குடியாட்சி முதற் பதிப்பு – 1946 இந்நூல் 2006 இல் பாவாணர் ஏடகம், சென்னை - 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. ஆட்சி முறையின் தோற்றம் உலகில் நாடுகள் பல. ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி முறை ஒவ்வொரு வகையாயிருக்கிறது. அஃதோடு ஒரே நாட்டில் கூட ஆட்சிமுறை என்றும் ஒரேவகையா யிருப்பதில்லை. நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் அது கூடியும் குறைந்தும் திரிந்தும் மாறுபட்டு வருகிறது. ஒரேநாட்டில் காலத்துக்கேற்றபடி ஆட்சிமுறை மாறுபடுவது போல, ஒரே காலத்திலுள்ள பல நாடுகளிலும் கூட ஆட்சிமுறை மாறுபட்டேயிருக்கிறது. ஆயினும் இம்மாறுபாடுகள் தொடர்பற்ற மாறுபாடுகள் அல்ல. ஒரு நாட்டில் இன்று ஏற்படும் அரசியல் நேற்று ஏற்பட்டிருந்த அரசியலின் தொடர்ச்சியேயாகும். மேலும் ஒரு நாட்டின் அரசியல் நிலையும் மாறுபாடும் அதனையடுத்துள்ள நாடுகளையும் தாக்காமலிரா. எனவே அரசியல் வளர்ச்சியை ஆராய்பவர் இரண்டு வகையான வளர்ச்சிப் போக்கைக் கவனித்தல் வேண்டும். ஒன்று ஒரே இடத்தில் காலப்போக்கால் ஒன்றின்பின்ஒன்றாக ஏற்படும் வளர்ச்சிமுறை இது கீழிருந்து மேற்செல்லும் ஒரு செங்கோட்டை ஒத்தது. இன்னொன்று இடம்பற்றி ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குச் சென்று வளர்ச்சி தரும் வளர்ச்சி முறையாம். இது பக்கவாட்டில் செல்லும் ஒரு படுத்தற்கோட்டைப் போன்றது. உலகில் அரசியல் கருத்துக்கள் வளர்ந்த வகையை இவ் விரண்டு முறையிலும் கவனிப்போம். உலகில் அரசியல் தோன்றிய வகையைப் பற்றியும், முதன்முதலில் எத்தகைய அரசியல் தோன்றிற்று என்பதைப் பற்றியும் மக்களிடையே பலவகையான கருத்துக்கள் பரவி யிருக்கின்றன. குடியாட்சியைவிட முடியாட்சி, அஃதாவது அரசன் இருந்து ஆளும் ஆட்சிமுறையே முற்பட்டதென்று தொன்றுதொட்டுக் கருதப்பட்டு வருகிறது. அரசன் கடவுளருளாலேயே தோன்றினான் என்று அக்காலத்தவர் கொண்டனர். இந்தியாவில் அரசன் திருமாலின் கூறு ஆவான் என்று கொள்ளப்பட்டான். சப்பானியர் அரசன் கடவுளின் ஓர் ஆட்பேர் என்றே கொள்கின்றனர். மேனாடுகளில் நெடுங்காலம் சமயப்பற்றுடைய மக்கள், உலகில் சமயத்தை நிலைநிறுத்த ஒரு சமயத்தலைவனையும் அரசியலை நிலை நிறுத்த ஓர் அரசனையும் கடவுள் அமைத்தார் என்று எண்ணினார்கள். இக் கொள்கை தெய்விக அரசுக்கொள்கை எனப்படும். இக்கொள்கை கவிஞர் கற்பனைக்கும் அரசனைக் சார்ந்தொழுகியவர்களுக்கும் மிகவும் உகந்ததாகவே தோன்றிற்று. ஆயினும் அரசன் மனம்போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது இக்கொள்கைக்கு எதிர்ப்புத் தோன்றிற்று. பகுத்தறிவுக்கண்கொண்டு ஊன்றி நோக்கிய மக்களுக்கு இதன் குறைபாடுகள் நன்கு விளங்கின. கடவுளே ஓர் அரசனை ஏற்படுத்தியிருந்தால் எல்லா நாடுகளும் ஒரே அரசனை ஏற்றிருக்கும். பல அரசர்கள் இருக்கமாட்டார்கள். கடவுள் ஏற்படுத்திய அரசர் படைவலியால் தம் அரசாட்சியைக் காக்கவோ அடுத்த அரசரைத் தாக்கவோ, தாக்கிய அரசரை எதிர்த்து வெற்றி தோல்வியடையவோ காரணமில்லை. படைவலியால் ஓர் அரசன் இன்னோரரசனை அடக்கிச் சிற்றரசனாக்கவோ அவன் நாட்டைக் கவர்ந்து அவனை அரசுரிமையிலிருந்து வீழ்த்தவோ செய்வது முடியாது. மேலும், கடவுளே ஏற்படுத்திய அரசன், அதே கடவுள் ஏற்படுத்திய சமயத் தலைவர்களுடன் அவ்வப்போது முரண்படுவானேன்? தெய்வம் சமயத்தையோ சமயத்தலைவர்களையோ ஏற்படுத்திய தென்பதும் மக்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. இடந்தோறும் காலந்தோறும் வேறு சமயங்களும் சமய உட்பிரிவுகளும் தோன்றித் தெய்வத்தின் பேரால் தலைவர்கள் பூசலிட்டதை அவர்கள் கண்டனர். எனவே, பகுத்தறிவாராய்ச்சியில் முனைந்த அறிஞர் தெய்விகக் கொள்கையை உதறித்தள்ளினார்கள். அதனிடமாக அவர்கள் வாழ்வியல் ஒப்பந்தக்கொள்கை என்ற ஒரு புதுக்கொள்கையை வகுத்தார்கள். உலகில் மனிதன் தோன்றியது உலகு தோன்றிய காலத்திற்கு நெடுநாள் பிற்பட்டே என்று அறிவியல் விளக்க அறிஞர் கூறினர். மனிதன் தோன்றிய போது இன்றளவு நாகரிக நிலை உடனடியாகத் தோன்றியிருக்க முடியாது. மனிதனுக்குக் கீழ்ப்பட்ட விலங்குகளிடையே கூடச் சில தனித்து வாழ்கின்றன. சில இணை இணையாகக் கூடி வாழ்கின்றன. ஒருசிலவே கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன. கீழ்ப்பட்ட விலங்குகள் தம் உடல்வலியை நம்பிப் போராடு கின்றன. உயர்படியிலுள்ளவை படிப்படியாகக் கருவிகளை வழங்கியும் சிறிதுசிறிதாக அறிவைப் பயன்படுத்தியும் வாழ்க்கைப் போராட்டத்தைத் திறம்படவே நடத்துகின்றன. மனிதனும் இவற்றைப் போலவே படிப்படியாகக் கருவிகளை வழங்கும் முறையிலும், கூடிவாழும் முறையிலும், உடல்வலியினிடமாக அறிவைப் பயன்படுத்தும் முறையிலும் மேம்பட்டு இறுதியிலேயே கூட்டுறவு வாழ்க்கையிலும் அதன் முதிர்ச்சியாகிய அரசியல் வாழ்க்கையிலும் கருத்துச் செலுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் ஆராய்ந்து முடிவு கட்டினர். கூடி வாழத்தொடங்கிய மனிதன், அக்கூட்டு வாழ்வுக்கேற்ற சில பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை ஒழுங்குகளையும் கைக்கொண்டிருக்க வேண்டும். பெரும் பாலோரும் இவற்றை இயல்பிலேயே கைக்கொண்டொழுகுவர். ஒழுகாதவிடத்தில் அங்ஙனம் ஒழுகாதவரைப் பொதுமக்கள் விலக்கியும் ஒறுத்தும் வந்தனர். ஆயினும் தனிப்பட்ட ஒரு மனிதன், அவற்றைத் தெரிந்தோதெரியாமலோ மீறியவிடத்தில் மற்றவர்கள் கூட்டாகச் சேர்ந்து அவனைக் கண்டிக்க ஒரு கூட்டு அவை ஏற்படுத்தி யிருப்பர். கூட்டத்தில் அறிவாலும் ஆற்றலாலும் சிறப்புப் பெற்றவர்கள் இதில் தலைமையுடையவரா யிருந்திருப்பர். இவர்களிடையிலும் மாறுபாடுகள் ஏற்படுங்காலத்தில் எல்லோருடைய நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் பெற்ற ஒருவன் அவர்கள் தலையில் நின்று ஒழுங்கு நிறுத்தி அவர்களை ஆள முற்பட்டிருப்பான் என்று எண்ணுவது தவறன்று. இத்தகைய தலைவனொருவனை மக்கள் கண்டு தம்மிடையே ஒழுங்கை நிலைநிறுத்தும்படி அனைவரும் கேட்டுக்கொண்டனர் என்றும், பொதுநலத்தை முன்னிட்டுத் தம் தனி உரிமைகளை ஓரளவு அவன்கையில் ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர் என்றும் மேற்கூறிய அறிஞர் கூறினர். பழங்கால மக்கட்கூட்டம் ஒன்றுக்கும் அவர்கள் தலைவன் அல்லது அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட இவ் ஒப்பந்தத்தையே அவர்கள் மக்கள் கூட்ட ஒப்பந்தம் என்றனர். இவ்வொப்பந்தம் பெரும்பாலும் எழுத்து மூலம் ஏற்பட்ட ஒப்பந்தமா யிருந்திருக்க முடியாது. அவ்வளவு பண்டைக்காலத்தில் எழுத்துக்கூட ஏற்பட்டிருந்ததென்று கூற இயலாதன்றோ? அவ் ஒப்பந்தம் உண்மையில் மனச் சான்றாக நிறைவேறிய வாய்மொழி ஒப்பந்தமேயாம். தெய்விகக் கொள்கையளவு இரண்டாவதாகக் கூறப்பட்ட மக்கட்கூட்ட ஒப்பந்தக்கொள்கை, பகுத்தறிவுக்கு மாறானதன்று. ஆயினும் இக்கொள்கையை வலியுறுத்தியவர்கள், அப்பண்டைக் கால மனிதனை எவ்வளவோ அரசியல் பொறுப்பறிந்தவனாகக் கொண்டனர். இன்று கூட உலகில் பெரும்பாலான மக்கள், தம்மை ஆள்பவரைப் பற்றிப் போதிய அக்கறை யில்லாமலிருப்பது கண்கூடு. மேலும் ஒப்பந்தக் கட்சி யறிஞர்கள் இன்று உலகில் உள்ள பல தீமைகளும் அரசர்களாலேயே நேர்ந்தனவென்றும், அரசர் ஒப்பந்த முடிவுக்கு முன் மக்களிடையே ஒரே சரிநிகர் நிலையும் இன்பமும் நிலவியிருந்தன வென்றும், கனவு கண்டனர். வரலாற்றைத் துருவி ஆராய்பவர் எவருக்கும் இத்தகைய கனவுகள் என்றும் எதிர்காலத்தைச் சார்ந்த நாகரிகமுதிர்ச்சியின் விளைவாகத் தோற்றுமேயன்றி நாகரிகமற்ற பண்டைக்காலத்துக்கு ஒத்தவை எனக் காணப்படுதல் அரிது. ஆயினும் ஒப்பந்தக் கொள்கையாளர் கனவுகள் கூட உலகில் அரசியல் உணர்ச்சியையும் ஆர்வத்தையும் தூண்டி அரசியல் புரட்சிகளுக்கு நல்ல ஆதரவு தருபவை களாகவே அமைந்தன. உலகத் தோற்றம், மக்கள் தோற்றம், நாகரிகத் தோற்றம் ஆகியவற்றுக்கு மக்கள் அரசியல் தோற்றம் பிற்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும் என்று மக்கட் கூட்ட ஒப்பந்த அறிஞர் கூறுவதை வரலாற்றாராய்ச்சியாளர் ஒத்துக்கொள்கின்றனர். அதுமட்டுமன்று. பழங்கால மனிதனைப் பற்றி நாம் அறிந்தவரையில் அவன் தொடக்க முதலே இன்று போல் நாடு நகரமும் ஊரும் அமைத்து உழவும் வாணிகமும் கைத்தொழிலும் பேணி வாழ்ந்தான் என்பது இல்லை. அவன் உண்மையில் கடலோரத்திலோ ஆற்றோரத்திலோ கூட வாழ்ந்ததாக எண்ண இடமில்லை. காடும் மலைகளுமே அவன் முதல் உறைவிடங்கள் ஆகும். மர நிழலும் அதனினும் முற்பட்டு மலைக் குகைகளுமே அவன் தங்கிய வீடுகளாயிருந்தன. பயிரிடுவாரின்றிக் காய்த்துப் பழுத்து விழுந்த காய்கனிகளும் சருகுகளும், காட்டு விலங்குகள், பறவைகள், உயிர்வகைகள் ஆகியவற்றின் இறைச்சியுமே அவன் உணவு. இவற்றைக் கொல்லக் கல்லையும் கற்கருவிகளையும் கோலையும் கோலாலான வில், வேல் முதலியவற்றையும் அவன் கையாண்டான். முதலில் சமையல் செய்யாதும். பின் தீயின் பயனறிந்து அவற்றைச் சமைத்தும் அவன் உண்டான். இக்காலங்களை வரலாற்றாசிரியர் பழங் கற்காலம் என்றும், புதுக் கற்காலம் என்றும் பகுத்துக் கூறுவர். கற்கருவிகள் கருவிகளாகவே யிராமல் தெளிந்த உருவற்ற மொட்டை மழுக்கைக் கற்களாயிருந்த காலம் பழங்கற்காலம். அவை அரை குறையாகவேனும் செப்பம் செய்யப்பட்ட காலம் புதுக் கற்காலம் ஆகும். மனிதன் செம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவற்றையும் இறுதியில் இரும்பையும் வழங்கக் கற்று மேம்பட்ட பிற்காலங்களை முறையே செப்புக் காலம், வெண்கலக் காலம் இரும்புக் காலம் என்று வரலாற்றறிஞர் கூறுவர். கற்கால மனிதன் தொடக்கத்தில் குகைகளில் தங்கி வேடர் வாழ்வு வாழ்ந்து வந்தான். தமிழிலக்கண அறிஞர் இந்நிலத்தில் அன்று முதல் இன்றளவும் வாழும் மக்கள் வாழ்வைக் குறிஞ்சி நில வாழ்வு என்றும், அம்மக்களைக் குறவர், வேடர் என்றும் வகுத்தனர். இந்நிலையிலுள்ளார் இன்றும் கற்கருவிகளும், நரிப்பல், புலிநகம் முதலிய அணிகளும், தோலாடையும், நரிவேட்டையும் முதலிய தொழிலும் உடையவராய் வாழ்கின்றனர். புதுக் கற்கால மனிதன் குகைகளிலிருந்து சற்று வெளிவந்து காட்டிலுள்ள மரங்களினடியில் வாழ்ந்தான். பிற்காலத்தில் இவர்கள் மரப் பட்டையும் கொடியும் தழையும் கொண்டு ஆடைகளும், கொப்பு, கிளை, தழை வேய்ந்து குடில்களும் கட்டி வாழ்ந்தனர். அவர்கள் ஆடு மாடுகளையும் நாய் முதலிய விலங்குகளையும் பழக்கி நிரைகாத்தும், பால், தயிர், நெய் எடுத்துண்டும் வாழ்ந்தனர். இத்தகைய வாழ்வே தமிழ் நூல்களில் கூறப்பட்ட முல்லை நில வாழ்வு. பண்டைய முல்லை நில வாழ்வுக்காலம் உண்மையில் இன்றைய முல்லை நிலத்தார் வாழ்வன்று. ஏனெனில் பிறநிலத்து வாழ்வின் கலப்பு அதிலில்லை. முல்லைநில மக்கள் குகைகளையோ மரங்களையோ குடில்களையோ உறைவிடமாகக் கொண்டிருந்தார்களானாலும் அவற்றில் நிலையாக வாழ்ந்திருக்க முடியவில்லை. விதையாமல் அறுத்து உண்பதும், வேட்டையாடி யுண்பதும் ஓரிடத்தில் நெடுநாள் நிலவமுடியா. காய் கனிகள் அருகிப் போனாலும், வேட்டை விலங்குகள் அருமையாய் விட்டாலும், ஆடுமாடு களுக்குப் புல் குறைந்தாலும் அவர்கள் குடி கிளம்ப வேண்டியது தான். இக் காலத்தில் பல திறப்பட்ட மக்கள் இங்ஙனம் இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிந்த நாடோடிகளேயாவர். உலகப் படத்தை எடுத்துப் பார்த்தால் இமயமலைக்கு நேராகக் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து மேற்கே பஸிபிக் மாகடல்வரை ஒரு பெரு மலைத்தொடர் சங்கிலிபோல செல்வதைக் காணலாம். உலக வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இம்மலைத்தொடர் இருந்த விடத்தில ஒரு பெருமாகடல் இருந்து உலகின் வடபகுதியையும் தென்பகுதியையும் இருவேறு மாபெருங் கண்டமாகப் பிரித்தது எனப் பழைய நிலவரலாற்றாசிரியர் கூறுகின்றனர். இவ்விரு பெருங் கண்டங் களும் நெருங்கிக் கடல் தூர்ந்தபின் அவற்றின் நெருக்குதலால் ஏற்பட்ட நிலமடிப்புகள் இப்பெரு மலைத் தொடர்கள் என்பர். இம்மலைத் தொடர்களின் தெற்கில் பல நாட்டு மக்கள் முல்லை நில நாகரிகத்தை ஒழித்து நாடு நகரம், பட்டினம் ஊர் ஆகியவற்றை அமைத்து உழவு, வாணிகம், நிலச் செலவு, கடற்செலவு ஆகியவற்றில் மேம்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த பின்னும், அம் மலைத் தொடருக்கு வடகிழக்கிலுள்ள மக்கள் முல்லை நில நாகரிகத்திலேயே நின்று நாடோடி வாழ்வே வாழ்ந்து வந்தனர் என்று அறிகிறோம். இத்தகையநாடேடி மக்களுள் ஒரு சாராரே ஆரியர் என்பவர்கள். இவர்கள் தொடக்கத்தில் எங்கிருந்து வந்தார்கள் என்று வரையறுத்துக் கூற முடியவில்லை. நடு ஆசியாவிலிருந்தனர் என்று சிலரும், தென் உருசிய நாட்டிலிருந்தனர் என்று சிலரும், பால்டிக் பகுதியிலிருந்தனர் என்று சிலரும் கூறுகின்றனர். வடமாகடற்பகுதியிலிருந்தனர் என்று சிலரும் கூறுகின்றனர். ஆயினும் இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னிருந்தே இவர்கள் தம் தாயகத்திலிருந்து கூறு கூறாகப் பிரிந்து பச்சை கண்ட இடமெல்லாம் பரந்து சென்றனர் என்றும், இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தெற்கு நோக்கி மேலை ஆசியாவிலும் தென் ஐரோப்பாவிலும் உள்ள அன்றைய நாகரிக உலகத்தின்மீது ஈசல்கள் போல் சென்று மொய்த்தனர் என்றும், இன்றைக்கு மூவாயிரத்தைந்நூறு ஆண்டுகளின் முன் இந்துக்கோசுமலை தாண்டிப் பாரசீகத்திலும், அதன் பின் சுலைமான் மலை தாண்டி வடமேற்கு இந்தியாவிலும், கிட்டத் தட்ட அதே காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புகுந்தார்கள் என்றும் அறிகிறோம். நாகரிக உலகில் இவ்வாரியர் வரவாலும், அவர்கள் வந்து அந்நாகரிக உலகுடன் உறவு கொண்டபின் ஏற்பட்ட அவர்கள் நூல்களாலும் மொழி வளர்ச்சியாலும் முல்லை நிலக் காலத்து மனிதன் நாகரிகப் பண்புபற்றி நாம் பல செய்திகளை அறிகிறோம். உலகின் நடுவிடத்துள்ள மேற்சொன்ன மலைத் தொடர்களுக்குத் தெற்கிலுள்ள விலங்குகளாகிய யானை, சிங்கம், புலி முதலியவையும், அவ்விடத்து வழங்கிய நாகரிகக் குறியீடுகளும் அவர்கள் அவ்விடத்துக்கு வரும் முன் பேசிய அவர்கள் மொழியில் இடம் பெறவில்லை. ஆடு மாடுகள் நீங்கலாக அவர்கள் அறிந்த உயிர்கள் ஓநாய், முயல், குதிரை முதலியவையே யாகும். நாடு, நகரம், ஊர், நாட்டுமக்கள் ஆகியவர்களைக் குறிக்கும் சொற்களும் அம்மொழியில் இல்லை. இந்தியாவில் அம்மக்கள் நுழைந்து நாடு நகரமைத்த பின் கூட அவற்றைக் குறிக்க ‘நாடு’ என்ற அஃறிணை ஒருமைச் சொல்லை அவர்கள் வழங்காது தம் முன்னைய நாடோடி வாழ்வைக் குறிக்கும் பலர்பால் சொல்லாகிய ‘நாட்டினர்’ என்ற சொல்லையே வழங்கினர். எனவேதான் பிற்கால வடமொழியிலும் ‘நான் பாஞ்சால நாடு சென்றேன்’ என்ற வாசகம் ‘நான் பாஞ்சாலரை அடைந்தேன்’ (அஹம் பாஞ்சாலந் அகச்சம்) என வழங்கலாயிற்று. செவ்வாய் கண்டம் எனத் தமிழர் அழைத்த இவ்விந்தியப் பெருநிலப்பரப்பில் முதலில் சிந்து ஆற்றின் கரையோரம் தங்கி வாழ்ந்த இவ்வாரியர் படிப்படியாகக் கிழக்குநோக்கிப் பரந்து கங்கையின் கரையோரங்களில் குடியேற்றங்கள் ஏற்படுத்திய பின்னும் இந்நிலை நீடித்திருந்ததென்று வரலாற்றாசிரியராகிய கே.வி. அரங்கசாமி ஐயங்கார் அவர்கள் கூறுகிறார்கள். (‘கே.வி. அரங்கசாமி ஐயங்கார் எழுதிய ‘இந்திய நாட்டு வரலாறு முசல் மான்களுக்கு முந்திய சாலம்’ என்ற நூல் காண்க)’ இந்நிலைமாறி அவர்கள் நாடு நகரம் அமைத்த காலம் கி.மு.7ஆம் நூற்றாண்டு (இன்றைக்கு இரண்டாயிரத்தறு நூறு ஆண்டு களுக்கு முந்திய காலம்) ஆகும். இங்ஙனம் நாடோடிகளாக வாழ்ந்தகாலத்தில் ஆரியரிடையே ஊர், நகரம், நாடு ஆகிய பாகுபாடுகள் இல்லை. அவர்கள் கூடிவாழும் வாழ்க்கையில் தொடக்கத்தில் ஏற்பட்ட பாகுபாடுகள் குடும்பமேயாகும். சிறு குடும்பங்களில் தந்தையும். சற்று விரிவுபெற்ற குடும்பங்களில் மூத்த ஆடவரும் தலைமை நிலையுடையவராய், குடும்ப உறுப்பினரிடையே ஒழுங்கை நிலைநிறுத்தி அதனை மீறியவரை ஒறுத்து வந்தனர். சமய வழிபாடுகளிலும் இறந்தவர்கட்குச் செய்யும் இறுதிவினை களிலும் அவரே சமயத் தலைவராகவும் இருந்து வந்தார். பெருங்குடும்பங்கள் கோத்திரங்கள் என்று வழங்கப்பட்டன. பல பெருங் குடும்பங்கள் இணைந்து ஒரே தலைவன் கீழ் அடங்கியபோது அக்குழு ஒருகுலம் என்னப்பட்டது . குலத்தின் தலைவன் குலபதியானான். இவன் தலைமை நிலையும் உரிமைகளும் குடும்பத்தலைவன் நிலையும் உரிமையும் போன்றவையே, ஆயினும் அவன் கீழடங்கிய மக்கள்தொகை விரிவடைந்ததனால் அவன்நிலை கிட்டத்தட்ட ஓர் அரசன் நிலையாயிற்று.நாடோடி வாழ்வு நீத்து ஆரியர் சிந்து கங்கைக் கரைகளில் நிலைபெற்ற குடியினரானபோனது இக்குலத்தவர் தங்கிய இடங்களே சிறு நாடுகளாயின. குலபதிகளே அரசராக மாறுதலடைந்தனர். இந்தியப் பண்டைய ஆரியமொழியாகிய வேதமொழி இக்குடியேற்ற நாட்களிலேயே ஓரளவு இலக்கிய இலக்கண அமைதிபெற்றது. எனவே அம்மொழியில் அரசனைக் குறிக்கும் சொற்கள் இந்நிலையை நன்கு உணர்த்துகின்றன. நாடோடி வாழ்க்கைக் காலத்தில் மக்கள் முல்லை நில மக்களாகவே இருந்தனராதலால் அவர்கள் ‘செல்வம் பெரும்பாலும் ஆடுமாடுகளாகவே இருந்தன. எனவே அவற்றிற்குரிய தலைவனான அரசன் பெயர்களுள் ஒன்று இடையர் என்று பொருள் கொள்ளும் ‘கோபன்’ என்ற சொல்லாகவே அமைந்தது. குலம் ராஜ் என்றும் ராஷ்ட்ரம் என்றும் அழைக்கப்பட்டதற் கிணங்க, அரசனும் ராஜன், ராஷ்ட்ரபதி அல்லது குலபதி யாயினன். இவற்றுள் முதல் சொல் நாளடைவில் பழம் பொருளிழந்து அரசு நிலையைக் குறிப்பினும் பின்னிரண்டு சொற்களும் முன்னைய நிலையை நினைவூட்டுபவையாகவே அமைந்துள்ளன. மேனாடு சென்ற ஆரியரிடையேயும் கிட்டத்தட்ட இதே நிலைமையை ஒட்டி இதே சொற்கள் நிலவின. குடும்பம் பாமிலியாஸ்(குயஅடைநைள) என்றும், குடும்பத் தலைவரான தந்தை பத்திரியாஸ்(ஞயவசயைள) என்றும் கோத்திரம் கேன்ஸ்(ழுநளே) என்றும் குலம் ட்ரிபாஸ்(கூசibடிள) என்றும் வழங்கப்பட்டன. பணத்தைக் குறிக்கும் சொல் இலத்தீன் மொழியில் பசு என்ற பொருளுடைய பெகு(ஞநஉர) என்பதேயாகும். இது இன்றும் ஆங்கிலத்தில் சம்பளம் என்பதற்கான ஃபீ(குநந)என்ற சொல்லின் மூலமாகும். குடியமைதி பெற்ற குலங்கள் முதலில் சிறு குடியேற்றங்கள் அல்லது நாடுகளாகவே யமைந்தன. சிந்து ஆறு கடந்து ஆரியர் கங்கையாற்றுப்பக்கம் குடியேறத் தொடங்கிய காலத்திலேயே முதற் குடியிருப்பும் ஏற்பட்டது. இதனால் நமக்குத் தெரியவரும் முதல் நாட்டு மக்களும் குலத்தினரும் சட்லஜ் ஆற்றுக்கும் யமுனையாற்றுக்கும் இடையில் குடியேறிய குருக்களும் பாஞ்சாலருமே யாவர். அதன்பின் கங்கைக் கரையில் ஏற்பட்ட குடியேற்றத்தார்களுள் முந்தியவர்கள் சரயு ஆற்றுக்கரையிலுள்ள கோசலரும் அதற்குக் கிழக்கிலும் தெற்கிலும் பரந்த விதேகரும் ஆவர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் குப்தர் தோன்றினர். இவர்களுள் யமுனைக்கரையில் உள்ள பாஞ்சாலரும் கீழ்க்கோடியிலுள்ள கோசலரும் விதேகரும் பின்னாளைய குப்தரும் தனி ஆரியராயிராமல் முன்னைய குடிகளுடன் கலப்புற்ற இனத்தவர் என்று எண்ண இடமுண்டு. யமுனைக்கரையில் தெற்கிலமைந்த விருஷணிகள் இன்னும் பெரும்பான்மையாகப் பழங்குடித் தொடர்புள்ளவராயிருந் திருக்கக் கூடும். விருஷணிகளில் சிறந்த அரசனாயிருந்த கண்ணன் கருநிறமுடையவன் என்றும் ஆயர் குலத்தில் வளர்ந்தவன் என்றும் குறிக்கப்படுவதும், வேதங்களுக்குப் புறம்பாக வேதங்களுடன் ஒட்டி வளர்ச்சியுற்ற பிற்கால ஆன்மீகக் கோட்பாடுகளை வகுத்தவன் என்றும் குறிப்பிடப்படுதல் இதற்கு ஆதரவு தருவதாகும். பாஞ்சாலரிடையே பிறந்த துரோபதையும் கோசலரிடையே பிறந்த இராமனும் இஃதே போல் கருநிற முடையவராகக் குறிக்கப்பட்டிருக்கின்றனர். விதேகரிடையேயும் சனகர் ஆன்மிக நெறியருளிய தலைவராவார். மேற்கூறியவற்றால் ஆரியரிடை முதன் முதல் ஏற்பட்ட அரசர்கள் பழைய குலபதிகளே என்று கண்டோம். அவர்கள் போரில் தம் குலத்தவர் அல்லது நாட்டினரின் படைத்தலைவ ராகவும், வழக்குகளில் வழக்குத் தலைவராகவும் , குலவழக்கங் களாகிய எழுதாச் சட்டங்களைக் கையாண்டு தீர்ப்பு உரைப்பவராகவும், சமய வினைகளில் சமயத் தலைவராகவும் இருந்தனர். இந்தியாவிற்கு வந்த ஆரியரைப் போலவே மேற்கு நாடுகளில் சென்ற ஆரியரும் பலபல சிறுநாடுகளை அமைத்தனர். அவை தமக்குள்ளும் முற்குடிகளுடனும் போரிட்ட காலத்தில் ஒன்றை ஒன்று வென்று விழுங்கிப் படிப்படியாக விரிவுற்றுப் பெருநாடுகளாயின. கிரிஸீல் இவை பல ஊர்கள் சூழ்ந்த சிறு நகரங்களாக அமைந்து அலக்சாண்டர் காலம் (கி.மு.327) வரை அதே நிலைமையில் இருந்தன. இத்தாலியில் பல சிறு நாடுகளிடையேயும் வலிமை மிக்கதான ரோம் என்ற ஆரிய நகரத்தினர் தம்மைச் சூழ்ந்த ஆரியக் கலப்பினத்தவரான லாட்டியரை வென்று பின் பெரும்பான்மை ஆரியரில்லாதாரான இத்தாலியரையும் அடக்கி ஆண்டனர். கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. நாலாம் நூற்றாண்டுவரை இவ்வரசு பிறநாடுகளையும் அடக்கிப் பிரிட்டன் முதல் மேலை ஆசியாவரை செர்மனி முதல் வட ஆப்பிரிக்காவரை பரந்த ஒரு பேரரசை நிறுவிற்று. செர்மனியில் இச்சிறுநாடுகள் கிட்டத் தட்டக் குல நிலையிலேயே 19ம் நூற்றாண்டளவும் தொடர்ந்து நிலவின. பிரான்சிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றினும் அரசர் ஆட்சிக்கு இச்சிறுநாடுகள் உட்படினும் தம் உரிமை முற்றும் கைவிடாமல் 18ம் நூற்றாண்டளவும் தொடர்ந்திருந்தன. பிரிட்டனில் தென்பகுதியில் குடியேறிய இவ்வாரிய இனத்தார் பல சிறு நாடுகளை அமைத்தனர். அவை படிப்படியாக ஏழாகி மூன்றாகி அவ்வப்போது ஒவ்வொன்று முதன்மையுற்று நிலையடைந்தன. 8ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஒரே நாடாயிற்று. ஆரியருடைய நாகரிகம், அவர்கள் அரசியல் தோற்றம் ஆகியவற்றை இங்ஙனம் முதன் முதலாக எடுத்துக்கொண்டதன் காரணம், அவை காலத்தால் முந்தியவை என்பதன்று. உண்மையில் மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஆரியர் வரவு மிகவும் பிற்பட்டதுதான். ஆனால் அவர்கள் அரசியலிலும் நாகரிகத்திலும் மூன்று சிறப்புக்கள் காணலாம். ஒன்று பிற்கால அரசியல் வளர்ச்சிகள் யாவும் ஆரியர் வாழ்க்கை நிலையினின்றே தோன்றியவை. இரண்டாவது, ஆரியரைப் பற்றிய செய்திகள் பிற்பட்டனவாதலால் வரலாற்றுக்கு எட்டிய செய்திகளாயிருக் கின்றன; அவர்கள் வரவு வரலாற்றுக்காலத்துக்கு அண்மை யிலுள்ளது. மூன்றாவது காரணம் காலத்தால் அவர்கள் நாகரிகம் பிற்பட்டதாயினும் வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைமை அவர்கட்கு முன்னைய நாகரிகங்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே கடந்துவிட்ட முல்லைநில நாகரிகப் படியாகும். எனவே, பதினாயிரக் கணக்கான ஆண்டுகட்குமுன் ஆரியரல்லாதார் அடைந்துவிட்ட முல்லைநில நாகரிகப்படிகளைப் பற்றி மிகவும் அறியக்கூடாத நிலையில் இருக்கிறோம். ஆரியர் மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் இருந்த நிலை அப் பிற மக்கள் பதினாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன் இருந்த நிலைமையை உய்த்துணர வழி செய்யும். ஆரிய வரலாற்றாசிரியர் தொடக்கத்தில் தங்கள் நாகரிகமே நாகரிகமெனக் கொண்டு அது தோன்றிய காலமே உலக நாகரிகம் தோன்றிய காலம் என எண்ணினர். 4000 ஆண்டுகட்குமுன், அஃதாவது கி.மு. 2000ல் ஆரியர் முல்லை நில நாகரிக நிலையி லிருந்ததால் உலகமே முல்லைநில நாகரிகத்தில் தானிருந்திருக்க வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தனர். இத்தகைய ஆசிரியர் கிரேக்க முதல் இலக்கிய நூல்களாகிய இலியத், ஒடிஸ்ஸி என்பவற்றின் காலமாகிய கி.மு. 1000 அல்லது கி.மு. 800 தான் மிகப் பழைய காலமென்றோ, அல்லது இந்திய ஆரியரது இருக்கு வேத காலமாகிய கி.மு. 1500-1200 தான் மிகப் பழைய காலமென்றோ கொண்டதுடன் அதற்கு முன்னைய காலம் அதனினும் நாகரிகக் குறைவான காலமென்று கருதினர். ஆனால் கிரேக்க நாட்டிலும் கிரீட்டிலும் கண்டெடுக்கப் பட்ட முசீனிய கிரேட்ட நாகரிகங்கள், ஆரியர் வரவுக்கு முற்பட்டன என்பதும், அவை ஆரியர் வரவுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே அவர்களை விடப் பன்மடங்கு உயரிய நாகரிக நிலை எய்தியிருந்தன என்பதும் புதைபொருளாராய்ச்சி யால் விளங்கின. முசீனியர் நாகரிகம் கி.மு. 2000 முதல் 1000 வரை நிலவியது என்றும் கிரேட்ட நாகரிகம் கி.மு. 3000 முதல் 2000 வரை நிலவியது என்றும் கருதப்படுகிறது. இவற்றுடன் உறவுடைய எகிப்திய நாகரிகம் கி.மு. 3000 முதற்கொண்டு தொடர்ந்த வளர்ச்சியுடையதாயிருந்தது. பாபிலோனியரும் மேலை ஆசியரும் கி.மு. 2000 முதல் கி.மு. 800 வரை பேரரசுநிலை எய்தியிருந்தனர். அசீரியர் கி.மு. 4000 முதற்கொண்டே மிக உயரிய நிலையி லிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் சிந்து ஆற்றின் தென்பகுதியில் மொகெஞ்சதரோ, அரப்பா ஆகிய இடங்களில் செய்யப்பட்ட நில அகழ்வாராய்ச்சியால் கி.மு. 5000 வரை எட்டக்கூடியதும் இவற்றுடனொத்த, ஆனால் இவற்றிலும் பழமையும் உயர்வும் மிக்க ஒரு நாகரிக வாழ்வு அவ்விடங்களில் இருந்ததென்று தெரியவருகிறது. இத்தாலியர் ரோமர் வரலாறு தொடங்கு முன்பாகவே டஸ்கனி என்ற இடத்திலுள்ள எட்ரஸ்கானியர் என்ற மக்கள் மாட மாளிகைகள் கூடகோபுரங்கள் கட்டியிருந்தனர். இன்னும் ஆரியரல்லாதாருள் ஒரு பிரிவினரான பினிசியரும் கார்த்தகினியரும் நாவாய்களில் கடல்கள் கடந்து உலகெங்கும் கி.மு. 1000த்திலேயே வாணிகம் நடாத்தினர். மேலை ஆசியாவிலும் எகிப்திலும் கிட்டும் சான்றுகளால் கி.மு.1000க்கு முற்பட்டே தமிழ்நாட்டு வாணிகர் கடல்கடந்து அந்நாடுகளில் தேக்கு, சந்தனம், பருத்தியாடை, மயிலிறகு, மிளகு முதலியவைகளைக் கொண்டுபோய் விற்றனர் என்று தெரிய வருகிறது. இவ்வாணிபத்தின் அறிகுறியாகத் தோகை (மயில்) அகில், தேக்கு. அரிசி முதலிய தமிழ்ச்சொற்கள் பண்டைய எபிரேய கிரேக்க மொழிகளில் சென்று இடம் பெற்றன. இங்ஙனம் கிரேட்ட மொழியில் இடம் பெற்ற அரிசி (ஒரிஸா) என்ற சொல்லே பல மொழி வாயிலாகவும் திரிபுற்று ஆங்கில மொழியில் ‘ரைஸ்’ என்ற உருவுடன் இன்று வழங்குகிறது. பழைய உலகு என்று கூறப்படும் ஆசியா ஐரோப்பா ஆபிரிக்கா என்பவற்றின் எல்லை கடந்து சென்றாலும் பல பழைய நாகரிகங்கள் காணப்படுகின்றன. ஆபிரிக்காவிலுள்ள அபீசீனிய நாகரிகம் கிரேக்கர் காலத்திலேயே மிகப் பழமையுடையதென்று கருதப்பட்டது. அமெரிக்காவில் ஐரோப்பியர் குடியேறியபோது பெருவிய நாகரிகமும் மய நாகரிகமும் மிக உயர் நிலையி லிருந்தனவாம். இவை யிரண்டும் இந்திய நாகரிகக் கூறுகளுடன், சிறப்பாகத் தென்னிந்திய நாகரிகக் கூறுகளுடன் மிகமிகப் பொருத்தமுடையவை என்று கூறப்படுகிறது. இவ்வாரியமல்லா நாகரிக வகைகள் எல்லாமே ஆரிய நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்டவையா யிருந்தும் எக்காரணங்களாலோ ஆரியர் தாக்கினால் பலவகையிலும் அழிந்தும் சிதைந்தும் போயின. இன்று அவற்றுள் அழியாமல் மீந்து நின்று நிலவும் ஆரியமல்லாத நாகரிகம் தென் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் நிலைபெற்று விளங்கும் திராவிட நாகரிகம் மட்டும் தான். திராவிடரின் பழைய தாய்மொழியின் கால்வழியில் வந்த மிகப் பழமைவாய்ந்த மொழியாகிய தமிழும் திராவிட நாகரிகமும் உலகில் பல பகுதிகளிலுள்ள மொழிகளுடனும் நாகரிகங்களுடனும் பல்வேறு வகையில் தொடர்பு உடையவை யென்று காணப்படுகிறது. ஆயினும் திராவிட இனம் எவ்வினத்துடனும் நேரடியான தொடர்புடையது என்று இன்னும் வரையறுத்துக் கூற முடியவில்லை. மொகெஞ்சதரோவில் கண்ட பழைய சிந்து நாகரிகம் மட்டுமே தெள்ளத் தெளியத் திராவிட நாகரிகம் என்று தெரியவருகிறது. ஆரியமல்லாத நாகரிகங்களுள் திராவிட இன நீங்கலாக மற்றவற்றை ஒன்றிரண்டு இனங்களாகப் பிரிக்கலாம். அராபியர், எகிப்தியர், மேலை ஆசிய மக்கள், ஆபிரிக்காவின் பழைய அராபிக் குடிகள் ஆகியவர்களும், ஏபிரேயர் (யூதர்கள்) பினீசியர் , கார்த்தகினியர் ஆகியவர்களும்; செமித்தியர் அல்லது நடு உலக மக்கள் என்ற பெரும் பிரிவிற் படுவர். திராவிடர் கூட இவ்வினத்துடன் சார்ந்தவரே எனப் பலர் கொள்கின்றனர். ஐரோப்பாவிலுள்ள ஸலாவியர், ஹங்கேரியர், பின்லாந்தியர் முதலியவர்கள் ஒரு புறமும்; ஆசியாவில் துருக்கியர், துருக்கித்தானர், சீனர், திபேத்தியர், சப்பானியர், கொரியர், பர்மியர் ஆகியவர்களும்; சித்தியமங்கோலிய இனம் என வகுத்துரைக்கப்படுகின்றனர். இந்தியாவில் திராவிடர் தனித்து நிற்பது போல் இத்தாலியில் பழைய எட்ரஸ்கானரும், அமெரிக்காவில் பெருவியரும், மயரும் தனிப்பட்ட குழுவினராகக் காணப்படுகின்றனர். இவர்களனைவரும் ஒவ்வொரு வகையில் திராவிட இனத்துடன் உறவுடையராயிருப்பது நோக்க, இவ்வனைவருமே ஒரு பேரினத்தவர்தாமோ என்று ஐயுற இடமுண்டு. ஆயினும், இது முடிவாகக் கூறமுடியாத செய்தியாதலானும், கால்டுவெல் போன்ற அறிஞர் ஆரிய இனம் கூட இப் பெரும் பேரினம் நாகரிக வளர்ச்சி பெறாத காலத்தில் இதினின்றும் பிரிந்துபோன கிளையினம் என்று கருதுவதாலும், இங்கே இவர்கள னைவரையும் ஆரியர் என்றும் ஆரியரல்லாதார் என்றும் பொதுப்படக் குறிப்போம். ஆரியர் வரவுக் காலத்தில ஆரியருக்கும் ஆரியரல்லா தாருக்கும் நாகரிக முறையிலும் வாழ்வியல் அரசியல் நிலைமை களிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு, வேற்றுமைகள் இருந்தன. ஆரியர் முல்லை நில வாழ்க்கை நிலையில் நாடோடிகளாய் நாடு நகரம் ஊர் இன்றிக் குடியும் குலமும் குலத் தலைவரும் உடையவராய், உழவு, வாணிகம் முதலிய தொழிலின்றி, ஆடு மாடு மேய்த்தலும் வேட்டையாடலும் தொழிலாகக் கொண்டவராய்க் குடி குலம் தவிர வாழ்வியல் பாகுபாடு தொழில் பாகுபாடு அற்றவராய், இயற்கைத் தோற்றங்களி லீடுபட்டுப் பல தெய்வங்களை வழிபடுபவராய் இருந்தனர். ஆனால் ஆரியரல்லாத மக்களோ குறிஞ்சி நிலவாழ்வும் முல்லைநிலவாழ்வும் கடந்து மருத நில வாழ்க்கையும் நெய்தல் நில வாழ்க்கையும் உடையவராயிருந்தனர். அவர்கள் நாடு நகரம் ஊர் கோட்டை முதலியவைகளுடன் பச்சைச் செங்கலாலும் சுட்ட செங்கலாலும் கட்டிய வீடுகளும் செங்கல் பாவிய தெருவீதிகளும் உடையவராயிருந்தனர். உழவும் வாணிகமும் அவர்களிடையே செழித்திருந்தன. ஆரியரைப்போல் அவர்கள் தழையாடையும் மரவுரியாடையும் அணியாது பருத்தி நூலாடையணிந்து அதற்கான நெசவு முதலிய தொழில் பேணியிருந்தனர். அவர்கள் முதலில் எலும்புகளாலும் பிற்காலங்களில் வெள்ளியாலும், பொன்னாலும் பூண்கள் செய்தணிந்தனர். செம்பு, வெண்கலம் ஆகியவற்றால் கருவிகள் செய்தனர். ஆரியர் வருங்காலத்துக்குள் இரும்பும் வழங்கலாயிற்று. அவர்கள் ஒழுங்கான நாடு நகர அரசியலையுடையவராய் அரசனுக்கடங்கிய ஆட்சி யுடைவராயிருந்தனர். ஆனால் ஆரியர் போல ஆட்சி முறை முற்றிலும் அரசன் அல்லது குலத்தலைவனிடம் சென்று அமைவதாயில்லை. அவ்வந் நகரங்களிலும் ஊர்களிலும் நகரவைகளும் ஊரவைகளும் இருந்து மேற்போக்காக அரசனாணையில் நின்று தன்னாட்சி நடத்தின. சமய வாழ்வில் அவர்களும் இயற்கைத் தெய்வங்களாகிய திணைநிலத் தெய்வங்களை உடையவராயிருப்பினும் நாளடைவில் வீரர் வழிபாடும் பிதிரர் வழிபாடும் உடையவராய் இறுதியில் ஏதாமொரு தெய்வத்தைக் குலதெய்வமாகவும் ஊர்த் தெய்வமாகவும் கொண்டனர். ஆரியர் வரவுக்கு நெடுநாள் முன்னரே அவர்கள் அன்னை வடிவையோ, எருதும் முக்கோலும் தாங்கிய சிவனுருவையோ தலைமையான தெய்வமாகக் கொண்டு அவர்கட்குக் கோயிலும் வழிபாடும் அமைத்தனர். ஆரிய ரல்லாதார்தாம் பல தொழில பாகுபாடுகளுடைய வகுப்புகளை முதலில் கொண்டிருந்தனர். குருமாரும் அறிவியல் ஆராய்ச்சியில் முனைந்த அறிஞரும் அவர்களிடையேதான் முதன்முதலில் ஏற்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவில் திராவிட அரசரிட மிருந்தும் கிரீசில் எகிப்திய குருமாரிடமிருந்துமே தம் முதல் கலையறிவு பெற்றனர் என்று வரலாறு காட்டுகிறது. விசுவாமித்திரர், சனகர், கண்ணன் முதலியவர்கள் ஆரியருக்கு ஆன்ம அறிவு கற்பித்த திராவிட அரசரே யாவர். ஆரியரல்லாதார் தாக்குத்தான் ஆரியரை நாகரிகப் படுத்திற்று என்பதை, அவர்கள் பல நாடுகளில் அடைந்த முன்னேற்றத்தை ஒப்பிட்டு நோக்கினால் காணலாம். தெற்கு நோக்கி வந்த ஆரியர் நாகரிகப்படியில் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகமடைந்தும் வடக்கே சென்ற ஆரியர், அந்நிலையை முந்நூறு ஆண்டுகள் வரை அடையாமலிருந்தனர். தெற்கு நோக்கி வந்தவருள்ளும் இத்தாலியில் வந்த ஆரியர் நடுஉலகத் தொடர்புடைய கிரேக்க ஆரியரிடமிருந்தும் அவர்களும் பாரசிகம், இந்தியா ஆகிய இடங்களில் குடியேறிய ஆரியரிடமிருந்தும் நாகரிகப் பண்புகளை வரவேற்றனர் என்று காணலாம். நேர்மாறாக ஆரியரல்லாதார் ஆரியத்தாக்கில் லாமலேயே தென்கோடி ஆப்பிரிக்காவில் அபிசீனியாவிலும் கீழ்க்கோடி ஆசியாவில் சீனாவிலும் தென்கோடி இந்தியாவில் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவில் பெருவிலும் தனித்து உயர்நாகரிகம் அடைந்துள்ளனர் என்பதைக் காணலாம். திராவிடரும் பிற ஆரியரல்லாதாரும் பதினாயிரம் ஆண்டுகளாக இவ்வளவு உயர் நாகரிக நிலையை அடைந் திருந்தாராயினும், ஆரியர் வருமுன்னேயே அவர்கள் வளர்ச்சியற்று அழியும் நிலையை அடைந்துவிட்டனர் என்று காணலாம். சீன நாகரிகம் இதற்குச் சான்று பகரும். இந்நிலைக்குக் காரணம் என்ன? நாகரிகம் அவர்களிடையே ஒரே நிலையில் சரிநிகராக வளர்ச்சியடையாததால் தொழில் பாகுபாட்டில் நாகரிகப்படியில் ஏற்றத் தாழ்வு உடைய பல்வேறு வகுப்புகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைந்தது இதற்கான தலையான காரணம். இன்னொன்று வாழ்க்கை முறையில் கோயிலும் கோயில் குருமாரும் அடைந்த தலைமை நிலையும், அறிவு இவரை அண்டிய ஒரு சிறு அறிஞர் குழுவில் சென்றமைந்ததும் ஆகும். ஒவ்வொரு வகுப்பினரும் தத்தம் வகுப்பு நலம் பேணியதால் இனநலம், நாட்டு நலம் மறந்தனர். அறிஞர் குழுவோ தம் நலமட்டும் பேணிவந்த குழுவினருடன் கலந்து தம் இனத்தைத் தாழ்த்தி உயர்வடையவும் பிற இனத்தவராகத் தம்மைக் கொள்ளவும் தலைப்பட்டது. திராவிடர் வாழ்க்கை முறையில் இதனை இன்றளவும் காணலாம். சீனரிடையேயும் உயர்குல மக்களாகிய மந்தாரின்களும் அவர்களைச் சார்ந்த பழைய மஞ்சு அரசர் குடியும் தமக்கெனச் சீன மொழியுள் ஒரு தனி உள்மொழியும், தனிச் சமயவகையும் வகுத்துச் சீனருட னுறவாடாது சீனாவைச் சுரண்டும் சப்பானியருடனும் வெள்ளையருடனும் உறவாடி வந்தது காணலாம். ஆரியரல்லாதாரிடம் தோன்றிய மனித நாகரிகமும் வாழ்வியல் அரசியல் முறையும், நாகரிகத்தால் குறைந்தவ ரானாலும் வகுப்பு வேற்றுமையும் குருமார் வகுப்பும் அறிஞர் குழுவும் இல்லாது ஒற்றுமையுடையராயிருந்த ஆரியர் கைப்பட்டு உரமும் வலுவும் அடைந்து புத்துருப்பெற்று உலகில் மீண்டுமொரு புதுவாழ்வும் புதுவளர்ச்சியும் தந்து புது ஊழியைத் தொடங்கி வைத்தது. இதனை ஆரிய ஊழி என்னலாம். 2. ஆட்சி வகைகள் கால நிலைக்கும் இடவேற்றுமைக்கும் ஏற்ப உலகில் எத்துணையோ ஆட்சி வகைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் பொதுப்படையாக அவற்றை முடிஆட்சி என்றும் குடியாட்சி யென்றும் இரு பெரும் பிரிவுகளுட்படுத்தலாம். இவற்றுள் முடியாட்சி என்பது ஆட்சியின் தலைமையில் ஓர் அரசனைக் கொண்டது. இவ்வரசன் பெரும்பாலும் முன்னைய அரசர் வழிவந்தவனாகவே யிருப்பான். ஆயினும் பிறப்புரிமை ஒன்றினால் மட்டுமே அவன் அரசனாய் விடுவான் என்று சொல்வதற்கில்லை. குடிகள் அவனை ஏற்றதற்கு அறிகுறியாக அவனுக்கு முடிசூட்டி அரசிருக்கை யளிக்க வேண்டும். பிறப்புரிமை உடையவரும் பிறப்புரிமை அற்றவரும் கூடச் சூழ்ச்சியாலோ படை வலியாலோ அரசாட்சியைக் கைக்கொண்டு தம் உரிமையை மக்கள் மீது திணிப்பதுண்டு. சில சமயம், ஓர் அரசனிறந்தபின் மக்களாகவே தாம் விரும்பிய ஒருவனை அரசனாகத் தேர்ந்தெடுப்பதும் விரும்பாத அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து வீழ்த்துவதும் உண்டு. முடியரசர் முன்னைய குலபதிகளின் வழிவந்தவர் என்று முன் பிரிவில் கூறியிருக்கிறோம். குலபதியாகவும் சிறு அரசனாகவும் இருக்கும்போது அரசுரிமையை முற்றிலும் அவர்கள் தாங்களே நேர்நின்று செயலாற்றினர். நாடு விரிய விரியப் படைத்தலைவர், அமைச்சர், பணியாளர், வழக்குத் தலைவர், ஊர், நகர, வட்டத் தலைவர் முதலிய பணியாளர்களை அமர்த்தி அவர்கள் துணை கொண்டு முடியரசன் ஆண்டான். ஆயினும் அவன் ஆட்சி எல்லார் மீதும் ஆணை செலுத்திற்று. இங்ஙனம் அரசனே தன் விருப்பப்படி தங்கு தடையின்றி ஆளும் உரிமை உடையவனாயிருந்தால் அம் முடியாட்சி வல்லரசாட்சி (னுநளயீடிவளைஅ) என்று பெயர் பெறும். கிரேக்கர் இத்தகைய ஆட்சியைக் குறிக்க வழங்கிய சொல்லே(கூலசயnலே) இப்போது ஆங்கில மொழியில் கொடுங்கோன்மையைக் குறிக்கிறது. அரசன் அமைச்சர் துணைகூட இல்லாமலோ அவர்களுக்குக் கட்டுப்படாமலோ நின்று, சட்டங்கள், குடிகளின் விருப்பம் ஆகிய எவற்றையும் பாராமல் தான் வைத்தது சட்டம் என ஆண்டால், அது கடுங்கோன்மையாகும். கடுங்கோலர் குடிகள் விருப்பம் பாராவிட்டாலும் அவர்கள் நன்மையைப் பேணுபவராயிருக்கக் கூடும். அப்போது அது நற்கடுங்கோன்மை (க்ஷநநேஎடிடநவே னுநளயீடிவளைஅ) ஆகும். அவர் தீயவராய்த் தீமை செய்தால் அது கொடுங்கோன்மையாகி விடும். அரசன் குடிமக்கள் நலங்களையும் விருப்பங்களையும் பேணிய அமைச்சர்கட்கும் நாட்டுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு ஆண்டாலும், மக்களுக்கு உரிமைத் தாள்கள் வழங்கி அவற்றை மீறாது ஆண்டாலும், அவ் ஆட்சி வரையறைப்பட்ட முடியாட்சி யாகும். குடிமக்களுக்குப் பொறுப்புடைய சட்டமன்றமும் அதற்குப் பொறுப்புடைய அமைச்சரும் அவ்வமைச்சருக்குக் கட்டுப்பட்ட அரசனும் ஆட்சி முறையில் அமைந்தால் அது பொறுப்புடைய முடியாட்சியாகும். அரசர் குடும்பத்தில் அரசுரிமை பெரும்பாலும் ஆடவர் வழியிலேயே வந்திருக்கிறது. பிரஞ்சு நாட்டில் பெண்களுக்கு அரசுரிமை இல்லை என்று ஒரு சட்டம் ஏற்பட்டிருந்தது. ஆடவர் வழியில் எவ்வளவு தொலைவு சென்றாலும் உரிமையுடையவ ரிராவிட்டால்கூட அவ்வுரிமைக்கு அண்மையிலுள்ள பெண் அரசியாவதில்லை. அவள் வழியில் வந்த அடுத்த ஆடவனே அரசனாவான். ஆனால் ஆங்கில நாட்டிலும் பிறநாடுகளிலும் உரிமை பெற்ற ஆடவர் இல்லாதபோது பெண்ணும் உரிமை பெற்று ஆளக்கூடும். எலிசபெத். ஆன், மேரியர் இருவர், விக்டோரியா ஆகியவர்கள் இங்ஙனம் ஆண்டுள்ளனர். இந்தியாவிலும் கணவனிறந்தபின் நாடாண்ட காரிகையர் பலர் உளர். வடநாட்டில் ரெசியா, சான்சி முதலியவர்களும், தமிழ்நாட்டில் அல்லி அரசியும், மங்கம்மை அரசியும் இத்துறையில் பேர்போனவர்கள். பண்டைய பாண்டியன் வழி அல்லி அரசி காலத்தில் பெண் அரசுரிமை உடையதாயிருந்தது என்று கூட அந்நாளைய கிரேக்க ஆசிரியர் குறித்திருக்கின்றனர். அது எங்ஙனமாயினும் இன்று மலையாள நாட்டில் திருவாங்கூரில் ஆடவரேதான் அரசராயினும் அவர்கள் அரசுரிமை பெண்வழியில் (மருமக்கள் வழியில்) வருகிறது. அண்மைவரை குடிகள் பொருளுரிமைகூட இவ்வழியிலேயே அங்கு அமைந்திருந்தது. ஆங்கில நாட்டில் உயர் குடியில் பொருளுரிமை கூட அரசுரிமை போல மூத்த ஆடவர்க்கு மட்டும் உரியதா யிருந்து வருகிறது. மன்னனில்லா ஆட்சி ஒழுங்கான ஆட்சியாயிராது பாழாட்சியே(ஹயேசஉhல) என்று அந்நாளைய மக்கள் கருதினர். பழங்காப்பிய ஆசிரியர் மன்னனில்லா நாட்டைக் கணவனில்லாக் காரிகைக்கும், கண்ணில்லா முகத்துக்கும், தாமரையில்லாப் பொய்கைக்கும், வெங்கதிரும் தண்கதிரும் இல்லா வானத்துக்கும் ஒப்பிட்டுக் கூறினர். ஆயினும் வடஇந்தியாவிலும், கிரீசிலும், ரோமிலும் பண்டைக் காலத்திலேயே இத்தகைய ஆட்சி இருந்தது உண்மை. ஆகவே ஆட்சி ஒழுங்கில்லாத நாடுதான் பாழாட்சி யுடையதென்றும், மன்னனில்லா ஆட்சி பாழாட்சி யன்று என்றும் காணலாம். தற்கால அறிஞர் மன்னனில்லா ஆட்சி முறையைக் குடியாட்சி(சுநயீரடெiஉ) என்கின்றனர். முடியாட்சியைப் போலவே குடியாட்சியும் முதல் முதலில் குலத்தலைவர் நிலையிலிருந்தே தோற்றி யிருக்கக் கூடும். குடிகள் அல்லது குலங்கள் ஒன்று பட்டபோது ஒரு குடித்தலைவன் அல்லது குலத்தலைவன் மற்றத் தலைவர்களை வென்றடக்கினால் முடியாட்சி ஏற்படும். சில சமயம் ஒரு தலைவன் இங்ஙனம் செய்யமுடியாமல் போகலாம். அப்போது பல தலைவர்கள் ஒன்றுபட்டோ, அல்லது தலைமையான ஒரு குடியினர் மட்டிலுமோ தலைமை தாங்கலாம். அத்தகைய தறுவாய்களில் முடியாட்சியினிடமாகக் குடியாட்சி தோன்றும். இந்தியாவில் கௌதம புத்தர் காலத்தில் சாக்கியர் குடியிலும் குப்தர் ஆட்சித் தொடக்கத்தில் லிச்சாவிக் குடியிலும் இத்தகைய குடியாட்சி முறை யிருந்ததாகத் தெரிகிறது. அலக்சாண்டர் காலம் வரை கிரேக்கர் நகரங்கள் பல,இத்தகைய குடியாட்சி வகைகளை யுடையவையாயிருந்தன. ரோம் சீசர் காலம் நெடுங்காலம் குடியாட்சி உடையதாயிருந்தது. ஒரு தனிமனிதன் கையில் ஆட்சித் தலைமை போய் விடக்கூடாது என்ற எண்ணமே குடியாட்சி ஏற்படக் காரணம். ஆனால், ஸ்பார்ட்டாவில் இக்கருத்துடன் ஒரு புதுவகை முறை கையாளப்பட்டது. அவர்கள் ஓர்அரசனுக்கு மாறாக இரண்டு அரசர் ஏற்படுத்தி ஒருவர் உரிமையை மற்றொருவர் உரிமையால் தடுத்து நிறுத்த வகைதேடினர். இப்புதுமை வாய்ந்த ஆட்சியை நாம் இணைமுடியாட்சி என்னலாம். குலமுதல்வனுக்கு மாறாகப் பல குலமுதல்வரோ ஒரு குடியினரோ தலைமை நிலைபெற்ற குடியாட்சி, குழுவாட்சி (டீடபையசஉhல) என்னப்படும். தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பாராக மட்டும் அமைந்தால் அது உயர் குடியாட்சியாம் (ஹசளைவடிஉசயஉல). வகுப்பு பிறப்புப் பற்றியது (சாதி) ஆனால், அது உயர்குல ஆட்சி(ஹசளைவடிஉசயஉல லெ bசைவா) என்றும். நாகரிகமுடைய வகுப்பினராட்சியானால் மேன்மக்களாட்சி (ஹசளைவடிஉசயஉல லெ அநசவை) என்றும், முனிவர் சமயத்தலைவர் ஆகியவர் ஆண்டால் முனிவராட்சி (ழயபiடிஉசயஉல) என்றும், முதன்மக்கள் ஆட்சி என்றும் பெயர் பெறும். சில இடங்களில் ஆட்சியுரிமை யாரிடமும் இல்லாமல் தெய்வத்தின்பெயரால் ஆட்சி நடைபெறுவதாகக் கூடக் கூறப்படுவதுண்டு, திருவாங்கூரில் இக்கருத்துடனேயே நாட்டுக் காசுகளில் அந்நாட்டுத் தலைமைக் கோவிலின் தெய்வமாகிய உந்தித் தாமரையானின் (பத்மநாபரின்) குறியீடுகளான சங்கு சக்கரம் மட்டுமே குறிக்கப்படுவதுடன் அரசரும் தம்மைப் பத்மநாபனடியார் என்று குறித்துக் கொள்கின்றனர். இதனை ஓர் ஆட்சிமுறையாகக் கொண்டால் தெய்வ ஆட்சி(கூhநடிஉசயஉல) என்று கூறவேண்டும். இன்னும் இதேமுறையில் அறிஞர் ஆட்சி, செல்வர் ஆட்சி (கூiஅடிஉசயஉல) ஆட்சி முறையிற் பயிற்சி பெற்ற வல்லுநர் ஆட்சி(க்ஷரசநயரஉசயஉல) என்று குழுவாட்சியைப் பலவாறாக வகுத்துக் கூறலாம். ஒரு வகுப்புக்கு அல்லது தலைவனுக்குக் கீழ் இன்னொரு வகுப்பு, அல்லது தலைவன், அதற்குஅல்லது அவனுக்குக் கீழ் அதற்கடுத்த வகுப்பு அல்லது தலைவன் என்றிப்படி ஏணி போல் ஆட்சி உரிமை இறங்கி வருமானால் அதனைப் படிமுறை ஆட்சி(ழநைசயசஉhல) என்பர். ஐரோப்பாவில் நிலஉரிமை இங்ஙனம் படிமுறையில் அரசன் முதல் உழவன் வரை பரந்திருந்தது. அதனைப் படிமுறை உரிமை(குநரனயடளைஅ) என்கிறோம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைக் குறைகூறுவார் அதனை வல்லுநர் ஆட்சி, படிமுறை ஆட்சி என்று சொல்வதுண்டு. குடியாட்சியுட்பட்ட எல்லா மக்களுக்குமே ஆட்சி உரிமை அமைந்திருந்தால் அத்தகைய ஆட்சிக்குப் பொதுக் குடியாட்சி (னுநஅடிஉசயஉல) என்பது பெயர். குடியாட்சி முறைகளுள் இதுவே சிறந்ததெனக் கொள்ளப்படுகிறது. பூ எனப்படுவது பொறிவாழ் பூவாகிய தாமரையே என்று கூறுவது போல் இதனையே குடியாட்சி என்று சிறப்பித்துக் குறிப்பர். இந்நூலின் பெயரில் கண்ட குடியாட்சி என்னும் தொடர் இப்பொருளிலேயே வழங்கப்படுகிறது. கொள்கையளவில்தான் உண்மையில் ஓராட்சி எல்லார் உரிமையையும் பேணுவதாயிருக்க முடியும். ஒரு சிற்றூரில் கூட எல்லா மக்களும் வந்து ஆட்சி உரிமையை நேரடியாக நடத்தல் முடியாது. ஆயினும் பண்டைய கிரேக்க நாட்டில் அதென்சில்(ஹவாநளே) எல்லாமக்களும் வந்து ஓரிடத்தில் கூடிப் பொதுக் காரியங்களை நடத்தினராம்! ஆகவே கருத்தியல் வகையில் அதென்சின் அந்நாளைய அரசியலே ‘நிறைந்த பொதுக்குடியாட்சி’(ஞநசகநஉவ னுநஅடிஉசயஉல) எனக் கூறப்படுகிறது. ஆயினும் உண்மையில் அவ்வாட்சியில் ஆரியராகிய கிரேக்கருக்கு மட்டும் தான் எவ்வகையுரிமையும் உண்டு. கிரேக்கரினும் பன்மடங்கு தொகையுள்ள பழங்குடி மக்கள் அங்கே அடிமை களாக வேலை செய்தனர். அவர்களைக் கிரேக்க அறிஞர்கூட மனிதராகக் கருதவில்லை. ஆதலினால்தான் அதனைப் பொதுக் குடியாட்சி என்றனர். அடிமைகளின் உரிமையை விலக்கிப் பார்த்தால் பொதுக்குடியாட்சியின் தன்மை கருத்தளவில் அந்நகராட்சியில் நிறைவுற்றிருந்தது என்பது உண்மையே. நகரும் நகர்சார்ந்த சேரிகளும் நகராட்சியில் உட்பட்டிருக்கும் காலம்வரை இவ்வாட்சி குடியாட்சி முறையில் நடந்தது. ஆயினும் அதேனியர் கடல்கடந்த பல தீவுகளிலும் நாட்டுப்பகுதிகளிலும் தம் கொடியைப் பரப்பிய போது அவ்விடங்களிலுள்ள மக்கள் ஆட்சியுரிமையில் சரிநிகர் பங்கு கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவில் இத்தகைய நிலையைச் சமாளிப்பதற்குத்தான் பெயராண்மையும்(சுநயீசநளநவேயவiடிn) தேர்தல் முறையும் எழுந்தன. கிரேக்க ரோம அரசியலில் இம்முறை எழவில்லை. பெயராண்மையும் தேர்தல் முறையும் உடைய குடியாட்சியே பொறுப்புடைய குடியாட்சி அல்லது உண்மையான குடியாட்சி என்று இன்று கொள்ளப்படுகிறது. இவ்வாட்சியின் சிறப்பு அது எல்லா வகையிலும் நிறைவுடையது என்பதன்று; நிறைவுடைய ஆட்சியை வகுக்க உதவிதந்து, வளர்ச்சிக்கிடம் தரும் வகையில் நெகிழ்ச்சியுடையது என்பதே. பொறுப்பாட்சி ஏற்பட்ட நாடுகளில் படிப்படியாகத் தேர்தலுரிமையும் அமைச்சர் குழுப் பொறுப்பும் வளர்ச்சியடைந்து வருகின்றன.தொடக்கத்தில் பழைய குலமுதல்வர், பெருங்குடியினர் ஆகியவர்கள் வழியில் வந்த செல்வரும் வல்லுநரும் தேர்தலுரிமை பெற்றிருந்தனர். பின் பிறரும் செல்வநிலை எய்தித் தேர்தலுரிமை பெறத் தொடங்கினர். இறுதியாக அனைவரும் தேர்தலுரிமை பெற்றனர். ஆடவருடன் சரிநிகராய்ப் பெண்டிரும், சொத்துரிமை உடையவருடன் சரிநிகராக உழைப்பாளிகளும் உரிமை பெற்று வருவது இந்நாளில்தான். பழைய அரசியலறிஞர் எல்லா மக்களும்-ஆடவர் பெண்டிர் அனைவரும் தேர்தலுரிமை பெற்று அமைத்த குடியாட்சியையே முழுக் குடியாட்சியென ஏற்றமைவுற்றனர். ஆனால் அரசியலுரிமைகள் பெறுவதனால் மட்டும் எல்லாருக்கும் சரிநிகருரிமை ஏற்பட்டு விடவில்லை என்பதைப் பல அறிஞர் கண்டனர். வாழ்வியல் ஒப்பந்த அறிஞரே இதனை முதலிற் கண்டுரைத்தவர்கள். மக்களிடையே உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டிருப்பது அரசியல், சமயம் ஆகியவற்றில் முன் தலைமை தாங்கிய வகுப்பினர் நடுநிலைநெறியின்றி ஆட்சி செய்ததன் பயனேயென்றும், எல்லாருக்கும் இயற்கை வாழ்வின்படி சரிநிகர் உரிமை உண்டு என்றும் அவர்கள் கூறினர். வாழ்வியல் ஒப்பந்த அறிஞர் வழிவந்த வாழ்வியல் சீர்திருத்த அறிஞர்(ளுடிஉயைடளைவள) முதலில் அரசியலில் அனைவருக்கும் உரிமை கிடைத்தால் வாழ்வில் சரிநிகர் நிலை ஏற்பட்டு விடும் என்று கருதினர். ஆனால், நடைமுறையில் தேர்தல் உரிமை ஒரு சொக்கட்டான் ஆட்டமாகவே இருப்பது கண்கூடு. முன் தம் தேர்தலுரிமையால் மக்களை ஆட்டி வைத்த பழைய செல்வர் இப்போது தம் உயர் நிலையைப் பயன்படுத்தி வேறுவகையில் தேர்தலுரிமையையே ஆட்கொண்டுவிட்டனர் என்பது அவர்கள் கண்டனர். முழுக்குடியாட்சி நிலவுவதாகக் கூறப்படும் இங்கிலாந்தில் இன்னும் பெருநிலக் கிழவரும் பெருந்தொழில் முதலாளிகளுமான விரல்விட் டெண்ணக்கூடிய ஒரு சிலரே ஆட்சியுரிமையை முற்றிலும் தம் வயப்படுத்தி யிருக்கின்றனர். என்றும், பிரான்சில் ஒரு சில பத்துக்குடிகளும், அமெரிக்காவில் ஒரு சில நூறு குடிகளும்தாம், உண்மையில் ஆட்சியை நடத்துகின்றனவென்றும் கூறப்படுகிறது. எனவேதாம் குடியாட்சி கொக்கரித்தாடும் இந்நாடுகளிலும் கோடி குவித்த மட்டற்ற செல்வ மாளிகைகளுடன் கூடப் பல குடிகள் அரையாடையுடன் வாழும் குடில்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, அரசியல் சரிஒப்பு ஏற்பட்டால் போதாது; தனி உரிமைகள், தனி உடைமைகள் அற்றுப்போனால் தான் உண்மையில் சரிநிகர் நிலை ஏற்படும் என்று பல அறிஞர் கண்டனர். மற்றவகை உடைமைகளை ஆண்டவரைவிடத் தொழில் வகையில் பலர் உழைப்பை ஆண்ட முதலாளி வகுப்பினர் இப் புதுப்போக்கை எதிர்த்தனர். எனவே, முடியாட்சி குடியாட்சி முதலிய எல்லாப் பழைய அரசியல் வகைகளும் முதலாளி முறையின் பல்வகை வேறுபாடுகளே என்றும் தொழிலாளிகள் இப்பெரு முதலாளிகளை எதிர்த்துத் தம் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டுமானால் பொது உடைமை ஆட்சி ஏற்படவேண்டும் என்றும் நாளடைவில் அறிஞர் கருதினர். செர்மானியப் பேரறிஞராகிய கார்ல் மார்க்ஸ் மனித நாகரிகத்தின் போக்கு முற்றிலும் முதலாளி தொழிலாளி என்ற இரு வகுப்பினரின் போராட்டமே என எடுத்துக்காட்டித் தொழிலாளிகள் இந்நிலையை உணர்ந்தாலல்லாமல் தம் வினைக்கு (விதிக்கு)த் தாம் தலைவராக முடியாது என்று காட்டினர். அவர் வகுத்த ஆட்சி முறையே பொதுப்படப் பொது உடைமை(ஊடிஅஅரnளைஅ) எனப்படும். இம்முறையில் அரசியலுரிமை மட்டுமன்றிச் சொத்தும், உடைமையை அனைவருக்கும் சரிநிகராக்கப்படுவன. உலகில் இன்று பொது உடைமை அரசாங்கம் முழுக்க அமைந்துள்ள நாடு உருசிய(சுரளளயை) நாடு ஒன்றே. அது மக்களுக்குப் புது முறை வகுத்து முன் செல்லுகின்றது. அதன் நன்மை தீமைகள் பிறநாடுகளுக்குப் படிப்பினை யாகும். இதுகாறும் கூறியவற்றால் ஆட்சிகள் மூவகையாவதைக் காணலாம். ஒன்று முடியாட்சி. மற்றொன்று குடியாட்சி. இரண்டும் தனிஉடைமை முறையின் பாகுபாடுகள்; மூன்றாவது இவற்றுக் கெதிரான பொது வுடைமை ஆட்சி. முடியாட்சி முழு உருவில் வளர்ச்சியடைந்து முதிர்ந்தது ஆரியரல்லாதாரிடையேதான். ஆனால், அதன் தோற்ற வளர்ச்சிகளை அவர்களிடையே காண முடியவில்லை. முதிர்ச்சியை மட்டுமே காணமுடிகிறது. ஆரியரிடையே குடியாட்சி முடியாட்சி இரண்டின் தோற்றத்தையும் காண்கிறோம். ஆனால் முடியாட்சி மட்டுமே நெடுநாள் ஆரியரால்லாத நாகரிகங்களின் முன்மாதிரியைத் துணைகொண்டு வளர்ச்சியடைந்தது. குடியாட்சியின் வளர்ச்சி பெரிதும் பிரிட்டனின் அரசியலிலேயே காணக்கிடக்கிறது. இன்று குடியாட்சி நிலவும் நாடுகளில் பலவும் பிரிட்டனையே அரசியல் வகையில் தாயகமாகக் கொண்டன. கடைசி ஆட்சி முறையாகிய பொதுஉடைமை ஆட்சிக் கருத்து செர்மனியில் தோன்றியதாயினும் அது முற்றிலும் வளர்ச்சியடைந்து வருவது உருசியாவில்தான். எனவே, ஆட்சிமுறை வரலாறு வகையில் கீழ்நாடுகளின் வரலாறுகளைவிட, கிரேக்க ரோம நாடுகளின் வரலாறு பயனுடையவை. ஆயினும், கிரேக்க நாகரிகம் நீங்கலாக மற்றவை குடியாட்சியின் தோற்ற வகையில் பயன்படமாட்டா. கிரேக்க நாட்டின் வரலாறு உலகுக்கு ஒரு முன் மாதிரியாயினும் வளர்ச்சி முடிந்து விட்ட ஒரு தனி வரலாறு. பழைய நாகரிக உலகிற்கும் புதிய நாகரிக உலகிற்கும் அரசியல் வகையில் பாலம் போன்றமைந்திருப்பது பிரிட்டன். அடுத்தபடி இன்றைய உலகிற்கும் வருங்கால உலகிற்கும் இடையேயுள்ள ஒரு பாலமாயமைந்திருப்பது உருசியா என்று கூறலாம். 3. பழங்கால ஆட்சி வகைகள் உலகில் முதல் முதல் ஏற்பட்ட ஆட்சிமுறை முடியாட்சியே என்றும் இது குலமுதல்வன் ஆட்சியினின்று தோன்றியது என்றும் மேலே கூறினோம். குலமுதல்வன் ஆட்சி எப்போது முடியாட்சியாக மாறிற்று என்று வரலாற்றாராய்ச்சியால் துணிந்து கூறமுடியவில்லை. ஆரியரிடை இந்தியாவிற்குள் வந்தபின்தான் குலமுதல்வனாட்சி முடியாட்சியாக மாறிற்று என்றும் கண்டோம். கிரீசிலும் கி.மு. ஆயிரத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் தீசியஸ்தான் குலமுதல்வன் நிலையிலிருந்து முடியரசை நிறுவிப் புகழ் பெற்றவன் என்று எண்ணப்படுகிறது. ரோமரிடையே மிகப் பழைய காலத்திலிருந்தே குலமுதல்வர் முடியரசராக விளங்கினர் என்று தெரிகிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில்தான் இங்கே எக்காரணத்தினாலே முடியரசு வீழ்ச்சியடைந்து குடியரசு ஏற்பட்டது. கி.மு. முதல் நூற்றாண்டில் பழையபடி குடியரசு வீழ்ச்சி யடைந்து முடியரசு நிறுவப்பட்டது. ஜெர்மானியர் டேனியர் முதலியவர்கள் நாடோடிகளாகவும் கடற்கொள்ளைக் கூட்டத்தினராகவும் இருந்த போதெல்லாம் குல முதல்வரிகளில் வலிமை மிக்கவர்கள் படிப்படியாய் உயர்வு பெற்றனர். அவர்கள் இங்கிலாந்து முதலிய இடங்களில் குடியேறிய பின்தான் இம்முதல்வர் முடியரசராக மாறினர் என்று தெரிகிறது. ஆனால், ஆரியரிடையேதான் இங்ஙனம் கிட்டத்தட்ட கி.மு. 1000ல் முடியரசு ஏற்பட்டது என்று கூற முடிகின்றது. ஆரியரில்லாத மக்களிடையே நாம் அறிந்தவரை தொடக்க காலமுதற்கொண்டு மன்னராட்சியே யிருந்து வருவதால் எப்போது முடியாட்சி தோன்றிற்று என்று கூறமுடியவில்லை. ஆயினும் இங்கும் மக்கள் மிகத் தொலைவு மிக்க பண்டைக் காலத்தே ஆரியரைப்போல் நாடோடிகளாயிருந்து குலமுதல்வர் களை வகுத்துப் பின் அவர்களையே மன்னராகக் கொண்டிருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு. ஏனெனில், விவிலிய நூலில் கண்ட வரலாற்றின்படி எகிப்து நாட்டில் தலைவரற்று அடிமைகளாயிருந்த ஏபிரேயர் அங்கிருந்து மோசே தலைமையில் செங்கடலைத் தாண்டிப் பாலத்தீனம் புகுந்ததாகவும் அங்ஙனம் தலைவராக அல்லது குல முதல்வராக வந்த மோசே வழியே பின்னர் மன்னர் வழியாயிற்று என்றும் அறிகிறோம். அவர் களுடன் தொடர்புடைய அராபிய மக்கள் முகமது காலத்திலும் இன்றளவும் கூட நாடோடிகளாகவும் குலமுதல்வர்கள் ஆட்சியுட்பட்டவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முகமது நபிநாயகத்துக்குப் பின் சில நூற்றாண்டுகள் அராபியர் ஒரு குடைக்கீழ்ப்பட்டிருந்தனர். பின் துருக்கியாட்சியால் அராபியரும் துருக்கியரும் ஒரு பேரரசாட்சியுட்பட்டனர். இறுதியில் கமால் பாக்ஷhவால் துருக்கி பிரிக்கப்பட்டபின் மீண்டும் குல முதல்வர் ஆட்சிமுறையில் பட்ட அரபிநாட்டை நம்நாளில் இப்னுசுஊதியே ஒற்றுமைப் படுத்தி வருகிறார். எகிப்து, பாபிலோன், திராவிட இந்தியா ஆகிய இடங்களில் மன்னராட்சி இவற்றினும் பழமையுடையனவாத லால், அவற்றின் முதல்நிலை பற்றி எத்தகைய குறிப்பும் கிட்டவில்லை. வரலாற்று மூலம்திராவிடர் பழமைபற்றி மிகுதியாக அறிய முடியவில்லையாயினும் அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருளாராய்ச்சியால் அது எகிப்தியர் முதலிய செமித்தியருடன் தொடர்புடையதும் ஒத்த காலத்ததும் ஆகும் என்பது புலப்படுகின்றது. பலவகைகளில் பண்டைக்காலச் சிந்து மக்கள் செமித்தியரினும் மேம்பட்ட நாகரிகமுடையவர் களாகவே யிருந்தனர் என்று வரலாற்றறிஞர்கள் கூறுகிறார்கள். இதனுடன் சேர்த்துப் பழைய மரபுரைகளைக் கவனித்தால் திராவிடநாடு இவற்றிலும் பழமையுடையதே என்பது விளங்கும். செமித்தியரில் ஆரியருடன் ஒத்த பழமையுடையவர் ஏபிரேயர். அராபியர் இவர் வழி வந்தவர் எனவே கூறிக்கொள்கின்றனர். இவ் ஏபிரேயர் தாம் எகிப்தியர் இனத்தவர் என்றும் அவர்கள் நாட்டினின்று அவர்கள் அரசனாகிய பரோவாவின் கொடுமை பொறாது வந்தவர்களே என்றும் கூறுகின்றனர். ஆனால், இவ் எகிப்தியரோ வெனில் தாம் இந்தியாவினின்று போந்தவர் எனவே உரைத்தனர். ஆகவே, செமித்தியர் திராவிடரின் வழிவந்த கிளையினர் என்று கொள்வது பொருத்தமற்றதன்று. மேல் ஆராய்ச்சிகள் இதனை இன்னும் தெளிவுபடுத்தக்கூடும். இந் நாடுகள் இடையே வழங்கிய அன்னை வணக்கம், ஊர் என்ற இடப்பெயர், ஆனின் வணக்கம், பெண்கள் வீரமும் உயர்வும் ஆகியவைகள் இவ்வொற்றுமையை வலியுறுத்தத் தக்க சான்றுகளாகும். இவ்வெகிப்தியரிடையேயும் பிற மக்களிடையேயும் முதன் மன்னர் பெயர் மெனாஸ் என்று மரபாக வழங்கி வருகிறது. இந்தியரிடையேயும் முதல் மன்னர் மனு என்றும், மக்களிடையே ஒப்புரவு குறைந்த காலத்து அவர்கள் இறைவனை வேண்டி அவரை அரசராகப் பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இம்மனுவே பெருவெள்ளக்காலத்தில் மக்கள் வகுப்பை அழியாது காத்தவர் என்றும் குறிக்கப்படுகிறது. விவிலிய நூலிலும் செமித்தியரிடையேயும் காணப்படும் இக்கதை கிரேக்கர், ரோமர், செர்மானியர் முதலிய தொலைதூர ஆரிய வகுப்பினரிடம் காணப்பெறாது இந்தியரிடையே மட்டும் காணப்படுவதிலிருந்து இக்கதை திராவிடச் சார்பானதே யல்லாமல் ஆரியச் சார்பானதன்று என்று துணியலாம். இதற்குப் புராணங்களே சான்றும் பகர்கின்றன. இம் முதலரசனாகிய மனுவே திராவிட நாட்டரசன் பிரகத்தன் எனவும், அவன் படகுடன் தங்கிய இடமும் திராவிட நாட்டின் மலைகளுள் ஒன்று எனவும் அவை கூறுகின்றன. இம்மன்னன் பாண்டிய நாட்டுத் தமிழ் மன்னருள் ஒருவன் என்றும், தங்கியமலை மலையமலை ஆகிய பொதிகை என்றும், அவன் பெருவெள்ளத்தினின்றும் காத்த முதன் மனிதவகுப்புத் தமிழர் அல்லது பழந் திராவிடரே என்றும் கொள்ளுதல் கூடும். அப்படியாயின் மனு அல்லது பிரகத்தன் திராவிடர்களிடையே முதல் மன்னன் என்று கொள்ள இடம் ஏற்படலாம். ஆயினும் புராணத்தின் போக்கிலிருந்து அவன், வெள்ளத்தால் பழைய உலகு அழிந்தபின் ஏற்பட்ட புதிய உலகின் முதல் அரசனாகக் கூறப்படுவதாகத் தோற்றுகின்றதே யன்றி உலகிலேயே முதல் அரசன் என்று கூறப்படுவதாகக் காணப்படவில்லை. இப் பழங்கதையை யன்றித் திராவிடரிடையே மன்னராட்சியின் தொடக்கம் பற்றிய எத்தகைய குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. அதன் காலமும் நம் ஆராய்ச்சிக்குட்படாததாயிருக்கின்றது. குலமுதல்வ னிலையிலிருந்து முடியாட்சி தோன்றியது போலவே குடியாட்சியும் சில இடங்களில் தோன்றின என்று மேலே குறிப்பிட்டிருக்கிறோம். இந்தியாவில் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் இத்தகைய குடியாட்சிகள் பல இருந்தன. கி.மு.4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திலும் சுக்கிரன் எழுதிய சுக்கிர நீதியிலும் இத்தகைய குழுவாட்சிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டில் குப்தர் வழியின் முதல் அரசனான சந்திரகுப்தன் லிச்சாவி என்ற குழுவாட்சி மக்களின் ஆட்சிக்குழு வினரிடையே பிறந்த இளவரசியை மணந்ததன் பயனாகவே ஆற்றல் மிக்கவனானான் என்று கூறப்படுகிறது. குழுவாட்சி முதலில் குடிச்சார்பிலேதான் எழுந்ததாயினும் நாளடைவில் செல்வத்தின் சார்பிலும் ஏற்படுவதுண்டு. அப்போது அது செல்வராட்சியும் சமயத்தலைவர் ஆட்சியும் ஆயின. பெயரளவில் முடியாட்சி யிருக்கும் இடங்களில்கூடப் பல விடங்களில் அம் முடியாட்சியின் போர்வையில் செல்வராட்சி, சமயத்தலைவர் ஆட்சி ஆகியவையே நிலவுவதுண்டு. திராவிட மன்னர் ஆட்சியும் செமிட்டிய மன்னர் ஆட்சியும் பிற ஆரியரல்லாத மன்னர்ஆட்சியும் பெரும்பாலும் அங்ஙனம் முடியரசு என்ற வெளிப்போர்வை போர்த்த சமயத்தலைவர் அல்லது குருமார் ஆட்சியாகவே இருந்தன என்று கொள்ள இடமுண்டு. பிற்காலத் தமிழ் மன்னர் ஆட்சியும், அண்மைக்கால தற்கால இந்துமன்னர் ஆட்சிகளும் கூட ஓரளவு இந்நிலையி லிருந்து மாறவில்லை என்று காணலாம். திருவாங்கூர் மன்னர் இன்றும் நாட்டுத் தெய்வத்தின் பெயரால் அத்தெய்வத்தின் அர்ச்சகர் அடிபணிந்து ஆளுதல் குறிப்பிடத்தக்கது. புராண இதிகாச காலங்களில் இவ்வாட்சியையே ஆரியர் வயப்பட்ட குருமார் இராமராச்சியம் எனப் புனைந்து கூறினர். கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகர் முடியாட்சியிலேயே நின்று விட்டதாயினும் இருமன்னர் ஆட்சியை ஏற்றது. அதென்ஸ் நகரம் படிப்படியாக முடியாட்சியினின்று வல்லாட்சிக்கு மாறி அதினின்றும் குடியாட்சியாக விளைவுற்றது. கிளீஸ்தெனிஸ் என்ற தலைவன் காலத்தில் அது நிறைகுடியாட்சியாயிற்று. அஃதாவது நகரத்தான் ஒவ்வொருவனுக்கும் சரிஒப்பான ஆட்சியுரிமை தரப்பட்டது. ஆட்சியெல்லை அதேனிய நகர அளவில் இருக்கும்வரை இஃது ஓரளவு நன்கு நடைபெற்ற தாயினும் அவ்வெல்லை விரிந்து பேரரசானபோது அது வளர்ச்சியற்றுப் போயிற்று. மேலும் அதேனிய நகரத்திலும் ஒரு சிறுபான்மை மக்களே-ஆரிய வகுப்பினரே- நகரத்தார் உரிமை பெற்றனர் என்பதை மேலே குறிப்பிட்டிருக்கிறோம். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டின் சிறந்த அறிஞராகிய ஸாக்ரட்டீஸ் என்பவர் அதேனிய நிறைகுடியரசின் ஊழல்களை எடுத்துக் காட்டினார். அவர் மாணக்கரும் சிறந்த இலக்கியப் புனைவாளரும் அறிஞருமான பிளேட்டோ என்பவர் தாம் எழுதிய ‘குடியரசு’ (ரிப்பப்ளிக்) என்ற நூலில் அதேனியக் குடியரசின் மாதிரியைப் பழித்து உதறிவிட்டு ஸ்பார்ட்டாவின் வல்லாட்சியையே உயர்வுடைய முன்மாதிரி எனக் கொண்டார். அவர்பின் வந்த மாணவரும் அலெக்சாண்டரின் ஆசிரியருமான அரிஸ்டாட்டில் தாம் எழுதிய ‘அரசியல்’ என்ற நூலிலும் ஓரளவு இதனையே ஆதரித்தார். ரோம ஆட்சி குடியாட்சியானபோது அது ஒரு வகையில் ஸ்பார்ட்டாவின் வல்லாட்சி (வன்மைக்குழுவாட்சி)யையே ஒத்திருந்தது. ஆனால் அவர்களிடையே ஆட்சிக்குழுவினராகிய பத்ரிசியரால் பிறமக்களை நெடுங்காலம் அடக்கிவைக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியக்குழுவினரைப்போல அவர்களும் அப்பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாத சமயங்களில் சில உரிமைகளை விட்டுக்கொடுத்தும், அவர் களிடையே படிப்படியான உயர்வு தாழ்வுகள் கற்பித்தும் மனுநீதி போன்ற வாழ்வியல் பாகுபாட்டு முறைகளை உண்டு பண்ணினர். ஆனால், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பாற்றலால் இக்குழுவாட்சி சீர்குலையவே தனிமனிதர் வல்லாட்சி ஏற்பட்டு, அது பழையபடி பேரரசுக்காலங்களில் முடியாட்சியாக மாறிற்று. செமிட்டியரிடையே வாணிபவாழ்வில் தலைசிறந்து விளங்கிய டைர், ஸைடன் நகரமக்களும் அவர்களின் குடியேற்ற நாடாகிய கார்தேசில் வாழ்ந்த மக்களும் அவர்களிடையேயுள்ள வாணிபச்செல்வர் தேர்ந்தமைத்த ஒரு குழுவினாலே ஆளப்பட்டனர். இவர்கள் வாணிபக்குழுவமைப்பு தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரின் குழுவமைப்புப் போன்ற தாகும். ஐரோப்பாவில் இத்தாலிநாட்டின் நகரங்களாகிய வேனிஸ், நேபிள்ஸ், பிளாரென்ஸ் ஆகியவை இவற்றைப் போலவே வாணிபத்தில் தலைசிறந்து நின்ற காலங்களில் அவையும் இத்தகைய செல்வக்குழுவாட்சியே யமைத்துக் கொண்டன. இக்குழுவின் அரசியல் மன்றம் தேர்ந்தெடுத்த ஒரு தலைவன் கீழ்நின்று ஆட்சியை நடத்திற்று. வெனிசில் இத்தலைவர் ‘டோஜி’(னுடிபந), என்றழைக்கப்பட்டனர். இத்தாலியில் இன்றும் வல்லாட்சியாளர் (முசோலினி போன்ற தலைவர்) இச்சொல்லை ஒட்டியே ‘டூஸ்’(னுரஉந) என்றழைக்கப்படுகின்றனர். இச்சில குடியரசுகளின் ஆட்சியை நீக்கினால் ஐரோப்பா முழுவதிலும் ரோமப் பேரரசின் பின் ஏற்பட்ட ஆட்சிமுறை இந்தியா முதலிய கீழ்நாடுகளில் இருந்து வந்த முடியாட்சி முறையேயாகும். இங்கிலாந்திலும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பெயரளவில் இவ்வாட்சி முறையே இன்னும் இருந்து வருகிறதாயினும் அவற்றின் மேற்போர்வையினிடையே உண்மையில் ஆட்சிமுறை முற்றிலும் மாறியே வந்திருக்கிறது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய வெளித்தோற்றமான மாறாட்டமில்லாமலே வெட்ட வெளிச்ச மாக முடியரசு கைவிடப்பட்டுப் பலபடியான குடியரசுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால், உள்ளார்ந்த தன்மைகளில் ஆங்கில நாட்டாட்சியே இக்குடியாட்சிகளுக் கெல்லாம் வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் விளங்கி நிற்கிறது. இங்கிலாந்திலும் இம்மேனாடுகளிலும் இன்று நடைபெறும் குடியாட்சி குடிப்பொறுப்பாட்சி (சனநாயகம்) என்ற பெயரால் சிறப்பிக்கப்படுகிறது. இதன்படி உண்மையில் எல்லாப் பொதுமக்களும் ஆட்சியுரிமை உடையவராயினும் அதனை நேரிடையாக அனைவரும் நடைமுறைப் படுத்த முடியாதாதலால் தாமாகத் தெரிந்தெடுத்த தேர்வாளர்கள் மூலம் ஆட்சியுரிமையைச் செலுத்துகின்றனர். மேற்கூறிய ஆட்சி முறைகள் அனைத்தும் ஒரு நாட்டார் தம்மைத் தாமே ஆளும் ஆட்சிக்கு மட்டுமே உரிய தன்னாட்சியைச் சார்ந்தவை. ஒரு நாட்டார் அடுத்த நாட்டில் ஆட்சி செலுத்துவது வெளியார் ஆட்சியாகும். எவ்வளவு சிறந்த ஆட்சியாயினும் வெளியார் ஆட்சி வெறுப்பிற்குரியது. அதனாலேயே “பொன்னாட்சியாயினும் தன்னாட்சியே மேல்” என்ற மேற்கோளுரையும் எழுந்துள்ளது. 4. பண்டைய அரசியல் முறைகள் ஆரியர் வருவதற்கு முன்னரே திராவிடர் நாகரிகத்திலும் அரசியல் முறையிலும் அவர்களை விட நெடுந்தொலைவு முன்னேறியி ருந்தனர். ஆரியர் ஆடுமாடுகளை மேய்த்துத் திரிந்து முல்லைநில வாழ்வு வாழ்ந்த காலத்திலேயே தமிழ்மக்களிடையே குறிஞ்சி அல்லது மலை நாட்டு நாகரிகம், முல்லை அல்லது காடுசார்ந்த இடைக்குல வாழ்வு ஆகியவற்றுடன் மருத நில வாழ்வாகிய நாடு நகர வாழ்வும் நெய்தல் நில வாழ்வாகிய உள்நாட்டு வெளிநாட்டு , வாணிபம் நிறைந்த பட்டின வாழ்வும் மல்கி விளங்கின. உழவும் கைத்தொழில்களும் கலைகளும் அவர்களிடையே செழித்தோங்கின. சிந்து ஆற்றங்கரையோரம் அகழ்ந்தெடுக்கப்பட்டு வரும் ஹரப்பா, மோகஞ்சதரோ நகரங்களிற் கண்டபடி இவர் 5000 ஆண்டுகட்கு முன்னரே பிற ஆரியரல்லாத மக்களாகிய எகிப்தியர், சாலடியர் அசிரியர் முதலியவருக்கு ஒப்பாகவும் சில வகைகளில் அவரினும் மேம்பட்டும் விளங்கினர். நில அகழ்வாராய்ச்சி இன்னும் முனைந்து நடைபெறுந்தோறும் இவற்றைப்பற்றி இன்னும் விளக்கமாகவும் விரிவாகவும் பல உண்மைகளை நாம் அறிதல் கூடும். தமிழருக்கு இன்று கிடைத்துள்ள மிகப் பழைய நூல்கள் தொல்காப்பியமும் புறநானூற்றின் சில பகுதிகளும் அவற்றுக்கடுத்தபடி திருக்குறளுமே யாகும். தொல்காப்பியத்தில் பாயிரத்தில் தொல்காப்பியர் வடமொழி ஐந்திர இலக்கண நூல் பயின்றவராகச் சிறப்பிக்கப்படுகின்றார். தமிழில் தொல்காப்பியம் சிறப்புற்றபின் மற்ற இலக்கண நூல்கள் புகழ் மங்கி ஒழிந்தன போல; ஐந்திரமும், பாணினீயம் சிறப்புற்றபின் புகழ் மங்கி யழிந்த ஒரு நூலாகும். ஆகவே, தொல்காப்பியம் பாணினீயத்துக்கு முந்தியதென்று கொள்ளலாம். அஃதோடு கி.மு. முதலாவது இரண்டாவது நூற்றாண்டின் பின் வளர்ச்சி பெற்ற புதிய செறிவு மிக்க சூத்திர நடை வழக்கிற்கு வருமுன் நிலவிய நெகிழ்ச்சியும் இனிமையுமுடைய சூத்திரநடையே தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. இவற்றை நோக்கத் தொல்காப்பியர் காலம் கி.மு. 