மணிமேகலை முதற் பதிப்பு - 1958 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. மணிமேகலை புத்தர் விழாவை யார் யாரோ கொண்டாடியது கண்டு தமிழரும் கொண்டாட முன்வந்துள்ளனர். ஆனால், மனித உலகில் பாதிப்பேர் - கிட்டத்தட்ட 100 கோடிப் பேரான புத்த சமய உலகினருக்குத் தமிழகம் அளித்த செல்வத்தை, மணிமேகலைக் காப்பியத்தை அவ் விழாநாளில் தமிழர் நினைத்ததில்லை. புத்தரைத் தமிழர் கொண்டாட விரும்பினால், அதற்குச் சிறந்த வழி, மணிமேகலை விழாவை அன்று நடத்துவதுதான் - மணிமேகலை மாநாட்டை அன்று தொடங்குவது, அல்லது உலகமொழிகளில் மணிமேகலைச் சிறப்பை எடுத்துக்கூறும் மொழி பெயர்ப்புகளை அரங்கேற்றுவதுதான்! ஏனெனில், மணிமேகலை தமிழுக்குப் பெருஞ் சிறப்பளிக்கும் காப்பியம் மட்டுமல்ல, புத்த நெறிக்கு அதனிலும் பெருஞ் சிறப்பளிக்கும் ஏடும் அதுவே! அதைத் தமிழர் போற்றாதது தமிழருக்கு எவ்வளவு இழுக்கோ, அதே அளவு அதைப் புத்த சமய உலகம் போற்றாதது. புத்த சமய உலகுக்கே மன்னிக்க முடியாத பேரிழுக்காகும். ஆனால், தமிழரும் அவர்களை ஆளும் இனமும் மணிமேகலையைப் புத்த உலகத்துக்குக் காட்டினால்தானே! தமிழர் அடிமையினமாய், தம் கலை போற்றாது பிறர் கலை போற்றி, தம் பொன்கலை யறியாது பிறர் பொன்கலை யறியப் பாடுபடும் இன்றைய நிலையில், ஆளப்படும் இனமாக இல்லாமல், கிரேக்கரைப் போல மாண்ட பேரினமாய் இருந்திருந்தால்கூட, தமிழகத்தில் புதையுண்டு கிடக்கும் திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் சங்க இலக்கியக் கலை மணிகளையும் வெளியுலகமாவது கண்டெடுத்துப் பயன்கண்டிருப்பது உறுதி! அந் நிலை ஏற்பட்டிருந்தால் மேலை உலகத்தினர் திருக்குறளையும்; சீன சப்பானியக் கீழை உலகத்தினர் மணிமேகலையையும்; இருதிசையிலும் அழகுக் கலைஞர் சிலப்பதிகாரத்தையும், சங்க இலக்கிய ஓவியப் படிமங்களையும் கண்டுணர்ந்து கட்டாயம் தமதாக்கியிருப்பர்! 1) புத்தசமயமும் மணிமேகலையும் புத்தசமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்தசமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ - பாளியிலோ - வேறு எந்த உலக மொழிகளிலோ - கிட்டத்தட்ட 50 கோடி புத்தசமயத்தினர் பேசும் சீன மொழியிலோ, 8 கோடி புத்தசமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோகூடக் கிடையாது. உண்மையில் புத்த சமயக் காவியங்கள் என்று வகுத்துக் கண்டால்கூட, சமற்கிருதத்தில் ஒன்றும், பாகத மொழியில் இரண்டும். தமிழில் மணிமேகலையுமாக நான்கே உள்ளன என்று அறிகிறோம். இவற்றுள் சமற்கிருதத்தில் அசுவகோஷன் என்ற புலவன் எழுதிய புத்தசரிதம் ஒன்றுதான் மணிமேகலையுடன் சமகாலத்தது என்று கூறத்தக்கது. பண்பிலோ, மணிமேகலையே புத்த உலகின் தலைசிறந்த காப்பியம் என்பதை அவற்றைச் சிறிது ஒத்துப்பார்த்த எவரும் எளிதில் காண்பர். எனவே காலத்தாலும், இலக்கியப் பண்பாலும் மணிமேகலைக்குப் புத்தசமய உலகில் ஈடுசோடு எதுவும் இல்லை. 2) தமிழிலக்கியத்தில் மணிமேகலையின் இடம் தமிழிலக்கிய வானில், திருக்குறள் ஒரு கதிரவன். மணிமேகலை ஒரு பால்நிலாவெறிக்கும் தண்மதியம். சிலப்பதிகாரம் பண்மணி ஒளிவீசும் ஒரு வானவில். சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் சேணில் நிலவும் ஒளிக் கோளங்களாகிய விண் சுடர்மணிகள். தமிழர் பெருங் காப்பியங்கள் என்று வகுத்த ஏடுகள் ஐந்து. அவை மணிமேகலை, சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன. சிறு காப்பியங்கள் என்றும் ஐந்து வகுக்கப்பட்டிருந்தன. அவை சூளாமணி, உதயணன் கதை, நீலகேசி, நாககுமார சரிதம், யசோதர காவியம் என்பவை. இவையே காலத்தால் முந்தியவையும், தன்மையால் சிறந்தவையும் ஆகும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பத்தும் தமிழ்க் காப்பியங்களில் பெருங்காப்பியங்களில் மூன்றும், சிறு காப்பியங்களில் இரண்டு அல்லது மூன்றுமே நமக்கு முழு அளவில் வந்தெட்டியுள்ளன. மீந்தவற்றுள் நாககுமார காவியம் பெயர் மட்டிலுமே கிடைத்துள்ளது. மற்றவற்றில் சில பல பாடல்களோ, பகுதிகளோதான் கிடைத்துள்ளன. இவற்றுள்ளும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் பழமை மிக்க முதற் காவியங்கள் மட்டுமல்ல; தமிழ்ப் பண்பிலும் தமிழர் பண்டைக் கலைப் பண்பாட்டிலும் தோய்வுற்று, சங்க இலக்கியக் கலைக்கோயிலிலேயே இடம் வகிக்கத் தகுந்த தனிப்பெரும் சிறப்புடையவையும் அவையே. மணிமேகலை மதுரைக் கூல வாணிகன் சாத்தனாரால் இயற்றப்பட்ட பின்னரே இளங் கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினாரென்று சிலப்பதிகாரப் பதிகமும் உரையும் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே தமிழரின் காப்பியங்களுள் நமக்குக் கிடைத்துள்ள முதல் முதல் காப்பியம் மணிமேகலையே என்று கூறலாம். தவிர, சிலப்பதிகாரம் பிற்காலத்தாரால் காப்பியம் என்று கருதப்படினும், அது உண்மையில் முத்தமிழ் வளங்கொழிக்கும் ஒரு நாடகமேயாகும். பிற்காலத் தாழிசை மூவடுக்குப் போல, கிரேக்கரின் முத்தொடர் நாடகங்களையும் மூன்று அரங்கங்களாகக் கொண்டு ஆடப்பெறும் மும்மை நாடகங்களின் தொகுப்பாகவே இது இலங்குகின்றது. எனவே, சங்ககாலத்திய முதற் காப்பியமாக மட்டுமன்றி, சங்க காலத்தின் ஒரே காப்பியமாகவும் அது இயங்குகின்றது என்னல் வேண்டும். 3) சங்க இலக்கியமும் மணிமேகலையும் கலையில் மனிதன் காணும் அழகு பொதுவாக இருவகைப் பட்டது. அவன் சிறுமையில் நுண்ணிய அழகு காண்கிறான். பெருமையில் பாரிய வீறமைதியும் பெருமித உணர்வும் காண்கிறான். பண்டை மேலையுலகிலே இரு நாகரிகங்கள் இந்த இரு வேறு வகைகளையும் இரு வேறாகவே காட்டும் முறையில் அமைந்திருந்தன. கிரேக்கர், அதாவது, சங்க இலக்கியம் குறித்த பெயருடன் கூறுவதானால் யவனர், சிற்பத்திலும் படிமக் கலையிலும் இலக்கியத்திலும் நுண்ணய அழகையே மிகுதிகண்டனர். ஆனால், உலகம் முன்னும் பின்னும் அத்தகைய அழகை என்றுமே கண்டதில்லை யென்று மேநாட்டுக் கலை விற்பனர் கருதியுள்ளனர். இது போலவே உரோமர் சிற்பம் பாரிய வீறமைதியை உலகில் வேறெந்த இனத்தையும் விடச் சிறப்பாகக் காட்டிற்று என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிரேக்கரின் மிகப் பெரிய படைப்புக்களில்கூட நாம் இந்த நுண்ணியத்தையும்; உரோமரின் மிகச் சிறு படைப்பில்கூட இந்த வீறமைதியையும் காணலாம். வடஇந்திய - இஸ்லாமியக் கலைப்படைப்பாகிய தாஜ்மகாலிலும் ஜும்மா மஸ்ஜிதிலும் இந்த இரு பண்புகளும் சரியாக அமைந்துள்ளதனாலேயே அவை மேனாட்டுக் கலைஞரின் ஏகோபித்த போற்றுதலுக்கு ஆளாகியுள்ளன. மதுரை திருமலை நாயக்கன் மகாலும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலும் தனிப்பட்ட உரோமப் பண்பை மட்டிலும் காட்டுகின்றன. திராவிடக் கலை என்று கூறப்படும் பல்லவர் - ஆந்திரர் காலச் சிற்பங்களும் அதேகால அஜந்தா, சித்தன்ன வாசல் ஓவியங்களும் சங்க இலக்கியமும் பொதுவாகக் கிரேக்கர் நுண்ணியப் பண்பை செவ்வையாகக் காட்டுகின்றன. சங்க இலக்கிய காலத்திய, அல்லது அதற்கு முற்பட் தமிழகக் கலைப் படைப்புக்கள் எவையேனும் நமக்கு மீந்திருக்குமானால், அவை கிரேக்கர் நுண்ணிய அழகையும் உரோமர் பாரக்கலையின் வீறமைதியையும் கட்டாயம் வென்றிருக்கும் என்று துணிந்து கூறலாம். காலத்துக்கு முற்பட்ட சங்க இலக்கியம் இதற்குச் சான்று. தவிர, மேலை நாடுகளில் கிரேக்க, உரோம கலைப்பண்புகளுக்கு அவற்றுக்கும் முற்பட்ட நடுநிலக் கடல் நாகரிகப்பண்பே மூலமுதல் ஆகும். தென்னாட்டின் சிந்துவெளிக் கால நாகரிகம் அவற்றுடன் தொடர்பு பட்டது மட்டுமல்ல! கிரேக்க கலையின் அழகைப் பழிக்கும் கலைப் பொருள்கள் கிரேக்க நாகரிகத்துக்குச் சில பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே இங்கே காணப்படுகின்றன. நடுநிலக் கடலக நாகரிகத்தின் மறுமலர்ச்சியாக எழுந்த இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களான ரபேல், மைக்கேல் ஏஞ்சலோ, லியானார்டோ டாவின்சி, பெட்ரார்க், தாந்தே ஆகியவர்கள் உரோம கிரேக்க கலைப்பண்புகளைப் புதுப்பித்தது போலவே, ஆந்திர பல்லவக் கலையும், வடநாட்டுத் தாஜ்மகாலும், இரஜபுத்திரர் கலையும் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிட - நடுநிலக் கடலக (ஞசடிவடி-ஐனேடி - ஆநனவைநசசயநேயn) நாகரிகக் கலையின் மறுமலர்ச்சிகளே யாகும். சங்க இலக்கியத்தில் நாம் பொதுவாகக் காணும் மாய அழகு கிரேக்கரின் நுண்ணய அமைதியழகே. ஆனால் கிரேக்கரிட மிருந்ததை விடப் பன்மடங்கு உயரிய அறிவுத் திறமும் கலைத் திறமும் அதில் இணைந்து காணப்படுகின்றன. இதனாலேயே பலர் அதன் அறிவுத் திறத்தில் சிக்கி அதன் பொன் வண்ணப் பொலிவைக் காணாது போகின்றனர். உண்மையில் சங்க இலக்கியப் பாடல்களின் வனப்பை பொன் வெள்ளி மணிகளிலும் தந்தத்திலும், பட்டிழையிலும், பூவிலும், பொன்னூலிலும் இழைக்கப்படும் நுண்ணழகுப் பொருள் களுக்கே ஒப்பிடலாம். நமக்குக் கிடைத்துள்ள சங்கப்பாடல்களில் மிகப் பெரும் பாலானவை - கிட்டத்தட்ட அனைத்துமே தொகை நூல்கள் அல்லது பொறுக்கு மணிகளின் திரட்டுக்கள். ஆதலால், நாம் அவற்றின் மூலம் தமிழரின் நுண்ணய இழைப்புத் திறத்தையே பெரிதும் காணமுடிகிறது. பருமை, பெருமை, பெருமித வீறு சார்ந்த திறங்களை அவ்வளவாகக் காணமுடியவில்லை. இழைத்துருவாக்கிய முத்துகளாகவே - பெரிய சிறிய முத்துகளாகவே - அவை திகழ்கின்றன. திருக்குறட்பாக்களும் குறுந்தொகைப் பாடல்களும் மலையைக் கடுகளவாக அடக்கிய செறிந்த முத்துக்கள். பத்துப்பாட்டின் பாடல்களோ முந்நூறு ஐந்நூறு அடிவரை நீண்ட பாரிய முத்து உருவங்கள் - அவ்வளவே! நெடுநல்வாடை ஒன்றே நுண்ணயம் கெடாமல் கிரேக்க வீறமைதியை கிரேக்கரிலும் ஸ்பார்ட்டா நகரத்தவருக்கே சிறப்பாய் உரிய செறிந்த வீறமைதியை - எட்டுகிறது. பேரளவான பார அகலக்கலை சங்க இலக்கியத்தில் நாம் பெரிதும் காணமுடியாத ஒன்றாகும். சங்ககால ஏடுகளான சிலம்பும் மேகலையும் இக் குறைபாட்டை மிகக் பேரளவில் நிறைவுபடுத்துகின்றன. ஏனெனில், அவை பாரக் கவிதை மட்டுமல்ல. கிரேக்கர்களிடையே கலைஞன் பீடியாஸ் நிருபித்த பாரச் சிலைகளைப் போல அவை கிரேக்க சங்க இலக்கியப் பண்பான நுண்ணயமும், உரோமருக் குரிய பார வீறமைதியும் இரண்டறக் கலந்து அதிசயப் படைப்புக்களாய்த் திகழ்கின்றன. 4) காப்பிய உலகில் மேகலை கவிதைப் பண்புக்கும் கலைப் பண்புக்கும் உலகிலேயே முதன்முதல் முழுநிறை இலக்கணம் கண்டு வகுத்தவன் சமற்கிருதப் பெருங் கலைவாணன் தண்டி. இவன் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராச சிம்ம பல்லவன் (685 -705) ஆட்சியில் வாழ்ந்தவன். ஆனால் எக் காரணத்தாலோ காப்பிய இலக்கண உணர்வும் உயிர்த் துடிப்புடைய காப்பியங்களின் படைப்பும் அவனோடு மறைந்துவிட்டன. அவனுக்கு முன் தமிழில் காப்பியங்கள் பல எழுந்தன. சமற்கிருத்திலும் அவனுக்கு முன் காளிதாசனின் இரகு வம்சம், குமார சம்பவம் போன்ற சிறந்த காப்பியங்கள் படைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவன் நூற்றாண்டுக்குப்பின் தமிழிலும் காப்பியங்கள் எழவில்லை. சமற்கிருதத்திலும் காப்பியங்கள் மரபிழந்தன. பின்னாட்களில் இந்த இரு மொழிகளையுமே பின்பற்றிய மற்ற எல்லா இந்திய மொழிகளும் இராமாயண பாரத புராணங்களைக் காப்பியங்களாகக் கருதி மொழி பெயர்த்தன. தமிழ், சமற்கிருத உயிர்க்காப்பியங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. இடைக்கால, பிற்கால மொழிப் புலவர்கள் அவற்றை மொழிபெயர்க்கவோ, பின்பற்றவோ கனவு காணவில்லை. அவற்றின் பண்பையே மறந்தனர்! காப்பியங்களைப் பெருங் காப்பியங்களென்றும் சிறு காப்பியங்க ளென்றும் வகுத்த தமிழர்கள், கம்பராமாயணத்தையோ வில்லிபுத்தூரார் பாரதத்தையோ, பெரியபுராணம், திருவிளை யாடற் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றையோ காப்பியங்கள் என்று குறித்ததும் இல்லை. பெருங்காப்பியங் களாகவே, சிறு காப்பியங்களாகவோ, புதுக்காப்பியங்களாகவோ கூட வகுக்க எண்ணவில்லை. அவை காப்பியங்களல்ல, புராண இதிகாசங்களே என்று விடுத்தனர்! சமற்கிருதவாணர்கள் கூட வால்மீகி ராமாயணமோ வியாசர் பாரதமோ காப்பியங்களென்று கருதவில்லை. நம் தற்காலத் தமிழ்ப்புலவர் உலகம் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும். மேனாட்டு மொழிகள் படித்த தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழாராய்ச்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இராமாயண பாரதங்கள் சமயச் சார்பானதனாலோ காவிய எல்லை கடந்து நீண்டுவிட்டதனாலோ, மிகப் பழமை யானவையாதலாலோ காப்பியங்களாகச் சேர்க்கப்படவில்லை என்று சிலர் போலி விடையிறுக்கக் கூடும். ஆனால், இது சரியான விளக்கமல்ல, ஆதாரமாகக் காட்டும் செய்திகளும் சரியானவை யல்ல. பாரத இராமாயணக் கதைகள் பழமை யானவையே. தவிர இன்றிருக்கும் பாரத இராமாயண ஏடுகளல்ல. மேலும் பழமையும் பேரளவும் காப்பியத்துக்குக் குறைகள் ஆகமாட்டா. புத்த சரிதம் முற்றிலும் சமயச் சார்பானதே. குணாட்டியன் ‘பேய் மொழி’யில் இயற்றிய ‘பெருங்கதை’ வால்மீகி இராமாயணத்துக்கும் பாணினிக்கும் முற்பட்டது. வால்மீகி இராமாயணம் 24000 பாடல்களும் வியாசபாரதம் 100,000 பாடல்களும் உடையதா யிருக்க, அது 700,000 பாடல்கள் உடையதாயிருந்ததாகவும், கடைசிக் காண்டமே 100,000 பாடல்களுடையதாயிருந்த தாகவும் குறிக்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கூறுகளையும் பொருட் படுத்தாமல் அது ஆதி காப்பியம் என்று சமற்கிருத வாணரால் கருதப் பட்டது. வால்மீகி ராமாயணங்கூட ஓரளவு ஏகதேச காவியமாகக் கருதப் படுவதுண்டு. தமிழ் மலையாள இராமாயணங்கள், சிறப்பாக மலையாள இராமாயணம், வால்மீகி இராமாயணத்தைப் பார்க்க மிகுதி காப்பியப் பண்பு உடையவை என்பதில் ஐயமில்லை. இலக்கிய உலகில் இருவகைக் காப்பியங்கள் உண்டு. இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என்பன அவை. முந்தியவை மக்களிடையே வழங்கிய மக்கட் பாடல்களை, காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பதால் ஏற்படுவன. பின்னது ஒரு கலைஞனாலேயே கட்டமைக்கப்படுபவை. ஹோமரின் இலியட் முந்திய வகைக்கும், மில்ட்டனின் துறக்க நீக்கம் பிந்தியதற்கும் எடுத்துக்காட்டுக்கள். மணிமேகலை இரண்டுக்கும் இடைப்பட்டது. மக்கள் பாடல்களுக்கும் அமைந்த பெயரான ‘காதையே’ அதன் உள்ளுறுப்பின் பெயராக அமைந்துள்ளது. 5) உயிர்க்காப்பியங்களின் பண்புக் கூறுகள் உயிர்க்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த தமிழ்க் காப்பியம் மணிமேகலை ஒன்றே என்னலாம். சிலப்பதிகாரமும் அப் பண்பு நிறைந்த தாயினும், அது காப்பியப் பண்புடைய காப்பிய நாடகம் என்று மேலே கூறினோம். தமிழில் மணி மேகலையும் சமற்கிருதத்தில் காளிதாசன் இரு காவியங்களும், ஹோமரின் இலியடும், தாந்தேயின் மூவுலகும், மில்ட்டனின் துறக்க நீக்கமும் நம் உலக இலக்கியத்தின் உயர்பெருங் காப்பியங்கள் ஆகும். கம்பராமாயணம் மட்டுமல்ல, சிந்தாமணிகூட இவற்றில் இடம் பெறுவது அரிது. இந்த உயர் பெருங்காப்பியங்களின் தனிப்பண்புகள் பல. அவற்றுள் பெரும்பாலானவற்றைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். இதிகாச புராணங்கள் ஆகிய போலிக் காப்பியங்களிலிருந்து அவற்றைப் பிரித்துணரவல்ல காப்பியச் சிறப்புப் பண்புகள் பல. அப் பண்புகளில் உலகில் சிறந்த காப்பியங்களையும் விஞ்சிய சிறப்பு மணிமேகலைக்கு உண்டு என்பது ஒப்பீட்டால் விளங்கத் தகும். இவற்றில் சில காண்போம். சிந்தாமணியிலும் பிற்காலப் புராணங்களிலும் இக் கால புராணத் திரைப்படங்களிலும் கதைக்குரிய இடமும் காலமும் இந்த உலகில் எந்த இடமோ, வரலாறறிந்த எந்தக் காலமோ அல்ல; இரண்டும் கற்பிதமானவை. இராமாயண பாரதத்திலோ பின்னணி இடம் வடநாடு; ஆனால், வடநாட்டு வாழ்க்கைக் காட்டப்படவில்லை. பெயர் தவிர மற்ற யாவும் கற்பனை. காலமும் அப்படியே. மேலைவுலகக் காப்பியங்களில் கூட இக் குறை உண்டு. மணிமேகலை இதற்கு முற்றிலும் விலக்கு ஆகும். உயிர்க்காப்பியங்கள் - தலைசிறந்த தற்காலப் புனைகதை களைப் போல - எடுத்த எடுப்பிலேயே கதையின் கவர்ச்சிமிக்க இதயப் பகுதியை எட்டிப் பிடித்துவிட வேண்டும். அதன் வீறமைதியின் உச்சியை எடுத்துக் காட்டி வாசகரை ஈர்த்துவிடவேண்டும். ‘வீரருடன் கடவுளர்கள் கைகலந்த பெரும்போர்’ என்று ஹோமரும் ‘வடதிசைக்கண் இமயமலை மேல்கடலும் கீழ்கடலும் அளக்கும் முழுக்கோல்போல் கிடக்க’ என்று காளிதாசனும் ‘மனிதன் மாபெரு வீழ்ச்சியும் அதன் பயனாய விளையும் ஆமிவை’ என்று மில்ட்டனும் தொடங்குவது போல, ‘ஞாயிறு போற்றுதும்’ என்று கண்ணகி திருமண வாழ்த்துடனும் திருமணத்துடனும் சிலப்பதிகாரம் தொடங்குகிறது. ‘உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர்’ என்று மணிமேகலை புகார்நகர் வருணனையுடனும் இந்திர விழாவுடனும் தொடங்குகிறது. சிலம்பு, மேகலை ஆகிய பாடல்களின் பதிகங்கள்கூடக் காப்பியத்தின் இப் பண்புகள் செறிந்துள்ளன. சிலம்பின் பதிகம் மணிமேகலை யாசிரியராலும், மேகலையின் பதிகம் சிலப்பதிகார ஆசிரியராலுமே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. உயிர்க் காப்பியங்கள் நாட்டுப் பெருமை, நகர்ப்பெருமை - ஆற்றுச் சிறப்பு, மலைச்சிறப்பு - மாலை வருணனை, நிலா வருணனை - நீர் விளையாட்டு, பந்து விளையாட்டு ஆகியவற்றுள் ஒன்றும் பலவும் ஏற்பறிந்து தரவேண்டும். கம்பராமாயணமும் பிற்கால தமிழ்ப் புராணங்களும் இவற்றைக் குறைவின்றித் தருகின்றன - ஆனால், சிலம்பு மேகலைகளைப் போல ஏற்பறிந்து கதையுடன் இரண்டறப் பொருத்தித் தரவில்லை. நாடு, நகர், ஆறு, மலை, வருணனை தொடக்கத்திலும், பிற வருணனைகள் கண்ட கண்ட இடங்களிலும் கதைக்குப் புறம்பாகவும் கதைப் போக்கை இடையிட்டுத் தடுத்தும் தரப்படுகின்றன. ஆனால், இவ் வகையில் சிலம்பு முதல் தரமான வியத்தகு கலைப்பண்பு காட்டியுள்ளது. சிலம்புக்குப் பின்னிடாத நிலையிலே, சில பல கூறுகளில் சிலம்பாசிரியரும் பொறாமைப்படும் வகையில், மேகலை இவ் வகையில் சிறப்புப் பெறுகிறது. இரு ஏடுகளிலும் நாடு நகரச் சிறப்பும் காவிரி ஆற்றுச் சிறப்பும் பிற வருணனைகளும் திணை வண்ணங்களும் (டுடிஉயட ஊடிடடிரசiபே) எங்கும் கதையுடன் கதையாக, கதைப் போக்கைத் தடைப்படுத்தாமல், அடிக்கடி கதை உணர்ச்சிகளைப் பெருக்கிக் கொண்டே இழையோடுவது காணலாம். மேலைநாட்டு காப்பியங்களுக்கும் சமற்கிருதத்தில் காளிதாஸனுக்கும்கூட இல்லாத ஒரு பெருஞ் சிறப்பு - குணாட்டியன் பெருங் கதைக்கும் சமற்கிருத புத்த சமய இலக்கியத்துக்கும் மணிமேகலை சிலப்பதிகாரத்துக்கும் மட்டுமே பொதுவான ஒரு கூறு உண்டு. அவை இரண்டும் கடவுளரைப் பற்றிய எடுகள் அல்ல; மக்களைப் பற்றியவை. மக்களிடையேயும் மன்னரைப் பற்றியவையல்ல, பொதுமக்கள் சார்ந்தவை. சிலப்பதிகாரம் ஒரு வணிக நங்கையைத் தெய்வமாக்கிக் காட்டுகிறது. மேகலையோ ஒரு கணிகை நங்கையே, மக்கட் பண்பில் இன்னும் ஒருபடி முன்னேறிச் சீர்த்திருத்தப் பண்பை அடைந்துவிட்டதாகக் காட்டுகிறது. சமற்கிருதப் புனைகதையான வாசவதத்தைபோல, ஒரு கணிகை நங்கையின் உள்ள உயர்வையும், சமுக சேவையையும் எடுத்துக் காட்டுகிறது. இவ்வகையில் பசிப்பிணி மருத்துவம் போற்றும் முறையிலும், சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக்கும் முறையிலும், ஓர் உயிரினிடத்து உண்மை அன்பு செய்பவர் “எவ்வுயிர்க்காயினும் இரங்குதல் வேண்டும்” (ஒஒiii - 79) என்னும் வள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் ஆகியவர்க்குரிய அருளறப்பண்பு முறையிலும் மணிமேகலை 19, 20ஆம் நூற்றாண்டுகட்குரிய சிறந்த இலக்கியமாகிவிடுகிறது. 6) தேசியக் காப்பியம் ‘சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல. முத்தமிழரசுகளையும் பற்றிய மக்கட் காப்பியம். அதாவது; தமிழர் தேசியக் காப்பியம்’ என்று காட்டியுள்ளனர் புலவர் குருசாமி அவர்கள். அது காப்பிய நாடகமாயினும், தேசியக் காப்பிய நாடகமே என்பதில் ஐயமில்லை. மணிமேகலையும் இப்பண்பில் சிலம்புடன் முற்றிலும் இணைகிறது, புகார், மதுரை, வஞ்சி என்ற மூன்று நகர்களுக்குப் பதிலாக, “இங்கே புகார், வஞ்சி, காஞ்சி” என்ற மூன்று நகர்கள் பின்னணி வண்ணங்கள் ஆகின்றன. மதுரை சுட்டியே காட்டப்படுகிறது. தமிழக வாழ்க்கையையும் வரலாற்றையும் பின்னி இணைப்பதில் அது சிலம்புடன் முற்றிலும் ஒத்திணைந்ததேயாகும். சிலப்பதிகாரம் மணிமேகலைக் காலத்திலும் அதற்கு முன்னும் உள்ள அரசர் வரலாற்றுச் செய்திகள், மரபுகள் இரண்டு ஏடுகளிலும் பலதடவை சுட்டி நினைவூட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேகலையில் முதல் காதையிலேயே கண்ணகி - கோவலன் முடிபும், கதைப் போக்கில் தொடித்தோட் செம்பியன் (1-4), கரிகாலன் (iஎ. 107-8), மனுச் சோழன் (ஒஒii-210) முதலிய வரலாற்றுச் செய்திகளும், மணிமேகலைக் காப்பிய காலத்திலேயே நிகழ்ந்த காரியாற்றுப் போர் வருணனையும் தரப்பட்டுள்ளன. இவ் வகையில் மணிமேகலை ஒரு வரலாற்றுக் காப்பியமாகவும் தேசியக் காப்பியமாகவும் இலங்குகிறது. தமிழக விவரங்களைக் குறிப்பிட்டுத் தேசியப் பின்னணி வண்ணம் தீட்டுவதில், சிலம்பும் மேகலையும் மற்றச் சங்கப் பாடல்களைக்கூட விஞ்சுகின்றன என்னலாம். 7) சிலம்பும் மேகலையும் சிலம்பு முத்தமிழ் நாடகமும் மேகலை ஒரு காப்பியமும் ஆனாலும், இரண்டும் ஒரு தொடர் காப்பியமாக உரையாசிரியர்களாலும் தமிழ் மரபாலும் குறிக்கப்பட்டுள்ளன. பிந்தி இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தின் இறுதி நூற் கட்டுரையே ‘மணிமேகலை மேல்உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்’ என்று முடிவுறுவது இதனை வலியுறுத்துகிறது. எனவே, கலிப்பா தாழிசை வண்ணங்களில் தொடங்கி, அகவலில் முடிவதுபோல, முத்தமிழ் மும்மை நாடகமாக இயங்கும் சிலப்பதிகாரம் இயற்றமிழ்க் காப்பியம் கொண்டு முடியும் ஒரே நாடகக் காப்பியமாக ஆசிரியர்களால் கருதப்பட்ட தென்றும், அவ்வகையிலே தனித் தனி இயற்றி இணைக்கப்பட்டதென்றும் கருதலாம். இதற்மேற்ப, திட்டமிட்டும் திட்டமிடாமல் இயல்பாகவும் இரு ஏடுகளிலும் பல பொதுப் பண்புகள் நிலவுவது காணலாம். இரண்டிலும் காதைகளே உறுப்புக்களின் பெயர்களாக நிலவுகின்றன. காதைகள் ‘என்’ எனவே முடிகின்றன. இரு நூல்களும் 30 காதைகளுடையவையாகவே இயங்குகின்றன. இரு நூல்களும் தொடர்ந்த இரண்டு தலை முறைக்கதைகளையும் தொடர்ந்த ஒரே கால முன் பின் தலைமுறை வாழ்க்கைககளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இரு நூல்களின் கதைத் தொடக்கமும் கதைத் தலையூற்றும் புகாராகவும் இந்திர விழாவாகவுமே அமைக்கப்பட்டுள்ளன. “எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்!” என்ற திருக்குறளின் மதிப்புரைக்கு இரு நூல்களுமே தக்க இலக்கியமாகும். இருநூலின் ஆசிரியர்களும் இரு வேறு வகையில் சர்வகலாவல்லவர்களாகத் தம் அறிவு முழுவதையும் இருநூல்களிலும் கொட்டி வைத்திருக்கின்றனர். இரு ஆசிரியர்களுமே தம் கால அறிவின் உச்சியில் வீற்றிருந்தவர்கள் என்பதிலும், இருவருமே தமிழ் மொழியைத் தமதாகக் கொண்ட தமிழ் முதல்வர்கள் என்பதிலும் ஐயமில்லை. ‘பொருளுக்கேற்ற சொல்தேடி எழுதுவர் பிற புலவர் ஆனால் இவர் சொற்கேற்பப் பொருள் தொடர்கிறது’ என்று சமற்கிருதப் புலவன் பவபூதியை அவர் நூலின் சிறப்புப்பாயிரம் புகழ்கிறது. சிலம்பு மேகலை ஆசிரியர் வகையில் இது முற்றும் பொருந்துவதாகும். சிலம்பாசிரியர் வகையில், அவர் தமக்கென ஒரு தமிழ்மொழி வகுத்துக் கொண்டாரோ என்று தோன்றும். அவர் தமிழுக்கு அத்தகைய தனிப் பண்பும் தனி ஆற்றலும் உண்டு. அவர் வருணனைத் திறன் வருணனையில் அடங்காது. சங்க இலக்கியத்தில்கூட இந்தத் தமிழைக் காணல் அரிது. ஆனால், மேகலை ஆசிரியர் சாத்தனார் தமிழாட்சியும் வருணனைத் திறமும் இதிற் குறைந்ததல்ல என்பதை ஐந்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையின் இறுதியில் வரும் புகார்ச் செல்வி உருவகமும் (அடிகள் 109-118), மாலையஞ் செல்வி வருகையின் உருவகமும் (அடிகள் 119-141) தெள்ளத் தெளியக் காட்டும், உபவன வருணனையில் குரவமும், மரவமும், இருந்தும், கொன்றையும் திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும், நரந்தமும், நாகமும் பரந்தவர் புன்னையும், பிடவமும், தளவமும், முடமுள் தாழையும் குடசமும், வெதிரமும், கொழுங்கால் அசோகமும் செருந்தியும், வேங்கையும், பெருஞ் சண்பகமும், எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி என அந்நாளைய தமிழகத்து மலர்களின் ஒரு சிறு பட்டியலே தரப்படுகிறது. 8) சமயச் சார்பான மூன்று திறங்கள் பொதுவாக, சிலப்பதிகாரத் தமிழுக்கும் மணிமேகலைத் தமிழுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை, முதலதில் கலையின் செழுமை மேம்பட்டுள்ளது என்பதும், பின்னதில் அறிவின் செறிவு விஞ்சியுள்ளது என்பதுமே. இது ஆசிரியர்களின் திறமை வேறுபாடு மட்டுமல்ல, அவர்கள் எடுத்துக் கொண்ட கதைப் பொருளின் வேறுபாடும் ஆகும். இளங்கோ துறவி ஆயினும் அவர் சமயத்தை விட வாழ்விலும், கடவுள் பக்தியைவிட மக்கள் அன்பிலுமே மிகுதி ஈடுபட்டவராகக் காணப்படுகிறார். அவர் எடுத்துக்கொண்ட கதைப் பொருளும் அதற்கேற்ப மனிதப் பண்பையே தெய்வப் பண்பாடாகக் காட்டுகிறது. ஆனால், சாத்தனார் வாணிகரானாலும் அழுந்திய சமயப்பற்றுடைய வராகக் காணப்படுகிறார். ஆனால், அவர் சமயம் புத்தசமய மானாலும், அவர் தனித் திறமையால் அது அறிவு, நீதி, பக்தி என்ற தமிழர் சமயத்தின் முத்திசைகளையும் ஒருங்கே அளாவியுள்ளது. இக் காரணத்தால், அது சிலப்பதிகாரத்துக்கு இல்லாத, மற்ற சமய இலக்கிய ஏடுகள் எதற்கும்கூட அமையாத பல திறச் சிறப்புக்கள் அமைந்துள்ளன. நீதிகளை அழகுபட அழகிய கவிதை மொழியில் கூறும் ஆற்றல் சிறிய ஆற்றலன்று. மேலை உலக இலக்கியத்தில் இலத்தீனக் கவிஞர் ஒருவர் இருவருக்கே அது வாய்த்துள்ளது என்பர். கீழ்த்திசையில் பாரசிகக் கவிஞன் ஹபீஸ் இத்துறையில் பெருஞ்சிறப்புடைய கவிஞனாகப் போற்றப்படுகிறான். தமிழிலோ வள்ளுவர் இதை மிகத் திறம்பட ஆற்றியதுடன் கம்பர் காலம் வரை அதன் மரபையே வளப்படுத்தியுள்ளார். உலகில் எந்த மொழியையும்விடப் பேரளவான, சிறந்த நீதி நூல்களில்கூடக் காண்டற்கரிய உயர் அறிவுரைகளையும் சமயக் கருத்துக்களையும் வள்ளுவர் மொழியோ என்னும்படி திட்பமும் இனிமையும் அதே சமயம் எளிமையும் வாய்ந்த நடையில் தந்துள்ளது. “கோல்நிலை திரிந்திடில் கோன்நிலை திரியும்” (எii-8) “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (ஒi-16) “எவ்வுயிர்க்காயினும் இரங்குதல் வேண்டும்” (ஒஒii-879) என்ற அடிகள் தமிழகத்திலே பழமொழிகளாய், தமிழர் பேசும் மொழியுடன் மொழியாய்க் கலந்தவை ஆகும். ‘வாழ்வு மாயம், துன்பமயமானது’ என்று கீழ்திசையில் பாடிய புலவர் பலர். இக் கருத்தில் புதுமையோ, கவர்ச்சியோ கிடையாது. ஆனால், மணிமேகலை அதைக்கூறும் அடிகளில் எவ்வளவு எளிமை, எவ்வளவு உண்மையான உணர்ச்சி ததும்புகிறது என்பதை வாசிப்பவர் காணாதிருக்க முடியாது. “பிறந்தோர் உறுவது பெருகிற துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்! பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது” ஒரு அடியில் உண்மையான சோகத்தின் அடித்தலத்தை எட்டுகிறோம். ஆனால், அடுத்த அடியிலேயே கவிஞர் உச்ச உயர் கிளர்ச்சியூட்டி விடுகிறார். அடுத்த இரண்டடி இவற்றின் விளைவான நீதியை வலியுறுத்துகிறது. நீதியை உரைக்கும் கவிஞர்கள் வாழ்க்கையில் அனுபவப்பட்டிருப்பார்கள். ஆனால், ஆழ்கலையறிவு சிக்கலான அறிவாராய்ச்சி அவர்களிடம் இருக்க மாட்டாது. இருப்பினும் ஒரு காவியத்தில் அவற்றை விளக்குமளவு எளிமைப்படுத்தும் திறன் பெறுவது அரிதினும் அரிது. புனைகதை எழுதுபவர் அதன் ஒரு அத்தியாயத்தில் ஒரு அறிவு நூல் துறையை விளக்குவதனால், அது எவ்வளவு கைகூடாச் செயல் என்று கூற வேண்டுவதில்லை. ஆனால், இதனையே சாத்தனார் திறம்பட ஆற்றியிருக்கிறார். நூல் முழுவதும் புத்த சமய தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. ஆனால் 27-ஆவது சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் கீழ்திசை யுலகில் அந் நாள் நிலவிய எல்லாச் சமயக் கிளைகளின் கோட்பாடுகளும், 29-ஆவது தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் புத்த சமய தத்துவங்களுமே விளக்கப்படுகின்றன. சமயத்துறையாளர் எவரும் செய்தற்கரிய, இலக்கியத்துறையாளர் எவரும் கண்டு பொறாமைப்படக் கூடிய செயல் இது என்பது ஊன்றி நோக்கினால் விளங்கும். இத் துறையில் சாத்தனாருடன் ஓரளவு ஒத்த திறமை யுடையவர் இளங்கோவே. ஆனால், இளங்கோ காவியத்தில் புகுத்திய துறையறிவு, கலைத் துறை அறிவு, வரலாற்றறிவு! சாத்தனார் புகுத்திய துறையோ சித்தாந்த வேதாந்த அறிவாராய்ச்சித் துறை! எந்தக் கவிஞரும் இது செய்யத் திணறியிருப்பர் என்று உறுதியாகக் கூறலாம். அதற்கு இணை உலக இலக்கியத்திலேயே இல்லை. மணிமேகலைக் காப்பியந்தரும் சமய உணர்வில் மிக வளமான துறை பக்தித் துறையேயாகும், நீதித் துறையைப் போலவே இத் துறையிலும் தமிழ் மொழி இலக்கிய உலகின் உயர்கொடுமுடியை எட்டியுள்ளது. அத்துடன் பக்தித் துறை ஒன்றில்தான் மணிமேகலை முதல் வள்ளுவர்; பாரதிவரை தமிழில் இடையறாத ஒழுக்கும் வளர்ச்சியும் காணப்படுகிறது. இத் துறையிலேயே சைவர் வேதங்களாகிய தேவார திருவாசகங்களும், வைணவர் வேதமாகிய திருநாலாயிரமும் உட்பட்டவை. ஆனால், இத் துறையின் நீண்ட பேரிலக்கியத்துக்கு மணிமேகலையே முதல் கல்லும் மூலத் தலைக்கல்லும் ஆகும். அதில் இடம்கொள்ளும் புத்த பக்திப் பாசுரங்கள் சிந்தாமணியின் அருகன் துதிப்பாடல்களுக்கும், சைவரின் திருவாசக தேவாரங்களுக்கும், வைணவரின் திருவாய்மொழிக்கும், சீராப்புராணத்தின் நபிநாயக வணக்கச் செய்யுட்களுக்கும், வீரமாமுனிவர், கிருட்டினபிள்ளை ஆகியவர்களின் இயேசு துதிகளுக்கும் தலையூற்று என்று கருதும்போது மணிமேகலை தமிழர் அனைவருக்கும் உரிய பழம்பெரும் பக்தி நூலாகவும் இடம் பெறுகிறது. புத்தர் விழாவில் தமிழர் புத்தரை வணங்குவதற்குப் பாளி மொழி மந்திரங்களைவிட உருக்கமானவை மணிமேகலை தரும் தமிழ் மந்திரங்கள். “மாரனை வெல்லும் வீர நின்னடி! தீநெறிக் கடும்பகை கடந்தோய், நின்னடி! துறக்கம் வேண்டாத் தொல்லோய். நின்னடி! எண்பிறக் கொழிய இறந்தோய், நின்னடி! கண் பிறர்க்களிக்கும் கண்ணோய், நின்னடி! தீமொழிக்கடைத்த செவியோய், நின்னடி! வாய்மொழி சிறந்த நாவோய், நின்னடி! நரகர்துயர் கெட நடப்போய், நின்னடி! உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி! வணங்குதலல்லது வாழ்த்தல் என்நாவிற்கு அடங்காது” (ஓஐ 61-72) இதன் ஓசையில் திருவாசகத்தின் பொற்றித் திருவகவலின் ஓசையைக் கேட்கலாம். இதன் ஒழுகிசையைப் பட்டினத்தார் பாடலில் காணலாம். ஆனால், ‘துறக்கம் வேண்டாத் தொல்லோய், நரகர் துயர்கெட நடப்போய்’ ஆகிய அடிகளே தமிழர் சைவம், தமிழர் வைணவம் ஆகியவற்றையும் பாரதியார் பக்தியையும் பிற பொதுச் சமயவாணர் சமயத்திலிருந்து தனிப்படுத்த உதவின என்னலாம். திருவள்ளுவரைப் பின்பற்றிச் சாத்தனார் இதனைத் தமிழ்ப் புத்தநெறியாகக் கொண்டிருக்கவேண்டும். வேண்டுதல் வேண்டாமை இலான் மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று என்பது போன்ற முப்பாலுரைகளால் ஊக்கப்பட்ட இவ்வடிகள் நாயன் மார்களிடையே ‘உன்நாமம் கூறும் உரிமை பெறின் நரகமும் செல்லத் தயங்கேன்’ என்ற கருத்தையும், ஆழ்வார் களிடையே ‘உன் பெயர் கூற முடியாதாயின், இந்திரலோகமும் வேண்டேன்’ என்ற பண்பையும் பாரதியாரிடம் ‘பகைவனுக் கருள்வாய்’ என்ற கோரிக்கையையும் தூண்டின என்பதில் ஐயமில்லை. திருக்குறளைச் சங்க நூல்களும் சிலப்பதிகாரமும் பிற்கால நூல்கள் யாவும் புகழ்ந்துள்ளன. எடுத்தாண்டுள்ளன. ஆனால், ஒரு குறளை எடுத்தாண்டு ஆசிரியரைப் ‘பொய்யில் புலவர்’ என்று தமிழிலக்கியத்தில் முதன் முதல் அழைத்தவர் சாத்தனாரே. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் பெருமழை என்வற இப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்’ திருவள்ளுவருக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக்கள் பலவற்றின் ஒளிக்கோடுகளை மணிமேகலையில் காணலாம். ‘புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்’ (ஓஓஐஐ-127) “ஆற்றாமாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை!” கீழ்த்திசையிலும் சரி, மேல்திசையிலும் சரி, காப்பியங்களில் மற்றெல்லாச் சிறப்பும் இருப்பதுண்டு. பண்போவியச் சிறப்புத் தற்காலப் புனைகதைகளிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் காணும் அளவு காப்பியங்களில் அமைவதில்லை. அமைந்தாலும் பண்புகள் இயங்கு பண்புகளாய், இயல்பாகக் கதையுடன் வளரும் பண்புகளாய் இருப்பதில்லை. சிலப்பதிகார நாடகம்கூட இந்த ஒரு வகையில் குறைவுடைய தேயாகும். கோவலன் வாழ்க்கைப் போக்குக்கும் முடிவுக்கும் அவன் தலைசிறந்த பண்புகளுக்கும் தொடர்பு காண முடியாது. ஆசிரியரே ‘ஊழ்’ வலிகாட்டி அத் தொடர்பின்மையை ஒத்துக் கொள்வதுபோல தோற்றுகிறது. கண்ணகியோ வீரத்தின் தடமேயில்லாத பெண்ணாயிருந்து திடுமெனத் தெய்வ ஆற்றலுடைய வீர நங்கையாய்விடுகிறாள். ஆனால், மணிமேகலை இவ் வகையில் தற்காலப் புனைகதை களுக்குரிய பண் போவியச் சிறப்புடன் இயங்குகிறது. மணிமேகலை இளம்பெண், அவள் மெல்லியல்பையோ, காதற் கனிவையோ மதவெறி கொண்ட எந்த ஆசிரியரும் முற்றிலும் காட்டாதிருந்திருக்க முடியும். காட்டினாலும் மெல்லியல் பண்பை அழித்திருப்பர். ஆனால், சாத்தனார் மணிமேகலையின் காதலில் அவள் துறவின் உயர்வும், அதேசமயம் அவள் துறவில் அக் காதலின் உள்ளார்ந்த கனிவும் வெளிப்பட வைத்துள்ளார். அவள் அழகும் மெல்லியல்பும் பலர் வாயுரையால் சுட்டப்படுகின்றன. காதல் இன்னதென்றே அறியாப் பருவத்தே, உதயகுமாரனைக் கண்டபோது அவளுக்குண்டான உணர்ச்சி களை அவள் கன்னித் தன்மையின் தூய்மையுடனும் அறியாமை யுடனும் தானே வெளியிடுகின்றாள். “இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்! இதுவோ, அன்னாய்! காமத்து இயற்கை?” (ஏ 87-90) என்று அவள் சுதமதியை நோக்கிக் கேட்கின்றாள். இதில் அவள் காதலுள்ளம், கன்னிமை, வாய்மை, பெண்மை மெல்லியல்பு ஆகிய யாவும் விளங்குகின்றன. சுதமதியைக் காணாதபோது, சுதமதி, ஒளித்தாய்! துயரம் செய்தனை கனவோ னவோ என்பதை அறியேன்!....... ஒரு தனி அஞ்சுவென், திருவே! (ஏஐஐஐ 20-1, 27) என அவள் புலம்புவது அவள் மெல்லியல்புக்கும் அறியா இளமைக்கும் உரிய அச்சத்தைக் காட்டுகிறது. ஆனால், இதே மெல்லியல்பும் காதல் கனிவும் அவற்றை வெல்லும் அவள் துறவத் தியாகத்தின் உயர்வை எடுத்துக் காட்டுகின்றன. அந்தத் தியாகம் அக் காதலில் கூடக் காணப்படுகிறது. இகழ்ந்தவள் என்று தெரிந்தும் அது உதய குமாரனை நாடச்செய்கிறது. தவிர, அக் காதல் துறவினிடையேயும் தன்னையறியாத அன்புக் கனிவாய் உள்ளொளி பூக்கின்றது. அவன் சிற்றின்ப அவாவை நீக்கி, உயர் புத்த நெறி யறிவூட்டி, ஆழ்ந்த அருள் நெறியிலேயே உணர்ச்சியை உயர்நேசமாக்க அவள் முயல்கிறாள். இலக்கிய உலகில் மணிமேலையுடன் ஒப்பிடத்தக்க உயர்ந்த இளமைப் பெண்மையைக் கிரேக்க நாடகப் புலவன் ஸோபேக்னிஸின் அந்திகோணேயிடம் காணலாம். அந்திகோணே தந்தையன்புக்காக உலக வாழ்வும் இன்பமும் துறக்கிறாள். சமுதாய நீதி எல்லை கடந்து அன்புத் தியாகம் செய்கிறாள். மணிமேகலையோ காதலையும் மனிதவாழ்க்கையையும் சமுதாயம் காட்டும் ஓர் உயர் இலக்குக்காகத் துறக்கிறாள். ஆயினும், அத்துறப்பிலேயே அவள் பெண்மையின் மாசற்ற தூய அன்புள்ளமும் காதல் துடிப்பும் பளிங்குச் சிலையில் காணப்படும் உள்வரை வண்ணம் போல நமக்குக் காட்சியளிக்கின்றன. சுதமதி, சித்திராபதி முதலிய பெண்மைச் சித்திரங்களும் இதுபோலவே உயிர்ச்சித்திரங்கள். சிற்றின்பக் காதலுணர்வில் படபடத்து அலையும் உதய குமாரன், மகள் பாசத்தைவிடச் சோழ மரபின் பெருமையில் உளங்கொண்ட சோழன் மாவண் கிள்ளி, பிள்ளைப் பாசத்தால் தூண்டப்பட்டுக் கொடுமை செய்ய முனையும் சோழமாதேவி, வீறுமிக்க துறவுவாழ்விலும் அன்புள்ளமும் பரிவும் கொண்ட அறவணவடிகள், ஆத்திரமும் முன்கோபமும் கொண்ட காஞ்சனள்- இவையே இன்றும் ஒரு சமூகப் புனைக்கதைக்குப் போதிய பண்போவியங்கள் ஆகும். இரக்கமே உருவாய், புத்தர் அருளறத்தின் உருவான ஆபுத்திரன் உள்ளப் பண்பு கண்டால், அந்த உள்ளம் தெய்வத் தன்மையுடைய உண் கலத்தினும் குறைந்த அற்புதமன்று. ஆதிரை, மருதி, விசாகை முதலிய பத்தினிப் பெண்டிர் கதை சிலம்பின் ஏழு நங்கையர் கதைகளுடன் ஒப்புடையன. சிலப்பதிகாரத்தை நோக்க, மணிமேகலையின் மொழியும் நடையும் கதையும் சோடணைத்திறமும் கலை மெருகும் கவர்ச்சி குறைந்தவை என்பதில் ஐயமில்லை இக் காரணத்தால் தமிழர் சிலப்பதிகாரத்தில் கருத்துச் செலுத்திய அளவு மணிமேகலையில் செலுத்தவில்லை என்பது உண்மையே. கதிரவன் அருகே எழும் நிலா ஒளி கதிரவனொளியால் பொலிவு குன்றுவதுபோல, மணிமேகலையும் குன்றவே நேர்கிறது. ஆனால், இது சிலம்பின் சிறப்பாகலாம். மணிமேகலையின் குறைபாடு ஆக மாட்டாது. ஏனெனில், மணிமேகலை சிலம்பின் தனிச் சிறப்பான பண்புகளிலும் அதனோடு ஒப்பானது. அத்துடன் வேறு தனி உயர் பண்புகளும் உடையது. நாம் சிலம்பளவு மேகலையில் கவர்ச்சி காணாததற்கும், சிலம்பளவு அதன் சிறப்புக்களை உணராததற்கும் உள்ள காரணம் இன்றைய தமிழர் அறிய வேண்டிய ஒன்று - இரண்டிலும் சொற் சிறப்பும் பொருட் சிறப்பும் விஞ்சியன ஆயினும், சிலம்பில் பொருளை விஞ்சிய சிறப்பு அதன் கன்னல் மொழியில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மேகலையில் சொல்லை விஞ்சிய சிறப்புடன் பொருள் மிளிர்கின்றது, சிலம்பு கேட்டவுடன் இன்பம்தருவது; மேகலை ஆழ்ந்து கற்கக் கற்க இன்பம் பயப்பது. சிலம்பு நாடகமாதலால், திசைமொழி அதாவது பேச்சு மொழிப்பண்பு நிரம்பியது. மணிமேகலை அறிவுக் காப்பியமாதலால், மேலீடாக எளிய ஆனால், ஆழ்ந்த பொருள் செறிந்த சொல் நடை உடையது. சிலம்பு கதலியின் உளியபாகமும், மேகலையும் திருக்குறளும் பலாவின் அரும்பாகமும், சங்க இலக்கியம் பொதுவாக வாதுமைப் பருப்பின் கடும் பாகமும் உடையன என்னலாம். எஎஎ செந்தமிழ்ச் செல்வம் முதற் பதிப்பு – 1960 இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. தமிழ் நாட்டின் இயற்கை வளம் உலகின் பல மொழிகளுக்கும் நாடுகளுக்கும் பெயரும் உருவும் எல்லையும் பண்பும் உருவாவதற்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முற்பட்டே தமிழ் என்ற திருந்திய மொழியும், தமிழகம் என்ற நாடும், மொழி நாடு சார்ந்த எல்லைப் பிரிவுகளும், நாகரிகமும், பண்பாடும் அமையப்பெற்ற இனம் தமிழினம். ஆனால், முத்திசைக் கடல் சூழ்ந்த அதன் பண்டைப் பரப்புக் கடல்கோளால் தெற்கிலும், அயலினக் கலப்பால் வடக்கிலும் மேற்கிலும் சென்ற ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே குறுகிற்று. வெள்ளையர் ஆட்சியிலும், அதன் மரபில் வந்துள்ள இந்தியர் ஆட்சியிலும் அது தன் தனி உருவும் தனித் தன்மையும் தனி உரிமையும் இழந்துள்ளது. இந் நிலையிலும் இழந்த உரிமைத் தமிழகத்தை மொழிவழி எல்லையிலேனும் பெற நாம் இன்று அவாவுகிறோம்; கனவு காண்கிறோம். நாம் அவாவும் தமிழகம் நம் அவாவும் நாடாத இயற்கை வளம் உ டையது. ஆனால், அதன் இன்றைய நிலை பண்புடைய அயலவரும் கண்டு பரிவுறும் நிலை ஆகும். இன்றைய தமிழ்நாடு இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் பேசுவோர் ஒருங்குறையும் தென்கிழக்குப் பகுதியேயாகும். இது பண்டைத் தமிழகம்போல முத்திசைக் கடலெல்லை கொண்ட தன்று. இரு திசைக் கடல் எல்லையும் இருதிசை நில எல்லையும் கொண்டது. கிழக்கேயும் தெற்கேயும் பழவேற்காட்டு ஏரிமுதல் கன்னியாகுமரி வரை வங்கக் குடாக் கடலும் மன்னார் குடாவும் எல்லைகள். வடக்கே தெலுங்கு கன்னடப் பகுதிகள் பழவேற்காட்டு ஏரிமுதல் நீலகிரிவரை எல்லையாகின்றன. மேற்கே அரபிக்கடல்,மேற்குமலைத் தொடர், மலையாளம் பேசும் பகுதிகள் ஆகியவை ஆங்காங்கே எல்லையாகின்றன. இன்று சென்னை அரசில் இடம் பெற்ற நிலப்பரப்பிலே, பண்டைப் பாண்டிய நாட்டுப் பகுதிகளான திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள்; பண்டைச் சோழ நாட்டுப் பகுதிகளான (புதுக்கோட்டை உட்பட) திருச்சி ராப்பள்ளி, தஞ்சை, தென் ஆர்க்காடு மாவட்டங்கள்; பண்டைச் சோழ நாட்டோடிணைந்த தொண்டை நாட்டுப் பகுதிகளான சென்னை,செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களும் அவற்றுடன் இணைந்த சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகளும்; பண்டைச் சேரநாட்டோடிணைந்த கொங்கு நாட்டுப் பகுதிகளான சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் அவற்றுடன் இணைந்து மைசூர் எல்லையிலிருக்கும் கோலார்ப் பகுதியும், மலபார் எல்லையில் கிடக்கும் பாலக்காட்டு வட்டப் பகுதியும், நீலகிரிப் பகுதியும், திருவாங்கூர் கொச்சி அரசின் எல்லையிலுள்ள தேவிகுளம், பீர்மேடு வட்டங்களும், செங்கோட்டை வட்டமும், நெய்யாற்றங்கரை வட்டமும், தோவாளை, அக°தீசுரம், இரணியல், கற்குளம், விளவங்கோடு வட்டங்களும் தமிழ்நாடு என்று மீண்டும் தனியுரிமை பெற வேண்டிய இந்திய எல்லைகள் ஆகும். தமிழர் குடியேறியும் பண்டிருந்தே தொடர்ந்து வாழ்ந்தும் வந்துள்ள கடல் கடந்த பகுதிகள் இலங்கை, மலாயா, தென்கிழக்குத் தீவுகள், தென் கிழக்காசியா, பிஜி, திரினிதாத்து, மொரிசியசு, தென் ஆப்பிரிக்கா, ஜமைக்கா, பிரிட்டிஷ் கயானா ஆகியவை ஆகும். தமிழ்நாடு உருவானால், அதன் பண்பாட்டு விரிவான தமிழகம் அல்லது பெருந் தமிழ்நாடு என்று கூறத்தக்கவை இவை. தமிழ்நாடு நிலவுலக நடுவரைக்குச் சற்று வடக்கில் வடநேர்வரை (சூடிசவா டுயவவைரனந) 8 பாகையிலிருந்து 13ஙூ பாகைவரையும் கீழ் நிரைவரை (நுயளவ டுடிபேவவைரனந) 78 பாகையிலிருந்து 82 பாகைவரையும் பரவியுள்ளது. சென்னை அரசு எல்லைக்குள் கிடக்கும் பகுதியளவிலேயே இதன் நிலப்பரப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சதுர மைல்களும், 2 கோடி 78 நூறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையும் உடையது. மொழியுரிமையாக அமையும் மாநிலம் ஐம்பத்தையா யிரம் சதுர மைல் பரப்பும் மூன்று கோடி மக்கள் தொகையும் உடையதாயிருக்கும் என்னலாம். தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி அல்லது மலைப் பகுதி என்றும், முல்லை அல்லது காட்டுப் பகுதி என்றும், மருதம் அல்லது ஆற்றுப் பகுதி என்றும், நெய்தல் அல்லது கடற்கரைப் பகுதி என்றும், பாலை அல்லது வளங்குன்றிய பகுதி என்றும் ஐந்திணையாகப் பிரித்திருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் ஒரு சிறு பரப்புத் தவிர, தமிழ் உட்பகுதி எதுவும் இன்று பாலை என்று குறிக்கத் தக்கதன்று. மற்ற நால்வகைத் திணைகளும் அவற்றுக்குரிய மலைவளம், காட்டுவளம், ஆற்றுவளம், கடல்வளம் ஆகிய நால்வகை இயற்கை வளங்களும் நிறைந்த முழுநிறை மாநிலம் தமிழ்நாடு. பண்டை நாகரிக உலகிலும் சரி, இன்றைய உலகிலும் சரி, தமிழகம் இயல்பாகவே உலகின் நடு மய்யமாக அமைந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் பிற பகுதிகள், அமெரிக்கா, ஆ°திரேலியா ஆகிய கண்டங்கள் கிட்டத்தட்ட அதைச் சுற்றிலும் நிலவுலகில் பதிக்கப்பட்டவைபோலக் கிடக்கின்றன. கடலுலகிலும் இந்துமா கடலில் அதுவும் இலங்கையும் கிட்டத் தட்ட மய்யமாகவே இருக்கின்றது. மனித நடமாட்டமுடைய அட்லாண்டிக் மாகடலும் பசிபிக் மாகடலும் இதன் இரு திசையிலும் உள்ளவையே. கடலுலகின் வாயில்களான ஜிப்ரால்ட்டர், சூய°, ஏடன், சிங்கப்பூர், பனாமா ஆகியவற் றிடையேயுள்ள கோட்டின்மீதே தமிழகம் அமைந்துள்ளது காணலாம். உலகின் கடல் நெறிகளும் வான் நெறிகளும் பெரும்பாலும் தமிழ்நாடு அல்லது இலங்கை கடந்தே செல்கின்றன. நிலப்பாதைகள் இவ்வாறு செல்ல முடியா விட்டாலும், எல்லாப் பாதைகளுக்கும் இடங்களுக்கும் தமிழ்நாடு அணிமையுடையதேயாகும். தமிழகத்தின் இம் மய்ய அமைப்பே அதை உலகில் முதல் நாகரிக நாடாகவும் நாகரிக முன்னோடியாகவும் உலக நாகரிகத் தாயாகவும் ஆக்கியிருந்தது. உலகின் முதல் கடலோடியின மாகவும் உலகின் முதல் பேரரசு, கடற் பேரரசு, கடல் வாணிக இனம் ஆகவும் அதுவே தமிழகத்தை ஆக்கியிருந்தது. இவ்வியற்கை வாய்ப்புகள் இன்று பயன்படாவிட்டாலும் அணிமை வருங்கால உரிமைத் தமிழகத்தால் இவை நன்கு பயன்படுத்தத் தக்கவையே யாகும். உலகின் தட்பவெப்ப மண்டலங்களுள் தமிழகம் வெப்ப மண்டலத்தினுள்ளே உலக நடுவரை அருகிலேயே உள்ளது. ஆயினும், மட்டற்ற வெப்பம், மட்டற்ற குளிர், மட்டற்ற மழை என்ற நிலைகளுக்கு ஆளான நாடுகளில் தமிழகம் ஒன்றன்று. மட்டான வெப்பம், மட்டான பருவ மழை இவையே அதன் பொது அமைதிகள் ஆகும். கிழக்கும் தெற்கும் கடலும், மேற்கில் மலையும், வடக்கில் மேட்டுநிலமும் வெப்பத்தை மட்டுப் படுத்துவதுடன் மிகு வெப்பு, மிகு குளிர் நிலைகளைத் தடுக்கின்றன. கோடைக் காலங்களில் அது தில்லியைவிட வெப்புக் குறைவாக உள்ளது. மழை வகையிலும் மேற்குத்தொடர் தென்மேற்குப் பருவ மழையைக் குறைத்துவிடுகிறது. வைகாசி 15 முதல் ஐப்பசி 15 வரை (ஜூன் -அக்டோபர்) வீசும் இப்பருவத்தில் தமிழகத்தின் பெரும் பகுதிக்கு 20 அங்குலம் முதல் நாற்பது அங்குலம் வரை மழை கிடைக்கிறது. பாண்டி நாட்டில் மலைசாராப் பகுதியில் மட்டும் 20 அங்குலத்துக்குக் குறைந்த மழை பெய்கிறது. அதே சமயம் வடகிழக்குப் பருவத்திலும் ஐப்பசி முதல் மார்கழி வரை (நவம்பர்-திசம்பர்) தஞ்சை மாவட்டத்துக்கு 20 அங்குலத்துக்கு மேலும் பிற தெற்குக் கிழக்கு மாவட்டங்களுக்கெல்லாம் 10 அங்குலத்துக்கு மேலும் மழை பெய்கிறது. இங்ஙனம் ஆண்டுக்கு இரு பருவங்களாக ஆறு மாதகாலம் பரவலாகத் தமிழகத்தின் பெரும் பகுதிக்கு மட்டான மழை கிடைக்கிறது, தமிழகத்துக்குப் பொதுவாகத் தென் கிழக்குப் பருவ மழையும் மேற்குமலைத் தொடருமே பல ஆறுகளையும் ஆற்று வளங்களையும் தருகின்றன. சில ஆறுகள் கிழக்கு மலைத்தொடரிலும் எழுகின்றன. முக்கியமான ஆறுகள் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி, வைகை, தாமிரவருணி ஆகியவை. இந்த ஆறுகளின் நீளம், அவற்றின் பிறப்பிடம், ஓடும் மாவட்டங்கள், விழுமிடம், துணையாறுகள், கிளை ஆறுகள் ஆகிய விவரங்கள் வருமாறு. மிகப் பெரிய ஆறாகிய காவிரியும் மிகச் சிறிதான தாமிரவருணியுமே ஆண்டு முழுதும் நீரோட்டமுடைய உயிர் ஆறுகள். இவை தென்மேற்குப் பருவக் காற்றால் வளம்பெறும் மேற்குத் தொடர்ப் பகுதியில் பிறந்து அடர்ந்த காடுகள் வழியாய் ஓடிப் பல கிளையாறுகளுடன் இணைவதே இவற்றின் தனிப்பட்ட உயிர் நீர் வளத்துக்குக் காரணம். இவற்றுக்கடுத்தபடி வைகையும் பாலாறும் காடற்ற நடுநிலத்தின் மீது ஓடுவதால் ஊற்று வளமே உடையன. காவிரியும் வைகையும் தாமிர வருணியுமே சோழ பாண்டிய அரசுகளின் நிலைக்களமாகவும் அவற்றின் நாகரிகப் பண்ணைகளாகவும் இயங்கி வந்துள்ளன. திருவாங்கூர் தமிழகத்திலுள்ள பெரியாற்று அணைத்திட்டத் தால் வைகை துணைவளம் பெற்றுள்ளது; பெற்று வருகிறது. பண்டைத் தமிழகம் உலகிலேயே சிறந்த துறைமுகங்களை உடையதாய் இருந்தது. கடற்கரைப் பட்டினங்களும் உள்நாட்டு நகர்களும் சிறந்திருந்ததால், அஃது இன்றைய கிராம இந்தியாவைப்போல் இராமல், மேல் நாடுகளைப் போல நகர வாழ்க்கைச் சிறப்பும் உயர்தர வாழ்க்கைச் சிறப்பும் உடையதாய் இருந்தது. கடல் வாணிகம், உள்நாட்டு வாணிகம், செய்தொழில் ஆகியவற்றிலும் வளமிக்கதாய் உலகில் செல்வவளத்தில் முதன்மை பெற்றிருந்தது. ஆனால், நீராவிக் கப்பல் வந்தபின் அதற்குப் போதிய ஆழ்கடலும் இயற்கைத் துறைமுகமும் தமிழகத்தில் குறைந்துள்ளன. சென்னை வெள்ளையராட்சியில் பெருந் துறைமுகமாகியுள்ளது. சிறு துறைமுகப்பட்டினங்களில் தூத்துக்குடியும் புதுச்சேரியும் சென்னைக்கடுத்தபடி ஏற்றுமதி இறக்குமதிச் சிறப்பு அடைந்துள்ளன. இவையன்றிக் காரைக்கால், நாகப்பட்டினம், தனுஷ்கோடி ஆகிய துறை நகரங்களும், மரக் காணம், சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம் , கூடலூர், தரங்கம் பாடி, காயல் பட்டினம், குலசேகரன் பட்டினம், குளச்சல் ஆகிய படகுத் துறைகளும் தமிழகத்தில் உள்ளன. இவற்றுட் பலவும் இவற்றையடுத்த இடங்களும் பண்டு உலகின் பெரிய வாணிகத் துறைகளாக நிலவியவையேயாகும். கடல்வளமாகிய முத்து, சங்கு, சிப்பி, மீன், பவளம், உப்பு; மலைவளமாகிய சந்தனம், அகில், தேக்கு, ஒண்மணிகள்; காட்டுவளமாகிய தேன், அரக்கு; அடி நில வளமாகிய தங்கம், இரும்பு; ஆற்று நில வளமாகிய நெற்பயிர், கரும்பு, அவுரி, கோரை, புன்செய்ப் பயிர்கள், பருத்தி; இவற்றை யொட்டிய உழவுத் தொழில், முத்தெடுத்தல், கடல் வாணிகம், சுரங்கத் தொழில், சர்க்கரைத் தொழில், சாயத் தொழில், பொன்வினை, மணிவினை, வளையல்தொழில், நூற்பு நெசவுத் தொழில்கள், செங்கல் தொழில், மரத்தொழில் ஆகியவை தமிழன் இயற்கையி லிருந்தும் தன் இயற்கை சார்ந்த வாழ்விலிருந்தும் முதன் முதல் கண்டு எடுத்து மனித உலகுக்கு வழங்கிய செல்வங்கள் என்று உலக வரலாறு நமக்கு எடுத் தியம்புகிறது. உலகின் பல மொழிகளிலே இன்னும் இவற்றுக்குரிய சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே அமைந்துள்ளன. முத்தும் சங்கும் இன்றும் திருநெல்வேலிக் கடல் தீரத்திலும் இராமநாதபுரக் கடல் தீரத்திலும் முக்கிய தொழிலாகவே உள்ளன. பாரசீக வளைகுடாவிலும், ஆ°திரேலிய வட கரையிலும் இப்போது முத்துப் பண்ணைகள் ஏற்பட்டு விட்டாலும், உலகின் முத்து வளத்தின் பெரும்பகுதி இன்னும் தமிழகத் தென் கரைக் குரியதாகவே உள்ளது. மற்ற வகைகளில் இன்று கேலிக்குரியதாகிவிட்ட கூவத்தாறு சிப்பித் தொழிலுக் குரிய சாலையாகவே இன்னும் இயங்குகின்றது. கோலாரில் எடுக்கப்படும் தங்கம் உலகத் தங்கவளத்தில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடேயானாலும், இந்திய மாநிலத்தின் தங்க வளத்தில் நூற்றுக்கு 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டதாகும். இதுபோலவே மீன் வளத்தில் உலகில் இந்தியா பிற்பட்டுள்ளதானாலும், தமிழகக் கரையில் அதன் வளம் மிகப் பெரிது. அரசியலாரும் அதில் கருத்தைச் செலுத்தி வளம் பெருக்க முயன்றாலும், நாட்டுரிமை அரசு ஏற்படாத காரணத்தால், கனடா, ஜப்பான், இரஷ்யா ஆகிய நாடுகளைப்போல் அவ் வளம் பெருக்க முடியவில்லை. தென் கடலின் மீன் வகைகள் மற்றக் கடல் களுக்கு ஈடல்லவாயினும், ஏ - ஊட்டமிக்க சுறாவுக்கு அதுவே தனிச் சிறப்பான தாயகமாகும். தமிழ்க் கடல் மறவராகிய மீனவர் ஆற்றல் இத் துறையில் போதிய அளவு பயன்படுத்தப் பெறவில்லை. கோலாரில் மட்டுமின்றிப் பிற தமிழகப் பகுதிகளிலும் தங்கச் சுரங்கங்கள் பண்டை நாள்களில் இருந்ததாக அறிகிறோம். இரும்பும் நிலக்கரியும் பிற உலோகங்களும் கனிப் பொருள்களும் இதுபோலப் பல இடங்களில் வள ஆதார நிலையில் இருப்பதாக அறிகிறோம். இவற்றுள் தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி இப்போதுதான் அரசியல் முயற்சிக்குரியதாகியுள்ளது. சேலத்திலுள்ள இரும்பும் இதுபோல இனிப் பயன்படுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது. ஆனால், இவை இன்னும் இந்திய நடு அரசின் உரிமையாட்சியில் இருப்பதாலும், சென்னை அரசு தமிழக உரிமையரசாய் இல்லாததாலும், இவ் வளங்கள் போதிய அளவு நாட்டை வளப்படுத்தும் முறையில் பயன்படுத்தப்படாமல், பிற பகுதிகளின் நலங் கருதியே ஊக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. தஞ்சையில் நில எண்ணெய் கூட இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். இது வருங்கால நில அகழ்வாய்வாளர் முயற்சிக்குரியது. தாமிரம் சேலத்திலும், அப்பிரகம் சேலம், கோவையிலும், மானோசைட் நாகர்கோவிலை யடுத்த மணவாளக் குறிச்சியிலும், இரப்பர், தேயிலை, காப்பி ஆகியவை மேற்கு மலைத்தொடரின் இரு சரிவுகளிலும் செல்வவளம் பெருக்க உதவுகின்றன. பண்டைத் தமிழரசர்கள் காவிரிக்குக் கரைகட்டித் தொண்டை நாட்டை வளப்படுத்தியவர் என்று புகழ் பெறுகிறார்கள். தமிழரசரும் புலவரும் நீர்ப் பாசனத்தையே மன்னன் கைவளம் தரும் மழையாகப் போற்றினர். தமிழகத்தின் ஆறுகள் இன்று நீர் மின்சார மூலம் புதுவளம் தருபவையாய் உள்ளன. பெரியாற்றுத் திட்டம், பாவநாசத் திட்டம், மேட்டூர்த் திட்டம், மணிமுத்தாற்றுத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழகத்துக்கு உழவு வளமும் நகர நலவாய்ப்பு வளமும் தருவ துடன் தொழில் வளங்களுக்கும் ஆதாரமாகி வருகின்றன. நல்ல தமிழ்த் தேசிய அரசியல் அமைந்தால் இவ் வளங்கள் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி. தமிழகத்தின் வேளாண்மை, மழை வளம், ஆற்று வளம், கால்வாய்ப் பாசனவளம், வான்பார்த்த ஏரிவளம், இறைவைக் கிணறுவளம் ஆகியவற்றை எதிர்பார்த்து நடைபெறுபவை. இவற்றுள் இடைக்கால அரசியல் கோளாறு களின்போதும் வெள்ளையராட்சியின் போதும் காடுகள் அழிக்கப்பட்டன. வானம் பார்த்த ஏரிகள் நிலமாக்கப்பட்டு நீர்வளமும் மழை வளமும் குறைந்தன. அத்துடன் புன்செய்கள் நன்செய்களாக்கப் பட்டதனால், நாட்டில் உழவர்க்குப் போதிய நல்ல விலை கிடைக்காமலும் தொழிலுக்கான பயிர்கள் அழிவுற்றும் போயின. வருங்கால அரசியல் நாட்டுத் தேவை, பொருளியல் வாழ்வு ஆகியவற்றுக்கேற்ற தேசியத் திட்டம் அமைத்தால், வெள்ளையர் ஆட்சிக்கு முன் இருந்த தமிழக வளத்தை நாம் மீட்டும் பெறுதல் கூடும். இயற்கை வளம் வாழ்க்கை வளமாக, மக்கள் ஆள்வளமும் திறவளமும் நன்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும். நல்ல அரசியல் இயற்கைவளம் பெருக்கத் திட்டமிடுவதோடு, அதற்கேற்ற மக்கட் பண்பு வளமும் பெருக்குதல் வேண்டும். தொழிலும் உழைப்பும் அறிவும் பயன்படாமல், அயல் நாட்டுக்கு அடிமையாக வாழும் பண்பும் இன்று கற்றவரிடமும் கல்லாதவரிடமும் ஒருங்குப் பரவி வருகிறது. நாட்டுரிமை அரசியல், இயற்கை வளம் பண்படுத்து வதுடன் இம் மக்கள் பண்பு வளமும் பண்படுத்துதல் வேண்டும். 2. பண்டைத் தமிழர் ஒப்பனைக் கலை மேலை நாட்டினரிடையே, பெண்டிர் இதழ்க்கும் நகங்களுக்கும் செவ்வண்ணம் பூசுவதையும், முகத்துக்கும் நறுந்துகள் இடுவதையும், முகத்துக்கு மென்கழுநீர் வண்ணச் சாயம் தோய்ப்பதையும் பலர் பார்த்திருப்பர். மேனியை மென்மை யாக்கி வெண்பளிங்குநிறம் தர வாசவெந்நீர், பனிநீர்க்குளிப்பு வகைகள் உண்டு என்பதையும் சிலர் கவனித்திருப்பர். புகையிலை, தேயிலை, காப்பி ஆகிய கெட்ட பழக்கங்களைப் போலவே, இந்த நல்ல அல்லது கேடற்ற நாகரிகப் பழக்கங்களும் கீழ்த்திசையிலிருந்து சென்றவை என்பதைப் பலர் அறிவர். ஏனெனில், குளிப்பு வகைகள் இன்றும் துருக்கிய முழுக்கு (கூரசமiளா யெவா), சப்பானிய முழுக்கு (துயயீயநேளந யெவா) என்று வழங்கு கின்றன. சவர்க்காரங்கள்கூட ஒரு காலத்தில் பெரும்பாலும் துருக்கிய சவர்க்காரம் (கூரசமiளா ளடியயீ) என்று விளம்பரப்படுத்தப் பட்டதுண்டு. அழகுக் கலையின் பகுதியாகிய உடல் தேய்ப்புக்குரிய ஆங்கிலச்சொல் (ளுhயஅயீடிடி) துருக்கியச் சொல்லே. ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவெங்கும் இக் கலைகள் பரவியிருந்தன. சமற்கிருதம் பிறக்குமுன் புத்த சமண இலக்கியங் களிலும், தொடக்கக்கால சமற்கிருத இலக்கியத்திலும் இக்கலைகள் அழியாதிருந்தன என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவில் பல கலைகளை அழித்த ஆரிய நாகரிகம் இதையும் இங்கே தடந் தெரியாமலாக்கி வெளிநாடு களிலிருந்து வந்தபின் மீண்டும் ஏற்பதில், தான் முந்திக் கொள்கிறது. பண்டைத் தமிழரிடையே கலை இயல்கள் தழைத்திருந்தன என்பதற்குக் கவிதையில்கூடச் சங்ககாலத் தமிழர் காட்டிய பகுத்தறிவு சான்று பகரும். என்ன கலைகள், எத்தனை கலைகள் இருந்தன என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சியாளர் காண முனைவது பயன்தரும். ஆனால், அந்த ஆராய்ச்சியை அவ்வத் துறையில் இந் நாளைய கலையறிவுடை யோர் செய்தலே முழுநிறை பயன்தரும். தமிழ்க் கலைகள் அழிந்ததற்குப் பெரிதளவு காரணம் கலை வளர்ப்பதற்கென்றே அமைந்த சங்கங்களையும், அதனையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர், விறலியர் வகுப்பினரை ஆதரிப்பதையும் மதிப்பதையும் விடுத்துத் தமிழ் மன்னரும் தமிழகச் செல்வரும் தமிழ் மக்களும் படிப்படியாக ஆரியப் போலி அறிஞரையும், போலி இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்தையும், போலி மதமாகிய ஆரிய மதத்தையும், ஆதரித்து நாட்டுப் பகைவர்களாகச் சென்ற இரண்டாயிர ஆண்டு வாழ்ந்து வந்திருப்பதுதான். தமிழக வாழ்வில் உச்ச மதிப்பிலிருந்த பாணர், விறலியர் இன்று தமிழர் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கோவிலின் மீளா அடிமைகளான இசை வேளாளர்குடி ஆகியுள்ளனர். தமிழரிடையே வழங்கிய அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரமும் பெருங்கதையும் பெருமைபடப் பேசுகின்றன. “பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதி” என்று சிலப்பதிகார ஊர்காண் காதை அறுபத்து நான்கு கலை வளர்த்த வகுப்பினர் இருந்த வீதி குறிக்கிறது. “யாழ்முதலாக அறுபத்தொடு நான்கு ஏரிள மகளிர்” என்று அக்கலையில் நங்கையரைப் பெருங்கதை குறிக்கின்றது. கலைகள் பலவற்றின் பெயர்களைத் தரும் இன்னொரு பகுதி மணிமேகலை ஊரலர் காதையில் காணப்படுகிறது. “வேத்தியல், பொதுவியல் என்றுஇரு திறத்துக் கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும் பண்ணியாழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துகக் கருத்தும், மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும், பாயற் பள்ளியும், பருவத் தொழுக்கமும், காயக் காணமும், கண்ணிய துணர்த்தலும், கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிசைச் செய்தியும், மலர்ஆய்ந்து தொடுத்தலும், கோலங் கோடலும், கோவையின் சேர்ப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்களம் வகுத்த ஓவியச் செந்நூல், உரைநூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை”. இதில் இருபத்தாறு கலைகளே கூறப்படுகின்றன. ஆனால், இப்பட்டியல் உயர்குடி நங்கையர்க்குச் சிறப்பாக உரிய கலைகள் மட்டுமே. இதில் அறிவு இயல்கள் (ளுஉநைnஉநள) ஒன்றிரண்டே உள்ளன. கலைகளே (ஹசவள) மிகுதி. இஃது இயல்பே. இவற்றுள் சுந்தரச் சுண்ண முதல் பாயற் பள்ளிவரை மூன்றும், வட்டிசைச் செய்தி முதல் கோவையின் சேர்ப்புவரை நான்கும், ஆகிய ஏழும் ஒப்பனைக் கலையின் பல பகுதிகள் ஆகும். வட்டிசைச் செய்தி என்பது சாந்து அணிதல். கோலங் கோடல் பொது ஒப்பனை. கோவையின் சேர்ப்பு அணிகல ஒப்பனை. பாயற்பள்ளி படுக்கையறை ஒப்பனை. சுந்தரச் சுண்ணம் முகத்தூள் (கயஉந யீடிறனநச), மேனித் தூள் (bடினல யீடிறனநச) ஆகியவை. பின்னது இன்றும் வழக்கத்திலுள்ளதே. தூநீராடல், மணத்தூள் கலந்த நறுநீரில் குளித்தல், மலர் ஆய்ந்து தொடுத்தல் பூ ஒப்பனை. கண்ணுக்கு மையிடுதல், சந்தனம் குங்குமம் இரண்டினாலும், ‘தொய்யில்’ என்ற சித்திரம் வரைதல், கைக்கும் கால்களுக்கும் மட்டுமின்றி, உதட்டுக்கும் நாக்குக்கும் கன்னத்துக்கும் நெற்றிக்கும் கைநகங்களுக்கும் அலத்தகம் அல்லது செம்பஞ்சுக் குழம்பால் சாயம் தீட்டுதல், நறுநெய்க்குளிப்பு, பலவகை நறுநீர்க் குளிப்பு, முகத்துக்கு வண்ணநறுந்துகளிடல், பெண்டிர் கூந்தலுலர்த்த அகிற்புகையிடல் ஆகியவை, தமிழர் ஒப்பனைத் திறத்தின் பகுதிகள். நறுநீரில் தமிழர் ஆடவரும் பெண்டிரும் மூன்று தடவை குளித்தனர். மூன்று தடவையும் மூன்றுவகைப் பொடி கலந்த நீரில் ஆடினர். முதல் பொடியில் துவர்ப்பொருள் அதாவது உடலைக் கெட்டியாக்கி மயிர் சுருக்கும் பொருள்கள் வழங்கப்பட்டது. இரண்டாவது விரைப்பொடி மணம் தந்தது. மூன்றாவது ஓமாலிகைப் பொடி மென்மையும் பளபளப்பும் தொய்வும் அளித்தது. மாதவி இவற்றை வழங்கியதாகச் சிலப்பதிகாரம் கடலாடு காதை கூறுவது காணலாம். “பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமாலி கையினும் ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிடும் கூந்தல் நலம்பெற ஆட்டி புகையில் புலர்த்திய பூமென் கூந்தல்” புனுகு (புழுகு), நானம் (க°தூரி) முதலியவையும் தேனும் மயிர் வளர்வதற்கும் குரல் கனிவுறுவதற்கும் வழங்கப்பட்டன. அடியார்க்கு நல்லார் இசை நாடகத் துறையில் பழைய தமிழ் நூல்கள் இருந்ததற்குச் சான்று பகர்ந்து இறந்துபட்ட அந் நூல்களின் சூத்திரங்களைத் தருவது போலவே ஒப்பனைக் கலையிலும் தமிழில் முன் இருந்து இன்று ஆரியர் வரவுக்குப் பின் அழிந்துபட்ட நூல்களிலிருந்து சூத்திரங்கள் தருகிறார். பத்துத்துவருக்குச் சூத்திரம் பூவந்தி திரிபலை புணர்கருங் காலி நாவலொடு நாற்பான் மரமே. ஐந்து விரைக்குச் சூத்திரம் கோட்டம் துருக்கம் தகரம் அகில்ஆரம் ஒட்டிய ஐந்தும் விரை. முப்பத்திரண்டு ஓமாலிகைக்குச் சூத்திரம் “இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம் குலவிய நாகணம், கோட்டம், நிலவிய நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி வேகமில் வெண்கோட்டம், மேவுசூர் - போகாத கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய் ஒத்த கருநெல்லி, உயர்தான்றி - துத்தமொடு வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சியுடன் எண்ணும் சயிலேகம், இன்புழுகு - கண்ணுநறும் புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், பின்னு தமாலம், பெருவருளம் - பன்னும் பதுமுகம், நுண்ணேலம், பைங்கொடு வேரி கதிர் நகையாய் ஓமாலிகை.” இம் மூன்றையும் வேறுவகையாக நச்சினார்க்கினியர் தம் சிந்தாமணி யுரையில் குறிக்கிறார். தமிழ்நாட்டில் இக் கலையின் வளத்தையும் பல்வகைப் பெருக்கத்தையுமே இது குறிக்கிறது. நெய்ப்பசை போக அந்நாளில் சந்தனத்துடன் வெள்ளி லோத்திரப் பூவின் உலர்த்திய பொடி கலந்து அரைத்து வழங்கினர். இதுவே நாளடைவில் மேனிச் சவர்க்காரம் (கூடிடைநவ ளுடியயீ) ஆக வளர்ச்சியுற்றது. துணிச்சவர்க்காரம் (றுயளாiபே ளுடியயீ) வண்ணான் காரத்திலிருந்து வளர்ச்சி பெற்ற தனிக்கலை ஆகும். கி.பி.16ஆம் நூற்றாண்டுவரை உலகுக்கெல்லாம் மணப் பொருளும், வண்ணப்பொருளும், இனிய தின்பண்டங்களும், பட்டு, மயிர், பருத்தி ஆடை வகைகளும் முத்துப் பொன்னணி மணியும் ஏற்றுமதி செய்து உலகின் பொருட் களஞ்சியமாக விளங்கியது தமிழகம். சங்க இலக்கியம் மட்டுமின்றி வரலாறுகளும் இதைத் தெரிவிக்கின்றன. இவ் வகையில் வடநாடு வறுமை கொண்டது என்பதை அர்த்தசா°திரம் எழுதிய சந்திர குப்தன் அமைச்சரான தென்னாட்டு ஆரியர் குறித்துள்ளார். தமிழகத்தின் ஆட்சிவறுமை, கலைவறுமை, மொழி வறுமை, பொருள் வறுமை ஆகிய எல்லாவற்றுக்கும் தமிழர் அடிமை மனப்பான்மை, தன்னலப் போட்டி ஆகியவையும் இவற்றைப் பயன்படுத்திய அறிவற்ற நாகரிகமாகிய ஆரியரும் சிறிது அறிவுடன் இயங்கி வந்துள்ள மேலை நாகரிகமும் காரணமாகும். மீண்டும் தமிழர் மேம்பட நமக்கு வேண்டிய சரக்குகள் இரண்டே இரண்டுதான் - தமிழர் அடிமைத் தனமும் ஆரிய மோகமும் ஒழிதல் வேண்டும். தன்னம்பிக்கை வளர்தல் வேண்டும். அத்துடன் இழிந்த அடிமைத்தனத்தின் சின்னமான இனப்பற்றற்ற தன்னலப் போட்டி பொறாமைகள் ஒழிதல் வேண்டும். இனப்பற்றும் ஒத்துழைப்பும் வளர்தல் வேண்டும். 3. சோழன் கலிங்க நாட்டு வெற்றி தமிழர் மிகுதியாக வரலாறு எழுதவில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. இது வரலாறு பேணாத, இன்றைய தமிழன் கதை. அடிமைகள் வரலாற்றை, ஆண்டைகள் வைத்துப் பேணுவரா? அடிமைகள்தான், பேண எண்ணுவரா? ஆனால், அன்றைய தமிழன் கதை இதுவல்ல. சங்க இலக்கியத்தில் மட்டுமன்று, தமிழ் இலக்கியம் முழுவதுமே நாம் வரலாற்று அறிவையும், வரலாற்று நோக்கையும் காண்கிறோம். இரண்டாயிர ஆண்டு இலக்கிய வரலாறு உடைய மொழி, உலகில் தமிழ் மொழி ஒன்றுதான் என்பதை, இன்று தமிழனே அறியாதிருக்கிறான். அத்துடன் வரலாறு சார்ந்த இலக்கியம் படைத்த மொழியும் தமிழ் ஒன்றுதான் - அதற்கு ஈடு இணையாக இன்னொரு மொழி கிடையாது என்பதும், இன்றும் எவரும் கவனியாத செய்தி. வரலாற்று இயக்கத்தைத் தமிழன் பேணாமல், புராணப் புளுகு இலக்கியத்தையே பேணியதால் வந்த நிலை இது! அசோகனைக் காணாத புராணங்களை அசோகன் சக்கர ஆட்சியிலும் பேணுகின்றனர் போலிப் புராண வாதிகள்! மூவர் உலா, கலிங்கத்துப் பரணி இடைக் காலத்திய - கம்பர் காலத்திய - தமிழின் ஒப்புயர்வற்ற வரலாற்று இலக்கிய நூல்கள். உலகிலேயே ஈடு இணையற்ற கவிதைகள் அவை. விழுமிய வீறுணர்ச்சிக்கு மூவர் உலா - வீர விறலுணர்ச்சிக்குக் கலிங்கத்துப் பரணி. தமிழிலேகூட இவற்றுக்கு ஒப்பான மக்கள் பாடல் நூல் வேறு கிடையாது எனலாம். தமிழில் புளுகுப் பரணிகள் ஏராளம். அவற்றிடையே புனுகு மணம் வீசும் பொன்னான பரணி கலிங்கத்துப் பரணி. இதனைப் பாடிய புலவர் பெயர் செயங்கொண்டார். அவர் முதலாம் குலோத்துங்க சோழனிடம் அவைப்புலவராய் இருந்தவர். கலிங்க வெற்றியின் பின், அரசன் செயங்கொண்டான் என்ற பட்டத்தை மேற்கொண்டான். அந்த வெற்றிக் களிப்பால், செயங்கொண்டானைப் பார்த்து, ‘ செயங்கொண்ட புலவர் பெருமானே இப்போது நானும் செயங்கொண்டானாகி விட்டேன்’ என்றானாம்! உடனே புலவர், ‘அப்படியானால், அந்தச் செயங்கொண்டான் வீரவெற்றியைப் பற்றி இந்தச் செயங்கொண்டான் கவிதை வெற்றிப் பரணி பாடும்!’ என்று கூறிச் சென்றாராம். ஒரு நாளைக்குள் கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்து, புலவர் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப, தமிழில் எந்த நூலிலும் காணாத குதிரைப் பாய்ச்சல் நடையை நாம் இதில் காண்கிறோம். நாலுகால் பாய்ச்சல், இரண்டுகால் பாய்ச்சல், தாளநடை, துரிதநடை, வெற்றிஎக்களிப்புநடை, கும்மாளநடை ஆகிய குதிரைப் பாய்ச்சலின் எல்லா வகைகளையும் இதன் கவிதை நடையில் காணலாம். காதல் சுவையும் அக்கால நிலைக்கேற்ப இதில் மிகுதி, குலோத்துங்கன் காலத் தமிழகத்தில் எல்லா நாட்டுச் செல்வமும் வந்து குவிந்து கிடந்தது போல, அவன் அந்தப்புரத்திலும் எல்லா நாட்டிலுள்ள, எல்லா மொழி பேசும் அழகு நங்கையரும் இருந்தனர். முதல் பாட்டிலேயே இந்த வீர, காதல் இணைப்பு திறம்பட கையாளப் படுகிறது. “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைத்த களிநல் மடவீர்! - கழல்சென்னி காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைத்த களப்போர் பாடத் - திறமினோ!” காஞ்சி என்பது பொன்மலைக்கும் காஞ்சி நகர்க்கும் பெயர். கலிங்கம் அதுபோல ஆடைக்கும் கலிங்க நாட்டுக்கும் பெயர். இதை வைத்து அழகுச் சிலேடை அமைக்கிறார் கவிஞர்! “பெண்களே! உங்கள் பொன் மாலைகள் (காஞ்சி) மட்டும் உடலில் இருந்தன ஆடை (கலிங்கம்) உடலில் இல்லை. அந்த நிலையில் குலோத்துங்கன் உங்களை ஆக்கினான் அல்லவா? அதே நிலைதான் போரிலும் ஆயிற்று. இங்கே காஞ்சி நகரம் அழியாதிருக்கிறது, தமிழகத்தில்! ஆனால், அங்கே வட புலத்தில் கலிங்கம் அழிந்தது. ‘இந்தக் கதை உங்களுக்குத் தெரியும். அந்தக் கதை கூறுகிறேன், கேளுங்கள்!’ என்று கவிஞர் நூலைத் தொடங்குகிறார். கலிங்கப் போரில் வெற்றி கொண்ட மன்னன் முதலாம் குலோத்துங்கன். ஆனால், காஞ்சியிலிருந்துகொண்டே அவன் படையனுப்பித்தான் வெற்றி கொண்டான். கள வெற்றிக்குரிய படைத் தலைவன் கருணாகரத் தொண்டை மான். அவன் முன்பே இலங்கையை வென்று அதைச் சோழப் பேரரசில் மாகாணமாகச் சேர்த்தவன். கலிங்கம் வெல்லச் சென்றவனும் அவனே. இதை அடுத்த அடிகள் தெரிவிக்கின்றன. “இலங்கை எறிந்த கருணாகரன் தன் இகல் வெஞ்சிலையின் - வலிகேட்பீர் கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் களப்போர் பாடத் - திறமினோ!” முதலாம் குலோத்துங்கன் கங்கைகொண்ட சோழன் (வங்காளத்தை வென்றவன்) ஆகிய இராச இராசனுடைய மகள் பிள்ளை, அவனுக்கு முன் இராச இராசன் மகன் இராசேந்திரனும் அவன் பிள்ளைகள் மூவரும் புகழுடன் ஆண்டனர். கடைசிப் புதல்வன் வீரராசேந்திரன் மகளை மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் மணந்திருந்தான். பில்கணன் என்ற காஷ்மீரம் சார்ந்த சமற்கிருதக் கவிஞன் அவன் அரசவைப் புலவன். விக்கிரமாதித்தன் சோழ நாட்டை வென்று அதில் தன் மைத்துனனாகிய முன்னைய சோழன் மகனைப் பட்டம் சூட்டியதாகப் பில்கணன் கூற்றால் அறிகிறோம். ஆயினும், மேலைச்சாளுக்கிய கைப்பாவையாகிய அந்த இளவரசனைச் சோழ நாட்டு மக்கள் விரும்பவில்லை. வேங்கி நாட்டில் சோழர் கீழ் அரசனாயிருந்து சக்கரக் கோட்டம் முதலிய இடங்களில் சோழர் வெற்றிக்கொடி நாட்டிய முதலாம் குலோத்துங்கனையே அவர்கள் அழைத்து முடிசூட்டினர். மேனாடுகளிலே அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன் ஆகிய மூவரே வீரஞ்செறிந்த உலகப் பேரரசர் ஆவர். சோழப் பேரரசர்கள் முதலாம் இராச இராசனும், முதலாம் இராசேந்திரனும், முதலாம் குலோத்துங்கனும் கீழ்த்திசைக் குரிய அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன் என்று கூறத்தக்க ஆசியாவின் வீரப் பேரரசர் ஆவர். மூவருமே இந்தியாவையும், இலங்கையையும், பர்மாவையும், மலாயாவையும், இந்துச் சீனாவையும், தென் கிழக்கு ஆசியத் தீவுகளையும் ஒரு சேர ஆண்டனர். குலோத்துங்கன் கி.பி.1070 முதல் 1118 வரை ஆண்டான். அவன் பட்டத்தரசி தியாகவல்லி, அரசுக்கு வருமுன்பே அவன் சோழ முன்னோர்கள் ஆண்ட கங்கை நாட்டு எல்லையை விரிவுபடுத்தி ஓரிசா, நாகபுரி பகுதியிலுள்ள மலங்குடி மக்களை அடக்கினான். அத்துடன் சில காலம் கடாரம் அதாவது பர்மா மலாயா பகுதி அரசுரிமையையும் அவன் ஏற்று நடத்தியிருந்தான் என்று தெரிகிறது. புராணப் பாணியைக் கலிங்கத்துப்பரணி கவிதைப் பின்னணியில் ஓரளவு பின்பற்றி வருகிறது. முதற்பகுதி பாலை நிலத் தெய்வமும் போர்த் தெய்வமுமாகிய காளியையும் பாலைநிலத்தையும் வருணிக்கிறது. அப்பகுதியிலேயே பாலைநில வருணனையிடையே வருணனையாகச் சோழர் தமிழக வெற்றிகள் குறிக்கப்படுகின்றன. “முள்ளாலும் கல்லாலும் தென்னர் ஓட முன்னொருநாள் வாள்அபயன் முனைந்த போரில் வெள்ளாலும் கோட்டாலும் புகையால் மூட வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்” முள்ளாற்றுப் போரிலும் கல்லாற்றுப் போரிலும் சோழன் பாண்டியனைத் துரத்தி ஓட்டினவன். சேரனது வெள்ளாற்றுப் போரிலும் கோட்டாற்றுப் போரிலும் அச் செல்வப் பேரூர்கள் புகைக்கு இரையாயின. இரண்டாம் பகுதி நகைச்சுவை மலிந்தது. அங்கே காளியின் குடிகளாகிய பேய்களிடையே ஒரு மந்திரவாதப்பேய் இந்திரசாலம் பண்ணி பொய்ப் போர் உணவு காட்டிப் பேய்களை ஏய்க்கிறது. மூன்றாம் பகுதியில் புராணத்தை வென்று பாடுகிறார் கவிஞர். கவிஞர் சோழ மரபின் வரலாறு கூறுகிறார், அதனிடையே கரிகாலன் வரலாறு வருகிறது. கரிகாலச் சோழன் இந்தியா முழுவதையும் வென்றுவிட்டான். அப்பால் செல்ல முடிய வில்லை. இமயமலை அவனை மதியாமல் தடுத்து நின்றது. கரிகாலன் கோபங்கொண்டு அதைச் செண்டால் (குண்டாந் தடியால்) அடித்து வீழ்த்தினான். இமய மலை, “ அய்யோ சரணம், அய்யா சரணம்,’ என்றது. அவன் அதைத்தூக்கி நிறுத்தினான். அதன் நெற்றியிலே திருநாமம் சாத்துவது போலப் புலிச் சின்னத்தைப் பொறித்தான். அதோடு விடவில்லை! பாரதத்தைப் பிள்ளையார் எழுதினாராமே, இமயத்தில்! கரிகாலன் அந்தப் பாரதத்தை அழித்தான். புதிய பாரதமாக வருங்காலச் சோழ நாட்டு வரலாற்றை அதில் எழுதினான். அது மட்டுமோ! இராமாயணக் கதை நடப்பதற்கு முன்பே வால்மீகி இராமாயணக் கதை எதிர்காலத்தில் இப்படி இப்படி நடக்கும் என்று ஞானக் கண்ணாற் கண்டு எழுதினாராம்! இராமாயணக் கதை, இதற்கேற்ப எதிர்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது புராணங்களும், இப்படித்தான். சந்திரகுப்தன் ஆட்சி செய்தான் அவன் மகன் ஆட்சி செய்வான் என்று இவ்வாறு எதிர்காலத் திலேதான் புராணங்கள் வரலாறுகள் எழுதுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, புராணிகர் தம்காலம் (கி.பி.3ஆம் நூற்றாண்டு) கடந்து எதிர்காலத்தைக் காணமுடியவில்லை. அது போலவே கரிகாலன் எழுதியதாகக் கவிஞர் தரும் சோழ புராணமும் கலிங்கத்துப் போர்வரை வந்து நின்றுவிடுகிறது. கரிகாலன் தனக்குப் பின்னுள்ள சோழர் வரலாறுகளையும் குலோத்துங்கன் வரலாற்றையும் குறித்துப் பின் குலோத்துங்கன் வீர வெற்றியைப் புகழ்ந்து பெருமைப்படுவதாகக் கவிஞர் முடிக்கிறார். இப் பகுதியில் கவிஞர் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை உள்ள ஆயிரம் ஆண்டுச் சோழ வரலாற்றைக் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பராந்தக சோழன் மதுரையையும் இலங்கையையும் வென்றது, இராசஇராசன் சேர நாட்டையும் உதகமண்டலத் தையும் வென்றது, மண்ணைப் போரால் சோழர் கங்கை நாட்டையும் கடாரம்நாட்டையும் வென்றது, இராசேந்திரனும் அவன் பின்னோரும் காம்பிலி நாட்டில் வெற்றித் தூண் நட்டது, கொப்பம் போரில் வடதிசை வென்றது ஆகியவற்றை இங்கே விரித்துரைத்து, இறுதியில் துங்கபத்திரை, கிருஷ்ணா ஆறுகள் கூடுமிடமாகிய கூடல்சங்கமத்தில் குலோத்துங்கன் வென்றதுவரை கவிஞர் பாடி முடிக்கிறார். “குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற கோன்அபயன் குவலியங் காத்தளித்த பின்னை இந்தநிலக் குலப்பாவை இவன்பால் சேர என்னதவம் செய்திருந்தாள் என்னத் தோன்றும்!” குலோத்துங்கன் பிறந்த உடனே உலகம் அடைந்த நிலையைக் காளி தேவி பேய்களுக்குக் கூறுவதாகக் கவிஞர் நான்காம் பகுதியில் கூறுகிறார். உதியர் அல்லது சேரர் பணிந்துவிட்டார்களாம்! செழியர் அல்லது பாண்டியர் கடலில் போய் விழுந்து விட்டார்களாம்! “கழலில் அடைந்தனர் உதியர்! கடலில் அடைந்தனர் செழியர்! பரிசில் சுமந்தனர் கவிகள்! பகடு சுமந்தன திறைகள்! அரசு சுமந்தன இறைகள்! அவனி சுமந்தன புயமும்! சோழ நாட்டுக் கவிஞர்கள் குலோத்துங்கன் பரிசில்களைச் சுமந்து சென்றனர். வெளிநாட்டரசர் திறைகளை யானைகள் சுமந்து வந்தன. சிற்றரசர்கள் கப்பத்தைச் சுமந்துகொண்டு வந்தனர். அதேசமயம் குலோத்துங்கன் தோள்கள் உலகத்தைச் சுமந்தன என்று கவிஞர் அழகுபடக் கூறுகிறார். இத்தனையும் குலோத்துங்கன் பிறந்த அன்றே நடந்ததாய்க் கவிஞர் மனக்கண்ணில் கண்டு கூறிவிடுகிறார்! இது புராண இதிகாச பாணியே ஆனாலும் கூறுவது இங்கே புராணம் அல்ல, வரலாறு! குலோத்துங்கன் ஆட்சியில் சோழ நாட்டின் சிறப்புப் பாடப்படுகிறது. “எங்குமுள மென்கதலி! எங்குமுள தண்கமுகம்! எங்குமுள பொங்கும் இளநீர்!” ஆயினும் போரில்லாமல் மன்னன் தோள்கள் தினவெடுக் கின்றன. வெளிநாட்டு அரசர் திறையைக் கொண்டுவந்ததாக அமைச்சர் வந்து கூறுகிறார். திறை கொணர்ந்த அரசர் பெயர்களைக் கவிஞர் கூற்றிலேயே காணலாம். “தென்னவர், வில்லவர், கூபகர், சாபகர், சேதிபர், யாதவரே; கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், காரிபர், கோசலரே; கங்கர், கராளர், கவிந்தர், துமிந்தர், கடம்பர், துளும்பர்களே; வங்கர், இலாடர் மராடர், விராடர், மயிந்தர், சயிந்தர்களே; சிங்களர், வங்களர், சேகுணர், சேவணர். செய்ய வரையணரே; கொங்கணர், கொங்கர், குலுங்கர், சௌந்தியர், குச்சரர், கச்சியரே; மத்தவர், மத்திரர், மாளுவர், மாகதர், மச்சர், மிலேச்சர்களே; குத்தர், குளத்தர், வடக்கர், துருக்கர், குருக்கர், வியத்தர்களே!” எத் னை சிற்றரசர் பெயர்கள்! ஆனால், ஒரு பெயர் இல்லை, அதுதான் கலிங்க அரசன் பெயர். அதைக் கேட்டதும் குலோத்துங்க சோழன் கோபாவேசங் கொள்கின்றான். தானே போருக்குப் புறப்பட எழுகிறான். அமைச்சனும் தளபதியுமான வண்டையர்கோமான் கருணாகரத் தொண்டைமான், ‘இந்தச் சிறு பகைவனை எதிர்க்கத் தாங்கள் போகக்கூடாது. இதோ நொடியில் சென்று, வென்று கொண்டு வருகிறேன் அவன் தலையை’ என்றான். அரசன் கோபம் ஒரு சிறிது தணிந்தது, தற்காலிகமாக. கருணாகரன் படையுடன் புறப்பட்டான். ஐந்தாம் பகுதியின் பரணிப் போர்தான் நூலின் நடுப் பகுதி. கம்பர் இதைப் படித்திருந்தால், யுத்தகாண்டத்தை இன்னும் சிறப்பாகப் பாடியிருப்பார் என்று கூறும் முறையில் போர் வீரரின் வீர உணர்ச்சியுடனும் வீரதீர ஒசையுடனும் பாடப் பட்டிருக்கிறது இப்பகுதி. மதில்கள் இடிந்தன; வீடுகள் எரிந்தன; புகைத் திரள் எழுந்தது; அடவிகள் பொடிபட்டன; அருவிகள் அனல்பட்டன; மலைகள் தூள்பட்டன. அரண்களைக் காணவில்லை. அரணாவார் யாருமில்லை. கலிங்கமக்கள் ஓடினர். கலிங்க மன்னன் மலையேறி ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். “கலிங்க வீரர், ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்! உடலின் இழிவினை ஓட அஞ்சினர், அருவர் வருவர் எனா இறைஞ்சினர், அபயம் அபயம் எனா நடுங்கியே!” அருவர் என்பது இன்றும் தெலுங்கில் தமிழரைக் குறித்த பெயர். ஆகவே, அன்று கலிங்கத்தில் பேசப்பட்ட திராவிட மொழியாகிய தெலுங்கு மொழியிலேயே அருவர் வருவர் அதாவது, தமிழர் வந்து விடுவார்கள் என்று கண்ட கண்ட இடமெல்லாம் அஞ்சி ஓடினார்களாம்! அகப்பட்ட கலிங்கர் கூறும் கூற்றுகளில் கவிஞர் நகைச்சுவையின் எல்லை காட்டுகிறார். ஆடைகளை எறிந்துவிட்டு; நாங்கள் கலிங்கர் அல்லர் (கலிங்கம் என்றால் ஆடை); நாங்கள் அமணர்கள்! (1.சமணர் 2. வேட்டியில்லாதவர்) என்றார் சிலர். வில் நாணை மூன்றாக முறுக்கிப் பூணூல் போல் போட்டுக்கொண்டு சிலர் ‘நாங்கள் இந்த நாட்டினர் அல்லர்; பார்ப்பனர்கள். கங்கையில் நீராடிவிட்டுச் செல்கிறோம்’ என்றனராம். குருதியில் ஆடை துவைத்து, அதைக் காவி ஆடையாக உடுத்து, ‘நாங்கள் புத்தத் துறவிகள்!’ என்றனராம் சிலர். சிலர் இன்னும் திறமைசாலிகள். தமிழர் பாணர்களைத் தாக்கமாட்டார்கள். ஆகவே, யானைக் கழுத்தில் உள்ள மணியைக் கையில் பிடித்துக்கொண்டு, ‘நாங்கள் தெலுங்கு நாட்டுப் பாணர்கள் (சித்தேசிகள்); கலிங்கக்களம் பாட வந் தோம். ஆனால், எங்கள் தோல்வி கண்டு திகைத்து நிற்கிறோம்’ என்றார்களாம்! கலிங்கநாடு ஓவியக் கலைக்குப் பெயர் போனது. கவிஞர் இதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகிறார். கலிங்க ஓவியர் எழுதிய சித்திர உருவம் தவிர அந்த நாட்டில் பிழைத்தவர்கள், காயம் படாதவர்கள் இல்லை என்று கம்ப சூத்திரமாகக் கூறி அவர் போர் வரலாறு முடிக்கிறார். தொண்டடைமான் கலிங்க அரசனைக் காடு மேடெல்லாம் தேடிக் குகை யில் கண்டுபிடித்து அரசன்முன் கொண்டு வந்தான். சோழன் அவன் முடிமீது அடி வைத்து அவனுக்கு அடைக்கலம் தந்தான். “கடற் கலிங்க மெறிந்து செயத் தம்பம் நாட்டிக் கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச் சுடர்ப் படைவாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டை மானே!” கலிங்க நாடு சிறிய நாடன்று. ஒருகால் இமய முதல் பாலாறு வரை ஆண்ட நாடு. வீரம் செறிந்த நாடு. அது மட்டுமன்று. கடல் வாணிகமும் கடற்படையும் நிறைந்த நாடு. கலை மலிந்த நாடு. எதிரியாயினும் இப் பெருமைகளைத் தமிழ்க் கவிஞர் செயங்கொண்டார் சுட்டிப் போகும் கவிநயம் கலந்த வரலாற்று வாய்மை இக்காலக் கவிஞர்களால்கூடப் போற்றிப் பின்பற்றத்தக்கது எனலாம். பேய்கள் வாழ்த்துவதாக ஆறாவது கடைசிப் பகுதியில் சோழனைப் பாடிக் கவிஞர் நூலை முடிக்கிறார். “மன்னர் புரந்தர வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே, தென்னர் உடைந்தமை பாடீரே; சேரர் உடைந்தமை பாடீரே! எற்றைப் பகலும் வெள்ளணி நாள் இருநிலப் பாவை தன்கீழ் நிழற்றும் கொற்றக் குடையைப் பாடீரே! குலோத்துங்க சோழனைப் பாடீரே! காட்டிய வேழை அணிவாரி கலிங்கப் பரணி நம் காவலன் மேல் சூட்டிய தோன்றலைப் பாடீரே! தொண்டையர் வேந்தனைப் பாடீரே!” 4. கவியரசனைப் பாடிய புவியரசன் தமிழிலக்கிய வரலாற்றிலே நாம் சென்ற இரண்டாயிர ஆண்டுக் காலமாகத் தமிழகம் அடைந்து வந்த வளர்ச்சி, தளர்ச்சிகளைக் காண்கிறோம். இந்த இரண்டாயிர ஆண்டு களிலே நமக்கு இரண்டு பொற்காலச் சித்திரங்கள் கிடைக்கின்றன. ஒன்று, சங்ககாலம் - ஏறத்தாழ கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு உரிய காலம். மற்றது, அதற்கு ஆயிர ஆண்டு பிற்பட்ட, நமது காலத்துக்கு ஓர் ஆயிர ஆண்டு முற்பட்ட சோழர் காலம். கவிச் சக்கரவர்த்திகளாகச் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் வாழ்ந்த காலம். இந்த ஆயிர ஆண்டுகளிலும் தமிழகத்தின் அடிப்படைப் பண்பில் பெரு மாறுபாடு ஏற்படவில்லை. ஓரளவு வளர்ச்சிகூட ஏற்பட்டிருந்தது. ஏனெனில், இரண்டு காலத்திலும் அரசரைப் புலவர் பாடினர். ஆனால், சங்ககாலப் புலவர் முடியரசரையும் குடியரசரையும் ஒரே பாடலாகப் பாடினர். ஏனெனில், அவர்கள் பாடியது அரசரையல்ல-அரசை-அரசுப் பண்பை! சோழர் காலத்திலோ பாடிய கவிஞர் தொகை குறைவு. ஆனால், அவர்கள் கவிச்சக்கரவர்த்திகள்! அவர்களால் பாடப்பட்டவர்களும் குடியரசரல்லர், முடியரசரல்லர்-தமிழக முழவதும் மட்டுமன்றி அந்நாளைய நாகரிக உலகம் முழுவதுமே ஆண்ட புவிச்சக்கரவர்த்திகள். ஆயிரம் ஆண்டுகளில் கவிஞரின் பட்டியலில் எவ்வளவோ பேர் உயிர் நீத்துவிட்டனர். அரசரும் அப்படியே. ஆனால், கவிஞர் தொகையில்-கவிஞர் அரசர் பண்பாட்டில்-சிலவற்றுள் படிப்படியான தேசத்தின் குடியாட்சிப் பண்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படாமல் இல்லை. ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார், மாபெரும் கவிஞர்கள்தாம்-ஆனால், அவர்கள் தனிவிரும் பாறைகள். சங்ககாலத்தில் ஒட்டக்கூத்தர், சயங்கொண்டாரை ஒத்த புலவர் ஒருவரல்லர். மிகப் பலர். அவர்கள் பாடிய அரசர்களும் மிகப் பலர்-முடியரசர்களும் குடியரசர்களும் அவ்வப்போது ஒன்றிரண்டு பேரரசர்களும் இருந்த காலம் அது. புலவர்களும் கவிச்சக்கரவர்த்திகளாய் இல்லை. அரசர்களும் மிகப் பெரும் பாலும் புவிச்சக்கரவர்த்திகளாய் அமைந்ததில்லை. இருவர் படியும் மிகத் தாழ்ந்திருந்தது-ஆனால், இது தன்மை தாழ்ந்ததனாலல்ல-உயர்ந்ததனாலேயே! புவிச் சக்கரவர்த்திகளின் தன்மைகளையுடைய தேசியக் கவிச்சக்கரவர்த்திகளும் அப்படியே! பொன்னே ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இடத்தில் பொன்னுக்கு மதிப்புக் குறைந்ததுபோல, சங்க காலத்தில் அரசியல் உயர்பண்பும், கலையின் உயர்பண்பும் கொட்டிக் கிடந்தன. அரசரை, முடியரசரை, வீரரை மக்களைப் பாடிய புலவர்களை உலகின் எந்த மொழியின் இலக்கியத்தையும்விட நிறைவளமாகத் தமிழ்ச் சங்க இலக்கியக் கலைக் கடலில் காணலாம். ஆனால், அதன் கலை வளத்தை, பண்பு வளத்தைச் சுட்டிக்காட்டும் வேறு சில கூறுகளும் உண்டு. அரசரைப் பாடிய புலவரேபோல் புலவரைப்பாடிய புலவரும், அரசரைப் பாடிய அரசரும், புலவரைப் பாடிய அரசரும் உண்டு. இதில் கடைசி வரிசையைச் சேர்ந்த ஓர் அரசனே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அவனைப் பாடிய பெரும் புலவர் மாங்குடிமருதனார். அவர் அவனைப் பாடிய மதுரைக் காஞ்சியே தமிழிலக்கியத்தின் இமயமலையாகிய சங்க இலக்கியத்திலும் உச்ச உயர்ச்சி மய்யமாகிய எவரெ°ட் போன்ற சிகரங்களுள் ஒன்று என்று கூறத்தக்கது, அரசரைப் பாடிய புலவர் இலக்கியத்தில் அஃது உலகிலேயே ஒப்புயர்வற்ற ஒரு சின்னஞ்சிறு பெருங்காவியம். அதனுடன் போட்டியிடவல்ல மற்ற ஒரே ஒரு சிறு பெருங்காவியம் அதே நெடுஞ்செழியனை நக்கீரர் பாடிய நெடுநல் வாடையே. ஆனால், அதனைப் பாடிய புலவர்க்குக் கிடைத்த பரிசோ வேறு. உலகில் எந்தப் புலவர்க்கும் எங்கும் கிட்டாத பரிசு. அவர் அப்பேரரசனைப் பாடு முன்பே-அவன் தலையாலங் கானத்துப் பெரும் போரால் தமிழகத்திலும் வரலாற்றிலும் பண்டைக்கால நெப்போலியனாகப் புகழ் நாட்டு முன்பே அப்புலவரைப் பாடி விட்டான். அவன் பட்டத்துக்கு வரும் சமயம் பால்மணம் அறாத சின்னஞ்சிறு பையன். சிறு பருவத்தில் அணியும் காப்பை அப்போர்க்காகத்தான் கழற்றி இருந் தான். காப்பு இருந்த கையில் அவன் வாள் ஏந்தப் போர்க்களம் புகுந்தான். சிறுவர் காலில் அணியும் கிண்கிணி சல்லடி சதங்கையை அன்றுதான் கழற்றி அவன் போர்க்குரிய வீரக்கழல் அணிந்தான். அவன் சிறுவன் என்று எண்ணி அவன் நாட்டின் புகழைத் தமதாக்க மற்ற அரசர், பேரரசர் எண்ணினார்கள். அரசரும் பேரரசரும் குடியரசருமாக ஏழு பேர் சேர்ந்து தாக்கினார்கள். அது கேட்டு அவன் சினங்கொண்டு போர்க்கு எழுந்தான். புறப்படும்போதே தன் அரசவையில் புலவர், படைத் தலைவர் முன்னிலையில் வெற்றிச் சபதம் எடுத்துக்கொண்டான். அந்தச் சபதமே புற நானூற்றில் (72) ஒரு பாட்டாகக் காட்சியளிக்கிறது. அப்பாட்டிலேயே அவன் மாங்குடி மருதனாரைப் பாடினான். ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கன் அவைப் புலவர் தலைவராயிருந்ததுபோல மாங்குடி மருதனாரே நெடுஞ்செழியன் காலத்து அவைப் புலவர் தலைவராக இருந்தார். அவர் அருமையைச் சின்னஞ் சிறுவனாகப் பட்டம் ஏறியபோதே நெடுஞ்செழியன் அறிந்திருந்தான் என்பது இப் பாட்டினால் தெரிகிறது. மதுரைக் காஞ்சியை அவர் பாடுவதற்கு நெடுநாள் முன்னரே, அவரை மதிப்பிட்டு அவர்க்குரிய புகழ்ப் பரிசை இப் பாட்டில் அளித்துவிட்டான். ‘இப் போரில் நான் வெற்றி பெறுவது உறுதி; பெறாவிடிலோ, நான் கொடுங்கோலரசன் ஆகுக! என்னைப் புலவர் திலகமாகிய மாங்குடி மருதனார் போன்றவர்கள் பாடாமல் வாராமலே போகட்டும்’ என்று அரசன் சூளுரைப் பாடலில் கூறுகின்றான். மாங்குடி மருதனார் மட்டுமன்றி அவர்க்குப் பின் புலவர் தலைமையேற்ற நக்கீரனாராலும் வேறு பல புலவராலும் பல இறவாப் பாடல்களில் நெடுஞ் செழியன் புகழப்பட்டான். அவன் புகழுடன் அவன் தலையாலங்கானத்துப் போரின் புகழே போட்டியிட்டது. ஏனெனில், அவனை நேரில் பாடிய புலவரினும் மிகப் பலர் அப் போரின் புகழ் பாடியுள்ளனர். நெடுஞ்செழியன் போன்ற புவிச் சக்கரவர்த்திகள் கவிச்சக் கரவர்த்திகளால் பாடப்பட்டதோடன்றி, தாமே கவிச்சக்கர வர்த்திகளாய் வாழ்ந்த காலம் சங்ககாலம். ஆனால், அந் நாளைய சக்கரவர்த்திகள் பெரும் பெரு சக்கரவர்த்தி களாகிவிடவில்லை. சான்றோராக, மக்களிடையே மக்களாக, ஆனால், மக்களுலகில் மாணிக்கங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் அரசர்குடிப் பிறப்பாலோ ஆட்சியாலோ மட்டும் சிறந்த பொது நிலை அரசர்கள் அல்லர். தமிழகத்தின் பண்டைத் தேசியத்தில் திளைத்துத் தேசியத்தின் மணியுருக்களாக அவர்கள் விளங்கினர். 5. தமிழர் குடியாட்சிப் பண்பு குடியரசு - குடியாட்சி-குடியாட்சி முறை! இந்த மூன்று வடிவங்களில் நாம் குடியாட்சிப் பண்பைக் காணலாம். குடியரசு என்பது மன்னன் இல்லாத ஆட்சிக்குப் பெயர். இதன் எதிர்ப்பதமே முடியரசு. ஆனால், மன்னன் இல்லாத ஆட்சி யெல்லாம் குடியாட்சி யாகமாட்டா. குடியரசு என்று மட்டுமே அவற்றைக் கூறுகிறோம். ஏனென்றால், குடியரசில் மன்னன் மரபுரிமை இல்லாத ஒருவர் ஆட்சியுரிமையை முற்றிலும் கைப்பற்றி ஆளலாம். இதை வல்லாளர் ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி என்கிறோம். தவிர உரிமை சிலரிடமோ, ஒரு வகுப்பாரிடமோ தங்கியிருந்தால் அக் குடியரசுகளை நாம் சிலராட்சி, வகுப்பாட்சி, உயர் வகுப்பாட்சி, குருமாராட்சி, செல்வராட்சி என்கிறோம். ஆளப்படும் மக்களிடம் ஆட்சியுரிமை இல்லாத இந்த ஆட்சிகளை எல்லாம்-முடியரசு, குடியரசு வகைகளையெல்லாம் நாம் ஒரே சொல்லில் வல்லாட்சி அல்லது எதேச்சாதிகாரம் என்கிறோம். ஆட்சியுரிமை மேலிருந்து கீழே, ஆட்சியாளரிடமிருந்து ஆளப்படும் மக்களிடம் வரும் ஆட்சியெல்லாம் வல்லாட்சியே. ஆட்சியுரிமை கீழிருந்து மேலே, ஆளப்படும் மக்களிடமிருந்து ஆள்பவரிடம் சென்றால் மட்டுமே அவ்வாட்சியை நாம் குடியாட்சி என்று கூறமுடியும். நிறை குடியாட்சி அல்லது மக்கள் ஆட்சியில் ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற வேற்றுமை கிடையாது. எல்லாரும் ஆள்பவர்கள் எல்லாரும் எல்லாரையும் ஆளும் ஆட்சிதான் நிறைகுடியாட்சி. அதில் எல்லாரும் மன்னர் எல்லாரும் மக்கள். நிறை குடியாட்சி ஒரு குறிக்கோள் மட்டுமே. நடைமுறையில் உலகில் அஃது எங்கும் கிடையாது. ஆனால், அந்தக் குறிக்கோளை நோக்கி, அதன் சிலபல கூறுகளை, முக்கியமான கூறுகளை உடன்கொண்ட குடியரசுகளைத் தான் நாம் இன்று குடியாட்சி என்று அழைக்கிறோம். ஆட்சி எல்லை மிகப் பெரியதாய் இருந்தால், எல்லாரும் எல்லாரையும் ஆளுவது என்பது முடியாத காரியம். பண்டைக் காலத் தமிழர் ஊராட்சியிலும் கிரேக்க நாட்டில் ஏதேன்சு நகர ஆட்சியிலும் எல்லாரையும் எல்லாரும் ஆளும் முறை நடைமுறையில் இருந்தது. தமிழர் ஊர்களும் ஏதேன்சு நகரமும் இது காரணமாகவே நடுவே அகல் வெளியிட்டுக் கட்டப்பட்டது. சந்தையென்றும் வெளியென்றும் எண்ணப்படும் ஆங்கிலச் சொல் (குடிசரஅ) ஏதேனியரின் இவ் வகல் வெளியின் பெயரே, தமிழர் இதனை ஊர்ப்பொது, பொதியில், அம்பலம் என்ற சொற்களால் வழங்கினர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்-பல்லாயிர ஆண்டுகட்கு முன்-தமிழர் அனைவரும் சிலபல ஆண்டுகளுக்கொருமுறை பொதிகை மலைச்சாரலில் ஒரு தமிழ்த் தேசியப் பொதுவிடத்தில் கூடினர். அந்த மலை அதனாலேயே ‘பொதியில்’ என்றும் தமிழ்மலை என்றும் இன்றுவரை வழங்கலாயிற்று. அதுவே தமிழ்த் தெய்வம் வாழும் தெய்வமலை, வடமலை, வெள்ளிமலை, பொன்மலை, வெள்ளியம்பலம் என்று பலவாறாகக் கூறப்பட்டது. அவ்விடத்தில் கூடிய தமிழ்ச் சங்கத்தின் நிலையிருக்கையே தென் மதுரையிலும் அலைவாயிலும் கடைசியில் மதுரையிலும் கூடிற்று. மதுரையும் இதனால் வெள்ளியம்பலம் எனப்பட்டது. தமிழரைப் போலவே கிரேக்கரும் ஒரு தேசியப் பொதுவிடத்தில் கூடினர். அந்த இடமே தேசிய விழா, தேசியப் பந்தயங்களின் களமான ஒலும்ப°. இவ் விடத்தில் முதலில் கூடிய ஆண்டு (கி.மு.8ஆம் நூற்றாண்டு) முதலே கிரேக்கர்தம் ஆண்டு ஊழி கணித்தனர். கிரேக்க நாகரிகம் போற்றும் மேனாட்டினர் இன்றும் உலகப் பொதுப் போட்டிப் பந்தயங்களை ஒலிம்பிக் பந்தயங்கள் என்றே நடத்துகின்றனர். எல்லாரும் எல்லாரையும் ஆளும் தொல் குடியாட்சி முறையில் தமிழரும் கிரேக்கரும் முதலில் முறை வைத்தே ஆண்டனர். ஆனால், கட்சி பெருகியபின், சிலர்க்கு அவர்கள் வாழ்நாளில் முறைவருவதில்லை. எனவே சீட்டுக் குலுக்கிப் போடும் முறை வந்தது. இதிலும் தகுதியுடையவர் சீட்டுப்பெறா நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே தகுதித் தேர்வாகத் தேர்தல் முறை வழக்குக்கு வந்தது. தமிழர் இதனைக் குடவோலை என்றனர். ஏனெனில், ஒவ்வொரு சீட்டும் ஓர் ஓலை. அது தேர்தல் பெட்டியாகிய குடத்தில் இடப்பட்டது. கிரேக்கர் ஓட்டுத் துண்டை வழங்கினர். ஆட்சித் தேர்வாகத் தொடங்கிய இதே முறை பின்னாள்களில் பெருந்தீர்ப்புகளுக்கும் அரசியல் கண்டனங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. கிரேக்கரிடையே ஏதேன்சு நகரவெளியின் நடுமய்யமே நகர்த் தெய்வமான ஏதேனாவின் கோவிலாயிற்று. தமிழரிடையே அம்பலத்திலிருந்தே தமிழர் குடியாட்சியின் சமய, சமுதாய, அரசியல் கூறுகள் தொடங்கின, பண்டு ஊரம்பலத்தில் ஆட்சி செய்த குழுவினர் அம்பலக்காரர் என்றும், அதன் உட்குழுவினர் அல்லது வாரியத்தார் அகம்படியர் அல்லது வாரியர் என்றும் வழங்கப்பட்டனர். இம் மூன்று பெயர்களும் இன்று சாதிப் பெயர்களாய் நிலவுகின்றன. அம்பலத்தில் வழக்காடுபவர் பெயராகிய மன்றாடி என்பதும் இன்று சாதிப் பெயராய் நிலவுகிறது. வீரர்க்குச் சிறந்த இடத்திலோ, அம்பலத்தைச் சுற்றிலுமோ அல்லது ஊர்த்தலைவனானால், சிறப்பாகப் புகழ்மிக்கவனானால் அம்பலங்களிலே கல் எழுப்பப்பட்டது. அதனருகே தலைவன் குடியின் மரபுச் சின்னமான மரமும் குடிச் சின்னமான கொடியும் நிறுவப்பட்டன. அந்த இடம் கோவில் என்றும், மரம் கோமரம் என்றும், கொடியென்றும் வழங்கப்பட்டன. தமிழர் அரண்மனையும் கோவிலும் இன்றளவும் கோயில் என்றும் அம்பலம் என்றும் வழங்கப்படுகின்றன. அம்பலத்தில் பேசுபவர்க்கென நாற்கால் பந்தலிடப்பட்ட பின் அது மன்றம் எனப்பட்டது. கூடுபவர்க்கும் நீண்ட பந்தல்கள் இடப்பட்டபின் அதுவே கூடம் எனப்பட்டது. இவையனைத்துமே பிற்காலக் கோவில்களாயின. மன்றம் இருந்த இடம் மண்டப மாகவும் கூடங்கள் இருந்த இடம் திருச்சுற்றுகளாகவும் மாறின. அம்பலத்தில் சிறுவர் கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி எனப்பட்டது. அறச்சாலை அறப்பள்ளியாயிற்று. நாடகமாடும் கொட்டகையின் அடிப்புறம் அரங்கு என்றும் மேற்புறம் மாடம் என்றும் பெயர்பெற்றன. இவையே கோவில் கோபுரங்களாகப் பின்னாளில் வளர்ந்தன. புத்த சமணத் தொழுகையிடங்களும் முசுலிம் தொழுகையிடங்களும் இன்று ‘பள்ளி’ என்ற இப் பழங்கோயிற் பகுதியின் பெயராலேயே வழங்குகின்றன. கூடம், மாடம் ஆகிய சொற்களிலும் கோவிலின் இடமாகிய கோபுரமும் இம் மரபுகளைக் காட்டுகின்றன. உட்கோவில் கோவில் என்றும் சிற்றம்பலம் என்றும் கூறப்பட்டன. புறக்கோவில் பேரம்பலம் என்னப்பட்டது. பழைமை வாய்ந்த உட்கோவில் என்ற முறையிலேயே சிற்றம்பலம் என்ற பெயர் மருவிச் சிதம்பரத்தின் பெயராயிற்று. பழைய குடியாட்சியின் எல்லை விரிய விரிய, எல்லாரும் கூடும் வழக்கம் கைவிடப்பட்டது. பேராள்கள் அல்லது தலைவர்கள் மட்டும் கூடினர். பின் பேராள்கள் தேர்ந்தெடுக்கப் படும் நம் காலத் தேர்தல் முறை தொடங்கிற்று. தேர்ந்தெடுத்த பேராள்கள் மூலமான குடியாட்சி பொறுப்பாட்சி எனப்படுகிறது. இக் குடியாட்சிப் பண்பு இப்போது குடியரசுகளிடம் மட்டுமன்றி, எல்லாக் கட்சி வகைகளிலுமே பரவிவருகிறது. பிரிட்டன் இன்று குடியரசன்று, முடியரசே. ஆனால், குடியாட்சிப் பண்புக் கும் பொறுப்பாட்சிக்கும் அது தாயகமாகக் கருதப்படுகிறது. அரசர் தனியுரிமை எதிர்த்து மக்கள் குடியுரிமைக்குப் போராடியே இக்குடியாட்சிப் பண்பை மேற்கொண்டுள்ளனர். பிரான்சில் முடியாட்சியை எதிர்த்து அரசனை ஒழித்துக் குடியரசுடன் கூடிய குடியாட்சி நடத்துகின்றனர். அமெரிக்கா அயல்நாடாகிய பிரிட்டனின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டனை எதிர்த்துப் போரிட்டு விடுதலை பெற்று, அவ் விடுதலையின் மீதே குடியாட்சி அமைத்தனர். நாடு, ஆட்சி, உரிமை - இவை குடியாட்சியின் மூன்று படிகளென்பதை இம்மூன்று நாடுகளும் காட்டுகின்றன. தமிழர்க்கு இன்று நாடும் இல்லை, ஆட்சியும் இல்லை, உரிமையும் இல்லை. ஆகவே, முன்பு நாம் கிரேக்கரை ஒத்த நிறைகுடியாட்சி உடையவர்களாயிருந்தாலும் இன்று நமக்குக் குடியாட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை, நாடேயில்லை. பிரிட்டனும் இந்தியாவும் காடுகளாய் இருந்த சமயங்களில் மற்ற நாடுகளுடன் நிலப்படை கடற்படையெடுத்து ஆண்டவர்கள் நாம். அவர்கள் ஆள நாம் உரிமையற்றிருக்கும் நிலை, குரங்குகள் ஆள மனிதர் மரமேறிக் குந்திக் கொண்டிருக்கும் நிலையேயாகும். இழந்த நிலைபெற, பண்டைக் குடியாட்சியின் புதுப்பிறப்பு, புதுமலர்ச்சி உண்டுபண்ண, தமிழர் தமக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேல்நாட்டு நாகரிகம் அளித்த குடியுரிமையை நன்கு பயன்படுத்துதல் வேண்டும். 6. புதிய தமிழகத்தின் மூதாதை பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த தமிழ்ப் பேரறிஞர் - புதிய தமிழ்க் கலையின் பொன்னார்ந்த தலையூற்று - இருபதாம் நூற்றாண்டின் தமிழக இயக்கங்களுக்கெல்லாம் மூல முதல் தந்தை - அன்றே உலகம் போற்றும் மேதையாய் இருந்தும், தமிழகம் நின்று நின்று நினைந்து - உணரத்தக்க அளவில் காலங் கடந்த அறிவு சான்ற பெரியார் - அவர் மரபில் வந்த புதிய தமிழகம், இன்று அவரது பிறப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது அவர் பெரு வாழ்வை உள்ளவாறு உணர்ந்து மதிப்பிட்டு, அவர் நினைவால் தமிழகத் தின் வாழ்வு பெருக்க முன் வந்துள்ளது. பலவகைச் சிறப்புக்குரிய அவரைத் தமிழகம் ‘மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை’ என்ற ஒரு தனிப் பெரும் சிறப்புப் பெயராலேயே இதுகாறும் அறிந்து வந்துள்ளது. “நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் அவரது மனோன் மணீய நாடகத்தின் வணக்கச் செய்யுள், ஒரு நூற்றாண்டாகத் தமிழரின் மறு மலர்ச்சிப் பாடலாக, தமிழர் புதிய தேசியப் பாடலாக நாடெங்கும் உலவி வருகிறது. தமிழகம் முழுநிறை தன்னாட்சி பெற்றுத் தனித் தேசிய இனமாக, தன்னினமாகிய திராவிட இனச் சூழலிடையே தனிநாயகமாய் வீறுடன் அமையும் காலம் நெடுந் தொலைவில் இல்லை. அன்று அப் பாடலே தமிழினத்தின் முதல் விடுதலைப் பண்ணாகவும், முதன்மைத் தேசியப் பண்ணாகவும், இயங்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இத்தேசியப் பண்ணைத் தந்த அவரே எவரையும் விட முனைப்பாகப் புதிய தமிழகத்தின் தந்தை; விழிப்புற்ற தமிழினத்தின் மூல முதல்வர் ஆவார். பேராசிரியர் சுந்தரனார் இற்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி வட திருவாங்கூரிலுள்ள ஆலப் புழை என்னும் நகரில் பிறந்தார். அவர் தந்தை அந்நகரில் அறுவை வணிகராய்ச் சிறந்த பெருமாள் பிள்ளை என்பவர். பள்ளிப் படிப்பின்போதே அவர் தந்தை யிடமிருந்து திருக்குறள் முதலிய தமிழ் நூல்களைப் பயின்றார். தம் 16ஆவது ஆண்டில் ஆலப்புழை ஆங்கிலப்பள்ளியில் முதல்வராகத் தேர்ந்து அது முதல் மாதவாரி உபகாரச் சம்பளம் பெற்றார். அவர் உயர் படிப்புத் திருவனந்தபுரம் அரசினர் கல்லூரியில் தொடர்ந்தது. கலை இளைஞர் (பி.ஏ.) தேர்வில் அவர் திருவனந்தபுரத்தின் முதல்வராகவும், சென்னை மாநிலத்தில் நான்காமவராகவும் தேறி, அரசினர் கல்லூரியிலேயே வரலாறு, ஆங்கிலம் ஆகிய இரண்டும் கற்பிக்கும் உரைவாணர் (லெக்சரர்) ஆனார். தம் 22ஆவது வயதில் சுந்தரனார் சிவகாமி அம்மையார் என்னும் நங்கையை மணந்தார். அவர் புதல்வர் நடராசனார் இன்று அவர் புகழ் மரபு காப்பவராவர். திருமணத்தை அடுத்து அவர் திருநெல்வேலி இந்து உயர்தரப் பள்ளித் தலைவராக உயர்வுபெற்று, அந் நகரில் அயராது உழைத்தார். அவர் முயற்சியால் அப் பள்ளி இரண்டாந்தரக் கல்லூரியாய் உயர்வுற்று, இன்று மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி திருநெல்வேலி, என்னும் பெயருடன் முதல் தரக் கல்லூரியாய் இயங்குகிறது. இரண்டு ஆண்டுகள் சென்றபின் 1879-இல், அவர் மீண்டும் திருவனந்தபுரம் வந்தார். அரசினர் கல்லூரியில் மெய்விளக்கத் துறைப் பேராசிரியராயிருந்த (ஞசடிகநளளடிச டிக ஞாடைடிளடியீhல) திரு ஹார்வி இங்கிலாந்து சென்றதால், அவர் பதவியில் அமர்ந்து தொண்டாற்றினார். இந் நிலையிலேயே 1880-இல் அவர் பல்கலைக் கழக உச்சநிலைப் படியான கலைமன்னர் (எம்.ஏ) பட்டம் பெற்றார். ஐந்தாண்டு இப்பணியாற்றிய பின் அரசர் ஆதரவால் உயர் அரசியல் பணியேற்று சில காலம் இருந்து, மீண்டும் அரசினர் கல்லூரிப் பணிக்கு வந்தார். திரு.ஹார்வியைப் போலவே கல்லூரி முதல்வர் திரு.ராஸூம் தாய் நாடு சென்றதனால், அவர் இருவர் பணியும் ஏற்றார். ஜெர்மன் பல்கலைக் கழகமொன்று (நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்) அவரை வரவழைத்துச் சிறப்பித்து மெய்விளக்கத்துறை முனைவர் (னுடிஉவடிச டிக ஞாடைடிளடியீhல) பட்டம் வழங்கிற்று. இலண்டனில் மன்னுரிமை வரலாற்றுக் கழகம், மன்னுரிமை ஆசியக் கழகம் ஆகியவை அவர்க்குத் தம் உறுப்பினர் பதவிகள் (கு.சு.ழ.ளு; ஆ.சு.ஹ.ளு.) வழங்கின. சென்னை அரசியல் அவர்க்கு நன்மதிப்புப் பட்டம் வழங்கிற்று. சென்னைப் பல்கலைக் கழகம், வரலாறு, மெய்விளக்கம், தமிழ்த் துறைகளில் அவரைத் தேர்வாளராகக் கொண்டது. 1897 செப்டம்பர் 11-இல் தம் 42 ஆவது வயதில் பேராசிரியர் திடுமென உலக வாழ்வு நீத்தார். உலக அரங்கிலும் பிறமொழியிலும் அறிவு நூல் துறைகளிலும் அன்று இந்தியாவிலேயே முதல் வரிசையிடம் வகித்தவர் பேராசிரியர் சுந்தரனார். ஆனால், இன்று தமிழகம் அவரைப் போற்றுவதற்கு அவர் தமிழ்ப்பணியும் தமிழினப் பணியுமே காரணமாகும். நெல்லையில் வாழ்ந்த காலத்தில் சுந்தர முனிவர் என்பவரிடத்திலும், சில காலம் நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளாரின் ஆசிரியரான நாராயண பிள்ளை யிடத்திலும் தமிழ் அறிவு பெற்றார். அத்துடன் மனோன்மணீயம் என்ற ஒப்பற்ற நாடகக் காப்பியத்தையும், நூற்றொகை விளக்கம் என்ற புத்தறிவு நூலையும் திருநெல்வேலியில் 1877-இல் தொடங்கி, திருவனந்தபுரத்தில் 1880-இல் முடித்தார். இரண்டும் அவர் சீரிய தமிழ்ப் புலமையையும் காலங்கடந்த அவர் அறிவாராய்ச்சித் திறனையும், கலைத் திறனையும் காட்டுகின்றன. தவிர திருவாங்கூர் மன்னர் வரலாறு, தமிழ் மொழி வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் ஊக்கம் செலுத்தி, அத்துறை ஆராய்ச்சிகளால் அவர் அரசியலா ராலேயே நன்கு மதிக்கப்பட்டார். தமிழகத்தில் அறிவியல் (விஞ்ஞான) அறிவு பரப்ப அவர் அரசியலார் ஆதரவு பெற்று ஒரு சொற்பொழிவு மன்றம் அமைத்து, அதில் அத்துறை அறிவை வளர்த்தார். நூல் தொகை விளக்கம் இக் கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு வடிவமேயாகும். தமிழ் மொழி, இலக்கியம், தமிழக வரலாற்றாராய்ச்சி களுக்குப் பேராசிரியரின் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, முதல் அடிப்படைக் கல் நாட்டிற்று என்னலாம். அது 1895-இல் புத்தக வடிவமாக வெளியாயிற்று. இக் கட்டுரையும், திருவாங்கூர் மன்னர் கால ஆராய்ச்சி, பத்துப்பாட்டு ஆராய்ச்சி ஆகியவையும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் மாத வெளியீட்டிலே முதலில் வெளிவந்தன. தனித் தமிழின் தந்தை, தமிழ் இயக்கத்தின் வழிகாட்டி என்று புகழப்படத் தக்கவர் மறைமலையடிகள். அவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுப்பிய தமிழார்வத்தின் ஒரு கிளைப் பிழம்பேயாவர். ஒரே ஆசிரியரிடம் இருவரும் படித்த தொடர்பை முன்னிட்டும், அடிகளின் சொல்லாண்மை, அறிவாண்மை கண்டும், பேராசிரியர் அவரைத் திருவனந்த புரத்துக்கு அழைப்பித்து ஆதரவு தந்தார். சிலகாலம் அடிகளைத் திருவாங்கூரிலேயே ஒரு பள்ளியின் தமிழாசிரியராக அமர்வித்தபின், அவரைச் சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழாசிரியராக்க உதவினார். அடிகளும் பேராசிரியருடைய மரபும் கருத்தும் பேணி, அவர் புகழை வளர்க்கும் இருபதாம் நூற்றாண்டுத் தூதராக விளங்கினார். நாட்டை மறவாத நல்லறிஞரை நாடு மறவாமல் பேணிய பெருமை இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடிகளுக்கே உரியது. மனோன்மணீய நாடகம் ஷேக்°பியரைப் பின்பற்றி இயற்றப்பட்ட ஒரு தலைசிறந்த தமிழ் நாடகம். பண்டை நாடகக் காப்பியமான சிலப்பதிகாரம் ஒரு சேர இளவரசனாலேயே பாடப்பட்டது. அடுத்த ஒரு தமிழ் நாடகக் காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கப்பால் அதே சேரநாட்டில் வாழ்ந்த பேராசிரியர் இயற்றிய மனோன்மணீயமேயாகும். தமிழ்க்கு முன்னது எத்துணைப் பழம் பெருமையும் அருமையும் உடையதோ, அதே அளவுக்கு மனோண்மணீயம் புதுப்பெருமையும் அருமையும் உடையது. ஏனெனில், சிலப்பதிகாரம் அழிந்த முத்தமிழ்க்குச் சான்று. மனோன்மணீயம் வரவிருக்கும் புதிய முத்தமிழின் சின்னம். அறிஞரும் கலைஞரும் அருமையாக வழங்கிய திராவிடம் என்னும் சொல்லையும், மொழிப் பெயராக மட்டும் வழங்கிய தமிழ் என்னும் சொல்லையும் தமிழினத் தேசியக் கொடிகளாக வானளாவ உயர்த்திய பெருமை மனோன் மணீயம் ஆசிரியர்க்கே உரியது. நூலினகத்தும் ஆசிரியர் தமிழகப்பற்று, நாஞ்சில் நாட்டு வருணனை, தாம்பிரவருணிப் புகழ் விருதுரைகள் ஆகியவை இலக்கியச் சிறப்புடனும் நாடகச் சிறப்புடனும் வீறு பெற்றுள்ளன. தவிர ஆசிரியர் தம் ஆசிரியரான சுந்தர முனிவர், ஆசிரியத் தந்தை, மனைத்தக்க மாண்புடைய தம் மனைவி, அவர் ஆர்வமிக்க தம் புதல்வர் ஆகியோரைத் தம் நாடகப் பேழை யிலேயே அழகுச் சித்திரங்களாக்கிப் பெருமைப் படுத்தியுள்ளார். தம் கல்லூரி ஆசிரியரான ஹார்வி பெயரைத் தம் இல்லத்துக்குச் (ஹார்விபுரம்) சூட்டியதுடன் நில்லாது மனோன்மணீயத்தையும் அவர்க்கே படையல் செய்துள்ளார். மனைவி பெயராலான சிவகாமி சரிதம் என்ற உட்காவியம் இனிய மனோன்மணீய நாடகக் கனியின் ஒரு இனிமை செறிந்த காவியச் சுனை ஆகும். பேராசிரியர் வளர்ந்த காலத் தமிழகம் ஒரு பிற்போக்குத் தமிழகம். யாழ்ப்பாணத்துப் பெருந்தமிழர் ஆறுமுக நாவலர், சென்னைப் பெருந்தமிழர் வடிவேலுசெட்டியார், திரு.வி. கலியாணசுந்தரனார் போன்றவர்கள்கூட வள்ளலாரின் புதுத்தமிழ் அருட்பாவையும் அவர் சமயச் சீர்திருத்த ஆர்வத்தையும் எதிர்த்து ஆங்கிலேயர் வழக்கு மன்றமேறிய காலம் அது. அப்பழைய அறிஞர் மரபு திருத்த ஒரு மறைமலை யடிகளை உருவாக்கிய பெருமையும், புதிய தமிழகத்துக்கு வழிசெய்த பெருமையும் பேராசிரியரையே சாரும். வாழ்க அவர் கனவு கண்டு இன்று நனவாகி வரும் தமிழகம்! வளர்க அவர் வித்திட்ட வண்ணக் காவிய இலக்கிய நறுஞ்சோலை! 7. ஆசியாவின் வீர ஜோதி தென் ஆசியா முழுவதும் புகழொளி பரப்பிய தென்னாட்டுப் பேரரசுகள் பல. உலகின் பேரரசுகளுக்குள்ளே இத் தென்னாட்டுப் பேரரசுகளுக்குத் தனிப் பெருமையும், தனிச் சிறப்பும் உண்டு. ஆயினும், பல வகைகளிலும் தென்னாட்டுப் பேரரசுகளிடையேகூடத் தலைசிறந்த, பீடும் புகழும் உடையது சோழப் பேரரசு தான் என்று கூறலாம். சோழ அரசரின் ஒரு மண்டலாதிபதி இலங்கையையும் அதன் மாகடல் தீவுகளையும் ஆண்டான். ஒரு மண்டலாதிபதி விந்தியத்துக்கு வடக்கே இமயம் வரை ஆண்டான். மற்றொரு மண்டலாதிபதி சுமத்ராவிலுள்ள பாலம்பாங் தலைநகரிலிருந்து கொண்டு கடாரம், அதாவது தென்கிழக்காசியா முழுவதையும் ஆண்டான். கடலுலகும் நிலவுலகும் ஆண்ட இந்தச் சோழப் பரம்பரைக்கு ஈடாக உலகில் எந்தப் பேரரசுப் பரம்பரையையும் கூற முடியாது. வீரத்திலும், ஆட்சித் திறமையிலும், அரசியல் மதிநுட்பத்திலும் கலையார்வத்திலும் சோழர் மரபில் தொடர்ச்சியாக வந்த பெரும் புகழரசர்களைப் போன்ற ஒரு கூட்டணியை நாம் எந்த நாட்டு வரலாற்றிலும் காண்பதற்கில்லை. அரபிக் கதைகளிலும், இசுலாமிய வரலாற்றிலும், இந்து°தானத்தின் பேரரசுகள் என்று குறிக்கப்படுகிறவர்கள் இந்தச் சோழ அரசர்களேயாவர். அந்நாளில் அவர்களுடன் சரிசமமாக நின்று ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெருமை உலகிலேயே ஒரு பேரரசுக்குத்தான் இருந்தது. அதுவே சீனப் பேரரசு. உலகின் செல்வம் முழுவதையும் புகழ் முழுவதையும் அந் நாளில் இந்த இரண்டு பேரரசுகளுமே பங்கிட்டுக்கொண்டன. பெருஞ் சோழரிடையே, தலைசிறந்தவர் யார் என்று ஒரு கேள்வி கேட்டால், வரலாற்றாசிரியர்கள் எளிதில் விடை கூற முடியாது. ஒருவர் இராசராசனே சிறந்தவன் என்று கூறலாம். இன்னொருவர் இராசேந்திரனே என்பார். வேறு சிலர் குலோத்துங்கனே என்று கூற முனைவர். ஏனென்றால், ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையிலும் தனிச் சிறப்புடைய வராகவே இருந்தனர். சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் இராசராசன். அவன் வகுத்த ஆட்சி முறையே இன்றளவும் தென்னாட்டின் அடிப்படை ஆட்சிமுறையாய் இருக்கிறது. பேரரசின் புகழை உச்ச எல்லைக்குக் கொண்டுசென்றவன் இராசேந்திரன். அந்தக் கோட்டை சரியாமல் காத்து, அதனைச் சூழ்ந்து வாரியடித்த சூறாவளிப் புயல்களை அடக்கி, ஒளி கொண்டவன் குலோத்துங்கன். குலோத்துங்கன் வாழ்வில் இருபகுதி உண்டு; ஒன்று சோழப் பேரரசு அவன் கைக்குள் வருமுன் உள்ள இளமைப் பகுதி. மற்றது அவன் பேரரசனான பின் உள்ள பகுதி. இவற்றுள் வரலாற்றில் இடம் பெற்ற பகுதி, இராசராசனுடனும் இராசேந்திரனுடனும் அவனுக்குச் சரிசமப் புகழ் தந்த பகுதி, பிற்பகுதியேயாகும். முற்பகுதி வரலாற்றால் முழுதும் விளக்கப்படவில்லை. இது இயல்பே. ஏனெனில், அது வரலாறு கடந்த பெருமை உடையது. அது வரலாறாக எழுதப்பட்டால், அது வரலாறாயிராது; தென்னாட்டின் தலைசிறந்த வீரகாவிய மாய்விடும். குலோத்துங்கன் தந்தை வழியில் கீழைச்சாளுக்கியர் குடியில் வந்தவன். தாய்வழியில் சோழ மரபுக்கு உரியவன். அவன் தாய் தஞ்சைப் பெருஞ்சோழனான இராசராசனின் மகளான குந்தவை. தந்தையோ வீரபுலிகேசியின் வழியில்வந்த விசயாதித்தியன். கீழைச் சாளுக்கியர் அந்நாளில் வேங்கிநாட்டை ஆண்டு வந்தனர். வேங்கிநாடு என்பது கோதாவரி, கிருஷ்ணா தீரமாகிய இன்றைய ஆந்திரமாநிலப்பகுதி. குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சிங்காசனம் ஏறுமுன், அவனுக்குப் போட்டியாக அவன் சிற்றப்பன் மகனான இரண்டாம் விசயாதித்தியன் எழுந்தான். இருவர் பூசல்களுக்கிடையே மேலைச் சாளுக்கியப் பேரரசனான விக்கிரமாதித்தியன் நாட்டையே கைக்கொண்டான். அப்போது சோழப் பேரரசை ஆண்டவர்கள் இராசேந்திரன் புதல்வர்கள். விக்கிரமாதித்தியனுடன் போரிட்டு ஒருவன் மாண்டான். இரண்டாவது புதல்வனாகிய இரண்டாம் இராசேந்திரன் விக்கிரமாதித்தியனை முறியடித்து, கீழைச் சாளுக்கிய அரசைக் கைக்கொண்டான். ஆனால், அவன் அதில் குலோத்துங்கனுக்கு முடிசூட்டவில்லை. விசயாதித்தனுக்கு முடிசூட்டினான். ஆயினும் வீரனான குலோத்துங்கனை அவன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே, தன் மகள் இராசசுந்தரியை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அத்துடன் கீழைச் சாளுக்கியர்க்கு வடதிசையில் இருந்த கீழ்ச்சுங்க அரசரை வென்று, அந்த அரசை அவனுக்கு அளித்தான். குலோத்துங்கன் இப்போதும் வயதில் இளைஞனாகவே இருந்தான். கீழ்ச்சுங்க நாட்டிலும் அவனுக்கு எதிர்ப்பு இருந்தது. கீழ்ச்சுங்கரும் சோழருடன் மண உறவு கொண்டவர்களாகவே இருந்தனர். உறவினருடனே சின்னஞ்சிறு சிற்றரசுகளுக்காகப் போரிடுவதை அவன் விரும்பவில்லை. அவன் அவா மிகவும் பெரிதாயிருந்தது. ஒன்று சோழப் பேரரசராதல் வேண்டும்; அல்லது தன் வாள் வலிமையால் சோழப் பேரரசு போன்ற ஒரு பேரரசைத் தானாக நிறுவுதல் வேண்டும். சோழப் பேரரசனாவது அப்போது எளிதாகத் தோன்றவில்லை. ஆகவே, பிந்திய திட்டத்தை மனத்துட் கொண்டான். தன் இளம் புதல்வி இராச சுந்தரியை அவன் கீழ்ச்சுங்க இளவரசனுக்கே மணஞ்செய்து, அவனுக்கே அரசாட்சியைக் கொடுத்தான். அதன்பின் ஒரு சிறு படையுடன் அவன் புதுப்புலங்கள் வெல்லப் புறப்பட்டான். கீழ்ச்சுங்கர் ஆண்ட பகுதிக்கு வட கலிங்க நாடு என்று பெயர். அஃது அசோகன் காலத்தில் ஒரு பெரிய பேரரசாயிருந்தது. விக்கிரமாதித்தியன் படையெடுப்பினால், எல்லைப்புறத்திலிருந்த சக்கரக் கோட்டத்தைக் கீழ்ச்சுங்கர் இழந்துவிட்டனர். தன் சிறுபடைகொண்டு குலோத்துங்கன் அதன் மீது படையெடுத்தான். பண்டைக்காலத்திலிருந்தே வெல்லமுடியாத கோட்டைகளுள் ஒன்று என்று பெயரை இது பெற்றிருந்தது. அது காடு சூழ்ந்த, ஒப்பற்ற யானைப் படையும் கோட்டைப் பொறிகளும் உடையதாயிருந்தது. ஒரு சில நாள்களுக்குள் குலோத்துங்கன் அதைத் தூள் தூளாக்கினான். அந்த இடத்தில் தன் புதிய ஆட்சியை நிறுவினான். சக்கரக் கோட்டம் ‘ப°தர்’ நாட்டின் எல்லையிலிருந்தது. ப°தர் நாட்டினர் தம் எல்லைக் கோட்டையை இடிக்க ஒருப்படவில்லை. மலைநாட்டு வீரர்களாகிய அவர்கள் அடிக்கடி அவன் கோட்டையின் வெளியிடங்களில் வந்து சூறையாடித் தொல்லை கொடுத்தனர். ஆகவே, குலோத்துங்கன் மீண்டும் போர்க்கோலம் பூண்டான். மகாநதி கடந்து சென்று அந்த நாட்டில் வலதுசாரி இடதுசாரியாகச் சுற்றித் தன் வீரத்தின் புகழை நிலைநாட்டினான். அவன் சிறிய ஆட்சி விரிவுற்றது. மகாநதிமுதல் கங்கைவரை அவன் காலடியின் கீழ்க் கிடந்தது. சோழப் பேரரசுக்கு இப்போதும் குலோத்துங்கன் அரசு ஒப்பானதல்ல. ஆனால், அவன் வீரம் கண்டு அவன் உறவினரான கீழைச்சாளுக்கிய, சோழ அரசரும், விக்கிரமாதித்தியனும் புழுக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி அவனை வீழ்த்த எண்ணினர். இக் கருத்துடன் சோழப் பேரர சனான வீர இராசேந்திரன் தன் மகளை விக்கரமாதித்தியனுக்கு மணம் செய்து கொடுத்தான். சோழப் பேரரசுக்கு இப்போது வடக்கே புதுவலுத் தோன்றிவிட்டது. ஆனால், இப்போதும் கிழக்கே கடாரத்தி லுள்ள ஒரு பாதியில் சோழர் கைவரிசை மிகவும் வலுக்குறைந்த தாகவே இருந்தது. அங்கே எப்போதும் சோழர் மண்டலாதி பதிகளாக இருந்த இளவரசர் குடியில் போட்டி பூசல்கள் மிகுதியாயிருந்தன. குலோத்துங்கன் இவற்றைப் பயன்படுத்தி, சோழப் பேரரசிலேயே கீழ்ப்பாதியைக் கைக்கொள்ள முனைந்தான். ப°தர் மக்கள் குரங்குப் போர்முறையில் கைதேர்ந்தவர்கள், கீழ்ச்சுங்கர் கடலில் கலஞ்செலுத்துவதில் வல்லவர்கள். இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள வீரர்களைக் குலோத்துங்கன் திரட்டினான். ஒரு சிறிய கப்பற்படையும், அதனுடன் கடல்கடந்து செல்லும் ஒரு நிலப்படையும் உருவாயின. ஆவலுடன் அவன் கடாரத்தின் மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு ஆண்டு களுக்குள் கடாரம் வீழ்ந்தது, அவன் கடாரத்தின் பேரரசனானான். சோழப் பேரரசுக்கெதிராகத் தன் வலுவைப் பெருக்க அவன், இன்னொரு பேரரசின் உதவியை நாடினான். அவன் சீனப் பேரரசருடன் வாணிக ஒப்பந்தம் செய்துகொண்டு கடாரத்திலே வேரூன்றினான். அவன் ஆட்சியில் கடாரத்தின் செல்வமும், புகழும் தமிழகத்தின் செல்வத்துடனும் புகழுடனும் போட்டியிட்டன. இச்சமயத்தில் வீர இராசேந்திரன் இறந்தான். அவனுடைய சிறுவன் பெயரளவில் அரசனானான். ஆனால், உண்மையில் அவன் பெயரை வைத்துக் கொண்டு மேலைச் சாளுக்கிய அரசனான விக்கிரமாதித்தியன் சோழ அரசியலில் தலையிட்டான். சோழநாட்டு மக்கள் இதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். சிறுவனான அரசனைச் சோழர்குடிப் பெரு மக்களே கொன்றொழித்துவிட்டு, குலோத்துங்கனையே சோழப் பேரரசனாகும்படி அழைப்பு விடுத்தனர். தன் வாள்வலியினாலே ஒரு பேரரசனாக விளங்கிய குலோத்துங்கனது ஆட்சியில் இப்போது ஒற்றுமை நிலவிற்று. சீனப் பேரரசனுடன் அவன் மீண்டும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அத்துடன் அவனை மகிழ்விக்கும் எண்ணத்துடன் நாகப்பட்டினத்தில் இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட புத்தர் கோவிலுக்கு மானியங்கள் அளித்தான். விக்கிரமாதித்தியனுடனும் அவன் சமரசம் செய்துகொண்டு அமைதியை நிலைநாட்டினான். குலோத்துங்க சோழன் நிலைநாட்டிய அமைதி, போர்க்கு இளைத்த கோழையின் அமைதியன்று. இளமையிலே ஒரு நெப்போலியனாயிருந்து முழுவயதில் அரசியல் மதியறிஞனான ஓர் அரசன் விரும்புவது அமைதியையே யாகும். சோழப் பேரரசுக்கு உலகில் ஏற்பட்ட புதிய படித்தரம் இதைக் காட்டுகிறது. கங்கைக் கரையை ஆண்ட கன்னோசி அரசன் அவனுக்குத் திறை செலுத்தினான். சயாம் நாட்டை ஆண்ட காம்போச அரசன் தன் மகனுக்குக் குலோத் துங்கன் என்று பெயரிட்டு அவனுக்குத் திறை அனுப்பினான். தமிழக வாணிகம் குலோத்துங்கன் காலத்தில் உலகெங்கும் பரந்து தழைத்தது. உள்நாட்டில் வாணிகத்தை வளர்ப்பதற் காகவே அவன் ஆங்காங்கே சிற்றரசர் ஆட்சியிலிருந்த சுங்கங்களை எல்லாம் ஒழித்தான். இதனால் அவன் `சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வழங்கப்பட்டான். மாநில முழுவதும் நிலங்களையும் பயிர் வகைகளையும் அளவையிட அவன் ஒரு தனி அரசாங்கத் துறையை உண்டு பண்ணினான். 