வாழ்க முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. வாழ்த்து மரபு வாழ்க! எவ்வளவு இனிமையான சொல்! இனிமைத் தமிழிலேகூட இதனிலும் இனிமை வாய்ந்த சொல் வேறு கிடையாது எனலாம். சொல்லினிமை, ஓசை யினிமை; பொருளினிமை, பண்பினிமை ஆகிய பலவகை இனிமைகளின் இனிய கூட்டுறவு அது! தமிழ், யாழ், எழில், அழகு, பொழில், பழம்! அழகிய சுவை யார்ந்த இந்தச் சொற்களிலெல்லாம் இடம் பெறும் பண்பார்ந்த `ழகர' ஒலி இச்சொல்லுக்கு இழுமெனும் இன்னோசை தருகிறது. தவிர, மற்ற மெய் ஒலிகளும் உயிர் ஒலிகளும் அத்தமிழ்ச் சிறப்பொலியுடன் இணைந்து தாமும் இன்னோசை பெற்று அதன் இனிமை பெருக்குகின்றன. வல்லோசையுடைய ககரமும், குறுகிய ஓசையுடைய அகரமும் இச் சொல் லிறுதியில் தமக்கு இயல்பான வன்மை, குறுமை திரிந்து, புத்திசையுடன் பொலிவது காணலாம். சொல்லின் இனிமையுடனும், ஓசையினிமையுடனும் போட்டி யிடுகிறது பொருளினிமை. பொருளினிமையுடன் போட்டியிடுகிறது பொருட்பண்பினிமை, மரபினிமை! சொல்லின் பொருள் நயங்கள், ஒட்ப திட்ப நுட்பங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை; ஆழ்ந்து ஆராய்ந்துணரத் தக்கவை. இச்சொல் தமிழர் பண்பாட்டில் ஊறி, தமிழ் மரபில் வளர்ந்து, தமிழகத்தின் வருங்கால வளர்ச்சிக்குரிய பல பண்புக் கூறுகளுக்குத் தோற்றுவாய் ஆகத்தக்கது. புத்துலகின் புது வாழ்வுக்கே வழி வகுக்கத்தக்கது. இவ்வினிய சொல் தமிழர் வாழ்வில் பயன்படுத்தப்படும் இன்பச்சூழல் மரபுகளில் சில காண்போம். மணவாழ்த்து `வாழ்க மணநிறை செல்வர்!' `வளர்க தமிழ் மரபு!' `வெல்க தமிழ்ப்பண்பு!' இவ்வாறு நாம் புதுமணத் துணைவர்களை வாழ்த்து கிறோம். தாய் தந்தையர்கள் வாழ்த்துகின்றனர். உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர். அன்பின் அழைப்பால், நட்பின் நல்லார்வத் தால், நேசத்தின் பாசத்தால் மணத் துணைவருடன் இணைவுற்ற தோழர் தோழியர் வாழ்த்துகின்றனர். மொழி, இனம், நாடு, உலகு, பண்பு என்னும் பல்வகை விரிவுபட்ட தொடர்புகளில் இழைந்த நல்லோரும் பெரியோரும் நல்வாழ்த்துக் கூறுகின்றனர். நல்லெண்ணமும் நல்லறிவும் உடைய உறவோர் யாவருமே வாழ்த்தொலியில் பங்குகொள்கின்றனர். சொல்லால் வாழ்த்த முழுவாய்ப்பும் இல்லாத நிலையில் மனத்தால் வாழ்த்துபவர் ஏராளம். அதற்கறிகுறியாகவே அவர்கள் மலர்களைத் தூவுகின்றார்கள். வாழ்த்துரையிடையே அறிவுரை வழங்குவர் அறிஞர், கலைஞர்! வாயுரை வாழ்த்தன்றிக் கையுரை வாழ்த்தாகப் பரிசில்கள் வழங்குவோர், அன்புச் சின்னங்களான மாலைகள் அணிவிப் போர் பலர்; பூச்செண்டுகள் அளிப்போர் பலர். வாழ்த்துரையை எழுத்து வடிவிலும், இசைப் பாடல் வடிவிலும், வண்ண ஓவிய வடிவிலும் தீட்டும் மரபும் தமிழகம் கண்டுள்ள ஒன்றே! `பூவும் மணமும்போலப் பொலிவுறுக! பொன்னும் மணியும் போலப் புகழ்பெறுக!’ `மணியும் ஒலியும் போல, முத்தும் பவளமும் போல, யாழும் இசையும் போல இணைவுற்று வாழ்க!' `வானும் மதியும் போல, மாலைப்போதும் தென்றலும் போல மகிழ்வுற்று, குதலைவாய் மழலையாடும் மதலைச் செல்வத்தில் திளைத்தாடுக!' `தமிழும் இனிமையும்போல, முத்தமிழும் முழுநிறை இன்பமும்போல, காவியமும் கவினும் போலக் கலந்து, உருவும் திருவும் இசையும் மிலைக! உடலோடு உயிர், முகிலோடு மின்னல், குடியோடு கோன் என ஒன்றுபட்டுக் குறைவற்ற நீண்ட வாழ்வு பெறுக!' இத்தகைய வாழ்த்துகளைத் தமிழகத்தில் ஒவ்வொரு நம்பியின் மண விழாவின்போதும், ஒவ்வொரு நங்கையின் மன்றல் வேளையின் போதும் கேட்கிறோம். பொங்கல் வாழ்த்தொலி தமிழர் குடும்ப வாழ்வின் மலர்ச்சி மணவிழா. அவர்கள் இன வாழ்வின் மலர்ச்சி தமிழ்விழா, பொங்கல்விழா. மணவிழா குடும்பத்தில் தலைமுறைதோறும் புதுமையூட்டுகிறது. திருமண விழா அதாவது திருந்திய மணவிழா தமிழர் பண்டு கண்டு, இன்று திரும்பவும் கண்டுணர்ந்து புதுப்பிக்கும் புதுவிழா! அது வாழ்வில் ஆக்கமும் பெருக்கமும் அளிக்கிறது. குடும்பத்திலும் இனத்திலும், இவற்றின் பொங்கல் பெருக்க வளமான சமுதாய, சமய, பொருளியல், கலை வாழ்வுகளிலும் ஆண்டுதோறும் புதுமை யூட்டுவது பொங்கல் விழா. அதுவே தலைமுறைதோறும், ஊழிதோறும் தமிழ் நின்று நிலவ உதவுகிறது. தமிழுடன் தமிழ்த் திருவள்ளுவரின் தெய்வத் தமிழ்ப் பண்பு மங்காது நீடித்து நிலவவும் அது வழிவகுக்கின்றது. தமிழில் இடைவிடாத புத்தார்வமும் எழிலார்ந்த புதுமலர்ச்சியும் ஊட்டுவது அது. `வாழ்க மணவிழா, வளர்க தமிழ்' என்று மணவிழாவில் பொங்கல் வாழ்த்தொலி எழுகின்றது. `பொங்கலோ பொங்கல்! பால் பொங்குக!’ என்று தமிழ் விழாவில் பொங்கல் வாழ்த்தொலி முழங்குகின்றது. இருவகை வாழ்த்தொலிகளும் ஆண்டாண்டாக, தலைமுறை கடந்து தலைமுறையாக, ஊழிதோறூழியாக எழுந்து வளர்வன. அவை தமிழ் ஒலிவடிவாக, தமிழ் நிலத்திலிருந்து, தமிழக வானில் பரவுகின்றன. தமிழ்த் தென்றலுடன் தென்றலாகக் கலந்து, தமிழ் மணத்துடன் மணமாக இயைந்து, தமிழர் வாழ்வென்னும் அகல் வெளியில் பரவி உலவுகின்றன; உலவிவருகின்றன. தமிழ்க்குருதி ஓடும் நரம்புகளிலெல்லாம் அவை புத்தார்வத் துடிப்பையும் புத்துயிர் அலைகளையும் புத்துணர்ச்சிப் பெருக்கையும் தூண்டிவருகின்றன. தூண்டிப் புதிய தமிழகத்தை ஆக்கிவருகின்றன. `பொங்கலோ பொங்கல்! வாழ்க தமிழ்ப் பொங்கல்! பாற் பொங்கலோ பொங்கல்!' நிலா முற்றந்தோறும் நிலவொளி பூத்த மாதரசியர், இன் குதலை மதலையரும் மைந்தரும் நங்கையரும் புடைசூழ நின்று, கதிரொளியை வரவேற்று மகிழ்கின்றனர். மகிழ்ந்து, `பொங்கலோ, பொங்கல்!' என ஆர்ப்பரிக்கின்றனர். கையில் கரும்பு ஏந்திய கன்னியரும் காளையரும் பொங்கும் மகிழ்வுடன் பொங்கல் உண்ண விரைகின்றனர். குடும்ப விழாவும் இன விழாவும் மணவிழாவின் வாழ்வு பொங்கலில் பொங்குகிறது. மலரும் மணமும் இழைந்து இன் நறுங்கனிவளம் தந்துள்ளன. முன்னர்க் காதல் துணைவர்க்கே விழாக் கொண்டாடப்பட்டது. இப்போது காதல் துணைவரே விழாக் கொண்டாடுகின்றனர் - மைந்தர் மதலையருடன் கொண்டாடுகின்றனர்! குடும்பம் முழுவதுமே கொண்டாடுகிறது-சுற்றஞ்சூழ, நண்பர், தோழர், தோழியர் குழாம் சூழக் கொண்டாடுகிறது! தமிழும் தமிழரும் தமிழ்ப் பண்பும் வளருந்தோறும், தமிழர் குடிவிழாவாகத் தொடங்கிய இத் தமிழ்விழா தமிழர் குடியாட்சி விழாவாக, தமிழர் சமுதாய விழாவாக, இன விழாவாக விரிவுற்று மலர்கின்றது! மண விழாவின் வாழ்த்து, பொங்கல் வாழ்த்தாக வளர்ந்துள்ளது! உண்கலப் பொங்கலுடன், நன்கல நிறைநாழியின் செந் நெலும், பிற கூல வகைகளும் துளங்குகின்றன. செங்கரும்பும், மங்கல மஞ்சளும், மணந்தரும் இஞ்சியும் ஏலமும் கமழ்கின்றன. சுவை பெருக்கும் பாலும் தேனும், கனியும் கண்டும் பயில்கின்றன. நாளின் களிப்பும், வாழ்வின் மகிழ்வும் எக்களிப்பும் கிளர்ந் தோங்குகின்றன. `பொங்கலோ பொங்கல்! வாழ்க தமிழ்! பொங்குக தமிழர் வாழ்வு' என்று தமிழ்ப்புலவர், தமிழ் மாணவ மாணவியர், தமிழார்வ நம்பியர் நங்கையர் வாழ்த்தெடுக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்! பழைமையில் புதுமை புகுந்து ஒலியாடுகின்றது. புதுமையில் பழைமை பரவி நிழலாடுகின்றது. பழைமைப் பாசமும் புதுமை நேசமும் விரவிப் பல்வண்ண இளநிலா, இளவெயிலின் இன்கதிர் எரிக்கின்றன. புதுமையின் ஆர்வம் பழைமையின் பண்பில் விளையாடி முதிர்ந்து கனிவுறுகின்றது. பாலும் தேனும், நெய்யும் பழமும், கண்டும் குழைந்தாற்போல, தமிழும் இன்பமும், தமிழறிவும், தமிழ்க் கலையும், தமிழ்ப்பண்பும், மறுமலர்ச்சியும் தழுவி அளவளாவுகின்றன. உள்ளறையிலிருந்து வெளியறைக்கு வந்தால், `பொங்கிற்றா பால்?' என்ற வினா வணக்கம்! வெளியறையிலிருந்து முற்றத்துக்கு வந்தால், `பால் பொங்கிற்றா, பொங்குக பால்' என்ற வாழ்த்து! முற்றம் கடந்தால், தெருவில் அடிதோறும் திருப்பந்தோறும், `பொங்குக பால், பொங்குக வாழ்வு' என்னும் பொங்கல் மகிழ்வுரைகள்! தமிழக அஞ்சல் துறை பொங்கல் வாரம் முழுவதும் பொங்கல் வாழ்த்துகளைச் சுமந்து செல்கிறது! பொங்கல் பரிசுகளைச் சுமந்து சுமந்து மீள்கின்றது! பண்டை உலகின் பழம் புகழ் ஏந்தி, வருங்கால உலகின் வண்புகழ் வளர்க்கக் கால எல்லைநோக்கிக் கடுகிச் செல்லும் ஓர் `அஞ்சல் மொழிதான்' தமிழ்! ``வாழ்க தமிழ் அஞ்சல்! வளர்க அஞ்சல் தமிழ்!'' எங்கும் `அஞ்சல் தமிழ்' பரவுகின்றது, `அஞ்சல்! அஞ்சல்! அருந்தமிழ்ப் பொங்கல், பொங்கல்!' என்ற வாழ்த்தொலி வளர்கின்றது! எங்கும் `பால் பொங்கிற்றா? பொங்குக பால்! மலர்க வண்டமிழ் வாழ்வு!' என்பதே தமிழ் தமிழுடன் அளவளாவும் பண்புமொழி ஆகின்றது! மும்மை வாழ்த்தொலி முழக்கம் தமிழ்க் குடும்பச் சூழல்களிலும், தமிழகத் தெரு வீதிகளிலும் பொங்கிப் பொலிவுறும் இத் தமிழ் வாழ்த்தொலிகள் தமிழ்ச் சமுதாயமெங்கணும், தமிழ் வழங்கும் உலகெங்கணும் பரவி வருகின்றன. தமிழ் ஊர்தி, தொடர் ஊர்தி களிலும், தமிழக ஊர்தி நிலையங்களிலும், தமிழ்க் கடல் தவழும் தமிழகக் கலங் களிலும், தமிழக வானூர்திகளிலும் உலாவத் தொடங்கியுள்ளன. தமிழர் இருவர் சந்திக்கும் வாய்ப்புடைய பொது இடங்கள் தோறும் அவை தமிழ் அலை எழுப்புகின்றன. குடும்பத்தின் வாழ்வுக்குரிய விழாவான திருமண விழாவிலும், இனத்தின் புது மலர்ச்சி விழாவான பொங்கல் விழாவிலும் தமிழ்மொழி பொங்கல் வாழ்வுறத் தொடங்கி விட்டது. தமிழ்க் கல்லூரி பல்கலைக் கழகங்களிலும் தமிழக ஆட்சி மன்றங்களிலும், தமிழ் அறங்கூறவையங்களிலும், தமிழக ஆட்சியரங்கங்களிலும் வண்டமிழ் மலர்ந்து தேன்சுவை கொழிக்கும் நாள் தொலைவிலில்லை. நம் மைந்தர் நங்கையர் வாழ்வின் ஒவ்வோர் ஓரையும்' ஒவ்வொரு மூச்சும் வினாடியும் அதை நம்மை நோக்கி அணித்தாகக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன; கொண்டு வருகின்றன என்னலாம்! ஆங்கிலத்தின் அந்திவானம் அதோ சாய்கின்றது, அழகுறச் சாய்ந்து பிறையொளி பூக்கின்றது! இந்தியின் பகலொளி அதோ மாலை வெள்ளியாய் மினுமினுக்கின்றது! அதுவே தமிழ்ப் பகலவன் வரவு கூறும் காலை வெள்ளியாய்க் கீழ்த்திசையில் குலவ இருக்கின்றது! தமிழ் இளநிலா, தமிழின் இன்பத் தென்றல், தமிழின் அழகு மணம், அமுத ஒளி எங்கணும் இன்னிசை பரப்பத் தொடங்கி விட்டது! பொது மொழிகளாகத் தற்காலிகமாக நிலவி வந்துள்ள ஆங்கிலம், இந்தி ஆகியவற்றையே வாயில் வரப்புகளாக, தூம்பு மடைகளாக, கால்வாய்களாகக் கொண்டு, தமிழக ஏரி வெள்ளம் இந்திய மாநில வாழ்வு, பரந்த அகலுலக வாழ்வு என்னும் பன்மொழிக் கழனிகளில் சென்று பரவ இருக்கின்றது. விரைந்து சென்று எங்கணும் பரவும்! உலகும் இந்தியாவும் தமிழகத்தின் விரிவாக, தமிழகமே உலகின், இந்தியாவின் செறிவாக; உலகும் இந்தியாவும் பசுஞ்சோலை, பசுங்கழனிகளாக, தமிழகம் அவற்றின் நாற்றுப் பண்ணையாக நின்று நிலவும் நாள் தொலைவிலில்லை! அழகு மலரை நாம் இங்கே பேண, அதன் ஆர்வ மணம் அங்கே உலகெங்கும் பரவ இருக்கின்றது! இனிய யாழை நாம் இங்கே மீட்ட, அதன் எழிலார்ந்த இன்னிசை அங்கே நாலா பக்கமும் நுண்ணலை பரப்ப இருக்கின்றது! வாழ்க தமிழ், வளர்க தமிழ் ஆட்சி, பொங்குக பொன்னார் தமிழகம்! தமிழகப் பண்பு பொங்கித் தண்கடல் வளாக முழுவதும் வழிந்தோடுக! முத்தமிழ் முச்சங்க முழக்கம் இமயங் கண்ட தமிழகம், ஈழம் கொண்ட தமிழகம்! கங்கைகொண்ட தமிழகம், கடாரம் கடந்த தமிழகம்! உரோமகத்தின் செல்வம் திறைகொண்ட தமிழகம்! வாணிகம் கண்ட தமிழகம்! வண்தொழில் புகழ்கொண்ட தமிழகம்! இத்தகைய தமிழகம் அன்று வாழ்ந்த பெருவாழ்வு இன்று மீண்டும் பொங்க இருக்கின்றது! அன்று மலர்ந்த தமிழ்ப் பண்பு, இடைக்கால நள்ளிராப் போதில் கூம்பி, இன்று மீண்டும் மறுமலர்ச்சியடைய இருக்கின்றது! மறுமலர்ச்சியடைந்து வருகின்றது! குழந்தைப்போதில் கூடிக் குலவி மகிழ்ந்த விளையாட்டு நினைவு முதிராப் பருவமுறிவு கடந்து பருவத்தில் பாசக் கனவார்வமாக வளர்ந்துள்ளது. நேச நனவார்வமாகப் பொங்க இருக்கின்றது! கனவின் அலைகளினூடாக நனவு தவழ்கின்றது! பழைமையின் புகைமுகிலிடையே அதோ நின்றொளி பூக்கின்றது, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் பொன்னார் புகழ்! தொன்முகிலைப் பொன் முகிலாக்கிப் பொன் கதிரொளி வீசுகின்றது! அதோ, சோழன் கரிகாலன் கையில் செண்டுடன் இமயத்தின் தருக்கடக்கி, அதன் நெற்றித்தடத்தில் தான் பொறித்த புலிக்கொடி காட்டிக் கொக்கரிக்கிறான்! அவந்தி அரசரும், ஈழத்தரசரும், மாளவ மன்னரும் அவன் கால்மலரைப் பெருமையுடன் தம் தலைமீதணிந்து, சிந்து கங்கைவெளி நோக்கி இறுமாந்து செம்மாப்புறுகின்றனர்! அதோ, அதே இமயத்தின் மற்றொருபால், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் புலிக்கொடியுடன் போட்டி யிட்டுத் தன் கயற் கொடியையும் இமயத்தின் புருவத்தில் பொறிக்கிறான்! கரிகாலன், நெடுஞ்செழியன் ஆகிய இருவரையும் கையமர்த்தி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இருவர் சின்னங்களுக்கும் அப்பாற் சென்று, இருவர் சின்னங்களையும் கண்டு நகைத்த வண்ணம், தன் வானளாவும் விற்கொடி பதிக்கிறான்! அவனருகே அவன் கான்முளை, சேரன் செங்குட்டுவன் தந்தை தோள்களிலும் பூரித்த திண் தோள்களுடன் நிற்கிறான். ஆரிய மன்னர் கனக-விசயர் தலைமீது தான் சுமத்திய கண்ணகித் தெய்வத்துக்குரிய `முதிராக் கலையின் முழுப்பெருஞ் சிலை' காட்டி, ``இதோ பார்மீன்கள்! மூவரசும் முச்சங்கமும் முத்தமிழும் திறைகொண்டு, மூவுலகும் வெல்ல எழுந்துள்ள ஆற்றல்சால் அருந்தமிழன்னை! கோவலன் மரபினரே, குறிக்கொண்மின்!' என்று கூறி அகமகிழ்கிறான்! ஈழமன்னன், கொங்கிளங் கோக்கள், மாளவ மன்னர், மகதப் பேரரசாண்டு மாண்ட ஆந்திர மரபினர் நூற்றுவர் கன்னர் ஆகியோர் புடைசூழ நிற்கின்றனர். அவர்கள் தரும் அரும்பெருந் திறைகளை அன்னை திருவடிக்கே அளித்தமைகின்றான், ஆற்றல்சால் அருந்தமிழ்ப் பெருவேந்தன்! ஆயிரம் ஆண்டு மேற்சென்று, அவன் வழி வந்து, மருண்மொழி நீக்கி அருண்மொழி என்ற புகழ்பெற்ற சோழன் இராசராசன் முத்தமிழ் என்னும் முழக்கோல் கொண்டு முழுதுலகளக்கிறான்! அவன் செம்மல் கங்கை கொண்ட சோழன் முதலாம் இராசேந்திரனின் ஒளி நிழலுருவம் அதோ வங்கத்தில் நின்று புன்முறுவல் பூக்கின்றது! அதன் கையில் சுழலும் சக்கரத்தின் ஒளி கடல் கடந்த ஈழம், கடாரம், காம்போசம், அந்தமான் நிக்கோபார், மாலத்தீவுகள், இலட்சத் தீவுகள், மலாயா, சுமத்ரா, சாவா, போர்னியோ, சயாம், இந்துசீனா-நிலவுலகம் கடலுலகம் எங்கும் எதிர் நிழலிட்டுக் கடலில் குளித்தாடுகின்றது, கரையில் குதித்தாடுகின்றது! தமிழ்க்குருதியுடன் தெலுங்குக்குருதி தெறித்துப் போட்டி யிட்டுத் திளைத்தாட, தமிழக வீரமும் ஆந்திர வீரமும், கன்னட வீரமும், கலிங்க வீரமும், ஈழத்து வீரமும் கடார வீரமும் கலந்த கடற் பெருந்தானையுடன், பாவேந்தன் செயங் கொண்டான் பாடும் பூவேந்தன் செயங்கொண்டானாக, அதோ குலோத்துங்கன் `கலிங்கத்துப் பரணி' கொண்ட காளையான கருணாகரத் தொண்டைமானுக்குக் காஞ்சி மாநகரில் வெற்றிப் பதக்க மளிக்கிறான்! `தமிழ் மன்னர் வீரம் கடந்தும் என் தமிழ் வீரம் நின்று நிலவி, மீண்டும் அம்மரபு துலக்கும்' என்று கூறுபவர் போல, கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் `பரணிக் கண்ணாடியிட்டு' நம்மை நோக்குகின்றார்! அவர் கையின் ஆள்காட்டி விரல் மற்றும் ஒரு பாண்டியனை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, பின்நோக்கி! தமிழின் மும்மணிகள் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி! வேங்கை மார்பனை வென்ற வெற்றிச் சிங்க ஏறு! கானப் பேரெயில் கடந்த காளை! தமிழர் வெற்றிகளுக்கெதிராக அவன் தமிழ் வெற்றிக்கொடி ஏந்துகிறான். தென் மதுரையிலும் அலைவாயிலும் (கபாட புரத்திலும்) முத்தொளி வீசி, மதுரையின் மாணிக்கமாய் மாண்புறத் திகழ்ந்த, முத்தமிழ், முச்சங்கப் புகழை அவன் வானளாவ உயர்த்தி, அதனை மற்ற இரு தமிழ் மன்னர்களும், அவர்கள் வழிநின்று, கீழ்த்திசை யுலகமும் வணங்கும்படி செய்கிறான். இன்றும் நாகரிக ஒளி புகாத மேலை உலகின் முகிலுருக் கள்கூட முத்தமிழ் ஒளிநாடி முடியசைக்கின்றன. புத்த நெறியை உலகளாவப் பரப்பிய பேரரசர்களான அசோகனும், கனகனும் (கனிஷ்கனும்) ஒருபுறமும், சமண நெறி பரப்பிய கலிங்கப் பேரரசன் காரவேலன் மற்றொரு புறமுமாக நின்று, முத்தமிழ் வேந்தனுக்கு முத்தொளி பரப்பும் வெண்கவரி வீசுகின்றனர். வானுயர் முத்தமிழ்க் கொற்றக் குடையைப் புத்தர்பிரானே தாங்குகின்றார். சிலுவை ஏந்திய செம்மலும், ஏட்டுருத் தாங்கிய ஏந்தலும் மேற்றிசையிலிருந்து அன்பு மலர்களும் அறிவு மணிகளும் தூவி வாழ்த்துகின்றனர். புத்தர் பிரான் அருகில் புத்த துறவியர் குழாம், மாவீரன் அருகில் அழகிய ஒரு சமண அறிஞர் குழாம் நின்று, முத்தமிழ் ஏத்தும் ஒரு புதுத் தமிழாக நான்காம் புகழ்த் தமிழ் மாலை புனைகின்றனர். அவர்கள் கைகள் ஒரு பால் கன்னட கூர்ச்சர நாடுகளையும், ஈழத்தையும்; ஒருபால் கடாரச் சாவக நாடுகளையும் சீனத்தையும்; மற்றொருபால் சோனக, யவன நாடுகளையும் சுட்டிக் காட்டுகின்றன. ஆம். வள்ளுவர் அன்பறத்தின் கிளைகளாக, புத்தர்பிரான் அருள் நெறியையும் மாவீரர் அறிவு நெறியையும் முத்திசையிலும் கொண்டு சென்று பரப்பிய தமிழகத்தை அவர்கள் ஏத்துகின்றனர்; ஏத்தி அகமார வாழ்த்துகின்றனர். அசோகனிடம் செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தையும்; நெடுஞ்செழியன் மணிமேகலையையும்; கரிகாலன் திருக்குறளையும் உவந்தளிக்கின்றனர். தமிழ் மூவேந்தரின் தூதுவனாக அப் பரிசுகளை உலகுக்களிக்கும்படி கோரி மகிழ்கின்றனர். அசோகனிடமிருந்து புத்தர் பிரான் மூன்று திருநூல்களையும் வாங்கி, மூன்று பிடகங்களுக்கும் முன்னே, அறப்பெரும் பீடிகையுடனொத்த கலைப் பெரும் பீடிகையின் கண்ணே, அவற்றை ஏற்றிவைத்துப் பூசனை செய்கின்றார். புத்த துறவியர் குழாம் பாடுகின்றது. `புத்தர் திருவடி பராவுகின்றோம், புத்தம் சரணம் கச்சாமி! தகைசால் அறவணம் அளாவுகின்றோம் தர்மம் சரணம் கச்சாமி! அறிவர் கழகம் விராவுகின்றோம் சங்கம் சரணம் கச்சாமி! பாளி மொழியின் ஒருமை வணக்கம் தமிழின் பன்மை வணக்கத்துடன் நாரிடை மலரென மிடைக்கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள்! உலகுக்குத் தமிழகம் அளித்த மும்மணிகளாக இவை திகழ்கின்றன. `வாழ்க' என்னும் சொல்லின் இனிமையுடனும் பொருட் செறிவுடனும், பண்புடனும் ஊடாடும் நம் கண் முன்னே, வருங்கால வானில் தெரியவரும் காட்சிகள் இவை! கார்ல்மார்க்சு தரும் காட்சி நம் வாழ்வின் இப் பழம்புகழ், பழம்புகழ் மட்டுமன்று; வெறுங் கலைப்புகழ், அரசியல் வரலாற்றுப் புகழ் மட்டுமல்ல; அவற்றின் சாயல் தமிழ் மக்கள் வாழ்விலும், பீடிலும் நின்று நிலவியுள்ளன! அணிமைவரை, வெள்ளையர் ஆட்சித் தொடக்கம் வரை நின்று நிலவியுள்ளன! இன்றுகூட அங்கு முற்றிலும் மறைந்துவிடவில்லை. உள்ளூர நம் அகத்தே உறைந்து கிடந்து, இன்று விரைந்து கனிவுற்றுப் பொங்கிப் பொதுளத் தொடங்கி யுள்ளது. வரலாற்றுப் பழம்புகழ், அரசியல் புகழ் ஆகி, தமிழர் வாழ்வில் புகுந்து, அவர்கள் தொழில்கள், வாணிகம், கல்வி, கலை, குடியாட்சி, குடியேற்றங்களை வளர்த்துள்ளன. கடல் கடந்த ஆட்சியாலும், கடல் கடந்த வாணிகத்தாலும் செல்வம் பெருக்க முற்றது. தமிழக ஒண் பொருள்கள் மட்டுமன்றி, தமிழகத் தொழிற் பொருள்களும் கலைப் பொருள்களும் உலகெங்கும் சென்றன - உலகின் செல்வ வளங்கள் யாவற்றையும் தமிழகத்தில் கொண்டு வந்து குவித்தன. ஆங்கில ஆட்சியின் விடியற்போதுவரை தமிழகமே உலகின் கலையூற்றாக, தொழிற் பண்ணையாகச் செல்வக் களஞ்சியமாக, அறிவுக் கருவூலமாக விளங்கிற்று. வரலாறு இவற்றைப் பொதிந்தே காட்டுகிறது. ஆயினும், தொழிற்புரட்சி கண்ட உலகப் பேரறிஞர் கார்ல்மார்க்சு இதை விளங்க எடுத்துச் சுட்டிக் காட்டியுள்ளார். தற்கால உலகின் தொழில் முதலாளித்துவம் என்னும் குழந்தை இரண்டாயிர ஆண்டு தமிழகத்தின் கருவிலிருந்து முதிர்ந்து, கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலே பிறந்து, பிறந்தவுடனே தாயறி யாமல் பிரித்தானியச் செவிலியால் மேலையுலகத் தொட்டிலுக்கு இட்டுச் செல்லப்பட்டு, ஜெருமனியிலும், அமெரிக்காவிலும், இரஷ்யாவிலும் இன்று தவழ்ந்தாடி வரும் ஒரு புதுப் பிறவியே யாகும் என்பதை அவர் விளக்கியுள்ளார். தமிழகச் செல்வங்களையும் நூற்றல், நெசவு, சிற்பம், கப்பல்தொழில், பொன்வினை, மணிவினை முதலிய தமிழகத் தொழில்களையும் கைக்கொண்டு தான் ஆங்கிலேயர் தமிழகம் உட்பட உலகின் ஒரு பாதியைக் கைப்பற்றி மறுபாதியையும் திறைகொள்ள முடிந்தது. தமிழ் வாழ்வின் உரங்கொண்டே அவர்கள் தமிழ்மீதும், பிற தாய்மொழிகள் மீதும் ஆதிக்கம் பரப்பி, தம் ஆட்சியையும் மொழியையும் உலகளாவ வளர்த்தனர்! தொழிலாளர் வாழ்விலும், பொருளியல் கோட்பாடு களிலும் புரட்சி விளைவித்தவர் என்றுதான் கார்ல்மார்க்சைப் பலரும் அறிவர். உலக வாழ்வையும் வரலாற்றையும் தமிழக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு நோக்கின் இரு விழிக் காட்சிகளாக இணைத்த புரட்சியறிஞரும் அவரே! தமிழகத்தைக் காணாமலே தமிழ்ப் பண்புகளை நுனித்துணர்ந்த வகையில், தமிழகம் ஈனாத் தமிழ்ப் பண்பாட்டறிஞர் என்று அவரை நாம் குறிக்கலாம். கொடி வளர்த்த கோமான் பண்ணை தமிழகம் இன்று வாழ்வின் செல்வத்தை இழந்துள்ளது. அதன் அவல நிலைக்குக் காரணம் இதுவே. ஆனால், அது வாழ்வின் பண்பை இழந்து விடவில்லை. உள்ளார்ந்த உரத்தையும் நெகிழவிட்டு விடவில்லை. அதன் உள்ளுயிர்ப்பும் வாடிவிட வில்லை. திருவள்ளுவர் பெருமான் யாத்த திருக்குறள் தழைத் தோங்குமளவும், அவர் பேசிய தமிழ்மொழி நிலவுமளவும், அவர் நாடி நரம்புகளில் ஓடிய தமிழ்க் குருதி தமிழர் நாடி நரம்புகளில் ஓடும் அளவும் அப்பண்புகள் சாகா வரம் பெற்ற பண்புகளாய்த் தழைக்கும் எனலாம்! தமிழன் வாழ்வு தாழ்வு வளங்கள் வெற்றிலைக் கொடி வளர்த்த ஒரு கோமான் கதையை நமக்கு நினைவூட்டுவன ஆகும். வெற்றிலைக் கொடிவளர்த்து வீறுடன் வாழ்ந்தான் ஒரு கோமான். இயற்கைத் திறமறிந்து வேளாண்மை செய்தவன் அவன். அதன் பயனாக, பண்ணை கிட்டத்தட்ட இயற்கை வளர்ச்சியே போலக் காட்சியளித்தது. கோமான் மரபினர் அது இயற்கை வளர்ச்சியென்றே கருதினர். அதன் பண்பறியாது அதைப் புறக்கணித்தனர். அப்போதும் அதன் வளம் குறைய வில்லை. பண்ணை கெடவும் இல்லை. பேணுவார் இல்லாமலே அது பீடுற வளர்ந்தது. காடாக வளர்ந்தது. பண்ணையும் பண்ணைவேலியும் கடந்து அஃது அயல் புலங்களெங்கும் படர்ந்தது. இதுவும் இயற்கை நிகழ்ச்சியே என்று கோமான் குடியினர் வாளா இருந்தனர். அயல் புலத்தவர் தம் முயற்சி யெதுவுமில்லாமலே பெரு வளங் கண்டனர்-அவர்கள் சின்னஞ் சிறு முயற்சிகள்கூட அவ்வளம் பெருக்கின. பண்ணைச் செல்வம் படிப்படியாகக் குறைய, அயலவர் செல்வம் படிப்படியாக உயர்வுற்றது. கோமான் வழி வந்த இளங்கோக்கள் இது கண்டு வாளா பொருமினர். கொடி தமதெனக் கோமான் மரபினர் உணரவில்லை. ஆனால், கொடி தமதன்றென அயலவர் அறிந்தனர். கோமான் குடியினரின் அறியாமையைப் பயன்படுத்தி, கொடியின் மூட்டிலேயே சென்று, புதுக் கொடிக்குரிய இளந்தைகளை உருவாக்கி வந்தனர். இதனால் புதுக்கொடிகள் பரப்பினர், புதுவளம் கண்டனர். காலும் தலையும் அறியாமல், தம் செயல் பிறர் செயல் காணாமல், கோமான் குடியினர் முன்னிலும் பொருமினர். வீணே மடமையுடன் மனம் புழுங்கி, மாழ்கினர். அறிவுடைக் குரிசில் கோமான் குடியில் அறிவுடைக் குரிசில் ஒருவன் தோன்றினான். அவன் சிந்தித்தான்; சூழல் ஆய்ந்தான். வரலாறு துருவி நோக்கினான். முன்னிலை பின்னிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தான். சார்நலம், எதிர்நலம் வகுத்துணர்ந்தான். அவன் உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது; உவகை பிறந்தது. `தாய்ப்புல வளர்ச்சி சேட்புலம் சென்றது. இது மிகச் சிறு கேடு, கேடே யன்று! தாய்ச் செடி வளர்ச்சி சேய்க் கொடிவளர்ச்சி கண்டது. இதுவும் கேடன்று, தாய்க் கொடியின் உயிர் வளத்துக்கு ஒரு நற்சான்றே! கேடுகள் யாவும் உண்மையில் கோமான் குடியினரின் முயற்சியின்மை, ஆய்வறிவின்மை ஆகியவைதாம்!' குரிசில் இவற்றைக் குறித்துணர்ந்தான். அவன் சிந்தனை அவனுக்குப் பின்னும் உவகை ஊட்டிற்று `தாய் வளர்ச்சி புறஞ் சென்றபோதும், சேய் வளர்ச்சி பெருகியபோதும், தாய் நிலவளம் குன்றியதில்லை. கொடுக்கக் கொடுக்கக் குறையாத இயற்கை வளம் அது. ஆகவே பொருமல் தேவையில்லை. தவிர, வெற்றிலைக் கொடி மரபுதான் அயல் புலங்களில் பரவிற்று. அதற்கு ஆக்கந்தரும் பாக்கு வளமும் சுண்ண வளமும் இன்னும் கோமான் புலத்தின் எல்லைக்குள்ளேயே இருந்தன.' குரிசில் இவற்றை ஆய்ந்து கண்டான். அவன் பொறுமையுடன் மீண்டும் வெற்றிலைப் பண்ணை வளர்த்தான். முன்னோன் அறிவு மரபு பேணி, அயல் புலத்தவரைத் தாண்டி வளங் கண்டான். அது மட்டுமோ? தன் புதுமுறைகளை அவன் அயல்புலத்தவர்க்கும் காட்டி அவர்கள் வளமும் பெருக்கினான். மூட்டிலிருந்து அவன் உருவாக்கிய கொடிகள் அயல்புலத்தவர் உருவாக்கியவற்றைவிடச் சிறந்தவை யாய் இருந்தன. சேய்நிலத்தவர் அதன் மேம்பாடு கண்டு, அதைப் பெற்றுத் தாய்நில வெற்றிலைக் கொடியுடன் தாய்நிலப் பாசமும் வளர்த்தனர். தாய் நிலவளம் பெருகிற்று. சேய் நிலவளங்களும் பெருகின. தாய் நிலவளம் சேய் நிலங்களின் வளங்களைப் பாதிக்கவில்லை, அவற்றைப் பெருக்கிற்று. அதுபோலச் சேய் நிலவளங்கள் தாய் நிலவளத்தைப் பாதிக்க வில்லை, அதைப் பெருக்கின. ஏனெனில், எல்லா வளங்களையும் வாணிக வளமாகக் கொண்டு பரப்ப, குரிசில் வெற்றிலைப் பண்ணையின் கூட்டுறவு வாணிகக் களம் ஒன்று நிறுவினான். பண்ணைக் கோமான் இப்போது பண்ணைகளின் கூட்டுக் கோமான் ஆயினான். வெற்றிலை வளம் பெருக்கக் கோமான் பாக்குத் தொழில் பண்ணைகளும் கமுகப் பண்ணைகளும், சுண்ணத் தொழில் பண்ணைகளும் தோற்றுவித்துப் பெருக்கினான். பண்ணை கூட்டுப் பண்ணையாய், கூட்டுப் பண்ணை ஒரு சிறு வளநாடாக வளர்ந்தது. வல்லாட்சி, வீரஆட்சி, செல்வஆட்சி ஆகிய யாவற்றிலும் மேம்பட்ட அறிவாட்சி, அன்பாட்சி, அருளாட்சி செலுத்தினான், கோமான் மரபில் வந்த குரிசில்! தமிழ் மரபு கோமான் மரபு என்று இங்கே குறித்தது வள்ளுவர் தமிழ் மரபையே. இயற்கை யளாவித் தமிழ் முன்னோர் வகுத்த மரபு, தமிழ் முன்னோரை அளாவி வள்ளுவர் வகுத்த மரபு ஆகிய இரண்டும் இன்று உலகளாவி உலக நாகரிக மாகவும், உலகப் பண்பாகவும் வளங்கண்டுள்ளன. ஆனால், அயல்புலத்தவரளவு முயற்சிகூட, அறிவுப் பண்புகூட இல்லாமல், தம் இயற்கைப் பண்பைக் காடாக வளர விட்டனர் தமிழர், களை செறிய விட்டனர்! இதனால், அவர்கள் வாழ்வில் பிந்திவிட்டனர்; அது மட்டுமோ? உலகின் முன்னேற்றத்துக்கும் ஒரு கால்கட்டாகக்கூட நிலவி வருகின்றனர். தமிழர் வாழவேண்டுமாயின், கோமான் மரபில் புது மலர்ச்சி யூட்டிய குரிசிலைப் போன்ற இளங்காளையரை, ஏந்திழையரைத் தமிழர் தோற்றுவிக்க வேண்டும்; அவர்கள் வழி நிற்கவேண்டும்! நின்று செயலாற்றி முன்னேற வேண்டும்! நாம் திருமண விழாவிலும், பொங்கல் விழாவிலும் `வாழ்க, பொங்குக’ என்று வாழ்த்தினால் போதாது! வாழ்வு மரபில் நின்று வாழ்ந்து, வாழ்த்து மரபில் நின்று வாழ்த்தப் பயிலுதல் வேண்டும். அவ்வழியே மீண்டும் தமிழ் மரபு வாயிலாக, தமிழ் இலக்கிய வாயிலாக, தமிழர் வாழ்க்கைப் பண்பையும் வாழ்த்துப் பண்பையும் கண்டுணர்ந்து பின்பற்றுதல் வேண்டும். கோமான் மரபு நீடிக்க, குரிசில் மரபு தோற்றுவிக்கத் தக்க சூழ்நிலைகளை நாம் காண்கிறோம். அவற்றை வகுத்து வருகிறோம். அவற்றை மறுமலர்ச்சி யார்வம் இன்னும் வளமாக்கிப் பெருக்குதல் வேண்டும். குரிசில்களுக்கான குருக்களை (வித்துக்களை) நம்பியர் நங்கையர் உள்ளங்களில் உழுது விதைத்தல் வேண்டும். கோமான் பண்ணையின் வளம் மாறாது நீடித்தது போல, தமிழ் மொழியின் பண்பு வளம், தமிழினத்தின் குருதி வளம், உரவளம் இன்னும் மாறாமல் நீடித்தே வருகின்றன. கோமான் மரபின் அறிவு வளந்தான் சிந்தனையற்ற இடைக்கால இருளின்போது தூங்கிக் கிடந்து வந்துள்ளது. குரிசில் வாழ்வு அதைத் தட்டி எழுப்பியது போல, தமிழர் தங்கள் அறிவுப் பண்பை மீண்டும் தட்டி எழுப்புதல் வேண்டும். வாழ்க என்னும் சொல்லின் பண்பு வளமே நம்மை அவ்வகையில் தூண்டவல்லது. வள்ளுவர் வகுத்த வாழ்வியல் நூலாகிய திருக்குறளே நம்மை அவ்வழியில் நெடுந்தொலை கொண்டு ஊக்கத்தக்கது. அவற்றில் கருத்துச் செலுத்துவோம். 2. வாழ்வியல் வண்ணம் தமிழ் இலக்கியத்திலே வாழ்க என்ற சொல் வாழி, வாழியர் என்ற பல வடிவங்களுடன் இயங்குகின்றது. வாழ்கவே, வாழியே, வாழியவே, வாழியரோ என்று அது பல இசைபடப் பாட்டுக்களில் பாடப் பெறுகிறது. வாழி வாழி, வாழ்க வாழ்கவே என்று அழகிய தொனிபட இரட்டித்தும் பன்மடங்காக அடுக்கியும் அதை வழங்குவதுண்டு. அதன் சொல்லாக்க வளமும் பெரிது. வாழ், வாழ்தல், வாழ்வு, வாழ்க்கை, வாழ்த்து, வாழ்த்துதல், வாழ்நன் அல்லது வாணன் முதலிய சொற்களும்; வாழ்நாள் அல்லது வாணாள், வாழ்முதல் (கடவுள்); வாழ்வகம்; வாழ்த்துரை, வாழ்த்துப்பா, வாழ்த்திதழ்; வாழ்க்கைத் துணை, வாழ்க்கைத் துணைநலம்; இல்வாழ்க்கை, குடிவாழ்க்கை, வாழ்வரசி, வாழ்வேந்தன்; வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைக் கோட்பாடு, வாழ்க்கைப் படுதல் முதலிய எண்ணற்ற தொடர் சொற்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. பொருள்வளம், நீடித்த இனமரபு, பண்பின் ஆழ அகலப்பரப்பு ஆகிய வற்றிலும் `வாழ்க' என்னும் சொல் வியக்கத்தக்க இயல்புகள் உடையது ஆகும். சொல் வளமிக்க தமிழ் மொழியின் வளம் முழுவதையும் வாழ்க என்னும் சொல் கொண்டுள்ளது என்றால் தவறில்லை. அஃது அத்தனை தமிழ்ச் சொற்களுடன் அளவளாவி அவற்றின் மரபுகளுடன் இணைந்து வளர்ந்துள்ளது. தமிழில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. மற்ற மொழிகளின் சொற்கள் தாண்டி அவை மனித இன நாகரிகத்தின் வேர் முதல் தடவுவன. அதே சமயம் மனித நாகரிகத்தின் உச்ச உயர் அறிவுப் பண்புடனும் கலைப் பண்புடனும் அவை விராவி, மனித இன நாகரிகமெங்கும் பண்பலைகள் பரப்புபவை. அத்துடன் சொல் தொடர்பு, பொருள் தொடர்பு, மரபுத் தொடர்பு, பண்புத் தொடர்பு ஆகியவற்றின் திறங்களால் தமிழின் சொற்கள் இயல்பாகவே குடும்பம் குடும்பமாக, சமுதாயம், சமுதாயமாக, இனம் இனமாக வகை தொகைப் படுபவை. அனைத்தும் ஒரு சேர ஒரே சொற்பேரினத் தொகுதியாக இயங்குபவை. வாழ்க என்னும் சொல் கிட்டத்தட்ட இவ்வெல்லாச் சொற்குடும்பங்களுடனும், சொற் சமுதாயங் களுடனும், சொல் இன, சொற்பேரினங்களுடனும் தொடர்பு கொண்டு; தமிழ்மொழி வாழ்விலும், தமிழின வாழ்விலும், மனித உலக வாழ்விலும் ஆழ்ந்தகன்று வேரூன்றிப் பரந்த ஒரு சொல் என்பது கூர்ந்துணரத்தக்கது. இச் சொல்லைத் துருவி ஆராய்ந்தால், தமிழ்ச் சொற்களுடனும் உலகப் பிறமொழிச் சொற்களுடனும் அது கொண்டுள்ள தொடர்பை ஒப்பிட்டுணர்ந் தால், அது தமிழர் வாழ்க்கைக் கோட்பாடு என்னும் அடித்தளத்தையும், அதன்மீது திருவள்ளுவர் பெருமான் கட்டமைத்த தமிழ்ப் பண்பாட்டையும், இரண்டையும் மய்யமாகக் கொண்டு வளர்ந்த உலக நாகரிகப் பண்பாட்டையும் செவ்வனே விளக்குவதாய் அமையும். பொருளும் பண்பும் சில சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டுமே இடம் பெறும்; வேறு சில சொற்கள் மக்கள் வழக்கில் மட்டுமே இயங்கும். இரண்டிலும் வழங்கும் சொற்களையே தொல்காப்பியகாலத் தமிழர் இயற்சொற்கள் என்று வகுத்தனர். இரு வழக்குகளும் உடைய சொற்களும் இரு வழக்குகளினிடையே வேறுபடு பவை; திரிபவை உண்டு. ஆனால், வாழ்க என்னும் சொல் இவை போன்ற தன்று. வியத்தகு நிலையில் அஃது இலக்கிய வழக்கு, மக்கள் வழக்கு இரண்டிலும், தமிழகம் எங்கணும், தொல்காப்பியர், திருவள்ளுவர் கால முதல் இன்றுவரை ஒரே வளமும் ஒரே வளர்ச்சியும் உடையதாக இயங்குகிறது. இன்று அது கொள்ளும் பொருள்கள் அத்தனையையும் திருக்குறளிலேயே நாம் காணலாம். மக்கள் வாழ்க்கையில் இன்று வழங்கும் உயிர்த் தமிழிலும் காணலாம். உயிருடன் இயங்குதல், மாளாது பிழைத்திருத்தல், மாள்வு தவிர்த்தல்; பிழைப்பு நடத்துதல், வறுமை தவிர்த்தல்; தங்கியிருத்தல், குடியிருத்தல்; (மனைவி அல்லது கணவனுடன் கூடி) இல்லறம் நடத்துதல்; மற்ற மக்கட் குழுவினருடன் கூடி இணங்கி ஒத்தியங்குதல், ஒப்புரவாற்றுதல், சமுதாயத்தில் உறுப்பினனாய் இயங்குதல்; வளர்தல், வளம் பெறுதல், நலம் பெறுதல், பயன் பெறுதல், பலவகைச் செல்வமும் வாய்க்கப் பெறுதல், இன்பம் பெறுதல்; உயர்தல், ஓங்குதல், சீரும் சிறப்பும் புகழும் பெறுதல்; ஆக்கம் பெறல், பெருகல், இனம் பெருக்குதல், மரபு நீட்டித்தல்; நீடித்து நின்று நிலவுதல், என்றும் நின்று நிலவுதல்-இத்தனை பொருள்களையும் சொல்லின் இலக்கிய வழக்கிலும், பேச்சு வழக்கிலும் காணலாம்! தவிர, தமிழ் மேலோர் கடுஞ்சினத்தில்கூடப் பழிச்சொல் வழங்குவதில்லை. வாழ்த்துச் சொல்லே வழங்கினர். `வாழி மடநெஞ்சே! வாழ்க கயவர்!' என்ற வழக்குகளை இலக்கியத்தில் காணலாம். `நாசமற்றுப் போவாய்' `உனக்கென்ன அவக்கேடு!' என்று தாய் தந்தையர் சுடுமொழிகள் பகர்வதை இன்றும் காண்கிறோம். சீற்றத்திலும் தமிழர் பண்பு உணர்வுத் தளத்தில் தான் சினத்துக்கு இடந் தந்தது; அறிவுத் தளத்தில் அமைதி பேணி, அதை மொழியிலும் பதியவைத்துள்ளது. மனித நாகரிக வளர்ச்சியுடன் வாழ்தல் என்னும் கருத்து வளர்ந்து வந்துள்ள எல்லாப் பண்புப் படிகளையும் வாழ்தல் என்ற தமிழ்ச் சொல்லின் பொருளே காட்டுவதாய் அமைந்துள்ளது. உயிருடன் இயங்குவதும், மாள்வு, இடர்களிலிருந்து தப்பிப் பிழைப்பதும் மனிதன் காட்டுநிலை வாழ்க்கைப் பண்பு. பிழைப்பு நடத்துவதும், வறுமை தவிர்த்து வாழ்வதும் இதனினும் மிகுதி உயர்ந்த பண்புகளல்ல. இவற்றை நாடோடி வாழ்க்கைப் பண்புகள் என்னலாம். இதிலிருந்து நாம் படிப்படியாக உயர் பண்புகளுக்கு வருகிறோம். அவ்வகையில் அடுத்தபடியே மனித நாகரிகப் படி ஆகும். அதிலேயே தங்குதல், குடியிருத்தல் என்ற பொருள்கள் மனிதன் நிலையான குடிவாழ்வு தொடங்கிய காலத்துக்கு உரியன. குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் பிறருடன் கூடி இணங்கி வாழ்தல் அமைகின்றது. ஒப்புரவுப் பண்பை இப்படியில் வாழ்தல் குறித்தது. சொற்பொருளின் மூன்றாவதுபடி தமிழர் பண்பாட்டின் படி ஆகும். இன்ப நோக்கம், பயன் நோக்கம், வளர்ச்சி, வளம், பெருக்கம், இனப்பெருக்கம் ஆகியவற்றை இப்படியில் வாழ்வு என்ற சொல் உணர்த்துகிறது. இந்தப் படியே இன்று பண்புடைய உலக நாகரிகமாக வளர்ந்துள்ளது. அடுத்த இரண்டு படிகளும் தமிழ் மரபின் உச்சியையும் திருவள்ளுவர் திருக்குறளின் தனிப் பண்புகளையும் சுட்டிக் காட்டுபவையாகும். அவையே புகழ் பெறுதல், நீடித்து நின்று நிலவுதல் என்ற பொருள்கள் குறித்தன. உலகின் அருட்பெரியார் மரபுகளையும், அவர்கள் கண்ட அருட்சமயங் களையும் தூண்டிய படி இதுவே. இப் படியில் தமிழகமோ, உலகமோ இன்னும் முன்னேறவில்லை. தமிழ்ப் பண்புணராத இழிபண்பினர் கையில் உலகச் சமயங்கள் சிக்கிச் சீரழிவதே இதன் காரணம் ஆகும். தமிழ் மரபும் தமிழ்ப் பண்பின் தொடர்பும் தமிழகத்திலேயே தட்டுக்கெட்ட நிலை இதற்குப் பெரிதும் உதவிற்று! `வாழ்தல்' என்று கூறும்போது, மனித நாகரிகத்தின் இந் நான்கு படித்தளங்களையும் நாம் ஒருங்கே குறிக்கிறோம். வாழ்க என்று தமிழர் கூறும்போதும், இந்நான்கு தளங்களும் தமிழர் மனக்கண், அறிவுக்கண், உணர்ச்சிக்கண் ஆகியவற்றின்முன் தோன்றாமலிருப்பதில்லை. சொல்லின் இனிமை கடந்து, சொற்பொருள் கடந்து, வாழ்க என்னும் தமிழ்ச்சொல் பரப்பும் பண்பு அலை, மரபு அலை இதுவே. தமிழ், கிரேக்க இலத்தீனப் பண்புத் தொடர்பு இன்றைய உலக மொழிகள் பலவற்றிலும் மூச்சு, ஆவி, உயிர், வாழ்தல், வாழ்க்கை, வாழ்வு, வாழ்நாள் ஆகியவை தொடர்பு பட்ட சொற்களாய் இருப்பது காண்கிறோம். இவற்றுள் ஒன்றும் பலவும் பல மொழிகளில் ஒரே சொல்லால் அல்லது ஒரே சொல்லின் திரிபால் உணர்த்தப்படத் தக்கவையாய் உள்ளன. தற்கால மொழிகளுள் ஒன்றான ஆங்கிலத்திலும் இடைக்கால மொழிகளுள் ஒன்றான சமற்கிருதத்திலும் இப் பண்பை முனைப்பாகக் காணலாம். ஆங்கிலத்தில் உயிர் என்பதற்குரிய சொல்லே (பெயர்ச் சொல்; வினைச்சொல்) உயிர் என்ற கருத்தை மட்டுமன்றி, உயிர்ப்பொருள், வாழ்க்கை, வாழ்வு, வாழ்நாள் ஆகிய பொருள்களையும் தருவதாகும். சமற்கிருதத்திலும் (ஜீவ என்ற சொல்) அத்தகையதே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழில் முதல் மூன்றும் சில சமயம் ஒன்றுபடுத்தப்படலாம். பின் நான்கும் சில சமயம் ஒன்றுபடுத்தப்படலாம். ஆயினும், முன் மூன்றுடன் (உயிர்) பின் நான்கும் (வாழ்தல்) பொருள் தொடர்புடையவையாயினும், என்றும் ஒரு சொல்லால் குறிக்கப்பட முடியாதவையாய் உள்ளன. உயிர் என்ற சொல் தமிழில் பெயர்ச்சொல்லாய் வரும் போது உயிரையும் மூச்சையும் குறிக்கக்கூடும். ஆனால், வினையாக (உயிர்த்தல் என்ற வடிவில்) வரும்போது அது மூச்சுவிடுதலை மட்டுமே குறிக்கும். ஆங்கிலத்தையோ சமற்கிருதத்தையோ போல, உயிருடன் இயங்குதலை ஒருபோதும் குறிப்பதில்லை. அதுபோலவே, வாழ்தல் என்பதன் பெயர்ச்சொல் வடிவும் உயிருடன் இயங்குதலைக் குறிக்குமேயன்றி, உயிரை ஒரு போதும் குறிப்பதில்லை. உயிர், வாழ்க்கை என்ற சொற்களின் இரு வேறுபட்ட சொல்மரபுப் பண்பை நாம் தமிழில் மட்டுமன்றி மேலை உலகின் பண்பட்ட பண்டை மொழிகளான கிரேக்க இலத்தீன மொழிகளிலும் காண்கிறோம். இவ்விரண்டு மொழிகளிலும் உயிர் என்பதற்கு ஒரு தனிச் சொல்லும் (கிரேக்கம் ; இலத்தீனம் ) வாழ்க்கை என்பதற்குப் பிறிதொரு தனிச் சொல்லுமே (கிரேக்கம்: இலத்தீனம் ஏவைய) உள்ளன. உயிருடன் இயங்குதல்தான் `வாழ்தல்' என்பது; மனித நாகரிகத்தின் காட்டுநிலை, நாடோடி நிலை மரபைக் காட்டுகிறது. உலகின் தற்கால, இடைக்கால மொழிகள் இப்பண்பு கடந்து சொல் மரபில் வளரவில்லை. அதற்கு மேற்பட்ட `குடிவாழ்வு' குறித்த நாகரிகப்படியைத் தமிழ் மொழியும் கிரேக்க இலத்தீன மொழிகளும் மட்டுமே காட்டுகின்றன. உலகில் முதல் முதல் குடி வாழ்வும் உழவும் தொழிலும் கலையும் கல்வியும் கண்ட இனம் தமிழினமேயாகும். தமிழர் வாழ்க்கைப் பண்பின் இந்த மரபு நடுநிலக் கடலக நாடுகளில் பரந்து, மனித நாகரிகம் வளர்க்க உதவியதை இச்சொல் மரபு காட்டுகிறது. ஏனெனில், கிரேக்க இலத்தீன மொழிகள், ஆங்கில சமற்கிருத மொழிகளைப் போலவே ஆரிய இனமொழிகள்தாம். ஆனால், ஆரிய இனத்தவர் கிரேக்க உரோம நாடுகளுக்கு வருவதற்கு முன் இருந்த நடுநிலக்கடல் நாகரிக இனங்களிட மிருந்தே இத்தமிழ்ப் பண்பை அவர்கள் பெற்றிருந்தனர். இந்திய மாநில எல்லையில் மூவாயிர ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்திய ஆரியரும் தமிழினத்துடன் தொடர்புற்றுப் படிப்படியாகப் பண்படைந்தனராயினும், தமிழின மரபு வட இந்தியாவில் பேரளவில் அழிந்த பின்னரே இந்திய ஆரிய நாகரிகம் புதிதாகத் தோற்றிற்று. இதனாலேயே அஃது இப் பண்பைப் பல கூறுகளில் பெற முடியாது போயிற்று என்று அறிகிறோம். உயிர் என்றால் என்ன? உயிர்ப்பண்பு, உயிர்ப்பொருள், மூச்சு என்ற மூன்று கருத்துக்களுக்கும் பொதுவான சொல்லாக இன்று உயிர் வழங்குகிறது. உயிர்ப் பண்பைத் தனிப்படக் குறிக்கவும், உயிர்ப்பொருளைத் தனிப்படக் குறிக்கவும் இன்று வழக்கிலுள்ள தனித்தமிழில் வேறு சொல் இல்லாத இடர்ப்பாடு பெரிது. தனித் தமிழை நையாண்டி செய்ய இன்னும் விரும்புபவர்க்கு இஃது ஒரு தக்க வாய்ப்பும் அளிக்கிறது எனலாம். உயிர்ப்பண்பை ஆவி என்றும் குறிப்பதுண்டு. உயிர்ப் பொருளைப் பண்டைத் தமிழிலும் இன்றைய கன்னடத்திலும், `மா' என்ற சொல் குறிக்கும். அதன் பன்மையான மாக்கள் என்பதே உயிரினத்தைக் குறிக்கத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் வழங்கிய சொல் ஆகும். இன்னும் பழைமையாக, உயிர்மெய் என்ற சொல் உயிர்ஒலி, மெய்ஒலிக் கூட்டுறவை மட்டுமன்றி, உயிரும் உடலும் கூடிய உயிர்ப்பொருளையும் குறிக்க வழங்கியிருந்ததென்று அறிகிறோம். ஆனால், உரையாசிரியர்கள் குறிப்பன்றி, இதற்கு வேறு சுவடு இல்லை. ஆ, ஆன் என்ற சொல்லும் அவற்றுடன் மா என்ற சொல்லின் இணைவாகிய ஆன்-மா என்ற தொடர் சொல்லும், உயிர்ப்பண்பு, உயிர்ப் பொருள் என்ற வேறுபாடின்றி, உயிர்நிலை அல்லது உயிரின் தனித்தன்மை குறித்த அறிவுத்துறைச் சொற்கள் ஆகும். `ஆன்மா' சமற்கிருத வழக்காக இடைக் காலத்தில் கொள்ளப்பட்டபின், `பொது உயிரான இறைவற்கும் தனி உயிர்க்கும் ஒருசேர வழங்கிய பண்டைத் தமிழ்ச்சொல் `ஆன்' மரபிழந்தது. `உயிர்' என்ற சொல் `உய்,' `இரு' என்ற இரு சொற்களால் ஆகியது. `இர்' தொழில் பெயர் விகுதி என்றாலும் ஒக்கும். உய்த்து, அதாவது மாள்வு தவிர்த்து இருப்பது என்பதே அதன் பொருள். சாவா உயிர் ஆன், சாவு கடந்து வாழ்வது ஆன்மா அல்லது உயிர் என்ற கருத்து அச்சொல்லில் தாக்கியுள்ளது. தமிழர் அறிவுநூல் மரபு அழிவுற்ற பின், சமற்கிருதத்திலும், கிரேக்க இலத்தீன மொழிகளிலும் `உயிர்' என்ற பொருள் குறித்த சொற்களுடன் இணைவான பழைய தமிழ்ச் சொற்கள் (மா, உயிர்மெய்) மரபற்று அழிந்தன. `உயிர்' இன்றைய குறுகிய, ஆனால் பண்பு வளமிக்க பொருளில் வழங்கலாயிற்று என்னலாம். தமிழில் அழிதல், சாதல், இறத்தல், மாள்தல் என்ற எல்லாச் சொற்களும் ஒழிதல் அல்லது இல்லாதுபோதல் என்னும் பொருளை உடையவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கூர்ந்து நோக்கினால், இது தவறு என்பது தெரியவரும். அழிதல் உயிரிலாப் பொருள்களுக்கு மட்டுமே வழங்குவது. அதன் சொற்பொருள் உருத்திரிதல், அல்லது உரு இல்லாமல் போதல், மாவாக, குழம்பாக, உருவற்ற பிழம்பாகப் போதல் என்பதே. சோறு குழைதலை இன்னும் அழிதல் என்று கூறுவது இதனாலேயே யாகும். சாதல் உயிர்ப்பொருள் சுட்டிய வழக்கு; நிறைதல் அதன் பொருள். சாப்பாடு நிறை உணவு குறித்தல் இப் பொருளிலேயே யாகும். உடலின் பயன் நிறைவுற்று, அது பயனற்றதாக ஒதுக்கப்படுதலையே சாவு குறிக்கும். அதன் மறுசொல்லாக, இடக்கரடக்கலாக வழங்கப்படும் இறத்தலோ, கடத்தல் என்று பொருள்படுவது. `இறைவன்', (`கடவுள்') என்ற சொல்லின் பகுதி அதுவே. ஒரு தலைமுறை வாழ்வு கடந்தான் என்பதே அதன் குறிப்பு. `மாள்வதே' இன்னும் சீரிய பண்புடைய சொல். ஏனெனில், மாண்பின் பகுதியும் அதுவே. வாழ்வில் புகழ் பெற்று, தன் வாழ்வு கடந்து புகழுற்றான், மரபு வாழ்வில் பெருக்க மடைந்தான் என்பதே அதன் நிறை குறிப்பு. வாழ்வு என்பதன் மெய்ப்பொருள் சாவு கடந்து பெருகுவதே. சாவு அதாவது வளர்ச்சியின் ஓய்வு கடந்து நிலவுதல் அதாவது சாவாமைப் பண்பே தமிழர் கண்ட வாழ்க்கையின் குறிக்கோள். சாவா மருந்து என்று தமிழர் புனைந்துரைத்தது இதையே. இங்ஙனம் சாவு கடந்து நீடித்து வாழ்வு பெறுவது உயிர்மரபு மட்டுமல்ல; மனித இனமரபு மட்டுமல்ல; சென்ற தலைமுறைகள், நடைமுறைத் தலைமுறை ஆகியவற்றின் வாழ்க்கைப் பண்புகளும், வருங்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்குரிய வித்தாகத் தனி மனிதன் தன் வாழ்க்கையில் திரட்டி அளித்த உயிர்ப் பண்புகளும் அச்சாவு அல்லது வாழ்வு நிறைவு கடந்து பொங்கி வழிகின்றன. உயிரின் இப்பொங்கற் பண்பையே தமிழர், சிறப்பாகத் தமிழ்த் திருவள்ளுவர், எச்சம், இசை, புகழ் என்று குறிப்பிட்டார். உயிர் என்ற சொல் திருவள்ளுவர் கண்ட இப்பண்பைத் திருவள்ளுவர்க்கு முன்பே கண்டு குறித்துள்ளது! வள்ளுவரைக் கடந்த வண்டமிழ்ப் பண்பு இஃது என்னலாம்! வாழ்தல் என்ற சொல்லும் திருவள்ளுவர் கருத்துப்படி என்றும் நின்று நிலவுதல், சீர்சிறப்பும் புகழும்பட மரபில் இயங்குதல் என்ற பொருள்கள் தந்தன. ஆசி மொழியும் வாழ்த்துரையும் ஆசி மொழியும் வாழ்த்துரையும் முற்றிலும் ஒன்று என்று பலர் கருதி வருகின்றனர். நல்லெண்ணமுடைய உரைகள் என்ற அடிப்படை இரண்டுக்கும் பொதுப்பண்பேயாகும். ஆயினும், வாழ்த்தின் வகைகளுள் ஒன்றாக, ஆசி மொழி அடங்கும். ஆசி மொழியை இக்காரணத்தால் வாழ்த்து என்று கூறலாமானாலும், வாழ்த்தை ஆசிமொழி என்று கூற முடியாது. அதன் பண்பு வேறு. அதன் பொருளும் மரபும் ஆசியைவிட அகல விரிவுடையது. ஆசி கூறுவதற்குரியவர் அதனைப் பெறுபவர்களிலும் மேம்பட்டவர்கள். ஆனால், வாழ்த்துதலுக்கு இத்தகைய வரம்போ, கட்டுப்பாடோ கிடையாது. அது வாழ்த்துக்குரியார் வாழ்வுடன் இணைந்தயாவர்க்கும் உரியது. அது கிட்டத்தட்ட உலகளாவிய, இனமளாவிய பரப்புடையது. ஏனெனில், தாய் தந்தையர் பிள்ளையை வாழ்த்துவது போல, பிள்ளைகள் தாய் தந்தையரை வாழ்த்தலாம். அரசன் குடிகளை வாழ்த்துவது போலவே, குடிகள் அரசனை வாழ்த்தலாம். ஆண்டவன் தம் அன்பரை வாழ்த்துவது போலவே, அன்பர் ஆண்டவனை வாழ்த்தலாம்! தமிழிலக்கிய வழக்கில் வாழ்த்தின் இப்பரந்த பண்பைத் தெள்ளத் தெளியக் காணலாம். மன்னனை முனிவர்மட்டுமன்று, அவன் அமைச்சரும் படைத்தலைவரும், அவன் வாயில் காப்போரும்கூட வாழ்த்தினர்! வாழ்த்திய பின்னரே மன்னரிடம் பேசுதல் தமிழ் அரசவை மரபாயிருந்தது. அரசவையில் மன்னன்முன் மட்டுமன்று, தனிப்பட்ட குடும்ப வாழ்வில் கூட, மன்னரை வாழ்த்தும் சீரிய தேசியப் பண்பு தமிழகத்தில் நிலவியிருந்தது. ஐங்குறுநூற்றின் மருதத்திணையின் பத்துப் பாடல்களுமே மன்னன் ஆதன் அவினியை வாழ்த்தி அகத்துறைப் பொருள் கூறுகின்றது காணலாம். `வாழி ஆதன்’ வாழி அவினி! வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!' எனவேட் டோளே யாயே: யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன் வரைக, எந்தையும் கொடுக்க எனவேட் டேமே!’ (ஐங்குறு நூறு 6) வாழ்த்துக்குரிய ஆங்கிலச் சொல்லும் (டெநளள) இதே பண்புடையதாய் இருப்பது காண்கிறோம். கிறித்தவத் திருநூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்கள் ஆங்கிலச் சொல் தமிழ்ச் சொற்களின் பண்புகளையோ, சமற்கிருதச் சொல் (ஆசீர்வாதம்) மரபையோ உணராமல், வாழ்த்தல் (டெநளள), வாழ்தல் (நெ டெநளளநன) என்ற மூல மொழியின் பண்பார்ந்த சொற்களை ஆசீர்வதித்தல், ஆசீர்வதிக்கப் படல் என்ற உணர்ச்சியற்ற சொற்களாக மொழிபெயர்த்துள்ளனர்! மன்னரிடம் பேசும்போதெல்லாம் முதலில் அவரையும் அவர் ஆட்சியையும் வாழ்த்திப் பேசத்தொடங்குதல் தமிழ் மரபு. கடவுள் பண்புடையாரும் இதுபோலக் கடவுளை வாழ்த்திய பின்னரே, எதுவும் பேசுவர், செய்வர். கடவுள் பெயர் கூறியதும் இதுபோல வாழ்த்தாதிரார். இப்பண்பை இன்னும் கிறித்த வரிடத்தும் இசுலாமியரிடமும் திறம்படக் காணலாம். கடவுள் பெயரோ, கடவுள் பண்புடைய அருட்பெரியார் பெயரோ குறிப்பிடப்படுமிடங்களிலெல்லாம், சமயங்களி லெல்லாம், இசுலாமிய மக்களுள் பேசுவோரும் கேட்போரும் வாசகத்தையே இடை முறித்து, ` இறைவன் திருவடி வாழ்வதாக,' `பெருமான் திருவருள் பரவுவதாக' என்று கூறிய பின்பே இடையில் முறிவுற்ற வாசகத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்வர்! திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ்ப்பெருங்காவியங்களிலும் இம் மரபைக் காணலாம். மறைமொழியும் நிறைமொழியும் தமிழில் ஆசு என்பது உறுதி, புகழ் என்ற இரு பொருள்களைக் குறிக்கும். ஆசிமொழி என்பது உண்மையில் இவ்விரண்டையும் வளர்க்க உதவும் மொழிகள் அல்லது சொற்கள் என்பதே. நிறைமொழி மாந்தராகிய அந்தண்மை சான்ற பெரியோர் பொதுவாக உலகுக்கு நின்று வழிகாட்டும் அறவுரையையோ, தனி மனிதருக்கு வழிகாட்டும் அறிவுரையையோ வழங்கினால் அதனை நாம் நிறைமொழி என்கிறோம். `நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப!’ என்ற தொல்காப்பிய நூற்பாவும், அதனைப் பின்பற்றி ``நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’’ என்று வள்ளுவர் வகுத்த குறட்பாவும் இவ் வாசி மொழியின் முதல் விடையையே குறித்தன. நிறைமொழி மாந்தர் தன்மையில் குறையாத சீரிய கவிஞரும் இத்தகைய உறுதி பயக்கும் உரைகளைத் தங்கள் வாழ்த்துரை களில் கூறுவதுண்டு. இவற்றை அகப்புறத் திணைகள் வகுத் துரைத்த தொல்காப்பியர் புறத்திணைகளுள் ஒன்றான காஞ்சித்திணை என்று சிறப்பித்தார். அறவோர்க்குரிய இத் திணையின் பெயராலேயே பண்டைச் சமய அறங்கள் அனைத்துக்கும் நடுநிலைக் களமாக 12ஆம் நூற்றாண்டுவரை நிலவிய காஞ்சி மாநகரம் அப்பெயர் பெற்றதோ என்று கருதல் தகும்! இத்திணைக்குரிய முழு நூலாகச் சங்க இலக்கியத்தில் முதுமொழிக் காஞ்சி இயங்குகிறது. மன்னர், வெளிப் புகழுரைகளுக்கிடையே, அகத்துறை சார்ந்த இன்ப உரையாடல்களிடையேகூட, சங்க இலக்கியத்தில் நீதி நூல்களில், அல்லது சமய நூல்களில்கூடக் காணுதற்கரிய உயர் அறவுரைகளை, இடித்துக் கூறும் அறிவுரைகளை, சினந்து கூறும் எச்சரிப்புரைகளைக் காணலாம்! சமுதாய முதல்வராகிய மேலோர் வாழ்த்துச் சமுதாயம் முழுவதையுமே இயக்குவது. ஆதலால், அவர்கள் வாழ்த்துக்குப் பேராற்றல் உண்டு என்று தமிழர் மதித்தனர். அவர்கள் கண்டனமும் அதுபோலச் சமுதாய நலம் கருதிய எச்சரிக்கையே யாகும். எனவேதான் அவர்கள் சீற்றத்தின் அழிவுக்கு மன்னர் பெருமக்கள்கூட அஞ்சினர்! ``குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்த லரிது!’’ ``வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம், தகைமாண்ட தக்கார் செறின்!’’ என்று வள்ளுவர் மேலோர் சீற்றத்தை வாழ்வின் உச்சநிலை எச்சரிக்கைக் கற்களாக வகுத்ததன் காரணம் இதுவே. சான்றோர் சால்பும் வெகுளியும் வள்ளுவர் மரபில் நின்ற தமிழர் கடவுளையே வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாகக் கொண்டனர். அத்தன்மை மிக்க பெரியோர் பண்பும் இதுவே. தமக்கென வாழாத அப் பிறர்க்குரிமையாளர் தம் என்பையும் பிறர்க்கு உரிமைப் படுத்துபவர். அத்தகையோர் என்றும் சினங் கொள்பவர் அல்லர், கொண்டாலும் அஃது உணர்ச்சி வசப்பட்ட சினமாகவோ, தன்னலம் குறித்த சினமாகவோ இராது. அறிவார்ந்த, உலகநலங் குறித்த சினமாக மட்டுமே இருக்கும். எனவேதான், அவர்கள் சீறின், அச்சீற்றம் ஊழின் சீற்றமாக, இயற்கையின் சீற்றமாக, இயற்கையின் சீற்றம் கொண்ட உருவாக அமையும். அறவோர் நெறி நின்ற பாவலர் வசைப்பாட்டும் தமிழில் அறம் பாடுதல் என்றே குறிக்கப்பட்டது. கவிஞர் வசைப் பாட்டுக்குத் தமிழ் மன்னர் அஞ்சினர் என்பதையும் அவர்கள் வாழ்த்தையே மிக உயர் செல்வமாகக் கருதினர் என்பதையும் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. செங்கண்மாவின் தலைவன் நன்னன் புலவர் பழிக்காளாகி அழிவுற்றான். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்கேகும் போது தன் சூளுரையில் `போர் வெற்றி கொள்ளேனானால், புலவர் என்னைப் பாடா தொழிக' என்கின்றான்! ஆசிமொழி என்பதற்கிணையான சமற்கிருதச் சொல் (ஆசீர்வாதம்) வாழ்த்து என்ற சொல்லின் பண்பிலிருந்து மட்டுமன்றி, ஆசிமொழி என்ற தொடரின் பண்பிலிருந்தும் பெரிதும் திரிபுற்றே நிலவுகின்றது. `ஆசி' என்ற சொல் வழியாகவே அதுவும் பிறந்ததாயினும், அது தெய்வீக, இயற்கை மீறிய ஆற்றலுடைய சொல் என்ற தவறான பொருளை எப்படியோ மேற்கொண்டது. `நிறைமொழி மாந்தர் பழிமொழி'யும் இதுபோல, சினங்கொள்ளா அருட் பண்பாளர் கண்டன உரை என்ற சீரிய பொருளிலிருந்து இயற்கை மீறிய ஆற்றலுடையார் கடுஞ்சினம் என்ற கருத்தாக இழிவுற்றது. இயற்கையை இயக்கும் சீரொழுங்குபட்ட ஆற்றல் என்ற உயர் கருத்திலிருந்து, இயற்கை மீறிய ஆற்றல் உடையவர் என்ற நிலைக்குக் கடவுள் கருத்துப் புராணங்களில் இழிந்துவிட்டது காண்கிறோம். சான்றோர் சால்புடை வாழ்த்துக்கும் சால்புக்கேடு கண்டவிடத்துக் கொண்ட வெகுளிக்கும் வள்ளுவர்பிரான் தகை சான்ற இலக்கணம் கண்டு கூறியுள்ளார். அவ்விலக்கணங்களில் முந்தியதற்குரிய இலக்கியத்தைச் சங்க இலக்கியத்தில்கூட ஓரளவிலேயே காணலாம். அவ் விலக்கியத்தில் பண்புடைப் புலவர்கள் அறிவுடை வாழ்த்துகள் பல உண்டு. அதற்கியைந்த பண்புடை மன்னரும் இருந்தனர். ஆனால், பொதுவாக அக்கால மன்னரிடம், அதாவது கடைச் சங்ககால மன்னரிடம், வீரம், கொடை முதலிய பண்புகள் மலிந்த அளவுக்குப் பண்பு மலிந்ததாயில்லை என்றே கூறுதல் வேண்டும். பண்பு கெடுக்கும் மரபு இரண்டாயிரம் ஆண்டு படர்ந்தே அவர்கள் தடம் இன்று அழிந்துள்ளது. அவர்கள் இனமரபும் நலிந்துள்ளது. ஆயினும், திருவள்ளுவர் கண்ட சான்றோர் வெகுளியின் இலக்கணத்துக்கு அரியதொரு இலக்கியமாகச் சிலப்பதிகாரம் இன்றும் விளங்குகின்றது. பெண்மையின் நிறைவு கண்ட கண்ணகியின் வானுயர் சீற்றத்தை அத்தகையதொரு தெய்வச் சீற்றமாக்கிக் காட்டுகிறார் இளங்கோ! வாழ்த்தின் வண்ணம் `வாழ்க' என்று சொல்லளவில் கூறுவதால் மட்டும் ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. `தாழ்க', `அழிக' என்று பழிப்பதால் மட்டும் ஒருவர் தாழ்ந்துவிடவும் மாட்டார். வாழ்த்துதல் சொல் கடந்து மனமொழி மெய்கள் மூன்றும் அளாவியதாய் இருந்தால் மட்டுமே பயனுடையதாகும். இவ்வகையில் வாழ்த்துதல் என்பதற்கு உண்மை எதிர்ப்பதம் கிடையாது. சொல்லளவில் எதிர்ப்பதங்கள் வீழ்க, ஒழிக என்பவையே, வாழ்வுக்கு எதிர்ப் பண்புகளையே வீழ்க, ஒழிக என்று கூறுதல் தமிழ் மரபு. இவையும் மன மொழி மெய் அளாவிக் கூறப்படுவனவே. இரண்டிலும் உட்பொருள் வாழ்வு நோக்கியதேயாகும். `வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்! வீழ்க தண்புனல்! வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே சூழ்க. வையகமும் துயர் தீர்கவே! என்ற கடவுள் வாழ்த்தில், வீழ்க, ஆழ்க, சூழ்க என்ற சொற்களும் `வாழ்க' என்ற பொருளே தருவது காண்க. தீமை வீழ்தல் நன்மை வளர்தலுக்குரிய ஒரு துணைவளமேயாகும். மழைத்துளி வீழ்தல், கடவுள் புகழ் சூழ்தல் நல்வாழ்வுக்கு உதவும் செய்திகள் என்று கூறத் தேவை இல்லை! வாழ்த்து ஆசிமொழியைப்போல ஒருதிசைப் பண்பன்று. வாழ்த்துபவரிட மிருந்து வாழ்த்துப் பெறுபவரிடம் செல்வது மட்டுமன்று. வாழ்த்துபவரிடமிருந்து வாழ்த்துப் பெறுபவரிடம் சென்று, மறுதிசையில் வாழ்த்துப் பெறுபவரிடமிருந்து வாழ்த்துபவரிடம் மீளும் ஓர் அலை எதிர்அலைப்பண்பு அது. அது பரப்பும் நல்லெண்ண, நல்மொழி, நற்செயலார்வ அலைகள் வாழ்த்துபவரிடமிருந்து வாழ்த்துப் பெறுபவரை நோக்கியும், வாழ்த்துப் பெறுபவரிடமிருந்து வாழ்த்துபவரை நோக்கியும் செல்வதுடன் அமைவதில்லை. அவர்களைக் கடந்து, இவர்கள் இருவர்க்கும் தாயகமான சமுதாய இன எல்லை முழுதும் அளாவி நிரப்பி, அவ்வெல்லை கடந்து பொங்கி வழிந்து, மனித இனம் முழுவதும், உயிரினம் முழுவதும், இயற்கை எல்லைவரை சென்று பரவுவதாகும். மனித இன எல்லை கடந்து மேலே சென்று `வாழ்க வானவர்' என்றும், கீழே சென்று `வாழ்க ஆனினம்' என்றும், இயற்கையளாவி `வீழ்க தண்புனல்' என்றும் தெய்வப் பாசுரங்கள் வாழ்த்தியதன் நோக்கு இதுவே. தவிர, அமைதி வாய்ந்த நீரில் எழும் சிற்றலைகள் அவை தோன்றிய மய்ய இடத்திலிருந்து புதுப்புது அலைகள் எழுப்புவதையும், அவையும் படர்ந்து கொண்டேயிருப்பதையும் காணலாம். ஆனால், அவை நம் பார்வையாற்றல் எல்லை கடந்தும் பரவிக்கொண்டேதான் இருக்கின்றன என்பதை இயங்கியல் நூலார் அண்மைக் காலத்தில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். உண்மையில் பரப்பில் செல்லும் அலைகளே யன்றி, பரப்பிலிருந்து ஆழ் தடநோக்கிச் சென்று பரவும் நுண்கிளை அலைகளும் ஓயாது இயங்கிக்கொண்டே தான் இருக்கின்றன. இதுபோலவே வாழ்த்தும்போது இயக்கப்படும் நல்லலைகள் சமுதாயம் எங்கும் பரவுவதுடன் அமையாது, சமுதாய வாழ்வில் என்றும் இயங்கிக்கொண்டே இருப்பவை ஆகும். தலைமுறை கடந்து தலைமுறை, ஊழி கடந்து ஊழி புத்தலைகளை, முன்னிலும் நுண்ணிய பண்பலைகளை அவை எழுப்பிக் கொண்டே இருப்பன. இட, கால எல்லை கடந்த கடவுள்பண்பாக இவ்வலை இயக்கம் நின்று இனத்தில் இயங்குகின்றது. அதுவே இனவாழ்வின் உயிராகி, இனத்தை இயக்கி வளர்க்கும் ஆற்றலுடையதாகிறது. வாழ்க்கைக் குழு வாழ்தல் என்ற சொல்லுக்கு இரண்டு பிறவினை வடிவங்கள் உண்டு. ஒன்று வாழ்வித்தல், மற்றொன்று வாழ்த்துதல். மேலீடாகப் பார்த்தால்கூட, இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு, பண்பு வேறுபாடு, மரபு வேறுபாடு உண்டு என்பது தெளிவாகத் தெரியவரும். வாழ்வித்தல் என்பது வாழும்படி செய்தல், வாழ்வதைத் தூண்டுதல் அல்லது வாழத் துணைசெய்யும் செயலைச் செய்தல் என்று பொருள்படும். இச்சொல் செயலெல்லையில் நிற்பது. ஒரு தனிச் செயலின் குறுகிய இட எல்லையிலும் கால எல்லையிலுமே இது வழங்குவது. ஆனால், வாழ்த்தல் அல்லது வாழ்த்துதல் விருப்பம், அவா, ஆர்வம், நோக்கம் ஆகியவற்றையும் சார்ந்தது. இவை வாழ்த்துபவன் செயலெல்லை, சொல்லெல்லை, கருத்தெல்லை ஆகிய மூன்றையும் தாண்டியது. ஏனெனில், இவை புற உள்ளமாகிய அறிவு கடந்து, இடை உள்ளமாகிய உணர்ச்சி கடந்து, அக உள்ளமாகிய உணர்வு சார்ந்தவை. உணர்ச்சி, அறிவு, சொல், செயல் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கே உள்நின்று இயக்குபவை இவை. வாழ்த்துதல் வாழ்த்துபவன் அவாவாக, ஆர்வமாக, அவன் வாழ்க்கைக்கே உரிய உள்நோக்கமாக, விருப்பமாக எழுகின்றது. அஃது அவன் வாழ்வினூடாக நின்று நிலவி, வாழ்த்துபவர் வாழ்வுடன் வாழ்த்துக்குரியவர் வாழ்வை இணைத்து, இருவர் வாழ்விலும் படர்கிறது. இருவர் வாழ்வுக்கும் நிலைக்களமான வாழ்க்கைக் குழு அல்லது சமுதாயம், இனம் ஆகியவற்றிலும் அது பரவி, அவ்விருவர் வாழ்வின் உள்நின்று உயிராகவும், புறம்நின்று ஆழமாக வும் ஒருங்கே செயலாற்றுகின்றது. வாழ்த்துபவர், வாழ்த்தப் பெறுபவர் ஆகியவரிடையே இயல்பாக உயர்வு தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால், வாழ்த்தின் பண்பே அவ்வுயர்வு தாழ்வுகளைச் சரி செய்வதாக அமைகிறது. ஏனெனில், வாழ்த்துபவர் அவா ஆர்வத்தால், அவர் வாழ்வு முழுவதுமே வாழ்த்துக்குரியவர் வாழ்வாகி விடுகிறது. அதே அவா ஆர்வம் அவர் எழுப்பும் நல்லெண்ண அலைகளினூடாகச் சென்று வாழ்த்துக்குரியவர் வாழ்விலும் புகுகின்றது. வாழ்த்துப் பெறுபவர் வாழ்வும் வாழ்த்துபவர் வாழ்வுடன் இணைந்து, அவர் வாழ்வாகி விடுகிறது. வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவராகவும், வாழ்த்தப்படுபவர் வாழ்த்துபவராகவும் எளிதில் அமைவதன் காரணம் இதுவே. வாழ்த்திலிணைந்தவர் அவா ஆர்வமும் நோக்கமுமே அவர்கள் நல்லெண்ணச் சூழலில் இணைந்த யாவரையும் இயக்குவதால், படிப்படியாக, அவர்களைச் சூழ்ந்து வாழ்பவர் அனைவரும் ஒரே ஆர்வத்தில், நோக்கத்தில், பண்பில் இணைந்து, ஒரே அன்பார்வக் குழுவாக அமைகின்றனர். இக்குழுவே மனித இனம் என்னும் அகல நீர்ப்பரப்பில் குடும்பம், சுற்றம், சமுதாயம், ஊர், நாடு, இனம், உலகம் எனப் பரந்து, மனித இனச் சிற்றுறுப்புகளாகவும் பேருறுப்புகளாகவும் அமைகின்றன. மனித நாகரிகமும் பண்பாடும் வாழ்வும் இவற்றையே கொழுகொம் பாகவும், பந்தல்களாகவும் கொண்டு படர்ந்து தழைக்கின்றன. அறிவுப் பண்பு வாழ்க என்று வாழ்த்துபவர் அன்புணர்ச்சி மட்டுமன்றி, அறிவுத் திறமும் உடையவரானால், அஃது அவர் வாழ்த்தின் திறத்தைப் பன்மடங்கு பெருக்குவது உறுதி. ஏனெனில், ஆர்வம் அவர்க்கு ஆற்றல் மட்டுமே அளிக்கிறது. அறிவு அவர்க்கு வாழும் வகை காட்டி, ஆற்றல் திசை தப்பிச் செல்லாமலும், இசைவுக் கேடுகள் விளைவிக்காமலும் நல்வழியில் அதைச் செலுத்த உதவுகிறது. வாழும் வகை தெரிந்த அவர் வாழ்வு இலக்கிய வாழ்வாய் அமைகிறது. அவர் அவர் ஆர்வம் பரப்பும் பண்பலை களுடன், வாழும் வகை பற்றிய அறிவலையும் பரவிச் செயலாற்று கிறது. அவர் வாழ்வில் இயங்கி, வாழ்த்துக்குரியவர் வாழ்வையும், அவருடன் பாசத்தால், வாழ்க்கைத் தொடர்பால், இனத் தொடர் பால் இணைந்தவர் வாழ்வையும் இயக்குகிறது. அத்துடன் அவர் அறிவுரையால், வாழ்த்துக்குரியவரும் வாழ்வினத்தவரும் அறிவின் உதவியால் தம் ஆர்வ ஆற்றலையும் உணர்ச்சி யாற்றலையும் செயலாற்றலையும் பயன்மிக்க ஆற்றலாக்கு கின்றனர். அவர்கள் கூட்டுழைப்பால் இவ்வாற்றல் எல்லையற்ற வளம் பெற்றுப் பொங்கல் வாழ்வுடன் பொலிவுறுகின்றது. அன்பு ஒற்றுமை வளர்க்கும். நோக்கம் இந்த ஒற்றுமைக்கு வலுத்தரும். அவர் ஆர்வம் ஒற்றுமையைச் செயலொற்றுமை யாக்கி, செயலை இயக்கி ஊக்கும். ஆயினும், இவ்வாற்றல்கள் பேராற்றல்களேயாயினும், இயற்கை ஆற்றல்கள் போன்ற குருட்டு ஆற்றல்களே. அறிவின் துணையில்லாதபோது, அவை செயலாற்றுமேயன்றி, திசை தெரிந்து, நெறியுணர்ந்து செயலாற்ற மாட்டா, ஏனெனில், அவை தீ, மின்வலி, புயல், பெருவெள்ளம், வெடிமருந்து ஆகியவை போன்றவை. தீ, குளிர் போக்க, உணவு சமைக்க, இரும்பு முதலிய திண் பொருள்களை வளைத்துருவாக்க உதவுவது. ஆனால், அதுவே நாட்டை அழிக்க, பன்னூறாண்டு வளர்ச்சியுடைய காட்டை ஒரு நொடியில் பொசுக்க வல்லது. மின்வலி எந்திரங்களை இயக்குவது, நகர மக்களுக்கு ஒளியும் காற்றோட்டமும், ஏற்ற இறக்க வாய்ப்பும், தொலைவென்று காலத்தை ஆளும் திறமும் அளிப்பது. ஆனால், அதுவே உயிரினங்களைக் கருக்கி ஒழிக்க, பேரழிவு செய்ய வல்லது. புயலும் வெள்ளமும் மேடுபள்ளமாக்கும். பள்ளம் மேடாக்கும். பூங்காவைப் பாலைவனமாக்கும். பாலைவனத்துக்கும் வளமூட்டிப் பூங்காவாக்கும். நட்பு, காதல், வீரம், சினம் முதலிய உணர்ச்சிகள் யாவுமே நன்மை தீமைத் திறமறியாத, கண்ணற்ற, திசை தெரியாத குருட்டு ஆற்றல்கள். அன்பு, அவா, ஆர்வம், நோக்கம் ஆகிய உணர்வுப்படிகள் இவ்வாற்றலைப் பரப்புகின்ற, ஆற்றல் களத்தை விரிவுபடுத்துகின்ற பண்புகளே தவிர வேறல்ல. தீயின் ஆற்றலை எளிதில் பரப்பும் உலர்ந்த சுள்ளிகள் போலவும், புயலின் ஆற்றலைப் பரப்பும் பாலைவெளிகள் போலவும், மின்வலி பரப்பும் ஊடுபொருள்கள் போலவும், நன்மை தீமை தரும் இருவகை உணர்ச்சிகளையும் நாலா திசையில் பரப்பும் எண்ணற்ற பண்புகளே அவை. இயக்கும் ஆற்றல்கள், ஊக்கும் ஆற்றல் களாகிய இவ்விரு பேராற்றல்களையும் தனி மனிதன்நலம், சமுதாயநலம், இனநலம் ஆகிய திசைகளில் திருப்பிச் செலுத்திப் பயனுடைய நல்லாற்றல்களாக்குவது பண்பேயாகும். ஆற்றல்மிக்க உறுப்புகளாகிய கையும் காலும், தசை நாரும் நரம்பு நாடிகளும், குருதி ஓட்டமும், அவற்றின் செயல்களுக்குத் திசையும் நெறியும் அறிந்து ஆணையிடும் கண்ணும் மூளையும் இல்லாத வழி பயன்படமாட்டா. காட்டுவெள்ளம் இருகரை வழிப்பட்டாலன்றி நாட்டில் பசுங்கழனியும் பூங்காவும் வளர்த்துப் பொங்கல் வளம் உண்டுபண்ண மாட்டாது. மின்னாற்றல் மின்தடை களினூடாகச் செலுத்தப்பட்டாலன்றி குறித்த இடத்தில் சென்று குறித்த முறையில் செயலாற்ற முடியாது. இவை போலவே ஆற்றல்மிக்க உணர்ச்சி, ஆற்றல் பரப்பிப் பெருக்கும் உணர்வு ஆகிய இரண்டையும் வாழ்வாக்கி வளப்படுத்தும் முறையில், அறிவுப் பண்பு வாழ்க்கையின் கண்ணாகவும், கரையாகவும், ஊடுதடைப் பொருள்களாகவும், உயிராகவும் நின்று செயலாற்றுகின்றது. உணர்ச்சியும் ஆர்வமும் இல்லாத அறிவு ஆற்றலற்றது; செயலற்றது. ஆனால், அறிவின் துணையற்ற உணர்ச்சியும் ஆர்வமும் உயிரற்றவை. உணர்ச்சியும் ஆர்வமும் அறிவும் கூடிய இடத்தில், அறிவு வழி வகுக்க, உணர்ச்சியும் ஆர்வமும் ஆற்றல் பெருக்க, இவற்றின் ஒத்துழைப்புப் பயனையும் இன்பத்தையும் ஆற்றலையும் ஒருங்கே வளர்க்கும். வாழ்த்துபவர் நல்லெண்ண ஆர்வத்துடன் கூடிய அறிவுப் பண்பு, வாழ்த்துபவர், வாழ்த்துக்குரியவர் ஆகிய இருவரையும் வாழ்வுக் குழுவையும், இயக்கிக் கூட்டுச்செயல் பெருக்கு வதாயமையும். உணர்ச்சி, அறிவு, பண்பு இன்பம் நாடுவது துன்பம் தவிர்ப்பது-இந்த இரண்டும் மனிதனுக்கு மட்டுமன்று, உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான இயல்பு ஆகும். எல்லாப் பொருள்களையும் கீழ்நோக்கி, நிலவுலக மய்யம் நோக்கி இழுக்கும் ஈர்ப்பாற்றலே போல, உயிர்களனைத்தையும் இயக்கும் அடிப்படை உயிராற்றல் இதுவே. இதையே நாம் உணர்ச்சிக் கூறு என்று அழைக்கிறோம். தற்காலிக இன்பம் நிலையான துன்பம் தரலாம். தற்காலிகத் துன்பம் நிலையான இன்பத்துக்கு வழி வகுக்கலாம். இதனை உணர்ந்த மனிதன் இன்பத்தில் சிலவற்றைத் தீயன என விலக்கி, நல்லன எனச் சிலவற்றைக் கொள்கிறான். அதுபோலவே துன்பத்தில் சிலவற்றை நல்லன எனக்கொண்டு, தீயன எனப் பிறவற்றையே தவிர்க்க விரும்புகிறான். இன்பம், துன்பம் என்ற கீழ் விலங்கியல் பாகுபாட்டைவிட்டு, இன்ப துன்பங்களுட் சிலவற்றை நன்மை எனக் கொண்டும், மீந்த சில இன்ப துன்பங்களைத் தீமையென விலக்கியும் ஒழுக விரும்பும் உளப்பகுதியே அறிவுக்கூறு ஆகும். தனி மனிதன் அறிவுக்கூறு தற்காலிக இன்ப துன்பம் கடந்து, நிலையான இன்பம் நாடுகிறது. அதுபோலவே பொது அறிவுக்கூறு, சமுதாய இன அறிவுக் கூறுகள், தனி மனிதன் இன்பதுன்பம், ஒரு தலைமுறை இன்ப துன்பம் கடந்து, சமுதாய இன்பம், இன இன்பம் நாடுகின்றன. ஒரு தனி மனிதன் இன்பம் மற்றொரு தனி மனிதற்குத் துன்பமாக அமையலாம். ஒரு தனி மனிதன் துன்பம் மற்றொருவற்கு இன்பமாகத் தோன்ற லாம். இதுபோலவே தனி மனிதன் இன்ப துன்பம், பொது சமுதாயத்துக்குத் துன்ப இன்பமாகவும்; ஒரு தலைமுறையின் இன்பதுன்பம், தலைமுறை கடந்த இனத்தின் துன்ப இன்பமாகவும் மாறுபடக்கூடும். இவற்றைச் சமுதாயமும் இனமும் எப்போதும் உணர்வதில்லை. ஏனெனில், சமுதாயத்திலும் இனத்திலும் வாழும் மக்கள் தம் தனிக் கண்ணோட்டத்துடனேயே சமுதாயத்தையும் இனத்தையும் காண்கின்றனர். சமுதாயக் கண்ணோட்டமுடைய சமுதாய அறிஞரும், இனக்கண்ணோட்டமுடைய இனஅறிஞரும் சமுதாய இன்பதுன்ப அடிப்படையிலும் தனி மனிதன் இன்ப துன்பங்களை நல்லன, தீயன என வகுக்கின்றனர். சமுதாய அறிஞர் வகுக்கும் நன்மை தீமைப் பாகுபாடே அரசியல் நீதி அல்லது பொருள். இன அறிஞர் வகுக்கும் நன்மை தீமைப் பாகுபாடே ஒழுக்கம் அல்லது அறம். இவை இரண்டும் சமுதாயஞ் சார்ந்த, இனஞ்சார்ந்த பொது அறிவின்பாற் பட்டவை ஆகும். உலகின் அரசியல், சமுதாய ஒழுங்குமுறை நூல்கள், சட்டங்கள் ஆகியயாவும் சமுதாய அறிஞர் வகுத்தவையே. அறநூல்கள் அல்லது ஒழுக்க நூல்களோ இன அறிஞரால் வகுக்கப்பட்டவை. இருவகை அறிஞர்களின் தொலைநோக்குக் கேற்ப அவர்கள் சட்டம், சமுதாயம், ஒழுக்கம், அறம் ஆகியவற்றின் உயர்வு தாழ்வுகள் அமைகின்றன. உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டுக்கும் மேற்பட்ட கூறு பண்புக்கூறு. கலைக்கூறு. சமுதாய அறிஞரும் இன அறிஞரும் இன்பதுன்பப் பாகுபாடுகளை நன்மை தீமைப் பாகுபாடுகளாகப் புதிய அடிப்படையில் வகுப்பது போல, பண்பாளர்கள், கலைஞர்கள் ஆகியவர்கள் நன்மை தீமைப் பாகுபாட்டை அதனினுமுயரிய ஒரு பாகுபாட்டின் மீது புதிதாக வகுத்தமைக் கின்றனர். அவையே அழகுடையன, அழகற்றன என்ற பாகுபாடும்; உயர்வுடையன, இழிந்தன என்ற பாகுபாடும் ஆகும். இவற்றை வகுப்பவர் கலைஞர், பண்பாளர் ஆகியோர். அவர்களை இனங்கடந்த கடவுள் பண்புடைய அறிஞர் என்னலாம். இனங்கடந்த கடவுள் பண்புக்கூறே உணர்வுக் கூறு உணர்ச்சி, உணர்வு ஆகிய இரண்டும் தொடர்புடைய சொற்கள். ஆனால், முன்னது அறிவு செயலாற்றாத இயற்கைப் பண்பு. பின்னது அறிவு கடந்த, முழு நிறை அறிவுடன் உணர்ச்சி இணைந்த உச்ச உயர்பண்பு ஆகும். திருவள்ளுவர் வகுத்த அறம், பொருள், இன்பம் மூன்றுமே இந்த உணர்வு நிலையில் வகுக்கப்பட்டவை ஆகும். உணர்வு நிலைப் பண்பை இன்னும் சென்று எட்டாத இன்றைய உலகில் அது கால இடம் கடந்த பொதுமறையாய் அமைந்துள்ளது இதனாலேயே என்று காணலாம். 3. வள்ளுவர் கண்ட அருளறம் வாழ்க்கை பற்றிச் சிந்தித்தவர், சிந்திப்பவர் மிகச் சிலர்; சிந்தியாதவரே மிக மிகப் பலர்! சிந்தித்தவர், சிந்திப்பவருள்ளும் தம் வாழ்க்கை பற்றிச் சிந்தித்தவர், சிந்திப்பவர்தாம் மிகப்பெரும்பான்மையினர். ஆனால், இவர்களைச் சிந்திப்பவர் பட்டியலில் சேர்ப்பதற்கில்லை. ஏனெனில், தனி வாழ்வு என்பது வாழ்வேயன்று. மனித இனத்தில், விலங்கினங்களில், கீழ்த்தர உயிரினங்களில்கூட, தனி உயிர் வாழ்வு என்பது இனவாழ்வில் ஓர் இழை; குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற கூட்டு வாழ்வுத் தளங்களில் ஒரு கண்ணி. இம்மூன்று தளங்கள் சாராத நிலை உயிர் வாழ்வன்று, உயிரிலாப் பொருளின் நிலையே, உயிரற்ற நிலையே! இன வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு இவற்றைப் பற்றிச் சிந்தித்த மிகச் சிலரே, சிந்திக்கும் மிகச் சிலரே, மனித நாகரிகத்தை ஆக்கியவர்கள்! மனிதனை ஆக்கியவர்கள்! ஏனெனில், இச்சிந்தனை மனிதனிடம் மட்டுமன்று. விலங்கு களிடையேகூட உண்டு. சூல்கொண்ட தன் பிடியுடன் சேற்றில் படிந்த சிறிய அளவான நீரைக் குடிக்கச் சென்றது, ஒரு களிறு! பகிர்ந்து குடிக்கப் போதாதஅளவு நீர்! பகிராமல் குடிக்கவோ பிடி விரும்பாது! அதன் தமிழ்ப்பண்பு அவ்வளவு! களிறு வள்ளுவர் பண்பை மேற்கொண்டது! குடிப்பதாக நடித்தது! பிடி நீரை அருந்திவிடாய் தீர்ந்தது! இது சங்க இலக்கியம், கலித்தொகை தரும் ஒரு காட்சி! யானைக் கூட்டத்தில் முதிய யானைகள் முன்னே செல்ல, பருவ இளங்களிறுகள் பின்னே போக, பிடிகள், குட்டிகள் இடையே அணிவகுத்துச் செல்லும் என்று அறிகிறோம். யானைகளை வீழ்த்த மனித இனத்தார் குழிபறித்து மூடிவைத் திருப்பது வழக்கம்! முதியயானைகள், தம் அனுபவத்தால் இதனை உணர்ந்து, ஒரு காலால் நிலத்தை அழுத்திப் பார்த்துச் செல்லுமாம்! காட்டில் தன்னாண்மையுடன் நானூறு ஆண்டளவும் வாழும் யானையினம், நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை என்றும் அறிகிறோம். நாட்டில் அதன் இனப்பெருக்கம்கூடத் தளர்வுறுகிறதாம்! மனிதர் நாடு அதற்குக் காடு என்பதை அது அறிந்துள்ளது என்னலாம்! யானையின் குடும்ப, சமுதாய, இனச் சிந்தனைகளை நாம் இங்கே காண்கிறோம்! குடும்பம், சமுதாயம், இனம் ஆகியவற்றை வளர்க்கத் திட்டமிடும் உயிரினம் மனித இனம் மட்டுமன்று, பல்வேறு படிகளில் பறவைகளிலும் விலங்குகளிலும், பூச்சியினங் களிலுங்கூட அவ்வகைத் திட்டங்கள் வளர்ந்துள்ளன. விலங்கினமும் விலங்கின நிலையிலுள்ள மனிதனும் இத்தகைய சிந்தனைகளாலேயே மனித நாகரிகப்படியை நோக்கி முன்னேற, அப்படியில் மேலும் ஓங்க முடிந்துள்ளது; முடிகிறது. விலங்கினத்தில்கூட ஏற்பட்டுவிட்ட இந்தச் சிந்தனை மரபு மனித இனத்தில் பெரும்பாலோரிடம் ஏன் பரவவில்லை? இது சிந்திக்கத்தக்கது தமிழ் இலக்கிய ஏடுகள் எத்தனையோ இடங்களில் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டியுள்ளன. மனித இனத்தின் ஒரு புதிர் மனித இனத்தில் பெரும்பாலோர் சிந்தியாதவர்கள். இன்னும், இருபதாம் நூற்றாண்டிலும் இந்த நிலை! உலகியல் நாகரிக உச்சியில் உலவுவதாகக் கூறப்படும் மேனாடுகளிலும் இந்த நிலை! உலகியல் அறிவு கடந்து கடவுள் பண்பின் உயர் தளங்களில் மிதப்பதாகக் கூறப்படும் கீழை உலகில்கூட இதே நிலைதான்! மனித இனத்தில் பெரும்பாலோர், விலங்கினத்தில் அன்று. இது குடியாட்சிக் காலம் என்று கூறப்படுகிறது! குடியாட்சித் தத்துவப்படி, ஓர் இனத்தின் பெரும்பான்மை யினரே அதன் பிரதிநிதிகள் ஆவர். அவர்களே அவ்வினத்தை ஆளுதற்குரியவர்கள். அவர்கள் நலங்கருதியே, அவர்கள் விருப்பத்துக்கிணங்கவே ஆட்சி நடைபெற வேண்டும். அவர்கள் நலமே ஆட்சி நோக்கமாக இருத்தல் வேண்டும். சிந்தனையால் உயர்ந்த மனித இனத்தில், வாழ்க்கைச் சிந்தனையால் உயர்நாகரிகம் பெற்ற நாகரிக இனங்களில், நாடுகளில், மனித நாகரிக இனத்தின் பிரதிநிதிகள், மனிதனை ஆட்சி நலத்துக்கே உரியவர்கள் சிந்தனை யற்றவர்கள்!! ஏன் இந்த நிலை? ஏன் இந்த நிலை? கேட்பார் இல்லை! மனித இனத்தின் புதிர்-மனித இனத்தின் வருங்காலத்துக்கு எச்சரிக்கையாய் அமையும் சுட்டு விரல் இது! பெரும்பான்மை மக்கள் சிந்தனையற்றவர்களாய் இருப்பானேன்? இது யார் குற்றம்? அவர்கள் குற்றமா? சிந்தித்த சிறுபான்மையினர் குற்றம்தானா? சிந்தித்த சிறுபான்மையினரே மனித இனத்தை ஆக்கிய வர்கள்; சிந்திக்கும் சிறுபான்மையினரே இன்னும் அதை வளர்ப்பவர்கள். சிறுபான்மையினரே மனித இனத்தை ஆக்கியவர்கள், இயக்குபவர்கள். ஆனாலும், பெரும்பான்மை மக்கள் சிந்தனைச் செல்வம் பெறவில்லை. இஃது அந்தச் சிந்தனைச் சிற்பிகள் குற்றம்தானா? அல்ல, அல்ல; அல்லவேயல்ல! சிந்தனையை, சிந்தனைச் செல்வத்தை, இந்தச்சிந்தனைச் சிற்பிகள் தமக்குள்ளாகவே வைத்துக் கொண்டவர்களோ, கொள்பவர்களோ அல்லர். அவர்கள் சிந்தனை தம்மைப் பற்றியதன்று. தம் வாழ்க்கையைப் பற்றியதல்ல; குடும்ப, சமுதாய, இனவாழ்வு பற்றியது. எனவே அவர்கள் சிந்தனை விரிந்து செல்வது! சிந்தனையைக் குடும்ப, சமுதாய இன எல்லைகளில் பரப்புவதே! சிந்தனை மரபு பரப்பும் இந்தச் செயலை அவர்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர். அதுவே மனித நாகரிகம், பண்பாடு, கலை, கல்வி எனச் செயலாற்றி, மனித இனம் முழுவதும் பரவி வருகிறது, பரவியுள்ளது. கூட்டு வாழ்வைப் பெருக்கும் அளவுக்கு அவை பரவியுள்ளன. ஆனால்; உழைக்கும் மக்கள் அக்கூட்டு வாழ்வில் பங்குகொள்ளும் அளவுக்கு, சிந்தனை செய்யும் அளவுக்கு அவை பரவவில்லை! பொது மக்களிடையே அவற்றின் பயன் படியுமளவுக்கு அவை பரவவில்லை! பசுங் கழனியும் பயிரும் அவை வளர்க்கவில்லை. முட்புதர்க் காடும் களைகளுமே வளர்க்கின்றன! வளர்க்கப் பயன்படுத்தப் படுகின்றன! பெரும்பாலோர் சிந்திக்காதது இன்று அவர்கள் குறையல்ல என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவர்கள் சிந்தியாதவர்கள் மட்டுமல்லர், சிந்திக்க முடியாதவர்கள். சிந்திக்கும் வாய்ப்பற்ற வர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், சிந்திக்கும் வாய்ப்புரிமை பறிக்கப்பட்டவர்கள்! இது எப்படி நேர்ந்தது? யார் செயல்? வள்ளுவர் எழுப்பிய வினா உண்பது, உடுப்பது, உறங்குவது! உணவு, உடை, உறையுள்! இவை உயிரின் அடிப்படைத் தேவைகள், உயிர்த் தேவைகள்! இவை கடந்தே மனிதன் வாழ்வு பற்றிச் சிந்திக்க முடியும்! ஆனால், இம்மூன்றுக்கும் பெரும்பான்மை மக்கள் என்றும் போராட வேண்டியிருக்கிறது; அதிலேயே அவர்கள் வாழ்வு அழியவேண்டியிருக்கிறது! சிந்தனையால் வளர்ந்த மனித இனம், சிந்தனையால் மேலும் வளரவேண்டிய மனித இனம், சிந்திக்காதபடி தடுக்கப் பட்டுள்ளது! இங்ஙனம் தடுத்தவர்கள் சிந்தனையாளர் அல்லர். சிந்திக்காதவரும் அல்லர். இடைப்பட்ட இனத்தவர், தம்மைப் பற்றிச் சிந்திப்பவர்கள்! சிந்தனையாளர் தமக்கெனச் சிந்திக்காது மனித இனத்துக் காகச் சிந்தித்தனர். மனித இன வாழ்வை வளப்படுத்தவே சிந்தித்தனர். சிந்தியாதவர்களோ சிந்தனைச் செல்வத்தின் பக்கமே செல்லவில்லை. இந்நிலையில் அந்தச் சிந்தனைச் செல்வம் சிந்தனையாளராகிய சிறுபான்மை நல்லோரை வளர்க்கவும் பயன்படவில்லை. நல்லோர் மரபைப் பெருக்கவும் பயன்பட வில்லை. அச்சிந்தனைச் செல்வத்துக்குரிய பெரும்பான்மை யினரை வளர்க்கவும் அவர்களிடையே சிந்தனையைப் பரப்பவும் பயன்படவில்லை. இடையே தற்சிந்தனையாளர்கள் அதைத் தட்டிப் பறித்துக் கொள்கின்றனர். மனித இனத்துக்கென நல் அறிவாளிகள் வகுத்த செல்வத்தைத் தம் மூட மதியளவில், அழிவுச் சிந்தனையில் நிறுத்திக் கொள்கின்றனர், இவர்கள்! சமுதாயத்தை ஆளும் இனம் மனித இனத்தின் பிரதிநிதி களிடமிருந்து அந்தப் பிரதிநிதித்துவத்தைப் பறித்து-சமுதாயத்தின் தந்தையர்களுக்கும் உரிமைச் செல்வர்களுக்கும் இடைநின்ற நோயாய், மனித இனப்பகையாய் வளர்கின்றது! சமுதாயத்தின், இனத்தின் கால இடம் கடந்த இயற்கை யளாவிய குறிக்கோள், கடவுள் பண்பு! அதன் பெயரால் மக் களிடையே எழுந்த ஒற்றுமை ஆற்றல், உணர்ச்சியாற்றல், தன்மறுப்பாற்றல் பெரிது! மிகப் பெரிது! அதை அரும்பாடுபட்டு ஆக்கிய நல்லோர்கள் வாழ்க்கைச் சிந்தனையாளர்களாகிய அருட் பெரியோர்கள் மரபு வளர்க்க அது சிறிதும் உதவாமல், அவ் வாக்கத்தால் வளர்தற்குரிய இனச் செல்வர்களுக்கும் அது பயன்படாமல், இரண்டையும் தம் அறியாமையால் அழித்துத் தம் மரபையே துடைத்துத் தூர்த்துவரும் சூழ்ச்சியறிவே கொண்ட மூடப் புரோகிதர் ஆட்சிக்கு அது பலியாகியுள்ளது; பலியாகி வருகிறது! சமுதாயத்தின் வலுவுக்காக அமைக்கப்பட்ட அரசியல், அதன் வளம் பெருக்க வேண்டிய பொருளியல் - வலிமை தர உதவி செய்து, அதற்காக உயிர் கொடுக்கும் வீரர் வளமும் பெருக்காமல், வளம் பெருக்க உதவி செய்து அதனால் வள மிழக்கும் தொழிலாளர் இனமும் வளர்க்காமல் - வலுக் கேட்டுக்கும் வறுமைக்கும் வழிவகுக்கும் கல்லாக் குருடர் - முதலாளி வகுப்பு, தன்னல அறிவு வகுப்பின் கையாட்சியில் சிக்கியுள்ளது! சீரழிந்து சீரழிவு பெருக்குகின்றது! பெரும்பான்மையினர் அவலநிலை, சிந்தனையற்ற அவல நிலைக்குப் பொறுப்பாளிகள் சமுதாய, சமய, அரசியல் ஆட்சியாளர்களே மக்கட் குறிக்கோளைக் கெடுத்து அதைத் தம் குறிக்கோளாக ஆக்கிக்கொண்ட ஆட்சி வகுப்பே - இதை வள்ளுவர் சுட்டிக் காட்டி வினா எழுப்பியுள்ளார்! வினாவுக்கு விடையும் குறித்துக் காட்டியுள்ளார்! `இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின். பரந்து கெடுக உலகியற்றி யான்!’ மனிதன் இரந்து உயிர்வாழ வேண்டுமா? அந்நிலை இருக்கலாமா? இது அவர் எழுப்பிய வினா! அந்நிலை அன்று இருந்தது, இன்றும் இருக்கிறது. அந் நிலை இன்னும் வளர்ந்து வருகிறது என்று கூடக் கூறலாம். ஏனென்றால், வள்ளுவர் மரபில் நின்று வினா எழுப்புபவரும் அரியராய் வருகின்றனர்! ‘இந்நிலைக்குக் காரணமானவர் யாரானாலும், சமூகத்தை ஆட்கொண்டவரானாலும், சமயத்தை ஆட் கொண்ட வரானாலும், அரசியலை ஆட்கொண்ட வரானாலும், நல்லுலகப் போர்வையில் அல்லுலகம் இயற்றிவரும் அவர்கள் அழியவேண்டியவர்கள்! அவர்கள் அழியட்டும்!’ என்று சினந்து எழுகின்றார் வள்ளுவர். வள்ளுவர் சினம் உலகின் சினமாதல் வேண்டும். உலக மக்கள் அறிவுப் புரட்சியாதல் வேண்டும். அக்காலம் முதல் இக்காலம்வரை நிலவிவரும் அவல நிலை ஒழிதல் வேண்டும். இந்நிலைமை தானாக ஒழியவில்லையானால், ஒழிக்கப் படுதல் வேண்டும்! இதுவே புதிர்க்கு, வினாவுக்கு வள்ளுவர் அளித்த, அளிக்கும் விடை! இயற்கை இந்த நிலையை அழிப்பது உறுதி. ஆனால், இயற்கை அழிக்கு முன், மனித இனம் கிளர்ந்தெழுந்து அழிப்பது நலம். ஏனெனில், இயற்கையின் அழிவு இரக்கமற்ற அழிவு, குருட்டழிவாயிருக்கும். அது தெய்வீக அழிவு ஆகாது. மனித இனம் தீமையழித்து நன்மை பெருக்கும் தெய்வீக அழிவை உருவாக்குதல் வேண்டும். மனித இனத்தின் சீரழிவு உணவு, உடை, உறையுள்! மனித இனத்துக்குரிய முப்பெருந் தேவைகள்! இவற்றுள் விலங்குகளுக்கும் உயிரினங்களுக்கும் ஒரே ஒரு தேவை குறைவு. உடைத் தேவை அவற்றுக்கு இல்லை. உணவு, உறையுள் தேவையே உண்டு. ஆனால், இவை பற்றிய கவலை, திண்டாட்டம் விலங்கு, பறவைகளுக்குக் கிடையாது. மனிதற்கே உண்டு. மனித இனத்துக்கே உண்டு. விலங்கு, பறவையினங்களில் அவற்றவற்றின் உணவு உறையுள்களுக்கு அவையவையே முயற்சி செய்கின்றன. அவற்றவற்றின் குடும்ப மரபை அவையவையே பேணுகின்றன. இதனால், எல்லா உயிரினங்களுக்கும் உழைப்பு, ஓய்வு, சிந்தனை வாய்ப்புக் கிடைக்கின்றன. சரிசம அளவிலேயேகிடைக்கின்றன. மனித இனத்தில் தூர தொலைக்கனவாய் இன்னும் இருந்துவரும் பொதுவுடைமை வாழ்வின் பண்பு, இயற்கையளித்த பண்பாகவே விலங்கு, பறவை, புழுப்பூச்சிகளுக்கெல்லாம் கிடைத்துள்ளன! உழைப்புக்கு மட்டும் உரிய உழைப்புவகுப்பு, அறிவுக்கு மட்டும் உரிய அறிவுவகுப்பு, ஓய்வுக்கு மட்டும் உரிய ஓய்வுவகுப்பு என்ற அழிவுப் பிரிவினை விலங்கு, பறவைகளிடையே கிடையாது. மனித இனத்துக்கு வெளியே அவற்றைப் பார்த்தல் வேண்டு மானால், நச்சு விலங்குகளை, நச்சு உயிரினங்களைக்கூட விட்டுவிட்டு, நச்சுப்பூச்சியினங்களுக்கே செல்லுதல் வேண்டும்! இன்ப வாய்ப்பு, சிந்தனை வாய்ப்பு இரண்டிலும் சரிசம நிலை, விலங்கினத்தில் இருக்கும் அளவுகூட மனித இனத்தில் இல்லை; விலங்கினத்தில் உள்ள நிலையினும் மனித இனத்தில் வரவரக் குறைந்தே வருகிறது. ஆயிரத்திலொன்று பதினாயிரத்தி லொன்று விழுக்காடுகூடத் தேறாத இன அறிஞர் மரபு எப்படியோ நிலைமையைச் சமாளித்து வருகிறதேயன்றி, அதுவும் தான் அழிந்து மனித இனத்தை வளர்த்து வருகிறதேயன்றி, இன்று உலகிலுள்ள மூன்று அழிவு வகுப்புகளும் - தற்சிந்தனை அறிவு வகுப்பு, சிந்தனையும் இன்ப உணர்வும் உழைப்புப் பங்கும் அற்ற ஓய்வு வகுப்பு, இன்ப வாய்ப்போ சிந்தனை வாய்ப்போ சிறிதுமற்ற பெரும்பான்மை உழைப்பு வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளும் - இன வாழ்வின் உயர்நிலையிலிருந்து விலகியே வாழ்கின்றன. இந்நிலையில்தான் மனித இனத்தின் பெரும்பான்மை உழைப்பு வகுப்பு வீணே விழலுக்கிறைத்த நீராக உழைத்துக் குப்பைவளம் பெருக்குகிறது. அந்த உழைப்பு வாய்ப்பில்கூட ஏழை வகுப்பில் மிகப்பெரும்பான்மையினர்க்குப் பங்கு கிடைப்பதில்லை-வர வர அவ்வாய்ப்பு இன்றைய போலி நாகரிகத்தில் பறிக்கப்பட்டு வருகிறது. உணவு, உடை, உறையுளுக்கு உழைக்கும் வகுப்பினர்க்கு, அவ்வுழைப்பும் கிடையாத ஏழை அகதி வகுப்பினர்க்கு, அவர்கள் உழைப்புக்குரிய அம்மூன்றும் சரிவரக்கிடைப்பதில்லை. மிகப் பலர் உணவு, உடை, உறையுள் மூன்றுக்கும் அங்கலாய்க்கின்றனர்! ஆலாய்ப் பறக்கின்றனர்!! பசி பட்டினியுடன், நோய் நொடி மூப்புச் சாக்காடுகளுடன் அவர்கள் அழிவுப் போராடுகின்றனர். இன்றியமையாத் தேவைகள் இல்லாமல், போதாமல், இருந்தும் பயன்படாமல், உயிர் சுமந்த பிணங்களாக அவர்கள் உழலுகின்றனர். உயிருடன் இயங்குவது எப்படி என்னும் கவலை அவர்களைப் பிடித்தாட்டு கிறது. உயிருடன் உடம்பை ஒட்டவைக்கவும் முடியாமல், உயிரிலிருந்து உடம்பை விடுவிக்கவும் வகை தெரியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர்! உலகில் நீதியும் ஆன்மார்த்த நீதிகளும் உழைப்பு வகுப்பினும் கடைப்பட்ட வகுப்பு, அகதி வகுப்பு - மனித நாகரிகத்தையே எட்டிப் பார்க்க முடியாத, அதுபற்றிக் கேள்விப்பட முடியாத, அதன் வாடையை முகர்ந்து பார்க்க முடியாத வகுப்பு! மனிதநீதி சென்று எட்டாத, பல அருட்பெரியார்கள், நீதிமான்கள் சிந்தனைகூடச் சென்று பரவாத வகுப்பு! புழுக்கள்போல் ஊர்ந்து நெளிந்து மாள்கின்றனர் அவர்களுள் பலர் - மனித இனத்தின் புழுக்கள் அவர்கள்! மனித இனம், மனித இனத்தின் நீதிமான்கள் அவர்கள் நிலைபற்றிக் கேள்வி கேட்டதில்லை, கேட்பதில்லை! மனித இனத்தில் புழுக்கள் ஏன்? இயற்கைப் படைப்பில் மனிதராகிவிட்ட பின்னும் மனித சமுதாயப் படைப்பில் அவர்கள் மீண்டும் புழுக்களாவானேன்? எவரும் இதைச் சிந்தித்ததில்லை, சிந்திப்பதில்லை! மனிதப் புழுக்கள் மனித இனத்தில் அழுக்கேற்றுகின்றன; மாசுபடிவிக்கின்றன; கறை படர்விக்கின்றன! இதற்கு மனித இன மருத்துவர் தரும் மருந்து, நீதி போதனை - ‘அழுக்குத் தீது, அழுக்ககற்றுங்கள்’ என்ற அறிவுரை! வள்ளுவர் நீதியல்ல இது! செந்தாமரைப் பூவுடன் பூவாகத் தரப்படும் ஊமத்தம் பூபோல, வள்ளுவர் நீதியுடன் நீதியாக மனித இனத்தின் முன் காட்டப்படும் நீதி நூல்கள் தரும் மருந்து இது! எல்லாப் புழுக்களும் புழுக்களாகவே ஊர்ந்து நெளிந்து மாண்டு விடுமா? சில புழுக்கள் பறக்கின்றன. மொய்க்கின்றன, கொசுக்களாக! சில கொட்டுகின்றன; குருதி குடிக்கின்றன; மூட்டைகளாக! இவர்கள் கீழோர், கயவர்! உழவரைக் குறித்ததாகக் கம்பர் காலமுதல் வழங்கும் தமிழ்ச் சொல் ‘கடையர்’. ‘பொதுவர்’, ‘பொதுமகள்’. ‘பொதுமக்கள்’ வேளாண்மையாற்றிய வேளாளர் மரபுப் பெண்டிரைக் குறிக்கும். ‘வெள்ளாட்டியர்’ ‘வெள்ளாட்டி மக்கள்’. பழைய பாணர், பாடகர், பொருநர், கூத்தர், விறலியர் மரபின் பெண்டிரைக் குறித்த ‘கூத்தியர், இவற்றுக்கிணையான சமற்கிருதச் சொற்கள் (தாசர், தாசி மக்கள், சூத்திரர்), உழவரைக் குறித்த பழைய ஆங்கிலச் சொல் (பொறுக்கிப் பயல்; பழைய ஆங்கிலம்-உழவன்) - இவை இந்தப் படிநிலைக்கு இழிவுறுத்தப்பட்ட அகதி வகுப்பினர்க்கு மனித உலக மொழிகள், மனித உலக இலக்கியம் வழங்கும் பரிசுகள்! பழிகளுக்கெல்லாம் படைப்புக் கடவுள், வறுமை! பழியற்றவிடத்துப் பழிகளைப் படைத்தீனும் தாய், சிறு பழிகளைப் பெரும் பழிகளாக வளர்க்கும் செவிலி, செல்வர் பழிகளைத் தண்டிக்காது, கண்டிக்காது, காணாதுவிட்டு, அகதி வகுப்பின் பழிகளை நுண்ணாடி முதலிய கண்ணாடிகளிட்டுப் பார்த்துப் பழிவாங்கும் மனித நீதிக்கடவுள் அது! கொசுக்கள், மூட்டைகளாக வளர்ந்த மனிதப் புழுவினத்தில் ஒரு சில தேள்கள், நட்டுவக்காலிகள், பாம்புகளாக வளர்கின்றன. உயிருடன் இயங்குவது எப்படி? இந்தக் கவலை ஊட்டிய சிந்தனை அவர்களிடம், ‘கடி, கொட்டு, குருதி உறிஞ்சு’ என்ற அறிவுரையைத்தான் தந்துள்ளது! கீழுலக அறிவுரை அது! அதைப் பின்பற்றிக் கடிக்கின்றன, கொட்டுகின்றன, குருதி உறிஞ்சுகின்றன அவை! நீதிமான்கள், உலகியல் அறிவுடையாளர்கள் இப்போது உரக்கக் கூவுகின்றனர்! நீதிமான்கள் விட்டதைச் சமயப்போதகர்கள் எடுத்துரைக் கின்றனர்! பரணி பாடுகின்றனர்! சமயப்போதகர்கள் விட்டதைச் சட்டக் கனதனவான்கள் சாதிக்கின்றனர்! வாழக் குற்றம் செய்தால், தண்டனை சாவு! வாழ வழியின்றி மாள நினைத்தால், தண்டனை! மாளாத மாள்வு! ‘படு, படு, படவேண்டியதைப் படு! அஃது உன் ஊழ்! உனக்கு கடவுள் அளிக்கும் வரம்! ஆகவே, சாகாதே வாழாதே! உனக்காக வாழாதே, எங்களுக்காக வாழ்! உனக்காகச் சாகாதே, எங்களுக்காகச் செத்தொழி!’ சட்டம் தரும் போதனை இது! வஞ்சனை, சூது, கொலை! இஃது அகதி வகுப்பினரிடம் உண்டு-உண்டு பண்ணப்பட்டவை இவை! இதை ஆளும் வகுப்பினர் பயன்படுத்தலாம்! போரில் கொலை, வீரம்! அரசியலில் கொலை, சூழ்ச்சி! வாழ்வில் வஞ்சனை, அஃது இன்பக் கேளிக்கை! ஆனால், இவற்றை ஆளும் வகுப்புக்காகச் செய்யட்டும், செய்து தண்டனையைத் தாம் அடையட்டும்! ஆளும் வகுப்பினர்க்குத் தேவையான அளவும் வாழட்டும், தாழட்டும்! அதன்பின் மாளட்டும்! ஆனால், தமக்கென அவர்கள் இத்தீமையைச் செய்யப்படாது! செய்தால், தண்டனை அவர்கள் பிறப்புரிமை! சமுதாயச் சிந்தனைப் போர்வையில் நீதிப் போர்வையில் பொருளியல் தத்துவப் போர்வையில், சமயப் போர்வையிலேயே எவனாவது இவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க நினைத்தால், ‘பேசாதே! சிந்திக்காதே! கண்ணைத் திறந்து பாராதே!’ என்ற உறுக்கு! வள்ளுவர் கேள்வி எழுப்பினார், இந்நிலையில் வாழ்ந்து வளர்ந்துவரும் மனித சமுதாயத்தில்! விடை சுட்டிக் காட்டினார், இத்தகைய நீதிமான்கள் கூடமகிழ! அவர் நூலும் புகழும் இன்னும் நின்று நிலவவும் செய்கிறது! தர்மம் தழைக்கும் பாரதத்தில் அதற்கு இன்றும் இடம் இருக்கிறது! தமிழ்ப் பண்பு செய்த தவம் இது! ‘இரந்தும்!’ இந்த ‘உம்’மையில் மறைந்துள்ள வள்ளுவர் பெருமான் உள்ளத்தின் சிந்தனையை யாரே அறிவார்!. இரத்தலைப் பற்றி மட்டும் சொன்னார், மற்றவற்றைச் சொல்லவில்லை தாம் கூறுவது ‘நீதிமான் போர்வை’யில் என்பதை அவர் அறிவார். ஆனால், இரத்தல் நீதிமான்கள் நீதியில் குற்றமன்று. வள்ளுவரோ அதுதான் குற்றங்கள் அனைத்தும் கடந்த குற்றம், பழியாளர் பழிகள் கடந்த கயமைப் பண்பு என்று முன்பே வகுத்துக் கொண்டார்! வள்ளுவரின் உம்மை தரும் பொருள் வளம், பண்பு வளம் இது! பண்பு: இனங் கடந்த சிந்தனை தன்னலம் கடந்த சிந்தனையே பண்பு. ஆனால், அதுவே உண்மையறிவுமாகும். ஏனெனில், தன்னலங் கடந்த சிந்தனையே நீடித்துத் தன்னைப் பேண வல்லது; வளர்க்கவல்லது. இதுபோலக் குடும்ப எல்லை கடந்த சிந்தனையே குடும்பப் பண்பு. அது குடும்பம் வளர்க்கும். சமுதாய எல்லை, தலைமுறை எல்லை, இன எல்லை, மனித இன எல்லை ஆகியவற்றின் வகையிலும் இந்த உண்மை வளமுடைய உண்மையேயாகும். ‘அரசியல் துறையில், வாழ்க்கைத் துறையில் இதன் வலுவைக் காணலாம். பிற நாடுகளை அடக்கியாளும் ஏகாதிபத்திய நாடு தன் நாட்டெல்லையில் உண்மைக் குடியாட்சி பேண முடியுமா? முடியாது என்று காண்பது அரிதன்று. பிற நாடுகளிலிருந்து பறித்த வளம் ஏகாதிபத்திய நாட்டுக் குடிமக்கள் வறுமைப் பசியைச் சிறிது ஆற்றும். அவர்கள் நன்றியுணர்வு ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கத் தூண்டும். தம் உரிமையை வற்புறுத்தத் தூண்டாது. உரிமைப் பேச்சு எழுந்தாலும், மக்கள் மனச்சான்றே அவர்களைக் குத்திக்காட்டும். நன்றியுணர்வு பிழைக்கும் மதியாகி, மீண்டும் தன்னல எண்ணமே எழுப்பும். ஏகாதிபத்தியத்தால், நாடுகளிடை உயர்வு தாழ்வால்தானே நாம் நலம் பெறுகிறோம். அப்படியிருக்க, இந்நாட்டுக்குள் உயர்வு தாழ்வைச் சிறிது பொறுத்தாலென்ன? என்ற அறிவுரையைக்கூட மக்கள் தற்காலிக மனச்சான்று அளிக்கக்கூடும். நண்பரிடம் அன்புடையவனாக, ஆதரவுடையவனாக, விட்டுக்கொடுப் புடையவனாக இருப்பது மனித இயல்பு. அயலாரிடம் அம்முறையில் நடந்து கொள்வது நாகரிகம். ஆனால், உண்மை அதுவன்று. நண்பர் சூழலுக்கு வெளியே, தன்னலச் சூழலுக்கு வெளியே, பகைவரிடம் அவ்வாறு நடந்து கொள்வதுதான் பண்பு, சால்பு என்று அவர் கருதுகிறார். இயேசு பெருமானைப்போல, பகைவர் தீமை செய்தால் மாறாக நன்மை செய் என்று வள்ளுவர்பிரான் கூறியதன் அருள்நெறி உயர்வைத்தான் பலர் அறிந்துள்ளனர். ஆனால் இயேசுவுக்கோ, வள்ளுவர்க்கோ அவை அருள் நெறி உயர்வன்று. அவையே பண்பு. ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்ற குறட்பாவில் அவர் இப் பண்பிலாதார்க்கு அதை ஓர் அறிவுரையாகவே கூறுகிறார் என்று காணலாம். ‘தீமைக்குப் பழிவாங்க, தண்டிக்கத்தானேயப்பா விரும்புகிறாய்! நன்மை செய்துவிடு. அதைவிடச் சிறந்த தண்டனை இல்லை’ என்கிறார். ஆனால், இயேசுபிரான் உயர் உள்ளத்தையும் வள்ளுவர் பெருமான் உயர் உள்ளத்தையும் வேறு இரு வாசகங்கள் சுட்டுகின்றன. ‘உன் எதிரியை நேசி’ (டுடிஎந வாநல நநேஅல) என்றார் இயேசு. வள்ளுவர், ‘இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு!’ என்று நயமாகப் பண்பு, சால்பு ஆகியவற்றின் மெய்ம்மையை அறிவுறுத்துகிறார். மனைவியிடம் கணவன் தன் அன்புபற்றிப் பலபடப் பேசுகிறான். குழந்தையிடம் தந்தை தன் பாசம் பற்றிப் பேசுகிறான். மனைவியும் குழந்தையும் அந்தப் பேச்சில் மகிழ்கிறார்கள். அச்சமயம் ஒரு வேலையாள் ‘என் மனைவிக்குத் தலைவலி. சிறிது ஓய்வு கொடுங்கள்’ என்று கேட்கிறான். அல்லது ‘என் குழந்தைக்குப் பூ என்றால் உயிர். தோட்டத்தில் கொஞ்சம் பூ பறித்துக் கொள்ளவா?’ என்று கேட்கிறான். உண்மையில் மனைவி கண்டு மகிழ, குழந்தை கண்டுணர, கணவன், தந்தை பாசத்தைக் காட்டத்தக்க இடம் இதுவல்லவா? நல்ல கணவன் தன் மனைவியிடம் பாசம் காட்டுபவன் மட்டுமல்லன், அதைப் பிறரிடம் போற்றுபவனே! நல்ல தந்தை தன் பிள்ளையிடம் கொஞ்சுபவன் மட்டுமல்லன், அதைப் பிறரிடம் கண்டு மகிழ்பவனே! இது போலவே நண்பனிடம் நட்புடையவன், அதை மெய்ப்பிக்க வேண்டிய இடம் நட்பிலன்று. பகைமையிலேயே! ஏனெனில், நண்பனிடம் மட்டும் காட்டினால், நண்பன் பகைவ னாகின்றான்; அல்லது பகைவனாகத் தோற்றுகின்ற காலத்தில் அது மறைந்து தன் மெய்யுருக் காட்டிவிடும். பகைவனிடம் காட்டினாலோ, பகைவன் நண்பனானபோது, அது நட்பின் உண்மைப் பெருமையையே, பீடினையே காட்டுவதாகும்! வள்ளுவரின் இக்கருத்தையே பாரதியாரின் ‘பகைவனுக் கருள்வாய்!’ என்ற வேண்டுதல் எதிரொலிக்கின்றது. அருளுலகின் மூல முதல் ஒளி உலக அருட் பெரியார்களுக்கு வழிகாட்டிய முதல்வர் எனப்படுவோர் இயேசுபிரான், முகமது நபிகள் நாயகம், புத்தர் பெருமான், மகாவீரர், வள்ளுவர் பெருமான் ஆகியோர்! நம் காலத்திலும் உலகப் பெரியார் டால்°டாயும், காந்தியடிகளும் அவ்வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்கள். இவர்கள் அருள்மரபைப் பற்றி ஜெருமன் அறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சர் புதுமையான ஒரு கருத்துரை தந்துள்ளார். அஃது `இந்தியாவின் சமயச் சிந்தனை’ (சுநடபைiடிரள வாடிரபாவ டிக ஐனேயை) என்ற அவர் நூலில் கண்டது. உலக அருட்பெரியார்களுக்கு இந்திய அருட் பெரியோரே வழிகாட்டிகள் என்பதும், இந்திய அருட் பெரியார் களுக்கு வள்ளுவரே வழிகாட்டி என்பதும் அவர் விளக்கம் ஆகும். அவர் கூற்றுப் புனைந்துரையன்று, மெய்யுரையே என்பதை இந்திய அருளாளரின் இனங் கடந்த இனப் பண்பு காட்டுகிறது. ‘கொல்லாதே’, ‘அன்பு செய்’ ஆகிய நீதிகள் மோசே காலமுதல் இயேசு பெருமான், நபிகள் நாயகம் ஆகியோர் காலம்வரை வலியுறுத்தப்பட்டே வந்தன. அவ்வருட் பெரியார்கள் அவற்றை மனித இனமளாவப் பரப்பவும் தவறவில்லை. இந்திய அருட்பெரியார்கள் அனைவருமே அதை மனித இனங் கடந்து உயிரினமளாவப் பரப்பி வலியுறுத்தியுள்ளார்கள். ‘உயிர்களைக் கொல்லாதே, உயிரினங்கள் எல்லாவற்றையும் நேசி’ என்று அதை விரிவுபடுத்தியுள்ளார்கள். புத்தர் பெருமானும் அவரைக் கடந்து மகாவீரரும் இன்றைய உலகம் மலைக்கும் அளவுக்கு அதனைத் தம் சமயக் கோட்பாடாக்கியிருந்தனர் என்பது உலக மறிந்ததே. அதனால், மனித நாகரிகத்துக்கு ஏற்பட்ட முன்னேற்ற நலங்களும் சிறிதல்ல; பிணியாளர்களுக்குரிய மருந்தகங்கள் நிறுவுவதிலும், உயிரினங்களின் துணையகங்கள் வகுப்பதிலும் உலகுக்குப் புத்த சமணரே வழிகாட்டிகளா யிருந்தனர் என்பது வரலாறு கண்ட செய்தி ஆகும். தமிழகத்துக்கு வெளியேயுள்ள புத்த சமணர்களைக் காட்டிலும், தமிழகப் புத்த சமணர் நூல்கள் கொல்லாமையையும் ஊறு செய்யாமையையும் வலியுறுத்தியுள்ளன. உண்மையில் நாலடியாரளவு இக்கொள்கையை வலியுறுத்திய சமண நூலை எம்மொழியிலும் காணமுடியாது. காடை கவுதாரிகளைக் கூண்டிலடைப்பதைக்கூடக் கண்டித்து, அது மனிதரைச் சிறையிலடைக்கும் தீவினையுடன் ஒக்கும் என்று நாலடி யாசிரியர்கள் கூறுகின்றனர். மற்றும் ‘ஊனைத் தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே’ என்ற இனியவை நாற்பதும், பிற்காலப் புத்தர்களின் நடவடிக்கை களைக் கண்டிப்பதோ என்று கருதும்படி வள்ளுவர் பெருமான், ‘தினற் பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும் விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்’ என்றதும் காணலாம். ஆனால், திருக்குறள் ஒன்றிலேயே புத்தர் பெருமான், மகாவீரர் கோட் பாடுகளின் வேர் மூலத்தையும், அதன் பண்பு விளக்கத்தையும் காணமுடியும்! ‘தன்னுயிர் நீப்பினும் செய்யற்க. தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை’ இக் குறட்பாவில் காணப்படும் உயிர் ஒப்புரவு, தன் மறுப்புப் பண்பு வேறு; புத்தர், மகாவீரர் அருளிரக்கப் பண்பு வேறு என்பதை அறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சர் உலகக் கண்ணோட்டத்துடன் கண்டு விளக்கியுள்ளார். தமிழ்ப் பண்பின் தண்ணொளி உலகெலாம் பரவி ஒளி வீசிய காலத்தவர் வள்ளுவர். அதன் பண்பொளி மாசு படிந்த பனியிடையே சுடரிடும் பிற்காலத்தவர்கள், புத்தர், மகாவீரர் என்பதை இக் குறட்பாக்கள் சுட்டிக் காட்டுகின்றன. புத்தர், மகாவீரர் காலத்துக்குத் திருவள்ளுவர் பிற்பட்டவர் என்ற தற்காலக் கருத்து, வருங்கால ஆராய்ச்சிகளால் களைந்த கற்றத்தக்கது என்று கூறலாம்! உலக சமயங்களெல்லாவற்றுக்கும் மூலமுதல்வர் வள்ளுவரே என்ற அறிஞர் ஷ்வைட்சரின் வாய்திறவா ஐயுறவு அன்று உறுதிப்படலாகும். உயிரின ஒப்புரவு வள்ளுவரின் ‘கொல்லாமைப் பண்பு’ புத்த சமணரின் ‘அருளிரக்க’ நெறியன்று. அது மேலையுலகப் பொதுவுடைமை வாதிகள் இன்னும் கனவு காணாத, விளக்கம் காணாத பொதுவுடைமைக் கோட்பாடு கடந்த பொது வுடைமைப் பண்பு ஆகும். அதுவே மனித இனப் பண்பின் வேர்முதல்; உயிர் ஒப்புரவுப் பண்பின் விளக்கம்! நாடு கடந்து ஏகாதிபத்தியம் பேணும் ஆட்சி குடியாட்சியை யும் அதே மூச்சில் பேண முடியாது. குடியாட்சியை வலியுறுத்திக் கோரும் பண்பும் அதன் குடி மக்களிடம் வளர வழியிராது. குடும்பம் கடந்து பேண முடியாத குடும்பப் பண்பு, குடும்பத் தினுள்ளும் தழைக்க இயலாது. அதுபோலவே, மனித இனம் கடந்து செல்லாத எந்த மனிதப் பண்பும் மனித இனத்துக்குள்ளும் வேரூன்ற மாட்டாது. அறிவில் மேம்பட்ட மனித இனம் உயிரினங்களின் உரிமைகளை மதிக்காதவரை, மனித இனத்திலே மனிதர், மனிதர் உரிமையை மதிக்க மாட்டார்கள். ஏனெனில், இரண்டிலும் பின்பற்றப்படும் பண்பு ஒன்றே! பண்பால் உயர்ந்த மனித இனமே விலங்குகள் உரிமை களைத் தட்டிப் பறிக்கிறது. விலங்கின நிலையிலுள்ள மனிதர் களையும் அதேபண்பு தட்டிப் பறிக்காமல் என்ன செய்யும்? நாட்டெல்லையில் ஓர் ஏகாதிபத்தியம் தன் ஏகாதிபத்திய உடுப்பைக் கழற்றிவைக்க முடியாதபோது, மனித இன எல்லையில் மட்டும் மனிதப் பண்பு தன் சட்டையை மாற்றிக்கொண்டு நுழையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மாட்டின் கழுத்தையும், ஆட்டின் கழுத்தையும் பதம் பார்க்கும் கத்தி, மனிதரை எண்ணியவுடன் மழுங்கிவிடுமா? ‘இயற்கை நடப்பு’, ‘கடவுள் அமைப்பு’ என்ற விளக்கங்கள் உயிரினக் கொலைகளுக்குச் சமயவாதிகள் சிலரால் தரப்படு கின்றன. ஆம்; அதே தொடர்கள்தாம் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அருகில் சென்று வீற்றிருக்கும் சமயவாதமும், மனிதர் வகையில், தொழிலாளர் இன வகையில் அளிக்கிறது என்பதைப் பலர் கவனிப்பதில்லை. வள்ளுவர் இக்கருத்தைக் கூறுவது பலர்க்கு வியப்பைத் தரலாம். நாம் திருக்குறளை வாசிக்கும்போது போட்டுக் கொண்டு பார்க்கும் இக்காலக் கண்ணாடியின் செயல் அது. ‘கொலை வினைய ராகிய மாக்கள், புலை வினையர் புன்மை தெரிவார் அகத்து’ இதற்குப் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள் தரும் தெளிவுரையை அப்படியே கீழே தருகிறோம். ‘கொலைத் தொழிலினராகிய மக்கள், அதன் இழிவை ஆராய்ந்த விடத்தில், புலைத்தொழில் உடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.’ இங்கே கொலை என்பது மனிதக் கொலை, புலை என்பது உயிர்க் கொலை. உயிர்க்கொலையே மனிதக் கொலைக்கு வித்து என்ற கருத்து இங்கே தொனிக்கிறது. பேராசிரியர் இக்கருத்தை எண்ணியுள்ளார் என்பது தெளிவு. கொலை, புலை என்ற சொற்களுக்கு அவர் வேறு விளக்கம் தரவில்லை - தெளிவுரை இங்கே காண்பவர் கண்ணின் தெளிவைக் கலைக்கவில்லை! உயிரினமும் மனித இனமும் மனித இனத்தின் தாய் மரபான இன அறிஞர் மரபு மனித இனச் செல்வர்க்கென்று சிந்தனைச் செல்வம் வளர்க்கிறது. அதைத் தட்டிப் பறிக்கிறது, மனித இனத்தின் ஒரு பகுதி! மனித இன ஒப்புரவுணர்ச்சி, குடியாட்சிக் கோட்பாடு, கடவுள் கொள்கைகூட இதைத் தடுக்க முடியவில்லை. இஃது ஏன்? தாய்ப்பசு தன் கன்றுக்காகச் சுரக்கிறது பால்! தாய் வளம், இயற்கை தந்த வளம்; பிள்ளை உரிமை, இயற்கை தரும் உரிமை தான்! ஆனால், மனித இனம் இடையே தலையிட்டு அதைத் தட்டிப் பறிக்கிறது! உயிரினம் தன் இன மரபு பேண ஆற்றல் பெருக்குகிறது. அந்த ஆற்றலையே நாம் தசை என்கிறோம். உயிரின் வளம் அது. உடலுக்குரியது, இன மரபுக்குரியது. ஆனால், உயிர்க்கும் உடலுக்கும் இடையே மனித இனம் புகுகிறது. குதிரையின் ஓட்டம் மனிதன் வண்டியிழுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கழுதையின் பொறுமை மனித இனத்தின் மூட்டை சுமக்கப் பயன்படுகிறது! உயிரினம் இனம் வளர்க்க உடல் பேணுகிறது. முட்டை யிடுகிறது. உயிரினத்தின் இவ்வளம் உயிரின மரபுக்கு உதவாமல், மனித இனம் தலையிடுகிறது. உயிரினங்களின் உடலைக் கொன்று உண்கிறது. அவற்றின் உயிர் மரபின் விதைகளான முட்டை களைத் தன் தசைவளர்க்கப் பயன்படுத்துகிறது! மனித இனத்தின் சிறுபான்மை - ஆக்கும் சிறுபான்மை யல்ல, அழிக்கும் சிறுபான்மை - மனித இனத்தின் பெரும் பான்மையைச் சுரண்டுகிறது. பெரும்பான்மை இதைக் கண்டிப்ப தில்லை; அறிவதில்லை; உணர்வதில்லை. கண்டிப்பவர் உண்டு. இன அறிஞர் மரபில் வருபவர்கள் அவர்கள். ஆனால், பெரும்பான்மை இக்கண்டனத்தைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. தன் வாழ்க்கை பற்றிச் சிந்தனை செய்யும் இனம்சார்ந்த எவரேனும் கூற முன் வந்தாலன்றி, அப்பெரும் பான்மை அதற்கு ஆதரவு தருவதுமில்லை! இஃது ஏன்? உயிரினத்தில் மனித இனமும் சிறுபான்மைதான். ஆக்கும் சிறுபான்மை யன்று. அழிக்கும் சிறுபான்மை. உயிரினங்களின் உரிமைகள் பறிபோவதை உயிரினங்கள் அறிவதில்லை. ஆட்டைத் தின்ற மனிதனிடம் நாய் ஒரு துண்டு எலும்பைப் பெற்று மகிழ்கிறது. அதே சமயம் ஓநாய் ஆட்டை அணுகும் போது மட்டும் உறுமுகிறது. கோட்பாடல்ல, பண்பு திருவள்ளுவர் இதையெல்லாம் எண்ணினார். ஆனால், கொல்லாமை மீறியவரை எதிர்க்கவில்லை; கண்டிக்கவில்லை. அவர் சமயப் புரட்சி செய்யவில்லை; கருத்துப் புரட்சி செய்தார். குறிக்கோள் உயர்த்தினார். ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்றார். உயிர் ஒப்புரவுப் பண்பு வளர்ந்தது. அவர் வழி நின்றனர். எல்லாரும் - ஆனால், ஒரு சிலர் கொல்லா நோன்பு ஏற்றனர். இதற்கு வரலாற்றுச் சான்று உண்டு. வட இந்தியாவில் கொலை வேள்வியை நிறுத்தியவன் அசோகன். இன்றுவரை அது மீண்டும் இந்தியப் பெருமக்கள் வாழ்வில் தலை காட்டவேயில்லை. அவனுக்கு முன், ஆனால் புத்தர் பெருமான், மகாவீரர் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இந்தியாவில் வந்து தங்கி, தான் கண்டதும் கேட்டதும் எழுதிச் சென்றவன் மெக°தனி°. அவன் கொல்லா நோன்பிகளைப் பற்றிக் குறிக்கிறான். ஆனால், தான் தங்கி வாழ்ந்த மகத நாட்டிலேயே இருந்த புத்த, சமணரின் கொல்லா நோன்பைப் பற்றி அவன் குறிக்கவில்லை. தமிழகத்திலேயே கொல்லா நோன்பிகள் இருந்ததாக அவன் குறிப்பிடுகிறான். அவர்கள் தமிழரோ, வேறு குடியினரோ என்று ஐயப்பட இடமில்லை. அவர்கள் கறுப்பு நிறத்தவர் என்றும் அவன் குறிக்கிறான். புத்தர் சமணர் ஊனுண்ணாமையை வேறு வேறு வகையில் வலியுறுத்தினர். அது சமயக்கோட்பாடாயிற்று. ஆனால், வள்ளுவர் பெருமான் ‘கொல்லாமை’யை ஒழுக்க நெறியாகப் பரப்பினார். அவர் அன்பறத்தில் அது ஒரு பகுதி. இவ்விரண்டின் வேறுபாடு சிந்தித்துக் காணத்தக்கது. வள்ளுவர் அருள் நெறிவாழ்க்கை கடந்த ஒரு கோட் பாடன்று. புத்த சமண நெறிகள் போல வாழ்க்கைக்குரிய ஒரு இரும்பு விலங்குமன்று. அஃது அவர் அன்பறத்தின் ஒரு கூறு, ஓர் உயிர்க் கூறு. ‘அறவினை யாதெனில் கொல்லாமை. கோறல் பிறவினை எல்லாம் தரும்’ என்று வகுத்துரைக்கிறார். ‘அறம் அதாவது ஒழுக்கத்தின் அடிப்படை கொல்லாமையே. ஏனெனில், கொல்லுதலே அறத்துக்கு மாறான எல்லாத் தீய பண்புகளுக்கும் வேர் முதல் ஆகும் என்று அவர் விளக்குகிறார். வள்ளுவர் கண்ட பொதுவுடைமை கொல்லாமை புத்த சமணரிடம் ஓர் எதிர்மறைப் பண்பு. வள்ளுவர்க்கு அஃது ஓர் எதிர்மறைப் பண்பாய் நின்றுவிட வில்லை. அன்பு காரணமாகவே அது பிறக்கிறது; ஒத்துணர்வால் அஃது ஊறு செய்யாமையாக வளர்கிறது. ‘தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ, மன்னுயிர்க்கு இன்னா செயல்’ ‘நமக்குத் துன்பம் வந்தால், அது நமக்கு எவ்வளவு தாங்குதற் கரியதாய் இருக்கிறது? இதை உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்குத் தீமை செய்யலாமா?’ என்று அவர் கேட்கிறார். துன்ப உணர்வு அருளுணர்வானபின், அத்துன்பம் பிற உயிர்களுக்கு வருவது கண்டால், விலக்கவும் விரைதல் வேண்டும். இது சால்பு. ‘இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்’ ‘துன்பம் என்று தான் அறிந்தவை, பிறரிடம் ஏற்படாமல் செயல் ஆற்றுதல் வேண்டும்’ இது மட்டுமோ? பிறர் துன்பத்தைத் தான் பகிர்ந்து உதவுவதுபோல, தன் இன்பத்தை, தன் ‘வாழ்வின் முதலை’ப் பிறருடன் பகிர்ந்து பிற உயிர்களையும் வளர்த்தல் வேண்டும். ‘பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை!’ பகுத்து என்ற சொல் தமிழில் பாத்து என்றும் பகுத்தீடு, பாத்தீடு என்றும் திரியும். பாதுகாத்தல் என்ற வினையின் முதல் உறுப்பாகிய ‘பாது’ இந்தப் பாத்து என்பதன் மரூஉவே. மன்னன் குடிகளைப் புரக்கிறான்; பாதுகாக்கிறான். புரத்தல் தொழிலாலேயே அவன் புரவலன், புரந்தரன் ஆகிறான். அதற்குரிய தலைநகர் புரி; அதன் அரண் புரிசெய் அல்லது புரிசை ஆகிறது. அப்புரத்தலின் மறைதிறவு பாதுகாத்தலிலேயே, பொதுச் செல்வம் எல்லார்க்கும் ஒப்பப் பகிர்ந்தளித்தலிலேயே உள்ளது. மன்னவன் ஒப்புரவு நெறி உயிர்களின் வாழ்வில் மட்டும் செயலாற்றுவதன்று. இயற்கைமீதும் ஒப்புரவு நெறி ஏற்றுவது. இயற்கையின் ஓர் இடத்தில் ஆறு இருக்கலாம், பிறிதோரிடம் ஆறு இல்லாதிருக்கலாம். ஓரிடத்தில் மழை பெய்யலாம்; மற்றோரிடத்தில் மழை இல்லாதிருக்கலாம். இயற்கையின் இவ்வுயர்வு தாழ்வைக்கூட மன்னவன் ஒப்புரவு செய்தல் வேண்டும். மிகுதியால் விளையும் தீமை குறைபாட்டால் விளையும் தீமையைச் சரி செய்யும்படி மாற்றுதல் வேண்டும். ``இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு’’ ‘நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில், பருவ மழையும் நிறைந்த விளைவுகளும் ஒருசேர ஏற்படுவனவாகும்! 4. வாழ்க்கைக் கோட்பாடுகள் மனிதன் தனியாக வாழ்வதும் இல்லை. அவன் சிந்தனை, உணர்வு தனியான சிந்தனையாகவோ, தனியான உணர்வாகவோ இருப்பதுமில்லை. நட்பு, பகைமை, ஏதின்மை (புதுத்தொடர்புத் தன்மை) ஆகியவற்றின் வேறுபாடுகளில் நாம் இதனைக் காணலாம். நட்பு என்பது, ஒரே வாழ்க்கை உணர்வுப் பழக்கமும் அதனுடன் ஒரே வாழ்க்கை நலமும் இணைந்தவர் சூழல். பகைமை என்பது, அதுபோலவே ஒரே வாழ்க்கை உணர்வும் பழக்கமும் உடைய சூழலே. ஆனால், இங்கே வாழ்க்கை நலம் மட்டும் எதிர் எதிர் முரண்பாடு உடையதாகிறது. நட்பு எளிதில் சிறு வேறுபாட்டால் பகைமையாவதையும், பகைமை எளிதில் நட்பாக மாறுவதையும் காண்கிறோம். ஏதின்மை என்பது, பகைமை, நட்பு ஆகிய இரு தொடர்புகளும் ஏற்படாத நிலை. ஆகவே, அதில் வாழ்க்கை உணர்வும் பழக்கமும், வாழ்க்கை நலமும் ஒப்புடையதல்ல. நெருங்கிய தொடர்பால் ஒப்பு இருப்பதாகக் காணப்பட்டாலும் அல்லது ஏற்பட்டாலும், அது நட்பாகலாம். வாழ்க்கை உணர்வும் பழக்கமும் மட்டும் ஒன்றுபட்டு நலம் வேறுபட்டால் அது பகைமையாகலாம். இரண்டு தொடர்பும் ஏற்படுமுன் உள்ள தொடர்பு, நட்புப் பகைமையினும் தொலைவான தொடர்பே ஏதின்மை. வெறுப்பு, உவர்ப்பு, அருவருப்பு, புறக்கணிப்பு ஆகிய உணர்வுகள் இதன் பாற்பட்டவை. நட்பு, பகைமை, ஏதின்மை நண்பர் ஒரே இனத்தவராயிருக்கலாம். இனத் தொடர் புடையவராயு மிருக்கலாம். ஒத்த பண்புடைய இருவேறு இனத்தவராகவும் இருக்கலாம். இரு வேறு பண்புடைய இரு வேறு இனத்தவர் தம்மளவில் ஒத்த பண்பினால் நண்பராகவும் கூடும். நட்பின் இத்தன்மைகள் அத்தனையும் பகைமைக்கும் உண்டு. ஏனெனில், பகைமை நட்புக்கு எதிர்ச்சொல்லன்றி, எதிர்மறைப் பண்பன்று. நட்பை நோக்கிச் செல்லும் ஒரு படியென்றே அதைக் கொள்ளலாம். ஆகவே, நட்பைப் போலவே பகைமையும் ஓரினத்தார்க்குள்ளோ, தொடர்புடைய இனங்களுக் குள்ளோ, வேறு வேறு இனங்களில் பண்பு ஒத்தவழியேதான் ஏற்பட முடியும். பண்புத் தொடர்பற்றவரிடையே நட்பும் இராது, பகைமையும் இராது. நட்பு, பகைமை இரண்டுமே பண்புத் தொடர்புக்கு அறிகுறிகள். சரிசம நிலைக்கு அறிகுறிகள். நட்பு, பகைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பண்பு ஏதின்மையே. அஃது இருவகைப்படும். நட்பாக, பகைமையாக மாறுவதற்குரிய ஏதின்மை சரிசம நிலையுடைய ஏதின்மை ஆகும். மற்றொரு வகை ஏதின்மை உண்டு. அஃது என்றும் இயல்பாக நட்பு, அல்லது பகைமையாய் மாற முடியாத ஏதின்மையாகும். இதுவே உயர்வு தாழ்வுடைய ஏதின்மை. இங்கே பகைமை என்றும் ஏற்பட முடியாது. அதற்கு மாறாகச் சில சமயம் ஆண்டான் அடிமைத் தொடர்பு ஏற்படும். நட்பு ஒன்றும் ஏற்பட முடியாது. சில சமயம் அதனிடமாக அருளன்பு இடம்பெறக் கூடும். ஆனால், இரு பண்புகளுமே ஒரு சிறிதும் ஏற்படாத ஏதின்மையே பெரும்பான்மையாகும். ஏதின்மை, பகைமை, நட்பு, இனத் தொடர்பு இவை படிப்படியான பண்பு வளர்ச்சியைக் காட்டும். ஏதின்மை, உயிரிலாப் பண்பு. பகைமையும் நட்பும் உயிர்ப் பண்புகள், அவையில்லாதவிடத்து உயிர்ப் பண்பு தோற்றாது. வாழ்க்கைப் பண்பு செயற்படாது. வாழ்வின் அடிப்படைக்கே வழி இராது. இதற்கு நேர் எதிரான இனத்தொடர்பு உயிர்கடந்த உயிராக்கப் பண்பு, வாழ்வுப் பண்பு. நீடித்த பகைமை, நீடித்த நட்பு ஆகிய இரண்டு படிகளிலும் உயிர்கள் ஒன்றை ஒன்று அல்லது ஒருவரை ஒருவர் அறிந்து உணர்ந்த ஒப்புணர்வின் அடிப்படையிலேயே இனமும் தோன்றுகிறது; வாழ்வும் தொடங்குகிறது. பல உயிர்கள் ஒன்றாய் ஒரு குழுவாகி, ஓருயிர்போலப் பல உயிர்கள் கூடி இயங்குவதே வாழ்வு என்று கூறப்படும். அங்ஙனம் ஒன்றுபட்டு ஓருயிர்போல வாழும் குழுவே இனம் ஆகும். அத்தகைய இன வாழ்விலேயே பெருக்கம், வளம், பொங்கல் ஆகியவற்றுக்கு வழி உண்டு. இதுவே வாழ்வினம், இனம் என்று வாழ்வியல், சமுதாயவியல் அரசியல் நூலாரால் குறிக்கப்படுவது. இஃது இனம் என்ற சொல்லின் சிறப்பு வழக்கு. ஆனால், இயல்நூல் துறையின் ஒரே பொதுப்பண்புடைய உயிர்களையும் பொருள் களையும் இனம் என்று கூறுவதுண்டு. இஃது இனம் என்ற சொல்லின் பொதுவழக்கு ஆகும். வாழ்தல் என்ற சொல்லுக்குக் கூடி இயங்குதல், சமுதாய, இன உறுப்பின ராக நிலவுதல், வளம் பெறல், நின்று நிலைபெறல் ஆகிய பொருள்கள் ஏற்பட்ட வகை இதுவே. அது வாழ்வினத்தில் மட்டுமே தனி உயிர் பெறும் வளர்ச்சி ஆகும். இனச்சுட்டு இனம் என்ற சொல்லை நாம் பொதுச் சொல்லாகவும், பொதுப் பண்பு குறித்த சொல்லாகவும் வழங்குகிறோம். சிறப்புச் சொல்லாக, இனத்தின் உட்பிரிவுகளைக் குறித்த சொல்லாகவும் வழங்குகிறோம். உயிரினம் என்று எல்லா உயிரினங்களையும் தொகுத்துணர்த்தவும் வழங்குகிறோம். ஓர் உயிரினம் குறிக்கவும் வழங்குகிறோம். மனித இனம் என்று பொதுவாகவும் மனித இனத்தினுள்ளேயே ஓர் இனம் என்றும் கூறுகிறோம். இதுபோலவே இனம் குறித்த எல்லாச் சொற்களுமே பொது, சிறப்பு என இரு சுட்டுகள் உடையன. குதிரை என்பது குதிரை இனத்தையும் குறிக்கலாம். அவ்வினம் சார்ந்த ஓர் உயிர், ஒரு குதிரையையும் குறிக்கலாம். இவற்றை வேறுபடுத்த வட ஐரோப்பிய மொழிகளில் மட்டும் பொதுச் சுட்டுச்சொல் என்றும் (ஆங்கிலம் : ய, யn) சிறப்புச்சுட்டுச் சொல் என்றும் (ஆங்கிலம் : கூhந; பிரஞ்சு; ஜெருமன் டுநனநச) வேறுபாடுகள் உண்டு. தென் ஐரோப்பிய மொழிகள், கீழை உலக மொழிகள் ஆகியவற்றில் அவை ஆரிய இனமொழிகளாயினும் சரி, பிற இனமொழிகளாயினும் சரி, இவ்வேறுபாடு கிடையாது. ஆனால், இவற்றினும் ஆழ்பண்புடைய முச்சுட்டு முறை ஒன்று எல்லா உலக மொழிகளிலும் இருந்ததென்று கருத இடமுண்டு. இவற்றின் தடம் வடஐரோப்பிய மொழிகளில்கூட இல்லாம லில்லை. தமிழ் மொழி ஒன்றுதான் அந்த மூன்றுசுட்டு மரபை இலக்கியக் காலத் தொடக்கம் வரை காத்து வந்துள்ளது. தமிழிலுள்ள முச்சுட்டு ஏதின்மை, தொலை, அணிமை குறித்தது. ஏதின்மைச் சுட்டாகிய ‘உ’ மேல் கீழ், பின்புறம், மிகுதொலை, தொடர்பின்மை, ஏதோ ஒன்று என்ற அறியாப் பொதுமை ஆகியவற்றைச் சுட்டுவது. மேல் என்ற பொருளில் அதனை வட ஐரோப்பா உட்படக் கிட்டத்தட்ட எல்லா உலக மொழிகளிலும் இன்று காணலாம். தொலை அணிமைச் சுட்டுகளாகிய ‘அ’, ‘இ’ என்பவற்றைத் தமிழின மொழிகளிலும் தென் ஆரிய மொழிகளில் (இலத்தீனம்:ஆங்கே,இங்கே; சமற்கிருதம் தத்-அது ஏதத், இதம்-இது) சிறப்பாகவும் பிறமொழிகளில் பொதுவாகவும் காண்கிறோம். ஏதின்மை, பகைமை, நட்பு என்ற மூன்று படிகளிலும் அதற்கிடையில், அறியாப் புதுமை, அறிவு, பழகிய அறிவு அல்லது ஒத்துணர்வு ஆகியவற்றிலும் மனித இனம் படிப்படியாக இன உணர்வு நோக்கி வளர்ந்த வளர்ச்சிகளை இச்சொற்கள் இன்றும் காட்டுகின்றன. தனி வாழ்வுப்படி ‘தனிமையை முழுவதும் விரும்பும் மனிதனையோ, உயிரினத்தையோ நாம் இன்று காண்பது, எண்ணிப் பார்ப்பது அரிது. தனிமையை, விரும்புவதாகக் கூறுபவர் உண்மையில் தம் உலகம் முழுவதையும் தம்முடன் கொண்டு செல்லும் உள்ளாற்றல் உடையவர்களே. அத்தனிமையும் வாழ் உலகத்தில் தொடர்பற்ற தனிமையன்று. அது நீடித்த, பல ஊழி தொடர்ந்த, கூட்டு வாழ்வின் விளைவேயாகும். ஆயினும், தொடக்க உயிர்கள் வாழ்வு பெரிதும் தனி வாழ்வாக, உயிரிலாப் பொருள்கள் நிலையிலிருந்து மிகுதி வேறுபடாததாகவே இருந்துவந்தது - அணு உயிர்கள் நிலை இன்னும் அதில் மிகுதி வேறுபட்டதல்ல. ஏனெனில், உயிர்கள் குடும்பம், சமுதாயம், இனம் ஆகிய கூட்டுறவுக் குழுக்களாக அமையுமுன் அவற்றிடையே நட்பு, பகைமை ஆகிய பண்புகளும் ஏற்படவில்லை. இவற்றுக்கு அடிப்படையான விருப்பு வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளும் தோன்றவில்லை. ஒவ்வோர் உயிரும் மற்றெல்லா உயிர்க்கும் ஏதிலாப் புத்துயிராகவே வாழ்ந்தன. உயிர்க்கு உயிர் ஏற்பட்ட முதல் தொடர்பு உணவுத் தொடர்பே. (செடி கொடி நீங்கலாக ஏனைய) உயிர்கள் உண்ணும் உணவு எப்போதும் இன்னோர் உயிராகவே இருந்து வருகிறது. ஏனெனில், ஊனுணவு மறுத்த சிறுபான்மை மனிதர்கள் உண்ணும் உணவும், செடி கொடி வகை உணவன்றி வேறன்று. அவையும் உயிருணவேயாகும். ஆயினும், உணவின் அடிப்படை ஆக்கம் உயிரிலா இயற்கைப்பொருள் என்பதில் ஐயமில்லை. செடி கொடிகள் பெரும்பாலும் இயற்கையை நம்பியே வாழ்கின்றன. நீர், நிலம் இரண்டிலும் கலந்துள்ள உப்புகள்; காற்றுவெளி, வான வெளியில் பரவும் காற்றுவளிகள், கதிரொளி ஆகியவையே அவற்றின் உணவு. ஆனால், மற்ற உயிரினங்கள் யாவும் ஒன்று செடி கொடிகளையோ அல்லது பிற உயிரினங்களையோதான் உணவாகக் கொள்கின்றன. செடி கொடிகள்கூட மற்றச் செடிகொடி உயிரினங்களின் பகுதிகள் மக்கிச்செறிவுற்ற உரத்தால் முன்னிலும் வளம்பட வளர்கின்றன. பிற செடி கொடி உண்ணும் ஒட்டுயிர்ச் செடியினமும், உயிரினங்களின் தசையையே உண்ணும் செடியினமும்கூட உண்டு. உயிர்களின் முதல் தொடர்பு தின்னும் தொடர்பே - ஓர் உயிர் தின்கிறது. இன்னோர் உயிர் தின்னப்படுகிறது. கொலையில் இருந்தே உயிர் தொடங்கிற்று என்பதை இது காட்டுகிறது. வாழ்வில் இன்னும் கொலைப்பண்பு இருப்பதன் மறை திறவு இதுவே. உயிர்கள் உணவுக்காக ஒன்றை ஒன்று தின்னப் போராடின. பெரிய உயிர் சின்ன உயிரைத் தின்றது. வலிமை மிக்க உயிர் வலிமை குறைந்த உயிரைத் தின்றது. இளந்தாய் பச்சிளங் குழந்தையைத் தின்றது! இளமுறுக்குடைய பிள்ளை தாய் தந்தையைத் தின்றது! இன்றைய மனிதர் கண்ணோட்டத்துக்கும் கருத்தோட்டத் துக்கும் இந்நிலை மிகக்கொடுமையாகத் தோற்றக் கூடும். ஆனால், இச்செயல்களில் இன்றிருக்கும் கொடுமை உணர்ச்சி, அருவருப்புணர்ச்சி, பகைமை உணர்ச்சி, உயிருலகில் அன்று தோற்றவில்லை. கொடுமையில்லாத அந்தக் கொலை உணவுப் பண்பு, அருவருப்பில்லாத அந்தத் தசைச் சுவைத்திறம், பகைமை யில்லாத அந்தப் போராட்ட ஆர்வம் இன்னும் இனவாழ் வினூடாக நம் மனித உயிர்வரை வந்து நம்மையறியாமல் ஆக்கி வளர்க்கும் நல்லுணர்வாகவே மாறி இயங்கி ஊடாடுகின்றன. இளம் பிஞ்சின் சுவையை நாம் இன்னும் விரும்புகிறோம். கனிந்த பழங்களில் நாம் இன்னும் இனிமை காண்கிறோம். இந்தச் சுவையுணர்வு எப்படித் தொடங்கிற்று என்பதை உயிர் நூலார் காட்டினாலன்றி நாம் உணரமாட்டோம். இளங்குழந்தைகளைக் கண்டவுடன் மகிழ்கிறோம். எடுத்தணைத்து முத்திக் கொள்கிறோம். பகைமை தோற்றாத காலத்தின் அழிவுச் செயல்களின் உணர்ச்சியே ஆக்க உணர்ச்சியாக மாறி வாழ்வின் வளங்காண உதவும் அழகுணர்ச்சிகளாக, இன்ப அவாவுணர்ச்சிகளாக, இன்று இயங்குகின்றன. தன்னலமும் தற்காதலும் இன்று காதல் துணைவரை, குடும்பத் துணைவரை வாழ்த்தும்போது ‘ஈருடலும் ஓருயிரும் போல வாழ்வீராக’, என்று அழகாக வருணிக்கிறோம். இன்று இது வருணனை; அழகு வருணனை. ஆனால், இதில் அறிவியல் உண்மையும் உண்டு. உயிரின வரலாற்று வாய்மையும் உண்டு. பருவமடைதல் என்ற கருத்துக்கு உயிர்நூலார் கூறும் பொருள் சுவையுடையது. ஆடவர், பெண்டிர் இருவர் உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் தாய்க்கூறு, தந்தைக் கூறு இரண்டும் உண்டு. பருவமடைதல் என்றால், இதில் ஒரு கூறு நீங்குதல் என்பதுவே பொருள். பருவமடையுமுன் முழு உயிர்ப் பிஞ்சாக இருந்த ஆடவர் பெண்டிர், பருவமடைந்த பின் முழுதும் வளர்ந்த அரையுயிராய் விடுகின்றனர். மண வாழ்வுக் கூட்டுறவில் இருபாதிகளும் மீட்டும் இணைந்தே புத்துயிர் பிறக்கிறதாம்! இஃது ‘ஈருடல் ஓர் உயிர்’ பற்றிய உயிர்நூலின் அறிவியல் உண்மை. உயிர் நூலின் உயிர் வரலாற்றுண்மை இன்னும் புதுமை வாய்ந்தது. நம் அழகு வருணனையை அது நமக்குப் பிடிக்காத அளவில் முழு உண்மையாக்கி விடுகிறது. உயிரின வரலாற்றில் தொடக்கத்தில் ஆண், பெண் வேறுபாடே கிடையாது. இனப் பெருக்க வாழ்வு வேறு, உணவு வாழ்வு வேறு என்ற நிலை கூட ஏற்படவில்லை. தின்று பெருத்த உயிர் இரண்டாக வெடித்தது. இரண்டு உயிராயிற்று. அவை தின்று பெருத்து நான்காயின, இப்படிப் பெருக்கம் இரட்டை எண்ணாக, இரட்டித்த பெருக்கமாகவே வளர்ந்தது. இன்றும் நுண்ணணு உயிர்கள் (க்ஷயஉவநசயை) இப்படியே பெருகுகின்றனவாம்! இன்று இருவர் சேர்ந்தது குடும்பம். அது மூன்றாக, நான்காக, எந்த எண்ணாகவும் பெருகலாம். ஆனால், அந்த உயிர்த்தொடக்கக் கால வளர்ச்சியில் எல்லா எண்ணையும் பார்க்கமுடியாது. இரண்டு, நாலு, எட்டு, பதினாறு - இது தான் வளர்ச்சிப்போக்கு. மூன்று, ஐந்து, ஏழு முதலிய ஒற்றை எண்களையோ, ஆறு, பத்துப் போன்ற ஒற்றை எண்ணின் பெருக்கத்தையோ காணமுடியாது! கீழ்வாய் இலக்கத்தில் இன்னும் இரண்டில் ஒன்று, நாலில் ஒன்று போன்றவைதாம் உண்டு. மூன்றில் ஒன்று, ஐந்தில் ஒன்று, ஏழில் ஒன்று அரிது, (தமிழில் ஐந்தில் ஒன்று இருப்பது புதுமை; மூன்றில் ஒன்று, ஏழில் ஒன்றுகூட ஏற்பட்டிருக்கின்றன!) ஆறில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, பதினொன்றில் ஒன்று, இவற்றின் பெருக்கம் முதலியவைகூடக் கிடையாது. ஆண், பெண் வேறுபாடு ஏற்பட்ட பின்னும் ஓர் உயிரே ஆணாகவும் பெண்ணாகவும் அமைந்தது - அம்மையப்பனான பழைய அரன் வடிவம் இதை நினைவூட்டுவதே என்று கருதலாம்! நிலப்புழு போன்றவை இம்மரபை இன்னும் நீடிக்கின்றன. இத் தொல் பழங்காலத் தற்காதலிலிருந்தே மனிதனிடம் இன்றும் தன்னலம் நீடிக்கிறது என்னலாம்! தன்னலம் உடைய மனிதர் இன்னும் தம் வாழ்வில் ஓரளவு முன்னேறக் கூடும். ஆனால், தற்காதல் செய்த உயிர்கள் உயிரினப் போட்டியில் எவ்வளவு பிற்பட்டுவிட்டன என்பதை அவற்றின் தேய்ந்து நலிந்துவிட்ட மரபே காட்டும். அவற்றின் மரபுத் தடமாக இன்று ஒன்றிரண்டு உயிரினங்களே உள்ளன. தன்னல வாழ்வும் இதுபோல இன மரபில் பிற்பட்டு நலிவதேயாகும். அத்துடன் இன்றைய அறிவுடைய தன்னலம் பெறும் சிறிதளவு வெற்றிக்குக்கூட அது பெரிதும் பொதுநலப் போர்வை போட்டுக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது. தன்னல முடையவர் இன்று அடையும் வெற்றி அவர்கள் பொதுநலப் போர்வையின் அளவிலேயே அமையும். அஃது அவர்கள் தனி வாழ்வில் வெற்றி தந்தபின், அவர்கள் உள்ளார்ந்த தன்னலம் அவர்கள் இன மரபில் நலிவூட்டும். நேர்மாறாகப் பொதுநல முடையவர் இனச்சூழலின் தன்னலத்தினால், தற்காலிகத் தோல்வி பெறலாம். ஆனால், அவர்கள் பொதுநல உணர்வு இன மரபை வளர்க்கிறது. சிற்சில சமயம் நல்லார் நலிவதையும், பொல்லார் வளர்வதையும் கண்டு பலர் புழுக்கம், மனக்கசப்படைவதுண்டு. தொலைநோக்குடையவர்களே அவற்றின் தொலைவிளைவுகள் காணமுடியும். திருவள்ளுவர் ‘அவ்வுலகம்’, ‘மறுமை’, மறுபிறப்பு’,` எழுபிறப்பு’ என்றது இவ்இனமரபையே. தமிழ்ப் பண்பும் திருவள்ளுவர் கருத்து மரபும் மறக்கப்பட்ட பின்னாளில், இதுவே உலகெங்கும் புத்தர், சமணர், ஆரியர் ஆகியோரின் மறுபிறப்புக் கோட்பாடாகவும், உலகின் ஏழு உலகக் கோட்பாடாகவும் மயங்கி உணரப்பட்டன. ஆதிக்க வாதம் உணவுப் போராட்டக் காலத்தில் தொடக்கத்தில் பசி, பசி தீர்ந்த மனநிறைவு, அச்சம் ஆகிய மூன்று உணர்ச்சிகள் தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு வழி ஏற்படவில்லை. கொடுமை, பகைமை முதலிய உணர்ச்சிகள் அவற்றைக் காணும்போது, அல்லது எண்ணும்போது உணர்ச்சியில் வளர்ந்துவிட்ட நம் உள்ள நிலையைக் காட்டுவதேயாகும். அவ்வுணர்ச்சிகள் தொடக்க உயிர்களிடமோ, தொடக்கக் கால மனிதனிடமோ கிடையாது. பேருயிர்கள் உண்டு பசியாறின; சிற்றுயிர்கள் அவற்றுக்கு அஞ்சின. பேருயிர்கள் பேருயிர்களை, சிற்றுயிர்கள் சிற்றுயிர்களைத் தின்னத் தொடங்கிய காலத்திலேயே உணவுப் போராட்டம் உயிர்ப் போராட்டம் ஆயிற்று. இந்தச்சரிசம நிலைக்கேற்ப, அச் சரிசம நிலையின் சிறு உயர்வு தாழ்வுகளுக் கேற்ப, வீம்பு, வீறு, வீரம், பகைமை, தன்மானம், வெற்றிக்களிப்பு, எக்களிப்பு முதலிய உணர்ச்சிகள் வளர்ந்தன. இவற்றின் பண்பை இன்றுவரை தனிமனிதர் வாழ்விலே காணலாம். இவை அன்புடைய உணர்ச்சி களல்ல. ஆனால், அன்புடைமைக்குரிய சரிசமத்துவத்தை அணுகிய உணர்ச்சிகள் இவை என்பது தெளிவு. வீம்பின் மிகுதியே ஆதிக்கத்தின் அடிப்படை. அது தன்னலம், தன்னலத்தின் குறுவிரியாகிய குழுநலம் ஆகியவற்றுடன் சேர்ந்து இன்னும் பல தனிமனிதர்கள் வாழ்விலும், பல இனங்களின் வாழ்விலும் நாட்டு வாழ்விலும் ஆதிக்கவாதமாக, அடக்குமுறையாகக் காட்சி தருகின்றது. ஆதிக்க வாதம் தழைக்குமிடத்தில் அதற்கெதிரான அடிமைத்தனமும் தழைக்கும். நட்பு, பகைமை ஆகியவை ஒரே பண்பின் இரண்டு எதிரெதிர் கோடுகளாய் அமைவதுபோல, ஆதிக்க மனப்பான்மையும் அடிமை மனப்பான்மையும் வெளிப்பார்வைக்கு எதிரெதிர் பண்புகளே தவிர உண்மையில் ஒரே பண்பின் இருபுறங்களே. ஆதிக்கவாதம் வீழ்ச்சியடைந்தால் அஃது எளிதில் அடிமை மனப்பான்மையாகவும், அடிமை மனப்பான்மை ஆட்சிக்கு வந்தால் அஃது எளிதில் ஆதிக்க வாதமாகவும் மாறிவிடும். இந்த இரண்டு பண்புகளுமே இன மரபழிக்கும் பண்புகள். கொடு விலங்குகளின் வாழ்வு இதைக் காட்டுகிறது. தனிக் காட்டரசன் என்று பெயர் பெற்றது சிங்கம். ஆதிக்கத்திலும் வீரத்திலும் இன்றுவரை அதுவே அரசர் மரபுக்கும் கவிதை மரபுக்கும் உரிய சின்னம். அஃது உலகின் பல காடுகளிலும் திரிந்த விலங்கு, போட்டியற்று ஆட்சி செய்த விலங்கரசு! ஆனால், இன்று அதன் மரபெங்கே? ஆப்பிரிக்கப் பாலை வனம் ஒன்றிலிருந்துதான் உலகெங்கணும் உள்ள விலங்குக் காட்சி சாலைகளுக்குச் சிங்கங்கள் தேடிக் கொண்டு வரப்படுகின்றன. அசாமில் சிங்கங்கள் ஒரு சிலவாகிவிட்டனவாம்! இந்திய அரசியல் சட்டம் அதன் மரபுப் பாதுகாப்புக்காகச் சட்டவிதிகள் வகுத்துள்ளன. அதனைக் கொன்றழிக்கும் இனமான மனித இனத்தின் தொலை அறிவுடைய சட்ட அமைப்பே அதன் மாள்வைத் தடுக்க வேண்டியிருக்கிறது. அதன் மரபு ஆற்றல் அதைக் காக்கவில்லை. மற்றக் கொடு விலங்குகளும் உலகில் மரபு நலிந்தே வருகின்றன. சிங்கத்தின் நிலைதான் சிங்காதனமிட்டு ஆண்ட அரசர் நிலைக்கும் உலகில் ஏற்பட்டு வருகிறது. அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன், விக்கிர மாதித்தன், சேரன் செங்குட்டுவன், இராசேந்திரன் ஆகிய வல்லரசர், பேரரசர் வளர்த்த வீர நினைவு நீடிக்கிறது. ஆனால், அவர்கள் வாழ்ந்த இனங்களிலேயே பல அழிவெய்தியுள்ளன. இனத்துக்கு அவர்கள் வீறளித்தார்கள்; வாழ்வளிக்கவில்லை; மரபு வளர்க்கவில்லை! சிங்க மரபைக் காக்க எண்ணும் கலையுணர்ச்சிதான் இன்று சிங்காதன மரபுகளின் சின்னங்களையும் காப்பளித்துப் பேணவேண்டியிருக்கிறது. ஆதிக்க வாதமும் அடிமை மனப்பான்மையும் ஆதிக்க வாதத்தின் மிகப் பெருங்கேடுஅஃது அடிமை மனப்பான்மையை வளர்ப்பதே. அடிமைகளிடையே உயிரினங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட பல நற்பண்புகள்கூடத் தீய பண்புகள் ஆய்விடுகின்றன. ஆதிக்க வாதத்தின் வீம்பை அது பசப்பாக்குகிறது. அதன் நேரடித் தாக்குதல்களை மறைமுகத் தாக்குதல்களாக்குகிறது. அத்துடன் பொய்ம்மை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று, கொடுமை, கயமை ஆகிய அருவருக்கத்தக்க பண்புகள் அடிமைகளிடையேதான் வளரமுடியும். ஆதிக்க வாதிகள் தோல்வியால் அடிமைகளாகவும், அடிமைகள் வெற்றியால் ஆதிக்கவாதிகளாகவும் மாறுவதால், அடிமை யாதிக்கமே ஆதிக்கத்தில் மிகக் கொடிய ஆதிக்கம் ஆகிறது. அடிமைகளுள் சிலர் அறிவும் பெற்றுவிட்டால், அஃது உலகை, மனித இனத்தையே உள்ளூரத் தின்றழிக்கும் எலும்புருக்கி நோயாய்விடுகிறது! தற்சிந்தனை வகுப்பு உண்மையில் அடிமைக் காலத்தில் புதிதாக எழுந்த ஒரு போலி வகுப்பேயாகும். கிரேக்க உரோமப் பேரரசுகள் பல உயர் பண்புகளை உலகுக்குத் தந்தவை. ஆனால், அவற்றின் அழிவுக்கு ஆண்டான் அடிமை முறையே காரணமாயிருந்தது. அடிமையாதிக்கம் பெற்ற காலப்பண்புக்கு உரோமப் பேரரசன் நீரோ ஓர் அழியாச் சான்றாகின்றான். ஆங்கிலப் பழமொழி ஒன்று அந்நினைவை நீட்டிக்கிறது. உரோம் நகரம் எரிவதை நீரோ கண்டு களித்தானாம். அதுதான் அவன் கலைப்பண்பு. இன்றும் கலையின் பெயரால் உலகில் நீரோ மரபு நீடிக்காமலில்லை. கலை கலைக்காகவே என்ற கூக்குரலிலும், இசைக்கலை மொழி கடந்த கலை என்ற நச்சுவாதத்திலும் நீரோ மரபு நிழலாடுகின்றது. உடலில் வலு இல்லாத நரி, ஆதிக்கவாதத்தை எதிர்க்க வழங்கிய அடிமைப் பண்பே, இன்னும் உலக மொழிகள் எல்லாவற்றிலும் சூழ்ச்சி குறித்த உருவகமாயுள்ளது. குள்ளநரிச் சூழ்ச்சி பல இடங்களில் வெற்றியடைவதுண்டு. ஆனால், உயிரினமும் சரி, மனித இனமும் சரி, அதை ஒன்றுபட்டு அடக்கி அழித்தே வந்துள்ளன, வரும், வருதல் வேண்டும். அத்தகைய அழிவறிவைவிட மடமையே ஆயிரமடங்கு மேம்பட்ட பண்பு ஆகும். பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகத்தில் வரும் குடிலன், இப்பண்போவியத்துக்கு முன்மாதிரி என்று கூறக்கூடிய ஷேக்°பியரின் ஒதெல்லோ நாடகத்தில் வரும் அயாகோ ஆகியோர் குள்ளநரிச் சூழ்ச்சிகளின் திறத்துக்கு அழியாச் சான்றுகள். மனித இனம் முழுவதும் வெறுக்கும் ஒரு பண்பு உண்டென்றால், அஃது இதுதான். மனித இனத்தை அழிக்கத்தக்க, மனித இனம் ஒன்றுபட்டு அழிக்கவேண்டிய ஒரு தனிப்பெருந் தீங்கு இதுவே! புரோகித வகுப்பினரிடம் இப்பண்பு, சிலசமயம் அரசியல் ஆதிக்கம், அறிஞர் ஆதரவு, சமயத் தலைமை ஆகியவற்றுடன் இணைந்து மிக நீடித்த வாழ்வு வாழ்வதுண்டு. இன்றும் தமிழகத்தில் மூலதளம் அமைத்து, இந்தியாவெங்கும் ஆட்சி செய்யும் நிலையில் அறிஞர் வகுப்பின் ஒரு பெருங் கூறாகவும், ஆட்சி வகுப்பின் உட்கூறாகவும், தமிழ்ப்பண்பை முழுத் திரையிட்டு உலகில் தன் நச்சுயிர்ப் பண்பைப் பரப்பிவருங் கூறாகவும் இத்தகைய ஓர் அடிமையறிஞர் வகுப்பு மக்கள் சமயத்துறையைத் தன் மடமைப் பயிர் வளர்க்கும் துறையாகப் பேணியே வருகின்றது! தமிழினம் நீங்கலாகப் பண்டைப் பேரினங்கள் பல இந்தப் புரோகித வகுப்பின் ஆட்சிக்கு இடம் தந்ததனாலேயே மாண்டு மடிந்துள்ளன. வள்ளுவர் மரபில் வந்த தமிழ்ப் பண்பு பேணிய அறிஞர், சித்தர் அவ்வழிவு மரபுடன் இன்றுவரை போராடி வந்துள்ளதனாலேயே, தமிழ் மொழியும், இனமும், பண்பும், பேரளவில் நலிந்தும் இன்னும் மரபறாது இயங்குகின்றன. இனியும் அம்மரபொழித்து இயங்கவல்ல ஆற்றல் அஃது ஒன்றுக்கே உலக இனங்களில் மீந்துள்ளது! தமிழ் வாழ வேண்டுமானால், உலகம் வாழ வேண்டுமானால், அம்மரபின் மெய்ந்நிலை, உணர்ந்து உலகம் அதைத் திருத்தியாதல் வேண்டும்! மனித இனத்தில் குள்ளநரியின் பண்புக்கு உள்ளார்ந்த ஓர் இடம் உண்டு. மனிதனும் மற்ற விலங்குகளை நோக்க, உடல் வலிமையும் உறுப்பாற்றலும் குறைந்தவனே. ஆயினும், உழைக்கும் கைகள், நிமிர்ந்த உரு, குடும்ப, சமுதாய, இன அறிவு, மரபு ஆகியவை அவன் அறிவைக் குள்ளநரி அறிவாக்காமல், குரங்கின் குறும்பாக்காமல், பறவைகளை ஒட்டிய காதலன்புப் பண்பிலும், யானையை ஒத்த சமுதாய, இன மூளைப் பண்பிலும் வளர்த்துள்ளன. அவன் மரபு குள்ளநரி மரபை உட்கொண்ட தாயினும், குள்ளநரி மரபாகாமல் காத்து வந்துள்ள கூறுகள் இவையே. காத்துவரும் இந்தக் கூறுகளைப் பேணிவரும் இனங்களில் தலைமையானது தமிழினம்! உயிர்ப் போராட்டம் உயிர் நூல் புலவர்கள் உயிரின வரலாற்றில் உணவுக்கான உயிர்ப் போராட்டத்துக்கே அதன் தகுதிக்கு மேற்பட்ட முழு முதன்மையளித்துள்ளார்கள். குடும்ப சமுதாய மரபுப் பண்புகளில் அவர்கள் இன்னும் போதிய கவனம் செலுத்த வில்லை! உலக வரலாறு இயற்றிய எச்.ஜி.வெல்° என்பார் ‘பெரு விலங்கேதான் நீடித்து நின்று வாழக்கூடும்’ என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ‘அறிவு கூடப் பேருருவுக்கு முன் பயன்படாது’ என்றும் அவர் குறிக்கிறார். பேருருவுடைய யானை மற்றெல்லா உயிரினங்களையும் விட நீடித்த வாழ்வுடையதாய் இருக்கிறது. ஆயினும், இந்த வலிமை அதைச் சிங்கத்துக் கெதிராக, புலிக்கெதிராகக் காப்பாற்றியிருக்க முடியாது. அதன் நீடித்த வாழ்வுக்கும், இன்னும் அஃது உலகில் வளத்துடன் வாழ்வதற்கும் காரணம் அதன் பேருருவமன்று. மேலும் அதன் வலுபாதுகாப்புக்கானதேயன்றி, அழிவுக்கான தன்று. காட்டானையிடம் இன்று காணக்கூடும் அழிவுச் செயல்கள் அதன் இன வளர்ச்சிக்குரிய ஒரு விளையாட்டே தவிர வேறல்ல. தவிர வேறு எவ்வுயிரினத் திலும் பெண்ணினத்துக்கன்றி ஆணினத்துக்கில்லாத ‘மதம் பொழிவு’ அதன் ‘பொங்கல் ஆற்றலுக்கு’ச் சான்றாகும். குடும்ப, சமுதாய, இன வாழ்வில் மனிதனுக்குச் சில வகைகளில் மேம்பட்டுச் சில வகைகளில் அடுத்தபடியாக, யானை முன்னேறியதன் பயனே இஃது என்பதில் ஐயமில்லை. உயிரினங்களின் உடல் எடை, மூளை எடை ஆகிய இரண்டின் விழுக்காட்டையும் உயிர் நூலார் கணித்துக் கண்டுள்ளனர். மனித இனத்தின் உச்ச நிலை விழுக்காட்டை அணுகியுள்ள விலங்கு யானை ஒன்றே என்று தெரிய வருகிறது. மனிதன் பழக்கும் விலங்குகளுள் அடிமைப் பண்பை ஒரு சிறிதும் ஏற்காத விலங்கும் யானையேயாகும். நாயின் தன்னினம் பகைத்த அடிமைத் தனத்தையே மனிதர் ‘நன்றி’ என்றும், இன நினைவறாத யானையின் தன்மான உணர்ச்சியையே நன்றிக் கேடென்றும் கூறுவர். நாலடியின் ஒரு பாட்டு மனித இனத்தின் இத்தவறான கருத்தை வலியுறுத்துகிறது. ‘யானை யனையார் தம்கேண்மை மிகவுரீஇ நாயனையார் கேண்மை கொளல்வேண்டும் - யானை இருந்திருந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்!’ யானையினம் உலகின் முதற் பேருயிரினங்களுள் ஒன்று. அதன் துதிக்கை, இரு காலில் நிற்க முடியும். அதன் உடல் அமைப்பு, கொம்புபோல் நீண்ட பல், திண்தோல், சேற்று நீர் விருப்பம் முதலியனவற்றுள் மனித இனத்துடன் தொலை யுறவையும், எருமை, பன்றி, பெருச்சாளி ஆகியவற்றுடன் அணிமையுறவையும் காணலாம். அதனுடன் போட்டியிட்ட பண்டைப் பெருவிலங்குகள் அரக்கப் பல்லி, அரக்க முதலை, அரக்கத் திமிங்கலம் முதலியன. அவை இன்று புராணக் கதைகளில்கூடக் குறிக்கப்படாதவை, மனிதன் கற்பனையில்கூட வந்தெட்டாதவை. மண்ணூலார் ஆராய்ச்சிகளாலேயே அவை உலகின் முதலூழி உயிர்கள் என்பது தெரியவருகின்றன. மனிதனையும் பிறவிலங்குகளையும் விடப் பழைமைவாய்ந்த ஓர் உயிரினப் பெருங்குழுவின் இன்றைய பிரதிநிதியாக யானை விளங்குகிறது. முதல் மனித இனங்கள் பலவற்றின் பேராளாக, மனித இனத்தின் வளத்துக்கு ஒரு சான்றாக விளங்கும் தமிழினம் போல, அஃது உயிர் முதலூழி உயிரினங்களின் வளத்துக்கு ஒரு சான்றாக நிலவுகின்றது. ஆனால், தமிழன் வளம்போல, அதன் வளமும், நீடித்த வாழ்க்கைப் பண்பு, நீடித்த மரபு வாழ்வு ஆகியவற்றை விளக்கும் மரபாகவும் இயங்குகிறது. உயிர்ப் போராட்டத்தின் வெற்றி உடல் வலு, அறிவு வலு, சூழ்ச்சி வலு முதலிய எந்த அழிவு வலுவிலும் இல்லை. நீடித்த வாழ்வும் இவற்றைப் பொறுத்ததல்ல. குடும்ப வாழ்விலிருந்து பெறப்படும் அன்புப் பண்பும் சமூக வாழ்விலிருந்து விளையும் கூட்டுறவு, ஒப்புரவுப் பண்பும் இரண்டிலுமிருந்து வளம்பெறும் கூட்டு வாழ்வின் விழையார்வமும் இன்பமுமே வாழ்வில் வளமும் பொங்கலும் உண்டு பண்ணுகின்றன. உயிரினங்களுள் யானையின் வாழ்வும் மனித இன வாழ்வும், மனித இனத்தில் தமிழின வாழ்வும் ஒருங்கே தரும் படிப்பினைகள் இவை! ஆதிக்க வாதம் வாழ்க்கையை ஒரு போராட்டமாகக் கருதிற்று. வெற்றி வீறும் வீம்பும் ஆதிக்கமும் நாடிற்று. உடற் பெருமையும் உடல் வலுவுமே வெற்றிக்குரிய வழி என்று கருதிற்று. அதற்கெதிரான அடிமை மனப்பான்மையோ தன்னல அறிவு அல்லது சூழ்ச்சி, வஞ்சகம், பொய்ம்மை ஆகியவற்றின் மூலம் வெற்றி நாடிற்று. தவிர ஒவ்வோர் உயிரும் மனிதனும் மற்ற ஒவ்வோர் உயிர் அல்லது மனிதனையும் உள்ளூரப் பகைக்கும் பண்பையும் இவ்விரண்டும் வளர்த்தன. ஓயாப் போட்டி, பொறாமை, ‘வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்’ என்ற அழுகை வேதாந்தம் ஆகியவையும் இந்த அடிமை மனப்பான்மையின் நீடித்த மரபுக்குரிய விளைவுகளேயாகும். இவையனைத்தும் பொதுவாக உயிரின மரபின் வாழ்வினாலும் மனித இன மரபின் வாழ்வினாலும் தாண்டிக் கடந்து விடப்பட்ட இடர்ப்பொறிகள் ஆகும். பல தனி மனிதரையும் மனித இனக் குழுக்களையும் அஃது இன்னும் பழைய மரபின் எச்சமாகிய இழிவுடைய நோக்கங்களாகப் பீடிக்கின்றன வாயினும், மனித இனம் அளவு கடந்து வாழ்வும் வளமும் பெருக்கும் என்று நம்பலாம்! தமிழும் தமிழினமும் தமிழ்த் திருவள்ளுவர் பண்பும் அவ்வகையில் மனித இனத்துக்கு உறுதி அளிக்கவல்லன. காதல் வாழ்வு இன்றைய உயிரின உலகில் கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களிலுமே ஆண் பெண்பால்களின் எண்ணிக்கை, வாழ்நாள், உருவமைதி, வடிவமைதி ஆகிய யாவும் கிட்டத்தட்ட சரிசம நிலையுடையனவாகவே இருக்கின்றன. உயிரின் தொடக்கக் காலத்தில் எல்லா உயிர்களும் இருபாலுயிர்களாகவே இயங்கிய நிலையில், இஃது இயல்பே என்னலாம். ஆயினும், பல இனங் களிலும், பல படிகளிலும் இவற்றுள் வேறுபாடு இருந்து வருகின்றன; வந்துள்ளன. ஓர் ஆண், ஒரு பெண் என்ற இணைபுடைய உயிரினங்களே இன்று மிகப்பல. ஆயினும், இணைதுணையாக இசைவுறாத உயிர்களும் ஓர் ஆண் பல பெண், ஒரு பெண் பல ஆண், ஆணின் பல தலைமுறைக்கு ஒரு பெண், ஆண், பெண் ஆகியவற்றுடன் அலியினம் என்ற முப்பாற் பிரிவு (தேனீ) முதலிய பலவகைப்பட்ட பாலின வேறுபாடுகள் உயிரினங்களிலும் உண்டு, செடி கொடிகளிலும் உண்டு. இனப்பெருக்கம் முதலிய பாலினச் சார்பற்றதாகவும், பாலினச் சார்பான பின்னும், உயிரின் செயலின்றி இயற்கை யாகவுமே இருந்து வந்தது. செடி கொடிகளில் பூவா இனங்களிலும் அணு உயிரினங்களிலும் பாலினச் சார்பற்ற பெருக்கம் காண்கிறோம். தவிர, செடியினங்களில் காற்றும் பனித்துளியும் நீரோட்டமுமே ஆண் பூந்துகளைப் பெண் மலரில் கொண்டு வீசப் பயன்படுகின்றன. காதல் வாழ்வில் உயிரினம் உணவுயிர்ப் போராட்டத் திலில்லாத பல பண்புகளை இயல்பாகப் பெற்றன. இயற்கைப் பருவ உணர்வு தொடக்கத்தில் இரண்டு உயிர்களைச் சிறிது நேரத்துக்கேனும் போராட்டமின்றி இணையச் செய்தன. ஆனால், கீழின உயிர்கள் பலவற்றில் இந்த அமைதிகூட நீடித்ததாயில்லை. தேனீயினத்தில் காதற் கட்டத்தின் முடிவில், அலித் தேனீக்கள், ஆண் தேனீக்கள் அனைத்தையும் கொன்றுவிடுகின்றன. தேளினத்தில் பெண்தேள் காதல் கூட்டம் முடிவுற்றதும் ஆண் தேளைத் தின்னுகின்றது. அது மட்டுமன்று; குட்டியிட்டதும் ஒரு குட்டியைத் தின்று பசியாறுகிறது. மீன்கள், பாம்புகள் வாழ்விலும் இதைக் காணலாம். நாய், பூனைகள் வலுக்குறைந்த குட்டிகளைத் தின்று விடுவதும் பலர் அறிந்த செயல்களே. குடும்ப வாழ்வு இணையிணையாக அமையாத உயிரினங்களின் நிலையே இது! கீழின உயிரினங்களிலும், தொடக்கக்கால மனித இனத்திலும், இன்றைய மனித இனத்திலேயே நாகரிகமற்ற இனங்களிலும், வகுப்புக்களிலும், காதல் வாழ்வில் போராட்டமும் பூசலும் போட்டிகளும் மிகுதி நிகழ்வதுண்டு. ஆனால், உணவுயிர்ப் போராட்டக் காலத்திலில்லாத பல புதிய உணர்ச்சிகள், பண்புகள் காதற்போராட்டத்தால் உயிரினங்களிலும் மனித இனத்திலும் மனித இனங்களிலும் வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன! உணவுயிர்ப் போராட்டத்தின் வீரம் காதல் போட்டியில் போட்டியிட்ட ஆண்களிடையே ஓர் ஆண் மற்றோர் ஆணை விலக்குவதிலும், அவ்வீரத்தைப் பெண்ணுக்குக் காட்டி, அதன் ஆர்வப் பாராட்டைப் பெறுவதிலுமே பயன்படுத்தப் பட்டது. அழிவு நோக்கத்துக்கே பயன்பட்ட வீரம் இங்கே ஆக்கத்துக்குப் பயன்பட்டது. ஆணுக்கு வீரம் அழகு தருவது என்ற எண்ணம் இன்றுவரை மனித இனத்தில் ஏற்பட்டிருப்பதன் காரணம் இதுவே. உண்மையில் காட்டுநிலையில் ஆணைவிடப் பெண்ணுக்கே வீரம் மிகுதி என்பதைப் பெண்புலி வாழ்வும், பெண் தேள் வாழ்வும், ‘காளி’ வழிபாடும் காட்டவல்லன. புதிய பண்புகளின் தோற்றம் உணவு உயிர்ப் போராட்டம் ஓர் உயிரின் வெற்றி, மற்றதன் தோல்வி அல்லது மாள்வில் முடிவுற்றது, அது கொலைப் போராட்டமாயிருந்தது. காதற் போராட்டத்தில் போராட்டம் தொடக்கத்திலிருந்தே உணர்ச்சி கலந்த இன்பப் போராட்ட மாயிற்று. அதில் ஆண் பெயரளவில் தான் வெற்றி பெற்றதாக நினைத்தாலும், ‘தோல்வி’யை வெற்றியாகப் பெண் நாடத் தலைப்பட்டது. போராட்டத்தை அது தன் விருப்பு வெறுப்புக் காட்டும் பண்பாகவும், இறுதி வெற்றியின் இன்பம் பெருக்கும் பண்பாகவும், நிலையாக வெற்றிகளைத் தூண்டும் பண்பாகவும் பயன்படுத்தத் தொடங்கிற்று. தோல்வியில் வெற்றி கண்ட பெண்மை அறிவு மரபையும், கலை மரபையும் உயிரினத்தில் தோற்றுவித்தது. அறிவு மரபு ஊடற் பண்பிலும், கலை மரபு கவர்ச்சியால் வெற்றி பெறும் பண்பிலும் வளர்ந்தது. உயிரினங்களிலே கவர்ச்சி, தொடக்கத்தில் பல்வேறு பயனோக்கத்துடன் கையாளப்பட்டது. செடியினம் முதல் முதல் கவர்ச்சியை நாடியது ஆண் பெண் கூட்டத்துக்கன்று. விதைகளைப் பரப்பி இனப் பெருக்கத்துக்கு உதவும் வேலையில் பறவைகளையும் பிற உயிரினங்களையும் ஏவல் கொள்வதற்காகப் பல செடியினங்கள் பழங்களுக்கு வண்ணமும் சுவையும் மணமும் ஊட்டின. இதற்குப் பிற்பட்டு, ஆண் மலரின் பூந்துகளைப் பெண் மலர்மீது சேர்ப்பிக்க வண்டு தும்பிகளை ஏவும் பணியிலேயே அவை பூக்களுக்கு அழகு வண்ணமும் மணமும் தந்து அவற்றில் சுவையுடைய தேனும் சேர்த்தன. செடி கொடியல்லாத உயிரினங்களிலே முதல் முதல் கவர்ச்சி உணவுயிர்ப் போராட்டத்துக்கே உரியது. இன்று பெண்ணின் கண்ணழகு கொல்லும் அழகு என்று கவிஞர் வருணிப்பதுண்டு. பாம்பின் அழகும் சிங்கத்தின் அழகும் மயிலின் அழகும் இங்ஙனம் உணவுயிர்ப் போராட்டத்தில் எதிரிகளை மயக்கிக் கொல்வதற்காக ஏற்பட்டதே. சிங்கத்தின் முழக்கம்கூட இவ்வகைக்குப் பயன்பட்ட ஒன்றே. இவ்வினங்களில் அழகு ஆணின் உடைமையாய் இருப்பதன் காரணம் இதுவே. தொடக்கத்தில் கொலைக்குப் பயன்பட்ட இந்த அழகு, வீரத்தோற்றம், குரல் ஆகியவை ஆணுக்குக் காதலிலும் பயன் பட்டது இயல்பே. ஆனால், இத்தகைய சிறுபான்மை உயிரினங்களுக்குப் புறம்பாக, அழகு, வண்ணம், குரலினிமை ஆகியவற்றையும், அதற்கேற்ற மென்மை நயத்தையும் பெண் பாலினிடமே காண்கிறோம். முதல் முதல் அறிவுப் பண்பும் கலைப்பண்பும் வளர்த்த உயிரினப் பகுதி பெண்பாலினமே என்பதை இது காட்டுகிறது. உடல் பருமை, உடல்வலு, வீரம் ஆகியவற்றைவிட, சிறுநயம், மென்நயம், மென்சாயல், அழகு, வண்ணம், சிறுகுரல், ஒலிநயம் ஆகியவையே வெற்றிக்கு உதவவல்லவை என்பதும்; ஆணின் வெற்றி தோல்விகளைத் தன் விருப்பத் தேர்வுக்கும் விருப்ப மிகுதிக்கும் தக்கபடி தன் விளையாட்டு வெற்றி தோல்விகளாகப் பயன்படுத்தலாம் என்பதும்; தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வேண்டும்போது இயல்பாக வெளித் தோற்றுவித்தும் வேண்டாத போது மறைத்தும் ஆணைத் தன் விருப்பின்வழி இயக்கலாம் என்பதும் ஆணினம் தாண்டிப் பெண்ணினமே முதல் முதல் பெற்ற அறிவு. அதுவே மனித இனத்தின் முதல் அறிவு; முதல் கலைப் படிப்பினைகள். பெண்ணினம் பெற்ற அறிவு கலைப் படிப்பினைகளே, ஒரு பேருண்மையைக் காட்டவல்லன. பெண்டிர் மனித இனத்தை உடலளவில் ஈன்று வளர்த்த இனம் மட்டுமன்று; உயிரினம் பெற்ற முதல் அறிவுப் பண்பு, கலைப்பண்பு பெண்ணினம் ஈன்றளித்த ஒன்றே. மனித இனத்தை மனிதப் பண்புடைய இனமாகப் படைத்தளித்த இனமும் பெண்ணினமேயாகும். பெண்ணின் காதல் போராட்டத்தின் மறைதிறவறிந்த ஆடவன் தன் உயிர்ப் போராட்ட வீரப் பண்பை மாற்றி, அன்புப் போராட்டப் பண்பின் முதற் படிப்பினையைப் பெற்றான். காதல் கூந்தல் ஊடலில் தன்தோல்வியால் தானும் வெற்றியின்பம் பெருக்கி எதிரிக்கும் வெற்றியின்பம் ஊட்டுதல் ஆகிய பண்புகளை அவன் கற்றான். அவன் படிப்படியாக விலங்குநிலை மாறி மனிதனாயினான்! பண்பறியாத, தகாத்தனமாக நடக்கும் ஆடவனை இன்றும் பெண்டிர் ‘அட மிருகமே!’ என்பதையும், புரியாத்தனமாகச் செயலாற்றும் பெண்டிரை ‘இஃது என்ன பேயடா அப்பா!’ என்பதையும் காண்கிறோம். ஆண் கெட்டால் விலங்காவான், பெண் கெட்டால் விலங்காகமாட்டாள், பேய்தான் ஆவாள்! தமிழர் உணவுயிர்ப் போராட்ட வாழ்வைப் புறம் என்றும், காதற் போராட்ட வாழ்வை அகம் என்றும் வகுத்தனர். புறத்தினும் அகமே தமிழ்ப் பண்பின் சிறப்பென்றும், அவ்வகவாழ்விலும், கூடலினும் ஊடலே தமிழ்ப்பண்பின் தனித் திறம் என்றும் கருதினர். தமிழறிந்தும் தமிழர் பண்பறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அப்பண்பறிவுறுத்தவே கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடினார் என்னும் செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். பெண்மையும் அறிவு, கலைப்பண்புகளும் அறிவுத்திறத்திலும் கலைத் திறத்திலும் முதல் முதல் முன்னேறிய இனப்பகுதி பெண்மையே. அவற்றில் உயிரினத்தையும் மனித இனத்தையும் தூண்டி வந்துள்ள, தூண்டிவரும் பகுதியும் பெண்மையே. ஆயினும், இந்த இரண்டு துறைகளிலுமே பெண்பாலார் முற்றிலும் பிற்பட்டே இருக்கின்றனர்; இருந்து வருகின்றனர். முற்றிலும் பிற்பட்டிருக்கின்றனர் என்று கூறுவதுகூடச் செய்தியை மழுப்பி நயம்படக் கூறுவதேயாகும். அறிஞர் அழகுநய மரபுக்கேற்ப உரைக்கும் சொல்லணி நயமேயாகும். கிட்டத்தட்ட அவர்கள் நிலை இரு துறைகளிலும் ஒன்றிரண்டு அழகுச் சிலைகளின் நிலைதான் என்னலாம். அதுவும் மிக முன்னேறிய நாடுகளில், இனங்களில், வகுப்புகளில்! இது மட்டுமோ? பெண் உணர்ச்சிக்குரியவள்; ஆண் அறிவுக்குரியவன் என்ற எண்ணம், கருத்து, எல்லா மக்களிடமும், அறிஞரிடமும் கலைஞரிடமும் இன்றுகூட உலகில் பரவியுள்ளது. பெண் விடுதலை, சரிசமநிலை, பேசும் முற்போக்கு அறிஞர், கலைஞர்—பெர்னார்டுஷா, இப்சன், வெல்° உட்பட—பெண் அறிஞர், கலைஞர்கூட —உலகெங்கும் இவ்வாறே கருதியுள்ளனர்; கருதி வருகின்றனர். இவ்வாறு கருதாத அறிஞர் பண்டை உலகில் ஒருவர்தாம், அவர் திருவள்ளுவர் ! இன்றைய உலகிலும் ஒருவர்தான், அவர் திரு. வி. கலியாண சுந்தரனார்! பன்மொழி உலகில் இருவருமே ஒருமொழியாளர், தமிழர், தமிழ் நாட்டவர்! உலகிலுள்ள மற்ற எல்லா அறிஞர், கலைஞர் கருத்தும் இதுபற்றிக் கனவுகூடக் காணவில்லை. இஃது இன்றுவரை உலகிலுள்ள ஒரு புதிர், பெண்மை பற்றிய மாயப்புதிர், பெண்கள்கூட அறிந்துகொள்ளாத மாயப்புதிர்! இதற்கு விளக்கம் யாது? திருவள்ளுவரும், திரு.வி.கலியாண சுந்தரனாரும் மட்டும் வேறு வகைக் கருத்துரைத்ததன் மறைதிறவு யாது? பெண்மைத் திறமறிந்த இரு பேரறிஞர்கள் ஆணின் உணர்ச்சி, அறிவு இரண்டும் இயங்கும் உணர்ச்சி, இயங்கும் அறிவு! இயங்குவதிலேயே அஃது இன்பம் காண்பது. பெண்ணின் உணர்ச்சி, அறிவு தொடக்கத்திலிருந்தே இயக்கும் உணர்ச்சி, இயக்கும் அறிவாக இயன்றது. இயங்குவதில் அஃது இன்பம் காணவில்லை. இயக்குவதிலேயே கண்டது. இது புற இன்பம் அன்று; அக இன்பம். இயக்கிய இயக்கம் நுகர்வதில் இதன் இன்பம் இன்னும் பெருக்கமுற்றது. இன்னும் அக நோக்கிற்று. தம் விருப்பப்படியே நடக்கும் சிறுவர் சிறுமியர் வாழ்வில், சில சமயம் தம் சொல்லும் புற விருப்பமும் கடந்து அக விருப்பப்படி நடக்கும் சிறுவர் சிறுமியர் வளர்ச்சியில், தாய் தந்தையர் காணும் அடங்கிய வெளிப்படக் கூறாத இன்பத்தையே, ஆடவர் உலகியல் வாழ்வில் பெண் பெற்றாள். ஆடவர் சமய வாழ்வில் ‘பேரின்பம்’ என்று கனவு காணும் இன்பம் ‘பெண்மைக் கடவுள்’ இங்கே ‘பெண்மைப் பண்பு’ பேணும் அளவில் என்றும் காணும் இன்பமேயாகும். பேரின்பம் காணும் பெண்மையின் இயற்கைத் திறம், அடங்கிய அறிவின் திறத்தால் அறிவையே இயக்கும் அவன் ஆற்றலின் பண்பு ஆகிய இரண்டும் அவளை உலகுக்கு அப்பால் நின்று பார்வையாளராகவே வாழ்வை நுகரத் தூண்டிற்று. பெண்ணின் இந்த அடங்கிய அறிவையே தமிழர் ‘மடம்’ (ஆடினநளவல) என்றனர். தான் தெரிந்தும் ஆண் தெரியும்படி தூண்டி ஆணின் அறிவை இயக்குவதற்காகத் தெரியாதது போலப் பாவிக்கும் அவள் பழக்க மரபை நாணம் என்றனர். இது வகையில் தன்னையே தனக்கு மறைத்து ஆணின் கற்பனையில் வளர்ந்து வரும் ‘மெல்லியலாள்’ பண்பைப் பேணிப் பயில்வதைப் ‘பயிர்ப்பு’ என்றனர். இதற்காகத் தான் மேற்கொள்ளும் செயலற்ற தன்மையையே ‘அச்சம்’ என்று நாம் கூறக்கேட்டு மகிழ்கிறது. பெண்மையுணர்ந்த பெண்மை அறிவுத் தெய்வம்! இவற்றைக் கண்டுணர்ந்தே திருவள்ளுவர் வாழ்வை ஒரு காரியமாக்கி, ஆணை அதில் ஒரு கருவி மட்டிலுமாக்கி, உணர்ச்சி, அறிவு, செயல் ஆகிய முத்துறைகளிலும் பெண்ணையே இயக்கும் முதற் காரணமாக்கினார். ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்ற குறட்பாவுக்கு எத்தனை உரைகள், எத்தனை விளக்கங்கள்! உரை வகுத்த ‘ஆணறிஞர்’எவரும் இக்கருத்துக் கூறிய உலகப் பேரறிஞனைக் கண்டிலர்! கோவலனைக் கண்டிக்க அஞ்சிய கண்ணகி பாண்டியன் முன் அஞ்சா நெஞ்சங்களும் அஞ்சும் உருவம் கொண்டது இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது. “பெண்மையின் உருவம் அறிவு’ என்று கூறிய பெண்மை யுணர்ந்த ஒரு தற்கால அறிஞர் திரு. வி. கலியாண சுந்தரனார். அறிவுத் துறையில் பெண்டிர் புகழ் பெறாததற்குரிய காரணத்தை அவர் அணியழகுபடச் சுட்டிக்காட்டினார். ஆடவரில் பெண்மையுடையவரே அறிஞர் என்று அவர் கருத்துரைத்தார். உலகின் பெண்ணறிஞர் பலர், பெரும்பாலும் பெண்மையில் ஆண்மையை மேற்கொண்டவர்கள்; ஆடவரைச் சித்திரிப்ப திலேயே அவர்கள் திறமையுடைய வராகியுள்ளனர். அவர்கள் படைத்த பெண்டிரோ ஆடவர் கற்பனைக்கே உருவம் கொடுத்து அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆண் புனைபெயருடன் புனைகதை யியற்றிய ஓர் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஆணன்று பெண் என்று அறிந்தபோது, உலகம் வியப்படைய நேர்ந்தது. ஆணையியக்கும் திறம் பெண்டிர்க்கு உண்டு. அறிவுப் பண்பில் அவர்கள் மனித உலகின் முன்னணியில் நின்று பயின்றதன் பயன் இது. ஆனால், பெண்களை இயக்கும் திறம் பெண்களுக்குகூடக் கிடையாது. பெண்மையின் மாயை கண்டு வியந்தவர்களுள் எத்தனையோ மாயப்பெண்டிர் உண்டு. கடவுளை மனித இனம் முதலில் பெண்ணுருவாகப் படைத்த தற்கும், இன்றும் பெண்ணை மாயையென்றும் மாயையைப் பெண்ணென்றும் சித்தாந்த வேதாந்த அறிவுநூல்கள் புகலுதற்கும், இகழும்போதும் பேய்களில் ஆணும் கற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை மறந்து பெண் பேய் என்பதற்கும் இதுவே காரணம் என்னலாம். பெண்ணின் பேராற்றலும், அதை ஒழுங்குபடப் பயன்படுத்தாவிட்டால் நேரக்கூடும் பேராபத்தும் அறிந்த ஒரே உலகப் பேரறிஞராகத் திருவள்ளுவர் விளங்குகிறார்! குடும்பம் கடந்த வளர்ச்சி இன வாழ்வைப் பேணியவள் பெண்; அதை வளர்ப்பவன் ஆண். இடப் புறமும் வலப்புறமும் உயிரினங்களின் உறுப்பு களிலேயே இவ்இரு தன்மைகளுக்குமுரிய சின்னமாக அமைகின்றன. இடக் காலூன்றி நின்று நாம் வலது காலால் முன்னேறுகிறோம். இடக்கண் வடிவு நோக்க வலக்கண் உருவமைதி காண்கிறது. இடக்கை ஊன்றி எழுந்து வலது கையால் செயலாற்றுகிறோம். இடக்கையால் வில் பிடித்து வலக்கையால் அம்பு எய்கிறோம். இடக்கையால் தாள் பற்றி வலக்கையால் எழுதுகிறோம். பெரும்பாலும் எழுத்து இடம் தொடங்கி வலஞ்செல்கிறது. இடக்கைச் சின்னமான பெண் வாழ்வின் அனுபவம், வாழ்வு முதல், வாழ்க்கைப் பண்பு பேண, வலக்கைச் சின்னமான ஆண் வாழ்வின் செயலுறுப்பாய், பெண் இதயம் விரும்பியபடி, பெண் மூளை ஆணையிட்டபடி, பெண் நாடி நரம்புகள் இயக்கியபடி இயக்கிய அளவில் செயலாற்றுகிறாள். ஆணின் சிறப்பு அவன் வாழ்க்கையலையின் முகடு என்பதே. பெண்ணே அலையாய், தன் வளர்ச்சியை ஆணின் வளர்ச்சி யாக்கி, அவனையே தன் உயிராக, தலையாகக் கொண்டு பேணுகிறாள், பிள்ளையைப் பேணும் தாய்போல! குடும்பத்தில் நடுவிடம், நடுநாயகம் தாய்க்கு! தந்தைக்கு அதை அளித்த பின்னும் இன்றும் என்றும் எல்லா உறவும் தாய்வழி உறவே. குடும்பத்தில் பெண்ணுக்குரிய நடுநாயக இடமே சமுதாயத்திலும் இனத்திலும் நீடிக்கிறது. ஏனெனில், சமுதாய விரிவு முற்றிலும் அவள் செயலே. தொடக்கக்கால மனித நாகரிகத்தில், காதல் குடும்பத்துக்குள்ளேயே நடைபெற்றது. இதை இன்று நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது. எண்ணிப் பார்க்க விரும்பவும் மாட்டோம். ஆரிய இன ஆராய்ச்சிப் பேரறிஞரான இராகுல சாங்கிருத்தியாயனர் இக்கால நிலைகளை —இருக்குவேத காலம்வரை நீடித்திருந்த அண்ணன் தங்கை காதல், அதற்கு முன் நிகழ்ந்த தாய் பிள்ளை, தந்தை மகள் காதல் ஆகியவற்றை ஆமளவில் சுவை நயம்படச் சித்திரித்துக் காட்டியுள்ளார். பண்டை எகிப்திலும் சயாமிலும் உடன் பிறந்தார் காதல் உயர் குடிகளில் பழைமை உரிமையாகப் பேணப்பட்டது. இன்றும் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் முதலிய வேறெம் மொழியிலும் பெண் கடவாத உறவு (அண்ணன், சிற்றப்பன், சிற்றன்னை), பெண் கடந்த உறவு (மைத்துனன், மாமன், மாமி) ஆகிய வேறுபாடு இல்லை என்பது காணலாம். அறிவுப் பண்புடன் காதலில் வெற்றி காண அழகுக்கலை வளர்த்தவள் பெண். இதுவே அவள் காதல் வெற்றியைக் குடும்ப எல்லைக்கு வெளியில் கொண்டு சென்று, குடும்பத்தைச் சமுதாயமாகவும், இனமாகவும் ஓருலகை நோக்கி வளர்த்தது; வளர்த்து வருகிறது. குடும்பத்துக்கு வெளியே ஆதிக்கம் வளர்த்தவள் என்பதனால்தான் ஆடவன் பெண்மை கண்டு அஞ்சினான். அது தன்னைக் கடந்த ஆற்றல் என்பது கண்டு, அதற்குப் புறவேலியிட்டு அகவிடுதலை பெருக்கினான்! ஆணின் இவ்வறிவற்ற மடச்செயலைக் கண்டு வள்ளுவர் பெருமான் புன்முறுவலுடன் எள்ளி நகையாடுவது காணலாம். ‘சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை!’ அண்ணனை ஆட்கொண்டு அடக்கிய தங்கையாகத் தொடக்கக்காலப் பெண் விளங்கினாள். அவள் அறிவில் மூத்தவளாயிருந்ததை இது காட்டுகிறது. இன்றும் தன்னிலும் மூத்த ஆடவரையே அவள் பாசக் கயிற்றால் பிணிக்கிறாள்! உடன் பிறந்தாரிடமாக மைத்துனர், பெற்றாரிடமாக மாமன் மாமி எனப் பெண் புக்ககத்தில் புதுக் குடும்பத் தொடர்பும் புது உறவு முறையும் வகுத்தாள். இப்பண்பின் தடத்தை ஆங்கில மொழி அழகாகப் பதிய வைத்துக் காட்டுவது காண்க. மணமூலம் வந்த புதுஉடன்பிறந்தாள் மைத்துனன் (செடிவாநச-in-டயற), அவ்வகை வந்த புதுத்தாய் மாமி (அடிவாநச-in-டயற) ஆகிறார்கள். மண உறவு மூலமே சமுதாயச் சட்டமும் அரசியல் சட்டமும் அரசியலும் வளர்ந்தன என்பதையும் இத்தொடர்கள் காட்டுகின்றன. ஏனெனில் இத்தொடரில் மணம் என்பதற்கு அமைந்த சொல்லே (டயற) இன்று சட்டம் என்ற பொருள் தருகிறது! சமுதாய வாழ்வு உயிரினத்தின் குடும்ப வாழ்வில் பிறந்ததுதான் மொழி. குயிலின் கூவல்தான் மொழிகள் அனைத்துக்கும் தாய்! முதல் உயிரினத் தாய்மொழி பாட்டிலிருந்ததனால்தான், மனித இனத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழும் இனிமை என்று பொருள்படுகிறது என்னலாம்! உணவுப் போராட்டத்தில் பயன்பட்ட பண்புகளே காதற் போராட்டத்தில் பயன்பட்டதுபோல, காதற்போராட்டப் பண்புகளே குடும்ப வாழ்வுக்கும் அது கடந்து சமுதாய வாழ்வுக்கும் இன வாழ்வுக்கும் புதுப்புது வகைகளில் பயன் பட்டன. காதல் வாழ்வில் கொழுநனும் கொடியும் கொஞ்சிப் பேசிய கொஞ்சல் உணர்ச்சிகள் - ‘கண்ணே மணியே கற்கண்டே’ என்ற இன்றைய மனித இனத்தின் சொற்கள் - தாய் தந்தையர் குழந்தைகளைக் கொஞ்சுவதிலும் பயன்பட்டன. ஆனால், உணர்ச்சிகளின் பண்பு காதலினும் மேம்பட்ட உயர் பண்புகளாக, ஆக்கவளப் பண்புகளாக மாறிவிட்டன. பண்பின் கருத்துப் படிவத்தின் பொங்கல் இது! தாய் தந்தை பிள்ளை தொடர்பு, இரு பிள்ளைகளிடம் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் தொடர்பாயிற்று! மனித இனத்தில் இஃது ஒரு புதுத் தொடர்பு வளர்த்தது. தம் அறிவும் தம் தன்னலச் சூழலும் கடந்து, தம் பாசத்துக்கே முதற் காரணமான ஒரு தாய் தந்தை உணர்வு, தெய்வங்களாகவோ, தெய்வமாகவோ இருந்து தம்மை வளர்க்கின்றது என்று மனித இனம் கண்டது! தாய்ப்பாசம், தந்தைப் பாசம், உடன்பிறப்புப் பாசம் இவையே நட்பு, தோழமை, கூட்டுறவு ஆகிய உணர்ச்சி களையும், அருள், அன்பு, அறம்; ஆதரவு, துணை ஆகிய பண்பு களையும் உணர்ச்சிகளையும் சமுதாயத்தில் பரப்பின. சமுதாய வாழ்வு கூட்டுப் பொங்கலாக ஓங்கிற்று! கொடுவிலங்குக் கோட்பாடு உணவுயிர்ப் போராட்டத்தில் ஏற்பட்ட ஆதிக்கவாதம் தன்னலத்தின் பயனேயாகும். ஆனால், அதையே பொதுநலப் பண்பாக்கி, கொலையும் அழிவும் ஆக்கத்துக்குரிய இயற்கை வழி என்று கூறும் அறிஞரும் உண்டு. உண்மையில் உயிர்நூல் அறிஞர்களுள் மிகப்பெரும்பாலோர், தொடக்க உயிர்களிலேயே கருத்துச் செலுத்திய காரணத்தால், இக் கொள்கையையே வற்புறுத்திச் சென்றுள்ளனர். இதைக் கொடுவிலங்குக் கோட்பாடு என்று கூறலாம். வலிமை குன்றிய எத்தனையோ உயிரினங்கள் அழிந்துள்ளன. வலிமையுடைய இனங்களே வாழ்ந்துள்ளன. இது சிலர் கோட்பாடு. வலிமை மட்டுமன்று; சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களைத் திருத்தியமைக்கும் பண்புடைய உயிரினங்களே வாழ்வு பெறு கின்றன என்பது பெரும்பாலோர் திருத்தக் கோட்பாடு. திருந்திய இக்கொடுவிலங்குக் கோட்பாட்டைத் தகுதி வாழ்வுக் கோட்பாடு (ளுரசஎiஎயட டிக வாந குவைவநளவ கூhநடிசல) என்னலாம். புற மெய்ம்மையை ஆயும் அளவில் இஃது ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை. ஆனால், வாதம் என்ற அளவில், அக மெய்ம்மையை இது விளக்கவில்லை. சூழ்நிலைக்கேற்ற தகுதி என்பதென்ன? அஃது எவ்வாறு ஏற்பட்டது? உயிரின் அறிவால் தகுதி ஏற்பட்டது என்று கோட்பாடு கூறவில்லை; அதை மறுக்கவுமில்லை. ஆனால், அது பெரும்பாலும் இனத்தின் தனி உயிர்களில் இயல்பாக ஏற்படும் வேறுபாடுகளின் பயனாகத் தற்செயலாக நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. மாள்வு தவிர்த்துப் பிழைப்பதற்குரிய சிறப்புடைய இனம் பிழைத்து, அதன் மரபு பெருகுகிறது. அச்சிறப்பற்ற உயிர்கள் தாமும் மடிந்து மரபும் அறுகின்றன. இந்நிலையில் தகுதியுடையவை பிழைத்துப் பெருகுகின்றன. தகுதியற்றவை தாமும் மாண்டு மரபும் தேய்வுறுகின்றன. இங்கே தகுதிவாழ்வு வாதம் தற்செயல் வாதமாகவும் சுழல் வாதமாகவும் காட்சியளிக்கிறது. ஏனெனில், உயிர்களின் வளர்ச்சியில் உயிர்களுக்கு எந்தப் பொறுப்போ, செயலோ இல்லை. இடைக்காலச் சமயங்கள் சிலவற்றின் விதி வாதத்துக்கும் இதற்கும் மிகுதி வேறுபாடு இல்லை. இரண்டாவதாக, தகுதி என்பது பிழைத்திருப்பது. ஆனால், பிழைத்திருப்பதுவோ தகுதியினால். இது தகுதிக்கு விளக்கமாகாது. தகுதி எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் காட்டுவது மட்டுமேயாகும். இன்றைய இயல் நூலறிஞர் பெரும்பாலோர் ஆதரவு இதற்கு இருந்தாலும், இது கொடுவிலங்கு வாதத்தின் மேம்பட்ட கோட்பாடன்று என்னலாம். இவ்வாதத்தின் இன்னொரு திருத்தம் உயிர்களின் வாழ்வார்வமே தகுதிக்குத் தூண்டுதல் என்று கூறுகிறது. தற்செயல்வாதம், விதிவாதம், சுழல்வாதம் ஆகிய பிழைகளிலிருந்து இது விடுபட்டுள்ளது. ஆயினும், வாழ்வார்வம் எல்லா உயிர்களுக்கும் ஒன்றுபோல் இருத்தல் இயல்பு. ஒரு சிலவற்றின் தனித் தகுதிக்கு இது விளக்கம் தரவில்லை. உயிர்நூலார் கூட்டு வாழ்வில் கருத்துச் செலுத்தாம லில்லை. ஆனால், குடும்பம், சமுதாயம் என்ற படிகளில் கருத்துச் செலுத்தாமல், நாடோடிக் கும்பல் வாழ்விலேயே (ழுசநபயசiடிரள டுகைந) கவனம் செலுத்தியுள்ளனர். இன்றைய மேலை உயிர்நூல் வளர்ச்சியிலும் (ளுஉநைnஉந டிக க்ஷiடிடடிபல) வாழ்வியல் நூல் வளர்ச்சியிலும் (ளுடிஉiடிடடிபல), மெய் விளக்கத் துறையிலும் (ஞாடைடிளடியீhல) இஃது ஒரு பெருங்குறைபாடு ஆகும். வேட்டைக் கோட்பாடு குடும்பம் வளர்த்துச் சமுதாயம் வளர்க்காத உயிர்களும் உண்டு. பெரும்பாலான பறவைகள் இதற்குச் சான்று. சமுதாயம் வளர்த்துக் குடும்பம் வளர்க்காத உயிரினங்கள் உண்டு. எறும்பினங்கள், தேனீக்கள் முதலியன இதற்குச் சான்றுகள். மனித இனத்தில் எல்லா இனங்களுமே இத்தகைய ஒரு படியில் நீடித்து அதன் பின்பே குடும்ப வாழ்வில் இணைந்தனர் என்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். நாகரிக அடிப்படையாகப் பார்த்தாலும், உயிரினங்களின் பண்படிப்படையாகப் பார்த்தாலும், இது முற்றிலும் தவறான வரலாற்றுக் காட்சி ஆகும். ஏனெனில், வேட்டைப்படி, நாடோடி வாழ்க்கைப்படி இரண்டும் அவர்கள் கருதுவதுபோல் ஒன்றல்ல. குடும்பப்படி, குடிவாழ்வுப்படி ஆகியவையும் ஒன்றல்ல. நாடோடி வாழ்விலும் வேட்டை வாழ்வு, மேய்ச்சல் வாழ்வு, நாடோடி உழவு வாழ்வு என்ற படிகள் உண்டு. குடிவாழ்விலும் இப்படிகள் உண்டு. உலகில் ஆசிய, ஐரோப்பிய நடுமலைத் தொடர்களுக்கு (இமயம், இமயத்தின் தொடர்ச்சி ஆகியவற்றுக்கு) இப்பால் தெற்கிலுள்ள இனங்கள் தொடக்கத்திலிருந்தே குடும்ப வாழ்வுடன் சமுதாய வாழ்வும் பெற்றுப் பண்பாட்டில் வளர்ந்தன. மிக முற்பட்ட காலத்திலேயே குடிவாழ்வும் வீடும் ஊரும் நாடும் அரசும் சமயமும் வகுத்ததனால், அவர்களிடையே ஒற்றுமை கெட்டு, பூசலும் போரும் பெருத்தன. ஆனால், நடுமலைத் தொடர்க்கு வடக்கேயுள்ள இனங்கள் குடும்ப வாழ்வில்லாத சமுதாயம் அதாவது நாடோடிக் குழுக்களாக இருந்தன. அண்மைக் காலம்வரை, இன்றுகூட, அந்த நிலை உட்பகுதிகளில் முற்றிலும் மாறவில்லை. இந்த இனங்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் பிற்பட்டிருந்தன. ஆனால் ஒற்றுமை, வீரவெறி, எப்பண்பாட்டையும் மேலீடாக எளிதில் மேற்கொள்ளும் தன்மை உடையவராய் இருந்தனர். நாடோடி வேட்டைப்படியிலும் நாடோடி மேய்ச்சல் வாழ்வுப்படியிலும் இருந்த இந்த இனங்கள் நாகரிக உலகில் வந்த பின்னரே குடும்ப, குடிவாழ்வுப் படிகளை அடைந்தன. நாடோடி வேட்டைப்படியிலுள்ளவர்கள் அன்றும் இன்றும் குடும்பச் சிந்தனை, இனச்சிந்தனை அற்றவர்களாய் இருப்பது காணலாம். நாகரிக சமுதாயத்திலேயே இத்தகை யவர்கள் சமுதாயக் கேடான செயல்களில் எளிதில் ஈடுபடு கின்றனர். குடிவாழ்வுச் சமுதாயங்கள், அரசியல்கள், சமயங்கள் யாவும் இவர்களை எளிதில் திருத்த முடிவதில்லை. ஏனெனில், வாழ்க்கைக் குறிக்கோளற்ற இவர்கள் மேலீடாக எப்பண்பையும் ஏற்று அதன் உயிர்க் குறிக்கோளை அழித்து விடுகின்றனர். எப் பகுதியையும் திறம்பட நடித்தும் அப்பண்பு பெறா நடிகர்நிலை அவர்கள் நிலை ஆகின்றது. இவர்கள் வாதம் கொடுவேட்டை வாதம்; இன்பக் களி யாட்ட வாதம் என்ற இரண்டில் அடங்கும். ‘வாழ், எக்கொடுமையைச் செய்தாவது வெற்றி பெறு! மீன் விற்றுப்பெற்ற பணம் நாறாது! திருடிய பணத்தை அறவழியில் செலவு செய்யலாம், திருடுவதில் திறன் இருந்தால் போதும். எந்தத் தீமை செய்தாலும், திறமையாகச் செய்தால் நல்ல பெயர் எடுத்துவிடலாம்’ இஃது இவர்கள் கோட்பாடு. நாடகத்தில் ‘தீயோன்’ கோட்பாடு இதுவே. ஆனால், வெளிப்படையாக இக் கோட்பாட்டைப் பரப்புபவர் உலகில் மிகுதியாயில்லாவிட்டாலும், இன அறிஞர் பண்பு பரவா இடங்களிலெல்லாம் இதுவே ஆதிக்கம் நாடுபவர், புகழ் நாடுபவர், செல்வம் நாடுபவர் பணியாக உலகில் உள்ளது. இந்தச் சமுதாயப் பண்பைப் பின்னணியில் வைத்துக் கொண்டுதான் சமயம், அரசியல், அறம் யாவும் இன்று ஆராயப்படுகின்றன. இப்பின்னணியில் அமைந்த சமயம், அரசியல், அறங்கள் வகையில் அவை தவறல்ல. வள்ளுவர் கோட்பாட்டை இம்முறையிலேயே மனித இனம் இன்று நோக்குகின்றது. அதன் உயர்வு முற்றிலும் விளக்கமுறாததன் காரணம் இதுவே. களியாட்ட வாதம் கொடுவேட்டை வாதம்போல், களியாட்ட வாதம் இன்றைய உலகை ஆளவில்லை. அதில் நம்பிக்கை யுடையவர்களும் முன் வகையளவு உலகில் மிகுதி இல்லை. ஆனால், குடும்ப வாழ்வில், சமுதாய வாழ்வில் அது செய்யும் கொடுமைகள் குறைந்ததல்ல. காதற் போராட்டப் படியில் தமிழர் வளர்த்த உயர் பண்பு உலகெங்கும் ஓரளவு பரவியுள்ளது. இல்லையானால் இன்றைய முதலாளித்துவ நாகரிகம் வெளிப்படையாகக் கோரம்மிக்க நாகரிகமாகவே இருக்கும். நல்ல காலமாக, தமிழகத்தின் முதலாளித்துவக் குழந்தையை வளர்த்த செவிலியான பிரிட்டன் குடும்பப் பண்பில் தமிழகத்துக்குச் சிறிதும் குறையாத, ஓரளவு மேம்பட்ட நாடாகவே அமைந்தது. முதலாளித்துவத்துக்கு ஓர் அடிப்படைப் பண்பைத் தந்தது இதுவே. ‘வாழ்க்கை வாழ்வதற்கே’, ‘கலை கலைக்காக,’ ‘தங்கு தடையற்ற விடுதலையே மனிதன் உயர்நிலை பேணும்’ என்ற பல சீரிய குறிக்கோள் வாதங்கள் களியாட்டவாதிகளால் பயன் படுத்தப்படுகின்றன. பெண் உரிமை இயக்கம், பகுத்தறிவு இயக்கங்கள் ஆகியவற்றில் களியாட்ட வாதம் புகுந்தால், சில சமயம் அந்த நல்ல இயக்கங்களின் எதிரிகள் வாதங்களை மெய்ப்பிக்கும் முறையில், அஃது அவ்வியக்கங்களின் அடிப்படைக் குறிக்கோளைக் கெடுத்துவிடுகிறது. வேட்டை வாதம், களியாட்ட வாதம் இரண்டும் வாழ்வில் வெற்றி, இன்பம் தவிர, வேறு குறிக்கோள் கிடையாது என்று கூறுபவை, அல்லது கூறாமல் உள்ளத்துள் கொண்டு செயலாற்று பவை. இரண்டிலும் உள்ள கேடு, வெற்றியை ஒவ்வொருவரும் தம் வெற்றிமட்டும் தான் என்றும், இன்பத்தைத் தம் இன்பம் தான் என்றும் கொள்வதே. எல்லார்க்கும் வெற்றி, எல்லார்க்கும் இன்பம் என்ற குறிக்கோளைக் கொள்வதனால், அதைவிட உயரிய வாழ்க்கைக் குறிக்கோள் இருக்க` nஅ முடியாது. தமிழர் வாழ்க்கைக் கோட்பாடு கொண்ட குறிக்கோள் இதுவே. வெறி வாதங்கள், மருட்சி வாதங்கள் மனித சமுதாயத்தில் வளர்ந்துள்ள தவறான, அழிவு தருகிற அல்லது ஆக்கம் கெடுக்கிற வேறு இரண்டு வாதங்கள் வெறி வாதமும், மருட்சி வாதமுமேயாகும். அவை இரு வாதங் களானாலும் இருநூறு வடிவங்களுடன் காட்சியளிப்பன. வெறி வாதங்கள் என்பவை சில வினைமுறைகள், சில கொள்கைகள், சில தெய்வங்கள் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக்கி, அதையே வற்புறுத்திப் பரப்பும் ஆதிக்கக் குழுவை வளர்ப்பதாகும். இம்முறைகள், கொள்கைகள், தெய்வங்கள் வாழ்வின் குறிக்கோளுடன் இசைந்தவையானால்கூட, அவற்றைப் பரப்பும் முறை, வலியுறுத்தும் முறை தனி மனிதன் அறிவு, வாழ்வு, சமுதாய வாழ்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பது இயல்பு. ஆனால், அவையே சில சமயம் மனித வாழ்வின் குறிக்கோள்களாகக் குறிக்கப்பட்டுவிடுகின்றன. உலகப் பெரும்பான்மை மக்கள் எல்லா நலங்களும் மனிதனுக்காக என்பதை அடிக்கடி மறந்து, மனித நலம் சாராத போலிக் குறிக்கோளுக்காக மாளத் துணிந்துவிடுகின்றனர். மருட்சி வாதம், நம்பிக்கை அடிப்படையான வாதம். ஆராயா நம்பிக்கைகள் மூடநம்பிக்கை என்ற பெயருடனும் அப் பெயரில்லாமலும் மனித இனத்தில் என்றும் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன; இருந்துவரக் கூடும். அவற்றுள் சில சமுதாயத்துக்கு நல்லனவாகவும் இருந்து விடலாம், தீமை பயக்காதனவாகவும் இருக்கலாம். தீமை பயப்பனவாகவும் இருக்கலாம். ‘கேளாதே! நம்பு!, ஆராயாதே, ஏற்றுக்கொள்!’ என்ற போதனை எப்படியும் தீமை பயப்பதேயாகும். ஏனெனில், நல்லதை நம்புபவன், தீமையையும் நம்புதல் எளிது. ஆராய்ச்சி கடந்த பண்புகளைத்தான் பயன் நல்லனவாக இருந்தால் தற்காலிகமாக ஆதரிக்கலாம். தீமை பயவாதவையா யிருந்தால், மக்கள் உணர்ச்சியறிந்து மெல்ல மெல்ல நீக்க வகை தேடலாம். ஏனெனில், தீமை விலக்கல் மட்டும் ஆக்கவாதமாகாது. ஊட்டமில்லா உணவு ஊட்ட உணவு உண்பதைத் தடுப்பது போல், தீமை பயவாத அப்பண்புகளே நற்பண்புகளினிடத்தை நிரப்பி, அவை வளராமல் தடுக்கும் களைகளாய்விடும். தீமை வளர்க்கும் பண்புகள் வகையில் நம்பிக்கையின் கேட்டை விளக்கத் தேவையில்லை. சுவர்க்க நரக நம்பிக்கை, விதி நம்பிக்கை, மறுபிறப்பு நம்பிக்கை; வணக்கத்தாலும் பசப்புப் புகழுரையாலும் அபராதங் களாலும் கைக்கூலிகளாலும் தீமைக்கு ஆதரவு தரத்தக்க பண்புடைய ஒரு கடவுள் அல்லது பல தெய்வங்கள் உண்டு என்ற நம்பிக்கை; பேய் நம்பிக்கை: மந்திர சூனிய நம்பிக்கை; ஆவி உலக நம்பிக்கை ஆகிய ஆராயா நம்பிக்கைகளுக்கு எத்தனை பேர் உலகில் பலியாகிறார்கள் என்பதைப்பற்றி இன்றைய உலக அரசியலோ, சமுதாய ஆட்சியாளரோ கவலைப்படவில்லை. அதனால் அவர்களுக்கு வரும் ஆதாய நட்டம் பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுவர். உலகின் மிகப் பெரிய அறிஞர்களுள் பலரைக்கூட இந்த நம்பிக்கைகளில் சில ஆட்கொண்டுள்ளன. அவர்கள் நம்பியது வியப்பல்ல; ஏனெனில் ஆராயா முடிவுகளில் பல, ஆராய்ச்சியால் மறுக்கப்பட்டவையாய் இருப்பதில்லை. அதனை நம்பும் உரிமை அறிஞர்க்கு உண்டு, ஆராயும் உரிமை, நிலைநாட்டும் உரிமையும் அவர்கட்கு உண்டு. ஆனால், நம்பிக்கை அவற்றை ஆராய்ச்சி முடிபாகக் கொண்டுவிடுவதுண்டு; இது பேரிடர் ஆகும். ஏனென்றால் அறிஞரே நம்பிக்கைக்கு ஆளாகும்போது பொதுமனிதர் நிலையைக் கேட்க வேண்டியதில்லை.! ‘நம்பாதே! ஆராயாது நம்பாதே!’ என்பது உலகுக்கு மட்டுமன்று; அறிஞர் மரபுக்குக்கூட மிகத் தேவையான ஒரு குறிக்கோள் வாசகம் ஆகும்! 5. தமிழர் வாழ்க்கை மரபு இயற்கையே பொதுநடத்துக்குரிய பேரம்பலம்; உயிரே ஆடரங்கு! காண்பது காலம், காட்சி அறிவு. அன்பு முழவதிர்கின்றது; இன்பம் யாழ் இசைக்கின்றது; அவா குழல் மிழற்றுகின்றது. ஆடும் கால்கள், ஊன்றடி தூக்கடிகள், குடும்பம், சமுதாயம்! பண்பு முத்திரைகள் காட்டும் இருகைகள், ஆண்மை, பெண்மை! இவற்றுடன் இனம் நின்றாடும் கூத்தாக வாழ்வைத் தமிழன் தன் உள்ளக் கற்பனையில் கண்டான்! பாரிய, சீரிய, கூத்து இது. பார் அறியாக் கூத்து! வாழ்வு கடந்த மெய்ம்மை, ஆயினும் கலை கடந்த கற்பனை. இந்த வாழ்வியல் கலைக்கு வழுவிலா இலக்கணம் வகுத்தவர் வள்ளுவர். வாழ்வை ஒருபாலாகக் கண்டவர் அவர். அதை இருபாலார்க்கும் பொதுவாகக் கொண்டவர். அதன் வகையை முப்பாலாக வகுத்துரைத்தவர். உரைகள் என்னும் மாயத் திரைகள், தமிழ் மரபுத் திரிபென்னும் முகில் படலங்கள், இடையிருட் கால, இக்காலத் தப்பெண்ணங்களின் பனிப்படலங்கள் ஆகியவை கடந்தும் அஃது ஒளி வீசுகின்றது. வள்ளுவர் காட்சிக்குத் துணைதருவதாய் அமைந்துள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியத்துக்கு மூல முதலாய் உதவியது தமிழ் மரபுப்பண்பு. இவை இருள் திரைகள் கடந்து ஊடுருவி உண்மை உருவிளக்கம் காண நமக்கு உதவுபவை, மேலை அறிவொளி, அதன் துணையொளியாய் நம்மிடையே எழுந்து அலைபாயும் மறுமலர்ச்சி ஆகியவையே. இவற்றின் துணை கொண்டு தமிழர் வாழ்க்கைச் சிந்தனைகளில் கருத்துச் செலுத்துவோம். தமிழர் வாழ்க்கைக் கோட்பாடு இயற்கை, உயிர், வாழ்வு ஆகிய தமிழ்ச்சொற்களே தமிழர் வாழ்க்கைக் கோட்பாட்டையும், அதுபற்றி அவர்கள் கொண்ட உயர்சிந்தனைப் பண்புகளையும் நமக்குக் காட்டவல்லன. இயலுவதை அதாவது இயல்பாக இயங்குவதைத் தமிழர் இயற்கை என்றனர். மாள்வு தவிர்த்து நீடித்திருப்பதை உயிர் (உயிர்ப்பண்பு அல்லது உயிர்ப்பொருள்) என்றனர். மாள்வு தவிர்ப்பதுடனும் நீடித்திருப்பதுடனும் அமையாது வளம்பெற வளர்ந்து தொடர்ச்சியாக ஓங்குவதையே வாழ்தல் என்றனர். இச்சொற்கள் காட்டும் உயர் அறிவாராய்ச்சிப் பண்பு சிந்தித்து ஒப்பிட்டே காணத்தக்கது. இயற்கை என்பதற்குரிய மேலை உலகமொழிகளின் சொற்கள் (ஆங்கிலம் சூயவரசந, இலத்தின் சூயவரசய) பிறப்பது, பிறப்புக்குரியது (இலத்தீன் சூயவ-சூயளஉi பிற) என்ற பொருளை மட்டுமே தரும். பிறப்பியல்பு, பிறப்பிலேயே உள்ள தன்மை என்ற கருத்தை மட்டுமே அது சுட்டும். இன்றைய மேலை உலக வழக்கின் உட்பொருளில்கூட அஃது இயல்பான (செயற்கையில்லாத) புறக்காட்சி என்ற பொருளையே தரும். இதன் பொருள், இயற்கை என்பதற்கீடான சமற்கிருதச் சொல்லின் (ப்ரபஞ்ச: காட்சியின் வளம், நிறைவு, என்ற) பொருளை விடச் சிறந்ததன்று. தானே இயங்குவது, நிலையாய் இருப்பதன்றி, காலத்தில் இயங்குவது அல்லது நடைபெறுவது என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் காட்டும் சீரிய அறிவுப் பண்புத்திறம் இங்கே கவனிக்கத் தக்கது. வாழ்தல் என்ற சொல்லின் அகப்பொருளும் பண்பும் விரிவும் முன்னே தரப்பட்டுள்ளன. அது வலிமை வலம் (வலிமையுடைய கை, வெற்றி), வெற்றி வேல் (வேற்படை), வேள் (கடவுள்), வேளாளர் (உழவர்); பண்புடையவர், வேட்கை (வேண்டும்) தேவைப்படுகிறது : மலையாளம், வெளி: திருமணம், வண்மை (வளம், நிறைவு. ஈகை), வணங்கு (நிறைந்து வளை), வண்ணம் (நிறம், பொலிவு, அழகு), வழிபடு, வழுத்து, உழை, உழவு ஆகிய சொற்களுடனும் சொற்பொருட் பண்புகளுடனும் தொடர்புடையது. இவ்வளவு பண்புமிக்க சொல், ஓர் இனம் மிக உயர் நாகரிகம் அடைந்த பின்னரே எழுந்திருக்க முடியும். ஆனால் கிரேக்க, இலத்தீனத் தொடர்புகள் கி.மு.2000-க்கு முற்பட்ட நடுநிலக்கடல் நாகரிகத்தைக் காட்டுவதால், அது மிகத் தொல்பழங்காலச் சொல்லேயாகும். தவிர அவை கிரேக்க இலத்தீ மொழிகளில் சிறிதும் காணக்கிடையாத பொருட்பண்பு வளங்களையும் உடையதாயிருக்கின்றன. உயிர் என்ற சொல் வாழ்தல் என்ற கருத்தை ஒட்டிப் பிறந்த அறிவாராய்ச்சிச் சொல்லேயாகும். இன்று அது பொதுப் பண்புகளில் வழங்கினாலும், அஃது அறிவுத் துறைக்குரிய (ஆன்மா என்று பொருள் தரும்) சொல்லேயாகும். பொது வழக்கில் உயிர்ப்பொருளுக்கு வழங்கிய உயிர்மெய், மா ஆகிய சொற்களினிடமாக அது பின்னாட்களில் தவறாக வழங்கப் பட்டதே என்பதில் ஐயமில்லை. — ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருள்’ வாழ்வில் பிறப்பு உண்டு; இறப்பு உண்டு; ஆனால், தோற்றமும் ஒடுக்கமும் கிடையாது; தொடக்கமும் ஈறும் கிடையாது. இதுவே தமிழர் கொள்கை. உயிர், வாழ்வு ஆகிய சொற்கள் உணர்த்தும் பண்பு இதுவே. ‘வாழ்வாயாக’ என்று ஒருவரை நாம் வாழ்த்தும்போது, ‘மாளாது என்றும் நின்று நிலவி வளம்பெறுவாயாக’ என்று நாம் இன்றும் அவாவுகின்றோம். அதன் மறைதிறவு இதுவே. வாழ்க்கை என்பது கால இடஎல்லை கடந்த ஒரு பரப்பு; அதில் அலைகள் உண்டு; அலைகளில் முகடுகள் உண்டு. ஒவ்வோர் அலையையுமே நாம் ஒரு தலைமுறை என்கிறோம். ஒவ்வொரு அலைமுகட்டையுமே ஒரு தனி உயிர் என்கிறோம். அலை கால எல்லையில் முன்னேறிச் செல்கிறது. அலைமுகடுகள் இப்பரப்பில் பரந்து செல்கின்றன. இரண்டுக்கும் அடிப் படையாக, ஆழ் தடத்தில் அதிரும் நீரியக்கங்களும் நீருமே பண்புகள், பண்பாடுகள். வாழ்க்கையின் ஒரு காலக்கூறாக அன்றி, படியாக அன்றி, தலை முறைக்குத் தனித்தன்மை கிடையாது. தலைமுறை என்ற கால இழையிலும், உயிர்கள் என்ற இட இழையிலும் இட்ட ஒரு முடிச்சே தனி உயிர். அது காலத்தையும் இனத்தையும் பிணைத்து நிற்கிறது. உயிர்கள் என்னும் முடிச்சுகளால் பிணைக்கப்பட்டுக் காலம், இடம் என்ற இழைகளால் ஒன்றுக்கொன்று குறுக்காகப் பின்னப்பட்ட ஒரு வலைபோன்றதே வாழ்க்கை. தனி மனிதன் உயிரை ஓர் அலைமுகடு அல்லது அலைக்கூறு என்னலாம். இதன் ஒரு கோடியே பிறப்பு. இதன் மறுகோடியே இறப்பு. இறத்தல் தன்னிலை கடந்து, மறு தலைமுறைக்குக் கடத்தலேயாகும். (இறத்தல், கடத்தல்) அதுபோலப் பிறத்தல், கடந்து பின் நிலவுதல் (பின்+இறத்தல்) என்ற பொருளுடையதேயாகும். பிறத்தல் என்பதற்குத் தென் ஆரிய மொழிகளில் சொல் (சமற்கிருதம்: ஜம்-உண்டாகு; ஜன்-பிற) உண்டு. ஆங்கிலம் முதலிய வட ஆரிய மொழிகளில் சொல்லில்லையாதல் காண்க. பெறுதல் என்பதன் செயப்படுவினையாகவே (க்ஷந bடிசn பெறப்படு, பிற) அஃது இன்று புது வழக்காய் எழுந்துள்ளது. பிறப்பும் இறப்பும் அலை இயக்கம் போன்றவை என்பதை வள்ளுவர் வேறொரு அழகிய உவமையால் தெரிவித்துள்ளார். ‘உறங்குவது போலும் சாக்காடு: உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ உறங்கும்போது செயல் முற்றிலும் ஒழிவதாகத் தோற்றுகிறது. ஆனால், விழிக்கும்போது, அஃது உண்மையில் விட்ட இடத்திலிருந்து தடையில்லாமல் தொடர்கிறது. இறப்பு இவ்வகையில் உறக்கம் போன்றதே. தனி மனிதன் வாழ்வு அதனுடன் முடிவது. தடமற அழிவதுபோலத் தோன்றுகிறது. அவன் சுற்றத்தார் அழுகின்றனர். அந்த அழுகையிலேயே பிறப்பின் தொடர்பு உள்ளது. அழுபவர்களில் ஒருவர் ஒரு சிலர் இறந்த உயிர் இறக்கு முன்பே அதன் மறுஉயிர்களாக, அதன் அடுத்த தலைமுறைப் பிரதிநிதிகளாகப் பிறந்த (பின்-இறந்தபின் கடந்து நின்ற) உயிர்களே. அலையின் எல்லைகள் ஒரு பகல், ஓர் இரவின் தொகுதியை ஒருநாள் என்கிறோம். இன்றைய தமிழர் பொதுவாக ஒருநாள் காலையிலிருந்து மறுநாள் காலைவரை நாள் எல்லை கொள்கின்றனர். ஆயினும், ‘இன்று விடியற்காலம், இன்று கருக்கிருட்டில்’ என்று இறந்த காலத்தில் முன்னிரவைக் குறிப்பதுண்டு. இன்று வழங்கும் கடிகாரங்களும் மேலை நாட்டுப் பழக்கமும் இவ்வியற்கைப் பழக்கத்தை வற்புறுத்துகின்றன. நள்ளிரவிலிருந்து மறு நள்ளிரவு வரை நாள் எல்லைகளாக அவை கொண்டு, நண்பகலை நடுநாளாகக் கொள்கின்றன. ஆனால், பண்டைத் தமிழர் ஒரு நண் பகலிலிருந்து மறு நண்பகல் வரை ஒரு நாளாகக் கொண்டு, நள்ளிரவையே நடுநாளாகக் குறித்தனர் என்று சங்கநூல் வழக்குகளால் தோன்றுகிறது. நாளைக் கணித்தறிய உதவும் உறுதி வேளை நண்பகலே என்ற இயற்கை உண்மையை இது நினைவூட்டுகிறது. காலையும் மாலையும் இடத்துக்கிடம் மாறுபடும். பல இடங்களில் பருவத்துக்குப் பருவம் மாறுபடும். நள்ளிரவோ காட்சியளவையுட் படாதது என்பது காணலாம். வாழ்க்கையலைகளாகிய தலைமுறைகளிலும் தமிழர் இதுபோன்ற ஓர் இயற்கை முறையையே கொண்டனர். தனி உயிரின் பிறப்போ இறப்போ சமுதாய உணர்ச்சிகளாய் இயங்கு வதன்றி உண்மையில் தலைமுறைகளின் சந்திப்புகள் ஆகமாட்டா. ஒருவன் இறக்குமுன்பே அவன் அடுத்த தலை முறையாகிய பிள்ளை வாழ்வும் மற்றடுத்த தலைமுறையாகிய பேரர் பேத்தி வாழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். அது போலவே ஒருவன் பிறக்கும் போதும் முந்திய தலைமுறை யினராகிய தாய் தந்தையர் வாழ்வும் முன் மறு தலைமுறை களாகிய பாட்டன் பாட்டியர் வாழ்வுகளும் நடந்து கொண்டி ருக்கும். ஆகவே, தலைமுறையின் உண்மைச் சந்திப்பான திருமணத்திலிருந்து, மறுசந்திப்பான அடுத்த திருமணம் வரையிலுமே தமிழர் ஒரு தலைமுறையாகக் கொண்டனர். வாழ்க்கை ஆதியும் அந்தமும் இல்லாதது என்பதை இது வலியுறுத்துகிறது. ஏனெனில், ஒரு திருமணத்தில் தந்தையும் பிள்ளையும் பெரும்பாலும் இருக்கின்றனர். சில சமயம் தந்தை தாயுடன் பாட்டன் பாட்டியும் இருக்கின்றனர். அடுத்த திருமணத்திலும் அப்படியே. வேற்றுமையெல்லாம். முதல் திருமணத்தின் தந்தை தாய் அடுத்த திருமணத்தில் பாட்டன் பாட்டியாய் விடுகின்றனர்; முதல் திருமணத்தில் புதுப்பெண் புதுமாப்பிள்ளை அடுத்த திருமணத்தில் தாய் தந்தை ஆகின்றனர் என்பதே. தனி உயிர்களையே உயிர்களாக நம்பிய பிற இனத்தார் வாழ்க்கையை அதாவது சமுதாய வாழ்வைப் பிறப்பிறப்புக் கோவை அதாவது பிறப்பின் பின் இறப்பு, இறப்பின் பின் பிறப்பு என்று கருதினர். இறந்த உயிர் மீண்டும் பிறக்கிறதென்ற தவறான மாயக்கொள்கை கீழ்த்திசையெங்கும் பரவியதன் காரணம் இதுவே. ஆனால், தமிழர் வாழ்க்கையைத் திருமணங்களின் கோவை என்று கருதினர். வாழ்வில் திருமணத்துக்கு அவர்கள் தந்த முக்கியத்துவம் இதுவே. திருமணத்துக்கும் (கற்பியலுக்கும்) காதலுக்கும் (களவியலுக்கும்) இலக்கியத்தின் ஒரு பாதியை ஒதுக்கியதன் மறைதிறவு இதுவே ஆகும். தமிழர் திருமணம் காதலுணர்ச்சி உயிர்களனைத்துக்கும் பொது. ஆனால், அவ்வுணர்ச்சியின் பண்பில் உயர்வு தாழ்வுப்படிகள் உண்டு. திருமணம் அதாவது ஆண் பெண் இருமைக் கூட்டு வாழ்வு உயிர்களில் சிலவற்றுக்கும் நாகரிக மனித இனங்களில் பெரும்பாலானவற்றுக்கும் பொது. ஆனால், காதலின் உச்ச உயர் பண்பைக் கண்டபடி, அதனடிப்படையாகத் திருமணம் வகுத்து, வாழ்வின் பொங்கல் வளத்துக்கு வழிகாட்டிய இனம் தமிழினம் ஒன்றே. தமிழர் திருமணம் தமிழர்க்கு மட்டுமே சிறப்புத்தரும் ஒரு பண்பு ஆகும். தற்காதலின் படிகடந்த கீழின உயிர்களில் கட்டற்ற காதற் கூட்டுறவையே காண்கிறோம். ஓர் உயிர் எந்த உயிரையும் கூடலாம்; கூடிய பின் இரண்டும் எந்தத் தொடர்பும் அற்றவையாயின. புழுப் பூச்சியினங்களில் உயர்ந்தவையான எறும்பு, தேனீ ஆகியவற்றில் கூட்டுக் காதல், பல வகைகளில் நடைபெற்றுள்ளன. இனத்தின் பண்புக்கேற்ப, ஓர் ஆண் உயிர், பல பெண்ணுயிர் என்றோ, ஒரு பெண் உயிர், பல ஆண் உயிர் என்றோ, பல ஆண் பல பெண் என்றோ அமைப்பு முறை இருந்தன. மனித இனத்திலும் கட்டற்ற இணைவு முறை பல பண்படா இனங்களில் இருந்ததுண்டு; இருக்கின்றது. இதில் வியப்பில்லை. பண்பட்ட இனங்களில் கூடப் புதிய கனவார்வ அறிஞர்கள் திட்டங்களில், புதிய சீர்திருத்தக் குழுக்களில் இவை சில சமயம் உயர்வாகக் கருதப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இதுவே பகுத்தறிவு முறை என்று கருதுபவரும் உண்டு. கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோவின் திட்டமும், பொதுவுடைமைக் குழுக்கள் பலவும் இத்தகைய சமுதாயக் காதல் முறையை அறிவாராய்ச்சி அடிப்படையில் புகுத்த விரும்புகின்றன. உயிர்விலங்கு பறவையினங்களிலும் உயர் பண்புடைய மனித இனங்களிலுமே காதல் குடும்ப இணைவும் திருமணமும் காணப்படுகின்றன. இங்குக் கூட சமுதாயக் காதல் கோட்பாடு புகுந்து, பணத்துக்காகத் திருமணம், பதவிக்காகத் திருமணம், சாதி சமயக் கட்டுக்குட்பட்ட திருமணம், காதலினிடமாகக் கடமை வலியுறுத்தும் திருமணம் ஆகிய போலி முறைகள் இன்றைய நாகரிக உலகெங்கும் பரந்து வருகின்றன. ஆரிய சுமிருதிகள் திருமணம் பற்றிக் கொண்ட கொள்கை இச்சமுதாயத் திருமணக் கொள்கையேயாகும். தமிழர் திருமணக் கோட்பாட்டை இரண்டு வாசகங்களில் கூறலாம். காதலில்லாக் குடும்ப வாழ்வு தமிழர் வாழ்வன்று. குடும்பத்துக்குப் புறம்பான காதல் வாழ்வு தமிழர் வாழ்க்கைப் பண்பன்று. இந்த இரண்டு சறுக்குக் குழிகளிலும் தமிழர் இன்று அடிக்கடி சறுக்கிச் செல்வது காணலாம். தமிழர் திருமணத்தில் இன்னொரு தனிப் பண்பு உண்டு. காதலின் முடிவு திருமணம் என்ற இன்றைய மேலை நாட்டுக் கீழ்மக்கள் அனுபவமும், திருமணத்தின் பின் நிகழ்வது காதல் என்னும் ஆராய்வுத்திறமற்ற ஆரியக் கருத்தும் தமிழர் திருமணக் கோட்பாட்டுக்குப் புறம்பானவையாகும். திருமணம் காதலின் நடுமுடிச்சு - அது காதலில் மலர்ந்து, காதலாகக் கனிவதாகும். தமிழர் காதற் பண்பு வாழ்வியல் நூலார் (ளுடிஉiடிடடிபளைவள), அறநூலார் (ஆடிசயடளைவள), உடல்நூலார் (ஞாலளiடிடடிபளைவள), உளநூலார் (ஞளலஉhடிடடிபளைவள), உயிர் நூலார் (க்ஷiடிடடிபளைவள) ஆகிய பல்வேறு துறையறிஞர்கள் காதலைப் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராய்ந்துள்ளனர். கலைஞர் அதன் உளப்பாடு, மெய்ப்பாடுகளைத் தீட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் அறிஞர், கலைஞர் அனைவரும் கண்ட மெய்ம்மைகளின் மொத்தத்தையும், அவர்கள் காணாத அதன் உயர் முகடுகளையும் வள்ளுவர் கண்டுள்ளார். உடலின்பம் என்ற முறையில்கூட வள்ளுவர் ஒருவரே காதல் இன்பத்தின் தனிச் சிறப்பை விளக்கியவர். ``கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஓண்டொடி கண்ணே யுள’’ கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐந்து பொறிகளுக்கும் ஒருங்கே இன்பம் தரும் உணர்ச்சி காதலல்லது வேறு இல்லை என்பது வள்ளுவர் இவ்வகையில் கண்ட தனி உண்மை. ஆனால், இந்த ஐந்தின்பத்துக்கும் உயிர் நிலையாய், அவை கடந்த இன்பம் உளம்சார்ந்த இன்பம் என்றும், அதுவும் உணர்ச்சி அறிவு, உணர்வு, பண்பு ஆகிய பல படிகளில் உயர்வுறுந்தோறும் அஃது உயர் இன்பமும் பயன்மிக்க நீடித்த பேரின்பமும் ஆகுமென்றும் தமிழ் ஏடுகள் பொதுவாகவும், வள்ளுவர் சிறப்பாகவும் வகுத்துள்ளார். சமற்கிருத இலக்கியத்திலும் இன்ப நூல்களிலும் நாம் உடல் சார்ந்த காதல் இன்பம் மட்டுமே வருணிக்கப்பெறக் காண்கிறோம். அது கடந்த ஒன்று உண்டு என்பதையே அவர்கள் கனவு கண்டிலர் என்பதை இலக்கியமும் சமயநூலும் அறிவுநூலும் சமற்கிருதத்திலே தெற்றெனக் காட்டுகின்றன. தற்கால மேலை நாட்டிலோவெனில் உடல்நூலார், உயிர்நூலார் பெரிதும் உடல் சார்ந்த காதலுணர்ச்சிகளையே காட்டுகின்றனர். அறநூலார், கலைஞர்கள்கூட இது கடந்து பெரிதும் எண்ணுவ தில்லை. சமற்கிருதவாணரைப்போல வாழ்வு ஒரு மாயம், பெண் ஒரு நுகர்பொருள் என்று எண்ணாத அளவிலேயே மேலை நாட்டவர் காதல் சமற்கிருதக் காதலளவு தாழ்ந்துவிடவில்லை. ஒரு சில கலைஞரும் நூலாரும் உளம் சார்ந்து காதலைத் தீட்ட முனைவதுண்டு. உணர்ச்சிப்படி கடந்து இவர்களும் செல்வ தில்லை. அவர்கள் சித்திரம் காதல் வாழ்க்கைக் குறிக்கோளுடன் இணைக்காததால், உடற் காதற் கோட்பாட்டின ராலும், இன்பக் களியாட்டக் கோட்பாட்டினராலும் சில சமயம் வெற்றிகரமாக நையாண்டி செய்யப்படவும் இடம் தருகிறது. இந்த நையாண்டி முற்றிலும் தவறுடையதன்று. ஏனெனில், அவர்கள் காட்டும் உணர்ச்சி காதலர் பசப்பு மொழி கடந்து செல்வதில்லை. காதலுக்காகக் காதல் என்பதும் கலைஞர் சொல் மரபாகிறதேயன்றி, மெய்ம்மை உணர்வுடையதாயில்லை. வள்ளுவரிடமே உடல் சார்ந்த உணர்ச்சி நிலையிலிருந்து தொடங்கி, உள்ளத்தின் உணர்ச்சி, அறிவு, உணர்வு, பண்பு ஆகிய படிகளின் முகடுவரை காதலின் தன்மை தீட்டப்படுகிறது. ஆண் பெண் உள்ளங்கள் இரண்டின் காதற் படிகளின் பண்போவியங் களும் தீட்டப்பட்டுள்ளன. காதல் வாழ்வுடனொட்டி வாழ்க்கைக் குறிக்கோளுடன் இழைவதாகத் தீட்டப்படுகிறது. குழந்தை இன்பம், குடும்ப இன்பம் காதலை உடலின்பமாகக் காணும் மனிதர், கலைஞர், கவிஞர், அறவோர் ஆகியவர்கள் குடும்ப இன்பத்தையோ, குழந்தை இன்பத்தையோ சித்திரித்துக் காட்ட முடியாது. தமிழில் வள்ளுவரும், சங்க இலக்கியமும், பல இடங்களில் இலக்கண நூலான தொல்காப்பியமும்கூட, இவற்றை அழகுபடச் சித்திரிக்க முடிகிறது. ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்!’ ‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்ற குறட்பாக்களுக்கிணையாகக் குழந்தையின்பம் தீட்டிக் காட்டும் சித்திரத்தின் இணையை உலக இலக்கியத்தில் எங்கணும் காண இயலாது. அதற்குச் சிறிது ஈடு செலுத்தும் பாடல்களைச் சங்க இலக்கியத்தில்தான் காணக்கூடும். `` குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்படவிதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே!’’ புறம்-188 என்ற பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடல், குறட்பாவின் பொருட் பண்பிலும் அழகிலும் பெரிதும் பிற்பட்டதன்று. குடும்ப அன்பின் அழகிய முழுச் சித்திரங்களையே தரும் சங்கப் பாடல் களும் பல. ``முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழ தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மலர்ந்தன்று ஒண்ணுதல் முகனே!” -குறுந்தொகை 167 என்ற கூடலூர் கிழாரின் குடி வாழ்க்கைப் படம் இதற்கொரு சிறந்த சான்று. புதிது மணமான மனைவி தயிர் பிசைந்த கையால் புத்தாடை திருத்திக்கொண்டு, புகை கண்ணில் முட்ட, இவற்றைச் சட்டை செய்யாது முனைந்து தாளித்த புளிக் குழம்பைக் கணவன் சுவையுடன் உண்பது கண்டு முகமலர்ச்சி யடைந்தாள். பெண்ணின் செவிலித் தாய் கண்ட இந்த இன்பக் காட்சி காதற் காட்சியினும் இனிது. ஏனெனில், இது குடும்பத்தில் கனிவுற்ற காதல் சித்திரம் ஆகும். தமிழின் அகப்பொருள் துறை காதல் சார்ந்தது மட்டு மன்று; குடும்பம் சார்ந்ததுமாகும். உடலின்பமே காணும் பிறமொழியினர் பெரும்பாலும் இத்தகு குடும்பக்காட்சியின் அழகுகளைக் காண்பதில்லை; கண்டு தீட்டுவதுமில்லை. தொல்காப்பியர் வகுப்புமுறை வாழ்வைத் தொல்காப்பியர் முப்பால்களாகப் பிரித் துணர்த்தினார். அவற்றுக்கு அவர் முதல், கரு, உரி எனப் பெயரும் வகுத்தார். முதல் என்பது வாழ்க்கையின் பின்னணிக் களமான இயற்கை. அது காலம் இடம் என்ற இருவகுப்புடையது. இரண்டின் பாகுபாடுகளும் திரிபுகளும் வாழ்வில் தம் பண்புகளைப் பதிப்பிக்கின்றன. காலம் தனி மனிதன் வாழ்வின் பெருங்கூறாகிய ஆண்டெல்லையில் செயலாற்றும் பெரும் பொழுதுகள் அல்லது பருவங்களும், சிறு கூறாகிய நாளெல்லை யில் செயலாற்றும் சிறு பொழுதுகள் அல்லது வேளைகளும் ஆகும். பெரும்பொழுதின் பயனாகவே மனிதனுக்குக் குளிரும் வெப்பமும், மழையும் வறட்சியும் மாறி மாறி வந்து காடும் பயிரும் தொழிலுக்குரிய சூழ்நிலைகளும் பிற இயற்கை வளங்களும் உண்டு பண்ணுகின்றன. சிறு பொழுதில் பகல் இரவு, காலை மாலை, நண்பகல் ஆகிய மாறுபாடுகளால் உயிர்க்கு ஓய்வு நேரம், உழைப்பு நேரம், இன்ப துன்பச் சூழல்கள் நேர்கின்றன. கருப்பொருள் என்பது செடி கொடி உயிரினச் சூழல்களும், அவற்றின் பயனான விளைபொருள்களும், அவற்றால் மனிதன் ஆக்கிக்கொள்ளும் கருவிகளும் ஆகும். முதற் பொருள் சூழலில் விலங்கு நிலையிலிருந்த மனிதன், மனித நிலைக்கு முன்னேற உதவிய கருவிச் சூழல் இதுவே. உரிப்பொருள் என்பது மனிதனுக்கே உரிய, மனித சமுதாயமே வகுத்துக் கொண்ட பொருள் ஆகும். அதுவே சமுதாய குடும்ப வாழ்வுகள். இதனையே புறம் என்றும் அகம் என்றும் தமிழர் வகுத்தனர். புறம் வாழ்க்கைத் தொழில்களையும், தொழிற் கருவிகளையும், கலைக்கருவிகளையும் உள்ளடக்கியது. உரிப்பொருள்கள் வாழ்க்கைக் குறிக்கோள், அகம் புறம் என்ற வாழ்க்கை முறைகள், வாழ்க்கைப் பண்புகள் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. அகம் குடும்ப ஒழுக்கத்தையும் அதன் பண்புகளையும் உள்ளடக்கியது. தொல்காப்பியர் வாழ்க்கைக் குறிக்கோள்கள் என மூன்று வகுத்துரைத்தார். அவை அறம், பொருள், இன்பம் என்பன. ஆனால், நூல்களின் குறிக்கோள்கள் மூன்றன் தொகுதியாகிய இலக்கு அல்லது வீடும் சேர்த்து நான்காக்கப்பட்டன. ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே’ என்ற தொல்காப்பிய நூற்பா இதனை உணர்த்துகிறது. இம்முப்பாற் பாகுபாடும், நாற்பாற் பாகுபாடும் உண்மையில் அகப்புறப் பாகுபாட்டின் விரிவேயாகும். அவை உண்மையில் புறப் புறம், புற அகம், அகப்புறம், அக அகம் என்னும் நுண்வகுப்பேயாகும். அறம் புறத்தின் புறம். இயற்கையுடன் பொதுவாழ்வை ஒருபுறமும், தனி உயர் வாழ்வை மறுபுறமும் இணைக்கும் பகுதியே அது. பொருள் புறத்தின் அகம். அது சமுதாயப் பண்பும் ஒழுக்கமும் அடங்கியது. அரசியல் வாழ்வும் அதனுட்பட்டதே. இன்பம் அகத்தில் புறம். குடும்ப வாழ்வின் உணர்ச்சிகளைச் சித்திரித்துப் பண்புகளைச் சுட்டிக் காட்டுவது அது. அகத்தில் அகமே வீடு-வாழ்க்கைப் பயனையும் வாழ்க்கைக் குறிக்கோளையும் ஒன்றுபட இணைப்பது அதுவே. நோக்கமும் குறிக்கோளும் நோக்கம், குறிக்கோள் ஆகிய இரண்டு சொற்களும் கிட்டத்தட்ட ஒரு பொருட் சொற்கள் என்று கருதப்படக்கூடும். இரண்டும் இலக்கு என்பதன் இருவேறு பண்புகளே என்ற அளவில் பெரிதும் ஒன்றுபட்டவையே. ஆயினும், அவற்றிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. நோக்கம் தனிமனிதன் குறிக்கொள்வது. அவன் இயற்கை விருப்பம் சார்ந்தது. இன்பநாட்டம், தனிநல நாட்டம் சார்ந்தது. அவன் செயலை உள்ளே நின்று இயக்குவது அதுவே. ஆனால், குறிக்கோள் என்பது சமுதாயம், இனம் சார்ந்தது. பொது இன்பமும் நீடித்த இன்பமும் நிலைத்த இன்பமும் குறிக் கொண்டது. தனி மனிதனின் இந்த இன்ப நோக்கம், சமுதாயம், இனம் ஆகியவற்றின் இந்தப் பயன் குறிக்கோள் ஆகியவற்றின் இணைவே இலக்கு. இன்ப நூலும் கலையும் பொதுவாக மனிதனை நோக்கத்தின் வழி செலுத்தும். அறநூல்களோ சமுதாய நோக்கத்தை அதாவது குறிக்கோளை நோக்கி மனிதனைச் செலுத்த முனையும். ஆனால், தமிழர் அறம், சிறப்பாக வள்ளுவர் அறம் பிற இன அற நூல்களிலிருந்து இவ்வகையில் வேறுபட்டது. அஃது உணர்ச்சியற்ற குறிக்கோள் வாதமிடுவதில்லை. குறிக் கோளற்ற உணர்ச்சியில் இழைவதில்லை. பொதுநலம் கடந்த தன்னலத்துக்கும் இடம் தருவதில்லை. தன்னல மடக்கிய பொது நலத்தையும் ஊக்குவதில்லை. குறிக்கோளின் திசையில் திரும்பிய நோக்கம், நோக்கத்தோடியைந்த குறிக்கோள்; பொதுநலம் பேணும் தனிநலம், தனிநலம் பெருக்கும் பொதுநலம் என்ற முறையில் திட்டமிடப்பட்ட பண்பே தமிழ்த் திருவள்ளுவர் அறம் ஆகும். இக்காரணத்தினாலேயே திருக்குறளில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் ஒரே அடிப்படைப் பண்புடையவையாய், ஒரே, குறிக்கோள் வழிச் செல்பவையாய் அமைந்துள்ளன. மற்ற இனங்களின் கருத்துக் கோவைகளில் அறம் வேறு, பொருள் (சமுதாயம், அரசியல்) வேறு, இன்பம் வேறு ஆதலைக் காணலாம். அறவோன் பொருளாளனாக, பொருளாளன் இன்பவாணனாக, இன்பவாணன் அறவோனாகப் பிற இனக்கருத்துப்படி இருத்தல் சாலாது. திருவள்ளுவர் கருத்துப் படியோ மூன்று தன்மைகளும் ஒரே அடிப்படைத் தன்மையின் மூவகை முனைப்புகளேயாகும். தனிநலம் அல்லது நோக்கம் இன்ப நாட்டமுடையது. ஆர்வம் தூண்டிச் செயலாற்றுவது. இதனால் செயல் துறையில் அதன் ஆற்றல் பெரிது. அஃது இயற்கையாற்றல், ஊழ் ஆற்றல், வெல்லுதற்கரிய ஆற்றல், நன்மை தீமை என்ற பாகுபாடற்ற ஆற்றல். சமுதாயநலன் அல்லது குறிக்கோள் அறிஞரால் வகுத்துரைக்கப்படுவது. உணர்த்தப்படுவது. அதன் ஆற்றல் குறைவு. ஆனால், அது நன்மை தீமைப் பாகுபாடுடையது. இந்த இரண்டையும் இணைப்பதன்மூலம், தமிழர் வாழ்வுக்கு அடிப்படையான பண்பையும், அதன்மீதமைந்த வாழ்க்கைப் பண்பாட்டையும் வகுத்தனர். அஃது இன்பமும் பயனும் ஒருங்கே தரவல்லது. நோக்கமும் குறிக்கோளும், தனி நலனும் பொது நலனும், இன்பமும் இயைந்த இந்தப் பண்புடைய இலக்கையே தமிழர் ‘கடவுள்’ (நோக்கம், குறிக்கோள் கடந்து நிற்பது), இறைவன் (வாழ்க்கை எல்லை இறந்து நிற்பது) என்றனர். தமிழில் கடவுளுக்கு ‘வாழ் முதல்’ என்ற பெயர் வழங்கு வதற்குரிய காரணம் இதுவே. இலக்கின் இயல் உடைய கலையார்ந்த மொழிப் படிவமே இலக்கியம். அதன் பண்பே இலக்கு அணவிய கலைப்பண்பாகிய இலக்கணம். குறிக்கோளுருவில் அறிஞர் காட்ட, இன்பம் அல்லது நோக்க உருவில் காட்சி தந்து, பயன் வடிவான பேரின்பம் அளிக்கும் இலக்கு கடவுள். அதை அடைவதற்குரிய இம்மூன்று படிகளுமே செயற்படி (சரியை, கிரியை), ஆர்வப்படி (பக்தி, யோகம்), அறிவுப்படி அல்லது நிறை நுகர்வுப்படி (ஞானம், அனுபூதி) எனப் பிற்காலச் சமய நூல்களால் குறிக்கப்பட்டன. கூட்டுவாழ்வின் வேர்முதல்: குடும்பம் ஒவ்வொருமொழி வாழ்விலும் தனி மரபுகளும் தனிப் பண்புகளும் உண்டு. இவற்றுட் சில அவ்வம்மொழிகளின் நுண்ணியக் கூறுகளாக, மொழியின் தனிநயம் பெருக்குகின்றன. இன்னும் சில மொழியுடன் மொழி வாழ்வில் வளர்ந்து, மொழியினத்தின் உயிர்ப் பண்புக் கூறாகிவிடுகின்றன. குடும்பச் சூழல் என்ற பொருளுடைய ஆங்கிலச் சொல்லும் (ழடிஅந), குடும்பம் என்பதற்குரிய (குடி என்ற) தமிழ்ச்சொல்லும் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஆங்கிலச் சொல் (ழடிஅந) குடும்பச் சூழலின் மய்யமாகிய அடிசிற்கள் அடுப்படி என்ற இரு பொருள்களை முதலில் கொண்டு, குடும்பத்தாயகம், இன்பத் தாயகம், இயற்கைத் தாயகம், தாயகத் திணைநிலம், தாயக நாடு, இயற்கை வாழ்வகம், தன்னுரிமை வாழ்வகம் என்ற பல படியான பொருள்கள் விரித்து, தன்னாட்சி (ழடிஅந சுரடந) சுட்டும் உயர்பண்புச் சொல்லாகியுள்ளது. குடும்பத்தையும் ஊரையும், நாட்டையும், இயற்கை மரபுச் சூழலையும், இன்பச் சூழலையும் ஒருங்கே குறித்த இவ்வளவு அழகிய பண்பமைந்த சொல் வேறெம் மொழியிலும்-தமிழில்கூட எளிதில் அமையாத ஒன்று என்னலாம். ஆயினும் குடி, ஊர் என்ற பழந்தமிழ்ச் சொற்களும், பழந்தமிழிலும், தற்கால மலை யாளத்திலும் வழங்கும் ‘நாடு’ என்ற சொல்லும் இதனுடன் பண்பில் இணைவுற்ற சொற்கள் ஆகும். நாடு என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பொருள் தனிமனிதர் வாழ்வுடன் பின்னி இரண்டறக் கலந்த அந்நாளைய தமிழர் குடியரசு அல்லது நகர்-நாடு (ஊவைல-ளுவயவந) குறித்தது. அம் மரபு தளர்வுற்றபின், இப்பொருளை அது பேரளவில் இழந்தாலும், மலையாளத்தில் இன்றும் வள்ளுவர் கால, சங்ககாலப் பொருளிலே அது கிட்டத்தட்ட ஆங்கிலத்தின் தாயகம் (ழடிஅந) என்ற சொல்லுக்கிணையாக வழங்குகிறது. நாட்டின் பொருளைத் தமிழில் இன்று ‘ஊர்’ கொண் டுள்ளது. ஆயினும் ‘உரிமை’க்குரிய ‘ஊர்’ இடைக்கால இன வாழ்வுத் தளர்ச்சியையும் காட்டி, மக்கள் வழக்கில் ஏதிலார் (ஊரார்) என்ற பொருளையும் சுட்டலாயிற்று! ‘குடி’ என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலச் சொல் கடந்து நீடித்த, பரந்த மரபுடையது. குழு வாழ்வு, குடும்பம், சமுதாயம், இனம், ஆட்சிக்குழு அல்லது ஆளப்படும் மக்கள், குடியுரிமை, உயர்குடிப்பண்பு என்று பலநாகரிகப் படிகள் சுட்டி, அச் சொல்லின் பொருள் மனித வாழ்வின் வளர்ச்சியைக் காட்டு வதாயுள்ளது. குடும்பத்திலிருந்து தொடங்கிய பண்பே குடியாட்சி (னுநஅடிஉசயஉல) ஆயிற்று என்பதை அது நன்கு விளக்குகிறது. ஆங்கிலேயரின் குடும்பத்தாயகம் என்ற சொல் மரபு வெறும் அழகுச் சொல் மரபன்று. அஃது அவர்கள் உணர்ச்சியையும் அறிவையும் உணர்வையும் வாழ்வையும் ஊடுருவி நின்று, அவர்கள் அரசியலைத் தற்கால உலகின் முன்மாதிரி அரசியல் ஆக்கியுள்ளது. இயற்கை மரபாக, எழுதாச் சட்ட மரபாக, மொழியுடனும் மொழியின் வாழ்வுடனும் மலர்ந்த இந்தக் குடியாட்சி மரபை எழுத்துருவச் சட்டத்தின் துணைக்கொண்டுகூட எந்த நாடும் எளிதில் முழுதும் பின்பற்றி வெற்றி காணமுடியவில்லை. ஆனால், ஆங்கிலமொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், அதனைக் கல்வி மொழியாக மேற்கொண்டவர்களுமே அதைச் சிறிதளவேனும் பின்பற்ற முடிந்துள்ளது. ஆங்கில மொழி காட்டும் குடியாட்சிக்குரிய இம்மறைதிறவு கூர்ந்தாராயத் தக்கது. தமிழின் ‘குடி’ என்ற சொல்லும் இதே பண்பைக் காட்டுவதே. ஆனால், தமிழர் தன்னாட்சியும் தமிழ் மொழி யாட்சியும் ஏற்படாததனால், அஃது இன்னும் உயிர்ப் பண்பாய் இயங்கத் தொடங்கவில்லை; தொடங்க முடியவில்லை. தன்னாட்சியுடனும் தமிழாட்சியுடனும் இணைந்து அவை இயங்கத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை என்னலாம். குடும்ப வாழ்வின் பண்புகளும் குடியாட்சிப் பண்புகளும் மனித வாழ்வின் அடிப்படைப் பண்பு குடும்ப வாழ்வு. மனித இனத்தின் அறிவுத் தொடக்கத்துக்குரிய முதல் அறிவுக் கூடமும், பண்புக் கூடமும் அதுவே. ஆனால், தொடக்கப் பண்பாகிய அதுவே மனித இனத்தின் குறிக்கோள் அல்லது இலக்குக்குரிய பண்பும் ஆகும். குடிவாழ்வில் தொடங்கிய மனித இன நாகரிகத்தின் முழுநிறை வளர்ச்சி குடியாட்சி, நிறைகுடியாட்சி, குடிப்பொதுவாட்சி ஆகியவற்றை நோக்கியதே. இவ்விலக்கு மனித இனத்தில் இன்னும் தொலைக் கனவே. ஆனால், குடும்பம் அத்தொலைக் கனவின் ஒரு முன்மாதிரிப் படமே. சமுதாயத்தின் உச்ச உயர் கனவாளர்களின் இலக்கு, சமுதாயத்தை ஒரு குடும்பம் ஆக்குவதே. அரசியலின் உச்ச உயர்கனவாளர் இலக்கு, நாட்டை ஒரு குடும்பம் ஆக்குவதே. சமயச் சிந்தனையாளர் அல்லது அருளாளரிடையே உச்ச உயர்கனவாளர்களின் இலக்கு உலகை ஒரு குடும்பம் ஆக்குவதே. ‘உடன்பிறந்தாராக வாழ்கின்றனர்’- சமுதாயத்தில் உறுப்பினரான மக்களை, நாட்டு மக்களை, உலக மக்களைச் சிறப்பித்துப் பாராட்டும் உவமைகளுள் இதனினும் மிக்க உவமையில்லை! மக்களுக்கு ஒரு தந்தை போன்றவன்!-இதற்கு மேற்பட்ட புகழ்ச் சியைச் சமுதாயத் தலைவர்களுக்கோ, அரசனுக்கோ, ஆட்சித் தலைவனுக்கோ, கடவுளுக்கோகூட தரமுடியாது! தந்தை போன்றவன் என்பதுடன் போட்டியிட வல்ல மற்றும் ஒரே ஓர் உவமை ‘தாய் போன்றவள்’ என்பதே! அன்புக்கும் அருளுக்கும் தண்ணளிக்கும் தாய்தான் உயிரின், உலகின் சீரிய உவமை. அதனோடொத்த இயலுலகின் ஒரே உவமை ‘வானம்’!- கடவுளுடனொப்பாக வள்ளுவர் வைத்துக் கூறிய பண்பு இதுவே. குடும்பப் பண்பின் கூறுகள்: முழுமுதலும் உறுப்பும் குடும்பம் அளவில் சிறிது. ஆனால், பண்பில் அதனினும் பெரிது எதுவும் இல்லை. மனித இனப் பண்பாடு முதலில் அச் சிற்றெல்லையில் தேர்வுப்பண்ணையாகப் பயிரிடப்பட்டு, அதன் வெற்றி கண்ட பின்பே சமுதாயம், அரசியல், சமயம் (இனவாழ்வு) ஆகிய அகல் எல்லைகளில் பார்க்கப் பெறுகின்றது. குடும்ப வாழ்வின் பண்புயர்வில் தமிழகம் அன்று உச்சநிலை எய்தியிருந்தது. அவ்வுச்சநிலை கடந்து இன்னும் வருங்காலத்தில் வளர இருக்கிறது, இன்னும் பல இனங்கள்-குறிப்பாக ஆங்கில இனம்-பிற இனங்களைத் தாண்டி வளர்ந்துள்ளன. மனித ஆட்சிக்கு வழி காட்டுகிற, மனித வாழ்வின் வளத்துக்கு முன்மாதிரியான இக்குடும்ப ஆட்சி, குடும்ப வாழ்வின் பண்புக் கூறுகளில் கருத்துச் செலுத்துவது பயன் தருவதாகும். 1. குடும்பம் ஒரு முழுமுதல் தொகுதி (ஊடிடடநஉவiஎந ரnவை). அதில் இடம்பெறும் மக்கள் பலர். அவர்கள் அதன் உறுப்புகள். உறுப்புகளடங்கிய இம்முழுமுதலின் வாழ்வு முற்றிலும் தனித்தனி வாழ்வுமன்று. முழுதும் கூட்டு வாழ்வுமன்று. அஃது ஒருங்கே கூட்டு வாழ்வில் இணைந்த தனித்தனி வாழ்வாகவும், தனித்தனி வாழ்வில் இணைந்த கூட்டு வாழ்வாகவும் அமைகிறது. இன்றைய உலகின் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய ஒரு படிப்பினை-பொதுவுடைமை, சமதர்ம வாதிகள்கூடக் கூர்ந்து கவனிக்க வேண்டிய குறிப்பு இதில் உண்டு. சில அரசியல்வாதிகள் முழுமுதலுக்காக உறுப்பினர் வாழ வேண்டுமென்கின்றனர். இத்தாலிய பாஸி°டுகள், ஜெருமன் நாசிகள், இரஷ்யப் பொதுவுடைமைவாதிகள் மூவரும் இப் பிழைபட்ட கோட்பாடுடையவரேயாவர். வேறு சில அரசியல்வாதிகள் உறுப்பினர் முழுநிறை சுதந்தரமே உயர்பண்பு என்று கருதுகின்றனர். தனி மனிதர்க் காகவே, உறுப்புகளுக்காகவே முழுமுதல் அல்லது கூட்டு எனக் கொள்கின்றனர். முதலாளித்துவக் குடியாட்சிவாதிகளுள் பலர் இத்தகையவர்களே. குடும்ப வாழ்வில் காணும் பண்பு பொதுவுடைமை அறிஞர்கள் கண்ட உச்ச உயர்கனவு. உறுப்புக்காக முழுமுதல், முழுமுதலுக்காக உறுப்பு என்பதே அதன் கூட்டுத் தனிவாழ்வின் மறைதிறவு. 2. உறுப்புக்காக முழுமுதல், முழுமுதலுக்காக உறுப்பு என்ற இருமைத் தத்துவம் குடிமரபு அல்லது இனத்துக்காகவே உறுப்பும் முழுமுதலும் என்ற இனக் குறிக்கோளைச் சுட்டிக் காட்டுகிறது. உறுப்பும் முதலும் தம்மைக் கடந்த ஒரு வருங்காலக் குறிக்கோளை நோக்கி வளர்கின்றன. இந்த இன அவாவே குடும்பம், சமூகம், நாடு ஆகியவற்றுக்கு ஒற்றுமையும் உயிரும் தருகின்றது. குடும்பப் பண்பு: சமதள நிலையும் சமதள வாழ்வும் 3. குடும்பத்தில் ஆண்கள் உண்டு; பெண்கள் உண்டு; முதியவர் உண்டு; இளைஞர் உண்டு; சிறுவர் சிறுமியர், குழந்தைகள் உண்டு. வலியவர், மெலியவர்; திறமையுடையவர், திறமையற்றவர்; ஏலுபவர், ஏலமாட்டாதவர்; அறிவுடையவர், அறிவற்றவர்; நல்லவர், கெட்டவர் ஆகிய எல்லாவகை வேறு பாடுகளும் உண்டு. இயல்பாகச் சமதள நிலையுடையதன்று குடும்பம். ஆனால் அதன் வாழ்வு சமதள வாழ்வு-எல்லா உறுப் பினர்க்கும் அது சரிசம உரிமை, சரிசம மதிப்புத் தருகிறது. அது மட்டுமன்று. இந்தச் சமதளநிலை தொய்வற்ற, பண்பற்ற இரும்புத் தளமன்று. ‘தேவைக்கேற்ற உதவி’. ‘ஆற்றலுக்கேற்ற உழைப்பு’. இந்த உயர் பொது உடைமைக் குறிக்கோளின் அடிப்படை குடும்பத்தில் உண்டு. இது சமதள நிலையன்று, சமதள வாழ்வு. 4. குடும்பத்தில் ஆள்பவர் வலியவர்; ஆற்றல் உடையவர்; அறிவுடையவர்; தொலைநோக்குடையவர்; அனுபவமிக்கவர்! ஆனால், குடும்ப ஆட்சியின் நலன் அவர்கள் நலன் அன்று -அல்லவேயன்று! அது குடும்ப முழுநலன். அதுமட்டுமன்று, அந்த முழுநலன் பாதுகாக்கப்படும் முறை ‘காந்தியம்’, ‘டால்°டாயிஸம்’, ‘இயேசுயிஸம்’, ‘வள்ளுவம்’ காக்கும் முறை. ஆற்றல் உடையவர், அறிவுடையவர் தம் அறிவை, ஆற்றலை, தம் நலங்கெடுத்தும் ஆற்றலற்றவர்க்கு, அறிவற்றவர்க்குப் பயன் படுத்துவதன் மூலமும்; அவர்கள் ஆற்றலை, அறிவைப் பெருக்கு வதன் மூலமும் முழுமுதலையும் இனத்தையும் வளர்க்கின்றனர்! குடும்பத்தின் இந்தப் பண்புடைய சமுதாயத்தையோ, இனத்தையோ, நாட்டையோ இன்றுகூட உலகில் காட்ட முடியுமா? ஆற்றலுடையார் ஆற்றலற்றவர்களை அடக்கிக்கொண்டு அவர்கள் பெயரால் தம் நலன், உரிமை நிலை நாட்டுதல்; அறிவுடையவர் அக்காரணத்தால் அறிவற்றவரை ஆண்டு அவர்கள் மீது சிறப்புரிமையும் நலனும் பெறல்-இவைதாமே இன்று மனித இனமெங்கும் காணும் பண்பு! அருட்பண்பு சமயத்துக்கே உரியது என்று கொண்டன சில நாகரிகங்கள்! சமயத்துறையில்கூட அதைக் கொண்டில, சில ‘சமய தர்ம’ங்கள்! இன்பத் துறையில் இவ்வருள் கொண்டவரோ, மருந்துக்கும் இல்லை! ஆனால், வள்ளுவர் அறமும் இன்பமும் பொருளும் இந்த அருள் பண்படிப்படையிலே அமைந்தது! அவர் நூல் இல்லறத்தில் தொடங்கி இன்பத்தில் முடிவுற்றதும், கடவுள் வாழ்த்திலும் வான் சிறப்பிலும் தொடங்கி ஒழுக்கத்து நீத்தார், அறன் வலியுறுத்தலைச் சுட்டிக்காட்டியதும் இதனாலேயே. விட்டுக்கொடுப்பு, தன்மறுப்பு, இணக்கம், ஒப்புரவு 5. அறிவுடையவர் குடும்பத்தில் அறிவிலாதவர்க்காகச் சில சமயம் தம் நலமும் தம் வாழ்வும் துறக்க நேர்கிறது. நன்றியும் பாராட்டும் புகழும் எதிர்பாராமல் இகழும் இன்னலும் தாங்கிக்கூட நலம் செய்ய நேரிடுகிறது. இத்தன்மறுப்பு உடையவரே குடும்பத் தெய்வங்கள். தன்மறுப்பில் சற்றுக் குறைந்தவர் உடைய குடும்பங்களில்,குடும்ப உறுப்பினர் விட்டுக் கொடுக்கின்றனர். ஏனையோர்கூட ஏற்றத் தாழ்வைச் சரிக்கட்டப் பழகுகின்றனர். இதனையே நாம் இணக்கம் என்று கூறுகிறோம். பணிவு, வணக்கம் ஆகிய சொற்கள் இன்று அடிமைப் பண்புடைய சொற்களாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. உண்மையில் இவை இணக்கமுடைய பண்பார்ந்த இன உறுப்பினரின் இணக்க அறிகுறியே. உறுப்பினர் ஒவ்வொரு வரும் மாறி மாறிப் பணிகின்றனர்; வணங்குகின்றனர்-ஒரே இனநலம், இனக்குறிக்கோளுக்கு அனைவரும், உட்படும் பண்பையே இது வளர்க்கிறது! குடும்ப ஆட்சியாளர். சமுதாய ஆட்சியாளர் ‘ஒப்புரவு’ செய்தல் வேண்டும். ஏற்றத் தாழ்வைப் போக்க இணக்கம் பரப்புதல் வேண்டும். இவ்வகையில் பணிவும் வணக்கமும் ஒப்புரவுப் பண்பை நோக்கிச் செல்லல் வேண்டும் என்பதை வள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து’ பணிவு யாவர்க்கும் நன்றாயினும் உயர்ந்தோர்க்கே இன்றியமையாதது. ஏனெனில், அதுவே ஒப்புரவு வளர்க்கும். ஏலாதவரிடத்தில் அதுபோலவே மானம், இரவச்சம் முதலிய பொதுப் பண்புகள் சிறப்புடையனவாகும். பண்பின் அருங்கலம் உணவுப் பொருள்கள். நீர் உணவுக் கலங்கள்-விறகு இவை யாவும் இருந்தாலும் உணவாய்விடாது. உணவாக்க, சமைக்க, தீ இன்றியமையாதது. அதுபோலவே வாழ்வில் அறிவுடையோர், ஆற்றலுடையோர், உழைப்புடையோர் இருந்துவிட்டால் அது வாழ்வாய்விடாது. அனைவரையும் செயலாற்றுவிக்கும் பொது ஆர்வமும், அனைவரையும் ஒருமுகப்படுத்துவிக்கும் பொது ஆர்வலரும் இல்லாவிட்டால் இனவுணர்ச்சி தடைப்பட்டு விடுவது உறுதி. விலைக்கு வாங்க முடியாத பொருள், வலியுறுத்திப் பெற முடியாத பொருள், தன்னாலேயே தூண்டப்பெற்றாலல்லது, பிறிதொன்றினால் தூண்டப்பட முடியாத பொருள், ஆர்வமே! உழைப்பாளர் உழைப்பை விலைக்கு வாங்கலாம். அறிஞர் அறிவைக் கூலி கொடுத்துச் செயலாற்றுவிக்கலாம். முதலாளி களுக்கு ஆதாய ஆர்வம் காட்டி இயக்கலாம். ஆனால் ஆர்வம், அவா அவ்வளவு எளிதல்ல; அவை உண்ணின்றெழுவன, உண்ணின் றெழுப்பப்படுவன. தீயைப்போல அளப்பரும் ஆற்றல் உடையன. ஆனால், அளந்து பெறப்படாதன. தற்கால நாகரிகத்தின் பெருங்குறை-ஆதாய ஆர்வம், ஆதிக்க ஆர்வம் தவிர ஆக்க ஆர்வம் எதுவும் மனித இனத்தில் அரிதாயி ருப்பதே! இது தற்கால நாகரிகத்தின் செய்தி மட்டுமன்று. மனித நாகரிகத்தின் உள்ளார்ந்த குறைபாடுகளுள் இஃது ஒன்று என்னலாம். ஆர்வம் உயிர்க்கு உயிர். அந்த ஆர்வத்துள் ஆர்வம் அன்பார்வம். அது செயலார்வம், உழைப்பார்வம், அறிவார்வம் ஆகியவற்றைத் தூண்டுவது மட்டுமன்று; அதுவே மனித இன முழுவதும் ஆர்வ அலைபரப்பும் ஆற்றலுடையது. மனித இனத்தை, மனித இனக்கூறுகளை ஒருமுகப்படுத்தி ஊக்கி உருவாக்கவல்லது. இத்தகைய ஆர்வத்தைவிட உயரிய ‘பண்பின் அருங்கலம்’ பிறிதில்லை என்னலாம். பிளேட்டோ கண்ட புதிர் உலகை ஆளும் தகுதியுடையவர் மிக மிகச் சிலர்! ஆளும் தகுதியற்றவரே மிக மிகப் பெரும்பாலானவர்கள்! இது பிளேட்டோ கண்ட நிலை. அவர் கண்ட மற்றும் இரண்டு உண்மைகள் உண்டு. அவை புதுமை வாய்ந்தவை; புதிரானவை. ஆளும் தகுதியுடையவர்கள் என்பவர்கள் என்றும் ஆள விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்! இதுவே மனித இனத்தில் பிளேட்டோ கண்ட பெரும் புதிர்! ஆளுந் தகுதியற்றவர்களுள் ஆள விரும்புபவர் சிலர். இவர்கள் அறிவுடையோர். ஆனால் தன்னலமுடையோர்; தீயோர். ஏனைய பெரும்பாலோர் தீயோர் அல்லர்; பஞ்சையர்; அறிவற்றவர். இயல்பாக அடிமைகளாக, ஆட்டுக் கூட்டங்களாக. சிந்தனையின்றி இயங்குபவர். ஆளுந் தகுதியுடையவர் ஆள விரும்பாவிட்டாலும் வற்புறுத்தப்பட்டால். நல்லாட்சியே செய்வர். வற்புறுத்தப்பட்டு ஆளும் தகுதியுடையோர் ஆளும் இனமே உயர் நாகரிக இனம்! பிளேட்டோ கண்ட குறிக்கோட் குடியரசு இதுவே! ஆனால், தகுதியுடையவரை வற்புறுத்துவது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்? பிளேட்டோ இதற்கு விடை கூறவில்லை. ‘தெய்வீகமாக’ நடக்கவேண்டிய செயல் இஃது என்று விட்டு விடுகிறார்! தமிழ்ச் சான்றோர் விளக்கம் பிளேட்டோ, கண்ட புதிரை விடுவித்தவர் தமிழினத்தவர், வள்ளுவர் இனத்தவர்! ஆளும் தகுதியுடையவர் தாம் ஒழுக்கத்து நீத்தார். ஆனால், அவர்கள் பிளேட்டோ குறிக்கொண்ட அன்பிலா அறவோர் அல்லர்; அவர்கள் அந்தணர். ‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு’ ஒழுக்கத்து நீத்தார் பெருமைகளை உலகம் அறியச் சான்றோர் அறநூல்களை உலகம் அறிதல் வேண்டும் என்கிறார், திருவள்ளுவர். ஆனால், உலகம் தம்மை அறியட்டும் என்றும் அவர்கள் வாளா இருப்பவர் அல்லர். ஏனெனில், அவர்கள் அந்தணர். `அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்!’ அவர்கள் கொல்லாமை, ஊறுசெய்யாமை ஆகிய எதிர் மறைப் பண்புகளுடன் நிற்பவர்கள் அல்லர். கதிரவன் போலச் செம்மை, தண்கதிரவன் போலச் செந்தண்மை, வானம் போலத் தண்ணளி உடைவர்கள் அவர்கள். அவர்களது அன்பு தூண்டுதல் வேண்டாது. கைம்மாறும் நன்றியும் வேண்டாது. கதிரொளி, நிலவொளி, வான மழைபோலத் தானாகச் செயலாற்றும். ஏனெனில் அது கரையற்ற காதலாக, அன்பாக, அருளாக மிளிர்வது. ``அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்!’’ அன்பு அடையாத கதவுடையது. துன்புறுபவரைக் கண்டால், அஃது உடனே கனிவுறும், கண் கசியும், செயலாற்ற விரையும். கைம்மாறின்றி, கோராது, பிறர்க்கு நலஞ்செய்வதையே வாழ்வாகக் கொண்ட பெரியார் ஒரு சிலராயினும் உலகில் இருப்பதால்தான் உலகம் வாழ்கின்றது. இக்கருத்தைச் சங்ககால மன்னருள் ஒரு புலவரும், புலவருள் ஒரு மன்னரும், இளைஞருள் ஒரு மூதறிஞருமான இளம்பெருவழுதி அழகுபட எடுத்துரைத் துள்ளார்! ``உண்டால் அம்ம, இவ்வுலகம்-இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே- முனிவிலர்- துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சி புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின், உலகுடன் பெறினும் கொள்ளார்-அயர்விலர்- அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!’’ புறம் - 182 தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் சான்றோர் இருப்பதாலேயே உலகம் நின்று நிலவுகிறது! தமிழர் வாழ்க்கைத் திட்டம் வாழ்வு கரையற்ற கடல் மட்டுமன்று. எல்லையற்ற வானம். அஃது இட எல்லை கடந்தது மட்டுமன்று; கால எல்லையும் கடந்தது. இயற்கையளாவியது. ஆனால், இயற்கைக்கு மய்யம் கிடையாது; வாழ்க்கைக்கு மய்யமுண்டு. அதுவே உயிர், இயற்கைக்கு இலக்குக் கிடையாது; வாழ்வுக்கு இலக்கு உண்டு. வாழ்வின் அடிப்படை வாழ்க்கைக்குழு அல்லது சமுதாயம். இது குடும்பங்களின் கூட்டுறவு; குடும்பத்தின் விரிவு. இக்குழு ஒரு குறிக்கோள் நோக்கி, ஒரு பண்பு வளர்த்து, ஒன்றுபட்டு ஒத்துழைக்கின்றது. தனி மனிதர் நோக்கம் அல்லது அவாத் தூண்ட, பொதுக் குறிக்கோள் வழிகாட்ட, இன ஆர்வம் இணைக்க அது வளர்கின்றது. இன ஆர்வலர் சமுதாயத்தை இயக்க, சமுதாயம் அரசியலை இயக்க, அரசியல் சமுதாய வாழ்வின் வளத்துக்குத் திட்டமிட, இத்தகைய வாழ்க்கைச் சட்டத்துக்குள் தனி மனிதன் வாழ்வைத் தனதாகப் பெற்று, தன் வாழ்வை இன வாழ்வாக்கி வாழ்கிறான். தனி மனிதன் கூட்டுறவில் ஓர் உறுப்பினனாகவும், இன மரபில் ஒரு கண்ணியாகவும் அமைகிறான். தனி மனிதன் நோக்கம், சமுதாயக் குறிக்கோள், இரண்டையும் வாழ்வின் வளமும் பெருக்கமும் தரும் முறையில் இயக்கித் தமிழர் வகுத்த தனித்திட்டமே அற வாழ்வு, பொருள் வாழ்வு, இன்ப வாழ்வு, ஆகியவை. 6. வாழ்க்கைக் குறிக்கோள் மனிதர் பொதுவாக நீண்ட வாழ்நாள், உடல் நலம், உளநலம், நீடித்த இளமை நலம் ஆகியவற்றை நாடுகின்றனர். நல்ல வாழ்க்கைத் துணை (மனைவி அல்லது கணவன்), நல்ல உடல் உளநிலை வாய்ந்த குழந்தைச் செல்வம் ஆகியவற்றையும் விரும்புகின்றனர். நல்ல வீடு, ஆடையணிமணிகள், இன்றியமையாத் தேவைகள், இன்ப வாய்ப்புகள் ஆகியவற்றைத் தரவல்ல பணச் செல்வம், நிலஉடைமை, ஆதாயம் அல்லது ஊதியம் தரும் தொழில் ஆகியவற்றின் மீதும் அவர்கள் கருத்துப் பரவுகிறது. பலர் இவற்றுடன் உற்றார் உறவினர், நண்பர் தோழர் அறிமுகச் சூழலுக்குரியோர் ஆகியோரின் ஆதரவு, செல்வாக்கு, உயர் பதவி, புகழ், ஆற்றல் ஆகியவற்றிலும் பற்றுடையவராக உள்ளனர். வாழ்க்கைப் பண்பில் உயர்ந்தோர் இவற்றை ஆக்கவும் பேணவும் பெருக்கவும் வல்ல கல்வியறிவையும்; நுகர்வின்பம் பெருக்கவல்ல கலை, இயல், மெய்விளக்க நூல்களையும் பெற விழைகின்றனர். சமூகப் பண்பில் இன்னும் ஒருபடி உயர்ந்தவர்கள் தன்னலச் சூழல் கடந்து குடும்பநலம், சமுதாயநலம், ஊர்நலம், நாட்டுநலம், உலக நலம், மனித இனநலம், உயிரினநலம் ஆகியவற்றில் உளம் பற்றுகின்றனர். கல்வி கலை நூல்களை அவர்கள் இந்நலங்களின் பெருக்கத்துக்காக ஏனையவரினும் ஆர்வமாகப் பயின்று வளர்க்கின்றனர். அவர்கள் விரும்பும் புகழும் ஏனையோர் விரும்பும் வீம்புப் புகழ், ஆரவாரப் புகழாயிராமல், அன்புப் புகழாக அமைகின்றது. புகழ்கடந்து இகழிலும் எதிர்ப்பிலும் நீந்திக்கூட உலகநலம் அவாவுபவரும் உண்டு. இத்தகைய புகழே ஆக்கப் புகழ் ஆகும். மக்கள் பல படியிலும் விரும்பும் இப்பேறுகள் எல்லாமே செல்வங்கள்தாம், வாழ்வின் வளங்கள்தாம். பணச் செல்வம் ஒன்று மட்டும் இருந்தால் இவை அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்று பலர் எண்ணுவதுண்டு. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் இது தவறு என்பது தெரியவரும். எடுத்துக்காட்டாக, நீடித்த வாழ்நாளோ, உடல் நலமோ, பண்போ செல்வத்தால் மட்டும் பெறத்தக்கதல்ல. இவற்றுக்கும் ஏனையவற்றுக்கும் செல்வம் உதவுமேயன்றி, அஃது ஒன்று மட்டுமே அவற்றைத் தந்துவிட மாட்டாது! நிழலின் அருமை ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பழமொழி. பழமொழிகள் பலவற்றைப்போலவே இது மிக ஆழ்ந்த ஓர் அனுபவ உண்மையை எளிய சொற்களில் கூறுகிறது. நிழலிலேயே வாழ்நாள் முழுவதும் கழிப்பவற்கு நிழல் என்ற ஒரு பொருள் இருப்பதாகவே தெரியாது. அவன் நிழல்பற்றி எண்ணவேமாட்டான். நிழலை அனுபவித்தாலும் அஃது ஓர் இன்பம் என்று அவன் கருதமாட்டான்; அதை அவன் அவாவவும் மாட்டான். வெயிலின் துன்பத்தைக் கண்ட அளவிலேயே அவனுக்கு நிழலின் அருமை தெரியும். அதை இன்பமாகக் கருதுவான். அதைப் பெறுவதில் அவாவும், பெற்ற பின் இன்பமும், விட்டுச்செல்லும்போது வருத்தமும், இல்லாதபோது துன்பமும் ஏற்படுவது இதன் பின்னரேயாகும். வாழ்வின் வளங்கள் என்று நாம் மேலே குறிப்பிட்ட பண்புகள் யாவும் உண்மையில் நிழல்போன்றவையே. அவற்றவற்றின் எதிர்ப் பண்பில்லாவிட்டால், நாம் அவற்றின் தன்மையை அறியவும் முடியாது. அவற்றை இன்பமாகக் கருதவோ, அவற்றின் இன்மையைத் துன்பமாகக் கருதவோமாட்டோம். அவை பற்றிய விருப்பு, வெறுப்பு, அவா, அச்சம் ஆகிய உணர்ச்சிகளுக்கும் இடம் இருக்கமாட்டாது. எடுத்துக்காட்டாக, உயிருடனிருப்பவர் உயிரைப் பற்றி எண்ணமாட்டார். உயிருடனிருப்பது அவர்க்கு ஓர் இன்பமாகவும் தோற்றமுடியாது. ஆனால், தூக்குத் தண்டனை பெற்று, அதன் நிறைவேற்றத்தை எதிர்பார்த்திருப்பவர் நிலைவேறு. பலர் வாழ்நாள் முழுதும் எண்ணாத எண்ணங்களை எல்லாம், அவர் ஓர் அரை நாழிகைப் போதில் எண்ணுவார். இங்ஙனமே உடல் நலத்தின் அருமை நோயிலும், கட்டற்ற வாழ்வின் அருமை அடிமை நிலையிலும், உணவின் அருமை பசியிலும், செல்வத்தின் அருமை வறுமையிலும், இளமையின் அருமை முதுமையிலும், சோலைவனத்தின் அருமை பாலைவனத்திலுமே நன்கு தெரியவரும். இன்பத்திலேயே திளைக்கும் பலர் இன்பம் இன்னதெனவே உணர மாட்டார்கள். துன்பத்திலேயே திளைக்கும் பலர் துன்ப உணர்வு அற்றவராய் விடுவர். நேர் பண்புகள் என்று நாம் கொள்ளும் யாவுமே இங்ஙனம் உண்மையில் நேர்பண்புகள் அல்ல என்று காணலாம். எதிர்மறைப் பண்புகள் என்று நாம் கொள்பவற்றின் எதிர்மறைகளே அவை. எதிர்மறைப் பண்புகளை யாராவது நேர்பண்பாகக் கருதினால், அங்ஙனம் கருதத் தடை ஒன்றும் இல்லை. அங்ஙனம் கருதுபவர்க்கு நேர்பண்புகள் என்று நாம் கருதுபவையே எதிர்மறைப் பண்புகளாய் இயலும். நேர், எதிர்மறை, என்ற பாகுபாடு இவ்வாறு எதிரெதிர் பண்புகள் என்பது தவிர வேறு பொருளற்றது. ஆனால், நேர் பண்புகளுள் சிலவற்றையும், எதிர்மறைப் பண்புகளுள் சிலவற்றையும் நாம் ஆக்கப் பண்புகள் என்றும், ஏனையவற்றை அழிவுப் பண்புகள் என்றும் பாகுபடுத்துவது, இதனினும் பொருள் வலிமையுடையது என்னலாம். ஏனெனில், அவ்வாக்கப் பண்புகளே வாழ்வின் வளத்துக்கு உதவுபவை; அழிவுப் பண்புகள் அதற்கு உதவாதவை, அல்லது ஊறு செய்பவை ஆகும். இன்பதுன்பம், நன்மைதீமை இன்பங்கள் எல்லாமே ஆக்கம் தருபவை என்று கூறமுடியாது; துன்பங்கள் எல்லாமே அழிவு தருபவை என்றும் கூறமுடியாது. இன்பங்களுள் துன்பத்துக்கு வழி வகுப்பவை உண்டு. இனிய நஞ்சு, அழகிய தோற்றமுடைய நச்சுப் பாம்புகள், இன்ப வாழ்வாலும் சோம்பலாலும் வரும் நோய்கள் இதற்குச் சான்றுகள். நேர்மாறாக, இன்பத்துக்கு வழிவகுக்கும் துன்பங்கள் உண்டு. நோயகற்றி உடல்நலம்தரும் கசப்பான மருந்து, கடு உழைப்பால் வரும் உடல்வலிமை, உடல்நலம் முதலியவை இதற்குச் சான்றுகள். தவிர, இன்பங்கள் யாவுமே மட்டு மீறின் துன்பந் தருபவையே. ‘அளவுக்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி இதை நினைவூட்டுகிறது. ஆக்கம்தரும் இன்பங்கள், துன்பங்கள் இரண்டையும் உண்மையின்பங்கள், நன்மை என வகுக்கலாம். மற்ற இன்ப துன்பங்களைத் தீயன என்று ஒதுக்கலாம். நன்மை தீமைப் பாகுபாட்டின் அடிப்படை இதுவே. அவாக்களிலும் நல்லின்பம், நலம்தரும் அவாக்கள் உண்டு. தீய அவாக்களும் உண்டு. முந்தியவை போற்றத்தக்கவை, வளர்க்கத்தக்கவை. பிந்தியவை தள்ளத்தக்கவை; கண்டிக்கத் தக்கவை. இன்பங்கள், அவாக்களைப்போலவே, கருத்து, சொல், செயல் ஆகியவற்றிலும் ஆக்கத்துக்கு உதவுபவை நல்லவை ; உதவாதவை, அழிவுக்கு வழிவகுப்பவை; தீயவை என்னலாம். இயற்கைச் சமயங்கள், இயற்கை அற நூல்கள் கொள்ளும் கோட்பாடு இதுவே. அறிவும் தொலைநோக்கும் உடைய அறவோர், அந்தணர் இன்பதுன்பங் கடந்து நல்லின்பங்கள், நலங்கள், நல்லவாக்கள், நல்வினைகள் காண்பதுடன் நிற்பதில்லை. துன்பத்திலிருந்து இன்பத்தின் தன்மை அறிந்த அவர்கள் அவ்வின்பங்களிலிருந்து இன்னும் மேலான இன்பங்களுக்கு வழிகாணுகின்றனர். வெயில் வெப்பின் பின் நிழல் அருமை கண்டு அதிலேயே அமைந்த சமுதாயத்தை அவர்கள் தண்ணறும்நிழல் நோக்கி இட்டுச் செல்கின்றனர். வெயிலுக்குப் பின் நிழல் எப்படியோ, அப்படியே நிழலுக்குப் பின் இத்தண்ணறு நிழல் அருமை மிக்கதாகிப் புதுச் சுவை தருகிறது. ஏனெனில், இங்கே உடலின் குளிர்ச்சியுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுந்தழைகள், பன்னிறச் செந்நீல வண்ணங்கள் ; காதுக்கு இன்பமான இனிய சுனையருவி நீரின் இசையரவம்; மூக்குக்கு இன்மணம் தரும் கவின் மலர்கள்; நாவுக்குச் சுவையூட்டும் நறுநீர், தேன், நல்ல கனிகள் ஆகிய தண்ணறும் சூழல்கள் உள்ளன. நிழலில் இனிமை பெருக்கிக் காட்டும் இத்தகு செயலே கலை. நன்மை பயக்கும் இன்பங்கள், அவாக்கள், செயல்கள் ஆகியவற்றை அறிவு கடந்த உணர்ச்சியில், உணர்ச்சி கடந்த உணர்வில் ஊட்டி, அறிஞர் வாழ்க்கையையே கலையாக்கி விடுகின்றனர். துன்பம், இன்பம் என்ற எதிரெதிர் பண்புகளுக்கு மாறாக, இன்பம்—உயர் இன்பம் எனப் படிப்படியாக உயர்ந்த நல் இன்பங்களுக்கு இவை ஏணி வகுக்கின்றன. இந்நிலையையே பண்பு என்கிறோம். பண்புகளை வகுத்த தமிழ்ச் சான்றோர்களுள் தலை சிறந்தவரே வள்ளுவர். இன்பத்துள் இன்பம் பண்டைத் தமிழரும் பண்டைக் கிரேக்கரும் வாழ்வை இன்பமயமாகக் கருதினர். மேன்மேலும் இன்பமயமாக்க முனைந்தனர். இன்பம் பெருக்க, உயர் இன்பம் ஆக்க விரும்பினர். ஆனால், இடைக்காலச் சமயங்கள் பொதுவாகவும், இடைக்காலக் கீழ்த் திசைச் சமயங்கள் சிறப்பாகவும் வாழ்வைத் துன்பம் எனக் கருதத் தொடங்கின. கிறித்தவ இசுலாமிய சமயங்கள் துன்பக் கோட்பாட்டில் மிகுதி ஆழவில்லை. ஆயினும், அதன் சாயல் அவற்றின்மீது படராமல் இல்லை. ஆக்கத்துக்கு மாறான தேக்கக் கருத்துக்களும், பின்னோக்கக் கருத்துக்களும் அவற்றில் இடம்பெறத் தொடங்கி யுள்ளன. புத்த சமண சமயங்களிலும் மற்ற இந்திய சமய வாழ்வுகளிலும் துன்பக்கோட்பாட்டின் சாயல் மிகுதி. வரவர அவையே பெருகின. கீழ்த்திசையை அடிமைத்திசையாக்கிவிட்ட நச்சுப் பண்பு இதுவே. ‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம். பாழ்போவது பிறவித் துயர்! படுநோய் செய்த வகையே!’ என்று பேரறிஞர் பலரை, சான்றோர் பலரைக்கூடப் பாட வைத்துவிட்டது, இந்த மடமை சார்ந்த துன்பக் கோட்பாடு! வாழ்வாவது இன்பம்-இது பொன்னாவது திண்ணம் யாழ்போல்வது பிறவிப் பயன் இசைசேர்இன்ப நிலையே! என்று நாம் இந்தப்பாட்டை மாற்றிப் பாடுவதே தகுதி! வாழ்வின் நோக்கமே இன்பம்! இது வள்ளுவர் கோட்பாடு. ஆனால், இதே குறிக்கோளைக் கூறும் களியாட்டக் கோட்பாட்டாளரும் உண்டு. அவர்கள் நினைக்கும் இன்பத்துக்கும், வள்ளுவர் நினைக்கும் இன்பத்துக்கும் பெருத்த வேற்றுமை உண்டு. அவர்கள் போற்றும் இன்பம் தனிமனிதன் இன்பம்; அது மட்டுமன்று, தற்காலிக இன்பம்; ஒருவர்க்கு இன்பமாக, இயலும்போதே மற்றவர்க்குத் துன்பம் தருவது; நாளடைவில் எல்லார்க்கும், இனத்துக்கும் துன்பம் தருவது. வள்ளுவர் வகுத்த தமிழ்ப் பண்பின் இன்பமோ, நிலையான இன்பம்; பொதுமக்கள் இன்பம். நுகர்பவர்க்கு மட்டுமன்றி அவர் சூழலுக்கும் இன்பம் தந்து இன்பம் பெருக்குவது. யாழின் இன்பம் இசைப்பவர்க்கு மட்டுமின்றிக் கேட்பவர்க்கும் இருவர் மரபினர்க்கும் இன்பம் தருவது. தண்ணிலவின்பம். கண்ணுக்கினிமையும், மேனிக்குக் குளிர்ச்சியும், உள்ளத்துக்குக் கிளர்ச்சியும் ஊட்டுவது. தென்றல், இளவேனில், பொழில் சூழ்ந்த பொய்கை ஆகிய இவையும் இத்தகையனவே. இறைவன் திருவடி இன்பத்தை இத்தகைய இன்பமாகத் தமிழின் அருட்புலவர் பெருமானான திருநாவுக்கரசர் வருணிப்பது காணலாம். ``மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே!’’ ஆக்கமும் தேக்கமும் ஆக்கத்துக்கு எதிர்ப்பதம் அழிவு மட்டுமன்று; தேக்கமும் எதிர்ப்பதமே. அழிவுதரும் இன்பம் போன்றதே, ஆக்கம் அல்லது பெருக்கம் தாராத இன்பம். உண்மை இன்பம், உயிர் இன்பம், உயிர் போன்றது. அஃது இன்பத்தின்மேல் இன்பமாக வளர்வது. யாழ் இன்பம், தென்றல் இன்பம் முதலியன தேக்க இன்பமல்ல. ஆக்க இன்பம். வண்டுகளின் ‘பொம்’ என்ற ஒலி செவிக்கினிமை மட்டுமன்று, அந்த ஒலியைத் தொடர்ந்து வண்டுகள் சேர்க்கும் தேன் இனிமை தோன்றுகிறது. தேன் நாடும் வண்டு, மலர்களைப் பொலியச் செய்து கனிவளம் தருகிறது. அது நமக்கு உணவுவளம் மட்டுமன்று. செடியினத்துக்கு உயிர்வளமும் பெருக்குகிறது. உயிர் இன்பம், பொங்கல் இன்பத்தின் வளம் இது. காதல் இன்பத்தை வள்ளுவர் இத்தகைய பொங்கல் இன்பமாக, வாழ்வை ஆக்கி வளர்க்கும் பேரின்பமாகக் காட்டும் அழகு கூர்ந்துணரத்தக்கது. `உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்த லின்று!’ உண்டால் மட்டுமே கள் கிளர்ச்சி தரும்; காதலரோ கண்டாலே கிளர்ச்சி தருவர். ஓரிரு புலன்களுக்கு மட்டுமே பிற இன்பப் பொருள்கள் மகிழ்ச்சி தரும். ஐம்புலனும் கடந்து இன்பம் அளிப்பது காதல் என்கிறார் வள்ளுவர், மற்றொரு குறட்பாவில்! அதற்கு விளக்கம் அளிப்பதுபோல, கிட்டத்தட்ட ஐம்புலச் சுவையுமடங்கப் பெண்ணின் அழகை ஒரு குறட்பாவில் அவர் அடக்கித் தருகிறார்! ``முறிமேனி: முத்தம் முறுவல்: வெறிநாற்றம்; வேல்உண்கண்: வேய்த்தோள் அவட்கு’’ மாந்தளிர் போன்ற மெல்லிய சாயல் படர்ந்த உடம்பினாள். முத்துப் போன்ற பற்கள் உடையவள். மணம் கமழும் பூவையாள். வேல்போல் கூரிய, கவர்ச்சிமிக்க கண்ணாள். மூங்கில் போலும் பசுமையான அழுத்தமான, தோள் உடையாள் அவள். இது மட்டுமோ! அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு! படிக்கும் தோறும் படிக்க வேண்டிய புதுச்செய்திகள் பல தெரிகின்றன. அறிவும் அறிவார்வச் சுவையும் பெருகுகின்றன. ஆம்; அறிவின் இந்த வளம் ‘இறைக்க இறைக்க ஊறும்’ உயிரூற்றுப் போன்றது! அதே வகையான மற்றுமோர் இன்ப உயிரூற்றுத்தான் காதல்! அஃது என்றும் பழஞ்சுவை கடந்து புதுச்சுவை காட்டிக் கொண்டேயிருப்பது! அது சாவா மருந்து. ஏனெனில், ஓயாது உயிர் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர். உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால், பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்! சோர்வடைந்தபோது உண்ண வேண்டா. தீண்டினால் போதும். உயிர் வந்துவிடும். புத்துயிர் உண்டாகிவிடும். கைக் கொண்டுகூடத் தீண்டுதல் வேண்டா. கண்ணொளி தீண்டினால் போதும்! அத்தகைய அமுத மருந்து, பெண்டிர் சொற்கள்! காதலின் வியத்தகு பண்புகள் இவை மட்டுமன்று. தீ அணுகினால் சுடும். அகன்றால் குளிரும். ஆனால் காதலோ, அகன்றால் சுடும். அணுகினால் குளிரும் ``நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?’’ வாழ்க்கையின் அடிப்படையான இன்பம் காதல். அதில் உயிர்ப்புடைய இனப்பண்பு கண்ட தமிழர், வாழ்விலும் அறிவு கடந்த, உணர்ச்சி கடந்த இன்பப் பண்பு நாடினர். சமனுணர்வு “துன்பம் மட்டுமன்றி, இன்பமும் நாடாதே!” “தீவினை மட்டுமன்றி, நல்வினையிலும் ஈடுபடாதே!” “தீய அவாக்கள் மட்டுமன்றி, நல்ல அவாக்களும் வேண்டா. ஏனெனில், இரண்டும் பிறவிக்கு வித்தாகும்.” “பிறப்புத் துன்பமயமானது. அதன் மாயத் தொடர்பி லிருந்து விடுபடுவதே பேரின்பம்” கிட்டத்தட்ட எல்லா உலகச் சமயங்களிலும் இந்தப் போதனை சிறிதளவாவது உண்டு. கீழ்த்திசைச் சமயங்களில் இஃது இன்னும் மிகுதி. வள்ளுவர் பெருமானைப் போலவே, அன்பறம் போதித்த புத்த சமண நெறிகள் தாமும் இத்துன்பக் கோட்பாட்டில் இழைந்துள்ளன. திருக்குறளில்கூட இக்கோட்பாட்டைக் காண்பவர் பலர். பல குறட்பாக்கள் இதற்கு இடம் தருகின்றன. ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ ``பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’’ எனக் கடவுள் பெயராலும், ‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்’ `அற்றவர் என்பவர் அவா அற்றார்’ ‘அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்’ ‘அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து’ என்று வாழ்வின் பேராலும் இன்ப துன்பம், அவா ஆகியவற்றை அறவே விலக்கும்படி வள்ளுவர் கூறியதாகத் திருக்குறளின் உரையாசிரியர்களும், பிறரும் கொள்கின்றனர். தமிழ்மொழியறியாமல் மொழிபெயர்ப்பு மூலமே உரையாசிரியர் கடந்து வள்ளுவர் உட்பொருள்களைக் கூர்ந் துணர்ந்து கண்ட பேரறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சர் கூட இக்குறட்பாக்களுக்குத் தேக்கப் பொருளே கண்டார்! இது வள்ளுவர் கொண்ட பொருளாயின், அஃது அவர் இன்பக் கோட்பாட்டுக்கு முரண்பட்டதாகும். ஆனால், கூர்ந்து நோக்கினால், வள்ளுவர் உண்மைப் பொருள் விளங்குவது மட்டுமன்று; சமயவாதிகள் மரபில் அஃது எவ்வாறு மெய்ம்மரபற்று இழிந்துவிட்டது என்பதும் தெரியவரும். இறைவன் இருவினையும் சார்வதில்லை. தனக்கென அவற்கு ஒரு பற்றில்லாததனால்! அதுபோலத் தனக்கென இன்ப துன்பம் பற்றாமல், தனக்கென அவாவுறாமல் இருப்பவன் பொதுநல இன்பம் பெருக்குகிறான். இன இன்பம் பெருக்கித் தானும் உண்மை இன்பம் காண்கிறான். வள்ளுவர் குறளை முழு நோக்காகக் காண்பவர்களுக்கு இதுவே அவர் குறிக்கொண்ட பொருள் என்பது விளங்கும். ‘ஊர்ப்பிள்ளைகள் தலைக்கு எண்ணெய் வார்ப்பவனுக்குத் தன்பிள்ளை தானே வளரும்!’ என்ற பழமொழி இதே உண்மையைத் தெரிவிக்கிறது. ‘அவா...