500க்குப் பிந்தியதாக இருக்க முடியாது. புறநானூற்றின் பல பாட்டுக்கள் இதனினும் முந்தியன என்பதில் ஐயமில்லை. திருக்குறளின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டெனக் கொள்ளப்படுகின்றது. தொல்காப்பியர் கூறிய ஐந்திணை ஒழுக்கம் அவர் காலத்ததாகவோ அல்லது அதனினும் முற்பட்டதாகவோ இருந்திருக்க வேண்டும். அதன் கோட்பாடுகள் வரையறுக்கப் பட்டு விரிவடைந்திருப்பதைநோக்க அது மிகவும் முற்பட்ட தென்று கூறலே சால்பு உடையது. பிற்கால இலக்கண இலக்கிய நூல்களும் இதே ஒழுக்கத்தை மேற்கொண்டு புனைந்து கூறுகின்றன வாயினும் அவை அக்காலத்தில் காணப்பட்ட ஒழுக்கத்தைக் கூறுபவை அல்ல; மரபு பற்றி விரித்துரைக்கப் பட்டனவே யாகும் என்று கூறலாம். அவை வளர்ச்சியற்றும் நாளடைவில் வழக்காறற்றும் போனதே இதனை நன்கு எடுத்துக் காட்டும். தொல்காப்பியர் காலத்திலும் புறநானூற்றுக் காலத்திலும் முடியுடை வேந்தர் மூவரும் ஆண்டதாகக் காணப்படினும், அவர் ஆண்ட இடம் கூடியும் குறைந்தும் சில காலம் ஒன்றில் ஒன்று முற்றினும் மறைந்தும் இருந்தன என்று தெரியவருகிறது. ஆயினும் இவ்வரசர் நேரிடையாகத் தம்நாடு முற்றும் தாமே ஆண்டனர் என்று தோற்றவில்லை. நாட்டின் ஆட்சி பெரும்பாலும் குறுநில மன்னர் தம் கையிலேயே இருந்தது. குறுநில மன்னர் தம் போர் வீரத்தின் பயனாய் அவ்வப்போது அவர்களை அடக்கித் தம் ஆற்றலை நிறுவி அவர்களிடமிருந்து வணக்கமும் திறையும் கொண்டதுடன் நின்றுவிட்டனர். இத் திறை மன்னர் பின்னாட்களில் குடிகளிடமிருந்து நேராகவும் பணியாட்கள் வாயிலாகவும் ஒழுங்காகக் கொண்ட இறை, அல்லது வரி அன்று. பெருநிலமன்னரின் தலைமையை மேற்கொண்ட குறுநில மன்னர் அவர்கள் பெயரைத் தம் பெயருடன் சேரச் சூட்டிக்கொண்டனர். அவர்கள் கொடி பூ முதலியவற்றையும் மேற்கொண்டு அவர்கள் போர்க்கெழுந்தபோது தாமும் தம் வீரருடனும் படைக் கலங்களுடனும் சென்று போரிட்டனர். இக்குறுநில மன்னராட்சி கிரேக்கர் நகராட்சியுடனும் இங்கிலாந்து முதலிய மேலைநாடு களில் கி.பி.1000த்தை ஒட்டி நிலவிய நில உடைமை ஆட்சியுடனும்(குநரனயடளைஅ) ஒரு சார் ஒப்புடையது. தொல்காப்பியத்திலும் புறநானூற்றிலும் விதந்து கூறப்படும் புறத்தினையொழுங்கு பெரும்பாலும் இக் குறுநில மன்னர் ஒருவருடன் ஒருவர் மாறிட்டுப் போராடிய போராட்டங்கள் பற்றியவையே யாகும். வெற்றி நாடிய மன்னர் மாற்றரசர்நாட்டின் நிரை (பசுக்கூட்டத்தைக்) கவர்ந்தனர். தும்பைமலர் சூடிப் போர்க்கெழுந்தனர். மாற்றரசர்கள் போர்க்களத்தி லெதிர்த்தும் புரிசைகள் (கோட்டைகள்) உள்ளிருந்தும் நொச்சிமலர் சூடிப் போரிட்டனர். வெற்றியடைந்த மன்னன், எதிரியின் நாட்டைச் சூறையாடியும் அவன் நிலத்தைக் கழுதை பூட்டிய ஏராலுழுது பாழ்படுத்தியும் தோற்றவன் கொடி முதலிய குறிகளைப் பறித்தும் வாகைசூடி மீண்டனன். சிற்சில சமயம் வெற்றிகொண்ட மன்னர் பகைநாட்டில் தன் ஆட்களை மன்னராக்கியும் பகைவர் குடியில் வந்த ஓர் இளவரசனைத் தன் கீழாளும்படி முடிசூட்டியும் மீள்வதுண்டு. கடைச்சங்க காலத்தில் (கி.பி.1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை) பல குறுநிலமன்னர் பெருநிலமன்னரை ஒத்த செல்வமும் அவரை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டு விளங்கினர். இவர்களுள் பாரி, ஓரி,காரி, மலையன், அதியமான் முதலிய பலர் சிறப்புக்கள், புறநானூற்றிலும் மற்றச் சங்க நூற்களிலும் காணப்படுகின்றன. பெருநில மன்னராகிய சேர சோழ பாண்டியர்கள் அவ்வப்போது அவர்களை அடக்கியாண்டதுடன் ஒரோ வழித் தம்முள் மற்ற இருவரையும் கூட ஒடுக்கித் தமிழ்நாட்டில் பேரரசராக விளங்கினர். அத்தகையோருள் முதல் கரிகால்சோழன், சேரன் நெடுஞ்சேரலாதன் முதலியோர் பழைமை மிக்கவர்கள். இவர்களைப் பின்பற்றி வந்தவர்களே பாண்டியன் சமயாகீர்த்தி என்னும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், இரண்டாம் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலிய பெரும் பேரரசர்கள் ஆவர். இவர்களில் பலர் தமிழ்நாட்டுடன் அமையாது வடநாடு, சீயம், சாவகம் முதலிய தொலைநாடுகளிலும் தம் சீர்த்தியைப் பரப்பினர். இவர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கி.மு. 500ல் சாவகத்தீவில் தன் ஆட்சியையே நிறுவித் தன் அடிகளை அந்நாட்டில் அலைதவழும் பாறை ஒன்றில் பதிப்பித்து அதற்குத் திருமுழுக்குவழிபாடு செய்வித்தான். இதனைத் தமிழ் நூல்கள் கூறுவதுமட்டு மன்றி, சாவக நாட்டுக் கல்வெட்டுக்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. அந்நாட்டில் அவன் ஏற்படுத்திய வழக்கம் இன்றளவும் நிலைபெறுகின்றது. அஃதோடு அந்நாட்டின் நகரங்களும் இன்றளவும் தமிழ்நாட்டு நகர்களாகிய மதுரை, கொற்கை ஆகிய பெயர்களையே கொண்டு திகழ்கின்றன. இவ்வரசனே யன்றிப் பின்னும் கரிகாலன் இமயத்தில் தன் புலிக்கொடி பொறிப்பித்ததும் சேரன் செங்குட்டுவன் வடவரசரை வென்று கண்ணகி உருவெடுப்பித்துக் கொணர்ந்ததும், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் படை யெடுத்துவந்த வடவர் படையை வென்றதும் தமிழ்நாட்டில் இப்பெருமன்னர் அடைந்த பெரும்பேரரசின் பயனாக எழுந்த செயல்களே யாகும். ஆயினும் தமிழரசர் வெற்றிகளெல்லாம் தனி மனிதர் போர்வெற்றியின் பயனாக எழுந்தனவேயன்றி நாடு பிடித்தாளும் அவாவினால் எழாமையினால் அவை நாட்டுவெற்றிகளாகவோ, நாட்டை விரிவுபடுததி ஒற்றுமைப்படுத்தும் நிலைபெற்ற வெற்றிகளாகவோ விளங்கவில்லை. பிடித்த நாட்டைத் தம் கீழுள்ள வீரருக்கோ முன்னைய அரசருக்கோ மீட்டும் கொடுத்துவிட்டு அவர்கள் திரும்பினர். அவர்கள் வாள்வலி குன்றியவுடன் அவ்வெற்றியும் மறைந்தது. எனவே (பெருஞ்சோழர் காலமாகிய கி.பி.1000 வரை) விரிந்த நாட்டை நேரிடையாக ஆளும் நிலை தமிழகத்தில் வேண்டப்படாது போயிற்று. விரிவான ஆட்சிக் கட்டுப்பாடில்லாமலே குறுகிய நாட்டை மன்னர் நேரிடையாக ஆளக் கூடுமாதலால் அரசியல் முறையில் வளர்ச்சியும் ஏற்படாது போயிற்று. பழங்கால ஆட்சிமுறைபற்றி நமக்கு ஓரளவு விளக்கமாகக் கூறும் நூல் திருக்குறளேயாகும். இந்நூலிற் காணப்படும் பொதுக்கருத்துக்களுடன் புறநானூறு முதலிய சங்க நூல்களில் கண்ட வரலாற்றுக் குறிப்புகளையும் இணைத்து ஓரளவு அக்கால ஆட்சிமுறையைக் காணலாம். மன்னனில்லாமலே நடத்தும் குடியாட்சியின் பரந்தவகைகள் எதுவும் அக்காலத்தில் மக்கள் கனவில்கூட எழவில்லை என்பது தெளிவு. மன்னர் வலிகுன்றிய இடத்தோ மன்னர் இறந்து அரசுரிமை காரணமாகப் பிறர் மாறுபட்டுக் கலகம் விளைத்தவிடத்தோ ஏற்பட்ட குழப்பங் கண்ட அந்நாளைய மக்கள் ஆட்சிமுறைக்கு மன்னன் இன்றியமையாத உறுப்பினன் எனவும், முடியாட்சியே இயல்பான ஆட்சி எனவும் கொண்டனர். அது மட்டுமோ? கவிஞர் மன்னனில்லா நாட்டையே கதிரவனில்லா வானம், கண்ணில்லா முகம், கணவனிழந்த காரிகை ஆகியவற்றுக்கு ஒப்பான உவமையாகக் கூறிப் புனைந்துரைக்கலாயினர். இங்ஙனம் மன்னனில்லா முழுக் குடியாட்சி தமிழகத்தில் கருத்தளவில் கூட நிலவாவிடினும், குடியாட்சியின் கோட் பாடுகளே நல்லாட்சியெனக் கொள்ளப்பட்டிருந்தன. மன்னன் மனம்போன படி ஆளுவதையும், தன் நலத்தையே பெரிதாக எண்ணி ஆளுவதையும் அவர்கள் கொடுங்கோலாட்சி என வெறுத்தனர். செங்கோன்மையுடைய அரசன் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கொள்ள வேண்டும் என்றும் உண்மையான செல்வம் குறையற்ற வாழ்வுடைய குடிகளேயென்றும் திருக்குறள் முதலிய அக்காலத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. “வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன், கோல்நோக்கி வாழும் குடி” என்றும் “மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல், மன்னாவாம் மன்னர்க்கு ஒளி” என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுதல் கவனிக்கத் தக்கது. குடிகளைப் புரந்து செழுமை யூட்டி அவர்கள் செல்வத்தின் ஒரு பகுதியை இறையாகக் கொள்வதற்கு மாறாக வலியுறுத்தி இறைகொள்ளுதல் வழிப்பறிக் கொள்ளையுடன் ஒக்கும் என்றும் கூறப்படுகின்றது. தமிழ்நாட்டில் மக்கள் விரும்பிய ஆட்சி வரையறைப் பட்ட அல்லது பொறுப்புள்ள மன்னர் ஆட்சி எனப்படுவதாகும். ஏனெனில் மன்னன் எப்போதும் அமைச்சர் சொல்லுக்கும் சுற்றம் அல்லது எண்பேராயத்தின் அறிவுரைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே கருதப்பட்டது. இவ்வமைச்சரும் சுற்றம் அல்லது அறப்பேரவையினரும் மன்னர் மகிழ நடக்க வேண்டுபவர் அல்லர்; வேண்டும்போது மன்னரை இடித்துக்கூறித் திருத்தும் பொறுப்பை உடையவர். மன்னன் பொறுப்பறிந்த நல்லரச னாயின் அவர்களை அடக்கியோ மீறியோ நடவாமல் அவர்கள் கடமையும் தன் பொறுப்பு மறிந்து திருந்துவான். அன்றேல் அவன் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகும்; மக்களும் அறிஞரும் அதனை வெறுப்பர்; சில சமயம் அவர்கள் புரட்சி செய்து மன்னனை அழிப்பர். ஒரோவழிக் கொடுங்கோலன் ஆற்றலுடைய வனாய் விட்டால் குடிகள் கொடுங்கோலனாளும் நாட்டினும் காடே நன்று எனக் கொண்டு ஓடிக் காடடைவதும் உண்டு. இதனாலேயே “கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடு நன்றே” என்ற மூதுரையும் எழுந்தது. ஆனால், செங்கோலனாவதும் கொடுங்கோலனாவதும் மக்கள் செயலல்ல; இறைவன்செயலென்று அந்நாளைய மக்கள் கொண்டனர் என்பது தெளிவு. அவ்வப்போது அமைச்சர், படைத்தலைவர்,பெருங்குடிகள் சேர்ந்து கொடுங்கோலனை வீழ்த்தி வேறு அரசனை அமைப்பினும் இம்முறை ஓர் ஒழுங்குமுறையாகக் கொள்ளப்படவில்லை. மன்னன் கடவுள்நிலையில் உள்ளவன் என்ற எண்ணமே இதற்குக் காரணம். திருவள்ளுவனாரும் இக்கருத்தையே மேற்கொண்டு “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு, இறையென்று வைக்கப் படும்” என்று கூறினர். இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டு வரையிலும் பிரஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டு வரையிலும் உருசிய நாட்டில் 19, 20ம் நூற்றாண்டு வரையிலும் கூட இக்கருத்து மன்னரிடையேயும் மன்னரைச் சார்ந்தொழுகியவர்க ளிடையேயும் நிலவி வந்தது. ஆயினும் மேனாடுகளில் மக்கள் இக்கருத்துக்கு நெடுநாள் குருட்டுத்தனமாக அடிமைப் பட்டிராமல் அரசியலுரிமையைத் தாங்களே கைக்கொண்டு வரையறைப்பட்ட மன்னர்ஆட்சியையும் குடியாட்சிவகை களையும் நாளடைவில் அமைத்தனர். தமிழ்நாட்டில் கருத்தளவில் மணலிடை நுண்ணிய பொன்பொடி போலக் காணப்படும் இக்கருத்து அதற்குமேல் வளம்பட்டு வளராது போயிற்று. ‘குடியுயரக் கோனுயரும்’ என்ற ஒளவையார் மூதுரையில் குடிவழியே கோன் உயர்வு பெறுவன் என்ற உண்மை பொதிந்து கிடப்பினும், பிற்காலத்தில் ‘அரசனெவ்வழி அவ்வழி குடிகள்’ என்ற எண்ணமே மேலிட்டு அரசியல் வளர்ச்சியiத் தடைப்படுத்திற்று. நாட்டுவாழ்வும் நல்லரசர், தீயரசர், வல்லரசர். புல்லரசர் ஆகியவர் கைப்பட்டுத் தொடர்ச்சியும் ஆக்கமும் அற்ற சீர்குலைவு வாழ்க்கையாயிற்று. 5ஆம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டளவும் தமிழ்நாட்டில் பாண்டியரும் பல்லவரும் பேரரசு செலுத்தினர். 10 முதல் 12ம் நூற்றாண்டு வரை தஞ்சைப் பெருஞ் சோழர் தமிழ்நாடு முற்றிலும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்ததுடன் முதற்காலத் தமிழரசர் சுவட்டைப் பின்பற்றிக் கங்கைநாடும் கடாரநாடும் (பர்மா) பொன்னாடும் (சாவகம்) ஈழநாடும் (இலங்கை) வென்று இந்தியாவிலேயே பேரரசராக விளங்கினர். முதற்காலப் பேரரசர் வெற்றிகள் போலவே இவ்வெற்றிகளும் அரசியல் விரிவை உண்டு பண்ணவில்லை. ஆனால் தென்னாட்டளவில் அவர்கள் பரந்த ஆட்சி செலுத்தினர். அவ்வாட்சியில் பழைய குறுநில மன்னராட்சி மங்கினும் முற்றிலும் வலியிழக்க வில்லை. அவை நகராண்மை, ஊராண்மை. ஆட்சிகட்கு வளந்தந்தன. இவ்வூராண்மையாட்சி மன்னர் முடி மாறினும் மாறாத நிலைபேறுடையதாக ஆங்கில ஆட்சிக்காலம் வரை மாறாதிருந்தது. வடநாட்டு மன்னவரும இவ்வாட்சி முறையை மேற்கொண்டு இதனை இந்தியப் பெருநிலப்பரப்பின் பொதுநல உரிமைகளுள் ஒன்றாக்கினர். ஆனால் தமிழர் பேரரசு, பேரிலக்கியத்தையும் பெருங்கோயில் குளங்களையும் தந்து வேறு நிலையான பயன் தராது மறைந்தது. வடநாட்டில் பழங்கால இலக்கியத்தில் காணப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் திருக்குறளிற் காணப்படும் கருத்துக்களே. வடநாட்டில் அரசியலுக்கும் அரசியல் கருத்துக்களுக்கும் முதல் நூலாய் விளங்கியது சாணக்கியர் அல்லது கௌடில்யரின் பொருள் நூலே (அர்த்த சாத்திரமே) யாகும். சாணக்கியர் தென்னாட்டினர் என்ற மரபுரையை மேலே குறிப்பிட்டிருக் கிறோம். மேலும் ஆரியர் நாடு நகர ஆட்சி கண்டது திராவிட நாகரிகம் வேர்கொண்டோங்கிய இந்தியப் பெருநிலப் பரப்பிலேயே ஆதலால், இக்கொள்கைகள் பெரும்பாலும் திராவிடச் சார்பாயிருப்பது இயல்பேயாகும். ஆயினும் பழங்காலத்திலேனும் ஆரியர் வரவினால் வட இந்தியாவுக்குச் சில சிறப்பான முறைகள் ஏற்பட்டிருந்தன. முதற்பிரிவிற் கூறப்பட்டபடி குலத்தலைவனிடமாகக் குலத்தலைவன் படி, அல்லது பல குடிகளில் தலைமை பெற்ற குடி நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றநிலை வடநாட்டில் கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு அளவும் காணப்பட்டது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஆண்ட1 முதற் சந்திரகுப்தன் இத்தகைய லிச்சாவி என்ற ஒரு குடியில் பெண்கொண்டு அதனால் வலிவு அடைந்தானாதலால் தன் காசுகளில் தன் உருவுடன் தன் துணைவி யுருவையும் பொறித்துக்கொண்டான் என்று வரலாறு கூறுகின்றது. புத்தர் பிறந்த மலைவாரக் குடியாக்கிய சாக்கியர் குடியிலும் இத்தகைய குழுவாட்சி அல்லது குடியாட்சி அவ்வப்போது நிலவிற்று என்று தோன்றுகிறது. ஆனால், ஆரியர் கூட்டுறவால் ஏற்பட்ட இச்செய்திகள் பெரும்பான்மை திராவிடச் சார்பான இந்திய நாகரிகத்தில் இடம் பெறாது அழிந்து போயின. பாரசீகர், கிரேக்கர் படையெடுப்புக்களால் வட இந்திய அரசியல் வாழ்வு தற்காலிகமாகக் குழப்பமுற்றதெனினும், அவை நிலவரமாக ஓர் அரசிய லுணர்ச்சியையும் உண்டுபண்ணின. இதன் பயனாக நாட்டை ஒன்று படுத்தி ஆளவேண்டும் என்ற கருத்து வளர்ச்சியடைந்தது. சாணக்கியனை அமைச்சனாகக் கொண்ட மோரிய அரசன் சந்திரகுப்தன் நாட்டை அங்ஙனம் ஒன்றுபடுத்தியதுடன் வன்மையும் ஒழுங்கும் உடைய ஆட்சியையும் நிறுவினான். அசோகனின்பின் இவ்வாட்சி வீழ்ச்சியடைந்ததாயினும் பின்னும் கனிஷ்கன், விக்கிரமாதித்தன், ஹர்ஷன் பிருதிவிராசன் முதலிய பழம் பெருமன்னர்களாலும் அக்பர் , சிவாஜி முதலிய பிற்காலப் பெருமன்னர்களாலும், மீண்டும் மீண்டும் இத்தகைய பேரரசிற்கான முயற்சி மேலிட்டு வளர்ந்தது. ஆனால், இவ் வளர்ச்சி நாட்டுமக்கள் வாழ்வை அடிப்படையாகக் கொண்டதல்லாவாகலின் தமிழ்நாட்டுப் பழம் பேரரசுகள் போலவே சிலகாலம் நல்லாட்சியும் புகழும் தந்து மாண்டது. தமிழ்நாட்டையும் வடநாட்டையும் ஒருங்கே படிப்படியாய் வென்று இந்தியப் பெருநிலப்பரப்பில் ஒரு பேரரசை ஆங்கிலேய ஆட்சி 17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை முயன்று நிறுவிற்று. ஓரளவு இப்பேராட்சியால் மேற்படையான ஒற்றுமை தோன்றினும் வெளிநாட்டார் ஆட்சிவலியால் ஏற்பட்ட இவ்வொற்றுமை, நாட்டொற்றுமையை விளைவிக்காமலே நிலவுகின்றது. இனித் தமிழ் நாட்டு வளர்ச்சியும் இந்தியப் பெருநிலப் பரப்பிலுள்ள அயல்நாடுகளின் வளர்ச்சியும் ஒன்றுபட்டு நிலவுமா? அல்லது வேறுபட்டு நிலவுமா? என்பது வெளிநாட்டுப் பேரரசாட்சியின் தலைமை நீங்கினால்தான் தெளிவுபடக்கூடும். இதற்கிடையில் அரசியல்வகை நடைமுறைகளில் பிற்பட்டு நிற்கும் தமிழ்நாட்டுக்கும், இந்திய நாடுகளுக்கும் முன்மாதிரியாய் விளங்கி வரும் அரசியல்கள் மேனாட்டு அரசியல் முறைகளேயாம். அவற்றுள் காலப் பழமையாலும் சிறப்பாலும் முதன்மை பெற்று நிற்பது ஆங்கில நாட்டு (அல்லது பிரிட்டன் நாட்டு) அரசியலேயாகும். அரசியல் வளர்ந்த ஆறுகளையும் ஆய்ந்து ஒப்பிட்டு நோக்கினால், அவ்வாராய்ச்சி நம் நாட்டின் எதிர்கால அரசியலை அமைக்க நமக்கு நல்ல தூண்டுதலாகும் என்பது உறுதி. 5. ஆங்கில நாட்டு அரசியல் புரட்சி 1. பயிற்சிக் காலம் உலகின் பண்டைய அரசியல் முறைகள் பெரும்பாலும் முடியரசுச் சார்பானவை என்றும், அவை ஆரியரல்லாத மக்களிடையே முழுவளர்ச்சியடைந்து மேல் வளர்ச்சிக்கு இடமில்லாமல் மரத்துப்போயின என்றும் மேலே கூறினோம். தமிழ்நாட்டிலும், வடஇந்தியாவிலும், மாசிதோனியாவிலும், ரோமிலும் இதே அரசியல், பேரரசு நிலையில் விரிவடைந்தன வாயினும் முடியரசுத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டதில்லை. வரலாற்றின் இருட்டுக்காலம் என்று அழைக்கப்படும் இடைக்காலங்களில் (கி.பி.500 முதல் 1500 வரை) கீழ்நாடுகளிலும் சரி, மேல்நாடுகளிலும் சரி, அரசியல் முறை பெரிதும் இப்பண்டைய முடியரசு முறையையே பின்பற்றி நின்றது. இப் பண்டைய முடியரசுக ளனைத்தும் வீழ்ச்சி யடைந்து ஐரோப்பா எங்கும் குடியரசுகள் நிறுவப்பெற்றது 19-ஆம் நூற்றாண்டிலேயேயாகும். இவ் வைரோப்பிய அரசியற் பெரும் புரட்சிகளுக்கு வழிகாட்டிகளாய் நின்றவை 1786-இல் நடைபெற்ற பிரஞ்சுப்புரட்சியும் 1768-இல் நிகழ்ந்த அமெரிக்கப்புரட்சி என்ற அமெரிக்க நாட்டு விடுதலைப் போரும், இவ்விரண்டிற்கும் முந்திப் பிரிட்டனில் நடைபெற்ற 1688-ஆம் ஆண்டைய ஆங்கில அரசியல் புரட்சியுமே ஆகும். இவற்றுள் காலத்தால் முந்தியதும் மற்ற இரண்டிற்கும் தூண்டுதலாயிருந்ததும் ஆங்கிலப் புரட்சியே. மேலும் மற்றப் புரட்சிகள் பண்டைய முடியரசின் சீர்கேடு முற்றியபின் அவற்றின் வீழ்ச்சியால் ஏற்பட்ட திடீர்ப் புரட்சிகள் ஆகும். பிரிட்டனின் முன் மாதிரியும் பிறநாடுகளின் முன் மாதிரியும் வெளித்தாக்குதல்களாக நின்று தூண்டியிராவிட்டால் அப்புரட்சிகள் திடீரென்று தோன்றியிருக்கமாட்டா. ஆங்கில நாட்டுப் புரட்சியோவெனில் இவற்றைப் போன்ற திடீர்ப் புரட்சியுமன்று; இவற்றைப் போலக் குருதிவெறியும் கலகங்களும் கொலைகளும் நிறைந்ததும் அன்று. வெளித்தாக்குதல் எதுவுமின்றி அது ஆங்கில அரசியல்வாழ்வில் தற்போக்காகவும் படிப்படியாகவும் நெடுங்காலமாக நிகழ்ந்துவந்த அரசியல் முன்னேற்றத்தின் பயனேயாகும். எனவே, ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சி முறையை ஆராய்பவர்க்கு மட்டுமன்றி உலக அரசியல் முறையை ஆராயப் புகுபவர்க்கும் இவ்வாங்கில நாட்டுப்புரட்சியும், அதனைப் பயனாகக் கொண்ட ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சியின் வரலாறும் இன்றியமையாத படிப்பினைகள் ஆகும். இதுவன்றி ஆங்கில அரசியல் இன்னொருவகையிலும் தலைமை உடையது. மற்ற அரசியல் முறைகள் எல்லாம் பண்டைய முறையிலேயே வளர்ச்சி பெறாது நின்று அஃது அழிவுற்ற பின்னர்த் தற்கால அரசியலைப் புதுவதாகப் புனைந்து கொண்டன. நேர்மாறாகப் பிரிட்டனிலோவெனில், அரசியல் பழைய உருவினின்றும் என்றும் முற்றிலும் விலகிச் செல்லாமல் படிப்படியாகப் புத்துயிர்ப் பெற்றுப் புதுமைபெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. எனவேதான் பழமையில் நின்றுவிட்ட அரசியல்கள் பழமை சீர்கெட்டபின் புதுவதுபுனைய முயலும்போது புதுமுறை வளர்ச்சிபெற்றுவிட்ட பிரிட்டனின் அரசியலைப் பின்பற்ற வேண்டிவந்தன. இங்ஙனம் பிரிட்டனின் அரசியல் பழைய உலக அரசியலுக்கும் புதிய உலக அரசியலுக்கும் ஒரு பாலமாகவும், புது அரசியல் முறைகள் அனைத்தினுக்கும் தாயகமாகவும் விளங்குகிறது. பிரிட்டனின் அரசியல் வளர்ச்சிக்கு நிலைக்களனாக விளங்கிய ஆங்கில அரசியல்மன்றும், அரசியல்மன்றங்களின் தாய்(ஆடிவாநச டிக ஞயசடயைஅநவே) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனைச் சார்ந்து வளர்ச்சியடைந்த உரிமைக் குடியேற்ற நாடுகளாகிய கனடா, ஆத்திரேலியா , நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா முதலியவையும் பிற அரசியல் சார்புடைய நாடுகளாகிய இந்தியா, எகிப்துபோன்றவையும், சார்பற்ற நாடுகளான அமெரிக்கா பிரான்சு, செர்மனி முதலிய நாடுகளும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பிரிட்டனின் அரசியலையோ அதன் கூறுகளையோ முன்மாதிரியாகக்கொண்டு தம் அரசியல் அமைய விளங்குகின்றன. ஆங்கில அரசியல் வளர்ச்சியை விரித்துரைக்கப் புகுமுன் அதன் வளர்ச்சி முறையின் பயனாக ஏற்பட்ட ஒரு புதுமையை விளக்குதல் வேண்டும். இவ்வளர்ச்சி மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியா யமைந்ததாயினும் ஒரே ஒரு வகையில் பழமைப்பற்றுடையதாகவே உள்ளது. மற்ற அரசியல்கள் பழமையில் சலிப்புற்று அதனை ஒழித்தது போல் ஆங்கில அரசியல் என்றும் பழமையை ஒழிக்க வில்லை. அதன் உள்ளுறை உயிரில் எவ்வளவு மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்ட காலத்திலும் அதன் உடலமைப்பு முற்றிலும் மாறாமல் இருந்தே வருகிறது. எனவே, இன்றைய ஆங்கில அரசியல் முறையின் உள்ளுயிர், புத்தம் புதிய அரசியல் முறைகளை ஒத்தே காணப்படினும், அதன் அமைப்புமுறையாகிய வெளிச்சட்டத்தில் அதன் பண்டைய உருவின்சின்னங்களும் இடைக்கால மாறுதல்களின் சின்னங் களும் மாறாமலிருந்தே வருகின்றன. எடுத்துக்காட்டாக மன்னர் உரிமைகள் இன்று பெரும்பாலும் அரசியல் மன்றத்தினாலும் அதன் உரிமைகளுக்குக் கட்டுப்பட்ட அமைச்சர்களாலுமே செயற்படுத்தப்படுகின்றனவாயினும் முடியரசு அப்படியே இன்றும் நிலைத்திருக்கிறது. அதன் உரிமைகளும் பெயரளவில் மாறாமலே இருந்து வருகின்றன. எனவே, ஓரளவு இங்கிலாந்தின் இன்றைய அரசியல், வரையறுக்கப்பட்ட முடியரசு என்று கூறினால் தவறாகாது. மேலும் அரசியல் வளர்ச்சிமுறையில் முடியரசுக்கு அடுத்தபடியான ஆட்சிமுறை, குழு ஆட்சிமுறையும் பெருமக்கள் ஆட்சிமுறையும் ஆகும். குழு ஆட்சிமுறையின் சின்னங்களாக இன்றும் பிரிட்டனின் அரசியலில் மன்னர் அவையும்(ஞசiஎல ஊடிரnஉடை) அமைச்சர் குழுவும்(ஊயbiநேவ) நிலை பெற்றுள்ளன. பெருமக்கள் ஆட்சிக்கு அறிகுறியாகப் பெருமக்கள் அவை(ழடிரளந டிக டுடிசனள) இன்றும் நிலவுகிறது. இவை எல்லா வற்றினுக்கும் மேலாகப் பொதுக்குடியாட்சி(னுநஅடிஉசயஉல) முறை பொதுஅவை(ழடிரளந டிக ஊடிஅஅடிளே) மூலம் நடைபெறுகிறது. அமைச்சர் குழுவின் அமர்வுக்குப் பொதுஅவையே காரணமா யிருப்பதால் பொறுப்பாட்சியும் முழுமையும் செயல்முறை யிலுண்டு. இன்னும் ஆட்சி வகுப்புகளில்(னுநயீயசவஅநவேள) நிலை பெறுபவரும் முறைமன்றத் தலைவரும்(துரனபநள) பிற பணியாளரும் அரசியல் மன்றத்தார்க்கும் அமைச்சர் குழுவிற்கும் முற்றிலும் கட்டுப்படாமல் தனி உரிமை உடையவராயிருத்தலின் திறலாளர் ஆட்சியும் (க்ஷரசநயரஉசயஉல) நிலைபெறுகிறது என்னலாம். இங்ஙனமாக ஆங்கில அரசியல் முறை தன்னிடத்தே உலகின் அரசியல் வளர்ச்சியின் வரலாற்றையே கொண்டுள்ள தென்னலாம். பொதுப்படையாக ஆங்கில அரசியல் வளர்ச்சியில் மூன்று பெரும்படிகளைக் காணலாம். முதலாவது பயிற்சிக் காலம், இது 1688-ஆம் ஆண்டுப் புரட்சியுடன் முடிவடைகிறது. இரண்டாவது பகுதி 1832-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் பெருஞ் சீர்திருத்தத்துடன் முடிவது, இதனை முயற்சிக்காலம் என்னலாம். 1832க்குப் பின் வெளித்தோற்றத்தை நீக்கிப் பார்த்தால் அரசியல்முறை முழுக் குடியாட்சியாக வளர்ச்சி யடைந்திருக்கிறது. இதனை யாம் வளர்ச்சிக்காலம் என்போம். முதற்பகுதியாகிய பயிற்சிக்காலத்தைக் கருநிலைக் காலம் என்றும் உயிர்ப்புக் காலம் என்றும் தேர்வுக்காலம் என்றும் உள்முதிர்வுக் காலம் என்றும் போராட்டக் காலம் என்றும் ஐந்து கூறுகள் ஆக்கலாம். கருநிலைக்காலம் ஆங்கில மக்கள் தம் பண்டைய தாயகநாடாகிய செர்மனிய நாட்டிலிருந்து இங்கிலாந்துமீது படையெடுத்து வந்து குடியேறிய காலமாகிய 5-ஆம் நூற்றாண்டு முதல் நார்மானியர் படையெடுப்புக் காலமாகிய 1066 வரை என்னலாம். இக் கால ஆங்கில மன்னர் நிலை தொடக்கக் கால ஆரியரது குல முதல்வர் நிலைக்கு மிகவும் அண்டிய நிலையுடையதேயாகும். மன்னர் ஆண்ட பகுதி அவர் நேராட்சிக்கு இடம் தரும் சிறு பகுதியாகவே இருந்தது. நாட்டின் ஆட்சி முறையில் மன்னனே போரில் படைத்தலைவனாகவும்; அமைதிக்காலத்தில் முறைத்தலைவனாகவும்(துரனபந) இருந்ததன்றிச் சமய வினைகளில் வேள்வித் தலைவனாகவும் (ழநயன ஞசநைளவ) அமைந்து நின்றான். கிறித்துவ சமயம் தோன்றிய பின் இறுதிக் கடமை விலகினும் பிற்கால அரசியல் வளர்ச்சியில் அரசனே நாட்டுமக்கள் சமயத்திலும் முழு முதல் தலைவன் என்ற எண்ணம் மீண்டும் ஏற்பட்டு 16ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த சமய இயக்கத்துடன்(ஞசடிவநளவயவே சுநகடிசஅயவiடிn) இணைந்து விட்டதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. மன்னருக்கு ஆட்சிமுறையில் உதவியவர் அவன் கீழ்ப்பட்ட பிற குலமுதல்வரும் போரில் திறங்காட்டிய படைத்தலைவரும் ஆவர். ஆயினும் அவ்வப்போது குடிமக்கள் அனைவரும் அடங்கிய பேரவை ஒன்றும் இருந்ததெனக் கூறப்படுகிறது. குடிமக்கள் அனைவரும் அரசியல் மன்றத்துக்கு வர முடியாது என்பது கூறாமலே அமையும். ஆயினும் அக் காலத்தில் உண்மையில் குடிமக்கள் என்றழைக்கப்பட்டவர்கள் போர்வீரர்களே. அவர்களிலும் அரசர் வாழ்ந்த பகுதிக்கு அண்மையிலுள்ள வர்களும் செல்வாக்குடைய பெருமக்களும் மட்டுமே தம் உரிமையை உண்மையில் செயல் முறையில் பயன்படுத்தி யிருப்பார்கள் என்று எண்ணுவது தவறாகாது. இத்தகைய பேரவைக்கு அக் காலத்தில் கொடுக்கப்பட்ட பெயர் விட்டெனாயெமோட் (அறிஞர் பேரவை) என்பதே. இப் பேரவையே யன்றி மாவட்டந்தோறும்(ளுhசைந) வட்டந்தோறும்(ழரனேசநன) ஊர்தோறும்(கூடிறn) சிற்றவைகளும் இருந்து ஆட்சி நடாத்தின. அவை மாவட்ட அவை(ளுhசைந அடிடிவ) வட்ட அவை(ழரனேசநன அடிடிவ) ஊரவை(கூடிறn அடிடிவ) எனப் பெயர் பெற்றன. பெயரளவில் இப்பேரவையின் ஆற்றல்கள் எல்லையற்றன. இன்றைய ஆங்கில அரசியல் மன்றத்தின் ஆற்றல்களுக்குக்கூட அவை இணையென்னலாம். ஆனால் செயலளவில் இவ்வாற்றல்கள் பயனற்றவையாயிருந்தன. இவற்றுக்குக் காரணம் அதன் அமைப்பு, குறுகிய காலவரையறை, மக்கள் பொறுப்பு உணராமை, பொதுமக்கள் விழிப்பின்மை ஆகியவைகளே. அமைப்புவகையில் பௌரளவில் குடிமக்கள் அனைவரும் வரலாமாயினும், தொலைவிலுள்ளவர்களும் தம் செலவில் வரமுடியாத எளிய மக்களும் அதிற் கலக்க முடிவதில்லை. ஆளும் பொறுப்பில் பொதுமக்களும் அக்கறை கொள்ளவில்லை. மேலும் இப்பேரவை நிலையான அவையுமன்று. நெடுநாள் நிலைபெறுவதுமன்று. பெரும்பாலும் புதுவரிகள் சுமத்தும்போது தான் அவை அமைக்கப்படும். அது வழங்கப்பட்டதும் அதனைக் கூட்டிய மன்னரே அதனைக் கலைத்துவிடுவர். பேரவைக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் தம் வேலையைவிட்டு அவையில் பங்குகொண்டு உழைப்பதை ஒரு சுமையாகவே கருதினதால் நெடுநாள் தங்க விரும்பாமல் விரைந்து போவதிலேயே கண்ணும் கருத்துமா யிருந்தனர். அரசியலில் பங்குகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அக்காலம் பொது மக்களிடையிலில்லை. எனவே பெரும்பாலும் ஆட்சி, மன்னர் மனம் போலவே நடந்து வந்தது. மன்னன் வலி குன்றியவனாயிருந்த காலத்தும் கூட அவன் ஆட்சியைக் கட்டுப்படுத்தியவர் தலைமைப் பெருமக்கள்சிலர் மட்டுமே. நார்மானிய அரசர் ஆட்சித் தொடக்கத்துடன் கருநிலைக்காலம் முடிவுற்று உயிர்ப்புக் காலம் தொடங்குகிறது. இது 1066-இல் நார்மானிய ஆட்சியுடன் தொடங்கி அதன் பின் ஆண்ட பிளன்டாஜெனட் கால்வழியின் ஆட்சிக்காலத்துடன், அஃதாவது 1399-இல் முடிவடைகிறது. நார்மானிய அரசர் ஆற்றல் மிக்கவர்கள். எனவே அவர்கள் பேரவையின் பேரால் பெருமக்கள் கையோங்காமல் தடுத்து வந்தார்கள். இவ் வேலையில் பொதுமக்கள் சார்பு அரசர் பக்கமேயிருந்தது. எனவே அரசர் பெருமக்களை அடக்கும் முறைகளுள் ஒரு முறையாக நல்லாட்சியின் பெயரால் தம்மைப் பொதுமக்களுடன் தொடர்பு படுத்தி வலுப்படுத்திக் கொண்டனர். எனவேதான் இவ்வரசரின் கடுங்கோன்மை(னுநளயீடிவளைஅ) மக்களால் கொடுங்கோன்மை(டீயீயீசநளளiடிn) ஆகக் கொள்ளப்படாமல் நலமுடைவல்லாட்சி(க்ஷநநேஎடிடநவே னநளயீடிவளைஅ) எனக்கொள்ளப் பட்டது. நார்மானிய ஆட்சியின் தொடக்கத்தில் பழைய ஆங்கில ஆட்சியில் செழித்தோங்கி நின்ற ஆங்கிலப் பெருமக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு நார்மானிய அரசருள் முதல்வனான வெற்றிவீரன் வில்லியமுடன் வந்த நார்மானியப் பெருமக்களுக்குக் கொடுக்கப் பட்டு விட்டன. இதன் பயனாகப் பழைய ஆங்கிலப் பெருமக்கள் பொது மக்களுடன் ஒன்றுபட்டுப் போக, நார்மானியப் பெருமக்களே நார்மானிய ஆட்சியில் பெருமக்களாக விளங்கினர். எனவே இப் புதியவகைப் பெருமக்களை ஆங்கிலப் பொதுமக்கள் பெருமக்கள் என்ற முறையில் மட்டுமன்றி நார்மானியர் என்ற முறையிலும் வெறுத்தனர். மன்னர் பிறப்பால் நார்மானிய ராயினும் இப்பெருமக்களை ஒறுத்தடக்க முயன்ற அளவுக்குப் பொதுமக்கள் அவர்களைப் போற்றினர். அதுவன்றி விரைவில் அவர்கள் வெளிநாட்டினர் என்ற எண்ணத்தையும் மக்கள் மறக்கலாயினர். மூன்றாவது நார்மானிய அரசனாகிய முதலாம் ஹென்றி பழைய ஆங்கிலக் குடியில் வந்த மட்டில்டா அல்லது மாட் என்ற இளவரசியை மணந்து இப்போக்கை வலியுறுத்திக் கொண்டான். அத்துடனமையாது அவன் ஆட்சிக்கு வந்தவுடன் தானே பொதுமக்களுக்கு நல் ஆட்சி உறுதி அளிக்கும் அரசுரிமைத்தாள் ஒன்று வழங்கினான். இதுவே ஆங்கில அரசியல் வளர்ச்சி வரலாற்றில் எழுத்து மூலம் மன்னர் உரிமைகள் வரையறுக்கப்பட்ட முதல் உரிமைத்தாள் ஆகும். இந்த அரசன் ஆட்சியிலேயே ஆட்சி முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நாம் மேற்குறிப்பிட்டபடி பெருமக்களின் வலிமையை அடக்க முனைந்த நார்மானிய அரசர் அப்பெருமக்களுக்கு மிகுதியான வலிமை தர உதவக்கூடும். பழைய பேரரறிஞர் மன்றத்தைப் பெரும்பாலும் கூட்டாமல் புறக்கணித்து வந்தனர். அப்பேரவையில் உறுப்பினராயிருந்து வந்தவருள் அரசன் ஆட்சியில் அவனுக்கு உதவும் பேரலுவலாளரும் துணைவரும் அறிவுரை கூற வல்லுநரும் இருப்பதுண்டு. மன்னன் அவர்களை மட்டும் தனிப்படத் திரட்டி மன்னரவையில் சேர்த்துக் கொண்டான். புதுவரிகள் வேண்டிய போதும் ஆட்சிமுறைச் சிக்கல்களில் உதவி வேண்டிவந்த போதும் பெருமக்கள் தொடர்புள்ள பெருவழக்குகளை மன்னன் ஆராயவேண்டி வந்த போதும் அவனுக்குப் பழைய பேரரறிஞர் அவையின் இடத்தில் நின்று உதவியது இம்மன்னரவையே(ஊரசயை சுநபளை). பொதுவாக அரசியல் காரியங்களை ஆராய்ந்து அரசனுக்கு உதவ இவ்வகை பயன்பட்டதுபோல், பொருளியல் சார்பான கேள்விகளை ஆராய இந்த அவையின் திரிபான இன்னோரவை ஏற்பட்டது. இதில் உறுப்பினராயிருப்பவர் மன்னர் அவையில் உறுப்பினரா யிருப்பவருள் பொருளியல் அறிவும் செயல்மரபும் உடைய ஒரு சிலரே யாவர். இது கூடிய இடத்தில் அமைந்திருந்த மேடைப் பலகைமீது குறுக்குக் கம்பிக்(ஊhநளூரநசநன) கரையுடைய துணி ஒன்று விரிக்கப்பட்டிருந்த காரணத்தினால் இவ்வவை குறுக்குக் கோட்டவை(நுஒஉhநளூரநச) என்றழைக்கப்பட்டது. (தமிழில் இந்நூலில் இதனைப் பொருளவை என்று கூறின் அமையும்) இவ்விரு சிறிய அவைகளில் முன்னது 16-17-ஆம் நூற்றாண்டுகளில் மன்னர் உயர்அவை(ஞசiஎல ஊடிரnஉடை) என்ற பெயருடன் வளர்ச்சி பெற்றது. மன்னர் அவையின் சில கடமைகளையும் பொருளவையின் கடமைகளையும் அரசியல் மன்றத்தின் பகுதியாகிய பெருமக்கள் பேரவையின் ஒரு பகுதி பிற்காலங்களில் ஏற்று நடத்தியது. ஆயினும் அப்போதும் பொருள் வழக்கு மன்றம் என்றும் பொருளவை(கூசநயளரசல ஊடிரசவ) என்றும் அதற்குப் பெயர்கள் நிலவின. இவ்விரண்டு அவைகளும் மன்னருக்கு உதவி தந்து அவனை வலிமைப்படுத்தினவேயன்றி அவனைக் கட்டுப்படுத்தவில்லை. மக்களுக்குப் பொறுப்பாட்சி வழங்குவதிலும் அவை எள்ளளவும் பயன்படவில்லை. அவ்வகையில் மிகச்சிறிய முன்னேற்றமாக அமைந்தது முதலாம் ஹென்ரி நிறுவிய சான்றுப் பொறுப்பாளர் முறையே(துரசல ளுலளவநஅள) யாகும். வழக்குகளில் குற்றஞ் செய்தவர் களைக் கண்டு கொள்ள அந்நாளில் வழங்கிய பண்டைய முறைத் தீத்தேர்வு. மற்போர்த்தேர்வு(கூசயைட லெ டிசனநயட டிக கசைந டிச றசநளவடiபே) ஆகியவைகளே. இப்பழம்பசலி முறைகளுக்கு மாறாக ஹென்ரி புகுத்திய முறை அவ்வவ்விடத்துப் பொதுமக்களிடையிலிருந்து தெரிந்தெடுத்த சான்றுக்குழுவினரைப் பொறுப்பாளராக அமர்த்துவதாம். இரண்டாம் ஹென்ரி அரசன் காலத்தில் இம்முறை வழக்குகளுக்கு மட்டுமன்றி வேறு வகைகளிலும் பயன்படுத்தப் பட்டது. 1188-இல் சாலடின் பதின்கூற்று வரி(ளுயடடயனin கூiவாந) என்ற புதுவரி சுமத்தப்பட்டது. அதற்காக மக்கள் உடைமை களைக் கணித்தறியும்படி அமைக்கப்பட்ட சான்றுப் பொறுப்பாளர் வரி தருவோரின் மொழி பெற்றுத் தேர்ந்தெடுக்கப் பட்டனராம். மொழித்தரவின்(ஏடிவந) வாயிலாக இங்கிலாந்தில் ஒரு குழு முதலில் அமைந்தது இப்போதே எனினும், அக்குழு ஆட்சிக் குழுவன்று; எனவே அதில் பொறுப்பாட்சியின் கருத்து அமையப் பெற்றதாயினும், அது பொறுப்பாட்சியின் முதல் தோற்றுவாய் என்று கூறுதல் இயலாது. ஆங்கில அரசியல் மன்றின் பெயர் ஆகிய பார்லிமெண்ட் என்ற சொல் ‘பேசும் அவை’ என்று பொருள்படும். .இது பிரஞ்சு மொழிச் சொல் ஆகும். ஆனால் இது பிரான்சில் மடத்துத் துறவியர் வீண் பொழுது போக்காகப் பேசும் வம்பர் அவைக்கே முதலில் ஏளனமாக வழங்கப்பட்டதாம்! பின்னர் பிரஞ்சு மன்னர் சமயத் திருப்பெருந்தந்தை(ஞடியீந) ஆகியவர்கள் கூட்டிய சமயத் தலைவர்(ஊநசபல) கூட்டத்திற்கும் இப்பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அரசியல் மன்றத்துக்குப் பிரான்சில் அப்பெயர் என்றும் வழங்கவேயில்லை. இங்கிலாந்தில் மூன்றாம் ஹென்ரி கூட்டிய ஒரு கூட்டத்திலேயே அப்பெயர் முதலில் வழங்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்குள் அப்பெயர் புதிதாகக் தோன்றி வளரத் தலைப்பட்டுவிட்ட ஆங்கில அரசியல் மன்றத்தின் பெயராக ஆங்கில மொழியில் வேரூன்றி விட்டது. இத்தகைய அரசியல் மன்றம் உருவாவதன் முன்னமே அரசன் ஆற்றல் பொதுமக்கள் சார்பில் பெருமக்களால் வரையறுக்கப்படத் தொடங்கிற்று; தொடக்கத்தில் பெருமக்களை யடக்க முயன்ற நார்மானிய மன்னர் பொதுமக்கள் பக்கம் சார்ந்தனராயினும். விரைவில் பொதுமக்கள், பெருமக்கள் என்ற வேற்றுமை மறையலாயிற்று. முதலாம் ஹென்ரியின் பின் ஆண்ட ஸ்டீபன் காலத்தில் அரசுரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் பெருமக்கள் பெரிதும் நலிவுற்றிருந்தனர். இரண்டாம் ஹென்ரி பின்னும் அவர்களை அடக்கியதுடன் முதல் ஹென்ரியின் சுவட்டைப் பின்பற்றி உரிமைத் தாளொன்றும் வழங்கிச் சான்றுப் பொறுப்பாளர் முறையையும் நிறுவினான் ஆயினும் இதற்குள்ளாகப் பெருமக்கள் பொதுமக்களையும் அவர்கள் தாய்மொழியையும் முன்போல் புறக்கணிக்காமல் ஏற்று அவர்களுடன் விரைவில் ஒன்றுபடத் தொடங்கினர். எனவே. இரண்டாம் ஹென்ரியின் பிள்ளைகளாகிய ரிச்சர்டு, ஜான் ஆகியவர்கள் ஆட்சிக்காலங்களில் எழுந்த பெருமக்கள் கிளர்ச்சி களில், முன் என்றுமில்லாதபடி பொதுமக்கள் பெருமக்களுக்கு ஆதரவு தந்தனர். இதன் பயனாகக் கொடுங்கோலனாகிய ஜான் அரசனிடமிருந்து ஆங்கிலப் பெருமக்கள் ஸ்டீபன் லாங்டன் என்ற சமயப் பெருந்தலைவன்(ஹசஉhbiளாடியீ) தலைமையில் நின்று அரசியலுரிமைத்தாள் ஒன்று எழுதி வாங்கினர். இது முதலாம் ஹென்ரியும் இரண்டாம் ஹென்ரியும் தந்த உரிமைத்தாள்களைப் போன்றதேயாயினும் அவற்றைப் போல் அரசன் விருப்பப்படி தந்ததாக இராமல் மக்கள் விருப்பத்தின் பேரில் அவனிடமிருந்து பெறப்பட்டதாதலால் மக்கள் அரசியல உரிமைப் போராட்டத்தின் முதல் வெற்றியாயமைந்தது. எனவே வரலாற்றில் அது பேருரிமைத்தாள்(ஆயபயே உயசவய டிச வாந பசநயவ உhயசவநச) எனப் பெயர் பெற்றிருக்கிறது. அதிற்கண்ட தலைமையான செய்திகள் மன்னன், பெருமக்கள்(க்ஷயசடிளே) தலைமக்கள்(ஊடநசபல) பொதுமக்கள் (ஊடிஅஅடிளே) ஆகியவர் இணக்கமின்றிப் புதுவரி சுமத்தப்படா தென்பதும், மன்னன் உரிமைத்தாளைப் பேணி அரசாளுகிறானா என்று மேற்பார்வையிடப் பதினைவர் அடங்கிய ஒரு குழு இருத்தல்வேண்டும் என்பதுமே இவற்றுள் முன்னது ஏட்டில் எழுத்தாகவே பெறப்பட்டது. அதிற்கண்ட உரிமைகளைச் செயல் முறையிலேயே பெறுவதற்கு உண்மையில் பல நூற்றாண்டுகள் போராடவேண்டி வந்தது. பின்னதோ சில ஆண்டுகளில் மீறப்பட்டுவிட்டது. வெளித்தோற்றத்தில் இவ்வகையாகப் பேருரிமைத்தாள் பயன்தராததுபோதல் தோற்றினும் உண்மையில் அரசியல் போராட்டத்தில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டி ஒரு முன்மாதிரியையும் ஒரு போர் முறையையும் எடுத்துக் காட்டிற்று. இக்காரணத்தால் இஃது ஒரு பெரு நிகழ்ச்சியே என்று கொள்ளத் தக்கதாகும். ஆங்கில அரசியலாகிய முக்காலிக்குப் பேருரிமைத் தாள்(ஆயபயே ஊயசவய, 1216) உரிமைப் பகர்ப்பு(க்ஷடைட டிக சுiபாவள, 1628) உரிமைக் கோரிக்கை(ஞநவவைiடிn டிக சுiபாவள 1688) ஆகிய மூன்றுமே மூன்று கால்கள் என்று கூறப்படுகின்றன. பேருரிமைத் தாளின் பெருமையை இது நன்கு எடுத்துக்காட்டுவதாகும். ஆங்கில நாட்டில் அரசியல் மன்றம் ஏற்பட்டு வேரூன்று வதற்கு மூன்றாம் ஹென்ரி அரசரின் திறமையின்மையும் முதல் எட்வர்டின் திறமும் இருவேறு வகைகளில் காரணங்களாய் அமைந்தன. ஜான் அரசன் 1215-இல் பேருரிமைத்தாள் வழங்கியபின் மறு ஆண்டிலேயே மாண்டான். அப்போது மூன்றாம் ஹென்ரி சிறுவனாகவே இருந்தபடியால் பெருமக்கள் பாதுகாப்பாளரை அமர்த்தி ஆடசி நடத்தினர். அரசன் நேராக ஆட்சிக்கு வந்ததும் அவன் தன் பிரஞ்சு நாட்டு மனைவி மூலம் தனக்கு உறவினரான வெளிநாட்டினரைப் பெருவாரியாக இங்கிலாந்தின் அரசியல் வாழ்வில் புகுத்தியும் கடுவரிகள் இட்டும் மக்களிடையே மனக்கசப்பை உண்டு பண்ணினான். அதற்கிடையில் தற்செயலாக அவன் தன் கீழ்ப்பட்ட பிரஞ்சு நாட்டுப்பகுதி ஒன்றின் ஆட்சியை நடாத்திய தன் உறவினனாகிய சைமன் டி மாண்ட்ஃபோர்ட் என்பவனை அந்நிலையிலிருந்து நீக்கிப் பகைத்துக்கொண்டான். ஆட்சிமுறையில் பெருஞ் செயலறிவுபடைத்த சைமன் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்துடன் தன் மைத்துனனாகிய அரசனை எதிர்த்து நாட்டு மக்களின் தலைவனானான். வெளிநாட்டினனாகிய அவன் வஞ்சமே ஆங்கில அரசியல் வாழ்வுக்கு ஒரு தஞ்சமாயிற்று. 1254-இல் மூன்றாம் ஹென்ரிக்குப் பொருளுதவி மிகவும் வேண்டியிருந்தது. அதற்காக அவர் கூட்டிய கூட்டத்திலேயே பெருமக்கள்(க்ஷயசடிளே) தலைமக்கள்(ஊடநசபல) ஆகியவர்களுடனாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நான்கு பேரை(முniபாவள) மாவட்டத்தலைவர்(ளுhநசகைக) வாயிலாக மன்னர் தருவித்தார். இதுவரை பெருமக்களும் தலைமக்களுமே இருந்த மன்னரவை போலல்லாது வரி எழுப்பும் நோக்கத்துடன் எழுந்த இம்மன்றத்தில் முதல் தடவையாகப் பொதுமக்கள் சார்பிலும் மாவட்டத்திற்கு நால்வர் அமரலாயினர். அரசியல் அறிவும் துணிவும் வாய்ந்த ஸைமன் இப்புது முறையின் பயனை நன்குணர்ந்து அதனைப் பின்னும் தொடர்ந்து வலியுறுத்தினான். மன்னர் கட்சியினரைப் போரில் 1264-இல் முறியடித்தபின் அவன் கூட்டுவித்த 1265-ஆம் ஆண்டைய அரசியல் மன்றில் மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றித் தலைமை வாய்ந்த மாநகரங்களிலிருந்தும்(ஊவைநைள) சிறுநகர்களிலிருந்தும் (க்ஷடிசடிரபாவள) ஆட்பெயர்களை(சுநயீசநளநவேயவiஎநள) வரவழைத்தான். இவ்வரசியல் மன்றம் சைமனின் அரசியல் மன்றம் என வரலாற்றில் கூறப்படுகிறது. சைமனையும் வரலாற்றாசிரியர் பலர் ‘ஆங்கில அரசியல் மன்றத்தின் தந்தை’ என அழைப்பதுண்டு. ஆயினும் சைமனினும் மேம்பட இப்பெயர் மூன்றாம் ஹென்ரிக்குப் பின் வந்த அரசனாகிய முதல் எட்வர்டுக்கே பொருந்தும். மன்னனை எதிர்த்த தலைவன் கூட்டுவித்த 1265-ஆம் ஆண்டைய அரசியல் மன்றை விட (மன்னரே நேரடியாகக் கூட்டிய) முதல் எட்வர்டின் 1295-ஆம் ஆண்டைய ‘மாதிரி அரசியல் மன்றம்’ பெரும் சிறப்புடையதாகும். இதுகாறும் குறுநில மன்னர் பேரவையாக(குநரனயட ஹளளநஅடெல) இருந்த மன்னரவைகளைப் போலல்லாது இதுவே முதன் முதலாக நாட்டுமக்கள் பேரால் அவர்களிடம் பொறுப்புடைய மக்களைத் திரட்டும் விருப்புடன் அரசன் கூட்டிய முதல் அரசியல் மன்றமாகும். இம்மன்றுக்கு மன்னன் பெருநிலக்கிழவராகிய முதற் பெருமக்களை மட்டுமன்றிச் சிறுநிலக்கிழமையுடைய மற்ற வேளாண் மக்களையும்(கூநயேவேள-in-ஊhநைக) முதல் தலைமக்களே யல்லாது துணைத் தலைமக்களையும் அழைத்ததுடன் சைமன் அரசியல் மன்றில் அழைத்தது போலவே மாவட்டங்கள், மாநகரங்கள், சிறுநகர்கள் ஆகியவற்றிலிருந்தும் இரண்டிரண்டு ஆட்பெயர்களை மொழித்தரவு மூலம் தேர்ந்தெடுத்துத் தருவித்தான். தொடக்கத்தில் அரசியல் மன்ற உறுப்பினர் மூன்று கூறுகளாகப் பிரிந்து மும்மண்டலத்தார்(கூhசநந நுளவயவநள) என அழைக்கப்பட்டனர். அவை தலைமக்கள் மண்டலம், பெருமக்கள் மண்டலம், பொதுமக்கள் மண்டலம் என்பவை. பிரான்சு நாட்டில் 18-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சிக்காலம் வரை பிரஞ்சு அரசியல் மன்றம்(ளுவயவநள ழுநநேசயட) இங்ஙனம் மூன்று பிரிவுகளாகவே நடைபெற்றது. மெய்ட்லன்ட் என்ற வரலாற்றறிஞர் இம் மண்டலங்களைத் தொழுவோர் மண்டலம், போர் புரிவோர் மண்டலம், உழைப்போர் மண்டலம் என அழகுபடப் புனைந்து கூறுகிறார்(ஆயவைடயனே : ஊடிளேவவைரவiடியேட ழளைவடிசல டிக நுபேடயனே). இங்கிலாந்திலும் அரசியல் மன்றில் இம் மூன்று பிரிவுகளும் நிலைத்திருக்கக் கூடுமாயினும் தற்செயலான சில இயற்கைக் காரணங்களால் மூன்றும் இரண்டாய் இணைந்து விட்டன. முதன்மையான தலைமக்களுடன் துணைத்தலை மக்களும் அழைக்கப்படினும் அவர்கள் தம் சமயத்துறையை விட்டு அரசியலி லீடுபட்டுத் தலைநகரில் நெடுநாள் தங்க விரும்பவில்லை. முதன்மைத் தலைமக்களோவெனில் சமயத்துறை யணி செய்பவராக மட்டுமன்றி அதன் சார்பில் பெருநிலக் கிழவராகவும் இருந்தமையால் அம்முறையில் பெருநிலக்கிழவரான பெருமக்களுடன் நாளடைவில் ஒன்றுபட்டுப் போயினர். எனவே முதல் மூன்று எட்வர்டு அரசர்களின் ஆட்சிக் காலங்களுக் குள்ளாகவே மும்மண்டலங்கள் அரசியல் மன்றின் இரண்டு அவைகளாகத் தொகுக்கப்பட்டுப் போயின. முதல்எட்வர்டு அரசன் வேல்ஸை வென்றடக்கினான். ஸ்காத்லந்தை வெல்லும் முயற்சியில் மாண்டான். அவன் புதல்வன் இரண்டாம் எட்வர்டு, ராபர்ட் ப்ரூஸ் என்ற ஸ்காத்லந்து வீரனால் முறியடிக்கப்பட்டு அந்நாட்டை இழந்தான். மூன்றாம் எட்வர்டு பிரான்சுடன் நூற்றாண்டுப்போர் என்ற பெரும்போர் தொடங்கினான். இப்போர்களால் மன்னன் கவனம் வெளிநாடுகளில் பெரிதும் ஈடுபட்டது. பெருமக்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு புதிதாக அமையப் பெற்ற அரசியல் மன்றத்தின் மூலமாகத் தம் ஆற்றலை மீட்டும் வளர்த்துக்கொள்ளலாயினர். எனவே அரசியல் மன்றத்தின் உரிமைகள் விரைந்து வளர்ச்சியுற்றன. போர்ச் செலவுக்காகப் புது வரி எழுப்பும் இன்றியமையாமையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் மன்றம் பேருரிமைத்தாள் காலத்தில் பெற்ற உரிமையால் மன்னன் நேர்வரி(னுசைநஉவ) சுமத்தும் உரிமையை மறுத்ததுடன் மறைமுகவரி(ஐனேசைநஉவ) பிரிக்கும் உரிமையையும் அப்பேருரிமைத் தாளில் தரப்பட்ட உரிமையளவிற்குக் கட்டுப்படுத்திற்று. அதனோடு 1327-இல் அரசியின் துணையும் இளவரசன் துணையும் பெற்று மன்றம் மன்னனை அரச்சிருக்கையினின்றும் அகற்றி அவன் மகனாகிய இளவரசனை மன்னனாக்கவும் துணிந்தது. 1377-இல் நல் மன்றம்(ழுடிடின ஞயசடயைஅநவே) என்ற அரசியல் மன்று மன்னனுக்கு உதவி செய்த இளவரசன் ஜானையும் அவன் நண்பரையும் கண்டித் தொறுக்கும் ஒறுப்பு நடை முறையையும் (ஐஅயீநயஉhஅநவே) கையாண்டது. 1399-இல் அது இத்தனையையும் தாண்டித் தன்னை மீறி ஆட்சி செய்ய முனைந்த இரண்டாம் ரிச்சர்டு அரசனை வீழ்த்தி அவன் உறவினனாகிய லங்காஸ்டர் கால்வழியினனான நான்காம் ஹென்ரியை அரசனாக்கிற்று. 1327-இலும் அரசியல் மன்றம் ஓரரசனை வீழ்த்தியதாயினும் அஃது உண்மையில் அரசியின் துணையுடனும் இளவரசன் துணையுடனும் செய்தது. மேலும், அதன் மூலம் அரசன் ஆனவனும் ஒழுங்குப்படியே அரசனான படியால் அது உண்மையில் மக்கள் உள்ளத்தில் அத்தனை பெரும் புரட்சி மனப்பான்மையைக் குறிக்கவில்லை. ஆனால் இம்மறையோ மன்னனை எதிர்த்தவர்கள் குடிமக்களேயன்றி வேறு யாருமிலர். அவர்கள் தேர்ந்தெடுத்த அரசனான ஹென்ரியும் அரசக் குடியினனாயினும் நேரடியாக அரசுரிமைக்குத் தகுதி உடையவன் அல்லன். எனவே 1399ஆம் ஆண்டின் இந்நிகழ்ச்சியைச் சில வரலாற்றாசிரியர் லங்காஸ்டிரியப் புரட்சி எனக் கூறுவதும் உண்டு. லங்காஸ்டிரியா ஆட்சித் தொடக்கத்துடன் ‘உயிர்ப்புக் காலம்’ முடிவடைகிறது. இக்காலத்தில் அரசியல் மன்றத்தின் உரிமைகள் மிக விரைவில் வளர்ச்சியடைந்து கிட்டத்தட்ட இன்றைய நிலையில் உள்ள உரிமைகளைப் பெற்றன. மன்ற அமைப்பும்-ஏன் நடை முறைகளும் கூட- ஓரளவு இன்றைய நிலைமையை அடைந்தன. ஆயினும் பொதுமக்கள் முற்றிலும் விழிப்படைந்து தம் பொறுப்புணராமையாலும், பெருமக்கள் மன்னனை எதிர்க்கும் ஒருசெய்தி நீங்கலாக மற்றெவ்வகையிலும் ஒற்றுமையற்றவர்களா யிருந்தமையாலும் இவ்வுரிமைநிறைவு முற்றிலும் பிஞ்சில் கனிந்த பழமாகவே அமைந்து நின்றது. இத்தன்மையை இதனையடுத்த தேர்வுக்காலம் நன்கு காட்டும். லங்காஸ்டர் கால்வழியினர் காலமும் யார்க்கியர் கால்வழியினர் காலமும் (அஃதாவது 1399 முதல் 1485 வரையுள்ள பகுதியே) தேர்வுக்காலம் என்னலாம். இக்காலத்தில் அரசியல் மன்றத்தின் தேர்வு மூலம் அரசுரிமைபெற்ற லங்காஸ்டர்களும் வரன்முறைப்படி அரசுரிமையுடைய யார்க்கியர்களும் போரிட்டுக்கோண்டே யிருந்தனர். இப்போரே வனமல்லிகைப் போர்(றுயசள டிக வாந சுடிளநள) எனப்படும். ஆறாம் ஹென்ரியரசன் காலத்தில் லங்காஸ்டர்களை யார்க்கியர் தலைவன் எட்வர்ட் வென்று நான்காம் எட்வர்ட் ஆனான். அடுத்த அரசன் மூன்றாம் ரிச்சர்டை லங்காஸ்டர் குடியின் கிளைக்குடியாகிய டியூடர் குடித் தோன்றலான ஏழாம் ஹென்ரி வென்று டியூடர் ஆட்சியை நிறுவினான். இங்ஙனமாக அரசியல் மன்றம் அரசனை வீழ்த்தவும் அமர்த்தவும் உரிமை கொண்டுவிடினும் அவ்வுரிமையைச் செயற்படுத்த முடியாமல் போயிற்று. மன்றத் தேர்வுரிமை உடைய லங்காஸ்டர்களும் வரன்முறை உரிமை உடைய யார்க்கியர்களும் போரிட்டே தத்தம் உரிமையை நாட்ட வேண்டி வந்தது.ஏழாம் ஹென்ரி திறம்பட இவ்வுரிமைப் போராட்டத்திற் கிடமில்லாமல் மன்றத் தேர்வு உரிமையுடைய தன்குடி உரிமையைப் பெற்றதுடனமையாமல் வரன்முறை உரிமையுடையதான மாற்றார்குடியில் தோன்றிய எலிசபெத் இளவரசியையும் மணந்துகொண்டான். அவன் ஆட்சித் தொடக்கத்துடன் தேர்வுக்காலம் முடிவு பெறுகிறது. முன் இரண்டு காலப்பகுதிகளினும் அரசியல் உரிமையாகிய உயிர்பெற்றும், நடைமுறைகளாகிய உடல்பெற்றும் அரசியல் மன்றம் பொதுமக்கள் ஆற்றலாகிய உரம்பெறாதிருந்தது. அவ்வுரத்திற்கு வழிகோலியது டியூடர் ஆட்சியாகும். இக்காலம் (1486-1615) அரசியலின் உள்முதிர்வுக்காலம் ஆகும். இக்காலத்தில் அரசாண்ட டியூடர் மன்னர் நார்மானிய அரசர்களைப் போலவே பெருமக்களை மீட்டும் எழவொட்டாமல் அடக்கிப் பொதுமக்களை ஆதரித்தனர். அவ்வாட்சியால் வாணிகமும் தொழிலும் செழித்தோங்கின. கல்வி வளர்ச்சியுற்றது. பொதுமக்களிடையே பொருள்வாய்ப்பும் அறிவும் ஓய்வு நேரமும் உடைய இடைத்தர வகுப்பொன்று ஏற்பட்டது. இவ்வகுப்பினர் பெருமக்களைவிடப் பொதுநலஉணர்ச்சியுடையவர். அவர்களைப் போலத் தந்நல வேட்டையும் போர்க்குணமும் உடையார்களல்லர். டியூடர் மன்னரின் வல்லாட்சி எவ்வளவு கடுமையாயிருப்பினும் பொதுமக்கள் சார்பாகவும் நாட்டுநலனுக்கு உகந்ததாகவும் இருந்ததால் இவ்விடைத்தர வகுப்பார் கைப்பட்ட அரசியல் மன்றமும் டியூடர் மன்னர் விருப்பத்திற்கேற்ற படியெல்லாம் குழைவுற்று அவர்கள் கைக்கருவியாகவும் அவர்கள் ஆட்சிக்குப் பக்கவலுவாகவும் அமைந்தது. டியூடர் ஆட்சியின் இறுதியில் அவ்வப்போது மன்றம் அரசரது விருப்பத்திற்கு முற்றும் இணங்காது முறுகியதுண்டு. ஆயினும் டியூடர் அரசர் வன்மையுடன் நயமும் உடையவர்களாதலால் சற்று விட்டுக்கொடுத்துத் தம் உரிமையைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆற்றலும் அறிவும் வாய்ந்த அம்மன்னர் அரசியற் குழவி உரம்பெற்று வருகிற தென்பதை உணர்ந்து முரண்டிக் கொள்ளாது தட்டிக்கொடுத்து வந்தனர். அவர்கள் ஆட்சியுடன் உள் முதிர்வுக்காலமும் முடிகின்றது. ஸ்டியூவர்ட் அரசருள் முதலாவது ஜேம்ஸ் ஆட்சி முதலாக இரண்டாவது ஜேம்ஸ் ஆட்சி முடிய (1605 முதல் 1688 வரை) அரசியல் போராட்டக் காலமாகும். டியூடர் அரசரின் ஆற்றலும் இன்றி, நாநயமும் அறிவும் சற்றும் இல்லாத ஸ்டூவர்ட் அரசர்கள் உரம் பெற்று வளரும் குழந்தையிடம் வீம்பு பேசினர்; போட்டியிட்டனர். முரண்டிய பிள்ளையின் முரண்டு வளர்ந்து வீர இளைஞன் மற எதிர்ப்பாயிற்று. முதலாம் ஜேம்ஸ் அரசன் அந்நாளைய அரசர்களிடையே கல்வி கேள்விகளில் ஒப்புயர் வற்றவன். ஆனால் அவன் அறிவு முற்றிலும் நூலறிவு. வாழ்க்கையில் அது ஏட்டுச்சுரைக்காயாய்ப் பயனற்றதாயிற்று. எனவே, வரலாற்றில் அவன் ‘உலகின் அறிவிற் சிறந்த மூடன்’ என்று அழைக்கப்படுகிறான். அரசியல் மன்றிலும் வெளியிலும் அவன் ஓயாது தற்பெருமையுடன் “அரசன் இறைவன் திருவுருவம்; அவன் செயல்கள் இறைவன் செயல்கள் போலக் கேள்விக்கு அப்பாற்பட்டவை” என்று வீம்பு பேசுவான். இது கேட்டுச் சீற்றமுற்ற அரசியல் குழந்தை மறைத்துக்கொண்டால் அவன் அதனினும் சீறி எழுந்து இன்னும் உயர்ந்த குரலில் தன் பல்லவியைப் பாடுவான். ஆயினும் ‘அறிவு நிறைந்த மூடன்’ என்ற பெயரும் அவனுடைய இயற்கைச் சோம்பற் குணமும் இம்முரண்டுதல் போராக வளராமல் காத்தன. குழந்தை முதலில் சீறி முரண்டினாலும் பின் அவனைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிற்று. அவனும் ‘போய்த் தொலை; உனக்கு இன்று உணவில்லை’ என்று கூறும் தந்தை போன்று மன்றத்தைக் கலைத்துவிட்டுச் சிலநாள் தானே ஆட்சி செய்வான். ஜேம்ஸின் பிள்ளையான முதல் சார்ல்ஸிடம் ஜேம்ஸின் வீம்பும் அரசன் தெய்வீகப் பிறவி என்ற எண்ணமும் தொடர்ந்து வேரூன்றின. ஆனால் அவன் ஜேம்ஸைப் போன்ற கனாவீரனாயிராமல் செயல்வீரனாகத் தலைப்பட்டான். மன்றம் முரண்டியபோது ஜேம்ஸைப்போல் தட்டிக் கழிப்பதற்கு மாறாக அவன் வீறாப்புடன் எதிர் நடவடிக்கையெடுத்தும் தன்னை எதிர்த்த மன்றத்தினை முற்றிலும் விலக்கியும் ஆளத் திட்டமிட்டு வந்தான். ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்றபடி மன்னன் முரண்டு காட்டக் காட்ட மன்றத்தில் வீறாப்புமிக்க கட்சிகள் கையோங்கின. சார்ல்ஸிடம் டியூடர்களின் நயத்தில் ஒரு சிறு கூறு இருந்திருந்தால் கூட அவனுக்கு வலிமை தரும் பல நிலைமைகள் இக்கிளர்ச்சியிடையேயும் ஏற்பட இடமிருந்தது. வீறாப்பான கட்சிகள் எழுந்தோறும் நடுநிலை யாளர்கள் விலகி முடியரசுப் பக்கம் சாயலாயினர். மன்றில் வீறாப்பு மிகுந்தோறும் பின்னிடைந்தவர்கள் முடியரசுக்கட்சியில் சேர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே வந்தனர். ஆனால் மன்றக்கட்சியின் தொகை குறைந்து கொண்டே வந்தாலும், அதன் வீர உணர்ச்சியும் ஒழுங்கும் பயிற்சியும் வளர்ந்து கொண்டே வந்தன. அதனால் அதன் வலிமை குன்றுவதற்கு மாறாக ஓங்கி வளர்ந்தது. இறுதியில் கிராம்வெல் என்ற ஒப்பற்ற படைத்தலைவன் தலைமையில் பயிற்சிபெற்ற ‘இரும்புச் சுவர்கள்’(ஐசடிளேனைநள) என்ற படை, அரசர்படையை வென்றதுடன் அரசனையும் சிறைப்படுத்திற்று. சிறையிலும் சார்ல்ஸ் தன் கட்சியுடன் சூழ்ச்சி செய்ய முயன்றான். இது கண்டுபிடிக்கப் படவே உலகவரலாற்றிலேயே முதல் தடவையாக அரசனாகிய அவன் நாட்டுப்பகைவனெனக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். லங்காஸ்டிரியப் புரட்சிக்குப்பின் மறுபடியும் ஆங்கில நாட்டு வரலாற்றில் இங்ஙனமாக ஒரு பெரும்புரட்சி தோன்றிற்று. இதனைக் கிராம்வெல்லின் புரட்சி அல்லது சமயத்தூய்மை யாளர் புரட்சி(ஊசடிஅறநடடயைn சுநஎடிடரவiடிn டிச ஞரசவையn சுநஎடிடரவiடிn) என்பர். இப்புரட்சியே உண்மையில் நெடுநாட்பின்னர் ஏற்பட்ட ஆங்கிலப் புகழ்மிக்க புரட்சிக்கும் அதன் பின் வந்த பிரான்சு, அமெரிக்கா முதலிய பிறநாட்டுப் புரட்சிகளுக்கும் தொலைத் தூண்டுதலாயிருந்த தென்னலாம். ஏனெனில் கிராம்வெல் அமைக்க முயன்ற அரசியலில் முடியரசு இல்லை. குழுவாட்சியின் சின்னமாகிய பெருமக்கள் அவையில்லை. சமயச்சார்பில் குருக்கள் இல்லை. மொழி உரிமை ஆண் பெண் அனைவர்க்கும் தரப்பட்டது. இவற்றுள் பல கூறுகள் பிரிட்டனில் 20ஆம் நூற்றாண்டு வரைதான் செயலுருப்பெற்றன. இன்னும் செயலுருப் பெறாத பகுதிகளும் உண்டு. முடியரசு ஒழிப்பு, பெருமக்களின் அவை ஒழிப்பு ஆகியவை இன்றும் வெளித்தோற்றத்திலே இல்லாதவையே. கிராம்வெல் காலத்திற்கு எவ்வளவோ அப்பாற்பட்ட இப்பெரும்புரட்சி கிராம்வெல் கருத்தில்தான் கனாவுருவில் நின்றது. ஆங்கில மக்கள் அன்றும், நெடுநாட் பின்னரும் அதனை உணரவில்லை. எனவே லங்காஸ்டிரியப் புரட்சியைவிட இப்புரட்சி ஆங்கில நாட்டின் முதிராப்பிறவி யாய்ப் பயனற்றதாயமைந்தது. கிராம்வெல் இறந்ததே ‘உள்ளதும் போயிற்று நொள்ளைக் கண்ணா’ என்றபடி கிராம்வெலின் வீறாப்பான கொள்கைமட்டுமின்றி நடுநிலையாளர் கொள்கைகள் கூட மறக்கப்பட்டுப் பழைய அரசாட்சியே இரண்டாம் சார்ல்ஸ் வருகையுடன் மீட்டும் வந்தது. ஆனால் பிரிட்டிஷ் மக்கள் போராட்டம் முற்றிலும் வீண்போகவில்லை என்பதை இரண்டாம் சார்லஸ் ஆட்சியும் இரண்டாம் ஜேம்ஸ் ஆட்சியும் காட்டின. தம் உரிமைக்காக முடியரசர் தலையையே துணிக்கத் துணிந்த நாட்டின் மக்கள் மீட்டும் அடிமைகளாக வாழ்வர் என்று எதிர்பார்க்க முடியாதன்றோ? அத்துடன் அரசுரிமைப் போர்க்காலத்தில் ஏற்பட்ட “நீண்ட அரசியல் மன்ற”த்தின்(டுடிபே ஞயசடயைஅநவே) முற்பகுதியில் நிறைவேறிய நடுநிலைச் சீர்திருத்தங்கள் பல நிலையாக நின்று ஆங்கில அரசியலில் இடம்பெற்றன. இவற்றுள் மன்னர் வரி சுமத்தும் உரிமை முற்றிலும் கட்டுப்பட்டதொன்று. மன்றத்தைக் கூட்டாது மூன்றாண்டுகளுக்குமேல் ஆட்சிபுரிவதைத் தடுப்பது, ஒழுங்கான வழக்குமன்ற ஆராய்ச்சியின்றிப் பெருமக்களை ஒறுக்க டியூடர் அரசர் அமைத்த விண்மீன் மண்டலமன்றம், உயர்ஆணைமன்றம்(ஊடிரசவ டிக ளுவயச ஊhயஅநெச, ஊடிரசவ டிக ழiபா ஊடிஅஅளைளiடிn) முதலிய ஒழுங்கு மன்றங்கள் அகற்றப்பட்டது ஆகியவை வேறு சில. மேலும் இரண்டாம் சார்ல்ஸ், இரண்டாம் ஜேம்ஸ் ஆகியவர் ஆட்சிகளிலேயே ஆளுரிமைச்சட்டம் முதலிய முதன்மைவாய்ந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆளுரிமைச்சட்டம்(ழயடரள ஊடிசயீரள ஹஉவ) குற்றத்தாள் வழங்காது ஒருவரைச் சிறைப்படுத்தும் உரிமையைக் கட்டுப்படுத்திற்று. சிறைப்பட்டவர் எவரும் இச்சட்டப்படி தன்னை வழக்குமன்றத்தில் கொண்டு வந்து தன் குற்றத்தை ஆராயும்படி அரசாங்கத்துக்கு முறையீடு செய்துகொள்ளலாம். இன்றளவும் தனிமனிதர் உரிமையைக் கொடுங்கோன்மையிடமிருந்து காப்பதில் இது ஒப்பற்ற சட்டமாயிருந்து வருகிறது. பிற நாடுகளும் இவ்வரிய சட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அரசுரிமை விலக்குச்சட்டப்பகர்ப்பு(நுஒஉடநளiடிn க்ஷடைட) ஒன்றும் கொண்டு வரப்பட்டது. இது நிறைவேறினால் இரண்டாம் சார்ல்ஸுக்குப் பின் அவர் உடன்பிறந்தார் ஜேம்ஸ் (இரண்டாம் ஜேம்ஸ்) பின்னால் அரசராயிருக்க முடியாது. எனவே உடன்பிறந்தார் உரிமையைக் காக்க மன்னர் அது நிறைவேறுமுன் அரசியல் மன்றைக் கலைத்தார். அதைக் கட்டாயம் நிறைவேற்றும்படி சிலரும், நிறைவேற்றக்கூடாதென்று சிலரும் மன்னரிடம் மனுச்செய்தனர். இவர்களே நாளடைவில் விக்குகள்(றுhபைள) டோரிகள்(கூடிசநைள) என்ற இருகட்சிகளாயினர். இவர்களுள் விக்குகள் ஸ்டியூவர்ட் அரசர்களை எதிர்த்த அரசியல்மன்ற முற்போக்குக் கட்சியினர். இவர்களே இறுதியில் கத்தோலிக்கரான ஜேம்ஸைத் துரத்தி அவர் மருகனும் புரொட்டஸ்டண்டு சமயத்தினரான மூன்றாம் வில்லியத்தை அரசனாக வரவேற்றவர்கள். டோரிகள் ஸ்டூவர்ட்டுகளை ஆதரித்தனர். மூன்றாம் வில்லியம் வருவதை இவர்கள் விரும்பவில்லை. அரசரானபின் வேண்டா வெறுப்பாய் ஏற்றனர். பிற்காலத்தில் இவ்விரு கட்சியினருமே தம்மரபு மாறாது முறையே பொதுப்படைச் சீர்திருத்தம் கோருபவராகவும் பழமை பேணுபவராகவும்(டுiநெசயடள, ஊடிளேநசஎயவiஎநள) மாறினர். இரண்டாம் ஜேம்ஸ் அரசர்க்கு எதிராக விக்குகள் செய்த கிளர்ச்சி வெற்றியடைந்ததே, முதலாம் ஜேம்ஸ் முதலாக இரண்டாம் ஜேம்ஸ் ஈறாக ஸ்டியூவர்ட் அரசர்கள் கொண்ட அரசர் உரிமைகள் எல்லாம் யாதொரு சந்தடியுமின்றி ஒதுங்கிப்போயின. புதிய அரசன் ஆட்சியில் வெற்றிபெற்ற அரசியல் மன்ற முற்போக்குக் கட்சியினராக விக்குகள் அம்மன்றின் நிலையை மேலும் உறுதிப்படுத்தி அரசன் வலிமையை வரையறுக்கும் சட்டங்கள் செய்தனர். பிறநாடுகளில் பெருங்கிளர்ச்சியுடனும் குருதி சிந்தியும் நடந்த பெருமாறுதல் இங்ஙனம் எளிதில் நிறைவேறியது கண்டு வரலாற்றறிஞர் இதனைக் குருதியில்லாப் புரட்சி என்றும், புகழ்மிக்க புரட்சியென்றும் சந்தடியற்ற புரட்சி என்றும் புகழ்வாராயினர். 2. முயற்சிக் காலம் ஆங்கிலமக்கள் பல நூற்றாண்டுகளாகக் கிளர்ச்சி செய்தும் போராடியும் கிடைக்காத அல்லது கிடைத்தும் கால முதிர்ச்சி யின்மையாலோ அரசன் ஆற்றல்மிகுதியாலோ பயன்படுத்திக் கொள்ள முடியாத உரிமைகள் மேற்போக்காகப் பார்த்தால் அருமுயற்சி எதுவுமில்லாமலே இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் வீழ்ச்சியின் பின் புதிய அரசர் ஆட்சியில் கிடைத்தன. ஆனால், உண்மையில் அவை ஓரளவு முதல் சார்ல்ஸ் அரசன் ஆட்சியில் ஏற்பட்ட போராட்டத்தின் தொலைப்பயன்களேயாகும். கிராம்வெல் ஆட்சி மட்டற்ற முன்னேற்றத்தைக் கொண்டுவர முயன்றதனால் தோல்வியடைந்த பின், இரண்டாம் சார்ல்ஸ் அரசர் ஆட்சியுடன் பல வகையில் பழைய முதல் சார்ல்ஸ் அரசர் ஆட்சிமுறையே மீண்டும் நடைமுறைக்கு வந்தது போலத் தோன்றிற்று. ஆனால்., ஒரு தடவை வெற்றியுடன் போராடிய மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து கொண்டு விட்டனர். இரண்டாம் ஜேம்ஸின் அடக்குமுறை ஆட்சியை ஒரு கட்சியாரே எதிர்த்தனராயினும் நாட்டுமக்களின் பெரும்பான்மை ஆதரவு அவர்கள் பக்கமிருந்தது. எனவே, ஜேம்ஸ் எளிதில் அரசிருக்கை யிலிருந்து அகற்றப்பட்டு அவர் புதல்வியான மேரியும் மருகரான மூன்றாம் வில்லியமும் அரசராயினர். வெற்றியுடன் மன்னரைத் தேர்ந்தெடுத்த மக்கள் எளிதாகத் தம் உரிமைகளை நிலைநாட்டவும் மன்னர்உரிமைகளை வரையறுக்கவும் சட்டங்களியற்றினர். இன்றைய ஆங்கில நாட்டரசியலமைப்பில் இச்சட்டங்கள் தலைமையான இடம் பெறுகின்றன. இச் சட்டங்களுள் உரிமைப் பகர்ப்பு(க்ஷடைட டிக சுiபாவள), கிளர்ச்சிச் சட்டம்(ஆரவiபே ஹஉவ), அரசர் வருவாய்ச் சட்டம் முதலியவை தலைசிறந்தவை. இவற்றுள் உரிமைப் பகர்ப்பு முதல் சார்ல்ஸ் அரசர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட உரிமைக் கோரிக்கையின்(ஞநவவைiடிn டிக சுiபாவள) புதிய உருவேயாகும். இதில் முதல் சார்ல்ஸ், இரண்டாம் ஜேம்ஸ் முதலிய தன்னாண்மைமிக்க அரசர்கள் ஆட்சிமுறைகளும் அக்கால வரிமுறைகளும் கண்டிக்கப்பட்டன. உரிமைப் பகர்ப்பை மன்னர் தம் ஆற்றலால் மீறி நடந்தனர். ஆனால் ‘குருதியில்லாப் புரட்சி’யின் பின் அங்ஙனம் அரசர் மீறாதபடி காக்க வேறு சட்டங்கள் ஏற்பட்டன. இவற்றுள் சிறந்தவையே கிளர்ச்சிச்சட்டமும் மன்னர் வருவாய்ச் சட்டமும் ஆகும். கிளர்ச்சிச் சட்டம் நாட்டில் ஏற்படும் கிளர்ச்சிகளை அடக்கும்படி ஒரு நிலவரப்படை வைத்துக் கொள்ளும் உரிமையை அரசனுக்கு அளித்தது. ஆனால், அவ்வுரிமை நிலைபெற்ற உரிமையாக அளிக்கப்படவில்லை. அது சில ஆண்டளவுக்கே உரிமையளிப்பதாயிருந்தது. ஆகவே அரசன் மன்றத்தை அடிக்கடி கூட்டாமல் படைவலியுடன் ஆளல் முடியாது. இதனுடன் மன்னர் வருவாய் வகையிலும் மாறுதல் செய்யப்பட்டது. இதற்கு முன்னெல்லாம் ஒவ்வோர் அரசர் ஆட்சித்தொடக்கத்திலும் அவர் வாழ்நாள் முழுமைக்கும் அவர் வருமானம் வரையறை செய்யப்பட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் அரசியல் மன்றத்தை ஆட்சித்தொடக்கத்தில் மட்டும் கூட்டிப்பின் கூட்டாமலே அவர்களால் ஆள முடிந்தது. ஆனால் இப்போதோ செலவின் ஒரு சிறு பகுதி மட்டுமே வாழ்நாள் முழுமைக்கும் நிலவர உரிமையாக அளிக்கப்பட்டது. மீந்த பெரும்பகுதியும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அரசர் வருமானச் சட்டம் வரையறுத்தது. மேலும் உரிமைப் பகர்ப்பின்படி அரசன் கத்தோலிக்கனா யிருக்கவோ கத்தோலிக்க மாதை மணம் செய்தவனாக இருக்கவோ கூடாது என்றும் வரையறுக்கப்பட்டது. இவ்வரையறை இன்றும் நடை முறையிலிருக்கிறது. பெரும்பான்மை புரோட்டஸ் டாண்டுகள் (சீர்திருத்தச் சமயச் சார்பானவர்கள்) ஆன இங்கிலாந்து மக்களின் சமயஉரிமை இங்ஙனம் காக்கப்படினும் குடிகளைப் பற்றியவரை படிப்படியாகப் பழைய சமயக்கட்டுப் பாடுகள் விலக்கப்படலாயின. வில்லியம் ஆட்சியிலேயே முழுக் கத்தோலிக்கர்களும் முழுமுன்னேற்றக் கருத்துடைய புரோட்டஸ்டாண்டுகளும் நீங்கலாகப் பிறருக்குச் சமயவாழ்வில் தன்னாண்மை தரும் சமய ஒப்புரவுச் சட்டம்(கூடிடநசயவiடிn ஹஉவ) ஒன்று நிறைவேறிற்று. படிப்படியாகப் பின்னாட்களில் முற்போக்கு மிக்க புரோட்டஸ்டாண்டுகள் கத்தோலிக்கர் யூதர் ஆகியவர்களுக்கும் ஒப்புரவு உரிமைகள் தரப்பட்டன. ஆங்கில அரசியல் வளர்ச்சியில் மன்னர் உரிமைகளின் வரையறையைவிடக் கூடச் சிறப்புடைய ஒரு பெருநிகழ்ச்சி வில்லியம் ஆட்சியில் தொடக்கமுற்றது. அதுவே ஆங்கிலக் கட்சி அரசியல் முறையாகும். ஆங்கிலநாட்டு வரலாற்றில் அரசியலுரிமைப்போர்க் காலத்தில்தான் நாட்டு மக்களிடையே தெளிவான கட்சிப்பாகுபாடு ஏற்பட்டது. இவை லங்காஸ்டிரியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மன்னர் குடியினரின் அரசுரிமைக் கான போராட்டக் கட்சிகள் போன்றவை அல்ல; குடிமக்கள் அரசியல் உரிமை மேம்பட்டதா? மன்னத் அரசியல் உரிமை மேம்பட்டதா? என்பதைப் பற்றி எழுந்த கட்சிகள் ஆகும். இரண்டாம் சார்ல்ஸ் மன்னரை மீட்டும் அழைத்த போது ஓரளவு இக்கட்சி வேற்றுமை ஓய்வுற்றதுபோல் காணப்பட்டது. ஆனால் அரசன் தம்பியாகிய இரண்டாம் ஜேம்ஸ் அரசுரிமையை விலக்கவேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தபோது மீண்டும் அக்கட்சி புத்துருப்பெற்றது. அவ்வேண்டுகோளைக் கொண்டு வந்த கட்சி பழைய மன்னர் கட்சியையும் அதனை எதிர்த்த கட்சி பழைய அரசியல் மன்றக் கட்சியையும் நினைவூட்டும். இரண்டாம் ஜேம்ஸ் அரசிருக்கையிலிருந்து நீக்கப்பட்டபின் முன் அவரை ஆதரித்த கட்சியில்கூட ஒரு சிலரே அவரிடம் பற்றுடையவரா யிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் வட ஸ்காத்லாந்திலுள்ள மேட்டுநில மக்களாவர். இவர்கள் பிற்காலத்தில் ஐக்கோபைட்கள் என்ற பெயரால் அரசியலைக் கவிழ்க்கும் நாட்டுப் பகைவருடன் ஒப்பாக வெறுக்கப்பட்ட குழுவினராயினர். ஜேம்ஸை ஆதரித்த கட்சியில் பெரும்பாலோர் அவர் அரசுரிமையை ஆதரியாமல் ஓரளவு அவர் கொள்கையை மட்டுமே மேற்கொண்டனர். இவர்கள் டோரிகள் என்றும் வில்லியம் அரசரைக் கொண்டுவந்தவர்கள் விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பது முன்னரே கூறப்பட்டது. மூன்றாம் வில்லியம் அரசர் ஒரு கட்சிச் சார்பாகவே இங்கிலாந்தின் அரசுரிமையை ஏற்றாரென்றாலும் விரைவில் கட்சிச் சார்பிலிருந்து விடுபட்டு நாட்டுப் பொதுத்தலைவனா யிருக்க எண்ணங்கொண்டார். ஆகவே, அவர் தம்மை முதலில் ஆதரித்த விக்குக் கட்சியினரிடையிலிருந்து மட்டுமல்லாமல் டோரிக் கட்சியினிரிடையிலிருந்தும் அமைச்சர்களைப் பொறுக்கி எடுக்க முற்பட்டார். ஆனால் தெற்கும் வடக்குமா யிருக்கும் இருவேறு கட்சிகளைச் சார்ந்த அமைச்சர்களைக வைத்துக்கொண்டு அவர் என்னதான் செய்தல் முடியும்? ஆகவே, அவர் தம் முதற்கருத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு கட்சியிலிருந்தே அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கலானார். அமைச்சர்கள் அரசியல் மன்றில் செல்வாக்குடையவர்களல்லாதவரா யிருந்ததால் அரசியல் மன்றத்தின் ஆதரவு அரசனுக்கு இல்லை. குருதியில்லாப் புரட்சிக்குப் பின் அவ் ஆதரவின்றி அரசன் தனித்தாட்சி புரிவதும் இயலுவதில்லை. எனவே, மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கொண்ட கட்சியிலிருந்தே அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வழக்கம் நாளடைவில் வேரூன்றி நிலைபெற்றுப் பிரிட்டிஷ் அரசியலின் எழுதாச் சட்டங்கள் அல்லது மரபுகளுள் ஒன்றாகிவிட்டது. ஆங்கில அரசியலமைப்பின் உயிர்நிலைப் பண்பாகக் கருதப்படும் அமைச்சர் குழு அமைப்பின் வளர்ச்சியில் இக்கோட்பாடு முதற்படியான வளர்ச்சி முறையைக் குறிப்பதாகும். 