1086-இல் நடைபெற்ற இந்த அளவையே இன்றளவும் நில அளவையின் அடிப்படையாக இருக்கிறது. இச்செயலால் அவன் ‘நீணில மளந்த சோழன்’ என்றும், ‘உலகளந்த பெருமாள்’ என்றும் புகழப்பட்டான். ஆறாண்டு வளர்ச்சியின் பின் சரிந்து போக இருந்த சோழப் பேரரசைக் குலோத்துங்கன் மீண்டும் நூறாண்டு நிலை பெற வைத்தான். 8. வள்ளுவன் கண்ட உலகம் திருக்குறள் தமிழர்க்கு ஓர் அணிகலன். அஃது தமிழ் நாட்டின் புகழ்க் கொடி. தமிழ்ப் பண்பின் உரைகல்லும் அதுவே. ஆனால், அந்தத் திருக்குறளில் நாடு, பண்பு என்ற பொதுச் சொற்களைத்தான் காணலாம். தமிழ் என்ற சொல்லைக் காணமுடியாது. தமிழ் நாடு; தமிழ்ப் பண்பு என்ற தொடர்களும் இடம் பெறவில்லை. சொல்லையே வழங்காமல், சொற்பொருளை எப்படி நாட்டினார்? அவர் தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான். அதன் பயனாகவே, அவர் புகழ் இன்று மொழி கடந்துள்ளது. அவர் கருத்துகள் நாடு நடந்து மதிக்கப்படு கின்றன. அவர் வகுத்த வாழ்க்கைத் திட்டம் காலம் கடந்து இன்றும் சிறப்புடைய தாய் இருக்கிறது, வருங்காலத்திலும் அவர் குறிக்கோள் காலங் கடந்து நிற்பது உறுதி. இயற்கை கடந்து நிற்கக்கூடும் என்றுகூடக் கூறலாம். பொதுமை அருமையானது. மிக மிக அருமையானது. ஆனால், அஃது எப்போதும் விரும்பத்தக்கதாய் இராது. அது பல மரம்கண்ட தச்சர் கதையாய் அமைந்துவிடக்கூடும். ஒரு தச்சன் பல மரம் கண்டானாம். ஆனால், ஒன்றுகூட வெட்ட நேரமில்லையாம்! அதுபோலப் பலர் கருத்தறிந்தவர் தமக்கென ஒரு கருத்தற்றவராய் இருந்துவிடலாம். பல மொழி கற்றவர் தம் மொழி அறியாதவராயிருக்கலாம். அகலம் நன்று. ஆனால், ஆழமில்லாப் பண்பு அதன் நலனைக் கெடுத்துவிடும். வள்ளுவர் பொதுமை, பலவற்றை மேலீடாக அரித்தெடுத்த பொதுமை யன்று. தமிழையும் பிற மொழிகளையும் ஒப்பிட்டு அவர் பொதுமை காணவில்லை. தமிழை ஆழ்ந்து கற்றே அப்பொதுமை கண்டார். தமிழகத்துடன் பிறநாடுகளும் சுற்றிப் பார்த்து அறிந்து அவர் உலகப் பொதுமை காணவில்லை. தமிழகத்திலிருந்து கொண்டுதான் அப் பொதுமையைப் படைத்தார். தமிழ்ப் பண்புடன் வேறு எந்தப் பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர் பொதுமை நிறுவவில்லை. தமிழ்ப் பண்பையே அப் பொதுமைப் பண்பாக்கிக் காட்டினார். வள்ளுவர்க்குத் தமிழ்ப் பண்பே மனிதப் பண்பாயிருந்தது. ஏனென்றால், அவர் நாளில் அதனுடன் போட்டியிடும் பண்பு இல்லை. தமிழர் கண்ட பண்பு தமிழகத்தில் அன்று உச்சநிலையில் இருந்தது, உலகமெங்கும் அதுவே சிறுகச் சிறுகப் பரந்து பண்புடைய உலகை வளர்த்தது. வள்ளுவர் காலத்தில், அதற்கு நெடுநாள் முற்பட்டே, தமிழகம் உருவாயிருந்தது. ஆனால், தமிழகத்திலும் அன்று வேற்றினமே இல்லை. தமிழகம் கடந்துகூட வேற்றினம் இல்லை. தமிழினம்தான் இருந்தது. ஆனால், தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக் காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ் நாடு என்றார்கள். ‘தமிழ் கூறும் நல் உலகு’ என்று தொல்காப்பியப் பாயிரம் கூறுவது இதையே. தமிழ்ப் பண்பு சிறிது குறைந்த பகுதிகளுடன் தமிழகத்தைச் சேர்த்து அவர்கள் தமிழுலகம் என்று அழைத்தனர். தமிழ்ப் பண்பு உலகெங்கும் அன்று படிப்படியாகப் பரவிக்கொண்டிருந்தது. இதனால்தான் திருவள்ளுவர் கண்ட தமிழ்ப் பண்பு உலகப் பண்பாய் அன்று நிலவிற்று. இன்றைய உலகப் பண்பு பேரளவில் திருவள்ளுவர் கண்ட தமிழ்ப் பண்பின் வளர்ச்சிதான். அது காலம் இடம் கடந்து நிலவுவதன் மறை இரகசியம் இதுவே. திருவள்ளுவர் கருத்துகளில் ஆழத்தைத் தூய்மையை - திட்டத்தை நாம் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. தமிழில்கூட வேறு எந்த நூலிலும் அதை முழுமையாகக் காண்பதற்கில்லை. ஆனால், அதன் பரப்பை - பரப்பின் ஒரு பகுதியை - தமிழிலக்கியம் முழுவதும் காணலாம். சமற்கிருதத்தில் பாரதத்திலும், புராணங்களிலும் சுமிருதிகளிலும்கூட அங்கொன்றும் இங்கொன்றும் காணலாம். ஆனால், இவை வள்ளுவர் கருத்துகளின் சிதறல்கள் மட்டும்தான். அவரிடமிருந்து நேரடியாகவோ சுற்று வழியாகவோ அவை மேற்கொள்ளப் பட்டவை. அவை வள்ளுவர் கண்ட மூலத் தமிழ்ப் பண்பின் கூறுகள் மட்டுமே; அவை கால இடங் கடந்த உலகப் பண்புக் கூறுகளாகமாட்டா. திருவள்ளுவர் காலத்தில் நாகரிக உலகின் மய்ய உயிர்நிலை யாக இருந்தது தமிழகம் ஒன்றுதான். மற்றக் கோளங்களுக்கு வெங்கதிரோன் ஒளி கொடுப்பதுபோல, உலகின் மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் தமிழகம் பண்பை வழங்கிக்கொண்டிருந்தது. சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. வேதமொழி என்று கூறப்படும் ஆரிய மொழியில் அன்று எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கியமொழி ஆன காலம் திரு வள்ளுவர்க்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் - சங்க இலக்கியத் துக்குக்கூடப் பின்னரேயாகும். கிரேக்க உரோம இலக்கியங்கள் யூத, எகிப்திய, சால்டிய நாகரிகங்களின் பிள்ளைகள் மட்டுமே. தமிழரிடமிருந்து அவை நேராகப் பெற்ற பண்புகள் சில. தமிழினத்தின் எல்லையிலிருந்து பழைமை இந்தியா, பாரசீகம், எகிப்து, சால்டியா ஆகிய நாகரிகங்கள் வழியாகப் பெற்ற பண்புகள் சில. இந்தத் தொல்பழ நாக ரிகங்களில் மிகவும் பிற்பட்ட நாகரிகங்கள் கிரேக்க நாகரிகமும், இந்திய நாகரிக முமே. இரண்டும் மொழி வகையில், பண்பு வகையில் இன்று மங்கி மறுகிவிட்டன. ஆனால், ஒன்று ஐரோப்பிய நாகரிகமாக ஒளி வீசிற்று. மற்றது இன்றைய புதிய வடஇந்தியத் தாய்மொழிகள் மூலம் புதிய வாழ்வு தேடுகின்றது. வள்ளுவர் திருக்குறளைவிடப் பழைமையான நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழில்கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது. அஃது இவ்வளவு பழைமையான நூலாயிருந்தாலும், இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது. ஏனென்றால், அன்றைய தமிழகமே இன்றைய உலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலமும் அதுவே. பேராசிரியர் சுந்தரனார் தமிழைப் பற்றிக் கூறிய உண்மை வள்ளுவர் குறளுக்கும் பொருந்தும். “பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்... ஆரியம் போல உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” என்று தமிழ்பற்றி அவர் பாடினார். அதனைச் சற்று மாற்றி, “பலநாடும் பலபண்பும் பலபடவே தான் படைத்து நிலவுலகில் அவை தழைத்து நில்லாமல் அழிந்திடினும் தனித்தமிழ் முன் இருந்தபடி தனிஎன்றாய் இருப்பது போல் தனித் தமிழன் வள்ளுவனும் அவன் கண்ட பொதுமறையும் மனிதஇனத் தலையூற்றாய் மன்னுலகின் இன்னுயிராய் இனிய பொது அறம் வளர்க்கும் எழில் நலங்கண்டு ஏத்துதுமே” என்று நாம் வாழ்த்தலாம். வள்ளுவர் கண்ட உலகத்தைத் தமிழன் தவற விட்டு விட்டான். அதை அவன் திரும்பவும் பெறும் நாள் விரைவில் வர இருக்கிறது. அது தமிழனுக்கு மட்டும் புதுநாள் அல்ல. உலகுக்கே புதுநாளாய் அமையும். ஏனென்றால், அதுவே வருங்காலத் தமிழகம். அதே சமயம் வருங்கால உலகத்தின் புதிய வழிகாட்டி யாகவும் அதுவே இருக்கப் போகிறது! 9. ஓருலகில் தமிழன் நாகரிகமற்ற மனிதன் தனி வாழ்வு வாழ்ந்தான். குறுகிய தன்னலம், சூழ்ச்சி அவன் பண்பாய் இருந்தது. அவன் வாழ்வு குடுவை வாழ்வு. இந்நிலையிலிருந்து குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு அவனை மீட்டது. குடி, ஊர், நாடு, நகர், பட்டினம், உலகம் என அவன் வாழ்வு விரிவடைந்தது. அவன் அறிவும் விரிவடைந்தது. பண்பும் உயர்வடைந்தது. அவன் பரவை வாழ்வு வாழத் தொடங்கினான். ஒருவகை நோக்கி வளரத் தலைப்பட்டான். வளர்ந்து வருகிறான். குடிவாழ்வில் தற்பண்பு உண்டு. பரவை வாழ்வில் ஒப்புரவு உண்டு. முன்னது பண்பாடு. பின்னது நாகரிகம். இரண்டும் சேர்ந்ததே பண்பாடுடைய நாகரிகம் அல்லது உயிர் நாகரிகம். ஒருவகை நோக்கி மனிதனை வளர்ப்பது அதுவே. நாகரிகமல்லாத தற்பண்பு வாழ்வு குடுவை வாழ்வாகும். அஃது உயிரற்ற நாகரிகம். நாகரிகம் வளர்க்காது. ஒருவகை நோக்கி வளராது. குடும்ப வாழ்வில் தமிழன் வளர்த்த இல்லறம் போன்ற சிறந்த அறம் வேறெங்கும் கிடையாது. அவன் வகுத்த மக்களாட்சிக்கு அவன் கொடுத்த ‘குடியாட்சி’ என்ற பெயர் இதற்குச் சான்று. இதற்குரிய மேலைநாட்டுச் சொல்லும் (னுநஅடிஉசயஉல) சமற்கிருதச் சொல்லும் (ஜனநாயகம்) இதே வேர்ப்பொருள் சுட்டாதது குறிப்பிடத்தக்கது. அவன் ஊர், நாடு வகுத்தான். குடியாட்சியின் பகுதிகளுக்கு அவன் கொடுத்த பெயர்கள் இதை விளக்கும். அவை ஊராண்மை, நாட்டாண்மை என்பன. நாடு கடந்து அவன் நகர் கண்டான். அது நாட்டுக்கு ஒற்றுமை தந்தது. நாட்டு நாகரிகம் வளர்ந்தது. நாகரிகம் என்ற பெயர் இதனைக் குறிக்கும். இத்துடன் அவன் அமையவில்லை. வெளிநாட்டுப் பரவைத் தொடர்பு தரும் துறைமுக நகர வாழ்வு அவன் உலக நோக்கை வளர்த்தது. துறைமுக நகரத்துக்குப் பட்டினம் என்ற பெயர் இன்றளவும் தமிழ் ஒன்றில்தான் உண்டு. மயிலைப் பட்டினத்தில் வாழ்ந்த ஒரு திருவள்ளுவர்தான் சாவா முழுமுதல் உலக நோக்கைத் தமிழனுக்கும் தமிழன் மூலம் உலகுக்கும் பண்டு அளித்தார். அணிமைக் காலத்தில்கூடத் தற்பற்று முற்றத்துறந்தும் தாய்ப்பற்றும் உலகப்பற்றும் துறவாத பட்டினத்தடிகள் நாகப்பட்டினத்திலேயே வாழ்ந்து உலக அறம் கண்டார். தமிழ் வாழ்வு தமிழகம் கடந்து தென்னாட்டிலும், தென்னாடு கடந்து இந்தியாவிலும், இந்தியா கடந்து உலகிலும் வரலாறு காணாக் காலத்திலேயே பரந்ததுண்டு. இதற்குச் சான்றுகள் பல காட்டலாம். பட்டினம் என்றசொல், கடற் கரைத் துறைமுக நகரத்தின் பெயர்களாகத் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருப்பதே இதற்கு ஒரு விளக்கம் ஆகும். கீழ்க் கடற்கரையில் குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், நாகப்பட்டினம், சென்னைப்பட்டினம், சதுரங்கபட்டினம் ஆகியவை தமிழகத்தில் உள்ளன. மசூலிப்பட்டினம், விசாகப் பட்டினம் ஆந்திரத்தில் உள்ளன. கங்கைக்கரையில் பாட்னா உண்மையில் பட்டினமே. மேல் கடற்கரையில் சோமநாதபுரத்தின் பழம் பெயர் பட்டினம் என்றே காணப்படுகிறது. பண்டைத் தமிழர் உலகளாவிய கடல் வாணிகக் களமாக நிலவிய பல துறைமுகப் பட்டினங்களில் காவிரிப்பூம்பட்டினம் ஒன்று. இன்றைய பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி பண்டு பொதுவு அல்லது எயிற்பட்டினம் என்று வழங்கிற்று. இன்றைய மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் மல்லைப்பட்டினம் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் விளங்கிற்று. வஞ்சி, முசிறி என்ற மேற்கரைப் பட்டினங்களிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் எயிற்பட்டினத்திலும் கிரேக்க ரோமர் குடியிருப்புகள் இருந்து தமிழர் வாழ்வின் பொங்கலுடன் பொங்கின. நாகையில் சோழப் பேரரசர் ஆட்சிக்காலம்வரை சீனர் குடியிருப்புகள் இருந்தன. கடாரம் அல்லது மலாய் நாட்டுப் பேரரசாண்ட பேரரசரும் சீனப் பேரரசரும் அதில் புத்த கோவில்கள் எழுப்பி அவற்றுக்கு மானியம் விட்டிருந்தனர். அக் கோவிலிலுள்ள புத்தர் பொற்சிலை உலகப் புகழ்பெற்றது. தமிழ்ப் பட்டயங்களிலும் இலக்கியங் களிலும் குறிக்கப்பட்டுள்ளது. இன்று இலண்டன் மாநகர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் இலெய்டன் பட்டயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. தமிழர் விழாவில் தழைக்கும் பண்புகள் பொங்கல் தமிழ்விழா. தமிழர்விழா. போலிப் பழைமைக்கு ஆட்பட்ட தமிழன் குடுவை வாழ்வை விட்டுப் பரவை வாழ்வின் உலக நோக்கைக் கொள்ளத் தூண்டுதலளித்தல் வேண்டும் விழா அது, அதே சமயம் அது போலிப் புதுமையில் மிதந்தாடும் மிதவல் வாழ்க்கையைத் தமிழன் தமிழகத்தின் வேர்ப்பண் புணர்ந்து, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்ப் பண்பு அடிப்படை யாக ஓருலகில் இடம் பெறத் தூண்டுதல் வேண்டும் விழாவும் அதுவே. உலகின் மிகப் பழைமையான இயற்கை விழாக்களுள் பொங்கல்விழா ஒன்று. அது உழவர் விழா. உழவின் எல்லாப் படிவளர்ச்சிகளையும் அது காட்டுகிறது. நெற்பயிர் தமிழர் நாகரிகத்துக்கும் சீன நாகரிகத்துக்கும் அடிப்படை. அரிசிப் பொங்கல் இதைக் குறிக்கிறது. கரும்பு சீனத்துக்கும் தமிழகத்துக்கும் தனியுரிமையுடைய வேளாண்மைச் செல்வம். கரும்பிலிருந்து சர்க்கரை ஆக்கிய முதலினம் தமிழினமே. தமிழன் கண்ட சர்க்கரை, இன்று உலகெங்கும் தமிழ்ப் பெயருடனேயே வழங்கி எல்லா இனத்தவர் நாவுக்கும் இனிப்பூட்டுகிறது. சர்க்கரைப் பொங்கல் இதைச் சுட்டுவது. மேய்ச்சல்நில வாழ்வு அல்லது முல்லைநில வாழ்வில் மனிதன் எடுத்துப் பழக்கிய முதல் விலங்குகள் ஆடும் மாடுமே. இதுபோலப் புல்வெளிப்பாலை, மணற்பாலை, முட்புதர்ப்பாலை ஆகியவற்றில் மனிதன் எடுத்துப் பழக்கிய விலங்குகளே, குதிரை, ஒட்டகை முதலியன. மலையாளக்கரை, பர்மா, இலங்கை, மலாயா போன்ற குறிஞ்சியும் முல்லையும் கலந்த நாடுகளில் மனிதன் பழக்கிய விலங்கே யானை. இவற்றுள் ஆட்டையும் குதிரையையும் பழக்கியவர் வட மேற்காசியப் புல்வெளியில் பண்டு வாழ்ந்த ஆரியர்களே. குதிரையும் ஒட்டகையும் பழக்கியவர் அராபியர். மாடு அல்லது ஆவினத்தைப் பழக்கியவரும் யானையைப் பழக்கியவரும் இந்தியாவில் வாழ்ந்த தமிழினத்தவர்களே. எகிப்தியர் போன்ற பண்டை நாகரிக மக்கள் வழங்கிய பசு இன்றைய வெளியுலகப் பசுவன்று. தமிழினப் பசுவே என்பதை இந்தியப் பசுக்களுக்கு மட்டுமே உரிய சிறப்புப் பண்பான கூன் அல்லது திமில் எடுத்துக் காட்டுகிறது, பால் பொங்கல் தமிழன் ஆவின் செல்வத்தை வளர்த்து முன்னேறிய முன்னேற்றப் படியைக் காட்டுகிறது. பழங்களுக்குத் தமிழில் கனி என்றும் பழம் என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. பழத்தைத் தெலுங்கர் ‘பண்டு’ என்பர். கனி, இயற்கை மனிதனுக்குத் தருவது. பழம், மனிதன் பழக்கி ஆக்குவது. முன்னதற்குக் கொட்டை இருக்கும். சுவை சிறியதாயிருக்கும். எட்டாக் கொம்பில் வளரும். பலவற்றில் முள் மிகுதி இருக்கும். மனிதன் அவற்றைப் பழக்கிப் பண்படுத்தினான். கொட்டை நீக்கினான். அல்லது சிறுகவைத்தான். சுவை பெருக்கினான். கொம்பின் உயரம் குறைத்தான். முள் நீக்கினான் அல்லது குறைத்தான். இவ்வகையில் மேலை யுலகம் படைத்த பழங்கள் ஆரஞ்சும் ஆப்பிளும். தமிழன் படைத்த பழங்கள் மா, கதலி, பலா. இவற்றையே அவன் முப்பழம் என்றான். மூன்றுக்கும் இயற்கை தந்த இயற்கைக் குணங்களும் உண்டு. தமிழன் கொடுத்த தீந்தமிழ்ப் பண்பும் உண்டு. கதலியில் அவன் ஓட்டை நீக்கினான். காட்டுக் கதலி அல்லது கல்வாழை இதைச் சுட்டிக் காட்டுகிறது. பலாவில் முள் நீக்கினான். சுவையூட்டினான். மலைப்பலா வென்றும் இமைப்பலாவென்றும் ஈரப்பலா வென்றும் வழங்கும் இயற்கைப் பலாக்கள் இதைக் குறித்துக் காட்டுகின்றன. மாவில் கொட்டை சிறுத்துச் சுவை பெருக்கப் பெற்ற மாவே தேமா. ஏனையது புளிமா, காட்டிலந்தையில் மாவின் சுவையேற்றி இடைக்காலத்தில் தமிழன் ஆக்கிய கனியே முந்திரி. இஃது இன்றும் தென் தமிழகத்தில் ‘கொல்லாமா’ என்று குறிக்கப் படுகிறது. மலை நாட்டில் அதற்கு வழங்கிய ‘காசுக்கொட்டை’ என்ற அதன் பெயரே அதன் இன்றைய ஆங்கிலப் பெயர் (ஊயளாநறரேவ) ஆயிற்று. தமிழகம் உட்பட இன்று உலகம் வழங்கும் மா, பலா, கதலி வேறு. தமிழன் வளர்த்த பண்புடை முப்பழம் வேறு. தான் வளர்த்துப் பழக்கிப் பேணியவற்றையே தமிழன் தேமா, தேம்பலா, தேங்கதலி என அழைத்தான். இந்த அடை தமிழிலக்கியத்தில் வேறெப்பழத்துக்கும் கிடையாது. தமிழன் தொழிலில் முன்னேறியபோது உற்றுக் கவனித்துப் பயன்படுத்திய பொருள்களில் ஒன்று தேன். கனிச்சாற்றுடன் போட்டியிடும் அதன் இனிமையை அவன் கண்டு வியந்தான். கனிச்சாறு கெடும். தேன் கெடாது. தேனிலூறிய கனியும் உப்பில் ஊறிய காய் போல் கெடுவதில்லை. புளிக்காடியிலும் இப்பண்பு உண்டு. தமிழன் இவற்றின் பண்பைக் கனிகளுக்கு ஊட்டி, பழங்களுக்கு ஊட்டித் தேம்பழங்கள் உண்டு பண்ணினான். வெட்டிவைத்தாலும், ஈ எறும்பு மொய்த்தாலும் கெடாத பழங்கள் அவை. இவற்றையே தமிழன் தேமா, தேங்கதலி, தேம்பலா என்றான். இன்றும் இவை தமிழகத்தில் உண்டு. ஆனால், தமிழ்ப் பண்பின் உயர்வேபோலத் தமிழனும் முற்றிலும் அறியாது, உலகமும் ஒரு சிறிதும் காணாமல், அது தமிழகத்தில் மட்டும் காட்டுப் பயிராக மேற்குமலைத் தொடர்க்கு அருகில், குமரி முனையின் அருகில் குமுறிக் கிடக்கின்றன. அவற்றின் பண்பறிந்து மீட்டும் உலகுக்களிக்கப் புத்தார்வத் தமிழர் இனித்தான் முன் வருதல் வேண்டும்! தமிழர் இன்று தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னுல கெங்கும் பரந்துள்ளனர். அவர்கள் இன்று ஆள்பவராக இல்லை. ஆனால், இன்னும் ஆக்குபவராக, பயிர் வளம், தொழில் வளம், வாணிக வளம் வளர்ப்பவராகவே உள்ளனர். தென்னுலகிலிருந்து கீழுலகிலிருந்து மீட்டும் ‘சமனொளி’ பரப்பும் கடப்பாடு டையவர் அவர்களே. உலக நடுவிடமான இலங்கையின் உச்சிமலைக்குத் தமிழர் ‘சமனொளி’ என்று இதனாலேயே பெயர் கொடுத்தனர் என்னலாம். 10. தமிழ்ப் பண்பில் குடியாட்சி அரசியல், சமுதாயம், பொருளியல், சமயம், குடும்ப வாழ்வு, கலை, இலக்கியம், அறிவியல் - இவை இன்றைய உலக வாழ்விலும் பல இனங்களின் வாழ்விலும் வரலாற்றில் தனித்தனித் துறை களாகவே காணப்படுகின்றன. இதுவே இயல்பு என்றும் பலர் கருதுவர். ஆனால், இவை மனித உலகின் பல கிளையின் வாழ்வுகளில் பெரிதும் தொடர்பற்றவையாகக் காணப்பட்டாலும் மனிதப் பேரின வளர்ச்சியில் ஒரே பண்பின் கிளை மலர்ச்சிகளே யாகும். நாகரிக மனித சமுதாயத் தின் வேர் முதலான தமிழினப் பண்பாட்டு வரலாறு இதனைத் தெளிவாகக் காட்ட வல்லது. தமிழரிடையே - சிறப்பாகத் தொல் பழங்கால நாகரிகத் தமிழரிடையே மேற் குறிப்பிட்ட அரசியல், சமுதாயம், பொரு ளியல், சமயம், குடும்ப வாழ்வு, கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய எல்லாத் துறைகளும் ஒரே அடிப்படைப் பண்பின் பல திசை மலர்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவ்வுண்மை உலக வரலாற்றில் பல புதிர்களுக்கு விளக்கமும் தரவல்லது. வருங்கால உலகும் வருங்காலத் தமிழகமும் வள்ளுவர் திருக்குறளில் காணவேண்டும் முழுநிறை வாழ்க்கை விளக்கம் இதுவே. உலக வரலாற்றின் ஒரு புதிர் உலகில் முடியாட்சி முந்தியதா, குடியாட்சி முந்தியதா? இத்தகைய ஒரு வினா எழுப்பப்பட்டால், முடியாட்சி முந்தியது என்றுதான் மிக்கபலர் விடை கூறுவார்கள். வரலாறு இந்த விடைக்கு ஆதரவும் தாராது, எதிர்ப்பும் தாராது. ஏனெனில், பண்டை நாகரிகங்களின் வரலாறு எந்த விடையையும் தடுமாற்றம் அடைவிக்கவே செய்யும். உரோமர் வரலாற்றிலே முடியாட்சிக் காலம் அதன் பேரரசுக் காலமே (கி.மு.1 முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டுவரை) யாகும். குடியாட்சி முறைகளை அழித்துத் தான் மாவீரன் ஜூலிய° சீசர் முடியாட்சியை நிறுவினான். உரோம் நாகரிகம் உச்சநிலையடைந்து உலக நாகரிகத்துக்கு வழிகாட்டியாயிருந்த காலம் (கி.மு.5ஆம் நூற்றாண்டில்) ஒரு கொடுங்கோலரசனை வீழ்த்தியபின்பே குடியாட்சி அமைந்ததாக உரோமரின் இலக்கியப் பழங்கதை மரபுகள் குறிக்கின்றன. இதுபோலவே கிரேக்கரின் வரலாற்றிலும் (கி.மு.4ஆம் நூற்றாண்டில்) மாவீரன் அலெக்சாண்டரும் அவன் தந்தை பிலிப்பும் பல கிரேக்கக் குடியரசுகளை அழித்தொழித்தபின்தான் பேரரசு பரப்பினர். கிரேக்க நாகரிகம் உச்சநிலையடைந்து மனித நாகரிகத்துக்கு வழி காட்டிய காலம் இதற்கு முற்பட்ட குடியாட்சிக் காலமே (கி.மு.7 முதல் 4ஆம் நூற்றாண்டுவரை) யாகும். ஆனால், இக்காலத் தொடக்கத்துக்குமுன் (கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கு முன்) அரசர்களே இருந்ததாகக் கிரேக்க இலக்கியப் பழங்கதை மரபுகள் குறிக்கின்றன. கீழை உலகில் குடியரசுகள் கீழை உலக வரலாற்றிலும் இலக்கியத்திலும் எங்குமே நாம் முடியரசைப் பற்றித்தான் கேள்விப்படுகிறோம். குடியரசு என்ற பெயர் இலக்கியங்களில் மருந்துக்குக்கூடக் கிடையாது. ஆயினும், தொடக்கக் காலப் புத்த இலக்கிய மரபு மூலமும் வரலாற்று மூலமும் வட இந்தியாவில் (கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை) முடியரசுகளுக்கிடையே ஆங்காங்கே குடியரசுகள் நிலவி வந்ததாக அறிகிறோம். தவிர, புத்தர்பிரான் பிறந்த சாக்கியர் குடியும் ஆந்திரப் பேரரசும், மாளவ அரசும் முடியரசுகளல்ல; பல குடியரசுகளின் இணைப்பான கூட்டுக் குடியரசுகளே. தமிழகத்துக்கு வெளியே உலக வரலாற்றில் குடியரசுகளைப் பற்றி நமக்குக் கிட்டும் செய்திகளைக் கீழ் வருமாறு வகுக்கலாம். ஒவ்வோர் இனத்திலும் குடியரசுக் காலமே நாகரிகத்தில் மிக உயர்ந்த காலம். அதற்கு முன்னும் பின்னும் அரசர் ஆட்சிகள் நிலவின. உலக வரலாற்றிலும் நாகரிக வரலாற்றிலும் குடியரசுகளில் பல வகைகள், பல வளர்ச்சிப் படிகள் உண்டு. சிறப்பாக, குடியரசுக் காலத்துக்கு முற்பட்ட அரசர் நிலையும், குடியரசுகளை அழித்து மேம்பட்ட முடியரசர் நிலையும் ஒரு தன்மை யுடையன அல்ல. அரசருள் மிகத் தொடக்கக் கால அரசர், தம் குடும்பம், தம்முடைய குருதித் தொடர்புடைய குலம் (கூசiநெ) ஆகியவற்றின் மீது இயற்கை ஆட்சி செலுத்தியவர்களே. இவர்களை வரலாற்று அறிஞர் குலபதிகள் என்பர். இந்தியாவில் ஆரியர் வந்த சமயம் இந்தக் குலபதிகளேயன்றி வேறு ஒருவகை அரசரும் ஏற்பட்டனர். இவர்களே குடியரசுகளைத் தம் கைக்கீழ் அடக்கி ஆண்டவர்கள். அந் நாளைய குடியரசுகள் பெரிதும் வாணிக நகரங்களா யிருந்ததனால், இவ் வரசர் வணிகர் தலைவர் (விசாம்பதி) என வழங்கப்பட்டனர். நகராண்மைக் கழக மரபின் வரலாறு இன்றைய உலகின் நகரவைகள், மாநகரவைகள் உண்மையில் உரிமை வரையறுக்கப்பட்ட சிறு குடியரசுகளே. 12-14ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலும் ஹாலந்திலும் வெனிசு முதலிய இத்தாலிய நகரங்களிலும் கீழை நாடுகளிலுமே இத்தகைய வாணிகக் குடியரசுகள் இருந்தன என்று அறிகிறோம். 12ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை °விட்ஸர்லாந்து மேலையுலகின் மிகப் பழைமையான மிகப் புகழ்பெற்ற கூட்டுக் குடியாட்சியாக நிலவி வருவதும் காண்கிறோம். இந்தியாவில் தற்கால மேலையுலகக் குடியரசுகளை மட்டுமன்றிப் பண்டைய உரோம கிரேக்கக் குடியரசுகளையும் விடப் பழைமையான காலத்திலிருந்தே வணிகக் குடியரசுகளும் கூட்டுக் குடியரசுகளும் நிலவின என்று கண்டோம். உண்மையில் ஆரியர் வரும் சமயத்திலும் அதற்கு முன்பும் திராவிடர் குடியாட்சி நகரங்களிலும் கூட்டுக் குடியரசு நாடுகளிலுமே ஆட்சி செலுத்தினர் என்று அறிகிறோம். மெக°தனி° குறிக்கும் மௌரியர் கால நகராட்சி முறை மொகஞ்சதாரோ காலத்தி லிருந்து ஆரியர் படையெடுப்புக் கடந்தும் நீடித்து வந்த முறையேயாகும். தமிழகத்தில் ஐம்பெருங் குழுக்களையும் எண்பேராய முறைகளையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஆந்திரரின் மரபினரான பண்டைக் குறும்பர்களின் கல்வெட்டுகளால் இம் முறை அவர்களிடையே நிலவியதாக அறிகிறோம். இன்று சோடா நாகபுரியிலுள்ள கோண்டர்கள் முதலிய பண்டைத் திராவிடர் எனப்படுவோரிடையே இம் முறைகள் ஆரிய நாகரிகத்தால் கெடாதும் மாறாதும் நின்று நிலவுவதாக ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர். பஞ்சாயத்து என்ற தற்கால சமற்கிருதத் தொடர் உண்மையில் ஐம்பெருங் குழுவிலுள்ள ஐந்து (பஞ்ச) என்ற சொல்லையும் எண்பேராயம் என்பதிலுள்ள ஆயம் (ஆயத்) என்ற சொல்லையும் இணைத்த புதுத் தொடரேயாகும். தமிழ்ச் சங்க கால நிலை மேலீடாகப் பார்ப்பவர்களுக்கு, மேலையுலக வரலாற்றிலும் வட இந்தியாவிலும் காணும் அளவுகூடக் குடியரசுகள் பற்றிய குறிப்புத் தமிழிலக்கியத்தில் தென்படவில்லை என்றே தோன்றும். அது மட்டுமன்று. சங்க இலக்கியங்களிலும் அவற்றிலும் எவ்வளவோ பழைமை வாய்ந்த தொல்காப்பியத்திலும்கூட முடியுடைத் தமிழரசர் மூவருமே படைப்புக் கால முதல் தொன்று தொட்ட பழைமையுடையவர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பண்டைத் தமிழர் குடியரசுகளையே அறிந்திருக்க முடியாது என்று யாராவது கூறினால், அதில் வியப்படைவதற் கில்லை. உண்மையில் பொது மக்களேயன்றிப் புலவரும் அறிஞரும் வரலாற்று ஆராய்ச்சி யறிஞரும்கூட அவ்வாறு கூறி வந்துள்ளனர்; எழுதி வந்துள்ளனர்; அவ்வாறே கருதியும் வந்துள்ளனர்-வருகின்றனர். பரந்து வலியுறவு பெற்றுவிட்ட இந்த ஆராயா நம்பிக்கையை வருங்கால ஆராய்ச்சியாளரின் ஒன்றுபட்ட உழைப்பின்றி வேறெதுவுமே அகற்ற முடியாது. சங்க காலத்திலே முடியரசர் மூவர் மட்டுமே இருந்தனர். ஆனால், மூவரசர்களுக்கு உட்பட்டும் உட்படாமலும் எண்ணற்ற குடியரசர்கள் இருந்தனர். தமிழக எல்லைக்குள் இவர்கள் வேளிர் என்றும் அதற்கப்பால் வடுக நாடு என்று அன்று அழைக்கப்பட்ட தெலுங்கு கன்னடப் பரப்புகளில் சளுக்கர் என்றும் குறும்பர் என்றும் அழைக்கப்பட்டனர். மலையாள கன்னடக் கரைக் கடம்பரும்கூட இதே வகைக் குடியரசர்கள் என்று கூறத்தக்கவர்களே! இக் குடியரசர் உண்மையில் கிரீசிலும் உரோமிலும் குடியரசுக் காலத்துக்கு முன் இருந்த அரசர் நிலையுடையவர்களே. ஆனால், கிரேக்க உரோம நாடுகளில் அவர்கள் தோன்றிய வகை, அவர்களுக்கும் பிற்கால முடியரசர் களுக்கும் உள்ள வேறுபாடு, முடியரசர்களின் ‘முடி’ தோன்றிய வகை, அது குறித்த பண்புகள் ஆகியவற்றை எளிதில் காண முடியாது. தமிழகத்திலேயே அவற்றை நன்கு காணலாம். இவ்வகையில் உலகின் அரசியல் வரலாற்றுக்கே தமிழக வரலாறு விளக்கம் தருவது ஆகும். முடியரசரும் குடியரசரும் முடியரசர்க்கும் குடியரசர்க்கும் உள்ள வேற்றுமைகள் யாவை? முடியரசர்க்கு முடியும் செங்கோலும் உண்டு. குடியரசருக்கு இரண்டும் கிடையாது. முடியரசர்க்கு நாட்டுப் படையின்றித் தமக்கே உரிய ஊதியம் பெறும் நிலவரப் படை உண்டு. அரசர் பிற நாடுகளைத் தாக்கிப் படையெடுக்க உதவுவது இந்த நிலவரப் படைதான். ஆனால், குடியரசர்க்குத் தம் நாட்டுக் குடிபடையன்றி வேறு படை கிடையாது. முடியரசர் தம் வெற்றியடிப்படையாக அரசுரிமை பெற்றனர். ஆகவே அவ்வுரிமை அவர்கள் குடிமரபாகச் சென்றது. குடியரசர் மக்களால் விரும்பி மேற்கொள்ளப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் மட்டுமே. அவர்களும் குடி மரபில் அரசராக முடியுமானாலும், அது குடி மரபுரிமையாகாது. தேர்வுரிமையே யாகும். குடியரசர் ஆட்சியில் ஐம்பெருங் குழு, எண்பேராயம், பேரவை ஆகிய உறுப்புகளின் உரிமை மீதே மன்னன் ஆட்சி செய்தான். பேரவையே மற்ற இரண்டு குழுக்களின் மீதும், அவை அரசன் மீதும் ஆட்சி செய்தன. முடியரசர் தம் ஆட்சி வலுவைக் கோரி அம் மூன்று ஆட்சிக் கருவிகளையும் இழக்காது பேணினரானாலும் மன்னர்க்கு இரண்டு குழுக்களும் துணையாயின. பேரவையோ மன்னர் கொலுவிருக்கையில் பொதுவாக அவர் விருப்பத்தையே பெரிதும் நிறைவேற்றும் பொம்மைக் கொலுவாயிற்று. குடியரசர் முடியரசர் தோன்றிய வகை குடியரசர்களுள் பலர் நாகரிகத் தொடக்கக் காலக் குலபதிகளாகவே இருந்திருத்தல் கூடும். ஆனால், நாகரிகம் வளர வளர அவர்கள் குடிகள் உரிமை வளர்ந்து ஐம்பெருங் குழு, எண்பேராயம், பேரவை வலுவடைந்து, இறுதியில் அவர்கள் குடியரசுகளின் முதல்வராயினர். குறும்பர், திரையர், ஆந்திரர் நிலை இதுவே. அவருட்சிலர், வணிகக் குடியரசுகளின் முதல்வராகவும் இருந்திருக்க லாம். எப்படியும் சங்க காலத்துக்கு நெடுநாள் முன்னரே குடியரசர் ஆட்சியிலும் சரி, முடியரசர் ஆட்சியிலும் சரி, குடியரசுகளிலும் சரி, குடும்பத்துக்கு ஒரு ஆட்சிப் பொறுப்பு மொழி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சங்க காலம்வரை தமிழகத்தில் மூன்று அரசரன்றி வேறு எவர்க்கும் ‘முடி’ உரிமை கிடையாதென்ற கொள்கை மிகவும் வலியுறவு பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அதே சமயம் பல குடியரசர் தாமும் முடியரசராக வேண்டுமென்று முயன்றதையும் முடியரசர் அதனை எதிர்த்துப் பெரும்பாலும் வெற்றியடைந் ததையும் காண்கிறோம். பாரி முடி மேற்கொள்ள முனைந்த தாலேயே மூவரசரால் அழித்தொழிக்கப்பட்டான். மலையமான் திருமுடிக்காரி முடியை மேற்கொண்ட பின்பே முடியரசரால் தாக்குண்டு அழிந்தான். காஞ்சியில் தொண்டைமான் இளந்திரையன் சிலகாலம் சோழ அரசையே கைக்கொண்டு பேரரசனாக நிலவியும் விரைவில் கரிகாலனால் ஒடுக்கப்பட்டு விட்டான். சங்க காலத்திறுதியில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் அவன் மீண்டும் முடியரசனாகி பாண்டியப் பேரரசருடன் போட்டியிடவல்ல பேரரசனானதாக அறிகிறோம். குடியரசர், முடியரசர் ஆகிய இருதிறத்தாருள், குடியரசு நிலையே முற்பட்டது என்பதை இச் செய்திகள் காட்டும். அப்படியானால் தொல்காப்பிய கால முதலே மூவரசர் பழைமை மரபு எல்லாம் நீடித்ததென்று நாம் ஆராயப் புகுந்தால், முடியரசர் தோற்றம் காண்டல் முடியும். மூவரசரும் தொடக்கத்தில் குடியரசுகளின் தலைவர்களாகவே குடியரசர்க்கு மேற்பட்ட வலுவுடையராயினர் என்பதில் ஐயமில்லை. அந்தக் கூட்டுக் குடியரசுகளிடையே பெண் கொள்ளல் கொடுத்தல் மூலம் ஏற்பட்ட ஒற்றுமையினாலும். எல்லாக் குடியரசுகளின் சின்னங் களையும் இணைத்ததனாலும், எல்லாக் குடிப் பெயரும் மேற்கொண்டதனாலும்; தமிழ்ச் சங்கம் காவிரிக்குக் கரை கட்டல் முதலிய தேசியத் திட்டங்களை மேற்கொண்டு முடியரசு களுடனும் சூழ் குடிகளுடனும், நேரடித் தொடர்பு கொண்ட தனாலும் அவர்கள் மிகப் பழைமைதொட்டே குடியரசர்க்கு மேற்பட்ட பேரரசச் சின்னமான ‘முடி’யும் செங்கோலும் பெற்றனர் ஆதல் வேண்டும். பாண்டியன் குடிப் பெயர்களாகிய செழியன், மாறன், வழுதி, மீனவன், வேம்பன், பஞ்சவன், கைதவன் என்பனவற்றுள் சிலவேனும் பாண்டியர் குடிக்குள் இணைந்துவிட்ட பழைய குடியரசுகளின் பெயர்களாய் இருத்தல் கூடும். சங்க காலத்திலேயே இக் காரணத்தால் பழையன் மாறன் பாண்டியனுக் கு அடுத்த பெருமையுடையவனாயிருந்தும், படைத் தலைவனாய்த் தன் பழங்குடிப் பெருமைக்குப் புதுப் புகழ் தந்ததும் கவனத்துக்கு உரியது. பழைய குடியரசன் ஒருவன் பெயராகிய ஆரி என்பவனாலேயே ஆரியர் முதலிய ஊர்ப் பெயர்களும் ஆரிய நாடு என்ற பாண்டியர் உள்நாட்டுப் பகுதிப் பெயரும் ஏற்பட்டன. இதுபோலவே சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன், புனனாடன் என்ற சோழக் குடிப்பெயருள்ளும், மலையன், பொறையன், குட்டுவன், வானவன், இமயவன், வில்லவன், கோதை, குடவன், உதியன் என்ற சேரர் குடிப் பெயருள்ளும் இணையரசின் உறுப்புகளையே காண்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சங்க காலத்திலேயே அக் குடிகளில் சில பல தனியாகவும் நிலவின. முடியரசர் பேரரசராக வளர்வதற்குப் புதிய வேளிர் குடி மணஉறவு எவ்வாறு பயன்பட்டன என்பதையும் இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. உண்மையில் திருமண மூலமே 12ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வேங்கி நாட்டுடனும் கீழைச் சாளுக்கியருடனும் எளிதில் இணைந்தது. ஐம்பெருங்குழு எண்பேராயம் ஐம்பெருங்குழு என்பது தற்கால அமைச்சரவை போன்றது. எண்பேராயம் என்பது மன்னர் தனிமன்றம் போன்றது. முன்னதில் அமைச்சர், குருக்கள், படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐந்து குழுவின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். பேரவையில் பிரதிநிதிகள் மட்டுமன்றி உறுப்பினர் முழுவதுமே இருந்தனர். பேரவையின் முடிவையே ஐம்பெருங்குழு தன் முடிவாய் அரசனுக் குரைத்தது. எண்பேராயம் கர்ணத்தார் அல்லது கணக்கர், கரும விதிகர் அல்லது நிறைவேற்றல் துறையாளர், கனகச் சுற்றம் அல்லது பொருள் காப்பாளர், கடை காப்பாளர் அல்லது அரண் காவலர், நகர மூப்பர், படைத்தலைவர், யானை மறவர், குதிரை மறவர் என்பவர்கள். அரசனில்லாத நேரம் ஆட்சிப் பொறுப்பு அரசியற் பொறுப்புச் சுற்றம் என்ற குழுவின் கையில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அதில் ஆசான் அல்லது குரு, பெருங்கணி அல்லது கணக்குத் தலைவர், அறக்களத் தந்தணர் அல்லது அறநடுவர், காவிதி அல்லது வரிபிரிப்பவர், மந்திரக் கணக்கர் அல்லது திருவாணை எழுதுவோர் இருந்தனர். 18-19ஆம் நூற்றாண்டுவரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய வாணிகக் கழக ஆட்சிக் காலம்வரை மக்கள் பேரவையின் உறுப்பினர்களான ‘நாயர்’களின் குடியுரிமைக்குக் கட்டுப்பட்டே ஆண்டதாகப் பிரிட்டிஷ் ஆட்சி மேற்பார்வையாளர் கடிதங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் திறத்தில் மேற்சொன்ன பண்புகளே தமிழர் சமயஞ் சாராத சங்ககால இலக்கியமாகவும், சமயஞ் சாராத பொங்கல், ஓணம் முதலிய விழாக்களாகவும், தமிழ்ச் சங்கம் முதலிய கலை நிறுவனங்களாகவும் குடும்பத்தினுள்ளே காதல்-வீர மரபுகளாகவும் இயங்கி வந்துள்ளன. 11. தமிழ் வளர்ச்சியும் தமிழரின் இயக்கமும் தமிழ், தமிழர், தமிழினம் என்ற குரல்கள் தமிழ் நாட்டிலெழுந்து முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவற்றுள் முதல் குரலும் முதன்மையான குரலும் தமிழ்க் குரலே. ஆனால், இக் குரல் முதல் முதலாக எழுந்தது ‘தமிழ் நாடு’ என்று குறிப்பிடும் ‘குண கடல், குமரி, குடகம், வேங்கடம்’ எனும் நான்கொல்லையுட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியாகிய தமிழ் நாட்டிலன்று! துணைக் கண்டத்திலிருந்து கடற்காலினால் பிரிக்கப்பட்ட பழந்தமிழ்த் தாயகத்தின் பகுதியான இலங்கை அல்லது ஈழநாட்டு யாழ்ப்பாணத் தமிழரிடையேதான் அக் குரல் எழுந்தது. அது மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கத் தமிழகம், மொரிசியசு, பிஜி, ஜமெய்க்கா, கயானா முதலிய தமிழுலகப் பகுதியெங்கும் பரவிப் பெரும் பான்மைத் தமிழர் வாழும் தமிழ் நாட்டிலும் புத்துணர்ச்சி யூட்டிற்று. கடல் கடந்த தமிழகம் தந்த இத் தமிழியக்கத்துக்குத் தமிழ்நாடே தலைமை வகித்து வழிகாட்ட வேண்டுமென்று தமிழுலகம் எதிர்பார்ப்பது இயல்பே யன்றோ? இவ்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது என்பதில் தடையில்லை. தமிழ்க் குரலால் எழுப்பப் பெற்ற தமிழியக்கம் தமிழ்நாட்டில் இன்று தமிழரியக்கமாய், தமிழின (திராவிட) இயக்கமாய் வளர்ந்து வருகிறது. தமிழர் குரல் தமிழியக்கமாக, அதாவது மொழியியக்கமாக நிலைபெற்றால் போதும் என்று விரும்புபவர் உண்டு. அது தமிழரியக்கமாக, அதாவது அரசியலியக்கமாக அமைந்து விட்டால் போதும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆயினும் அது படிப்படியாக தேசிய இயக்கமாகவும், இன நாகரிக இயக்க மாகவும், இனக்கலை இயக்கமாகவும், வளர்ந்துகொண்டு வருகிறது. இவ் வளர்ச்சியைக் காரணகாரியத் தொடர்புடன் மரபு வழியில் நின்று உணராதவர், தமிழ் நாட்டையோ தமிழ்ப் பண்பையோ உணர முடியாது. இவற்றை உணராமல் தமிழ் வளர்ச்சிக்கு வழி காண்பதும் அரிது. தமிழியக்கத்துக்கு யாழ்ப்பாணம் தலைமை வகிக்கும் வரை அது மொழி யியக்கமாயிருக்க முடிந்தது. ஆனால், இலங்கையிலே உள்ள தமிழ்த் தொழிலாளர் உரிமை, பிற கடல்கடந்த தமிழகத் தொழிலாளர் உரிமை ஆகியவற்றுக்கான தொண்டாற்றி, அவர்களை உயர்வுபடுத்துதல் வேண்டுமானால் தமிழியக்கம் தமிழரியக்கமாய்த் தீருதல் வேண்டும். தமிழ்நாடு அரசியல் உரிமை பெற்றாதல் வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டில் தமிழியக்கம் தமிழரியக்கமாக வளரவேண்டிய தாயிற்று. ஆனால், நெடுங்காலம் அது தமிழரியக்கமாகவும் நின்றுவிட முடியவில்லை. தமிழகம் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதி. அதனுடன் அரசியலில் அஃது இணைக்கப்பட்டு உள்ளது. துணைக்கண்ட முழுவதையும் ஆட்டிப் படைத்துவரும் அயற்பண்பு வடநாட்டை முற்றிலும் அடிமைப்படுத்தித் தென்னாடெங்கணும் பரவி, அதன் பண்பாட்டை மாற்றியமைத்துத் தமிழகத்தை யும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. தமிழர் வாழ்வும் பண்பும் பொருளாதார நிலையும் மட்டுமன்றி, அவர்கள் மொழியும் இதனால் பெரிதும் பாதிக்கப்படவே செய்கிறது. எடுத்துக்காட்டாக, இலங்கையிலும் தமிழ் மொழியோடு சிங்களம் என்ற மற்றொரு மொழி இருக்கிறது. தமிழர் அங்கும் பெரும்பான்மையினர் அல்லர். ஆயினும், தமிழ் அங்கு சிங்களத்துடன் சரிசமமாக நாட்டு மொழியாய், கல்வி மொழியாய் இயங்குகிறது. தமிழர் மீது சிங்களத்தை அங்கே யாரும் திணிக்க முற்படவில்லை. சமய, நாகரிகத் துறைகளில் சிங்களவர் பாளி மொழியை மேற்கொண்டவர். ஆயினும், தமிழர்மீது அவர்கள் பாளி மொழியைச் சுமத்துதல் வேண்டு மென்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ முயலவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் மொழியாக இந்தியும், நாகரிக சமய மொழியாக வடமொழியும் நேரடியாகத் திணிக்கவும் படுகின்றன. மறைமுகமாகப் பிரச்சார பீரங்கிகளின் உதவியால் பரப்பவும்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் தமிழியக்கம் வெறும் மொழியியக்கமாகவோ வெறும் அரசியல் இயக்க மாகவோ இருந்தால் தமிழ்கூடப் பாதுகாக்கப்பட முடியாது, தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் பாதுகாக்கப் பட முடியாதென்று கூறுதல் வேண்டுவதில்லை. இதுமட்டுமன்று, தமிழ்நாட்டில் பிறமொழி கற்றும் தமிழ்ப் புலமையைப் பழியாது அதனை மேற்கொண்டு தமிழ்க்கு உழைக்க முன்வந்த தமிழ்ப் பெரியார்கள் தமிழர் என்ற காரணத்தினாலும், தமிழ்க்கு முதலிடம் தந்து உழைப்பவர் என்ற காரணத்தினாலும்; ‘கூலித் தமிழரின்’ இனவளர்ச்சியில் கருத்துக் கொண்டு, அவர்கள் தாய்மொழியாகிய தமிழை உயர்த்துவதன் மூலம் அவர்களை உயர்த்த முயன்றவர்கள் என்ற காரணத்தினாலும், அப்பெரியார்களைத் தமிழ்ச் செல்வர் ஒதுக்கித் தள்ளிவந்தனர்-வருகின்றனர். இதேபோன்று இன்று உழைக்க முன் வருபவர்களும் அரசியலாரால் ஒதுக்கப்படுவது போலவே, மடாதிபதிகளாலும் செல்வர்களாலும் வேம்பென ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர். ஆனால், யாழ்ப்பாணத் தமிழ்ச் செல்வரும் பிற கடல் கடந்த நாட்டுத் தமிழ்ச் செல்வரும் அவர்களில் பலர்க்கு ஆதரவு தந்து, தாயகமாகிய தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பின் மரபும் ஊற்றும் வற்றாமல் பாதுகாத்துவந்தனர். தமிழ்நாட்டுச் செல்வரின் செயலுக்கும் அயல்நாட்டுத் தமிழ்ச்செல்வரின் செயலுக்கும் உள்ள இவ்வேறு பாட்டின் காரணம் என்ன? இது செல்வரின் பண்பு அல்லது முதலாளித் துவத்தின் பண்பு என்று முற்றிலுங் கூறிவிட முடியாது என்பது தெளிவு. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடைபெற்று வந்துள்ள ஆரிய திராவிடப் பண்பாட்டுப் போராட்டத்தில் இன்று தமிழ்நாடு முன்னணிப் போர்க்களமாய் அமைந்துள்ளது. வட நாட்டை விழுங்கிவிட்ட பின்பே தென்னாட்டுக்கும், தமிழகஞ் சார்ந்த தமிழின நாடுகளை ஓரளவு தன்னிழற் கீழ்க்கொண்டு வந்த பின்பே தமிழ் நாட்டுக்கும் அப் போர் பரவியிருப்பதுபோல, தமிழ்நாடு கடந்த பின்பே அது யாழ்ப்பாணத்தையும் கடல்கடந்த பிற தமிழகங்களையும் முழுவதும் தாக்க முற்பட முடியும். இந்நிலை வரும்வரை யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் செல்வரும் கடல் கடந்த தமிழ்ச் செல்வரும் ஓரளவுக்கேனும் செல்வராகவும் அதே சமயம் தமிழராகவும் இயங்க முடியும். ஆனால், தமிழ்நாட்டுச் செல்வர் இன்று அங்ஙனம் இயங்கமுடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றத் தமிழின நாட்டுச் செல்வர், ஆட்சியாளர், அரசர்கள் ஆகியவர்களைப்போல, அவர்கள் தமிழ் மரபழித்து அயற்பண்பாகிய ஆரியப் பண்பைச் சார்ந்தன்றிச் செல்வர் ஆகவோ, செல்வராயிருக்கவோ, செல்வம் பெருக்கவோ வழியேற்படாது. ஆகவே, தமிழ்நாட்டுச் செல்வரும் மடாதி பதிகளும் சமயத் தலைவர்களும் இன்று தமிழ்ப் பண்பையோ தமிழ் மரபையோ ஆதரிக்க அஞ்சி அயற்பண்புகளுக்கு முழுவதும் அடிமைப்பட்டிருப்பதும் மேன்மேலும் அடிமைப் பட்டு வருவதும் அவர்கள் குற்றமன்று. தமிழ்நாட்டின் குற்றமுமன்று. தமிழ்நாடு துணைக்கண்டத்தின் ஆட்சியுடனும் பண்பாட்டுடனும் இணைந்திருக்கும் வரை தமிழகத்தில் இந்த நிலை மாறாது. தமிழியக்கம், தமிழரியக்கம் ஆகிய இரண்டும் தமிழின இயக்கமாய், எதிர்கால மொழி வாழ்வை முன்னிட்டுப் பிரச்சார இயக்க அளவில் கடல்கடந்து தமிழுலகை நோக்கியும்; எதிர்கால நாகரிக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வை முன்னிட்டு நிலங்கடந்து தமிழின நாடுகளை நோக்கியும் முன்னேறி வருகிறது. தமிழ்மொழிப் பரப்புக்கும் தமிழினப் பரப்புக்கும் இடையேயுள்ள பொது நிலமாய்; முன்பு தமிழராயிருந்து ஆரியப் பண்பாட்டின் தாக்குதலால் தமிழரிடமிருந்து விலகியும், அதே சமயம் ஆரியராய்விடவும் முடியாமல், தமிழரைத் தாக்கப் பயன் படும் ஆரிய அடிமைக் கண்காணி நாடுகளாய் மட்டும் இயங்கும் தமிழின நாடுகளுக்கும் கடல்கடந்த முழுத் தமிழ் வாழ்வுடைய நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையுடையதாய்; தன்னகத்தே ஆரிய அடிவருடிகளான ஆண்மையற்ற தமிழரையும், அவர்களுக்கு அஞ்சி அடங்கிக் கிடக்கும் பொது மக்களாகிய அடிமைத் தமிழரையும், ஆரியத்தையும் ஆரிய அடிவருடிகளான ஆண்மைத் தமிழரையும் எதிர்த்துப் பொதுமக்களை உயர்த்தப் பாடுபடும் தனித்தமிழர் அல்லது திராவிட இயக்கத் தமிழரையும் தன்னகங்கொண்ட தமிழ்நாடு தமிழியக்கத்துக்கும் தமிழின இயக்கத்துக்கும் உரிய பாலமாய், தமிழரியக்கத்தின் நிலைக்களமாய் அமைந்தது இயல்பே. ஆரிய மொழியாதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும், கல்வியாதிக்கமும் நீங்க அதன் அரசியல் ஆதிக்கமும் நீங்குதல் வேண்டும். அப்போதுதான் தமிழ் உண்மையிலேயே முதலிடம் வகிக்கும். அப்போதுதான் தமிழராட்சியும் தமிழ் நாட் டாட்சியும் கல்வியாட்சியும் தமிழராட்சியாக, அதாவது தமிழ்ப் புலவர் ஆட்சியாகத் திகழும். தமிழரிடையே அன்று பிறமொழி படிப்பவர், உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர். ஆகவே, தமிழ்ப் புலவர் உலக அறிவுடையவராகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவர். பிறமொழி பயிலமாட்டாத தொழிலாளர், ஏழைகள் அன்று தமிழிலேயே எளிதாகவும் குறைந்த காலத்திலும் விஞ்ஞானம் கற்பர். தனித் தமிழராகிய இத் தொழிலாளத் தமிழர் விஞ்ஞானத்தில் தம் தமிழ் மரபிலேயே சொல்லாக்குவர். அவர்கள் விஞ்ஞான அறிவும் பள்ளிப் படிப்பாய், வாயாடும் அறி வாய் இராமல், அறிவைத் தாண்டிச் செயலுக்குப் பயன்படும் விஞ்ஞானமாயிருக்கும். தமிழர் ஒரு சில அயல் மொழிகளுக்கு அனைவரும் கட்டுப்படாமல், விரும்பிய உலக மொழிகளைக் கற்று அந் நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பிலும் முன்னேறுவர் என்பதில் தடையில்லை. 12. பகுத்தறிவும் - இயல்நூல் வளர்ச்சியும் மேல் திசையில் இயல் நூலாராய்ச்சியும், இயல் வளமும் பெருக்கமடைந்துள்ளன-பெருகி வளர்கின்றன. அதன் ஆற்றல் மக்கள் வாழ்விலும், நாட்டு வாழ்விலும் வளமும் வளர்ச்சியும் உண்டுபண்ணி உள்ளன. ஆனால், கீழ்த் திசையில் இயல்பாக இயல்நூலாராய்ச்சி எழவில்லை-இயல்நூல்வளமும் ஏற்பட வில்லை. இயல்நூலறிவின் ஆற்றல் மட்டுமே பரவியுள்ளது.- அதன் அறிவும் பரவிவருகிறது. ஆனால், மேலை நாட்டில் விளங்குவதுபோல அது பயிர்வளமாய் இயங்கவில்லை; இறக்குமதியாகும் நெல் வளமாக மட்டுமே அமைந்துள்ளது. பயிரிடும் முயற்சி அரிது என்பது மட்டுமன்று; பயிர்வளம் தரும் நிலவளம், உரவளம் இங்கு ஏற்படவில்லை. மேலை நாடுகளில் இயல்நூலாராய்ச்சியும், இயல்நூல் வளமும் உயிர்வளங்கள்-உயிர் வளர்ச்சிகள். அவை கல்லூரி பல்கலைக் கழகங்களில் பிறந்து வளர்பவை. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அவற்றை ஊக்க, அவற்றுக் கான உரம் பெருக்க மட்டுமே முயல்கின்றன. ஆனால், கீழ்த் திசையிலோ மக்கள் வாழ்வில் இயல்நூல் தோன்றவுமில்லை-வளரவுமில்லை-இனித் தோன்றுவதற்குரிய முயற்சிகளையும் யாரும் தொடங்க வில்லை, திட்டமிடவில்லை, கருதவில்லை, கனவு காணவில்லை! இங்குள்ள கல்லூரி, பல்கலைக் கழகங்கள், கலை நிலை யங்கள் மேலை இயல் நூலறிவின் வளத்துக்கு ஒரு விளம்பர மேடை யாகவும் அவற்றின் ஆற்றல்கள்-வளரும் தொழில்களின் வாணிகத் துறைக்கு ஒரு நிலையான விளம்பர அமைப்பாகவும் மட்டுமே இயங்குகின்றன. ஏனென்றால், படித்துப் பட்டம் பெறுபவர்-இயல்நூல் பட்டம் பெறுபவர்கள்கூட- அதனால் மேலையுலக நாகரிக ஆட்சியின் பலவகை விளம்பர அமைப்புகளில் ஊதியம் பெற்று, அவ்வாட்சியை வளர்ப்பவர்களாக அமைபவர்களே யன்றி, கீழையுலகுடன் வேறு எத்தகைய தொடர்பும் அற்றவர்களாய் உள்ளனர். அதுமட்டுமன்று, தெரிந்தோ தெரியாமலோ-கீழ்த்திசையில் இயல்நூலறிவின் உயிர் விதை என்றும் முளைக்காமலும், முளைத்தாலும் வளராமலும், வளர்ந்தாலும் உரமின்றி மடிந்தும் களை மூடி மறுகியும் அழியவுமே வழி பிறக்கின்றது. ஏனெனில், இயல் நூலறிவின் உயிர் விதையும் உரமும்; மக்கள் அறிவாற்றலும் பகுத்தறிவுமே யாகும். கீழ்த்திசையெங்கும் பொதுவாக-தென்னாட்டிலும் தமிழகத்திலும் சிறப்பாக-இயல்நூல், ஆராய்ச்சி ஆகியவற்றின் உயிர் விதைகளும், உயிர் உரவள ஆதாரங்களும் வளர வொட்டாமல் தடுக்கும் பண்பு, நச்சுக் களைகள், நச்சுக் காற்றுகள் உள்ளன. புராணங்கள் வளர்க்கும் மத மூட நம்பிக்கைகள், அரசியல் மொழி வாழ்வுகளின் அடிமைச் சூழல்கள், சமுதாய வாழ்வைக் கெடுக்கும் சாதி வருண பேதங்களாகிய ஒழுக்கப் பண்பு கெடுக்கும் ஒழுக்க முறைகள் ஆகியவை அத்தகைய உவர்ப் பண்புகளும், நச்சுக் களைகளும், நச்சுக் காற்றுகளும் ஆகும். நம் கல்வி நிலையங்கள், கல்லூரி, பல்கலைக் கழகங்கள், நம் சமயப் பிரச்சாரங்கள், நம் பத்திரிகைகள், நம் அரசியல் கட்சிகள் இவற்றுக்குத் தெரிந் தும் தெரியாமலும், தன்னலக் குழப்பங்களால் இயக்கப்பட்டும், அறியாமையாலும், தொலைநோக்கின்மையாலும் ஆதரவு தந்து வளர்க்கின்றன. நம் கீழ்த்திசை இலக்கியங்கள், அறிவு நூல்கள்கூட மிகப் பெரும்பாலும் இந்நோய் நச்சுச் சுழலில் பிறந்து வளர்ந்து அவற்றையே ஊக்குவன வாக உள்ளன. இந் நிலையை மாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. மேலையுலக வரலாறு அதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலையுலகின் தலை சிறந்த அறிவு மன்னருள் ஒருவர்-மாத்யூ ஆர்னால்டு-`பண்பும், பண்புக் கேடும்’ என்ற ஒப்பற்ற நூலில் அதை விளக்கியும் உள்ளார். தற்கால மனித நாகரிகத்தின்-அதாவது மேலை உலக நாகரிகத்தின்-உருவளத்துக்குக் காரணமான பண்புத் திறங்கள் மூன்று என்று அவர் வகுத்துள்ளார். அவை கலை ஒளி, அல்லது இனிமை ஒளி. சமய நம்பிக்கை அல்லது யூகப் பண்பு. அதாவது, ஏபிரேய தன்னலப் பண்பு. முற்போக்கறிவு, அல்லது அன்பற்ற சூழ்ச்சியறிவு என்பன. இம் மூன்றனுள் இனிமை ஒளி; கிரேக்க இலக்கியம் மேலையுலகுக்கு அளித்த பரிசு. சமய நம்பிக்கை; இயேசு பிறந்த யூத இனமும் பால°தீனமும் அளித்த கொடை. மூன்றாவதே ஐரோப்பாவில் இயல்பாகத் தோன்றிய, அல்லது இவ்விரண்டினாலும் தூண்டப்பட்ட அறிவு வளர்ச்சி. மாத்யூ ஆர்னால்டு கிரேக்கப் பண்பாட்டில் மட்டுமீறிய பக்தி பூண்டவர். அதன் பரிசைச் சற்று மிகைபடவே கூறியுள்ளார் என்பதைப் பலர் ஒத்துக் கொள்வர். ஆயினும், கூர்ந்து நோக்கினால், அவர் மிகையுரை மெய்யை ஒட்டிய மிகையுரையே யாகும். ஏனெனில், கிரேக்கரிடம் இனிமை, கலைப்பண்பு முனைப்பாய் இருந்தது. ஆற்றல் பண்பு, அல்லது கட்டுப்பாடும் உதவியும் ஒற்றுமையும் தற்பண்பும் நலிந்திருந்தன. கிரேக்கர் அழிவுக்குக் காரணம் இதுவே. ஆனால், பிந்திய பண்புகள் உரோமரிடம் முனைப்பாய் இருந்தன; முந்திய பண்புகள் இல்லாமையே அவர்கள் பேரரசப் பெருவாழ்வைச் சரிய வைத்தது. மூன்றாவது பண்பு, அதன் பெயர் தெரிவிக்கிறபடி நடுக் கடலகத்தின் வாணிக நாகரிகமாகிய பில்க°தீனர் நாகரிகப் பண்பு அதுவும் மற்ற இருபண்புகளும் இல்லாமலே அழிந்தது. மூன்று பண்டை நாகரிகங்களில் ஒரு பண்பு குறைந்திருந்தது. அதுதான் சமத்துவ மெய்யறிவு, அன்புப் பண்பு. கிறித்துவ சமயம் மேலையுலகுக்கு ஒரு சிறிதேனும் அளித்த பண்புக் கூறு இதுவே. திராவிட நாகரிகத்திலும், சங்க இலக்கியத்திலும் நாம் கிட்டத்தட்ட இந்த மூன்று பண்புகளையுமே காண்கின்றோம். பகுத்தறிவுப் பண்பு, கலைப்பண்பு, அன்புப் பண்பு ஆகிய மூன்றுமே திருவள்ளுவரின் திருக்குறளில், உலகில் வேறு எந்த இனத்திலும், நாகரிகத்திலும், இலக்கியத்திலும், கோட்பாட்டிலும் இல்லாத அளவு இணைந்திருக்கின்றன. ஆனால், இவ் ஒப்பற்ற கருவூலத்தைப் பெற்றிருந்தும் தமிழகம் வீழ்ந்துள்ளது-கீழ்த்திசை விழக் கண்டுள்ளது. இஃது எதனால்? இயல் நூலாராய்ச்சி மேலையுலகில் தழைத்த அளவுகூடக் கீழ்த்திசையிலோ தமிழகத்திலோ தழையவில்லை. மேலையுலகம் தந்த பரிசாகக்கூட வளர முடியவில்லை. இஃது ஏன்? முதலாவது, திருவள்ளுவர் திருக்குறள் கருத்துகளை, அதற்கு மாறான கருத்துகள் மலிந்த கீழ்த்திசை இலக்கியங்கள், மூடி மறைத்துவிடுகின்றன. திருவள்ளுவர் பண்பு தமிழகத்தில் கீழ்த்திசையுலகச் சமுதாய வாழ்வில் படாமலும், பட்டாலும் ஊன்றாமலும், ஊன்றினாலும் உயிர்ப் பண்பு பரவாமலும் அவை தடுத்து நிறுத்திவிடுகின்றன. சமற்கிருதப் புராண இதிகாசங்கள் மட்டுமன்றி, இலக்கியமும் சமயநெறியும் அவ்வப்போது திருவள்ளுவர் மொழி போன்ற மொழிகளில் பயில்கின்றனவாயினும், அவை பசப்புரைகளேயன்றி, வற்புறுத்தப்படும், விளக்கப்படும் உரைகள் அல்ல. ஏனெனில், அவை பெரும்பாலும் தன்னலமும் சூழ்ச்சியும் பரப்பி, அவற்றுக்குப் பெரும்பாலான மக்களை அடிமையாக்கும் திட்டத்துக்குரிய கவர்ச்சி கரமான பூச்சுகளேயாகும். கலை, சமுதாயம் ஆகிய துறைகளில் வளரும் - வளர்க்கப் படும் இந்த நச்சுப் பண்புகளுடன், அரசியல் அடிமைத்தனமும், மொழியடிமைத்தனமும் சேர்ந்து வளர்கின்றன. தேசிய வாழ்வின் அடிப்படையான தொழிலாளரும், பெண்டிர்களும், அவர்கள் வாழ்வுகளுக்குரிய தாய்மொழியும் அடிப்படைக் குடியாட்சி தேசிய உயிர்ப் பண்புகளும் நசுக்கப்படுகின்றன. அயல்மொழி ஆட்சியுடன் எப்போதும் புரோகித முதலாளித்துவம், நிலப்பண்ணை முதலாளித்துவம், வாணிக முதலாளித்துவம், தொழில் முதலாளித்துவம், பண முதலாளித்துவம் ஆகியவை இணைந்து, கீழ்த் திசையில் மக்கள் வாழ்வையே ஒரு நோய்க் களமாக்கியுள்ளன. இயல்நூல் இவற்றை யழிக்க உதவுதல் வேண்டும். ஆனால், இயல்நூல் வளராமல் இவை தடுத்தாளுகின்றன. அறிவியக்கத் தார்தாம் இவற்றுக்காவன செய்தல் வேண்டும். 13. இல்லறமே பேரின்பம் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’- இது தமிழர் நெறி. இக் கருத்தையே மனித உலகின் நாகரிக சமயங்கள் எல்லாம் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால், ஒரு குலத்துக்கும் ஒரு தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கி, ஒருமைக் கோட்பாட்டின் உச்ச உயர்முகடு கண்டுரைத்த உலக முதல்வர் திருவள்ளுவர் ஒருவரே! ‘ஒன்றே குலம்’ இது சங்ககாலத் தமிழர் கண்ட வாசகம். ஆனால், இஃது அவர்களுக்கு நீண்டநாள் முன்னரே-நூற்றுக் கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே-வள்ளுவர் கண்ட ஒரு முழு மெய்ம்மையின் ஓர் அரைகுறை நிழற்கோடு மட்டுமே. அவர் கண்ட அம்முழு மெய்ம்மை குலம் ஒன்றே என்பதன்று, வாழ்க்கை ஒன்று, வாழ்குடி உலகு அதாவது மனித இனம் ஒன்று என்பதே. இதைக் கண்ட வான் பேரறிஞருள் வள்ளுவர் முதல்வர். அது மட்டுமன்று. அவர் கண்ட அளவிலும் முறையிலும் அதனை வேறு எவரும் காணவில்லை என்னலாம். ஏனெனில், வாழ்க்கை ஒன்று, இறைமை ஒன்று-இவற்றின் தொடர்பு கண்டு இறைமைக்கு இலக்கணமும் உயிர் விளக்கமும் அளித்தவர் வள்ளுவர் ஒருவரே. இயற்கை ஒன்று. ஒரு வழி நின்று முழு நிலைப்பட்ட அதன் அமைதியே (வள்ளுவர் மொழியில் தெய்வம், ஊழ்) அறம். இவ்வியற்கை வழி நின்று வளரும் உயிர் உலக, மன்பதை அமைதியே பொருள். இதனையே நாம் வாழ்க்கை என்கிறோம். இக்காலத்தவர் பெரும்பாலார் இதனைச் சமுதாய வாழ்க்கை, சமய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என வேறு வேறுபட்ட துறைகளாகக் கொள்வர். இத்துறைகளை வள்ளுவர் மதித்தாரானாலும், இவற்றின் அடிப்படை உணர்ந்து அதனையே வாழ்முதல் அதாவது பொருள் என்று கூறினார். இயற்கை, வாழ்க்கை ஆகிய இரண்டின் மூலமும் முடிவும் (முடிவுக்கு முடிவு அதாவது குறிக்கோளும்), உள்ளீடும் அவற்றை இயக்கும் உயிர்முதலும் பயனும் யாவும் இன்பமே. இயற்கை ஒன்றே, வாழ்க்கை ஒன்றே எனக் கொண்ட வள்ளுவர் இந்த இன்பமும் ஒன்றே எனக் கண்டு விளக்கினார். இந்த இன்பத்தையே அவர் ‘இறை’ என்றார். ஒன்றான இயற்கையமைதியின் அறமுதலும், ஒன்றான வாழ்க்கை யமைதியின் பொருள் முதலும், ஒன்றான இன்ப முதலும் முழுநிறை வாழ்க்கைக் குறிக்கோளான, நாகரிகக் கனவிலக்கான இறைவனே. இதனால், இறைவன் முப்பால் முதல்வன் அல்லது முழுமுதல்வன் ஆகிறான். இயற்கையின் தோற்றமும் வாழ்க்கையின் இயங்கு முதலும் இன்ப முடிவாகிய குறிக்கோளும் அவனேயாதலாலும், அம்முடிவே தோற்றமாகவும், தோற்றமே முடிவாகவும் இடையறாது சுழலுதலாலும், வள்ளுவரும் அவர் வழிநின்ற சமயவாணரும் இறைவனை முப்பால் ஆழி (அற ஆழி) இயக்கும் அந்தணன் என்றும், ஆதி அந்தம் இலாதவன் என்றும், அற (இயற்கை) வடிவினன், பொருள் (அறிவு) வடிவினன், இன்ப வடிவினன் என்றும் கூறியுள்ளனர். இவ்வாசகங்களை நாம் எங்கும் காண லாம் -அவற்றின் அறிவார்ந்த கலைப்பண்பு வாய்ந்த வாழ்க்கை விளக்கத்தை வள்ளுவரிடத்தில் மட்டுமே நாடிப் பெற முடியும். ஒன்றே அறம், ஒன்றே பொருள் (வாழ்க்கை), ஒன்றே இன்பம் (வாழ்பயன் வளம்), ஒன்றே இறை; அறத்தின் வழி பொருள், பொருள்வழி இன்பம், அம்மூன்றன் வழி இறை. இதுவே வள்ளுவரின் வியத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை ஒருமைக் கோட்பாடு, இதை உணராதவர் வள்ளுவர் குறளின் சொற்களில் விளையாடும் கிளிப்பிள்ளைகள் -அவர் சொற்பொருளும் சொற்பொருளின் உயிர்ப்பொருளும் காணாதவரேயாவர். ‘அறம் ஒன்று, அதுவே இல்லறம்.’ ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வள்ளுவர் துணிந்துள்ளது கண்டும் இல்லறத்துக்கு மாறாக ஒரு துறவறம் காண முனைந்துள்ளனர் இடைக்கால மாயச் சமயவாணர். சங்ககால ஒளவையார்க்குப் பன்னூறாண்டு பிற்பட-வள்ளுவர்க்குப் பல்லாயிரஆண்டு பிற்பட-வாழ்ந்த அணிமைக் கால ஒளவையார்கூட வள்ளுவப் பண்பின் அரை ஒளி நிழலில் நின்று ‘இல்லறமல்லது நல்லறமன்று ‘ என்று பாடியுள்ளது காணலாம். 12 அல்லது 16ஆம் நூற்றாண்டு வரையிலாவது வள்ளுவர் உயர் குறிக்கோள் ஒரு சிலரிடமாவது மங்கி மங்கி மின்னொளி வீசிற்று என்பதை இது காட்டுகிறது. இல்லறம் ஒன்றே அறம். அறம் ஒன்றே. அது மட்டுமன்று. அதனால் வரும் இன்பமும் ஒன்றே. வள்ளுவர் கொண்ட துறவறம் இல்லறத்துக்கு மாறானதோ, எதிரானதோ அன்று. அஃது இல்லறத்தின் கனிந்த முதிர்வே, அதன் விரிவேயாகும். வீட் டெல்லையில் சமுதாயம், நாடு மொழி, இனம் என விரிவுறுந்தோறும் அது பல படியான துறவறங்களாக உருக் கொள்கிறது. அவையும் இல்லற வகைகளேயாத லால்தான் வள்ளுவர் இல்லறத்துக்கும் பொதுவாகத் தந்த அதே உயர்வு சிறப்பைச் சிறப்பாகத் துறவறத்துக்கும் கூறினார். ‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்’ துறவோரின் தவவாழ்வை (தியாகப் பொதுத் தொண்டை) இங்கே வள்ளுவர் உயர்வுபடுத்தி, அது மேற்கொள்ளாதவரை மெல்ல நகையாடுகிறார். ‘துறவோர்க்கு இவ்வளவு புகழ் வருகிறதே, அப் புகழை வளர்ப்பதற்காகத்தான் மற்றவர்கள் அதே வழியைச் சற்று மறந்திருக்கிறார்கள் என்று கூறுதல் வேண்டும்’ என்கிறார் அவர். இல்லறத்தார் பொதுவாகக் குடும்பம் என்ற சிற்றெல்லையிலே பெறும் இன்பம் சிற்றின்பம். இடைக் காலத்தவரால் ‘சிறு’ என்ற சொல் இங்கே சிறுமை, கீழ்மை என்ற பொருளில் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. காதல், காமம் என்ற மற்ற உயர்ந்த தமிழ்ப் பண்புகள் குறித்த சொற்களைப் போலவே தமிழர் அடிமை யிருட் காலங்களில் இதுவும் இழிந்த அடிமைப் பொருள் குறித்து விட்டது. உண்மை யில் சிறிய யாழ், சிறிய இடை என்ற இடங்களில் சிறுமை இழிவு குறிக்கவில்லை. இனிமை, நுண்ணயம், நுட்ப அழகு நலம் ஆகிய பண்புகளே குறித்தன. சிற்றின்பம் இப் பொருளே கொள்ளவல்லது. பேரின்பம் இதனைவிட எல்லைப் பரப்பில் பெரிது. ஆனால், நுண்ணயத்தில், ஆழத்தில், முழு நிறை நலத்தில் சிற்றின்பத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. இதுபோல விரிவுற்ற இல்லறமாகிய துறவறம் பொது இல்லறத்திலும் விரிந்த எல்லையுடைய தானாலும், முழு நிறை நலத்தில் அப்போது இல்லறத்துக்கு ஈடாகாது. இஃதுணர்ந்தே வள்ளுவர் பொதுவான இல்லற, துறவறங்களை அறத்துப் பாலில் வைத்து, அவற்றை, இயற்கை நெறி அல்லது அறத்தின் பால் வைத்தார். பின் அவற்றின் கருவி நயங்களைப் பொருட்பாலில் விதந்தோதியபின், மீண்டும் பொது இல்லறத்தின் நுணுகிய ஆழ்ந்த காதற் சுவையிலேயே திளைக்க முற்பட்டார். பொதுவான இல்லறம் - இன்பம்! சிறப்பான துறவறம் பேரின்பம்! ஆனால், இந்த இரண்டும் கடந்த சிறப்பான இல்லறம், காதலின் அகச்சுவை ததும்பும் காதலறம் ஆகும். அதுவே இன்பம், பேரின்பம் ஆகிய இரண்டு இன்பங்களும் கடந்த நீடின்பம். இந்த மூன்றாம் இன்பமே வள்ளுவரின் மூன்றாம் பாலும் முழு நிறை பாலுமாகிய இன்பப்பாலில் விளக்கப்படும் இன்பம் ஆகும். இஃது இல்லற இன்பம், துறவறப் பேரின்பம் ஆகிய இரண்டு புற இன்பங்களும் கடந்த அக இன்பம், அகப் பேரின்பம் ஆகிய நீடின்ப வகைகள் ஆகும். வள்ளுவர் குறிக்கொண்ட இல்லறம், இன்பம் ஆகிய ஒருமைக் கோட்பாடுகளின் பண்புகள் நீண்ட காலமாகத் தமிழராலும் தமிழர் தாழ்வுற்ற காலை அவர்களை வந்தடுத்து அறவுரையும் அறிவுரையும் ஆன்மிகவுரையும் அளிக்க முற்பட்ட ஏனையோராலும் மறக்கப்பட்டுவிட்டன. ஆனால், இசைக் கருவியாகப் பயன்பட்ட யாழை இசை மறக்கப்பட்டபின் ஓரழகுப் பொருளாக உயிர்க் கலைப் பண்பறியாதவர் வழங்குவதுபோல, வள்ளுவர் பண்பு மறக்கப்பட்ட பின்னும் அப் பண்பைப் பல தமிழ்ச் சொற்கள் இன்றளவும் இலக்கிய மரபுகளாகவும் உயிர்ப்பிழந்த வழக்கு மரபுகளாகவும் இயக்குகின்றன. குடும்பக் காதல் இன்பம், கடவுட் பற்றால் பெறப்படும் துறக்க இன்பம் இரண்டும் தமிழில் ‘இன்பம்’ என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன. ஒன்று சிற்றின்பம் என்றும் மற்றொன்று பேரின்பம் என்றும் குறிக்கப்படுகின்றன. அவற்றின் வேறுபாடு எல்லை விரிவு மட்டுமே என்பதை இது காட்டுகிறது. பக்தித் துறை கடந்து யோகத்துறை நின்ற மறைவாணர்கள் (ஆலளவiஉள) இந்த இரண்டில்கூட விரிவுடைய பேரின்பத்தைவிட எல்லையில் குறுகிய ஆனால், ஆழமிக்க சிற்றின்பப் பண்பையே நீடின்பம், நுணுக்கஇன்பம், பெரும் பேரின்பமாகக் கொண்டு, அம்மொழியிலே கடவுட் பற்றை அகத்துறைபோல விரித்து நுணுகி விளக்கியுள்ளனர். கடவுளுணர்வின் அனுபவமும் காதலுணர்வின் அனுபவமும் ஒரு தன்மையதே என்பதை உலகெங்கும் இத் துறையினர் கண்டுரைத்துள்ளனர். ஆனால், இரண்டும் உண்மையில் ஒன்றே என்று விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே. “பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” இங்கே பற்று என்பதை, ஆசை அவாவென உரை கண்டனர் உரையாசிரியர்கள். பற்றற்ற தன்மை உயர்நிலையானால் அது மனிதரைவிட விலங்குகளிலும், விலங்குகளைக் காட்டிலும் கீழின உயிரிலும், இவற்றைப் பார்க்கிலும் கல்போன்ற உயிரிலாப் பொருளிலும் எளிதாகக் காணப்படும் பண்பு ஆகும். வள்ளுவர் குறுகிய தற்பற்றையே பற்றெனக் கொண்டார். காதலிலும் கடவு ளுணர்விலும் ஒருங்கே இத் தற்பற்று எளிதில் அழிவதை நாம் இன்றும் காணலாம். உண்மையான கடவுட் பற்று வேறன்று, காதல் வேறன்று. தமிழர் காதலையும் கடவுட்பற்றையும் ஒரே அகத்துறை யாகக் கொண்டதனால்தான் இரண்டையும் இன்பம் என்றனர். காதலுக்குப் புறப்பற்றுக் கோடாக ஒரு காதலன் அல்லது காதலி வேண்டும். கடவுட்பற்றுக்கு அது தானும் தேவை யில்லை. இதனாலேயே காதல், இன்பத்தின் அல்லது அகத்தின் புறமாகவும், கடவுட் பற்று இன்பத்தின் அல்லது அகத்தின் அகமாகவும் வள்ளுவரால் குறிப்பாய் உணர்த்தப்பட்டது. நல்ல காதலை உணர்ந்தவனுக்கு, அதில் ஈடுபட்டுப் பண்பில் வளர்ந்த வனுக்குக் கடவுட்பற்று வேறு தேவைப்படாது. ஏனெனில், அதுவே கடவுட்பற்றின் உருநிழல், ஒளிநிழல் ஆகும். பாரசீகக் கவிஞர்கள் பொதுவாக, கவிஞர் ‘ஜாபீ’ சிறப்பாக; தமிழ் மறைவாணக் கவிஞர் பொதுவாக, மாணிக்கவாசகர், நாச்சியார் சிறப்பாக; வடபுலத்திலும் ஜயதேயர், சைதன்னியர் குறிப்பாக இவ்வகைக் கடவுட் காதல், காதல் கடவுள் தத்துவத்தில் இழைந்தவர் ஆவர். உலகில் பரவிய இக்கோட்பாட்டைத் தமிழர் பண்பில் பொதுவாகவும் வள்ளுவப் பண்பில் சிறப்பாகவும் இன்னும் பலவகையில் காணலாம். குடும்ப இன்பத்தின் நிலைக்களனும் கடவுட் பற்றின் நிலைக்களனும் தமிழில் ஒருங்கே வீடு என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இடைக்காலத் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிப் புலவர் இதற்குப் பொருள் கூறுவதிலே இடைக்கால மாயைக்கு ஆளாகின்றனர். கடவுட் பற்று நிலையில் துறக்க வீட்டுக்கு மட்டும் விடுபட்டது வீடு, பற்றுக்களிலிருந்து விலகிய இடம் என்று பொருள் தருகின்றனர். ஆனால், குடும்ப வீட்டுக்குத் துன்பம் விட்டஇடம் வீடு என்று வேறு பொருள் காண்கின்றனர். உண்மையில் இரண்டுமே துன்பம் விட்ட இடம் என்ற பொருளுக்குத் தகுதியுடையவையே. அது மட்டுமன்று. இரண்டுக்கும் உரிய பகுதியை வள்ளுவர் சுட்டுகிறார். அது வீழ்தல், வீழ் தருதல் என்ற பண்டைத் தமிழ்ச் சொல்லாகும். மேலீடாகக் காதலில் வீழ்தல் (குயடட in டடிஎந) என்ற ஆங்கில மரபை நினைவூட்டுவதாக இச்சொல் அமைகிறது. ஏனெனில், காதலித்தல் என்பதே அதன் குறிப்பு. ஆனால், அதன் மெய்ப் பொருள் விழுது அல்லது வீழ்து என்பதனுடன் தொடர்புடையது. வீழ்தருதல் என்பது விழுதுபோல் வேர் ஊன்றி விரிந்து பரவப் பெறுதல் என்ற கருத்து உடையது. அதற்கு நிலைக்களமானது வீடு. அது தாய் ஆலமரம்போல் வீட்டில் தொடங்கி, வீட்டின் விரிவாகிய ஊர், நாடு, இனம், மொழிஇனம், பண்பினம், மனித உலகு எனப் படராலமரம் போல விரிவுற்றுப் பரவிச் செல்வது ஆகும். காதல், பக்தி ஆகியவற்றில் தமிழர் கொண்ட ஒற்றுமை இத்துடன் முடியவில்லை. காதலன் நிலை பக்தன் நிலை போன்றது. காதலி நிலை கடவுள் நிலை போன்றது. கடவுளுக்குரிய சொல்லாகிய ‘தலைவன்’ ‘தலைவி’ தமிழ் மரபில் மட்டுமே காதலர்க்கும் கடவுளுக்கும் ஒருங்கே வழங்குதல் காணலாம். ஆனால், இங்கும் சமயவாணர் பலர் மறந்து மரபு அறும்படிவிட்ட செய்தி ஒன்று உண்டு. பக்தன் கடவுளுடன் பற்றிலிழைந்து இரண்டற்ற ஒன்றற்ற (அத்துவித) நிலை அடையும்போது அவனும் கடவுளாகிறான். சைவர் இதனைச் ‘சிவோக’ நிலை என்பர். ‘சிவமாக்கி என்னை ஆட்கொண்ட’ என்று மணிவாசகர் பாடுகின்றார். இக் காரணத்தாலேயே கடவுள் பக்தன் இருவர்க்கும் ஒப்பான காதலி, காதலன் இருவரும் தலைவி தலைவர் எனத் தமிழில் குறிக்கப்படுகின்றனர். கடவுளைக் காதலிக்கும் பக்தனைக் காதலனுக்கும் ஒப்பாக்கியவர் மாணிக்கவாசகரும் முசுலிம் ஞானிகளும் மட்டுமேயாவர். வைணவரும், கிறித்துவரும் பிறரும் கடவுளைக் காதலனாக்கி பக்தனைக் காதலியாக்கினர். வள்ளுவப் பண்பில் இழைந்து நோக்கினால் முன்னதே வள்ளுவர் குறிப்பு என்றும், அதுவே மிகவும் நுண்ணயமும் பொருத்தமும் உடையதென்றும் தெரியவரும். காதலன் காதலியை நாடுகிறான். அவன் இருந்த இடத்தி லிருந்து அவளிடம் உள்ளம் மட்டும் இழையவிடுகிறான். காதலன் உணர்ச்சி வசமுடையவன். காதலி அறிவுடன் அதை அடக்கிக் கொண்டு அதன் ஆற்றலில் விஞ்சுகிறாள். கற்புநெறியில் தன் திண்மையை அவனுக்கு அளித்து, ‘பெண்வழிச் செல்லா’ ஆண்மையை அவனுக்கு அளித்து, உலகில் அவனுக்கு ஏறுபோற் பீடுநடை அளிக்கிறாள். வள்ளுவக் காதல் கவிஞரைப் போலவே, அவரைப் பின்பற்றிப் பக்தரும் இந்நிலைகளை வருணித்தல் காணலாம். உன் கடைக்கண் பண்பைப் பெற்றபின் நாங்கள் ‘ஒருத்தரையும் மதிப்பதில்லை உன்றன் அருளாலே’ என்று பாடுகிறது திருப்புகழ். கூடல் ஆடவன் காதல். ஆண், பெண் ஊடலில் அவனைத் தடுத்தாட் கொண்டு, துன்பம் போல் இன்பம் பெருக்குகிறாள். இந்த ஊடல் நிலையிலேயே ‘இரண்டற்ற ஒன்று, ஒன்றற்ற இரண்டு’ நிலைகளை மனிதன் பெறுகிறான். கடவுட் பற்றின் உயிர் முகட்டு நிலையும் அதுவே. காதலில் சிற்றின்பமாகத் தொடங்கிய இன்பம், கடவுட் பற்றில் பேரின்பமாகி, பண்பார்ந்த காதலியின் பால் அணுகிய காதலனின் உண்மைக் காதலில் இனங்கடந்த நீடின்பமும் இன இன்பமும் ஆக மிளிர்கின்றது. இன்பம், இனிமை, இனம் - இச்சொற்கள் தமிழில் மட்டுமே சொல் தொடர்புடையன. ‘இன்பம் இனம் வளர்ப்பது’ இதை வள்ளுவர் குறித்ததுபோல் யாரும் குறிக்கவில்லை. பெண் இன்பத்தைப் பாடிய கவிஞர் எவரும் அதுபோல் பாடவில்லை. ஆனால், பெண் இன்பம் பாடிய எவரும் நுகர்ந்து பாடாத அளவிலும் வகையிலும் குழந்தை இன்பத்தை அவர் ஒருவரே பாடியுள்ளார். அதுமட்டுமன்று. அது வெறும் இன்பம் அன்று. இன இன்பம் பயனுடைய இன்பம். நீடித்து வளர்ந்து தழைத்துப் பொங்கும் எல்லையிலா இன்பம் தருவது ஆகும். இதனாலேயே, “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்று இனமுதல் அறிவின் உச்சி கண்ட வள்ளுவர் வாய் மொழிந்துள்ளார். தம்மினும் அறிவுடைய பிள்ளையைப் பெறாதவர் பிள்ளை பெற்றவராகமாட்டார். உலகில் இசை நாட்டியவராகமாட்டார். இந்த அழகிய கருத்தைக் குறளில் காணலாம். உரையாசிரியர் உரைகளில் காண முடியாது. பெண் இயற்கைத் தாய், இனத்தாயின் உரு. தம்மில் தம் மக்கள் அறிவுடையார் என்பதை அவள் மதிப்பிட முடிவதில்லை. கல்வியில்லாத இக்காலப் பெண்கள் நிலையினாலென்று உரையாசிரியர் கூறினார். அவர் போலிச் சிற்றறிவுக்கு ஏற்றபடி. உண்மை என்னவெனில், அன்பு மிகுதி காரணமாகவே, தாய் தன் மதிப்பீட்டில் உறுதி கொள்வதில்லை. அதனை உலகமொப்பிய சான்றோர் ஒப்புதல் ‘கேட்டு’ அகமகிழ்வதாக, அவர் குறிக்கிறார். “ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” இம் மகிழ்ச்சியை வள்ளுவர் தந்தைக்கு அளிக்கவில்லை. ஏனெனில், தந்தை இவ்வளவு கைம்மாறு கருதாத மகிழ்வுணர்ச்சி யுடையவனன்று. அவன் கடமையாற்றிப் பெருமையும் புகழும் கொள்கிறான். தாயாகிய பெண்ணோ, இன உணர்வில் மகிழ்கிறாள். அவளே இன இன்ப வடிவினள், இன அறிவின் சிகரம், இனப் பண்பின் உயர்தளமாதலால்! 14. தமிழினமும் மலாய் நாடும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர் இன்று உலகில் நான்கு கோடிப் பேர் உள்ளனர். பரத கண்டத்தின் தென் கோடியிலே, தமிழர் பழந்தாயகத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டில் இவர்களில் மூன்று கோடிப் பேர் வாழ்கின்றனர். மலாயா, வியட்னாம், இந்தோனேஷியா, ஆசியா, தென்கிழக்காசியப் பகுதிகளில் பல இலட்சம் தமிழர் பழங்காலத் தொடர்புகளின் சின்னமாகவும் இக்காலத் தொழிலுலகின் உறுப்பினராகவும் பரவியுள்ளனர். தவிர தென் ஆப்பிரிக்கா விலும் பர்மாவிலும் மடகா°கர், மொரிசியசு, பிஜி, திரினிடாட்டு, மார்ட்டனீக்கு முதலிய தீவுகளிலும் இதேபோலத் தமிழர் பல்லாயிரவர் வாழ்கின்றனர். முத்திசைத் தமிழர் பரந்தகன்ற தென்கடலுலகில் சிதறிக் கிடக்கின்ற இத் தமிழ்ப் பேரினத்தின் வாழ்வில் தமிழகம், மலாயா, இலங்கை ஆகிய மூவிடத்தில் நிலைபெற்றுள்ள தமிழரே நடுவிடம் வகிக்கின்றனர் என்னலாம். தமிழின் வாழ்வை வளர்க்கும் வாய்ப்பிலும் ஏனைய தமிழர்களைவிட இம்முத்திசைத் தமிழர் களுக்குள்ள வளமும் பொறுப்புமே பெரிதாகும். மலாயாவாழ் தமிழர்களுக்குத் தமிழர் என்ற வகையில் இருவகைப்பட்ட பெரும் பொறுப்புகள் உண்டு. அவர்கள் மொழியுரிமையால், இன இயல்பால் தமிழர். அதே சமயம் வாழ்வுத் தாயக உரிமையால் அவர்கள் மலாயா நாட்டினர். தமிழர் என்ற வகையில் தமிழுலக வளர்ச்சியில், தமிழின வளர்ச்சியில் அவர்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள பங்கு பெரிது. தமிழர் என்ற வகையிலேயே தமிழகத்தை உள்ளடக்கிய, தமிழகத்தின் விரிவாகிய இந்தியாவுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டும் சிறிதன்று. இந்தியாவுக்கு வெளியே 1941-42இல் நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஈடுபடுத்தி முழுப் பெரும் பங்கு கொண்டவர் கள் அவர்களே. தமிழக நாகரிகத்தின் சின்னமாகவும் இந்திய நாகரிகத்தின் சின்னமாகவும் மலாயாவில் வருங்காலத்தில் புகழ் வளர்க்க வேண்டிய பெரும் பாரம் அவர்களுடையதே. அதே சமயம் மலாயா நாட்டின் வருங்காலப் புகழிலும் அவர்களுக்கிருக்கும் பங்கும் பொறுப்பும் சிறிதன்று. மலாயா பொன்னாடு மலாயா நாடு பண்டை உலகில் பொன்னாடு எனப் புகழ்பெற்றது. உலகின் பழைய நாகரிகங்கள், பண்டைப் பெரு நாகரிகங்கள் பலவும் நேற்றைய நாகரிகங்களாகக் காணும் அளவு தமிழகத்துடன் ஒத்த பழம்பெரு நாகரிக நாடு அது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அது தமிழகத்துடன் இணைந்து கலை, நாகரிகம் வளர்த்துள்ளது. அத்துடன் இன்றும் அது உலகில் செல்வவளம் பெருக்கும் நாடுகளில் முதன்மை வாய்ந்ததாகவே திகழ்கின்றது. அவ்வளர்ச்சியில் இணைந்து ஈடுபட்டுள்ள உலகின் பழம் பேரினங்கள் மூன்றில் சீனர், மலாய் மக்கள், தமிழர் ஆகிய மூன்று இனங்களுள், தமிழர் ஒரு முக்கிய உறுப்பாக அமைந்துள்ளனர். பரதகண்டத்தின் புகழை முன்னாள்களில் இத்திசைக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழர்களே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பேரரசுகளும் தமிழ் வாணிகக் குழாங்களும், தொழிற் குழாங்களும், கலைக் குழாங்களும் இங்கே பரவி இந்நாட்டின் வாழ்வு பெருக்கி வளம் தந்துள்ளனர். கலை, நாகரிகம் வளர்த்துள்ளனர். அவற்றின் பரந்தகன்ற சின்னங்களை மலாயா நாட்டிலும் அதனைச் சூழ்ந்த தீவுகளிலும் எங்கும் காணலாம். சில இடங்களில் இடப் பெயர்களாக, சில இடங்களில் மன்னர் பெயர், குடிப் பெயர்களாகவும், வேறு சில இடங்களில் மொழிப் பண்பு, கலைப் பண்பு, பழக்க வழக்கப் பண்புகளாகவும் அவை காட்சியளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுப் பழைமையுடைய இத்தொடர்பு இன்னும் நீடிக்கிறது. ஆனால், இன்றைய தொடர்புக்கும் பண்டைய தொடர்புக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. முன்பு மலாய் இனமும் உலகாண்ட பேரினம், தமிழினமும் உலகாண்ட பேரினம், இரண்டு இனங்களும் கலை, வாணிகம், தொழில் ஆகிய எல்லாவற்றிலும் முழுத் தொடர்பும் ஈடுபாடும் கொண்டிருந்தன. இன்றோ இரண்டு இனங்களும் உரிமை இழந்துவிட்ட இனங்களே. இந்நிலையில் தமிழரில் மிகச் சிறுபாலோரோ இன்று கலையும், வாணிகமும், உயர்நிலையும் நாடி இந்நாட்டில் இடம்பெற முடிகிறது. மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தொழிலில் உழைப்பாளராகவும் தோட்ட வேலையாள்களாகவும் இருந்து நாட்டுக்கு அடிப்படை வளம் தந்தாலும் தாம் வளப்படாமல், சரிசம உரிமைக்குரிய வாய்ப்பு வளமில்லாமல் உள்ளனர். ஒன்றுபடுதல் வேண்டும் தமிழர் மலாயா நாட்டு வாழ்வில் உரிய பங்கேற்றுத் தம் பொறுப்பை முழுவதும் நிறைவேற்ற வேண்டுமானால், மலாயா நாட்டின் பழம் பெருமைகளைப் புதுப்பிக்க உதவ வேண்டு மானால் அவர்கள் தம்மை ஒன்றுபடுத்தித் தம் வலிமையை வளர்த்தல் வேண்டும். இதற்கான உதவிகளைச் செய்யும் கடப்பாடு இந்திய அரசியலார்க்கும் மலாயா அரசியலார்க்கும் உண்டு. ஏனெனில், இச் செயலின் மூலமே இந்தியாவின் புகழையும் மலாயாவின் புகழையும் உலகரங்கில் அவர்கள் வளர்க்க முடியும். ஈர் அரசியலார்களையும் அவ்வகையில் ஊக்கத் தமிழர் இன்றே ஒன்றுபட்டு, தமிழ்ப் பண்பாட்டையும் தமிழின மலாய் நாட்டு வரலாற்றுத் தொடர்பையும் அறிந்து உலகத்துக்கும் அறிவித்தல் வேண்டும். மலாயா நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள தொடர்பு இன்றைய நேற்றைய தொடர்பு அன்று. அதை உணர வரலாறு துணை செய்யக்கூடும். ஆனால், வரலாறு காட்டும் தொடர்பு உண்மையில் அதன் மேற்பரப்பிலுள்ள தொடர்பு மட்டுமே. ஏனெனில், தமிழினத்தின் வரலாற்றிலும், மலாயா நாட்டின் வரலாற்றிலும் இன்றைய உலக வரலாறு மிக மிகச் சிறிய ஒரு பகுதியே. இன்று இரண்டு இனங்களையும் ஆளும் இனங்களால் கனவு காண முடியாத அளவு இவ்வீர் இனங்களும் பழம் பெருமையுடையவை ஆகும். இன்றைய உலகின் பெரும்பாலான மொழிகளும், மொழி இனங்களும் ஆரியர் வந்த பின் ஏற்பட்ட புது மொழிகளும் புது இனங்களுமேயாகும். உலகின் பண்டைப் பெருமொழிகள் என்று கருதப்படும். கிரேக்கம், இலத்தீனம், சமற்கிருதம் ஆகியவை தமிழினத்தையோ, மலாயா இனத்தையோ, இவற்றுடன் தொடர்புடைய சீன இனம், யூத இனம், அராபிய இனம், ஆகிய வற்றையோ நோக்க, புத்தம் புதிய இனக் கலவை மொழிகளே யாகும். மாண்ட பண்டை ஆரிய மொழிகளின் நிலையே இதுவானால், மற்ற உலக மொழிகளுக்கும் தமிழினத் தொடர் புடைய மொழிகளுக்கும் உள்ள தொலை, ஏணி வைத்தாலும் எட்டாத தொலை என்று கூறத் தேவையில்லை. மொழிகளும் காலமும் நாகரிக உலகுக்குள் ஆரியர் புகுந்து நாகரிகமடைந்து மொழிகள் வளர்க்கத் தொடங்கியது 3500 ஆண்டுகளுக்குமுன்பு - அதாவது கி.மு.1500 இலேயே. நாகரிக உலகில் எகிப்தியர், யூதர், அராபியர், பினீசியர், சாலடியர், கிரேக்கர், எட்ர°கானர் ஆகிய நடுநிலக் கடலக (மத்திய தரைக்கடல்) -இனங்களும், தமிழர் மலாயினம், சீனர் ஆகியோரும் தழைத்திருந்தனர். இந் நாகரிக ஊழியை(நுசய) வரலாற்றாசிரியர் வரலாற்றுக்கு முற்பட்ட ஊழி என்று பொதுவாகக் கூறினர். ஆனால், முன்பு ஆரியர் வருகையையே வரலாற்றுத் தொடக்கமாகக் கருதியதுபோல் எகிப்தியப் பழைமை எல்லையாகிய கி.மு. 3000-த்தையே இங்கும் பழைமை எல்லையாகக் கொண்டனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது இவ்வாறு கி.மு.3000 முதல் தொடங்கி கி.மு.1500 உடன் முடிவதாகும். சிந்துவெளி நாகரிகம் வரலாற்றுக்கு முற்பட்ட இனங்களின் எல்லையையும் சுமேரிய இன நாகரிகமும் ஏலமிய இன நாகரிகமும் தாண்டின என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி காட்டிற்று. சுமேரிய இன நாகரிகத்தையும், ஏலமிய இன நாகரிகத்தையும் தாண்டிய பழைமையும், பெருமையும் உடைய நாகரிகமாகச் சிந்து கங்கை வெளியிலிருந்து இலங்கைவரை பரவியிருந்த சிந்துவெளி நாகரிகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தெரியவந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட ஊழிக்கும் முற்பட்ட நாகரிகங்கள் இவை. வரலாற்றாசிரியர் இந்த ஊழிக்கு இன்னும் பெயர் கொடுக்கவில்லை. தமிழக, மலாயா நாகரிகங்கள் இவற்றினும் முற்பட்ட மனித இன நாகரிகங்கள் என்று உலகப் பழைமை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மேலை நாட்டார் 15ஆம் நூற்றாண்டில் கொலம்ப° காலத்தில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிற அமெரிக்கக் கண்டத்திலே அவர்கள் செல்லுமுன் தழைத்தோங்கிய மாய நாகரிகத்துடனும், இங்கா° நாகரித்துடனும் எகிப்தியருக்கு முற்பட்ட, பெயர் அறியப்படாத பண்டை இனங்களுடனும் தமிழினமும் மலாய் இனமும் தொடர்புடைவையாகும். உண்மையில் இந்நாகரிகம் பரந்து சிதறிய ஒரு நாகரிகம் அன்று. ஐரோப்பாவில் நிலவிய நாகரிகமே என்று மண்ணூலார் கூறுகின்றனர். இன்று வடமேற்கு அமெரிக்கா, தென் அமெரிக்கா, மடகா°கர், தென்னாடு, இலங்கை, மலாயா, சாவா முதலிய தீவுகள், ஆ°திரேலியா, ஆசியப் பகுதிகள் பல கண்டங்களில் துண்டுபட்டு எட்டிக்கிடக்கின்றன. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடமேற்கு அமெரிக்கா, அமெரிக்காவில் இல்லை. தென்னாடும், மலாயாவும் ஆசியாவுடன் எட்டிக் கிடக்கவில்லை. இவையனைத்தும் ஒரு தனிக் கண்டமாக இன்று இந்துமகா கடல் இருக்குமிடத்தில் பரந்து கிடந்தன. இவை துண்டுபட்டுப் பிரிவுற்றும் கடலுள் அழிந்தும் சிதறிய பின்பே வடக்கே உள்ள பனிவெளிகள் வட ஆசியா, வட ஐரோப்பா ஆயின. அதன் பின்னரே இமயமலையும், சிந்து, கங்கை ஆறுகளும் தோன்றிச் சிந்து கங்கை வெளி தோன்றியது. மலாயாவும் தமிழகமும் மலாயா நாட்டுக்கும் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள பழந்தொடர்பு இங்ஙனம் ஒரே கண்டத்தில் ஒட்டிக் கிடந்த ஒரே மாநில ஒரே இனத் தொடர்பாகும். இத்தொடர்பு இந்தியா பிறப்பதற்கு, இமயமலையும், சிந்து, கங்கை ஆறுகளும் பிறப்பதற்கு முற்பட்ட சமற்கிருத மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்ட தொடர்பாகும். தமிழகமும், மலாயாவும், இலங்கையும் கடலால் பிரிக்கப் பட்ட பின்னும் அவர்கள் கடல் வாழ்வில் தொடர்பு கொண்டிருந்தனர். முதலில் இக் கடல்கள் ஆறுகளாயிருந்து படிப்படியாக விரிவுற்றவையே என்பதும், இன்றிருப்பதைவிட மிகுதியான தீவுகள் அன்றிருந்தன என்பதும் கருதினால், கடலக வாழ்வு தமிழினத்துக்கும், மலாய் இனத்துக்கும் எவ்வளவு உயிர் நிலையானது என்பது தெரியவரும். தமிழர் பண்டைத் தொடர்புகள் பெரும்பாலும் கடல் தொடர்புகளாகவும், தெற்கு, வடக்குத் தொடர்புகளாய் இராமல், கிழக்கு, மேற்குத் தொடர்பு களாகவும் இருந்ததன் காரணம் இதுவேயாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்தம் நாகரிகத்தைக் கடலுலகில் மட்டுமன்றி, நிலவுலகிலும் பரப்பினர். இமயம் வரைக்கும், அதற்கப்பாலும் தமிழின நாகரிகம் பரவிற்று. இதன் சின்னங்களின் ஒரு பகுதியே சிந்துவெளி நாகரிகம். ஆரியர் என்ற இனப் பெயரிலேயே இப் பரப்பின் சின்னம் புகுந்துள்ளது என்னலாம். ஏனெனில், ஆரியர் தம் இனத்துக்குப் பெயர் சூட்டிக்கொள்ளத் தொடங்கிய இடம் நடு ஆசியாவே. நடு ஆசியாவில் அத் தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழினத் தொடர்பால் நாடோடி வாழ்வைவிட்டுக் குடிவாழ்வும், உழவும் வளர்த்திருந்தனர். நாடோடிகளை அடுத்து வாழ்ந்ததால் அவர்கள் தம்மைப் பெருமையுடன் உழவர் அல்லது ஆரியர் என்று கூறிக்கொண்டனர். ஆர் அல்லது ஏர் என்ற சொல்லின் அடிப்படையாக அப் பகுதி அன்று முதல் இன்று வரை ஆரிய நாடு என்றே அழைக்கப்படுகிறது. அசோகர் நாள்களிலும் அஃது ஆரிய நாடு என்றே குறிக்கப்பட்டது. தமிழர் யாழ் தமிழர் உலக நாகரிகம் வளர்த்த சின்னங்களில் ஒன்றே தமிழர் யாழ் வடிவம். (மேனாடுகளில் ஹார்ப் என்ற வடிவில் இயங்குவது.) பண்டைத் தமிழ் யாழ், ஆயிரம் நரம்புடைய ஆதியாழ் என்றும், 21 நரம்புடைய பேரி யாழ் என்றும், 19 நரம்புடைய மகரயாழ் என்றும், 14 நரம்புடைய சகோட யாழ் என்றும் வகுக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஆதியாழ் பண்டைத் தமிழகத்திலேயே வழக்கிறந்து போயிற்று. ஏனையவையும் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே இறந்துபட்டன. சிலப்பதிகாரம் இல்லாவிட்டால் நாம் அவற்றை உணர முடியாமலேயே போயிருக்கும். ஆனால், உணர்ந்த அளவில் பழைமையான பேரியாழே மேனாடுகளின் யாழ் (ஹார்ப்) ஆகவும், மிகப் பிற்பட்ட செங்கோட்டி யாழே சமற்கிருத காலத்தில் வீணை யாகவும் திரிந்தன அல்லது திருந்தின என்று காணலாம். இந்தியாவுக்கு வெளியே நாம் காணும் நரம்புக் கருவிகள் வீணையை ஒத்ததாக இல்லை. யாழை ஒத்ததாகவே உள்ளன என்பது இங்கே கருதத்தக்கது. யாழைப் போலவே உலகெங்கும் தமிழக நாடகப் பண்பைக் காணலாம். மலையாள நாட்டில் நடிகர் குழு ஒன்றின் படத்துடன் சாவா நாட்டின் குழுவின் படத்தையும், பர்மிய நாடகக் குழுவின் படத்தையும் பத்திரிகைகளில் பார்ப்பவர் அவற்றின் நெருங்கிய ஒற்றுமையைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. ஆராய்ந்து நோக்கினால் படத்தில் காணும் இந்த ஒற்றுமை, கலை , நாகரிகம், மொழி, பண்பாடு ஆகிய எல்லாவற்றிலும் காணத்தக்கதேயாகும். பரவிய பட்டினம் இந்தியா முழுவதும் பரவியிருந்த தமிழகப் பண்பைப் பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் பரப்பு இன்றும் காட்டுகிறது. இன்று அது நகரம் என்ற பொருளில் பிழைபட வழங்குகிறது. இப் பிழைபட்ட பொருளே சமற்கிருதத்திலும் அதன் பொருளாகும். பழைய தமிழ் மரபில் அது கடற்கரைத் துறைமுக நகரையே குறிக்கும். அத்தகைய நகரமாகக் கங்கைக் கரையில் பாட்னா இன்றும் உள்ளது. தவிர மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆந்திர நாட்டில் உள்ளன. கூர்ச்சரத்தில் உள்ள சோமநாத புரத்தின் பழம் பெயர், பட்டினம் என்றே தெரிய வருகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கித் தமிழகம் மேற்கு எகிப்துடனும், பினீசியர், யூதருடனும், சாலடியருடனும், கிழக்கே மலாயா, சயாம், சீனா ஆகியவற்றுடன் கடல் வாணிகத் தொடர்பும்; குடியேற்றத் தொடர்பும் தொடர்ச்சியாகப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டிருந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்த தமிழகப் பேரரசனாகக் கொள்ளத் தக்கவன் நிலந்தரு திருவிற்பாண்டியன். தொல்காப்பியம், அரங்கேற்றப்பட்டது கடல்கொண்ட கவாடபுரத்திலிருந்த அவன் அவைக்களத்திலேயே என்று அறிகிறோம். சய நாடு அல்லது யவ நாடாகிய சாவகத்தை வென்று, கடல் நீர் வந்து அலம்புமிடத்தில் பாறையில் தன் அடி பொறித்து அவன் முந்நீர் விழா ஆற்றினான். இதனாலேயே அவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்றும் முந்நீர் விழவின் நெடியோன் என்றும் வழங்கப்பட்டான். பழங்காலப் பாண்டியருள் ஒருவனாகப் புறநானூறு, அவன் புகழைக் குறிக்கின்றது. இமயம் வளர்த்த தமிழையே மொழியாகக் கொண்டு ஆண்டவன் என்றும் அஃது அவனைப் புகழ்கின்றது. பாண்டியர் பேரரசு தொல்காப்பியக் காலப் பாண்டியர் பேரரசு கடல் கடந்து சாவகத்தையும் மலாயா நாட்டையும் உட்கொண்டிருந்தது. இது பற்றிய விரிவான விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை யானாலும், அவன் கீழ்த்திசையில் அமைத்த பேரரசு சோழர் காலம்வரை அதாவது 12ஆம் நூற்றாண்டுவரை மரபு அழியாமல் நிலவிற்று என்று அறிகின்றோம். மணிமேகலை சாவக நாட்டுக்கு வந்த சமயம் அங்கே தமிழே பேசப்பட்டதாகக் குறிக்கிறது. தவிர இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கிரேக்க நூல்களான பெரிப்ளஸும், டாலமி இயற்றிய நில நூலும் தமிழகத்துக்கும் மலாயாப் பகுதிகளுக்கும் ஒழுங்கான கடற் போக்குவரத்து இருந்ததாகக் குறிக்கின்றன. சுமத்ராவில் பலெம்பாங்கைத் தலை நகராகக்கொண்டு தென்பர்மா, கம்போடியா, மலாயா உட்பட்ட பேரரசை ஆண்ட ஸ்ரீ விஜயப் பேரரசர் குடிப்பெயர் ஸ்ரீ மாறர் என்பதே. சோழர் காலம்வரை இப்பாண்டியர் குடிப்பெயர் மாறாமல் நிலவி வந்தது என்பதை இது காட்டுகிறது. 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன புத்த யாத்திரிகன் பாஹியன். அவனும் தமிழகத்திலிருந்து திரிகோண மலை வழியாகக் கப்பலில் சாவகம் வந்ததாகக் குறிப்பிட் டுள்ளான். தமிழரேயன்றி கி.மு.2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த ஆந்திரப் பேரரசர் ஆட்சியும் கீழ்த்திசையில் விரிவுற்றிருந்தது. அது மலாயாவை உட்கொள்ளா விட்டாலும் வங்காளத்தையும், ஆந்திர நாட்டையும், வட பர்மாவையும் (அரக்கான் பகுதியையும்) உட்கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை மூலம் கலிங்க வணிகர் மலாயாவில் பெற்ற பெரு வாழ்வின் பயனாகவே இன்றும் தமிழினத்தார் அனைவரும் கீழ்த்திசையில் ‘கலிங்குகள்’ என்ற அழைக்கப்படுகின்றனர். ‘கொடையில் கர்ணன்’ என்ற வழக்கு இன்றளவும் இந்தியாவைப் போலவே தூரக் கிழக்கு நாடுகளில் வழங்கு கிறது. இந்தக் கர்ணன் மகா பாரதக் கர்ணன் அல்லன்; ஆந்திரப் பேரரசர்களுள் சிறந்தவர் களாகக் கர்ணன் என்ற பட்டப் பெயரையுடைய ஏழு கர்ணர்களில் முதல்வனான மகா கர்ணனேயாவான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சோழப் பேரரசு 12ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக மலாயாத் தொடர்பு, வரலாற்றில் மிகுதி இடம் பெற்றுள்ளது. இராசேந்திர சோழன் (1012-1044) காலத்திலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1120) காலம் வரை ஸ்ரீ விஜயப் பேரரசு, சோழப் பெரும் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. இச்சமயத்தில் மலாயா மட்டுமின்றித் தென்னிந்தியா, கங்கைச் சமவெளி தீரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், பர்மா, தென் பர்மா, சுமத்ரா, ஜாவா, போர்னியோவின் கிழக்குப் பகுதி, இந்து சீனா ஆகியவையும் சோழப் பேரரசில் இடம் பெற்றிருந்தன. தமிழர் இலங்கையிலும், மலாயா, இந்தோனேஷியா, இந்தோசீனப் பகுதிகளிலும் பரந்து வாணிகம், கலை ஆகியவற்றைப் பரப்பியதுடன் அமையாமல் குடியேற்றங்கள் அமைத்தும், அரசு, பேரரசுகள் அமைத்தும் மிக நீண்ட காலம் பெருவாழ்வு கண்டனர். சம்பாவிலும் (ஊhயஅயீய) கம்போடியா விலும் ஆண்ட தமிழ்ப் பேரரசர் கட்டிய கோவில்கள் சோழப் பேரரசர் கோவில்களையே பெரிதும் ஒத்துள்ளன. இராசேந்திர சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள ஒரு கோவிலில் கம்போடிய அரசன் அனுப்பிய கல் ஒன்று பதிக்கப் பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் காலத்தில் கம்போடிய மன்னன் தன் புதல்வனுக்குச் சோழன் பெயரிட்டு விழா நடத்தினான். பரத நாட்டியம் கம்போடியாவிலும் பல தீவுகளிலும் உள்ள நாட்டியம் தமிழகத்தின் பரத நாட்டியத்துடன் தொடர்புடையது என்று கருதப்படுகின்றது, இந்தோனேஷி யாவிலும் இந்தோசீனாவிலும் சைவசித்தாந்தம் நீண்டகாலம் பயின்று வந்தது என்று அறிகிறோம். தாய்லாந்திலுள்ள அரசவைக் குருமார்கள் தமிழ்த் திருப்பாவை விழாவும் திருவெம்பாவை விழாவும் நடத்துவதுடன் தமிழ் மந்திரங்களும் பயிலுகின்றனர். சேர, சோழ, பாண்டியர் என்ற பெயர்கள், மதுரை போன்ற ஊர்ப் பெயர்கள் சுமத்ராவிலும் அதை அடுத்தடுத்த தீவுகளிலும் இன்னும் வழங்குகின்றன. பாழடைந்த நிலையிலுள்ள போநகர், அங்கோர்தாம் கோவில்கள், தமிழர் கடல் கடந்த சிற்பப் பெருமைகளுக்குச் சான்றாகும். மலாயாவிலும், கிழக்குத் தீவுகளிலும் இசுலாம் சமயத்தைப் பரப்பியவர் தமிழ் வணிகரே என்றும் தெரியவருகிறது. தமிழகத்துடனும், தமிழுலகத்துடனும் தொன்றுதொட்டு மலாயா கொண்டுள்ள தொடர்புகளை மலாயாவாழ் தமிழர்கள் புதுப்பிக்க வேண்டுமானால் அவர்கள் பெரும்பகுதி தொழிலாளர்களாக மட்டும் இருந்து தம் உழைப்பைப் பிறர்க்கு விட்டு விட்டுத் தளர்வுறுதல் கூடாது. உண்மையில், உழையாத இனத்தவர் அதைப் பேணுவர் என்றும் கூற முடியாது. உழைப்பாளராகிய தமிழர், மலாய் நாட்டின் அரசியல், கலை, அறிவுத் துறைகளிலும் பழங்காலம் போலப் பெரும் பங்கு கொண்டு மலாய் நாட்டுக்கும் மலாய் இனத்துக்கும் மீண்டும் புது வாழ்வளிக்கப் பாடுபடுதல் வேண்டும். எஎஎ வள்ளுவர் நிழல் முதற் பதிப்பு – 1959 இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. நிழலும் ஒளியும் நிழலும் ஒளியும் வேறு வேறு பண்புகளல்ல. தமிழிலக்கிய வழக்கு அடிக்கடி இரண்டையும் ஒரு பொருளில் வழங்குவது உண்டு. தவிர, ஒளியின்றி நிழலுக்கோ, நிழலின்றி ஒளிக்கோ உருவும், வடிவும், எல்லையும் இருக்க முடியாது. ஒளி நிழல் விரவிய இடங்களில் எது நிழல், எது ஒளி, என்று கூறுவது அரிது. ஏனெனில், திண்ணிய நிழலை நோக்க நிழல் ஒளியாகவும்; முனைத்த ஒளியை நோக்க, ஒளி நிழலாகவுமே காட்சியளிக் கின்றன. எனவே நிழல், ஒளி என்பவை அளவு வேறுபாடுடைய ஒரே பண்புக்கூறுகள்; வேறு வேறு பண்புகள் அல்ல. ஒளியாயினும் சரி, நிழலாயினும் சரி-உருவோ, வடிவோ, வண்ணமோ உடையதனை நாம் நிழல் என்றே கூறுகிறோம். வானவில் ஏழு வண்ணங்களையும் ஒரே வண்ணமாகக் காட்டும் கதிரவனொளிகூட இவ்வகையில் நோக்கினால் கதிரவன் நிழலேயாகும். அது நிழலுக்கெல்லாம் உருக்கொடுத்து எங்கும் பரவுவதாதலினாலேயே நாம் அதனை நிழல் என்று கூறாமல் ஒளி என்று கூறுகிறோம். அத்துடன் அதன் ஒளி நிழல் கூறுகளில் நாம் காணும் கூறு மிக மிகச் சிறிது. நம் கண்கள் காணப்பெறாத கூறுகளே மிக மிகப் பெரியன; மிக மிகப் பல. அவற்றை இயல் நூலார் வானவில் வண்ணப் பட்டைக்கு இப்பால் கதிர்கள்(ரடவசய சயலள), அப்பால் கதிர்கள் (iகேசய சயலள) என்று குறித்துள்ளனர். அறிஞரின் அறிவை நாம் ஒளியென்று கூறினால், அறிஞருள் அறிஞரான திருவள்ளுவரை நாம் ஒளிகளுக்கு ஒளியாகிய கதிரவன் என்னலாம். கதிரவன் நிழல் நம்மீதும் வீசும், மற்ற ஒளிகள் மீதும் வீசும். அந் நிழல் நமக்கு ஒளியாய், அவ்வொளிகளுக்கும் ஒளியாய் அமையும். அதுபோலத் திருவள்ளுவர் அறிவை நாம் நம் அறிவால் அளந்தாலும் அது கடல் போன்றதாகவே, கதிரவன் ஒளி போன்றதாகவே இருக்கும். நாம் கடல்களென கதிரவனொளிகளெனக் கருதும் அறிஞர் பேரறிஞர் அறிவுகளால் அளந்தாலும், அப்போதும் அது கடலாக, கதிரவனொளியாகவே திகழும். எந்த நிழலுக்கும் அஃது உருத்தரும் வண்ணம் பிரித்துக் காட்டும். ஆனால், அதை நிழலாக்கிக் காட்டும் எந்த நிழலையோ, அதன் வண்ணம் பிரித்துக் காட்டும் எந்த ஒளியையோ நாம் காண முடியாது. கதிரவனைப்பற்றி, கதிரவனொளியைப்பற்றி ஆராயத் துணிந்த உயிரினம் எதுவும் கிடையாது. மனிதனுக்கு மட்டுமே அந்தத் துணிவு பிறந்துள்ளது. கதிரவனைத் தாண்டிய ஓர் உயர் ஒளிக் கூறு அவன் அகத்தில் மின்னுகின்றது என்பதற்கு இஃது ஒரு சான்று. ஆனால், இந்த உயிரினத்தின் துணிச்சல் இத்துடன் நின்றுவிடவில்லை. தன்னைப்பற்றித் தாய் தந்தையர், தாய் தந்தையரைப் பெற்ற மூதாதையர், அம் மூதாதையரையும், தாய் தந்தையரையும் தன்னையும் உலகுடன் படைத்தவராகக் கூறப்படும் மூலமுதற் பொருள் எதையும், எவரையும் அவன் ஆராயாது விட்டது இல்லை. எனவே, திருவள்ளுவரும், அவர் திருக்குறளும் அவன் ஆராய்ச்சிக்கு உட்படாதிருக்க முடியாது. ஆயினும், திருக்குறளாராய்ச்சியில், வள்ளுவர் ஆராய்ச்சியில் அவன் இன்னும் புராணக் கால அறிஞரின் நிலையிலேயே இருக்கிறான் என்னலாம். திங்களின் ஒளியும், மற்றக் கோளினங்களின் ஒளிகளும் கதிரவனோடொத்த ஒளிகள், அவை கதிரவனைப் போலவே தொலைவிலுள்ளன என்று புராண அறிஞர் எண்ணினர். மற்றக் கோளினங்களும் கதிரவனும் பரந்தகன்ற மண்ணுலகை, நாம் கண்டு களிக்கும்படி வலம் வருகின்றன என்று மக்கள் நம்பினர். ஆனால், இன்றோ அவை வலம் வரவில்லை. கோளினங்களும் நாமும் இடம் செல்கின்றோம் என்று காண்கிறோம். வள்ளுவர் ஆராய்ச்சி வகையிலும் இது போன்ற ஒரு பெரிய மாறுதல் உலகில் வரக் காத்துக் கொண்டிருக்கிறது; வேகமாக வரத் தொடங்கியுள்ளது. கதிரவனொளியை நம் கண்களிலிருந்து பிற கோளினங்களின் நிழல் மறைப்பதுண்டு. நம் மண்ணுலகின் நிழலேகூட நாள்தோறும் அரை நாளைக்கு ஒரு பாதி உலகுக்கு அவ்வொளியை மறைக்கின்றது. ஆனால், கதிரவனின் ஒளிப் பிழம்பின்மீது வேறு எதன் ஒளியோ, நிழலோ சாய்வதை நாம் என்றும் காண முடியாது. கதிரவனைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் ஒளி இருப்பதாக நாம் அறிந்தால்கூட அதன் ஒளி நிழல் அதன்மீது படுவதை நாம் காணமுடியாது. ஏனெனில், நம் கண்ணுக்கு ஒளிகாட்டும் ஒளியே அக் கதிரவன் ஒளிதான். கதிரவனுக்கு ஒளி தருவது எது? கடவுளுக்குத் தாய் தந்தையர் யார்? அவர் எந்த ஆண்டில் பிறந்தார்? இத்தகைய கேள்விகளை யாராவது கேட்டால் நாம் அவர் களைப் பித்தர் என்று கருதுவோம். ஆனால், திருவள்ளுவர்க்கு முன் மாதிரி எது? அவர் கருத்தொளியினூடாக நெளியும் நிழற் கூறுகள் அல்லது ஒளிக் கூறுகள் எவை? என்று யாராவது கேட்டால் நாம் இன்று சிரிக்க மாட்டோம், கேட்பவர்களைப் பித்தர் என்று கருதமாட்டோம். எனினும், இவ்வாறு கருதும் காலம்-தமிழர் கருதும் காலமல்ல, உலகம் கருதும் காலம்-நெடுந் தொலைவில் இல்லை. அக் காலத்தை நோக்கிச் செல்லும்-அதன் வாயிலைத் திறக்கும் திறவை நம்முன் நீட்டும் திறமுடைய சில கருத்துகளையே வள்ளுவர் நிழற் கூறுகளாகத் தமிழன்னையின் திருவடிகளில் அன்பு மலர்களாகத் தூவுவோம். 2. ஜெர்மானிய அறிஞர் கண்ட கீழ்த்திசை ஒளி வள்ளுவர் புகழ் இன்று வையகமெங்கும் பரவி வருகிறது. கிறித்துவ நெறி, புத்த நெறி, இசுலாமிய நெறி ஆகிய உலகப் பெருநெறிகளுக்குரிய திருவேடுகளின் புகழ் அளாவி, அவற்றுடன் அன்புப் போட்டியிட்ட வண்ணமே அது நாடு கடந்து நாடாக, மொழி கடந்து மொழியாக, உலகெங்கும் புகழொளி வீசத் தொடங்கியுள்ளது. உலகாளும் மேலை வல்லரசுகள் போற்றி வளர்க்கும் நெறி கிறித்துவம். உலகில் பல பெரு நாடுகள் அளாவிப் பரவியுள்ள நெறிகள் புத்தமும் இசுலாமும். அவற்றின் திருவேடுகள் நாடு, மொழி, எல்லை கடந்து பரவுவதற்கான வாய்ப்புகள் பல. அவற்றைப் பரப்புவதற்கான முயற்சிகளும் திட்டங்களும் நிலையங்களும் ஏராளம். ஆனால், வள்ளுவர் பிறந்த தமிழினமோ இன்னும் ஊரும், பேரும், உரிமையும் அற்ற நிலையிலேயே மறுகுகின்றது. அவ்வினத்தின் தாயகங்கள் அரசியல் வாழ்வில் தட்டுக் கெட்டுத் தடுமாறுகின்றன. அயலகங்களிலோ, அவ்வினத்தவர் அயல் நாட்டவர்களாலும், இனத்தவர்களாலும் கறிவேப்பிலைகளாகப் பயன்படுத்தப்பட்டும் அவர்கள் வாழ்வு முற்றிலும் சீர்குலைவுக்கே ஆளாகி வருகிறது. இந் நிலையில், நல்லிலக்கிய ஏடு என்ற தனியொரு வாய்ப்பின்றி வள்ளுவர் குறளின் புகழுக்கு வேறு வாய்ப்பு இல்லை. இன்றும் வேறு வாய்ப்பு ஏற்பட வழியும் இல்லை. ஆயினும், வாய்ப்பில்லாமலே அது வாழ்ந்து வந்துள்ளது. வளர்ப்பாரில்லாமலே வளர்ந்து, பரப்புவாரில்லாமலே பரந்து, அஃது உலகில் வண்ண ஒளி வீசிவருகின்றது. இவ்வாறு இன முயற்சியின்றித் திருக்குறள் உலகப் பொது மறையாகப் பரவி வருவதன் மறைதிறவு யாது? தமிழகத்திலேயே-தமிழர்களிடையிலேயே-பாகவதம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம், புராணங்கள் ஆகியவற்றைப் பரப்புவதற்கான முயற்சிகள் எவ்வளவோ உண்டு. அவற்றில் பத்தில் ஒரு பங்குகூடத் திருக்குறளுக்கு என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை என்னலாம். தமிழகம் சூழ்ந்த தமிழின மொழிகளிலேயே திருக்குறளைத் தமிழர் எவரும் மொழி பெயர்க்க முயன்றதில்லை. அவ்வம் மொழியினரே அத் துறையில் முனைந்துள்ளனர். ஆங்கில மொழி ஒன்றில் மட்டுமே-அதுவும் வெளியார் போற்றி மொழிபெயர்க்கத் தொடங்கிய பின்னரே தமிழர் அப் பக்கம் கருத்துத் திருப்பியுள்ளனர். ஏனைய உலக மொழிகளிலோ, அன்றும் இன்றும், தமிழர் முயற்சி முயற் கொம்பேயாகும். ஆயினும், இச் சூழல்களிடையேகூடத் திருக்குறள், கிறித்துவத் திருவேடாகிய விவிலிய நூலுக்கு அடுத்தபடியாக, உலக மொழிகளறிந்த இரண்டாவது திருஏடாக, இடம் பெற்றுள்ளது என்று அறிகிறோம். திருக்குறளின் இப் புகழொளி பற்றித் தமிழர் பெருமைப் படத் தொடங்கிவிட்டனர் என்பதில் ஐயமில்லை. தமிழகத்திலேயே இப்பொழுது எங்கும் திருக்குறட் கழகங்கள் நிலவி வருகின்றன; பெருகி வருகின்றன; அத்துடன், ‘வள்ளுவன் புகழ் வையகம் எல்லாம் வாரி இறையடா தமிழா’! என்ற கவிதையாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆயினும், இவ்வுணர்ச்சிகள் யாவும் இன்னும் உணர்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. அறிவும் செயலும் அவ்வழி செல்லவில்லை. மக்கள் உணர்ச்சியை அவ்வழி ஊக்கிச் செயலாற்று விக்கத்தக்க, அதைப் பேணி வளர்க்கத்தக்க தமிழர் சமுதாய ஆட்சியும் அறிவாட்சியும், அரசாட்சியும் இன்னும் தொலைக் கூக்குரல்களாகவே உள்ளன. இன்றைய நிலையில் வள்ளுவர் குறள் பற்றிய தமிழக உயர்ச்சி அவர் உலகப் புகழை வளர்க்கும் உணர்ச்சியாய் அமையவில்லை. நேர்மாறாக, அஃது இன்னும் அப் புகழின் ஓர் எதிர் நிழலாக, ஓர் எதிரொலியாகவே இயல்கின்றது. வள்ளுவர் புகழின் மறைதிறவை-மருமத்தையே தமிழர் எவரும் இதுவரை கண்டுணர்ந்ததில்லை; காண முயன்றதில்லை என்றால் தவறாகாது. ஏனெனில், நூல்களென்னும் கோடானு கோடி மின்மினிகளிடையே அதை ஓர் ஒளி மிக்க மின்மினியாகத் தான் அவர்கள் கருதி வந்துள்ளனர். மின்மினிகளுக்கு ஒளிதரும் ஒளிகளுக்கெல்லாம் ஒளியான கதிரவன் அவர் என்று தமிழர் எவரும் கருதியதில்லை. அது மட்டுமன்று. தமிழகம் சூழ்ந்த நாடுகளில் உள்ளவர்களோ, தமிழகத்தில் வந்து தங்கித் தமிழும், தமிழரும் உணர்ந்து, தமிழாராய்ந்த மேலை நாட்டு அறிஞரோ கூட இதைக் கண்டுணரவில்லை. தமிழே அறியாது, தமிழகமே காணாது, ஜெர்மன் மொழியிலுள்ள ஏதோ ஒரு தொலை மொழிபெயர்ப்பு மூலமே திருக்குறளைப் பற்றி அறிந்த தொலைநாட்டு உலகப் பேரறிஞர் ஒருவருக்கே அம் முழுப் பெருமை உரியது. அவர்தாம் ஆல்ஃபிரட் ஷ்வைட்சர் என்னும் ஜெர்மானிய அறிஞர். குறள் தந்த கோமானான வள்ளுவரைப் பற்றி, அவர் காலத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள மெய்ச் செய்திகள் மிக மிகச் சிலவே. இவைபற்றி அறிஞர் ஆல்ஃபிரட் ஷ்வைட்ஃசருக்கும் நம்மைவிட மிகுதியாக எதுவும் தெரிந்திருந்தது என்று கூறமுடியாது. வள்ளுவர் வாழ்ந்த காலம் கி.பி.முதல் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்டதாயிருக்கலாம் என்பதே நம் வரலாற்றாராய்ச்சியாளர் பெரும்பாலாரின் முடிவு. இதன் ஒரு தொலை நிழல் மட்டுமே, அறிஞர் ஷ்வைட்சர் இயற்றிய இந்தியர் கருத்து வளர்ச்சி வரலாறு என்ற ஏட்டிலும் இடம் பெறுகிறது. அது கிறித்து பிறந்த ஊழியின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட் டிருத்தல் கூடும் என்று மட்டுமே அந் நூலில் அவர் சுட்டியுள்ளார். ஆனால், இம் முடிபுடன் அவர் தொடங்கியுள்ள கீழை உலக ஒப்பீட்டாராய்ச்சிகள் வியத்தகு புது விளக்கங்களைக் கண்டுள்ளன. தமிழகத்தின் சைவ, வைணவ பத்தி இயக்கங்கள்; அவற்றின் நாயன்மார்கள், ஆழ்வார்கள்; அவர்கள் வழி வந்த இடைக்கால இந்திய மாநிலத்தின் சமய அறிவுத்துறை ஆசாரியர்களான சங்கரர், இராமானுசர், மத்துவர், சைதன்னியர், இராமானந்தர், கபீர், அணிமைக்காலப் புதுமலர்ச்சித் தலைவர்களான இராசாராம்மோகன் ராயர், தயானந்த சரசுவதி, மகரிஷி தேவேந்திரநாத தாகூர், இராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்த அடிகள், கவிஞர் இரவீந்திரநாத தாகூர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர் சமய அருட் கருத்துகளின் தோற்ற வளர்ச்சி வரலாறுகளை ஷ்வைட்சர் அலசி ஆராய்ந்துள்ளார். அவர்களின் உயிர் மூலக்கருத்துகளை எல்லா உலக அறிஞர்களின் வழக்கப்படி வேதபிராம்மண, ஆரணியக உபநிடதங்களிலே இதிகாச புராணங்களிலே இடைக்கால சமற்கிருத இலக்கிய ஏடுகளிலே அவர் தேட முற்பட்டுள்ளார். ஆனால், அக் கருத்துகளின் மூலங்கள் அவற்றுள் எவற்றிலும் உபநிடதங்களில் கூட நேரிய முறையில் காணக் கிடைக்கவில்லை. இவற்றின் பயனாக, அக் கருத்துகள் அவற்றினின்றும் இயல்பாக வளர்ந்தவையல்ல என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அதே சமயம் அம் மூலக் கருத்துகளை அவர் திருக்குறளில் காண்கிறார்! அவை வேத புராண இதிகாசங்களுக்கு சமற்கிருத இலக்கியத்துக்குப் புறம்பான வேறொரு தொடர்பான உயிர் வளர்ச்சியிலிருந்து கிளைத் தவை என்பது அவர் கருத்து. அவ்வெல்லாக் கிளைகளின் மூலங்களையும் நாம் திருக்குறளில் காண முடியும் என்று அவர் கூறுகிறார்! இது மட்டுமோ? கி.பி.முதல் நூற்றாண்டுக்கே உரியதென்று கருதப்படும் புதிய இந்து சமயத் திருவேடான பகவத்கீதையின் கருத்து களுடனும், திருவள்ளுவர் காலத்துக்கே முற்பட்டவை என்று நாளிது வரை கருதப்பட்டுவரும் பார்ப்பன சமய, புத்த, சமண சமயக் கருத்துகளுடனும் திருக்குறட் கருத்துகளை அவர் ஒப்பிட்டுக் காண்கிறார். தவிர, கீழையுலகின் மேல் கோடியில் கி.பி.முதல் நூற்றாண்டிலும் புதிதாக எழுந்த கிறித்துவ, இசுலாமிய சமய முதல்வர்களின் தனி ஒளிகளுடனும் அவர் வள்ளுவர் ஒளியை ஒப்பிட்டாராய்ந்துள்ளார். வள்ளுவர்க்குரிய தாகக் கருதப்பட்ட நாள்களுடன் சம காலத்தவராகவும் முற்பட்ட பிற்பட்ட காலங்களுக் குரியவராகவும் அவரும் அணித்தான நாட்டினராகவும், தொலை நாட்டினராகவும் இவ்வெல்லா வகையினர்களின் தலைசிறந்த கருத்துகளையும், தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துகளையும் அவர் திருக்குறளில் காண்கிறார். அதேசமயம் ஒவ்வொரு கருத்து வகையிலும், திருக்குறளே வளர்ச்சிப் படியிலும் தன்மையிலும் முற்பட்ட கருத்து மூலங்களை உடையதாய் இலங்குவதை அவர் எடுத்துக்காட்டு கிறார். திருக்குறளின் தலைசிறந்த கருத்துகளின் பலதரப்பட்ட நிழல்களாகவே, திருவள்ளுவர் முழுநிறை கருத்துகளின் கால தேச வேறுபாட்டுத் திரிபான பண்புச் சிதைவுகளாகவே இவ்வுலகக் கருத்துகள் யாவும் அமைந்துள்ளன- இதுவே ஷ்வைட்சர் கண்ட வியத்தகு முடிவு. மேலீடாகப் பார்ப்பவர்க்கும் இம்முடிபில் ஒரு கால முரண்பாடு எளிதில் தென்படும். இதை ஷ்வைட்சர் உணராம லில்லை. அதற்கு அவரே, அவர் கண்ட ஆதாரங்களினடிப் படையில், ஒரு விளக்கமும் தருகிறார். கிறித்துவ ஊழியின் தொடக்க நூற்றாண்டுகளிலே, தமிழகத்திலே எழுந்ததாகக் கொள்ளப்படும் திருக்குறள், எப்படி அக் காலத்துக்கு உரியனவும் முற்பட்டனவும் தமிழகத்துக்கு அப்பாற்பட்டனவுமான இத்தனை கருத்துப் பரப்புகளுக்கும் மூலமாயிருக்கக்கூடும்? இஃது ஒருவன் தன் பிள்ளை பேரப் பிள்ளைகளை மட்டுமன்றி, உடன் பிறந்தார்களையும் தாதை மூதாதையர்களையும் பெற்றான் என்று கூறுவது போன்றதே யாகுமன்றோ? இக் கேள்விக்கு ஷ்வைட்சர் தரும் விளக்கத்தை அவர் மொழியிலேயே காண்போம். ``இவ்வுலகம் மாயை யன்று. இவ் வாழ்க்கை நிலையாமை யுடையதன்று, நிலையானதே. இக் கருத்தை இயல்பாகவும், சமயம் சாராத ஒழுக்க முறையாகவும் விளக்கும் ஒரு கோட்பாடு இந்திய மக்களிடையே கி.பி.முதல் நூற்றாண்டுகளில் நிலவிற்று. ஆனால், இது பற்றிய தடத்தையே நாம் பார்ப்பன சமயத்திலோ, புத்த சமயத்திலோ பகவத்கீதை சார்ந்த புதிய இந்து சமயத்திலோ காண முடியாது. ஆயினும், அது நாளடைவில் இந்து சமயத்தில் சமயப் பேராசிரியர்கள் மூலமாகத் தோய்ந்து ஊறிச் சுரந்துள்ளது-சுரந்து வருகிறது. இச் சமயப் பேராசிரியர்கள் பெரும்பாலும் `தாழ்ந்தவர்’கள் எனக் கருதப்படும் பொதுமக்கள் வகுப்பிலேயே பிறந்தவர்களென்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்களிடையே மக்களாக வாழ்ந்து, மக்கள் உணர்ச்சி களாலேயே உந்தப்பட்டு இக் கருத்துகளை இந்து சமயத்தின் அழகு மலர்களாக வளர்த்துள்ளனர், வளர்த்து வருகின்றனர்!”- இந்தியக் கருத்துகளின் வளர்ச்சி வரலாறு - பக்கம் 205. திருவள்ளுவரின் கருத்துகள் திருக்குறள் வடிவிலேயே நமக்கு வந்தெட்டியுள்ளன. இஃது இயல்பே. கிட்டத்தட்ட இதே நிலைமையிலேதான் சமய முதல்வர்கள், சமயாசிரியர்கள், கருத்துகள்கூட நமக்குக் கிட்டியுள்ளன. இவ்வெல்லாத் தலைவர்கள் வகையிலுமே அவ்வத் தலைவர்களுக்குரிய புதுமைக் கருத்துகள் அல்லது சிறப்புக் கருத்துகள் மூலமே அவர்கள் புகழ்பெற்றிருத்தல் வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அதே சமயம் அவர்கள் கருத்துகளின் ஒரு பகுதி அவர்களுக்கு முற்பட்ட மரபுரிமைக் கருத்துகளாக இருக்கக் கூடாதென் றில்லை. கருத்துகளின் பெரும்பகுதியோ, கிட்டத்தட்ட முழுவதுமோகூட மரபு வரவாக இருந்திருத்தலும் முடியாததன்று. ஏனெனில், முதல்வர் பங்கு கருத்துகளின் தொகுப்புரை, விரிவுரை, திருத்தவுரைகளாக இருத்தல்கூடும். இந் நிலையில் எம்முதல்வர் கருத்துத் தொகுதியிலும் அது போலவே திருவள்ளுவர் கருத்துத் தொகுதியிலும், அவ்வவர்களுக்குரிய தனிப்பகுதி எவ்வளவு, அவ்வவர்கள் முன்னோர்களுக்குரிய பொதுப்பகுதி எவ்வளவு என்று போதிய சான்றுகளின்றி நம்மால் பகுத்துரைக்க முடியாது. திருவள்ளுவர் தமிழினத்தவர் கருத்துகளுக்கு அழகிய உருவும் கலைக்கோப்பும் ஒழுங்கும் தந்த பேரறிஞர், பேரெழுத் தாளர் மட்டுமே என ஷ்வைட்சர் கருதியுள்ளார். அவை பொதுக் கருத்துகளே யென்றும், கீழை உலகின் ஒரு மக்கட் பேரினத்தின் இனக் கோட்பாடே என்றும் அவர் எண்ணியுள்ளார். ஆகவே தான் திருவள்ளுவர் கி.பி. முதல் நூற்றாண்டுகளுக்குரியவர் என்று அவர் நம்பினாலும், அக் கோட்பாடு வேதகாலத்துக்கு முன்னிருந்தே நிலவி வந்த ஒன்று என்று அவர் கொள்கிறார். சமுதாய, சமய, அரசியல் ஆட்சி வகுப்பினரால் மதிக்கப்படாமல், இருட்டடிக்கப்பட்ட நிலையிலேயே அம் மூலப் பண்டாரத்தி லிருந்து நேர் நிழலாகத் திருவள்ளுவர் திருக்குறளும், சுற்று வழியாகவும் கிளை நிழல்களாவும், வள்ளுவர் மரபிலேயே வந்த அவர் நேர் நிழலாகவும் உலக, கீழையுலகச் சமய சமுதாயக் கருத்துகளும் வளர்ந்திருத்தல் வேண்டும் என்பது அவர் உய்த்துணர் முடிபு ஆகும். நாகரிக உலகின் சமயக் கருத்துகளுக்கும் திருவள்ளுவர் திருக்குறளுக்கும் இடையே ஷ்வைட்சர் கண்டுணர்த்தும் தொடர்பு விளக்கம் இது. ஷ்வைட்சருக்கே யுரிய இக் கருத்துத் தமிழகத்துக்கும் உலகத்துக்கும் புத்தம் புதிது. உலக நாகரிகம், உலகப் பெருஞ் சமயங்கள், இந்திய மாநில நாகரிகம் ஆகியவற்றின் வரலாறு பற்றிய உலகப் பொதுக் கருத்துகளில் அது புரட்சிகரமான மாறுபாடு வேண்டுவது. எனவே, அதன் முழு நிறை விளக்க ஆராய்ச்சி திருவள்ளுவர் திருக்குறளாராய்ச்சிக்கும், தமிழக ஆராய்ச்சிக்கும் மட்டும் உரியதன்று. இந்திய நாகரிக ஆராய்ச்சி, உலக நாகரிக ஆராய்ச்சி ஆகிய அகல் அரங்குகளுக்கே உரியது. ஆயினும், தமிழக நோக்கிலிருந்து, அதன் சார்வு எதிர்வுகளை, அதன் மூலம் ஏற்படும் புதிய ஒளி நிழற் கோடுகளை ஆராய முயல்வோம். 3. திருவள்ளுவர் காலம் மனித நாகரிகம் ஓர் ஒளி வளர்ச்சி. அது முற்றொளி நோக்கிப் பொதுவாக முன்னேறிவருகிறது. ஆனால், அவ்வப் போது ஆங்காங்கு முன்னேற்றம் தடைப்பட்டுச் சிறிது தேக்கம் ஏற்படுவதும், சில சமயம் இடையே தற்காலிகத் தளர்ச்சி ஏற்படுவதும் உண்டு. வளர்ச்சியை நாம் நிழலினின்று ஒளி-நிழல் நோக்கிச் செல்லும் முன்னேற்றமாகவும், தளர்ச்சியை ஒளி நிழலினின்று தற்காலிகமாகப் பின்னடைந்த நிழல் ஒளியாகவும் காணலாம். இந்த ஒளி நிழல் கூறுகளை மதிப்பிட்டுணர்வதற்கு வள்ளுவர் பற்றிய கால வரையறை இன்றியமையாததாகும். கால வரையறையை ஆராயப் புகாமலே அதை ஒதுக்கி வைத்தே அறிஞர் ஷ்வைட்சர் வள்ளுவர் தனி ஒளி நிழல் கூறுகளை ஆராய முற்பட்டுள்ளார். இதில் அவர் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. திருவள்ளுவர் ஓர் உலகப் பெரியார். ஆனால், அவர் தம் காலத்தில் வாழ்ந்த பெரியார்களுள்ளும், காலங்கண்ட பெரியார் களுள்ளும், காலங் கடந்த பெரியார்களுள்ளும் தனி முதன்மை யுடையவர். அவர் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்று கொண்டாலும் சரி. அதற்குமுன் ஆயிர, ஈராயிர ஆண்டு, அல்லது அதற்குப் பின் ஆயிர, ஈராயிர ஆண்டு என்று கொண்டாலும் சரி, இவ்வெல்லாக் காலங்களிலும் அவர் ஒரே நிலையில், ஒத்த புதுமை, ஒத்த பெருமை உடையவராகவே காணப்படுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால், காலங் கடந்த இந்தப் பண்பே வள்ளுவர் காலத்தை அறுதியிட்டுக் காணும் ஆர்வத்தைத் தூண்டுவது ஆகும். அதுவே ஓரளவு அதைச் சுட்டிக்காட்டவும் போதியது என்னலாம். திருவள்ளுவர் காலம் கிறித்துவ ஊழியின் தொடக்க நூற்றாண்டுகள் அல்லது கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்பதை அறிஞர் ஷ்வைட்சர் ஒரு முடிந்த முடிபாகக் கொண்டுள்ளார். ஆனால், தமிழகத்திலே எந்த ஆராய்ச்சியாளரும் அத்தகைய முடிந்த முடிபாக எதையும் அறுதியிட்டுக் கூறியதாகத் தெரியவில்லை. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், அது சங்க காலத்திய நூல், சங்க காலத்திலும் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டும் என்று மட்டுமே கூறுகின்றனர். இவருள் சிலர் அது கி.பி.முதல் நூற்றாண்டுக்கு உரியதாகலாம் என்றும், வேறு சிலர் கி.மு.1,2,3ஆம் நூற்றாண்டுகளுக் குரியதாகலாம் என்றும் ஊக மதிப்புத் தந்துள்ளனர். ஆனால், முதற் கருத்தின் ஒரு தொலை நிழலே ஷ்வைட்சர் வரை சென்று எட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் கி.பி.2ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்டது என்பது 2ஆம் நூற்றாண்டு என்று அவரால் கொள்ளப் பட்டுள்ளது. ஷ்வைட்சர் கொண்ட காலத்துக்குத் திருவள்ளுவர் முற்பட்டவர் என்று கருதும் ஆராய்ச்சியாளரே மிகப் பெரும்பாலானவர். ஆயினும், அக் காலத்துக்கு அவர் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்று கருதுபவர் ஓரிருவரே. முடிந்த முடிபாக எதுவும் கொள்ள முடியாத நம் நிலையை இது வலியுறுத்திக் காட்டுகிறது. ஆனால், நாம் ஏற்கும் முடிபு எதுவானாலும், எல்லாச் சார்பாளரும் தரும் ஆதாரங்களைக் கூர்ந்து நோக்கினாலன்றி, நாம் வள்ளுவர் காலச் சூழ்நிலையை உள்ளவாறு காணமுடியாது. வாதங்களின் முடிபுகளைவிட இவ்வகையில் வாத ஆதாரங்களே மிகவும் பயன் உடையவை. சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் திருக்குறளை ஒட்டிய கருத்துகளும் சொற்றொடர்களும் பல உள்ளன. ஆனால், திருவள்ளுவர் காலத்தை நிலையாக அறுதியிடுவதில் இத்தகைய ஒற்றுமைக் கூறுகள் முற்றிலும் பயன்படவில்லை. ஏனெனில், சிலர் இவ்வொற்றுமைக் கூறுகளில், திருவள்ளுவர் கருத்தையும் சொல்லையுமே மூலமாகவும், வேறுசிலர் மற்ற நூல்களையே மூலமாகவும் கொள்ள இடமேற்படுகிறது. திருக்குறளின் பெயரையோ, ஆசிரியரையோ மேற்கோளாகக் காட்டும். சொற்றொடர்களே இவற்றைவிட நன்கு பயன்படுபவை. அத்தகையவை ஒரு சிலவே. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ - குறள் 55 என்ற குறட்பா, திருவள்ளுவர் கருத்துப் பொறிப்பும் சொற் பொறிப்பும் கொண்ட ஒன்று, மணிமேகலையில், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப்பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!’ என்ற அடிகள் இந்தக் குறட்பா முழுவதையும் தன்னகம் கொண்டு, அவ்வறவுரைக்குரிய அறவோராகிய திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று சுட்டியும் காட்டுகிறது. திருவள்ளுவர்க்குத் தமிழகம் சூட்டியுள்ள தனிப் பெரும் புகழ்ப் பெயர்களுள் “பொய்யில் புலவன்” என்பதும் ஒன்று. திருக்குறள் நூலையும் அதன் அறிவுரைகளையும்-ஆசிரியரையும், இந் நாளில் நாம் எவ்வளவு உச்சிமேற் கொண்டு பாராட்டுகிறோமோ, அதே அளவில் மணிமேகலை ஆசிரியர் காலத்துக்குள்ளேயே அவர் புகழ் பெற்றிருந்தார் என்பதை இப் பாடல் காட்டுகிறது. சொற்றொடரின் உயிர்த்துடிப்பை நோக்க, திருவள்ளுவர் புகழ் இன்று போலவே அன்றும் பழம் புகழாய் விளங்கியிருந்தது என்று தோற்றுகிறது. திருக்குறட் கருத்துகளும் வாசகங்களும் சொற்றொடர் களும் மணி மேகலை நூலெங்கும் சிதறலாகக் காணப்படுகின்றன. அவ்வெல்லா ஒப்புவமைக் கூறுகளிலும் திருக்குறளே மூல நூல் என்பதை மேலே காட்டிய ஒரு மேற்கோளே நிலைநாட்டப் போதியது. மணிமேகலையுடன் கதை நிகழ்ச்சி, ஆசிரியர் வாழ்வு ஆகிய இரு வகைகளிலும் சமகாலத் தொடர்புடையது சிலப்பதிகாரம். மேற்குறிப்பிட்ட குறட்பாவே அந் நூலிலும் இது போலக் கிட்டத்தட்ட முழுவதும் எடுத்தாளப் பட்டுள்ளது. வள்ளுவர் பெயர் இங்கே குறிக்கப்படாவிட்டாலும், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரு காலத்தனவாதலால், இங்கும் திருவள்ளுவர் திருக்குறளுரையே மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து!’ என்ற காதை இறுதிக் கண்ணுள்ள வெண்பாவே அது. மணிமேகலை ஆசிரியரைப் போலவே சிலப்பதிகார ஆசிரியரும் நூலெங்கும் குறளாசிரியர் கருத்தையும், சொல்லையும் அடியொற்றிப் பின் சென்றுள்ளார். மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் மற்ற சங்கப்பாடல்கள் பலவற்றின் ஆசிரியரான சீத்தலைத் சாத்தனாரே என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இருவரும் வேறு வேறு புலவர் என்பாரும் உளர். ஆனால், இஃது எப்படியானாலும், சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோ வடிகள் அவர் கூற்றுப்படியே சேரன் செங்குட்டுவன் இளவல் ஆவார். சேரன் செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் பரணர் பாடியுள்ளார். பரணர் சங்கப் புலவர்களுள்ளும் பழைமை யானவர். செங்குட்டுவனையோ, அவன் முன்னோர் பின்னோர் களையோ பாடும் பாடல்களும் சங்கத் தொகை நூல்களில் பல. ஆகவே சிலப்பதிகார, மணிமேகலை நூல்கள் சங்கத் தொகை நூல்களில் சேர்ந்தவையல்லவானாலும், சங்ககால ஏடுகளே என்பது மறுக்க முடியாத உண்மை. செங்குட்டுவன் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு என்று இலங்கைச் சமகால வரலாற்றுக் குறிப்புகளால் நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று வரையறுக்கப்படுவதற்கான ஆதாரம் இதுவே. ஆனால், இது திருவள்ளுவர் காலம் இன்னதுதான் என்று வரையறுக்க வில்லை. இன்ன காலத்துக்கு முற்பட்டது என்றே வரையறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், மேலே கண்டபடி கி.பி.2ஆம் நூற்றாண்டுக்குரிய இந் நூல்களிலேயே வள்ளுவர் பழங்காலப் புகழ் வாய்ந்த அறவோராகக் குறிக்கப்பட்டுள்ளார் என்பது நோக்க, அவர் இதற்கு நெடுநாள் முற்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்தகைய பழம் புகழ் நிலை பெறுவதற்குக் குறைந்தது ஓரிரு நூற்றாண்டாவது தேவைப்படும் என்ற காரணம் காட்டிய அறிஞர் பலர்; அவர் காலத்தை, கி.பி.1 அல்லது கி.மு.1ஆம் நூற்றாண்டு என்று மதிப்பிட்டனர். சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பதை மறுக்கும் அறிஞர் சிலர் உண்டு. அவர்கள் சிலப்பதிகார மணிமேகலை மேற்கோள்களால் ஏற்படும் கால வரையறையையும் ஏற்கத் தயங்கியுள்ளனர். சங்க ஏடுகளிலே இது போன்ற நூலுரை மேற்கோள்களோ, ஆசிரியர் திருவள்ளுவர் பற்றிய குறிப்போ காணப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் அவற்றால் எடுத்தாளப்பட்ட திருக்குறளும் பிற்காலத்தவை ஆகக்கூடும் என்று அவர்கள் கருதியுள்ளனர். மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் குறட் கருத்துகள், சொற்றொடர்கள் சங்கப்பாடல்களிலும் பலப்பல உண்டு. அவ்விரு நூல்களைப்போலவே இப் பாடல்களும் குறளடிகளைப் பின்பற்றியே பாடப்பட்டிருத்தல் வேண்டு மென்பதில் ஐயமில்லை. ஆனால், வெறும் ஐயுறவு, ஆராய்ச்சி ஆகமாட்டா தென்றாலும். ஐயுறவாளர் ஐயத்துக்குத் தக்க ஆதாரங்கள் காட்டியே ஐயமறுக்க முடியும். குறள்-சங்க இலக்கிய ஒப்புவமைகளுள் ஒன்று, கிட்டத்தட்ட மணிமேகலையைப் போலவே ஒரு குறட்பாவை எடுத்தாளுகின்றது என்னலாம். ‘ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவே, நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ!’ - புறம். 34 என்ற அடிகள் புறநானூற்றில் ஆலத்தூர்க்கிழார் என்ற புலவர் பாடலில் இடம் பெற்றுள்ளன. இங்கே, ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ - குறள் 110 என்ற குறட்பாவின் கருத்தும் சொல்லும் பொதிந்துள்ளன என்பதில் ஐயமில்லை. முதல் நான்கடிகள் ‘எந்நன்றி கொன்றார்க்கும்’ என்ற தொடரின் எடுத்துக்காட்டு விளக்கங்களாகவே அமைந் துள்ளன. அத்துடன் ஆசிரியரே இவ் வாசகம் வேறொரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டதென்றும் சுட்டியுள்ளார். ஆனால், மணிமேகலை வள்ளுவரைப் புகழ் பெயரால் ‘பொய்யில் புலவன்’ என்று குறித்தது போலவே, ஆலத்தூர்க்கிழாரும் குறளை அதற்குரிய ஒரு பெருஞ் சிறப்புப் பெயரால் ‘அறம்’ என்று குறித்தார். புறநானூற்றிலேயே காக்கைபாடினியார் என்ற புலவர் மற்றொரு திருக்குறட்பாவின் கருத்தும் சொல்லும் அடியொற்றிப் பாடியுள்ளார். களத்தில் புண்பட்டு மாண்ட தன் புதல்வன் புண்ணுற்றது முதுகிலே என்று யாரோ கூறக் கேட்டுக் கடுஞ்சினத்துடன் பிணங்களைத் துழாவிய வீரத்தாய், அவன் மார்பில் புண்பட்டிறந்தது கண்டு மகிழ்வதை வருணிக்கும் காட்சி அது. ‘படுமகன் கிடைக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே’ - புறம். 278 இவ்வடிகளில், ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்!’ - குறள். 69 என்ற குறட் கருத்தும் சொல்லும் குறிக்கப்பட்டுள்ளன என்பதை எவரும் காணாமலிருக்க முடியாது. வள்ளுவர் குறளின் கருத்தும் சொல்லும் தழுவிப் பாடிய சங்கப் புலவர் பாடல்கள் இன்னும் மிகப்பல உண்டு. ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர். காக்கை பாடினியார் காலத்தால் அவர்க்கு முற்பட்டவர் என்று கருதப்படுபவர். இப் புலவர்கள் கி.பி.1, 2ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராதலால், திருவள்ளுவர் காலம் இவர்களுக்கு முற்பட்டதாதல் வேண்டும் என்று காட்டி அறிஞர் சிலர் அவர் கி.மு முதல் நூற்றாண்டுக் குரியராகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். திருவள்ளுவர் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரியராதல் கூடும் என்று கருதுபவர், அவர் கதை மரபின் ஒரு கூறுடன் வரலாற்றுச் செய்தியொன்றை இணைத்துக் காண்கின்றனர். திருவள்ளுவர் மாணவனும் புரவலனுமாக இருந்து அவரை ஆதரித்தவன், வணிகக் கோமானான ஏலேல சிங்கன் அல்லது ஏலேலன் என்று கதை மரபு கூறுகிறது. கப்பற்பாட்டுகளிலும் தொழிலாளர் பாட்டுக்களிலும் செவிப்படும் விடாப்பல்லவியான ‘ஏலேலோ’ என்பது அவன் பெயரையே நினைவூட்டுவதாகக் கொள்ளப் படுகிறது. இப் பெயரை ஒத்த ‘ஏலாரா’ என்ற சோணாட்டுக் கடலோடி வீரன் இலங்கை மீது படையெடுத்து வென்று கி.மு.2ஆம் நூற்றாண்டில் அந் நாட்டை ஆண்டானென்று இலங்கை வரலாறு குறிக்கிறது. திருவள்ளுவர் வாழ்வு கிமு.2ஆம் நூற்றாண்டினது என்று அறிஞர் கொண்டதன் அடிப்படை இதுவே. திருக்குறளாராய்ச்சி அறிஞரான டி.எ°.கந்தசாமி முதலியார் அவர்கள் புத்தர் கோட்பாடுகளைத் திருவள்ளுவர் கண்டித்திருப்பதாகக் கருதுகிறார். ஆகவே, வள்ளுவர் புத்தர் காலமாகிய கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும், சங்கப் புலவர் வாழ்ந்த கி.பி.1, 2ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும் அவர் துணிந்துள்ளார். ஆயினும், எவ்வாறோ இந்த இரு எல்லைகளுக்கும் இடையில் அவர் வள்ளுவர் காலத்தைக் கி.மு.3ஆம் நூற்றாண்டென்று முடிவு செய்தார். திருவள்ளுவர், புத்தர் காலத்தவராகவே அதாவது, கி.மு.5ஆம் நூற் றாண்டினராகவே இருத்தல் வேண்டுமென்பது சேலம் கல்லூரித் தலைவராயிருந்த அறிஞர், காலஞ்சென்ற இராமசாமிக் கவுண்டர் அவர்கள் கொள்கை. கடைச் சங்க காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 3ஆம் நூற்றாண்டின் நடுவில் முடிவுற்றதாகப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. திருவள்ளுவர் கடைச் சங்க காலத்துக்கே நெடிது முற்பட்டவ ராதல் வேண்டும் என்பது அவர் எண்ணம் ஆகலாம். இவ்வாராய்ச்சிகள் யாவும் வள்ளுவர் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர், நெடிது முற்பட்டவர் என்ற முடிபையே வலியுறுத்தப் போதியன. எவ்வளவு முற்பட்டவர், எந்நூற்றாண்டினர் என்று முடிவு படுத்துவதில் எவரும் வெற்றி பெறவில்லை என்றே கூறுதல் வேண்டும். ஏனெனில், இவ் வகையில் எல்லா முடிவுகளும் ஏறத்தாழ ஊக மதிப்புகளே. சங்ககாலம் அல்லது கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டே வள்ளுவர் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு தரும் ஆராய்ச்சியறிஞர் எவரும் தற்போது இல்லை. ஆனால், அவ்வாறு கருதியவர், வாதிட்டவர் ஒருவர், இருவர் உண்டு. அவர்கள் முற்பட்ட தமிழக அறிஞருள் ஒருவரான கே.என். சிவராஜபிள்ளையும், காலஞ்சென்ற முன்னாள் சென்னை, திருவாங்கூர் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவரான இராவ் பகதூர் எ°.வையாபுரிப் பிள்ளையுமே யாவர். இவர்கள் தொடக்கத்திலிருந்தே தமிழ்ப் பழைமையிலும், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி என்பதிலும் அவநம்பிக்கையும், அதே சமயம் சமற்கிருதப் பழைமையிலும், பெருமையிலும்; ஆராயா நம்பிக்கையும் ஆர்வமும் உடையவர்கள். வரலாற் றாராய்ச்சி முன்னேறுந்தோறும் அவர்கள் வாத முடிபுகள் பெரிதும் மங்கி மறைந்தே வந்துள்ளன. ஆயினும், அவர்கள் வாதம் புதுமை வாய்ந்தது; புதுமை வாய்ந்த மெய்ம்மைகளுக்கு வழிகாட்டுவது. பிறர் வலியுறுத்திக் காணாது மேலீடாக விட்ட செய்திகள் சில பலவற்றைத் தம்கோள் நிறுவும் முயற்சியில் அவர்கள் வற்புறுத்தி விளக்கிச் சென்றுள்ளனர். வள்ளுவர் கால ஆராய்ச்சிக்கு இவை உதவுபவை ஆகும். தமிழ் ஐயுறவு வாதிகளான இவ்விருவருள் அறிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்களே முதல்வரும் வழிகாட்டியும் ஆவார். சங்ககாலத்தை முற்காலப் பிற்காலப் பல்லவர்களுக் கிடைப்பட்ட கி.பி.5ஆம் நூற்றாண்டில் காண விழைந்தவர் அவர். ஆந்திர நாட்டு அறிஞர் ஒரு சிலர் இதை ஆர்வமாகத் தழுவ முயன்றும் ஆராய்ச்சிப் போக்கால் இம் முடிவு சிதறுற்றுள்ளது. தொல்காப்பியம், சங்க காலத்துக்குப் பிற்பட்டது என்ற தம் கொள்கையை வலியுறுத்தவும் இவர் அரும்பாடு பட்டுள்ளார். இதுவும், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி, எதிர் ஆராய்ச்சிகளின் முன் நிற்கவில்லை யாயினும், இத் துறையில் அறிஞர் ஆராய்ச்சி வீண்போகவில்லை. புறநானூற்றில் சில பகுதிகளும் மற்றச் சங்க இலக்கியப் பாடல்களில் சிலவும் கடைச் சங்க காலத்துக்கோ, தொல்காப்பியத்துக்கோகூட முற்பட்டவையாயிருத்தல் வேண்டும் என்பதை இது நிலை நாட்டியுள்ளது. அவ்வாராய்ச்சி, மொழியாராய்ச்சித் துறையிலும் சில புரட்சிகரமான முடிபுகள் தந்துள்ளது. இராவ் பகதூர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி களும் புதுமையில் குறைந்தவையல்ல. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தம்மைச் செங்குட்டுவன் இளவல் என்று கூறியபோதிலும் செங்குட்டுவனைப் பாடிய சங்கப் புலவர்கள் எவரும் அப் பெருங் கவிஞரைப் பற்றி எதுவும் குறிக்கவில்லை. ஆகவே, சிலப்பதிகார ஆசிரியர் கூற்றுகளும், சிலப்பதிகாரக் கதையும்; அதனுடன் இணைந்த மணிமேகலைக் கதையும், அதன் ஆசிரியர் கூற்றுகளும் அத்தனையும் இட்டுக் கட்டான புனைந்துரைகள் என்பது அவர் வாதம். இந் நூல்கள் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை அல்ல என்றும், அவற்றால் மேற்கோளாகக் காட்டப்பட்ட திருக்குறளும் சங்க காலத்துக்குப் பிற்பட்டதாகவே இருத்தல் சாலு மென்றும் அவர் கருதியுள்ளார். சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களின் கதை, கதைப் பொருள், கருத்து, இலக்கிய வழக்கு, இலக்கண வழக்கு, மொழி வழக்கு ஆகியவை சங்க இலக்கியத்தினின்றும் பொதுவாக வேறுபட்டவை என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். அவை பிற்பட்ட காலத்தவை என்பதை வலியுறுத்த இவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் காலம் பற்றிய அவர் முடிபை ஏற்காத தமிழ்ப் புலவர்களுள்ளும் அறிஞர்களுள்ளும் பலர் சிலப்பதிகார, மணிமேகலை பற்றிய அவர் முடிபு நோக்கிச் சிறிது சாயத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக் காவியங்கள் சங்க காலத்திலேயே பிற்பட்டவையாக இருத்தல் கூடும் என்று புலவர் உலகிலே கூடச் சிலர் கருத, இது தூண்டுதல் தந்துள்ளது. மூன்றாவதாக, சங்க இலக்கியத்தின் மூன்று பிரிவுகளான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவற்றில் திருக்குறளை உள்ளடக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18உம் பத்துப் பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையும், எட்டுத் தொகையுள் ஒன்றான பரிபாடலும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட பிற்சேர்க்கைகளாதல் வேண்டும் என்ற ஐயுறவையும் எ°.வையாபுரிப் பிள்ளை வலியுறுத்த முயன்றுள்ளார். ஆராய்ச்சி - சிறப்பாக, ஐயுறவுவாத அடிப்படையான ஆராய்ச்சி - ஓர் இரு திசைக் கூர் உடைய வாள். சங்க இலக்கியம் வரலாற்று நோக்குடைய தென்பதை யாவரும் ஒத்துக் கொள்வர். இதை அடிப்படையாகக் கொண்டு சங்க ஏடுகளில் ஒன்றான பதிற்றுப்பத்தை மெய்த்தளமாக்கி, அதனுடன் முரண்பட்ட காரணத்தால் சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களை இட்டுக்கட்டு நூல் என்று ஒரு சிலர் கூறினால், நேர்மாறாக, சிலப்பதிகார, மணிமேகலைகளை மெய்த்தளமாக்கி, பத்துப்பாட்டு அதற்கு முரண்படுவதனால், அது முழுவதும் இட்டுக்கட்டான நூல் என்று கூறுபவரும் உண்டு. இத்தகைய வாதங்களை ஆராய்ச்சி உலகம் ஒரு பொழுது போக்காகக் கருதக் கூடுமேயன்றி, கோட்பாட்டு விளக்கத்துக்காக ஆதாரங்களைப் போலியாக்குவதில் பயன் எதுவும் இராது. சிலப்பதிகார மணிமேகலைக் காப்பியங்கள் இட்டுக்கட்டிய நூல்கள் என்று குற்றஞ்சாட்டுவது எளிது. அதை நிறுவுவது முடியாத காரியம். ஏனெனில், சங்க இலக்கியங்களால் நமக்கு விளக்கமுறாத முத்தமிழ்ப் பழைமைக்கு அவையே சான்று தருகின்றன. அவற்றின் சான்றுக்குச் சிலப்பதிகாரத்தின் பழைய உரையாசிரியர் இருவரும் மேலும் விளக்கம் அளிக்கின்றனர். கடைச் சங்க இலக்கியத்துக்கும் முற்பட்ட பல நூல்களின் பெயர் விவரங்கள், பாடல்கள், நூற்பெயர் அறியப்படாப் பாடல்கள் ஆகியவற்றைத் தரும் இத்தகைய உரைகளும்; அவற்றுக்கு இலக்கியமான முதல் நூல்களும், சங்க இலக்கியங்களால் ஒரு சிறிதும் உணரப்படக் கூடாத அந் நாளைய சமயநிலை, சமயக் கருத்துகளைத் தரும் மணிமேகலை போன்ற காப்பியங்களும் இட்டுக்கட்டுகள் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் தங்களையே ஆராய்ச்சியுலகின் கேலிக்கு ஆளாக்கிக் கொள்பவர் ஆவார்கள். சிலப்பதிகார, மணிமேகலைகள் சங்க இலக்கியத் தோடொத்த பழைமையுடையவை மட்டுமல்ல, அவற்றிலும் முற்பட்ட பழைமை மரபில் வந்தவை என்பதைத் தமிழர் கவனித்தல் வேண்டும். தவிர, சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் ஒருங்கே தமிழக வரலாற்றுக்கே பேரொளி விளக்கம் தந்துள்ளவை, தரத்தக்கவை என்பதையும் அறிவுலகம் மறந்து விடுவதற்கில்லை. மொழி நூலாராய்ச்சியும் இலக்கண ஆராய்ச்சியும் தமிழில் மிக மிகக் குறைவு. தமிழ்ப் புலவர்க்கு இன்னும் அவை புறம் பானவை. இதனாலேயே எ°.வையாபுரியாரின் இத்துறை சார்ந்த வாதங்கள் புலவருலகையும், பல்கலைக் கழக அறிஞரையும் சில சமயம் மயங்க வைத்துவிடுகின்றன. சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்கள் நடையிலும், இலக்கிய இலக்கண வழக்கிலும், மொழி வழக்கிலும் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டிருப்பது உண்மையே. இதன் காரணம் ஆராய்ச்சிக்குரியது என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இத்தகைய செய்திகள் கால வேறுபாடு ஒன்றால் மட்டுமே விளக்கத் தக்கவையல்ல. காலவேறுபாடு ஒன்று மட்டுமே அத்தகைய வேறுபாடுகளுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஒரே காலத்தில் கம்பராமாயணம் போன்ற புலவர் இலக்கியமும், குறவஞ்சி, பள்ளுப்போன்ற மக்கள் இலக்கியமும் நிலவ முடியாதன அல்ல. இரண்டின் இலக்கிய நடை, இலக்கண இலக்கிய வழக்கு, மொழி நடை வேறுபாடும் போல், காலவேறுபாடில்லாமலே இத்தகைய நோக்க வேறுபாடு, இட வேறுபாடு, கணித வேறுபாடாயிருத்தலும் கூடியதேயாகும். சங்க இலக்கியத்தையும் தேவாரத்தையும்விட நிகழ் காலத்தை மிகுதியாகப் பயன்படுத்தும் திருவாசகம் பிற்பட்டதென்று எ°.வையாபுரியாரும் அறிஞர் பலரும் கொள்வது சரியானால், தேவார திருவாசகங்களைவிட இத்தகைய வழக்குகள் குறையப் பெற்ற கம்பராமாயணம் முதலிய நூல்கள் தேவார, திருவாசகங் களுக்கு முற்பட்டவை என்றும் கூற வேண்டிவரும். இவ் வேறுபாட்டின் உண்மை விளக்கம் சங்க இலக்கியம் அல்லது உயர்ந்தோர் இலக்கியம் என்பதும்; சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம் போன்றவை இசை நாடக இலக்கியம் அல்லது மக்கள் இலக்கியம் என்பதுமேயாகும். தவிர கால வேற்றுமை யுடன் இடவேற்றுமையும் சேர்ந்து கம்பராமாயணம் போன்ற இடைக்கால நூல்களைப் பல கூறுகளில் சங்க இலக்கியத்தை விடப் பழைமை வழக்குகள் உடையவையாகச் செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் காணமுடியாத உரிச்சொல், திரிசொல் வழக்குகளைக் கம்பராமாயணத்திலும், கம்பராமாயணத்தில் காணமுடியாத நாட்டுமக்கள் வழக்குகள் மிகப் பலவற்றைச் சங்க இலக்கியத்திலும் நாம் காணலாம். வையாபுரியாரின் மூன்றாவது வாதம் நேரடியாகத் திருக்குறளைப் பாதிப்பதாகும். திருக்குறள் உட்படப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் 18உம், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும் எட்டுத் தொகையில் பரிபாடலும், சங்க காலத்தவை அல்ல, பிற்பட்டவை என்பதே அது. அவர் வாதங்களுள் வலிமை மிக்க வாதம் இதுவே. ஏனெனில், இறையனார் அகப்பொருளுரை தரும் முச்சங்க மரபு வரலாற்றில் கடைச்சங்க நூல்களின் பட்டியலில் திருக்குறளோ, மற்றக் கீழ்க்கணக்கு நூல்களோ குறிக்கப்படவில்லை. அத்துடன் கீழே தரப்படும் மேற்கோள் சுட்டிக்காட்டுகிறபடி, பழைய உரையாசிரியர்கள் பத்துப்பாட்டையும் எட்டுத் தொகையையும் மட்டுமே சங்க இலக்கியம் என்ற பெயருடன் குறிப்பிட்டுள்ளனர். இறையனார் அகப்பொருளுரையின் பட்டியலில் வரும் ஏடுகள் அத்தனையுமே நமக்கு வந்தெட்டவில்லை. கூத்து, வரி முதலியவை அத்தகையவை. வந்தெட்டியவற்றுள்ளும் அரை குறையாக எட்டியன சில. அதே சமயம் இறையனார் அகப்பொருளுரை குறிப்பிடாது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் சில பாடல்கள் சங்ககாலத்தன வென்று உறுதியாகக் கூறத்தக்கவை. வையாபுரியார் அவர்களே கண்டு வெளியிட்டுள்ள புறத்தொகை மூலம் கிடைத்த பல நூற்பகுதிகளில் தகடூர்யாத்திரை ஒன்று. அது சங்க காலத்திலேயே நடந்த ஒரு போர் பற்றியது. சங்கப் புலவர்களே நேரில் கண்டு பாடியது. எனவே, இறையனார் அகப்பொருளுரையின் பட்டியலை முழு நிறைவாகக் கொண்டு ஆராய்வது முறைமையின் பாற்படாத ஒன்றேயாகும். சிலப்பதிகார உரைகள் தரும் நூல்கள் சில இறையனார் உரையில் உள்ளன. ஆனால், பல அதில் காணக் கிடைக்க வில்லை என்பதை நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும். கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய அறிஞர் எ°.வையாபுரிப் பிள்ளை யவர்களின் முடிவைச் சைவ சிந்தாந்த சமாசத்தின் சங்க இலக்கியத் தொகுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்னலாம். ஏனெனில், அவர்கள் திருக்குறளையும் மற்றக் கீழ்க்கணக்கு நூல்களையும் அத் தொகுப்பில் சேர்க்கவில்லை. அது மட்டுமன்று; அதற்கான விளக்கத்தையும் அவர்கள் தம் சீரிய முன்னுரையில் தந்துள்ளனர். “பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியத்தின் பாற்பட்டவை என்பதை எவரும் மறுக்க முடியாது. சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றுக்குச் சங்க இலக்கியம் என்ற பெயர் பொருந்துவதைப் பற்றிப் பல வகையான கருத்து வேற்றுமைகள் உண்டு. தொல்காப்பிய உரையுள் பேராசிரியர் மரபியல் 94ஆம் சூத்திர உரையிலும், நச்சினார்க்கினியர் அகத்திணையியல் 6ஆம் சூத்திர உரையிலும் கூறுவனவற்றி லிருந்து எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே சங்க இலக்கியம் என்று கருதப்பட்டன என்பது தெளிவாகலாம்.” பழங்கால உரையாசிரியர், நம் காலச் சமாசத்தார், வையாபுரிப் பிள்ளை யவர்கள் ஆகியோர் முடிபுகளை ஆராயுமுன், அம் முடிபுகளிடையேயுள்ள சிறு வேறுபாடு கூர்ந்து கவனிக்கத்தக்கது. உரையாசிரியர்களும், அவர்களைப் பின்பற்றிச் சமாசத்தாரும் சிலப்பதிகாரத்தையும் (மணிமேகலையையும்), திருக்குறள் உட்பட்ட கீழ்க்கணக்கு நூல்களையுமே விலக்கி யமைந்தனர். அறிஞர் வையாபுரி அவர்களோ, இதே கதிக்குத் திருமுருகாற்றுப்படையையும் பரிபாடலையும் உட்படுத்தி, அம் மூவேறு வகைப்பட்ட நூல் தொகுதிகளையும் மறுப்பதற்கு மூவேறு வகைப்பட்ட ஆராய்ச்சி ஆதாரங்களை நாடியுள்ளார். சமாசத்தார் தம் முடிபுக்கு உரையாசிரியர்கள் கூற்றையே ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால், முடிபு முற்றிலும் ஆராய்ச்சி ஆதாரம் நாடியதன்று என்றும் எண்ண இடமுண்டு. ஏனெனில், அதன் பின்னணியிலுள்ள உணர்ச்சிச் சார்பான உட்கிடக்கையை முகவுரை மொழிகளே சுட்டிக் காட்டுகின்றன. “நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாமோ என்று சிலர் ஐயுறுதல் கூடும். ‘சங்க நூல்களெல்லாம், புத்த, சமண சமயச் சார்புடையன; அவற்றைப் பயிலுதல் கூடாது’ என்று எனது இளமைப் பருவத்தில் சில சிவனடியார்கள் கூறியதுண்டு. இக்காலத்தின் நல்வினைப் பயனாக இக் கொள்கை மறைந்துவிட்டது.” முகவுரையை வகுத்துரைத்துள்ள சமாசச் செயலாளர் திரு.ம.பால சுப்பிரமணியன் அவர்கள் தரும் அனுபவ மொழிகள் இவை. இந்`நல்வினைப் பயன்’ சைவ சித்தாந்த மகாசமாசத்துக்கு விக்கிரம வருஷம் சித்திரை மாதம் 1ஆம் தேதிக்குச் சரியான 1940 ஏப்ரல் 13ஆம் நாளிலேயே கிட்டியதாகத் தெரிகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் பல மறுக்கக் கூடாதபடி, மழுப்பக் கூடாதபடி சமண நூல்கள் என்பதும், அது போலவே மணிமேகலை புத்த சமய உலகையே தமிழ் நோக்கி ஈர்க்கவல்ல புத்த சமயப் பெருங்காப்பியம் என்பதும் யாவரும் அறிந்ததே. அத்துடன் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கூடச் சமண நெறியினர் தம் சமய ஏடுகளென உரிமை கொண்டாடுகின்றனர். கொண்டாடி வந்துள்ளனர். இந் நிலையில் புத்தாராய்ச்சியாளர் உதவி கொண்டோ, பழைய உரையாசிரியர் ஆதாரங்காட்டியோ இத்தகைய நூல்களை விலக்கி, புறச்சமய அளறு நீக்கிச் சங்க இலக்கியத்தைப் புனிதப்படுத்தியதே ‘இக்காலத்தின் வினைப் பயன்’ ஆதல் கூடும் என்று ஐயுறாதிருக்க முடியவில்லை! உரையாசிரியர் இந் நூல்களை விலக்கியதற்கும் இதுவே காரணமாய் இருத்தல் கூடும். ஏனெனில், அவர்கள் சங்க காலத்தைவிட நம் காலத்துக்கே அணிமையானவர்கள். அத்துடன் வையாபுரியாரின் முழு ஆராய்ச்சி முடிபையும் நாம் ஒப்புக் கொள்ளுவதானால், அவர் விலக்கிய பத்துப்பாட்டையும் பரிபாடலையும் அவர்களும் சமாசத்தாரும் உட்படுத்தியதற்கும் இதுவே காரணமாகக் கொள்ளப்பட இடமுண்டு. ஏனெனில், அவற்றுள் ஒன்று திருமால் புகழ் பாடுவதாயினும், இரண்டும் முருகன் புகழும் தம்மகம் கொண்டவை. சைவ சித்தாந்த சமாசத்தாரைவிடச் சைவ சித்தாந்தக் கழகத்தார் சைவப்பற்றில் குறைந்தவர் அல்லர். ஆனால், அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆசிரியர் மறைமலையடிகள் ஆகியவர்களைப் பின்பற்றி அவர்கள் சைவப் பற்றுடனொத்த ஊன்றிய தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஐயுறவுக் குழுவைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் தமிழ்ப் பற்று சமாசத்தாரின் குறுகிய போக்கினின்றும் அவர்களைத் தொடக்கத்திலிருந்தே விலக்கியிருத்தல் வேண்டும். ஏனெனில், அவர்கள் சமய சாதி வேறுபாடின்றி எல்லாச் சமயஞ் சார்ந்த சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் ஏடுகளையும் வெளியிட்டுப் பரப்பத் தயங்கவில்லை. உண்மையில் தமிழ்ப் பற்றிலூன்றிய கழகத்தார் புத்த சமண நூல்கள் உட்படச் சங்க இலக்கியம் முழுவதையும் வெளியிட்டுப் பரப்பத் தொடங்கியபின்னரே, சமாசத்தார் சங்க இலக்கியத்தில் புத்தார்வம் காட்டி அதைச் சைவப் போர்வையுள் நின்று புனிதப்படுத்தி வெளியிட முற்படலாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சமயத் திரையின் பின்னும் தமிழ் இலக்கியத் திரையின் பின்னும் இருந்து ஆராய்ச்சியில் முனைந்துள்ள இவ்விரு வகைப்பட்ட சமற்கிருதப் பற்றாளர்களும் வலியுறுத்திய ஆதாரங் கள் அவர்கள் நோக்கிய திசையில் நன்முடிவு காணப் பயன்பட மாட்டா. பயன்படவில்லை. ஆனால், அவை எதிர்த் திசையின் முடிபு சுட்டிக் காட்டத்தக்கவை. ஆகவே, ஐயுறவாராய்ச்சியாளர் நோக்க உட்கிடக்கைகளை விட்டு அவர்கள் வாதங்களையே ஆராய்வோம். எட்டுத் தொகை என்பது எட்டுத் தொகுப்பு நூல்களடங்கிய பெருந் தொகுப்பேயாகும். அத் தொகைநூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. பத்துப்பாட்டு என்பவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினெழு நூல்களே நமக்குக் கிட்டியுள்ளன. அவை நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறு பஞ்ச மூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி ஆகியவை. நமக்குக் கிட்டாத ஏடு ஐந்திணை பற்றிய ஐந்து நூல்களில் ஒன்று என்பது கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள் கூறும் பழம் பாடலால் தெரியவருகிறது. எட்டுத் தொகையின் எட்டுத் தொகை நூல்களில் நான்கிற்கே தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் வந்தெட்டியுள்ளன. கலித் தொகைக்குத் தொகுத்தவர் பெயர் மட்டிலுமுண்டு. புறநானூற்றுக்கு இரண்டும் கிட்டவில்லை. பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியவற்றின் தொடக்க இறுதிகளே கிடைக்கப் பெறாததால் அவற்றுக்கும் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. ஆனால், தெரிந்த அளவில் தொகுத்தவர், தொகுப்பித்தவர்கள் சங்க காலத்தவர்களே. இவற்றினடிப்படையிலே எட்டில் ஆறு சங்க காலத் தொகுப்புகளே என்று வையாபுரிப் பிள்ளையவர்களே காட்டியுள்ளார். அத்துடன் அகநானூறு 43ஆம் பாடலைப் பாடிய ஆசிரியர் நல்லந்துவனாரே கலித்தொகையில் நெய்தல் கலி முழுவதும் பாடி அதைத் தொகுத்தவராகவும் அமைகிறார். அப் பாடல்கள் பரிபாடலிலும் உள்ளன. எனவே, வையாபுரியார் கருதியபடி எட்டுத் தொகை நூல்களும் பெருந் தொகுப்பாகக் கி.பி.4ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன என்பதை ஒத்துக்கொண்டால்கூட, எட்டும் சங்ககால ஏடுகள், சங்ககாலத் தொகைகள் என்பதில் ஐயமில்லை. கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு நடுவில் முடிவுற்றுவிட்டபடியால் பெருந்தொகுப்பு அதன்பின் தொகுக்கப்பட்டது என்பதும் பொருந்தாக் கூற்று ஆகும். வையாபுரியாரின் கால வரையறை என்பது பெரிதும் ஐயுறவு வரையறையே. பின் எல்லை குறிப்பது ஒன்றில் மட்டுமே அவர் ஊக்கம் காட்டியுள்ளார். ஆனால், நேர்மையான பின் எல்லை பெருந்தொகுப்புக்குக்கூட கி.பி.3ஆம் நூற்றாண்டுகள் நடுப்பகுதியேயாகும். பத்துப் பாட்டுத் தொகுக்கப்பட்டது பிற்காலத்தே என்பதற்கும் உரையாசிரியர் குறிப்பையே வையாபுரியார் வேதவாக்காகக் கொண்டுள்ளார். அதன் பின் எல்லை வரையறுக்க மட்டுமே இது பயன்படுத்தப்படுதல் வேண்டும். தவிர, பத்தில் திருமுருகாற்றுப்படை நீங்கிய ஒன்பதும் சங்ககாலத்துப் புலவரால் பாடப்பட்டவையே. அத்துடன் நெடுநல் வாடையும் பிறசங்கப் பாடல்களும் பாடிய நக்கீரனாரே திருமுருகாற்றுப்படை ஆசிரியர் என்று கொள்வதில் தவறொன்றும் இல்லை. அது வேறு நக்கீரனார் என்று வையாபுரியார் கொள்வது தம்கோள் நிறுவுவதற்காகவே யன்றி வேறன்று. ஏனெனில், நடைவேறுபாடும் அதன் பொருள் வேறுபாடும் அதை ஒட்டிய நோக்க வேறுபாடும் சார்ந்ததேயாதல் இயல்பு. தவிர, திருமுருகாற்றுப்படை நக்கீரனாரின் நடுவயதுக்கும், நெடுநல் வாடை அவரது முதிர் வயதுக்கும் உரியனவாகவே இருத்தல்கூடும். கால வேறுபாடு என்பது இவ்வகைப்பட்ட வாழ்க்கைக் கால வேறுபாடு மட்டிலுமாகவே கொள்ளத்தக்கது. அத்துடன் சமயக் கருத்துகள் பிற்பட்டன என்று கொண்டு, அதனடிப்படையில் நூல்கள் பிற்பட்டனவென்றும், நூல்கள் பிற்பட்டன என்று கொண்டு, அதனடிப்படையில் சமயக் கருத்துகள் பிற்பட்டன என்றும் கொள்ளும் வையாபுரியார் வாதம் வளைய வளைய வரும் சுழல் வாதமேயாகும். இதுவன்றி, நாம் மேலே காட்டியபடி சமயச்சார்பு மிக்க பரிபாடல் சங்க ஏடாதலின் திருமுருகாற்றுப்படையும் சங்க ஏடேயாதல் கூடாததன்று. தமிழர்க்குத் தமக்கென ஒரு சமயம் கிடையாதென்பதிலும், தமிழருக்கு சமயக் கருத்துகள் யாவும் சமற்கிருதவாணர் அல்லது ஆரியரிடமிருந்தே வந்திருத்தல் வேண்டும் என்பதிலும் வையாபுரியார் கொண்ட ஊன்றிய ஆராயா நம்பிக்கையே அவரை இத்தகைய சுழல் வாதங்களில் உழலவிடுகின்றன. சமற்கிருதத்தில் கால ஆராய்ச்சியுடையவர் எவரேனும் தமிழாராய்ச்சியில் புகும் நாள் வந்தால், அன்று மெய்ம்மை இதற்கு நேர்மாறானதென்ற முனைப்பான செய்தி மறைபடாது வெளியாகிவிடும். எட்டுத்தொகை தொகைநூல்கள் அடங்கிய பெருந் தொகுதி. பத்துப் பாட்டும் கீழ்க்கணக்கு நூல்களும் தனி நூல்களின் தொகுப்பே. பெருந் தொகுப்பும், தொகை நூல் தொகுப்புப் போன்றதன்று. எனவே, அவற்றுக்குத் தொகுத்தார், தொகுப்பித்தார் தேவைப்பட்டிருக்க முடியாது. தொகுப்பு வேலை சங்கத்தார் பொது நடைமுறைக்கே விடப்பட்டிருத்தல் இயல்பு. ஆகவே, எட்டுத் தொகையைப் போலவே பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கும் சங்க காலத் தொகுப்புகளே என்பதில் ஐயமில்லை. நூல்கள் சங்ககாலத்தவையாய் இருத்தல் வேண்டும். அல்லது அதற்கு முற்பட்டவையாதல் வேண்டும். ஏனெனில், சங்கத் தொகுப்புகளில் கடைச் சங்கத்துக்கு முற்பட்ட பாடல்களும் இடம் பெற்றுள்ளன என்று நாம் காண்கிறோம். தவிர, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சங்க காலத்துக்குப்பின் இறந்துபட்டிருப்பதும், களவழி நாற்பது போன்ற நூல்கள் சங்க கால நிகழ்ச்சிகள் பற்றியதாக இருப்பதும், ஒருவேளை சங்க கால அல்லது சங்கப் புலவர்களால் பாடப் பட்டிருப்பதும் நோக்கத்தக்கது. எனவே, கீழ்க்கணக்கு நூல்களும் அவற்றில் உட்பட்ட திருக்குறளும் கடைச் சங்க காலத்தவை அல்லது கடைச் சங்கத்துக்கு முற்பட்டவையாய் இருத்தல் கூடுமேயன்றி, சங்க காலத்துக்குப் பிற்பட்டன ஆகமாட்டா. கடைச் சங்கத்துக்கு முற்பட்ட முத்தமிழ்க் கால மரபுடன் தொடர்புடைய சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களே பழம் புகழ் ஏடாக எடுத்தாண்ட திருக்குறள் கடைச் சங்க காலத்திலேயே முற்பட்ட நூலாகவோ, கடைச் சங்கத்திலும் முற்பட்ட நூலாகவோதான் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. வள்ளுவர் கால ஆராய்ச்சிக்கு அறிஞர் வையாபுரிப் பிள்ளை மட்டுமன்றி, அவர்க்கு முந்திய ஆராய்ச்சியாளரான கே.என்.சிவராஜபிள்ளையும் வழிகாட்டும் இடம் இதுவே. சிலப்பதிகார மணிமேகலைகள் சங்க இலக்கியத் தொகுப்பில் சேர்க்கப் படாமைக்கும், சிலப்பதிகாரமும் அரச துறவியான அதன் ஆசிரியர் இளங்கோ வடிகளும் சங்க ஏடுகளிலே குறிப்பாகச் செங்குட்டுவனையும் சேரர்களையும் பாடிய பதிற்றுப்பத்திலே - குறிக்கப் பெறாமைக்கும் தனிக் காரணங்கள் இருத்தல் கூடும் என்பது மேலே கூறப்பட்டது. ஆனால், வள்ளுவர் குறிக்கப் பெறாமைக்கு இதுபோன்ற காரணம் கூறமுடியாது. வள்ளுவர் சங்க காலத்தவரன்று என்று அறிஞர் வையாபுரி கருதியதற்கான அடிப்படை இதுவே. அவர் கருத்து முற்றிலும் தவறு என்று கூறுவதற்கில்லை. பிற்பட்ட தென்று காட்டும் ஆர்வம் அவர்க்கு மிகுதியானதனாலேயே பிற்பட்டதா, முற்பட்டதா என்ற வினாவை அவர் எழுப்பவில்லை. கீழ்க்கணக்கு நூல்கள் தொகுப்பு பிற்பட்டது என்று கருதினால் கூடத் திருக்குறள் பிற்பட்டது என்று தெளிவுபட முடியாது. அத்துடன் திருக்குறட் கருத்தும், சொல்லும், சொற்றொடர் களும், உவமையணிகளும்; சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களைப் போலவே சங்க இலக்கியங்களிலும் பலவாகக் காணப்படுகின்றன. ‘திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிந்தியவரும் அல்லர். களவழி நாற்பது, இன்னா நாற்பது ஆசிரியர்கள் போலச் சங்க காலத்தவரும் அல்லர். முந்தியவரே’ என்பதை இது காட்டும். திருவள்ளுவர் பெரும் புலவராதலால் சங்கப் பாடல்களை யெல்லாம் கற்றறிந்து பலர் பாடற் கருத்துகளையும் கையாண்டார் என்று கூறுதல் கால ஆராய்ச்சிக்குரிய வாதமாகாது. ஏனெனில், சிலப்பதிகார மணிமேகலையை அவர் படித்து மேற்கோள் காட்டவில்லை. குறளையே அவை மேற்கோள் காட்டின. அதுபோலவே புறநானூற்றில் ஆலத்தூர்க்கிழார் திருக்குறட் கருத்தும் சொல்லும் கையாளும்போது, தாம் வேறொரு நூலிலிருந்து அதை எடுத்தாண்டதாகவே கூறுகிறார். எனவே, காக்கைபாடினியார் போன்ற பிற சங்ககாலப் புலவர்கள் கையாண்ட வள்ளுவர் கருத்துகளும், சொற்றொடர்களும் இவைபோலத் திருக்குறளையே உள்ளத்துட் கொண்டு எடுத்தாளப்பட்டவை என்பதில் ஐயமில்லை. திருக்குறள் சொல், கருத்து ஒற்றுமைகளை நாம் சங்க காலச் செய்யுள்களிலும் இடைக்கால, இக்காலச் செய்யுள்களிலும் காண்பதைப் போலவே இன்றைய தமிழர் அறிந்த மிகப் பழம் பெரும் நூலாகிய தொல் காப்பியத்திலும் காண்கிறோம். ‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும் மறைமொழி தானே மந்திரம் என்ப’ - தொல்காப்பியம் செய்யுளியல் : சூத்திரம் - 175 என்ற தொல்காப்பியச் சூத்திரம், ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ - குறள்-28 என்ற திருக்குறட்பாவை எவர்க்கும் நினைவூட்டாமலிராது. தொல்காப்பியர் காலம் இன்னது, அதன் பழைமை எல்லை எது என்பது இன்னும் வரையறுக்கக் கூடாத செய்தியே. ஆனால், அது கடைச்சங்கத்துக்கு முற்பட்டது. இடைச் சங்கத்திற்கூடத் தொடக்கக் காலத்துக்கே உரியது என்று கூறத்தக்கது. ஆசிரியர் மறைமலையடிகளார் அது முதற் சங்கத்து இறுதிக்கே உரியது என்று கொண்டுள்ளார். தொல்காப்பியக் கால அரசன் நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லது நெடியோன் பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரை யாண்டவன் என்று சங்கப் பாடல்களாலேயே தெரிவதால் இது வலியுறவு பெறுகிறது. திருவள்ளுவர் இவ்வளவு பழங் காலத்தவராய் இருக்கமாட்டார் என்ற எண்ணமே இவ்வொப்புவமை வகையில் திருக்குறள் மொழி மூல வாசகமன்று, தொல்காப்பிய மொழியே மூலவாசகம் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணியுள்ளது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறாய் இருக்கக் கூடாததன்று. கே.என்.சிவராஜ பிள்ளை சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுக்குக் கொடுத்த பழைமை திருக்குறளுக்கும் உரியதாய் இருத்தல் கூடாததன்று. திருவள்ளுவர் காலமறியாதவர், இடைக்கால, பிற்கால நூல் ஒப்புவமைகளைக் கூடத் திருவள்ளுவர் மூலங்களாகக் கொள்ளத் தடை எதுவும் இல்லை. ஏனெனில், கம்பர் முதலிய மிகப் பல இடைக்காலப் புலவர்கள் திருவள்ளுவர் கருத்தும் சொல்லும் எடுத்தாண்டனரே யன்றி நூற் பெயர், ஆசிரியர் பெயர்கள் பெரும்பாலும் குறித்ததில்லை. வால்மீகியும், நாரதரும், உபமன்னியுவும் பிற்கால ஏடுகளில் குறிக்கப்படும் அளவுக்குத் திருவள்ளுவர் பெயர் எங்கும் காணப்படவில்லை என்பதைத் தமிழாராய்ச்சியாளர் இதுவரை எண்ணிப் பார்த்ததில்லை. காரணம் பிற்பட்டவற்றை முற்பட்டன என்று எவரும் கூற முனையவில்லை என்பதே. திருவள்ளுவர் காலம் தெளிவாக அறியப்படும் அளவிலேயே ஒப்புவமைக் கூறுகள் குறளையே மூலமாகக் கொண்டன என்பது தெளிவுற முடியும். வள்ளுவர் சொல்லாற்றலும், தனிச்சுவையும், பொருள் நயமும் அவர் தனி இலச்சினையாக மாட்டாவோ என்று இங்கே பலர் வினாவுதல் இயல்பு. ஆனால், சிலப்பதிகார மணிமேகலை வகையிலும் சங்கப் பாடல்கள் வகையிலும் வள்ளுவர் கால வரையறை செய்ய இவை பயன்படாதது காண்டல் வேண்டும். சொல் நயம், பொருள் திட்டம் ஆகியவை ஒப்புவமை மூலம் காட்டக்கூடுமானால் மேற் குறிப்பிட்ட தொல்காப்பிய-திருக்குறள் ஒப்புவமையிலும் அதை எவரும் காணமுடியும். சொல் நயத்தில் தொல்காப்பியர் திருவள்ளுவர்க்குக் குறைந்தவரல்லர். திட்பத்தில்கூடத் திருவள்ளுவருடன் ஒப்பிடக்கூடிய ஒரு தமிழ்ப் புலவர் உண்டென்றால் அது தொல்காப்பிய ஆசிரியரே. ஆயினும், தொல்காப்பியத்தின் இந்த நூற்பாவின் நயமும் திட்பமும் தொல்காப்பியத்தின் வேறு எந்தச் சூத்திரத்திலும் காணாத ஒன்று. அதன் தனிச் சுவையும் திட்பமும் திருவள்ளுவர் இலச்சினை பெற்றதன்றாயின், வேறு எதுவும் அது பெற்றதல்ல என்னலாம். வள்ளுவர் தொல்காப்பியர்க்கும் முற்பட்டவர் என்பது உணரப்பட்டால், சிலப்பதிகார மணிமேகலைகள் அவர்க்குத் தந்த பழம் புகழ்ச்சிறப்பின் அருமையை நாம் முற்றிலும் காண்பவராவோம். நமக்குக் கம்பர் எவ்வளவு முற்பட்டவரோ, அவ்வளவு கம்பர்க்கு முற்பட்ட பெருமை, பழைமை உடையவர்கள் இளங்கோவும் சாத்தனாரும், சங்கப் புலவராகிய கபிலரும் ஒளவையாரும். அதே சமயம் அந்த இளங்கோவும், சாத்தனாரும் நமக்கு எவ்வளவு தொலைப் பழைமையும் பெருமையும் உடையவரோ, அவ்வளவு அவர்களுக்குத் தொல்காப்பியரும் தொல்காப்பியர்க்கு வள்ளுவரும் பழைமையானவராயிருத்தல் கூடும். இக் கோட்பாட்டை வருங்கால ஆராய்ச்சிகள் தெளிவுபட நிலைநாட்டக் கூடுமானால், சங்க இலக்கியம் ‘திருவள்ளுவர்’, ‘குறள்’ என்ற பெயர்களைக் கையாளாமைக்கும் ‘அறம்’, ‘பொய்யில் புலவன்’ என்ற பெயர்களையே கையாண்டமைக்கும் உள்ள வரலாற்றுக் காரணம் ஒளி பெறக் கூடும். ‘முப்பால்’, ‘அறம்’, ‘தமிழ் வேதம்’, ‘பொய்யா மொழி’ முதலிய நூலின் புகழ்ப் பெயர்களுடன் ‘குறள்’ என்ற பெயரும் ‘பொய்யில் புலவன்’ , ‘தெய்வப் புலவன்’, ‘செந்நாப் போதார்’ முதலிய புகழ்ப் பெயர்களுடன் ‘திருவள்ளுவர்’ என்ற பெயரும் ‘திருவள்ளுவ மாலை’ என்ற தொகுப்பு ஏட்டிலேயே தெளிவாகக் காணப்படு கின்றன. சங்க காலத்தில் நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் பல புகழ்ப் பெயர்களாகவே வழங்கி, ‘திருவள்ளுவர்’ ‘குறள்’ என்ற பெயர்கள் கடைச்சங்க காலத்தில், சங்கத்திலேயே அளிக்கப் பட்டன ஆகலாம். வள்ளுவமாலை சங்க காலத்ததெனில் அத் தொகுப்புத் தொடங்கியதற்குரிய காரணமும் இதுவேயாகக் கூடும். ஏனெனில், உக்கிரப் பெருவழுதியின் அவையில் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார் என்ற கதை மரபுக்கு உக்கிரப் பெருவழுதியின் காலமோ சங்கப் பாடல்களின் சூழலோ சிறிதும் இடம் தரவில்லை. ஆசிரியர் இயற்பெயரும் நூற்பெயரும் நீணாள் வழக்கால் மறைவுற்று, மக்களிடையே பொதுப் பெயரால் பரவி வந்த ஒரு பழைய நூலுக்கும், நூலாசிரியருக்கும் சங்கப் புலவர் சுட்டுப் பெயர்களிட்டு, அதனை அவ்வக்காலப் புலவர்களால்கூடச் சிறப்பித்திருத்தல் கூடும். ‘அறம், பொருள், இன்பம்’ என்ற பாகுபாடும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டது. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்ற பாகுபாடும் அத்தகையதே. அவற்றை முத்தமிழின் இலக்கியங்களும் பயனாகக் கொள்பவையேயன்றி வகுத் துரைப்பவை அல்ல. அங்ஙனம் வகுத்துரைக்கும் நூல், அறிவு நூல், மறை நூல் அல்லது வேத உரையின் பிற்பட்டனவாகத் தொல்காப்பியர் காலமுதல் சங்ககாலம் வரை கருதப்பட்டு வந்ததாதல் வேண்டும். முத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறாத அத்தனி முதல் நூலும் பின்னாளில் நல்லிலக்கியங்களுள் ஒன்றாகப் பேணப்படத் தொடங்கிய பின்னர், அது போன்ற பிற நூல்களும் எழுந்து அவை திருக்குறளுடன் சேர, இலக்கியத்துக்குப் புறம்பாகக் ‘கீழ்க்கணக்கு அல்லது சில்லறை நூல்கள்’ என்று தொகுக்கப்பட்டிருத்தல் சாலும். இங்ஙனமில்லாவிடில் ‘கீழ்க்கணக்கு’ என்னும் சொல் பொருளற்ற சொல் ஆகும். பின்னாளைய இலக்கணங்கள் ‘மேற்கணக்கு’, ‘கீழ்க்கணக்கு’ என்ற தொடர்களுக்குத் தரும் இலக்கணம் பொருந்தாக் கூற்றும் முரண்பட்ட கூற்றுமாகும். திருக்குறள் போன்ற ஒரு முழு முதல் நூலே தமிழர் மறை நூலாக இருந்திருக்க வேண்டுமென்றும், அதனையே பண்டைய இலக்கணங்கள் முதனூலாகச் சிறப்பித்தன என்றும், அது சார்ந்த துணை நூல்களே மெய்ம் மொழி (ஆகமம்), பட்டாங்கு (மெய்ந்நூல், சாத்திரம்) என வழங்கப்பட்டன என்றும்; இவை அழிந்துபட்டபின் திருக்குறளும், திருமந்திரமும், பின்னாளைய மெய்ஞ்ஞான நூல்களும் மரபு வழி நின்று அக் கருத்துரைகளைத் தொகுத்தன என்றும் ஆசிரியர் மறைமலையடிகள் கருதியுள்ளார். இக் கருத்துத் தவறன்று என்பதைப் பரந்த தமிழ்-சமற்கிருத சமய நூல் இலக்கிய ஒப்புவமை ஆராய்ச்சிகள் நிலைநாட்ட வல்லன. ஏனெனில், பிற்கால சமற்கிருத இலக்கியங்களிலும் புராண இதிகாசங்களிலும், பிற்காலத் தமிழ்ச் சமய நூல்களிலும் காணும் கருத்துகளை அவற்றுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்திலே பலவிடங்களில் பரக்கக் காணலாகும். ஆனால், திருக்குறள் அம் முதல் நூல்களின் வழிவந்த தொன்றன்று; அஃது ஒரு முதல் நூலேயாகும். இக் கருத்தை வலியுறுத்தும் பல்வேறு செய்திகளை, வரும் இயல்களில் காண்போம். 4. வள்ளுவர் சமய ஒளி ‘எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்!’ என்று மதுரைத் தமிழ் நாகனார் என்பாரும், ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று இடைக்காடர் என்ற புலவரும் திருக்குறளைச் சிறப்பித்ததாகப் பழைய ஏட்டுத் தொகுப்புகளிலுள்ள பாடல் களால் அறிகிறோம். மனித இனம் சிந்தித்த, சிந்திக்கிற, சிந்திக்க இருக்கும் சிந்தனைகள் ஒன்று விடாமல் - குடும்பம், சமுதாயம், அரசியல், சமயம் ஆகிய பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கைப் பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாம் - உச்ச உயர் முறையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இதை - இன்றன்று - மிகப் பழங் காலத்திலேயே தமிழர் கூர்ந்து கண்டுணர்ந்தனர். மேற் குறிப்பிட்ட பழம் பாடல்கள் இதைக் காட்டுகின்றன. எல்லாச் செய்திகளையும் கூறுவது மட்டுமல்ல, எல்லாச் செய்திகளையும் எல்லாரும் ஏற்கும்படி, வரவேற்கும்படி, ஆர்வமாகப் பாராட்டி உச்சி மேற்கொள்ளும்படி தெள்ளத் தெளியக் கூறுவது திருக்குறள். மொழி வேற்றுமை, நாட்டு வேற்றுமை, இன வேற்றுமை, பண்பாட்டு வேற்றுமை, நாகரிக வேற்றுமை, கோட்பாட்டு வேற்றுமை, இவை எல்லாவற்றையும் கடந்த இணக்கத்தை அது கண்டுள்ளது. இவை பெரிதல்ல. இவை எல்லாவற்றையும்விட மனித இனத்தை அலைக்கழித்த வேறுபாடு சமய வேறுபாடே. உலகில் பழஞ் சமயங்களும் உள்ளன. புதுச் சமயங்களும் உள்ளன. தமிழகங் கண்ட, கீழ்த்திசை கண்ட சமயங்கள் உண்டு. மேல் திசை கண்ட சமயங்கள் உண்டு. இவை எல்லாமே ‘எம் சமயத்துக் குரியது,’ ‘எம் சமயத்துக்கே உரியது’ என்று இத் திருநூலை ஏற்க முந்துகின்றன. எதிலும் எளிதில் ஒவ்வாச் சமயங்கள், இஃது ஒன்றில் எளிதில் ஒத்த பண்பு காட்டுகின்றன. இந் நிலை வியத்தற்குரியது, ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க இந் நிலை மலைப்புக்குரியதேயாகும். தமிழர் இவ்வுண்மையையும் பழங்காலத்திலேயே கண்டுள்ளனர். மிகப் பழைமை வாய்ந்த சமயப் பெரியாரான கல்லாடர் பெயரால் இயலும் பாடல் ஒன்று இதை அழகு நயம்படக் குறித்துள்ளது. ‘ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப வேறுஎனின் அன்றுஎன்ப ஆறு சமயத்தார் - நன்றுஎன்ன எப்பா வலரும் இயைபவே, வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி,’ குறுகிய குறட்பா. சொற்கள் சில. பொருள்களோ பல. எல்லாப் பொருளும் அடங்குவன. இது மட்டுமோ? அவற்றை எல்லாரும் ஏற்கும்படி, எல்லாச் சமயத்தாரும் வரவேற்கும்படி கூறினார்! இஃது எப்படி முடிந்தது? எப்படி முடியும்? மேலை உலகு நடுவுநிலை கண்ட உலகுதான். ஆனால், அதன் நடுவு நிலை வாணிக நடுவுநிலையே, தமிழகமும் கீழ்த்திசை உலகும் பண்டிருந்தே நடுவுநிலை பயில்வதுதான். ஆனால், இஃது ஒப்பு நடுவுநிலையே. ‘வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம், பேணிப் பிறவுந் தமபோற் செயின்!’ - குறள் 120 என்று வாணிக நடுவுநிலையையும், ‘ஒப்புரவி னால்வரும் கேடெனின், அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து’ - குறள் 220 என்று ஒப்புரவு நடுவுநிலையையும் வள்ளுவரே சிறப்பித்துள்ளார். ஆனால், வள்ளுவர் கண்ட நடுவுநிலை வாணிக நடுவுநிலையன்று. ஒப்புரவு நடுவுநிலையுமன்று. அஃது இவை கடந்த இவற்றுக்கு எட்டாத ஓர் உயர் பண்பு. வாணிக நடுவுநிலை தன்னலக் குறிக்கோளுடையது. ஆனால், இத் தன்னலம் அறிவுடைத் தன்னலம். தொலை அறிவுடைத் தன்னலம். வள்ளுவர் இந்த வாணிகப் படியில் உள்ளவர்க்கு இதனைப் பரிந்துரைக்கத் தயங்கவில்லை. முந்திய குறட்பா இத்தகையது. “நீ உன் பொருளை நன்கு பேணுபவனா? பெருக்க நாடுபவனா? நல்ல வாணிகனா? சரி அப்படியானால் உனக்கு ஒரு நல்ல வாணிக முறையையே கற்றுத்தருகிறேன். பிறர் பொருள்களை உன் பொருள்கள் போலப் பேணிப் பார்! உன் வாணிக முறையால் வரும் ஆதாயம் இரட்டிப்பதை, பெருகுவதை நீ காணலாம்” என்று அவர் வணிக அறிஞன் போலவே பேசுகிறார். ஆனால், இரண்டாவது குறட்பா இன்னும் ஓர் உயர்ந்த படிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இன்னும் உயர்வுடைய ஒரு பண்பை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. “ஒப்புரவினால் கேடுவருவது அருமை. ஆனால், வரக்கூடும் என்று ஐயுறுகிறாயா? சரி. அப்படி வந்துவிட்டால்கூட என்ன கெட்டுவிடும்? கேட்டிலெல்லாம் பெரும் கேடு, தன் உடைமைகளை விற்பதல்ல, தன்னை விற்பது. அப்படித் தன்னை விற்றுக்கூடப் பெறத்தக்கதே ஒப்புரவு. ஏனெனில், உயிர் போனாலும் உயிரினும் மேலான, நிலையான புகழை அது தருவதாகும்! எனவே, தயங்காது ஒப்புரவு நாடு!” என்று ஊக்குகிறார். புகழ் வேட்டைக் கலத்து அறிஞர் போல! ஆனால், வள்ளுவர் கண்ட நடுவுநிலை-சமய நடுவுநிலை, வாழ்க்கை நடுவுநிலை—இவ்விருவகை நடுவுநிலைகளிலிருந்தும் எத்தனையோ படி உயர்வுடையது. வள்ளுவர் பெருமையை அறியாதவரல்லர், அவர்க்கு உச்ச உயர்வு தாராதவரல்லர் - பரிமேலழகர்! ஆனால், அவர் வள்ளுவர் நடுவுநிலைப் பண்பை வாணிக நடுவுநிலையாகவே காண்கிறார். அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற முப்பாற் பாகு பாடுடையதென்று பரிமேலழகர் கொள்கிறார். வள்ளுவர் ஒழுக்கம் மட்டுமே கூறுவதாகக் கண்டு, அதற்குத் தம் விளக்கம் தருகிறார். “வழக்கும், தண்டமும் உலக நெறி நிறுத்துதற் பயத்தவாவ தல்லது. ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பில வாகலானும்; அவை தாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது.” - திருக்குறள்; பரிமேலழகர் உரைப்பாயிரம் இங்கே பரிமேலழகர் தமிழ் மொழிக்குக் கொடுத்த மதிப்பைவிட, திருவள்ளுவர்க்குக் கொடுக்கும் மதிப்பே பெரிது என்று எளிதில் காணலாம். சமற்கிருத மொழி தெய்வ மொழி என்று அவரால் கருதப்பட்டது. ஆயினும், அத் தெய்வமொழியில் அறத்துடன் வழக்கும் விரவி எழுதிய மனு, ஆபத்தம்பர், கோதமர் முதலானோர் சமயப் பெரியாராயினும் மனிதப் புலமை உடையவரே. நேர்மாறாகத் தமிழ் மொழி மனித மொழியே யானாலும், அதில் அறம் வகுத்த திருவள்ளுவர் தெய்வப் புதல்வர், இங்ஙனம் மொழி தாழ்ந்ததானாலும் புலவர் தெய்வத்தன்மை உடையவர் என்பதைப் பரிமேலழகர் ஒத்துக்கொள்கிறார்—- சிறிது பெருமையுடனே சுட்டிக்காட்டு கிறார்! ஆயினும், பரிமேலழகர் கண்ட சமயமும் வாணிகச் சமயம். அவர் கண்ட தெய்வமும் வாணிகத் தெய்வமே. அது மட்டுமன்று, அவ் வாணிகமும் திருவள்ளுவர் குறட்பாவில் மேலே சுட்டிக் காட்டிய பண்புடை வாணிகமன்று. தமிழ் வாணிகப் பண்பன்று. எனவே, திருவள்ளுவர் தெய்வப் புலமையையும் ஒரு வாணிகத் தெய்வப் புலமையாகவும், நடுவுநிலை யையும் ஒரு வாணிக நடுவுநிலையாகவும் அவர் கருதுவார். பரிமேலழகர் கருத்துப்படி, திருவள்ளுவர் தேசந்தோறும் மாறுபடும் வழக்கும், தண்டமும் விட்டு, எல்லா நாடுகளுக்கும் உரிய ஒழுக்க முறையையே மேற்கொண்டார். அத்துடன் எத்தேசத்திலும் நூல் அறிவும் உணர்வு மிகுதியும் உடைய ஒரு சிலர்க்கே உரிய பண்புகளை ஒதுக்கி, எல்லாத் தேசங்களின் எல்லா மக்களுக்கும் உரிய பொதுப் பண்பை வகுத்தார். இவ் விளக்கம் முழுவதும் சரியானால் திருவள்ளுவர் சிறப்பு, நன்மையும் தீமையும் கலந்த உரைகளில், தீமை விலக்கி நன்மை மிளிரச் செய்வதே நாம் கொள்ளுதல் வேண்டும். ஆனால், இக் கருத்து முற்றிலும் சரியன்று. ஏனெனில், திருவள்ளுவர் சமய நடுவுநிலையை ஒரு சிறிதும் விளக்காது, திருவள்ளுவர் கருத்துகளின் தனி முதன்மை, தனிச்சிறப்பு ஆகியவற்றையும் அது கருத்திற்கொள்ளவில்லை என்பது தெளிவு. வாணிக முறைச் சமயம், வாணிக முறை ஒழுக்கம் கடந்து நெடுந்தொலை சென்றவர் தமிழர். ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ - புறம். 134 என்ற உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்கப் பாடல் இவ் வாணிக முறை அறத்தைக் கடிந்துள்ளது. ‘மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று கட்டுரைத்த வள்ளுவர்க்கும், வாணிக முறைச் சமய வாணர்க்கும், அறவாணர்க்கும், இடையேயுள்ள தொலை எட்டா நெடுநீளத் தொலை என்று கூறத் தேவையில்லை. தற்காலத் தமிழரும் அறிவுலகத்தாரும் திருவள்ளுவர் நடுவுநிலையை ஒப்புரவு நடுவுநிலையாகவே கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை. சமய வேறுபாடுகளை அவர் முனைப் பாகக் கூறவில்லை. எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை மூலக் கருத்துகளை அவர் வலியுறுத்தி விளக்கி யுள்ளார். அவர் நடுவுநிலையின் தன்மையும், தனிச்சிறப்பும் இதுதான் என்று பலரும் எண்ணுகிறார்கள். நடுவுநிலைப் பண்பின் பொதுவிளக்கம் என்ற முறையில் இக் கருத்துப் பெரிதளவு சரியே. அதனால், திருவள்ளுவர் நடுவுநிலைப் பண்பையோ அவர் தனிச்சிறப்புகளையோ இஃது ஒரு சிறிதும் விளக்கப் போதாது. ஏனெனில், அவர் கருத்து அவர் காலத்தனவென்று கொள்ளப்படும் பழஞ் சமயங்களுக்கு மட்டும் பொதுவன்று, அதற்குத் தெளிவாகப் பிற்பட்ட இசுலாம் போன்ற சமயங்களுக்கும், கீழ்த்திசைக்குத் தெளிவாகப் புறம்பான கிறித்தவ நெறி போன்ற சமயங்களுக்கும் பொதுவேயாகும். ஷ்வைட்சர் சுட்டிக்காட்டுகிறபடி, அவர்க்கு முற்பட்டனவென்று பொதுவாகக் கருதப்படும் சமயங்களில்கூட, பின்னாளைய மாறுபட்ட கோட்பாடுகள் அனைத்துக்கும் அது பொதுவாகவே அமைந் துள்ளது. இவற்றை ஒப்புரவு நடுவுநிலை விளக்கம் தெளிவுபடுத்துவதாகக் கொள்ள முடியாது. இரண்டாவதாகத் திருவள்ளுவர் பொதுமையின் சிறப்பு அது விலக்குவன விலக்கி, கொள்வன கொள்வதில் மட்டும் அமைவதன்று. ஏனெனில், அவர் விலக்குவன எல்லாச் சமயங்களும் விலக்குவனவே. எல்லாச் சமயங்களும் வள்ளுவரை ஏற்பதுடன் நில்லாது, ஆர்வமாக ஏற்பதன் மறைதிறவு, இதுவே. அத்துடன் கொள்பவற்றையும் வாளா கொண்டமைந்தவரல்லர் திருவள்ளுவர். அவற்றுக்கு அவர் தரும் விளக்கம், அவற்றிடையே அவர் காணும் தொடர்பு அவற்றின் எல்லாக் கூறுகளையும் வாழ்க்கையுடன் இணைத்துக் காணும் அவர் திறம் ஆகிய பல ஆக்கப் பண்புகள் சமய முதனூல்களுக்கெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரு விளக்க உரையாய் அமைவன. நம்பிக்கை அடிப்படையாகச் சமயங்கள் வலியுறுத்தும் பண்புகளுக்கெல்லாம் அவர் பகுத்தறிவு அடிப்படையான காரணம் கூறுகிறார். சமயவாணர் ஒவ்வொரு வரும் அவரை ‘எம் சமயத்துக்குரியவர்’, ‘எம் சமயத்துக்குரியவர்’ என்று கூறுவது இதன் அருமை நோக்கியேயாகும். மூன்றாவதாக, எந்தச் சமய முதல்வரும், எந்த அறநூலாரும், எந்த அறிஞரும், முன்னோ, பின்னோ, சமகாலத்திலோ காட்டாத முறையில், இன்னும் திருக்குறள் உரையாசிரியரால், வாசகர் களால் முற்றிலும் தனிப்பட உணரப்படாத முறையில், அவர் மனித இனத்தில் நாகரிகப் பண்புகள், கருத்துகள், வாழ்க்கைப் பண்புகள், கலைப்பண்புகள் ஆகிய எல்லாவற்றையும் ஒரே வாழ்க்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் இணைத்துக் காட்டுகிறார். உலகெலாம் ஒருங்கிணைத்து ஆராய்ச்சியறிவு களையெல்லாம் ஒருங்கு தொகுத்து விளக்கம் நாடும் மெய் விளக்க அறிஞரால்கூட, வள்ளுவர் கண்ட ஒருமைப்பாட்டைக் காண முடியாது. இதை நோக்க, வள்ளுவர் நடுவுநிலை சமய நடுவு நிலை மட்டுமன்று, வாழ்க்கைக் கோட்பாடுகளனைத்தையும் இணைக்கும் வாழ்க்கை நடுவுநிலை மட்டும்கூட அன்று, ஷ்வைட்சர் காட்டுகிறபடி அதுவே சமயங்களின் பொருளிழந்த நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கெல்லாம் பொருள் காட்டி விளக்கும் மூலக் கோட்பாடு ஆகும். வாழ்க்கைக் கோட்பாடுகளின் நோக்கம், செயல், தொடர்பு மறக்கப்பட்டு மயக்கம் தரும் குருட்டுத்தனங்களுக்கெல்லாம், திருக்குறள் கண்ணளித்து உயிர்ப்பூட்டும் உயிர் முதல் ஆகும். வள்ளுவரிடம் சமயக் கோட்பாடு வேறு; வாழ்க்கைக் கோட்பாடு வேறு என்ற நிலை கிடையாது. அவர் சமயக் கோட்பாடு அவர் வாழ்க்கைக் கோட்பாடே! அதுபோல அவரிடம் சமுதாயக் கோட்பாடு வேறு, அரசியல் கோட்பாடு வேறென்பது கிடையாது. இன்பக் கோட்பாடு வேறு, அறிவுக் கோட்பாடு வேறு, அறக் கோட்பாடு வேறென்பதும் கிடையாது. சமயம், வாழ்க்கை; சமுதாயம், அரசியல்; இன்பம், அறிவு, அறம் ஆகிய எல்லாம் வள்ளுவரால் ஒரே மனித நாகரிகக் கோட்பாடாக அழகுபட யாத்தமைக்கப்பட்டுள்ளன. சமயம் என்றால் என்ன? சமுதாயம் என்றால் என்ன? அரசியல் எவ்வாறு இருத்தல் வேண்டும்? அறிவுக்கும், இன்பத்துக்கும், அறத்துக்கும் உள்ள தொடர்பு யாது? கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா? உண்டென்றால் நம் வாழ்க்கைக்கும் அவர்க்கும் உள்ள தொடர்பு யாது? பிறப்பு, இறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? உயிர் என்றால் என்ன? மறுபிறப்பு, மேல் உலகம், கீழ் உலகம் ஆகியவை உண்டா, இல்லையா? உண்டென்றால் அவற்றின் விளக்கம் யாது? அழகு, மெய்ம்மை, நன்மை இவற்றின் தன்மை என்ன? தொடர்பு யாது? உணர்ச்சி, அறிவு, உணர்வு ஆகியவற்றின் தொடர்பு யாது? சாவா வாழ்வின் மறைதிறவு யாது? அறிஞர்களால், சமயங்களால், கலைஞர்களால் கிட்டத் தட்ட விடை காணமுடியாத கேள்விகளாகவே இவை இன்று கூட இயல்கின்றன. ஆனால் இத்தனைக்கும் விடை விளக்கங்கள் திருக்குறளில் உள்ளன. தமிழ்மொழி அறியாமல் தமிழர் அறிந்த அளவுகூடத் தமிழக வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் அறியாமலே தொலை தூரத்திலேயிருந்து மொழி பெயர்ப்புக் கண்ணாடி மூலம் திருக்குறளில், இவற்றில் சிலவற்றையேனும் ஷ்வைட்சர் கண்டுள்ளார். நாமும் இனிக் காண இருக்கிறோம். ஆனால், ஷ்வைட்சரின் விளக்கத்தை வரலாற்று மொழியில் மொழி பெயர்ப்பதானால் அப்போது தான் நமக்கு அதன் முழு உண்மை விளங்கும் -—முழுப் புரட்சிகரமான மெய்ம்மை வெளிப்படும்! சமயங்கள் ஏற்பட்டபின் அவற்றிடையே நடுவுநிலை கண்ட நடுவுநிலை ஞானியரல்லர் திருவள்ளுவர். அவர் கண்ட நடுவுநிலையே உலகில் பல சமயங்களாகப் பரவியுள்ளன. சமயங்கள், தம் கோட்பாடுகளின் தேசகால வேறுபாடுகளை நீக்கி அடிப்படை ஒருமையைப் பின்பற்றியே தேசகாலங்களுக் கிடையில் உலகச் சமயங்கள், தம் கோட்பாடுகளை வளர்த்து வந்தன; வளர்த்து வருகின்றன; வளர்த்துவரும்! மனித இன நாகரிகத்துக்கு, சமய உலகுக்கு வள்ளுவர் ஒரு நூலாசிரியரல்லர். அறிஞர், கவிஞர், கலைஞர் அல்லது அறவோர் அல்லர்; சமய முதல்வர்கூட அல்லர். இத்தகையவர் அனைவர்க்கும் முற்பட வாழ்ந்து தம் காலங்கடந்த, தேசங்கடந்த அறிவால், இத்தகைய அனைவர்க்கும் மூல முதல்வராய், தோன்றாத் துணைவராய் இருந்து, வரலாற்றில் வாழ்ந்த ஒரு தெய்வமாய் இயங்கியவரே திருவள்ளுவர். அவர் தெய்வத் திருநூலே, காலத்தூசி படிந்த நம் தமிழ் மொழியில் புதையுண்டு கிடக்கிறது. வள்ளுவரிடம் சமணக் கருத்துகள், புத்தக் கருத்துகள் உண்டு, ஆனால் சமண, புத்தக்கருத்துகளறிந்து அவர் நடுவுநிலை உண்மை கூறியவரல்லர். ‘அவர் கருத்துகளே சமண, புத்த சமயங்களாகப் பின்னாள்களில் இயல்பாக வளர்ந்தன. அவரிடம் சைவ, வைணவக் கருத்துகள் காணப்படுவது இயல்பு. ஏனெனில், அவர் கருத்துகளே சைவ, வைணவ சமயங்களாக வளர்ந்தன. கிறித்தவ இசுலாமியச் சமயங்களுள் அவர்க்குத் தொடர்பு உண்டு. ஏனெனில், அவர் கருத்துகளின் தொலை ஒளிகளாகவே அவை தோன்றி வளர்ந்தன. தமிழர் திருக்குறளைப் போற்றிப் புதைத்து வைத்த பின்னும் அஃது இன்று உலகில் புகழொளி வீசியுள்ளது. சமயங்களை யெல்லாம் வளர்த்து வந்துள்ளது. பண்டிருந்து இன்றுவரை! ஆனால், உலகம் அதனைத் தங்கு தடையின்றிக் காணும்படி தமிழகம் திருவருள் பாலித்திருந்தால், இனியேனும் பாலிக்கக் கூடுமானால்கூட, உலகில் அது சமய ஒளி மட்டுமன்றி, முழு நாகரிக ஒளியே பரப்பியிருக்கும்; பரப்பும். ஏனெனில், அரசியல் துறையில் கிரேக்க அறிஞர் பிளேட்டோ முதல் இன்றைய குடியாட்சிப் பொதுவுடைமைவாத முதல்வர்கள் வரை எழுப்பியுள்ள விடைகாணாச் சிக்கல் வினாவுக்கெல்லாம் திருக்குறள் விளக்கம் அளித்திருப்பது உறுதி. அது மட்டுமன்று, அவர்களிடையே ஒற்றுமை விளைத்திருக்கவும் முடியும். ஏனெனில், சமயத்துறைக் கருத்துகளுக்கும் மூல முதல்வர் திருவள்ளுவரே. சமயம், அரசியல் ஆகிய இத் துறைகளில் மட்டுமன்றி, சமுதாயம், கலை, காதல் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் வள்ளுவர் அறிவே உலகின் மூல முதல் அறிவு-வள்ளுவர் விளக்கங்களே இன்னும் நீண்டநாள் அவற்றின் தொலை விளக்கமாகவும் இருக்க முடியும். ஏனெனில், வள்ளுவர் கோட்பாடு இவ்வெல்லாத் துறைகளையும் ஒரே துறையாக்கும் ஒப்பற்ற உயர்வுடையது. வள்ளுவர் உதவியின்றி அதே முடிவு காண நம் உலகுக்கு - கீழை உலகானாலும்சரி, மேலை உலகானாலும்சரி -—இன்னும் எத்தனை எத்தனையோ பன்னூற்றாண்டுகள் தேவைப்படக்கூடும். வள்ளுவரின் திருக்குறளை உலகச் சமயங்களின் முதல் நூல் என்று கண்டு, அம் முறையில் அதற்கு நேரிய உரைகண்டால், அதனால் சமயங்களுக்கு ஆதாயம் உண்டு. ஏனெனில், அது சமய வேறுபாடுகளை இணைக்கும், சமய வரலாற்றை விளக்கும். பகுத்தறிவாளர் ஆதரவு பெற முடியாமல் வலிமையிழக்கும் சமய வாழ்வில், பகுத்தறிவு விளக்கம் மூலம், பல கூறுகள் ஒளியும் வலிமையும் பெறும். இது போலவே உலக நாகரிகத்தின் மூல முதல் நூல் திருக்குறள் என்று கொண்டு அதற்கு உரை விளக்கங்கள் வகுக்கப்படுமானால், அதனால் உலகுக்கும், உலக நாகரிகத்துக்கும் ஆதாயம் உண்டு. ஏனெனில், உலக நாகரிகத்தின் இன்றுள்ள சிக்கல்கள் நீக்கி, அதை விரைந்து நெடுந்தொலை கொண்டு செல்லும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு. சமயத் துறை வேறு, உலகியல் வேறு என்று கொண்டனர் இடைக்கால சமற்கிருதவாணர். தற்கால மேலை உலகின் கருத்தும் இதுவே. ஆனால், பண்டைத் தமிழரும் சீனரும் இவ்வாறு கருதியதில்லை. இதனாலேயே மேலையுலகில் சமயத்துறை முன்னேற்றம் கீழை உலகைப் போலவே பிற்போக்கடைந்து இருப்பினும், உலகியல் வாழ்வு நெடுந்தொலை முன்னேறத் தொடங்கியுள்ளது. சமயத்துறை என்பது அகவாழ்வு, வாழ்வின் நீண்டகாலத் திட்டம் அல்லது பண்பு என்பது உணரப்படாத நிலையில், இம் முன்னேற்றம் சூழ் வனமற்ற நிலத்தின் புல் வளர்ச்சி தழை வளர்ச்சியாகவே அமைந்து விடுகிறது. வள்ளுவர் காட்டிய முழுவாழ்க்கை ஒளியறிந்து முன்னேறக் கூடுமானால் மேல் திசை மட்டுமன்றிக் கீழ்த் திசையும் வருங்காலத்தில் வளமான வளர்ச்சி காண வழி ஏற்படும். வரலாற்றுக்கு முற்பட்ட - அழிந்து போன நாகரிகங்கள் திருவள்ளுவரைப் போன்ற ஒரு தெய்வ அறிஞரைப் பெற்று, அவரை உணர்ந்து, அவர் வழி நின்றிருக்கக் கூடுமானால், அவை ஒரு நாளும் அழிந்துபட்டிருக்கமாட்டா! ஆனால், தமிழகம் அத்தகைய தெய்வ அறிஞரைப் பெற்றும் இன்னும் உணரத் தொடங்கவில்லை என்றே கூறுதல் வேண்டும். உலகின் அறிவு வளர்ச்சியில் நாம் பல பேரலைகளைக் காண்கிறோம். ஒவ்வோர் அலைக்கும் காலமய்யமும் தேசமய்யமும் உண்டு, அக் காலத்திருந்தும் தேசத்திலிருந்தும் அஃது எல்லையற்ற காலமளாவ, உலகமளாவப் பரப்புபவை. இத்தகைய அலைகளில் நம் காலத்தில் காந்தியடிகள், டால்°டாய் ஆகியோர் எழுப்பிய அலைகளே பெரியன. ஆனால், காந்தியடிகளும் டால்°டாயும் அருளாளர் வழி வந்த அருளாளரேயாயினும், தம்காலச் சூழ்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் அவர்களிடையே குறைவு. அதன் கோளாறுகளைக் கண்டு விளக்குவதிலும் அவர்கள் காலத்தை ஊடுருவ முடியவில்லை. ஆற்றலில் அவர்களை விஞ்சிய கார்ல்மார்க்சு சூழலிலிருந்து தம்மைப் புறமாக்க முடியாது சூழலில் சிக்குண்டனர் என்னலாம். ஆகவே, அவராலும் சூழலை மாற்றியமைக்க முடியாது போய்விட்டது. இம் மூவரும் எழுப்பிய கால அலைகள் இதன் பயனாகச் சிற்றலைகளாகவே இயங்கியுள்ளன. உலகில் பேரலை எழுப்பிய முதல்வர்களுள் கடைசி யானவர்கள் முகமதுவும் இயேசுவுமே. வரலாறு இவர்களையும், இவர்கள் காலத்தையும் நன்கறிந்துள்ளது. ஏனெனில், மேலை நாகரிகத்துக்கு நேரடியான மூலமாய் அமைந்தவை, அவர்கள் இருவரும் எழுப்பிய அலைகளே. ஆனால், அவர்கட்கு முற்பட்ட அலை புத்தபிரானையும், மகாவீரரையும் அளித்தது. முகமது நபியையும் இயேசு பிரானையும் முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலைகளின் தாயகம் கிட்டத்தட்ட ஒரே உலகப் பகுதியே - அராபிய உலகம் என்று இன்று வழங்கப்படும் மேலை ஆசியாவே. அது மட்டுமன்று, அவ்விரு அலைமுகப்புகளும் எழுநூறு ஆண்டுகள் இடைப்பட்டன வாயினும் உண்மையில் ஒரே அலையைச் சார்ந்தவையே. மேலும், அவ்வலை அவ்விருவருடனும் ஓய்வுற்றதேயன்றி இருவருடனும் தொடங்கியதன்று. அதன் தொடக்கம் சாலமன் தாவீது, மூசா, ஆபிரகாம் ஆகியவர்கள் காலங்களை உள்ளடக்கியது. ஆகவே, அந்த அலையின் தொடக்கம் கி.