அறிவுச் சுடர் முதற் பதிப்பு - 1951 இந்நூல் 2004இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. உரை முத்துக்கள் முத்துச் சுருக்கம் என்றும் முசிவு தருவதில்லை; அது என்றும் எவரும் விரும்பும் நல்விருந்தாளியாகவே இருக்கிறது. காட்டியர் மணிச்சுருக்கம் என்பது என்ன? குறளுருவான ஒரு உடல் வடிவம்; ஆனால் அறிவுணர்வாகிய உயிர் உள்ள உடல். எஸ். டி. காலரிட்ஜ் கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். திருவள்ளுவமாலை உரைத்தாங்கு உரைத்த உரை, எம்மொழியிலும் நல்லுரையே. ஜான் டிரைடன் மெய்யுணர்வுக்கும் உரைத்திறத்துக்கும் வேறுபாடு உண்டு; மெய்யுணர்வு விழுமிய குறிக்கோளை நாடுவது; உரைத்திறம் எங்கோ செல்வதுபோல் சென்று சட்டென அதை நோக்கித் திரும்புவது. ஜான் டிரைடன் நல்ல நூல்நிலைய மொன்றின் ஒரு பாதியைப் புரட்டித் திரட்டினால்தான் ஒரு நல்ல ஏடு எழுத முடியும். அறிஞர் ஜான்ஸன் 2. குழந்தைகள் குழந்தையும் தெய்வமும் கொண்டாடு மிடத்திலே. தமிழ்ப் பழமொழி குழலினிது யாழ்இனிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (குறள் 66) குழந்தைகளைத் திருத்த மிக நல்ல வழி, அவர்களைப் பாராட்டுவதுதான். ஆர். பி. ஷெரிடன் சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்காதீர்கள். இறைவன் எழிலாட்சி அவர்கள் வசமே உள்ளது. விவிலிய நூல் - மறைத்திரு. மார்க். நாளின் இயல்பை விடியற்காலம் காட்டுவதுபோல் மனித வாழ்வின் இயல்பைக் குழந்தைப் பருவம் காட்டுகிறது. (துறக்கமீட்பு) மில்ட்டன் குழந்தையே (குழந்தை வாழ்வே) மனிதனின் (மனித வாழ்வின்) தந்தை. குழந்தைகளை நன்கு பயிற்றச் சிறந்த வழி அவர்களை மகிழ்வுடையவராக்குவதே. ஆஸ்கார் ஒயில்டு படைத்தளிக்கின்றனர், பல்பொருள் ஹாலந்துச் சிறுவர்; உடைத்தழிக்கின்றனர், அவற்றையே ஆங்கிலச் சிறுவர்! குழந்தைப் பாடல் அடங்காக் குட்டி, மடங்காக் குதிரை. (தெமிஸ்டாக்கிளிஸ்) புளூட்டார்க் 3. காதல் நட்பு அடிக்கடி காதலாக மாறலாம், மாறுவதுண்டு; ஆனால் காதல் மீட்டும் நட்பாக ஆவதில்லை. பைரன் வாழ்க்கையின் தொடக்கமும் இடையும் இறுதியும் எல்லாம் காதலின் செயல்களே. லாஃவந்தேன் ‘தளராத என்காதல், குளோரிஸ், இனி உன்மீது வளராது, என்காத லாணைகள் மீதாணை!’ என்றான்; ‘தளராத காதல் தளர்ந்த தென்ன மாற்ற’ மென்றாள்; ‘தளரவில்லை அதுஇன்று முழுநிறைவு பெற்ற’ தென்றான். முழுநிறை மணவாழ்வு என்பது வாழ்க்கை நடுவேயுள்ள ஒரு வீட்டு விளக்கு; வாழ்க்கை அதனைச் சூழ்ந்த ஒரு வான விளிம்பகம். இளவரசி அந்தாயின் பிபேஸ்கொ மணவாழ்வு என்பது ஒரு வகையில் வாழ்க்கையைப் போன்றதே - அது ஒரு போர்க்களம், மலர்ப் படுக்கையன்று. ஆர். எல். ஸ்டீவென்ஸன் மனிதன் அவாக்களின் முடிந்த முடிவு இல்வாழ்வின் இன்பம் பெறுதலே. திருமணம் என்பது ஓர் உணர்ச்சிக் காப்புறுதி. மணமறுப்பு அதன் தளர்ச்சிப்பாடு. ரஸ்ஸல் கிரீன் மணவினையுட் புகாதவர் புக விரும்புகின்றனர்; புகுந்தவர் வெளியேற விரும்புகின்றனர். அப்படியானால், திருமணம் கேள்வி எழுப்பி ஆராய்வதற்குரிய செய்தி அல்லவா? எமர்சன் “ஒன்று என் வீட்டில் நான் ஆட்சித் தலைவனாயிருப்பேன்; இல்லாவிட்டால் அதன் காரணம் அறிவேன்”, என்கிறான் ஆடவன், மணவினைக்கு முன்பு! மணவினைக்குப் பின்பு, அவன் அக் காரணத்தைத்தான் அறிகிறான். ஒரு பெரியார் மணவினைக்கு நீ ஒத்துக் கொள்கிறாயா என்றபோது ஆடவன், “ஆம்; நான் அதனை ஒத்துக்கொண்டாய் விட்டது. ஆனால் அது என்னை ஒத்துக்கொள்ளவில்லை” என்றான். கிளாரென்ஸ் வான்செஸ்டர் ஆண்டவன் கைத்திறத்தால் படைக்கப் பெற்ற பொருள்களில் மிகமிக உயர்ந்த ஒன்றை நீ கோருகிறாய்- அதுவே ஒரு பெண்ணின் நெஞ்சம், ஒரு பெண்ணின் வாழ்வு ஆகிய இரண்டும் இணைந்துள்ள ஒரு பெண்ணின் காதல்! மேரி. டி. லாத்தபீ உன் காதல் இவ்வளவில் ஓங்குங்கொல், முன்காதல். கொள்ளாள புகழ்மாது எனின் லவ்லஸ் ஒருவனுக்கு நேரக்கூடும் எல்லா இன்னல்களையும் ஒருவன் காதல் மூலம் பெற்றவனாயிருந்தால்கூட, என்றும் காதலித்திராத ஒருவனைவிட அவன் ஆயிரமடங்கு இன்பமுடையவனே யாவன். ரிச்சர்டு மங்க்டன் மில்னிஸ் அவளுடன் நான் எத்தனை இறப்புக்கள் இறக்கவும் ஆயத்த மாயிருக்கிறேன். அவளில்லாமல் வாழ ஒருப்படேன். அவளிடம் நான் கொண்டுள்ள பாசத்தின் தன்மை இது. மில்ட்டன் என் நெஞ்சிற்கினிய அமுதே, உன்னுடன் நான் கழித்த காலக் கூறுகளையெல்லாம் ஒரு முத்தாரமாகக் கோத்து, அம் முத்துக் களையே கையில் வைத்துக் கருத்திலும் உருட்டி வருகிறேன்; அதுவே என்னுடைய வழிபாட்டு மணிமாலையாயிருக்கிறது. ராபர்ட் காமீரான் ரோஜரிஸ் காதலும் காதன்மை கூரும் அதுக(ண்)ணீர் கோதாட்டிக் கொள்ளப் பெறின். ஸ்காட் (ஏரிக்கரைச் சீமாட்டி) நாடிப் பெறுங் காதல் நன்று; அதனிலும் நனிநன்று நாடாது பெற்றிடும் காதல். ஷேக்ஸ்பியர் ஆ, என்காதல் ஓர் செக்கச் சிவந்த செவ்வல்லி ஆர்வமுறச் சித்திரையிற் பூத்திடும் அதன் பொலிவு ஆ, என்காதல் ஒரு செவிக்கினிய யாழின் பண் அரிய புதிய செல்வழிகள் ஆக்கிப் பொழியும் ஆங்கதுவே. கவிஞர் பர்ன்ஸ் ஒருவரை ஒருவர் கவர்ந்தீர்ப்பதிலும் ஒருவருடன் ஒருவரை ஆரப்பிணைப்பதிலும் முறுக்குற்று வரிந்து சுற்றும் நாண்போன்ற காதலைப்போல, எந்த வடமும் எந்த ஆழ்வடமும் (ஊயடெந) அவ்வளவு வலியதாகாது. வர்ட்டன் கருத்தெலாம், உணர்வெலாம், களிப்பெலாம் மெய்யில் உருத்தெழும் ஆற்ற லவையெலாம் காதல் குருத்தெழும் உணர்வில் அடங்கி அதன்அழல் திருத்துவ தன்றித்தம் செயலெதும் இலவே. காலரிட்ஜ் என் காதலுக்குரிய மாதின் நல்லாதரவும் உதவியும் இன்றி, நான் மன்னனென்ற முறையில் என் பொறுப்புக்களை வகிக்கவும், என் கடமைகளை நிறைவேற்றவும் எள்ளளவும் முடியாதவ னாயிருக்கிறேன். வின்ட்சர் கோமகன் ஆடவன் முதலில் காதலையே காதலித்து, நாளடைவில் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் பெண்டிரோ முதலில் ஆடவனைக் காதலித்து, இறுதியில் காதலைக் காதலிக்கிறாள். ரெமி-டி-கூர்மாண்ட் ஒரு ஆடவனுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவனை நன்கு உணரவேண்டும்; ஒரு சிறிது அன்பு செலுத்தவும் வேண்டும்; ஆனால் ஒரு பெண்ணுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவளை நிரம்ப நேசிக்க வேண்டும்; ஒரு சிறிதும் உணர முயலவே கூடாது! ஹெலென் ரோலண்டு மனிதன் காதலிப்பது சிறிதளவு, ஆனால் அடிக்கடி; பெண்டிர் காதலிப்பது பெரிதளவு, ஆனால் அருகலாக. பஸ்டா நம் முதற்காதலும் கடைசிக் காதலும் எல்லாம் தற்காதல்தான்! மயாலீ காதல் என்பது ஃபிரான்ஸில் ஒரு களி நாடகம்; இங்கிலாந்தில் ஒரு துயர் நாடகம்; இத்தாலியில் ஒரு இசை நாடகம்; ஜெர்மனியில் ஒரு சோக நாடகம். மார்கரட் பிளலிங்டன் 4. சுவடிகள் நூல்கள் வாசிப்பதில் எனக்குள்ள அடக்க முடியாத ஆவலை, இந்தியாவின் எழிலார்ந்த செல்வமுற்றும் கொடுத்தாலும், நான் கைவிட ஒருப்படேன். எட்வர்டு கிப்பன் ஒரு பூண்டின் வாழ்வுக்கால முழு வளர்ச்சியின் பயனை ஒரு சிறுபுட்டி நன்மருந்து நமக்கு வேண்டும்போது தரக் காத்திருப்பது போல, ஒரு சிறந்த அறிஞன் முழு வாழ்வின் பயனை ஒரு நூல் நமக்கு வேண்டும்போது தரக் காத்துக் கொண்டிருக்கிறது. மில்ட்டன் சட்டைப் பையிலிட்டுக்கொண்டே செல்லக் கூடிய ஒரு சிறிய பூந்தோட்டம்- அதுதான் ஏட்டுச் சுவடி சீனப் பழமொழி சுவை பார்க்கத்தக்க ஏடுகளும் உண்டு; விழுங்கத்தக்க ஏடுகளும் உண்டு; மென்று சுவைத்துச் செரிமானம் செய்ய வேண்டிய ஏடுகளும் உண்டு. பிரான்சிஸ் பேக்கன் சட்டங்கள் அழியும்; சுவடிகள் அழியா. புலவர் லிட்டன் அறிவாளிகளின் உரைகள் மட்டுமே பின்னோர்களால் வீணாகச் சிதைக்கப்பட முடியாத செல்வம். லாண்டார் தலைமகனொருவரின் உயிர்க்குருதி போன்றது ஒரு நல்லேடு; அது நறுமணமிட்டுப் பேணப்பட்டு வாழ்க்கை கடந்த பெரு வாழ்வை எதிர்நோக்கிப் பதனம் செய்து வைக்கப்பட்டதாகும். (அரியொபஜிட்டிக்கா) மில்ட்டன் 5. கல்வி இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்; தம்மை விளக்குமால்; தாமுளராக் கேடுஇன்றால்; எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. (நாலடியார்)- சமண முனிவர் கல்வி கற்றவரை எளிதில் நல்வழியில் திருப்பலாம்; ஆனால் ஏமாற்ற முடியாது. எளிதில் ஆளலாம்; ஆனால் அடிமைப்படுத்த முடியாது. புரோ பெருமகனார் எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கொன்றில்லை திருமூலர் திருமந்திரம் நான் கற்றுக்கொடுக்க எண்ணுவது அறிவையன்று; அறிவை அறியும் அறிவையே. என் அறிவு வளர வளர, இக்கோட்பாடும் வளர்ந்து வருகிறது. டாக்டர் ஆர்னால்டு கல்வியின் தலையான நோக்கம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதேயாகும். கிரேன்மர் பெருமகனார் ஆசானுரைத்த தமைவரக் கொளினும் காற் கூறல்லது பற்றலன் ஆகும். (நன்னூல்) - பவணந்திமுனிவர் நம் தற்காலக் கல்வி முறையில் ஆசிரியர் போதனைக்கே நாம் மட்டு மீறிய முதன்மை கொடுத்து வருகிறோம். மாணவர் கற்றறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு பெரியார் ஒருவன் கல்வியறிவின் மிகப் பெரும் பகுதி அவன் தன் முயற்சியால் தானே கற்றுக் கொள்வதாகும். ஸர் வாட்டர் காட் பல்கலைக்கழகத்திலிருந்து (ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து) ஒருவன் பெறுவது வெறும் பட்டம் மட்டுமன்று (பட்டத் தகுதியே). ஆர்தர் வாக் ஒரு கல்வித்துறையின் பொது முடிபுகளை, நீ வீட்டி லிருந்தே ஏடுகள் மூலம் அறியலாம்; ஆனால் அதன் நுட்ப நுணுக்கங்கள், விளக்கங்கள், நயங்கள், அவற்றுக்கு உயிர் ஊட்டும் உயிர்ப் பண்புகள் ஆகியவற்றை அவற்றை உயிரியக்க மாக உடையவர் (பள்ளி ஆசிரியர்களிடமிருந்தே பெறக் கூடும். கார்டினல் நியூமன் (கல்விபெற வேண்டும்) சிறுவனைக் கீழ்த்தர நூல்கள் எவையும் இல்லாத நூல்நிலையம் பார்த்து அதில் உலவவிட வேண்டும். அவன் விரும்பும் சுவடிகளை அவன் படித்து முன்னேறிக் கொள்வான். அறிஞர் ஜான்ஸன் படிப்பு ஒரு மனிதனை நிறைவுடையவனாக்குகிறது; கேள்வி அவனை எதற்கும் சித்தமுடையவனாக்குகிறது; எழுதுதலே அவனுக்குத் திட்பம் தருகிறது. ஃபிரான்சிஸ் பேக்கன் ஒரு குடியாட்சியின் உண்மையான அரண்வரிசை அதன் பள்ளிக் கூடங்களே யாகும். ஹோரேஸ் மான். 6. கவிதை பிற மாந்தரினும் கூரிய தொலை நோக்குடையவன் கவிஞன். வேவல் பெருமகனார் இன்னிசை ஓசை, மறைபொருள் செறிவு, மாய மருட்கை இம்மூன்றும் கவிதையின் உயிர்நிலைகள். இவற்றுடன் அது பொருளும் உடையது. வேவல் பெருமகனார் ஆழ்ந்த அறிவனாக இல்லாமல் எவரும் கவிஞருட் சிறந்த வனாக இருந்ததில்லை. கவிஞர் காலரிட்ஜ் உரைநடை, கவிதை ஆகியவை பற்றிய என் விளக்கத்தைக் கவிதை இளஞ் செல்வர்கள் கூர்ந்து கவனித்தல் வேண்டும். உரைநடை என்பது சொற்களின் மிகச் சிறந்த ஒழுங்கமைதி; கவிதை என்பது மிகச்சிறந்த சொற்களின் மிகச்சிறந்த ஒழுங்கமைதி. கவிஞர் காலரிட்ஜ் ஆர்ந்தமர்ந்து கருத்திலுருவாக்கப்பட்ட உணர்ச்சி வேகமே கவிதை. கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் கவிதை என்பது இயற்கை யழகின் திரைநீக்கம். கவிஞர் ஷெல்லி கவிதை என்பது யாது? புனைவாற்றல் குறிப்புரைகளால் உருவாக்குகின்ற உயிர் உணர்ச்சிகளுக்கான உயர் சூழலே. ரஸ்கின் கவிஞன் நம்மிடம் எழுப்ப வேண்டும் வியப்பதிர்ச்சி சிறப் பருமை சார்ந்ததா யிருக்கக்கூடாது; செழுங்கொழுமைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்க வேண்டும். நம் எண்ணங்களைத் தக்க சொல்லால் நினைவூட்டுவதாகவே இருக்க வேண்டும். கவிஞர் கீட்ஸ் எல்லாக் கவிஞர்களும் வெறிகொண்ட பித்தர்களே. ராபர்ட் பர்ட்டன் கலைகளில் தலைமூத்த கலை, பல கலைகளுக்கும் தாய்க்கலை கவிதை! காங்கிரீங் கவிதையை இசைபயில் எண்ணம் என்னலாம். கார்லைல் கவிதை என்பது அழகிலுறையும் வாய்மை. கில்ஃவில்லன். கவிதை, உரைநடையைவிட, சில சொற்களுள் பல் பொருள் கூறுகிறது. வால்ட்டேர் கவிதை என்பது கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடல்ல; உணர்ச்சியின் பிடிப்பிலிருந்து விடுபடுவதேயாகும். டி. எஸ். எலியட் கவிஞனின் திறம் பொருளில் ஒரு சிறிது விளக்காது விட்டு மறைப்பதனால் செறிவளிப்பதேயாகும். அவன் அழகின் திரையை விலக்க முற்பட்டாலும் முழுதும் விலக்குவதில்லை. ஈ. பி. ஒயிட் குவெபெக் வெற்றியைவிட நான் பெருமை கொள்ள விரும்புவது கவிதை எழுதுவதாகும். படைத்தலைவர் உல்ஃவ் 7. அறிவுநூல் ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே அறிவுநூல். ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் அறிவியல் மெல்ல மெல்ல முன்னேறுகிறது; அடிமேலடியாக முன்னேறுகிறது. ஸ்டியூவர்ட் சேஸ் ஒரு அறிவியல் துறையில் துறைபோன வல்லுநர் ஆனவர் கள் வரவர இன்றியமையா நிலையில் பிற துறைகளில் மிகப் பொது நிலை அறிவுடையவராய் வருகின்றனர். தன் துறை முற்றிலும் ஆண்டறிய அவன் முழு அறிவாற்றலும் தேவைப் படுகிறது. கெரால்டு ஹேர்டு இன்றைய குடியுரிமையாளன் ஓர் அறிவியல் துறை வல்லுநனாயிருக்க முடியாதிருக்கலாம்- ஆனால் பொதுநிலை அறிவாளியாக, அதன் பொது முன்னேற்றத்தைக் கவனிப்ப வனாக இருக்க முடியும்; இருந்தாக வேண்டும். கெரால்டு ஹேர்டு செய்பொருட் படைப்புக் கலையில் நம்மை விஞ்சிய ஊழிகள் உண்டு; உயர் குறிக்கோட்பற்றில் நம்மினும் உயர்வுற்ற ஊழிகள் உண்டு; நம்மினும் வீறுமிக்க, ஒழுங்கமைந்த சட்ட திட்டங்களுடைய ஊழிகள் இருந்ததுண்டு. ஆனால் நம் அறிவியலை எவரும் அணுகியது கிடையாது. கெரால்டு ஹேர்டு கலை யென்பது ‘நான்’; அறிவுநூல் என்பது ‘நாம்’! கிளாட் பெர்னார்டு அறிவுநூலின் ஒவ்வொரு முன்னேற்றப் படியும், ஒரு மனிதன் கற்பனைத் துணிவினின்றே தோன்றியுள்ளது. ஜான் டியூயி நீராவி நூறு ஆண்டுகட்கு முன்னிருந்ததைவிட இன்று, ஒன்றும் மிகுதி வலுவறியப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது - அவ்வளவுதான்! எமர்சன் அறிவுநூலும் கலையும் உலக முழுமைக்குமே உரியன. அவற்றின் முன் தேச எல்லைகள் மறைகின்றன. கெதே. அறிவியல் என்பது பொது அறிவின் வடித்தெடுப்பான பகுத்தறிவின் உயர்நிலை - அது திட்பமான காட்சியறிவு - சிறு வழுவுக்கும் இடந்தராத ஆராய்ச்சியறிவு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது. டி. எச். ஹக்ஸ்லி அறிவியல் என்பது வேறெதுவுமன்று; புலனறிவின் திறம்பட்ட வளர்ச்சி; அதன் திண்ணிய பொருள்கோள் பொது அறிவின் நுட்ப விளக்கம். ஜார்ஜ் ஸான்றாயனா அனுபவ அறிவின் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பே அறிவியல். ஜார்ஜ் ஹென்ரி லூயி எதிலிருந்து தோற்றம், எதை நோக்கி நாட்டம், இயங்குவது ஏன், எவ்வாறு - இவ்வினாக்களின் விடையினுள் எல்லா அறிவு நூலும் அடங்கும். ஃழுபெர்ட் 8. வரலாறு வரலாறு என்பது விளக்கச் சான்றுகளுடன் நல்லுரை தரும் மெய்விளக்க நூல் துறை என்னலாம். வைக்கவுண்ட் பாலிங்புரோக் (ஹென்ரி ஸென்ட் ஜான்) வரலாறு என்பது ஒரு மாபெரும் நாடகக் காட்சி; காலமே அதன் மேடை; பொன்றா மெய்மையே அதன் பின்னணித் திரை; பகலவனொளியே அம் மேடையின் விளக்கங்கள். கார்லைல் பெரியார் வாழ்வு எதுவும் வீணாவதில்லை. உலகின் வரலாறு பெரியார் வாழ்க்கை வரலாறுகளின் கோவையே. கார்லைல் வரலாறு என்றும் எதுவும் இரட்டுறச் செய்வதில்லை; வரலாற்றாசிரியர் செய்வர். ஒரு பெரியார் எத்துணையோ அளவு வரலாறு வேண்டும், ஒரு சிறிதளவு இலக்கியம் உண்டாக. ஹென்ரி ஜேம்ஸ் வரலாற்றுச் சிக்கல்களை ஆராய்க; அன்மைக் காலப் பிரிவுகளையல்ல. ஆக்டன் பெருமகனார் மனித உலக வரலாறு என்பது மனிதர் கருதிய கருத்துக்களின் வரலாறேயாகும். (உலக வரலாற்றுச் சுருக்கம்) எச். ஜி. வெல்ஸ். 9. கலையும் இயற்கையும் கலைபயில் சீமாட்டி : இயற்கைக் காட்சியைக் கண் ணுற்றதும் எனக்கு என் கலை நினைவுக்கு வந்தது. கருத்துரையாளர் : (இயற்கையைப் போற்றும் கலை எவ்வளவோ உண்டு) கலையைப் போற்றும் இயற்கையை எங்கும் கண்டதில்லை. (ஒரு பத்திரிகை) உயர் இசைபோலவே உயர்கலை ஒழுங்கமைதிக் கட்டுப் பாடற்றது. தன் அழகின்பத்தில் ஊறி அது வெறியுடையதாகும். ஜார்ஜ் ஜீன் நேதன் எந்தப் படத்தைப் பார்த்தாலும், “ஆ, அது என் மீது பற்றிக் கொண்டு விடுகிறது”, என்கிறாள் அச் சீமாட்டி. “அவை என்ன காளான்களா, பாசிகளா?” என்றார் குளோவிஸ் ஸர்கி கேலிச்சித்திரம் வரைவது என்பது கூடவே கூடாது. அவற்றை வரைந்து வரைந்து பழகி, நான் மனிதரின் இயற்கை முகம் எப்படி இருக்கும் என்பதை மறந்தே போனேன். கலைஞன் ஹோகார்த் கலை என்பதே கலையின் முடிந்த முடிபன்று; மனிதர் உள்ளமளாவும் வகைகளுள் அது ஒன்று. எம். பி. முஸ்ஸார்க்ஸ்கி கலை வாழ்வின் உணவாகாது- வாழ்வின் இன்தேறல் மட்டுமே. ஜீன் பால்ரிஃட்டர் கலைஞன் பொருள்களைக் காண்பது அவற்றின் இயல்பு கொண்டன்று; தன் இயற்கை கொண்டு. ஆல்ஃபிரட் டானெஸ் 10. சமயமும் மெய்விளக்கத் துறையும் மனிதர் சமயத்துக்காக, அச்சமயத்தைப் பின்பற்றி வாழ்வது தவிர, வேறு எதுவும் செய்யத் தயங்க மாட்டார் - அதற்காக வாதாடுவர், எழுதுவர், போராடுவர்! கோல்ட்டன் சமயமென ஒன்றிருந்தும் மக்கள் இவ்வளவு ஒழுக்கக் கேடுடையவர்களாயிருப்பார்களானால், சமயமில்லாது எந் நிலையில் இருப்பார்களோ? ஃவிராங்க்லின் சமயம் உண்மையில் ஒன்றே - அதுவே நல் வாழ்வு. தாமஸ் ஃவுல்லா எத்தனை கடவுளர், எத்தனை சமயங்கள் எத்தனை வளைநெளி புதுமைய நெறிகள்? ஆனால் துன்பமிக்க இவ்வேழை உலகின் தேவை யெல்லாம் அன்புநெறி என்ற கலை ஒன்றுதான். எல்லா வீலர் வீல் சாக்ஸ் என் நாடு இந்த உலகம்; மனித வகுப்பினர் என் குடும்பத் தவர்; நன்மை செய்வதே என் சமயம். தாமஸ் பெய்ன் யாதும் ஊரே யாவரும் கேளிர். புறநானூறு. நானும் ஒரு காலத்தில் மெய்விளக்க அறிவராயிருக்க முயற்சி யெடுத்துக் கொண்டதுண்டு. ஆனால் இன்பம் வந்து அதை இடையிடையே கெடுத்துவிட்டது. ஆலிவர் எட்வர்ட்ஸ் 11. மனிதன் ஆ, மனிதன் எத்தகைய திறனமைந்த படைப்பு! எத்தனை அறிவாற்றல்! எத்தனை எல்லையில்லாக் கலைப் பண்பு! உருவில், இயக்கத்தில், செயலில் எத்தகைய மேதகைமை! உணர்வில் ஓர் இறையுரு வொப்பான்; உலகின் வனப்பெலாம் திரண்ட வடிவம்; உயிரினங்களின் ஒப்பற்ற கொடுமுடி! ஷேக்ஸ்பியர் மாவும் மாக்களும் ஐயறிவினவே மக்கள் தாமே ஆறறி வுயிரே. தொல்காப்பியர் மனிதன் கற்பவற்றுள் உயர்ந்த கற்பனைக்குரிய பொருள் மனிதனே. போப் மனிதன் தான் நம்பும் நம்பிக்கைகளின் ஒரு கூட்டு. செக்காவ் இயற்கை வழக்கமாகப் படைத்து உருவாக்காமல், பல நூற்றாண்டுகள் இடையிட்டு மிக அருமையாகப் படைக்கும் படைப்புக்களுள் அவர் ஒருவர் (நெப்போலியனைக் குறித்தது) ஜூனோ பரம்பொருளுக்கும் பச்சைமண்ணுக்கும் இடையே ஊச லாடும் ஒரு மணிப் பொறியின் ஊசல் வட்டு - இதுவே மனிதன். பைரன் மனிதன் பண்பு எதுவாயினும் ஆகுக; அவன் ஒரு தனி வகைப் படைப்பு என்பதில் ஐயமில்லை. அவன் கடவுளின் திருவுருவ மல்லவானால், அவனை மண்ணுலகின் ஒரு நோய் என்று கட்டாயம் கூறியாக வேண்டும். ஜி. கே. செஸ்டர்ட்டன் ஒரு மனிதன் பண்புகளுள் பொது மக்களால் மிகவும் பாராட்டப் பெறுபவை பெரும்பாலும் அவனால் மிகத் துச்சமாகக் கருதப்படு பவவையாகவே இருக்கும். ஒரு பெரியார் மனிதன் வரவர அறிவுத்திறமையுடையவனாகலாம்; அறிவுக் கூர்மையும் சூழ்ச்சியுமுடையவனாகலாம். ஆனால் செயலில் வலிவும், இன்ப வளர்ச்சியும் நல்வாழ்வும் உடைய வனாதல் அரிது - அது கூடுமானால், ஊழிக் கணக்கான காலத்தின் பயனாகவே. கெதே. ஒரு சில குறைபாடுகள்தான் அவரிடமில்லை. அவை இருந்திருந்தால் அவரை முழுநிறை மனிதராகக் கொள்ளலாம். (டியூக் டி லாங்கெவிலைப்பற்றி) திருமதி. டி. செவிஞி வாசிக்கும் வகையை மட்டும் அறிந்தால் ஒவ்வொரு மனி தனும் ஓர் ஏடேயாவன். வில்லியம் எல்லரி சானிங் சிரிக்கவும் அழவும் செய்யப்கூடும் விலங்கு, மனிதன் மட்டுமே. ஏனெனில், ‘உலகம் எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்கள் உடையவனாய், இரண்டின் வேற்றுமையையும் அறிந்தவன் அவனே. ஹாஸ்லிட் 12. வாழ்க்கை வாழ்க்கை நலத்தை நான் விரும்புகிறேன். அதை நான் பெறக் கூடுமானால், நான் வாழட்டும். அல்லவெனில் எதிர்பாராப் புகழ் வந்து என் வாழ்வைக் கொண்டு செல்லட்டும். நான் விரும்பும் முடிவு அதுவே. ஷேக்ஸ்பியர். வாழ்வாவது இன்பம், அன்பரே... பகலும் இரவும்... இரண்டும் இனியன. ஞாயிறு, திங்கள், உடுக்குலங்கள் எல்லாம் இனியன. புறவெளிகளிலோ தங்கு தடையற்ற காற்று எங்குந் திரிகிறது. ஜார்ஜ் பாரோ. வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் - நல்ல உடல் நலம். ஆண்டுக்கு இருநூறு முந்நூறு பொன் வருவாய் - ஆம், அத்துடன் நண்பர்கள்! ஆர். எஸ். ஸ்டீவென்ஸன். காலமெனும் வெண்பளிக்கு வெளியில் தீட்டிக் கறைகொண்ட பல்வண்ண மாடங்காண் வாழ்க்கை. கவிஞன் ஷெல்லி. வாழ்க்கையின் மெய்ம்மைமிக்க முடிவு, வாழ்க்கை முடி வற்றது என்று உணர்வதே. வில்லியம் பென். கற்கத்தகும் வாழ்க்கை கருத்தாட்சி பெற்ற வாழ்க்கையே. ஆர்தர் வாக். (இல்வாழ்க்கையல்லாது) வேறு எந்த வாழ்க்கை முறையும் அவ்வளவு புகழத்தக்கதன்று. ஏனெனில், இல்வாழ்க்கை என்பது எளிது; தூய்மை மிக்கதும் ஆகும். சாஸர். அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். திருவள்ளுவர். பலருக்கு வாழ்க்கை என்பது கிளர்ச்சிதரும் பல நிகழ்ச்சிகளின் தொடர்பாக மட்டுமே காணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை என்பது புறநிகழ்ச்சி எதுவுமன்று; அவற்றால் அகத்தே ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகளின் தொகுதியே என்பதனை அவர்கள் உணர்வதில்லை. ஓர் அறிஞர். மாறுபாடற்ற ஒழுங்கமைதி என்பது சிறுமை உள்ளங் களின் அறியாமையால் வரும் மாய மருட்சி. எமர்ஸன். வாழ்க்கை என்பது ஓர் இசையரங்கேற்றம்; ஆனால் அதில் யாழ் வாசிப்பவன் மேடையில் அரங்கேற்றும் போதுதான், யாழ் மீட்டவும் பயிற்சி பெற்றுக் கொள்ள முனைகிறான்! சாமுவேல் பட்லர். வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியற்ற வாழ்க்கை, வாழத் தகுந்த தல்ல. சாக்ரடீஸ். எழுத்தளவில் அறிவராயிருப்பது மிக எளிதே; வாழ்க்கையில் அறிவராயிருப்பது அத்துணை எளிதன்று. செக்காவ். நாம் எவ்வளவு நாள் வாழ்வோம் என்பது முக்கியமன்று; எங்ஙனம் வாழ்கிறோம் என்பதே முக்கியமானது. பெய்லி. உணர்ச்சித் திறமுடையவர்கட்கு வாழ்க்கை ஒரு துயர் நாடகம். அறிவுறுத்திற முடையவர்க்கு அது ஒரு களி நாடகம். லாபுருயேர். 13. நாகரிகம் பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பலர். திருவள்ளுவர். நாகரிகம் ஏழை மக்களுக்குச் செய்து தரும் வாழ்க்கை வசதியின் அளவே, அதன் உண்மையான உரைகல் ஆகும். டாக்டர் ஜான்ஸன். வரவர மிகுதியான நல்வாழ்வுச் சாதனங்கள், வரவர மிகுதி யான ஓய்வு நேரம் - இவையே நாகரிகத்தின் இரு அடிப்படைக் கூறுகள். பெஞ்ஜமின் டிஸ்ரேலி. தங்கள் ஆன்ம வாழ்வை மேம்படுத்திக் கொள்பவர் களாலன்று நாகரிகம் சிறப்பது! தம் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களே, அவர்களினும் நாகரிக வாழ்வுக்கு உகந்தவர்கள் ஆவர். கென்னத் பிக்ட்ஹார்ன். தனி மனிதரைப் போலவே நாடுகளும் ஆட்சிகளும் தோன்றி மறைகின்றன. ஆனால் நாகரிகம் ஓர் இறவாப் பண்பு. மாஜினி. தானே தன் காரியம் எதையும் செய்து கொள்ளாமல் கூடிய மட்டும் பிறரைக் கொண்டே செய்து வாழ்வதுதான் நாகரிகத்தின் தொடக்கம் ஆக அமைகிறது. எச். ஸி. பெய்லி. நம் நாகரிகம் நம் உடலின் தோல்வரைகூடச் செல்வ தில்லை. அது பெரும்பாலும் நம் ஆடையுடன் நின்று விடுகிறது. மிகு தூயதிரு டப்ள்யூ. ஆர். இங்க். டி. டி. 14. பண்புடைமை பண்புடையார் என்பவர் யார்? நன்றி கூறுவதில் முதல்வராக முந்திக் கொள்பவர், குறை கூறுவதில் கடைசியாகப் பிந்திக் கொள்பவர்! ஸெர்பிய நாட்டுப் பழஞ்சொல். பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல். (நீதிநெறி விளக்கம் : குமரகுருபரர்) நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. திருவள்ளுவர். தன்னையறியாமற்கூடப் பிறரைப் புண்படுத்தாதவனே பண்புடையாளன். பிஸ்மார்க். பண்புடைமை என்பது இரு பண்புகளின் இணைப்பு. கோடாத நற்பொருளார்வச்சுவை ஒன்று; உலகெலாம் அணைத்தா தரிக்கும் தாராள மனப்பான்மை மற்றொன்று. டப்ள்ளூ. எச். மாலர். என்னால் ஒரு பெருமகனை ஆக்க முடியும். ஆனால் எல்லாம்வல்ல இறைவனே ஒரு பண்புடையாளனை ஆக்க முடியும். முதலாம் ஜேம்ஸ் மன்னன். 15. முன்னேற்றம் முன்னேற்றமென்பது ஒரு குறிக்கோளன்று; ஒரு மறுக்க முடியா நடைமுறைத் தேவை. அது மனித வகுப்பின் ஒரு கடமை யன்று; இயற்கையின் ஓர் ஒழுங்கமைதி. இத்தகைய முன்னேற்றத்தில் உள்ள உறுதியான நம்பிக்கையே சென்ற நூற்றைம்பது ஆண்டுகளாக மேலை உலக நாகரிகத்தின் அடிப்படைப் பண்பா யிருந்து வருகிறது. மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி. இணக்கமுள்ள மனிதன், உலகுக்குத் தக்கபடி தன்னைச் சரி செய்து கொள்கிறான்; இணக்கமற்ற மனிதனோ, ஓய்வு ஒழிவின்றித் தனக்குத் தக்கபடி உலகத்தை ஆக்குவதிலேயே முனைகிறான். ஆகவே உலகின் முன்னேற்றங்கள் யாவும் இணக்கமற்றவர்களால் ஏற்படுபவையே. பெர்னார்டு ஷா. தாவி ஏறிச் செல்வது, தற்போதைய நிலையில் மனக்குறை யுறுவது, ஆகிய இவை மனிதன் உள்ளர்ந்த உணர்ச்சிப் பண்புகள் என்பதும், நிலையான வாழ்க்கை நிறைவை விரும்புவதே மற்றெல்லாம் உயிர் வகைகளின் உள்ளார்ந்த உணச்சிப் பண்பு என்பதும் விளக்கப்பட வேண்டிய மெய்ம்மைகள் ஆகும். மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி. தற்காலப் புதிய முன்னேற்றங்களால் வரும் செல்வப் பெருக் கனைத்தும் பெருஞ் செல்வர் செல்வத்தைப் பெருக்கவும், இன்ப வாழ்வினர் இன்பமிகுக்கவும், உடையோர் இல்லோர் வேற்றுமை நிலையையும் மாறுபாட்டையும் அகலமாக்கவும் மட்டுமே பயன் படும்வரை, முன்னேற்றங்கள் உண்மையான முன்னேற்றமாகவோ, நிலையான முன்னேற்ற மாகவோ இருக்க முடியாது. ஹென்ரி ஜார்ஜ். தொழிலுக்கு மேன்மேலும், மிகுதி ஊதியந் தர முயல் வதிலேயே முன்னேற்றம் அடங்கியுள்ளது. கார்லைல். உலகின் பெரும்பாலான மூட மக்கள் எவ்வகை இன்னலு மின்றி நன்கு வாழ்நாளை நடத்தி வருகிறார்கள். கார்ல். ஏ. மென்னிங்கர். பித்தர்கள் இன்பமாகவே வாழ்கின்றனர் - அமைந்த அறிவு டையவர் களைவிட அவர்கள் இன்பம் எத்தனையோ பெரிது! அறிஞர் பால் மண்டேன். உலகத்தின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் ஒரு கழு மேடை யிலிருந்து மறு கழு மேடைக்கும் ; ஒருபுதுக் கருத்துக்குப் போராடு வதிலிருந்து மறு புதுக் கருத்துக்குப் போராடும் வகையிலேயும் அமைந்துள்ளது. வென்டெல் ஃவிலிப்ஸ். பல்வேறுபட்ட மக்களும் ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது பற்றிய கதையே உலக வரலாறு; யாரேனும் அறிவுத் திறமுடையவர் ஒரு புதுத் தவறு கண்டுபிடித்து, அதன் மூலம் வழக்கத்திற்கு மாறான சறுக்கல் ஏற்படுவதையே முன்னேற்றம் என்கிறோம். ஓர் அறிஞர். ஒரு தொல்லையே விட்டுக் கொடுத்து, மற்றொரு தொல் லையை வாங்குவதையே நாம் முன்னேற்றம் என்கிறோம். ஹாவ்லக் எல்லிஸ். 16. நாடு வேறு எந்த நாட்டிலிருந்தாயினும் இருவர் ஓரறைக்குள் நுழைந்து அமர நேர்ந்தால், உடன் தானே ஏதாவது உரையாடத் தொடங்காமலிருக்க மாட்டார்கள். ஆனால் அதே நிலையில் இரண்டு ஆங்கிலேயர்களின் விடப்பட்டால், ஒவ்வொரு வரும் கூடியமட்டும் தொலைவாக வேறு வேறு திசை நோக்கிய பலகணி யண்டை சென்று வாளா வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அறிஞர் ஜான்ஸன். ஒரு காரியம் எவ்வளவு நல்லதாயினும் சரி, எவ்வளவு கெட்டதாயினும் சரி, அதைச் செய்யும் ஓர் ஆங்கிலேயனைக் காண்பதரிதன்று; ஆனால் ‘தவறு’ எதனையும் எவனும் செய்வதாக உணர்வது கிடையாது. அவன் செய்வதெல்லாம் ஒரு ‘கொள்கை’ யுடன்தான்! அவன் போராடுவதெல்லாம் நாட்டுப்பற்றுக் கோட்பாட்டினாலேயே; அவன் சுரண்டுவ தெல்லாம் தொழில் முறைக் கோட்பாட்டினாலேயே அவன் அடிமைப் படுத்துவதுகூட, ‘பேரரசாட்’சிக் கோட்பாட்டுக்கு இணங்கியே! பெர்னார்டு ஷா. சமயத்தையும் ஒழுக்கக் கேட்டையும் தவிர, இங்கிலாந்தில் பொழுது போக்கு எதுவும் இல்லை - எவ்வளவு வருந்தத்தக்க நிலை! ஸிட்னி ஸ்மித். ஆங்கிலேயன் வழக்காற்றில், ‘நாகரிகத்தில் பிற்பட்ட நாடுகள்’ என்றால், அவன் நாட்டினிடமிருந்து ‘வாணிகச் சரக்குகள் பெறாத நாடுகள்’ என்று பொருள். டக்ளஸ் உட்ரஃவ். என் தாய்நாடு யாதாயினும் ஆகுக; என்ன குறை களுடைய தாயினும் ஆகுக. எப்படியும் அது என் தாய்நாடே. சார்லஸ் சர்ச்சில். நாட்டுணர்ச்சி என்பது மனித வகுப்பின் ஒரு குழந்தைப் பருவ நோய் அது ஒரு கூவை வீக்கம் போன்றது. ஆல்பெர்ட் ஈன்ஸ்டீன். நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு. திருவள்ளுவர். மன்னர் திருத்தவிசு; மன்னுசெங்கோல் வாழரங்கம்; துன்னும் உயர் தோற்றத் திருவிடம்; மால்- மின்னுசெவ்வாய்க் கோளிருக்கும் கோயில்; குறைவறநற் சீரியற்கை வேளிருக்கும் கோட்டை விறல்மாடம்;- நாளிருக்கும் தீங்குகள் வாராநீர்சேர் திரையே எம்நாடு, பாங்குயர் வீரர் பயில்மரபின் - ஓங்குமனை; வெள்ளிப் பரவை விளக்கநாடு வேபதித்த ஒள்ளரக்கு மாமணிஎன் றோது. ஷேக்ஸ்பியர். உருவ நீனிறக் கடலகங் கீண்டெழுந் தோங்கித் திருவி னீள்பிரித் தானியா தோன்றிய ஞான்று பெருமி தத்துடன் பீடுறும் இறைபடைப் பார்ந்தே, உருமினார்த்தனர் தேவர்கள் உயர்விறற் பாடல். வாழ்க நீள்பிரித் தானியா; ஆட்படா தென்றும் ஆள்க நீள்பிரித் தானியர் அனைத்துல கொருகுடைப் படுத்தே! (நாட்டுரிமைப் பாட்டு) ஜேம்ஸ் தாம்ப்ஸன். 17. அரசாங்கம் அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. திருவள்ளுவர். மக்கள் தேவைக்காக, மக்களின் அறிவு வகுத்துக்கொண்ட வகைமுறையே அரசு. எட்மண்ட் பர்க். நம் தேவைக்கு மேற்பட்ட அரசியல் இயந்திரத்தை வைத்துக் கொண்டு, நாம் இன்னலுறுகிறோம் என்று எனக்குத் தோற்றுகிறது. உழைப்பவர் உழைப்பை இவர்கள் பெரிதும் உறிஞ்சி விடுகின்றனர். ஜெஃவ்வெர்ஸன். மக்கள் விருப்பமே எந்த அரசாங்கத்திற்கும் உரிய நேர்மை யுரிமை ஆகும். ஆகவே மக்கள் சுதந்தர உரிமையைப் பாதுகாப்பதே அதன் முதற் கடமையா யிருக்க வேண்டும். ஜெஃவ்வெர்ஸன். வேற்றுமையுற்ற குடும்பம் நில்லாது - பாதி அடிமைப் பண்பும், பாதி சுதந்தர மக்களையும் உடைய எந்த அரசாங்கமும் நிலைக்க முடியாது. லிங்கன். அவ்வந்நாட்டின் தகுதிக்கேற்ற அரசாங்கம் அததற்குக் கிடைக்கிறது. ஜோஸஃவ் டி. மேய்ஸ்டர். அரசாங்கம் இருப்பது சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்கவே. எல்லாரும் விரும்புபவர்களுக்கும் பணக்காரர் களுக்கும் பாதுகாப்பு தேவையில்லை - அவர்களுக்கு நண்பர் பலர், பகைவர் குறைவு. வென்டெல் ஃவிலிப்ஸ். மிகத் தாழ்ந்த தொழிலைக்கூட அதற்கென்று பயிற்சி யில்லாமல் எவரும் மேற்கொள்வதில்லை. ஆனால், தொழில் களுள் மிகக் கடினமான பிறரை ஆளும் தொழிலுக்கு மட்டும், எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர் என்று முன்வந்து விடுகி றார்கள். சாக்ரட்டீஸ். நம் அரசாங்க அமைப்பின் அடிப்படையையே மாற்றிய மைக்கும் உரிமை நம் மக்களுக்கு உண்டு, என்ற அடிப்படை யிலேயே நம் அரசியலமைப்பு அமைந்துள்ளது. வாஷிங்டன். என் மனம் போல நான் செயலாற்ற முடியுமட்டும் என் குடிமக்கள் எவரும் தம் விருப்பப்படி சிந்தனையாற்றலாம். பேராளன் ஃவிரெடரிக் அரசியல் முறை எதுவாயிருந்தாலும் (வல்லாட்சியாளர்) கொடுங்கோன்மையை எதிர்த்து நின்று மக்களைக் காக்க மனித உள்ளத்திலேயே ஓர் இயற்கைப் பண்பு இருக்கிறது. அறிஞர் ஜான்ஸன். எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும் என்பவர் களும், எதையும் மாற்றக்கூடாது என்பவர்களுந்தான் வாழ்க்கைப் போரில் பெருத்த இடைஞ்சல் விளைவிப்பவர்கள். ஆஸ்டர் பெருமாட்டி. எல்லா அரசியல் முறைகளிலும் சட்டம் அமைப்பவர்கள் மக்களே. எட்மண்ட் பர்க். 18. குடியாட்சி தொடக்க நாளிலிருந்தே நம் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த உயர் குடியாட்சிப் பண்புடையதாகவும், அதே சமயம் நம் உயர் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த குடியாட்சிப் பண்புடையதாகவும் இருந்து வந்திருக்கிறது. (பிரிட்டனைப் பற்றி) மெக்காலே. தன் தனிப்பட்ட நலங்களை மதித்துப் பேணி வளர்க்கும் மனிதன், பொதுச் சமூக நலனுக்கு எதிரியாகிறான் என்ற கருத்து அடிப்படையான ஒரு தவறாகும். குடியாட்சியின் தனிச் சிறப்பு யாதெனில், தனி மனிதன் தன் நலத்தைப் பேணும் வகைகளாலன்றி, பொது நலத்தை வளர்க்க முடியாது என்ற கருத்தே. பேராசிரியர் ஸி. கே. ஆலன். மக்கள் அரசியல் தவறு செய்யாதவர்கள், என்று எண்ணுதல் தவறு; அவர்கள் பெருந் தவறு செய்கிறார்கள். அதை உணரவும், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் வல்லாட்சி வகைகளின் தவறுகளைப் பார்க்க, இவை குறிப்பிடத் தக்கவையேயல்ல. கால்வின் கூலிட்ஜ். மிகப் பொதுநிலைப்பட்ட மக்களுள்ளாக மிகச் சிறப்பு வாய்ந்த அடங்கியலான ஆற்றல்கள் உள்ளன என்ற மெய்ம்மையை அடிப்படையாகக் கொண்டதே குடியாட்சி. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக். மக்களை, மக்களே, மக்கள் நலத்துக்காக ஆள்வதென்பது தான் குடியாட்சி. ஏபிரகாம் லிங்கன். குடியாட்சியின் தீங்குகளுக்கு மருந்து இன்னும் மிகுதியான குடியாட்சி உரிமைகளே ஆகும். ஆல்ஃபிரட் ஸ்மித். எனக்குக் குடியாட்சியில் உறுதியான பற்று உண்டு; ஏனெனில் அதுவே ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிப் படுத்த வல்லது. உட்ரோ வில்ஸன். குடியாட்சி என்றால், மக்களை, மக்களுக்காகவே, மக்களைக் கொண்டு தடியடிகளால் அடித்தடக்குவது என்று பொருள்! ஆஸ்கார் வைல்டு. குடியாட்சி என்பது ஒரு கல்லறை போன்றது; அது வாங்கு வதை என்றும் மீட்டுத் தருவதில்லை! எட்வர்டு புல்லேர் லிட்டன் பெருமகனார். ஒரு சிறு தன்னல இலஞ்சக்குழுவினால் ஆட்சியாளர் அமர்த்தப் பெறும் பழைய முறைக்கு மாறாக, திறமையற்ற ஒரு பெரும்பான்மைக் கூட்டம் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையே குடியாட்சி எனப்படுகிறது! பெர்னார்டு ஷா. குடியாட்சியில் அமைப்பொழுங்கும் கட்டுப்பாடும் இருக்க வேண்டியதே. ஆனால் அதன் உயிர்நிலை தனிமனிதன் சுதந்திரமே யாகும். சார்லஸ் எலன்ஸ் ஹியூஸ். 19. சரிநிகர் நெறி நம் துன்பங்களனைத்தையும் ஒருங்கே திரட்டிச் சரிநிகராகப் பங்கு வைத்து, ஆளுக்கு ஒரு பங்கு கொண்டு செல்க என்றால், பெரும்பாலோரும் தம்தம் பங்கை மனம் நிறைந்து ஏற்றுச் செல்லத் தயங்க மாட்டார்கள். சாக்ரட்டிஸ். 20. செய்தித்தாள் மூன்று செய்தியிதழ்களின் எதிர்ப்புக்கு நான் நடுங்குகிறேன்; ஆனால் ஒரு நூறாயிரம் துப்பாக்கிகள் ஏந்திய படைவீரருக்கு நான் நடுங்குவதில்லை. நெப்போலியன். வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. திருவள்ளுவர். செய்தியிதழ் விடுதலையுரிமை ஒரு குடியாட்சி வாழ்வின் ஊன்றுகோல் ஆகும். வெண்டெல் எல். வில்கி. நம் விடுதலை, செய்தியிதழின் விடுதலையுரிமையைப் பொறுத்தது - அதைக் கட்டுப்படுத்தினால் நம் விடுதலை அழியா மலிருக்க முடியாது. ஜெஃவ்வெர்ஸன். பொதுமக்களின் நினைவாற்றல் பத்தாண்டுகள் நீடித் திருக்கு மானால், எந்த அமைச்சரும் இரண்டு தடவை பணித்துறைக்கு வர முடியாது. அது பத்து வாரம் நீடிக்க முடியுமானால் செய்திகளின் வாய்மை, கருத்துக்களின் பொருத்த அமைதி ஆகியவற்றில் கருத்துடையவர்களால் எத்தனை செய்தியிதழ்கள் ஏற்கப்பட முடியும்? போர்ட்ஸ்மத் கோமகன். 21. சட்டமுறையும் வரையறையும் சட்ட ஒழுங்கு ஓய்வுற்ற இடமே கொடுங்கோன்மை தொடங்குமிடம். (வில்லியம் பிட்) சாதம் கொமான். நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். திருவள்ளுவர். சட்டங்கள் தனி நிகழ்ச்சிகளை எண்ணிச் செய்யப்பட வில்லை. பொதுவாக மனித இனத்தை எண்ணியே. ஒரு பெரியார். வீடுகள் ஒன்றை ஒன்று சார்ந்தே நிலைபெறுவது போல், சட்டங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே நிற்கின்றன. எட்மண்ட் பர்க். சட்டங்கள் நூலாம்படை போன்றன. குளவி முதலிய பேர் இனங்களை ஊடாடவிட்டு, சிறிய ஈ, கொசுகு ஆகியவற்றை அகப்படுத்திக் கொள்ளும். ஜோனதன் ஸ்விஃப்ட். சட்டம் கண்டிப்பான வரையறையில்லாமலிருப்பதே அதன் மாபெரும் புகழ் ஆகும். (விருந்துரை) திரு. வில்பிரகன். நல்ல சட்டங்கள் வகுப்பது எளிது; அருமையாவது அவற்றை நடைமுறையில் வெற்றிபெற நடத்துவதில்தான் இருக்கிறது. வைக்கவுண்ட் பாலிங்புரோக். ஒருவன் எத்தனை உயர்வுடையவனாயினும், சட்டம் அதனினும் உயர்வு உடையதே. தாமஸ்ஃவுல்லர். சட்டங்கள் மிகவும் மென்மை யுடையவையாயிருந்தால் அவற்றுக்கு யாரும் கீழ்ப்படிய மாட்டார்கள். அவை மிகவும் கடுமையுடையவையாய் இருந்தால் பெரும்பாலும் நிறை வேற்றப் படுவதில்லை. ஃவாங்க்லின். கேடுள்ள, வெறுப்பூட்டத்தக்க சட்டங்களை ஒழிக்க வேண்டுமானால் அவற்றை வழுவற நிறைவேற்ற வேண்டும். அதனினும் சிறந்த வழி காண முடியாது. யுனிஸல் எஃகிரான்ட். சட்டங்களை ஆக்குவதினும் அவற்றை நிறைவேற்றிச் செயற்படுத்துவதே முதன்மை வாய்ந்தது. ஜெஃப்பெர்ஸன். சட்டங்கள் சில சமயம் தூங்கக்கூடும். ஒரு போதும் இறப்பதில்லை. சட்டக் கருத்துரை. சிறுமையுடைய சட்டங்கள் பெரும்படியான குற்றங்களை ஆக்குவன. ஊயீடா. நல்லார் சட்டங்களுக்கு அஞ்ச வேண்டுவதில்லை. தீயோரை அடக்கவும், அவர்களைக் காக்கவுமே அது அமைந்துள்ளது. மாஸிங்கர். நாட்டில் சட்டங்கள் பெருகுவது, மருத்துவர் பெருகுவது போன்றது. அது நற்குறியன்று. வால்ட்டேர். சட்டங்கள் ஏழைகைள வருத்தும்; செல்வர்களைத் தீண்டாது - அவற்றை இயக்குபவர் அவர்கள். கோல்டுஸ்மித். 22. வகுப்பும் வகுப்புணர்ச்சியும் ஒரு வகுப்பினர் உலகத்தை இருபெரு வகுப்பாக வகுப்பவர்கள்; மற்ற வகுப்பினர் அங்ஙனம் வகுக்காதவர்கள். நான் (இரு வகுப்பாக வகுப்பவனாயினும்) பிந்திய வகுப்பையே விரும்புகிறேன். பஞ்ச் பத்திரிகை. உலகம் இருசார்பாளர் அடங்கியது; ஒரு சார்பினர் செயல் செய்வோர்; மற்றையோர் செயலின் பயன் அடைவோர். எப்போதும் முதல் வகுப்பிலேயே சேர்ந்திருக்கப்பார். ஏனெனில் அதில்தான் போட்டி மிகக் குறைவு! டுவைட் மாரோ. இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. திருவள்ளுவர். மக்களை இன்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்; ஓயாது உழைத்துச் சாகிறவர்கள், ஓயாக் கவலையால் சாகிறவர்கள், நேரம் போகாமல் சாகிறவர்கள்! ஒரு பெரியார். பீவரிட்ஜ் அறிக்கைபற்றிக் கருத்துக் கூறுவோருள் மூன்று வகுப்பார் இருக்கிறார்கள். அதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்ப வர்களும் முதலிரு வகுப்பார்கள். அதை வாசித்துப் பார்த்தவர்கள் தான் மூன்றாவது வகுப்பினர். (முதலாம் சார்லஸ் மன்னரிடம் இச்சகமாயிருந்து மக்களைக் கெடுத்து வாழ்ந்த பக்கிங்ஹாம் கோமகளைப் பற்றிய கூற்று). டிரைடன். புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - புத்தகத்தைப் போற்றும் புலவரும் வேறு பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. நாலடியார். கடவுள் ஆடவர்களையும் படைத்தவர்; பெண்டிர்களையும் படைத்தவர்; ‘பக்கிங்ஹாம்’களையும் படைத்தார்! டிரைடன். இருவகை நல்லார்கள் இருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு - நம்மைக் காப்பதற்கென்றே பிறந்தவர் ஒரு சாரார், நம் துன்பங்களை உணரப் பிறந்தவர் மறு சாரார்! ஒரு பெரியார். செல்வம் குவிய மனிதர் சிதறுறுங்கால் தொல்லை பெருகும், சூழ்உலகு கேடடையும்! மன்னர் இளங்கோக்கள் வாழிலென், வீழிலென்? உன்னும் நொடியில் அவர் வாராரோ போகாரோ? ஆயின் ஒருநாட்டின் உயிர்போன்ற வேளாளர் மாயின் மறித்துப் பிறப்புறுதல் அரிதரிதே. (பாழ்பட்ட சிற்றூர்) கோல்டுஸ்மித். இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர். இளங்கோவடிகள். ஒருவர் தம் வகுப்பைப் பற்றிப் பெருமை கொண்டால், அவர் அதற்குரியவரல்லர்; அதனில் தாழ்ந்தவர் என்பதற்குச் சான்று வேறு வேண்டியதில்லை. ஸ்டானிஸ்லாஸ். 23. விடுதலை விடுதலை என்பது ஓர் எதிர்மறைப் பண்பன்று; உருப்படி யான; நுகரத்தக்க, ஒரு மெய்ப்பண்பு ஆகும். கார்ஃபீல்டு. விடுதலையினால் பொறுப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மனிதர் இதனால்தான் அது வகையில் அச்சமடைகின்றனர். பெர்னார்டு ஷா. விடுதலை நம் உடைமை ஆக வேண்டுமானால், அது கட்டுப் படுத்தப்பட வேண்டும், ஆயினும் இக் கட்டுப்பாட்டைச் சமூகம் எவ்வளவு கூடுதல் சகித்துக் கொள்ளும் என்பது அல்ல, எவ்வளவு குறைந்த அளவு சகித்துக்கொள்ளும் என்பதே ஒவ்வொரு அறிவுடை யோர் குழுவும் இடைவிடாது விழிப்புடன் நுணுகிக் கவனித்து வரவேண்டிய செய்தி ஆகும். எட்மண்ட் பர்க். தத்தம் விடுதலைபற்றி எல்லாரும் கருத்தொன்று பட்டேயி ருக்கிறோம். அது எவ்வளவு கிடைத்தாலும், அவ்வளவுக்கு நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பிறருக்கு எவ்வளவு விடுதலை என்பதைத் தான் ஒத்துக் கொள்வது அரிதாயிருக்கிறது. ஏனெனில், நமக்கு எவ்வளவு கூடுதல் கிடைக்கிறதோ, அந்த அளவு அதுபிறருக்குக் குறைகிறது. டாக்டர் ஜான்ஸன். நம் விடுதலையை நாம் நுகர்வது நாட்டின் ஆட்சித் துறையில் மட்டுமன்று. நாள் முறை வாழ்வில் ஒருவர்க்கொருவர் எப்போதும் அதை வழங்குகிறோம். அவரவர் மனம்போல் நடக்க விடுகிறோமே யன்றி, நாம் அதில் தலையிட்டுக் கண்டனம் செய்வதில்லை. இது ஏனெனில், அங்ஙனம் கண்டனம் செய்வது (சட்டப்படி) தண்டனை யாகாதானாலும், அதனால் அவர்கட்கு வருத்தம் உண்டாகும். பெரிக்ளிஸ். மனிதன் விடுதலை யுரிமையுடனேயே பிறக்கிறான். ஆனால் எங்குமே அவன் தளைப்பட்டிருக்கிறான். ரூசோ. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருவள்ளுவர். சுதந்தர நாட்டில் கூக்குரல் மிகுதி; ஆனால் துன்பம் குறைவு. வல்லாட்சி நடைபெறினும் நாட்டில் குறையிரத்தல் என்பதே கிடையாது. ஆனால் மக்கள் மனக்குறை மிகவும் பெரிது. கார்னாட். பிறர் விடுதலை மறுப்பவர்கள் தாமும் அதற்கு உரிய வராகார். தெய்வ நேர்மையின்கீழ் அவர்கள் நெடுநாள் அதனை நுகரவும் மாட்டார். ஆபிரகாம் லிங்கன். விடுதலையை நன்கு பயன்படுத்தும் தகுதி வரும்வரை, எவரும் அதற்கு உரியர் ஆகார் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையென்று கொண்டு பல அரசியல் அறிஞர்கள் பசப்புவ துண்டு. நீந்தக் கற்றபின் அன்றி எவரும் நீரில் இறங்கக் கூடாதென்று பேசிய பழைய கதையில் வரும் படித்த முட்டாள் கூற்றையே இது நினைவூட்ட வல்லது. மக்காலே. நமக்கு நலமெனத் தோன்றுவதை நாம் விரும்பும் முறையிலேயே நம்மைச் செய்யவிடும் உரிமை தருவதே விடுதலை. அதே உரிமையை நாம் பிறருக்கு மறுக்காமலும், அவர்கள் அதைப் பெறுவதை மறுக்காமலும் இருக்கும்வரை அது உண்மையான விடுதலை ஆகும். ஜான் ஸ்டூவர்ட் மில். வெறும் அரசியல் விடுதலை எவ்வளவு இருந்தாலும் ஏழ்மையும் பசியும் உடைய மக்களுக்கு அதனால் மன நிறைவு ஏற்படாது. மார்ஷல் லெனின் வெல்வெட்டுப் பட்டு மெத்தையில் பிறருடன் இடர்ப் பட்டு அமர்வதினும், எனக்கெனத் தனி உரிமையுடைய ஒரு பூசணிக்காய் மீது உட்காருவதையே நான் பெரிதும் விரும்புவேன். தோரோ. தனி மனிதன் உடலுக்கு உடல்நலம் எப்படியோ, அப்படியே நாட்டு நலனுக்கு உகந்தது விடுதலை. உடல் நலமின்றி மனிதனால் இன்பங்களை நுகர முடியாது; விடுதலையின்றி நாட்டு மக்களும் இன்ப வாழ்வினைப் பெற முடியாது. பாலிங்புரோக். விடுதலையே, ஆம், விடுதலையே வேண்டுவது என் சிறை ஒரு பொன்னுலகாயிருந்தால் கூட, அதன் பொன்மதிலைத் தாவிக் கடப்பதற்கே நான் துடிதுடிப்பேன். டிரைடன். வேறு எந்த விடுதலையும் எனக்கு வேண்டாம். அறிவை அறிய, ஆராய, நம்புவதை நம்ப, அகச்சான்றுக்கேற்ப இவற்றைக் கூற, இவற்றுக்கான விடுதலையே எனக்கு வேண்டும். மில்ட்டன். 24. உடல் நலம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தமிழ்ப் பழமொழி. வாழ்க்கை இன்பங்களனைத்தின் உயிர் நிலையாவது உடல் நலமே; அஃது இல்லாதவிடத்து அவை சுவையற்றவை; உயிரற் றவை என்று கூடக் கூறலாம். ஸர் வில்லியம் டெம்பிள். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயி ர்வளர்த் தேனே. திருமூலர். ஒரு நாட்டு மக்களின் உடல்நலமே அம்மக்கள் நல்வாழ் வுக்கும் அடிப்படை; அவர்கள் ஆற்றலால் வரும் நாட்டின் ஆற்றலுக்கும் அடிப்படை அதுவே. பெஞ்ஜமின் டிஸ்ரேலி. உன் உடல்நலத்தில் அக்கறை கொள்; அதை நீ பெற்றால், உன் நன்மனச் சான்றுக்கு அடுத்தபடி அது வகையிலேயே நீ இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாவாய். ஏனெனில், மனிதர் பெறும் பேறுகளுள் இரண்டாவது பேறாகக் கொள்ளத் தக்கது அதுவே. (முதலதைப் போலவே) பணத்தால் பெற முடியாத பேறு அது. ஜஸாக் வால்ட்டன். உடல்நல முடையவன் உள்ளத்தில் நல்ல அவர்களை உடையவன்; உள்ளத்தில் நல் அவா உள்ளவனுக்கு உள்ள தல்லாதது எதுவுமில்லை. அராபிப் பழமொழி. மனம் நலத்தின் ஆகும் மறுமை. திருவள்ளுவர். ஒரு நாட்டு வாழ்வின் போக்கு அடிக்கடி அதன் முதல மைச்சரின் உணவுச் செரிமானம் சரியாயிருக்கிறதா, அல்லதா என்பதையே பொறுத்ததாயிருக்கிறது! வால்ட்டேர். உடல்நலம் உடல் நிலையைச் சார்ந்ததன்று, மன நிலையைச் சார்ந்தது. மேரி பேக்கர் எடி. தன்னுடன் விருந்துண்ணத் தூண்டும்படி அவன் தன் விருந்துணவு வகைகளின் பட்டியலை என்னிடம் காட்டினான். நான் அதனை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, “உம் உண்டிப் பட்டியல் எனக்குத் தேவையில்லை. உடனுண் போர் பட்டியலைப் பார்த்துத்தான் நான் வர இணங்கக்கூடும்”, என்றேன். ஸ்விஃப்ட். நடிகர் எட்மண்ட்கீன் தம் நடிப்புக்கேற்ற உணவே உண்டு நடிப்பாராம். கொடுங்கோலனாக நடிக்குமுன் பன்றிக்கறியும், கொலையாளியாக நடிப்பதற்கு முன் பச்சை மாட்டுக் கறியும், காதலனாக நடிப்பதற்கு முன் பதம் செய்த ஆட்டுக் கறியும் உண்பாராம்! ஸிட்னி ஸ்மித். உன் மன நிறைவுக்காக உண்; பிறர் மன நிறைவுக்காக உடு. ஃவிராங்க்லின். ஆரணங்குகளல்ல ஆடைகளை அணிவது; ஆடைகளே ஆரணங்குகளை அணிந்து கொள்கின்றன. எச். எல்மெங் கென். பெண்டிர் தூக்குமேடைக்குச் செல்ல நேர்ந்தால், அப்போது கூட ஆடை சிங்காரித்துக்கொண்டு தூக்கு மேடை செல்வதற்காகச் சிறிது நேர ஓய்வு கேட்பர். கிராம்ஃவோர்ட். 25. உழைப்பும் ஓய்வும் உழைப்பே நம் குடிக்கும் வகுப்பின் கூற்றாயமைந்துள்ளது. (குடியல்ல நம் உழைப்பு, வகுப்பின் கூற்றுவன்). ஆஸ்கார் ஒயில்டு. இன்றியமையா முட்டுப்பாடே புதுமைக் கண்டுபிடிப்பு களின் தாய் என்று நாம் கூறுகிறோம். ஆனால் ஓய்வே சிந்தனை, கலை ஆகியவற்றின் தாய். பெருந்தகை ஆல்ஃவிரடு ஸிம்மர்ன். கற்றறிந்தவர் அறிவு அவரவர்களுக்குக் கிட்டும் ஓய்வு வாய்ப்பின் பயனே. எக்ளிஸியாஸ்டிக்கஸ். ஓய்வே மெய் விளக்கத்தின் தாய். தாமஸ் ஹாக்ஸ். உழைப்பாளிக்கு உழைப்பால் ஏற்படும் வலுத்தேய்வு குறைவுகளுக்குத் தக்க ஓய்வு கட்டாயம் தரப்பட வேண்டும். போப்லியோ. உழைப்பின் நோக்கம் ஓய்வு. அரிஸ்டாட்டில். தொழிலுடையோருக்குப் போதிய ஓய்வு, ஓய்வுடையோ ருக்குப் போதிய தொழில், இவை இருந்தால் உலகத்தின் குறைகள் குறைவுறும். திருமதி திரெல். உழைப்பிற்கினிய சுவையூட்டுவது ஓய்வு. புளூட்டார்க். ஓய்வுட னுழைப்பே நீடித்து உழைக்கும். ஓவிட். 26. மருத்துவர் திருவாளர் உணவு, திருவாளர் ஓய்வு, திருவாளர் மகிழ்ச்சி ஆகிய மூவருமே தலைசிறந்த பண்புடைய மருத்துவர் ஆவர். ஸிட்னி ஸ்மித். நல்ல மருத்துவர் கழுகின் கட்புலனும், அரிமாவின் மன உரமும் ஒரு நங்கையின் மென்கரமும் உடையவராயிருத்தல் வேண்டும். ஸர்ஃவிலிங் சிட்னி. மருத்துவன் குணப்படுத்துகிறான்; இயற்கை குணம் காண்கிறது. அரிஸ்டாட்டில். இயற்கை, காலம், பொறுமை இம்மூன்றும் மூன்று தலை சிறந்த மருத்துவர் என்னலாம். எச். ஜி. போன். ஒரு நாள் ஒரு பழம் உண்க; ஒரு நாளும் மருத்துவரை நாட வேண்டி வராது. ஆங்கிலப் பழமொழி. மருத்துவர் செய்யும் நன்மையைவிட இயற்கை செய்யும் நன்மை மிகுதி. ஆலிவெர் கிராம்வெல். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். திருவள்ளுவர். மருத்துவனின் மிகச் சிறந்த அறிவு ஊகமே. பெரும்பாலாக அவர்கள் கருத்துக்கள் போலிக் கருத்துக்கள். அவர்கள் வெற்றி, நோயாளியின் விருப்பங்களையறிந்து அவர்கள் நடப்பதைப் பொறுத்ததே. இதனால் அவர்கட்கு ஆதாயமும் உண்டாகிறது. ஸர் ஜான் பிராம்ப்டன். வழக்கறிஞர்களைப்போல மருத்துவரும் மாறுபட்ட கருத்து கொள்ளுவதுண்டு. வழக்கறிஞர் மாறுபாடுகளில் தீர்ப்புக் கூறுபவர் மன்ற நடுவர். ஆனால் மருத்துவர் மாறு பாட்டிடையே யார் கூறுவது! தவறு என்பதைக் காட்டுபவன் நோயாளியின் சவப்பெட்டி அமைப்பவனே! ஜேம்ஸ் வாலர். மருத்துவரும் அரசியலறிஞரும் ஒருவகையில் ஒப்பாவர். உடல் அல்லது அரசியலின் அமைதியை அவர்களுள் ஒரு சாரார் காப்பர்; மற்றொரு சாரார் குலைப்பர். ஒரு பெரியார். (அடிக்கடி) நோயைவிட மருந்து கொடிதாயிருப்பதுண்டு. போமண்ட் ஃவ்ளெச்சர். உலகிலுள்ள மருத்துவரின் மருந்துகளத்தனையையும் கடலகத்தில் போட்டமிழ்த்திவிட்டால் அது மனித உலகுக்கு நன்மையா யிருக்கும்; மீன்களின் உலகிற்கு மட்டுமே அது தீமை பயக்கக் கூடும்! ஹால்ம்ஸ். மருத்துவர் என்பவர் தமக்குத் தெரியாத மருந்துகளை, தமக்குச் சிறிதளவும் தெரியவராத நோய்களைத் தீர்க்கும் படி, தமக்கு எவ்வகையிலும் அக்கறையற்ற மனிதர்களுக்குக் கொடுப்பவரே ஆவர். வால்ட்டேர். மருத்துவர் ஒவ்வாரென்னில் மன்னி உரைப்பார் யாரே? கருத்துற ஆயும்யாங்கள் மாறுறின் கருத்தும் என்னாம்? கவிஞர் போப். 27. உரையாடல் இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. திருவள்ளுவர். நற்செயல்கள் மூலம் பிறரை நண்பர்களாக்க முயல்வதை விட, வன்சொற்கள் மூலம் அவர்களைப் பகைவராக்கமா லிருப்பது எளிது. பர்ட்டன் காலின்ஸ். நல்ல தோழமை, நல்ல உரையாடல், இவைபிரண்டுமே நல்லொழுக்க வாழ்வின் நாடி நரம்புகள். ஜஸாக் வால்ட்டன். ஏடுகளிலிருந்து நான் கற்பதைவிட உரையாடல்களிலிருந்து கற்பதே மிகுதி. ஸி. ஜே. பாக்ஸ். கற்றலிற் கேட்டலே நன்று. முன்னுறை அரையனார். கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. திருவள்ளுவர். நல்லுரையாடலின் கூறுகள் வாய்மை, நல்லுணர்வு, நகைத் திறம், சொல்திறம் ஆகிய நான்குமே. ஸர். வில்லியம் டெம்பிள். நல்ல உரையாடலுக்கு நன்கு பேசும் திறன் எவ்வளவு சிறப்போ, அவ்வளவு நன்கு கவனித்துப் பொறுமையுடன் கேட்கும் திறனும் வேண்டும். அது போல் கவர்ச்சி தருவது பிறிதில்லை. சீனப் பழமொழி. உரையாடலின் மறைதிறவு மற்றவர் விருப்பம் பேசுவதா, கேட்பதா என்றறிவதே. ஸ்டீல். 28. பெருமையும் சிறுமையும் பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர். அதிவீரராம பாண்டியர். தம்மை என்றும் சிறியர் என்றெண்ணாதவர் ஒரு சிலர் உண்டு; இவர்களே முற்றிலும் சிறுமை உடைய ஒரு சிலரும் ஆவர்! ஜி. கே. செஸ்டர்ட்டன். போலிப் பகட்டினால் இதுவரை யாரும் பெருமை பெற்ற தில்லை. ஸாமுவேல் ஜான்ஸன். பெருத்த குற்றங்கள் பெரியாருக்கே உரிய சிறப்புரிமையாம். லாருஷ்ஃவூகோல்ட். சிலர் பெரியாராய்ப் பிறக்கின்றனர். சிலர் பெருமையை ஆக்கிக் கொள்கின்றனர்; இன்னும் சிலர்மீது பெருமை திணிக்கப் படுகிறது. ஷேக்ஸ்பியர். பெரியார் பெரியாராயிருப்பதன் காரணம் நாம் அவர் களிடம் மண்டியிடுவதுதான். நாமும் நிமிர்ந்து நிற்போம். ஸ்டர்னர். தக்கார் தகவிலர் ஆதல் அவரவர் எச்சத்தாற் காணப் படும். திருவள்ளுவர். 