1696-இல் மூன்றாம் வில்லியம் அமைத்த விக் அமைச்சர் குழுவே ஆங்கில அரசியல் மன்ற வரலாற்றில் முதல் ஆட்சி உரிமை பெற்ற அமைச்சர் குழு என்னலாம். ஆயினும் இரண்டாம் சார்ல்ஸ் அரசர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விக் அமைச்சர் குழுவாகிய ஜூண்டோவை(துரவேடி) இதற்கு ஒரு முன்மாதிரி என்னலாம். அமைச்சர் குழுவமைதியின் இரண்டாவது வளர்ச்சிப்படி அமைச்சர் ஒருமைப்பாடும் கூட்டுப்பொறுப்பும் ஆகும். இரண்டாம் சார்ல்ஸ் அரசர் ஆட்சியிலேயே அமைச்சர் ஒருவர் கருத்து வேறுபாடுடையவரானால் குழு முழுமையும் கலையும் வழக்கம் இருந்ததெனினும் அது இன்றியமையா ஏற்பாடாக வில்லை. உண்மையில் அதனை இன்றியமையா ஏற்பாடாக்கிய பெருமை முதலாம் ஜார்ஜ் அரசர் காலத்தில் முதல் அமைச்சராயிருந்த வால்போல் என்ற பெரியாரதேயாகும். வில்லியம் காலமுதல் சிலசமயம் விக்குகளும் சில சமயம் டோரிகளும் வன்மையுடையவராயினர். வில்லியம் ஆட்சியின் இறுதியிலும் ஆன் ஆட்சியிலும் பெரும்பாலும் டோரிகளே மீண்டும் தலைமை நிலைக்கு வந்தனர். வில்லியம், மேரி ஆகியவர் பிள்ளையற்றவராதலால் அவர்களுக்குப் பின் மேரியின் தங்கை ஆன் அரசியானாள். அவளும் பிள்ளையில்லாது போயினள். அரசுரிமைக்கு ஆனுக்குப் பின் உரிமையுடைய பல அண்மை உறவினர் கத்தோலிக்கரா யிருந்தனர். சட்டப்படி கத்தோலிக்கர் அரசராக முடியாதாயினும் எங்கே கிளர்ச்சி வலிமையால் அரசாட்சி அவர்கள் கையில் சிக்கிவிடுமோ என்று அஞ்சிய ஆங்கிலமக்கள் மிகத் தொலைவான உரிமையையே யுடைய ஹனோவர் முதன் மகனான ஜார்ஜே(ழுநடிசபந, நுடநஉவடிச டிக ழயnடிஎநச) அரசனாக வரவேண்டும் எனச் சட்டம் வகுத்தனர். இவர் முதலாம் ஜேம்சின் புதல்வியான எலிசபெத்து, அவள் கணவன் பாலட்டைன் முதன் மகனார் பிரடெரிக்ஆகியவரின் மகள் பிள்ளையாவர். தாயின்தாய் வழியில் மட்டுமே இவர் ஆங்கில நாட்டுடன் தொடர்புடையவர். இந்த ஹானோவர் குடியினர் அரசியல் மன்றத்தார் விருப்பத்தால் அரசராயினும் இரண்டு தலை முறைவரை பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் முற்றிலும் ஜெர்மானியராகவே இருந்தனர். ஆங்கிலமொழி பேசவோ ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களையறியவோ செய்யாத இவர்கள் பெரும்பாலும் ஆட்சிப்பொறுப்பை முற்றிலும் அமைச்சர்களிடமே விட்டுவிட நேர்ந்தது. தற்செயலாக நேர்ந்த இந்த நிலைமை ஆங்கில அரசியல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பெரிய நற்பேறாக முடிந்தது. பெயரளவிலும் எழுத்துவடிவில் சட்டத்தின்படியும் அமைச்சர்கள் அரசனால் அமர்வுபெற்று அரசனுக்கே இன்றளவும் பொறுப்புடையவராயிருக்கின்றனர். ஆனால், முதலிரண்டு ஹனோவரிய அரசர் (முதலாம் இரண்டாம் ஜார்ஜுகள்) காலமுதல் உண்மையில் அவர்கள் அரசியல் மன்றத்திற்கே பொறுப்புடையவர்களாகவும் அதன் விருப்பு வெறுப்பினாலேயே அமர்வும் நீக்கமும் பெற்றவர்களாகவும் ஆயினர். அத்துடன் மட்டுமின்றி மன்றத்தின் விருப்பம் அவர்களை ஒரே குழுவாக அரசன் செயலுக்குப் பொறுப்புடைய வர்களாகக் கொண்டு நின்றதனால் அவர்களிடையே கூட்டுப்பொறுப்பும் வளரலாயிற்று. அமைச்சர் குழுவமைதியின் இவ்விரு கூறுகளும் இரண்டாம் சார்ல்ஸ் அரசர் காலத்திலேயே வித்தூன்றியவையாயினும் வில்லியம் ஆன் ஆகியவர்கள் அரசாட்சியில் குருதியில்லாப் புரட்சியின் பயனாக உரம்பெற்று முதலிரண்டு ஹனோவரியரின் ஆட்சிக்காலங்களில் வேரூன்றி ஆங்கில அரசியலின் உயிர்நிலை அடிப்படையாக நிலைபெற்றன. இதேசமயம் அமைச்சர்குழுவின் உறுப்பினர் பொதுப் பேரவையினின்றுமே தேர்ந்தெடுக்கப் பட்டதனாலும்; அதற்கே அவர்கள் பொறுப்புடையவராய் அதன் ஆற்றலுக்கே கட்டுப்பட்டவராயிருந்ததனாலும்; அரசர் பெயரால் அமைச்சர் ஆட்சியை நடத்துவதற்கு உயிர்நிலை வேண்டுதலான பொருள்வருவாயும் வரி பிரித்தலும் அதே பொதுப்பேரவையின் கையிலிருந்ததனாலும் பொதுப் பேரவையே நாட்டின் பொதுப்பேரவையாக வளர்ச்சியடைந்தது. பெருமக்கள் அவை இதற்குமாறாகப் பல வகையிலும் ஆற்றலும் உரிமைகளும் இழந்து வந்தது. வில்லியம், ஆன் முதலியவர்கள் ஆட்சிக் காலங்களில் அரசர், பெருமக்கள் அவையில் வளர்ச்சியடைந்து வரும் கட்சிக் கெதிராக வலிவு தேடிய காலத்தில் புதிய பெருமக்களை ஆக்கவும் முற்பட்டனர். இதனால் பெருமக்கள் பேரவை அரசர் கையிலும் அவ்வரசர் பெயரால் ஆட்சி நடத்தும் நடைமுறைக்குழுவாகிய அமைச்சர் குழுவின் கையிலும் இறுதியில் அவ்வமைச்சர் குழுவினை இயக்கிய பொது அவையின் கையிலும் ஒரு பொம்மையாக மாறி வந்தது. ஆள் ஆட்சிக்கு இரண்டாட்சிகளிலும் (1714 முதல் 1761 வரை டோரிகளின் ஆற்றலும் புகழும் மங்கியிருந்தன. விக்குகள் மேலோங்கி யிருந்தனர். தொடக்கத்தில் விக்குகளின் தலைவராய் டௌன்ஷென்ட் என்பவரே முதலமைச்சராயிருந்தார். ஆனால் அவர் மன்னருடன் இணைந்து வெளிநாட்டு அரசியலிலும் போரிலும் பெரிதும் ஈடுபட்டதுடன் ஆங்கில மக்களுக்கு ஐயமும் கலவரமும் உண்டுபண்ணும் வகையில் மறைவான உடம்படிக்கை களிலும் கலந்துகொண்டனர். பொருளமைச்சராயிருந்த அவர் மைத்துனர் ராபர்ட் வால்போல் வெளிநாட்டுப் போர்களை வெறுத்தவர். இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளின் பூசல்களில் கலக்காமல் ஒதுங்கி நின்று அமைதியுடனிருந்தால்தான் அது வாணிபத்திலும் கைத்தொழிலிலும் சிறந்தோங்க இடமுண்டு என்று அவர் எண்ணினார். அவர் எதிர்ப்பால் 1717 முதலே விக்குக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1721 இல் வெளிநாட்டுக் காரியங்களிலும் உள்நாட்டுச் செய்திகளிலும் மக்களின் எதிர்ப்புக்கு டௌன்ஷெண்டு ஆளாகவே அவர் சார்பான விக்குக் கட்சி வீழ்ச்சியுற்றுப் புதிய விக்குக் கட்சியின் தலைவராய் வால்போல் முதலமைச்சர் நிலையேற்றார். டௌன்ஷென்டுக்கு உள் நாட்டில் எதிர்ப்பை உண்டு பண்ணிய நிகழ்ச்சி ‘தென்கடற் குமிழி’ எனப் பிற்காலத்தில் ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட தென்கடல் வாணிபக் கழகத்தின் முறிவு ஆகும். சென்னையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதுமக்கள் சிறுபொருள் திரண்ட பெருங்குவையை விழுங்கி ஏப்பமிட்ட அர்ப்பத்நாட் கழகத்தைப் போல இது ஆங்கில மக்களில் எல்லா வகுப்பினரிடையேயும் பொருளிழப்பையும் திண்டாட்டத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணிற்று. வால்போல் பொருளியலறிஞர், திறமையான ஆட்சியாளர். அதனோடு அவர் அந்நாளைய நிலையை நன்கறிந்தவர். பழங்கால நிலக்கிழமையின் வாழ்வுமுறை நீங்கி வாணிகக் கைத்தொழில் துறைகளில் அறிவியல் புரட்சி ஏற்படுத்தும் புதிய ஊழி தொடக்கமுற்றது. அக்காலமே பழைய வாழ்வின் அழிவிலிருந்து புதுவாழ்வு பிறப்பதற்கு முற்பட்ட இரண்டுபட்ட நிலையில் ஏற்படும் வாழ்வியல் பொருளாதாரக் குழப்பங்களனைத்தையும் வால்போல் திறம்பட அமைத்து ஒழுங்குபடுத்தி ஆங்கில மக்கள் ஆதரவைப் பெற்றார். அத்துடன் அரசியல் நடைமுறையிலும் மற்ற அமைச்சர்களை ஒருமைப் படுத்தி அமைச்சர் குழுவாட்சி முறைக்கும் நன்கு அடிகோலினார். இங்கிலாந்தின் திறமிக்க முதல் தலையமைச்சர் இவரேயாவர். காலத்தின் இயல்புக்கும் கட்சித் தலைமையின் வேண்டுதலுக்கும் ஏற்ப அரசியல் வல்லுநர் என்ற முறையில் கைக்கூலி, செல்வர்குழுத்தலைமை, சூழ்ச்சிமுறை ஆகியவற்றை அவர் கையாண்டதுண்டாயினும் அக்காலம் அரசியல் வாழ்வின் முதிரா இளமைக்காலமாதலின் அவை புறக்கணிக்கத்தக்கவை. ஆனால், ஆங்கில அரசியல் பொருளியல் வாழ்வுக்கும் அவற்றின் மூலம் உலக வாழ்வுக்கும் அவர் ஆற்றிய பணி, ஒப்புயர்வற்ற தாகும். ஒரு நாட்டின் வாழ்வில் பல துறைகளிலும் செயற்கரிய செய்யும் பெரியார் தோன்றி மக்களுக்குத் தலைமை தாங்கி நடாத்துவதுண்டு. அத்தகைய பெரியார்களுள் இருவகையினர் உளர். காலத்திற்கேற்ற தலைமை தாங்கிய பெரியார், காலத்துக்கு அப்பாற்பட்ட தலைமைத்திறனுடையார் என அவர்களை வகுத்துக் கூறலாம். கிராம்வெலும் வால்போலும் காலத்துக்கப் பாற்பட்ட பெரியார் எனக் கூறவேண்டும். கிராம்வெல் கண்ட அரசியல் கனாக்களை அவர் காலத்து மக்கள் எவரும் காணவுமில்லை; உணர்ந்து ஒத்துழைக்கவும் முடியவில்லை. எனவே, அவை நனவுலகில் தோல்வியுற்றன. பொருளியல் துறையில் வால்போலின் முறைகளும் அவ்வாறே. அவற்றின் உயர்வையும் நற்பயன்களையும் பிற்காலத்தார் போற்றினும் காலத்தின் சூழலுக்குட்பட்ட குறுகிய நோக்கமுடைய அந்நாளைய மக்கள் அவற்றை எதிர்த்தனர். எதிர்ப்பு மிகுதியாக ஆக வால்போல் தலைமைநிலை நழுவி எதிரிகளிடம் சென்றது. 1741-இல் அவர் அரசியல் நிலையினின்றும் நீங்கி 1745-இல் உலகு நீத்தார். அவருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பைத் தந்த அவரது புதிய சீர்திருத்தம் இறக்குமதி வரிகளை நீக்கி அவற்றை உள்நாட்டு வரிகளாக மாற்றியதேயாகும். இது மிகச்சிறந்த முறையெனப் பிற்காலத்தில் ஏற்கப் பட்டுப் பின்பற்றப்பட்டது. ஹனோவரிய அரசர்களில் மூன்றாவது அரசர் மூன்றாம் ஜார்ஜ் என்பவர். இவர் முதலிரண்டு அரசர்களிடமிருந்து எல்லாவகையிலும் மாறுபட்டவர். இவர் தந்தையையும் பாட்டனையும் போல் ஆங்கில நாட்டாரின் தாய் மொழியையும் பழக்கவழக்கங்களையும் அறியாதவரல்லர். நாட்டுமக்களுடன் நாட்டு மகனாய் அவ்விருதுறையிலும் ஒன்றுபட்டவர். அத்துடன் அவர் பேரவாவுடையவரானதால் தம் தந்தையையும் பாட்டனையும் போல் அரசியல் தலைமை முழுமையையும் அமைச்சர் குழுவினிடமே விட்டுவிட ஒருப்படவில்லை. ஸ்டூவர்ட் அரசர்கள் மனத்துட்கொண்ட கனவுகளின் சாயல் அவர் மனத்திலும் ஏற்பட்டன. ஆகவே, அவர் அரசியல் மன்றத்தின் ஆதரவைநாடி அதில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களைக் கொள்ளாமல், தம் மனத்துக்குப் பிடித்த கொள்கையுடைவர் களையே அமைச்சர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுதவியாலும் அரசியலாளர்களிடம் அந்நாளில் வழங்கிய கைக்கூலி, உயர் பணிதரல் முதலிய மறைவழக்கங்களின் உதவியாலும் மன்றத்தை வசப்படுத்தி அடக்கியாள எண்ணினார். மூன்றாம் வில்லியத்தையும் முதல் ஜார்ஜையும் கொண்டுவரக் காரணராயிருந்த முற்போக்கு அரசியல் மன்றக் கட்சியான விக்குகளைவிட முன் ஸ்டூவர்ட் அரசர்களை ஆதரித்தவர்களின் கால்வழிவந்த டோரிகளே அரசனின் இப்போக்குக்கு உடந்தையாயிருந்தனர். எனவே, அவர் மீண்டும் அந்த டோரிகளிடையே தம் விருப்பத்திற்கு இணங்குபவர்களைத் தலைமை யமைச்சராகக் கொண்டு ஆளமுயன்றார். ஆனால், ஆங்கில அரசியல் வளர்ச்சி இத்தகைய நாடகத்துக்கு இடம்தரும் நிலையினின்று மிகு தொலை சென்றுவிட்டது. வரவர மன்னருக்கும் மன்னர் கையாட்டிகளான அமைச்சர்களுக்கும் எதிர்ப்பு வளர்ந்தது. இவற்றினிடையே அமெரிக்க விடுதலைப்போர் எழுந்தது. மூன்றாம் ஜார்ஜ் அரசரும் அவர் அமைச்சர்களாகிய நார்த் பெருமக்கள் முதலியவர்களும் ஆங்கில நாட்டிலேயே விடுதலைப் பற்றாளர்களை எதிர்த்தவர்கள். ஆங்கில நாட்டு அரசியல் தலைமைக்குக் கீழ்ப்பட்டிருந்த அமெரிக்கக் குடிகளுரிமைகளை அவர்கள் எங்ஙனம் ஆதரிப்பர் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? ஆனால் காலத்தின் மாறுதல் அமெரிக்கக் குடியேற்றத்தாரை விடுதலையார்வத்தால் வலிமைப்படுத்தி ஒற்றுமைப்படுத்தியது. ஜார்ஜ் வாஷிங்டன் என்ற ஒப்பற்ற தலைவரின் கீழ் அவர்கள் தம் அரசியல் கிளர்ச்சியை ஒழுங்கான படைத்திற எதிர்ப்பாக்கி விடுதலைப் போர்செய்து வெற்றிபெற்றனர். அமெரிக்க நாட்டினர் விடுதலை, அஃதாவது ஆங்கில நாட்டார் அமெரிக்க நாட்டின்மீது செலுத்திய ஆட்சியை இழந்தமை ஆங்கில மக்களைத் தட்டியெழுப்பிற்று. தம் அரசர் விடுதலைக்கு எதிரிமட்டுமல்லர்; திறமுமற்றவர் என்று அது அவர்களுக்கு எடுத்துக்காட்டிற்று. மூன்றாம் ஜார்ஜின் தன்னாண்மை ஆட்சிக்கும் அவர் சார்பாளரான நார்த்பெருமகன் அமைச்சர் நிலைக்கும் இது சாவுமணி யாயிற்று. அமெரிக்கக் கிளர்ச்சியின் போது அமெரிக்கக் குடிமக்கள் கோரிக்கையை ஆதரித்து நின்ற ஆங்கிலப் பெருந்தலைவர் இருவர். ஒருவர் சாதம் கோமகனான (மூத்த) வில்லியம் பிட் என்பவர். இன்னொருவர் ஆங்கிலநாட்டின் ஒப்புயவர்வற்ற சொற்பொழிவாளரான பக் என்பவர். இவர்களில் முன்னவரை அரசர் முதல் அமைச்சராக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால், அவர் அரசரைப் போல அமெரிக்கரை எதிர்க்கவும் விரும்பாமல் விக்குகளைப் போல் அவர்கள் விடுதலையையும் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை மீட்டும் ஆங்கிலப் பேரரசில் சேர்க்க விரும்பினதால் பணியேற்க முடியவில்லை. அதனோடு சின்னாட்களுக்குள் அவர் உயிர்நீத்தும் விட்டனர். அமெரிக்க விடுதலைப்போர் ஆங்கிலப் பேரரசை ஒருபுறம் ஓரளவு கலைப்பதாயிருந்தாலும் இன்னொருபுறம் அதனை வேறுபக்கம் திருப்பிப் புத்துயிர் தருவதாயிருந்தது. அமெரிக்க நிலத்தில் ஆங்கிலப்படைகள் தோற்றபின் இனிப்பேரரசின் கடல்கடந்த பகுதிகளை விடாதிருக்க வேண்டுமானால் கடலாற்றல் மிகுதியாக வேண்டுமென்றும் குடியேற்ற நாடுகளிடம் குறுகிய தன்னல மனப்பான்மையை முந்துறக் காட்டல் கூடாதென்றும் ஆங்கில மக்கள் உணர்ந்தனர். இவற்றின் பயனாக ஆங்கில நாட்டுக் கடற்படை வன்மைபெற விரிவுபடுத்தப்பட்டது. அமெரிக்கக் கூட்டுறவு நாட்டின்(ருnவைநன ளுவயவநள டிக ஹஅநசiஉய) இழப்பிற் கீடாக விரைவில் அதன் வடக்கில் கானடா பிரிட்டிஷ் ஆட்சிக்குள் ஒன்றுபடுத்தப்பட்டது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் கை மேலோங்கிப் பிரிட்டிஷ் ஆட்சி விரிவுபடத் தொடங்கிற்று. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய குடியேற்ற நாடுகள் புதுவதாகத் தோன்றின. இவற்றுள் பிரிட்டன் மூன்றாம் ஜார்ஜின் கொள்கைகளை மீட்டும் பின்பற்றாது எச்சரிகையாக நடந்து கொண்டது. ஆனால், எப்படியும் அமெரிக்க விடுதலைப் போரின் அதிர்ச்சி ஆங்கிலப் பேரரசை மட்டுமன்றி உலக வரலாற்றையே மிகவும் தாக்கும் செயலாக நிலவாதிருக்க முடியவில்லை. அமெரிக்கரைக் கண்டு இங்கிலாந்தின் அரசியலின் கீழ்த் துயருற்ற அயர்லாந்து மக்கள் தாமும் விடுதலைபெற விதிர் விதிர்த்தனர். அமெரிக்க மக்களின் விடுதலையியக்கத்தின் போது எடுத்தாண்ட புதிய கருத்துக்கள் கடுங்கோன்மையிலும் உயர்வகுப்பாரின் சுரண்டலிலும் கொடுமையிலும் கிடந்துழன்ற பிரஞ்சுநாட்டு ஏழைமக்கள் உள்ளத்தில் கிடந்து குமுறிப் பலவகைக் கனாக்களையும் செயலார்வத்தையும் தூண்டின. ஆங்கில நாட்டு அரசியலையும் மெய்விளக்க நூல்களையும் கற்ற பிரஞ்சுப் பேரறிஞர் இக்கனாக்களுக்குச் சிறகு தந்து மக்கள் வாழ்வு, அரசியல், பொருளியல் ஆகியவை பற்றிய புத்தாராய்ச்சி நூல்கள் வெளியிட்டனர். இவர்களுள் ரூசோ என்ற பேரறிஞர் எழுதிய வாழ்வியல் குழு ஒப்பந்தம்(ஊடிவேசயஉவ ளுடிஉயைட) மனித வகுப்பையே தட்டி எழுப்பிய ஒரு சில நூல்களில் ஒன்றாக இடம்பெறத்தக்க தாகும். இதுபோல இன்னும் வால்தேர் முதலிய பிற அறிஞரும் தம் வெறித்த முற்போக்குக் கொள்கைகளை மக்களிடையே பரப்பினர். இவற்றின் பயனாக எழுந்த பிரஞ்சுப் புரட்சித் தீ 1785 முதல் புகைந்து 1792-இல் கனன்று 18-ஆம் நூற்றாண்டின் முடிவில் பேராரவாரத்துடன் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கிடுகிடுக்கும்படி வெடித்து நாலாபக்கமும் கங்குகளையும் வெப்பத்தையும் பரப்பிற்று. இறுதியில் இப் புரட்சியால் குழப்பமுற்ற பிரான்சு நாடு நெப்போலியன் பேராவலுக் கிரையாய், அவன் காலடியில் பட்டுக்கிடந்தது. அவனுக்குப் பின் வந்த அரசர்கள் ஆங்கில அரசர் உதவியுடனும் பிற ஐரோப்பிய அரசர் உதவியுடனும் பெருமக்கள் ஆதரவுடனும் மீட்டும் உலகில் கடுங்கோன்மையைக் சிலகாலம் நிலைநாட்ட முயன்றனர். ஆயினும் இம்முயற்சிகள் முழுவதும் வெற்றி பெறாது வீழ்ச்சியடைந்தன. அதன் பயனாக ஒன்றன்பின் ஒன்றாக ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்போர்கள், புரட்சிகள், நாட்டுரிமை இயக்கங்கள் ஆகியவை மலிந்தன. பிரஞ்சுப் புரட்சியின் இப்பேராரவாரம் இங்கிலாந்தையும் தாக்காமலிருக்க வில்லை. பிரஞ்சுப் புரட்சிக் கழகங்கள் போன்ற புரட்சிக் கழகங்கள் ஆங்காங்கு நிலவின. ஆயினும் அவற்றின் மட்டற்ற முற்போக்கால் முன் ஓரளவு முற்போக்குடைய தலைவர்கள் கூட வெருட்சி யடைந்து பின்னடையலாயினர். இத்தகையோருள் அமெரிக்கப் புரட்சியை ஆதரித்தவரும் இந்தியாவில் ஆங்கில ஆட்சித் தலைவர் வாரன் ஹேஸ்டிங்ஸின் தன்னாண்மைப் போக்கை எதிர்த்தவரும் ஆன பெருஞ் சொற் செல்வர் பர்க்கும் ஒருவர். பிரஞ்சுப் புரட்சியின் வெப்பமும் வேகமும் மிகுதியாக ஆக, இத்தகைய நேர்நிலையாளரான முற்போக்காளர் பலர் அவ்வியக்கத்தினின்றும் விலகினர். இறுதியில் நெப்போலியன் பேரவாவால் புரட்சி சென்றொடுங்க அதன் எதிர்தாக்குத லியக்கமான மூன்றாம் நெப்போலியனின் வல்லாட்சிமுறை வந்தபின் எங்கும் புரட்சியியக்கம் அடக்கப்பட்டது. பொதுவில் பூத உடல் இறந்த பின்னர்த்தான் புகழுடல் வலிவுபெறும் என்று கூறுவதுண்டு. பிரஞ்சுப் புரட்சிவகையில் இது உண்மையாயிற்று. வெளிப்படையான புரட்சி ஒடுக்கப்பட்ட பின்பே அதன் உள்ளார்ந்த உயிர்ப்பண்புகளின் ஆற்றல் வெளிப்பட்டது. அதன் ஒளிப்பரப்பிற்பட்ட நாடுகள் அனைத்துமே பெரிய மாற்றங்கள் அடைந்தன. அவ் வொளி விளக்கை முதலில் ஏற்றிய நாடாகிய பிரிட்டன் அதன் தாக்குக் குள்ளாகாமலிருத்தல் கூடுமோ?ஐரோப்பாவின் தலை நிலத்து மக்களைப் போல ஆங்கில மக்கள் உச்சநிலைக்கருத்தியல் உலகிற் குதிப்பவரல்லர் ஆயினும், பிரஞ்சுப் புரட்சியிருக்க ஒளியைக் கண்ட அவர்கள் தம் அரசியல் மன்ற அமைப்பு, மொழித்தாள் முறை ஆகியவற்றின் ஊழல்களை முன்னிலும் மிகுதியாகக் கவனித்து அவற்றை ஆர்வத்துடன் ஆராய்ந்து சீர்திருத்தம் வேண்டுமென்று கூக்குரலிடத் தொடங்கினர். தொடக்கத்தில் வெறியாளரால் ஏற்பட்ட வெருட்சியின் எதிர்த்தாக்கு நீங்கியபின் முற்போக்குடைய தலைவர் பலர், இக்குறை நீக்க முன்வந்தனர். அதன் பயனாகவே 1832-ஆம் ஆண்டு அரசியல் மன்றச் சீர்திருத்தமும் அதனைப் பின்பற்றிய மற்றச் சீர்திருத்தங்களும் தோன்றின. இவை வரும் பிரிவிற் குறிக்கப்படும். 3. வளர்ச்சிக் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை பிரிட்டனின் அரசியல் மன்றத்தின் உரிமைகள் படிப்படியாக வளர்ந்து உரம்பெற்றனவாயினும் அம்மன்ற அமைப்பின் அடிப்படையான தேர்தல்முறைகள் மிகவும் சீர்கெட்டுக் குழப்பநிலையிலேயே இருந்தன. மாவட்டத் தேர்தலில் வாக்காளர் தகுதி 1430 வரை வரையறுக்கப்பட்டாமலேயிருந்தது. 1430-இல் வாக்காளர், 40 பொன் வருவாய் மதிப்புடையதாகத் தம் உரிமையில், அல்லது தம் கைவசமாக நிலம் உடையவராயிருக்க வேண்டுமென்று வரையறை ஏற்பட்டது. ஆயினும் இவ்வரையறை தெளிவானதாயில்லை. மாவட்ட அரசியல் முதல்வரும் சட்ட அறிஞரும் விரும்பியவாறெல்லாம் அதைப் பயன்படுத்த இடமிருந்தது. இத்தகைய மாவட்டங்கள் முதலில் 37 இருந்தன. நேரடியாக மன்னருரிமை உடையவையாயிருந்த செஸ்டர், டர்ஹம் ஆகியவை நெடுநாளைக்குப் பின் தான் மன்றத்தின் தேர்வில் கலந்தன. எட்டாம் ஹென்ரியின் காலத்தில் வேல்ஸ்நாடும் முதல் ஜேம்ஸ் காலத்தில் ஸ்காட்லாந்தும் மூன்றாம் ஜார்ஜி காலத்தில் அயர்லாந்தும் அரசியல் மன்றில் இடம் பெற்றன. அவற்றின் சார்பாக ஸ்காட்லாந்துக்கு 48 பேரும் அயர்லாந்துக்கு 100 பேரும் மன்ற உறுப்பினராயினர். நகரத்தொகுதித் தேர்தலில் 1832வரை நிலைமை இன்னும் பன்மடங்கு குழப்பமாயிருந்தது. தேர்தலுரிமை பெற்ற நகரங்கள் தொடக்கக்காலங்களில் தென்கிழக்கிலும தென்மேற்கிலுமே மிகவும் குவிந்து கிடந்தன. வாணிகமும் கைத்தொழிலும் வளர்ச்சியடைந்து பெருகிய தன் பயனாக 18-ஆம் நூற்றாண்டுக்குள் இடைநாட்டுப் பகுதியிலும் வடநாட்டுப் பகுதிகளிலும் பெருநகரங்கள் ஏற்பட்டன. ஆனால் அவற்றுக்குத் தேர்வுரிமை இல்லாமலேயேயிருந்தது. போக, அரசர்கள் தம் விருப்பத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது பலவகைப் போலித் தேர்வுத் தொகுதிகளை ஏற்படுத்தினர். இவையும் பெரும்பாலும் கார்ன்வால் போன்ற தென்மேற்குப் பகுதியிலேயே அமைந்தன. எட்டாம் ஹென்ரியின் காலத்தில் இங்ஙனம் 38 புதிய தொகுதி களும் எலிசபெத் அரசி காலத்தில் 62 புதிய தொகுதிகளும் ஏற்பட்டன. இவற்றின் பயனாய் 1832-இல் ஒரு புறம் மக்கள் நெருக்கமிக்க பல நகரங்களில் தேர்தல் தொகுதியில்லாம லிருந்தன. இன்னொரு புறம் ஒரு சில வீடுகளிருந்த இடத்திற்கு இரண்டு, மூன்று, நான்கு உறுப்பினர் தொகுதிகள் வரை தரப்பட்டிருந்தன. முன் ஊரிலிருந்து வெறும் மலையாகவோ வயலாகவோ போய்விட்ட இடங்களில்கூடப் போலித் தொகுதிகள் இருந்தன. அவ்விடத்திற்கு உரிய பெருநிலக்கிழவர் அவ்விடத்தில் தமக்கு வேண்டிய ஆட்களை மொழியாளராகத் தருவித்துத் தமக்கு வேண்டிய ஆட்களையே தேர்ந்தெடுத்துக்கொண்டனர். பல தொகுதிகள் செல்வர்கள் சட்டைப்பையிலிருந்து பணம் பெற்ற கையாட்களைத் தேர்ந்தெடுக்கும் தொகுதிகளாகவே யிருந்தமையால் அவைகள் ‘சட்டைப்பைத் தொகுதிகள்’ என்று ஏளனமாக அழைக்கப்பட்டன. பிரஞ்சுப் புரட்சியின் பேரொளி விளக்கம் இத்தேர்தல் ஊழல்களை மக்கள் எல்லோரும் கவனிக்கும்படி செய்தது. மேல் பிரிவில் குறிப்பிட்டபடி 19-ஆம் நூற்றாண்டின் முதற் காற்பகுதியில் புரட்சியின் பயனாக ஏற்பட்ட வெருட்சியினால் பிற்போக்காளர் கை, சிறிது வலுவடைந்ததுபோலத் தோன்றினாலும் இவ்வெருட்சி நெடுநாள் நிற்கவில்லை. தேர்தல் பெயரளவில் குடிமக்கள் தேர்வாகத் தோன்றிற்றேயன்றி அது உண்மையில் ஒரு சில செல்வர் கைப்பட்ட ஆட்சியுரிமையே என்பதைப் பொதுமக்கள் நன்கு உணரலாயினர். ரூஸோ, வால்த்தேர் ஆகியவர்களை ஒப்ப இங்கிலாந்திலும் பெந்தம் என்பவர் உரிமை பெற்ற வகுப்பார் ஆட்சியை ஆணித்தரமாகக் கண்டித்திருந்தார். புரட்சி அமளி அடங்கியபின் ஜேம்ஸ் மில், பிரான்ஸிஸ் பினேஸ் போன்ற அறிஞர்கள் பெந்தமைப் பின்பற்றிக் குடிமக்கள் உரிமை எப்படி யிருக்க வேண்டும் என்பதை விளக்கிப் பழைய குளறுபடைகளை மிகவும் கண்டித்தனர். நாட்டுவாழ்வின் உயிர்நிலை நாடியென்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துவிட்ட வாணிபக் கைத்தொழில் வகுப்பினரும் தம் உரிமையைப் பெற முன்வந்து கிளர்ச்சி செய்தனர். இவற்றின் பயனாகவே 1833-இல் அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்டது. இது தேர்தல் முறையின் அடிப்படையை மாற்றிற்று; தேர்தல் தொகுதிகளை மீட்டும் சீர்திருத்தி அமைத்துத் தேர்தல் தொகுதியையும் இன்னும் நன்றாக வரையறுத்தது; மேலும் மொழியாளர் பதிவேடு ஒன்று அமைக்கப்பட்டது. 2000 மக்களுக்குக் குறைவாக உள்ள தொகுதிகள் அறவே ஒழிக்கப்பட்டு 2000-த்துக்கும் 4000-த்துக்கும் இடைப்பட்ட மக்களுடைய தொகுதிகள் ஓர் உறுப்பினர் தொகுதிகளாகக் குறைக்கப்பட்டன. இவ்வகையாகப் பழைய சீர்கேடடைந்த நகரத் தொகுதிகளில் 56 முற்றிலும் தலைமுழுக் காட்டப்பட்டன. 31 தொகுதிகளில் உறுப்பினருள் ஒவ்வொருவர் குறைக்கப்பட்டனர். இக்குறைபாட்டின் மூலம் எஞ்சிய இடங்கள், மாவட்டங்களுக்கும் புதிய பல நகரங்களுக்குமாகப் பங்கீடு செய்யப்பட்டன. மாஞ்செஸ்டர், பர்மிங்ஹாம் ஷெஃப்ஃபீல்டு, லீட்ஸ் ஆகிய பல நகரங்கள் இவ்வகைத் தேர்தலில் இடம்பெற்றன. 10 பொன்னளவு பதிவுரிமை உடையவர்களும், 10 பொன் நீண்ட தவணை ஈட்டுக்காரர்களும், 50 பொன் குறுகிய தவணை ஈட்டுக்காரர்களும், 50 பொன் மதிப்புடைய இட ஆட்சி யுடையவர்களும் மாவட்டங்களில் மொழித்தகுதி பெற்றனர். நகரங்களிலும் மொழித்தகுதி ஒரே நிலைப்படுத்தப்பெற்றது. முன்னெல்லாம் தேர்தல் காலங்களில் தேர்தல் தகுதியுடையவர் யார்? தகுதியற்றவர் யார் என்பதை மாவட்டப் பணியாளரும் சட்ட அறிஞருமே வகுத்துரைத்தனர். இப்போது தகுதியுடையவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட பின்புதான் அவர்கள் மொழி தர இணக்கம் பெற்றனர். இச் சீர்த்திருத்தச் சட்டம் முன் இருந்த குழப்ப நிலைமையை நெடுந்தொலை திருத்திற்று. செல்வர் குழுவின் தடங்கலற்ற ஆட்சி குறைவு பெற்றது. ஆனால் முற்போக்காளர் அவாக்களை அது முற்றிலும் நிறைவேற்றவில்லை. ஒழுங்கு முறையின்றிக் குவிந்து கிடந்த தேர்தல் தொகுதிகள் புதிய நிலைக்குத் தக்கபடி சற்று ஒழுங்கு முறைக்குக் கொண்டுவரப் பட்டனவே தவிர ஒரே நிலையில் தொகுதிகள் அமைவு பெறவில்லை. மக்கள் தொகை விழுக்காட்டின்படி தொகுதிகள் அமையவுமில்லை. அதுபோலச் சில புதிய தேர்தல் தகுதிகள் ஏற்பட்டனவே யன்றிப் பழைய தகுதி முறை அகற்றப்படவில்லை. முன்பு மாவட்டங்களில் மொழி பெற்றவர்கள் பெருநிலக்கிழவர் மட்டுமே. இப்போது அத்தொகுதி சற்று விரிவுற்று வேளாண் மக்களில் முதன்மையுடையவரில் சிலரையும் உட்படுத்திக் கொண்டது. நகரங்களில் பெருநிலக்கிழவர், செல்வர் ஆகியோர் கைக்குட்பட்டிருந்த போலித் தொகுதிகளில் இப்போது வளர்ச்சியுற்று முன்னிலைக்கு வந்து விட்ட வாணிகக் குழுவினராகிய புதிய இடைத்தர வகுப்பினருக்கும் மொழி உரிமை கிடைத்தது. சீர்திருத்தச் சட்டத்தினால் இவ் வகுப்பினரிடையே முன்னிலும் 1,00,000 பேர்வரை நகர்த் தொகுதிகளில் மொழி உரிமை பெற்றனர். ஆனால், பொதுமக்கள் ஆட்சியுரிமை இவற்றினால் வந்துவிட்டதென்று கூறிவிடல் முடியாது. அதற்கான போராட்டம் இச்சீர்திருத்தச் சட்டத்துடன் தொடங்கிற்று என்று கூறலாம். சீர்திருத்தச் சட்டத்தின் பயன்களுள் தேர்தல் முறையை விடச் சிறந்தது சட்ட அமைப்பில் ஏற்பட்ட மாறுதலேயாகும். இதுவரை சட்டங்கள் என்று அரசியல் மன்றத்தில் நிறை வேறியவையெல்லாம் ஆங்காங்கு அவ்வவ்விடத்துக்கு வேண்டிய சில நடைமுறைகளுக்கான அரசியல் மன்ற இணக்கமேயாகும். அவ்வந் நடை முறைகள் முடிவுற்றபின் சட்டம் பயனற்றவையாய் விடும். ஆட்சி முறையில் நிலையான ஒழுங்குகளை வகுத்து அதற்கான நிலையங்கள் அமைக்கும் புதுவகைச் சட்டங்கள் 1832-ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டத்தின் பின்னாலேயே ஏற்பட்டன. வறுமை ஒழிப்புச்சட்டம். நகரசபைச் சட்டம் ஆகியவை இத்திறத்தவை. ஆட்சிமுறையில் அக்கறைகொண்டு அதனால் நன்மைக்கும் தீமைக்கும் ஆளான நகரத்தொகுதிகளின் இடைத்தர வகுப்பினரே இத்தகைய சட்டங்கள் நிறுவுவதற்குப் பெரிதும் காரணராயிருந்தனர் என்று கூறலாம். இங்கிலாந்தில் சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்ட அதே ஆண்டுக்குள்ளாகவே அஃதே போன்ற சட்டங்கள் ஸ்காட் லாந்துக்கும் அயர்லாந்துக்கும் தனித்தனி நிறைவேற்றப்பட்டன. இங்ஙனம் ஒரே அரசில் இணைந்துவிட்ட மூன்று நாடுகளும் ஒரு நிலையடைந்தன. 1832-ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டத்தை அடுத்த 1838-இல் நகர்த் தொகுதிகளின் தேர்தல் உரிமையில் இன்னொரு மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்த பழைய நகர் அவை இன்றைய நிலையில் நகரமக்களுக்குப் பொறுப்புடையதாகத் திருத்தி அமைக்கப் பட்டது. 1839-இல் பிரிட்டனில் மட்டுமன்றி பிரிட்டிஷ் பேரரசு முழுமையிலும் அடிமை வாணிகம் ஒழிக்கப்பட்டது. அவ் வாணிபத்தினால் பெரும்பயனடைந்து அதன் ஒழிப்பால் பேரிழப்பு அடைந்த வணிகர்களுக்கு அரசாங்கம் 2 கோடி பொன்வரை இழப்பீடாகத் தந்தது. பிரஞ்சுப்புரட்சி யியக்கத்தின் புத்தெழுச்சி ஒன்று 1830-இல் பிரான்சு நாட்டிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி முதலியவற்றிலும் எழுந்தது. அதன் பயனாகக் கொடுங்கோலரசரோடு பேரரசர்க்கும் பெருங் குடியாட்சித் தொடர்புடைய சிற்றரசுகளுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டன. பெல்ஜிய நாடு ஹாலந்தினிடமிருந்து விடுதலை பெற்றுத் தனியாட்சி நிறுவிற்று. இங்கிலாந்தில் இவற்றின் எதிரொலியாக 1840-இல் முனைப்பான குடியாட்சி யியக்க மொன்று தோன்றிற்று. இவ்வியக்கத்தார்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு பத்திர உருவில் வகுத்துக் கிளர்ச்சி செய்ததனால் பத்திரக்காரர் (ஊhயசவளைவ) என்றழைக்கப்பட்டனர். அப் பத்திரம் முனைப்பான கோரிக்கைகளை வற்புறுத்தின. அவை ஆண்டு நிறைவுபெற்றவர் அனைவர்க்கும் மொழி உரிமை, மறைவுடைய மொழித்தரவு முறை(க்ஷயடடடிவ) ஆண்டுக்கு ஓர் அரசியல் மன்றங் கூடுதல், சரிசமவிழுக்காடுடைய தேர்தல் தொகுதிகள்,தேர்தலில் செல்வநிலைத் தகுதி அகற்றப்படல், உறுப்பினர்க்கு ஊதியம் தரல் ஆகியவை. இக் கட்சியினரின் கட்டுப்பாடற்ற வெறித்த போக்கு பிரஞ்சுப் புரட்சியைப் போன்றே மக்களுக்கு வெருட்சி தந்து முழு வெற்றியடையாமல் போயிற்று. ஆயினும் படிப்படியாக வளர்ச்சி ஏற்படுவதற்கு அது துணை செய்தது. அயர்லாந்துக் குடியாட்சி யியக்கத்தையும் இது வலுப்படுத்திற்று. விக்டோரியா அரசியினுடைய ஆட்சியின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் தலை சிறந்த முதன் மந்திரிகளும் நாட்டுத் தலைவர்களும் ஆன பிட், பாமர்ஸ்டன், டிஸ்ரெய்லி ஆகியவர்கள் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினர். காலப் போக்கின் சுழலிற்பட்டு அவர்கள் அடிக்கடி தங்கள் கொள்கையை வற்புறுத்தியும் குறைத்தும் கூட்டியும் திருத்தியும் வந்தனராதலால் பழைய கட்சிப் பாகுபாடுகள் பலவகையில் மாற்றம் பெற்றன. நாட்டில் இடைத்தர வகுப்பார் செல்வத்திலும் செல்வாக்கிலும் பழைய பெருநிலக் கிழவரினும் மேம்பட்டவராய் அரசியலில் வலிமை யுடையவராயினர். முன் அவர்கள் சார்பில் நின்று உழைத்தவர்கள் லிபரல் கட்சியினரே யாயினும், இப்போது லிபரல் கட்சியினருக்குப் போட்டியாக நின்று அடிக்கடி கன்ஸர்வேட்டிங் கட்சியினரும் அவர்களை ஆதரிக்க முன் வந்தனர். லிபரல் மந்திரிகள் செய்ய முடியாத சீர்திருத்தங்களைச் செய்யவும் அவர்கள் அரைகுறையாக விட்டவற்றை நிறைவு படுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சியார் முன்வரலாயினர். இத்தனை போட்டிகளால் கட்சிகள் பிளவுபட்டு அடிக்கடி எது எக்கட்சி என்று கூறமுடியாத நிலைகள் ஏற்பட்டன. ஆங்கில நாட்டுத் தலைவர்களுள் துணிவுமிக்கவராகிய டிஸ்ரேய்லி இடைத்தர வகுப்பார், புதிய தொழிலாளி வகுப்பினர் ஆகியவர் உள்ளுறக் கொந்தளிப்புடையராகி வருவதை உணர்ந்து ‘வெப்பத்திற்குச் சரியான மாற்று வெப்பமே’ எனக்கொண்டு தம் கட்சியினரும் எதிர்க்கட்சியினருமே வெருட்சியடையத் தக்க முற்போக்குடைய ஒரு புதிய சீர்திருத்தச் சட்டத்தை 1867-இல் கொண்டுவந்தார். இதன்படி, நகர்த் தொகுதிகள் எத்தகைய உடைமை வரையறையும் இல்லாமல் வீடு உடையவர் யாவருக்கும் மொழியுரிமை தரப்பட்டது. ஆயினும் அயர்லாந்தில் மட்டும் 4 பொன்வரி வரையறை இவ்வகையில் செய்யப்பட்டது. தற்காலிகமாக வீடுகளில் தங்குபவர்கள் கூட 100 பொன் வாடகை கொடுப்பவர்களானால் மொழிக்கு உரியவராயினர். மாவட்டப் புறங்களில் ஆண்டுக்குப் 12 பொன் வாடகை செலுத்துவோர்கள் அனைவரும் மொழி உரிமை பெற்றனர். இங்ஙனம் 1832-ஆம் ஆண்டுச் சட்டம் நகரின் இடைத்தர வகுப்பாருக்குத் தந்த உரிமைகளை 1867-ஆம் ஆண்டுச் சட்டம், நகரின் உழைப்பு வகுப்பினர்க்கும் தந்தது. இங்ஙனம் அரசியலில் தொழிலாளர் இடம் பெற்றதன் விளைவாகவே இதற்குப் பிற்பட்ட சட்ட அமைப்புகளிற் பலவும் தொழிற் சங்கம் நிறுவுதல் முதலில் தொழிலாளர்க்கான திட்டங்களுக்கு அடிகோலுபவையா யிருந்தன. 1872-இல் பத்திரக்காரர் கேட்ட மறைவான மொழித்தர வுரிமை வழங்கப்பட்டது. இச் சட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. எனவே, அது நிலவரமான சட்டமாக நிறைவேற்றப் படாமல், தற்காலிகத் தேர்வுமுறையாக ஓராண்டளவுக்கு மட்டும் செல்லுபடியாகும்படி நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இதே வகையில் இது நெடுநாள் புதுப்பிக்கப்பட்டுவந்து இன்னும் அப்படியே வழக்கப்படி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அரசியல் முறையில் சட்டமேற்படுத்தாமலேயே எல்லாரும் ஏற்று நடத்தும் நடைமுறைகள் பல ஆங்கில அரசியல் அமைப்பில் வழக்கங்களாகவும் சடங்குகளாகவும் அமைந்துள்ளன. இவற்றை எழுதாச்சட்டங்கள் என்று புனைந்துரைப்பதுண்டு. ஆண்டு தோறும் இச் சட்டம் புதுப்பிக்கப்படுவதும் அத்தகைய ஒரு நடைமுறைச் சடங்காய் விட்டது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் அடுத்தபடி 1884-இல் நிறைவேறிய மக்கள் பெயராண்மைச் சட்டமும்(சுநயீசநளநவேயவiடிn டிக வாந ஞநடியீடந ஹஉவ) 1885-இல் நிறைவேறிய தேர்தல் தொகுதி ஒழுங்குச் சட்டமும்(சுநனளைவசiரெவiடிn டிக ளுநயவள ஹஉவ) ஆகும். இவற்றுள் முதலது, 1867-ஆம் ஆண்டுச் சட்டம், நகர்த்தொகுதியில் வீடுடையவர்க்கு அளித்த அதே பரந்த உரிமையை மாவட்டத்துக்கும் அளித்தது. அதுபோலவே, பின்னதாகிய 1885-ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டம் 1867-இல் நகர்த்தொகுதியில் தொழிலாளர் பெற்ற உரிமையை நாட்டுப்புறத்துத் தொழிலாளரும் அடையும்படி செய்தது. நிலஉடைமை வீட்டு உடைமைகள் அற்ற பிறவகைப் பணியாளர்களுக்கும் இதன் மூலம் மொழியுரிமை கிடைத்தது. அஃதோடு அரசியல் மன்றத்தின் ஒவ்வோர் உறுப்பினர்க்கான தொகுதிக்கும் மொழி தரும் மக்கள் தொகை விழுக்காடு ஒரே நிலையாக இச்சட்டத்தால்தான் முதல்முதல் ஒழுங்குபடுத்தப் பட்டது. இங்ஙனமாகப் பத்திரக்காரர் கோரிக்கைகளுள் மற்றொன்று நிறைவேற்றப்பெற்றது. அரசியல் மன்றின் உறுப்பினர் தொகை இப்போது 658லிருந்து 670 ஆக உயர்ந்தது. தேர்தல் தொகுதிகள் ஒரு நிலைப்படுத்தப் பட்டது முதல் உறுப்பினர்கள் அவ்வத் தொகுதிக்கே பெயராட்கள் ஆவர் என்ற கருத்துப் படிப்படியாக மாறுதலடைந்து அவர்கள் நாட்டின் பெயராட்களே என்ற கருத்து முதிர்வுற்றது. உண்மையில் 18-ஆம் நூற்றாண்டிலிருந்தே பர்க் என்ற அறிஞர் இதனை வலியுறுத்தியிருந்த போதிலும், இது நடைமுறையில் நன்கு வரவேற்கப்பட்டது. 1885-ஆம் ஆண்டுச் சட்டத்தின் பின்னரேயாகும். அரசியல் மன்றிலுள்ள இரண்டு அவைகளுள் கீழவை பொதுமக்கள் அவை என்று நெடுநாள் வழங்கினாலும், உண்மையில் அது பெருமக்கள் என்ற மரபுரிமைப் பட்டம் பெறாத பெருநிலக்கிழவர், செல்வர், ஆகியவர்கள் தலைமை உரிமைபெற்ற அவையாகவே 1832வரை யிருந்து வந்தது. 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியாலும், பிரிட்டனின் பேரரசும் வாணிகமும் வளர்ச்சியடைந்ததனாலும் வணிக மக்களும், இடைத்தர வகுப்பினரும் தொழிலாளரும் வளர்ச்சி யடைந்தனர். இவ்வளர்ச்சி கீழவையின் தன்மையில் பெருமாறுதலை உண்டுபண்ணி அதை வரவர உண்மையாகவே பொது அவையாக்கி வந்தது. நாட்டு மக்கள் வாழ்வு, தாழ்வு வளர்ச்சி, கருத்து வேற்றுமை ஆகிய வாழ்க்கைச் செய்திகள் அனைத்தையும் இப் பொதுஅவை கண்ணாடி போல் எடுத்துக் காட்டி அதற்குரிய உண்மையான பெயராண்மையுடைய அவையாக விளங்கலாயிற்று. இதற்கு நேர்மாறாகப் பெருமக்கள் அவை, எவ்வகை வளர்ச்சியும் அடையாதிருந்தது. அடிக்கடி அரசர்கள் புதிய பெருமக்களைத் தம் சார்பில் அமைப்பதன் மூலம், அது தனி ஆற்றலும் நாட்டுப் பொறுப்பும் இழந்து வந்தது. மேலும் பொருள் வழங்குவதும். மந்திரிகள் அமைப்பதும அவர்களை இயக்குவதும் பொதுஅவையாகவே அமைந்தது. எனவே சட்டப்படி பெருமக்களின் அவையுடன் கலந்து அதன் இணக்கம் பெற்றே பொதுஅவை சட்டமியற்ற வேண்டுமாயினும், அரசியல் நடைமுறையில் பெருமக்கள் அவை, பொதுஅவைப் போக்கிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டது. 1832-ஆம் ஆண்டு வரையில் இரண்டு அவைகளிலும் ஆற்றல் செலுத்திய வகுப்புகள் கிட்டத்தட்ட ஒரே நிலையுடையவையா யிருந்தபடியால் இவ் வவையில் பிணக்கு இல்லாதிருந்தது. 1832முதல் 1885 வரை புதிய இடைத்தர வகுப்பினர் கைப்பட்டு முன்னேறிய பொது அவையுடன் பெருமக்கள் அவை அவ்வப்போது முரண்பட்டது. ஆயினும் அது முறுகாதிருந்தது. 1893-இல் முதன் முதலாகப் பொதுஅவை நிறைவேற்றிய அயர்லாந்துக் குடியாட்சிப் பகர்ப்பைப் பெருமக்கள் அவை மறுத்தது. அரசாங்கத்தில் தலைமை தாங்கியவர்கள் உறுதியால் இப்பிணக்கு முற்றவில்லை. ஆனால் 1909-இல் அரசாங்கத்தார் கொண்டு வந்த புதிய வரவு செலவுத் திட்டத்தின்படி வருமான வரி வருமான மிகுதிக்கேற்பப் படிப்படியாக உயர்த்தப்பட்டது. பொது அவையில் பெருத்த எதிர்ப்பு இருந்த போதிலும் அது நிறைவேறிற்று. ஆனால், பெருமக்கள் அவை அதை மறுக்கவே அரசாங்கம் ஆத்திரமுற்று மன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தல் நடத்திற்று. அடுத்த சில ஆண்டுகளில் அரசாங்க ஆதரவுடன் பொதுஅவை பெருமக்கள் அவையின் இம்மறுப்புரிமையை ஒழிக்க வேண்டும் என்று கச்சை கட்டித் போராடிற்று. 1919-இல் ஒருவகையான இடைநிலைத் தீர்ப்பு ஏற்பட்டது. பொது அவையின் திட்ட மெதனையும் பெருமக்கள் அவை மறுத்தலும் அது பொதுஅவையில் மூன்று தடவை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டால் அது பெருமக்கள் இணக்கம் பெறாமலே சட்டமாய் விடும் என்று வரையறை செய்யப்பட்டது. இதே ஆண்டில் மன்றத்தின் காலஎல்லை 7 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 400 பொன் ஊதியம் தருவதென்றும் உறுதிப்படுத்தப்பட்டது. 1912-இல் அயர்லாந்து இரு அவை களுடைய தனி மன்றம் பெற்றுப் பிரிட்டிஷ் அரசியலமைப்பி லிருந்து விலகி நின்றது. முதல் உலகப்போர் முடிவில் மாதர் மொழி உரிமைப் போராட்டத்தில் முனைந்து சலியா முயற்சியுடன் போராடினர். 1918-இல் நிறைவேறிய சீர்திருத்தச் சட்டம் பெண்களில் 30 ஆண்டுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மொழி உரிமை தந்ததுடன் வீடுடையவர்கள் வீட்டில் தங்கியிருக்கவேண்டும் காலஎல்லையைக் குறைத்தும், கப்பலோட்டிகள், போர்வீரர்கள் ஆகியவர்களுக்கு மொழியுரிமை தந்தும் பத்திரக்காரர் கேட்ட மக்கள் முழுயுரிமை பெற்ற அயர்லாந்தில் வடபகுதியிலுள்ள அல்ஸ்டர் மொழியுரிமையின் பெரும் பகுதியைப் பொது மக்களுக்கு வழங்கிவிட்டது. முதல் உலகப்போரில் பெண்கள் ஆற்றிய தொண்டின் பயனாகவே அவர்களுக்கு இம்மொழியுரிமை பெற்ற அயர்லாந்தில் வடபகுதியிலுள்ள அல்ஸ்டர் மாவட்டத்துச் சீர்திருத்தச் சமயத்தவர்கள்(ஞசடிவநளவயவேள). கத்தோலிக்கர்களான அயர்லாந்து மக்கள் ஆட்சியிலிருக்க விரும்பாமல் அதனை எதிர்த்தனர். அதன் பயனாய் 1920-இல் அயர்லாந்து இரண்டு அரசுகளாக ஆக்கப்பட்டு இரண்டு மன்றங்கள் அமைக்கப் பெற்றன. 1924-ஆம் ஆண்டுச் சட்டம் 30 ஆண்டுக்கு மேற்பட்ட ஆங்கில நாட்டு ஆடவர் பெண்டிர் அனைவருக்கும் (உறுப்புக் குறை யுடையவர், பித்தர், குற்றவாளிகள் ஆகியவர்கள் நீங்கலாக) மொழியுரிமை தந்தது. இத்துடன் 1848-இல் பத்திரக்காரர் கோரிய முனைப்பு மிக்க சீர்திருத்தங்கள் அனைத்துமே பெரும்பாலும் வழங்கப்பட்டுவிட்டன என்று கூறலாம். இன்று பிரிட்டிஷ் அரசியல் மன்றின் பொது அவைகிட்டத் தட்ட 600 உறுப்பினர்களை யுடைய பேரவையாகும். அதில் 30 பேர் வெல்ஸ் நாட்டுப் பெயராட்கள்; 72 ஸ்காட்லாந்தின் பெயராட்கள். அயர்லாந்து உட்பட்டிருந்தபோது அதன் சார்பில் 103 உறுப்பினர் இருந்தனர். பெருமக்கள் அவையிலும் 620 உறுப்பினர் உண்டு. அதில் அரச குடும்பத்துக் கோமக்கள் இளவரசிகள்(னுரமநள னுரஉhநளளநள) கோமான்கள்(ஆயசளூரநளளநள) இளங்கோக்கள்(நுயசடள ஏளைஉடிரவேள) பெருமக்கள்(க்ஷயசடிளே) வழக்கு மன்றத் தலைவரான நிறை வாழ்நாட் பெருமக்கள்(டுகைந யீநநசள) தலைமக்கள்(க்ஷiளாடியீள) ஆகியவர் இருப்பர். தலைமக்கள் மூன்றாம் எட்வர்டு காலத்தில் மிகுதி. ஆனால், தலைப் பெருமக்கள் இருவர்(ஹசஉhbiளாடியீள டிக லடிரவா யனே உயவேநசரெசல) நீங்கலாக இப்போது 24 தலைமக்களே இடம் பெற்றுள்ளனர். தொடக்கத்தில் அரசருடன் ஒப்பாயிருந்த பெருமக்கள் வலிமை பெற்றிருந்தனர். பெருமக்கள் அவையும் அரசருடன் வீற்றிருந்து தீர்ப்பளிக்கும் முதற் பெரு மன்றமாயிருந்தது. இன்றும் முடிவான மேல்வழக்குகள் அதன் பெயராலோ அதன் கிளைக்குழு மன்றங்களாலோ தான் நடைபெற்று வருகின்றன. பொதுஅவை அரசு வீற்றிருந்து ஆணை செய்யும் அரசன் முன்னும் பெருமக்கள் முன்னும் நின்று கொண்டு மன்றாடும் அவையாகவே தொடங்கிற்று. இன்றும் அரசர் முடியேற்பு முதலிய தறுவாய்களில் வெளிச்சடங்கு முறையில் இப்பழக்கம் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால், மன்னர் செலவுக்குப் பணந்தரும் உரிமை காரணமாகப் படிப்படியாய்ப் பொதுஅவை வலிவு பெற்று மேம்பட்டது. மன்னர் செயலாற்றுங் குழுவாக ஏற்பட்ட அமைச்சரவையைப் பொது அவை தேர்ந்தெடுத்து அவர்களை இயக்கியதன் காரணமாய் படிப்படியாகப் பொதுஅவையே உண்மையில் ஆட்சி புரியும் அரசாங்கத்தின் தலைமை அவையாகவும், சட்ட அவையாகவும் முழுமுதல் முறை மன்றமாகவும்-சுருங்கச் சொன்னால் உண்மை அரசியல் மன்றமாகவும் விளங்குகிறது. மூன்றாம் பிரிவில் குறிப்பிட்டது போலவே இன்றைய பிரிட்டிஷ் அரசாங்க முறை இப்பொதுஅவை மூலம் முழுப் பொறுப்பு வாய்ந்த குடியாட்சி நடத்தும் குடியரசே யாயினும், பெயரளவில் அரசுரிமை யறிகுறியாகிய முடியரசையும், பெருமக்கள் ஆட்சியின் குறியீடாகிய பெருமக்கள் அவையையும், குழுவாட்சியாகிய அமைச்சர் குழுவையும், வல்லுநர் ஆட்சியான நிலையான பணியாளரையும் கொண்டு திகழ்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் அரசியல் மன்றின் வாழ்வில் ஒரு புதிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னெல்லாம் வரன்முறையான இரண்டு கட்சிகள் தாம் மாறி மாறித் தலைமை நிலைக்குப் போராடின. கன்ஸர்வேட்டிவ்கள் பெரும்பாலும் உயர் குடிமக்கள் சார்பிலும், பெரும் பேரரசு நிலைச் சார்பிலும், மாற்றம் வேண்டாப் பழமை பேணும் சார்பிலும் நின்றனர். மாற்றம் வேண்டுமென்றதனோடு சற்றுப் பரந்த மனப்பான்மையும் பேரரசு நிலையில் தளர்வும் கோரியவர்கள் லிபரல்கள். விக்டோரியா ஆட்சியின் இறுதியிலிருந்து 18-ஆம் நூற்றாண்டுக் கைத்தொழில புரட்சியின் பயனாய் முதலாளிகள், தொழிலாளிகள் என்ற வகுப்புகள் தோன்றின. முதலாளிகள் தம் நிலைக்கேற்பக் கன்ஸர்வேட்டிவ் கட்சியை ஆதரித்தும் தொழிலாளர் சிலகாலம் லிபரல்களுடன் சேர்ந்து உழைத்தும் வந்தனர். சிற்சில சமயம் இந்நிலை மாறியதும் உண்டு. ஆனால் 1920க்குப் பின் இது வளர்ச்சியுற்று இவ் வகுப்பு தனிக் கட்சியாக வளம்பெற்றது. நாளடைவில் மற்ற இரு கட்சிகளுள் ஒன்றின் துணைகொண்டு அரசியலில் தலைமை நிலையை யடையவும் செய்தது. உலக இரண்டாம் போரிறுதியில் அவர்கள் தனிப்பட நின்றே அரசாங்கமும் அமைக்க முடிந்தது. ஆட்சிமுறையில் பிரிட்டன் முழுக்குடியாட்சிநிலையை எய்திய போதிலும், தொழிற் கட்சியினர் கண் கொண்டு, அதிலும் சிறப்பாக அதில் முனைத்த முன்னணியினர் கண் கொண்டு பார்த்தால் வாழ்வியல் அமைப்புக் காரணமாகச் செல்வ நிலை உயர்வு தாழ்வுகள் பேணப்பட்டு, உண்மைச் சரி ஒப்பு நிலை இல்லாதிருக்கின்றது என்பது பெறப்படும். ஜெர்மனியில் தோன்றிய உலகப் பேரறிஞர் மார்க்ஸ் என்பவர் தோற்றுவித்த வாழ்வியல் ஒப்பு நெறி(ளுடிஉயைடளைஅ) இம் முனைத்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி யடைந்து உருசிய(சுரளளயை) நாட்டில் பொது உடைமைக் கட்சியாகக் காய்த்துப் பொது உடைமை அரசாங்கமாகக் கனிந்துள்ளது. இவ் உருசிய நாடு ஒன்று நீங்கலாக வேறெந்த நாடும் பிரிட்டனளவு தன் முயற்சியால் அரசியல் முன்னேற்றத்தில் தொடர்ந்து மேம்பட்டதில்லை என்பதைக் காணலாம். மற்ற நாடுகளின் அரசியல் வளர்ச்சி முறைகளை வரும் பிரிவுகளில் காண்போம். 6. அமெரிக்கநாட்டு அரசியல் வளர்ச்சி அமெரிக்க நாட்டு வாழ்வியல் பண்புகளும் நாகரிகமும் வரலாற்று முறைப்படி பார்த்தால் பிரிட்டன் வாழ்வு நாகரிகம் ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்த கிளைகளேயாகும். ஆனால் அந் நாகரிகம் முற்றிலும் கிளை நாகரிகம் அன்று. அமெரிக்க நாட்டில் குடியேறியவர்கள் பெரும்பாலும் ஆங்கில மொழி பேசுபவரே யாயினும் சிறிதும் பெரிதுமான பல தொகைப்பட்ட மக்கள் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சென்று அங்கே குடியேறி அவர்களுடன் கலந்ததுண்டு. மேலும் அவர்களுக்கு வடக்கிலுள்ள கானடாக் குடியேற்ற நாட்டில் பெரும்பாலும் பிரஞ்சு மக்களே குடியேறி யிருந்தனர். தெற்கில் மெக்ஸிக்கோ, தென் அமெரிக்க நாடுகளாகிய பிரெஸில் முதலியவற்றிலும் பெரும்பான்மையினராகக் குடியேறிய மக்கள் ஸ்பானிய நாட்டினர் ஆவர். இன்னும் தெற்குக் கோடியில் பல ஐரோப்பிய நாட்டினரும் சென்று குடியேறியும் நாடமைத்தும் இருந்தனர். ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் இத்தாலியரும் ஜெர்மானியரும் இங்கே பல வகையில் விரவியுள்ளனர். மேலும் பல்வேறு நாகரிகப்படிகளிலுள்ள பழங்குடி மக்களாகிய செவ் இந்தியரும் இப் பெரு நிலப்பரப்பிலிருந்தனர். அவர்கள் வெள்ளையர் குடியேற்றத்தால் தம் நிலை கெட்டுத் தளர்ந்து அழிந்துகொண்டே வரினும் அண்மையில் ஓரளவு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டும் வருகின்றனர். தவிர, அமெரிக்காவில் எங்கும் இயற்கை வளம் சிறப்புடையதா யிருப்பினும் அங்குள்ள வெப்பம், சதுப்பு நிலங்களின் புழுக்கம், காடுகளின் கொடு நிலைகள், குளிர்சுரம் முதலிய நோய்கள் ஆகியவற்றை எதிர்த்துத் தாங்கித் தாமே உடலுழைப்பை மேற்கொள்ள வெள்ளையர் விரும்பவில்லை. எனவே, அவ்வகைக்காக அவர்கள் நீக்ரோவர் முதலிய கறுப்பு மக்களை அடிமைகளாகக் கொண்டு சென்று அவர்கள் மூலமே நாட்டை வளப்படுத்த லாயினர். இத்தகைய வேறு வேறு வகைப்பட்ட மக்கள் கலவைகளுக்கிடையில் வாழ்ந்த அமெரிக்கர் நாகரிகமும் வாழ்க்கைப் பண்பும் தனி வாழ்வு வாழ்ந்த ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுதல் இயற்கையே யன்றோ? மேலும் இங்கிலாந்திலிருந்தும் பிற வெள்ளையர் நாடுகளிலிருந்தும் அமெரிக்கா சென்றவர்கள் அந்நாடுகளில் இன்ப வாழ்வு வாழ்ந்த உயர்குடி மக்களோ செல்வரோ அல்லர். பெரும்பாலும் அவர்கள் வறுமைக் கொடுமைக்கஞ்சி ஓடியவர்களும் 16-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருந்த ஐரோப்பிய அரசியலாரின் சமயச் சார்பான அடக்குமுறை களிலிருந்து தப்பி ஓடியவர்களும் பேரவாவால் உந்தப் பட்டுப் பெரும் பொருள் திரட்டும் ஆர்வங் கொண்டு சென்ற ஊக்கமிக்க இளைஞருமே யாவர். எனவே அவர்களின் புதிய வாழ்வில் இப் பொருளார்வமும் சமய விடுதலையார்வமும் வகுப்பு வேற்றுமைகளுக்குப் பணியாத சமநிலை யார்வமும் குடிகொண்டிருந்தன. 18-ஆம் நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சியால் பல்வகைப் பொறிகளின் மூலம் பொருள்களின் பெருக்கத்தை மிகுதிப்படுத்திய பிரிட்டன் அப் பொருள்களை விற்கும் விற்பனையிடமாகத் தன்குடியேற்ற நாடுகளை நடத்தத் தொடங்கிற்று. அப்போது அமெரிக்கக் குடியேற்றப் பகுதிகள் ஆங்கில ஆட்சியை மீறி யெழுந்தன. ஏரும் கலப்பையும் கைக்கொண்ட உழவர்கள் திடுமென வாளும் துப்பாக்கியும் கைக்கொண்ட போர்வீரராக மாறித் தம் நாட்டு விடுதலைக்கான படையாகத் திரண்டனர். உழவருள் உழவராயிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் அவர்களைத் திறம்படத் பயிற்றுவித்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தி வெற்றி கண்டனர். பழம் பெரும் நாடுகளிலொன்றும் வல்லரசுகளில் ஒன்றுமாகிய பிரிட்டனை வரலாற்றில் ஒரு நூற்றாண்டளவே வளர்ச்சியுடைய தம் நாடு எதிர்த்து வென்றது என்ற புத்தார்வம் அவர்கள் உள்ளார்ந்த பண்புகளை ஊக்கி அவர்களைத் தமக்கென ஓர் அரசியலையும் வகுக்கும்படி தூண்டிற்று. இதற்கேற்ப அவர்கள் முதல் தலைவரான வாஷிங்டன் அரிய படைத் தலைவரா யிருந்ததுடன் அமையாமல் அரிய அரசியல் அமைப்பாளராகவும் மாறி 1787-இல் அமெரிக்க விடுதலை விளம்பரம் என்ற பேருரிமைத் தாளை வெளிட்டார். அமெரிக்கா நாடுகளின் தனிப் பண்புகளுக்குக் கேடின்றி ஒற்றுமை குலையாத ஒரு தனிப்பட்ட அரசியல் முறையை அவர் அதில் வகுத்து அமெரிக்காவின் முதல் தலைவராக உலகில் பெரும்புகழ் பெற்றார். அமெரிக்கா நாட்டில் ஆங்கிலேயர்கள் குடியேறிய காலம் எலிசபெத், முதல் ஜேம்ஸ் ஆகியவர்கள் ஆட்சிக் காலம் ஆகும். நாம் ஏற்கனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சி அதற்கு நெடுநாள் முன்னரே தொடங்கி முன்னேற்ற மடைந்து வந்தது. புத்தம் புதிதாக அரசியல் முறை வகுக்கத் துணிந்த அமெரிக்கப் புதுக் குடிமக்களுக்கு இது ஒரு முன்மாதிரியா யிருந்ததென்பது எதிர்பார்க்கத் தக்க இயல்பேயாகும். உண்மையில் அரசியலமைப்பிற்கான ஒழுங்குத் திட்டங்கள் வகுக்க முற்பட்ட அமெரிக்க நாட்டுத் துணைத் தலைவரான தாமஸ் ஜெப்பெர்சன்(கூhடிஅயள துநககநசளடிn) என்பவர் ஆங்கில அரசியல் மன்ற நடவடிக்கைப் பதிவேடுகளையே அவ்வகையில் பெரிதும் பின்பற்றினார். ஆங்கில நாட்டைப் போன்றே அமெரிக்காவிலும் இரண்டு அவைகள் ஏற்பட்டதும் ஆங்கில நாட்டைப் போன்றே தேர்தல் முறைகள், சட்டங்கள் அமைக்கும் குழு, உட்குழு நடை முறைகள் ஆகியவைகள் ஏற்பட்டதும் இதனாலேயே யாகும். ஆயினும் இவ் வேற்றுமை பெரும்பாலும் மேற்போக்கான ஒற்றுமைகளேயாகும். அரசியலமைப்பை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு ஒற்றுமைகளைவிட உள்ளார்ந்த வேற்றுமைகளை மிகுதி என்பது தெரியவரும். இதற்குக் காரணங்கள் பல உண்டு. மேற் குறிப்பிட்ட மாறுபட்ட சூழ்நிலைகள், காலநிலைகள் ஆகியவை அவற்றுள் சில. மேலும் அமெரிக்கக் குடியேற்றம் ஏற்பட்ட காலம் ஆங்கில அரசியல் பயிற்சிப் பருவத்திலேயிருந்த காலம். முதல் சார்ல்ஸ் காலத்து அரசியலுரிமைப் போரும் மூன்றாம் வில்லியம் காலத்துப் புகழ்மிக்க புரட்சியும் அதன்பின் ஹானோவரியர் ஆட்சிக் காலமுதல் தொடங்கிய அமைச்சர் குழுப் பொறுப்பாட்சி முறையும் வளர்ச்சிக்காலச் சீர்திருத்தங்களும் அன்று ஏற்படவில்லை. எனவே, ஆங்கில மக்கள் முதிரா இளங்கருத்துக்களையே தாய் நாட்டுடன் பொதுவான வரன்முறைச் செல்வமாகக் கொண்டு அமெரிக்கர் அதனைத் தம் இயல்புக்கும் சூழ்நிலைக்கும் ஒப்பத் தமக்கெனத் தனிவளர்ச்சி முறைகளோடு மேற்கொண்டனர் என்பது தெளிவு. அமெரிக்க அரசியலின் வேறுபாடுகளுள் தலைமை வாய்ந்த செய்தி அமெரிக்கநாடு ஆங்கிலநாட்டிலும் மிகப் பெரிய பரப்பு உடையதாயிருந்தது என்பதே. அதில் ஆங்கில நாட்டைப் போன்று சமய அரசியல் வாழ்வு பண்புகளில் ஒருமைப்பாடு இல்லை. அதற்கு மாறாக வேறுபாடுகள் மிகுதியாயிருந்தன. எனவே, ஆங்கிலநாட்டு அரசியல் போன்ற தனியாட்சி அரசியல் அந்நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை. அமெரிக்க அரசியலில் ஒவ்வொரு குடியேற்றமும் தற்சார்புடைய ஒரு தனி அரசாகித் தனித்தனித் தலைவரும் தனித்தனி அரசியல் மன்றும் ஆட்சி முறையும் கொண்டது. ஆனால், அதேசமயம் பெருநிலப்பரப்பின் பொதுக்காரியங்களைக் கவனிக்கப் பொது அரசியலும் இன்றியமையாததா யிருந்தது. எனவே, அத்தனி அரசியல்களும் தனிப்பண்புகளும் கெடாத முறையில் அவற்றை உட்படுத்திய ஒரு கூட்டு அரசியல்முறை(குநனநசயட ளுவயவந) அமைக்கப்பட்டது. அமெரிக்க நாட்டு அரசியல் முறையில் இன்னொரு வேறுபாடும் உண்டு. அரசியலின் கூறுகளாகிய சட்ட அமைப்பு, வழக்கு நடைமுறை, அரசியல் நடைமுறை ஆகிய மூன்றும் அமெரிக்க அரசியலில் வேறுவேறு தனிப்பட்ட பகுதிகளாகத் தாற்சார்புடையனவாய் விளங்குகின்றன. இங்கிலாந்திலும் அமெரிக்கர் குடியேற்ற நாட்களில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் இருந்தது. நீதிநடைமுறை இன்றளவும் இங்கிலாந்தில் பெரும்பாலும் அரசியல் நடைமுறைப்பகுதிக்குக் கட்டுப்படாதிருக்கிறதாயினும் அத்துறையிலும் அரசியல் மன்றின் நிலை எல்லாவற்றுக்கும் மேற்பட்ட உரிமை நிலையே யாகும். சட்ட அமைப்பு, அரசியல் நடைமுறை ஆகியவை பற்றியோ வெனில் ஹானோவரியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அமைச்சர் குழு ஆட்சியில் இரண்டும் பெரும்பாலும் ஒன்று பட்டுப் பின்னிக்கொண்டுவிட்டன. ஆனால், அமெரிக்காவில் இந்நிலை ஏற்படவில்லை. காரணம் அமெரிக்கர் அரசியல் அமைப்பு ஏற்படுத்தும் காலத்தில் இங்கிலாந்திலும் அந்நிலை ஏற்படவில்லை என்பதே. மேலும் இந்நிலை பிற்காலத்திலும் ஏற்படுவதற்குப் பெரிய தடை ஒன்று உண்டாயிற்று. இம்மூன்று துறைகளும் தனித்தனி ஒன்றுடனொன்று சார்பற்று இருப்பதே உயர்வுடையது என்று மாண்டிஸ்க்யூ(ஆடிவேநளளூரநைர) என்ற அறிஞர் கூறியிருந்தார். அமெரிக்கரிடையே இக்கருத்து வேரூன்றிச் செல்வாக்குப் பெற்றது. ஆங்கில ஆட்சியினின்று விடுபட்ட தறுவாயில் தனி மனிதனாட்சி மீது மக்கள் மனக்கொதிப்பு மிகுதியாயிருந்தது. அமெரிக்காவில் தனிமனிதர், எவர் கையிலும் முழு உரிமைகளும் போய்விடாமல் பாதுகாக்க இந்நிலை உதவும் என அவர்கள் கருதினர். இங்ஙனமாக அமெரிக்காவின் அரசியலில் அரசியல் நடைமுறைத் துறைக்குத் தலைவர் நாட்டுத்தலைவர்(ஞசநளனைநவே); அவர் தலைமையின் கீழிருந்து அமைச்சரும் அரசியல் பணியாளரும் ஆட்சியை நடத்தினர். சட்டம் அமைக்கும் துறை காங்கிரஸ்(ஊடிபேசநளள) என்றழைக்கப்படும் அரசியல் மன்றின் இரண்டு அவைகளினிடமும் அவற்றின் அவைத்தலைவர் கையிலும் அமைந்திருந்தது. சட்ட நடைமுறை கூட்டுறவு அரசியலின் தலைமை, வழக்கு மன்றத் தலைவர் கையிலும் கூட்டுறவு வழக்கு மன்றம், துணைமன்றங்கள் ஆகியவற்றினிடமும் இருந்தது. இம் மூன்று கூறுகளும் அவற்றின் தலைவர்களும் மற்றக் கூறுகளுக்கோ தலைவர்களுக்கோ கட்டுப்பட்டவையாயிராமல் தற்சார்பும் தன்னாண்மையும் உடையவையாகவே யிருந்தன. எனவே, ஆங்கில நாட்டைப் போல நாட்டுத் தலைவராகிய முதல் அமைச்சரோ அமைச்சர் குழுவோ அமெரிக்காவில் அரசியல் மன்றுக்குக் கட்டுப்பட்டு அதனிடம் பொறுப்பு வகிக்கவில்லை. ஒழுங்கு முறைப்படி கூட்டுறவுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குரிய கால எல்லைவரை அவர் ஆட்சி செய்வதை யாரும் தடுக்க முடியாது. அக் காலஎல்லை கழிந்த பிறகோ, அவர் உலகு நீத்த பொழுதோதான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் படலாகும். கூட்டு அரசியலிலுள்ள இதே நிலைதான் தனி அரசியலிலும் ஏற்பட்டது. நாட்டுத் தலைவர் நிலையில் இருந்தவர் தனி அரசியலின் தலைவர்(ழுடிஎநசnடிச) அங்கும் பெரும்பாலும் அரசியல் மன்றில் இரண்டு அவைகள் இருந்தன. நாளடைவில் எல்லா அரசுகளிலுமே இரண்டு அவைகள் அமைந்தன. முதலில் இரண்டு அவைகள் ஏற்பட்டது ஆங்கில நாட்டு அரசியல் மரபைப் பின்பற்றியேயாகும். ஆயினும் அவை தனிப்பட்ட முறையில் அமெரிக்க நலன்களுக்கு உகந்தவையாக மாறுபட்டு அமைந்தன. சிறிதும் பெரிதும் ஆன பலன் அரசியல்கள் சேர்ந்த கூட்டு அரசியல் ஏற்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு சிக்கலை இப்புது அமைப்புத் தீர்த்து வைத்தது. ஒவ்வோர் அரசியலும் தான் சிறியதாயினும் பெரிய அரசியலுக்கொப்பாகப் பெயராண்மை பெற்றால்தான் பாதுகாப்பு நிலை இருக்கும் என்று எண்ணப்பட்டது. அதே சமயம் பொது அரசியலில் மக்கள் தொகைக்கேற்ற பெயராண்மை இருப்பதும் இன்றியமையாததெனக் கருதப்பட்டது. அரசியல் மன்றில் இரண்டு அவைகள் இருந்ததனால் இரண்டு முறைகளையும்(ழடிரளந டிக சுநயீசநளநவேயவiஎநள) பின்பற்ற முடிந்தது. அரசியல் மன்றின் கீழவை (பெயராளர் அவை) மக்கள் தொகுதிக்கேற்ற பெயராண்மை உடையதாயிருந்தது. மேலவையோ(ளுநயேவந) அரசியல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே நிலைப் பெயராண்மை யுடையதாயிற்று. கூட்டுறவில் படிப்படியாக வந்துசேர்ந்த அரசுகள் 30. ஒவ்வொன்றுக்கும் 2 ஆட்பெயர்கள் வீதம் மேலவையில் 60 உறுப்பினர் இருந்தனர். பிரிட்டனின் அரசியல் மன்றையும் அமெரிக்கா அரசியல் மன்றையும் பார்ப்பவர்களுக்குக் கட்டட அமைப்பிலும் உறுப்பினர் இருக்கும் முறையிலும் நடை முறையிலும் காணப்படும் வேற்றுமைகள் எண்ணற்றவை. இங்கிலாந்தின் அவைக்கட்டடம் உறுப்பினர் தொகைகளை நோக்க மிகச் சிறிது. எனவே, இடவமைப்புங் குறைவு. அமைச்சர்கள், எழுத்தாளர், படியாளர் தவிர மற்றவர்கள் நெருக்கமாய் வரிசை வரிசையாக அடுக்கி அமைந்த விசிப்பலகைகளில்(க்ஷநnஉhநள) தான் உட்காந்திருப்பார். இவைகள் பெரும்பாலும் அவையில் நடு இடைவழிக்கு(ஊடிசசனைடிச) இருபுறமும் எதிரெதிராக அடுக்கப்பட்டிருக்கும். அரசாங்கத்தில் பணியேற்று நடத்தும் கட்சியினர் வலப்புறமும் அவர்களை எதிர்ப்பவர் இடப்புறமும் வீற்றிருப்பர். இவற்றுக்கப்பால் கண்காட்சிக்காக வரும் விருந்தினரின் மாடிப்படிகள்(ஏளைவைடிசள ழுயடடநசல) ஒன்று அமைந்துள்ளது. பொருளாண்மை இருக்கை(கூசநயளரசல க்ஷநnஉh) என்ற தலைமையிடத்திலேயே தத்தம் மேடைப்பலகை யுடன் அமைச்சர்கள் இருப்பர். எல்லாவற்றிற்கும் தலைமையில் தாழ்ந்த மேடைப் பலகையில் மன்ற எழுத்தாளரும் அவருக்குப் பின் உயர்ந்த மேடைப் பலகையின் எதிரில் அவைத் தலைவரும் வீற்றிருப்பர். அமெரிக்க அவையின் நிலை இவை யனைத்திற்கும் மாறானது. இருக்கைகள் எதிரெதிராக வன்றி ஒரே வட்டமாக இருக்கும். கட்சிகள் அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சி என்று பிரியாமல் சிதறியும்,உறுப்பினர் ஒருவருக்கொருவர் எதிராக இராமல் பரந்தும் இருப்பர். பொருளாளர் மேடை போன்ற எதுவுமில்லை. அமைச்சரோ முதலமைச்சர் நிலையில் ஒரு நாட்டுத் தலைவரோ அவை எதிலும் வந்தமர்வதேயில்லை. அமரவும் கூடாது. ஏனெனில் இங்கிலாந்திலிருப்பது போல் அவரோ அமைச்சரோ அவை உறுப்பினரல்லர். இங்கிலாந்தில் அவை சிறிய இடத்தில் அமைந்திருப்பதால் ஒருவரோடொருவர் வாதிடவோ அமளி செய்யவோ இடமுண்டு. எனவே, அது அரசியல் அவை மட்டுமன்று; வாத அவை கூட. ஆனால் அமெரிக்க அவையில் ஒருவர் பேசுவதை ஒருவர் ஒலி பெருக்கியின்றிக் கேட்க முடியாது. வாதம் உரையாடல் ஆகியவற்றுக்கு இடமில்லை. அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புடைய தலைவரோ அமைச்சரோ அமெரிக்காவில் அவைக்கு வரவும் முடியாது; சட்டங்கள் கொண்டு வரவும் முடியாது. அவற்றின் பகர்ப்பை அவைத் தலைவருக்கு அனுப்புவதுடன் அவர்கள் வேலை முடிந்துவிடும். அவையார் ஏற்கின்றனரா? என்று பார்க்கவோ, அதனை ஆதரித்துப் பேசவோ, கண்டனங்களுக்கு மறுமொழி கூறவோ அவர்களால் முடியாது. உண்மையில் மன்ற அவை கூட அச்சட்டங்களைப் பற்றி மிகுதியும் வாதிப்பதில்லை. அதனை உருவாக்க உதவுவதுமில்லை. அதனை உருவாக்கப் பல கழகங்களும்(ஊடிஅஅவைவநநள) துணைக்கழகங்களும்(ளுரb-ஊடிஅஅவைவநந) பாடுபடும். இவற்றில் பல தடவை ஆராயப்பட்டபின்பே மன்ற அவைகளில் அவை கொண்டு வரப்படும். மன்ற அவை ஏற்காவிட்டால் அது திருத்தி அமைக்கப்படுவதில்லை. புதிதாக மீண்டும் கொண்டு வரப்படவேண்டியதுதான். பிரிட்டனில் அன்றாட நடைமுறைச் செய்திகள் ஒரு காலத்தில் தனி தனி உறுப்பினரால் மன்ற அவையில் கொண்டு வரப்பட்டன. இப்போதும் அவ்வப்போது அவை வருவதுண்டு. ஆனால், பெரும்பாலும் அவை அந்தந்த அரசியல் துறையின் பணியாளர் கையிலேயே ஒப்படைக்கப்படுகின்றன. அரசியல் நடைமுறைத்தலைவர் ஆகிய முதலமைச்சர் மன்றின் பெரும்பான்மைக் கட்சி ஆதரவு பெற்றவராதலால் அவரே அவற்றின் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். ஆனால், அமெரிக்காவில் ஒவ்வொரு சிறுநடைமுறை ஒழுங்குக்கும் தலைவர் அரசியல் மன்றத்தை எதிர்பார்த்தே யாகவேண்டும். மொத்தமாகப் பார்த்தால் பிரிட்டன் அரசியல் நாட்டு வளர்ச்சியுடன் வளர்ந்த ஒரு நாட்டுப் பண்பாய் எழுதி வரையறுக்கப்படாத நிலையில் சிறுபான்மை சட்ட வரம்புகளுக்கும் பெரும்பான்மை எழுதாச் சட்டமாகிய நடைமுறை மரபுகள் அல்லது வழக்கங்களுக்கும் கட்டுப்பட்ட அரசியலாகும். இதனை எழுதப்படா அரசியலமைப்பு என்பர்.அமெரிக்காவின் அரசியலமைப்பு இதற்கு மாறாக எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும். அதன் உயிர்நிலைப் பண்புகள் எல்லாம் அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டமான விடுதலை விளம்பரத்திலேயே அடங்கியுள்ளன. அதிலேற்படும் ஒவ்வொரு மாற்றமும் சட்டமூலமே நடைபெறும். அப்புதுச் சட்டங்களும் அரசியல் மன்றால் முதற் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நிறைவேறவேண்டும். எனவே, அமெரிக்க அரசியல் மன்றின் உரிமைகள் முந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. அடிப்படைச் சட்டங்களை அது மாற்ற முடியாது. அரசியலமைப்பில் இன்றியமையாத மாற்றம் வேண்டும் போதும் உடம்படிக்கைகள் வேண்டும்போதும் கூட மேலவையின் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினரின் இறுதியிணக்கம் பெறவேண்டும். நடைமுறை அரசியல், மன்ற அவைகளுக்குக் கட்டுப்பட்டதன்று. ஆனால், ஆங்கில நாட்டு அரசியல் மன்றம் எல்லையற்ற உரிமையுடையது. அதனைக் கட்டுப்படுத்துவது அதன் மரபும் அதன் விருப்பமுமே தவிர வேறில்லை. ஆங்கில அரசியல் தனி அரசியல்; அமெரிக்க அரசியல் அதன் நாட்டுப் பிரிவுக்கும் வேறுபாடுகளுக்கும் ஏற்றபடி கூட்டு அரசியலாய் அமைந்துள்ளது. ஆங்கில அரசியல் குடியாட்சி, பொறுப்பாட்சி ஆகியவற்றின் உள்ளார்ந்த தன்மைகளுடையதாயினும் வெளித் தோற்றத்திலேனும் முடியாட்சி, வரையறைப்பட்ட முடியாட்சி, குழுவாட்சி வல்லுநராட்சி ஆகியவற்றின் குறியீடுகளை உடன்கொண்டு திகழ்வது. அமெரிக்க அரசியல் கலப்பற்ற குடியாட்சி அமெரிக்க மக்களின் விடுதலையார்வர்வத்தில் சட்டென மலர்ந்த ஓவியமலர் அது; ஆங்கிலநாட்டு மன்றத்தைப்போல அது காலத்தின் போக்கில் மெல்ல முளைத்துக் காழ்த்து இலை தழைத்து, அரும்பி முகிழ்த்து மலர்ந்த வளர்ச்சியும் உயிர்ப்பும் உடைய மலர் அன்று. ஆயினும் அஃது ஒருவகையில் வாடாது பெரும்பாலும் ஒரே நிலையில் இருக்கும் மலரே. அமெரிக்கர் ஆங்கில அரசியலை அவர்கள் பாராட்டினும், தம் அரசியலே முழு விடுதலையார்வம் நிறைந்த முழுக்குடியாட்சி எனக் கொள்கின்றனர். அமெரிக்கக் குடியரசில் ஆட்சியுரிமைகள் பெரும்பாலும் இரு கூறுகளாய்ப் பிரிக்கப்பட்ட இரட்டை ஆட்சி முறையே யாகும். ஒரு கூறு வாழ்வியல் (சமூக) பண்புகளின் மீது ஆட்சி செலுத்துவது. இது பெரும்பாலும் தனியரசுகளிடமே யுள்ளது. இன்னொரு கூறு பொருளியல் வாழ்வுக்கு இன்றியமையாத தந்தி, அஞ்சல், போக்குவரவு, தொழில் அமைப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, தனியரசியல்கள் தொடர்பு ஆகியவை பற்றியது. இக்கூறு பெரிதும் கூட்டுறவு அரசியலின் பொறுப்பிலுள்ளது. தனி அரசியல்கள் உண்மையில் பேரளவில் தற்சார்பு உடையவை. கூட்டுறவு அரசியல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சி, பெயர்மன்றமும் கூட்டுறவுத் தலைவரும் உடையதாயினும் அந்நிலை ஓரளவு மேலவையின் உரிமைகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. இம்மேலவை அடிப்படைச் சட்டங்களைத் தடுத்து நிறுத்தும் உரிமை உடையது. எல்லா அரசியல்களிலிருந்தும் சரிநிகர் பெயராண்மையுடைய இதன் மூன்றிலிரண்டு பெரும் பான்மை உறுப்பினரின்றி உடம்படிக்கையோ தலைசிறந்த சட்டங்களோ ஏற்படமுடியாது. எனவே, ஆங்கில நாட்டைப் போல் மேலவை அமெரிக்காவில் அரசியலமைப்பின் அணியாக மட்டும் அமையாமல் உண்மையிலேயே தலைமையான உரிமைகள் உடையதாய் விளங்குகிறது. ஆங்கில நாட்டில் அண்மைவரை இரு அரசியல் கட்சிகளே இருந்தன. தற்காலத்தில் மூன்றாவதாகத் தொழிற்கட்சி ஒன்று முன்னணிக்கு வந்திருக்கிறது. ஆயினும் அரசியலமைப்பு வகையில் அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு குலையவில்லை. மூன்றாம் கட்சி இரண்டில் எதனுடனாவது நிலவரமாகச் சேர்ந்தோ அவ்வப்போது நிலைமாறியோ அரசியல் வட்டாட்டத்திற்குச் சுவை தருகிறது. அமெரிக்காவில் தொடக்ககத்தில் உண்மையில் கட்சிகளுக் கிடமில்லாமல் பல்வகைக் குழுக்கள் ஏற்பட்டிருந்தன. ஆயினும் நாளடைவில் குடியாட்சிக்கட்சி(சுநயீரடெiஉயளே) பொது ஆட்சிக்கட்சி(னுநஅடிஉசயவள) என்னும் இருகட்சிகள் தோன்றியுள்ளன. தொழிலாளர் குழு ஒரு கட்சியாக முன்னணிக்கு வரவில்லை. காரணம் அமெரிக்காவில் புதுக்காடுகள் நிறைந்திருப்பதால் அவற்றைத் திருத்திப் பயிரிடும் குடியானவர் பெருந்தொகையினர். தொழில் முதலாளிகள் பெருத்த கிழக்கு அரசியல் பகுதிகள் குடியேற்றக் கட்சியையும்; பண்ணை முதலாளிகள் குடியானவர் வாணிகக் குழுவினர் நிறைந்த தெற்கு, மேற்கு, வடமேற்கு அரசியல் பகுதிகள் பொது ஆட்சியையும் ஆதரிக்கின்றன. இக்கட்சிகளே தனித்தனி இயங்கும் அரசியல்களையும் கூட்டுறவையும் ஒருபுறமும், சட்ட அமைப்பு மன்றங்களையும் நடைமுறை அரசியலையும் இன்னொரு புறமும் இணைக்க உதவுகின்றன. இவற்றின் முயற்சியால் முதலில் பெருநிலக் கிழவர் கையிலிருந்த அமெரிக்க அரசியல் இப்போது பெரும்பாலும் சிறுநிலக்கிழவர் கைக்கு மாறியுள்ளது. 7. ஐரோப்பிய ஆசிய நாடுகளின்- அரசியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளின் அரசியல் வளர்ச்சி 18ஆம் நூற்றாண்டு இறுதி வரையும் கிட்டத்தட்ட நார்மன் அரசர் ஆட்சித் தொடக்கத்தில் இங்கிலாந்திலிருந்த நிலைமையிலேயே இருந்தது. முதல் எட்வர்டு காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்டது போன்ற மும்மண்டலப் பிரிவு (தலைமக்கள் மண்டலம், பெருமக்கள் மண்டலம், பொதுமக்கள் மண்டலம் என்ற பாகுபாடு) அதே சமயத்தில் பிரான்சிலும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் ஆற்றல் மிக்க அரசர் ஆட்சிக் காலங்களில் அது கூட்டப்படாமலோ அல்லது டியூடர் அரசர் காலத்தில் இருந்தது போல் அரசர் கைப்பாவையாகவோ இருந்தது. எட்டாம் ஹென்ரியைப் போலவே தன்னாண்மை மிக்க அரசனாகிய பதினான்காம் லூயியின் ஆட்சியில் அது கூட்டப்பெறாமலே போயிற்று. பிரஞ்சுப் புரட்சியின் போது அது உருக்குலைந்து பலப்பல வெறித்த மாறுதல்களடைந்தது. பிரான்சிலும்சரி, ஐரோப்பிய நாடுகள் பிறவற்றிலும் சரி, நெப்போலியன் ஆட்சிக்கால அரசியல் புயலிற்பட்டு இப்பழைய அரசியல் முற்றிலும் சீர்குலைவுற்று அழிந்து போயிற்று. ஐரோப்பாவில் ஏற்பட்ட தற்கால அரசியல் முறைகள் எல்லாமே இந் நெப்போலியன் காலப் புரட்சிக்குப் பிற்பட்டனவேயாகும். அப்புரட்சியிற்பட்டு அழியாமலும் வெளிப்படையாகவேனும் அதன் தாக்குதலுக்கு உட்படாமலும் இருந்த அரசியல், பிரிட்டிஷ் அரசியல் ஒன்றே. எனவேதான் அவை யனைத்தும் வெளியமைப் பிலேனும் இங்கிலாந்தின் அரசியலைப் பின்பற்றி யவையா யுள்ளன. அவற்றுட் காணும் பொதுஒற்றுமை இரு அவைகள் இருப்பதும், நடைமுறைகள் பெரிதும் மேலீடாக ஒத்திருப்பதுமே யாகும். ஆயினும் அவை ஒன்றிலேனும் மேலவை இங்கிலாந்தைப் போல வழிவழிப் பிறப்புரிமை உடையது அன்று. பிரான்சு, பெல்சியம், ஹாலந்து, ஸ்வீடன் முதலிய நாடுகளில் மேலவை உறுப்பினர் கீழவையைப் போலவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நார்வேயில் அது கீழவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு ஆக அமைந்துள்ளது. இத்தாலியிலோ அதன் உறுப்பினர் மன்னரால் கீழவைக்குப் பொறுப்புடைய அமைச்சர் அறிவுரையுடன் வாழ்நாள் முழுமைக்குமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். மேலும் பிரான்சு, இத்தாலி, பெல்சியம், ஹாலந்து ஆகிய நாடுகளில் பிரிட்டிஷ் அரசியலின் வெளியுருவம் மட்டுமல்லாமல் ஓரளவு அதன் தன்மைகளும் காணப்படுகின்றன. இத்தாலியிலும் பெல்சியத்திலும் ஹாலந்திலும் இங்கிலாந்தைப் போலவே முடியாட்சி ஏற்பட்டுள்ளன. முதலிரண்டும் மன்னராலும் இறுதிநாடு அரசியலும் ஆளப்பட்டு வருகின்றன. இவற்றுள் அரசரோ அரசியோ இங்கிலாந்து மன்னரைப் போலவே கீழவையில் பெரும்பான்மைக் கட்சியிலிருந்து தெரிந்தெடுக்கப் பட்ட பொறுப்புடைய அமைச்சர் குழு மூலம் ஆளுகின்றனர். எனவே அந்நாடுகளின் ஆட்சி பொறுப்பு வாய்ந்த முடியாட்சி (ஊடிளேவவைரவiடியேட அடியேசஉhல) ஆகும். பிரான்சிலும் அரசனுக்கு இணையாக இடம்பெற்றுள்ள தலைவர் இதுபோலவே பொறுப்டைய அமைச்சர் குழுமூலம் ஆட்சிசெலுத்துகின்றார். எனவே அதுவும் பொறுப்பு வாய்ந்த குடியாட்சியே யாகும். ஆனால் மேற்கூறிய நாடுகளுக்கு மாறாக (நாசியர் ஆட்சிவரை) செர்மனியிலும் ஆஸ்ட்ரியா ஹங்கேரியிலும் (நாளதுவரை) ஸ்விட்சர்லாந்திலும் பிரிட்டன் போன்ற பொறுப்பாட்சி இல்லை. அதோடு அரசியலமைப்பின் மாதிரியும் இங்கிலாந்தைப் போன்ற தனியரசியல் முறையா யிராமல் அமெரிக்காவைப் போன்ற கூட்டுறவு அரசியல் முறைகளா யிருக்கின்றன. கூட்டுறவு வகைமட்டும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முறையில் வேறுபட்டு இருக்கின்றது. கிரீஸ் 20ஆம் நூற்றாண்டளவும் தனிப்பட்ட அரசியல் வாழ்வை இழந்து முதல் உலகப் போருக்குப்பின் விடுதலை பெற்று ஆங்கில அரசர் நிலையை ஒத்த அரசர் ஆட்சியைப் பெற்றது. ரஷ்யா முதல் உலகப்போர்வரை டியூடர் ஆட்சி போன்ற தன்னாண்மை அரசியலுடனே இருந்து திடுமென ரஷ்யப் புரட்சி மூலம் ஒரு புதிய வகைக் கூட்டுறவு அரசியல் முறையைத் தனக்கென வகுத்துக்கொண்டது. பிரிட்டன் அரசியல் தலைமையை மீறி அதனைத் தாண்டி அரசியலில் புதுத்துறை வகுத்த நாடு இன்று உலகில் ரஷ்யா ஒன்றே. அதனை இன்னொரு பிரிவில் கவனிப்போம். ஆசிய நாடுகளில் பல தன்னாண்மையிழந்து கிடக்கின்றன. வேறு சில வலியிழந்து நிற்கின்றன. மேலை நாடுகளுக்கொப்பாக வளர்ந்துள்ள சப்பான் உண்மையில் டியூடர் ஆட்சி போன்ற தன்னாண்மைமிக்க முடியாட்சியையே இரண்டாம் உலகப்போர் முடிவுவரை கொண்டிருந்தது. ஆயினும் அது வெளி வடிவிலேனும் பிரிட்டனைப் போன்ற அமைச்சர் குழுவும் மன்ற அவைகளும் நடைமுறைகளும் வகுத்துள்ளது. சீனா பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பழைய பேரரசர் ஆட்சியிலிருந்து,பின் வெளிநாட்டார் சுரண்டலாலும் தாக்குதலாலும் பேரரசர் வலிமைக்குறைவாலும் சீர்கெட்டது. இந்நிலையில் அறிஞர் சுன்யத்சேனும் அவருக்குப்பின சியாங்-கை-ஷேக்கும் தோன்றி அதனை ஒரு குடியரசாகச் சீரமைத்து வந்தனர். ரஷ்யப் பொதுவுடைமைச்சார்பினர்களும் சீனாவின் ஒரு பகுதியில் தனியாக அரசு நிறுவியுள்ளார்கள். பாரசீக நாடு, ஆப்கனித்தானம் ஆகிய பழைய நாடுகள் முடியரசுகள். அவை பிரிட்டனின் மாதிரியை மேல் போக்காக வேனும் பின்பற்ற முயன்றுள்ளன. துருக்கிப் பேரர சினின்று விடுபட்ட ஈராக், சிரியா முதலிய நாடுகள் இன்னும் பிரிட்டனையோ பிரான்சையே சார்ந்தே வாழ்கின்றன. இந்தியாவும் அதுபோலவே துருக்கியோ கமால் பாஷாவின் ஒப்பற்ற தலைமையின் கீழ் பிரிட்டன் போன்ற நிலையில் குடியரசாய் விட்டது. இனிப் பிரிட்டனை ஓரளவு முன் மாதிரியாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் அரசியலமைப்புகளைக் கவனிப்போம். பிரஞ்சுப் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட பிரஞ்சுக் குடியாட்சியின் புறவடிவம் உண்மையில் பிரிட்டனின் மாதிரியைப் பின்பற்றி எழுந்ததே. ஆங்கில அரசியல் மன்றத்தின் ஒழுங்கு முறைகள் ராமில்லி(சுடிஅடைடல) என்பவர் மொழிபெயர்த்திருந்தார். இம்மொழி பெயர்ப்பைப் பெந்தமின் தோழராயிருந்த டுமாண்ட் மூலம் பெற்று மிராபோ என்ற அரசியல் தலைவர் அதனைப் புரட்சிக்காலப் பேரவை முன் வைத்தார். அவை ஆங்கில ஒழுங்குமுறை நமக்கேன் என்று அதனைப் புறக்கணித்துவிட்டது. ஆயினும் பதினெட்டாம் லூயியின் காலத்தில் மீட்டும் முடியாட்சி ஏற்பட்ட போது இம்மொழிபெயர்ப்பு உபயோகப் படுத்திக் கொள்ளப்பட்டதாம். பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் அறிஞர் கற்பனை உலகுகளிடையே கருப்பெற்று மக்கள் உள்ளத்தில் உரம்பெற்று எழுந்த மூன்று அடிப்படைக்கோட்பாடுகள் சரி ஒப்புநிலை, உடன்பிறந்தார் நிலை, தற்சார்பு நிலை (குசயவநசnவைல, டுiநெசவல, நுளூரயடவைல) ஆகிய மூன்றுமே உண்மையில் (ஜார் அரசர் கால ரஷ்யா நீங்கலாக) வேறெந்த நாட்டையும் விட இப் புரட்சிக் காலத்துக்கு முந்திய பிரான்சில்தான் இம்மூன்றும் மருந்துக்கும் இல்லாத நிலைமையிலிருந்தது. இதனை பிரான்சின் அரசியல் இருட்காலம் அல்லது வல்லாட்சிக் காலம் என்று கூறலாம். இரண்டாம் பகுதி புரட்சித் தொடக்கமாகிய 1785 முதல் 1875 வரையுள்ள ஆராய்வு நிலைக் காலமாகும். இக்காலத்தில் பல அரசியலமைப்புகள் ஒன்றின்பின் ஒன்றாக வந்து கையாளப் பட்டன. அவற்றை அமைத்தவர் ஆங்கில நாட்டு அரசியலிலிருந்து தாம் புனைந்து பெருக்கிய கனாவுலகக் கருத்துக்களை வல்லாட்சிக்கென அமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தினுள் திணிக்க முயன்று அவர்கள் பெரும்பாலும் தோல்வியே யடைந்தனர். இறுதியில் கனவுகளை யெல்லாம் கைவிட்டுத் தற்காலிகமாக நடைமுறைத் திட்டமாக எல்லாக் கட்சிக்கும் சற்று விட்டுக் கொடுக்கும் ‘அவியல்’ திட்டமொன்று கொண்டு வரப்பட்டது. இதனை அமைத்தவர்கள் இதனைத் தற்காலிக முறையாகக் கொண்டு வரினும் இது கிட்டத்தட்ட நிலவரமான அரசியலாய் அமைந்தது. ஏனெனில் இது சமயத்துக்கேற்றபடி வளர்ச்சியும் மாறுபாடும் ஏற்படுவதற்கு இடந்தந்து தொய்வுடையதாயிருந்தது. மூன்றாவது காலம் 1875 முதல் இரண்டாம் உலகப் போர் முடிவுவரை இதனை வளர்ச்சிக் காலம் என்னலாம். புரட்சிக் காலத்தில் மூன்று அமைப்புக்கள் ஏற்பட்டன முதலாவது 1789இல் மனித உரிமைகளை வகுத்தது. 