தவாஅப் பிறப்பீனும் வித்து’ என்பதன் பொருள் இதையே குறிக்கிறது. ‘தன்னலப் பற்று என்பது ஒருவனை மேன்மேலும் தாண்டி உயர்படி செல்லவிடாத தாழ்ந்த பிறப்புக்கு வித்தாகிவிடும். ஏனெனில், தன்னலம் பேணுபவர் பிள்ளைகள் மேலும் தன்னலமே பேணுவதால் குடும்பப் பண்பிலும் சமூகப் பண்பிலும் தட்டுக்கெட்டுத் தாழ்வர்’ என்பதே இக்குறட்பாவின் குறிப்பு ஆகும். தன்னலம் வேண்டாது அத்தன்னலம் மறுத்துப் பொது நலம் பேணுபவனுக்கு அப் பொதுநலமேயன்றித் தன்னலமும் உண்மையில் பெருகும் என்பது வள்ளுவரும் பிற தமிழ்ச் சான்றோரும் ‘வேண்டாமை யன்ன விழுச் செல்வம்’ ‘வேண்டாமை வேண்ட வரும்’ தவிர, இன்பத்தில் தன்னையிழப்பவர் துன்பத்திலும் தன்னையிழந்துவிடுவார். இன்ப துன்ப இயல்பு, இன்ப துன்பங்களின் காரணம் பற்றிய சிந்தனையற்று, வாழ்வின் மேடு பள்ளங்களில் அவர்கள் அலைக்கழிவு பெறுவர். துன்பத்தையும் இன்பத்தையும் இயல்பெனக் கொள்பவன் இரண்டையும் நல்இன்பமாக, ஆக்கப் பண்பாக வளர்க்க முயல்வான். ‘இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்-துன்பம் உறுதல் இலன்’ என்ற குறளின் கருத்து இதுவே! வாழ்வின் வித்து தனி மனிதன் வாழ்வின் வித்தும், உரமும். உயிரும் அவன் நோக்கம், இன்பநாட்டம், விழைவு ஆகியவையே. எனவே, அவா விரும்பத்தகாத ஒரு பொருளன்று, மிகவும் விரும்பத்தக்க, உண்மையில் கிடைத்தற்கரிய ஒரு பொருளே. ஆயினும், தனி மனிதன் அவாக்கள் எப்போதும் நல்ல அவாக்களாகவும் இருப்பதில்லை. வாழ்வுக்கு ஆக்கம் தரும் அவாக்களாகவும் இருப்பதில்லை. ஆகவேதான், அறிவுடையோர் ஆக்கக் குறிக்கோள் வழி அவாவைச் செலுத்த முனைகின்றனர். அவர்கள் கலைஞர் ஆகின்றனர். மக்கள் விருப்பம் அறிந்து, அதனூடாகவே நற்குறிக்கோள்களைச் செலுத்தி இன்பமாக்கு கின்றனர். குறிக்கோள்மூலம் இன்பங்காட்டி அவர்கள் அவாவையே குறிக்கோளாக்குகின்றனர். அப்போது அவாக்கள் ஆக்க வாழ்வின் வித்துக்கள் ஆகின்றன. குறிக்கோளின் பயனும், ஆக்கமும் அவாவின் இன்ப உயிர்ப்புடன் கலந்து வளந் தருகின்றன. மனிதரின் அடிப்படையான அவாக்கள் மூன்று என்பர் சமய நூலார். அவற்றை மண், பொன், பெண் எனப் பகுப்பர். ஆனால், மண் அதாவது ஆட்சி சிலர் அவாவே. வலிமையுடைய அவாவுமன்று. எனவே வேறு சிலர் மண், பெண், மகவு என அதைத் திருத்தியுள்ளனர். இது பண்பறிந்த தமிழ் வேதாந்திகள், திருவள்ளுவர் பண்பின் தன்மையுமறியாது திளைத்த சமயவாதிகள் பண்பு. சமயவாதம் வாழ்வொளியை மறைப்ப தனால், அவற்றை அவர்கள் வேதாந்த வழிநின்று கண்டிக் கின்றனர். கண்டிக்கும்போதும் ஒரு தமிழ்க்கவிஞர்-அணிமைக் காலக் கவிஞர்-அவற்றின் இனிய பண்புகளை அழகுபடக் கூறுகின்றார். விழைவு எனப்படுகின்றது. மென்மெலத் தழல் விரிந்த கனகத் தரும்பி, மென் மழலை மாதர் மருங்கிற் படர்ந்து, பைங் குழவிமீது கொழுந்துவிட்டோங்குமால்! (தமிழ்ப் பாகவத புராணம்) கண்ணன் குழந்தைத் திருவிளையாடற் புராணமான பாகவத புராணம் பாடிய கவிஞரின் ஓர் அழகமைந்த பாடல்தான் இது. ஓசையின்பத்திலும், பண்பினிமையிலும் இப்பாட்டுத் திருவள்ளுவர் மரபையே சுட்டிக் காட்டுவதாய் உள்ளது. மனிதரின் ஆசை பொன்னிலே அரும்புகிறதாம், பொன்னாசையாக மிளிர்கிறதாம்! ஆனால், அது பொன்னாசைப் பேயர் நிலையில் நின்று விடுவதன்று-அது தமிழர் பொன்னாசை! அது பூவை மீது பரவுகிறது-கவிஞர் மொழியில் மழலை மாதர் மருங்கில் சென்று படர்கிறது. மழலை மாதரிடம் படர்ந்த கொடி மழலை மைந்தரிடம் சென்று கொழுந்து விடுகிறதாம்! கொழுந்து விட்டோங்கு கிறதாம்! புராணம் பாடவந்த கவிஞர் இங்கே புராணத்தின் துன்பக் கோட்பாட்டை மறந்து இன்பக் கவிஞராகி விடுகிறார்! இனம், பேரினம் இம்மூன்று இன்பக் கூடங்கள் மீதுதான் தமிழர் இன்பக் கோட்பாடென்னும் கோட்டை எழுப்பப்படுகிறது. ஆனால், தமிழர் இன்ப அடிப்படையில் முதன்மை பொன்னுக்கன்று. பெண்ணுக்கு! அதாவது காதலுக்கு, ஆண் பெண் காதல் பிள்ளை மீது படர்கிறது. பொன்மீது அதாவது குடும்பவாழ்வின் இன்றி யமையாத் துணையான சமுதாயச் செல்வத்தின்மீது தவழ்கிறது. அது மண்மீது அதாவது ஆட்சிமீது வேரூன்றி, வானோக்கி, இன வாழ்வின் எதிர்காலம் நோக்கி வளர்கிறது. தனிமனிதர், விழைவு அற்றவராயிருந்தால், அதுவே சமய வாதிகள் பாராட்டும் பேரின்பம். ஆனால், தமிழர் விழைவற்றவரை விலங்கினத்திலும் கடைப்பட்டவராகவே கருதினர்! விழைவே உயிர், உயிர் விழைவே மனிதத்தன்மை என்று கொண்டனர்! சமுதாயக் குறிக்கோளாக இழைந்த விழைவே உயர் பண்பாடு. இத்தகைய நல் விழைவு, நல்லவா, நல்லார்வம், இல்லா விட்டால், சமுதாயம் இல்லை; கட்டாயம் பண்பட்ட சமுதாயம் இருக்க முடியாது! தனிமனிதர் விழைவு சமுதாயக் குறிக்கோளை அணுகுந் தோறும், அவர்கள் பண்புடையவர்கள் ஆகின்றனர். அதிலிருந்து விலகுந்தோறும் அவர்கள் பண்பற்றவராய் விடுகின்றனர். தனிமனிதர் விழைவு அவர்கள் இயல்பு சார்ந்தது. அவர்கள் தனி நலங்களும் தனிப்பண்புகளும் அதில் விரவாமல் இராது. ஆகவேதான், முழுதும் நிறைபண்பு கைவராதநிலையில், தன்னல அடிப்படைமீதே பொதுநலங் கட்டமைக்கப்படுகிறது. ஓர் இனத்தின் எல்லையில், கிட்டத்தட்ட அல்லது ஏறத்தாழ ஒரே இயல்பும் மரபும் சூழலும் உடைய மக்களிடமேதாம் இவை ஒன்றுபட்டு, ஒரு பண்புக்குள்ளும், ஒரு குறிக்கோளுக்குள்ளும் தொடக்க நிலையில் கட்டுப்பட முடியும். மனிதப் பேரினம் முழுவதும் ஒரே இனமாக இன்னும் அமையாததன் காரணம் இதுவே. விழைவின் செயற் பண்பு மொழி, பழக்க வழக்கம், சமயமரபு ஆகியவற்றால் பாதிக்கப்பெறுவது. பொருளியல் வாழ்வும் இவற்றை ஒட்டியே ஒருமைப்படும். ஏனெனில், இவை அனைத்தும் அன்பு, அளவளாவல், விட்டுக் கொடுப்பு, தன்மறுப்பு ஆகியவற்றின் அளவிலேயே அமைவன. இனங்களின் வகுப்பு முறையில் மொழி முதலியன பேரிடம் பெறுவது இதனாலேயே. மனிதப் பேரினத்தில் இனங் கடந்த, மொழி கடந்த, மரபு கடந்த, ஒற்றுமை ஏற்பட முடியும். ஏற்பட்டே வருகிறது. ஆனால், இவை கடந்த ஒற்றுமை மேற்பரப்பிலேயே வளர முடியும். இனவாழ்வின் ஆழம் மொழி மரபு, இனம் ஆகியவை சார்ந்தே பல்வகைப் பெருக்கமடையும். இனவாழ்வின் முழுநிறை வளர்ச்சி கழிந்தே இன வாழ்வு பேரினவாழ்வாகப் பொங்கிப் பொதுளும். பல வேர்களையுடைய மரம் போல, பல இன அடிப்படை யுடனேயே மனிதப் பேரினம் ஆழ வேரூன்றி மேல் நோக்கி வளரமுடியும். இன்பமும் பயனும் ‘வாழ்க’ என்று வாழ்த்தும்போது, நாம் இன்பம் பெறுக என்று மட்டும் கூறவில்லை. இன்பத்துடன் பயனும் பெறுக, இன்பமும் பயனும் கலப்பதால் வாழ்வின் வளம் பெற்றோங்குக என்று உள்ளத்தால் குறிக்கிறோம். இன்பம் போன்ற துன்பமும் உண்டு. துன்பம் போன்ற இன்பமும் உண்டு. இன்பம் தரும் துன்பமும் உண்டு. துன்பம் தரும் இன்பமும் உண்டு. தற்காலிக இன்பமும் உண்டு. நிலையான இன்பமும் உண்டு. நுகர்பவர்க்கு மட்டும் இன்பம் தரும் சிறிய இன்பமும் உண்டு. நுகர்பவர்க்கு மட்டுமன்றி அவர் சூழலுக்கே, இனத்துக்கே இன்பந்தரும் உயர் இன்பம், பேரின்பமும் உண்டு. நிலையான இன்பம், உயர் இன்பம், பேரின்பம் பயன் தரும் இன்பங்கள்! பயன் பெருகும் இன்பங்கள். பயனற்ற இன்பம் இருப்பதுபோலவே, இன்பம் தாராத பயனும் உண்டு. ஆனால், பயனும் இன்பமும் இரண்டும் கூடிய வழிதான் உயிர் இன்பம், இன்பமும் பெருக்கிப் பயனும் பெருக்கும் பண்பு உண்டாகிறது. தமிழர் இத்தகைய இன்பம். இத்தகைய பண்பு, இத்தகைய பயனே நாடினர். பயன் அறிவு சார்ந்தது. ஆனால், அறிவு தானாகச் செயலாற்றாது. செயலாற்றினும் அது தன்னலச் சூழல்களில் சிக்கிச் சீரழியும். இன்பம் உணர்ச்சி சார்ந்தது. அது தானாகச் செயலாற்றுவது. ஆனால், அறிவின் துணையின்றி அது திசையறியாது செல்லும்; மிக விரைவில் துன்பமும் அழிவும் தரும். இரண்டுங் கூடிய வழி அக்கூட்டு, பயனும் பெருக்கமும் தருகிறது. அது மட்டு மன்று; இன்ப நாட்டம் செயல் ஊக்கம் ஆகிறது. அறிவை ஆர்வமாக்கி வளர்க்கிறது. இன்பமும் அறிவும் கலந்தவழி அன்பு பிறக்கிறது. அஃது ஆர்வத்தைப் பொதுநல ஆர்வமாக்குகிறது. தான் செயலாற்று வது மட்டுமன்றி, இப்பொதுநல ஆர்வம் தன் சூழலையும் செயலாற்ற வைக்கிறது. தமிழர் வகுத்த வாழ்த்துப் பண்பில் நாம் இச்சமூகச் செயலார்வத்தை, அதன் ஒன்றுபட்ட செயலை, ஒற்றுமையை, அதன் பயனைக் காண்கிறோம். மனித இனத்தின் மொழிகள் பொதுவாக, மனித இனப் பண்பாட்டின் உச்ச உயர் கொடுமுடிகண்ட தமிழ் மொழியில் சிறப்பாக, நாம் இந்த ஒன்றுபட்ட செயலின் வளத்தை-சமுதாய ஒற்றுமை மட்டுமன்று, சமுதாயம் கடந்த இன ஒற்றுமையின் வளத்தைக் காண்கிறோம். தனித்தமிழ் வளம் இத்தகைய பண்பாட்டின் வளமை ஆகும். ஆதிபகவன் எப்போதுமே வாழ்பவர் விழைவு ஒன்று. உலகின் பொது நோக்கமாக அறிஞர் அவ்வக் காலத்தில் வகுத்துக் காட்டுவது மற்றொன்று. இரண்டும் இரண்டு சாய்வரைகளாக இருவேறு கோணத்தில் செல்கின்றன. ஆனால், இரண்டு சாய்வரைகளும் இயற்கை வெளியில் ஒரு குறியில் சென்று கூடுகின்றன. இங்ஙனம் கூடும் வகையறிந்தே தமிழர் அதை வழிபடு குறிக்கோள் அல்லது வாழ்வின் குறிக்கோள் என வகுத்தனர். இவ்வழிபடு குறிக்கோள் காலத்துக்குக் காலம், வளர்ச்சிப் படிக்கு வளர்ச்சிப் படி மாறுபடுவது. ஆனால், இம்மாறுபாடு தொலை மாறுபாடும் உருவ மாறுபாடுமே. இடமாறுபாடோ, திசைமாறுபாடோ, பண்புமாறுபாடோ அல்ல. ஏனெனில், அவை ஒரே ‘விழிவரை’யில் தோன்றுபவை. எனவேதான், குறிக்கோளை முதலில் கண்டுணர்த்தியவர் அதன் ‘விழிவரை’ முகப்பைக் காட்டியவர் ஆகிறார். அதனைப் பின்னால் காண்பவர், அனைவர்க்கும், காட்சி புதுக்குபவர்களுக்கும் அவர் ஒருங்கே ‘விழி’ ஆகிறார். வாழ்வின் இக்குறிக்கோள் இயல்பாகவே எல்லையற்றது. ஆதியந்தம் இல்லாதது; அளவில்லாதது. ஏனெனில், அது காண்பவர் காட்சிக்கும், அறிபவர் அறிவுக்கும், விழைபவர் விழைவுக்கும் ஏற்ப அமைவது. எனவேதான் அதனை முதலில் கண்டு மக்கட்கு உணர்த்திய மக்கட்குலத்தின் ‘விழி’யை அல்ல ‘கண்’ போன்றவரைத் தமிழர் ‘ஆதிபகவன்’ என்றனர். காண்பவர் என்பவர் எல்லாருமே வகுத்துக் காண்பவரே யாதலால், காண்பவர்க்கு அதாவது பகவர்க்கு ‘விழிவரை முகப்பு’க் காட்டிய அம் ‘முதல் விழியாளர்’ அல்லது ‘நுதல் விழியாளர்’ ஆதிபகவன் சிறப்பிக்கப்பட்டார். தமிழர் வழிவந்த பல கிளையினங்களிலும் இவ் ஆதிபகவனே சிவன், அறிவன், கண்ணன், புத்தன், சினன் என்று பலவாறாக அழைக்கப்பட்டான். பகுத்துக் காண்பது பகல். இது பழந்தமிழில் நாளைப் பகுத்துக் காட்டும் நண்பகலின் பெயராய், பின்பொழுது பகுத்துக்காட்டும் கதிரவன் பெயராகவும், கதிரவனொளியார்ந்த நாளின் பகுதியாகவும் வழங்கிற்று. பகுத்துக் காண உதவுவது கண். ஆனால், கண்களுக் கெல்லாம் கண்ணாகப் பகலவன் விளங்குகிறான். பகலவன் போலவே, பகவர்களின் பார்வைக்கெல்லாம் ‘விழிவரை முகப்பு’க் காட்டியருளிய முதல்வன் ஆதிபகவன். பார்வையின் ஒளி விழிபட உதவும் பகலவன் போன்று, மக்கள் இறைவன் வழி நின்று வழுத்தி வழிபட உதவுபவனே ஆதிபகவன். இது காரணமாகவே தமிழர் வழி நின்ற இனத்தவர் சிலர் ஆதி பகவனைப் பகலவனாகவும், அனலவனாகவும் வழிபட்டு வணங்கி வந்துள்ளனர். வாழ்முதலும் வழிபாடும் வாழ்வு, விழைவு, விழா முதலிய சொற்களின் மெய் யெழுத்துத் தொடர்பு அவற்றின் மெய்ப்பொருள் தொடர்பாக வும் தமிழில் அமைந்துள்ளது. ஏனெனில், விழைவின் வழி வளர்வது வாழ்வு. அவ்விழைவார்வம் வளர்ப்பதே விழா! வாழ்க்கை என்னும் ஊர்திக்கு விழைவே ஆற்றல். ஆனால், அது திசை தெரியாத ஆற்றல். அதனை ஒருமுகப்படுத்தி வாழ்வு நோக்கிச் செலுத்துவது குறிக்கோள். இரண்டும் இணைந்த வாழ்வின் குறிக்கோளே தனி உயிர்களை ஒரே வாழ்க்கைக் குழுவாக, சமுதாயமாக, இனமாக இணைக்கிறது. அத்தனி உயிர்களின் தனித்தனி விழைவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே சமுதாய விழைவாக ஒரே இன விழைவாக இயக்குகிறது. வாழ்பவர் நோக்கங் கடந்து, விழைவெல்லை இறந்து வடமீன் போல நிலையாக நின்று நிலவும் இக்குறிக்கோளையே தமிழர் வாழ்முதல் (வாழ்க்கைக் குறிக்கோள்), கடவுள், இறைவன் (காட்சி, அறிவு, விழைவு ஆகியவற்றின் எல்லை கடந்து அல்லது இறந்து நிற்பது), இயவுள் (வாழ்வை இயக்குவது), கந்தழி (கட்டற்றது, காண்பவர் கட்டும் வரையறையன்றி இயல்பாக எல்லையற்றது), வேள் (வளமும் வெற்றியும் தருவது) என்று பலபடக் குறித்தனர். வழிபடுதல், வழுத்தல், வணங்குதல், இறைஞ்சுதல்; பூசித்தல்; தொழுதல் ஆகிய சொற்கள் வாழ்தல், வாழ் முதல் ஆகியவற்றுடன் சொல் தொடர்பு, பொருள் தொடர்பு உடையவையே. வழிபடுதல், வழுத்துதல், குறிக்கோள் வழி நின்று முன்னேறுதல் அல்லது பின்பற்றுதலையும், அதில் அழுந்தி ஊன்றி நிற்றலையும் குறிக்கும். வணங்குதல் என்பது வளைதல் அல்லது குறிக்கோளின் திசையில் சாய்தல் அல்லது திரும்புதல் ஆகும். நெல் மணிகளின் பளுவால் கதிர் சாய்தல் போல, பண்பு வளத்தினால் உயிர் வாழ்முதலை நோக்கிச் சாய்வதை இது குறித்துக் காட்டுகிறது. இறைஞ்சுதல் இறைவழி உளஞ்செலுத்துதல். பூசித்தல் பண்பாகிய பூக்கள் அல்லது மலர்களால் குறிக்கோளின் வழியை அணிசெய்தல் ஆகும். தொழுதல் என்ற சொல் தொழுதி அல்லது கூட்டம், தொழில் அல்லது கூட்டுறவுழைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இனமளாவி இயங்கிக் குறிக்கோள் வழி தானும் நின்று பிறரையும் நிற்கும்படி இயக்கும் செயலை அஃது உணர்த்துகின்றது. இறைவணக்கம் குறித்த சமற்கிருதச் சொல் (பிரார்த்தனை; வரம் வேண்டுதல்), ஆங்கிலச் சொல் (ஞசயலநச; வேண்டுகோள் விடுதல்) ஆகியவற்றின் பொருளும் பண்பும் நோக்கத் தமிழ்ச் சொற்கள் எவ்வளவு சீரிய பண்பாட்டுயர்வுடையன என்பது விளங்கும். வழிபாட்டுள் சிறந்த வழிபாடு எது? தாய் தந்தை அன்புக்குச் சேய் காட்டும் மிகச் சிறந்த கைம்மாறு எது? அதே தாய் தந்தையர் அன்புக்குரிய மற்றச் சேய்களிடம்-சிறப்பாக இளஞ்சேய்களிடம் வலுவற்ற, திறமையற்ற ஏலாச் சிறுவர் சிறுமியர் காட்டும் அன்பேயன்றோ? தாய் தந்தையர் உள்ளம் குளிர்விக்கும் செயல் இதைவிடப் பிறிதொன்றில்லை. ஏனெனில், பிள்ளையின் வாழ்வே தாய் தந்தையர் தணியாத பேரவா. பிள்ளை தான் வாழ்வதால், தன் உடன் பிறந்தாரை வாழ்விப்பதால் அவர்களுக்கு ஊட்டும் மகிழ்வை வேறு எவ்வகையாலும் ஊட்ட முடியாது. கடவுளுக்கு அன்பு செலுத்தும் முறைகளில் சிறந்த முறை இதுவே. இயேசு பெருமான் போதனைகளுள் தலை சிறந்த போதனை-பிற சமயங்கள் தாண்டி இயேசு சமயங்கண்ட ஓர் உயர் பண்பு உண்டென்றால், அஃது இதுவே! வாழ்முதலையே கடவுளாக உலகுக்குக் காட்டிய தமிழினம் இவ்வுண்மையைத் தன் மொழி மூலத்திலேயே பொதிந்துரைத் துள்ளது. வழிபாட்டுள் சிறந்த வழிபாடு உழைப்பு, தொண்டு, சேவை, தாளாண்மை! இது தமிழர் கண்ட உண்மை. வாழ்வு, வழிபாடு, வாழ்முதல் ஆகியவற்றுடன் மெய்த் தொடர்புடைய சொல் வழிபாடு. தொண்டு என்ற சொல் தொழுதல், தொழில் என்ற சொற்களைப்போல மக்கள் கூடி உழைத்தலையும் கடவுள் பணியையும் ஒருங்கே குறித்த சொல் ஆகும். கடவுள் பணியாளர்களையும் மக்கட் பணியாளர்களையும் நாம் இன்றுவரை தொண்டர் என்றே குறிக்கிறோம். தவிர, ஊதிய மில்லா ஆர்வ உழைப்பு, அதாவது தெய்வப் பண்புடைய தன்னலமற்ற உழைப்பைத் தொண்டு என்று இன்றும் குறிக்கிறது. தொண்டு, சேவை ஒருபொருட் சொற்கள். சேவை இன்று சிலரால் சமற்கிருதச் சொல்லாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் சேவை, தாளாண்மை இரண்டும் கடவுள் திருவடிகளை (சேவடி, தாள்) நினைவூட்டும் சொற்கள் ஆகும். குறிக்கோளைக் கடைப்பிடித்தல் என்ற பொருளிலேயே தாளாற்றுதல் முயற்சி செய்தல் என்ற பொருளைத் தருகிறது. தாளாண்மை வழிபாடே இறைவன் தாள் சேர்வது, அடி சார்வது ஆகும். இத்தாளாண்மையே கடவுள் பற்று, அதுவே மக்கட் பற்றும் உண்டுபண்ணுகிறது. வேளாண்மை (வேள்-கடவுள்; வேள்வி-வழிபாடு; வேளாண்மை-உழவு,விருந்தோம்பல், கடவுள் வழிபாடு) இம்மூன்று பண்புகளையும் ஒருங்கே குறிக்கிறது. ``தாளாற்றித் தந்த பொருளெல்லாம். தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’’ என்ற குறட்பாவின் முழுப்பொருள் இதுவே. ‘உழைத்துப் பெறும் செல்வத்தின் பயன் தகுதியுடையவர்களுக்கு ஆதரவு செய்யும் தெய்வத்தன்மை வாய்ந்த பண்பு பெருக்குவதே’ என்று வள்ளுவர் கருத்துரைக்கின்றார். இறைவன் தாள் தாள், அடி ஆகிய சொற்களைத் தமிழர் வழங்கும் அழகே ஒரு தனி அழகு எனலாம். இறைவன் பெயரைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் திருவள்ளுவர் தாள், அடி என்ற சொற்களை விடாது வழங்கு கிறார் என்று காண்கிறோம். தொல்பழங்கால முதல் சீனரும் சப்பானியரும் கடவுள், கடவுள் தன்மையுடையவர், அரசர் ஆகியோர் திருவுருவைப் பார்ப்பதில்லை. அவர்கள் திருவடிகளை மட்டுமே காண்பர். முற்காலப் புத்தரும் புத்தர் திருவுருவம் பேணவில்லை. அதை வணக்கப் பொருளாக்கவும் இல்லை. அவர் திருவடி உருவங்கள் மட்டுமே செய்து, அவற்றைப் பூசித்தனர். இத்திருவடி வணக்கம் தமிழ்த் திருவள்ளுவர் தாளாண்மை வழிபாட்டின் வழிவந்த ஓர் இன மரபுச் சின்னம் ஆகும். உழைப்பு வகைகளில் அடிப்படை உழைப்பாகிய உழவுக்கும், மக்கள் நல உழைப்பாகிய தொண்டுக்கும் தமிழர் தந்த மதிப்பு உலகின் வேறெவ்வினமும் தந்ததில்லை எனலாம். உழைப்பவர் தாளாளர் என்றும், உழவர் வேளாளர் என்றும் இருசாரார்க்கும் உதவும் அறிவுழைப்பாளர் கோளாளர் என்றும் தமிழரால் ஒரு தன்மையில் வைத்துப் போற்றப்பட்டனர். ‘தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்; வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான்; இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. என்று இனியவை நாற்பது இதை விளக்குகிறது. கடவுள் தன்மைமிக்க அருட்பெரியாரையும் துறவியரையும் தமிழர் தொன்று தொட்டு இன்றுவரை அடிகள், அடியார், தொண்டர் என்றே அழைத்து வந்துள்ளனர். இச்சொல்லின் சீரிய பண்பு அதற்கிணையான சமற்கிருதச் சொல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இனிது விளங்கும். ஏனெனில், சமற்கிருதச் சொல் அடியவர் என்பதன் நேர் எதிர்ச்சொல்லான ஆண்டை (°வாமி) என்ற பொருளுடையது. தமிழகத்தில் பிறந்து, சமற்கிருத அறிவுலகின் முடி சூடா மன்னராக விளங்கிய சங்கராச்சாரியார் காலத்துக்குப்பின் (கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல்) ‘அடிகள்’ என்ற தமிழ்ச் சொல்லின் நேர் மொழி பெயர்ப்பே (பாதா:) சமற்கிருதத்தில் இப்பொருள்பட வழங்கலாயிற்று. தமிழ்ச் சொல்லுடன், தமிழ்க்கே சிறப்பான நன் மதிப்புப் பன்மை வழக்கும் சமற்கிருதத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழினத்தவர் கடவுளின் காலடியில் பிறந்தவர் என்றும் தாம் கடவுள் தலையில் பிறந்தவர் என்றும் கருதி இருக்குவேத ஆரியர் தருக்கியதற்கு இச்சொல்லும் திருக்குறளின் பண்பறியாத இடைக்கால மரபுமே உதவியிருக்கக் கூடும் என்னலாம்! உழைப்பும் பண்பும் உழைப்பின் வகைகளுள் அடிப்படை உழைப்பு உழவே. உழைப்புக்கும் உழவுக்கும் தமிழினம் தந்த முதன்மையிடம் தமிழ் மொழியிலேயே பொறிக்கப் பட்டிருக்கிறது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற தொல் காப்பியப் பாகுபாட்டைப் பலர் ஆரிய வருணமுறையுடன் ஒத்தது என்று மயங்குகின்றனர். தமிழர் பாகுபாட்டின் பண்பிழந்த இடைக்கால மரபே ஆரிய மரபாகப்பிறகு உணரப்பட்டது என்பதே உண்மையாகும். ஆயினும், இரு பாகுபாடுகளிடை யிலும் தாமரைப் பூ, ஊமத்தம் பூ ஆகிய இருவகைப் பூக்களுக் கிடையிலுள்ள வேறுபாடுகள் உண்டு. முதலாவது தொல்காப்பியப் பாகுபாடு பிறப்புப் பற்றிய பாகுபாடன்று. தொழில் பற்றிய பாகுபாடு. இரண்டாவது அது தொடர்பற்ற நான்கு வேறுபட்ட கூறுகளல்ல. ஒரே பெரு வகுப்பில் அடங்கிய நான்கு கிளை வகுப்புகளே அவை. ஏனெனில், விரிந்த பொருளில் வேளாளர் என்ற சொல் நான்கு வகுப்புகளையும் ஒருங்கே குறிக்கும். வேளாளர் மருதநிலவாணர். நான்கு வகுப்புகளும் பெரிதும் மருதநிலப் பிரிவுகளே. திணையால் ஒரே வகுப்பாகிய வேளாளர் தொழிலால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நாற்பால் வகுப்பினராகக் கூறுபடுத்தப்பட்டனர். அவருள் அந்தணர், அரசர் பெறும் உயர்வு பண்பாலோ, பிறப்பாலோ அன்று. தொழிலாலேயே. ஏனெனில், அவர்களும் பிறப்பால் வேளாளரே. வணிகர் முற்கூறப்பட்டதன் காரணம் அவர்கள் மருதநிலம் கடந்து நெய்தல் நிலத்திலும் பரவி, பட்டின ஆட்சியிலும் நாடு கடந்த உலகப் பண்பாடுடைய வள்ளுவர், பட்டினத்தடிகள் போன்ற உலக அறவோரை உள்ளடக்கியதனாலேயே என்னலாம்! வேள் (கடவுள்), வேள்வி வழிபாடு (பூசனை), வேளான் (பார்ப்பான், பூசாரி), வேளிர் (குடியரசர்), வேலை (கடல்; திரை-வணிகர்: திரு அல்லது செல்வத்துக்கு உரிய பரப்பு), வேளாண்மை (உழவு), வேட்கோவர் (குயவர், முல்லைநில ஆயர்) ஆகிய சொற்கள் வேளாண்மையின் நாற்பால் பரப்பைக் காட்டுகிறது. உழைப்பவர், உழவர் செல்வமே உண்மைச்செல்வம். பண்புடன் பொருளீட்டும் அவரே பண்புடன் அதைச் செலவு செய்யும் பண்பாளரும் ஆவர். வேளாண்மை என்ற சொல் உழவை மட்டுமன்றி, விருந்தோம்பல், ஒப்புரவுப் பண்பு ஆகியவற்றையும் குறிப்பதன் மறைதிறவு இதுவே. மருத நிலத்தவரும் முல்லைநிலத்தவரும் இயல்பாகவே கொல்லாமை மேற்கொண்டவர்கள். இரு நிலத்திலும் வேளாளரும் ஆயரும் உழைத்து உண்பவர். அடிமைப் பண் பற்றவர். ‘மனிதர் உணவை மனிதர் பறித்’துத் தின்னும் ஈனப் பண்பற்றவர். அன்பிரக்கமும் ஈகையும் உடையவர். தமிழர் இயல்பான இப்பண்புகளைப் பேணிப் பெருக்கி, அவற்றைத் தமிழினத்தின் சீரிய வாழ்க்கைக் குறிக்கோளுடன் இணைத்தனர். வேளாண்மைப் பண்பே தமிழ்ப் பண்பாயிற்று வேளாளரைக் கடையரென்றும் கடைநிலத்தவரென்றும், ஒழுக்கம் கெட்டவர் என்றும், வேசி மக்களென்றும், அதுபோல ஆயரைப் பொதுவர் என்றும், மகளிரைப் பொது மகளிர் என்றும் இழிக்கும் பண்பைக் கம்பராமாயண முதலிய பிற்காலத் தமிழ் நூல்களிலும் சமற்கிருத நூல்களிலும் காண்கிறோம். இது தமிழ்ப் பண்பு தட்டுக்கெட்டு ஆரியப்பண்பாகப் பொலிவுற்ற காலச் சறுக்குதலேயாகும் என்பது தெளிவு. தொல்காப்பியத்திலோ, திருக்குறள், சங்க இலக்கியங்களிலோ, சிலப்பதிகார மணி மேகலைக் காப்பியங்களிலோ இதன் தடம் இல்லை. குறிக்கோளும் வாழ்வும் தனி மனிதர் அவா ஆர்வத்துடன் இணைந்த இனக் குறிக்கோள் இல்லாதவழி இனமில்லை. அஃது இனத்தை ஒற்றுமைப்படுத்துகிறது. இனத்தில் உறுப்பினரிடையே அன்பையும் கூட்டுறவையும் வளர்க்கிறது. அக்கூட்டுறவு உழைப்பாக மக்கள் தொண்டாக மலர்கிறது. இன உறுப்பினர் வாழ்வில் இன உறுப்பினர் அக்கறை கொள்கின்றனர்; உழைக்கின்றனர். எல்லா உறுப்பினரும் இன வாழ்வுக்காக ஆர்வமுறுகின்றனர்; உழைக்கின்றனர். இனம் ஒவ்வொருவர் வாழ்வுக்காகவும் ஆர்வம் கொள்கிறது, உழைக் கின்றது; பாடுபடுகின்றது. இனத்தின் தலைமுறை அல்லது சமுதாயம் முந்திய தலைமுறையின் உழைப்பினால் வரும் பயனைத் தன் வாழ்வாக்கி, தன் வாழ்வின் பயனை அடுத்த தலைமுறையின் வாழ்வாக அளிக்கிறது. உயிர்கள் பெருக்கமுறுகின்றன. வாழ்வு வளம் பெறுகின்றது. பண்பு விரிவுறுகின்றது. ஆற்றல் உயர்வடைகின்றது. கால எல்லையில் இடையறாது நடைபெறும் இந்த இயக்கமே- இயற்கையினுள் ஒரு தனி இயற்கையாக வளரும் இந்த வளர்ச்சியே-வாழ்வு. அதன் குறிக்கோள் எதுவெனில், நோக்கமும் திட்டமும் உயிர்ப்பும் அறிவும் உடைய இயற்கை (கடவுள்) ஆக்குவதே, அதாவது முழுநிறைவை நோக்கிச் செல்வதே! 7. வாழ்வின் வளம் வாழ்வில் ஆக்கக் கோட்பாடு கண்டவர் தமிழர். தேக்கக் கோட்பாட்டை, பின்னோக்கக் கோட்பாட்டை, அழிவுக் கோட்பாட்டை எதிர்த்தவர்கள் அவர்கள். ஆனால், உலகில் தமிழர் பண்பு தளர்ந்து நலிந்து மறக்கப்பட்ட காலத்தில், ஆக்கக் கோட்பாட்டுக்கு அவர்கள் வகுத்த துறைச் சொற்களே தேக்கக் கோட்பாடு, பின்னோக்கக் கோட்பாடு அழிவுக் கோட்பாடு, ஆகியவற்றை வளர்க்க, மயக்க அறிவினரால், தன்னலக்காரரால், தன் வாழ்வுச் சிந்தனையாளரால், போலி அறிஞரால் பயன்படுத்தப்பட்டன. அவாக்களை, தற்பற்றைக்கூட அழிக்கத் தமிழர் விரும்பவில்லை. தற்பற்றை உட்கொண்ட, தொலை நோக்குடைய தற்பற்றின் விரிவான பொது நலத்தை வளர்த்து, அதன் சார்பில் அவாக்களை உயர்வுபடுத்த, உயர் அவா ஆர்வங்களைப் பெருக்க அவர்கள் முனைந்தனர். அந்த நல்லவாக்களை, நல்லவா ஆர்வங்களைக் குறிக்கோள் நோக்கி வளர்க்கவும், அதன் அடிப்படையாகக் குடும்பக் குழு, சமுதாயக் குழு, இனக் குழுக்களை ஒன்றுபடுத்திக் கூட்டுழைப்புக்கும், கூட்டுவாழ்வு வளத்துக்கும், கூட்டுப் பொங்கல் வாழ்வுக்கும் திட்டமிட்டனர் அவர்கள். இவ்வகையில் அவர்கள் கண்ட புது மெய்ம்மைகள் தற்கால இயல் நூலார் கண்டுள்ள மெய்ம்மைகளுக்குச் சிறிதும் குறைந்தவையல்ல; பின்னடைந்தவையல்ல. உண்மையில் தமிழர் கண்ட மெய்ம்மைகளைக் காணாததாலேயே தற்கால இயல் நூல் மெய்ம்மைகள் உயிர் மெய்ம்மைகளாக, வளமுடைய மெய்ம்மை களாகாமல்-வறட்டு மெய்ம்மைகளாக, தேக்கமும் பின் னோக்கமும் விளைக்கும் மலட்டு மெய்ம்மைகளாகத் தடுமாறு கின்றன. ஆயினும், தமிழர் கண்ட மெய்ம்மைகளை நாம் மீட்டும் கண்டுணர இந்த இயல்நூல் உண்மைகள் பேரளவில் உதவுவன ஆகும். இனக்கடன்-புகழ் வாழ்தலுக்கு நிலைக்களமாகவும், இயங்கு களமாகவும் இயல்வது இனமே. அது சமுதாயம், மரபு ஆகிய இரண்டிலும் ஒத்த விழைவு, ஒத்த குறிக்கோளில் இணைந்த இணைவு ஆகும். இனம் தனி மனிதற்கு அல்லது உயிர்க்கு மூலத்தளமாக மட்டுமன்றி, மூலதனமாகவும் அமைகிறது. அதுவே தனி மனிதன் வாழ்வின் உடல் என்னலாம். அஃது இன்றி அவனுக்குப் பிறப்பில்லை; வாழ்வில்லை. அதே சமயம் இனத்துக்குத் தனி மனிதன் அல்லது தனி உயிரே முதல் பெருக்கும் வட்டியாகவும், வளர்ச்சிக் கூறாகவும், உயிர்க் கூறாகவும் கொள்ளத்தகும். அது தலைமுறைதோறும் மூலதனம் பெருக்கி, இயங்காது தேங்கி நிற்கும் மூலதனத்தின் வறட்சி நீக்கி, அதை இயங்கவைத்து வளமுடையதாக்குகிறது. தேக்கத்தைப் புது ஆக்கமாக்கி அடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியில் அதனை ஈடுபடுத்துகிறது. தனி மனிதன், இனத்துக்காக வாழ்கிறான். இனம் தனி மனிதனுக்காக வாழ்கிறது. தனி மனிதன் புகழ், இனவாழ்வு; இனவாழ்வின் புகழ் தனி மனிதன். இனத்தின் புகழ், இனம் தனி மனிதனுக்குக் கடனாக அளிக்கும் மூலதனம். தனி மனிதன் புகழ், இனத்துக்குத் தனி மனிதன் முதலும் வட்டியுமாக அளிக்கும் புது மூலதனம். தனி மனிதன் தனி மனிதனுக்குக் கடமைப்பட்ட நன்றி, கடன்-சிறு நன்றி, சிறு கடன். அதில் தவறுபவர்க்கே ‘உய்தி’ இல்லை. மன்னிப்புக்கிடையாது என்பது திருவள்ளுவர் கோட்பாடு. `எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்; உய்வுஇல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற குறட்பா இதை வலியுறுத்துகின்றது. ஆனால், இனத்துக் குரிய கடன், நன்றி, பிறப்பால் ஏற்பட்ட கடமை இதைத் தீர்க்காதவர் இனக் கொலைஞர்; இனப் பகைவர். அத்தகை யோரை ஈன்றெடுக்கும் இனம் மரபற்று அழிய நேரும். அக் கடனை, அதாவது இனம் அளித்த முதலை அரைகுறையாக, கால் அரை முக்காலாகத் தீர்ப்பவர்கூட ‘நிலக்குப் பொறை’-பூமிக்குப் பாரம், ஆகத்தக்கவர் என்று வள்ளுவர் கூறுகிறார். பூமிக்குப் பாரம் `கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்: அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை!’ கல்லாத மூடனைத் துணையாக வைத்துக்கொண்டு திறமை காட்டி வல்லாட்சி செய்யும் ஆட்சியாளனால் நாட்டுக்குப் பயன் இல்லை. அவன் பூமிக்குப் பாரம். `கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதுஇலார் உண்மை நிலக்குப் பொறை!’ அன்பு, அருள் இருந்தால்தான் உலகம் வாழும். அது இல்லாதவர் உயிரோடு இருப்பதே பூமிக்குப் பாரம்தான்! `ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை!’ செல்வத்தைத் திரட்டி வைத்து, புகழ்ப் பண்புடன் அதைச் செலவு செய்யாதவர் உயிருடன் இருப்பது பூமிக்குப் பாரம். இது மட்டுமோ! `சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை!’ சான்றோர் உயர் பண்புமட்டும் உலகில் இல்லையானால் உலகம் தன் பாரத்தைத் தானே தாங்காது! இனத்தின் கடமையை அதாவது முதலை முழுவதும் தீர்ப்பவர் அல்லது திருப்பிக் கொடுப்பவர்கூடத் திருவள்ளுவர் கருத்துப்பட ‘வாழ்பவர்’ ஆக்கமாட்டார். அவர்கள் பிறப்பதால் இனத்துக்கு ஆதாயம் இல்லை. நட்டமும் இல்லை; அவ்வளவு தான். ஆகவே, அவர்கள் பிறந்ததும் ஒன்றுதான். பிறவாததும் ஒன்றுதான். அத்தகையவரையே வள்ளுவர் பிறந்தும் பிறவா தாரில் என்ற வட்டச் செலவுக் கணக்கில் எழுதி வைத்தார்! பொன்றாப் புகழ் இனக் கடனை முதலும் வட்டியுமாகத் திருப்பித் தருபவர், முதல் பெருக்குபவரே புகழ்க்குரியவர் என வகுத்தார் திருவள்ளுவர். அவர்கள் செயலும் பண்பும் அவர்கள் பெயருடன் நின்று நிலவலாம். அல்லது பெயர் நிலவாவிடில் கூடச் செயலுருவிலும் பண்புருவிலும் அவர் நின்று நிலவுபவர். அவர் மரபே அவர் புகழாக வளரும். பெயருடன் நின்று நிலவுவதையே நம்புகிறோம். ஆனால், புகழ்க்குரிய பலர் இப்புகழ் பெறவில்லை என்பது தெளிவு. ``எத்தனையோ ஒளி நிறை முத்தங்கள் ஆழ்கடல் தளத்தில் ஆருமறியாமல் கிடக்கின்றன! எத்தனையோ மணநிறை வண்ணமலர்கள் காட்டகத்தே ஆரும் எடுத்துச் சூடப் பெறாமல் கிடந்து சிதறி அழிகின்றன!’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கிரேயின் பாடல் இதை அழகு வமையுடன் சித்திரித்துக் காட்டுகிறது. இவைபோல் பலர் தகுதியுடையவர்கள். பயன்படவில்லை. தகுதியும் பயனும் உடையவராய்ப் பெயர் நிறுவாதவரும் மிகப்பலரேயாவர். வள்ளுவர் குறித்த புகழ், பெயர் அறிந்த ஆரவாரப் புகழ் அன்று. ஏனெனில், பெயர் அறிந்த ஆரவாரப்புகழ் சில சமயம் தகுதியற்ற புகழாகவும் சில சமயம் தகுதி மீறிய புகழாகவும் இருப்பதுண்டு. அவர் குறித்த புகழ் பெயரறிந்தும், அறியப் படாமலும் உலக வாழ்வின் பெருக்கத்திலும் மரபின் வளத்திலும் இடம் பெற்ற புகழ், சான்றோர் தகுதி எனக் கண்டு மகிழும் புகழ்! வள்ளுவர் கருத்துப்படி இனத்திலிருந்து பெறும் பங்குக்கு மேற்பட்ட, சில சமயம் அதன் பத்திரட்டி, நூற்றிரட்டி அளிப்பவரே புகழ் நாட்டியவர் ஆவர். இத்தகு புகழ் நாட்டுபவரே சான்றோர் எனப்படுகிறார். இது வீம்புப் புகழ் அன்று, ஆதிக்கப் புகழ் அன்று; ஆரவாரப் புகழ் அன்று, அன்புப் புகழ்கூட அன்று. இனப் புகழ். இனத்தை உயர் இனமாக, தெய்வ இனமாக உயர்த்தும் புகழ் இது. ஆக்கம், பெருக்கம், பொலிவு, பொங்கல் வாழ்க! ஆக்கம் பெறுக! பெருக்கம் அடைக! வளம் உறுக! பொலிவுறுக! பொங்குக! வாழ்க! இதன் விரிவிளக்கமாக இத்தொடர்கள் அமைந்துள்ளன. மேலீடாகப் பார்த்தால் இவை வாழ்க என்பதற்குரிய அழகிய மாற்றுச் சொற்கள் மட்டுமே என்று தோற்றக்கூடும். ஆனால், வாசிப்பவரின் அழகுணர்ச்சியினூடாக, வாழ்க என்ற சொல்லின் விரிவான இத்தொடர்கள் படிப்படியாகப் பண்பில் உயருவது காணலாம். ஊன்றி நோக்கினால் ஆக்கத்தின் மிக்கது பெருக்கம்; பெருக்கத்தின் மிக்கது வளம்; வளத்தின் மிக்கது பொலிவு; பொலிவின் மிக்கது பொங்கல் என்பது தெரிய வரும். இத்தமிழ்ச் சொற்களில், தொடர்களில் அடங்கியுள்ள படிப்படியான உயர்வு அகரவரிசைகளில் முற்றிலும் தெளிவாகக் காணத்தக்கதல்ல. அது மொழியின் சொற் கடந்த, பொருள் கடந்த உணர்ச்சி; உணர்ச்சி கடந்த பண்பு. ஆயினும் பண்பியல், வாழ்வியலாராய்ச்சியால் இது விளக்கக்கூடாதது அன்று. ஆக்கம் முதலிய வளங்களுக்கு அடிமனையாவது ஒற்றுமை, கூட்டுழைப்பு, கூட்டு வாழ்வு! கூட்டு வாழ்வின் முழுப்பயன்களைத் தனி வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பண்புகளின் படிப்படியான உயர்வு தெற்றென விளங்கும். ஒற்றுமை வகைகளும் வலுவும் ஒற்றுமையின் வலு ஒற்றுமையின் தன்மைக்கு ஏற்றபடி வேறுபடும். அன்பிலா ஒற்றுமை, ஆதிக்க ஒற்றுமை, சரிசம ஒற்றுமை, அன்பொற்றுமை முதலியன ஒற்றுமையின் பலவகைகள்; பல படிகள். அன்பிலா ஒற்றுமை என்பது தற்செயலாகப் பலர் ஒரே செயலில் ஈடுபடுவதாகும். இதில் ஒவ்வொருவர் தன்னலமும் அவர்களைத் தனித்தனியே செயலாற்ற வைக்கும். ஒருவர்க் கொருவர் உதவியும் இருக்காது. ஊறும் இருக்காது. இதில் கூட்டின் வலு என்று எதுவும் தனியே இருக்கமுடியாது. அவரவர் வலுவே வலு. ஆயினும், கூட்டில் வலுக் குறைந்த உறுப்பினர் முதல் முதல் தீங்குக்காளாகிக் கூட்டினின்றும் பிரிய நேரிடும். ஆகவே, கூட்டின் வலு அதன் குறைந்த வலுவுடைய உறுப்பினர் வலுவாக அமைகிறது. ஆதிக்க ஒற்றுமையில் வலு மிக்கவர் ஆதிக்கம் வகிக் கின்றனர். அவர் தன்னலமே செயலாற்றுகிறது. பிறர் அவர்க்கு அடங்கி நடப்பர். அவர்கள் தன்னலங்கள் ஒன்று. செயலாற்ற மாட்டா; அல்லது செயலாற்றினால் எதிர்ச்செயலே ஆற்றும். சிறு செயல்களில் ஆதிக்கஉறுப்பினர் தாம் செய லாற்றாமல் மற்றவரைச் செயலாற்ற வைத்துப் பயன்பெறக் கூடும். ஆனால், இதனால் ஏற்படும் மனக்கசப்புப் பெருஞ்செயல்கள் வந்துறும் போது கூட்டின் வலுவைக் குறைக்கும். ஏனெனில், அப்போது ஒன்று ஆதிக்க உறுப்பினர் அதாவது வலுமிக்க உறுப்பினர் வலுவே கூட்டின் வலுவாய் அமைய நேரும். சில சமயம் ஏனைய உறுப்பினர் ஒன்றுபட்டு அவரை எதிர்க்கவோ, கலந்து எதிரியுடன் சேரவோ செய்தால், இந்த வலுவும் குறைகிறது. இங்ஙனம் ஆதிக்க ஒற்றுமையின் வலு கூட்டின் ஆதிக்க உறுப்பினர் வலுவுக்கு மேற்பட்டதன்று. சரிசம ஒற்றுமையே இயல்பான இன ஒற்றுமையின் அடிப்படை. இங்கே ஆதிக்கத்துக்கும் மிகுதி வழி இராது. தொடக்கத்தில் அன்பும் மிகுதி இராது. போட்டி பூசல்கள் மிகுதியாயிருக்கும். ஆனால், இவை நிலையானவையாக நிலவமாட்டா. சரிசம நிலை காரணமாகவே, அன்பின் அரைகுறை வடிவான தோழமையுணர்ச்சி எளிதில் ஏற்பட்டு விடும். எனவே அவ்வப்போது போட்டியும் அடிக்கடி தோழமையுதவியும் கூட்டுச் செயலும் நிலவும். இந்நிலையில் ஒற்றுமைக் குழுவிலுள்ள உறுப்பினரின் சராசரி வலுவே கூட்டின் வலுவாய் அமையும். வலுவில் சற்றுக்குறைந்தவர் சற்றுக் கூடியவரின் உதவி பெறுவர். சிலசமயம் வலுக் குறைந்தவர் போட்டி, வலு மிக்கவர் ஆற்றலைக் குறைக்கும். சராசரி வலுவே நிலையான வலுவாய் அமையும். அன்புக் கூட்டுறவில் அனைவரும் ஒருவர்க்கொருவர் உதவுவர். ஆகவே, கூட்டின் வலு அதன் உறுப்பினர் வலுவின் கூட்டுத் தொகையாக இயலும். ஒற்றுமை விளக்கக் கதைகள்; விறகுக் கட்டு ஒற்றுமையின் வலுவை விளக்கும் கதைகள் பல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் உண்மைப் படிப்பினையைச் சுட்டிக் காட்டுகின்றன. நான்கு பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் ஓயாது பூசலிட்டு வந்தனர். முதுமை வாய்ந்த அவர்கள் தந்தை எவ்வளவு நல்லுரை புகன்றும் அவர்கள் கேட்கவில்லை. தந்தையார் நோயுற்று இறுதிப் படுக்கை அடைந்தார். தந்தைநிலை பிள்ளைகள் பூசலில் சிறிது ஓய்வு கொடுத்தது. சிறிது தற்காலிக அந்த ஒற்றுமையையும் உண்டு பண்ணிற்று. அது கண்ட அறிவுடைய தந்தை அந்த ஒற்றுமையை மேலும் வலியுறுத்திவிட்டு இறக்க விரும்பினார். வீட்டில்கிடந்த ஒரு விறகுக் கட்டைக் கொண்டு வரச்சொன்னார். ஒவ்வொருவராக அதைக் கையால் முறிக்கும்படி கூறினார். அறிவற்ற அப்பிள்ளைகள் ஒவ்வொருவராக ஆன மட்டும் முயன்றனர். கட்டு அசையவில்லை. பின் இருவர், மூவர், நால்வர் சேர்ந்தாவது முறிக்கும்படி கூறினார் அப்போதும் கட்டுச் சிறிதும் தளரவில்லை. பின் கட்டவிழ்த்து ஒவ்வொன்றாக முறித்துப் பாருங்கள் என்றார். ஒவ்வொன்றாக முறித்தபோது, ஒருவரே அத்தனையையும் முறித்தனர். அதன் படிப்பினை வீணாகவில்லை. தந்தை இறக்கு முன்பே நால்வரும் பூசலைவிட்டு, ஒன்றுபட்டு வாழ்வதாக ஒருவர்க்கொரு வரும், தந்தைக்கு அனைவரும் வாக்களித்தனர். தந்தை கவலை தீர்ந்து கண் மூடினார். எருதுகளும் சிங்கமும் விறகுக் கட்டின் கதை உயிரிலாப் பொருள்பற்றிய கதை. விலங்குகள் பற்றிய மற்றொரு கதை ஒற்றுமையின் வலுவை இன்னும் முனைப்பாகக் காட்டுகிறது. நான்கு காட்டெருதுகள் ஒரு வளமான புல்வெளியில் வாழ்ந்தன. நான்கும் புல்மேய்ந்து சுனைநீர் படிந்து கொழு கொழு என்று வளர்ந்திருந்தன. அவற்றை வேட்டையாடித் தின்ன ஒரு சிங்கம் ஆவலுற்றது. ஆனால், நான்கும் எப்போதும் ஒன்றுகூடி மேய்ந்து நீர் பருகி வாழ்ந்தன. சிங்கம் ஒன்றின் அருகே சென்றால், மற்ற மூன்றும் மூன்று திசையிலிருந்தும் தாக்கிச் சிங்கத்தை விரட்டியடித்தன. சிங்கம் ஆழ்ந்து சிந்தித்தது ஒவ்வொரு எருதும் தனியாய் இருக்கும் சமயம் பார்த்து, அது பேசிற்று. ‘மற்ற மூன்று எருதுகளையும் நான் தின்று விடுகிறேன். புல்வளமும் நீர்வளம் முழுதும் உனக்கே இருக்கும்’ என்று ஒவ்வொன்றிடமும் கூறி வைத்தது. மூட எருதுகள் இதை நம்பின ஒவ்வோர் எருதைச் சிங்கம் தாக்கும்போது மற்றவை சேர்ந்து தாக்கவில்லை. ஒவ்வொன்றும் தான் தான் கடைசியாக மீந்திருக்கும் எருது என்று மனப்பால் குடித்துக்கொண்டு ஒவ்வொரு தோழராக மடியவிட்டது. ஆனால், மூன்று எருதுகள் மடிந்த பின்தான் நான்காம் எருதுக்கு உண்மை விளங்கிற்று. அது கண்கெட்டபின் பரிதி வணக்கமாக முடிந்தது! அஃது ஒன்றுதான் ஒற்றுமைப் படிப்பினையை மிகப்பிந்தி உணர்ந்தவாறு சிங்கத்தின் கூரிய நகங்களுக்கு இரையாகி, வருந்தி மாண்டது! ஆறு கடத்தல் ஆறுகடத்தல் பற்றிய பல கதைகள் பல அரிய உண்மை களைக் காட்டுகின்றன. அனுபவ அறிவற்ற நால்வர் ஆற்றின் ஆழத்தைப் பற்றி ஆராய்ந்தனர். ஆறு அகலமானது. நடுவே மட்டும் நிலை கொள்ளாதது. நடுநீரோட்டம் வரை பத்தடிக்கு ஒரு முறை ஆழம் கணக்கிட்டனர். 2 1/2 அடி, 3அடி, 3 1/2 அடி, 4அடி என்று கணக்கிடப்பட்டது. நடுவே மட்டும் 7அடி இருந்ததாகக் கணக்கிட்டனர். எனவே சராசரி 5அடி என்ற கணக்குப்பார்த்து ஆறு கடக்க முனைந்தனர். நடு நீரோட்டம் அனைவரையும் இழுத்துச் சென்றது வேறு நால்வர் தம் உயரத்தின் சராசரி கணக்கிட்டனர். அவர்கள் முறையே 6அடி. 5 1/2அடி, 5அடி, 4 1/2அடி, உயரமிருந்தனர். அவர்கள் சராசரி உயரம் 5அடி ஆற்றின் சராசரி ஆழம் 5 1/2அடி தான். ஆகவே இடரில்லை. என்று கணக்கிட்டு. ஆறு கடந்து அவர்களும் அடித்துச் செல்லப் பட்டனர். விலங்குகள், ஆறுகடந்த இருகதைகள் அன்பொற்றுமை, விட்டுக் கொடுப்பு, ஆழ்ந்த சூழ்ச்சியறிவு ஆகியவற்றைக் காட்டுகின்றன. ஒரு கால்வாயின் குறுக்கே ஓர் ஒற்றைத் தடி பாலமாகப் போடப் பட்டிருந்தது. இருகரையிலிருந்தும் இரண்டு மூர்க்க ஆடுகள் அதைக் கடக்க முற்பட்டன. ஒவ்வொன்றாகக் கடந்திருந்தால். பாலத்தில் இரண்டும் கடந்து சென்றிருக்க முடியும். இரண்டும் தாமே முதலில் கடந்துவிட எண்ணின. நடுப்பாலத்தில் சந்தித்தன. ஒன்றுடனொன்றாக மோதின. ‘நீ படுத்துக்கொள், நான் தாண்டுகிறேன்.’ என்றது ஒன்று. அவ்வாறே கூறிற்று மற்றது. இரண்டும் போரிட்டு நீரில் விழுந்தன. அறிவுடைய இரண்டு ஆடுகள் அதே நிலையில் மோதின. `நான் படுத்துக்கொள்கிறேன். நீ தாண்டுகிறாயா?’ என்றது ஒன்று. `வேண்டுமானால் நான் படுத்துக் கொள்கிறேன். நீ தாண்டு’! என்றது மற்றது. `யார் படுத்தாலென்ன, யார் தாண்டினாலென்ன? நானே படுத்துக்கொள்கிறேன். நீ தாண்டிச் செல்’ என்றது முதல் ஆடு. இரண்டாம் ஆடு தாண்டிச் சென்றபின் முதல் ஆடும் எழுந்து பாலம் கடந்தது. அன்பு அறிவு, வீம்புப் போட்டியற்ற விட்டுக் கொடுப்பு ஆகியவை இக்கதையின் படிப்பினைகள்! குரங்குப் பாலம் குரங்குகள் ஆற்றைக் கடந்த கதை வியப்புடையது. மனிதனுக்கடுத்த உயிரின வளர்ச்சியுடைய விலங்கு குரங்கு. அதுபற்றிய ஒரு நாடுசூழ் வரவாளரின் உண்மை நிகழ்ச்சிக் கதை அதன் இன அறிவை நன்கு விளக்குகிறது. காடுவிட்டுக் காடுதேடிப் புறப்பட்ட ஒரு பெருங்குரங்குக் கூட்டம் ஓர் ஆற்றின் இக்கரை மரங்களில் வந்து திரண்டன. ஆறு அகலமும் ஆழமும் உடையது. வெள்ளம் கரைபுரண்டோடிற்று. குரங்குகளின் புடை பெயர்ச்சியைத் தொடர்ந்து கவனித்தவாறே நாடு சூழ்வரவாளரும் இக்கரையில் நின்று, இனி இந்த ஐந்தறிவுடைய உயிரினம் என்ன செய்கிறது என்று கவனித்த வண்ணம் இருந்தார். குரங்குகள் ஓரிரவு மரங்களில் கூடிக் கூக்குரலிட்டன. அதன் பின் எல்லாம் ஒரு பெரிய மரத்தை நோக்கியே சென்றன. ஏன் இந்தத் தனிப்போக்கு என்று புரியாமல் நாடுசூழ் வரவாளர் ஆர்வத்துடன் நோக்கி நின்றார். அந்த மரத்தின் எதிராக மறுதிசையிலும் அதுபோல ஒரு பெரிய மரம் இருந்தது. இரண்டின் கிளைகளும் ஒன்றை ஒன்று அணுகியிருந்தன. இப்போது நாடு சூழ்வரவாளர் குரங்குகளின் நோக்கத்தைச் சிறிது புரிந்துகொண்டார். ஆற்றின் நடுவே தொடங்கிய கிளைவரை குரங்குகள் சென்று அணிவகுத்தன. கிளை குரங்குகளின் பளுவால் வளைந்து கொடுத்தது. எதிர் எதிர் மரங்களின் கிளைக்குக் கிளை இன்னம் பன்னூறு அடி தொலைவு இருந்தன. ‘பாவம்’! இதுவரை பயன்பட்ட குரங்கின் அறிவில் இனி என்ன பயன் என்று அவர் எண்ணிக்கொண்டார். ஆனால், அடுத்த நிகழ்ச்சிகள் அவர் மனித அறிவையே கேலி செய்தன. அவர்க்கு வியப்பூட்டின. குரங்குகள் எதேதோ கத்தின ஒரு குரங்கு கிளை நுனியில் வாலைப்பற்றிக் கொண்டு தலைகீழாய்த் தொங்கிற்று. அடுத்த குரங்கு கிளை கடந்து அக்குரங்கின் உடலைப் பற்றி இறங்கி அதன் கைக்குக் கீழ் உடலில் வாலைச்சுற்றித் தானும் தொங்கிற்று. இப்படி ஒவ்வொரு குரங்கும் அடுத்த குரங்கைப்பற்றி ஒரு சங்கிலி போல் தொங்கின. சங்கிலி நீரை எட்டுமளவும் தொங்கின. இதன் பொருளை இன்னுமறியாமல் பார்த்துக் கொண்டிருந்த நாடுசூழ் வரவாளர் விழித்தார். சங்கிலி ஊசலாடிற்று. வரவர அதுவேகமாக ஊசலாடிற்று. வேகம் உச்ச நிலை அடைந்தபோது, சங்கிலியின் கீழ் நுனியிலிருந்த குரங்கின் கை எதிர்க்கரையிலுள்ள மரக்கிளையைப் பற்றிக்கொண்டது. ஒரு சில குரங்குகள் இயலாது சங்கிலியைத் தொடர்ந்து வந்து எதிர்கிளையைப் பற்றிய குரங்கின் பிடியைத் தம் வால்களாலும் கைகளாலும் வலுப்படுத்தின. குரங்கின் இன அறிவு நாடு சூழ் வரவாளர் தம் கண்களையே நம்பமுடியவில்லை. மனிதப் பொறி வல்லுநர் மலைக்கும் முறையில் குரங்கினம் தம் இனத்தின் உடல்கொண்டே ஒரு பாலம் கட்டிவிட்டது. குரங்குகள் அதன் வழியே எதிர் மரத்திற்கு எளிதில் சென்று மறுகரை ஏறின. மனித அறிவு இப்போது சற்றுச் சிரித்துக் கொண்டது. எல்லாம் சரிதான்! என்ன இருந்தாலும் குரங்குகள் தானே! குரங்குகள் பலமாகத் தொங்கும் குரங்குகளைப் பலியிட்டுத்தானே இனம் கடந்து சென்றது! பாலத்தின் கதி அதோகதிதான்! என்று எண்ணிற்று. மனித அறிவு மீண்டும் வெட்கிற்று. எல்லாக் குரங்குகளும் முதல்மரத்தைக் கடந்த பின், வாலால் சுற்றியிருந்த குரங்குவாலை மெல்ல அகற்றிற்று. பிடி விட்டது. பாலம் மீண்டும் சங்கிலியாக நீர்ப்பரப்புவரை தொங்கிற்று. தொங்கி வேகமாக ஊசலாடிற்று. இத்தடவை சங்கிலி எதிர்க் கரை மரக்கிளையில் ஊசலாடிற்று. ஊசலாட்டமும் இப்போது முந்தியதற்கு நேர்மாறா யிருந்தது. முன்பு அது தொங்கிக்கொண்டு வரவர வேகமாக ஊசலாடிற்று. இப்போது வால் பிடி விட்ட வேகத்தில் முதலில் விரைந்து ஊசலாடிற்று. படிப்படியாக ஊசலாட்ட வேகம் குறைந்தது. சங்கிலி அசையாது தொங்கிற்று. சங்கிலி நுனியிலிருந்து ஒவ்வொரு குரங்காக மேலிருந்த குரங்கின் வாலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பற்றி ஏறிற்று. சங்கிலி சிறுகச் சிறுகக் கரைந்தது. பாலமாயிருந்த குரங்குகள் கிளை ஏறி மற்றக் குரங்குகளுடன் எதிர்க் கரை ஏறி விட்டன! நாடுசூழ் வரவாளர் குரங்கினம் காட்டிய இன அறிவால் மனித இனத்துக்குப் படிப்பினை தரக்கூடிய பேரறிவு பெற்றார்! படிப்பினையின் ஆழ் பண்பு அறிஞர் அறிவு கூர்மையானது. ஆனால், பொதுவான மனித அறிவு அறிந்த அறிவுடன் நின்று கூர்மை மழுங்கிவிடுகிறது. ஒற்றுமையின் வலுப்பற்றிய கதைகள் இதனால் அவற்றின் முழுப் படிப்பினையைத் தாராது போய் விடுகின்றன. பலர்க்கு அவை கட்டுக் கதைகள், அழகுக் கதைகளாக மட்டுமே காட்சியளித்து விடுகின்றன. இது கண்ட இன அறிஞர் அடிக்கடி வகை வகையாகப் புதுமை உவமைகளால் படிப்பினையின் பண்பை வலியுறுத்துகின்றனர். ‘நீ குடிக்கும் நீரை எல்லாம் குடிக்காமல் ஒருபக்கம் விட்டு வைத்திருந்தாய் என்று வைத்துக்கொள். அல்லது குடிக்கும் நீரின் அளவு நீரைச் சேமித்து வைத்தாய் என்று வைத்துக்கொள். அந்த நீரில் நீ விழுந்தால் உன்னை மூழ்கடித்துச் சாகவைக்க அந்த நீரே போதும்! நீ விடும் மூச்சின் காற்று ஒரு புறமாகச் சேர்ந்து உன் வாழ்நாள் முழுவதும் நின்று, உன்மீது வீசுகிறது என்று வைத்துக்கொள். உன்னையே தூக்கியடித்துக் கொண்டு சென்று கடலில் வீசி எறியத்தக்க புயலாக அதுவே விளங்கும்!’ விடாயகற்றி ஆக்கம் தரும் சிறு துளிகள் சேர்ந்ததுதான் அழிவு தரும் பெருவெள்ளம். அழிவை ஒற்றுமையால் ஆக்கம் ஆக்கிவிடலாம். அழிவின் பேராற்றலை, ஆக்கத்தின் சிறு ஆற்றலால் வெல்லலாம் என்பதை இது காட்டுகிறது. குளிரகற்றி உயிர் பேணும் வெப்பம்தான் மட்டின்றிப் பெருக்கமுற்றால் அழிவு தருகிறது. இதன் படிப்பினையும் அதுவே. தனி உயிரின் சிறுமையை அறிவால் வெல்வதற்குப் பயன்படும் பல கருவிகளின் ஒற்றுமை ஒன்று. அஃது ஒன்றின் சிறுமையைப் பலவற்றின் பெருமையால் சமாளித்து வெல்லுகிறது. சில சமயம் அஃது எதிர்க்கும் ஆற்றலின் பெருமையைப் பலவாகப் பிரித்து வெல்கிறது. ஒன்று பல என்ற தொகையின் வேற்றுமையைப் போலவேதான் சிறிது பெரிது என்ற வேற்றுமையும். சிறு சிறு கற்களிட்டுப் பெரிய வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் பேரணையை ஆக்குகிறோம். சாடியில் எட்டாத ஆழத்தில் இருந்த நீரை, சிறு சிறு கற்களிட்டு மேல்வரச் செய்து காக்கை குடித்த கதையைப் படித்திருக்கிறோம். காக்கையின் இந்த இன அறிவும் வியக்கத்தக்கதே- மனிதர் பலர்க்கு இல்லாதது! ஒற்றுமையின் வலுவுடன் அறிவின் வலுவும் அன்பின் வலுவும் சேர்ந்தால் அஃது எல்லையற்ற மாபெரும் வலு ஆகிவிடும். இயற்கை தரும் வலு அறிவு ஒற்றுமையைப் பயன்படுத்திக்கொள்வது போலவே, இயற்கையையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். வலுவற்ற பொருள்களுக்குச் சில சமயம் தடுக்கும் வலு அவற்றின் வலுவைவிடப் பெரியதாய் இருப்பதுண்டு! பெரு வெள்ளத்தின் இழுப்பையும் அரிப்பையும் தடுப்பதில் கல்லாலான அணையைவிட மரங்களுக்கும், மரத்தைவிடப் புதர்களுக்கும், புதர்களைவிடப் புல்லுக்கும் ஆற்றல் மிகுதி என்பதைப் பலர் அனுபவத்தால் அறிவர். புல்கரண் பற்றிய தரை கல்லினும் உறுதியான அரிப்புத் தடுப்பாகும். பசைத்தன்மை மட்டு மீறிய சறுக்கலில் பொடி மணலும், ஆழமான சதுப்புச்சேற்றில் பளுக்குறைந்த பரந்த அடிப் புறமுடைய கட்டைகளும் சருகுகளும் பெரும் பயனுடையவை ஆகும். அலைகளின் மோதுதலைத் தடுப்பதில் பாறைகளைவிட இடையே பிளவுகளையுடைய மரச் சட்டங்களுக்கே வலு மிகுதியாகும். கடலின் தாக்குதலிலிருந்து நாடுகளையும் மாநிலங்களையும் காக்கும் அலை தாங்கிகள் உடைந்த, வலுவற்ற பலகைகளாலேயே செய்யப்படுகின்றன. கல்லைப் பிளக்கும்போது வளையமாட்டாத இரும்பு, வாழைத்தண்டைப் பிளக்கும்போது இற்றுவிடுகிறது. பஞ்சின் மீது பாய்ந்தால் மழுங்கிவிடுகிறது. வெடிகுண்டுகளிலிருந்து பாதுகாப்பு விரும்புவோர்க்குத் திண்ணிய கற்கோட்டைகளால் பயனில்லை. மணல் சாக்குகளே பயனுடையவை என்பதை அவர்கள் அறிவர். குமரகுருபரரின் நீதி நெறி விளக்க வெண்பா இந்த உண்மையை இனிது தெரிவிக்கிறது. ‘வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்!” கடுஞ் சொல்லால் இனிய சொல்லை வெல்ல முடியாது. இதற்குக் கவிஞர் கூறும் அனுபவ உவமைகள் இரண்டு. யானையின் திண்ணிய உடலைப் பிளக்கும் வேல்பஞ்சைப் பிளக்க முடியாது. பஞ்சை வெட்டவும் மயிர் வெட்டவும் மிக மிகக் கூர்மை வாய்ந்த கத்திகள் வேண்டும் என்பதை யாவரும் அறிவர். வலுமட்டும் அதற்குப் போதாது. அடுத்த உவமை இன்னும் இனியது. கடப்பாரையால் பிளக்க முடியாத பாறை-அதை மென்மையான மரத்தின் வேர் பிளந்துவிடும்! தன் மறுப்பும் அறிவும்: அழிவுதடுத்த சிறுவிரல் அறிவொடு தன் மறுப்பும் சேர்த்துத் தனி மனிதர் இனத்துக்கு ஆற்றிய பெருந்தொண்டு பற்றிய கதைகள் பல. மனித இனத்தின் வரலாற்றை விலங்கின வரலாற்றுக்கும், மன்னர் பெருமக்கள் வரலாற்றுக்கும் மேம்பட்டதாக உயர்த்தும் நிகழ்ச்சிகள் இவையே. ஒரு பேரூர் மக்கள் வளமாக வாழ்ந்தனர். வளத்துக்குக் காரணமான ஒரு பெரிய ஏரி, ஊர் மக்களின் ஒன்றுபட்ட முயற்சியால் ஊரடுத்த குன்றுகளின் சரிவுகளை மூன்று கரையாகக் கொண்டு நான்காவது ஒரு பேரணை கரையாக்கப் பட்டுக் கட்டப்பட்டிருந்தது. பேரூர் அணையடியிலேயே இருந்தது. இரண்டாண்டுகள் பெய்த மழையில் ஏரி விம்மி நீர் நிறைந்து நின்றது. அக்கண்கொள்ளாக் காட்சியைக் காண ஊர்மக்கள் நாள்தோறும் அணைமீது நடந்து சென்றனர். நீர் அளாவிவந்த இன்பக்காற்றில் உலவியதுடன், அடுத்த பல ஆண்டுகளுக்கு வளமூட்டவல்ல அப்பெருநீர்ப் பரப்பையும் கண்டு மக்கள் களித்தனர். வாழ்வில் வறுமையுற்ற ஓர் ஏழைச் சிறுவன் தன் உணவுக்கு அணை கடந்த பள்ளத்தில் ஏதேனும் மீன் அகப்படாதா என்று காண முன்னிரவில் அணைக்குச் சென்றான். நெடுநேரம் துழாவியும் சில மீன்கள்தாம் அகப்பட்டன. அவற்றை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு அவன் மீண்டான். மீளும் சமயம் அணையின் பக்கம் இள நிலவில் ஒரு சிற்றொளி தெரிந்தது. அஃது அணையில் தற்செயலாய் ஏற்பட்ட ஒரு சிறிய நீர்க் கசிவு. அவன் கண்ணில் படும்போது அஃது ஓர் ஈர்க்கோல் அளவிலேயே இருந்தது. ஆனால், அஃது அணையின் அடித்தளத்தில் இருந்ததால், நீர் வேகமாகக் கசிந்தது. அவன் கண்காண அது சுண்டு விரல் அளவாயிற்று. ஒரு மணி நேரத்தில் அஃது ஓர் ஆள் நுழையும் அளவாகிவிடும்! நள்ளிரவுக்குள் அணையுடைந்து ஊரை அழிக்க அதன் வலுப்போதியது! இவற்றைச் சிறுவன் உணர்ந்தான். காலைப் பசி போக்க நீண்ட உழைப்பின்மீது திரட்டிய சிறு மீன்களடங்கிய கூடையை அவன் கீழே வைத்தான். அது தனக்கு இனி பயன்படாது என்று கண்டே, அம்மீன்களை அவன் அந்தப் பள்ளத்திலேயே மீண்டும் நீந்தவிட்டான். கசிவை அடைக்க எந்தப் பொருளும் உடனடியாக அவனுக்கும் கிட்டவில்லை. அதைத் தேட நேரம் அவனுக்குக்கிட்டவில்லை. அதைத் தேட நேரம் தாழ்த்தினால், அதற்குள் எப்பொருளாலும் எளிதில் அடைக்க முடியாதபடி அது பெரிதாகி ஆற்றல் மிக்கதாகிவிடும் என்பதையும் அவன் உணர்ந்தான். அவன் இன உணர்வு மேலெழுந்தது! அது பாரிய தியாக உணர்வாயிற்று! போர்வீரர்கள்-படைத் தலைவர்கள்-அலெக்சாண்டர்கள், சீசர்கள், நெப்போலியன்கள்-பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் இராஜேந்திரன், படைத்தலைவர் பரஞ்சோதி, கருணாகரத் தொண்டைமான் ஆகியோர்-காட்டிய வீரத்தைவிட அவன் உள்ளத்தில் வீரம் பெரிதாயிற்று. சுண்டு விரலால் அவன் கசிந்தோடும் வெள்ளத்தை அடைத்தான்! வள்ளுவர் புகழ்ப் பண்பில் ஒரு சிறு கூறு! இரவின் குளிரில் உடல் வாடிற்று. நீரின் குளிரால் சுண்டு விரல் மரமரத்தது. விரைவில் கை முழுதும் உணர்ச்சியற்றது. உடல் விறைத்தது. உணர்விழந்தது. நள்ளிரவுக்குள் உடல் உயிர் இழந்தது. ஆனால், சுண்டு விரல் தன் வேலையை ஒழுங்காகச் செய்தது. விறைத்த உடல் அதன்வலுவைப் பெருக்கிற்று! சிறு செயல் செய்தான் அவன்! ஆனால், ஏழைமையில் வாடிய அவன் உயிர் அதில் மடிந்தது. எந்தச்சிறுவிரலும் செய்யாத செயலை, அடையாத பயனை அந்தச்சிறுவிரல் செய்தது. பயனை அடைந்தது. எந்த மனித உடலும் காணாத பயனை அவன் உடல் கண்டது. காலையில் பேரூரார்-நீர்வளத்தால் வாழ்ந்த - வாழ இருந்த-செல்வர் வந்து கண்டனர். தாம் இழக்க இருந்த வாழ்வை உயிரை, ஊரை, வாழ்விக்க ஓர் ஏழைச் சிறுவன் தன்வாழ்வு ஈந்து காத்தது கண்டனர்! கசிவு சரி செய்யப்பட்டது! விரைவில், அணை சரிப்படுத்தப்பட்டது. ஒருசில நாள்களில்! அந்த அணைமீது ஊரார் நன்றிக்கு அறிகுறியாக அவன் சிலை செய்து வைக்கப்பட்டது. சிலையின் சுண்டு விரல் பொன்னால் இழைக்கப்பட்டிருந்தது. ஊரார் நன்றி பெரிது. ஆனால், அவன் செய்த சேவை அதனினும் பெரிது. வள்ளுவர் ஓசையற்ற அரும் புகழ்ப் பண்புக்குரிய ஒரு சிறு செயல் இது! இச்சிறு பெருஞ் செயலின் ஒரு கூறு மனித உலகில் எல்லாரிடமும் பரவினால், புராணங்கள்கூறும் பொன்னுலகுக்கு என்ன தேவை? அதனினும் சிறிய ஒரு வள்ளுவர் தமிழுலகு, புராணப் போலிக்கனவுகளை வென்று வள்ளுவர் மெய்க் கனவில் நனவுருவாக விளங்குமன்றோ! ஒரு மரம் தோப்பன்று! ஒற்றுமை, அறிவு, தியாகம்! இவற்றின் பண்பை மேலே கூறிய கதைகள் விளக்குகின்றன. ஒற்றுமைப் பண்பை மதிப்பிட்டுக் காட்ட இவை போதா! ‘ஒரு மரம் தோப்பன்று; ஒரு பிள்ளையும் பிள்ளையன்று’ இஃது ஒரு தமிழ்ப் பழமொழி! ஒற்றுமை தரும் ஆக்கம், பெருக்கம், வளம், பொலிவு, பொங்கல் ஆகியவற்றின் படிப்படியான உயர்வுகளை இஃது எடுத்துக்காட்ட உதவுவது ஆகும். இதில் அடங்கியுள்ள மெய்ம்மை பெரிது. ஆனால், மேலீடாகப் பார்ப்பவர்களுக்கு இஃது அழகுவமையாக மட்டுமே காட்சியளிக்கும். ஏனெனில் ‘ஒரு மரம் தோப்பன்று’ என்பது சிறு பிள்ளைத்தனமான வாசகம், அல்லது திறமையான வாயடி என்று கருதவே இடம் தரும். ஒரு மரம் தோப்பன்றானால் என்ன? ஒரு மரம் மரமாகத்தானே இருக்கமுடியும் என்றுகூடக் கூறத் தோன்றும்! இத்தகைய எண்ணங்களைத் தூண்டுவதற்குத்தான் போலும், இங்கே தோப்பு என்ற சொல் புகுத்தப்பட்டிருக்கிறது! ஏனெனில், ‘ஒரு பிள்ளையும் பிள்ளையன்று’ என்பதற்கீடாக, இவ்வாசகம் ஒரு மரமும் மரமன்று என்றிருந்தாலே போதுமானது. தனி மரம் புயலில் சாய்ந்துவிடும். தோப்பின் பன்மரச் செறிவு புயலை எதிர்த்து நிற்கும் உறுதி தருகிறது. ஏனெனில், தோப்பின் ஒவ்வொரு மரத்துக்கும் தோப்பினுடைய அத்தனை மரங்களின் கூட்டு வலுவும் உரியதாகி விடுகிறது. ஒரே பொதுப்பண்புடைய உறுப்புகளின் கூட்டு வாழ்வால் ஏற்படும் இயல்பான பயன் இது. இங்கே கவனிக்கவேண்டிய ஓர் உயிர் உண்மை உண்டு. தோப்பில் ஒவ்வொரு மரத்தின் வளமும் தோப்பின் வளமாகிறது. இதனால் கூட்டு வாழ்வில் தோப்பில் எத்தனை மரங்களுண்டோ, அத்தனை தோப்புகளின் வலு உண்டாகிறது என்று காணலாம். பல எண்கள் சேர்ந்தது, அவற்றின் கூட்டுத் தொகை. இது பொதுக் கணக்கியல் உண்மை. இஃது ஐந்தும் ஐந்தும் பத்து என்பது போன்றது. ஆனால், பல உருப்படிகள் ஒரு கூட்டுறவில் சேர்ந்தால், அதன் கூட்டுவலு இத்தகைய கூட்டுத் தொகையன்று. அஃது அவற்றின் பெருக்கத்தொகை. ஐந்தும் ஐந்தும் இருபத்தைந்து போன்றது இது. கூட்டியல் உணர்ச்சியையே நாம் ஆக்கம் என்கிறோம். பெருக்கியல் வளர்ச்சியை நாம் பெருக்கம் என்கிறோம். வாழ்வு ஆக்கம் தருவது மட்டுமன்று. ஆக்கத்தோடு நிற்பதும் அன்று. அஃது ஆக்கம் தாண்டிப் பெருக்கம் காண்பது. அது கூட்டு வாழ்வுக் குழுவில் நடைபெறுவதாதலால் குழுவின் உறுப்பினர்களின் மொத்த வலுக் கடந்து அதன் பெருக்கமாகச் செயலாற்றுவதாகும். ‘பாய்ல்’ தத்துவம் இரண்டும் எட்டும் பத்து. அது பத்தில் குறைபடாது. பத்தில் கூடாது. இஃது எண் சார்ந்த கணக்கியல் உண்மை; கூட்டியல் உண்மை. இரண்டு பலம் கல்லும், எட்டுப்பலம் கல்லும் சேர்ந்தால், பத்துப்பலம் கல். இஃது எண்ணிடைப்பட்ட உயிரில்லாப் பொருள் தத்துவம். ஆனால், இரண்டு துளி நீர், எட்டுத் துளி நீர்-இவற்றின் இணைப்பு வகையில் கூட்டின் மதிப்பு இதுவன்று. அளவில் இது பத்துத் துளி நீரே. ஆனால், வலுவில் இது பத்துத்துளி நீரும் அல்ல. பதினாறு துளி நீரும் அல்ல; நூறு துளி நீர். ஏனெனில், நீர் கல் போன்றதன்று. ஒன்றாக இணையும் இயல்புடையது. எண்ணிடைப்படாதது. தனி வடிவற்றது. முற்றிலும் ஒன்றுபட்டுச் செயலாற்றுவது. ஆகவே, அதன் கூட்டு வலுவே ஒவ்வொரு துளியின் வலுவும் ஆய்விடுகிறது. ஒவ்வொரு துளிக்கும் பத்துத் துளியின் கூட்டுவலுச் சேருவதால் பத்துத் துளியின் வலு பத்து பத்து அதாவது நூறு துளி வலு ஆகிறது. இயங்கியல் நூலில் (ஞாலளiஉள) முதன் முதல் ராபர்ட் பாய்ல் (சுடிநெசவ க்ஷடிலடந) என்பவர் கண்டுணர்த்திய உண்மை இது. ஆகவே, இஃது அந்நூலில் ‘பாய்ல்’ தத்துவம் (க்ஷடிலடந’ள டுயற) என்று பெயர் பெறுகிறது. இதன்படி நீரியல் பண்புடைய அதாவது இணைவியல் ஆற்றலுடைய பொருள்களின் கூட்டுவலு அதன் சிற்றுறுப்புகளின் கூட்டு வலுவன்று. அவற்றின் பெருக்க வலுவாகும். தொய்வகத்தால் (ரப்பரால்) செய்த ஒரு பந்தில் நீரையோ நீர்ப் பொருளையோ நிறைய அடைத்து வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதைச் சிறிது கையால் அழுத்தினால் நாற்புறமும் மேலும் கீழும் அஃது உப்புவது காணலாம். அதில் எத்தனை துளையிட்டாலும் நீர் அத்தனை துளையிலுமிருந்து அழுத்தத்தின் அளவுக்கேற்பப் பீறிடுவது காண்கிறோம். இயங்கியலார் அழுத்தத்தின் அளவையும், பீறிடும் நீர் வெளிவரும் வேக அளவையும் கணக்கிட்டுள்ளார்கள். துளை எத்தனை இருந்தாலும் பீறிடும் அளவு ஒவ்வொரு துளையிலும் அழுத்தத்துக்கு ஒப்பாகவே இருக்கிறது என்று கண்டு கணித்துள்ளார்கள். நீரியல் பொருளின் இந்த அழுத்தத்தைப் பயன்படுத்திப் பல நீராற்றல் பொறிகள் செய்யப்பட்டுள்ளன. நீராற்றல் அழுத்தப் பொறி இதில் ஒன்று. நீரின் ஒரு சிறுபரப்பில் அழுத்தம் அழுத்தத்தை அஃது அதன் விரிந்த எதிர்ப்பரப்பில் முழுவதும் பரப்புவதால், அழுத்துபவர் அழுத்த வலுவினும் பன்மடங்கான வலுவுடன் அழுத்தப்பொறி வேலை செய்கிறது. உயிரின் ‘பாய்ல்’ தத்துவம் தொய்வகப் பந்தைப் போலவும், நீராற்றல் அழுத்தப் பொறியைப் போலவும் முற்றிலும் மூடப்பட்ட, பரப்பையுடைய எல்லையிலேயே இந்தப் ‘பாய்ல்’ தத்துவம் முழுவதும் செயற்படும். ஏனெனில், காற்றைவிடப் பளுவுடைய நீரியல் பொருள்கள் யாவும் கீழ் நோக்கிய ஆற்றலேயுடையன. காற்றும் பளுவுடையதே. ஆயினும், நீரியல் பொருள்களை விட அதன் தொய்வு நெகிழ்வாற்றலும் விரிவாற்றலும் மிகுதி. ஆகவே, ‘பாய்ல்’ தத்துவத்தின் பெருக்கம் இவற்றில் இன்னும் மிகுதி. இதனைப் பயன்படுத்தியே வெடி மருந்து செயலாற்று கிறது. காற்றைவிடப் பளுக் குறைந்த வளிப் பொருள்கள் (ஆவிகள்) காற்றைவிட வெப்பமும் தட்பமும் அழுத்தமும் மிக்க வளிகள். ஆகவே, அவை நீரியல் பொருளையும், காற்றையும்விட ஆற்றல் வாய்ந்தவை. பல விசை இயந்திரங்கள் இவற்றால் இயக்கப் படுகின்றன. சுரங்கங்களின் பாறைகளில் துளையிடுவது இரும்புக் கம்பிகளல்ல; அவற்றால் முடியாத கடுஞ்செயல் அது. விசைக் குளிர் காற்றே அதில் பயன்படுகிறது. நீரியல் பொருளும் வளியும் பொருளின் புற ஆற்றல்கள். அதன் அணுவுள்ளாற்றல்களே வெப்பம் (எக்°ரே, ரேடியஒளி போன்ற) குறுகிய அலை ஒளிக்கதிர்கள், காந்தம், மின்வலி, அணு ஆற்றல் போன்றவை. தற்கால இயல் நூல் இவ்வாற்றல்களின் திறமறிந்தே அண்டத்தை ஆளும், அழிக்கும் பேராற்றல்களை உண்டுபண்ணி, காலமும் இடமும் இயற்கையும் வென்று வருகின்றது. இப்பேராற்றல்களுள் ஒன்றே உயிர். மற்றப் பேராற்றல் களைக் கண்டுணர்ந்த அளவில்கூட மனிதனும், மனித உலகில் இயல் நூலும் இன்னும் அதன் ஆற்றல்களைக் கண்டுணர வில்லை. ‘பாய்ல்’ தத்துவம் நீரியல் பொருளில் தொடங்கி, உயிரியல் பொருளிலேயே உச்ச அளவில் செயலாற்றுகிறது என்பது கூர்ந்து கவனித்தால் விளங்கும். உயிர்ப் பொருளின் ‘பாய்ல்’ தத்துவமே வாழ்வு! வளர்ச்சி, பொலிவு, பொங்கல் ‘பாய்ல்’ தத்துவம் ஓர் உயிர்த் தத்துவம். ஏனெனில், அஃது ஏட்டுத் தத்துவமாக நின்றுவிடவில்லை. வாழ்வில் பயன் பட்டுள்ளது. அதைத் தொழிலறிஞர் வழங்கி, எத்தனையோ இயந்திரப் பொறிகளில் ஈடுபடுத்தி ஆதாயம் கண்டுள்ளனர். கல்லிலும் கட்டிகளிலும், பொன்னிலும் மணியிலும் ‘பாய்ல்’ தத்துவம் செயலாற்றவில்லை. நீர் முதலிய இணைவியல் பொருள்களிலேயே அது செயலாற்றுகின்றது. வடிவுடைப் பொருளும் எண்ணிடைப்படும் பொருளும் நீரியல், வளியியல் பொருள்கள்போல் எளிதில் இணைவுறாததாலேயே ‘பாய்ல்’ தத்துவம் அவற்றில் செயலாற்ற முடிவதில்லை. ஆயினும் நீரியல் பொருள், வளியியல் பொருள் முதலியவை உயிரில்லாப் பொருள்களே. வெப்பம், ஒளி, காந்தம், மின்வலி, அணுவலி ஆகியவை போல உயிரில்லாத ஆற்றல்களாயினும். அணுவுள் ளிருந்தெழும் ஆற்றல்கள். ஆனால், உயிர் அணுவுள்ளிருந்தெழும் ஆற்றல் மட்டுமன்று; அத்தகைய ஆற்றல்களையே இயக்கும் மூல முதலாற்றல். மற்ற அணு ஆற்றல்களைவிட அஃது அணுவின் உள்ளார்ந்த இயக்க ஆற்றல், ஆகவே, அஃது ஆக்கம், பெருக்கம் ஆகிய வளர்ச்சி எல்லைகள் கடந்து வளம்,வளர்ச்சி, பொலிவு, பொங்கல் என்ற உயிர்ப் பெருக்கங்கள், விசைப் பெருக்க ஆற்றல்கள் உடையது. இரண்டும் எட்டும் பத்து என்பது கூட்டியல் ஆற்றல், ஆக்க ஆற்றல் மட்டுமே. இரண்டும் எட்டும் பதினாறு; இரண்டு எட்டு ஆகியவற்றின் தொகையான பெருக்கம்; பத்தின் பெருக்கமாகிய நூறு; நூறின் பெருக்கங் களாகிய பதினாயிரம் பத்துக் கோடி என்ற நிலையுடையவை வளம், வளர்ச்சி, பொலிவு, பொங்கல், ஓங்கல் என்பவை! கூட்டு வாழ்வின் பயனைத் தமிழர் கூடுதல் என்று குறிக்கவில்லை. பெருகுதல், பெருக்கம்; வளருதல், வளம்; பொலிதல், பொலிவு; பொங்குதல், பொங்கல்; ஓங்குதல். புகழ் என்றே குறித்தனர். இவற்றுள் பெருகுதல் என்பது ஒன்று, இரண்டு எனக் கூடுதலல்ல; ஒன்று பத்து, நூறு எனப் பெருகுதல். வளர்தல் கூடுதலும் அல்ல, பெருகுதலுமல்ல, கூடிவளர்தல், பொலிதல் பெருக்கத்தின் பெருக்கம் அல்லது விசைப்பெருக்கம் பெருகிக்கொண்டே போகுதல் ஆகும்! பொங்கல் தன் விசைப் பெருக்கத்துடன் நில்லாமல், சூழ்விசைப் பெருக்கத்தைத் தூண்டிக்கொண்டே விசைப்பெருக்கம் அடைதல்! ஓங்கல் அல்லது தானும் விசைப் பெருக்கம் உற்றுச் சூழ்விசைப் பெருக்கம் தூண்டி, சூழல் தன்னையும் தன் சூழலையும் இடைவிடாது எதிரெதிர் தூண்டி மேன்மேலும் பெருவிசைப் பெருக்கமாக வளர்தல் ஆகும்! சிற்றுயிர்களின் செயலால் மாவு புளிக்கும்போது சுவையும் அளவும் ஆற்றலும் பெருக்குவதை அறியாதவர் இல்லை. கள்ளும் தேறலும் இத்தகு செயலால் விளைபவையே. மனிதன் இவற்றைத் தவறாகப் பயன்படுத்தினாலும், இவை உயிர்க்கு உயிர்ப் பூட்டுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றால் ஏற்படும் தீங்குகளும் தொல்லைகளும் யாவும் இவற்றின் தன்மையறிந்து மனித இனம் இவற்றைப் பயன்படுத்தும் வகை காணாததாலேயே யாகும் என்னலாம். ஏனெனில், இவை அறிவு செயலாற்றும் புறமனங்கடந்து, உணர்ச்சி செயலாற்றும் இடைமனத்தையும் சில சமயம் உணர்வு செயலாற்றும் அகமனத்தையும் கடந்து, தங்கு தடையற்றுச் செயலாற்றிவிடுகின்றன. இழி பண்புடையோர் இவற்றைச் சமுதாய ஆக்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தினாலும், அறிவு கடந்த உயர் பண்புகளுக்கும் அவை பயன்படுத்தக் கூடியனவே. அகமனம் தூண்டி நோயாற்றும் செயலையும், செயற்கரிய செய்யும் திறங்களையும் பற்றி நாம் கேள்விப் படுகிறோம்; காண்கிறோம். இடை மனத்தையும் அகமனத்தையும் ஆக்கத்துக்குத் தேவைப்பட்ட முறையில் தூண்ட உயிரியக்க முடைய இப்பொருள்கள் வருங்கால அறிவு மேம்பட்ட சமுதாயத்தில் பயன்படுத்தப்படலாகும்! வாழ்வியலின் தத்துவங்களறிந்தோர் உயிராற்றலையும் இதுபோல் பயன்படுத்தி, புற உலகில் இயல் நூல் செய்யும் அரும் பெருஞ் செயல்களினும் வியத்தகு சீரிய செயல்களை அக உலகில், மனித வாழ்வில் செய்து முடித்தல் கூடும்! மணவிழாவின் வாழ்த்தொலி, பொங்கல் விழாவின் வாழ்த்தொலி ஆகியவை செய்து காட்ட வேண்டும் செயல்கள் இவையே-வாழ்க என்று வாழ்த்துவதுடன் நில்லாது, வாழ்வின் வண்ணமும் வளமும் அறிந்து, அறிவித்து, வாழும் வகை கூறி, வாழ்வை வளப்படுத்த வகை காணுதல் வேண்டும். µµµ உலகம் சுற்றுகிறது முதற் பதிப்பு – 1957 இந்நூல் 2007இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முன்னுரை தமிழிலக்கியம், அறிவு நூல் அல்லது விஞ்ஞானம், மெய்விளக்கம் அல்லது தத்துவம் ஆகிய மூவுலகங்களினூடாகப் பின்னிச்சுழலும் கட்டுரைப் பேரிலக்கியம் ‘உலகம் சுற்றுகிறது!’ நிலவுலகின் சுழற்சியில் சுழற்சியைத் தொடங்கு முகமாகக்கொண்டு, வானகோளங்களின் அண்ட பேரண்டத்துக்குரிய மாயத்தின் மாயத்தைப் பழந்தமிழ் மரபில் வந்த பறக்கும் குதிரை உவமையால் வாசகர் மனக்கண் முன் கொணர்ந்து, அறிவின் சுழற்சியாகிய வட்டாட்டத்தில் சுழன்று, உயிரும் உயிர் முதலும் ஆய்ந்து, மனித இன முன்னேற்றம், இயற்கை மலர்ச்சி ஆகிய சுழன்று முன்னேறும் திருகேணியில் தமிழகத்தை ஏற்றிவிடுகிறது இச்சிற்றேடு. விஞ்ஞான மரம் திடுமென மக்கள் உள்ளமாகிய நிலப்பரப் பிலிருந்து வளர்ந்துவிட முடியாது. மொழியென்னும் உள்ளத் தடத்தின் ஆழத்தில் வேரோடிய பின்னரே அது உரமும் வலிவும் பெற்று வளமுற உயிர்வளர்ச்சி பெறமுடியும். தமிழகத்தில் விஞ்ஞானம் முன்போல வளரவேண்டுமானால் மேலை அயல் பயிரில் நாற்றுக்களை மட்டும் நட்டால் போதாது. தமிழ் மொழியில் புதுச் சொற்கள் அமைத்தால் மட்டும் கூடப் போதாது. தமிழ் உள்ளங்களினூடாகத் தமிழ்மொழி புத்தறிவு வளமும் பழந்தமிழுரமும் ஊட்டப்பெற்று, தமிழர் பொது அறிவுடன் மொழியும் ஒருங்கொத்து உயிர்த்துடிப்புப் பெற்றிட வேண்டும். 1. சுழற்சியில் புரட்சி உலகம் சுற்றுகிறது! நாம் வாழும் நிலவுலகம் சுற்றுகிறது! ஆனால் இதை நாம் பொதுவாக உணர்வதில்லை. அத்துடன் நாம் நினைப்பது போல, அது தட்டையானதன்று - உருண்டையானது. இதுவும் பொதுவில் நமக்குப் புலப்படாத செய்தியே. இந்த இரண்டு உண்மைகளையும் மனித இனம் எளிதில் கண்டு கொள்ளவில்லை. கண்டுணர நீண்டநாள் பிடித்தது. இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சங்ககாலச் சான்றோர்களும், பண்டைக் கிரேக்க நாட்டின் தலைசிறந்த அறிஞர் சிலரும் இவற்றை உணர்ந்திருந்ததாக அறிகிறோம். ஆயினும் யாவருமொப்ப இயல் நூலறிஞர் இவற்றை நிலைநாட்டியது சென்ற நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே தான். பரந்த அளவில் உலக மக்கள் இவற்றை உணர்ந்து வருவதும் இந்நாட்களிலேயேயாகும். இவ்வுண்மைகளில் முழு ஆழ அகல விரிவுகளை இன்று கூட மனித இனம் முற்றிலும் அறிந்துவிடவில்லை - அறியத் தொடங்கியேயுள்ளது என்னலாம். ஏனெனில் துண்டுபட்ட தனி உண்மைகளல்ல. மனித உலகின் எல்லா அறிவுத் துறைகளிலும் சென்று பரவி, மனிதன் அறிந்த அறிவையெல்லாம் புரட்சிகரமாக மாற்றி வருபவை, இன்றும் மாற்றவல்லவை இவை. பழைய நம்பிக்கைகள் பல இவற்றால் சரிந்துள்ளன - சரிந்து வருகின்றன. அதுமட்டுமன்று. பழைய அறிவே ஆராய்ந்து முடிவு கட்டியவை போலத் தோன்றிய அடிப்படை அறிவுக் கூறுகளே, கோட்பாடுகளே இவற்றால் முற்றிலும் உருமாறியுள்ளன, பண்பு மாறியுள்ளன. புதிய அறிவியலூழியின் கருத்துக்களைக்கூட இவை பொங்கழற் குவையிலிட்டுப் புத்தம் புதிய அறிவுக்கு, புரட்சிகரமான புதிய அறிவுக் கருவூலத்துக்கு வழி வகுத்து வருகின்றன. உலகின் சுழற்சியில் சிந்தனைகளைச் சுழலவைத்துச் சிந்தனையின் அடிப்படைகளையே மாற்றியமைக்கும் இத்தகைய கருத்துப் புரட்சிகளில் சில இங்கே குறிப்பிடத்தக்கவை. பொதுவாக, கிழக்கே செல்பவன் மேன் மேலும் கிழக்கே தான் செல்ல முடியும். திசை திரும்பினாலன்றி மேற்கே வர முடியாது. புறப்பட்ட இடத்துக்கே வருவானென்றும் எவரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இது பழங்கால உலகின் அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியான அறிவு முடிவு - அறிவின் இயக்கத்துக்கே எல்லை காட்டும் பழங்கால அறிவுச் சட்டம்! உலகம் உருண்டை என்ற மெய்ம்மை இதைப் பொய்ப் பித்து விட்டது. பழங்கால அறிவின் அடிப்படைச் சட்டத்தையே தகர்த்தெறிந்துவிட்டது. ஏனெனில் உலக உருண்டை மீது, ஒருவன் திசை திரும்பாமலே புறப்பட்ட இடத்திற்கு மேற்கே வந்து விடவும் முடியும். புறப்பட்ட இடத்திற்கு நேராக 25,000 கல் தொலைவு கடந்த பின் புறப்பட்ட அதே இடத்துக்கே வந்து சேர்ந்துவிடவும் கூடும். ஏனென்றால், இந்த 25,000 கல் தொலைவே உலக உருண்டையின் சுற்றளவு. இது வெறும் கோட்பாடல்ல. தற்கால உலகின் செயல் முறைச் செய்தி. கி.பி. 15, 16 நூற்றாண்டுகளிலிருந்து மேலை நாட்டுச் செயல் முனைவர் பலர் நிலவுலகம் சுற்றிவந்து, உலகம் உருண்டை என்பதைக் கண்கூடாக எண்பித்துக் காட்டிவிட்டனர். உலகம் சுற்றிய மேலை நாட்டவர் அடிச்சுவடுகளைப் பின்பற்றி `உலகம் சுற்றிய தமிழர்' பலரை நம் 20ஆம் நூற்றாண்டு கண்டுள்ளது. தற்காலக் கடல் நெறிகள், வான்நெறிகள் கிழக்கும் மேற்கு மாகச் சென்று, மக்களை உலகம் சுற்றி எங்கும் பயணம் செய்வித்து வருகின்றன. திசைகள் பற்றி மற்றொரு வகையிலும் நாம் இப்போது தடுமாற வேண்டியவர்களாகிறோம். கிழக்கே செல்பவன் நோக்கும் திசைவேறு. மேற்கே செல்பவன் நாடும் திசைவேறு. ஆகவே ஒரே இடத்திலிருந்து எதிரெதிராகச் செல்பவர்கள் என்றும், எங்கும், எப்படியும் சந்திக்க முடியாதென்றுதான் எவரும் கருதுவார்கள். ஆனால் இருவரும் எதிரெதிராக 25,000 கல் தொலைவு செல்வதனால், பாதி தொலைவு சென்றவுடன் உலக உருண்டையின் எதிர்புறமாக ஒரு தடவை எதிரெதிராக அவர்கள் சந்திப்பது உறுதி. அதன் பின்னும் அவர்கள் எதிரெதிராகச் சென்று, இறுதியில் புறப்பட்ட இடத்திலேயே மீட்டும் வந்து கூடுவார். கிழக்கு மேற்குத் திசைகளில் மட்டுமல்ல, எதிரெதிராகத் தெற்கு வடக்குத் திசைகளில் செல்பவருக்கும் இதே செய்தி பொருந்தும். ஆனால் இங்கே சுற்றளவு சற்றே, ஒரு சில கல் அளவில் குறையும். அத்துடன் நிலவுலகின் வட கோடியும் தென்கோடியும் மனிதர் எளிதில் அணுக முடியாத, உயிர் வாழ்வுக்கே இடந்தராத கொடும்பனிப் பாழ் வெளிகள். ஆகவே இத்திசைகளில் உலகம் சுற்றும் திறலாண்மை இனி வருங்காலத் துக்கே உரியது ஆகும். இரண்டு நூற்றாண்டுகளாக, வடகோடி தென்கோடிகளை நில, நீர்ப்பரப்பு வழிசென்று மீள்வதும், அக்கோடிகள் கடந்து வான்வழி பறப்பதுமே ஓரளவு அருந்திற லாண்மைகளாக நிறைவேறியுள்ளன. திசைகள் போக்குகள் பற்றிய இக்கருத்துப்புரட்சிகள் பொதுமக்கள் எண்ணங்களுக்கே அதிர்ச்சி தருபவை. இவையன்றி அறிவுலகின் அறிஞர் கருத்துக்களையே தாக்கும் புரட்சிகளும் உண்டு. நேர்வரை வேறு, வட்டம் வேறு! நேர்வரை வட்டத்தினுள்ளாகச் சென்று அதை வெட்டினால், அது சுற்றுவரையை இரண்டிடத்தில், இரண்டுதடவை, இரு புள்ளி களில் சந்திக்க முடியும். பின் எங்கும் சென்று சந்திக்க முடியாது. இது பொதுமக்கள் கருத்து மட்டுமன்று. இதுவே இடக்கணக்கியல் (ழுநடிஅநவசல) துறையின் முடிவு; தீர்த்த முடிவு. அதன் அடிப்படை விதிகளுள் - விளக்கமே வேண்டாத அளவு இயல்பாக எவருக்கும் விளங்குபவை என்று கருதப்பட்ட இயற்கை விதிகளுள் இது ஒன்று. மேலையுலகுகட்கு இடக்கணக்கியல் அறிவின் அடிப் படையை வகுத்துத்தந்தவர் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த கிரேக்க அறிஞர் `யூக்ளிட்'. அக்கால முதல் கிட்டத் தட்ட நம் காலம்வரை இரண்டாயிர ஆண்டுகளாக இவ்விடக் கணக்கியல் முடிவு, அசைக்க முடியாத முடிவாகவே கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது இப்போது அசைந்து ஆட்டங் கொடுத்துவிட்டது. வட்டமாகச் சுற்றிவருபவன் சிறு வட்டமாகச் சுற்றினால், மிகக்குறுகிய நேரத்தில், மிகக்குறைவான தொலைவே நடந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்து விடுவான். ஆனால் பெருவட்டமாகச் சுற்றுந்தோறும், வரவர நீண்ட நேரம், வரவர நெடுநீள் வட்டமாக நெடுந்தொலை கடந்த பின்னரே புறப்பட்ட இடம் வந்து சேர முடியும். வட்டம் சிறிதாகுந்தோறும் நேர்வரைக்கும் வட்டத் துக்கும் உள்ள வேறுபாடு வரவரப் பெரிதாகிக் கொண்டே வருவதை எவரும் எளிதாகக் காணலாம். ஏனெனில் நேர் வரை எல்லையற்று இருபுறமும் நீண்டு செல்வது. வட்டத்துக்கோ சுற்றளவு வரையறுத்த எல்லையுடையது. அத்துடன் வட்டம் சிறிதாகுந் தோறும் அச்சுற்றளவு குறுகிக் கொண்டே வருகிறது. இறுதியில் வட்டத்தின் சுற்றளவு அதன் மையமான புள்ளியள வாகக் குறுகித் தேய்வுற்று மாய்கிறது. இந்நிலையில் வட்ட முழுவதும் நேர் வரையின் நுண் கூறான ஒரு புள்ளியளவாகி, அதனுள் ஒடுங்கி அடங்கிவிடுகிறது. நேர்மாறாக, வட்டம் பெரிதாகுந்தோறும், நேர் வரைக்கும் வட்டத்தின் சுற்றளவுக்கும் உள்ள வேறுபாடு குறைந்து கொண்டேதான் வரும். இறுதியில் வட்டத்தின் அகலம் அல்லது விட்டம் (சுயைஅநவநச) 7927 கல் ஆக, அதாவது அதன் அரை அகலம் அல்லது ஆரம் (னுயனரைள) 3963ஙூ கல் ஆக வளரும்வரை வட்டம் பெரிதாகிவிட்டால், வட்டத்துக்கும் நேர்வரைக்கும் உள்ள வேறுபாடு முற்றிலும் அகன்றுவிடுகிறது! வட்டமே நேர் வரை யாகவும், நேர்வரையே வட்டமாகவும் அமைந்துவிடுகின்றன!! ஏனெனில், இப்போது வட்டத்தின் சுற்றளவு 25,000 கல் தொலைவு ஆகிவிடுகிறது. இதுவே உலக உருண்டையின் சுற்றளவு. கருத்துலகில் இதனால் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டுவரும் புரட்சி பெரிது, மிக மிகப் பெரிது. அதன் முடிவுகளும் பல, மிக மிகப் பல. மிக மிக எதிர்பாராத முடிவுகளாகவும் அவை காட்சி யளிக்கின்றன. முதலாவதாக, நாம் நேர்வரை என்று கூறுவது நேர் வரையேயல்ல - உலகம் உருண்டை என்று மெய்ம்மை உண்டு பண்ணும் வாய்மைப் புரட்சிகளில் இது ஒன்று. நமக்கு மட்டுமல்ல - தச்சர், பொறியியலாளர், கணக்கிய லாளர் ஆகியோர் கணிப்புக்களுக்கெல்லாம் ஆராய்ச்சியறிஞர், கலைஞர் ஆராய்ச்சிகளுக்கெல்லாம், கருத்துக்களுக்கெல்லாம் - அடிப்படை அளவையாயமைவது நேர்வரையே. ஆனால் இவர்களனைவரும் நீர்மட்டத்தை வைத்துக் கொண்டே நேர்வரையை உறுதி செய்கிறார்கள். நீர் மட்டமோ கடலின் மேற்பரப்பில் ஒரு கூறு. கடலின் மேற்பரப்போ உலக வட்டத்தின் ஒரு கூறு. இவ்வாறாக 25,000 கல் சுற்றளவுடைய ஒரு பெரிய வட்டத்தின் ஒரு பகுதியையே நாம் மட்டுமல்ல, தச்சரும் கணக்கியலறிஞரும், பொறிவலாளரும், ஆராய்ச்சியறிஞரும், கலைஞரும், கருத்தியலாளரும் எல்லாருமே நேர்வரையாகக் கொண்டுள்ளனர். இந்த அடிப்படையின்மீதே அவர்கள் இரண்டா யிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளாக தங்கள் அறிவுக் கட்டடங்கள் எழுப்பியுள்ளனர். கருத்துக் கோட்டைகள் உருவாக்கியுள்ளனர். அடிப்படை இப்போது சறுக்குகிறது. மேற்கட்டட முழுவதும் இனி இப்புதிய அடிப்படை மீதே புதுவதாக மீண்டும் கட்டி எழுப்பப் படவேண்டியதாகிறது! இது மட்டுமன்று. நிலவுலகில் வாழும் நம்மைப் பொறுத்தமட்டில், 25,000 கல் நீளத்திற்கு மேற்பட்ட நேர்வரை இருக்க முடியாது! அதுவே நம் நேர்வரையின் உச்ச அளவு நீளம்! இதுபோலவே, 25,000 கல் சுற்றளவு அதாவது 7927 கல் விட்ட அளவு அல்லது 3963ஙூ கல் ஆர அளவு எல்லைக்கு மேற்பட்ட வட்டமும் இருக்க முடியாது. அதுவே நம் உலகின் உச்ச உயர் எல்லையான வட்டம். நேர்வரை 25,000 கல் நீளத்துக்குமேல் நீண்டால் அது தன்னைத் தான் வட்டமாகச் சுற்றிவரவேண்டும். நேர் வரையாகவே இயங்க முடியாது. ஏனெனில் 25,000 கல் எல்லையிலேயே அது ஒரு நிறை வட்டம் ஆகிவிடுகிறது. இது போலவே அந்நீளத்துக்கு மேற்பட்ட சுற்றளவுடைய வட்டமும் இருக்க முடியாது. அதுவும் தன்னைத்தான் சுற்ற வேண்டும். வட்டம், நேர்வரை ஆகியவற்றின் பேரெல்லைகள் தான் இவை. சிற்றெல்லையிலோ வட்டத்தின் சுற்றளவு நேர்வரை ஆகிய யாவுமே ஒரு புள்ளியாய் விடுகின்றன. வட்டத்தின் சுற்றளவும் மையமும் ஒன்றாகி விடுகின்றன. வட்டத்தின் சுற்றளவு, நேர்வரை, புள்ளி ஆகிய மூன்றுமே வேறுபாடற்று ஒன்றுபட்டு விடுகின்றன. இவ்வெல்லையில் புள்ளி வேறன்று, நேர்வரை வேறன்று - வட்டம் வேறன்று - வட்டத்திலும் சுற்றளவு, மையம், ஆரம், விட்டம் ஆகிய யாவும் ஒன்றாய், ஒரு புள்ளியளவுக்குள் ஒடுங்கி விடுகின்றன. விட்டம் சுற்றளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் நான்கில் ஒரு பங்குக்கும் இடைப்பட்ட கூறு. ஆரமோ விட்டத்தில் பாதி. இவை மாறா இடக்கணக்கியல் அமைதிகள் என்று கருதப்படுபவை. ஆனால் சிற்றெல்லையில் இவை யாவுமே ஒரே புள்ளியாய் விடுவதால் சமமாகி விடுகின்றன! இடக்கணக்கியலின் அமைதிகள் இவ்வாறு மாறா அமைதிகளல்ல, மாறுபடும் அமைதிகளாய் விடுகின்றன! சிந்தனையின் இவ்வெல்லைகளில் சிந்திப்பவர் சிந்தனையே சுழல்கிறது. தலை தடுமாறுகிறது. உலகம் உருண்டை என்ற மெய்ம்மை ஒரு சிலவே - அதுவும் இடக்கணக்கியல் என்ற ஓர் அறிவுத்துறை சார்ந்த புரட்சிகளில் சிலவே இவை. உலகம் உருண்டை மட்டுமல்ல, அது உருண்டோடுகிறது, சுழல்கிறது! இச்சுழற்சியடிப்படையான கருத்துப் புரட்சிகள் இன்னும் பல, எத்தனையோ பல! இரண்டு உண்மைகளும் இடக்கணக்கியல் துறையே யன்றி பிற பல துறைகளில், வாழ்வின் அடிப்படைக் கருத்துக்களிலும் நம்பிக்கைகளிலும் கோட்பாடுகளிலும் புதியதாகக் கிளப்பும் கருத்துப் புரட்சிகள் இன்னும் எவ்வளவோ மாயமானவை எதிர்பாராதவை. இந்த இரண்டு பேருண்மைகளில் முழு ஆழ அகல விரிவுகளைத் துருவி ஆராய்ந்து, அவற்றின் மூலம் நம் புதிய அறிவியலூழிக்கே ஒரு புதுத்திருப்பம் உண்டு பண்ணியவர், புதிய அறிவியலூழி கடந்து, இன்னொரு புத்தம்புதிய அறிவிய லூழிக்கே வழிவகுத்த பெரியார் ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அவர் பகுத்தறிவூழியின் உச்ச உயர் முகடேறி நின்று, மெய்யறிவூழியின் கனவார்ந்த முகிற்படலங்களில் மூழ்கிக் குளித்து, நம்மையும் அத்திசைக்கு வரும்படி அழைப்பு விடுத்துச் சென்றவர் ஆவர். தம் மெய்யறிவாற்றலால் அவர் நுனித்துணர்ந்து கண்ட முழு மெய்ம்மையின் உருவரைத் தோற்றமே தலைசிறந்த அறிஞர் களின் அறிவைத் தலைசுழல வைப்பதாகும் என்னலாம். நம் நிலவுலகம் ஓர் உருண்டை. நம் உள்ளத்தால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அவ்வளவு மாபெரிய உருண்டை அது. ஆனால் உருண்டை வடிவாயிருப்பது நிலவுலகம் மட்டுமன்று - இதை ஒரு சின்னஞ்சிறிய அணுக்கூறாகக் கொள்ளுமளவு பேரளவான பாரிய இயற்கையே அதனினும் எல்லையற்ற பேரளவான ஒரு மாபேருருண்டை தான்- இதை நம் உளங் கொளக் காட்ட முற்பட்டுள்ளார் அறிஞர் ஐன்ஸ்டீன்! இது மட்டுமோ? நம் நிலவுலகம் சுற்றுகிறது. நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அவ்வளவு நெடுநீள வட்டமாக அது சுற்றிச் சுழல்கிறது. ஆனால் இங்கும் சுழல்வது நிலவுலகம் மட்டுமன்று. அதை ஒரு சுழலும் அணுக்கூறாக, சுழித்துச் சுழன்றோடும் சிறுதூசாகத் தன்னகம் கொள்ளுமளவு பாரித்தகன்ற மாபேரியற் கையே சுற்றிச் சுழன்று கொண்டு தானிருக்கிறது - இது அறிஞர் ஜன்ஸ்டீன் காணும் மெய் கடந்த மெய்ம்மைக்காட்சி! உருவம், வடிவம், பண்பு, இயக்கம் ஆகியவை பற்றிய நம் கருத்துப்படி `எங்களுக்கெல்லாம் அடிப்படைப் பண்பு நேர்வரை யன்று, வட்டமே - நேர் இயக்கமன்று, சுழற்சியே’. என்பது நம் புத்தூழி முதல்வர் காட்டும் புதுமை, புதுமெய்ம்மை. இம்மெய் யறிவின் வழிநின்று, `உலகம் சுற்றுகிறது' என்ற உண்மையின் முழுவடிவாக இயங்கும் ‘வட்டத்தின் வாய்மை’களை, `உருட்சியின் உள்ளார்ந்த உண்மைத் தெருட்சி'களை `சுழற்சியின் புரட்சி' களை நாம் மேலும் ஆராய்வோம்! 