29. நகைத்திறம் நீண்ட ஆயுளுக்கு நன்மருந்தாக உடற்பயிற்சி, நகைப்பு ஆகிய இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். என்னளவில், நான் தயங்காமல் நகைப்பையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன். ஸர் சார்லஸ் வில்ஸன். ஒரு நகைத் துணுக்கை விளக்கமுயன்றால் போதும், நகைத் திறத்தைக் கொலை செய்ய வேறு எதுவும் வேண்டாம். மாக்ஸ் ஈஸ்ட்மன். நகை, நகைத்திறம் பற்றி ஒருவன் ஒரு நூல் எழுத முனைவ தானால், அதனை ஒரு இலக்கிய நோயின் முன்னறி விப்பு என்றே கருதலாம். ஏனெனில் இம் முயற்சியே அதன் ஆசிரியரிடம் அவ்விரு திறங்களும் இல்லை என்பதற்கான அறிகுறி ஆகும். பெர்னார்டு ஷா. ஒருவன் தன் நேரத்தின் ஒரு பகுதியை நகையாடுபவர் களுடன் கழித்தல் நலம். டாக்டர் ஜான்ஸன். நகைப்புத் திறம் மனிதனுக்கு மட்டுமே இருப்பது ஏன் என்பது எனக்கு நன்கு விளங்குகிறது - கடுந் துயருக்கு அவனே மிகுதி ஆளாவதால், நகைப்புத் திறனை அவன் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. உயிரினங்களில் துயர் மிகுதியும் அவலமும் உடைய அவனே, மிகுதியான மகிழ்ச்சிக்கும் உரியவனாயிருப்பது பொருத்த மானதே. நீட்ஷ். முறுவலித்தற்குரிய நேரம் வேறு; நகைத்தற்குரிய நேரம் வேறு. ஆனால் நகைப்புறத்திறத்தை நாம் மறந்து வருவதுடன் பல்லிளித் தலையே முறுவலிப்பாகக் கொண்டும் வருகிறோம் என்பது வருந்தத்தக்கது. எச். கெம்பால் கூக். தன்னிடமில்லாத பண்புகளுக்கு ஓர் இழப்பீடாகவே மனித னுக்குப் புனைவாற்றல் தரப்பட்டுள்ளது. அக்குறை பாடுபற்றி அவனுக்கு ஆறுதல் அளிக்கவே நகைத்திறம் தரப்பட்டுள்ளது. ஓர் அறிஞர். கீழ் மக்கள் எப்போதும் சிரிப்பர். முறுவலித்தல் செய்யார்; பண்பிற் பயின்ற உயர்வுடையோர் புன்முறுவல் பூத்தவராகவே இருப்பர். அவர்கள் சிரித்தல் அருமை. செஸ்ட்டர்ஃபீல்டுப் பெருமகனார். வாழ்க்கைப் புயலில் நகைத்திறம் ஓர் அரிய தற்காப்பிடம் ஆகும். கூருணர்ச்சியுடைய ஒருவன் நகைத்திற மற்றவனாயிருந் தால், அவ்வுணர்ச்சிகளால் அவனடையும் துன்பம் மிகவும் பெரிது. அறிஞர் பெர்னார்டு ஹார்ட். வசைத்திறம் வாய்ந்த கூரிய நகைத்திறம், கூர்மை மிக்க கத்தியைப் போன்றது. ஆனால் கூர்மை மிக்க கத்தியைப் போலவே அது தன்னைப் பயன்படுத்துவாரையும் வெட்ட வல்லது. ஆரோ ஸ்மித். பொதுமக்கள் நகைத்திறத்தை இன்னும் மறந்துவிட வில்லை; அவர்கள் இன்னும் நமக்கு அதன் மறைதிறவைக் கற்பிக்கக்கூடும். ஆரோஸ்மித். இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில். திருவள்ளுவர். நம்மைப் பித்துக்கொள்ளிகளாகாமல் தடுத்து வரும் நல்லாற்றல் நகைப்புத்திறனே. ஹென்ரி பெர்க்ஸன். உருக்கமான கோயில் மேடைச் சொற்பொழிவொன்றைக் கேட்ட அனைவரும் கண்ணீர் வடித்தனர். ஒருவன் மட்டும் அசையாதிருந்தான். இது பற்றி அங்குள்ளார் அவனை வினவிய போது அவன் “ஐயா, நான் இவ்வூரல்ல’ என்று கூறினானாம். அவன் கண்ட கண்ணீருக்குரிய பண்பு நகைப்புக்கும் உண்டு. நகைப்பு எங்கும் இயற்கையாக எழுவதாக எவ்வளவு தோற்றினாலும், அது பரந்த ஓர் ஒப்புமைக் கூட்டுறவில், தோழமைத் தொடர்பு காரணமாக ஏற்படுவதேயாகும். ஹென்ரி பெர்க்ஸன். நகைப்பு கட்டாயமாக உனக்கு நலஞ் செய்வது. நகைத்த வுடன் உன் குருதிகளிலெங்கும் ஒரு மின்னோட்டம் போன்ற ஓட்டம் ஏற்படுகிறது. ஆற்றலடக்கி வைத்துள்ள கசியாக் குழல்களிலிருந்து ஒரு சக்தி வெடித்து நாடி நரம்புகள் எங்கும் பரவுகிறது. அது தொட்ட இடமெல்லாம் உயிர் தருகிறது. கெரால்டு ஹெர்டு. நகைக்க முடியாத மனிதன் துரோகம், சூழ்ச்சி, அழிமதி ஆகியவற்றுக்கே உரியவன். அவன் வாழ்நாள் முழுவதுமே ஒரே சூழ்ச்சியாக இருக்கும் என்று கூறினால் மிகையாகாது. கார்லைல். நகைத்திறன் உரையாடலாகிய உணவுக்குச் சுவையூட்டும் உப்பு - அதுவே உணவாய் விடாது. ஹாஸ்லிட். நகைமன் இயன்மாதணி; பலர்நாடும் தகை; ஒரு நாவுரைச் சால்பு. கவிஞர் போப். பெருநகையும் ஆன்ற பெரியார் உரையும் ஒருதகையாம் ஒண்மைத் திறத்தே - சிறுதகையார் தேறாச் சிறுநகை செப்பமறச் சிரழிக்கும் மாறாப் பழிசூழும் மற்று. ஷேக்ஸ்பியர். நகைச்சுவை மணிகள் இந்நூலில் புதியனவும் நல்லவுமாக எவ்வளவோ உள்ளன வாம். ஆனால் அந்தோ, நல்லன எவையும் புதியன அல்ல; புதியன எவையும் நல்லன அல்ல! லெஸ்ஸிங். சுவடிகளை இரவல் கொடுக்காதேயுங்கள்; அதனை எவரும் திருப்பிக் கொடுப்பது கிடையாது. என்னுடைய நூல் நிலையத்திலுள்ள நூல்கள் யாவுமே இரவலாகப் பிறர் கொடுத்தவைதான்! அனதோல் ஃபிரான்சு. 30. மொழி சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. திருவள்ளுவர். எண்ணங்களின் உடையமைதி மொழி. அறிஞர் ஜான்ஸன். மொழி கருத்துக்களைக் கொண்டுலாவும் ஊர்தி மட்டுமன்று; கருத்தாராய்ச்சித் தொழிலுக்கான ஓர் ஒப்பற்ற நல்ல கருவியுமாகும். சர் ஹம்ஃப்ரி டேவி. மொழி மனித உள்ளத்தின் படைக்கலச்சாலை; அதில் பழம் புகழ்ச் சின்னங்களுடன் வருங்காலப் புகழுக்குரிய போர்க் கருவிகளும் வைக்கப் பெற்றுள்ளன. காலரிட்ஜ். மெல்லிய இனிய மேருவ வருதகுந இவை மொழியாம். சங்கப்புலவர் அம்மூவனார். ஒரு மனிதன் பண்பை நன்கு தெரிவிக்கும் கருவிகளிற் சிறந்தது மொழியே; ஒருவன் இயல்பை உணர வேண்டுமானால், அவனைப் பேச விடுக. நம் உள்ளத்தின் உள்கடந்த உட்பகுதி யிலிருந்து அது வெளிப்படுகிறது. பென் ஜான்ஸன். மொழி, மாந்தர் போற்றுதலுக்குரிய ஒன்று. அது வாழ்க்கை யிலிருந்து எழுவது - வாழ்க்கையின் பேரிடர்கள், பெருமகிழ்வு களிடையே; அதன் தேவைகள், அதன் சோர்வுகள் ஆகியவற் றினிடையே அது மலர்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அதனைப் பேசும் மக்களினத்தின் உயிர்நிலைப் பண்புகள் அடங்கியுள்ளன. இ. டப்ள்யூ. ஹால்ம்ஸ். 31. ஒழுக்கம் ஒழுக்கம் விழுப்பந் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். திருவள்ளுவர். சமய வகைகள் பல; ஏனெனில் அவை மனிதனால் ஆக்கப்பெற்றன. ஒழுக்கம் எங்கும் ஒரே நிலைப்பட்டது; ஏனெனில் அது கடவுளுக் குரியது. வால்ட்டேர். ஒழுக்கத்தால் மட்டும் ஒருவன் சமயப் பற்றாளனாக முடியாதிருக் கலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் ஒருவன் சமயப் பற்றாளனா யிருக்க முடியாது. கலைமகன் வில்ஸன். மக்கள் எதில் ஈடுபட்டுப் பெருமை கொள்கிறார்களோ, அதுவே அவர்கள் கோட்பாடும், அவர்கள் ஒழுக்கமும் ஆகும். ஜே. மார்ட்டினோ. அறிவுத்திறத்தில் கடைசி எண்ணமே தலைசிறந்த எண்ணம்; ஒழுக்கத்துறையிலோ முதல் எண்ணமே தலைசிறந்தது. ராபர்ட் ஹால். சமயப்பற்றற்ற ஒழுக்கம் வேரில்லாமரம்; ஊற்றுக் கசிவில்லாத ஓர் ஓடை; அது மணல்மீதமைந்த மனை. மழையில்லாத போது அது வாழ்வதற்கெளிதாம். ஆனால் புயல் வந்தால் தங்காது. பெர்னார்டு ஷா. ஆழ்ந்த ஒழுக்க உணர்வில்லாவிட்டால், உயர்நடை ஒழுங்கு இருக்க முடியாது. எமெர்ஸன். 32. மெய்யறிவு ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. திருவள்ளுவர். பொது அறிவெல்லை கடந்த நிலையே மெய்யறிவு. காலரிட்ஜ். முனைத்த மெய்யறிவு என்று நாம் கூறுவது முந்திய தலைமுறைகளின் மெய்யறிவுத் தொகுதியின் புது விளைவே - நம் மிகச் சிறந்த தற்காலச் செயல் முறைகள் முறிந்து பட்டமரத்தின் வேர்களில் தோன்றிய புது முனைகளே. எச். டப்ள்யூ. பீச்சர். டெல்ஃபித் தெய்வ மொழியாளர், கிரேக்கரில் சிறந்த அறிவாளி என்று என்னையே குறிப்பிட்டது ஏன் தெரியுமா? தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதைத் தெரிந்தவன் கிரேக்கர்களுள் நான் ஒருவனே. ஸாக்ரட்டீஸ். அறிவின் பிறப்பிடம் எது, அது எங்கேயுள்ளது, அது யாரால் இயக்கப்படுவது - இவற்றை அறிந்தவன் மெய்யறிஞன். ஏ. ஏ. ஹாட்ஜ். ஒவ்வொருவர் அறிவினும் உயரிய அறிவு ஒன்றுண்டு; அதுவே அனைவரின் அறிவு. டாலிராண்ட். சொல் மிக அருகிய இடமே அறிவு மிகுந்த இடம். ஸாஃபக்ளிஸ். அறிவை அறிவது மெய்யறிவன்று; அறிவைச் சரிவரப் பயன்படுத்த அறிவதே மெய்யறிவு. ஸ்பர்ஜியன். மெய்யறிவாளன் உண்மையான அறிவுலகில் ஒரு தொடக்க வகுப்புக் குழந்தை. அவன் இயற்கையின் புரியாப் புதிர் எழுத்துக் களால் எழுதப் பெற்ற சுவடியைப் படிக்கிறான். அதற்கு விளக்கம் நாடுவதற்கான சொல்விளக்க நூலோ, எல்லையிலா ஊழிதான். கார்லைல். உடலுக்கு உடல்நலம் எப்படியோ அப்படியே மெய்யறிவு உளத்துக்கு. ராஷ்ஃபூகால்டு. நம் உண்மையான அறிவு நம்மை நாம் திருத்திக் கொள்ள உதவும்படி, நம் குற்றங் குறைபாடுகளை உணர்வதுதான், - திருந்தும் வகைதெரிவது அரிது; குற்றம் தெரிவதுகூடச் சிறப்பே. அராபி நல்லுரைகள். கடவுள் பொன்னையும் அளித்துள்ளார், மெய்யறிவையும் அளித்துள்ளார். ஆனால் பொன்னைப்போலவே மெய்யறிவும் அளிக்கப் பெற்றுள்ளது. கடவுள் அளித்த பொன் களஞ்சியத்தி லில்லை, சுரங்கங்களினுள் கிடக்கின்றது. அராபி நல்லுரைகள். இவ்வுலகு பற்றிய அறிவு மனிதருக்கு எங்குமிகுதியோ, அங்கு அவ்வுலக அறிவு குறைவு என்பதை நன்கு காணலாம். கிப்ஸன். “பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை; அருளிலார்க் கவ்வுலக மில்லாகி யாங்கு”. திருவள்ளுவர். அறிஞர் மனிதனை உணர்வது, குதிரைக்காரர் குதிரை காண்பது போன்றதே - செல்வம், மதிப்பு, பதவி ஆகியவை குதிரையின் சேணம், கடிவாளம் முதலியவையே. ஸிஸீல். ஒரு தலைமுறையின் அறிவு மறு தலைமுறையின் மடமை. ப்ர்ஸ்ட்லி. அறிவின் ஒழுங்குகளை அறிந்தும் அவற்றை வாழ்க்கையில் வழங்காதவன், நன்கு உழுதும் விதையாதவன் போன்றவனே. ஸாதி. முழுநிறை அறிவு நாற்கூறுடையது. அவையே அறிவு அதாவது நேர்மையான செயல் செய்யும் ஒழுங்கு முறை; நேர்மை, அதாவது தனி வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் ஒப்ப நடக்கும் நிலை; வீரம், அதாவது இடர் கண்டு விலகாது ஏற்றல்; தன்னடக்கம், அதாவது அவாவை அடக்கி வழிப்படுத்தல். பிளேட்டோ. மெய்யறிவர் உள்ளம் பளிங்கு போன்றது. அது வானகத்தின் ஒளியை ஏற்ற நமக்குத் தருகிறது. ராஷ்ஃபூகால்டு. 33. அன்பு அன்பு தானே கொடுக்கும், தன்னையே கொடுக்கும்; ஆனால் அதை விலைக்குப் பெற முடியாது. லாங்ஃவெல்லோ. அன்பிலார் எல்லாந் தமக்குரியர், அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு. திருவள்ளுவர். நாம் எதில் அன்பு செலுத்துகிறோமோ, அதுவே நம்மை உருவாக்கி நம் பண்பாயமைகிறது. கெதே. அன்புக்கு அழிவு இல்லை; அன்புக்குரியவர் அதனை ஏற்கா விட்டால்கூட, அன்பு செய்பவரிடமே அது மீண்டு அவரைக் கனியச் செய்து தூய்மைப்படுத்தி உயர்வுறுத்தும். வாஷிங்டன் இர்விங். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார். திருமூலர். அன்பு கடவுளின் வடிவுரு; உயிரற்ற உருவன்று, உயிருடைய உரு; கடவுளியல்பின் நிறைநலப் பண்புகளின் உயிரியங்கும் வடிசாற்றின் சாயல் அது. மார்ட்டின் லூதர். அன்பு செய்யும்வரை மனிதன் ஒழுக்கக் கேடுடையவனாக முடியாது. சார்ல்ஸ் லாம். இவ்வுலகில் நாம் பெறும் பேரினத்தின் மணிமுடி ஒருவர்க் கொருவர் அன்பு காட்டுதலே. மீன்ட்டல். கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே அரும் பொருள் அன்பு. அது நெஞ்சுடன் நெஞ்சை, உள்ளத் துடன் உள்ளத்தை, உயிருடன் உயிரைப் பிணைக்கும் ஒரு வெள்ளித்தளை. சர் வால்ட்டர் ஸ்காட். அன்பு என்றும் முன்பின் ஆய்ந்து தயங்குவதில்லை - அது வரையறையின்றிக் கொடுக்கிறது; கருத்தற்ற ஊதாரி இளைஞன் போலக் கொடுக்கிறது. கொடுத்தபின அது துடிக்கிறது - மிகுதி செய்யத் தவறிவிட்டோமோ என்று துடிக்கிறது. லூனா மோர். அன்பிற்கு முண்டே அடைக்கும்தாழ்; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். திருவள்ளுவர். அன்பு உலகைக் காண்பது கண்கொண்டல்ல, உளங் கொண்டு. ஷேக்ஸ்பியர். விரும்பி அன்பு செய்தல் நன்று; விரும்பாது அது செய்தல் அதனினும் நனிநன்று. ஷேக்ஸ்பியர். வாழ்வின் மிகச் சிறந்த இன்பம் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பது - நம் பண்புகளுக்காக நேசிக்கப் படுகிறோம் என்பதை விட, பண்புகள் இல்லாதவிடத்தும் நேசிக்கப்படுகிறோம் என்பதே. விக்டர் ஹியூகோ. ஆடவர் அன்பு செய்வதைவிட, பெண்டிர் மிகுதி அன்பு காட்டுகிறார்கள் என்று கூற முடியுமோ, முடியாதோ - ஆடவரினும் அவர்கள் நல்லன்பு காட்டுகிறார்கள் என்று கட்டாயம் கூற முடியும். துபே. 34. கடவுள் பொருள்களின் இயல்பில் மனிதன் உள்ளத்தால், அறிவால், ஆற்றலால் முற்ற உணரமுடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. மனிதனால்கூட அறியப்பட முடியாத இதனை ஆக்கும் பொருள் மனிதனியல்பு கடந்ததாகவே இருக்க வேண்டும். இது கடவுளை யன்றி வேறு யாதாகத்தானிருக்கக் கூடும்? ஸிஸரோ. ஆங்கில (ஜெர்மானிய) இனத்தவர் கடவுளைக் குறிக்க வழங்கிய சொல்லிலேயே (ழுடின) ஒருதனி அழகு இருக்கிறது - நன்மை அவர் பண்புகளின் சிறப்புக்கூறு. ஆதலால் அவ்வடிப்படை யிலேயே அப்பெயர் அமைந்தது. டர்னர். எல்லா இடமும் மையம், ஆனால் சுற்றுவட்டத்தை எங்கும் காணோம்! அவ்வெல்லையிலா மாபெரு வட்டமே கடவுள். எம்பிடாக்ளிஸ். கடவுள் என்பதற்குரிய எகிப்தியரின் சொற்குறி ஓவிய எழுத்துமுறை வடிவம் செங்கோலில் பொறித்த ஒரு கண் - எல்லாம் கண்டு, எல்லாம் இயக்குபவர் அவர் என்பதை அது குறிக்கிறது. பார்க்கர். கடவுளைப்பற்றிய தவறான கருத்துக் கொள்பவரை விட, கடவுளைப் பற்றிக் கருதாதவரே நல்லவர். பிந்தியவர் நம்பாதவர் மட்டுமே, முந்தியவர் அவரை அவமதிப்பவர். புளூட்டார்க். உலகின் பருமையிலும் நுண்மையிலும் நாம் ஒருங்கே கடவுளின் அடிச்சுடுகளைக் காணலாம். இயற்கையின் எல்லை யளவில் அவர் திருத்தவிசின் திருச்சுழல்விலும், மின்மினியின் நுண்சிறகொளியிலும் அதனைக் கண்டு களிக்கலாம் வில்லியம் கூப்பர். கடவுள் இல்லை என்று கருதுபவர் (உலகை உணர) வேறு ஒரு கடவுளைப் புனைந்துருவாக்கியே ஆக வேண்டும். வால்டேர். கடவுள் பெரியர், ஆகவே மக்கள் அவரை நாடுவர்; அவர் நல்லவர், ஆகவே அவரைக் காண்பர். ஜான் ஜே. கடவுள் விருப்பத்திற்குரிய மனிதர் இருவகையினர் - கடவுளை அறிந்தவர், இவர்கள் அவர் வழிநின்று செயலாற்றுவர். கடவுளை அறியாதவர், இவர்கள் அவரை நாடுவர். பேனின். வாய்மை அவர் உடல்; ஒளி அவரது நிழல். பிளேட்டோ. “கடவுளுக்கு நான் அஞ்சுகிறேன்; கடவுளுக்கு அடுத்தபடி, கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுகிறேன்!” ஸாதி. சொற்பதம் கடந்த அப்பன் தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும், ஆளலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. மாணிக்கவாசகர். 35. பெண்மை பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப. திருவள்ளுவர். ஒரு சாராருக்காக மற்றொரு சாராராகவே ஆண், பெண் இருபாலாரும் அமைந்துள்ளனர். அறிவமைதியுடனும், அன்பமைதியுடனும் இரு திறத்தினரும் ஒத்து வாழ்வதன் மூலமே வாழ்க்கை நலமும் வாழ்க்கைக் கடமைகளும் நிறைவெய்தி, வாழ்க்கைப் பயனாகிய இன்பம் கிட்டும். டப்ள்யூ. ஹால். இருபாலாருள் ஒரு பாலாரை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் எவரும், மனிதப் பண்பிற் குறைபட்டவராகவே இருக்க முடியும். “இணைத்தது இறைவன்; மனிதன் இணை பிரிக்கா திருப்பானாக,” (விலிலிய நூல்) ஸி. ஸிம்மன்ஸ். இருபாலாருள் எப்பாலரிடையே என்ன சீர்திருத்தம் நிகழினும், அதனை மறுபாலரிடம் காணாதிருக்க முடியாது. ஏனெனில், ஆண்பாலார் திறங்களைப் பெண்பாலாரும், பெண்பாலார் திறங்களை ஆண்பாலாரும் நிழற்படுத்திக் காட்டும் நிலைக் கண்ணாடிகள் போன்றவரே யாவர். ஒரு திறத்தவர் செப்பம் மறு திறத்தவர் செப்பத்தின் அளவுக்கொத்தாகவே இருக்கும். கால்ட்டன். சிந்தனைக்கு அவன்; வீரத்துக்கு அவன். மெல்லியல்புக்கு அவள்; இனிமைக்கும், நயத்துக்கும் அவள். கடவுளுக்காக அவன்; அவனிடமமைந்த கடவுள் தன்மைக்காக அவள். மில்ட்டன். கால மாறுபாடுகளிடையே மாறுபடாப் பொருள் ஒன்று உண்டு. அதுவே பெண்மை நலம் உடைய பெண். ஜாபினா ராஃஸ்டன். மனிதர் நிலவுலகு போன்றவர்; நாம் (மாதர்) திங்களுலகு போன்றவர். (திங்களைப்போல்) நம் ஒரு புறத்தையே நாம் அவர்களுக்குக் காட்டுகிறோம். ஆகவே, மறுபுறம் ஒன்று உண்டு என்பதை அவர்கள் அறிவதில்லை. ஆலிவ் ஷரைனர். பெண்ணாயிருந்து செயலாற்றும் செயல் மிகத் தொல்லை தருவதுதான்! அவர்கள் கையாளவேண்டியதாயிருக்கும் பொருள் மனிதனாயிற்றே! ஜோஸஃவ் கான்ராட். வனப்பும் பயிர்ப்பும் வாய்ந்த மாது! கடவுளின் படைப்புக் கலைத்திறத்துக்கு ஒரு முழுநிறை வெற்றிச் சின்னம்; பொன்னுலகக் கற்பனைக்கு ஒரு புகழ்ச்சான்று; உலகின் அருள்விளையாட்டுப் புதுமைக்கு ஒரு எடுத்துக் காட்டு; உலகின் புதுமைப்புதிர்களுள் ஒன்று! ஹெர்மீஸ். கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு அடுத்த கடப்பாடு பெண்மைக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாடே - மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும், அதை மணம்பெறச் செய்பவர்களும் அவர்களே. போளி. சட்டங்களைவிடப் பெண்டிர் கண்கள் சக்தி வாய்ந் தவை; தண்டனையைவிட அவர்கள் கண்பனிப்பு திருத்தும் ஆற்றலு டையது; நம் வாதங்களைவிட அவர்கள் பார்வை தெளிவு தருபவை. ஸெவில். அழகு பெண்களைத் தற்பெருமைகொள்ளச்செய்கிறது. பண்புநலம் அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்கள் பயிர்ப்பு அவர்களைத் தெய்வங் களாக்குகிறது. ஷேக்ஸ்பியர். பெண்மையே! நீ பொது வாழ்வின் இன்பப் போதினிலே கொடிபோல் நுடங்கித் தள்ளாடும் மென்மையுடையாய்! மாலை நிழல்போல் மாறுகின்றாய்! ஆனால், பொறுக்க வொண்ணாத் துயரத்தின் பளுவில் எங்கள் புருவங்கள் தெறிக்கின்ற காலையில், உன்போன்று உறுதியும், ஆறுதலும் தருபவர் யார்? வால்ட்டர்ஸ்காட். துயருறுபவன் தன் துயரால் பெறும் நோவினும் மிகுதியாக, அவன் துயர்கண்டு துயருறும் ஆள் ஒருவர் உண்டு; மகிழ்ச்சியிடையே மகிழ்பவன் மகிழ்ச்சியினும் மிகுதியாக, மகிழ்ச்சி பெறுபவர் ஒருவர் உண்டு... அன்பு, கனிவு, உளமார்ந்த பற்று ஆகியவற்றில் தன் தனித்தன்மையிழந்த அவ்வொருவர் - பெண். வாஷிங்டன் இர்விங். பற்றுறுதியும் பண்புநிறைவும் உடைய பெண் எல்லா வகைகளிலும் ஒரு பண்பை நல்யாழ் போன்றவளே - ஆண்டு செல்லுந் தோறும் அதன் இசையிழைவு இனிமையும் நுண்மையும் மிகு மன்றிக் குறைபடாது. ஓ. டப்ள்யூ. ஹாம்ஸ். புதுமலர்ச்சி யறிஞரைக் கண்டுணரும் கண்கள் பெண்டிர் கண்களே; புத்தறிவுக்குச் செவி சாய்ப்பவரும் பெண்டிரே. ஆனால், அதே பெண்டிர் வெற்றுரைச் சோம்பேறிகளிடையே வெற்றுரை யாடிக் கொண்டே, அவற்றிடையே பயனுரைகூறும் நன்மாந் தரையும் பிரித்துணர்வார். ஸி. எச். டால். வனப்புடைய பெண் ஒரு மணி. நற்பண்பு வாய்ந்த பெண் ஒரு மணிக்குவை. ஸாதி. பெண்ணின் பெருமை புறஉலகறியாத தன்மையினது. அவள் அவாவும் புகழ், அவள் கணவன் மதிப்புக்குள் அடங்கிவிடுகிறது. அவள் இன்பமே அவள் குடும்பத்தின் நல்வாழ்வுக்குள் அடங்கிக் கிடக்கிறது. ரூஸோ. தெய்வங்களுக்கும் பெண்களுக்கும் உரிய பொதுப் பண்பு; இது துன்புறுவோர் பக்கமே அவர்கள் ஒத்துணர்வு செல்லும். பால்ஸக். வானின் கவிதைமலர்கள் வான்மீன்கள்; நிலவுலகின் கவிதை மலர்கள் பெண்மணிகள். ஒத்தியல் இசையுடன் ஒளிதந்து (வான் மீன்கள் வான வெளியிலியங்கும் நிலவுலகை இயக்குவது போலவே) மாதர் நிலவுகில் மனித வாழ்வை உருவாக்கி இயக்குகின்றனர். ஹார்கிரேவ். மறைநூலை ஓதிப் பிறருக்கு உரைக்கும் வேலை பெண் டிருக்குக் கூடாதென்று தடை செய்யப்பட்டிருப்பது ஏன் தெரியுமா? அவர்கள் வாதமின்றி உலகை அதன் வயப்படுத்தி, வருந்தாது எவரையும் திருத்தி விடுவரே! நியூட்டன். தென்றலின் ஒவ்வோரசைவிலும் நுடங்கி, புயலில் மடியாத நாணல் போன்றவள் பெண். வாட்லி. பெண்டிரே நம்மை இயக்குகின்றனர்; எனவே, அவர் களையே முழு நிறைபண்புடையவராக்குக. அவர்கள் திருந்துந் தோறும், நாம் தாமாகவே திருந்துவோம். பெண்மனம் அறிவு பெறுவதைப் பொறுத்ததே மனிதன் அறிவுவளர்ச்சி. ஷெரிடன். பெண்ணின் கைப்பாவை மனிதன்; சைத்தானின் கைப்பாவை பெண். விக்டர் ஹியூகோ. மிகச் சிறந்த பெண்ணிடம் ஆடவர் வீரத்தின் கூறு உண்டு. மிகச் சிறந்த ஆணிடம் பெண்டிர் கலைநயத்தின் கூறு உண்டு. செல்வி மலாக். இன்பவாழ்வு நிறைவுற்ற நாடு, இன்பவாழ்வு நிறைவுடைய பெண் - இருவர்பற்றியும் வரலாறு வாயாடாது. ஜார்ஜ் எலியட். நற்குண நங்கையின் நெஞ்சை மட்டும் மனிதன் திறந்து பார்க்க முடியுமானால், அதில் எத்தனை அன்புக் கனிவுகளின் செறிவை, எத்தனை தன் மறுப்புக்களின் புதைந்த பொதிவுகளை, எத்தனை மாறாட்டத்துக் குள்ளான தூய நற்பண்புகளை காண முடியும்! ரிஷிட்டெர். 36. நூல் நிலையம் என் நூல் நிலையமே எனக்குப் போதிய பண்ணைப் பெருஞ் செல்வம். ஷேக்ஸ்பியர். ஒரு நூல் நிலையத்தில் உனக்குக் கிடைப்பது என்ன என்பதை நினைத்துப்பார்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளிடையே உலகில் பல நாடுகளிலும் வாழ்ந்தவருள் தலைசிறந்த அறிஞர், சொற்செல்வர், கலைப்பண்பாளர் தம் கல்வியின் பயனான, அறிவின் பயனான தலைசிறந்த கருத்துக்களைத் தலை சிறந்த முறையிலும், ஒழுங்கிலும் தொகுத்த தொகுப்புக்களின் சூழல், உன்னுடன் உறவாடக் காத்திருக்கிறது... தம் உயிர்த் தோழனுக்குக் கூட அவர்கள் முற்றிலும் மனந்திறந்து உரைத் திருக்க மாட்டாத உயர் அருங்கருத்துக்கள் தெள்ளத்தெளிய வரையப்பட்டு, ஏதோ ஓர் ஊழியில் வரும் உன்னிடம் தரப்பட்டுள்ளன! எமெர்ஸன். இக் காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம், நூல்களின் தொகுதிதான். கார்லைல். படிப்படியாக நான் தேர்ந்து திரட்டிய என் தனிப்பட்ட நூல் நிலையமே, என் அறிவுப் பணிகட்கெல்லாம் மூல அடிப்படை; அத்துடன் என் தாயகத்திலும், புறத்தும் என் வாழ்க்கையில் ஒருங்கே இன்பமும், ஆறுதலும் அளித் துள்ளவையும் அவையே. கிப்பன். நூல்நிலையங்கள்... பண்டை உலகின் சின்னங்கள்; இக்கால உலகின் புகழ்க் கொடிகள்! லாங்ஃவெல்லோ. சுவடிகளில்லாத வீடு பலகணியில்லா வீடு போன்றது. சுவடிகள் வாங்க ஆற்றலுடைய எவரும் சுவடிகளில்லாத வீட்டில் பிள்ளைகளை வளர விடுதல் தகாது. தம் குடும்பத் திற்கு அவர்கள் இதனினும் பெரிய தீங்கு தேட வேண்டிய தில்லை. பிள்ளைகள் இயற்கையாகவே சுவடிகளை விரும்பு கின்றனர் - சுவடியார்வம் வாசிப்பார்வமாக, அறிவார்வமாக வளர்கிறது. அவர்களைத் தீமைகளினின்றும் காக்கும் சாவிகளில் இதனினும் சிறந்தது இல்லை. ஹோரேஸ் மான். ஒருவருக்குப் பெருந்துணை தரும் நூல்கள் அவரைச் சிந்திக்கத் தூண்டும் நூல்களே. தியோடோர்பார்க்கர். நீ சிந்திப்பதைச் சிந்திக்கும் நூலன்று, உன்னைச் சிந்திக்க வைக்கும் நூலே வாசிக்கத்தக்கது. மக்காஷ். 37. நட்பு புதிய நண்பர்களைப் பெற முடியாதபோதுதான் மனிதன் வாழ்வின் கலைப்பண்பை இழந்தவனாகிறான். எஸ். வீர். மீச்செல். இளமையில் நண்பரிருப்பது நன்று; முதுமையில் இன்னும் மிக நன்று. இளமையில் எல்லா வளமும் போல, நட்பு வளமும் எளிது. ஆனால் நண்பர் இருப்பதன் அருமையை முதுமையிலேயே காணலாம். எட்வர்டு கிரிக். நடுநிலை நேர்மையும் ஒத்துணர்வும் உடைய நண்பரைப் பெற்றவர்கள், தங்கள் உளப்பண்புச் செல்வத்தை இரட்டித் தவராவர். ராபர்ட் ஹால். நட்பு இன்பம் பெருக்குகிறது. துன்பம் குறைக்கிறது. முன்னதை அது இரண்டு மடங்காக்குகிறது. பின்னதைப் பகிர்ந்து கொள்கிறது. அடிஸன். பிழையும் பீழையும் நேர்ந்தபோது நட்பின் சிறப்பு ரிமையைப் பயன்படுத்தி ஒறுத்துத் திருத்தத் தயங்குபவர் போலி நண்பர். பேக்கன். நகுதற் பொருட்டன்று நட்பு; மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. திருவள்ளுவர். அறிவுத் திறமுடைய நண்பர்களைப்போல வாழ்வின் நல்ல புகழ்த்திரு வேறில்லை. யூரிப்பிடிஸ். இன்பத்தில் நாடுவதை விடத் துன்பத்தில் நண்பனை விரைந்து நாடிச் செல்லுக. சிலோ. மென்மையான உணர்ச்சி யியல்புடைய இளமையிலேயே பெரும்பாலாக நட்பு ஏற்படுகிறது. ஆண்டு முதிர்ந்தபின் ஏற்படும் நட்பு அஃது, உரத்திலும் குறைவுடையது. அது நீடித்து வேர்க் கொள்ளுதல் முடியாது. ஃவிட்ஸ் ஆஸ்பேர்ண். மாலை நிழல் போன்றது நட்பு. வாழ்க்கையாகிய ஞாயிறு படியுந்தோறும் அது நீட்சியுறுகிறது. லாஃவரதேன். தீயோர் நட்பு, காலை நிழல் போன்றது, அது வாழ்க்கை முன்னேற முன்னேறக் குறுகும் தன்மையுடையது. நல்லோர் நட்பு, மாலை நிழல் போன்றது. ஹொடர். நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. திருவள்ளுவர். உண்மை நட்பு மிகப் படிப்படியாக வளர்வது; இரு சார்பிலும் தகுதியிருந்தால் மட்டுமே அதுபற்றியிணைத்து வளரும் தன்மையது. செஸ்டர்ஃவீல்டு. நண்பரை நாடி அவர்கள் தகுதியைத் தேர்ந்துணர்ந்த பின் அவர்களை எஃகுத் தளைகளால் உன் நெஞ்சத்துடன் பிணைக்க. ஷேக்ஸ்பியர். விழிப்புணர்வில்லா நண்பனினும், இடர் தருபவன் இல்லை. அவனைவிட விழிப்புணர்வுடைய பகைவன் மேலாம். லாஃவந்தேன். நட்பின் ஒளி எரியத்தின் (ஞாடிளயீhடிசரள) ஒளி போன்றது. சுற்றிலும் இருள் செறியச் செறிய, அதன் ஒளி பிறங்குதல் மிகுதி. கிராம்வெல். போலி நண்பர் நிழல் போன்றவர். ஒளியிடையே அவர் தாளொடுதாளாக இருப்பர். இருளடையின் காணப்பெற மாட்டார். போவீ. குண ஒருமையால் நட்பு ஏற்படுவதினும், குறைபாடொற்று மையால் ஏற்படுதல் மிகுதி. போவீ. காய்ச்சும் கடுஞ் சூட்டில் இரும்பு இணைவது போலவே, பெருந்துன்பத்திடையே நட்பின் பிணைப்பு வலிவுறுகிறது. கால்ட்டன். மருத்துவன் திறமையும் கூர்நோக்கும்; செவிலியரின் சுறுசுறுப்பும், விழிப்பும்; தாயின் பொறுமையும் கனிவும் யாவும் நட்பினும் உண்டு. கிளாரெண்டன். நட்பாடுவதில் காலம் தாழ்த்து; நட்பாடியபின் என்றும் உறுதியாக அதனைப்பற்று. ஸாக்ரட்டீஸ். நண்பனை இழத்தல் ஓர் உறுப்பை இழப்பது போன்றது. அதன் வெந்துயர் ஆறும். ஆனால், இழப்பைச் சரி செய்தல் முடிவதன்று. ஸதே. என் நண்பனுக்காக நான் செய்ய முடியாத அளவு பெரிய காரியம் எதுவும் இல்லை. அவனுக்காக நான் செய்யக்கூடாத அவ்வளவு சிறு செய்தியும் எதுவும் இருக்க முடியாது. ஸர் ஃவிலிப் ஸிட்னி. 38. இசை இயற்கையின் நான்காவது இன்றியமையாத் தேவை இசையே. முதலது உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது உறையுள், நான்காவது இசை. போவீ. மேதக்க எண்ணங்களை உள்ளத்தெழுப்ப, கடுஞ்சினங் கனிந்தெழும்படித் தூண்ட, அன்பைப் பெருக்க, மனிதரை இயக்கி ஆட்கொள்ளச் செய்ய, எதற்கும் இசையினும் அருந்திறல் வாய்ந்த மறைகலை இல்லை. அடிசன். ஓவியக் கலையின் மிகப்பெரு நலிவு, அது உயர் ஒழுக்க உணர்ச்சியைத் தூண்ட முயலுவதில்லை என்பதே - இசை இதனைத் திறம்படச் செய்கிறது. திருமதி ஸ்டோ. எவ்வளவு வற்புறுத்தும் வாதங்களையும்விட எளிதாக மாந்தரைப் போரில் முன்னணிக்குத் தூண்டிப் போரிடச் செய்வதும்; எந்த அறிவுரையையும் விட, மக்களிடையே நாட்டுப் பற்றார்வத்தையும், செயலாக்கத்தையும் உண்டுபண்ணுவதும், படைத்துறை இசை, நாட்டுப் பாடல் ஆகியவையே. டக்கர்மன். இசை மிக வியத்தகு புதுமை வாய்ந்த கலைப்பண்பு. அது செயல்துறைக்கும் நினைவுத் துறைக்கும் இடைப்பட்ட ஓர் இடையீடு - உள்ளத்துக்கும் புறப்பொருளுக்கும் இடை யிணைப்புச் செய்யும் ஓர் ஊடுவாயில். அது பொருளுமன்று, பொருட்பண்பு மன்று; புறத்துறையுமன்று, அகத்துறையு மன்று; பொருள் சார்ந்த தாயினும் பொருளன்று. எச். ஹின். இசை பல வகையில் கவிதையோடொத்த கலை. இரண்டிலும் அறிவுத்திறத்தால் கற்பிக்க முடியா நுண்ணயங்கள் உண்டு. கலை யாட்சித் திறம்படைத்த கலைஞன் ஒருவனாலேயே அந்நயங்கள் ஆட்சிப்பட முடியும். போப். மற்ற எல்லாப் படைப்புக் கலைகளையும் போலவே, இசைக் கலையும் அதனைப் படைக்கும் கலைஞனாகிய படைப்பாளனை விட ஆற்றல் வாய்ந்தது. பீகவன். இசை ஒரு தடவை உள்ளத்தின் வாயிலைத் திறந்து உள் நுழைந்து விட்டால், அது அங்கே தனி உயிர் பெற்று விடுகிறது. பின் அது என்றும் இறவாது. அது ஓய்வொழிவின்றி நினைவுக் கூட்டத்தில் வாயில் இடைவாயில் வழிகளிலெல்லாம், ஊடாடிக் கொண்டே யிருக்கிறது. புல்லர். அன்பு, அமைதி ஆகியவற்றின் குரல்களுள், இசையினும் மென்மையான, இனிமையான, திறம்படைத்த குரல் வேறு இல்லை. எலிஹூபரிட். உயர் கலைகள் அனைத்திலும், உணர்ச்சியை இயக்கி யாளும் தன்மையுடைய கலை இசையே, சட்டமியற்றும் எவராலும் மிகுதியான ஆதரவுரதரத் தக்க கலை அது. நெப்போலியன். 39. கதையிலக்கியம் நல்ல கதை, கேட்க இன்பமா யிருக்க வேண்டும்; மெய்யான தாகத் தோற்ற வேண்டும்; பொருத்தமுடையதாக, சுருக்க மானதாக, இன்னுரை புணர்ந்ததாக, புதிதாக இருக்க வேண்டும். இவ்வமைதி களிலிருந்து வழுவினால், அது அறிவிலிகள் பாராட்டைப் பெறலாம் அறிவுடையோருக்கக் கண்ணாய்வு மட்டுமே தரும். ஸ்டில்லிங்ஃவ்ளீட். மக்கள் விருப்பத்துக்கும், அவர்கள் திருத்தத்துக்கும் ஒருங்கே உகந்த முறையில் அவர்கள் உள்ளங்கள் மீது ஆட்சி செய்யும் சிறந்த ஏடுகள் புனைகதை ஏடுகளே. அவை வாழ்க்கையின் படிப்பினைகளை ஒழுங்கு படுத்தித் திறம்பட மீண்டும் தெளிவான முறையில் எடுத்துக் காட்டுகின்றன; நம் குறுகிய மனப்பான்மை களிலிருந்து நம்மை வெளியே கொண்டுசென்று, பிறரை உள்ளவாறு அறிய வைக்கின்றன. நிகழ்ச்சிகளை வாழ்க்கை வாழ்பவனுக்குக் காட்டுவது போலவே - ஆனால் ஒரே ஒரு வேறுபாட்டுடன் - அவை நமக்குக் காட்டுகின்றன. அவ் ஒரே ஒரு வேறுபாடு யாதெனில், நம் அறிவை மூடியிருக்கும் தப்பெண்ண ஆணவத்திரையை அவை விலக்கிக் காட்டுவதே. ஆர். எல். ஸ்டீவென்ஸன். வரலாற்றில் கூட மிகநல்ல வரலாறு எது? முக்கியமல்லாத நொய்யவரைகளை விட்டுவிட்டு, முக்கியமானவற்றைச் சிறிது மிகைப்படுத்திக் காட்டி, வாய்மையின் தடத்தை நன்கு பதிப்ப வையே. வாய்மையின் உருவம் மனத்தில் இவ்வழியிலேயே பற்றி நீடித்து நிற்கும். மக்காலே. 40. புகழ் தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. திருவள்ளுவர். புகழார்வம் மக்களுலகில் மிகப் பொதுவாகப் பரந்த உணர்ச்சி என்பதைக் கல்லறை வாசகமரபே காட்டும். தம் வாழ்க்கையில் உயர்பண்பு இல்லாதிருந்தால் கூட அப்பெயரை விரும்புபவர்களே மிகுதி. கல்லறையுடன் மறக்கப்பட விரும்புபவர் மிகமிக அரியர். கெட். புகழ் வீரச்செயல்களாகிய நன்மலர்களின் மணம். சாக்ரட்டீஸ். வீரச் செயல்கள், நற்செயல்களுக்கான ஒரு நற்றூண்டு தலாகவே நான் புகழை விரும்புகிறேன். மாலெட். புகழ் ஆற்றைப்போல் பிறப்பிடத்தில் ஒடுங்கியது. ஆனால், அது நீண்டு செல்லுந்தோறும் அகன்று செல்கிறது. டாப்னென்ட். நான் பொன்னை விரும்பவில்லை. ஆயினும், புகழை விரும்புவது ஒரு பழிச்செயலானால், உலகின் உள்ள உயிர்களிடையே பெரும் பழிக்குரியவன் நானே. ஷேக்ஸ்பியர். இறந்தபின்னரே புகழ் வருமாயின், அதைப் பெற நான் விழையமாட்டேன். மார்ஷியல். சிப்பிக்குள் ஒளியுடை முத்து முதிர்வுறுவது போல, உண்மைப் புகழ் கல்லறைக்குள்ளிருந்தே விளைவுற்றது ஒளி பிறங்குகிறது. லாண்டார். புகழை விரும்புபவன் இகழுக்கு அஞ்சக்கூடாது. இகழச்சமே புத்தறிவுக்குச் சாவுமணி. சிம்ஸ். இல்வாழ்க்கையின் செல்வங்களுளெல்லாம் சிறந்தது புகழே. உடல் மண்ணிற் கலந்தபின்னும் புகழ்வாய்ந்தவர் பெயர் நீடித்து வாழ்கிறது. ஷில்லர். புகழுக்கு உரிமையாகிறவர் மிகச் சிலரே. விலைக்கு வாங்கப் பெற முடியாத மிகச் சிலவற்றுள் அது ஒன்று - மனித இனத்தின் நன்கொடை அது ஒன்றே. அது பெறுமுன் தகுதித் தேர்வு மிகுதி; தகுதி கண்டபின்னும் உலகம் வழங்க மன மில்லாததுபோல் அளந்து தான் அதனை வழங்குகிறது. ஜான்சன். காலமென்னும் பேரேட்டின் பக்கங்களில் எத்தனையோ சிறப்புடையவர் பெயர்கள் எழுதப்பெற்று வருகின்றன. ஆனால், ஒரு பெயர் எழுதப்பெறும்போது மறுபெயர் அழிய, அல்லது மங்க விடப்படுகிறது. ஆனால், இவற்றிடையேயும் ஒரு சில என்றுமழியா ஒளியெழுத்துக்களாக இலங்குகின்றன. லாங்ஃவெல்லோ. எண்ணில் இசைதேர்ந்த ஆன்றோர் அருஞ்செயலே மண்ணில் மலர்ந்து வாடா உயிர்மலரே. ஷர்லி. மனித இனத்தின் நல்வாழ்க்கை யின்பத்தை மேம்படுத்தும் நற்செயல்களின் மீதன்றி நிலையான மெய்ப்புகழ் நாட்டப்பெற மாட்டாது. சார்லஸ் சம்னா. 41. இன்பமும் துன்பமும் இன்ப வாழ்க்கையாளன் ஒருவன் ஒரு கோவிலகத் தலைவ னாக, வேட்டைக்காரனாக, படக்காட்சி நடிகனாக, உண்டி விற்போனாக இருக்க முடியும்; முதல்தர ஓவியக்காரனாக, சிற்பியாக, இசைஞனாக, இலக்கியப் படைப்பபாளனாக, எந்த இன்ப வாழ்வினனும் இருந்ததில்லை. ஜே. ஜி. நேதன். துன்பம் ஒருவனுக்கு அவனையே அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஓர் அறிஞன். கடவுள் மக்களைத் துன்பக் கடலின் ஆழத்துக்குக் கொண்டு செல்வது அவர்களை அதில் அமிழ்த்துவதற்கன்று; அவர்களை நீராட்டித் தூய்மைப் படுத்துவதற்கு. ஆதி. ஓயா வெற்றி நமக்கு உலகின் ஒரு புறத்தையே காட்டுகிறது. துன்பம் அதன் மறுபுறத்தை உணர வைக்கிறது. கோல்ட்டன். இன்னாமை யுள்ளும் இனிதாம் பயனுண்டு; பன்னூறு தேரை நச்ச ருவருப் புளதெனினும் மன்னும் அதன்தலையில் துன்னரிய மாமணியே. ஷேக்ஸ்பியர். துன்பத்தை ஒத்த பயிற்சிக் கருவி வேறில்லை. டிஸ்ரேலி. 42. மகிழ்ச்சியும் இன்பமும் கடமைகளை விளையாட்டாகவும், விளையாட்டுக்களை இடைப் பொழுதுபோக்குகளாகவும் கொள்ளும் மனிதனே இன்ப முடையவனாவான். மிகு. தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். திருவள்ளுவர். அறிவிலார் எதையெதை எண்ணி வாழ்கின்றனரோ, அவற்றையெல்லாம் விலையாகத் தந்து, நேசித்தல், நேசிக்கப் பெறுதல் ஆகிய இரண்டினையும் பெற விழைவர் அறிவுடையோர். டப்ள்யூ. எஸ். லாண்டார். மனிதன் இன்பத்தைத் தானே ஆக்கவல்லவன். தோரோ. அவாக்களை நிறைவுபடுத்துவதை விடுத்து அவற்றைக் குறைப்பதன் மூலமே இன்பத்தை நாட முடியும் என்று நான் கண்டு கொண்டேன். ஜான் ஸ்டூவர்ட் மில். எண்ணுமளவு இன்பத்தை நாம் என்றும் பொறுவதில்லை. ஆனால் நாம் எண்ணுமளவு துன்பமும் நமக்கு எப்போதும் வருவதில்லை. லாருஷ்ஃவொகோல்ட். மனிதன் இன்பம் அவன் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையது. எக்ளிஸியாஸ்டிகஸ். மனித இன்பங்கள் அனைத்தம் விரைந்து ஓடுவன; இறைவன் அமைப்பு அது; ஏனெனில் எளிதில் கிடைக்கும் எப்பொருளும், கிடைத்தவுடன் இல்லையாகி விடுகிறது. யூஜீன் ஃவீல்டு. அழகு வாய்ந்த பொருள், என்றும் இன்பம் நல்கும் பொருள். கவிஞர் கீட்ஸ். இனிமை, இனிமையுடன் போரிடுவதில்லை - மகிழ்ச்சியில், மகிழ்ச்சி மகிழவே செய்யும். ஷேக்ஸ்பியர். மறைவாக ஒரு நல்ல செயலைச் செய்து, அதைத் தற்செயலாக யாராவது வெளிப்படுத்தக் கிடைத்தால் அது போலும் இன்பமிகுதி தரும் செயல் வேறு இருக்க முடியாது. சார்லஸ் லாம். இன்பமென்பது வேறு எதுவுமன்று; துன்பத்தின் இடை ஓய்வு மட்டுமே. ஜான் ஸெல்டன். இன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது; அது ஒரு செய்பொருளின் கிளை விளைவேயாகும். எமர்ஸன். 43. காலம் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. திருவள்ளுவர். நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி இன்று வாழ எண்ணுவது கூடக் காலங் கடந்த எண்ணமே. நெற்றே வாழத் தொடங்கினவர் அறிவுடையோர். நொடிப் பொழுதுகளைப் பற்றி நீ நன்கு கவன மெடுத்துக் கொள்; ஓரைகள் தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளும். செஸ்டர்ஃபீல்டு. இன்றையப் பொழுதை நுகர்; நாளையைப் பற்றிக் கவலைப் படாதே. ஹொரேஸ். சேணியன் குழலினும் விரைந்தது என் வாழ்நாள். ஜாப். செய்யாதிருப்பதிலும் பிந்திச் செய்தல் நன்று. லிவி. காலம் சட்ட உரிமை தரும் - ஒழுக்கமுறைச் சட்டத்தில் கூட. எச். எல். மெங்கன். காலத்தினும் சிறந்த அறிவுரையாளர் இல்லை. பெரிக்ளிஸ். காலத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள். பிட்டாக்கஸ். ஒரு நகரம் வளர ஓர் ஊழி வேண்டும். அதை அழிக்க ஒரு மணி நேரம் போதும். ஸேனெக்கா. காலம் என்பது அடிமைகளுக்காக ஏற்பட்டது. ஜாண். பீ. பக்ஸ்டன். 44. இளமையும் முதுமையும் இளைஞர் கனாக்கள் நடைபெற முடியாதவை; முதியவர் கனாக்கள் முன் நடைபெற்று விட்டவை. உலகின் குறைபாடறிந்து கனாக் காணாதவர் நடுவயதினரே. சாக்கி. வாழ்க்கையின் மயக்கங்களை அகற்றும் நிகழ்ச்சிகள் நிறைந்தது இளமை. மயக்கங்கள் அகன்றவுடன் இளமையும் முற்றுப் பெற்று விடும். ஆர்தர் வாக். மக்கள் பல்வேறு வயதில் முதுமை அடைகின்றனர். சிலர் 65 ஆண்டு முதுமையுடன் பிறந்து உடனேயே வாழ்க்கையிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். சிலர் 90 வயதில்கூட 21 வயது இளமையை விடுவதில்லை. (பிரெஞ்சுப் புரட்சி குறித்து) பெருவாழ் வுடையதப் பேரொளி விடியல் மருவும் இளமையெனில் வானெழில் ஒளியே. வோர்ட்ஸ்வொர்த். இளமையின் அகரவரிசையில் ‘தோல்வி’ என்ற சொல் கிடையாது. புல்வர் லிட்டன். இளமையில் கற்கிறோம்; முதுமையில் உணர்கிறோம். மெரி எப்ளா எஷென்பாஃக். இளமையின் முதுமை 40; முதுமையின் இளமை 50. (மணமாகாக்) கன்னியர் இளையராயின் இடர் ஆவர்; நடுவயதின ராயின் வருந்துதற்குரிய நிலையினர். ஆனால் முதுமை யிலோ அவர் மகிழ்வுக்குரியவராவர். அறிஞர் ஸ்டீவென் டெய்லர். இளமை ஒரு பெரும் பிழை; நடு வயது ஒரு பெரும் போராட்டம்; முதுமையோ ஒரு பெருங் கழிவிரக்கம். டிஸ்ரேலி. இளமை காரியமுணர்ந்தால், முதுமைக்கு உணர்ந்ததை ஆற்றும் ஆற்றலிருந்தால், வறுமை என ஒன்று உலகிலிருக்க மாட்டாது. பழமொழி. நம் தந்தையர் அறிவிலிகள் என நாம் நினைக்கிறோம். நாம் அத்தனை அறிவுடையவர்கள் ஆய்விட்டோம். ஆனால் அதே மாதிரி நம்மினும் அறிவுடையவர்களாய் நம் மக்கள் நம்மையும் அதேபோல நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. போப். 45. உணர்ச்சிப்பாங்கு உள்ளத்தின் திரிந்த நிலைகள் ஒரு திடீர் அதிர்ச்சியால் ஏற்படுபவை யல்ல; குழந்தைமைப் போதைய சூழ்நிலைகளின் விளைவுகளேயாகும். அறிஞர். ஜே. ஏ. ஹாட்ஃவீல்டு. நாம் எதை நம்புவது என்பதைவிட, ஏன் நம்புகிறோம் என்பதே இக்கால உள ஆராய்ச்சி முறையில் முதன்மையா யிருக்கிறது. ஒரு செய்தித்தாள். ஒருவரை யொருவர் விரும்புவதன் அடிப்படைக் காரணங் களுள் ஒன்று, இருவரும் மூன்றாவதொரு பேர்வழியை மனமொத்து வெறுப்பதாகும்! பெர்ட்ராண்டு ரஸ்ஸல். 46. செல்வம் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. திருவள்ளுவர். பெருஞ் செல்வத்தின் ஒரே பயன் பகுத்துப் பயன் படுத்துவதே. இது தவிர, வேறு உண்மைப் பயன் கிடையாது. மற்றவையெல்லாம் வீணாரவார மட்டுமே. பேக்கன். செல்வம் இன்பத்தை விலைக்குப் பெற முடியாது. ஆனால், அதனைக் கொண்டு மனிதன் துன்பத்தை விலைக்கு வாங்கக் கூடும். மைக்கேல் ஆர்லென். செல்வப் பற்றே, தீமைகள் எல்லாவற்றுக்கும் வேர்முதல். தூயதிரு. பால். மிகுதியாகப் பொருளீட்டும்படி என்னை நானே வற்புறுத்த விரும்பினேன். ஆகவே, மிகுதியாகச் செலவிடத் தொடங்கினேன். ஜேம்ஸ் அகேட். செல்வத்தை மட்டும் திரட்டிவிடு; உலக முழுவதும் சேர்ந்து உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத்தயங்காது. பெர்னார்டு ஷா. தன் தேவைக்கு மேற்பட மனிதன் மிகுதியாக ஈட்டுந் தோறும், கவலை அவனைப் பிடித்துத் தின்னத் தொடங்கி விடுகிறது. பெர்னார்டு ஷா. மற்ற மனிதர்களெல்லாம் பணத்திற்காக இவ்வளவு பேயாய் அலையாதிருந்தால், எந்தத் தனி மனிதனும் பணமில்லாமல் எவ்வளவோ அழகாக வாழ்க்கை நடத்திவிட முடியும். மாகரேட் கேஸ்ஹரிமன். வேறு எந்த நற்பரிசுக்கும் தகுதியில்லை என்று கண்ட பின்னர் அத்தகுதியற்ற மனிதனுக்கே கடவுள் பொருளைத் தருகிறார். தலூர். ஊசியின் காதில் ஒரு தேர்வடத்தைப் புகுத்தினாலும் புகுத்தலாம்; செல்வரை வானுலக முய்க்கும்படி செய்தல் அரிது. மறைத்திரு. மாத்யூ. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. திருவள்ளுவர். சொகுசாக இறப்பதற்கு எவ்வளவோ பணம் பிடிக்கிறது. ஸாமுவேல் பட்லர். ஐய, (நீங்கள் கோருகிறபடி) எனக்குப் பொருளுதவி செய்தவர்கள் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாமைக்கு இரண்டு காரணங்களுண்டு; ஒன்று அப் பட்டியலை நான் தொலைத்து விட்டேன்; மற்றொன்று அப்பணமும் செலவாகிப் போய்விட்டது. அறிஞர் ஜான்ஸன். செல்வமனைத்தும் உழைப்பின் விளைவே. லாக். 47. வசையுரை அரசியல் : டாலிராண்டு குறித்து : இவரிடம் பழைய ஆட்சியின் பழிப்பண்புகள் ஒன்று விடாமல் உள்ளன. அதே சமயம் புதிய ஆட்சியின் நற்பண்பு களுள் ஒன்றுகூட அவரிடம் இடம் பெறவில்லை. கார்னோ. திருவருட் பரம்பரை : எக்ஸிட்டர் தலைமகளைக் குறித்து: திருவருட்பரம்பரை பற்றி நான் இப்போது நம்பி ஆக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், ஜூடாஸ் இஸ்காரி யட்டின் பரம்பரையில் இப்போதும் ஒரு எக்ஸிட்டர் தலை மகள் எப்படி ஏற்பட முடியும்? புது முயற்சி வீரம் : புது முயற்சி வீரனாகயிருக்க விரும்பாதே! தொடக்கக் காலப் புதிய கிறிஸ்தவர்தான் கோளரிகளுக்கு இரையாக வேண்டி யிருந்தது. மலைகடந்து செல்ல விரும்புவோர் நாடுவது (புதுப் பாதையல்ல) கழுதைகளும் கோவேறு கழுதைகளும் நடந்து சென்று தேய்பட்ட பாதைகளையே. அத்தகைய வற்றையே நீ நாடு. தூய்மைமிகு திரு. டப்ள்யூ. ஆர். இங்க். டி. டி. ஜெர்மானிய தத்துவ அறிவர் : ‘நான்’ என ‘அது’ என விளக்கினார் ‘எனை’ என ‘அதை’ என முழக்கினார் ‘மேரியன்பாடில்’ சென் றிறந்தனர் காரிருட் கடலக மிதந்தனம். ஸ்டீவிஸ்மித். தனிப்பட்ட மனிதர் சமயம் : தனக்கென எவருக்கும் ஒரு சமயம் இருக்க முடியுமென்பது தமக்கென ஒவ்வெருவருக்கும் ஒரு ஞாயிறு திங்கள் இருக்க முடியும் என்பது போன்றது ஆகும். ஜி. கே. செஸ்டர்ட்டன். 48. நல்லுரைகள் ஆர்வம் மிகுதி உடையவன், ஆனால் அமைதிவாய்ந்தவன்; உலகம் அவனுக்கே உரியது. வில்லியம் மெக்ஃவாக்ஸ். தோல்வியென்பது வீழ்ச்சி யடையும்போது விழுவது அல்ல; விழ அஞ்சி விழாது நிற்பதேயாகும். ஒரு பெரியார். உன் கைப்பிடிக் கயிற்றின் கோடிவரை சறுக்கி விட்டால், உடனே கயிற்றில் ஒரு முடிச்சிட்டு அதைப் பற்றித் தொங்கிக் கொள். அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட். பிறர் காலடியிலிருந்து புல்லறுத்துக் காயவைத்துக் கொள் பவனே திறமைசாலி. ஒரு பெரியார். அந்தப் பேர்வழியிடம் காணக்கூடிய கருத்து ஒன்றே ஒன்று; அதுதான் அவற்றில் தவறான கருத்து. அறிஞர் ஜான்ஸன். மௌனத்தைப் பற்றிய நம் மறைவாசகத்தைக் கார்லைல் மிகவும் அரும்பாடுபட்டுச் சுருக்கி, இறுதியில் முப்பது அழகிய ஏட்டுப் பகுதிகளாக உருவாக்கினார். மார்லிப் பெருமகனார். பேரளவு சமயப் பற்றுடனே சிறிதளவு சிற்றின்ப அவாவை எந்த அளவில் எந்த முறையில் சேர்த்தால் மனச்சான்றின் தொல்லை குறையக் கூடும். அந்த அளவுக்கு மிகக் குறைந்த கட்டற்ற இன்ப நுகர்வு பெருகக்கூடும். அந்த அளவுக்குப் பெருகும்போதே அந்த விழுக்காடறிந்து அவற்றை மேற் கொள்வதில் திரு. சார்லி மார்கன்... ஒப்பற்ற திறம் பெற்றுள்ளார்! ராபர்ட் ஃவர்சைத். அவரை மக்கள் மாசற்றவர் என்கிறார்கள் - ஆம் அவர் தொழுநோய் அந்த அளவுக்கு முதிர் நிறைவுடையதாயிருக்க வேண்டுமே! கவன்ட்ரி பாட்மோர். சாவினாலேயே திருத்தம் பெறத்தகும் மந்திரிகளுள் வால்டோ ஒருவர். ஸாக்கி. மாகி (மார்கரட்), ஸ்காட்லந்துக்காரரின் மிக உயர்ந்த பண்பு எது என்பதனை நீ மறந்து விட்டாய்! கெடுதி பயக்கலாம் என ஐயுறத் தகும் எதனையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்! ஜே. எம். பாரி. மனைவி : அன்ப, இது முற்றிலும் பொருளற்றதாகவல்லவா தோற்றுகிறது? கணவன் : ஆம், அன்பே! அங்ஙனம் தோற்றுவது உண்மையே. ஆயினும் அதனாலேயே அது நல்ல சட்ட மாயிருக்கப் படாது என்று கூறிவிட முடியாது. சர் வால்டர் ஸ்காட். செல்வருக்குத் தனிச் சட்டமுண்டு; மிகுசெல்வருக்கு அதனினும் வேறான தனிச் சட்டம் உண்டு. ஒரு பெரியார். ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலுஞ் சரி, ஒவ் வொரு செயலையும் ஒவ்வொரு எண்ணத்தையும் சட்டத்தை ஆராய்ந்து பின்பற்றியே அவன் செய்தாலும் சரி, அவன் வாழ்க்கையில் சட்டம் குறுக்கிட்டும் தூக்குத் தண்டனைக்குரிய குற்றத்திற்குப் பத்துத் தடவையாவது ஆளாக்காமலிராது. மாண்டேய்ஸ். முறைவர் முதலில் தன் வாழ்க்கைக் காவனவற்றைப் பார்த்துக் கொண்டு, பின் தன் மதிப்புக் காவனவற்றைக் கவனித்துக் கொண்டு அதன்பின்தான் நேர்மையைப் பற்றிச் சிந்திக்க முடியும். ஒரு பெரியார். வழக்குரைஞர் ஆவோர் தொடக்கத்தில் ஐந்து வெள்ளிக் காக 500 வெள்ளி அளவு உழைப்புச் செய்து, இறுதியில் 500 வெள்ளிக்காக ஐந்து வெள்ளி உழைப்பு உழைப்பவரே ஆவர். பெஞ்சமின் ப்ரூஸ்டர் கூற்று. வழக்குரைஞர்கள் பெரும்பாலும் வழக்காடச் செல்வ தில்லை; இம் மறைபொருளை மக்கள் அறிந்திருந்தால் நல்லுது. மேஸல்கு ரோஸஸ். நம் பின்னோருக்காக நாம் ஏன் சட்டம் வகுக்க வேண்டும்? நமக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ஸர் பாய்ல்ராஷ். இருபெண் மணத்துக்குரிய மிக்க கடுந் தண்டனை யாது? இரண்டு மாமியார் இருப்பதுதான்! பாஸ்வெல். தண்டலாளர்: (கணவனைப் பார்த்து): இவ்வழக்கில் உன் மனைவிக்கு நீயே வழக்குரைஞராக இருக்க எண்ணமா? கணவன்: அண்ணலே, நான் வழக்குரைஞனல்லன்; நான் உண்மை பேசப் பழகி விட்டவன். சமயப் பணியாளர்கள் வாய்மையிலேயே கருத்துச் செலுத்தவில்லையென்று புரூடு ஸ்காட்லாந்து நாட்டு இளைஞர்கட்கு அறிவுறுத்துகிறார். வரலாறு என்பது ஒரு பெரும் புளுகு மூட்டையென்று தூயதிரு. சமய அறிஞர் கிங்ஸ்லி கழறுகிறார். இந்த வசையுரைப் போராட்டத்தின் காரணம் என்ன? இதனை விளக்குவது எளிது; கிங்ஸ்லி ஒரு சமய அறிஞர் என்று புரூடு நினைத்து விட்டார். புரூடின் நூல்கள் வரலாறுகள் என்ற கிங்ஸ்லியும் கருதிக் கொண்டார்!! அறிஞர் வில்லியம் ஸ்டப்ஸ் வரலாற்றை நையாண்டி செய்து ‘பிரலு’ க்கு வாடிக்கை யாய் விட்டது; ‘பிரலை’ நையாண்டி செய்வதும் வரலாற்றுக்கு ஒரு வேடிக்கையாயிருப்பது உறுதி. (பிரல் என்பவர் பற்றி) ஈ.பி. ஆஸ்பார்ன் ஓரரசன் இரக்க உணர்ச்சியுடையனாக இருந்தால், அவன் ஆட்சி ஒரு முழுத் தோல்வியாகவே இருக்கும். முதலாம் நெப்போலியன் வரலாற்றின் படிப்பினைகளை மனிதர் படித்துக் கொள்வ தில்லை என்பதே வரலாற்றிலிருந்து நாம் படிக்கத்தகும் படிப்பினை ஆகும். ஹெகெல். கட்டுக் கதையிலுள்ள கதைப் பொருத்தப் பண்புகூட இல்லாத கட்டுக் கதைத் தொகுதியே வரலாறு. ரஸல் கிரீன். அந்தோ வரலாற்றைப் படிக்காதீர்! அது என்றும் பொய்யாக வே இருக்கும். ஸர் ராபர்ட் வால்போல். வரலாறு படிக்காதே, வாழ்க்கை வரலாறுகளே படி. ஏனெனில் இவைகளே ஊகக் கோட்பாடுகளற்ற வரலாறுகள் ஆகும். பெஞ்சமின் டிஸ்ரெய்லி. என்றும் நடைபெற்றிராத செய்திகளைப்பற்றி அவற்றுக் குரிய காலத்தில் வாழ்ந்திருக்க முடியாத ஒருவர் எழுதி வைத்த கற்பனை - இதுதான் வரலாறு! ஒரு பெரியார். வரலாறு என்பது மனித வகுப்பார் இதுவரை செய்துள்ள கொலை முதலிய குற்றங்கள், அவர்கள் அறியாமையால் நிகழ்ந்த பிழைகள், அவர்கட்கு நேர்ந்த இடையூறுகள் ஆகியவற்றின் தொகுதியே யல்லாது நேவறொன்றும் இல்லை. கிப்ஸன். வரலாறு என்பது அறிஞர் பலர் சேர்ந்து ஒத்துப் புளுகும் புளுகன்றி வேறென்ன? நெப்போலியன். வரலாற்றாசிரியனும் ஒரு தொலைநோக்கறிஞனே; ஆனால் ஒரே ஒரு வேற்றுமை; வரலாற்றாசிரியன் நோக்கு முன்நோக்கல்ல, பின் நோக்கு. ஷலெருகல். நாம் விரும்பாதவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு நாம் விரும்புகிறவற்றுக்கு அடிமைப் பட்டிருக்க விரும்புவதே விடுதலை ஆகும். ஸர். எர்னஸ்ட் பெடன். காதலின் முதல் மூச்சே அறிவின் கடைசி மூச்சு. அத்தாய்ன் ப்ரெட். வாழ்க்கை என்பது சோர்வு கொள்வதற்கான ஒரு நீள் பயிற்சி. ஸாமுவேல் பட்லர். வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்ளக் கூடும்; இந்தப் பொழுதுபோக்கு வேடிக்கைகள் இல்லாவிட்டால்! ஸர். எஸ். கார்ன்னவால்லூயி. வாழ்க்கை ஒரு தீராத நோய். ஏபிரசம் கௌலி. வாழ்விது ஓர்நிழலாட்டம்; பயிற்சியற்ற நடிகன் வந்தாடி ஓடித்தன் அரங்காட்ட மாடிப் பாழ்வெளியில் மறைகின்ற வறிதாட்டாம்; பொருளில் பருவரலும் பகட்டுமிக்க பயனீடாக் கதையின் பண்பற்ற புனைசுருட்டுப் பொறியெனலாம் தகைத்தே. ஷேக்ஸ்பியர். நாம் வாழ்வது எதற்காக? நம் அயலார் வெட்டிப் பொழுது போக்குக்காக! அத்துடன் அவர்களையும் நம் பொழுதுபோக்காக ஆக்க! ஜேன் ஆஸ்டன். உலகம் ஒரு பெரும் குமிழி; அதில் மனித வாழ்வு ஒரு சாணிலும் குறுகியது. ஃவிரான்ஸிஸ் பேக்கன். அழுகையுடன் தொடங்கி அலறலுடன் முடிவுறும் இந்த வாழ்க்கையிடம் நமக்கு ஏன் இவ்வளவு பற்றுதல்? மேரி வார்விக் கோமாட்டி. வாழ்க்கை என்பது அழுகை, சிணுக்கம், சிரிப்பு ஆகிய வற்றின் கூட்டு. ஆனால் அதில் பெரும்பகுதி சிணுக்கம்தான்! ஒரு பெரியார். பெரும்பாலும் வீரம் வேண்டுவது மாள்வதற்கல்ல. வாழ்வத ற்கே. ஆல்ஃவியரி. ஆடவர் வாழ்க்கையின் இயல்பை மிக முன் கூட்டி உணர்ந்து விடுகிறார்கள். பெண்களோ மிகப் பிந்தி உணர நேரிடுகிறது. ஆஸ்கார் ஒயில்டு. காதல் அணங்கனாய்! நீயும் நானும் சேர்ந்தால் காதொடு மூக்கிலாக் காசினியின் கூட்டையெல்லாம் மோதித் தகர்த்துத் துகளாக்கி அத்துகளைக் காதல் உளநேர்வில் மீட்டுரு ஆக்குவமே. ஒமார் கயாம். வதைப்பும் பதைப்பும் புதைபடும் வரை - அப் புதைப்புக்கும் முன்னறிவுப்பு கிடையாது! மொத்தத்தில் இந்த வாழ்க்கைத் திட்டம் ஒரு வேடிக்கையான திட்டம்தான்! ஜார்ஜ். எம். கோஹன். வாழ்க்கையைப் பற்றிப் பொதுவாகக் கூறினால் ஒரே முடிவுதான் கூற முடியும் - ஏனெனில் இளமைக் கால முழுவதும் ஒரே இழுக்கு, நடு முதிர்ச்சிக் கால முழுவதும் ஒரே போராட்டம்; முதுமைக்கால முழுவதுமோ ஒரே கழிவிரக்கம். அவன் பண்புடையாளன் என்று கூறப்படுபவர் நிலையி லேயே பயிற்றுவிக்கப் பட்டான் - அதாவது எதுவும் செய்ய முடியாதவனாகப் பயிற்றுவிக்கப்பட்டான்! ஃபீல்டிங். ஐய, என் கை அச்சாளர், ஒரு நங்கை யாதலால் உம்மைப் பற்றி நான் எண்ணுவதைக் காதால் கேட்டுக் கை அச்சடிக்க முடியாது. நானும் ஒரு பண்புடையாளனாதலால் அதை மனம் விட்டுச் சொல்லவும் முடியாது. ஆனால் இந்த இரு தடையும் உமக்கு இல்லை. ஆகவே என் மனக் கருத்தை நீர் அறிந்து கொள்ளலாம். வில்லியம் கூப்பர். காலரிட்ஜ் ஆங்காங்கே வீணுரையாகச் சிதறிய சொற்களைப் பொறுக்கி யெடுத்துக் கொண்டால் போதும் - ஒரு பத்துப் பன்னிரண்டு (டஜன்) கவிஞர்களுக்கு அவை ஈடு செலுத்தும்! ஹூக்ஹாம்ஃவ்சேர். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. திருவள்ளுவர். நினைப்பு சொல் செயல் எல்லாம் நல்லவனாகவே இருத்தல் வேண்டும். எளிய வாழ்க்கையே சிறந்தது. பிறருடன் அன்பாகவே நடக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும். மனிதன் வாழ்க்கை முறையில் நற்பேறு அடைய வேண்டுமேயொழிய வழிபாட்டாலும், வரையாது அறஞ்செய்வதாலும் துன்பத்தை ஒழித்துவிட முடியாது. கொல்லாமையே சிறந்த பண்பாக அமைய வேண்டும். கௌதம புத்தர். 49. முரண்பாடு என் கருத்தில் முரண்பாடா?- சரி, அப்படியானால் நான் முரண்பட்ட கருத்துக்கள் உடையவன் தான்! என் நெஞ்சம் பெரிது; திரளான முரண்பாடு களுடைய மனித வகுப்பே அதில் அடங்கியுள்ளது. புரட்சிக் கவிஞர் வால்ட் விட்மன். உலகமுள்ளளவும் விதைப்புக் காலமும் இருந்தே தீரும்; அறுவடைக் காலமும் இருந்தே தீரும். தட்பும், வெப்பும், வேனிலும் கூதிரும், பகலும், இரவும் என்றும் முடிவடைய மாட்டா. விவிலிய நூல், உலகத் தோற்றப்பகுதி. ஆ! என் தீராப் பகைவர்கள் பற்றி நான் விரும்புவதெல்லாம் அவர்கள் ஒரு நூலாசிரியர் ஆகவேண்டும் என்பதே! விவிலியநூல், பழைய ஏற்பாடு, யோபுவின் ஏடு. ஒரு நூல் பற்றிக் கருத்துரை எழுத நேரும்போது, கருத்து ரைக்கு முன்பு அந்நூலை நான் வாசிக்கத் துணிவதேயில்லை. கருத்துரைக்கு அதனினும் தப்பெண்ணம் உண்டாக்குவது வேறு எதுவும் இல்லை. (பத்திரிகை ஆசிரியர், கருத்துரையாளர்) ஸிட்னி ஸ்மித். நூலை வாசிக்காவிட்டால் என்ன, அதில் ஒரு சொல்லைக் கூட உணராவிட்டால் என்ன; நூலைப்போல அழகு செய்யும் பொருள் வேறு எதுவும் கிடையாது. ஸிட்னி ஸ்மித். சிந்திக்கும் பழக்கத்தை அகற்றுவதற்கு நூலை வாசிப்ப தென்பது அடிக்கடி ஒரு திறமிக்க சூழ்ச்சியாயமைகிறது. ஆர்தர் ஹெல்ப். ஏட்டுப் பேர்வழி ஒரு பெருத்த இடர் - அவன் வகையில் விழிப்புடன் இருக்க! ஜஸாக் டிஸ்ரெய்லி. பெருத்த விற்பனையுடைய ஏடு - ஆம், இடைத்தர அறிவுடை யோனுக்கு அமைக்கப்பட்ட பகட்டான கல்லறை மாளிகை அது! லோகன். பி. ஸ்மித். நல்ல ஏடு என்றும் அல்லாத எடு என்றும் எதுவுமில்லை. ஏடு நன்று எழுதப்படுகிறது. நன்கு எழுதப்படவில்லை அவ்வளவுதான். ஆஸ்கர் ஒயில்டு. நெருப்பு அருகே இருந்தாலும், தயக்கமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு படிக்க இடந்தரத்தக்க சுவடிகளே பயன்தரும் சுவடிகள் எனக் கூறத்தக்கவை ஆகும். அறிஞர் ஜான்ஸன். இந்நூலை வாசிப்பதைவிட அதை எழுதுவது எளிதாயிருந் திருக்க வேண்டும். (ஒரு நண்பர் நூல் பற்றி). கோல்டுஸ்மித். மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துக் களை மறைப்பதற்காகவே. வால்ட்டேர். மூளை நடுநிலைமையில் நிற்கும்போதுதான் நாக்கு இரு சார்புக்கும் அலைந்து திரியும். ஒரு பெரியார். சொற்போர் ஆண்மையுடையது; உரையாடல் பெண்மை யுடையது. நினைவாற்றல் குறையுந்தோறும் மக்கள் நா நீள்கிறது. மண்டிஸ்யூக். ம்ம்ம் மக்களும் அமைப்புகளும் முதற் பதிப்பு 1957-58 இந்நூல் 2002 இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முன்னுரை மனிதர் எவரும் தங்குதடையற்ற தன்னுரிமையுடைய வரல்லர் என்று தான் பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். ஆடவராயினும் சரி, பெண்டிராயுனும் சரி, யாவரும் தம்மைச்சூழ இருக்கும் மன்னுலக அமைப்புக்கு ஆட்பட்டவர்களே என்பது அவர்கள் எண்ணம். இது மிகவும் தவறு. மன்னுலக அமைப்புக்கள் எல்லாம் மனிதன் படைப்புகளே. அவற்றை ஆக்கியவனும் இயக்குபவனும் ஆள்பவனே அவனே. இவ்வமைப்புக்கள் சமய அமைப்புக்களாயிருக்கலாம். அரசியல்,சமுதாய அமைப்புகளாகவோ; வாணிக, தொழில்துறை அமைப்புக்களாகவோ இருக்கலாம். குடும்ப அமைப்பாயிருக்க லாம். பண்டை மரபுப் பண்பாயிருக்கலாம். அது எதுவாயினும். அதை ஆக்கிய மனிதனால் அதை அழிக்க முடியும், மாற்றவும் திருத்தவும், புதுப்பிக்கவும் முடியும். அதை மாற்றியமைத்து இயக்கவும் அவனால் கட்டாயம் முடியும். மனித வாழ்வையும் வாழ்வின் அமைப்பையும் சூழலையும் உண்டு பண்ணுபவன் மனிதன்; மனிதனை அவை உண்டு பண்ணுபவை அல்ல. இந்த உண்மையை அறியாதவனுக்கு, வாழ்வு புதிர்மயமானது. இடர் நிறைந்தது. மாறுபாடும் சுழற்சியும் உடையது. அதனிடையே அவனுக்கு, அமைதியும் பாதுகாப்பும் கிட்டுவது அரிதாகின்றது. என்றும் மாறுபடும் இவ் உலை விடையே மாறுபடா நிலவர அமைதியுடைய அடித்தளத்தை அல்லது ஓர் உறுதிப்பொருளைக் கண்டு கிட்டினாலல்லாமல், அவனுக்கு இன்பமும் அமைதியிம் உண்டாகாது. அறிவியல், மெய்விளக்கம், சமயம் ஆகிய மூன்றும் அம்மூன்றின் பல துறைகளும், இவ்வடித்தளத்தை அஃதாவது உறுதிப்பொருளைத் தேடி அடைவதற்கான பலதிறப்பட்ட முயற்சிகளே. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், உலைவுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை ஒரே அமைதியில் பொருத்தி இணைத்துக் காண்பதே அவற்றின் முடிந்த முடிவான நோக்கம். இதற்காக அவை மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகியல் திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆன்மிகத்திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆனால் இயற்கையின் உள்ளுறை அமைதி கண்டு, அக அமைதியுடன் அதைப் பொருத்தி நிறைவு காண்பதே இரண்டு திறங்களுக்கும் உரிய பண்பு ஆகும். கணக்கியலும் அறநூலும் கணக்கியல் ஒன்றுதான் சரி நுட்பமான அறிவியல் துறை என்று கூறப்படுவதுண்டு. ஏனென்றால், இத்துறையின் மெய்மைகள் ஒருவித விலக்குக்கூட இல்லாமல் எல்லா, இடத்துக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமானவை. ஆயினும் கணக்கியலின் இதே சிறப்பை மற்றொரு துறையிலும் முனைப்பாகக் காணலாம். கணக்கியல் எல்லா அறிவியல் துறைக்கும் அடிப்படையான சரிநுட்ப அமைதிகளை விளக்குகிறது. அதுபோலவே வாழ்க்கை யின் சரிநுட்ப அமைதிகளை விளக்க முற்படுவது அறநூல். கணக்கியல் புற உலகின் சரிநுட்ப நிலையை விளக்குவது. அறநூல் அகநிலை அமைதி, அகப்புறத் தொடர்பு ஆகியவற்றின் சரிநுட்ப நிலைகளை விளக்குவது. கணக்கியல் சரிநுட்ப நிலையின் உடலானால், அறநூல் அதன் உயிராய் அமையவல்லது. பொதுவாக எல்லா இயல்களுமே கணக்கியலை அடிப்படையாகக் கொண்டவை என்ற அறிவியலுண்மை வரவரத் தெளிவாக உணரப்பட்டு வருகிறது. கணக்கியலுடன் சிறிதும் தொடர்பற்றது என்று பெரும்பாலும் கருதப்படுவது இசை. ஆனால் அதுகூட மிக நுட்பம் வாய்ந்த கணக்கியல் திறம் உடையது என்பதை நாம் இப்போது அறிந்து வருகிறோம். அடிப்படை இசைக்கூறுகள் தத்தம் அளவமைதியில் என்றும், எங்கும் மாறுபடுவதில்லை. அக் கூறுகளின் வகைதொகைக் கூட்டிணைப்புக்கள் எண்ணற்றவை. ஆயினும் தனிக்கூறுகளும் தத்தம் அளவைத்தன்மைகளில் மாறுபடுவனவல்ல. குறிப்பிட்ட கூட்டிணைப்புக்களும் தத்தம் தன்மையளவைகளில் மாறுபடுவ தில்லை. அறிவியலின் இக்கணக்கியல் பண்பு அல்லது அடிப்படை பண்பே அறிவியல் கட்டடத்தின் தலைக்கல் ஆகும். எந்த அறிவியல் துறையும் தன்தன் முழுநிறைநிலை நோக்கி முன்னேறுந்தோறும், இக் கணக்கியற் பண்பும் அதில் மேம்பட்டு நிரம்புதல் காணலாம். அறிவியல் மட்டுமன்றி எல்லாத்துறைகளிலுமே இத்தகைய அடிப்படைக் கணக்கியல் பண்பமைதி உண்டு. வாழ்கையில் மிக பரந்தும், வாழ்க்கையின் இலக்கணமாகிய அறநூலின் பொன்வேய்ந்த முகடாகிய சமயத்தில் செறிவாகவும் இதே அமைதியைக் காணலாம். அறநூலார் இவ்வமைதியை மேற்புற நோக்காகர் கொண்டு கடவுள் என்பர். சமயத்துறைவாணரோ மனிதர் பெற்று நுகரவேண்டும் ஒரு முடிவு நிலையாக அதனைக் கொள்வர். அந்நிலை அடைந்தவர்களை அவர்கள் “பேரமைதிநிலை” (வீடு, நிர்வாணம், முக்தி) அடைந்தவர் என்று பெருமைப்படுத்துகின்றனர். அலையெழுந்தாடிக் கலக்கமுறும் காலம் என்னும் கடற்பரப்பின் அடிப்படைத்தளத்தில், அல்லது அவ்வடித் தளத்தில் ஊன்றி நிற்கும் பாறைமீது முன்னிலைப்பெற்று நிற்பவர் அவர்கள். திருத்தொண்டர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், முனிவர்கள் என்று குறிக்கப்படத்தக்கவர்கள் இவர்களே. ஒரே அறிவுத் தொகுப்பு செயல்கள், அவற்றின் விளைவிகள் ஆகியவை பற்றிய அனுபவங்களின் தொகுதியாகவே வாழ்க்கை இயங்குகின்றது. இவ்வனுபவங்களின் இயற்கை முடிவே அறிவுப்பேறு. வாழ்க்கையில் நாம் அடையும் வளர்ச்சி முற்றிலும் இவ்வறிவின் வளர்ச்சியன்றி வேறல்ல. உலகம் இவ்வறிவை அடைவதற்கான ஒரு பெரும் பள்ளி அல்லது கல்லூரி அல்லது பல்கலைகழகமே யாகும். இக்கல்வி நிலையங்களின் மாணவர் பலதரப்பட்டவர்கள். அவர்கள் அறிவின் வளர்ச்சி முறைகளும் பல. வளர்ச்சி வேகமும் பலதரப்பட்டது. ஆனாலும் அவர்கள் அறியவேண்டுமென்று முன்பே தொகுத்து வகுக்கப்பட்ட அறிவு ஒன்றே. இது போலவே, வாழ்க்கையிலும் அறிவு வளர்ச்சி பலதரப்பட்டதாகத் தோன்றினாலும், இயக்கையில் அது ஒரு தொகுதியுட்பட்டதே. கல்வித்திட்டத்தில் பாடம் வகுப்பு ஆகிய முறைகள் உண்டு. அதுபோல வாழ்க்கைமுறை வகுப்பிலும் பல படிமுறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப்படிகள் ஒரே முடிந்த அறிவுக்கு வழிவகுப்பவையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை ஒருவன் விரைவில் பெறலாம். மற்றொருவன் கால நீட்டித்தோ, பிற்பட்டோ, அல்லது சுற்றுவழியாகவோ பெறக்கூடும். ஒருவன் ஒரு சில அனுபவங்களை ஊன்றிக் கவனித்து அவற்றின் படிப்பினை களாலேயே அவ்வறிவைப் பெறலாம். மற்றொருவன் மிகப்பல அனுபவங்கள் கடந்தே அதைப் பெறக்கூடும். இவ்வேறுபாடுகள் அவரவர் அகத்திறனை அல்லது முன்னை அனுபவங்களின் நல் விளைவைப் பொறுத்தவை. எனினும் அனுபவங்களின் இவ்வேறுபாட்டாலோ அறிபவர் வேறுபட்டாலோ அறிவு வேறுபடுவதில்லை. இயற்கை இவ்வடிப்படை அறிவில் வகுத்துள்ள படிமுறைகளின் வழியாகவே எல்லா மனிதரும் சென்று வளர்ச்சியடையவேண்டும். அவையே நாகரிகப்படிகள், பண்பின் திறங்கள் அறிவின் அளவைகள் ஆகும். கல்விநிலையத்தின் அறிவுத்திட்டத்தை மாணவர் பின்பற்றமுடியுமே தவிர, அதன் முழு அளவைக் காணமுடியாது. முழு அளவைப்பெற்றவர் தாம் அதை அறியவும் தீட்டவும் இயக்கவும் முடியும். ஆயினும் அத்தகைய முழுநிறை திட்டத்தையே “கல்வி” “அறிவு” என்ற பொதுச் சொற்களால் அவர்கள் சுட்டுகின்றனர். இதுபோலவே வாழ்க்கையின் முழுநிறை அறிவு அமைதியை வாழ்க்கையின் மாணவராகிய மனிதர் முழுவதாகப் பார்க்க முடியாது. எனினும் பொதுமுறையில் தொகைச்சுட்டாக அதனையே அவர்கள் “தெய்வநீதி” அல்லது “பொதுநேர்மை” என்று குறிப்பிடுகின்றனர். அதை நோக்கியே நல்மனிதர் அதாவது முற்போக்குடையவர்கள் நேர்வழியாக முனைகின்றனர். மற்றையோர் சுற்று வழியாகச் சென்று அலமருகின்றனர், அல்லது பின்னோக்கி நழுவி அவதியுறுகின்றனர். தெய்வநீதி : காரணகாரியத் தொடர்பு தனி நீதிக்கும் தெய்வ நீதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? தனி நீதி தனி மனிதன் விருப்புவெறுப்புக்களையும், அவன் தற்காலிக இன்பதுன்ப உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தெய்வ நீதியோ அவற்றுக்கு அப்பாற்பட்டது. அது எல்லா மனிதருக்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடத்துக்கும் பொருத்தமானது. ஏனெனில் அது காரணகாரியத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. அதன் இன்றியமையா இணைப்பால், எல்லாப் பொருள்களும் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே முழுநிறை அமைதியின் பல்வேறுபட்ட உறுப்புக்களாகின்றன. காரணகாரியத் தொடர்பு மூவகை அமைதிகளை உடையது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. அதே சமயம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. எனவே செயல்கள் ஒன்றுகொன்று காரண காரியமாகச் சங்கிலியின் கண்ணிகள் போலத் தொடர்கின்றன. குறிப்பிட்ட ஒரு காரணம் அதற்குரிய காரியமாகிய செயலை உண்டுபண்ணியே தீரும். அதே சமயம் ஒரு காரணம் அதற்குரிய குறிப்பிட்ட விளைவான காரியத்தையன்றி வேறு எதையும் உண்டுபண்ணாது. அஃதாவது ஒரே காரணம் எப்போதும் ஒரே காரியத்துக்கு உரியது. குறிப்பிட்ட ஒரு காரியம் அதற்குரிய காரணத்தையே தொடரும். வேறு காரணத்தால் தொடராது. ஒரே காரியம் எப்போதும் ஒரே காரணத்துக்கு உரியது. அதனைப்பற்றி வேறு காரியம் தொடராது. காரணகாரியத் தொடர்பின் மேற்குறிப்பிட்ட மூன்று கூறுகளுமே வாழ்கையிலும் இயற்கையிலும் கணக்கியலின் சரிநுட்பநிலை, இன்றியமையாக் கட்டாய உறுதிப்பாடு ஆகியவற்றை உண்டுபண்ணுகின்றன. காரணகாரியத் தொடர்பு எல்லாப் பொருளைகளையும் பண்புகளையும் செயல்களையும் ஒரே பேரமைதியில் இடம் பெறும்படி இணைக்கிறது. இது பற்றியே எல்லா அறிவுத்துறைகளுக்கும் கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கும் அடிப்படை அறிவமைதியே என்று நாம் கூறுகிறோம். இதனையே நாம் தெய்வநீதி என்றும் வழங்குகிறோம். ஏனெனில் இது என்றும் மாறுபடாதது. என்றும் கூடாதது; குறையாதது, ஒழியாதது, அழியாதது! முன்னாகவோ பின்னாகவோ, மனித இனம் அதைச்சென்று அடைந்தே யாகவேண்டும்! தெய்வ நீதியை ஆன்மிகத்துறைக் கணக்கியல் நெறி என்று கூறலாம். கணக்குத் தெரியாதவனும் கணக்கில் தவறுபவனும் அதன் தண்டனையிலிருந்து விலகிவிட முடியாது. அதுபோலடத தெய்வநீதியை ஒருவன் அறியாவிட்டாலும், தவறாகப் புரிந்துகொண்டு செயலற்றினாலும், அதன் இன்றியமையா விளைவுகளுக்கு ஆளாகியே தீரவேண்டும். காரியமாகிய அவ்விளைவுகளை விலக்குவதற்கு அல்லது உண்டுபண்ணுவதற்கு ஒரே வழி காரணத்தை அறிந்து அதை விலக்குவதோ, மேற்கொள்ளுவதோதான். எனவே தெய்வநீதியின் படிகளாகிய கார்யகாரணத் தொடர்பறிந்தால் ஒருவன் விலக்கவேண்டிய விளைவுகளை விலக்கவும், மேற்கொள்ள வேண்டியவற்றை வருவிக்கவும் கூடும். அவன் தன் ஊழைத் தானே ஆக்குகிறான். உலக வாழ்விலுள்ள உயர்வு தாழ்வுகள் சரிநுட்பமாக இன்றியமை யாமையாது செயலாற்றும் தெய்வநீதியின் விளைவுகளேயாகும். அதன்வழி இயங்கும் ஆன்மிக அமைதிகள் கட்டாயமாகச் செயலாற்றுபவை யாதலால், அவற்றை எவரும் விலக்க இயலாது. ஆனால் காரணகாரிய அறிவுடையவன் அந் நீதியை உணர்ந்து, இதன் போக்கை வேண்டும்போது வேண்டிய வகையில் மேற்கொண்டும் விலக்கியும் ஆட்கொள்கிறான். தெய்வநீதி தற்செயலானதுமல்ல; நிலையற்ற போக்குடையதுமல்ல: கட்டாயமான நேர்விளைவுடையது. இந்தத் தத்துவத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையே உண்மை அறிவின் முதற்படியாகும். அவ்வுறுதி இல்லையென்றால் காரியகாரணத் தொடர் விளங்காது. தெய்வநீதி ஒன்றே என்ற நம்பிக்கை அறிவின் இரண்டாம் படியாகும். அது இல்லையென்றால் வாய்மையல்லாதவற்றை விலக்கி ஒரே வாய்மையைப் பொறுமையுடன் நாடவொ, நாடிப்பெற்றவன் அதில் ஊன்றி நின்று அடுத்தபடிக்கு முன்னேறவோ இயலாது. அறிவின் மூன்றாவது படி தெய்வ அருள்பற்றிய உறுதி. இது இல்லாவிட்டால், தீமையின் முடிவும் நன்மையாகும் என்ற நல்லெண்ணமும், நன்முயற்சியும் விடாப்பிடியும் உண்டாக மாட்டா. தீமையீயனால் ஏற்படும் மனக்கசப்பே தீமையை விட்டகலும் முயற்சியைப் பெரிதும் தடைப்படுத்தும். அமைப்புகள் திட்டமான மெய்யறிவு ஒன்று உண்டு. அதையன்றி அறிவு இல்லை. எந்தப்படி கடந்தும், எத்தனை தொல்லைப்பட்டும், எவ்வளவு காலந்தாழ்த்தும் சுற்றியும் அதை நாம் அடைவது உறுதி. அதை அடைந்தும் உழலும் வாழ்க்கைக் கடலில் உலையா அடித்தளப்பாறையை நாம் எட்டியவர்கள் ஆவோம். அப்போது வாழ்வின் மலைப்புகள் அகலும். அதன் நிலைப்புகழ் வந்தெய்தும். அந் நிலையடைந்தோர் அடையாதோறுக்கு அமைத்த நூலேணிகளே அமைப்புக்கள். அவற்றைச் சென்று எட்டிப்பயன்படுத்தும் வாய்ப்புடையவர் அவ்வமைப்புக் களை மாற்றாமலே முன்னேற்றுவர். தம் போக்குக்கு அவை தடையாவன என்று கருதுவோர் அதற்காக அமைப்பைக் குறைக்கூறிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அமைப்பை ஆக்கியவர்களைப் பின்பற்றி அதனைப் பயன்படுத்தவோ, மாற்றியமைக்கவோ, ஒழித்து வேறு ஆக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. அமைப்புகள் தோன்றும் வகையையும் அவற்றை மாற்றியமைக்கும் வகைகளையும் இச்சிறு நூலில் ஆராய்வோம். 1. அமைப்பாளரும் அமைப்புக்களும் மனிதர் தனித்துநின்றும் செயலாற்றுலாம். அமைப்புக்கள் வாயிலாகவும் செயலாற்றலாம். அமைப்புக்கள் வாயிலாக நடைபெறும் செயல்களை அமைப்பின் செயல்கள் என்றே குறிப்பதுண்டு. அமைப்பவர் அல்லாமல் அமைப்புக்கே தனித்த நிலையும் செயலும் இருப்பதாகவும், அமைப்பே மனிதனை இயக்குவதாகவும் கூறப்படுவதுண்டு. அடிக்கடி மனித வகுப்பை இத்தகைய அமைப்புகுகள் ஆட்டிப்படைப்பதாகவும், அடக்கு முறை செய்வதாகவும் குறை கூறப்படுவதை இந்நாளில் நாம் கேட்கிறோம். புதுக்கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர் “வணிக அமைப்புமுறை,” “சமூக அமைப்புமுறை,” “போட்டி அமைப்பு முறை,” “அரசியல் அமைப்பு முறை” எனப் பல முறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். வறுமை, ஒழுக்கக்கேடு, பஞ்சம் ஆகியவற்றுக்கு இம்முறைகளே காரணம் என்றும் அவற்றின் மீது குறை கூறுகின்றனர். இவ்வமைப்புக்களைச் செயலுக்கு ஆட்பட்ட நிலைகள் என்று கொள்ளாமல், செயலாட்சியும் பொறுப்பும் உடையவை யாக இத்தகையோர் கருதுகின்றனர். அதுமட்டுமோ? மனித இனத்தின் உள்ளார்ந்த விருப்பங்களுக்கு மாறாக அவர்களைக் கட்டுப்படுத்தி அடக்கிக் கொடுமைப்படுத்துபவை என்றும், மனித எல்லை கடந்த மாபெரிய கொடுங்கோன்மையின் உருவங்கள் என்றும் இவ்வமைப்புக்களை அவர்கள் கற்பனை செய்கின்றனர். அமைப்பும் பொறுப்பும் அமைப்புக்கள் தன்னியல்பான தனிநிலையோ, தனிஅறிவோ உடையனவல்ல. எனவே அவற்றைப் பொறுப்புடையவை என்று கருதுவது தவறு. அவை மனித விருப்பங்கள் கடந்தவையுமல்ல, மனிதரை அடக்குமுறை செய்யத்தக்கவையும் ஆகமாட்டா. ஏனெனில் அவற்றின் இயல்பும் ஆற்றலும் அமைப்பவரும் அமைப்பின் உறுப்பினரும் ஆன மனிதரின் உள்ளார்ந்த விருப்பங்களையும் முயற்சியையும் ஒத்துழைப்பையும் பொறுத்தவையேயன்றி வேறல்ல. அவை மனிதர் உள்ளார்ந்த விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றின் புறவடிவங்களேயாகும். மேலும் அவை சமூகமுறையில் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்தவை. கிட்டத்தட்ட ஒரே விருப்பமும் ஒரே மாதிரித் தேவைகளும் உடைய மக்களே ஒரு சமூகமாகச் செயலாற்றுகின்றனர். ஆனால் சில சமயம் ஒத்துழைப்பு அக ஒத்துழைப்பாய் இயல்பாகவே நடைபெறுகிறது. அமைப்பை தன்செயலுடையது போலத் தோன்றுவதன் காரணம் இதுவே. அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் இதை அறிந்தால், குறைகூறவே தேவை ஏற்படாது. அவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டால் அவர்கள் செயல் மாறுபாடு படிப்படியாக அமைப்பிலும் மாறுதல் கொண்டு வராமலிராது. அமைப்புக்களை மனிதர் விரும்புவதாக் கூறலாம்; வெறுப்பதாகக் கூறலாம். இவற்றால் அமைப்பில் மாறுதல் ஏற்படாது. ஏனென்றால் இவ்விருப்பங்கள் புற விருப்பங்களே. அமைப்பு எப்படியும் சமூகத்தின் செயல்துறை ஒத்துழைப்பைப் பொறுத்தது. ஆகவே அது தனிமனிதர் செயலையும், செயலுக்குக் காரணமான அகக் கருத்தையும், அகப் பண்புகளைமே சாரும். அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் உண்மையாகவே தங்கள் அகக் கருத்தையும் அகப் பண்புகளையும் அவற்றுக்கேற்ப மாற்றியமைத்தால், அவர்கள் செயல் மாறும். பிறர் கருத்துக்களும் செயலும் அவ்வாறே நாளடைவில் மாறுபடும். புதிய அமைப்பு தானாகவே அமைந்துவிடும். வரலாற்றின் போக்கில் எவரது முனைத்த முயற்சியும் இல்லாமலே அமைப்புக்கள் இவ்வாறு தாமாக மாறி வந்திருப்பதைக் காணலாம். இதனால் முனைப்பான முயற்சி வேண்டியதில்லை என்றோ, பயன்படுவதில்லை யென்றோ கொள்வதற்கில்லை. முனைப்பான முயற்சி மாறுபாட்டை விரைவு படுத்தக்கூடும். ஆனால் அதன் பயன் பெரிதும் மாறுதல் விரும்புவர் அகப்பண்பின் மாறுபாட்டையே பொறுத்திருக்கும். போலிக்கண்டனம் நாவால் ஓரமைப்பை ஒருவன் உரக்கக் கண்டிக்கலாம். ஆயினும் அவன் உள்ளார அதன்மீது விருப்பமுடையவனா யிருக்கக்கூடும். ஏனெனில் அவன் கண்டித்துக் கொண்டே செயலில் அதைப் பின்பற்றுபவனாயிருப்பான். இச்சமயத்தில் அமைப்பு அவன் கண்டிப்பினால் பாதிக்கப்படாது. சமயத் துறையில் பழிகளை உரக்கக் கண்டித்துக் கொண்டே அப் பழிகளுக்கு இடந்தரும் புற நீர்மையாகிய போலிப் பண்புடையவர்களைக் காண்கிறோம். இதே போன்ற புற நீர்மை சமயமல்லாத பிற துறைகளிலும் நிலவுவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஒப்பியல்வாதிகள்1 பலர், பிறர் உழைப்பின் மீது சிறப்பாக ஏழைகள் உழைப்பின் மீது வாழும் சுரண்டல் முறையை வன்மையாகக் கண்டிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். அதே சமயம் அவர்கள் பொருளகங்களிலும்2 பிற தொழிலகங்களிலும்3 பங்காளராயிருந்து4 பங்கூதியம்5 பெறத் தயங்கவில்லை. பங்கூதியம் என்பது, தான் உழையாது உழைப்பவர் வருவாயில் பங்கு பெறுதல் ஆகும் இது சுரண்டல் முறையில் ஒரு கூறு கைக்கொள்வதேயாகும். இங்ஙனம் பங்கூதியம் பெறுவதன் மூலம் இத்தகையோர் ஒருபுறம் சுரண்டல் முறையைக் கண்டித்துக் கொண்டே மறுபுறம் அதனுடன் ஒத்துழைத்து அம் முறையை வளர்க்கின்றனர். இது பற்றி அவர்களிடம் உசாவினால், அப்போதுதான் அவர்கள் தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க அமைப்பைக் குறை கூறுகின்றனர். “எங்களைச் சொல்லி என்ன செய்ய! எல்லாம் அமைப்பின் செயல். அமைப்பை மாற்றும் வரை நீங்கள் என்ன எசய்யமுடியும்? நான் என்ன செய்யமுடியும்? நாம் யாவருமே செயலற்றவர்கள். அமைப்பின பாரிய சக்கரங்களிடையே அரைபடும் சிறு தூசிகள் நாம்,” என்று அவர்கள் போலி விளக்கம் தருகின்றனர். நாம் மேலே காட்டியபடி அமைப்பைக் குறைகூறும் முறை ஒரு மாயமுறை ஆகும். அமைப்பை மாற்றியமைக்கும் பொறுப்பும் ஆற்றலும் அதை அமைத்தவர்களான அமைப்பின் உறுப்பினர் களுக்கு உண்டு. ஆகவே உறுப்பினர் செயலற்றவர்கள், அதன் செயலுக்கு ஆட்பட்டவர்கள் என்று கூறுவதும் பொருந்தாது. அப்படியானால் அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் அகக் கருத்து என்ன என்று பார்ப்போமானால், அவர்களை அறியாது அவர்கள் செயலும் எண்ணமும் முரண்படுவதன் காரணம் எளிதாக விளங்கும். அமைப்பைக் குறை கூறும்போதும் அதன்மீது பொறுப் பேற்றும் போதும், அவர்கள் உண்மையில் குறை கூறுவது அமைப்பின் உறுப்பினர் அனைவரையும் அன்று. தம்மை நீக்கி ஏனைய உறுப்பினர் அனைவரையுமே அவர்கள் குறை கூறுகின்றனர். அவர்கள் தாம் மாறுபட விரும்பவில்லை. பிறர் மாறுபட வேண்டுமென்று விரும்புகின்றனர். பிறரிடம் தீமையென்று கண்டிப்பதைத் தம்மிடம் நல்லது என்று அவர்கள் மனமார ஏற்கின்றனர். இதனால் ஏற்படும் அகக் கருத்து விளக்கத்தை அவர்கள் கண்டால், அது மிகக் கோரமானது என்று அவர்களே ஒத்துக்கொள்வர். அவர்கள் சுரண்டலின் எதிரிகளல்லர். ‘தம் சுரண்டலின்’ எதிரிகளும் அல்லர். ‘ பிறர் சுரண்டலின்’ எதிரிகள் மட்டுமே! அஃதாவது சுரண்டலில் பிறருடன் பங்கு கொள்வதுடன் அமையாமள், தாம் மட்டும் தனியுரிமையுடன் சுரண்டுடவiதை அவர்கள் உள்ளம் நாடுகிறது. இதனால் உண்மையில் அவர்கள் சுரண்டலைக் கண்டிக்காத பலரைவிடச் சுரண்டும் பண்புமிக்கவர்கள் ஆகின்றனர்! சுரண்டுதலுக்கு உரிய அமைப்பைக் கண்டிக்க முற்படும் அவர்களே தான் அந்த அமைப்பைத் தம் அகப் பண்பால் இன்னும் உரமூட்டி வளர்ப்பவர்கள். சுரண்டலமைப்புக்குக் காரணமாயிருந்தவர்கள் அவர்கள் எதிரிகளல்லர், அவர்கள் முன்னோடிகளேயாவர். சுரண்டுதலமைப்பின் மீது போர் தொடுத்துக் கண்டனக் கணைகளை ஏவிக்கொண்ளே இத்தகையோர் அவ்வமைப்பின் தூண்களாயிருக்க முடிகிறது! இயற்கை, செயற்கை அமைப்புக்கள் அமைப்புக்கள் செயற்கை அமைப்புக்களாகவும் இருக்கலாம்; இயற்iகை யமைப்புக்களாகவும் அமையலாம். செயற்கை அமைப்புக்கள் மனிதர் வரிந்து கட்டிக்கொண்டு புற முயற்சி மூலம் வெளிப்பட அமைத்தவை. புறமுயற்சியா லமைந்த இவ்வமைப்புக்களின் வலிமை புற முயற்சியாலோ அல்லது அக நீர்மையில்லாமையாலோ தகர்ந்துவிடத்தக்கவை. ஆனால் இயற்கையமைப்புக்கள் என்பவை தம்மையறியாமலே அகக் கருத்திலும் பண்பிலும் செயலார்வத்திலும் ஒன்று பட்டவர் கூடி ஒத்துழைப்பால் ஏற்படுபவை ஆகும். அகப்பண்பில் ஊன்றி அமைவதால் அவை மிகவும் வலுவுடையவை. அகப்பண்பே செயலார்வமாய்ச் செயற்படுவதனால், அவை செயல்துறையிலும் கட்டாயமான வெற்றி உடையவை. இயற்கையமைப்புக்களின் வெற்றி தோல்விகள் மனித சமூகத்தின் வெற்றி தோல்விகள். மனித சமூகத்தையே மாற்றியமைக்கத் தக்க மாறுபாடுகளே அவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆயினும் தனிமனிதன் தன் அகப்பண்பு மூலம் சூழலை மாற்றியமைக்கலாம். அகக்கருத்து மாறுபாடு நாளடைவில் படிப்படியாகச் சூழலை மாற்றியமைக்க வல்லது ஆகும். அகக் கருத்து மாறுபடாத எந்தப் புறப்பண்பும், புற மாறுபாடும் இவ்வக அமைப்பைச் சிறிதும் தாக்காது. அமைப்புக்குக் காரணமான பொது அகப் பண்பை மாற்ற விரும்புவோர் முதலில் தம் தனி அகப் பண்பை மாற்ற வேண்டும். அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் பிறர் கருத்தையே முதலில் மாற்ற எண்ணுகின்றனர். இதில்கூட அவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் அமைப்பைக் கூறுவதன் மூலம் எல்லார் பொறுப்பும் தட்டிக் கழிக்கப்பட நேரலாம். மேலும் ஒருவன் பிறரை மாற்ற விரும்புவது போலவே, ஒவ்வொருவரும் விரும்புவர். இதனால் எவரும் மாறுபட மாட்டார். சுரண்டலைக் கண்டிப்பவர் மனப்பான்மையாக வளர்கிறது. அவர்கள் தாம் கண்டிக்கும் சுரண்டலைத் தாமே வளர்க்க உதவுபவர்களாகிறார்கள். அதுமட்டுமல்ல. அத்தகையயோரின் இயல்பான கூட்டுறவினாலேயே சுரண்டலமைப்பு நிலைநிற்கிறது. ஆகவே அவர்களைச் சுரண்டலுக்கு உதவுபவர்கள் என்று கூறுவது கூடப் போதாது. அவர்களே தான் சுரண்டலமைப்பு என்று கூறவேண்டும். குற்றஞ்சாட்டும் அவர்களே தான், உண்மையான குற்றவாளிகள். வாய்பேசாக் கூட்டுறவு அமைப்பு முறைகள் என்பது என்ன? ஒன்றுபட்டுச் செயலாற்றுவதற்கு இணங்கியவர்களின் வாய்பேசாத கூட்டுறவு ஒப்பந்தங்களே அவை. அமைப்புமுறைகளின் தோற்றத்திற்கு மட்டுமன்றி அவற்றின் தெடர்ந்த வாழ்வுக்கும் இந்தக் கூட்டுறவு ஒருபுறமும் உயிர்நிலைக் காரணங்களாகும். எந்தத் தனிமனிதனும் இந்த இணக்கத்தைப் பின்வாங்கிக் கொள்ள முடியும். அதனால் கூட்டுறவு முறிந்துவிடா விட்டாலும், வலுக்குறைவது உறுதி. அதுமட்டுமன்று; ஒரு தனிமனிதன் செயலே மற்றத் தனிமனிதர் செயலையும் தூண்டாமலிராது. ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனும் இத்தகைய கூட்டுறவில் சேர்ந்திருக்கும்போது, அதனால் பெறும் ஆதாயமும் உண்டு. இடர்களும் உண்டு; மொத்ததில் இடர்களைவிட ஆதாயம் மிகுதியென்று கருதுவதனாலேயே அதில் நீடித்து இருக்கிறான். அதே சமயம் கூட்டுறவிலிருந்து விலகுவதிலும் அவனுக்கு இடர்கள் இருக்கலாம். ஆதாயங்கள் இருக்கலாம். ஆதாயங்களைவிட இடர்களே அவனுக்குப் பெரிதாகத் தோற்றக்கூடும். ஒவ்வொரு மனிதனும் தன்தன் தனி நலனுக்காகவே போராடுகிறான். போராட்டத்தில் எந்தப்பக்கம் அவன் திரும்பினாலும் மொத்தத்தில் நலந்தீங்குகள் இருபுறமும் இருக்கத்தான் செய்யும். எந்தப் பக்கம் அவன் இருக்கிறான் என்பது அவன் அனுபவத்தையே பொறுத்தது. யாராவது கூட்டுறவின் பக்கம் இருப்பது நன்றன்று என்று கருதினால், அதன் இடர்களுடன் அதன் ஆதாயங்களையும் துறந்துவிட ஒருப்படுவர். அத்துடன் கூட்டுறவிலிருந்து விலகுவதனால் ஏற்படும் இடர்களை ஏற்று விலகுவதன் அனுபவத்தையும் வெற்றியையும் கண்ட கூட்டுறவின் மற்ற உறுப்பினரும் சிறிதுசிறிதாக அவரைப் பின்பற்றுவார்கள். பழைய அமைப்பு முறைகள் தாமாக இந்நிலையில் தளர்ந்து சரிந்து மறைந்து போகும். தற்கால அமைப்பு முறைகளின் கொடுமைகளை எடுத்துக்காட்டிக் கண்டிப்பவர் இத்தகைய நிலைமையை உண்டாக்கி வருகிறார்களென்று எவரும் கூறமுடியாது. அவர்கள் தாம் கண்டிக்கப்புகும் அமைப்பு முறையின் ஆதாயங்களைத் தாம் நுகரத் தயங்கவில்லை. வெறுப்பது ஆதாயங்களுடன் கிட்டும் இடர்களையே. அதுமட்டுமன்று. அவர்கள் பெறும் ஆதாயங்கள் பிறருக்கு இடரும், பிறர் பெறும் ஆதாயங்கள் அவர்களுக்கு இடரும் ஆகும். எனவே அவர்கள் விரும்புவது பிறர் இடரை, வெறுப்பது பிறர் ஆதாயத்தை என்பது தானே விளங்கும். சுருங்கச் சொன்னால், அவர்கள் சுரண்டலை வெறுப்பதற்கான காரணம், சுரண்டலை அவர்கள் ஒழிக்க விரும்பவதாலல்ல. சுரண்டலில் வரும் ஆதாயத்தில் அவர்கள் மற்றவர்களுக்குப் பங்குதர விரும்பவில்லை. அதில் வரும் இடர்களிலோ, அவர்கள் தாம் பங்குகொள்ள விரும்பவில்லை. ஆதாயம் முழுவதும் கூடியமட்டும் தமக்கு வரவேண்டுமென்றும், இடர்கள் முழுவதும் கூடியமட்டும் மற்றவர்களுக்குச் செல்லவேண்டுமென்றும் அவர்கள் அவாவுகின்றனர். இது சுரண்டல் முறை எதிர்ப்பல்ல, சுரண்டலில் தனியுரிமைக் குத்தகை நாடுவதேயாகும்! தனிமனிதரும் அமைப்பும் “தனிமனிதன்” ஒன்றும் தெரியாத, ஒன்றும் தனிப்படச் செய்ய இயலமாட்டாத அப்பாவி. அவன் செய்யும் கொடுமைகள் கூட அவனாகச் செய்வதல்ல. இரக்கமற்ற, உணர்ச்சியற்ற ஓர் அமைப்பு முறையில் அவன் கட்டுண்டு. அதன் செயலில் அவன் சிக்குண்டு கிடக்கின்றான். கொடுமை செய்யும்போது அவன் கொடுமைக்கு ஆளானவனே யாவான்” இதுவே போலி எதிர்ப்பாளர் கூற்று! மேற்குறிப்பிட்ட செய்திகளை நோக்க, தனிமனிதனை எப்படி ஏதுமறியாத அப்பாவி என்று கூறமுடியும்? எல்லாரும் தத்தம் நலமே அவாவி ஈடுபட்டு ஒத்துழைக்கும் திட்டமுடைய அமைப்பில் அவர்கள் பொறுப்பு இல்லாதிருக்க முடியுமா? ஒவ்வொருவருக்கும் இல்லாத பொறுப்பு மொத்தத்தில் அமைப்புக்கு எவ்வாறு ஏற்பட முடியாது. ஏனெனில் தனிமனிதரை நீக்கி அமைப்பு என்ற ஒன்று இல்லை. உண்மை யாதெனில், அமைப்பில் குறை இருந்தால், அப்போது அதில் ஈடுபடும் உறுப்பினர் அனைவருமே குற்றவாளிகள் ஆவர். அமைப்பு பல தலைமுறை, பல ஊழி கடந்ததா யிருந்தால் கூடப் பொறுப்பு குறையவில்லை. ஏனென்றால் தனிமனிதர் நலன்களுக்கு மாறான அமைப்பு நீடித்திருக்காது. அமைப்புக்கான பொறுப்பைத் தனிமனிதரிடமிருந்து விலக்க முடியாது. ஆனால், இந்த அடிப்படை மெய்மையை மறுக்க, அமைப்பைக் குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் வேறு ஒருவகையில் வாதிக்கூடும். “அமைப்புக்கான பொறுப்பில் தனிமனிதர் அனைவருக்கும் சரிசமமான பங்கு கிடையாது. ஏனென்றால், அதன் நலங்கள் தனி மனிதரிடையே ஒரு சிலருக்குச் சாதகமாகவும், மிகப் பலருக்குப் பாதகமாகவும் பலபடி உயர்வு தாழ்வுகளுடன் செயலாற்று கின்றன; அமைப்பின் நலத்துக்குரிய சிலரே அதனுடன் ஒத்துழைத்து அதில் பொறுப்புடையவராகின்றனர். மற்றவர் பொறுப்புடையவராகார். அத்துடன் சிலரிடையிலும் பலரிடையிலும் பலபடிகளாக நலங்களும் நலக்கேடுகளும் வேறுபடுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தமக்கு மேம்பட்ட வரை நோக்கி அமைப்பை எதிர்க்கவும், கீழ்ப்பட்டவரை நோக்கி அதை ஆதரிக்கவும் விரும்புபவர். இவ்விரண்டாகப் போக்கினால்தான், தனிமனிதன் செயல் பயனற்றதாகி, கூட்டு வலுவாகிய அமைப்பின் மொத்த வலிமை செயலாற்றுகிறது. எனவே, மக்கள் படிநலம் உயருந்தோறும் பொறுப்பு மிகுதி. தாழுந்தோறும் பொறுப்புக் குறைவு,” என்று அவர்கள் வாதிப்பர். ஒத்துழைப்பின் வலு இந்த வாதமும் செல்லுபடியாகாது. முதலாவதாக, சிறுபாலார் ஒத்துழைப்பின் மீது எந்த அமைப்பும் நிலைபெறவோ, வளரவோ முடியாது. பெரும்பாலோர்களின் நலத்துக்கு அது மாறுபட்டதாயிருந்தால், அது கணக்கில் அழிந்துவிடும். சிறுபாலார், பெரும்பாலார் என்ற வாதத்தை விடுத்துச் சுரண்டல் முறை அமைப்பைக் கண்டிப்பவர்கள் தனிமனிதன் இரண்டாகச் செயல்முறையைச் சுட்டிக்காட்டு கின்றனர். இதுவே நாம் கூறிய உண்மையை அவர்கள் உணர்கின்றனர் என்பதைக் காட்டும். தனிமனிதர் இரண்டகம் என்பது ஒவ்வொருவரும் தத்தம் நலம் நாடி அதை ஆதரித்தும், நலக்கேடு நாடி அதை எதிர்த்தும் நிற்கின்றனர் என்றே பொருள்படும். அவர்கள் எதிர்ப்பு ஆதரவைவிட வன்மையுடையதானால், அமைப்புத் தகர்ந்து விடும் என்பது கூறாதலே அமையும். அப்படியானால், அமைப்பு நீடிப்பதற்குக் காரணம் அவர்கள் எதிர்ப்பைவிட, ஆதரவே வலுவுடையது என்று ஏற்படுகிறது. அவர்களில் பலர் சுரண்டலை முனைப்பாகக் கண்டிப்பவ ரல்லாராயினும், அவர்கள் நிலை உண்மையில் அதை ஆதரிப்பவர் நிலையில் வேறல்ல. குரல்கொடுத்துக் கண்டிக்கவோ, ஆதரிக்கவோ பிறரை தூண்டாவிடினும் அவர்கள் செயலிலேயே சுரண்டல் எதிர்பாளருடன் ஒத்துழைத்துச் சுரண்டல் இயந்திரத்தில் தம் ஆட்சியைக் கொண்டுவர முயல்கின்றனர். சுரண்டலைக் கண்டிப்பவரும் சரி, கண்டிக்காது வாய் பேசாது ஆதரிப்பவரும் சரி அம்முறைக்குப் பொறுப்பற்றவர் ஆகமாட் டார்கள் என்பது இதனால் தெற்றெனப்புலப்படுகின்றது. சுரண்டலை வெளிப்படையாக ஆதரிப்பவர் எவரையும் நாம் காணமுடியாது. இது இயல்பானது, நீக்கமுடியாதது. தெய்வநீதிப்படி அமைந்தது என்று வேண்டுமானால் சிலர் கூறலாம். இவர்கள் சுரண்டல் அமைப்பு முறையில் நற்பலன் கண்டவர் அல்லது காண்கின்றவர் என்பது தெளிவு. ஆனால் மிகப்பெரும்பாலோர் ஆகியவரும் அதனை எதிர்க்கவில்லை. நற்பலன் கண்டவரைப் பின்பற்றி அதன் ஆட்சிக் கயிற்றைத் தம் கையில் கொள்ள அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். அவர்கள் அமைப்பு முறையில் மிகுதிநலம் பெறமுடியவில்லை. ஆயினும் அவர்கள் முயற்சி அம்முறையை முற்றிலும் நேரடியாக எதிர்ப்பதில்லை. அதனுடன் ஒத்துழைத்து அம்முறையில் வெற்றி கண்டவருடன் ஒப்பாக இடம் பெறவே அவர்கள் உழைக்கின்றனர். மூன்றாவது பகுதி முதற்பகுதியைப் போலவே சிறுபான்மை யானது. இப் பகுதியினரே சுரண்டல் முறையை வெளிப்படையாக எதிர்க்க முனைந்து பிறரையும் எதிர்க்கத் தூண்டுபவர்கள். சொல்லளவில் அவர்கள் சுரண்டல் அமைப்புமுறையை எதிர்ப்பதாகத் தோன்றினாலும், செயலளவில் அவர்தம் இரண்டாம் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களைப் போல, அதன் நலங்களைஙக கூடியமட்டும் பற்றிக் கொண்டு பெரும்பங்கு நலங்களை அடைபவரை ஒத்த இடம்பெற அவாவி, அது காரணமாக அமைப்பை எதிர்ப்பவர்களே. அவர்களுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், அவர்கள் ஆட்சியிலுள்ளவத்களை எதிர்க்கும் துணிவுடைய வர்கள் என்பதே. அமைப்புடன் ஒத்துழைத்து ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஓரளவு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும்பாலான பொதுமக்கள் ஆட்சியாளர்களை எதிர்க்கும்படி அவர்கள் தூண்டுகிறார்கள். இவ்வெதிர்ப்பு வெற்றி பெறுவது அருமை. ஆனால், வெற்றிபெற்ற அளவில் நலம்பெறுவது யார் என்று கவனித்தால், எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பால் சற்றுக் குறைபட்டால், அந்த அளவுக்கு வலுமிகுவது பொதுமக்களுக்கல்ல. அவர்களைத் தூண்டி ஆட்சியாளர்களை எதிர்த்தவர்களுக்கே. செயல்முறையில் இப்பயன் அவர்கள் நோக்கத்தின் புற உருவே. அவர்கள் அமைப்பு முறையை எதிர்ப்பது அமைப்பு முறையை ஒழிப்பதற்கல்ல, அதன் ஆட்சியாளராகத் தாமே அமர்வதற்காகத்தான். அமைப்பின் மூன்று வகுப்புகள் இங்ஙனம் எந்த அமைப்பிலும் அந்த அமைப்பினால் ஆதாயம் பெறுபவர்கள், ஆதாயம் பெறும் அவாவுடன் கூடுமானமட்டும் ஒத்துழைப்பவர்கள், ஆதாயத்தைப் பையில் போட்டுக் கொண்டே எதிர்ப்பியக்கம் தோற்றுவித்து ஆதாயம் பெறுபவர் குழுவில் படிபடியாக இடம் பெறுபவர்கள் என்று மூன்று வகுப்பார் ஏற்படுகின்றனர். இவர்களை நாம் முதலாளி வகுப்பு, உழைப்பாளி வகுப்பு, நடுத்தர வகுப்பு என்று அழைக்கலாம். அமைபபினிடத் மூன்று வகுப்பும் சொல்லளவில் கொள்ளும் தொடர்பு வேறானாலும், அதன் ஆதாயத்தை மட்டும் பெற்று, அதை மேலும் பெருக்க நாடுவதில் மூன்று வகுப்புக்களுமே செயலில் ஒன்றுபடுதலைக் காணலாம். ஓர் அமைப்பை ஆதரிப்பவர்கள் அதன் நலன்களை மட்டுமின்றி அதன் கேடுகளையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஏனெனில் ஒரே அமைப்பில் ஒருவர் நலங்கள் மற்றொருவர் கேடுகளாகவும், ஒருவர் கேடுகள் மற்றொருவர் நலங்களாகவும்தான் இருக்க முடியும். நலங்கேடுகள் ஆகியவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றை எதிர்ப்பது, அமைப்பை எதிர்ப்பபதாக முடியாது; அமைப்பின் மற்ற உறுப்பினரை எதிர்ப்பதாகவே முடியும். இது போலவே அமைப்பை எதிர்ப்பவர்களும் அதன் கேடுகளை மட்டும் எதிர்த்தால் போதாது. அதன் நலங்களைத் துறந்தே அiதை எதிர்க்க வேண்டும். அவர்கள் நலங்கள் வேறுசிலர் கேடுகளே. அவர்கள் கேடுகளும் வேறுசிலர் நலங்களே. ஆதலால், அவர்கள் எதிர்ப்பு அச்சிலரைக் கெடுப்பதாகவே முடியும். சுரண்டலை முனைந்து எதிர்த்துத் தலைமை தாங்குபவர்கள் முனைந்து எதிர்க்காத பொதுமக்கள் நலங்களைச் சுரண்டுவது இவ்வகையில்தான்! முதலாளிகள் அல்லது ஆட்சியாளர்கள் பொது மக்களின் இயல்பான ஒத்துழைப்பைப் பயன்படுத்திச் சுரண்டுகிறார் களென்றால், இவ்வெதிர்ப்பாளர்கள் அவ்வெதிர்ப்பைத் தூண்டிவிட்டு அதன் பயனைச் சுரண்டுகிறார்களென்னலாம். அமைப்பில் பொதுமக்களே பெரும்பாலானவர்கள். ஆதலால், மற்ற இரண்டு வகுப்பாரும் அவர்களைச் சுரண்டு கிறார்கள் என்பது சொல்லளவில்தான் சரியாக முடியுமே யல்லாமல், உண்மையில், அதாவது செயலளவில் சரியல்ல. அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் எந்தக் சுரண்டலும் நடைபெற முடியாது. அதுமட்டுமன்று; பெரும்பாலான அவர்கள் பண்பே அதில் பெரும்பாலான பங்குப் பொறுப்புக்கும் உரியதாகும் என்பதில் ஐயமில்லை. எனவே, ‘தனிமனிதன் குற்றமற்றவன்; அமைப்பே அவனைக் கைப்பாவை யாக்கி ஆட்டிப்படைத்து அட்டூழியம் புரிகிறது’ என்ற குற்றச்சாட்டில் ஒரு சிறிதும் உண்மை இருக்க வழியில்லை. எல்லா அமைப்பிலும் நலங்களுங்களும் தீமைகளும் இருப்பது இயல்பு. எல்லாரும் அதன் நலங்களை ஏற்றுத் தீமைகளை விலக்க முயல்வதும் இயல்பு. மனிதச் சமுதாய அமைப்பில் எல்லாத் தனிமனிதரும், எல்லா வகுப்பினரும் இவ்வியல்புப்படியே ஒன்றுபட்டு ஒத்துழைக்கின்றனர். எவரும் தொடர்பாக நலங்களைப் பெறுகின்றனர் என்றோ, தொடர்பாக நலங்களைப் பெறுகின்றனர் என்றோ, தொடர்பாகத் தீமைகளைப் பெறுகின்றனர் என்றோ யாரும் நிலைநாட்டமுடியாது. ஓரளவு அத்தகைய நிலை ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு நாட்டில் இருந்திருக்கலாம்; இருந்தன; ™ஓரளவு இருக்கின்றன. இவையே நாடு, இனம், சாதி ஆகிய பிறப்பு வேறுபாடு காரணமானவை. ஆனால் அமைப்பில் இயல்பாக வளர்ந்துவரும் ஒரேவகைப்பட்ட ஒத்துழைப்பு இவற்றைத் தகர்த்தெறிந்து விட்டது. தகர்த்தெறிந்து வருகிறது. இவை கடந்து கிட்டத்தட்டத் தொடர்பாக இருந்து வரும் வேறுபாடு வகுப்பு வேறுபாடு ஒன்றுதான். இதில் தனிமனிதன் மாறினாலும், வகுப்பின் தன்மை எளிதில் மாறுவதில்லை. ஏனென்றால், போட்டியினால் ஒரு வகுப்பில் வெற்றி பெற்றவன் வேறு வகுப்புக்கும், தோல்வியுற்றவன் மற்றொரு வகுப்புக்கும், தள்ளப்படுகிறான். போராட்டத்தில் தோற்றவன் எப்போதும் தோற்பதில்லை. வென்றவன் எப்போதும் வெல்வதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் ஒருபுறம், தோற்றவர் ஒருபுறமுமாகவே அமைந்து போராடுகின்றனர். போட்டியில் சரிசமப் பொறுப்பு அமைப்பில் எந்த ஒரு சமயத்திலும் நலங்களுக்கு உரியவர்கள் போட்டியில் வென்றவர்கள். அவர்கள் வெற்றி நீடிக்கலாம். அல்லது திடுமென மாறலாம். ஆனால் வென்ற அளவில் நலங்கள் அவர்களைச் சார்கின்றன. அதே சமயத்தில் போட்டியின் நலங்களின் உரிமை குறைந்தவர்கள் நிலையும் இதுபோலவேதான். போட்டியில் தற்காலிமாகத் தோற்ற அளவிலேயே அவர்கள் நலங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனால், போட்டி இத்துடன் நிற்பதில்லை. வென்றவரும் தோற்றவரும் பின்னும் போட்டியிடத்தான் செய்கின்றனர். அதுமட்டுமன்று, வென்றவர் வென்றவருடன் போட்டியிடு கின்றனர். தோற்றவர் தோற்றவருடன் போட்டியிடுகின்றனர். அமைப்பை ஏற்று அதனடிப்படையில் நடத்தப்படும் இத்தகைய நிறைபோட்டியில் ஒவ்வொருவர் வெற்றி தோல்வி களும் வேறு வேறு ஆயிருக்கலாம். அவர்கள் பொறுப்பு சரிசமமாகவே இருக்க முடியும். அமைப்பின் சாதகபாதகங்கள் போரில் ஏற்படும் வெற்றி தோல்விகள் போன்றவை. வெல்ல இருப்பவர், தோற்க இருப்பவர் இருவரும் நாடுவது வெற்றியையே. போரை அதற்கான முறையாக இருவருமே ஏற்கின்றனர். ஆனால், வெற்றி கிடைப்பது ஒருவருக்குத்தான். இருவருக்கும் கிடைக்க முடியாதென்பதும் இருதிறத்தாருக்கும் தெரியும். இந்நிலையில் வெற்றி பெற்ற வருக்குத்தான் போரில் பொறுப்பு உண்டு, தோற்றவருக்குக் கிடையாது என்று எப்படிக் கூறமுடியும்? இந்த வெற்றிதோல்விப் பொறுப்புகளைப் போரைவிடச் சூதாட்டத்தில் நாம் தெளிவாய்க் காணலாம். எதிராளியின் பொருளைத் தட்டிப் பறிக்கவே இருதரப்பாரும் ஆவலுடன் சூதாட்டத்தில் இறங்குகின்றனர். தொடக்கத்தில் இருதரப்பாரில் எவரும் ஆட்டத்தின் ஆவலில் பின்னடையவில்லை. ஆயினும் முடிவில் வென்றவன் நழுவுகிறான். முற்றிலும் தோற்றவன் ஆட்டத்தில் மனக்கசப்புடன் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு செல்கிறான். அரைகுறையாகத் தோற்றவன் மேலும் ஆடத் துடிக்கிறான். ஆனால் இத்தற்காலிக மனநிலை வேறுபாடு அடுத்த ஆட்டத்தில் போய்விடுகிறது. ஏனெனில் வென்றவன் தோற்கக்கூடும்; தோற்றவன் வெல்லக் கூடும். பொருளியல் துறையில் சமூக அமைப்பிலும், போரிலும், சூதாட்டத்திலும் வென்றவர் தோற்றவரைச் சுரண்டவில்லை. இருவரும் சுரண்டல் நோக்குடனேயே அமைப்பை ஏற்று இறங்குகின்றனர். வெற்றி கண்டவன் வெற்றிக்குத் தோற்றவன் காரணமாதலால் அதை ஏற்கிறான். ஏற்பதன் மூலமே அவன் மீண்டும் வெற்றி காண வழி ஏற்படலாம் என்று கருகிறான். மூன்றும் இவ்வகையில் வளர்ப்பது ஒரே சூதாட்ட மனப் பான்மையையே. இம்மனப்பான்மையையே. இம் மனப்பான்மையே சுரண்டல் அமைப்பைத் தாங்கி நிற்கிறது. இம் மனப்பான்மையுடையவர்கள் வென்றாலும் தோற்றாலும், வாயளவில் ஆதரித்தாலும் எதிர்த்தாலும், அவர்கள் அமைப்புக்குப் பொறுப்பேற்று அதைத் தாங்கு பவர்களே. இம் மனப்பான்மையைக் கைவிட்டு, அமைப்பின் கேடுகளைக் கண்டிக்கும்போதே அதன் நலன்களைத் துறந்த வர்கள்தான் உண்மையில் அமைப்பை ஏற்காது புதிய அமைப்புக்குப் பாடுபட்டவர்கள் ஆவார்கள். மனிதர் மாறுகின்றனர்; வகுப்பு நிலையானது இங்ஙனம் அமைப்பின் தீமைக்கு ஆளானவர்கள் என்பவர் யாவரும் உண்மையில் தத்தம் செயல்களுக்கு ஆளானவர்களே யல்லாது வேறில்லை. நன்மைக்கு ஆளானவர்கள் என்பவர்களும் தத்தம் செயல்களுக்கு ஆளானவர்களே. ஆனால் அமைப்பில் குறைபாடு இருக்கக்கூடும் என்பதை நாம் மறுக்கவில்லை. அது இரு சாரரையும் ஒருங்கே பாதிக்கிறது. தீமைக்காளான வகுப்பு என்று ஒன்றை எப்போது காட்டாலாமானாலும், தனிமனிதர் நீடித்துத் தீமைக்கு ஆளாவதில்லை. அதுபோல நன்மைக்கு ஆளாகுபவர்கள் என்று ஒருவகுப்பைச் சுட்டிக்காட்ட முடியுமானாலும், எந்தத் தனிமனிதரும் அந்நன்மைக்கு நீடித்து இலக்காவதில்லை. நிலையான நன்மை தீமைகள் இல்லாமையே அமைப்புக்களின் குறைபாடு என்பது இதனால் விளங்கிறது. அமைப்பின் இக் குறைபாடறிந்தவர்கள் அதை நீக்கிப் புதிய அமைப்புக்குப் பாடுபடமுடியும். அதற்கு வழி அமைப்பைக் குறைகூறி, தனிமனிதர்கள் சிலரையோ பலரையோ அதற்குப் பொறுப்பேற்றவர்களாகக் கருதுவதல்ல. குறைப்பாட்டைப் பற்றிய அறிவை அமைப்பை ஆதரிக்கும் அனைவருக்கும் தெரிவித்தல், அமைப்பின் நலந்தீங்கு இரண்டிலிருந்தும் விலகிநின்று பிறருக்கு வழிகாட்டால் ஆகிய இவ்விரண்டுமே புதிய அமைப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை வகுக்கும். அமைப்புக்கள் எதனிலும் அதன் தீமைக்குப் பொறுப் புடையவர்கள், அதாவது அதனடிப்படையில் ஏமாற்றுபவர்கள் இருக்க முடியாது. அதன் நன்மைக்குப் பொறுப்புடையவர்களாகி, தீமைக்கு ஆளாகும் ஏமாளிகள் அல்லது சுரண்டுப்படும் குற்றமற்ற அப்பாவிகளும் இருக்க முடியாது. ஆகவே அமைப்பைக் குறை கூறித் தனிமனிதரைக் குற்றமற்றவராக்குவதோ, அமைப்பில் சிலரைக் குறை கூறிப் பலரைக் குற்றமற்றவராக்குவதோ தகாது. நாம் இங்ஙனம் கூறும்போது நாம் அமைப்பை ஆதரிப்ப தாகவோ, அல்லது அமைப்பின் உறுப்பினரான தனி மனிதர் குற்றமற்றவர் என்று கூறுவதாகவோ அமையாது. நிலையான நன்மை, எல்லாருக்கும் நன்மை, எல்லாருக்கும் நன்மை ஒருவருக்குத் தீமை தராது மற்றவருக்கு நலந்தரும் நன்மை இதுவே உயர் குறிக்கோள். இதன் அடிப்படையில் ஏற்படாத அமைப்புக்கள் எவையும் குறைபாடு உடையவையே. தற்காலத் தொழில் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் இவ்வகையில் குறை நிரம்ப உண்டு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இவ்வமைப்பு தனிமனிதர் சிலர் பலரிடமும், சில சமயம் எல்லாரிடமும் தங்குதடையற்ற தன்னலத்தையும், பேராவலையும் தூண்டிவிடுகிறது என்பதும் உண்மையே. இவையல்லாமல் மூன்றாவது ஒரு தீங்கும் இந்த அமைப்புமுறை காரணமாயிருக்கிறது என்பதைப் பலர் கவனிப்ப தில்லை. அமைப்பில் எல்லாரும் வாய் பேசாமல் செயலில் ஒத்துக்கொண்ட தத்துவங்களின் எல்லையில்தான் தனிமனிதன் தன்னலம், பேரவா ஆகியவை பொதுவாகச் செயலற்றுகின்றன. ஆனால் அரங்கில் ஆடிப்பழகியவன் அம்பலத்தில் ஆட முனைவதைப் போல, அமைப்பின் எல்லைக்குள் தன்னலப் பேரவா வேட்டையாடியவன் அடிக்கடி அந்த எல்லை கடந்தும் வேட்டையாட முற்படுகிறான். அமைப்பை ஆதரிப்பவரும் துணுக்குறும் வஞ்சனை, கொடுமைகளை அத்தகையவன் ஆற்று கிறான். அமைப்புக் கடந்து தெறித்த இத்தகைய தீங்குகளின்றும் அமைப்பினுட்பட்ட தீங்குகளைப் பிரித்துக் காட்டவே, “தனிமனிதன்” தீங்கு, “அமைப்பின்” தீங்கு என்ற பாகுபாடு எழுந்தது என்னலாம். ஏமாற்றுபவர் ஏமாளி இருவரின் சரிசமப் பொறுப்பு புதிய வாணிகக் கழகம் நிறுவுவதாக மக்களை ஆசைக் காட்டி அவர்களை மோசம் செய்பவர்கள் உண்டு. ஆசைகாட்டி அழித்து விடாமல், நீடித்த, நிலையான சுரண்டல் நடத்துபவர் களும் உண்டு. இவ்விடங்களில் ஏமாற்றுபவர்களை எல்லாருன் கண்டிக்கத் தவறுவதில்லை. ஆனால் கண்டனத்துக்குரியவர்கள் அவர்கள் மட்டுமல்ல. அவர்கள் ஏமாற்றத்துக்கு அமைப்புமுறை இடங்கொடுத்து மற்ற மக்களை நம்ப வைத்தது. இதைக்கண்டு, குற்றவாளிகள் ஏமாற்றியவர்கள் மட்டுமல்ல, அமைப்பும் குற்றவாளிதானென்று நடைமுறை அமைப்பின் எதிரிகள் கூறுகிறார்கள். அமைப்பு என்றால் அமைப்புடன் ஒத்துழைக்கும் அனைவரின் தொகுதி என்று பொருள் கொண்டால் நாம் இதை ஒத்துக்கொள்ளத் தயங்கமாட்டோம்; ஆனால், அமைப்பையும் ஏமாற்றியவர்களையும் குறைகூறி, ஏமாந்தவர்களைக் குற்றமற்றவர் களாக்கும் கண்டனத்தை நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், ஏமாற்றியவர்கள் என்ன மனப்பான்மையுடன் அமைப்பைப் பயன்படுத்தினார்களோ, அதே மனப்பான்மையுடன் அதில் பங்கு கொண்டவர்கள்தான் ஏமாறியவர்களும்! இருசாரா ரிடையேயும். உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் - ஒரு சாரர் வெற்றி கண்டவர்கள், தற்காலிகத் தோல்வியுற்றவர்கள், தற்காலிக வெற்றி கண்டவர்கள். மற்றவர்கள் தோல்வியுற்றவர்கள், தற்காலிகமாகத் தோல்வியுற்றவர்கள். ஏமாற்றும் வகுப்பும் ஏமாறும் வகுப்பும் நீடித்து இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஏமாற்றுபவன் ஏமாளியாகா திருப்பதில்லை; ஏமாளி ஏமாற்றுபவனாகாதிருப்பல்லை. பொதுவுரிமைச் சீர்திருத்தவாதிகள் முதலாளித்துவத்தையும் அதன் ஆதாய மனப்பான்மையையும் வன்மையாகக் கண்டிப்பது சரியே. ஆனால் முதலாளித்துவத்தின் ஒருபகுதி உற்பத்தித் தொழிலின் முன்னேற்றம். இதை யாரும் குறைகூற மாட்டார்கள். குறைகூறத்தக்க அதன் பகுதி வாணிகத் துறைசார்ந்த ஆதாயச் சூதாட்டமே. இது மக்கள் பேரவாவை முதலீடாகக் கொண்ட வாணிகம் ஆகும். சீர்திருத்தம் பேசுபவர்கள்கூட இந்தக் குழியில் விழுந்து தங்கள் பணத்தை “நல்ல முதலீடு” பார்த்து, அதாவது நல்ல பங்கூதியம் வரும் துறை பார்த்துப் போடமுயல்கிறார்கள். முதலாளித்துவத்தின் மிகத் தீய பகுதியாகிய பேரவா மனப் பான்மையை ஒருபுறம் வளர்த்துக் கொண்டே, அவர்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தப் போரிடுவதாகவும் கூறிக்கொள் கின்றனர். ஆதாயச் சூதாட்டம் ஆதாயத்தை மட்டும் விரும்பவில்லை. பிறர் ஆதாயத்தினி பயனான ஆதாயத்தை அது விரும்புகிறது. சிலரிடம் இவ்விருப்பம் முனைப்பாயிருப்பதில்லை. ஆனால் அடங்கிய விருப்பம் வாய்ப்பு நேர்ந்தவிடத்தில் முனைந்து வெளிவந்து செயலாற்றுகிறது. உழையாது பெறும் ஆதாயமே பணப்பகட்டுக்கும் சொகுசு வாழ்வுக்கும் இடம் தருகிறது. இவை பிறர் உழைப்பின் பயனாக வந்தனவாதலால், உழைப்பவர் பக்கம் வறுமையையும் பட்டினியையும் பரப்பாமலிராது. சூதாட்ட ஆதாயத்தில் இங்ஙனம் பட்டினியும் வறுமையும் ஏற்பட்டும், முன்னதைப் பெற்றுக் கொண்டவர் பிந்தியவர் தீங்குகளுக்காக முதலாளித்துவத்தைக் குறை கூறுகின்றனர். ஆதாயவிருப்பும் சூதாட்டமும் உயர் வகுப்பாரிடமும் நடுத்தர வகுப்பாரிடமும் ஆதாயச் சூதாட்டம் முனைப்பாகக் காணப்படுகிறது. இதனால் ஏழை வகுப்பினரிடம் அது இடம் பெறவில்லை என்று கூறமுடியாது. அவர்களுக்கு இவ்வகையில் வாய்ப்புகள் இல்லாததனாலேயே இந்த விருப்பம் முனைப்பாக இருக்கவில்லை. ஆனால், ஏழைமக்களின் கனவார்வங்கள் எவையென்று ஆராய்ந்தால், உண்மை விளங்கி விடும். வாய்ப்புக் கிடைக்காமல், நம்பிக்கை என்னும் பசையற்று வற்றிவிட்ட அவர்கள் ஆர்வங்களை அவர்கள் விரும்பிகேட்கும் ஆர்வக்கதைகள் காட்டுகின்றன. ஏழை ஒருநாள் எத்தகைய அருமுயற்சியுமில்லாமல் திடுமெனப் பணக்காரனாய் விடுகிறான். அதன்பின் அவன் உழைக்கும் தேவையில்லாமல் செல்வத்தின் இன்பத்தில் திளைக்கிறான். இது வெறும் புராணக்கதையல்ல, வாழ்க்கையின் நிழலே என்பதைக் குதிரைப்பந்தயம் முதலிய சூதாட்டக் களங்கள் காட்டுகின்றன. ஏழைகள் திடுமெனப் புராணவீரர் போலப் பணக்காரராகும் அவாவால், தம்மிடம் உள்ளதையும் கொண்டு கொட்ட முனைகின்றனர். மனித உள்ளத்தில் பேரவாவும் உழையாத செல்வப் பற்றும் இன்ப ஆர்வமும் இருக்கும்வரை, வறுமையும் பட்டினியும் உலகச் சமுதாயத்தை விட்டு அகல முடியாது. இவையே முதலாளித் துவத்தின் வித்துக்கள். முதலாளித்துவச் சமுதாயம் என்பது முதலாளிகளால் ஆக்கப்பட்ட சமுதாயமன்று. அது முதலாளி களை ஒருபுறமும் ஏழைகளை ஒரு புறமும் பிரித்து, அந்நிலை யிலும் அவர்களை நீடித்து நிற்கவிடாமல் ஓயாது சுழற்றி ஆட்டிவரும் ஒருமுறை ஆகும். அதனை ஆக்கியவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பார் ஆகிய எல்லா மக்களுமே. மனிதர் அனைவரின் உள்ளார்ந்த விருப்பங்களே அவர்கள் செயல்கள் ஆகின்றன. இவையே அவர்களின் வாய்பேசா ஒப்பந்தமாகி, அமைப்புக்களின் அடிப்படையாக அமைகின்றன. எனவே, அமைப்புக்களின் நன்மை தீமைகள் மனிதர் உள்ளவாக்களின் நன்மை தீமைகளேயன்றி வேறல்ல. அவர்கள் அடையும் “நன்மை தீமைகள்” அதாவது அவர்கள் நன்மை தீமைகளென்று கொள்ளும் “ஆதாய இழப்பு”க்கள் உண்மையில் அவர்கள் உள்ளவாக்களின் குறைப்பாட்டால் பிறந்த ஒரே பொதுத்தீமையின் இருபுறங்களே. ஏனெனில் ஒருவர் ஆதாயம் என்று கூறுவது இன்னொரு சமயம் இழப்பாகவும் அமையவல்லது. பத்துச் சூதாடிகள் தலைக்குப் பத்துப் பணத்துடன் சூதாட வந்தமர்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்துப் பணம்கூட அவர்களுக்குத் தமக்கேயுரிய பணமாயிருக்க வேண்டும்மென்பதில்லை. ஒவ்வொருவரும் உழைப்பில்லாமல் பத்தை நூறாக்கும் கனவுடனேயே வந்துள்ளார்களாதலால், ஒரு பத்தைக் கடனாகக் கூட வாங்கி வந்திருக்கலாம். நூறு வென்றவுடன் பத்தைத் திருப்பிக்கொடுத்து, உழைப்பில்லாமல், உண்மை முதலில்லாமல், தொண்ணூறு ஈட்டிச் செல்லவே அவர்கள் ஒவ்வொருவரும் வந்திருக்கின்றனர் என்பது தெளிவு. சூதாட்ட முடிவில் ஒருவனிடமோ ஒரு சிலரிடமோ பணமும் இருக்கும். மற்றவர்கள் வெறுங்கையாய், கடனானி கனாகத்தான் செல்வர். இதில் ஈட்டியவர் தம் பணத்தைத் தம் பணமாகக் கருதாமல் செலவிடுவர். அவர்கள் கைப்பணம் விரைவில் கரையும். மற்றவர்களோ கடன், பட்டினி ஆகியவற்றில் உழல்வர். இங்ஙனம் கடன் வாங்கி வந்த தொகை தவிர, ஒருகாசு ஈட்டாமல், செவவி செய்து அத்துடன் சிலரைக் கடன்படுத்திய பின்பும் ஒருசிலர்கூட உண்மை ஆதாயம் அடையவில்லை. அனைவரும்-வென்றவரும் தோற்றவரும்- இங்கே அடையும் கேடு அனைவரின் தீய நோக்கத்தினால் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. தான் உழையாது, அடுத்தவர் பணத்தைத் தட்டிப்பறிக்கும் பொது அவாவினால்தான் இவை யாவும் நிகழ்வுற்றன என்று கூறத் தேவையில்லை. இன்பமும் செல்வமும் நல்லவை, துன்பமும் வறுமையும் கெட்டவை என்று தான் உலகில் பெரும்பாலானர் எண்ணுகின்றனர். முந்தியவற்றுக்கும் ஆளானவன் தன்னை வெற்றி பெற்றவனாகவும் பிந்தியவற்றுக்கு ஆட்பட்டவன் தன்னைத் தோல்வியுள்ளவனாகவுமே கருதுகிறான். இந்த அடிப்படை மனப்பான்மையின் பயனாகவே, துன்பமும் வறுமையும் அடைபவன் இன்பமும் செல்வமும் பெற்றவனைப் பார்த்துப் பொறாமை யடைகிறான். அவனைப் போலாகவும் பாடுபடுகிறான் ஆனால் நேர்மாறாக இன்பமும் செல்வமும் பெற்றவன் துன்பமும் வறுமையும் அடைபவனைப் பார்த்துப் பொறாமைப்படுவதுமில்லை. அவனைப் போலாக விரும்புவது மில்லை. உலக நிலை இதுவாயினும், உண்மை இதற்கு நேர்மாறானது. அமைப்பின் குறைப்பாடுகளையும் தீங்கையும் அகற்றும் திறமுடைய “உண்மை நலங்கள்” இன்பமும் செல்வமும் அல்ல, துன்பமும் வறுமையுமேயாகும். ஏனெனில் அவை அமைப்பின் குறைபாடுகளிலும் அதற்குக் காரணமான் தனிமனிதன் குறைபாடுகளிலும் கருத்துச் செலுத்துகின்றன. கூட்டுப்பொறுப்பும் நீடித்த பொறுப்பும் மனிதர் அடையும் நலங்களுக்கும் தீங்குகளுக்கும் அவரவர் செயல்களே காரணமாவன. அமைப்பு எவ்வகையில் அவற்றுக்குக் காரணமானது. ஒருசாராருக்குத் தீங்கும் தருவது அமைப்பே என்பது பொருந்தாது. மனிதர் செய்யாத எந்த அநீதியையும் அமைப்புச் செய்துவிடாது. ஒரு சிலருக்கு ஒரு சிலர் மட்டுமல்லாமல் எல்லாருமே அமைப்பின் மூலமாக வாய்பேசாது பொது உள்ள அவாக்களால் தூண்டப்பட்டுச் செய்யும் செயல்களின் விளைவே. வேறு சிலருக்கு வரும் தற்காலிக நலனும் அவ்வாறே. அமைப்பில் குறைப்பாடு இருப்பதால் மொத்தத்தில் பெரும்பபாலாருக்குத் தற்காலிகக் கேடும், எல்லாருக்குமே நிலையான கேடும் விளைகிறது. எனவே அமைப்பின் பொறுப்பு என்று கூறுவதில் ஏதாவது உண்மை உண்டு என்றால் அது இதுவே. ஒவ்வொரு மனிதரின் நலத்தீங்குகள் அவர்கள் செயலால் மட்டுமல்ல, அனைவர் ஒன்றுப்பட்ட செயலாலுமே ஏற்படுகின்றன. அத்துடன் அவர்கள் நற் பண்புகள், அல் பண்புகளின் விளைவு அவர்கள் தற்காலிக நலந்தீங்குகளுடன் முடிவதில்லை. அவர்கள் நிலையான வாழ்வின் நலந்தீங்குகள் யாவும் அவற்றின் முழுநிறை பயன்களாகவே அமைகின்றன. அண்மையில் சமநெறி நண்பரொருவர் நிலமுதலாளிகள், நிலமுதலாளித்துவம் ஆகியவற்றைப்பற்றி உரத்த குரலில் கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அவர் மிகவும் அறிமுகமானவர். நான் சென்று அவரைத் தனிமையில் அழைத்து “ அன்பரே, நீர் ஏன் நில முதலாளிகளை இப்படித் திட்ட வேண்டும். நீரே ஒரு நில முதலாளிதாமே? அத்துடன் போன வாரத்தில் தானே புதிதாக நிலம் வாங்கி உம் நில முதலாளித்துவத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறீர்?” என்றேன். அவர் சிறிது புன்முறுவலுடன், “ஆம் அன்பரே! அதனாலென்ன? நான் நிலமுதலாளியாயிருப்பதற்கும், அந்த முறையைக் கண்டிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கக் கூடும்? தவறு தவறுதானே? நாம் நிலமுதலாளியாயிருப்பதால் தவறு என்று தெரிந்ததைக் கண்டிக்காது விடுவதா? என்றார். “தங்கள் நேர்மை பாராட்டத்தக்கதுதான், அன்பரே! ஆனால் தவறு என்று தெரிந்திருந்தும், நீர் மேலும் முதலாளித் துவத்தை வலுப்படுத்தலாமா?” என்றேன் நான். “தவறு முறையில்தானே இருக்கிறது, அன்பரீர்! முறை இருக்குமளவும் அதன் ஓர் உறுப்பாய் நான் இயங்கித்தானே தீரவேண்டும்? முதலாளித்துவ முறையின் கேட்டுக்குத் தனிப்பட்ட முறையில் தொழிலாளி எப்படி பொறுப்பாயிருக்க முடியாதோ, அதுபோலவே, அதுபோலவே, தனிப்பட்ட முறையில் முதலாளியும் பொறுப்பாயிருக்க முடியாது என்பது என் கோட்பாடு. எல்லாரும் சேர்ந்து முறையை மாற்றியமைக்கும்வரை, தன்மனிதர் அதன் செயலற்ற அடிமைகளாகவே இயங்க முடியும்.” “அப்படியானால் சூதாடிக்கொண்டே சூதாட்டத்தைக் கண்டிக்கலாமே! சூதாட்டமுறை அதனால் ஒழிந்துவிடுமோ? குடித்துக்கொண்டே குடியின் கொடுமையைப் பேசினால், குடி ஒழிப்புக்கு என்ன வழி ஏற்படும்?” என்றேன். நண்பர் விடை எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். தாங்கள் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. முறையைக் கண்டித்துவிட்டு, அதனுடன் ஒத்துழைப்பதில் பயனில்லை. நான் அமைப்பில் உறுப்பினறா யிருக்கும்வரை ஓரளவு அதன் செயலில் பங்கு கொள்ளாதிருக்க முடியாதுதான். ஆனால், மனமார அதனுடன் ஒத்துழைத்து, அதை வளர்ப்பது தவறுதான்,” என்று அவர் ஒத்துக்கொண்டார். மனமாற்றத்துக்குரிய ஒரே வழி எல்லாரும் தம் உள்ளவாக்கள் காரணமாக ஒத்துழைத்து அமைந்த அமைப்பை எல்லாரும் மனமாற்ற மடைந்தாலன்றி ஒழிக்க முடியாதென்பதை நாமும் ஒத்துக்கொள்ளுகிறோம். ஆனால் அடிப்படைக் காரணமாகிய உள்ளவாவை ஒழித்து, எல்லாரும் ஒழித்துக்கட்ட நாம் வழிகாட்டினாலல்லாமல், மற்றவர் மனமாற்றம் ஏற்படாது. தவிர, ஒரு தனிமனிதன் மனமாற்றமடைந் தாலும் அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தாலும், அமைப்பில் மாறுதல் ஏற்படுவது உறுதி. உலகில் தன்னுறுதியும் வாய்மைப்பற்றும் மிக்க தனிமனிதர் ஒத்துழையாமை எதிர்ப்பால் பல பழங்கால அமைப்புக்களும் முறைகளும் படிப்படியாகத் தகர்ந்துள்ளன. மனிதப்பலி, உடன்கட்டை ஏறல், சித்திரவதைத் தண்டனை முறைகள், மதம் இனம் பிறப்புக்காரணமான கொடுமைகள் ஆகியவை பல வீரமிக்க தனிமனிதர்களின் எதிர்ப்பாலேயே மனித வாழ்வின்று ஒழிந்தன. அத் தனிமனிதர் செயல்கள் பிறர் கண்களைத் திறந்தன. அவர்கள் உறுதி அவர்களை ஊக்கின. அவர்கள் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றினர். அமைப்புக்கள் மக்கள் உள்ளத்திலிருந்தும் செயலிலிருந்தும் பிறப்பன. சொல்லிலிருந்து பிறப்பனவல்ல. சொல் உள்ளக்கருத்தினை உள்ளவாறு தெரிவிக்கும் அளவிலேயே அதற்கு மதிப்பு உண்டு. அப்போதும் அதன் பயன் ஒரு உள்ளக்கருத்தை இன்னொரு உள்ளத்துக்கு அல்லது பிற உள்ளங்களுக்குத் தெரிவித்துச் செயலாற்றுவிப்பதன்றி வேறன்று. ஆகவே சொல்லால் எதிர்ப்பதும் கண்டிப்பதும் அமைப்பை மாற்றியமைக்க உதவாது. சொல் உள்ளத்தையும செயலையும் தழுவிய வாய்மைச் சொல்லாயிருந்தா லல்லாமல், அது பிற உள்ளங்களையும் ஊக்காது. செயல்களையும் இயக்காது. உள்ளத்திலிருந்து தோன்றிச் செயலில் வெளிப்படும் மாறுதல்களாலேயே அமைப்பும் அமைப்புக்கு ஆதரவு தரும் பிற உள்ளங்களும் மாறக்கூடும். மனித சமுதாயத்தில் பல அமைப்புக்கள் உள்ளன. அடிப்படை அமைப்பே சமுதாய அமைப்பு. அதன்மீது சமய அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள், வாணிக, தொழில், கலை அமைப்புக்கள், பொருளியல் அமைப்புக்கள் ஆகிய எத்தனையோ துணையமைப்புக்கள் கட்டமைந்துள்ளன. இவை எவற்றிலும் நல்ல அமைப்புக்கள், தீய அமைப்புக்கள் என்ற பாகுபாட்டை யாரும் காட்ட முடியாது. ஏனென்றால் மனித நாகரிகம் தீமையை நாடிச் செல்லவுமில்லை. தீமைக்காக அவ்வமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. கள், களவு, சிற்றின்ப வாணிகம், அடிமை வாணிகம் ஆகிய எத்தனையோ பெருந்தீமைகள் இவ்வமைப்புக்களிடையே சிலகாலம் இடம் பெற்றிருந்ததுண்டு, பெறுவதுண்டு. ஆனால் படிப்படியாக இவை அமைப்புக்களுக்கு வெளியே தள்ளப்பட்டுத் தான் செயலாற்ற வேண்டியவையாயின. மனிதச் சமுதாய அமைப்பு அவற்றுடன் போராடியே வந்திருக்கிறது. ஆயினும் இன்னும் பல தீமைகள் அமைப்புக்களிடையே இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் அவை மனிதர் உள் அவாக்களின் குறைகள். அடிக்கடி அவற்றுக்கு எதிர்ப்பு சமுதாயத்துக் குள்ளேயே ஏற்படவும் முடிகிறது. இது மனிதர் உள்ளத்தின் மனச் சான்றால் ஏற்படும் விளைவு. இங்ஙனம் அமைப்புக்களின் நலங்கள், தீங்குகள் யாவும் தனிமனிதன் உள்ளார்ந்த நலந்தீங்குகளன்றி வேறன்று. மனிதன் நாகரிகமடையுந்தோறும் அவன் உள்ளத்தின் அறிவும் பண்பும் உயர்கிறது. இதன் பயனை நாம் அவனைச் சூழ உள்ள எல்லா அமைப்புக்களிலும் காண்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமுதாய அமைப்பு, சமய அமைப்பு ஆகியவற்றைவிட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை உயர்ந்தவை என்பதை யாவரும் ஒத்துக் கொள்வர். தனிமனிதருள் இரண்டாயிர ஆண்டுகட்கு முன் ஒரு புத்த பிரான், ஒரு இயேசு இருந்திருக்கலாம். அவர்கள் வாழ்வின்பயனாக ஏற்பட்ட நம் சமுதாயம் தான் அவர்கள் உயர்வை அறியதக்கதாயுள்ளது. ஆனால் இன்றைய நம் சமுதாயம் அவர்கள் காலச் சமுதாயத்தைவிட உயர்ந்ததேயாகும். ஆனால் இன்றைய அமைப்புக்களின் குறைகளும் அத்தகைய வாய்மை வீரர் உள்ளப் புரட்சிகளால்தான் நீங்கமுடியும். அவர்கள் தங்கள் உள் அவாக்களை மாற்றியமைத்து, அதனால் முதலில் மனித உள்ளங்களையும் பின் அமைப்புக்களையும் மாற்றியமைப்பார். புத்தர்பிரான், இயேசு புத்தர்பிரானும் இயேசுவும் தெய்வப்பிறவிகள் என்று அவரவர் வகுத்த சமயத்தவர்களால்தான் குறிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதச் சமுதாயத்தில் செய்த மாறுபாடுகளை நோக்க, அவர்கள் மனிதச் சமுதாயத்தில் செய்த மாறுபாடுகளை நோக்க, அவர்கள் அனைவருமே தெய்விக சக்தி வாய்ந்தவர் என்பதை வரலாறுணர்ந்த யாவரும் ஒத்துக்கொள்வர். அந்தத் தெய்விக சக்தி யாது? வாய்மையே. இது பொதுநிலை வாய்மையல்ல; அது கடந்த உயர்வாய்மை ஆகும். தவறு என்று சமூகம் கூறுவதைத் தவறு என்று கூறுபவர் பலர். அதை செய்யாது இருப்பவர் ஒரு சிலர். இவர்களை நாம் நல்லவர்கள் என்று போற்றுகிறோம். தாம் தவறு என்று நினைத்ததைப் பிறர் சரி என்று ஏற்றாலும், பிறர் நல்லது என்று போற்றினாலும், தவறு என்று நினைவு, சொல், செயல், ஆகிய மூன்றாலும் துறப்பவர் நல்லவர் மட்டுமல்ல, வீரரும் கூட இத்தகையவர்களையே நாம் பெரியார் என்றும் தெய்வத் தன்மையுடையவர் என்றும் பாராட்டுகிறோம். இத்தகையோர் வழி நாம் நிற்பதானால், அமைப்பில் தவறு என்று எந்தக் கூற்றினைக் கண்டாலும், உடனடியாக அதுவகையில் அமைப்புடன் ஒத்துழையாதிருக்க வேண்டும். வாய்மையுடன் கூடிய ஒத்துழையாமையே அமைப்பைக் கட்டாயம் மாற்றியமைப்பதற் கான முதற்செயலாய் முடியும். முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் சமூக அமைப்பை எதிர்க்கும் போது சொல்லால் எதிர்த்துச் செயலால் ஆதரவு தந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் பொய்மை மட்டுமன்று, கோழைமையும் ஆகும். அமைப்பினால் ஏற்படும் தீங்கையே அவர்கய் எதிர்க்கிறார்கள். தீங்கிற்கு ஆளானவர் களையே திரட்டப் பார்க்கிறார்கள். இது அமைப்பை மாற்றியமைக்காது. அமைப்பில் இன்று ஆதிக்கம் வகிப்பவர்களை மாற்றிப் பிறரை உயர்த்தலோ, இன்று ஆதிக்கம் வகிப்பவர்கள் வலுவைக் குறைத்து பிறரை அவர்களுடன் பங்கு கொள்ள வைக்கவோதான் அது பயன்படக் கூடும். இம் மாறுதல் முதலாளித்துவ எதிர்ப்பில் லாமலே முதலாளிகளின் போட்டி யினால் நடைபெறக் கூடியது ஆகும். அமைப்பு இத்தகைய மாறுதல்களால் ஒரு சிறிது தளர்வுபெறக்கூட முடியாது. வாய்மையுடைய ஒரு தனிமனிதன் உளம், சொல் செயல் மூன்றும் ஒத்த வாழ்வினால் எந்த அமைப்பும் ஒரு சிறிதேனும் மேம்படாமலிராது. ஏனெனில் அது பிறர் உள்ளங்களை இயக்கும். ஆனால் இரு தனிமனிதர் இவ்வகையில் ஒன்றுபட்டால், அதன் விளைவு எத்தனையோ மடங்கு பெரிதாயிருக்கும். ஏனெனில் இருவர் ஒற்றுமையிலேயே புதிய அமைப்பு உருவாகிவிடும். இருவர் கடந்து மூவரானவுடன் புதிய அமைப்பு வேருன்றி விடும். பழைய அமைப்பு கலைவது அதன்பின் உறுதி. அமைப்புக்கள் இங்ஙனம் மனிதர்கள் அமைத்தவை. அவற்றை மனிதர் கலைக்கவும் திரும்ப அமைக்கவும் கட்டாயம் முடியும். பெரும்பாலும் அமைப்புக்கள் இயற்கை அவாக்களினால் எழுந்தவை. செயற்கையாகத் திட்டமிட்டு ஒருவர் உண்மையில் எதிர்த்தாலும், அவ்வெதிர்ப்பில் வாய்மையும் உறுதியும் இருந்தால், இயற்கையமைப்பு மாறி அது புதிய அமைப்பின் வயமாகாதிராது. மனிதன் நினையாதமைத்த அமைப்பு நினைத்தமைத்த அமைப்புக்குக் கட்டாயம் வழிவிடும். 