1791ல் பொறுப்புடைய அமைச்சர் குழுவும் ஓரவையுடைய மன்றும் அமைத்தது. 1795ல் உடைமைவரையறையுடன் மொழித்தேர்வு நடாத்தித் கூட்டப் பெற்ற ஈரவை மன்றமும் அதனால் தெரிந்தெடுக்கப்பட்ட நடைமுறைக் குழுவினர் ஐவரும் அமைந்த மூன்றாம் அரசியலமைப்பு ஏற்பட்டது. 4 ஆண்டுகள் கழியுமுன் 1799-இல் நெப்போலியனை முதல்வனாகக் கொண்ட குடியரசு நிறுவப்பட்டது. 1800-இல் அரசியல் மன்றின் உரிமைகளைக் குறைத்து நடைமுறையாளர் வலிமையை உயர்த்தி நெப்போலியன் தன் தலைமையில் ஆட்சி முறை அமைத்து முடியேற்றுப் பேரரசையும் நிறுவினான். புரட்சிக்காரர் விடுதலைக் கனவு பிரஞ்சு மக்கள் உள்ளத்திலும் அவர்கள் நாட்டு வாழ்விலும் வரலாற்றிலும் எவ்வளவு பதிந்தனவோ அதினும் பன்மடங்கு மிக ஆழமாய் நெப்போலியன் பேரரசுக் கனவுகளும் அவன் ஆட்சி முறைகளும் இராணுவ முறைகளும் பதிந்து வேரூன்றின. அவன் அமைப்புத் திறத்தின் பயனாகப் புரட்சிக் குழப்பத்தால் வலியற்றிருந்த தன்னாட்சி நிலையங்கள் மீட்டும் உயிர்ப்பிக்கப் பெற்று உயர் அரசியலுடன் நன்கு பிணைக்கப்பட்டன. புரட்சிக் காலத்தில் அகற்றப்பட்ட பெருமக்கள் மீட்டும் நிலைநிறுவப் பட்டனர். நாட்டு உரிமைப் படை என்ற மதிப்புக் குழுவும்(டுநபiடிn டிக ழடிnடிரச) அமைக்கப்பட்டது. உலகில் நெப்போலியன் ஒப்பற்ற வாள் வீரனாகவே கருதப்படினும் உண்மையில் அவன் ஒப்பற்ற ஆட்சி வீரனும் ஆவன். அவன் வாள் வலிமையால் ஏற்பட்ட அரசு போன பின்னும் அவன் எழுதுகோல் வன்மையால் ஏற்பட்ட நல்லாட்சி முறைகள் இன்றளவும் நிலைத்துள்ளன. தோல்வியறியா நெப்போலியன் இறுதிப் போரில் படுவீழ்ச்சியடைந்தபின் 1815-இல் மீட்டும் பழையபூர்பன் அரசர் முடியேற்றனர். இவர் ஆங்கில நாட்டு முறையைப் பின்பற்ற வீணில் முயன்றனர். இத்தோல்வி மன்னர் திறமின்மையின் பயனே என்று எண்ணி 1830-இல் ஆர்லியன்ஸ் மரபில் வந்த இன்னொரு மன்னரைக் கொண்ட இம்முறையை நடத்திப் பார்த்தனர். இதுவும் பயனற்றுப் போயிற்று. 1848-இல் நடைபெற்ற இரண்டாவது புரட்சியின் போது அமெரிக்காவைப் போல் பல பகுதிகளின் ஆட்பெயர்களும் வந்து கூடித்தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அவையும் 4 ஆண்டுக்கு ஒரு முறை வயது வந்த எல்லா மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் உடைய குடியரசு நிறுவப் பெற்றது. ஆனால், இதனை நடத்தத் தக்க ஆற்றல் வாய்ந்த தலைவனில்லா நிலையில் நெப்போலியன் குடியில் வந்த லூயி நெப்போலியன் கை ஆட்சியைக் கொண்டு இரண்டாம் பேரரசை நிறுவினான் இது 1852முதல் 1870 வரை நீடித்தது. இக் காலத்தில் அரசியல் வளர்ச்சி ஏற்படாத போதிலும் அமைதி நிலவிற்று. நாட்டின் செல்வமும் செல்வாக்கும் வளர்ச்சியுற்றன. இதன் பிற்பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இவற்றால் ஆட்சி சிறிது நலிவுற்றது. இறுதியில் பிரஷ்யாவுடன் (அதாவது செர்மனியுடன்) நடைபெற்ற போரில் பிரான்சு தோற்று அல்ஸாஸ், லொரெயின் முதலிய கைத்தொழில் மாகாணங்களை இழக்க நேர்ந்தது. இதனுடன் இரண்டாம் பேரரசு வீழ்ச்சி யடைந்தது. இதன்பின் மூன்றாவது தடவையும் ஒரு குடியரசு ஏற்பட்டது. முடியாட்சிக் கட்சியினருக்கும் வெறித்த குடியரசுக் கட்சியினரான பொது உடைமைக் கட்சியினருக்கும் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இக் குழப்ப நிலையில் கட்சிகளைப் பகைக்காது இணைத்துக் குடியாட்சிக் கட்சியினரான டியர்ஸும் மக்மோகனும் 1875-இ ல் தற்காலிமாக ஓர் அரசியலை நிறுவினர். இது உண்மையில் மூன்று வேறு வேறு மனிதர் ஏற்படுத்திய அரசியல் சட்டங்களின் கூட்டவியலே யாகும். ஆயினும் மேற்குறிப்பிட்டபடி எந்த உயர் அரசியலும் நிலைபெறாத அளவு அது அதன் நெகிழ்ச்சியின் பயனாக நிலைபெற்றது. தொண்ணூறாண்டுகளாகப் பல அரசியல் அமைப்பு களையும் கையாண்டு கையாண்டு பார்த்த பிரஞ்சு மக்கள் இறுதியில்,வெற்றி அரசியல் அமைப்பின் நிறைவினாலன்று, அது வளர்ச்சிக்கு இடம் தரும் முறையில் அமைவதனாலேயே என்று கண்டு கொண்டனர். பிரஞ்சு அரசியலமைப்பு ஒரு வகையில் பிரிட்டிஷ் முறைக்கு மாறாய் அமெரிக்க முறையை ஒத்தது. அது நாளடைவில் வளர்ச்சியடைந்த உருவாயிராமல் ஒரே ஆண்டில் ஒரே மனிதனால் ஏற்பட்ட அடிப்படை மீது எழுந்தது ஆகும். ஆயினும் அது அமெரிக்காவைப் போலவும் முற்றிலும் இல்லை. அமெரிக்காவில் அரசியலமைப்பு ஒரு சட்டத்தை அடிப்படை யாகக் கொண்டது. பிரான்சில் அது 3 சட்டங்களை அடிப்படை யாகக் கொண்டது. அதனோடு அது அமெரிக்க அரசியலை விட மிகவும் நெகிழ்ச்சியு முடையது. அரசியலமைப்பில் மாற்றங் கொண்டு வருதல் இங்கே மிகவும் எளிது. இரண்டு அவைகளும் இணைந்த மன்றக் கூட்டத்தில் நிறைறேற்றப்பட்டால் அரசியல் அமைப்பில் எத்தகைய சீர்திருத்தமும் செய்யலாகும். ஆயினும் உண்மையில் 1875க்குப் பின் 3 தடவையே இச் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. இது இவ் அரசியலமைப்பின் உறுதிக்கு ஒரு சான்று ஆகும். பிரான்சில் குடியரசுத் தலைவர் இடம் ஆங்கில மன்னர் இடத்தைப்போன்றே பெரிய மதிப்புக்குரியது. ஆனால் அதைப் போலவே நடைமுறையில் தனிப்பட்ட உரிமைகள் அற்றது. இரண்டு அவைகளும் கூடிய மன்றக் கூட்டத்தில் தனிப்பட்ட பெரும்பான்மை மொழிகள் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். பிரான்சில் இரண்டு அவைகளும் பெரும்பாலும் வேறுவேறு கட்டிடங்களிலேயே கூடுகின்றன. மேலவை(ளுநயேவந) லக்ஸம்பர்க் அரண்மனையிலும்(ஞயடயளை டுரஒநஅரெசப) ஆட்பெயரவை(ஊhயஅநெச டிக னுநயீரவநநள) பூர்பன் அரண்மனையிலும் (ஞயடயளை க்ஷடிரசbடிn) கூடும். தேர்ந்தெடுக்கப்பட்டபின் தலைவர் ஆட்சி ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன் முடிவுக்கு ஒரு திங்களின் முன் தலைவர் இரண்டவைகளையும் கூட்ட வேண்டும். தலைவர் இடம் திடுமென நிரப்ப வேண்டிய விடத்தும் அது கூடும். தேர்தல்களில் நிற்கும் கட்சிகள் பலவாதலால் அவை ஒன்றிரண்டு கூட்டுக் கட்சிகளாகச் சேர்ந்து பொதுச் சார்பாக ஆட்களை நிறுத்தும். ஒவ்வோர் உறுப்பினரும் பல கட்சிகளுக்கு உகந்தவராயிருக்க வேண்டிய வராதலால் கூடிய மட்டும் எல்லாருக்கும் பொதுவான கொள்கைகளையே செயலாற்றுவர். எனவே அரசியலின் போக்கு வெறித்த முற்போக்குடையதா யிருக்கவோ அல்லது செயலார்வமிக்கதா யிருக்கவோ இடமில்லை. இங்கிலாந்தைவிட அமெரிக்காவிலும் பிரான்சிலும் மேலவைக்கு ஆற்றல் மிகுதி. பிரஞ்சு மேலவையில் 300 உறுப்பினர் உண்டு. இவர்கள் 9 ஆண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலும் ஆட் பெயரவைச் சார்பில் மறைமுகமாகவே நடைபெறும். ஒவ்வோராண்டும் மூன்றிலொரு பங்கு உறுப்பினர் நீக்கிப் புதுப்பிக்கப்பெறுவர். இவ்வவை பொருளியல் சார்பான நடைமுறைகளைத் தொடங்கி வைக்க முடியாவிடினும் அவற்றைத் திருத்தவோ அவற்றின் மீது வாதாடவோ கூடும். ஆட்பெயரவையில் உறுப்பினர் தொகை 584. இவர்கள் குடிமக்களிடைய நேரடியாக 4 ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவைக்கட்டிடம் பிரிட்டனிலுள்ளதை விடப் பெரிதாகவும் நாடகக் கொட்டகைபோல் அமைதி வடிவினதாகவும் இருக்கிறது. பிறை வளைவின் நடுவில் அமைச்சர்களும் இருபுறத்துள் வலதுபுறத்தில் ஆதரிக்கும் கட்சிகளும் இடது புறத்தில் ஆதரிக்காத கட்சிகளும் இருக்கும். வளைவெதிரில் மேடைமீது குடியரசுத் தலைவர் இடமும் அதன் பின் எழுத்தாளர் இருக்கைகளும் மேடையின் கீழ் உறுப்பினர் வந்து பேசும் சிறு சாய்மேடையும் இருக்கும். அரசியல் நடைமுறையில் இவ்வமைப்பு இரு கட்சி அரசியலை விடக் கட்சி இணைப்பு அரசியலுக்கே பெரிதும் உகந்தது. எனவே அரசியல் மாற்றம் ஏற்படும்போது பெரும்பாலும் எந்த அமைச்சர் குழுவும் முற்றிலும் மாறுவதில்லை. ஆதரவு கைவிட்ட கட்சியினிடமாக வேறுகட்சி ஆட்கள் சேர அது மீட்டும் திருத்தியமைக்கப்படுவதே பெரும்பான்மை நிகழ்ச்சி யாகும். மன்று நடைமுறையில் பிரிட்டனைப் போல வாதங்கள் இரா. ஆனால் உறுப்பினர்கள் நடுவில் வந்து வாசிப்பதனால் திருத்தமாக எழுதப்பட்ட இலக்கிய நிறைவுடைய பேருரை களுக்கு இடமுண்டு. பிரான்சில் அரசியல் தலைவர் எளிதில் நீக்கப்பட முடியாது. அவர்நிலை பிரிட்டிஷ் அரசர் நிலைபோன்றது. ஆனால் அமைச்சர்களை நம்பிக்கையில்லாத் தீர்மான மூலம் அகற்றலாம். இவ் வமைச்சர் பொறுப்புப் பிரிட்டனைப் பின்பற்றி அமைந்ததே யாகும். இங்ஙனம் பலவகையில் பிரிட்டனைப் பின்பற்றியதாயினும் பிரஞ்சு அரசியல் 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் அரசியல் ஆய்வுக்களமாயமைந்தது. 20ஆம் நூற்றாண்டில் ரஷ்யா இந்நிலையை உடையதாயிற்று. பிரான்சுக்குப் பலவகையில் மாறுபட்ட நாடு செர்மனி. பிரான்சைப் போலவே இங்கும் பெருநிலக் கிழமை முறையும் (குநரனயடளைஅ) அதன்மீது உரோமகாலப் பேரரசு முறையும் அமைந்திருந்தன. ஆனால் பிரான்சைப் போல் பெருநிலக்கிழமைகள் ஒரு நாடாக ஒன்று படாமல் பல அரசியல்களாகப் பிரிந்து இயன்றன. ஆயினும் அந்நாட்டுப் பேரரசர் தம் ஆட்சியையே உரோமர் பேரரசின்வழித்தோன்றல் எனக் கொண்டு அதனைத் ‘தெய்விக உரோமப் பேரரசு’ என்று கூறிவந்தனர். அறிஞர் வால்த்தேர் நகைச்சுவையுடன் அது தெய்விகமுமல்ல உரோமச் சார்பானதுமல்ல, பேரரசுமல்ல என்று கூறினராம். இஃது உண்மையே. ஏனெனில் அது தெய்விகத்துக்கு மாறான உலகியல் அரசே; உரோம நாட்டிற்கு மாறாச் செர்மானிநாட்டில் நிலவுவது, இறுதியாக உண்மையில் ஆற்றலுடையதாயிராமையால் அது பேரரசுமன்று. ஆயினும் இச் செர்மன் அரசியல்களில் ஒன்றாகிய பிரஷ்யா படிப்படியாக வளர்ந்து 1710 முதல் 1786 வரை ஆண்ட பிரடரிக் ஆட்சிக்குள் ஐரோப்பாவின் வல்லரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. நெப்போலியன் தெய்விக உரோமப் பேரரசைக் குலைத்து அதன் பகுதிகள் பலவற்றைப் பிரான்சுடன் சேர்த்துத் தானே தெய்விக உரோமப்பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஏற்பட்ட பிரான்சின் சீரழிவில் செர்மனி மீண்டும் தலைதூக்கியதுடன் முன்போல் தளர்ச்சியுற்ற கூட்டுறவாயிராமல் ஒற்றுமைப்படத் தொடங்கிற்று. பிரான்சுப் பிரஷ்யப் போரில் வெற்றிப் பெற்ற நாடுகளில் ஒன்று என்ற முறையில் பிரஷ்யா 1815-இல் ஏற்பட்ட வியன்னாக் காங்கிரஸ் மூலம் விரிவு பெற்றதுடன் தன்னோடு ஆஸ்ட்ரியாவும் பிரஷ்யாவும் உள்ளிட்டு 37 சிறிதும் பெரிதுமான அரசியல்களை ஒரே கூட்டுறவில் சேர்த்தது. இக் கூட்டுறவை நடத்திய கூட்டுறவு அவை (டியூட் அல்லது பண்டு ஸ்டாக்) பல அரசியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்பெயர்களை உறுப்பினராக உடையது. இக் கூட்டுறவில் பெயரளவில் தலைமை பெற்றது ஆஸ்ட்ரியா ஆயினும் ஆஸ்ட்ரியாவின் கட்சியும் பிரஷ்யாவின் கட்சியும் கிட்டத்தட்டச் சரி நிகராயிருந்ததால் அது எவ்வகையிலும் உருப்படியான வேலை செய்ய முடியாமல் போயிற்று. இதற்கிடையில் பிரஷ்யாவிலேயே நாட்டுமக்கள் பொறுப்பாட்சி கோரினர். 1848-இல் அவர்கள் பிராங்க் போர்ட்-ஆ-திமெயின் என்ற விடத்தில் தற்காலிக நாட்டுமன்றம்(ஊடிபேசநளள டிக ஊடிnஎநவேiடிn டிக குசயமேகடிசவ-டிn-வாந-ஆயiநே) கூடிப்பொறுப்புவாய்ந்த ஒற்றுமைப்பட்ட பேரரசு ஒன்று நிறுவ முயன்றனர். ஆயின் அதில் கலந்த அரசியல் புலவர்கள் காலம் நீட்டித்ததால் பிரஷ்ய அரசர் அவர்களைப் புறக்கணித்து அவர்கள் பரந்த மனப்பான்மைக்குச் சற்று விட்டுக்கொடுத்துத் தன் ஆட்சியையும் வலுப்படுத்தி 1850-இல் ஓர் அரசியலை அமைத்தார். இவ்வரசியல் அமைப்பு நலிவுற்று நிலமாற்றங்களுடன் 1918 வரை நீடித்திருந்தது. செர்மன் அரசியலறிஞருள் சிறந்தவரான பிஸ்மார்க் செர்மனியை ஒரே இனம் மொழி ஆகியவற்றால் இணைக்கப் பட்ட ஒரே கூட்டுறவு அரசியலாக்க விரும்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா செர்மன் இனமும் மொழியுமே கொண்டதாயினும் பிற இனங்களையும் உட்கொண்டிருந்ததால் போரிட்டாயினும் அதனை விலக்க உறுதி கொண்டார். அதே சமயம் அத்தகைய உறுதியான செர்மன் கூட்டுறவு பிரான்சுக்கு இடையூறு ஆகும் எனக் கருதி மூன்றாம் நெப்போலியன் அதை எதிர்த்தான். சூழ்ச்சித் திறத்தில் மிக்க பிஸ்மார்க் செர்மனியை வட செர்மனி தென் செர்மனி என இரண்டு கூட்டுறவுகளாக்குவதாகக் கூறிக்கொண்டு முதலில் ஆஸ்ட்ரியாவை முறியடித்து விலக்கி விட்டுப் பின் பிரான்சையும் முறியடித்து 1878-இல் செர்மன் கூட்டுறவுப் பேரரசை நிறுவினார். 1878 முதல் 1918 வரை 40 ஆண்டுகளாகச் செர்மன் அரசியல் உலகிலேயே மிக உறுதி மிக்க அரசியலாகக் கருதப்பட்டு வந்தது. அதற்கேற்ப அதன் ஆட்சிக் காலத்தில் செர்மனி ஆற்றலிலும் செல்வத்திலும் நாகரிகத்திலும் உலகில் முதலிடம் பெறும் நிலைக்கு ஓங்கி வளர்ந்தது. ஆயினும் அதில் உண்மையான பொறுப்பாட்சி மிகக் குறைவு. உருவில் அமெரிக்க அரசியல் போன்றதாயிருப்பினும் அது முற்றிலும் பேரரசர் கைக் கருவியாகவே இருந்தது. 1914-இல் தொடங்கிய முதல் உலகப் போர்க் காலத்தில் பேரரசர் பிடி தளர்ச்சியடைத் தளர்ச்சியடைய அதன் வலுவும் குறைந்து 1918-இல் அது வீழ்ச்சியடைந்தது. அதன் பெரும் சிறப்புக்களுள் ஒன்று, அது ஒரு நாட்டு மக்கள் அல்லது ஓர் அறிஞர் குழுவின் முயற்சியால் எழுந்ததன்று. ஒரு தனிமனிதன் அதாவது பிஸ்மார்க்கின் அறிவுத் திறத்தால் எழுந்து உலகை இரண்டு தலைமுறையளவும் ஆட்டி வைத்ததே அதன் பெருமையாகும். ஆட்சி முறையிலும் அதனைப் பிற பேரரசுகளுடன் நன்கு ஒப்பிடலாம். அமெரிக்க அரசியலைப் போலவும் இந்தியாவில் 1918-இல் ஏற்பட்ட அரசியலைப் போலவும் செர்மன் அரசியலும் இரட்டையாட்சித் துறைப்பட்டதாகும். அரசியல் காரியங்கள் கூட்டுறவுத் துறைகள் எனவும் தனி அரசியல் துறைகள் எனவும் வகுக்கப்பட்டிருந்தன. வெளிநாட்,வெளிநாட்டு வாணிகம், நிலப்படை, கடற்படை, வரிப்பிரிவு, நாட்டுக்கடன், பொருள் நிலையங்கள், தொழிலமைப்பு, ஆராய்ச்சித் துறைகள், பத்திரிகைக் கட்டுப்பாடு ஆகியவை கூட்டுறவுத் துறைகள். சட்டமமைத்தல், வழக்குகள் ஆகியவையும் பெரும்பாலும் கூட்டுறவுத் துறைகளே. முதலில் இக்கூட்டுறவின் தலைவராயிருந்து பின் பேரரசரான பிரஷ்யா அரசரின் கால்வழியில் வந்தவர்கள் கெய்ஸர் (பேரரசர்) என்ற பட்டம் பெற்றனர். பிரிட்டிஷ் பேரரசர் பிரிட்டனின் அரசராகவும் பிரிட்டிஷ் பேரரசின் பேரரசராகவும் விளங்குவதுபோல் அவர் பிரஷ்யாவின் அரசராகவும் செர்மனியின் பேரரசராகவும் விளங்கினார். முதலுலகப் போருக்கு முன்பே சீர்திருத்தப் பொதுக் குடியாட்சிக் கட்சியினர்(ளுடிஉயைட னுநஅடிஉசயவள) பேரரசினை எதிர்த்து வந்தனர். 1917-இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் 1918-இல் நிகழ்ந்த செர்மன் பேரரசின் படுதோல்வியும் அவர்களை வலுப்படுத்தின. பேரரசர் பொதுத் தேர்தலுரிமை முதலிய பலவற்றையும் இறுதி நேரத்தில் விட்டுக்கொடுத்தும் பயனின்றிப் பேரரசு கவிழ்ந்தது. அதன்பின் சில காலம் வெய்மார் அரசியல் ஆங்கில அரசியல் முறையைப் பின்பற்ற முயன்றது. ஆனால் உலகப் போரால் ஏற்பட்ட நெருக்கடியை அது சமாளிக்க முடியாமல் போகவே படிப்படியாக நாசியர் ஆட்சிமுறை ஏற்பட்டது. இது பெயரளவில் குடியரசாயினும் உண்மையில் பழைய பேரரசின் புது உருவேயாகும். கெய்ஸரிடத்தில் இப்போது பொருள் காப்பாளராய் அமைந்த ஹிட்லர் நின்றார். இவ்விடம் பிஸ்மார்க்கால் தனக்கென ஏற்படுத்தப்பட்டது. அது கெய்ஸர் கையாளின் கையிலிருந்தவரை அவரே வல்லாளராய் ஆட்சி செலுத்தினார். கெய்ஸரில்லாதபோது பொருள் காப்பாளரே அவ்விருதிறத்து உரிமைகளையும் பெற்றுப் புதிய வல்லாள கண்டராயினர். 1945-இல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்ச்சி யடைந்த பின் செர்மனி நேச நாடுகளிடையே பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ரஷ்யச் சார்பில் பொது உடைமை முறை ஆட்சிக்கும் மற்றப் பகுதிகள் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஆகியவற்றின் தலைமையில் குடியாட்சி முறைக்கும் உட்பட்டிருக்கிறது. இங்ஙனமாக ஒரு வகையில் இங்கிலாந்து மக்களின் பழம் பெருந் தாயகமான செர்மனி ஐரோப்பாவில் வணங்காமுடி பெற்றுப் பெரும் படையுடன் பேரரசாட்சி நிறுவ இரண்டாயிரம் ஆண்டு முயன்றும் இன்றும் உருவான அரசியல் அமைக்க முடியாமல் திணறும் நிலையிலேயேயுளது. இன்னும் ஒரு புறம் ஐரோப்பா முழுமைக்குமே நாகரிகமாகிய பாலூட்டிய தாயகம் இத்தாலி 5 ஆம் நூற்றாண்டில் ரோமர் பேரரசாட்சி சீர்குலைந்தபின் அரசியல் குழப்பத்துட்பட்டுப் பல தடவை பிறநாடுகளின் அரசியலடிமையாய் வாழ்ந்து இறுதியில் நெப்போலியனால் வெல்லப்பட்டு அவன்கீழ் ஒரே நாடாக மீட்டும் ஒற்றுமைப் படுத்தப்பட்டது. நெப்போலியன் ஆட்சியில் அவர் சட்டம் ஒழுங்கு முதலிய யாவும் இத்தாலி வாழ்வில் பொறிக்கப்பட்டன. அதன் பயனாக இன்றளவும் அது பிரான்சுடன் பல ஒற்றுமைகள் உடையதாய் விளங்குகிறது. நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற வியன்னாக் காங்கிரஸில் பிஸ்மார்க் இத்தாலியை மீட்டும் துண்டுபடுத்திப் பெரும் பகுதியை ஆஸ்ட்ரியாவுக்கும் மற்றப் பேரரசுகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். ரோம் கத்தோலிக்க சமயத்தின் உலகத் தலைவரான திருப் பெருந்தந்தையிடம்(ஞடியீந) தரப்பட்டது. இத்தாலி மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிளர்ந்தெழுந்தும் சிற்றரசுகளுள் ஒன்றிலேனும் பொறுப்பாட்சி இல்லாத நிலையில் ஒற்றுமை ஏற்பட வழியில்லாதிருந்தது. 1848-இல் இத்தாலியில் ஒரு பகுதியில் தற்சார்புடைய மன்னராயிருந்த சார்ல்ஸ் ஆல்பர்ட் ஓர் அரசுரிமைத்தாள் வழங்கினார். ஆஸ்ட்ரியா இவனை வெறுத்து அக்கிளர்ச்சியை அடக்க முயன்றது. அது பலதடவை அரசரை நீக்கினும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. இத்தாலி நாட்டுத் தலைவரான கவூர் இங்கிலாந்து பிரான்சு ஆகியவற்றின் துணை கொண்டு ஆஸ்ட்ரியாவை முறியடித்துப் பெரும் பகுதி இத்தாலியை ஒன்று படுத்தினார். ஆயினும் இறுதியில் பிரான்சு எதிர்புறம் சேர்ந்து வெனிசை ஆஸ்ட்ரியாவிடம் விட்டுக்கொடுக்க ஒருப்பட்டது. ஆயினும் எல்லாச் சிறு அரசுகளும் எழுந்து காரிபால்டியின் தலைமையில் வெளியார் ஆட்சியை ஒழித்து மன்னர் தலைமையில் ஒற்றுமைப்பட்டன. 1870-இல் இறுதியாக வெனிசும் இத்தாலியக் கூட்டுறவில் சேர்ந்தது. இங்ஙனம் பிரஷ்யா தலைமையில் செர்மனி ஆஸ்ட்ரியாவை எதிர்த்து ஒன்றுபட்டது போலவே கிட்டத்தட்ட அதே காலத்துக்குள் இத்தாலியும் அதே முறையில் ஒன்று பட்டது. 1848-இல் ஒரு பகுதிக்குத் தரப்பட்ட அரசுரிமைத்தாளே நாடு முழுமையின் அரசியல் அமைப்புக்கும் அடிப்படையாயிற்று. அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்குத் தடையில்லாதிருக்கவே பொது முறைச் சட்டங்களாலேயே அது திருத்தியமைக்கப்பட்ட இடமும் ஏற்பட்டது. ஆயினும் 1848 முதல் 1922 வரை மிகுந்த மாற்றமில்லாமலே இவ்வரசியல் ஒழுங்காக நடைபெற்றது. இத்தாலிக்கும் செர்மனிக்கும் உள்ள ஒற்றுமை இத்துடன் முடியவில்லை. ஹிட்லர் தோன்றுவதற்குச் சற்று முன்னாகவே இத்தாலியில் 1922-இல் முசோலினி தோன்றி நாசியருக்குக் கூட முன்மாதிரியாகும் முறையில் பாசிசத்தை வகுத்தார். நாட்டில் பல கட்சிகளிலிருந்தும் இதுவும் ஹிட்லர் ஆட்சிபோல் வல்லாளர் ஆட்சியாகவே இருந்தது.ஆனால் ஹிட்லருக்குச் செர்மனியிலிருந்த அளவு வலிமையோ ஆதரவோ அவருக்கு இத்தாலியிலில்லை. எனவே அவர் வெற்றி முழக்கொலிகள் சற்றுக் குறைந்தபோது எதிர்ப்பை அவரால் சமாளிக்க முடியவில்லை. போரின் இறுதிக்கட்டம் தொடங்குமுன் அவர் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. இறுதியில் இங்கும் ஆங்கில ஆட்சி முறையில் அதன் ஆதரவிலேயே அரசியலமைப்பு ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் 20-இம் நூற்றாண்டின் ஆய்வுக்களமாயமைந்த ரஷ்யா பற்றி இன்னொரு பிரிவில் விரித்துரைப்போம். பால்கன் தீவக்குறை ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறிய ஆசியா என்னும்படி அரசியல் வாழ்வில் பிற்பட்டும் பிளவுபட்டும் நலிந்தும் சீர்குலைவு நிலையிலேயே என்றும் இருந்து வந்திருக்கிறது. இதன் தென்பாலுள்ள கிரீஸ் இத்தாலியினும் பழமையான நாடு. ஐரோப்பிய நாகரிகத்துக்குத் தாயகமாய் இருந்ததுடன் இத்தாலிக்கும் அது நாகரிக முறையில் ஆசிரியனாயிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் அது தூண்டுதலாயிருந்தது. ஆயினும் அரசியலில் ரோமர் காலமுதல் அது வர வர வீழ்ச்சி யடைந்துவந்தது. இடைக்காலத்தில் துருக்கிப் பேரரசுக்கு அது அடிமைப்பட்டு முதல் உலகப் போரின் இறுதியில் துருக்கிப் பேரரசு வீழ்ச்சி யடைந்தபின் விடுதலை யடைந்து முடியரசாய் விளங்குகிறது. வெளியுருவில் ஆங்கில அரசியலை ஒத்ததே கிரேக்க அரசியல். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் முசோலினி, ஹிட்லர் ஆகியவர் பேராவலுக் கிரையாகி கிரீஸ் நாசி யாட்சியில் சிக்கிற்று. 1945-இல் மீட்டும் நேச நாட்டின் உதவியுடன் விடுதலை பெற்றும் முன்னணிக் குடியாட்சிக் கட்சியினர், பொதுஉடைமைக்காரர் ஆகியவர் கிளர்ச்சியால் சில காலம் தொல்லைப்பட்டு வருகிறது. துருக்கி கமால்பாஷாவின் தலைமையின்கீழ்ப் பழைய உள்ளுரமற்ற பேரரசைத் துறந்து உரமிக்க தனிநாடாய், ஆங்கில அரசியல்போன்ற அமைப்புடைய குடியரசாய் விளங்குகிறது. போலந்து, செக்கொஸ்லாவியா முதலியவை உலகப்போருக்குப் பின் எழுந்து இரண்டாம் உலகப்போரில் சீரழிந்து மீண்டும் உருவாய் வரும் நாடுகள் போர்ப் புயலிடையே தோன்றிய இந்நாடுகள் அரசியல் நிலவரமடைய நெடுங்காலம் செல்லும் என்றே எதிர்பார்க்கலாம். ஐரோப்பாவின் நிலை இதுவாக, ஆசியாவில் துருக்கி நீங்கலாக, சப்பான் ஒன்றுதான் வல்லரசு நிலையிலிருக்கிறது. அது உண்மையில் வல்லாண்மையுடைய முடியாட்சியாயினும் மேனாட்டு முறைகளை மேலீடாகப் பின்பற்றி ஆங்கில நாட்டைப் போன்ற பொறுப்பாட்சியின் தோற்றமுடையதாய் விளங்குகிறது. முதலுலகப்போரில் அமெரிக்கா போல் விலகி நின்றும் இறுதியில் ஈடுபட்டும் சப்பான் தன்னை மிகவும் வலுப்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப்போரிலோ ஹிட்லர் முசோலினியின் பேராவலில் பங்குகொண்டு பேரரசு ஒன்றை வென்று நிறுவமுயன்று படுவீழ்ச்சியடைந்தது. அதன் அரசியல் இனி மேனாட்டு முறையில் குடியரசாகவே அமையக்கூடும். சீனாவில் பழைய மஞ்சுப்பேரரசர் ஆட்சி மிகவும் தளர்ச்சியுற்ற ஆட்சியாயிருந்து பிறநாட்டுத் தாக்குதலாலும் நாட்டுமக்கள் கிளர்ச்சியாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிவுற்றது. நாட்டில் பல பெருந்தலைவர்கள் தத்தம் படைகளுடன் தலைமை நிலைக்காக நெடுங்காலம் போராடி வந்தனர். அவர்களுள் டாக்டர் சுன்யத்சென் என்ற பேரறிஞர் படை வலியுடன் அறிவாற்றலும் உடையவராய் ஓர் அரிய குடியாட்சி முறையையும் வகுத்தார். தொடக்கத்தில் கான்டனில் எழுந்த அவர் கிளர்ச்சி தென் சீனாவெங்கும் பரந்தது. அவருக்குப் பின் அவர் உறவினரான சியாங்கை ஷேக் கிட்டத்தட்டச் சீனா முழுமையும் ஒரே ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். ஆனால் சப்பான் உட்புகுந்து முதலில் மஞ்சுரியாவையும் பின் மங்கோலியாவையும் வடசீனாவையும் படிப்படியாகக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப்போரில் கடல்களை முற்றிலும் சப்பான் கைப்பற்றியதுடன் தெற்கேயுள்ள இந்துசீனா, சீயம், பர்மா ஆகியவற்றையும் கைக்கெண்டு விட்டதனால் சீனா துண்டிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் வட சீனாவில் யீனான் என்ற பகுதியில் பொது உடைமைக்காரர் தனித்து அரசியலமைத்துப் போட்டியிட்டனர். சப்பான் வீழ்ச்சியின் பின் இவற்றிடையே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டு வருகிறது. போரின் தாக்குதலால் சியாங்கின் அரசியலும் வல்லாண்மைத் திறம் குறைந்து பொதுமக்கள் சார்புடையதாகிவிட்டது. ஐரோப்பா ஆசிய கண்டங்களில் இதுகாறும் விவரித்த நாடுகளுக்கு அப்பால் சென்று இன்னும் கவனிக்க வேண்டியன பிரிட்டிஷ் பேரரசின் பகுதிகளான இந்தியாவும் குடியேற்ற நாடுகளும் ரஷ்யாவுமேயாகும். அவற்றை வரும் பிரிவுகளில் ஆராய்வோம். 8. பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள் ஐரோப்பிய அரசியல்கள் எல்லாவற்றிலும் காணப்படும் பெருங்குறை ஒன்று உண்டு. தன்னாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஆங்கில நாட்டு முறைகளை அந்நாட்டார் வல்லாண்மையை அடிப்படையாகக் கொண்ட தம்நாட்டு முறைகளின் மீது கொண்டு பிணைத்தனர். ஆங்கில நாட்டு வாழ்வியல், பண்பு ஆகியவற்றின் வளர்ச்சியுடன் சேர்ந்தே விடுதலை யார்வமும் பயிற்சியும் வளர்ந்து வந்திருக்கின்றன. எனவே ஆங்கில வாழ்வுடன் தொடர்பற்ற பிறநாட்டு வாழ்வின் மீது இம்முறைகள் சுமத்தப்பட்ட போது அதன் முரண்பாட்டால் இயற்கை வளர்ச்சி தடைப்பட்டது. புதிய முறையும் பழைய நிலையும் தம்முள் ஒன்று பட்டுப் பின்னது வேரூன்ற நாட் செல்லுவது இயற்கையே. ஆனால் ஓரளவு அமெரிக்காவிலும், இன்னும் சிறப்பாகப் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளிலும் ஆங்கில வாழ்வியல் பண்புகளும் நாகரிகமும் பெரும்பாலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றதனால் அவற்றில் ஆங்கில முறைகள் அவ்வவ் விடத்துக்குத் தக்க மாறுதல்களுடன் இய்லபான வளர்ச்சி யடைந்தன. எனவேதான் பலவகையிலும் அவை விரைவில் தாய்நாட்டுக்கொப்பான நிலையை அடைய முடிந்தது. இந்தியப் பெருநிலப்பரப்பின் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும் பெரும்பாலும் குடியேற்ற நாட்டுடனும் ஒவ்வாது ஐரோப்பிய நாட்டுடனும் ஒவ்வாதிருக்கின்றன. எனவே ஓரளவு அவற்றைப் பின்பற்றி அரசியல் கிளர்ச்சியில் முனைந்த இவ்விருசார் அரசியல்களும் அவற்றின் ஆராய்ச்சியால் ஓரளவு பயன்பெறினும் அவையனைத்திற்கும் புறம்பாக நின்று வளர்ச்சியுற்ற ரஷ்யப் பெருநிலப் பரப்பிற் கண்ட அரசியலமைப்பின் ஆராய்ச்சியாலேயே உண்மையில் பெரும்பயனடையக் கூடும். இக்காரணம் பற்றியே உலகின் மற்ற அரசியல்கள் அனைத்தையும் ஆராய்ந்ததன் பின் இன்றைய இந்தியப் பரப்பின் நிலையையும் தமிழக நிலையையும் ஆராயவும், இவற்றை ஆராயுமுன் இறுதியாக ரஷ்ய அரசியலை ஆராயவும் தொடங்கினோம். பிரிட்டன் நீங்கலாகப் பிரிட்டிஷ் பேரரசுப் பகுதிகளைக் குடியேற்ற நிலைநாடுகள்(னுடிஅiniடிளே) என்றும் குடியேற்றங்கள் (ஊடிடடிnநைள) என்றும் சார்பு நிலைநாடுகள்(னுநயீநனேநnஉநைள) என்றும் வகுக்கலாம். முதல் வகையைச் சேர்ந்தவை கானடா, ஆஸ்ட்ரேலியா, தென் ஆபிரிக்கா, நியூபவுண்ட்லண்டு, நியூசிலந்து ஆகியவை. இவை சில்லறைச் செய்திகளில் வேறுபடினும் கிட்டத்தட்ட இங்கிலாந்தைப்போலவே பொறுப்பாட்சியும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் குழுவும் தேர்தலுரிமையுடைய சட்ட சபைகளும் உடையவை. இவை பிரிட்டிஷ் அரசியலமைப்பில் அதன் கொடியையும் முடியாட்சியையும் மட்டுமே ஏற்கின்றன. ஆங்கில நாட்டாட்சிக்கு வேறு எவ் வகையிலும் அடிமைப்பட வில்லை. இரண்டாவது கூட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் ஆங்கில மன்னர் ஆட்சியுட்பட்ட பல சிறு குடியேற்றங்களும் உட்படும். மூன்றாவது கூட்டத்தில் இந்தியாவும் பர்மாவும் மலாயும் உட்படும். இவ் விருவகையிலும் பெயரளவில் சட்ட அவைகள் இருப்பினும் இவை பொறுப்பாட்சியே இல்லாமலோ அல்லது அது முற்றிலும் ஏற்படாமலோ இருந்து வருகின்றன. பிரிட்டனின் முதன்முதல் குடியேற்ற நாடு உண்மையில் அமெரிக்காதான். இந் நாட்டில் தொடக்கத்தில் இங்கிலாந்து பொறுப்பாட்சி ஏற்படுத்தாமல் தன் நன்மைக்காக அதன் பொருளியல் நலன்களைப் பயன்படுத்திற்று. அமெரிக்கா இதன் பயனாகவே பிரிட்டனுக் கெதிராக எழுந்து விடுதலைபெற்றுத் தனி நாடாயிற்று. அமெரிக்காவை இழந்தபின் பிரிட்டன் மற்றக் குடியேற்ற நாடுகளில் தன் கொள்கையை மாற்றிக் கொண்டது. கானடா மாகாணங்கள் பற்றி 1833-இல் டர்காம் பெருமகனார் செய்த அறிக்கையில் இக் கொள்கை முதன் முதலாக உருப்பெற்றது. அதன்படி அக் குடியேற்ற நாடுகளின் தலைவர் பிரிட்டிஷ் மன்னரின் நிலையில் நின்று அந்நாட்டுச் சட்ட அவைகளில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஆட்களை அமைச்சராகக் கொண்டு ஆள்வர். தாய்நாடு, குடியேற்ற நாடு ஆகியவற்றின் உறவைத் தாக்காத எச் செய்தியிலும் அவர் பிரிட்டனின் அரசாங்கத்தையோ, மன்னரையோ, கலக்க வேண்டியதில்லை. தாய் நாட்டின் உறவு, அரசியலமைப்பின் அடிப்படை ஆகியவற்றில் மட்டுமே தாய் நாட்டின் அரசாங்கத்தோடு மன்னரும் தலையிடுவர். மற்ற வகையில் அவர்கள் உள்நாட்டுச் செய்திகளில் கிட்டத்தட்ட முற்றிலும் தன்னாண்மை யுடையவர்களே. குடியேற்ற நாடுகளின் அரசியல் அமெரிக்கா முதலிய நாடுகளை விடக்கூடத் தாய்நாட்டின் அரசியலைப் பின்பற்றியே அமைவது இயற்கை. அதற்கேற்பவே கிட்டத்தட்ட அவற்றிலெல்லாவற்றிலும் இரண்டு அவைகள் உள்ளன. அமைச்சர் தம் ஆட்சிவகையில் அவைகளிடமே பொறுப்புடைய வர்களாயிருந்தனர். மன்ற நடைமுறைகளும் பெரும்பாலும பிரிட்டனைப் பின்பற்றியவையே. ஆயினும் இவை ஒன்றாயினும் முற்றிலும் பிரிட்டனை ஒத்தும் இருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுள் ஒன்றேனும் பிரிட்டனைப்போலத் தனியரசாயில்லை; அவ்வப்போது ஏற்பட்ட குடியேற்றங்களைத் தனி அரசுகளாகக் கொண்ட கூட்டுறவு அரசியல்களாகவே அவை நிலவுகின்றன. அதோடு அவற்றின் கூட்டுறவுத் தலைவராய் அமைந்து தொழிலாற்றும் ஆட்சித் தலைவர்கள் (கவர்னர்கள்) பெரும்பாலும் மன்னரைப் போலவே உரிமையுடையவர்களாயினும், பிரிட்டனில் பிற்காலத்தில் சட்டங்கள் வகையில் மன்னரது மறுப்பு உரிமை கைவிடப்பட்டதுபோம் அவர்கள் மறுப்புரிமை கைவிடப் படாமலே யிருந்து வருகின்றன. தாய்நாட்டுக்கும் குடியேற்ற நாடுகளுக்கும் உள்ள வேற்றுமைகளுள் இன்னொன்று மிகவும் தலை சிறந்தது. பிரிட்டனின் குடியாட்சிக் கருத்துக்களை உடன்கொண்டு சென்ற குடியேற்றநாடுகள் ஒன்றேனும் அதன் பெருங்குடியாட்சியின் பரபைக் கொண்டுசெல்லவில்லை. ஆகவே பிரிட்டனைப் பின்பற்றி இவற்றில் மேலவை ஒன்று ஏற்பட்ட போதிலும் இம் மேலவை பிரிட்டனைப்போல் வழி வழி வந்த பெருங்குடிமக்கள் உரிமை கொண்டதாக இல்லை. பொது அவையைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவோ, உறுப்பினர் வாழ்நாள் அளவுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்டகால எல்லயளவுக்கோ அமர்வு பெற்றதாகவே அவை இயங்குகின்றன. சில தனியரசுகளில் இம்மேலவை வேண்டியதில்லை யென்று கைவிடப்பட்டுக்கூட வருகின்றது. குடியேற்ற நாடுகளுள் முதன் முதல் குடியேற்ற நாட்டு அரசியலுரிமை பெற்றது கானடாவாகும். அது 1867-ஆம் ஆண்டுச் சட்டப்படி கூட்டுறவு அரசியலாயிற்று. நியூபவுண்ட்லந்து என்ற தீவு கானடாவுக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. ஆயினும் அது கானடாக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாகவே இன்னும் இயங்குகிறது. கானடாவையடுத்து ஆஸ்ட்ரேலியா 1909-இலும் தென் ஆபிரிக்கா 1909-இலும் கூட்டுறவுகளாயின. நியூபவுண்ட்டுலந்து கானடாவுடன் சேராமல் தனித்து நின்றது போலவே நியூசிலந்து என்ற தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாக நிலவுகிறது. இக் குடியேற்ற நாட்டின் அரசியல் முறை பெரிதும் அமெரிக்க அரசியல் முறையைப் பின்பற்றியே கூட்டுறவு முறையில் அமைந்துள்ளன. ஆயினும் அமெரிக்க அரசியலுக்குச் சிறப்பான பண்பு கூட்டுறவு அரசியலைவிட உறுப்புக்களான தனி அரசியல்களுக்கு மிகுதி உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன என்பதே. உண்மையில் கூட்டுறவு அரசியலின் உரிமைகள் மட்டிலுமே வரையறுக்கப்பட்டு அவைபோக மீந்த உரிமை களனைத்தும் வரையறையில்லாமல் தனி அரசியல்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. குடியேற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று மட்டும் அமெரிக்காவின் நிலைமையை முற்றிலும் பின்பற்றியது. அங்கும் வரவர மேல் அரசியலின் உரிமைகளையே வலியுறுத்தும் போக்குக் காணப்படுகிறது. கானடாவிலோ தனி அரசியல்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. மீந்த உரிமைகள் அனைத்தும் கூட்டுறவையே சார்ந்தவை. தென் ஆபிரிக்காவில் அரசியல் பெயரளவில்தான் கூட்டுறவு அரசியல். உண்மையான உரிமைகள் பெரிதும் மேலரசியலையே சார்ந்துள்ளன. தனியரசியல்கள் பெரும்பாலும் மாவட்ட தன்னாட்சி அளவிலேயே நிலைபெறுகின்றன. மேலவைகள் பற்றியமட்டில் கானடாவில் கூட்டுறவு அரசியலில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதேயில்லை. முதல் அமைச்சரைக் கலந்துகொண்டு ஆட்சி முதல்வர் (கவர்னர் ஜெனரல்) வாழ்நாள் எல்லைக்கு உறுப்பினரை அமர்த்திக் கொள்கின்றனர். பொதுப்படக் கானடாவின் மேலவை அரசியல் வலிமை குன்றியதாக இருந்து வருவதால் அதனை உரப்படுத்தும் வகையில் சீர்த்திருத்தங்கள் செய்யவேண்டுமென்று முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனி அரசியல்களில் குவபெக், நோவாட்கோஷியா ஆகிய இரண்டுக்கு மட்டுமே மேலவைகள் உண்டு. மற்றவற்றுக்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் மேலவை உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களிலும் சற்று உயர்ந்த தேர்தல் வரையறையுடன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தனி அரசியல்களில் இரண்டில் உறுப்பினர் கானடாக் கூட்டுறவு அரசியலைப் பின்பற்றி வாழ்நாள் எல்லை முழுமைக்கும் அமர்த்தப்படுகின்றனர். மற்ற நான்கிலும் ஆஸ்திரேலியக் கூட்டுறவைப் போலவே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தென் ஆபிரிக்காவில் மேலவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் படுவதுடன் மக்கள் தொகையளவுக்கேற்ற விழுக்காட்டில் தேர்ந்தெடுக்கப்படவும் முயற்சிகள் செய்யப்படுகின்றனர். இதன் பயனாக இந்நாட்டில் அரசியலில் வேறெங்குமில்லாப் புது நிலைமை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மற்றெல்லா நாடுகளிலும் கீழவை பெரும்பாலும் வெறித்த முற்போக்குடையதாயிருக்க, இவ்வொரு கூட்டுறவில் மட்டும் மேலவை கீழவையை விடக்கூட முற்போக்கும் புரட்சி மனப்பான்மையுமுடையதாயிருக்கிறது. கட்சிப் போக்குகளை உற்று நோக்கினாலும் தாய்நாட்டிற்கும் குடியேற்றங்களுக்கும் ஒரு தெளிவான வேறுபாடு காணப்படும். பிரிட்டனில் மூன்று கட்சிகளும் மாறி மாறி வளர்ந்தும் நலிந்தும் அரசியல் கவறாட்டமாடி வரினும், பெரும்பாலும் அவற்றுள் முதன்மை நிலையிலிருந்து வருவது பழய நிலவுடைமையும் பிறப்புரிமையும் செல்வாக்கும் உடைய வகுப்புகளின் மரபில் வந்த கன்சர்வேட்டிவ் கட்சியே. அடுத்த படியாகக் குடியாட்டிசியில் முற்போக்குடைய லிபரல் கட்சியும் அண்டைக் காலங்களில் தொழிற்கட்சியும் முன் வந்துள்ளது. உண்மையில் இக் கடைசிக் கட்சி தனிப்பட அரசாங்கம் அமைத்தது இரண்டாம் உலகப் போர் முடிவிலேயே (1945) ஆகும். ஆனால் குடியேற்ற நாடுகளில், சிறப்பாக ஆஸ்திரேலியாவில், பிறப்புரிமையுடைய உயர் வகுப்புக்கு இடமில்லாததனால் தொழிலாளர் வகுப்பின் சார்பில் தொழிற் கட்சியே தொடக்க முதற்கொண்டு உயர்நிலை யடைந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டுச் சட்டங்களைவிட இக் குடியேற்ற நாட்டுச் சட்டங்களே நாட்டுத் தொழிலாளர் நலங்களைப் பெரிதும் சார்ந்தவையா யிருக்கின்றன. மேற்கூறிய செய்திகளால் பிரிட்டனின் முன்மாதிரியைப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகள் தமக்கும் தம் மரபுக்கும் வளர்ச்சி முறைமைக்கும் புறம்பான அரசியலைப் பின்பற்றியதினால் இடர்ப்பட்டு இன்னும் பிரிட்டனை விடப் பிற்பட்டே யிருந்துவருகின்றன. அமெரிக்கா சிலவகைகளில் முற்பட்டும், குடியேற்ற நாடுகள் இன்னும் மிகுதியாக அவ் வளர்ச்சியுடன் ஒன்றுபட்டு மிருப்பதனால் தாய் நாட்டினும் மிகுதியாகக் கூடச் சில வகைகளில் அவை முற்பட்டும் இருக்கின்றன என்று கூறலாம். இனி இக் குடியேற்ற நாடுகளைப் போலவோ, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை ஒத்தோ பிரிட்டனின் நாகரிகம், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை யாயிராத இந்தியா முதலிய சார்பு நாடுகளையும் பிற நாடுகளையும் ஆராய்வோம். 9. தற்கால இந்திய அரசியல் முறையும் - அரசியல் இயக்கங்களும் இந்தியப் பெருநிலப்பரப்பை ஒரு நாடு என்றும் ஒரு கண்டம் என்றும் கூறுபவர் உண்டு. உலகில் 8-இல் ஒரு பங்காக இருக்கும் அதன் பரப்பும் 5-இல் ஒரு பங்காக அமைந்த மக்கள் தொகையும் பல இன, மொழி, சமய நாகரிகப்படிகள் அடங்கிய இதன் பலவகைப் பெருக்கமும் பிறவும் இதனை ஒரு நாட்டைவிட எவ்வளவோ பெரிதாக்குகின்றன. அளவு மக்கள் தொகை ஆகிய இரண்டாலும் அது ஒரு சிறு கண்டம் அல்லது துணைக் கண்டம் என்னலாம். பலவகைப் பெருக்கத்தைப் பார்த்தாலோ கண்டங்கள் எதுவுங்கூட இதற்கு ஈடில்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட ஒரு சமயமே நிலவுகிறது. ஆசியாவில் இந்தியா நீங்கலாக மூன்று நான்கு சமயங்களே நிலவுகின்றன. நாடு என்று சிலர் கொள்ளும் இந்தியப் பெருநிலப் பரப்புக்குள்ளோ ஒன்றிரண்டு நீங்கலாக எல்லா உலகச் சமயங்களும் இடம் பெற்றுள்ளன. போகநாடு என்று கூறப்படும் இந்தியாவிலேயே ஒரு சமயம் என்று அழைக்கப்பட்ட, ஆனால் உண்மையில் பல சமயங்களின் கூட்டுறவாகிய இந்து சமயமும் உள்ளது. உலகில் தோன்றிய சமயங்களில் ஒரு சில நீங்கலாக அனைத்தும் இங்கே தோன்றியவையே. மொழிகளில் உலக மொழிகள் ஏழுநூற்றுச் சில்லறை. இந்தியாவினுள் அவற்றில் நானூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. மக்கள் இனங்களை நோக்க, உலகின் பிற பகுதிகளிலுள்ள எல்லா இனங்களும் வேறெங்குமில்லாத தனியினமும் இந்தியாவில் உண்டு. நாகரிகப்படிகளை நோக்க, உலக நாகரிகத்தின் உச்சிநிலை முதல் நாகரிகத்தில் கடைப்பட்ட மக்கள்வரை, முதல்தரச் செல்வர் முதல் கடைப்பட்ட பஞ்சைகள் வரை இப்பரப்பில் உண்டு. எனவே இதனை நாடு என்பது மட்டுமன்றிக் கண்டம் என்பதும்கூடக் குறைபட்ட குறிப்பேயாகும். இது ஒரு உலகம், ஒரு குட்டி உலகம் ஆகும். இதனை அளவில் மட்டும் ஒத்தது சீனநாடு; பலவகைப் பெருக்கத்தில் ஓரளவு ஒத்தவை உருசியாவும் அமெரிக்காவுமே. இந்தியா ஓர் உலகமாயினும், வெளி உலகுடன் எவ்வளவோ தொடர்புடையதாயினும், அவ்வுலகுடன் சேர்ந்த உலகின் ஒரு பகுதி என்றுமட்டும் சொல்வதற்கில்லை. உலகெனப் பரந்துநின்ற இதில் வெளி உலகினின்று வேறுபட்டுக் கிடக்கும் வேறுபாடுகளும் தனிப்பண்புகளும் அடிப்படைத் தனி ஒற்றுமைகளும் பல. பிறப்பு வேற்றுமைப்பாகுபாடு (சாதி வகுப்பு), ஊழ்வலியில் நம்பிக்கை, மறுபிறப்புக்கொள்கை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிய அடிமைத்தனம், முயற்சியின்மை, ஆன்மிக அறிவில் தோய்ந்து பெற்ற முப்பொருளுண்மை முடிவுகள் (பதி, பசு, பாசம் அல்லது சத்துச் சித்து ஆனந்தப்பாகுபாட்டுணர்வு) ஆகியவையும் பொதுக்கலை, இலக்கியம், மொழி இயல்பு ஆகியவையும் இப்பெரு நிலப் பரப்புக்கு அடிப்படையில் பரந்த ஒற்றுமையும் தனித்தன்மையும் தருபவை ஆம். இவ்வடிப்படை ஒற்றுமைக்குக் காரணம் என்ன? இப்பரப்பு முற்றும் இன்று பலவகையில் சிதறுண்டு கிடந்தாலும், நாகரிகத் தொடக்கத்தில் ஓரினம், ஒரு மொழி, ஒரே பண்பு உடையதாய் விளங்கியதேயாகும். அப் பண்பே ஆரியரல்லாதார், அல்லது சிறப்பாகத் திராவிடர் பண்பு ஆகும். இன்றைய இந்தியாவில் கண்ட உடற் கூறுகள், சமயமுறைகள், நாகரிகம் ஆகியவற்றில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களிடையே காணக் கிடக்கின்றன. அடிப்படையில் ஒற்றுமையை விளைவிக்கும் இத் திராவிடப் பண்பை மறந்து வேற்றுமை விளைவிக்கும் ஆரியப்பண்பை இந்தியாவின் உயர்நிலையாகக் கொண்டுதனால் தான் இந்தியாவை ஒரு நாடாகக் கொள்ளவோ ஆக்கவோ முடியவில்லை. ஆரியர் வரவுக்கு முந்தியே திராவிட இந்தியா நாகரிகத் துறைகளில் எவ்வளவோ மேலோங்கியிருந்ததாயினும் வீணையின் உட்கீறல்போல் உள்ளுற அதில் வேற்றுமைகள் வாழ்வியல் வேற்றுமைகள் - மறைந்து கிடந்தன வென்றும், அவற்றின் பயனாகவே ஆரியர் எளிதில் இப் பரப்பில் முன்னேறினர் என்றும் முன்பிரிவுகளில் கூறினோம். ஒற்றுமையும் இன உணர்வும் அற்ற இப் பெருங்குடிமக்களிடையே வந்து கலந்த ஆரியர் இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியும் பெருக்கியும் நிலவரமாக்கியும் ஒரு நாடாயில்லாது ஒரு தனி உலகமாய் இருந்த இதனை உண்மையிலேயே பல நாடுகளாகவும் பல கண்டங்களாகவும் ஆக்கினர். திராவிடர்களிடையே நிலவிய தொழில் பாகுபாடும் நாகரிக உயர்வு தாழ்வுகளும், பிறப்பு வேற்றுமை, இன வேற்றுமை, சமய வேற்றுமைகளாக மாற்றப்பட்டன. ஒரே இனத்துட்பட்ட பல்வேறு அரசர் குலங்கள் ஞாயிற்றுவழி என்றும் திங்கள் வழி என்றும் அழற் கடவுள்வழி என்றும் பகுக்கப்பட்டன. மேலும் ஆரியச் சார்பென்றும் ஆரியர் காலமென்றும் திராவிடர் (சூத்திரர்) என்றும் ஆரியர் நலங்களுக் கேற்றபடி பகுக்கப்பட்டன. வேறுபட்டுப் பூசலிட்ட அவர்கள் பூசலிடையே ஆரியரும் அவரைச் சார்ந்தவரும் ஓரினமென ஒற்றுமையுற்று அவர்கள் ஆக்கத்தைச் சுரண்டித் தம் ஆக்கத்தை மேம்படுத்தினர். இதன் பயனாக வரலாற்றுக்கால இந்தியா ஒரு பைத்தியக்காரர் விடுதிபோலியங்கலாயிற்று. இருக்குவேத காலங்களில் தூய ஆரியர் உறைவிடமாகக் கெள்ளப்பட்ட ஏழு ஆற்றுநிலம் (சப்த சிந்து நாடு அதாவது பஞ்சாப் முதலிய வடமேற்குப் பகுதிகள்) இன்று முகமதிய சமயமும், பாரசீகச் சார்பு மொழிகளும் பயிலும் வேற்று நிலமாயிருக்கின்றன. இதிகாச காலத்தில் ஆரியரகம் என்று கூறப்பட்ட கங்கைநாடு (ஐக்கிய மாகாணங்கள்) ஆரிய, பாரசீக, அராபிக் கலவைச் சொற்களாலான இந்தி மொழிக்கு நிலைக்களமாயிற்று. பெரும்பான்மைத் திராவிடர் கலப்புப்பெற்ற வங்கம், கூர்ச்சரம், மராடம் முதலிய பகுதியிலுள்ள மக்கள் தம்மை ஆரியரெனக் கொண்டு பிற திராவிட மக்களை விலக்கி வாழ்ந்தனர். இதன் பயனாக வங்கம், பீகார், அஸாம் முதலிய இடங்கள் புத்த சமண இஸ்லாமிய சமயங்களின் நிலைக்களங்களாயின. முழுக்க முழுக்கத் திராவிடரே வாழும் மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் ஆகிய பகுதி மக்கள் ஆரியப் பூச்சுப்பூசி எப்படியாவது ஆரியராக இடம்பெற்று விடவேண்டும் என்ற பஞ்சை எண்ணத்தால் ஆரியர் உதைத்தும் அவர்கள் அடி வருடிகள் ஆயினர். ஆரியரால் சூத்திரர் என்று இவர்கள் அழைக்கப்படினும் தம்மைப்போல் அடிமைப்படாத சூத்திரரை (பழங்குடி மக்களை)த் தாழ்த்தி வைப்பதில் முனைந்து மன நிறைவடைகின்றனர். திராவிட உயிர்ப்பு முற்றிலும் அவியாது கொழுந்து வீசி இந்தியாவுக்கு அவ்வப்போது சமயம் நாகரிகம் கலை ஆகியவற்றை அளித்துக் காத்துவரும் இந்தியாவின் தாயகமான தமிழ் நாட்டிலும் தாம் ஆரியர் எனக் கொண்டு தருக்கும் ஒரு திராவிடப் பழங் குருதியினம் வடகலை உயரவும் தென்கலை தாழவும் பாடுபட்டுத் தன் தாய் யாரென்பதை அறியாது தாய்ப் பழி சூழ்கின்றது. இந்தியப் பரப்பு முற்றிலும் பழந் திராவிடக் குருதி குன்றாத பெருங்குடி மக்கள் தாழ்த்தப்பட்டு வேறு வகையின்றிப் புத்த சமண சமயங்களையும் முகமதிய கிறித்தவ சமயங்களையும் சார்ந்தும், சமய வகையில் விடுதலை பெற்றனரே யன்றி மொழி வகையிலும் நாகரிக வகையிலும் விடுதலை பெறாது தடுமாறுகின்றனர். இந் நிலையில் இந்தியாவின் வரலாறு பல நாடுகளின் வரலாறுகளாய் விட்டதில் வியப்பு எதுவுமில்லை. இந்தியா ஒரு நாடாக வேண்டுமானால் அதற்கு ஒருமை தந்த, தரும், இனமாகிய பழந் தமிழகத்தின் வழி தமிழரும் அவரைச் சார்ந்த திராவிடரும், சமய மொன்று தவிர அவர்களுடன் ஒன்றுபட்ட முகமதியரும் கிறித்தவரும் இப் பெரு நிலப்பரப்பின் வாழ்வில் ஆரிய நச்சுப் பூச்சுத் தவிர்ந்து தனி மக்களாதல் வேண்டும். ‘காலத்தால்’ ஏற்படும் இத்தகைய பிரிவினை ஒன்றாலன்றி இப் பெரு நிலப் பரப்பு ஒற்றுமைப் படுதல் அரிது. மேற்போக்காகப் பெயரளவில் ஒற்றுமை பேணி அடிப்படை வேற்றுமையின்மீது கட்டடம் கட்டுவது உண்மையில் மேன்மேலும் பிரிவினைகளை வரவழைப்பதேயன்றி வேறன்று. மேலே ஆராயப் போகும் உருசிய நாட்டின் அமைப்பு முறை இவ் வகையில் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு சிறந்த படிப்பினை தருவதாகும். திராவிட கால இந்தியாவின் அரசியல் முடியரசு நிலைப்பட்ட தாயினும் நகர் மன்றம், மாவட்ட மன்றம் ஆகியவற்றையும், செயற்குழு உட்குழு முதலிய ஆட்சி அமைப்பையும் உடையதாயிருந்தது. கங்கை நாட்டில் ஆண்ட நந்தரும் மோரியரும் பேரரசு ஏற்படுத்தி இவற்றைச் செயற்படுத்தினர். குப்தர் காலத்தில் அரசியல் தழைத்தோங்கிய தனால் அக் காலமே ஆரியர் பொன்னாட்சிக் காலம் என நிலவிற்று. தென் இந்தியாவிலும் தக்காணத்திலும் சளுக்கர் இரட்டர் (ராஷ்டிரகூடர்) ஆந்திரர், பல்லவர் முதலிய பலகால் வழிகளில் பேரரசர் ஏற்பட்டு இவற்றைப் பயன்படுத்தினர். கி.பி. ஆயிரத்தை ஒட்டிச் சோழரும் அவரைப் பின்பற்றி விசயநகர மன்னரும் மராட்டரும் தெற்கில் அரசு வகுத்தனர். வடக்கில் ஆப்கானியக் கால்வழியினனாகிய சேர்சாவும்(ளுhநச ளுhயா) முகலாயப் பேரரசர் அக்பரும் அரசியல் பொருளியல் வல்லுநராகிய அபுல்பாசல், தொடர்மால் ஆகியவர்கள் உதவியுடன் அதனை விரிவுபடுத்தினர். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டிஷ் வாணிகக் குழுவினர் ஆட்சி வகுத்தபோது பண்டை மரபுடன் வளர்ச்சி யடைந்த இம் முறையே சிற்சில மாறுதல்களுடன் பிரிட்டிஷ் ஆட்சி முறையாக மாறிற்று. இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் கொந்தளிப்பு களிடையேயும் அரசியல், சமய, வாழ்வியல் பண்புகள் உண்மையில் கெடாமல் நன்கு பேணப்பட்டு வளர்ந்தன என்பதை வரலாறு தெளிவுபடக் காட்டுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, பண்டைய இந்திய அரசியலின் நகராண்மையும் ஊராண்மையும் நகர்களில் சீர் குலைந்தாலும் சிற்றூர்களில் பேணப்பட்டு வந்தன. போர்களாலும் வெளிநாட்டார் போட்டியாலும் நகர்களின் கைத்தொழிலும் வாணிகமும் அழிந்தன. ஆனால் ஊர்களின் சிறு தொழிலும் உழவும் யார் கொள்ளையாலும் கெடாமல் நலிந்தேனும் வாழ இடமிருந்தது. அவற்றின் மூலம் அரசர் கால்வழிகள் மாறுபட்ட காலங்களிலும் ஆட்சி முறை கெடாத நிலைமைக்குத் தக்கபடி அலைகள் போல விழுந்தெழுந்து அமைந்தன. பிரிட்டிஷ் வாணிகக் குழு இந்தியாவை நாடி வந்தகாலம் பிரிட்டிஷ் இளைஞர் அமெரிக்காவில் குடியேறத் தொடங்கிய காலமாகிய 17-ஆம் நூற்றாண்டே. அந் நூற்றாண்டுக்குள் அமெரிக்கா பிரிட்டிஷார் கைவசமாயிற்று. இந்தியாவிலோ அவர்கள் வாணிகம் மட்டும் பரந்தது. 18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் அமெரிக்காவை இழந்தது; இந்தியாவைப் பெற்றது. கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆகிய முதற்கால வீரர் மூலமும், ஹேல்டிங்ஸ் பெருமகன், டெல்ஹெளசி போன்ற அரசியலார் மூலமும் இந்தியா படிப்படியாகப் பிரிட்டிஷ் ஆட்சியுட் பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் பம்பாய், வங்காளம், சென்னை ஆகிய மூன்று முதன் மாகாணங்கள் வகுக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதிக்குள் மீந்த மாகாணங்களும் அமைக்கப்பட்டன. வடமேற்கு எல்லை புறமும் அஸாமும் இறுதியில் இவற்றுடன் இணைக்கப்பட்டன. இலங்கை பர்மா பலூசித்தானம் ஏடன் ஆகியவை இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தம் ஆட்சி எது, வெளியார் ஆட்சி எது என்ற வேற்றுமை அறியாத இந்தியப் பெருநிலப்பரப்பின் பஞ்சை மக்களிடையே பிரிட்டிஷ் ஆட்சி வெளியாட்சி என்ற உண்மை மட்டும் எளிதில் பரந்தது. அதன் பயனாக இந்திய உலகின் வரலாற்றிலேயே முதன் முறையாக 1857-இல் மக்கள் எழுச்சி ஒன்று ஏற்பட்டது. இதனைப் படை வீரர் கிளர்ச்சி(ளுநயீடில ஆரவiலே) என்று பிரிட்டிஷார் கூறினர். இதன் பயனாக வாணிகக் குழுவின் கைவசமிருந்து பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ஆட்சி உரிமையை அகற்றி மன்றத்தின் இணக்கத்துடன் அவ் வாட்சியைப் பிரிட்டிஷ் மன்னர் பிரானிடம் ஒப்படைத்தது. பிரிட்டனின் மன்னரே இந்தியப் பேரரசராயினர். அவர் பெயரால் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் இந்திய முதல் தலைவர்(ழுடிஎநசnடிச ழுநநேசயட) மன்னரின் ஆட்பெயர்(ஏiஉநசடில) எனவும் வழங்கப்பட்டார். வாணிகக் குழுவின் இந்திய ஆட்சி உரிமை வாணிகக்குழு மன்றம்(க்ஷடியசன டிக ஊடிரnஉடைடடிசள) வசமிருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பகுதிகளெல்லாம் ஓர் ஆட்சித் தலைவர் (ழுடிஎநசnடிச) இருந்தனர். 1773-இல் ஏற்பட்ட ஒழுங்கு முறைச் சட்டத்தால் (சுநபரடயவiபே ஹஉவ) கல்கத்தாவிலுள்ள தலைவரே முதல் தலைவராயினர். தலைவரும் முதல் தலைவரும் குழுமன்றத்தைக் கலந்து அமர்த்திய மூன்று ஐரோப்பிய செயற்குழு உறுப்பினர் உதவியால் ஆட்சி செலுத்தினர். படைவீரர் கிளர்ச்சியின்போது பிரிட்டனில் ஆட்சி செலுத்தியவர் விக்டோரியா அரசி. இவர் இந்தியாவின் பேரரசி என 1858-இல் இந்தியாவிலும் முடி சூட்டப் பெற்றார். அச் சமயம் அவர் பழைய பிரிட்டிஷ் மன்னரைப் போலவே இந்திய மக்கள் நலங்களைப் பேணுவதாக உறுதியளித்து அவர்களுக்கு ஓர் அரசுரிமைத் தாள் வழங்கினர். இது இந்தியப் பேருரிமைத் தாள் எனப் பெயர்பெறும். இதன்மூலம் இந்திய மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், சமய, கலை, நாகரிக உரிமைப் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட்டன. மேலும் இந்தியப் பெருநிலப் பரப்பில் அமைதியைக் காப்பதுடன் நில்லாது பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக இந்தியரை விடுதலைக்கும் பொறுப்பாட்சிக்கும் கொண்டு செல்லும் என்று பிரிட்டிஷ் அரசியலின் பேரால் பேரரசியார் உறுதிமொழி தந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட அரசியலமைப்புக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் இதுவே அடிப்படையாயிற்று. பிரிட்டனில் முதல் ஹென்ரி அருளிய உரிமைத் தாளுடனும் ஜான் தந்த பேருரிமைத் தாளுடனும் இதனை ஒப்பிடலாம். விக்டோரியாப் பேரரசியின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பெருநிலப் பரப்பு முழுமையும்உண்மையில் ஒரே நாடாகவோ ஒரே தன்மையுடைய பேரரசாகவோ திகழவில்லை. சமய, கலை, நாகரிக வகைகளில் இந்தியாவில் ஏற்பட்ட வேறுபாடுகள் போதாமல் பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சியைப் பரப்பிய முறைகளால் வேறும் பல வேறுபாடுகள் நுழைந்தன. பிரிட்டிஷார் தம் ஆட்சியில் சேர்க்க முடியாது நேசநாடு என்ற நிலையில் விட்டுவிட்டு நாடுகள் சில. அவை இமய மலைச் சாரலில் உள்ள நேபாளம், பூட்டானம் ஆகியவை. இவற்றின் நிலை ஓரளவு இந்தியாவின் வட மேற்கிலுள்ள தனி நாடான ஆப்கானித்தானத்தைப் போன்றது. ஆயினும் பிரிட்டிஷாருடன் இவை மிக நெருக்கமான உறவு உடையவை. பிரிட்டிஷார் வருமுன்னும் வந்த பின்னும் அவர்களோடொப்ப வாணிக முறையில் வேறு சில வெளியார் தங்கள் ஆட்சி நிறுவிய இடங்கள் சிலவும் உண்டு. இவற்றுள் சந்திர நாகூர், பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்கள் பிரஞ்சு ஆட்சியிலும் சின்சுரா டச்சு ஆட்சியிலும் கோவா, தையூ, தாமன் முதலியவை போர்ச்சுகீசிய ஆட்சியிலும் நிலவும் சிறுபகுதிகள் ஆகும். வாணிகக் கழகத்தார் மூலம் பிரிட்டிஷார் நேரடியாகக் கைப்பற்றிய இடங்கள் மாகாணங்களாகவும் துணை மாகாணங் களாகவும் வகுக்கப்பட்டன. தொடக்கத்தில் மூன்று மாகாணங் களும், இந்தியா முற்றும் ஆட்சி பரந்தபின் மாகாணங்கள் பத்தாகவும் ஆயின. அண்மையில் 1939-இல் பர்மா தனி நாடாகப் பிரிவுற்றது. அதற்கிடையே ஒரிஸா, வடமேற்கு எல்லைப்புறம் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்போது 11 முதல் மாகாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தில்லி நகரமும் குடகும் தனி மாகாணங்களாக விளங்குகின்றன. பிரிட்டிஷார் ஆட்சியில் நேரடியாகச் சேராமல் பழைய மன்னர்கள் ஆட்சியிலேயே நின்ற பகுதிகள் உண்டு. அம் மன்னர்கள் பிரிட்டிஷ் மன்னர் பிரானுடன் பலபடியான உடன்படிக்கைகள் வகுத்துப் பேரரசின் கீழ்ப்பட்ட சிறு மன்னர்களாய் ஆள்கின்றனர். அவர்கள் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டதாயினும் இந்தியாவிலிருந்து பிரிந்த ஆட்சியாகும். இவர்கள் ஆளும் பகுதியைச் சிலர் சிறப்புப்பட இந்திய இந்தியா என்று விதந்து கூறுவர். ஆனால் உண்மையில் இந்திய இந்தியா என்பதைவிட இந்திய இந்தியாக்கள் எனப்படுவதே பொருத்தம். ஏனெனில் அவற்றின் அரசியல் ஒருவகைப்பட்டது அன்று. சிறிதும் பெரிதுமான இவற்றின் தொகை ஏழு நூற்றுக்குமேலாகும். நேசநாடு, துணை மன்னர்கள் நாடு, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் ஆகிய இவை எல்லாவற்றிலிருந்தும் வேறாகப் பழைய பண்படா மலைக் குடிகள் பகுதிகள் ஓர் ஆணையாளர் தலைமையில் நேரடியாக மன்னர்பிரான் ஆட்பெயரின் ஆட்சியிலிருக்கின்றன. இந்தியாவை அடுத்த நாடுகளிடையே பர்மா, பலுச்சித்தானம், இலங்கை, ஏடன் துறைமுகம் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டன. இவற்றுள் பலுச்சிஸ்தானம் ஒரு துணை மன்னர் ஆட்சியிலுள்ளது. பர்மா முதலிய பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுள் ஒன்றாகிப் பின் தனி நாடாயிற்று என்பது கூறப்பட்டது. இலங்கை ஒரு தலைவர் ஆட்சியுட்பட்டு இந்தியப் பேரரசுடன் இணைந்தாலும் நேரடியாக மன்னர் பிரானுடன் தொடர்புடைய குடியேற்றமாய் விளங்குகிறது. அராபிக் கடலிலும் வங்கக்குடாவிலும் உள்ள தீவுகளும் இதுபோல் நேரடியான ஆட்சி உடையவை. பிரிட்டிஷ் மாகாணங்களோ துணைமன்னர் நாடுகளோ மற்றப் பிரிவுகளோ உண்மையில் கலை, நாகரிகம், மொழி ஆகியவற்றை ஒட்டி இயற்கையாய் ஏற்பட்ட நாடுகள் அல்ல. வரலாற்று நிகழ்ச்சிகளின் பயனாகவும் பிரிட்டிஷ் ஆட்சியின் வாய்ப்புக்களை ஒட்டியும் ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகளே யாகும். மொழி, கலை, பொருள் நிலை, இனம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒட்டிய பிரிவினை வேண்டுமென்ற அவா அண்மையில்தான் எழுந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண ஆட்சியை அமெரிக்கா முதலிய கூட்டுறவு ஆட்சியுட்பட்ட தனியரசுகளுக்கும், தலைமை ஆட்சியைக் கூட்டுறவு அரசியலுக்கும் ஒருவாறு ஒப்பிடலாம். ஆனால் தொடக்கத்தில் தனி அரசுகளின் உரிமைகள் குறைவு. தலைமை அரசுக்கு உரிமை கூடுதல். அதுமட்டுமன்றி அவ் வுரிமை முற்றும் பிரிட்டனிலுள்ள இந்தியா அமைச்சர் இணக்கத்திற்கு உட்பட்டது. இந்தியா அமைச்சரோ மன்னருக்கும் மன்னர் சார்பில் பிரிட்டிஷ் அரசியல் மன்றுக்கும் பொறுப்பு உடையவர். இவ் அரசியல் முறையில் நடைமுறைத் தலைவர் எவரும் மற்றக் குடியாட்சியின் ஆட்சியாளர்களைப்போல் கீழ்நோக்கி ஆட்சிக்கு உட்பட்ட பொது மக்களைக் கவனிப்பதில்லை. படிப்படியாக மேல் நோக்கித் தம்மினும் உயர்ந்த ஆட்சியாளரையும் முடிவாகப் பிரிட்டனில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசியல் மன்றையும் கவனிப்பவர்களாகவே அவர்கள் அமைந்துள்ளனர். ஆகவே, இந்தியாவின் இவ் ஆட்சி முறையை அரசயலறிஞர் குடியாட்சி என்றோ பொறுப்பாட்சி என்றோ கூறுவதற்குச் சற்றும் இடமில்லை. அதனை நேர்மையான வல்லாட்சி என்றோ, வல்லுநர் ஆட்சி என்றோ, படி முறை ஆட்சி என்றோதான் கூறமுடியும். இம் முறை 1935 அரசியல் சீர்திருத்தத்தின் பின்கூட மாறாமலே இருந்து வருகிறது. இந்திய அமைச்சர் பிரிட்டிஷ் அமைச்சர் குழுவினுட்பட்ட ஒரு அமைச்சர். எனவே. அவர் மற்ற பிரிட்டனின் அமைச்சர்கள் போலவே முதலமைச்சரைக் கலந்து மன்னரால் அமர்த்தப் படுபவர். இந்திய முதல் தலைவரும் அதுபோலவே முதலமைச்சர் துணைகொண்டு மன்னரால் ஐந்தாண்டுக்காலத்துக்கு அமர்வு பெறுபவர். அவருக்குத் துணையாக நடைமுறைக் கழகம் ஒன்றும் சட்டமன்றம் ஒன்றும் இருந்தன. நடைமுறைக் கழகத்தின் உறுப்பினர் ஆட்சித் தலைமை நிலையத்துடன் கலந்து மன்னர் ஆட்பெயரால் அமர்த்தப்பட்டனர். அவர்கள் தொடக்கத்தில் முற்றிலும் ஐரோப்பியரே. சட்டமன்றத்திலும் பெரும்பாலும் ஐரோப்பியரே. இவ் அரசியல் மன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்று. சட்டங்கள் ஏற்படுத்தும் உரிமை அதற்கிருந்ததாயினும் அவ்வுரிமை பிரிட்டிஷ் அரசியல் மன்றத்திற் கடங்கியதே யாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவில் போரோ கலவரமோ மிகுதியின்றி அமைதி நிலவிய காலம். நடந்த ஒரு சில போர்களும் நாட்டைத் தாக்காத முறையில் வடமேற்கு எல்லையிலும் பர்மாவிலும் நடந்தவையே. அரசியல் வாழ்விலும் படைவீரர் கிளர்ச்சி போன்ற எழுச்சி எதுவும் பிரிட்டிஷ் அரசி ஆட்சியேற்ற பின் ஏற்படவில்லை. நாட்டின் பழைய குடித் தொழில்கள் பொறிவகை மேம்பாட்டினால் அழியினும், பொதுப்பட வாணிகம் மேம்பட்டு வந்தது. பழைய பழக்க வழக்கங்களில் மிகக் கொடியவை எனத் தோன்றிய உடன்கட்டை முதலிய சில அகற்றப்பட்டன. இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான பொது வழக்கு நடைமுறைச் சட்டம், குற்றவழக்கு நடைமுறைச் சட்டம், குற்றச்சட்டம் ஆகியவை தொகுக்கப்பட்டன. இவற்றாலும் அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்களாலும் பட்டம் பதவிகளாலும் படித்த இந்தியர் மனமமைந்திருந்தனர். 1861-இல் இந்திய அரசியல் மன்றச் சட்டம் பிரிட்டனில் நிறைவேறிற்று. இதன் மூலம் தேர்தலுரிமை ஏற்படவில்லை யாயினும் இந்திய சட்ட மன்றத்தில் அரசியல் பணியாளரல்லாத வர்களும் உறுப்பினர் ஆக அமர்த்தப்பட்டனர். மாகாணங்களிலும், சென்னை பம்பாய் ஆகியவற்றில் சட்ட மன்றங்கள் ஏற்பட்டன. படிப்படியாக வங்காளத்திலும் பிற மாகாணங்களிலும், சட்டமன்றங்கள் உண்டாயின. 1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டப்படி ஏற்பட்ட கல்கத்தா உயர்நிலை வழக்குமன்றம் அகற்றப்பட்டுச் சென்னை, வங்காளம், பம்பாய் ஆகிய மாகாணங்களில் தனித்தனி தலைமை வழக்கு மன்றங்கள் அமைக்கப்பட்டன. இவை கடந்த மேல் வழக்குகள் பிரிட்டனின் மன்னரவைக்கு(ஞசiஎல ஊடிரnஉடை) அனுப்பப்பட்டன. 1880 முதல் 1884 வரை மன்னர் ஆட்பெயராயிருந்த ரிப்பன் பெருமகனார் ஆங்கில உயர்நிலைக் கல்விக்கான பல்கலைக் கழகங்கள், நாட்டாண்மை அரசியல் நிலையங்கள்(டுடிஉயட ளுநடக ழுடிஎநசnஅநவே) ஆகியவைகளை ஏற்படுத்தினார். அத்துடன் தாய்மொழிச் செய்தித்தாள்களுக்கிருந்த கட்டுப்பாட்டை அவர் அகற்றினார். தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சில சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இந்தியப் பெருநிலப் பரப்பின் உயர்நிலை வகுப்பார் இச்சீர்திருத்தங்களால் மிகவும் நன்மையடைந்தனர். ரிப்பனை அடுத்து முதல் தலைவரான டப்பரின் பெருமகனார் (1884-1888) காலத்தில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் வரையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நோக்கத்துடன் செல்வரும் படித்த வகுப்பினரும் இந்திய நாட்டுரிமைக் கழகம்(ஐனேயைn சூயவiடியேட ஊடிபேசநளள) ஒன்று ஏற்படுத்தினர். இவ்வாண்டு முதல் பெரும்பாலும் ஆண்டுதோறும் அது கூடி மக்கள் நிலைகளைப்பற்றி ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேறிற்று. 1892-இல் எல்சின் பெருமகனார் முதல்தலைவரா யிருக்கையில் இந்திய சட்டமன்றத்தில் பணியாளரல்லாத உறுப்பினர் தொகை கூடுதலாக்கப்பட்டதுடன் வரவு செலவுத் திட்டம் பற்றி ஆராயவும் இடைக்கேள்விகள் கேட்கவும் உரிமைகள் தரப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியிலமைந்த மன்னர் ஆட்பேர்களுள் திறமை காரணமாகப் பிரிட்டிஷார் போற்றுதலையும் வெறித்த வல்லாட்சி காரணமாக இந்திய மக்கள் வெறுப்பையும் ஒருங்கே அடைந்தவர் கர்சன் பெருமகனார். இவர் செய்த சீர்திருத்தங் களுள் ஒன்று 1905-ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளப் பிரிவினை. வங்காளம் ஒரே மாகாணமாக ஆட்சி செய்யப்பட முடியாதபடி அவ்வளவு பெரிதானதால் இப்பிரிவினை வேண்டப்பட்டது என அவர் கூறினார். ஆனால், மொழி, பழக்கவழக்கங்கள், நாட்டுப்பற்று ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒரு நாடாய் இணைந்து நின்ற வங்கத்தின் மக்கள் இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1911-இல் இது போன்ற இன்னொரு மாறுதல் ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது முதல் கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. இப்போது தலைநகரம் தில்லியாக மாற்றப்பட்டது. ஆட்சி ஒழுங்கிற்காகவென்று செய்யப்பட்ட இவ்விரண்டு மாறுதல் களும் இந்து முஸ்லிம் வேற்றுமைக்கு விதையாய் அமைந்தன. 1909-ஆம் ஆண்டில் இந்தியா அமைச்சராயிருந்த மார்லியும் முதல் தலைவராயிருந்த மின்டோவும் சேர்ந்து மின்டோ-மார்லிச் சட்டம் என்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அக்காலை நாட்டுரிமைக் கழகத்தில் தலைமை பெற்றிருந்த அரசியலறிஞருள் சிலர் இதனை ஏற்றும் சிலர் எதிர்த்தும் வந்தனர். இதிலிருந்து ஆங்கில நாட்டைப் போலவே இந்தியாவிலும் ஒரு நடுநிலைக் கட்சி ஒன்றும் துணிந்த முற்போக்குக் கட்சி ஒன்றும் ஏற்பட்டன. 20ஆம் நூற்றாண்டில் அடிக்கடி இத்தகைய பிளவுகள் ஏற்பட்டன. ஆயினும் தொடக்கத்தில் நடுநிலையாளரே சிறுபான்மை யோராகி விலக நேர்ந்துள்ளது. முற்போக்குக் கட்சியே வலிபெற்று நாட்டுரிமைக் கழகத்தில் பேராதரவு பெறலாயிற்று. மின்டோ மார்லிச் சீர்திருத்தத்தின்படி இந்தியா அமைச்சரின் கழகத்தில் ஐரோப்பியரல்லாதார்க்கு இடம் ஏற்பட்டது. இந்தியாவிலும் அரசியல் நடைமுறைக் கழகத்தில் உறுப்பினர் தொகை விரிவுபடுத்தப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தின்மீது ஆராய்ச்சி செய்யும் முன்னைய உரிமையுடன் சேர அதில் திருத்தங்கள் கொண்டுவரும் உரிமையும் தரப்பட்டது. மாகாணங்களிலும் பம்பாய், சென்னை ஆகியவற்றில் நடைமுறைக் கழகத்தில் இந்தியர் அமர்வுபெற்றனர். மாகாணக் கீழவைகளில் பணியேலாதவர் தொகை கூடுதலாக்கப்பட்ட துடன் அவர்களுள் ஒரு பகுதியினர் குறுகிய பரப்புடைய மொழித்தரவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1914-இல் தொடங்கி 1918 வரை நடந்த முதலுலகப் போரில் இந்தியவீரர் ஒரு கோடிவரை ஈடுபட்டு இந்தியாவிற்குப் பெருஞ்சிறப்பும் புகழும் தந்தனர். அதன் பயனான இந்தியருக்கு மிகுதியான அரசியல் உரிமை தருவதாகப் போர்க்காலத்தில் உறுதிமொழி தரப்பட்டது. ஆனால் போர்முடிவில் நிலைமை மிகவும் மாற்றம் அடைந்தது. இந்திய நாட்டுரிமைக் கழகத்தில் மீட்டும் பிளவு ஏற்பட்டு விடுதலை ஆர்வத்தில் முனைப்புடைய கட்சி மறுபடியும் நடுநிலையாளரை விலக்கி யெழுச்சி பெற்றது. சமய ஆர்வமிக்க முஸ்லிம்கள் உலகில் ஒரே இஸ்லாமியப் பேரரசாயிருந்த துருக்கி தோல்வியுற்று வீழ்ச்சியடைந்ததால் சீற்றங் கொண்டனர். நாட்டுரிமைக் கழகத்தில் காந்தியார் தலைமையில் எழுந்த முனைப்புக்கட்சி இச்சீற்றத்தைப் பயன்படுத்தி நாட்டில் ஒத்துழையாமைக் கனலை மூட்டிற்று. கிளர்ச்சி வேகத்துக் கிணங்க அடக்குமுறை வேகமும் எழுந்தது. இக்குழப்பநிலையில் 1919-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு சீர்திருத்தம் வழங்கப்பட்டது. இதுவே மாண்டேகு-செம்ஸ்போர்டுச் சட்டம்(ஆடிவேயபரந-ஊhநஅளகடிசன சுநகடிசஅள) ஆகும். ஒத்துழையாமை இயக்கத்தார் இச் சீர்திருத்தம் பிற்போக்கானது என்று கூறி எதிர்த்தனர். இதற்கிடையில் சென்னையில் உயர்குடியினரே ஆங்கில ஆட்சியுடன் முற்றிலும் தழுவிப் பணிகளையும் அரசியலுரிமைகளையும் முற்றிலும் கைக்கொள்வதை எதிர்த்துத் திராவிடரிடையே செல்வரும் படித்தவர்களும் சேர்ந்து நேர்மைக்கட்சி(துரளவiஉந ஞயசவல) ஒன்றமைத்தனர். இவர்களுடன் வட நாட்டிலும் அரசியலில் நாட்டுரிமைக் கழகத்திலிருந்து ஒதுங்கி நின்ற சிலர் நடுநிலைக்கட்சி அமைத்து மாண்டேகுச் செம்ஸ்போர்டுச் சீர்திருத்தத்தை ஏற்று நடத்த முன்வந்தனர். சில ஆண்டுகளுக்குள் நாட்டுரிமைக் கட்சியிலும் தன்னாட்சிக்கட்சி(ளுறயசயத ஞயசவல) என்ற ஓர் உட்பிரிவு ஏற்பட்டுச் சட்டமன்றில் புகுந்து பணியேற்றது. ஒத்துழையாமைக் காலத்துக்குப் பின் தென்னாட்டைப் போல் வடநாட்டிலும் நாட்டுரிமைக் கட்சிக்கு எதிர்ப்புத் தோன்றிற்று. இந்தியக் கட்சிகள் மற்ற நாட்டுக் கட்சிகளைப் போல் அரசியல் கட்சிகள் அல்ல. வகுப்புக்கட்சிகளே என்பதைத் தென்னாடு அறிய முற்பட்டதுபோல் வடநாடும் அறியத் தொடங்கிற்று. தென்னாட்டில் நாட்டுரிமைக் கட்சியைத் தம்வயப்படுத்தியவர்கள் ஆரியச்சார்பாளரான பார்ப்பனரும் அவர்கள் துணையால் ஏழைமக்களைச் சுரண்டிய செல்வருட் சிலருமே. பிற செல்வர் பொதுமக்கள் துணைவராய் அவர்களை எதிர்க்க முற்பட்டனர். வடநாட்டிலே ஆரியச் சார்பாளர் இந்துக்கள் என்று தம்மைக்கூறிய அனைவரையும் ஒன்றுபடுத்தித் தம் வயமாக்கினர். துருக்கிப் பேரரசு வீழ்ச்சியால் சீற்றங் கொண்டிருந்த மக்களையும், அவர்கள், தம்முடன் சிலகாலம் சேர்த்துக்கொள்ள முடிந்தது. ஆனால், முஸ்லிம்களிடையே தலைமைவகித்த அறிஞர்கள் நாட்டார்வத்தின் பெயரால் பிற இனத்தவர் தம் இனநலம் பேணுகின்றனர் என்று கண்டு முஸ்லிம் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் குழாம்(ஆரளடiஅ டுநயபரந) ஒன்று அமைத்தனர். இந்தியர் என்ற பெயரில் ஆரிய உயர்வை நிலைநாட்டவே நாட்டுரிமைக் கழகம் பாடுபடுவது கண்ட முஸ்லிம் குழாத்தின் தலைவர் நாளடைவில் தம் இனம் தனி நாட்டு மக்கள் கொண்டது(ளுநயீநசயவந சூயவiடிn) என்பதை உணர்ந்து தனி நாடு வகுக்கும் முயற்சியை மேற்கொண்டார். தென்னாட்டு நேர்மைக் கட்சியைப் போலவே இவர்களும் தனித்தேர்தல் தொகுதி, ஒதுக்கப்பட்ட மொழித்தரவுரிமை ஆகியவை கோரினர். சமயவிடுதலை பெறாது தம்மை இந்து என்றும் ஆரியரென்றும் நம்பிய திராவிட இனத்திலும் சமய விடுதலைபெற்ற இம்முஸ்லிம் திராவிட இனம் வலிமையுடையது என்று கண்ட ஆரிய இந்துக்கள் அவர்களுக்குத் தனித்தொகுதி, தனிமொழித்தரவுரிமை ஆகியவை தந்து தம் வயமாக்க முயன்றும் விழிப்படைந்த முஸ்லிம்கள் நாளடைவில் தனிநாடு வகுப்பதிலேயே முனைந்து நின்றனர். 