மு.1000க்கு முற்பட்டது. அஃது உலகில் கிட்டத்தட்ட மூவாயிர ஆண்டுகளுக்கு மேற்பட வீசும் ஓர் உலக அலையாகும். முகமது நபி, இயேசுபிரான் ஆகியோரை முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலைகளைப் போலவே, புத்தர்பிரானையும் மகாவீரரையும் முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலையும் இரண்டாயிர மூவாயிர ஆண்டுகள் வீசிய ஓர் உலகப் பேரலையாகும். ஏனெனில், கடைசி அலை உலகுக்கு யூதநெறி, கிறித்துவ நெறி, இசுலாமிய நெறி ஆகிய மூன்று நெறிகளை அளித்துள்ளது போலவே, இவ்வலையும் உலகுக்குப் புத்த நெறி, சமண நெறி ஆகிய இரு பெரு நெறிகளை அளித்துள்ளது. அது மட்டுமன்று; கடைசி அலை யூத இலக்கியம், அராபிய இலக்கியம் என்ற இரு பேரிலக்கியங்களை ஊக்கி, விவிலிய நூலாகவும், திருக்குரானாகவும் மணியுருப் பெற்றது போலவே, இந்த அலையும் தென்திசை யில் கடைச் சங்க இலக்கியம் என்று நாம் கூறும் தமிழ்ப் பேரிலக்கியத்தையும், வடதிசையில் உபநிடதங்கள் என்று சமற்கிருத வாணரால் அழைக்கப்படும் அறிவுப் பேரிலக்கியத்தையும் அளித்து, இறுதியில் புத்த பீடமாகவும், மகாவீரர் திருநூலாகவும் மணியுருப்பெற்றது. கடைசியலை கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஓய்வுற்றது. அதன் தொடக்கம் கி.மு. 1000க்கு முற்பட்டது. ஆனால் புத்த, சமண -—உபநிடத அலை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் முடிவுற்றது. அதன் தொடக்கக் காலத்தை நாம் வரையறுக்க முடியாவிட்டாலும், அஃது இருக்கு வேதக் காலம் என்று குறிக்கப்படும் கி.மு. 1500க்கு முற்பட்டதென்று துணிந்து கூறலாம். ஏனெனில், ஷ்வைட்சரும் அறிஞர் பலரும் கண்டு கூறுகிறபடி உபநிடதங்கள் புதிய ஆராய்ச்சிகளாகத் தொடங்க வில்லை. ஆராய்ச்சியடிப்படையில் வேதங்களுக்குரிய புது விளக்கங்களாகவே தொடங்குகின்றன. அவ்வாராய்ச்சிக்குரிய அலை முகப்பு சனகர் போன்ற மன்னர்கள், அதனை உலகில் பரப்பிய அறிஞர்களே உபநிடத முதல்வர்கள். அதனடிப்படையில் வேதங்களுக்கும் வேதச் சமயத்துக்கும் புது விளக்கம் தந்தவர்களே ஆரியர் மீது மெல்லத் தம் ஆதிக்கம் பரப்ப எழுந்த ‘பிராம்மணர்’என்ற புதிய பண்டைக்கால அறிவு வகுப்பார்! இவற்றைக் கருத்துட்கொண்டால் இவ்வலையின் தொடக்கம் கி.மு. 2000க்குப் பிற்பட்டதல்ல என்று ஊகமாகக் கூறலாம். புத்த, சமண அலைகளுக்கும் முற்பட்ட அலை உலகில் உண்டு. அதன் அலை முகப்புகளே சீன அறிவு முதல்வர் கன்பூசிய°, பாரசீக அறிவு முதல்வர் ஜரதுஷ்டிரர் ஆகியோர். இவர்கள் காலத்தை நாம் வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆனால், கி.மு. 600க்கு அதாவது புத்த சமண சமயத்துக்கு நெடுநாள் முற்பட்டவர் என்றே கூறத்தகும். கன்பூசிய° கி.மு. 1200க்கு உரியவர் என்று சீன அறிஞர் கருதுகின்றனர். ஜரதுஷ்டிரர் காலமும் கிட்டத்தட்ட அதே அளவு பழைமையுடையதென்று துணிந்து கூறலாம். உண்மையில் இருவருமே கி.மு. 1500க்கு உரியவராகக்கூட இருத்தல் ஏலாததன்று. ஏனெனில், ஜரதுஷ்டிரர் எழுப்பிய அலையே நடு ஆசியாவில் பாரசீக ஆரியருடன் வாழ்ந்த இந்திய ஆரியரை இந்தியாவை நோக்கி வெளியேற்றிற்று! முகமது - —இயேசு அலை கடைசி அலை. ஆயினும், அதன் தொடக்கம் புத்தர் மகாவீரர் காலத்துக்கும் முற்பட்ட தென்பது மேலே காணப்பட்டது. அதுபோலவே புத்த மகாவீரர் அலையின் தொடக்கம் உண்மையில் கன்பூசிய°— - ஜரதுஷ்டிரர் காலத்துக்கு முற்பட்டது என்பதை நாம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், கன்பூசிய° - ஜரதுஷ்டிரர் அலையில், ஜரதுஷ்டிரர் - கன்பூசியசும் அலை முகப்புகளும் அலையின் ஓய்விறுதியுமேயாவர். ஆகவே, சமய உலக வரலாற்றில் நாம் காணும் உலகப் பேரலைகளுள் முந்திய பேரலை ஜரதுஷ்டிரர்- கன்பூசிய° அலையே என்பதில் ஐயமில்லை. அதன் தொடக்கமும் வரலாறும் இன்றும் காணாதது. உலக வரலாறு பற்றியும் சமய வரலாறு பற்றியும் வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள ஆராயாத தவறான நம்பிக்கைகள் அவற்றை மேலும் துருவி ஆராய இன்னும் தடையாகவே உள்ளன. இந்த அலைகளின் வரலாற்றைக் காண்பதில் நமக்குள்ள இடர்ப்பாடு பெரிது. ஆனால், அதைவிட வள்ளுவர் காலமும் பண்பும் காண்பதிலுள்ள இடர்ப்பாடு இன்னும் பெரிது. உண்மையில் பண்பு காண ஷ்வைட்சர் உதவியிராவிட்டால் காலங்காணும் வாய்ப்பே நமக்கும் உலகுக்கும் என்றும் ஏற்பட்டிராது. திருக்குறள் சங்க காலத்து ஏடு, தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது என்ற தமிழர் முடிபு அதை என்றென்றும் ஒளி பெறாமலே தடுத்திருக்கவல்லது. இப்போதுகூடப் பொது மக்களிடையே இன்னும் இருந்து வரும் தாய்மொழிப் பற்று ஒன்று தவிர, தமிழக அறிவுலகிலிருந்து இதுவகையில் புதிய நடுவுநிலை கோடா அறிவாற்றலை எழுப்பித் தூண்டினாலன்றி, இவ்வகையில் உலகுக்கு வேறு ‘கதி’ ஏற்படாது. ஆனால், வள்ளுவரைத் தந்த தமிழகம் ஆராய்ச்சியுலகிலும் மேலையுலகுக்கும் வழிகாட்டிக் கீழை உலகைத் தட்டி எழுப்பவல்ல ஒரு வள்ளுவ—அறிஞரை அல்லது மரபைத் தரும் என்று நாம் நம்பலாம். திருவள்ளுவர் காலம் எவ்வளவு பழைமையானது என்று கொள்ள முடியுமோ அவ்வளவு பழைமையானதாகக் காட்டுதல் வேண்டும் என்ற ஆர்வம் தமிழார்வலரிடையே இருப்பது இயல்பு. ஆனால், இது திருவள்ளுவர் கால ஆராய்ச்சி வகையில் இதுவரை தடையாய் இருந்து வந்திருக்கிறதேயன்றி உதவியாய் இருந்ததென்று கூறுவதற்கில்லை. ஏனெனில், முற்பட்டதென்ற ஆராய்ச்சி முடிவுகள் யாவுமே இத்தகைய ஆர்வ முடிவுகள் என்ற எண்ணத்தை இது பரப்ப ஏதுவாகிறது. தமிழினம் இன்று இருக்கும் நிலையில் இந்த எண்ணத்திலும் தமிழர்க்குக் கேடு பயப்பது எதுவுமில்லை. ஏனெனில், நல்ல பாம்பைக் கண்டு அஞ்சுபவர்கள் அவ்வினத்தின் குஞ்சுகளையும் முட்டைகளையும் இரக்கமின்றி ஒழிக்க முற்படுவதன்றி, அதே இனம், அல்லது இனத்தின் குஞ்சு அல்லது முட்டை என்று ஐயுறத்தக்க பிற உயிரினங்களையும், அவற்றின் கரு உருவங்களையும், கொன் றொழிக்க நேர்ந்துவிட்டது. இந் நிலையில் தமிழ் நாகரிகம் பிற்பட்டதென்ற முனைப்புடன் ஆராய்ச்சியில் புகும் வையாபுரியார், கே.என். சிவராஜ பிள்ளை போன்றாரது ஆராய்ச்சிகள் தமிழகத்துக்கு மிகவும் பயன் தந்த ஆராய்ச்சிகளே என்பது உறுதி. ஏனெனில், சங்க காலத்தை வையாபுரியார் ஏற்றுக்கொண்டதே தமிழக ஆராய்ச்சித் துறையில் ஒரு முதற்படி முன்னேற்றமாய் அமைந்தது. ஆனால், உலகில் அம் முடிபு அதன்பின்னும் அறியப்படவில்லை. வையாபுரியார் போன்றார் ஆள்பவர் நம்பிக்கை பெற்றவராயினும் அவரும் தமிழர்தாமே! அறிஞர் வையாபுரியார் போன்றாரும் முனைவர் உ.வே. சாமிநாதய்யர் போன்றாரும்கூடத் தமிழகத்துக்கு வெளியே தமிழராகத்தான் மதிக்கப்படுகின்றனர். அறிஞராக மதிக்கப்படுவ தில்லை. அவர்கள் முதல் பற்று சமற்கிருதமாய் இருப்பதுகூட தமிழகத்துக்கு வெளியே, தமிழில் அவர்கள் கொண்ட இரண்டாம் படியான தாய்மொழிப் பற்றை மன்னிக்கத்தக்க ஒரு குற்றமாகக் கருதப்பட உதவவில்லை! வள்ளுவர் புத்த சமயத்தைக் கண்டிப்பதாகக் கொண்டு அவர் காலத்தை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கொண்டார் அறிஞர் டி.எ°. கந்தசாமி முதலியார் அவர்கள். இங்ஙனம் அவர் கொண்டதற்குக் காரணமான குறட்பா புலால் மறுத்தல் பற்றியதே என்னலாம். ‘தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின், யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்’ - குறள் 256 இக் குறட்பா புத்த நெறியின் வழக்கைக் குறித்ததானால் கனிஷ்கன், மணிமேகலை காலங்களுக்குப் பிற்பட்ட பண்புக் கேடுகள் புகுந்த பிற்காலப் புத்த நெறிக்கே பொருந்துவதாகும். ஆனால், மணிமேகலையே திருக்குறளை மேற்கோளாகக் காட்டும் நூல். அறிஞர் கந்தசாமி முதலியார் புத்த சமயத் தடமுடையவை என்று காட்டக்கூடும் மற்றக் குறட்பாக்கள் சில உண்டு. ஆனால், அவை புத்த நெறியினரே திருக்குறள் தம் சமயத்துக்குரியதென்று சொல்வதற்கு மூலக் காரணமான குறட்பாக்கள் மட்டுமே. எனினும், அதே வகைக் கருத்துகளைப் புத்தர் மட்டுமன்றிச் சைவ, வைணவ, கிறித்துவ, இசுலாமிய சமயத்தாரும் வேறுபாடின்றி ஏற்கமுடியும். வள்ளுவர் நாத்திகர் என்பதற்கும் மார்க்சியப் பொதுவுடைமைவாதி என்பதற்கும்கூடச் சில பல குறட்பாக்கள் சான்றளிக்க முடியும். இவையனைத்தும் நேர்மையான ஒப்புவமைகளே -—ஆனால், வள்ளுவர் இத்தனையையும் பின்பற்றியவர் என்பதைவிட, இத்தனையும் வள்ளுவரைப் பின்பற்றியன என்று கூறுவதே பொருத்தமுடையதாகும். அறிஞர் இராமசாமிக் கவுண்டர் அவர்கள் திருவள்ளுவரைப் புத்தர் காலத்தவர் என்று கருதினார். ஆனால், புத்த, சமணஅலை வேத காலங்களுக்கு முன்னிருந்தே தொடங்கியது. புத்தர்க்கு, நெடிது முற்பட்ட உபநிடதங்களிலும், உபநிடதங்களுக்கு முற்பட்டனவாகக் கருதப்படும் ஆரணியங்களிலும், ஷ்வைட்சர் திருவள்ளுவர் தடம் காணத் தவறவில்லை, ஆனால், திருவள்ளுவர் கோட்பாட்டையே இந்தியா முழுவதிலும் பரவி வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழினத்தின் கருத்தாக அவர் கருதினார். அக் கருத்தின் தடத்தை அவர் உபநிடத, ஆரணியங்களிடையே கண்டார். ஆகவே, திருவள்ளுவர் புத்த, சமண நெறிகளுக்கு மட்டுமன்றி, வேத உபநிடதங்களுக்கும் முற்பட்டவர் என்பது உறுதி. வரலாற்றறிஞர் புத்தர் அலைக்கும், அதற்கும் நெடிது முற்பட்ட ஜரதுஷ்டிரர் அலைக்கும் உள்ள ஒரு தொடர்பை எக்காரணத்தாலோ கண்டும் காணாதவராகக் கண்ணை மூடிக்கொள்கின்றனர். காலத்தாலும் இடத்தாலும் நெடிது பிரிவுற்ற இந்த ஈரலைகளிடையிலேயும் மாறுபாடு இருப்பது இயல்பு. ஒற்றுமை இருப்பதுதான் இயல்புக்கு மாறானது. ஆனால், ஒற்றுமையே—வரலாற்று இன ஒற்றுமையே—- அவற்றிடையே பெரிது. ஜரதுஷ்டிரர் மேற்கொண்ட ஒரு பண்பாட்டை எதிர்த்துப் போராடித் தோல்வியுற்றே, இந்திய ஆரியரெனப்படுபவர் சிந்து வெளியிலும் அதன்பின் கங்கை வெளியிலும் பரவினர். ஆனால், அவர்கள் கங்கை வெளியடை வதற்குள் எதிர்ப்பு இங்கும் தொடங்கிற்று. ஈர் எதிர்ப்புகளும் ஒரே இனப் பண்பாட்டின் எதிர்ப்புகளே என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. எதிர்ப்பின் வேறுபாடுகளில்—- இனிக் கருத்துச் செலுத்து வோம். வேத ஆரியர் பல தெய்வ வழிபாட்டுடனேயே சிந்து வெளியில் நுழைந்தனர். ஜரதுஷ்டிரர் ஒரே கடவுள் கொள்கையை உறுதியாய்ப் பற்றியவர். ஆகையால், வேத வழிபாட்டை மூர்க்கமாக எதிர்த்தார். ஆனால், ஆரியர் பொது வேதத்தில், இந்திய ஆரியர் பல தெய்வ வழிபாட்டுக்கு ஆதரவான பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்ததுபோல, அவர் அதே மூல வேதத்தில் ஒரு கடவுள் வணக்கத்துக்கு உரியவற்றை மட்டும் பிரித்தெடுத்தார். அதனையே அவர் (சிலப்பதிகார, மணிமேகலைப் பிரிவுகளை நினைவூட்டும்) காதைகள் (காதா பயவாய) என்ற சொல்லால் குறித்தார். இருக்கு வேதத் தேவர்களை மட்டுமன்றி `தேவர்’ என்ற சொல்லையே ஜரதுஷ்டிரர் பேய்களைக் குறிப்பதாகக் கொண்டார். வேதங் களிலும், பிற்காலப் புராண மொழி, சமற்கிருத மொழிகளிலும், தேவர் பகைவர் பெயராகக் குறிக்கப்பட்ட ‘அசுர’ என்ற சொல்லையே அவர் கடவுள் தூதர் (ஹபேநட) பெயராகக் கொண்டு, கடவுளைப் பெரிய அசுரன் (அஹுர மஜ்தா) என்று குறித்தார். ஆங்கிலத்தில் தேவ என்ற சொல்லின் பாரசீகப் பொருளையும், இருக்கு வேதப் பொருளையும் வேறு இரு சொற்களில் (னுநஎடை, னுiஎiநே) இன்றும் காணலாம். புத்த சமயத்திலும் கடவுட் பகைவனான பேய்மகன் தேவலன் என்றே அழைக்கப்பட்டான். வேத ஆரியரின் பலதெய்வ வழிபாட்டை, ஒருதெய்வ வழிபாட்டால் எதிர்த்த பாரசீக முதல்வர் போலன்றி, புத்தர் பிரான் பலதெய்வ வழிபாட்டை தெய்வ மறுப்பு அல்லது கடவுள் பற்றிப் பேசாத பகுத்தறிவு ஆராய்ச்சியாலேயே எதிர்த்தார். இரண்டாவதாக பார்சிகள் இன்றளவும் ஊன் உண்பவரே. ஆனாலும், ஜரதுஷ்டிரர் கொலை வேள்வியை மட்டுமன்றி, வேள்வியையும் அதுபோன்ற வினைமுறைகளையும் தவம், நோன்பு ஆகியவற்றையும் எதிர்த்தார். புத்தர் பெருமானோ கொலையையும் புலால் உண்ணுதலையுமே கடிந்தார். ஜரதுஷ்டிரர் காலத்தில் பாரசீக ஆரியரிடையிலோ, இந்திய ஆரியரிடையிலோகூடச் சாதி வேறுபாடு கிடையாது. ஆனால், வேள்வியாற்றிய குருமார் வகுப்புத் தொடங்கி இருத்தல் வேண்டும். ஜரதுஷ்டிரர் குருமார் வகுப்பைத் தொழில் வகுப்பாக்கிப் பிறப்புரிமை அழித்தார். புத்தர் காலத்துக்குள் புதிய இந்திய ஆரியரிடையே சாதி வேறுபாடு தோன்றவில்லை யாயினும் மூவருண வேறுபாடு தோன்றிவிட்டது. புத்தர் அதனைச் சாடினார். குருமார் வகுப்பு, துறவி வகுப்பு இரண்டையும் ஒழிக்க அவரும், சமணரும் மணவாழ்வற்ற துறவறத்தை வலியுறுத்தினர். இந் நோக்கம் நல்ல நோக்கமேயாயினும், இதன் மூலமே கீழ்த்திசையில் வெறுப்புத் துறவறத்தைப் பரப்ப புத்த சமயமும், சமண சமயமும் பெரிதும் காரணமாயின. ஜரதுஷ்டிரர் குடும்ப, சமுதாய ஒழுக்கம்; தாய்மை ஆகியவற்றை வலியுறுத்தினார். குடியைக் கடிந்தார். இவை வேத ஆரியர்க்கு முரண்பட்டவை. ஆனால், புத்தர் இன்னும் ஒருபடி மேற்சென்றார். அகப்புறத் தூய்மைகளை வலியுறுத்தினார். அவாவையே ஒழிக்க வேண்டுமென்றும். உயிர்களுக்கு உதவவேண்டுமென்றும் வலியுறுத்தினார். இந்திய சமயங்களுள் அவா ஒழிப்பு மேற்கொண்ட முதல் சமயங்கள் புத்த சமயமும் சமண சமயமுமேயாகும். (திரு வள்ளுவர் அவா வடக்கம் இதனில் சற்று வேறுபட்டது. ஆனால், அஃது இக் கருத்துக்கு மூலமானது ஆகக்கூடும்). புத்த சமயத்தவர் ஒழுக்கக் கேடும் குடி ஆதரவும் மணிமேகலைக் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட பண்புக் கேடுகளேயாகும். புத்த, ஜரதுஷ்டிர சமயங்களுக்கு இடையேயுள்ள வேற்றுமை ஓரினத்துக்கு உட்பட்ட வேற்றுமை என்று திண்ணமாகக் கூறலாம். ஏனென்றால், காலத்திலும் இடத்திலும் புத்த நெறிக்கு மிக அணிமையான சமண நெறிக்கும் அதற்குமுள்ள வேறு பாட்டைவிட இது முனைப்பானதன்று, சமண சமயம் ஒரு கடவுள் நெறி பேணிற்று. ஆனால், சமணர் கடவுட் கருத்துத் திருவள்ளுவர் கருத்துக்கும் சைவ, வைணவக் கருத்துகளுக்கும் இடைப்பட்ட தென்னலாம். கொல்லாமை வகையில் அது புத்த நெறியைவிடத் தீவிரமானது. வேள்வியை அது புத்த, சைவ, வைணவ நெறிகளைப் போலவே கண்டித்ததாயினும், சைவ வைணவ நெறிகளைப் போலத் தவமும் நோன்பும் போற்றிற்று. சாதி வருண முறைகளைப் புத்த சமயம் போலவே சமண, சைவ, வைணவ சமயங்கள் கண்டித்தாலும், புத்த சமயத்தைவிட இச் சமயங்கள் படிப்படியாகக் கண்டிப்பைத் தளர்த்தின. உலகில் பரவிய புத்த நெறி இந்தியாவில் நீடித்து நிலவாததற்கு, அதன் சாதி எதிர்ப்பே பெரிதும் காரணம் என்று அறிஞர் கருதுகின்றனர். சமணம் வெளியுலகில் பரவாததற்கும், இந்தியாவில் பரப்புக் குறுகியதற்கும் காரணம் அதன் கடுவாழ்வு என்றும், இந்தியாவில் அஃது அழியாது நிலவியதற்குக் காரணம் சாதி எதிர்ப்பு வகையில் அதன் கண்டிப்புத் தளர்வுற்றதேயாகும் என்றும் அவர்கள் எண்ணியுள்ளனர். வேத ஆரியரை இந்தியாவில் எதிர்த்த புத்த, சமண அலை திருக்குறள் கருத்துகளை மேற்கொண்ட அலையே என்பது ஷ்வைட்சர் கருத்து. மேற்காட்டிய ஒப்புவமைகள் இதே பண்பை ஜரதுஷ்டிரர் சமயச் சீர்திருத்த அலைமீதும் ஏற்றப் போதியன. ஆனால், இதை வலியுறுத்தும் வேறு செய்திகளும் உள்ளன. வேதக் காலத்துக்கு முன்பே ஓர் அறிவார்ந்த உலோகாயத (பகுத்தறிவு)க் கோட்பாடு இந்தியா வெங்கும் பரவி இருந்தது என்பதைப் பண்டித ஜவஹர்லால் நேரு ‘இந்தியாவின் கண்டு பிடிப்பு’ என்ற நூலில் விளக்கியுள்ளார். அது சார்ந்த இலக்கியம் எதுவும் நமக்கு வந்தெட்டவில்லை. ஆனால், இது சமயத்தின் அறிவுத் துறைகளாக இன்று உலவும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், மீமாம்சை, பூர்வ மீமாம்சை என்ற ஆறு அறிவுத்துறைக் கோட்பாடுகளும் அந்தப் பண்டைக்கால உலோகாயதத்தின் கிளைகளே என்பதை அறிஞர் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அறிவார்ந்த இந்த நாத்திக உலோகாயதத்துடனேயே, அது போல அறிவார்ந்த ஓர் ஆத்திக உலோகாயதமும் இருந்தது என்று கூறலாம். ஆனால், பிற்காலத்தார் இந்த அறிவார்ந்த ஆத்திக உலோகாயதத்துக்கும், அறிவார்ந்த நாத்திக உலோகாயதத்துக்கும் வேறுபாடு காணாது இரண்டையும் நாத்திகம் என்று கருதியிருத்தல் வேண்டும். ஏனெனில், இந்த நாத்திகரும் பல ஆத்திகரும் நாத்திக சமய முதல்வரையே, கடவுள், கண்டுணர்ந்த கண்கண்ட கடவுளாகக் கருதினர். பகவன், அல்லது பகவான் என்ற பெயர் முதல் முதல் வழங்கப்பட்டது இம் முதல்வர்க்கே. புத்த, சமண, சைவ, வைணவ, புதிய வேதம் அல்லது இந்து சமயங்கள் பின்னாளில் இச் சொல்லை இதே மரபில் கையாண்டுள்ளன. திருவள்ளுவர் சமயம் சார்ந்த கருத்துகள் நாத்திக முதல்வர் கருத்துகள் என்று கருதப்பட்டவற்றுடன் பெரிதும் சொல் ஒற்றுமையும் ஓரளவு கருத்து ஒற்றுமையும் உடையனவாக உள்ளன. முதன் முதல் கடவுட் கருத்தை—ஒரு கடவுட் கருத்தை மனித இனத்துக்கு வகுத்தளித்த பகுத்தறிவு முதல்வர் திருவள்ளுவர் தானோ என்று ஐயுற இடமுண்டு. ஏனெனில், அக் கடவுட் கருத்து ஒன்றே நாத்திகரும் ஆத்திகரும் ஒருங்கே ஏற்கும் கருத்தாய் அமைந்துள்ளது. தமிழக அருளாளர் அனைவரும் இன்றுவரை ‘உண்டென்பார்க்கு உளதாகி, இல்லை யென்பார்க்கும் அதுவாகும் பொருள்’ என்று கடவுளைப் பாடத் தயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் புத்த, சமண அலைக்குரியவரல்லர். அதற்கு முற்பட்ட ஜரதுஷ்டிரர், கன்பூசிய° அலைக்கும் முற்பட்ட முதல்வர் என்பதை ஈர் அலைகளின் ஒப்பீடு தெள்ளத் தெளியக் காட்டுகிறது. கங்கை வெளியில் திருவள்ளுவர் கடவுட் கருத்தைச் சமணரும், கடவுள் சாரா உலோகாயதக் கருத்தைப் புத்தர் பிரானும் மேற்கொண்டது போலவே, முற்பட்ட அலையில் ஜரதுஷ்டிரர் திருவள்ளுவர் ஒரு தெய்வக் கருத்தையும், கன்பூசிய° கடவுள் சாரா உலோகாயதக் கருத்தையும் தழுவினர். அத்துடன் பொதுவாக, புத்த சமண சமயங்களைவிட, ஜரதுஷ்டிரர், கன்பூசிய° சமயக் கருத்துகளே இருவேறு வகையில் திருவள்ளுவருக்கு அணிமையானவை. வளையாத சமயஞ் சாரா வாழ்க்கைக் கோட்பாட்டு விளக்கத்தில் பிந்தியவரும் வள்ளுவரை நினைவூட்டு பவராவர். வள்ளுவர் மூவலைகளுக்கும் முற்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டும் மற்றொரு பேருண்மை அறிவார்ந்த கடவுட் கோட்பாடே. ஒரு கடவுள் கோட்பாடு பல தெய்வக் கோட்பாட்டின் படிப்படியான வளர்ச்சியே என்று பொதுவாக உலக ஆராய்ச்சியறிஞர்கள் கருதுகின்றனர். உபநிடதங்களின் கடவுள் பற்றிய ஆராய்ச்சிகளை இதற்காதாரமாகக் காட்டுபவரும் உண்டு. ஆனால், ஷ்வைட்சர் சுட்டிக்காட்டியபடி, உபநிடதங்கள் ஆராய்ந்துருவாக்கப்பட்ட ஒரு கோட்பாட்டைப் புதிய நிலத்தவர்க்கு விளக்குபவையே யன்றி, புத்தாராய்ச்சியில் புகுபவையல்ல. தவிர, ஒரு தெய்வ வணக்கத்துக்குப் பேர்போன இசுலாமிய, கிறித்துவ, யூத சமயங்களின் வரலாறு காட்டும் உண்மை இதற்கு ஆதரவானதல்ல. ஒரு கடவுட் கோட்பாட்டின் வளர்ச்சிவேறு. பலதெய்வ நம்பிக்கை வேறு. முன்னது அறிவார்ந்த இன சமுதாயத் தலைவர்கள், அறிஞர்கள் வழி தொன்றுதொட்டு ஒரு தெய்வக் கோட்பாடாகவே வளர்ந்து வந்துள்ளது. அந்த ஒரு தெய்வக் கோட்பாட்டுடன் இயல்பாக இணைந்த தெய்வக் கோட்பாடு, பல தெய்வக் கோட்பாடு அன்று; இன முதல்வர் அல்லது பகவர் கோட்பாடே. யூதரின் ஒரு தெய்வக் கோட்பாட்டுக்கும் ஜரதுஷ்டிரரின் ஒரு தெய்வக் கோட்பாட்டுக்கும் இடையேயுள்ள அலைகளின் சூழல் மாறுபாடுகள் பல. அதுபோலக் கன்பூசியசின் உலோகாயதத்துக்கும், புத்தர்பிரான் உலோகாயதத் துக்கும் இடையேயுள்ள அலைகளின் சூழல் வேறுபாடுகள் பல. இரண்டையும் இணைக்கும் மூல முதலின் தடங்களைச் சைவ, சமண, புத்த, வைணவ சமயங்களிலும், வேதகால நாத்திக உலோகாயதத்திலும் காணலாம். இவை அனைத்தின் மூல முதல் கரு வடிவத்தையே நாம் திருக்குறளில் காண்கிறோம். உலக சமய ஒப்பீட்டால் நாம் காணும் இம் முடிபைத் தொல்காப்பிய, திருக்குறள் ஒப்பீடும் வலியுறுத்துகிறது. தொல்காப்பியர் காலம் இஃது என்று உறுதிப்படாவிட்டாலும் அது முதற்சங்க இறுதி, இடைச் சங்கத் தொடக்கக் காலத்தது என்று அறிகிறோம். தொல்காப்பியக் காலப் பாண்டியன் நெடியோன் கடலுள் ஆழ்ந்த குமரி, பஃறுளியாற்றுப் பகுதியை ஆண்டதுடன், இமயம் வரையும், கடல்கடந்த கடாரத்தையும் (சுமத்ராவையும்) வென்றதாகத் தெரிய வருகிறது. இக் காலம் இலங்கை ஒரு தனித்தீவாக ஆகாத காலம்; வடதிசையில் ஆரியர் புகாத காலமாகும். ஆகவே, தொல்காப்பியத்துக்கு முற்பட்ட திருவள்ளுவர் ஆரியர் வருகைக்கு நெடிது முற்பட்டவராகவே இருத்தல் வேண்டும். வேதங்களை வியாசர் வகுப்பதற்கும், இராமாயண பாரதங்களுக்கும் தொல்காப்பியம் முற்பட்டதென்றே நச்சினார்க் கினியர் கருதியுள்ளார். அத்தகைய ஒரு மரபுரை அன்றும் தமிழகத்தில் உலவியிருத்தல் கூடும். தொல்காப்பியர் சுட்டிய முதல் நூலும், தமிழ் நூல்கள் சுட்டிய நால் வேதமும் நாற் பொருள் கூறும் முப்பால் நூலாகவே இருத்தல் வேண்டும் என்னலாம். வள்ளுவரையே தமிழர் இறைவன் அல்லது இறையனாராகக் கருதி, இவ் வேதத்தை வெளியிட்ட முதல்வனாகப் பின்னாளில் கொண்டவராதல் வேண்டும். தொல்காப்பியர் முதல் அணிமைக்கால இலக்கண நூல் வரை முதல் நூல் இலக்கணமாகத் தரும் நூற்பாவின் பொருள் மட்டுமன்றிச் சொல்லும் திருக்குறள் வாசகங்களை நினைவூட்டுவதாய் உள்ளது. ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்’ இவ் இலக்கண நூல் நூற்பாவுடன் கீழ்வரும் குறட்பா ஒப்பு நோக்கத்தக்கது: ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ - குறள் 5 5. முப்பால் அறம் வாழ்க்கையின் முழுநிறை இலக்கணமாக அமைந்த ஏடு திருக்குறள். திருவள்ளுவர் இவ்விலக்கணத்தை அறம், பொருள், இன்பம் என்ற முப் பால்களாக வகுத்துள்ளார். முப்பால் என்ற அதன் பெயர் இவ்வமைப்பையே சுட்டிக்காட்டுகிறது. முப்பால்களில் ‘அறம்’ ஒரு கூறேயானாலும், சங்க காலங்களில் நூல் முழுவதுமே ‘அறம்’ என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோற்றுகிறது. முப்பாலில் அறத்தின் சிறப்பை இது குறிக்கிறது. காலஞ்சென்ற எ°. மீனாட்சி சுந்தர முதலியார் ‘நூற் பொருள் விளக்கம்’ என்ற சிறந்த புத்தாராய்ச்சி நூலின் ஆசிரியர் ஆவார். திருவள்ளுவர் நூலுக்குப் பொருத்தமான பெயர் இன்பம் அல்லது இன்ப நூல் என்பதே என்றும், அவ்வாறே அது வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். வள்ளுவர் ஒருவர் நீங்கலாக, உலகின் ஏனைய அறிஞர் யாவரும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நான்கு குறிக்கோள்களாகவோ, அல்லது ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்த நால் வேறு படிகளாகவோதான் கருதியுள்ளனர். ஆனால், வள்ளுவரோ வீட்டை இன்பத்தின் முதிர்ச்சியான பேரின்பமாகவே கொண்டார். இன்பத்துக்குரிய இல்லறமும், வீட்டுக்குரிய துறவறமும் ஒரே அறத்தின் பால் உட்படுத்தப்பட்டதன் காரணம் இதுவே. அத்துடன் வள்ளுவர் முப்பால் பாகுபாட்டிலேயே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவரது முப்பாலில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும், மூன்று வேறு வேறு பண்புகளும் அல்ல. முரண்பட்ட பண்புகளும் அல்ல. மூன்றும் ஒன்றன் மீது ஒன்று சார்ந்த, ஒன்றை ஒன்று தழுவிய ஒரே வாழ்க்கை இலக்கணத்தின் மூன்று கோணங்களேயாகும். அறம் என்பது தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அல்லது தனிமனிதனுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பேயாகும். பொருள் இதன் மறு நிலை. சமுதாயத்துக்கும் அரசியலுக்கும் தனிமனிதன் வாழ்வின் மீதுள்ள பொறுப்பு அது. இன்பம் தனிமனிதனைச் சமுதாயத்தின் உறுப்பினனாக்கும் குடும்பப் பண்பு. அஃது அறம், பொருள் ஆகியவற்றின் அடிப்படை; இரண்டின் பண்பும் பயனும் முடிபும் அதுவே. ஏனெனில், அது தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைக்கும் கண்ணி மட்டுமல்ல, அதுவே சமுதாயத்தின் ஒரு தலைமுறையை முன்பின் தலைமுறைகளுடன் இணைவித்து இறவா இனவாழ்வு பெருக்கும் பண்பு வலையின் பின்னல் முடி ஆகும். இவ்வாறு திருவள்ளுவர் நூலில், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் உண்மையில் சரி ஒத்த சிறப்பு உடையனவே. அறமும் பொருளும் இல்லாமல் இன்பமோ; பொருளும், இன்பமும் இல்லாமல் அறமோ; இன்பமும், அறமும் இல்லாமல் பொருளோ கிடையாது. மூன்று பண்புகளும் மூன்று பண்புகளிலும் உள்ளீடாக உள் நிலவும் ஒளியாகின்றன. எனவே, வள்ளுவர் நூலுக்கு ஒரே பெயராக நாம் முப்பால் என்று கூறுவது போலவே, ‘அறநூல்’ என்றும் கூறலாம். ‘பொருள் நூல்’ என்றும் கூறலாம். ‘இன்ப நூல்’ என்றும் கூறலாம். முப்பால் பெயர்களும் ஒப்பாகவே நூற்பெயர்க்குப் பொருத்தமானவை. எனினும், அந் நூலை ‘அறநூல்’ என்று கூறுவதற்கு இப் பொதுக் காரணமன்றி வேறு தனிக் காரணங்களும் உண்டு. வள்ளுவர் நூல் அறத்தில் தொடங்குகிறது. இன்பத்தில் முடிவுறுகிறது. ஆனால், முடிவுக்கும் தொடக்கத்துக்கும் இணைப்பாக இன்பத்துப் பாலின் இறுதியில் கற்பியலும். அறத்துப்பாலின் தொடக்கத்திலே இல்லறவியலும் அமைந் துள்ளன. இவ்வாறு தொடக்கமே இறுதியாகவும், இறுதியே தொடக்கமாகவும் உள்ள இத் திருக்குறள் ஆரத்தில்; கற்பியலும், இல்லறவியலும் ஆரத்தின் பூட்டு முகப்பாக உள்ளன. அம் முகப்பிலிருந்து தொங்கும் மதாணி அல்லது பதக்கமாகப் பாயிரம் அமைந்துள்ளது. வள்ளுவர் நூலுக்குத் தொடக்கமும் இறுதியும் அதுவே. அறம், பொருள்,இன்பம் என்னும் முப்பாலையும் ஒரு பாலாக்கி ஒரு வாழ்க்கை இலக்கணமாக இசைவித்துக் காட்டும் பகுதியும் அதுவே. பாயிரத்தின் ஒழுங்குமுறை அறம், பொருள், இன்பம் என்ற நூலின் பொது ஒழுங்கு முறைக்கு நேர்மாறானது. வான் சிறப்பு இன்பத்துப் பாலுக்கும், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பொருட்பாலுக்கும், அறன் வலியுறுத்தல் அறத்துப் பாலுக்கும் இசைந்தவை, நூற் பகுதி பொதுவாக உயிர்களின் வாழ்க்கைப் பயன் காட்டுவது. ஆகவே, அறத்தின் வழி பொருளும், பொருளின் வழி இன்பமும்; பயனாகவும், வளமாகவும் காட்டப்பட்டன. இல்வாழ்வில் அறத்தின் பண்பு இல்லாவிட்டால் சமுதாய, அரசியல் வாழ்வுகளில் பொருள் கெடுவது உறுதி. சமுதாய அரசியல் வாழ்வில் பொருள் சிதைவுற்றால் குடும்பத்தில் இன்பம் பொங்கமாட்டாது. குடும்ப இன்பமே அறத்தின் அடிப்படையாத லால் முப்பாலையும் ஒரே அற ஆழியாக்குவது அறப்பகுதியாகிய இல்லறமேயாகும். இது நூலின் ஒழுங்குமுறை தரும் படிப்பினை. ஆனால், பாயிரம் இதையே உயிர்ப் பொதுநிலை அல்லது இயற்கை மீதேற்றி, இயற்கையின் பயனான உயிர்ப் பண்பாக அறத்தைக் காட்டுகிறது. தூண்டுவாரும், இயக்குவாரும் இன்றித் தனிமனிதர் வாழ்வில் நிகழும் இன்பம் போன்றதே வான் அல்லது மழை இன்பத்தின் வழி இயங்குவது உயிர் வளம். தனியுயிரின் இன்ப வாய்ப்பின் வளமே பொருள். அதைப் பெருக்கும் அமைப்புகளே சமுதாயமும் அரசியலும். இயற்கையில் இவற்றை இயக்கும் சத்தி எது? கடவுட் பண்பு. அதாவது ஒழுக்கத்து நீத்த பண்பு. அல்லது அன்புத் தியாகம், அல்லது தன்னலமற்ற சேவை. இதனையுடைய ஒழுக்கத்து நீத்தாரின் பெருமையே இயற்கையின் பொருட் கூறு ஆகும். பாயிரத்தின் பொருட்பாற் கூறும் இதுவே. இந் நீத்தார் தம்மைக் கடந்து உலகுக்குப் பரப்பும் பண்பே அறம். அஃது இயற்கையில் வான் தரும் வளத்தால் இயங்கும் உயிர்வளம் போன்றது. இஃது அறன் வலியுறுத்தலாகிய பாயிரத்தின் அறப் பகுதியாயிற்று. பாயிரத்தின் இறுதி, நூலின் தொடக்கத்துக்கும்; நூலின் இறுதி, பாயிரத்தின் தொடக்கமாகிய வான் சிறப்புக்கும், நூல் தொடக்கத்துக்கும் தோற்றுவாய் ஆதலை இங்கே காணலாம். ஆனால், பாயிரத்தின் பாயிரமாக அமைவது முதல் அதிகாரம் ஆகிய இறை வழிபாடு அல்லது கடவுள் வணக்கமே. நூலின் முப்பாலையும் பாயிரத்தின் முப்பாற் கூறுகளையும் ஒரு பால், ஒரு கூறாக்கி இணைப்பது இதுவே. கடவுள் அறத்தின் அறம், பொருளின் பொருள், இன்பத்தின் இன்பம். அறம், பொருள், இன்பம் ஆகிய மூவகைக் குறிக்கோள்களும் உள்ளடக்கிய வாழ்வின் மொத்த இனக் குறிக்கோளே இறைவன் அல்லது கடவுள். அதனை முதலிற் கண்டு பிறர்க்கும் சுட்டிக்காட்டும் மனித இன முதல்வரே பகவர். ஆதிபகவன் அல்லது முதற்பகவனும் அவன் வழி நின்ற பிற பகவரும் சுட்டிக்காட்டியவழி காண்பதே இறைவன்தாள் சேர்வது ஆகும். அவ் வழி நிற்பதும் அவ் வழி செல்வதுமே இறைவழிபாடு ஆகும். முப்பால் முதல்வனான அவ்விறைவனின் சிறந்த வழிபாடு, அறம், பொருள், இன்பம், ஆகிய முப்பால் வழி நின்று வாழ்வதேயாகும். வாழ்வு என்னும் அற ஆழி இயக்குவதேயாகும். ‘ஆதி பகவன்’ என்ற தொடரே திருக்குறளின் தொல் பெரும் பழைமையைச் சுட்டிக்காட்டுவது ஆகும். இச் சொல் மரபு பிற்காலங்களில் கடவுள் தன்மையுடைய மனிதர்கள் வகையில் பகவான் எனத் திரிபுற்று வழங்கிற்று, பகவர் புத்த சமண நெறிகளில் புத்தர் என்றும், தீர்த்தங்கரர் என்றும்; சைவ வைணவ நெறிகளில் நாயன்மார் என்றும் ஆழ்வார்கள் என்றும்; யூத, கிறித்துவ. இசுலாமிய நெறிகளில் தொலைக் காட்சிவாணர் அல்லது பார்ப்பார் (தீர்க்கதரிசிகள்), நபிகள் என்றும் வழங்கப்பட்டனர். பகவர் கருத்தின் இம் மரபு வளர்ச்சியில் நாம் மூன்று படிகளைக் காண்கிறோம். தொடக்கக் காலத்தில் பகவரில் முந்தியவர் முதல்வர் எனச் சிறப்பிக்கப்பட்டனர். திருவள்ளுவர் கால ஆதி பகவனும், சமணர்தம் முதல் தீர்த்தங்கரரான இடபதே வரும் இத்தகையவர். நாத்திகப் பகுத்தறிவு நெறியாகிய தொல் பழங்கால உலோகாயத நெறியின் முதல்வர் பிரக°பதியே சமற்கிருத மரபால் முதல் முதலாக, சிறப்பிக்கப்பட்ட ‘பகவான்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. யூத நெறியிலும் முதன்மைச் சிறப்பு முந்தியவர்க்கே அளிக்கப்பட்டது. இரண்டாவது பகவான் மரபு சமண, புத்த சமயங்களுட னேயே தொடங்கு கிறது. இங்கே கடைசிப் பகவருக்கு முதன்மைச் சிறப்புத் தரப்பட்டது. அவரே முந்தியவர். அனைவரிலும் முழு நிறைவுடையவராகக் கருதப்பட்டார். இம் மரபு கிறித்துவ, இசுலாமிய நெறிகளிலேயே முழுவளர்ச்சி பெற்றது. பகவரில் கடைசிப் பகவரான முழுநிறை தெய்வ உருவாக இயேசுவும் முழுநிறை மனித உருவாக முகமது நபிகளும் கருதப்பட்டனர். மூன்றாம் மரபு யூதரிடம் மெல்லத் தொடங்கிக் கிறித்துவ நெறியில் விளைவுற்று, நம் நாளிலேயே முதிர்வுற்று வருகிறது. உலக முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் மேனாட்டினர்க்குரிய அசைக்க முடியாத நம்பிக்கை இம்மூன்றாம் மரபின் சுவடேயாகும். இறுதிக் கணக்கு அல்லது இறுதித் தீர்ப்புப் பற்றிய புராண நம்பிக்கை (சித்திரபுத்திர நாயனார் நோன்பு மரபு) யூத, கிறித்துவ, இசுலாமிய மரபு இதன் சின்னங்களே. தொல் பழங்கால நாத்திக உலோகாயத முதல்வர் பிரக°பதியும், சாங்கிய ஆராய்ச்சித் துறை முதல்வர் கபிலரும் தமிழ் மரபில் பழஞ் சங்கப் புலவர்களுள் ஒருவராகக் குறிக்கப் படும் இறையனாரும் ஒருவரே என்றும் அவர் திருவள்ளு வராகவே இருத்தல் வேண்டும் என்றும் ‘நூல்விளக்க’ ஆசிரியர் குறித்துப் போந்தார். அவர் தரும் ஆதார மேற்கோள்கள் பிற்காலத் தமிழ்ப் புராணங்களே யாயினும் அவர் கூற்றுகள் பிறமொழிச் சான்றுகளுடன் ஒப்பிட்டு ஆராயத் தக்கவையே யாகும். ஏனெனில், திருவள்ளுவர் காலமும், ஆதிபகவனாகிய இறையனார் காலமும் தொடர்புடையவை. இரண்டு கருத்து மரபுகளும் முன் இயலில் குறிக்கப்பட்ட ஜரதுஷ்டிரர்— கன்பூசியசின் முதல் அலைக்கும் முற்பட்டவை. இருவரும் ஒருவர் பற்றிய ஈர் உலக மரபுகளாகவே கூட இருத்தல் இயலாததன்று. ஏனெனில், திருவள்ளுவர் வகுத்த கடவுட் கருத்து ஆத்திக, நாத்திக வேறுபாடற்றது. இரு சார்புக்கும் மூலமானது. நாத்திக மரபிலிருந்து ஆத்திக மரபோ, ஆத்திக மரபிலிருந்து நாத்திக மரபோ தோன்றிய தென்பதைவிட, இரண்டுக்கும் மூலமுதலான திருவள்ளுவர் மரபிலிருந்தே இரண்டும் இருவேறு கிளைகளாகப் பிரிந்தன என்றால் பொருத்த முடைத்தாகும். வள்ளுவர் நூல் இவ்வாறு எல்லாப் பொருளும் கூறுவது மட்டுமன்று; ஏற்றுக் கொள்ளும் வகையில் கூறுவது மட்டுமன்று; அது எல்லாப் பொருளையும் ஒரே மூலப் பொருளுடன் இணைத்து, அதையே நாத்திகரும் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளத் தக்க முறையில், கடவுட் கருத்தாக உலகுக்கு அளித்துள்ளது. வள்ளுவர் கடவுட் கருத்தும் அதனுடன் அவர் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை இணைத்த அருமையும் வள்ளுவர் காலத்துக்குப் பின் பரக்க எங்கும் உணரப்பட்டிருந்தால், ஆத்திக நாத்திக வேறுபாடோ, சமயப் பூசல்களோ உலகில் என்றுமே ஏற்பட்டிராது என்னல் தகும். ஏனெனில், வள்ளுவர் கடவுட் கருத்து ஆத்திகர்களும் நாத்திகர்களும் ‘கடவுள்’ என்ற சொல்லால் பின்னாள்களில் கருதிய கருத்துக் கடந்தது. ஆத்திகர் கூறும் கடவுளின் பண்புகள் யாவும் அதில் உண்டு. அறிவுடைய நாத்திகர் விரும்பும் வாழ்க்கைப் பண்புகள் யாவும் அதில் இடம் பெறுகின்றன. ஆனால், ஆத்திகரின் கடவுள்; மனித வாழ்க்கை யுடனோ, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளான அறம், பொருள், இன்பங்களுடனோ தொடர்பற்றவர். மற்றொரு புறம் நாத்திகர் போற்றும் வாழ்க்கைப் பண்புகளோ ஒருமைப்பாடும் நோக்கமும் தொடர்பும் அற்றவை. ஒன்றுபட இயங்காதவை. என்றும் உலகை இயக்காதவை, இயக்க முடியாதவை. வள்ளுவர் இரு சாராரையும் போலல்லாது வாழ்க்கைச் சகடத்தை இயக்கும் இயல்பான உயர் குறிக்கோளாகக் கடவுட் கருத்தைப் படைத்துருவாக்கியுள்ளார். அவர் கருத்தை உலகம் முழுதுற உணர்ந்த நிலையில்கூட, அது பல்வேறு சமயங்களின் மூலமாக, திரைமுலம் ஒளி தரும் பெரு விளக்கம் போல, உலகைச் சென்ற ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இயக்கி வந்துள்ளது. கடவுளைக் குறிக்கத் திருவள்ளுவர் வழங்கிய பண்பார்ந்த அடை மொழிகளுள் ஒன்று ‘அறவாழி அந்தணன்’ என்பது. இறைவழி நிற்கும் அருளாளர்க்கு உரிய சொல் என்ற முறையில், அதற்குத் திருவள்ளுவரே பொருள் விளக்கமும் தந்துள்ளார். ‘அந்தணர் என்போர் அறவோர்; மற்றுஎவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ - குறள் 30 இக் குறட்பா நீத்தார் பெருமை என்ற பாயிரத்தின் பொருட் கூறான அதிகாரத்துக்கு உரியது. அவ்வொழுக்கத்து நீத்தாரையே இக் குறட்பாவில் வள்ளுவர் அந்தணர் என்று குறிக்கிறார். அவர்கள் அறவோர்கள் அதாவது இறை வழி நின்று அற ஆழி இயக்குபவர்கள், கைம்மாறு குறியாது செயலாற்றி இயற்கையில் பொருளும் இன்பமும் பெருக்கும் இயல்புடைய வான் போல, அவர்கள் வாழ்வில் எல்லா உயிர்க்கும் இன்நலம் செய்வதையே இயல்பாகக் கொண்டவர், வாழ்க்கையில் அன்பறமும், இயற்கையில் வானின் அளிப்பும் அவர்கள் பண்போடியைந்த பண்புக் கூறுகளாகவே இயல்வன. இம் மூன்று பண்புக் கூறுகளையும் உள் நின்று இயக்கும் அன்பு, இன்பம், அறிவு ஆகியவற்றின் முழுநிறை வாழ்க்கைக் குறிக்கோளே இறைவன். ‘அறவாழி அந்தணன்’ என்ற தொடர் இறைவனுக்குப் பொருந்தும் வகை இதுவே. அந்தணன் என்ற சொல் தமிழில் கடவுளையும் கடவுட் பண்புடைய மனிதரையும் ஒருங்கே குறிக்கிறது. ‘அம்’ அதாவது அழகிய ‘தண்மை’ அல்லது குளிர்ச்சி வாய்ந்த அருளன்புடை யவர் என்ற பொருளிலேயே திருவள்ளுவர் அச் சொல்லை வழங்கினாரென்பதை மேற்குறிப்பிட்ட குறட்பாவில் உள்ள ‘செந்தண்மை’ என்ற விளக்கம் காட்டுகிறது. திருமூலர் ‘அந்தத்தை அணவுபவர் அந்தணர்’ என்று பொருள் கொண்டதாகத் தோற்றுகிறது. `அந்தத்தைச் சிந்தை செய் அந்தணர்’ என்று அவர் தம் திருமந்திரத்தில் குறிக்கிறார். இங்கும் ‘அந்தம்’ என்ற சொல் அழகு, முடிவு அல்லது குறிக்கோள் என்ற இருபொருளும் தருதல் காணலாம். அழகு மனிதர் இயல்பான குறிக்கோள் ஆவது என்ற முறையிலேயே இச் சொல் இரு பொருளும் குறித்திருத்தல் சாலும். ஆகவே, வள்ளுவர் ‘அந்தணன்’ என்ற சொல்லுக்குக் கொண்ட தமிழ்ப் பொருளும் திருமூலர் கொண்ட தமிழ்ப் பொருளும் வேறுபடுபவை போலத் தோன்றினாலும் மாறு படுபவை அல்ல. வள்ளுவர் ஒளி வழிவந்த மற்றோர் அறிவுப் பொறியான கிரேக்க அறிஞன் பிளேட்டோ அழகு, மெய்ம்மை, நன்மை ஆகிய மூன்றுமே உலகும் தோற்றமும் இறுதியும் உள்ளீடும் குறித்த கடவுள் என்று விளக்கியுள்ளது காணலாம். உயிர், வாழ்வு, இயற்கை ஆகிய முத்தளங்களும் கடந்த அந்தணன் இறைவன். அவன் கூறாக இயற்கையில் அந்தண்மை அல்லது வானும், சமுதாயப் பொதுவாழ்வில் அந்தணர் அல்லது ஒழுக்கத்து நீத்த உரவோரும், தனி உயிர் வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்வில் அன்பு அல்லது அறமும் நிலவுகின்றன. இவ்வாறு வள்ளுவர் வகுத்த அறம் முப்பால் என்ற அற ஆழியில் ஒரு புறம் கடவுளையும், இயற்கையையும்; மறுபுறம் தனி மனிதன் வாழ்வையும், சமுதாய, சமய, அரசியல் வாழ்வுகளையும் இடை நின்று இயக்கும் நடுநாயக அச்சாக இயங்குகிறது. சங்க காலங்களில் திருக்குறள் ‘தாளா அறம்’ என்று வழங்கப்பட்டதன் தனிப் பொருத்தம் இதுவே. முப்பாலும் இணைத்துக் கூறும் பாயிரத்துக்கும் நூலின் பிற்பகுதிக்கும் இடையே அறன் வலியுறுத்தலும், அறத்துப்பாலும் வாயில்களாக அமைந்தது இதனாலேயேயாகும். அற ஆழியாகிய இறைவன் அறத்தை ஆழியாக அல்லது சக்கரமாகக் கொண்டே உலகை இயக்கு கிறான் என்பதைக் குறட்பாக்களாலன்றி வரிசை முறையி னாலேயே வள்ளுவர் தெரிவித்துள்ளார். தமிழில்கூட இவ்வருமைப் பாட்டை வேறெங்கும் காண்டல் அரிது. அற ஆழி உருட்டுதல் என்னும் தொடர் கடவுள் செயலாகவும், அரசன் செயலாகவும் சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் குறிக்கப்படுகின்றன. புற வினை உருவில் இதுவே புத்த சமயத்தில் பொதுவாகவும், திபேத்திய ‘லாமா’ சமயத்தில் சிறப்பாகவும் இன்றளவும் செயற்படுத்திக் காட்டப்படுகிறது. அறத்துப் பாலுக்கும் அறத்துக்கும் திருக்குறளில் மற்றொரு சிறப்பு உண்டு. சென்ற, இரண்டாயிர மூவாயிர ஆண்டுகளாகச் சமய வாணரும் தமிழக உரையாசிரியர்களும் திரித்துணர்ந்து மயங்கிய பண்பு இதுவே. திருவள்ளுவர் ஒரே அறத்தின் இரு பிரிவுகளாக இல்லறம், துறவறம் ஆகிய இரண்டையும் வகுத்துரைத்தார். இந்த இரண்டின் தொடர்பையும் உணர்ந்து கொள்ளாமல் இவற்றை எதிரெதிர் பண்புகளாகக் கருதிய தனாலேயே, திருவள்ளுவர் அறத்தின் உயிர்ப் பண்பைச் சமயவாணர் புரிந்து கொள்ளாது அலமரல் உற்றனர். துறவறத்தை இல்லறத்தின் எதிர்ப் பண்பு என்று கருதியது போலவே, பலர் மறத்தை அறத்தின் எதிர்ப் பண்பு என்று கொள்வதுண்டு. ‘அறம் வெல்லும், மறம் அழிவுறும்’ என்ற அறிவுரை கூறுபவரை நாம் இன்று காண்கிறோம். ஆனால், திருவள்ளுவர் துறவறத்தை மட்டுமன்றி, மறத்தையும் அறத்தின் கூறாகவே கொண்டார். அறம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. துறவறம் மட்டுமன்று, மறமும் இதுபோல அன்பையே அடிப்படையாகக் கொண்டது என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். ‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.’ - குறள் 76 ‘அறம்தான் அன்படிப்படையான பண்பு என்று கூறுபவர் அறிவில்லாதவர்கள். உண்மையில் மறத்துக்குக்கூட அதுதான் அடிப்படையான பண்பு ஆகும்’ என்று அவர் குறித்துள்ளார். மறத்துக்கும் அறத்துக்கும் உள்ள வேறுபாடு, குறிக்கோள் பற்றியதன்று, முறைபற்றியதே. அறம் உணவு போன்றது. மறம் மருந்து போன்றது. அறம் தாயின் அன்பு அணைப்புப் போன்றது. மறம் தாயின் அன்பு வெறுப்புப் போன்றது. அறம், மறம் ஆகியவற்றின் வகையிலேயே திருவள்ளுவர் தரும் இவ் விளக்கம், இல்லறம், துறவறம் ஆகிய அறத்தின் உட்பிரிவுகள் வகையில் அவர் கருத்தொளியை முனைப்பாகச் சுட்டிக்காட்டப் போதிய தாகும். ‘வள்ளுவர் துறவறம் வெறுப்புத் துறவறம் அன்று, அன்புத் துறவறமே’ என்பதை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியவர் காலஞ் சென்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனாரே யாவார். அது மட்டுமன்று. துறவு என்பது உலகைத் துறப்பதோ, இன்பத்தைத் துறப்பதோ அன்று, தன்னலத்தைத் துறப்பதே என்ற அறிவொளி விளக்கம் தந்தவரும் அவரே. ஆனால், திருவள்ளுவர் திருக்குறளை அணுகும்போதே, நாம் உலகியல், ஆன்மிக இயல்; அறம், மறம்; இல்லறம், துறவறம்; தன்னலம்; பொதுநலம் ஆகிய சொற்களை எதிரெதிர் சொற்களாகக் கொள்ளும் நம் காலக் கருத்துப் பழக்கத்தை ஒதுக்கி வைத்துவிட வேண்டியது அவசியம். தன்னலம் அற்ற பண்பே பொதுநலம் என்று நாம் அடிக்கடி கருது கிறோம். ஆனால், தன்னலத்தின் விரிவு, தொலை அறிவுடைய தன்னலமே, பொதுநலம் என்ற உணர்வு கொளுத்தியவர் திருவள்ளுவர். ஆகவே, துறக்க வேண்டியது தன்னலத்தையன்று, அறிவற்ற குறுகிய நோக்குடைய சிறு தன்னல மயக்கத்தையே; தன்னலம் வேறு, பொது நலம் வேறு என்ற கருத்தையே, தற்காலப் பொதுமக்கள் மட்டுமன்றி அறிஞர் பலரும், கீழ்த் திசையறிஞர் மட்டுமன்றி மேல் திசை அறிஞர் பெரும்பாலோரும் இம் மயக்கத்துக்கு உரியவர்களே என்னலாம். பொதுவாகச் சீன நாட்டறிஞர் மட்டுமே இத் துறையில் வள்ளுவப் பண்பை மரபறாது காத்து வந்துள்ளனர் என்னல் வேண்டும். அறம், மறம்; தன்னலம், பொதுநலம் ஆகிய இணைப் பண்புகளிடையேயுள்ள சிறிதளவு வேறுபாடுகூட இல்லறம், துறவறம் ஆகியவற்றினிடையே கிடையாது. ஏனெனில், துறவறம் இல்லறத்துக்கு உட்பட்ட, அதன் பரந்த அடிப்படை மீதமைந்த ஒரு சிறப்புப் பண்பே. இதனால் இரண்டின் பண்புக்கும் அடிப்படை இல்லறத்தின் பண்புதான். ‘அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை’ - குறள் 49 என்றும், ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்?’ - குறள் 46 என்றும், திருவள்ளுவர் அறத்தின் சிறப்பு முழுவதையும் இல்லறத்துக்கு அளித்ததன் காரணம் இதுவே. ஆனால், சிறந்த இல்லறமே துறவறமாதலால், இது துறவறத்தின் சிறப்பை ஒரு சிறிதும் குறைப்பதன்று. ‘தலைப்பட்டார் தீரத் துறந்தார், மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்’ - குறள் 348 என்று துறவு பற்றியும், ‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்’ - குறள் 263 என்ற துறவோர் பண்பாகிய தவம் பற்றியும், இல்லறத்தினும் உயர்வு தோன்ற வள்ளுவர் கூற முடிந்தது இதனாலேயே, இவை முரண்பட்ட உயர்வு நவிற்சி யுரைகளல்ல. உயர்வுமேல் உயர்வு கூறிய தன்மை விளக்க வுரைகளேயாகும். அறம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. அதனாலேயே இன்பம் தருவது; அன்பு அடைக்கும் தாழ் அற்றது. எல்லையற்ற விரிவுடையது. இன்பமும் அது போன்றதே. அன்பு விரிவுறும், எல்லையற்ற வளர்ச்சி பெறும். ‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல’ - குறள் 39 `இன்பம், உண்மையான இன்பம் அன்பு வழியிலும் அற வழியிலும் மட்டுமே வரும். மற்ற எந்த வழியிலும் முயல்பவர் இன்பம் பெறார். அது மட்டுமன்று. அவ் வழிகள் புகழும் தாரா; துன்பமே தரும்’ என்று வள்ளுவர் வகுத்துரைத்தார். அறத்தின் விரிவு, அன்பின் எல்லைக் கேற்றபடி விரிவுறும். குடும்ப எல்லையிலும் சமுதாய எல்லையிலும் செயலாற்றும் இல்லறம், சிறிய எல்லையில் சிற்றின்பத்திலிருந்து தொடங்கிப் பெரிய எல்லையில் உள்ள பேரின்பம் நோக்கி வளரும். அதில் சிற்றின்ப எல்லை வீடாகவும்; பேரின்ப எல்லை, நாடாகவும், உலகமாகவும் இடஎல்லை அல்லது பரப்பில் விரிந்து செல்லு கின்றது. ஆனால், துறவறத்தில் அன்பு, பெருங்குடும்பமாகிய சமுதாயம், அதாவது நாடு, உலக எல்லையிலேயே தொடங்குகிறது. அத்துடன் அது கால எல்லையில் உலகு தாண்டி இனம் நோக்கிச் செயலாற்றுகிறது. அது பேரின்பத்திலிருந்து தொடங்கிப் பெரும் பேரின்பம் அல்லது நீடின்பம் என்ற இன இன்பம் அளாவுகிறது. இந்த வளர்ச்சிப் போக்கையே திருவள்ளுவர் இசை அல்லது புகழ் என்று கூறினார். மதுரைத் திருமலை நாயகன் மகால், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், உரோம் நகரிலுள்ள செயின்ட் பீட்டரின் திருக்கோவில் ஆகியவற்றின் கலைப் பண்புகள் பற்றிக் கலைத் திறனாய்வாளர் சில அடிப்படை மெய்ம்மைகளை நமக்கு உணர்த்துவதுண்டு. அப் பாரக் கலைகளின் மாபேரளவே பார்ப்பவர்கள் கண்களுக்கு முதலில் பெருமைப் பண்புகாட்டி, அழகுப் பண்பை மறைக்கு மென்றும்; பின் அழகுப் பண்பு காட்டிப் பெருமைப் பண்பை மறைக்கும் என்றும், இவற்றை விட்டு வெளிவரும் சமயத்தில்தான் இரண்டும் கலந்த வீறமைதிப் பண்பு மனத்தில் இயல்பாகத் தங்கும் என்றும் கூறக் கேட்டிருக்கிறோம். இஃது அவற்றைக் காண்போர் கொள்ளும் சொல்லொணா உணர்வின் விளக்கம் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர் தரும் திருக்குறள் பாவுருவிலும் நூலுருவிலும் சிறிதேயானாலும், உண்மையில் இத்தகைய பாரக்கலையே. இன்று பொதுவாக உலகம் அதில் காண்பது அதன் சொல்லழகையும் சொல்திட்பம் அல்லது பொருட் செறிவையும் மட்டுமேயாகும். இவை கட்டட அழகல்ல, கட்டடத்தின் செங்கல்களின் அழகே. பார அகலக் கலையின் வீறமைதியை நாம் காண வேண்டுமானால், நாம் முதலில் செங்கல்லின் அளவும் கட்டடத்தின் அளவும் பொருளின் ஆழ அகல விரிவு உயர்ச்சிகளும் அகங்கொள்ளுதல் வேண்டும். அதன்பின் பொருளுடன் பொருளைப் பிணைத்த அவர் அழகு நயம் காணுதல் வேண்டும். இரண்டையும் நாம் பொது அறிவுநிலை யுடன் ஒப்பிட்டுக் காணும்போதே, அவர் பார வீறமைதியை நாம் நுகர முடியும். பார அகலக் கலை நுகர்பவர் நுகரும் சமயத்தில் தாமும் பார அகலப் பண்பு எய்துவர். அதுபோலவே வள்ளுவர் முப்பாலை நுகரும் சமயம் நாமும் நம்மை அறியாது வள்ளுவர் பார அகல உலகின் தன்மை பெறுவோம். துறவு, தவம், கடவுள் ஆகிய உச்ச உயர் பொருள்களுக்குச் சமயவாணர் கொடுத்துள்ள உயர்வு முழுவதையும், திருவள்ளுவர் தம் மாளிகையின் செங்கல் ஒவ்வொன்றுக்கும்—இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதர்க்கும்—கொடுத்திருக்கிறார். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்!’ - குறள் 50 இல்லற நெறிப்படி வாழ்பவன் தெய்வத்துக்கு ஒப்பாவான் என்று திருவள்ளுவர் குறிக்கிறார். இங்கே ‘கடவுள்’ அல்லது ‘இறைவன்’ என்ற பதத்தைத் திருவள்ளுவர் வழங்கவில்லை. இறைவன், பகவன், அந்தணன், தெய்வம் என்பன கடவுட் பண்பின் படிகள். இறைவன், வாக்கும் மனமும் சென்றெட்டாக் குறிக்கோள். பகவன் அத்திசை திரும்பி நின்று அதைக் காட்டியவன். அந்தணன், அதைக் கண்டு வழிபடுபவர்க்கு வழிகாட்டியான கடவுட் பண்பினன். தெய்வம் ‘அற ஆழி’ யான இறைவனின் அறவடிவம். அஃது இயற்கையின் அமைதியாகவும் உயிருலகின் அற ஆழியாகவும் இயங்குகிறது. இல்லறத்தில் வாழாது வாழ்பவன் இவ் வடிவாகிறான் என்பது அவன் உச்ச உயர் நிலையை விளக்குகிறது. அத்துடன் இக் கருத்துக் கவிஞர் உயர்வு நவிற்சியணியா யமையாமல் அதே அழகும் அதை விஞ்சிய நயமுமுடைய தெய்வக் கலைஞன் தன்மை நவிற்சி யணியாகவும் திகழ்கிறது. இல்லறத்தான் ‘தெய்வ’ வடிவினனானால், துறவறத்தான் வடிவு யாது? துறவுப் பண்பில் மேன்மேலும் உயர்ந்து செல்லும் சான்றோன், அந்தணன், பகவன், ஆதிபகவன் வடிவுகள் எத்தகையவை? பாரக் கலையின் பாரப் பொருளை, அதன் பாரப் பெருமையை உணர இவ் வினாக்கள் உதவக்கூடும்! வள்ளுவர் இல்லற துறவறக் கோட்பாடுகளின் தொடர்பு அறிபவர்களுக்கு, அவர் கூறும் தவமும், நோன்பும்; சமயவாணர் கூறும் குறுகிய தன்னல வெறுப்புத் தவமும், குருட்டு நோன்பாசாரங்களும் அல்ல என்பது தெளிவாக விளங்கும். தவம் என்பது கிட்டத்தட்ட தற்கால மொழியில் நாம் தன்மறுப்பு, தியாகம் என்று கூறும் கருத்தேயாகும். ஆனால், நம் தன்மறுப்பும். தியாகமும், கால, தேச எல்லை கடந்து இனக் குறிக்கோள்களான பின்பே வள்ளுவர் கருத்தளாவ முடியும். நோன்பு என்பதும் அதுபோலக் கிட்டத்தட்ட காந்தியடிகள் குறிக்கொண்ட அறப்போர் அல்லது மெய்யார்வமேயாகும். ஆனால், இங்கும் திருவள்ளுவரின் கால—தேசங் கடந்த இனக் குறிக்கோளுடன் சேர்த்தே அஃது உணரப்படுதல் வேண்டும். தவிர, சமய வாணர்க்கு நோன்பு தாழ்ந்த படி; தவம் உயர்ந்த படி. திருவள்ளுவர் கருத்தில் தவத்தின் முடிவே நோன்பு. வள்ளுவர் கருத்தைத் தவம் (தவ்வு =—தாண்டு). நோன்பு (நோன்=வலிமை) என்ற சொற்களே சுட்டிக் காட்டும். வள்ளுவர் அறிவு தமிழின அறிவின் முதிர்ச்சியே என்று ஷ்வைட்சர் கூறிய செய்தியை இது வலியுறுத்துவது என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழ் மொழி இப் பண்பைச் சங்க காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே, தொல்காப்பியத்துக்கு முன்னரே இழந்து வரத் தொடங்கிற்று. பெரிதும் இழந்திருந்தது என்பதைக் குறள்—தொல்காப்பிய—சங்க இலக்கிய ஆராய்ச்சி எளிதில் காட்டும். ஆயினும், இதன் சாதனை வருங்காலத்துக்கே உரியதென்றாகும். சேலம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் போன்ற நுண்ணாய்வாளர் பலர் இவ் வழி முயன்றாலன்றி அது விளக்கம் உறாது. துறவு கடந்து தவம், தவம் கடந்து உளத்திண்மை. இத் திண்மை யுடையார் கூறும் சொற்களே மந்திரம். தமிழகத்தில் நாம் அறியும் சமயத்துறை மந்திர ஏடுகளுள் பழைமை சான்றது திருமந்திரம். ஆனால், அதனினும் பழைமை சான்ற மந்திரத்தைத் தொல்காப்பியர் அறிந்திருந்தார். அவர் திருக்குறளையே அத்தகைய மந்திரமாகக் கருதியிருத்தல் வேண்டும். ஏனெனில், மந்திரத்துக்கு இலக்கணம் கூறும்போது அவர் வள்ளுவர் குறளை நினைத்தே, ஒரு குறட்பாவைத் தழுவி அதையே தம் மந்திர இலக்கணமாக்கினார். ஆனால், வள்ளுவர்க்கு முன்னும் அத்தகைய மந்திரங்கள் இருந்தனவோ, இல்லையோ?