2. உழைப்பு: கூலி: வாழ்க்கை நலம் உயிர் இயற்கையின் மதலை. அது இயற்கையின் உள்ளார்ந்த இயல்பின் விளைவேயாகும். அவ் வியல்பில் நாம் இரண்டு உள்ளுயிர்க் கூறுகளைக் காணலாம். அவையே ஆற்றல், ஆக்கம் என்பன. வெளிப்பட ஆக்கம் புலப்படாதபோது நாம் ஆற்றலை அழிவு என்கிறோம். ஆனால் உண்மையில் அது புதிய ஆக்கமேயாகும். இயற்கையில் ஆற்றலும் ஆக்கமும் இல்லாத கணம் எதுவுமே கிடையாது. உயிர் இவற்றின் விளைவேயாகும். இயற்கையைப் போலவே வாழ்க்கையிலும் இரண்டு இன்றியமையா உள்ளுயிர்க்கூறுகள் உண்டு. ஒன்று உழைப்பு. மற்றொன்று பயன். இவையே வாழ்க்கையின் அடிப்படை நோக்கங்கள் என்னலாம். ஒவ்வொரு மனிதனும் உயிரினமும் உழைத்தாகவேண்டும். இது இயற்கையின் எழுதாக்கட்டளை. ஒவ்வொரு மனிதனும் உயிரினமும் தனக்கோ, தன் இனத்துக்கோ, பயனுடையவன் அல்லது பயனுடையதாயிருந்ததாக வேண்டும். இதுவும் இயற்கையினுடைய மற்றோர் எழுதாக்கட்டளை. இக்கட்ளைகளை எவரும் மீறி வாழமுடியாது. ஏனெனில் மீறுபவர் வாழ்வு வாழவாயிராது. அது முன்னைய வாழ்வின் மட்டத்திலிருந்து மாள்வின் பள்ளத்திற்குச் சரிந்தோடும் கிளர்ச்சியற்ற போக்கேயாகும். இயற்கையின் ஆற்றல் எல்லையற்றது. ஆனால், இந்த எல்லையற்ற ஆற்றலை நாம் அழிவாற்றல் என்றுதான் கூறுகிறோம். நம் கண்ணுக்கு இயற்கையின் எல்லா ஆற்றல்களுமே அவ்வாறே தோன்றுகின்றன. ஏனெனில் பயனுடைய ஆற்றலை இயற்கை வளர்க்கிறது. பயனற்ற ஆற்றலைப் புதிய ஆக்க ஆற்றலாக மாற்றுகிறது. இயற்கையின் வழிவந்த உயிரின வாழ்வில் நாம் அதனை நன்கு காணலாம். அவற்றில் பயன்படும் உறுப்புக் களும் உடற்பகுதிகளும் வளர்கின்றன. பயனற்றவை தேய்ந்து படுகின்றன. வேறு பயனுடைய பகுதிகளாக அவற்றின் ஆற்றல் மாறுகிறது. இயற்கையின் பட்டறையில் பயனற்ற கருவிகள் கிடந்து துருப்பிடிப்பதுமில்லை. பயனுடையத்தக்கவை ஒரு கணமேனும் பயன்படாமல் கிடப்பதுமில்லை. பயனுடைய பொருள்கள் என்றும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். பயன் முடிவதானால், பொருளும் உடனே அழிக்கப்படும். அதாவது வேறு பொருளாக மாறுதலடையும். உழைப்புக்கென ஏற்பட்ட இயற்கையின் பட்டறையில் உழைப்பும் பயனும் அற்ற ஒரு பொருளோ, ஒருகணமோ இராது. இயற்கையின் சிக்கனம் இது. திறமையும் வாய்ப்பும் இயற்கையின் ஆக்க ஆற்றலே உயிராதலால், உயிர் வாழ்விலும் மக்கள் வாழ்விலும் இதே இயற்கைத் தத்துவம் நின்று நிலவுவதைக் காணலாம். திறமை எங்கு இருந்தாலும் அங்கே வாய்ப்பும் வளங்களும் கட்டாயம் இருக்கும். எங்கே ஆற்றல் இருக்கிறதோ அங்கே அது செயலாற்றுவதற்கான நெறிமுறை களும் கட்டாயம் இருந்து தீரும். எங்கே உயர் உள்ளக் கருத்துக்கள் நிலவுமோ அங்கே செயல் திறமும் செயல் துணையும் அருகே இராமலிராது. கலப்பை அமைந்தபின் வயல் உண்டாதில்லை. கலப்பை கென வயல்தான் காத்துக்கிடக்கிறது. கப்பலுண்டானபின் கடல் உண்டாவதில்லை. கப்பலுக்காக அதுவே காத்திருக்கின்றது. துறைமுகத்துக்காக முன்கூட்டி அவை விளைந்து பெருக்க மடைகின்றன. கலப்பைக்கும் கப்பலுக்கும் துறை முயத்துக்கும் தாயக வாய்ப்புக்களான வயலும் கடலும் வாணிகமும் எப்படி பிறக்குமுன் ஒருங்கிருக்கின்றனவோ, அப்படித்தான் நிமித்த காரணமாகிய மனிதனும் அவன் முயற்சியும் திறனும் ஏற்படுமுன்பே, அவற்றை எதிர்நோக்கி அவற்றின் துணைக் காரணங்களும் முதற்காரணங்களுமாகிய வாய்ப்புவளங்கள் காத்துக்கிடக்கின்றன. “என் திறமைக்குத் தக்க வாய்ப்புவளங்கள் சூழல்கள் இல்லாமல் தவிக்கிறேன்,” என்று குறைபடும் குமுறல் குரலை நாம் அடிக்கடி கேட்கிறோம். இதைப்போல பொருளற்ற குரல் வேறெந்தனையும் நாம் கேட்கமுடியாது. இந்தச் சாக்குபோக்கு ஒன்று, வீண் தற்பெருமைக்கு ஒரு மறைப்புத் திரையா யிருக்கவேண்டும். அல்லது சோம்பேறித்தனம், அசட்டை மனப்பான்மை, திறமையின்மை ஆகியவற்றின் சின்னமாயிருக்க வேண்டும். ஏனெனில் முயற்சி செய்யும் விருப்பமும் திறமையும் இருந்தால், முயற்சிக்கான வாய்ப்பு நலமும் சூழல் நலமும் கட்டாயம் அமையும். திறமைகள் பல உண்டு. பலவற்றை நாம் உயர்வாகக் கருதத்கூடும். ஆனால், உண்மையில் உயர்வு உடையதும் மதிப்பு மிக்கதும் இன்றியமையாததும் உழைப்புத் திறன் ஒன்றே. இத்திறம் இருக்குமிடத்தில்தான் மற்றத் திறங்கள் மதிப்டையும். இது இல்லாதபோது எந்தத் திறமையும் மதிப்புப் பெறமாட்டாது. இவ் வுண்மையை நோய்வாய்ப்பட்ட சமயத்திலோ, உறுப்பு ஊறுபட்ட சமயத்திலோ எவரும் தெளிவாகக் காணலாம். இச் சமயங்களில் அவர்கள் ஊக்கமிக்க உழைப்பு எதுவும் செய்ய முடியாதபடி தடைப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் ஆற்றல் பெறும்வரை அவர்கள் தங்களை உடல்நலமுடையவர் என்று கருதவும் மாட்டார்கள். இத்தறுவாயில் யாராவது சென்று உழைக்கும் ஊக்கம் தருகிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு எவ்வளவு கிளர்ச்சி ஏற்படும்? சொன்னவர்களுக்கு என்ன தர முன்வர மாட்டார்கள்? உழைப்பு ஊக்கம் அல்லது திறம்தான் உடல்நலம். அதுதான் உள்ளக் கிளர்ச்சி என்பதை அவர்கள் அப்போது நன்கு அறிந்துகொள்வர். செல்வந்திரட்டியவர்களின் எந்த அளவு செல்வமும் பதவி வகிப்பவர்களின் எந்த அளவு உயர்பதவியும் இந்த உழைப்புத் திறமைக்கு ஈடில்லை என்பது இங்ஙனம் சொல்லாமலே அமையும். ஏனென்றால் உழைப்புத்திறம் திறமைகளுக்கெல்லாம் அடிப்படையானது மட்டுமல்ல; அதுவே இன்பவாழ்வின் அடிப்படையான, உளநலத்தின் அடிப்படையான உடல்நலம் ஆகும். உழைப்பு உழைப்புத்திறனை அளிக்கிறது. உழைப்புத்திறன் உடல் நலமாய், உள நலம், மூளை நலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றது. நல்லுழைப்பால் இவ்வாற்றல்கள் அனைத்தும் சேமிக்கப்படுகின்றன. இச்சேமச் செல்வமுடையவன் உடலிலேயே உழைப்பூக்கம் செறிவுற்றுத் துடிக்கிறது. தசைகளில் ஆற்றல் பொங்கி மிளிர்கிறது. நரம்புகளில் உணர்ச்சி அதிர்கின்றது. மூளையில் அறிவு ஒளி காலுகின்றது. செலவு செய்யக் காத்துத் துடிக்கும் திரண்ட செல்வமுடைய செல்வனாக உழைப்புச் செல்வன் விளங்குகிறான். ஆர்வ உழைப்பும் அடிமை உழைப்பும் உழைப்பு இருவகை. அவை ஆர்வ உழைப்பு, அடிமை உழைப்பு என்பவை. ஊதியத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் உழைப்பார்வத்துடன் உழைத்து, உழைப்புரிமையால் தானே வரும் ஊதியத்தைப் பெற்றுப் பயன் படுத்துவது ஆர்வ உழைப்பு. ஊதிய நோக்கம் ஒன்றே கொண்டு, வேண்டா வெறுப்பாக, உழைப்பது அடிமை உழைப்பு. இவ்வகையினர் கூடியமட்டும் குறைந்த உழைப்பு, கூடியமட்டும் மிகுதி ஊதியம் என்ற குறிக்கோளுடையவர். அவர்கள் வறுமை காரணமாகவே உழைப்பை மேற்கொள்பவர். அவர்கள் உள்ளம் முதலாளிகள் உள்ளத்திலிருந்து மிகுதி வேறுபட்டதன்று. ஏனெனில் அவர்களும் உழைப்பிலா ஊதியத்திலேயே, அதாவது ஆதாயத்திலேயே கருத்துடையவர். இவர்களே கையில் கொஞ்சம் பணம் ஏறியவுடன் முதலாளிகளாய், பிறர் உழைப்பால் வரும் ஊழியத்தைத் தான் உழையாது ஈட்டுபவர். முதலாளிகள் மீது இத்தகையோர் காய்ந்தால், அது முதலாளித்துவத்தின் மீதல்ல; அவர்களிடம் இருக்கும் பணத்தின் மீதேயாகும். ஆர்வ உழைப்பாளன் உழைக்கும்போது முணுமுணுப்ப தில்லை. ஊதியம் வாங்கும்போது பல்லிளிப்பதும் இல்லை. அவன் கூடியமட்டும் குறைந்த உழைப்புச் செய்ய விரும்புவது மில்லை. கூடிய மட்டும் மிகுதி ஊதியம் தேடுவதில்லை. உழையா ஊதியமாகிய ஆதாய வகையிலோ மற்றப் போலி வகை ஆதாயங்களாகிய கைக்கூலி, திருட்டு, கொள்ளை ஆகியவற்றிலோ அவன் மனம் நாடுவதுமில்லை. ஏனென்றால், அவன் விரும்புவது உழைப்பு மட்டுமே. காரணகாரியத் தொடர்பை அறிந்த அவன் உழைப்பின் பயனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உழைப்பு காரணம், ஊதியம் அதன் பயன். காரணத்தை இயக்கியப்பின் காரியததைத் தனியாக இயக்கக் கவலைப்பட வேண்டியதில்லை. அது தானாக இயங்கும். உழைத்தவன் வேண்டாமென்றால் கூட உழைப்பின் பயன் அவனை வந்து பதின்மடங்கு சாராமல் போவதில்லை. ஏனெனில் உண்மையான ஊதியம் அதை அவாவுபவனைவிட அதை உறுதியுடன் எதிர்பார்ப்பவனையே ஆர்வத்துடன் சென்றடையும். உழைப்பைப்போல அரிய செல்வம், ஆக்கவளமிக்க செல்வம் உலகில் வேறு எதுவுமில்லை. இதை அடிமை உழைப்பாளன் அறியமாட்டான். ஆர்வ உழைப்பாளனே அறிவான். உழைப்பின் மதிப்பாக அடிமை உழைப்பாளன் எதிர்பார்க்கும் ஊதியம் உண்மை ஊதியமன்று. அவன் எதிர்பார்க்கும் ஊதியத்தின் முழுப் பயனும் மதிப்புமேயாகும். இதில் ஒரு சிறு பகுதியைக் கூட அவன் பெறுவதில்லை. அவன் பெறும் ஊதியம் அவன் அடிமை நிலையை ஏற்ற அவன் இதில் கூடப் போராட வேண்டியவனாயிருக்கிறானே யன்றிப் பேரம்பேச முடியவில்லை. பேரம் செய்வதற்குரிய தன்னாட்சியும், தன் வலிமையும் அவனிடம் இல்லை. அதே சமயம் அடிமையைப்போல ஆண்டான் தயவைக்கூட எதிர்பாராமல், தன் இன்றியமையாத தேவையான குறைந்த தொகையையே அவன் ஊதியமாக ஏற்கிறான். இது உழைப்பின் பயன் அன்று. ஏனெனில் உழைப்பின் பயனாக வந்த ஊதியம் உழைப்பவனாகிய அவன் உழைப்புத்திறனைப் பெருக்க வேண்டும். அங்ஙனம் பெருக்கினால் தான் அது நல் ஊதியம் ஆகும். மேலும் உழைப்பை மதியாத அடிமை உழைப்பாளி, பெற்ற கூலியைக் கூடத் தன் உழைப்புத் திறனை அல்லது உடல்நலத்தைப் பேணும் முறையில் பயன்படுத்தத் தவறிவிடுகிறான். குடி, தகா இன்பம், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளைப் புறக்கணித் தொதுக்கிவிட்டுத் தற்காலிக இன்ப வாழ்வு, வீண்பகட்டாரவாரம் ஆகியவற்றில் அவன் அவ்வூதியத்தை வீணாக்குகிறான். ஆகவேதான் அடிமை உழைப்பாளி பெறும் ஊதியம் அவன் வாழ்வை வளப்படுத்த உதவாமல் அவனை மேலும் மேலும் அடிமையாக்க மட்டுமே பயன்படுகிறது. அடிமை உழைப்பாளியின் வாழ்க்கைத் துன்பத்துக்கு வறுமைதான் காரணம் என்று பல பொருளியலறிஞர் சப்பைக் கட்டுக் கட்டுவர். வறுமை பொதுவாக எல்லாருடைய வாழ்க்கைத் துன்பத்துக்கும் காரணமாயிருக்கலாம். அடிமை உழைப்பாளிக்கு அதனால் தனிப்பட மிகுதியான துன்பம் ஏற்பட வழியில்லை. மேலும் அடிமை உழைப்பாளிக்குத் திடீரென்று ஒரு புதையல் கிடைத்ததாகவே வைத்துக்கொள்வோம். அதனால்கூட அவன் அடிப்படை வாழ்வில் என்ன மாறுதல் ஏற்படமுடியும்? உழையா ஊதியமே நாடிய அவர்கள் பிற அடிமை உழைப்பாளரைத் திரட்டி அழிவு முதலாளி அதாவது அடிமைத்தனம் வளர்க்கும் முதலாளியாக இயங்கவே அது பயன்படும். வறுமையிலிருந்து மீண்ட அடிமை உழைப்பாளி தன் உழையாச் செல்வத்தை அடிமைத்தனம் வளர்க்கவே பயன்படுத்துவான். உழைப்பின் உண்மைப் பயன் உழைப்பின் உண்மைப்பயனை அறிந்த ஆர்வ உழைப்பாளி ஊதியத்துக்காகப் போராடுவதில்லை. அதுவகையில் கவலைப் படுவதுமில்லை. உழைப்புக்காக முதலாளி தரும் கூலி உழைப்பின் பயனுமல்ல, அதன் மதிப்புமல்ல என்பதையும் அவன் அறிவான். ஆகவே அவன் அந்தக் கூலிக்காக உழைக்கவே செல்லமாட்டான். வறுமை காரணமாக உழைக்க நேர்ந்தால் பெற்ற ஊதியத்தைத் தன் உழைப்பின் பயனான உண்மை ஊதியத்தின் ஒரு சிறு பங்காகக் கொண்டு அதைத் தன் உழைப்புத் திறனைப் பெருக்கும் வகையில் பயன்படுத்துவான். உழைப்புத்திறன் பெருகப்பெருக உழைப்பின் மதிப்பு தானே வளரும். அடிமை முதலாளியின் பிடியிலிருந்து அவன் விரையில் விடுபடுவது உறுதி. அடிமை உழைப்பாளிகளும் அடிமை முதலாளிகளும் நிறைந்த இன்றைய உலகில் கூலியே உழைப்பின் பயனான உண்மை ஊதியம் என்ற தவறான கருத்துப் பரவியிருக்கிறது. இக் கருத்துப் பரவியிருக்கும்வரை முதலாளி ஆண்டாலும் ஒன்றுதான், தொழிலாளி ஆண்டாலும் ஒன்றுதான்! இருவருக்கும் இடையேயுள்ள தரவகுப்பு அல்லது போலி அறிவு வகுப்பு ஆண்டாலும் ஒன்றுதான்! ஆனால் உண்மை உழைப்பின் தன்மையை அறிந்தவுடனே, ஒருவர் இம் மூவகை அடிமைகளின் ஆட்சியிலிருந்தும் விடுபடுவது உண்மை. உண்மை உழைப்புப் பரவுந்தோறும் மூவகைப்பட்ட அடிமையாட்சிகளும் ஒழிந்து உழைப்பாட்சி ஏற்பட்டுவிடும். உழைப்பினால் ஏற்படும் பயன்களைத் தொகுத்துச் சொன்னால் உழைப்புவளம், பயனவளம் என்று இருவகைப்படுத்திக் கூறலாம். உழைப்புத் தரும் ஊதியம் மட்டுமன்றி உழைப்பும் உழைப்புத் திறனை மேன்மேலும் வளர்க்கிறது. அதன் பயனோ, உழைப்பவனுக்கு மட்டுமன்றி அவன் வாழும் சமூகத்துக்கும் வளர்ச்சி தந்து, அதன் மூலம் நாளடைவில் அவனையும் வளர்க்கிறது. இங்ஙனம் உழைப்பு இருவகை உயிராற்றல்களையும் இயக்கி அவற்றின் மூலம் வளம் பெருக்குகிறது. ஊதியத்தை நாடுபவன் அடிக்கடி உழைப்பின் முழுப் பயனையும் அடையாது போகலாம். ஊதியத்தை நாடாதவன் அதை அடையாது. இருப்பதில்லை. உழைப்பின் விலை ஊதியம், ஊதியம் பெற்றதும் உழைப்பின் பயன் முடிவடைகிறது என்று ஊதியத்தை நாடுபவன் நினைத்து விடுகிறான். இதனால் அவன் ஊதியத்தை அதற்குரிய பயன் நோக்கிப் பயன்படுத்த முடிவதில்லை. உழைப்பின் பயன் ஊதியம் என்பது போல, ஊதியத்தின் பயன் உழைப்பு என்பதும் உண்மை. ஆகவே ஒன்றை ஒன்றாக மாற்றியதுடன் பண்டமாற்று நின்றுவிடுவதில்லை. உழைப்பதுடன் ஊதிய மாக்கியபின், ஊதியத்தை மீண்டும் உழைப்பாக்குவதல்லது வேறு செயலில்லை. சரக்குகள் கொடுத்துப் பணம் மீட்டுவர் அந்தப் பணத்தைப் பூட்டியே வைத்திருந்தால் பணம் மதிப்புப்பெறாது. அதைக் கொடுத்து வேறு பொருள் வாங்கவே அதைப் பயன்படுத்துவர். தேவைச்சரக்கும் பணமும் என்றும் தலைமாறிவருவதுபோல, உழைப்பும் ஊதியமும் மாறிமாறி வருபவை. பண்டமாற்றில் பண்டத்தின் பெருக்கமல்லாமல் செல்வம் இருக்கமுடியாது அல்லது உண்மை ஆதாயம் இருக்கமுடியாது. ஊதிய நோக்கத்தின் சிறுமை உழைப்பின் பயனுள்ள வளமும் எல்லையற்றது. அதை நாம் ஏழு கூறாக வகுக்கலாம். அவை பணம், சமூகப் பயன், தொழில்நேர்த்தி, ஆற்றல், தன்னாண்மை, புகழ், இன்பம் என்பன. இவற்றுள் பணம் உழைப்பின் மதிப்பாக வருவது. அடிமை உழைப்பு முறையில் இதன் ஒரு பகுதியே கூலிவடிவில் உழைப்பாளிக்குத் தரப்படுகிறது. மற்றப்பகுதி ஆதாயவடிவில் உழையாத முதலாளிக்கே சென்று விடுகிறது. ஆதாயத்தின் ஒரு சிறு பகுதியைக் கெஞ்சியோ மிஞ்சியோ மிகுதி கூலியாகப் பெறத்தான் அடிமைத் தொழிலாளி அடிக்கடி போராடுகிறான். ஆனால் அவன் போராட்டமே அவன் தன்மதிப்பைக் குலைக்கிறது. ஏனென்றால், அவன் எவ்வளவி போராடிப் பெற்றாலும், அவன் பெறப்போவது கூலி மட்டுமே. கூலி என்பது அவன் பிழைப்புக்குத் தேவையான் ஊதியம். அதைக் கொடுத்து அடிமை முதலாளி அவன் உழைப்பை அல்லது உழைப்பு நேரத்தை விலைக்கு வாங்குகிறான். கூலி என்பது அந்நேரத்துக் குரிய வாடகையும் அவன் பிழைப்புத் தரத்துக்குரிய மதிப்புமேயன்றி வேறல்ல. இந்த நிலையை ஏற்பதே தவறு. ஏற்றால், அதிலிருந்து தப்பித் தன்னாண்மை பெற முயல்வதுதான் தன்மதிப்பாகும். அதனையே போராடிடப பெருக்குவது என்பது அறியாச் சிறுமதியினர் செயலேயாகும். மிகுதி கூலிக்காகப் போராடுவதைவிட, கூலியை நன்கு பயன்படுத்தி உழைப்புத் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினால், எந்தப் போராட்டமும் தேவையல்லாமலே கூலி உயரும். அத்துடன் இந்தப் போக்கு விரைவில் அடிமை முறையிலிருந்து அவனை உயர்த்தவும் தவறாது. உழைப்பின் முழுமதிப்பு கூலி அல்லது பிழைப்பூதியமும் ஆதாயமும் சேர்ந்ததேயாகும். அடிமை உழைப்புமுறை உலகில் இயந்திரங்கள் தோன்றிய பின்னரே ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் தொழிலாளிதானே முதலாளியாகவும் இருந்தான். தொழிலின் பயனை அவன் கூலி என்றும் ஆதாயம் என்றும் பிரிப்பதில்லை. முதன்முதலில் வணிகன் அவன் ஊதியத்தில் ஒருபகுதியை ஆதாயமானப் பெற்றான். ஆனால், வணிகன் ஆதாயம் என்னும் உழைப்பைச் சுரண்டவில்லை. உழைப்பின் சமூகப் பயனையே சுரண்டிற்று. அத்துடன் சமூக வாய்ப்பு ஆதாயம் தருவதைப் போல, வாய்ப்புக்கேடு இழப்பும் உண்டுபண்ணிற்று. ஆயினும் மொத்தத்தில் உழைப்பின் மதிப்பை வாணிக ஆட்சி ஓரளவு குறைந்தது. இயந்திரம் வந்த பின் தொழில் ஆட்சி நிலைமையை இன்னும் சீர் கெடுத்தது. வாணிகத்திலாவது வணிகன் ஆதாயத்துடன் நட்டமும் அடைவான். ஆனால் இயந்திர முதலாளித்துவத்தில் வாணிகத்தை விட நட்டம் மிக அருமை. அத்துடன் அது உழைப்பின் ஒரு பெரும்பகுதிப் பயனையே ஆதாயமாகக் கொண்டது. நல்லகாலமாக, உழைப்பின் பயனறிந்தவர்கள் இன்றும் அடிமை முதலாளித்துவத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய இன்றியமையாமை உண்மையில் கிடையாது. ஏனென்றால் உழைப்பின் பயன் அதன் பணமதிப்பு மட்டுமல்ல. அது சமூகத்துக்கும் தனிமனிதனுக்கும் பலவகை வளந்தருவது. உழைப்பினால் உழைப்பவன் உடல் வளர்ச்சி பெறுகிறது. அது பின்னும் உழைப்பாற்றலையும் உடல் நலனையும் உள நலனையும் வளர்க்கிறது. அத்துடன் உழைப்பின் பயனாக ஏற்படும் பொருள்கள் சமூகத்தை நேரடியாக வளர்த்து அதன் செல்வமாகிறது. அவன் வளர்க்கும் சமூகம் அவனை வளர்க்கவும் அவன் வாழ்வின் இன்பம் பெருக்கவும் பலவகையில் உதவுகிறது. உழைப்பவன் உழைப்பார்வ முடையவனாயிருந்தால், அவன் உழைப்பின் பயனால் அவனுக்குச் சமூகத்தின் தோழமை பெருகுகிறது. உழைப்பின் பிற பயன்கள் உழைப்பு உழைப்புத் திறனை வளர்ப்பது போல, சமூகப்பயன் சமூகப் பயனை மேன்மேலும் வளர்க்கிறது. இரண்டும் ஒன்றுபத்து நூறாகப் பெருகி உலகையே மாற்றியமைக் கின்றன. இயந்திரங்களே இதற்குச் சான்று. உழைப்பின் பயனாய் வந்த அறிவே இயந்திரங்களை ஆக்கிற்று. அது அடிமை முறையை வளர்த்தாலும், உழைப்பின் சமூகப்பயனைப் பேரளவு பெருக்கி யுள்ளது என்பதில் ஐயமில்லை. உழைப்பின் மூன்றாவது பயன் தொழில் நேர்த்தி ஆகும். இது உழைப்பின் நேரடிப்பயனல்ல. படைப்புத் தொழிலில் படைக்கப்பட்ட பொருள் நீங்கலாக இடையே முயற்சியின்றித் தானே விளையும் கிளைப் பொருள் உண்டு. அது போன்றதே இது. ஆனால் நேரடிப்பயனல்ல ஆனாலும், இதன் மதிப்புச் சிறிதல்ல. ஏனென்றால் இது நேரடியாக உழைப்பவன் தன் மதிப்பை உயர்த்துகிறது. மனிதர் இளமையிலிருந்து பெறும் திறங்கள், நயங்கள் ஆகிய யாவும் இந்தத் தேர்ச்சியின் விளைவுகளே. கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தேர்ச்சியடையும் தோறும், கல்லாமலே பலவற்றை எளிதில் உணரத்தொடங்குகிறது. இயந்திரங்களின் நுண்கூறுகளைக் கண்டு தொழிலர்ற்றும் தொழிலாளி சில நாட்களில் தானும் இயந்திரத்தின் ஒரு கூறுபோல முயற்சியின்றி விரைந்து தொழிலாற்றுகிறான் எழுத்தும் சொல்லும் கூட்டி வாசிப்பவர்களும், சிந்தித்துச் சொல்தேடி எழுதுபவர்களும் அத்துறைகளில் தேர்ச்சியடைந்த பின், கண்ணோட்டமாகவே வாசிக்கின்றனர்; கருத்தூன்றாமலே மொழியின் நுண்நயங்களை வழுவாது கையாளுகின்றனர். இத்தகு திறனால் கண்ணிழந்தவர் கண்ணுடையவரை விடத் திறம்படப் பணியாற்றுவதையும், கையிழந்தவர் கையுடையவரை விட விரைந்து செயலாற்றுவதையும் காண்கிறோம். இவ்வாறாகப் பெறும் தேர்ச்சியில், தேர்ச்சிக்கால ஆர்வமும் இன்பம் தரும். தேர்ச்சியோ இன்பமும் தன்நிறைவும் இளிக்கும் ஆற்றல் வழங்கும். தேர்ச்சி உழைப்பவன் மன் மதிப்பை உயத்த்துகிற தென்றால், அதனால் வரும் ஆற்றல் அவனை அவன் சூழலினின்றும் உயர்வுபடுத்தி தன்னாண்மையை வளர்க்கிறது. அடிமை உழைப்பாளியாக இருந்த ஒருவன் கூடத் தேர்ச்சி பெற்றுவிட்டால், இன்றியமையா உழைப்பாளியாகி அடிமை நிலை தவிர்கிறான். இன்றைய அடிமை முதலாளித்துவ முறையில்கூட, தேர்ச்சிபெற்ற தொழிலாளி தேர்ச்சி பெறாத் தொழிலாளரைவிட உயர்வாகவே கருதப் பெறுகிறான். அவன் சலுகைகளும் பல. தனித்துறைகளில் தேர்ச்சி மிகுதியானவர்கள் வல்லுநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்றியமையாமையும் அவர்கள் ஆற்றலும் அவர்களை முதலாளிகளைவிட மதிப்புடையவர்களாக்கி விடுவதைக் காண்கிறோம். நாட்டுக்கு நாடு நடக்கும் உடன்படிக்கைகளிலும் பேரங்களிலும் முதலாளிகளை நாட்டின் செல்வமாகக் கொண்டு எவரும் எந்த நாடும் அவர்களையோ அவர்கள் பணியையோ விரும்பி இரவல் கேட்பதில்லை. ஆனால் நுணுக்கத் துறை வல்லுநர்கள் இங்ஙனம் வல்லரசுகளால் விரும்பிக் கோரப் பெறுமளவு நாட்டின் செல்வமாகி விடுகின்றனர். தன்னாண்மை யுடன் உழைப்பைப் பயன்படுத்தினால், அவ்வுழைப்பு எந்த அளவு நாட்டின் உயர்செல்வம் ஆகிவிடலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. வல்லுநர் ஆவோர் உழைப்பவராகக் கருதப்படாமல், உழைப்பவர் தலைவராக, உழைப்பவர்களுக்கு உதவும் நண்பராக, உழைப்புலகத்தின் ஆசிரியராகச் சமூகத்தில் மதிக்கப் பெறுகிறார். அவர் அறிவு உழைப்பிலாப் போலி அறிஞர் அறிவிலும் பன்மடங்கு மதிப்புடையதாகின்றது. மனித சமூகத்தின் தலைவர்களிடையே அவர் சரிசமமாக நடத்தப்பட்டு ஒரு தலைவராகிறார். அவர் ஒத்துழைப்பும் அறிவுரையுமன்றிச் சமூகத்தில் எதுவும் நடப்பதில்லை. ஒரு தனித்துறையிலேயே உழைப்பின் அறிவு இவ்வளவு ஆற்றல் தருமானால், உழைப்பவர் ஆர்வ உழைப்பாளராகவும், ஆர்வ அறிஞராகவும் ஆய்விட்டால், அவர்கள் ஆற்றல் எந்த எல்லைக்கு வளரும் என்று கூறத் தேவையில்லை. ஆர்வ உழைப்பின் தனி மதிப்பு உழைப்பவர் பலர்; அவர்களுள் இத்தகைய ஆற்றல் படைத்தவர் ஒருசிலர் தானே என்று பலர் வினா எழுப்பலாம். ஆனால், இச் சிலரது உழைப்புக்கால வாழ்க்கையை உற்றுநோக்கினால், இச்சிலர்தாம் ஆர்வ உழைப்பளராயிருந்தவர் என்பது தெரியவரும். எல்லாரும் ஆர்வ உழைப்பாளரா யிருந்தாலும் இதே உயர்வு எல்லாருக்கும் கிடைக்காமலிராது. இதனால் உழைப்பு வகுப்புக்குச் சமூகத்தில் தலைமைப் பதவியின் இடமும், அதே சமயம் அச் சமுதாயத்துக்கு மனித இனத்தின் தலைமைப் பதவியும் உரியதாயிருக்கும். தவிர, நாடுகளில் ஒரு நாடு தலைமை வகிப்பதற்கும், நாட்டு வாழ்விலேயே ஒரு குறிப்பிட்ட காலம் புதுமலர்ச்சிக் காலமாய் அமைவதற்கும் இத்தகைய ஆர்வ உழைப்பின் பரப்பே காரணம். ஆற்றலினால் ஏற்படும் உழைப்பின் அடுத்த பயன் தன்னாண்மை ஆகும். வெளிப்பார்வைக்குச் செல்வர் அல்லது முதலாளிகளே சமூகத்தில் மிகவும் மதிப்புடையவர்களாயிருப்பது போலத் தோற்றக்கூடும். உண்மையில் அவர்களுக்குத் தன்னாண்மையோ உண்மை மதிப்போ இருப்பதில்லை. அவர்களுக்குத் தமக்கென தனிவலிமை சமூகத்தில் இருப்ப தில்லை. அதனாலேயே அவர்கள் எப்போதும் ஆட்சியாளர் தயவை எதிர்பார்த்து வாழவேண்டியவர்களாகின்றனர். அவர்களுக்குத் தரப்படும் மதிப்பும் ஆட்சியாளர்க்குத் தரப்படும் புறமதிப்புப் போன்றதே. ஏனெனில் ஆட்சியில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் ஆட்சியளரே மாறினாலும் ஆட்சியாளர் தயவை அவர்கள் எத்தகைய தயக்கமுமில்லாமல் நாடிநிற்பது காணலாம். தானே உழைத்து, உழைப்பாளிகளில் ஒருவனாகவும், அவர்கள் நண்பனாகவும் உயர்பவன் சமூகத்தில் பெறும் வலிமை இது போன்றதல்ல. அது தன்னாண்மையும் தோழமையும் சேர்ந்த வலிமை. அது சமூக மதிப்பை ஒட்டியா, ஆட்கியாளரை ஒட்டியதல்ல. அவர்கள் நாளடைவில் முதலாளிகளைப் போல ஆட்சியைக் சார்ந்து வாழவோ, ஆட்சி மாற்றத்துக்கு அஞ்சவோ வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் சமூகத்தை இயக்கி ஆட்சியையும் தன்வயப்படுத்த வல்லவராவர். தானே உழைத்துத் தேர்ச்சிபெற்று, தன் ஆற்றலும் தன்னாண்மையும் அடைந்த தொழிலாளிதான் தற்காலக் குடியாட்சி முறையில் அடிப்படை வலு ஆவான். தற்கால முதலாளித்துவ ஆட்சிமுறை பண்டைய உயர்குடி ஆட்சிமுறை களைப் போலன்றி, நடுத்தர வகுப்பின் ஆட்சிமுறையாக மாறிவருவதன் காரணம் இதுவே. உழைப்பின் தேர்ச்சியால் உயர்ந்தவன் வாழ்வு முற்கால உயர்குடியாளர் வாழ்வோ, இக்கால முதலாளிச் செல்வர் வாழ்வோபோல, சோம்பேறித் தேனீயின் வாழ்வாக இல்லை. தேனீச்சமூகத்தின் உழைப்பாளித் தேனீக்களில் ஒரு தேனீயாக, தொழிலாள ரினத்தில் ஒரு தொழிலாளனாக இருந்துகொண்டே அவன் அவர்கள்மீது செல்வாக்குப் பெற்று விடுகிறான். அது மட்டுமன்று, அவன் அவர்களைத் தற்கால வலிமையால் அடக்கி ஆளவில்லை. நிலையான அன்பாற்றலினால் இயக்குகிறான். உழைப்பால் உயர்ந்த உரவோர் கண்ணில் நேர்மையின் ஒளி, குரலில் தகுதியின் தொனி ஆகிய இவை உழைப்பால் உயர்ந்த உரவோருக்கு மட்டுமே உரியன. அவன் எவரையும் அச்சுறுத்துவதுமில்லை. அவன் எவருக்கும் அஞ்சவேண்டுவதுமில்லை. அவன் யாருக்கும் நயவஞ்சகமோ, தீங்கோ செய்வதில்லை. யாரும் அவனுக்கு நயவஞ்சகமோ, தீங்கோ செய்யத் துணியவும் மாட்டார்கள். தன்னாண்மையில்லாத அடிமை உழைப்பாளி ஒருபுறம் வறுமை என்னும் சாட்டையால் தாக்குண்டு, இன்றியமையாத் தேவை களுக்காக வேண்டா வெறுப்பாக உழைக்கிறான். மற்றொருபுறம் உழையாத செல்வத்தை வைத்துக்கொண்டு உழைப்பவர்களின் அடிமை உழைப்பைச் செல்வமாகப் பெருக்கும் முதலாளி பிற முதலாளிகளின் போட்டிக்கும், பொருளியல் நெருக்கடி, போர் நிலவரம், வாணிகக்கள வாய்ப்பு, வாய்ப்புக்கேடு, திருட்டு கொள்ளை ஆகிய பலவற்றைக் கவலையுடன் வாழ்வில் போராடுகிறான். ஆர்வ உழைப்பின் பயன் நுகர்பவன் துன்பம், போலி இன்பம் என்னும் இவ்விருகோடிகளுக்கிடையே உண்மையான வாழ்வின் ஒய்யார இன்ப நிலையைக் தனதாகக் கொண்டு வாழ்கிறான். ஆற்றல், தன்னாண்மை ஆகியவற்றிலும் பெறற்கரிய உயர் மணிமகுடம் புகழ். இது உழைப்பவராயிருந்தது, உழைப்பவருக்கு உழைத்து அவர்களை உயர்த்தும் உயர்வுடையோருக்கல்லாமல் வேறூ எவருக்கும் கிட்டுவதில்லை. உலகத்தை வென்ற பேரரசர் புகழ் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்புகழ் அரசரை மட்டுமே இயக்கும். போர்வீரன் புகழ் போரால் நலமடைபவரளவில், அந்நலம் தேவைப்படும் காலத்தில் மட்டுமே நிலவும். மேலும் போர்வீரடன புகழில் பெரும்பகுதி அவனை அடக்கியாள்பவர் புகழாகவே அமையும். செல்வன் புகழ் அச்செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் எல்லைக்கு வெளியே பரவாது. அவன் பெருங்கொடையாளனா யிருந்தால் கூட, அந்தப்புகழ், செய்த நலங்களுக்கு நன்றி என்ற அளவிலன்றி அகந்திறந்து மலர்ந்த அன்புப்புகழாயிராது. தானே ஆர்வமுடன் உழைத்தவன் புகழ் தன்னலப் பற்றற்றது. அவன் அப்புகழ் சார்ந்து வாழவேண்டியவனல்லன். அது அச்சம் காரணமானதன்று. அவன் தகுதி பாராட்டி அவன்மீது அன்பு பொழியும் புகழாய் அது மிளிரும். அன்புச் செல்வம் செல்வமும் பதவியும் புகழும் யாவும் நுகர்பவர் வாழ்க்கையில் அன்புக்கு ஈடாகமாட்டா. ஏனெனில் இத்தனையும் பெற்றவர் குடும்ப வாழ்வில் அன்புக்கு இலக்காகாவிட்டால், அவர்கள்மீது யாரும் இரக்கங்கொள்ளவே செய்வர். அத்துடன் செல்வமும் புகழும் பதவியும் அற்றவர்க்குக் குடும்பவாழ்வில் அன்பு கிடைத்தால், அந்த அன்புகிடைத்தால், அந்த அன்பு அக் குறைபாடுகளை நியைலுப்படுத்திவிடுவதைக் காண்கிறோம். தீயவர் என்று கருதப்படும் பலர் தம் குடும்பத்தவர் அல்லது ஒருசில நெருங்கிய தோழர் அன்பை நம்பித் தான் உலகத்தின் இகழையும் தண்டனைகளையும் இடையூறுகளையும் ஏற்கத் துணிகின்றனர் என்று காணலாம். தன்னலமற்றுத் தன்னுட னொத்த தொழிலாளருக்குத் தோழமைப் பதத்துடன் உழைப்பவனுக்கு, அவன் சமுதாயம், அவன் இனம் யாவுமே அவன் குடும்பம் போலாகிவிடுகிறது. அவன் புகழ் அப் பெருங் குடும்பம் அவன்மீது பொழியும் எல்லையற்ற அன்பு ஆகும். இதனைப் பெற்றவர் பெறாத பொருள் ஒன்று உண்டு என்று கூறமுடியுமா? அவர்கள் செல்வத்துக்குரிய - உண்மைச் செல்வத்தைப் படைக்கிற - உழைப்பாளி மக்களையே தம் செல்வமாகக் கொண்டுள்ள தனிப் பெருஞ் செல்வர்கள் ஆவர். மேற்கூறிய எல்லாப் பயன்களும் சேர்ந்ததே நிறை இன்பம். உடலுழைப்பில் ஆர்வங்காட்டிய எவரும் படிப்படியாக எல்லா நலன்களும் பெற்று இந்நிறை இன்பத்துக்கு உரியவராகாதிருக்க முடியாது. தெளிவான மனச்சான்று, உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு ஆளாகாத அமைதியான உள்ளம், தன் திறமைகளை முழுவதும் ஈடுபடுத்தி மனித இன முன்னேற்றத்துக்கு உழைத்ததனாலேற்படும் மனநிறைவு. உழைத்துப் பயன் பெற்று மேலும் உழைக்க முனைந்து நிற்கும் தசையுடலும் உள்ளுடலாகிய மூளையும் நரம்பு மண்டலமும் ஆகிய இத்தனையும் பொருந்திய வாழ்க்கைநலம் ஆகிய இவை அவர்கள் குறைவிலா நிறை இன்பக் கோட்டையாய் அமையும். இவ் வெழுவகை நலங்களும் நிறைவேறுவதற்குரிய ஒரே வாயில் உழைப்புத்தான். ஆனால், உழைப்பில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே இவ்வாயில் வழியாக முன்னேற முடியும். பிழைப்பூதியத்துக்காக உழைத்து. இன்பத்துக்கு உழைக்காமல், இன்பத்துக்கு அலைந்து குறுக்குவழி தேடுபவர்களுக்கு இவ்வாயில் தென்படுவதே அரிது. தவிர, உழைப்பின் பயனாக வரும் ஊதியத்தின் அளவைப் பெரிதாகக் கருதி அதைப் பெருக்க மட்டுமே பாடுபடுபவர் ஊதியத்தை வேண்டுமானால் வருந்திப் பெறலாம். உழைப்பின் உண்மைப் பலனைப் பெறமுடியாது. அதைப் பெறுவதற்கு வழி ஒன்றே. ஊதியம் எவ்வளவு குறைவானாலும், அதனை உழைப்புத்திறனைப் பெருக்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உழைப்பின் ஆற்றலை வளர்க்கும் வகையிலும் உண்மைப் பயனாகிய ஆற்றல் கைவரப் பெறும். இவ்வாற்றலே இன்பங்கள் எல்லாவற்றிலும் அடிப்படையாதலால், இதனைப்பெறாத இன்ப நாட்டம் போலி இன்ப நாட்டமாகவே அமையும். உழைப்பினாற் பெற்ற பணம் உழைப்பைப் பெருக்கவதற்கே அதாவது ஆற்றல் பெறுவதற்கே பயன்படுத்தப் பெறவேண்டும். ஏனெனில் ஆற்றல் பெற்றவர்க்கு இன்பமும் உழைப்பைப் பெருக்கவல்லது. அதே சமயம் ஆற்றல் அற்றவர் இன்பங்கள் நீர்மேல் எழுதிய சித்திரம் போன்றது. ஆற்றல் பெற்றவர் இன்பமே சுவர்மேல் எழுதிய சித்திரமாய் அமையும். வரலாறு காட்டும் சான்று உழைப்பு உயிர்த்தன்மையுடையது. சோம்பல் சாவின் தன்மையுடையது. உழைப்பவர் ஓய்வு அயர்ச்சி அகற்றும் துயில் போன்றது. உழைப்பாளி இயற்கையினிடம் எதை அளிக்கிறானோ, அதை அல்லது அதனை ஒத்த தன்மையையே அவன் இயற்கையினிடமிருந்து மீண்டும் பெறுகிறான். எனவே சோம்பி வாழ்நாள் கழிப்பவன் வாழ்வின் அழிவையே பரிசாகப் பெறுவான். உழைப்பை அளிப்பவன் வாழ்வின் பயனைப் பரிசாகப் பெறுவான். இது இயற்கையின் ஒழுங்கமைதி. இதைக் கடந்துசெல்லக் குறுக்குவழியோ புழைக்கடை வழியோ எதுவும் கிடையாது. உழைப்பு என்னும் அரசபாட்டை வழிதான் சென்றாக வேண்டும். தான் உழைப்பதற்கு மாறாகப் பிறர் உழைப்பைச் சுரண்டுபவன், பிறர் வாழ்வை குறைக்க எண்ணலாம். ஆனால், இயற்கை அவனையும் அவன் இனத்தையுமே வேரோடழிக்கிறது. உலகில் முதல்முதல் அடிமை களை வைத்து வாழ்வு பெருக்கிய நடு உலக நாகரிகங்களே இவ்வகையில் வரலாறு காட்டும் சான்றுகளாகும். நாகரிகப் படியில் பலவகையிலும் முந்திக் கொண்டு வளர்ந்த நாடுகள் அவை. ஆனால், அடிமை உழைப்பைப் பயன்படுத்திய காரணத்தினால், அவை வளர்ச்சி தொடராது அழிந்துபட்டன. அவர்கள் பெருமை வரலாற்றில் புதையுண்ட பெருமை ஆகிவிட்டது. இயற்கையின் திட்டத்திலும் சரி, மனித சமுதாயத்திலும் சரி, அவரவர் கைமுயற்சியினாலேயே அவரவர் வாழ்வும் தாழ்வும் அமைந்துகிடக்கிறது. முயற்சி, முயற்சியின்மை என்ற இரண்டு வேறுபாடு தவிர, செல்வம், வறுமை என்ற பிற வேறுபாடு எதுவும் உண்மையில் கிடையாது. இதுபோலவே முயற்சி, முயற்சியுன்மை என்ற வேறுபாடுகள் தவிர வேறு ஏமாறுதல், ஏமாற்றுதல் என்ற எதுவும் இருக்கமுடியாது. ஏமாறுபவன், ஏமாற்றுபவன் என்று கூறப்படும் இருவரும் உண்மையில் தம்மைதாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். உழைப்பவன் உழைப்பின் பயனை உழையாதவன் சுரண்ட எண்ணலாம். சுரண்டியதாகக் கருதிக் கொள்ளலாம். ஆனால், உண்மையுல் உழைப்பின் பயனை எவரும் சுரண்ட முடியாது. உழைப்பில் ஆர்வமுடையவன் உன்ன ஊதியம் தரப்பட்டாலும் அல்லது தரப்படாவிட்டாலும் கூட உழைப்பின் பயனைப் பெறாது போகமுடியாது. இது இயற்கையின் கட்டமைதி. இது எக்காலமும் மாறாதது. இயந்திரத் தொழிலை எதிர்த்த கைத்திறத் தொழில்கள் அழிந்ததன் காரணம் இயந்திரத் தொழிலின் போட்டியன்று. உழைப்பவன் ஊதியத்தை அளவாக வைத்து உழைத்ததேயாகும். கைத்திறத் தொழிலாளர்களால் தங்கள் செய்பொருள்களை விற்கமுடியாது போயிருக்கலாம். அப்போது கூடக் குறைந்த அளவு அதைத் தங்களுக்குள்ளாவது பரிமாறிக் கொண்டால், இயந்திரத் தொழில் வளர்ச்சி அவர்களை ஒன்றும் செய்திருக்க மாட்டாது. இயந்தில நாகரிக வெற்றிக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். இயந்திர நாகரிகம் வருமுன்பே, இயந்திர நாகரிக மனப்பான்மை, ஊதிய நாட்டம், உலகில் பரவிவிட்டது. அகப் பண்புகள் “மேலே காட்டிய தத்துவங்களை ™ஓரிருவர் ஏற்கலாம். ஒருசிலர் ஏற்கலாம். அதற்கேற்ற மட்டமான வாய்ப்பு வளமுடையவர்களுக்கு அது சரி. ஆனால் இன்றைய உலகத் தொழிலாளர்களுக்கு, நூறாயிரம் பத்து நூறாயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்களுக்கு, அவர்களினும் மிகப்பலரான பொதுமக்களுக்கு இவை எப்படி ஏற்புடையவையாகும்.?” என்று சில ஒப்பியல் நெறிவாணர்கள் வினா எழுப்புவது உறுதி. இந்த தத்துவங்களை நாம் வாய்ப்பு வளங்களுடைய ஓரிருவருக்கோ, சிலருக்கோ கூறவில்லை. எல்லாருக்குமே கூறுகிறோம். உண்மையில் வாய்ப்பு வளமுடையவர்கள் சிலர் என்பதையே நாம் ஒத்துக்கொள்ள முடியாது. எவருக்கும் அப்படி தனிப்பட்ட முறையில் வாய்ப்பு வளங்கள் கிடையாது. வாய்ப்பு வளங்கள் எவரிடமும் நிலையாக இருப்பவையும் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாதவர்களுக்கு அவை பயன்படவும் மாட்டா. மேலும் வாய்ப்பு வளங்களை நம்பி ஒருவர் மேம்படுவதும் நலிவதும் அரிது. பதவிகளை நாம் வாய்ப்பு வளங்களில் மிகச் சிறந்தனவென்று கருதுகிறோம். இன்று பதவியிலிருப்பவர்கள் நேற்று இருந்ததில்லை. நேற்று இருந்தவர்களோ, அவர்கள் மரபினரோகூட இன்று இல்லை. ஆகவே, வாய்ப்புவளங்கள் வருவதற்கும் போவதற்கும் நாம் வேறு வாய்ப்புவளங்களைக் காரணம் காட்ட வேண்டிவரும். உண்மை என்னவெனில், வாய்ப்புவளங்களை ஆக்குவதும் பயன்படுத்து வதும் வீணாக்கிக் கழிப்பதும் அகப் பண்புகளே. வாய்ப்புவளங்கள் தாம் அகப்பண்புகளால் ஆவன. அகப்பண்புகள் வாய்ப்புவளங்களால் ஆவதில்லை. உனவே வாய்ப்பு வளமுடையவராகக் கொள்ளப்படும் சிலர்மட்டுமன்றி, அனைவரும் உழைப்பின் மூலம் உயர்வும் பயனிறைவும் பெறலாம். அதற்குத் தடையாயிருப்பது வாய்ப்பு வளமல்ல, ஊதிய நோக்கமே. ஊதியநோக்கம் அகன்று உழைப்பார்வம் ஏற்பட்டால், உழைப்பின் பயனான எல்லா நலங்களும் தாமாக வந்தெய்துவது உறுதி. உழைப்பு, ஊதியம், உடல்நலம் ஆகிய மூன்றும் தனிமனிதன் வாழ்விலும் சரி, இனவாழ்விலும் சரி, மூன்று வளர்ச்சிப்படிகள் ஆகும். இவற்றுள் பண ஊதியத்தை மட்டுமே ஊதியமாகக் கொண்டும், அதிலும் பிழைப்பூதியத்தையே ஊதியமாகக் கொண்டும் உழைப்பைக் கணிப்பது தான் தற்காலத் தீங்குகள் அனைத்திற்கும் மூலக்காரணமாகும். வருங்கால அரசியல், பொருளியல் திட்டங்கள் ஊதியத்தை முழுநிறைவடிவில் கண்டு அதன்மீது கட்டமைப்புச் செய்யவேண்டும். அப்போதுதான் உயிரற்ற பொருளியல் வீக்கமட்டும் ஏற்பட்டு, வாழ்வின் உயர்மெய்மைகள் எல்லாம் கெடுகின்ற தற்போதைய நிலைக்கு ஒரு முடிவு உண்டாகும். எந்த நாடு இந்த ஆன்மிக உண்மையை மதித்துத் தொழிலாளர் வாழ்வில் திட்டமிடுமோ, அந்த நாடு உலகுக்கு ஒரு புத்தம் புது வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் நாட்டுக் கல்விமுறை மாறியமைவது மிகமிக அவசியம் ஆகும். 3. “தகுதியின் மீதே வெற்றி” “இயற்கையின் அமைதி வேறு, தெய்விக அமைதி வேறு; புறம் வேறு, அகம் வேறு” என்று அணிமைவரை பலரால் கருதப்பட்டு வந்திருக்கிறது. இன்னும் இவ்வாறு கருதுபவர் பலர். ஆனால் இவ்விருவேறு வகைப் பிரிவுகளும் இயற்கையின் மெய்மைக்கு மாறுபட்டது. தெய்வக் கோட்பாட்டுக்கும் எதிரானது. இயற்கையின் அமைதி, தெய்விக அமைதி ஆகிய இரண்டுமே, வேறு வேறு கோணங்கள் என்பதே உண்மை. இரு கோணங்களிலும் ஏற்படும் காட்சி வேறாயிருக்கலாம். ஆனால், அது காட்சியின் முரண்பாடாயிருக்கக் கூடுமேயன்றி, பொருண்மையின் முரண்பாடாயிருக்க முடியாது. தெய்விக அமைதி அகச்சார்பானது. மொழியின் கண்காணா ஓசையுருவம் போன்றது. இயற்கையமைதியோ புறச்சார்பானது; அதன் கண்கண்ட எழுத்துருவம் போன்றது. இரண்டிற்கும் தோற்றமாறுபாடு உண்டு. தெய்விக அமைதிக்கும் இயற்கையமைதிக்கும் உரிய தொடர்பு இதுவே. தெய்விக அமைதியின் எளிய கண்கண்ட புறவடிவமே இயற்கை அமைதி. இயற்கையைக் காண்பவர் காட்சி தவறக்கூடும். ஆனால், தவறுமிடத்தில் அத்தவற்றை அக்காட்சியே திருத்தவல்லது. இந்த வழியில்தான் நாம் இயற்கையின் மறை உண்மைகளைத் தேர்ந்தறியக்கூடும். அதுமட்டுமன்று. இயற்கையின் அகமெய்மை யாகிய தெய்விக உண்மைகளைக் காண நமக்கிருக்கும் ஒரே வழி இயற்கைதான். பழங்காலடக சதய வாதிகள் இயற்கை கடந்த ஒரு தெய்விக அமைதியைக் காண அவாவினர். ஏனெனில், அவர்கள் இயற்கையைத் தெய்வத்துக்கு மாறானது என்று கருதினர். இப்போது நாம் வரவர இயற்கையே தெய்வத்தின் புற அமைதி என்பதை உணர்ந்து வருகிறோம். புறவடிவின் காட்சியில் நாம் தவறுகள் பலவற்றைக் கடந்து செல்ல வேண்டி வரலாம். ஆனால், இயற்கையின் வாய்மை கடவாமல் பொறுமையுடன் செல்வது ஒன்றே இயற்கையில் உள்ளார்ந்து நிலவும் தெய்விக உண்மை களைக் காண வழி ஆகும். தெய்விக அமைதியின் கண்கூடான, செயல்திறம்பட்ட உருவமே இயற்கை. கண்காணா மெய்மையின் வரிவடிவம் அது. அதன்வழியே மெய்மையைக் காணப் பாலைவனங்களில், தடம் தெரியா நீள்வழிகளிலெல்லாம் நாம் அலைந்து தேடுகிறோம். ஆனால் தேடுகின்ற நம் கண்களின் முன்னேதான் தேடுகின்ற போதெல்லாம் அது ஒளிவீசி நிற்கின்றது. அரும்பொருள் என்று நினைத்து நாம் அதைத் தேடும்போதெல்லாம் அது எளிய பொருளாகவே அருகில் இருக்கின்றது. அரும்பொருளென்று நினைத்துத் தேடி அலுத்து மீண்டபின்தான் அது எளிய பொருளென்ற மெய்யறிவு நம்மிடம் ஏற்படமுடிகிறது. தேடும்போது மூடிக்கொண்டிருந்த நம்ம கண்கள் திறத்கின்றன. இயற்கை கடவுளை மறைக்கும் திரையல்ல, கடவுளமைதிக்கு முரண்பட்டதல்ல; கடவுளைக் கட்புலப் படக் காட்டும் ஓர் உருவடிவே அது என்று நாம் உணர்கிறோம். தெய்விக அமைதி இயற்கை கடந்தது என்று எண்ணி அதை அகத்தே கற்பனைக் காட்டில் தேடும்போதெல்லலாம், நாம் திரையிட்ட கண்களுடன் ஆடி அலைந்தோம். அறியாமை, தற்செருக்கு ஆகிய அத்திரைகள் நீங்கியபின், இயற்கையே கடவுளைக் காட்டும் கண்ணாடி என்பதறிந்தோம். அழியும் பொருளென நாம் நினைத்தவற்றில் நாம் இப்போது அழியாத் தன்மையைக் காண்கிறோம். புறம் என்று நாம் நினைத்தன வெல்லாம் அகத்தின் மறுப்புறம் என்று உணர்கிறோம். இயற்கை ஒன்றே இயல் நூலாராய்ச்சியாளர் ஓரியற்கை மெய்மையைக் கண்டுணரும் போதெல்லாம், ஒரு தெய்விக உண்மையும் அதன்மூலமாகவே வெளியாகின்றது. இயல்நூல் துறையிலேயே ஒரு சிறு துறைக்குரிய உண்மையைக் காண்பவன் அது இயல்நூல் முழுமைக்குரியது என்று எப்போதும் எண்ணுவதில்லை. ஆயினும் இயற்கை ஒன்றே; அதன் அடிப்படை இயல்பும் ஒன்றே. நாளடைவில் ஒரு துறையின் உண்மை மற்றக் துறைகளிலும் தொடர்புடையதாயிலங்குவதைக் காண்கிறோம். எடுத்துக் காட்டாக இயங்கியல் நூலின் அணுத் தத்துவம் இயைபுநூலில் பொருள் இயைபுக்கான அணுத் தத்துவ ஆதாரத்தையும் விளக்கிற்று. சில சமயங்களில் இருவேறு துறைகளுக்குரிய ஒரு தத்துவம் அவ்விரு துறைகளையும் ஒரு துறையாக்குவதும் உண்டு. எனவே, ஒரே அமைதியின் இருகோணமான இயற்கையமைதி, தெய்விக அமைதி ஆகியவற்றில் இயற்கை அமைதியின்பால் கண்டுணரப்படும் ஒவ்வொரு உண்மையும் அதற்கியைந்த ஒரு தெய்விக அமைதி சார்ந்த மெய்மைக்கும் வழிகாட்டியாகவே யிருக்கும் இதில் ஐயமில்லை. மேலும் இயற்கையமைதி சார்ந்த ஒவ்வோர் உண்மையும் அவ்இயற்கையமைதியின் ஒரு கூறே. ஒவ்வோர் உண்மையைக் கண்டுணருந்தோறும் அவ் வமைதி பற்றிய முழு அறிவில் ஒரு பகுதியையே நாம் அறிகிறோம். எனவே, ஒவ்வோர் உண்மையும் இயற்கையமைதி பற்றியதாயினும் தெய்விக அமைதி பற்றிய தாயினும் இரண்டு அமைதிகளையும் சார்ந்த ஒரே முழுநிறை அறிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லுவதேயாகும். இயற்கை உண்மை காண்பவன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவன் கண்ட உண்மை முழு இயற்கை அமைதி நோக்கியும், தெய்விக அமைதி நோக்கியும் நம்மை இட்டுச் செல்லத் தவறுவதில்லை. தெய்விக அமைதி என்பது இயற்கையின் அகநிலை அமைதி அல்லது ஆன்மிக அமைதி. இயற்கை அமைதி முழுவதும் ஒரே ஆன்மிக அமைதியின் புறவடிவமேயாகும். இயற்கையின் ஒவ்வோர் உண்மையும் ஒவ்வோர் ஒழுங்கமைதி. ஒவ்வோர் ஆன்மிக தத்துவமும் ஓர் ஓசையானால், ஒவ்வோர் இயற்கை உண்மையும் அதன் வரிவடிவமான ஒவ்வோர் எழுத்து ஆகும். இரு அமைதிகளும் ஒரே நிறைவட்ட அமைதியின் இருபாதி களான இரு அரைமதி வட்டங்களே யாகும். இவற்றின் இந்த இன்றியமையா இணைத்தொடர்பை அறியாதவர்கள் ஆன்மிக அமைதி வேறு, இயற்கை அமைதி என்று கூறுவர். இன்னும் சிலர் ஆன்மிக அமைதிக்கு முரண்பட்டது இயற்கையமைதி என்றுகூட வாதிடுவதுண்டு. ஆனால் இரண்டும் முரண்பட்டவையுமல்ல. வேறுவேறானவையும் அல்ல. ஒன்று அகவடிவம் அல்லது நுண்வடிவம்; மற்றது புற வடிவம் அல்லது பருவடிவம் மட்டுமே. சார்ல்ஸ் டார்வின்: ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ பல ஆண்டுகளுக்கு முன் சார்ல்ஸ் டார்வின் இயற்கையின் அணுக்க நுணுக்கங்களைத் துருவி ஆராய்ந்து ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்தைக் கண்டு தெளிவு படுத்தினார். இது இயற்கையின் அமைதியாயினும், இயற்கையிற் காணப்பட்ட தெய்விக மறைநிலை அமைதியேயாகும். ஆயினும் தெய்விக அமைதியின் பாதுகாவலர் நாங்களே என்று கூறிக் கொள்ளும் கமயத்துறைவாணர்கள் பெரும்பாலும் இதைத் தங்கள் வலுக்கொண்ட மட்டும் எதிர்த்தனர். இயற்கையின் மூலம் புத்தறிவு காணுமுன், இயற்கைத் துறையிலிருந்து அறியாமை சமயத்துறையிலும் ஆட்சி பெற்றிருந்தது. இயற்கைத் துறையின் அறியாமையை அத்துறை புத்தறிவு போக்கமுடிந்தது. ஆனால், சமயத்துறையில் அவ்வளவு எளிதாகப் புத்தறிவு எழ முடியவில்லை. ஏனென்றால் இயற்கை இறைவன் படைப்பு என்ற எளிய சிறிய உண்மையைக் சமயவாதிகள் ஊன்றிக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் இயற்கை தெய்விக அமைதியின் புறவடிவம் என்பதையும், இயற்கையமைதியின் அறிவுவாயிலாகவே தெய்விக அமைதித்துறையில் அறிவு வளர முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பர். ஆன்மிக மெய்மை பொதிந்த டார்வினின் இயற்கை மெய்மைக்கு முதலில் எழுந்த எதிர்ப்பும் வெறுப்பும் சீற்றமும் இன்று சுழன்றடித்தார்த்து ஓய்வுற்றுவிட்டன. ஆனால் அதன் நிழல் சமயத்துறையாளர் பலரிடத்தில் மட்டுமன்றி இயற்கையமைதியில் கருத்தூன்றும் சிலரிடம்கூடப் புகுந்துள்ளது. அவர்கள் மூலமாக, ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற அமைதி ஒரு கொடுமை வாய்ந்த அமைதி என்ற கருத்துப் பரவியுள்ளது. உண்மையில் தொடக்கத்தில் இம் மெய்மையை எதிர்ப்பதற்குக் காரணமாயிருந்த தப்பெண்ணம் இதுவே. இங்ஙனம் எதிர்ப்பு ஓய்ந்தபின்னும், அதற்குக் காரணமான தப்பெண்ணம் இன்னும் மாறாமல் நீடித்து நிலவியே வருகிறது. மேற்கூறிய தப்பெண்ணத்துக்கு டார்வின் கண்ட மெய்மையோ அதற்கு அவர் தந்த விளக்கமோ காரணமல்ல. தகுதி என்ற சொல்லைப் பற்றிப் பொதுவாக மக்களிடையே இருந்துவரும் தவறான எண்ணமே காரணம். மக்கள் தகுதி என்றாலே திறமை அல்லது ஆற்றல் என்று கருதி விடுகிறார்கள். இது அரை உண்மை மட்டுமே. திறமையும் ஆற்றலும் தகுதி ஆய்விட மாட்டா.மேலும் திறமையும் ஆற்றலும் தகுதியின் இன்றியமையாக் கூறுகளும் அல்ல. ஏனெனில் தகுதியற்ற வரிடையே திறமையும் ஆற்றலும் இருக்கக்கூடும். ‘தகுதி’ என்ற சொல்லை இங்ஙனம் ஆற்றல் என்று கொண்டவர்கள் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்று பொருன்படுத்திக் கொண்டனர். பல மக்கள் தங்கள் தப்பெண்ணத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. தகுதியை அவர்கள் தவறாக ஆற்றல் என்ற கருதிக்கொண்டது போலவே, ஆற்றலையும் தவறாகக் கொடுமை செய்யும் ஆற்றல், கொடுமை எனப் பொருள்படுத்திக் கொண்டனர். ஆற்றல் உடைய சிலர் கொடுமை செய்கின்றனர். அதைக் கண்டு ஆற்றலே கொடுமைதான் என்று மக்கள் எண்ணி விடுகின்றனர். இம் முறையில் தகுதி ஆற்றலாகவும் ஆற்றல் கொடுமையாகவும் கொள்ளப்பட்டதனால்தான், ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை அவர்கள் ஆராயாது மிக எளிதாகக் ‘கொடுமையின் மிகுதியே வெற்றி’ என்று கருத்தில் கொண்டனர். தெய்விக ஒழுங்கமைதி ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவம் இயற்கையின் ஒழுங்கமைதி மட்டுமன்று; அதுவே தெய்வித ஒழுங்கமைதியும் ஆகும். ஆனாவ், கொடுமையின் மிகுதியே வெற்றி என்பதோ, ஆற்றலின் மிகுதியே வெற்றி என்பதோ அதற்கு வெவ்வேறு வகையில் முரணான, நேர் எதிர்மாறான கருத்து ஆகும். ஏனெனில் ஆற்றலில் மிக்கதே எப்போதும் தகுதியில் மிக்கதாயிருப்பதில்லை. கொடுமையில் மிக்கதோ ஒரு போதும் ஆற்றலில் மிக்கதாயிராது. இயற்கையின் வளர்ச்சிப்படிகளில் ஒவ்வொன்றும் இதைத் தெள்ளெனக் காட்டுகிறது. கொடும் பாறைகள் வெயிலும் மழையும் காற்றும் தடுக்க இயலாமல் அவற்றால் பொடிந்து தகர்ந்து போகின்றன. ஆனால் மெல்லிய மண்ணோ புல்பூண்டு செடி கொடி மரங்களை வளர்த்து அவற்றிலிருந்து தம்மைக் காத்துப் பேணிக்கொள்கின்றன. ஆற்றல்மிக்க விலங்கினங்களும் கொடுமைமிக்க விலங்குகளும் உயிரினத் தொடக்கக் காலங்களில் வாழ்ந்தன; இப்போது இறந்தொழிந்தன. இன்று தகுதியால் வென்று வாழ்பவை ஆற்றலில் குறைந்த, கொடுமையற்ற, ஆனால் அறிவுமிக்க உயிரினங்கள் மட்டுமே. மனித இனம் ஒருபுறம் இதற்குச் சான்று; வலிமையில் இன்னும் குறைந்த, பகைகளுக்கும் இன்னும் மிகுதியும் ஆளான பூச்சியினம் மற்றும் ஒரு சான்று. தகுதிமிக்கவை வாழ்வில் வெற்றி பெறுகின்றன என்றால், ஆற்றல் மிக்கவை அல்லது அழிவாற்றல் அல்லது கொடுமை மிக்கவை வெற்றி பெறுகின்றன என்பது பொருளன்று. தகுதி மிக்கவை வெற்றி பெறுகின்றன என்றால் நல்லவை, சிறந்தவை வெற்றி பெறுகின்றன என்றே பொருள். ஒவ்வொன்றின் வெற்றியும் இனவெற்றிக்கு உதவுவது; ஒவ்வோரினத்தின் வெற்றியும் உலகவெற்றிக்கு உதவுவது. தகுதி என்பதற்கு டார்வின் தந்த, விளக்கிக்காட்டிய பொருள் இதுவே. உலகம் ஓயாது முன்னேறிக் செல்கிறது. உலக முன்னேற்றத்துக்கு உதவும் பண்பே தனியுயிர் முன்னேற்றத்தையும் உண்டுபண்ணுகிறது. உலக முன்னேற்றத்தில் பங்குகொண்டு முன்னேறும் உயிர் வாழ்கிறது; வளர்கிறது. பங்கு கொள்ளாத உயிர் தாழ்கிறது, அழிகிறது. தகுதியின் மிகுதியே வெற்றி என்பதன் பொருள் இதுவே. தகுதிமிக்கவை வாழும் என்றால் நலஞ்சிறந்தன வாழும் என்றே பொருள் கொள்ளல்வேண்டும். இயற்கையில் உள்ளார்ந்த நிறைநலம் உண்டு. அதுவே முழுநிலை நேர்மை அல்லது தெய்விக அமைதி. இயற்கையின் கால இடச் சூழல்கள் தாண்டி இதனுடன் இயைந்து அதனைக் காண்பவர் உண்டு. இவர்களையே நாம் அருளாளர் என்கிறோம். ஆனால் இவ்வமைதி இயற்கையின் வாயிலாகவே செயலாற்றுகிறது. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வோர் இடச்சூழலிலும், ஒவ்வொரு காலச் சூழலிலும் இவ்வமைதி செயலாற்றுகிறது. அதன்மூலம் தகுதிமிக்கன ஆக்கம் பெறுகின்றன. தகுதியிற் குறைந்தவை பின்தங்கி அழிகின்றன. அதாவது நல்லன வாழ்கின்றன, வளர்கின்றன, வெல்கின்றன. அல்லன தாழ்கின்றன, தளர்கின்றன, நலிகின்றன. சமயங்கள் நாடவேண்டி தெய்விக அமைதியின் நிறைவு இதுவே. நாகரிக முதல்வர் செயல்துறையில் முனைந்து தேடவேண்டிய நலமும் பண்பும் இதுவே. இயல்நூலறிஞரும் பிற நுணுக்கத் துறைவரும் கலைஞரும் கண்டு தெளிவுறுத்த வேண்டும் மெய்மையும் இதுவே. ஆனால், நாகரிகத்துக்கு வழிகாட்டாத சமய முதல்வர்களும், மக்கள் வாழ்க்கை நலத்துக்கு வழிகாட்டாத நாகரிக முதல்வர்களும் மக்களிடையே நிலவும் ஆராயா மடமைகளைத் தாமும் ஏற்று வழிகாட்டுவதற்கு மாறாகத் தாமே மலைப்படைகின்றனர். இத்தகையோரே சமயத்தின் அடிப்படை மெய்மை, நாகரிகத்தின் அடிப்படைப் பண்பு ஆகிய இரண்மையும் உணராமல், தகுதி ஆற்றலாகவும், ஆற்றல் என்பதைக் கொடுமையாகவும் கருத்திற் கொண்டு தடமாறித் தடுமாறுகின்றனர். தகுதியின் மெய்ப்பண்பு தகுதியில் ஆற்றல் உண்டு; ஆனால் அது ஆக்க ஆற்றல்; அழிவாற்றல் அல்ல. தகுதி சார்ந்த ஆற்றல் அழிக்க உதவாது. ஆகவே அதில் கொடுமையும் இருக்கமுடியாது. எனவே தகுதிக்கும் கொடுமைக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அவ்வாறாயினும் தகுதி என்றவுடனே ஆற்றலையும் கொடுமையையும் பலர் நினைப்பதற்குக் காரணம் என்ன? தகுதிமிக்கவை பிழைத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெறுகின்றன என்ற மெய்மையைக் கேட்டவுடனே, பிழைத்து வாழ்தல், என்ற கருத்து அவர்களைத் தனியுயிர் பிழைத்து வாழ்தல், தனியுயிரின் தன்னலம் என்ற இழிந்த எண்ணங்களுக்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை தன்னலமல்ல, பொதுநலம் தகுதி என்பது தன்னல ஆற்றலன்று, பொதுநல ஆற்றல் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். டார்வின் தத்துவத்தைக் கண்டித்தவர்கள் அதைத் தன்னலமிக்கது கொடுமை வாய்ந்தது என்று குறை கூறினர். ஆனால் தன்னலமும் கொடுமையும் டார்வினின் தத்துவத்தி லில்லை. கண்டித்த அவர்கள் உள்ளத்தில்தான் இருந்தது. டார்வின் தத்துவம் தகுதி இன்னது என்பதை நன்கு விளக்குகிறது. உயிரினங்களிலும் விலங்குகளிலும் இனநலத்துக்கு ஆக்கம் தரும் பண்புடையன வாழ்ந்தன. அவற்றின் பண்பு இனப் பண்பாயிற்று. இனங்களில் பேரின நலன் அல்லது இயற்கை நலத்துக்கு ஒத்தன வாழ்கின்றன. வாழும். இதுவே டார்வின் காட்டிய மெய்மை. அவர் தந்த விளக்கம் இன்னும் தெளிவானது. ஏனெனில் நேர்மை, பொதுநலம், பெருந்தன்மை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் மனித இனத்தில் வளர்ந்த வகைகளையும் இயல்நூலுடன் அவர் பொருத்திக் காட்டியுள்ளார். இயற்கையின் பண்புகளே தெய்வ அமைதிப் பண்புகள் என்ற முடிவு இதில் தொனிக்கிறது. சமய முதல்வர்கள் இதுகண்டு சீறினர். ஏனென்றால் தெய்விக அமைதி வேறு, இயற்கை அமைதி வேறு என்ற அவர்கள் அறியாமடமைக் கருத்துக்கு ஊறு ஏற்படுகிறது என்று அவர்கள் கருதினர். மேலும் இயல்நூல் துறையிலிருந்து காண்பவர் “தெய்வ அமைதியே இயற்கையமைதி” என்று கூறமாட்டார். இயற்கையமைதியே தெய்விக அமைதி என்றுதான் கூறுவர். இது காட்சியின் திசைமாற்றமே தவிரக் காட்சி மாற்றமாகாது. இயற்கை அமைதி, தெய்விக அமைதி ஆகியவற்றின் தொடர்பறிந்த சமய முதல்வர்கள் இதன் திசையை மாற்றி, தெற்விக அமைதியே இயற்கை அமைதி: ஆகவே இயற்கை அமைதியே தெய்விக அமைதி என்பதில் தவறில்லை என்று கூறி அமைந்திருப்பர். குறுகிய தன்னலம், அதாவது பொதுநலங் கருதாத தன்னலம் அழிவு நாடிச் செல்வது. பரந்த தன்னலம், அதாவது பொது நலங்கருதியோ கருதாமலோ அதனுடன் இயைந்த நிற்கும் தன்னலம் தனி உயிருக்கும் இனத்துக்கும் ஆக்கம் தரும். எனவே பொதுநல இயல்பே தகுதியாகும். வெற்றி யாவும் தகுதியடிப்படையிலேயே யாதலால், வாழ்வில் நேர்மைக் கேடு என்பது கிடையாது. யாவும் இயற்கையின் நேர்மையமைதிக்குக் கட்டுப்பட்டவையே. இவ்வியற்கை அமைதியே வாழ்க்கை அமைதியாகிய ஒழுக்கம். அதன் உயில் நிலை ஆன்மிக அமைதி அல்லது தெய்விக அமைதி அன்பு, வாய்மை ஆகிய அடிப்படை மெய்மைகளையன்றி அழிவு பிழைத்து அழியா ஆக்கம் நாடும் வழிகள் எதுவும் இல்லை. ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற டார்வினின் இயற்கைத் தத்துவங்காட்டும் முழுநிறை உண்மை இதுவே. டார்வின் தத்துவத்தின் ஒழுக்கப்பண்பு டார்வின் தத்துவம் இயற்கைத் தத்துவம் மட்டுமல்லாமல்ல; அதுவே உயர் ஒழுக்கத் தத்துவமும் ஆகும். தகுதி மிக்கவர் வெல்வர் என்பதன்று. பொதுநலமிக்கவர் வெல்வர் என்பதே. ஒவ்வொரு இனத்தின் தலைசிறந்த உறுப்பும் அந்த இனத்தை வளர்க்க உதவும் உறுப்பே. அந்த இனத்தை அழிக்க உதவும் உறுப்பன்று டார்வினின் இத் தத்துவத்தினும் உயரிய மெய்மையைக் சமயநூல்களில் கூடக் காண்டலரிது. ஆனால் அந்நாளைய சமய முதல்வர் சமயம் பற்றிய அறிவு குறுகிய தன்னலச் சூழலில் வளர்ந்த அறிவாதலால். இந்த உயர்மெய்மையை அவர் தம் காட்சிக் கோணம் காணத் தவறிற்று. இயற்கையின் உள்ளார்ந்த தகுதி அல்லது நலம் நிலையான நலம் ஆகும். புறத்தே செயற்படும் தகுதி நிலையான தகுதியன்று, மாறுபடும் தகுதி; ஆனால் வளரும் தகுதி. அது இடத்துக்கி இடம் மாறுபடுவது. காலத்துக்குக் காலம் மாறுபடுவது. இம் மாறுபாட்டை இயக்குவது உள்ளார்ந்த தகுதி அல்லது தெய்விக அமைதி. அவ் இயக்கமூலம் ஓரிடத்திலுள்ள தகுதி மாறுபட்டு, அடுத்த இடத்திலுள்ள தகுதியை வளர்க்கிறது. ஒருகாலத் திலுள்ள தகுதி மாறி, அடுத்த காலத்திலுள்ள தகுதியை வளர்க்கிறது. இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் தகுதியின் மாறுபாடுகளிடையே தகுதியைவிட அதனுதவியால் வளர்ச்சி யடைந்து மாறுபட்ட மற்றொரு காலத் தகுதி உயர்வுடைய தாகவே இருக்கும். தகுதிமட்டுமல்ல; ஒழுக்கம், நேர்மை, கடவுள், சமயம் ஆகியவை பற்றிய கருத்துக்களும் காலத்துக்குக் காலம் மாறுகின்றன, உயர்வடைகின்றன, வளர்கின்றன. கொடுமையே வெற்றிதரும் என்று நம்புபவர் ஒருசிலர் இன்றும் இருக்கலாம். ஆனால் மனித இனதே அங்ஙனம் கருதிய காலம் இருந்தது. அக்காவத் தெய்வங்கள் கொடிய உருவில் சமைக்கப்பட்டன. அவை கொடும் பலிகள் கோரின. இந்நிலையிலிருந்து மனித அறிவு உயர்ந்தது. ஆற்றல் வெற்றிதரும் என்று கருதிற்று. அதனினும் உயர் கருத்து அக்காலத்து மனிதனுக்கு ஏற்படவில்லை. அக்காவத் தெய்வமும் ஒழுக்க முறைமைகளும் ஆற்றலடிப்படையிலமைந்திருந்தன. காவியங்களும் அந்நாளில் வீர காவியங்களாகவே இருந்தன. ஆனால் விரைந்து மனித இனம் அறிவு, அழகு, அன்பு, சரிசம நேர்மை ஆகிய படிப்படியான உயர் தத்துவங்களைக் கண்டுணர்ந்தது. சமயம், ஒழுக்க முறைமை, சமூக அமைப்பு அரசியல் ஆகிய யாவும் சற்று முன்பின்னாகவேனும் இவ்வுயர் தத்துவங்களுடனொத்து வளர்ச்சியடைந்தே வருகின்றன. இவை யாவும் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற இயற்கைத் தத்துவ அடிப்படையான வாழ்க்கைத் தத்துவத்தின் விளைவே. தெய்விக அமைதி அல்லது முழுநிறை நேர்மை இத்தனையிலும் ஊடாடி நிற்கும் அகநிலை அதாவது உயிர்நிலை அல்லது ஆன்மிகத் தத்துவம் ஆகும். தெய்விக அமைதியின் இயக்கும் ஆற்றலின்றி இவை என்றும் நடைபெற மாட்டா. தெய்விக அமைதியே எல்லாவற்றையும் இயக்குவது என்றதும் சமயத் துறையாளர் பலர் உடனே தம் துறைதான் மற்றெல்லாத் துறைகளுக்கும் மேம்பட்டதாயிருக்க வேண்டும் என்று கருதாமலிரர். அவர்கள் கருத்து தவறானது மன்று. உண்மைச் சமயத்துறை இயற்கை கடந்த அமைதிபற்றிய அறிவைச் சார்ந்ததாதலால், எல்லாவற்றிலும் உயர்ந்ததே. ஆனால் உண்மைச் சமயத்துறை என்பது இடவேறுபாடு கடந்த, காலநிலை தாண்டியதாயிருத்தல் வேண்டும். மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் சமயத் துறையாளர் இந்நிலையில் இருந்தனர். அவர்கள் இயற்கையின் அறிவு மூலமாக இயற்கையின் உள்ளார்ந்த மெய்யறிவை நாடினர். இன்று சமயத்துறை மனித சமூக வாழ்வில் பின்னடைந்து விட்டது. அது பழைமைப்பற்று பிற்போக்கு ஆகியவற்றின் கோட்டை ஆகிவிட்டது. இயற்கை அறிவை அது வரவேற்று, காலத்துடன் முன்னேறி, காலந்தாண்டி அது சிந்திக்க வில்லை. அது தற்போதைய இயற்கை அறிவுக்கு முரண்பட்ட முற்காலப் பழம் பஞ்சாங்க கால இயற்கையறிவில் நின்று புதிய இயற்கை அறிவை ஐயநோக்குடன் நோக்குகிறது. உண்மைச் சமயத்துக்கு மாறாக இயற்கை அமைதி வேறு, இறை அமைதி வேறு என்ற கருத்தை அது வரவேற்ற வகை இதுவே. நாகரிக வளர்ச்சியின் மூன்று படிகள் சமயம், சமூகம், அரசியல் ஆகிய இவை நாகரிக வளர்ச்சியின் மூன்று படிகள். ஆனால் பின்னதன் முன்னேற்றத்தை முன்னது பயன்படுத்தினால், முன்னதன் ஆக்க ஆற்றல் பின்னதனினும் உயர்வுடையதாயிருக்கும். ஏனெனில் சமயம் சமூக அடிப்படையாகவே வளரமுடியுமானாலும், அதனினும் தொலை நோக்குடையது. அதுபோலச் சமூகம் அரசியலடிப்படையாகவே வளரமுடியுமானாலும் அரசியல் தாண்டிய நோக்கம் உடையது. மனித இனம் சமயப்படி தாண்டிச் சமூகப்படி அடைந்தபோது, சமயம் சமூக முன்னேற்றத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைவதில் பின்னடைந்தது. இதனால் சமூகம் போதுமான அளவு சமயத்தை வளர்க்கவில்லை. சமயம் சமூகத்தைப் போதுமான அளவு வலுப்படுத்த முடியவில்லை. இது போலவே மனித இனம் சமூகப்படி தாண்டி அரசியற்படி அடைந்தபோது, சமூகம் அரசியலின் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைவதில் பின்னடைந்தது. இதனால் அரசியல் சமூக வாழ்வைப் போதுமான அளவு வளர்க்கவில்லை. சமூகமும் போதுமான அளவு அரசியலை வளப்படுத்தாது நிற்கிறது. தகுதி காலத்துக்குக் காலம், ஊழிக்கு ஊழி வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. வளர்ந்துகொண்டே யிருக்கிறது. தகுதி கொடுமையாகவும் ஆற்றலாகவும் இருந்த காலம் உண்டு. பின் அது அறிவின் பண்பை ஏற்றது. கொடுமையும் ஆற்றலும் மட்டுப்பட்டன; ஆனால் ஒழியவில்லை. ஏனென்றால் அறிவு ஆற்றலுக்கு உதவியாகவும் கொடுமைக்கு உடந்தையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அறிவின் படி கடந்து அழகின் படி அடைந்ததும் கொடுமை கிட்டத்தட்ட அழிவுற்றது. ஆற்றலும் பின்னும் மட்டுப்பட்டது. ஆனால் அழகுணர்ச்சி ஆற்றலை வளர்க்க உதவிற்று. ஆற்றல் சிறுபான்மையாகக் கொடுமைக்கு உதவிற்று. தகுதி அழகு கடந்த அன்பு சார்ந்த பின் இன்றைய சமயங்கள் வற்புறுத்தும் சரிகம நேர்மை ஒழுக்கம் ஆகிய உயர் தத்துவங்கள் எழுந்தன. கொடுமையும் ஆற்றலும் இன்னும் செயலாற்றுகின்றன என்றால், இதற்குரிய காரணம் வேறொன்றுமன்று. சமயம் உண்மைச் சமயமாக உயராமல், சமூகம், அரசியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களை ஏற்பதால், இன்னும் உயர் முன்னேற்றங் களுக்கு உதவியும் தூண்டுதலும் தந்து வழிகாட்டாமல், அவற்றுக்கு ஒரு புறம் பிற்பட்டும், மற்றொரு புறம் அவற்றுக்கு ஆளடிமைப்பட்டும் வருவதேயாகும். தெய்விக அமைதியை உணர்ந்து அதனுடன் இணைந்து நடப்பவர்கள் என்றும் இருந்து வந்துள்ளனர். இன்னும் இருக்கின்றனர். இனியும் இருப்பர். எல்லாத்துறையிலும் உலகின் முன்னேற்றத்துக்கு அவர்கள் பேருதவி செய்பவர் ஆவர். சமயத்துறை நலிந்துவிட்டது, அதற்கு மாறான உலகியல் துறைகள் வளர்ந்து வருகின்றன என்று இன்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது உண்மைச் சமயத்துறை சார்ந்த இவ் அருளாளர் வகையில் உண்மையன்று. நேர்மாறாக, முந்திய எந்தக் காலத்தையும் விட, அறிவியல் ஊழியாகிய இக் காலத்திலேயே தெய்விக அமைதியின் உச்ச உயர்நிலைப் பண்பாகிய அன்பு நெறி மிகுதி செயலாற்றக் தொடங்கியுள்ளது. ஆயினும் அதன் செயலை நாம் சமயத்துறை என்ற குறுகிய பகுதியில் காணமுடியாது. நாகரிகத்தின் எல்லாத்துறைகளிலும் காணலாம். குடியாட்சி, சமதருமம், பகுத்தறிவு ஆகிய எத்தனையோ உயர் கருத்துக்களாக அவ்வுயர்நிலைப் பண்பு நிலவுகிறது. அது அரசியலையும் சமூகத்தையும் பொருளியல் வாழ்வையும் கூட மாற்றிவருகிறது. இவற்றிலெல்லாம் கூறிக்கோளளவு கொள்கை உயராமலிருக்கலாம். கொள்கையளவு செயல் வளராமலிருக்க லாம். செயலும் அருளாளர் உடனடிச் சூழல்கள் தாண்டிப் போதுமான அளவில் விரைந்து பரவிவிடாமல் இருக்கலாம், ஆனால் இயற்கையின் எல்லையற்ற பரப்பளவில் அது பரவாமல் நிற்பதில்லை, ஏனெனில் அருளாளர் உள்ளத்தில் தோன்றிய ஒளி, அனைத்துலகும் பரவியன்றி ஓன்றி கொள்ளப்போவதில்லை. உலகை ஆள்பவர் யார்? உலகை ஆள்பவர் யார்? அரசியல்கள் ஆள்கின்றன என்றுதான் மேலீடாகப் பார்ப்பவர்களுக்குத் தோற்றும். அரசியல் கடந்த பொருளியல் ஆராய்ச்சியாளர் பொருளகங்களே ஆள்கின்றன என்று காண்பர். பொருளியல் இயக்கியன்றி அரசியல் ஆள்வதில்லை. பொருளியல் ஆராய்ச்சி கடந்து சமூகத்தை ஆராய்வோர் சமூகமும் சமூகத்தில் நிலவும் கருத்துக்களுமே ஆள்கின்றன என்று அறிவர். ஆனால் இந்த ஆட்சிகளெல்லாம் இயக்கும் ஆட்சிகளல்ல. மக்கள் தகுதியை, சமூகத் தகுதியை வளர்ப்பவைகளல்ல. புதிய கருத்துக்களை, கருத்தாட்சியை, சமூக அமைப்புப் புரட்சியை உண்டுபண்ணு பவைகளல்ல. உண்மை அருளாளர் - உலகினின்று ஒதுங்கி வாழும் போலி அருளாளர்களல்ல - உலகுடன் உலகாக இயங்கி அவ்வத் துறையின் பண்பை உலகறியாமவே உயர்த்தும் உயர் அருளாளரே இவ்வகையில் உலகை இயக்குபவர்களாவர். உண்மை அருளாளர் கல்வியாசிரியராயிருந்து கல்வி மூலம் மக்கள் அறிவுக் கண்ணைத் திறக்கலாம். மருத்துவராயிருந்து நோய் நீக்கி உடல் நலம் வளர்க்கலாம். சமயத்துறைவராயிருந்து மக்கள் வாழ்க்கைத் தளர்ச்சியகற்றி ஆறுதலும் ஊக்கமும் தரலாம். எந்தத் துறையிலும் அவர்கள் அரும்பண்பு உலகில் அன்பொளி பரப்பி ஒற்றுமை வளர்த்து, உயர்கருத்தும் பண்பும் ஊட்டி வளர்ப்பது உறுதி. அவர்கள் தகுதி மூலம் உலகின் தகுதி வளர்வதும் உறுதி கால எல்லை கடந்து உலகம் நிலைபெற உதவுவமு அத்தகுதியே யாகும். கொடுமை சென்றெட்டும் எல்லை கடந்து ஆற்றல் செல்லும்; ஆற்றல் கடந்து அறிவு செல்லும்; அறிவு கடந்து அழகுப் பண்பு செல்லும்; அது கடந்து அன்புப் பண்பு செயலாற்றும். அன்புப் பண்பு இட எல்லை, கால எல்லை கடந்து செல்லும் தன்மையுடையது. அது சாதி, இனம், நாடு, நகரம் ஆகிய எல்லைகளைத் தாண்டி உலகை ஓர் உலகாக்க வல்லது. ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை எதிர்ப்பவர்கள் கூறும் ஒரு வாதம் இங்கே கவனிக்கத் தக்கது. ‘தகுதியற்றவர் அனைவரையும் அழித்துத் தகுதியுடையவர் முன்னேறுவர். தகுதியுடைய வரிடையேயும் தகுதிமிக்கவர் தகுதி நிறைந்தவரை அழித்து வாழ்வர். இங்ஙனம் இனத்தின் பெரும்பகுதி அழியும். பிழைத்து வாழும் சிறுபான்மையோரும் இனப்பற்று, ஈவிரக்கம் அற்றவராயிருப்பர்!’ தகுதி: இன ஆக்கப்பண்பு இவ்வாதம் உண்மைத் தகுதி பற்றிய வாதம் அன்று. ஏனெனில் உண்மைக் தகுதி அழிப்பதில்லை. தகாகவர்களை அது தகுதியுடையவர் களாக்கவே முயலும். மேலும் தாமாக அழியும் தகுதியற்றவர்களைகூட இயற்கையினால் அழிவர். அவ்வழிவும் உடனடியாக நிகழ்வதில்லை. தாம் வாழ்ந்தும் தம் பண்பின் மரபே அழியாப் பெறுவர். தகுதியற்றவர் வாழ்வது போலவும் தகுதியுடையவர் தாழ்வது போலவும் காணப்படுவது இதனாலேயே. உண்மைத் தகுதியுடையவர் அன்பும் பொதுநலர் பற்றும் உடையவர். அவர்கள் தாம் அழிந்தாலும் தம் மரபையும் இனத்தையும் வளர்ப்பவர்கள். தகுதி யற்றவர்கள் பெரும்பாலும் தன்னல வழியுடைய வராதவதலால், தாம் சிறிதுபோது வாழலாம். அவர்கள் பண்பின் மரவும் இனமரபும் தான் அழிவுறும். ஆனால் பண்பும் இனமும் இதனால் அழியாது. ஏனென்றால் தகுதியுடையவர் ஓரினத்தில் ஒரு சிலர் இருப்பினும் அவ்வினம் அழியாமல் காக்கப்பெறும்1! அன்புநெறியின் வெற்றிக்கு ஒருசில அருளாளரே போதும். தன்னல நெறிக்கோ, இனத்தின் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பேரும் அதனைச் சார்ந்ததாலும், தோல்வியே கிட்டும். அன்புநெறியின் இந்த வெற்றி ஆற்றலுக்குத் தனிக் காரணம் உண்டு. தன்னல நெறி பிரிக்கிறது. அன்புநெறி இணைக்கிறது. தன்னலநெறியில் உழைப்பவனுக்கு அவனைத் தவிர யாரும் உதவமாட்டார். அன்புநெறியின் வெற்றியில் முழுநிறை அன்புநெறியாளரான அருளாளர் மட்டுமன்றி, தன்னல நெறியாளர்கூடத் தம்மையறியாமல் ஈடுபடுகின்றனர். ஏனென்றால் அன்பு நெறி இயற்கைநெறி; இயற்கையில் உள்ளூர நின்று இயக்கும் தெய்விக அமைதியின் பண்பு வாய்ந்தநெறி. தீமையே செய்தொழுகுபவர் என்று இழித்துரைக்கப்படும் பலர் நல்லாரைக் கண்டதும் தம் தீமையை ஒதுக்கி அவரை மதித்து ஆதரிப்பதை நாம் கண்டிருப் பதில்லையா? அவர்களைத் தீயவர் என்று ஒதுக்கிய போலி நல்லார் வியக்கும் வண்ணம் அவர்கள் நன்மை கண்டு விதிர்விதிர்க்கின்றனர். இவ்விசித்திர நிலையின் காரணம் என்ன? உலகில் தீயவர் என்றும்; கொலைகாரர், வஞ்சகர், கொடியவர், ஐயபெரும்பழியாளர் என்றும் ஒதுக்கப்படுபவர்கள் தீயவருள்ளும் கடையவராக மதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தீயவழியினராயினும் தீயவருள் கடையரல்லர். அவர்கள் நன்மையை அறியாமல் அல்லது நன்மையில் நம்பிக்கையில்லாமல் கெட்டழிப்பவர்கயே. நல்லாரைக் கண்டவுடன் அவர்கள் தம் தீமைக்கு வெட்கி அத்தீமையை அவர்கள்பால் செல்லவொட்டாது ஒதுக்குவதன் காரணம் அவர்கள் உள்ளத்தின் உள்ளாழத்தில் நன்மையார்வம் ஒழிந்து விடாமல் நிலவுவதேயாகும். நன்மையை உணர்ந்தும் தன்னலத்தால் தீமையை மறைத்துச் செய்யும் பல ‘அரைகுறை நல்லாரை’ விட அவர்கள் தீயவரல்லர். தீயவரில் கடையவர் போலி நல்லாராகத் திரிபவர், தன்னலத்தால் நயவஞ்சகப் போர்வை போர்த்தி நடப்பவரேயன்றிப் பட்டாங்கமாகத் தீமை செய்பவர் அல்லர் என்னலாம். நன்மையின் வலிமை இருளின் செறிவினுள்ளும் ஒளி உண்டு. அதுபோலத் தீமையின் கருவினுள்ளும் நன்மையின் தடம் கட்டாயம் உண்டு. ஏனென்றால் மனிதன் இயல்பு தீமையன்று; நன்மையே. தன்னலம்கூட அறியாமையால்தான் குறுகிய தன்னலமாகிறது. அறிவு பெறுந்தோறும் பயனுடைய தன்னலம் பொதுநலமே என்ற உணர்வு ஏற்படுகிறது. இயல்பாக நாணயமாயிருப்பவர் என்பவர் அதுபற்றிய அறிவில் உறுதி பெற்றவரேயன்றி வேறல்லர். பலர் நாணயமாயிருப்பதன் ஆதயமறிந்து நாணயமாயிருக்கப் பழகுவர். தீயவர் நல்லவராக நடிக்கும் நடிப்பை நாம் பெரிதும் காண்கிறோம். நல்லவர் தீயவராக நடிப்பதை அவ்வளவாகப் பார்க்கமுடியாது. இதற்குக் காரணம் நன்மை நடிப்புக்கூடப் பயனுடையது என்பதை மனித உள்ளம் இயல்பாக அறிந் திருப்பதே என்னலாம். தீமை நடிப்புக்குக் கூடப் பயனுடையது என்பதை மனித உள்ளம் இயல்பாக அறிந்திருப்பதே என்னலாம். தீமை நடிப்புக்குக் கூட விரும்பத்தக்கதல்ல என்பதை அறியாதவர் இருத்தல் அரிது. மனித நாகரிகம் வளர்ச்சியடைந்தேறும், கொடுமை, வஞ்சகம், பகைமை, வீம்பு, போட்டி மனப்பான்மை, செருக்கு, அடக்குமுறை ஆகியவை படிப்படியாக ஒழிவது கண்கூடு. ஆங்காங்கே அவை நடை பெற்றாலும் அவை தனிமனிதன் ஆற்றலுக்கும் மடமைக்கும்தான் அறிகுறி. ஏனென்றால் அன்புக்கு மனமார்ந்த ஒத்துழைப்பு அவற்றுக்கு இருக்கமுடியாது. தனிமனிதன் ஆற்றல் பொதுமனித ஆற்றலுக்குமுன் தகர்வது உறுதி. தகரும்போது அவை அழியாமலிரா. தனிமனிதர்களிலும் சரி, சமூகங்களிலும் சரி, தன்னாதிக்கம் விரும்பிய முரட்டு வகுப்பினர் பண்டை நாளிலேயே அழிந்துவிட்டனர். தன்னலம் நாடியவரும் பிற்பட்டு விட்டனர். உலகம் இன்றும் அறிவுடன் செயலாற்றி அமைதி நாடுபவரின் உலகமாய் மாறி வருகிறது. இதுபோல வருங்காலத்தில் தன்னலமிக்க நாடுகள், ஆதிக்க ஆட்சி, ஆதிக்கப்போர் விரும்பும் நாடுகள், தன்குழு நலன், தன் ஆதாயம் ஆகியவற்றுக்கு ஆட்படும் நாடுகள் அழிவது உறுதி. தனக்குள் ஒற்றுமை பேணி அன்பாட்சி கண்டு, தன் எல்லை கடந்து உலகிலும் அது ஏற்படப் பாடுபடும் நாடுகளே வருங்காலத்தில் நிலைபெற்று வாழ்வன ஆகும். அன்புடையர்க்கு உரியது உலகம். வருங்கால உலகம் அவர்கள் அன்பாட்சி நோக்கி செல்கிறது. அன்பிலாதவர் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்தாலும், எதிர்கால உலகிள் தொடர்பிலிருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தம் மரபை நிகழ்காலத்துடன் அல்லது அணிமை எதிர்காலத்துடன் தறித்துக் கொள்கிறார்கள். 4. தீமையில் நன்மை ‘எல்லா நன்மைக்கே’ என்ற மூதுரையை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். கவிஞர் போப் மனிதனைப் பற்றிய தம் உரை விளக்கத்தில் “இருப்பனயாவும் ஈடிலாநேர்மையே” என்றும், கவிஞர் பிரௌனிங், “வாளிடை இவர்ந்தனன் எந்தை, மன்னுறம் நானிலம் இவர்ந்தது நேர்மை எங்கணும்” என்றும் கட்டுரைத்திருக்கின்றனர். உலகப்போக்கின் வழுவிலா நிறை நேர்மையில் இவர்கள் எவரும் எள்ளளவும் பற்றுத் தளரவில்லை. அதே சமயம் உலகில் யாவும் நேர்மை என்று வாளா ஏற்பது எங்ஙனம்? போரும் பஞ்சமும் நல்லவை, நேர்மை யானவை என்று ஒப்புக்கொள்ள முடியுமா? நோயும் வறுமையும் நலந்தருபவையா? இவை உலகிலில்லாதவை என்றோ, நேர்மையானதென்றோ கூறமுடியாது. மக்களிடையே தன்னலமும் பலவகையான பழிச் செயல்களும் நிலவுகின்றன. குடியும் கொடுமைகளும் கூத்தாடு கின்றன. குற்றங்களும் தகாச் செயல்களும் அட்டூழியங் களும் பல உருவில் நடமாடுகின்றன. இவை யாவும் நேர்மையின் ஆட்சி யாகுமா? நீரிலும் நிலத்திலும் வானிலும் ஏற்படும் இடர்கள் எத்தனை? இயற்கையின் கோளாறுகளிடையே ஆயிரப்பதினா யிரக்கணக்கான மக்கள், தீங்கிழையாச் சேயிழைமார், சூதறியா இளங்குதலையர் அழிகின்றனரே! இவற்றை எந்த நேர்மையில், நன்மையில் சேர்த்துவிடுவது? இவற்றுக்கு ஒரு விளக்கம் கட்டாயம் வேண்டும்! நேர்மையுடையவை மக்களுக்குப் பொதுவாகவேனும், சிறப்பாகவேனும் நலந்தரவேண்டும் அல்லது இன்பமளிக்க வேண்டும். ஆனால் மேற் கூறியவற்றுள் எதுவும் இன்பந்தருபவை என்று யாரும் கூறமுடியாது. “இருப்பன யாவும் ஈடிலா நேர்மை”என்று வேதாந்தம் பேசுபவர்கள்கூட இவற்றை வரவேற்று மகிழமாட்டார்கள்! அவற்றைத் தீமை என்று ஒத்துக்கொள்வர். இருப்பவை யாவும் நேர்மை என்றால், “இத் தீமைகள் இருப்பவை நிகழ்பவைதானே; அவை நேர்மையாவது எவ்வாறு?” என்ற கேள்வி எழுவது உறுதி. துன்பந்தரும் இத்தீமைகள் நேர்மையானவையல்ல என்றுதான் எவரும் கூறுவர். இருப்பவை யாவும் நேர்மையே என்ற கொள்கையை ஏற்பவர், உலகப் போக்கு முழுவதும் நேர்மையடிப்படையானதே என்று கொள்பவர் “இத்தீமைகள் நேர்மையா? நேர்மையானால் எவ்வாறு நேர்மை?” என்ற வினாக்களுக்கு விளக்கந்தந்து விடுவிக்க வேண்டும். இன்பம் வேறு, நலம் வேறு இன்பந்தருபவை மட்டுமே நேர்மையானவையாய் இருக்கக்கூடு மென்றால், இத்தீமைகளை யாரும் நேர்மை என்று கூறமாட்டார், கூறவும் முடியாது. ஆனால் இன்பந்தராதவையும் நேர்மையாக இருக்கக்கூடும். அவை நலந் தருபவையானால்! இம் முறையிலேயே தீமையாக, அதாவது துன்பந் தருபவையாகத் தோற்றும் அந்நிகழ்ச்சிகளையும் நேர்மையானவை என்று காட்டலாம். நல்லோர்கூட இவற்றை விலக்க விரும்புவது உண்மையே. அவை துன்பந்தருபவை என்பதும் உண்மையே. ஆனல் அவை தரும் துன்பம் தற்காலிகமாக மிகப் பெரிதாக, மிகக் கொடிதாகத் தோற்றினாலும், அத்துன்பம் நிலையானதன்று, தற்காலிகமானதே. தற்காலிகத் துன்பந்தருபவை தற்காலிகத் தீமைகள் மட்டுமே; நிலையான தீமைகளல்ல. அவை நிலையான நலந்தசக்கூடு மானால், அவை தீமைகள் போலக் தோற்றினாலும் அவற்றை நாம் தற்காலிகமாகத் தீமைகள் போல தோற்றும் உண்மையான நலங்கள் என்றே கொள்வோம். நாம் உலகில் நன்தை என்பதும் தீமை என்பதும் உண்மையில் தற்காலிக நன்மைகளையும் தீமைகளையுமே. நிலையாக நன்மைகள் மட்டுமே உண்டு. தீமைகள் கிடையாது. எனவேதான் பஞ்சம், வறுமை, நோய் முதலியவை தீமைகள் என்பதற்கும், எல்லாம் நன்மையே உண்மைக்கும் எத்தகைய உள்ளார்ந்த முரண்பாடும் கிடையாது. பஞ்சம், வறுமை ஆகியவை துன்பந்தருவதால் தீமையென்று மக்களும், நீடித்த நலமே இறுதியில் விளைவிப்பதால் நலமென்று ஆழ்ந்தகன்ற அனுபவ அறிவுடையாரும் கொள்வர். தீமைகள் என்று கருதப்படுபவை - தற்காலிகத் துன்பந்தருபவை என்று நாம் குறிப்பிட்டவை - உண்மையுல் நீடித்த நலம் தருவது எவ்வாறு என்பதை இனிக் காண்போம். பொதுவாக இன்பம், துன்பம் என்று பாகுபடுத்தும்போது, துன்பத்தில் ஒரு பெரும் பகுதி உடலின் நோவே யாகும். இதை நாம் விரும்புவதில்லை. விலக்க எண்ணுகிறோம். அதனாலேயே அதைத் துன்பம் என்கிறோம். ஆயினும் உடலை எண்ணிப் பார்க்கும் போதுதான் இது துன்பம். உயிரை எண்ணிப் பார்க்கும்போது துன்பம் அல்லது தீங்கு என்று கூறுவதற்கில்லை. ஏனென்றால் அது உடலின் கோளாறுகள் பற்றி உயிருக்கு எச்சரிக்கை தருகிறது. உடலைப் பேனி நீட்டிப்பதற்காகவே நோவு இந்த எச்சரிக்கை தருவதால், அது நீடித்த நலம் பயக்கும் நன்மை ஆகும். உடல் நோவைப் போலவே உளநோவு அல்லது மனவேதனையும் வெளிப்பார்வைக்குத்தான் துன்பமாகத் தோற்றுகின்றது. உடல்நோவு உடல் நலம் பற்றி எச்சரித்து உயிர் நீட்டிப்புக்கு உதவுவது போல, மன வேதனையும் மனநலம் பற்றி எச்சரித்து அறியாமை அகற்றி அறிவு கொளுத்த உதவுகிறது. மனவேதனைகள் தீய செயல்கள் அல்லது தீய சொற்கள் அல்லது தீயக் கருத்துக்களால் வருபவை. ஆகவே மன மொழி மெய் ஆகிய முத்திற வழுக்கள் பற்றியும் அவை நமக்கு நண்பன்போல எச்சரிக்கை தருகின்றன. அவற்றை நல்ல வீர நண்பரின் இடித்துரையாகக் கொள்பவர்களுக்கு அவை உண்மையில் தீமையல்ல, துன்பந் தருபவையுமல்ல. நீடித்த இன்பத்துக்கும் அதற்கு ஆதாரமான நல் அறிவுக்கும் வழிகாட்டும் சின்னங்களாகவே அவை அமைகின்றன. விவிலிய நூலுரைகள்: இஸாயா, ஏமாஸ் “நான் ஒளியை உருவாக்குகிறேன். இருளை உண்டுபண்ணு நான் அமைதியை உருவாக்குகிறேன். ஆனால் தீமையியும் சேர்ந்து இயற்றுகின்றேன். இத்தனையும் செய்யும் இறைவன் நானே” என்ற விவிலிய நூலறிவர் இஸாயாவின் மெய்யுரையின் நுண்பொருள் இதுவே. இதே முறையில் அறிவர் ஏமாஸும் கருத்துரைத் துள்ளார். மக்கள் வாழும் ஒரு நகரில் ‘தீமை ஏற்பட்டால், அதனை இறைவனைத் தவிர வேறு யார் ஏற்படுத்தி இருக்கமுடியும்?’ என்று அவர் கேட்கிறார்! விவிலிய நூலின் பழைய ஏற்பாடு முழுவதும் தீமைக்கும் நேர்மைக்கும் உள்ள தொடர்பு பற்றிய விளக்கமாகவே உள்ளது. தீமை நிறைநேர்மையிலேயே வேரூன்றியிருப்பது. நன்மையை போலவே அது நேர்மையின் ஒரு சிறகாகும். நேர்மையின் அமைதியைப் பின்பற்றுவதால் நன்மை ஏற்படுவது போலவே அதை மீறினால், தீமை ஏற்படுகிறது. பழைய அறிவர்களுக்கு இம் மெய்மை யிலிருந்த உறுதி மிகப் பெரியது. ஏனெனில் அவர்கள் அகத் தீமைகளை மட்டுமன்றி, அறத்தீமைகளாகிய பெரு வெள்ளம், புயல், நிலநடுக்கம், வறட்சி, பஞ்சம் ஆகியவற்றைக் கூடப் புறத் தீமைகளின் பயனாகக் கொள்ளாமல் அகத் தீமைகளின் விளைவுகளாகக் கருதினர். மனித இனம் நேர்மையின் அமைதி களாகிய வரம்புகள் கடந்து அழிமதி உடையவர்களா யிருந்த தனாலேயே இத் தீமைகள் ஏற்பட்டன என்பது அவர்கள் கோட்பாடு. எல்லாக் தீமைகளும் தெய்விக அமைதியை மனிதன் மீறியதால் வருபவையே. மேலீடாகப் பார்ப்பதற்கு இது அணிந்துரையாகவே மிகையுரையாகவோதான் தோற்றக்கூடும். ஆனால் இவை அறியாமை, ஆழ்ந்த சிந்தனையின்மை ஆகியவற்றின் தவறு மட்டுமே. மனித உள்ளத்தின் அன்மை, மனித வாழ்வின் இயல்பு ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்து ஆராய்பவர் இம் மெய்மைகளின் உறுதிப்பாட்டை நன்கு உணர்வர். சிறப்பாகக் கடுந்துயரும் கொடும்பழிகளும் உணர்ச்சிப் புயல்களில்லாத விடங்களில், உள்ளமைதி நிலவும் காலங்களில் இவற்றின் தடமும் காணப்படாது. ‘ஊழும் உயர்மதியும்’ என்ற தம் நூலில் இயலறிவர் மேட்டர்லிங்க் கூறுவதாவது: “ஒரு தடவை ஊழை எதிர்த்து வென்றவனிடம் அதன் வலுக்குறைந்து விடுகிறது. ஒரு தடவைக்கு மேல் எதிர்த்து வென்ற பின் அங்ஙனம் வென்ற உள்ளத்தை அணுகவே ஊழ் அஞ்சுகிறது. அத்தகைய ஓர் உள்ளம் இருக்கும் எல்லையில்கூட, சில சமூகப் பெருந்தீமைகளை அனுப்ப ஊழ் பெரிதும் தயங்காதிராது........ “அறிவன் ஒருவன் செயலற்று அமைதியுடன் இருந்தால் போதும். ஊழின் அழிமதி அவனைச் சுற்றிலும் கட்டுப்பட்டு நின்று விடுகிறது. இதற்கு நாம் கண்கூடான ஒரு சான்று காணலாம். உலகின் மிகப்பெரிய அழிமதிகள் எவற்றிலும் நாம் ஓர் உண்மையான அறிவன் சிக்கியுள்ளதைக் காண்பதில்லை. ஏனெனில் அங்ஙனம் நேர்ந்தால்கூட, குருதி சிந்துமுன், ஏன், கண்ணீர் சிந்துமுன், அவ் அறிவனால் அந்நிகழ்ச்சியை நிறுத்தி விடமுடியும். மேலும் அறிவனுக்கு அறிவன் எதிராக இயங்குவதை நாம் எங்கும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, அதுமட்டுமோ? ஓர் அறிவனைக் சுற்றிலும் எங்காவது எவ்வகைப் போராட்டமாவது இருந்ததாக நமக்குக் தெரியவரவில்லை. “இதில் வியப்புக்கிடமில்லை. உள்ளத்தின் உண்மையை உணர மனமார முயலும் ஒருவனைச் சூழ்ந்து கடுந்துயர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெறமுடியும்?..... கவிஞரும் அருளாட்சி அறிவரும் “கடுந்துயர் நாடகக் கவிஞர்கள் தம் நாடகத்திரை மீது ஓர் அறிவனை ஒருபோதும் வரவிடுவதில்லை. வரவிட்டாலும் அவனை ஒரு கணம் நின்று போகும்படி செய்துவிடுவர். உயர் உள்ளங்களைக் காணவே துயர் நாடகக் கவிஞர் அஞ்சிகின்றனர். ஏனென்றால் அவரை அண்டவே அந்நிகழ்ச்சிகள் அஞ்சும். கவிஞர் கற்பனையில் கூட நாடகம் நடைபெறாது. நாடகத்தில் ஓர் அறிவன் வந்தால், நாடகத்தின் வீரத் தலைவன் வீரத்தலைமை யிலுள்ள சோடை வெளிப்பட்டுவிடும். உண்மை வீரத் தலைவன் யார் என்பதும் தெரிந்துவிடும். அதுமட்டுமன்று. நாடகம் நாடகமாயிராது; போராட்டமற்ற அமைதியாய் விடும் உணர்ச்சி கொப்பளிக்கும் புயலாயிராது. நல்லறிவமைதியாய் விடும்.” ஷேக்ஸ்பியர் போன்ற நாடகக் கவிஞர்கள் பலவகைப் பண்புடைய மனிதரின் ஓவியங்களையும் உருவாக்கியும், நல்லறிவன் ஒருவன் ™ஓவியத்தைக் கூட தீட்டாததற்குக் காரணம் இதுவே. அவர்கள் காட்ட எண்ணிய நாடக் நிகழ்ச்சிகளுக்குரிய காரணங்கயையே அவர்கள் நாட வேண்டியவர்களாயினர். அறிவர் உள்ளம் அதற்கு நேர்மாறான அமைதியன் மூலவிதை களைக் தன்னகம் கொண்டிருப்பது. அவர்கள் ஒளி மட்டுமன்றி, அவர்கள் நிழல் கூட நாடக நிகழ்ச்சிகளைத் தடுத்திருக்கும். உலகின் காரணகாரிய நேர்மைத் தொடர்பை அறிந்து, அதன் மூலம் முக்கால முணர்ந்தவராகக் கருதப்படும் அறிவர் கண்ட முழுமெய்மை இதுவே. தனிமனிதனும் சரி, மனித இனமும் சரி, தத்தம் நன்மை தீமைகளுக்குத் தாமே பொறுப்புடையவர். அவர்கள் தன்னலமாகிய விதையிலிருந்து அறியாமையாகிய பயிரும் பகைமை பொறாமை போன்ற உணர்ச்சி எழுச்சிகளாகிய மலர்ச்சியும், துன்பங்களாகிய விளைவும் ஏற்படுகின்றன. பேரவா, தன்னடக்கமின்மை ஆகியவை இவ்வறியாமைப் பயிருக்கு நீரும் உரமும் ஆகின்றன. இன்பநாட்டம் என்னும் போலிக் கதிரொளி இப் பண்ணையை வளர்க்கிறது. குடி, நோய், வறுமை, பஞ்சம் ஆகியவை இப் பண்ணையின் வெற்றிகரமான அறுவடைப் பருவங்கள். இத்தீமைப் பயிர் விளைவிப்பவர்கள் தீமைகளை விரும்புவதில்லை யாயினும், தீமையின் விதைகளை நன்மைகளின் விதைகளென்றும், தீமையின் உரத்தை நன்மையின் உரமென்றும் தேடி வளர்த்துத் துயருறுகின்றனர். தனிமனிதர் தீங்குகள் அவர்களைக் கடந்து, அவர்கள் குடும்ப எல்லையிலும் சமூக எல்லையிலும் பரந்து அழிவு தருவது போலவே, நாட்டின் தீங்குகள், மனித இனத்தின் தீங்குகள் நாட்டு எல்லை கடந்தும் மனித இன எல்லை கடந்தும் தீமை எல்லையை விரிவுபடுத்துகின்றன. அகத்தீமைகள் புற;த தீமைகளாவதன் காரணம் இதுவே. அவை பரவுவதைத் தடுத்து நிறுத்தத்தக்க ஆற்றல் நல்ல கருத்துக்களுக்கு, நல்லறிவுக்கு மட்டுமே உண்டு. அது இல்லாத இடத்தில் ஒவ்வொரு தனிமனிதர் தீமையும் அடுத்த தனிமனிதரையும் சமூகத்தையும் தாக்கும். ஒவ்வொரு நாட்டின் தீமையும் நாடுகடந்து அயல்நாடுகளைத் தாக்கும். மனித இனத்தின் தீங்குகள் அவர்கள் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறையைத் தாக்கும். நல்லார் சூழலால்-சிறப்பாக அறிவுடை நல்லாராகிய அறிவர் சூழலால் மட்டுமே இத்தீமையின் அலை வலுவிழந்து படிப்படியாக நலியத் தொடங்கும். இயற்கை தீமைகள்: மனிதன் பொறுப்பு வறுமை, நோய், பஞ்சம் ஆகிய சமூகத் தீமைகள் தனி மனிதர் உள்ளப் பண்பாட்டின் குறையினால் வரக்கூடும் என்பதைப் பலர் ஒப்புக் கொள்வர். ஏனென்றால் அவை மனிதர் அறியாமை, சோம்பல், துப்புரவின்மை, தன்னலப்போட்டி, பகைமை, போர் ஆகியவற்றால் நேரக்கூடியவை. ஆனால் புயல், நிலநடுக்கம், எரிமலை, அழற்சி ஆகிய இயற்கைத் தீமைகள் மனிதர் உளப்பாங்கின் குறையால் ஏற்படக் கூடியவை என்பதை அத்தகையவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பார்கள். மனிதர் குறைகள் மனித சமூகத் தீங்குகளைக் கொண்டுவருதல் போல இயற்கையின் குறையே இயற்கையின் தீங்குகளுக்குக் காரணமாக வேண்டும் என்று கூட அவர்கள் எளிதில் வாதிக்கலாம். ‘உயிர்ப்பும் அறிவுணர்வும் அற்ற உயிரிலா இயற்கை மீது ஒழுக்க விதிகளைக் சுமத்துவது என்பது ஒன்று கவிஞர்கள் கற்பனையாயிருக்க வேண்டும்; அல்லது காதலத், பக்தர், பித்தர் மயக்கங்களாயிருக்க வேண்டும்!’ என்றும் அவர்கள் முடிவுகட்டிக் கூறுவர். ‘இயற்கையின் அமைதி வேறு, தெய்விக அமைதி வேறு’ என்று பழைய சமயவாதிகள் கருதியதுபோலவே இக் கால உலகியல்வாதிகள் பலரும் ‘இயற்கை அமைதி வேறு, மனித வாழ்வின் அமைதி வேறு’ என்று கருதுகின்றனர். சற்று ஆழ்ந்த மனமமைந்து ஆராய்ந்தாலன்றி எவரும் இம்முடிவையே எளிதில் ஏற்றுக்கொள்ளவும் கூடும். மனிதர் குறைகள் மனிதரையே தாக்கும் என்பது உண்மையானால் இயற்கையின் குறை இயற்கையை மட்டுமே தாக்கவேண்டும். தனி மனித வாழ்வைத் தாக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அது மனிதவாழ்வை ஒரு சிறிதல்ல, முற்றிலும் தாக்குகிறது. வெயிலும் மழையும் காற்றும் இயற்கையின் ஆற்றல்கள். அவை மட்டாக நின்று மனித வாழ்வை மட்டுமன்றி உயிரின வாழ்வு முழுவதையுமே வளர்க்கின்றன. ஆனால் எவையேனும் மட்டுமீறினால், அல்லது சிறிது தடம்பிறழ்ந்தால், உயிர் வாழ்வுக்கும் மனித வாழ்வுக்கும் பேரழிவு நேர்வது உறுதி. இயற்கையில் மிகச்சிறு மாறுபாடும் மனித வாழ்வைப் பாதிக்கும்போது, மனிதவாழ்வு இயற்கையைப் பாதிக்காது என்பது எவ்வாறு? இயற்கை காடு வளர்த்தது. மனிதன் அதை நாடாக்கி, நகராக்கி, தோட்டம், வயல், சோலைவனங்கள் ஆக்கி விடவில்லையா? இயற்கை கடலும் ஆறும் உடையது. மனிதன் கேணி, குளம், ஏரி, வாய்க்கால், அணைக்கட்டுத் தேக்கங்கள் ஆக்கவில்லையா? இயற்கை செடிகொடி மரங்கள், விலங்கு பறவைகளை அளித்தது. மனிதன் காட்டுச் செடியை நாட்டுச் செடியாக்கிக் காட்டுமலரை ஒய்யார வனமல்லியாகவும், காட்டுக்காயை இனிய கிச்சிலிப்பழமாகவும், காட்டரிசியை நெற்பயிராகவும் காட்டுக் கட்டையைக் கரும்பாகவும் மாற்றவில்லையா? காட்டில் திரியும் ஓநாய் வகையை நாட்டு நாயாகவும், காட்டுக் குதிரையை அழகும் பயனும் உடைய அரபிக்குதிரை யாகவும், காட்டு மாட்டையும் எருமையையும் ஆட்டையும் நாட்டின் கால்நடைகளாகவும் பால்தரும் வீட்டு நண்பர்களாகவும் ஆக்கவில்லையா? இயற்கை தரும் அரிசியும் கோதுமையும் காய்கறியும் பிறவும், சோறு சூட்டப்பம் கறிவகைகள் ஆகவில்லையா? இயற்கையை மனிதன் தனக்கேற்றபடி மாற்றியமைக்க வில்லை என்று பழங்காலபழங்கால மனிதர் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், சூயஸ் நில இடுக்கையும் பனாமா நில இடுக்கையும் கடல் கால்வாய்களாக்கி வானில் பறந்து, நிலத்தின் வயிறகழ்ந்து அதன் கருவிலிருந்து தங்கம் வெள்ளி நிலக்கரி கல்லெண்ணெய் போன்ற செல்வங்களை வெளிக்கொணரும் தற்கால மனிதர் கட்டாயம் கூறமுடியாது! இன்னும் சில காலம் சென்றால் சகாராப் பாலைவனத்தை மனிதன் சோலைவன மாக்கலாம்; வட, தென் துருவப் பாலைவனத்தை மனிதன் தொழில் கூடங்களாக்கலாம். இயற்கைதான் மனித வாழ்வைப் பாதிக்க முடியும். மனிதன் இயற்கையைப் பாதிக்க முடியாது என்ற கூற்றை அறிவு விழிப்புடன் எவரும் கூறமாட்டார்கள்! ஆயினும் மனிதன் செயல்கள் இயற்கையுடன் போட்டி யிட்டுப் புயலை, நிலநடுக்கத்தை, வெள்ளத்தை, காட்டுத்தீயை, மலைச்சரிவை இன்னும் நெடுநாள் சென்று வருங்காலத்தில்கூட உண்டுபண்ணமுடியாது. கடல் இடப்பெயர்வை உண்டுபண்ண முடியாது. இவை மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை என்பது மட்டுமல்ல; இவை என்றுமுள்ளவை. மனிதன் இயற்கையமைதி கண்டு பயன்படுத்தத் தொடங்கியதற்கு முன்பே உள்ளவை. இவற்றை மனிதன் செயலென்று எப்படிக் கூறமுடியும்? அதுவும் அவன் புறச்செயல் அன்று, மனத்தின் செயல் அன்று; அவன் ஒழுக்கப் பண்பின் விளைவு என்று எப்படிக் கூறமுடியும்? இயற்கை கடந்த மனிதனின் அழிமதிகள் இக் கேள்விகள் பொருளற்ற கேள்விகளல்ல. ஆனால் கேள்வி கேட்கும்போதே கேட்பவர் மெய்ம்மையைத் தவறாகப் பொருள்கொண்டு விடுகிறார். மனிதன் செயலால், பண்பால் புயல் முதலிய இயற்கை இடர்கள் ஏற்படும் என்று குறிக்கும்போது நாம் புயல் முதலிய நிகழ்ச்சிகளுக்குக் காரணமே மனிதன்தான், இயற்கைக் காரணங்களாலேயே நடைபெறுகின்றன வாயினும், அவை அவனைப் பாதிப்பதற்கு அவனே பெரிதும் காரணம் என்று தான் நாம் குறிப்பிடுகிறோம். முதலாவதாக அவன் இயற்கைக் காரணங்களையே மாற்றியமைக்கலாம்; அல்லது இயற்கை நிகழ்ச்சிகளின் விளைவுகளைத் தவிர்க்கலாம்; மட்டுப்படுத்தலாம். மூன்றாவதாக அவற்றைத் தன் விருப்பத்துக்கேற்ற வகையில் வளைத்துப் பயன்படுத்தலாம். இம்மூன்று வகைகளால் தேவைப்பட்டபோது, தேவைப்பட்ட மாறுதல்களை மனிதனால் செய்ய இயலும். இவ்வகையில் அவன் இயற்கைக் காரணங்களைக் கடந்து அவற்றின் நிகழ்ச்சிக் காரணம் ஆகிறான். இயற்கை நிகழ்ச்சிகளால் வரும் இடர்கள் மனிதன் செயலால் மனிதனைப் பாதிக்கவோ பாதிக்காதிருக்கவோ முடியும் என்பதை அனுபவ வகையில் காணலாம். பெருநகரங்களில் வாரந்தோறும் - சில சமயம் நாள்தோறும் - வண்டிகளின் மோதல்களால் உயிரழிவும் உறுப்பழிவும் பொருளழிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்கிறோம்; கேட்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாகரிக நாட்டு அரசியலார் இவற்றைத் தீர உசாவி ஆராய்ந்து அவற்றின் மூல காரணங்களை விலக்க அல்லது மட்டுப்படுத்த, விளைவுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க வழி காண்கின்றனர். போக்குவரவுப் பாதைகளின் நெருக்கடிகளைக் குறைக்கப் பாதைகளைப் பெருக்கல், அகலமாக்கல், ஊர்திகளுக்கு விதிகள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் அமைத்தல், ஊர்தியோட்டிகளின் தகுதியை உயர்த்தல், எச்சரிக்கைகளை மிகுதியாக்கல், நடப்பவர் களுக்குரிய விதிகள் அமைத்தல், அறிவுரை எச்சரிக்கை தருதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் இடர்கள் குறைகின்றன. தற்செயல் இடர்கள் கூட இங்ஙனம் தற்செயல் இடர்கள் அல்ல, இயல்பாக நடைபெறுகிற, ஆயினும் விலக்க முடியாத நிகழ்ச்சிகள் அல்லது தீங்குகளே என்று அறிகிறோம். அரசியலார் முயற்சியினால் இத்தீங்குகள் குறைய மட்டுமே வழி ஏற்படுகிறது. அரசியலார் பொறுப்பை முழுதும் ஊர்தி வலவரும் பொது மக்களும் பகிர்ந்து கொண்டால் தீங்குகளைக் கிட்டதட்ட முற்றிலும் விலக்கமுடியா தென்றில்லை. இவ்விடர்கள் இயல்பானவை அல்லது தற்செயலானவை என்று மேலீடாகத் தோற்றுவதற்குக் காரணம் அது ஒருவர் இருவர் செயலால் நேர்பவை அல்ல, பலர் செயலால் நேர்பவை என்பதே. சிலசமயம் இவை பலநாளைய கோளாறுகள், குறைகள் காரணமாகவும், பல தலைமுறைக் கோளாறுகள் காரணமாகவும் நிகழலாம். எடுத்துக்காட்டாக, அரசியலார் நீண்டகாலமாக வளர்ந்து வரும் போக்குவரவில் கவனம் செலுத்தாது. பாதைகளைச் சீர்குலைய விட்டிருக்கலாம்! ஊர்தியின் உடைமையாளர் அதன் பகுதிகளை நீண்டநாள் தேயவிட்டு தேய்மானத்தைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கக் கூடும். ஊர்திவலவன் குறிப்பிட்ட நாளிலோ அல்லது வழக்கமாகவோ குடிப்பவனாக இருக்கலாம்! அவன் குடும்பவாழ்வில் அவன் மனைவி குறிப்பிட்ட நாளிலோ அல்லது வழக்கமாகவோ சண்டையிட்டுப் பூசல் விளைத்து வந்திருக்கக் கூடும். ஒருவேளை ஆட்சி காரணமாகத் தொழிலாளர் வகுப்பிலோ, சமூகங் காரணமாக அல்லது அவன் தனிப்பட்ட பிழை காரணமாக அவன் குடுத்பத்திலோ மீளா வறுமை தாண்டவமாடலாம். இத்தனை காரணங்களாலும் ஊர்தி அடிக்கடி இடருக்கு ஆளாகலாம்! பொது மக்களிடையிலும் இதுபோல எண்ணற்ற குறைகளிருக்கலாம். அரசியலார், வலவர், பொது மக்கள் மூவரும் திருந்துவதைப் பொறுத்தது இவ் இடர் காப்புகள். அறிவுடைய அரசிலார் மூவருக்கும் முதல்வராயிருந்து இடர் காப்பதும் உண்டு. இருப்பூர்திகளுக்குத் தனிப்பாதை அமைத்தல், பாதைகளின் மேலாக, அல்லது கீழாகப் பாலங்கள் அமைத்தல், ஊர்திகளுக்குச் சுரங்கப் பாதை அமைத்தல், பள்ளி முதலிய பொதுவிடங்களைப் போக்குவரவு பாதையிலிருந்து ஒதுக்கமாக்குதல் ஆகியவை இத்தகைய முயற்சிகள். நாட்டுப் போக்குவரவுப் பாதைகளை நகர்கள் ஊர்கள் வழியே செல்ல விடாமல் பண்டைக் கீழநாட்டு அரசர் பலர் காத்து வந்துள்ளனர். தற்செயல் இடர்கள்: கூட்டுப் பொறுப்பும் தனிப் பொறுப்பும் அறிவிலார் மட்டும் தம் முயற்சியால் தற்செயல் இடர்களைப் பெரிதும் குறைத்து எல்லாருக்கும் நலம் பெருக்க முடியும். ஆனால் ஒரு ஊர்திவலவன் நினைத்தால், எல்லா இடரும் தடுக்க முடியாவிட்டாலும் தன் ஊர்தியளவில், முழுதும் இடர்விலக்க முடியும். பொதுமக்களில் ஒருவன் நினைத்தால் எந்த ஊர்தியையும் காக்க முடியாவிட்டாலும் தன்னளவில் எல்லா ஊர்திகளிலிருந்தும் முழுப்பாதுகாப்புப் பெறமுடியும். தற்செயல் இடர்களைப் போலவேதான் இயற்கை நிகழ்ச்சிகளும் அவற்றை மனிதன் தனித்தோ சேர்ந்தோ விலக்கக்கூடும் அல்லது இடர்காப்பேனும் பெறக்கூடு மாதலால், அவன் அவற்றுக்குத் தன்னளவில் மறைமுகமாகக் காரண மாகிறான். சில சமயம் அவன் கவனக் குறைவினால் அல்லது அறியாமையினால், இயற்கையின் நலங்கள் தீமையாகக் கூட மாறுகின்றன. இங்கே அவன் நேரடியாகவே இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணமாகிறான். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தருவோம். இயற்கையின் வளத்துக்கு வெயில், காற்று, மழை ஆகிய மூன்றும் காரணமாகும். வெயில் காற்றையும், காற்று மழையையும் உண்டு பண்ணுகிறது. இங்ஙனம் ஒன்றற்கொன்று காரணமாகவும், ஒன்றுடனொன்று உதவியாகவும் உள்ள இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று கேடாகவும் ஒன்றுக்கொன்று மாறாகவும் இயங்க முடியும். இவ்விடங்களில் மனிதன் செயல் இயற்கையின் செயல்களுக்கு ஒப்பாகி விடுகிறது. மழையினால் வளர்ந்த காடுகளை மனிதனும் மனிதன் வளர்க்கும் கால்நடைகளும் அழிகின்றன. இயற்கைச் சூழலில் விலங்குகளும் உயிரினங்களும் பெருகுவதைவிட மனிதன் அமைக்கும் சூழலில் மனிதனும் விலடக்கினங்களும் பேரளவாகப் பெருகுகின்றனர். இதனால் இயற்கையினளவில் காடுகள் வளர, இயற்கையினாற்றல் கடந்து மனிதன் அவற்றை அழிக்கிறான். காடு குறைவதால் மழையும் குறைகிறது. நிலத்தின் கரைவும் மிகுதியாகிறது. ஒருசில நூற்றாண்டுகளில் மனிதன் செயலால் சோலை வனங்கள் பாலைவனங்களாகின்றன. வளப்பமிகுந்து தென்றல் உலவிய இடங்களில் அனற்காற்றும் புயலும் சூறாவளியும் எழுகின்றன. புயல், சூறாவளி சமுதாயப் பொறுப்பு இது மட்டுமன்று. இயற்கை தன்னைத்தானே துப்புரவு செய்து கொள்கிறது. விலங்கினங்கள்கூட இத் தொழிலை இயற்கைவழி நின்று செவ்வனே நிறைவேற்றுகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் அறிவைச் சிலசமயம் இயற்கை எல்லை கடந்து தீமை பெருக்கப் பயன்படுத்துகிறான். நகரங்களில் மனிதன் செய்யும் துப்புரவுக்கேடு இயற்கையின் துப்புரவுப் பழியாளர்களான மழை, காற்று, வெயில் ஆகியவற்றின் துப்புரவு ஆற்றல் கடந்து விடுகின்றது. இயற்கையில் எங்கும் எளிதில் காண முடியாத அருவருப்பான சூழல்களை நதரங்களில் காணலாம். இதுமட்டுமோ? மிகுசெல்வம் காரணமாக உழையாதவ ர்களையும், மிகுவறுமை காரணமாக உழைத்து உழைத்துப் பாடுபட்டும் உருக்குலைபவர்களை நகரவாழ்வு பேணுகிறது. அத்துடன் உழைக்கும் பழக்கத்தையே கைவிட்டும் உழைப்புக்கு இடம் கிடையாமலும் அலைந்து திரிபவர்களை நகரங்களிலேயே காணலாம். இவர்கள் சோம்பல் வாழ்வின் தொலைவிளைவு இயற்கையின் பெரும் தீங்குகளைவிட எவ்வளவோ பெரிது. உழையாது உண்ணும் உயிரினங்களை மனித சமூகத்திலன்றி இயற்கையில் எங்கும் காண முடியாது. இயற்கை உழையாதவர்க்கு உணவு அளிப்பதேயில்லை. ஏனெனில் உழையாது உண்ணும் சூழலில் இயற்கையே வளங்குறையும். மனித சமுதாயம் உழையாத உலுத்தர்களை உண்பிப்பதன் மூலம் இயற்கையின் வளத்தையே சூறையாடிப் பஞ்சத்தை மட்டுமன்றி, புயலையும் சூறாவளியையும் தோற்றுவித்து விடுகிறது. இயற்கையமைதி வேறு, தெய்வ அமைதி வேறு என்பது எவ்வளவு தவறோ, அதே அளவு இயற்கையுன் செயல் வேறு, மனிதன் செயல் வேறு என்பதும் தவறேயாகும் என்பதை மேற்கூறியவற்றால் உணரலாம். உண்மையுல் இதற்கு இத்தனை வளையவளையச் சுற்றி வாதமிடக்கூடத் தேவையில்லை. மனிதனும் இயற்கையின் ஒரு பகுதியே. மனிதன் செயல்கள் உண்மையில் இயற்கையின் செயலின் ஒரு பகுதியே. இயற்கையின் செயலில் உயிரிலா உலகின் செயல்விட உயிருள்ள உலகின் செயலே முக்கியமான பகுதி. ஏனெனில் அதில் இயற்கையின் உயிரிலாப் பகுதியின் செயலுடன் உயிரின் செயலும் இணைகின்றது. உயிரின் செயலிலும் இடம் பெயரா உயிராகிய செடி கொடிப் புல்பூண்டின் செயலினும், இடம் பெயரும் உயிரினங்கள் செயல் சிறந்தது. அதனுள்ளும் படிப்படி யாகப் புலனறிவில் உயர்ந்த விலங்கினங்கள், புள்ளினங்கள் செயலும், அவற்றுள்ளும் பகுத்தறிவுடைய மனிதன் செயலும் முக்கியமான பகுதியாகும். மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாயினும், இயற்கை அவனை இயக்குகிறது என்பதைவிட, அவன் இயற்கையை இயக்குகிறான் என்பதே பொருத்தமாகும். இயற்கையை நாம் ஒரு பாரிய உடலாக உவமிக்கலாமானால், உயிரினங்கள் அதன் நாடி நரம்புகள் குருதி நாளங்கள்; மனித இனம் அதன் மூளை என்னலாம். மனிதனின் எல்லையற்ற ஆற்றல் மனிதன் உடல் இயற்கையின் உடலின் ஒருபகுதி. மனிதன் உயிர் இயற்கையின் உயிரில், அதாவது இயற்கையை இயக்கும் ஆற்றலில் ஒரு பகுதி. மனிதன் அறிவோ இயற்கை அமைதியையே இயக்கும் தெய்விக ஆற்றலின் ஒரு பகுதி. இதனால்தான் மனிதன் இயற்கையுன் முழுநிறை உறுப்பாகவும், இயற்கையை இயக்கும் இறைவனின் ஒரு கூறாகவும் குறிக்கப் பெறுகிறான். இயற்கைப் பரப்பிலுள்ள மாடகூடங்களில் தலை நெடுமாடத்தின் உயர்கோபுர முகட்டின் உச்சி மணிமகுடம் அவன்! அவன் தன்னை யறியக் கூடுமானால், இயற்கையை அறியக்கூடும்; இறைவனை அறியக்கூடும்! அவன் தன்னை இயக்கக் கூடுமானால், கட்டாயம் இயற்கையை இயக்கக்கூடும்; இறைவனையும் தன்வயப்படுத்த முடியும்! ஆயினும் அவன் இயற்கையின் ஒரு பகுதியேயாதலால், இயற்கையோடன்றியே இயற்கையை இயக்கமுடியும். அவன் இறைவனின் ஒரு பகுதியாதலால், இறைவனோடொன்றியே இறைவனைத் தன்வயப்படுத்த முடியும். இயற்கை யமைதியையோ, தெய்விக அமைதியையோ அவன் மீற முடியாது. மீறிமுயன்றால் இயற்கையின் முகட்டில் தான் வகிக்கும் உயர்படியாகிய மனிதப்படியினின்று படிப்படியாக இறங்கவே நேரும். ஆனால் இயற்கையமைதியையும் அதை இயக்கும் தெய்விக ஒழுங்கமைதியையும் உணர்ந்து அவற்றை இயக்கினால், அவனால் ஆகாதது என்று எதுவும் இருக்கமுடியாது. மனிதன் உடல் இயற்கையின் உடலின் ஒரு பகுதி என்று நாம் மேலே குறிப்பிட்டது வெறும் உவமையோ, அணிந்துரையோ அல்ல. அது நூற்றுக்கு நூறு முழு மெய்ம்மையேயாகும். இயற்கையை நுனித்து ஆராய்பவர்களும், உடலை நுனித்தாராய் பவர்களும் அவற்றின் தன்மைகளில் ஒப்புமை காணாரிhர். உலகின் திண்கூறு கடும்பாறை. உடலின் திண்கூறு என்புச் சட்டம். உலகின் உயிராதாரக்கூறு மண். உடலின் உயிராதாரக் கூறு சதையும் தசை மண்டலமும். உலகின் உயிரியக்கம் நீராலும் காற்றாலும் இயங்குகிறது. உடலின் உயிரியக்கம் குருதியோட்டத் தாலும் உயிரோட்டத்தாலும் நடைபெறுகிறது. உலகின் இயக்குமாற்றல், வெப்பம் ஒளி மின் ஆற்றல்கள் உடலின் இயக்குமாற்றல் ஐம்புல ஆற்றலும் அறிவாற்றலும். இவ்வொப்புமைகள் உடலும் உலகும் ஒரு தன்மையன என்பதைத்தெள்ளத் தெளியக் காட்டுகின்றன. தன்மையில் மட்டுமல்ல, மனிதன் உடலும் உலகும் ஒத்திருப்பது. உலகின் பன் மண்டலங்களையும் பகுத்தாராய்ந் தவர்கள் அவற்றில் கண்ட மூலப்பொருள்களை வகுத்துரைத் தார்கள். உடலின் பல கோசங்களைப் பகுத்தாராய்பவர்களும் அதுபோல அவற்றின் நுண்கூறுகளின் ஆக்கங்களைப் பகுத்துரைத்துள்ளார்கள். மிகப் பல கூறுகள் இரண்டனுக்கும் பொதுவாகவே உள்ளன. வலிமை கடக்கும் மென்மை உடலுக்கும் புற இயற்கைக்கும் உள்ள இதே பொருத்தத்தை உயிருக்கும் இயறகையின் அகக்கூறான தெய்விக ஒழுங் கமைதிக்கும் இடையே காணலாம். அயற்கையின் புற ஆற்றல் வலிமையால் இயங்குகின்றது. இது உடலின் ஆற்றலுக்கு ஒப்பு ஆகும். இயற்கையின் அக ஆற்றல் மெய்ம்மையால், நேர்மையால், ஒற்றுமைப் பண்பாகிய அன்பினால் இயங்குகிறது. இது உயிராற்றலுக்கு ஒப்பு ஆகும். இயற்கையின் புற ஆற்றலின் வலிமையிடையே வலிமை கடந்த தகுதியை இயங்க விடுவது அதன் அக ஆற்றல் அல்லது தெய்விக அமைதியே. உயிராற்றலிலும் நாம் இதே பண்பைக் காணலாம். உயிரில் ஆண் பெண்ணையோ பெண் ஆணையோ வலிமையற்றதெனக் கொள்றழிப்பதில்லை. பேணி வளர்க்கின்றன. தாமே இயங்க வல்லவர் அல்லர் எனத் தாய் தந்தையர் சேய்களைக் கைவிடுவதில்லை. நேர்மாறாகத் தம் வருத்தம் பாராமல், தாம் குறைபட்டும் வளர்க்கின்றனர். ஒவ்வொருயிரும் தன்னைக் கடந்து படிப்படியாகப் பிற உயிர்களிடத்தும் தம் தலைமுறை கடந்து மறு தலைமுறைகளிடத்தும் பற்றும் பாசமும் பரிவும் கொள்கின்றன. வலியார் மெலியாரை வாட்டி அழிப்பதற்கு மாறாக வலியார் மெலியாரைப் பேணுவதை நாம் உயிர்வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும், மனித நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் காண்கிறோம். வலியார் மெலியாரைப் பேணுவது வலிமையைக் குறைப்பதாகச் சிலர் கொள்ளக் கூடும். இதுவே விலங்குப் படியின் அறிவு. வலிமையான விலங்கு மற்ற விலங்குகளைப் பசிக்காகக் கொன்று தின்பதையும், சில சமயம் பசி காரணமில்லாமலே கொன்றழிப்பதையும் காண்கிறோம். உயிர் படியிலுள்ள விலங்கினங்களும் புள்ளினங்களும் மனிதனும் இவ்வாறு செய்வதில்லை. இதனால் இவ்வினங்கள் தேய்ந்து நலியவில்லை. அதற்கு மாறாகத் தகுதியின் மிகுதியால் தழைகின்றன. இங்கே எழும் தகுதி வலியார் மெலியார் என்ற வேறுபாட்டடிப்படை யான வலிமையன்று. அதனினும் உயரிய, கூட்டுறவடிப் படையான வலிமை ஆகும். காலில்லாத ஒருவனும் கண்ணில்லாத ஒருவனும் கூடியவழி, கண்ணில்லாதவன் காலில்லாதவனைத் தூக்கிக் கொண்டு செல்கிறான். இங்கே வலிமை செயலாற்றியிருந்தால், கண்ணில்லாதவனைக் காலில்லாதவன் கொன்றிருக்கலாம். அங்ஙனம் செய்யாது அவர்கள் தங்கள் வேறு வேறு வகைப்பட்ட வலிமைப் பண்புகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒருவர் கண்கள் இருவர்க்கும் பயன்பட்டன. ஒருவர் கால்கள் இருவர்க்கும் பயன்பட்டன. இங்கே வலிமைவழி என்ற அறியாமை வழிவகுக்கும் தகுதி வழி என்ற அறிவு வழிக்கும் உள்ள முதல்படி வேறுபாட்டைக் காண்கிறோம். வலிமையுடையவர் என்பவர் உண்மையில் ஒருவகை வலிமையே உடையவர். அவர்கள் அவ் வலிமையை இனநலத்துக்குப் பயன் படுத்தி, இனநலத்தின் பிற வலிமைகளில் பங்குகொண்டு தம்மையும் வளர்த்து இனத்தையும் வளர்க்கிறார்கள். எல்லாருக்கும் வேறுவேறு வலிமையுண்டு என்று அறிவதே தகுதியின் முதல் அளவுக்கூறு. ஒருவகை வலிமையே வலிமை என்று எண்ணும் அறியாமையே விலங்குப் படியின் அறியாமை ஆகும். கொடுமையே, வலிமை என்று கருதும் விலங்குப் பருவத்தின் கடைப்படி அதுவே. தகுதியின் இரண்டாம் அறிவுக்கூறு இனம் ஒன்று, தனியுறுப்பினர் அதன் கூறுமட்டுமே என்ற அறிவு. இனம் வாழாவிட்டால் உறுப்புக்கள் வாழமாட்டா. தனியுறுப்பின் மட்டற்ற வளர்ச்சி உடலுக்கு நோய்தரும் வலிமையைக் குறைக்கும். சரிசம வளர்ச்சியே உயர் நலம் பேணி உறுப்புக்கு நீடித்த உழைப்பும் வலுவும் பயனும் தரும் என்பதே மூன்றாம் அறிவுக் கூறு கடைசி அறிவுக்கூறு உறுப்புக் கடந்து முழுமுதலிலேயே உறுப்பின் வாழ்வு இருக்கிறது என்பதே. தனிமனிதன் இவற்றை அறிந்து தன்னைக் கடந்து வாழும் இனவாழ்வே நாகரிகம் ஆகும். இற்றை உலகும் பண்டை உலகும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித இனம் பொதுவாகப் பல துறையிலும் நம்பமுடியாத அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இன்னும் அது ஆற்றலை வளர்க்கும் முறையில் வளர்கின்றதே யன்றிக் தகுதியை வளர்க்கும் முறையில் வளர வில்லை. இயற்கையின் அமைதிகளை நாம் கண்டுணர்கிறோம், கையாளு கிறோம். ஆனால் இயற்கைவழி நிற்கவில்லை. இயற்கையின் உயிர் நிலையாகிய தகுதியை, அதனை இயக்கும் தெய்விக அமைதியை அறியவோ கையாளவோ மறுக்கின்றோம். இதற்கு அடிப்படை யான காரணம் ஒன்று உண்டு. மனித இனத்தில் அறிவு வளர்கிறது. ஆனால் அறிவு தகுதியை வளர்க்கவில்லை. இன நலத்துக்குப் பயன்படவில்லை. ஏனெனில் அவ்வறிவை இயக்குபவர்கள் இன நலத்தில் அக்கறை யுடைய நல்லறிஞரல்லர். தன்னல வேட்டையில் ஈடுபட்டு உலகைச் சூறையாடுபவர்கள் கையில் பட்ட அறிஞர் அறிவு உலகில் உயர்வு தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் வளர்த்து பஞ்சம் வறுமைபோர் ஆகிய அழிவுச் சக்திகளுக்கே ஆக்கம் தருகிறது. உலகின் முன்னேற்றம் இங்ஙனம் புறத்தோற்றத்தில் மட்டும் முன்னேற்றமாய் நிலவுகிறது. அதனை முன்னேற்றப்பாதையில் செலுத்துவதற்கான தகுதி அல்லது அறிவுநலமுடைய தலைவர்கள் அல்லது அறிஞர்கள் இன்று தோன்றவில்லை. தோன்றினாலும் வளரமுடியவில்லை. வளர்ந்தாலும் தம்மிச்சை யுடன் செயலாற்ற முடியாது தன்னலவேடரின் கைப்பாவை யாக்கப்படுகின்றனர். பண்டை உலகில் அறிவும் ஆற்றலும் இன்றைய அளவில் இல்லை. ஆனால், அதனை இயக்கியவர், அதுவரையில் நல்லறிவுரை தந்து எச்சரித்த நல் அறிஞர் பலர் இருந்தனர். இந்நாளைவிட அத்தகையவர் தொகையும் அன்று பெரிது. அவர்களுக்கிருந்த வாய்ப்பும் இன்றைவிட அன்று மிகுதி என்னல் வேண்டும். ஆயினும் அவர்கள் சொற்கள் அன்றே மிகுதி பயன் அளிக்கவில்லை. ஏனெனில் பயன் அளித்திருந்தால், உலகம் இன்றைய நிலையை எய்தியிராது. ஆனால் அவை இன்று பலருக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காய் விட்டன. செவி கொடுப்பவர்களுக்கு அச் சொற்கள் இன்னும் எச்சரிக்கையாகவே இயல்கின்றன. தகுதியறிந்தவர்களுக்கு அவை இன்னும் ஊக்குரையாகவே இலங்குகின்றன. உலகம் தான் செல்லும் பாதை தவறானதென்று கண்டு நேர்வழி நாடும் நாளில், அச் சொற்கள் முன்னிலும் பயனுடையவனவாதல் உறுதி. ஏனெனில் இன்று தவறான தலைவர்களால் தவறான பாதையில் செலுத்தப்படும் அறிவு. அந்நேர்வழியடைந்தும் உடன் தானே அரும்பயன் விளைவிப்பது உறுதி. காலம்கடந்த பெருமையுடைய பண்டை அறிவர் பண்டை உலகம் எவ்வளவு பிற்பட்டதாயினும் பண்டை அறிவர் எவ்வளவு முற்பட்டவர் என்பதை விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் கனல்தெறிக்க உரை மிழற்றும் அறிவர் ஏமாஸ் மொழிகள் காட்டுகின்றன; “மக்கள் நேர்வழி காணவில்லை. அடக்கு முறையும் சூறையாட்டும் கொள்ளையும் நடத்தி அரண்மனை மாடங்களில் செல்வங் குவிக்கின்றனர். இதனைக் கடவுள் காண்கிறார். கண்டு உரக்க அநீதியை நிறைக்கிறீர்கள். அதற்குச் சரிநிகரான அநீதி உங்களைச் சுற்றிலும் எழும். அந்த அநீதி உங்கள் அநீதி மாடங்களைக் கீழடக்கித் தகர்க்கும். அந்த அநீதி அநீதிசார்ந்த உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பறிக்கும். உங்கள் மாடங்கள் மண்ணுடன் மண்ணாகும்.” துடித்துத் தெறிக்கும் இக் கடுஞ்சின மொழிகள் அன்றைக்கும் எச்சரிக்கை, இன்றைக்கும் எச்சரிக்கையே! உலகம் வளர்ந்திரக்கிறது; தன்மை மாறவில்லை. அதுமட்டுமன்று, அன்று எச்சரிக்கும் ஏமாஸ்கள் மிகுதி. இன்று அவர்கள் அருகிவிட்டனர். ஆயினும் ஏமாஸின் மொழிகள் காலங்கடந்து இன்னும் செயலாற்றவல்லன. ஏனெனில் தீமையின் தன்மை மாறவில்லை. அன்று உலகு சிறிது. இன்று பெரிது. அன்று நினெவே, இன்று நியூயார்க்! அன்று ஜெருசெலம்; இன்று லண்டன்! 