1919 ஆம் ஆண்டுச் சட்டம் தற்காலிகமுறையாகத் தரப்பட்ட தென்றே அரசாங்கம் கொண்டது. எனவே பத்தாண்டுக்கு ஒரு முறையாகப் பிரிட்டிஷ் அரசியல் மன்ற அவைகளின் இணைந்த குழு ஒன்று அனுப்பப்பட்டது. அது கண்டறிவித்த அறிக்கைப்படி சீர்திருத்தம் புதுப்பிக்கப்படவேண்டும் என்ற வாசகம் அச்சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதன்படி 1928-இல் ‘சைமன்குழு’ என்று பெயர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ஐரோப்பியர் அல்லாதார் இடம் பெறாததால் நாட்டுரிமைக் கழகமும் பிறகட்சிகளும் அதனை எதிர்த்தன. தென்னாட்டு நாட்டுரிமைக் கட்சியில் மேலோங்கிய பார்ப்பனர்களை எதிர்ப்பதில் முனைந்த நேர்மைக்கட்சி ஒன்று மட்டுமே அதனை வரவேற்றது. இதனையடுத்து நாட்டுரிமைக் கட்சியும் முஸ்லிம் குழாமும் முழுவிடுதலையை (அதாவது பிரிட்டிஷ் பேரரசைச் சாராது தனியாட்சி நிறுவுவதை)க் கொள்கையாக ஏற்றன. முன்னைய கட்சி 1930-31-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் முனைந்து நாட்டார்வத்தின் பேரால் வளர்ச்சியுற்றது. முஸ்லிம் குழாமும் முஸ்லிம்களைத் தட்டியெழுப்பி முஸ்லிம் பொதுமக்களிடையே பெருத்த ஆதரவு பெற்றது. 1935-இல் குடியாட்சியின் தன்மையும் பொறுப்பாட்சியின் தன்மையும் மாகாண அரசியலிலேனும் இடம்பெறும் முறையில் அடுத்த பெரும்படியான முன்னேற்றம் தரப்பட்டது. இது அவ்வாண்டு ஆகஸ்டு 8இல் பிரிட்டிஷ் அரசியல் மன்றில் நிறைவேறி மன்னர்பிரான் இணக்கம் பெற்றது. இது மாகாணங்களில் மட்டுமே பொறுப்பாட்சியைப் பேரளவில் தந்ததோடு மேலரசியலையும் சீர்திருத்துவதற்கான முதற் படிகளை உட்கொண்டதா யிருந்தது. இந்தியப் பெருநிலப் பரப்பின் விரிவுக்கும் பல்வகைப் பெருக்கத்திற்கும் அரசியல் முறையில் ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகட்கும் ஏற்றவகையில் இந்திய அரசியலை அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளின் அரசியலைப் போலவே கூட்டுறவு அரசியலாகக் கொள்வதென இச்சட்டம் ஒத்துக்கொண்டது. இக்கூட்டுறவில் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் உடனடியாகச் சேர்வதென்றும் துணைமன்னர் நாடுகள் தம் விருப்பப்படி அவ்வப்போது சேர்வதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டத்தின் கருத்து முற்றிலும் நிறைவேற்றப் பட்டால் பழைய நடைமுறைக் குழுவிற்கு மாறாக இச்சட்டத்தின்படி 10க்கு மேற்படாத அமைச்சர்கள் முதல்தலைவரால் அமர்த்தப்படுவர். கட்சிகள் பலவற்றின் கட்சிப் பிணக்குகளிடையே இக்கூறு முற்றிலும் நிறைவேறவில்லை. பழைய நடைமுறைக் குழுவே தொடர்ந்து நின்று தொகையில் விரிவுபெற்று வந்திருக்கிறது. சட்டத்தின்படி அரசியல் மேலவையில்(ஊடிரnஉடை டிக ளுவயவந) பிரிட்டிஷ் இந்தியாவில் குறுகலான ஒரு தேர்தல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 156 உறுப்பினர்களும் துணைமன்னர் நாடுகளிலிருந்து அமர்வுபெற்ற 104 உறுப்பினரும் இருப்பர். மூன்றாண்டுக்கு ஒருமுறை பிரஞ்சு மேலவையைப் போல் இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருள் மூன்றில் ஒரு பகுதியினர் விலக, புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலவையின் தேர்தல் தொகுதியில் நூறாயிரம்பேர் வரைமொழி உரிமை உடையவர்கள். கீழவையில் மொத்தம் உறுப்பினர் 375 பேர். இவர்களில் 250 பேர் பிரிட்டிஷ் இந்திய மாகாண அவைகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். கீழவையின் தேர்தல் இங்ஙனமாக மறைமுகத் தேர்தலாகும். 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின் முற்போக்குமிக்க பகுதி மாகாண அரசியலேயாகும். இதில் மொழியாளர் தொகுதி மிகவும் விரிவாக்கப்பட்டது. முன்னைய மொழியாளர்கள் மட்டுமன்றி 18 ஆண்டுகட்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இதில் உரிமை பெற்றனர். ஆயினும் நூற்றுக்கு எட்டுப்பேரே கையொப்பமிடத் தெரிந்தவர்களா யிருக்கும் இப்பெருநிலப் பரப்பில் இம் முன்னேற்றத்தால் நூற்றுக்குப் பத்துப் பன்னிரண்டு விழுக்காடுதான் உரிமை பெற்றனர். எல்லா மாகாணங்களும் சேர்ந்து இதன்படி உரிமை பெற்றவர்கள் ஏறக்குறைய மூன்றுகோடிப்பேர். சிறுபான்மை வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகியவர்கட்கும் வெளிநாட்டு வணிகர் நலங்களுக்கும் பாதுகாப்பளிப்பதை முன்னிட்டு மாகாணத்தலைவர் முதல் தலைலவர் ஆகியவர்கட்குச் சட்டங்களை ஏற்கவும் மறுக்கவும் உரிமைகள் தரப்பட்டன. ஆயினும் பொறுப்பாட்சியற்ற மேலரசியலில் இப் பாதுகாப்பு வேண்டப் படுவதன்று. மாகாண ஆட்சியில் உண்மையில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படா தென்று அமைச்சர்களுக்கு உறுதி தரப்பட்டது. மேலரசியலைப் போலல்லாமல் மாகாணங்களில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைகளிலிருந்தே தெரிந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கே பொறுப்புடையவரா யிருந்தனர். எனவே, முதல் தடவையாகப் பேரளவில் பொறுப்பாட்சி இச்சட்டத்தால் மாகாணங்களில் வழங்கப்பட்டது என்னலாம். ஒரு சில தனி உரிமைகள் நீங்கலாக மாகாண அரசியலிற்பட்ட உரிமைகள் யாவும் அமைச்சர் ஆட்சிக்கு வந்தன. ஆயினும் மேலரசியலைச்சார்ந்த துறைகள் பல இருந்தன. மேலரசியலில் பொறுப்பாட்சி இல்லாததால் உண்மையில் இவ்வாட்சி குறைபட்ட பொறுப்பாட்சியேயாகும். இப் புதிய சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தலில் மேலரசியல் மன்றிலும் மாகாணங்களிலும் முஸ்லிம்க ளல்லாத தொகுதிகளில் நாட்டுரிமைக்கட்சி பெருவாரியாக இடம் பெற்றது. சென்னை, பம்பாய், ஒன்றுபட்ட மாகாணம் முதலிய ஏழு மாகாணங்களில் அது அமைச்சர் குழு அமைத்து ஆண்டது. முஸ்லிம்கள் மிகுதியான மாகாணங்களில் மட்டும் அது இடம் பெறவில்லை. ஆயினும் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பின் போரில் நாட்டுரிமைக் கட்சி பிரிட்டனுடன் ஒத்துழைக்க மனமில்லாது ஆட்சியைக் கைவிட்டது. சிற்சில இடங்களில் மற்றக்கட்சிகள் தனித்தும கூடியும் வந்து ஆட்சி செலுத்தின. சில இடங்களில் நடைமுறைக் குழு அல்லது(ஹனஎளைடிச’ள சுநபiஅந) அறிவுரையார் குழு ஆட்சி நடைபெற்றது. போர்க்காலத்திலும் அதன் பின்னும் நாட்டுரிமைக் கட்சியின் பிடியினின்று இரண்டினங்கள் திமிறி எழுந்து வருகின்றன. இன்னோரினம் எழ முயன்று வருகின்றது. உண்மையில் இம்மூன்றினங்களும், திராவிட இனத்தின் முப்பெருங்கிளைகளே. முதலில் எழுச்சிபெற்று வீறுடன் தனிநாடு வேண்டிய கிளை இனம் சமயவகையில் ஆரியப் பூச்சுக்குட்பட்ட திராவிட சமயத்தினின்றும் விடுதலைபெற்ற முஸ்லிம் இனமேயாகும். அது நாட்டுரிமைக் கட்சியுடன் போராடுமளவு சரிநிகர் வலிமைபெற்று விளங்குகிறது. தமக்கென அவ்வினம் தெய்வநாடு (பாகிஸ்தான்) என்ற தனி நாடு கோரி நிமிர்ந்து நிற்கின்றது. அடுத்தபடி தென்பகுதியில் சிலர் பழைய நேர்மைக்கட்சியிடையே முனைந்து நின்ற முற்போக்குக் கிளைக்கட்சிக்குத் திராடவிடர் கழகம் எனப் புதுப்பெயர் சூட்டித் திராவிடநாடு கோரி நிற்கின்றனர். முஸ்லிம்களைப் போல் சமயவிடுதலையும் பெறாமல் திராவிடர்போல் வாழ்வியல் உரிமையும் பெறாமல் ஆரியர்க்கும் ஆரியர் வயப்பட்டு அவர்களுடன் ஒன்றுபட்ட வடநாட்டுத் திராவிடக் கலப்பினத்தாரான போலி ஆரியர்க்கும் அடிமைப்பட்டு நின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்து உரிமைபெற முயன்று வருகின்றனர். அரசாங்கம் அவர்கள் மேல் அருளிரக்கம் காட்டிவருகிறதாயினும் அவர்களை உயர்த்துவதற்காகப் பிற இனங்களைப் பகைக்கத் துணியவில்லை. நாட்டுரிமைக் கட்சியில் ஆக்கம் பெறும் உயர்குடிச் செல்வரும் ஆரியரும் தம்முடன் சரிநிகர் நிலையில் போட்டியிட முடியாத அவர்களிடம் இரக்கம் காட்டிக் கொடை வழங்க முன்வரினும் வேற்றுமையகற்றி உயர்த்தத் துணியவில்லை.திராவிடர் கழகமும் முஸ்லிம் குழாமும் அவர்களுடன் ஒத்துணர்வு கொள்ளினும் தத்தம் ஆக்க வேலைகளில் சிக்கிக் கிடக்கின்றன. அவர்கள் நிலைமைகளும் தாழ்த்தப்பட்டோரினும் மிகவும் வேறுபட்டவை. இந்நிலையில் இவ்வினம் இன்னும் தலை தூக்கியெழாதிருக்கின்றது. முதலிருபிரிவுகளில் குறித்தபடி இந்திய உலகம் அடிப்படையில் ஒரே திராவிடப் பண்புடையதாக இருப்பதால் ஒரே பரந்த பெருங்கூட்டுறவு ஆட்சிக்குரியதேயாயினும் அப் பண்பு சீர்கெட்டிருக்கும் இன்றைய நிலையில் தனித்தனி வாழ்வு பெற்றே ஒரேநிலை உயர்வும் ஒருமைப்பாடும் எய்தல் முடியும். சமயவிடுதலையேனும் பெற்ற முஸ்லிம்கள் இதில் முன்னணியில் நிற்பது இயல்பே. வாழ்வியல் விடுதலையை ஓரளவு இழவாது கலை, நாகரிகத் துறையில் ஆரியருக்கு இன்னும் மேம்பட்டு நிற்கும் திராவிடர் கிளையான தமிழகத்தார் அடுத்தபடி தலைiமை ஏற்பது உறுதி. அவர்களைப் பின்பற்றித் தம் இனப்பெயர் கூறக்கூசும் பிற திராவிடரும், தம் இனமறியா வடநாட்டுத் திராவிடரும் எழவேண்டும். தாழ்த்தப்பட்டவர் நிலையும் அதனினும் சிறப்பாக மலைநாட்டு மக்கள்(ழடைட கூசiநௌ) நிலையும் உண்மையில் மேலைநாடுகளின் நீக்ரோவர், செவ்விந்தியர்நிலை போன்றவை. இவ்வியக்கங்கள் அவர்களையும் விழிக்கச் செய்து சரிநிகர்நிலை ஏற்படுத்தியபின் இவ்வெல்லா நாடுகளும் ஒரே அரசியலில் இணைதல் கூடும். அதுவரை அவற்றின் தனிவளர்ச்சிகளைத் தடையாது தனித்தனி தேர்தல் தொகுதி(ளுநயீயசயவந நுடநஉவடிசயவநள), தனிப்பெயராண்மை(ளுயீநஉயைட சுநயீசநளநவேயவiடிn), தனி ஆட்சி உரிமை(ளுநயீயசயவந ளுநடக ழுடிஎநசnஅநவே) ஆகியவை பெறும்வகையில் கட்டுப்பாடற்ற பாதுகாப்பு அளிக்கும் அரசியல் முறையே நன்மை அளிப்பதாகும். அத்தகைய பெருமித நோக்குடைய அரசியல் அமைக்க உருசிய நாட்டின் அரசியல் நடைமுறை ஒரு பெரிய வழிகாட்டியாகும். 10. உருசியப் பெருநாடும்- பொதுஉடைமை ஆட்சியும் உலகுக்கு அரசியல் வகையில் படிப்பினை தரும் நாடுகளில் பிரிட்டனைவிட உருசியாவின் சிறப்புக் குறைந்ததன்று. ஏனெனில் பண்டைய ஆரியரல்லாதார் உலகிலிருந்து தற்கால உலக நாகரிக அரசியலுக்கு வருவதற்கான ஏணி பிரிட்டனானால், தற்கால உலகினின்றும் எதிர்கால உலகுக்குச் செல்லும் ஏணியின் முதற்படியாய் அமைந்துள்ளது உருசியா என்பதில் ஐயமில்லை. நம் நாட்டைப்பற்றிய வரை உருசியாவினால் நமக்குக்கிட்டும் படிப்பினை பிரிட்டனால் கிடைப்பதைவிடப் பன்மடங்கு மேம்பட்டதே. ஏனெனில் சூழ்நிலையால் முன்னைய சிறப்புக்கள் இழந்து அலைக்கழியும் நம்நாடு, மற்ற நாடுகளைவிடப் பிற்பட்டிருப்பதால் வளர்ச்சிமுறையிலும் பிற்பட்டே செல்ல வேண்டுவதில்லை என்பதை உருசிய நாட்டின் வரலாறு காட்டுகிறது. எப்படியெனில் ஒரு கால்நூற்றாண்டுகளுக்கு முன்வரை உருசிய நாடு பலவகையில் நம் நாட்டின் நிலையிலேயே இருந்தது. பிரிட்டன் முதலிய மேலை நாடுகளால் கைக்கொள்ளப்பட்ட ஆசிய நாடுகளைவிட அது பிற்பட்டது என்று கூறத்தக்க வகையிலேயே இருந்தது.எனவே, முற்போக்கானவை என்று கூறப்படும் நாடுகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தைப் பிற்போக்கான ஒரு நாடு அவ்வளவு நாட்கள் காத்திராமல் விரைவிலேயே அடையக்கூடுமானால் முன் முற்போக்கடைந்த நம்நாடு ஏன் அத்தகைய முன்னேற்றம் அடைதல் முடியாது? முடியும் என்பதனையும் முடிவது அரிதாயின் அதன் காரணங்களையும் அந்நாட்டின் ஆராய்ச்சியால் நாம் அறியலாம் அன்றோ? பரப்பு, மக்கள் தொகை, இனம், மொழி, சமய வேறுபாடுகள் ஒற்றுமையின்மை ஆகிய எல்லா வகையிலும் உருசியா இந்தியாவை ஒத்த நாடு. பரப்பில் அது இந்தியாவைப் போல் ஐந்து மடங்கு பெரிது. ஆனால் மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு பங்கு. அதில் உருசிய இனத்தவரின் உட்பிரிவினரான பேருருசியர், சிற்றுருசியர், வெள்ளை உருசியர் ஆகியவர்களும், போலர்களும் (போலந்து மக்கள்) யூதர்களும், பின்களும் (பின்லாந்து மக்கள்) எலட்களும் (லாட்விய மக்கள்) துருக்கியரும் தார்த்தாரியரும் கக்கேசியரும் மங்கோலியரும் உள்ளனர். உருசிய நாட்டின் இவ்வினப்பெருக்கம் இந்தியா நீங்கலாக மற்ற எந்தப் பரப்பிலும் மிகுதியே. சமய வகையிலும் கிறித்துவமதத்தின் பல உட்பிரிவுகளும் இஸ்லாமும் உள்ளன. இதிலும் இந்தியாவிற்கு இது குறைவான பெருக்கமுடையதே. மொழியிலும் இந்தியாவிலுள்ள மொழிகளுக்கு இந்நாட்டின் மொழிவகைகள் எவ்வளவோ குறைவுதான். இப்போது உருசிய நாடு மேற்கே பால்டிக் கடலையும் வடக்கே வடமாகடலையும் கிழக்கே பசிபிக் மாகடலையும் சப்பானையும் தெற்கே மங்கோலியா, மஞ்சூரியா, சீனா, இந்தியா, ஆப்கானித்தானம், பாரசிகம். காஸ்பியன்கடல், காக்கசஸ் தொடர், கருங்கடல், தானியூப் ஆறு, ருமேனியா, ஹங்கேரி, செக்கோஸ்லவேகியா, போலந்து, செர்மனியின் கிளை நாடாகிய கிழக்குப் பிரஷ்யா ஆகியவற்றின் எல்லைகளையும் தன் எல்லைகளாகக்கொண்ட பரப்பு ஆகும். இதன் தலைமையான நில இயல்கூறுகள் ஐரோப்பாவில் பால்டிக்கரையோர நாடுகளான லிதுவெனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகியவையும் உருசிய நாடும், உக்ரேனும், ஆகிய ஐரோப்பிய எல்லையில் காக்கசஸ் பகுதியும், ஆசியாவில் சைபீரியா, தார்த்தாரி (துருக்கித்தானம்) மங்கோலியா ஆகியவையும் ஆகும். இவற்றுள் தொடக்கத்தில் உருசிய அரசர் ஆண்டது பால்டிக் முதல் யூரல் மலைவரையுள்ள உருசியப் பகுதியை மட்டுமே. படிப்படியாகப் பண்டைய உருசிய அரசர் ஐரோப்பிய உருசியா முழுமையும் வென்றனர். பின் எல்லைப்புறக் குடியேற்றங்கள் மூலம் பேரரசு காக்கசஸ் பகுதியிலும் சைபிரியாவிலும் கீழ்க்கோடி மங்கோலியாவிலும் பரந்தது. வேறுபட்ட இத்தனை நாடுகளையும் பேரரசர் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. பெருமக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியவர்கள் மூலமே அவர் ஆணை செலுத்தப் பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் உருசியா தார்த்தாரியர் எழுச்சியால் வலிகுன்றியது. நாகரிகமும் ஆசிய நாகரிகத்துடன் ஒன்றுபட்டு நின்றது. 15-16ஆம் நூற்றாண்டுகளில் பண்டைய ரோமப் பேரரசின் கீழ்ப்பகுதியில் பரந்த துருக்கியப் பேரரசின் முன்மாதிரியும், அங்கிருந்து பரந்த கிரேக்க கத்தோலிக்கக் கிளைச் சமயத்தின் ஆட்சியும் உருசியாவை ஐரோப்பிய நாகரிகத்தி னின்றும் துண்டு படுத்தின. உருசிய அரசு உருவில் வல்லாட்சி யாகவும் ஆனால் ஐரோப்பிய வல்லாட்சியின் உறுதி இல்லாததாகவும் இருந்தது. இதனால் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய அரசியலறிஞர் உருசியாவை ஐரோப்பிய அரசியலுடன் சேராது ஆசியப் பேரரசுகளுள் ஒன்றென்றே கணித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பீட்டர்பெருமான் உருசியப் படைகளைத் திறம்படப் பயிற்றுவித்தும் நாட்டில் தம் ஆணையை வலியுறுத்தியும் ஐரோப்பிய நாகரிகத்தை நகரங்களிலேனும் பரப்பியும் இந்நிலையை ஒரு சிறிது மாற்றினார். இந்நிலையிலிருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசு சிறிது சிறிதாகத் தலைதூக்கி ஐரோப்பிய அரசியலில் பங்கு கொள்ளத் தொடங்கிற்று. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவெங்கும் கிட்டத்தட்டத் தன் பிரஞ்சுக்கொடியை நாட்டிய நெப்போலியன் (பிற்கால ஹிட்லரைப் போலவே) பிரிட்டனைத் தாக்குமுன் இறுதிப் படியாக உருசியாவைப் படையெடுத்து அதன் பயனாகத் தானே வலிகுன்றி வீழ்ச்சியடைந்தான். இதனால் உருசியாவின் பெயர் ஐரோப்பிய அரசியலில் சற்று மதிப்புப் பெற்றது. எல்லையற்ற தன் பரப்பின் காரணமாகவும் தனித்த நிலஇயல் தட்பவெப்ப இயல் காரணமாகவும் உருசியாவை எவரும் எளிதில் வெல்வது அரிது என்ற எண்ணம் பரந்தது. ஐரோப்பாவெங்கும் 18ஆம் நூற்றாண்டுவரை பரந்திருந்த நில உடைமைப் படிமுறை ஆட்சி(குநரனயடளைஅ) உருசியாவில் 19ஆம் நூற்றாண்டிலும் அழியாதிருந்தது. அதனை இரண்டாம் அலெக்சாண்டர் பேரரசன் (1859-1866) ஓரளவு அடக்கி ஒடுக்கினான். அஃதோடு ஐரோப்பிய அரசியல்களில் கண்ட குடியாட்சியின் உள்ளீடுகளில் தேர்தல் அவைகள் அமைத்தல், அமைச்சர் குழு அமைத்தல் முதலிய முறைகளை மேலீடாகப் புதிதாக ஏற்படுத்தினான். ஆயினும் தேர்தல் தொகுதி மிகவும் குறுகலாகவும் அவைகளின் உரிமை குறைவாகவும் இருந்தன. அமைச்சர் அரசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கைக் கருவிகளாயிருந்தனர். இந்நிலையிலும் கூடப் பின்னைய பேரரசர் இவ்வரசியலின் பேரையே வெறுக்கும் அளவுக்குப் பிற்போக்காளராயிருந்தனர். அலெக்சாண்டரின் இப்புது முயற்சி ஒரு வகையில் பயனளித்தது. ஐரோப்பாவில் கார்ல்மார்க்ஸ் பரப்பி வந்த கருத்துக்கள் அரசியல் வளர்ச்சியுற்ற மற்ற நாட்டுமக்கள் மனத்தைவிடப் பிற்பட்ட அரசியல் வளர்ச்சியுடைய உருசிய மக்கள் இதயத்தை மிகுதியாகக் கவர்ந்தன. அரசாங்கம் பிற்போக்கில் உறுதியடைய அடைய முற்போக்கு மனப்பான்மை கொண்ட பொதுமக்கள் வெறித்த முற்போக்குக் கட்சியுடன் இணைய இடமேற்பட்டது. 1905 இல் உருசியப் பேரரசு கீழ்நாட்டின் புதிய வல்லரசாகிய சப்பானுடன் போரிட்டு முழுத்தோல்வியடைந்தது. இதனால் பெருங்குடி மக்கள் ஆதரவில் நடைபெற்ற பேரரசர் ஆட்சி மீது வெறுப்பு மிகுதியாயிற்று. அதனை அடக்க முயன்றும் பயனற்றுக் குழப்ப நிலை ஏற்படவே வேண்டா வெறுப்பாக குடிமன்றங்கள் அமைத்து முன்போல் குடியாட்சி உருவில் வல்லாட்சி செலுத்தும் முயற்சி ஏற்பட்டது. மன்றங்களுக்கு முன்போல் உண்மை உரிமை எதுவும் தரப்படாவிடினும், கார்ல்மார்க்ஸ் கொள்கை பரப்பினால் ஆண்டுநிரம்பிய மக்கள் அனைவருக்கும் மொழிதர வேண்டியதாயிற்று. மன்றங்கள் மிகவும் முனைத்த முற்போக்குடையவையாய்த் தம் உரிமை எல்லைகளை மதிக்காமல் அமைச்சரை எதிர்க்கவும் புரட்சிகரமான திட்டங்கள் வகுக்கவும் தொடங்கவே,மிகுந்த எதிர்ப்புக் கிடையில் வலுவந்தமாக அவைகளைக் கலைக்க வேண்டியதாயிற்று. அதன்பின் முன்போல் ஆண்டு நிரம்பிய அனைவரையும் உட்படுத்தாது செல்வக் குடியினர்க்கு மட்டும் பேராதரவுடைய குறுகிய தொகுதி மூலம் அவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலகாலம் இச் செல்வர் அவைகள் உருசிய ஆட்சிக்கடங்கி நல்ல பிள்ளைகளாய் ஒத்துழைத்து வந்தன. முதலுலகப் பெரும் போரில் உருசிய, பிரிட்டன் முதலிய நேசநாடுகள் பக்கம் நின்று போரிட்டது. ஆனால், உருசியப் பேரரசராகிய சார் ஆட்சி, போர் முயற்சியும் முற்போக்கும் திறனுமற்றதாய் மக்கள் வெறுப்புக்காளாயிற்று. போர்க்கால விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமையால் பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாட இடமேற்பட்டது. இவ்வகையில் மிக மட்டமான சீர்திருத்தங்களை மன்றங்கள் கோரியபோது அக் கோரிக்கைகளும் மறுக்கப்பட்டன. நடுநிலையுடைய மன்றங்களே அரசியலை எதிர்த்து அமர்க்களம் செய்யலாயின. நாட்டில் புரட்சித்தீ எழுந்தது. போர் முடிவிற்கு ஓராண்டுக்கு முன் 1917 மார்ச்சில் (தற்போது லெனின்கிராடு என்று அழைக்கப்படும்) பீட்ரோகிராடிலுள்ள தொழிலாளரும் பட்டினியால் வாடிய ஏழை மக்களும் ‘உணவு வேண்டும் உணவு வேண்டும்’ என்ற கூக்குரலுடன் ஊர்வலம் வந்தனர். அரசாங்கம் படைவகுப்புகளை அனுப்பி அவர்களைக் கலைக்க முயன்றது. ஆனால் புரட்சியார்வம் படைகளையும் விட்டபாடில்லை. படைகள் மக்கள்மீது பாய மறுத்ததுடன் நில்லாது அவர்களுடன் சேர்ந்துகொண்டன. இங்ஙனம் வலிமை பெற்று மக்கள் சிறைக் கூடத்தை உடைத்து அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுவித்தனர். பேரரசரும் அவர் குடும்பத்தினரும் சிறைப்படுத்தப் பட்டனர். அரசியல் ஒழுங்குகளுக்குக் காத்திராமல் மன்ற உறுப்பினர் சிலர், ஒரு செயற் குழுவாய் அமைந்து தற்காலிக அரசியல் ஒன்று அமைத்தனர். நடுநிலையாளரின் தலைவரான மிலியுகோவ் முதலிலும், அவரினும் வெறித்தவரான சீர்திருத்தக் குடியாட்சிக் கட்சித் தலைவரான கெரன்ஸ்கி அவரை யடுத்தும் தலைவராயினர். ஆனால், மேன்மேலோங்கி யெழும் புரட்சி வேகத்தை அவர்களால் தடைப்படுத்த முடியவில்லை. கார்ல்மார்க்சின் கொள்கைகளைப் பின்பற்றிய பொதுஉடைமைக் கட்சி, வேறு அரசியல் அமைத்து ஆணைகள் பிறப்பித்தது. நாளடைவில் தற்காலிக அரசாங்கம் அதனுடன் இணைந்து செயலாற்றிற்று. பொதுஉடைமைக் கட்சியின் வெறித்த முற்போக்குக் குழுவினரான போல்ஷ்விக்கர் நிக்கோலாய் லெனின் லியோன் ட்ராஸ்கி ஆகியவர்கள் தலைமையில் அரசியல் புரட்சி போதாது; வாழ்வியல், பொருளியல் புரட்சியும் வேண்டுமென்று துணிந்து அதற்கியைய நாட்டை முற்றிலுமே திருத்தி யமைக்கத் தொடங்கினர். முதலில் அவர்கள் போரை நிறுத்தும்படி நேசநாட்டினருக்கு அறிவித்தனர். அவர்கள் அதற்கு இணங்காது போகவே, சற்றுமிகுதியாக செர்மானியருக்கு விட்டுக் கொடுத்துத் தனி உடம்படிக்கை செய்தனர். பின் பேரரசரையும் அவர் குடும்பத்தினரையும் தூக்கிலிட்டு ஒழித்து, அவர்களைச் சார்ந்தவரையும் அரசியலில் அவர்களுடன் ஒத்துழைத்தவர் களையும் வெளியேற்றியும் ஒறுத்தும் விலக்கிப் பொதுஉடைமை ஆட்சியை ஏற்படுத்தினர். பழைய அரசியல் ஒழுங்கை மீறி ஒரு கட்சி ஏற்படுத்திய இவ் வரசியலமைப்பே பொதுஉடைமை உருசியாவின் அரசியலமைப்புக்கு அடிப்படையான எழுத்துமூல அடிப்படை ஆயிற்று. உருசியப் பேரரசின் வீழ்ச்சியின் பின் அதன் உறுப்புக்களான நாடுகள் தனித்தனியாய்ப் பிரிந்தே நின்றன.பொதுஉடைமை அமைப்பு ஏற்பட்ட இப் பகுதி அவ்வரசுகளை விடுதலையுடைய தனியரசு பெற்ற சரிநிகர் நாடுகளாகவே கொண்டு நேசமுறையில் உடம்படிக்கை செய்துகொண்டு கூட்டரசியலாயிற்று. இக் கூட்டுறவில் முதலில் சேர்ந்து குடியரசுகளான நாடுகள் (1)உருசியக் குடியரசு (2) உக்ரேனியக் குடியரசு (3) வெள்ளை உருசியக் குடியரசு (4) துர்க்மெனிஸ்த்ர்க் குடியரசு(5) உஸ்பெக் குடியரசு (6) தட்ஜிஸ்தன் குடியரசு (7) திரான்ஸ்கக்கேசியக் கூட்டுறவுக் குடியரசு ஆகியவை. பால்டிக் நாடுகளும் கருங்கடல் ஓரத்திலுள்ள பெஸ்ஸரேபியாவும் புரட்சிக்காலத்தில் தனியாய்ப் பிரிந்துவிட்டன. அவற்றுள் இரண்டாம் உலகப்போருக்குமுன் பால்டிக் நாடுகள் உருசியாவால் வெல்லப்பட்டுப் பொது உடைமை ஆட்சியில் சேர்க்கப்பட்டன. பெஸ்ஸரேபியா ருமேனியாவிடம் சேர்க்கப்பட்டுப் பின் மீட்கப்பட்டது. சைபீரியா, துருக்கித்தான், மங்கோலியா முதலியவை படிப்படியாகக் கூட்டுறவில் சேர்க்கப்பட்டன. ஐரோப்பியக் குடியாட்சி நாடுகளைப் போலவே உருசியாவிலும் தேர்தல்களும் அரசியலவைகளும் நடைமுறைக் குழுக்களும் ஆட்சித் தலைமையும் அமைந்துள்ளனவாயினும் பல அடிப்படையான செய்திகளில் உருசிய அரசியலமைப்பு வேறுபடுகிறது. இவற்றுள் முதல் வேறுபாடு உருசியப் புரட்சி ஐரோப்பியப் புரட்சிகளைப் போல் வெறும் அரசியல் புரட்சியாயிராமல் வாழ்வியலையும் பொருளியலையும் முற்றிலும் மாற்றி மக்கள் வாழ்க்கையில் புரட்சியமைத்து அதன் மீதே அரசியல் புரட்சி வகுத்தது ஆகும். ஐரோப்பிய முதலாளித்துவ வாழ்வியலில் ஊறிய ஐரோப்பிய அரசியலறிஞர் இதனைக் குடியாட்சிக்கு மாறுபாடான தெனவும் மனித உரிமைகளை மறுப்பதெனவும் கொடுமையும் குருதியும் சிந்தலும் மிகுந்தவை எனவும் பலவாறாகக் கண்டித்துள்ளனர். ஆனால், இவ்வறிஞர் மனத்திரையில் உலகில் 100க்கு 97 பேர் ஆன சுரண்டப்படும், அறியாமையில் மூழ்கிய ஏழை மக்களைவிட, சுரண்டுபவரும் தன்னல மிதுவெனத் தெளிவு பட அறிந்தவரும் ஆன 100க்கு 3 செல்வர்களே மனித உருவில் முனைந்து நிற்கின்றனர் என்று கூறுவது மிகையன்று. உலக மக்கள் 200 கோடிப் பேரில் 6 கோடியளவாக இச் செல்வர் இருப்பதாக வைத்துக்கொண்டால் கூட அவர்கள் குருதி சிந்துவதால் படிப்படியாகக் குற்றுயிருடன் வதைப்படும் 194 கோடிப்பேர் நல்வாழ்வு பெறுவதானால், அக் குருதி ஒரு பொருட்டு அன்று என்பதை அவர்கள் உணர்கிறார்களில்லை. முதலாளி அரசியல்களின் போரில் ஏழைமக்கள் இதனினும் இறந்துபட, அவர்கள் குடிகள்வாழவும் வகையற்றுப் போகின்றன என்பதை மறுப்பது இவ் வறிஞர்களுக்கு எளிதான செய்தியாய் விடுகின்றது. உலகின் அரசியல்களுள் முன் மாதிரி எதுவுமின்றிப் புதுமுறை வகுத்த உருசிய அரசியலமைப்பில் குறை காண்பது எளிது. ஆனால் அது ஒரு தேர்வுக்காலமுறை என்பதை மறக்கக் கூடாது. அது உலகிற்கு ஒரு படிப்பினை என்பதையும், குருதி சிந்தி உருசியர் காட்டிய இப்படிப்பினையைக் குருதி சிந்தாமலே மற்ற நாடுகள் பின்பற்றக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. உலகெங்கும் வளர்ச்சியடைந்து வரும் பொதுமக்கள் விழிப்பினிடையே முதலாளித்துவ அறிஞர் புகழும் குடியாட்சி அரசாங்கங்கள் கூட உருசிய அரசியலைப் பின்பற்றி வருவது கண்கூடு. உருசியரின் ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டங்களையும் கோடிக்கணக்கில் பொருள்குவிக்கும் திட்டங்களையும் ஏளனச் சிரிப்புடன் கேலி செய்த அறிஞர்கள் இப்போது ஆயிரக்கோடிக் கணக்கில் நாலாண்டுத் திட்டமும் இருபதாண்டுத் திட்டமும் வகுத்து ஒருவருக்கொருவர் போட்டியிடத் தொடங்கியிருக் கின்றனர். ஆயினும் உருசிய முறையைக் குறைகூறியவர்கள் அதன் புதிய நடைமுறைகளைப் பின்பற்றத் துணிந்தனரேயன்றி அதன் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்ற இன்னும் துணிவு கொள்ளாதிருக்கின்றனர். இதற்குத் தடை அறிவன்று அன்பின்மை; பொதுநல ஆர்வமன்று, உள்ளார்ந்த தன்னலம் என்பது உற்றறிபவர்களுக்கு வெளிப்படையேயாகும். உருசிய அரசியலமைப்பைப்பற்றிக் கூறுமுன் அதற்குத் தாயகமாயிருந்த கார்ல்மார்க்ஸ் கோட்பாடுகளைப் பற்றிச் சிறிது கூறுதல் வேண்டும். உருசியப் புரட்சியுடன் பலவகையில் ஒப்புடையதாய் அதற்குப் பலவகையில்முன்மாதிரியா யிருந்தது பிரஞ்சுப் புரட்சி. அப் புரட்சியும் புது உலகையே அமைக்க முயன்றது. ஆனால் பொருளியலடிப்படையை மாற்றாமல் அரசியலமைக்க முயன்றதனாலேயே அது வீழ்ச்சியடைந்தது. மேலும் இப்புரட்சி பொதுமக்கள் அல்லது தொழிலாளர் புரட்சி என்று கண்டதுமே, செல்வர்களோடு செல்வாக்கு மிக்க உலகின் மற்ற அரசியல்கள் ஒன்றுபட்டு இப்புரட்சியை அடக்கவும் இப்புரட்சி மற்ற நாடுகளில் பரவாமல் தடுக்கவும் முன்வந்தன. உலகின் முதலாளிகளனைவரும் ஒன்றுபட்டுத் தம் அரசியல்களைத் தொழிலாளர் மீது ஏவுவது கண்ட கார்ல் மார்க்ஸ் என்ற செர்மன் பேரறிஞர் உலகில் உள்ள தொழிலாளர் எல்லோரும் ஒன்றுபட்டால்தான் முன்பே அமைக்கப்பட்டு வேரூன்றிய முதலாளித்துவ அரசியலை எதிர்த்து அதனையும், அது வேரூன்ற இடந்தந்த பொருளிய லமைப்பையும் மாற்றியமைத்தல் முடியும் எனக் கருதினார். இதன் பயனாக அவர் 1864-இல் உலகத் தொழிலாளர் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த உலகத் தொழிலாளர் மகாநாடு ஒன்று கூட்ட ஏற்பாடு செய்தார். இதுவே 1864-ஆம் ஆண்டைய முதல்உலகத் தொழிலாளர் கூட்டுற வமைப்பு ஆகும்(குசைளவ ஐவேநசயேவiடியேட டிக 1864). பாரிசில் நடைபெற்ற இவ்வமைப்புச் சிலகாலம் நின்று புதிய திட்டங்கள் வகுத்ததாயினும் பிரான்சில் அச்சமயம் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களில் சிக்கிச் செயலற்றுப் போயிற்று. எனவே, கார்ல்மார்க்சும் வேறு சில அறிஞரும் கூடி 1889 இல் இரண்டாவது உலகக் கூட்டுறவமைப்பு ஒன்று ஏற்படுத்தினர். இது ஏழு முறைகூடி உலகில் தொழிலாளர் இயக்கத்தையும் பொதுவுடைமை முறையையும் பரப்ப முயன்றது. பிரிட்டனுட் படப் பல அரசியல்கள் இக்கருத்துக் கெதிராகத் தம் முழுச்செல்வாக்கையும் பயன்படுத்தின. முதல்உலகப்போர் குறுக்கிட்டு இக் கூட்டுறவைத் தழைக்க விடாமல் செய்தது. முதலுலகப் போரின்பின் லெனின் தலைமையில் மூன்றாம் அமைப்பு ஏற்பட்டது. இது தற்காலிகமாகப் பொது உடைமை அமைப்பை உருசிய நாட்டளவில் கட்டுப்படுத்திக் குறுக்கிக் கொண்டது. இதனினும் முனைந்து உலகியக்கத்தைப் பரப்ப முயன்றவர்கள் டிராட்ஸ்கி தலைமையில் 4 ஆம் அமைப்பு ஒன்று நிறுவினர். நாடுகளுடன் நாடாய்ப் போரும் உடம்படிக்கையும் வாணிக உறவும் கொள்ளவேண்டும் நிலையிலிருந்த உருசியாவுக்கு இப் பொதுவுடைமை அரசியல் கால்கட்டாய் இருந்ததனால் இரண்டாம் உலகப் போரிடையில் லெனினால் இது கலைக்கப்பட்டது. இதன் தலைவராகிய டிராட்ஸ்கியும் அதற்கு முன்பே லெனினுடன் மாறுபட்டு வெளியேறிப் பல நாடுகளில் திரிந்து அமெரிக்காவில் இருக்கும் போது கொலையாளர் கைக்கு இரையாயினர். மூன்றாவது அமைப்புடன் ஒத்துழைத்து லெனின் அமைத்த கூட்டுறவு அரசியலமைப்பில் அரசியலுரிமையும் மொழி யுரிமையும் உடலுழைப்புடைய தொழிலாளர்கள், உழவர் ஆகியவர்கட்கே முதல்படியாகத் தரப்பட்டன. பொதுஉடைமை ஆட்சியை நிலைநிறுத்த இத்தகையோரிடையே படைவீரரும் கடற்படை வீரரும் திரட்டுவது இன்றியமையாததாயிருந்ததால் அவர்களும் உரிமைபெற்றனர். முதலாளிகள், வாணிகர், சமயத்தலைவர் ஆகியவர்கள் சுரண்டுபவர்கள், சுரண்டுபவர் களுக்கு ஆதரவளிப்பவர் உடலுழைப்பற்றவர் என்ற கருத்துடன் உரிமை மறுக்கப்பட்டு விலக்கப்பட்டனர். இந்தியா முதலிய மற்ற நாடுகளைப் போலவே உருசியாவிலும் தேர்தல் தொகுதிகள் இரு பிரிவாக விளங்குகின்றன. ஒன்று நகரத் தொகுதி; மற்றொன்று நாட்டுப்புறத் தொகுதி. கூட்டுறவில் உறுப்பினரான அரசுகளில் கூடச்சில தனி அரசுகளாகவும் சில பேரரசுக்கு உட்பட்ட சிறு கூட்டுறவுகளாகவும் இருக்கின்றன. அக் கூட்டுறவுகளுக்குள்ளும் துணைக்கூட்டுறவுகள் உண்டு. (இரண்டாம் உலகப் போருக்குப்பின் இவற்றுக்குத் தனிப்பட வெளிநாட்டாருடன் உடம்படிக்கை செய்யவும் போர்செய்யவும் போரிலிருந்து விலகவும் உரிமை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.) தனி அரசியல்களுள் ஊர்கள் முதல் கூறாகவும் அவற்றை உட்படுத்திய அடுத்த கூறு கூற்றங்கள்(ஏடிடடிளவ டிச கூயடரளூள) ஆகவும் அதற்கு மேற்பட்டவை வட்டங்கள்(ருபநணன டிச னுளைவசiஉவள) ஆகவும் மண்டலங்களாகவும்(டீடெயளவ டிச னiஎளைiடிளே) வகுக்கப்பட்டன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி அவையும் அவைத்தலைவரும் உண்டு. ஊரவைக்கு அப்பால் ஊரிலுள்ள உழவரும் தொழிற்சாலைத் தொழிலாளரும் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பர். ஊரவைகளே கூற்ற அவைகளுக்கு உறுப்பினர் தேர்ந்தெடுத்தன. அவற்றிலிருந்து 1,000 ஊராருக்கு ஒருவராக வட்ட அவைக்கும், வட்ட அவையிலிருந்து 25,000 ஊராருக்கு ஒருவராக மண்டல அவைக்கும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். நகர அவைகள் வேறு அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து மண்டல அவைக்கு 5,000 நகர மொழியாளருக்கு ஒருவராக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மண்டலத்துக்கு மேற்பட்ட பிரிவு மாவட்டம்(ழுரநெசnயை டிச ஞசடிஎinஉந) ஆகும். கூற்ற அவையிலிருந்து 10,000 நகர அவைகளி லிருந்து 2,000 மொழியாளருக்கு ஓர் உறுப்பினர் வீதமும் மாவட்ட அவைக்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டங்களை உள்ளடக்கய தனியரசின் பேரவைக்கு மாவட்ட அவையிலிருந்து 1,25,000 ஊராருக்கு ஓர் உறுப்பினர் வீதமும் நகர அவைகளிலிருந்து 25,000 மொழியாளருக்கு ஓர் உறுப்பினர் வீதமும் அனுப்பப்பட்டனர். உருசியப் பெருநாட்டின் கூட்டுறவுப் பேரவைக்கு மாவட்ட அவைகள் 1,25,000 மொழித்தரவினருக்கு ஓர் உறுப்பினரும், நகர அவைகள் 25,000 மொழித்தரவினருக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்தன. இப் பேரவை ஐரோப்பியமுறைப்படி இரண்டு அவைகளாயமையாது ஒரே அவையாய் இலங்குகிறது. வாழ்வியலிலும் பொருளியலிலும் பெருமக்கள் ஆட்சி ஒழித்த பொது உடைமை உருசியப் பெருநாட்டிற்கு மேலவை வேண்டுவதில்லையன்றோ? இப் பேரவை ஆண்டுக்கு ஒருமுறை சிலநாள் கூடும். இடைப்பட்ட காலத்தில் நிலவர ஆட்சி முறையைக் கவனிக்க இப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு உயர்நிலை நடைமுறைக்குழு(ருniடிn ஊநவேசயட நுஒநஉரவiஎந ஊடிஅஅவைவநந டிச கூசமை) அமைக்கப்பட்டு மூன்று திங்களுக்கு ஒருமுறையாக இரண்டுவார காலம் கூடும். இக் குழுவும் 400 உறுப்பினர்வரை அடங்கிய பெருங் குழுவாதலால் இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறை உட்குழு(ஞசநளனைநளேடிn) ஒன்று அமைக்கப்பட்டு நிலையான ஆட்சிச் செய்திகளைக் கவனிக்கிறது. இதில் 21 உறுப்பினர் இருப்பர். இதனினின்றும் தலைவர் லெனினும் கட்சித் தலைவர் சிலரும் அமைந்த செயற்குழு ஒன்று தலைமை தாங்கும். கூட்டுறவு நடைமுறைக்குழுவில் மட்டும் அமெரிக்கா முதலிய மேலை அரசியலமைப்பின் ஈரவை அமைப்புச் சற்றுக் காணப்படுகிறது. இக்குழு இரு குழாமாகப் பிரிந்து இயல்கிறது. ஒன்றில் தனியரசுகளுக்கு மக்கள் குழு விழுக்காட்டின்படி பேராண்மை தரப்படும். மற்றொன்றில் இனவகை நாகரிக வகைக்கு ஒரே நிலைப்பட்ட பெயராண்மை வழங்கப்படுகிறது. முதலது கூட்டுறவு மன்றம்(ருniடிn டிக வாந ளுடிஎநைவ) என்றும் பின்னது இனமன்றம்(ளுடிஎநைவ டிக சூயவiடியேடவைநைள) என்றும் பெயர் பெறுகின்றன. சட்டங்கள் பெரும்பாலும் கீழவைகளைக் கலந்தும் ஆராய்ந்தும் செய்யப்படினும், அவற்றின் இணக்கத்துக் குட்பட்டு நடைமுறைக் குழுவாலும் உட்குழுவாலும் தலைவராலும் கட்டளைகளாகப் பிறப்பிக்கப்படலாம். நடைமுறை யாட்சியைக் கூட்டுறவு அமைச்சர் குழு(ருniடிn ஊடிரnஉடை டிக ஊடிஅஅளைளiடிநேசள) ஒன்று நடத்துகிறது. இதில் 15 அமைச்சர்கள் இருப்பர். இவர்கள் நடைமுறைக் குழுவால் அமர்வு பெற்று அதற்கும், இறுதியில் பேரவைக்கும் பொறுப்பு உடையவர்கள். அமைச்சர் குழுவினுள் ஒருவர் தலைவராகவும் நால்வர் துணைத்தலைவராகவும் இருப்பர். ஒவ்வொருவருக்கும் வெளிநாட்டுறவு, போர், கடற்படை, வெளிநாட்டு வாணிகம், போக்குவரவு, தொழிலாளர் நலம், உணவு, பொருளியல் ஆகிய அரசியல் துறைகள் பொறுப்பாகத் தரப்படுகின்றன. பேரவைகள் தலைவர் ஆணைகட்கு உட்பட்டு அவ்வத்துறைகளில் அமைச்சர் களும் அத்துறையின் பணியாளருக்கும் நாட்டுமக்களுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கலாம். அரசியல் ஒழுங்குப்படி ஒவ்வொரு தனியரசும் தத்தமக்குப் பிடித்த அரசியலைப் பின்பற்றலாம். ஆயினும் அடிப்படைக் கொள்கைகள் எல்லாத் தனியரசுகளிலும் பரவிய கட்சிகளை யமைப்பாலும் தொடக்கத்திலேயே ஏற்பட்ட அரசியலமைப்பு உடம்படிக்கையாலும் கட்டுப்படுத்தப்பட்டு ஒரே நிலையில் வளர்ச்சியடைகின்றன. தனியரசுகளிடையே சச்சரவுகளோ, பொதுமக்களிடையே பூசலோ முணுமுணுப்போ உருசியாவி லில்லை. இரண்டாம் உலகப் போரில் வேறெந்நாட்டுமக்களையும் விட உருசியமக்கள் ஒன்றுபட்டுநின்று உலகவரலாறு என்றும் எங்கும் காணாத மாபெரும் தன்மறுப்புக்கள் செய்து ஐரோப்பிய வல்லரசுகளைத் திணறவைத்த நாசிப் பெரும்படைகளை எதிர்த்து முறியடித்தது ஒன்றே இவ் வொற்றுமையின் வன்மைக்கு ஒரு நற்சான்று ஆகும். உருசியப் பொதுஉடைமை தன்வெற்றிகரமான ஆட்சியாலும், அதன் விளைவாலும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் விளங்குகிறது. குடியாட்சிப் பெரும்பேச்சுப் பேசும் ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்சியின் கீழுள்ள நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தனியாட்சிக்கும் விடுதலைக்கும் தகுந்த பருவநிலை அடையாமலிருக்க, ஒருசில ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய வல்லரசுகளை வென்று அதிரவைக்கும் நாடாக உருசியாவைப் பொது உடைமை ஆக்கிவைத்திருக்கிறது. சார் ஆட்சியில் உருசியா கல்வியில் இந்தியாவினும் கீழ்ப்பட்டிருந்தது. இன்று 100-க்கு 95 பேர் கல்வியறிவுடையவராயிருக்கின்றனர். பொதுமகளிர் வாழ்வை எந் நாடும் அகற்றாத கறையை உருசியா அகற்றி ஆடவருடன் ஆடவராகத் தொழிலிலும் அறிவியலிலும் போரிலும் ஈடுபடும் பெண்டிரை உண்டுபண்ணியிருக்கிறது. ஐரோப்யிய அறிஞர்கள் மூக்கில் கைவைத்து நோக்கும் முறையில் தனி அரசுகளுக்குத் தனி வெளிநாட்டுறவு உரிமையைக் கொடுத்துத் தன் உள்ளார்ந்த ஒற்றுமையை, படை வலியால் ஏற்படமுடியா அன்பு ஒற்றுமையை, உருசியா காட்டியிருக்கிறது. அரசியல் திறத்திலோவெனில் ஸ்டாலின் உலக அரசியல் சூதாட்டக்காரரிடையேயும் சூதாட்டக்காரர் எனப் பேர் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் சூதாட்டம் அறிவையும் சூழ்ச்சியையும் கருவியாகக் கொண்டனவே யன்றி அடிப்படை நோக்கமாகக் கொண்டதல்ல. உருசிக மக்கள் அன்பையும் தொழிலாளர், ஏழைமக்கள் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட அன்புமுறையில் நின்றே அச்சூழ்ச்சி வலிமை பெறுகிறது. வேற்றுமைகளுள்ள நாட்டில் வலியுறுத்திச் சுமத்தப்பட்ட ஒற்றுமை வேற்றுமையை வளர்ப்பதேயாகும் என்றும், வேற்றுமையை ஒப்புக்கொண்டு அவ் வடிப்படையில் அன்புமுறையில் ஏற்படும் ஒற்றுமை அறிஞர்களின் பார்வையில் வேற்றுமையாகத் தோற்றினுந் தொலை நோக்குடையவர் அதனை உருவான ஒற்றுமைக்கு உதவும் ஒரு படிமுறையாகவே கொள்வர் என்றும் உருசிய அரசியல் வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது. 11. தமிழ்நாட்டிற்கான படிப்பினைகள் இன்று உலகில் பல்வேறு இனங்கள் தனித்தும் கலந்தும் வேறுபட்டும் பலபல கலைப்பண்பாடுகளையும் வாழ்வியல் ஒழுங்குகளையும் அரசியல் வகைகளையும் பேரரசுகளையும் வல்லரசுகளையும் அமைத்துள்ளன. அவற்றுள் தலைமை பெற்று விளங்கும் இனம் ஆரிய இனமே என்பது மிகையாகாது. அரசியலில் மட்டுமன்றி வாழ்வியலிலும் வாணிகக் கைத்தொழில் துறைகளிலும் செல்வத்திலும் செல்வாக்கிலும் மேம்பட்டு விளங்குவதுகூடப் பெரும்பாலும் இவ் வினமேயாகும். இவ்வினத்துடன் ஒன்றுபட்டு மேம்பாடடைந்திருக்கும் ஆரியரல்லாத இனப்பிரிவு யூதப்பிரிவு ஒன்றுதான். இதுவும் தொகையில் சிறுபான்மையாகும். இதன் பழம் பெருமை முற்றும் அகன்று இது நாடற்று அரசியலற்று நிலவுகின்றது. ஆயினும் இனப்பற்று என்ற உள்வலிமையாலும் ஆரியரிடையே சுரண்டுதல் கொள்கையுடைய முதலாளிகளுடன் ஒத்துழைப்ப தாலும் மட்டுமே இன்று அது ஆரிய இனத்துடன் கலந்துறவாட முடிகிறது. கலைவகையிலும் சமயவகையிலும் அறிவியல் நாகரிக வகைகளிலும் கூட ஆரிய இனத்துக்கு உயிரூட்டிய இனம் செமித்திய இனமாகும். இன்று ஆரியரிடையே பெரும்பான்மை யாகப் பரவிய சமயம் கிறித்துவசமயமே. இக் கிறித்துவ சமயமும் இதனுடன் சரிநிகராக உலகசமயமாய் இயங்கும் இஸ்லாம் சமயமும் இரண்டும் செமித்தியரிடைத் தோன்றியவையே. பின்னது இன்றும் செமித்திய வழியினரைத்தான் பெரும்பான்மை தழுவி வளர்கின்றது. மூன்றாவது உலகசமயமாகிய புத்தசமயமும் இந்தியாவில் சிறுபான்மைச் சமயமான சமணமும் ஆரியர் உறவாலோ உறவுக்குப் புறம்பாகவோ திராவிடரிடைத் தோன்றிய ஆரிய எதிர்ப்புச் சமயங்களேயாம். முதன் மூன்று சமயங்களுக் கடுத்த நாலாவது பெருஞ்சமயமாகக் கருதப்படும் இந்து சமயம்கூடப் பெரும்பாலும் திராவிடர்களது பழைய சிவநெறி திருமால் நெறிகளின் புதுப் பூச்சேயாகும். திராவிடர் செமித்திய இனத்துடன் தொடர்புடையவர் என்று எண்ண இடமுண்டு என்று மேலே கூறியிருக்கிறோம். இக் கருத்து மொகெஞ்சதரோப் புதைபொருளாராய்ச்சியால் வலியுற்று வருகிறது. மேலாராய்ச்சி களால் இன்னும் வலியுறலாம். செமித்திய இனம் திராவிட இனத்துடன் உறவுடையது என்று மட்டுமன்றித் திராவிட இனத்தினின்று கிளைத்த இனமே என்றுகூடத் தெளிவாக இனித் தெரியவரக்கூடும். அங்ஙனமாயின் (செமித்திய இனமுட்பட்ட) திராவிட இனமே உலகிற்குச் சமங்களனைத்தையும் கலை, வாணிக, நாகரிக வாழ்வுகளையும் அரசியல் கருநிலைக் கருத்துக்களையும் அறிவியல் தொடக்கத்தையும் தந்த இனம் என்று ஏற்படக் கூடும். இவ்வினத்தினர் வாழ்வின் பயன் இன்று ஆரியரிடையேயும் காணப்படுகின்றதாயினும், அவர்கள் அமைத்த பேரரசுகள், பெருவாழ்வுகள் ஆகியவை பண்டைய வரலாற்றுக் கதைகளாய் விட்டன. சொல்லப்போனால் வரலாற்றால்கூட இன்னும் முழுதும் விளக்கப்படமுடியாத பழங்கதையாய் விட்டன. அவர்கள் ஏற்படுத்திய எகிப்திய, சால்டிய, அசிரிய, யூத அரசுகளும் பேரரசுகளும் நாகரிகங்களும் இன்று அழிந்தொழிந்தன. இன்றளவும் பெயரளவிலேனும் நின்று நிலவும் நாகரிகம் திராவிட நாகரிகமும் அதன் முடிமணியாகத் திகழும் தமிழ்நாகரிகமுமே யாகும். அது இன்றும் நின்று நிலவுவது மட்டுமன்றி இன்றும் உயிர்ப்புடையதாக விளங்குகிறது. ஆரியரல்லாதாரது பண்டைய ஊழிக்கும் ஆரிய ஊழிக்கும் இடையே ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசியல் வகையில் பாலமாகவும், ஆரிய ஊழியினின்று புது ஊழிக்கு வர உருசியப் பெருநாடு பாலமாகவும் அமைந்தது போல, வருங்காலப் புதிய பேருலகுக்குத் தமிழ்நாடு பாலமாயமையுமென்று நம்பலாமன்றோ? தனிமொழி, தனிச்சமயம், தனிப்பண்பு, தனிவாழ்க்கை நலங்கள் ஆகியவற்றால் ஒருநிலைப்பட் சிறு நாடாகிய பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டே பழைய நாட்டுரிமைக் கழகக்கட்சி இந்தியப் பெருநிலப் பரப்புக்குப் புதிய குடியாட்சி முறையையும் விடுதலையையும் வேண்டிநின்றது. விடுதலை இயக்கம் வளருந்தோறும் பிரிட்டனின் முன்மாதிரி இந்தியாவுக்குப் பொருத்தமானதன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. விடுதலை இயக்கத்தை ஏளனம் செய்துவந்த பிரிட்டிஷ் அரசியலறிஞர் இந்தியா ஒரு நாடன்று; நாடுகள் பல கொண்ட ஒரு கண்டமே எனக்கூறி நையாண்டி செய்ததுண்டு. அந் நாளில் நாட்டுரிமைக் கட்சித் தலைவராய் விளங்கிய அயர்லாந்துப் பெருமாட்டி, திருவாட்டி, அன்னிபெசன்ட் அம்மையார் ‘இந்தியா ஒரு நாடே’ என்று ஒரு நூலெழுதி விடையிறுத்தனர். ஆயினும் உள்ளுற இந்தியாவின் பல்வகைப் பெருக்கம் பலரை உறுத்திற்று. ஆகவே, பிரிட்டனின் தனியாட்சி முறை நல்ல முன்மாதிரி அன்றெனினும், அமெரிக்காவின் கூட்டுறவு ஆட்சி போதிய அளவு முன்மாதிரியாகும் என்ற கருத்து எழுந்தது. இனம், சமயம் முதலியவற்றினும் மொழியே தலைமையான வேறுபாட்டு அறிகுறியாதலால் மொழிவாரியாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவாட்சி ஏற்படவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இங்கும் ஒரு சிக்கல் எழுந்தது. அமெரிக்கா இனம் பண்பியல், சமயப்பிரிவு ஆகிய வகைகளில் மாறுபாடுகள் உடையதாயினும் சமய ஒற்றுமையும் அதனினும் சிறப்பாக மொழி ஒற்றுமையும் உடையது என்பது எடுத்துக் காட்டப் பட்டது. இவ்வேறுபாட்டை அகற்றும் முயற்சியாகவே பொதுமொழி வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. வடநாட்டில் இயற்கையாகவே முகலாயர் ஆட்சியில் உருதுமொழி வடநாட்டிலேனும் பொது மொழியாய் ஏற்கத் தடை யெதுவுமில்லை. ஆனால், பெரும்பான்மை ஆரிய இந்து ஆதரவு பெற்ற நாட்டுரிமைக் கட்சியினர் உருதுவிலும் இந்து மக்களிடையே பரந்துவிரிவுற்ற இந்த மொழியைப் பொதுமொழி யாக்க முன்வந்தனர். இதனால் வடவரிடையே இந்து முஸ்லிம் வேற்றுமை பிறந்தது. இந்தியாவுக்குப் பொதுமொழி வகுக்கும் முயற்சியால் மொழியினும் இனம்வலிது என்ற உண்மை வெளிப்பட்டுப் பல மொழி பேசும் வடநாட்டு முஸ்லிம்கள் உருதுவையும் (உருது உட்படப்) பல மொழி பேசும் வடநாட்டு இந்துக்கள் இந்தியையும் நாட்டுப் பொதுமொழியாகக் கொண்டனர். முஸ்லிம் இந்தியா (பாகிஸ்தான்) இந்து இந்தியா (இந்துஸ்தான்) என்ற பாகுபாடு இதனினின்றும் கிளைத்தது. முஸ்லிம் இந்தியா, இந்துஇந்தியா என்ற இந் நாட்டுப் பிரிவினை, முஸ்லிம் தண்ணீர், இந்துத் தண்ணீர் எனப் பஞ்சபூதங்களிலொன்றாகிய தண்ணீர் பிரிக்கப்படும் அளவு வடநாட்டில் வேரூன்றி வளர்ந்து விட்டது. வடநாட்டில் இந்தியைப் புகுத்தத் தொடங்கிய ஆரிய இந்துக்கள் அவ் வேற்றுமை நிலவாத முழுத் திராவிட இந்தியாவாகிய தென்னாட்டை அம் முயற்சிக்குக் கருவியாக்க முயன்று இங்கும் இந்திப் புதுப்பயிர் விளைவிக்க முயன்றனர். வடநாட்டில் முஸ்லிம்களைத் தட்டி எழுப்பிய பெருமையுடைய இதே இந்தி, தென்னாட்டில் தமிழர்களையும் அவர்களைப் பின்பற்றிப் பிற திராவிடர்களையும் தம் மொழி, தம் இனம் ஆகியவற்றை அறியத் தூண்டுதலாயமைந்தது. முன் ஆயிரவகுப்பாகப் பிரிந்து ஒரு வகுப்பின் குத்தகையாட்சியை எதிர்க்க 999 வகுப்புக்கள் சார்பில் எழுந்த நேர்மைக் கட்சியியக்கம் அவ்வொரு வகுப்பு ஒரு தனியினம், 999 வகுப்புக்களும் உண்மையில் நாட்டு மக்களிடையே பெரும்பான்மையான மற்றோரினம் என்ற உண்மை கண்டு தன் கிளைஇனத்தவரான வடநாட்டு முஸ்லிம்களைப்போலத் தனிநாடு தனியாட்சி கோரிற்று. இந்நிலையில் அமெரிக்க முன்மாதிரியும் பயனற்றுப் போயிற்று. ஐரோப்பிய அரசியலில் மலைமுகட்டில் எங்கோ பதுங்கி வாழ்ந்த ஓர் அரசியல் (சுவிட்சர்லாந்து) இப்போது முன்மாதிரி ஆகத் தொடங்கிற்று. இங்கே கூட்டுறவாட்சி ஏற்பட்டுப் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் முன்னதாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. இங்கு இனவேற்றுமை, நாட்டுவேற்றுமை ஆகியவற்றைவிட மொழிவேற்றுமையே மிகுதி. ஆனால், நாடோ நம் தமிழ்நாட்டின் ஒரு வட்டத்துக்கும் போதாத சிறு துண்டு. அச் சிறுநாட்டு மக்கள் ஒருமொழியை இன்னொரு மொழிமீது திணிக்க மனமில்லாதவராய் அங்கு நிலவும் மூன்று மொழிகளையும் பொதுமொழிகளாகக் கொண்டு மொழி பெயர்ப்பால் ஆட்சி செலுத்துகின்றனர். அச் சிறு நாட்டிற்கு மூன்று பொது மொழியானால் இந்தியா போன்ற பெரு நாட்டுக்கு இரண்டு மொழி ஏன் கூடாது என எண்ணி இந்தியையும் உருதுவையும் பொதுமொழிகளாக்கலாம் என்று கொண்டனர், நாட்டுரிமைக் கட்சியறிஞர். ஆனால், முஸ்லிம் இனம் இது கண்டு மனமாறவில்லை. அதே வாதத்தைக் காட்டிப் பல இனத்து மக்களும் “இந்தியாவில் ஒன்றிரண்டு மொழிகள் தாம் ஏன் பொதுமொழிகள் ஆகவேண்டும். சிறிய நாடாகிய சுவிட்சர் லாந்து, அங்குப் பேசப்படும் மூன்று மொழிகளையும் அரசியல் மொழிகளாகக்கொள்ள முடியுமானால் இங்கும் ஏன் எல்லா மொழிகளும் அவ்வத் தனியரசின் அரசியல் மொழியாகவும், அனைத்துமே கூட்டுறவாட்சியின் பொதுமொழிகள் ஆகவும் நடைபெறக் கூடாது” என்று கிளர்ச்சி செய்யலாயினர். மொழிபெயர்ப்பாட்சி சிறு நாட்டில் செல்லுமானால் பெருநாட்டுக்கு-பிற மொழிப் பயிற்சியில் உலகில் எந் நாட்டையும் வென்ற இப் பெரு நாட்டிற்கு, ஏன் செல்லாது? இவ்வகையிலும் உருசியப் பெருநாட்டின் அரசியல் நல்ல வழிகாட்டி யாகின்றது. அங்கு ஒவ்வொரு தனியரசிலும் அவ்வம் மொழியே அரசியல் மொழி. கூட்டுறவாட்சியில் எல்லா மொழியிலும் எழுத்து மூலங்கள் மொழிபெயர்க்கப்படும். அது மட்டுமன்று. உருசியர் நாட்டுப்பற்று மொழி, இனம் ஆகிய வற்றைப்பற்றிப் பசப்பி ஒருமைகாண முயலாது ஒற்றுமை காணவே முயல்கின்றது என்று உணரலாம். பொதுமககள் ஆட்சியில் அரசாங்கந்தான் இறங்கிவந்து பொதுமக்கள் மொழியைக் கற்றுப் பொதுமக்களிடையே தன் கருத்தைப் பரப்ப வேண்டுமே யன்றிப் பொதுமக்கள் அரசாங்கத்தின் பொது மொழியைக் கற்கும்படி வற்புறுத்தப்படவோ தூண்டப்படவோ கூடாது. இதன்படி உருசியப் பேரரசின் நடவடிக்கைகள் யாவும் விரிவான மொழிபெயர்ப்புத் துறை ஒன்றின் மூலம் எல்லாப் பகுதிகளின் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. செர்மன் மொழி பேசும் செர்மன் குடியரசு ஒன்று யூரல் பகுதியில் தனித்து வாழ்கின்றது. இதன் மீதுகூட உருசிய மொழி சுமத்தப் படவில்லை. அதன் அரசியல் செர்மன் மொழியில் நடைபெறுவது மட்டுமன்றி, கூட்டுறவு அரசியலின் எழுத்து மூலங்களும் அச் சிறு குடியேற்றத்தாரின் நன்மைக்காக செர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் படுகின்றன. அது மட்டுமோ! உலகமொழிகள் அனைத்திலுமே பொது உடைமை நூல்கள், பொதுவுடைமை யிக்கத்தாரால் எழுதிப் பரப்பப்படுவதை யாவரும் அறியலாம். உருசியாவின் இன்னொரு படிப்பினை பல இனங்களிடையேயும் உள்ளார்ந்த ஒற்றுமையை விளைவிக்கும் முறை ஆகும். இனத்துக்குத் தனிப்பேராண்மை தந்தால் இனப்பிரிவு நிலைபெற்றுவிடும் என்று சிலரும், இனப் பேராண்மையால் சிறுபான்மை இனம் மிகுதிச் சலுகை பெற்றுப் பெரும் பான்மையினர் பேராண்மை அளவு குன்றும் என்றும் பலர் அஞ்சுகின்றனர். அமெரிக்க அரசியலில் மேலவையில் சிறு நாடும் பெரு நாடும் ஒரே அளவு பேராண்மை பெறுகின்றன. உருசியாவில் கூட்டுறவு அரசியல் மன்றில் கூட்டுறவு மன்றில் மக்கள் தொகையை ஒட்டிய சரிநிகர் பேராண்மை (கூட்டுத் தொகுதி முறையில்) அமைந்திருக்கிறது. ஆனால், இனங்களின் பாதுகாப்பை முன்னிட்டு இன மன்றத்தில் இனங்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் பெருமை சிறுமைகளைப் பாராமல் சரிநிகர் நிலையான பேராண்மை தரப்பட்டிருக்கிறது. கிட்டத் தட்ட எட்டுக்கோடிப் பேரை உட்கொண்ட பேருருசியருக்கும் ஆயிரக்கணக்கிலுள்ள சின்னஞ் சிறு இனங்களுக்கும் ஒரே அளவு பேராட்கள் தான். இந்தியாவில் இதற்கு நேர்மாறாக இனப் பாதுகாப்புக்கு இனப் பேராண்மை (தனித் தொகுதி) தர இணங்காது நாட்டுரிமைக் கழகம் போராடுகிறது. ஓரினத்துக்குத் தந்து மற்ற இனங்களுக்கு மறுக்கிறது. பேரினத்துக்கும் சிற்றினத்துக்கும் ஒப்பான பேராண்மை உடைய மன்றம் ஒன்றும் தொகைவாரியான மன்றம் ஒன்றும் அமைவதே இச் சிக்கலைத் தீர்க்கும் வழியென உருசியா காட்டும். மேலும் இனவாரியாக நாடுகளைப் பிரிக்க உருசியா தயங்கவில்லை. எனவேதான் இனவாரி நாடுகளும் பிரிந்த பின்னும் அப் பேரரசியல் கூட்டுறவில் தம் விருப்பத்துடனேயே இணைகின்றன. இந்தியாவில் பிரியவேண்டும் என்ற இனத்தைப் பிரிப்பதால் அன்புப் பிணைப்பு ஏற்படும் உண்மையை அன்புமுறையும் அருள் முறையும் பேசும் காந்தியடிகள் போன்ற தலைவர்கள்கூடக் கவனிக்காதது வருந்தத்தக்கது. அன்மட்டு மன்று; சரிநிலைக் கொள்கையிலும் உருசியாவிலும் மிகுந்த அக்கறை செலுத்தும் சவகர்லால்நேரு போன்ற பேரறிஞர்கள் நாட்டுரிமைக் கழகத்தின் தலைவர்களா யமைந்த போதிலும் இவ் வகையில் மக்களுக்கு வழிகாட்டாதது வியப்புக் கிடமாகும். நாடுகள் இனவாரி, பண்புவாரியாகப் பிரிவதனால் பெருநாட்டின் ஒற்றுமை மிகுமேயன்றித் தளர்வுறாது என்பதை உருசியா செயல்முறையிலேயே காட்டி விட்டது. எனவே, தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாளநாடு முதலிய நாடுகள் தனிநாடுக ளாவதோ அவை ஒன்றுபட்டுத் திராவிடப் பெருநாட்டின் கூட்டுறவாவதோ உண்மையில் நாளடைவில் இந்திய உலகில் சீர்கேட்டை விளைவிப்பதற்கு மாறாக, மிக ஆழ்ந்த அடிப்படையில் ஒற்றுமையை விளைவிக்கவே உதவும் என்பதைக் காணலாம். இத் திராவிடப் பெருநாட்டுக் கூட்டுறவு பாகிஸ்தான், இந்துஸ்தான், சீக்கிஸ்தான் முதலிய எத்தனை கூட்டுறவுகளுடனும் தனிநாடுகளுடனும் வேண்டும்போது நேச முறையில் ஒன்றுபட்டுப் பெருங் கூட்டுறவாகக் கூடும். வடநாட்டுத் திராவிட இனமும் தாழ்த்தப்பட்ட இனமும் பிரிந்தால்கூட இப் பேரிணைப்புக்கு உதவியாகுமே யன்றி வேறன்று. தொலைப்பட்ட எதிர்காலத்தில் இப்படியே இந்தியப் பெருங் கூட்டுறவும் பாரசிகம், அராபியா முதலிய முஸ்லிம் நாடுகளுடனும், பர்மா, சீனா முதலிய புத்த சமய நாடுகளுடனும் பொதுவுடைமை உருசியாவுடனும் சேர்ந்து ஆசியப் பெரும் பேருறவில் சேரவோ, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, ஆத்திரேலியக் கூட்டுறவுகள் அமைந்து அவற்றுடன்கூட ஒன்றுபடவோ செய்யலாம். ஆனால், இவையனைத்தும் தன் சார்பில் ஒவ்வொரு நாடும் கூட்டுறவும் முன்பின் ஆய்ந்து செய்ய வேண்டியவை. கூட்டுறவில் சேர்வதால் தம் வளர்ச்சிக்குத் தடையோ, தம்நிலை பிறர்நிலையுடன் சரிநிகர் நிலையாயிரா தென்ற ஐயமோ இருக்கும்வரை இத்தகைய கூட்டுறவு ஒற்றுமை ஏற்படாது. இன்னொரு வகையில் உருசியா நமக்க அரிய படிப்பினை ஒன்று தரலாம். பிரான்சு நாடு அரசியலில் மட்டும் புரட்சி ஏற்படுத்தி அமைந்தது. அதனைவிடப் பொருளியல் முறையையும் மாற்றி அமைத்த உருசிய நாடு பிரான்சிலும் பிற்பட்ட நிலையிலிருந்ததாயினும் இன்று முற்பட்டிருக்கிறது. இன்றைய இந்தியாவும் அதனினும் சிறப்பாகத் தமிழ்நாடும் அரசியலில் ஐரோப்பாவுக்கும் அன்றைய உருசியாவுக்கும் பிற்பட்டு அடிமை வாழ்வு வாழ்கிறது. பொருளியலில் தமிழ்நாடு ஐரோப்பாவிற்கும் உருசியாவிற்கும் வடநாட்டிற்கும் பிற்பட்டே யிருக்கிறது. இவை யனைத்திலும் மேலாக வாழ்வியலில் சீனா, பர்மா, மலேயா, இலங்கை முதலிய நாடுகளையும் விடத் தமிழ்நாடும் இந்தியாவும் பிற்பட்டுள்ளன. உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத பிறப்பு வேற்றுமை-பிற நாட்டின் பொருள் முதலாளி, அறிவு முதலாளி, சமய முதலாளி ஆகியவற்றைக் கடந்த பிறப்பு முதலாளி இனம் ஒன்று-இந் நாட்டிலுள்ளது. எனவே, பொருளியலில் பிற்பட்ட உருசியா அரசியல் புரட்சியுடனமையாதது போல், வாழ்வியலிலும் பிற்பட்ட நம்நாடும் இந்திய அயல் நாடுகளும் பொருளியல் புரட்சியுடன் அமைந்துவிட முடியாது. உருசியாவில் பொருளியல் புரட்சி மீதே அரசியல் புரட்சி அமைந்தது போல் இந் நாட்டில் வாழ்வியல் புரட்சி ஏற்பட்டு அதன் மீது பொருளியல் புரட்சியும், அதன் மீது அரசியல் புரட்சியும் ஏற்பட்டாலன்றி உண்மையில் புரட்சி வெற்றியடையாது. இதனை உணர்ந்துதான் போலும் சங்கரர், இராமாநுசர் முதலிய சமயத்தலைவர் ஆனமட்டும் சமூகத்தைச் சீர்திருத்த முயன்று தோல்வியுற்றனர். புத்தர், மகாவீரர், அது சமய அடிப்படையுடையதெனக் கண்டு புதுச்சமயம் வகுத்தும், அச் சமயங்கள் இத் தெய்வத் திருநாட்டில் இடம்பெறாது போயின. வள்ளுவர் எதிர்கால நிலையை நுனித்தறிந்தவர்போல் கலையளவில் இந்நெறியைப் பொறித்து வைத்தார். உருசியப் புரட்சியினை எதிர்த்த மந்தமதிகள் அரசியல் புரட்சியே போதும்; பொருளாதாரநிலை சரிப்பட்டுவிடும் என்று கூறியதுபோல், இன்று இந் நாட்டில் பொது உடைமைவாதம் செய்யும் சிலர் பொருளியல் புரட்சி போதும்; வாழ்வியல்நிலை சரிப்பட்டுவிடும் என்கின்றனர். இது உண்மையில் ஆசிரியர் உரைகளைப் புகழ்ந்து, அவர் அடிப்படைக் கோட்பாட்டை மறுத்துவிடுவது போன்றதேயாகும். ஐரோப்பாவைவிடச் சீர்குலைந்த உருசியநாடு அதனினும் அடிப்படைச் சீர்திருத்தத்தை அவாவியது போல், உருசியநாட்டினும் சீர்குலைந்து பிற்பட்டு இழிநிலையிலுள்ள இந்நாட்டுக்கு அதனினும் வெறித்த முற்போக்குடையதும், அதனினும் அடிப்படை நிலையானதுமான புரட்சி யமைப்பு வேண்டும். இத்தகைய புரட்சியை இந்தியப் பெருநாட்டிலும் அதன்பின் ஆசியா முதலிய பிற கண்டங்களிலும் அமைக்கத் தூண்டுதலாயிருந்து, உருசியாவைப்போல் தமிழ்நாடு திராவிடமும் உலகிலும் உலக வரலாற்றிலும் சிறப்பான இடம் பெறுமாக. ஐக்கிய நாடுகளின் அமைப்பு முதற் பதிப்பு – 1952 இந்நூல் 1952 இல் எம்.ஆர். அப்பாதுரை, சென்னை வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகவுரை ஐ.நா. அமைப்பு ஓர் உலகளாவிய அமைப்பு மட்டுமன்று; உலகளாவிய ஓர் இயக்கத்தின் பயனாயும், உலகளாவிய ஓர் அரசாங்கத்தின் முன்னோடியாயும் உள்ளது. இம்முத்திறக் கூறுகளையும் இவற்றின் தொடர்புகளையும் இச்சிறுநூல் விளக்குகிறது. தமிழக மாணவர்களுக்குச் சிறப்பாகவும், தமிழர்களுக்குப் பொதுவாகவும் இந்நூல் இக்கால உலகு பற்றிய பொது அறிவையும், நாட்டியக்கங்கள், பண்பாட்டியக்கங்கள் ஆகியவை பற்றிய அடிப்படை அறிவையும் தருவதாகும்; தவிர, உலக நாகரிகத்தின் போக்கை உணர்த்தி, வருங்கால உலகின் அமைப்பில் அரசாங்கங்களையும், மக்களையும், அறிஞரையும், மாணவ இளைஞர் நங்கையரையும் ஒருமுகப்படுத்தி இணைக்கவும் உதவத்தக்கது. இந்நூலாசிரியரது பரந்து தெளிந்த அறிவும் ஆழ்ந்த தமிழ்ப் பண்பாடும் இவற்றைத் தமிழுலகுக்கு எளியனவாகச் செய்துள்ளன என்று கூறலாம். ஐ.நா. அமைப்பின் வேர் முதல்களான உலக இயக்கங்கள், நிறுவுதல்கள் ஆகியவற்றின் பொது வரலாறுகளை இதன் முதற்பிரிவாகிய தோற்றுவாயும்; அவற்றினடியாக ஐ.நா. இயக்கமும் ஐ.நா. அமைப்பும் வளர்ந்த வகையைச் சிறப்பாக இரண்டாம் பிரிவும், அமைப்பின் உயிர் பெற்றுள்ளன. இன்றியமையா இடங்களில் மட்டுமே ஆங்கிலம் அருகே தரப்பட்டுள்ளது. ஆங்கிலப் பிரிவாகிய ஐ.நா. அமைப்பின் தோற்றமும், சொற்களால் ஆங்கிலமறிந்தவர்களன்றிப் பிறர்க்கு எதுவும் கருத்து விளக்கம் ஏற்படாது. ஆங்கிலத்திலும் பொருள் வரையறைக்குப் பின்பே விளக்கம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் விளக்கம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் விளக்கம் தருவதே ஆங்கிலச் சொல் வழக்கிலும் எளிதாகப் பொது மக்களிடையே அறிவைப் பரப்புவதற்கேற்ற வழியாகும் என்பது கூற வேண்டுவதன்று. இந்நூலைத் தமிழகமும், கல்வியுலகில் மாணவரும் ஆசிரியரும் நன்கு பயன்படுத்துவரென்று நம்புகிறோம். 1. தோற்றுவாய் பண்டைத்தமிழ் ஆன்றோர், ‘ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்,’ என்ற விழுமிய கருத்தை உடையவராயிருந்தனர். ‘நாடு, குலம்’ என்னும் சொற்களை விட, ‘உலகம்’ என்னும் சொல்லையே தமிழ் நூல்களில் மிகுதியாகக் காண்கிறோம். தமிழ் பேசப்படும் நிலப்பரப்பைக்கூட, தொல்காப்பியத்திற்குப் பாயிரம் கூறிய பனம்பாரனார், தமிழ்நாடு என்று குறிப்பிடவில்லை; ‘தமிழ் கூறும் நல்லுலகு’ என்றே குறிப் பிட்டார். பல தமிழ் நூல்கள் ‘உலகு’ என்னும் சொல்லைக் கொண்டே தொடங்குகின்றன. குடும்பம், குலம், ஊர், நாடு என்னும் பிரிவுகளையெல்லாம் உலகம் என்னும் ஒரே முழுமுதலுக்குரிய படிகள் என்றே தமிழர் கருதினர் என்று கூறலாம். “அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்; ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெய்தல் வேண்டும்.” என்று இராமலிங்க வள்ளலார் இறைவனை வேண்டுமிடத்து, அவர் மனிதவுலகம் கடந்து, உயிர்களனைத்தையும் ஒரே உலகமாகக் காண்கிறார். பிற நாட்டுச் சான்றோர்கள் உரைகளிலும் இதேபோன்ற விழுமிய குறிக்கோளைக் காணலாம். உலகு படைத்த இறைவனை ஒரே தந்தையாகவும், மனித ரனைவரையும் ஒரே குழுவினைச் சார்ந்த உடன்பிறப்பாள ராகவும் மேனாட்டு அருளாளர் குறிப்பதுண்டு. அருளாளர் அவா ஆர்வமாகவும், கவிஞர்கள் கனவு ஆர்வமாகவும் இருந்த இக்கருத்து, இன்று அறிஞர் நனவுலகத் திட்டமாகவும், உலகநாடுகளின் பல அரசியலார், அரசியலறிஞர் ஆகியவர்களின் செயல்துறைக் குறிக்கோளாகவும் மாறியிருக் கிறது. கனவார்வம் நனவுறுதியாய் மாறிவிட்டது. இவ்வியத்தகு மாறுதலுக்குக் காரணம் யாது? அருளாளர் ஆர்வம் அறிஞர் கனவாகவும், அறிஞர் கனவு அரசியலார் திட்டமாகவும் எங்ஙனம் உருவாயின? இதனை இப்பிரிவில் விளக்குவோம். இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் பல மாறுதல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அலை மோதிக்கொண்டேயிருக்கின்றன. இதற்கு முன் நிகழ்ந்துள்ள எல்லாப் போர்களைக்காட்டிலும் இப்போரில் அழிவு மிகுதி. தத்தம் நாடுகளின் விடுதலைக்காகவும், உலக நாகரிகத்தைப் பாதுகாப்பதற்காகவும் தம் உயிரைப் பலி கொடுத்தவரும், தம் வாழ்க்கை நலங்களையும் இன்பங்களையும் துறந்தவரும் எண்ணற்றவர். அரசாங்கங்களும் நாள் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான பொன்களைப் போர் முயற்சியில் செலவழித்தன. போர்க்காலத்தில் உள்ள இவ்வழிவும் செலவும் போதாமல், அப்போரின் விளைவாக இன்னும் உலகில் மக்களிடையே பல இன்னல்கள் இருந்து வருகின்றன. உலகத் தொழில்கள் பல போர்த்தொழில்களாகி, இப்போது திடுமென மீண்டும் அமைதிக் காலத்திற்கேற்ப மாற்ற முடியாதவையாயிருக்கின்றன. போரில் ஈடுபட்டுள்ள வீரரும் தொழிலாளரும் தொழிலில்லாது திண்டாடுகின்றனர். தொழில் துறைகளில் இவை சீர்கேடும் குழப்பமும் உண்டுபண்ணியுள்ளன. போரழிவால் பல நாடுகளில் இன்று உணவு உடைத் தட்டு ஏற்பட்டிருக்கிறது. போதுமான போக்குவரவு வசதிகளில் லாததால், வேண்டும் இடங்களுக்கு உணவைக்கொண்டு சேர்க்க முடியவில்லை. தொழிலில்லாமை, பொருள் தட்டுப்பாடு, நாணய முடை, செலவாணித் தொல்லை என்பவை காரணமாக, ஏழைமக்களுள் பலருக்கு உணவும் உடையும் சென்றெட்ட முடியாதிருக்கின்றன. இவ்வளவு தொல்லைகளுக்கிடையில், ‘இன்னும் ஒரு போர் எழுந்து விடுமோ!’ என்று உலக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘இனிப் போர் எழுந்தால், நாங்கள் தாளமாட்டோம்!’ என்று அருளாளர் மட்டுமன்றி, அறிஞர் மட்டுமன்றி, உலக அரசியலாரும் பொதுமக்களும் ஒரே குரலாகக் கூறத்தொடங்கிவிட்டதற்குக் காரணம் இதுவே. இதுவரை ஏற்பட்டுள்ள போர்களைப் போலல்லாமல், இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப்போர்களும் - சிறப்பாக, இரண்டாம் உலகப்போரும் - உலக நாடுகள் அனைத்தையுமே பாதித்திருக்கின்றன. உலக மக்களுள் எல்லாவகுப்பாரும் இப்போரில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் வெற்றிக்கு அரசாங்கங்களைவிட, அரசாங்கங்களின் அமைப்பை ஏற்றுக் கிளர்ந்தெழுந்த பொது மக்களே பெரிதும் காரணர் ஆவார்கள். ரஷ்ய மக்களின் ‘ஸ்டாலின்கிராடு வெற்றி’ இதற்கு பெருஞ்சான்று. அரசுகளையும் வல்லரசுகளையும் திணறச் செய்த நாஜிப்படை, இங்கே வீறியெழுந்த ரஷ்யப் பொதுமக்களின் தாக்குதலால் பின்னடைய நேர்ந்தது. இங்ஙனம், உலகவெற்றியில் பெரும்பங்கு கொண்டு விட்ட பொதுமக்கள், இப்போது தங்கள் உண்மையான ஆற்றலை அறிந்துகொண்டார்கள். “போரை வெல்லும் வலிமையுடைய எங்கள் கரங்கள், அமைதிக் கால வாழ்விலும் வெற்றி காண முடியும்! உலகநாகரிகத்தைப் பாதுகாக்க எங்களால் முடியுமானால், எங்கள் விருப்பப்படி உலகநாகரிகத்தை ஆக்கவும் எங்களால் முடியும்!” என்ற எண்ணம் மக்கள் உள்ளத்தில் எழுந்துள்ளது. ஆகவே, தங்கள் நாட்டு அரசாங்கங்கள் இனித் தங்கள் அரசாங்கங்களாகவே இருக்க வேண்டும் என்றும், உலக நாகரிகம் இனித் தங்கள் நாகரிகமாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் உள்ளார்ந்த விருப்பமே அறிஞர் கோரிக்கையாய், அக்கோரிக்கையை உலக அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகின் வெற்றிக்கு உழைத்த மக்களுக்கு, அதன் பயனாக வரும் நல்வாழ்விலும் கட்டாயம் பங்கு இருக்க வேண்டுமென்பதை அரசுகளும் வல்லரசுகளும் தெளிவாய் உணர்ந்துகொண்டுள்ளன. மக்களின் தன்னம்பிக்கை, அறிஞரின் கனா, அரசாங்கங்களின் நல் விருப்பம் ஆகிய இம்முக்கூறுகளின் இணைப்பே ஐக்கிய நாடுகளின் அமைப்பாய் உருவெடுத்துள்ளது என்னலாம். இரண்டு உலகப்போர்களால் அல்லற்பட்டு, ‘இனியும் இவை போன்ற, இவற்றினும் பயங்கரமான, போர் ஏற்பட்டுவிடுமோ!’ என்று அஞ்சும் உலகுக்கு, அப்போர் விளைவுகளிடையேயும் போர் அச்சத்திடையேயும் புயலிடையே தோன்றும் மின்னொளிபோல எழுந்து, போரச்சமாகிய கருவானில் தோன்றும் வானவில்லாய் நின்று நிலவுகிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பு! அதன் ஒளியின் துளக்கத்தில் உலகமக்கள் நம்பிக்கை வளர்கின்றது. அதன் தளர்ச்சியில் அவர்கள் உள்ளக் கிளர்ச்சியும் தளர்ச்சியுறுகின்றது. அவர்களின் நம்பிக்கையைத் தளரவிடாமல், அந்நம்பிக்கை அடிப்படையாகவே உலக அமைதியையும், ஒற்றுமையையும், உலக மக்கள் நல்வாழ்வையும் கட்டமைத்து வளர்ப்பது உலகப்பற்றாளர், அறிஞர் ஆகியவர் கடமை ஆகும். வருங்கால உலகின் சிற்பிகளாகிய இளைஞரும், நங்கையரும், மாணவரும், மாணவியரும் இதில் கருத்துச் செலுத்த வேண்டுவது அவசியம். போர் என்னும் ஒன்று உலகில் என்றுமே ஏற்பட முடியாதபடி செய்யவேண்டும் என்று நெடுநாளாகவே உலகப்பற்றாளர் சிலர் கனவு கண்டு வந்ததுண்டு. ஆனால், போரை ஒழித்துவிடுவது எப்படி? என்பது பற்றி எல்லாரிடையேயும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. தவிர, ‘போரை ஒழித்துவிடுவது என்பது முடியாத காரியம்,’ என்று கூறுபவரும் உண்டு. மற்றும், ‘போர் இயற்கையானது. போரினால் மக்களுக்கு வீரமும் உணர்ச்சியும் நாகரிக வளர்ச்சியும் ஏற்படுகின்றன,’ என்று கருதுபவரும் இல்லாமலில்லை. ஆயினும், போரில் அவாவுடையவர் மட்டுமன்றிப் போரில் நம்பிக்கை யுடையவரும் அதனை வெறுக்காதவரும் வரவரக் குறைந்தே வருகின்றனர். ஏனென்றால், இக்காலப் போர்களின் அழிவு பழங்காலப்போர்களைப் போன்றதாயில்லை. போர்கள் ஒரு நாட்டை மட்டுமன்றி, எல்லா நாடுகளையும் பாதிக்கின்றன; போரில் ஈடுபட்ட நாடுகள் மட்டுமன்றி, ஈடுபடாத நாடுகளும் அவற்றின் அழி விளைவுகளுக்கு ஆளாகின்றன. பழங்காலப் போர்களில் உலகின் ஏதோ ஒரு மூலையில் எவையோ இரண்டு நாடுகளின் பெயரால் யாரோ சிலர் சண்டை செய்தனர் என்ற நிலையே ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் எப்பகுதியிலும் அவற்றில் மிகுதியாக ஈடுபடவோ, அவற்றில் அக்கறை கொள்ளவோ இல்லை. அவர்கள் போருடன் தொடர்பற்ற நிலையில் வழக்கம்போல வாழ்க்கை நடத்தியே வந்தார்கள். போர் முடிந்த பின்னருங்கூட, ‘யார் வெற்றி பெற்றார், யார் தோற்றார்?’ என்ற பேச்சுடன் உலகம் கவலையற்றிருக்க முடிந்தது. ஆனால், இன்று இந்நிலை மாறிவிட்டது. போர் எல்லா நாடுகளையும் பாதிப்பதுடன், எல்லா மக்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. போர் வீரர் மட்டுமன்றித் தொழிலாளர் பலரும், பொது மக்களும், ஆடவர் மட்டுமன்றிப் பெண்டிரும், இளைஞர் மட்டுமன்றி முதியோரும், குழந்தைகளும் அதன் இன்னல்களுக்காளாகின்றார்கள். போர் என்பது எப்படியிருக்கும் என்று அறியமாட்டாத நாட்டுப்புற மக்கள்மீதும், மருத்துவ விடுதியில் கையறுபட்டுக் காலறுபட்டுக் கிடக்கும் நோயாளிகள் மீதும் இக்காலப் போர்விமானங்கள் கண்ணில்லா விஞ்ஞானக் கருவிகளையும், நச்சுப்புகைக் குண்டுகளையும், அணுகுண்டுகளையும் வீசக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. போரின் அழிவிலிருந்து தப்பியிருக்கத்தக்க நாடோ, நாட்டுப்பகுதியோ, மக்கள் வகுப்போ, உயிரினமோ இன்று எங்கும் இருப்பதாகக் கூற முடியாது. இந்நிலையில் இன்று போரை ஒழிப்பதென்பது ஒரு குறிக்கோளன்று; ஒரு கனவன்று; அஃது உடனடித் தேவையாகிவிட்டது. இன்றைய போர்களில் எவரும் வீரத்தைக் காண முடியாது. போர் வீரங்கண்டு பரணி பாடும் புலவரும் இனி இருக்க முடியாது. ஏனெனில், போரில் இன்றும் வீரம் இருக்கலாம்; ஆனால், வீரத்தைவிட அழிவே பன்மடங்கு மிகுதி. அதில் தியாகம் இல்லை; படுகொலையும் நாசமும் உண்டு. அதில் பெயரளவில் வென்றவர், தோற்றவர் இருக்கலாம். ஆனால், வென்றவர் வெற்றி, தோற்றவரின் தோல்வியைவிட மேம்பட்டதன்று. ஆகவே, இன்று போரை ஒழிக்க நினைப்பது கனவுமன்று, கற்பனையுமன்று. அஃது அறிஞர் குறிக்கோளாய், அரசாங்கங்களின் திட்டமாய் உள்ளது. போரை ஒழிப்பதற்காக உலகில் தோன்றிய இயக்கங்கள் இரண்டு: ஒன்று, அமைதி இயக்கம்; மற்றொன்று, உலக இயக்கம். முன்னது, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் அறிஞர் கனாத்திறச் சிந்தனைகளால் ஏற்பட்டது; பின்னது, அரசாங்கங்களின் நீண்டநாள் அனுபவங்களின் பயனாhகவும் மக்கள் புத்தெழுச்சியின் பயனாகவும் எழுந்து வளர்ச்சியுற்று வருகிறது. அமைதி இயக்கம், உலகின் அருளாளர் கண்ட கனா அதனை ஆதரித்த உலகப்பெரியார்களுள் ரஷ்ய ஞானியாகிய டால்ஸ்டாய், ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின், பிரெஞ்சு மேதை ரோமேன் ரோலந்து, புதிய இந்தியாவின் தந்தையாரான பெரியார் காந்தியடிகள் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வியக்கத்தை ஓர் அரசியல் இயக்கம் என்பதைவிட, ஓர் ஆன்மிக இயக்கம் என்பதே பொருத்தமானது. ஆயினும், இது பல நாடுகளின் அரசாங்கங்களுக்குத் தலைவலி உண்டாக்குவதாகவே இருந்தது. ஏனெனில், இது அரசாங்கங்களின் போர் முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கருதப்பட்டது. ‘போருக்கு, மக்கள் ஆதரவு தரக்கூடாது. யாரும் போர் வீரராகவும் சேரக்கூடாது. போரில் ஈடுபடுவது கடவுளுக்கு அடாத செயல். கொலை, களவு, கள், சூது முதலியவற்றைப் போலப் போரும் போர் வெறியும் வெறுக்கத்தக்க பழிச்செயல்கள்,’ என்று டால்ஸ்டாய் போன்ற அறிஞர், மக்களுக்குக் கூறினர். போர் முயற்சிகளுக்குக் குந்தகமான இவ்வியக்கத்தை அரசாங்கங்கள் எதிர்த்தது இயல்பே. ஆயினும், அமைதியியக்கத்தின் உலக நல்லறிஞர் பலர் ஈடுபட்டிருந்தனராதலால், அவ்வியக்கம் வீண் போகவில்லை. அஃது, அரசாங்கங்களின் மனப்பான்மையைக்கூட ஓரளவு மாற்றிற்று. அவர்கள் தங்கள் போர்முயற்சியை எதிர்க்கும் செயலை வெறுத்தார்களாயினும், அச்செயலில் ஈடுபட்ட அமைதி இயக்கத்தின் உயர்குறிக்கோளை உணர்ந்து, தாங்களும் அதனை ஓரளவு மேற்கொண்டார்கள். போரைத் தாமும் ஒழிக்கவே விரும்புவதாகக் கூறிக்கொண்டு, ‘போரை ஒழிக்கப் போர்!’ என்று அவர்கள் தங்கள் போர்க் குரலையே மாற்றி ஒலித்தார்கள். ஆனால், இது தவிர வேறு அடிப்படை நோக்கம் எதுவுமில்லாமல், போரை ஒழித்துவிடவும் முடியாது; அம்முயற்சியில் மக்களை ஈடுபடுத்திவிடவும் முடியாது என்பதை அரசாங்கங்களும் அறிஞரும் உணர்ந்த தறுவாயிலேதான் உலக இயக்கத்தின்மீது அவர்கள் பார்வை திரும்பிற்று. உலக இயக்கம் - அமைதியியக்கத்தைப் போல மக்களை மட்டும் போருக்கு எதிராகத் தூண்டும் இயக்கமன்று. அது முதலில் அரசாங்கங்களையும் அரசியலறிஞர்களையும் அவ்வழியில் தூண்டி, பின்னர் அவர்களுக்கு வலுவாக மக்களை அத்துறையில் இயக்க முனைகிறது. அது போர் முயற்சியைத் தடுத்துப் போரை ஒழிக்கப் பாடுபடவில்லை. போரிலீடுபடும் அரசாங்கங்களிடையே நேச ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியும், சமரசம் செய்தும், நேசவுணர்ச்சியை வளர்த்தும், போர் எழுவதற்கான சூழ்நிலைகளை மாற்றியமைத்தும் அது போரைத் தடுக்க முயல்கிறது. அரசாங்கங்களை ஒன்றுபடுத்த முனைந்து, அதன் பின்னர், அவ்வரசாங்களின் ஒற்றுமைக்கு வலுத் தரும்படியாகவே அது மக்களைத் தூண்டுகிறதாதலால், அஃது - உலகநலனையும், அரசாங்க நலனையும், மக்கள் நலன்களையும் ஒருங்கே இணைக்கப் பாடுபடுகிறது. மக்கள் நலனடிப்படையில் அரசாங்கநலனை அமைத்து, அரசாங்க நலன்களினடிப் படையில் உலகநலனை எழுப்ப அது முயல்கிறது. இங்ஙனம் இவ்வுலக இயக்கம் இயற்கையையும் இயற்கைச்சூழலையும் எதிர்த்துப் போராடும் இயக்கமாயமையாமல், இயற்கைச் சக்திகளையும் இயற்கைச் சூழல்களையும் துணைக்கொண்டே, போருக்குக் காரணமான செயற்கைச் சூழல்களை மாற்றியமைக்கும் இயக்கமாயமைகிறது. அது சுழியிட்டுப் பாய்ந்தோடும் வெள்ளத்தைக் கையால் தடைசெய்ய முயலாமல், அதனைத் தடுத்து நிறுத்த வல்ல அணைகளுக்கான கற்களையே கையாலும் கருவியாலும் தூக்கிக்கொண்டு சென்று கட்ட முயல்கிறது. உலக இயக்கத்துக்கு ஆதரவு தரும் சக்திகள் அரசாங்கங்களின் அனுபவம், அறிஞர்களின் திட்டம், மக்கள் ஆர்வம் ஆகியவை மட்டுமல்ல. இவற்றைக்கடந்து, இவற்றுக்கு அப்பாற்பட்டு, இயற்கையின் வளர்ச்சியிலும் மனிதநாகரிக வளர்ச்சியிலும் உள்ளார்ந்து முதிர்ச்சி அடைந்து வந்துள்ள இரு தத்துவங்கள் மீது இவ்வியக்கம் ஒரு புதிய அமைப்பை எழுப்ப முனைகிறது. இவ்விரு தத்துவங்கள் ‘விடுதலை, ஒற்றுமை’ என்பவைகளே. ஒற்றுமை வலிவற்றவர்களுக்கு வலிவும், வலிவுடையவர் களுக்கு வலிவு மேம்பாடும் உண்டுபண்ணுவதை யாவரும் அறிவர். பள்ளிக்கூடத்து நீதிக்கதைகள் பல இதனை வலியுறுத்துகின்றன. ஒன்றாகப் பிணைத்த விறகுக்கட்டைப் பலர் சேர்ந்துகூட முறிக்க முடியாது. ஒவ்வொன்றாக எடுத்து முறிக்க முயன்றால், தனியாக ஒரு சிறு பையன்கூட அதை முறிக்க முடியும். நான்கு எருதுகள் ஒன்றுகூடி நின்றால், சிங்கத்தாலும் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது போகும்: அவை பிரிந்து நின்றால், எருதுகள் ஒவ்வொன்றாக எளிதில் கொல்லப்படும். ஒற்றுமையின் வலிமையைக் காட்டும் கதைகள் இவை. ஆனால், இவ் வொற்றுமைப்பண்பு, விடுதலை ஆர்வத்தின் மீதே அமைக்கப் பெற முடியும். விடுதலை ஆர்வத்துக்கு எதிராக வலிந்து கட்டப் படும் ஒற்றுமை ஒற்றுமையுமாகாது: கட்டுப்பாடும் ஆகாது. அஃது அடிமைத்தனமேயாகும். இத்தகைய ஒற்றுமை நீடித்துநில்லாது; வலிமையுடையதும் ஆகாது. இயற்கையின் ஆராய்ச்சி, உலக நாகரிக வரலாறு, நாட்டு வரலாறு ஆகிய யாவும் இவ்வுண்மையை விளக்க வல்லன. உயிரின வளர்ச்சியில் சிற்றுயிர்களிடையேகூடக் குடும்பமாக வாழும் உயிர்கள் தனி வாழ்வு வாழும் உயிர்களை வென்று பரவியுள்ளன. சமூகமாகக் கூடி வாழும் உயிர்கள், அங்ஙனம் வாழாத உயிரினங்களை வென்று வளர்ச்சி பெற்றுள்ளன. மனிதன் தனி வாழ்வு கடந்து குடும்ப வாழ்வு உடைய வனாகவும், குடும்ப வாழ்வு கடந்து சமூகவாழ்வு உடைய வனாகவும் இருப்பதனாலே தான் உயிர்களிடையே தலைசிறந்த உயிரினமாகியுள்ளான். சமூகவாழ்விலும் தொடக்கக்கால மனிதனைப் போலக் குடும்பம் குலம் ஆகியவற்றுடன் நின்று விடாமல்; ஊர், நாடு, உலகம் என நாகரிக மனிதன் ஒற்றுமை எல்லை வளர்வதனாலேயே அவன் இயற்கையைத் தன் வயப்படுத்தி ஆள்பவன் ஆகியுள்ளான். விடுதலையார்வத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அதனை எதிர்த்து அமைக்கப்பெறும் ஒற்றுமை சில காலமே நிலவமுடியும் என்பதனையும், அது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பதனையும் உலக வரலாறு முழுவதுமே காட்டுகிறது. அலெக்ஸாண்டர் பேரரசும், உரோமர் பேரரசும், தைமூர் பேரரசும் உடல் வலு, படை வலு ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்தன. அவ்வலுவுக்குக் காரணமான வீரத் தலைவர்களின் கை ஓய்ந்தவுடன் வலியமைந்த அவ்வொற்றுமை களும் தாமே குலைந்துபோயின. மார்க்கஸ் அரிலியஸ், அசோகர், அக்பர் ஆகிய அருளாளர் தலைமையில் அப்பேரரசுகள் அமைந்த போதுங்கூட, அவை நிலைக்கவில்லை. பிரிட்டிஷ்பேரரசு விடுதலையார்வமுடைய பிரிட்டிஷ் மக்களுக்கு விட்டுக்கொடுத்த அளவில் சற்று வலுவுடையதாயிருப்பினும், பாதி உலகளவு பரந்த பேரரசின் பல திற மக்களின் விடுதலை யார்வத்தைத் தன்னுள் அடக்க முடியாமல் அது வலுவிழந்து வந்துள்ளது. மேலும், விடுதலையார்வத்துக்கு விட்டுக்கொடுப்ப தென்பது வேறு. விடுதலையார்வத்தின் மீது கட்டமைப்ப தென்பது வேறு. உலக இயக்கமும் ஐக்கியநாடுகளின் அமைப்பும் விடுதலையார்வத்தை அடிப்படையாகக் கொண்டே உலக ஒற்றுமையை உண்டுபண்ணப் பாடுபடுகின்றன. ‘ஒற்றுமையில்லாத விடுதலையார்வம் பயன்படாதது போலவே, விடுதலையார்வத்தை அடிப்படையாகக் கொள்ளாத ஒற்றுமையும் பயன்படுவதில்லை,’ என்ற நாகரிக வரலாற்றுப் படிப்பினைமீது அது நிலைபெறுகிறது. ‘விடுதலையார்வத்தின்மீது ஒற்றுமை கட்டப்படுவது என்பது எவ்வாறு? பல இடங்களில் விடுதலையார்வம் ஒற்றுமையைக் குலைப்பதாக அல்லவா இருக்கிறது?’ என்ற கேள்வி எழலாம். விடுதலையார்வத்தால் உண்மையான ஒற்றுமை என்றும் கெடுவதில்லை. விடுதலை ஆர்வத்தை அடிப்படையாகக் கொள்ளாத போலி ஒற்றுமை மட்டுமே இங்ஙனம் அவ்வார்வத் தால் கெடும். ஒரு நாடு மற்ற நாடுகளையோ, ஒரு வகுப்பு மற்ற வகுப்புக்களையோ அடக்கியாளும் இடத்தில், அடக்குமுறைக்கு ஆளான நாடு அல்லது வகுப்பின் விடுதலையார்வம் அப்போலி ஒற்றுமையைச் சிதறடித்தல் உறுதி. ஆனாலும், விடுதலை யார்வத்தை அடிப்படையாகக்கொண்ட கூட்டுறவு, உறுப்பினர் களின் விடுதலையார்வத்தைப் பாதுகாக்கும்; அக்கூட்டுறவாளர் களிடையே சமத்துவநிலை பேணும்; அவர்கள் நலன்களைச் சரி சம நிலையுடன் வளர்க்க முனையும். ஆகவே, அக்கூட்டுறவின் நலனும் குறிக்கோளும் எப்போதும் அதன் தனி உறுப்புகளின் நலனும் குறிக்கோளுமாகவே இருக்க முடியும். அஃது, உறுப்புகளின் சமத்துவம் பேணுவதனால், அவற்றிடையே நேச வுணர்ச்சியை இப்பொதுநோக்க மூலம் உண்டு பண்ணுவதும் எளிது. உலக இயக்கம் உலக நாடுகளிடையே தனித்தனி விடுதலையார்வத்தையும் சரி சமவுரிமையையும் பேணுவதுடன், அரசாங்கங்களையும் இதே வகையில் மக்களிடையே விடுதலை யார்வத்தையும் சரிசமநிலையையும் பேணத் தூண்டுகிறது. இதனாலேதான் உலகவியக்கம் ஒவ்வொரு படியிலும் வளர்ச்சி அடைந்து வலுப்பெற்று வருகிறது. உலக இயக்கம் இவ்வுயர்குறிக்கோளை ஒரே மூச்சாக ஒரே எட்டில் அடைந்துவிடவில்லை என்பதை அதன் வரலாறு காட்டும். மிதிவண்டி ஏறிப் பழகுபவன், பல தடவை விழுந்தெழுந்து, ஒவ்வொரு வீழ்ச்சியாலும் மிதிவண்டியின் போக்கை மதித்துணர்வது போலவே, இவ்வியக்கமும் அரசாங்கங்களின் கூட்டுறவு முயற்சிகளின் தோல்விகளிலிருந்தும், அறிஞர் திட்டங்களின் போதாத்தன்மையிலிருந்தும் பல படிப்பினை களைக்கண்டு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. உலக இயக்கத்துக்கு வழிகாட்டி, அதற்கு வகை துறையமைத்த இயக்கங்கள் பல. அருளாளர், அறிஞர் கனாக்களைப்பற்றி முன்னே குறித்துள்ளோம். இவற்றை முற்றிலும் வெறுங்கனவுகள் என்று கூறிவிடுவதற்கில்லை. ஏனெனில், பேரருளாளர் தோற்றுவித்த இயக்கங்களுட்சிலவே பௌத்தம், கிரிஸ்தவம், இஸ்லாம் ஆகிய உலகச் சமயங்கள். இவை நாட்டெல்லை, மொழியெல்லை, இனவெல்லை கடந்து பரவி, உலகில் மக்களிடையே ஒற்றுமையை வளர்த்துள்ளன. மேலும், 15-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கம், சமயச் சீர்திருத்த இயக்கம் (ஞசடிவநளவயவே சுநகடிசஅயவiடிn) ஆகிய பண்பாட்டு இயக்கங்களும், தொழிற்புரட்சி போன்ற பொருளியல் இயக்கங்களும் உலகெங்கும் பரந்துள்ளன. அரசியல் துறையில் வாள் வலிமையால் ஏற்பட்ட பேரரசுகளுக்கு அடிக்கடி வலிமை கொடுத்தவை வாள் வலிமை இல்லாமலே அமைந்த இச்சமய, பண்பாட்டு இயக்கங்களேயாகும். அரசியல், சமயம், பொருளாதாரம் ஆகியவற்றை மட்டும் சார்ந்த இயக்கமாயிராமல், மக்களின் உள்ளஅவா ஆர்வங்களினடிப்படையில் எழுந்த முதல் உலக இயக்கம் பதினெட்டாம் நூற்றாண்டில் உலக அறிஞர் பலரின் அறிவுக்கனலினின்று எழுந்த பிரெஞ்சுப் புரட்சி இயக்கமே. இது பெயரளவில் பிரெஞ்சுப் புரட்சி இயக்கமாயிருந்ததே தவிர, உண்மையில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் அமெரிக்கா விலும் பரந்து அகன்ற உலக இயக்கமே ஆகும். சர்வதேச அளவில் படர்ந்த இவ்வியக்கத்திலும் இதனை அடக்க ஐரோப்பிய மன்னர் மேற்கொண்ட முயற்சிகளிலுந்தான் முதன் முதல் மக்களின் சார்பிலும் அரசாங்கங்களின் சார்பிலும் ஐரோப்பிய அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில் இக்கூட்டுறவுப் பண்பின் பயனாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே பல ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் ஏற்பட்டன. இவை போரில் ஏற்பட்ட சச்சரவுகளையும் வேற்றுமைகளையும் அகற்ற முயன்றதுட னல்லாமல், அடிக்கடி நிலையான நட்புறவைக் காக்கத்தக்க சில பொதுத் தத்துவங்களையும் கட்டுப்பாடுகளையும் வகுக்க முயன்றன. இவையே பலரால் ‘சர்வதேசச் சட்டங்கள்’ என்று வழங்கப்பட்டன. இவை பெயரளவில் சட்டங்கள் என வழங்கினாலும், மக்களைச் சட்டங்கள் கட்டுப்படுத்துவது போலக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல; ஒழுக்கமுறை விதிகளைப்போலப் பொதுக்கருத்தைத் தெளிவாக உருவாக்குபவைகளே. ஆயினும், பெரிய வல்லரசுகள் இவற்றை ஏற்றுக்கொண்ட அளவில் தற்காலிகமாக இவற்றுக்கு ஓரளவு மதிப்பு ஏற்பட்டது. அரசாங்கங்களிடையே போரின் பயனாய் எழுந்த ஒப்பந்தங்களைப் போலவே, போருக்குக் காரணமான நிகழ்ச்சிகளிலும் சில கட்டுப்பாடுகள் உண்டாயின. 1884இல் நடைபெற்ற பெர்லின் மாநாட்டை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதற்கு முன்பெல்லாம் அமெரிக்காக் கண்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றப் போட்டி, வர்த்தகப் போட்டி காரணமாகப் பல போர்கள் நடைபெற்றிருந்தன. இதேபோல ஆப்பிரிக்காக் கண்டத்தின் குடியேற்றப் போட்டியிலும் சச்சரவுகள் நிகழாமல் இம்மாநாடு தடுத்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தில் போட்டியிடத்தக்க வல்லரசுகளிடையே அக்கண்டத்தில் செல்வாக்கெல்லைகள் வகுக்கப்பட்டன. இதனால் போட்டி தவிர்க்கப்பட்டது. போரின் விளைவாகவும், போரைத் தடுப்பதற்காகவும் ஏற்பட்ட இவ்வொப்பந்தங்களைப் போலன்றி, ஆக்க முறையில் நாடுகளை ஒன்றுபடுத்திச் செயலாற்ற வைக்கத் தக்க நிலையான அமைப்புகளிலும் அறிஞர் கருத்துச் செல்லலாயிற்று. உலகில் அஞ்சல் நிலையங்கள் பல நாடுகளில் இருந்தாலும், நாட்டுக்குநாடு அஞ்சல் செல்வதில் பல சிக்கல்கள் இருந்தன. இவற்றை நாட்டுக்குநாடு தனித்தனி ஒப்பந்தங்களால் சரி செய்வதை விட, உலக நாடுகளுடைய அஞ்சல் நிலையங்களின் சார்பாக ஒரு கூட்டுறவு நிலையம் அமைப்பது நீடித்த பயன் தரும் என்று அஞ்சல் துறையாளர் கண்டனர். அதனால், அவர்கள் 1874இல் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் உலக அஞ்சற்கூட்டுறவு மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இதன் பயனாக உலக அஞ்சற்கூட்டுறவு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இஃது இன்றளவும் நிலைபெற்றிருப்பதுன், ஐக்கிய நாடுகளின் அமைப்பிலும் இணையுறுப்பாகியுள்ளது. இதுபோன்ற பல சர்வதேச அமைப்புகள் தனித்தனி துறைகளில் தனித்தனி குறிக்கோளுடன் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் அமைக்கப்பட்டு வந்துள்ளன. இவை உலக இயக்கத்துக்கு வழிகாட்டிகளாயிருப்பதுடன், அவ்வப்போது அதனுடன் இணைந்தும் வருகின்றன. 1918இல் அமைக்கப்பெற்ற உலக நடுவுநிலைத் தீர்ப்பு மன்றமும், 1819இல் நிறுவப்பெற்ற சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் இது போன்ற சர்வதேச அமைப்புகளே; இவையும் இப்போது உலக அமைப்பில் இணைந்தே செயலாற்றுகின்றன. நாட்டின் தனித்தனி துறைகளைச் சர்வதேச அடிப்படையில் இணைக்கும் இந்நிலையங்கள், உலக இயக்கத்துக்கு வழி காட்டிகளாகவும் வலுவூட்டுபவையாகவும் அமைந்தன. உலக இயக்கம் - இவற்றைப் போன்ற தனித்துறைக் கூட்டுறவு இயக்கம் அன்று. ஆனால், அது போர் நிகழ்வதைத் தடுக்கும் முறையில் உலக நாடுகளையே ஒன்றுபடுத்தும் கூட்டுறவிணைப்பு முயற்சியாகும். இத்தகைய முயற்சி முதன்முதலாக 19-ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சிகளுக்கு உயிரூட்டிய இயக்கம் பிரெஞ்சுப் புரட்சி இயக்கமேயாயினும், வல்லரசு நாடுகளுள் ஒன்றாகிய பிரான்ஸ் நாட்டில் இவை தழைத்து வளர முடியாதபடி அரசியல் சூழ்நிலைகள் அமைந்திருந்தன. ஆகவே, இம்முயற்சிகளுக்குச் சிறு நாடுகளான ஸ்விட்ஸர்லாந்தும் ஹாலந்துமே தாயங்களாயின. அஞ்சற்கூட்டுறவு மாநாடு ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பெர்ன் நகரில் கூடியதை மேலே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், உலகநாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய முதல் அமைப்பு, ஹாலந்தில் ஹேகு நகரிலேயே நடைபெற்றது. இதுவே, 1899-ஆம் ஆண்டின் ஹேகு அமைதி மாநாடு ஆகும். நாடுகளும் வல்லரசுகளும், தங்களிடையே போட்டியோ சச்சரவோ ஏற்பட்டபோது, அவற்றைப்போரில் தீர்ப்பதைவிடச் சமரச முயற்சியால் தீர்ப்பதே நல்லது என்பதை இம்மாநாடு வலியுறுத்தியது. 1912-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஹேகு அமைதி மாநாடு, இந்நல்லெண்ணத் தீர்மானத்தை வலியுறுத்திற்று. அத்துடன், எந்த வல்லரசும் சமரச முயற்சியினாலேயே சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், போரில் இறங்கக் கூடாதென்றும், சமரச முயற்சிகள் வெற்றியடையாத விடத்து அவற்றை ஒரு நடுநிலைக் குழுவிடம் விட்டுத் தீர்ப்புப் பெறவேண்டுமென்றும் தீர்மானித்தது. இத்தகைய நடுநிலைத் தீர்ப்பளிக்கும் நிலையமாகவே நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹேகு நடுநிலைத் தீர்ப்பு மன்றம் அமைக்கப்பட்டது. ஹேகு மாநாட்டின் தீர்மானமும் உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றமும் பெரிய வல்லரசுகளைக் கட்டுப்படுத்த முடியா தென்பதனை முதல் உலகப்போர் காட்டிற்று: அவற்றை முற்றிலும் புறக்கணித்தே ஜெர்மனி போர் தொடுத்தது. அத்துடன் போரில் ஈடுபடாத சின்னஞ் சிறு நாடாகிய பெல்ஜியத்தின் மீது காரண மில்லாமலும், முன்னறிவிப்பில்லாமலும் அது போர்தொடுக்கத் துணிந்தது. முதலுலகப் போர் முடிவில் ஜெர்மனி படுதோல்வி யுற்ற பின் ஏற்பட்ட வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தத்தின்படியே, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் என்ற ஓர் அமைப்பை நேசநாட்டினர் ஏற்படுத்தினர். அதனையடுத்து ஹேகு அமைதி மாநாட்டினும் வலுவுடையதாக ஒரு சர்வதேசக் கூட்டுற வமைப்பையும் ஏற்படுத்தத் துணிந்தனர். இதுவே, 1919இல் நிறுவப்பட்ட சர்வதேச சங்கம் ஆகும். இதன் தலைமையிடம் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா நகரம். இதில் நேச நாடுகள் பலவும் உறுப்புக்களாய் சேர்ந்தன. சர்வதேச சங்கத்தின் அமைப்புக்குப் பெரிதும் காரணரா யிருந்தவருள் ஒருவர், அக்கால அமெரிக்க நாட்டுத் தலைவரான உட்ரோ வில்ஸன் ஆவர். அவரைச் சர்வதேச சங்க இயக்கத்தின் தந்தையார் என்று கூறுவதுண்டு. ஆயினும், சர்வதேச சங்கத்தில் உறுப்பாக அமெரிக்கா சேர முடியவில்லை. அதுபோலவே போர் முடியுமுன் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு, அந்நாடு நேசநாடுகள் கூட்டுறவிலிருந்து பிரிந்துவிட்டதனால், ரஷ்யாவும் சேரவில்லை. இவ்விரண்டு நாடுகளும் சேராதது சங்கத்தின் வலுக்குறைவுக்கு ஒரு காரணம். மேலும், சங்கம் ஆண்டுக்கொரு முறை கூடினும், உலக நெருக்கடிக்காலங்களில் அது விரைந்து செயலாற்ற முடிய வில்லை. அதன் நடவடிக்கைகளை வலியுறுத்தத்தக்க நிலையான அமைப்புகளும் சாதனங்களும் ஏற்படவில்லை. எனவே, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒவ்வொன்றாகச் சங்கத்தின் கோட்பாடுகளை மீறி அயல் நாடுகளைத் தாக்க முற்பட்டன. ஜப்பான். சீனா மீது போர் தொடுத்துப் பல ஆண்டுகளாக அதனைச் சூறையாடி விழுங்கத் தலைப்பட்டது. சங்கத்திலிருந்து வெளியேறிய முதல் நாடு இதுவே. அடுத்தபடி இத்தாலி ஜப்பானைப் பின்பற்றி அபிசீனியா மீது பாய்ந்து, இரண்டாண்டுகளில் அதனை விழுங்கிற்று. சங்கம் அதன்மீது நடத்திய பொருளாதார நடவடிக்கைகள், வல்லரசுகளுக்கு ஒரு கேலிக் கூத்தாய் முடிந்தன. இவற்றால், துணிந்து சங்கத்தை மீறத் தலைப்பட்ட நாஜி ஜெர்மனி, ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் இத்தாலியுடன் சேர்ந்து ஒத்திகை நடத்திவிட்டுப் படிப்படியாக ஆஸ்திரியா, பொகீமியா, மொரேவியா ஆகிய நாடுகளையும் செக்கோஸ்லாவியாவையும் விழுங்கி, இறுதியில் போலந்து மீது பாய்ந்து, இரண்டாம் உலகப் போரை உண்டுபண்ணிற்று. இங்ஙனம் சர்வதேச சங்கம் பல சிறு சச்சரவுகளை வெற்றிகரமாகத் தீர்த்ததாயினும், பெரிய வல்லரசு களைத்தடுத்து நிறுத்தமுடியாமல், வலுவிழந்தது. அது பல படைக்குறைப்பு மாநாடுகளை நடத்திற்று. ஆனால், படைத்துறை அனுபவமுள்ள நிபுணர்குழு எதுவும் சங்கத்திற்கு இல்லாத காரணத்தால், ஜெர்மனி போன்ற வல்லரசுகள் கட்டுப் பாடுகளுக்குப் புறம்பான புதுக் கருவிகளையும், புதுக் கருவி வகைகளையும் கண்டுபிடித்து, அக்கட்டுப்பாடுகளை எளிதில் மீறலாயின. 1930 முதல் சங்கம் பெரிதும் செயலிழந்து போயிற்று. 1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பின் அது பெயரளவிலேயே நடைபெற்றது. சர்வதேச சங்கம் உலக இயக்கத்திற்குச் செய்த நிலையான நன்மைகள் இரண்டு: அது உலகச் செய்திகள், தகவல்கள், சர்வதேச மூலாதாரமான பத்திரங்கள் ஆகியவற்றைத் தொகுத்ததுடன் சர்வதேசத் துறையில் பல அறிஞரையும் நிபுணரையும் ஈடுபடுத்திப் பயிற்றுவித்தது. சர்வதேச சங்கத்தினர் தொகுத்த நூல் நிலையம், இன்றும் உலக இயக்கத்தினரின் நூல் நிலையத்துக்கு ஒரு மூலக் கருவூலமாய் இருந்துவருகிறது. சர்வதேச சங்கத்தின் நிபுணரும் அதன் நடைமுறைகளில் அனுபவம் பெற்றவருமாகிய பலர் இன்றும் அதன்பின் வந்த புதிய அமைப்பாகிய ஐ.நா. அமைப்பில் அரும்பணியாற்றி வருகின்றனர். இரண்டாவதாகச் சர்வதேச சங்கம் தன் நீண்ட கால அனுபவத்தினால் உலக அமைப்புகளில் ஏற்படக்கூடும் வலுக்குறைவுகளையும் அவற்றின் காரணங் களையும் மக்களுக்கு எத்துக்காட்டிப் புதிய அமைப்புகளுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்தது. இன்றைய ஐ.நா. அமைப்பு, இப்படிப்பினைகளின் பயனை நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா. அமைப்பில் ஏற்பட்டுள்ள கீழ்வரும் பண்புக்கூறுகள் சர்வதேச சங்கத்தின் படிப்பினையின் மூலம் ஏற்பட்ட சீர்திருத்தங்களே யாகும்: (1) நிலையான பணியாற்றும் பொறுப்புடைய ஒரு தனி மனிதராக ஐ.நா. அமைப்பில் ஒரு பொதுச் செயலாளர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவருடன் பல துணைச்செயலாளர் இருந்து, அமைப்பின் வேலைகளைத் தொடர்ச்சியாக கவனித்து, இடையறாப் பொறுப்புடையவராய் உழைத்து வருகின்றனர். (2) ஐ.நா. அமைப்புக்குப் படைத்துறைச் சார்பில் வேண்டிய துணை செய்யவும், நெருக்கடிக் காலங்களில் கடைசி நடவடிக்கையான படைத்துறை நடவடிக்கைகளை எடுக்கவும், முதல் தர வல்லரசுகளின் படைத்துறை நிபுணர் அடங்கிய படைத்துறை நிபுணர் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. (3) ஐ.நா. அமைப்பில் போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் பொறுப்புடைய உறுப்பாகிய பாதுகாப்பு மன்றம், நிலையானதும் தொடர்ச்சியானதுமான அமைப்பாய் அமைந் துள்ளது. இதன் செயல்கள் உலக முழுமையையும் உலக வல்லரசு களையும் கட்டுப்படுத்தத் தக்கவையாயிருக்க வேண்டுமாதலால், இதில் இன்றைய உலகின் முதல் வல்லரசுகளாகக் கருதப்படும் ஐந்துநாடுகளின் பிரதிநிதிகள் நிலையான உறப்பினர்களாகவும், கூட்டுப் பொறுப்பும் சிறப்புரிமையும் உடையவர்களாகவும் அமைந்துள்ளார்கள். (4) மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு மன்றம் ஒன்று நீங்கலாக, மற்றெல்லா உறுப்புகளிலும் உலகநாடுகள் சரிசமமான நிலையில், வேற்றுமையில்லாமல் உறுப்பாயுள்ளன. சிறப்பாக அமைப்பின் அடிப்படை உறுப்பான பொதுப் பேரவையில் உலகநாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் தனி முழுச் சுதந்தர உரிமையுடைய வராயும், சரிசமமான மொழியுரிமை உடையவராயும் உள்ளனர். வல்லரசுகளுக்கும், சின்னஞ்சிறு அரசுகளுக்கும் சரிசமமாக ஒரே மாதிரியான மொழியுரிமை இருப்பதால், ஐ.நா. அமைப்பு வல்லரசுகளின் வேட்டைக்காடு ஆய்விட வழியில்லை. (5) இறுதியாக, சர்வதேச சங்கத்தின் பெருங்குறைபாடு, அது அரசாங்கங்களின் கூட்டுறவாய் மட்டும் இயங்கிற்று என்பதே. அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் வலுவும், மக்கள் ஆர்வத்தை எழுப்பி அவர்கள் ஆதரவைப் பெறவல்ல சிறப்புறுப்புகளும் நோக்கங்களும் அதற்கு இல்லை. ஐ.நா. அமைப்பில் தொடக்கத்திலிருந்தே இத்தவறு திருத்தப் பட்டுள்ளது. “உலக நாடுகளின் மக்களாகிய நாங்கள்” எனத் தொடங்கும் ஐ.நா. உரிமை விளம்பரத்தின் வாசகமே, அது நாட்டரசாங்கங் களைக் கடந்து நாட்டு மக்கள் கூட்டுறவை நாடுகிறது என்பதைக் குறிப்பதாகும். மேலும், அடிப்படை மனிதவுரிமைகள் உரிமை விளம்பரத்தில் இடம் பெறுவதுடன், அது வற்புறுத்தப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்கான தனிக்குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக, உலகமக்கள் சமூக, பொருளாதார வசதிகளைக் கவனித்து, அவற்றின் நிலைகளை வளர்ப்பதற்காகச் சமூக பொருளியல் மன்றம் என்ற தனியுறுப்பும்: அதனால் நிறுவப்பட்ட தனியுறுப்பாகக் கல்வி, விஞ்ஞானம், பண்பாடு ஆகியவற்றை உலக அடிப்படையில் வளர்ப்பதற்கான ‘ஐ.நா. கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக்கழகம்’ (ருசூநுளுஊடீ) என்ற கிளை உறுப்பு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் உழைக்கும் பிற சர்வதேச அமைப்புக்களுடனும் நாட்டமைப்புகளுடனும் ஐ.நா அமைப்புத் தொடர்பு கொள்வதற்கும் வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சங்கம் 1946 வரையில் செயலாற்றியபின் புதுவடிவுடன் உருவான புதிய உலக அமைப்பாகிய ஐ.நா. அமைப்புக் குழுவின் தீர்மானப்படி கலைக்கப்பட்டது. சங்கத்தின் பொறுப்பிலிருந்த உடைமைகள், பத்திரங்கள் யாவும் ஐ.நா. அமைப்பால் மேற்கொள்ளப்பட்டன. புதிய உலக இயக்கத்தின் பண்புகள் பற்றியும் அதன் பயனாக ஏற்பட்ட புதிய உலக அமைப்பாகிய ஐ.நா. அமைப்புத் தோன்றிய வகை பற்றியும் இனி வரும் பிரிவிற்கூறுவோம். 2. ஐ.நா. அமைப்பின் தோற்றம் நாஜி விமானங்கள் இலண்டன் மாநகர்மீது வட்டமிட்டு ஓயாது குண்டு மாரிகளைப் பொழிந்த வண்ணமிருந்தன. “அலைகடல் ஆளுக பிரிட்டானியா! பிரிட்டானியர் என்றும் அடிமையர் ஆகமாட்டார்!” என்று நாட்டுப் பாடல் பாடிவந்த பிரிட்டானியர், தம் நாட்டமைதியையும், வீட்டமைதியையும் இழந்து, நாட்டு விடுதலைக்கே இடர் வந்துற்றதெனக் கண்டு, அதனைக் காக்க அரும்பாடு பட்டுப் போராடிக்கொண்டிருந்தனர். இத்தகைய உயிர் நெருக்கடியான சூழ்நிலையிலேதான் ஐக்கியநாடுகள் அமைப்புக் கருவுயிர்த்தது. அந்நாள் பிரிட்டனின் போர்க்கால முதல்வராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரும் போரில் இன்னும் ஈடுபடாதிருந்த அமெரிக்கநாட்டின் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்டும் முன்னேற்பாட்டின்படி, யாருக்கும் தெரியாமல், சந்தடியின்றி, அட்லாண்டிக்குக் கடலின் ஒரு பகுதியில் ஒரு கப்பல் தளத்தின் மீது சந்தித்தனர். அவர்கள் பேச்சுகளின் விளைவாக எழுந்த அட்லாண்டிக்கு உரிமைப் பட்டயமே புதிய உலக அமைப்பின் கருமூலமாகும். இப்ட்டயமூலம் இருதலைவரும் நேசநாட்டினரின் சார்பில் தம் போர் நோக்கத்தையும், போருக்குப் பிற்பட்ட எதிர்கால உலகம் பற்றிய தம் நீண்டகாலத் திட்டங்களின் நோக்கத்தையும் உலகாநடுகளுக்குத் தெரிவித்தனர். “நேசநாட்டினர் ஒற்றுமை, போரின் வெற்றியுடன் நின்றுவிடுவதன்று; அது பின்னும் நிலையாக நீடித்திருக்க வேண்டும். மேலும், அந்நோக்கம் நேசநாட்டினரளவிலோ, நேசநாட்டு அரசாங்கங்கள் அளவிலோ நிற்பதன்று. அஃது உலகநாடுகள் அனைத்தையும் அவற்றின் மக்களின் எதிர்காலத்தையும் அளாவியதாகும்?” என்பதை இப்பட்டயம் வற்புறுத்திற்று. உரிமைப்பட்டயத்திலும், இதனை விளக்கிச் சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் பேசிய பேச்சுகளிலும், அறிவிப்புகளிலும் உள்ளீடாகப் பிற்காலத்து அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கருநிலைக் கருத்துகள் மிளிர்கின்றன. ரூஸ்வெல்ட்டு இதனைப்பற்றிய விளக்கத்திடையேதான் பசி வறுமை உடைப்பஞ்சம் உறையுட்பஞ்சம் ஆகியவற்றிலிருந்து விடுபடும் உரிமை, தொழில் பெறும் உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய நான்கு விடுதலை உரிமைகளைப் பற்றி விளக்கினார்: “உலகநாடுகள் பலாத்காரத்தையும் போர்ச் செயலையும் ஒழித்துக்கட்ட முன் வரவேண்டும். எந்த ஒரு நாட்டின் சுதந்தரத்தின்மீதும் மற்றொரு நாடு தாக்குதல் நடத்த முடியாதபடி எல்லா நாடுகளும் உத்தரவாதமளித்து, நிலையான அமைதியைப் பேணுதல் வேண்டும். அத்துடன், ஒவ்வொருநாட்டு மக்களும் தத்தம் விருப்பப்படி தத்தம் அரசியல் முறையை வகுத்துக்கொள்ளும் உரிமை பெறுதல் வேண்டும். உலக வாணிகத்துறையிலும், உலகின் மூலப்பொருள் வளத்திலும் எல்லா நாடுகளுக்குமே சரிசம உரிமையும், சரிசமசந்தர்ப்பமும் இருத்தல் வேண்டும். கட்டற்ற கடலின் சுதந்தரம் இருக்க வேண்டும். உலகத் தொழிலாளரின் பொருளியல் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். உலகமக்கள் அனைவருக்கும் வறுமை, அச்சம் ஆகிய இரு தொல்லைகளிலிருந்து முழு விடுதலை ஏற்பட்டு, அவர்களிடையே பொருளாதார இணக்கமும் சமூகப்பாதுகாப்புக்கான உத்தரவாத உணர்வும் உண்டாதல் வேண்டும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் வகையில். அமைதியை நாடும் உலக நாட்டு மக்கள் யாவருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அரசாங்கங்கள் ஊக்கமும் ஆதரவும் தரும்.” இவைகளே அட்லாண்டிக்கு உரிமைப்பட்டயம் உலகுக்களித்த உறுதிகள். நேசநாடுகள் அனைத்தும் இவ்வுரிமைப் பட்டயத்துக்கு ஆதரவு தந்தன. 1942 ஜனவரி முதல் தேதியில் இருபத்தாறு நேசநாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, அட்லாண்டிக்குப் பட்டயத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் ஏற்பதாக ஒப்புக்கொண்டு, அதில் கையொப்பமிட்டார்கள். அச்சு வல்லரசுகளை எதிர்த்துப்போரை வெற்றிகரமாக நடத்துவதுடன் ஆக்கிரமிப்புச் சக்தியை எதிர்த்து அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவதாகவும் இந்நாடுகள் உறுதி செய்துகொண்டன. சிறுநாடுகள் இப்பட்டயத்தைத் தம் சிறப்புரிமைகளின் பாதுகாப்பெனக் கொண்டு போற்றிப் பாராட்டின. உலகப் பத்திரிகைகள் யாவும் இதனை வரவேற்றன. போரில் உடலார்வமுழுவதையும் ஈடுபடுத்திய வீரர்கள், தங்கள் உள ஆர்வமுழுவதையும் இதில் ஈடுபடுத்தினார்கள். 1941 இறுதியிலேதான் முக்கூட்டச்சின் கீழ்க்கோடி உறுப்பான ஜப்பான், கீழ்த்திசைப் போரைத் தொடங்கியது; அமெரிக்காவும் போரிலிறங்கிற்று. பெரும் போருக்குள் ஒரு பெரும்போராகவும், வீரகாவியத்துக்குள் ஒரு வீரகாவியமாகவும் விளங்கிய ஜெர்மன்-ரஷ்யப்போர் எழுந்ததும் இதன் பின்புதான்: உலகில் இதற்கு முன் என்றும் எங்கும் கண்டிராத கட்டுப்பாடான ஒரு முகப்பட்ட இணைப்பமைப்புகளுடன் நேச அரசாங்கங்கள் உறுதியாய் நின்று இவ்வுயிர்ப் போராட்டத்தை நடத்தி வந்தன. ஆனால், அதேசமயம் அவை மக்கள் சார்பாக, இவ்வியக்கத் துடன் இயக்கமாக உலக இயக்கத்தையும் வளர்க்கலாயின. போரின் உச்சநிலை திரிந்து வருந்தோறும், போர் அமைப்புகள் பல, உலக இயக்கத் துணையமைப்புகளாய் மாறலாயின. 1940லிருந்து வேலை செய்து வந்த நேசநாடுகளின் கூட்டுத் தகவற்குழு இணைப்பு நிலையம் (ஐவேநச-ஹடடநைன ஐகேடிசஅயவiடிn ஊடிஅஅவைவநந யனே ஊநவேசந) 1942 நவம்பருக்குள் உலக இயக்கத்தின் முற்பட்ட உறுப்பாக்கப்பட்டு, ‘ஐ.நா. தகவல் அமைப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. 1943 டிஸம்பருக்குள் இதில் 19 நாடுகள் உறுப்புகளாயின. இதே ஆண்டில் ஐ.நா. சீரமைப்புத் துயருதவிக் கழகம் (ருnவைநன சூயவiடிளே சுநடநைக யனே சுநாயbடைவையவiடிn ஹளளடிஉயைவiடிn) அமைக்கப்பட்டது. இது பின்னர்க் கலைக்கப்பட்டதாயினும், புதிய அமைப்புகள் இப்பொறுப்பை ஏற்றன. 1943-ஆம் ஆண்டு, அக்டோபர், 30-ஆம் நாளில் பிரிட்டன், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் வெளி நாட்டமைச்சர்களும் சேர்ந்த மாநாடு ஒன்று மாஸ்கோவில் நடைபெற்றது. அவர்கள் விடுத்த நான்கு வல்லரசுகளின் அறிக்கை ‘மாஸ்கோ அறிவிப்பு’ என வழங்கப் பெறுகிறது. அதில் அவர்கள் தங்கள் எதிரிகளை முறியடிக்கவேண்டி உலகப்போரில் தாங்கள் ஒன்றுபடுவது மட்டுமன்றி, அதுபோலவே அவ் வெற்றியின் பின்னும் உலக அமைதியைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றுபட்டு நடக்க உறுதி கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். ‘உலகின் எல்லா நாடுகளும் சரிசம உரிமையுடன் கலந்து செயலாற்றத்தக்க உலக நாடுகளின் கூட்டுறவமைப்பு ஒன்று ஏற்படுத்துவது அவசியம்,’ என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.மாஸ்கோ மாநாட்டில் நான்கு வல்லரசுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துகள் விரைவில் திட்ட உருப்பெற்று வளர்ச்சியடைந்து வந்தன. உலக இயக்கம் பிரசாரநிலை கடந்து அமைப்புருவாகத் தொடங்கிற்று. இதற்கிடையே இதே ஆண்டு டிஸம்பரில் பாரசீக நாட்டைச் சேர்ந்த டெஹிரான் நகரில் €உலக மும்முதல்வர்கள் என்று கூறப்பட்ட ரூஸ்வெல்ட், சர்ச்சில், ஸ்டாலின் ஆகியவர்கள் வெளிநாட்டமைச்சர்களின் கருத்துரையை மீண்டும் ஆராய்ந்தார்கள். அவர்கள் முடிவு மாஸ்கோ முடிவை வலியுறுத்தியதுடன், சில கூறுகளில் அதனைக் கடந்து மற்றும் ஒரு படி மேற்சென்றது. “கொடுங்கோன்மையையும் அடக்கு முறையையும் எந்த வடிவில், யார் கையாண்டாலும், அவற்றை நம் நாட்டு மக்களேயன்றி, உலகிலுள்ள மற்ற எல்லா நாடுகளின் மக்களுமே வெறுத்து வருகின்றார்கள். ஆகவே, பெரிது சிறிது என்ற வேற்றுமையின்றி, இவ்வெல்லா நாடுகளையும் ஒன்றுபடுத்தி, நாட்டு மக்கள் எல்லாருடைய அவா ஆர்வங் களையும் ஒரு முகமாக்கி நிழற்படுத்திக் காட்டி, உலக ஒற்றுமையிலும் அமைதியிலும் யாவரும் அக்கறை கொள்ளும் படி செய்தல் வேண்டும்”, என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். வெளிநாட்டமைச்சர் அறிவிப்பைவிட, இது பின்னும் தெளிவாக உலகமக்களை அறைகூவி அழைப்பதாயிருந்தது. உலக இயக்கத்தின் இன்னொரு பண்பையும் மூவர் அறிவிப்பில் காணலாம். இதுவே, உலக இயக்கத்தில் சேரும் உறுப்பு நாடுகளின் சரிசமநிலையும் தன்முடிபு உரிமையும். இதில் சரிசமநிலை உலக அரங்கில் குடியாட்சித் தன்மையைப் பேணுவது, பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் உலக இயக்கத்தில் ஒரே நிலை பெறுவதால், சிறு நாடுகளுக்குப் பாதுகாப்பும் ஏற்படுகிறது. ஆனால், இச்சரிசமநிலையுடன் இடம் பெறும் தன் முடிபுரிமை என்ற பண்பு இருகூறு உடையது: தனி மனிதன் வகையில் குடியாட்சியில் தரப்படும் இன, வகுப்பு, மொழி, கொள்கை அடிப்படையான தனியுரிமைப் பாதுகாப்பை இது நாட்டு அசாங்கங்களுக்கும் கொடுக்கிறது. இதன்படி மதம், வகுப்பு, இனம், அரசியல் கொள்கை ஆகியவற்றில் உலக இயக்க அமைப்பு உறுப்புநாடுகளின் தனி உரிமைகளில் குறுக்கிடும் உரிமை தடைபடுகிறது. ஆனால், அதேசமயம் இவற்றை சாக்கிட்டும், உள்நாட்டுக் காரியங்கள் என்று கூறிக்கொண்டும், உறுப்பு நாடுகள் உலக அமைப்பின் செயலைத் தடை செய்யும் நிலை இதனால் சிலபல சமயம் ஏற்படக்கூடும். இத்தகைய அறநெறி மயக்கங்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனை உலக இயக்கத்தின் குறைபாடாகக் கருதுபவரும் உண்டு. ஆயினும், உலக இயக்கம் நாட்டரசாங்கங்களைப் பகைக்காமல் செயலாற்றி நல்லெண்ணத்தை வளர்ப்பதனாலும், நாட்டரசாங்கம் நடந்து மக்கள் அவா ஆர்வங்களை அது ஊக்குவதனாலும் இத்தடங்கல், இயக்கத்தின் வளர்ச்சியுடன் குறையவே வழியுண்டு. “அவரவர் அவா ஆர்வங்களுக்கேற்ற வகையிலும், அவரவர் மனச்சான்றுகளுக்கேற்ற வகையிலும், உலக நாடுகளின் எல்லா மக்களும் கொடுங்கோன்மைக்கு ஆளாகாமல் வாழும் நாளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்ற மூவர் வாசகம், உலக இயக்கத்தின் உரிமைக் கட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை யாயினும், அதன் அன்புமுறை சார்ந்த உயர்குறிக்கோளையும் விருப்ப இலக்கையும் குறிப்பதாகும். ‘எது உள்நாட்டுச் செய்தி? எது தன் முடிபுரிமைக்கு உரியது?’ என்பவற்றில் கருத்து வேறுபாடு எழக்கூடுமாயினும், இது நாட்டரசாங்கங்களின் கடமையையும் குறிக்கோளையும் எடுத்துக்காட்டச் செய்து, அரசாங்கங்களையும் இயங்கச் செய்ய வல்லது என்பதில் ஐயமில்லை. உலக அமைப்புப் பற்றிய முழுத்திட்டம் உருவானது டம்பார்ட்டன் ஒக்ஸ் மாநாட்டிலேயே. இது 1944-ஆம் ஆண்டுக் கோடைப் பருவத்தில் அமெரிக்காவில் வாஷிங்டனைச் சார்ந்த டம்பார்ட்டன் ஒக்ஸ்பண்ணையில் நடைபெற்றது. இம்மாநாடு, ஆகஸ்டு 21இல் பிரிட்டன், அமெரிக்க, ரஷ்யப் பிரதிநிதிகளுடன் தொடங்கிற்று. ஸெப்டெம்பர் 28இல் ரஷ்யாவினிடமாகச் சீனா இடம் பெற்று, அக்டோபர் 7 வரை மாநாடு நடத்தப் பெற்றது. ரஷ்யா மேல் திசைப் போரிலும், சீனா கீழ்த்திசைப் போரிலும் மட்டுமே ஈடுபட்டதனை முன்னிட்டே, மாநாட்டில் இங்ஙனம் இரு திறக் கூறுகள் (ளுநளளiடிளே) ஏற்பட்டன. உலக அமைப்பில் பொதுப்பேரவை, பாதுகாப்புமன்றம், சமூக பொருளியல் மன்றம், உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் ஆகிய உறுப்பமைப்புகளுக்கான ஒழுங்குமுறைகள் இம்மாநாட்டில் விவாதித்து முடிவு செய்யப்பட்டன. பொதுப்பேரவையில் உறுப்புநாடுகள் யாவும் இடம் பெறவேண்டும். அவற்றிடையே சரிசம நிலையும் இருக்க வேண்டும். பாதுகாப்பு மன்றத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து பெரிய வல்லரசுகள் நிலையான உறுப்புகளாவும், வேறு ஆறு உறுப்புகள் பொதுப் பேரவையால் இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக உறுப்புகளாகவும் இருக்கும். இவ்வைந்து வல்லரசுகளில் பிரான்ஸ் இச்சமயம் அட்லாண்டிக்குப் பட்டயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை யாதலால், அது சேர இணங்கினால் ஐந்தாவது வல்லரசாகும் என்ற விதி அமைக்கப்பட்டிருந்தது. டம்பார்ட்டன் ஓக்ஸ் மாநாட்டின் இம்முடிவுகள் நான்கு வல்லரசுகளின் ஒப்புதலுடன் உலகமக்கள், அரசாங்கங்கள் கருத்துரைக்காக வெளியிடப்பட்டன. பொதுவாக இத்தகைய ஆதாரங்கள் மன்ற உறுப்பினர் ஏற்புப் பெற்ற பின்னரே வெளியிடப்பெறும். ஆனால், உலக அமைப்புக்கு உலக ஆதரவே அடிப்படை வலுத்தருவது என்பதை முன்னிட்டு, இங்கே ஆதரவு வல்லரசுகளின் (ளுயீடிளேடிசiபே ஞடிறநசள) பெயரால் அஃது உலகப் பொதுமக்கள் ஆராய்ச்சிக்கு விடப்பட்டது. அடுத்த ஆண்டு (1945) ஜனவரியில் கிரிமியா மாநாட்டில் உலகமூவர் மறுபடியும் கலந்து, போர்நிலை, உலக இயக்கம் ஆகியவைபற்றி விரிவாகப் பேசினர். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்பிரவரி 4 முதல் 12 வரை யால்ட்டாவில் நிகழ்ந்த பேச்சு விவாதங்கள் உலக அமைப்பில் பெருமுக்கியத்துவம் உடையவை. உலக அமைப்பைக் கூடிய விரைவில் கூட்டுவ தென்று இதில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான காலமும் வரையறுக்கப்பட்டது. அமைப்பின் இத்தொடக்கத் திட்ட மாநாடே பேர் போன ஸான் பிரான் ஸிஸ்கோ மாநாடு ஆகும். யால்ட்டாவில் இம்மாநாட்டிற்கான காலவரையறை செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு மன்றத்தின் மொழியெடுப்பு வகையிலும் முக்கியமான ஒரு கட்டுப்பாடு வகுக்கப்பட்டது. நடைமுறைகள் பற்றிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவுகளுக்கு ஏழு மன்ற உறுப்பினரின் ஆதரவு தேவை என்றும்; முக்கியமான தீர்ப்புகள் வகையில் தெளிவாக ஆதரவு தெரிவிக்கும் ஏழு மொழிகள் தேவையென்றும்; அந்த ஏழில் ஆதரவு வல்லரசுகள் ஐந்தின் மொழிகளும் ஒருங்கே இடம் பெற வேண்டும் என்றும் பெருவிவாதங்களுக்குப் பின் முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு மன்றம் அமைதிக் காப்புக்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்புடையதாதலால், அதன் செயல்களுக்கு உலக முதல் வல்லரசுகளின் ஆதரவு வலு இன்றியமையாதது என உணரப்பட்டதனாலேயே இத்தனிக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும், விவாதங்களில் தொடர்புடைய உறுப்பினர் மொழியுரிமையில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் முடிவு செய்யப்பட்டது. டம்பார்ட்டன் ஓக்ஸ் மாநாட்டின் திட்டத்தின்படி உலக அமைப்பின் ஒரு பகுதியாக உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் ஒன்று அமைக்க வேண்டியிருந்தது. இதற்கான சட்டவிதிகளைத் தொகுக்க ஒரு சட்டக்குழுவும் வேண்டியிருந்தது. ஆதரவு வல்லரசுகளின் அமைப்பின்பேரில் 44 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இத்தகைய குழு ஒன்று கூட்டப்பட்டது. இக்குழு ஏப்பிரல் 9 முதல் 20 வரை கூடி ஆராய்ச்சி செய்து, ஏற்கெனவே இருந்து வந்த முக்கிய உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றத்தின் அமைப்பு விதிகளையே முன் மாதிரியாகக் கொண்ட ஒரு விதி முறைப்பட்டி தொகுத்தது. பழைய நடுநிலைத் தீர்ப்பு மன்றத்தை ஏற்றுக்கொள்வதா, புதிதாக ஒன்று அமைப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டுக்கே விடப்பட்டது. உலக இயக்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பாக உருவாவதற்கு உடனடியாக உதவிய தாயகக்கூட்டம் ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாடே. அமெரிக்க உள்நாட்டமைச்சர் காரியாலயத்தைச் சேர்ந்த திரு. அல்கர் ஹிஸ் என்பவரே இம்மாநாட்டின் தலைமைச் செயலாளராய் அமர்த்தப் பட்டார். இவருக்கு மாநாட்டைக் கூட்டும் வகையில் உதவி செய்ய ஆயிரம் பேர்களுக்கு மேலடங்கிய ஓர் ஆட்சிப்பணி நிலையம் (ளுநஉசநவயசயைவ) அமெரிக்க உள் நாட்டமைச்சர் காரியாலயத்தாரால் அமைத்துத் தரப்பட்டது. உலக இயக்கத்தவரை விருந்தேற்பவராக இருந்து வரவேற்கும் பொறுப்பும் செலவும் அமெரிக்காவினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாடு ஏப்பிரல் 25 முதல் ஜூன் 26 வரை (இரண்டு மாதங்கள்) நடைபெற்றது. ஆதரவு வல்லரசுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களே வரிசைமுறையில் மாறிமாறி அதன் முழுநிறைகூட்டங்களுக்குத் தலைமை வகித்தனர். மாநாட்டின் வேலையில் பெரும்பகுதியும், மாநாட்டினால் அமர்வு பெற்ற தனித்தனி குழுக்களால் ஆற்றப்பட வேண்டியதாயிருந்ததனால், மாநாட்டுக் கூட்டங்கள் தொடக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே நிறை கூட்டங்களாய் இருக்க முடிந்தது. ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டின் முக்கியமான செயல், உலக இயக்கத்துக்கும் உலக அமைப்புக்கும் வேண்டிய அடிப்படை விதிகளும் நோக்கங்களும் கொண்ட உலக நாடுகளின் உரிமைப்பத்திரம் ஒன்றை வகுப்பதே. இவ்வேலை பல பல குழுக்களுக்கிடையே வகுத்துக்கொடுக்கப்பட்டது. இம்முக்கியமான வேலை போக, வேறுபல சில்லறைக் கடமைகளும் மாநாட்டுக்கு இருந்தன. ஐக்கியநாடுகளின் அமைப்பினுடைய கூறுகளான ஐ.நா. பேரவை, பாதுகாப்பு மன்றம் முதலியவற்றைக் கூட்டுவதற்கான முன்னேற்பாடுகளை வகுப்பது, அவற்றின் கடமைகளையும் பொறுப்புகளையும் உரிமைகளையும் வரையறுப்பது, இவை எல்லாவற்றையும் தொடர்ந்து கவனித்துக்கொள்வதற்காக ஐக்கியநாடுகள் பணித்துறை ஆட்சிக்குழு (ரு.சூ. ளுநஉசநவயசயைவ) அமைப்பது ஆகியவை அவற்றுட்சில. மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாக நான்கு குழுக்கள் அமர்த்தப்பெற்றன. இவை நடைமுறை ஒழுங்குக்குழு (ளுவநநசiபே ஊடிஅஅவைவநந), நிறைவேற்றற் குழு (நுஒநஉரவiஎந ஊடிஅஅவைவநந), ஒருமுக இணைப்புக் குழு (ஊடி-டிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந), சான்றாண்மைக் குழு (ஊசநனநவேயைடள ஊடிஅஅவைவநந) என்பவைகளே. இவற்றுள் முதற்குழுவில் ஒவ்வோர் உறுப்பு நாட்டின் பிரதிநிதிக்குழுவின் தலைவர்களும் இடம் பெற்றிருந் தார்கள். நிறைவேற்றற்குழுவில் நாற்பெரு வல்லரசுகளின்1 பிரதி நிதிக்குழுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப் பட்ட வேறு பத்து நாடுகளின் பிரதிநிதிக் குழுத்தலைவரும் இருந்தனர். மாநாட்டின் ஆராய்விற்கான செய்திகளை நடைமுறை ஒழுங்குக் குழு வகுத்தபின், நிறைவேற்றற்குழு அதனை அதற்குரிய சிறப்புக் குழுவினிடம் விட்டு, அக்குழுக்களின் முடிவுகளைத் திரட்டும். ஒருமுக இணைப்புக் குழு, அவற்றின் நடைமுறைகளை இணைத்து முடிபுகளைத் தொகுக்கும். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம், தகுதி, அடையாளம் ஆகியவை பற்றிய செய்திகளைச் சான்றாண்மைக் குழு கவனிக்கும். 1945 மார்ச்சு முதல் தேதிக்குள் ஜெர்மனிமீதோ, ஜப்பான்மீதோ போர் தொடுத்துள்ள நாடுகள் மட்டுமே ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் உறுப்புநாடுகளாக ஒப்புக் கொள்ளப்பட்டன. மேலும், அவை 1942 ஜனவரியில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உரிமைப் பட்டயத்தில் கையொப்பமிட்ட நாடுகளாய் இருக்க வேண்டும். இவையே ஐக்கியநாடுகள் அமைப்பினைத் தோற்றுவிக்கவும் விதிமுறை வகுக்கவும் உரிமையுடைய தொடக்க உறுப்பு நாடுகள் ஆகும். ஐ.நா. அமைப்பில் இதன் பின் சேரும் உறுப்பினர் இத்திட்டத்தை உருவாக்குவதில் பங்கு கொள்ளாமல், உருவாகிய பின் இத்திட்டத்தை ஏற்பவரேயாவர். ஆதரவு வல்லரசுகளால் 42 நாடுகளுக்கு மாநாட்டிற்கு வந்து கலப்பதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டன. இந்த 42 நாடுகளும் மேற்குறிப்பிட்ட இரண்டு தகுதிகளை உடையவை. இவற்றுள் யால்ட்டா மாநாட்டில் கோரப்பட்ட உரிமையாட்சிப் பொறுப்புடைய அரசாங்க அமைப்பு, மாநாடு தொடங்குவதற்கு முன் போலந்துக்கு அமையவில்லையாதலால், அந்நாடு இடம் பெறவில்லை. ஆனால், மாநாடு முடிவு பெறுவதற்குள் ரஷ்யக் கூட்டுறவினால் தனியுரிமைப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயலோ ரஷ்யக் குடியரசையும், உக்ரேனியக் குடியரசையும், புதிதாக உரிமை ஆட்சி நிறுவிய டென்மார்க்கையும் மாநாடே தன் சொந்தப் பொறுப்பில் தனித்தனியாக அழைக்கத் தீர்மானித்து உறுப்பாகச் சேர்த்துக்கொண்டது. முன்னேற்பாட்டு வேலைகள், மாநாடு தொடங்குவதற்கு நெடுநாள் முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன. டம்பார்ட்டன் ஓக்ஸ் திட்டம் நிறைவேறிய நாளிலிருந்து மாநாட்டுத் தொடக்கம் வரை அத்திட்டக் கோரிக்கைப் பத்திரம் பல உலக நாடுகளால் தனித்தனியாகவும் கூட்டாகவும், பல தனித்துறை நாட்டமைப்பு களாலும் சர்வதேச அமைப்புகளாலும் ஆராய்ந்து விவாதிக்கப் பட்டது. மாநாட்டின் பிரதிநிதிக் குழுக்கள் பலவும் இத்தகைய அமைப்புகள் பலவும் அதற்கான திருத்தக் கோரிக்கைகளை அனுப்பின. மொத்தம் 1200 திருத்தங்கள் வரை அனுப்பப் பட்டிருந்ததாக அறிகிறோம். பல திருத்தங்கள் திட்டத்தை உருவாக்கிய ஆதரவு வல்லரசுகளாலேயேகூட அனுப்பப் பெற்றிருந்தன. இவ்வெல்லாத் திருத்தங்களும், இவற்றிற்குரிய மூலத் திட்டமான ஐ.நா. உரிமை விளம்பர மூலபாடமும், சட்டக் குழுவினரால் முன்னரே உருவாக்கித் தரப்பட்ட உலக நடுநிலைத்தீர்ப்பு மன்றத்தின் ஒழுங்குமுறைத் தொகுதியின் தற்காலிகப் பகர்ப்பு மூலமும் ஆகிய இவையே மாநாட்டினால் முடிவான - உருப்பெறுவதற்காகக் காத்திருந்த பத்திரங்கள் ஆகும். மாநாட்டின் முதல் பொதுநிறை கூட்டம் 1945 ஏப்பிரல் 25-ஆம் நாள் தொடங்கிற்று. தொடக்கப் பேருரையை அமெரிக்கத் தலைவர் ட்ரூமன் வாஷிங்டனிலிருந்தே ஒலிபரப்பினார். இதனையடுத்து எட்டு நிறை கூட்டங்கள் நடைபெற்றன. கூடிய மட்டும் எல்லா உலக நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் கூட்டத்தில் நேரிடையாகக் கலந்து தம் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று கருதப்பட்டதனால், ஒருவர் பின் ஒருவராக, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்கள் ஐ.நா. அமைப்புப்பற்றியும்; இயக்கம் பற்றியும்; அவற்றின் நோக்கம், திட்டம் ஆகியவற்றைப் பற்றியும் தத்தம் கருத்துரைகளையும் புத்துரைகளையும் தெரிவித்துப் பேசினர். எட்டு நிறை கூட்டங்களிலும் இங்ஙனம் 38 நாடுகளின் தலைவர்கள் பேசினார்கள். இக்கருத்துரைகளும் விவாதங்களும் முடிவுற்றபின் மாநாடு மிக விரைவாகக் குழு வேலைகளில் இறங்கிற்று. மாநாடு கூட்டப்பட்ட காலத்தில், உலகின் பல பகுதிகளிலும் பற்பல நாடுகளிலும் பல நெருக்கடியான நிலைமைகள் இருந்து வந்தன. பல நாடுகளின் சார்பில் வந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் மட்டுமன்றி, அவ்வந்நாட்டின் வெளிநாட்டமைச்சர்களும் மாநாட்டு வேலையைச் சரிவர முடிக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில்லாமல் மாநாட்டு வேலைகள் பொறுப்பாக முடிவு பெறமாட்டா. அதேசமயம் அவர்கள் தங்கள் நாட்டை விட்டுத் தொலைவில் நெடுநாள் தங்கியிருக்கவும் வழியில்லை. இந்நிலையிலேதான் மாநாடு பொதுநிறை கூட்டங்களில் மிகுதி நேரம் செலவு செய்ய முடியாமல், விரைந்து விரைந்து குழுமுறை வேலைகளை முடிக்க வேண்டியதாயிற்று. மே மாதம் 4-ஆம் நாள், குழு நடைமுறை வேலைகள் தொடங்கின. மாநாட்டிற்கான வேலைகள் யாவும் நான்கு குழாங்களாக வகுக்கப்பட்ட 12 குழுக்கள் வசம் ஒப்படைக்கப் பட்டன. இக்குழாங்களும் இவற்றிடம் ஒப்படைக்கப்பட்ட குழுக்களும் வருமாறு: 1. ஐ.நா. அமைப்பின் அடிப்படை நோக்கங்கள், கோட்பாடுகள், உரிமைகள் ஆகியவை பற்றிய குழாம்: இக்குழாத்தில் இரண்டு குழுக்கள் வேலை செய்தன. முதற்குழு, உலக நாடுகள் உரிமை விளம்பரத்தின் நோக்க வாசகத்தையும் கோட்பாடுகளையும் வகுக்க அமைக்கப்பட்டது. பின்னது, உறுப்பினர் பற்றிய விதிகள், திருத்தத் தீர்மானங்களின் நடைமுறைகள், பணித்துறை நிலையத்தின் அமைப்பு ஆகியவற்றைக் கவனித்தது. 2. ஐ.நா. பேரவையின் உறுப்பாக்கம், கடமைகள், உரிமைகள் ஆகியவை பற்றிய குழாம்: இதில் நான்கு குழுக்கள் வேலை செய்தன. அவை முறையே (1) பேரவையின் அமைப்பு, நடைமுறை; (2) அரசியல் பாதுகாப்புச் செய்திகள்; (3) பொருளியல், சமூகக் கூட்டுறவு நடவடிக்கைகள்; (4) பொறுப்பாட்சி முறை ஆகியவை பற்றிய தேர்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட குழுக்கள். 3. பாதுகாப்பு மன்றம், அதன் அமைப்பு, கடமைகள், உரிமைகள் ஆகியவை பற்றிய குழாம்: இதிலும் நான்கு குழுக்கள் இருந்து வேலை செய்தன. இவை முறையே (1) பாதுகாப்பு மன்றத்தின் அமைப்பும் நடைமுறையும்; (2) நாடுகளிடையேயுள்ள சச்சரவுகளை அமைதி முறையில் தீர்த்துவைத்தல்; (3) அவற்றை வலியுறுத்துவதற்கான நடை முறைகள்: (4) திசைநிலப் பாதுகாப்புமுறை ஏற்பாடுகள் (சுநபiடியேட ளுடிஉநைவல ஹசசயபேநஅநவேள) ஆகிய துறைகளுக்குரியவை. 4. உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் பற்றிய குழாம்: இதுவும் இரண்டு குழுக்களுடையது. முதலாவது, உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் பற்றியும்; இரண்டாவது, சட்டத்துறைச் செய்திகளைப் பற்றியும் ஆராய்ந்தது. மேற்கூறிய இந்நான்கு குழாங்களும், இவற்றினுட்பட்ட குழுக்களும், இவை தவிர வேறு நுணுக்கத்துறை சார்ந்த திறப்புக் குழுக்களும் உரிமை விளம்பர மூலப் பகர்ப்பின் பல பிரிவுகளைத் தனித்தனியாக எடுத்து உருவாக்கின. இப்பகர்ப்புப் பகுதிகள் எல்லாவற்றையும் ஒருமுக இணைப்புக் குழுவொன்று ஒருங்கிணைத்துத் தொகுத்து, இவற்றில் இருக்கக்கூடும். முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றை நீக்கி, இவற்றை உருவாக்கிற்று. இக்குழுவில் 14 உறுப்பினர் இருந்தனர். இவர்கள் தந்த உருவிலேயே ஐக்கிய நாடுகளின் உரிமை விளம்பரம் உலகநாடுகளுக்கும் மக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு தனி நாட்டின் அரசியலமைப்பை வகுப்பதிலே கூடப் பல தொல்லைகளும் தொடக்குகளும் ஏற்படாமலிருப்ப தில்லை. உலகத்திற்கே ஒரு தனி அரசியலமைப்பான ஐ.நா. அமைப்பிற்குத் திட்டம் வகுப்பதில் இதனினும் பெரிய சிக்கல்கள் இருப்பது இயல்பாக எதிர்பார்க்கக்கூடியதே. இதற்குமுன் ஏற்பட்டிருந்த உலக அமைப்புகளும் நாட்டரசியல் அமைப்புக ளும் ஓரளவு இதற்கு வழிகாட்டியாய் இருந்தனவாயினும், அவை எவற்றாலும் அளவு காணப் பெறாத பெரும்பொறுப்பை ஐ.நா. அமைப்பாளர் ஏற்றுக்கொண்டிருந்தனர். எனினும், உலக மக்கள் ஆர்வமும், உறுப்பு நாட்டினர் ஒத்துழைப்பும், முயற்சியில் ஈடுபட்டவர்களின் முன் அனுபவமும், திறமும் குறிப்பிடத்தக்க எந்தவிதச் சிக்கலும் இல்லாமலே உலக அமைப்பின் அரசியல் அமைப்பு மாநாடான ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டு வேலையை வெற்றிகரமாக முடிக்க உதவின. அதன் போக்கில் நிகழ்ந்த சிறு தடங்கல்களும் விவாதங்களும் பெரும்பாலும் மொழி பற்றியவையும்: சிறு நாடுகள் வல்லரசுகள் ஆகிய வற்றிடையே இயல்பாக இருக்கக் கூடிய ஆதிக்கவாதப் போட்டிகளுமே ஆகும். மொழித்துறையில் உரிமை விளம்பரம், நடுநிலைத் தீர்ப்புமன்ற விதித் தொகுதித் திட்டம் ஆகிய இரண்டையும் பற்றியவரையில், உலக முதன்மொழிகள் என்று வகுக்கப்பட்ட ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், சீனம் ஆகிய ஐந்து மொழிகளிலும் அது சரிசம உரிமை வழக்குடன் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நடைமுறை வகையில் ஆங்கிலம் ஒன்றே பொதுமொழி யாயிருப்பது வசதியானது என்று வல்லரசுகள் சார்பில் விவாதிக்கப்பட்டது. ஆயினும், சிறு நாடுகள் எல்லாம் ஒரு மொழி ஆதிக்கத்தை வன்மையாக எதிர்த்ததன் காரணமாக, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் நடைமுறைப் பொது மொழிகளாக இருக்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டது. சர்வதேச சங்கத்திலும் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழி சரிசம இடம் வகித்ததென்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரான்ஸின் ஏகாதிபத்திய ஆதிக்கம் பெரிதும் வலுக்குறைந்தது என்பதும், அம்மொழியைச் சிறு நாடுகள் தம் உரிமைக்குப் பாதுகாப்பான மொழி என்று கருதுவதை ஊக்கியிருக்க வேண்டும் என்று கூறலாம். இம்மொழித் துறையைத் தவிரச் சிறு நாடுகள் பெருநாடுகள் போட்டிகூடக் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதிருந்தது. இதற்குக்காரணம் யாதெனில், சிறு நாடுகளில் ஒரு பகுதியே ஒன்றுபட்டு ஒரு குழுவாகச் செயலாற்ற முடிந்தது. சிறு நாடுகளில் பல பிரிட்டன், அமெரிக்கா முதலிய மேற்கு வல்லரசுகளுக்கு ஆதரவாகவும்; அடிக்கடி செயலாற்றின. வல்லரசுகளும் பெரும்பாலும் சிறிய அரசுகளைக் கூட்டாக எதிர்க்க விரும்பவில்லை; எதிர்க்க முடியவுமில்லை, ஏனெனில், அவைகளுக்குள்ளேயே பல தறுவாய்களில் வேற்றுமைகள் எழுந்தன. ஆயினும், பொதுவாக, ஒத்துப் போகவேண்டுமென்ற எண்ணம் வல்லரசுகளுக்குள்ளேயும்; வல்லரசுகள், சிறிய அரசுகளுக்குள்ளேயும் இருந்துவந்தன. எனவே, கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதெல்லாம் எந்தத் தெளிவான முழுப் பிரிவினையும் காணப்படாமலிருந்தது. அத்துடன் பெரும்பாலும் இரு சார்புகளும் சரிமச வலுவுடையனவாகவே இருந்ததனால், சமரச முயற்சிக்கும் விட்டுக்கொடுப்புக்கும் நிரம்ப இடமிருந்தது. ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டிலும் சரி, ஐ.நா அமைப்பு ஏற்பட்ட பிற்பாடும் சரி, நீடித்த முட்டுக்கட்டை நிலைகளுக்கும் சிக்கல்களுக்கும் பலத்த கருத்து வேற்றுமைகளுக்கும் காரணமாயிருந்த ஒரே செய்தி, பாதுகாப்பு மன்றத்தின் மறுப்புமொழியுரிமை (ஏநவடி ஞடிறநச) பற்றியதே. இது யால்ட்டா மாநாட்டில் வகுக்கப்பட்ட திட்டம். ஐ.நா. அமைப்புக் கூறுகளில் இஃது ஒன்றில் மட்டுமே ஆதரவு வல்லரசுகளுக்குத் தனி உரிமை வழங்கப்பட்டிருந்தது. எனவே, சிறு நாடுகள் இது வகையில் அடிக்கடி எதிர்ப்புக் காட்டியது இயல்பே. ஆயினும், இங்கும் பாதுகாப்பு வகையில் ஆதரவு வல்லரசுகளிடையே உள்ள ஒற்றுமையின் அவசியத்தை யாவரும் உணர்ந்தாலும், ஐ.நா. அமைப்பிலும் அதன் திட்டத்திலும் ஏற்படக்கூடிய ஒரே பலக்குறைவு வல்லரசுகளிடையே ஏற்படக்கூடும் போட்டி ஒன்று தான் என்பதை யாவரும் அறிந்திருந்தலும் இச்சிக்கல் ஒரு திறமைப் போட்டியாக மட்டும் இருந்ததேயொழிய, வெற்றி தோல்வித் தேர்வாக வளரவில்லை. மாநாட்டின் குழு முறை வேலைகள் எதிர்பார்த்ததைவிட நீடித்தன. ஆனால், உலகச் சூழ்நிலைகளிடையே மாநாட்டினை நீட்டிக்கொண்டு போகவோ, கடத்திப்போடவோ வழியில்லை. ஆகவே, பல நடைமுறைகள் விரைவாக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் அதிபரபரப்புடன் முடிவு செய்யப்பட்டது. இறுதி நாள் நிறைகூட்டத்தில் நடைமுறைத் தலைவர் அமெரிக்கத் தலைவர் ட்ரூமனாகவே இருந்தார். அவர் முடிவுப் பேருரையுடன் மாநாடு இனிது நிறைவேறிற்று. மாநாட்டின் முடிவில் அதன் நடவடிக்கையின் விளைவாக வெளிவந்த ஐ.நா. உரிமை விளம்பரம், பல வகைகளில் அதன் மூலப் பகர்ப்பான டம்பார்ட்டன் ஓக்ஸ் திட்டத்திலிருந்து மாறுபட்டேயிருந்தது. இம்மாறுபாடுகள் - உலக மக்கள், உலக நாடுகள், அவற்றின் அறிஞர்கள் ஆகியவர்கள் அனுபவம், ஆராய்ச்சி, செயல் திறம் ஆகியவற்றின் சின்னங்கள். மாநாட்டின் பாயிர வாசகம் (ஞசநயஅடெந) புத்தம் புதிதாகச் சேர்க்கப்பட்டதே. பொதுப் பேரவையின் உரிமையெல்லையும் அளவும் பலபடியாகப் பெருக்கமடைந்தன. மனித சுதந்தரங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியவை முன்பு அட்லாண்டிக்குப் பட்டயத்திற் குறிப்பாகக் கூறப்பட்ட அளவிலும் மிகப் பலவாகி, பொருளியல், சமூகத்துறைகளில் அமைப்பின் நோக்கமே முற்றிலும் விரிவடைந்து, விளக்கமும் தெளிவும் திட்பமும் அடைந்தன. இவற்றின் பயனாக அமைப்பின் ஒரு கிளைக் கூறளவாக முதலிற்கருதப்பட்ட பொருளியல் சமூகமன்றம், அதன் பல உறுப்புகளுடனும் இடையீட்டுத் தொடர்புடைய ஒரு முழு உடற்கூறாய் அமைந்தது. மேலும், டம்பார்ட்டன் ஓக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப் பெறாத புதிய கூறான பொறுப்பாண்மை முறை என்ற முழுக் கூறு ஒன்று வகுக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகளும் அமைப்பும் இம்மாநாட்டில் இடம்பெற வேண்டும் என்ற முடிவு யால்ட்டா மாநாட்டிலேதான் செய்யப்பட்டது. கீழ்த்திசை நாடுகளான ஆஸ்திரேலியாவும், சீனாவும்; மற்றொருபுறம் மேல்திசை நாடுகளாகிய ரஷ்யாவும், பிரான்ஸும், அமெரிக்காவும் தனித்தனி உருவாக்கிய மூலப்பகர்ப்புகளிலிருந்து அது ஸான் பிரான்ஸிஸ்கோமாநாட்டில் தீட்டப்பட்டது. பொறுப்பாட்சிக் குட்படாத தன்னாட்சியில்லாப் பகுதிகளுக்காகவும் ஒரு தனி அறிவிப்பு (னுநஉடயசயவiடிn டிn சூடிn-ளுநடக-ஊடிஎநசniபே கூநசசவைடிசநைள) இம்மாநாட்டிலேயே நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் புதிதாக உருவாக்கப் பெற்றதாயினும், பழைய மன்றமும் அதனுட் கொண்டுவரப் பட்டது. நடுநிலைத் தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்பை எந்த நாடாவது புறக்கணித்தால், அதற்குரிய எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு மன்றத்திற்குமேல் வழக்குக் கொண்டுவரும் உரிமையும் வழங்கப்பட்டது. பணித்துறை நிலையத்தினைச் சார்ந்தவர் எந்த நாட்டுத் தனிக்குடியுரிமைக்கும் உட்படாத உலகக் குடியுரிமையாளர் ஆவர் என்பதையும் மாநாடு வரையறுத்தது. உரிமை விளம்பரத்தில் பின்னும் திருத்தம் கொண்டு வருவதற்கான நடைமுறை பற்றி ஒரு வாசகம் பல நாடுகளின் விருப்பப்படி சேர்க்கப்பட்டது. அதற்காகக் கூட்டப்படும் ‘பொது மாநாட்டில் பொதுப் பேரவையின் உறுப்பினருள் மூன்றில் இரண்டு பங்கினரும், பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினருள் எழுவரும் இணக்கமளித்தால், திருத்தம் நிறைவேற்றப் படலாகும்’ என்பதே அவ்வாசகம். ஆயினும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளில் பாதுகாப்பு மன்றத்தின் நிலையான உறுப்பினர் உள்ளடங்கலாக, மூன்றில் இரண்டு பங்கினர் உறுதி செய்த பின்பே இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வரத்தக்கவை. ஸான்பிரான்ஸிஸ்கோ மாநாடு 1945 ஜூன் 25 ஆம் தேதியன்று ஐ.நா. உரிமை விளம்பரத்தை முறைப்படி ஏற்றது. மறு நாள் மாநாட்டில் கலந்துகொண்ட எல்லா நாட்டு அரசாங்கங் களின் பிரதிநிதிகளும் அதிற் கையொப்பமிட்டார்கள். மாநாட்டின் போது உறுப்பு நாடாகச் சேர முடியாதிருந்த போலந்துக்காக இடம் விடப்பட்டு, அதுவும் 1945 அக்டோபர் 15ஆம் தேதி வாஷிங்டனில் கையொப்பமிட்டது. விளம்பரத்திலேயே கண்ட வாசகப்படி நிலையுறுப்பு நாடுகளும் அதனை ஏற்றதன் பின், அதாவது அக்டோபர் 24 முதல், உரிமை விளம்பரம் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்க உள்நாட்டமைச்சர் எஃவ், பயர்ன்ஸ் இதனை ஐ.நா. அமைப்பின் சார்பில் உலக மக்களுக்கு முறைப்படி அறிவித்தார். ஐ.நா. அமைப்பு ஒழுங்காக நடைமுறைக்கு வர வேண்டு மானால், முதலில் அதன் தாயக உறுப்பான ஐ.நா. பொதுப் பேரவை கூட்டப்பட வேண்டும். அம்முயற்சியை மேற்கொள்ளும் வரை, அதற்கான ஏற்பாடுகளுக்கும் மற்றச் செயல்முறை களுக்குமாக இடைக்கால நடைமுறைத் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. அதிலும் உறுப்பு நாடுகள் அனைத்தும் கையொப்ப மிட்டன. இதன்படி விளம்பரத்தில் கையொப்பமிட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பிரதிநிதி அடங்கிய முன்னேற்பாட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அமைப்பின் தனித்தனி உறுப்புக்களுக்கான விரிவான நடைமுறைத் திட்டங்கள்; முதற்பொதுப் பேரவையும் பிற உறுப்பு மன்றங்களும் கூடுவதற்கான முன்னேற்பாடுகள்; சர்வதேச சங்கம் கலைக்கப்பட்டு அதன் உரிமைகள் பொறுப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ளல்; ஐக்கிய நாடுகளின் தலைமையிடத்தை வரையறுத்தல் ஆகியவை அதன் கடமைகள் ஆயின. முன்னேற்பாட்டுக் குழு ஜூன் 27லும் நவம்பர் 24லும் கூடிற்று. முதற்கூட்டத்திலேயே அது தன் நிலையான வேலைகளைத் தொடர்ந்து செய்ய 14 உறுப்பினர்களடங்கிய நிறைவேற்றற்குழு ஒன்றை அமைத்தது. 1945 டிசம்பர் 23ஆம் தேதி முன்னேற்பாட்டுக் குழு தன் அறிக்கையை வெளியிட்டுக் கலைத்தது. 1946 ஜனவரி 10ஆம் தேதி ஐ.நா. அமைப்பின் தாயுறுப்பான பொதுப் பேரவைக் கூட்டம் தொடங்கிற்று. அமைப்பின் செயலாட்சி இத்துடன் தொடக்கம் பெற்றது. அடிக்குறிப்பு 1 டம்பார்ட்டன் ஓக்ஸில் பிரான்ஸ் ஐம்பெரு வல்லரசுகளுள் ஒன்றாயிடம்பெற்றிருந்தாலும், ஸான்பிரான்ஸிஸ்கோ மாநாடு கூடுமுன் அந்நாடு தன் அரசியல் மன்ற இணக்கம் பெறாததால், அம்மாநாட்டில் பிரான்ஸ் ஐம்பெருவல்லரசுகளில் இடம் வகிக்க முடியாதிருந்தது. 3. நோக்கமும் கோட்பாடுகளும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு என்பது உலக நாடுகளின் ஒரு கூட்டுறவமைப்பு. அது சில நாடுகளால் திட்டமாகத் தீட்டப் பெற்றுப் பல நாடுகளின் ஏற்புப் பெற்றுள்ளது. நாளடைவில் எல்லா நாடுகளையும் உளப்படுத்தும் தன்மையில், அந்நோhக்கத் துடனே அது தீட்டப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இருபத்தைந்து நாடுகள் தொடக்கத்திலேயே அதில் சேர்ந்திருந்தன. 1942க்குள் அத்தொகை 28 ஆகி, 1947க்குள் 55 ஆகி உள்ளது. இன்னும் அதன் கொடியின்கீழ் இணையாத நாடுகள் இருபத்து மூன்றே. இவையும் பெரும்பாலும் இரண்டாம் உலகப்போரில் எதிரி நாடுகளாயிருந்த ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்பனவும், அவற்றின் நேசநாடுகளும், ஒரு சில நடுவுநிலை நாடுகளுமே. மக்கள் தொகைவாரியாகப் பார்த்தால், உலக மக்கள் தொகையாகிய 200 கோடியில், 160 கோடி மக்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பில் தத்தம் நாட்டரசாங்கங்கள் மூலம் தொடர்புடையவர்களே. அதாவது, உலகில் நூற்றுக்கு எண்பது பேர் அமைப்பின் ஆதரவாளராகி யுள்ளனர். ஐ.நா. அமைப்புக்கு முன்னிருந்த சர்வதேச சங்கத்தில் உறுப்புக்களாயிருந்த நாடுகள் நாற்பத்து நான்கும், அவற்றைச் சார்ந்த மக்கள் தொகை 130 கோடியுமாகவே இருந்தன என்பதை நோக்க, உலக இயக்கத்தின் வளர்ச்சியும் அதற்கு மக்கள் காட்டும் பேராதரவும் நன்கு விளங்கும். ஐ.நா. அமைப்பின் முடிந்த முடிவான நோக்கம், போரை ஒழித்து, ஆக்கிரமிப்புக்கு இடமில்லாது செய்வதே. அது நாடுகளிடையே நேசவுணர்ச்சியைப் பெருக்கி, மக்கள் நல்வாழ்வை வளர்த்து, உலக அமைதியையும் ஒற்றுமையையும் பேணுவது. உலகின் கலை, நாகரிகம், தொழில் வளம், மக்கள் நலம் ஆகியவற்றுக்கு உதவத்தக்க ஒரு முழுமுதல் அமைப்பாய் அது இயங்குவது. போர் ஒழிப்பும், அமைதி காப்பும், முந்திய உலக அமைப்புகளுக்கும் உலக இயக்கத்துக்கும் நோக்கமாகவே இருந்தாலும், அதனை நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக்கி, மக்கள் அவா ஆர்வங்களைத் தூண்டி ஈடுபடுத்திய அமைப்பு ஐ.