2. மாயத்தின் மாயம் “உலகே மாயம், நாம் காணும் உலகே மாயம்! வாழ்வே மாயம், வாழ்வில் நம் உணர்வே மாயம்! வாழ்வே மாயம்..............! உலகே மாயம்..........!" உலக வாழ்விலேயே கசப்படைந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் வெறுப்பு வேதாந்திகள் ஒரு புறம் இப்பாடலைப் பாடுவது கேட்கிறோம். மறு புறமோ வாழ்பவரின் ஓய்வு நேர இன்பக் காட்சியான நம் தமிழகப் புதுமைத் திரையிலும் இதே பாடல் செவிப்படுகிறது. பாடுபவர் உணர்ச்சிக் கேட்டினை இவ்விருமை நிலை நன்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழரின் அறிவார்ந்த உயிர்ப்பழமை மரபில் வந்த பாடல் இது. அதே சமயம் உயிர் மரபு கெடாது பாடப்பட்டால், அறிவார்ந்த மேலையுலகப் புதுமைக்கும் இது முரண்பட்டதன்று. அதற்கு நிறைவும் பொங்கல் வளமுமே தரத்தக்கது. ஆனால் அறிவார்ந்த பழமைப் பண்போ, அறிவார்ந்த புதுமைத் தொடர்போ அற்ற இடைக்காலப் போலிப் பழமை தன் உயிர்த் துடிப்பற்ற சோகக் குரலிலேயே இதைப் பாட முற்படுகிறது. இப்பாடலில் இடம் பெறும் `உலகு' `வாழ்வு' `உணர்வு' `மாயம்' ஆகிய சொற்கள் தமிழர் பண்டைய உயிரறிவு மரபில் வந்த கருத்துப் படிவங்கள். `உலகம்' உலவுவது, எல்லாவற்றுக்கும் உருத்தந்து நிலவுவது என்றும்; `வாழ்வு' இடையறாது நின்று நிலவி ஒன்று பத்தாகி என்றும் இடையறாது பெருக்கமுற்றுப் பொங்கல் வளம் காண்பது என்றும்; `உணர்வு' உண்மை அதாவது மெய்மை கடந்த மெய்மை நோக்கி உயர்வு நாடுவது என்றும்; மாயம் மறைத்துக் காட்டும் வண்ண ஓவியத்திரை என்றும் பொருள்படுவன. சிறப்பாக `மாயம்!' என்ற சொல் புதுமை, வியப்பு, மருட்கை என்னும் பொருள் தொடர்புகள் உடையது. இது பாடல் முழு மைக்குமே கிளர்ச்சியூட்டி, அதன் பல்லவியாகி, அப்பண்ணை எழுச்சிப் பண்ணாக்கும் திறமுடையது. ஆனால் இடைக்காலப் போலிப் பழமை இம்மாயத்தை `மாயை' யாக்கி, மாயையைப் `பொய்மை' என்றும் `இன்மை' என்றும் கொண்டு விடுகிறது. பொருள் மரபின் இக்குளறுபடியே பாட்டுக்கு அவலத்தொனி கொடுத்து அதைச் சோகக் குரல் வாய்ந்த அவலப் பண்ணாக்கி விடுகிறது. மாயம் மாயையல்ல - மாயம் வேறு, மாயை வேறு! பொய்மை இன்மையல்ல - பொய்மை வேறு, இன்மை வேறு. மாயை திரை, இயற்கையின் மறை திரை, மாயம் திரைக் காட்சி, திரையூடாகத் தென்படும் மெய்மையின் நிழலொளி வண்ணம். அது உண்மையை மறைப்பதன்று. திரையில் புதிர் எழுப்பி, புதுமை வியப்பார்வ உணர்வுகளின் மூலம் புத்தறிவு தூண்டுவது. அதுவே உயிருக்கு அறிவு, அறிவுக்கு உயிர் ஊட்டுவது. அறிவை உயிர் அறிவாக, சிந்தனையாகச் செயலாற்ற வைப்பது. மாயையும் மாயமும் இவ்வாறு மெய்மையை அடை வதற்குரிய வழிகள், வாயில்கள் - அவை பொய்மைகள் ஆகமாட்டா! உண்மையில், திரை கடந்து மாய உணர்வு மூலம் புத்தறிவு பெற்றவனுக்கு அப்புத்துணர்வு பெறாத முன்னை நிலை அறிவுதான் `பொய்மை' ஆகிறது. ஆனால் இங்கும் `பொய்மை' என்பதன் சரியான பொருள் `இன்மை' அன்று, `அன்மை'யே. முழுமெய்மை அல்லது மெய்மை கடந்த மெய்ம்மையாகிய உண்மையை அடைவதற்குரிய ஒரு படியே பொய்ம்மை. அதுவும் போலி மெய்ம்மையாகிய ஒரு முதற் படியேயாகும். மயக்கம், மருட்சி, மாறாட்டம்! இவையே மாயையின், பொய்மைத் தோற்றத்தின் படிகள். மாயம், மருட்கை, தெருட்சி! இவை புத்தறிவு அல்லது மெய்ம்மையின் மலர்ச்சிப் படிகள். மயக்கம், மருட்சி, மாறாட்டங்களினூடாகப் பொய்மை புரியவிழ்க்கிறது. மாயம், மருட்கை, தெருட்சிகளினூடாக மெய்மை இதழவிழ்க்கிறது. மாயம், மெய்ம்மையின் முகையரும்பு. மருட்கை அதன் நாளரும்பு அல்லது போது. தெருட்சியே அதன் நாள் மலர். பொய்மை நிலையில் உள்ள மருட்சிப் பண்பே, மாறாட்டத் தின் திகைப்பு மூலம் மாய உணர்வு ஊட்டப் பெற்று மருட்கை, அதாவது புத்தார்வ வியப்பு ஆகிறது. மருட்சிக்கும் மருட்கைக்கும் இடையேயுள்ள இந்த மலர்ச்சித் தொடர்பைத் தமிழில் அவற்றின் பொது வேர்ச்சொல்லான `மருள்' சுட்டிக் காட்டுகிறது. மயக்கமாகிய பொய்மையின் கட்டவிழ்க்கும் மருட்சியே புத்தறிவின் இதழ் அவிழ்க்கும் மருட்கையாகிப் புதுமை மணம் கமழ்கின்றது. மருட்சி, மருட்கை ஆகியவை மருளின் இரு தளங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. முன்னது கீழ்த்தளம். ஐம்புல உணர்வின் மயக்கறாதது. பின்னதே மேல் தளம். ஐம்புலங்கடந்த ஆறாம் புலன். அதாவது உள்ளத்தின் அறிவு நிலையாகிய சித்தத்தின் செயலால் அது மயக்கறுக்கத் தொடங்கிவிடுகிறது. மருளைப்போலவே உணர்வுக்கும் இருதளங்கள் உண்டு. மனித அறிவுக்கெல்லாம் மூலமாவது உணர்வே. இது கீழ்த்தள உணர்வு. இதையே தமிழர் உணர்ச்சி என்றும் குறிப்பர். இது அறிவை மறைப்பது, ஆனால் இன்ப துன்ப அலைகளால் அறிவைத் தூண்டுவது. அறிவுக்கு முற்பட்ட இக்கீழ்த்தளத்துக்கு எதிரான உணர்வை நாம் மெய்யுணர்வு என்கிறோம். இது அறிவின் பயன், அறிவுக்கு மேற்பட்ட தளம் ஆகும்! கீழ்த்தள உணர்வு இன்ப துன்ப அலைகளால் அறிவுக்கு வழி வகுப்பது போல, இது மாய மருட்கை அலைகளால் புத்தறிவு அல்லது சிந்தனைக்கும் மெய்யறிவுக்கும் வழிகோலுகிறது. இருதள உணர்வுகளான உணர்ச்சி, மெய்யுணர்வு ஆகியவற் றினிடையேயுள்ள மலர்ச்சித் தொடர்பை `உணர்' என்ற தமிழ் வேர்ச்சொல் குறித்துக் காட்டுகிறது. ஐம்புல உணர்வு தரும் மயக்கத்துக்கு அதைத் தொடர்ந்து எழும் மருட்சி, மாறாட்டங்களுக்கு, நம் நிலவுலகக் காட்சியே சான்று ஆகிறது. நம் நிலவுலகம் பம்பரம்போல் விரைவாக, வேகமாக, விசை வேகமாகச் சுற்றிச் சுழன்றோடுகிறது. ஆயினும் இந்த ஓட்டத்தை, விரைவை, விசைவேகத்தை நாம் நேரடியாகக் காண்பதில்லை, உணர்வதில்லை. இயற்கை அதன் மீது திரையிட்டு மறைக்கிறது. ஐம்புல உணர்வு அதனை நமக்குக் காட்டுவதில்லை. பம்பரத்துக்கு இருவகைச் சுழற்சிகள் உண்டு. அது தன்னைத்தானே `விர்ர்...... விர்ர்' என்று சுற்றிச் சுழல்கிறது. இவ்வாறு சுற்றிச் சுழன்று கொண்டே அது நிலத்தின் மீதும் வட்டமாகச் சுழித்தோடுகிறது. இவ்வியக்கங்களை நாம் அதன் தற்சுழற்சி, வட்டச் சுழற்சி என்னலாம். நிலவுலகத்துக்கும் இவ்வாறான இருவகைச் சுழற்சிகள் உண்டு. அது தன்னைத்தானே மணிக்கு 1000 கல் வேகத்தில் சுழல்கிறது. இவ்வாறு தன்னையே ஒரு சுற்றுச் சுற்றிவர அதற்கு 24 மணி நேரம் பிடிக்கிறது. இப்படிச் சுழன்று கொண்டே அது கதிரவனைச் சுற்றி வானவெளியில் ஒரு நெடுநீள வட்டமாகச் சுழித்தோடுகிறது. இச்சுழற்சியின் வேகம் தற்சுழற்சியின் வேகத்தை விடப் பன்மடங்கு பெரிது. ஏனெனில் அது நொடிக்கு 18ஙூ கல் அதாவது கணத்துக்கு 1,110 கல் அல்லது மணிக்கு 66,600 கல் வீதம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இவ்வேகத்தில் அது கதிரவனை ஒரு தடவை வட்டா காரமாகச் சுற்றிவர ஓர் ஆண்டு, அதாவது ஏறத்தாழ 365ஙு நாட்கள், திட்ப நுட்பமாகக் கணித்துரைத்தால் 365 நாட்கள், 5 மணி, 56 கணம், 56 நொடிகள் ஆகின்றன. நிலவுலகம் சுற்றியோடும் இந்நீள் வட்டத்தின் சுற்றளவு 58 கோடியே 38 இலட்சத்து 12 ஆயிரத்து 196 கல் தொலைவு ஆகும். அது நம் கற்பனையின் கற்பனைக்கும் எட்டாத் தொலை, எட்டாத் தொலை என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நிலவுலகின் சுற்றளவைவிட இது பல்லாயிர மடங்கு பெரிது. 23,000 மடங்குக் கும் மேற்பட்டது. வேகங் கடந்த வேகத்தில் இந்த இருவகைச் சுழற்சிகளிலும் நிலவுலகம் இரவு பகலாக, ஓய்வொழிவில்லாமல், என்றும், எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டேதானிருக்கின்றது. ஆனால் இங்ஙனம் விசை வேகத்துடன் சுழல்வது நிலவுலகம் மட்டுமன்று. அதனுடன் அதன்மீது வாழும் மனித இனத்த வராகிய நாமும் ஓய்வொழிவில்லாமலே உறங்கும்போதும், நடக்கும்போதும், நிற்கும்போதும், இருக்கும்போதும், செயலாற் றும்போதும் சிந்தனையிலாழ்ந்திருக்கும்போதும் சுற்றியோடிக் கொண்டே இருக்கிறோம். நம்முடனே நம்மைச் சுற்றியுமுள்ள உயிரினங்கள், மரஞ் செடி கொடிகள், மலைகள், காடுகள், பாலைவனங்கள், ஆறுகள், ஏரி குளங்கள், கடல்கள் - இயங்கும் பொருள்கள், இயங்காப் பொருள்கள் ஆகிய யாவுமே இடையீடின்றி வட்டமிட்டுச் சுழன்ற வண்ணமேயுள்ளன. இச்சுழற்சி நம் வாழ்வுடன் வாழ்வாக, எண்ணத்துடன் எண்ணமாக என்றும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நீரில் வாழ்ந்தும் நீரறியா மீன்போல, காற்று வெளியிலியங்கியும் காற்றை எண்ணிப்பாராத பறவை போல, நாம் நம் வாழ்வின் வாழ்வான, எண்ணத்தின் எண்ணமான இச்சுழற்சியியக்கத்தை உணர்வதில்லை. மிக மிகப் பெரிய பம்பரத்தின் மீது வாழும் மிக மிகச் சின்னஞ் சிறிய சிற்றெறும்பின் நிலை, சிறு தூசின் நிலை தான் நம் வாழ்வு. இதை நாம் உணர்வதில்லை, எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் இதை உணரத் தொடங்கியவர்கள் தான், இதை எண்ணிப் பார்த்துப் பிறரையும் எண்ணிப் பார்க்கத் தூண்டிய வர்கள் தான் தாம் பெற்ற இம்மாய உணர்வை எழுச்சிப் பாடலாகப் பாடினர். ஐம்புல உணர்வு மெய்ம்மை முழுவதையும் நமக்குக் காட்டுவதில்லை. அதன் ஒரு சிறு பகுதியை, சின்னஞ்சிறு பகுதியை, மிக மிகச் சிறு பகுதியையே நமக்குக் காட்டுகிறது. மேலும் நம் கண் முன் இருப்பதையே நாம் காண்கிறோம். பின்னால் உள்ளவற்றை, தொலைவில் உள்ளவற்றையல்ல. அருகிலுள்ள ஓசையையே நாம் கேட்கிறோம். அருகிலுள்ள மணமே முகர்கிறோம். மெய் அல்லது புறஉடல் மீது உறுத்து வதையே உணர்கிறோம். நாம் உணர்வது ஒரு சின்னஞ்சிறு பகுதி, உணராததே மிகப் பெரும் பகுதி என்பதை இவை காட்டுகின்றன. மிகச் சிறியவற்றை, மிகப் பெரியவற்றை நாம் காண்ப தில்லை. நாம் காணும் யானையை, மலையை எறும்பு காண முடியாது. எறும்பின் கண்ணை, அது காணும் சிறு தூசை, தூசினும் சிறிய அணுக்களை நாம் காண மாட்டோம். ஆயினும் கண்ணாடி மூலம் அத்தகையவை உண்டு என்பதை அறிகிறோம். இதுபோல நிறங்களில், ஒளியில், ஒலியில் மிக நுண்ணிய வற்றையும் நாம் உணரமாட்டோம். மிக மிகப் பெரியவற்றையும் நாம் அறிய முடியாது. ஐம்புலங்களில் ஒன்றும் பலவும் குறைந்த உயிரினங்கள் உண்டு. இக்குறைப்பட்ட புலன்கள் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு பகுதியை உயிருக்கு மறைக்கும் பண்புடையன என்று கூறத் தேவையில்லை. ஐம்புலன்களின் குறைபாட்டை இது நமக்கு வலியுறுத்திக் காட்டுகிறது. ஏனெனில் ஒவ்வொரு புலனும் காட்டும் குறை காட்சியையே ஐம்புலன்களும் காட்டக்கூடும். உயிர் மலர்ச்சியில் ஏற்பட்ட புலன்கள் ஐந்து - அவை கடந்த ஆறாம் புலனாகிய அறிவு இக்குறை தணிக்க உதவுவதன்றி நீக்குவதாகாது என்பதை நாம் காண்டல் வேண்டும். இது மட்டுமோ? ஒரு புலன் அறிவதை மறுபுலன் அறிய மாட்டாது என்பதையும் நாம் உளங்கொளல் வேண்டும். காற்று இயங்குவதை நாம் இலை அசைவால் காண்கிறோம். அது வீசுவதை நம் மெய் அதாவது உடல் உணர்த்துகிறது. ஆனால் கட்புலன் அதைக்காண நமக்கு உதவுவதில்லை. மனிதன் கண்டுணரும் உலகம் ஐம்பொறிக் காட்சிகளுக்குட் பட்ட உலகம். அதுவும் அவன் அருகிலுள்ள அவன் புலனள வைக்கு உட்பட்ட உலகம் மட்டுமே. இதற்கு அப்பாலும் இப்பாலும், உப்பாலும் எப்பாலும் அவன் அறியா உலகமே எல்லையற்றுப் பரந்து கிடக்கிறது. ஒளிக்கதிரின் வண்ணப்பட்டையில் நம் காட்சிக்குப் புலப்படுவன ஊதா, அவுரி நீலம், பச்சை, கடல் நீலம், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களே. இவற்றை அடுத்த இப்பால் ஊதா நிறத்தை (ரடவசயஎiடிடநவ) அப்பால் சிவப்பு வண்ணத்தை (iகேசய-சநன) நம் கண்கள் நமக்குக் காட்டுவதில்லை. இவற்றுக்கு அப்பாலும் இப்பாலும் உள்ள மிக நுண்ணிய, மிகப் பெரிய ஒளியலைகளையோ, ஒலியலைகளையோ, மின்காந்த அலைகளையோ நாம் புலனுணர்வாலறிய மாட்டோம். ஆயினும் கருவியாராய்ச்சி மூலமும் அவற்றின் செயலாலும் அறிவின் கணிப்பாலும் ஆராய்ச்சியாலும் அத்தகையவையும் உலகில் நாம் புலனுணர்வால் உணராப் பகுதியாய் இயங்குகின்றன என்பதை அறிகிறோம். வெப்பில் ஒரு குறிப்பிட்ட சிற்றெல்லையில் குறைந்த வெப்பு, அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட குளிர்ச்சி, ஒரு குறிப்பிட்ட பேரெல்லைக்கு மேற்பட்ட வெப்பு அல்லது சூடு ஆகியவற்றை நம் உடல் உணராது. ஏனெனில் இவ்விரு நிலைகளிலும் நாம் உணர்விழப்போம். ஒருவேளை உணர்வின் நிலைக்களனான உயிரையே இழந்து விடுவோம். புலன் காண்பது புல்லிது, சிறிது. அது காணாததே பெரிது என்பது இதனாலும் தெளிவாகிறது. ஐம்புல உணர்வின் இக்குறை காட்சியை நிறைகாட்சியாகக் கொள்வதே மயக்கம். ஐம்புல உணர்ச்சி இருப்பதைக் காட்டாதது மட்டுமன்று, இல்லாததைக் காட்டவும் வல்லது. வானவெளியில் இல்லாத நீலப்படலத்தை அது நீலவானமாகக் காட்டுகிறது. நீரில் காண முடியாத நீல நிறத்தை அது கடல் நீரில் காண்கிறது. கதிரொளியின் ஏழு வண்ணங்களை ஒரே வெள்ளொளியாகவும் அவற்றின் `இன்மை' அல்லது குறைபாட்டைக் கரிய நிறமாகவும் இருளாகவும் அது நம்மை உணரச் செய்கிறது. மழைவானில் அது வான வில்லின் காட்சியளிக்கிறது. இல்லாத பண்பை இருப்பவற்றுக்கு ஏற்றி அல்லது இருப் பவற்றின் பண்பை இல்லாதவற்றுக்கு ஏற்றும் ஐம்புல உணர்வின் இத்திறமே மருட்சி. சிறிய பொருளருகே பெரிய பொருள் மிகப் பெரிய தாகவும், பெரிய பொருளருகே சிறிய பொருள் மிக மிகச் சிறிதாகவும் தோன்றும். இதுபோலவே கருமையினருகே வெண்மை, வெண்மையினருகே கருமை தத்தம் பண்பிற் சிறந்து காணப்படும். தவிர கண்ணின் கோளாறு ஒன்றே பொருளின் எண், வடிவம், உருவம், பண்பு, தொலை ஆகியவற்றில் வேறுபாடும் மாறுபாடும் உண்டு பண்ணுவதுண்டு. காட்சியின் அணிமைச் செய்கைகளை நம் கட் புலன் உணர்வதே இத்தகைய உருவ, வடிவ, அளவை மாறாட்டங்களின் உதவியால்தான், இல்லாவிட் டால் நாம் எதிலும் நீள அகல அளவையை மட்டுமே காண்போம். உயரம் தொலை ஆகியவற்றைக் காணமாட்டோம்! ஓரிடத்தின் தோற்றத்தையும் ஒலியையும் பிறிதிடத்துக்கு மாற்றும் தன்மையுடையவை எதிரொளியும் எதிரொலியும். தேனீயின் இரைச்சலும் கொசுவின் இரைச்சலும் ஒரே வகை ஒலியானாலும், தேனின் இனிமையும் கொசுக்கடியின் நச்சரிப்பும் கேட்கும் காதுகளின் உணர்ச்சிகளை வேறுபடுத்துகின்றன. வெங்காயம் நாவில் இனிக்கும். மூக்கில் தான் கார்ப்பு உணர்வு உடையது. மூக்கைப் பிடித்துக்கொண்டு தின்றால் அது இனிமையுடையதாயிருப்பது இதற்குச் சான்று பகரும். ஆனால் மூக்கின் கார்ப்பு நாவின் கார்ப்பாகப் புலனுணர்வில் மாறு படுகிறது. புலன்கள் ஒன்றை மற்றொன்றாகப் பிறழ உணர்விக்கும் மாறாட்டங்கள் இவை. மயக்கம், மருட்சி, மாறாட்டம் ஆகிய இந்நிலைகளைப் பொருளிலும் பண்பிலும் காண்பதுபோல, இயக்கத்திலும் காணலாம். மணிப்பொறியில் நொடிமுள் தாண்டித்தாண்டிக் குதிப்பதை நாம் எப்போதும் எளிதில் காண்கிறோம். ஆனால் கணமுள்ளின் அசைவை அவ்வளவு தெளிவாகக் காணமுடியாது. மணிமுள் வகையிலோ அது இடம் பெயர்ந்துவிட்ட நிலைகளைத்தான் அவ்வப்போது காணமுடியுமே தவிர, இடம் பெயர்வதையோ அசைவதையோ பார்க்க இயலாது. அதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தால்கூட, நோக்குபவர் கண்ணையும் கருத்தையும் மறைத்து அது புதிய இடம் சென்றுவிடும். மூன்று முட்களும் ஒரே மூல விசையால் இயங்குபவையே. ஒரே இயக்கத்தின் மூன்று விசைப்படிகளே அவை. ஆயினும் விரைந்த விசையைப் பார்ப்பதுபோல, விரைவுகுறைந்த விசையைக் காணமுடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ் வேகம் குறைந்தால், வேகமோ, அசைவோ, இயக்கமோ, நம் கட்புலனுக்குச் சிறிதும் தென்படாது என்பதை இது காட்டுகிறது. இது இயக்கத்தின் நுட்பமாயம். இதற்கு நேர் மாறான மற்றோர் இயக்கமும் உண்டு. விளைவு வேகமாகி, வேகம் விசையாகி வளரும் போது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் நாம் வேகத்தை ஒரு சிறு அசை வாகக் கூடக் காணமுடியாது. பம்பரத்தின் உச்சவேகம் அது `நின்றியங்கும்' வேகமே. `நின்றியங்குகிறது' என்று நாம் கூறும்போது கூட, அது நிற்பதைத் தான் நாம் காண்கிறோமேயன்றி இயங்குவதைக் காண்பதில்லை. ஆனால் அது இயங்குகிறது என்று நாம் உணர்வதற்குக் காரண மான நிலை இந்த நிற்கும் நிலைதான். ஒருமுனை மீது அசை யாமல் நிற்பது பம்பரத்தின் இயல்பல்ல. இயல்புக்கு மாறாக அது நிற்பது கண்டே, அது உச்ச உருவத்தில் சுழன்றியங்குகிறது என்று நாம் உய்த்துணர்கிறோம். இவ்வுய்த்துணர்வின் விளைவாகவே அது `நின்றியங்குகிறது' என்று நாம் கூறுகிறோம். பம்பரத்தில் மட்டுமல்ல - சுழலும் மின்விசிறியில், வானூர்தியின் சுழல் பொறியில், உந்தகங்களின் விசை யாழியில் நாம் இதுபோலவே இயக்கத்தின் விசை மாயத்தைக் காண்கிறோம். ஆனால் இங்கே விசை நிலையில் உருளும் வடிவம்கூட மாறுபட்டு விடுகின்றன. சுழலும் பம்பரம் பம்பரமாகவே நின்றியங்குகிறது. ஆனால், இங்கே சுழலும் அலகுகள் அசைவாகவே நின்றியங்க வில்லை. அலகுகளின் சுழல் வட்டம் வட்ட வடிவமான ஓர் ஆவியுருவாக அல்லது நிழலுருவாகக் காட்சியளிக்கின்றது. இங்கே இயக்கத்தை நமக்குக் காட்டியுணர்த்துவது நின்றியங்கும் நிலையல்ல. இந்த வடிவ மாற்றம், உருமாற்றமே. பம்பரத்துக்கு இயல்பல்லாத நின்றியங்கும் நிலையால் அதன் இயக்கத்தையும் உய்த்துணர்வதுபோல, அலகுகளுக்கு இயல்பல்லாத நிறைவட்ட வடிவும் ஆவி நிழலுருவும் அவற்றின் விசையியக்கச் சின்னமாக, விசையமைதியாக அமைகின்றன. இயக்கத்தின் நுட்ப மாயத்தில் காணாத நிலை மாற்றத்தையும் வடிவ உருமாற்றத்தையும் நாம் இயக்கத்தின் இந்த விசைமாயத்தில் காண்கிறோம். ஆனால், நிலவுலக இயக்கத்தின் மாயத்தோடொத்த மாயங்கள் இவையல்ல. காண்பவரும் காட்சிப் பொருளும் தனித்தனியாக இயங்கும் நிலையே - சிறப்பாகக் காண்பவர் இயங்கும் நிலையிலே தான் அதனை உணர்தல் கூடும். இத்தகையவையே நிலை மாற்றம், வடிவ உருமாற்றங்கள் மட்டுமன்றி, பொருள் மாறாட்டம், பண்பு மாறாட்டம், இயக்க மாறாட்டம் ஆகியவற்றையும் உண்டு பண்ண வல்லவை. நாம் ஊர்தியில் அமர்ந்து செல்லும்போது ஊர்தி ஊர்வதாகவே நமக்குத் தெரிவதில்லை. ஊர்தி தவிர மற்றெல்லாப் பொருள்களும் ஊர்வதாக, விரைவதாகத்தான் தோன்றுகிறது. இங்கே இயக்கம் மறைக்கப்படுவது மட்டுமன்றி, மாறாட்டமே செய்யப்பட்டிருக்கிறது. ஊர்தி இச்சமயம் நம் காட்சிக்கு இலக்காவதில்லை. இது இயல்பே. ஏனெனில் நாம் அதன் ஒரு பகுதியாய் விட்டோம். அதிலிருந்தே காண்கிறோம். ஆனால் காட்சிமாயம், இம்மறைப்புடன் நில்லாமல் நம் ஊர்தியின் இயக்கத்தை ஊர்தி தவிர மற்றெல்லாப் பொருள்கள்மீதும் ஏற்றி, இயங்கு பொருள்கள் மட்டுமன்றி, இயங்காப் பொருள்களும் இயங்க முடியாத பொருள்களும் கூட இயங்குவதாகக் காட்சி தருகிறது. இங்கே ஒரு பொருளின் இயக்கம் மற்றொரு பொருளுக்கு - இயங்கும் பொருளின் இயக்கம் இயங்காப் பொருளுக்கு மாற்றப்படுவது மட்டுமன்று. இயக்கத்தின் திசையும் போக்கும் பண்பும் யாவுமே மாறுபடுகின்றன. ஊர்தியின் போக்கு மற்றப் பொருள்களுக்கு மாறும்போது, ஊர்தியின் முன்னோக்கிய வேகம் மற்றப் பொருள்கள் வகையில் பொதுவாகப் பின்னோக்கிய வேகமாகத் திசை மாற்றம் பெறுகிறது. அத்துடன் அருகிலுள்ள பொருள்கள் வேகமாகவும், தொலைவிலுள்ள பொருள்கள் படிப்படியாகக் குறைவேகமாகவும் இவ்வாறு பின்னோக்கி ஓடுகின்றன. இவைமட்டுமல்ல. கூர்ந்து கவனித் தால், ஒரு குறிப்பிட்ட அளவு தொலைவுக்கு அப்பால், பொருள் கள் முன்னோக்கியே செல்வதையும், தொலை செல்லுந்தோறும் மிகு வேகமாகவே முன்னோக்கிச் செல்வதையும் காண்போம். மொத்தத்தில் ஊர்தியிலிருந்து வலப்புறம் எல்லாம் இடஞ்சுழித்தும், இடப்புறம் எல்லாம் வலஞ்சுழித்தும் பின்னோக்கி வட்டமிட்டோடுவதாகவே தெரியவரும். பொருள், பண்பு, இயக்கம், திசை ஆகிய வகைகளில் நாம் வாழ்வில் காணும் மற்ற மயக்கம், மருட்சி, மாறாட்டங்களெல் லாம் மாயைகளல்ல, மாயத்தோற்றங்கள். ஏனென்றால் இவை தோற்றங்கள் மட்டுமே என்பதை நாம் அனுபவத்தால் அறிவோம். ஆனால் நிலவுலக இயக்கத்தில், வாழ்க்கையில் காணும் தோற்றங்களை நாம் பொதுவாக மாயமாகக் கொள்வதில்லை; மெய்மையாகவே கொண்டு விடுகிறோம். இந்நிலையே மாயை யாகும். இது சார்ந்தவையே பொய்மை நிலைக்குரிய மயக்கம், மருட்சி, மாறாட்டங்கள். அறிஞர் அறிவும் ஆராய்ச்சியும் இம் மாயத் திரையிலே மெய்மையின் நிழலொளி கண்டு இம் மயக்கம், மருட்சி, மாறாட்டங்களையே மாயம், மருட்கை, தெருட்சி களாக்கி வருகின்றன. மாயம், மருட்கை ஆகிய உணர்வுகளின் வழி; உலகம், வாழ்வு ஆகியவற்றின் புதுமை இன்பம் காண்பவரே கலைஞர், கவிஞர். அவ்வழி தெருட்சி பெறுபவர்களே புத்தறிவுக்கு வழிகாணும் மெய்யறிவாளர். அதனைப் பிறருக்கும் அளிக்க அம்மெய்யறிவாளர் பயன்படுத்தும் அறிவுக் கருவியே பகுத் தறிவு. இது அறிவை உயிரறிவாக்கி, சிந்தனையைத் தூண்டி, மெய்யறிவின் திசையில், பொங்கல் புத்தறிவின் வழியில் செல்ல விடுகிறது. தெருட்சி தரும் மெய்யறிவு கதிரொளி போன்றது. வாழ்க்கைமீது படர்ந்த அதன் நிலவொளியே மெய்யுணர்வு. இவற்றின் நிழற்பண்புகளாகவே சமுதாயத்தில் அருளும், அறிவும் தனிமனிதர் வாழ்வில் காதலும் அன்புமாக மிளிர் கின்றன. மெய்யறிவு, மெய்யுணர்வு ஆகிய இரு பண்புகளும் சிந்தனையின் சீரார்ந்த செல்வங்கள். மெய்யுணர்வின் ஒளி கண்டவரையே நாம் அருளாளர், கலைஞர் என்கிறோம். மெய்யறிவின் வழி நிற்பவரையே பகுத்தறிவாளர் என்று கூறுகிறோம். இவ்விருவர் வழியும் செல்லாதவர்களே `உலகே மாயம், வாழ்வே மாயம், உணர்வே மாயம்' என்ற பாடலின் பொருள்மரபும் உணர்ச்சி மரபும் காணாது அவலச்சுவைபட அதைப் பாடுவர். அவ்வாறு பாடாமல், `மாயம்' என்ற சொல்லை அடிதோறும் மேலெழுந்து செல்லும் தொனியுடைய பல்லவி யாக்கி, புதுமைக் கிளர்ச்சியுடன் அதை எழுச்சிப் பண்ணாகப் பாடியவர் உண்டு - பண்டைத் தமிழகத்தில் உண்டு. இத்தகையவர்களே சங்கங்கண்ட சான்றோர். சங்கங்கண்ட பண்டை உலகம் பழந்தமிழகம். அது கண்ட மெய்யறிவூழியின் கலைமுகட்டில் உலவியவர் முப்பால் முதல்வர். பகுத்தறிவின் பாலமிழ்தமான முழு மறை தந்த மூவா முனைவர் அவர். மாயத்தின் இயல்பும் மருளின் தன்மையும், மருள் நீக்கிய பொருள் அல்லது மெய்ம்மையின் சிறப்பும் விளக்குவதா யமைந்துள்ளது அம்முப்பால் முதுமறையின் ஓர் அழகிய குறட்பா. `பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு' மயக்கம், மருட்சி, மாறாட்டம் ஆகிய பொய்மைப் பண்புகளின் இயல்பை இவ் வாய்மொழி உள்ளங்கை நெல்லிக் கனியாக நமக்கு விளக்குகிறது. `மெய்ம்மை யல்லாதவற்றை மெய்ம்மை என்று பிறழ உணரும் பொய்ம்மையாகிய மயக்கத்தால், மனிதப் பிறப்பு வீணான பிறவியாய்க் கழிந்துவிடும்' என்பதே இம் மூலப் பழமறை வாசகம் தரும் இயல்பான முழுப்பொருள். மேலீடாகப் பாவின் சொற்களை வாசிப்பவர்க்குக்கூட இம்முழுப்பொருளின் சாயல் விளக்கமடையாமல் போகாது. ஆயினும் வலிந்தேனும் தம் போலிக்கருத்தை எங்கும் காண விழைகிற, கண்டுவிடுகிற, அறிவும் பண்புமில்லாத இடைக்கால, நம்காலப் போலிப்பழமை இத்திருமறை ஏட்டின் விளக்கத்துக்கு மருள் உரையாகிய உறைதிரையிட்டு, அறியாமை இருளே காண்கின்றது. அதன் மருள் உரை இது: "மனிதப் பிறவியே, உலக வாழ்வே, மாணாதது - சிறப்பில் லாதது, பொய்மை, அதாவது இன்மை காண்பது. ஆதலால் அது காணும் உலகமே, வாழ்வே பொய்யானது, இல்லாதது!" அந்தோ! திரைமறைவில் ஒளிகாட்டித் தெள்ளமுதம் தரவந்த சிந்தனையின் செல்வரை, இப்போலிப் பழமை யாளர்கள் திண்ணை வேதாந்தம் பேசிப் புலம்பவைத்து விட்டனர்! அறிவுக்கு அறிவு விளக்கம் தரவந்த ஆன்றோர் வணங்கும் தெய்வத்தை, அறியாமை விளக்கம் தரும்படி செய்து விட்டனர்! பிறப்பின் பயனை முழுமையாக்க வந்த பழந்தமிழ் அறிவு மரபின் முதல்வரான பொதுமறைப் போதகர், `பிறப்பே மாணாதது, பயனற்றது, சிறப்பற்றது' என்று கூறுவது எவ்வாறு? மனிதர் காண்பதெல்லாம் பொருளற்றதெனின், பொருளா வது தான் எது? பொருளாவது காணாப்பொருளாகிய கடவுளெனின் `அந்தோ! காண்பதுவே பொய், இல்லாதது என்றால் காணாதது எம்முறையில் மெய் என்று மெய்ப்பிக்கப்படும்?' நம் அறிவூழியின், பகுத்தறிவூழியின் முகட்டில் நிற்பவர் ஐன்ஸ்டீன் என்பதை முன் இயலில் கண்டோம். ஆனால் இவ்வூழியினும் உயிர்ப்புடைய, இதனைத் தொலைவிலிருந்தே தோற்றுவித்த மூலமரபுக்குரிய ஒரு தொல்பழங்காலச் சிந்தனை யூழியின் சிகரத்தில் நின்றவர், நின்று முக்கால உலகையும் முழுமையாகக் கண்டவரே திருவள்ளுவர். அவர் மெய்யுணர் வின், அருள் நெறியின் வழி நின்று, அவர் பழந்தமிழ் மரபே கண்ணாகக் கொண்டு, ஐன்ஸ்டீன் அளித்த அறிவு விளக்கக் கண்ணாடியிட்டு, இயற்கையின் திரைவிலக்கி, அதன் மாயத்தின் மாயத்தை, மாய ஒளியை நோக்கி நம் அறிவில் உயிர் மலர்ச்சி காண்போம். 3. பறக்கும் குதிரை பறக்கும் குதிரை! பறக்கும் உயிரினம் குதிரையன்று, பறவை! ஆயினும் `பறக்கும் குதிரை' என்று கூறுகிறோம். `பறக்கும் குதிரை' உருவைப் புனைந்து கற்பனை செய்கிறோம். உச்ச வேகத்தில் செல்லும் குதிரை பறப்பதுபோலத் தோற்றக்கூடும். ஆனால் அது பறக்க முடியாது, அதற்குச் சிறகு களும் இல்லை. எனினும் அதன் உருவுக்குச் சிறகுகள் இணைத்து, உச்ச வேகத்தின் அறிகுறியாக நாம் `பறக்கும் குதிரை'யின் ஒய்யாரப் படத்தையே பயன்படுத்துகிறோம். நம் நாள்வரை - நம் நாளிலேயே அது ஒரு கலைச் சின்னம், வாணிக விளம்பரச் சின்னம் ஆகியுள்ளது. உச்ச வேகத்தில் கூடக் குதிரை பறப்பதில்லை, பறப்பது போலத் தோற்றம் மட்டுமே தருகிறது. ஆனால், பறவைகள் உண்மையிலேயே பறக்கின்றன. அப்படி யிருந்தும் வேகத்தின் உரு மாதிரியாகப் பறவை பயன்படுத்தப் பெறவில்லை, குதிரை அல்லது `பறக்கும் குதிரை'யே பயன்படுத்தப் பெறுகிறது. இயல்பாகவே பறக்கும்பறவைகளை விட்டு விட்டு, பறக்காத குதிரை பறப்பதாக, சிறகற்ற குதிரை சிறகுடையதாக இங்கே வலிந்து கற்பனை செய்யப்படுகிறது. இது ஏன்? குதிரை வேகத்தைவிட விரைந்த வேகங்களை இன்றைய உலகம் செயல் துறையிலேயே கண்டுள்ளது. இயற்கையிலோ இன்னும் எவ்வளவோ பாரிய வேகங்கள் உண்டு - மிகப் பெரிய வேகங்கள், நாம் கற்பனை செய்து காண முடியாத வேகங்கள் இன்று இயல் நூலாரால் கண்டு கணித்து அளவையிடப் பட்டுள்ளன. ஒளி வேகம், மின் வேகம் இத்தகையன. இவை சரி ஒப்பான வேகங்களேயாதலால், இரண்டையும் ஒளி வேகம் என்றே குறிக்கலாம். அது நொடிக்கு 1,86,200 (ஓர் இலட்சத்து எண்பத்தாறாயிரத்து இருநூறு) கல் தொலை வீதம் விரைவதாக `நூலறி புலவோர் நுண்ணிதிற் கணித்து' உணர்த்துகின்றனர். இந்த வேகத்தை நாம் எண் இலக்கக் குறியீடுகளால் தாளின்மீது எழுதிக்காட்டத்தான் முடிகிறதே தவிர, மனத்தால் எண்ணிப்பார்க்க, அறிவால் மதிப்பிட்டுக் காண முடியாது. கணத்துக்கு இத்தனை கல் தொலைவு, மணிக்கு இத்தனை கல் தொலைவு என்று பெருக்கிப் பார்ப்பதானால், பெருக்குபவர் மனம் சலிப்புறும் - எழுதுபவர் கைகள் சோர்வுறும் - எழுதிய இலக்கங்கள் தாளை நிரப்பும்! ஆனால், அத்தொகையை மனித அறிவு பற்ற முடியாது, மனிதர் உணர்வு கொள்ள முடியாது. கற்பனை கடந்த இந்த வேகத்தைக்கூடக் கலைஞர் மனக் கண் முன் கொணர எண்ணும்போது, பறக்கும் குதிரைகளின் உருவில்தான் அவற்றைக் காட்டுகின்றனர். இது மட்டுமோ? இயல் நூல் அறிவின் பயனாக இயங்கும் இயந்திர ஆற்றலின் அளவையை மேலையறிஞர் தம் மொழிகளில் இன்னும் `குதிரை ஆற்றல்' அல்லது `பரித்திறம்' (ழடிசளந யீடிறநச) என்றுதான் குறிக் கின்றனர். மற்றும் குதிரைகளால் ஈர்க்கப்பட்ட பண்டைக் காலத் தேரின் (ஊயச) பெயரே இன்னும் விசைக்கலத்தின் (ஆடிவடிச உயச) பெயராக மேலை மொழிகளில் வழங்குவது காணலாம். குதிரையும் `பறக்கும் குதிரை'யும் இங்ஙனம் பொது மக்கள், கலைஞர், அறிஞர் ஆகிய முத்திறத்தார் கற்பனைகளையும் முற்றிலும் எவ்வாறு கைப்பற்ற முடிந்தது? கற்பனை, கலை, அறிவு ஆகிய மூன்று தளங்களிலும் `பறக்கும் குதிரை' வடிவம் எவ்வாறு வெற்றிகரமாகப் பறந்து முன்னேறியுள்ளது? மொழி, கலை, அறிவுத்துறை ஆகியவை இன வாழ்வின் மூன்று வளர்ச்சித் தளங்கள். `பறக்கும் குதிரை' பற்றிய கற்பனை இம் முத்தளங்களின் நடுநாயகத் தளமாய் அமைந்து, மற்ற இரு தளங்களையும் இணைத்து, முத்தளங்களையும் அளாவி யுள்ளது காணலாம். முத்தள வாழ்வே முழு இன வாழ்வு, இனமொழி வாழ்வு. ஆதலால், `பறக்கும் குதிரை'யின் கற்பனை; இனவாழ்வு, மொழி வாழ்வு ஆகிய இரண்டின் பொது எல்லைக் கோடாக நின்று நிலவுகின்றது. நடக்கிறது, ஓடுகிறது! பாய்கிறது, பறக்கிறது! மொழித்தளத்தில் இயலுலகில் காணப்படும் வேகங்களைப் படிப்படியாக உயர்வுபடுத்திக் காட்டும் சொற்கள் இவையே. ஓடுவதில் குதிரையும் பறப்பதில் பறவையுமே உயிரின உச்ச வேகங்களின் உருமாதிரிகளாகியுள்ளன. இயற்கையாக மொழி செல்லும் எல்லை இது, இது கடந்து மொழி இயல்பாகச் செல்வதில்லை. இக்காட்சி யுரைகளுடன் கவிஞர், கலைஞர் அமை வதில்லை. அவர்கள் குதிரையும் தேரும் நிலம் பாவாமலே தாவுகின்றன, பாய்கின்றன என்பர். அத்துடன் பறவைகளின் இயல்பை முற்றிலும் குதிரைமீது ஏற்றி, குதிரைகள் பறக்கின்றன என்பர். அவற்றைப் `பறக்கும் குதிரை' என்றே சிறகுகளுடன் உருவகம் செய்து காண்பர். இதுவே உயிர்க்கலை, காட்சிக்கலையின் எல்லை எனலாம். ஏனெனில் மொழி, கலை, அறிவுத்துறை ஆகிய மூன்று தளங்களில் அது நடுத்தளத்தில் தோன்றிய தாயினும், இனத்தின் முழுப் பரப்பாகிய மொழியளாவி, அதன் உச்ச உயர்முகடாகிய அறிவுத்துறையிலும் சென்றெட்டியுள்ளது. கட்டற்ற கற்பனைக்கலை, இனத்தின் வேர் முதலாகிய மொழியிலோ, அதன் உச்ச உயர் முகடாகிய அறிவுத்துறை யிலோ சென்று பரவாத புறக்கலை, இவ்வெல்லை கடந்தும் கற்பனையை ஓட விடுவதுண்டு. கற்பனை வேகத்தில் கடுகிச் சென்றன! கற்பனையும் பிற்பட முற்பட்டு முடுகின! கற்பனை இங்கே கற்பனையின் கற்பனையாகி, நிழலின் நிழல்போலப் பொருண்மையும் சாரமும் அற்றதாகி விடுகிறது. அத்துடன் இதற்குமேல் கற்பனை செல்ல முடியாது என்ற நிலையடைந்து, அது சிறகொடிந்த கற்பனையாகி விடுகிறது. இக்கற்பனைகள் யாவும் வருணனை புனைந்துரைகளாக, மிகையுரை அழகுரைகளாக மட்டுமே செயற்படுபவை. அவற்றுக்குப் பின்னணியாக ஒரு புதிய உலகையே - புதியதோர் இயற்கையைப் பின்னணியாகக் கொண்ட புதியதொரு வாழ்வையே - படைத்து உருவாக்கிக் காட்டும் உயர்தள உயிர்க் கலைஞர்களும் உண்டு. அவர்கள் தம் கற்பனைக் கண்ணால் நாம் காணாதது கண்டு, அவற்றைத் தம் கண்கொண்டே நாமும் காண வைத்து விடுகின்றனர். அவர்கள் படைப்புக்கள் மாயப்படைப்புக்கள். டடட மாய விளக்கு! மாயக் கம்பளம்! பறக்கும் தேர்! மாயக் குதிரை! அராபிக் கதைகளின் மாய அழகுக்குரிய மாயக் கற்பனைகள் இவை. கதைகளுக்கு இவையே எதிர்பாராத் திருப்பங்கள், வியப்பார்வங்கள், அவாத்துடிப்புக்கள், உணர்ச்சி நயங்கள் அளிக்கின்றன - வாசகர்கள் நிலவுலகையே மறக்கும்படி செய்து, புதியதொரு நிலவுலகில், புத்தம் புதியதொரு மாய உலகில் மிதக்கும்படி செய்பவை இவை. நாகரிகமற்ற இனங்களுக்கு அல்லது நாகரிக வளம் பெறாத ஊழிகளுக்குரிய தெய்வீகப் பழங்கதைகளிலே, சமஸ்கிருத, உரோம, கிரேக்க புராணங்களிலே, இதிகாசங்களிலே இவற்றைப் போன்ற நிகழ்ச்சிக் கூறுகளை நாம் காண முடியாதென்றில்லை. ஆனால் அராபிக் கதைகளில் நாம் காணும் மாயக்கலைத் துடிப்பை, இன ஆர்வத்தை, இயல்பான உணர்ச்சி மாயத்தை நாம் இவற்றில் சிறிதும் காண முடியாது. இவ் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? அராபிக் கதைகளில் மட்டும் கண்டுணரப் பெறும் இந்த இயல்பான மாயத்தின் மறைதிறவு யாது? அராபிக் கதைகளின் கலை உயிர்க்கலை. ஏனையவை கட்டற்ற, சிறகொடிந்த கற்பனைக் கதம்பக் கூளங்கள். உயிர்க் கலை என்பது என்ன? ஏனையக் கலையிலிருந்து அது எவ்வகையில் வேறுபடுவது? கனவுகள், கற்பனைகள் இயல்பாக நனவிலிருந்து எழுபவை; நனவின் அவா நிழலாக, ஆர்வச் சாயலாக அமைபவை. அவை இயற்கையிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் இன ஆர்வத்தால், சிலசமயம் நிறைவேறாத அல்லது நிறைவேற முடியாத மனித இன அவாக்களால் இழைத்துப் பின்னப்படு பவை. நனவின் கனவாக அல்லது கனவின் நனவாக எழுந்து, அவை இயற்கையுடனும் வாழ்வுடனும் பெரிதும் ஒத்திசைந்து, அவாத்தளத்தின் பல்வண்ண ஒளி நிழல் படிவங்களால் மட்டும் அவற்றினின்றும் வேறுபடுபவை. இவ்வேறுபாடே அவற்றின் மாயக் கவர்ச்சிக்கும் இனநலத்துக்கும் வழிகோலுவதாய மைந்துள்ளது. ஏனெனில் அவை இனநலத்தின் கனவாகக், கற்பனையாகத் தோன்றி, நனவிலும் வாழ்விலும் மேலும் இனநலம் வளர்ப்பவை ஆகும். அராபிக்கதைகளின் உயிர்க்கலை இத்தகைய இயல்பான கனவு கற்பனைகளால் புனைந்துருவாக்கப்பட்ட பன்மணிப் பதக்கம். அது கனவுகளின் பூங்காவாக, கற்பனைகளின் கனிமரக் காவனமாக இயங்குவதன் காரணம் இதுவே. எல்லாக் கனவுகளும் கற்பனைகளும் இத்தரப்பட்ட வையல்ல. பேய்க் கனவுகள், பித்தர் கற்பனைகள் இவற்றுக்கு நேர்மாறானவை. இவை உடல் கோளாறு, மூளைக்கோளாறு - நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பு - வரம்பிகந்து சமநிலை மீறிய தன்னலம், தன் முனைப்பு, பேரவா ஆகியவற்றின் பயனாய் எழுபவை. உடல் நலிவிலும் உளநலிவிலும் இனநலிவிலும் பிறந்த இவை அந்நலிவுகளையே வளர்க்க உதவுகின்றன. தெய்வீகப் பழங்கதைகள், புராண இதிகாசங்கள் பெரும் பாலும் இவைபோன்றவை - இயற்கையுடனோ வாழ்வுடனோ பொருந்தாத உருவிலாக் கற்பனைத் துணுக்குகளின் கதம்ப கூளங்கள் அவை. அவற்றில் கனவு நனவுடன் முரண்படுவது. கற்பனை இயற்கை கடந்தது மட்டுமல்ல, இயற்கை மீறியது. அது மட்டுமன்று. கனவுகளும் கற்பனைகளும் தம்முள் தாமே இசைவனவல்ல, முரண்படுவன. தெய்விகப் பழங்கதைகளை விட, புராண இதிகாசங்களை விடப் பழமையானவையல்ல, அராபிக் கதைகள் - அவை உண்மையில் பிந்தியவை, மிகமிகப் பிந்தியவை. ஆயினும் காலத்தால் முற்பட்டவற்றில் ஒரு சிறிதளவு கூடக்காணப் பெறாத கலைத்திறமும் மாயக்கவர்ச்சிப் பண்பும் பிற்பட்ட வற்றிலே முனைப்பாக இடம் பெறுவது காண்கிறோம். இது இயல்பான கால வளர்ச்சி, வரலாற்று மலர்ச்சி என்று ஆராய்ச்சியறிஞர் சிலர் கருதியமையக் கூடும். ஆனால் இக்கருத்துக் கற்பனையின் இயல்பான வளர்ச்சியையோ, பண்பின் மலர்ச்சியையோ, கலை மாயத்தின் மறைதிறவையோ ஒரு சிறிதும் விளக்கவல்லதன்று. உண்மையில் நாம் மேலே குறித்துக் காட்டியபடி, அவற்றிடையே உள்ள வேறுபாடு; காலவளர்ச்சி வேறுபாடோ, அளவு வேறுபாடோ கூட அல்ல. இவற்றிலும் அடிப்படையான வேறுபாடு - வகை வேறுபாடு, பண்பு வேறுபாடு ஆகும். ஒன்று உயிர்க்கலை மரபு சார்ந்தது. மற்றது ஏனைக் கட்டற்ற கற்பனை மரபு சார்ந்தது. ஒன்று கலை கடந்த கலை. மற்றது உருவாலும் பெயராலும் கலையெனக் குறிக்கப்படினும், அப்பண்பின் மரபுக்கு அயலானது. அராபிக் கூறுகளின் கவர்ச்சியில் நாம் இரு கூறுகளைக் காணலாம். ஒன்று புறக்கூறு, மற்றது அகக்கூறு. புறக்கூறு அதன் கலைமாயம்; அகக்கூறு அதன் கற்பனை மாயம். தெய்வீகப் பழங்கதைகளிலும் புராண இதிகாசங்களிலும் கதை கூறுபவரும் கேட்பவரும் இயற்கை கடந்த, இயற்கை மீறிய நிகழ்ச்சிகளையும் முரண்பாடுகளையும் நம்பியாக வேண்டும், ஏற்றமமைந்தாக வேண்டும். ஏனெனில் அந்நம்பிக்கை ஒன்றையே பின்னணியாகக்கொண்டு, அந்த ஒன்றை எதிர்பார்த்தே, வற்புறுத்தியே, அதை வளர்க்கும் எண்ணத்துடனேயே அவை கட்டுரைக்கப்படுகின்றன. அதே சமயம் நம்புபவர், நம்பாதவர் ஆகிய இருசாராருமே அதில் கலைப்பண்பு எதனையும் நுகர்தல் இயலாது. நம்புபவரிடையேகூட, கதை கூறுபவருக்கு மாறான வேறு இனத்தவர், சமயத்தவர், கோட்பாட்டாளர் அவற்றை ஏற்றமையவோ, அவற்றில் அக்கறை கொள்ளவோ முடியாது. அராபிக் கதைகளின் நிலை இவ்வெல்லா வகையிலும், முற்றிலும் வேறுபட்டது. அவற்றிலும் மாயமந்திரங்கள், இயற்கை கடந்த நிகழ்ச்சிகள் பின்னணியாகவே இயங்குகின்றன. ஆனால் அவை இயற்கை மீறியவையல்ல. இயற்கையுடனோ வாழ்வுடனோ உலகுடனோ தொடர்பற்ற தெய்விக அரு நிகழ்ச்சிகளல்ல. அத்துடன் தான் சிரிக்காமலே உலகைச் சிரிக்க வைக்கும் திறமுடைய நகைச்சுவை நாடக மன்னன் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனைப் போல, அராபிக் கலைஞன், தான் நம்புவதாகக் காட்டிக் கொள்ளாமலே, அந்நம்பிக்கையை வாசகர்மீது புகுத்தாமலே, வற்புறுத்தாமலே, மெல்லக் கதையுடன் கதையாக அந்நம்பிக்கையை வாசகர் உள்ளத்தில் அலைபாய விட்டு விடுகிறான். தன் கற்பனை தவிர மற்றெல்லாவற்றையும் வாசகர் வாசிக்கும் சமயத்திலாவது தற்காலிகமாக மறந்து விடும் படி செய்வதே (ளுரளயீநளேiடிn டிக துரனபநஅநவே யனே வநஅயீடிசயசல அயமந நெடiஎந) தலைசிறந்த கலைஞனின் கலைமாயம் என்பர், ஆங்கில நாட்டுக் கலையுலக மேதை காலரிட்ஜ். இத்திறம் அராபிக் கதைகளில் முழு நிறைவாக உண்டு. எனவே நம்புபவர், நம்பாதவர் மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டினரும், மொழியினரும், எந்தச் சமயத் தினரும் இனத்தினரும், எந்த நாகரிகப்படியிலுள்ளவரும், எந்தக் காலத்தவரும் அதில் முழுதும் ஈடுபட்டுத் தன்வயப்பட்டுவிட முடிகிறது. டடட அராபிக் கதைகளின் இந்த இருபெருஞ் சிறப்புகளுக்கும் காரணமான கவர்ச்சிக் கூறு புறக் கூறேயாகும். மனித இன முழுவதற்கும் - சிறப்பாக உலகெங்குமுள்ள, எக்காலத்துக்குமுரிய குழந்தைகள், சிறுவர், சிறுமியர், இளைஞர், நங்கையர் ஆகிய அனைவருக்கும் - உரிய ஆழ்ந்த உள்ளார்ந்த அவா ஆர்வங்களையே பின்னணியாகக் கொண்டு, அப் பின்னணியுடன் அராபியக் கலைஞன் தன் கற்பனைகளையும் கற்பனை நிகழ்ச்சிகளையும் இழைத்துப் பின்னியுள்ளான். இப்பின்னணியே அவன் படைத்த மாய உலகு. அது மனித இனத்தின் அவாத் தளத்தில் ஏற்றி வைக்கப்பட்ட புதிய இயற்கை யாய் அமைந்ததனாலேயே, எளிதில் கலைமாயம் உண்டு பண்ணு கிறது. அதே காரணத்தினாலேயே அது கால இடங்கடந்த உலகளாவிய உணர்வாட்சி உடையதாகவும் இலங்குகிறது. இக்கலை மாயத்துக்கு உறுதுணையாய் உதவுவது கற்பனை மாயமே. இதுவே கவர்ச்சியின் அகக்கூறு. கற்பனைகள் ஒன்றுக்கொன்று இசைவுடையதாய், இயற்கை கடந்தாலும் அவாத்தள அளவில் நின்று இயற்கையை மீறாதனவாய், அவாவின் உருவிலன்றி வேறு தெய்விக அரு நிகழ்வுகளின் தலையீடற்றனவாய் இயல்வதனாலேயே, கவிஞன் இக் கற்பனைகளையும் கற்பனை நிகழ்ச்சிகளையும் தன் மாயப் பின்னணிச் சட்டத்தில் எளிதில் இயல்பாக இழைத்துப் பின்ன முடிகிறது. கவர்ச்சியில் இங்ஙனம் உயிர்க் கூறாய் அமைவது புறக் கூறாகிய கலைமாயமன்று, அகக்கூறாகிய இக்கற்பனை மாயமே. அதுவே கலை மாயத்துக்கு அடிப்படை ஆதாரமு மாகும். டடட அராபிக் கதைகளுக்குப் பின்னும் உலகில் கதையிலக்கியம் உண்டு. ஆனால் அவை ஒன்று கட்டற்ற கற்பனைத் துறைக்கு இறங்கின. அல்லது இயற்கை கடந்த கற்பனையையே கை விட்டன. இதனால் அராபிக் கதைகளே கலையின் இத்துறை சார்ந்த உலக இலக்கியத்தில் உச்ச உயர் முகடாய் இன்னும் இலங்குகிறது. அதே சமயம் அத்துறையில் அராபிக் கதைகளே மனித இனத்தின் முதல் முயற்சி என்று கூறுதலும் அரிது. ஏனெனில் அத்துறையில் அது அப்பழுக்கற்ற முழு நிறை மலர்ச்சி எய்தியுள்ளது. கதைகளில் பூதங்கள் அமைத்த மாய அரண்மனைகளில் ஒன்றாகவே, அக்கதையோடும் மாயக் கலைப் படைப்பாய் அமைந்துள்ளது என்னலாம். அராபிக் கலைஞன் கலைக்குரிய முன் மாதிரிகளை, அவன் கற்பனை மூல மரபுகளைப் புராண இதிகாசங்களிலே தெய்விகப் பழங்கதைகளிலே காணல் முடியாது. அப்படி யானால் அவ்வுயிர் மரபின் பழமையை, அதன் தலையூற்றை நாம் எங்கே தேடுவது? அதன் கருமூல முணர்ந்து அக்கற்பனையின் தோற்ற விளக்கத்தை, மாயத்தின் உயிர்த் திறவை எங்கே காண்பது? சமஸ்கிருத புராண இதிகாசங்களுக்கு முற்பட்டவை புத்தகாலச் சாதகக் கதைகள். இவை சமஸ்கிருத மரபல்ல, அதைவிடப் பழமையானவை - கங்கை நாட்டின் புத்தர் காலத் தாய்மொழி மரபு சார்ந்தவை. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இவற்றுக்கும் ஆதாரமென்று கருதப்படும் மரபு ஒன்று உண்டு. அதுவே விந்தியமலைப் பகுதியில் மூவாயிர ஆண்டுகட்கு முன்னிருந்தே நிலவிய ஒரு தாய் மொழியின் வாய்மொழிக் கதை மரபு. இலக்கிய வடிவில் தொகுக்கப்பட்ட நிலையில், இதை நாம் பெருங்கதை மரபு என்கிறோம். இத்தொகுப்பு மூல உருவில் நம்மை வந்து எட்டவில்லை. அது என்ன மொழியில் எழுதப்பட்ட தென்பதே நமக்குத் தெரியாது. ஆயினும் இத்தொகுப்பின் மொழி பெயர்ப்புச் சிதைவுகளின் துண்டுத் துணுக்குகளான மூன்று பெருங்கதைப் படிவங்கள் சமஸ்கிருதத்திலும், ஒன்று தமிழிலும் உண்டு. இவற்றையும் உலகக்கதை இலக்கியத்தையும் ஆராய்ந்த உலக இலக்கிய ஆராய்ச்சியாளர், உலகின் புராண இதிகாசங்கள், கதையிலக்கியங்கள் ஆகிய அனைத்துக்கும் உரிய கருமூலப் படிவங்களை இதிலேயே காண்கின்றனர். இதுவே உலகக் கதையிலக்கியத்தின் தலையூற்று என்றும் துணிந்துள்ளனர். நமக்குக் கிட்டியுள்ள பெருங்கதைப் படிவங்களை ஒப்பிட்டுக் காண்பதன் மூலம், நாம் மூலத்தொகுப்புக்குரிய பண்புகளைப் பெரிதும் உய்த்துணர முடிகிறது. அது புராண இதிகாசங்களின் கட்டற்ற கற்பனைக்கூளமும் அல்ல. அராபிக் கதைகளின் கலை மாயம் முற்றிலும் உடையதுமல்ல. ஆனால் அதே சமயம் அது இரண்டையும் விடப் பழமையானது. இரண்டின் கதைகள் பலவற்றின் மூலப்படிவங்களையும், உலகப் பழங்கதைகள் பலவற்றின் மூலப்படிவங்களையும் அதில் ஆராய்ச்சி அறிஞர் காண்கின்றனர். அத்துடன் அராபிக் கதைகளின் கலைமாயத்துக்கு ஆதாரமான கற்பனை மாயம், புராண இதிகாசங்களுக்குரிய கற்பனைகள் ஆகிய இரண்டை யுமே அது இயற்கையையும் வாழ்வையும் நோக்கி இட்டுச் சென்று, கற்பனை மாயத்தையும் கற்பனைத் தோற்றத்தையும் விளக்க உதவுவதாக அமைந்துள்ளது. கட்டற்ற கற்பனைகளிலிருந்தே கலைக்கற்பனை தோன்றி யிருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆனால் இது தவறு என்றும், இரண்டும் வேறு வேறு வகை திரிபுகள் என்றும் மேலே காட்டினோம். எனினும் முழு உண்மை, இந்த இரண்டு கருத்துக்களும் கடந்ததேயாகும். கட்டற்ற கற்பனைக்கும் கலைக் கற்பனைக்கும் உரிய மூல மரபு ஒன்றே - அதனைச் சுட்டிக் காட்டுவது தான் பெருங்கதை மரபு. இயல் பான கற்பனையின் முழு மறுமலர்ச்சியே கலைக் கற்பனையா யிற்று. அதே சமயம் அதன் உயிர் மரபு முற்றிலும் அறுந்த தளர்ச்சி நிலையாகவே, திரிபாக, சிதைவாகவே கட்டற்ற கற்பனைகள் எழுந்தன என்னலாம். அராபிக் கதைகளின் கலை மாயம் தான், அவற்றுக்குரிய கவர்ச்சியின் புறக்கூறாகிய அவாத்தள இயற்கையான மாய உலகுதான் பெருங்கதையில் மிகுதி இடம் பெறவில்லை. இது கலை மாயத்தைக் குறைக்கிறதென்றால், கற்பனை மாயத்தை, கவர்ச்சி யின் அகக்கூற்றினைப் பெருக்குகிறது. அதன் கற்பனை எளிமை அராபிக் கதைக்குக்கூட இல்லாத பண்பு. இவ்வாறு அராபிக் கதையின் கலை மாயத்தையும், அதற்காதாரமான கற்பனை மாயத்தையும் கட்டற்ற கற்பனைகளையும்கூட இயற்கை நோக்கியும் ஒரு படி முன் சென்று விளக்குவதாகப் பெருங்கதை மரபு அமைகின்றது. டடட பெருங்கதைக்குரிய பண்புகள் இன்னும் முனைப்பாக, இன்னும் முன் சென்று கற்பனை மாயத்தின் மூலமரபையும் தோற்றத்தையும் விளக்குவனவாகத் தமிழ்ப் பெருங்கதையிலும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய தமிழ்க் காப்பியங்களிலும் பிற தமிழிலக்கிய ஏடுகளிலும் மிளிர்கின்றன. அவற்றில் கற்பனை மாயத்தின் மாயத்திரை பெரிதும் விலகி, அதன் மறை திறவே பேரளவில் ஒளி விளக்கம் பெறுகிறது. ஏனெனில் இங்கே மாயத்தின் மாயம் - மாய நீலவொளி, மாயமுகிற் படலம் - மறைகின்றது. கற்பனை நனவின் நிழலாக, பண்டை வாழ்வில் இடம்பெற்ற ஓர் இயல் நூல் மரபின் நிழல் தடமாகவே காட்சியளிக்கின்றது. அராபிக் கதைகளின் பின்னணியில் நிறைவேறா மனித இன அவாவே கலைமாயம் உண்டு பண்ணுகிறது. ஆனால் இங்கே நிறைவேறிய அவா - ஒரு வேளை அருகலாக அல்லது அரை குறையாக நிறைவேறிய அவா - ஒரு வேளை நிறைவேற்றம் கடந்து மரபற்று மறைந்துவந்த நனவின் அருந்தடம் நிழலாடுவது காண்கிறோம். தமிழ்க் காப்பியமாகிய சீவகசிந்தாமணியில் இடம்பெறும் பறக்கும் மயிலும், தமிழ்ப்பெருங் கதையில் வரும் மாயயானையும், அராபிக் கதைகளின் மாயக்குதிரை, மாயக் கம்பளங்களை நினைவூட்டுபவை - அவற்றின்கதை மூல மரபுகளே அவை. ஆனால் அவற்றின் மாயம் அராபிக் கதைகளின் மாயத்தி லிருந்தும் புராண இதிகாசங்களின் தெய்வீக அருநிகழ்வுகளி லிருந்தும் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் இங்கே தெய்விக ஆற்றலும் இல்லை. மாயமந்திரமும் இல்லை. பறக்கும் மயில் ஒரு `மயிற்பொறி', மாய யானை ஒரு `யானைப் பொறி'. இரண்டையும் தச்சரே, மாய ஆற்றலுடைய பொறிவலாளரே இயற்றியவர் ஆகின்றனர். மயிற்பொறி தெய்விக ஆற்றலால், மாய மந்திரத் தால் பறக்கவில்லை, ஏறியிருப்பவர் இயக்குவதாலேயே பறக்கிறது. மாய யானை மெய்யான உயிருடைய யானை போலவே இயங்குகிறது. ஆனால் அதை இயக்குவதும் தெய்விக ஆற்றலன்று, மாய மந்திரமன்று - உள்ளே ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் ஆட்களே. இது மட்டுமன்று. தற்கால இயந்திரங்களை, மின் விளக்கை, மின் விசிறியை இயக்குவதற்கும் திருப்புவதற்கும் நிறுத்துவதற்கும் உரிய திருகாணிகள், அல்லது சுரை அல்லது விசை முனைகளை (ளுறவைஉhநள) நாம் அறிவோம். சீவகசிந்தாமணியில் மாயத்தச்சன் காட்டியபடி அரசமாதேவி ஒரு விசையை முறுக்கியதனாலேயே மயிற்பொறி திடுமென வானில் எழுந்து பறக்கிறது. ஆனால் தச்சனிடமிருந்து மயிற் பொறியைத் திருப்புவதற்கும் நிறுத்து வதற்கும் உரிய வகை முறைகளை அறிந்துகொள்ளாததாலேயே, தச்சனால் எதுவும் உதவ முடியாத நிலையில் மயிற்பொறி முதலில் சென்ற திசையிலேயே நாட்கணக்கில் பறக்க நேரிடுகிறது. இறுதியில் பசிவிடாயாலும் அச்சத்தாலும் சோர்வுற்று மயங்கிய நேரத்தில், அரச மாதேவியின் கைகள் தற்செயலாக விசையாணி மீதுபட்டு அது வேறு வழியில் திருகியதனாலேயே மயிற்பொறி மீட்டும் கீழே இறங்கி வந்து அவ்வணங்கைச் சுடுகாட்டில் விட்டுச் சென்றது என்று தமிழ்க் கவிஞர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். மாயம் பிறந்த வகையை மட்டுமன்றி, அது மாயமாக உருவான வகையைக்கூட இவ்வருணனைகள் நமக்கு விளக்கு கின்றன. விசைக் கப்பல்கள் (ளுவநயஅளுhiயீள), உந்தகங்கள் (க்ஷரளநள), விசைக்கலங்கள் (ஊயசள), மின்கலங்கள் (நுடநஉவசiஉ கூசயஅள), மின் ஊர்திகள் (நுடநஉவசiஉ கூசயiளே), வான்கலங்கள் (ஹசை ளுhiயீள), வானூர்திகள் (ஹநசடியீடயநேள), வானுந்துகள் (துநவ ஞடயநேள), வான்மிதவைகள் (ழுடனைநசள), வலவனில்லா வான ஊர்திகள் (ஞடைடிவடநளள ஞடயநேள), சேண்முகடுகள் (ழநடiஉடியீவநசள) ஆகியவை இயங்கும் காலம் இது. ஆனால் இன்று விசைக்கப்பல் திமிங்கில உருவிலோ, விசைக்கலம் குதிரை உருவிலோ, வான்கலம் பறக்கும் குதிரை உருவிலோ பறக்கும் மயில் உருவிலோ இயற்றப் படுவதில்லை. பண்டைத் தச்சர் இவ்வாறு இயற்றி, அவற்றை மாயமாக மாயமந்திரமாக, தெய்விகச் சித்தாற்றலாகக் கருதப்படப் பெரிதும் உதவினர் என்னலாம். இன்றைய புதுமைப் பொறிகளை எல்லாரும் அறிவர். ஆயினும் இயக்குபவர் சிலர், நுட்பமறிந்தபின், இயற்றுபவர் - இயற்றுமுறை உணர்ந்தவர் குறிப்பிடத்தக்க மிக மிகச் சிறுபாலாரான ஒரு சிலரே. ஆயினும் அவை விலங்கு பறவை உருவில் அமையாததாலும், பொறி நுட்பப் பயிற்சியும் இயல் நூலறிவும் கல்வியும் நாடு மொழி இனம் வகுப்புக்கடந்து, இன வேறுபாடு, பால் வேறுபாடு இன்றி உலகில் பரவுவதாலுமே இவை பொறிகள், இயல் நூலறிவின் விளைவுகள் என்பது பொது மக்கள்வரை எல்லாருக்கும் தெரிந்த செய்தியாக இயல்கின்றது. ஆனால் முற்கால இடைக்கால நிலை இதுவல்ல. சிந்தாமணி ஆசிரியரும் தமிழ்ப்பெருங் கதை ஆசிரியரும் அவற்றைத் தெள்ளத் தெளியப் பொறி என்று கூறினாலும், தமிழகம் கடந்த அகலுலகிலும் பொது மக்களிடையிலும் அவை அரைகுறை மாயங்களாக, மாயமந்திர ஆற்றல்களாகவே நாளடைவில் கருதப்படத் தொடங்கின. இயல் நூல் மரபு முற்றிலும் தொடர்பற்றுப்போன இடைக்காலங்களிலே, அவை பொறிகள் என்பது முற்றிலும் மறக்கப்பட்டு, மாய மந்திர ஆற்றல்களாக, இன்னும் சில சமயம் தெய்விக ஆற்றல்களாக, இயற்கைமீறிய நிகழ்வுகளாக இழி வழக்குற்றன. தமிழ்ப் பெருங்கதை, சிந்தாமணி காலங்களிலும் அதற்கு முன்னும் தமிழகத்திலும் தமிழகம் சூழ்நிலங்களிலும் இயல்நூல் பெரிதும் வளர்ச்சியுற்று, கலையும் தொழிலும் பெருக்கின என்பதையும் அவை அருநிகழ்வுகளாக நிலவி, பின்னும் படிப்படியாக அவ்வேடுகளின் காலத்துக்குள்ளாகவே வழக்கில் மெல்ல அருகலாகி இறுதியில் மறைவுற்றன என்பதையும் இவை காட்டுகின்றன. இவ்வுண்மையை வலியுறுத்தும் வேறு பல செய்திகளும் உண்டு. கிரேக்கர் ஆரியர் என்று குறிக்கப்படும் இந்து ஐரோப்பிய இனம் சார்ந்தவர்கள். கிட்டத்தட்டச் சிந்து கங்கை வெளிகளில் ஆரியர் புகுந்து பரவிய அதே காலத்திலேயே, அதாவது கி.மு. 1500, கி.மு. 1000 வாக்கிலேயே, அவர்கள் கிரீசிலும் சென்று குடியேறினர். கிரேக்க புராண இதிகாசங்கள் பெரும்பாலும் இதற்குப் பின், உருவானவை யேயானாலும், ஆரியர் வருமுன் கிரீசிலும் கிரீட் தீவிலும் வாழ்ந்த பழங்குடி இனத்தவரான ஈஜியரின் கதை மரபுகளும் அவற்றில் விரவியுள்ளன. இவற்றுள் ஒன்றே `பொறிக் கோட்டம்' (டுயலெசiவோ) பற்றிய கதை. பொறிக் கோட்டம் ஒரு மாயப்பூங்கா. அது கிரீட் தீவில் ஆண்ட மன்னன் ஈஜியசுக்குரியது. அதில் புகுந்து அவன் ஆற்றலை அவமதித்துச் சென்ற ஒரு கிரேக்க வீரனை விரைந்து பின்பற்றுவதற்காக, மன்னன் மகன் ஐக்காரஸ் பறக்க உதவும் சிறகுப் பொறி ஒன்றைப் பயன்படுத்துகிறான். கடல்மீது பறக்கும்போது பொறி தற்செயலாக முறிவுற்றதனால் அவன் கடலில் விழுந்து இறக்கிறான். இப்புராணத் துணுக்கின் `சிறகுப் பொறி'க் கற்பனை முற்றிலும் கட்டற்ற கற்பனையன்று என்பதை இன்றைய அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. ஈஜியஸ் உண்மையில் ஒரு மன்னன் பெயரன்று, ஈஜிய இனத்தவரின் மன்னர் மரபின் பெயரே. அம்மரபினர் அரண்மனை ஓர் அரண்மனை நகரமாகக் காட்சியளித்திருந்தது. கதையில் வரும் பொறிக் கோட்டம் அதன் ஒரு பகுதியே. இவ்வரண்மனை நகர் மண்ணில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் புதையுண்டிருந்த பின் இன்று அகழ்ந்து காணப்பட்டுள்ளது. அந்நகரம் இன்றைய நாகரிக நகர்களுடன் போட்டியிடுமளவில், வியத்தக்க நிலையில் நீர்க்குழாய், இயந்திரக் கிணறு, குளிக்கும் மாடங்கள், விசிறிப்பொறி, மணிப் பொறி ஆகிய வாய்ப்புக்கள் உடையதாய் இருந்ததென ஆராய்ச்சியாளர் கண்டுள்ளனர். பிரிட்டன், ஸ்பெயின் முதலிய மேல் கோடி ஐரோப்பியப் பரப்புக்கள் முதலாக, கீழ்க்கோடியில் சீனா’சப்பான், அமெரிக் காவரை பறந்து ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த ஓர் உயர் நாகரிகப் பேரினத்தின் பகுதியே இந்த ஈஜிய நாகரிகம். நாகரிகத்திலும் கலையிலும் இயல் நூலறிவிலும் அது மிகவும் வளர்ச்சியுற்றிருந்த தென்பதை நாம் ஐக்காரஸ் கதையாலும் ஈஜியஸ் அரண்மனை அகழ்வாராய்ச்சி யாலும் மட்டுமன்றி, வேறு பல வகைகளாலும் இன்று அறிகிறோம். நாம் கிரேக்க நாகரிகம், கலை, உரோம நாகரிகம், சிற்பம் என்று போற்றுவதெல்லாம் பெரிதும் இத்தொல்பழம் பேரினத்தின் நாகரிகம், கலை, சிற்பம் ஆகியவற்றின் புத்துருக்கள், மறு பதிப்புக்களே யாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழினம் இந்த உலகத் தொல்பழம் பேரினத்தின் ஒரு பகுதி. ஒரு நடுநாயக உயிர்மையப் பகுதி என்பதும் கூர்ந்து நோக்கத் தக்கது. பெருங்கதை ஏடுபற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும், அவ்வேடு இயற்றப்பட்ட மூலத் தாய்மொழி பற்றியும் நமக்கு வந்து எட்டியுள்ள விவரங்களும் இதே உண்மையை வலியுறுத்து கின்றன. பெருங்கதை மரபின் மூலத்தொகுப்பு ஏழு நூறாயிரம் (7,00,000), பாடல்களும் ஏழுகாண்டங்களும் அடங்கிய மிகப் பெரிய ஏடு என்று கேள்விப்படுகிறோம். இது தமிழ்க் கம்பரா மாயணத்தைப் போல் எழுபது மடங்கும், சமஸ்கிருத வால்மீகி இராமயணத்தைப் போல இருபத் தொன்பது மடங்கும் ஆகும் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. பெருங்கதை என்ற பெயர் கீழ்த்திசையில் நீடித்த புகழ் மரபு நாட்டியுள்ளது. சமஸ்கிருதத்தில் மகா பாரதத்தின் பெயர் (பெரிய பரத குடியினர் வரலாறு), கம்பர் இராமாயணத்துக்குத் தந்த `மாக்கதை' என்ற பெயர் ஆகியவையும், சேக்கிழார் பெரிய புராணம் என்ற பெயரும் இப்புகழ் மரபு புதுப்பிக்க வந்தனவாகத் தோன்றுகின்றன. தமிழ் முதற்சங்க ஏட்டின் பெயராகக் காணப்படும் மாபுராணம் என்பதும் இதே பொருள் தொடர்பு கொண்டுள்ளது- பெருங்கதையுடன் அதன் தொடர்பு இன்னது என்று இன்று அறியுமாறில்லை. அது ஓர் இலக்கண ஏடு என்று இடைக்காலத் தமிழ் மரபு கருதினும், அது ஒரு காவியமாகவே இருந்திருத்தல் கூடாததன்று என்னலாம். பெருங்கதைக்குரிய மூலத்தாய் மொழி பேய் மொழி எனக் குறிக்கப்பட்டுள்ளது. கதை மரபு அதைப் பேய்கள் பேசிய மொழி என்று தான் கூறுகிறது. ஆனால் அது விந்தியமலைப் பகுதியில் ஒரு காலத்தில் நிலவிய ஏதோ ஒரு தாய் மொழி என்றும், ஏதோ ஒரு மலைநாட்டுப் பழங்குடி மக்களின் தாய்மொழியாய் இருத்தல் கூடுமென்றும் தான் ஆராய்ச்சியாளர் பொதுவே கருத்துரைத் துள்ளனர். எனினும் மொழி எது என்பதுபற்றி ஒருமித்த முடிபு இல்லை. வரருசி என்ற பழைய பிராகிருத இலக்கண நூலார் பிராகிருதச் சிதைவு வகை ஒன்றைப் பேய்மொழி எனக் குறிப்பிட்டுள்ளனர். இதை எடுத்துக் காட்டிப் பேய் மொழி ஒரு பிராகிருதச் சிதைவே என்பர் பல ஆராய்ச்சியாளர். ஆனால் பேய்மொழி என்ற வன்மை வாய்ந்த பழிப்பெயர் காண அது ஆரியரல்லாதார் மொழி - ஆரியருக்குப் பணிந்தடங்காத வன்மொழி என்று கூறவே இடமுண்டு. இன்றும் விந்தியமலைப் பகுதிகளில் பேசப்படும் பண்படாத் திராவிட மொழிகளாகிய கோண்டு, கூயி முதலிய மொழிகளில் அது ஒன்றாயிருக்கலாம், அல்லது தெலுங்கின் ஒரு வகையாகவோ, பழந்தமிழராகிய முதற் சங்க (மாபுராணகால)த் தமிழ் மொழியாகவோ கூட இருத்தல் கூடும் என்னலாம். கவிஞன் பற்றிய மூலக்கதை மரபு அவனை ஆதரித்த அரசன் ஆந்திர சாதவாகன மரபினன் என்றே கூறுகிறது. மூலமொழி எப்படியும் திராவிட இனம் சார்ந்தது என்பதை இது வலியுறுத்துகிறது. தொகுப்பின் ஆசிரியர் குணாட்டியன் என்ற கவிஞர். ஏட்டைப் போலவே ஆசிரியரும் மிகத் தொல்பழங்காலப் பெரும்புகழ் உடையவர் என்றே தோன்றுகிறது. ஆனால் மொழி பேய் மொழி என்று பழித்துரைக்கப் பட்டதற்கேற்ப, இக்கவிஞரே அசுரர்களின் குருவும் அசுரப் பேரரசன் மாவலியின் அமைச்சருமான சுக்கிராசாரி என்று கருதப்படுகிறார். சுக்கிராசாரிக்கு உசனா என்றும் கவி என்றும் தனிச் சிறப்புப் பெயர்கள் உண்டு. பகவத் கீதையில் உசனா என்ற பெயருடன் இவரே அந்நாளைய கவிஞருள் முதல்வன், தலைசிறந்தவன், தெய்வக் கவிஞன் (குடிவேஊhயபேந) என்று உச்ச நிலையில் வைத்துப் போற்றப்படுகிறார். சமஸ்கிருத இலக்கிய காலத்தில் ஆதிகாவியம் எனப் பாராட்டப்பட்ட வால்மீகி இராமாயணத்துக்கு முன் அச்சிறப்புப் பெயருக்குரியதாகப் பெருங்கதையே நிலவிற் றென்றும், சமஸ்கிருத இலக்கிய காலத்தில் ஆதிகவி என்று பாராட்டப்பட்ட வால்மீகிக்கு முன் அதே சிறப்புப் பெயருக்குரிய வராகப் பெருங்கதையாசிரியரே கருதப்பட்டிருந்தாரென்றும் தெரிய வருகிறது. சமஸ்கிருத நீதி நூல்களில் ஒரு நீதி நூலாகச் சுக்கிராச்சாரி இயற்றிய சுக்கிரநீதி ஒன்று உண்டு. காலஞ் சென்ற முனைவர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள் இதன் தமிழ் மொழி பெயர்ப்பொன்றை முன்னுரை விளக்கவுரை ஆராய்ச்சி யுரைகளுடன் வெளியிட்டுள்ளார். இந்நூலின் தனிப்பெருஞ் சிறப்புக்களாக அவர் இரு செய்திகளைக் குறித்துள்ளார். முதலாவதாக, நூல் முழுவதிலும் திருக்குறள் வாசகங் களுடன் உள்ள ஒப்புமைகள் காட்டி, இரு ஏடுகளின் கருத்துக் களிலும் நீதிகளிலும் இனஒற்றுமை நிலவுவதைத் தமிழாக்க ஆசிரியர் விளக்குகிறார். சாதி சமயச் சார்பற்ற, மூட நம்பிக்கைகள் சாராத பகுத்தறிவு நெறி, உண்மைக் கடவுள் நெறியாகிய அருளன்பு நெறி ஆகியவை இரு ஏடுகளுக்கும் அடிப்படை. இல்லற ஒழுக்கம் வேறு, துறவற ஒழுக்கம் வேறு - அறமுறை வேறு, அரசியல் முறை வேறு - காதல் நெறி வேறு, குடும்ப ஒழுக்கம் வேறு என்ற வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உலகின் மற்றெல்லா நீதி நூல்களிலும் உண்டு, இந்த இரண்டிலும் மட்டுமே கிடையாது என்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். இரண்டாவதாக, பொருளியல் பகுதி மூலம் சுக்கிர நீதியின் ஆசிரியர் காலத்தில் இயல்நூல் அறிவின் வளர்ச்சியும் அதன் விளைவான இயந்திரக் கருவிகளும் சமுதாய, அரசியல் சமூக உச்சத்தளத்திலாவது பெருநடப்பாயிருந்தன என்பதைப் பண்டிதமணி ஏட்டின் பல மேற்கோளுரைகள் வாயிலாக எடுத்து நிறுவியுள்ளார். இயல்நூலுக்கும் பகுத்தறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு - ஒன்றன் பயனே மற்றது, ஒன்றில்லாமல் மற்றது நிலவாது. திருக்குறள், தொல்காப்பிய இயல் நூல்கள் எவையும் இங்குக் கிட்டாவிட்டாலும், அவற்றின் தடங்களை, நிழல் ஒளிகளை, சாயல் வண்ணங்களை நாம் இலக்கண ஏடுகளின் நுட்ப நுணுக்கங்களிலும் இலக்கியப் பரப்பின் ஆழ்தெளிவிலும் காண்கிறோம். தொல்காப்பியத்தின் மொழி நூலாராய்ச்சிப் பண்பு, சங்க இலக்கியத்தின் பகுத்தறிவுக் கண்ணோட்டம், ஆழ்ந்த சிந்தனைப் பண்பு, கடு வாய்மை நோக்கு, அருங்கலைச் செப்பம் ஆகியவை இதற்குச் சான்றுகள். தவிர இலக்கியம், வரலாறு, புராணம் ஆகியவற்றின் வான விளிம்பில் இலக்கிய மரபாகிய தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் செய்தியும், புராணமரபாகிய சிவபெருமான் முப்புரம் எரித்த செய்தியும் காணப்படுகின்றன. ஐக்காரஸின் பறக்கும் `சிறகுப் பொறி'க் கற்பனை கடந்து, பிற்காலப் பறக்கும் குதிரை, பறக்கும் கம்பளக் கற்பனைகளைக் கூடக் கடந்து, இவை பறக்கும் கோட்டைகள், பறக்கும் நகரங்களையே பாவனை செய்துள்ளன. அராபிக் கதைகளின் பின்னணியாகக் காணப்படும் மனித இன அவாவகையில், இன்னும் உயரிய வள்ளுவத் தளமே காட்டுவது மணிமேகலையின் அமுதசுரபிக் கற்பனை. இது புராண இதிகாசங்களில் வரும் உலப்பிலாக் கலத்தை (அட்சய பாத்திரத்தை) நினைவூட்டுவதாயினும், பண்பில் வேறுபட்டது, உயர்ந்தது. தோற்றத்திலும் பயனிலும் அது மனிதப் பண்பின் தெய்விக அருள்தளமாய்த் தளிர்த்துள்ளது. சிறைப்பட்டோர் விடுதலை, சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய பண்பு ஆகிய வற்றின் அருள்திறம் புத்தர் அறநெறியில் கூடத் தமிழகத்துக்கு வெளியே எளிதில் காணப்பட முடியாத ஒன்று. தமிழ் இலக்கிய மரபில் மட்டுமல்ல, மொழி மரபிலேயே இயல் நூல் மரபின் இத்தகைய பல மெய்த்தடங்களை நாம் காணலாம். தற்கால உலக மொழிகளில் மேலை ஐரோப்பிய மொழி களுள் ஒரு சிலவே முனைப்பாக இயல் நூல் மரபு பேணி வளர்க்கின்றன. ஆனால் இவை எவற்றிலும் அது உயிர் மரபல்ல; இம்மரபு அம்மொழிகளின் வாழ்விலேயே பிறந்ததன்று. இயல் துறைச் சொற்களை அம்மொழிகள் மாண்ட மொழிகளிலிருந்து தருவித்து, இனமொழி அல்லது தாய்மொழி உயிர்ப் பகுதியுடன் ஒட்டாத அறிவுத்துறை மரபாக மட்டும் உலவ விட்டிருப்பதன் காரணம் இதுவே. அத்துடன் அம்மாண்ட மொழிகளிலும் இயல்நூல் மரபு உயிர் மரபாய் இயங்கியதில்லை. இடை யிருட்காலங்களிலேயே இயல் நூல் மரபின் ஒளி பேணிய அராபிய இனம் அதன் ஒரு சிறு பகுதியையே கிரேக் கரிடமிருந்தும் பெரும் பகுதியைச் சமஸ்கிருத வாணரிட மிருந்தும் பெற்றது. இவையும் அதை மாண்டபின் தொல்பழம் பேரினப் பகுதிகளிலிருந்து, தமிழின முள்ளடக்கிய நடு உலகப் பழம் பேரினத்திலிருந்தே பெற்றன. கலையும் இயல்நூல் மரபும் உலகுக்குத் தந்துள்ள பழம் பேரினத்தில் இன்னும் உயிர் மரபறாது நிலவும் ஒரே மொழி இனம் தமிழ் இனமே. இடைக்காலத்திலிருந்து தமிழ் இயல் நூல் மரபுத் தொடர் பறுந்தே நிலவுவதாகத் தோற்றினாலும், அத்தொடர்பின் உள்ளார்ந்த துடிப்பு இன்னும் அறுந்துவிடவில்லை, என்றும் எளிதில் அறுந்து விடுவதும் அன்று. வைகை, பாலாறு முதலிய தமிழக ஆறுகளில் வறட்சிக் காலத்தில் கூட ஊற்றகழ்பவர் நீரின் உள்ளோட்டம் காண்பதுபோல, தமிழினத்தின் இயல்நூல் மரபின் வளத்தை, உள்ளொழுக்கை, இன உயிர்நாடியில் துடித் தோடும் உள்ளுயிரோட்டத்தை நாம் தமிழ் மொழியிலும் தமிழர் இன வாழ்விலும் துருவி நோக்கிக் காணலாம். மேலைப் பகுத்தறிவின் துணையுடன் அதை ஆய்ந்து கண்டெய்தினால், தமிழினம் மீண்டும் எளிதில் இயல் நூல் வளம் பெருக்குவது எளிது. அந்நிலையில் அது மேலை மொழியினங்களுடன் சரிசம பங்கு கொள்ளத்தக்கது மட்டுமன்று, அவற்றை மேன்மேலும் தூண்டி இயக்கவல்லதாய், உலகின் இயல்நூல் மரபுக்கே இடையறா உயிரூற்றாய், உலகுக்கும் பொங்கல்வளம் தரத்தக்க தாகும். மொழியின் இவ்வுள்ளுயிர் வளமான இயல்நூல் மரபின் உயிர்த்தடங்களில் சில காண்போம். இயந்திரம்! பொறி! இவ்விரண்டு தமிழ்ச் சொற்களும் ஒரே பொருளுடையன வாகத் தமிழ்மரபு காணாத சிலரால் வழங்கப் படுவதுண்டு. முன்னது சமஸ்கிருதம், பின்னது அதற்குச் சரியான தனித்தமிழ் என்று கருதும் அறிவிலிகள் கூட உண்டு. ஆனால் இரண்டும் வேறுபட்ட சொற்கள் மட்டுமல்ல, உயிர் வேறுபாடு உடையன ஆகும். பொறி கருவி போன்றது. இயந்திரம் கருவியை இயக்கும் கைபோன்றது. பொறி கருவிபோல, ஆற்றலை வாய்ப்பாக, வேண்டிய திசையில் செலுத்துவது. பலசமயம் அது ஆற்றலைச் சிக்கன மாக்குகிறது. அதாவது ஆற்றலின் விளைவு பெருக்கி ஆற்றலைச் செயல் துறையில் ஆதாயம்படப் பயன்படுத்துகிறது. நெம்பு கோல் அல்லது தென்னுக்கோல் வகைகள், விற்பொறி வகைகள் (ளுயீசiபேள), சாய்தளங்கள் (ஐnஉடiநேன ஞடயநேள), திருகாணிகள் ஆகியவையும் இவற்றின் இணைவாலமைந்த பல்வகைப் பெரும் கருவிகளும் இத்தகைய பொறிகள் ஆகும். சிலசமயம் பொறியின் சிக்கனம் ஆற்றலின் மூன்று கூறுகளான அளவு, இடம், காலம் ஆகியவற்றுள், ஒன்றை மற்றொன்றாக அல்லது மற்றவையாக மாற்றிக் கிட்டத்தட்ட ஆற்றலை உண்டு பண்ணுவதாக, குறைந்த படி ஆற்றல் பெருக்கம் உண்டு பண்ணுவதாகவேனும் தோற்றும். இவற்றை நாம் விசைப்பொறிகள் என்னலாம். இயந்திரம் ஒரு பொறியேயானாலும் அது பண்பிலும் பயனிலும் மற்றப் பொறிகளினின்றும் மிகவும் வேறுபட்டது. கருவியை இயக்கும் கைபோல, அது பொறியை இயக்குகிறது. ஆனால் கை உயிருடைய உடலின் உறுப்பு என்ற முறையில் தானே இயங்குவது, தன்னாற்றலுடையது. உடலின் ஆற்றலாகிய உயிராற்றலே அதன் ஆற்றல். அதனால் அதுதானும் இயங்கிக் கருவிகளையும் இயக்குகிறது. அது ஆற்றலை உண்டு பண்ணுவ தன்று, உயிராற்றலின் எல்லை கடந்து அதைப் பெருக்கவும் முடியாது. இயந்திரம் கைபோலத் தானே உயிர்ப் பொருளாக இயங்காவிட்டாலும், ஆற்றலுண்டு பண்ணுவது, எல்லையற்ற ஆற்றலுடையது. ஏனெனில் அது இயற்கையின் எல்லையற்ற ஆற்றலிலிருந்து ஆற்றல் பெற்று, அதைக்கொண்டு இயங்குகிறது, அதைக் கொண்டு பொறியை இயக்குகிறது. இயந்திரம் என்பது அத்தமிழ்ச்சொல் சுட்டிக் காட்டுகிற படியே, இயக்கும் திறமுடைய ஒன்று. அதன் ஆற்றலைத் திறம்பட, சிக்கனமாகக் கொண்டு செலுத்தித் தொழில்படுத்தும் கருவியே பொறி. இயல்நூல் மரபில் பண்டைத் தமிழர் மேலை மொழி யாளரைவிட எந்த அளவில் மேம்பட்டிருந்தனர் என்பதை இயந்திரம், பொறி என்ற இச்சொற்களே காட்டும். ஏனெனில் இவற்றுக்குச் சரியான மேலை மொழிச் சொற்களில், பொறி என்பதற்கான சொல் ஒன்றே (ஆயஉhiநே) தமிழ்ச்சொல் போலத் திறம்பட்ட அமைப்பு என்ற பொருளைத் தருகிறது. இயந்திரம் என்பதற்கான சொல்லோ (நுபேiநே) விசைப்பொறி அல்லது சூழ்ச்சிப்பொறி என்னும் பொருளே தருவது. தமிழ்ச் சொற்கள் தமிழுக்கேயுரிய வேர்ச்சொல் வளர்ச்சி. மேலை மொழிச் சொற்களோ பண்டைக் கிரேக்க இலத்தீன் மொழி வேர்ச் சொற்களையுடையன. அம்மொழிகளும் தமக்கென இயல்நூல் மரபற்ற மொழிகள் என்பது காணின், தமிழ் இயல்நூல் மரபின் உயிர் மேம்பாடு இனிது விளங்கும். இந்த இரு சொற்களும் இயல்நூல் மரபு மறக்கப்பட்ட காலத்திலும் அம்மரபுக்கு வெளியே கலைத்துறையிலும் வாழ்க்கைத் துறையிலும் ஊறிப் புதுமலர்ச்சி கண்டுள்ளன. இயந்திரம் இடைக் காலங்களில் ஆற்றல் மொழியாகிய மந்திரத்துக்குரிய சக்கரத்தையும், கூலம் உடைக்கும் அல்லது அரைக்கும் பொறியையும் (எந்திரம்) குறிக்க வழங்கிற்று. பொறி உடலின் உணர்வுமையங்களான ஐம்பொறிகளுக்கும், உயிர் மையங்களான பொருத்துக்களுக்கும் வழங்குகின்றது. இயந்திரத்தின் மூலம் மன் அதாவது மக்களுக்குப் பயன் விளைவிக்கவல்ல மனத்திறம் அல்லது மூளைத் திறமே மந்திரம். திருக்குறள், தொல்காப்பிய கால முதலே அது மூளைத் திறமுடையவர் வாய்மொழிக்குரிய சொல்லாக வழங்கலாயிற்று. இயந்திரம், பொறி, மந்திரம் ஆகிய சொற்களைப் போலவே இயல் நூல் வளத்தின் ஒளி மரபிழந்த நிழல் மரபுச் சின்னங்கள் எண்ணற்றவை தமிழில் உண்டு. ஆய், ஆராய், ஆராய்ச்சி, நுழை புலம், வகை தொகை, வகை திரிபு, ஐயந்திரிபு, மயக்கம் ஆகியவை இவற்றுட் சில. பண்பற்றவனைப் பெண்டிர் இன்றும் வகை தொகை கெட்டவன், வகை திரிபற்றவன் என்று கூறுவர். இச்சொற்களின் பொருள் நயமும் பொருத்தமும் கண்டு மகிழத்தக்கது. `ஆராய்ச்சி' நல்ல தமிழ்க் குடிகளாகிய பழங்குடி மக்களிடையே ஆண் பெண்களுக்குரிய இயற் பெயராகவும், ஆராய்ச்சி மணி, ஆராய்ச்சி மண்டபம் போன்ற தொடர்களில் உச்ச உயர்நீதி, உச்ச உயர் ஆய்வாராய்வு என்ற பொருள்களுடனும் வழங்கப் படுகிறது. தமிழர் இலக்கியத்திலும் மொழியிலும் இடம் பெறும் இதே மரபு வளத்தை நாம் தமிழக வாழ்விலும் காணலாம். `பறக்கும் குதிரை' விழா! தமிழக வாழ்வில் ஊறிச் சமயத்துறையில் படிந்து விட்ட இயல்நூல் மரபின் தடங்களில், அதன் நிழல் கூறுகளில் இது ஒன்று. இது அராபிக் கதையின் கற்பனைமாயம் அன்று, தமிழக வாழ்வில் இடம்பெற்ற செயல் மாயம்! ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், ஆண்டு தோறும் நடைபெற்றுவரும் பத்து நாள் விழாக்களில் ஒரு நாள் விழா - ஒன்பதாம் நாள் விழாவே இது. தமிழகமெங்கும் ஒன்பதாம் நாள் விழா தேரோடும் திருவிழாவாகவே காட்சியளிக்கும். ஆனால் இச்சிற்றூர்த் தலைக்கோயிலின் ஒன்பதாம் நாள் விழாவில் தேர்கிடையாது. தேரோடும் வீதிகளில் தேருக்குப் பதிலாகப் `பறக்கும் குதிரை'யே பகட்டாரவாரத்துடன் உலா வருகின்றது. பல கல் தொலைவு சுற்று வட்டத்துக்குள்ளாக - ஏன், தமிழகத்தில் எங்குமே - இத்தகைய தோற்றம், இத்தகைய விழாக் கிடையாது. இத்தனிப்பெருஞ் சிறப்புக்காரணமாக, சுற்றுப் புறத்தில், அணிமைத் தொலைவிலுள்ள சிற்றூர், பேரூர் மக்கள் பலரும் திரள்திரளாக, சாரிசாரியாக `நம்பிரான் விழா' என்றழைக்கப் பெறும் இப்`பறக்கும் குதிரை' விழாக் காண விரைவர். ஊர்கொள்ள முடியாத இந்தக் கூட்டம் வந்து கொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்க முடியும். ஊரெல்லைக்குள் வந்து குழுமியவர்களைவிட ஊரெல்லையில் மொய்ப்பவர்களே மிகுதியாயிருப்பர். ஆனால் எவரும் `பறக்கும் குதிரை' காண ஊரின் நாற்கட்டு வீதிகளுக்குள் வரவேண்டுமென்பதில்லை. எத்திசையில் எங்கிருந்தாலும் அண்ணாந்து பார்ப்பவர்களுக்கு வீட்டின் மோடுகள், இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாடிகள் தாண்டி, மரங்களின் உச்சிக்கிளைகளுக்கும் அப்பால் வான வெளியில் அது முன்னும் பின்னும் குதித்தாடிக்கொண்டு பம்பரம்போல் சுழன்று சுழன்று பறந்து தவழ்வது எளிதில் தெரியவரும்! தேர்வீதிகளின் எல்லை கடவாமலே, வானவீதியில் அடங்காமல் சீறிக் குதித்தோடிக் கும்மாளமிடும் இப்பறக்கும் குதிரையைக் காண்போர் எவரும் வியக்காமல், மருட்சியடை யாமல் இருக்க முடியாது. குதிரை மரத்தாலும் இரும்பாலும் செம்பு பித்தளை யாலும் வனையப்பட்ட குதிரைதான் - ஆனால் உயிருள்ள குதிரையினும் உயிர்த்துடிப்புடனும் ஒய்யார அழகுக் கவர்ச்சி யுடனும் அது நடமாடுகிறது. அது பறப்பதில்லை தான். ஆனால் அது பறப்பதாகவே, சுழன்று சுழன்று குதித்தோடியாடிப் பறப்பதாகவேதான் முழுதும் தோற்றமளிக்கிறது. இயற்கையைப் படம் பிடிப்பது மட்டுமன்று கலை - அதன் அழகு பெருக்கி, கவர்ச்சியை முனைப்பாக்கிக் காட்டுவது அது. இயற்கையின் உயிருக்கு உயிர் கொடுத்து, உயிர்களை வல்லார்க் கும் அல்லார்க்கும் அதை உயிர்முகமாக்குவது. பலர் காணத் தக்க செவ்வுயரத்திலும் நெடுந் தொலைவிலும் பறந்தாடும் குதிரை, இது காரணமாகவே குதிரையினும் பாரிய உருவத்துடனும், குதிரையின் வடி வழகினும் வண்ணத்தினும் முனைப்பான மாய எழிலுடனும் செவ்வண்ணத்துடனும் புனைந்துரு வாக்கப்பட்டு, தொலை வந்து அணிமையிலே உயிர்த்தோற்றத்துடன் உருத்தெழுந் துலவுவதாகக் காட்சியளிக்கிறது. அழகுடன், வீரம், வீரத்துடன் வேகம், சுழற்சி, ஆட்ட பாட்டம் ஆகிய யாவும் போட்டியிடுகின்றன. செவ்வண்ணங் கீண்டு வெண்மையிற் கருமையாக உருண்டு திரண்டு நீண்ட தோற்றத்துடன் சீறிக் கனலெழ உருத்து நோக்கும் கண்கள் காண்பவர் உள்ளத்தில் அச்சமும் கவர்ச்சியும் ஒருங்கே ஊட்டிக் கிளர்ச்சியும் பரபரப்பும் உண்டு பண்ணுகின்றன. கலைஞன் செயலால் உயிர்த் தோற்றங் கொள்ளும் இவ்வுரு மாயம், வடிவழகுமாயம், வண்ண மாயங்களைக் காட்டிலும், மாயத் தச்சனாகிய பொறிவலாளன் அமைத்த இயக்க மாயமேகாண் போர்க்குக் கண்கொள்ளாக் காட்சியாய் இயங்குகிறது. பறக்கும் குதிரை ஒரு பாரிய விசைப்பொறியாக வியக்கத் தக்க கலைத்திறத்துடனும் சூழ்ச்சித் திறத்துடனும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த விசைப்பொறி, வேகத்தைச் செயல் கடந்து, கற்பனை கடந்து பெருக்குவது மட்டுமன்று. விசையுடன் விசையை, விசைமீது விசையை, பல வகை விசை வேகங்களை ஒருங்கே இயக்கி, அது ஓர் இயக்கக்கலை எனின் இயக்கமாயமே, விசைக்கலை எனின் விசைமாயமே உண்டு பண்ணி விடுகிறது. குதிரையுருவை உயிர்க் குதிரையாகக் காட்டும் உயிர் மாயம், ஓடாக் குதிரையை ஓடுவதாகக் காட்டும் இயக்க மாயம், ஆகியவற்றுடன், நிலந்தாவும் குதிரையை வான் தாவிப்பறந்து தவழும் குதிரையாக்கும் கற்பனை மாயத்தையும் பறக்கும் குதிரையின் மாய அருங்கலைஞன் செயலுருவிலேயே படைத்து ஊக்கியுள்ளான் என்னல் வேண்டும். விரைவு, வேகம், விசை, விசை வேகம் எனச் சுழற்சியின் வேகத்தை இயற்கையெல்லை கடந்து பெருக்குவதற்கும் குதிரை அத்துடன் முன்பின்னாகக் குதித்தாடுவதற்கும் உரிய அமைப்புக் கள் விசைப் பொறியில் திட்டமிட்டே புனையப்பட்டுள்ளன. சுழற்சியின் விசைப் பெருக்கம் உண்டு பண்ணும் வகையில் சாணைப்பொறி, தையல்பொறி, மிதிவண்டி ஆகியயாவும் கிட்டத்தட்ட ஒரே முறையைப் பின் பற்றுகின்றன. சுழற்றுபவன் ஒரு வட்டத்தைச் சுழற்றுகிறான். அதன் சுற்று வட்டத்துடன் மற்றச் சிறு வட்டுகளின் சுற்றுவிட்டங்களோ, மைய அச்சோ பொருத்தப்படுகின்றன. பெரிதான சுற்று வட்டம் ஒரு தடவை சுற்று வதற்குள் சிறிதான வட்டம் பல தடவை, இன்னும் சிறிதான மையம் பின்னும் பலதடவை சுற்றிவிடுகிறது. சுற்று வட்டங்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் விசை ஒன்று பத்து நூறாகப் பெருகும். கொள்கையளவில் இவ்வாறு இம்முறையில் எல்லை யற்ற விசைப் பெருக்கம் ஏற்படக் கூடுமாயினும், செயலளவில் இதற்கு மிகக் குறுகிய எல்லைதான் உண்டு. ஏனெனில் பொறி விசை பெருக்கத் தான் வழி வகுக்கிறதேயன்றி, சுற்றுபவன் ஆற்றல் பெருக வழி செய்யவில்லை. இக்காரணத்தாலேயே சாணை, தையற்பொறி, மிதிவண்டி ஆகியவற்றை வாய்ப்பான விசைப்பொறிகள் என்று மட்டும் கூறுகிறோம். இயந்திரம் என்று கூறுவதில்லை. பறக்கும் குதிரை விசைப் பொறியாயினும் எல்லையற்ற வேகம் மட்டுமன்றி, எல்லையற்ற ஆற்றலும் உடையது. ஏனெனில் அது சுழற்சியிலிருந்து சுழற்சி பெருக்கவில்லை. சுழற்சியுள் சுழற்சி அமைத்துச் சுழற்சிகளைப் பெருக்குகிறது. எல்லாச் சுழற்சிப் படிகளையும் சுழற்றுபவன் ஒருவனல்ல, ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருவனாகப் பலர் சுழற்றுகின்றனர். சுழற்சியுள் சுழற்சியின் படிகள் பெருகும்தோறும் விசை பெருகுகிறது. சுழற்றுபவர் தொகையும் ஆற்றலும் அதற்கிசையப் பெருக வழியுண்டு. தமிழக விழாக்கால உலாவுருக்கள் அடியில் முன் பின்னாக இரண்டு நீண்ட தண்டயங்கள் பிணிக்கப்பட்டு தூக்கு கலங்களாகக் கொண்டு செல்லப்படுவன. பறக்கும் குதிரை மற்ற உலாவுருக்களைப் பார்க்க எத்தனையோ மடங்கு பெரியது, பளுவுடையது. அதன் சுழலாட்ட வேகம் மட்டுமன்றி, கொண்டு செல்பவர் ஆட்டபாட்ட வேகமும் பயங்கரமானது. இதற்கேற்ப அதன் அடித்தட்டு மற்ற உலா உருக்களை நோக்க இரண்டு மூன்று மடங்கு நீண்டகன்ற திண்ணிய பரப்புடையது. தண்டயங்களும் முன்பின்னாக மூன்று, பக்கத்துக்குப் பக்கம் குறுக்காக மூன்று என எண்ணிலும் நீளத்திலும் வலிமையிலும் விஞ்சியதாய் அமைந் துள்ளன. இரு தண்டயங்களின் நாற்கோடிகளிலும் கோடிக்கு ஐந்தாறு பேராக மற்ற உலாவுருக்கள் தூக்கப்படும் என்றால், இங்கே ஆறு தண்டயங்களின் பன்னிரண்டு கோடிகளிலும் கோடிக்கு இருபது முப்பது பேருக்குக் குறையாமல் இருநூறு முந்நூறு வல்லமைமிக்க ஆட்கள் அதனை இயக்க முன் வருவர். ஆரல்வாய்மொழி ஒரு கணவாயில் அமைந்திருப்பது. பல போர்க்களம் கண்டது. மலை சூழ்ந்த அப்பகுதியில் வாழ்க்கையே, வாழ்க்கைக்கான உழைப்பே ஓர் ஓயாப் போராட்டம் தான். எனவே அவ்வூர் மக்கள் மலை வாசிகளுக்குக்கூட, அரிதான நெடிய திண்ணிய உருவும் கல்லொத்ததோள் வலுவும், வீரதீரமும் போரார்வமும் உடையவர்கள். ஊரின் எல்லா விழாக்களும், சிறப்பாக எட்டாவது ஒன்பதாவது நாள் விழாக்கள், இவ் வலிமைக்கும் வீரத்துக்கும் நல்ல பயிற்சி தருபவையாக அமைந்துள்ளன. எட்டாம் நாளில் உலாவுருக்கள் இரண்டு பாரிய மண்டகப் படிகள். பறக்கும் உருவத்துக்கு ஆறு தண்டயங்களென்றால், இவற்றுக்கு மூன்று தண்டயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை மற்றிரண்டு உலாவுருக்களைவிட மிகமிகப் பாரியவை, பளுமிக்கவை. அவற்றைப் புல்லெனச் சுமந்து சென்று, ஊர் வீரர் முன்பின்னாகக் கூக்குரலிட்டோடுவர் - மண்டகப்படிகளின் முழுப் பளுவுடனும் வேகத்துடன் எதிரெதிர் பாய்ந்துவந்து, தண்டயங்களுடன் தண்டயங்களை மோதவிட்டு இடி முழக்கம் செய்வர். மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்வதனால், காட்சி காண்பவருள் அருந்திறல் வாய்ந்தவரன்றி எவரும் தெருவில் வரவே அஞ்சுவர் - பெண்டிர் குழந்தைகள் மாடிகளிலும் படிகளிலும் நின்று தான் காட்சி காண்பர். `தில்லை யம்பலம் சிவ சிதம்பரம் தை தையக்கோ!' என்று அவர்கள் எழுப்பும் போர்க்குரல் தெருவெங்கும் கூட்டங் களை அதிரச் செய்து வானில் ஒலி எதிரொலியாக முழங்கும். ஒன்பதாம் நாள் ஆட்டபாட்டம் இந்த எட்டாம் நாளில் குறைந்ததல்ல, பன்மடங்கு பெரிது. ஏனென்றால் பாரிய பறக்கும் குதிரையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் முன் பின்னாக ஓடியாடு வதுடன் நிற்பதில்லை. அதனுடனே சுற்றிச் சுழன்று பறக்கும் குதிரையைச் சுழலவைத்தபடியே முன்பின்னாக, பின்முன்னாக ஓடியாடிக் குதிப்பர் - வான்பிளக்கப் போர்க் குரல்கள் எழுப்பி முகில்களுடன் போருக்கெழுபவர்போல ஆர்ப்பரிப்பர். தண்டயங்களில் தூக்குபவர் முதலிலேயே தோள் கொடுத்துவிடுவதில்லை. இடை ஓய்வு நேரந்தவிர, அதைப் பெரும்பாலும் தோள்மீது சுமப்பதேயில்லை. முதலில் அதை நிலமீது அமைந்துள்ள முட்டளவுயரமான குத்துக் கல் மீது வைத்து, பேராரவாரத்துடனே தொங்கவிட்ட கைப்பூட்டுக் களிலேயே ஏந்துவர். இந்த நிலையில் உலாவுருவுடன் பம்பரம் போலப் பரபரவென்று சுற்றி, உரு உச்ச விசையில் சுழலும் சமயத்தில் திடுமென ஒரே கூக்குரலிட்ட வண்ணம் தொங்க விட்ட கைகளைத் தோளளவுக்கு உயர்த்துவர். பம்பரமாகச் சுழன்ற வண்ணமே குதிரை வீடுகளின் மோட்டளவு உயரத்துக்கு உயர்வுறும். சுற்றிய வேகம் நிற்காமலே அது அவ்வுயரத்தில் சுழன்று கொண்டிருக்கும். தோளளவாகத் தூக்கி முன்பின்னாகச் சிலநேரம் ஓடிய பின், வீரர் உலாவுருவை மீட்டும் முன்போல் தாழ்த்திச் சுழற்சி உண்டு பண்ணுவர். மீட்டும் தண்டயங்களை உயர்த்துவர். ஆனால் இத்தடவை அதைத் தோள் அளவுடன் நிறுத்தாமல், தோள் அளவிலும் சுற்றிச் சுழன்று உலாவுருவுக்கு மேலும் விசையூட்டிய பின் கைகளைத் தலைக்கு மேல் உச்ச அளவுக்கு உயர்த்திப் பிடித்து அந்நிலையிலே மீண்டும் சுற்றிச் சுழல்வர், ஓடியாடுவர், முன் பின்னாக ஓட்டம் தொடங்குவர். தூக்குபவர் தரும் இந்தச் சுழற்சியே பறக்கும் குதிரையைச் சுழன்று மேலெழுந்து பறப்பது போன்ற மாயத் தோற்றம் தரப் போதியது. ஏனெனில், பறக்கும் குதிரையும் அதன்மீது இறுகப் பிணிக்கப் பெற்றுள்ள தெய்வஉருவும் உலாவுருவின் அடித் தட்டின் மீது நேரே பொருத்தப்படவில்லை. அடித்தட்டின் மீது அரைப்பனை உயரமுள்ள ஒரு பாரிய இருப்புத் தூண் அல்லது உலக்கை நிறுத்தப்பட்டு, அதன் உச்சிமீது குதிரை நின்றாடிச் சுழல்வதாகவே அது அமைக்கப்பட்டுள்ளது. குதிரையும் உலக்கைமீது, நேரே சுழல்வதன்று. உலக்கை மீது ஒரு சுழலும் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அடித் தட்டிலுள்ள ஒருவர் அதைச் சுற்றிவிட்டுக் கொண்டே இருக்கிறார். தூக்குபவர் தரும் சுழற்சியுடன் இச்சுழற்சியும் சேர, சட்டம் விசை வேகமாகச் சுழல்கிறது. சுழல் சட்டத்தின்மீது சுழல் சட்டம், அதன்மீது சுழல் சட்டம் என மூன்று சுழல் சட்டங்கள் ஒன்றன் மீது ஒன்றாக, ஒன்றில் ஒன்று சிறிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டத்தின் கீழும் கீழ்ச்சட்டத்தில் ஓர் ஆள் இருந்து அதைச் சுழற்றி விடுகிறார். கீழே சுழலும் அடித்தட்டின்மீது சுழல் சட்டம், சுழல் சட்டமீது அடுத்த சுழல் சட்டம் அடுத்த சுழல் சட்டமாக, உச்சச் சட்டம் எல்லாச் சுழற்சிகளையும் தன் சுழற்சியாகக் கொண்டு, குதிரையுடன் விசைப்பம்பரத்தினும் விசைபடச் சுற்றுகிறது. உச்சச் சட்டத்திலுள்ளவன் குதிரையின் காலில் கட்டப் பட்ட கயிற்றை இழுத்து இழுத்து, அதற்குக் குதித்தாடும் தோற்றம் தருகிறான். இவ்வாறாக, குதிரையின் முன்பின் குதித்தாடும் ஆட்டம், தூக்குபவர் சுற்றியோடும் ஓட்டம் ஆகியவற்றுடன் சுழல் சட்டங்களின் ஒன்றுபட்ட விசைச் சுழற்சி, தூக்குபவர் தொங்குகை உயரத்திலிருந்து தோள் உயரம், தோள் உயரத்தி லிருந்து தூக்கு கை உயரம் வரை உலாவுருவை ஏற்றியிருக்கும் வேகம் ஆகிய இத்தனையுடன் தூக்குபவர், மக்கள், மேள தாளங்கள் ஆகியவற்றின் ஆரவாரமும் சேர்ந்து, பறக்கும் குதிரைப் பொறிக்கு, உயிர் மாயமும் உருமாயமும் வண்ண மாயமுமட்டு மின்றி, இயக்க மாயமும் விசைமாயமும் வானிற் பறக்கும் அருமாயமும் அளிக்கின்றன. பறக்கும் குதிரையின் சுழற்சி மாயத்துக்கு ஒளிமாயம், ஒலிமாயம் அளிப்பது அதன் மீது சுழலும் வெண்கலக்குடை. அதனருகுகளில் கலகலக்கும் வெண் கலத் தகடுகள், பல்வண்ண மணிகளின் தொங்கல் வரிசைகள் உள்ளன. குடை குதிரை மீதும் தெய்வ உருவின் மீதும் பொருத்தப் பட்டு, அதன் சுழற்சியுடன் சுழன்றாலும், அது தானும் தனிச் சுழற்சிக்குரியதாகப் பொருத்தப்பட்டுள்ளது. குதிரை மீதமர்ந்த சிறுவனொருவன் அதன் சுழற்சிக்குரிய விசையைத் திருகி அதைச் சுழலச் செய்கிறான். குதிரையின் சுழற்சியுடன் இணைந்து அது பின்னும் வேகமாகச் சுழன்று, கலகலக்கும் பல்வண்ண மணிகளின் ஓசைகளிலும் ஒளியிலும் தெய்வ உருவுக்கு மேலும் மாய இயக்கமும் எழிலும் இசையும் அளிக்கிறது. சுழற்சியுள் சுழற்சிமூலம் விசை பெருக்கும் தத்துவம் அதைப் பின்பற்றிய செயல்முறை ஆகியவை என்றோ ஒரு காலத்தில் தமிழக வாழ்வில் ஒரு பகுதியாய் இருந்திருக்க வேண்டும். அது வாழ்வில் பரவாமல் மறைந்தபின், அத் தத்துவமும் மறக்கப் பட்டபின், விழா மரபாக அது இச்சிற்றூரில் மட்டுமே நீடித்து, சமயத்துறை மரபாதலால் பொருள் மரபிழந்த குருட்டு மரபாக நீடித்திருத்தல் வேண்டுமென்பதை இவ் விழாக் காட்டுகிறது. ஆனால் பறக்கும் குதிரை விழா இவ்வூருக்கு மட்டும் சிறப்பாய் அமைவானேன்? ஒன்பதாம் நாளில் இவ்வூரில் மட்டும் தேர்விழா நடைபெறாததேன்? இவ்விழா மரபு என்று, எப்படி, எந்நோக்கத்துடன் ஏற்பட்டது? இவ்வினாக்களுக்கு இன்றைய நிலையில் திடுமென முழுவிடை காண்பதரிது. ஆனால் சூழலும் ஊர்மரபும் கோயில் மரபும் இதை ஓரளவு சுட்டிக்காட்டப் போதியன. ஊர்ப் பெயர் ஆரல்வாய்மொழி, ஆருவா(ய்) மொழி, ஆராம்பிளி, அரண்வாய்வழி, அரன்வாய்வழி, அரன்வாய் மொழி எனப் பல வடிவில் எழுத்திலும் பேச்சிலும் வழங்குகிறது. இது இன்று குமரி மாவட்டமாக வகுக்கப்பட்டுள்ள பழைய நாஞ்சில்நாடு அல்லது நஞ்செய்நாட்டு எல்லைப் பகுதி. மேற்குமலைத் தொடர் கடந்து செல்லும் ஒரு மலையிடுக்கு அல்லது கணவாயில், கிட்டத்தட்ட மூன்று பக்கம் மலை சூழ்ந்த இடத்தில் இது அமைந்துள்ளது. கணவாய் ஆரல்வாய் மொழிக் கணவாய் என்றும், தோவாளைக் கணவாய் என்றும் வரலாற்றிலும் வழக்கிலும் பெயர் பெற்றுள்ளது. இந்த இடத்தில் போர்கள் பல நடைபெற்றுள்ளன என்பதை வரலாற்றில் காண்கிறோம். போரில் வீழ்ந்த ஒரு படைத்தலைவனுக்கு வீரக்கோயிலும் வீரபூசையும் இன்றளவும் பேணப்படுகின்றன. ஊரில் எங்கும் அணிமை வரை காணப்பட்ட, இப்போதும் அகழ்ந்து காணப் படும் குண்டுகளும், மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பீரங்கிகளும் இப்போர்களுக்கு இன்றும் சான்று பகர்கின்றன. பழம்போர்கள், வேட்டை, கடும்உழைப்பு ஆகியவை இன்று வரை ஊர்மக்களை உரமிக்க உடல் வாய்ந்தவர்களாகவும் போர்க் குணமுடையவர்களாகவும் ஆக்கிப் படைத்துள்ளது. ஒன்பதாம் நாள் விழாவின் உருவும் இயல்பும், எட்டாம் நாள் விழாவின் பண்பும், இச் சூழல்களுக்கும் பண்புக்கும் இசைந்தவை யாகும். தமிழகக் கோயில்களுக்கும் விழாக்களுக்கும், தமிழக வரலாற்றுக்கும் அரசியல் வாழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பேரூர், சிற்றூர்க் கோயில்கள் எல்லாவற்றிலுமே பத்து நாள் விழாக்கள் பெரும்பாலும் உண்டு- இவை உண்மையில் ஒவ்வோர் அரசரின் முக்கிய உள்நாட்டு வெற்றிகளையும், கடல்கடந்த வெற்றிகளையும், அவ்வரசன் பிறந்த நாளையும் கொண்டாடுபவையாகவே பெரிதும் அமைந்துள்ளன. ஏழுநாள் இறைவன் எழுச்சியாகவும், எட்டாம் நாள் மன்னன் போர் எழுச்சி குறிப்பதாகவும், ஒன்பதாம் நாள் மன்னன் வெற்றிக் கொண்டாட்டம் அல்லது வெற்றியுலாவாகவும், பத்தாம் நாள் மன்னன் பிறந்த நாள் வாழ்த்து நாளாகவும் (நாள் மங்கல மாகவும்) அமைந்துள்ளன. ஒன்பதாம் நாள் விழாப் பொதுவாக எங்கும் தேர் விழாவாக இருப்பதன் காரணம் இதுவே. அது மன்னன் வெற்றி உலா அல்லது ஊர்வலம் குறிப்பதாகும். ஆரல்வாய் மொழியில் கோயில்கொண்ட இறைவர், இறைவி பெயர்கள் மதுரை கோயில் கொண்ட மீனாட்சி சொக்கலிங்கர் பெயர்களே. கோயில் மரபுகளும் விழா மரபுகளும் பெரிதும் இதற்கிசைந்தவையே, மதுரையைப் பின் பற்றியவையே. ஆனால் கோயில் மரபுகளில் சிலவும் விழாவின் மரபுகளில் சிலவும் விசித்திரமாக மாறுபடுகின்றன. எட்டாம் நாள் விழாப் பண்பும், ஒன்பதாம் நாள் பறக்கும் குதிரை விழாவும் இம்மாறுபாடுகளில் உட்படுபவை. மாறுபாடு காட்டும் இப்புதுமைகள் பொதுவாக மீனாட்சி சொக்கலிங்கத்துக்கோ, சிவன் கோயிலுக்கோ உரியவை யல்ல - அவை சாத்தா கோயில் அல்லது காளி கோயிலை நினைவூட்டு பவை. ஐந்தாம்நாள் அரிமாவூர்தி சிறப்பாகக் காளியையும் ஒன்பதாம் நாள் பறக்கும் குதிரை சிறப்பாகச் சாத்தனையும் நினைவூட்டுவன. இதற்கேற்பக் கோயில் மரபுரை, முதலில் கோயில்காளி கோயிலாகவும் சாத்தா கோயிலாகவும் இருந்து, பின் வரலாற்றுச் சூழல் காரணமாக, மீனாட்சி - சொக்கலிங்கர் வாழ்விடமாயிற்று என்று குறிக்கிறது. அவர்கள் குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சிகள் இரண்டு - இரு வேறு காலத்துக்குரியவை. முதலது மிகப் பழைய மரபு, தமிழ் மூவேந்தராகிய சேர சோழ பாண்டியரைப் பின்னணியாகக் கொண்டது. பின்னது தமிழகம் அல்லது ஆரல்வாய் மொழிப் பகுதி நீடித்து அரசியல் குழப்ப நிலையில் இருந்த ஏதோ ஒரு காலம் குறிப்பது. தமிழ் மூவேந்தரும் ஏதோ ஒரு காலத்தில் தம் போராட்டங் களின் இறுதியில் அல்லது இடையே ஒரு நீடித்த போர் நிறுத்தம் அல்லது நேச உடம்படிக்கை கருதிக் கணவாய்ப் பகுதியில் வந்து ஒருங்கு கூடினர். மூவரும் தங்குவதற்கு மூன்று அரண்மனைகள், மூன்று கேணிகள், மூன்று குளிப்பு மாடங்கள், மூன்று பூசை மடங்கள், மூவரும் தனித்தனியிருக்கையுடன் கூடியிருப்பதற்கு வாய்ப்பான ஒரு முப்பந்தல் ஆகியவை அமைத்தனர். அத்துடன் தம் தேசிய ஒற்றுமையின் புத்துணர்ச்சிக்கு அறி குறியாக, தமிழ்த் தேசியத் தெய்வமாகிய மதுரை மீனாட்சி சொக்கலிங்கரைத் தம்மிடையே கோயில் கொள்ள வைத்து, மூவரும் அத்தெய்வங் களின் முன் வழிபட்டு, அத்தெய்வங்கள் சான்றாக ஒப்பந்தம் கையொப்பமிட்டனர். இவ்வரலாற்று மரபுக்குரிய காலத்தை அறுதியிட முடிய வில்லை. ஆனால் அதன் வாய்மையை இன்றும் சூழல்கள் மெய்ப்பிக்கின்றன. மூவேந்தர் கூடிய இடம் இன்றும் முப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. மீனாட்சி சொக்கலிங்கர் கோயில் அங்கில்லை. ஆனால் பாழ்பட்ட நிலையில் மூவேந்தர் அரண் மனைகள், மூன்று கிணறுகள், மூன்று குளிப்பு மாடங்கள், மூன்று பூசை மடங்கள் உள்ளன. தற்கால ஆரல்வாய்மொழி ஊர் இப்போது இந்த முப் பந்தலுக்கு இரண்டு கல் மேற்கே இருக்கிறது. வடக்கூர், நடுவூர், தெற்கூர் என்ற மூன்று பகுதிகளாக அது அமைந்துள்ளது. ஆயினும் முப்பந்தலருகே கீழையூர் அல்லது கீழை ஆரல்வாய் மொழி ஒன்று இருந்ததாக ஊர் முதியவர் அணிமைக் காலம்வரைக் கூறி வந்ததுண்டு. அதுவே பழய ஊர்ப்புறமாகவும் இருக்கக் கூடும். வரலாற்று மரபோடிணைந்த கோயில் மரபு வேறு காலம், வேறு சூழல் குறிப்பது. ஆனால் இதுவும் முதல் மரபுடனும் இன்றைய சூழலுடனும் ஒத்திசைவதே. போரும் புயலும் முப்பந்தலை அலைக்கழித்தன. அன்று அப்பகுதியிலிருந்த ஊர் மக்கள் மலையடிகளில் சென்று பதுங்கினர். பழைய ஊர் பாழாயிற்று. கொலையும் கொள்ளை யும் அப்பகுதியை மனிதர் நடமாட்டமற்ற தாக்கிற்று. இந்நிலை யில் மீனாட்சி சொக்கலிங்கர் கோயிலுக்கு எவரும் போக முடியவில்லை - பூசை செய்பவர்கூடப் பலதடவை தாக்கப்பட்டு உயிரிழக்க நேர்ந்தது. இந்நிலையில் மேற்கே தங்கிய புதிய ஊர்மக்கள் கூடி, அப்பகுதியில் இருந்த காளி- சாத்தாக் கோயிலுக்கே மீனாட்சி சொக்கலிங்கரையும் கொண்டு வந்தனர். கோயில் மரபுகளும் விழா மரபுகளும் புதிய தெய்வங்களுக்கும் இடம் தரும்படி விரவப்பட்டன. இம்மரபுரைக்கேற்பவே ஊர்த்தலைக் கோயிலில் பறக்கும் குதிரை விழா மரபும் பிறமரபுகளும் இடம் பெற்றனவாதல் வேண்டும். முப்பந்தல் இன்றும் ஆறலைக்கள்வர் கொள்ளைகள் நடக்கும் இடமாகத்தான் உள்ளது. ஆறலைக் கள்வர்களுக்குரிய முப்பிடாரி கோயில்கள் முப்பந்தலை இன்று ஆள்கின்றன. பறக்கும் குதிரைவிழா நம்பிரான்விழா என்று அழைக்கப் படுவதால், பலர் நம்பிரான் என்பது பறக்கும் குதிரையின் பெயர் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மையில் பொது வாகக் கடவுள், சிறப்பாக நாடு காவல், கழனிகாவல் தெய்வமாகிய சாத்தாவையே குறித்தல் கூடும். தேவாரக் காலங்களில், சிறப்பாகச் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் காலங்களில், சேர அரசர் பட்டமாகிய `தம்பிரான்' என்ற பெயரை ஒட்டிச் சுந்தரமூர்த்திக்கும் `தம்பிரான் தோழர்' என்ற பெயர் வழங்கியிருந்தது. சேரமானைக் குறித்த தம்பிரான் இறைவனைக் குறித்ததாகப் பின்னாட்களில் இன்றுவரை வழங்கியுள்ளது. நம்பிரான் தம்பிரானின் மரூஉவாய் இருத்தல் கூடும். அல்லது தம்பிரான் சேர அரசனையும் நம்பிரான் இறை வனையும் குறித்திருக்கக் கூடும். முருகன் பெயர் முருகன் வாயில் காவலனுக்கும் வழங்கப்படுதல்போல, நம்பிரான் சிவபெரு மானையும் அவர் காவல் ஆகப் பேரூர் காத்தல் விட்ட சாத்தனுக்குப் பொதுவாக வழங்கி யிருத்தலாகும். இவ் வழக்கை ஒட்டி முதல் வரலாற்று மரபின் காலம் சேரர் ஆட்சியின் கடைப்பகுதியும் சேரமான் ஆட்சிக் காலமுமான 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுகள் என்னலாம். ஆனால் அது சங்க காலத்ததாகவும் இருத்தல் கூடாததன்று. ஏனெனில் மூவரசர் ஒத்த சிறப்புடன் இருந்த காலமும், அவருடன் பல்லவர் முதலிய பிற்கால மரபினர் போட்டியிட்டுப் பெரும்பங்கு கொள்ளாத காலமும் அதுவே. கோயில் மரபுக்காலம் விசயநகர நாயக்கர் காலமோ, மதுரை நாயக்கர் காலமோ அல்லது ஆங்கில வாணிகக் கழக ஆட்சியின் தொடக்கக் காலமோ ஆகக்கூடும். அதாவது அது 15ஆம் நூற்றாண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாய் இருக்கலாம். ஆயிர ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துபட்ட அல்லது கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஓர் இயல் நூல்மரபு, ஆரல்வாய் மொழியில் ஒரு செயல் மாயமாக ஆயிர ஆண்டு தொடர்ந்து இன்றளவும் நடைபெற்று வருகிறது என்னலாம். தமிழகத்தின் மரபறுந்து போன இயல் நூல் மரபு, அராபிக் கதையின் மாய மரபு, தற்கால இயல் நூல் மரபு ஆகியவற்றை இணைக்கும் இப்பறக்கும் குதிரை சுழலும் நிலவுலகுடன் நிலவுலக வாழ்வும் சுழன்று சுழன்று வரும் வகையைக் குறித்துக் காட்டுவதாயுள்ளது. வள்ளுவருடன் தொடங்கி, ஐன்ஸ்டீன் கடந்து வருங்கால உலகு நோக்கி வலம்வரும் அம்மரபு தொடர்ந்து சுழலும் உலகின் சுழற்சி மாயத்தின் பல்வேறு வண்ணங்களிலும் கருத்துச் செலுத்துவோம். டடட 4. அறிவின் சுழற்சி ‘மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை! பரத்தை மறைத்தது பார்முதல் பூதம், பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்!' உலகப் பொதுமறை மரபில் வந்த தமிழகச் சித்தருள் முதல்வர் திருமந்திரமருளிய திருமூலர். அவர் வாய்மொழி இது. மாயை, மருட்சிக்குரிய இலக்கணம் கண்டார் பொதுமறை மூலவர். அவர் வழிநின்று மாயம் விளக்கி, அதன் வாயிலாக மெய்யறிவு, மெய்யுணர்வு பெறுதற்குரிய காட்சிச் சான்று தந்துள்ளார் முதல்வர். மதயானை உருவமொன்று, காட்டில் உயிருருவமாகக் காட்சியளிக்கிறது. அதுகண்டு, அது மதயானையென்றே கருதி மருட்சியுறுகிறான் ஒரு வழிப்போக்கன். மருட்சி அச்சம் தருகிறது. வழிப்போக்கன் ஒரு மரத்தின்மேல் ஏறி, மதயானை செல்லும்வரை காத்திருக்க முனைகிறான். கணங்கள் ஓரைகள் ஆகின்றன. யானை அசையவில்லை. அவன் ஒரு சிறு கல்லெடுத்து அத்திசையில் எறிகிறான். மெல்ல மெல்ல அரவம் செய்து பார்க்கிறான். யானையின் தோற்றத்தில் எத்தகைய மாற்றமும் இல்லை. மருட்சி மாய உணர்ச்சியாகிறது. அவன் துணிந்து இறங்கி, மெல்ல மெல்ல, இன்னும் அஞ்சி அஞ்சியே, பக்கவாட்டில் நகர்ந்தும் பின்புறம் சென்றும் நோக்கினான். மாயம் மருட்கை, வியப்பார்வமாகிறது. எட்டித் தொலைவில் பதுங்கிப் பதுங்கி நின்று கொண்டே அவன் ஒரு கோலால் யானையைத் தீண்டுகிறான், தட்டுகிறான். யானை நின்ற நிலையிலேதான் நிற்கிறது. அவனுக்குத் துணிச்சல் மிகுதியாகிறது. அவன் அதைக் கையாலேயே தொட்டுப்பார்க் கிறான். அது யானையல்ல, யானைபோல மரத்தால் செய்யப் பட்ட உயிருருவமே என்று கண்டு கொள்கிறான். அவன் தெருட்சி யுறுகிறான், மெய்யறிவு பெறுகிறான். இது மாயத்தின் விளக்கச் சான்று மட்டுமே. `பார்முதல் பூதம்' அல்லது உலகத் தோற்றத்துக்கு இதே விளக்கத்தைக் கொண்டு இணைக்க வைக்கிறார் அறிவார்ந்த மாயச் சித்தர். உலகத் தோற்றம் யானைத் தோற்றம் போன்றது. மாய உணர்வு யானைத் தோற்றத்திலிருந்து அதன் மெய்யியல்பு, அதாவது முதற்பொருளாகிய மர உணர்வுக்கு வழி செய்தது. பார்முதல் பூதம் அல்லது உலகத் தோற்றத்திலிருந்து அதே உணர்வு அதன் முதற் பொருளாகிய பரத்தின் உணர்வுக்கு, அதாவது கால இடங்கடந்த மெய்ப்பொருளுணர்வுக்கு வழி வகுத்தது. இங்கே `பார்முதல்', `பரம்' என்ற சொற்களால் திருமூலர் குறித்தவையாவை என்பதை நாம் மேலே காண்போம். பார்முதல் பூதம் எதுவாயினும், பரம் எதுவாயினும் பார் முதல் பூதத்தைப் பரமாகக் கண்டதுடன் மெய்ம்மைத் தோற்றம் முற்றுப் பெற்றுவிடுவதாகப் பலர் எண்ணுவர். இது தவறு. யானைத் தோற்றம் கடந்து மர உணர்வுப் பேறு, உலகத் தோற்றம் கடந்து பரவுணர்வுப்பேறு ஆகிய இவை மெய்யறிவுப் படிக் குரியவை. இவை கடந்த மெய்யுணர்வுப் படி ஒன்று உண்டு. அதுவே முழு உண்மையறிவு அல்லது முழுமெய்யறிவுப்படி ஆகும். திருமூலரின் பாடலில் முதலடி, மூன்றாமடிகள் இந்த மெய்யறிவுப்படியைச் சுட்டுகின்றன. இரண்டாமடி நான்கா மடிகள் மெய்யுணர்வுப்படி குறிப்பவை. யானைத் தோற்றம் மரப்பொருள் இயல்பை மறைத்தது. அது போலவே மரப்பொருள் உணர்வு ஏற்பட்ட பின், அதில்யானைத் தோற்றம் மறைந்துவிட இடம் ஏற்படுகிறது. மரப் பொருள் உணர்வுடன் யானைத் தோற்ற உணர்வும் இணைந்ததே மெய்யுணர்வு நிலை. உலகத் தோற்றம் உலக முதற் பொருளை மறைத்தது. இது போலவே உலக முதற் பொருளுணர்வு ஏற்பட்டபின், அது உலகத் தோற்றத்தை மறைக்க இடம் ஏற்பட்டு விடுகிறது. உலக முதற் பொருளுணர்வுடன் உலகத் தோற்ற உணர்வும் இணைந்ததே மெய்யுணர்வுநிலை. தோற்றத்தை மெய்யாகக் கொள்வது மருட்சி, மருட்சி கலந்த பொது அறிவுநிலை. தோற்றம் கடந்து பொருண்மை அல்லது இயல்பு காண்பது தெருட்சி நிலை, மெய்யறிவு நிலை. தோற்றமும் பொருண்மையும் சேர்ந்து முழுமையாகக் காண்பதே முழு மெய்யறிவு அல்லது மெய்யுணர்நிலை. அறிவுநிலை வேதம், மெய்யறிவுநிலை வேதாந்தம், அது கண்டவரே வேதாந்திகள். உள்ளத்தின் மெய்யுணர்வுநிலை சித்தம். மெய்யுணர்வின் நிறைவே சித்தாந்தம். அது கண்டவர் சித்தர், சித்தாந்திகளின் உயிர் மரபுக்குரிய முதல்வர். உலகத் தோற்றமே மெய் என்று கொள்பவர் பாமரர். அது கடந்து முதற் பொருள் கண்டவரே மெய்யறிவாளரான வேதாந்திகள். ஆனால் உலகத் தோற்றம் பொய், முதற்பொருளே மெய் என்று கூறுபவர் உண்டு - அவர்களே வள்ளுவர் மூல மரபும் திருமூலர் வழிமரபும் இழந்து விட்ட இடைக்கால, பிற்காலப் போலி வேதாந்திகள். அவர்கள் மாயவாதத்தை மாயாவாதமாக்கி, உலகம் மாயை, பொய் இல்லாதது என்று கூறுபவர்கள். உலகத் தோற்ற உணர்வும் முதற்பொருளுணர்வும் ஒருங்கே கொண்டு, ஒன்றனூடாக மற்றதும், ஒன்றனுருவாக மற்றதும் காண்பவரே மெய்யுணர்வாளர், சித்தர், சித்தாந்திகள், உண்மை வேதாந்திகள், அவர்கள் வழி நிற்பவர்கள். தோற்றமும் இயல்பும் சேர்ந்ததே முழு மெய்மை, உண்மை உணர்வு. மயக்கம், மருட்சி, மாறாட்டங்களறுத்த முழு மெய்யுணர்வு இதுவே. அறிவு, அறியாமை! ஒளி, இருள்! வெட்பம், தட்பம்! பெருமை, சிறுமை! மேல், கீழ்! கிழக்கு, மேற்கு! தெற்கு, வடக்கு! இவை யாவுமே எதிரெதிர் பண்புகளாகக் கொள்ளப் படுவதுண்டு - இது பொது அறிவு நிலைக்குரிய மயக்க மருட்சி மாறாட்ட நிலை ஆகும். பொதுவாகக் கருதப்படுவது போல, இவை வேறு வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்பு களல்ல. உலகம் உருண்டை என்ற மெய்மையின் புரட்சிகளை ஆராயும்போது, கிழக்கு மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவை பற்றிய மயக்கங்களைக் கண்டோம். கிழக்கே செல்பவன் மேற்கே வருகிறான்! தெற்கே செல்பவன் வடக்கே வரக்கூடும்! தவிர, ஒரு பொருளுக்குக் கிழக்கேயிருப்பவன், மற்றொரு பொருளுக்கு மேற்கேயும், ஒரு பொருளுக்கு மேற்கேயிருப்பவன் மற்றொரு பொருளுக்குக் கிழக்கேயும் இருக்கக் கூடும். கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு முதலிய திசைப் பெயர்கள், தொடர்புச் சொற்கள் மட்டுமே - தொடர்புத் தள மையமாக ஒருவனை, ஒன்றைக் கொண்டாலன்றி அவை பொருள் உணர்த்த மாட்டா. எதற்குக் கிழக்கு, எதற்கு மேற்கு என்று தெரியா விட்டால், கிழக்கு மேற்கு என்ற தனிச் சொற்கள் பொருளற்றவை. தொடர்பற்ற புதிய இடத்தை யடைந்தவன், நடுக் கடலில் மிதப்பவன், இந்தத் திசைத் தொடர்புகளைக் கூட உணர மாட்டான். ஏனெனில் அவற்றை உணர உண்மையில் இரண்டு வரையறைத் தளங்கள் வேண்டும். ஒன்று காண்பவன். மற்றொன்று கதிரவன் காலையில் தோன்றும் பக்கம், அதாவது நிலவுலகம் சுழலும் திசை! இந்த இரண்டும் இல்லாத இடத்தில் திசையே காணப்பட மாட்டாது, திக்குத்திசையற்ற நிலையே நிலவும். உலகச் சுழற்சி யில்லையானால், கதிரவன் தோற்றம் இல்லையாகும். கதிரவன் தோற்றம் இல்லையானால், கிழக்கோ மேற்கோ, தெற்கோ வடக்கோ பொருளற்ற சொற்களாய்விடும் என்பதை இது காட்டுகிறது. கிழக்கு மேற்கு உணர்வைவிட மாயமானது மேல் கீழ் உணர்வு. இவையும் தொடர்பு குறித்த சொற்களே. ஒன்றனுக்குக் கீழ் இருப்பவர் மற்றொன்றுக்கு மேலாகவும், ஒன்றனுக்கு மேல் இருப்பவர் மற்றொன்றினுக்குக் கீழ் ஆகவும் அமைதல் கூடும். தவிர, கீழ் இருப்பவர் மேல் நோக்கியன்றித் தாம் கீழ் இருப்பதாகவோ, மேலிருப்பவர் கீழ் நோக்கியன்றித் தாம் மேல் இருப்பதாகவோ அறியமாட்டார். பள்ளத்தாக்கில் இருப்பவரும் மேட்டு வெளியில் இருப்பவர்களும் தாம் பள்ளத்தில், மேட்டு வெளியில் இருப்பதை நில நூலார் கணித்துரைத்தன்றி அறிய முடியாது. நடுக்கடலில் இருப்பவர் திசையறியாதது போலவே, வானில் நிலந்தட்டுப்படாத உயர்தளத்தில் மிதப்பவர் சரியான மேல்கீழ் உணர்வும் இழந்தவராவர். அவர்கள் உடலின் தலையும் காலும் மேல்பக்கம், கீழ்ப்பக்கம் சுட்டிக் காட்டக்கூடும். ஆயினும், இது நிலக்கவர்ச்சி எல்லை கடக்கு மட்டும்தான் பயன்படும். நிலவுலக வாழ்விலேயே, காலடியில் நிலம் இருக்கும் பக்கத்தைக் கீழ் என்றும், இதற்கு நேர் எதிராக, தலை உச்சிமீது உள்ள பக்கத்தை மேல் என்றும்தான் நாம் கொள்கிறோம். நில உலகம் உருண்டை என்ற மெய்ம்மை இதைக் கேலிக் குரியதாக்கி விடுகிறது. நில உலக உருண்டையில் எதிர் எதிராக, 12,500 கல் தொலைவுக்கு அப்பாலும் இப்பாலும் நிற்பவர்களுக்கு, கீழ் பக்கம் என்பது, அதாவது காலடியும் நிலமும் இருக்கும் பக்கம் எதிரெதிராகவே இருக்க முடியும். ஒருவர் கீழ்நோக்கு மற்றவர்க்கு மேல்நோக்கு ஆகவும், ஒருவர் மேல் நோக்கு மற்றவர்க்குக் கீழ்நோக்கு ஆகவும் இருந்தே தீர வேண்டும். `நில உலகம் உருண்டை. உருண்டோடுகிறது!'- இவ்வாறு தந்தை அல்லது ஆசிரியர் கற்பிக்கும் சமயம், குழந்தை அல்லது குழந்தை மாணவ மாணவி தன் அறியாக் கேள்விகளாலேயே அந்தத் தந்தை அல்லது ஆசிரியர் அறிவைத் திக்குமுக்காட வைப்பதுண்டு. `நிலவுலகம் உருண்டோடுவது உண்மையானால், அப்படி உருண்டோடும்போது நாம் விழுந்துவிட மாட்டோமா? நிலவுலகில் நமக்கு நேர் எதிராக நிற்பவர் எப்படி விழுந்து விடாமல் தலைகீழாக நிற்க முடியும்?' - இந்தக் கேள்விக்கு விடை கூற மாட்டாமல் முதியவர் சிரித்துப் பசப்பியோ, குழந்தையின் அறியாமை கண்டு நகையாடுவதுபோல இறுமாந்து புன்னகை செய்தோ சமாளிப்பர். `தமிழகத்தில் நாம் நிமிர்ந்து நடக்கும்போது ஸக்சிக் கோவில் உள்ளவர்கள் தலைகீழாக வல்லவா தொங்க வேண்டும்?' - சற்று விரிவாக நிலநூல் படித்த சிறுவனானால், இப்படியும் கேட்டு விடலாம்! அறியாக் குழந்தைகளின் கேள்விக்கு அறிவு நிலை மட்டும் எட்டியவர்கள் விடை விளக்கம் கூற முடியாது. மெய்யறிவு நிலையும் மெய்வுணர்வு நிலையும் பெற்றவர்கள் தான் கூற முடியும். மேல், கீழ் என்பன தொடர்பு குறித்த சொற்கள் மட்டுமே - அதுவும் நிலவுலகில் இருப்பவர்களுக்கு நிலவுலகில் தாம் இருக்கும் சமயத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற நிலமையத்தின் திசை, எதிர்திசை குறித்த சொற்களே அவைகள். கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு ஆகிய திசைப் பெயர்களும் சரி; மேல், கீழ் என்ற அவற்றை ஒத்த தொடர்புப் பெயர்களும் சரி; ஒருவனுக்கு, ஓரிடத்தில், ஒரு சமயத்தில் பொருந்தும் தொடர்புப் பெயர்களேயல்லாமல், என்றும் எக்காலத்தும் எல்லாருக்கும் எல்லாப் பொருளுக்கும் ஒத்த கால இடம் கடந்த தனி மெய்ம் மைகளாகமாட்டா. ஏனெனில் ஒருவருக்கு ஒரு சமயத்தில் ஓர் இடத்தில் கிழக்கு, தெற்கு, கீழ் ஆகியிருப்பது; மற்றொருவருக்கு, மற்றொரு சமயம், மற்றோரிடத்தில் மேற்கு, வடக்கு, மேல் ஆக அமையக் கூடாதென்றில்லை. இடத் தொடர்பு காட்டும் இச்சொற்களிலிருந்து வேறு பட்டவையல்ல, பெருமை, சிறுமை, தட்ப வெப்பம், ஒளி இருள், அறிவு அறியாமை ஆகிய எதிரிணை சொற்கள். அவை எதிரிணை சொற்கள் மட்டுமே, முற்றிலும் எதிர்ப்பண்பு குறித்த எதிர்க்கருத்துக்களல்ல. பெருமை சிறுமை அளவுத் தொடர்புச் சொற்கள், உறு பெருமை நோக்க, பெருமை சிறுமையாகிறது. உறுசிறுமை நோக்க, சிறுமை பெருமை ஆகிவிடும். காண்பவர் பொதுவாக ஒரு நடு அளவையோ, தற்குறிப்பாக ஒரு திட்ட அளவையோ எண்ணிக் கொண்டுதான் அதில் மிக்கவற்றைப் பெரியன என்றும், அதில் குறைந்தவற்றைச் சிறியன என்றும் கருத முடியும். மேலீடாகக் காண்பவருக்கு, வெப்பமும் குளிர்ச்சியும் பெருமை சிறுமை போன்ற அளவுத் தொடர்புச் சொற்களாகத் தோற்றாது, எதிரெதிர் பண்புச் சொற்களாகவே தோற்றக் கூடும். ஏனெனில், பொதுவாக நாம் வெப்பத்தின் குறைவைக் குளிர்ச்சி என்றோ, குளிர்ச்சியின் குறைவை வெப்பம் என்றோ கூறுவ தில்லை. இதற்குக் காரணம் இவ்வகையில் நமக்கு இயல்பாக ஏற்பட்டுள்ள ஓர் உணர்ச்சி மாயமும் ஒரு மொழி மாயமுமே யாகும். நம் உடலின் வெப்ப நிலையை நாம் இயல்பான நடு அளவாகக் கொண்டு, அதின்மிக்க வெப்ப நிலையை வெப்ப மென்றும், அதில் குறைந்த வெப்ப நிலையைக் குளிர்ச்சியென்றும் உணர்கிறோம், கூறுகிறோம். இது வெப்ப நிலையை மறைத்துக் காட்டும் உணர்ச்சி மாயமாகவும் மொழி மாய மாகவும் செயலாற்றுகிறது. இது மட்டுமன்று, மொழிமாயம் உணர்ச்சிமாயங் கடந்து மேலும் ஒருபடி முன்சென்று விடுகிறது. உறு வெப்பநிலையிலிருந்து குறை வெப்பநிலைக்கு மாறும்போது நாம்பெறும் உணர்ச்சியை வெப்பம் என்றும் கூறுவதில்லை. குளிர்மை அல்லது குளுகுளுப்பு (ஊடிடிடநேளள) என்ற ஒரு புதிய சொல்லை அதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோலவே உறுகுளிர்ச்சியிலிருந்து குறை குளிர்ச்சிக்கு மாறும் நிலையை வெப்பம் என்றும் கூறாமல் குளிர்ச்சி என்றும் கூறாமல், வெதுவெதுப்பு (றுயசஅவா) என்ற புதிய சொல்லால் குறிக்கிறோம். உணர்ச்சி மாயம், மொழிமாயம் கடந்து இயல் நூலார் உறுவெப்பம் அல்லது கொதிநிலை (க்ஷடிடைiபே யீடிiவே) முதல் உறுகுளிர்ச்சி அல்லது உறைநிலை (குசநநணiபேயீடிiவே) வரையிலும் இவை கடந்து அப்பாலும் இப்பாலும் ஒரே படிப்படியான வெப்பநிலை ஏற்றத் தாழ்வாகக்கொண்டு, கருவி மூலம் இது காட்டியுள்ளார்கள். வெப்பதட்பம் இவ்வாறு பொதுமக்களை மட்டுமே மருட்சிக்கு ஆளாக்குகிறதென்றால், ஒளி இருள் தொடர்பு இயல்நூல் மாணவருக்கே- இயல் நூல் அறிஞருக்கே கூட மருட்சி தருவதாய் உள்ளது. ஒளிக்கு எதிர்பண்பு இருள் என்பதே பொதுமக்கள் கருத்து என்பதில் ஐயமில்லை. ஆனால் இயல்நூல் மாணவர், இயல் நூலறிஞர் பலர் கருத்துக்கூட இதிலிருந்து மிகுதி வேறுபட்ட தன்று. ஏனெனில், அவர்களுள்ளும் மிகமிகப் பலர் ஒளியின் இன்மையே இருள் என்று கருதுவர். ஒளிக் கதிர்ப்பட்டையின் ஏழு நிறங்கள் சேர்ந்ததே ஒளி, வெண்மை என்றும், ஏழின் முழுதுறழ் இன்மையே இருள், கருமை என்றும், ஒளி இருளுக்கு மட்டுமன்றி, வெண்மை கருமைக்குக்கூட விளக்கம் அளிப்பவர் உண்டு. ஒளியின் இன்மை இருள் என்பதன் முழுப்பொருள் என்ன? ஒளி, இருள் என்ற இருபண்புகள் உண்மையில் கிடையாது, ஒளி ஒன்றுதான் உண்டு என்பதே. இன்னொரு வகையில் கூறுவ தானால், ஒளி உள்பொருள், இருள் இல்பொருள் - வெறும் மொழிமாயம் என்னல் வேண்டும். ஆனால் இது ஒளி இருளுக்கு மட்டுமல்ல, வெப்ப தட்பம், பெருமை சிறுமை ஆகிய எல்லாவற்றுக்குமே பொருந்தும். வெப்பநிலையின் குறைபாடன்றித் தட்பம் என்ற ஒரு தனிப் பண்பு, அளவின் குறைபாடன்றிச் சிறுமை என்ற ஒரு தனிப்பண்பு உண்மையில் கிடையாது. ஒளி உள்பொருள், இருள் இல்பொருள் - அப்படியானால், இல்பொருளை நாம் எப்படிக் காண்டல் கூடும்? நாம் இருளைக் காண்கிறோமே!' என்று எவருக்கும் கேட்கத் தோன்றும். நம் கால இயல்நூல் சூழலில் மட்டுமல்ல, முற்கால இடைக்கால, புத்தசமண வேதாந்த சித்தாந்த வாதச் சூழல்களுக் கிடையேகூட இது ஒரு பெரிய ஆராய்ச்சி எதிர் ஆராய்ச்சிச் செய்தியாயிருந்து வந்துள்ளது. உள்பொருள் (பாவம்) காணமுடியும். இல்பொருள் (அபாவம்) என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் அதைக் காண முடியாது - இது ஒருவகைப் பழைய வாதம். பொருளின் உண்மை காணாமையே இன்மை காண்பது. மழை இல்லாதபோது, `இப்போது மழை இல்லை' என்கிறோம். இயன்றது கண்டு கூறும் வகை இதுவே என்பர் இன்னும் சிலர். இது மட்டுமோ? `காணாதிருக்கும் உள்பொருள் உண்டானால், காணப் படும் இல்பொருள் ஏன் இருக்க முடியாது?' என்று வாதிடுபவர் கூட உண்டு. காணாதிருக்கும் உள்பொருள் காற்று என்று கூறத் தேவையில்லை. காணும் இல்பொருளுக்கு வான், வானவில் சான்றுகளாகலாம். அறியாக் குழப்பத்தில் அறிவுக் குழப்பம் உண்டு பண்ணும் கேள்விகள்; வாதங்கள் இவை. இங்கு வாத வழியிலன்றி, மெய்யறிவு வழிநின்று முடிவு கட்டிய தொல்லறிவாளர் உண்டு. அவர்கள் முடிவை இடைக் காலங்களின் பழம்பெரு நூலான பகவத் கீதை ஒரு மணிவாசக மாக்கிக் கூறுகிறது. `இல்லாதது என்றும் இருப்பதில்லை, பிறப்பதில்லை உள்ளது என்றும் இல்லாதிருப்பதில்லை, அழிவதில்லை- இரண்டன் தன்மைகளையும் மெய்யுணர்வாளர் கண்டு முடிவு செய்துள்ளார்' (நாஸதோ வித்ய தே பாவ: நாபாவே வித்யதே ஸத: உபயோரபி த்ருஷ் டோந்தஸ்து அநயோஸ் தத்வர்சிபி) இவ்விடங்களில் வாதமயக்கம், அறிவு மருட்சி ஆகியவை உண்டாவதற்குரிய காரணம்கூட மொழி மாயமே. மழையில்லை என்பவன் இன்மை காண்பதும், ஒளிகாணாதவன் இருள் காண்பதும் உண்மையில் இன்மைக் காட்சியல்ல, அன்மைக் காட்சியே. இடைக்காலப் புத்த சமண, வேதாந்த சித்தாந்த ஏடுகளில் இல்பொருள் சான்றுகளாகக் குறிக்கப்படும் முயற்கொம்பு, மலடிமகள், வானத்தாமரை ஆகியவையும் உண்மையில் இல் பொருள்களல்ல, அல்பொருள்களே. ஆம். இருள் என்பதும் இதுபோன்றதொரு மொழி மாயமே. அது ஒளியின் எதிர்பண்புமன்று, இன்மையுமன்று - அன்மை யே! அன்மை என்பது மாறுபட்ட உண்மை, இன்மையன்று. இருள் ஒளிக்கு எதிர்பண்பு என்ற அறியாப் பொது மக்கள் கருத்துக்கூட அவ்வளவு படுதவறானதன்று, அது ஒளியின் இன்மை என்ற அறிவுடைய அறிஞர் முடிபே அதனினும் தவறானது. ஏனெனில் அது எதிர் பண்பல்லாவிட்டாலும், ஓரளவு மாறுபட்ட உண்மையே - காட்சிக்குரிய ஒளியின் அல்லது ஒளிக்கூறின் அன்மை, காட்சிப் படாத ஒளிக்கூறுகளின் உண்மையே அது. ஒளி, இருள் மட்டுமல்ல எதிரிணை சொற்கள்! ஒளி, நிழல் - இவையும் எதிரிணை சொற்களே! ஒரே அகல்பேரொளி அல்லது இருவேறு ஒளிகளின் கதிர்கள் ஒரு கோல் அல்லது கம்பத்தைக் கடந்து செல்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்போது கோலின் அகலத்தை அடிவரை (யௌந) ஆகக்கொண்ட ஒரு முக்கோணம் செறிநிழல் (ரஅசெய) ஆகவும், அதன் இருபுறமும் கோலின் ஓரங்களைக் கூர் மையம் (ஹயீநஒ) ஆகக்கொண்ட இரு முக்கோணங்கள் தளர்நிழல் அல்லது ஒளிநிழல் (ஞநரேஅசெய) ஆகவும் மற்றப் பகுதிகளே ஒளிப் பரப்பாகவும் இயல்வது காணலாம். கோலின் இருநிழல் வடிவங்களில் ஒவ்வொன்று மட்டும் படிந்த இடம் தளர் நிழலாகவும், இரண்டும் சேர்ந்து படிந்த இடம் செறி நிழலாகவும் அமைகின்றன. நிழலோடு நிழல் சேர்ந்தால் செறிநிழல், இதன் மிகு செறிவே இருள் என்பதை இது காட்டுகிறது. நிழலோடு ஒளிசேர்ந்தால் தளர்நிழல், தளர் நிழல் தோய்ந்தால் அது ஒளி நோக்கிய வளர்ச்சி என்று காண்பதும் அரிதன்று. ஏனெனில் இரண்டு ஒளிக் கதிர்ப் படைகள் கடக்கும் போது, இரண்டும் படியும் இடம் செறி ஒளியாக, தளர்ஒளி ஊடறுத்து நிற்பது காணலாம். நிழல், ஒளியில் இருளின் கூறு; இருளில் ஒளியின் கூறு. ஒளி, இருள் ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே பொரு ளாகத் தொடர்பு படுத்துவது நிழல். ஒளி, இருள் ஒரே பண்பின் இரு அளவுத் தொடர்புகள் என்பதையும் இதுவே காட்டும். மொழி மாயத்துக்கு இங்கே மொழிமாயமே விளக்கம் தந்து தெருட்சியளிக்கிறது. ஏனெனில் ஒளியின் அன்மைப் பொருளாகிய இருளை இன்மைப் பொருளாகக் காட்டிய அதே மனித மொழி, இரண்டின் தொடர்பு குறித்த `நிழல்' என்ற சொல்லையும் படைத்து உருவாக்கியுள்ளது. பண்டைத் தமிழர் இந்த மொழி மாயங்களை உணர்ந்தே மணம் நாற்றம், ஒளி நிழல் ஆகிய சொற்களை எதிரெதிர் சொற் களாக்கிய பின்னும் இரு பொருள்களிலும் மாறிமாறி வழங்கியுள்ளனர். விருப்பத்துக்குரிய நாற்றமே மணம், வெறுப்புக் குரிய மணமே நாற்றம் - உருத்த நிழலே ஒளி, திரிபுற்ற ஒளியே நிழல் என்று சொல் பயின்றுள்ளனர். தவிர ஒளியின்றி நிழலுக்கு வடிவம் இல்லை, நிழலுக்குப் பின்னணியாய் நின்று வடிவும் உருவும் தருவது ஒளியே. அது போல நிழலின்றி ஒளிக்கு வடிவில்லை, அதற்குப் பின்னணியாய் நின்று வடிவம் தருவது நிழலே. நிழலுக்கு எதிரிணை சொல்லான ஒளி, வடிவெல்லை யுடைய ஒளி. ஆனால் வடிவெல்லையற்ற நிழலையும் ஒளியையு மே நாம் இருள் ஒளி என்கிறோம். ஒளியில் பல படிநிலைகள்; இருளில் பல படிநிலைகள் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும் ஒரே வெப்பநிலையின் இரு திசைகளாய் இயல்வது போலவே ஒளியும் இருளும் ஒரே ஒளி நிலையில் இரு திசைகள் என்பதை இது காட்டுகிறது. ஒளியின் இன்மையை, அதாவது அன்மையைப் பொது வாக மனிதன் இருளாகக் காண்கிறானென்றால், ஒளிகாண இயலாத நிலையில் அவ் ஒளியையே இருளாகக் காண்கிறான் குருடன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியின் மிகுதியால் கண் கூசுகிறது. உறுமிகுதியில் மனிதன் குருடாகிறான். மனிதன் பகலொளி பூனைக்கு நிழலொளி. ஆந்தை கோட்டான் கூகை ஆகியவற்றுக்கு அதுவே இருள். அதே சமயம் மனிதன் இருள் இவற்றுக்கு ஒளியாக இயல்கின்றது. இருள் இவ்வாறு ஒளியின் அன்மை மட்டுமல்ல, அதற்கு மாறான, மனிதன் காணமுடியாத கூறுகளின் உண்மையையும் குறிப்பதேயாகும் என்னலாம். மனிதன் கண் காணாதவற்றைப் பிற புலன்கள் உணர் கின்றன. மனிதன் உணராதவற்றை நாய் நரிகள் மோப்பத்தால் உணர்கின்றன. மனிதன், உயிரினங்கள் ஆகிய இரு சார்புகளிலும் புலன்கள் பெரும்பாலும் ஒளிக்கதிர்களின் வண்ணப் பட்டைக்கு இப்பாலும் அப்பாலும் உள்ள ஒளியலைகளையோ, ஒலியலைகளில் பெரும்பாலானவற்றையோ, மின்காந்த அலைகளையோ உணர்வதில்லை. பலவற்றைக் கருவித்துணை கொண்டே உய்த்துணர்கிறோம். ஒளி என நாம் கூறுவது ஒளியலைகளில் நம் கண்ணுக்குத் தெரியும் கூறுகளை மட்டுமே. இவற்றின் செறிவு உருத்த ஒளியாகவும், செறிவுக் குறைவு நிழலாகவும் கொள்ளப்படு கின்றன. கண்ணுக்குத் தெரிந்த பகுதிகளின் முழுக்குறை பாட்டையே நாம் இருள் என்கிறோம். இது உண்மையில் ஒளியின் அன்மை மட்டுமல்ல, நம் கண்காணா ஒளியலைக் கூறுகளின் உண்மையாகவும் இயல்கின்றது. காணப்படும் ஒளியலைகளின் தொலைவெல்லையில் நாம் பார்க்கும் அல்லது பார்ப்பதாக எண்ணும் வான்நீல நிறம் போன்றதே, கண்காணமாட்டாத ஒளியலைகளின் எல்லையில் நாம் காணும் அல்லது காண்பதாக எண்ணும் அல்லது கூறும் கருமை அல்லது இருள் மாயம். இருள் இல்பொருளன்று, அல்பொருள் - அது காணாத ஒளி, காணாத உள்பொருள். தமிழில் அல் என்பது கருமை, இருள், இரவு என்ற பொருள்கள் சுட்டுவது இங்கே கூர்ந்து நோக்கத்தக்கது. மேற்கண்ட எதிரிணை சொற்களில் வெப்ப தட்பம் வரையுள்ளன பொதுமக்கள் காட்சியை மட்டுமே மறைக்கும் அறிவு மாயமாகவும், ஒளி இருள் ஆகியவற்றின் எதிரிணைவு இயல்நூலறிவு அல்லது பகுத்தறிவுத் துறை சார்ந்தவரையும் மருட்டும் மெய்யறிவு மாயமாகவும் இயங்குவது காண்கிறோம். அறிவு அறியாமை என்ற எதிரிணை சொற்கள் மெய்யறிவின் உச்சநிலை அணுகியவர்களைக் கூட மருட்சியில் ஆழ்த்தத்தக் கவை ஆகும். ஏனெனில் அவற்றை வேறு வேறு, எதிரெதிர் பண்புகள் என்று கொள்ளத்தக்கவர்கள்கூட அறிவின் இன்மையே அறியாமை என்று கட்டாயம் கொண்டுவிடுவர். உணர்வு, மருள் ஆகியவற்றுக்கு இருதளங்கள் இருப்பது போல அறியாமைக்கும் இரு தளங்கள் உண்டு. ஒன்று அறிவுக்கு முற்பட்டதளம், அறிவு முதிராத தளம். இது அறிவின் இன்மை யோ அன்மையோ கூட அல்ல. அறிவின் குறைநிலையே. மற்றொரு தளம் அறிவுக்கு மேற்பட்டது. அறிவு, அதாவது அறியப்பட்ட அறிவின் மிகக் குறுகிய சிற்றெல்லைக்கு வெளியேயுள்ள அறியப்படாத அறிவின் உருபெரும் பரப்பையே அது குறிப்பதாகும். கொள்கையளவில் இது நிகழ் காலத்துக்குரிய தன்று, வருங்காலத்துக்குரியது. ஆனால் மனிதன் நிகழ்கால அறிவு நிலையிலும் அதன் சாயல் அறியாமை பற்றிய அறிவாக, அறிவு பற்றிய துணியா முடிபுப்பண்பாக, ஐயுறவு நிலையாக இயல்கின்றது. தமிழில் அறியாமையின் இரு தளங்களையும் குறிக்கக் கிட்டத்தட்ட ஒரே வேர்ச் சொல்லடிப் படையான இரு சொற்கள் உள்ளன - அவையே மடமை, மடம் என்பன. இரண்டிலும் வேர்ச்சொல் `மடு' என்பதே. நிறை, செறியவை என்பது அதன் பொருள். குறையறிவின் கலக்கமற்ற, அறிவுக்கு முற்பட்ட, சிந்தனையற்ற நிறையமைதியை மடமை என்ற சொல் குறிக்கிறது. குறையறிவின் குறுகிய கட்டுப்பாட்டுக்குள் உயிர்மரபற்று நின்று விடாமல், அறிந்த அறிவின் அறியாமை அல்லது குறை பாடறிந்து, அறியா அறிவின் அறிநிலை அல்லது நிறைவும் தேர்ந்தநிலை மடம் ஆகும். பெண்டிரின் நாற்குணங்களில் ஒன்றான மடம் பிந்திய அறிவுநிலை கடந்த அறிவறியாமை நிலையேயாகும். இயல்பாய் அறிந்தும் அவ்வறிவு அறியாத நிலையுடைமையும், அறியாமை, அதாவது அறியா அறிவின் பரப்புப் பற்றிய விழிப்புடைமையும் கலந்த ஒரு பண்பமைதியே இது என்னலாம். மடம் உண்மையில் அறிவின் முத்தளப்பரப்பும் அளாவியது. அறிவின் எல்லையற்ற முழுப்பரப்பின் செயலற்ற அறிதுயில் நிலை என அதை நாம் குறிக்கலாம். ஏனெனில் அறியாத அறிவு பற்றிய விழிப்பு, அறிந்த அறிவின் அறியாமை அல்லது குறைபாடு பற்றிய ஐயம், அறிவுக்கு முற்பட்ட அறியாமை பற்றிய மறுசிந்தனை ஆகியவற்றின் கூட்டமைதியாக அது இயல்வது. இதுவே கடவுள்நிலை அறிவின்கரு - முக்கால முணரும் பகவரின் அறிவமைதி நிலையும் இதுவே. அறிவு, அறியாமை இவ்வாறு எதிரெதிர் பண்புகளல்ல, அறிவுநிலை என்ற ஒரே பண்பின் அலை எதிர் அலைகள், தள எதிர்தளங்கள் மட்டுமே. தமிழைச் செந்தமிழாக, பண்பார்ந்த மொழியாக, கன்னித் தாய்மொழியாகக் கண்ட முதல்வர்கள் இத்திறமுணர்ந்தவர்கள் என்பதைத் தமிழின் அறிவு கடந்த சொல்லமைதிகள் காட்டு கின்றன. மெய்யறிவுநிலை கடந்த இந்த மெய்யுணர்வு நிலையின் உச்ச உயர் முகடளாவி ஒளி வீசியுள்ளவர் முதுமறை மூலவர் திருவள்ளுவர். அறிவு, அறியாமையின் இத்தொடர்பை விளக்கும் அவர் வாய்மொழி வாசகம் ஒன்று உண்டு. `அறிதோறு அறியாமை கண்டற்றால், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.' வள்ளுவர் பெருமான் இங்கே இப்பெரும் பேருண்மையை ஒரு தனி உண்மையாக விளக்கவில்லை. அறிவு அறிவறியாமை பற்றிய இத்தகைய உண்மைகளை விளக்க வேண்டிய இடம் இன்பத்துப் பாலன்று, பொருட்பால். இன்பத்தின் பண்பு கூறுமிடத்தில் அப்பேருண்மைக்கு விளக்கமாக வந்த ஓர் உவமையாகவே இதனை அவர் ஓர் இடைக் குறிப்பாகத் தந்துள்ளார். அதன் முழு ஆழ அகல விரிவுரைகளை உரையாசிரி யர்களோ வாசகர்களோ காணாமல் தடுக்க இச்செய்தி பேரளவில் வகை செய்துவிட்டது என்னலாம். பொருந்திய காதலால் ஒருவன் பெறும் இன்பம் கணந்தோறும் புதிது புதிதாக எல்லையற்ற பொங்கல் வளம் காணும் இயல்புடையது. இதற்கு உவமையாகவே அறிவு அறியாமைத் தொடர்பு இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது. அவ் வின்பம், `நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய, முன்னையறியாமை கண்டாற் போலக் காணப் படா நின்றது' என்பது பரிமேலழகர் உரை வாசகம் ஆகும். அவர் உரை விளக்கம் அவர் கருத்துக்கு இன்னும் ஒளி தருவதாயுள்ளது. `அறிவிற் கெல்லையின்மையால், மேன்மேலறிய அறிய, முன்னை யறிவு அறியாமையாய் முடியுமாறுபோல. (இன்பத்தின்) செறிவிற் கெல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய, முன்னைச் செறிவு செறியாமையாய் முடியா நின்றது' என்பது அவ்வுரை விளக்கம். பரிமேலழகர் உரையும் அதைவிட முனைப்பாக உரை விளக்கமும், உவமைக்குரிய பொருளாகிய புத்தின்ப மலர்ச்சி யுடன் அறிவறியாமைத் தொடர்பை நன்கு பொருத்திக் காட்டுகின்ற தென்பதில் ஐயமில்லை. முன்னைய இன்பம் (செறிவு) இன்பமின்மையாக (செறியாமையாக)த் தோற்றுமளவு புதிய இன்பத்தின் (செறிவின்) அளவு பெரிது என்ற கருத்துக் கேற்ப, அறிந்த அறிவு அறியாமையேயாகத் தோற்று மளவு புதிய அறிவு (மெய்யறிவு) பேரறிவாக விளங்குகிறது என்று அவர் காட்டுகிறார். அத்துடன் இன்பத்துக்கு எல்லையில்லை என்பதுட னொப்ப, அறிவுக்கு (அறிவு அறியாமை அடங்கிய அறிவு நிலை முழுமைக்கு) எல்லையில்லை என்பதையும் அவர் சுட்டியுள்ளார். ஆயினும் வள்ளுவர் கூறவந்த பொருளில் இது ஒரு பகுதி மட்டுமேயாகும். அறிவு, அது கடந்த புதிய அறிவு அல்லது மெய்யறிவு ஆகிய இந்த இரண்டில் மெய்யறிவின் அளவையும், அறிவின் எல்லையற்ற வருங்கால வளத்தையும் இங்கே உரையாசிரியர் உட்படுத்தத் தவறவில்லை. ஆனால் மெய்யுணர்வு நிலை என்பது இந்த மெய்யறிவுடன் அறிவும் ஒருங்கே அளாவியது. அத்துடன் இரண்டின் அறியாமை, அதாவது குறைபாடு பற்றிய அறிவும், அறிவுக்கு முந்திய படியாகிய அறியாமை பற்றிய சிந்தனையும், இன்னும் அறியப்படாத அறியாமை, அதாவது வருங்கால அறிவு வளம் பற்றிய உயிர் ஆர்வமும் உள்ளடக்கியது அது. இம் முழுப்பரப்பையுமே வள்ளுவர் இங்கே சுட்டியுள்ளார். இம் முழுப்பரப்பின் ஒரு கூறே வள்ளுவரால் பொருட் பாலில் சுட்டப்பட்டது. `தொட்டனைத் தூறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.' இது அறிவு நிலையின் எல்லையற்ற வளத்தையே காட்டு கிறது. பிற்கால ஒளவையார் பாடல் ஒன்று மற்றொரு கூறு வகுத்துச் சுட்டுகிறது. `கற்றது கைம்மண் ணளவு, கல்லாத துலகளவு.' இந்த அறிவின் குறையையும் குறைபாட்டையும் அறியா அறிவாகிய அறியாமையின் கழி பேரெல்லையையும் கணித் துணர்த்துவது. ஆனால் வள்ளுவர் இன்பப் பாலில் குறித்த உண்மை இதனினும் அரியதோர் அறிவு கடந்த உண்மை. அறிந்த அறிவு, புதிய அறிவாகிய மெய்யறிவு, அறிவுக்கு முற்பட்ட அறியாமை நிலை பற்றிய மறுசிந்தனை, அறியா அறிவாகிய அறியாமையின் எல்லையற்ற வளம், இவற்றை அளாவி முன்னேறும் அறிவு கடந்த பண்பு, பண்பு கடந்த சால்பு ஆகியவற்றை அது உள்ளடக்கியது. அது உலகளாவியது, இனமளாவியது, எடுக்கக் குறையாதது, கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத பொங்கல் வளம் காண்பது, கொடுப்பவர் பெறுபவர் இருவர்க்கும் உறுநலன் செய்வது, ஒன்று பத்து நூறாக அறிவார்வமும் அறிவும் இன்ப ஆர்வமும் இன்பமும் பெருக்குவது. வெளிப் பார்வைக்கு அறிவறியாமைத் தொடர்பை வள்ளுவர் இங்கே ஓர் உவமையாகக் கூறியதாகத் தோற்றினும், அவர் கருத்தில் உவமையும் பொருளும் ஒன்றை ஒன்று விளக்கும் ஒரே உண்மையின் இரு கூறுகளேயாகும் என்பது கவனிக்கத் தக்கது. கல்வி, அறிவு ஆகியவை பற்றி அவர் அறத்துப்பாலிலும் பொருட் பாலிலும் இன்பப்பாலிலும் கூறி, அம் முத்தளத்திலும் உள்ள அறிவு நிலைகளையே சுட்டிப் படிப்படியாக விளக்கிக் காட்டியுள்ளார். இஃது உணராதவரே இவ்வுவமையையும் இதுபோன்ற உவமைகளையும் வெற்றுவமைகளாகக் கொள்வர். உண்மையில் அவை ஒன்றை ஒன்று விளக்கவந்த ஒரே பேருண்மையின் வேறுவேறு கோணங்கள் மட்டுமே யாகும். அறத்தளத்தில் அறிவு நிலை தனி மனிதன் அறிவு நிலை. பொருள் தளத்தில் அது சமுதாய அறிவு நிலை ஆகி உலகப் பரப்பு அடைகின்றது. இன்பத் தளத்திலோ அது இன அறிவு நிலை, அது இன்பம் பயப்பது, இன்ப உருவானது. அது கால இடம் கடந்தது. முழு இன அறிவாக, இன்ப உணர்வாகக் கனிவுறுவது அது. அறிவு அறியாமை ஒரே அறிவு நிலையின் இரண்டு அலைகள் மட்டுமல்ல. அறிவலையில் அறியாமைக் கூறு உண்டு. அதுவே அறிவமைதி குலைத்துப் புத்தறிவுக்கு வழி வகுப்பது. அறியாமையலையில் இதுபோல அறிவுக் கூறு உண்டு. அறியாமை பற்றிய அறிவு என இதைக் கூறலாம். அறிவை எல்லையற்ற அறிவாக வளர்ப்பதும், மறு சிந்தனையூட்டுவதும் இதுவே. அறிவுக்கு முற்பட்டநிலை குழந்தையின் அறியா நிலை. அதன் அறியாவினா அறிவுடையவர் அறிவு மட்டுமன்றி மெய்யறிவாளர் உயர் அறிவும் கடந்து மெய்யுணர்வுத் தூண்டு தல் தருவதன் காரணம் இதுவே. பெரும்பாலும் ஆடவரிடம் மெய்யறிவுப்படி கடந்து எழும் இந்த மெய்யுணர்வு அல்லது இன அறிவின் ஓர் இயற்கைக் கூறு குழந்தைகளிடையிலும் பெண்டிரிடையிலும் அறியாப் படியிலேயே தளிர்க்கின்றது. அறியும்தோறும், அதாவது அறிவெல்லை கடந்து அறிவு வளருந்தோறும் ஒருவன் அறிவின் அறியாமை (அறிந்த அறிவின் குறைபாடு, புத்தறிவின் நிறைவும் குறைபாடும்), அறியாமையின் அறிவு (அறிவுக்கு முற்பட்ட நிலையின் மறுசிந்தனை, அறியா அறிவின் அவா ஆர்வம்) ஆகியவை பெறுதல் போல, காதலிக்கப் பட்டவரால் தாமும் காதலிக்கப்பெற்ற காதலர் அடையும் இன்பமும் இன்பம் கடந்த புத்தின்பம், அது கடந்த எல்லையற்ற இன்ப அவா வளம், இன்பம் பெறா நிலையின் நினைவாகிய புதுமலர்ச்சியின்பம், எல்லையற்ற இன்ப எதிரலை இன்ப வளம் ஆகியவற்றால் பொங்கல்நிறை இன்பமாகிறது. இன்பப்பாலில் அறிவறியாமை பற்றிய குறட்பாத் தரும் மொத்தப் பொருள் வளம் இதுவே. அறிவலையின் அறியாமைக்கூறே மயக்கம், மருட்சி, மாறாட்டங்கள். அறிவை உயிரறிவாக்கி வளர்ச்சி தூண்டுபவை இவையே. அத்துடன் அவையே அறிவைத் தூண்டி இயக்கிய பின் மாயம், மருட்கை, தெருட்சியாகி, மெய்யறிவாகிய புத்தறிவுக்கு வழி வகுக்கின்றன. ஆனால் அறிவுப் படியும் மெய்யறிவுப் படியும் கடந்த பின்னும் அறிவுக்கு முற்பட்ட அறியாமை அல்லது அறிவுக்குறை பற்றிய மறுசிந்தனை மீண்டும் புதிய அறிவறியாமை அலைகளைத் தூண்ட முடியாதென்றில்லை. இயல் நூலின் முற்போக்கும் நிலவுலகச் சுழற்சியும் இவற்றுக்குச் சான்றுகள் தருகின்றன. தற்கால இயல் நூல் வளர்ச்சி முற்றிலும் அணிமைத் தற்காலத்துக்கேயுரியதன்று. அதன் வேர்த் தடங்களை இடைக் காலங்களில் காணமுடியும். அதற்கு உரம் தந்த வாழ்வு பண்டைக்கால இயல் நூல் வாழ்வே. அழிந்து பட்ட அவ் வாழ்வின் மக்கிய உயிர்கூறுகளே புதிய வளர்ச்சிக்கு உரமாய் உதவின. ஆனால் இவ்வேர்த்தடமும் உரமுதல் வாழ்வும் காணாமல் தற்கால இயல்நூல் வளர்ச்சி முழுவதும் தற்காலத்துக்கேயுரியதென்று கருது பவர்கூட, அவ்வியல் நூல் வளர்ச்சிக்குத் தூண்டுதலான சிந்தனைகளை முற்காலங்களில் காணாதிருக்க முடியாது. பண்டைக் கிரேக்கரும், அவர்கட்கு முற்பட்ட நடு நிலக் கடல் நாகரிக இனங்களும் தமிழக மக்களும் பிற கீழ்திசை இனத்தவரும் இயற்கையின் மூலப்பொருள் பற்றிச் சிந்தித்திருந் தனர். கிரேக்க அறிஞரின் இத்தகைய சிந்தனைகளும், புத்தர் காலத்துக்கு முற்பட்ட கீழ்திசையறிஞர் சிந்தனைகளும் கிரேக்க நாட்டவர் அறிவிலக்கியத்திலும் கீழ்திசை உபநிடதங்களிலும் நமக்குச் சேமித்துத் தரப்பெற்றுள்ளன. மிகத் தொல்பழங் காலத்திலிருந்தே இச்சிந்தனைகளின் பயனாக அறிஞர் கண்ட கோட் பாடே பின்னாட்களில் பொருள் மூலங்கள் அல்லது பூதங்கள் என்று தொகுத்துரைக்கப் பட்டன. நிலம், நீர், அனல், காற்று என்ற நான்கு இயற் பொருள் களையுமே மூலப் பொருள்களாகக் கொண்டனர் கிரேக்கரும் அவர்களைப் பின்பற்றிய மேலைநாட்டாரும். ஆனால் கீழ்திசை யாளர் சிந்தனை, இவற்றுடன் வான் என்பதனைச் சேர்த்து ஐந்தாகக் கொண்டது. திருமூலர் பாடலில் `பார்முதல் பூதம்' என்று குறிக்கப் பட்டது இந்த ஐம்பூதங்களையே. ஏதோ தொல்பழங்காலத்தில் எழுந்த ஒரு சிந்தனை யூழியின் பயனாகத் தொகுக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை, இடையிருட் காலத்துக்கு முற்பட்டே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் உயிர்ப்பற்ற, வளர்ச்சியற்ற, வாதக் கோட்பாடாகக் கொண்டு இயங்கி வந்தது. ஆனால் மீட்டும் இந்தியா, அராபியா ஆகிய பரப்புக்களிலிருந்து புதிய இயல் நூல் மரபு எழுந்து, 16-ஆம் நூற்றாண்டின் பின், மேலை ஐரோப்பாவில் புது மலர்ச்சியுற்ற போது, இயலுலகின் மூலமுதற் பொருளாராய்ச்சி மீண்டும் புதிய அடிப்படைமீது தொடங்கிற்று. பழைய ஐம்பூதக் கோட்பாட்டிலிருந்து இது தொடர வில்லை. அக்கோட்பாடு ஒரு சிந்தனை முடிபு என்ற எண்ணமே அற்ற நிலையில், அதை ஓர் அறியா நம்பிக்கையாக ஒதுக்கி விட்டு, மூலப் பொருள்,தோட்டம், புத்தம் புதிதாகப் புதிய அடிப்படையிலிருந்து தொடங்கிற்று. தற்கால இயல் நூலார் நூற்றுக்கு மேற்பட்ட முதற் பொருள் (நுடநஅநவேள)களை நாடி ஆய்ந்து கணித்துள்ளனர். அவற்றின் பட்டியலும், அவற்றின் பண்பாராய்வும் விரிவடைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் திருமூலர் திரு மந்திரத்திலோ வேறு கீழ்திசை மேல்திசை ஏடுகளிலோ ஐம்பூதம், நாற்பூதம் பற்றிய குறிப்புக்களை இயல்நூலார் அல்லது இயல் நூல் மாணவர் காண நேர்ந்தால், அப்பழங்கால நம்பிக்கைகளை எண்ணி ஏளன நகை நகைக்காமல் இருக்க மாட்டார்கள். முதற் பொருள்கள் என்ற முறையில் தற்கால மூலப்பொருள்களுடன் அவற்றை ஒப்பிட்டால், இவ்வேளன நகைக்குரிய காரணங்கள் எளிதில் புலப்படும். ஒரு பொருள் மூலப்பொருள் என்றால், அது உள் பொருளாய் இருக்க வேண்டும். வேறு பொருளாகப் பிரிக்க முடியாத தனிப் பொருளாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது உள் பொருளல்லவானால் அது பொருளேயல்ல. பிரிக்க முடியுமானால், அது மூலப் பொருள்களின் சேர்க்கையாலான கூட்டுப்பொருள், மூலப்பொருளல்ல. பழைய ஐம்பூதங்களில் கீழ்திசையில் மட்டுமே உலவும் வான் உள்பொருளல்ல, இல்பொருள். தோற்றுகின்ற நீல விதானமானால், அது தோற்றம் மட்டுமே. வானவெளியென்று அதைக் கொண்டால், அது ஒன்றுமற்ற வெற்று வெளி அல்லது காற்று உலவுவதற்குரிய வெற்றிடம் மட்டுமே. ஐம்பூதங்களிலும் மேலை நாற்பூதங்களும் ஒருங்கே இடம் பெறும் தீ ஒரு தோற்றம், ஓர் ஆற்றல். தோன்றாத வெப்பம் என்ற முறையில் அது ஓர் ஆற்றல். தோன்றும் தீ நாக்கு அல்லது அழற்பிழம்பு என்ற முறையில் அது எரிபொருளின் உருத்த ஆவி மட்டுமே. புகைபோல, சாம்பல்போலக்கூட அது பொருளின் திரிபல்ல. திரிபுத் தோற்றமே. ஐந்து அல்லது நான்கில் நிலம், நீர், காற்று நீங்கலாக ஏனையவை பொருள்களே அல்ல என்று காண்கிறோம். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றிலும்கூட எதுவும் தனிப் பொருளல்ல. நிலத்திலே எத்தனை எத்தனையோ தனிப்பொருள்கள் செறிந்துள்ளன. பாறை, மண், மணல் என வடிவிலும்; பலவகைப் பாறை, மண், மணல் என வகையிலும்; பல உலோக முதலிய தனிப்பொருள்கள் சேர்ந்தவை, அடங்கியவை என ஆக்கத்திலும் அது இடத்துக்கிடம் வேறுபடுவது. காற்றிலும் எண்ணற்ற ஆவிவடிவப் பொருள்கள் அல்லது வளிகள் (ழுயளநள) சேர்ந்தே உள்ளன. நீரில் பல பொருள்கள் கலந்துள்ளன. தூய நீரே நீர்வளி இரு மடங்கும் உயிர்வளி ஒருமடங்கும் இணைந்துள்ள ஓர் இணைபொருள் என்று இயல்நூலார் கண்டுள்ளனர். இரண்டை யும் கலந்து நம்மால் நீராக்கவும் முடியும், நீரினைக் கூறுபடுத்தி அவ்விரு பொருளாக்கவும் முடியும். இவ்வாறு திருமூலர் திருமந்திரத்திலும் பழைய கீழ்திசை, மேல்திசை அறிவேடுகளிலும் இலக்கியத்திலும் குறிப்பிடப் படும் ஐம்பூத, அல்லது நாற்பூதக் கோட்பாடு தற்கால இயல்நூலொளி கொண்டு காணின் ஒரு கேலிக் கூத்தாகவே தோற்றக் கூடும். ஆனால் உண்மையில் அது ஒரு கேலிக் கூத்தன்று. இடைக்காலக் கீழ்திசை, மேல்திசை இலக்கியங்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு இக்கோட்பாடு கேலிக் கூத் தாகக்கூடப் படாது; ஒரு பழங்கால மூட நம்பிக்கையாக மட்டுமே தோற்றும். கிரேக்க அறிவேடுகள், கீழ்திசை உபநிட தங்கள் காண்பவருக்கு மட்டுமே அது அக்காலச் சிந்தனை, தனிப்பொருள் தோட்டத்தின் பயன் என்பது தோற்றும். ஆயினும் அச்சிந்தனை மரபை அவற்றிலும் காண முடியாது. அவ்வேடுகளின் காலத்திலேயே அவை மரபிழந்த பழைய நம்பிக்கையாய்ப் போய் விட்டன. சமஸ்கிருதத்தையோ, கிரேக்க மொழியையோ தொல் பழங்கால மனித நாகரிகத்துக்கு ஆதாரமாகக் கொண்டு தேடுபவர், இத்தகைய அறிவார்ந்த பழமைகளின் உயிர் மூல மரபைக் காண முடியாது. அவை காலத்தால் மட்டுமன்றி, இனத்தாலும் பண்பாலும் அம் மரபிலிருந்து நெடுந்தொலை விலகியவை. அவ்வுயிர்மரபின் துடிப்பை ஓரளவாவது காணத் தமிழ் இலக்கியம், தமிழ் அறிவேடுகள் தான் உதவ முடியும். ஐம்பூதக் கோட்பாடு கீழ்திசையுலகிலும், நாற்பூதக் கோட்பாடு மேலைத் திசைக்கே உரியது என்று பல மேலை அறிஞர் எண்ணுகின்றனர். ஆனால் புத்தர் காலத்திலும் அதற்கு முற்பட்டும் கீழ்திசையிலும் ஐந்தாவது பூதமாகிய வானை இல்பொருளென்று மறுத்து நாற்பூதங்களே கொண்ட கோட்பாட்டுக் குழுக்கள் பலப்பல நிலவியிருந்தன. ஐம்பூதக் கோட்பாடு ஐம்பொறி புல உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதைத் தமிழ் அறிவேடுகள் காட்டு கின்றன. ஒளவையார் என்ற பெயருடைய அருந்தமிழ்க் கலை யணங்குகள் பலர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலப் புகழ்சான்ற ஒளவையாருக்குப் பின் வாழ்ந்தவர்கள் கூடப் பலர். அவர்களுள் ஒருவர் ஒளவை யருங்குறள், ஞானக்குறள், ஒளவை யோகக்குறள் எனப் பலவாறாக அழைக்கப்படும் ஓர் அரிய சிற்றேடு இயற்றியுள்ளார். அதன் ஒரு குறட்பா ஐம்பூதத்துடன் ஐம்பொறி புலனுக்கு உள்ள விசித்திரத் தொடர்பைக் காட்டு கிறது. `நிலம், ஐந்து; நீர், நான்கு; நீடுஅங்கி, மூன்றே; உலவை இரண்டு; ஒன்று விண்.' வள்ளுவர் குறளின் மணிச் சுருக்கத்துடன் போட்டி யிடுவதாக அமைந்துள்ளது இக்குறட்பா. இதன் விரிந்த பொருள் வருமாறு: பூதங்கள் ஐந்தனுள், முதலாவதாகிய நிலம் (மெய் வாய், கண், மூக்கு, செவி என்ற) ஐந்து பொறிகளாலும் உணரப் பெறுவது. அடுத்த பூதமாகிய நீர் ஐம்பொறிகளில் ஒன்று குறைய (மெய், வாய், கண், செவி என்ற) நான்கு பொறிகளாலும்; தீ அல்லது அனல் (அங்கி பின்னும் ஒன்று குறைய (மெய், கண், செவி என்ற) மூன்று பொறிகளாலும்; காற்று (உலவை) மற்றும் ஒன்று குறைய (மெய், செவி என்ற) இரண்டு பொறிகளாலும்; இறுதியாக ஐந்தாம் பூதமாகிய வான் (விண்) ஐந்தில் நான்கு பொறிகளும் குறைய (செவி என்ற) ஒரே பொறியாலும் நுகரப்படத்தக்கது. குறட்பாவின் இந்த நுட்பமும் விரிவும் உடைய பொருளின் பொருத்த நயம் எண்ணி எண்ணிப் பார்த்து இன்புறத்தக்கது. மற்றும் அறிவேடுகள் மூலம் பொதுவாக, நிலம் மண உணர்வுக்கும்; நீர் வாய் அல்லது சுவையுணர்வுக்கும்; தீ கண் அல்லது ஒளியுணர்வுக்கும்; காற்று மெய் அல்லது ஊறுணர்வுக் கும்; வான் செவியுணர்வுக்கும் புறத்துணை அல்லது ஊடுவாயி லாய் இருப்பது என்று அறிகிறோம். ஒவ்வொரு பூதத்தின் தனி உணர்வு அடுத்த பூதத்தில் மறைவுறும் பொறி உணர்வாயமைந்திருப்பதும் நுணுகிக் கண்டுணரத்தக்கது. பூதங்கள் பற்றிய கோட்பாடு எவ்வளவு தற்கால இயல் நூலறிவுடன் முரண்படுவதானாலும், அது வெறும் அறிவுச் சார்பற்ற மூட நம்பிக்கையல்ல என்பதையும், கேலிக்கூத்தாக இருக்கக்கூடிய ஒன்றல்ல என்பதையும் இக்குறட்பாவுடன் மற்ற அறிவேடுகளின் இணை வொப்புமை சுட்டிக்காட்ட வல்லது. தவிர, பூதங்கள் இணைந்து எவ்வாறு உயிர்ப் பொருள்களும் இயங்கு பொருள் இயங்காப் பொருள்களான எண்ணில் கோடி உருவேறுபாடுகளும் தோன்றுகின்றன என்பதன் வகையிலும், இயல் நூலின் சாயல் வாய்ந்த விளக்கம் இடம் பெறுகிறது. இது தமிழில் ஐம்மானம் என்றும் சமஸ்கிருதத்தில் பஞ்சீகரணம் என்றும் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதத்திலும் மற்றப் பூதத்தின் கூறு ஏற்படுவதால் ஐம்பூதம் இருபத்தைந்து வகைப் பேதங்களாய், இவ்வாறே ஒவ்வொன்றும் ஐந்தாகி நூற்றிருபத்தைந்து வகை பேதமாகவும் பின்னும் இவ்வாறே பெருகிக் கொண்டு செல்கின்றன. இப்பாகுபாட்டின்படி பொருள்களின் பண்புக்கேற்றவாறு அவற்றுக்குரிய பூதமும் பூதக் கூறும் அமைகின்றன. உடலில் கடுமையில் கடுமையாகிய எலும்பு நிலத்தின் நிலக்கூறு ஆகிறது. நுண்மையில் நுண்மையாகிய மூளைச் சத்து அல்லது விந்து வானில் வான்கூறாக அமைகிறது. இயற்கை அல்லது புறத்தும் இவ்வாறே பொருளின் பண்புகளே பூதப் பாகுபாடும் பூதக் கூறும் வரையறுக்க உதவுகின்றன. மேலீடாக ஐம்பூதப் பாகுபாடு தற்கால மேலை இயல் நூலுடன் முற்றிலும் முரண்படுவதாகத் தோற்றினும், கூர்ந்து நோக்குபவர்கட்கு முரண்பாட்டின் மறைதிறவு பாகுபாட்டின் அடிப்படை வேறுபாட்டிலேயே உள்ளது என்பது தெரியவரும். தற்கால இயல் நூல் பொருளின் பொருண்மை யடிப்படையாக அதைக் கூறுபடுத்த முயன்றுள்ளது. இதுவே சிறந்த முறை என்பதில் இன்று நமக்கு ஐயுறவுகிடையாது. இவ்வழியே நம் உலகம் நீண்டநாள் சென்று அவ்வடிப்படையிலேயே வாழ்வை வகுத்துக் கொண்டுள்ளது. ஆனால் பொருள்களைப் பொருள் களின் கருத்துருவாக, பண்புக் கூட்டாகக் கொண்டது தொல் பழங்காலச் சிந்தனை. ஒவ்வொரு பண்பும் ஒரு புலனுகர்வுக் குரியதாக, ஒரு புலனால் உணரக் கூடியதாகக் கருத்துருவாக்கப் பட்டது. கடுமை, நெகிழ்வு, விரைவு, நொய்மை, நுண்மை ஆகியவை யே நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகியவற்றின் அடிப்படைப் பண்புக் கூறாகக் கருதப்பட்டது. நிலையான வடிவுடன் இடம் நிரப்புதல் (ளுடிடனைவைல) சமதளம் பரவுதல், மேலெழுதல், எங்கும் பரவுதல், எல்லாவற்றுக்கும் ஊடாயிருத்தல் இவை ஐம்பூதங் களின் செயல் கூறுகளாகக் கருதப்பட்டன. பொறிகளிலும் மூக்கின் மணம், நாவின் சுவை, கண்ணின் பார்வை, மெய்யின் பரந்துபட்ட ஊறுணர்வு, செவியின் ஓசை இவற்றுடன் இணைந்து உணரும் பண்பாகக் கொள்ளப்பட்டது. பொறியுணர்வால் பல்வேறாக உணரப்படும் இந்நுட்பப் பண்புகள், செயல் திறங்கள், உணர்வுகளின் கொண்டு கூட்டாக வே இயற்பொருள்கள் யாவும் மதிக்கப்பட்டன. ஐம்பூதக் கோட்பாடு வகுத்தவர் பூதங்களை முதற் பொருளாகவல்ல, முதற் பொருண்மைப் பண்புகளாகக் கொண்டனர். இஃது உணரப்பட்டால், பாகுபாடு கேலிக்குரிய தல்ல. ஏனெனில் திண்மை (ளுடிடனை), நீர்மை (டுiளூரனை), விரை கொதிநிலை (குடரஒ), ஆவிநிலை (ழுயளநடிரளநேளள), நுண்ணிலை (நுவாநசநயடநேளள) ஆகியவற்றுள் எல்லாப் பொருள்களின் இயல்பும் அடங்கும். பரம் என்ற ஒரே பண்புடைய ஒரே மூலப் பொருளின் பல பண்புருக்களின் கூட்டாக ஐம்பூத உலகம் அல்லது உலகத் தோற்றம் திருமூலர் காலம்வரை தமிழ் மரபில் உணரப்பட்டது என்னல் வேண்டும். இயலியக்க நூலார் பொருளை இன்றும் திட்பம், நீர்மம், ஆவி வடிவம் (ளுடிடனை, டுiளூரனை, ழுயள) என்ற முப்பிரிவினுள் அடக்குவர். மூன்றும் புறநிலைகளே. அவற்றில் அடங்கா நிலைகள் உண்டு என்பதையும், மிக அண்மைக்கால இயல் நூல் ஆராய்ந்து வரும் அணு உள்ளியக்க, ஒளி இயக்கப் பண்புகளையும் ஐம்பூதப் பாகுபாடு விளக்குவது என்பதையும் நாம் காணல் வேண்டும். தற்கால இயல்நூல் சில குறிக்கோள்கள் அல்லது அடிப்படைக் கருத்துக்கள் மீதே உருவாகியுள்ளது. இயல்நூல் ஊழிக்கு ஊழி இவ் அடிப்படைக் கருத்துக்களில் இவை மாறு படுவதுண்டு. பொருள் அடிப்படையான இயல் நூலாராய்ச்சி அறிஞர் ஐன்ஸ்டீனின் புத்தூழியில் ஆற்றலடிப்படையான இயல் நூலாராய்ச்சியாக மாறி வருவதை நாம் அறிந்து வருகிறோம். தொல் பழங்காலப் பாகுபாட்டில் அனலின் பண்பு ஆற்றல் அடிப்படைக் கோட்பாட்டையும், அதற்கடிப்படை யாகச் சிலரால் கொள்ளப்பட்டு வந்த, (நுவாநச ஆநனரைஅ) வானின் பண்பையும் நினைவூட்டுவன ஆகலாம். அறிவுப் படியிலிருந்து ஒதுங்கி அறியாமைப் படியாய்த் தள்ளப்பட்ட ஐம்பூதப் பாகுபாடு இங்ஙனம் மெய்யறிவுப்படி கடந்தும் மறு சிந்தனைக்குரியதாகிறது என்பதும், புதிய மெய்யுணர்வுப் படிக்கு வழிகாட்டுவதாய் அமைந்துள்ளது என்பதும் அறிவு அறியாமை அலைகளின் உயிர்த் தொடர்பு காட்டும் மெய்ம்மை ஆகும். அறியாமைப்படி அல்லது அறிவுக்கு முற்பட்ட படியில் வேறுபட்ட, ஆனால் ஒதுக்கப்பட்ட அறிவு மறைந்துள்ளது என்பதைக் கோள்கள் பற்றிய இக்கால, அக்காலக் கோட் பாடுகள், முடிவுகள் உணர்த்தும். நீலவானை அப்படியே ஒரு நீல விதானம் அல்லது ஒரு தகட்டாலான பெரிய விசை மாடம் என்று கருதும் குழந்தை களும் வெள்ளையுள்ளத்தினரும் உண்டு. அனுபவமும் கேள்வி யறிவுமே இந்நாளில் இக்கருத்தை அறியா மயக்கம் என்று ஒதுக்கித்தள்ள உதவுகின்றன. ஆனால் இவ்வறியா மயக்கமே ஒரு காலத்தில் உலகத்தில் அறியாக் கேள்விகளுக்குரிய அறிவு விளக்கமாய், மேலும் அறிவு வளர்ச்சி தூண்டிய அறிவுக் கோட்பாடாய் நிலவியிருந்தது. நிலவுலகம் நிலையானது. கோள்கள், விண் மீன்கள் ஆகியவை நிலவுலகைச் சுற்றுகின்றன என்று மக்கள் இயல்பாகக் கருதிய காலம் அது. ஆனால் இந்த அறிவு நிலையிலும் முகில்கள் வான ஒளிக் கோளங்களை மறைப்பதை மக்கள் கவனித்தனர். கோளினங்கள், விண்மீன்கள் யாவும் சுற்றி வந்தாலும், அவற்றின் போக்குகள் ஒருநிலைப்படாமல், ஒரே வேகமாய் அமையாமல் இருப்பதும் கண்டனர். திங்கள் கதிரவனை விட வேகமாக இயங்குவது கண்டனர். கதிரவன் விண்மீன்களைக் கடந்து செல்வது கவனித்தனர். விண்மீன்கள் வேறுசில விண்மீன்களைக் கடந்து விரைவது நோக்கினர். முகில்கள் நிலவுலகிற்கு அருகிலுள்ளன. திங்கள் அதற் கடுத்தபடியும், கதிரவன் அதற்கடுத்தபடியும் அணிமையுடை யன. விண்மீன்கள் தொலைவிலுள்ளன, சில இன்னும் மிகு தொலை விலுள்ளன. இது இன்று நாம் அறிந்துள்ள உண்மை, இதை அறியா நிலையிலும் மக்கள் ஊகித்தனர். ஆனால் அன்று அது உண்மைப் படியன்று, மெய்ப்படியே. ஏனெனில் ஊகித்த அந்த மெய்ம்மை யை விளக்க வேறோர் மெய்ம்மை, இன்று அறிவுலகம் தகர்த் தெறிந்து விட்ட அக்காலத் தற்காலிக மெய்ம்மை தேவைப் பட்டது. அத்தற்காலிக, நீலவானத்திரை யடிப்படையாக ஏற்பட்டது. நீலவானத் திரை ஒன்றல்ல, ஒன்றன்மேல் ஒன்றாக, ஏழு உண்டு. ஒன்றன் மீது முகில்கள் தவழ்ந்தன. ஒன்றன் மீது திங்கள், ஒன்றன்மீது கதிரவன் உலவினான். இவற்றருகே கோளினங் களின் திரை. இவற்றுக் கப்பால் விண் மீன்கள் பொறித்த திரை, இறுதியில் தொலை விண் மீன்கள் பதிக்கப்பட்ட திரை அமைந்தது. சுற்றுபவை திங்களல்ல, கோளினங்களோ விண்மீன் களோ அல்ல. திரைகள், விதானங்கள் சுழன்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் சுழன்றன. நீலத்திரையை இன்றும் உலக மொழிகள் வானம் என்றுதான் குழந்தை வழக்காக அழைக்கிறது. வான் இல் பொருள் என்று கூறும் மேலை உலக மொழிகளில் கூட அச் சொல் உண்டு. ஆனால் ஏழு திரை குறிக்க மேலை, அணிமைக் கீழை மொழிகளில் மட்டுமே வான் மண்டலம் (குசைஅயஅநவே) என்ற சொல் உண்டு. ஏழுலகம், மேலேழு கீழேலுலகக் கற்பனை புராணங்களில் இடம் பெற்ற வகை இதுவே. வான கோளங்களின் பல்வகைத் தொலை, வேகங்களை விளக்க வந்த தற்கால விளக்க மெய்ம்மையே இக்கருத்து. மேல்திசையிலும் அணிமைக் கீழ்திசையிலும் இக் கோட்பாடு அத்திசைகளின் மொழிகள் உருவாகும் காலம் வரை, விவிலிய குரான் ஏடுகள் உருவாகும் காலம் வரை நிலவினும், கீழ்த்திசையில் இக்கோட்பாடு புராண காலங்களுக்கு நெடுநாள் முன்பே கைவிடப்பட்டு விட்டன. புராணங்களில் ஏழுலகக் கற்பனையளவில் மட்டுமே அது காணப்படுகிறது. ஆயினும் ஏழ் மண்டலக் கால அறிவு மரபு அன்று அற்றுப் போய்விட்டதால், கதிரவனைவிடத் திங்கள் தொலைவானதாக அனுபவ அறிவற்ற ஊகக் கருத்து அதில் இடம் பெற்று விட்டது. ஏழ்மண்டலக் கோட்பாடு கடந்த கீழ்திசை அறிவு மரபைப் புராணங்களல்ல, அவற்றுக்கும் முற்பட்ட வளர்ச்சியுடைய வானநூலே காட்டுகிறது. கீழ் திசையில் கருவுற்ற வான நூலின் வான விளிம்பிலே, நிலவுலகமே இயற்கை மையம் என்ற கருத்து நீடிப்பதைக் காண்கிறோம். வானகோளங்கள் அதைச் சுற்றுவதாகவே இன்றும் கொள்ளப்படுகிறது. வானத்திரைக் கருத்து மறைந்து விட்டது. ஆனால் முற்றிலும் கைவிடப்பட்டு விடவில்லை. அது ஒரு புதுப் பயனீடு காண்கிறது. கோளினங்கள், விண்மீன்களின் போக்குக் கூர்ந்து கவனிக்கப்பட்டது, கணிக்கப்பட்டது. மிகுதி இடம் மாறா விண்மீன்கள், ஒரே ஒழுங்குப்படி இடம் மாறும் விண் மீன்கள், ஒழுங்கின்றித் தனித்தனி போக்குடைய கோளினங்கள் இவை முதல் முதல் திரித்தறியப்பட்டன. ஒழுங்காக இடம் மாறும் விண்மீன்கள் தாம் அடங்காமல் இயங்குகிற ஒரு வானத் திரையில் பதிந்தவை என்றும், மிகுதி இடம் மாறா விண்மீன்கள் இதற்கப்பால் இயக்கமின்றி நிலவும் ஒரு திரையில் பதிந்தவை என்றும், ஒழுங்கின்றி உலவும் கோளினங்கள் மற்றொரு திரையில் அல்லது மண்டலத்தில் தனித்தனி கட்டற்றுத் தனிப் போக்குடன் இயங்குபவை என்றும் கருதப்பட்டன. வானநூல் வளர்ச்சியில் இந்தப்படி மிக முக்கியமானது. விண்மீன்கள், நாண்மீன்கள், கோள்மீன்கள் அல்லது கோளினங் கள் என்ற அடிப்படைப் பாகுபாடும், அவற்றின் பண்புகளும் இன்றளவும் வான நூலறிவுக்கு அடிப்படையாகவே உள்ளன. ஒழுங்காக இடம் மாறும் விண்மீன்களின் பின்னணி வானத்தில் இருபத்தேழு இடங்கள் அவற்றுக்குரிய மீன் குழுக் களால் குறிக்கப்பட்ட ஒரு வானவீதி (விண்மீனெறி) வகுக்கப் பட்டது. அம்மீன் குழுக்கள் நாண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று அழைக்கப்பட்டன. இதே வீதி பன்னிரண்டாக வகுக்கப்பட்டு அது வான்மனை வட்டம் (இராசி மண்டலம்) ஆயிற்று. மீன் குழுக்கள் வான் மனைகளாக வகுக்கப்பட்டன. திங்கள் வான்வீதி கடந்து செல்லும் காலம் ஏறத்தாழ ஒரு மாதமாகவும், கதிரவன் அது கடக்கும் காலம் ஓர் ஆண்டாகவும் கொள்ளப்பட்டது. மிகுதி இடம் மாறா விண்மீன்களிலும் ஒன்று (வடமீன்) ஒரு சிறிதும் இடம் மாறாமலே ஆறு மாதம் இரவுதோறும் காட்சியளித்தது கண்ட அந்நாளைய மக்கள் அதை வான் மண்டல நடு அச்சாகக் கருதினர். வான மண்டலம் அதை மையமாகக் கொண்டு சுற்றுவதாகக் கருதினர். வான நூலின் அடுத்தபடி பெரு முன்னேற்றம் இது. ஏனெனில் உலகம் உருண்டை என்ற கருத்து எழ வழி வகுத்ததும், அதன் சுழற்சியில் மக்கள் கவனம் திருப்பியதும் அதுவே. கீழ்திசையில், வடமீனுக்கு நேர் கீழ் இருக்கும் இடத்தை `மேரு' என்றனர். விண்மீன்களும் கோளினங்களும் வடமீனையும் இந்த மேருவையும் சுற்றிச் செல்வதாகப் பாகவத புராணம் கூறுகிறது. திருமூலர் திருமந்திரமும் மேருவையே யாவும் சுற்றுவன, உலகின், இயற்கையின் நடுநாடி அதுவே என்று குறிக்கின்றது. மேருவைச் சுற்றிக் கதிரவன் செல்வதால், அதன் ஒரு திசையில் பகல், மறுதிசை இரவு என்றும் புராணங்கள் குறித்தன. உலகம் உருண்டை என்பது உணரப்படா விட்டாலும் `வட்டம்' என்று கருதப்படத் தொடங்கிற்று. நிலவலயம், குவலயம் என்ற தமிழ், சமஸ்கிருதச் சொற்கள் இப் படிநிலையில் உருவான சொற்கள். மேருமலை என்றது இங்கே உலகின் வடகோடி. அதிலும் அதனெதிரான தென் கோடியிலும் ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்பதை நாம் இன்று அறிவோம். நிலவுலகுக்குப் பகலிரவு வேறு பாடளிப்பது மேருவே என்ற புராணத்துக்கு முற்பட்ட காலக் கருத்தில், மெய்ம்மையில் இவ்வாறு உண்மை யின் ஒரு பெருங்கூறு அடங்கியுள்ளது. வடமீன் நாண்மீன் மண்டலத்தின் நடு அச்சு என்பதும் இதுபோல நம் காலப் பேருண்மைகளை நோக்கித் திருப்பும் ஓர் உயிர்த் திருப்பம் என்பதைப் பிற்படக் காண்போம். கீழ்திசை வான நூலார் கோள்களை ஒன்பது என்றே கொண்டனர். ஞாயிறு (கதிரவன்), திங்கள் (மதி), செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பன இந்த ஒன்பது கோளினங்களின் பெயர்கள். பண்டைய ஐம்பூதக் கோட்பாட்டைத் தற்கால இயல் நூல் கேலிக்குரியதாகக் கருதிய நிலை, கோளினங்கள் வகையிலும் ஏற்பட்டுள்ளது. தற்கால இயல் நூலின்படி, கோளினம் என்ற சொல்லுக்கே கதிரவனைச் சுற்றிச் செல்லும் என்பது பொருள். அப்படியிருக்கக் கதிரவன் எப்படிக் கோளினங்களில் ஒன்று ஆகும்? ஒரு போதும் ஆகாது. ஞாயிறு (கதிரவன்) கோளினங்களில் ஒன்றல்ல. கதிரவனைச் சுற்றும் கோளினங்களில் நிலவுலகம் ஒன்று. அது பண்டைய ஒன்பது கோளினங்களில் சேர்க்கப் படவில்லை. ஆனால் கோளினமாகிய நிலவுலகைச் சுற்றியோடும் துணைக் கோளினம் திங்கள். அதுவும் ஒன்பது கோளினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது தவறு. இராகு, கேது கதிரவனையும் திங்களையும் மறைப்புச் செய்யும் காலங்களில் தோன்றும் கோளினங்கள் என்று கருதப்பட்டன. உண்மையில் திங்களின் மறைப்புக்கு நிலவுலகின் நிழல் அதன்மீது விழுவதும், கதிரவன் மறைப்புக்குத் திங்கள் நிலவுலகுக்கும் கதிரவனுக்கும் இடையே வந்து அதை மறைப் பதும் காரணமென்ற விளக்கம் இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இராகு, கேது என்ற கிரகங்கள் உண்மையில் இல்பொருள் கள் ஆகும். அப்படிப்பட்ட கோளினங்கள் எதுவுமே கிடையாது. இவ்வாறாக, பண்டைய வானூலிலே - இல்லாத கோளினங்கள் இரண்டு இருப்பதாகக் கொள்ளப் பட்டன; (இராகு, கேது). கோளினங்களுள் ஒன்று (நாம் வாழும் நிலவுலகம்) கோளினமாகக் கொள்ளப்படவில்லை, கோளினங்களின் பட்டியலில் விடப்பட்டது. கோளினங்களின் நாயகமான கதிரவன் கோளினங்களுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. துணைக்கோளான திங்கள் கோளினமாக உட்படுத்தப் பட்டது. இவை மட்டுமோ? தற்கால இயல்நூல் சேண்மம் (யூரானஸ்), வருணம் (நெப்டியூன்), அளகை (புளூட்டோ) என்ற மூன்று கோளினங்கள் இயங்குவது கண்டுள்ளது. மொத்தத்தில் கோளினங்கள் வகையில் பண்டை வானநூல் முடிவு மயக்கம், மருட்சி, மாறாட்டம் ஆகியவற்றின் எல்லா மாயைப்படிகளும் நிரம்பியதாக, மெய்யறிவுக்கு மட்டு மன்றி, அறிவுக்கும் முற்பட்ட அறியாமைப் படியின் குறை நிரம்பியதாகவே காணப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த அறியாமைப் படியில்கூட, நாம் நம் கால அறிவின், மெய்யறிவின் விதைகளை மட்டுமன்றி, மெய்யுணர்வுப் படிக்கான தூண்டு தலைக் கூடக் காண இயலும். முதலாவதாகக் கோளினங்கள் மற்றக் கோளங் களிலிருந்து பிரித்துணரப்பட்டிருந்தன. மற்றவற்றுக்கு (விண்மீன்களுக்கு) இல்லாத பொதுப் பண்பு அவற்றில் காணப்பட்டன. கோளினங்களுக்கு உரிய தனிச் சிறப்பான பொதுப் பண்புகள் இன்று கதிரவனைச் சுற்றியோடுதல், கதிரவன் ஈர்ப்புக்கு ஆளாதல் ஆகியவை என்று கருதப்படுகின்றன. தமக்கென ஒளியின்றி, கதிரவனொளியை நிழலிட்டுக் காட்டு தலும் பொதுப் பண்பேயாகும். கோளினங்களுக்குரிய மேலை மொழிப் பெயர் (ஞடயநேவ) இப்பொதுப் பண்புகளுள் எதனையும் காட்ட வில்லை. ஆனால் முதலில் காணப்பட்ட மூலப் பொதுப் பண்பான ஒழுங்கு மீறிய தனியியக்கத்தை (உலவுவது என்ற பொருளை) அது குறிக் கின்றது. விண்மீன் என்பதற்குரிய மேலை மொழிகளின் சொல் (ளுவயச) இதற்கெதிராக, மின்னுவது அல்லது இமைப்பது என்னும் பொருளுடையது. கோளினங்களின் பொதுப்பண்பு குறித்த வகையில், கீழை மொழிகள் - சிறப்பாகத் தமிழ் மொழி இயல் நூல் வளர்ச்சி நோக்கிய ஒரு பெரும் படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் இதற்குரிய சொல் (க்ரஹம்) ஈர்க்கப்படுவது என்ற பொருளையும், தமிழில் (கோள்) அது போலவே ஈர்த்துக் கொள்ளப்படுவது என்ற பொருளையோ ஒளியைத் தனதாக வன்றிக் கதிரவனிட மிருந்து பெற்றுக் கொள்வது என்ற பொருளையோ சுட்டுவது ஆகும். இதற்கெதிராக, விண்மீன் என்பதற்குச் சமஸ்கிருதத்தில் பழைய சொல் (தாரா) மேலைச் சொல்லின் (ளுவயச) திரிபாகவே இருந்தாலும், புதுச்சொல் (நட்சத்ரம்) இயங்காதது என்ற பொருளும், தமிழின் அதற்குரிய சொல் (மீன்) மின்னுவது என்ற பொருளும் தருவன ஆகும். இரண்டாவதாக, பழைய கோளினப்பட்டியலிலுள்ள பெயர்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற ஐந்தும் நம் கால இயல்நூலின் படியும் கோளினங் களாகவே நிலை பெறுகின்றன. தவிர, பழைய கோளினங்களான ஒன்பதில் இல் பொரு ளான இராகு கேதுக்கள் இரண்டும், கதிரவனும், துணைக் கோளான திங்களும் எடுபட்டு நான்கு குறைந்தாலும், அதனுடன் நம் நிலவுலகம், சேண்மம், வருணம், அளகை ஆகிய நான்கு சேர்க்கப்பட்டு, பழைய பட்டியலின் தொகையாகிய ஒன்பது நிரப்பப்பட்டுள்ளது. இது மட்டுமோ? கேலிக்குரியது பழைய பட்டியல் அன்று, புதிய பட்டியலே என்று கூடக் கூறலாம். பழைய பட்டியலில் விடுபட்ட நான்கு போக ஐந்துடன் நிலவலயம் சேர்த்து ஆறு கோளினங்களுடனேயே தற்கால இயல்நூல் பட்டியல் பிறந்தது. 18-ஆம் நூற்றாண் டில் 1781இல் ஸர் வில்லியம் ஹெர்ஷெல் (ளுசை றடைடயைஅ ழநசளஉhநட) என்ற ஆங்கில நாட்டு வானூலறிஞர் தற்செயலாய்க் கண்டுபிடித்த பின்னரே சேண்மமும் (யூரானஸூம்), 19ஆம் நூற்றாண்டில் லவெரியர், ஆடம்ஸ் ஆகியவர் கணிப்பைப் பின்பற்றி 1846இல் `கால்' (ழுயடடந) கண்ட பின்னரே வருணமும் (நெப்டியூனும்), 20-ஆம் நூற்றாண்டில் லவல், பிக்கரிங் ஆகிய அமெரிக்க வானூலார் கணிப்பைப் பின்பற்றி இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி 1930இல் டாம்போ (கூடிஅரெபா) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு அளகையும் (புளூட்டோ) சேர்க்கப்பட்ட பின்னரே புதிய பட்டியல் பழைய பட்டியலின் தொகையை எட்டியது. புதிய இயல் நூலறிவுக்குப் பழைய இயல் நூல் வழி காட்டியது பட்டியல்களின் பொதுப் பெயர்கள் ஐந்தில் மட்டுமல்ல. ஒதுக்கப்பட்ட பெயர்கள் நான்கில் இல்பொருள் களாகிய இராகு கேது ஆகிய இரண்டும் கீழையுலகிலேயே நிழற்கோள்கள் (சாயா கிரஹங்கள்) என்று துணியப்பட்டு, அவற்றின் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டிருந்தது. ஒன்பது கோளினங்கள் ஏழு கோளினங்களாகி, இரண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட காலம் உண்மையில் பண்டை இயல் நூலுக்கு முற்பட்ட காலமாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில் கோளினங்களின் அடிப்படையில் வார நாட்கள் அமைந்த போது, ஏழு கோளினங்களே கொள்ளப்பட்டன. இவ்ஏழு நாள் வாரம் இன்றைய உலக மொழிகள் அனைத்திலும் பரந்துள்ள தாதலால், இது மிகத்தொல் பழங்காலத்திலேயே ஒரு தொல்பழமை வாய்ந்த மொழியிலிருந்து உலகெங்கும் பரவியதாதல் வேண்டும். நாள்மீனடிப்படையில் நாளும் மாதமும் அமைத்தவர், இந்தியாவின் பழங்குடி மக்களான தமிழினத்தவரே. வான் மனை வட்டம் ஆரியர் வருகைக்கு நெடுநாள் முன்னரே, கி.