1‘நினெவேயும் ஜெருசெலமும் அன்று அவற்றுக்குச் செவிசாய்க்காத அறிவு மொழிகளுக்கு லண்டனும் நியூயார்க்கும் செவிசாய்க்க வேண்டும். இனித்தான்! 5. நேர்மை நெறியும் அன்பு நெறியும் நேர்மையைச் சிறப்பிக்கும்போது அது கடுநேர்மை என்று சிறப்பிக்கப்படுவதைக் கேட்கிறோம். அன்பு சிறப்பிக்கப்படும் போது அதனைக் கனிந்த அன்பு என்று சிறப்பிக்கக் காண்கிறோம். கடுமை நேர்மையின் பண்பு, கனிவு அன்பின் பண்பு என்றும் இதனால் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பிழைபாடான கருத்து1 நேர்மை நெறியும் அன்பு நெறியும் தெய்விக அமைதி சார்ந்த இரண்டு நெறிகள். இரண்டும் தெய்விக அமைதியின் அடிப்படைக் கூறுகள். இரண்டும் நலம் பயப்பவை. எனவே இவற்றிடையே முரண்பாடு இருக்க முடியாது. நல்லமைதிகள் ஒன்றுடனொன்று இயைபுடையவை யாகவே இருத்தல் வேண்டும். நேர்மையும் அன்பும் வேறுபாட்டவை, முரண்பட்டவை என்ற கருத்து அவற்றைப் பற்றிய அறியாமை காரணமாக எழுவது. அதுமட்டுமன்று அவற்றின் தனித்தனி பண்புகளாகக் கொள்ளப்படும் கடுமை, கனிவு ஆகியவையும் உண்மையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான, எதிரெதிரான பண்புகளல்ல. கடுமையிருக்குமிடத்தில் கனிவும், கனிவு இருக்குமிடத்தில் கடுமையும் இருக்க முடியாதென்றில்லை. வெளிப்பார்வைக்கு நேர்மையில் கடுமை இருப்பதாகத் தோற்றுகிறது. ஆனால் அக் கடுமையினூடாக உள்ளாரக் கனிவும் உண்டு. இதுபோலவே அன்பினிடம் மேற்பார்வைக்கு கனிவு மட்டும் இருப்பதாகத் தோற்றுகிறது. ஆனால் உள்ளீடாக அதில் கடுமை இல்லாதிருப்ப தில்லை. கனிவில்லாக் கடுமையே கொடுமை ஆகும். நேர்மையின் கடுமை இத்தகைய கொடுமை அல்ல என்பது தெளிவு. அது போலக் கடுமை இல்லாத கனிவு உணர்ச்சிக் குழைவாய் விடும். அதில் உள்ளார்ந்த பற்றுறுதி இருக்கமுடியாது. அன்புடையார் கனிவு இத்தகைய நிலையற்ற உணர்ச்சிக் குழைவு என்று யாரும் கருதமாட்டார்கள் குழந்தையின் மனம் போன போக்கில் இழைந்து கொடுக்கும் தந்தையின் செயலை விடத் தந்தையின் கடிந்துரையில் அன்புமிகுதி. கண்டிப்பு இல்லாத உணர்ச்சி அன்பாகாது, உணர்ச்சி மயக்கமேயாகும். குழந்தையிடத்தில் உண்மையன்பும், அதன் எதிர்கால நலத்தில் அக்கறையுமுள்ள எந்தத் தந்தையும் அதனை நன்கு பயிற்றுவிக்கக் கடுமுயற்சி எடுக்காமலிருக்க முடியாது. அது எப்போதும் கனிவின் பக்கம் மிகுதி சாயாமலும், கடுமையின் பக்கம் மிகுதி சறுக்காமலும் இரண்டு பண்புகளின் இனிய நடுவரைமீதே அருமுயற்சியுடன் செல்லும். நல்ல தோழனின் அன்பில்கூட இத்தகைய இனகடுமை சிறிது உண்டு. ஆனால் தந்தையின் அன்பில் அது ஒரு செம்பாதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் குழந்தையின் வாழ்வில் தோழனுக்கு அக்கறை உண்டு. தந்தைக்கு அக்கறை மட்டுமல்ல, பொறுப்பும் மிகுதி. தந்தையின் அன்பில் கடுமை இருப்பது போலவே நேர்மைக்குரியவரான துரறவர், இறைவர் ஆகியவர் நேர்மை யிலும் உள்ளூரக் கனிவு மிகுதி உண்டு. அவர்கள் தண்டனையில் பழியுணர்வு, பகைமை, சீற்றம் கிடையாது. தண்டனை கொடுக்கும்போதே பரிவும் கவலையும் உடன் கொள்வர் தண்டனையால் எதிர்பார்க்கப்படும் பயன் கிட்டியதே, தண்டனையை மேலும் வளரவிடாமல் நிறுத்துவர். சில சமயம் தண்டனையை விடத் தண்டனை யச்சமே போதியதென்று கருதினால், அவர்கள் அச்சுறுத்தியமைவர். அச்சுறுத்தலினும் எச்சரிக்கை பயனுடையதென்று அவர் கருதினால், எச்சரிப்புடன் நிறைவு பெறுவர். இச் செயல்களின் உள்ளார்ந்த அன்பு தக்க செவ்வியல் குற்றம் செய்தவன் எள்ளத்தில் புகுந்து இயக்கும். தண்டனையை விடப் பன்மடங்கு வலிமை இந்த உள்ளார்ந்த கனிவுக்கு உண்டு. அன்பும் நேர்மையும் கனிவு, கண்டிப்பு ஆகியவற்றின் உள்ளார்ந்த ஒருமைப் பாட்டை விவிலிய நூலுரை ஒன்று தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டுகிறது “ஒவ்வொரு மனிதனும் என்ன விதை விதைக்கிறானோ, அந்தப் பயிர்தான் அறுவடை செய்வான் ” என்பதே அது. அவரவர் செய்த நற்செயல்களின் பலனை அவரவர் துய்க்காமல் இரார். இது அன்பின் பண்பு. அவரவர் செய்த தீயசெயலின் பயனையும் அவர்கள் நுகராமலிரார். இது நேர்மையின் பண்பு. உயர்வு தாழ்வு, வேண்டுதல் வேண்டாமை இன்றி எல்லாருக்கும் அவரவர் செயற் பயனை நுகர்வித்தல் ஒத்த அன்பு அதாவது நேர்மையின் பாற்படும். இதன் நேர்மையை யாவரும் கொள்கையளவில் ஒத்துக் கொள்கின்றனர். ஆயினும் தத்தமக்குத் துன்பம் வந்துவிடத்தில் பெரும் பாலான மனிதர்கள் இந்நேர்மை யமைதியை மதிக்க மறுக்கிறார்கள். “ஐயோ நாங்கள் எத்தகைய தீங்கும் செய்தோமில்லையே! தீங்கற்ற எமக்கு இந்நேர்மையற்ற தீங்கு வந்துற்றதே!” என்று புலம்புகின்றனர். நேர்மையமைதியில் கருத்துச் செலுத்தியிருந்தால், அவர்கள் வந்து தீங்குக்கு வீணே வருந்தாமல், தீங்குக்கு மூலக்காரணமான தீய பண்புகள் யாவை என்பதைக் கண்டு உணர்வதிலேயே கவனம் உடையவர்களாயிருந் திருப்பர். நேர்மையற்ற தீங்கைத் தமக்கு அனுப்பியதாக இறைவன் மீதும் இயற்கை மீதும் பழி சுமத்தியிருக்க மாட்டார்கள். தெய்வத்திடம் இங்ஙனம் ஏற்கனவே நேர்மைக் கேட்டைச் சுமத்தியதனுடன் நில்லாமல், பலர், சிறப்பாகக் கிறித்தவர் பலர், மேலும் நேர்மைக் கேடான பண்பை இறைவனிடம் எதிர்பார்க் கின்றனர். “இறைவனே நேர்மையமைதிப்படி எம்மைத் தண்டித் தால், நாங்கள் தாளமாட்டோம். நேர்மையை ஒதுக்கி வைத்து, எங்கள் தீங்குகளுக்கு மன்னிப்பு அளித்து, எங்கள் மீது உம் கருணையைப் பொழியும்” என்று அவர்கள் மன்றாடுகிறார்கள். அந்தோ! தம்மவர், பிறர் என்றும், வேண்டியவர் வேண்டாதவர் என்றும் இரக்கம் காட்டிக் கையுறை பெற்றும் பெறாதும் நேர்மை நெறியினின்று விலகின் ஒருதலைத் திரிப்புச் செய்யும் உலகிலுள்ள கீழ்த்தரமுறைவருடன் கடவுளையும் இவர்கள் சேர்த்துவிட்டார்கள் போலும்! தீங்கை மன்னிக்கும் ஒரு நேர்மை, நன்மையை எப்படி மதிக்கமுடியும்? கெஞ்சுவதற்காகத் தீமையையே மன்னித்தல், ஒரு தீமையை இரு தீமைகளாக ஆக்குவதன்றி வேறல்ல. செய்த தீமை ஒரு தீங்கு கெஞ்சுதல் மற்றொன்று. கெஞ்சுபவர்க்குத் தீமை மன்னிப்பும் நலமும் செய்வது, கெஞ்சாத நலம்புரி கொள்கையினரை அவமதிப்ப தாகவே அமையும். தந்தையை ஒத்த இறைவனிடம் இத்தகைய வேண்டுதல் களைச் செய்யும் மாந்தர் ஒழுக்கமுறைமையின் அறிவிற் கடைப்பட்டவர் ஆவர். அவர்கள் குடியாட்சிக்கு மட்டுமின்றி, நல்லாட்சிக்கே தகாதவர்கள். ஏனெனில் அவர்கள் சரிசம நேர்மையுடைய செங்கோல் மன்னனை மதியாமல், ஒருதலை நேர்மையுடைய கொடுங்கோலனையே அவாவுவர். புறத்தே அன்பும் அகத்தே நேர்மையும் உடையவர்களையே நாம் அன்புடையவர்கள் என்கிறோம். அகத்தே அன்பும் புறத்தே நேர்மையும் உடையவர்களையே நாம் நேர்மையுடையவர்கள் என்று கருதுகிறோம். இருசாராரிலும் நேர்மைமிக்கவர் யார் என்று கூறத் தேவையில்லை. புறத்தே நேர்மையும் அகத்தே அன்புமுடையவர்களே நேர்மைமிக்கவர் என்று யாவரும் ஒத்துக் கொள்வர். ஆனால் அன்புமிக்கவர்களும் அவர்களேதான், புறத்தே அன்பும் அகத்தே நேர்மையும் உடையவர்களல்லர். ஏனெனில் புறநேர்மை அவர்கள் நேர்மையை வலியுறுத்துவது போல, அக அன்பு அவர்கள் அன்பை வலியுறுத்துகிறது. மேலும் நேர்மை புறச் செயலிலேயே செயலாற்ற வேண்டியது. அன்பை அதன் நீடித்த தொலைவிளைவிலேயே காணமுடியும். ஒருவரது தீமையின் விளைவை அவர்கள் உடனடியாகத் துய்த்து அதன் படிப்பினைகளை அறிய விடுவதைவிட நேர்மையும் வேறில்லை. உண்மை அன்பும் அதுதான். உடனடியாக விளைவை நுகரவிடாததனால், அவ் விளைவு நேராமற் போவதில்லை. புற அன்புச் செயல் அதனை நாட்கடத்த மட்டுமே பயன்படும். உடனடியாக நேராக விளைவின் காரணகாரியத் தொடர்பு முறிவதால், அதன் படிப்பினைகளையும் நுகர்பவர் சரிவரப் பெறுவதில்லை. தீமை விரைவில் அகலுவதை இது தடுக்கிறது. எனவே புற அன்பு நேர்மையுமன்று, அன்புமன்று என்பதைக் காணலாம். சமயப் பண்பின் படிகள்: வழிபாடு, ஈடுபாடு, மெய்ப்பாடு, வினைமுறை தீமையை அடுத்துத் தீயவிளைவு ஏற்படுவதனால், மேலீடாகப் பார்ப்பவர்களுக்குத் துன்பம் மிகுதி என்று தோற்றுவது இயல்பே. ஆனால் இதில் புறத் துன்பத்திலும் அகத் துன்பம் அதாவது துயரே மிகுதி புறத்துன்பம் படிப்பினை தருவதில் தளர்வுடையதாதலால் சூழ்நிலையை எளிதில் மாற்றியமைக்காது. துயரோ அதை உடனடியாக மாற்றி யமைக்கும் ஆகவே இவ் வகையிலும் புற அ;னபிலிருக்கும் நேர்மைக் திறத்தையும் அன்புத் திறத்தையும் விட, அக அன்பில் இருக்கும் நேர்மைத் திறமும் அன்புத் திறமும் கூடுதலேயாகும். இறைவனை மக்கள் நேசித்தால், அவர்கள் இறைவனிட முள்ள அன்பு நேர்மையையும் நேர்மையன்பையும் தம் வாழ்விலும் செயலிலும் கருத்திலும் மேற்கொள்ளல் வேண்டும். இதுவே உண்மையான வழிபாடு. மிக உயர்ந்த வணக்க முறை இதுதான். இதற்கடுத்தபடியான முறை ஈடுபாடு ஆகும். இதில் இறைவன் தன்மையை வாழ்விலும் செயலிலும் கொண்டு வரப் பயிலாதவர், உள்ளத்தில் அவற்றை ஆழ்ந்து தோயவிட்டு, அத்தகைய பயிற்சி பெறுகின்றனர். இப் பயிற்சிக்கும் வழி அறியாதவர்கள், இறைவன் பண்புகளை ஆராய்ச்சி வாயிலாகவும், கதை காவிய வாயிலாகவும், மனித வாழ்க்கை இயற்கைபற்றிய அறிவுவாயிலாகவும் ஐயந்திரிபற உணர முயலுகின்றனர். இது மெய்ப்பாடு எனக் குறிக்கத்தகும். வழிபாடு, ஈடுபாடு, மெய்ப்பாடு ஆகிய இம் மூன்று முறைகளையே சமயக் கணக்கர் யோக நெறி, பக்தி நெறி, அறிவு நெறி என்பர். இம்மூன்று நெறிகளுக்கும் கீழ்ப்பட்ட பாமர நெறியே வினைநெறியாகும். இதனைச் சிலர் செயல்நெறி(சரியை) என்றும் கூறுவர். மேற்கூறிய நால்வகை வணக்கங்களும் படிப்படியாக மனிதனுக்கு இறைவன் பண்பை ஊட்டவல்லன. ஆனால் இறைவன் பண்புகள் பற்றியே மயக்க உணர்வுடையவர் பலர் நான்கு நெறிகளுக்கும் புறம்பான அவநெறிகளில் அலைந்து அவமருகின்றனர். அவர்கள் வணக்கமுறை வாணிக முறை யாகவும், மனுப்போடும் முறையாகவும், தம் குற்றங்களின் விளைவைத் தாம் பெற விரும்பாமல் மன உரமற்ற மன்னிப்புக் கோரும் நேர்மையற்ற கோழைமை முறையாகவும் இழிகின்றது. இவற்றுள் இறுதிநிலை வாணிக முறையைவிடக் கேடானது. ஏனென்றால் நட்டத்தில் பங்கு வேண்டாமென்று கூறினால், ஆதாயத்தில் பங்கு பெறமுடியாது என்பது எல்லா வணிகருக்கும் தெரிந்த நீதி. தீங்குகளுக்கு மன்னிப்புப் கேட்பதன் மூலம் நன்மையின் உரிமையை இழக்கிறோம் என்பது மன்னிப்புப் கோரும் பக்தனுக்கு, அதாவது வணக்கமுறை அல்லது தொழுகையிலீடுபடும் போலிப் பக்தனுக்குத் தெரியாது. நிறை நேர்மையும் நிறை அன்பும் ஒன்றே முத்திரைக்காசுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஆயினும் காசு ஒன்றே. நேர்மையும் அன்பும் இங்ஙனம் ஒரே பென் அன்பின் மறுபக்கத்தையும் அன்பையும் காண்பவன் நேர்மையின் மறுபக்கத்தையும் காண்கிறான். நேர்மையில் அன்பு நுண்உருவில் இருக்கிறது. அன்பில் நேர்மை நுண்ணுருவில் இருக்கிறது. இரண்டும் சேர்ந்தே நிறை நேர்மை அல்லது நிறை அன்பு என்ற ஒரே பண்பு. நிறை நேர்மை அல்லது நிறை அன்பு தெய்விக அமைதியின் உள்நிறை கூறு. எனவே அதில் நேர்மையுடன் அடிக்கடி காணப்படும் அல்லது சேர்த்தெண்ணப்படும். அன்பிலாக் கடுமை அல்லது கொடுமையோ, அன்புடன் அடிக்கடி காணப்படும் அல்லது சேர்த்தெண்ணப்படும் கடுமையிலா அன்பு அல்லது வலிமைக்கேடா இருக்க முடியாது. தீமைகள் என்று கூறுத்தக்கன யாவும் கொடுமை, வலிமைக்கேடு ஆகிய இரு குறைபாடுகளால் நேர்பவையேயாகும். இவற்றைத் தெய்விக அமைதியோ இயற்கையோ ஆதரிப்பதில்லை. ஆகவேதான் அது இத் தீயவிளைவுகளை அனுப்பி, நம்மை எச்சரிக்கின்றது. தன் எச்சரிப்புக் கவனிக்கப்படாவிட்டால், இன்னும் கடுந்தண்டமைகளை அனுப்பி, தீமைக்கு ஆளானவகை வலுக்கட்டாயமானவேனும் நன்மை வழிக்கு இழுக்க இயற்கை பாடுபடுகிறது. ஆகவே நன்மை நாடிய தீமையன்றி உலகில் தீமை எதுவும் கிடையாது. அந்த நன்மை நாடிய தீமை கூட மனிதன் தன் அறியாமையால், தொடர்ந்து பெருக்கிக்கொள்வதேயாகும். இயற்கையோ தெய்விக அமைதியோ கலப்பற்ற தனிநலமன்றித் தீமை தருவதில்லை. மனிதன் கெடவிரும்பினால்கூட இயற்கை அவனைக் கெடவிடுவதில்லை. ஒறுத்தேனும் அவனை நல்வழிக்கு இழுத்துச் செல்லவே விரும்புகிறது. ஆகவே கடவுள் எல்லாம் வல்லவர். நிறைநேர்மையுடையவர், நிறை அன்புடையவர் என்ற முக்கூறுகள் மேலீடாகப் பார்ப்பவர் எண்ணுவதுபோல, முரண்பட்ட பண்புகளல்ல; முழுநிறை இசைவுடைய பண்புகளேயாகும் என்று காணலாம். 6. தற்காப்பு முறைகள் விலங்குக்கும் சரி, மனிதனுக்கும் சரி வாழ்க்கை ஒரு போராட்டமாகத் தான் இருக்கிறது. இப் போராட்டத்தில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று மாள்வை எதிர்த்த போராட்டம். அதனையடுத்த பகையினங்களை எதிர்த்த போராட்டம். மூன்றாவதே பகைப் பண்புகளை எதிர்த்த போராட்டம் ஆகும். உயிரிலா இயற்கையின் பகுதியிலிருந்து தொடங்கிய உயிர் வாழ்வு திரும்பவும் அவ்வுயிரிலா இயற்கையில் விழுந்து விடாமலிருப்பதற்கே அதாவது மாளாமல் பிழைத்திருப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது. இயற்கையின் இம்மாள்வாற்றல் நாள்தோறும் பசிவடிவில் வருகிறது. ஆனால் பசியை வென்றவுடன் உயிரினம் பசிக்கு முன்னிருந்த நிலையை விட மிகுதி உரம் பெறுகிறது. அது வளர்கிறது. இயற்கையின் மாள்வு நிலையைத் தாண்டி முன்னேறுகிறது. சில சமயம் மாள்வாற்றல் பசி வடிவிலும் விடாய் வடிவிலும் வராமல் நோய் வடிவில் வருகிறது. இப்போது இடர் இன்னும் மிகுதி. உயிரினத்தின் உடல்நலன், உளநலன், அறிவுநலன் ஆகியவையும், அறிவு நலனின் முதிர் வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ நலனும் நோயை எதிர்த்துப் போரிடுகின்றன. போரில் வெற்றிகண்ட உயிரினம் நோய்க்கு முன்னிருந்த நிலையைத் தாண்டி வளர்கிறது. மாள்வாற்றல் மூன்றாவது ஒரு வடிவிலும் உயிரை அணுகுகிறது. இதுவே முதுமை வடிவம் உடலழிவும் ஆகும். இவ் வழிவிலிருந்து தப்பவே உயிர்கள் இனப் பெருக்கம் என்னும் புதிய கருவியைக் கையாண்டு வருகினிறன. இதனால் பழைய உடல் மாளுமுன் புதிய உடல், முதிய உடல் மாளுமுன் இளஉடல் வருகின்றது. பல இடங்களில் ஓர் உடல் மாளுமுன் பல இன உடல்கள் தோன்றுகின்றன. இங்ஙனம் உயிரினம் மாள்வை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் கடைசிக்கூற்றே இனவாழ்வாகப் கெருக்க முறுகிறது. தனி உயிரினத்தின் உடல் மாளினும் அதன் உயிர்நிலை - அதன் இனவாழ்வு - தொடர்ந்து அழிவைத் தாண்டி நின்று நிலவுகிறது, வளர்கிறது. இயற்கையால் வரும் மாள்வின் இடரை எதிர்த்து நடைபெறுவது இம் முதற்போராட்டம். பசி விடாய் ஆகிய உருவில் உணவும் பருகுநீரும்; நோய் உருவில் உடல்நலமும் மருந்தும்; முதுமை, சாவுருவில் இனப் பெருக்கமும் இனவளமும் போராடுகின்றன. இந்த மூன்று போர் முறைகளாலும் உயிரினும் மாள்வாற்றலை எதிர்த்துத் தலைமுறை தலைமுறையாக, ஊழூழியாகப் போராடி வருகிறது. பிற உயிரினமும் சரி, மனித இனமும் சரி, இந்தப் போராட்டங்களை இன்னும் நடத்தி வருகின்றன. பசி, நோய், சாவு ஆகிய மூன்றனுள் எதனையும் மனிதன் இன்னும் நிலையாக வென்றபாடில்லை. உயிர்ப்போராட்டமும் உணவுப்போராட்டமும் ஆனால் இயற்கை தரும் இவ்விடர் தவிர இன்னொருவகை இடரும் உயிரினங்களுக்குத் தொடக்கமுதல் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் உயிரிலாப்பகுதியே தொடக்க உயிரினங்களின் உணவாயிருந்திருக்க வேண்டும். ஆனால் உயிரினங்களின் விரைந்த வளர்ச்சியில் உயிருணவு தேவைப் பட்டது. இது முதுமை ஏற்பட்டதன் பின்னரே நிகழ்ந்தது. ஏனெனில் இனப்பெருக்கத் துக்காக, ஆண், பெண் பால் வேறுபாடு உண்டாகி, ஒரு தலைமுறையிலேயே அடுத்த தலைமுறை பிறப்புற்றபோது தான், பழைய தலைமுறையை முதுமை அணுகிற்று. பால் வேறுபாடு தோன்றுமுன் ஒரு தலைமுறையின் முடிவே அடுத்த தலைமுறையின் தொடக்கமாய் அமைந்திருந்தது. இறந்த உடலே புதியதாகப் பிறந்ததால், உயிருணவு வேறு, உயிரில் உணவு வேறு என்ற நிலை ஏற்படவில்லை. உயிர்கள் இறந்தபின் அவற்றின் உடல் அடுத்த தலைமுறைக்கு அல்லது வேறு உயிர்களுக்கு இரையாயின. இந்த இரைபோதாத அளவான போது முதிய உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கமும், அதன்பின் அவற்றைப்போல நலிந்த உயிர்கள், இள உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கமும் உயிரின வளர்ச்சியில் ஏற்பட்டது. உயிரின வளர்ச்சியில் தொடக்கத்தில் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்றும் ‘வலிமையின் மிகுதியே வெற்றி’ என்றும் இருந்த நிலை இந்தப் படியின் நிலையே. உயிர்கள் உயிர்களைக் கொல்லத் தொடங்கியபோதும் இனப் பண்பு இதைத் தடுத்தது. பெருமீன் சிறுமீனைத் தின்றாலும், உயர் உயிரினங்களில் இந்நிலை அகன்றது. உயிர் உயிரை உண்பதற்கு மாறாக இனம் இனத்தை உண்டது. இனங்களிடையே பதை இனங்கள், நட்பினங்கள் ஏற்பட்டன. வலிமைமிக்க இனங்கள், நலிந்த இனங்கள், கொடுமை செய்யும் இனங்கள், கொடுமைக்கு ஆளான இனங்கள் எழுந்தன. ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தை இரையாகக் கொள்ள நாடிய இனங்கள், கொல்ல நாடிய இனங்கள் பகை இனங்களாயின. இயற்கையின் மாள்வாற்றலை எதிர்த்து உயிரினங்கள் போராட வேண்டிய போராட்டத்துடன், இப்பகையினங்களின் பகைமையாற்றலை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றொரு போராட்டமும் ஏற்பட்டது. ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்தை, ‘கொடுமையின் மிகுதியே வெற்றி’ அல்லது ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்று கொள்பவர்கள் உயிரின வளர்ச்சியின் இந்த இரண்டாவது வகையான போராட்டத்தையே கருத்தில் கொண்டனர். வலிமையற்ற உயிர்கள் இரையாகிய அழிய வலிவுடைய உயிர்கள் இரையாக அவற்றை உண்டு வாழ்ந்தன என்பதையும், கொடுமைமிக்க உயிர்கள் விரைந்து பிற உயிரினங்களை அழித்து வாழ, கொடுமையற்றன அழிவுக் காளாகிப் பின்னடைந்தன என்பதையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டுவர். ‘கொடுமையின் மிகுதியே வெற்றி’, ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவங்கள் இயற்கையமைதியின் குறிக்கோளல்ல என்பதை இந்தப் படியிலும் எளிதில் காட்டலாம். அவை இயற்கையின் குறிக்கோளாயிருந்தால், இரை கொள்ளும் உயிர்களே இன்று உலகில் மிகுதியாயிருக்க வேண்டும். ஆற்றலுள்ள உயிர்களே மிகுதியாயிருக்க வேண்டும். இரண்டும் ஒரு சிறிதும் உண்மையல்ல. கொடுமைமிக்க இரைகொள்ளும் விலங்குகள் ஒருசிலவே இருக்கின்றன. அவையும் அருகி வருகின்றன. தீங்கற்ற பறவைகளும் வலுவிற் குறைந்த விலங்குகளுமே இன்று மிகுதி. வலிமையிலும் உருவிலும் மிகவும் பிற்பட்டு, பர பகையினங்களிக்கு இடையில் வாழும் புழுப்பூச்சியினம் அழியாமல் இன்னும் பெருகி வருவது ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்திற் கெதிரான சிறந்த சான்று ஆகும். இயற்கையின் தற்காப்பு முறைகள் வலிமையுடைய உயிர்களுக்கெதிராக வலிமை குறைந்த உயிர்களைப் பாதுகாப்பதற்கு இயற்கை வகுத்த முறையே தற்காப்பு முறை ஆகும். வாழ்க்கைப் போராட்டத்தினிடையில் தற்காப்புக்காக உயிரினங்கள் மேற்கொண்டுள்ள முறைகள் எண்ணித் தொலை யாதவை. இயல் நூலாராய்ச்சியால் இப்போது காப்பு முறைகள் ஓரறிவுயிரினமாகிய செடி கொடி முதல் மனிதன் வரை எல்லாப் படிகளிலுமே நடைபெறுகின்றன என்று காணலாம். உயிரினங்களின் படி உயருந்தோறும் இம் முறைகளும் பலவகைப்பட்டுப் பல்கிப் பெருக்கமடைகின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் கொடுமையுடைய உயிரினங்களும் ஆற்றல்மிக்க உயிரினங்களும் முந்திவிடாமல் அவையற்றவை பெருகி வளர இயற்கை எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் இவை என்பதை இப்பாதுகாப்பு முறைகள் தெள்ளத் தெளியக் காட்டுகின்றன. அத்துடன் தகுதி எவ்வாறு படிப்படியாகக் கொடுமையிலிருந்தும் ஆற்றலிலிருந்தும் வேறுபட்டு உயர்வுறுகிறது என்பதையும் நாம் இவற்றால் உணர்கிறோம். மிகக் கொடிய விலங்குகளுக்கும் மிக ஆற்றல் வாய்ந்த விலங்குகளுக்கும் இடர் தரும் பகையினங்கள் மிகுதி இருக்க முடியாது. ஆற்றல் குறைந்த சிற்றுயிர்களுக்கோ பகையினங்கள் பல. இடர்கள் பல. ஆயினும் தற்காப்பு முறைகளை இவ்வினங்களே மிகச் சிறந்த வதையில் பயன்படுத்திக் கொண்டதனால் அவை தப்பிப் பிழைப்பதுடன், ஆற்றல் மிக்க எதிரிகளைக் காட்டிலும் வளம்பெற்று வளர்ந்துள்ளன. வலிமையில் மிகக் குறைந்த பூச்சியினத்திலேயே தற்காப்பு முறையில் மிகவும் கவனத்தைக் கவர்வனவாயுள்ளன. பல பூச்சியினங்கள் தம் வாழ்வுக்கு நிலைக்களமான மண், மரக்கிளை, சுள்ளி, இலை. சருகு ஆகியவற்றின் வடிவத்தையும் நிறத்தையும் முற்றிலும் தமதாகக் கொண்டு, அவ்வொப் புமையால் எதிரிகளின் கண்களுக்குத் தப்பும் சூழ்ச்சி நயமுடையவை யாயிருக்கின்றன. சில பூச்சியினங்கள் பூக்களிடையே பூக்கள் போல உருவிலும் நிறத்திலும் தோற்றத்திலும் இருப்பதால், அவற்றைத் தின்னும் பறவைகள் அவற்றின் மீது உட்கார்ந்தும் அவற்றின் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் விட்டுச் செல்கின்றன! பூச்சியின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவற்றின் குணங்குறிகளை முற்றிலும் அறிந்த இயல்நூலார் கூட அவற்றை எளிதில் உருத்திரித்துக் காணமுடியாது அலமருகின்றனர். உயிரினங்களில் முற்றிலும் முதிரா உயிரினம் நீரில் வாழும் மீனேயாகும். இவ்வினத்துக்கு மற்ற உயிரினங்கள் மட்டுமன்றித் தன் இனதே பகைமையுடையது. அப்படியிருந்தும் தற்காப்பு முறைமைகளால் அது விள இனங்களிலிருந்தும் தன் இனத்தி லிருந்தும் ஒருங்கே தப்பிப் பிழைக்க முடிகிறது. விலங்குகளில் மெலிந்தவைக்குத் தற்காப்புக்கான கருவிகளாகக் கொம்பு, நீண்ட பற்கள், கூரிய நகங்கள் இருக்கின்றன. இதைத் தவிர மான், குதிரை, முயல் ஆகியவற்றின் விரைந்த ஓட்டம் தற்காப்புக்கான ஒரு முறையேயாகும். பல விலங்குகளும் மீன்களும் குழைவுநெளிவுள்ள உடலாலும் பிடிகொடாது வழுக்கிச் செல்லும் இயல்பாலும் தம் பகைவரிடமிருந்து தப்புகினறன. இவற்றினும் தந்திரமிக்க முறைகளை நரியும் பல்லியும் பயன்படுத்துகின்றன. நரி தன் உடலிலிருந்து வெளிவிடும் கெட்ட நாற்றத்தால் தன்னைத் துரத்தும் நாய்களைத் திக்குமுக்காடவைத்துத் தப்பியோடுகிறது. பல்லியோ தன் வாலைத் துடிக்கவைத்து அகற்றி அதைப் பகையினங்கள் கண்டு வேடிக்கை பார்த்திருக்கும் சமயம் பார்த்துத்தான் தப்பியோடி மறைகிறது. மனித இனம்! அறிவுத் தற்காப்பு முறை தாழ்ந்த இனங்களிலேயே அறிவை இந்த அளவு வளர்த்த தற்காப்பு முறைகள் மனித இனத்தில் எவ்வளவு உயரியபடி யடைந்துவிட்டன என்று கூறவேண்டுவதில்லை. அந்த முறைகளை நாம் மனித இனத்தில் இன்று முனைப்பாகக் காண முடியாது. ஏனெனில் அம்முறைகள் கிட்டத்தட்டப் பகையினங்கள் எதுவுமே அவன் உலகில் தலை காட்டாத நிலையைக் கொண்டுவந்து விட்டன. விலங்குகளில் கடைப்பட்ட விலங்குகளைவிட மனிதன் வலிமை மிகுந்தவனன்று. பல விலங்குகளின் தற்காப்பு முறைகள்கூட அவனிடம் இல்லை. ஆனால் இவை அவன் அறிவை மேன்மேலும் வளர்த்துத் தற்காப்பு முறைகளை அறிவுத் தற்காப்பு முறைகளாக்கின. அதுமட்டுமன்று தற்காப்புத் தேவை அகன்றவின் அவன் அறிவு வளர்ச்சிக்கான வகைமுறைகளாயின. விலங்குகளுடன் விலங்காக மரப்பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்த அவன், அக் குகைகளினிடமாக வீடும் தெருவும், ஊரும் நகரமும், நாடும் வளர்த்து உலகைத் தனதாக்கிக் கொண்டான். ஓடாத கால்களுடன் ஓடும் விலங்கேறி, இப்போது அவன் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எட்டாத விரைவுடைய விசை ஊர்திகளில் உலகெங்கும் திரிகிறான். பறக்குமாற்றலற்ற அவன் பறக்கும் ஊர்தி கண்டுள்ளான். கொல்லும் நகமும் நச்சுப்பல்லும் கொம்பும் அற்ற அவன் இன்று உலகையே கொன்று குவிக்கத்தக்க அழிவுக் கடைக்கலங்களைப் படைத்துக் கையாள்கிறான். கட்புலனிலும் செவிப்புலனிலும் கழுகுக்கும் நாய்க்கும் ஆற்றாத அவன் கட்புலனுக்கு எட்டாத காட்சிகளையும், செவிப்புலனுக்கு எட்டாத ஓசைகளையும் அறிய வழிகள் வகுத்துள்ளான். தற்காப்புக்காகத் தொடங்கிய அறிவு முறைகள் அவனுக்கு இப்போது உலகாட்சியையே தந்துள்ளன. இயற்கையின் மறைதிறவையே அளித்துள்ளன. விலங்குகளைப் போல மனிதனுக்கு இப்போது பகையினங்கள் இல்லை. அவற்றுக்கெதிரான தற்காப்பு முறைகளும் மிகுதி தேவையில்லை. அறிவு இவையனைத்தையும் தேவையற்றவையாக்கிவிட்டது; அவனை மனிதனாக்கி விட்டது. விலங்குகளுக்கில்லாத தன்னறிவும் தன்னுணர்வும் பகுத்தறிவும் அவனுக்குச் சிறப்பாகிவிட்டன. ஆனால் தேவை நீங்கினாலும் மனிதன் விலங்குணர்ச்சிகள், விலங்கு மனப்பான்மைகள், பண்புகள் முற்றிலும் நீங்கி விடவில்லை; அவன் புறத்தோல் கடந்து கிளறினால் இன்னும் விலங்கினத்தின் எல்லா இயல்புகளையும், கொடு விலங்குகள் முதல் சிறு புழு வரையுள்ள எல்லா உயிரினங்களுக்குமுரிய இயற்கையுணர்ச்சிகளையும் மனப்பாங்குகளையும் அவன் இன்னும் கொண்டிருப்பது காணலாம். உயர் பண்புடைய மனிதனிடம் இவை அடங்கியும் முற்றிலும் கீழடக்கப்பட்டும் இருக்கின்றன. தாழ்ந்தவரிடமோ அவை கீழடக்கப்படாமலும், மிகுதி அடங்காமலும் இருக்கின்றன. இம்மெனுமுன் அவர்களைப் போர்த்திருக்கும் மெல்லிய மனிதப் போர்வை அகன்றுவிடும். உள்ளூர அவரவர் வளர்ச்சிப் படிகேற்பக் கொடுவிலங்கு நிலையோ, ஆற்றல் விலங்கு நிலையோ. இழிஉயிரின் நிலையோ பகட்டாக வெளித்தோற்றுவது காணலாம். தானே தனக்குப் பகை: அழிவுணர்ச்சி விலங்குநிலை மனப்பான்மையும் விலங்குப் பண்புகளும் நாகரிக மனித சமூகத்தில்கூட இடம்பெறாமல் இல்லை. நாகரிகம் என்று கருதப்படும் பழக்கவழக்கங்கள் பலவற்றிலும், பண்புகள் பலவற்றிலும் அவை இடம் பெறாமலுமில்லை. ஆனால் முனைப்பாக நாம் அவற்றைக் காண்பது இன்றும் தற்காப்புத் துறையிலேயே. தற்காப்புக்கான தேவை குறைந்துவிட்ட பின்பும், தற்காப்பு வளர்ச்சி அவனிடம் சிறிதும் குறைந்து விடவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. விலங்குகள் பகையினங்களிலிருந்து தம்மைப் பெரிதும் தற்காத்துக் கொள்ள முற்படுகின்றன. மனிதனுக்கு இன்று பகையினம் மனிதனன்றி வேறு இல்லை. தன் இனத்துக்கு எதிராகவே அவன் தற்காப்புப் பண்பை வளர்க்கிறான். தற்காப்புப் பண்பும் உண்மையில் தற்காப்புப் பண்பாயில்லை. அது தாக்குதல் பண்பாகி, இப்போது அழிவுப் பண்பாக வளர்ந்துள்ளது. அழிவுப்படைக்கருவிகளில் மனிதன் தன் அறிவையும் பணத்தையும் நேரத்தையும் இன்றும் மிகுதியாகவே செலவு செய்கிறான். தற்காப்புக்கு மட்டுமன்றி, இவற்றைக் கொடு விலங்குகளின் பண்பாகிய அழிவுக்கும் பயன்படுத்துகிறான். இவை மட்டுமன்றி இவ்வழி முறைக்காகவே மனித இனத்தின் நலத்துக்கு உழைக்க வேண்டிய தொழிலாளர் வகுப்பின் ஒரு பெரும் பகுதியைப் பழக்கி, அவர்கள் உயிரைப் பணயமாக வைத்துச் சூதாடுகிறான். படைகளையும் அழிவுப் போர்களையும் வளர்க்கும் உணர்ச்சியையும் பழக்க வழக்கங்களையும், பலர் இன்றும் உயர்வாகப் போற்றுகின்றனர். அவற்றைப் புகழும் நூல்கள் வீரகாவியங்களாகப் புகழப்படுகின்றன. நாட்டுப் பற்று, இனப்பற்று ஆகிய உயர்பண்புகள்கூட இவற்றின் பெயரால் இழிபண்புகள், மூர்க்கப் பண்புகள் ஆக்கப்படுகின்றன. பல பிற்போக்கான சமூகங்களில் இவ் வழியே பண்புகளை வளர்க்க மனிதப் பலியாடுகள் போதிய அளவில் அகப்படாத தனால் அல்லது பயன் படாததனால், ஆடு, கோழி முதலிய உயிரினங்களைப் பயன்படுத்துகின்றனர். அவை ஒன்றை ஒன்று மோதியும் கிழித்தும் குருதி சிந்தும் காட்சியைக் கண்டு அவர்கள் ‘வீரக் கலையுணர்ச்சி’ அமைதி பெறுகிறது. அழிவுக்காகப் பயன்படும் உணர்ச்சிகள் தற்காப்பு என்ற பெயரால் வளர்க்கப்பட்டு, வெறும் கலையுணர்ச்சியாகவே பேணப் படுகிறது. கலை கொலையாகி, கொலை கலையாக வளர்க்கப் படுகிறது. மனிதன் அறிவும் அறிவாற்றலும் சென்ற நானூறு ஆண்டுகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவும் அறிவாற்றலும் ஒரு சிறிதும் மனித உணர்ச்சிகளை வளர்க்கப் பயன்படுத்தப்படவில்லை. மிகப் பெரும்பாலான முறையில் கீழ்த்தரமான விலங்குணர்ச்சிகளில் பலவற்றை வளர்ப்பதற்கே பயன்பட்டிருக்கின்றன. இவ்வுணர்ச்சிகளில் கொடுமை அல்லது அழிவுணர்ச்சி ஒன்று. இதற்காக இன்று ஈடுபடுத்தப்படும் அறிவு கிட்டத்தட்ட மனித இன அறிவின் முழுப்பகுதியுமே என்னலாம். இந்த அழிவுக்கலையில் அழியும் மனித உயிர்கள் தொழிலாளர் சமுகத்தின் ஒரு பெரும்பகுதி. தொழிலாளர் உழைப்பின் ஒருபெரும்பகுதியைத் தமதாக்கி, மனித சமூகத்தின் தேவைகளைச் சாக்கிட்டுத் தொழில் வளர்த்துப் பொருளீட்டும் வகுப்பினர் அனைவருமே-தொழில் முதலாளிகள், வணிகர், பொருளகத்துறை முதலாளிகள் ஆகிய அத்தனை பேருமே-போர்க்கால அழிவுக்காகவே வாழ்ந்து பணம் திரட்டுபவர்களாக அமைந்துள்ளனர். இங்ஙனம் மனித இனத்தில் இன்னும் மங்காது வளர்ந்து வரும் விலங்குணர்ச்சிகளுள் ஒன்றுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இன்ப உணர்ச்சி, வீம்புப்போட்டி உணர்ச்சி அழிவுணர்ச்சிக்கு அடுத்தபடியாக மனிதனை ஆட்டிப்படைக்கும் விலங்குணர்ச்சிகள் இன்ப உணர்ச்சியும் வீம்புப்போட்டி உணர்ச்சியுமேயாகும். இன்ப உணர்ச்சி மனித இனத்தின் ஒரு பெரும்பகுதியை அடிமைப்படுத்தி அதனை ஒரு சிறிய வகுப்புக்கு இரையாக்குகிறது. அச்சிறிய பகுதியினுள்ளும் வீம்புப்போட்டி பெருகி, இன முழுவதையும் ஒருசில பண மூட்டைகளுக்கும் ஒரு சில போர் வெறியர்களுக்கும் ஆளடிமைகளாக்கி வைக்கிறது. மனிதன் இதுகாறும் அடைந்துள்ள வளர்ச்சிகளை மனித இனம் இன்றும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவை மனித உணர்ச்சிகளை, மனித இனத்தின் தகுதிளை, மனித இனத்தை வளர்க்கப் பயன்படுத்தப் பெறாமல், விலங்குணர்ச்சி களையும் விலங்குத் தகுதிகளையும் வளர்ப்பதில் ஈடுபடுத்தப் படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். விலங்குணர்ச்சிகள் அழிக்கப்படாவிடிலும் படிப்படியாக அடக்கிச் செயலற்றவை யாக ஆக்கப்படல் வேண்டும். மனித உணர்ச்சிகள் படிப்படியாகப் பேணி வளர்க்கப்படவேண்டும். இதுகாறும் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிகள் இவ் வுணர்ச்சிகளின் வழிச் சென்றால், செலுத்தப்பட்டால், ஈடுபடுத்தப்பட்டால், இனநலம் இன்றிருக்கும் நிலை கடந்து எத்தனையோ மடங்கு மேம்பாடடையும். மனித உணர்ச்சிகள் இன்னும் மனித இனத்தின் ஆட்சி யாளர்கள் இனத்தின் பெரும்பான்மை மக்கள் ஆகியவர்களின் தலை நோக்கமாகா விடினும், அவை விலங்குணர்ச்சிகளின் உட்புகுந்து அவ்வுணர்ச்சிகளையே உயர்த்தி வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனித உணர்ச்சிகள் செயலாற்றுவதற்குரிய தலைசிறந்த கருவிகளாகிய அறிவும் அறிவாராய்ச்சியும், அறிவு முறைகளும் நாள்தோறும் தழைத்தே வருகின்றன. ஆனால் அவை மனித உணர்ச்சிக்கு மாறாகவே பயன்படுத்தப்படுகின்றன. முதலில் அவனது அழிவுப் படைக்கலங்கள் விலங்குகளின் தற்காப்பு உறுப்புக்களைவிட உண்மையிலேயே தற்காப்பு மிக்கவை. உறுப்புக்களால் தன்னைக் காக்க முற்படும்போது உயிரினும் தன்னையும் பெரிதும் இடருக்குள்ளாக்கிக் கொள்ளமலிருக்க முடியவில்லை. ஆனால் மனிதன் கருவிகளோ படிப்படியாகப் பிறரை அழிப்பதில் ஆற்றலுடையவையாகவும், அதே சமயம் கையாளுபவனுக்கு இடரில்லாமலும் வகுக்கப் பட்டுள்ளன. தொலைவிலிருந்து எய்யும் அம்பு இதன் முதற்படி. ஆனால் தாக்குபவர் தற்காப்பவர் ஆகிய இரு திறத்தவத்களிடையிலும் இம்முன்னேற்றம் ஏற்பட்டபின், இந்த வாய்ப்பு ஒரு சிறிதே குறைகிறது. ஆயினும் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் இது சரிசெய்யப்படத் தவறவில்லை. மொத்தத்தில் மனிதன் அழிவாற்றலும், தன் இடர்காத்து அழிப்பதிலும் முன்னேறுகிறான். ஆளில்லா விமானங்களால் எதிரி நகர்களில் குண்டு வீசுதல் இவ் வகையில் மிகப் புதிய வளர்ச்சி ஆகும். இவையும் இரு தரப்பும் மேற்கொள்வதால் கருதிய பயனை முழுவதும் தராவிட்டாலும், மனித இனத்தில் அழிவுணர்ச்சியைவிடத் தன்னுயிர் மதிப்புணர்ச்சியையும், அதற்கான அறிவுமுறைப் பழக்கத்தையும் இது வளர்க்கிறது. உடல் ஆற்றலை விட்டு அறிவாற்றலையும், அறிவாற்றல் கடந்து தூய அறிவு அல்லது கற்பனையாற்றலையும் மனிதன் கையாளுகின்றான். தூய அறிவற்றலே மனித இனத்தின் தனிச்சிறப்புப் பண்பு ஆகிவருகிறது. இதே அறிவாற்றல் அழிவிலிருந்து தற்காப்புக்கும், உயிர் காப்புக்கும் படர்ந்ததுடன் நிற்காமல், மனிதன் இன்பவாய்ப்பு களைப் பெருக்குவதிலும் முனைகிறது. பொருள்களைவிடப் பணம் பொருள் வளத்தின் குறியீடாக மனித இனத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதனால் ஏழை பணக்காரர் வேற்றுமை வளரலாம். ஆனால், தூய அறிவற்றலால் செயல் செய்யும் பண்பும் வளர்கிறது. மனிதரை எதிர்த்து மனிதர் செய்யும் போட்டி இப்போது அழிவுப் போட்டியிலிருந்து இன்பவாய்ப்புப் போட்டியாகிறது. எதிரியின் உயிரை அழிப்பதில் தனக்குத் தொல்லையும் இடரும் மிகுதி என்பதையும், அதனால் தனக்கு ஆதாயமில்லை என்பதையும் கண்ட சூழ்ச்சியறிவுள்ள மனிதன், கொல்லாமலே அடிமைப்படுத்தும் கலையை வளர்த்து வருகிறா. உள்ளார்ந்த மனித உணர்வின் இளங்குருத்துக்கள் விலங்கின் வல்லமைப் போட்டியே இன்னும் மனித இனத்தின் செய்வகைப் போட்டியாக இருந்துவருகிறது. ஆனால் அது உடல் வல்லமைப் போட்டியாயில்லை; அறிவு வல்லமைப் போட்டியில் முதற்படிக்கு வந்துவிட்டது. திருடுதல், கொள்ளை யடித்தல், தாக்குதல் ஆகியவற்றைவிட வாணிகம் செய்தல், தொழில் முதலாளித்துவம், பொருள் திரட்டும் வழிகளுக்கான அறிவு வளர்த்தல் ஆகியவை மிகுதி ஆதாயம் தரும் எளிய வழிகளாய்விட்டன. இங்கே பொருள் வளத்தையும் தேன் குறியீடான பணத்தையும்விட, அவற்றை வளர்க்கும் அறிவு வளத்தின் மட்டத்துக்கே போட்டி உயர்ந்துவிட்டது. வல்லமைப் போட்டி இப்போது உரிமைப்போட்டி ஆகியுள்ளது. அறிவுத் திட்டம், செயல்நயம், முன்னறிவு, திறமையாட்சி, புத்தறிவு ஆகியவையே மனித இனப்போட்டியின் குறிக்கோளாகி விட்டன. தெய்விக அமைதி அதாவது நேர்மை அல்லது ஒழுக்கம் இன்னும் மனித இனத்தின் குறிக்கோளாகவில்லை. ஆயினும் நேர்மையும் ஒழுக்கமும் மனிதப்பண்புகளாக வளர்ந்தே வருகின்றன. போட்டியுணர்ச்சி மாறாமலேயே வல்லமைப் போட்டி அறிவுப்போட்டி யானதுபோல, மனிதன் தன்னல உணர்ச்சி மாறாமல் அதன் அடிப்படையிலேயே நேர்மைப்பண்பு வளர்கிறது. நேர்மையற்ற முறைகளையும் ஒழுக்கமற்ற முறைகளையும் விட, நேர்மைவழியும் ஒழுக்கவழியும் ஆதாயம் மிகுதி உடையவை, எளியவை என்பது மனித இனத்தில் உணரப்பட்டு வருகிறது. இவ்வகையில் சமூகமதிப்பு என்ற ஒன்று கிட்டத்தட்ட நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒரு மறையுருவாக நின்று செயலாற்றுகிறது. ஏமாற்றுவதைவிடச் சட்டப்படி நடந்து நலம் பெறுவதில் சமூக மதிப்பு மிகுதி என்ற அறிவு ஏற்படுந்தோறும் சட்டத்தை மதித்து நடக்கும் பண்புடையாளர் பெருகுகின்றனர். ஒழுக்கக் குறிக்கோளை ஏற்காமலே இங்ஙனம் உள்ளீடாக ஒழுக்கம் உளப்பண்பிலும், சமூகப் பண்பிலும் வளர்கிறது. பொய் பேசுவது தவறு என்று கருதாதவனும் பொய் பேசுபவன் என்று கருதப்படுவது இழிவு என்று எண்ணி அதை ஒதுக்குவதில் அல்லது மறைப்பதில் முனைகிறான். இதில் அவன் தன் அறிவை வீணாக்கினாலும். எப்படியும் அதைச் சமூகம் காண நேர்ந்தவின் அவற்றின் மதிப்பு முன்னிலும் கெடுகிறது. வல்லமையாட்சியும், பொருளாட்சியும், அறிவாட்சியும் ஒன்றையொன்று மடக்கியும் மூன்றும் இன்றும் உலகில் இருந்தே வருகின்றன. ஆனால் வல்லமையாட்சி பொருளாட்சிக்கும், பொருளாட்சி அறிவாட்சிக்கும் விட்டுக் கொடுத்தே வருகின்றன. அறிவாட்சிக்கும் மேற்பட்டது நேர்மையாட்சி அல்ல அன்பாட்சியாகிய அருளாட்சி. இது இன்னும் முனைப்பாக வில்லை. மனித இனத்தை இயக்கத் தொடங்கவில்லை. ஆனால் மனித இனத்தின் சமூக உள்ளத்தில் அது இடம் பெற்றுவிட்டது என்பது உண்மை. மற்ற உணர்ச்சிகள் எதுவும் செயலாற்றாத இடத்தில் வல்லமையாட்சி, பொருளாட்சி, அறிவாட்சி ஆகிய முத்திற ஆட்சியாளர் தன்னலங்கள் குழுநலங்கள் பாதிக்கப்படாத இடங்களிளெல்லாம் அருளாட்சியின் கனிவு செயலாற்றப்படு வதைக் காண்கிறோம். சில சமயங்களில் அந்நலங்களை எதிர்த்தும் அருளாட்சி வெற்றி பெற்றுள்ளது; பெறுகிறது. அடிமைப்பட்ட நாடுகளில் விடுதலை இயக்கங்கள், அடிமை விடுதலை இயக்கங்கள், பிற்ப்பட்டவர் தாழ்த்தப் பட்டவர் நல இயக்கங்கள், சேரிச் சீர்திருத்தங்கள், இன வேறுபாடு ஒழிப்பு இயக்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள். தொழிலாளர் நலப் பாதுகாப்புச் சட்டங்கள் ஆகியவை இத்தகையவை. மின்னொளி வண்ணங்கள் ஒரு சங்கிலியின் வலு அதன் வலிமை குறைந்த கண்ணியின் வலுவே. அதுபோல ஒரு சமூகத்தின் வலுவும், ஒரு நாட்டின் வலுவும் அதன் வலுமையற்றோர் வலுவே. இவ்வுண்மை அரசியலாரால்கூட உணரப்பட்டு வருகிறது. வலிமையற்றோர், துன்புற்றவர், குறைப்பட்டவர் பாதுகாப் பிலேயே மற்ற எல்லாருடைய பாதுகாப்பும் அடங்கிக் கிடக்கிறது. கடைப்பட்ட உறுப்பின் நலம் இன நலமாகிப் பிற உறுப்புக்களின் நலங்களையும் பேணவல்லது. இத்தகைய கருத்துக்கள் அறிவின் ஆழ்ந்த ஆழத்தில், அறிவு கடந்த அறிவாகிய அருளில் தோன்றி யவை. மனித வகுப்பை அலைக்கும் பிற உணர்ச்சிவேகங்கள் விலகிய சமங்களில் இவ்வருள் ஞாயிற்றின் செவ்வொளி மக்கள் வாழ்வில் அழகுற வானவில்போலச் சுடர்விடுகிறது. மின்னொளி போல அவ்வப்போது பாய்கின்றது. நிலவொளியாய் இடை யிடையே வந்து அழகுமிழ்கின்றது. இவ்வழகொளியில் மனித இனம் அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுகிறது. இவ் ஓய்வுக்கால ஒளியை மனிதர் இன்னும் ஆன்மிக ஒளி, கலை ஒளி, உயர் பண்பு என்று குறிக்கின்றனர். ஆனால் மற்ற உணர்ச்சிகள் படிப்படியாக அகலுந்தோறும் இதுவே நிலையான பண்பாய், நீங்காப் பகலொளியாய் விரிவுறும். தற்காப்பிலிருந்து அறிவும் தன்னலத்திலிருந்து அன்பும் பரவுகிற அதேசமயம், அன்பின் தலையூற்றான குடும்ப வாழ்விலிருந்தும் புதிய அன்பொளி பரவுகிறது. பசி, விடாய் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையகவே குடும்பப் பற்றுத் தோன்றிற்று. ஆனால் உயிர்களில் கீழ்னங்களிலிருந்து படிப்படியாக இப்பற்று இரண்டு உயிர்களின் தற்காலிகப் பற்று என்ற நிலையிலிருந்து, ஆண் bhண் குழந்தைகள் உறுப்புக்களாகச் சேர்ந்த குடும்பமாகவும்; குடும்பங்களின் தொடர்புகளால் ஏற்பட்ட குடும்ப சமுதாயம் அல்லது குலமாகவும்; மொழி, வாணிகத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையான இன்னுமகன்ற நாட்டினமாகவும் வளர்வது காணலாம். இவற்றால் மனிதன் உடல்பாசம் விரிவடைந்து குடும்பப்பற்று, சமூகப்பற்று, இனப்பற்று, உயிர்ப்பாசம் அல்லது பரிவு ஆக உயர்கிறது. நாளடைவில் குருதி உறவை நோக்கிய பாசம் தன்னலப் பயனை நோக்கிய நேசமாகவும், உடனடியான பயனை எதிர்பாராது தொலைப் பயனை எதிர்பாராது தொலைப் பயனை நோக்கிய அன்பாகவும் மாறுகின்றது. இப் பரிவு இன்னும் அருளாக மாறுவதற்கு உலகம் ஒரு முழுமுதல் பொருள் அதாவது அது ஒரே இயற்கையமைதிக்குக் கட்டுப்பட்டு, ஒரே தெய்விக அமைதியால் இயக்கப்படுகிறது என்ற கடவுளன்றி மட்டும்தான் வேண்டும். இதன் தொலை ‘முன்னொலி’யாக ஓர் உலகம் என்ற குறிக்கோள் எழுந்துள்ளது. தன் துன்பத்துக்கு வருந்திய மனிதன் பிற உயிரின் துன்பங்கள் உணரத் தொடங்கிவிட்டான். தன் இன்பம் நாடிய நிலையினின்று பிறர் இன்பங்கண்டு மகிழும் நிலையையும் அடைந்து வருகிறான். முதல் நிலையை அடையப் பிற உயிர்களின்மீது அன்பாட்சி யார்வமும் இரண்டாம் நிலையை அடையப் பிறர் பாராட்டாகிய புகழ்மீதார்வமும், பாலங்களா யுதவின. தன்னல ஆர்வமும் புகழார்வமாக, அன்பார்வமாக மாறுந்தோறும் மனிதன் அருளாளன் ஆகிறான் மனிதருள் அருளாளராகதவரும், அருளாளரைப் பின்பற்ற விரும்பாதவரும் கூட அவரை மதிக்கத் தவறுவதில்லை. தெய்விக அமைதி இங்கே உள்ளூர நின்று செயலாற்றுகிறது. உயர் செவ்வியடைந்தவரின் உள்ளத்தில் நின்று அவரை அது அருளாளராக்கி, அங்ஙனம் உயர் செவ்வியடையாதவரின் உள்ளத்தில் நின்று அவ்வருளாளர்பால் மதிப்பை உண்டுபண்ணி அவரிடம் பாசம் கொள்ளத் தூண்டுகிறது. விலங்கநிலை! மனிதநிலை! தெய்விகநிலை! விலங்குணர்ச்சிகளிலிருந்து வளர்ந்த மனிதன் இங்ஙனமாக விலங்குணர்ச்சிகள் என்ற நிலத்திலிருந்து கொண்டே மனித உணர்ச்சிகள் என்ற காற்று மண்டலத்திலும் ஓங்கி வளர்ந்தான். இப்போது அவன் விலங்கல்ல, மனிதன்; ஆனால் அவன் கால்கள் இன்னும் வேர்கள்போல விலங்குணர்ச்சி என்னும் நிலத்தில் ஊன்றியிருக்கின்றன. அவன் தலைமட்டும் அந் நிலத்திலிருந்து உயர்ந்து வானவெளியில் வீசும் தென்றலில் ஆடுகின்றது. விலங்குணர்ச்சி மட்டும் இருக்கும்போது அவன் விலங்காயிருந் தான். விலங்குணர்ச்சியுடன் மனித உணர்ச்சியும் கலந்தபின் அவன் மனிதனாகிறான். ஆனால் விலங்குணர்ச்சி குறையுந் தோறும் மனித உணர்ச்சி வளர்கிறது. அவன் மனித இனத்திலேயே பல விலங்குப் படிகளிலிருந்து படிப்படியாக விலங்குணர்ச்சிகள் முற்றிலும், அல்லது கிட்டத்தட்ட முற்றிலும் நலிந்து தூய மனித உணர்ச்சி கனந்தெழும்போது, அவன் தெய்விகப் பண்புடையவனாகிறான். தெய்விகப் பண்பு என்பது விலங்குணர்ச்சியின் கட்டுவிட்ட விலங்குணர்ச்சியின் கலப்பற்ற, தூய மனித உணர்ச்சியேயாகும். விலங்குகளின் தற்காப்பு முறைகளிலிருந்தும் விலங் குணர்ச்சிகளிலிருந்தும் மனிதரின் தற்காப்பு முறைகளும் மனித உணர்ச்சிகளும் எவ்வளவு உயர்வுடையவையோ, அவ்வளவு மனிதத் தற்காப்பு முறைகளையும் மனித உணர்ச்சி களையும்விடத் தெய்விகத் தற்காப்பு முறைகளும் தெய்விக உணர்ச்சிகளும் உயர்வுடையவை. இம் மூன்று முறைகளும் உயிரின வளர்ச்சியின் மூன்று தெளிவான படிகளைக் குறிக்கின்றன. விலங்குப் படியில் உடல் உடலை எதிர்த்தழிக்க முற்படுகிறது. மனிதப் படியில் உள்ளம் உள்ளத்துடன் அறிவின் உதவிக்கொண்டு மோதிக் கீழ்ப்படுத்தி ஆள எண்ணுகிறது. ஆனால் தெய்விகப் படியில் உடல் சார்ந்த போராட்டம், உளம் சார்ந்த போராட்டம் இரண்டும் இல்லை. இந்தப் படியில் சமூகத்தின் உறுப்பினனாகிய மனிதன் மற்ற உறுப்பினருடன் போரிடும் புறப் போராட்டம் எதுவுமே கிடையாது. இங்கே போராட்டம் அகப் போராட்டமாய் விடுகிறது. மனிதன் தன் உள்ளத்தின் அகத்தில் உளிந்தும் வெளிப்படையாகவும் முனைப்பாகவும் நின்று அலைக்கும் பேரவா, வீம்புணர்ச்சி, தற்பெருமை முதலிய உட்பகைப் பண்புகளிடன் போராடி வென்று, அவ் வெற்றியின் பயனைச் சமூகத்தின் பிற உறுப்பினருக்கும் சமூகத்துக்கும் அளித்து அதை வளர்க்கிறான். விலங்குப் போட்டியில் உறுப்புக்களே கருவியாயிருக் கின்றன. மனிதன் உறுப்புடன் புறக் கருவிகளை முதலில் கையாண்டு, பின் தன் அறிவையே கருவிகளை இயக்கும் கருவியாக்குகிறான். ஆனால் தெய்விகப் போராட்டத்தில் போட்டியுமில்லை, பகைவரும் இல்லை. உட்பகைக் கருவியாகிய பண்புகளையே மனிதன் எதிர்க்கிறான். புதிய ஆன்மிகச் சாலையில் உருவான இரண்டு படைக்கலங்களையே அவன் கையாளுகிறான். அவை எதிர்ப்பின்மை, தன்மறுப்பு ஆகிய இரண்டுமே. இவற்றை உடலின் எந்த உறுப்போ அறிவோகூடக் கையாளுவதில்லை. தெய்விக அமைதி ஒளியில் பயிற்சி பெற்ற அகப்பண்பே அவற்றைக் கையாள முடியும். கூரிய நகமும் நச்சுப் பல்லும் உடைய கீழின உயிர்கள் மனிதன் படைக்கலங்களையோ, சூழ்ச்சி முறைகளையோ கையாள முடியாதது போலவே, பொது நிலையான தன்னல அடிப்படையான அறிவும், பகைமை யடிப்படையான எதிர்ப்பு முறைகளும் இப் புதுக் கருவிகளைப் பயன்படுத்த முடியாது. தன்னலம், போட்டி, எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது தற்கால மனித சமுதாயம் ஆனால் தன்னல மறுப்பு, தனிநல அழிப்பு, பரந்து செல்லும் பரந்து பரிவுணர்ச்சி, உலகெலாம் ஒன்றெனக் கொள்ளும் உயர்பண்பு ஆகியவையே தெய்விக சமுதாயத்தின் அடிப்படை அமைதிகள். விலங்கு சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மனித சமுதாயம் எவ்வளவு அப்பாற்பட்டதோ, அந்த அளவு இத் தெய்விக சமுதாயம் மனித சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மனித சமுதாயம் எவ்வளவு அப்பாற்பட்டதோ, அந்த அளவு இத் தெய்விக சமுதாயம் மனித சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது ஆகும். அறிவற்ற விலங்கின் வீம்பைவிட, அறிவுடைய தன்னலம் மேம்பட்டது. தற்காலிகமாக விலங்கின் வீம்பாற்றல் மேம்படக் கூடுமானாலும், காலங்கடந்து செயலாற்றும் அறிவுடைய மனிதன் தன்னலத்துக்கு முன் அது செயலற்றதாகி விடும். இதுபோலவேதான் தெய்வப் பண்புடைய மனிதன் பண்பின்முன் தற்காலிகமாக மனிதன் தன்னல அறிவு மேம்படுவதாகத் தோன்றினாலும், இயற்கை கடந்து செயலாற்றும் அத் தெய்விகப் பண்பின் முன்அது சரணடைவது உறுதி. அப்பண்புடையவன் எதிர்ப்பை எதிர்த்து வெல்லமாட்டான். எதிர்ப்பின்மை யால் வெல்லுவான். தன்னலத்தை அவன் தன்மறுப்பால் செயலற்றதாக்குவான். சினத்துக்கெதிராகப் பொறுமை, வீம்புக்கு எதிராகப் பணிவு, பகைமைக்கு எதிராகப் பரிவு, வெறுப்புக்கெதிராக அன்பு ஆகிய இவை தெய்விகப் போர்முறையின் நீதிகள். இந் நீதிகளைக் கையாளவல்லவர்களின் முன் மனித சமுதாய முறைகள் முறிவடையும் என்று திடமாகக் கூறலாம். ஆன்மிக வாழ்வு என்பது இனவாழ்வே விலங்குகளுக்கும் மனிதனுக்கும் தற்காப்பு என்பது தம் உடலைக் காப்பதே. உயிர் நீங்கும் வரை உடலை அவர்கள் காத்து நிற்பர். ஆனால் தெய்விகப் போர் முறையில் உடல் தற்காக்கப் படுவதில்லை. உயிரும் உயிரின் தூய பண்புகளும் அவற்றுக்கு நிலைக்களமா யியங்கும் இனமும் இன மரபுமே தற்காக்கப் படுகின்றன. இவை யனைத்தையும் ஒருங்கே குறிப்பதானால் ஆன்மிக வாழ்வு அல்லது ஆன்மா என்னலாம். உடல் அழிவது. அதை அழியாமல் காக்க விலங்கும் மனிதனும் பாடுபடுகின்றனர். ஆன்மா அழியாதது. அதன் தூய்மை பேண, அதன் நற்பண்புகளை வளர்க்கத் தெய்விக மனிதன் பாடுபடுகிறான். உடலெதிர்ப்பைவிட அறிவெதிர்ப்புப் பன்னூறு மடங்கு வலிமையுடையது என்பதையாவரும் அறிவர். தெய்விக எதிர்ப்பு முறையாகிய எதிர்ப்பின்மையும் தன்மறுப்பும் அறிவெதிர்ப்பை விடப் பல்லாயிர மடங்கி வலிமையுடையன. இவ் வல்லமையின் ஆற்றலையும் ஒளியையும் புகழையும் இயேசு, புத்தர் முதலிய அருண்மன்னவர் வாழ்வில் காண்கிறோம். மன்னர் ஆட்சி அவர்கள் நாட்டிலும் அவர்கள் தலைமுறையிலும் மட்டும் வலிமையுடையதாயிருந்தது. ஆனால் புத்தர் பிறந்து வாழ்ந்து இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு மேலாயின. இயேசு வாழ்ந்து இருபது நூற்றாண்டுகளாயின. அவர்கள் வாழ்வும் நாடும் கடந்து உலகெங்கும் அவர்கள் அருளாட்சி ஓயாது பரவி வருகின்றது. அவர்கள் அருளாணை முன் மன்னரும் மன்னர் மன்னரும், மன்னர் ஆட்சிக்கு வலுத் தந்த படைத் தலைவர்களும், அவ்வாட்சியை எதிர்த்துப் புத்தாட்சி அமைத்த குடியாட்சி முதல்வர்களும் ஒருங்கே தலை வணங்குகின்றனர். மன்னரை வணங்கியவர் உடல் வணங்கினர். உள்ளத்தில் அச்சம் முதலிய பல உணர்ச்சிகளே இருந்தன. வணங்குபவர் உயர்வு தாழ்வுக்கேற்ப வணக்கமும் வேறுபட்டது. ஆனால் புத்தர், இயேசு ஆகிய அருண்மன்னர் ஆட்சிக்கு வணக்கம் செய்பவர்கள் உள்ளத்தில் வேறுபாடின்றி ஒரே அன்பு நிலவுகிறது. முடியாட்சி, குடியாட்சி, முதலாளி தொழிலாளி, நல்லார் கெட்டார், உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய எல்லா வகைப்பட்டவர் உள்ளத்தையும் அது ஒரே வகையில் கனிவித்து இயக்குகின்றது. விலங்கு, மனித, தெய்வ முறைகள் ஒன்றுக்கொன்று மேம்படினும் ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பவையே. மூன்றும் ஒரே உயிரின வளர்ச்சிகளில் மூன்று பேரூழிகளைக் குறிக்கின்றன. உயிரினங்களின் தொடக்கப் படியிலிருந்து அதன் முழுநிறைவு நோக்கிச் செல்லும் இவ் வளர்ச்சியைத் தீமையிலிருந்து நன்மை நோக்கிய வளர்ச்சி நலம் என்று குறிக்க முடியாது. ஏனெனில் நாம் மேலே காட்டியபடி தீமை என்று எதுவும் எங்கும் என்றும் இல்லை. இம் முன்னேற்றம் முழுவதும் நன்மையிலிருந்து படிப்படியாக உயர்வுடைய நன்மைக்கேயாகும். அது முழுநிறை நன்மை நோக்கிய இடைவிடாத முன்னேற்றம் என்னல் தகும். இயற்கையின் புற உடம்பிலிருந்து அதன் அகஉயிர்நிலை நோக்கிச் செல்லும் இவ் வளர்ச்சியில், உயிரினம் படிப்படியாகத் தன்னையும் இயற்கையையும் அறிந்து, இயற்கையின் உயிராகிய கடவுளின் ஒரு கூறாகிறது. இந்நிலையை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைதல் இல்லை. ஆனால் எல்லா உயிர்களும் அதை நோக்கியே செல்கின்றன, வளர்கின்றன. அவ் வளர்ச்சி யிடையே தோற்றும் பண்புகள்தான் ஆற்றல், அறிவு, அன்பு ஆகிய மூவொளிகள் ஆகும். உயிரினங்களின் அழல், மதி, ஞாயிறு என இவற்றை குறிக்கலாம். 