நா. அமைப்பே. இன்று ஐ.நா. அமைப்பு உலகநாடுகளிடையே ஒற்றுமையும் தொடர்பும் வளர்க்கும் அமைப்பாக மட்டுமே இயங்குகிறது. ஆயினும், இத்தொடர்பு வளர்வதற்கான வழிவகைகளும், அவற்றுடன் மக்கள் வாழ்க்கைத் தொடர்பு வளர்வதற்கான வகைதுறைகளும் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளின் அரசியலனுபவம் பெற்ற அறிஞரும், பல நுணுக்கத் துறையாராய்ச்சி வல்லுநரும் அதன் கட்டமைப்பில் ஈடுபட்டிருப்பதனால், அஃது எதிர்கால வளர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கும் வகையில் உறுதியான அடிப்படையுடனும், எளிதில் மாற்றியமைக்கத் தக்க, வளர்ச்சியடையத் தக்க நெகிழ்ச்சித் திறத்துடனும் வகுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஐ.நா. அமைப்பு உலக ஒற்றுமை நலனையும், நாட்டின் தனித்தனி நலன்களையும், அரசாங்கங்களையும், மக்களையும் ஒரே பேரிணைப்பில் இணைக்கும் ஓர் ஒப்பற்ற ஒற்றுமைச் சாதனமேயாகும் என்பதில் ஐயமில்லை. அது அத்துடன் வருங்காலத்தில் ஓருலக ஆட்சியை அமைக்கத் தக்கது என்பதும் நம்பிக்கைக்குரிய செய்தியே. ஐ.நா. அமைப்பின் வருங்காலவளர்ச்சி இத்துடன் நிற்பதன்று. அது நாடு, இனம், வகுப்பு முதலிய எல்லைகளையெல்லாம் தடுத்து வைக்கும் - அல்லது பிரித்து வைக்கும் எல்லைகள் என்ற நிலையிலிருந்து மாற்றி, வகுத்துத் தொகுக்கும் கூறுகள் ஆக்க வேண்டும். பிரிவினைக் கோடுகள் கடக்க முடியாத மலைகளாய் இராமல், நீரை ஆங்காங்கே தேக்கி வைக்க உதவும் பாத்திகளின் கரைகளாகவும், நீரைக் கொண்டு சென்று பாத்திகளை வளர்க்கும் வாய்க்கால்களாகவும், பாத்திகளைச் சென்று பார்ப்பவர்கள் பயிரை அழிக்காது நடந்து செல்லும் வரப்புகளாகவும் அமைய வேண்டும். இம்முழு நிறைபயன் ஏற்படுவதற்கு நாள் செல்லக்கூடும்: அதில் பல இடையூறுகள், சிக்கல்கள், முட்டுக்கட்டைகள் ஏற்படக்கூடும். ஆனால், அமைப்பின் நோக்கம் அறிஞரிடமிருந்த அரசாங்கங்களிடையேயும், அரசாங்கங்களிடமிருந்து மக்களிடையேயும் பரவுந்தோறும், அதன் விளைவு அந்நிறை பயனை நோக்கி வளர்வதாகவே இருக்க முடியும். இவ்வகையில் ஐ.நா. அமைப்பின் வெற்றி தோல்விகள், வளர்ச்சி தளர்ச்சிகள் ஆகியவை, அதன் நோக்கங்கள், அமைப்பு முறைகள் ஆகியவற்றைப்பற்றி மக்களிடையே செய்யப்படும் பிரசாரத்தையும்; உலகில் ஒவ்வோர் ஆடவனையும் பெண்ணையும், முதியவரையும் இளைஞரையும், அறிஞரையும் பொதுமக்களையும் அதில் ஈடுபடுத்தி, அதிற்பங்குகொள்ளச் செய்யும் முயற்சிகளையும்; அம்முயற்சிகளுக்கான பயிற்சி களையும் பொறுத்தனவாகவே இருக்கும். இதனை உலகம் நன்கு உணர்ந்துள்ளது என்றே கூறத்தகும். ஏனெனில், பிரிட்டனிலும், பல உறுப்பு நாடுகளிலும், உறுப்பு நாடுகளல்லாத சில நாடுகளிலுங்கூட ஐ.நா. இயக்கம் பற்றியும், அமைப்புப் பற்றியும், அதன் திட்டங்கள், எழுத்து மூலங்கள், நோக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவை பற்றியும் அந்தந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க ஐக்கியநாட்டுக் கழகங்கள் (ருnவைநன சூயவiடிளே ஹளளடிஉயைவiடிளே) ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாடும் உரிமை விளம்பரமும் ஏற்படுமுன்பே பிரிட்டனில் இத்தகைய கழகம் ஏற்பட்டுவிட்டது. அவ்வுரிமை விளம்பரம் உருவான உடனேயே அதனை அக்கழகம் அச்சிட்டு மூலமும் விளக்கமும் வழங்கிற்று. மேலும், அதுவே விளக்கவுரைகள் ஆற்ற மாணவர் கழகங்களும் பெண்டிர் கழகங்களும் வகுத்தது. 1946 ஆகஸ்டு 2க்குள் உறுப்பு நாடுகள் இருபதிலும் உறுப்பல்லாத ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்விட்ஸர் லாந்து ஆகிய நாடுகளிலும், இத்தகைய பிரசாரக் கழகங்கள் அமைந்ததுடன் இவை ஒரே உலகக் கூட்டுறவாகவும் இணைக்கப்பட்டன. ஐ.நா. கழக இணைப்புக் கூட்டுறவின் முதல் தலைவராக செக்கோஸ்லவேகியாவின் முதல்வர், டாக்டர் ஜான் மஸாரிக்கு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும். ஆசியாவில் பொதுவாகவும், இந்திய மாநிலத்தில் சிறப்பாகவும் ஐக்கிய நாடுகள் பற்றிப் பிரசாரம் செய்யும் கழகங்கள் அமையப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர், கன்பூஸியஸ், புத்தர், இயேசு, முகமது நபி ஆகிய பண்டை உலகப் பேரருளாளரையும், இராமலிங்க வள்ளலார், ஸ்ரீ நாராயண குருசாமி, மகாத்துமா காந்தி அடிகள் போன்ற இக்காலப் பேரருளாளரையுமளித்த கீழ்நாட்டுலகு, இவ்வியக்கத்தில் பெரும்பங்கு கொள்வது பொருத்தமானதும் நலமானதும் மட்டுமன்றி, இயக்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாததுமாகும் என்னலாம். ஐரோப்பியப் போட்டி நாகரிகத்தாலும் கண்ணிலாக் கருவி மோகத்தாலும் உணர்ச்சிக் கனிவிலாப் பொருள் மோகத்தாலும் அல்லற்படும் உலகுக்கு ஆசியாவும் இந்தியாவும் - சிறப்பாகத் தமிழகமும் - தொலை நோக்குடைய அருளொளி விளக்கம் தர முடியும். ஆகவே, தமிழகத் தலைவரும், இந்தியத் தலைவரும், அரசாங்கத்தாரும் ஆசியாவின் நாகரிகத் தாயகமாகிய இந்த நாட்டில் உலக இயக்க ஒளிவிளக்கங்களாகிய ஐ.நா. கழகங்களை நிறுவ வேண்டுவது அவசியமாகும். அறிஞரும் மக்களும் இது வகையில் அவர்களை ஊக்கக் கடமைப்பட்டவர்கள். ஐ.நா. அமைப்பின் நோக்கங்களைக் கீழ் வருமாறு வகுத்துரைக்கலாம்: (1) உலகில் அமைதியை உண்டுபண்ணுவதும் பேணுவதும் - அதாவது போரை ஒழிப்பதும் போர் ஏற்படத்தக்க சூழ்நிலை களை மாற்றியமைப்பதும் - ஐ.நா. அமைப்பின் தலையான நோக்கம் ஆகும். போர் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளுக்குள் மிக முக்கியமானவை, போர் பற்றிய அச்சமும் ஐயப்பாடுந்தான். இதனால், வல்லரசுகளிடையே போர்க்கருவி களின் படைப்பிலும் பெருக்கத்திலும் போட்டி ஏற்படுகிறது. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் தொழில் வளத்துக்கும் செய்ய வேண்டிய முயற்சிகள் யாவும் இவற்றால் தடைபடுகின்றன. பெரும்பாலும் ஏழை மக்களிடமிருந்தே திரட்டப்படுகிற வரிப்பணம், போரிலும் போர்க்கருவிகளிலும் வீணாக்கப் படுகிறது. கல்விக்காக, தொழிலுக்காக, ஆண்டில் ஒரு கோடி ஒதுக்கத் தயங்கும் அரசாங்கங்கள், போரில் நாள் ஒன்றுக்குப் பல கோடி செலவு செய்ய முன்வருகின்றன. போர் வெறியால் நாம் அழிப்பது பணத்தையும், பணந்தேடும் முயற்சியையும், தொழிலாளர் உழைப்பையும் மட்டுமன்று; அறிஞர் அறிவையும், புத்தாராய்ச்சி உழைப்பையுங்கூடப் பெரும்பாலும் அழிவுப் போர்த்துறைக்கே பயன்படுத்துகிறோம். இக்கால விஞ்ஞானம் பெரிதும் அழிவு விஞ்ஞானமாகவே வளர்ந்துவருவதன் காரணம் இதுவே. மக்களுக்கு நல்வாழ்வையூட்டும் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆராய்ச்சியாளனைவிட, அழிவுப் படைக்கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளனுக்கும், அவ்வாராய்ச்சித் துறைக்குமே இன்றைய உலக சமூகத்தில் பெருமையும், ஆதரவும், ஊக்கமும் தரப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். (2) ஐ.நா. அமைப்பு உலகநாடுகளிடையே நட்புணர்ச்சியையும் நல்லெண்ணத்தையும் உண்டுபண்ணி, அவற்றிடையே ஒத்துழைப்பையும் ஒருமுகப்பட்ட செயலையும் வளர்க்கக் கடமைப் பட்டுள்ளது. போர் அச்சத்துக்கும் போர் பற்றிய ஐயங்களுக்கும் அழிவுப் போட்டிகளுக்குங்கூடப் பெரும்பாலும் உள்ளார்ந்த பகைமையும் தப்பெண்ணங்களுமே காரணம். போருக்கான சூழ்நிலைகளை உண்டுபண்ணும் இவற்றைச் சமரசப் பேச்சாலும், இடையீட்டாளர் அறிவுரை நல்லுரைகளாலும் போக்கி, நேசம் வளர்ப்பதுதான் இச்சூழ்நிலையைப் போக்க வழியாகும். இன, சமய, மொழி, வகுப்பு வேறுபாடுகள் காரணமாகவும், பழக்க வழக்க வேறுபாடுகள் காரணமாகவும், இடவேறுபாடு கால வேறுபாடு காரணமாகவும், இவற்றின் சார்பான தலைமை, நாட்டுத் தலைமைப் பூசல் காரணமாகவும், தப்பெண்ணங்களும் போட்டியும் பகைமையும் வளர்வதுண்டு. உலக இயக்கம் இவற்றை நீக்கும் கடப்பாடும் திறமும் உடையது. ஏனெனில், இவையனைத்தும் ஏறக்குறைய ஒரே உலகில் ஏற்பட்ட தற்காலிகக் கூறுபாடுகளேயன்றி, நிலையான வேறுபாடுகளல்ல. இவற்றிடையே உள்ள எல்லைக்கோடுகள் ஒரே வயலிடையே உள்ள வரப்பு வாய்க்கால்களைப் போலவும், ஒரே வீட்டிலுள்ள அறைச்சுவர்களைப்போலவும் அமைந்தவைகளேயன்றி, நிலை யாகப் பிரித்து வைக்கும் மலைகளல்ல. வயலிலுள்ள வரப்பும் வாய்க்காலும் கூறுபாடுகளிடையே சமநிலையாக்கவும், வயலைப் பார்க்க வருவோர் பயிரை அழிக்காமல் நடக்கவும், பயிருக்கு உயிர் போன்றுதவும் நீரை எங்கும் கொண்டு பரப்பவுமே ஏற்பட்டுள்ளன. வீட்டின் சுவர்கள் அறைக்குப் பாதுகாப்பாக அமைபவைமட்டுமல்ல; அறை களிடையே போக வர வாயில்களும் கதவுகளும், வெளியிலுள்ள காற்றை உலாவவிடப் பலகணிகளும் புழைவாயில்களும் உடையவைகளே. இவைபோலவே நாட்டெல்லைகள், இனமொழி வகுப்பெல்லைகள், சரிசமவளர்ச்சியும் சூழ்நிலைக் கேற்ற பாதுகாப்புகளும் தர அமைந்தவையேயன்றி, இடையீடிலாப் பிரிவினை மதில்களல்ல என்பதை மனித இனம் மறவாதபடி அறிவுறுத்துவதும், அந்தப் படிப்பினையைச் செயற்படுத்தி மனிதரின் செயல்களை ஒரு முகப்படுத்துவதும் உலக இயக்கத்தின் பொறுப்பு ஆகும். உறுப்புக்கு உறுப்புப் பகைமை ஏற்பட்டால், அதனால் உடல் அழியும்; உறுப்புகளும் கேடுறும். உறுப்பை உடலின் உறுப்பாக எண்ணாமல், தனிக் கூறுகளாக எண்ணுபவர் இதனை உணரமாட்டார். அது போல நாடும் நாடும் பகைமை கொண்டால், பொது உலக நலன் கேடுறும். அதனால், நாடுகளும் நாளடைவில் நலிவுற்றே தீரும். ஏனெனில், மனித நலன்களும் மனித நாகரிக நலன்களும் நாடு கடந்த உலக அடிப்படையிலேயே அமைந்துள்ளன. நல்லறிஞர் இவ்வடிப்படை ஒற்றுமை கண்டு, அதனைச் சுட்டிக்காட்டி, நாடுகளிடையே நேச மனப்பான்மையை வளர்த்தல் கடன். பண்டைச் சோழர் மரபில் தந்தையும் மகனும் தம்முள் எதிர்த்துப் போரிட முனைந்த போது அந்நாளைய தமிழான்றோராகிய புலவர் கூறிய அறவுரை, இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கது. “போர் என்றால், இருவருள் ஒருவரே வெற்றி பெற முடியும். எவர் வெற்றி பெற்றாலும், மற்றவர் தோற்பது உறுதி. ஆனால், எவர் தோற்றாலும், தோற்பது நும் குடியாகவே இருக்கும். ஆதலால், குடி மதிப்பழிக்கும் இச்செயல் தவிர்க,” என்றார் அப்புலவர் பெருமான். இதே அறிவுரையை நாடுகளிடையேயும் நல்லறிஞர் கூறலாம். ‘இரண்டு நாடும் மனித இனம் சார்ந்ததே. எந்நாடு வென்றாலும், மற்றொருநாடு தோற்கும். எந்நாடு தோற்றாலும் தோற்பது மனித இனமே. குடும்பச் சண்டையிலும் கட்சிச் சண்டையிலும் நாட்டறிஞர் கூறும் மேற்குறிப்பிட்ட நல்லுரைகளைப் போலவே, நாட்டுச் சண்டைகளிலும் நாடுகளிடையே அருளாளர் கூறத்தகும் இந்த நல்லுரையை உலக அமைப்பு இக்கால அரசியல் முறையில் செய்யக் கடமைப்பட்டது. நாட்டரசாங்கம் இனம், வகுப்பு, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நடுநிலை நின்று அடிப்படை நன்மை கோரி எல்லாரையும் சமரசப்படுத்துவது போலவே, உலகப் பிரிதிநிதிகள் அடங்கிய உலக அமைப்பும் உலக நாடுகளின் வேறுபாடுகளைக் களையும் தகுதியுடையது. (3) ஐ.நா. அமைப்பு உலகில் நாடுகளிடையேயும் மக்களிடையேயும் கூடியமட்டும் சரிசம நிலையையும் தன் முடிபுரிமையையும் (சுயநிர்ணய உரிமை) பேணி வளர்த்துச் சரிசம சந்தர்ப்பங்களையும் அளிக்க வேண்டும். சரிசம நிலையில்லாத இடங்களிற்கூட இருக்கும் நிலையைத் தற்காலிகமாக ஏற்று, வலிமையுடைய உறுப்புக்கும் வலிமை குறைந்த உறுப்புக்கும் இடையே நேச மனப்பான்மையை வளர்த்து, ‘ஒருவர் வலிமை மற்றவர்க்கும் வலிமைதருவதே; ஒருவர் வலிமைக்கேடு மற்றவர்க்கும் வலிமைக்கேடே,’ என்பதை உணர்த்தி, அவர்களைச் சரிசம நிலை நோக்கி மனமொத்து வளரச் செய்தல் வேண்டும். சரிசமநிலையே, நட்பின் அடிப்படை. நட்பே. ஒற்றுமையின் அடிப்படை. ஐ.நா. அமைப்பு இதனை நன்கு மதிப்பதாலேயே பாதுகாப்பு மன்றம் நீங்கலான உறுப்புக்களெல்லாவற்றிலும் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் சரிசம மொழியுரிமை அளித்துள்ளது. அத்துடன் பெரு வல்லரசுகள், சிறுநாடுகள் ஆகியவற்றின் சமத்துவமும் முக்கிய உறுப்புகளில் பேணப்படுகிறது. சரிசம நிலையின் உரையாணியாய் இயலும் பண்பு, தன் முடிபுரிமையே. உறுப்புகள் இவ்வமைப்பில் தம் விருப்பப்படி சேர்ந்து, தம் விருப்பப்படி விலகக் கூடியவை என்பதையும், ஆகவே, அவற்றின் செயல்கள் தன்மதிப்புரிமையுடனும் பொறுப் புடனும் கூடியவையே என்பதையும் இது வலியுறுத்துகிறது. தன்முடியுரிமை அற்ற இடங்களில் உறுப்புகள் செய்யும் முடிபுக்கு அவற்றின் பொறுப்பும் மதிப்பும் இருக்கமுடியாது. அச்சத்தாலும் கைக்கூலி ஆசையாலும் சான்று கூறுபவன் சான்றுரை போல, அது அவர்கள் உள்ளார்ந்த விருப்பார்வத்தையும் செயலுறுதியை யும் தூண்டாது. உலகில் சரிசம நிலையும் தன் முடிபுரிமையும் பேணப்படுமானால், இன்றிருக்கும் போர்ச் சூழல்கள் மட்டுமன்றி, மற்றும் பல வாழ்க்கைக் குறைபாடுகளும் இன்னல்களுங்கூட அகன்றுபோகும் என்பது கூறாமலே விளங்கும். ‘சமத்துவம்’ என்பது - ஒரே தன்மை பேணுவது என்பதன்று; சரிசம நிலை பேணுதல்; சரிசம சந்தர்ப்பம் அளித்தல் என்பதே. ஆகவே, சரிசம சந்தர்ப்பமளித்துக் கூட்டுறவு வளர்ப்பதன் மூலம் சரிசம நிலையெய்தும்படி செய்வதே ஐ.நா. அமைப்பின் குறிக்கோள். (4) ஐ.நா. அமைப்பு, நாடுகளிடையேயும் நாட்டு மக்களிடையேயும் கூட்டுறவுப் பண்ணை வளர்த்து, அதன் மூலம் உலக மக்களிடையே கல்வி, பொருளியல், சமூக, பண்பாட்டுத் துறைகளில் வளர்ச்சியையும் வளத்தையும் உண்டுபண்ண முயலுகிறது. அரசுகளுக்கும் பேரரசுகளுக்கும் ஓரளவு உறுதி உண்டுபண்ணும் துறைகள் இவைகளே. மக்கள் வாழ்வில் வளம்பெருக்கும் அரசுதான் நல்லரசென்று புகழப்பெற்று, மக்கள் ஆதரவைப் பெற்று வலிவுடையதாயிருக்கும். ஆனால், அதேசமயம் மக்கள் வாழ்க்கை சார்ந்த இத்துறைகளே நாட்டில் அரசியல் எல்லை கடந்து செயலாற்றுபவை. எனவே, இத்துறைகளில் கூட்டரசாங்க அமைப்புகளையும், நாட்டுக்கு அப்பாற்பட்ட கூட்டுறவமைப்புகளையும் ஊக்குவதன் மூலம் ஐ.நா. அமைப்பு, உலகக் கூட்டுறவு மனப்பான்மையை வளர்க்கிறது. உலக இயக்கத்தில் இதற்கு முன் உள்ள கூட்டுறவுகள் எல்லாம் முற்றிலும் அரசியல் கூட்டுறவுகளாகவே இருந்ததால், அவை மக்கள் மனத்தில் வேரூன்ற முடியவில்லை. ஐ.நா. அமைப்பு, பண்பாட்டுத்துறைகளிலும் கருத்துச் செலுத்துவதுடன் அதற்கென்றே உறுப்புகள் வகுத்துள்ளது; மேலும், அத்தகைய அமைப்புக்களை ஐ.நா. அமைப்புத் தனக்குப் புறம்பாக வெளி யிலும் ஆக்கியும் ஊக்கியும் தன்னுடன் இணைத்துச் செயலாற்றுவித்து வருகிறது. பொருளியல், சமயம், கலை, பண்பாடு ஆகிய துறைகள் சார்ந்த இயக்கங்களும், அத்துறை சார்ந்த நெருக்கடிகளும் என்றுமே நாட்டெல்லை தாண்டிப் பரந்து செல்பவை. இன்றோ, இக்கால விஞ்ஞானத்தின் விளைவாக வானூர்தியும், தொடர் ஊர்தியும், பிற ஊர்திகளும் உலகைக்குறுக்கி உலகக்கோடிகளை அயலூர்களாகவும், அடுத்த வீடுகளாகவும் ஆக்கியுள்ளன. தந்தியும், வானொலியும், தொலை பேசியும், தொலை நோக்கியும், பத்திரிகைகளும் தொலை நிகழ்ச்சிகளை அருகில் கொண்டு வந்துள்ளன. இக்கால நாகரிக நாடுகளில் ஆண்பெண்பாலாரின் கல்வி கேள்வி நிலையும் பரந்து, கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு பேர் படித்தவர்களாயிருப்பதால் அறிவெல்லையும் பரந்து விட்டது. இந்நிலையில் பிற்பட்ட நாடுகளும் வகுப்புகளும் இன்று பிற்பட்ட நாடுகள், வகுப்புகள் அல்ல; பிற்பட்ட உலகப் பகுதிகள், உலகாகிய உடலின் நலத்தையும் வளர்ச்சியையும் தடைப்படுத்தும் நோய்ப்பகுதிகள்! இவற்றை மேம்படுத்துவது அவற்றின் நலனுக்காக மட்டுமன்று; உலக நலனுக்கும் அச்செயல் மிக அவசியமானதே. இதனால், உலக அமைப்பின் பொறுப்பு இவற்றின் பக்கமும் செல்லுகிறது. (5) ஐ.நா. அமைப்பின் நோக்கங்களில் தனிச் சிறப்புடையன, அடிப்படை மனித உரிமைகள் எனப்படும் தனி மனிதன் உரிமைகளே. அமைப்பின் தலைசிறந்த, புரட்சிகரமான, வருங்கால வளர்ச்சி வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூறு இதுவே. சமூகமும் நாடும் கடந்து நாம் ஒருவகைக் கனாக்காணினும்; சமூகம், நாடு, உலகம் என்ற இவ்வெல்லா மேற்கட்டுமானங்களும் தனிமனிதன் வாழ்வு ஆகிய அடித்தளத்தின் மீதன்றி, உறுதியாய் அமைய முடியாது. ஏனெனில், இக்கட்டடத்தில் உலகம் என்பதே மேடு; நாடுகள், அதன் சுவர்கள்; சமூகங்கள், அதன் தூண்கள்; தனி மனிதன் வாழ்வாகிய அடித்தளத்தின்மீதே இவை யாவும் நிலை பெறுகின்றன. மேலும், உலகக் கூட்டுறவு, நாட்டொற்றுமை, சமூக அமைதி ஆகிய யாவும் தனி மனிதன் வாழ்வைப் பாதுகாக்கும் கருவிகளும் வகைதுறைகளும் மட்டுமே. தனி மனிதன் நல்வாழ்வையோ உரிமைகளையோ புறக்கணித்துச் சமூகக் கட்டுப்பாடும் நாட்டொற்றுமையும் உலகக் கூட்டுறவும் பேணுவது, நோக்கத்தை விட்டுவிட்டு வகைதுறையைப் பற்றும் செயலேயாகும். வானளாவப் பறக்கும் பறவை வாழ்ந்து வீடுகட்ட நிலத்தின்மீதும், மரக்கிளைமீதும் வந்திறங்க வேண்டுவதுபோல, எல்லா வளங்களும் இறுதியில் தனிமனிதன் வளத்திலேயே வந்து முடியும். ஆகவேதான், அடிப்படை மனித உரிமை அல்லது உயிராதார மனித உரிமைகளை வகுப்பதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஐ.நா. இயக்கத்தவர் முதலுரிமை தந்துள்ளனர். பொருளியல் சமூக மன்றம் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இதற்கென மனித உரிமைக் குழாம் ஒன்றும் அமைத்துள்ளது. ஐ.நா. இயக்கம் கருவிலிருக்கும் காலத்திலேயே அவ்வியக்கத் தந்தையாராகிய அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்டு இதில் கருத்துச் செலுத்தியதும் இதனை நான்கு சுதந்தரங்களென வகுத்துரைத்ததும் கவனிக்கத் தக்கன. (6) தனி மனிதன் உரிமைகளின் சார்பாகப் பால் வேறுபாடு, மொழி, சமயம், இனம் ஆகியவை காரணமான எந்த வேற்றுமையும் ஒரு சார்பும் மக்களிடையே காட்டப்படா வென்பது ஐ.நா. உரிமை விளம்பரத்திலும் அதன் பல ஒழுங்கமைதிகளிலும் சட்டதிட்டங்களிலும் வற்புறுத்தப் படுகிறது. வலிவுடையவர், வலிவற்றவர் என்ற வேறுபாடு நாடுகளிடையேயும் கூட்டுநிலை வாழ்விலும் எப்படிச் சமத்துவத்தையும் சரிநேர்மையையும் கெடுக்கிறதோ, அது போலவே, நாகரிக வாழ்வினிடையேயும் இனம், நிறம், சமயம், கோட்பாடு, மொழி, வகுப்பு ஆகியவை காரணமாகவும், பால்காரணமாகவும் பல வேறுபாடுகள் எழுந்து, அவற்றால் தனிமனிதன் சமத்துவ உரிமையும் சரிநேர்மையும் கெடுகின்றன. இவ்விரண்டையும் பேண வேண்டுமென்றால், இவ்வேறுபாடுகள் பேணப்படக் கூடாதென்பது வற்புறுத்தப்படுவதும், நடைமுறையில் கொண்டுவரப்படுவதும் இன்றியமையாதவை. இனம், நிறம் ஆகியவை காரணமாகவே, 18-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கறுப்பர்களாகிய நீகிரோக்கள் அடிமையாய் வாங்கவும் விற்கவும் கொடுமைப்படுத்தவும் பட்டார்கள். அமெரிக்கத்தலைவர் ஏபிரகாம் லிங்கன் வில்லியம் வில்பர்போர்ஸ் போன்ற ஆங்கில நாட்டறிஞர் முதலியவர்கள் இவ்வடிமை முறையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, இதனை ஒழிக்கப் பாடுபட்டார்கள். ஆனால், அவர்கள் ஒழித்தவை அரசியல் உரிமை வேறுபாடும் சட்டவேறுபாடும் மட்டுமே. பிற்பட்ட இனங்கள் பல, சமூக - பொருளியல் - கல்வி - பண்பாட்டுத் துறைகளில் இன்னும் பிற்பட்டேயிருக்கின்றன. சமூகத்துறையில் பெருமுதலாளிகள் ஆதிக்கத்தால் தொழிலாளர் நலன்கள் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றன. தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாத்தல், தொழிலின் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும், நாட்டுச் செல்வநிலைக்கும் மிகவும் இன்றியமையாதது. எல்லா நாகரிக அரசாங்களும் இதில் ஓரளவு முயற்சி செய்து, அதற்கான சட்டங்களும் நலப்பாதுகாப்பு நிலையங்களும் நடைமுறைப்படுத்தியே வருகின்றன. இதுபோலப் பெண்கள், குழந்தைகள் உடல் உளப் பாதுகாப்புப் பொதுவாகவும்; பெண் தொழிலாளர், குழந்தைத் தொழிலாளர் நலங்கள் சிறப்பாகவும் பல உயர்வு தாழ்வு வேறுபாடுகளுக்கு உட்பட்டவையாயிருந்து வருகின்றன. பெண்டிர்க்கு மாதவிடாய், பிள்ளைப்பேறு, தாய்மை ஆகிய பல நிலைகளில் ஆண்களுக்கு இல்லாத பல தனித் தொல்லைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்குத் தனிச் சலுகைகள் தேவை. அவர்கள் குடும்ப வாழ்வு, உடல் நலம் ஆகியவற்றுக்கொவ்வாத தொழிலில் அவர்கள் ஈடுபடல், அவர்களுக்கான சலுகைகளுடனும் பாதுகாப்புடனும் அவர்கள் ஆடவர்களுடன் சரிசமமான ஊதியம் பெறல், அவர்கள் மனவுரிமைகள், சொத்துரிமை, பணியமர் உரிமை ஆகியவற்றில் உலக சமூகம் பொதுவாகவும், பல பிற்பட்ட நாடுகள் சிறப்பாகவும், இன்னும் முன்னேற வேண்டுவனவாகவே இருக்கின்றன. இதுபோலத் தாய் மடியிலும் விளையாட்டிலும் காலம் கழித்தற்குரிய பருவத்திலும், கல்வி கற்கும் பருவத்திலும், உடல் ஓய்வோடு நல்ல உணவுண்டு விரைந்து வளர வேண்டும் பருவத்திலும், குழந்தைகள் உடல் நலத்துக்கும் ஒவ்வா உழைப்புச் செய்து போதிய உணவின்றிப் பல இடங்களில் அல்லலுறு கின்றார்கள். இவை அனைத்திலும் சட்டப் பாதுகாப்பும், உரிமை சமத்துவப் பாதுகாப்பும் இருந்தாலன்றி உலக முன்னேற்றத்தில் அவர்கள் பங்கு கொள்ள முடியாது. சட்டங்கள் தனிமனிதன் உரிமைக்காகவே அமைந்துள்ளன. ஆனால், பல சமயம் சட்டத்திலிருந்து மனிதனைப் பாதுகாக்கவே சட்டங்கள் தேவைப்படுகின்றன. காவல் துறையினர் காவலில் வைப்பவரைக் காரணம் கூறி விளக்க வேண்டுமென்றும், விரைவில் விசாரணை செய்யப்படவேண்டுமென்றும், அதற்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளுதல் முதலான உரிமைகள் தரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தும் காவல் உரிமைச் சட்டம் (ழயநெயள ஊடிசயீரள ஹஉவ) இத்தகையது. இது பல நாடுகளில் இருந்தாலும், உலக அடிப்படையில் இது ஒப்புக்கொள்ளப் பட்டாலன்றி, பிற்போக்கான நாடுகளில் இது விரைவில் பயன் தாராது. உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களிலிருந்து தனிமனிதன் உரிமைக்குப் பாதுகாப்புத் தேவைப்படுவதைப் போலவே, சட்டங்களைப் பாதுகாக்கும் அரசாங்கங் களிலிருந்தும், அவற்றை நிறைவேற்றும் வழக்கு மன்றங்களி லிருந்துங்கூடத் தனி மனிதனுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்புத் தேவை. இப்பாதுகாப்பை அளிப்பவை பத்திரிகைகளே. அவற்றின் சுதந்தரம் அரசாங்கங்களால் பேணப்பட வேண்டும். இங்கே கட்சி, கோட்பாடு வேறுபாடுகள் சட்டத்திலும், அதன் நிறைவேற்றத்திலும் இடம் பெறாமலிருத்தல் வேண்டும் என்பது மிகமிக உயிர்நிலையான செய்தி ஆகும். இவ்வெல்லாவகை அடிப்படை உரிமைகளையும் வகுத்து விளக்கி, இவற்றுக்குப் பாதுகாப்பும் வலியுறுத்தும் தருவதே மனித உரிமையின் நோக்கம். (7) இறுதியாக, மேற்கூறிய எல்லா நோக்கங்களும் நிறைவேறும்படி அரசாங்கங்களிடையிலும் நாட்டு மக்களிடையிலும் ஒத்துழைப்பையும் கூட்டுச் செயலையும் பெருக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இது இந்நோக்கங் கொண்ட நிலையங்களை உண்டுபண்ணுவதாலும், வளர்ப்பதாலும், அத்தகைய பல வகைப்பட்ட நிலையங்களை இணைப்பதாலுமே முடியக்கூடும். சமூகப் பொருளியல் மன்றம், அதன் சார்பான ஐ.நா. கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக் கழகம், இதற்கு முன்னோடியாயிருந்த ஐ.நா. நல்லாக்க மறுசீரமைப்பு மன்றம் முதலிய கிளை உறுப்புக்கள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்புப் போன்ற பிற இணை அமைப்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றின் ஒத்துழைப்புடனும் செயலாற்றுவதுடன், அவற்றின் வேலை முறைகளை ஒருமுகப்படுத்தவும் ஐ.நா. இயக்கம் பாடுபடுகிறது. அடிப்படைத் தத்துவங்கள்: மேற்கூறப்பட்ட நோக்கங்களைச் செயலிற்கொண்டு வர ஐ.நா. அமைப்புப் பல கிளை மன்றங்களையும், நிலையங்களையும், பல சட்டங்களையும், திட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இவற்றுள் சட்டங்களையும் திட்டங்களையும் உண்டுபண்ணுபவையும் பாதுகாப்பவையும் நிலையங்களே யாகும். இந்நிலையங்கள் சரிவர நடைபெற இவற்றின் உரிமைகள், கடமைகள், தொடர்புகள் வகுக்கப்பட வேண்டும். அதாவது, அதற்கான ஒழுங்கு முறைகள் தீட்டப்படல் வேண்டும். மேற்கூறிய நோக்கங்களுக்கு மாறுபடாமல் அவ்வொழுங்கு முறைகள் அமைக்கப்பட வேண்டுமானால், அந்நோக்கங்களுக்கு உட்பட்டுச் செயலாற்றுவிக்கும் அடிப்படைத் தத்துவங்கள் அமைய வேண்டுவதவசியம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், அமைப்புக்கு நோக்கம் அல்லது நோக்கங்கள் இருப்பது போல, இவ்வொழுங்கு முறைகளுக்கும் நோக்கங்கள் இருந்தாக வேண்டும். இந்நோக்கங்களே அடிப்படைத் தத்துவங்களாகும். ஐ.நா. அமைப்பிற்கும் அதனைச் சார்ந்த நிலையங்களுக்கும் பணித்துறைகளுக்கும் ஆன ஒழுங்கு முறைகள் கீழ் வரும் அடிப்படைத் தத்துவங்கள்மீது அமைக்கப்பட்டுள்ளன: (1) உறுப்பு நாடுகளுள் ஒவ்வொன்றும் பிறவற்றுடன் வேறுபாடற்ற சரிசம உரிமையுடனும் முழுத் தற்சுதந்தரத் தன்னாண்மையுரிமையுடனும் அமைப்பில் உறுப்பு வகிக்கும். இதன் பயனாகவே அமைப்பில் பல கோடி மக்களைக் கொண்ட அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும், ஒரு சில ஆயிர மக்களைக் கொண்ட சின்னஞ்சிறு லக்ஸம்பர்குக்கும் வேறுபாடின்றித் தலைக்கு ஒரு மொழியுரிமை தரப் படுகிறது. கடற்படையும் வாட்படையும் காலாட்படையும் திரள் திரளாக உடைய பிரிட்டன் போன்ற வல்லரசும் சிறு ஆப்கானிஸ்தானும் ஏமனும் இது போலவே சரிசம மொழியுரிமை உடையன. (2) உறுப்பு நாடுகள் யாவும் அவற்றின் சார்பான அரசாங்கங்களும் தத்தம் உள்ளத்தூய்மையுடன் மனமார ஐ.நா. உரிமை விளம்பரத்திற்கண்ட கடமைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்றும் வகையில் முழுமனத்துடன் உழைப்பதாக உறுதியளிக்க வேண்டும். உரிமைகள் யாவும் கடமைகளைப் பொறுத்தவையே யாதலால், கடமைகளை எவரேனும் புறக்கணித்தால், உரிமைகள் விலையற்றுப்போகும் என்று கூறத்தேவையில்லை. தனி மனிதர் வாழ்வில்கூடப் பலர் கடமைகளை வாயளவில் வாய் வேதாந்தமாகப் பசப்பி, அவைகளை நழுவ விட்டுவிட்டு, உரிமைகளுக்கு மட்டும் உரத்த குரலில் போராடுவதையும், அதனால் பூசல் விளைவதையும் பார்த்திருக்கிறோம். ‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து,’ என்னும் பழமொழி இதனாலேயே ஏற்பட்டுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற தன்மையால் பல தலைசிறந்த நிலையங்களும் அமைப்புகளும் பொருளற்றவை யாகிவிடுகின்றன. வல்லரசும் சிற்றரசும் ஆக, முற்பட்டவரும் பிற்பட்டவரும் ஆக, பல மக்களையும் பல நாடுகளையும் கொண்ட உலக அமைப்பில் உறுப்பினர் யாவரும் சரிசம உரிமை உடையவராதலால், அவர்கள் கடமைகளையும் சரிசமமாகப் பேண முன்வந்தாலன்றி, உரிமைகள் வல்லடி வழக்காகவும் ‘கள்ளுளி மங்கன்’ நீதியாகவும் போய்விடும் என்பது வெள்ளிடை மலை. எனவேதான் கடமைகளை ஒவ்வோர் உறுப்பினரும் நிறைவேற்ற வேண்டும் என்றும், கடமைகளை நிறைவேற்றாதவர் உரிமைகளைப் பெற முடியாது என்றும், அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறிய அத்தகையோர் குற்றவளிகளாகக் கருதப்பட்டு அமைப்பினால் நடவடிக்கை எடுப்பதற்குரியர் என்றும் அதிகார முறையில் இத்தத்துவம் கட்டுப்படுத்துகிறது. (3) வேற்றுமைகளும் விவாதங்களும் ஏற்பட்ட இடத்திலெல்லாம் ஒவ்வோர் உறுப்பினரும் அவற்றை அமைதியான முறையிலும், உலக அமைதிக்கு ஊறு ஏற்படாத வகையிலும், நேர்மையடிப்படையிலும் தீர்க்கக் கடமைப்பட்டவர் ஆவர். நாடுகளிடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் நேரடியாகப் போரையுண்டாக்காவிட்டாலும், பிறநாடுகளைப் பாதிப்பன வாகவோ, பிற்பட மனக் கசப்பை வளர்ப்பனவாகவோ இருந்தால், மறைமுகமாகப் போருக்கான சூழ்நிலைகளை உண்டுபண்ணக்கூடும். ஆகவே, இருநாடுகளிடையே உள்ள சச்சரவு வகையில் ஏற்படும் நேச உடம்படிக்கை அவ்விரு நாடுகளின் அமைதியையும் நலனையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டதாய் இராமல், உலக அமைதியையும் நலனையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இத்தத்துவம் வலியுறுத்துகிறது. மேலும், தொடர்புடைய எல்லா நாடுகளுக்கும் இனங்களுக்கும் நேர்மையான முடிவு ஏற்படாதவிடத்தில், சரிசமநிலை பாதிக்கப்பட்டு, மனக்கசப்புகள் வளர இடமேற்பட்டுவிடும். ஆகவே, நேர்மையும் இங்கே வற்புறுத்தப் பெறுகிறது. (4) மற்ற நாடுகளுடன் கொள்ளும் தொடர்பு வகையில் எந்த உறுப்புநாடும் மற்ற நாடு அல்லது நாடுகள் மீது பலாத்காரத்தைக் காட்டி அச்சுறுத்தவோ, அதன் அரசியல் சுதந்தரத்துக்கு ஊறு நாடவோ, அல்லது வேறு எந்த வகையிலாயினும் உலகநாடு களின் உரிமை விளம்பரத்தின் நோக்கங்களுக்கு மாறுபட நடக்கவோ செய்யக்கூடாது. இத்தத்துவத்தின் குறிக்கோள் வெளிப்படையானது. இது நாடுகளின், சிறப்பாகச் சிறு நாடுகளின், தன்னாட்சிச் சுதந்தரத்தை வலியுறுத்திக் காப்பதுடன், படை வலியினால் போரெழுப்புவதையும் வன்மையாகக் கண்டிக்கிறது. (5) ஐக்கிய நாடுகளின் உரிமை விளம்பரத்தின்படி, ஐ.நா. அமைப்பு நடவடிக்கையிலீடுபடும் சமயம், எல்லா உறுப்பு நாடுகளும் அதற்கு உதவி செய்யும் கடமையுடையவை. அத்துடன் ஐ.நா. அமைப்பின் நடவடிக்கைக்கு ஆளான எதிரி நாடுகளுள் எதற்கும் எந்த உறுப்பு நாடும் எத்தகைய உதவியும் செய்யக் கூடாது. இஃது, இரண்டாவது தத்துவத்தில் கூறப்பட்ட உறுப்பினர் கடமைகளுள் முக்கியமான ஒரு கடமையை வகுத்துக் கூறி, அமைப்பை வலுப்படுத்துகிறது. எதிரி நாடுகள் எவை என்பதைத் தீர்த்துக்கூறும் உரிமை அமைப்பிற்கே என்பதையும், எதிரிக்கு ஆதரவு தருவது ஐ.நா. அமைப்புக்கு எதிரியாவது என்பதையும் இஃது எடுத்துக்காட்டி எச்சரிக்கிறது. நடுநிலைத் தீர்ப்பு மன்றத்திற்கும் அமைப்பிற்கும் இது வலுத்தருகிறது. (6) உலக அமைதியையும் நலத்தையும் பேணுவதற்கு அமைப்பில் உறுப்பாகச் சேராத நாடுகளும் ஒத்துழைப்பது இன்றியமையாதது. ஆதலால், அத்தகைய நாடுகளும் உரிமை விளம்பரத்திற்கண்ட தத்துவங்களை மதிக்க வேண்டுமென்று ஐ.நா. அமைப்புக் கோருகிறது. இத்தத்துவம், ஐ.நா. அமைப்பால் நடவடிக்கை எடுக்கத்தக்கதோ, அல்லது அதற்கான வலிவுடையதோ அன்று. ஆனாலும், இது அதன் உயரியநோக்கை எடுத்துக்காட்டுகிறது. அதன் முக்கியத்துவம் அது ஐ.நா. அமைப்பின் எதிர்கால முழுநிறை பரப்பைச் சுட்டிக் காட்டுவது என்பதே. ஐ.நா. அமைப்பு அதில் சேர்ந்த நாடுகளையே முறைப்படி கட்டுப்படுத்துவ தாயினும், அது எல்லா நாடுகளின் நலன்களையும், அதாவது உலக முழுமுதல் நலனையே நோக்கமாகக் கொண்டது என்பதையும், எல்லா நாடுகளும் உறுப்பாகச் சேரும் காலத்தை அது அவாவி எதிர்பார்க்கிறது என்பதையும் இது தெளிவாகக் குறிக்கிறது. இது தவிர, உலக அமைதிக்கு ஊறு விளைப்பவர் உறுப்பினர் அல்லாதவிடத்தும், அவர்கள் செயலுக்கு உறுப்பினர் செய்யும் ஆதரவு, அமைப்புக்கு மாறானது என்பதையும் இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது. (7) உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் இடங்கள் தவிர, மற்றப்படி எவ்வகையிலும் உறுப்பு நாடுகளின் சொந்த உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. அமைப்புத் தலையிடாது. ஐ.நா. அமைப்பின் தத்துவங்களுள் பெருத்த விவாத எதிர் விவாதத்துக்கு இடமான தத்துவம் இதுவே. ஆயினும், இத்தத்துவம் இன்றைய சூழ்நிலையில் தேவைப்பட்டதாகவே ஐ.நா. அமைப்பின் முதல்வர்களால் கருதப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஐ.நா. அமைப்பு உலகமக்கள் அமைப்பாயினும், அது நாடுகள் மூலமாகவும், நாட்டின் அரசாங்கங்கள் மூலமாகவும் மட்டுமே மக்களின் பிரதிநிதித்துவம் உடையதாயிருக்கிறது. நாடுகளின் சரிசமத்துவத்தை மட்டுமன்றித் தன்னாட்சி உரிமையையும், முழுநிறை சுதந்தரத்தையும் அஃது ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அது உள்நாட்டுச் செய்திகளில் தலையிடுவதில்லை என்று உறுதி கூறுவது பொருத்தமுடையதேயாகும். ஆனால், அதேசமயம், மக்கள் பொருளியல்வாழ்வு, சமூகவாழ்வு ஆகியவற்றிலும்; உடல் நலம், கல்வி, தொழிலாளர் நலம், பண்பாடு ஆகியவற்றிலும் அது அக்கறை காட்டுகிறது. இவ்வகையில் அரசாங்கச் சார்பான அமைப்புகளுடன் மட்டுமன்றி, அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளுடனும் நாடுகடந்த உலக அமைப்புகளுடனுங்கூட, அது தொடர்பு கொள்ள நாடுகிறது. “இவையனைத்தும் உள் நாட்டுச் செய்திகளில் தலையிடுவனவல்லவா?’ என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இம்முரண்பாடு உண்மையில் ஐ.நா. அமைப்பின் தற்காலிக நடைமுறை, அதன் காலங்கடந்த உயர்குறிக்கோள் ஆகியவற்றிடையே எழுந்துள்ள முரண்பாடேயாகும். இத்தத்துவம், அதன் தற்காலிக நடைமுறையை மட்டுமே சார்ந்தது. கலை, பண்பாடு முதலிய அமைப்புகள் அதன் எதிர்கால வளர்ச்சி நோக்கியவை. ஆயினும், பிந்திய இனங்களில் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளிடம் தொடர்பு கொள்ளும்போதும், பிற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும்போதும், அதனதன் சார்பில் தொடர்புள்ள நாட்டரசாங்கங்களுடனும் அவற்றின் பிரதிநிதிகளுடனும் கலந்துகொண்டே அது செயலாற்றுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆகவே, மேலீடாகத் தோன்றும் இம்முரண்பாடு உண்மையில் முரண்பாடன்று என்பதைக் காணலாம். விளக்கமாகக் கூறினால், அது இக்கால நடைமுறை ஒழுங் கமைப்பின் அடிப்படையிலேயே, எதிர்கால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்னல் வேண்டும். நடைமுறையும் வளர்ச்சியும் முரண்பட்டுக்காணும் இக்காட்சி, ஐ.நா. அமைப்பின் இன்னொரு கூற்றில் இதனினும் முனைப்பாகக் காணப்படுகிறது. இதுவே பொறுப்பாண்மைத் தத்துவமும் அதனைச் செயலாற்றும் பொறுப்பாட்சி மன்றமும் ஆகும். முதல் உலகப் போர் முடிவில் தோல்வியுற்ற எதிரிநாடுகளின் ஆட்சியிலிருந்த நாடுகளும் குடியேற்ற நாடுகளும் எதிரி ஆட்சியிலும் விடப்படாமல், சுதந்தர ஆட்சியாகவும் விடப்படாமல், இடைத்தர ஆட்சிநிலையில் வைக்கப்பட்டன. அவற்றை நேசநாடுகள் தத்தம்மிடையே பங்கிட்டு அவற்றின் நல்லாட்சிக்கு உறுதி கூறின. சர்வதேச சங்கம் அவற்றை அவர்கள் பாதுகாப்பாட்சி (ஆயனேயவநள)களாக வகுத்தமைத்தது. சில பகுதிகளைச் சர்வதேச சங்கம் நேராகவோ, பிற நேசவல்லரசுக் குழு மூலமோ ஆட்சி செய்ய ஏற்றுக்கொண்டது. சர்வதேச சங்கம் 1946இல் கலைக்கப்பட்ட போது ஐ.நா. அமைப்பு இப்பொறுப்புகளைச் சர்வதேச சங்கத்தினிடமிருந்து ஏற்றுக்கொண்டது. இரண்டாம் உலகப்போரிலும் இதுபோல எதிரி நாடுகளின் ஆட்சிப்பகுதிகளை நேசநாடுகள் கைக்கொண்டன. ஐ.நா. அமைப்பு இவற்றையும் பொறுப்பாட்சிகளாகக் கொண்டது. ஐ.நா. அமைப்பில் எல்லா உறுப்புகளும் சரிசம சுதந்தர உரிமையும் தன்னாட்சி உரிமையும் உடையவை. அவ்வுரிமையுடைய நாடுகளே அதில் உறுப்பாகச் சேர முடியும். பாதுகாப்பாட்சி, பொறுப்பாட்சி நிலையிலுள்ள நாடுகள் இங்ஙனம் தம் சொந்த உரிமையில் சேர முடியாது என்பது தெளிவு. ஆனால், அதேசமயம் அவற்றின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட நாடுகள் உறுப்பாக முடியும் - ஆகியுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர் தகுதிகள் உலக அடிப்படையில் அமைந்துள்ளனவாதலால், அது உறுப்பல்லாத நாடுகளுக்கும், எல்லா நாட்டு மக்களுக்கும் உரியதாயிருக்க வேண்டுவதே. ‘பொறுப்பாட்சி நாடுகளுக்கும் மக்களுக்கும் இவ்வுரிமை கிடையாதா?’ என்ற கேள்வி அறிஞரால் எழுப்பப்படுவது உறுதி - எழுப்பப்பட்டும் உள்ளது. ஐக்கியநாட்டு இயக்கத்தவர் இதனை உணர்ந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. பாதுகாப்பாட்சி என்ற சொல்லும், அதனைப் பொறுப்பாட்சி என்று திருத்திய திருத்தமும் இதனை நன்கு எடுத்துக்காட்டும். தவிர, சர்வதேச சங்க நாட்களிலேயே பாதுகாப்பாட்சியிற்கூட உட்படாமல் வல்லரசாகிய பிரிட்டனைச் சார்ந்த துணைநாடா (னுநயீநனேநnஉல)யிருந்த இந்தியாவைப் பிரிட்டன் தன்னாட்சி நாடாக்குவதாக வாக்குறுதி கொடுத்து, அச்சங்கத்தில் உறுப்பு நாடாக்கியதும்; அதே அடிப்படையில் 1947இல் சுதந்தரம் பெறுவதற்கு முன்னதாகவே ஐ.நா. அமைப்பில் உறுப்பாகியதும் குறிப்பிடத்தக்கன. இந்நிலையில் பாதுகாப்பாட்சி, பொறுப் பாட்சி ஆகியவற்றுக்குரிய நாடுகளின் மக்கள் வகையிலும்; மற்ற உறுப்பு நாடுகளிலும் உறுப்பு அல்லாத நாடுகளிலும் உள்ள மக்களுக்கு உரிய அதே தன்னாட்சி உரிமையை ஐ.நா. அமைப்பு நோக்க அளவிலும் கொள்கை அளவிலும் ஒத்துக் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், நடைமுறையில் இது நிகழ்வு நிலையை (ளுவயவரள ணுரடி) அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெறும் நோக்கமுடையது என்றே கூறவேண்டும். பாதுகாப்பு நாடுகள் வகையிலும், இதுபோன்ற தற்காலச் சூழ்நிலை நிகழ்வு நிலைகளிலும் சர்வதேச சங்கத்தின் நிலை பெரிதும், ஐ.நா. அமைப்பின் நிலை ஓரளவும் இரண்டாக மானவை என்பதில் ஐயமில்லை. தென்னாப்பிரிக்கா, கிழக்காப்பிரிக்கா வகையில் நாம் இதனைத் தெள்ளத் தெளியக் காணலாம். இங்கே இந்திய மக்கள், ஆசிய மக்கள் உரிமைகள் மட்டுமன்றி, ஆப்பிரிக்காவுக்குரிய பழங்குடி மக்கள் உரிமைகள்கூடத் தென்னாப்பிரிக்கா வெள்ளையர் அரசாங்கங்களின் உள் நாட்டுச் செய்திகளாக விடப்பட்டுள்ளன. இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலைகளில் ஐ.நா. அமைப்பின் போக்கு, பிற்பட்ட நாடுகளின் பக்கம் சாய்வது அதன் வலிமையையும், பிற்பட்ட நாடுகளுக்கு ஏற்படக்கூடிய வலிமையையும், மட்டுமே பொறுத்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், ஐ.நா. அமைப்பின் நோக்கம் அவ்வமைப்பின் நடைமுறையையும் அதன் தற்கால வலுவையும் கடந்து தொலை நோக்குடையது என்பதற்குத் தடையில்லை. ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் முன்னேற்றம் அடைவதன் மூலமாக மட்டுமே ஐ.நா. அமைப்பில் இந்த நோக்கம் நடைமுறையில் வலுப்பெற முடியும். அந்நிலை வரும் வரையில் இத்தகைய செய்திகள் எப்போதும் உள்நாட்டுச் செய்திகள் என்று ஒருசாராராலும், உலகச் செய்தி என்று மறுசாராராலும் கூறப்பட்டே வரும். ஏனெனில், இத்தத்துவத்தின் வாசகத்திலுள்ள பெருஞ்சிக்கல், ‘எது உள்நாட்டுச் செய்தி, எது உலகச் செய்தி?’ என்பதை வரையறுக்க முடியாதிருப்பதேயாகும். ஆயினும், மனித உரிமைகள், ஐ.நா. அமைப்பின் குறிக்கோளை எடுத்துக்காட்டி வலியுறுத்தப் போதியவை. ஐ.நா. அமைப்பின் எதிர்கால வலிமை, வல்லரசுகளிடையே அது போட்டியைச் சமாளிக்கும் திறத்தையும், உலக மக்களிடையே அது பற்றிய அறிவும் அக்கறையும் ஆதரவும் வளர்வதையுமே பொறுத்தது. ஆனால், குறிக்கோள் நோக்கி அது வளரும் வளர்ச்சி பெரிதும், அதில் ஈடுபட்ட சிறு நாடுகளும் அதன் மக்களும் பெறும் ஒற்றுமையையும் வலிமையையும் பொறுத்ததேயாகும். சிறப்பாக, இந்தியா, சீனா போன்ற ஆசியநாட்டு மக்களும், ஆப்பிரிக்கப் பழங்குடியினராகிய நீகிரோவரும், உலகில் முற்போக்கடைந்துவிட்ட வெள்ளையர் நாடுகளுக்கு ஒப்பான வலிமையும் வளமும் பெறுவதைப் பொறுத்தே ஐ.நா. அமைப்பின் நோக்கம் முழுநிறை வளர்ச்சியை அடைய முடியும். அட்லாண்டிக்கு விளம்பரத்தின் உரிமைகளை அட்லாண்டிக்குக் கடலடுத்த நாடுகளுக்குள்ளேயே கட்டுப் படுத்த, வெள்ளையர் நாடுகளிலுள்ள பல பிற்போக்காளர் அரும்பாடுபட்டார்கள் என்பதை இத்தறுவாயில் நினைவுகூர்தல் வேண்டும். ஐ.நா. அமைப்பின் நோக்கங்களையும் அடிப்படைத் தத்துவங்களையும் விளக்கியபின், அதன் ஆக்கமுறையில் கருத்துச் செலுத்துவோம். 4. ஆக்கமும் செயல் முறைகளும் - ஐ ஐக்கியநாடுகள் அமைப்பு என்பது உலக முழுவதும் பரந்து செயலாற்றும் ஒரு நிலையான பேரியக்கத்தின் தலைமை நிலையம். அது உலகத்தையும் உலகமக்கள் வாழ்க்கையையுமே ஓர் உடலாகக் கொண்ட உயிர் என்னலாம். அது தன் உறுப்புகளால் நேரடியாகவும், தான் தொடர்புகொண்டுள்ள இணைப்பமைப்பு களால் தொலைமுறையாகவும் உலகவாழ்வு முழுவதும் பரந்து செயலாற்றுகிறது. ஸான் ஃபிரான்ஸிஸ்கோ மாநாட்டிலேயே ஐ.நா. அமைப்புக்கு நிலையான ஒரு தலைமையிடம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு முன்னேற்பாட்டுக் குழுவிடம் விடப்பட்டிருந்தது. ஐ.நா. பேரவையின் முதற்கூட்டம் லண்டனில்தான் கூடிற்று. அச்சமயம் தலைமையிடம் பற்றிய பெருத்த வாதங்கள் ஏற்பட்டன. உலகில் பல நாடுகளும் தலைமையிடம் தம் நாட்டில் இருக்க வேண்டும் என வாதாடின. ஆனால், இதற்கென அமைக்கப்பட்ட ஐ.நா. குழு அமெரிக்க ஐக்கிய நாட்டையே தேர்ந்தெடுத்தது. அந்நாட்டிலும் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ, சிக்காகோ, நியூயார்க்கு, ஃபிலடெல்ஃபியா முதலிய பல நகரங்கள் இப்பெருமைக்குப் போட்டியிட்டன. இறுதியில் நியூயார்க்கே தலைமையிடமாகத் தேரப்பட்டது. இந்த இடத்திற்கான அமெரிக்க நாட்டு அரசாங்கத்தின் இணக்க உரிமைப்பத்திரம் முறைப்படி முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிலையான இடம் இதற்காக முற்றிலும் முன்னேற்பாடு செய்யப்படும்வரை, அந்நகரிலேயே ஏரித்தீவிலுள்ள லேக் ஸக்ஸஸ் (வெற்றி ஏரி) என்ற இடத்தில் அமைப்பின் பணிமனை அமர்வு பெற்றிருக்கிறது. ஐக்கியநாட்டமைப்பின் பணிமனைகள் யாவும் அதன் தலைமையிடத்திலேயே உள்ளன. ஆயினும், அதன் உறுப்புகள் பலவும் பல இடத்திலும் அவ்வப்போது கூடுபவைகளே. அமைப்பின் நேரடி உறுப்புகளில் நிலையாயிருக்கும் உறுப்பு, நடுநிலைத்தீர்ப்பு மன்றம் ஒன்றே. இது பழைய நடுநிலைத் தீர்ப்பு மன்றம் இருந்த இடத்திலேயே, அதாவது ஹாலந்து நாட்டிலுள்ள ஹேகு நகரிலேயே நிலைபெற்றுள்ளது. ஐ.நா. அமைப்புக்காக விடப்பட்டுள்ள இடத்தின் வாழ்க்கை யுரிமை மட்டுமன்றி, எல்லாவகைப்பட்ட அரசியல் குடியுரிமை களும் அமெரிக்க நாட்டாரால் ஐ.நா. அரசாங்கத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழ்பவர்கள் இனி எந்நாட்டின் தனிக்குடிகளும் அல்லர்; உலக நாட்டுக்குடிகள் ஆவர். இதுபோலவே ஐ.நா. அமைப்பின் பணிமனைகளில் உழைக்கும் பணியாளர்களும் உலகக் குடியுடையவரேயாவர் என்றும், எந்தத் தனி நாட்டுரிமையும் அவர்கள்மீது செல்லுபடியாகாது என்றும் விதியமைக்கப் பட்டுள்ளது. ஐ.நா. அமைப்பில் பெரும்பணிப் பொறுப்பு வகிப்போர், முன்பு பல்வேறு தனி நாட்டின் குடிகளாய் இருந்தவர்களே. அவர்கள் தத்தம் நாட்டின் பற்றைவிட உலகப்பற்றும் நடுநிலை மனப்பான்மையும் மிகுதியாக உடைய சான்றோர்களே. ஆயினும், ஐக்கியநாட்டின் மீது அதன் பணியாளர்கள் மூலமாக எந்தத் தனி நாட்டரசாங்கத்துக்கும் தனி உரிமையோ தனிச் சலுகையோ தனி ஆதிக்கமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் பணியாளர் பற்றிய இக்கட்டுப்பாடு தேவையாயிற்று. உலகநாட்டுரிமையின் ஆர்வத்தால் பல உலகச் செல்வர்களும் பல உலகப்பற்றாளரும் தலைமையிடத்தின் எல்லையுள்சென்று குடியேறியுள்ளனர். அது ஓர் உலகக் குடியேற்றமாயுள்ளது. அங்கே பல நாட்டு மக்களும் கலந்துற வாடும் ஒரு சின்னஞ்சிறு உலகைக் காணலாம். உலக அமைப்பின் பணியாளர்களுக்குக் கூடியமட்டும் இன்றைய உலகின் முதல் தர மொழிகள் தெரிந்திருத்தல் வேண்டும். அத்துடன் கூடியமட்டும் பல மொழி அறிவு இருத்தல் பெரும்பயனுடையது. ஏனெனில், உலகிலுள்ள எல்லா நாட்டுமொழியாளரும் அங்கேவந்து கூடுவர். எல்லா மொழிகளிலும் பேச்சும் எழுத்தும் நூலாதாரங்களும் அங்கே நடமாடும். ஐ.நா. அமைப்பிலேயே பணியாளர்களில் ஒரு பெரும்பகுதியினர் மொழி பெயர்ப்பாளர்களே. ஐ.நா. அமைப்பில் பொறுப்பாண்மைத்துறையின் சார்பில் துணைப்பொதுச் செயலாளராயிருக்கும் விக்டார் ஹூ என்ற சீனர் தம் தாய்மொழியைப் போலவே ஃபிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மேல்நாட்டு மொழிகளிலும் பேசவும் எழுதவும் கூடியவராம்! இவைபோதாமல், அவர் தம் வாழ்நாளுக்குள் ஐக்கியநாடுகளின் எல்லா மொழிகளையுமே கற்றுத்தேர்ந்துவிடும் உறுதியுடன் உழைக்கிறாராம்! ஐ.நா. அமைப்புக்கு உலகப்பற்றும் நடுநிலையுணர்வும் உடையவர் மட்டுமன்றி, உலகறிந்த பல துறைச் சான்றோர்களும், வல்லுநர்களும், நுணுக்கத்துறையினரும், எழுத்தாளரும் தேவை. பல நாடுகளின் முதலமைச்சராயிருந்தவரும், வெளி நாட்டமைச்சராயிருந்தவரும், படைத்துறை வல்லுநரும், விஞ்ஞானிகளும், கல்லூரி ஆசிரியரும், நூலாசிரியரும், பத்திரிகையாசிரியரும் (சிலர் தம் பணிகளைத் துறந்துகூட,) ஐ.நா. அமைப்பில் பங்கு கொண்டுள்ளனர். அமைப்பாளரும் எல்லாத் துறையிலும் திறமையுடையவர்களை நேரடியாகவும் போட்டித்தேர்வுகள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கின்றனர். கூடுமான போதெல்லாம் திறமைக்கடுத்தபடி எத்தனை வேறுவேறு நாட்டுமக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியுமோ, அத்தனை நாட்டுமக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கின்றனர். ஆனால், எந்நாட்டின ராயினும் பணியேற்ற பின் அவர்கள் உலகக்குடிகள் ஆய்விடுகின்றனர். உலக நாட்டுக்கே, அதாவது ஐ.நா. அமைப்புக்கே நாட்டுப் பற்றுரிமையுடையவராயிருப்பதாக அவர்கள் பணியேற்பின் போது உறுதி செய்து கொடுக்கின்றனர். ஐ.நா. அமைப்பின் மிக உயர்ந்த முதற்பணியாளர் அதன் பொதுச் செயலாளரேயாவர். இவர் பாதுகாப்பு மன்றத்தின் பரிந்துரைமீது ஐ.நா. பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் பணியமர்வுக்குரிய காலம் ஐந்தாண்டுகள். ஐந்தாண்டுகளுக்குப் பின் இவர் மீண்டும் தேந்தெடுக்கப்படும் உரிமையுடையவர். இவருக்கு ஆண்டுக்கு 20,000 அமெரிக வெள்ளி (ரூ.50,000) வரியிலா ஊதியமாகத் தரப்படுகிறது. இவர் பணிமனைச் செலவுகளையும் அமைப்பே ஏற்றுக்கொள்ளுகிறது. முதல் பொதுச்செயலாளராக இப்போதிருப்பவர் திரு. டிரிக்விலை. இவர் நார்வே நாட்டினர்; அந்நாட்டின் வெளி நாட்டமைச்சராய் போர்க்காலங்களில் அரும்பணியாற்றியவர்; நேச நாட்டினர் எல்லாருடனும் போர்க்காலத்திலேயே நன்கு பழகியவர். பொதுச்செயலாளர் ஒருவர்தான் ஐ.நா. அமைப்பில் மிகப் பெரும் பொறுப்பும் அமைப்பின் எல்லா உறுப்புகளுடன் தொடர்பும் உடைய தனிமனிதர். அவர் செல்வாக்கும் பதவியும் அவரைக் கிட்டத்தட்ட உலகின் ஒரு முடி சூடா மன்னராக்கப் போதியவை. உலகின் முதல் வல்லரசுகள்கூட அவர் விருப்பத்திற்குப் பெருமதிப்புக் கொடுத்தாக வேண்டும். ஆயினும், பண்டைக் காலப் பேரரசர் கனாக்கண்ட இந்த ‘ஏழுலகாள் பதவியை’ அவர் உலகப்பற்று, உலகத்தொண்டு காரணமாகப் பெற்ற ஓர் உலகக் குடியுரிமையாளரேயாவர் - உலகின் முடிசூடா மன்னர் பதவியில் அவர் உலகத் தொண்டராகவே பணி ஆற்றி வருகிறார். ஒரு நாட்டின் பல்துறைப் பொறுப்பையே ஒரு தனிமனிதன் கவனித்துக்கொள்வதரிது. பரந்த உலகின் பல்துறைப்பெருக்கம் வாய்ந்த பொறுப்பைப் பொதுச் செயலாளர் போதிய திறம்பட்ட உதவியின்றிச் செய்ய முடியாதென்பது எதிர்பார்க்கத்தக்கதே. இதனை முன்னிட்டே பொதுச்செயலாளரின் பாரித்தகன்ற செயற்பொறுப்புப் பரப்பை எட்டுத்துறைகளாக வகுத்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு துணைப்பொதுச் செயலாளர் அமர்த்தப்பெற்றுள்ளனர். இவர்களனைவரும் பொதுச் செயலாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கே பொறுப் புடையவராவர். இவ்வெட்டுத் துறைகளும் இவற்றில் பதவி வகிக்கும் துணைப்பொதுச் செயலாளர் பெயர்களும் கீழே தரப்படுகின்றன. அவரவர் பெயரின் எதிராகத் தரப்படுகின்ற அவரவர் தாய்நாட்டின் பெயரிலிருந்தே, அவர்கள் எத்தனை பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு பெற்றுள்ளனர் என்பதையும், பெருநாடுகள், சிறுநாடுகள் எல்லாவற்றுக்கும் இதில் இடம் தரப்பட்டுள்ளது என்பதையும் காணலாம். (1) சமூகத்துறை துணைப் பேராசிரியர் ஹென்றி பொதுச் செயலாளர் லாகியர் (ஃபிரான்ஸ்). (2) பொருளியல் துறை பேராசிரியர் டேவிட் துணைப் பொதுச் செயலாளர் ஓவென் (இங்கிலாந்து) (3) பாதுகாப்பு மன்றச் திரு. அர்க்காடி ஸோபொ செய்திகள் துறை லாவ் (ரஷ்யா) துணைப் பொதுச் செயலாளர் (4) பொறுப்பாண்மைமன்றச் திரு. விக்டார் ஹூ (சீனா) செய்திகள் துறை - துணைப் பொதுச் செயலாளர் (5) மாநாட்டுப் பொதுப் திரு. ஏட்ரியன் பெல்ட் பணித்துறைத் துணைப் (ஹாலந்து) பொதுச் செயலாளர் (6) சட்டத்துறைத் துணைப் திரு. ஐவான் கெர்னோ பொதுச் செயலாளர் (செக்கோஸ்லாவியா) (7) ஆட்சித்துறை, செல்வத் திரு. ஜான் பி. ஹட்ஸன் துறைத் துணைப் (அமெரிக்கா) பொதுச் செயலாளர் (8) பொதுத்தகவல்துறைத் திரு. பெர்ஜமின் கோ துணைப்பொதுச் செயலாளர் ஹென் (சிலி) இத்துணைப் பொதுச் செயலாளர் எண்மர்களையன்றிப் பொதுச்செயலாளர் பணிமனையைக் கவனிக்க ஒருநிறை வேற்றற்பணியாளரும் உள்ளனர். இப்பதவி வகிப்பவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த திரு. ஆர்.ஈ.ஏ.ஜாக்ஸன் என்பவர். இத்துறைகள் பலவும் பின்னும் கிளைத்துறைகளாக அல்லது அரங்கங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் அரங்கத் திற்கும் ஓர் ஆணையாளர் (னுசைநஉவடிச) பொறுப்பு வகிக்கிறார். சமூகத்துறையில் உடல் நலம், மயக்கமருந்துச் சரக்குகள், சமூகநலத்துறைகள், பண்பாட்டுக் கல்வித்துறைகள், புலம்பெயர் மக்கள் துறை, மனித உரிமைகள் ஆகிய ஆறு அரங்கங்களுக்கு ஆறு ஆணையாளர்களும், அவ்வவ்வரங்களுக்குரிய அரங்க ஆராய்ச்சி நிலையங்களும் உண்டு. பொதுச்செயலாளருக்கடுத்தபடி பெரும்பொறுப்பு வகிக்கும் தனிமனிதர் பொதுப் பேரவைத்தலைவர், பாதுகாப்பு மன்றத்தலைவர், பொருளியல் சமூகமன்றத்தலைவர் ஆகிய வர்களே. இந்நால்வருமே ஐ.நா. அமைப்பின் உயிர்நிலைக்குழு என்று கூறத்தக்கவர் ஆவர். ஏனெனில், மிக நெருக்கடியான காலங்களில் பொதுச்செயலாளரோ, அல்லது மற்றவர்களுள் முதல் இருவரோ, தனித்து அல்லது வேறு இருவருடன் கூட்டாய் இருந்து, அமைப்பின் நடைமுறை களனைத்தையும் நடத்தும் பொறுப்புரிமை உடையவராவர். மேற்கூறிய இத்தனிப்பணியாளர் அனைவரும் அமைப்பின் எல்லாக் கூறுகளையும் இணைக்கும் சிறப்புப் பணியாளர்கள் மட்டுமே. இவர்கள் கீழுள்ள பணியாளர்கள் அவரவர்களின் அமைப்புக் கூறுடன் ஒன்றுபட்ட நிலையிலுள்ளவர்களே. ஆகவே, இத்தனிமனிதரை விடுத்து அமைப்பின் ஆக்க முறைபற்றியும் செயல்முறை பற்றியும் கருத்துச் செலுத்துவோம். ஐ.நா. அமைப்புத் தன் உறுப்புகள் மூலமாகவே நேரடியாகச் செயலாற்றுகின்றது. இத்தகைய ஆறு உறுப்புகள் ஐ.நா. அமைப்பில் உண்டு. அவையாவன; (1) பொதுப்பேரவை, (2)பாதுகாப்பு மன்றம், (3) நடுநிலை மன்றம், (4) சமூக, பொருளியல் மன்றம், (5) பொறுப்பாண்மை மன்றம், (6) பணித்துறை நிலையம் ஆகியவை. பொதுப்பேரவை இவற்றுள், உலக அரசாங்கம்போல இயங்கும் ஐ.நா. அமைப்புக்கு ஒரு சட்ட, அரசியல் மன்றமாக இயலுவது பொதுப் பேரவையே. அதுவே பொதுச் செயலாளரை நேரடியாகவும் மற்றப் பணியாளரை அவர் மூலமாகவும், பிறவிதிமுறைகள் ஏற்பாடுகள் மூலமாகவும் தேர்ந்தெடுத்து அமர்த்துகிறது. மற்றெல்லா உறுப்புகளும் கூடுமுன் இது முதலில் கூடி, அவற்றின் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான விதிமுறைகளை வகுக்கிறது. அவை எல்லாவற்றையும் செயல் முறையில் தூண்டுவதும், அவற்றின் செயல் துறைகளைப்பற்றி ஆய்வதும், அவற்றின் சார்பில் அறிவிக்கப்படும் அறிக்கைகளை ஏற்பதும், விவாதிப்பதும், புதிய உறுப்புகளைத் தோற்றுவிப்பதும், இயக்குவிப்பதும், மாற்றுவதும் எல்லாம் இப்பொதுப் பேரவையே. மேலும், உறுப்புகள் யாவற்றையும் பொதுச் செயலாளர் ஒத்துழைப்புடன் இணைப்பதும், ஐ.நா. அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதியாய் நின்று உறுப்பு நாட்டரசாங் கங்களுடன் பேச்சுகள் நடத்தி ஒப்பந்தங்கள் வகுப்பதும், உலகின் பிற சர்வ தேச அமைப்புகளுடனும் நாட்டமைப்புகளுடனும் உறவு கொள்வதும், யாவும் இப்பேரவையின் செயல்களே. இத்துடன் ஐ.நா. அமைப்பு இப்பேரவை கூடுவதற்கு முன்பே திட்டப்படுத்தப்பட்டதாயினும், அத்திட்டத்திற்கும் அதன் சார்பில் உருவாக்கப்பட்ட உரிமை விளம்பரம், நடுநிலைத்தீர்ப்பு மன்ற விதிமுறைத் தொகுதி ஆகியவற்றுக்கும் பொறுப்பு வகிப்பது அதுவே. ஏனெனில் அதில் திருத்தங்கள் அமைக்கும் உரிமை அதற்கே உள்ளது. பொதுப் பேரவையை ‘ஐ.நா. அமைப்பின் நகரப் பொதுமன்றம்’ என்றும், ‘மனித இனத்தின் மனச்சான்று’ என்றும் குறிப்பதுண்டு. உலக மக்களிடம் அது எவ்வளவு நேரடியான தொடர்பு கொண்டுள்ளது என்பதனை முதற்புனை பெயரும்; அது அரசியல் வாழ்வின் சூதாட்டத்தையும், சாதிமத இனவேறுபாடு, நாட்டுப்பற்று முதலிய குறுகிய எல்லைகளையும் கடந்த மனித ஒழுக்கநிலையான அன்பு நெறி சார்ந்ததென்பதனை இரண்டாவது புனைபெயரும் காட்டுகின்றன. பொதுப்பேரவை ஆண்டுக்கு ஒருமுறை ஒழுங்காக ஸெப்டெம்பர் 2-க்குப்பின் வரும் முதல் செவ்வாய்க் கிழமை எனக் குறிக்கப்பட்ட நாளில் கூடுகிறது. இது தவிரப் பாதுகாப்பு மன்ற உறுப்பினரோ, ஐக்கிய நாட்டு அமைப்பின் உறுப்பினரில் பெரும்பான்மையினரோ விரும்பினால், அவர்கள் சார்பில் பொதுச் செயலாளர் பொதுப்பேரவையைக் கூட்ட வேண்டும். இப்பொதுப் பேரவை ஒன்றே வேறெந்த அமைப்புறுப்பாலும் தேர்ந்தெடுக்கப்படாமல், நேரே உறுப்பு நாடுகள் அரசாங்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உடையது. இது ஒன்றே உரிமை விளம்பரம் நீங்கலாக எத்தகைய உரிமைக் கட்டுப்பாடும் வரையறையும் அற்ற முழு நிறை உரிமை உடைய மன்றம். இதில் உறுப்பு நாடுகள் அனைத்துமே உறுப்புகள் ஆகும். ஒவ்வொரு நாட்டினர் சார்பிலும் ஐந்து பிரதிநிதிகள் அடங்கிய பிரதிநிதிக்குழு ஒன்று பேரவையில் இடம்பெறும். பிரதிநிதிகள் ஐவராயினும், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய மொழியுரிமை ஒன்றே. ஆகவே, ஒவ்வோர் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிக் குழுவும் கூட்டுப்பொறுப்புடனேதான் மொழி தரவேண்டும். ஒவ்வொரு குழுவினர் கருத்தையும் அறிந்து அவ்வக்குழுவின் தலைவர் அதன் மொழியுரிமையைக் கையாளுவார். பொதுப்பேரவையின் முக்கியமான உரிமைகளும் கடமைகளும் வருமாறு: (1) உரிமை விளம்பரத்துக்கு உட்பட்டு, உறுப்பு நாடுகளின் உள்நாட்டுச் செய்திகள், அரசியல் அமைப்பு முறை ஆகியவற்றில் புகாமல், உலக அமைதி, பாதுகாப்பு, உலக மக்கள் நலன், மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகிய செய்திகளில் பேரவை விவாதம் நடத்தித் தீர்மானங்கள் செய்யலாம்; திட்டம் வகுக்கலாம்; அவற்றிற்காகப் பிற உறுப்புகளைத் தூண்டலாம்; கண் காணிக்கலாம்; மாற்றியமைக்கலாம்; புது உறுப்புகள் அமைக்கலாம்; தானும் குழு, கிளைக்குழு அமைக்கலாம்; பிற உறுப்புகள் அத்தகையவற்றை அமைக்கும்படி தூண்டலாம்; அமைப்பதை ஏற்கலாம். (2) பேரவை பிற உறுப்புகளின் செயல் முறை அறிக்கைகளைக் கேட்டு இணக்க ஏற்பு அளிக்கும்; அவற்றின்மீது விவாதம் நடத்தும். (3) நாடுகளிடையே சர்வதேச முறையில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வகையில் அமைப்பின் சார்பில் உறுப்பு நாடுகளுக்கு ஆதரவுரை கூறலாம். (4) பேரவையே அமைப்பின் வரவு செலவுத் திட்டத்தின்மீது விவாதம் நடத்தி அதனை ஏற்கிறது. (5) பேரவையே பாதுகாப்பு மன்றத்தின் ஆதரவுரையுடன் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கிறது; பாதுகாப்பு மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடுநிலைத் தீர்ப்பு மன்றத்திற்குரிய 15 நடுவர்களையும் தேர்ந்தமர்த்துகிறது; பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினர்களையும், சமூக பொருளியல் மன்றம், பொறுப்பாட்சி மன்றம் ஆகியவற்றின் உறுப்பினரையும் தேர்ந் தெடுக்கிறது; அணுச்சத்திக் குழாத்தினரை அமர்த்துகிறது. உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய செய்திகளை எந்தப் பேரவை உறுப்பினரும், எந்தப் பாதுகாப்பு மன்ற உறுப்பினரும் பேரவை முன் கொண்டு வரலாம். அது பாதுகாப்பு மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால், அம்மன்றம் அதனை ஆராய்ந்து கொண்டிருக்கும் காலவரையறைக்குள் பேரவை அதில் தலையிடாது. மேலும், பேரவை ஒரு சட்டமன்றமட்டுமேயாதலால், அது விவாதம் செய்து ஒழுங்கு முறையும் முடிவும் வகுக்குமேயன்றி, எத்துறையிலும் செயல் முறையிலிறங்காது. பாதுகாப்புச் செய்திகளில் அதன் செயல் முறை உறுப்பு, பாதுகாப்பு மன்றமே. தன் முடிவுகளை அது பாதுகாப்பு மன்றத்திற்கு அனுப்பி, அதன் செயலுக்கு அதனை விட்டுவிடும். பாதுகாப்புத் துறையில் பாதுகாப்பு மன்றம் பேரவையின் செயல் மன்றமாயமைந்தது போலவே, சட்ட வழக்குத் துறைகளில் நடுநிலைத் தீர்ப்பு மன்றமும்; சமூக பொருளாதாரத் துறைகளில் சமூக பொருளியல் மன்றமும்; பொறுப்பாட்சி நாட்டு மக்கள், பொறுப்பாட்சிப் பகுதி ஆகியவை பற்றிய ஒப்பந்தங்கள் வகையில் பொறுப்பாண்மை மன்றமும் அதன் செயல்முறை மன்றங்களாய் இயல்கின்றன. இவையும் தாமே தமக்கு வேண்டிய கிளைகளும் கிளையுறுப்புகளும் குழுக்களும் கிளைக்குழுக்களும் அமர்த்தும் உரிமை உடையன. ஆனால், இவையனைத்தும் பெரும்பாலும் பேரவையின் இணக்க ஏற்புக்கு உரியன. சமூக பொருளியல் மன்றம் மட்டுமே, இக்கிளையுறுப்புகளிடையே இவ்வகையில் தனி முக்கியத்துவம் வகிப்பது. இதன் குழுக்களும் கிளைக்குழுக்களும் மிகப்பல. தவிர, இது சமூக, பொருளாதார, கலை, பண்பாட்டுச் செய்திகளில் ஈடுபடுவதாதலால், உலக மக்களுடனும், உலக அரசாங்கங்களுடனும், பிற உலக அமைப்புகளுடனும் நாட்டமைப்புகளுடனும் தொடர்புறவு கொள்ளும் தன்மை உடையது. ஐ.நா. அமைப்பின் தனிச் சிறப்புறுப்பாகிய இம்மன்றத்தின் ஒவ்வொரு செயலிலும் பேரவையின் சார்பிலேயே - அடிக்கடி பேரவையின் மூலமாகவே - அது செயலாற்றுகிறது. பொறுப்பாட்சித் துறையில் போர்த்துறை முக்கியத்துவம் உடையவை என்று வகுக்கப்பட்ட பகுதிகள் பற்றியவரை அவை பாதுகாப்புத் துறைக்குரியவை யாதலால், பேரவை அவற்றைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாட்சிக்கே விட்டுவிட்டு, மீந்த பகுதிகளைப் பொறுப்பாண்மை மன்றமூலம் செயலாற்றுகிறது. பணித்துறை மன்றத்தில் பொதுச்செயலாளரை நேரடியாகப் பாதுகாப்பு மன்றத்தின் பரிந்துரைமீது பேரவை தேர்ந்தெடுக்கிறது. அடுத்தபடி துணைப் பொதுச்செயலாளரைப் பேரவையின் பரிந்துரைமீது பொதுச்செயலாளர் தேர்ந் தெடுக்கிற €hர். மற்ற உயர் பணியாளரைப் பொதுப்பேரவை அமைக்கும் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டுப் பொதுத் தேர்வு மூலம் அவ்வத்துறையின் துணைச்செயலாளர் தேர்ந்தெடுக்கிறார். மற்றச் சிறுபணியாளர்கள் அவ்வத்துறையின் கிளையரங்கத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவர். பல முக்கியத் துறைகளில் பொதுச்செயலாளர் மூலம் நேரடியாகப் பணியாளர் அமர்த்தப்பெறுவதும் உண்டு. பாதுகாப்பு மன்றம் ஐ.நா. அமைப்பில் பொதுப்பேரவைக்கு அடுத்தபடி தற்சார்பும் தன்னுரிமையும் உடைய உறுப்பு, பாதுகாப்பு மன்றமே. ஓரளவு பிற உறுப்புகளைப்போலவே பேரவையால் இதன் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இது ஒன்று மட்டும் பேரவைக்கு வேறெவ்வகையிலும் பொறுப்பு வகிக்காமல், தனிச் செயலுரிமை உடையதாய் அமைந்துள்ளது. மேலும், மற்ற எல்லா உறுப்புகளிலும் எல்லா நாடுகளும் சரிசம நிலையுடையவை யாய், சரிசம மொழியுரிமையுடையவையாய் இருக்க, இதில் மட்டும் ஆதரவு வல்லரசுகள் நிலையான உறுப்பினவாகவும் மொழியுரிமை வகையிலும் வேறு பல வகையிலும் தனிச் சலுகையுடையனவாகவும் உள்ளன. இவ்வேறுபாடு பெரிதும் யால்ட்டா மாநாட்டின் பயனாக ஏற்பட்டதே. இவ்வேறுபாடு பற்றியும் சிறப்பாக மொழியுரிமையில் ஆதரவு நாடுகளின் மறுப்புரிமை (ஏநவடி) பற்றியும் தொடக்கத்திலிருந்தே வலுத்த வாத எதிர்வாதங்கள் இருந்து வந்துள்ளனவாயினும், உலக இயக்கத்தின் தற்போதைய நிலையிலும், உலகின் தற்போதைய சூழ்நிலையிலும், இதில் மிக்கமாறுபாடு ஏற்படுவதற்கில்லை. மற்ற எல்லாத்துறைகளிலும் எல்லாநாடுகளுக்கும் எத்தனைச் சம உரிமையும் சமப்பொறுப்பும் இருந்தாலும், பாதுகாப்புச் செய்திகளில் வல்லரசுகளின் போட்டியச்சமே பெரிதாதலால், அவ்வல்லரசுகளின் கூட்டுப்பொறுப்பும் பக்கபலமுமின்றி ஐ.நா. அமைப்பு வலிவு பெற முடியாது. அமைதிக்கு உத்தரவாதமளிக்க வேண்டியவர்கள் இறுதியில் அவர்களேயாதலால், இதில் அவர்களே பொறுப்பும் ஆற்றலும் உடையவராய் அமைந் துள்ளனர். விலக்க முடியாத இவ்வேறுபாட்டு நிலை சர்வதேச சங்கத்தின் அனுபவத்தினால் வந்தது; இதனை விலக்குவது குறிக்கோள் முறையில் சரியாயினும், நடைமுறையில் இப்போதைய நிலையில் கூடாததொன்று. உண்மையில் பாதுகாப்பு மன்றத்தின் இச்சிறப்புரிமைகள் கூட வல்லரசுகளின் கூட்டுப் பொறுப்புச் சரிவர நிறைவேறும்போதுதான் பயன்படும். சர்வதேச சங்கம் தத்தளித்ததற்குக் காரணங்களைக் கண்டு ஐ.நா. அமைப்பினர் அவற்றைத் திறம்பட விலக்கிவிட்டனர். என்றாலும், இன்னும் உலக இயக்கம் சென்று மோதக்கூடும் ஒரு பாறை இல்லாம லில்லை; அதுவே வல்லரசுகளிடையே எழக்கூடும் முதல் போட்டி. அதனைச் சமாளிக்கும் பொறுப்புப் பாதுகாப்பு மன்றத்தினதேயாதலால், அதன் தனிச்சிறப்புப் பண்புகளை நாம் போற்றுவதும் கண்டிப்பதும் அதன் பொறுப்பை அது நிறைவேற்றுவதையும் நிறைவேற்றாததையுமே பொறுத்தன. இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய செய்தி. பாதுகாப்பு மன்றத்தில் பதினோர் உறுப்பினர் உண்டு. உறுப்பு நாடுகளுள் ஒவ்வொன்றும் இம்மன்றத்திற்குத் தம் சார்பில் ஒவ்வொரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும். அவர்கள் மொழியுரிமையும் ஒன்றே. ஆனால், ஆதரவு வல்லரசுகளின் சார்பில் அனுப்பப்படும் பிரதிநிதிகள் நிலையானவர்களாய் இருப்பார்கள். மற்ற ஆறு பிரதிநிதிகளும் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பு நாடுகளின் சார்பில் வரும் பிரதிநிதிகள் ஆவர். இவர்கள் இரண்டாண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் ஆண்டில் இவர்களுள் மூவர் ஓராண்டுக்கும் மற்றவர்கள் இரண்டாண்டுக்குமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதனால், ஆண்டுதோறும் இவர்களுள் மூவர் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பர். முதலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அறுவருள் ஆஸ்திரேலியா, பிரேஸில், போலந்து ஆகியவற்றின் பிரதிநிதிகள் இரண்டு ஆண்டுக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மெக்ஸிக்கோ, ஹாலந்து. எகிப்து நாட்டினர் ஓராண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின் கூறப்பட்ட மூன்றின் இடங்களிலும் இரண்டாம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பெல்ஜியம், கொலம்பியா, ஸிரியா ஆகிய நாடுகளுக்குரியவர். இவ்வுறுப்பினர் தவிர, உறுப்பினர் அல்லாத பேரவை உறுப்பு நாட்டினரோ, பேரவை உறுப்பினர் அல்லாத பிற நாட்டினரோகூட, அந்நாட்டின் செய்திகள் தேர்ந்தாராயப் படும்போது தனிப்பட அழைக்கப் பெற்று மன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். ஆயினும், இவர்கள் பார்வையாளர் போன்றவர்களே: மன்றத்தின் மொழியுரிமையில் இவர்கள் கலந்துகொள்ள முடியாது. பாதுகாப்பு மன்றத்தின் தனிச்சிறப்புக்கள் பல: (1) மொழியுரிமைபற்றிய தனிவேறுபாட்டை மேலே குறித்துள்ளோம். (2) அதன் தன்சார்பும், தன்னுரிமையும் மேலே காட்டப்பட்டன. இவை தவிர, வேறு பல தனிப்பண்புகளும் அதற்கு உண்டு. (3) அது ஒன்றே ஐ.நா. அமைப்பின் நிலையான தொடர்ச்சியான உறுப்பு. அது எப்போதும் செயலாற்றும் உறுப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. (4) தலைமையிடத்தில் அது குறிப்பிட்ட காலங்களில் கூடுவதன்றி, எந்தச் சமயத்திலும் உலகின் எந்தப் பகுதியிலும் சென்று கூடலாம். கூட்டமில்லாத காலம் இடைவேளைக் காலம் போன்றதாகுமே அன்றிச் செயலாட்சியற்ற காலமாகக் கணிக்கப்படாது. அதன் பணித்துறை ஓய்வொழிவின்றி விழிப்புடன் செயலாற்றுவதாகவே இருக்கும். (5) பாதுகாப்பு மன்றத்துக்கு தன்னுரிமையாகக் குழுக்களும் கிளைக்குழுக்களும் அமைக்கும் உரிமையும், தேவைப்பட்டால் கிளை உறுப்புகள் அமைக்கும் உரிமையும் உண்டு. (6) பாதுகாப்புக்குத் தேவையான செய்திகளில் பொதுச்செயலாளர் மூலமாகவோ, பேரவையின் மூலமாகவோ, நடுநிலைத்தீர்ப்பு மன்றம், சமூக பொருளியல் மன்றம், தனி உறுப்புநாடுகள், அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் பேச்சு நிகழ்த்தவும், பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய ஒப்பந்தங்கள் அமைக்கவும், மன்றத்துக்கு உரிமை உண்டு. (7) மன்றம் ஒன்றே போர் நடவடிக்கைக்கு வேண்டிய செயல்களில் இறங்கவும், உறுப்பு நாடுகள் அல்லாதவற்றின் முறையீட்டைப் பேரவை மூலமோ, நேரிலோ கேட்கவும், உறுப்பு நாடுகளின் போர் நடவடிக்கை உதவி, படைப்போக்குரிமை உதவி கோரவும் அதிகாரம் உடையது. (8) பாதுகாப்பு நடவடிக்கைகளில் பேரவையின் உரிமை முழுவதும் பாதுகாப்பு மன்றத்திற்கு ஒப்படைக்கப்படுவதால், அது பேரவையின் சார்பில் முழு அமைப்பின் உரிமையையும் பெற்றுச் செயலாற்றுகிறது. பாதுகாப்பு மன்ற உறுப்புகளாகிய நாடுகள் நடவடிக்கை கோரி, அது நடைமுறைக்கு வருமளவும், பாதுகாப்புமன்றத்தின் நிலையுறுப்புகளான ஆதரவு வல்லரசுகள் தாமே கூட்டாகச் செயலில் இறங்கும் பொறுப்புடையவை. இதுவும் நடைமுறைக்கு வரும் வரையில், தாக்கப்பட்ட உறுப்பு நாட்டுக்குத் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. பாதுகாப்பு மன்றத்தின் செயல் முறையில் மூன்று பகுதிகள் உண்டு: (1) சமரசமுயற்சிகள், (2) தடை முறைகள், (3) நடவடிக்கைகள். முதற்பகுதியாகிய சமரசமுயற்சிக் கட்டத்தில் அது உறுப்புநாடுகள் பகுதியிலும் பிறநாடுகளிலும் நேரில் அவ்வந்நாட்டு அரசாங்க இணக்கம்பெற்று நிலைமைகளைச் சென்றாராயவும், பேச்சுகள் நடத்தவும், நடுநிலைத் தீர்ப்புக்குப் பரிந்துரை தரவும், நடுவர் அமர்த்தவும், நடுநிலைத் தீர்ப்பு மன்றத்துக்குக் கட்சியினர் சார்பில் முறையிடவும் உரிமை யுடையது. இதேகட்டத்தில் அவரவர் நாட்டுக்குரிய திணை நிலத்தில் திணைநில அமைப்புகளிருந்தால் திணைநிலச் சமரச ஏற்பாடுகளுக்கு (சுபiடியேட ஹசசயபேநஅநவேள) ஊக்கமளிக்கலாம். ஐரோப்பியத் திணைநில உறவமைப்பு (நுரசடியீநயn சுநபiடியேட சுநடயவiடிளே டீசபயnளையவiடிn), ஆகிய உறவு மாநாடு (ஹளயைn சுநடயவiடிளே ஊடிகேநசநnஉந) ஆகியவை இத்தகைய திணைநிலை அமைப்புகளே. ஆனால், இவை பாதுகாப்பு மன்றத்துக்குத் தகவல் அறிவித்தே சமரச முயற்சி செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போர்க்கால எதிரிகள் சார்ந்த ஏற்பாடானால் மட்டும், தகவலறிவிப்பின்றிப் பேச்சு நடத்தலாம். பேச்சுகள் முறிவுற்ற இடத்தில் தடைமுறைகள் தொடங்குகின்றன. இதற்கு மன்றம், உறுப்பு நாடுகள் உதவியைக் கோரலாம். அதற்காக அது, தனி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும். பொருளியல் நடவடிக்கைகளில் அது பொருளியல் மன்றத்தின் ஒத்துழைப்பையும் நாடலாம். பொறுப்பாட்சிப் பகுதிகளில் போர்த்துறை சார்ந்த முக்கியத்துவமுடையவை பாதுகாப்பு மன்றத்தின் பொறுப்பிலேயே உள்ளன. பாதுகாப்பு மன்றம் பேரவையுடன் ஒத்துழைத்துத் தனித்தனியாகக் கூடியே நடுநிலைத்தீர்ப்பு மன்ற நடுவரைத் தேர்ந்தெடுக்கின்றது. சட்டத்துறையில் பாதுகாப்பு மன்றம் நடுநிலைத்தீர்ப்பு மன்றத்தின் அறிவுரையை நாடும். பாதுகாப்பு மன்றத்தின் துணையுறுப்புக்களான குழுக்களுள் முக்கியமானவை: (1) படைத்துறையாளர் குழு, (2)அணுச்சத்திக்குழாம், (3) படைக்குறைப்புக் கட்டுப்பாட்டுக் குழாம், (4) நிலைக்குழுக்கள், (5) தற்காலிகச் சிறப்புக்குழுக்களும் குழாங்களும். இவற்றுள் படைத்துறையாளர் குழுவில் ஆதரவு வல்லரசுகளின் படைத்துறைப்பணி முதல்வர்கள் அல்லது அவர்கள் பேராட்கள் உறுப்பினர்களாவார்கள். படைத்துறைச் செய்திகளில் அவர்கள் அறிவுரை கூறுவதுடன் படை நட வடிக்கைகளில் மன்றத்தின் சார்பில் செயலாற்றுவார்கள். வேண்டும்போது படைத்துறைக் குழுவில் உறுப்பனிரல்லாதவரும் அதில் வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கப்படலாம். அவ்வவ்விடத்துத் திணைநிலத் துணைக்குழுக்களைக் கலந்து படைத்துறைக்குழு, படைத்துறைத் துணைநிலைத் திணைக்குழு அமைக்கலாம். அணுச்சத்திக் குழாம் பேரவையாலேயே அமர்வு பெறுவது. 