மு. 2500-க்கு முற்பட்டே, சிந்து வெளியில் வகுக்கப்பட்டிருந்தது. நாள்மீன் வகுப்பும் வார வகுப்பும் இன்னும் முந்தியதாதலால், அது தமிழினத்தின் வகுப்பேயாதல் ஒருதலை. மூன்றாவதாக, பண்டைப் பட்டியலின்படி, கதிரவன், திங்கள் உள்ளிட்ட கோளினங்களின் இயக்கமும், நிலவுலக இயக்கத்தால் இயங்குவன போலத் தோற்றும் பிற கோளினங் களின் இயக்கமும் பண்டைத் தமிழரால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இனங்கள் இன்று வரை மேற் கொள்ளாத வகையில், அவ்வான நூற் கணிப்படிப் படையிலே தமிழர் ஆண்டு மாத நாட்கணிப்பு தொன்றுதொட்டு இன்று வரை நடந்து வருகிறது. அறியாப்படியில் நிலவுலகம் சுற்றும் சுற்றை மற்றவற்றின் மீது ஏற்றிக் கணிக்கப்பட்டாலும், கணிப்பின் துல்லியம் இதனால் பாதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர் வான நூலறிவு மிகவும் பழமையானது மட்டு மன்று, இன்றைய வான நூல் நிலைக்கு மிகவும் அணிமையுடைய பண்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே அது எட்டியிருந்தது. இதனைச் சங்கப் பாடல்கள் தெள்ளிதில் காட்டும், ஞாயிறு, திங்கள், கோளங்களின் செலவும் திசையும், அவற்றின் நீள அகல எடைகளும் நேரில் சென்று கண்டவர் போல அளந்து கணித்துக் கூறும் `கணி'கள் (வான நூலார்) பற்றிப் புறநானுற்றுப் பாடல் ஒன்று குறித்துள்ளது காண்கிறோம். `செஞ்ஞாயிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளி திரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே....' (புறம் - 30) கோள் (ஈர்த்துக் கொள்ளப்படுவது அல்லது ஒளி கொள்வது) என்ற கோளினப் பெயரின் பழமை நோக்க, ஈர்ப்புக்கும் ஒளிக்கும் மூலகாரணமான கதிரவனே கோள்களின் நடுநாயக ஒளிக்கோணம் என்ற கொள்கையும், நிலவுலகமும் கோள்களும்தான் கதிரவனைச் சுற்றுகின்றன என்ற கருத்தும் முற்றிலும் துணியப்படா நிலையில் சங்க காலத்தில் அருகலாக உணரப்பட்டிருந்தன என்று கூற இடமுண்டு. ஞாயிறு இயற்கையின் இயக்க மையம் என்ற கருத்துத் தனிப்பட ஞாயிற்றுக் கோட்பாடு (சூரிய சித்தாந்தம்) எனக் குறிக்கப்பட்டு, புராண நம்பிக்கைகளிடையே புதையுண்டு இடைக்காலங்களில் மறையொளி வீசிற்று. சங்க இலக்கியங் களில் ஆங்காங்கே அதன் தடம் காணப்படுகின்றன. திருக்குறளில் வான்சிறப்பு அதனைப் பற்பல குறட் பாக்களில் காட்டாமலில்லை. `விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி.' `நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின்.' ஞாயிறு மழைக்குக் காரணம். கடல்நீரை முகந்து அது புயலாகி மழை பொழிவிக்கிறது. இக்கருத்துத் தமிழிலக்கியம் எங்கும் தெரிய வரும் ஒன்று. `பம்பி மேகம் பரந்தது பானுவால் நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் அம்பின் ஆட்டுவதும் என்றகன் குன்றின்மேல் இன்பர் வாரி எழுந்தது போன்றதே!' என்ற கம்பர் கற்பனைப் பாடலிலும், `பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாப் பெருங்கடல்நீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.' என்று குமரகுருபரரின் நீதி நூலும் கதிரவன் வெப்பம் கடல்நீரை முகிலாக்கி மலைமீது மோதிப் பொழிகின்றது எனும் உண்மை நன்கு பழகியறிந்த கருத்தடிப்படையான உவமைகளாகக் குறிக்கப்பட்டுள்ளது. கடலே, உயிரே வான்செயல் என்று திருவள்ளுவர் வலியுறுத்துவது கதிரவன் உலகியக்க, உயிரியக்க மையம் என்பதனைச் சுட்டி உணர்த்துவதேயாகும். அறியாப்படி அறிவுக்கும் மெய்யறிவுக்கும் மெய்யுணர்வுக் கும் படியாவதன்றி, அறிவுக்கு நிலமாக, முன்னைய மரபிறந்து அழிந்துபட்ட அறிவையும் உரமாகக் கொண்டு புதுவளர்ச்சி தூண்டுவது என்பதை இச்செய்திகள் காட்டும். நிலவுலகம் உருண்டை, உருண்டோடுகிறது. நிலவுலகம் மட்டுமல்ல, நிலவுலகை அணுவாகக் கொண்ட இயற்கையும் உருண்டை, உருண்டோடுகிறது. நிலவுலகிலுள்ள ஒவ்வோர் அணுவும் உருண்டை, உருண் டோடுகின்றது. அணுவில் அணுவாகிய நுண்மங்கள் (சூரஉடநரள) அதன் நுண்ணிமங்கள் (ஞசடிவடிளே), அதனைச் சுற்றியோடும் மின்மங்கள் (நுடநஉவசடிளே) ஆகிய யாவும் உருண்டை, உருண்டோடுகின்றன. பருப்பொருளின் இப்பருமை, நுண்மை எல்லைகளைப் போலவே, நுண்பண்புகளின் பருமை, நுண்மைகளாகிய வாழ்வும் கருத்தும் உருண்டு சுருண்டு சுழித்தோடுகின்றன. அறிவறியாமைப்படிகள் இத்தகைய சுழற்சிக்குரிய சான்றுகள். உயிர்கள் பிறப்பிலிருந்து இறப்புக்கு, இறப்பிலிருந்து பிறப்புக்கு அலைபாய்ந்து சுழல்கின்றன. ஒவ்வொரு தலை முறையும் இச்சுழற்சியின் ஒரு வளையமாகச் சுழித் தோடுகிறது. அறியாமைப்படி அறிவுப்படிக்கும், அறிவுப்படி அடுத்த அறிவறியாமைப் படிக்கும் உரமாவது போல, ஒவ்வொரு தலைமுறையின் பிறப்பு இறப்பு அலைகள் அடுத்த தலைமுறை களுக்கு உரமாகித் தூண்டுதல் தந்து, பிறப்பு இறப்பு அலைகளை ஊக்குகின்றன. இறத்தல் (கடந்து செல்லுதல்), பிறப்பு (பின் இறப்பு, பின்னும் கடந்து செல்லுதல்) என்ற தமிழ்ச் சொற்கள் தொல்பழம் காலத்திலேயே தமிழர் அறிந்த இவ்வறிவின் தடங்களாக இயல்கின்றன. இயற்கையின் சுழற்சி ஓர் எல்லையிலா மாபெரு வட்டம். நமக்கு நில உலகச் சுழற்சி ஓர் எல்லையிலாப் பெரு வட்ட மாயினும் இயற்கையின் சுழற்சி வட்ட நோக்க, அதை ஒரு நேர்வரையாகக் கொண்ட புள்ளியாக, சிறு வட்ட வளையமாக, சுழித்தோடும் வட்டமேயாகும். அதனுள் சுழித்தோடும் பின்னும் நுண்ணிய சிறுவட்டங்களே அணுக்கள், அணுநுட்பங்கள். இதுபோலவே, இயற்கையோடொட்டிய எல்லையிலா மாபெரு வட்டமாகிய உயிரின் இன வாழ்வில், உயிரின் மலர்ச்சிப் பேரூழி வட்டத்தில், ஒவ்வோர் உயிரின வாழ்வும் மனித வாழ்வும் பெரிய, சிறிய சுழித்தோடும் வட்டங்கள். மனித இன வாழ்வாகிய பெரு வட்டத்தில் ஒவ்வொரு தலைமுறை வாழ்வும் ஒரு வட்ட வளையம், ஒவ்வொரு பேரின, கிளையின வாழ்வும், வட்டக் கூறுகள், வளையக் கூறுகள். உயிர்களின் வாழ்வு இவ்வாறு ஒரே மாபெரும் பின்னல் வளையத் தொடர். அது இயற்கையின் பின்னல் வளையத் தொடருடன் பின்னிப் பிணைந்து வளைந்து வளைந்து வட்டாகாரமாக ஓடுகிறது. தமிழர் தொல்பழ வாழ்வின் கருவிலிருந்து தமிழென்னும் கன்னிச் செவ்வொளி கீண்டு, வெள்வொளி காலும் வெண் கதிரவனாம் வள்ளுவர் வாய்மொழியாய் விடியல் பகலொளி யாகி, சங்ககாலப் பகல்கடந்து தமிழ் மாலை ஒளி வீசி நடுநிலக் கடலகத்தும், எகிப்திலும், கிரீசிலும், கங்கை வெளியிலும் அராபியாவிலுமாகப் பிறையொளி பிறங்குவித்து மேலை ஐரோப்பாவில் முழு நிலவொளி வீசி வருகிறது இயல் நூலறிவு. நிலவொளி என்றும் நிலவாதது; கதிரவனொளியவாவியே வாழ்வின் வளங்காண நிற்பது. ஐன்ஸ்டீன் மெய்யறிவொளி தூண்டிய தமிழக வள்ளுவரின் மெய்யுணர்வொளியாம் கதிரவன், அறிவுலகின் ஒரு பகல், ஒரு இரவு, ஒரு நிலவொளி கழிந்து, மீண்டும் செவ்வானில் புதுவிடியல் ஒளி காலுமாக. அதுகாணும் வகையில், ஐன்ஸ்டீன் வழிநின்று, வள்ளுவர் ஒளியின் மறுசிந்தனையில் உளங் கொள்வோமாக. 5. வட்டாட்டம் உலகம் சுற்றுகிறது! நிலவுலகம் மட்டுமன்று - நிலவுலகத்துடன் வேறு பல உலகங்கள், வான கோளங்கள் சுற்றுகின்றன. இவற்றையே நாம் கோள்கள் (ஞடயநேவள) என்கிறோம். வானவெளி ஒரு நிலாமுற்றம்; கோள்கள் நங்கையர்கள்; அக்காள் தங்கையர்கள். நிலவுலகத்தோடொத்த, நிலவுலகத் தினும் பெரிய, சிறிய நங்கையர்கள். கதிரவன் கோளரசு; கோள்களின் அன்னை. அவள் முற்றத்தின் நடுவே, நடு நாயகமாக, தாய்ச்சியாக நின்று கொண்டு, நிலவுலகத்தையும் மற்றக் கோள் நங்கையரையும் தன்னைச் சுற்றி வட்டாட்டமாட்டுவிக்கிறாள். நிலவுலக நங்கை ஒரு பாலாக நின்று சுழன்றாடி ஓடுகிறாள். நிலவுலகைவிடக் கதிரவனுக்கு அருகாமையில் ஓரிருவரும், நிலவுலகம் கடந்து விலகி ஏனையோரும் தம்மைத் தாமே சுற்றிக் கைவீசிச் சுழன்று சுழன்றாடிக் கொண்டே, அன்னையாகிய கதிரவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அன்னையின் புன்னகையொளி அரிவையர்மீதெல்லாம் பட்டுத் தெளிக்கின்றது. நிலவுலகைவிடக் கதிரவனுக்கு அருகாமையிலுள்ள கோள் நங்கையர்கள் நிலவுலக வட்டத்துக்கு உள்ளாகச் சிறு சிறு வட்டமாகச் செல்கின்றனர். நிலவுலகம் தாண்டி அப்பால் உள்ளவர்கள் நிலவுலக வட்டத்தை உள்ளடக்கி, அதனினும் படிப்படியாகப் பெரிய, மிகப் பெரிய வட்டங்களாகச் சுற்றுகின்றனர். ஒவ்வொருவர் பாதையின் நீளமும் வெவ்வேறுபட்ட நீள் வட்டங்களாக வேறுபடுகின்றன. சராசரியாக அவர்கள் நொடிக்கு 13-கல் வேகத்தில் ஓடுகின்றனர். ஆயினும் ஒவ்வொருவர் வேகமும் ஒருவருக்கொருவர் சிறிது சிறிது வேறுபடுகின்றன. இதனால் எந்தக் கணத்திலும் வட்டாட்ட மேடையில்கோள் நங்கையர்கள் ஒரே வரிசையிலில்லாமல், தத்தம் சுழற்சியின் நீள் வட்ட நெறிகளில் ஆங்காங்கே சிதறிய பூக்கள் போல நின்றாடி இயங்குகின்றனர். புதன் (ஆநசஉரசல), வெள்ளி (ஏநரேள), நிலவுலகம் (நுயசவா), செவ்வாய் (ஆயசள), வியாழன் (துரயீவைடிச), சனி (ளுயவரசn), சேண்மம் (ருசயரேள), வருணம் (சூநயீவரநே), அளகை (ஞடரவடி) ஆகியவை தனிக்கோள்கள், தனி நங்கையர்கள் அவர்களிடையே கும்பலாக, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குறுங்கோள்கள் (ஞடயநேவடினைள டிச யளவநசடினைள) சின்னஞ்சிறு துண்டுத் துணுக்குக் கோள்களாக, தனிக்கோள் நங்கையர்களுடனே குறு நடமாடிக் கும்மாள மிட்டுக் குழைந்தோடி வருகின்றனர். கோள் நங்கையரில் சிலர் தத்தமக்குரிய சிறுமியர்களைத் தம்முடன் கொண்டு நடமிடுகின்றனர். கதிரவனைச் சுற்றித் தாம் சுழன்றாடுவதுபோல, அவர்கள் தம் சிறுமியரும் தம்மைச் சுற்றிச் சுழன்றாட விடுகின்றனர். கோள் நங்கையர்களைச் சுற்றி ஆடி ஓடும் இச்சிறுகோள் நங்கையர்களே துணைக்கோள்கள். கவிஞரையும் கலைஞரையும், காதலரையும், சிறுவர் சிறுமியர்களையும் கைக்குழந்தைகளையும் ஒருங்கே மகிழ்வித்துப் பல்வகை யுணர்ச்சிகளில் சுழன்றோட விடும் வானொளி விளக்கம் திங்கள், நிலவுலகு. அது உண்மையில் நிலவுலகைச்சுற்றி வட்ட மிடும் நிலவுலகின் துணைக்கோள், நிலவுலகின் சிறுமியேயாகும். நிலவுலகுக்கு இவ்வாறு ஒரு துணைக்கோள் இருப்பது போலவே, செவ்வாய்க்கு இரண்டும், வியாழனுக்கு ஒன்பதும், சனிக்குப் பத்தும், சேண்மத்துக்கு நாலும், வருணத்துக்கு ஒன்றுமாக மொத்தம் 27 துணைக் கோள்கள் (ளுயவநடடவைநள) உண்டு. கதிரவனைத் தாய்ச்சியாகக்கொண்டு கதிரவனைச் சுற்றிக் கோள் நங்கையர்களும் குறுங்கோள் நங்கையர்களும், அக்கோள் நங்கையர்களைச் சுற்றித் துணைக் கோள்களாகிய சிறுமியர்களும் இராட்டினத்துக்குள் இராட்டினம்போல ஆடும் இந்த நிலாமுற்ற வட்டாட்டத்தில் அவர்கள் உடுத்தியிருக்கும் பாவாடைகளும் தாவணிகளும், சிற்றாடை களும் மேலாடைகளும் அவர்களைச் சுற்றித்தாவித் தாவி ஆடுகின்றன. அவர்கள் பொன்முடிகளும் பொன்னீலக் கருங்குழல்களும் தத்தம் நிலையில் நின்று குதியாடு கின்றன. அவர்கள் அணிந்துள்ள பூணணி மணியாரங்கள் கலகல வென்று குலவி அலையாடுகின்றன. அவர்கள் தலையில் சூடிய வண்ண மலர்கள் குழைந்தாடுகின்றன. அப்பூக்கள்மீது அமர்ந் துள்ள பொறிவண்டுகள் பொற்பூந்தும்பிகள்கூட எழுந்தெழுந்து அப்பூக்களிலிருந்து நெடிது அகல முடியாதனவாய் அவற்றின் மீது தவழ்ந்தாடுகின்றன. கோள்களின் சுழற்சியுடன் சுழற்சியாக, அக்கோள்களைச் சார்ந்துள்ள இயங்காப் பொருள்கள், இயங்கு பொருள்கள் யாவும் சுழல்கின்றன. கடல்கள் அல்லது நீர்மண்டலங்கள் கோள்களின் இத்தகைய பாவாடை போல்வன. காற்று அல்லது வளி மண்டலங்கள் அவற்றின் மேலாடை, முகிற்குலங்கள் அவற்றின் பொன்முடிகள், கருநீலக் குழல்முடிகள், செடி, கொடிகள், உயிரினங்கள் யாவும் அவற்றின் பூணணி மணி யாரங்கள், முத்து வடங்கள். பூவை முடியில் பொருந்திய பூ, பூவை நுகரும் பொறி வண்டாக உயிரினங்களில் உச்ச உயர் உயிரினமாகிய மனிதன் விளங்குகின்றான். நிலாமுற்ற வட்டாட்டத்தின் கற்பனையழகு அதன் எல்லையற்ற பாரிய பரப்பை ஒரு சிறிதும் உணர்த்த முடியாது. ஆனால் அப்பரப்பை ஓரளவு அகங்கொள்ள முடியுமானால், கற்பனையழகு கற்பனை கொள்ளா அழகாகவே அமையும். நிலவுலக உருண்டையின் குறுக்களவு அல்லது விட்டம் 7927 கல் என்றும், அதன் சுற்றளவு ஏறத்தாழ 25,000 கல் என்றும் மேலே கண்டுள்ளோம். அத்துடன் அதன் மேற்பரப்பு இருபதுகோடி சதுரக்கல் என்பதையும்; பிழம்பு அளவு 25,838 கோடி கனகல் என்பதையும், எடை மானம் 6 கோடி கோடி கோடி பாரம் என்பதையும் நோக்கினால், அதன் கற்பனை கடந்த பேரெல்லையை நாம் ஓரளவு கருத்தில் கொள்ள முடியும். ஆயினும் இயற்கையின் மாபேரெல்லைகளை நோக்க இது ஒரு தூசு, அல்லது அணுவின் அணுமட்டுமே என்னலாம். நிலவுலகின் சுழற்சிக்கு 24 மணி நேரமும், வட்டா காரச் சுழற்சிக்கு ஏறத்தாழ 365 நாட்களுக்குச் சற்று மிகுதி காலமும் பிடிக்கிறதென்பதையும் நாம் மேலே கண்டிருக்கிறோம். இந்தக் கால எல்லைகளையே அந்நிலவுலகில் வாழும் நாம் ஒரு நாள் என்றும், ஓர் ஆண்டு என்றும் கணித்துக் காலத்தின் சிற்றெல்லை, பேரெல்லைகளை அளக்கப் பயன்படுத்துகிறோம். நிலவுலகைவிடச் சிறிய கோள்களும் உண்டு. நிலவுலகின் துணைக்கோளான திங்கள் மட்டுமன்றி, கோள்களில் புதன், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்றும் அதைவிட அளவில் குறைந்தவை. திங்கள் நிலவுலகிலிருந்து 2,40,000 கல் தொலைவில் சுழல்கிறது. அதன் குறுக்களவு 2163 கல். இது நிலவுலகின் குறுக்களவில் நாலில் ஒரு பங்கேயாகும். இதன் பயனாக, அது பிழம்பளவில் நிலவுலகில் 14-இல் ஒரு பங்காகவும், எடை மானத்தில் 26-இல் ஒரு பங்காகவும் குறைந்து விடுகிறது. கோள்களில் புதன் கதிரவனுக்கு மிகமிக அருகாமை யிலுள்ளது. ஆனால் அதுவே கதிரவனிடமிருந்து மூன்று கோடி அறுபது இலட்சம் கல் தொலைவில் உள்ளது. அதன் குறுக்களவு 3030 கல். பரப்பில் இது நிலவுலகில் 7-இல் ஒரு பங்கும், பிழம்பளவில் அதன் 19-இல் ஒரு பங்கும் ஆகிறது. செவ்வாய் நிலவுலகம் கடந்து அதைவிடக் கதிரவனிடமிருந்து தொலை வாய் இருந்தாலும், நிலவுலகைவிடச் சிறிது. அதன் விட்டம், நிலவுலகில் பாதி யளவான 4230 கல்லேயாகும். பரப்பளவில் இது நிலவுலகில் நாலில் ஒரு பங்கும் பிழம்பளவில் 8-இல் ஒரு பங்குமே தேறுவது ஆகும். வெள்ளி கதிரவன் திசையில் நிலவுலகுக்கு அருகாமையி லுள்ள கோள்; அளவிலும் அது ஏறத்தாழ நிலவுலகத்துடன் ஒப்பானது. அதன் விட்டம் 7700 கல். புதன், வெள்ளி, நிலவுலகம் ஆகியவை கதிரவனிட மிருந்து 3.6 கோடி, 6.7 கோடி 9.3 கோடி கல் தொலைவில் உள்ளன. செவ்வாய் 14.2 கோடி கல் தொலைவில் உள்ளது. ஆனால் அடுத்த கோளமான வியாழன் 48.3 கோடி கல் தொலைவிலேயே சுழல்கிறது. இடையே 34 கோடி கல் தொலைவுக்குக் கோள்கள் எதுவும் இல்லாமல் வானில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. வியாழன், சனி, சேண்மம், வருணம் ஆகியவை பெருங் கோள்கள். அவை நிலவுலகைவிட ஆயிரக்கணக்கான மடங்கு பெரியவை. அவற்றுள்ளும் முதல் கோளான வியாழன் மற்றெல்லாக் கோள்களின் மொத்த அளவையும் விடப் பெரிது. அதன் குறுக்களவு 86,500 கல் ஆகும். நிலவுலகைவிட இது 1300 மடங்கு பெரிது. சனி, சேண்மம், வருணம் ஆகியவற்றின் விட்டங்கள் 70,000; 31,500; 34,800 எனப் பொதுவாகக் குறைபடுகின்றன; அளவில் அவை நிலவுலகைவிட முறையே 760 மடங்கு, 350 மடங்கு, 380 மடங்கு பெரியன. வியாழன், சனி, சேண்மம், வருணம் ஆகியவை முறையே கதிரவனிடமிருந்து 48.3 கோடி, 88.6 கோடி, 178.2 கோடி, 279.2 கோடி கல் தொலைவிலுள்ளன. கடைசிக் கோளாகிய அளகை அணிமையில் தான் கண்டுணரப்பட்டது. அதன் விட்ட அளவு இன்னும் அறியப்பட வில்லை. ஆனால் அது கதிரவனிடமிருந்து 366.6 கோடி கல் தொலைவில் உள்ளது என்று அறிகிறோம். நிலவுலகைவிடக் கதிரவனுக்கு அருகாமையிலுள்ள புதன், வெள்ளி ஆகிய கோள்கள் கதிரவனை முறையே 88 நாட்களிலும், 225 நாட்களிலும் சுற்றுகின்றன. செவ்வாயின் வட்டாகாரச் சுழற்சி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள், அதாவது 687 நாட்கள் பிடிக்கின்றது. பெருங் கோள்களாகிய வியாழன், சனி, சேண்மம், வருணம் ஆகியவையும் அளகையும் முறையே கிட்டத்தட்ட 12 ஆண்டு, 30 ஆண்டு, 84 ஆண்டு, 165 ஆண்டு, 254 ஆண்டுகளில் வட்டாகாரச் சுழற்சி முடிக்கின்றன. கோள்களின் நடுநாயகமாக விளங்கும் கோளர சாகிய கதிரவன் நிலவுலகைவிட, கோள்கள் அனைத்தும் சேர்ந்த மொத்த அளவைவிடக் கூடப் பல்லாயிரமடங்கு பெரிய ஓர் எரியும் அனற்பிழம்புக் கோளம் ஆகும். அதன் குறுக்களவு 8,65,000 கல். கோளுடன் அதற்குரிய துணைக்கோள்களைச் சேர்த்து நாம் கோட்குடும்பம் என்கிறோம். அக்கோளையும், அதனைச் சுற்றித் துணைக்கோள்கள் இயங்கும் வட்டத்தையும் சேர்த்துக் கோள்வட்டம் என்று கூறலாம். கதிரவனுடன் கோள்கள், குறுங்கோள்கள் ஆகிய வற்றையும் அவற்றுக்குரிய துணைக்கோள்களையும் சேர்த்துக் கதிரவன் குடும்பம் என்கிறோம். கதிரவனைச் சுற்றிக் கதிரவன் குடும்பம் இயங்கும் பெருவட்டத்தை நாம் ஞாயிற்று மண்டலம் (ளுடிடயச ளுலளவநஅ) என்னலாம். ஞாயிற்று மண்டலத்துக்கு வெளியே பன்னூறாயிரம் கல் தொலைவுக்கப்பாலிருந்து பன்னூறாண்டுகளுக்கொருமுறை ஞாயிற்று மண்டலத்தினுட் புகுந்து கதிரவனை அருகாமையில் சென்று சுற்றி மீண்டும் அப்பால் செல்லும் ஒளிக் கோளங்களும் உண்டு. இவையே வால்மீன்கள் (ஊடிஅநவள). இவற்றுக்குத் தலை போல ஓர் ஒளிமுகடும், வால்போல நீண்டகன்ற ஓர் ஒளிப் பிழம்பும் உண்டு. வரும்போதும் போகும்போதும் கதிரவனைச் சுற்றும்போதும் இவற்றின் வால் ஒளிப்பிழம்பு எப்போதும் கதிரவனிருக்கும் திசைக்கு எதிர்ப்புறமாகவே அமைந்திருக்கும். இவ்வால்மீன்களைக் கதிரவன் குடும்பத்தின் வெளியுற வினர் என்னலாம். நெடுநீள் வட்டமாகிய ஞாயிற்று மண்டலத்தின் குறுக்களவு 400 கோடி கல் தொலைவு ஆகும். நிலவுலகை நோக்க, கதிரவனும் ஞாயிற்று மண்டலமும் மிகமிகப் பெரியவையே. ஆனால் இயற்கையின் மாபேரெல்லை யின் அளவைகளிடையே அவைகூட அணுப் போன்றவை ஆகிவிடுவன. வானவெளியில் இயங்கும் ஒளிக்கோளங்கள் கதிரவனும் கோள்களும் துணைக்கோள்களும் மட்டுமல்ல. மேலும் பல்லாயிரக் கணக்கானவை இவற்றினும் மிக மிகப் பெரிய ஒளிக்கோளங்கள் உண்டு. வானத்தில் இரவில் கருவித் துணையில்லாமலே நாம் ஆயிரக்கணக்கான ஒளிமணிகளைக் காண்கிறோம். இவையே விண்மீன்கள். கட்புலனால் காணப்படும் விண்மீன்களே ஆறாயிரத்துக்கு மேல் உள்ளன என்று வானூலார் சிலர் கணித் துள்ளனர். இவை முதல்தர ஒளியுடையவை, இடைத்தரப் பட்டவை, மங்கலானவை என வகுக்கப் பட்டுள்ளன. கட்டிலகப்படாமல் தொலை நோக்காடிகள் மூலம் காணப்படுபவை இன்னும் பல்லாயிரக்கணக் கானவை. ஆற்றல் மிக்க தொலை நோக்காடிகள் கொண்டு ஆண்டுதோறும் புதிது புதிதாக மேன் மேலும் ஆயிரக் கணக்கானவை காணப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றன வென்றாலும் காணக்கூடாதவை இன்னும் பன்னூறாயிரக் கணக்கில் இருக்கக் கூடும் என்பது உறுதி. அத்துணை முதல்தர ஆற்றலுடைய தொலை நோக்காடிகளில் கூடக் கும்பல் கும்பலாக ஒளிநிழலாக மட்டுமே காணக்கூடிய விண்மீன் திரள்களும் உண்டு. இவ்விண்மீன்கள் ஞாயிற்று மண்டலத்திலிருந்து நெடுநீள் தொலைவில் இருப்பதனாலேயே புள்ளியளவாகக் காணப்படு கின்றன. உண்மையில் அவை மிகமிகப் பெரியவை. அவற்றுள் மிகச் சிறியதுகூட நிலவுலகளவானது. ஆனால் பெரும் பாலானவை கதிரவனைவிடப் பெரியவை. கதிரவனைப் போல ஆயிரமடங்கு பெரியவையும் உண்டு. கண்பார்வைக்குக் கோள்களும் திங்கள் போன்ற துணைக் கோள்களும் நிலையாக ஒளி வீசுபவை. விண் மீன்கள் இவை போலன்றி விட்டுவிட்டு ஒளிவீசி மின்னி மினுங்குபவை. ஆனால் இவ்வேறுபாடும் அவற்றின் மலைமடுவான தொலை வேறுபாடு காரணமானதே. உண்மையில் கோள்கள், துணைக்கோள் களுக்குத் தம்மியல்பான ஒளிகிடையாது. அவை கதிரவனொளி யையே எதிர் நிழலிட்டுக் காட்டுவன. ஆனால் விண்மீன்களோ கதிரவன் போன்ற பேரொளிப் பிழம்புகள், அவற்றுட் பெரும் பாலானவை கதிரவனைவிட ஒளிமிக்க, பாரிய அனற்கோளங்கள் ஆகும். விண்மீன்களை நோக்க, கதிரவன் நமக்கு மிக அரு காமையிலுள்ளது என்னல் வேண்டும். விண்மீன்களைப் பார்க்கிலும் அது பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் தோன்றுவதன் காரணம் இதுவே. அதற்கு நாம் தனிப் பெயரிட்டுக் கதிரவன் என்று அழைப்பதுகூட இதனால் தான். ஏனென்றால் அது விண்மீன்களுள் ஒரு விண்மீனே. விண் மீன்களும் நம் ஞாயிற்று மண்டலத்தின் மையமான கதிரவனைப் போன்ற கதிரவன்களே - ஞாயிற்று மண்டலத்தைப் போலவே, பலசமயம் அதனிலும் பாரிய கதிரவன் மண்டலங்களுக்கு மையமான கதிரவன்களே யாகும். ஞாயிற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள விண்மீன்களில் நமக்கு மிகவும் அணிமையிலுள்ள விண்மீன்கூடக் கதிரவனை விடப் பலவாயிர மடங்கு தொலைவிலுள்ளது. விண்மீன்களின் தொலைவுகளைக் கல்தொலை அளவால் அளந்து கணிக்க முடியாது. அவ்வாறு கணிப்பது நில உலகின் சுற்றளவை அங்குலத்தால் அளப்பது போன்றதாகும். அம் மாபேரெல்லைகளைக் கணக்கிட வானூலார் ஒளி ஆண்டு என்ற ஒரு பேரளவைக் கூறு வகுத்துள்ளனர். ஒளிக்கதிர் வேகமே நாம் அறியும் உச்ச அளவு வேகமாகும். அதுவே இயற்கையின் உச்ச எல்லை வேகம் என்று கருதுகிறார் அறிஞர் ஐன்ஸ்டீன். அது நொடிக்கு 1,86,200 கல் தொலை செல்வது என்று மேலே கண்டோம். இவ்வேகத்தில் அது ஓர் ஆண்டு செல்லும் கற்பனை கடந்த நீள்பெருந் தொலைவே ஓர் ஒளி ஆண்டு என்ற வானூலாரின் வான் தொலை அளவை ஆகும். கதிரவன் நம்மிடமிருந்து 9 கோடியே 30 இலட்சம் கல் தொலைவிலிருப்பதாக மேலே கூறியுள்ளோம். இத்தொலை கடந்து கதிரவனொளி நமக்கு வந்து சேர 8 கணம், 20 நொடிகள் (500 நொடிகள்) தான் பிடிக்கின்றன. ஆனால் ஞாயிற்று மண்டலத்துக்கும் நமக்கும் மிக அருகாமையிலுள்ள விண்மீன் நம்மிடமிருந்து 8 ஒளி ஆண்டு தொலைவிலிருக்கிறது. அதன் ஒளி அவ்விண் மீனிடமிருந்து நம்மை நோக்கி வந்து சேர 8 ஆண்டுகள் பிடிக்கிறது. நாம் இன்று காணும் அதன் ஒளிக் கதிர்கள் உண்மையில் அந்த விண்மீனிலிருந்து 8 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டவையே யாகும்! நமக்கு மிக அணிமையிலுள்ள விண்மீன்தான் இது. மிகத் தொலைவிலுள்ளவையோ நூறாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ளவை. நாம் இன்று காணும் ஒளிக்கதிர்கள் அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான நூற்றாண்டு களுக்கு முன், மனித இனம் நிலவுலகில் தோன்றுவதற்கு முன்னரே புறப்பட்டன ஆதல் வேண்டும்! வான வெளியில் விண்மீன்களை மட்டுமன்றி, சில ஒளிக்கீற்றுக்களை, ஒளி ஆவிப்படலங்களை, ஒளி முகில்களையும் நாம் காண்கிறோம். ஆற்றல் மிக்க தொலை நோக்காடிகளின் மூலம் ஆராய்ந்தால்கூட, இவை சற்றே ஒளிமிக்க படலங்களாக மட்டும்தான் தோன்றுகின்றன. இவை உண்மையில் கண்ணுக்கு எட்டாத, ஆற்றல் சான்ற தொலை நோக்காடிகளுக்குக் கூட எட்டாத நெடுந்தொலைவுக்கும் அப்பாற்பட்ட நெடுநீள் தொலைவுடையவை. ஆயினும் இவை கோடி, நூறுகோடிக் கணக்காகத் திரண்டுள்ள விண்மீன் குழுக் களின் திரளொளியே என்று வானூலார் உய்த்துணர்கின்றனர். இவை நம் ஞாயிற்று மண்டலத்தைப் போன்ற கதிரவன் மண்டலங்கள் மட்டுமல்ல, ஏனெனில் ஒவ்வொரு விண்மீனுமே ஒரு கதிரவன் மண்டலம் ஆகும். பல ஞாயிற்று மண்டலங்களை உட்கொண்ட அண்டமாக, பல அண்டங்களை உட்கொண்ட பேரண்டமாகத் திகழ்பவை அவை என்று கூறப்படுகிறது. ஒளிப்படலங்களில் கட்புலனுக்கே மிகமிகப் பெரிதாகத் தோற்றுவது வான்கங்கை அல்லது பால் வழி (ஆடைமல றுயல) என்று கூறப்படுவதாகும். இது இரவு நேரங்களில் வானின் தென்கோடி முதல் வடகோடிவரை சற்றுத் தென்மேற்கு வடகிழக்குச் சாய்வாக, ஆங்காங்கே சற்று இடை விட்டுவிட்டு ஒரு பெரிய நிலா வில்லாகக் காட்சியளிக்கிறது. ஒவ்வோர் ஒளிமுகிலும் பல கதிரவன் மண்டலங்களைத் தனி விண்மீனாகக்கொண்ட பன்னூறாயிரம் விண் மீன்களின் திரளே. அத்தகைய கதிரவன் மண்டலங்கள் பலவற்றை அண்ட மாகவும், அவ் அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டமாகவும் அவை திகழ்கின்றன. அண்டங்கள் அல்லது பேரண்டங்களின் இத் தொகுதிகளுள் நமக்கு மிகவும் அருகாமையிலுள்ளது - உண்மையில் நம் பேரண்டம், நம் அண்டமாக, நம் ஞாயிற்று மண்டலத்தைத் தன்னகம் அடக்கியுள்ளதே வான்கங்கை அல்லது பால் வழி என்று அறிஞர் கருதுகின்றனர். மற்ற அண்ட பேரண்ட ஒளி முகில்களை விட அது பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் அணிமையுடையதாகவும் தோன்றுவதன் காரணம் இதுவே - நாம் அதனுள்ளிருந்து அதன் ஒரு பகுதியாக இருந்தே அதைக் காண்கிறோம். பல்லாயிரக்கணக்கான கதிரவன் மண்டலங்களை உட்கொண்ட இப்பால்வழியின் குறுக்களவு 70,000 ஒளி ஆண்டுகள் ஆகும். அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டம், பேரண்டங் களை உள்ளடக்கிய மாபேரண்டம் என இயற்கையெல்லை விரிவுற்றுச் செல்கிறது. எல்லா அண்ட பேரண்ட மாபேரண்டங் களையும் தன்னுள்ளடக்கிய அனைத்தண்டம் (அகிலாண்டம்) ஆக அது இலங்குகின்றது. ஞாயிற்று மண்டலத்திலே நடுநாயகக் கோளரசாய் இருக்கும் கதிரவன் தன்னைச் சுற்றிக் கோள்களை வட்டாட்ட மாட்டுவிப்பதுடன் வாளா இருந்து விடவில்லை. நிலவுலகின் தற்சுழற்சியால் கதிரவனும் விண்மீன்களும் ஒரே நிலையில் ஒரு நாளைக்கு ஒரு தடவை நிலவுலகைச் சுற்றுவதாகத் தோற்றுகின்றன. ஆனால் ஒரே இயக்கத்தின் மாயமாகத் தோற்றும் அவற்றின் போக்கில் ஒரு சிறு வேறுபாடு காணப்படுகிறது. விண்மீன்களின் போக்கிலிருந்து கதிரவன் போக்குக்குரிய காலம் நாள்தோறும் நான்கு கணங்கள் வேற்றுமையுடையதாகிறது. கோள்களைப் போலவே கதிரவனும் தன்னைத் தானே சுற்றிச் சுழன்றுகொண்டு, இயற்கையெல்லையில் வேறு ஏதோ ஒரு பெருங்கதிரவனை அல்லது விண்மீனைச் சுற்றி நொடிக்கு 12 கல் வேகத்தில் ஓடுவதாக அவர்கள் உய்த்துணர்கின்றனர். இந்த விண்மீன் எது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், பொதுவாக முதல் தர ஒளியுடைய கலுழன் (எநபய) என்ற விண்மீன் திசையிலேயே அது செல்வதாகக் கருதப்படுகிறது. ஞாயிற்று மண்டலத்தைத் தன்னுடனாகக்கொண்டு கதிரவன், தன் போன்ற வேறு பல ஞாயிற்று மண்டலங்களாகிய விண்மீன்கள் உடன்வர அண்டக் கதிரவனைச் சுழன்றோடு கின்றது. அண்டக் கதிரவனின் குடும்பம் சுற்றிச் சுழலும் இப்பெரு வெளியே அண்டம். நம் அண்டமும் பிற அண்டங்களும் இதுபோல் பேரண்டக் கதிரவனைப் பேரண்டப் பெரு வெளியில் சுற்றிச் சுழல்பவையே என்னலாம். நம் பேரண்டம் இதுபோல இன்னும் பல பேரண்டங் களுடன் மாபேரண்ட வெளியிலும், மாபேரண்டங்கள் இயற்கை யின் முழு உருவாகிய அனைத்தண்ட வெளியிலும் உலவுவன ஆகலாம். அனைத்தண்ட வெளி அல்லது இயற்கையும் நீள் வட்ட வடிவானது, அதுவும் இயங்குவது என்றே அறிஞர் கருது கின்றனர். அது ஓயாது தன் எல்லைக்குள்ளேயே பன்னூறாயிர ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாறி மாறி வீங்கியும் ஏங்கியும் - விரிந்தும் சுருங்கியும் வருகிறது. தற்போது பன்னூறாயிர மாண்டுக் காலமாக அது விரிவடைந்துகொண்டே வருகிறது. நிலவுலக இயக்கம், ஞாயிற்று மண்டல இயக்கம், அண்ட பேரண்ட இயக்கங்கள் யாவற்றுக்கும் மூல ஆதாரமான கரு இயக்கம் இதுவே. இயற்கையில் இவ்வாறு நிலவுலகம் அதன் சிறு பகுதியில் சிறு பகுதியாகிய ஓர் அணுக் கூறு. இயற்கையை நோக்க நிலவுலகம் இவ்வாறு அணு என்றால், அணுவை நோக்க அது இயற்கை போன்ற எல்லையற்ற விரிவுடைய தென்னலாம். இயற்கையில் எல்லாம் அணுவின் சேர்க்கையால் ஏற் பட்டவையே என்ற கோட்பாடு புதிதன்று. கீழ் திசையில் கணாதர் எனும் அறிவர் அதையே தம் முழுக் கோட்பாடாக்கி, வைசேடிகம் எனப் பெரு வழக்காக்கியிருந்தார். இது தொல் பழங்காலக் கீழையுலகக் கோட்பாடுகளில் ஒன்றாக, இடைக்காலங்களில் அறுவகைச் சமயங்களில் ஒன்றாக, வகுக்கப்பட்டுள்ளது. மேல் திசையில் கிரேக்க உலகிலும் கி.மு. 6, 7 ஆம் நூற்றாண்டுகளிலுள்ள அறிஞர் அணுக்கோட்பாடு வகுத்திருந் தனர் என்று காண்கிறோம். ஆனால் செயல் தேர்வு, கணிப்பு அடிப்படையில் அணுக் கோட்பாடு வகுக்கப்பட்டது தற்காலத்தி லேயேயாகும். அதனை வகுத்தமைத்தவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த `டால்ட்டன்' என்ற அறிஞர் ஆவர். 1898-ல் ஒளிமம் (சுயனரைஅ) என்ற உலோகத்தைக் கியூரித் துணைவர்கள் (ஆச. & ஆசள. ஊரசநை) கண்டுபிடித்ததன் பயனாக, அணு ஓர் அணு உலகாகியுள்ளது. அணு மண்டலமாகியுள்ளது. அதன் உள்ளாக்கம் ஆராயப்பட்டபோது, அதுவும் இயற்கை யின் சுழற்சியுட் சுழற்சி இயல்புக்கு உட்பட்டதே என்பது காணப் பட்டது. உண்மையில் அது நிலவுலகின் அணுக்கூறாகிய ஒரு நுண்ணிய ஞாயிற்று மண்டலமே என்னலாம். அது நடுவே கதிரவன்போல ஒரு கருவுள் பகுதி யையும் (சூரஉடநரள) சுற்றிலும் ஒரு கவிகை அல்லது சில கவிகைகளாக (ளுhநடடள டிக டீசbவைள) கோள்கள் போலச் சுற்றிச் சுழன்றோடும் மின்மங் களையும் (நுடநஉவசடிளே) உடையதாக விளங்குகிறது. இம்மின்மங்கள் மின் எதிர் ஆற்றல் செறிந்த நுண்மங்களே. இவற்றுக்கெதிராக, கருவுளின் பகுதிகள் நேர்மின் ஆற்றலுடைய நேர்மங்கள் (ஞசடிவடிளே), பொதுமின் ஆற்றலுடைய நொதுமங்கள் (சூநரவசடிளே) ஆகியவை இணைந்தவை. இயற்கையின் பேரெல்லை அனைத்தண்டம். அதன் சிற்றெல்லை நிலவுலகமல்ல, அணுமண்டலம். முதலது கற்பனை கடந்த பேரெல்லை. மற்றது கற்பனை கடந்த சிற்றெல்லை. ஆனால் இரு திசையிலும் அமைப்பு முறையும் இயக்க முறையும் பெரிதும் ஒத்துள்ளன. `அண்டமே பிண்டம். அண்டத்திலுள்ளது பிண்டத்திலுமுண்டு' என்ற பழந்தமிழ்ப் பழஞ்சொல் இவ் வுண்மையை நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வளவு இயக்க முறை சுழற்சியுட் சுழற்சியாக, பறக்கும் குதிரை அமைப்பையே நினைவூட்டும் முறையில் அமைந் துள்ளது என்னலாம். அந்தரத்தில் சுழன்றாடுகிறது, பறக்கும் குதிரை! அச் சுழற்சியையே கண்கொட்டாது பார்த்து நிற்கின்றனர் மக்கள் - அதிலேயே மயங்கித் தம்மை மறந்து ஆழ்ந்துள்ளனர்! பறக்கும் குதிரையின் சுழற்சி மாயத்தில் அவர்கள் உள்ளம் பறிகொடுத்து நிற்கின்றனர். ஆனால் பறக்கும் குதிரை மீதிருப்பவன் காணும் காட்சி வேறு, மாயம் வேறு! அவன் பறக்கும் குதிரை சுழன்றாடுவதையே காணவில்லை. அச்சுழற்சியை அதைக் காணும் மக்களிடம், மக்களைச் சூழ்ந்த மாடமாளிகை கூடகோபுரங்களினிடம், மரஞ் செடி கொடி களினிடம் காண்கிறான். அவையாவுமே சுழன்று சுழன்று குதித்தாடுவதுதான் அவனுக்குப் புலப்படுகிறது. நிலவுலகம் ஒரு பறக்கும் குதிரை - ஆம், நாம் வாழும் நிலவுலகம் இத்தகைய ஒரு பறக்கும் குதிரையே. அது அந்தரத்தில் நின்று பறக்கும் குதிரை போலவே சுழன்றாடுகிறது! ஆனால் நாம் அச்சுழற்சியைக் காண்பதில்லை. ஏனெனில் நாம் அதன் மீதே சுழல்கிறோம். நம் நிலை பறக்கும் குதிரை மீதிருப்பவன் நிலையே. பறக்கும் குதிரையை நாம் அதன்மீதிருந்தும் காணமுடியும். தொலைவிலிருந்து, அதன் சுழற்சியில் பங்கு கொள்ளாமலே பார்க்கவும் இயலும். ஆனால் நிலவுலகமாகிய பறக்கும் குதிரையை நாம் - மனித இனத்தவராகிய எவரும் - அதன் மீதிருந்து, அதன் சுழற்சியில் பங்கு கொள்ளும் நிலையில் மட்டுமே காண்கிறோம். தொலைவிலிருந்து, அதன் சுழற்சியில் பங்கு கொள்ளா நிலையில் காண்பவர் எவரும் இருக்க முடியாது. உண்மையில் பறக்கும் குதிரையுடன் சுழலும் சுழல் சட்டங்கள் போல, நிலவுலகுடன் ஞாயிற்று மண்டலமும் அண்டங்களும் பேரண்டங்களும் மாபேரண்டங்களும் யாவுமே சுழல்கின்றன. இயற்கையிலேயே நிலவுலகின் சுழற்சியில் முற்றிலும் பங்கு கொள்ளாத பகுதி இல்லை என்னலாம். நிலவுலகின் சுழற்சி, பறக்கும் குதிரையின் சுழற்சி போன்றது - இரண்டும் சுழற்சிமீது சுழற்சி; சுழற்சியுள் சுழற்சியாக அமைந் துள்ளன. ஆனால் நிலவுலகின் மாயம் பறக்கும் குதிரைமீதிருந்து காண்பவர் கட்புலப்படும் மாயம் தான். பறக்கும் குதிரை மாயம், இதுவல்ல. நிலவுலகச் சுழற்சியில் பங்கு கொள்ளாமல், அதற்கப்பால் தொலைவிலிருந்து காண்பவர் காட்சி மாயமாகவே அது விளங்குகிறது. பறக்கும் குதிரை இங்ஙனம் நிலவுலகத்தை நினை வூட்டுவதாயினும், பறக்கும் குதிரைமாயம் நிலவுலக மாயம் அன்று. நிலவுலக மாயத்துக்குத் தெளிவூட்டும் எதிர் மாய மாகவே அது அமைந்துள்ளது. பறக்கும் குதிரை மரபின் மூலமுதல்வரான தொல்பழங்காலத் தமிழர் புறக்கண்ணால் எவரும் காணமுடியாத நிலவுலகமாயத்தை இயற்கை மாயத்தைத் தம் அகக்கண்ணால் கண்டு, அதனை உருவக வடிவாக்கிப் பறக்கும் குதிரை மரபு சமைத்தனர் என்னலாம். மெய்யறி வூழிக்காலத் தமிழரின் அகநோக்கு, நுண் நோக்கு அல்லது இயல் நூல் நோக்குக்குப் பறக்கும் குதிரை மாயம் வேறும் பல சான்றுகள் தருகிறது. இயற்கையின் சுழற்சி, நிலவுலகின் சுழற்சி ஆகிய இரண்டும் அறியப்படாத காலத்தை நாம் இயல் நூலுலகின் அறியாமை யலைக்குரிய காலம் என்னலாம். ஆனால் இந்த அறியாமை அலையிடையே நிலவிய மருட்சியிருளினூடாகப் பறக்கும் குதிரை மரபு ஓர் அறிவலையாக மிளிர்கின்றது. ஏனெனில் அதுவே வானநூல் அறிவின் முதல் தொடக்கத்தையும் இயல் நூலறிவின் தொலை எதிர்காலத்தையும் ஒருங்கே சுட்டிக் காட்டு வதாய் உள்ளது. பறக்கும் குதிரைமாயம் உண்மையில் மாயத்தை விளக்கும் மாயம், எதிர்மாயம் என்று மேலே குறித்துள்ளோம். ஆனால் இவ்வெதிர்மாயம் அதன் நேர் மாயத்துக்குரிய மூன்று கூறுகளில் மூன்றாவது கூறேயாகும். நிலவுலக மாயத்துடனொத்த பறக்கும் குதிரைக் காட்சி - குதிரைமீதிருந்தே பார்ப்பவன் காட்சி - அதன் நேர் மாயம். அதில் நாம் மூன்று கூறுகள் காணலாம். பறக்கும் குதிரையின் சுழற்சிக்கு ஆதாரமாக அமைபவை அதன் பல்வேறு சுழல் சட்டங்கள் - மேல், இடை, கீழ்ச் சட்டங்கள், தண்டயங்களுடன் கூடிய அடித்தளம் என அவற்றை நாம் நான்காக வகுக்கலாம். ஆனால் நுணுகி நோக்கினால், தொலைநின்று காண்பவர்களும் நான்கு சட்டங்களும் கடந்த ஐந்தாம் சட்டமே யாவர். பறக்கும் குதிரையின் சுழற்சியில் அவர்கள் பங்குகொள்ளாமலிருக்கலாம் - ஆனால் நிலவுலகின் சுழற்சியுடன் அவர்களும் சுழல்பவரே யாவர். மேல், இடை, கீழ்ச்சட்டங்கள், தண்டயங்கள் ஆகிய நான்கு சுழல் தளங்களும் சுழற்சியில் பங்கு கொள்பவை. ஆனால் சுழற்சியின் வேகம் கீழே வரவரக் குறைகிறது. சுழற்சியின் விட்டமோ கீழே வரவர அகல் பெருவட்டமாக விரிகிறது. இந்நிலையில் குதிரைமேலிருப்பவன் இவற்றில் குதிரையின் சுழற்சி மாயத்தை முற்றிலும் காணமாட்டான். ஓரளவு திசைமாறி, போக்கு மாறி, வேகமும் மாறியே, தாறுமாறான போக்கு களாகவே அவற்றைக் காண்பான். நான்கு சுழல் தளங்களுக்கும் வெளியே, ஐந்தாவது தளமாக மேலே குறிக்கப்பட்ட எல்லையில், எல்லாப் பொருள் களிலும் பறக்கும் குதிரை மேலிருப்பவன் பறக்கும் குதிரையின் சுழற்சியை அப்படியே திசை மாற்றிக் காண்பான். மாயத்தில் இங்கே திசை மாற்றமும் பொருள் மாறாட்டமும் முழு அளவில் இடம் பெற்றாலும் வேகம் ஒரு சிறிதும் மாறாது இயல்கின்றது. பறக்கும் குதிரை அளவுடையது; எல்லையுடையது. ஆனால் அதை நோக்க ஐந்தாவது தளம் நிலவுலக எல்லையன்றி வேறு எல்லையுடைய தன்று. எனவே இத்தளத்தின் நெடுநீள தொலைவில் உள்ள மலைமுகடுகள், வான் முகில்கள், வானகோளங்கள் பறக்கும் குதிரையின் சுழற்சி மாயத்தினால் ஒரு சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பறக்கும் குதிரை மீதிருப்பவன் எவ்வளவு சுழன்றாலும், எப்போதும் அவை அவனுக்கு ஒரே திசையில் அசையா மலே நிலையாகக் காணப்படும். பறக்கும் குதிரை மீதிருப்பவன் காணும் இம்மூவகைக் காட்சியையும் நாம் நிலவுலக மாயத்தில் காணலாம். அவையே வானூலார் வகுத்துள்ள வானகோளங்களின் மூன்று வகை களாக, வான நூலறிவின் அடிப்படை அறிவுக் கூறுகளாக அமைவன. நிலவுலகுக்கு அருகாமையில், அதன் சுழற்சியில் பேரளவு பங்கு கொள்ளும் வான கோளங்கள் உண்டு. மற்றக்கோளங்களை நோக்க, குறை தொலைவின் காரணமாக இவை அளவில் பெரிதாகத் தோற்றுகின்றன. தாம் ஒளியற்றவை யானாலும், கதிரவனொளி பெற்று, ஒளிக் கோளங்களைவிட ஒளி உடையவையாகவும் நிலையான ஒளி வீசுபவையாகவும் இவை விளங்குகின்றன. தவிர, நிலவுலகிலிருந்து காண்பவருக்கு நிலவுலகச் சுழற்சியுடன் அவற்றின் சுழற்சியும் கலந்து, திசை பல வகையில் மாறுபட்டும், வேகமும் போக்கும் பலவகையில் தாறுமாறாகி யும் காணப்படுகின்றன. இக்கோளங்களே கோள்கள். நிலவுலகிலிருந்து நெடுந்தொலைவில், அதன் சுழற்சியில் மிகுதி பங்கு கொள்ளாதவை கதிரவன், விண்மீன்கள் ஆகியவை. திசை மட்டும் மாற்றி நிலவுலகின் சுழற்சி வேகத்தை மாறாமல் காட்டுபவை இவையே. இவற்றுள் கதிரவன் மட்டுமே ஒளியும் உருவும் மிக்கதாகத் தோற்றுவது இத்தளத்தில் இது மிக அணிமையிலி ருப்பதனாலேயே ஆகும். ஆனால் விண்மீன்கள் ஒளியும் உருவும் பெரிதும் மறைவுற்று, சிறுசுடர் மணிகளாக விட்டுவிட்டு ஒளி வீசுகின்றன. திசை மட்டும் மாற்றி நிலவுலகின் சுழற்சியை இவை அப்படியே காட்டுகின்றன. விண்மீன்களில் மிகு தொலைவானவை படிப்படியாக நிலவுலகின் சுழற்சி மாயத்தினால் பாதிக்கப்படாதவையாகி, இறுதியில் சில பல அதிலிருந்து முற்றிலும் விடுபட்டனவாய், நிலவுலகம் எவ்வாறு சுழன்ற போதும் தொலைவும் திசையும் ஒளியும் மாறாதவையாய் இருக்கின்றன. இவை நிலவர விண்மீன்கள் (குiஒநன ளுவயசள) எனப்படுகின்றன. நிலவுலகை மையமாகக் கொண்ட பழைய வான நூலார் கணித்த கோளங்களின் இயக்கங்கள், கதிரவனே மையம் என்று அறியப்பட்ட பின்னும், காலக் கணிப்பு, வேகக் கணிப்பு ஆகியவற்றில் மாறுபடாததன் காரணம் இதுவே. அறியாமை யலையின் உள்ளீடான அறிவலையாக இக்கணிப்பு இயல்கின்றது என்னலாம். கோள்கள், விண்மீன்கள், நிலவர விண்மீன்கள் என்ற இந்தப் பாகுபாடு வானநூல் வளர்ச்சியில் ஒரு முக்கிய கூறு, முக்கியமான படி ஆகும். முதலிரண்டின் வேறுபாடு அவற்றின் இயல்பறிந்த வேறுபாடாகத் தொடங்கவில்லை. கோள்கள் நிலையான ஒளி வீசுபவை, விண்மீன்கள் மின்னி மினுங்குபவை என்ற காட்சி மாய அடிப்படையிலேயே அவை பிரித்துணரப் பட்டன ஆகலாம். விண்மீனைக் குறிக்கும் மீன் என்ற சொல்லும் (மின்னுவது மீன்), விண்மீனுக்குச் சரியான மேலை மொழிச் சொல்லும் (ளுவயச, ளுவசை - அசை) இதனைச் சுட்டிக்காட்டுகின்றன. விண்மீன்கள், நிலவர விண்மீன்கள் ஆகியவையும் இது போலத் தோற்ற மாயத்தினடிப் படையிலேயே பிரித்துணரப் பட்டிருந்தன என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நிலவர விண்மீன்கள் தோற்ற மாயத்திலும் திசை மாறாதன. ஆனால் தமிழகத்திலும் கீழ்திசையிலும் காட்சி மாயம் கடந்து மெய்ந்நிலை உணரப்பட்டிருத்தல் சாலும் என்னலாம். ஏனெனில் கோள் என்பதற்குரிய மேலை மொழிச் சொல் (ஞடயநேவ- அலைந்து திரிவது) தோற்ற மாயத்தை மட்டுமே காட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால் அதற்குரிய கீழை உலகச் சொற்களில் சமஸ்கிருதச் சொல் (க்ரஹம்) ஈர்க்கப்படுவது என்ற பொருள் தருவது. தமிழ்ச் சொல்லோ (கோள்) கதிரவனால் ஈர்த்துக் கொள்ளப்படுவது என்ற இதே பொருளோ, கதிரவனிட மிருந்து ஒளி கொள்வது என்ற பொருளோ சுட்டுவது. இரு பொருள் களையுமே சொல் குறிப்பதுமாகலாம். சமஸ்கிருதச் சொல் கோளின் தனியியல்புகளுள் ஒன்றையும் தமிழ்ச்சொல் இரண்டையும் சுட்டுகின்றது. நிலவுலகம் வட்டவடிவமான தென்ற கருத்தும் நிலவலயம் (நிலவுலகாகிய வட்டம்), குவலயம் (வளைந்த வட்டம்) என்ற தமிழ்ச் சொற்களில் மிளிர்கின்றன. வானூலின் முத்திற வேறுபாட்டை மட்டுமன்றி அதன் உள்ளியல்பையும் பண்டைப் பழந்தமிழர் உணர்வு தென்றெட்டி யிருந்த தென்பதைத் தமிழ்ச் சொல் மரபும் பறக்கும் குதிரை மரபும் ஒருங்கே காட்டுகின்றன. சுழல் வட்டங்களின்மீது சுழல் வட்டமாக இயங்குவது பறக்கும் குதிரை, அதன்மீதும் ஒரு சுழல் வட்டமாகச் சுழல்வது அதன் மீதமைந்த மதிவட்டக் குடை. இது நிலவுலகக் கோள் வட்டத்தின் மீது சுழலும் துணைக் கோளாகிய திங்களை நினைவூட்டுவது ஆகும். ஆனால் அதுவே அணுவின் சுழற்சி யையும் குறித்துக் காட்டுவதாகக் கொள்ளத்தக்கதே. இயற்கையை நோக்க, நிலவுலகம் ஒரு பறக்கும் குதிரை. ஆனால் நிலவுலகை நோக்க, அதன் சிற்றெல்லையில் ஒரு சின்னஞ்சிறு ஞாயிற்று மண்டலமாகச் சுழலும் அணுவும் ஒரு பறக்கும் குதிரையே என்னலாம். பறக்கும் குதிரை விழாவின் உலாவுருவில் நாம் ஒரு மதிவட்டக் குடையையுமே காண்கிறோம். ஆனால் இயற்கையின் திருவிளையாடலில், 27 துணைக் கோள்கள் மதி வட்டங்களாகத் தனித்தனி சுழன்றுவர, கோள்களும் குறுங்கோள்களும் மிகப்பல பெரிய சிறிய பறக்கும் குதிரைகளாக ஞாயிற்று மண்டல மென்னும் சுழல் வட்டமீது சுழல்கின்றன. பறக்கும் குதிரையைப் போலவே சுழல் வட்டங்களும் பல; இடைச் சட்டம், அடிச்சட்டம், தண்டமாகிய அடித்தளங்களும் பல. இவையன்றிப் பறக்கும் குதிரைகளும் பறக்கும் குதிரை களாக அவற்றினுள் இடம்பெறும் பத்து நூறாயிரக்கோடி கோடிக்கு மேற்பட்ட அணுக்களும் ஒன்றனுள் ஒன்றாகச் சுழலுகின்றன. இயற்கையின் பறக்கும் குதிரை விளையாட்டு இவ்வாறு பறக்கும் குதிரைகளின் கூட்டு விளையாட்டாக எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பறக்கும் குதிரையின் சுழற்சி, இயற்கையின் சுழற்சியில் நம் கருத்தைத் திருப்பவல்லதாகலாம். ஆனால் பறக்கும் குதிரையின் மாயம் தரும் படிப்பினைகள் வேறு. அது தன் சுழற்சி மாயத்தாலேயே பறவைகளின் நேர் வேகத்தை நம் கண் முன் கொண்டு வந்து காட்டிவிடுகிறது. சுழற்சி வேகம், நேர் வேகம் ஆகியவற்றின் தொடர்புகளிலே இது நம் சிந்தனையை ஓட விடுகிறது. தற்கால இயந்திர ஊழியின் வேக ஆற்றல்கள் யாவும் நேர் வரையாகச் செல்லும் ஆற்றலாகவே பெரும்பாலும் பயன்படு கின்றன, பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவ்வேகங்கள் யாவும் சுழலும் வட்டாகார ஆற்றல்களாகவே படைத்து உருவாக்கப்படுகின்றன. நேரான காற்றோட்டம் தருவது மின் விசிறி. ஆனால் அதன் அலகுகள் வட்டாகாரமாகச் சுழன்றே இந்நேர் வேகம் உண்டு பண்ணுகிறது. செல்கலங்கள், விசைக் கப்பல்கள், வானூர்திகள்யாவும் நேராகவே விரைகின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு செல்லும் சக்கரங்கள், விசையூட்டும் பொறிகள் வட்டாகார மாகத்தான் செல்கின்றன. நேர் வேகத்தை நேர் வேகமாக்கவோ, சுழல் வேகத்தைச் சுழல் வேகமாக்கவோ, நேர்வேகத்தைச் சுழல் வேக மாக்கவோ முடியா தென்றில்லை. வில்லின் நிமிர்வாற்றல் அம்பை நெடுந்தொலை செலுத்து கிறது. விற்பொறியும் துப்பாக்கியும் கிட்டத் தட்ட இதே நிலை உடையவையே. நெம்பு கோலின் ஒரு புறத்தில் கீழே அழுத்தப் படும் ஆற்றல் மறுபுறத்தில் பாரங்களை மேலே எழுப்புகிறது. கப்பியாற்றல், இணைக் கப்பியாற்றல்களும் இது போன்றதே. நேர் வேகம் நேர் வேகமாகச் செயலாற்றுவதற்கு இவை சான்றுகள். மிதி வண்டி, மணிப்பொறி சுழற்சி வேகத்தைச் சுழற்சி வேக மாக்குகின்றன. தயிர்கடையும் தாம்புக் கயிறு, பண்டைக் காலத் தீக்கடைகோல் (ஞெலிகோல்) கயிற்றின் இழுப் பாகிய நேர் வேகத்தால் சுழற்சி வேகம் உண்டு பண்ணு வதற்குரிய சான்றுகள். இம்முறைகள் அருந்தலான முறைகள். சுழற்சி வேகத்தை நேர் வேகமாக்கும் முறையே மிகுதியாக, வர வர மிகுதியாகக் கையாளப்பட்டு வருவது. இதற்குக் காரணம் என்ன? நேர்வரை நம் கட்டுக்கு உட்படாத வரையறையற்ற நீள் எல்லையுடையது. வட்டமோ நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட எல்லையுடையது; வரையறையுடையது. நேர் வரை இயக்கம் இடம் விட்டு இடம் சென்று கொண்டே இருப்பது. வட்டமோ இருந்த இடமிருந்தே இடைவிடாது இயங்கவல்லது. இக் காரணங் களால், மேலே குறிப்பிட்ட சில வாய்ப்பான இடங்கள் நீங்கலாக, வட்டம் ஓரிடத்திலிருந்து எல்லையற்ற இயக்கம் தூண்டுவதற்குரியது. வண்டி, செல்கலங்களின் சக்கரங்கள் போல, இயங்கும் நேர் வேகத்தில் இணைக்கப்பட்டபோது, அது இயங்கிக்கொண்டே இயங்கும் ஆற்றல் - இயக்கும் பொருளா லேயே தான் இயங்கும் அருந்திறலாற்றலும் உடையது. வில் எய்த அம்பையே மீட்டும் எய்ய முடியாது. துப்பாக்கி எறிந்த குண்டையே மீட்டும் எறிய முடியாது. ஆனால் மிதி வண்டியிலுள்ள மிதியாழியும் சரி, செல்கலங் களின் உருளாழியும் சரி, இயக்கிக் கொண்டே இயங்கும் பொருளுடன் இயங்கும் ஆற்றல் உடையன. இடைவிடாச் சுழற்சியால், இடையறா எல்லையற்ற இயக்கம் உண்டுபண்ணும் திறமும் சுழற்சியாற்றல் ஒன்றுக்கே உண்டு. இவை மட்டுமல்ல. சுழற்சியாற்றல் சக்கரத்தின் ஆற்றல். சக்கரத்துக்கு ஒரு மையம், ஒரு புள்ளி உண்டு. ஒரு வட்டம், சுற்றுவரையும் உண்டு. சுழற்சியில்மையம் இடம் பெயராது சுற்றும். அது ஒரு புள்ளி. இயங்காமல், அதாவது இடம் பெயராமல் இயங்கி, இயக்கும் அரும்பெறல் ஆற்றல் உடையது அது. ஆனால் புள்ளியுடன் சுற்றுவரையும் ஒத்து இயங்கும் இதன் சுழற்சி இடம் பெயரா ஆற்றலல்ல, இடம் பெயரும் ஆற்றல். அதே சமயம் நேர்வரைபோல அது முற்றிலும் இடம் பெயர்ந்து சென்று விடுவதில்லை. மீட்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து வந்து செல்வது. மையம் இயக்க ஆற்றலையும், சுற்றுவரை எல்லையுடைய ஆற்றலையும், அதன் இடைவிடாச் சுழற்சி இடையறா ஆற்றல் தொடர்பையும் சுட்டுகிறது. இவற்றில் ஆழ்ந்து கவனம் செலுத்தாதவர்களுக்கு இவை மிக எளிய செய்திகள், கவனத்துக்கு உரியவை யென்றே கூறத்தகாத செய்திகளாகத் தோற்றும். இது இயல்பே. அறிந்த அறிவின் அறிவு மாயம் இது. அறிவில் அறியாமையலையாகிய மறி சிந்தனையே இவற்றின் நுண்ணிய படிப்பினை காட்டும். நேர்வரை வட்டம் தொடங்குமிடம் அவற்றின் சிற்றெல் லை ஒரு புள்ளி - அவற்றின் பேரெல்லை ஓர் எல்லையற்ற மாபெரிய வட்டம் - 25,000 கல் சுற்றளவுடைய `நேர்வரை - வட்டம்' - எல்லையில்லா நேர்வரை - இந்த மெய்ம்மை கடந்த மெய்ம்மையைச் சக்கர ஆற்றல் சுட்டிக் காட்டுகிறது. பறக்கும் குதிரை மாயம் இயல் நூல் - மெய்யறிவின் முகட்டி லுள்ள இந்த மாயம்வரை நம்மைக் கொண்டு செல்லவல்லது. இது மட்டுமன்று. இது கடந்து ஐன்ஸ்டீன் சிந்தனை கடந்த கற்பனை, கற்பனை கடந்த சிந்தனையிலும் அது நம்மை இட்டுச் செல்லும் திறம் உடையது. புள்ளி, நேர்வரை, வட்டம். யூக்ளிட் காலம் முதல் இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாக மனித உலகின் இடக்கணக்கியலின் அடிப்படையான அளவைத் தளங்கள் இவையே. நேர்வரை, வட்டம் ஆகிய இரண்டுக்கும் உட்கூறாய் அடங்குவது புள்ளி. இரண்டுக்கும் அடிப்படையாய் அமைவதும் அது. ஆனால் அது இல்லாத அளவை. அது முதலளவை யல்ல, அளவைத் தொடக்கம் மட்டுமே. அளவையின் கருமூலமாக, அளவையின் தொடக்க மூல தளமாக, இடக்குறிப்பாக மட்டுமே செயற்படுவது அது. இடக்கணக்கியல் புள்ளியை அளவைகளுள் ஒன்றாகக் கணிக்காததன் காரணம் இதுவே. இன்மையின் (சூநபயவiஎந ளூரயவேவைநைள) முடிவும் உண்மையின் (ஞடிளவைiஎந ளூரயவேவைநைள) தொடக்கமும் குறிக்கும் நடுநிலைப்பட்ட இன்மையில் (ணநசடி)குறிபோன்ற நிலையை யுடையது அது. இடக்கணக்கியலின் அளவைகள் - எல்லாப் பொருள் களையும் கணித்துணர உதவும் அளவைகள் - யூக்ஸிட் காலம் முதல் மூன்று என்றே வகுக்கப்பட் டுள்ளன. அவையே நீளம், அகலம், உயரம் அல்லது ஆழம் அல்லது திட்பம்! இம்மூன்றும் நேர்வரையாலேயே அளக்கப்படுவன என்பது தெளிவு. புள்ளியின் எல்லையற்ற பெருக்கம் நீளம். இது நேர் வரையால் கணிக்கப்படுவது. நேர்வரையின் எல்லையற்ற பெருக்கம் பரப்பு அல்லது சமதளம். இதில் ஒருபுற நேர்வரை நீளம். மறுபுற நேர் வரை அகலம். இரண்டின் பெருக்கமாகப் பரப்பளவு கணிக்கப்படு கிறது. பரப்பு அல்லது சமதளங்களின் எல்லையற்ற பெருக்கம் கன தளம் அல்லது பிழம்பு. இதன் ஒரு தள நேர் வரைகனமாகவும், அதே தளத்தின் மற்றொரு நேர்வரை அகலமாகவும், இரண்டுக்கும் குறுக்கான தளத்தின் இரண்டுக்கும் குறுக்கான நேர்வரை உயரம் அல்லது ஆழம் அல்லது திட்பமாகக் கருதப்படுகின்றன. இம்மூன்றன் பெருக்கமே, அதாவது பரப்பளவுடன் மூன்றாம் அளவையைப் பெருக்கிய பெருக்கமே கன அளவை அல்லது பிழம்பளவையாகக் கணிக்கப்படுகிறது. நீளம், அகலம், நிமிர்வு (உயரம், ஆழம் அல்லது திட்பம்) ஆகிய மூவளவைகளும் இவ்வாறு நேர்வரையையே அடிப்படை அளவைக் கூறாகக் கொண்டுள்ளன. கணக்கியலில் புள்ளி கடந்த அளவை, அதாவது அளவுடைய அளவையாகவே நேர்வரையும் வட்டமும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றுள் ஓரளவை முனைப்புடைய கோல், ஈரளவை முனைப்புடைய நிலம் அல்லது பரப்பு, மூவளவை முனைப்புடைய பிழம்பு அல்லது வடிவுடைப் பொருள் ஆகியவற்றை அளக்கவல்ல அடிப்படை அளவை வட்டமல்ல, நேர்வரையே. ஏனெனில் அது நீளத்தை மட்டுமன்றி அகலத்தையும், மூன்றாம் அளவையாகிய நிமிர்வையும் அளக்கப் பயன்படுகிறது. அது மட்டுமன்று. நீளம் அகலம் பெருக்கி, அல்லது பரப்பின் அளவைச் சரிசமப் பரப்புக் கூறுகளாக்கி விடுகிறது. நீளம், அகலம் நிமிர்வு பெருக்குவதன் மூலம் பிழம்பளவைச் சரிசமப் பிழம்புக் கூறுகளாக்கி விடுகிறது. சரிசமப் பரப்புக் கூறுகளும், சரிசமப் பிழம்புக் கூறுகளும் பரப்பிலும் பிழம்பிலும் இடையீடில்லாத தொடர் பரப்பு, பிழம்புகளாய் அமைவதால், அப்பரப்பையோ பிழம்பையோ கணித்துணரவும் உதவுகின்றன. வட்டத்துக்கு இவ்வாய்ப்புகள், ஒழுங்குகள் ஒன்றும் கிடையாது. அது மூவளவைக்கு உறுப்பல்ல; மூவளவைக்குப் பயன்படுவதுமல்ல. நீளம், அகலம், நிமிர்வு என்ற மூவளவைக் கூறுகளை வட்டத்தில் நாம் காண முடியாது. ஆயினும் வட்டத்துக்குப் பரப்பு உண்டு. வட்டத்துக்கு வட்டம் உருண்டை. அதற்குப் பிழம் புரு, பிழம்பளவை உண்டு. இவை இரண்டும் நேர்வரையில் அடங்குபவையல்ல, நேர் வரையைக் கூறாகக் கொண்டவையல்ல. அவை புள்ளியைக் கூறாகக் கொண்டவை. நீளம், பரப்பு, பிழம்பு ஆகியவற்றுக் கெதிராக, வட்டத் தளத்தில் நாம் இணை துணைகாண வேண்டுமானால், புள்ளி, வட்டம், உருண்டை என்று கூற வேண்டும். ஆனால் இங்கே முதலது அளவற்றது. வட்டத்தை யூக்சிடின் இடக்கணக்கியல் ஆராயா மலில்லை, ஆராய்ந்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளில் கருத்துச் செலுத்தவில்லை. அதன் மூவளவையற்ற நிலையைக் கூடக் கவனிக்காமலே, அளவற்ற அளவையான புள்ளியை விட்டுவிட்டு, அதன் பரப்பளவிலும் பிழம்பளவிலும் கருத்துச் செலுத்தியுள்ளன. இங்கும் முரண்பாடு உண்டு. அது முரண்பாட்டைக் கணித்தது. முரண்பாட்டை விளக்க முயலவில்லை. நீள அகலப் பெருக்கம் பரப்பளவு. இது சமதளப் பரப்பளவு பற்றிய வாய்ப்பாடு. வட்டத்தின் பரப்பளவில் இடக்கணக்கியல் இவ்வாய்ப் பாட்டைப் பயன்படுத்தவில்லை. ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் கூறப்புகவில்லை. கண்ணை மூடிக்கொண்டு அதற்கு வேறொரு வாய்ப்பாடு வகுத்துரைத்துள்ளது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று இடை யிருட் காலத்தார் காரணம் விளக்காமலே நீதி வகுத்தது போல, யூக்சிட் சார்பான இடக்கணக்கியலார் காரணம் விளக்காமலே கட்டத்துக்கு ஒரு நீதி, வட்டத்துக்கு ஒரு நீதி வகுத்தனர். வட்டத்துக்கு நீளமாகவும் அகலமாகவும் கொள்ளத் தக்கது அதன் குறுக்களவு அல்லது அகலம் அல்லது விட்டமே. வட்டத்துக்கு விட்டமல்லாது சுற்றளவு ஒன்று உண்டு. கட்டத்துக்கு நான்கு பக்கங்களின் மொத்த நீளமே சுற்றளவாகும். வட்டம் சரிசம கட்டம் அல்லது சதுரம் போன்றது. சதுரத்தின் சுற்றளவு, நாற்பக்கங்களின் மொத்தம், அதாவது அதன் நீளம் அல்லது அகலத்தின் நான்கு மடங்கு ஆகும். வட்டத்துக்கு விட்டமே நீளம் அகலம் இரண்டுமாகலால், சதுரத்துடன் ஒப்பாக அதைக் கொண்டால் அதன் சுற்றளவு நான்கு விட்டம் ஆக அமைதல் வேண்டும். ஆனால் வட்டம் இத்தகைய சதுரத்தில் குறைந்தது. அதனுள் அடங்கியது. ஆகவே அதன் சுற்றளவு விட்டத்தின் நான்கு மடங்கில் குறைந்தே இருக்க முடியும். கூடிய மட்டும் நுட்பமாக அளந்து பார்த்ததில் இந்நீளம் விட்டத்தின் மூன்று மடங்குக்கு மேற்பட்டது, நான்கு மடங் குக்குக் கீழ்ப்பட்டது என்று தெரிய வந்தது. ஆனால் அதைத் திட்பமாகக் கணிக்க முடியாத நிலை பண்டை நாள் முதல் இற்றை நாள் வரை உள்ளது. குத்தாயமாக இத்தொடர்பை மூன்றுடன் ஏழில் ஒன்று என்று குறிக்கலாம். பதின்மானக் கீழ்வாய் (னுநஉiஅயட கசயஉவiடிn) முறையில் கணித்துப் பல அறிவியல் விடா முயற்சியாளர் அதனை ஆயிரக்கணக்கான பதின்மானக் கீழ்வாய் இடங்கள் வரை (னுநஉiஅயட யீடயஉநள) கணித்து நோக்கி யுள்ளனர். சுற்றளவில் அடங்கும் இவ்விட்டத்தின் மடங்கைக் கணிப்பு வாய்ப்புக்காக இடக்கணக்கியலார் வட்ட முரண் (வ.மு : மேலை மொழியில் `பை') என்று குறித்து, வாய்ப்பாடுகளில் அதனை அவ்வாறே பயன்படுத்தியுள்ளனர். சுற்றளவு காண இவ்விட்ட முரணின் அளவைக் குறியை (வ.மு.) ப் பயன்படுத்தினர். சுற்றளவு என்பது விட்டம் - வ.மு. பெருக்கம் (ஊசைஉரஅகநசநnஉந = சநகஉச டிசபைiயேட னயைஅநவநச) என்றனர். சுற்றளவு நாலு விட்டத்தில் குறைவு. விட்டத்தின் வ.மு. அல்லது குத்தாயமாக மூன்றுடன் ஏழில் ஒன்று. ஆதல் கண்டோம். பரப்பளவும் இதுபோல விட்டத்துடன் விட்டம் பெருக்கிய தொகையில் குறைதல் ஒருதலை. இக்குறைவு எவ்வளவு என்பதும் அளந்து ஆராயப்பட்டது. அது நாலில் வ.மு. எந்த வீதமோ அதே வீதத்தில் குறைவதாகக் காணப்பட்டது. எனவே வட்டத்தின் பரப்பளவு என்பது விட்டத்தின் விட்டப் பெருக்கத்தில் நாலில் வ.மு. பங்கு எனக் குறிக்கப்பட்டது. (ஹசநய டிக ய உசைஉடந = ன2கூகூ/4 = கூகூ ச2) வட்டத்தின் வட்டமாகிய உருண்டையின் பிழம் பளவு விட்டத்தின் கன அளவில் குறைந்ததாகவே இருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில் அது விட்டத்தின் நீள அகலமுள்ள கன சதுரத்துக்குள் அடங்குவதே. அது மட்டுமன்று. அது வட்டத்தின் விட்ட உயரமாகிய உருளை (ஊலடiனேநச) யினும் சிறிது. அதிலும்கூட அடங்குவதே. உருளையின் பரப்பளவு வட்டத்தின் பரப்புடன் விட்டத்தின் பெருக்கம் (கூகூ ச2ன=ன2கூகூ/4ன) ஆகும். கணிப்பு மீது உருண்டையின் பிழம்பளவு வட்டத்தின் பரப்புடன் விட்டத்தின் பெருக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு (ன2 கூகூ/4 3/2 ன = 4கூகூ/3 ச3) என்று காணப்பட்டது. இவ்வாய்ப்பாடுகள் கணிப்புக்கு வாய்ப்பானவை. அளவைக்குப் பெரிதும் திட்பமானவை. ஆனால் போதிய காரண விளக்கமற்ற வட்ட முரண் குறியளவும் மூன்றில் இரண்டு போன்ற காட்சியுணர்வளவும் கொண்டே கணிப்பு இயங்கிற்று. வட்டம், உருண்டை ஆகியவற்றின் அளவைகள் மட்டு மன்றி, முக்கோணம், உருளை, கூம்பு (ஊடிநே), மோடு (ஞலசயஅனை), பட்டை (ஞசளைஅ) ஆகியவற்றின் அளவைகளையும் ஆராய வடிவியல் (ஆநளேரசயவiடிn) என்ற தனிக்கணிப்புத் துறை கூட வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கும் வாய்ப்பாட்டு மூலமான குருட்டள வையன்றி அளவைத் தொடர்புகளின் விளக்கத்தில் கருத்துச் செலுத்தப் படவில்லை. இவை வருங்கால இயல் நூலுக்குரிய செய்திகளே யாகும். இயல்நூல் பொதுவாக எதையும் கூறுபடுத்தி ஆராய்வதி லேயே கண்ணும் கருத்துமாயுள்ளது. இயற்கையை ஒரே மொத்த மாகத் தொகுத்தாராய்வது அதன் நோக்குக்கு அப்பாற்பட்டது. அத்துடன் அது பெரிதும்; என்ன, எது, எப்படி என்ற வினாக்களையே எழுப்பி விளக்கம் நாடுவது. ஏன் என்ற வினா எழுப்புவதில்லை. இடக்கணக்கியல், வடிவியல் ஆகியவற்றிலோ அது எப்படி என்ற கேள்வியைக்கூட எழுப்பவில்லை. இயல்நூல் எழுப்பாத வினாக்களை அறிஞர் ஐன்ஸ்டீன் நுண்ணாய்வு எழுப்பியுள்ளது. அதனைப் பின்பற்றி அவர் தோற்றுவித்துள்ள புதிய ஊழி அதன் விளக்கத்திலும் முன்னேறத் தொடங்கியுள்ளது. நிலவுலகின் எல்லாப் பொருள்களுக்குமுரிய கணிப்பின் மூல அளவையாக நேர்வரையையே இயல்நூல் குறிக் கொண் டுள்ளது. அதனடிப்படையிலேயே நீட்டலளவையும் பரப்பளவையும் பிழம்பளவையும் கணிக்கின்றது. ஆயினும் செயலளவில் நம் நிலவுலகைப் பொறுத்தவரை நேர்வரை என்பது 25,000 கல் சுற்றளவுடைய ஒரு பாரிய வட்டத்தின் கூறு, அதாவது வளைவிற் கூறு (யசஉ) மட்டுமே. இவ் வட்டத்தின் பகுதியையே நாம் நேர்வரை என்கிறோம். நிலவுலகளவில் இடக்கணக்கியல் நேர்வரை என்று கருது வதும் இதனையேயன்றி வேறன்று. இடக்கணக்கியல் மூல அளவையாக வட்டத்தையோ, வட்டத்தின் கூறினையோ கருதியதில்லை. அப்படியானால் இடக்கணக்கியலடிப்படையில் நேர்வரைக்கும் வட்டத்துக்கும் உரிய தொடர்பு யாது? வேற்றுமை யாது? நேர்வரை வட்டப்பகுதி, முழு வட்டமன்று. அத்துடன் வட்டம் சிறிது. நேர்வரையோ மிகப் பெரிய வட்டத்தின் பகுதி, நிலவுலகளாவிய மாபெரு வட்டப்பகுதி. இம் முடிவுக்குப் பின் ஐன்ஸ்டீன் ஒரு புதிய வினா எழுப்பினார். எவ்வளவு பெரிய வட்டமானாலும், அத்தகைய வட்டப் பகுதியான நேர்வரையை யூக்ஸிட் மனங்கொண்டிருக்க முடியாது. அவர் உண்மையான நேர்வரையையே கருதியிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த `நேர்வரை'யின் கருத்தடிப் படையாகத்தான் நாம் உலகம் உருண்டை என்கிறோம். யூக்ஸிட் கருதியது போன்ற உண்மை நேர்வரை நிலவுலகில் இருக்க முடியாதானாலும், நிலவுலகத்துக்கு வெளியே, இயற்கையில் இருக்க முடியாதா? இதுவே ஐன்ஸ்டீனின் புதிய வினா. ஒளிக்கதிர் நேர்வரையாகவே செல்கிறது என்று 17-ஆம் நூற்றாண்டுக்குரிய இயங்கியலறிஞர் நியூட்டன் வகுத்திருந்தார். நிலவுலகில் நேர்வரையெல்லாம் மாபெரு வட்டப் பகுதிகளேயானதால், அவ்வெல்லைக்குள் கதிரவனொளிக் கதிரும் வட்டாகாரமாகத்தான் செல்ல வேண்டும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். அது சரி என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நிலவுல கின் எல்லைக்குள் நேர்வரை இதுவன்றி வேறில்லை. ஆனால் நிலவுலகை அணுகுமுன் அகல வெளியில் ஒளிக்கதிர்கள் உண்மை நேர்வரையாகத்தானே செல்லக் கூடும்? ஆம் என்ற விடை எளிதில் பிறந்தது. செயல் தேர்வுகளும் இதனை வலியுறுத்தின. யூக்ஸிட் கண்ட உண்மை நேர்வரை இயற்கையில் ஒளி செல்லும் நெறிதான். அதைக் கருத்தில் கொண்டே நிலவுலகு சாரா உண்மை நேர்வரையை அவர் கருத்தில் கொள்ள முடிந்ததென்று ஐன்ஸ்டீன் இப்போது கருதினார். `ஒளி இயற்கையின் உச்ச வேக இயக்கம். அது மட்டு மன்று, அது ஒன்றே நிலவுலகை வந்தெட்டும் நேர்வரை. அதை நோக்கியே உலகம் உருண்டை என்பதை நாம் உளங் கொள்ள முடிகிறது. தட்டையல்ல என்று காண்கிறோம்' - இவ்வாறு ஐன்ஸ்டீன் வாதித்தார். ஆனால் இவ்வாதம் நெடிது நிற்கவில்லை. ஐன்ஸ்டீனே அதனைத் தகர்த்தெறிய நேர்ந்தது. நிலவுலகம் போல உருண்டையான கோளங்கள் எண்ணற்ற வை. அவற்றினருகிலெல்லாம் கதிரவன் ஒளிக்கதிரும் விண்மீன் களின் ஒளிக்கதிரும் வட்டாகாரமாக வளைய வேண்டும் என்று அவர் உய்த்துணர்ந்தார். இக்கருத்தை வெளியிட்டார். இது சரியா, தவறா என்பதைக் கண்டுணர, அவர் விண்மீன் ஒளி கதிரவனைக் கடந்து வரும் வேளையில் அதன் பாதையைக் கணிக்க முற்பட்டார். கதிரவன் ஒளி வட்டத்தருகே விண்மீன் ஒளிக்திர்கள் சாய்ந்து வளைந்தே வந்தன. இதனைப் பல வானூலார் கணிப்புக்கள் மெய்ப்பித்தன. நிலவுலகருகே எல்லாம் வட்டாகாரமாவது போல் வான கோளங்களருகேயும் யாவும் வட்டாகாரமாகின்றன என்பது தெளிவாயிற்று. இது மட்டுமன்று. இயற்கையே வட்டாகாரமானது. எண்ணற்ற கோளங்களின் வட்டங்களெல்லாம் இணைந்த மாபெரு நிலாவட்டமாக இயற்கையில் யாவும் செல்கின்றன என்று ஐன்ஸ்டீன் கண்டு விளக்கினார். நிலவுலகில் நேர்வரையெல்லாம் ஒரு மாபெரும் வட்டப் பகுதியே. அதுபோலவே கதிரவன் மண்டலத்திலும் நேர்வரைகள் யாவும் ஒரு மாபெரு வட்டப் பகுதியே. ஆனால் நிலவுலக நேர்வரை வட்டத்தைவிட இது மிகமிகப் பெரிது. முன்னது 7,927 கல் விட்ட அளவுடைய வட்டமென்றால், பின்னது 400 கோடி கல் விட்ட அளவுடைய வட்டம் ஆகும். கதிரவன் மண்டலத்துக்கு வெளியே அண்டத்தில் அண்டத்தின் நேர்வரை அதன் பேரெல்லையாகிய பெரு வட்டப்பகுதி. இதுபோலவே பேரண்டத்திலும் இயற்iயிலும் அவை பேரண்ட எல்லை, இயற்கையெல்லை அளாவிய பெருவட்டப் பகுதிகள் ஆகவே இயலமுடியும். ஐன்ஸ்டீன் தந்துள்ள இவ்விளக்கம் அறிவுக்கு ஒரு புது மலர்ச்சி தருகிறது. யூக்ஸிட் கருத்துக்களுக்கு ஒருபுதுப் பொருள் விளக்கம் தருகிறது. இவை மட்டுமல்ல. புள்ளி, நேர்வரை, வட்டம் என்ற யூக்ஸிடின் மூன்று தளங்களின் தொடர்புகளை விளக்குகிறது. வட்ட முரண் என்ற குறியளவு எப்படி உண்டா கிறது என்பதற்கான விளக்கத்தின் திசையையும் இது காட்டுகிறது. எல்லையற்ற என்ற தொடர் அதன் சொற்கள் குறிப்பது போல முடிவில்லாத நிலை என்று பொருள்படுவதன்று. மனித மொழியின் ஆற்றல் கடந்த ஒரு கருத்துப் படிவம் அது. கணிக்க முடியாத, எண்ண முடியாத அளவை அது குறிக்கிறது. நம் நிலவுலக வாழ்விலேயே நாம் இத்தகைய இரண்டு எல்லைகளைக் காண்கிறோம். ஒன்று அணு. அது நம் சிற்றெல்லை. ஆகவே அதை நாம் `எல்லையற்றது' என்று சொல் வதில்லை. கண் காணாதது என்று மட்டுமே குறிக்கிறோம். இதற்கெதிரான எல்லையற்ற நிலை நம் நிலவுலகின் வட்டாகார எல்லையே. எல்லையற்ற தாய் அணு. எல்லையற்ற தந்தை நிலவுலகம். எல்லையுடைய நிலவுலகச் சேய்களாகிய நாம் இவற்றினிடையே வாழ்கிறோம். வட்டம், நேர்வரை ஆகியவற்றின் தொடக்கநிலை அணுப் போன்ற புள்ளி என்று மேலே கண்டோம். இரண்டின் பேரெல்லையே நிலவுலக வட்டம். நிலவுலகின் இந்த இரண்டு `எல்லையற்ற' எல்லைகளிடை யே தான் வட்டம், நேர்வரை என்ற வேறுபாடு உண்டு. சிற்றெல்லை வட்டமாகிய புள்ளிக்கும் பேரெல்லை வட்டமாகிய முழு நேர்வரைக்கும் இடைப்பட்ட வட்டங்கள் - புள்ளியில் பெரிய, நிலவுலகில் சிறிய வட்டங்கள் நம்மால் வட்டங்களாகக் கருதப்படுகின்றன. பெருவட்ட எல்லையின் பகுதிகள் நேர்வரைகளாக இயல்கின்றன. நிலவுலக எல்லை கடந்து ஞாயிற்று மண்டலத்தில் இதுபோல, நிலவுலக வட்டம் அணு, புள்ளி. ஞாயிற்று மண்டல வட்டம் பெருவட்டம். இரண்டுக்கும் இடைப்பட்ட வட்டங்களே வட்டங்கள். பெருவட்டப் பகுதி நேர்வரை. இயற்கையெல்லையிலும் இவ்வாறே இயற்கையின் முழுப் பெருவட்டப் பகுதி நேர்வரை, அதில் குறைந்த வட்டங்களே வட்டங்கள். யூக்ஸிட் கருதிய வட்டங்கள், நேர்வரைகளின் வேறுபாடு முற்றிலும் அவர் அறியா மாயையல்ல. அறியாமைக் கால அலையின் அறிவொளியாக அவர் கண்ட முழு மெய்ம்மைக் கூறே என்பது இதனால் தெளிவாயிற்று. அவர் கருத்தில் கொண்ட வட்டம் வட்டமே. அதற்கு அவர் வகுத்த இலக்கணங்களும் அதற்கு முற்றிலும் உரியனவே. ஆனால் நேர்வரை வகையில் அவர் கருத்தில் கொண்டது வேறு. அவர் பொருளுடன் சார்புபடுத்தித் தாளில் வரைந்தது வேறு. அவர் கருத்தில் கொண்ட நேர்வரை நிலவுலக நேர்வரை யன்று, ஞாயிற்று மண்டல நேர்வரையன்று, இயற்கையின் நேர்வரையாகிய அதன் மாபெரு வட்டப் பகுதியே. ஆனால் அவர் தாளில் அதனை வரைந்தபோது அது நிலவுலக நேர்வரை, அதாவது நிலவுலகப் பெரு வட்டப் பகுதியாயிற்று. தாளுக்கும், கருத்துக்கும் இடையில் இவ்வாறு வேற்றுமை இருந்தாலும், கணிப்பை அது பாதிக்கவில்லை. ஏனெனில் இயற்கைப் பெருவட்டத்துக்கும் நிலவுலகப் பெரு வட்டத்துக்கும் உள்ள வேறுபாடு எல்லையற்ற நிலைக்கும் அணுவுக்கும் உள்ள வேறுபாட்டைவிடப் பன்மடங்கு பெரிது - நிலவுலகுக்கும் அணுவுக்கும் உள்ள வேறுபாட்டைவிடப் பெரிது. நிலவுலகை மையமாகக் கொண்ட காலத்து வானூலாரின் வானிலைக் கணிப்புக்கள், கதிரவன் மையக் கோட்பாடு வந்த பின்னும் எப்படி மாறவில்லையோ, அதுபோலவே, யூக்ஸிட் அறிவார்ந்த கணிப்புக்களின் அடிப்படையை ஐன்ஸ்டீன் ஊழி மாற்றிய பின்னும் அவை நிலையான மாறா மெய்ம்மை களாகவே உள்ளன. இயற்கையின் பல செய்திகளை - ஏன் என்ற வினா இதற்கு முன் எழுப்பப்படாமலே ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திகளில் சிலபலவற்றையும் இப் புது மெய்ம்மைகள் விளக்குகின்றன. துணைக்கோளான திங்கள் நிலவுலகத்தைச் சுற்றி வட்டாகாரமாகச் செல்வானேன்? நிலவுலகைச் சார்ந்த பொருள்களுக்கு வட்டாகாரம் தான் நேர்வரை. கோள்கள் கதிரவனைச் சுற்றி நீள் வட்டாகாரமாகச் செல்வது ஏன்? ஞாயிற்று மண்டலத்தில் நீள்வட்டாகாரப் போக்குத் தான் நேர்வரைப் போக்கு. கதிரவன், விண்மீன்கள் வட்டாகாரமாகச் செல்வானேன்? இயற்கையிலேயே வட்டாகாரப் போக்குத்தான் நேர் போக்கு. இயற்கையின் சுழற்சியை இன்னொரு கோணத்திலிருந்து காணவும் பறக்கும் குதிரை மரபை நாம் பயன்படுத்த முடியும். யூக்ஸிடின் நேர்வரை நிலவுலகமீதிருந்து கணிக்கப் பட்டா லும், கருத்தளவில் அது நிலவுலக நேர்வரையன்று - ஞாயிற்று மண்டல, அண்ட, பேரண்ட நேர்வரைகள் கூட அல்ல, இயற்கை யின் நேர்வரையே என்று கருதினார் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் கடந்துகூட யூக்ஸிட் கருத்தளவை சென்றிருக்கலாமோ என்று நாம் கருத இடமில்லா மலில்லை. யூக்ஸிட் கருத்தளவான நேர்வரை இயற்கையின் பெரு வட்டப் பகுதியேயானால், அவ்வியற்கையின் பெரு வட்டத்தை நாம் பெருவட்டம் என்று கூறுவது எவ்வாறு? கருத்தளவான நேர்வரை இயற்கை கடந்த நேர் வரையாயிருந்தாலன்றி, இயற்கையின் உருவப் பெருவட்ட மென நாம் குறித்தல் இயலாது. இயற்கையின் இயக்க மாறுபாடுகளுக்கிசைய மாறுபட்டு, தான் வேறு மாறுபாடு இல்லாதிருக்கும் இயற்கையின் பெரும் பகுதி ஒன்று இருத்தல் கூடும் என்று ஐன்ஸ்டீனே கருதியுள்ளார். ஐன்ஸ்டீன் கருதிய இயற்கையின் ஓர் இயங்காப் பகுதியி லோ அல்லது இயங்கும் பகுதியின் இடம் பெயரா மையத்திலோ ஒருவர் நின்றுகொண்டு, இயற்கையின் இயக்கங்களையெல்லாம் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் காணும் காட்சி கிட்டத்தட்டக் காட்சியாளர் காணும் பறக்கும் குதிரைக் காட்சியேயாகும். பறக்கும் குதிரையின் சுழற்சியும் குதியாட்டமும் உலாவுருவின் ஓட்டமும் பார்ப்ப வருக்கு ஒரே இயக்கமாகத் தோற்றுவது போல, எல்லாச் சுழல் வட்டங்களும் சுழற்சியும் ஒரே சுழற்சியாகத் தோற்றும். அச்சுழற்சிப் பாதையை நேரடியாகப் பறக்கும் குதிரை காட்டுவதைவிட, நிலத்தின்மீது அதனுடன் ஓடும் அதன் நிழல் தெளிவாகக் காட்டும். குதிரையின் ஒவ்வொரு சுழற்சியும் நிலத்தில் காணப்படும் நிழலில் ஒரு சுழியாகவும் அதன் ஓட்டம் சுழித்துக் கொண்டே ஓடும் இத்தகைய ஓட்டமாகவும் காட்சி தரும். இதுபோல, இயற்கையின் அகல் வெளியில் சுழலும் ஒவ்வொரு கோளத்தின் தற்சுழற்சியும் ஒரு சுழியாகவும் வட்டாகாரச் சுழற்சி சுழித்துக் கொண்டே செல்லும் ஒரு வட்டமாகவும் தோற்றமளிக்கும். தமிழின் இரு சுழி னகரம் அல்லது முச்சுழி ணகரத்தில் சுழிகளை இரண்டுடன் அல்லது மூன்றுடன் நிறுத்தாமல் நீட்டித்துக்கொண்டே சென்றால் எப்படி இருக்குமோ அவ்வாறு இச்சுழித் தொடர் அமையும் என்னலாம். திங்கள் போன்ற துணைக்கோளின் சுழற்சி இவ்வாறு சுழித்துச் செல்லும் ஒரு வட்ட வளையம். ஆனால் இந்தச் சுழி வளையமே நிலவுலகம் போன்ற கோளுடன் சுழல்வதால், கோளின் பாதை கோளின் தற்சுற்றில் சுழி வளையங்கள் அடங்கிய சுழிப்பாய், அதன் வட்டாகாரச் சுழற்சியில் இவ்வாறு சுழித்துக் கொண்டே செல்லும் வளையமாய் இயங்கும். இவ்வாறு இயற்கையின் சுழற்சியில் சுழற்சி சுழித்தோடும் வட்டங்கள், அதைப் பின்னும் சுழியாகக் கொண்டு சுழித்தோடும் வட்டங்கள் என எல்லையற்ற சுழி வட்ட மடங்கிய சுழி வட்டங்களாக இயங்கும். ஒவ்வொரு சுழி வட்டமும் இயற்கையின் இயக்கத்தில் ஓர் அலை. சுழி அலைத் தொடக்கம்; வட்டம் அதன் ஒடுக்கம். அலையின் இரு கோடிகளும் அணு, நிலவுலகம் போன்ற இரண்டு எல்லையற்ற நிலைக்கோடிகள். அவ்வவ் அலையில் சுழி புள்ளி நிலையையும், வட்டம் பெருவட்ட நிலையாகிய நேர்வரை நிலையையும், இடைப்பட்ட யாவும் சிறுவட்ட நிலைகளையும் குறிக்கின்றன. ஐன்ஸ்டீன் கண்ட மெய்ம்மைகள் யூக்ஸிட் காணாதன. ஆயினும் யூக்ஸிட் கணக்கியல் ஐன்ஸ்டீன் மெய்ம்மைகளையும் அது கடந்த மெய்ம்மைகளையும் எதிர் நோக்குகின்றன என்று கண்டோம். அது போலவே அவரது இடக்கணக்கியல் கணிப் பளவையாக மட்டும் கண்ட வட்டமுரண் வட்டத்தின் தளம். அதாவது நிலவுலகின் எல்லைக்குட்பட்ட தளம். அதன் எல்லை யற்ற தளம் அல்லது நிலவுலகப் பெரு வட்டம் ஆகியவற்றின் தொடர்பையே குறிப்பதாகலாம். அல்லது நிலவுலக வட்டம், இயற்கை வட்டம் ஆகியவற்றின் தொடர்புறவு குறிப்பதாகலாம். இயற்கையின் இயங்கும் பகுதி வட்டத்தையும், இயங்காப் பகுதி கட்டத்தையும் உண்மை வரையையும் குறிப்பனவாகக் கூடுமானால், இவற்றின் தொடர்பே வட்டமுரண் ஆகலாம். நீளம், அகலம், நிமிர்வு ஆகிய மூன்றளவைகள் கடந்த நான்காம் அளவையாக ஐன்ஸ்டீன் `காலத்'தைக் குறிப்பிடுகிறார். இதுபற்றி மேலே விளக்க இருக்கிறோம். வட்டத்துக்கும் கட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு, பின்னது நான்காம் அளவையை உட் கொண்டதாக இருக்கலாம். இயற்கையின் நேர்வரைகள் எல்லாமே பெருவட்டக் கூறுகள் என்ற ஐன்ஸ்டீன் புத்தறிவு இடக்கணக்கியலை மட்டு மன்றி இயல் நூலின் எல்லாத் துறைகளையுமே புரட்சிகரமாக மாற்றியுள்ளன; மாற்றி வருகின்றன. வானநூல் இப்புது மெய்ம்மையை மேற்கொள்ளு முன்பே தற்செயலாக அதன் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இது அறியாமையலையின் உள்ளீடான அறிவலையின் செயலே யாகும். வானநூல் பெரிதும் நேர் காட்சியை அடிப்படையாகக் கொண்டது. அதன் கணிப்புக்களுக்குக் காண்பவன் காட்சித் தளமும் அக்காட்சி மாயமுமே அடிப்படையாகும். தொலை நோக்காடி முதலிய கருவிகள் கொண்டு காணும்போதும் இந்நிலை மாறவில்லை. கணிப்புக்களும் காரணகாரிய ஆராய்ச் சியும் மட்டுமே நிலவுலகம் உருண்டை. அது இயற்கையின் மையமன்று என்பதை மெய்ப்பித்துள்ளது. காண்பவனை மையமாகக் கொண்ட காட்சி எல்லை ஒரு பெரிய அரைக்கோளமாகவே தோற்றமளிக்கிறது. அதன் மோடு அரைவட்டமாகிய ஒரு நீல வட்டம். நிலப் பரப்பு காண்பவர் வான கோளங்கள் அத்தனையையும் திரையில் காண்பதுபோல அதன் மூலமே காண வேண்டும். அத்துடன் அரைக்கோளமாகிய இம்மோடு அடிக்கடி மாறுவது. ஆகவே அதை ஒரு சுழலும் முழுக் கோளமாகக் கொண்டே வானநூல் கோளப்பாதைகளையும் தொலைகளையும் கணிக்கிறது. கோளத்தில் உள்ள தொலைகள், பாதைகள் யாவும் கோளசார வடிவின்படிதான் கணிக்கப்பட முடியும். ஆகவே இயல்பாக அதன் நேர்வரைகள் வட்டப் பகுதிகளாகவும், கோணங்கள், முக்கோணங்கள், கட்டங்கள் யாவும் நேர் வரைகளுக்குப் பதில் வட்டப்பகுதி அல்லது வில்வரைகள் கொண்ட உருக்களாகவும் கணிக்கப்பட வேண்டி வந்தது. இது யூக்ஸிட் சார்பான இடக்கணக்கியல், வடிவியலுக்கு மாறான புதிய இடக் கணக்கியல், வடிவியல் உருவாக வழி செய்தன. கோள இடக்கணக்கியல் (ளுயீhநசiஉயட ழுநடிஅநவசல) கோளவடிவியல் (ளுயீhநசiஉயட ஆநளேரசயட) என இவை வழங்குகின்றன. மெய்யறிவுக் காலத்துக்கு முற்பட்ட அறியாமை யலையின் அறிவுக் கூறாக வளர்ந்துவந்த இப்போக்கை ஐன்ஸ்டீனின் புத்துணர்வுக்குரிய புது மெய்ம்மை வற்புறுத்திற்று. இடக்கணக்கியலின் மூவளவைகளுக்கு நீட்டலளவை அல்லது நேர்வரையே அடிப்படை என்பது கண்டோம். ஆனால் வாழ்க்கைத் துறையில் எல்லா அளவைகளுமே ஒன்றே ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. அவற்றுக்கும் இறுதி அடிப்படை அளவுகோல் மூவளவையாகவும் நேர்வரையாகவுமே வந்தமை கின்றன. எடை அளக்கும் நிறைகோலில் படிகள் எடைகள் குறிக்கின்றன. இவை ஒன்றற்கொன்று பெருக்கமான ஒரே உலோகத்தின் பிழம்புகள். அவற்றின் பிழம்பளவே எடையின் திட்பம் வரையறுக்க உதவுகின்றன. சில நிறை கோல்களில் எடையின் அளவை வரைகள் காட்டுகின்றன. இங்கே நீட்டலள வையே நேராகப் பயன்படுகிறது. வெப்பமானி (கூhநசஅடிஅநவநச) பாதரசம் போன்ற ஒரே பொருளின் பலபடி வெப்பங்களைச் சரிசம நீளங்களாகவே குறிக்கின்றன. மணிப்பொறிகள் நேரத்தை விரைந்தும் காட்டலாம்; தாழ்த்தும் காட்டலாம். மணிப்பொறியை மணிப் பொறியுதவி யாலேயே திட்பமாக்குகிறோம். ஆனால் திட்ப அளவையுடைய மணிப்பொறியில் ஊசல் குண்டின் நீளம், எடையே நேரம் வரையறுக்க உதவுகிறது. இந்த அளவைகள் யாவுமே - நீட்டலளவைக் கோல் கூட - உண்மையில் மாறுபடும் இயல்புடையவை. பொருள்கள் யாவும் - சிறப்பாக உலோகங்கள் வெப்ப நிலைக்கேற்றபடி ஒரு சிறிது விரிவுற்றுச் சுருங்குகின்றன. இது நீட்டலளவு கோலையும் பாதிக்கிறது. தேய்மானம், வளைவு ஆகியவையும் அளவையின் திட்பத்துக்கு ஊறு தருகின்றன. இவற்றால் பாதிக்கப்படாத ஓர் இயற்கை அளவை இல்லாமல், அளவைகள் திடப்பட முடியாது. இது மட்டுமன்று. பொருள்களின் உருவையும் வடிவையும் உறுதி செய்வது அவற்றின் திண்மையும் (ளுடிடனைநேளள) செறிவுமே (குசைஅநேளள). அதே சமயம் பொருள்களின் திண்மை நிலை, நீர்மம் (டுiளூரனைவைல), வளிமம் (ழுயளநடிரளநேளள) ஆகியவை நிலவுலகப் பரப்பில் இடத்துக்கு இடம் சிறிது வேறுபட்ட நிலையுடைய வெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்ததே யாகும். நிலவுலக வரலாற்றின் பேரூழிகளில் அவை பெருமாறுதலுக் காளாவன. நம் நேர் அளவைகளுக்கெல்லாம் அடி நிலமான நிலப் பரப்பு அடியில் கொந்தளிக்கும் கொதி குழம்பின் மீது மிதக்கும் ஆறிய குழம்பேயாகும். இந்நிலையில் நிலவுலக வெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவற்றுக்கு ஆளாகாமல் நிலையாயுள்ள நம் ஒரே அளவை மையம் கதிரவன் ஒளிதான் என்பதை ஐன்ஸ்டீன் காட்டி யுள்ளார். நிலவுலகின் தற்சுழற்சி யடிப்படையாக, அவ் வொளி யின் தோற்ற மறைவுகளே இராப் பகலாகிய நாட் கூற்றினையும், வட்டாகாரச் சுழற்சி யடிப்படையாக, அதன் பருவ மாறுதல் களே ஆண்டையும் நமக்குத் தருகின்றன. நிலவுலகின் ஒரே இடத்தில் இவை திட்பமான கால அளவை வரையறுக்கப் பயன்படுவன. நிலம் எங்குக் கிடக்கிறது என்று காண நில அளவை மட்டும் பயன்படாது. ஏதேனும் ஓர் எல்லைக்கு நிலையான குறி வேண்டும். எல்லைக்கல் அத்தகைய குறி ஆகின்றது. ஆனால் ஒரு தடவை எல்லைக்கல் பெயர்க்கப்பட்டு விட்டால், குறி பயனில் குறியாய்ப் போய்விடும். நிலவுலகோடு பிணிக்கப்பட்ட மலை போன்ற குறியீடே நிலையான குறியீடாயமைய முடியும். மாந்த வாழ்வுக்கு நிலவுலகத்தில் மலையைவிடச் சிறந்த மாறாத குறியளவையாகக் கதிரவனொளி பயன்படுகிறது. நேர அளவைக்கு மட்டுமன்றி, எல்லா அளவைகளுக்குமே மூலம் அது என்று ஐன்ஸ்டீன் காட்டியுள்ளார். பொருள்களின் மூவளவையில் ஒரே பிழம்பளவையுள்ள பொருள்களில் நீளம் குறைந்தால் அதை அகலம் அல்லது உயரம் கொண்டோ, அதுபோல அகலம் அல்லது உயரம் குறைந்தால் நீளம் கொண்டோ, ஏதேனும் இரண்டு குறைந்தால் அதை மூன்றாம் அளவை கொண்டோ ஈடு செய்து சரி செய்ய முடியும். மூவளவைகள் இடம் சார்ந்தவை. இத்துடன் காலத்தின் உறழ்வே வேகம். அது கால இடத் தொடர்பு காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைக்குள் வேகம் குறைந்தால் காலம் நீளும்; வேகம் கூடினால் காலம் குறையும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வேகம் குறைந்தால் இடம் குறையும்; வேகம் கூடினால் இடம் கூடும். ஆற்றல் உண்டுபண்ணாத விசைப் பொறிகள் காலத்தை இடமாகவும், இடத்தைக் காலமாகவும் மாற்றுவதன் மூலமே ஆற்றல் உண்டுபண்ணுவதாகத் தோன்றுகின்றன. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுவது போலவே, இம் மூன்றையும் காலமாகவும் மாற்றமுடிவதால், அது மூன்றளவையுடனொத்த நான்காம் அளவையே என்று ஐன்ஸ்டீன் அறிவித்துள்ளார். நாம் வாழும் உலகம் மூவளவை உலகமல்ல, நான்களவை உலகம் என்பது அவர் முடிவு. இடத்தில் வாழும் நாம் இடத்தை முழுமையாக உணர முடியாமல் அதன் ஒரு சிறு பகுதியை உணர்வது போல, காலத்தில் வாழும் நாம் அதனை முழுமையாகக் காணாமல், அதன் ஒரு பகுதியாகிய நிகழ்காலம், அடுத்தணிமையுடைய இறந்த, எதிர்காலம் ஆகியவற்றையே உணர்கிறோம். உயிர் என்றால் என்ன? அது தனிப் பொருளா? உயிரில்லாப் பொருளிலிருந்து அது எவ்வாறு வேறுபடு கிறது? இயல்நூல் காணாத, பெரிதும் கருதாத கேள்விகள் இவை. ஆனால் உயிரியக்கமுடைய உடலை அவர்கள் நன்கு கூறுபடுத்தி ஆராய்ந்துள்ளனர். உயிரியக்கமுடைய உயிர்ப் பொருளின் ஆக்கம்கூடக் கண்டுள்ளனர். அதுவே கரியம் (ஊயசbடிn), நீரகம் (ழலனசடிபநn), உயிரகம் (டீஒலபநn) கலவையான கரிய நீரகிகள் (ஊயசbடிhலனசயவநள) அதனை ஆக்கவும், அது போன்ற முட்டை, தொடக்க உயிரினங்களின் உடல் கூறு ஆக்கவும் அரிது முயன்றுள்ளனர், முயன்று வருகின்றனர். இதில் அவர்கள் அடைந்த வெற்றி பெரிது. தோல்வியும் குறிப்பிடத்தக்கது. பொருளைக் கிட்டத்தட்ட உயிர்ப் பொருளாகவே ஆக்கினர். ஆனால் உயிரியக்கம் தான் இல்லை. ஆக்கிய கரிய நீரகி உயிர்ப் பொருளாகவில்லை. ஆக்கிய முட்டை குஞ்சு பொறிக்கவில்லை. கரிய நீரகி உயிர்மூலப் பொருள் மட்டுமல்ல, உயிர்ப் பொருள் (டுiஎiபே டிச டிசபயniஉ அயவவநச) அது உயிரியக்கத் திடையேதான் ஆக்கப்படுவது (ஞசடினரஉநன டிசபயniஉயடடல) என்று கூறியமைந்துள்ளனர். உயிரியக்க மென்றால் என்ன? அது ஏன் உயிருக்குப் புறம்பாக இயலவில்லை. இயல்நூல் இவ்வினா எழுப்பாமலில்லை. ஆனால் ஊக விடைகூடக் காணவில்லை. உயிர் உள்வளர்ச்சி, பொருளில் இயங்கும் இயற்கை யாற்றலின் செயல். அது மூவளவைப்பட்ட வளர்ச்சியன்று. நான்காம் அளவாகிய காலத்தின் இயக்கம் விளைக்கும் விளைவு. இயற்கையாற்றலுடன் நாலளவை யடிப்படையில் சரிசம செயல் எதிர்செயல் ஆற்றலும் உடையது உயிர். இச்சரிசம நிலையும் சரிசம செயல் எதிர் செயல் ஆற்றலும் இழந்த அன்றே அது பொன்றிவிடுவது. ஆனால் இந்நிலையடையு முன் அது இயற்கையின் சூழலில் அவ்வாற்றலுடைய உயிர்களை ஆக்கி விடுவது. ஆகவே இயற்கையின் நாலளவை ஆற்றலுடன் சரிசம நிலையுடைய ஓர் இயற்கைக்கூறு அமைத்தாலல்லாமல் உயிரை உண்டு பண்ண முடியாது. ஐன்ஸ்டீன் மெய்யறிவுப் புரட்சி இங்ஙனம் அறிவின் குறைபாடும், அறிவின் அடிப்படையாகிய அறியாமையில் மறைந்துகிடக்கும் அறிவுப் புதையலும் காட்டி அறிய வேண்டும் அறிவு நோக்கி நம்மைச் செலுத்துகிறது. இயலுலகில் அறிவுப் புரட்சியெழுப்பிய இவ் ஐன்ஸ்டீன் வழி நின்று, வாழ்வின் இயல்புகளையும், அதில் ஏற்பட்டுவரும் புரட்சிகளையும், மெய்யறிவூழி முதல்வரான வள்ளுவர் சுட்டிக் காட்டிய புதுவாழ்வின் முழு நலன் பற்றியும் ஆராய்வோம். 6. உயிரும் உயிர்முதலும் கோழி முந்தியதா, முட்டை முந்தியதா? மரம் முந்தியதா, விதை முந்தியதா? பழம்புதிர் வினாக்கள் இவை. கோழிக்கு முட்டைதான் முந்தியது, மரத்துக்கு விதைதான் முந்தியது என்று கூறத் தோன்றும். குழந்தைகள் அவ்வாறே கூறுவதுண்டு. ஒரு தலை முறையின் எல்லைக்குள் இவ்விடை சரியானதே என்பதிலும் ஐயமில்லை. ஆனால் முட்டை எதிலிருந்து வந்தது, விதை எதிலிருந்து பிறந்தது என்ற கேள்விகள் அக்குழந்தைகளையே கட்டாயம் திணறவைக்கும். உலகின் சுழற்சி போன்ற சுழற்சிகள் இவை. வட்டத்தில் எது தொடக்கம், எது முடிவு என்று கூற முடியாது. அத்துடன் சுற்றுபவர் எங்கே முதலில் தொடங்கினாலும், ஒரு சுற்றுடன் தொடக்கத்தை இறுதியாக்கி, அதிலேயே அடுத்த சுற்றுத் தொடங்கி இடை விடாது செல்வர். கோழி முட்டை மரபு, மரம் விதை மரபு ஆகிய இரண்டும் உயிர் மரபுகள். அவற்றின் ஒவ்வொரு தலைமுறையும் ஒரு வட்டம், வட்டத்தின் ஒரு சுற்று. அதன் சுழற்சியில் தொடக்கம் முடிவாகி, முடிவு தொடக்கமாகிறது. கோழி முந்தியது அல்லது முட்டை முந்தியது என்றோ, மரம் முந்தியது அல்லது விதை முந்தியது என்றோ எவரும் கூற முடியாததன் காரணம் இதுவே. ஆயினும் கோழி முட்டை மரபின் சுழற்சி, மரம் விதை மரபின் சுழற்சி ஆகியவை முற்றிலும் வட்டச் சுழற்சி போன்றவை யல்ல. அவை உயிர்மரபுச் சுழற்சிகள். வட்டத்தில் முடிந்த இடமே தொடக்கம். தொடக்கமே முடிவு. அத்துடன் சுழற்சியில் சுழலும் பொருளின் தொடர்ச்சி உண்டு. உயிர் மரபின் தொடக்கத்திலும் மரபின் சிற்சில கூறுகளிலும் இந்நிலை உண்டு. எடுத்துக் காட்டாக, நுண்ணுயிர்கள் தாமே பொன்றி, புத்துயிர் பிறப்பிக்கின்றன. உடல் இரண்டாக வெடித்து முந்திய மறு தலைமுறை உயிர்கள் தோற்றி விடுகின்றன. முட்டை வெடித்தே கோழிக்குஞ்சும், வித்தழிந்தே மரமும் தோற்றுகின்றன. ஆயினும் உயிர் வளர்ச்சியில் இந்நிலை பெரிதும் மாறுபடுகிறது. கோழி மாண்டு முட்டை உண்டாவதில்லை. மரம் மாண்டு வித்துண்டாவதில்லை. அது மட்டுமன்று. ஒரு கோழி ஒரு முட்டையல்ல; பல முட்டைகளிடுகிறது. ஒரு மரம் ஒரு விதையல்ல; பல விதை விளைவிக்கிறது. இம்முறையாலேயே உயிர் ஒன்று பத்து நூறாகப் பெருகுகிறது; இனப்பெருக்கம் உண்டாகிறது. உயிர் மரபு வட்டச் சுழற்சிபோல இடையறாத் தொடர் புடையது மட்டுமல்ல. அது சுற்று முடியுமுன் புது வட்டத் தொடக்கமுடையது. ஒரு வட்டத்திலிருந்து பல உயிர்கள், பல வட்டங்கள் தொடங்குவது. ஓர் உயிர் எத்தனை கிளைகள், கிளைகளின் கிளைகளாகப் பிரிந்தாலும், ஒரே உயிர் வழி தொடரும் உயிரினப் பெருக்கப் பரப்பை நாம் நேர் மரபு அல்லது கால்வழி என்னலாம். ஆனால் உயிர் மரபு முற்றிலும் இத்தகைய நேர் வழியாய் அமைவதில்லை. அமைந்தால் ஓர் உயிர் பன்னூறாயிரமாய்ப் பெருகிய பின், புதிய உயிர்ப்பரப்பில் பழமையின் தொடர்பு வரவரக் குறைந்துவிடும். இதைத் தடுக்கும் முறையில் உயிர் வளர்ச்சியில் ஆண் பெண் பாற் பாகுபாடு அமைந்துள்ளது. பிறப்புக்கு மூலமாக, ஓர் உயிர், ஓர் உடலன்று - ஈருயிர், ஈருடல் - தாய்மரபு, தந்தை மரபு - தேவைப்படுகிறது. வட்டத் தொடர்ச்சியில்லாத இன்னொரு வேறுபாட்டை இது புகுத்து கிறது. வட்டம் ஒரு புது வட்டத்தையன்றிப் பல புது வட்டங் களைப் பிறப்பிப்பது மட்டுமல்ல, வட்டம் மற்றொரு வட்டத் துடன் பின்னிய கூட்டாகப் புது வட்டங்களைப் பிறப்பிக்கிறது. ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாய் மரபு உண்டு. தந்தை மரபு உண்டு. எதை நேர்கால் வழியாகக் கொண்டாலும், மற்றக் கால்வழி அதனுடன் பின்னுவதாகவே கொள்ள வேண்டும். நேர்கால் வழியை இன்று பெரும்பாலான மனித இனங்கள் தந்தை வழியாகக் கணிக்கின்றன. தாய் வழி அதனுடன் வந்து கூடிக் கலப்பதாகக் கொள்ளப்படுகிறது. தாய் வழியே நேர் வழியாகக் கொண்டு, தந்தை வழி அதனுடன் கலப்பதாக மாந்த இனம் கொண்ட ஊழிகள் உண்டு. இன்றும் அவ்வாறு கொள்ளும் இனங்கள் இருக்கின்றன. தாயபாகம் என்ற தொல் பழந்தமிழ் மரபுச் சொல் இன்னும் பழைய தாய்வழி மரபுரிமையை நினைவூட்டுவதாக அமைந் துள்ளது. உயிருக்குத் தாய்வழி, தந்தைவழி அதன் ஒரு தலை முறையில் மட்டும் கலப்பதல்ல. தலைமுறை தோறும் கலப்பது. அதுமட்டுமல்ல. உயிரின் தாய்க்கும் ஒரு தாய் வழி, தந்தை வழி கலப்பு உண்டு. தந்தைக்கும் ஒரு தாய் வழி, தந்தைவழி கலப்பு உண்டு. முந்திய முதல் தலைமுறையில் ஒரு தாய்வழி, தந்தை வழியானால், இரண்டாம் தலை முறையில் இது இரண்டிரண் டாகி நாலாகவும், மூன்றாவதில் எட்டாகவும் பெருகிக் கொண்டே செல்கிறது. பின் தலைமுறைகளிலும் இதே பெருக்கம் உண்டு. வட்டத்தைவிட உயிர் மரபின் தொடர்ச்சிக்கு நல்ல உவமை வட்டமாக இடையிடையே சுழித்துச் செல்லும் பின்னலாகும். தலைமுறைதோறும் ஒவ்வோர் உயிரும் முன் ஒரு தலைமுறையின் இரு உயிருடனும் பிணைகிறது. இரண்டும் தலைமுறை தோறும் பெருகிப் பரவுவதால், உயிரின் பிறப்பு இனத்தின் கால்வழிகளை யெல்லாம் தலை முறைதோறும் பிணைக்கிறது. உயிர் மரபு ஒரு சுழல் பின்னல் வலை. அதில் ஒவ்வோர் உயிரும் ஒரு கண்ணி. அது முன் இரண்டு இழையுடனும் பின் இரண்டு இழையுடனும் பின்னுவதால், அது இழைகளின் கண்ணி முடிச்சுமட்டுமல்ல, வலை முழுமையின் முடிச்சு ஆகும். ஒவ்வொரு தலைமுறையிலும் இன முழுமையின் ஒவ்வொரு முடிச்சாக, கண்ணியாக உயிர் வாழ்வு அமைகிறது. ஆனால் உயிர்மரபு வலையைவிடக் கூடச் சிக்கலானது. பின்னல் வலையில் ஒவ்வொரு கண்ணியும் அடுத்துள்ள கண்ணிகளினுடனேயே இணைகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறை உயிரும் அதே தலைமுறையின் இணைப்பரப்பில் உள்ள எந்தக் கண்ணியுடனும் இணையலாம். பின்னல் வலையில் ஒரு கண்ணி ஒரு தலைமுறையில் இரண்டு கால் வழிகளாக மட்டுமே பிரியும். ஆனால் உயிர் மரபில் ஓர் உயிருக்கு எத்தனை பிள்ளைகளோ அத்தனை கால்வழிகளில் அது கண்ணிகளாகச் சென்று பின்னுகிறது. உயிர் மரபு உண்மையில் பின்னிப் பின்னிப் பெருக்க முற்றுச் செல்லும் அலைகளையுடைய ஒரே மாகடல் என்று கூறலாம். இச்சுழற்சி, பின்னல், பெருக்கம் ஆகிய யாவற்றுக்கும் அடிப்படையானது உயிர், உயிராற்றல். அது உடலல்ல, உடலின்றி இயங்குவதுமல்ல. அது உடலின் ஆற்றலல்ல. ஆனால் அலைவடிவில் இயங்கிப் புத்தலை எழும்பிச் செல்லும் கடல்நீர் போன்று, அது உடலென்னும் வடிவில் இயங்கும் இயற்கையாற் றலின் ஒரு கூறு. இயற்கையாற்றல் முழுதும் தாய்வழி தந்தை வழியாகக் கொண்டு, புதிய உயிர் உடல்கள் எழுப்பி, இயற்கையாற்றலின் புத்துருவம் பெருக்கிச் செல்வது. உயிருக்கு ஆதாரமான இந்த இயற்கையாற்றல் எது? அது எவ்வாறு இயங்குகிறது? ஐன்ஸ்டீன் மெய்யறிவு வழி, பண்டைத் தமிழர் மெய் யுணர்வு வழி நின்று இவற்றை ஆராய்வோம். உயிரின் ஆற்றல் இயற்கையின் ஆற்றலில் ஒரு கூறு. அது நிலவுலகின் சுழற்சியிலிருந்து, அண்டச் சுழற்சியி லிருந்து, இயற்கையின் இயக்கத்திலிருந்து பிறப்பது. நிலவுலகமாயம் நிலவுலகின் சுழற்சியை மட்டுமே மறைத்து மாறாட்டம் செய்வதன்று. அச்சுழற்சிக்கும் நம் உயிர், நம் வாழ்வு, நம் கருத்து ஆகியவற்றுக்கும் இடையேயுள்ள இன்றியமையாத் தொடர்பையும் அது முற்றிலும் இருட்டடித்து வருகிறது. உயிரின வாழ்வு, நம் வாழ்வு மட்டுமல்ல - அவ்வாழ்வுக்கு மூல முதலான உயிராற்றலே, உயிரே நிலவுலகச் சுழற்சியின் ஒரு சுழற்சிக் கூறே, நம் உடல் சுழலும் நிலவுலகின், இயற்கையின் ஒரு சிறு கூறு. அதனை இயக்கும் உயிராற்றல் நிலவுலகின் சுழற்சி யாற்றலில் ஒரு கூறு. இதைப் பொதுவாக நாம் உணர்வதில்லை, கவனிப்பதில்லை. ஆனால் இதில் நுணுகிக் கருத்துச் செலுத்திய அறிவர், அறிஞர், கலைஞர் தொல் பழங் காலத்திலேயே தமிழகத்தில் உண்டு. கதிரவன் ஒரு நெருப்புக்கோளம், எரிந்துகொண்டே சுற்றிச் சுழன்று வரும் ஒரு பேரொளிப் பிழம்பு. அது ஈன்றெடுத்துள்ள கோள்நங்கையர்கள், குறுங்கோள் நங்கையர்கள் - அவர்கள் ஈன்றெடுத்துள்ள துணைக்கோள் சிறுமியர்கள் - கதிரவன் சுழற்சியிலிருந்தும், கோள்களின் சுழற்சியிலிருந்தும் தெறித் தோடிய துண்டுகளே. அவை பலபடியாக ஆறிவருகிற, அல்லது முற்றிலும் ஆறிய கோளங்களாகவே இன்னும் சுழலுகின்றன. ஆறிவரும் நெருப்புக் கோளங்களில் ஒன்று நம் நிலவுலகம் - அதன் உட்பகுதி இன்னும் உருகிக் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அனற்குழம்பே. இந்தக் கொதி குழம்பிலோ அதனருகாமையிலோ உயிரினங்கள், மாந்தராகிய நாம் வாழ முடியாது. ஆறியமர்ந்த மேற்பரப்பில் மட்டுமே உயிர் நிலவ முடியும். அதே சமயம் கொதி குழம்பின் அகவெப்பே நம் உயிர், உயிர்க்கு ஆதாரம். ஏனெனில் கதிரவன்போல முழுதும் கொந்தளிக்கும் அனற்கோளத்தில் எப்படி உயிர் இருக்க முடியாதோ, அப்படியே முற்றிலும் ஆறியலர்ந்த கோளங் களிலும் உயிர் இருப்பதில்லை. நிலப்பரப்பின் குறைந்த வெப்ப நிலையிலே, நிலவுலகின் உள்ளுயிர் வெப்பின் ஒரு கூற்றினை நம்மகம் வைத்துப் பேணியே நாம் வாழ்கிறோம். சூழ்வெப்ப நிலைக்கு நம் உடல் வெப்பநிலை இறங்கினால், நம் உயிருக்கு ஊறு ஏற்பட்டுவிடும். நம் வாழ்வின் மூலமுதல் நாம் `உயிர்' என்று கூறும் நம் உடலின் உள் ஆற்றலே. இதில் ஒரு முக்கிய பகுதி கோள் நங்கையர் உள்ளுயிரிலிருந்து நமக்குக் கிடைக்கும் கதிரவன் வெப்பத்தின் ஒரு கூறே. நிலவுலகமாகிய தாயிடமிருந்தும் தாயின் தாயாகிய கதிரவனிடமிருந்தும் வெப்பாற்றல் பெற்று இவ்வுயிர்ச் சேமநலத்தை அடிக்கடி நிரப்புவதன் மூலமே, நிரப்புமளவிலேயே நாம் உயிர் வாழ்கிறோம். வெப்ப நிலையிலேயே உயிர் கரு உயிர்க்கிறது, பிறக்கிறது. முட்டை வெப்பமில்லாவிட்டால் பொலிவுற்றுக் குஞ்சு பொறிப் பதில்லை. உயிரின் ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு செயலிலும், உணர்விலும், சிந்தனையிலும் கூட வெப்பம் செலவழிந்து உயிர் ஆற்றல் தேய்வுறுகிறது. இந்தச் சூட்டை உயிர்கள் முற்றிலும் நிலவுலகமாகிய தாயிடமிருந்து பெறுவதில்லை. தாயின் தாயாகிய கதிரவனிடமிருந்தே பேரளவு கொள்கின்றன. இவ்வாறு வெப்பநிலையின் சமநிலை உயிரின் இன்றியமை யாத் தேவையாகிறது. அது மிகுந்தால் நம் உயிர் பொன்றிவிடும். அது ஆறியமர்ந்தால் நாம் உயிர் வாழமாட்டோம். இரு கோடியிலும் நாம் சென்று விடாமல் காப்பது நிலவுலகின் சுழற்சியே. நிலவுலகின் தற்சுழற்சியால் நமக்கு இரவு பகல் உண்டாகின்றன. சுழலும்போது எப்போதும் ஒரு பாதி கதிரவன் பக்கமாகப் பகலொளி பெற்றும், மறுபாதி அதன் மறைவில் இராக்காலம் மேற்கொண்டும் இயல்கின்றன. ஒவ்வொரு நிலப்பகுதியும் ஒரு குறிப்பிட்ட சமயம் பகலொளியில் புகும் சமயம் ஆகி அப்பகுதிக்கு விடியற் காலமாகிறது. அதினின்றும் மறையும் சமயம் அப்பகுதிக்கு மாலையாகப் பொழுது சாயும் காலமாகிறது. இவ்வாறு மாறுபட்டு எல்லாப் பகுதிக்கும் பகலொளியும் இரவின் தட்பமும் சமநிலையாகக் கிடைக் கின்றன. தற்சுழற்சியிலும் வட்டாகாரச் சுழற்சியிலும் நிலவுலகு எப்போதும் தன் பாதைமீது ஒரு திசையில் 23ஙூ பாகை (னுநபசநநள) அளவு சாய்ந்தே செல்கிறது. இது இடத்துக்கிடம் பகலிரவுக் காலத்திலும், பருவநிலைகளிலும் வேறுபாடு உண்டு பண்ணு கிறது. வடகோடியில் 23ஙூ பாகையளவும் தென்கோடியில் அதே அளவும் இக்காரணத்தால் மாறி மாறி ஆறுமாத காலம் பகல், ஆறுமாத காலம் இரவாகிறது. இப்பகுதி குளிர்மண்டலம். நடுவரைக்கு வடக்கிலும் தெற்கிலும் இதுபோல 23ஙூ பாகை யளவு கதிரவன் நேர் ஒளி மாறி மாறிச் செல்வதால் அப்பகுதி வெப்ப மண்டலம் ஆகிறது. குளிர் மண்டலத்துக்கும் வெப்ப மண்டலத்துக்கும் இடைப்பட்ட தென் பகுதிகள் மித மண்டலங்கள் ஆகும். குளிர், மித, வெப்ப மண்டலங்கள் மூன்றிலும் நடு வரையின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகள் மாறி மாறிக் கதிரவனுக்கருகில் வந்து வெப்ப நிலையும், கதிரவனிடமிருந்து விலகித் தட்பநிலையும் பெறுகின்றன. நீள் வட்டமான பாதையில் சாய்வு காரணமாக இது போல நிலவுலகின் வடபாதியும் தென்பாதியும் மாறி மாறிக் கதிரவனருகிலும் கதிரவனுக்குத் தொலைவாகவும் சுழல நேர்வதால், நிலவுலகின் ஒவ்வொரு பகுதிக்கும் இளவேனில், வேனில், முன்பனி, பின்பனி (ளுயீசiபே, ளுரஅஅநச, ஹரவரஅn, றுiவேநச) ஆகிய பருவங்கள் ஒவ்வோர் ஆண்டும் மாறி மாறி வருகின்றன. பகல் இரவும், பருவங்களும் செடிகொடி உயிரின வாழ்வுக்கு இன்றியமையா மாறுபாடுகள். இவை நிலவுலகச் சுழற்சியினால் ஏற்பட்டு, வெப்பதட்பம், பனி மழை ஆகியவற்றைத் தேவைக்கேற்ற அளவில் வழங்குகிறது. ஐம்பூதப் பண்புகளில் வெப்பம் இவ்வாறு நிலவுலக மூலமான கதிரவன் கூறாகவும் நேரடியான கதிரவன் கூறாகவும் உயிருக்கும் உயிர்வாழ்வுக்கும் இன்றியமையா அடிப்படை ஆகிறது. நிலவுலகச் சுழற்சி அதில் பெரும் பங்கு கொண்டு ள்ளது. ஐம்பூதப் பண்புகளில் மற்றவையும் இதுபோலவே நிலவுலகச் சுழற்சி மூலமே உயிரின் உயிர்க்கூறாக இயல்கின்றன - அப்பண்புகளில் எந்த ஒன்று இல்லாவிட்டாலும் உயிர்வாழ முடியாது. உயிர்கள் நீரிலும் பிறக்கின்றன, வாழ்கின்றன. நிலத்திலும் பிறக்கின்றன, வாழ்கின்றன. காற்றிலும் வாழ்கின்றன. ஆனால் மூன்றுக்கும் நீர் உயிர், உயிர்ச்சூழல்.. குளிக்க நீர் வேண்டும். குடிக்க நீர் வேண்டும். உணவுப் பொருள் விளைய, உணவு சமைக்க நீர் வேண்டும். உணவுடன் கலந்துண்ண நீர் வேண்டும். தனியாக விடாய் தீரப் பருகுவதற்கு நீர் வேண்டும். இவை மட்டுமோ? உண்டபின் கைகழுவ, கலம் துலக்க, ஆடை தோய்க்க, நீர் வேண்டும். நிலத்தைவிட நீர் நல்ல இயற்கையான போக்கு வரவுப் பாதை - படகுகளும் கலங்களும் எளிதாக இடம் விட்டு இடம் பெயர நீர்ப்பரப்பு உதவுகின்றது. நீரின் இப்பல திசைப்பட்ட இன்றியமையா உயர் நிலைப் பயன்களை வள்ளுவர் இனிது எடுத்துரைக்கின்றனர். `துப்பார்க்குத் துப்பாய துப்புஆக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.' `மழையாகிய நீர் உண்பவர்களுக்கு உண்ணத் தக்க நல்ல உணவை ஆக்குகிறது. அத்துடன் உண்ணும்போது உணவும் ஆகின்றது' என்பது இக்குறட்பாவின் பொருள். முப்பாலின் இரண்டாம் அதிகாரமான `வான் சிறப்'பில் மற்றக் குறட்பாக்கள் உலக வாழ்வுக்கு நீர்- மழை உருவில் வானம் தரும் நீர் எந்த அளவு இன்றியமையாதது என்பதை இக்கால இயல்நூல் மாணவரும் இயல் நூலாருமே கண்டு வியக்கும்படி நுணுக்க நயமுடன் எடுத்துரைக்கின்றன. விடாய் அகற்றுவது, பசி தீர்ப்பது மழை. பசிக்கு உணவுப் பொருள் தரும் உழவு நடப்பதுகூட அதனாலேயே. உயிரினங் களில் கடைப்பட்ட புல்லினம்கூட மழை நீரில்லாமல் தழைக்காது. தானம், தவம் கூட மழைநீரில்லாமல் இல்லை என்று கட்டுரைக்கிறார் வள்ளுவர். நீர் வாழ்வின் இன்றியமையாப் பகுதியான உயிர் மட்டுமன்று, அதற்குச் சிறப்பளிப்பதுவும் அதுவே என்று அவர் விளக்குகிறார். நிலவுலகின் நீர் மண்டலம் கடல். அதன் வெப்ப மண்டலம் அதன் உட்பிழம்பும் கதிரவனொளியும் ஆகும். இந்த இரண்டு மண்டலத்தின் கூறுகளுமே நம் உயிரின் ஓர் இன்றியமையாக் கூறு ஆகும் என்று காண்கிறோம். வெப்பு மிகுந்தாலும் உயிர் வாழ முடியாது. நீரும் அதுபோலத்தான். இந்த இருமை நிலையின் அருமையை விவேக சிந்தாமணியின் ஒரு பாடல் குறித்துக் காட்டுகிறது. `சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர்! அங்கதைக் கொய்துபோட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும் துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் தங்கள்தம் நிலைமை கெட்டார் தகுதிஇப் படியேதானே!' முற்றிலும் கொதி குழம்பாகிய கோளங்களிலோ, முற்றிலும் ஆறியலர்ந்த கோளங்களிலோ உயிர் இருப்பதில்லை. அதுபோல முற்றிலும் நீர் மண்டலம் வற்றிய கோள்களிலும் உயிர் இருக்க மாட்டாது. நம் உடலின் வெப்பக் கூறு உடல் முழுவதும் பரந்துள்ளது. அதுபோல நீர்க்கூறு குருதியாக உடல் முழுவதும் ஓடுகிறது. அதுவே தோல், தசை, மூளை, நிணம், எலும்பு ஆகிய பிற உடற் கூறுகளை ஆக்கவும் பயன்படுகிறது. இவற்றைத் தமிழர் ஏழு தாதுக்கள் என வகுத்துள்ளனர். `தொக்கு உதிரத்தோடு ஊன் மூளை நிணம் என்பு சுக்கிலம் தாதுக்கள் ஏழு.' தாதுக்களைத் தொகுத்துரைக்கும் ஒளவைக் குறளின் பா இது. நீரே உடலின் அடிப்படைப் பொருள், உடலின் பெரும் பகுதி நீரே. உயிரினம் முதன் முதல் பிறந்தது நீரில்தான். நீர் கலந்த காற்றையே நீர் வாழ் உயிர்கள் உயிர்க்கின்றன. ஆனால் மற்ற உயிர்கள் வகையிலும் உயிர்ப்பரப்புக்களும் உயிர்க்கும் காற்றில் சிறிது ஈரம் இருந்தால் மட்டுமே மூச்சுவிட முடியும். நீரின் இன்றியமையாமை பற்றிக் கூறுகிற திருக்குறளின் அதிகாரம் அதை மழை வடிவில், வான்பெற்ற பெயருடனேயே குறிக்கப்படுகிறது. நீர் மண்டலத்தின் பெரும்பகுதி கடலா னாலும், உயிர் பேணும் வகையில் அதனின்று கதிரவன் வெப்பத்தால் எழும் முகில்கள் வானத்திலிருந்து பொழியும் மழையே அதன் உயிர்ப்பகுதி என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இச்செயலால் நீர் மண்டலத்தின் பயன் முற்றிலும் நிலவுலக இயக்கத்தின் விளைவு ஆகிறது. நிலவுலகம் சுற்றுவதாலேயே நிலவுலகின் ஒரு பகுதியில் வெப்பு ஏற, அது கடல் நீரை ஆவியாக்கி முகில் எழுப்பி மழைபொழியச் செய்கிறது. குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடலொன்று இதனை விளக்குகிறது. `பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாப் பெருங்கடல்நீர் மொண்டு புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.' நிலவுலகச் சுழற்சி வெப்பு மூலமாக மட்டுமன்றி நீர் மூலமாகவும் இவ்வாறு உயிர் வாழ்வுக்கு இன்றியமையாததா கிறது. முற்றிலும் வெப்பாறிய கோளங்களில், முற்றிலும் நீர் மண்டலம் வற்றிய கோளங்களில் உயிர் நிலவ முடியாதது போலவே, முற்றிலும் காற்று மண்டலம் இல்லாத கோளங் களிலும் உயிர் வாழ்வு இருக்க முடியாது. வெப்பம் நீர் ஆகியவற்றைப்போலவே காற்றும் நம் உயிரின் இன்றியமையாக் கூறு. காற்று நம் உயிர்மூச்சு, உயிரினங்களின் உயிர்ப்பு. நீரில் உயிர்கள் வாழ்கின்றன. அவை ஒன்று நீர்ப் பரப்புக்கு வந்து மூச்சு வாங்க வேண்டும். அல்லது நீரில் கரைந்துள்ள காற்றை உட்கொள்ள வேண்டும். நிலத்தில் வாழும் உயிர்களோ காற்று மண்டலத்திலேயே உலவுகின்றன. அவை காற்றை உட்கொண்டு காற்றில் வாழ்கின்றன. நீர் மண்டலத்தில் வாழ்ந்தாலும், நில மண்டலத்தில் வாழ்ந்தாலும், உயிர்கள் காற்று மண்டலத்தின் தொடர்புடன், அதனருகில்தான் இயங்க முடியும் என்பதை இது காட்டுகிறது. காற்றுக் கரைந்து கலக்கமுடியாத அளவு காற்று மண்டலத் திலிருந்து அகன்ற ஆழ்கடலிலோ, நிலத்தின் உள்ளாழத்திலோ உயிர் வாழ்வு இல்லை. நம் உடலின் சரிசம வெப்பத்தைப் பேணுவது மூச்சு. மூச்சே நம் உடலின் நீர்க்கூறான குருதியை உடலெங்கும் ஓட விடுவது. புற உடலை நீர் கழுவுவதுபோல, நீரையும் குருதியோட்டத் தையும் துப்புரவு செய்வது மூச்சு வடிவில் இயங்கும் காற்றே. உடலில் குருதியை ஓட விடுவதுபோல, நிலவுலகின் நீர் மண்டலத்தைக் கடலிலிருந்து முகில் மண்டலத்துக்கும் அங் கிருந்து நில வழி மீண்டும் கடலுக்கும் சுழலவிடுவது காற்று மண்டலமே யாகும். ஒலி இயங்க உதவுவது, வானொலியலைகளை நிலவு லகைச் சுற்றிச் சுழலச் செய்வது ஆகிய யாவும் காற்று மண்டலத் தின் செயல்களே. நீரில் கலங்களை ஓட விடுவது போல, வான வெளியில் வானூர்திகளை ஓட விடுவதும் காற்று மண்டலமே. உயிர்களின் உடலுக்கும் பொருள்களுக்கும் உருத் தரும் சரிசம அழுத்தம் காற்று மண்டலத்துக்கு உரியதே. மனிதன் நிலமண்டலத்தையும் நீர்மண்டலத்தையும் கடந்து செல்வதுபோல அவ்வளவு எளிதில் காற்று மண்டலத்தைக் கடந்து செல்ல முடிவதில்லை. உணவில்லாமல், நீரில்லாமல் அவன் நாட்கணக்கிலாவது வாழ முடியும். காற்றில்லாமல் சில கணங்கள் கூட வாழ்தல் அரிது. அத்துடன் நாம் மூச்சுவிடுவதற்கு நிலத்தளத்திலிருக்குமளவு அழுத்தமுள்ள காற்று, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்படாத, குறையாத வெப்பம், ஈரம் ஆகியவற்றை உடைய காற்று இன்றியமையாதது. இந்தப் பண்பு களுடைய காற்று இயங்கும் எல்லையில் தான் மனிதனும் உயிர்களும் இயங்க முடியும். வெப்பம் நீர் ஆகியவற்றைப்போல, அவற்றினும் உயிருக்கு இன்றியமையாதது காற்று. அதுவும் நிலவுலகின் சுழற்சியினா லேயே பிறக்கிறது, இயங்குகிறது. ஆறிவரும் எரி குழம்பு நிலையிலுள்ள கோள்களின் மேற்பரப்பிலிருந்தும், வெப்பேறி வரும் நீர்மண்டலங்களிலிருந்தும் பிரிந்து கோள்களைப் போர்வைபோலப் போர்த்துள்ளது அது. கதிரவன் வெப்பத் தாலும் நிலத்தின் சுழற்சியாலும் ஏற்படும் பல்வகை வெப்ப அழுத்த வேறுபாட்டாலேயே அது நிலவுலகம் சுற்றி இயங்கு கிறது. நிலவுலகின் நீர்மண்டலம், நிலமண்டலம் ஆகிய தென் வட கோளங்களுக்கிடையே தென் வடக்காக வீசும் காற்று, தென் மேற்கு வட கிழக்காக இயங்குவதும் நிலவுலகச் சுழற்சியாலேயே. மேற்கிருந்து கிழக்காகச் சுழலும் நிலவுலகின் சுழற்சி வேகம் வடக்கே செல்லும் காற்றை வட கிழக்காகவும், தெற்கே செல்வதைத் தென் மேற்காகவும் திருப்பி விடுகிறது. வெப்பம், நீர், காற்று ஆகியவற்றைப்போல நிலமும் உயிர்க் கூறேயாகும். இதனைப் பலர் உணர்வதில்லை, கூர்ந்து கவனிப்ப தில்லை. இதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது வள்ளுவரின் `வான் சிறப்பு' அதிகாரத் திலுள்ள ஒரு குறட்பா. "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும், தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்." `முகில்கள் திரண்டு மழை பொழியாவிட்டால் பரந்த கடலும் தன் இயல்பில் குறைந்து விடும்' என்பதே இதன் பொதுக் கருத்து ஆகும். மணக்குடவரும் பிற உரையாசிரியரும் புலவர் குழந்தையும் `தடிந்து' என்ற சொல்லுக்கு (நாம் மேலே தரும் `திரண்டு' என்ற பொருளினிடமாக) மின்னலாக மின்னி என்று (மற்றொரு) பொதுப் பொருள் தந்துள்ளனர். மணக்குடவர் சுட்டிக்காட்டும் வேறு சில உரையாசிரியர்கள் `கூறுபடுத்து' என்றும், பரிமேலழகர் `குறைத்து' என்றும் பொருள் கண்டனர். `கூறுபடுத்தல்' என்பது கடல் நீரின் உப்பியல்பைக் கூட்டுதலும் குறைத்தலும் செய்து நீர்வாழ் உயிர்களின் வாழ்வுக்கும் நீர்படு பொருள்களான முத்து, பவழம், சங்கு ஆகியவற்றுக்கும் வழி வகுப்பது குறிக்கும். `தடிந்து' என்பதற்குப் பரிமேலழகர் கூறிய `குறைத்து' என்ற பொருளே குறட்பாவின் சொற்போக்குக்கும் கருத்துப் போக்குக்கும் இசைந்த வளமான சிறப்புப் பொருள் தருவது. குறட்பாவின் கருத்துக்கே அது புதிய ஒளி விளக்கம் அளிக்கிறது. `மேகம் கடலைக் குறைத்து மறுபடியும் அதிலேயே பெய்து நிரப்பாது போகுமேயானால், அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்' - பொருளற்ற புதிராகக் காணப்படும் நம் முந்திய பொதுப் பொருள் இங்கே பொருளும் சுவையும் உடைய வாய்மையுரையாக மாறுபடுவது காணலாம். பரிமேலழகர் இங்ஙனம் `தடிந்து' என்பதற்குச் சிறந்த பொருள் காண்கிறாரானாலும், அதற்கே `கூறுபடுத்து' என்று பொருள் கூறுபவர் கருத்தைக் குறட்பாவின் அடுத்த அடியின் பொருளில் தொனிக்க வைத்துள்ளார். `நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்' என்பதற்கு அவர் விளக்க உரை இதனைக் காட்டுகிறது. `தன்னியல்பு குறைதலாவது நீர்வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையுமாம்' என்பது விளக்கவுரை. பரிமேலழகர் விளக்கவுரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டும் பரிபாடல் அடிகள் முப்பால் முதல்வரின் உட்கோளை இன்னும் திறம்படச் சுட்டுவனவாய் உள்ளன. `கடல் குறைபடுத்த நீர் கல்குறைபட எறிந்து' என்று சங்கப் புலவர் அதில் வள்ளுவர் சொல்லுடன் பொருள் ஒன்றிக்காண்கிறார். மேகம் கடல் நீரை ஒரு புறம் குறைக்கிறது. ஆனால் மழையாகப் பெய்து மறுபடியும் கடலில் விழச்செய்வதனால், குறைந்த நீர் மீண்டும் நிரப்பப்பட்டு விடுகிறது. இதில் மேகத்தின் செயல்விளைவு மிகுதியில்லை. கடல் தன் நீர்மை குன்றும் என்ற தொடருக்கும் இது பொருள் பொலிவு தரவில்லை. பரிமேலழகர் இதனாலேயே `தன் இயல்பு குன்றும்' என்பதற்கு விளக்கம் கூறும்போது `தடிந்து' என்பதற்குக் `கூறுபடுத்தி' என்று பொருள் கூறியவர் கருத்தை ஏற்று நீர் வாழ்வன வாழ்வித்தலை, படிவன படுவித்தல் குறைபடும் என்று பொருள் கண்டார். ஆயினும் `தடிந்து' என்பதற்குக் `கூறுபடுத்தல்' என்றே பொருள் கண்டவர் வழி சென்று முழுப்பொருள் காண்பதானால், விளக்கம் ஒரு சற்றே மிகுதியாகும். `கூறுபடுத்தல்' என்பது முதலில் நீரைக் குறைப்பதனால் உப்புத் தன்மை பெருக்குவதும், மழை பெய்வித்துக் கடல்நீர் நிரப்பு வதனால் நீர் பெருக்கி உப்புத் தன்மை குறைப்பதும் ஆகும். இயல்பு குன்றாமல் காப்பது இங்கே உப்புத் தன்மை குறையாமல் காப்பது என்று பொருள்படும். `கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து' என்ற பரிபாடல் வாசகம் வள்ளுவர் குறளுக்கு உரைதானோ என்னும் படி அமைந்துள்ளது. கடல்நீர்க் குறை நிரப்புவது மழையினால் என்னின், இயல்பு குறை நீக்குவது கல்குறைபடுவதால் என்று அது சுட்டுகிறது. மழைநீர் கல் தேய்த்துப் பொடித்துக் கரைத்து, அவற்றின் உப்புச் சத்துக்களைக் கொண்டு கடல்நீரில், உப்புத் தன்மை உண்டு பண்ணுகிறது. மழை இல்லாமல் போனால், கடல் நீரின் `நீர்மை' அல்லது தன்மையாக நாம் கொள்ளும் உப்புத் தன்மை அதற்கு இல்லாதாகிவிடும் என்பதே திருவள்ளுவர் கருத்தாதல் வேண்டும். உரையாசிரியர்கள் `கடல் தன் நீர்மை குன்றும்' என்பதற்கு, கடலின் தன்மை அளவில் குறைந்து விடும் என்றே பொருள் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் `நீர்மை குன்றும்' என்பது `தன்மை கெட்டுவிடும்' என்ற தொனியே தருவது. ஆகவே `கடல் நீரின் உப்புக்குக் காரணம் மழை. மழை இல்லாவிட்டால், கடல் உப்புத் தன்மை கெட்டுவிடும்' என்பதே வள்ளுவர் உட்கோளாதல் சாலும். உரையாசிரியர்கள் குறித்த நீர்வாழ் உயிர்கள், நீர்படு பொருள்கள் கடலின் வளங்களே தவிர, கடலின் இயல்பு ஆக மாட்டா. ஆனால் உப்பு இயல்பு அவற்றுக்கு ஆதாரமாகின்ற வை. ஏனெனில் உப்பு - நிலத்தின் சத்து - உயிரின் அடிப்படைக் கூறு ஆகும். உப்பு வகைகளும் உப்பு வகைகளின் கூறுகளுமாகிய நிலப் பொருள்களே உயிர்களின் உடலாக்கத்துக்கும் உயிர் வாழ்வுக் கும் இன்றியமையாதன. உடலும் அவை. உண்ணும் உணவும் அவை. உட்கொள்ளும் நீரில் கூட,. இந்த உப்புச் சத்துக்கள் இல்லாத நீர் `தூய' நீராக இருக்கலாம். `உயிர் நீர்', `நன்னீர்' ஆகமாட்டாது. நல்ல உப்புச் சத்துக்கள் கலந்த நீரே நன்னீர். நல்ல உப்புச் சத்துள்ள நிலத்தில் சுரக்கும் நீரே நன்னீர். `தண்ணீர் நில நலத்தால்' என்ற தமிழ்ப் பாடல் வாசகத்தின் குறிப்பு இதுவே. `நிலத்தின் நலந்தான் நீர்நலம். வேறு நீர்நலம் கிடையாது. ஏனெனில் தூயநீர் நல்ல நீரன்று' என்பதைத் தமிழ்ப் பாடல் தெள்ளத் தெளிய விளக்குகின்றது. மேற் குறிப்பிட்ட குறட்பா இவ்வாறு மழைக்கும் கடல் நீரின் இயல்புக்கும் உள்ள தொடர்பை மட்டுமல்ல, மழைக்கும் நில மாறுபாட்டுக்கும், மழைக்கும் நிலத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்புகளையும் ஒருங்கே சுட்டிக் காட்டுவது ஆகும். நிலத்தின் கூறு, உப்பின் கூறு. அது கடல் நீரின் கூறுமட்டு மன்று, நன்னீரின் கூறு. அதுவே உடலுக்கு ஆதாரம் ஆகும். நம் உயிர் உண்மையில் நம் உடலின் கூட்டிணைவாலும் ஆற்றலிணைவாலும் ஏற்படுவதே. `உடல் மண்ணில் பிறந்து மண்ணாக மடிவது' என்று புலவோர், அறவோர் பாடுவதுண்டு. இது முற்றிலும் சரியன்று, முற்றிலும் தவறுமன்று. உண்மையில் அது மண்ணில் பிறப்ப தில்லை, மண்ணில் மடிவது மட்டுமே. மண்ணாகப் பிறப்ப தில்லை. மண்ணாக மடிவது மட்டுமே. அது உயிரின் மரபுத் தொடர்ச்சியாக, உயிருடைய உடலிலிருந்து, உடல் வாழ்விலே பிறப்பது. ஆயினும் அதன் உயிர் மரபு தொடக்கத்தில் மண்ணிலிருந்து பிறப்பதே. அதன் உடலாக்கமும் மண் முதலிய இயற்கைப் பொருள்களின் ஆக்கத்துடன் வேறுபாடற்றதே. தவிர, உயிர் மரபு மண் சார்ந்தது மட்டுமன்று. உயிர் வாழ்விலும் உயிர் வளர்ச்சிக்குரிய உணவு தருவது மண்ணே. புதுப் பிறப்பு, அதாவது மரபு வளர்ச்சிக்குரிய ஊட்டம் அளிப்பதும் மண்ணே. நேரடியாக உயிர்களின் உடல் மண்ணில் பிறப்பது என்று கூற முடியாவிட்டாலும், அது பேரளவில் உண்மையேயாகும். நிலவுலகில் உயிரிலாப் பொருளும் உயிர்களும் உயிராற்றல் ஒன்றாலன்றி வேறு படுவனவல்ல - உடலாக்கத்தால் வேறுபடுவனவல்ல. ஆயினும் உயிரிலாப் பொருளின் ஆக்கத்தில் இல்லாத உயிர்ப்பு, மரபுத் தொடர்ச்சி, வளர்ச்சி, ஒழுங்கு உயிரிலா உடலாக்கத்தில் உண்டு. ஒழுங்கு அடிப்படையாகத் தேர்வு, தேர்வு அடிப்படை யாக வளர்ச்சி, மரபுத் தொடர்ச்சி, தன் இனப்பெருக்கம் ஏற்படுகின்றன. இவையே உயிரின் உயிர்ச் செயல் - இவை நீங்கலாக உயிரின் உடலில் உள்ள எல்லாப் பொருட் கூறுகளும் நிலத்தின் கூறுகளே. நாமும் உயிரினங்களில் ஒரு பெரும் பகுதியும் நிலத்தின் மீதே வாழ்கிறோம். நீரில் வாழ்பவையும் வானில் பறப்பவையும் கூட நிலத்தை அடுத்தே கூடுகட்டி வாழ்கின்றன. நிலத்தின் வளமும் நீரில் கரைந்த நிலவளமுமே அவற்றுக்குப் பெரிதும் உணவாகின்றன. நாம் உண்பது மண்ணின் கூறு - மண்ணிலிருந்து கீழின உயிர்கள் பெற்றுத் தரும் நிலக்கூறுகளே. நம் ஆக்கத்துக்கும் வளத்துக்கும் மரபு வளங்களாகிய வளர்ச்சிக்கும் இனப் பெருக்கத்துக்கும் அடிப்படை அவையே. உயிருடைய நிலப்பொருட் கூறு நம் உடல். அது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது விறகு போன்றது. இவ் எரிவிளக்கின் எண்ணெய், திரி, இவ் எரி விறகின் கட்டையும் நிலப் பொருட் கூறே. உயிரின் செயல் ஒவ்வொன்றும், உயிர் என்பதும், நிலப் பொருட் கூறாகிய இவ்வெண்ணெய் திரி அல்லது கட்டை எரிந்து வெப்பமாக மாறி இயங்கும் இயக்கமேயாகும். பயன்படுத்தப் பட்ட வெப்பம் போக, எரிந்தழிவுற்ற எரிபொருள் மிச்சமும் வெப்ப ஆவியுமே நம் மூச்சாக வெளிக் கிளம்புகிறது. உயிரியக்கத்தில், உயிர்ச் செயலில் எரிந்து செல வழியும் இக்கட்டை அல்லது எண்ணெய் திரிக்கு ஈடாக நாம் இணைக்கும் எரிபொருளே உணவு. உச்ச அளவில் எரியும் உயிர்த் தீ, அழிந்த சாம்பரில் புதையுண்டு அவியத் தொடங்குமுன் தன் சேம எரி பொருள் குவையிலிருந்து உலர்ந்த கட்டை அல்லது செறிந்த எண்ணெய் திரிகள் மூலம் புதிது உருவாக்கும் விளக்கொளிகள் அல்லது விறகுக் கொள்ளிகளே இனப்பெருக்கம், மரபுப் பெருக்கத்துக் குரிய புத்துயிர்கள். வெப்பம், நீர், காற்று ஆகியவற்றைப் போலவே நிலமும் இவ்வாறு உயிரின் அடிப்படை ஆகிறது. உண்மையில் அதுவே உயிரிலாப் பொருளிலிருந்து உயிர்ப் பொருளுக்குத் தாவும் பாலமாய் அமைந்து, உயிரின் உடற்கூறாகவும், உடலிலிருந்து எழும் உயிர் ஆற்றலுக்கு ஆதாரமாகவும் அமைகிறது. நிலமும் நீரும் உயிரின் உடற்கூறென்றும், காற்றும் வெப்பமும் அதன் உயிர்க்கூறென்றும் ஒருவாறு கூறலாம். தனிப் பொருள்களைத் தனிப் பொருள் கூறுகளாக இக்கால இயல்நூலார் போல வகுக்காமல் தனிப்பண்புக் கூறுகளாகப் பண்டைத் தொல்பழங்கால அறிவர் வகுத்ததன் அமைதி இங்கே புலப்படுகிறது. தனிப் பொருள் கூறுகள் என்று இயல்நூலார் வகுத்த பொருள்கள் ஒன்றுவிடாமல் அத்தனை யும் இனிமேல் வகுத்துக் காணப்படக்கூடும் பொருள்கள் உட்பட யாவுமே - இயற்கையின் ஒரு பண்புக்கு, நிலப் பண்புக்குரிய கூறுகளே. அவற்றை நாம் இக்கால இயல்நூல் மொழியில் பொருளின் பிழம்புக் கூறு (ஆயவவநச) என்னலாம். பண்டை அறிவர் நீரும் காற்றும் தனிப் பொருள்களாகக் கொண்டதாக எண்ணி நம் காலத்தவர் ஏளனம் செய்வதே ஏளனத்துக்குரியது என்று இது காட்டுகிறது. ஏனெனில் பண்டை வகுப்பு முறையின்படி நீரும் காற்றும் நிலத்தின் நீர்க்கூறு, காற்றுக் கூறுமட்டுமே. இது போல அனலும் வானும் நிலத்தின் அனற்கூறு, வான் கூறாகவே கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. தீயையோ வெப்பத்தையோ இக்கால இயல்நூல் பொருள் என்று குறிக்கவில்லை. ஆற்றல் என்று மட்டுமே சுட்டிற்று. அது உள்பொருளன்று; இல்பொருளுமன்று. அது இன்மையாகவும் கொள்ளத் தக்கதன்று. பொருளின் பொருட் கூறல்லாத பண்பு களில் ஒன்று என்று மட்டுமே கொள்ளத்தக்கது. தீக்கும் வெப்பத்துக்கும் தொடர்பு உண்டு, வேறு பாடும் உண்டு. தீ கட்புலனாவது; ஊறுணர்வுமுடையது. வெப்பமோ ஊறுணர்வு மட்டும் உடையது; கட்புலனாகாதது. ஒரு புலனுக்கு உணர்வளிக்கும் வெப்பம், இரு புலனுக்கு உணர்வளிக்கும் தீ ஆகியவற்றின் வேறு பாட்டைத் தற்கால இயல்நூல் ஓரளவு விளக்கினும் அவற்றின் இயல்பையோ வேறுபாட்டின் தன்மை யையோ முற்றிலும் விளக்கியதாகக் கூற முடியாது. வெப்புடன் ஒளிக்குரிய தொடர்பும் இயல் நூலால் முற்றிலும் விளக்கப்படவில்லை. வெப்பல்லாத, வெப்பத்துடன் தொடர்புடைய ஆற்றல்கள் உண்டு. அவையே மின்னாற்றல் காந்த ஆற்றல் போல்வன. இவற்றைப் பயன்படுத்தி இக்கால இயல்நூல் பொருளியல் வாழ்வில் பெரும் புரட்சிகள் கண்டுள்ளது. ஆனால் இவற்றின் இயல்பு பற்றிய விளக்க ஆராய்ச்சியில் அது தட்டித் தடவித்தான் செல்கிறது. ஐன்ஸ்டீன் ஊழியிலேயே அவை கருத்திலும் புரட்சி தூண்டத் தொடங்கியுள்ளன. வெப்பம், ஒளி, காந்தம், மின் ஆகிய நால்வகை ஆற்றல் களில் ஒளி, மின் அலைகள் இரண்டும் நில மண்டல நீர் மண்டலங்கள் மட்டுமன்றி, காற்று மண்டலமும் கடந்து இயங்குபவை. இது உணரப்பட்டபோது, தற்கால இயல் நூலார் அடைந்த, அடைந்துவரும் திகைப்பு மிகப் பெரிது. ஏனெனில் இயல் நூலும் உலகும் அறிந்த அறிவுடன் இது பெரிதும் முரண்படுகிறது. ஐம்பூதக் கோட்பாட்டடிப்படையில் மணம் நிலத்தின் கூறு என்றும், சுவை நீரின் கூறு என்றும், ஒளி அனலின் கூறு என்றும், ஊறுணர்வு காற்றின் கூறு என்றும், ஓசை வானின் கூறு என்றும் பண்டை நூல் மரபு குறிக்கிறது. தற்கால இயல்நூல் இக்கோட்பாட்டை ஏற்கவில்லை. அது அனுபவம் அல்லது செயல் தேர்வு அடிப்படையில் புதிய ஆராய்ச்சிப் போக்கிலேயே சென்றுள்ளது. அப்போக்கில் ஐன்ஸ்டீன் ஊழியிலேயே புத்தறிவுக்கு வழி வகுக்கவல்லதான அறிவின் அலை திகைப்பு மூலம் மாய மருட்கை யுணர்வுகள் ஊட்டியுள்ளன. வெப்பம், ஓசை, மின்காந்தம் ஆகியவை பல்வேறு வகையான அலை இயக்கங்களென்று இயல் நூல் கருதிற்று. இவை யாவும் பொருளின் பொருட்கூறு வழியாகவே செல்வன. அதாவது நிலம், நீர், காற்று ஆகியவற்றின் அணுக்கள் வழி யாகவே பரவுவன என்றும் கொள்ளப் பட்டது. இதற்கேற்ப, காற்று நீக்கப்பட்ட வெறுங் கூடுகளினூடாக வெப்பம், ஓசை இரண்டுமே தடைபடுவது கண்டனர். அது மட்டுமன்று, இம்மூன்று ஆற்றல்களுமே நிலவுலக வட்டம் சார்ந்து, அதாவது நில மண்டலம், நீர் மண்டலம், காற்று மண்டலம் ஆகிய வற்றினுள்ளாக நிலவுலகைச் சுற்றிச் சுற்றியே செல்வது கண்டனர். இம் முடிவமைதிக்கு ஒரே ஒரு குந்தகம், ஒரு முரண்பாடு காணப்பட்டது. ஒளி நிலவுலக எல்லைக்கப்பால், நிலமண்டலம், நீர் மண்டலம், வளிமண்டலம் ஆகிய மூன்றுக்கும் வெளியே பரவவல்லது. மூன்றுக்கும் வெளியேயுள்ள அகல் வெளி கடந்துதான் அது கோள்களிலிருந்தும் கதிரவனிடமிருந்தும் தொலைதூர விண்மீன்களிடமிருந்தும் நிலவுலகுக்கு வந்து நம் கட்புலப்படுகிறது. ஒளி மட்டுமன்றி, மின்காந்த அலைகளும் அவை போன்ற வேலி ஏற்ற வேலி இறக்கம் (கதிரவன் திங்களின் நீர் மண்டல ஈர்ப்பு), கோள்கள் மீதுள்ள கதிரவன் ஈர்ப் பாற்றல் முதலியனவும் இவ்வாறே வெற்று அகல் வெளி கடந்து செயலாற்றுகின்றன. கதிரவனிடமிருந்து ஒளி மட்டுமன்றி ஒளியுடன் வெப்பமும் நம் நிலவுலகுக்கும் பிற கோள்களுக்கும் வந்தெட்டுகின்றது. ஐன்ஸ்டீன் ஊழிக்குள் இவற்றில் சில முரண்பாடுகளாவது தீர்ந்துள்ளன. ஒளியும் வெப்பமும் ஒரே ஆற்றலின் இரு இயக்கங்கள். அதுபோல மின் இயக்கம், காந்த இயக்கம் ஆகியவை ஒரே ஆற்றலின் இரு இயக்கங்கள். பொருளின் பொருட்கூறு அணுகிய பின்னர் அச்சூழலிலேயே ஒளி வெப்பமாகவும், மின் இயக்கம் காந்த இயக்கமாகவும் பரவுகின்றன என்று காணப்பட்டுள்ளது. இவ்விளக்கம் பின்னும் ஒளி, மின் ஆற்றல்கள் எவ்வாறு பொருளின் பொருட் கூறற்ற அகல்வெளியில் விரைகின்றன என்பதனை இசைவித்துக் காட்ட முடியவில்லை. இவை அலை இயக்கங்கள். அலைகள் நீர், காற்றுப் போன்ற ஓர் ஊடு பொருளில்லாமல் எப்படி இயங்க முடியும்? அகல் வெளியில் அவற்றுக்குரிய ஊடு பொருள் யாது? குழந்தைகள் அறியா வினாக்களுக்குப் பொருத்தமான விளக்கம் விடை கூற முடியாதவர்கள், அதன் அறியாமையையே பயன்படுத்த எண்ணிச் சப்பைக் கட்டு விளக்கங்கள் கூறுவ துண்டு. இயல்நூலார் சிலகாலம் இத்தகைய விளக்கமே கண்டனர். ஐம்பூதப் பாகுபாட்டில் வானை இல்பொருளாகக் கொண்டு அக்கோட்பாட்டின்மேல் ஏளனக் கணைமீது இறு மார்ந்த புன்னகைக்கணை ஏவிய அதே அறிவார்ந்த இயல் நூலார், இப்போது புதிய அறிவூழியின் வினாவுக்கு அந்தப் பழைய விடையையே புதிய உருவில் தேடி எடுத்துத் தந்தனர். பொருளின் பொருட்கூறு இருக்குமிடத்திலும், பொருளின் பொருட்கூறு இல்லாத அகல்வெளியிடத்திலும் எங்கும் வான் போன்ற விண்மம் (நுவாநச) என்ற ஊடுபொருள் நீக்கமற நிறைந்து, ஒளியலை, மின்காந்த அலைகளை ஏந்துகின்றன என்று கூறினர். அது மட்டுமோ? `நிலவுலகை அரக்கன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலடியில் சென்று ஒளித்தான்' என்று புராணிகர் கூறிய போது, `அரக்கன் எதன் மீது நின்று சுருட்டினான்?' `நிலத்தைச் சுருட்டிய போது கடல் எங்கே இருந்தது?' `அவன் ஒளித்த கடலடி எந்த உலகம் சார்ந்தது?' என்பன போன்ற அறியாப் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்கப்படுவது போல, இந்த விண்மம் பற்றியும் வினாக்கள் எழுந்தன. இவை விண்மத்தின் இயல்பு பற்றிய பல முரண்பட்ட கருத்துக்களை இணைத்துக்காட்ட வேண்டி வந்தது. அறிஞருள் அறிஞரான ஐன்ஸ்டீன் ஒருவர் மட்டுமே இயல்நூலின் இம்முரண்பாடுகள் கண்டு, அவற்றிடையே ஓரளவு தெளிவும் விளக்கமும் காண முற்பட்டவர் ஆவர். பொருளின் பொருட்கூறு (ஆயவவநச) வேறன்று, ஆற்றற் கூறு (நுநேசபல) வேறன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றம் பெறக் கூடியதே என்பதை அவர் நிலை நாட்டியுள்ளார். `விண்ம'க் கற்பனை விளக்கப்புகும் செய்திகளை, அக் கோட்பாட்டின் முரண்பாடுகள் இல்லாமலே இப்புதுக் கருத்து விளக்குகிறது. ஒளி அகல்வெளியில் முழுதும் ஆற்றல் `அலை' யாகவே வருகிறது. இங்கே அலை என்ற சொல் காற்று, நீர் போன்ற பொருளில் காணப்படும் பொருள் சார்ந்த அலையன்று, தூய ஆற்றல் இயக்கமே. ஆனால் நில உலகத்தின் எல்லையருகே வளிமண்டலத்தை அணுகிய பின் அதன் ஆற்றலின் ஒரு பகுதி பொருள் சார்ந்த ஆற்றல் அலையாகிய வெப்பமாகவும், மற்றப் பகுதி முன்போலவே தூய ஆற்றல் `அலை' யாகவும் இயல்கிறது. ஐம்பூதக் கோட்பாடு எந்த அளவு இயல் நூலுக்கு உதவுகிறது என்று காண்போம். ஐம்பூதக் கோட்பாடு பொருளின் பொருட்பண்புக் கூறுமட்டுமன்றி, நீர்ப்பண்புக் கூறும், தீப்பண்புக்கூறும், காற்றுப் பண்புக் கூறும், வான்பண்புக்கூறும் வகுத்துள்ளது. ஆகவே முதற்கூறு மட்டுமே பொருளின் பொருட் கூறு. மற்றவை யாவும் இது கடந்த ஆற்றற் கூறுகள் ஆகின்றன. ஐம்பூதக் கோட்பாட்டின் உயிர் மரபு அற்று நீண்ட காலமாய்விட்ட இன்றைய நிலையில், அவற்றை நாம் இன்னும் முற்றிலும் புதுப்பித்துக் காண முடியவில்லை. அவற்றின் மறு சிந்தனை, சிறப்பாகப் புத்தாராய்ச்சிகளின் ஒளியுடன் செய்யப் படும் மறு சிந்தனை, பொருளின் பொருட் பண்புகடந்த ஆற்றற் பண்புகளில் மேலும் நம் ஆராய்ச்சியைச் செலுத்தப் பெரிதும் உதவக்கூடும் என்பது உறுதி. அவ்வழி ஆங்காங்கே நம் உய்த் துணர்வைச் செலுத்துவோம். மெய்ம்மையின் புறப்பகுதி இயற்கை. அகப்பகுதி உயிர். புறப்பகுதி சார்ந்த இயற்கை ஆற்றல்களை ஆராயும் அளவில், அகப்பகுதி சார்ந்த உயிராற்றல்களை, புலனறிவாற்றலை, தற்கால இயல்நூல் ஆராய முற்படவில்லை. மணநுகர்வுணர்வு நிலப்பண்புக்கூறு என்று விளக்கப் பட்டுள்ளது. மலரின் மணம் மலரின் சிறுதுகள் பரவுவதாலேயே ஏற்படுவது என்று இது குறிக்கிறது. சுவை நுகர்வுணர்வு பொருளின் துகள் நீரில் கரைந்து நாவில் பரவுவதால் ஏற்படுவது. காட்சியுணர்வு தீயின் பண்புக்கூறு. அதுவே ஒளி என்னும் ஆற்றல் கூறு என்பது தெளிவு. தற்கால இயல் நூல் இங்கே ஐம்பூதக் கோட்பாட்டுடன் முழுவதும் இசைவது மட்டுமன்று; அதை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ஒளி வான் போன்ற விண்மம் என்ற ஊடுபொருள் வழிச் செல்கிறது என்ற கோட்பாடு தொடக்க இயல்நூல் காலங்களில் ஏற்பட்ட ஒரு மருட்சிச் சறுக்கலே யாகும். உயிரின் அடிப்படை உணர்ச்சி ஊறுணர்ச்சி. இது எவ்வாறு உடல் முழுதும் பரவிச் செயலாற்றுகின்றது என்பதை இயல்நூல் எண்ணிப் பார்க்கவே முற்பட வில்லை. ஐம்பூதக் கோட்பாடு இதைக் காற்றுப்பண்பு என்று குறிக்கிறது. அதன்மேல் விளக்கம் நாம் இன்று அறியுமாறில்லை. ஆனால் ஐம்பூதக் கோட்பாடு அதில் கருத்துச் செலுத்திய அளவு கூட இயல் நூல் கருத்துச் செலுத்தவில்லை என்பது தெளிவு. இயல் நூல் உயிரின் தன்மை, இயல்பு ஆகியவற்றை அணிமை வரை விளக்க முடியவில்லை. ஊறுணர்ச்சி விளக்கம் உயிரின் விளக்கத்தில் ஓர் இன்றிய மையாக்கூறு ஆகும். பொருளின் பொருட் பண்புக்கூறு கடந்த ஆற்றல்களில் தற்கால இயல் நூல் அறிந்த ஆற்றல்கள் ஒளியும், மின் காந்த இயக்கமும் ஆகும். ஒளி பண்டைப் பாகுபாட்டின் தீப்பண்புக் கூறாதலால், மின்காந்த இயக்கமே பண்டைப் பாகுபாட்டில் காற்றுப்பண்பாக வகுக்கப்பட்டதோ என்று கருத இடமுண்டு. ஏனெனில் அது விரைந்து பரவும் பண்பேயாகும். வான் பண்புக்கூறு இவையாவும் கடந்த ஒன்று ஆதலால் அது தற்கால இயல் நூல் சிறிதும் சென்று எட்டாத, தற்கால மெய்விளக்க அறிவாண்மை (ஞாடைடிளயயீhல) இன்னும் சென்று கருதாத உயிரின் உயிர்ப் பண்புக் கூறாக இருத்தல் கூடும் என்னலாம். மெய்யறிவு கடந்த ஐன்ஸ்டீன் அறிவொளி இது வகையில் உருவிளக்கம் தருவது ஆகும். ஐன்ஸ்டீன் உலகு, உயிர் பற்றிய கருத்தின் உதவியால் இத்தொல்பழங்காலத் தமிழ் மரபில் ஒளி செலுத்துவோம். இயற்கை எல்லையற்றது என்று கூறுவது தவறு - மனித மொழியில் எல்லையற்றது என்பதன் பொருள் தன் அளவை, தன் கற்பனை எல்லை கடந்த முழுமையுடையது என்பதேயாகும். இயற்கையின் பகுதிகள் எல்லாவற்றிலும் நாம் அதன் கூறுகளை, துண்டுகளை அல்லது உறுப்புக்களைத்தான் காண்கி றோம்; முழுமையையன்று. எல்லையற்ற பேரளவுடைய இயற்கையின் அதே முழுமையைச் சின்னஞ்சிறு அளவிலும் காட்டுவதே உயிர். இது ஐன்ஸ்டீன் தரும் விளக்கம். எல்லையற்ற முழு இயற்கை பெரு மெய்ம்மை (ஆயஉசடிஉடிளஅடிள); அது கால இட அளவைக் கடந்தது. எல்லையுடைய, அதாவது கால இட அளவையுட்பட்ட முழுமையே உயிர் அல்லது நுண் மெய்ம்மை (ஆiஉசடிஉடிளஅடிள). கடவுள் கால இடம் கடந்தவர் என்பது இயற்கை மரபில் வந்த சமயவாணர் கருத்து. இது உண்மையில் மெய்யுணர்வு மரபில் வந்த அருளாளர் கருத்தின் நிழற் படிவமேயாகும். அறிஞர் ஐன்ஸ்டீன் இதற்குப் பகுத்தறிவு வழி காணத்தக்க மெய்யறிவுப் பொருள் கண்டு கூறியுள்ளார். உயிர் முழுமையில் முழுமையாதலால், அதனுடன் தன் சிற்றெல்லையில் சரிசம நிலையுடையது. பரந்த எல்லையில் புற இயற்கையின் இயக்கம் எதுவாயினும், அதனுக்கேற்ற சரிசம எதிரியக்கம் தோற்றுவிக்கும் இயல்பும் ஆற்றலும் அதற்கு உண்டு. இதனை அது இழக்க நேர்ந்தால், அது தன் தனித்தன்மை அல்லது முழுமையிழந்து இயற்கையுடன் இயற்கையாய் விடுகிறது. ஆனால் இந்நிலை எய்துமுன் அதுபிற முழுமை அல்லது முழுமைகளை இயற்கையின் புற ஆற்றலுதவியால் படைத் துருவாக்கி விடுகிறது. இவ்வகையில் முழு மெய்ம்மை அமைதியுடைய, அதாவது செயலாற்றாத மெய்ம்மைக் கூறாகவும், நுண் மெய்ம்மையாக உயிர் அல்லது உயிர்களே அதன் முனைந்து செயலாற்றும் மெய்ம்மைக் கூறாகவும் இயங்குகின்றன. இயற்கையிலும் உயிரிலும் ஒருங்கே காணப்படும் இந்த முழுமைப் பண்பையே பண்டைத் தொல்பழங்கால அறிவர் வான்பண்புக்கூறு என்றனராதல் கூடும். அது ஒளியினும் மின்னாற்றலினும் ஆற்றல் சான்றது. ஏனெனில் அது இயற்கையையே இயக்குவது. தன் மறுபடிவம் அல்லது மறு படிவங்களையே படைத்து உருவாக்குவது. ஒசை பொருட் கூற்றின் வழிமட்டுமே வந்து செவிப் படுவது; நொடிக்கு 1020 அடியே செல்வதாதலால் ஒளி மின்னாற்றல் களைவிட மிக விரைவு குறைந்தது. இவை இன்றைய இயல்நூல் தரும் செய்திகள். ஆனால் பண்டை ஐம்பூதக் கோட்பாடோ அதை ஒளி கடந்த காற்றுப் பண்புக் கூறாக நாம் கொண்ட மின், காந்த இயக்கம் கடந்த வான்பண்புக் கூறாகக் கொண்டது. இது வருங்கால மறு சிந்தனைக்குரியது. ஆனால் தற்கால இயல்நூல் செவிப்படும் ஓசையையன்றி, செவிப்படா ஓசையை, வெப்பம், காந்தம் போலப் பொருட் கூறு வழிச்செயலாற்றும் ஓசையை யன்றி ஒளிமின் போலத் தூய ஆற்றல் அலையைக் கருதவில்லை என்னலாம். மணம் எத்திசையிலும் மேலும் செல்வதாயினும் தொலை செல்லாதது. சுவை பொருட் சார்பும் நீர்ச் சார்பும் கொண்டு பெரிதும் கீழ்நோக்குவது. ஒளிக்கூறான தீ நேர் நோக்கும் மேல் நோக்கும் உடையது. காற்றுக்கூறான ஊறுணர்வு பெரிதும் பொருட்கூறு பற்றிச் சூழ்திசை பரவுவது. ஆனால் வான்கூறான ஓசை சூழ்திசையும் மேல்கீழும் எல்லையற்றுச் செல்லவல்லது. ஒளியும் மின்னாற்றலுமே - சிறப்பாக ஒளியே - இயற்கை யளாவிய ஆற்றல் என்பது ஐன்ஸ்டீன் கோட்பாடு. ஆயினும் கேளா ஓசை இயல்பை அறியக்கூடுமானால் ஓசையும் வான்பண்புக் கூறுமே இயற்கை யெல்லையளாவியனவாய் இருத்தல் கூடா தென்றறிக. சுழற்சியுள் சுழற்சியாகக் கொள்ளும் கதிரவனும் பிற வான கோளங்களும் செல்லும்போது, பல்வேறு உருவும் வேகமுமுடைய அச்சுழற்சியால் ஏற்படும் மெல்லோசைகளின் இயைபு யாழிசையை விஞ்சிய இனிமையுடைய தெனப் பண்டை அருட்கவிஞர் கூறியுள்ளனர். அவ்வோசையியைபாகிய பேரினிமையே அவர்கள் `தசநாதம்' `பேரிசை' என்று குறித்தனர். இவ்வாறு இயற்கையும் உயிரும் ஒரே ஐம்பூதக் கூட்டுற வால் இயங்கி, மெய்ம்மையில் ஒரு பெரும் பேரியாழாகவும் அதனோடியைந்த சின்னஞ் சீறியாழாகவும் ஒத்திசைந்தியல்வன என்று கூறலாம். ஐம்பூதம் என்னும் சட்டத்தில் சுழலும் பெருஞ் சக்கரங்கள், சிறு சக்கரங்களாக அவற்றின் பேரெல்லை, சிற்றெல்லைகள் அமைகின்றன. சுழல்வது உலகங்கள் மட்டுமல்ல - உலகின் அணுக்களும், உயிர்களும் சுழல்கின்றன என்று காண்கிறோம். பெரிய பறக்கும் குதிரைகளருகிலும் உள்ளும் சிறிய பறக்கும் குதிரைகளாக, பெரும் பெரிதினுள் பெரிதும், பெரிதினுள் சிறிதும், சிறிதினுள் சின்னஞ் சிறிதுமாக யாவும் சுழன்று சுழன்று இயல்கின்றன - அச்சுழற்சியே நம் வாழ்வின், செயலின், சிந்தனையின் பின்னணியும் முன் மாதிரியும் ஆகும் என்னலாம். ஐன்ஸ்டீன் சுட்டிக்காட்டி, வள்ளுவரும் தொல்பழங்கால அருள் மரபும் குறிப்பில் ஒளியாட, இச்சுழற்சியின் நுட்பமாயங் களில் கருத்தோட விடுவோமாக. 7. திருகேணி ஆறு ஓடுகிறது! நாம் பேசும் மனித இனமொழியின் ஒரு வாசகம் தான் இது. ஆனால் மனித இனம் தானே படைத்து உருவாக்கியுள்ள மாயங்களில் ஒன்றுக்கு - மொழி மாயத்துக்கு இது ஒரு சான்றாய் அமைகிறது. குதிரை ஓடுகிறது என்று நாம் கூறுகிறோம். அது சிறிது நேரம், சிறிது தொலை ஓடி நிற்கும் என்று தான் எதிர்பார்ப்போம் - ஓடிக் கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். குதிரை ஓடுகிறது என்ற வாசகத்துக்கு அவ்வாறு பொருள் கொள்ளவும் மாட்டோம். ஆயினும் ஆறு ஓடுகிறது என்று நாம் கூறும்போது, அதையே எதிர்பார்க்கிறோம். அவ்வாறே பொருள் கொள்கிறோம். ஓடும் பொருளை முன் பார்த்த இடத்தில் பின் பார்க்க முடியாது. பார்க்க எண்ணவும் மாட்டோம். ஆனால் நேற்று ஆற்றின் ஒரு துறையில் குளித்த நங்கை இன்றும் நாளையும் தயங்காமல் அதே இடத்துக்குக் குளிக்கச் செல்வாள். ஆறு ஓடி விட்டது என்று கருதி வாளா இருந்து விடமாட்டாள். ஆறு என்றும் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பது மட்டுமன்று. அது புறப்பட்ட இடத்தில் இருந்து என்றும் புறப்படும். ஓடுமிடமெங்கும் என்றும் ஓடும். செல்லும் திசையில் என்றும் செல்லும். அது ஒரு பொருளல்ல, விலங்கு பறவை போன்ற இயங்கு பொருள்கூட அல்ல. இடையறாது இயங்கும் பொருள் மட்டும் கூட அல்ல. இடையறாது இயங்கும் இடையறாத் தொடர்பு. மொழி மாயம் இது மட்டுமன்று. ஆற்றில் வெள்ளம் பொங்குகிறது. ஆற்றில் நீரே இல்லை. இவ்வாறெல்லாம் நாம் பேசுகிறோம். ஆறு நீரானால், ஆற்றில் நீரே இல்லை என்று எப்படிக் கூற முடியும்? ஆறு நீரல்ல என்பதை இது காட்டுகிறது. ஆற்றில் நீர் ஓடாத காலத்திலும் நாம் அதை ஆறென் போம், நீர் மீண்டும் வரும் என்பது கருதி. நீர் இல்லாத ஆறு உயிரில்லாத உடல் போன்றது. உயிரில்லாத உடலை உட லென்று நெடிது கூறமாட்டோம், பிணம் என்போம், அவ்வாறு நடத்துவோம். அது போலவே ஆறு நிலையாக வற்றிவிட்டால், அது ஆறு என்பதே மறக்கப் பட்டு, மணல் திட்டு என்று பெயர் பெற்று விடும். ஆறு கரையல்ல, மணற்படுகையல்ல என்பதை இது காட்டுகிறது. ஓடும் நீரும் கரையும் படுகையும் சேர்ந்ததுதான் ஆறு, இவை தனித்தனி; எவையும் ஆறல்ல. ஆற்றுக்கு உடல் கரை, நீர் உயிர் என்று கூறலாம். ஆனால் ஆற்றுநீர் ஆற்றுடன் அமைவதில்லை. அது கடலில் கலக்கிறது. கடலிலிருந்து நீர் ஆவியாகி முகில் வடிவாய் வானில் தவழ்ந்து மழையாகப் பொழிகிறது. மலையில் பெய்த மழை மீண்டும் ஆற்று நீராகிறது. ஆற்றின் உயிராகிய நீர் இங்ஙனம் இடையறாது இயங்கும் இடையறாத் தொடர்பு மட்டுமல்ல, இடையறாது இயங்கும் ஓர் இடையறாத சுழல் வட்டக் கூறு. ஆறு அச்சுழல் வட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. நீரின் மாற்று வடிவங்களுள் ஒரு மாற்று வடிவாக மோரை யும் சேர்த்து, நகைச்சுவையும் வசைச்சுவையும் மிக்க தமிழ்ப் புலவர் ஒருவர் மோர் விற்கும் ஆய்ச்சியரை நையாண்டி செய்துள்ளார். `கார் என்று பெயர் படைத்தாய், ககனத் துறும்போதில்; நீர்என்று பெயர் படைத்தாய், நெடுந்தரையில் வந்ததன்பின்; தார்ஒன்று நீள்குழலார் ஆய்ச்சியர்கை சார்ந்ததன்பின் மோர் என்று பெயர் படைத்தாய், முப்பெயரும் பெற்றாயே!' ஆற்றின் கரைக்கு உடலும், ஆற்று நீருக்கு உயிரும் உவமை மட்டுமல்ல, விளக்கமும் ஆகும். ஆனால் அதுபோலவே எதிர்திசையிலும் உடலுக்கு ஆற்றின் கரையையும், உயிருக்கு ஆற்று நீரையும் விளக்க உவமமாகக் கொள்ளலாம். ஆற்றின் கரை இயங்காதது, இடம்விட்டு இடம் பெயராதது, நிலையானது. ஆற்று நீரோ ஓயாது இயங்கு வது, இடம்விட்டு இடம் பெயர்ந்துகொண்டே இருப்பது. அது நீர் என்ற பொருளன்று. அப்பொருளின் இடையறாத் தொடர்பு. அதுபோல உடல் இயங்காத பொருள். உயிர் இயங்கிக் கொண்டே இருப்பது. ஆற்றின் கரை தனி உயிரின் உடலுக்கு உவமையன்று. ஏனெனில் ஆற்றின்கரையும் தொடர்புடையது. நீர் செல்லும் இடமெல்லாம் அது செல்வதில்லை. ஆனால் ஆங்கெல்லாம் அது தனித்தனி கரையாகத் தொடர்ந்து நிலைபெறும். இக்கரைக்கு உவமையாவது தலைமுறை கடந்து தலைமுறை யாகச் செல்லும் இனத்தின் உடலே யாகும். ஆற்று நீருக்கு உவமையாகும் உயிரும் இது போல, தனி மனிதன் உயிரன்று, இனத்தின் உயிரே. ஆற்றின் கரை ஆற்று நீரின் செயலாலேயே ஆவது, அழிவது, மாறுவது. ஆறு பல கிளைகளாகப் பிரியும் போது, ஆற்று நீரே கிளைதோறும் கரையமைத்துச் செல்வது. அது போல உடல் உயிரின் ஆக்கம். உயிரே அதை அழிப்பது, மாற்றுவது. உயிர் பலவாகப் பிரியும் போது, தாய் உயிரே உயிர்தோறும் உடல் உண்டு பண்ணுகிறது. ஆற்றின்கரை ஆறு கடந்து தொடர்வதில்லை. இயங்காப் பொருளாகவே நின்று விடுகிறது. ஆற்று நீரோ நீர்வடிவில் ஆறு கடந்து கடல், நீராவி வடிவில் கடல் கடந்து வான், மழைநீர் வடிவில் மீண்டும் ஆறு ஏன் ஓயாது இடையறாது தொடர்ச்சி யாய்ச் சுழல் வட்டமாகச் சுழன்று கொண்டே இருக்கிறது? இதுபோல உடல் இனங் கடந்து நிலவுவதில்லை. இனத்தின் தலைமுறைதோறும் உயிர் தோறும் தனித்தனி இயங்காப் பொருளாக நின்று விடுகிறது. ஆனால் உயிர் உடல் கடந்து, தலைமுறை கடந்து இன முழுதும் ஒன்று பலவாகிப் பெருகி, உடல்களை ஒன்று பலவாகப் பெருக்கு வதுடன் நிற்பதில்லை. அது இனங்கடந்த இயற்கையில் மழைநீர் போலப் பிறந்து இனத்தில் இடைவிடாது என்றும் ஓடி இயற்கையளாவி வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. இனத்தின் உடல்களின் தொடர்பைக் கவனியாமல் ஒவ்வொரு தனி உயிரின் உடலையும் ஒரு தனிப் பொருளாகக் கணிப்பர் பாமர மக்கள். அறிஞர் நிலைகூட வேறன்று. அதுபோல உயிர் இனத்தில் தனி உயிர்களின் தொகை கடந்து ஒன்று பலவாகிப் பெருகுவதையும், இனங்கடந்த இயற்கை யளாவுவதையும் கவனியாமல் அவர்கள் அதைத் தனி உயிரில் இடம் பெறும் ஒரு தனிப் பொருளாகப் பாமரரும், உடல் சார்ந்த தனி ஆற்றலாக அறிஞரும் கொள்வர். பாமரரும் சரி, அறிஞரும் சரி - உடல் உயிர்த் தொடர்பு பற்றியோ, உயிரின் இயல்பு பற்றியோ, உயிரின் படைப்பாற்றல் பற்றியோ எதுவும் புரிந்துகொள்ள முடியாமல், எதுவும் விளக்க முடியாமல் போனதன் காரணம் இதுவே. உயிர்கள் பல, பல வகைப்பட்டன. ஆனால் அவை ஆற்று நீரின் துளிகள் போல ஒரே இயக்கத்தின் கூறுகள்; கிளைக் கூறுகள். இயற்கையாற்றலின் ஓர் கூறாகத் தொடங்கி, இயற்கை யுடன் ஊடாடிக்கொண்டே, இயற்கையளாவ வளர்ந்துவரும் ஓர் இயற்கையின் சுழற்சியாக, நிலவுலகச் சுழற்சியுடன் இணைந்த ஒரு சுழற்சி யாகவே அது கருதத்தக்கது. உயிர்களின் இனமலர்ச்சி வரலாற்றைத் தற்கால இயல் நூலின் ஒரு பிரிவாகிய உயிர் நூல் (க்ஷiடிடடிபல) மிக விரிவுற ஆராய்ந்துள்ளது, ஆராய்ந்து வருகிறது. உயிர்கள் எண்ணற்றன; கோடிக்கணக்கானவை; சில அணு வினும் சிறியன. யானை, திமிங்கிலம் போன்றவை; கிட்டத்தட்டச் சிறு மலைகள் போன்றவை. இவற்றினும் பாரிய உயிர்கள் முன்னூழிகளில் இருந்திருப்பதாக அறிகிறோம். இவற்றின் வகைகள், வகை வேறுபாடுகளும் எண்ணற்றவை. ஆழ்கடலில் வாழ்வன, நீர்ப்பரப்பில் மிதப்பன, நிலமீது தவழ்வன, நில மகழ்ந்து வாழ்வன, வானில் பறப்பன என அவற்றின் வாழ்விடங் களும் வாழ்வு வகைகளும் வேறுபடுகின்றன. உயிர்களிடையேயுள்ள வேற்றுமைகளைத்தான் எவரும் முனைப்பாகக் காண்பர். ஆனால் அவ்வேற்றுமைக் காட்சிகளுக்கு அடிப்படையே ஒற்றுமை தான் - ஆழ்ந்த அடிப்படை ஒற்றுமை மீதே அவ்வேற்றுமைகள் நிகழ்கின்றன, காணப்படு கின்றன. நாம் ஒற்றுமையடிப்படையில் இனங்களையும் பேரினங் களையும் தொகுக்கிறோம். ஒற்றுமைகளிடையே காணப்படும் வேற்றுமைகளின் அடிப்படையில் கிளையினங்கள், இன வகைகள் வகுக்கிறோம். உயிர் நூலார் இவற்றுடன் அமையவில்லை. வேறுபாடு எவ்வாறு அமைகின்றது என்று ஆராய்ந்தனர். சூழல் மாறுபாட்டுக் கிணங்கத் தனி உயிரில் ஏற்படும் மாறுபாடுகளே இனம்கிளையினமாக, இனவகையாக, புது வகையாகப் பல தலைமுறைகள் கடந்து, ஊழி கடந்து மாறுபட்டுள்ளன என்று கண்டனர். வேறுபாடு காலத்தின் செயல் என்பது காணவே, ஒற்றுமை இன்னும் நீடித்த வேறுபடாக் காலத்தின் நிலை என்பது பெறப்பட்டது. உயிர்களை அவர்கள் வளர்ச்சிப் படிகளுக்கேற்பக் கீழ் உயிரினங்களிலிருந்து மனிதன் வரை, படிப்படியாக, வகை வகையாக, வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்திக் காட்டினர். மனிதனும் குரங்கும் இரண்டு கால்களுடன் நடப்பவை. இவற்றுக்கு முற்பட்ட படியில் விலங்குகள் நான்கு கால்கள் உடையன. இன்னும் முற்பட்டபடி பறவைகளுக்கும் ஊர் வன வற்றுக்கும் (சுநயீவடைநள) பொதுவான படி. இவை யனைத்துமே முதுகெலும்புடைய உயிர்கள். மீன்கள் இவற்றுடன் தொடர்புடைய நீர்வாழ் உயிர்கள். முதுகெலும்பற்றவை புழுப்பூச்சிகள் (ஐளேநஉவள). இவற்றிலும் தொடக்க நிலை உயிரினங்கள் அணு உயிர்கள் (க்ஷயஉவநசயை) போன்றவை. தொடக்க உயிரினங்களுடன் தொடர்புடையவை மரஞ்செடி கொடிகள். இவற்றிலும் கிளையுடைய மரங்களை விட, ஒற்றைத்தடி மரங்கள், செடிகொடிகள் பொதுவாக முற்பட்ட படியுடையவை. உயிர்கள் ஒரே மொத்தமாக ஒரு கடவுளால் படைக்கப் பட்டன, அல்லது தோன்றின என்ற கருத்து இடைக்காலத்தது. மனித இனம் சென்ற சில நூறாயிர ஆண்டுகளுக்குள்ளும், உயிரினங்கள் ஒரு சில கோடிக்கணக்கான ஆண்டுகளுக் குள்ளுமே தோன்றிப் படிப்படியாக வளர்ந்தன என்பது பல இயல்நூல் துறைகளின் ஒன்றுபட்ட ஆராய்ச்சி முடிவு. உயிரினங்களின் இப் படிமுறை வளர்ச்சியே இன மலர்ச்சி (நுஎடிடரவiடிn) என்று கூறப்படுகிறது. உயிர்கள் தோன்றுவதற்குப் பலகோடி ஆண்டுகட்கு முன்னிருந்தே நிலவுலகம் நிலவியுள்ளது. ஆனால் அது உட்பகுதி மட்டுமன்றி, புறத்தோடும் எரிகுழம்பாய் இருந்தது. நிலவுலகச் சுழற்சியால் அது ஆறி அமரவும், அதன் மீது படிந்த நீராவி கடலாகப் படியவும், பிற ஆவிகள் வளிமண்டலமாகச் சுழலவும், ஓயா வெயில் பனி மழைகளால் ஆறியபாறைகள் பொடிபட்டு மண் உண்டாகவும் பலகோடி ஆண்டுகள் பிடித்தது. உயிர்கள் அதன் பின்னரே ஏற்பட முடிந்தது. உயிர் நூலார் விரிவுற ஆய்ந்துள்ள இதே உயிர் மலர்ச்சியைத் தொல் பழங்காலத் தமிழர் ஐம்பூத மலர்ச்சி யாகவும் ஐம்புல மலர்ச்சியாகவும் கொண்டனர். `கல்தோன்றி மண் தோன்றாக் காலம்' என்ற சங்க இலக்கியத் தொடர் ஐம்பூத மலர்ச்சியில் கடைசிப்படியையும், இயல் நூலார் விளக்கும் உயிர்த்தோற்றத்துக்கு முந்திய படியையும் சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு புலனுணர்ச்சியையும் உயிர் மலர்ச்சியில் ஒரு படியாகக் காட்டுகிறார் தொல்காப்பியர். ஒன்றறி வதுவே உற்றறி வதுவே, இரண்டறி வதுவே அதனுடன் நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே, ஆறறி வதுவே அவற்றொடு மனனே- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே! (தொல். சூ. 1526) ஊறுணர்வு மட்டுமுடைய ஓரறிவுயிர்களாகிய புல்லும் மரமும்; அதனுடன் சுவையுணர்வுமுடைய ஈரறிவுயிர்களாகிய நத்தை, சிப்பி ஆகியவையும்; அவற்றுடன் முகர்வுணர்வுமுடைய மூவறி வுயிர்களாகிய கறையான், எறும்பு ஆகியவையும்; அவற்றுடன் ஒளியுணர்வும் உடைய நாலறிவுயிர்களாகிய நண்டு, தும்பி, ஆகியவையும்; அவற்றுடன் ஆறாம் அறிவாகிய மனமும் உடைய ஆறறிவு யிராகிய மனிதனும் என உயிர்கள் ஆறு படி வகைகளை உடையன என்று நூலோர்தம் முடிபை ஒழுங்கு படுத்தியுள்ளனர். செடி கொடியினம் ஓரறிவுயிர் என்று வகுக்கப் பட்டதும், அதனுள்ளும் புறக்காழ் உடையவை புல், அகக்காழ் உடையவை மரம் என்று வகைப்படுத்தப் பட்டதும் தொல்காப்பிய காலத்துக்கு முற்பட்டே தமிழர் இயல்நூல் உணர்விலும் அறிவாராய்ச்சி நுட்பத்திலும் அடைந்திருந்த மேம்பாட்டைச் சுட்டிக் காட்டு வன ஆகும். உயிர்கள் தொடர்புறவு தனி நிகழ்ச்சிகளல்ல, இயற்கையின் சுழற்சியுடனும் ஒத்த ஓர் இயக்கமே என்பதை உயிர் மலர்ச்சி காட்டுகிறது. ஆற்றொழுக்குப் போல அது இயற்கையிலிருந்து தொடங்கி, இயற்கையை அவாவிச் சுழல்வது மட்டுமன்று; ஒவ்வொரு தனியுயிர் வாழ்விலும் தலைமுறையிலும், ஒவ்வோர் இனவகை வாழ்விலும் இன வாழ்விலும் பலசிறு சுழற்சிகள், கலைகள், பின்னல்களுக்கு அது ஆளாவது ஆகும். தொடக்க உயிரினங்களில் தனி உயிர் வாழ்வுக்கும் தலைமுறை வாழ்வுக்கும் வேறுபாடு கிடையாது. அணு உயிர் களில் முந்திய உயிர் வெடித்தோடிய இரண்டு உயிர்களாவதால், முந்திய உயிரின் முடிவு அடுத்த உயிரின் தொடக்கம் ஆகிறது. அத்துடன் ஓர் உயிர் இரண்டாக, இரண்டு நாலாகவே பெருகிச் செல்கிறது. ஆனால் உயிரின மலர்ச்சியில் மேலின உயிர்களில் தனி உயிருக்கும் தனி உயிருக்கும் இடையில் இனப் பெருக்கம் கடந்த முதுமை, அதாவது இனம் பேணும் பருவம் இடைப் படுகிறது. இதனால் முந்திய உயிரின் நடுமலர்ச்சிப் பருவத்தி லேயே அடுத்த உயிரின் பிறப்பு ஏற்படுகிறது. அத்துடன் ஓர் உயிர் இரண்டுக்கு மேற்பட்ட உயிரினங்களாகவும் பெருகு கின்றன. உயிர்களின் மாறுபாடுகளிடையே சில சமயம் பழைய உறுப்புக் கெடுகிறது. பல கீழின உயிர்களின் வால், இடையே சில உயிரினங்களிடையேயும் மனிதனிடத்திலும் அறவே, அல்லது கிட்டத்தட்ட அறவே மறைந்து விடுகிறது. கீழினங்கள் சிலவற்றில் கண்கள் பலவாக இருப்பினும், கிட்டத்தட்ட எல்லா உயிரினங் களிலும் அவை இரண்டாக நிலைத்து விடுகின்றன. மீன்களின் செவுள்கள் அடுத்த உயிர்களிலேயே மறைந்து விடுகின்றன. வேறு சில சமயம் பழைய உறுப்புக்கள் புது வடிவும் பயனும் பெறுகின்றன. மீன்களிடம் நீந்த உதவும் உறுப்புக்களான துடுப்புக்கள், செதிள்கள் ஊர்வனவற்றுள் பல கால்களாகி, பின் ஆறு கால்களாகவும் நான்கு கால்களாகவும் குறைகின்றன. பறவைகளிடம் முன்கால்கள் இறக்கைகளாகப் பறப்பதற்கும், குரங்கு கடந்து மனிதனிடம் அவை வேலை செய்யும் கைகளாகவும் மாறியுள்ளன. மீன்களின் மிதவைப் பைகள் உயர் உயர்வான ஈரல்களாகியுள்ளன. இறுதியாகப் புதிய உறுப்புக் கள், கூறுகள் தோன்றுவதும் உண்டு. முதுகெலும்பும், மூளையும் இவற்றுள் முக்கியமானவை. புதிய உறுப்புக்கள் மட்டுமன்றி, புதிய வளர்ச்சிகளும் பெரும்பாலும் உடலின் உள்ளீடான வளர்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாறுபாடுகளிடையே பழைய உறுப்புக்கள், வாழ்க்கைப் பழக்கங்கள் தம் தடங்களை நீண்டகாலம் விட்டுச் சென்று ள்ளன. மழை நாளில் கைகளை மேல்நோக்கியும் கால்களைக் கீழ்நோக்கியும் முடக்கிக் கொண்டிருந்த குரங்குகளின் கைகால் மயிரொழுங்கு நீர் வடிந்த திசையில் படிந்திருத்தல் இயல்பு. அதே ஒழுங்கை மனித இனம் இன்றும் காட்டுகின்றது என்று அறிஞர் டார்வின் நுண்ணிதிற் கண்டு உணர்த்தியுள்ளார். இன மலர்ச்சியில் ஒவ்வொரு படியும் உண்மையில் ஓர் அலை; ஒரு சுழற்சியேயாகும். தனி உயிர் வாழ்வு கீழின உயிர்களில் இனவாழ்வின் பால் ஒரு சிற்றலை. ஆனால் உயிர் உயிரினங்களில் தனி உயிரின் வாழ்வு அலை வேறு, இனவாழ்வின் தலைமுறை வாழ்வு அலைவேறு எனப் பிரிவுறுகின்றது; தனி உயிர் வாழ்வு அதன் பிறந்த மண் தொடங்கி இறப்புடன் முடிகிறது. ஆனால் அது அடுத்த தலைமுறை உயிரை உண்டு பண்ணும் பருவம் இவற்றுக்கு இடைப்பட்ட உயிர் மலர்ச்சிப் பருவம் ஆகும். இந்த உயிர் மலர்ச்சியிலிருந்து அடுத்த உயிரின் மலர்ச்சிப் பருவம் வரை ஒரு தலைமுறை ஆகிறது. உயிர் மலர்ச்சி என்பது தனி உயிர் வாழ்வில் இன மலர்ச்சியின் அலை தொடங்கும் பருவமேயாகும். தனி உயிர் வாழ்வில் அதற்கு முன்னுள்ள பருவம் முதிராப் பயிற்சிப் பருவ மாகவும் பின்னுள்ள பருவம் புத்துயிர் பேணும் பருவமாகவும் மட்டுமே கழிகின்றன. தனி உயிருடன் தொடர்பில்லாமலே, அதன்மீது மலர்ச்சிப் பருவத்திலிருந்து மலர்ச்சிப் பருவத்துக்குத் தாவி இன வாழ்வு தவழ்கின்றது. தனி உயிர் இனமலர்ச்சியில் ஈடுபடும் இப்படியிலேயே, இனவாழ்வில் முட்டையிடுதல் என்னும் புதுமை நிகழ்கின்றது. தனி உயிர் வாழ்வில் முட்டைப்பருவம் என்பது உண்மையில், முட்டையிடும் உயிர்கள் முட்டை யிடுமுன் அடைந்த வளர்ச்சிப் படியின் ஒரு செறிவேயாகும். முதல் ஊழி உயிர்கள் பலகோடி ஆண்டுகளில் அடைந்த முன்னேற்ற மனைத்தையும் புதிய முட்டை ஊழி உயிர்கள் முட்டையின் வாழ்வுக் காலத்துக்குள் விரைந்து செறிவுறப்பெற்று, புதிய ஊழியின் புத்தின வாழ்வில் முனைகின்றன. முட்டையிடும் உயிர்களிலிருந்து கருவுயிர்க்கும் உச்ச உயர் உயிரினங்களுக்கு வரும்போது, நாம் இதுபோல இன்னொரு ஊழியில் புகுகிறோம். முதல் இரண்டு உயிரின ஊழிகளில் உயிரினமடைந்த முன்னேற்ற முழுவதையும் இவ்வூழி உயிர்க் கருவிலேயே விரைந்து செறிவுறப் பெற்று, பிறந்தவுடன் மூன்றாம் ஊழியில் புகுந்து முன்னேறுகிறது. மனித இனம் உச்ச உயிரினங்கள் தாண்டி நெடுந் தொலை முன்னேறிவிட்டது. இம்முன்னேற்றம் மற்ற ஊழிகளில் அடைந்தது போன்ற புற உடல் முன்னேற்றமல்ல. அக உறுப்பு முன்னேற்றமும், அதனுடன் இசைந்த வாழ்க்கைக் கருவி கலங்கள், வாய்ப்பு வன்மைகள், கருவியமைப்புகளின் மேம்பாடு ஆகும். உயிரினங்களின் கருநிலைக்காலம் நீடித்தது. அதன் பின்னும் தாய் மடியிலும் குழுச் சூழலிலும் வளரும் அறியாக் குழந்தைப் பருவம், விளையாட்டுப் பருவம் எனப் பயிற்சிப் பருவங்கள் பல. உயிரினங்கள் பலகோடி ஆண்டுகளாக அடைந்த வளர்ச்சியை மனித உயிர் கருப் பருவத்திலும், உச்ச உயர் உயிரினங்களும் பண்படா மனித இனமும் அடைந்த பன்னூறா யிர ஆண்டு வளர்ச்சியைத் தாய் மடியிலும், நாகரிக வளர்ச்சிக் கால மனிதனின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சியை விளை யாட்டுப் பருவத்திலும் பெறுகிறான். பல் விழுந்து முளைக்கும் பருவத்தில் மனிதன் ஒரு பிறப்பிலேயே இரு பிறப்பாகி விடுகிறான் என்னலாம். குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, சமய வாழ்வு, அரசியல் வாழ்வு - மொழி, கலை, இயல்நூல் - கைக் கருவி, விலங்காற்றல் கருவி, இயற்கையாற்றல் கருவி - சமையல் தொழில், உழவு, நெசவு, கட்டடக்கலை, பொறித் தொழில் - செம்பு, வெண்கலம், இரும்புக்கருவிகள் - இவ்வாறு மனித நாகரிகம் சென்ற சிலபல ஆயிர ஆண்டுகளுக்குள் அடைந்த முன்னேற்றம் அளவிலும் வேகத்திலும் உயிரின ஊழிகள் முன் என்றும் காணாதவை. உண்ணா அளவு உண்டவன் அதைச் செரிமானம் செய்து கொள்ளப் புதுவகை முறைகள் தேடியாக வேண்டுமன்றோ? மனித இனம் அவ்வாறு தன் மாபெரு முன்னேற்றங்களை அடுத்த தலைமுறையின் புத்தம் புதிய உயிருக்குச் செறிவித்து ஊட்டக் கண்டுபிடித்த புதிய அமைப்புக்களே மொழி - கலை - கல்வி நிலையங்கள், கல்லூரிகள் முதலியன. உயிரினப் படியின் பலகோடி ஆண்டு வளர்ச்சியும் குருதியில் படிந்து விட்டவை. அவை கருவிலேயே இனக் குருதியுடன் குருதியாக உயிர் வளர்ச்சியில் இடம் பெற்று விடுகின்றன. குடும்பப் படியில் உயிர் அடைந்த பன்னூறாயிரம் ஆண்டு வளர்ச்சியையே தாய் மடியில் பிள்ளை பாலுடன் பாலாகப் பெற்று விடுகிறது. காட்டு மிராண்டியாக மனிதன் சமுதாயம் வளர்த்தபடி பல்லாயிர ஆண்டு வளர்ச்சியுடையது. இது விளையாட்டுப் பருவத்தில் குடும்பச் சூழலிலேயே கிடைத்து விடுகிறது. ஆனால் இதன்பின் சிலபல ஆயிர ஆண்டுகளில் மனிதன் அடைந்த மாபெரும் வளர்ச்சி மனித இனமே - வளர்ந்த முழு மனிதரே இன்னும் செரிமானம் செய்து கொள்ள முடியாத ஒன்று. பழங்கால மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டு அடைந்த வளர்ச்சியைத் தாய் தந்தையிடமாகச் சமுதாயப் பிரதிநிதியாய் விளங்கும் ஆசிரியர் தொடக்கப் பள்ளியிலும், இடைக்கால மனிதன் அடைந்த நூற்றாண்டுக் கணக்கான வளர்ச்சியை அக்கால சமுதாயப் பிரதிநிதியான ஆசிரியர்கள் இடைத்தர, உயர்தரப் பள்ளியிலும், அணிமை நூற் றாண்டுகளில் மனிதன் அடைந்த பெரு வளர்ச்சியை அதில் திளைத்த பேராசிரியர்கள் கல்லூரியிலும், தற்கால வளர்ச்சியை இது கடந்த நிலையங்களும் முதிரா மனித உயிருக்குப் படிப்படியாக அளிக்கின்றன. இன்று மனிதன் அடைந்துள்ள முழு முன்னேற்றமும் கல்லூரி, பல்கலைக் கழகங்களால் கூட ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தர முடிவதில்லை. இதனால்தான் தொழில் பாகுபாடு, அறிவுப் பாகுபாடு தொடங்கியுள்ளது. பொறிவலாளனுக்கு அத்துறையில் முழு மனிதப் பயிற்சி தரப்படுகிறது. மற்றத் துறைகளில் அவன் நிலை காட்டுமிராண்டி கால நிலையே. (அல்லது இடைக்கால நிலையே). இதுபோலவே மருத்துவன் மருத்துவத் துறையில் மட்டும், கணக்கியலாளன் கணக்கியல் துறையில் மட்டும் தற்கால முழு மனிதனாக்கப் படுகிறான். மற்றத் துறைகளில் முற்கால, இடைக்கால மனிதனாக விடப் படவேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மனித இன வளர்ச்சியில் எப்படியும் மனித இனத்தவர் மிகப் பெரும்பாலார் ஈடுபட முடியாத, ஈடுபடக் கருத இயலாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மட்டற்ற விரைவளர்ச்சி, நேர்வரை வளர்ச்சி வளர்ச்சி யன்று. வட்டாகாரமாகச் சென்று, சுழியலைமேற் சுழியலை யாகச் செல்லும் வளர்ச்சியே, வளர்ச்சிப்படி தோறும் புதிய அடிப்படை அமைத்து வளரும் வளர்ச்சி என்பதை இது காட்டுகிறது. மனித நாகரிகம் என்பது மனித இனம் தன் உயிரின ஊழிகள், பேரூழிகள் கடந்து, அடுத்த ஊழி பேரூழியில் காலடி எடுத்து வைப்பதற்காக உருவாக்கி வரும் புதிய அடிப்படையேயாகும். வருங்கால மனித இன வாழ்வு இதனால் அதன் ஆற்றலை, அழிவாற்றலைப் பொறுத தன்று. அரசியல், செல்வ வாழ்வைப் பொறுத்ததன்று. ஆக்க ஆற்றல், இனச் சரிசம ஆற்றலாகிய உண்மை நாகரிகத்தையே பொறுத்தது. நாகரிக முன்னேற்றம் ஒரே நேர்வரையான முன்னேற்றம் என்று பலர் - மேனாட்டினர் கூடக் கருது வதுண்டு. பழமை எப்போதும் பிற்பட்டும் புதுமை எப்போதும் முற்பட்டும் இருக்க வேண்டும் என்பது மேலை நாட்டினருக்கும் மேனாட்டுக் கல்வி கற்றவர்க்கும் இயல்பான ஒரு மூட நம்பிக்கை ஆகும். இது எவ்வளவு தவறு என்பதை வரலாறு மெய்ப்பித்துக்கொண்டே வந்தாலும், இப்புதுமைக்கால மூட நம்பிக்கை இன்னும் எளிதாக அகன்ற பாடில்லை. இக்கால ஐரோப்பிய நாகரிகத்தைவிட ஆயிர ஆண்டு களுக்கு முற்பட்ட இடையிருட்கால ஐரோப்பிய நாகரிகம் மிகமிகப் பிற்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட உரோம கிரேக்க நாகரிகங்களும், அதற்கும் முற்பட்ட நடு உலக, கீழை உலக நாகரிகங்களும், இடையிருட் காலத்தைவிடச் சிறந்தவை மட்டுமல்ல, சில பல கோளங்களில் இன்றைய ஐரோப்பிய நாகரிகமும் தாண்டியவை ஆகும். அத்துடன் அன்றைய நாகரிகத்துக்கே மூலமானவையும் அவையே. கீழ்திசை நாகரிகங்கள் நடு உலக நாகரிகத்துக்குத் தாய் மூலமானவை, கீழ்திசை நாகரிகங்களுக்கும் முற்பட்டது, மூலமானது, பன்மடங்கு மேம்பட்டது சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழ் நாகரிகம். தற்கால இயல்நூல் தாண்டி ஐன்ஸ்டீன் எவ்வளவு தொலை நோக்குச் செலுத்தியுள்ளனரோ, அவ்வளவு ஐன்ஸ்டீன் தாண்டிச் சங்க இலக்கியமும், அது தாண்டித் தொல்காப்பிய மும் திருக்குறளும் தொலை நோக்குச் செலுத்தியுள்ளன என்று முன் இயல்களில் பல இடங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளோம். உலக நாகரிகம் கீழிருந்து மேல் நேர்வரையாக, அல்லது செங்குத்தாகச் செல்வதன்று. நேரே ஏணிபோல ஏறிச் செல்வதும் அன்று. வட்டவட்டமாகச் சுற்றிச் சுழன்று, ஒவ்வொரு சுற்றும் ஒரு முன்னேற்ற அலையாகப் புறப்பட்ட இடத்துக்கு வந்தாலும் இதற்கு மேற்பட்ட உயரம் நண்ணி, இவ்வாறு சுற்றிச் சுற்றித் திருகிச் செல்லும் திருகேணியே மனித இன வாழ்வு, மனித இனநாகரிகம். திருகேணி எப்போதும் மேல்நோக்கிச் செல்வதுமன்று. அவ்வப்போது கீழ்நோக்குவதும் கீழ்நோக்கிச் சாய்வதும் ஆகும். சில பல சமயம் ஏணி இற்று முறிவுற்றுப் பெருத்த இடைவெளி காணப்படுவதும் உண்டு. ஆனால் கீழ்நோக்கும் போக்கு அலை வீழ்ச்சியாக, ஓய்வாகவே நிலவுவது. அடுத்த படி வளர்ச்சியை அது ஊக்குவது ஆகும். முறிவும் மறு வளர்ச்சிக்குரிய கடுமையான அனுபவமாகவே நாளடைவில் அமையும். உலகிலும் சரி, தமிழகத்திலும் சரி, பல்லாயிர ஆண்டு களுக்கு முன் மனித நாகரிகம் ஒரு விரைந்த, சரிசம நிலையற்ற வளர்ச்சி பெற்று, மேல் வளர்ச்சியற்று நின்றது. அது மட்டுமன்று, அவ்வளர்ச்சி தளர்ந்து முறிவுற்று, அதன் அழி பாட்டிடையே ஏற்பட்ட புது மறு வளர்ச்சியாகவே, உலகின் தற்போதைய நாகரிகம் எழுந்துள்ளது. ஆனால் மறுபடியும் அது செரிமானமாக முடியாத திடீர் வளர்ச் சியுள் முனைந்துள்ளது. பழைய முறிவு, அழிபாட்டின் தடமகலாத தமிழக மக்களுக்கு இச்சமயம் உலக நாகரிக வளர்ச்சியில் ஒரு தனிப் பெரும் பொறுப்பு உண்டு. சரிந்து முறிந்த அழிபாட்டுக்கு மட்டுமன்றி அதன் அனுபவத் துக்கும் உரிமையாளராகிய தமிழர்; புதிய வளர்ச்சிக்கு உரமூட்டி, அதனால் எதிர்கால உலகம் புது வளர்ச்சி பெறுவதற்குரிய அடிப்படையை அமைக்க முடியும். அதற்குரிய பழைய கட்டுமானப் பலகைகளாக, செங்கல்களாக, திருக்குறளும் சங்க இலக்கியமும், சிலம்பும் மேகலையும், பெருங்கதையும் சிந்தாமணியும், திருமந்திரமும் திருவாசகமும், திருக்கோவையாரும், உலாவும் பரணியும், சிந்தும் தெம்பாங்கும் அவர்களிடம் உண்டு. அதன் பழைய உரமிக்க மண்ணாகத் தமிழ்ப் பண்பாடும் உண்டு. இயல் நூலும் ஐன்ஸ்டீன் முழுச் சிந்தனை நோக்கும் புறத் தூண்டுதலாக, வள்ளுவர் மெய்யுணர்வு நோக்கு அகத்தூண்டு தலாகக் கொண்டு, தமிழகம் சுழலும் உலகை இயற்கையின் மலர்ச்சி நோக்கி அடுத்த பேரூழியில் செலுத்த நாம் பாடுபடு வோமாக. (முற்றும்) எஎஎ அப்பாத்துரையம் - 18 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) ஆய்வுகள்  வாழ்க  உலகம் சுற்றுகிறது ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 18 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+328 = 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் வாழ்க 1. வாழ்த்து மரபு ... 3 2. வாழ்வியல் வண்ணம் ... 19 3. வள்ளுவர் கண்ட அருளறம் ... 39 4. வாழ்க்கைக் கோட்பாடுகள் ... 60 5. தமிழர் வாழ்க்கை மரபு ... 91 6. வாழ்க்கைக் குறிக்கோள் ... 115 7. வாழ்வின் வளம் ... 137 உலகம் சுற்றுகிறது முன்னுரை ... 161 1. சுழற்சியில் புரட்சி ... 162 2. மாயத்தின் மாயம் ... 170 3. பறக்கும் குதிரை ... 183 4. அறிவின் சுழற்சி ... 216 5. வட்டாட்டம் ... 252 6. உயிரும் உயிர்முதலும் ... 290 7. திருகேணி ... 314