யாம் அறியோம்! ஏனெனில், வள்ளுவர் குறளினும் பழைமையான இலக்கியம் எதனையும் இதுகாறும் மனித உலகம் அறிந்ததில்லை. எனினும், கடவுட் கருத்தை உலகில் பரப்பிய முதல் மந்திரத் தொகுதி குறளாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்குறளுக்கு அடுத்தபடி பழைமை வாய்ந்த அவெ°தா, இருக்கு வேதம் ஆகியவற்றின் மந்திரங்கள் மீது திருவள்ளுவரின் ஒளி நிழல்களை நாம் காண்கிறோமானாலும், அவ்வொளி நிழல் சென்று எட்டுவதற்குமுன் நிலவிய அரையிருள் நிழல்களும் அவற்றின் மீது படர்ந்துள்ளன என்பதில் ஐயமில்லை. உண்மையில் வள்ளுவர் ஒளி நிழல் அவற்றின்மீது ஒளி பரப்பியிருந்தாலும், வள்ளுவர் ஒளி நிழலை அவையும் அவைபோன்ற அரையிருட் படலங்களும் இந் நாள் வரை உலகில் பல படிகளாக மறைத்தேயுள்ளன என்று காண்கிறோம். நல்ல காலமாக, வள்ளுவர் ஒளி நிழலை நம் கீழ் திசைக் கண்களிலிருந்து மறைத்த அரையிருள் நிழற்படங்கள் மேல் திசையில் அவ்வளவு திண்ணிதாகப் பரவவில்லை. மேல்திசை அறிஞருள் ஒருவரான ஷ்வைட்சரின் கண்ணொளி அரையிருள் நிழல்படாத தொலைவினின்றும் இக் கதிரவன் ஒளி நிழல் கண்டுள்ளது. கடவுட் கருத்தை முதலில் கண்டு உலகுக்கு அறிவித்தவர் என்ற முறையில் திருவள்ளுவரே உலகுக்கு ஆதி பகவன் என்று கூறத்தக்கவர். ஆனால், விவேகானந்த அடிகள் தம் பெருமை முழுவதையும் தம் ஆசானான இராமகிருஷ்ணர்க்கு அளித்தது போல, திருவள்ளுவரும் தம் பெருமை அனைத்தையும் தம் ஆசானுக்கே அளித்திருக்கக்கூடும். அவர்க்கு அவ்வாசான் அணிமைக் காலத்தவராய் இருந்ததனாலேயே, அவர் மெய்ப் பெருமை தோன்ற எழுத்து வகுத்துருவாக்கிய முன்னோன் ஒருவனை எண்ணி, உலகுக்கு எழுத்தையும், ஆதிபகவனுக்கு அதன் முதன்மை நிலையான அகரத்தையும் உவமையாக்கி இருத்தல் கூடும் என்னலாம். திண்மையை அறத்தின் உச்சியில், தவத்தின் கொடுமுடியில் நிற்பவர் பண்பாகத் திருவள்ளுவர் காண்கிறார். ஆனால், வியப்பு என்னவென்றால், பெண்மையில் அதைப் பொதுப் பண்பாக, கற்பாக அவர் கண்டுணர்ந்தார். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்’ -குறள் 666 என்ற குறள் திண்மையுடையாரே ‘செயற்கரிய செய்பவர்’ என்று சுட்டிக் காட்டுகிறது. தவத்தாலும் நோன்பாலுமே பொதுவாகக் கைவரப்பெறும் இத் திண்மை, பெண்பாலார்க்குக் கற்பு ஒன்றின் மூலமே கைவரப் பெறுவது என்று வள்ளுவர் கட்டுரைத் துள்ளார். அறம் என்ற இமய மலை—- அதன்மேல் துறவறம் என்ற எவர°ட் கொடுமுடி- அதன் மேல் ஏற்றிய தமிழ்க் கொடி திருவள்ளுவர் கண்ட பெண்மை, அவர் கண்ட பெண்மை கனவுப் பெண்மை மட்டுமன்று, தமிழகம் அவர்காலம் முதல் நெடிது பேணிவரும் பெண்மை அது! பெண்மைக் கென்றே-தனிமனிதன், சமுதாயம், சமயம், அரசியல் ஆகிய படிகள் கடந்த இனப்படி அல்லது கடவுட் படிக்குரிய இனமாகிய பெண்ணினத்துக் கென்றே-வள்ளுவர் வகுத்த பால்தான் இன்பப்பால்! ஆகவே, அதுபற்றிய முழு விளக்கத்தை அந்தப் பாலுக்கு ஒத்திவைத்துவிட்டு, அறம் பற்றிய ஆராய்ச்சியில் மேற் செல்லுவோம். வள்ளுவர் வாழ்க்கைக் கோட்பாட்டில் ஊழ் மிகமிக முக்கியமான இடம் வகிக்கிறது. ஓர் அதிகாரமாகவும் ஓர் இயலாகவும் அது வகுக்கப்பட்டு, அறத்துப் பாலின் இறுதி இயலாக அமைந்துவிட்டது. பொருட்பாலின் முதல் இயலான அரசியலைத் துறவியலுடன் இணைக்கும் பகுதி அதுவே. எனவே, துறவறவியலின் கடைசி அதிகாரமான அவாவறுத்தலையும், பொருட்பால் அரசியல் ஆகியவற்றின் முதல் அதிகாரமான ‘இறைமாட்சி’யையும் சேர்த்தே அதன் ‘வாயிற்’ பண்பை நாம் விளங்கக் காணுதல் தகும். அறத்துப்பால் இறை வணக்கத்துடன் தொடங்கிற்று. வான்சிறப்பு, ஒழுக்கத்து நீத்தார், அறன்வலியுறுத்தல் என்ற மூன்றதிகாரங்களாலும் இன்பம், பொருள், அறம் ஆகிய இயற்கைக் கூறுகள் வழி இறைவன் தனி மனிதனை அவன் தனி அறத்தில் நின்று இயக்குகிறான். உள் நின்று இயக்கும் இந்த இறைவனை அன்றித் தனி மனிதனை இயக்கும் ஆற்றல் வேறில்லை. ஆனால், சமுதாய, அரசியல் நிலையடைந்த மனிதனுக்கு இது போலவே புறம் நின்று இயக்கும் ஓர் இறைவனும் உண்டு. அவன்தான் அரசன். இறைவழிபாட்டுடன் தொடங்கும் அறத்துப் பால் போல, இறைமாட்சியுடன் பொருட்பால் தொடங்கு கிறது. மனிதனை உள் நின்று இயக்கும் அக இறைவனாகிய கடவுள் போல, சமுதாயத்தைப் புறம் நின்று இயக்கும் புற இறைவன் அரசன். இருவரையும் தமிழில் ஒரே சொல் குறிக்கும் புதைபொருள் இதுவே. வேறெம் மொழியிலும் இஃது அமையாதது கூர்ந்து நோக்கத்தக்கது. 6. வள்ளுவர் சமுதாய அரசியற் கருத்துகள் சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றும் மூவேறு துறைகளாகவே இன்று மனித சமுதாயத்தில் நிலவுகின்றன. மூன்றிலும் உறுப்பினர், ஆளப்படுவோர், பண்பாட்சிக்கு உரியவர் ஒரே மனித இனம் சார்ந்தவர்களே. ஒரே மனித இனத்தின் நலங்களைப் பேணவே அம் முத்துறைகளும் மனித இனத்தில் அமைந்துள்ளன என்பதையும் எவரும் ஒத்துக் கொள்வார்கள். ஆயினும், மூன்றும் மூவேறு பாகுபாடுகளென்றும்; மூன்றின் பண்புகளும் வேறு வேறு என்றும்; மூன்றின் பரப்பு, உட்பரப்புப் பாகுபாடுகளும் தனித் தனியானவை என்றும்; முத்துறைகளின் ஆட்சியாளர்களும் வேறு வேறானவர் மட்டுமல்லர்; வேறு வேறு பண்பும், நோக்கமும், இயல்பும் உடையவர்கள் என்றுமே பொதுவாக உலக மக்களும் உலக அறிஞரும் கருதி வந்துள்ளனர். கருதி வருகின்றனர். சமயத்தின் மீது சமுதாயத்தையும், சமுதாயத்தின் மீது அரசியலையும் கட்டமைக்க மனு முதலிய சமற்கிருத சுமிருதிவாணர் சிறப்பாகவும் சமற்கிருத வாணர் பொதுவாகவும் முயன்றதுண்டு. இதன் பயனாக அவர்கள் கண்ட கோட்பாடே வருணாசிரமக் கோட்பாடு. சுமிருதிகளும் பகவத்கீதையும், அர்த்த சாத்திரமும். புராண இதிகாசங்களும். சமற்கிருத இலக்கியமும் இதைப் பலவேறு வகையில் புதிது புதிதாக விளக்க முற்பட் டுள்ளன. திருவள்ளுவர் மரபின் நிழல் தடவி அவரைப் போல மும்மையில் ஒருமை காண இடைக்கால சமற்கிருத நாகரிகம் பெரிதும் முயன்றுள்ளது என்பதற்கு இவை சான்றுகள் ஆகும். இந்திய அருட் பெரியார் அனைவருடனாகவும், சில சமயம் சொற்கடந்து பண்பிலும் உள்ளீடாக ஷ்வைட்சர், திருவள்ளுவர் மரபைக் கண்டதில் வியப்பில்லை. அம் மரபில் இஃது ஒரு பகுதியேயாகும். மேலைச் சமயங்களாகிய கிறித்துவ, இசுலாமிய ஏடுகளில் சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றும் ஒரே வாழ்க்கைப் பண்பு என்ற கருத்தின் நிழலைக் காணலாம். எனினும், இவை சமயக் கோட்பாடுகளாதலால், நாளடைவில் மேலை நாடுகளில் சமயங் கடந்து செயலாற்றவில்லை. இன்றைய உலக வாழ்வில் சிறப்பாகவும் மேலே குறித்துள்ளபடி மூன்றும் மூவேறு ஆட்சிக்குட்பட்ட, மூவேறு பரப்புடைய, மூவேறு பண்பு களாகவே கருதப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் அருட் பெரியார்கள் மூன்றையும் ஒன்றாகக் காணும் ஆர்வமுடையவர் களாகவே உள்ளனர். ஆனால், இருதிசையிலும் அறிஞர்கள், பொதுமக்கள், ஆட்சியாளர்கள் இம் மூன்றையும் வேறு வேறாகவே கண்டுள்ளனர். இதற்குச் சிறு சிறு விதி விலக்குகள் உண்டு. எடுத்துக்காட்டாகச் சட்ட அறிஞர்கள் சமுதாயப் பழக்கவழக்கப் பண்புகளின் மீதே சட்டங்கள் அமைகின்றன என்ற மெய்ம்மை கண்டு வகுத்துள்ளனர். உயிரின வளர்ச்சியில் கருத்துச் செலுத்தியவர்கள் குடும்ப சமுதாயப் பண்புகள் மீதே அரசியல் மட்டுமன்றி, சமயமும்கூடக் கட்டமைக்கப்படுகிறது என்று விளக்க முற்பட்டுள்ளனர். இருபால் பற்றிய இன்ப இயலார் பாலின உணர்வினின்றே உயிரியக்கம் முழுவதும் நாகரிகப் பண்புகள் யாவும் மலர்கின்றன என்று காட்டுகின்றனர். ஆனால், மூன்றும் வேறு வேறு என்ற பரந்து செறிந்த பொதுக் கருத்தி னிடையே இவ் விளக்கங்கள் மின்னல்களாக, மின்மினிகளாக நிலவுகின்றனவேயன்றி, நிலையான மெய்ம்மைகளாக, கோட்பாடாக இன்னும் உணரப்படவில்லை. இந்த உலகப் பின்னணிகளிடையே திருவள்ளுவர் வாழ்க்கைக் கோட்பாடு தனித்தன்மை உடையது. அதே சமயம் அது கீழை உலகுக்கும், மேலையுலகுக்கும்; அறிஞர்க்கும் அருளாளர்க்கும் இடையே பாலமாகவும், அவர்கள் வேறுபாட்டுக் குரிய விளக்கமாகவும் அமைகின்றது. திருக்குறளின் பொருட்பாலில் பொருள் என்பது சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றையும் உட்படுத்தும் கூறு ஆகும். இவற்றுள் சமயம் என்பது பொருளின் அறக்கூறு-இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு கூறுவது. பாயிரத்தாலும் அறத்துப்பாலின் துறவறத்தாலும் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் மீந்த பகுதியே இறைமாட்சி, கல்வி முதலிய பொருட்பாலின் தொடக்க அதிகாரங்களால் விளக்கப்படுகிறது. ‘அரசியல்’ என்ற இயல் முழுவதும் இவற்றின் விரிவே. நாம் இன்று அரசியல் என்ற தொடரால் வழங்கும் வாழ்க்கைக் கூறு அங்கவியலில் விளக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதே அங்க இயலின் பல அதிகாரங்கள் ஆள்வோரை ஆள்வோனாகிய அரசன் அல்லது இறைக்கும், அமைச்சர் முதலாக ஆன்றோர் அதாவது சமுதாயத் தலைவர் ஈறாக உள்ள ஆள்வோராகிய பெரியார்க்கும் அவர் வழி நிற்கும் ஆளப்படுபவ ராகிய குடிகளுக்கும் உரிய பண்புகளையும் பொதுப்பட நிறுவி அடுத்த ஒழிபியலுக்குத் தோற்றுவாய் செய்கின்றன. ஒழிபியல் என்ற பெயர் பொருட்பாலின் கடைசி இயலின் முக்கியத்துவத்தைச் சிறிது மறைப்பதாகவே அமைந்துள்ளது. உண்மையில் பொருட் பாலின் உயிர்க் கூறாகிய குடியியல் அல்லது சமுதாய இயல் அதுவேயாகும். சமுதாயத்தை உள்ளே நின்றியக்கி, சமயத்தையும் அரசியலையும் வகுத்து நல்லரசாக்க வும், அல்லரசு தவிர்க்கவும் மக்கட்கு வழிகாட்டுபவர் ஒழுக்கத்து நீத்தாராகிய சான்றோரேயாவர். அவர் பண்புகளும் அவர் வழி நிற்கும் குடிகளின் பண்புகளும் விளக்கும் பகுதியே ஒழிபியல்! அறம், பொருள், இன்பம் என்ற பாகுபாட்டை இன்பம், பொருள், அறம் எனக் கொள்ள விரும்புபவர் உண்டு. இங்ஙனம் கொள்வதிலும் ஓர் உண்மை தொக்கி நிற்கிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இன்பத்தின் அடிப்படையிலேயே பொருளும், பொருளின் அடிப்படையிலேயே அறமும் நிகழக் கூடும். இதுபோலவே சமயம், அரசியல், சமுதாயம் என்ற பாகுபாட்டிலும் சமுதாயமே அடிப்படையானது. சமுதாயத்தின் வழியே அரசியலும் அரசியலின் வழியே சமயமும் வளம் பெறுதல் கூடும். ஆனால், முப்பாலில் பாயிர முறையன்றி எதிர் முறையில் வள்ளுவர் வரிசையமைத்தது போலவே பொருட் பாலிலும் இவ்வெதிர் முறையையே பின்பற்றியுள்ளார். இதில் நாம் கருத்துச் செலுத்துதல் பயனுடையது. தமிழில் ‘இறை’ என்ற சொல் கடவுளையும் குறிக்கும்; அரசனையும் குறிக்கும். திருவள்ளுவரும் இரு பொருளையும் இந்த ஒரு சொல்லால் குறித்துள்ளார். இது தற்செயலான சொல் வழக்காறன்று. ஏனெனில், கடவுளைக் குறிக்கும் முதல் அதிகாரத்தில் ஆதிபகவனுடன் கடவுளை ஒன்றுபடக் கூறி, பண்புப் பெயர்களை வழங்கியுள்ளார். ‘இறைவன்’ என்ற சொல் இரு தடவையே வழங்கப்பட்டுள்ளது. மற்றச் சொற்கள் இறைவனின் கண்கண்ட வடிவமான ஆதி பகவனையும், ஆதி பகவனுக்குப் பேரளவிலும் இறைவனுக்கு நிறையளவிலும் பொருந்தும் பண்புகளையும் காட்டின. இதுபோலவே பொருட் பாலின் முதல் இயலான அரசியலின் முதல் அதிகாரமான இறைமாட்சியிலும் தலைப்பை விடுத்தால் ஒரே ஒரு தடவை இறைவன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அரசு, மன்னன், வேந்தன் முதலிய சொற்களும் பிற பண்பு சார்ந்த அடைச் சொற்களும் கருத்து விளக்கங்களாகத் தரப்பட்டுள்ளன. ‘இறை வாழ்த்து’ அதிகாரம் முப்பாலுக்குப் பொதுவாகவும் அறத்துப் பாலுக்குச் சிறப்பாகவும் தோற்றுவாய் ஆதல் போல, இறைமாட்சி பொருட்பாலுக்குப் பொதுவாகவும் அறத்துப் பாலுக்குச் சிறப்பாகவும் தோற்றுவாய் செய்கிறது. அறத்தை இயக்கி முப்பால் வாழ்வாகிய உலக வாழ்வை இயக்குபவன் கடவுளின் கண்கண்ட உருவினனான ஆதிபகவன். அவன் அறவாழி அந்தணன் வழி நின்ற அந்தணனாய், பிற பகவர் அல்லது அந்தணர் மூலம் அறவோரையும் அறத்தையும், சமுதாயத்தையும் உலகையும் இயக்குகிறான். அதுபோலவே, மனிதப் பேரினத்தின் ஒரு முழு நிறைவுடைய கூறாகிய இனம் அல்லது தேசிய அமைப்பு அல்லது அரசியல் சமுதாய எல்லையிலும் ஆள்வோரை இயக்குபவனாக இறைவழி நின்ற அரசன் அல்லது இறைவன் அமைகிறான். அறவாழி இயக்கும் இறைவன் வழிநின்றே பொருளாழி இயக்குவதால் அவனும் இறைவன் ஆவான். ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்!’ -குறள் 388 இக் குறட்பா மேற்குறிப்பிட்ட கருத்தை வள்ளுவர் வாய் மொழியாலேயே விளக்குகிறது. இறைவன் பண்பு இயற்கையில் ஊழ் அல்லது தெய்வமாக, அமைதியாக (டுயறள டிக சூயவரசந) இயங்குகிறது. அதுவே, சமுதாயத்தில் அறமாக (டுயறள டிக நுவாiஉள டிச ஆடிசயட ஊடினந) இயல்கின்றது. பின்னும் அதுவே அரசியல் சமுதாயம் அல்லது தேசிய இனம் நாட்டில் ‘முறை’ என்ற பெயருடன் (டுயறள டிக ளுவயவந) இடம் பெறுகிறது. அற ஆழி இயக்குபவன் இறைவன் அல்லது ஆதிபகவனானால், ‘முறை’ யாழி இயக்குபவனாக அரசன் விளங்குகிறான். திருவள்ளுவர் கால அரசன், மக்கள் சமயம், அரசியல், சமுதாய வாழ்வு ஆகிய மூன்றுக்கும் ஒருங்கே பொறுப்புடைய முழு நிறை தேசிய முதல்வன் என்பதை நாம் உளங்கொள்ளுதல் வேண்டும். அதுமட்டுமன்று, அவன் பிறப்பால் இயல்பான குடிமுதல்வன். ஆனால், அவன் உரிமை முடியரசின் நிலையான தனி உரிமையன்று. குடியரசின் தற்காலிகமான தேர்வுரிமைகூட அன்று. அஃது அவன் அன்புரிமையும் மக்கள் ஆர்வ உரிமையும் மட்டுமே. தற்கால மொழியில் கூறுவதானால், அவனுக்கு உண்மையில் உரிமை எதுவும் கிடையாது. கடமை மட்டும்தான் உண்டு. மக்கள் வாழவில் வளம் காணும் அளவிலேயே அவன் ஆட்சி சிறக்கும். மக்கள் உள்ளத்தில் அவா ஆர்வம் எழுப்பிச் செயலாற்ற வைத்து, அவ் அவா ஆர்வங்கள் எழுமுன் அவை நிறைவேறும்படி செய்வதே அவன் செங்கோன்மைப் பண்பு. இப் பண்பைக் குடியாட்சி யியக்கும் அரசன்பால் ஏற்றாமல் அவன் புகழ்க்குரிய நாட்டின்பால் வைத்துப் பாடியுள்ளார் திருவள்ளுவர். ‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு’ -குறள் 739 ‘மக்கள் நாடிய வளங்கள் யாவும் நாடுமுன்பே நாட்டில் அமைதல் வேண்டும். அப்படி நாடுமுன்பே அமையாமல், நாடிய பின் அமையுமானால், அது நாடல்ல’ என்பது இக் குறட்பாவின் பொருள். மேலீடாகப் பார்ப்பவர்க்கு இது பொருளற்ற பசப்புக் கூற்றாகக்கூடத் தோற்றக்கூடும். பொருள் செறிவித்து உரையாற்றினால்கூட அது கம்பர் போன்ற கவிஞரின் கட்டற்ற கவிந்துரையாக விளங்குமேயன்றி, சங்கப் புலவருக்கோ அது கடந்து திருவள்ளுவர்க்கோ உரிய முழு வாய்மையுரையாகத் தோற்றாது. வள்ளுவர் கால நாடு குடியாட்சிக்கு மூலமான நகர் நாட்டுக் குடியரசு என்பதையும், அதன் முதல்வனாக வள்ளுவர் குறிக்கொண்ட அரசனும் அரசியற் பண்பும் இன்றைய குடியாட்சியும் சமதருமமும் பொதுவுடைமையும் இன்னும் சென்றெட்டாத, காந்தியடிகள் போன்ற அருளாளர் கனவுகள்கூடக் கடந்த ஓர் உயர் குறிக்கோள் என்பதையும் உணர்பவர்க்கு இது போலிக் கவிதையின் மிகையுரையல்ல; உண்மைக் கவிதை, தெய்விகக் கவிதையின் உள்ளுணர்வுரை என்பது இணக்கமாகும். அரசியலில் செயலுரிமை பெற்றவர் அமைச்சரும், மன்ற வாணரும், அம்பலக்காரரும், அகம்படியரும், அரசியற் பணியாளருமேயன்றி அரசனல்லன். அவன் அவர்கள் செயல்துறையில் அவர்கள் காட்டிய வழி நடப்பவன் மட்டுமே, அதனை மீறும் ஆற்றல் அவனுக்குக் கிடையாது; மக்களுக்கே உண்டு. ஆனால், அவன் சமுதாயத் தலைவன். மக்கள் உள்ளங்களில் வீற்றிருப்பவன்; அவன் சமுதாயத் தலைவர்கள் அல்லது பெரியார்களின் நண்பன். அவர்களைச் சேர்ந்தொழு குபவன், அவன் அந்தணர்கள் உள்ளத்தில் வீற்றிருப்பான், அவ்வுள்ளம் இடங்கொண்ட இறைவனின் கண்கண்ட செயலுருவாக ‘மக்கட்கு இறையாக’ விளங்குபவன். இக்காரணங் களால் அவன் மக்கள் அவாவையே இயக்கி, ஆட்சியாளர் உள்ளமும் இயக்கித் ‘தோன்றாத் துணை’யான ‘ஒரு கடவுளாக’; செய்பவர் அறியாமலே செயல்வளம் உண்டுபண்ணுவான். வள்ளுவர் மொழியில் அவன் ஊழை வெல்லும் ஊழ் கண்ட பெரியார்களின் உள்ளமாக, அரசியல் சமுதாயத்தின் ஓர் ‘ஆகூழாக’ நிலவுவான். இவ் ஆகூழ்வளம் இயற்கையால் நாட்டுக்கு அமைவதன்று, இயற்கை வளமன்று, இயற்கை வளத்தின் வாய்ப்புகளறிந்து, அன்பின் தொலையறிவும், ஆர்வத்தின் செயலாற்றலும், ஒப்புரவு, சால்பு ஆகியவற்றின் எல்லையற்ற துணையாற்றலும் கொண்டு நாட்டுக்குக் குடியாட்சி மரபில் நிற்கும் மன்னன் அளிக்கும் வளமே இது. சங்க இலக்கியத்தில் இயற்கை தரும்; போட்டியிடும் மன்னன் கைதரும் வளத்தைப் புலவர் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே” - புறம். 186 என்று மோசிகீரனாரும். “வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பற்று ஆயினும், நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாதே; அதனால் நிலன்நெளி மருங்கின் நீர்நிலைபெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே!” - புறம். 18 என்று குடபுலவியனாரும் இக்கருத்துக்கு ஓரளவு விளக்கம் தந்துள்ளனர். மழை பெய்யா இடத்துக்கும் காலத்துக்கும் உதவ அணைகட்டி நீர்ப்பாசனம் அமைத்தல் மன்னனால் ஏற்படும் ஆகூழ்க்கு-நாடா வளத்துக்கு ஓர் எடுத்துக் காட்டேயாகும். பாயிரத்தில் இறை வாழ்த்தினை யடுத்து வான் சிறப்பு கூறப்பட்டது. இயற்கை வழி நின்று இறைவனாற்றும் வரையா அன்புச் செயல் அது. அதுபோலச் சமுதாய ஆட்சி வழி நின்று அரசனாகிய இறைவன் ஆற்றும் அறிவுச் செயல் ஒன்று உண்டு. அது வான் போலச் சமுதாயத்தின் வளம் பெருக்குவது. அதுவே கல்வி, வான் சிறப்போடொத்த பொருட்பால் கூறு அதுவே. வான்மூலம் இறைவன் உலகில் அறவொளி இயக்கினான். அறம், வானின் பண்பாகிய கடவுட் பண்பை மனித இனத்தில் பரப்புகிறது. அதே கடவுட் பண்பை அரசியல், சமுதாயத்தில் அரசன் பரப்பும் கல்வி தரும். கல்வி இறையாட்சியின் பின் அடுத்து வைக்கப்பட்டதன் காரணம் இதுவே. ‘கல்வி’ அதிகாரம் பொருட்பாலில் ஏன் இடம் பெறுதல் வேண்டும்? பொருட்பாலில் இடம்பெற்றாலும் ‘அரசியலில்’ ஏன் கூறப்படுதல் வேண்டும்? இக் கேள்விகளை எழுப்பியவர் உண்டு. கல்வி மக்களுக்குப் பொதுவாகவும், அரசனுக்குச் சிறப்பாகவும் அமைவது என்ற முறையிலேயே அஃது அரசியலில் இடமளிக்கப்பட்டது என்று விளக்கம் அளிப்பவரும் உளர். பரிமேலழகர் உரை விளக்கம் இதுவே. ஆனால், இவை, விளக்குபவர் குறுகிய உள்ளப் போக்கைக் காட்டக்கூடுமேயன்றி வள்ளுவர் கருத்துயர்வையோ, கோட்பாட்டின் அருமையை யோ அணுகமாட்டா. ஏனெனில், வள்ளுவர் கீழ்த்திசையிலும் மேல்திசையிலும் இடையிருட் காலத்தவர் கருதியபடி, சிறந்த மனிதர் அல்லது அறிவினம் அல்லது அறிவு வகுப்புக்குரியது கல்வி என்று கருதவில்லை. தற்கால அறிஞர்களைப் போல குடியாட்சி, சமதரும, பொதுவுடைமை அறிஞரைப்போல், மனித இனத்துக்குச் சிறப்பளிப்பது என்று கூடக் கருதியமையவில்லை; கல்வியை விலங்குக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள வேறுபாடாகவே கருதினார். மனித இனம் முழுவதும் கல்வி பரவுதல் வேண்டும் என்று இன்று குடியாட்சியறிஞர், சமதரும, பொதுவுடைமை யறிஞர்கள் கனவு கண்டுள்ளனர். சில பல நாடுகளிலேனும் அதை முனைந்து வெற்றிகரமாக்கிக் காட்டியுள்ளதாக அரசியற் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், இங்கே கல்வி என்று கூறப்படுவது எழுத்தறிவையே. இஃது, ஆள்பவர் ஆளப்படுபவர் என்ற வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட கருத்தன்றி வேறன்று. ஏனெனில், ஆளப்படுபவர் இவ்வடிப்படைக் கல்வி பெறுவது ஆள்பவர் நலத்துக்கு உயிர்த் தேவையாகும். ஆள்பவர்—ஆளப்படுபவர் வேறுபாடற்ற நிலையில், எல்லார்க்கும் ஒத்த கல்வியே குறிக்கோளாதல் சாலும். திருவள்ளுவர் குறிக்கோள் இதுவே என்பதைக் கல்வி அதிகாரத்திலுள்ள அவர் குறட் பாக்கள் காட்டுகின்றன. திருவள்ளுவர் கல்வி எண்ணும், எழுத்தும் உள்ளடக்கியது. ஆனால், இந்த இரண்டுக்கும் கடவுளுக்கும் இன்று எவரும் எத்தகைய நேர்த்தொடர்பும் காணமுடியாது. எவரும்-பரிமேலழகர்கூடக்—காணவில்லை. இவை கடவுள் பற்றிய அறிவுநூல் காணக் கருவிகள் ஆகும் என்று மட்டுமே அவரும் பிறரும் கூறுவர். ஆனால், இப்படியும் ‘எண்’ எழுத்தளவு பயன்படாது, தவிர, கடவுள் பற்றிய நூல்களுள் ஒன்று மட்டுமே மேலே குறித்தபடி ‘ஒரு நல்ல ஆத்திகரின் தீங்கற்ற மிகையுரை’ என்று வள்ளுவர் பாடத்தைக் கொண்டாலன்றிக் கல்வியின் பயனும் நோக்கமும் இறைவன் தாள் என்பதை உணருமாறில்லை. வள்ளுவர் குறிக்கோளை நாம் சென்று எட்டாததற்குக் காரணம் ‘அறிவு’ என்ற சொல் பற்றியும், ‘அழகு’ என்ற சொல் பற்றியும் உலகம் இன்று கொண்டுள்ள மயக்கக் கருத்துகளே யாகும். இரண்டுடன் ‘நன்மை’ என்பதற்குரிய தொடர்பைக் கண்டுணர்ந்தார் உலக அறிஞர்களிடையே கூட மிக மிகச் சிலரே. அவர்களும் அதை விளக்கியவர்களல்லர். வள்ளுவர் விளக்கி யுள்ளார். ஆனால், அஃது இடைக்காலப் பிற்காலச் சமயவாணர் அரைகுறை அறிவின் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது. அறிவு நன்மையுடன் தொடர்பற்றதல்ல. காவல் துறை யறிவும், திருட்டுத் துறை அறிவும் ஒன்றே. முன்னதை நாம் வளர்க்கிறோம். பின்னதைச் சில சமயம் அறிவு என்று கூறினாலும் பெரும்பான்மை விலக்க விரைகிறோம். அறிவும் இவ்வாறே! மனித இனம் கண்காணாப் பகவர் வழிநின்று நல்லறிவும் நல்லழகுமே வளர்த்துள்ளனர். உயிர் வளர்ச்சி நூலார் இதனைத் தெளிவுபட இன்னும் காட்டுவர். வள்ளுவர் இதன் உண்மை கண்டவர்; கண்டு சமய முதல்வர்களுக்குத் தம் சொல்மரபில் விட்டுச் சென்றவர். அதன் சொல் மரபு இன்று எல்லாச் சமயங் களையும் வளர்த்துள்ளது. அதன் பொருள் மரபோ ஓரொரு சமயத்தில் ஓரோரு கூறாக மட்டும் நின்று நிழலொளி அல்லது மின்னொளி தருகின்றது. எல்லாச் சமயங்களும்,—நாத்திகக் கோட்பாடுகள்கூடத்—தம்மையறியாமல் வள்ளுவர் குறட்பாவில் ஈடுபடுவதன் காரணம் இதுவே. வள்ளுவர் கடவுள், இனநல உருவினர். அன்புருவினர். அவர் வழி நிற்கும் வள்ளுவர் அறிவும், அழகும் அன்பு வளர்க்கும் அறிவு. அன்பு வளர்க்கும் அழகு. இயலும் கலையும் பயன் நோக்கியன வல்ல என்று கூறும்போது, நாம் எண்ணுவது தனி உயிர்ப் பயனையே. அவை பொது உயிர்ப்பயன். எண் கடந்த, இடங்கடந்த. காவல் கடந்த, —அதாவது நாடு, இனவேறுபாடு, சூழல் வேறுபாடு, சமய வேறுபாடு, தலைமுறை வேறுபாடு, ஊழி வேறுபாடு கடந்த தூய உயர் நிலை (யளெடிடரவந) அறிவு நலமும், அழகு நலமும் ஆகும். ஆகவேதான் வள்ளுவர் கருத்துப்படி கல்வியின் நோக்கமும் பயனும் சமுதாயத் தொண்டு, உயிர்த் தொண்டென விரிந்து, எல்லையற்ற அன்புருவான கடவுளின் தாள் கடைப் பிடிக்கச் செய்யும் பண்பாய் உள்ளது. கண்காணா முழுமுதல் இறைவன், அவன் வழி அவனைக் கண்டுணர்ந்த அவன் தாள் ஆகிய ஆதிபகவன், அவன் வழி நின்ற உலகம், அதில் அவன் நேர்வழி மரபாகிய பகவர், கிளை வழி மரபாகிய அந்தணர், அரசியல் சமுதாயத்தில் மீண்டும் நேர் இறைவழி நின்று; அனைவரையும், அனைவர் மரபையும் இணைக்கும் அரசனாகிய இரண்டாம் இறைவன், அவன் ஆதிக்க உரிமையின்றி அன்புரிமையால் இயக்கப்படும் அவன் தாள்கள், தாளாளர்கள் அல்லது செயலாட்சி முதல்வர் அதாவது அமைச்சர் முதலிய ஆள்வோர் குழுவினர்; மீண்டும் இறைவன் வழிநின்று சமுதாயம் இயக்கும் பெரியார், சான்றோர், பண்பாளர் ஆகியோரால் இயக்கப்படும் மக்கள் அவை அல்லது மன்றம், இவர்கள் இயக்க இயங்கும் மக்கள் எனத் திருவள்ளுவர் வகுத்த அறம், பொருட்சங்கிலியின் பின்னல்; இறைவன் தாளாகிய ஒரு தலையினின்று உலகளாவுகிறது. தற்காலத்தில் சிந்தனையுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிகையுரிமை, எதிர்க்கட்சியுரிமை, அவையோர் உரிமை யாகிய எத்தனையோ உரிமைகளை அரசியலார் அளிப்பதாகக் கூறுகின்றனர். அறிஞர் திருநிலையுடையதாகப் பேண விரும்பு கின்றனர். ஆனால், இவை கருத்தளவிலும் குறிக் கோளளவிலும் நிலவுவனவன்றிச் செயல்முறையில் செயற்படத் தக்கனவல்ல என்பதை ஒரு சிறிது அனுபவ வாயிலாகச் சிந்திப்பவர் காணக்கூடும். ஏனெனில், ஒருபுறம் தீயோர் இவற்றைப் பயன்படுத்துவதை எந்த அரசியலாரும், சமயத் தலைவரும், சமுதாயத் தலைவரும் தடுக்கமுடியாது; முடியவில்லை. அதே சமயம் ஆள்பவர் விரும்பாத, அல்லது தற்காலிகமாகவேனும் உணராத இடத்தில் நல்லோர் இவற்றை வழங்க முடியாமல் திணறுவதையும் காணலாம். இயேசுபிரான், முகமதுநபிகள், காந்தியடிகள் வாழ்க்கையே இதற்குச் சான்று. நல்லோர் ஆள்வோராக வரினல்லது நல்லோர்க்குப் பாதுகாப்பு இருக்க முடியாது. உலகின் சூழலில் நல்லோர் பெயர் கூறிப் பிறர் ஆள்வோராதலல்லது, நல்லோர் ஆள்வோராக வருதல் என்றும் கூடாத ஒன்று. கிரேக்க மாபேரறிஞருள் ஒருவரான பிளேட்டோ இவ்வுண்மை கண்டு குடியாட்சி என்பது குழப்ப ஆட்சியேயன்றி வேறன்று என்று அங்கலாய்த்துள்ளார். தற்காலத்துக் குடியாட்சியறிஞர் அங்ஙனம் கொள்ளவில்லை என்றால் குடியாட்சியின் உயர் குறிக்கோளே போதும். நாளடைவில் நலம் விளையும் என்ற அவர்கள் நம்பிக்கையாலேயன்றி வேறன்று. தற்காலக் குடியாட்சி என்பது நல்லோர் விரும்பும் குடியாட்சிக் குறிக்கோளுடன் அதன் நிழலிலே வல்லோர் விரும்பும் வல்லாட்சியைத் தழைக்கவிடும் ஒரு முறையேயன்றி வேறன்று. பிளேட்டோவுக்கும் சாக்ரட்டீசுக்கும் காலத்தாலும் முந்தியவர் வள்ளுவர். அவர்கள் கடந்து சிந்தனையின் உச்ச உயர் முகட்டில் உலவியவர் அவர். பிளேட்டோவின் புதிரை இக்கால அறிஞர் விடுவிக்காது முடிச்சறுத்து விளையாடுகின்றனர். வள்ளுவரோ புதிரை விடுவிக்கப் புது வழியை முன்பே காணினும், அறிஞர் அறிவு ஒன்றின் உதவியால் மட்டும் காணமுடியாத ‘காந்திய அருள் வழி’யில் அதைச் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளார். அவர் உரிமையை முழுதும் மக்களிடம் விட்டார். ஆள்பவருக்குக் கடமையை மட்டும் வகுத்தார். உரிமையும் கடமையும் இல்லாத, இயற்கைக் கடப்பாடுடைய, இடையார்வமே உயிராகக் கொண்ட இன உயிர்மரபைக் கண்டுணர்ந்து, அம் மரபில் அன்புரிமை வகுத்தார். அதன் உச்சி கண்காணா இறைவன் அல்லது இன ஆர்வம். இதனையே அணிமைக்கால உலக அருளறிஞர் சிலர் வள்ளுவர் நிழல் மரபுக்கூற்றின் நிலை உயிர் ஆர்வ ஆற்றல் (டுகைந கடிசஉந) என்று அழைத்துள்ளனர். அதன் வடிவு போன்ற மரபின் நடுமய்யம், அரசன் அல்லது இரண்டாம் இறைவன். அவன் ஆள்பவனுமல்லன், ஆளப்படு பவனுமல்லன். இரண்டுமற்ற அன்பு மரபின் மய்ய உருவினன். அவன் வழி நிற்பவர் சான்றோர்; பண்பாளர். அவர்களும் அரச இறைவன்போல மனிதரானாலும், பிறகுடி மனிதர்க்குரிய உரிமையையும் மேற்கொள்ளாமல், கடமைகளையும் கடமை களாகக் கொள்ளாமல் பிறர் உரிமையைத் தாம் தம் இயல்பால் பேணி, தம் கடமையையும் தம் இயல்பாகச் செய்தமைபவராவர். அது மட்டுமன்று. இனத்தின் அறியாமையைத் தம் அறிவால் காத்து, இனத்தின் ஏலாமையைத் தம் ஆற்றலால் அகற்றி, இனத்தின் பொல்லாங்கைத் தாம் அவற்றின் தீவினையேற்று நலமாக்கி, இனம் அறிந்தும் அறியாமலும், இனம் உதவியும் உதவாமலும் சில சமயம் தடுத்தும் இனம் வளர்க்க வாழ்பவர், மாள்பவர் ஆவர். ஒழிபியலின் குடிமை, அரசியலில் இறைமாட்சியுடனும், அங்கவியலில் அமைச்சுடனும் இணைவுடையது. அது குடும்பத்துக்குரிய நற்குடி உறுப்பினர் பண்பு கூறுவது. தற்கால உலக நாகரிகத்தில் மேலை நாடுகளில்கூட ஆங்கிலேயர் மட்டுமே பேணிவரும் அரும்பண்பு இது. குடும்பத்துக்கு ஒரு குடும்பப் புகழ் மரபும் (குயஅடைல கூசயனவைiடிn). நாட்டுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இதுபோல ஒருமரபு (நுளயீசைவை னநஉiடிn) வகுத்து, அவற்றின் மூலம் தனி நபரை இயக்கும் பண்பு முறையே இங்கிலாந்தும் பிரான்சும் கண்ட வாழ்க்கைப் பண்புகள். இப் புகழ் மரபை ஒரு தெய்வமாக, உவமை யணிந்துரையாக்குவதை இன்றும் ஆங்கிலக் கல்லூரி களில் காணலாம். திருவள்ளுவர் வகுத்த குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை இவை போன்ற பண்பு மரபுகளாகும் என்பதை உணராமலே, குறளின் பெருமையை அறிந்து போற்றுகின்றனர். தமிழர் அறிந்தால் எவ்வாறு போற்றுவாரோ, அறியோம்! ஆங்கில, பிரஞ்சு மரபுகளுக்கு இணையாகத் தமிழரிடம் இன்னும் அறியாத வள்ளுவர் மரபு ஒன்று உண்டென்றால், அது ‘மானம்’ ஆகும். அந்த ஒரு சொல்லுக்குத் தமிழர் பொருள் மரபு, உணர்ச்சி மரபு இழந்துவிடவில்லை. சங்ககாலம் முதல் இன்றுவரை அவ்வுணர்ச்சியும், சொல்லும், பொருளும் இணையறாமல் நீடித்துள்ளனர். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது. ஆயிரத்தில் ஒன்று குறைந்தால் அஃது ஆயிரமன்று. ஒரு ஆத்திரத்தில் கிணற்றில் குதிக்கலாம். ஓராயிரம் ஆத்திரத்தில் மேலே எழுந்து வர முடியாது’ என்பன போன்ற பழமொழிகள் இதற்குச் சான்றுகள். ‘வீம்பு’ என்ற தவறான படியில் தமிழர் வாழ்வையே இது பல சமயம் இன்றும் அலைக்கழிப்ப துண்டு -—அரைக்காசு உரிமைக்காக ஆயிரம் செலவழிக்கும் மரபு மடமை, வீண் மதிப்புக்காக வாழ்வு குலைக்கும் மடமைத் தருக்கையும், உயர்வு நாட்டுவதற்காக ஓயாது போராடிப் பூசலிடும் மடமைக் குடியாட்சிப் பண்பையும் நாம் இவ் வள்ளுவர் கால மானத்தின் உருக்குலைந்த நிழல் மரபுகளாகக் கொள்ளலாம். ஒழிபியல் விளக்கும் நற்பண்புகளுக்கும், அற்பப் பண்புகளுக்கும் இடைப்பட்ட இயல் ‘உழவு.’ தொழில்களில் உழவுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு, அஃது உயிர்த் தொழில் என்பதே. இயற்கை, உயிர், இறைவன் இந்த மூன்றின் தொடர்பால் அன்பு, அறிவு, வளம் என்ற வடிவில் அஃது இயங்குகிறது. எல்லா உயிர்ப்பண்புகளுக்கும் அது சின்னமாய் அமைவது. திருவள்ளுவர் வீரத்தை வில்லேர் உழவு என்றும், புலமையைச் சொல்லேர் உழவு என்றும் குறித்தது வெற்றுவமையன்று. உழவே போல் அவை பண்பை ஒன்றிப் பெருக்குவன. நாட்டளவில் உள்ள இந்த உழவுப் பண்பே தேசியம். உலகளாவிய இவ் வுழவுப் பண்பே நாகரிகம். உயிருலகும், இயற்கையும், கால எல்லை கடந்த இனமும் அளாவிய இவ் உழவுப் பண்பே வள்ளுவர் குறித்த அற ஆழி, பொருளாழி, இன்ப ஆழி. இரவு முதல் கயமை ஈறான அதிகாரங்கள்; உழவுப் பண்புகளின் குறைபாட்டின் பயனேயாதலால், உழவு அதிகாரமும் அவையும் ஒருங்கே இன்பத்துப் பாலின் முதல் அதிகாரத்துக்கு வாயிலாய் அமைகின்றன. கயமை வறட்சியையும், இன்பம் இவ் வறட்சி நீக்கும் வானையும் ஒக்கும். பொருட்பாலில் தீர்ந்த இன்மை (இல்லாமை)யை. இன்பப் பாலின் நிறைந்த இன்மை (இல்வாழ்வின் தன்மை) நிறைவுபடுத்திப் பொங்க வைப்பதாகும் என்ற முறையில் கயமை யதிகாரமும், கயமையின் எதிரான இன்பத் தெய்வமாகிய ‘தகையணங்குறுத்தும்’ செயல் கூறும் இன்பத்துப் பாலின் முதலதிகாரமும்; பொருள் இன்பப் பால்களிடையே வாயில்கள் ஆயின. 7. முப்பால் இன்பம் முப்பால் பாகுபாடு திருவள்ளுவர் பொதுமறை கடந்து தமிழினத்தில் பரவியுள்ளது. தமிழினம் கடந்து கீழ்த்திசையிலும் பரவியதுண்டு. ஆயினும், அப் பாகுபாட்டின் கூறுகளும், அதன் அறிவுத் திறங்களும் பண்புத் திறங்களும் பல; கீழ்த்திசையளாவிப் பரவாமல், தமிழகத்துக்கே யுரிய சிறப்புக் கூறுகளாக நிலை பெற்றுள்ளன. அதுபோலவே அதன் ஆழ்ந்து செறிந்த கூறுகளும், திறங்களும் பல தமிழினத்திலேயே பரவ முடியாமல், வள்ளுவர்க்கே யுரிய தனி உயர் சிறப்புகளாக அமைகின்றன. இதனால், வள்ளுவர் பண்பின் நிழலை நாம் தமிழினத்திலும்; வள்ளுவர், தமிழக நிழல்களைக் கீழ்த்திசையிலும் காண முடிகிறது. இவை கடந்து உலகில் வள்ளுவர் நிழலைக்கூடக் காணமுடிகிறது. ஆனால், புறநிழல்கள் எதனையும் தமிழினத்திலோ வள்ளுவரிடத்திலோ காணமுடியாது. புறத்தே பரவாமல், தமிழினப் பரப்பில் பொதுவாகவும், திருவள்ளுவரிடம் சிறப்பாகவும் செறிவுற்ற பண்புகளில் தலை சிறந்தது இன்பப் பண்பே. இதனையே தமிழர் அகம் எனச் சிறப்பித்தனர். இப் பண்பின் உயர்விலே தமிழர் செம்மாந்து மகிழ்ந்திருந்தனர் என்பதனைக் குறிஞ்சிப் பாட்டு என்ற சங்கப் பாடலால் அறிகிறோம். அதைப் பாடியவர் பொய்யா நாவிற் கபிலர் என வள்ளுவர் பண்பினாலேயே சிறப்பிக்கப்பட்டவர். அவர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்துவதற்காக இப் பாட்டை இயற்றினாரென்றும் பாட்டின் அடிக்குறிப்புத் தெரிவிக்கிறது. தமிழ் அறிவுறுத்துவதற்காக இவ்வுயர் பாட்டை இயற்ற நேர்ந்தது ஒன்றினாலேயே, ஆரிய அரசன் பிரகத்தன் தமிழறியாத வனல்லன் என்று துணிந்து கூறலாம். தமிழ் மொழியறிந்து அதனாலேயே அவன் தருக்கியிருத்தல் வேண்டும். தமிழிலக்கியம் உணரும் தன்மையும் தனக்கு உண்டு என அவன் தறுகணுரை ஆற்றியிருத்தல் வேண்டும். ஏனெனில், ‘அவன்’ அறிந்தவரையில் ‘இது தமிழ்’ என்று அவன் அறியாதது அறிவுறுத்து வதற்காகவே குறிஞ்சிப்பாட்டைக் கபிலர் இயற்றி அளித்தார் என்று அறிகிறோம். குறிஞ்சிப்பாட்டு அகம் சார்ந்தது. அகத்திலும் அழகிய ஊடல் அளாவியது. அகப் புறப்பாகுபாடு தமிழர் வகுத்த பாகுபாடேயானாலும், அதில் அகம் சிறப்பாக, அகத்தில் ஊடல் இன்னும் சிறப்பாகத் தமிழர்க்கே உரிய பண்பு ஆகும். இதனை இப் பாட்டின் உரையாசிரியர்கள் எடுத்து விளக்கியும் உள்ளனர். ஓர் இனத்தின் நாகரிக உயர்வை, பண்பாட்டை, அவ்வினத்தவர் பெண்பாலார்க்குக் காட்டும் மதிப்பால் அளவிட்டு உணரலாம் என்று மேலை அறிஞர் கூறுவதுண்டு. இதில் வியப்பில்லை. மனித இனத்தை நாகரிகம் நோக்கி உயர்த்திய பண்பு பெண்டிரின் காதற்பண்பே. காதல் இருவர்க்கும் பெயரளவில் உரியதாயினும்; அதனை இயக்குபவர், அதனை மூலதளமாகக்கொண்டு அறிவுப் பயிரும் வாழ்வுப் பயிரும் வளர்ப்பவர் பெண்பாலரேயாவர். நாகரிக வளர்ச்சியில் எல்லா இனங்களுக்கும் மிக மிக முற்பட்டே முந்திக் கொண்டிருந்த தமிழர் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். எனவேதான், எந்த இனமும் வகுக்காத முறையில் அவர்கள் அகம் புறம் வகுத்தனர். எந்த இனமும் ஆராயாத அளவில், அகத்துறையில் நுட்ப நுணுக்க விரிவுகளை ஆராய்ந்து விளக்கினர். தமிழர் வகுத்த இந்தத் தளத்தின் மீது நின்றே திருவள்ளுவர் தமிழர் கனவு காணாத உச்ச உயர் எல்லைக்கு இந்த இனப்பண்பை உயர்த்திச் சென்றார். அவர் முப்பால் பாகுபாட்டில் இன்பம் மூன்றாவது பாலாக மட்டும் அமையாமல், முப்பாலின் முடிமகுடமாக நிலவும் வகை அதுவே. அறநூல், பொருள்நூல் என்ற பெயர்களும் வள்ளுவர் முப்பால் நூலுக்கு முற்றிலும் பொருந்துபவையே. இது மேலே காட்டப்பட்டது. ஆனால், இவற்றைத் தாண்டி இன்பநூல் என்ற பெயர் அதற்கு முற்றிலும் இசைவும் முழு உயிர்ப் பொருத்தமும் உடையதாகும். ஏனெனில், அப் பாகுபாடு முழுவதும் இன்பத்தையே நோக்கமாகக் கொண்டது. இன்பத்தை நோக்கியே செல்வது. அறத்துப்பாலில் அஃது அவ்வின்பத்தின் தலையூற்றாகிய இல்லறத்தில் தொடங்குகிறது. துறவறம் அத் தலையூற்றின் விரிவே. இரண்டனுக்கும் உரிய கருவி கலங் களாகவே அது பொருள் முழுதும் ஆராய்ந்து, மீண்டும் இறுதியில் அவ்வின்பத்துக்கே வருகிறது. இதன்பின் அது இன்பப் பயிரில் பரவுதல் விடுத்து அதன் உயிரூற்றிலேயே இறங்கி, அதன் ஆழ்சுவையில் ஈடுபடுகிறது. இது மட்டுமா? அச் சுவையிலும் அகத்தில் அகமாக உள்ளார்ந்து நுழைந்து, களவியல், கற்பியல், கூடல், ஊடல் என நுணுகிச் செல்கிறது. சிறப்பாக இறுதி மூன்று அதிகாரங்களும் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை எனக் குறித்துச் செல்லும் சீர்த்தி நினைந்து நினைந்து இன்புறத் தக்கது. சிந்தித்துச் சிந்தித்து மேன்மேலும் சிந்தனையை ஓடவிடத்தக்கது. இன்பம் முப்பாலின் முடிந்த நோக்கம் மட்டுமன்று, அதன் தொடக்கமும் முடிவும் மறுமலர்ச்சியுமாக அஃது இயங்குகிறது. ஒரு முடிவுக்குக் காரணமாக, முடிவுபெறாக் காரியமாக, இடையறாது முப்பால் மணிகளினூடாகச் செல்லும் உயிரிழையாக அது செயற்படுகிறது. உண்மையில் வள்ளுவர் வகுத்த முப்பால் வளம் அன்பு என்னும் நிலத்தில் வேரூன்றி, இனம் என்னும் வான அகல் வெளியிலே பரவி, இன்பம் என்னும் கதிரவனை நோக்கி உயர்ந்து வளர்வதாகும். இவ் வளர்ச்சியில் இன்பத்தின் இனக் கனிவாகிய காதலே கனிவளமாய் அமைகிறது. ஆனால், அன்பு நிறைவாகிய இக் காதலே மீண்டும் இன வளர்ச்சிக் கும், மறுமலர்ச்சிக்கும் உரிய கரு விதையாகவும், வேர் முதலாகவும் இயல்கின்றது. இவ்வாறு அன்பிலிருந்து இன்ப நோக்கிலும். இன்பத்திலிருந்து அன்பு நோக்கிலும் அலையலை யாகத் தவழ்ந்து செல்லும் இன்பப் பயணமே வாழ்வு. வள்ளுவர் தரும் இந்த இன்ப வாழ்க்கைச் சித்திரம், அறிவுலகம் அறியாத ஒன்று மட்டுமன்று; தமிழகத்திலேகூட வள்ளுவர் நூலுக்கு வெளியே இத்தகைய கவினார்ந்த மெய்ம்மையை முழு உருவில் காணமுடியாது. காலத்தாலும் பண்பாலும் மற்ற எவரையும்விடத் திருவள்ளுவர்க்கு மிகவும் அணிமையுடையவராகக் கருதப்படக்கூடியவர் தொல்காப்பிய ஆசிரியரே. அவர்கூட இந்த உயர் மெய்ம்மையைக் குறிக் கொண்டதாகக் கூறுவதற்கில்லை. அதன் ஒருதொலை நிழலையே, சில நிழற் கோடுகளையே நாம் தொல்காப்பியத் திலும், சங்க இலக்கியங்களிலும் காணலாம். பிற்கால ஏடுகளிலோ நாம் திருக்குறளின் சொல் நிழல்களையும் சொற்பொருள் நிழல்களையும் காண்டலாகுமே யன்றி, அவர் கருத்துணர்வுகளின் நிழலையோ அவர் உயிர்க் கருத்து மரபின் நிழலையோ காண்டலாகாது. ‘இன்ப நூல்’ என்பது வள்ளுவர் நூலுக்கு இசைவுடைய பெயர் மட்டுமல்ல, அதுவே நூலின் தொல்பழம் பெயர் என்பர் அறிஞர் மீனாட்சி சுந்தர முதலியார். அத்துடன் ‘இன்பம்’ என்ற சொல்லின் பொருளெல்லை பற்றியும் அவர் தனிக் கருத்துரை தந்துள்ளார். வள்ளுவர் ‘இன்பம்’ என்ற சொல்லை நாம் வழங்குவது போல ஆண், பெண்பாலாரிடையேயுள்ள சிற்றின்பத்தை மட்டும் குறிக்க வழங்கவில்லை, தனி உயிர்க்கும் இறைவனுக்கும் இடையே நிகழும் பேரின்பத்தையும் உட்குறிக்கவே வழங்கினார் என்பது அவர் கோட்பாடு. அறிஞர் கருத்து இங்கே ஊன்றி ஆராயற்பாலது என்பதில் ஐயமில்லை. கடவுட் பற்றைக் காதலாகப் பொது அளவிலேயே மனித உருவமறிந்த மொழியில் தீட்டிக் காட்டும் மரபு தமிழகத்துக்கு மட்டும் உரியதன்று; உலக முழுமைக்குமே பொதுவானது. வைணவர் தனியுயிரைக் காதலியாகவும். அத் தனியுயிரின் கருத்தில் கருக்கொண்டெழும் உணர்வாக இறைவனையும் கற்பனை செய்து பாடுவது மரபு. மேலையுலகக் கிறித்துவத் தொண்டர் பலர் பின்பற்றிய மரபும் இதுவே. ஆனால், சைவப் புலவோர், சிறப்பாகத் தமிழ்ச் சைவர் வணங்கும் அன்புத் தெய்வமாகிய மாணிக்கவாசகர் தம் திருக்கோவையாரில் தனி உயிரைக் காதலனாகவும், இறைவனைக் காதலியாகவும் வருணித்துத் தம் உணர்ச்சிகட்கு உருவம் தந்துள்ளார். ‘மலங்கெடுத்து மனங்கரைக்கும்’ இவ் வாசகத்தின் மரபிலேயே மேலை இசுலாமிய அருட்கவிஞர் -—சிறப்பாகப் பாரசீகக் கவிஞர் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தார்-சிறப்பாக மேலை நாட்டறிஞர் இந்த இறை நினைவில் இறையை முற்றிலும் மறுக்கும் அளவுக்கு, இவர்களுள் பலர் பேரின்ப உணர்வை முற்ற முழுக்கச் சிற்றின்ப உணர்வின் உருவிலேயே சுழித்தோட விட்டுள்ளனர். கால இடம் கடந்து நீடித்துள்ள இவ்வுலக மரபு, வள்ளுவர் பற்றிய அறிஞர் மீனாட்சிசுந்தரனார் கருத்தை வலியுறுத்துவதாகும். அறிஞர் கருத்துக்கு மற்றொரு வலியுறவும் உண்டு. வள்ளுவர் முப்பால் வகுப்பு முறையிலேயே அது நாற்பால் வகுப்பு முறையையும் படியவைத்துக் காண உதவுகிறது. அதன்படி வள்ளுவரின் அறம் புறத்தின் புறம் ஆகும். புறப்புறமாகிய இயற்கையுடன் ஒத்த தனிமனிதன் வாழ்க்கை யமைதியை அஃது எடுத்தியம்புகிறது. இதனையடுத்த பொருட்பால் இதுபோலப் புறத்தின் அகமாக இயங்குவது ஆகும். ஏனெனில், புறத்தின் புறம் இயற்கையானால், புறத்தின் அகம் அதன் உயிர்களின் வாழ்குழு அல்லது மன்பதையேயாகும். தனியுயிர் வாழ்வின் பின்னணி வண்ணமும்; அதை இனவாழ்வு நோக்கி முனைப்பாக ஊக்குவித்துச் செலுத்தல் முன்னணி வண்ணமும், சமுதாயம், சமயம், அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்வே - இவற்றின் மூலம் இனத்தின் புறவாழ்வை அதன் உயிர் நிலையாகிய அகவாழ்வு நோக்கித் திருப்பும் பகுதியே-புறத்தின் அகப்பகுதியே வள்ளுவரின் பொருட்பால் ஆகும். இப் பகுப்பின் நுட்பம் கண்ட பின்—வள்ளுவர் இன்பப்பால்; புறப்புறம், புறத்தின் அகம் ஆகிய இரண்டுக்கும் எதிரான அகப்புறம், அகத்தின் அகம் ஆகிய இவற்றின் தொகுதி என்பது எளிதில் தெரியவரும். இன்பப்பாலில் அகப்புறம், அகத்தினகம் என்ற இந்தப் பாகுபாட்டை இருவேறு வகைகளில் காணலாம். ஒரு புறம் களவியலை நாம் அகத்தின் புறம் என்றும், கற்பியலை அகத்தின் அகம் என்றும் கருதலாம். ஏனெனில், களவியலில் தலைவன் தலைவியர் இருவராய் நின்று ஒருவரை யொருவர் அணுகி ஓருணர்வில் தம்மையறியாது ஒன்றுபடத் தொடங்குகின்றனர். ஆனால், கற்பியலில் அவர்கள் இரண்டறக் கலந்து ஒன்றுபட்ட நிலையை அடைந்து விடுகின்றனர். இந் நிலையிலேயே அவர்கள் இருமையில் ஒருமை, ஒருமையில் இருமை என்ற மறைநிலை நயங்களின் நுட்பங் கண்டு ஒருவர் இன்பம் ஒருவர் பெருக்கி, தாமும் இன்பம் பெறுகின்றனர். கொடுத்தலால் பெறுதல், துய்ப்பித்தலால் துய்த்தல் என்ற இயற்கை கடந்த—வாழ்வின் பொதுநிலை கடந்த இந்த ஒப்பற்ற ஒரு பருவத்தின் தனி நுகர்ச்சிகள் ஆகும். இயற்கையிலோ, வாழ்விலோ, வேறெங்கும் நாம் இதனை ஒத்த, இது போன்றவற்றைக் காண முடியாது. அகத்தின் அகப்புற உட்கூறுகளை நாம் இன்னொரு வகை யாகவும் காணலாம். கூடலை அகத்தின் புறமாகவும், ஊடலை அகத்தின் அகமாகவும் கருதுவதற்கு இடம் இல்லாமலில்லை. ஏனெனில், கூடலில் இருவர் தாம் ஒன்று படுவதால் ஏற்படும் இன்பத்தையே நுகர்கின்றனர். ஊடலிலோ போலியாகக்கூட இரண்டுபட முடியாததிலும் இரண்டக நிலை கண்டு இன்பத்தில் துன்பமும் துன்பத்தில் இன்பமும் அடைகின்றனர். இன்பப்பாலின் அகப்புறம், அகத்தினகம் என்ற கூறு நாட்டின் வகையில், மேலே தரப்பட்ட விளக்கங்கள் இரண்டுமே அறிஞர் மீனாட்சி சுந்தரனார்க்கு ஏற்புடையதன்று. வள்ளுவர் இன்பப்பாலில் வெளிப்படையாகக் கூறிய அத்தனையும், அகத்தின் புறமே என்றும்; அவர் குறிப்பு அறிந்து உற்றுணர்ந்து ஆழ்ந்து நுணுகி நோக்கினால், வெளிப்படையாகக் கூறியவற்றின் உட்பொருளே அகத்தினகமாய் இலங்குமென்றும் அவர் கருதியுள்ளார். பொதுவாக முப்பால் நூலின் போக்கும் குறிப்பும் பின்பற்றிச் செல்பவர்க்கு அறிஞர் மீனாட்சி சுந்தரனார் கருத்து பொருந்தாக் கருத்தென ஒதுக்கித் தள்ளுவதற்குரியதன்று என்றே பெறப்படும். ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்!’ - குறள் 1330 வள்ளுவர் திருக்குறளின் கடைசி அதிகாரமான ‘ஊடலுவகை’யில் கடைசிக் குறட்பாவே இது. நூலின் இந்தக் கடைசிக் குறட்பா ஒரு முற்று வினையுடன் அமைவு பெறவில்லை; ஓர் எச்ச வினையுடன் அவாய் நிலைபோல நின்றுவிடுகிறது. அது மட்டுமன்று; கூடலின் பல்வேறு உணர்ச்சிகளைக் கூறிய பின்னரே வள்ளுவர் ஊடலில் கருத்துச் செலுத்தினார். ஊடலின் பலவகை நய நுட்பங்களை எல்லாம் ஆராய்ந்த பின்னரே இக் குறட்பாவுடன் ஊடலை முடிக்க எண்ணுகிறார். ஆயினும், ஊடலை முடிக்கும் இக் குறட்பாவின் இரண்டாவது அடியே மீண்டும் கூடலை நினைவூட்டுகிறது. முடிந்த இடத்தில் தொடக்கம் நோக்கிச் சொற்போக்குத் திரும்பும் இந்த நிலை, வளையில் புகுமுன் தலையைத் திருப்பிக் கொள்வதாகக் கூறப்படும் பாம்பின் செயல் போன்றது. தனிச் செய்யுளில் இலக்கண நூலார் இச் சொல்லணி முறையை அளைமறிபாப்பு என்று கூறுவர். ஆனால், வள்ளுவர் நூலில் இஃது அவாய் நிலையாக நிற்கும் இறுதி எச்சச் சொல்லை யடுத்து, நூற்பொருளையும் அவாய் நிலையாக நிறுத்திச் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. அகத்தின் புறம் முடிவுற்று, அகத்தின் அகத்தில் சிந்தனை செலுத்துவதாக இக் குறட்பா இறுதிக்கண் நிற்பதென எண்ண இடமுண்டு. தவிர, வள்ளுவர் நூல் முழுவதுமே இன்பத்தில் தொடங்கி இன்பத்தில் முடிவது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதே சமயம் இன்பத்துக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு வான்சிறப்பால் விரித்துத் தரப்பட்டது. எனவே, நூல் மெய்ம்மையில் இன்பத்துடன் தொடங்கி இன்பத்துடன் முடிவது மட்டுமன்று; அஃது இறைவனுடன்தொடங்கி இறைவனுடன் முடிவதுமாகும். ஏனெனில், வள்ளுவர் குறிக்கொண்ட வாழ்க்கைக் குறிக்கோள் இறைவன். அதன் திசை நின்ற இன்பம்; பயன் இன்பம்; பயன் குறிக்கோளின் செயல் விளைவே யாதலால், வள்ளுவர் கருத்துப்படி இன்பத்துடன் இன்பமே வடிவாகக் கொண்டவன் இறைவன். தனியுயிர் இறைவன் வழி நின்று இனத்தில் பரவிச் சென்று அதனுடன் ஒன்றுபடுவதே இன்பம். இருவராகிய தலைவன், தலைவி காதல் வழி ஒன்றுபட்டு இரண்டறக் கலந்தும்; இன்ப நுகர்வு நோக்கியே முற்றிலும் ஒன்றற்ற இருநிலையும், முற்றிலும் இரண்டற்ற ஒரு நிலையும் அடைவதுபோல; இரண்டுபட்ட மெய்ம்மைகளிடையே தொடங்கிய தனியுயிரும், இனமுதல்வனாகிய இறைவனும் இன உணர்வின் மூலம் ஒன்றுபட்டு; இரண்டற்ற, ஒன்றற்ற இடையறா இன்பநிலையில் இழைகின்றனர். அகப்புறம் அகத்தினகத்தைக் காட்டும் வகையும், அதன் வயப்பட்டு உட்பொருள் குறிக்கும் வகையும் இதுவே. இக் கருத்துடன் மீண்டும் இறுதிக் குறட்பாவை நோக்கினால் அதன் முழு நிறைவான பொருள் நமக்கு நன்கு விளங்கும். ‘கூடுதல் இன்பம், ஊடுதல் அதன் மேல் இன்பம். ஊடுந்தொறும் அவ்வின்பம் மேன்மேலும் நுணுகிய இன்பமாகி, நய நுட்பமிக்க உவகை என நுணுகி நுணுகிச் செல்கிறது,’ இவ்வாறு கூறி, வள்ளுவர் இன்பக் கேணியின் நுண்புழை வாயிலில் நம்மை மேன்மேலும் இட்டுக் கொண்டே செல்பவர். திடுமென, ஒரு புழைவாயிலின் முடிவில் வந்ததும் சற்றே திரும்புவது போல நம்மை நோக்கி; ‘இந்த இன்பமும் மீண்டும் கூடி முயங்கப்பெற்றால்; இப்படியே இன்பத்தின் மேல் இன்பமாக நீண்டு விரிந்து வளர்ந்துகொண்டே செல்லும்.’ எனக் கூறி முடியுமுன், கூறிய இச் சொற்கள் முற்றிலும் நம் செவியில் ஏறும் முன், அவர் திடுமென மறைந்துவிடுகிறார். இவ்வாறு அவாய் நிலையில் விட்ட செய்திக்கு விளக்கம் இனி அவரிடம் பெறுமாறில்லை. நாமே அவர் வழி நின்று சிந்தித்து அதைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டுமென்ற நிலையில் நம்மை அவர் விட்டுச் சென்றுள்ளார். புனைகதை அல்லது நாடக உலகிலே, காதலர் காதலுரை யாடலை நம்முன் காட்டி, அம் மகிழ்விடையே ஓர் இயலைக் காட்சியை முடித்த கலைஞர்; அடுத்த இயல்-காட்சியின் தொடக்கத்திலேயே காதலியின் மடியில் ஒரு குழந்தையைக் காட்டுவதுண்டு. இடையே நடைபெற்ற திருமணத்தையும், திருமண வாழ்வையும் நாம் உய்த்துணரும்படி செய்து நம் உள்ளத்தில் இன்னதென்று உணரமுடியாத வான்பேருவகையை எழுப்பும் கலைஞன் நயமே இது. சில சமயம் இறுதி இயல் காட்சியிலே கதைத் தலைவனைக் கலைஞன் தூக்குமேடை நோக்கிக்கொண்டு செல்வான். ஆனால், அதன் முடிந்த முடிவினையைக் கூறாமல்-காட்டாமல், நாமே உய்த்துணர வைத்துவிடுவான். வள்ளுவர் இறுதிக் குறட்பாவின் அவாய் நிலைக் குறிப்பும் இது போன்ற ஒரு புதைபொருள் கலைத்திறமே யாகும். ஆனால், அது குறித்துக்காட்டும் பொருள், கலைஞர் பொதுவாக அவாய் நிலையால் உணர வைக்கும் பொருளைவிட எத்தனையோ எல்லையற்ற பொருள் நிறைவுடையது. எல்லையற்ற இறைவன் தாளுடன் நூல் தொடங்கிய வள்ளுவர், அத் தாளைச் சுட்டிக் காட்டியே நூல் முடிவில் நம்முள் நாமாக இணைந்து ஒன்றுபட்டு விடுகின்றார் என்னலாம். இயற்கைத் திரையிலும், மனித வாழ்க்கைத் திரையிலும் நாம் முன்னே கண்ட காட்சிகளையெல்லாம், இன முதல்வன் அல்லது கடவுள் என்ற வண்ணக் கண்ணாடித் திரையில் மீட்டும் புதுவண்ணம்படக் காணவைத்து; வள்ளுவர், இன்பத்திலும் ஒரு மாய இன்பம் உண்டுபண்ணியுள்ளார். காணும் அழகைவிட, காணா-கண்ட அழகின் கவர்ச்சி பெரிது. உண்ணும் இன்சுவையைவிட, உண்ணவிருக்கும் - உண்ட பின்னைய இன்சுவை இனிது. கேட்கும் இசையை விட, கேளாத-கேட்டபின் இசைக்கும் இசை இனிது. வள்ளுவர் புறத்தின் புறம், புறத்தின் அகம், அகத்தின் புறம், ஆகியன கூறி அகத்தின் அகத்தை உய்த்துணர வைக்கும் அழகு இது போன்றது ஆகும். வள்ளுவர் இன்பப்பாலின் முழு நிறை சுவையையும் உலகம் நுகர்தல் வேண்டுமானால், அது காதல் இன்பத்துக்கு எந்த அளவு பொருந்துமோ, அதனினும் பன்மடங்கான அளவில் இறையின்ப மாகிய பேரின்பத்துக்கும் பொருந்துவதாகும் என்பதை மனங்கொளல் வேண்டும். பல குறட்பாக்களின் சொல்லும் சொற்றொடரும், அகப்புறமாகக் கருதுபவர்க்கே அவை இன்பக் கவிஞர் எவர் வருணனைகளாலும் சென்றெட்டப்படாத கனிந்த-விஞ்சிய சுவை நயம் உடையது ஆகும். ஆனால், அதனை அகத்தினகப் பொருளுடன் ஒட்டிக் கண்டால், அவற்றின் இனிமை நமக்குக் கவிதையினிமை, அறிவு நுட்பத்தின் விழுமிய நயம், இன உணர்வு நலம் ஆகிய மூவகை அழகும் நிரம்பிய தெய்விக இனிமையாய் அமையவல்லது. வள்ளுவர் இன்பப் பாலின் இருதிசை நயத்தைக் காணுமுன், தமிழ் மொழியிலேயே அப் பண்பு நிறைவுடையதாக அமைந் திருத்தலை நாம் ஓர்தல் வேண்டும். இறைவயப்பட்ட உயிர் இறைவனாகவே இயங்கும் என்பர் சமய அறிவு நூலார். இதனை நினைவூட்டும் வகையில் தமிழர் இறைவனுக்கும், காதலனுக்கும் தலைவன் என்ற பெயர் தந்துள்ளனர். அது மட்டுமன்று காதலனைத் தலைவன் என்றழைத்தது போலவே காதலியையும் தலைவி என்றழைத்து, இறைவயப்பட்ட உயிர் பெறும் இறை நிலையை உய்த்துணர வைத்தனர். தனி உயிர் பெறும் தனி வாழ்வின் நிறைவும், இறைவழி நின்ற உயிரின் நிறை நிலையும் தமிழில் ஒருங்கே ‘இன்பம்’ என்றுதான் குறிக்கப்படுகின்றன. முன்னது சிற்றின்பம் என்றும், பின்னது பேரின்பம் என்றும் பெயர் பெறுகின்றன. இது மட்டுமன்று, இரண்டு இன்பத்துக்கும் நிலைக் களன்கள் ‘வீடு’ என்ற ஒரே பெயரால் குறிக்கப்படுகின்றன. இடைக்காலத் தமிழர் பேரின்பங் குறித்த வீட்டுக்குப் ‘பற்றுவிட்ட இடம் வீடு’ என மாயப் பொருள் விரித்தனர். ஆனால், குடும்ப இன்ப நிலைக்களனான வீட்டுக்கு மட்டும் ‘துன்பம்விட்ட இடம் வீடு’ என்று பொருள் கூறினர். உண்மையில் இரண்டு சொற்களுமே ‘துன்பம் விட்ட இடம்’ என்ற பொருள் உடையதாகலாம். அன்றியும் ‘வீழ் தரும்’ அதாவது அன்பு ஆழ்ந்து வேர் விடுதற் குரிய இடம் என்றே இரண்டும் பொருள்படுதல் செவ்வியதாகும். வீழ்து (விழுது) என்ற சொல்லும், திருவள்ளுவர் அடிக்கடி வழங்கும் வீழ்தல் (அன்பில் ஊன்றுதல்) என்ற சொல்லும் தொடர்புடையவையே யாகும். காதலித்தல் என்பதற்குக் காதலில் வீழ்தல் (குயடட in டடிஎந) என்று கூறும் ஆங்கில மொழி மரபு வழக்கும் இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது. தமிழரின் பண்பு வழி நின்று திருவள்ளுவரும் ‘தலைவனை’க் காதலனாக மட்டுமன்றிப் பத்தனாகவும் கொண்டார். தலைவியைக் காதலியாக மட்டுமன்றி இறைவன் அல்லது இறைவனருளாகவும் தோற்றம் தருகின்றார். தலைவி பற்றிய கூற்றுகளை எல்லாம் இறைவன் மேலேற்றிக் கூறினால் இருவரது இயைபும் நன்கு விளங்கும். தலைவி கண்காட்டிக் குறிப்பறிவித்துச் செல்லும் காரிகை. பரமன் தானே ஞானகுருவாகத் தோன்றிக் குறிப்பினால் போதம் அளிக்கிறான் என்பது சைவ மரபு. தொடக்கத்தில் தலைவி மயக்கமூட்டிப் பின் தன் நோக்கின் குறிப்பாலேயே மயக்கம் தெளிவிக்கிறாள். மாயையில் உயிர்களைத் தோய்விக்கும் மாயவனும், அதிலிருந்து மீட்கும் காவலனும் திருமாலே என்று வைணவரும்; மாயையூட்டி மாயை மலமறுப்பவன் இறைவன் எனச் சைவரும் பிறரும் கூறுவர். ‘தலைவன் காணுங்கால் அவள் நிலம் நோக்குகின்றாள் - குறிப்பு கண்ணிற் படவில்லை.’ தலைவன் காணாக்கால் தான் நோக்கி மெல்ல நகையாடுகிறாள். புறநோக்கில் இறைவன் மறைந்து, அகநோக்கில் அகப்படுகிறான் என்பது வைணவக் கருத்து. ‘அவள் ஒரு நோக்கு நோய் செய்கிறது - மாயை; மறு நோக்கு அந்நோய்க்கு மருந்தாகிறது - அருள்.’ அவள் பொது நோக்கும் ஏதிலார் போலப் பேசும் பேச்சுமே அவனுக்கு அவள் ஈடுபாட்டைக் குறிப்பாக உணர்த்தி விடுகின்றன - அன்பு பரவுமிடமே அருள் குவிவுறும். இவ்வளவும் களவியல் நிலை. கற்பு நிலையில் தலைவி தலைவனைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்கிறாள் - கடவுள் தானே செவ்வி கண்டு பத்தனை ஆட்கொள்கிறார் என்பது சைவ மரபு. ஆளும் தன்மையுடைய பெண், தலைவனையே ஆளவைத்து, ஆண் அல்லது ஆடவனாக்கித் தான் அவனைப் பேணுபவள் (பெண்) ஆகிவிடுகிறாள் - இறைவன் இயக்குவிக்கும், ஆட்டுவிக்கும் அறிவும் இது. இதன் பின்னும் தலைவி கூறிச் சிலவும், கூறாமல் பலவும் தலைவனுக்கு உணர்த்துபவள் ஆகிறாள் - சமய நூலுணர்வுடையார்க்கு இறைவன் அரியனாய், அன்புடை யார்க்கு எளியனாகிறான். கடமையில் பிரிய நினைக்கும் தலைவனைத் தலைவி சிலசமயம் வேண்டா வெறுப்புடன் பிரியவிட்டு ஏங்குகிறாள். சில சமயம் தன் மெல்லியல்பும் அதன் உறுதிப்பாடும் காட்டி அவனைத் தன்னிடம் அன்புச் சிறைப் படுத்துகிறாள். தன்னிடம் நொடிப் பற்றுடையவனைப் புறக்கணித்து, தன்னை விட்டுவிட்டு உயிர்ப்பாச வழிச் செல்பவன் வசப்பட்டு இறைவன் அணைக்க அவன் ஆட்படுகிறான். உடனிருக்கும்போதே பலகால் மறைந்து நின்று உவகை யூட்டுகிறாள் தலைவி - இயற்கை யழகில் தோன்றாத் துணையாய் இருந்து களிப்பூட்டுகிறான் இறைவன். கூடலின் இன்பத்தை ஊடிப் பெருக்குகிறாள் அவள். தலைவன் இன்பத்திலேயே தன் இன்பம் காண்கிறாள். சில சமயம் அவன் கடமை, அவன் இன்பம் நாடித் தான் துன்புறுகிறாள். அவள் மென்மையின் உறுதி கண்டு அவன் அன்பால் உடைகிறான். ஆனால், தன் தோல்வியிலேயே அவன் வெற்றி காண்கிறான் - கடை இடமே நாடுபவன் முதலிடம் பெறுவான். முதலிடம் நாடுபவன் கடை இடம் பெறுவான் என்பது இயேசு மொழி. ஊடலில் அவன் அன்புறுதியைப் பலவாறு கடுந்தேர்வுகளால் வாட்டிப் புடமிட்டு, அவனுக்குத் துன்பத்தில் இன்பம் ஊட்டத்தான் இன்பத்தில் துன்பம் நுகர்கிறாள் தலைவி. நோன்பு, தவம், சோதனை இன்பமோ துன்பமோ என்றும் நிலையிலாத் துன்பமின்பம் துவள அவனும் அவளும் கூடி, ஊடி, ஊடிக்கூடி எல்லையில்லா இன்பத்தில் திளைக்கின்றனர். இன்ப அலையிலிருந்து துன்ப அலைக்கும், துன்ப அலையிலிருந்து இன்ப அலைக்குமாகத் தாவி வாழ்வில் விளையாடுகின்றனர் - பித்தனாகிய பத்தன் செயலிது. காதலன், காதலிக்குரிய இந்த அகப்பொருள் விளக்கத்தில் பெரும் பகுதியும், பத்தன், இறைவன் தொடர்புக்கு அழகுறப் பொருத்துவதாகும் என்று கூறத் தேவையில்லை. பொருந்தாதது போலத் தோன்றுமிடங்கள் கூட, உண்மையில் உலகச் சமயங்களின் ஒப்புமையால் பொருத்திக் காணக் கூடியவையே யாகும். வள்ளுவர் சமய நெறி உலக சமயங்களின் கருமூலம் என்பதைக் கருத்துட் கொண்டால், இந் நிலை இயல்பேயாகும். நாடு, இடம், இனம், காலம் கடந்தவர் கடவுள் என்பதைச் சமயங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், அவர் சமயமும் கடந்தவர் என்பதைப் பல சமயங்கள் வலியுறுத்தத் தவறிவிடு கின்றன. கடவுளைத் தனக்கே உரியவராக்க முற்படும் நாடும், இனமும் எப்படிக் கடவுள் தன்மையில் குறைபடுகின்றனவோ; அப்படியே கடவுளைத் தம் எல்லையில் குறுக்கும் சமயங்களும் அவர் பண்பில் குறைபடுகின்றன. இவற்றுக்கு மாறாக, உலகச் சமய முதல்வராகிய வள்ளுவரின் கடவுட் பண்பு இனப் பொது நிலையுடையது. தமிழக மரபு இன்னும் அதைச் சொல்லள விலேனும் காத்தே வருகிறது. ஆனால், இடைக்காலச் சமயங்கள் பல, கடவுளைத் தம் அளவில் குறுக்கியுள்ளன. உலகச் சமயங்களிலே வினைமுறை - கர்மமார்க்கம், அறிவு விளக்கத் துறை - ஞானமார்க்கம், அன்புநெறி - பத்திமார்க்கம், இரண்டற்ற ஒருமை நிலை - யோகம் என்ற நான்கு கூறுகளைக் காணலாம். இப் பாகுபாட்டிலேயே நாம் திருவள்ளுவர் முப்பால் பாகுபாட்டின் நாற்பாற் கூற்றின் நிழற் கோடுகளைக் காணலாம். வினைமுறை சமயத்தின் அறக்கூறு. அது பல சமயங்களில் தூய உயர் அற நெறியிலிருந்து பலபடி கீழே விழுந்து தடுமாற்ற மடைந்துள்ளது. ஆயினும் புத்த, சமண நெறிகளில் இதன் உச்ச உயர் நிலையைக் காணலாம். சமயங்களின் அறிவு விளக்க நெறியே அவற்றின் பொருள் நெறியாகும். இது புத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய கீழ்த்திசைச் சமயங்களில் தலை சிறந்து காணப்படுகிறது. அன்பு நெறி, இரண்டற்ற ஒருமை நிலை ஆகிய இரண்டும் அகத்தின் புறம், அகத்தின் அகம் ஆகியவற்றுடன் இசைவனவாகும் - இது சைவ, வைணவ சமயங்களிலேயே உச்ச உயர் நிலை அடைந்துள்ளது. இவ்விரண்டு சமயங்களின் பத்தி களவியலுடனும், யோகம் கற்பியலுடனும் பெரிதும் பொருந்துவன என்னலாம். அகத்தின் அகப்புற இருமை நயத்தைப் பெரும்பாலும் கற்போரே ஊகிக்கும்படி விட்டுவிட்டு வள்ளுவர் வகுத்த இன்பப் பாதையிலே படிப்படியாகச் செல்வதே குறளுணர்வார்க்குப் போதியது. ஏனெனில், வள்ளுவர் இன்பம் இன இன்பமாதலால், அஃது இன வழி நிற்கும் உயிராகிய காதலரையும், இன முதல்வர் வழி நிற்கும் உயிராகிய பத்தனையும் ஒருங்கே குறிப்பதாகும். அறத்துப்பாலில் இல்லறத்திலேயே வாழ்வில் பெண்டிரின் இன்றியமையாமையையும், வளமிக்க துணைமையையும், சிறப்புகளையும், பொறுப்புகளையும் இரண்டகமற்ற சீரிய சொற்களால் வள்ளுவர் விளக்கியுள்ளார். பெண்டிரின் உடலின்பத்திலும் தோற்றத்திலுமே மயங்கி அறிவழிகின்ற ஏனைய கவிஞர்களைப் போலல்லாது, திருவள்ளுவர் வேறு எப்புலவர்களும் கூறாத முறையில் ஆர்வமிக்க இழுமெனும் கனிவு மொழிகளால், குறட்பாக்கள் வடிவிலேயே பல சிறு காவியங்கள் தந்துள்ளார். அவற்றிலேயே இனவாழ்வின் குறிப்பும் தொக்கி நிற்கிறது. ஏனெனில், மகன் கடமை தந்தைக்குப் புகழ் பெருக்குவது எனினும், தந்தை கடமை மகனுக்கு அவையில் முந்தும் இடம் பெறுவித்தல் என்றும்; தம்மினும் தம்மகனை அறிவுடைய வனாக்குதலே தந்தையின் இன நலமடக்கிய கடமை என்றும் அவர் வகுத்தார். இவை உலகில் வேறு எந்த அறநூலாரும் இன அறிஞரும் இனக் கலைஞரும் கரை காணாத கருத்துகள் ஆகும். இனத்துக்குரிய இந்த வாழ்வின் தலையூற்றாகிய இன்பம்; அவ்வின் பத்தினூடாகப் பொங்கித் ததும்பும் அன்பின் கனிவு, அறிவின் முதிர்வு, அவற்றிடையே வீசும் இனஉணர்வின் மணம் ஆகிய இவற்றை வள்ளுவர் தீட்டிய வகையில் தீட்டிய கலைஞன் அவர்க்கு முன்னும் இலன்; பின்னும் இலன். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்கூடச் சிலவகையில் வள்ளுவரின் வெளிப்புறச் சாயல்களாகவே இயல்கின்றன. இன்பத்தைப் பற்றிய இரு நூற்றைம்பது குறட்பாக்களையும் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் கோணத்திலிருந்து பார்த்தால், அவற்றின் மேலீடான தனிப் பண்புகள்கூட வியப்புக்கிடமானவையாகவே அமைகின்றன. காதலைப் பற்றிப் பாடிய உலகின் மற்றைய புலவர்கள் அனைவரும் இன்றுவரை பெண்மையின் உடலழகை, உறுப்பு உறுப்பாகச் செயற்கை உவமைகளுடன் காமுகன் நிலையில் நின்று விரித்துரைப்ப திலேயே பெரிதும் ஈடுபட்டுள்ளனர். திருக்குறள், தொல் காப்பியம் , சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில்தாம் காதல் ஈர் உள்ளங்களில் மாறி மாறி எழும் உணர்ச்சிச் சித்திரங்களின் இயக்கமாக, அவற்றின் உடலூடான மெய்ப்பாடுகளாக வருணிக்கப்படுவதைக் காணமுடியும். தவிர, உலகின் பிற புலவர்களிடையே உணர்ச்சி தீட்டப்படும்போது, ஆடவன் அதுவும் பெரிதும் காமுகனான ஆடவனின் இழிதக்க உணர்ச்சிகளே கவிதை வடிவில் காட்டப்படுதல் மரபு. பண்டைத் தமிழிலக்கியத்தில் பொதுவாகவும், திருக்குறளில் சிறப்பாகவும் உயர்ந்த காதலிலீடுபட்ட பண்பார்ந்த உள்ளங்களின் - ஆண் உள்ளம் மட்டுமின்றிப் பெண் உள்ளங்களின் காதலனுபவங் களின் ஒவ்வொரு நிழலும், சாயலும் நுண் மய்யத்துடன் மெய்ந்நிலையும், வாய்மையும் வழுவாது தீட்டப்பட்டுள்ளது காணலாம். உடலழகு வருணனையும், உணர்ச்சி வெறியும் வள்ளுவரால் தீட்டப்பட நேரும்போதும் காணப்படும் அவரது கூரறிவுத் திறமும் கவிதை நயங்களும், இலக்கிய உலகெங்கணும், தமிழ்ச் சங்க இலக்கியத்தில்கூட காணப் பெறாதவை. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல நுகர்வும் பெண் தரும் இன்பம் ஒன்றிலேயே உண்டு என வள்ளுவர் கூறிய பின்னரே எவரும் முதன் முதல் கருத்தில் உன்ன முடிகிறது. இங்கே அழகு மட்டுமன்று எவரும் ஊன்றிக் கவனிக்காத, கண்டுணராத ஓர் ஆழ்ந்த மெய்ம்மை கண்டுணர்ந்து அழகுபட ஓரடியில் வைத்து யாக்கப்பட்டுள்ளது. பெண் தரும் இன்பம் என்பது இங்கே பெண் பெறும் இன்பத்துக்கும் பொருந்துவதே. வள்ளுவர் அவற்றிடையே வேறுபாடு காணவில்லை. இருதிசையும் வேறுபாடற்ற நிலையே தமிழர் இன்பப் பண்பு என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. இதே உண்மை; வருணனை வடிவில் மற்றோர் அரிதினும் அரிய குறட்பாவில் தரப்படுகிறது. ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’ - குறள் 1113 இங்கே ஏழு சீர்களுக்குள் தெய்வக் கவிஞர் தரும் வருணனை வளம், கம்பன் அகலக் கவிதையில் இருபது பாட்டுகளில் அடங்க முடியாத செல்வம் ஆகும். கம்பன் காவியம் முழுவதையுமோ, வேறு தமிழ், பிறமொழிக் காவியம் முழுவதையுமோ கொடுத்துக் கூட விலைக்கு வாங்கிவிடத் தக்க நிறை நய அழகு இந்த ஒரு குறட்பாவில் அமைந்துள்ளது என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. ‘அவள் உடலின் நிறமும் மென்மையும் மாந்தளிரை நினைவூட்டுவன. பற்கள் முத்துகளேதாம் என்று கூறத் தோன்றும். அவளைச் சுற்றி நிலவும் தோற்றமும், நறுமணமும் கள்ளினும் மயக்க வெறியூட்டுவன. அவள் கண்களோ வேல்கள் போலக் காண்பவர் உள்ளம் புகுந்து அவர் உயிரைப்பற்றி ஈர்ப்பதாயிருக்கும். அவள் தோள்களோ மூங்கில் போன்ற பசுமையும் மென்மையும், அழுத்தமும் கொண்டவை.’ குறட்பா தரும் முழுப்பொருள் இது. இதில் உறுப்பு உறுப்பான வருணனை உண்டு. அவையும் ஐம்புலன்களின் நுகர்வு வண்ணங்களாகவே தரப்பட்டுள்ளன. உடல் சார்ந்த பெண்மைக் கவர்ச்சியைக்கூட எந்தக் கவிஞனும் இதைவிட வெறியூட்டும் மொழிகளில் கூறமுடியாது. ஆனால், அதே சமயத்தில் வள்ளுவர் வாய்மொழி நின்று நோக்கின், வள்ளுவக் காதலன் வெறும் காமுகன் என்றோ காம வெறியன் என்றோ இவ் வருணனை மூலம் முடிவு கட்ட எவராலும் முடியாது. பெண் ஒரு போகப்பொருள்; ஆடவர் முதலில் பசப்பி விளையாடிப் பயன் பெற்றுப் பின் போலி வேதாந்தங்களுக்கு இரையாக்கி, பழித்துக் கறிவேப்பிலை யாகக் கசக்கி எறியும் ஒரு பொருள்தான் என்று பிற கவிஞர் பலர் கையாண்ட- கையாளும் உணர்ச்சியின் நிழல்கூட அதில் கிடையாது. மேலும் உயர் சமயவாணர் பலராலும் விளக்க முடியாத இந்த உணர்ச்சியின் சாயலைப் பகட்டாரவாரமற்ற வள்ளுவர் இன்பச் சமயத்தில் காண்டலரிது. பெண்மையை மதிக்கும் இத்தகைய காதல் உணர்ச்சிகள், கவிதை வருணனைகள் மேலை இலக்கியத்தில்கூட எளிதில் கிட்டமாட்டா. கம்பர் கவிதையிலோ, அதற்குப் பிற்பட்ட கவிதையிலோ அது குதிரைக் கொம்பென்றால் மிகையாகாது. ஆனால், திருவள்ளுவர் மரபின் தடமாக, நாம் சங்க இலக்கியக் காலம் முதல் சேக்கிழார் பெரிய புராணக் காலம்வரை தமிழிலக்கியத்தில் இப் பண்பை ஓரளவு கெடா நிலையில் காணலாம். தமிழ்க்கு அடுத்தபடி பாரசீகக் கவிதையிலும், ஓரளவு டால்°டாய் காலத்துக்கு இப்பாற்பட்ட இரஷ்ய, வட ஐரோப்பிய இலக்கியங்களிலும் மட்டுமே பெண்ணினம் இதே அளவில் மனித உணர்ச்சியும், தன் மதிப்பும் கெடாமல் தீட்டப்பட்டுள்ளது. இதில் வியப்புக்கிடம் என்னவென்றால், சங்க கால ஒளவையார் போன்ற பெண்பால் தமிழ்ப்புலவர் நீங்கலாக, மற்றக் கலையுலகப் பெண் எழுத்தாளர்கள் எவருமே பெண் ணினத்தின் இத் தன்மதிப்பு ஓவியம் காணவில்லை. பெண் எழுத்தாளரும் பிற எழுத்தாளர் மரபில் இழைந்து ஆணோக்கு அடைந்து விடுவதையே எங்கும் காண்கிறோம். உடற்காதலைத் துய்த்தபின் அதன் கழிபேருவகை யிலீடுபட்டு, அதனைப் புதுமைச் சுவையுடன் ஆர்வம் கெடாத புதுப் புது உவகைகளுடனும், பண்பார்ந்த அறிவுத் திறங் களுடனும், காதலன் காதலியரை வருணிக்கும் இடங்கள் திருவள்ளுவரின் அறிவும், கவிதை நயமும் ஒருங்கே உச்ச நிலையளாவும் இடங்களாகும். ‘உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று’ - குறள் 1090 காதலின்பம் கள் போன்ற வெறி தருவது. ஆனால், கள் உண்டவர்க்குத் தான் வெறிதரும். காதலோ கண்வழிக் கண்ட உடனேயே அதே மகிழ்ச்சி தருகிறது. இவ்வுவமையின் புதுமை கடந்து மேலும் புதுமை காண்கிறது. மற்றொரு குறள். இத் தடவை அது காதலியின் கூற்றாய் அமைகிறது. ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில், காமத்திற்கு உண்டு!’ - குறள் 1281 `கள்ளை உண்டால்தான் களிப்பு வருகிறதன்றிக் காமம்போல் கண்ட அளவில் களிப்பு வாராது. இது மட்டுமோ? நினைத்த அளவில் மகிழ்ச்சியளிக்கும் மாயம் கள்ளுக்கு ஒரு போதும் கிடையாது. அந்த வியத்தகு ஆற்றல்கூடக் காதலுக்கு இருக்கிறதே!’ என்று விளக்குகிறாள் வள்ளுவக் காதலி. இதே கருத்தை, ‘உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது’ - குறள் 1201 என வேறு நயம்படக் காண்கிறோம். இயற்கையில் ஒளிக்கே கதிர் உண்டு. ஆனால், மேலைக் கவிஞர் மில்டன் தம் ‘துறக்க நீக்கத்தில்’ இருளுக்கும் கதிர்கள் கற்பித்துத் தம் புனைவாற்றலைக் காட்டியுள்ளார். வள்ளுவர் காதலின் ஆற்றலுக்குத் தீயின் ஆற்றலை இரண்டு இடங்களில் ஒப்பிட்டு அதே போன்ற இயற்கை கடந்த அரும் புனைவுகளைப் படைத்துள்ளார். ‘நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?’ - குறள் 1104 ‘இந்தக் காதலியின் காதல் ஆற்றல் தீயின் வெப்புப் போல்தான் சுடுகிறது. ஆனால், இதன் ஆற்றல் மிகைப்படுகிறது. தீயானது அணுக அணுகத்தான் அது வெப்பு மிகுதியாகிச் சுடும். அகன்று செல்லச் செல்ல அந்த வெப்புக் குறைவதற்கே வழி உண்டு. ஆனால், இவள் காதல் ஆற்றலின் தீயோ, அகல அகலத்தான் வெப்பு மிகுதியாகிச் சுடுகிறது! அணுகினாலோ பன்னீரும் சந்தனமும் போல் குளிர்ச்சியாயிருக்கிறது! இது என்ன வியப்பு? என்ன கவிதை நயம்படப் பாராட்டுகிறான் காதலன். ஆனால், இதே கருத்தை வேறு ஓர் உணர்வு படக் காதலியும் ஒரு குறட்பாவில், ‘தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ?’ - குறள் 1159 ‘தொட்டால்தான் தீ சுடும். இந்தக் காதல் தீ விட்டாலும் சுடுகிறதே!’ எனக் குறிக்கிறாள். காதலி கூற்றில் காதல்தான் சுட்டப்படுகிறது. காதலன் குறிக்கப்படவில்லை. கூறுவது பெண்ணாகையால். பெண்மைக்குரித்தான நாணின் உள்ளார்ந்த நய அழகு இந்தக் கவிதையின் ‘பேசாத பேச்சில்’கூட இனிமை பயக்கின்றது. ‘இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’ - குறள் 1091 ‘இவள் பார்வை இருவகைப்பட்டது. ஒன்று எனக்குப் பொதுவே நோய் செய்வது. ஆனால், மற்ற நோக்கு அந் நோய்க்கே மருந்தாக அமைந்து விடுகிறது.’ என்று தலைவன் இன்ப துன்பங்களில் இழைந்து மகிழ்கிறான். அதனையே வியப்பணியாக மற்றோரிடத்தில் குறிக்கிறான். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து’ - குறள் 1102 ‘நோய்க்கு மருந்து வேண்டுமானால், அதற்கு எதிரான பண்புடைய வேறு ஏதேனும் ஒரு பொருளை, எங்காவது, யாரிடமாவது சென்றுதான் தேடித்திரிதல் வேண்டும். ஆனால், இந்த ஆயிழை தரும் நோய்க்கு மருந்து, யாரிடமும் பெற முடியாது; எங்கும் கிடைக்காது. எப்பொருளும் அமையாது. அவள் தந்த நோய்க்கு, மருந்து அவளிடமே உள்ளது. அஃது அவளேதான்’ என்று காதலன் அவள் காதலின் தனி நலம் உணர்ந்து பாராட்டுகிறான். ‘உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ - குறள் 1106 ‘தளர்ந்த உயிரைத் தூண்டிப் புத்துயிர் தோற்றுவிக்கும் பண்பு, அமிழ்தத்துக்கே உண்டு என்பர். பார்வையால் தீண்டியவுடனேயே, அதே ஆற்றலை உடையனவாக விளங்குகின்றன, இனிய மடநோக்குடைய இக் காதலியின் கண்கள். எனவே, ஒரு வேளை அக் கண்கள் அமுது கொண்டு குழைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ அறியேன்!’ காதலர் கூற்றுகளாக இங்ஙனம் நுண்ணறிவின் கொடுமுடியையும், கலையழகின் செவ்வியையும் ஒருங்கே கொண்ட குறட்பாக்கள் எண்ணற்றவை. இவற்றுட் பல காதலின் தலைசிறந்த விளக்கங்களாகவும், நயத்திறமிக்க பாராட்டுரை களாகவும் அமைவன. ‘காதலிக்கப்பட்டவரே தம்மைக் காதலிக்கும் காதலனாகப் பெறும் அரும்பேறு எவர்க்கும் கிட்டக்கூடுமானால், அது கொட்டையில்லாத இனிய கனிபோல முழுவதும் எளிய இன்சுவையுடையது’ - குறள் 1191. ‘காதல் இருபுறமும் ஒத்திருந்தால் அஃது இருபுறமுமொத்த பளுவுடைய தூக்குக் காவடி போல இனிய வாய்ப்புடையது. அஃது ஒரு புற மட்டுமிருந்தால், குடைமறிக்கும் காவடி போன்றதாகத் துன்பம் தரும்.’- குறள் 1196. காதலித்தவர்க்குக் காதலர் காதலையேதான் கைம்மாறாகத் தரமுடியும். வேறு எதுவும் தரமுடியாது. அக் காதல் தாராவிட்டால் வேறு என்ன தந்தாலும் ஒரு சிறிதும் பயன் இல்லை - குறள் 1195. ‘காதலித்தவர் பெறும் காதல், வாழும் உயிர்கட்கு வானமழை போன்ற இன்றியமையா இன்னலம் ஆகும்.’ - குறள் 1192. ‘காதலித்தவர் தோள் மீது சாய்ந்து உறங்கும் இன்பத்தை விடத் துறக்க இன்பம் என்று கூறுகிறார்களே அதுகூடப் பெரிதாகாது!’ -குறள் 1103. ‘காதல், மலரைவிட மெல்லிது. குறித்த பருவத்தில் மட்டும் மலர்ந்து மணம் கமழ்வது. பக்குவ நிலை அறிந்தே அதனைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் பெற்றாரே அதன் அரும் பேறு பெற்றாராவர். அது மிகவும் அரிதாதலால், அதைப் பெறும் பேறு பெற்றோர் மிகச் சிலரேயாவர்.’ - குறள் 1289. காதலுக்கும், கலைக்கும் இடையேயுள்ள தொடர்பு உலகம் அறிந்தது. இரண்டும் உணர்ச்சி வசப்பட்டவை. கலையைப் படைப்பவனுக்கும், அதன் சுவையை நுகர்பவனுக்கும் உரிய தூண்டுதலும், அவர்களிடையேயுள்ள தொடர்பும் - இணைவும் உணர்ச்சிதாம். உணர்ச்சிகளுள் தலைசிறந்த உணர்ச்சி என்ற வகையில் காதல் அதில் தலைப்பெரும் பேரிடம் வகிக்கிறது. ஆனால், காதலுக்கும், கலைக்கும் அறிவுடன் தொடர்பு உண்டு என்பதோ, காதல், கலை, அறிவுத்துறை ஆகிய மூன்றுமே, நன்மை, தீமை, உணர்வு அதாவது அறத்துடன் உறவுடையவை என்பதோ எவரும் உளம் கொளாக் கருத்து ஆகும். அவ்வாறு உளங் கொண்டவர், வகுத்தமைத்தவர் திருவள்ளுவர் ஒருவரே. அவர் காதற் சித்திரத்தை மற்றக் கவிஞர், கலைஞர், எழுத்தாளர் சித்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகத் தெளிவாக விளங்கும். காதல், உணர்ச்சிகளுள் தலை சிறந்த உணர்ச்சி மட்டுமன்று; அதுவே உணர்ச்சிகளின் தாய். அதே சமயம் அறத்தின் தந்தையும், அறிவின் ஆசானும் அதுவன்றி வேறன்று. இயக்கும் ஆற்றல்களில் தலை சிறந்து இயங்கும் ஆற்றலாகிய இறையும் அதுவே. காதலின் முழுநிறைப் பண்பை நாம் காதல் என்று கூறுவ தில்லை. பண்பு என்றே கூறுகிறோம். அது பெண்ணினத்தில் இயல்பாகப் படிந்து பெண்மை என்ற பெயரால் இயல்கின்றது. ஆயினும், உணர்ச்சி என்ற முறையில் அஃது ஆடவரிடமிருந்தே பிறக்கின்றது. பெண்மை மீது பரந்து ஓடும் ஆணின் உருவற்ற காதல், பெண்மையின் பண்புகளைக் கரையாகக் கொண்டு பல உருவங்கள் கொள்கின்றது. பெண்ணினத்துக்குரிய உருவுடைய, உறுதியுடைய காதலே கற்பு. அக் கற்பு நெறியளாவி நின்று காதல் குடும்பமாக மாறுகிறது. அந் நிலையிலே ஆடவர் பெண்டிரிடையே அஃது இடை நின்று ஓயாது ஊடாடி, அலை எதிர் அலையாக வளர்ந்து விசை பெருக்கி, பிள்ளைகள் மீது படர்ந்து, உறவினர், சமுதாயம், இனம், உலகம் ஆகிய பலவகைப் பரப்புகள் அளாவி, முடிவற்ற கால இட எல்லைகளில் விரிவுறுகின்றது. நட்பு, பாசம், பரிவு, இரக்கம், அருள், உலகப் பற்று, இனப் பற்று, இறைப் பற்று முதலிய பல்வகை உணர்ச்சிகள் காதலின் மென்மை உருவாக்கிய அன்பின் குழந்தைகளே. இவற்றுள் உலகப் பற்று, இனப் பற்று, இறைப் பற்று ஆகிய மூன்று திறங்களும் இன உணர்வு தூண்டிக் கலை வளர்க்கின்றன. அவையே நேர்மை, ஒப்புரவு, சரிசமநிலை, ஒற்றுமை, ஒத்துழைப்பு, தன்மறுப்பு, விட்டுக்கொடுப்பு ஆகிய திறங்களை உருவாக்கி, அன்பு, அறம் பேணுகின்றன. அவ்விரண்டின் வழி தனி உயிர்களைச் செலுத்தி, அவையே அறிவாகவும் இயங்குகின்றன. இவ்வறிவு தனிமனிதனைச் சமுதாய நோக்கிலும், சமுதாயத்தை இன நோக்கிலும், இனத்தை இறைமை நோக்கிலும் ஊக்கு கின்றது. இதுவே திருவள்ளுவர் குறிக்கொண்ட காதலாகும். இக் காரணத்தினால்தான் உலகக் கவிஞர்களிடையே அவர் ஒருவர் வகையில் மட்டும் காதற் சித்திரம் இவ்வெல்லாப் பண்புகளையும், அறிவுப் பண்பையும், அறப் பண்பையும், கலைப் பண்பையும் உட்கொண்டு அவை கடந்து இயங்குவது காண்கிறோம். வள்ளுவரின் காதல் தலைவன், தலைவி கூற்றுகளை உற்று நோக்கி ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டிலுமே பொதுவாக அறிவுப் பண்பையும், இன உணர்வையும் காணக் கூடுமானாலும், இரண்டு பண்புகளுமே தலைவி கூற்றில்தான் சிறக்க அமைகின்றன என்பது தெளிவு. காதலில் ஆணின் நிலை, தனியுயிரின் நிலை - மாணவன் நிலை மட்டுமே. பெண்டிர் நிலையே, இனமுதல் அதாவது இறைநிலை-ஆசான் நிலை ஆகும். ஆயினும், பொதுவாக மாணவரிடம் காணப்படும் பணிவும், ஆசானிடம் காணப்படும் தன்முனைப்பும் மட்டும் இங்கே ஆண், பெண்பாலாரிடம் தலைமாறி விடுகின்றன. இரு பால்களின் தொடர்பால் உலகெங்கும் காணப்படுகிற - ஆனால் அறிஞர், கலைஞர்களால் முற்றிலும் சரிவர உணரப்படாத மாயப் புதிர் இதுவே. நிறையறிவும் ஆற்றலும் வாய்ந்த பெண், தன் அறிவும் ஆற்றலும் தனக்கே தோன்றாத நிலையில், பணிவுப் பண்பை மேற்கொள்கிறாள். தன்முனைப்பற்ற இந்த நிறை நிலையையே தமிழர் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு என்ற நாற் குணங்களாக வகுத்துப் பேணினர். இப் பண்புகள் மூலம் பெண், தான் அறிவதை ஆண் அறிவதாக உணர்ந்து அவனை அறிய வைத்து, அவன் வழி அறிவதாகவே எண்ணி, அவனை மேன்மேலும் அறிவில் தூண்டி இயக்குகிறாள். தன் உணர்ச்சிகளை அவன் உணர்ச்சிகளாக்கி, அவனை இன்ப துன்பங்களில் தோய்விக் கிறாள். மணிப்பொறியில் தான் அசையாததுபோல் காணப்பட்டு, புற உறுப்புகளை விரைந்தோட வைக்கும் விசை முதல் (அயin ளயீசைiபே) போல, அவள் தன் அடங்கிய கருவியக்கத்தால் அவனை மேன்மேலும் விசைபடச் செயலில் இயக்கியமைக்கிறாள். ஆண், பெண்பாலாரின் தொடர்பில் இயல்பாகக் காணப்படும் இந்தப் புதிர், ஆணுக்குப் பெண் அடிமை என்று கூறும் வடபுல அறிஞரும், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று பாடும் மேல் புல அறிஞரும், ஒரு சிறிதும் காணாத கண்டு தெளியாத ஒன்று ஆகும். ஏனெனில், ஆணுக்குப் பெண் அடிமை என்று கூறும் வட புலத்தார், அதே சமயம் ‘பெண்மாயை’ பற்றிப் பாடத் தவறுவதில்லை. ஆற்றல், அறிவு, செல்வம் ஆகிய மூன்று பண்புகளுக்கும், மலைமகள், கலைமகள், திருமகள் என்ற பெண் தெய்வங்களையே உரியவராகக் கூறப்படும் மரபையும் தம் கோட்பாட்டுக்கு முரண்பட்டதென்று காணாமல், அமைந்த ஆராய்வின்றி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுபோலவே இயற்கை யாற்றல்களுக்கெல்லாம் காரண காரியம் துருவி ஆராய்ந்து தனி மனிதன், சமுதாய வாழ்க்கைப் பண்புகளையும், உளப் பண்புகளையும் அலசிக் காணும் ஆற்றல் படைத்தவர் களான மேல் புலத்தவர்களும் ஆண், பெண் சமத்துவக் குறிக்கோளை மேற்கொண்டுள்ளனராயினும், அதற்கு மாறான இயற்கை, சமுதாயச் சூழல்களையும், ஆண், பெண்பாலாரின் இயற்கை வேறுபாடுகளையும் விளக்க முடியாதவர்களாகவே அமைகின்றனர். இவ்விரண்டின் பின்னணியுடன் வைத்து ஒப்பிட்டு நோக்க, வள்ளுவர் கருத்தின் தெளிவும், உயர்வும் போற்றுதற்குரியன ஆகும். வள்ளுவர் கருத்துப்படி ஆண், பெண்பாலார் அடிப்படைச் சமத்துவ முடையவராயினும், இருவரும் இருவேறு வகைப்பட்ட தனி மாறுபாடுகளும் உடையவராவர். இன எல்லையில் இனக் காவலராகி, இன மரபைப் பேணி, வரன் முறையாக வந்த இனப் பண்புகளைத் தம் தலைமுறைக்களித்து, தம் தலைமுறைகளையும், வருங்காலத் தலைமுறைகளையும் ஊக்கும் மிகப் பெரும்பொறுப்பு பெண்களுடையதே. இதில் ஆணின் பங்கு தம் தலைமுறையின் புதுப்பண்பு காண்பது ஒன்றேயாகும். இத் துறையில் பெண்ணை இனத்தின் முதல் என்றும், ஆணை அதன் வட்டி என்றும் கூறலாம். ஒவ்வொரு தலைமுறையிலும் எழும் வட்டி, இன முதலுடனே அடுத்த தலைமுறையில் சேர்ந்து விடுவதால், இன மரபு என்பது பெரும்பாலும் பெண்டிர் மரபு மட்டுமே. ஆண் அதன் தற்காலிகத் துணைவன், செயலாளன் அல்லது தொழிலாளனாகவே இயங்குகிறான். பெண்ணை முதலாளி இனமென்றும், ஆணைத் தொழிலாளி இனமென்றும் அறிஞர் பெர்னாட்ஷா கருதியது இவ்வகையில் தவறு படுவதல்ல. ஆனால், முதலாளித்துவ நாகரிகத்தில், தொழிலாளியின் உழைப்பின் பயனை முதலாளி சுரண்டுவதுபோலப் பெண் ஆணின் உழைப்பைச் சுரண்டுவதில்லை. ஏனெனில், அவள் தானே ஆணுக்கு உடைமைப்பட்டு, ஆணுக்காகவே தன்னை மறந்து வாழ்கிறாள். இனத்தின் உறுப்புகளாகிய குடும்பம், சமுதாயம் ஆகிய இரண்டில், குடும்பமே சிற்றுறுப்பு. பெண்டிர் இன வாழ்வில் வகிக்கும் இடத்தையே இதிலும் வகிக்கின்றனர். குடும்ப எல்லையிலே வீட்டினுள் பெண்ணே போட்டியற்ற ஆட்சி செலுத்துகிறாள். ஆனால், குடும்பத்தையும் இனத்தையும் இணைக்கும் சமுதாய எல்லையில் ஆடவனே பெரும்பங்கு கொள்கிறான். குடும்பத்தைச் சமுதாயத் துடனும் சமுதாயத்தை இனத்துடனும் இணைத்து இருவகையிலும் செயலாற்றும் கூறும் அவனே. குடும்பத்திலும், இனத்திலும் பெண்; சமுதாயத்திலும் சமுதாயத்துடன் குடும்பம், இனம் இணைப்பிலும் ஆண், இப்பாகுபாடு ஆண், பெண் பாலார்க்குத் தனித் தனித் துறையில் சமத்துவம் அளிக்காவிட்டாலும், மொத்தத்தில் ஏறத்தாழ சமநிலை அளிக்கிறது. ஆயினும், அச் சமத்துவத்திலும் பெண் உயிர்ப் பகுதியாகவும், ஆடவன் உடற் பகுதியாகவும் இயங்கு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ - குறள் 56 என்று பெண்டிர்க்குத் திருவள்ளுவர் கிட்டத்தட்ட வாழ்வின் முப்பொறுப்பும் உரிமையும் அளித்ததன் காரணம் இதுவே. ஆனால், சமுதாயப் பெண் பண்புடையவளாதலால் தன் அறிவை அடக்கி முடக்கி ‘மடம்’ ஆக்கி, தன் முனைப்பை உள் ஈர்த்து ‘நாணம்’ ஆக்கி, தன் உள்ளுறுதியைப் பொதுவாக மறந்து ‘அச்சம்’ ஆக்கி, தன் செயல் திறத்தைச் சேமித்துப் ‘பயிர்ப்பு’ ஆக்கிக் கொள்பவளாதலால் தான் எதுவும் செய்யாமல், இயக்காமல் செய்விக்கும், இயக்குவிக்கும் இயல்புடையவளாய் விடுகிறாள். இதனால், இயல்பாக அவள் பங்கு உயிர்நிலையா னாலும், உயிர் புறந்தோன்றாததுபோல அது புறந் தோன்றுவதில்லை. பெண்டிர், ஆடவர் கண்களே தம் கண்களாகக் கொண்டு, கண்டு, அவர் அறிவே தம் அறிவாகக் கொண்டு அறிந்து, அவர் செயலாற்றலே தம் செயலாற்றலாகக் கொண்டு செயலாற்றிவிடுகின்றனர். எனவேதான், உண்மையில் மனித இனம் என்பது பெண்டிரினமே யானாலும், அஃது ஆடவரினமாகவே இயங்க முடிகிறது. ஆண், பெண் வேறுபாடுகளுள் பெரும்பாலானவை பெண்டிரின் இன முதற் பண்பின் விளைவுகளேயாகும். பெண்டிர் அறிவு புறந் தோன்றாததாயினும், உடல் தோற்றத்தில் மெல்லியதாயினும், இரண்டும் ஆண் கடந்து வேகமாக வளர்கின்றன என்பது உற்றுணர்வார்க்கு எளிதில் புலனாகும். பருவ முதிர்ச்சி பெண்டிர் வகையில் 12உம், 16மாயிருக்க, ஆடவர் வகையில் அது 16உம் 21மாக வேறுபடுவதன் காரணம் இதுவே. தவிர, குறைந்தது ஏழாண்டு வயதிளமையுடைய பெண்ணுடனேயே ஆடவன் தோழமை கொள்ள முடிகிறது என்பதும் இதன் இன்றியமையா விளைவேயாகும். தம்மினும் ஏழாண்டுகள் அல்லது அதற்கு மேல் இளமையுடைய தம் பாலாருடன் ஓர் ஆடவனோ, ஒரு பெண்ணோ இவ்வாறு தோழமை கொள்ள முடியாது என்று கூறத் தேவையில்லை. இது மட்டுமன்று, ஆடவர் வளர்ச்சி என்பது பருவ முதிர்ச்சியின் பின் ஒரே திசை மாறா வளர்ச்சியாகும். ஏனெனில், இன வாழ்வில் தம் தலைமுறையின் படி வந்தவுடன் அவர்கள் இனவாழ்வின் பங்கு முடிந்து விடுகிறது. முதுமை ஒன்றுதான் அதன் தளர்ச்சியாய் அமைகிறது. ஆனால் பெண்டிர் வகையில் பருவ முதிர்ச்சிக்குப் பின்னும் வளர்ச்சிப் படிகள் முடிவதில்லை. ஆடவன் பிள்ளைப் பேற்றைத் தூண்டுகிறான்; பெறுவதில்லை. பெண்ணோ மறு தலைமுறை வாழ்வை ஈன்றெடுக்கிறாள். மறு தலைமுறை உடலைப் பாலூட்டிப் பேணுபவளும் அவளே. அதற்கு அறிவூட்டும் வேலையில் ஆடவர் உதவக் கூடுமானாலும், அப் பொறுப்பு முற்றிலும் பெண்ணினுடையதே. இதன் விரிந்த விளைவே இருபாலாரின் இளமை முதுமை வேறுபாடுகளில் பெரும் புதிர்களை உண்டு பண்ணுகின்றது. பிள்ளைப் பேற்றுப் பருவம், உடல் பேணும் பருவம் முடிந்த பின், பிள்ளைகள் அறிவை ஊட்டி வளர்க்கும் தாய்மைப் பருவத்தை-இளமை கடந்த பருவத்தைப் பெண் அடைகிறாள். ஆடவனுக்கும் மனித மொழி இத்தகைய ஒரு தந்தைப் பருவத்தைக் கற்பித்தாலும், உண்மையில் அவனுக்குத் தந்தைப் பருவம் என்றொரு பருவம் கிடையாது. ஏனெனில், உடல் தளரும் வரை பிள்ளைப் பேற்றைத் தூண்டுவது தவிர, அவனுக்கு இன வாழ்வில் எந்தப் பங்கும் கிடையாது. அவன் முதுமை, இளமை கடந்த முதுமையன்று. வலி தளர்ந்த முதுமை மட்டுமேயாகும். முதிய ஆடவன் ஓர் இள நங்கையைக் காதலித்து, அவளுடன் மணத் தொடர்பு கொண்டு வாழ முடிகிறது. முதிய பெண்டிர் வகையில் இது நம்மிடையே காணப்படாத ஒன்று . இதற்கு விளக்கம் மேற்கூறப்பட்ட வள்ளுவ அடிப்படையான மெய்ம்மையேயாகும். பெண் தாய்மைப் பருவம் அடைந்த பின், மீண்டும் பிள்ளைப் பேற்றுக்குரிய மணப்பருவம் அடைய முடியாது. ஆனால் ஆண் என்றும் தந்தைப் பருவத்தை எட்டாதவனாதலால், கடைசிவரை பிள்ளைப் பேற்றுப் பருவத்தி லிருந்து, அது தளர்ந்த பின் வற்றல் முதுமையை மட்டுமே அடைகிறான். பெண்ணுக்கு இளமையும், தாய்மையும் வேறு வேறு பருவங்கள் என்பதையும், ஆணுக்கு இரண்டும் வளர்ச்சி தளர்ச்சி என்ற வேறுபாடன்றி, வேறு மாறுபாடுடையன அல்ல என்பதையும் இங்கே காணலாம். கருவாகப் பத்து மாதம் வயிற்றில், பால்குடி குழந்தையாக மூன்று முதல் ஐந்தாண்டுவரை மடியில், ஒவ்வொரு பேறு காலமடுத்த வளர்ப்புப் பருவம் கடந்த பின் மறு இளமை, பருவம் கடந்தபின் அறிவுத் தாய்மை, அது கடந்த பின் தளர்ச்சியிலும் இன வருங்காலத்துக்குரிய பண்புத் தாய்மை என்று இவ்வாறு இயற்கை யன்னையின் மறு படிகளாகப் பெண்பாலார் கொள்ளும் இனத் தாய்மைப் படிகள் பல. இவை ஆண் பாலார்க்கு இல்லாத பெண்டிர்ச் சிறப்பு. ஆடவரின் அறிவற்ற, அன்பற்ற, பண்பற்ற கண்களுடன் வாழ்க்கையைக் காணும் கீழ்த்திசை, மேல்திசை மக்களும், அறிஞர் பலரும் இயல்பான பெண்டிரின் சரிசமக் கேடான வாய்ப்புக் கேடுகள் என்று கருதுபவை, உண்மையில் இன மரபு கண்டவர்கட்குப் பெண்டிரின் குறைபாடுகளேயல்ல; அவை உண்மையில் அவர்களின் தனிப்பெரும் நிறைவுகளேயாகும்! இந்த ஆண், பெண் வேறுபாடுகளை வள்ளுவர் காட்டிச் செல்லும் இடங்கள் பல. பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களில் காதல் பெறாதவர், அல்லது பெறும் வாய்ப்புக் காணாதவர் அதற்காக உயிர் துறக்க முனைவதுண்டு. அவ்வகையில் பின்பற்றும் முறையே மடல் ஏறுதல். வாள்போல் அறுக்கும் கருக்குடைய பனை மட்டை களால் இயன்ற குதிரையில் ஏறிஇருந்து மாள்வது; அல்லது விருப்பம் ஈடேறும் வரை அத் துயர் ஏற்பதே அம் முறையின் செயலாறு. இவ்வுரிமை ஆடவர்க்கு உண்டு. பெண்டிர்க்கு இல்லை. இதனைக் குறிக்கும் குறட்பா அது காரணமாகப் பெண்ணினம் புகழவும் அதனை ஒரு வாய்ப்பாக்கியுள்ளது. ‘கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்’ - குறள்1137 பெண் தன் காதலைக் காதலனிடம்கூட வெளிப்படக் கூற முடியாமல், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் வேலிகள் அவளைத் தடை செய்கின்றன. காதலன் தன்னை வந்தடுத்தாலல்லாமல், அவள் அவனை அணுக முடியாது. பிரிவுற்ற காதலன் அவளைத் தேடிவரும் வரை பெண் வாடி வதங்கலாமேயன்றி அவனைச் சென்று காணமுடியாது. அவனாகக் காதலித் தாலன்றி அவள் அவன் காதலை இயக்கவும் முடியாது. ஆடவனைவிட அவள் தன் களவுக் காதலைப் புறம் தெரியாவகை அடக்குதல் வேண்டும். ஊரின் அலர் தூற்றலும், சுற்றத்தினர் கண்டனக் கணைகளும் அவளை நோக்கியே எய்யப் படும். அவள் குடியின் மான உணர்ச்சி அவளையே சாரும். காதலனுக்கு இஃது அவ்வளவாகக் கிடையாது. இந்த நிலையில் பெண்ணின் காதலும் எளிதில் புறம்போகும் இடமின்றிப் பெருகி உள்ளலை பாய்ந்து கடலாகக் குமுறுகின்றது. ஆனால், இந்த நிலையிலும் காதலின் தடைகளை மீற, அல்லது கடக்க ஆடவனுக்கு ஒரு வழி உண்டு. அதுவே மடலேறுதல். பெண்டிர்க்கு அதுகூடக் கிடையாது. அவள் மடலேறமாட்டாள். ‘காதல், காதல், காதல்! காதல் போயின், காதல் போயின் சாதல், சாதல், சாதல்!’ என்ற பாரதியார் பாடல் அவள் வகையில் ‘உயிர்விடுதல்’ என்ற எளிய வழி காட்டவில்லை. ‘உயிர் அழிய விடல்’ என்ற கோரப்பொருளே உடையது. இந்த நிலையில் காதல் பயணம் ஆற்றும் பெருமையுடைய இனம் பெண்ணினம் எனக் கட்டுரைக்கிறார் வள்ளுவர். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்’ - குறள்54 அறத்துப் பாலின் இந்தக் குறட்பாவுக்கு, மேற்குறிப்பிட்ட இன்பத்துப் பாலின் குறட்பா ஓர் உரை விளக்கமாக அமைகிறது. கற்பின் பெருந்திண்மை—-திண்மை என்பது கைக்கிளைக் காதலிலும், சமநிலையற்ற காதலிலும் மடலேறாமலே தன் மனங் கொண்ட காதலுறுதி வழியே நிற்றல் என்பதாகும், ‘சொற் காத்து’ என்று திருவள்ளுவர் பெண்டிர் கடமை சுட்டிய இடத்தில் கூறுவதும், கணவன் சொல்லை அல்லது ஆணையைக் காத்து என்று பொருள் படுவதன்று. பெண்ணினத்துக்கு, பெண்குடிக்கு உரிய மரபுப் புகழ், மானம், மதிப்புக்காத்து என்பதே அதன் பொருள் ஆகும். பெண்மையைப் பற்றிய வள்ளுவர் கருத்துகள் அறத்துப் பாலிலும், இன்பத்துப் பாலிலும் மட்டுமன்றி, பொருட்பாலிலும் ஓரிரு அதிகாரங்களில் இடம் பெறுகிறது. அவையே பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் என்பன. தற்காலச் சீர்திருத்த அறிஞர் பலர்க்கும், முற்போக்கெண்ணம் கொண்ட புலவர், ஆராய்ச்சித் துறையாளர்க்கும் இடர்ப்பாடு தரும் அதிகாரங்கள் இவை. பெண்ணுக்கு முழு உயர்வும், பொறுப்புந் தந்த வள்ளுவர், இன்பப் பாலில் பிரிவுப் பகுதிகளில் பெண்மையின் அறிவு நயம், இன நயம், நுணுகி நுணுகிக் கண்டுணர்ந்த வள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்ற அதிகாரத்தில் ஆடவன் பெண் வழி நிற்கலாகாது என்று கூறுவது வியத்தற்குரியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இங்கே வள்ளுவர் பொதுமகளிர் அல்லது வரைவின் மகளிரைக் கூறினார் என்றுகூடக் கொள்ளுதற்கில்லை. அஃது அடுத்த அதிகாரத்துக் குரியது. இவ்வதிகாரத்தில் பெண்ணைக் குறிக்கும் ‘மனை, இல்லாள், மனையாள், நன்னுதலாள்’ என்ற சொற்கள் ஐயத்துக்கிடமின்றி, வாழ்க்கைத் துணையையே குறித்து நிற்கின்றன என்று ஒத்துக்கொண்டே யாதல்வேண்டும். ‘ஆண், பெண்ணின் சொற்கேட்டு நடப்பது தவறு’ என்ற பொருளையே மேற்கொண்டு, முற்போக்காளர்களை ஓரளவு மறுத்து அதற்குப் பழைமைப் பொருள் காண விழைந்துள்ளார் முனைவர். மு. வரதராசனார் முதலிய பேராசிரியர்கள். ஆனால், பெண்ணின் அறிவுமீது, பண்பு மீது இது சுமத்தும் கறையை அவராலும் முற்றிலும் மறந்துவிட முடியவில்லை. ஏனெனில், பெண்ணுக்கு வள்ளுவர் அளித்துள்ள மிக உயர் மதிப்புடன் இதை இசைவித்துக் காண முடியவில்லை. ஆண், பெண் இருவருமே தமிழில் சரி ஒப்பாகத் துணைவர் என்றும், சரி ஒப்பான உரிமையாட்சியுடைய தலைவர் என்றும் வழங்கப்படுகின்றனர். ஆனால், குடும்பம் என்ற ஒரே சிறு எல்லையில் இருவர் எப்படிச் சரி சம ஆட்சி செலுத்துவது? ஒருவர் இயக்கி மற்றவர் செயலாற்றினாலும், ஒருவர் அரசர், மற்றவர்அமைச்சர் என்ற நிலை பெறலாகுமேயன்றி, இருவரும் உரிமை ஒத்த தலைவராவது எங்ஙனம்? பெண்வழிச் சேறல் அதிகாரத்தின் திறவு இவற்றின் விடையிலிருந்து ஓரளவு பெறப்படுதல் வேண்டும். தமிழர் மரபில் ‘இல்லாள், மனைவி’ என்ற பெயர் பெண்ணுக்கே உரியன. ஆணுக்கு இது போன்ற பெயர்கள் இல்லை. ஆகவே, குடும்ப ஆட்சி பெண்ணாட்சியே என்பதில் ஐயமில்லை. பெண் இயக்குபவளாகவே உள்ளாள். ஆயினும், அவள் பண்பு, இங்கும் அவள் உரிமை ஆட்சியை அன்பாட்சி யாக்கி, அவள் உரிமைகளை மறைக்கிறது. ஆனால், சமுதாயத்தில் அவள் முற்றிலும் இயக்குவிப்பவள் மட்டுமே. சமுதாய ஆட்சி பெண்ணால் இயக்குவிக்கப் பட்டாலும், ஆணே உரிமை ஆட்சி செலுத்துகிறான். இவ் வகையில்தான் இருவரும் தலைவர் ஆகின்றனர். அக ஆட்சி ஒருவரிடத்தும் புற ஆட்சி மற்றவரிடத்தும் அமைகிறது. குடும்பமும், சமுதாயமும் ஒன்றுடனொன்று பிணைக்கப் பட்ட நலன் உடையன. எனவே, குடும்ப ஆட்சி செய்யும் பெண், குடும்ப எல்லையில், சமுதாயத்தின் சார்பில் கணவனின் பேராள் (பிரதிநிதி) ஆகிறாள். இது போலவே சமுதாயத்தில் செயலுறுப்பினனான ஆண் அதில் தன் சார்பில் உரிமை செலுத்துவதன்றித் தன் மனைவி சார்பிலும் பேராள் ஆக இருந்து செயலாற்ற வேண்டியவனாகிறான். குடும்பத்தில் மனைவி சமுதாயத்துக்குப் பொறுப்புடைய பேராள் என்றால்; சமுதாயத்தில் கணவன் குடும்பத்துக்குப் பொறுப்புடைய பேராள் ஆகிறான். காதல், குடும்பத்திலேயே முழு வளர்ச்சி பெற்று ஏறத்தாழ முழு நிறை வடிவில் ஆட்சி செய்கிறது. ஆனால், சமுதாயத்திலோ, இனத்திலோ காதலின் வழி வந்த பண்புகள் குறையாட்சியே செலுத்துகின்றன. இதனால் குடும்பத் தலைவியும், குடும்பத்தில் சமுதாயப் பேராளுமான பெண் காதலடிப்படையாகவே, காதலியாக, மனைவி அல்லது இல்லாளாக இருந்து கொண்டே எல்லாப் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட முடிகிறது. ஆனால், காதல் நிறைவுறப் பரவாத சமுதாயத்தில் தன்போன்ற பல குடும்பப் பேராள்களிடையே ஒருவனாக நின்று, செயலாட்சியில் பங்கும், குடும்பப் பேராள் என்ற முறையில் குடும்பப் பொறுப்பும் நிறைவேற்ற வேண்டிய ஆண், முற்றிலும் காதலனாக நின்று எல்லாப் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட முடியாது. ஆகவே, அவன் குடும்ப எல்லையில் மட்டும் காதலனாகவும், அதற்கு வெளியே சமுதாய மனிதன் அல்லது உழைப்பாளி, அரசியல்வாதி, வீரன் முதலிய பல்வேறு பண்பு களுடையவனாகவும் நின்று செயலாற்ற வேண்டியவனாகிறான். ஆண், பெண் இருவர் காதல் வாழ்வுகளில் உள்ள இந்த வேறுபாட்டை நாம் உலகெங்கணும் நாகரிக சமுதாயங்களில் காணலாம். ஆனால், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மட்டுமே இவ் வேறுபாட்டினை அழகிய வாழ்க்கைச் சித்திரமாகவும், திருக்குறளிலேயே அதன் முழு விளக்கத்தையும் காணலாம். அந்த விளக்கமே பெண்வழிச் சேறல் என்ற பொருட்பாலின் அதிகாரம். தலைவியின் காதல் வாழ்வில் கூடலுக்கெதிராக ஊடல் மட்டுமன்றிப் பிரிவும் பேரிடம் பெறுகிறது. ஏனெனில், கூடியிருக்கும் காலத்தில் காதல் எவ்வளவு அவளை இன்பத்தில் மிதந்து தன்னை மறக்க வைக்கிறதோ, அதே அளவு பிரிந்திருக்கும் காலத்தில் காதல் அவளைத் துன்பத்தில் திளைக்க வைத்துத் தன்னையுந் தன் கணவனையும் பற்றிப் பன்மடங்கு மிகுதியாகச் சிந்தித்துச் சிந்தித்து அழிய வைக்கிறது. காதல் வாழ்வின் இப் பாகுபாடு ஆணின் வாழ்க்கையில் மிகமிகக் குறைவே என்பது தெளிவு. காதலன் அல்லது கணவன் வரைவுக்காக (மண ஏற்பாட்டுக்காக) அல்லது உயர்தரக் (கல்லூரிப் பல்கலைக் கழகக்) கல்விக்காக, பொருள் ஈட்டுவதற்காக அல்லது அரசியல் (உத்தியோகக்) கடமைகட்காகப் பிரிந்து செல்கிறான். தலைவியை அவன் எளிதில் மறப்பதில்லை. போகும் வழியில் பல காட்சிகள் அவனுக்குச் சிறிது கவலையூட்டலாம். வேலை முடிந்த பின் காதலி பற்றிய ஆர்வம் அவனை விரைந்து திரும்பும்படி தூண்டலாம். வரும் வழியில் அவளைப் பற்றி அவன் பிதற்றலாம். ஆனால், பிரிவின் பெரும்பகுதியில் வினை (செயல்) அவன் முழுநிறை கவனத்தைக் கவர்கிறது. கவர்தல் வேண்டும். காதல் வாழ்விலேகூடத் தலைவனுக்கு ஓர் ஆண்மை கற்பிக்கப்படும் இடம் இதுவே. அவன், பெண்ணைப்போலக் காதலில் பிறந்து, காதலில் மிதந்து, காதலாகவே இருப்பவன் அல்லன். அத் தகையவன் ஆண் ஆகமாட்டான். காதல் அவனை இயக்குகிறது. அவன் பெண்ணைப் போலக் காதலாக இயங்க மாட்டான்; இயங்கக்கூடாது. காதலில் ஆழ்ந்து அழகுக் கற்பனைகளில் காலம் கழிக்கும் கவிஞர்களும், சிந்தனையில் சிக்கிக் காரண காரிய உலகில் திரியும் அறிஞர்களும், இன உணர்வில் ஆழ்ந்து அதற்காக வாழும் அறவோர், அந்தணர், அருளாளர் களும், பெரும்பாலும் ஆடவர்களாகத் தோற்றத்தால் அமைந்தாலும், உண்மையில் குடும்ப எல்லைக்கு வெளியே செயலாற்றும் பெண்மையின் கூறுகளே யாவர். ஆணுக்குத்தான் சமுதாயம். பெண் ஆணின் இன்ப வாழ்க்கைக்குரிய ஓர் உறுப்பு மட்டுமே என்று கூறுவோரும், சமுதாயத்திலே ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு கற்பிக்கக் கூடாதென்போரும், இன்றும், என்றும் உலகில் உண்டு. ஆனால், பண்டைத் தமிழரும் திருவள்ளுவரும் இவ்விரு திறத்தவரையும் கடந்த ஆண்மை, பெண்மைத் தத்துவம் கண்டவர்கள். அவர்கள் இலக்கிய அறிவுக் கண்ணால் கண்டது; அனுபவத்தில் நாம் என்றும் காணக் கூடியதே. காதலிலேயே அழுந்தி வழியும் ஆணை-கவிஞனை, அறிஞனை, அறவோனைக்கூட—எந்தப் பெண்ணும் காதற் களவின் தலைவனாக ஏற்றதில்லை. தாய்கூட இத்தகைய பிள்ளையை, தங்கைகூட இத்தகைய அண்ணனை, தோழியர்கூட இத்தகைய நண்பனை விரும்ப மாட்டார்கள். அவனை ஆணுலகம் பெரிதும் விரும்பலாம்; ஆண், பெண் இருபாலாரும் தந்தையாக, தெய்வமாகப் போற்றலாம். ஆனால், இது பாலினங் கடந்த இனப் பாசமேயல்லது வேறன்று. ‘மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று’ - குறள் 1112 வள்ளுவக் காதலன் தன் காதலியின் கண்கள் மலர்கள் போன்ற கவர்ச்சியுடையன என்று மகிழ்கிறான் முதலில். அடுத்த கணம் உவகை அவனை வருத்துகிறது. ‘மலர் பலர் காணும் பூ ஆயிற்றே! இது நான் மட்டுமே காணும் அழகு நலனுட்கொண்ட கண் அல்லவோ?’ என்று கவல்கின்றான். பெண் பற்றிய ஆணின் காதற் கற்பனை போன்றதன்று ஆண்கள் பற்றிய பெண்களின் காதற் கற்பனை. அவள் விரும்புவது ஆற்றலுடைய உள்ளத்தை. அது மட்டுமா? ஆற்றலுடைய அந்த உள்ளத்திலும் அவள் முழு நிறை உரிமையை, முழுநிறை ஆட்சியை நாடுகிறாள். அந்த உள்ளமும் தன்னை மட்டுமன்று, பெண்மையையே ஈர்க்கத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுவும் பெண் தான் வலிந்து சென்று பெற்றதாய் இருந்தால் அவளுக்கு அதில் ஆர்வம் ஏற்படு வதில்லை. தன்னை அவன் வலிய விரும்பி அவனாக நாடி அரு முயற்சியுடன் பெறுதல் வேண்டும். பெண் விரும்பும் காதலன், நுகரும் காதற் பண்புகள் இவை. தன் விருப்பு, வெறுப்புகளை மறைக்கும் நாண்; தன்முனைப்பை அடக்கும் அடக்கம்; தெரிந்தும் தெரியாத வகையாக இருக்கும் மடம்; இயக்கியும் இயக்காதவள் போல் குறிப்பறிவித்து இயக்குவிக்கும் பயிர்ப்பு; ஆகியவற்றைப் பெண்கள் பயன்படுத்துவதன் காரணம் இது. ஏனெனில், தன் செயல்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கும் அவள் ஆணையே பொறுப்புடையவனாக்கி, அவனைத் தன் விருப்பப்படி ஆட்டிப் படைப்பதிலேயே இன்பம் கொள்கிறாள். மேலும், ஆடவர்களின் காதலில் இல்லாத போட்டி மதிப்பு, பெண்ணின் காதலில் இடம் பெறுகிறது. பெண்கள் விரும்பும் தகுதியுடைய, ஆனால் பெண் வழியில் எளிதில் இணங்கி விடாத ஆடவனையே பெண்மையில் சிறந்த அணங்கு நல்லாள் நாடுகிறாள். இதுவே பெண்ணின் இனமளாவிய இன ஆர்வம் என்னலாம். ஆடையணிகளில் கூடப் பிறபெண்டிர் விருப்பம் பெண்ணை ஆள்வது காண்கிறோம். இதனால் ஆணைப் போலவே பெண்ணும் தன்னிடமே காதலர் முழுப்பாகத்தை விரும்பினாலும், அப் பாகத்தில் அமிழா ஆண்மையிலேயே முழுக் கவர்ச்சி பெறுகிறாள். பெண்ணின் இந்த இரண்டக உள்ளத்தின் இருமை நயங்களை வள்ளுவரைப்போலத் திறம்பட, கவினுற எடுத்துக் காட்டும் ஒரு கவிஞனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. காதலன் தன்னைத் துறந்ததற்காக அவள் அவனைப் பழிப்பாள். ஆனால், தோழி இதனை ஏற்காது காதலன் பக்கமாய்ப் பேசினாலும் காதலி அவளை நோவாள். தோழி அவனைக் குறை கூறினாலும் காதலி சினம் கொள்வாள். அவன் அன்பின்மையை நினைந்து மனமுருகுவாள். அதே சமயம் அவனுடன் ஊடாமல் கூடும் அவாவுடன் எழும் கைகளை, நெஞ்சை, உடலை நோவாள். ‘கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு’ -குறள் 1246 `நெஞ்சே! உன் போலி நட்பையும், வஞ்சகத்தையும் நான் அறியாதவளல்லள். நீ எப்போதும் அவர் (தலைவர்) பக்கம் நின்று என்னைக் கைவிடுகிறாய் என்பது எனக்குத் தெரியாதா? அவர் இருக்கும்போது, அவரிடமிருந்து மிகுதி இன்பம் பெற எண்ணி, நான் சிறிது ஊட நினைத்தால், நீ அது பொறுக்காமல் அந்த ஊடலை உடைத்துப் பாழாக்கி அவர் மீது போய் விழுவாய். ஆனால், இப்போது அவர் இல்லாத நேரத்தில் ஏதோ அவர்மீது குறைபடுவது போலப் போலிச் சீற்றம் சீறுகிறாய்?’ என்று காதலி தன் நெஞ்சுடன் கொஞ்சிப் பூசலிடுகிறாள். மற்றொரு சமயம் தலைவனைக் காண விரும்பும் கண்களை இடித்துரைக்கிறாள், அவள் துன்பம் அச் சமயம் கோபமாகி கோபம் கோபநகையாக மின்னுகிறது. ‘ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது’ - குறள் 1176 ‘இந்தக் கண்கள் தாமே அவரை எனக்குக் காட்டி என்னை இந்தக் காதற் றுன்பத்தில் இழுத்துவிட்டது! இப்போது அவையே துயில் கெட்டுத் தொல்லைப்படுகின்றன. படட்டும், நன்றாகப் படட்டும், தாம் செய்த பழிக்குத் தாமே நன்றாகப் பட்டழியட்டும். அதைக் காண எனக்கு மகிழ்ச்சியே’ என்று கண்களைப் பழித்துத் தன் துன்பத்தில் இன்பம் தேடுகிறாள். காதலர் திரும்பிய பின்னர்க் கைகள் ஊட மறுக்கின்றன. அது மட்டுமோ? இவற்றை அடக்கி அவள் ஊடினாலும்—ஊடல் நீடித்தாலும் அவள் பெண்மைக் கோட்டையின் செருக்கு நிற்பதில்லை. அதை உடைக்கும் ஒரு படை அவனிடம் உண்டு. ‘பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை’ -குறள் 1258 ‘நாம் அவர்க்கே என்று அவர்க்குத் தெரியும். அவர் நமக்குக் கிடைத்தற்கு அரியர் என்று நமக்குந் தெரியும். இந் நிலையில் பல வேடங்கள் போடுதல் மாயம் வல்ல அவர்க்கு எளிது. அவற்றுக்கு நாம் இணங்காவிட்டால், நம் பெண்மையின் அரணை அவர் தன் கை எல்லையிலுள்ள ஒரு படையால் எந்நேரமும் உடைத்து நம்மை ஆட்கொண்டுவிடமுடியும். அதுதான் நம் முன் பணிந்து கெஞ்சிவிடுவது! அதை நாம் எப்படிப் பொறுக்க முடியும்!’ என்று பெண்மையின் ஆற்றலெல்லை கண்டு அதில் மனம் நைவது போல உள்ளூரப் பெண்மை நயத்தில் ஆழ்கிறாள். பெண் வழிக்குச் செல்லாத ஆணிடமே பெண் உள்ளம் ஈடுபடுகிறது என்பதையும், பெண்ணுக்குத் தன்மதிப்பு உண்டானாலும் அது காதலனுக்குப் பல வகையில் தளர்ந்து உள்வாயில் திறக்கும் தன்மையுடையதே என்றும், அது போலவே எங்கும் வீரமே பேணிக் காதலியை ஆட்கொண்ட ஆணும் காதற் பெண்ணின் கருத்தினைக் கவிழ்க்கும் முயற்சியில் அந்த ஆண்மையையும், அந்த ‘ஒருத்தி’யிடம் ஒப்படைத்துவிடத் தயங்குவதில்லை யென்றும் இவை சித்திரித்துக் காட்டுகின்றன. பெண்வழிச் செல்லாது சமுதாயத்தின் வழிச் சென்று, தலைமுறை வாழ்வின் கடமையினூன்றிய ஆணும், பெண்மையை ஈர்க்கும் திறமுடைய அவ்வாணைத் தனக்கே உரியவனாக இழுத்துக் காட்டும் ஆற்றலுடையவளாய், அந்த ஓர் ஆணை உயிரெனக் கொண்டு, அவன் வழி நின்று சமுதாயத்தில் அவன் மதிப்பும் தன் உயர்வும் நாட்டும் கற்பு நெறியாண்மை வாய்ந்த பெண்ணும் கூடிய காதற் கற்புக் கூட்டுறவே தமிழர்-வள்ளுவர் கண்ட குடும்ப வாழ்வு. இத்தகைய குடும்ப வாழ்வே, ஆண் மூலம் சமுதாயமும், பெண் மூலம் இனமும் இருவர் மூலம் குடும்ப வாழ்வும் திறம்பட நடத்த வல்ல தமிழர் குடியாட்சியின் மறைதிறவு ஆகும். ‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை’ - குறள் 59 என்று அறத்துப்பாலில் வள்ளுவர் கூறியது இதனாலேயே. ஆடவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பும் புகழும் தருவது மனைவியின் கற்புத் திறனே. ஆடவன் பெண்வழிச் சேராதவனாக இருத்தல் வேண்டும். பொருட்பாலில் பெண்வழிச் சேறலுக்குப் பின்னரே, ‘வரைவின் மகளிர்’ பற்றிக் கூறப்படுவதன் காரணம் இதுவே. பொதுமகளிர் என்றவுடன் இந் நாளையத் தமிழர், நம் கால விலை மகளிரையும், விலையிலாச் சிறு மகளிரையும் எண்ணி விடுவதுண்டு. ஆனால், அக் காலப் பொதுமகளிர் இந்நாளையக் குடும்பப் பெண்களைவிடப் பண்பில் உயர்ந்தவர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் தீதின்றிக் காட்டுகின்றன. பொதுமகளிருள் பல தரப்பட்ட படிகள் அந் நாளில் இருந்தனவானாலும், அத்தனை வகையினரும் இந் நாளையக் ‘கட்டற்ற காதலுரிமை’ யுடைய மேனாட்டு அல்லது மலையாள நாட்டுப் பெண்களிலிருந்து மாறுபட்டார்களல்லர். மனைமகளிர்க்கும், பொதுமகளிர்க்கும் இடையே தமிழர் கண்ட வேற்றுமை ஒன்றே ஒன்றுதான். அதாவது மனை மகளிர் காதலர் தம்மைத் தேடிப் பெறக் காத்திருப்பர். அவனைத் தமதாகக் கொள்ளக் கற்பு என்ற படையைப் பயன்படுத்துவர். அவர்கள் வாழ்வின் நோக்கம் உடலின்பமன்று—வாழ்வு, வீடு, புகழின்பங்கள். ஆனால், பொது மகளிர் ஆடவரைத் தாம் வலிந்து கைக்கொள்வர். அவர்களைப் பெண்வழிச் செல்லவைப்பர். அவர்கள் வாழ்வின் நோக்கம் உடலின்பத்தின் மேலான எதுவும் இருப்பதில்லை. ஆயினும், சமுதாயத்தில் அவர்கட்கும் ஒரு நோக்கம் உண்டு. பெண்மை உணர்வு - அதாவது கலையுணர்வுடைய ஆடவரைத் தேர்ந்து கண்டு பற்றிக் கொள்ளுதலும், மற்றவரிடையே அவ்வுணர்வு கொளுத்துவதும் பெண்ணினத்தில் ஆண்மைக் கூறாக இயங்கும் அவர்கள் செயல் ஆகும். குடும்ப எல்லைக்குள் நின்று குடும்பம் மூலம் இனப் பண்பு வளர்க்கும் கற்புடைப் பெண்டிர் போலன்றி, அவர்கள் சமுதாய எல்லையளாவிச் சமுதாயப் பண்பு—அதாவது கலை மூலம் அதே இனப் பண்பு பேணுபவர்களாக அவர்கள் விளங்கினர். இன்றளவும் ஜப்பான் நாட்டுச் ‘செய்ஷாப்’ பெண்கள் இப் பண்டைத் தமிழ் மரபில் பெரிதும் கெடாது நிற்பது காண்கிறோம். ஆணும், பெண்ணும் கூடிக் குடும்பத்தில் வாழ வேண்டிய நெறியில் வாழ்ந்து, பண்பாளர் அல்லது நன்மனிதராய், சமுதாயத்தில் வாழவேண்டிய முறையில் வாழ்ந்து, துறவோர் அல்லது அறவோராய், இனத்தில் வாழவேண்டிய வகையில் வாழ்ந்து, தெய்வமாகத் திகழ்வர். அத் தெய்வங்கள் இறைவன் தாள்களாக, அடியவர்களாக, இறைவழி காட்டும் உயிருடைய நாழிகைக் கற்களாக இயங்குவர். இதுவே வள்ளுவர் முழுநிறை வாழ்க்கைக் கோட்பாடு. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ - குறள் 50 எஎஎ தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியவர் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணிவிழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது. அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டு கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து, பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம். நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம். தமிழின் மூலத்தை ஆய்ந்தவர் அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல — தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும். நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை—படிப்பு—எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார். மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால், இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு? ......... பெரிய அறிவு!” என்று கேட்பதன் மூலமும் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக் காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்! இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால், சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத் துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது—முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். சுதிக்குள் பாடும் இசைவாணர் அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு— மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு—தம் பணிகளைச் செய்திருக்கிறார். முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னதுபோல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகைகளில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம்—எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி, எண்ணி, அந்தந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரையார். ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும், ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்க எண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார். இசை நிகழ்ச்சியில் பாடுபவர், பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும்—பல்வேறு இசை நுணுக்கங்களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார். அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும்; தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர். மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம்-பேச்சு-நடவடிக்கைகள்-இருக்கும் இடம்-ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லாவற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது! இந்தச் சுதியை நமக்கு அமைத்துத் தந்தவர்களில் அப்பாத் துரையாரும் ஒருவர். அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு. கடன்பட்டுக் குமுறும் புத்தக ஆசிரியர்கள் மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவன் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் -அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படித்தான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக-ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக-தென்னமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்! இங்கோ.. ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென்சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வட சென்னையிவ் வீடு இருந்தால் தென் சென்னைக்கும், அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது! இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்! புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். அப்பாத்துரையாரின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும்- எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும்-என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு! இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ் மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார்! மறதி ஆகும் மரபு நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. ‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த்தென்றல்’-திரு.வி.க., நீதிக்கட்சித் தலைவர் சர்.பி. தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும். தமிழ்ப் பெரும்புலவர்களின்-வாழ்க்கை வரலாறுகள் நம்மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது. ‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது. பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால்-‘இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றிய செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும்: “கரிகால் வளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு” என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட் டிருக்கும்! உண்மை வரலாறு உருவாகட்டும் இப்படி அய்யப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள்-தமிழ்ச் சான்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் (1968-சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கட்கு, “இதுதான் எங்கள் நாட்டு வரலாறு” என்று எடுத்துக்காட்ட முடியும். இத்தகைய பணியைச் செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை ஏற்றுப் பணியாற்றுவதற்கு முழுத் திறமை பெற்றவர்—பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (சென்னையில் 20.9.1967-இல் நடைபெற்ற பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி முதல்வர்-பேரறிஞர் அண்ணா ஆற்றிய பாராட்டுரை. ‘நம் நாடு’ நாளிதழ் 22-9-1967) பன்மொழி கற்ற தென்மொழிப் புலவர் தமிழகத்தில் இரண்டு அகரதுரைகள் உள்ளனர்— ஒருவர் அண்ணாத்துரை— மற்றவர் அப்பாத்துரை; அண்ணாத்துரை அரசியற் புலவர்; அப்பாத்துரை மொழியியற் புலவர். இன்று நமது தமிழகம் தமிழராட்சியில் வளம்பெறுகிறது. ``தமிழ் நாட்டுக் கல்விமுறை தமிழர்கையில் தாய்நாட்டுத் தொழிலாக்கந் தமிழர்கையில் தமிழர் வாணிகமெல்லாம் தமிழர்கையில் தமிழ்த்துறையில் இயங்குவதும் தமிழர்கப்பல் தமிழ்ச் சமுதாயத் தொண்டு தமிழர் வாழ்க்கை தமிழகத்தின் அரசாட்சி தமிழர் ஆட்சி தமிழுள்ளம் சாதிமத பேதம் இன்றித் தாயுள்ளம் ஆகிடினே தழைப்பதாமே’’ என்று நான் 1919ஆம் ஆண்டு நடந்த திருச்சி தமிழர் மாநாட்டிற் பாடினேன்; இன்று என் எண்ணம் நிறைவேறித் தமிழகத்தில் தமிழ்மணம் கமழ்கிறது. நான் ஆசிரியராயிருந்து நடத்திய மலர்களில் கதிரெழுச்சியையே இலச்சினையாகக் குறித்தேன். கதிரெழுச்சி இன்று கன்னித் தமிழுலகை ஆளுவது பற்றி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சிக்கிடையே அப்பாத்துரையின் மணிவிழா கிண்கிணி நடைபோட்டு வருகிறது. அப்பாத்துரை யார்? அவருக்கு மணிவிழா ஏன்? அதற்கு மலர் ஏன்? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு இதுவே விடையாகும்: அப்பாத்துரை பன்மொழி கற்ற தென்மொழிப் புலவர். தனித்தமிழ் வித்தகர்; நுண்மாண் நுழைபுலன் மிக்கார். தமிழர் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர். இலக்கணப் பண்பும் இலக்கிய நயமும், ஈர்க்கும் சுவையும், இயக்கும் உணர்வும், கற்பனைக் கனவும், கவின்பெறு நடையும் உடைய உயர்ந்த நூல்களை உலகிற்கு அளித்தவர். அவர் நூல்களை அவர் எனக்கு அனுப்புவதில்லை; எனினும், அப்பாத்துரை நூல்கள் என்றால் நான் வாங்கிப் படிப்பது வழக்கம். சங்ககாலப் புலவர் கருத்துகளின் சிங்க நாதமே அப்பாத்துரை. அவர் நாடகம் எழுதியுள்ளார். ஆராய்ச்சி நூல்கள் பல யாத்துள்ளார். தமிழுக்கு மிகவும் தேவையான விஞ்ஞானத் துறையிலும் புகுந்துள்ளார். அவரது எயின்ஸ்டின் வரலாற்றைப் படித்து மகிழ்ந்தேன். அதில் மிடுக்கான கலைச் சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் தருகிறார். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தமிழிலேயே தற்காலக் கலையியலைப் புகட்ட வேண்டும் என்று ‘செங்கோல்’ ம.பொ.சி.யும் பேசுகிறார். கல்வியமைச்சர் நெடுஞ்செழியனும் பேசுகிறார்; நான் அந்தக் காலம் விஞ்ஞான ஆசிரியராயிருந்த போதே தமிழில் விஞ்ஞானத்தை அளந்து தரமுடியும் என்று ஆசிரியர் குழுவில் விளக்கி நடத்தியும் காட்டினேன்; எனது நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் என்னைத் தூண்டி நூல்கள் எழுதப்பணித்தார். ஞாயிறு தோறும் பொன்மலைக்குச் சென்று அவரைக் கண்டு எனது விஞ்ஞான நூல்களைப் படித்ததுண்டு. நல்ல தமிழில் தற்கால அணுவியலையும் எழுதலாம் என்ற துணிவு எனக்குண்டு; அப்பாத்துரைக்கும் உண்டு. எங்களைத் தமிழகஅரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடிடநஉரடயச னுiஅநளேiடிளே = அணு அளவை, நுடநஉவசடி-னுலயேஅiஉள டிக க்ஷடினநைள in ஆடிவiடிn=மின் இயக்கத்திறன், இவ்வாறு கலைச் சொற்களைத் தமிழாக்கலாம்; சில சிறப்புச் சொற்களை (ரேடியம், எலக்ட்ரான், புளுடோனியம் போன்ற சொற்களை) அப்படியே வழங்கலாம். தமிழில் விஞ்ஞானத்தைப் பயிற்றலாம். ஜப்பானியர், சீனர், ரஷ்யர், ஆங்கிலேயர் - அனைவரும் தமது தாய்மொழியிலேயே கலைவளம் பெருக்கி முன்னேறுகின்றனர். அவர்களைவிடத் தமிழர் குறைவா என்ன? - கவியோகி சுத்தானந்த பாரதியார் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர்களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப் பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர்களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப் பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 அப்பாத்துரையம் - 19 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) ஆய்வுகள்  மணிமேகலை  செந்தமிச் செல்வம்  வள்ளுவர் நிழல் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 19 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+272 = 296 விலை : 370/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 296  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் மணிமேகலை ... 3 செந்தமிழ்ச் செல்வம் 1. தமிழ் நாட்டின் இயற்கை வளம் ... 25 2. பண்டைத் தமிழர் ஒப்பனைக் கலை ... 33 3. சோழன் கலிங்க நாட்டு வெற்றி ... 39 4. கவியரசனைப் பாடிய புவியரசன் ... 50 5. தமிழர் குடியாட்சிப் பண்பு ... 54 6. புதிய தமிழகத்தின் மூதாதை ... 59 7. ஆசியாவின் வீர ஜோதி ... 64 8. வள்ளுவன் கண்ட உலகம் ... 70 9. ஓருலகில் தமிழன் ... 74 10. தமிழ்ப் பண்பில் குடியாட்சி ... 79 11. தமிழ் வளர்ச்சியும் தமிழரின் இயக்கமும் ... 87 12. பகுத்தறிவும் - இயல்நூல் வளர்ச்சியும் ... 92 13. இல்லறமே பேரின்பம் ... 96 14. தமிழினமும் மலாய் நாடும் ... 104 வள்ளுவர் நிழல் 1. நிழலும் ஒளியும் ... 117 2. ஜெர்மானிய அறிஞர் கண்ட கீழ்த்திசை ஒளி ... 120 3. திருவள்ளுவர் காலம் ... 127 4. வள்ளுவர் சமய ஒளி ... 150 5. முப்பால் அறம் ... 171 6. வள்ளுவர் சமுதாய அரசியற் கருத்துகள் ... 187 7. முப்பால் இன்பம் ... 200