7. வான் போக்கு - மேனோக்கிய உணர்வு வானகப் பயணமும் வானூர்தியும் ஏற்படுமுன்னே அப் புதுமுறை விரைவில் ஏற்படும் என்று தெரிவித்தவர் கலை முனைவர் பக்1 அதனால் மனித வாழ்விலும் மனப்பாங்கிலும் உணர்விலும் ஏற்படக் கூடும் மாறுதல் பற்றியும் அவர் விரித்துரைத்திருக்கிறார். அவர் முன்னறிவிப்பின் ஒரு பகுதி நிறைவேறி விட்டது என்று காண்கிறோம். ஆகவே மறு பகுதியில் அவர் கூறுவதைப் பற்றியும் நாம் சிந்திப்போம். ‘நிறை உலக உணர்வு’ என்ற2 தம் நூலில் கலைமுனைவர் பக் கூறுவதாவது:- “வானகப் பயணத்தின் முன் நாட்டெல்லைகள், பாதுகாப்பு வரி எல்லைகள் தடமற்றுப் போகும். ஒரு வேளை மொழி வேறுபாடுகள்கூட மனித சமுதாயத்தில் இல்லையாய் விடும். பெருநகரங்களின் தேவை அகன்று விடக்கூடும். ஏனெனில் ஒருங்கு வாழ்வதற்கு நெருங்கி வாழ வேண்டும் என்ற நிலை இராது. அவை படிப்படியாகச் சிற்றூர்களாகவோ தனி மாளிகை களாகவோ பரந்து கலைந்துவிடும்.” “இன்று நகரங்களில் அடைபட்டு எந் நாளும் வாழ்பவர் வேனிற் காலத்தில் மலைமீது அல்லது கடலருகிலும், குளிர் காலத்தில் உள்நாட்டிலுமாக மாறிமாறி வாழக்கூடும். கலையழகிலீடுபடுபவர்கள் அவ்வப்போது தத்தம் விருப்பப்படி திறந்த வெளிகளிலோ, அடர் கானகங்களிலோ, அழகிய காட்சியிடங்களிலோ அவ்வப்போது தங்குவர். நிலத்தில் உழைப்பவர் சிற்றூரில் சிதறியும், தொழிலிலீடுபட்டவர் நகரங்களில் அடர்த்தியாகவும் இருக்கும் நிலை தேவைப்படாது. வேண்டிய வேண்டியபடி மக்கள் எல்லையற்ற இடத்தில் ஆங்காங்குத் தங்கியும் திரிந்தும் வாழ்வார்கள்.” வானூர்தியும் வான் பயணமும் இன்று பெருகி வருகின்றன. ஆயினும் அவற்றின் பயனாக மேற்குறிப்பிட்ட மாறுபாடுகள் இன்னும் ஒரு சிறிதுகூட ஏற்படவில்லை. ஆனால் அவை இனி ஏற்படாது என்று கூறமுடியாது. மேலும் வான்போக்கு இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. தொடர் ஊர்தி வந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி நிலையைக் கூட நாம் இன்று எட்டிவட்ட தாகக் கூற இயலாது. ஏனெனில் நிலத்திலும் நீரிலும் மனிதன் அடைந்த வெற்றிகளைவிட வானில் அடையும் வெற்றி மிக நீண்டதாகவே இருக்கமுடியும். வான்போக்கின் வருங்கால வாய்ப்புக்கள் வான்போக்கு மட்டுமன்றி அது பற்றிய முறையும் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது என்று எண்ண இடமுண்டு. வான்போக்கு முறைமையின் இறுதி இலக்குப்பற்றி இயல்நூலறிஞர் ஈடிஸன் கூறுவதாவது: “இறுதியாக முழுநிறை வடிவம் எய்திய வானூர்தி பறவைகளின் இயக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைவதால் வேண்டும். அப்போதுதான் அது பறவைகளைப் போல எளிதில் சிறகடித்தெழவும், நேரே மேல்நோக்கிக் பறக்கவும், வானவெளியில் வேண்டும் போது மிதந்து நிற்கவும், விரும்பியபடி விரும்பிய இடத்தில் இறங்கவும் முடியும்.” ஈடிஸன் இறுதியாகக் குறிப்பிட்ட முறையில் வானூர்தி தொடங்கவில்லை. அதற்கு இறக்கைகள் இருந்தாலும் அவை பறவைகளின் இறக்கைபோல இயங்கும் இறக்கையோ, இயக்கும் இறக்கையோ அல்ல. பட்டங்களின் தத்துவத்தைப் பின்பற்றி அதன் இறக்கைகள் காற்றின் அழுத்தத்தைப் பயன்படுத்தி மிதக்கவும் சமநிலை பேணவும் மட்டும் உதவுகின்றன. ஊர்தி இயங்குவது கிட்டத்தட்ட நில ஊர்திகளைப் போன்றுதான். பட்டங்களை ஒரு கயிறு இழுக்கிறது. வானூர்திகளைக் கயிறு இழுப்பதற்கு மாறாக, உந்துபொறியின் உந்துவிசை போன்ற விசை இயந்திரமே இயக்கிச் செல்கிறது. இது காரணமாகவே வானூர்தி பறவைகளைப்போல இறக்கையடித்து நின்ற நிலையில் எழாமல், அதற்கென அமைக்கப்பட்ட பரந்த சமநிலப் பரப்பில் ஓடி எழவேண்டி யிருக்கிறது. பறவைகளைப்போல அது சிறகடித்து மிதக்க முடிவதில்லை. பறவைகளைப்போல நினைத்த இடத்தில் இறங்கவும் முடியாது. பறவைகளின் இறக்கையைப் பார்க்கிலும் இன்னும் பன்னூறு மடங்கு விசையுடன் பூச்சியினங்களின் இறக்கைகள் இயங்குகின்றன. வானவெளியில் தங்குதடையின்றி உலவ இவ் வமைப்பு பறவை அமைப்பிலும் மிகுதி உதவக்கூடும். வான்போக்கின் வளர்ச்சியினால் மனித சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை இன்னும் நாம் முற்றிலும் வரையறுத்து உரைக்க முடியாது. அது இன்னும் அரசியலார் உயர்தர மக்கள் போக்குவரத்துக்கும் உயர்விலையுடைய சிறுதிறச் சரக்குப் போக்குவரத்துக்குமே உரியதாகி இருக்கிறது. கப்பல்கள்போல அல்லது இன்னும் மிகுதியாக நில ஊர்திகள் போல அது மக்கள் நான்முறை வாழ்வின் ஒரு பகுதியாகவில்லை. ஆனால் விளைவு காண நாளாயினும் அதன் உடனிகழ்ச்சி மாறுபாடுகளை நாம் இப்போது மதித்துரைக்கக்கூடும். இயல்நூல் துறையின் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் மக்கள் மனப்பான்மையின் ஒரு மாறுதலை அடுத்து அதன் இன்றி யமையா விளைவாக ஏற்பட்டதேயாகும். மக்கள் மனப்பான்மை யின் மாறுதல் இதுபோலவே ஒரு சமூக மாறுதலின் விளைவாக வருகின்றது. கலைமுனைவர் எதிர்பார்த்தபடி வருங்காலத்தில் வான்போக்கின் விளைவு எது என்பதையும் நாம் அறிதல் அரிதானாலும், அதற்குக் காரணமான மாறுதல் எது எனக் காண்டல் எளிதேயாகும். புது முன்னேற்றம் சமுதாயப் புத்தறிவின் பயன் புத்தறிவு எப்போதும் முன்னேற்றத்துடன் இணைந்தது. அது உள்ளார்ந்த அக நிலை முன்னேற்றத்தின் புறச்சின்னமே யாகும். மனித இனத்தின் வளர்ச்சியில் முக்கியமான திரும்பு கட்டங்களிலெல்லாம், இன உணர்வில் திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. அவ் வளர்ச்சி அவனிடம் ஒரு திடீர்த் தேவையை உண்டுபண்ணுகிறது. தேவையின் இன்றியமையாமையால் ஏற்படும் நெருக்கடி புத்தறிவைத் தூண்டி விரைவுபடுத்துகிறது. எடுத்துக்காட்டாகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறலாம். மனித இனம் மூட நம்பிக்கைகளின் கட்டுத்தளைகளை அறுத்தெறிந்து, தங்கு தடையற்ற விடுதலையுணர்ச்சியுடன் உலவத்துடித்த தறுவாயிலேயே அதற்குச் சிறந்த கருவியான அச்சுப்பொறி கண்டுபிடிக்கப்பட்டது. பண்டை இலக்கிய ஆட்சியின் பிடியிலிருந்து அறுத்துக்கொண்டு தற்கால ஆராய்ச்சி கடு விரைவுடன் முன்னேறிய காலத்தை ஒட்டியே நீராவி இயந்திரம் காணப்பட்டது. இதுபோலவே மனித உள்ளம் குறுகிய நோக்கங்களைக் சுற்றுச் செல்வதைவிட்டு, மனித இனத்தையே அளாவிய உயர்குறிக்கோளைத் தேடும் நேரத்தில்தான் வான்போக்குப் புத்தம்புதிய முறையாக, மக்கள் புத்தாராய்ச்சித் துறைக்கு எட்டியுள்ளது. இன்று உலகில் பழைய சமயங்களின் பிடி தகர்ந்து வருகிறது. பழைய ஆட்சிமுறைகள் ஆட்டங்கொடுத்துவிட்டன. குறுகிய நாட்டுப் பற்று மறைந்து வருகிறது. தனிவாழ்வும் தனி நலமும் தடங்கெட்டு வருகின்றன. மனித இனத்தின் சிந்தனை என்றுமில்லா நீளமும் அகலமும் உயரமும் அவாவுகின்றது. விலங்காற்றலில் ஊன்றிநின்று மனித உணர்ச்சிகளை வளர்த்த மனிதன் விலங்காற்றலின் பிடியை அறுத்தெறிந்து வருகிறான். இதனால் மனித உணர்ச்சிகள் தெய்விக உணர்ச்சியின் திசை நோக்கி உந்தி எழுகின்றன. விலங்கு ஊழியின்படியும் மனித ஊழியின் தொடர்பும் விட்டுத் தெய்விக ஊழியின் ஈர்ப்பு மனித உலகில் செயலாற்றத் தொடங்கிவிட்டது. வான்போக்கு மனித இனத்தின் இந்த அகநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட புதுமை நெறியேயாகும். சமயங்கள் கற்பனை செய்து காட்டிய தெய்விக வாழ்வில் மனிதன் மன நிறைவுற்றுக் கட்டுண்டு கிடந்த காலம் உண்டு. கற்பனையைவிட்டுக் காரியத்திலிறங்கி அறிவு முன்னேற்ற மடைந்த காலம் அதனைத் தொடர்ந்தது. இப்போது அறிவு கற்பனையின் எல்லையை அணுகுகிறது. கனவுகண்ட மெய்ம்மையை அவனறியாமல் அவன் நனவாகக் காணும் வாய்ப்பை அணுகி வருகிறான். இப்புதிய வாழ்வின் கருத்து நிழல்கள் இப்போதே நம்மிடையே ஒளிவீசத் தொடங்கியுள்ளன. வானூர்தி மனித வாழ்வில் பொதுநடைமுறைச் செய்தியாகி வரும் நாட்களுக்குள் இப்புதிய வாழ்வு முறையும் உலகைப் புதிய ஆக்கிவிடுமென்று நாம் நம்பலாம். புதிய வாழ்வும் புதிய உலகும் எப்படி எப்படி இருக்கும் என்று நாம் விரிவாக ஆன்னறிந்து கூறமுடியாவிட்டாலும், அதன் கருத்து நிழல்கள் மூலம் அதனை ஒருவாறு நுனித்தறிந்து கூறலாம். தனிமனிதன் வாய்ப்பு நலங்கள் இன்று ஒரு குறுகிய வரையறைக்குள் இருப்பதுடன், தனிமனிதனுக்குத் தனிமனிதன் அதில் உயர்வுதாழ்வு வேறுபாடுகள் மிகுதியாக உள்ளன. வருங்கால உலகில் எல்லாருக்கும் முதலில் சரிசம வாய்ப்பு நலங்களும், கூடிய விரைவில் எல்லாருக்கும் எல்லையற்ற வாய்ப்பு நலங்களும் இருத்தல் வேண்டும். தனி மனிதருக்கிடையேயுள்ள இதே நிலை நாடுகளிடையும் இருப்பதால், நாட்டின் எல்லை முற்றிலும் இட எல்லையாகவே இருக்கும். வானூர்தி உலகையே ஒரு நாட்டினளவு குறுக்கிவிடக் கூடுமாதலால், இந்த இட எல்லைகூட மாகாண எல்லை, நகரெல்லை தெருவெல்லை யளவில் நெருக்கமடைந்துவிடும். நாட்டுக்கு நாடு தொடர்பு மிகுந்த வேறுபாடும் உயர்வு தாழ்வும் குறையவே, நேசப் போட்டி விளையாட்டுக்களேயன்றிப் பகைமைப் போட்டியோ, போரோ இருக்க இடமேற்பட மாட்டாது. தனிமனிதர் நலங்கள் எல்லையற்றனவா யிருக்கு மாதலாலும், உலகெங்கும் ஒரு நகரெனச் சிறுத்து விடுமாத லாலும், தொழில் தங்குதடையற்று வளரும் ஆனால் தொழிலில் கூட்டுறவும் வகைதிரிவும் இருக்குமேயன்றிப் போட்டி மறைந்துவிடும். நாடுமொழி வேறுபாடுகளைப்போலவே, செல்வர் ஏழை, முதலாளி தொழிலாளி ஆகிய வேறுபாடுகளுக்கு இடமேற் படாது. தொடர் ஊர்தி ஒரு நாட்டுக்குள் இருந்த வேறுபாடு களகற்றிப் பழைய நிலை முதலாளித்துவத்தையும் பண்ணை முறையையும் அழித்து நாட்டு ஒற்றுமைக்கு அடிகோலிற்று. அதுபோலவே வானூர்தி நாட்டுக்கு நாடு, வகுப்புக்கு வகுப்பு உள்ள வேறுபாடுகளை அகற்றி ஓருலகை உண்டுபண்ணுவது உறுதி. அமைதித்துறையில் இந்நிலை இன்னும் அணுகிவராட் டாலும், போர்த் துறையில் அணுகிவிட்டது காணலாம். பொருளியல் துறையிலும் உலகம் விரைந்து ஓருலகமாகி வருகிறது. சமூகத்துறையில் வானூர்தியின் பொதுமுறை வழக்கு இதே செயலைக் செய்யும் என்பதில் ஐயமில்லை. வான்போக்கு இன்றும் தேர்வுமுறையாகவும், போர்முறை யாகவும் அரசியல் வாய்ப்பு நலத்துக்கான கருவியாகவுமே உள்ளது. ஆனால் அது விரைவில் பொருளியல் வாழ்வில் புகுந்த மக்கள் இடப்பெயர்வுக்கும், பயணத்துக்கும், வாணிகப் போக்குவரத்திற்கும் உதவும் அளவில் விரிவடைந்துவிடும். இந்நிலை நாடுகளிடையேயுள்ள தொடர்புகளில் பெரும் புரட்சி கொண்டுவராமலிராது. நாம் நேலே குறிப்பிட்ட மாறுபாடு களுக்கு அது ஒரு முதல் தொடக்கமாக அமையும். ஓருலக வாழ்வும் பொருளியலும் இன்றைய சமய வாழ்வு, கலை, இலக்கிய, மொழி வாழ்வுகள், அரசியல் வாழ்வுகள், அரசியல் வாழ்வு ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் மீட்டும் உருவாக்கும் என்றும் நாம் உறுதியாக நம்பலாம். 8. புதிய வீர உணர்வு வீரம் முற்றிலும் உடல் சார்ந்த ஒரு பண்பன்று. ஏனெனில் ஆற்றல் உடையவன் உள்ளத்தில் அச்சமுடையவனாய்க் கோழையாயிருக்கலாம். ஆற்றல் குறைந்தவன் கூடச் சாகத் துணிந்துவிட்டால் வீரமுடையவனாகலாம். ஆயினும் பொதுவாக ஓரளவு உடல் நலம் இல்லாதவனிடம் உள நலமோ வீரமோ தோற்றாது. ஓரளவு உடல் வலிமை இல்லாதவனிடம் வீரம் பிறர் உள்ளத்தில் பெருமித உணர்வைத் தோற்றுவிக்காது. மொத்தத்தில் வீர உணர்வு உளம் சார்ந்ததானாலும், அதன் செயலும் தோற்றமும் உடல் சார்ந்தனவே யாகும். உடல் உரத்துடன் இயைந்த உள வீரத்தையே நாம் வீரம் என்கிறோம். ஆயினும் அவ்வீரத்தின் செயல் உடல் தாக்குதலும் உடற் பாதுகாப்புமே யாதலால், அதை உடல்வீரம் என்பது தவறாகாது. மனிதர் வீரம் என்றவுடன் பொதுவான உடல் வீரத்தைத்தான் கொள்கின்றனர். வீரத்துக்கு அவர்கள் கூறும் உவமை இதனைத் தெளிவு படுத்துகிறது. வீரனை நாம் “வீரசிங்கம்” என்றே கூறுகிறோம். சிங்கத்தின் உடல் வலுவும், தாக்குதல், தற்காப்புத் துணிவும் வீறும் பதிந்துள்ள அளவு எந்த மனிதர் வீரமும் வீர உணர்ச்சியுடையவர் உள்ளங்களில் பதியவில்லை என்பதை இது காட்டுகிறது. மனிதரிடையே வீரத்துக்கு உவமையாக யாரையாவது குறிப்பதானால் படைவீரனையே குறிப்பது வழக்கம் சிங்கத்தைப் போன்ற வீரன் என்பது போலப் படைவீரனை ஒத்த வீரமுடையவன் என்ற பேச்சும் எழுவதுண்டு. சிங்கம், படைவீரர் ஆகிய இரு திறத்திலும் அஞ்சாமையே வீரத்தின் அடிப்படை ஆகும். எதிர்ப்பு உடல் வலிமையா லானாலும், உடலின் பாதுகாப்பு அதில் ஒரு பகுதியானாலும், அந்த உடல்பற்றி அஞ்சாது துணிந்து இடரில் குதிப்பதே இங்தே இவ்விடத்தில் வீரமாகப் போற்றப்படுகிறது. சிங்கம், படைவீரர் வீரமல்லாத மற்றொரு வீரமும் உண்டு. அதையும் சிலசமயம் மக்கள் புகழ, பாராட்டக் காண்கிறோம். இது சிறப்பாக அக வீரம் அல்லது அறிவு வீரம் என்று கொள்ளத் தக்கது. உடல் வீரத்தில் மனிதன் உடல் பாதுகாப்புக்காகத் துணிச்சல் காட்டுகிறான். அறிவு வீரத்தில் ஒருவன் தன் கொள்கைக்கே துணிந்து போராடுகிறான். இந்த வீரத்தையும் மக்கள் வீரமாகக் கொள்வர். ஆனால் உடல் வீரத்திலிருந்து இதை வேறுபடுத்த இதை அறிவுவீரம் என்பர். இது உடல் வீரத்திலும் உயர்வுடையது. ஆனால் அருமையானது. உலகில் நூற்றுக்கு எண்பது பேர்களிடம் உடல் வீரத்தை எதிர்பார்க்கலாமானால், ஒரு பத்துப் பதினைந்து பேரிடம் இந்த அறிவுவீரத்தை எதிர்பார்க்க முடியும். அதுமட்டுமன்று, உயிரின வளர்ச்சியில் இந்த வீரத்தை நாம் விலங்குகள் எவற்றிலும் காணமுடியாது. மனித இனத்தில்கூட ஒன்றிரண்டு ஆயிர ஆண்டுகளுக்குள்ளாகத் தான். மனித இனம் இதன் பெருமையை அறிந்துள்ளது. இன்றும் இவ்வீரமுடையவர், அதை மதிப்பவர் குறைவே. மனித சமுதாயத்தில் இவ்வீரம் இன்னும் வளர வேண்டிய ஒன்றேயாகும். ஆனால் அருமையாயினும் அறிவு வீரம் உலகம் போதிய அளவில் அறிந்த ஒன்று. உலகம் இன்னும் அந்த அளவும் அறியாத இன்னும் ஒரு வீரம் உண்டு. அதுவே தெய்விக வீரம்! புதுமை வீரம் என்று நாம் குறிக்க விரும்புவது அதுவே. ஏனெனில் அது இன்றும் உலதில் அருமையிலும் அருமையாகவே உள்ளது. இதனை அறிந்து பாராட்டுபவர்களைக் காண்பது அரிது. மேற்கொள்பவர்கள் இன்னும் மிகமிக அரியர். உடல் வீரம், அறிவு வீரம், தெய்விக வீரம் உடல்வீரம், அறிவுவீரம் இரண்டிலும் உள்ள எதிரிகள் புற எதிரிகள். அவற்றிடையே உள்ள வேற்றுமையெல்லாம், உடல் வீரம் குருதி சிந்துகிறது, உடலை அழிக்க நாடுகிறது என்பதும், அறிவு வீரம் கொள்கையை மட்டுமே அழிக்க விரும்புகிறது என்பதுமே. ஆனால், தெய்விக வீரம் எதிர்க்கும் எதிரி புறத்தேயில்லை. மற்ற இரண்டு வீரத்தையும் போலவே இதிலும் அஞ்சாமை உண்டு. ஆனால் அது ஒருவன் தன்னுள்ளே உள்ளீடான பகைகளான தீய பண்புகளை எதிர்த்து நிற்கும் அஞ்சாமையே யாகும். புற எதிரிகள் தீங்கு செய்யும்போது தெய்விக வீரம் புற எதிரிகளையே அவர்கள் பண்பிலிருந்து காக்கமுடியும். அவர்கள் மீது பரிவுகொண்டு அவர்கள் செய்யும் தீமையை எதிர்க்காமல் தாங்கி, அதனால் அவர்களுக்கு ஏற்படும தீப் பழிகூட அவர்களைக் சார்கிறதே என்று வருந்தும். மற்ற வீரர்களைப் போலத் தெய்விக வீரன் தன்னைப் பாதுகாக்க முயலாமல், தன் உயிர் கொடுத்தும் பிறரை எதிரிகளைக்கூட காக்க முயலுவான். பிறர் கண்டு பாராட்டுவதற்குரிய ஆரவாரம் உடல் வீரத்திலும் உண்டு; அறிவு வீரத்திலும் உண்டு. வாளுடன் வாளும் கேடயமும் மோதும் ஓசை, இடியோசை போன்ற துப்பாக்கி, பீரங்கி முழக்கம் ஆகியவை உடல்வீரத்தின் பெருமித நிலையை அறிவிப்பன. அறிவு வீரத்திலும் இதனில் குறையாத பெருஞ்சொல் முழக்கங்கள், வாத எதிர்வாத முறுக்கு, கைவீச்சு, முகவெட்டு, கைகால்களை இருக்கைகளிலும் மேடைகளிலும் அறைந்து காட்டல் ஆகிய பகட்டு முறைகள் உண்டு. ஆனால் தெய்விக வீரம் மோன நிலையில் தன்னுள்ளேதான் போராடுகிறது. அதை மோனமுறை என்றுகூடக் கூறலாம். சில சமயம் அது தற்காலிகமாகத் தோல்வி, இகழ், பகைமை ஆகியவற்றைத் தாங்கி அவற்றுக்கெதிராக ஒரு சிறுமூச்சுக் கூட எழுப்பாமல் அழிவுறும். ஆரவாரங்களின் தூண்டுதலும் உடனடிப் புகழின் தூண்டுதலும் இல்லாத நிலையில், இவ்வீரத்துக்குத் தேவைப்படும். அஞ்சாமை மற்ற இரு வீரங்களின் அஞ்சாமைகளைக் காட்டிலும் வியக்கத்தக்கதே யாகும். ஆரவாரமும் பெருமிதமுமுடைய மற்ற இரு வீரங்களும் தற்காலிகப் பயனுடையவை. உடல்வீரத்தில் பயன் காண் போருடன் நிற்கும். சில சமயம் அது கொள்கைக்காக மேற்கொள்ளப்பெறும் வீரமானால், அறிவு வீரத்தைப் போன்றே சற்று நீடித்த நிலவும். ஆனாலும் அவற்றின் கொள்கையால் வீரர் பெருமையடைந்ததன்றி, வீரமே நேரடியாகப் பெருமையடைவ தில்லை. ஆனால் தெய்விக வீரமோ அவ் வீரத்தக்குரியவர் மாண்டாலும், அவருக்குப் பின் பல்லாயிர ஆண்டுக்காலம் உலகை மாற்றியமைத்து, பலரைத் தன் வயப்படுத்த வல்லது. உடல் வீரத்திலும் அறிவு வீரத்திலும் தாக்குதலும் பாதுகாப்பும் உண்டு. தெய்விக வீரத்தில் தாக்குதலும் இல்லை; மனித இனப் பாதுகாப்பன்றிப் பாதுகாப்புமில்லை. அதன் போராட்டத்தைப் போலவே போராட்டக் கருவிகளும் புதுமை வாய்ந்தவை. ஏனெனில் அதன் போர் முறையில் எதிரிகள் பண்புகளாதலால் அவற்றை எதிர்க்கும் உறுதியும், புற எதிரிகள் உள்ள இடத்தில் அவர்கள் மீது அன்புமே கருவிகள் ஆகும். தெய்விக வீரத்துக்கு உலகில் இன்றும் மிகுதியான சான்றுகள் கிடையா. பண்டை உலகிலேயே புத்தரும் இயேசுவும் இத் தெய்விக வீரத்தை அதன் பண்பறியாத அஞ்ஞான உலகுக்குக் காட்டிச் சென்றனர். மனித இயல்பு கடந்த இவ் வீரத்துக்குரிய அவர்களை அந் நாளைய மக்கள் தெய்வப் பிறவிகள் என்று கூறி வீரத்தின் தெய்விகத் தன்மைகள் மீது திரையிட்டனர். இன்று உலகம் அந் நிலையினின்று பொதுவாக மிகுதி மாறிடவில்லை. ஆயினும் அம் மாறுதல் தொலைவி லில்லை என்பதை டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகிய பெரியோர்கள் தெய்விக வீர வாழ்வுகள் காட்டுகின்றன. புத்தர். இயேசுபோல அவர்களும் காலங்கடந்தவர்களாயினும், அவர்கள் தம் காலத்தில் உயர்வுக்குச் சான்றாக நின்றும், அதனை உயர்த்தியும் சென்றனர் என்னலாம். மனித உலகின் தெய்விக ஊழி இன்னும் தொலைவிலில்லை என்று காட்டவந்த திருத்தூதர்களோ என்னும்படி அவர்கள் தம் வாழ்க்கையின் உயர்வுடன் உலக வரலாற்றைப் பெரிதும் இணைத்துச் சென்றுள்ளனர். ம்ம்ம் நாத்திகர் யார்? ஆத்திகம் எது? முதற் பதிப்பு - 1943 இந்நூல் 2004இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. நாத்திகர் யார்? நாத்தியர் யார்? ஆத்திகர் அல்லாதவர். அப்படியானால், ஆத்திகர் யார்? ஆத்திகர்களைக் கேட்டுப் பார்ப்போம்! * * * சந்தேகப் பேர்வழி ஒருவன் ஒரு பண்டாரச் சன்னிதியிடம் போய் “ஐயன்மீர்! ஆத்திகர் யார்? எப்படி இருப்பான்; நாத்திகன் யார்? எப்படி யிருப்பான்” என்று கேட்பதாக வைத்துக் கொள் வோம் பண்டாரச் சன்னிதி இவ்வாறு திருவாய் மலர்ந்தருளுவார். பண் - சன் : திருநீறிடாத நெற்றி; உருத்திராக்கமணியாத கழுத்து; இவற்றை உடையவன் எவனோ அவனே நாத்திகன். சந் - பேர் : அப்படியானால் நானும் என் போன்ற இளைஞர்களும் நாத்... பண் - சன் : பொறு! பொறு! நீங்கள் எல்லாம் நாத்திகர் அல்லர்; உங்கள் நிலை வேறு. இளமை, புதுமை, நாகரிகம் ஆகியவற்றின் சாயல் உங்கள்மீது படிந்திருக்கிறது. அவ்வளவு தான். நீங்கள் திருநீறிடாவிட்டாலும் இடப்படாதென்றிருக்க வில்லையே! இடுபவர்களை மதிக்காமலுமில்லையே. அப்படி மதிக்காமல் இருப்பவர்கள்தான் நாத்திகர். * * * சன்னிதியவர்கள் விளக்கப்படி, கிறிஸ்தவர்களுக்கு ஆத்திகம் போதிக்கும் பாதிரி நாத்திகர். (இவர் ‘அஞ்ஞானி’களாகிய இந்துக்களுக்குத் தாமே ஆத்திகம் கற்பிப்பதாக எண்ணிக்கொள்ளுபவர் என்பது கவனிக்கத்தக்கது). இது மட்டுமா? சுத்த ஆத்திக சமயம் என்று கூறப்படும் இஸ்லாமும் நாத்திகம் ஆய்விடுகிறது. புத்தம் சமணம் முதலிய மற்றப் புறச் சமயங்களும் நாத்திகம். அதோடு சன்னிதியார் விளக்கம் நின்றுவிடாது. பட்டை நீற்றுக்குப் பதில், பட்டை நாமமிட்ட ஐயங்காரும், ஜீயரும், நாத்திகமாகவே முடிகின்றனர். முழுநீறும் உருத்திராக்கமும் முழு நாமமுமிடாத பார்ப்பனரும் வட நாட்டாரும் நாத்திகர்களே. சன்னிதியிடம் கேட்ட கேள்விகளை ஜீயரிடம் கேட்டால், சன்னிதி நாத்திகராவர். சாத்திரியும், ஐயரும் நாத்திகராவார். பாதிரியிடம் கேட்டால் இவரனைவரும் நாத்திகர்களே. ஆக ஆத்திரிகரிடையே உள்ள இந்த ஆத்திக நாத்திகக் குழப்பம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. * * * சன்னிதியும், ஜீயரும், பாதிரியும் வெறும் புரோகிதக் கும்பல்கள், மதத்தின் பரந்த தத்துவங்களை அவர்களெங்கே அறிவார்கள்? நாத்திகர் யார்? ஆத்திகர் யார்? என்று அறிய வேண்டுமானால், மத ஆராய்ச்சியில் முனைந்தவர்களையன்றோ கேட்க வேண்டும்? * * * ஆராய்ச்சியில் கடுகு வறுப்பவர்களைக் கேட்டால் கூடப் போதும்- “இவ்வளவுதானா, இது தெரியாதா? கடவுள் உண்டு என்பவன் ஆத்திகன். கடவுளுக்கு என்ன பெயர் சொன்னாலும் பொருட்டில்லை. கடவுள் இல்லவே இல்லை என்பவனே நாத்திகன்’ என்பார்கள். இவ்விடை கேட்டுப் பலர் திருப்தி அடையக்கூடும். ஆனால் நம் சந்தேகப் பேர்வழி அவர்களையும் குழப்பி விடுவான். சந் - பேர் : “கடவுள் கருணையற்றவர்; சக்தியில்லாதவர்; அநீதி உடையவர்” என்று ஒருவன் திட்டுகிறான். கடவுளைத் தகாத சொற்கள் கூறிப் பழிக்கிறான். அவன் ஆத்திகனா? நாத்திகனா? ஆத்திகத்தில் ஒரு சிறிது பற்றுடையவரும் ஆத்திரத்துடன் “அவன் முழு நாத்திகன்; நாத்திகனிலும் கேடு கெட்ட நாத்திகன்!” என்பார். ஆனால் இந்த ‘நாத்திகன்’ கடவுள் இல்லையென்று கூற வில்லை. அவர் தீயவர், கெட்டவர் என்று பழிக்கத்தான் செய்தான். கடவுள் இருப்பதாக எண்ணாவிட்டால் அவன் பழிக்கப் புறப்படுவானா? ஆகவே கடவுள் இல்லையென்று கூறுபவன்தான் நாத்திகன் என்பதற்கில்லை. இனி இன்னும் ஒரு “ஆத்திகனை’ ‘ஆராய்ச்சியாளர்’ முன் கொண்டு வருவோம். * * * “கடவுள் யார் இல்லை என்பது? எங்கள் வீட்டில் அவர் வந்து அரிமணையில் வாழைக்காய் அரிந்து சமையல் வேலைகூடச் செய்கிறார்” என்று ஒருவன் சொல்கிறதாக வைத்துக்கொள்வோம். முன்னைய நாத்திகனைவிட இவன்மீது ஆத்திகர் சீறி விழுவர் என்பது உறுதி. “கடவுளைத் தேடித் தேடி அலைய வேண்டாம். நானே கடவுள்”. “நானும் கடவுள்; நீயும் கடவுள்; நீ உட்கார்ந்திருக்கும் பலகையும் கடவுள்...” இப்படிக் கூறும் வேதாந்தியைச் சைவ சித்தாந்திகள், வைணவ சித்தாந்திகள், கிறித்தவ, இசுலாமிய சித்தாந்திகள் ஆகிய எல்லா மத சித்தாந்திகளுமே நாத்திகர் என்பர். இஸ்லாமியரிடை இக் கோட்பாட்டைப் போதித்த ‘அனலிக்’ என்ற இந்திய அறிஞரை இசுலாமியர் நாத்திகர் என்றே கொள்கின்றனர். ஆகவே கடவுள் உண்டு என்பவருள்ளும், பலவகையாரைப் பிற ஆத்திகர், நாத்திகர் என்றே கூறுகின்றனர். * * * “நிறைந்த அறிவுநிலை பெற்ற உயிரே கடவுள்” என்கின்றனர் ஜைனர் (சமணர்). “அவர்களை (அதாவது ஆசை முதல் சகலவற்றையும்) அறுத்தால் வீடு (நிர்வாணம்) பெறுவாய். கடவுளைப் பற்றிக் கவலை வேண்டதம். கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் அறியாதவன் கூற்று” என்றார் கௌதம புத்தர். இவர்கள் ஆத்திகர்களா? நாத்திகர்களா? * * * சமயத் தலைவர், சமய அறிஞர் குழப்பங்களைக் கேட்டுக் குழம்ப வேண்டாம். பொதுமக்கள் என்ன சொல்லுகிறார்கள்? பொதுமக்கள் சர்க்கரை இனிக்குமா இனிக்காதா என்று ஆராய்பவர்கள் அல்லர். தின்று பார்த்து இனித்தால் ஏற்பார்கள். இனிக்காவிட்டால் எறிவார்கள். ஆத்திகம், நாத்திகம் எத்தகையவை என்பதை அவர்கள் பெரும்பாலும் ஆராய்வ தில்லை. ஆனால், எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் அவர்கள் கண்டிப்பான வழி உடையவர்கள். அவர்கள் ‘கொள்ளாமல் கொள்ளும்’ முடிவு ‘ஆத்திகம்’ நல்லது; ‘ஆத்திகர்’ நல்லவர்கள். ‘நாத்திகம் கெட்டது; ‘நாத்திகர்’ கெட்டவர்கள் என்பதே. சமயவாதிகள், அறிஞர்கள் ஆகியவர்களின் சழக்குரைகளை விட, இது மிகத் தெளிவானது. கவைக்கு உதவுவது, “சாத்திரக் குப்பையைத் தள்ளுங்கடி - குல கோத்திர நாற்றத்தைக் கொத்துங் கடி” என்று சித்தர்கள் இதனாலேயே பாடியிருக்க வேண்டும். இந்த நல்ல முடிவை ஏற்றால் பாதிரியோ, சாத்திரியோ, ஐயரோ, ஜீயரோ, பண்டாரச் சன்னிதியோ எவரும் நாத்திகராக விலக்கப்பட வேண்டுவதில்லை. அது மட்டுமா? ஆத்திகர் களுக்கும் அன்பின் பெருமையை எடுத்தறிவித்த அருளாளர் களாகிய இயேசு பெருமான், புத்தர், மகாவீரர் ஆகியவர்களையும் நாக்கில் நரம்பின்றி நாத்திகர் என்று கூற வேண்டுவதில்லை. மனித வகுப்பின் நன்மைக்குப் பாடுபடும் எச்சமயத்தாரும் எந் நாட்டவரும் ஆத்திக ரேயாவர். பகுத்தறிவுடைய எவருக்கும் இம்முடிவு திருப்தி தரக் கூடியதே. * * * பாமர மக்களிடம் இயற்கையாய் ஏற்பட்ட இப்பகுத்தறி வாகிய அமைதியைச் சில ‘அறிஞர்கள்’ குலைக்கப் பார்ப்பதுண்டு. உலகம் உருண்டையென்று காட்ட முயன்ற கலீலியோவைக் கத்தோலிக்க புரோகிதர் நாத்திகர் என்றனர். தாவரங்களிலிருந்து விலங்கு, பறவைகளும், அவற்றினின்று மனிதனும், படிமுறை (நுஎடிடரவiடிn) யிலே தோன்றினர் என்று காட்டமுயன்ற டார்வினை, எல்லாக் கிறித்தவ ஆத்திகரும் நாத்திகர் என்றனர். இவ்விரண்டும் இத்துறையைச் சாரும். இத்தகையவர்கள் நாத்திகர்கள் அல்லர்; அறிஞர்களே என்று உலகம் ஒத்துக்கொண்டுவிட்டது. தோற்று அறுந்த வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பவர்கள் சமய ‘ஆத்திகர்களே’. * * * பாமர மக்களுக்கு இயற்கையாக நல்லறிவு எவ்வளவோ உண்டு. சிறு குழந்தைகளிடத்திலும் அவ்வாறே இயற்கை அறிவுச் செல்வம் அடங்கிக் கிடக்கிறது. உறங்கிக் கிடக்கும் இவ் வறிவை எழுப்புவதே உண்மைக் கல்வி. ஆனால், கல்விக்கு இன்னொரு வேலையும் இந் நாகரிக காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையறிவைக் குழப்பும் மேற் கூறியவர் போன்ற ‘அறிஞர்கள்’ ஊட்டும் குழப்பங்களைக் கண்டு, அவற்றில் சிக்கி அழியாமல் காக்கவும் கல்வி வேண்டப்படுகிறது. நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இத்தகைய ‘கண்திறக்கும் கல்வி’ இனித்தான் ஏற்பட வேண்டும். * * * மக்களிடையே அறிவாலோ, ஆற்றலாலோ, மற்றெவற்றா லோ உயர்ந்த நிலை பெற்றுவிட்ட கூட்டத்தார்கள். தமக்குப் பிடிக்காதவர்களை எதிர்த்தழிக்க ஒரு புதுமுறை வகுத்துள்ளனர். நேரடியாக அவர்களை எதிர்ப்பதைவிட, பாமர மக்களை அவர் களுக்கெதிரே தூண்டிவிட்டுப் பகைவனைப் பகைவன் கை கொண்டே அழிக்கப் பார்ப்பதே இம்முறை. பாமர மக்கள் வெறுக்கும் பாசிசம், நாத்திகம் ஆகிய பட்டங்களை அவர்கள் மீது ஏற்றிவிட வேண்டும். பின் அவர்கள் தம் நண்பர்களாலேயே அழிவர். இம் முறைகள் காலம் இடம் சூழ்நிலைக் கேற்றபடி திரிக்கப் பட்டிருப்பதே, இவற்றின் ஆபாசத்தை விளக்கப் போதியது. ஒரு நாட்டு நாத்திகம் மற்ற நாட்டில் ஆத்திகம் ஆக்கப்படும். ஒரு காலத்து நாத்திகம், மற்றக் காலத்து ஆத்திகமாகும். இவற்றுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருகிறோம். ‘கட்குடியாமை’ இந் நாட்டிலும் இசுலாமியரிடையேயும் ஆத்திகர் போற்றும் உயர் பண்பு. ‘ஊனுண்ணாமை’யும் சைவர் களுக்கு அவ்வாறே. மேல் நாட்டில் ‘மது ஒழிந்து, நீரே உண்க’, (கூநநவடிவயடளைஅ), ஊனுணவு தவிர்த்துக் காய்கறியே உண்க (ஏநபநவயசயைnளைஅ) என்று கூறியவர்கள் (ஷெல்லி, காட்வின், ஹார்டி, பெர்னார்டு ஷா ஆகியவர்கள்) நாத்திகர்கள் என்று தூற்றப்பட்டனர். பாரசிக நாட்டில் உமர் கய்யாம் மது வேண்டும் என்ற நாத்திகர். ஆனால் ஊன் மறுத்த நாத்திகர். கொல்லாமை, ஊறுபண்ணாமை (அஹிம்சை) இன்று சிறந்த ஆத்திகமாகக் கொள்ளப்படுகிறது. வேத புராண இதிகாசங்களில் பல இடங்களில் “நாத்திகராகிய புத்தர் சமணர்களின் கொல்லாமை” யாகிய போலி அறவுரை கேட்டு வேள்வியில் கொலை செய்யாமல் போனதனால், ஆத்திகம் கெட்டு வருகிறது என்ற ஒப்பாரி பல இடங்களில் பாடப்படுகிறது. இது நம் நாட்டின் இக்காலப் போலி ஆத்திகர்களுக்கு ஒரு நல் விருந்து ஆகும். ஆகவே, ‘அறிஞர்’களுக்கு அவர்கள் தன்னலத்துக்கு மாறானது எல்லாம் நாத்திகம். அவர்கள் தன்னலத்துக்கு ஏற்றது எல்லாம் ஆத்திகம் என்று காணலாம். ‘தலைவர்கள்’ தன்னல வாழ்வுக்கு ஒவ்வாதவை, அறிவாயினும் நன்மையாயினும் நாத்திகமே. அதற்கு உகந்ததானால் அது அறியாமையாயினும் அநீதியாயினும், ஆத்திகமே. பாமர மக்கள் மீது பள்ளிக்கூடங்கள், இலக்கிய இலக்கணங்கள், கலைகள், சமயம், பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இப்பாடம் கருவிலிருந்தே திணிக்கப்பட்டு வருகிறது - இன்று நேற்றல்ல; இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாக. இதை நீக்கும் ஆச்சாரியர்கள், அரச பூபதிகள், அமைச்சர் பிரான்கள் என்றும் ஏற்பட்டதில்லை- ஏற்பட்ட ஒரு சிலர், உயிருடனோ, கொல்லப்பட்டோ, வேறு வகையிலோ புதைக்கப்பட்டனர். சாதியை எதிர்த்த புத்தர், சங்கரர், இராமானுஜர், வள்ளலார் ஆகியவர்கள் வாழ்க்கையில் இதற்குச் சான்றுகள் கிடைக்காம லில்லை. * * * சாதாரண சமயவாதிகள், அறிஞர்கள் கதைகளைக் கட்டுக் கதையாக்கிவிடுவது நம் நாட்டுத் தற்கால ‘ஆத்திகர்கள்’ கோட்பாடு. அதன்படி இந் நாட்டில் ‘ஆத்திகன்’ எனப்படுபவன் ‘கடவுள் உண்டு’ என்பவனன்று. ‘சாதி உண்டு’, என்பவனே. இந் நாட்டில் ‘நாத்திகன்’ எனப்படுபவன் ‘கடவுள் இல்லை’ என்று மறுப்பவன் அல்லன். ‘சாதி இல்லை’ என்று மறுப்பவன் மட்டுமே. இதை வரலாற்றிலும் வாழ்விலும் காணலாம். பிறநாட்டறிஞர் பலர் இதனை எடுத்துக் கூறியுள்ளனர். நம் நாட்டிலும் வள்ளலார், இராமலிங்க அடிகள் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளனர். இராமகிருட்டிண பரமஅம்சரும், இராமலிங்க வள்ளலாரும் கடவுட் கொள்கையில் ஒன்றுபட்டவர்கள். ஆனால் பரமஅம்ச ருக்குப் பக்தர்கள் கோடி குவிந்து மடங்கள், பள்ளிகள் கட்டினர். அனைத்துயிரும் ஒன்றென்ற வள்ளலார்க்கு அவர் வகுப்பிலேயே எதிர்ப்பு. அவர் சமயத்தின் அந்நாளைய கலியுக குரவராம் ஆறுமுக நாவலர் ‘பிறவி எதிரொளி’ - இது ஏன்? கடவுளைப் பற்றிப் பேசாத புத்தர் நாத்திகர். ‘நானே கடவுள்’ என்ற சங்கரர் பகவான். ஆனால் சாதியை எதிர்க்க முயன்றபின்- அவர் வாழவில்லை! சாதியை எதிர்த்த ராமானுசர் வழிவந்த வைணவராகிய தென் கலையார் தாழ்ந்தவர். சாதியை மீட்டும் நாட்டிய வேதாந்த தேசிகர் வழிநின்ற வடகலையார் உயர்வுடையவர். (வடகலையில் பிரமணர் தவிர பிறவகுப்புக் குறைவு; இல்லையென்றுகூடக் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.) வேடனையும், பறையனையும் நாயன்மாராக ஏற்ற சைவத்தை இன்றளவும் பிராமணர் ஏற்கவிவ்லை. ஆனால் சைவர்கள் சீற்றம் அவர்கள் மேலல்ல; சைவத்தைத் திருத்தி முன்னைய தூய நிலைக்கு உயர்த்த முற்பட்ட அறிஞர்களாகிய மறைமலையடிகள் போன்றவர்கள் மீதேயாகும். இது ஏன்? உண்மை ஆத்திகர் சிந்திக்க வேண்டும். * * * உண்மை ஆத்திகர்களாகிய பாமர மக்களுக்கு இது ஒரு சோதனைக் காலம் என்றுதான் கூறவேண்டும். போர்க்களத்தில் எவன் நேச நாட்டான், எவன் பகை நாட்டான் என்று தெளிவாகத் தெரிந்தால் போரிடுபவர் நிலைமை எளிது. ஆனால் பகை நாட்டார் நேச நாட்டார் வேடத்துடன் வருவதுண்டு. இதனினும் கொடிய நிலை, நேச நாட்டாரும் பகை நாட்டார் வேடத்தில் செல்வது. இந் நிலையில் வீரர்கள் நேச நாட்டார் பலரைப் பகைவர் என்றெண்ணிக் கொல்வர். பகை நாட்டாரை நேச நாட்டார் என்றெண்ணி உடனுறங்கி ஏமாறுவர். இன்று தமிழ்நாட்டு உண்மை ஆத்திகர் நிலை இது. * * * உருவத்தால் எவரையும் மதித்தல் கூடாது என்பதை அந் நாளைய தமிழர் அறிந்திருந்தனர். ‘பெரியார் எல்லாம் பெரியரும் அல்லர்; சிறியார் எல்லாம் சிறியரும் அல்லர்’ என்றும் ‘பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே; மெய் போலும்மே! மெய்யுடையொருவன் சொல்லமாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே’ என்றும், கூறினர் அதிவீரராம பாண்டியனார். அவர் இன்று உயிர் வாழ்ந்திருப்பின், ஆத்திகர் எல்லாம் ஆத்திகர் அல்லர்; நாத்திகர் எல்லாம் நாத்திகரும் அல்லர் நாத்திகன் ஒருவன் சொல்வன்மையினால் ஆத்திகன் போல்வான்; ஆத்திகன் போல்வான் ஆத்திகன் ஒருவன் சொலமாட்டாமையால் நாத்திகன் போல்வான், நாத்திகன் போல்வான். என்றும் கூறியிருப்பார் என்பது உறுதி. இவ்வறிவுரை மரபை மனத்துட்கொண்டு போலி ஆத்திகர், போலி நாத்திகர் யார்? உண்மை ஆத்திகர், உண்மை நாத்திகர் யார்? என்று பகுத்தறிய வேண்டும். (ஆத்திகரில்தான் போலி ஆத்திகர் இருப்பார். நாத்திகரிலும் கூடவா போலி நாத்திகர் என்று எண்ணக்கூடும். கலி காலப் புதுமைகளில் இது இன்னொன்று). * * * அறுபது வயது ஆடவன், பதினைந்து வயதுப் பெண்ணை மணம்புரியலாம் என்கிறான் நம் அற்புதப் பாரத நாட்டு ஆத்திகன். இருபது வயது ஆடவன்தான், அப் பதினைந்து வயதுப் பெண்ணை மணக்க வேண்டும். அறுபது வயதுக் கிழவன் மணப்பது அடாத பாதகம் என்கிறான். இவ்வற்புதத் தமிழ்நாட்டு நாத்திகன். இவர்களுள் யார் உண்மையில் நாத்திகன் (அதாவது கெட்ட வன்), யார் உண்மையில் ஆத்திகன் (அதாவது நல்லவன்) என்றறிய விளக்கமா வேண்டும்? பள்ளிக் கல்வியா வேண்டும்? இதனைக் குழப்புவதற்கு வேண்டுமானால் நம் நாட்டுத் தமிழ், தெலுங்கு, மலையாளப் பாடப் புத்தகங்கள் உதவும். நல்ல காலமாக ஆங்கிலமிருந்து அவர்களறிவை ஓரளவு காத்து வருகிறது! * * * நம் பள்ளிகளில் நாத்திகம் போதிக்கப்படுவதாக, ஆத்திகர் சாதியில் இன்னும் இடம்பெற்று விடாத ஒரு சில பெரியார்கள் அடிக்கடி கூவி வருகின்றனர். ஆனால் இவர்கள் தமிழாசிரியர்களை மட்டுமே குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ஆங்கில ஆசிரியர் களையும் பிறபாட ஆசிரியர்களையும் குறிப்பிடாதது ஏன்? பின்னால் கூறப்பட்டவர்களே (ஆங்கில ஆசிரியர்களே) உண்மையில் நாத்திக மொழியாகிய ஆங்கிலமும், நாத்திக அறிவு நூலும் போதிப்பவர்கள். ஆனால் அவர்கள் பிறந்த வகுப்பு பெரும்பாலும் நாத்திக வகுப்பல்லவே. அதனாலேயோ அவர்களை விலக்கியது? அல்லது அவர்கள் உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள், உயர்ந்த கைகளிடம் எதிர்ப்புச் செல்லாது என்பதனாலா? மற்றப் பாட ஆசிரியர்களிடம் இக் கேள்விகள் கேட்கப்படுவ தில்லை. கேட்கப்பட வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அவற்றின் நூல்கள் அறிவு நூல்களே. தமிழில் அறிவு நூல்கள் எவ்வளவோ இருந்தும், என்ன எண்ணத்துடனோ, அறிவுக்குப் பொருந்தாத நூல்களைத் தேடி எடுத்து வைக்கின்றனர். இங்ஙனம் தமிழாசிரியர்க்கு மட்டுமே இவ்விரண்டக நிலை ஏற்பட்டிருக் கிறது. எதையும் அவர்கள் கற்பிக்க வேண்டும். பாவம்! தமிழாசிரியர் சாதியிலும் பெரும்பாலும் ஏழை. சம்பளத்திலும் ஏழை. ஆங்கிலம் படித்தவர்களுக்கு எப்போதோ ஏற்பட்ட அறிவு, வடநாட்டில் ராஜாராம் மோகன்ராய், தேவேந்திர நாத், டாக்டர். தயானந்தர் முதலியவர்களுக்கு என்றோ கிட்டிய அறிவு அவர்களுக்கு இன்று கிட்டியுள்ளது. அவர்கள் சொல்லாமலே மாணவர்கள் எல்லாரும் ஆங்கிலப் பாடங்கள் மூலம் அறிவர். அறிந்து கேள்விகள் கேட்கின்றனர். நூல்கள் அறிவுக்குப் பொருந்தாதவை. இக்காலப் பிள்ளைகள் கேள்விகளோ மகாத்மாக்களையும் நடுங்க வைப்பவை. தமிழாசிரியர் சப்பைக் கட்டுக் கட்டினால் பிள்ளைகள் நையாண்டி செய்து கல் எறிவார்கள். (இப்படிச் செய்த காலம் மாறி வருகிறது.) சற்று அறிவுக்குப் பொருந்தப் பதில் கூறத்தொடங்கினாலோ, இப் புத்தகம் புதிய ‘ஆத்திகவாடு’கள் சீறுகின்றனர். முன்னே எதிர்கால இளஞ் சிங்கங்கள் குமுறல்; பின்னே நச்சரவம்; தமிழாசிரியனே, அந்த நான்முகனால் எந்த மொழியில் உன் தலைஎழுத்து எழுதப் பட்டதப்பனே! தமிழாசிரியர் நிலைக்கிரங்கி மற்ற ஆசிரியர் துணை தருவர் என்று எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் ஆதரிக்காவிட்டால், தமிழகம் ஆதரிக்க வேண் டாமா? கேடுகெட்ட ஆசிரியத் தொழிலிலும் கேடுகெட்ட தமிழாசிரியர் தொழிலிலிருந்து வருபவர்களுக்கு இருக்கிற இழிவு போதாமல், தொல்லை வேறு தரத் தமிழகம் பார்த்திருக்குமா? தமிழர் தவறியும் ‘நாத்திகர்’ என்ற ஏச்சுக்காளாகும் தமிழாசி ரியனை நாத்திகன் என்றெண்ணாதே. தவறியும் ‘ஆத்திக’ மேற்பூச்சுடன் திரியும் நாத்திகனை நம்பி ஏமாறாதே. ‘நான் ஆத்திகன்’ என்று பிறரை ஏமாற்ற ஒருவன் கூறக்கூடும். உள் நின்றெழுந்த இயற்கை அறிவுச் சீற்றத்தால், தெய்வீக அருள் தூண்டுதலால் அன்றி, எவனும் ‘நாத்திகன்’ என்றே பெயரெடுக்க முன் வரமாட்டானன்றோ? ‘ஆத்திக’க் கொடி தாங்கினும், ‘நாத்திக’க் கொடி தாங்கினும் அறிவும் அருளும் சமத்துவமும் வெல்க. எக் கொடி தாங்கினும் ‘போலி ஆத்திகம்’ வீழ்க. 2. ஆத்திகம் எது? ஆத்திகம் என்பது யாது என்ற கேள்விக்கு எவரும் மிக எளிதாக விடைகூறி விடுவார்கள். ‘கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம்’ என்பதுவே அது. ஆனால், உண்மை ஆத்திகம் எது என்ற கேள்வி, பலருக்குக் குறும்புத்தனமான கேள்வியாகத் தோன்றலாம். ஆத்திகரும் பெரும்பாலும் ‘ஆத்திகத்தில் உண்மை ஆத்திகம், போலி ஆத்திகம் என்று வேறா?’ என்ற கோபத்துடன் கேட்கலாம். கேள்வியின் தொனியைச் சற்று மாற்றிக் கேட்டால் அதே ஆத்திகரோ மனஎழுச்சியுடன் உண்மை ஆத்திகம் பற்றிப் பேசப் புறப்பட்டுவிடுவார்- அவரிடம் கேட்க வேண்டும் கேள்வியின் முறை இதுதான்- ‘ஆத்திகத்தைப் பற்றி யார் யாரெல்லாமோ; என்னென்ன வெல்லாமோ கூறுகிறார்கள். அதன் உண்மையான கருத்து யாது?’ என்று கேட்டால் போதும், உடனே ஆத்திகர், மற்ற ஆத்திகர் கொள்கைகளைக் கண்டிக்கவும், தம் உண்மை ஆத்திகக் கொள்கைகளை விளக்கவும் தொடங்கிவிடுவார். இப் புதுமையான மனநிலைக்குக் காரணம் யாது? கேட்பவன் நாத்திகன் என்று ஐயப்பட்டபோது ஆத்திகர் சீறுவர். ஆனால் ஆத்திக நிலையில் கேள்வி கேட்டால், ஆத்திகத்தில் தான் கொண்ட உண்மை ஆத்திகத்தைப் போதிக்கவும் தனக்கு மாறுபட்ட ஆத்திகத்தைக் கண்டிக்கவும் துணிவார். * * * பொதுப்படையாக எல்லாச் சமயங்களுமே ஆத்திக சமயங்களேயென்று பெரும்பாலும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. நாத்திகர் எந்த மதத்திலும் சேராதவர் என்று கூறப்பட்டாலும், உண்மையில் அவர்கள் கொள்கையையும் ஒரு மதம் என்று கூறலாகும். அதோடு இந்தியாவில் மட்டிலுமாவது நாத்திக மதங்கள் பல அக் காலத்தில் தழைத்திருந்தன என்றே தோற்றுகின்றது. இவற்றுள் மிகவும் தீவிரமான நாத்திகம் லோகாயதம் என்றழைக்கப்பட்டது. இம் மதத்தை நிறுவியவர் ‘ப்ருகஸ்பதி பகவான்’, ‘தேவகுரு’ என்று வட நாட்டினராலும் புராணங்களாலும் போற்றவும் பட்டுள்ளார்! தவிர வட நாட்டில் அறு சமயங்கள் என்றும, தமிழரால் அகப்புறச் சமயங்கள் என்றும் கொள்ளப்பட்ட ஆறு தரிசனங்களில் சாங்கியம், நியாயம், வைசேடிகம், பாட்டாசாரியம் (அல்லது பழைய வைதிக சமயம்) ஆகிய நான்கும் நாத்திக சமயங்களே. யோகம் என்ற தரிசனத்திலும் நாத்திக (நிரீசுவர) யோகம், ஆத்திக (கேசுவர) யோகம் என்ற பாகுபாடு உண்டு. போக, புத்த மதம் தொடக்கத்தில் மிதமான நாத்திகமாய்த் தோன்றி, பிற்பாடு முழு நாத்திகமாய் வளர்ச்சியடைந்தது. நாத்திக மல்லாத சமயங்களும், எல்லாம் ஒரே வகையான ஆத்திகம் அல்ல. உலகமே கடவுள் என்னும் மாயாவாதம் (ஞயவோநளைஅ) கிட்டத்தட்ட நாத்திக எல்லைக்குட்பட்டு ஆத்திகப் போர்வை மட்டும் கொண்ட மதம் ஆகும். மேனாட்டு அறிஞர் கொள்கைளில் பலவும், இந்தியாவில் சங்கரர் கேவல அத்துவிட நெறியும் இதன் வகைகளே. சீனாவில் கன்பூசியசு நெறி, தாவ் நெறி ஆகியவையும் இத் திறத்தவையே. ஆத்திக நெறிகளாகிய ஜரதுஷ்டரர் நெறி (பார்ஸி மதம்), சைவம், வைணவம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றுள்ளும் கடவுட் கொள்கை வேறுபாடுகள் மிகுதி. சைவமும் வைணவமும் உயிர்களும் உலகும் கடவுளால் உண்டு பண்ணப்பட்டவையல்ல என்று கூறும் ஆத்திகங்கள். கிறிதத்வர், இசுலாமியர் கடவுள் இவற்றை உண்டுபண்ணுவர். ஆனால் அழிப்பதில்லை என்கின்றனர். கடவுளின் பண்புகள் பற்றியும், ஆத்திக சமயங்களிடையே வேற்றுமை உண்டு. அவரைக் குண நிறைவுடையவர் (சகுணர் அல்லது உருவுடையவர்) என்பவை சில; குணமற்றவர் என்பவை சில. இரண்டு வகையினரும் அவர் என்பது சைவம். கடவுள் ஒருவர் என்பதில்கூட வேறுபாடுகள் இல்லா மலில்லை. வைதிக மதத்தில் அறிஞர்க்கான உயர்நூல்கள் (ஞான நூல்கள்) கடவுள் ஒருவர் என்றும், புரோகிதர்களுக்கான செயல் முறை நெறி (கர்ம மார்க்க நூல்கள்) பலர் என்றும் முரண்படக் கூறுகின்றனர். * * * நல்ல ஆத்திகர்களான பக்தர்கள் இவ்வறிவு நூல்களின் சிக்கல்களில் பெரும்பாலும் நுழைவதில்லை. அவர்கள் எச் சமயத்தவராயிருந்தாலும், சில அடிப்படைக் கொள்கைகளை உடையவர்களாகவே இருக்கின்றனர். ஆத்திகர்களிடையே ஒற்றுமை காண வேண்டுமாயின், இந்தப் பக்தர் குழுவினிடமே செல்ல வேண்டும். கடவுளின் குணங்கள் அல்லது இலக்கணங்கள் எனப்படு பவை இவையே; எங்கும் நிறைந்திருத்தல் (சர்வாந்தர்யாமி), எல்லாம் அறிதல் (சர்வஜ்ஞர்), எல்லாம் வல்ல தன்மை (சர்வசக்தர்), நிறைந்த அருள் உடைமை (பரம கருணாநிதி) என்பவை. இவற்றுள் பக்தர்கள் மிகச் சிறப்பாகக் கொள்வது கடைசிப் பண்பையே. பொதுமக்களிடையே ஆத்திகத்திற்கு இவ்வளவு செல்வாக்குத் தரும் கொள்கை இதுதான். இந்தியாவிலும் உலக மக்களிடையேவும் பெரும்பான்மையாகப் பரவிய சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய ஆத்திக சமயங்கள் விரைந்து பரவியதும் இக் கொள்கையினாலேயே யாகும். ஆகவே, உண்மை ஆத்திகம் என்பது அன்புநெறி என்று கூறினால் தவறில்லை. உலகில் ஆத்திகப் பொது மக்களுள் எவரும் இதனை மறுக்க மாட்டார்கள். * * * அன்பு நெறியே உண்மை ஆத்திகம் என்பதனைப் பல சமயப் பெரியார்கள் அழகுபட எடுத்துரைத்துள்ளனர். சைவர் ‘அன்பே சிவம்’ என்றும், கிறித்தவர் அன்பே கடவுள் (ழுடின ளை டடிஎந) என்றும், விதந்துரைப்பது இதனாலேயே. திருமூலர் திருமந்திரத்தில், அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதி யாரும் அறிகிலார் அன்பே சிவமாவதி யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய மர்ந்திருந் தாரே. என்று இதனை வற்புறுத்தியுள்ளார். அன்பு முறையே உயர் முறை என்பதில் கருத்து வேற்றுமை யேயில்லை. ஆனால் அவ்வன்பின் வகைபற்றி இரு கருத்துக்கள் உள்ளன. அன்பு கடவுளிடமா, உயிர்களிடமா என்பதே அவ் வேறுபாட்டின் அடிப்படை. கடவுளிடம் அன்பு என்பதே சமய உரையாயினும், பல சமயப் பெரியார்கள் ‘கண்காணாக் கடவு ளிடம் அன்பு செலுத்த முடியாது; கடவுளிடம் அன்பு காட்டும் முறை உயிர்களிடம் அன்பு காட்டவதன்றி வேறல்ல’ என்று துணிந்து கூறியுள்ளார்கள். இப்படிக் கூறியவர்கள் நாத்திகர்கள் அல்லர்; ஆத்திகர்களே. அதுவும் எல்லா ஆத்திகர்களும் உச்சிமேற் கொள்ளும் சிறந்த ஆத்திகத் தலைவர்களேயாவர். மேலே குறிப்பிட்ட திருமூலர், படமாடக் கோயில் பரமற் கொன்றீந்தால் நடமாடக் கோயில் நம்பற் கங்காகா நடமாடக் கோயில் நம்பற் கொன்றீந்தால் படமாடக் கோயில் பரமற் கங்காமே. என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். உயிர்களே கண்கண்ட கடவுளின் கோயில், ஆதலின் அவற்றிற்குச் செய்யும் பணியே உயர்வுடையது; கோயிலுக்கும் கல்லுருவுக்கும் செய்வதன்று என்று இது ஐயமறக் கூறுகின்றது. இயேசு பெருமானும் இதே கருத்தை ‘மகனை (உயிர்களை)ப் போற்றுபவன் தந்தையை (கடவுளை)ப் போற்றுகிறான்’ என்று குறிப்பிட்டார். சைவ ஆத்திகர் இத் திருமூலர் கருத்தை மறந்து நெடுநாளாகிறது. ஆனால் கிறித்தவர் இன்றும் ‘மக்கட் பணியே சமயப்பணி’ என்று கொண்டு, பள்ளிக் கல்வி தரல், மருத்துவ உதவி தரல், ஏழைகட்குத் தொழில் தரல், ஆகிய திருப்பணிகளால் தம் சமயத்தைப் பெருமைப்படுத்து கின்றனர். அதன் உயர்வை நிலை நாட்டுகின்றனர். திருமூலரை நாயனாராக்கிய சைவருடைய பிற்காலப் புராணங்களில், மக்கட்பணி மறக்கப்பட்டு, அதற்கு மாறான தெய்வப் பணிக்கு உயர்வு தரப்பட்டிருப்பதே சைவம் ஆத்திகத்தை நேர்வழியினின்று ஆயிரம் ஆண்டுகளாக அகற்றி வைத்திருக்கிறது என்னலாம். அரண்மனைபோலக் கோயில் கட்டிக் கல்லுருவுக்குப் பாலும் தேனும் கொட்டுவதும், மனிதராகிய படமாடக் கோயில் களைக் குடிசையில் உணவின்றி, கல்வியின்றி வாட வைப்பதும் எம்மத ஆத்திகரும் ஒப்புக்கொள்ள முடியாத நச்சுச்செயல்களே யாகும். * * * ‘மக்கட்பணி சிறந்தது என்பது உண்மையே. திருமூலர் முதலியோர் கூறியதை நாங்கள் ஏற்காமலில்லை. ஆனால் கடவுட் பணி மக்கட் பணியினும் மேலானதே. பிள்ளையை அரிந்து ஒருவன் கடவுளிடம் அன்பைக் காட்டினான். இன்னொருவன் பட்டத்தரசியாகிய தன் மனைவியின் மூக்கை அறுத்தவன், அறுத்தது போதாதென்று கையையும் வெட்டித் தன் கடவுளன்பை வெளிப்படுத்தினான்’ என்று சிலர் (போலி ஆத்திகர்) விதண்டா வாதம் செய்யலாம். இத்தகைய வாதங்கள் நாத்திகத்தை வளர்க்க மட்டுமே பயன்படும். மேலும் இந்தியர் கோயில்களைத் தகர்ப்ப தனால் புண்ணியம் கிட்டும் என்றெண்ணிய மாமூத் கஜனியின் நம்பிக்கை, இத்தகைய வாதத்தின் எதிர்பாராப் பலன் என்பதைப் போலிச் சைவ ஆத்திகர் ஓர்தல் வேண்டும். ஆத்திகம் என்ற பெயருக்காக மக்கள் எச் செயலையும் ஏற்று விடுவார் என்றென்னும் ‘பெரியார்கள்’ மதங்களின் வரலாறு அறியாதவர். உலகில் பல மதங்கள் அழிந்த வகை யாது? நரபலி கொண்ட காபாலிக சைவம், வேள்விக் கொலைசெய்த பழைய வேதநெறி ஆகியவை, ஏன் அழிந்தன? கிறித்தவம், இசுலாம் உலகில் பெரும்பான்மையாக வளர்வானேன்? மக்களுக்கு நன்மை செய்தல், பகுத்தறிவி ஆகியவையே ஆத்திகம் வெற்றியடைவதற் குரிய வழிகளாம் என்று நம் நாட்டினர் அறிதல் வேண்டும். நம் வேத சமயம் உடன் கட்டையை ஆதரித்தும் அது நிலைக்க வில்லை. காமலீலைகளை உயர்வாகக் கொள்ளவும் சில சமயங்களும் இன்று இந்தியாவில் வளர்ந்து வருகின்றனவாயினும், இந்தியர் நாகரிக மடைந்தோறும் இறுதியில் அவை அழிதல் உறுதி. * * * ஆத்திகம் நாகரிகத் தொடக்கத்தில் எங்குமே குருட்டு நம்பிக்கை, பல தெய்வ ஆராதனை, உருவ வணக்கம், பலி ஆகியவற்றுக்கு ஆளாய் வினைமுறையில் (கர்ம மார்க்கத்தில்) நின்றது. பின் அறிவுநெறி (ஞான மார்க்கம்) ஏற்று ஒரு கடவுள் வழிபாட்டை மேற்கொண்டது. இறுதியில் அன்புநெறி தோன்றிற்று. இதனிலும் முதலில் கடவுளன்பு நெறியும், பின் மக்கள் அன்பு நெறியும் தோன்றின. சமயத் துறையில் நாகரிக உணர்ச்சியின் படிகள் இவை. இந்தியர் சமய வாழ்வு, உண்மையில் மற்ற நாட்டு வாழ் வுக்குப் பிற்பட்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில், மற்றெல்லா நாடுகளுக்கும் முற்பட்டே இங்கு அறிவு நெறியும் அன்பு நெறியும் கொழுந்து விட்டோங்கித் தழைத்துள்ளன. தமிழகத்தில் வள்ளுவர் குறளிலும், சங்க நூல்களிலும் கண்ட சமயப் பண்பாடு, உலகில் எந்நாடும் இன்றும் என்றும் பெருமையுடன் ஏற்கத் தக்கவையே. (போலிச் சமயப் பேயின் விரல்கள் சில இடை யிடையே காண்கின்றனவாயினும் அவை தலையெடுக்காதது காணலாம்.) ஆனால், தமிழ்நாட்டறிஞர்களின் ஒப்புயர்வற்ற அறிவு தமிழ் நாட்டிற்கும் பயன்படவில்லை. இந்தியாவுக்கோ அயல் நாடு களுக்கோ பயன்படவில்லை. இந்தியாவின் புரோகிதப் பேய்க்குப் பல தமிழறிஞர்களின் சமயக் கருத்துக்களை நூல்களில் வைத்தே புதைத்தது. வட நாட்டிலும் புத்தர், மகாவீரர் போன்ற பெரியார் சமயங்களை அழித்தொடுக்கிற்று. இன்று தமிழர் சமய வாழ்வும், இந்தியர் சமய வாழ்வும் (கிறித்தவர் இசுலாமியர் நீங்கலாக) இனிய சிற்றுண்டியுடன் அழுகல் பிணத்தையும் வேற்றுமை யின்றிக் கலந்துண்ணும் உணவு ரசிகத்தன்மை போன்றவையே. * * * புரோகிதரை வெளி வேடங்கொண்டு ஆத்திகர் என்றெண் ணிப் பொது மக்கள் ஏமாறுகின்றனர். இந்தியாவின் இந்நிலை எந் நாட்டிலும் கொடிய தன்மையுடையது. ஏனெனில் இங்கு புரோ கிதர் தொழில் செய்து பிழைப்பவர் மட்டுமல்ல. அவர்கள் இங்கு ஒரு தனி இனம். அவர்கள் புரோகிதத்திலும் கோயில் வழிபாட்டி லும் மட்டுமன்றிக் கல்வியிலும் அரசியல் பணியிலும் சமூகத் தலைமையிலும் உயர்நிலை பெற்று, மக்கள் அறிவுக்கும் வளர்க்கைக்கும் உள்ளத்திற்கும் சிறையாய் இருக்கின்றனர். புரோகிதர் ஆத்திகம் பேசினும், ஆத்திகர் அல்லர் என்பதை அறிஞர் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாகத் தயங்குகின்றனர். உணவு முதல் நல்வாழ்வு வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, அரசியல் தலைமை முதல் ஆண்டிப் பண்டாரம் வரை அவர்கள் ஆட்சியிலிருப்பதனால்! ஆனால் உலகில் தன் ஊதியம் ஒன்றன்றி, வேறு என்ன வேண்டும்? சமயப் பற்றோ, கடவுள் நம்பிக்கையோ, ஈரநெஞ்சோ அற்ற இவர்கள் போன்ற ஒரு வகுப்பை மனித உலகிலோ விலங்கு உலகிலோ (பேய் உலகமென்றிருக்குமானால்) அப் பேயுலகிலோகூடக் காண முடியாது. ஆகவே அறிஞர்கள் அவர்களை நேரில் எதிர்த்து நாத்திகப் பட்டம் பெற்றுப் பொது மக்களிடமிருந்து பிரிக்கப்படுவதைவிட, அவர்கள் உண்மை நாத்திகத்தை விளக்கி மக்களைக் காக்கவே முனைதல் வேண்டும். * * * தமிழ்நாட்டிலும், ஓரளவு வடநாட்டிலும் கூடப் போலி ஆத்திகத்தில் ஆழ்ந்த பாமர மக்களை, ஆத்திக நெறி மூலமே திருத்தலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. இதில் வியப்பிற் கிடமில்லை. அன்புநெறி, அறிவுநெறிப் பெரியார்கள் தமிழகத்தில் எண்ணற்றவர் பிறந்தும், அவர்களையும் அவர்களைப் படைத்த கடவுளையும் ஏமாற்றிப் புரோகிதக் கும்பல் இந் நாட்டில் இறுமாப்படைந்து நிற்கிறது. வேதத்தில் பிராமணன் எல்லாத் தேவர்களினும் உயர்வான தேவன் என்று கூறப்பட்டிருக்கிறது. மலையாள நாட்டில் இன்றும் கடவுளுக்குப் படைக்குமுன் அவர் களுக்குப் படைக்கப்படுகிறது. கீழ்சாதியினர்க்கான கடவுளும், அவர்களுக்குக் கீழ்சாதிதான் போலும்! தங்கள் ஆட்சி வசதியைத் தவிர வேறு எதுவும் எண்ணாத வெள்ளை அரசியலாரும், இப் புரோகித வகுப்பிற்குப் பக்க பலமாய் விட்டுவிட்டனர். எனவே, இவ் வாத்திகத்தை நாத்திகப் புரட்சி விட்டுவிட்டனர். எனவே, இவ் வாத்திகத்தை நாத்திகப் புரட்சி செய்துதான் திருத்தலாம் என்று பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர். இது பெரிதும் வருந்தத் தக்கதேயாயினும், கண்டிக்கத்தக்கது அல்ல. ஆத்திக அறிஞராவது இடை நின்று உண்மை விளக்க வேண்டும். * * * ஆத்திகத்தின் படிப்படியான வளர்ச்சியை மேலே விளக்கி னோம். வருங்கால உலகில் ஆத்திகம் வளர்ச்சியடைய வேண்டு மானால் அது அன்பு நெறியில் இன்னும் ஒரு படி வளர்தல் வேண்டும். மக்கட் பணியும் உடற்பணி என்றால் போதாது. மக்கட் பணியன்றி வேறு உடற்பணி உண்மையில் இல்லை என்று உலகுக்குப் போதித்தல் வேண்டும். பலர் இலர் என்ன புத்தம்புதுக் கருத்து என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் இது புது வற்புறுத்தலேயன்றிப் புதுக் கருத்தல்ல. ‘ஒரு நாட்டு நாகரிகத்தை அறியவேண்டின், அந் நாட்டினர் வழிபடும் கடவுளை அறிக, என்றார் ஓர் அறிஞர். இதன் உட்பொருள் யாதெனில், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளே கடவுள் என்பதாகும். கடவுளுக்கு நாம் கொள்ளும் பண்புகளே நாளடைவில் நாம் அடைய விரும்பும் பண்புகள் ஆகும். கொலைகாரருடைய கடவுள் பலி விரும்புகிறார். ஊனுண்பார். குடியருடைய கடவுள் ஊனும் குடியும் அவாவுகிறார். மறக்கொடுமை வாய்ந்த வாழ்க்கையினர், காளி போன்ற தெய்வங்களை வணங்குவர். இன்ப வேட்கையினர் முருகனையும், திருமாலையும் போற்றுவர். உலைவில்லா நடுநிலை ஒப்புரவினர், யேகோவா, அல்லா போன்ற நீதிக் கடவுளையும், அன்பு நெறியினர், கிறித்தவர் கடவுள் போன்ற தெய்வத்தையும் வழிபடல் காண்க. வருங்கால ஆத்திகர் மேற்கொள்ள வேண்டிய இன்னொரு கொள்கை உண்டு. போலிச் சமயம் எது, உண்மைச் சமயம் எது என்றறிய அது உதவும். தண்ணீர் அதன் நில நலத்தால் அறியப் படுவது போலச் சமய உயர்வும் அதனைச் சார்ந்த மக்கள் உயர்வாலேயே அறியப்படல் வேண்டும். சுவாமி விவேகானந்தர், மரம் நல்லதென்பது அதன் பழத்தை உண்டே அறியப்படும் என்று குறிப்பிட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. இக் கண்கொண்டு தமிழகத்தைக் கண்டால் தமிழர் இன்றைய சமய வாழ்வின் நச்சுத் தன்மை விளங்கும். கோயில் நிறைந்த இந் நாட்டில்தான் வறுமை குடி கொண்டுள்ளது. கலைமகளுக்கு ஆண்டு தவறாது பத்து நாள் வழிபாடியற்றும் இந் நாட்டில்தான் 100க்கு 90பேர் படிப்பில்லாத வர்கள். அதிலும் அவ்வழிபாட்டுக்குச் செலவழிக்கும் பக்தர்கள் மட்டுமே படியாதவர்களின் வகுப்பினராயிருப்பது வெட்கக் கேடு. முகூர்த்தமும், சகுனமும் பார்க்கும் இந் நாட்டில்தான் விதவைகள், பிச்சைக்காரர்கள் மிகுதி. இந் நாட்டு மன்னர்கள்தான், வர்த்தகம் செய்ய வத்வர்களின் கால் வருடும் கணக்குப்பிள்கைகள். ‘சமயம் மனிதன் நலத்துக்காக; மனிதன் சமயத்தின் நலத்துக் காக அல்ல’ என்ற அறிஞர் பழவிரை சமயத்தின் போலித் தன்மையும் உயர்வும் கண்டறியும் உரைகல் ஆகும். ஆத்திகம் பிறந்த நாடு இந்தியா. ஆனால் நாத்திகம் தழைத்த, தழைக்கிற நாடும் இதுவே. இந்நிலை எதனால் வந்தது? ஆத்திகர்கள் போலி ஆத்திகர்களை நம்பிச் சமயத் தலைமையை அவர்களிடம் விட்டதனால் என்று கூறத் தேவையில்லை. * * * முடிவாக ஆத்திக நண்பர்கட்கு ஒன்று கூறுவோம். நாத்திகம் பற்றி உண்மை ஆத்திகர் அஞ்ச வேண்டிய காரணம் எதுவுமில்லை. அஞ்சினால் அவர்களுக்கு ஆத்திகத்தில், அதன் வெற்றியில், கடவுளிடத்தில், தம் கடவுட் பற்றில் நம்பிக்கை இல்லையென்று தான் பொருள். மேலும் ஆத்திகத்தின் எதிர்ப்பதம் நாத்திகம் என்று கூறப் படினும், ஆத்திகத்தின் பகைவர் நாத்திகர்களல்லர். இன்று பழிப்பவர் நாளை வணங்குவர். பழிப்பும் அன்பின் காரண மாகவே யாகும். அன்பும் உள்ளார்ந்த சின்னமே. ஆத்திகர் அஞ்ச வேண்டிய பகைவர், கடவுள் இல்லையென்று அறிந்தோ அறியாமலோ கூறும் நாத்திகர் அல்லர். கடவுள் இல்லை என்றோ, அவர் திறமற்றவர் என்றோ உறுதியாக நம்பி, அவர் பெயரைக் கூசாமல் பயன்படுத்தி அவரையும் அவர் படைத்ததாகக் கூறப்படும் மக்களையும் ஏய்த் துண்ணூம் உண்மை நாத்திகப் பேய்களான போலி ஆத்திகர் களையே, கூற்றத்தினும் கொடும் பாம்பினும் கொடியவையாகக் கொண்டு அஞ்சுதல் வேண்டும். ‘மனிதர் வணங்கத்தக்க உயர் தெய்வம், உயர் மனிதத் தன்மையே’ என்பது உண்மை ஆத்திகத்தின் அடிப்படைக் கொள்கை எனக் கொள்ளலாகும். இக் கொள்கைகளெல்லாம் நாத்திக அறிஞர் சூழ்ச்சி உரைக ளே என்று, புரோகிதர் அல்லது புரோகித அடிவருடிகள் கூற முயல்வர் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் நூல்களிலே எப்படியோ இடம்பெற்றது, அவர்களும் போற்றும் சில அறிவுரைகளையும் கதைகளையும் சுருக்கமாகக் குறிக்கின்றோம். வேத வாதத்தில் பற்றுடையவர்கள்... பலன் விரும்புபவர்கள்... வேதம் முக்குணச் சார்புடையன. நீ அவற்றை அழிப்பாய், அர்ச் சுனா! - கீதை ‘எனக்குத் தந்தை யார் தெரியாது. தாய் யார் என்பது மட்டுமே தெரியும் என்று கூறிய ஜாபாலனை, அவன் குருவாகிய முனிவர், ‘பிறப்பால் பார்ப்பானாகுபவன் பார்ப்பானல்லன்; உண்மை உரைப்பவனே பார்ப்பான். நீ சிறந்த பாப்பானே’ என்று ஏற்று ஞானநூல் தந்த கதை. (ஜாபாலோபநிஷத்) விருந்தினனுக்காகப் பஞ்ச காலத்தில் தன் உணவையும், மனைவியின் கைக்குழந்தை பங்கையும் தந்த பார்ப்பான் மேலுலகு சென்றான். அவன் கொடுக்கையில் சிதறிய அரிசி தின்று, கீரி உடல் பாதி பொன்னாயிற்று. தருமபுத்திரர் அசுவமேத யாகத்தில் கொடுத்த கொடைக்கு இத்தன்மை இல்லாமையால், கீரி அவரை இடித்து இக்கதை கூற, மீந்த பாதி உடலும் பொன்னாயிற்று. (மகாபாரதம்) கடவுள், ஆபூபென் ஆடத்திடம் ‘கடவுள் பக்தர்’ பெயர்ச் சீட்டைக் காட்டினர். அதில் தன் பெயரில்லாதது கண்டு வருந்தி னான். ஆனால் மறுநாள் அவன் மனித நேசம் உடையனாதலால், பக்தரின் பெயருக்கு மேலே அவன் பெயர் எழுதப்பட்டது. (முசல்மான்கள் கதை) துறவி ஒருவர் ஏழைகட்கு உணவுதரும் நோன்பு ஆற்றிவந்தார். நோன்பு நேரத்தில் கடவுள் காட்சி அளித்தார். கடவுளை விட்டு நோன்பில் இறங்கிய துறவி, கடவுளைக் காணும் நிலைபெற்றும் நோன்பு தடைப்பட்டதே யென்று வருந்தினர். ஆனால் நோன்பு முடிந்து வந்தபோது, கடவுள் காத்திருப்பது கண்டார். மனிதனுக்கு அடிமை எவனோ, அவனுக்கு நான் அடிமை என்றார் கடவுள். (கிறித்தவர் கதை) இக் கதைகள் நாத்திகர் எழுதியதல்ல வென்று கூற வேண்டு வதில்லை. * * * பள்ளிகளில் நாத்திகம் பரவுகிறது என்று இன்று அஞ்சுவோர்! உண்மையில் ஆத்திகர்கள்தானா என்பதை அறிஞர் ஊன்றி நோக்க வேண்டும். ஆத்திகர்களானால் கல்லில் ஊற்றும் பாலாலும், கஞ்சாக குடிகர், நாத்திகர், சோம்பர் ஆகியவர் கொழுக்கச் செய்வதே புண்ணியம்; கல்விக்குச் செலவு செய்வது பாவம் என்று எண்ணு வரா? ஆத்திகரா காதலற்ற மணம், பெண்களை விலைக்குக் கொடுக்கும் விவாக மணம், பிச்சைப் பொருளாகக் கொடுக்கும் கன்னிகாதான மணம், இளமை, மணம், விதவைக் கட்டுப்பாடு ஆகியவற்றை ஆதரிப்பர்? ஆத்திகர்களா. சாதி வேற்றுமை இல்லையென்றால் கடவுளுக்கு ஆபத்து, ஆத்திகத்துக்கு ஆபத்து என்று கத்துவர்? பரந்த சமரசக் கொள்கை காரணமாகத் தமிழரை மூவாயிரம் ஆண்டுகட்கு மேல் ஏய்த்த இக் கும்பலிட மட்டுமாவது, சமரசம் காட்டி ஏமாறாமல் தமிழன் வாழ்வானாக. தமிழனைக் கண்டுதான் அயல்நாடுகளான பிற இந்தியப் பகுதி மக்கள் விழித்தெழ வேண்டுமாதலால், தனக்காக அல்லாவிடினும், தம் வடநாட்டுத் தோழர் வாழவாயினும் தமிழன் இக் கும்பலைத் திருத்த முற்படுவானாக. ம்ம்ம் நிழலும் ஒளியும் முதற் பதிப்பு – 1949 இந்நூல் 2004இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. சிறப்புரை தமிழ்நாடு அறிவுக்குப் பேர் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல படக் கிடக்கின்றன. தமிழ்நாடு அளித்த அறிவுக் களஞ்சியங்கள் பல உண்டு. அறிஞர் தமிழ்நாட்டில் அன்றுந் தோன்றினர்; இன்றுந்தோன்றுகின்றனர். அக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் நக்கீரர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் முதலியோர்; இக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் பூண்டி அரங்கநாத முதலியார், திருவிதாங்கூர் சுந்தரம் பிள்ளை, குடந்தை இராமாநுஜம், ஸர். சி.வி. இராமன் முதலியோர். இந் நாளில் ஆராய்ச்சி உலகம் பெருகி வருகிறது. அவ்வுலகில் ஒளிர்வோருள் இந் நூலாசிரியர் கா. அப்பாத்துரை அவர்களும் ஒருவர். இவர் பன்மொழிப் புலவர். இவர் தம் நூல்கள் தமிழ்நாட்டைப் படிப்படியே ஓம்பி வருதல் கண் கூடு, இத்தகைய ஒருவரால் யாக்கப்பெற்றது இப்பாட்டு நூல். இந்நூற்கண் மில்ட்டனிசம் உயிர்ப்பாய் நிலவுகிறது. அவ்வுயிர்ப்புக்கு ஏற்ற அரண்கள் எடுக்கப்பட்டுள்ளன. நூலுள் பல செம்பொருள்கள் மிளிர்கின்றன. அவற்றுள் ஒளியும் இருளும் உள்ளத்தைக் கவர்வன. ஒளியைப் பற்றியும், இருளைப் பற்றியும் உலகில் எழுந்த ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இருளில் ஒளி காண்டல் அறிவு. “நள்ளிரவில் நட்டம் பயில்வானை” என்பது மணிவாசகம். இருளில் ஒளி காண மக்களை இந்நூல் உந்தும் என்று நம்புகிறேன். அறிஞர் அப்பாத்துரையார் வாயிலாக இது போன்ற நூல்கள் பல வெளி வரல் வேண்டும் என்பது எனது வேட்கை. இந் நூலை நன்முறையில் தந்த அவருக்கு எனது வாழ்த்து உரியதாக. திரு. வி.க 25. 11. 49 நூன்முகம் இலக்கியம், மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்து ஆசிரியன் மனக்கோள், உளக்கோள் மிளிரப் புனைந் துரைக்கப் படுவது, சமயமும் சமயக் கருத்தும் வாழ்க்கையின் ஒரு சிறு கூறு மட்டுமே. ஆகவேதான் முழு நிறை இலக்கிய மாகிய தமிழ்ச் சங்க இலக்கியத்தில் அது அருமையுடனும் அருகியும் வழங்கப் பெறுகிறது. காதலைப் போல் சமயமும் மிகைபடக் கையாளப் படின் அதன் நல்லியல்பு கெட்டு விடும். காதல், காமுகர், சிற்றின்பமாகிவிடும்; சமயம், புரோகிதர் பசப்புரையாகி விடும். நூலின் இறுதிப் பாட்டுக்கள் சில நீங்கலாக இந் நூற் பாட்டுக்கள் பத்தாண்டுகட்கு முன்பு எழுதப்பட்டன. அவற்றின் வருணனைகளும் சமயஞ்சார்ந்த அறிவுக் கருத்துக் களும் மாணவர்க்கும், கவிதையின்பம் நுகர்பவர்க்கும் பயன்படும் எனக் கருதியே இது தமிழுலகுக்கு அளிக்கப் பெறுகின்றது. நூலின் பின்னணியான புனைவியல் கருத்து இது. இம் மண்ணுலகு இருள், ஒளி, இன்பம்,துன்பம், பகல், இரவு ஆகிய மாறுபாடுகளை உடையது. இவ்விரு தன்மை களை வேறு பிரித்து ஒளி, இன்பம் முதலிய நற்பகுதிகளே நிரம்பிய வானுலகு அல்லது நாகருலகு ஒன்றும், இருள், துன்பம் முதலிய தீய பகுதிகளே நிரம்பிய நரகுலகு ஒன்றும் புனைந்து கொள்ளப்பட்டுள்ளன. நாகருலகோரின் தலைவர் கடவுள் அல்லது வானுலகத்து எந்தை. இவை கவிதைக் கற்பனை களாக மட்டிலுமே கொள்ளப் பட்டுள்ளன. ஒளியே கண்டு கைத்துப் போன கலை யுணர்வுடைய நாகன் ஒருவன், “வானத்து எந்தை” யின் தண்டனைக் கடுமை கலந்த அருளன்பினால் நாகர் உலகுக்கு நேர்மாறான நரகுலகைக் கண்டபின் நம் மண்ணுலகை அடைந்து புதிய காட்சிகளைப் புத்தார்வத்துடன் அதை வருணித்துக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. விண்மீன்காட்சி, காலைக் காட்சி, மாலைக் காட்சி, நிலாக் காட்சி ஆகியவை இப் புத்தார்வப் பின்னணி யிடையே புதுமை நயம் பெறுவதுடன் புதுக் கருத்துக்களுக்குத் திரையாகவும் அமைகின்றன. தமிழுலகம் இம் முயற்சியை, அதன் சிற்றெல்லைக்குள் வைத்து நுகர்ந்து ஆதரவு காட்டி ஊக்கும் என நம்புகிறேன். தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் இச்சிறு பணிக்கு ஊக்கந் தந்து சிறப்புரை அருளியமைக்கு ஆசிரியர் நன்றி அன்னாருக்கு உரித்தாகுக. கா. அப்பாத்துரை, எம். ஏ., எல்.டி ஆசிரியர் (விசாரத்) தமிழ்மனை சேப்பாக்கம் திருவள்ளுவர் ஆண்டு 1981 சித்திரை 1 1. நிழலும் ஒளியும் 1. ஓய்வற்ற ஒளி உலகை வெறுத்தேன், அந்தோ! உறை இருளில் உடல் அழுந்தி உழன்றேன், அந்தோ! மாய்வற்றேன்; மாய்விலா மாய்வு பெற்றேன் மாளும் நாள் என்று என்றே மாழ்கி னேனே! 2. நாற் புறமும் இருள் திரண்ட உருக்கள் கண்டு நலிவனோ? நளு நளென நெளி புழுக்கள் மேற் புரள மயிர்க் கூச்சிட்டு அழுங்கு வேனோ? மெய் இறையே, என் பிழைகள் பொறுக்கொ ணாதோ? 3. என்றி றைஞ்ச, இது காறும் எண்ணில் ஊழி இமையாது விழித் தென்னை வதைக்கும் கண்கள் நின்றழுந்தி நிறை துயிலில் ஆழத் துன்ப நிலை நீத்து நீடமைதி பெற்றே னன்றே! 4. எத்தனை நாள், எத்தனையாண்டு, ஊழிக் காலம் என்றறியேன்; துயில் நிலையில் நின்று நீங்கிச் சித்த உணர்வு அடைந்ததுவும் அறியேன்; சுற்றும் தெரு ளுறுதண் கால் வீசல் உணர்ந்தே னன்றே! 5. உறங்கு கின்ற மதலையினை வருடும் தாயின் ஒள் விரல்கள் எனத்தண் கால் வருடலோடும், மறங் கிடந்த வல்வினை நோய் தோய்ந்த உள்ளம் ‘வலி’ அகன்று மெல்ல மெல்ல எழுந்த தன்றே! 6. கண் விழித்து நோக்குதலும் “கனவோ, அன்றிக் கடவுளே! இது நனவோ, கருதி நின்ற விண்ணுலகும் இது வன்று, வீழ்ந் தழுந்தும் வினையினேன் நரகு மன்று இஃது என்னோ” என்றேன். 7. வானிடை நின் றெந்தை குரல் கனிந்து எழுந்து என் மைந்தனே, மனங்கவலல்! நன்மை அன்றி யான் இடர்கள் தருவதி(ல்)லை; இன்பமெல்லாம் எய்துபவர் மன நிலையே; வேறொன்று அன்றால்! 8. துன்ப நிலை காணாதார் இன்பங் காணார்; தொன்மை நெறி இயல்பிது, நின் பிழையன்று ஐய, இன்ப நெறி காட்டுதும் யாம்” என்றது என்றன் ஏழை உளம் அவ்வழியே நின்ற தன்றே! 2. வெள்ளியின் காட்சி 9. கீழ்த் திசையில்! அகோ, அகோ! கடையே னுக்கும் கிட்டி விட்ட காட்சியதே காட்சி, காட்சி! பாழ்த் திரையைக் கிழித் தெறிந்து பளிங்கு போலும் பசும்பொன் ஒளிக் கதிரெழுந்த பண்பு தானே! 10. கருவானை நீல்நிற வான் ஆக்கும் செய்ய கதிர்களையும் செம்மையுடன் கலந்த நீலக் கருஞ்சிவப்புச் சாயல்கள் அங்கு அவற்றையும் கண்டு அடியனேன் உடல் புளகம் உற்ற தன்றே! 11. இருளூடு செங்கதிரின் கால்கள் வீசி இயங்குதலும் என்னுடலும் உளனும் பூரித்து, அருள்நாடி ஒளி திகழ்ந்து நிறைந்து பொங்கி, ஆக முற்றும் செங்குருதி பரந்த தன்றே! 12. மயிர்க் கால்கள் நுனி நிற்ப மறையின் நாதம் செவிக் கொண்ட மெய்யடியார் என்ன நின்று செயிர் தீர்த்த செஞ்சொல் மொழிப் புலவர் உள்ளம் தீங்கனவில் கண்ட எலாம் தெளியக் கண்டேன். 13. அன்புருவாம் இறைவடிவம் ஒளியே; ஆம், ஆம்! அறிவொளி என் றுரைத்தார்கள்; அதுவும் ஆம், ஆம்! இன்புருவம் என்றார்கள்; அதுவும் ஆம். மற்று ஏனோ யான் இதுவரை அவ் எழில் காண்கில்லேன்? 14. ஒளிக் கொளியாம் இருள் கண்டேன், இன்று கண்டேன்! ஒளிக் (கு) உருவும் உயிரும் உணர் வதுவும் ஈந்து வெளிக்கு வெளியாய், அறிவும் உணர்வும் காணா மெய் கடந்த மெய்ம்மையினை இன்று கண்டேன்! 15. முற்றொளியைக் காணு மியல்பு அற்ற கண்கள், முற்றி ருளில் எல்லையறு துன்ப மல்லால் மற்றொன்றும் காணுமியல்பு அற்ற கண்கள் மருள் திரையில் அருள் கண்ட மாட்சி என்னே! 16. எழிலோ டெழில்! எழிலோ டெழில் இறைவ, என்னே! இயங்கு மெழில்! புதிது, புதி- தாக மென் மேல் எழில் கடந்த பேரெழிலாய், அதுவும் தாண்டி இமைக்கு முனம் வெவ்வேறாம் எழிற்பே ராழி! 17. எந்தை அருள் முந்தி வரப் பிந்தி எந்தை இன்னடியார் கருதுறும் இன் னுருவம் கொண்டு வந்திடல் போல் கதி ரொளியைப் பற்றி வந்த மணிக் கதிர்ச் செவ் வெள்ளியினைக் காண்மின், காண்மின்! 18. நீலமுகி லுடன் கலந்த செக்கர் வானம் என நின்ற இறைவன் முடிச் சடைக ளென்ன மாலுறச் சென் றோடு கதிர்க் குலங்க ளோடும் வான் விளங்க நின்றெ ழுந்த வெள்ளி கண்டே; 19. ஒளி என்றால் இது ஒளி, என் உணர்வும் இஃதே! உயிரிருந்து பெற்ற பயன் பெற்றேன் இன்றே; அளிவேறில், ஆருயிரில், அரனே! என்றும் அடைவு இதுவே என்ற ருளாய்” என்றிரந்தேன். 20. “ஆயின் இதோ என் செய்கேன், அந்தோ, அந்தோ! அடியன் உயிர் உணர்வதுவும் கொள்ளை கொண்ட மாய வெள்ளி ஒளி மழுங்கி வாடல் என்னோ? வாழ்வதனை ஈங் கிதற்கோ வழங்கினாயே!” 21. என்றழுதேன்; இமைக்கு முனம் சொன்ன எல்லாம் இறையு மனங் கொள்ளாது துயர முற்றுக் கன்றி ழந்த ஆ என்னக் கதறி வீழ்ந்தேன், கடவுளருள் துயில் வந்தே அணைந்த தன்றே! 3. காலைக் காட்சி 22. அருளாளன் மடிதவழும் துயிலின் நீங்கி அறிவோடு செறி துன்ப நெறியிற் பட்டே இருளார்ந்த குருடன் ஒளி பெற்றி ழந்தான் எனத் துயரப் படகுழிப்பட்டு அலமந் தேனே! 23. “கொடுமை அரன் கொடுமை இது! கொடுப்ப தென்றால் கொடையிதுவோ? கொடுத் தழிக்கும் கொள்கை உண்டோ? அடிமை இவண் அடிப் பொடிக்கும் அருகன் அல்லேன், அழி சினங் கொள் குறி வேண்டின் அதற்கு ஈது ஒன்றோ?” 24. “என்றென்றே அவலித்தேன்; அழுத கண்ணீர் இடையாடும் கீழ் வான ஒளி ஈது என்னோ? ஒன்றன்றோ என்றன் உயிர்க்கு உரிய சோதி? உளங் கொள்ளற்கிது எல்லாம் உரியஆமோ? 25. “ஆயினுமிங்கு இது அதுவே ஆகுங் கொல்லோ? அழகு இது, செவ் வண்ணம் இது, செயலும் ஈதே நேயமிகு வெள்ளியதுவே வளர்ந்து என் நீள் கனவில் விளைந்திட்ட விளைவி தாமோ! 26. “உருக்கி விட்ட தங்கமலை ஓங்கல் பார், பார்! ஓடுகின்ற செங்குருதி ஓடை பார், பார்! திருக் கிளரும் தெய்வ மணம் இது என், எந்தாய்! தேவர் குலம் கேளாப் பண் இது என் எந்தாய்! 27. “அரன் உமை போல் அழல் ஒருபால் நிழலும் ஓர் பால் ஆக நின்று பலசாயற் கணங்கள் தோற்றி, வர வர அச் சாயல்களும் குருதி யாறும் வாரி மடுத்து இவண் எழுந்த ஒளிப் பிழம்பே! 28. “எம் பெருமான்! நின்னுலகில் காணக் கிட்டா நிறையழகு ஈது என்? வான விளிம்பு கீண்டு செம்பவளத் தகடென்னச் செம்பொன் என்னத் திகை அமிர்த கலச மெனத் திகழும் ஈது என்? 29. “விண் வளரும் ஞாயிறுதுவே இதாமோ? வேளை ஒரு நிறம் பூண்டு வடிவம் பூண்டு மண் வளரும் ஞாயிறு இதன் புதுமை என்னே? மணி வணன் கை விட்டெறி மின் ஆழி ஈதோ? 30. “விழை வெனும் ஓர் வெண் மாலை அகத்தில் தொக்க வேந்துயர ஓர் ஏழுவகை மலர்கள் என்னக் குழைவுறு செம் பொன் முதலாம் எழு நிறங்கள் கோத் தொரு வெண் பிழம்ப மைந்த அமைப்பி தென்னே? 31. ஏழ் நிறத்த கதிர்களும் ஏழ் பரிய தாக எழில் வானந் திரிகின்ற ஏக மூர்த்தி ஏழ் நிறமும் ஓர் நிறமாய் இயங்கச் செய்த இயல்பதனை ஈங்கு எமக்கே இயம்பி டாயே! 32. “இருட் படைகள் இரிந் தோடத் தொடரும் வெற்றி இறை என்கோ? இருள் மடந்தை காந்தன் என்கோ? விருப்புடன் இவ்வுலக மெலாம் ஆளும் எந்தை மேற் கவித்த வெண் கொற்றக் குடையி தென்கோ? 33. “மணி என்கோ, மரகதம் மா - ணிக்கம் என்கோ? மலர் வாவி நடு வளர்தா- மரைய தென்கோ? அணி என்கோ, அழல் என்கோ? அழல்வி ழுங்கி, அடல் வானில் ஒளி காலும் அமரன் என்கோ? 34. என மனத்தால், இன் மொழியால், எழிலார் மெய்யால் இறைஞ்சினேன் இதய நெக்கு உருகி நின்றேன். புனை நினைவாம் மலர் மாலை சார்த்தி உள்ளே பூசித்தேன், பொருளிதுவே என்று போற்றி. 35. “கண்ணிருந்தால் காண்டகு நற்- காட்சி ஈதாம்! கருத்துடையார் கருதல் தகும் உண்மை ஈதாம்! எண்ணுகின்ற எண்ணம் எலாம் இதனை யன்றி எண்ணுவனோ? எணா நிலை எந்- தாய்”(ஈ) கென்றேன். 36. “வாழ் விருக்கும் நாள் உண்டேல், வாழ்வாம் இந்த வளர் ஒளியே கண்டுய்யும் வகை நீ செய்வாய்! தாழ்வு வரினும், தந்தாய்! இது தந்தாயேல் தாழ்விலேன்; இது அன்றித் தாளேன்” என்றே. 37. உள்ளார்ந்த அன்புடன் என் உளங்க னிந்து அங்கு உடல் உருக, உடற் குருதி கதிப்ப நின்று கள் ளார்ந்த வண்டு மல ருட்கி டந்த காட்சி போல் எனை மறந்து கிடந்த போதே 38. கனவில் உயர் பொற் குன்று கற்குன் றாதல் கடுப்ப, அகல் வானரங்கின் ஒளி மடந்தை புனைதரு பொன் அழலாடைப் போர்வை நீத்தாள், பொன் மேனி வெண் மேனி யாகக் காய்ந்தாள்! 39. இருளி லொளி யிற் காணாப் பொற்பு கண்டேன் இன்று ஒளியில் மையிருளில் காணாத் துன்ப மருள் கண்டேன், மயக்க நிலை கொண்டேன்; பொற்பும் மட்டறின் மீ ளாத் துயரம் நல்கல் கண்டேன். 40. விண்ணெரிய, கண் ணெரிய மேனி வேர்ப்ப, வெங் கனலால் அடி பொடிப்ப முடி வெடிப்ப, எணண மெலாம் மண்ணாக மண்ணிற் சோர்ந்தேன் மிக்க துயர் தொக்க துயில் வண்ணம் எய்தி. 41. கரிய திரை எழுது கரும் படம தென்னக் காய் தருவெந் துயரிடையும் மிக்குத் தோன்றும் அரிய துயிர் நிலை உணர்ந்து மாழ்கி நின்றேன், அக உணர்வால் அவ் வெப்பும் குறைதல் கண்டேன். 42. துன்ப நிலை குறைதலும் ஓர் இன்பம், என்னே! துன்ப மின்பம் தோற்றுகின்ற தோற்றம்? எந்தாய்! உம்பர் உல கத்தன்று மாறாக் காட்சி உண்மையறி யாததும் ஓர் உண்மை யன்றே. 43. ஞாயிறவன் வெம்மை எலாம் தீர்ந்தான்; கண்கள் நலிவற வெள் ளொளி மாறிப் பொலிவு குன்றப் போயிறும் அன்னான் நிலைமை என்னாம் என்றே புத்துணர்வோடு ஆர்வ முறப் பார்த்தி ருந்தேன். 44. பார்த்த கண்கள் மீட்டு மொளித் தோற்றம் காண, வேர்த்த உடல் வெப் பொழித்துத் தேற்றம் கொள்ள, ஆர்த் தெழுந்த உட் கிளர்ச்சி நீங்க, வெப்போடு ஒளியும் நலி வுற்றி ழியக் கண்டே னன்றே! 45. “ஞாயிறி தென் உயிர்; இதுபோ யிறுமே யாகில் போயிறு மென் உயிரும்” எனத் தாய் கதறி நின்றேன் இறுமேல் கரு வுயிரும் இறுமே அன்றோ? தாயனையாய், இது உனக்குத் தகுமோ?” எனறேன். 46. ஆயினிதென் புதுமை, மிகப் புதுமை! எங்கும் ஆருயிர்கள் பிறக்கு மெனில் இன்ப முண்டாம்; மாயுமெனில் துன்பமென்பர்; மாயும் இந்தத் தாய் ஒளியில் தாய்மை எழில் தோற்றம் என்னே! 47. “ஏழெழில் சென் றோரொளியாம் எழில் முன் கண்டேன்; ஓரொளி மாய்ந் தேழுடனேழ் ஏழாம் காட்சி, ஏழிசையின் இன்ப மெலாம் கடந்த இன்பம், எழி லிறிந்த எழில் எவ்வாறு இயம்ப லாமே. 48. இருளி லொளி எவ்வாறு அவ்வாற தாக ஒளியி லொளி யாம் புதுமை கண்டேன், கண்டேன்! இருளிரியப் போந்த ஒளி ஒளியாம் என்னில் ஒளியிரிய வரு மொளிக் கென் இயம்பு கேனே? 49. ஒளியில் உலகந் தோன்றி மறைதல் கண்டேன். ஒளியில் உல கங்கள் அழிந்து எழுதல் கண்டேன். களிகொள் புதுப் புதுப் படிவத் தோடே தோன்றிக் கவின் மாறாக் கன்னிமையின் உலவக் கண்டேன். 50. இரா நங்கை விராவ வரும் எழிலார் தோற்றம் எழில் ஞாயி றென்னின் நறுந் தென்றல் மாலை பராவுமவன் புலவி விடுத் தணைக்கக் கைகள் பரவுறுபோது எழு களியார் எழிலே யாங் கொல்? 51. வான்மடந்தை கேள்வன் வரு போழ்தத் தன்னாள் மனைவரு சுற் றஞ்சூழ வந்த டைந்தே மால்மருவும் ஊடல்நடங் கொண்ட காட்சி போலு மிந்த வானரங்கின் தோற்றம் மன்னோ! 52. கன வென்னும் நங்கை அரைத் துயிலிற் கண்ட கனவெனலாம் கண்காணாக் காட்சியோ? செம் புனலென்ன வழிந் தோடும் அனல் வெள்ளம் போய்ப் புகைக் கொடியார் துகிலெடுப்பப் போந்த தாலோ! 53. செந் நிறத்தில் நூறுவகைச் செந் நிறங்கள், செறி நீலத் தாயிரமும் சிதறு பச்சை பன்னூறாயிர மாகப் பரந்து நின்ற பதம் காண ஆயிரங்கண் வேண்டு மம்மா! 54. அழலாறும் புகை மலையும் கடலும் ஆர்ந்தே ஆரிருள் சேர் முழைஞ்சுகளும் மினற் பரப்பும் நிழற் காட்டில் ஒளிக்கோடு கொண்டு கீண்டும் நீள் முகில் மால் யானைகளும் நிறையுமாலோ! 55. புத்தார்வம் கொடு தோன்றும் அறிவு தேர்ந்து புலனறி மெய் அறி வாகி மனத்துக் கெட்டாச் சத்தாகி நின்றும் அன்பு நெறியிற் பட்டே இன்புரு வாய்க் கனியுமுண்மை காட்டு மிஃதே! 56. எழு மிரவி திருமகளார் கேள்வ னென்னில் என்னுயிர் கொள் இச்சோதி கலையார் செல்வி தழுவு கடை ஊழியது கண்ட செம்மல் தாண்டவம் செய் பெருமா னென் றுரைக்க லாமே! 57. ஆக்குவிப்பான் ஆக்கத்தின் மிக்க தாமால் அளிப்பவன் பேரளி; அதனிற் பெரிது அளித்தே தேக்குவிப்பான், தெருட்டுவிப்பான், பிறவி தீர்ப்பான் சீரெனவே காட்டுறு பா- சுரமி தாமோ? 58. அழிவில் ஒளி எழில் காட்டும் இதுவன் றோ மெய் அமர்ந்த இறை யுரு! ஓயாது அழிவிற்கு ஏங்கும் எளியன் மனம் புண்ணாகா வாறு வந்த இறையருள் இங்கு இது இன்றேல் என்னா வேனே. 59. இவ்வண்ணம் எழில் வண்ணம் கண்டிருந்த என் கண் முன் நிழற் படலம் எழுந்து வீசிச் செவ் வண்ண மது விழுங்கி ஏப்ப மிட்டுச் செறி இருளாம் பாழ் சென்று சேர்ந்த தன்றே. 60. பிறந்து வளர்ந் தோங்கி நின்ற ஒளி நீ போயின் பேதை நான் பிழைப்பேனோ? நலியுங் காறும் சிறந்து நின்ற செவ் வொளியே! சென்றாயோ என் சிந்தையினி நின் செலவே செல்லும்’ என்றேன். 61. எழுந் தெழுந்து மனக் கிளர்ச்சி தந்த எல்லாம் எந்தை செயல் என்று ஏழை காண கில்லேன் விழுந் தெழுந்து வெந்துயரால் மாழ்கி மீண்டும் புது விழைவாம் உயிர் தூண்டப் பெங்கினேனே. 4. நிலாக் காட்சி 62. மேற் றிசையில் விழுந்த ஒளி என்னாம், என்னாம்? மீட்டு வருமோ? என்றே ஏங்கி னேற்கு நாற்றி சையும் களிபரப்பி ஒளி இழந்த ஞாயிற்றின் கீற்றென ஒன்று ஒளிரக் கண்டேன். 63. ஓவியர் ஓவியந்தீட்ட வரைந்த கோட்டின் உருப் போலும், உயர் மாடம் அமைக்கும் தச்சர் பாவிய சாரம்போலும், புதிய சோதிப் பணிக் கெடுத்த பண்ணவன்நற் சட்ட மீதோ? 64. சூலுண்ட தாயிறப்பச் சூலிற் சாய்ந்து பாலின்றிப் பரிதவிக்கும் பால னாங்கொல்? ஆலிக்கும் தாயின்றி அழுத கண்கள் ஆழ்ந்தழகு குன்றிநின்ற பால னாங்கொல்? 65. ‘தீதோவப் பார்காத்த செம்மல், சென்றான் தீதோவச் செம்மலிட்ட ஆணை யாழி ஈதோ என் றுரைப்ப எழுந்து ஓங்கும் இந்த இணை ஒளியால் இணையி லொளி மறப்ப னாங்கொல்? 66. என் றேங்கி அழுத கண்கள் வாட ஆடும் இறையூடே அம் மதியின் ஒளியால், சென்ற மன் தோய்ந்த மங்கை மகன் மகிழ்வு கண்டு வளர்துயரி னிடை எய்தும் எழுச்சி உற்றேன். 67. படிப்படியாய் அம் மகவின் வாழ்வில் ஈடு பட்டழிந்து வாழும் அ(ன்)னை போல இங்கே அடிக்கடி கண் ணுறலால், மெய் யுறலால் இந்த அருமகவும் ஒளி புதுக்கி வளர்ந்த தன்றே! 68. ஒளி நகையால் என் உடலம் புளகம் பூப்ப, ஓங்குநலத் தால் உள்ளம் மகிழ் சிறப்பக் களி நடையால் வெந்துயரம் சென்றொளிப்பக் கவின் மழலை யாடிடுவான் போன்ற தன்றே. 69. கண் பனிப்ப, மெய்சிலிர்ப்பக் காத லுள்ளம் கருதரிய மெய்யின்பக் கடல் திளைப்ப, விண் பனிப்ப, விரி முகிலாம் ஆடை போர்த்து விரிந்து நெகிழ்த்து என்னுள்ளம் கவர்ந்த தன்றே. 70. ஞாயிறதன் ஒளியதனில் வெம்மை நீத்து நற்கருப்பஞ் சாறட்டு மதுவும் சேர்த்தே ஆவிறுத்த தெளி தீம்பால் அவனி யெங்கும் அள்ளி யொழு கச்செய்த அளியி தென்னே? 71. ஒளி என்னும் பாற்கடலிற் கடைந்தெடுத்த ஒள்ளமிர்தக் குடந்தாங்கி இரவின் வேந்தர் களி கொள்ளக் கொண்டேகுங் காலை, மாலை மால் சென்று குடமுடைத்த காட்சி யாலோ? 72. காலொழுகு மிடமெங்கும் பாலொ ழுக்கிக் கலை யொழுகும் கவினெங்கும் கலந்து பூசி மாலொழுக மல்லல்மா ஞாலம் எங்கும் வண் கயிலை யிடமென்ன வயங்கிற் றம்மா! 73. என் மதியை முன் மூடும் இருளால் வேறு மின்மினிக ளவை நாடி அலைந்து நொந்தேன் மன் மறைத்த முகில் நீங்க மதியால் இன்று முதன் மதியாம் முழுப் பிழம்பு கண்டே னன்றே! 74. இருளி னொளி யதன் ஒண்மை யதுக லந்தும் இலங் கொளியில் இருளதனின் தண்மை சேர்த்தும் இருளொளிகள் வெள்குறவென்று இயற்கைத் தச்சன் இயற்றிய பூம்புனை பொறி யென்று இயம்ப லாமோ. 75. இம் மதியம் குடைகாப்ப இன்ப மெல்லாம் எய்தி இந்தஉலககலா திருப்ப னன்றே! மும்மையிலும் எந்தாய்! உன் உலகு வேண்டேன், முதலுல கிங்கிது வென்றே முனைந்திட்டேனே. 76. முனைந்த முனைப் பினில் மூழ்கி மெய் மறந்து மூவாத முதலுலகு ஈது என்றி ருந்தேன்! கனைகடலின் அரவமெனக் காலத் தேரின் கால் கடுக விரைந்தோடிச் சென்ற தன்றே. 77. நிலையான உலகின்ப நிலை வெறுத் தேன்; நிலையாத உலகின் பத்- தீடுபட்டு, நிலையாத அதுபடுதல் கண்டு வீழ்வேன், நிலைகாணா நிலையிதென உணர்வே னல்லேன். 78. தேயு மெனில், பொருள்கள் சென்று மாயும் என்ற சிந்தையலால் வேறொன்றும் மனங் கொள் கில்லேன்; மாயுமது தோற்று மெனும் உண்மை தேரேன், மாய மிது தெளியாமல் மயங்கி னேனே. 79. ஒளிதோன்ற இருள்மாயும் இருள்போ யேக ஒளி தோன்றும்; உலகிதனின் புதுமை யிஃதே, களி கதிரோன் பின் நிலவு; நிலவின் பின்னே கதிர் தோன்றும் இயல்புணராது அலைவுற் றேனே. 80. குறைமதியாம் கீற்று வளர்ந்து ஓங்குகின்ற காலமெலாம் இன்பத்தில் குளித்து வாழ்ந்தே, நிறைமதியாய், அது தேய்ந்து குறைதல் கண்டு நெஞ்சுருகி வெந்துயரின் பிடியுட் பட்டேன். 81. நிலையான அவ்வுலக இன்பத் தாலும் நிறைவுறாது உளமுளைந்து வருந்தி நின்றேன்; உலை வுறும் இவ் வுலகின்ப நிலைக்கு மென்று என் உளத்து விழை வுற்றேன் என் நிலையி தென்னே! 82. என் றென்றே விழைவொருபால், சிந்தையோர் பால் இரு தலைசென் றோடயான் அல்லற் பட்டே சென்றோய்ந்து தயங்கி நின்ற வேளை, அந்தோ! தெளிவருளும் எந்தை குரல் எழுந்த தன்றே. 5. முடிவுரை 83. “மைந்த, நீ கவலை தவிர்; மயக்கம் வேண்டா; வானுலகின் இன்ப மெலாம் மெய்யாக் கண்டாய். நந்து பசி யாலன்றிச் சுவை தோன்றாது; நலந் தோன்றா, தீமையதன் தழும்பு றாமல். 84. “அப்பரிசே இருளின்றி ஒளியின் தன்மை தோன்றாது; மாற்ற மின்றி எழில் தோன்றாது; துய்ப்பரிதே யாமின்பம், துன்பந் தன்னின் தொடர்பின்றி; துன்பம் இன்றேல் இன்பம் இல்லை! 85. “ஒளியதனின் துணியின்றி இருளைக் கண்கள் காண ரிதாம்; அவ்விருளின் எல்லையற்ற வெளிநிறைவை ஒளியின்றி உணரொ ணாது; மேவு மிவை தமுள் கலந்தே அழகு தோன்றும்.” 86. ஒளியுலகத் தெந்தையிவை உரைப்பக் கேட்டே ஒளி வளரும் இவ்வுலகின் தன்மை யெல்லாம் அளியார்ந்த அவ்வுலகின் வண்ண மென்றே அறிந்து கொண்டேன், அறிவுருவின் வண்ணம் பெற்றேன். 87. கண்ணிமையார் அவர் தாமும் காண லாற்றாக் கடவுண்மாக் கவினதனை உணர்விற் காணத் திண்ணிய ஆரிருட் படலம் திரையாம்; அந்தத் திரையூடே அதனியல்பு தெளிய லாகும். 88. இருள் வண்ணம் சூழ்தரு சிற் றுயிர்கட் கெட்டா இறைவடிவை இருட் சத்தி கலந்து காட்டி மருளாலே மருள் நீக்கும் வகையும் கண்டேன், வளருமதன் ஒளியாலே ஒளியா கின்றேன். 89. பேரருளின் அகன்ற ஒளி காண கில்லார்க்கு என இறைவன் அதன் நிழலாய்க் கதலாலே சீருடனே சிற்றழ காய்ச் சிறுகத் தந்து சிறுமை தவிர்த் தெமையாண்ட செம்மை ஈதே. 90. பொருளற்ற சொல்லாலே மதலைக் கிங்கே பொருளுணர்த்தும் மெய்யன்பார் அன்னை போல மருளுற்ற சிறு பாச வயப்படுத்தி மாசறுவான் பொருளுணர்த்தும் வானத் தெந்தை! 91. மனையென்றும் சுற்ற மென்றும் மாம னென்றும் மக வென்றும் மாறுகின்ற உருவி னூடே வினைப்படுத்தி மாறாத அருளே போல விழி காட்டி அழைப்பிக்கும் விமலன் அன்பே. 92. சம நிலையில் சுழலுகின்ற ஆழி நோக்கில் சலியாது நிலை பெற்றாற் போலத் தோன்றும்; அமைவுறு நன் மரங்களெலாம் ஓடும் ஊர்தி அமர்வார்கட் குருண்டோடு மவை போல் தோன்றும். 93. இம்மெனு முன் எண்கடந்து விரையும் காட்சி இயலார்ந்த எழிலாக மருட்சி யூட்டும்; செம்மை யுறும் யாழ் நரம்பின் நிறை யதிர்ச்சி தெளிந்த சுவை இசையாக இன்ப மூட்டும். 94. செவ் வண்ண மதனிடையே இருளின் நீழல் தேங்கி நிற்கும்; இருளதனில் செம்மை நீடும்; இவ்வணமே வெற்றியிடை தோல்வி; தோல்வி - யதனிடையே வெற்றியது தொக்கு நிற்கும். 95. அறி வெல்லை யது கடந்த அறிவு தானே அறிவற்ற உணர்ச்சி யென அடங்கித் தோன்றும், நிறைந் தமைந்த பளிக்கு நீர் நிலையில் தெண்ணீர் நேர் காண லாகாத வாறு போன்றே 96. அழிவதனிற் பொலிவுண்டாம் பொலிவின் பின்னே அழிவு வரும்; இவ் இயல்பை அறியார் வாழ்வில் கழிபெருந் துன்புறுவர்; அத் துன்பத் தூடே கருது மின்பம் ஊர்வதவர் அறியார் அன்றே. 97. தோற்று கின்ற பல காட்சி மாற்றத் தூடே மாற்ற மறத் தொடர்ந்து நின்ற உண்மை காணாய்! வேற்றியலாய் எதி ரெதிராய்த் தோற்று மின்ப துன்ப மெலாம் பொய்! மாறா இன்ப மொன்றே! 98. எள்ளுதலில் போரொளி யைக் காண உள்ளும் அதற் கிணையம் பேரொளி வந் தெய்தல் வேண்டும். உள்ளத்தில் ஒளிக் கிணையாம் ஒளியி னூடே ஒளிவளரும்; அவ்வழியே உணர்வு தோன்றும். 99. இவ்வகையால் உலையு மனத் திடை நின் றென்றும் நிலையான எழில் கண்ட பின்னர், எங்கும் செவ்வி எழிலது கண்டு கவிஞன் போலத் திரிந்து அழகாம் உணரவதனில் திளைத் துயிர்த்தே; 100. மண்ணகமும் விண்ணகமும் காடும் மேடும் மறி நிலவும் எறி கதிரோன் வெயிலும் நாடி நண்ணரிய தலையாறும் விரிந்த முந்நீர் நற்கடலும் சென்று கவின் பலவுந் தேடி; 101. இருளில் ஒளி காட்டுகின்ற இந்த ஞாலம், இருளதுவே காட்டுகின்ற நரக ஞாலம், மருளற்ற ஒளி காலும் நாகர் வாழும் வான் ஞாலம் எங்கெங்கும் சென்று வாழ்ந்தே; 102. இறைவனையும் எதிர்த்த என்றன் துடுக்குத் தானும் இறையருளின் ஒரு துறையாம் மருளே என்ற நிறையுணர்வால் உலைவிலா நிலை உணர்ந்தேன் ஓங்குகவான் இறை யருள் என்று உவந்திட்டேனே. ம்ம்ம் இராவணன் வித்தியாதரனா? முதற் பதிப்பு - 1943 இராவணன் வித்தியாதரனா? இராமனுடைய விரோதிகளை வால்மீகி இராக்கதர் எனல். வித்தியாதரர் என்ற சொல் சமண இலக்கியத்தில் ஒரு மனித வகுப்பினரைக் குறித்ததாகும். அவர்கள் பண்டை இந்தியாவில் மிகவும் தலைசிறந்த வகுப்பினர். சமண இலக்கியத்துக்குப் புறம்பாகவோ அச்சொல், அது மனித இயல்புக்குப் புறம்பான ஒரு குழுவை - பேய், பிசாசுகள், ஆவிகள் போன்ற நிலையினரைக் குறித்ததாயிற்று. சமண இலக்கியத்தில் மட்டுமன்றிப் புத்த இலக்கியத்திலும் வித்தியாதரர் நிலை மிக உயர்ந்ததே. வித்தியாதரரைப்பற்றி நாம் ஆராய வேண்டுமானால், நாம் வரலாற்றுக் காலங்களுக்கு எவ்வளவோ அப்பால் செல்லல் வேண்டும். இந்தியாவில் வரலாற்றுக் காலமென்பது கிரேக்கர் தொடர்பு, அதாவது அலக்ஸாண்டருடைய படையெடுப்புக்குப் பிந்திய காலமாகும். வரலாற்றாராய்ச்சியாளர் இந்நிகழ்ச்சி யினையே கால விளக்கக் குறியாகக் கொண்டு இந்து, சமண, புத்தச்சார்பான இந்திய இலக்கியத்திற் கண்ட நிகழ்ச்சிகளை அதற்கு முன் இவ்வளவு தொலை பழமையுடையது என்று கணக்கிடுகிறார்கள். இவ்வாராய்ச்சியில் நாம் சிறப்பாகக் கவனிப்பது சமண இலக்கியத்தையே. மகாவீர வர்த்தமானர் நிர்வாண (வீடு பெற்று) நிலை அடைந்தது. கி.மு. 527 என்பதை நாம் அட்டியின்றி ஏற்றுக் கொள்ளலாகும். அது கிட்டத்தட்டத் திட்டமான காலவரை யறையென்பதில் ஐயமில்லை. சமணர் மரபுரைப்படி மகாவீரர் 24 தீர்த்தங்கரர்களின் வரிசையில் கடைசியானவர். அவரை அடுத்து முந்தியவர் பகவான் பார்சுவ நாதர் ஆவர். அவர் மகாவீரருக்கு ஓரிரண்டு நூற்றாண்டுகட்கு முந்தியவர். அவர் பெயர் உண்மை வரலாற்றில் இடம்பெற்ற பெயரேயன்றிக் கற்பனைப்பெயர் அல்லவே அல்ல. அவருக்கும் முந்தியவர் அரிஷ்டநேமி. இவர் மாபாரதத்தின் புகழ்பெற்ற வீரர் கண்ணபிரானின் ஒன்று விட்ட உடன்பிறந்தார். இவரும் வரலாற்றுப்படி உண்மையிலிருந்தவரே என்று ஐயமறக் கூறலாம். எனவே, அவர் காலம் மாபாரத காலம் என்று பெறப்படும். வித்தியாதரரைப் பற்றி அறிய நாம் இதனிலும் முற்பட்ட காலத்தை ஆராய வேண்டும். இராமாயணத்தில் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் மாபாரதப் போருக்கு முந்தியவையேயாகும். சமண ராமாயணத்தைப் பார்த்தால், அதில் பண்டைக்கால இந்தியாவின் வித்தியாதர வகுப்பைப்பற்றிய தெளிவான விரிவுரை காணப்படுகிறது. வால்மீகியால் இராக்கதர்கள் என்றும், குரங்குகள் என்றும் இழித்துரைக்கப்பட்ட இராமனுடைய விரோதிகளைச் சமண இராமாயணக் கதையில் வித்தியாதரர் என்ற பெயரால் மிகவும் உயர்வுபடக் குறிக்கப்படுகிறார்கள். இராவணனாதியோர் வித்தியாதரர்களே வித்தியாதரர் என்ற சொல்லின் நேர்பொருள், வித்தைகளிலும் கலைகளிலும் கரைகண்ட புலமையுடையவர் என்பதே. அவர்கள் வான ஊர்திகளில் செல்லும் ஆற்றலுடைய வராயிருந்தது அவர்களுக்கேயுரிய தனிப்பெருஞ் சிறப்பாகும். வடமொழி இலக்கியத்தில் அவர்கள் பல விடங்களில் ‘கேசரர்’ அதாவது ‘வானில் உலவுபவர்’ என்று குறிக்கப்படுகின்றனர். அவர்கள் நாகரிகத்தில் மிகவும் உயர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் அஹிம்சா தர்மத்தைப் பின்பற்றினார்கள்; ஏனெனில் அவர்கள் சமண சமயத்தினர். இலங்கை அரசன் இராவணனும், அவன் உறவினர் நண்பர் முதலிய யாவரும், சமண சமயத்தைப் பின்பற்றிய வித்தியாதரரே என்பது இதனால் பெறப்படும். ஜினனை (வென்றியஞ் செல்வனை) வணங்கு முறையில் அவர்கள் கோயில்கள் எழும்பினர்; கொல்லாமையைச் சமயக் கட்டுப்பாடாகவே பின்பற்றும் சமண சமயத்தின்படி அவர்கள் ஒழுகினர். இத்தகைய வித்தியாதரரை வால்மீகி இராகதர் என்று கூறினர். இது இனவெறுப்புக் காரணமாகவும் பகைமை காரணமாகவுமே என்பது தெளிவு. ஆனால், வால்மீகியின் கூற்றின்படிகூட இராவணன் உயர் பண்பாடுடையவன் என்றும், இசையில் மிகவும் விருப்புடையவன் என்றும் விளங்குகிறது. இவ்வுரை இராக்கதர், காட்டு மிராண்டிகள் என்ற கூற்றுக்களுடன் எவ்வாறு பொருந்தும்? பொருந்தாதன்றோ? இதுபோலவே கிஷ்கிந்தையை ஆண்ட மரபினரும், தப்புத் தவறாகக் குரங்கினம் என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கூற்றின் பிழைபாட்டையும் சமண இராமாயணம் எடுத்துக் காட்டுகிறது. சமண இராமாயணத்தின்படி பார்த்தால் கிஷ்கிந்தையில் ஆட்சிபுரிந்தவர்களை வானரர் என்றழைத்தது ஒரு பெரிய பிழையின் பயனாகவேயாகும். அவர்கள் கொடியில் குரங்கையே சின்னமாகக் கொண்டார்கள். அக்கொடியைத் தாங்கிச் சென்ற அவர்கள் படை, அக்காரணத்தாலேயே வானரசேனை என அடிக்கடிக் கூறப்பட்டது. இதன்பொருள், குரங்கைக் கொடியாக வுடைய சேனை என்பது மட்டிலுமாகும். சமண மரபுரைப்படி இவர்களும் வித்தியாதரரே: இவர்களும் மற்ற வித்தியாதரரை ஏற்ற பண்பாடுடையவர்களே. இவர்களில் மிக முக்கியமானவன் ஹனுமான். இவ்வித்தியாதரன் அயோத்தி அரசனாகிய இராமனுடைய நண்பனானான். தமிழர் நாகரித்துக்கும், ஆரியர் நாகரிகத்துக்கும் நடந்த போரே இராமாயணப் போர். சமண இராமாயணத்திலும், இராமருக்கும் இராவணனுக்கும் இடையே நடந்த போர் விரித்துரைக்கப் படுகிறது என்பது உண்மையே. அப்போர் இருவரிடையே ஏற்பட்ட கலகங் காரணமாக உண்டானது. அதற்குக் காரணமா யிருந்த செயல் இராவணனதே. ஆனால், இதனோடு கூடவே இரு தரப்பாரிடையே பண்பாடுகளிடையேயும் ஒரு சச்சரவு இருந்ததென்று தெரிகிறது. வால்மீகியின் கூற்றை உண்மையாகக் கொண்டு பார்த்தாலும் கூட இது விளங்கும். கீழ்நாட்டு நாகரிக ஆராய்ச்சி யாளர்கள் கூற்றின்படி, இராமாயணம் உண்மையில் வெளிநாட்டி லிருந்து படையெடுத்து வந்த ஆரியருக்கும், அவர்களை எதிர்த்துத் தடுக்க முயன்ற நாட்டு மக்களாகிய இராக்கதர் களுக்கும் நடந்த போராட்டத்தைக் குறிப்பதேயாகும். சமண மரபுரைப்படி வித்தியாதரர் கொல்லாமை (அஹிம்சை) நெறியைப் பின்பற்றியவர்கள். எனவே, அவர்கள் உயிர்க்கொலை புரியும் வேதயஞ்ஜயம் அல்லது யாகத்தை அறவே வெறுத்தார்கள். இராவணன் கொல்லாமை நெறியொழுகிய யாகவிரோதி. ரவிஷ்யணரின் பத்மபுராணத்தில் கூறப்படும் கதை ஒன்று இதற்குச் சான்று பகரும். இராவணன் பேரரசின் எல்லையில் மருதவேந்தன் ஆதரவில் வேதயாகம் ஒன்று நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இராவணன் அவை வரை இச்செய்தி எட்டிற்று. இராவணன் அதனைத் தடுக்கும் பொருட்டுத் தன் அரசியற் பணியாளர்களை அனுப்ப முயன்றான். இறுதியில் அவன் தானே அவ்விடம் சென்று அங்கே குடியிருந்த மக்களைக் கலைத்ததுடன் அவ்வரச குடியினருக்கும் சமயத்தின் பேரால் உயிர்க்கொலை செய்து குருதி சிந்துவதன் தீமையை நன்கு விளக்கிக்காட்டி, அவர்களையும் கொல்லாமை நெறிக்குக் கொண்டு வந்தான். இவ்வித்தியாதரர்கள், உயிர்க்கொலை யாகத்தின் மீது வெறுப்புடையவர் என்பது, வால்மீகி எழுதிய இராமாயணத் தாலும் வெளிப்படுகின்றது. வால்மீகியின் கூற்றுப்படி இராக்கதர்கள் எப்போதும் யாகச் செயலுக்கான ஏற்பாடுகளைக் குலைக்கவே செய்தனர். கதைத் தொடக்கத்திலேயே விசுவாமித்திரர் தாம் செய்யும் யாகத்தில் இராக்கதர்கள் தலையிடுவதைத் தடுப்பதற்கென அயோத்தி இளவரசரான இராம இலக்குமணரின் உதவியைக் கோரினார். வால்மீகி இராமாயணத்திலும் இராக்கதர்களின் பண்பை இச்செய்தி விளக்கமாகக் காட்டுகிறது. இராக்கதர்கள், பண்பாடோ, நுண்ணிய அறிவுத்திறமோ அற்று, இயல்பாகவே காட்டு மிராண்டிகளாக இருந்தார்களானால், அவர்கள் இவ்வுயிர்க் கொலை யாகத்தில் பலியிடப்படும் உயிர்களின் ஊனில் ஒரு பகுதி, பெறும் எண்ணமுடையவர்களாய் அதனுடன் ஒத்துழைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் நிலை இங்கே கூறப்பட்டபடி காட்டுமிராண்டிகள் இயல்புக்கு ஒத்ததாக இல்லை. நேர் மாறாக இந்நிகழ்ச்சி, அவர்கள் உண்மையில் கொல்லாமை நெறியைப் பின்பற்றிய உயர் பண் பாடுடைய வித்தியாதர வகுப்பினர் என்ற சமண நூற் கூற்றுக்கே முற்றிலும் பொருந்துவதாயிருக்கிறது. இசையால் வென்ற கணவனை வரிக்கும் சுயம்வரம், தமிழரின் உயரிய பண்பாடு. சமணரின் தமிழ் நூல்களில் இதற்கொத்த செய்திகள் காணப்படுகின்றன. தமிழ்ப் பேரிலக்கிய நூலாகிய சிந்தாமணியில் வித்தியாதரரைப் பற்றிய வரலாறு குறிப்பிடப் படுகிறது. இதன் கதைப் பகுதி மகாவீரர் காலத்திலேயே இருந்தவனான ஜீவகசாமி என்பவனைப் பற்றியதாகும். அவன் பல இளவரசிகளை மணந்து கொண்டான். அவர்களுள் முதலாவதாக வருவது, காந்தருவ தத்தை என்ற வித்தியாதர இளவரசி யாகும். இக்காந்தரு வதத்தையை அவள் தந்தை, ஒரு வணிக இளங்கோவுடன் ஜீவகன் வாழும் நகருக்கு அனுப்பிச் சுயம்வர முறையில் அவளை மணம் புரிவிக்கும்படி ஏவினான். இச்சுயம்வரமும், அதில் கணவனைத் தேர்ந்தெடுக்க வழங்கிய முறையும், வேறெங்கு மில்லாப் புதுமை உடையது. இசைப்போட்டி மூலம் கணவனைத் தேர்ந்தெடுக்கும் முறை வடமொழியிலாயினும் சரி, தமிழிலாயினும் சரி, வேறெங்கும் கூறப்படவில்லை. இறுதியில் ஜீவகன் அவளை வீணைப் போட்டியில் வென்று அவளை வாழ்க்கைத் துணையாகக் கொண்டான். ஜீவகன் ஒருவன் நீங்கலாக மற்ற எல்லோரையும் இவ்வித்தியாதர நங்கை வென்றாளென்ற இச்செய்தி அவள் அடைந்திருந்த உச்சநிலைப் பண்பாட்டை நன்கு காட்டுவதாகும். தமிழிலுள்ள மற்றோரிலக்கிய நூலாகிய சூளாமணியில் வித்தியாதரைப்பற்றிய இது போன்றதொரு குறிப்பு வருகிறது. இங்கும் வித்தியாதர இளவரசி ஒருத்தியை, அரச குடியினன் (க்ஷத்திரியன்) ஒருவன் மணப்பதாகக் காண்கிறோம். சமணர் வரலாற்றின் மிகத் தொடக்கக் காலத்தை அணுகி நோக்கினால், அங்கும் விருஷப பகவான் வரலாற்றில் வித்தியாதரரைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம். சமண வரலாற்றிலும், இந்து புராண வரலாற்றிலும் ஒரே படித்தாக விருஷப பகவான் காலம் கிருதயுகம் என்று குறிக்கப்படுகிறது. இது வரலாற்றுக் காலத்தின் சார்பால் நெடுந்தொலைவான பண்டைப் பழங்காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது என்பது கண்கூடு. மக்களுக்கு அரசியல் வகுத்த முதல்வர் மக்கள் குடி வாழ்க்கையைச் சீரமைத்துப் பொருட் படைப்பு, பகுப்பு, பாதுகாப்பு முதலியவற்றுக்கான ஒழுங்கு முறைகளைக் கற்பித்து மனித வகுப்பினைப் பொருளியல் அடிப்படையில் உருவாக்கின பெருமை விருஷப பகவான் செயலே என்று சமணர் கூறுகின்றனர். இதனாலேயே இந்து புராணிகர்களும், திருமாலுக்குப் பத்துத் திருப்பிறவிகள் கற்பித்ததற்கு நெடுநாள் முன்பே, விருஷபரைத் திருமாலின் திருப்பிறவி எனக் கொண்டனர். சமணர் வரலாற்றிலும் அவரே 24 தீர்த்தங்கரர்களுள் முதல்வராவார். இப்போது நடக்கும் கற்பத்தில் (பெரும் பேரூழியில்) சமண சமயக் கொல்லாமை நெறியைச் சீர்திருத்திப் புது உரு தந்தவர் அவரே. வித்தியாதரராகிய தமிழருக்கும் க்ஷத்திரிய அரசருக்கும் மணம் சம்பந்தமான உறவு விருஷப பகவானைப் பற்றிய சமண வரலாற்றில் நாம் கவனிக்க வேண்டிய இரண்டு சிறப்பான செய்திகள் உண்டு. ஒன்று, அவர் இக்குவாகு மரபினர் என்பது. மற்றொன்று, அவர் இரு வித்தியாதர அரசிளம் பெண்களை மணந்தனர் என்பது. இவற்றுட் பிந்திய நம் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஏனெனில், அச்சமயம் இக்குவாகுக்களும், வித்தியாதரர்களும் சரிநிகர் நிலையினராயிருந்தனர் என்பதை அது காட்டுகிறது. இக்குவாகு மரபினர் மிகவும் முதன்மை யுடையவராக வடமொழி இலக்கியத்தில் கருதப்படுகின்றனர். வேதநூல்களிலும், அவர்கள் ஆரியரிடையே தலைமை வாய்ந்த வகுப்பினர் என்று குறிக்கப்படுகின்றனர். பிற்கால வடமொழி நாடகங்களும், காவியங்களும் நாகரிகப் பண்பாடு வகைகளில் இக்குவாகுக்கள் மிக உயர்ந்த தலைமை நிலை உடையவர் என்று கூறிச் செல்கின்றன. இராமன் இக்குவாகு மரபினனே. கௌதம புத்தரும் இம்மரபினரென்றே கூறிக் கொண்டார். சமணரின் தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வருள் பலர் இம்மரபின் வழி வந்தவர்களாகவே தெரிகிறது. இத்தனைச் சிறப்பு மிக்க அரசகுடி (க்ஷத்திரிய) மரபினர் ஒருவர், வித்தியாதர அரச குடும்பத்துடன் மணஉறவு கொண்டனர் என்பதிலிருந்து இரு செய்திகள் தெளிவுபடுகின்றன. ஒன்று, இவ்விரு மரபுகளும் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சரிநிகரான இரு குடிகளாயிருந்திருக்க வேண்டும். அல்லது அவ்விரு வகையினரும் ஒரே இனத்தவராயிருக்க வேண்டும். உண்மைக் காரணம் இவற்றுள் எதுவாயினும் சரி; விருஷப பகவான் வித்தியாதர அரசர் குடியிலிருந்து பெண் கொண்டனர் என்பதோடன்றி, இரண்டு பெண்களையும் பட்டத்தரசியராகக் கொண்டனர் என்றும் அறிகிறோம். மொஹஞ்சதரோ புதையலில் திராவிடர் நாகரிகம் இதுமட்டுமன்று, விருஷப பகவானுடைய முற்பிறப்பில் அவர், வித்தியாதரப் பேரரசர் அதிபலராயிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இவ்வித்தியாதரப் பேரரசரும் கொல்லாமை நெறியை உறுதியாகக் கடைப்பிடித்த சமண சமயத்தினரே. கூறும் எல்லாச் சமண புராணங்களும் - வட மொழியிலுள்ள புராணங்களும், தமிழிலுள்ள புராணங்களும் ஒன்றைப்போலவே இச்செய்தியை வலியுறுத்துகின்றன. மிகவும் பழமை மிக்க அந்நாட்களிலேயே இவ்வித்தியாதரர்கள் இமய முதல் கன்னியாகுமரி இலங்கை வரையும், காந்தார முதல் மகதம் வரையும், மேலும் இந்தியா முழுவதுமே ஆட்சி செலுத்தினார் என்று அறிகிறோம். மொஹஞ்சதரோவிலும் ஹரப்பாவிலும் அண்மையில் கண்ட புதை பொருள் ஆராய்ச்சிகளால் ஆரியருக்கு முந்திய ஒரு பழம் பெரு நாகரிகம் இந்நாட்டில் இருந்ததெனத் தெரிய வருகிறது. நகரங்கள், அங்கே காணப்பட்ட அரண்மனைகள் ஆகியவற்றின் அழிவுகளும், மட்பாண்டங்கள், நாணயங்கள் ஆகியவையும் காணில், அவ்வளவு ஆதி பண்டைக் காலத் திலேயே மக்கள் எவ்வளவு உயர்ந்த வாழ்க்கைப் பண்பாட்டுடையவர்களாயிருந்தார்கள் என்பது தெரியவரும். இப்பொருள்களைக் கண்டெடுத்து ஆராய்ந்த கீழ்நாட்டு ஆராய்ச்சியாளர்,அந்நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள் ஆரியர் வருமுன் இந்தியாவிலிருந்த திராவிட மக்களே என்று கூறுகின்றனர். திராவிடர்கள் வித்தியாதரரேயாதலின், இந்நகர்களில் வாழ்ந்த மக்களும் சமண நூல்களில் குறிக்கப்பட்ட வித்தியாதரராகவே யிருத்தல் வேண்டும். வேதங்களில் பழங்குடி மக்களுக்கு வசைமாசி பழங்குடி மக்களைப் பற்றிய வேதங்களின் கூற்றுக்கள், பெரிதும் வசைமாரிகளாயிருப்பினும், அவற்றுள்ளும் அவர்களைப் பற்றிய உண்மைச் செய்திகள் பல விளக்கம் பெறுகின்றன. வேத இருடிகள் அவர்களைத் தாஸ்யர்கள் என்று குறித்தனர். இத்தாஸ்யர்கள் அல்லது தாஸர்கள், இந்திர வணக்கத்தை எதிர்த்தவர்கள். எனவேதான் அவர்கள் சமயச்சடங்கற்றவர் (அவிரதர்) என்றும்; மாறுபட்ட சடங்கு உடையவர் (அன்னிய விரதர்) என்றும்; யாகம் செய்யாதவர் (அயக்ஞர்) என்றும்; ரிக்வேதத்தை ஏற்காதவர்கள் (அன்-ரிக்) என்றும்; பிராமணப் புரோகிதரைக் கொள்ளாதவர் (அப்ராஹ்மணர்) என்றும்; இந்திரனை வணங்காதவர் (அனிந்திரர்) என்றும் பலவாறாகக் குறிப்பிடப்பட்டனர். வேதநூல்களில் கூறப்பட்ட தாஸ்யர்களின் இவ்விவரங் களிலிருந்து அவர்கள் வேதமுறைப்படி செய்யப்படும் யாகங்களை எதிர்த்தனர் என்றும்; அவர்கள் வேறுபட்ட சமயச் சடங்குகளை உடையவர்கள் என்றும்; வேறுபட்ட மொழியைப் பேசினர் என்றும்; இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களின் வணக்கத்தை எதிர்த்தனர் என்றும் தெரிய வருகின்றன. சிசினதேவ வணக்கம் என ஆரியர் இழித்துக் கூறியதன் கருத்து வேத இலக்கியத்தில், இவர்களைப் பற்றிக் கூறப்பட்ட இன்னொரு செய்தி கீழ்நாட்டாராய்ச்சியாளர் பலருக்கு மயக்கத்தை உண்டுபண்ணி வந்திருக்கிறது. அது இத்தாஸ்யர்கள் சிசினதேவரை வணங்குபவர் என்பதே. சிசினதேவர் என்ற இத்தொடர், அறிஞர்களுக்குப் பெருமலைப்பை ஊட்டி வந்தது. அது குறி (லிங்க) வணக்கம் என்று மொழி பெயர்க்கப்பட்டது. இத்தகைய கருத்து எழக்காரணம், தாஸ்யர்கள் மிகவும் நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள் என்ற பழைய கருத்தே. இந்தியாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் உள்ள நாகரிகமற்ற காட்டு மிராண்டிகளிடையில் லிங்க வணக்கம் இருந்தது. ஆகவே, அவர்களுடனொப்ப, இவர்களிடமும் அவ்வணக்கம் இருந்தது என்று கொள்ளப்பட்டது. லிங்கம் பிறப்பின் அறிகுறி. அதில் இரு பகுதிகள் உண்டு. ஆண் சார்பான அடையாளம், (லிங்கம்) பெண்சார்பான அடையாளம் (ஆவுடை) என்பவை. ஆனால், சிசின என்ற சொல், முதலது மட்டிலுமே குறிப்பது. எனவே, சிசினதேவர் என்பதை இலிங்க வணக்கம் எனக் குறிப்பது முற்றிலும் பொருந்தாது. சமணமரபு இதனை அறிய மிகவும் உதவுகிறது. விருஷப பகவான் சரிதம் கொல்லாமை நெறி மீண்டும் தலையெடுத்து ஓங்கிய செய்தியை, நன்கு விளக்குகிறது. அவர் தம் மைந்தன் பரதனை அரசனாக்கித் தம் அரசுரிமை துறந்து யோகமும் தவமு மாற்றக் காடு சென்றார். அவர் தம் அணிகளையும் ஆடைகளையும் களைந்து, ஜாத ரூபத்துடன் அதாவது, பிறந்த மேனியுடன் நாட்கள் கழித்தார். இத்திகம்பர உருவுடனேயே அவர் கேவல ஞானமடைந்து, அதனைப் பலவிடங்களிலும் (அவ்வுருவுடனேயே) சென்று போதித்தார். விருஷபர் நிர்வாணம் அடைந்தபின் அவர் புதல்வன் பரதன் அவருக்குக் கயிலை மலையில் ஒரு கோயில் எழுப்பி, அவர் உருச்சமைத்து வணங்கினான். இங்ஙனம் விருஷப பகவானுக்கு உருவமைத்துக் கோயில்கட்டி வழிபடும் வழக்கம் இந்தியா முழுவதும் பரந்திருக்க வேண்டும். வித்தியாதரர் கொல்லாமை (அஹிம்சை)க் கொள்கையினர். ஆதலின் அதனோடொப்பத் தம் நகரங்களிலும் இவ்வகைக் கோயில்கள் கட்டி வழிபட்டிருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் எழுப்பப்பட்ட உருவம் பேரியோகி யாகிய விருஷப பகவானின் திகம்பர உருவாயிருந்தது. வெளிநாட்டுப் படையெடுப்பாளரான ஆரியர் கண்களில், திகம்பர (நிர்வாண) உருவ வணக்கமாகத் தோற்றியது. பகைமை காரணமாக, அதனைச் சிசின தேவர் என அவர்கள் இழிவுபடக் கூறினர். இப்பொருள்கோள் சரி எனக் கொண்டால், ஆரியர் படையெடுப்புக்கு நெடுநாள் முன்னிருந்தே, இந்தியா முழுவதும் கொல்லாமை நெறியைப் பின்பற்றிய வித்தியாதரர்கள் நிறைந்து வாழ்ந்தவராதல் வேண்டும். தெற்கிலும் பிற்கால ருத்ர - சிவ வணக்க முறை ஏற்படும் வரையில், இந்த விருஷப வணக்கமே நிலைபெற்றிருந்தது. அது பின்பு ருத்ர - சிவ வணக்கமாக மாறியது, தேவாரம் பாடிய நாயன்மாரது புதிய இந்துமத இயக்கக் காலத்தி லேயே யாக வேண்டும். தேவாரப் பாடல்களின் கூற்றுக்களை ஆராய்ந்து பார்த்தால், தென் இந்தியாவிலுள்ள பண்டைய திராவிட அரசர்களான சோழர், பாண்டியர், சேரர், காஞ்சிபுரத்துப் பல்லவர், ஆகிய குடியினர் அனைவரும் சமண சமயத்தைப் பின்பற்றியவர்களே என்பதைக் காணலாம். அப்படியானால், அக்காலத்தில் தென் இந்தியாவில் நிலவியிருந்த சமண சமயத்தின் நிலை யாது? தொல்காப்பியத்தில் கூறும் கந்தழிக்குப் பொருள் என்ன? தமிழிலேயே பெரும்பாலும் மிகப் பழமையான நூல் என்று கூறத்தகும் தொல்காப்பியத்தில், தென் இந்திய வாழ்க்கை நிலை நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆராயின், முருகன், கண்ணன், இந்திரன் முதலிய பல்வேறு குல தெய்வங்களை மலைப்புறக் குடிகளும், பிற குடிகளும் வணங்கினதாக அறிகிறோம். ஆனால், தனிப்பெருந் தெய்வமாக வணங்கப்பட்ட ஒன்றின் பெயரும் தரப்பட்டிருக்கிறது. அது கந்தழி என்று குறிக்கப்படுகிறது. உரையாசிரியர்கள் அதற்கு “எல்லாப் பற்றுக்களையும் கட்டுக்களையும் அறுத்தெறித்து முதல் நிலையடைந்தவன்” என்று விளக்கந் தருகின்றனர். இது சமணர் சித்தனைப் பற்றிக்கொண்ட கருத்திற்கு முற்றிலும் பொருத்த மானது. சித்தபரமேஷ்டியின் வணக்கம் மிகப் பண்டைக் காலத்திலிருந்தே தென் இந்தியாவில் இருந்து வந்து, இறுதியில் காபாலிக சைவத்தின் முன் மறைவுற்றிருக்க வேண்டும். இவ்வுண்மைக்கு இன்றைய வழக்கொன்று இன்னும் சான்றாயமைந்துள்ளது. சமணரல்லாதவரிடையிலும் கூடப், பிள்ளைகளுக்கு முதலில் சமய போதனை செய்யும்போது, வணக்க மொழியாக (முதலில்) எல்லாராலும் ஓம் சித்தாய நம என்று கூறப்படுகிறது. அதன்பின் அவரவர் தனிவகுப்பு மரபின்படி ‘ஓம் நமசிவய’ அல்லது ‘ஓம் நாராயணாய’ என்ற மந்திரங்கள் ஓதுவிக்கப்படுகின்றன. தத்தம் மரபுக்கேற்ற கடவுட் பெயராகிய நமசிவய, நாராயணாய நம என்ற தொடர்களுக்கும் முன்னதாகச் சித்தவணக்கம் கூறப்படுதல் குறிப்பிடத்தக்கது. புதிய இந்து இயக்கக் காலத்துக்கு முன்பு, தென்இந்தியா முழுவதும் சித்த வணக்கம் பரவியிருந்ததென்பது இதனால் நன்றாக வலியுறுவதாகின்றது. தமிழராகிய வேளாளர் - வேத வருணாசிரமத்துக்கு உட்பட்டவரல்லர். மற்றும் தொல்காப்பியத்தின் மூலம், நாம் அறியும் இன்னொரு சிறந்த உண்மை, குடிவாழ்வில் ஏற்பட்டபடி, முறைக்கு மாறான ஒரு வகுப்பு இருந்ததாகும். நான்கு வகுப்பு (வர்ணங்களு)க்குரிய கடமைகள் தொல்காப்பியத்தில் தரப்படுகின்றன. ஆனால், தென் இந்தியாவின் முதல் குடிகளான நிலப்பெருங் குடிமக்கள், இவ்வகுப்புமுறை (வருணாசிரம தர்மத்து)க்குப் புறம்பானவர்களாயிருந்தார்கள். தொல்காப்பியர் அவர்களை வேளாளர் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் குடிவாழ்வில் மிக உயர்ந்த இடம் பெற்றனர். நிலப்பெருங் கிழவராதலின், அவர்கள் தென் இந்தியாவை ஆண்ட மன்னர்களுடன் மண உறவு கொண்டனர். அவர்கள் மன்னர் படைகளில் படைத்தலைவராகவும், அவர்களுடைய அமைச்சராகவும், ஆட்பெயராகவும் தொண்டாற்றும் உரிமையுடையவராயிருந்தனர். இவ்வேளாளர், வகுப்பு முறையை (வருணாசிரம தருமத்தை) ஏற்கவில்லை. அவர்கள் பார்ப்பன வகுப்பு முறைப்படி எந்த வகுப்பினருக்குரிய கடமைகளையும் மேற்கொள்ளும் தடையற்ற உரிமை உடையவராயிருந்தனர். திருக்குறள் வேளாண் வேதம் இவ்வேளாளர் நிலப்பெருங் கிழவரா யிருந்ததனால், அவர்கள் உழவுக்கு முதன்மை தந்தது இயற்கையே. இது மிகவும் கவனிக்கத்தக்க செய்தியாகும். ஏனெனில் வட இந்தியாவிலிருந்து புகுத்தப்பட்ட பார்ப்பன மரபின்படி, உழவு மிகவும் கடைப்பட்ட தொழிலாகும். அது கடைப்பட்ட வகுப்பாகிய சூத்திரருக்கே உரியது. இரு பிறப்பாளராகிய (துவிஜராகிய) முதன் மூவகுப்பினருக்கும் அது விலக்கப்பட்டது. ஆனால், தென் இந்தியாவில் முதன்மை பெற்ற வகுப்பு வேளாளராகவே இருந்ததனால், மக்கள் தொழில்களுள் உழவுக்கே முதலிடம் தரப்பட்டது. மற்றெல்லாத் தொழிலாளரும் இத்தொழிலாளரை அண்டியே பிழைத்தவராதலால், அவையனைத்தும் உழவுக்குக் கீழ்ப்பட்ட தொழில்களாகவே கருதப்பட்டன. இச்செய்தி தெய்வப் புகர் சான்ற தமிழ்ப் பேரிலக்கிய நூலான திருக்குறளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது வேளாண் வேதம் என்று குறிக்கப்படுவதும் கவனிக்கத் தக்கது. திராவிடராகிய தமிழரே, வேளாளரும் உயரிய நாகரிகமுடைய வித்தியாதரரு மாவர். எனவே, தொல்காப்பியத்தில் இவ்வோளாளரே தென் இந்தியாவின் அன்றைய காலத்துத் தூய திராவிடர் என்பதும், தொல்காப்பியர் காலத்திலேயே வடநாட்டு வகுப்பு முறை தென் இந்தியாவில் புகத் தொடங்கிற்று என்பதும் தெளிவு. இவ்வோளாளர் வகுப்பு முறையை மட்டுமன்றி வேதச் சடங்குகளையும் மறுத்தனர். ஏனெனில் அவர்கள் விருஷப பகவானின் கொல்லாமை நெறியை மேற்கொண்டவர்கள். இதிலிருந்து பண்டய இந்தியாவின் வித்தியாதரர்கள், ஆரியர், வருமுன் இந்தியாவிலிருந்த மக்களே என்பதும், அவர்களே இன்று திராவிடர்கள் என்றழைக்கப்படுகின்றனர் என்பதும் காணலாம். அவர்களே மொஹஞ்சதரோ, ஹரப்பாப் புதை பொருளாராய்ச்சியால் தெளிவுபடுத்தப்பட்ட இந்தோ சுமேரிய இன மக்களாவர். தென் இந்தியாவில் இவ்வினத்தாரின் பண்பாடு, தொன்றுதொட்டுப் புதிய இந்து மத இயக்கம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஏற்படும் வரையில் நிலவியிருந்தது. அந்நூற்றாண்டில்தான் காபாலிகரும், சாக்தரும் வந்து பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அப்பழம் பெருஞ் சமயத்தை அருகச் செய்தனர். சைவ சமயத்திலும் முற்காலச் சைவ நெறி கொல்லாமை நெறியைச் சார்ந்தது என்ற உண்மை இக்கோட்பாட்டை வலியுறுத்தும். காபாலிகச் சைவம் எவ்வகையிலும் கொல்லாமை நெறியுடன் ஒத்து வரக் கூடியதன்று. - ஏனெனில் அது ஊனுணவையும் குடியையும் ஆதரிப்பதுதான். கொல்லாமை நெறியொழுகும் சைவ சமயம் சமண சமயத்தின் மறு பெயரே. பண்டைச் சைவம் தெளிவுபடக் கொல்லாமை நெறியை மேற்கொண்டது என்பது உண்மையானால், அது விருஷப பகவான் வணக்கத்திற்கு ஒரு மறுபெயரே என்பது தெளிவு. இவ்விடத்தில் விருஷப பகவானுக்கே மகேசுவரன், மகாதேவன், யோகீசுவரன், மஹாயோகி, சிவன், சிவசொரூபன், சிவகதி நாயகன் முதலிய மாற்றுப் பெயர்கள் இருந்தன என்பதை ஓர்தல் வேண்டும். புதிய இந்து இயக்கத்திற்கு முந்திய சமயத்தைச் சமணமதம் என்றழைத்தாலும் சரி; சைவம் என்றழைத்தாலும் சரி; அப்பெயரைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், சமணர் கூற்றுப்படி பார்த்தாலும், சமணரல்லாதார் கூற்றுப்படி பார்த்தாலும், அது கொல்லாமை நெறியை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவருக்கும் உடன்பாடான முடிவாகவே காணப்படுகிறது. வித்தியாதரர் தமிழரே முடிவாகக் கூறுமிடத்து, வித்தியாதரர் என்ற கேள்விக்கு விடை கண்டோம். அவர்கள் ஆரியர் வரவுக்கு முந்திய காலத்து இந்தியாவின் பழங்குடிகள். வேதங்களில் கூறப்பட்ட தாஸ்யர்கள் அவர்களே. அவர்கள் உயரிய நாகரிகமும் பண்பாடும் உடையவர்கள்; கொல்லாமை நெறியைப் பின்பற்றியவர்கள். அவர்கள் இன்றையத் தென் இந்தியத் திராவிடர்களின் மூதாதையர்கள். அவர்கள் ஒரு காலத்தில் வட இந்தியாவிலும் பரந்திருந்தனர். ஆயினும், கி.பி. முதல் நூற்றாண்டுகட்குள், அவர்கள் தென் இந்தியாவில் மட்டுமே தலைசிறந்திருந்தனர். இங்கே அவர்கள் பின்னும் நெடுங்காலம் தம் அரசு, தம் இலக்கியம், தம் சமயம் ஆகியவற்றை அழியாது பாதுகாத்து வந்தனர். அண்மையிலேயே வடநாட்டினின்று வந்த பிறநாட்டு நாகரிகப் பண்பாட்டு ஆதிக்கத்தால் இவை நலிவடைந்தன. ம்ம்ம் . அப்பாத்துரையம் - 41 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) பொது  அறிவுச் சுடர்  மக்களும் அமைப்புகளும்  நிழலும் ஒளியும்  நாத்திகன் யார்? ஆத்திகம் எது?  இராவணன் வித்தியாதரனா?ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 41 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 22+290 = 312 விலை : 390/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 312 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் அறிவுச் சுடர் 1. உரை முத்துக்கள் ... 3 2. குழந்தைகள் ... 4 3. காதல் ... 4 4. சுவடிகள் ... 8 5. கல்வி ... 9 6. கவிதை ... 11 7. அறிவுநூல் ... 13 8. வரலாறு ... 14 9. கலையும் இயற்கையும் ... 15 10. சமயமும் மெய்விளக்கத் துறையும் ... 16 11. மனிதன் ... 17 12. வாழ்க்கை ... 19 13. நாகரிகம் ... 21 14. பண்புடைமை ... 22 15. முன்னேற்றம் ... 22 16. நாடு ... 24 17. அரசாங்கம் ... 26 18. குடியாட்சி ... 28 19. ரிநிகர் நெறி ... 29 20. செய்தித்தாள் ... 30 21. சட்டமுறையும் வரையறையும் ... 30 22. வகுப்பும் வகுப்புணர்ச்சியும் ... 32 24. உடல் நலம் ... 37 25. உழைப்பும் ஓய்வும் ... 39 26. மருத்துவர் ... 40 27. உரையாடல் ... 41 28. பெருமையும் சிறுமையும் ... 42 29. நகைத்திறம் ... 43 30. மொழி ... 47 31. ஒழுக்கம் ... 48 32. மெய்யறிவு ... 49 33. அன்பு ... 51 34. கடவுள் ... 53 35. பெண்மை ... 54 36. நூல் நிலையம் ... 59 37. நட்பு ... 60 38. இசை ... 63 39. கதையிலக்கியம் ... 64 40. புகழ் ... 65 41. இன்பமும் துன்பமும் ... 67 42. மகிழ்ச்சியும் இன்பமும் ... 68 43. காலம் ... 69 44. இளமையும் முதுமையும் ... 70 45. உணர்ச்சிப்பாங்கு ... 72 46. செல்வம் ... 72 47. வசையுரை ... 74 48. நல்லுரைகள் ... 75 49. முரண்பாடு ... 82 மக்களும் அமைப்புகளும் 1. அமைப்பாளரும் அமைப்புக்களும் ... 94 2. உழைப்பு: கூலி: வாழ்க்கை நலம் ... 119 3. “தகுதியின் மீதே வெற்றி” ... 137 4. தீமையில் நன்மை ... 153 5. நேர்மை நெறியும் அன்பு நெறியும் ... 172 6. தற்காப்பு முறைகள் ... 179 7. வான் போக்கு - மேனோக்கிய உணர்வு ... 197 8. புதிய வீர உணர்வு ... 203 நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1. நாத்திகர் யார்? ... 209 2. ஆத்திகம் எது? ... 220 நிழலும் ஒளியும் 1. நிழலும் ஒளியும் ... 236 2. வெள்ளியின் காட்சி ... 238 3. காலைக் காட்சி ... 242 4. நிலாக் காட்சி ... 252 5. முடிவுரை ... 258 இராவணன் வித்தியாதரனா? ... 267