1946இல் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவில் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் அனைவரும் உறுப்பினராயில்லாத போது கானடாவும் உறுப்பாயிற்று. இதற்குப் பல குழுக்களும் துணைக்குழுக்களும் உண்டு. 5. ஆக்கமும் செயல் முறைகளும் - ஐஐ நடுநிலைத்தீர்ப்பு மன்றம் நடுநிலைத்தீர்ப்பு மன்றம் பேரவையைப் போன்ற தற்சார்புடையதோ, பாதுகாப்பு மன்றம்போலத் தற்சார்புச் செயலுரிமை உடையதோ அன்றாயினும், அமர்வு பெற்றபின் முழுதும் தற்சார்புடையதும், தன்னாண்மையுடையதும் ஆகும். ஐ.நா. இயக்கம் தோன்றுமுன்னரே ஹேகு நடுநிலைத் தீர்ப்பு மன்றம் செயலாற்றி வந்திருந்ததாயினும், ஐ.நா. இயக்கம் தோன்றிய பின் அதனையே வைத்துக்கொள்வதா, புதிதாக வேறோர் அமைப்பு அமைப்பதா என்ற வினா எழுந்தது. பழைய மன்றத்தில் ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததனால், அப் பொறுப்பைக் கழிக்கப் பலர் விரும்பவில்லை. ஆகவே, பழைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு, அதனை முன்மாதிரியாகக் கொண்ட புதிய அமைப்பு வகுத்து, அதில் பழைய அமைப்பைச் சேர்த்து அதற்குப் புத்துருத் தரப்பட்டது. நடுநிலைத்தீர்ப்பு மன்றத்தில் நடுவராக (துரனபநள)ப் பதினைந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் ஐ.நா. உறுப்பு நாட்டினராகவும் இருக்கலாம்; பாதுகாப்பு மன்றமும் பேரவையும் வகுக்கும் சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மற்ற நாட்டவரும் தேர்ந்தெடுக்கப்படலாம். நடுவருள் இருவர் ஒரே நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கக்கூடாது. அவர்கள் தத்தம் நாட்டு முறைமன்றங்களில் உயர்தகுதியும் அனுபவமும் உயர் பண்புத்திறங்களும் உடையவராயிருத்தல் வேண்டும். நடுவர் தேர்ந்தெடுப்பு மிகவும் சிக்கலான நடைமுறைகளை உடையது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் முந்திய ஹேகு நடுநிலைத் தீர்ப்பு மன்றத்திற்குக் கட்டுப்பட்ட பிறநாடுகளும் அனுப்பும் பிரதிநிதிகளடங்கிய நிலையான நடுவர் மன்றம் ஒன்று, முதலில் நடுவர் பதவிக்குரிய தகுதியுடைய பல நாடுகளின் ஆட்களைத் தேர்ந்து ஒரு பட்டி வகுக் கின்றது. பின்னர் பாதுகாப்புமன்றமும் பேரவையும் தனித்தனிகூடி, தனித்தனி மொழிகளால் அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இந்நடுவர்கள் 9 ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் மீட்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உரியவர். ஆயினும், முதலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவருள் ஐவர் பணித்துறைக் காலம் மூன்றாண்டிலும், அடுத்த ஐவர் பணித்துறைக்காலம் ஆறாண்டிலும் முடிவடையும். ஆகவே, மூன்றாண்டுக்கு ஒருமுறை ஐந்தைந்து பேர் புதியவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இம்முறையில் 1946 பிப்பிரவரி 6ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்கள் வருமாறு: ஒன்பதாண்டுக் காலத்துக்கு: 1. அலக்ஜாண்ட்ரோ அலவாரிஃஜ் (சிலி) 2. ஜோஸி ஃபிலாடெல்ஃபோ டி பரோஸ் அஃஜிவெடோ (பிரேஸில்) 3. ஃழூலிஸ் பாஸ்டிவன்ட் (ஃபிரான்ஸ்) 4. ஜோஸி கஸ்டவோ குவெரெரோ (எல் ஸால்வடார்) 5. ஸர் ஆர்னால்டு டங்கன் மக்நேர் (பிரிட்டன்) ஆறாண்டுக் காலத்துக்கு: 1. இஸிட்ரோ ஃபபீலா அலஃபாரோ (மெக்ஸிக்கோ) 2. கிரீன் எச். ஹாக்வொர்த்து (அமெரிக்கா) 3. ஹெல்கெ கிளேஸ்டட் (நார்வே) 4. ஸெர்கி பாரிஸோவிக் கிரைலாவ் (ரஷ்யா) 5. சார்லஸ் டிவிஷெர் (பெல்ஜியம்) மூன்றாண்டுக் காலத்துக்கு: 1. அப்துல் ஹமீத் படால் பாஷா (எகிப்து) 2. ஃஸுமோ (சீனா) 3. ஜான் ஈரீட் (கானடா) 4. பாக்டன் வினியார்ஸ்கி (போலந்து) 5. மிலோவன் ஃஜோரிகிக் (யுகோஸ்லாவியா) முறைமன்ற விடுமுறை நாட்கள் தவிர மற்றெல்லாக் காலங்களிலும் இம்மன்றம் ஹேகு நகரில் நிலையாயிருக்கும். ஆனால், இது விரும்பினால் வேறு இடத்தில் சென்று மன்றமாகக்கூடிச் செயலாற்றவும் செய்யலாம். மன்றம் செயலாற்றுவதற்கான குறைந்த அளவு உறுப்பினர் நடுவருள் 9 பேர் ஆவர். ஐக்கிய நாட்டு உறுப்பினருள் தொடக்க உறுப்பினர்களே நடுநிலைத் தீர்ப்புமன்ற விதித்தொகுதி வகுப்பதில் பங்கு கொண்டவர்கள். மன்றத்தின் தீர்ப்புக்கு இந்நாட்டினரேயன்றி உரிமை விளம்பரத்தின் வாசகங்களின்படி உலகநாட்டுறுப்பினர் அனைவரும் கட்டுப்பட்டவர். உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளும் பாதுகாப்பு மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அதற்கு உரியனவாகலாம். ஆயினும், எந்த நாடும் மன்றத்தின் தீர்ப்புக்கு முறையிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. விவாதக் கட்சியினருள் ஒரு நாட்டவர் முறையிட்ட பின்புதான், இரு நாட்டினரும் அதற்குக் கட்டுப்பட வேண்டிய வராவர். ஐக்கிய நாட்டு உரிமை விளம்பரத்திலேயே நடுநிலைத் தீர்ப்பு மன்றமல்லாத பிறதீர்ப்பு மன்றங்களிலும் நாடுகள் தம் வழக்கைத் தீர்ப்புக்குக் கொண்டு செல்லலாம் என்னும் விதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், சட்டத் தொகுதிக்குரிய நாடுகளுள் எதுவும் அதேபோலச் சட்டத் தொகுதிக்குரிய நாடுகளுடன் கூடிய தொடர்பில், தனிப்பட்ட கட்டுப்பாடு களில்லாமலே, பொதுவாகக் குறிப்பிட்ட சில கூறுகளில் நடுநிலைமன்றத் தீர்ப்பைக் கட்டாயமாக ஏற்பதாகக் கூறலாம். சட்டத் தொகுதியிலும் பழைய நடுநிலைத் தீர்ப்புச் சட்டத்தைப் போன்ற கட்டுப்பாடுகள் அதில் குறிப்பிட்டுள்ள காலவரையறைக்குள் புதிய நடுநிலைமன்றம் வரையிலும் செல்லுபடியுடையவாகும் என்பது வகுக்கப்பட்டுள்ளது. இம்மன்றம் சர்வதேசச் சட்டங்களை வகுத்துத் தொகுத்து, அவற்றை நடைமுறையில் வலியுறுத்தும். சர்வதேச ஒப்பந்தங்கள், தனிநாடுகள் ஏற்றுக்கொண்டவை, சர்வதேச வழக்கங்கள், நாகரிக நாட்டின் சட்ட மரபுகள், பல நாட்டுப் புகழ் வாய்ந்த சட்ட நிபுணரின் முடிவுகள் ஆகியவை இவ்வகையில் ஆராயப் படுகின்றன. மன்றத்தின் தீர்ப்புக்குச் செல்லும் நாடுகளும் அதன் எதிர்க்கட்சிகளும் ஆகிய இரண்டும் ஐக்கியநாட்டு உறுப்பாயிருந்தால், அதன் தீர்ப்பைக் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று உரிமை விளம்பரம் கட்டுப்படுத்துகிறது. எந்தக் கட்சியாவது அதனை ஏற்கவோ அதன்படி நடக்கவோ தவறினால், மற்றநாடு அதனைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலுக்குக் கொண்டு செல்லலாம். உரிமை விளம்பரத்தின் கட்டுப்பாடுகளும் தொடர்புடைய நாடுகளின் நல்லெண்ணமும் தவிர, நடுநிலைத் தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாட்டு முறை மன்றங்களின் தீர்ப்புகளுக்குள்ள வலியுறுத்தும் ஆற்றல் பொதுவாக இல்லை. பொதுப் பேரவையோ, பாதுகாப்பு மன்றமோ, சட்ட நுணுக்கங்களிலும் உரிமை விவாதங்களிலும் மன்றத்தின் அறிவுரை கோரக்கூடும். மற்ற உறுப்புகளும் தத்தம் உரிமைகள் வகையில் பொதுப் பேரவையின் இணக்கம் பெற்று மன்றத்தின் அறிவுரை கோரலாம். மன்றத்தின் தீர்ப்பு, மன்றத்தில் வீற்றிருக்கும் நடுவர்களுட் பெரும்பான்மையினர் தீர்ப்பேயாகும். தீர்ப்பு அறிவிப்புகளில் தீர்ப்பில் கலக்கும் நடுவர்கள் பெயரும், தீர்ப்பின் முடிவுக்கான அவர்கள் காரண விளக்கங்களும் குறிக்கப்படல் வேண்டும். எந்த நடுவராவது தம் எதிர்தரப்புக் கருத்தைக் குறிக்க விரும்பினால், குறிக்கலாம். தீர்ப்பில் மன்றத்தின் தலைவரும் பதிவாளரும் கையொப்பமிட்டபின், இருகட்சியினரின் போராட்டங்களுக்கும் முன் கூட்டி அறிவிக்கப்பட்ட காலத்தில், மன்றப் பொதுவில் அது வாசிக்கப்பட வேண்டும். மன்றம் தன் தலைவரையும் துணைத் தலைவரையும் மூன்றாண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கிறது. பதிவாளரும் பிற பணியாளரும் அவ்வப்போது அமர்த்தப்பெறுவர். சில்லறை வழக்குகளைத் தீர்க்க, மன்றத்தில் முழு உரிமையும் உடைய ஐந்து நடுவர் அடங்கிய மன்றக் குழாம் அமைக்கப்பெறும். பொறுப்பாட்சி மன்றம் பொறுப்பாட்சிமன்றம் தன்னாட்சி பெறாத, அதாவது எதிரி நாடுகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுச் சர்வதேச சங்கம் மூலமோ, தனி ஒப்பந்தங்கள் மூலமோ வல்லரசுகளின் ஆட்சியிலிருக்கும் நாடுகள் சார்பில் வகுக்கப்பட்டது. பொறுப்பாட்சித் திட்டத்தில் சார்ந்த நாடுகளுக்கு மட்டுமன்றி, பிற தன்னாட்சியற்ற நாட்டு மக்களுக்கும் நல்வாழ்க்கை நலமும் படிப்படியான உரிமைகளும் வழங்குவதென்றே வாசகங்கள் உரிமை விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் ஐ.நா. அமைப்பின்வசம் பற்பல ஒப்பந்தங்கள் மூலம் ஒப்படைக்கப் பட்டுள்ள நாடுகளே பொறுப்பாண்மை முறையில் நேரடியான தொடர்புடையவையாகும். இவையே பொறுப்பாட்சி நாட்டுப் பகுதிகள் எனப்படும். இவற்றை எந்த நாடு, எவ்வாறு, எக்கட்டுப்பாடுகளுடன் ஆளுவதென்பதை அதற்குரிய தனி ஒப்பந்தமே வரையறுக்கிறது. பொறுப்பாட்சிமன்றத்திலும் பாதுகாப்பு மன்றத்தைப் போலவே நிலையான உறுப்பினரும் தற்காலிக உறுப்பினரும் உண்டு. பொறுப்பாட்சிப் பகுதிகளை ஆளும் வல்லரசுகளும், அவற்றுட்சேராத பிற ஆதரவு வல்லரசுகளும் நிலையான உறுப்பின, இவைகளில் பொறுப்பாட்சியுடைய நாடுகளின் தொகைக்கு நிகரான அளவில் பொறுப்பாட்சிச் சார்பற்ற நாடுகளின் தொகை இருக்குமாறு அதற்கேற்ற தொகையான தற்காலிக உறுப்பினரைப் பொதுப்பேரவை தேர்ந் தெடுக்கிறது.ஐ.நா. அமைப்பில் மிகவும் குறைந்த அளவு உரிமையுடைய உறுப்பு, இப்பொறுப்பாட்சி மன்றமேயாகும். உலகில் தன்னாட்சியற்ற நாட்டுப் பகுதியாக (1947இல் தன்னாட்சி பெற்ற இந்தியா நீங்கலாக) 130 லக்ஷம் சதுர மைல் பரப்பும், 27 கோடி மக்கள் தொகையும் உள்ள பகுதி இருந்து வருகிறது. இதில் பொறுப்பாட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொறுப்பாட்சி வல்லரசுகளின் நல்லெண்ணத்தைத் தூண்டுவதும், அந்நாடுகளின் மக்கள் நிலைபற்றி ஆட்சியினர் ஒத்துழைப்புடன் சென்று ஆராய்ச்சி நடத்துவதும், அவை பற்றிய அறிக்கைகள் வாசிப்பதும் மட்டுமே இம்மன்றத்தின் செயலுரிமைகள். இவை பற்றி விவாதிக்கும் உரிமைகூட இதற்கு இல்லை. நாட்டு மக்களின் மனுக்களை நாட்டாட்சியாளர் கூட்டுறவுடன் இருந்து கேட்கலாம். முந்திய சர்வதேச சங்கத்தின் செயலைவிட ஐ.நா. அமைப்பில் மிகுதியாயுள்ள உரிமை யாதெனில், குறிப்பிட்ட காலங்களில் அமைப்பின் இவ்வுறுப்பினர் பேராட்கள் அப்பகுதிகளை அவற்றின் ஆட்சியாளர் ஒத்துழைப்புடன் பார்வையிடலாம் என்ற உரிமை மட்டுமேயாகும். பொறுப்பாட்சித் திட்டம் புதிது; பல பகுதிகளுக்கு அது இன்னும் பரவவில்லை. பல இடங்களில் திட்டம் வகுக்கப்படவில்லை. ஆயினும், திட்டமில்லாத இடத்தும் ஆட்சி நாடு உரிமை விளம்பரத்தின் குறிக்கோளைச் செயற்படுத்தும் பொறுப்புடையது என்று ஐ.நா. பேரவை தீர்மானித்துள்ளது. பொறுப்பாட்சித் திட்டம் ஐ.நா. அமைப்பின் வருங்காலத்தில் பிற உறுப்புக்கள்போல வளர்ச்சியடையத் தக்க ஒன்றே. அதன் முக்கியத்துவம் அதன் தற்கால நிலையைச் சார்ந்ததன்று; எதிர்காலப் பணிக்கு அது ஒரு நல்ல தொடக்கம் என்பதைச் சார்ந்ததேயாகும். சமூக பொருளியல் மன்றம் பொறுப்பாட்சி மன்றத்தைவிடப் புதிதான ஒரு கருத்தாய் தோன்றிய சமூக பொருளியல் மன்றம், விரைந்து ஐ.நா. அமைப்பின் தலைமையான உறுப்பாய் விடும் நிலையில் பெருக்கமுற்று வருகிறது. அது அரசியல் சாராத மன்றமாதலால், அதன் ஆற்றல் குறைவு; ஆனால், இதே காரணத்தினால் அதன் உரிமையெல்லையும், செல்வாக்கெல்லையும், அமைப் பெல்லையும் மிகவும் விரிந்துகொண்டே செல்கின்றன. அதன் குழுக்களும் கிளைக் குழுக்களும் ஒரு புறம்; அதனுடன் இணைக்கப்பெற்ற, இணைக்கப் பெற்றுவரும் உலக அமைப்புகள் மற்றொருபுறம்; இன்னும் புதியனவாக ஏற்பாடாகிவரும் குழுக்கள், அவற்றின் பரந்துசெல்லும் செயல் முறைகள் ஆகியவற்றை நோக்க, அதுவே ஒரு தனி அமைப்பாய் வளர்ந்துவிட்டது என்று கூறலாம். சமூக பொருளியல் மன்றத்தின் உறுப்பினர் 18 பேர். இவர்கள் மூன்றாண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஆனால், முதலாண்டில் ஆறுபேர் மூன்றாண்டுக் காலத்துக்கும், ஆறுபேர் இரண்டாண்டுக் காலத்துக்கும், ஆறுபேர் ஓராண்டுக் காலத்துக்குமாகத் தேர்ந்தெடுக்கப் படுவதால், ஆண்டுதோறும் ஆறு பேர் மாறிக்கொண்டே யிருப்பர். ஒரே உறுப்பினர் உடனடியாக மீட்டும் தேர்ந்தெடுக்கப்படலாகும். 1947-ஆம் ஆண்டில் இம்மன்றத்தில் இருந்த உறுப்புகள் வருமாறு: சிலி, சீனா, நார்வே, பிரிட்டன், பெரு, ரஷ்யா, அமெரிக்கா, கானடா, லெபனான், கொலம்பியா, ஃபிரான்ஸ், இந்தியா, பெல்ஜியம், செக்கோஸ்லவேகியா, உக்ரேன், கியூபா, கிரீஸ், யூகோஸ்லேவியா. சமூக பொருளியல் மன்றத்துக்குரிய சில சிறப்புப் பண்புகளாவன: 1. நிலையான உறுப்புகளான முதல் மூன்று உறுப்புகளுக்குப் புறம்பே மிகவும் அடிக்கடி கூடும் உறுப்பு இதுவே. இது ஒழுங்காக ஆண்டில் மூன்று தடவை கூடுகிறது. இது தவிர, இம்மன்றக் கூட்டத்திலேயே பெரும்பான்மை உறுப்பினர் விரும்பினாலும், பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர் விரும்பினாலும், பாதுகாப்பு மன்றம் விரும்பினாலும், சிறப்புக் கூட்டங்கள் கூட்ட வேண்டும். முறைப்படி எந்த உறுப்பு நாடோ, இணையுறுப்போ, பொறுப்பாட்சி மன்றமோ விரும்பினாலும், இம்மன்றத்தின் தலைவர் விருப்பத்துக்கு உட்பட்டுச் சிறப்புக்கூட்டம் கூட்டலாம். 2. இம்மன்றம் நாட்டரசாங்க அமைப்புகளுடனும் நாட்டரசாங்கக் கூட்டமைப்புக்களுடனும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இது தவிர, வேறு எந்த அமைப்பிற்குமில்லாத ஓர் உரிமையும் இதற்கு இருக்கிறது. இது ஒன்றே அரசாங்கச் சார்பற்ற நாட்டமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் நெருங்கி ஒத்துழைக்கிறது. 3. இம்மன்றம் உறுப்பு நாடல்லாத நாட்டரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் இணைப்பமைப்பின் ஒத்துழைப்பையும் கோரி அவர்கள் பிரதிநிதிகளைத் தன்விவாதக் கூட்டத்தில் வரவழைக் கலாம். ஆனால், இத்தகையோர் மொழியுரிமையில் கலந்துகொள்ளமாட்டார்கள். 4. இம்மன்றம் தன் கருத்துரைகளையும் ஆதரவுரை களையும் நேரிடையாகப் பேரவைக்கு மட்டுமன்றி உறுப்பு நாடுகளுக்கோ, அரசாங்க அமைப்புகளுக்கோ, அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளுக்கோ அறிவிக்கலாம். பாதுகாப்பு மன்றத்தால் சிறப்புக்கூட்டம் கோரப்படுவது பொருளியல் நடவடிக்கைகளுக்காகவேயாதலால், அத் தறுவாயில் சமூக பொருளியல் மன்றம் பாதுகாப்பு மன்றத்தின் ஓர் உறுப்பாகவே செயலாற்றுகிறது. மொத்தத்தில் சமூக பொருளியல் மன்றமே, அமைப்பில் மிகவும் தொய்வு நெகிழ்ச்சியும், எளிதில் வளரும் தன்மையும், வருங்காலத்தின் அமைப்புக்கு மிக விரிந்த செல்வாக்குத்தரும் தகுதியும் உடைய உறுப்பு ஆகும். உரிமை விளம்பரத்தின்படி சமூக பொருளியல் மன்றமூலம் ஐ.நா. அமைப்பு நிறைவேற்ற விரும்பும் உயர்குறிக்கோள் வருமாறு: 1. உயர்ந்த வாழ்க்கைத் தரம், யாவருக்கும் முழுத் தொழிலுரிமை, சமூக முன்னேற்றம், சமூக வளர்ச்சி 2. பொருளியல், சமூகவியல், உடல் நலம் முதலிய துறைகளில் சர்வதேச முறையில் ஒரு நன்முடிவு காண்டல்: கல்வி, பண்பாட்டுத் துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு. 3. மனிதவுரிமைகளையும், அடிப்படைச் சுதந்தரங்களையும், இனவேறுபாடு, ஆண்பெண்பால் வேறுபாடு, மொழி மதவேறுபாடுகள் இன்றி யாவர் வகையிலும் சரிசமமுறையில் பின்பற்றுதல். மேற்குறிப்பிட்ட பரந்தகன்ற உயர்குறிக்கோள்களைப் பொறுப்புடன் ஏற்றுநடத்த முன் வந்துள்ளது சமூக பொருளியல் மன்றம். இதில் அதனுடன் ஒத்துழைக்கும்படி அதனால் அமர்த்தப் பெற்றுள்ள குழுக்களும், அக்குழுவின் கீழ் அமைந்துள்ள துணைக்குழுக்களும் வருமாறு: (1) பொருளியல் பணியுதவிக் குழாம், தற்காலிகப் பொருளியல் குழு, பாழ்பட்ட பகுதிச் சீர்திருத்தத் துணைக்குழு. (2) புள்ளி விவரக்குழாம் (3) போக்கு வரவு செய்தியிணைப்புக் குழாம் (4) சமூகத் துறைக் குழாம் (5) மயக்கமருந்துச் சரக்குக் குழாம் (6) பெண்ணுரிமைக் குழாம் (7) மனிதவுரிமைக் குழாம் - சிறுபான்மைப் பாதுகாப்புத் துணைக்குழாம் - ஒரு சார்பு வேறுபாட்டுத் தடுப்புத் துணைக் குழாம் - தகவல், பத்திரிகைச் சுதந்தரத் துணைக் குழாம். இவை தவிர வேறு பல குழாங்கள், துணைக்குழுக்கள் பற்றியும் ஆய்வுரைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இக்குழாங்கள், துணைக்குழாங்கள் தவிர, சமூக பொருளியல் மன்ற மூலமாக ஐ.நா. அமைப்பில் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்புச் செய்து வரும் இணைப்பமைப்புகள் பல உண்டு. இவையும் பெருக்கமுற்று வருகின்றன. இணைப்புறவு ஏற்றுக்கொள்ளப் பெற்று ஒத்துழைக்கும் அமைப்புகள் வருமாறு: 1. உணவு வேளாண்மைக் கழகம் 2. ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக் கழகம் 3. சர்வதேசத் தொழிலாளர் பணி நிலையம் 4. சர்வதேசச் செல்வ நிதி நிலையம் 5. சர்வதேசச் சீரமைப்புப் பொருளகம் அறிவுரையளவில் இணைந்துள்ள இணைப்புகளாவன: 1. தொழிற்சங்க உலகக் கூட்டுறவு 2. சர்வதேசக் கூட்டுறவுக் கழக இணைப்பு 3. அமெரிக்க தொழிலாளர் கூட்டுறவு சமூக பொருளியல் மன்றத்தின் குழாங்கள், அரசியல் துறையைவிட மிகவும் சிக்கல்வாய்ந்தனவும் அரசியலாரால் தெளிவாக உருவாக்கப்படாதனவுமான பொது மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளில் மூழ்கிப் பல ஆராய்ச்சிகளையும் தேர்வுகளையும் நடத்தியுள்ளன. இவற்றின் பயனாக மக்கள் தொண்டு ஓர் உயர் அறிவுக் கலையாகியுள்ளது. எடுத்துக்காட்டாகச் சமூகத் தொண்டு என்பது, இதுகாறும் அருளாளர், மனித வுணர்ச்சியுடைய உயர்வகுப்பினரின் ஆன்மிக அறச் சிந்தனையாகவே கொள்ளப்பட்டது. அது சமூகத்திற்கு முழுவதும் உரிய கடமை என்பதையும், அரசியலாரின் பொறுப்பு என்பதையும் புள்ளி விவரங்கள், காரண காரியவாதங்களாலேயே இக்குழாங்கள் நிலை நாட்டி உள்ளன. தாழ்ந்தோரை உயர்த்துவது அத்தாழ்ந்தோர் நன்மையை முன்னிட்டு மட்டுமன்று; சமூகத்தின் முழு நன்மையையும் அரசியலின் வலிமையையும் அப்பணியிலும் சிறக்க உயர்த்துவது வேறு இல்லை என்பதை இவை எல்லாருக்கும் தெளிவாக எடுத்துக் காட்டின. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பயனாக, அதில் புதிதாகக் கருத்துரைக்கப்பட்டு வளர்ச்சியடைந்த அமைப்புகளுள் ஐ.நா. கல்வி விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் ஒன்று. கல்வி விஞ்ஞானக் கலைத்துறைகளில் அது வகுத்துள்ள சர்வதேசத் திட்டங்கள் உலகநாடுகளால் முறைப்படி ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு உண்மையிலேயே ஒரு புதிய உலகத்தைப் படைத்துக் காட்டியதாய்விடும். இந்தியருக்கும்- சிறப்பாகத் தென்னாட்டவர்க்கும் - இவ்விணைப்பமைப்பில் தனிப்பட்ட ஒரு தொடர்பு உண்டு. இதில் வெற்றிகரமான செயல்களில் தென்னிந்தியர் பலரும், சிறப்பாகத் தமிழரும், பெரும்பங்கு கொண்டுள்ளனர். இது பற்றி மற்றொரு பிரிவில் கூறுவோம். பணித்துறை நிலையம் பணித்துறை நிலையம், அமைப்பின் நிலையான பணியாளர்கள் இருந்து தொழிலாற்றும் அலுவலகம். மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் அது பற்றிய குழுவின் தலைமை நிலையமாயிருந்து செய்வதும்; மாநாடுகள், உறுப்புக்கூட்டங்கள், குழு, துணைக்குழுக் கூட்டங்கள், ஆகியவற்றுக்குத் தேவையான தகவல்களையும் புள்ளி விவரங்களையும் சேகரிப்பதும்; உறுப்புகளின் நடைமுறை களைப் பதிவு செய்வதும்; உறுப்புகளிடையே தொடர்புறவு உண்டுபண்ணுவதும் யாவும் இப்பணிமனையே. உறுப்புக் கூட்டங்கள் நடக்குமிடங்களுக்கெல்லாம் பணிமனையின் பிரதிநிதிகள் செல்லுவர். ஆனால், பணிமனையின் மூலதளம் தலைமையிடத்தில் இருந்தே நிலையான வேலைகளைச் செய்ய வேண்டும். பணித்துறை நிலையத்தின் தலைவர், பொதுச்செயலாளர். அவர் கீழுள்ள துணைச்செயலாளரும் அவர்களின் துறைகளும் பணிமனையின் உறுப்புகள். ஆயிரக்கணக்கானவர் இவற்றில் பணி செய்கின்றனர். 6. இணைப்பமைப்புகள் உலகில் தேசங்களும் தேச அரசியல்களும் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியுள்ளன. உலகப் பொது அரசு வேண்டுமென்ற எண்ணமும் உலக இயக்கமும் ஓர் அறை நூற்றாண்டுக்குள்ளாக ஏற்பட்டனவே. ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சியுடைய நாடும், நாட்டரசியலுங்கூட இன்னும் எங்கும் முழு நிறைவு பெற்றுவிட்டனவெனக் கூற முடியாது. தவிர, உலகின் பல பிற்பட்ட நாடுகளில் அவை இன்னும் நாகரிக நாடுகளின் அளவெல்லைக்கு வராமலேயுள்ளன. இந்நிலையில் புத்தம்புதிய இயக்கமாகிய உலக இயக்கத்திலும் அதன் அமைப்புகளிலும் தொடக்கத்திலேயே முழு நிறைவை எதிர்பார்ப்பது இயல்பாகாது. இதுவரை ஏற்பட்டுள்ள மூன்று உலக அரசு அமைப்புகளுள்ளும் ஒவ்வொன்றின் நடைமுறைக் குறைபாடுகள் கண்டே, அடுத்த அமைப்புச் செப்பமிக்கதாக அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அமைப்பில் முன் அனுபவங் களினால் ஏற்பட்ட திருத்தப்பாடுகளை முன்னரே குறித்துள்ளோம். ஆனால், ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஏற்படும் திருத்தங்களைவிடத் திருத்தத்துக்கும், அனுபவத்தால் பிற்காலத்தில் வேண்டப்படும் மாறுபாடுகளுக்கும் எளிதில் இடந்தரக்கூடிய வகையில் அது அமைந்திருப்பதே, அதன் வருங்காலத்திற்குரிய தனிப்பெருஞ் சிறப்பு ஆகும். உயிரின வளர்ச்சியில் பயன்படுத்தப்படாத உறுப்புகள் தேய்ந்தும் குறைந்தும் மறைவுற்றும், பயன்படுத்தப்படுபவை வளர்ச்சி பெற்றும் பயனுக்கேற்ற வகையில் மாறுபட்டும் வருவதை உயிர் நூல் ஆராய்ச்சியாளர் எடுத்துக்காட்டுகின்றனர். ஐ.நா. உறுப்புகளிலும் இது போலப் பயனோக்கி உறுப்புகள் குறைவதும், பெருகுவதும், மாறுபடுவதும் காணலாம். தேவை முற்றுப்பெற்றுவிட்டது நோக்கிக் கலைக்கப்பட்ட உறுப்புகளுக்கு ஐ.நா. துணையுதவிச் சீர்திருத்தக் கழகத்தையும், பல்கிப் பெருகி வளரும் உறுப்புகளுக்குச் சமூக பொருளியல் மன்றத்தையும் எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். சமூக பொருளியல் மன்றம் தொடக்கத்தில் ஐ.நா. அமைப்பிலுள்ள புதிய உறுப்புகளுள் ஒன்றாகவும், இரண்டாம் படியான உறுப்பாகவுமே பிறப்பிக்கப்பட்டதாயினும், அது உண்மையில் பல உறுப்பு, கிளை உறுப்புகளின் தாயமைப்பாக வளர்ந்து வருகிறது. அதனால் அமைக்கப்பட்ட குழுக்கள் கூடத் தனியமைப்புப்போல வளரத்தக்கவையாயிருக்கின்றன. அவையும் தாயுறுப்பாகிய சமூக பொருளியல் மன்றம் போலவே இயங்கித் தமக்கெனப் பணியாட்களும் பணிமனையும் துணைக்குழுவும் அமைக்கப்பெறும் உரிமையுடையவையாயிருக்கின்றன. இக்குழுக்களுள் தலை சிறந்தது, மனித உரிமைக் குழாமே. இதற்கடுத்தபடி பெண் உரிமை நிலைக் குழாம். மயக்கமருந்துச் சரக்குக் குழாம் ஆகியவை முக்கியமானவை. ஐரோப்பியப் பொருளியல் குழாம், ஆசிய தொலைகிழக்குப் பொருளியல் குழாம் என்னும் இரண்டு திணைநிலைக் குழாங்களும் உண்டு. இக்குழாங்களிலும் இவற்றின் துணைக்குழாங்களிலும் ஐ.நா. அமைப்பின் மற்ற எல்லா உறுப்புகளையும்விட மிகுதியான அளவில் இந்தியா பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழாங்கள், குழுக்கள் ஆகிய உட்கூறுகளேயன்றி, ஐ.நா. அமைப்புடன் பல அமைப்புகள் பல்வகைப்பட்ட தொடர்புறவும் உடைய இணைப்பமைப்புகளாய் இயங்குகின்றன. இவை சிறப்புச் செயலமைப்புகள் (ளுயீநஉயைடளைநன ஹபநnஉநைள) எனப்படுகின்றன. ஓர் அமைப்பு இத்தகைய உறவு நாடினால், அதற்காக அமைப்புடன் மனுச்செய்துகொள்ள வேண்டும். உரிமைநாட்டு விளம்பரத்தை ஏற்றுக்கொள்ளுதல், அமைப்புடன் மொழியுரிமையிற் கலவாத பிரதிநிதிகளைப் பார்வையாளராகப் பரிமாறிக்கொள்ளுதல் முதலிய சில விதிகளுடன் அவ்வமைப்புகள் ஐ.நா. அமைப்புடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும். அதன் பின் சமூக பொருளியல் மன்றம் இவ்வொப்பந்தத்தைப் பேரவையில் கொண்டுசென்று அதன் இணக்கம்பெற்று, இதனை இணைத்துக்கொள்ளும். ஐ.நா. அமைப்பில் அவ்வப்போது இவ்விணைப்பமைப்புகள் தம் நடைமுறைகளைப்பற்றி அறிவிக்கும். ஐ.நா. அமைப்பு அவற்றுக்குத் தம் நடவடிக்கைச் செய்திக் குறிப்புகள், வெளியீடுகள் முதலியவற்றை அனுப்பும். ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான இணைப்புகள் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டுக் கழகம், ஐ.நா. உணவு வேளாண்மை அமைப்பு, சர்வதேச அமைதித்திற (ஸிவில்) விமானப் போக்கு அமைப்பு ஆகியவை. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருப்பவை சர்வதேச நாணய நிதி, சர்வதேச மறுசீரமைப்பு மேம்பாட்டுப் பொருளகம், உலக அஞ்சல் கூட்டுறவு, சர்வதேசத் தொலைச்செய்தியிணைப்புக் கூட்டுறவு ஆகியவை; உலக உடல் நல அமைப்பு, சர்வதேச அகதிகள் அமைப்பு, சர்வதேசத் தொழிலாளி அமைப்பு ஆகியவையும் இணைப்பமைப்புகளாகச் சேர ஏற்பாடாகி வருகின்றது. உரிமை பெற்ற தனி அமைப்பாகச் சர்வதேசக் குழந்தைகள் அவசரகால நிதி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இவை தவிர அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளாக, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டுறவு, சர்வதேச வர்த்தகர் சங்கம், சர்வதேசக் கூட்டுறவு இணைப்பு, சர்வதேச வேளாண்மைத்துறை உற்பத்தியாளர் கூட்டுறவு, சர்வதேசக் கிறிஸ்தவ வர்த்தக சங்கங்கள் கூட்டுறவு, அரசியல் மன்றத் தொடர்புறவுக் கூட்டுறவு, உலகத் தொழிற்சங்கக் கூட்டுறவு ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. இவையன்றி அறிவுரைத் தொடர்பு மட்டுமுடைய பல சர்வதேச அமைப்புகளும் உலகத் தோழமை தகவல் அமைப்புகளும் உள்ளன. ஐ.நா. அமைப்புடன் தொடர்பற்ற, ஆனால் அதே போன்ற அடிப்படையுடைய திணைநில அமைப்புக்கள் சில உண்டு. அவற்றுள் ஒன்று, ஆசியாக் கண்டத்திற்குரிய ஆசிய மாநாடு; மற்றொன்று, பிரிட்டிஷ் பொதுவரசு சார்ந்த பொதுவரசு மாநாடு. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இது தொடக்கத்தில் 1919இல் நிறுவப்பட்டுச் சர்வதேச சங்கத்துடன் ஒத்துழைத்தது. 1944இல் இது ஃபிலடெல்ஃபியா அறிவிப்பு விளம்பரத்தை ஏற்று, ஐ.நா. அமைப்புடன் இணைந்தது. இதன் தலைமை நிலையம் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் கூடும் ஒரு சர்வதேசத் தொழிலாளர் மாநாடும், ஓர் ஆட்சிக்குழாமும், சர்வதேசத் தொழிலாளர் பணியகம் என்ற ஒரு பணிமனையும், ஒரு தொழில் துறைக்குழுவும் ஆக நான்கு உறுப்புகள் செயலாற்றுகின்றன. சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அரசாங்கப் பிரதிநிதிகள் இருவரும், முதலாளிகள் சார்பில் ஒருவரும், தொழிலாளர் சார்பில் ஒருவரும் ஆக நால்வர் பிரதிநிதித்துவம் வகிப்பர். இது ஒப்பந்த மூலம் ஐ.நா. அமைப்பில் 1946 டிஸம்பர் 14இல் இணைவுற்றது. இதில் உறுப்பு நாடுகள் 52. இதன் நோக்கங்களாவன: 1. வாரத்திலும் நாளிலும் வேலைநேரம் வரையறுப்பது; 2. தொழிலில்லாமையை அகற்றித் தொரிலாளர் தேவை அடைவுகளைச் சரி செய்வது; 3.தொழிலாளர் நோய் நீக்கம், உணவு உடை உறையுள் வசதி, வாழ்க்கைத்தர உயர்வு; 4. மாதர், குழந்தைகள் பாதுகாப்பு, முதுமையெய்தியவர்களைப்பேணும் பொறுப்பு, வெளிநாட்டுத் தொழிலாளர் நலன் பாதுகாப்பு, சரிசமத் தொழில் மதிப்புக்கேற்ற சரிசம ஊதியப் பாதுகாப்பு; 5. தொழிலாளர் சங்கக் கூட்டுறவு உரிமைக் காப்பு; 6. பணித்துறை, தொழில்துறைக் கல்விப் பயிற்சி. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தொடக்கத்தில் வகுக்கப்பட்ட அதன் அமைப்புத்திட்டத்துடன் கூட, 1944 மே 10இல் ஃபிலடெல்ஃபியா உரிமை அறிவிப்பு ஒன்று இணைக்கப்பட்டது. இது பொதுவாக மேற்கூறிய நோக்கங்களை மேலும் சரிசமத்துவக் கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் வலியுறுத்துகிறது. 1946க்குள் ச.தொ. அமைப்பின் பொது மாநாடு 29 கூட்டங்கள் கூட்டிற்று. ஆட்சிக்குழு, 100 தடவை கூடிற்று. ஒவ்வொரு கூட்டமும் உலகநாடுகளின் ஒவ்வொரு முக்கிய நகரத்தில் கூட்டப்பட்டது. மாநாட்டின் பொதுத்தீர்மானங்கள் சர்வதேசத் தொழிலாளர் துறை மரபொழுங்கு (ஊடிnஎநவேiடிளே)களாகவும் மாநாட்டின் பரிந்துரைகளாகவும் இடம் பெறுகின்றன. இவற்றின் தொகுதி சர்வதேசத் தொழிலாளர் துறைச் சட்டக் கோவையாக வளர்கிறது. உறுப்புநாடுகள் இதனைத் தத்தம் அரசாங்கங்களின் சட்டமன்றங்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றும் பொறுப்பு உடையன. ஐ.நா. உறுப்பினர் எவரும் விரும்பினால், இதுவரை இதன் உறுப்பினராயில்லாவிட்டாலும் உறுப்பினராகச் சேரலாம். இம்முறையில் 1945இல் இதன் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஐ. நா. க. வி. ப. கழகம் ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டுக் கழகம், ஐக்கிய நாடுகள் அமைப்புத் தோன்றுவதற்கு முன்னும், அது தோன்றிய பின்பு தொடக்க நாட்களிலும் பணி செய்து வந்த பல சமூக, பொருளியல் அமைப்புகளின் வேலையை மேற்கொண்டு நடத்தப் புதிதாய் அமைக்கப்பட்டு வளர்ந்து வரும் ஓர் அமைப்பு ஆகும். சமூக பொருளியல் மன்றத்தின் ஒத்துழைப்புடன் வளர்ந்து வரும் ஒரு தனிப்பேருலக அமைப்பாய் அது விளங்கி வருகிறது. ஐ. நா. க. வி. ப. கழகத்திற்குத் தொலை மூலவிதையாயிருந்த அமைப்பு, சர்வதேச சங்கத்தின் உறுப்பான சர்வதேச அறிவுத்துறைக் கூட்டுழைப்புக் குழுவேயாகும். இதன் நடைமுறை உட்கூறாக 1926 ஜனவரி 16இல் சர்வதேச அறிவுத்துறைக் கூட்டுழைப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் தலைமையிடம் பாரிஸ்நகரில் இருந்தது. அறிவு, கலை, பண்பாட்டுச் சார்பான பல உலக அமைப்புகளுக்கு அது கொண்டுகூட்டுப் பணிமனையாகவும் பொதுப் பணிமனை யாகவும் இயங்கி வந்தது. 1942லும், 1944லும் நடைபெற்ற நேசநாட்டுக் கல்வி அமைச்சர்கள் மாநாடுகள் இதனுடன் ஒத்துழைத்துத் தீட்டிய திட்டங்களின் விளைவாகவே ஐ.நா.க.வி.ப. கழகம் பிறந்தது. 1945 நவம்பர் முதல் நாளில் இதன் முதல் அமைப்பு மாநாட்டுக் கூட்டம் கூடிற்று. அமெரிக்க, ஃபிரெஞ்சு அரசாங்கங்கள் இதன் சார்பில் எல்லா ஐக்கிய நாடுகளுக்கும் அழைப்புகள் விடுத்தன. 44 நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு உலக அமைப்புகளின் பார்வையாளரும் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாடு ஒரு முன்னேற்பாட்டுக் குழாம் நிறுவிற்று. மாநாட்டாரால் அமர்வு பெற்ற ஐ.நா.க.வி.ப. கழகப் பொது ஆணையாளர் (னுசைநஉவடிச ழுநநேசயட) இம்முன்னேற்பாட்டுக் கழகத்தினிடமிருந்து கழகத்தின் தொடக்கப் பொறுப்பை ஏற்றார். ஐ.நா.க.வி.ப கழகத்தின் தொடக்க உறுப்பு நாடுகள் 30. கல்வி, விஞ்ஞானம், பண்பாடு ஆகிய துறைகளில் சர்வதேசக் கூட்டுறவு உண்டுபண்ணுவதன் மூலம் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உதவுவதே கழகத்தின் நோக்கம். ஐ.நா. உரிமை விளம்பரத்தில் வகுக்கப்பட்ட மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்தரங்கள் ஆகியவற்றுக்கு உலகமக்களின் ஆதரவு இதனாலேயே ஏற்பட முடியும். உலக நாகரிகம் பரவி, நாகரிக வாய்ப்புகளில் சரிசமசந்தர்ப்பம் ஏற்படாதவரை, இவ்வுயர்கருத்துகள் ஏட்டுக்கருத்தாய் இருக்குமேயன்றி, நடைமுறை வலுப்பெறமாட்டா. கல்வி மூலம் அறிவும், விஞ்ஞான மூலம் அறிவாற்றலும், பண்பாட்டுப் பாதுகாப்பு மூலம் சரிசம சந்தர்ப்பமும் ஏற்பட்டாலன்றி, நாகரிகத்தின் நற்பயன்களில் உலக முழுவதும் ஒருங்கே பங்குகொள்ள முடியாது. உயர்வு தாழ்வு நிலைகள் இருப்பது காரணமாக எழும் மனக்கசப்பு, பேரவா ஆகிய போருக்குக் காரணமான பண்பலைகள் செயலற்று ஒழியும். இந்நோக்கங்களை நிறைவேற்றக் கழகம் மேற்கொள்ளும் செயல் கோட்பாடுகளாவன: (1) பெருவாரியான மக்கட்பிரசார முறைகளால் ஒவ்வொரு நாட்டுமக்களும் பிறநாட்டு மக்களை அறிந்துகொள்ளும் வகை செய்தல் வேண்டும். ஒருவரை ஒருவர் ஒத்தறிவதன் மூலமே அவர்களிடையே ஒத்துணர்வு ஏற்படும். (2)மக்களிடையே கல்வியும் பண்பாடும் பரப்பப்படல் வேண்டும். (3) அறிவுத் தொகுதியைப் பேணி வளர்த்துப் பரப்ப வேண்டும். கழகத்திற்குப் பொது மாநாடு, நடைமுறைக் குழு (நுஒநஉரவiஎந க்ஷடியசன), பணித்துறை நிலையம் ஆகிய மூன்று உறுப்புகள் உண்டு. பொது மாநாடு எல்லா உறுப்பினரின் பிரதிநிதிகளும் அடங்கியது. இது ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கிறது. நடைமுறைக் குழுவில் இதனால் மூன்று ஆண்டுக் காலங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது குறைந்தது ஆண்டுக்கு இரு முறை கூடி மாநாட்டின் திட்டங்களைச் செயற்படுத்தும். ஐ.நா.க.வி.ப. கழகத்தின் முதல் பொது ஆணையாளர் அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர். 1946 டிஸம்பரில் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையிலேயே இக்கழகம் ஐ.நா. அமைப்பின் ஓர் இணையுறுப்பாக ஏற்கப்பட்டது. ஐ.நா.க.வி.ப. கழகத்தில் இந்தியா ஒரு முக்கிய உறுப்பு. இந்தியாவின் பிரதிநிதிகளிடையே ஸர்.எஸ். ராதாகிருஷ்ணன், ஸர்.ஏ. இராமசாமி முதலியார், இராஜகுமாரஅமிர்தகௌரி முதலிய பலர் கழகத்தின் பல உறுப்புகளின் சார்பில் தலைமைவகித்தும் பங்கு கொண்டும் இந்தியாவுக்குப் பேரும் புகழும் தந்துள்ளனர். பல இனங்கள், பல மொழிகள், உலகின் பழம் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைத் தாங்கி உலகின் ஒரு சிறு பதிப்பாய் இயங்கும் இந்தியா, பேருலகின் அமைப்பில் அறிவு, கலை, பண்பாட்டுத் துறைகளில் பெரும்பங்கு கொள்வதும் வழிகாட்டுவதும் இயல்பே என்னலாம். உலக அமைதியையும் ஒற்றுமையையும் கூட்டுழைப்பையும் வளர்க்க ஐ.நா.க.வி.ப. கழகம் வகுத்துள்ள திட்டங்கள் மிக விரிவானவையும் தொலைநோக்குடையவையும் ஆகும். அவை நடைமுறைக்கு வருங்கால், இக்கழகம் ஐ.நா. அமைப்பின் தன்மையிலேயே பெரும்புரட்சி கொண்டு வருதல் உறுதி. போரைப் பெரும்பாலும் போர்த்துறைக் கூட்டுறவாலும் அரசியல் சமரசங்களாலும் ஒழிக்கும்படி ஏற்பட்ட அமைப்பில், இக்கழகம் அமைதிக்கான வாழ்வின் உயர்குறிக்கோள்களான கல்வி, விஞ்ஞான ஆராய்ச்சி, பண்பாட்டின் மூலமாக ஏற்படும் சமத்துவம், சரிசம இன்பம் ஆகியவற்றின் மூலமே போரை ஒழித்துவிடலாகும் என்ற நம்பிக்கையை வளர்ப்பதாயுள்ளது. ‘போரைப் போரால், போர்ப்படைப் பெருக்கத்தால் ஒழிக்கலாம்’ என்பதைவிட, அமைதிக்கால வாழ்வுக்குரிய இன்பத்தின் மதிப்பை மக்களிடையே உயர்த்துவதால் அதனை ஒழிப்பது என்பது நேர்மை மிக்க, தவறாத நிறை பயனுடைய செயலேயாகும். இது முடியாததுமன்று. மேலும், இதுகாறும் விஞ்ஞானம் பல அரும்பெருஞ்செயல்களை உலகுக்குச் செய்துள்ளதாயினும், உலக நாடுகளின் அரசியல் வாழ்வு போரின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாலும், நாடு கடந்த நிலையில் உலகமக்கள் வாழ்வு அறியாமை காரணமாகப் போதிய அளவு பெருக்க மடையாதிருப்பதனாலும், விஞ்ஞானம் இன்று போருக்காகவும் ஆதாயநோக்கத்துக்காகவுமே பெரிதும் பயன்பட்டு வருகிறது. அமைதி, உலகமக்கள் நல்வாழ்வு, ஆக்கத்துறை முதலிய செய்திகளில் அதனை ஈடுபடுத்திப் பெருக்குவதே அதன் தன்மையை மாற்றுவதாகும். வருங்கால உலகில் விஞ்ஞானம் போர் வெற்றி நாடும் வல்லரசுகளின் கைப்பிள்ளையாகவோ, பணம் தேடிக்குவித்து உலக நலன்களிலிருந்து ஒதுங்கித் தன்னலம்பேணும் இயந்திர முதலாளிச் செல்வர்களின் பொம்மையாகவோ இராமல், உலக மக்களின் வாழ்க்கை வளத்துக்கான ஓர் ஒப்பற்ற கருவியாக அமைய வேண்டும். ஐ.நா.க.வி.ப. கழகம் இதனைச் செய்யப் பெரிதும் உதவும் என்பதை நாம் நம்பலாம். கழகத்தின் திட்டங்களை (1) முழுநிறை அடிப்படைத் திட்டங்கள், (2) தனித்துறைத் திட்டங்கள், (3) தொடர்ச்சியான திட்டங்கள் என மூவகைப்படுத்தலாம். இவையும் கல்வித்துறைச் சீரமைப்பு, சர்வதேச ஒத்துணர்வு, அடிப்படைக் கல்வி ஆகிய முத்திற நோக்கம் உடையன. போரழிவால் ஏற்பட்டுள்ள கல்விச்சீரழிவைச் செப்பம் செய்வது; கல்விக்குரிய பாடபுத்தகங்களை உலக அடிப்படையில் சீர்திருத்தி அமைப்பது; சர்வ தேச அறிவாராய்ச்சிக் குழுக்கள் அமைப்பது; சர்வதேச மக்கள் ஒத்துணர்வறிவுக்கான தகவல்கள், அறிவுத்துறைகள் வகுப்பது; சர்வதேச உறவு உண்டுபண்ணும் கூட்டுறவுக் குழுக்கள், ஆசிரியர் குழுக்கள் அமைப்பது; முதியோர் கல்வித் திட்டம், உடல் நலக்கல்வி, பொருளியல், தொழில், பண்பாட்டுக்கல்வி ஆகியவை அடிப்படைத் திட்டங்கள் ஆகும். நூல்நிலையத் தகவல் தொகுத்தல், நூல் நிலையங்கள் அமைத்தல், தேசீய விஞ்ஞானக் கழகங்கள் நிறுவல்; தொழில் துறையிற் பிற்பட்ட நாட்டுமக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்; இனம், சமூகம், குடும்பம் ஆகியவை சார்ந்த வாழ்க்கைச் சிக்கல்கள், பொறுப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிந்து சரி செய்யும் முறையிலுள்ள ஆராய்ச்சிகளும் நடை முறைகளும் ஏற்படுத்துதல்; வானொலி, நாடகம், படக்காட்சி முதலிய மக்கள் விளம்பர முறைகளால் உலக அறிவுபரப்புதலும், வளர்த்தலும் ஆகியவை தனித்துறைத் திட்டங்கள். தொடர்புத் திட்டங்கள் இவற்றின் இணைப்புக்கான நடைமுறைகளும், அவற்றின் மூலசாதனங்கள் சேகரித்தலும், செயல் விளைவுகளைத் தொகுத்து வகுத்தலும் ஆகும். உலகின் உயர்தனி இலக்கியச் செல்வங்களாகிய முதல்தர நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று 1946 டிசம்பர் 14இல் கழகப் பொதுப் பேரவை தீர்மானித்தது. ஐ.நா. உணவு வேளாண்மை அமைப்பு (குடிடின & ஹபசiஉரடவரசந டீசபயnளையவiடிn டிக வாந ருnவைநன சூயவiடிளே) போருக்குப்பின் அமைக்கப்பட்ட முதல் ஐ.நா. அமைப்புக்குழு இதுவே. 1943இல் கூட்டப்பட்ட ஹாட் ஸ்ப்ரிங்ஸ் உணவு மாநாட்டில் பசியொழிப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இத்தகைய ஓரமைப்பு நிறுவுவததென்று தீர்மானிக்கப்பட்டது. இதே ஆண்டு ஜூலையில் அமைப்புக் கான இடைக்காலக் குழு அமைக்கப்பட்டது. 1945 அக்டோபர் 16இல் ஐ.நா. உ.வே. கழகம் செயல் தொடங்கிற்று. இதில் 57 உறுப்பு நாடுகள் உள்ளன. இது உணவூட்டம், உணவு, உழவு ஆகிய மூன்று துறைகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தித் தேசீய அடிப்படையிலோ, சர்வதேசீய அடிப்படையிலோ சமயத்துக் கேற்ற குறுகிய காலத்திட்டங்களும், நீண்டகாலத்திட்டங்களும் வகுக்க வேண்டும். ஐ.நா. துணையுதவி மறுசீரமைப்புக் கழகம் நடத்திக்கொண்டு வந்த பல செயல்களை இவ்வமைப்பு அதன் கலைப்பின் பின்னர் மேற்கொண்டது. கிரேக்கநாட்டில் போர்க்கால அழிவைச் சரிசெய்தல், வேளாண்மை, வெட்டுமரம், உணவு ஆகிய துறைகளில் மாநாடுகளையும் ஆராய்ச்சித் துறைகளையும் திட்டம் செய்தல் இக்கழக வேலை முறைகளின் வெற்றி ஆகும். சர்வதேச அமைதிக்கால விமானத்துறை அமைப்பு (ஐவேநசயேவiடியேட ஊiஎடை ஹஎயைவiடிn டீசபயnளையவiடிn) இது முழு அளவில் நடைமுறையில் தொடக்கமுற்றது 1947 ஏப்பிரல் 4-ஆம் நாளிலேயே. உலகில் மிக விரைந்து வளர்ந்து பெருகிவரும் வானப்போக்குவரவுத்துறையில் ஒழுங்கமைப்புக் கூட்டு வளர்ச்சியும் பாதுகாப்பும் அமைப்பதே இதன் நோக்கம். போட்டியின் அழிவைத் தடுத்தல், இடையூறுகளைக் குறைத்துப் பிரயாணிகளுக்குப் பாதுகாப்பளித்தல், விமானத்துறைக் கலையை அமைதிக்கால வாழ்வுக்கான நிலை ஆக்கல், உறுப்பு நாடுகளின் சரிசமவுரிமைநிலை காத்தல் ஆகியவை இதன் செயல் திட்டங்கள். ஒரு பொதுப்பேரவையும் அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 உறுப்பினர் அடங்கிய மன்றமும் இதன் உறுப்புகள். பேரவையின் திட்டங்களை மன்றம் நிறைவேற்றுகிறது. இதனை ஐ.நா. அமைப்புடன் இணைக்கும் ஒப்பந்தம் பேரவையால் 1946 டிஸம்பர் 14இல் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச நாணய நிதி நிலையம் (ஐவேநசயேவiடியேட ஆடிநேவயசல குரனே) 1944இல் பிரெட்டன்வுட்ஸில் ரூஸ்வெல்ட் ஒரு மாநாடு கூட்டி, அதற்கு ஐக்கிய நாடுகளின் உறுப்பினரையும் பிற இணைப்புறவு நாட்டினரையும் வரவழைத்தார். 44 நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய இந்த ஐ.நா. நாணயச் செல்வத்துறை மாநாடு, ஜூலை 21 முதல் 22 வரை நடைபெற்றது. இதன் மூலம் ஏற்பட்ட இரு அமைப்புகளே சர்வதேச நாணய நிதி நிலையமும் சர்வதேசச் சீரமைப்பு மேம்பாட்டுப் பொருளகமும் ஆகும். மாநாட்டில் வகுக்கப்பட்ட ச.நா. நிதி நிலைய ஒப்பந்த விதித் தொகுதி உறுப்புநாடுகளின் பார்வைக்கும் ஆராய்வுக்கும் அனுப்பப்பட்டது. உறுப்பு நாடுகள் அதனை ஏற்று வாஷிங்டனில் அதில் கையொப்பமிட்ட பின், 1945 டிஸம்பர் 27ஆம் தேதி முதல் இவ்வமைப்பு நடைமுறைக்கு வந்தது. ஒவ்வோர் உறுப்பு நாட்டுக்கும் உரிய பங்கு வரி இவ்வளவு என வகுக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவு பங்கு வரி 2 பங்குகள்; மிகக் கூடுதல் அளவு பங்கு வரி 31,750 பங்குகள். கூடுதல் அளவு செலுத்தும் உறுப்பு நாடு அமெரிக்கா. இந்தியா இவ்வகையில் உறுப்பு நாடுகளுள் 5-ஆம் இடம் வகிக்கிறது. உறுப்பு நாடுகளுக்கு வகுக்கப்பட்ட பங்கு வரிப் பண மூலம் நிதிநிலையத்துக்கு 739,75,00,000 அமெரிக்க வெள்ளி மூலதனம் சேர்ந்துள்ளது. ஒவ்வோர் உறுப்பு நாடும் தன் தங்கச் சேமவைப்பிலிருந்து 100க்கு 10 வீதமோ, அல்லது தன் அமெரிக்க வெள்ளிச் சேமிப்பில் 100க்கு 10 பங்கு வீதமோ, இவற்றில் குறைந்த அளவு தொகையைப் பங்கு வரியுள் தங்கமாகத் தர வேண்டும். மீதியை உறுப்பு நாடுகள் அதனதன் நாணயச் செலாவணி வடிவில் தரலாம். இவ்வமைப்பின் நோக்கம், நிலையான அமைப்பு வாயிலாக உலக நாணயத்துறையில் ஒத்துழைப்பு ஏற்படுத்தி, அதனால் உலக வாணிகத்தைச் சரிசமநிலையில் தடைப்படாது வளர்ப்பதும்; ஊழியர்கட்கு உயர் ஊதியம் பேணுவதும்; எல்லா உறுப்பு நாடுகளின் வள ஆதாரங்களையும் பெருக்குவதும் ஆகும். அத்துடன் இந்நிலையம் போட்டி மூலம் நாணயமதிப்புக் கெடாமலும், செலாவணி மாற்றுச் சிக்கலின்றி எளிதில் நடைபெறும்படியும், செல்வத் துறையில் உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கை வளரும்படியும் செய்யும். சர்வதேச சீரமைப்பு மேம்பாட்டுப் பொருளகம் (ஐவேநசயேவiடியேட க்ஷயமே கடிச சுநஉடிளேவசரஉவiடிn யனே னுநஎநடடியீஅநவே) இதன் தோற்றம் சர்வதேச நாணய நிதி நிலையத்துடன் ஒத்ததே. இது 1947 டிசம்பர் 27இல் நடைமுறைக்கு வந்தது. இதன் உறுப்பு நாடுகள் 44. பொருளகத்தின் உரிமையற்ற மூலதனம் ஆயிரங்கோடி அமெரிக்க வெள்ளி. இது நூறாயிரம் வெள்ளி மதிப்புடைய பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளகத்தின் நோக்கங்கள் உறுப்பு நாடுகளின் சீரமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும், வளமை தரும் துறைகளுக்கும் முதலீட்டுதவி செய்வது; வெளி நாடுகளில் தனிப்பட்டவர் முதலிடுவதற்கான ஆதரவுகள் தருவது; தனி மனிதர் முதலீட்டுடன் ஒத்துழைத்து வள ஆதாரம் பெருக்குவது; சர்வதேச முதலீட்டு நிலையால் உறுப்பு நாடுகள் பாதிக்கப்படாமலிருக்கப் பார்ப்பது; போர்க்காலப் பொருளாதார நிலையைப் படிப்படியாக எத்தகைய அதிர்ச்சிக்குமிடமின்றி அமைதிக்கால நிலைக்குக் கொண்டு வருவது ஆகியவையே. பொருளகத்திற்கு ஆட்சியாளர் குழு (க்ஷடியசன டிக ழுடிஎநசnடிசள), நடைமுறை ஆணையாளர்கள், தலைவர், பணித்துறையாளர் ஆகிய கூறுகள் உண்டு. ஒவ்வோர் உறுப்பினரும் ஓர் ஆட்சியாளரையும் ஒரு பகர ஆளையும் தேர்ந்தெடுத்தனுப்புவர். உரிமையாற்றல்கள் யாவும் ஆட்சியாளர் குழுவையும், நடைமுறைகள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆணையாளர்களையும் பொறுத்தவை. ஆணையாளர்களின் தலைவரே முக்கியமான பொறுப்புள்ளவர். முதற்பொருளாகத் தலைவர் அமெரிக்காவைச் சார்ந்த ஜான் ஜே மக்கிளாய் என்பவர். பொருளகத்தின் தலைமை நிலையம் வாஷிங்டனில் அமைந்துள்ளது. உலக உடல் நல அமைப்பு (றுடிசடன ழநயடவா டீசபயnளையவiடிn) இதன் தலைமை நிலையம் ஜெனிவா. இது 1948 ஏப்பிரல் 7இல் ஐ.நா. அமைப்புடன் இணையுறுப்பாயிற்று. இதன் அமைப்புத் திட்டம் 1946 ஜூன் 19 முதல் ஜுலை 22 வரை கூடிய சர்வதேச உடல் நல மாநாட்டினால் வகுக்கப்பட்டது. 51 நாடுகள் இதன் தொடக்க உறுப்புகள். உலக மக்களின் உடல் நலத்தை உச்ச அளவுக்குக் கொண்டு வருவது அமைப்பின் நோக்கம். இதற்காக அது எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் வருமாறு: 1. சர்வதேச உடல்நலத் தொண்டுகளை ஒருமுகப்படுத்துதல். 2. அரசாங்கச் சார்பானவை, தொழிற்சார்பானவை, பிற சார்புடையவை ஆகிய எல்லாவகை உடல் நல நிலையங் களுடனும், இவ்வகைத் தொடர்புடைய பிற ஐ.நா. இணைப்புக்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளுதல். 3. தொற்று நோய், கொள்ளை நோய் நீக்கப் பணிகளை ஊக்குதல். 4. தற்செயல் இடையூறுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுத்தல். 5. உணவூட்டம், நல் உறையுள், சூழ் இடவசதி, கேளிக்கை வசதி, தொழிலாளர் பொருள் நலம், உடல் நல வாய்ப்புகள் முதலியவற்றை அறிந்து மேம்படுத்தல். 6. தாய்மை, குழந்தை நல மேம்பாடு. 7. பள்ளிப்போதனை, பயிற்சி ஆகியவற்றிடையே உடல் நலம் கவனித்தல். 8. உடல் நலத்துக்கு வேண்டிய புத்தாராய்ச்சி வளர்த்தல். 9. மன நலத்துக்கான பயிற்சிகள் ஊக்கல். 10. உடல் நலத்துறையில் இருந்து வரும் சமூகச் சார்பான முறைமைகள் செயலாட்சி முறைகள் ஆகியவற்றை ஆராய்தல். 11. நோய்களின் பெயர்கள், சாவுக்குக் காரணம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைச் சர்வதேச வகையில் ஒப்பிட்டுப் பொது அறிவை வளர்த்தல். 12. நோய்க்குறியாராய்வு வகைகளை ஒழுங்குபடுத்தல். 13. உணவு, மருந்து, ஆராய்ச்சித் துறைகளில் சர்வதேச அளவை முறைகளை ஒருமுகப்படுத்தல். இவ்வகையில் உலக உடல் நலப் பேரவை, நிறைவேற்றற்குழு, பணித்துறை நிலையம் ஆகிய மூன்று உறுப்புக்கள் உள்ளன. பணித்துறை நிலையத்தின் தலைவர், பொது ஆணையாளர் எனப்படுகின்றனர். ஐ.நா. துணையுதவிச் சீரமைப்புக்கழகம் கலைக்கப்பட்டபின் அதன் உடல்நலத் தொண்டுகள் உலக உடல் நல அமைப்புக்கு மாற்றப்பட்டன. அனைத்துலக அஞ்சல் கூட்டுறவு (ருniஎநசளயட ஞடிளவயட ருniடிn) இது 1947இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் பெர்ன். மேற்கூறப்பட்ட இணைப்புறுப்புகள் தவிர, சர்வதேச அகதிகள் அமைப்பு (ஐவேநசயேவiடியேட சுநகரபநந டீசபயnளையவiடிn), சர்வதேச வாணிக அமைப்பு (ஐவேநசயேவiடியேட கூசயனந டீசபயnளையவiடிn), உலக வானிலைக்கள அமைப்பு (ஐவேநசயேவiடியேட ஆநவநடிசடிடடிபiஉயட டீசபயnளையவiடிn), உலகக் கடல் போக்கு வரவுத்துறை ஆராய்வு அமைப்பு (ஐவேநசயேவiடியேட ஆயசவைiஅந ஊடிளேரடவயவiஎந டீசபயnளையவiடிn) ஆகியவைகளும் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன. இவை இன்னும் முறைப்படி இணைப்புறவைப் பெறவில்லையாயினும், இணைப்புக்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. உலக அரசியல் துறை அமைப்பாகத் தொடங்கிய ஐ.நா. அமைப்பு, இங்ஙனம் அரசியல் துறை உறுப்புகளாக அமைந்த பாதுகாப்பு மன்றம், பொறுப்பாட்சி மன்றம், நடுநிலைத் தீர்ப்பு மன்றம் ஆகிய உறுப்புகளுடன், போர் ஒழிப்பு, சமரசம் ஆகியவற்றின் மூலமும், அமைதி, மனித உரிமைப் பிரசாரம் மூலமும் அரசியல் கூட்டுறவை வலுப்படுத்த முனைந்தது. அதன் பின் இறுதியிற்கூறப்பட்ட மனித உரிமையே இவற்றின் அடிப்படை என்பதைக் கண்டு, தனிமனிதன் உரிமையின் முழு மதிப்பைப் பேணித் தனி மனிதன் அவா ஆர்வத்தைத் தூண்டி, அவன் நல்வாழ்வை நிலைநிறுத்த முனைந்து, சமூக பொருளியல் மன்றம் என்னும் தனிப்பெருங்கிளையைத் தோற்றுவித்தது. இம்மன்றம் மரத்தினுள் மரமாக வளர்ந்து, கிளைகளும் விழுதுகளும் விட்டு, ஒரு தனிப்பேரமைப்பாகப் பெருக்கமடைந்துள்ளது. புற உடலமைப்பாய் விளங்கும் ஐ.நா. அமைப்பில் இது உடலின் அக உறுப்பு மண்டலமான தசை நரம்பு அமைப்பாக வளர்ந்து வருகிறது. இதனுள்ளும் ஐ.நா.க.வி.ப. கழகம் கிட்டத்தட்ட ஒரு தனி அமைப்பாகி, இவ்வுடலின் உயிர் நிலையாய் வளரத்தொடங்கியுள்ளது. ஐ.நா. அமைப்பின் இம்முத்திற உடலுக்குத் தக்க சூழ்நிலையாக்கங்களாகவே மற்ற இணைப்புறுப்புகள் இயங்குகின்றன. 7. அமைப்பின் வருங்காலம் தத்தம் வாழ்வில் கருத்துச் செலுத்தி அதனுடன் அமைந்து நிற்பது பெரும்பாலான தனி மனிதரின் இயல்பு. ஆனால், அதேசமயம் தனி மனிதன் வாழ்வு, தனி மனிதன் வாழ்வுடன் என்றும் நின்றுவிடுவதில்லை. ஆராயாத விலங்கு நிலை வாழ்வு வாழ்பவரிடையேகூடத் தனி மனிதர் வாழ்வுடன் நின்று தன்னலம் பேணும் சிறுமனத்தினர்களையும், தன்னலத்தில் அக்கறை குறைந்து பிறர் நலமே எண்ணும் பல திறப்பட்ட அன்பு நெறியாளர், ஊருக்கு உழைப்பவர், புகழ் நாடுபவர், கடவுட்பற்றாளர், ஒழுக்கமுறையாளர், சமயப்பிரசாரகர் ஆகியவர்களையும் காணலாம். சிந்தனை தொடங்கியவுடன் இவ்விருதிறத்திலும், தனி மனிதன் வாழ்வு, வழிப் போக்கர் விடுதி போன்றதெனக்கூறி வாழ்க்கையில் பற்றற்றவர் ஒரு புறமும்; தனி மனிதன் வாழ்வு பொது வாழ்வின் ஒரு கூறே எனக்கொண்ட அறிஞர், கலைஞர், கவிஞர் ஆகியவர் ஒருபுறமும் தோற்றினர். இவர்களிடையே தனிமனிதன் வாழ்வு கருதியே பொது வாழ்வில் பங்கு கொண்டு பணியாற்றிய பல வகுப்பினர் - வணிகர், சமயப் புரோகிதர், அரசியலார், மருத்துவர், காலக் கணிப்பாளர், உழவர், தொழிற்கலைஞர் ஆகியவர் - தோன்றினர். சமூகம் பரந்து, சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் மரபுகள் பெருக்கமடைந்தன. தனி மனிதன் வாழ்வு, பொதுவாழ்வு ஆகியவற்றில் கருத்துச் செலுத்திய இவ்விரு திறத்தவரையும் ஒப்ப, இயற்கை, வாழ்வு ஆகிய இரு திறங்களில் கருத்துச் செலுத்திய அறிஞர் பலர். இவர்கள் இயல் நூல் (விஞ்ஞான) அறிஞர், வாழ்க்கை அறிஞர் (வரலாற்றறிஞர், கலைஞர், அரசியலறிஞர், பொருளியலறிஞர், அருளாளர்) எனப் பெருகினர். இவர்களுள் ஒவ்வொருவர் முயற்சியாலும் தனி மனிதன் நிலை கடந்த உலகம், உலகவாழ்வு ஆகியவற்றின் எல்லை விரிவடைந்தது. இவர்களுள் வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி நின்றவர் போன்றிருந்த அருளாளரே உண்மையில் வாழ்க்கையில் மிகுந்த தொலைநோக்குடையவர் என்பதில் ஐயமில்லை. வாழ்வின் குறிக்கோளை அறம், பொருள், இன்பம் என வகுத்த வள்ளுவர், பொது மனிதவாழ்வே தனி மனிதன் வாழ்வின் அடிப்படை என்பதை அக்குறிக்கோள் கூறுகளின் வரிசையாலும், தனி உரைகளாலும் திறம்படக் காட்டியுள்ளார். அவர் மனிதனின் கடந்த குறிக்கோள் கடவுள் (இறந்துநின்றநிலை, இறை) எனக் குறித்ததுடன்; இயற்கை சார்ந்ததே வாழ்வு என வான்சிறப்பிலும்; அதன்வழி நின்று வாழ்க்கைச் சட்டம் வகுத்த அந்தணர் வழி நிற்பதே உலகு என ஒழுக்கத்து நீத்தார், அறன் வலியுறுத்தல் ஆகியவற்றிலும் காட்டிப்போயினர். பொதுவாழ்வின் ஒழுங்காகிய அறமும் (ஆடிசயட டுகைந), அதன் கருவியாகிய பொருளும் (ஞடிடவைiஉள & ளுடிஉiடிடடிபல), இன்பத்தில் (ழயயீயீiநேளள) அதாவது தனிமனிதன் வாழ்வில் சென்று முடிவன என்பதே திருவள்ளுவர் கோட்பாடு. வள்ளுவர் வழி நின்ற பிற உலக அருளாளர் எல்லாருடைய மொத்தக் குறிக்கோளைத் தாயுமானவர் ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே, அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே,” எனச் சுருக்கி வலியுறுத்தியுள்ளார். கீழ் நாட்டுச் சூழலில் கனவளவாக நின்ற இம்முடிபே, தனி மனிதன் வாழ்வில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தி, இயற்கையிலும் பொருளிலும் ஆராய்வு நடத்தி வாழ்க்கை வளம் பெருக்கிய மேனாட்டறிஞர் கருத்தையும் இறுதியில் கவர்ந்துள்ளது. மேனாட்டின் அருட்பெரியாராகிய கார்லைல், ரஸ்கின், எமர்ஸன், டால்ஸ்டாய், ரோமேன் ரோலந்து ஆகியவர்களும்: அரசியல் கடந்த அருளாளராகிய ஏப்ரஹாம் லிங்கன், வில்ஸன் ஆகியவரும்; பொருளியல் கடந்த அருளறிஞரான கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியவரும் இம்மாறுதலுக்குப் பெரிதும் காரணமாவர். தனிமனிதன் வாழ்வு என்ற அடிப்படை மீது எழும் அரசியல், பொது மனிதன் வாழ்வு நோக்கிச் செல்வதே ஆயினும், தன் குறிக்கோளை நாடி அது மேனோக்கிச் செல்லாவிட்டாலும், பொது மனிதன் வாழ்வு தனி மனிதன் நலத்தின்மீது அமைந்ததே என்பதை எண்ணாவிட்டாலும், பரந்துபட்டு அழிவதன்றி அது வேறு நலங்காண முடியாது என்ற அறிவே உலக இயக்கத்துக்கு உருவான தூண்டுதலாகியுள்ளது என்னலாம். உலக இயக்கமும், அமைதியியக்கமும் அருளாளர் கனவில் தோன்றினவாயினும், அறிஞர் திட்டங்களின் மீதும், அரசியலார் அனுபவங்களின் மீதும், மக்கள் அவா ஆர்வங்களின் மீதும் கட்டமைக்கப் பெறுகின்றன. ஆயினும், இன்றும் அருளாளர் கனவே அதற்குத் தூண்டுதல் என்பதை மறுப்பதற்கில்லை. அரசியலறிஞர் அதில் புகுவது போரினை அவர்கள் விரும்பாத எதிர்மறைக் காரணம் ஒன்றினால் மட்டுமே. ஹேகு அமைதி மாநாடும், சர்வதேச சங்கமும் முறிவுற்றதன் காரணம் இதுவே. ஐ.நா. அமைப்பு அறிஞர் கனாக்களைச் சிறிது துணிந்து அரசியல் குறிக்கோளாக்க முனைந்திருப்பதும், அத்துறையில் அரசியல் அறிஞர்களைத் தூண்டியிருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. அதேசமயம் அரசியல் அறிஞர்கள், அரசியலார்கள் குறிக்கோள் அதனுள் இன்னும் தனித்து நின்று திணறுவதும் மறுக்கமுடியாததே. பாதுகாப்பு மன்றத்தில் மட்டும் மொழியுரிமைச் சரிசமநிலை ஏற்பட முடியாததும், ஐந்து வல்லரசுகளின் ஒன்றுபட்ட கூட்டுறவின்றி அது இயங்க முடியாத நிலையில் வகுக்கப்பட்டிருப்பதும் கண்கூடு. அரசியல் துறையில் உலக இயக்கத்தின் வளர்ச்சி தடைபடுவதனாலேதான் மற்றத் துறைகளில் ஐ.நா. அமைப்பு வளர்ந்து செல்கிறது என்று கூறலாம். இதுவே இயற்கையின் அமைதி எனினும், அரசியல் துறையில் கட்டற்று வளர்ந்துவிட்ட மேனாடுகள் பிற துறைகளிற் கவனம் செலுத்தி வளர்ச்சியடைந்த பின்பே இனி முன்னேற முடியும் என்றும் இது காட்டவல்லது. புது வளர்ச்சித் துறைகளில் இந்தியா, சீனா போன்ற கீழ்த்திசை நாடுகள் மற்றத் துறைகளைவிட மிகுதி இடம் பெறுகின்றன என்பதும் இவ்வகையில் குறிக்கத்தக்க செய்தி ஆகும். உலக அமைப்பைப் பற்றிய நம்பிக்கை ஒரு புறம் உலக மக்களிடையே வளர்ந்து வருகின்றது. மக்களிடையேயும் அறிஞரிடையேயும் அதற்கு ஆதரவு பெருகியே வருகின்றது. அரசாங்கங்கள் இவற்றைப் பயன்படுத்தி முன்னேற விரும்புகின்றன. இதில், இனி வளர்ச்சியடைய வேண்டிய பகுதி மக்கட்பகுதியே அன்றி, அரசாங்கப்பகுதி அன்று. அரசாங்கங்களுள் சிறுநாடுகளும் பெருவல்லரசுகளும் சரிசமமொழியுரிமை பெற்றாலும், அவை சரிசம வலுவுடையவை ஆய்விடும் என்று கூற முடியாது. நாடு, அரசாங்க எல்லைக்குள் நின்று அவை என்றும் சரிசம வலுப்பெற்றுவிடவும் முடியாது. ஐ.நா. அமைப்பும் உலக இயக்கமும் வளர்ச்சி பெறவேண்டிய பகுதி மக்கட்பகுதியே என்பதனை இது இன்னும் நன்றாக வலியுறுத்தும். சமூக, பொருளியல், கலைத்துறைகளுள் நாட்டெல்லை, அரசாங்க எல்லை கடந்து மக்கள் வளர்ச்சியுற்றுச் சமநிலை அடைந்து விட்டால், அதன்பின் நாட்டெல்லையும், அரசாங்க எல்லையும் உலக எல்லையின் கூறுகளாக, உலகநாட்டின் மாபெரு மாகாண எல்லைகளாக மாறுவது உறுதி. பெரிய வல்லரசுகளும் சிறிய அரசுகளும் ஒன்று இருக்க மாட்டா; பெரிய நாடுகளும், சிறிய நாடுகளுமே இருக்கும். அத்துடன் பெரிய நாடுகள் மாகாணம் போன்ற பெரும்பிரிவாகவும், சிறுநாடுகள் மாவட்டங்கள் (ஜில்லாக்கள்), கூற்றங்கள் (தாலூக்காக்கள்) போன்ற சிறு பிரிவாகவுமே இயங்கத் தக்கவை ஆகிவிடும். உலக அடிப்படையில் மொழி, பண்பாட்டுச் சார்பான சிறு திருத்தங்களுடன், அவை உலகக் கூறுகளாக அன்று வகுக்கப்பட்டுவிடலாம். இத்தொலைக் குறிக்கோள் இன்றைய சூழ்நிலையில் எய்தப்பெற முடியாததன் காரணமாகவே நாட்டு எல்லை, அரசாங்க எல்லையில் இன்றைய உலக அமைப்பின் கட்டடம் எழுப்பப்பட்டது. உலக இயக்கத்தின் அரசியல் நோக்கு ஒன்றிலேயே முனைந்துள்ள பலர், ஐ.நா. அமைப்பின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையில்கூடக் கலக்காமல், விலகி நிற்பதுண்டு. உலக இயக்கம் கண்ட தோல்விகளை அவர்கள் வெற்றிப் படிகளாகவும் படிப்பினைகளாகவும் கருதத் தவறுகிறார்கள்; அல்லது அவற்றையே முடிவான படிப்பினைகள் என்று கருத மறுக்கிறார்கள் என்னலாம். ஆனால், நம்பிக்கையார்வ முடையவர்கள் எதையும் முடிவான படிப்பினையாகக் கொள்ளவில்லை. ஐ.நா. அமைப்பு நெகிழ்ச்சியுடையதாக, விரும்பிய திசையில் விரும்பிய அளவில் வளர இடமளிப்பதாக அமைந்துள்ளதன் காரணம் இதுவே. சிறு தோல்விகள் இனியும் வரக்கூடுமாயினும் அவை அமைப்பின் உருவில் மாறுதல் செய்யும் படிப்பினைகளாக அமையுமேயன்றி, அதனைக் கலைக்க விடும் படிப்பினைகள் ஆகமாட்டா. வேண்டுமானால், பெருந்தோல்விகளின் பயனாக அதன் அடிப்படையையே மாற்ற வேண்டி வரலாம். ஆனால், அதற்கும் அமைப்பில் இடம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தல் வேண்டும். அமைப்பின் அடிப்படை ஒழுங்குத் திட்டமாகிய உரிமை விளம்பரத்திற்கூடப் பாதுகாப்பு மன்றமும் பேரவையும் கூடித் திருத்தம் கொண்டு வந்து, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை யுடன் நிறைவேற்ற வகையிருக்கிறது. அமைப்பின் எதிர்காலம் பற்றி அவ்வமைப்பின் பொதுச் செயலாளராகிய திரு. ட்ரிக்விலையின் முன்னுரை பெற்ற, ‘ஐக்கிய நாடுகள்’ என்ற நூலின் ஆசிரியர் தரும் விளக்கம் இவ்வுண்மைகளைத் தெளிவுபடுத்துவது ஆகும். “அரசாங்கக்கூட்டுறவமைப்புகளுள் வேறு எதன் வரலாற்றிலும், ஐ.நா. அமைப்பு வகையில் ஏற்பட்டுள்ளது போலத் தொடக்கத்திலிருந்தே ஒன்றுக்கொன்று முற்றிலும் நேரெதிரான மாறுபட்ட மதிப்பீடுகளும், விளக்கமுடிவுகளும், கருத்துரைகளும் ஏற்பட்டதில்லை என்னலாம். உலகின் பல பகுதிகளிலும் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ மாநாட்டின் உரிமை விளம்பரம் பற்றித் தெரிய வந்த சமயத்திலிருந்து, உலகின் அரசியலறிஞரிடையேயும், கருத்துரையாளரிடையேயும், அரசியல் தலைவரிடையேயும், பொது மக்களிடையேயும் ஐ.நா. அமைப்பின் ஆதரவாளர் கட்சி, அதன் எதிர்ப்பாளர் கட்சி என இரு கட்சிப்பிளவுகள் தென்பட்டன. மிகப் பெரும்பாலராயமைந்த முந்திய கட்சியினர் கருத்துப்படி நேச நாட்டினர் போர்க்காலக் கூட்டுறவு, ஒற்றுமை ஆகியவற்றின் சத்தியை அமைதிக்கால வாழ்வுக்குப் பயன்படுத்தத் தக்க ஓர் அமைப்புப் பிறந்துள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், எதிர்தரப்பினரோ, நாட்டரசாங்கங்களின் கட்டற்ற தன்முடிபுரிமை இதில் அப்படியே பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது என்பதையும்; மனித உலகின் அமைதி காக்கும் அமைப்பாக அது இயங்குவதற்கு (பாதுகாப்பு மன்றத்தின்) மொழி மறுப்புரிமை வாசகங்கள் கடக்க முடியாத ஒரு தடைக்கல்லாகவே அமையக்கூடும் என்பதையும் சுட்டிக் காட்டினர். உலக ஆட்சிக்குரிய வருங்கால அமைப்பின் இடைக்கால முன்னேற்பாடாக அமைந்துள்ள ஐ.நா. அமைப்புப் பற்றிய எண்ணற்ற கருத்துரை விளக்கங்களும் இவ்விரு திறத்தார்களுக்கும் இடையே பலதரப்பட்ட படிகளாக இடம்பெறுகின்றன. இதற்கிடையே, கூட்டங்களிலும், அறிவுரை விவாதங்களிலும், பத்திரிகைத் தலையங்கங்களிலும், வானொலி மேடைகளிலும், உரிமை விளம்பரத்தை உடனடியாக இப்போதே திருத்தி அமைத்து விடுவதற்கும்; ஐ.நா. அமைப்பை அப்படியே ஓர் உலக ஆட்சி மன்றமாக மாற்றி அமைப்பதற்கும் உரிய தூண்டுதலுரைகளும், ஊக்குதலுரைகளும் எழுகின்றன. இது வகையில் மிகுதிவிரைவு காட்டக்கூடாதென்றும், தேசிய அடிப்படை உரிமைகளைக் கைவிடுவது பேரிடர் தருவதாகு மென்றும் எச்சரிக்கையுரைகளும் ஆங்காங்கே தரப்படுகின்றன. “இருதரப்பினரின் பல்வேறுபட்ட தூண்டுதலுரைகளும் ஐக்கியநாடுகளின் இன்றைய இயல்பு என்ன என்பதைக் கவனிக்க முற்றிலும் தவறியேவிட்டன என்னலாம். எனவேதான் ‘ஐ.நா. அமைப்பு என்பது என்ன?’ என்ற விளக்கம் முதன்முதல் தேவைப்படுகிறது. “ஐக்கிய நாடுகள் என்பது தன்னிறை உரிமை பெற்ற நாட்டரசுகளின் ஒரு கூட்டமைப்பு. இந்நாட்டரசுகள் ஒன்றுபட்டுச் சர்வதேச அமைதியைப் பேணவும்; சர்வதேச முக்கியத்துவம் உள்ள பொருளியல், சமூக, பண்பாட்டுச் சிக்கல்களை ஒருங்கிணைந்து நின்று தீர்க்கவும்; இனவேறுபாடு, ஆண் பெண்பால் வேறுபாடு, மொழி வேறுபாடு, சமய வேறுபாடு ஆகியவையின்றி எல்லாரிடை யேயும் மனித உரிமைப்பேறுகளை வளர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. “போர் இனி என்றும் நிகழமாட்டாது என்பது இதனால் பொருள்படக்கூடுமா? இதில் கூறப்பட்டுள்ளதன் பொருளாவ தெல்லாம், ‘இந்நாடுகள் ஒன்றுபட்டுள்ளன; அமைதியைக் குலைப்பதாக அச்சுறுத்தும் நிகழ்ச்சிகளைத் தடுக்க அல்லது அகற்ற எல்லா முயற்சிகளையும் செய்ய ஒருப்பட்டுள்ளன; இவ்வடிப்படைக் குறிக்கோளை நிறைவேற்றிச் செயலாக்க மிக்க நுணுக்க விரிவுடைய திட்டமொன்றை அவர்கள் வகுத்துள்ளனர் என்பது மட்டுமே. “போரைச் சட்டவிரோதமான செயலாக்கும் முயற்சிகளுள் இது முதல் முயற்சி அன்று: 1928இல் தேசியக் கொள்கை அடிப்படையான குறிக்கோள் முறையில் போரை ஒரு வகைதுறையாகக் கொள்வது சட்ட விரோதமானது என்று கொல்லாக் பிரயாண்ட் ஒப்பந்தம் அறிவித்தது. ஆயினும், இரண்டாம் உலகப்போரை இது தடுக்கவில்லை. சுதந்தர உரிமையுடைய எந்த நாடும் தற்காப்புக்காகப் போராடும் உரிமையைத் துறந்து விட முடியாது. எனவே, நம் உடனடி முக்கியக் குறிக்கோள், போரை ஒழிப்பதன்று; தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு என்பது நடைபெற முடியாதபடி செய்வது, அல்லது அது நடைபெறத் தொடங்கியதும் அதனைத் திணறடிக்க வைப்பது என்பதே. ஐ.நா. அமைப்பின் புத்தம்புதிய வகைமுறை யாதெனில், பாதுகாப்புக்காக எந்தநாடும் போரிட்டுத் தீரவேண்டிய நிலை அவசியமற்றதாகும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஒரு மாபெரிய அரசியல், பொருளியல், படைத்துறைக் கருவியைப் படைத்து உருவாக்கியிருப்பதேயாகும். மேலும், எந்த ஆக்கிரமிப்பரசும் தன் சார்பில் போருக்குக் காரணமான சாக்குப்போக்கு எதுவும் சொல்லிக் கொள்ள முடியாதபடி பல படிகளாக அமைந்துள்ள சமரச, நடுநிலைத்தீர்ப்பு வழிகளை ஐக்கிய நாட்டமைப்பு வகுத்துத் தந்துள்ளது. “‘பழைய சர்வதேச சங்கமும் மொத்தத்தில் இது போன்ற கருத்துடன்தானே அமைக்கப்பட்டது?’ என யாராவது வாதித்தல் கூடும். ஆனால், சர்வதேச சங்கத்தைவிட ஐக்கியநாட்டமைப்பு மிக்க வலிவுடைய அமைப்பென்பதையும், இன்னும் வலுவுடையதாகக் கூடியதே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் உறுப்பு நாடுகளான 51 அரசுகளும் மனித உலகின் பரப்பில் பத்தில் ஒன்பது பகுதியின் ஆட்சிக்குரியவை; அவற்றின் படை வலு, அவற்றின் செல்வவளம், அவற்றின் விஞ்ஞான அறிவு வளம் ஆகியவை அவ்வமைப்பின் பின் பலமாய் அமைந்துள்ளன. இத்தகைய பிரமாண்டமான காப்பமைப்பை எதிர்க்க எத்தகைய வருங்கால ஆக்கிரமிப்பரசும், அது எவ்வளவு வலுவுடைய தாயினும், தயங்கியே தீரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குவதொன்றே. எனவே, ஐக்கிய நாடுகள் ஐக்கியமாக நிற்கும்வரை, ஆக்கிரமிப்பாளரை எதிர்ப்பதென்ற அவர்கள் முடிவு அவர்கள் புற உலகக் கோட்பாடாக இருக்கும் வரை, ஆக்கிரமிப்புப் போர் என்பது நிகழ முடியாத செயலே என்று கூறலாம்.” மேற்கூறிய விளக்கம் அரசியல் நோக்குடன் ஐ.நா. அமைப்பைப் பற்றி ஐயுறவு கொள்பவர்கள் வாதங்களைப் பேரளவு தீர்க்க வல்லது. ஆயினும், “ஐக்கியநாடுகள் ஐக்கியமாக நிற்கும் வரை - ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து நிற்பதென்ற அவர்கள் முடிவு புறவுலகக் கோட்பாடாக இருக்கும் வரை” என்ற தொடர்கள் அவ்வரசியல் நோக்கின் எல்லையையும், அதில் ஏற்படக்கூடும் குறைபாட்டையும் சுட்டிக்காட்டுகின்றன. ஐக்கியநாடுகள் ஒன்றுபட்டிருப்பதென்பது முடியக்கூடாத செயலன்று; கட்டாயம் முடியக்கூடியதே. ஏனெனில், அந்நாட்டரசுகள் யாவும் சரிசம உரிமையுடன், ஒரே நோக்கத்தில் இணைந்தவையாதலால், அவற்றின் பெரும்பான்மை முடிவில் சிறுபான்மையும் ஒத்துழைக்கும் என்பதில் எவருக்கும் ஐயமிருக்க முடியாது. ஆனால், இவ்வழகிய உலகக் குறிக்கோளாகிய வீணையில் உள்ள ஒரே வடு, வல்லரசுகளின் தனி உரிமையும் அவற்றின் கூட்டுப் பொறுப்பும் பற்றியதே. தாக்குதலில் இறங்கத் துணியக்கூடும் அரசகள் பெரும்பாலும் இவ்வல்லரசுகளில் ஒன்றாகவோ, இவற்றின் ஆதரவுடைய அரசாகவோதான் இருக்க முடியும். அவை தாக்குதலை ஒழிப்பதென்ற குறிக்கோளில் ஒன்று பட்டுப் பிறநாடுகளுடன் இணைந்திருக்கும்வரை போர் நிகழ முடியாது. ஆயினும், இக்குறிக்கோள்கூட அவ்வல்லரசு களிடையேயுள்ள போட்டியுணர்ச்சிகளையோ ஐயுறவச் சங்களையோ தீர்த்துவிட்டதென்று முற்றிலும் கூறுவதற்கில்லை. உண்மையில் அவற்றின் கூட்டுப் பொறுப்பு அவசியமாக்கப் பட்டது இது காரணமாகவே. வல்லரசுகளிடையே வேற்றுமை ஏற்பட்டு அது வலுக்குமானால், இன்றைய நிலையில் பாதுகாப்பு மன்றம் செயலாற்ற முடியாது. அதன்மீதே, அதன் வலுமீதே அமைந்த ஐ.நா. அமைப்பும் போரைத் தடுத்துவிட எண்ண முடியாது. இவ்விடர்ப்பாட்டைச் சுட்டிக் காட்டுபவர் எழுப்பும் வினாவுக்கான விடையை அரசியல் நோக்குடன் அமைப்பை நோக்குபவர் காண முடியாது. அரசியல் நோக்கங்கடந்து அமைப்பு விரைந்து வளர்ந்து வருகிறது என்பதைக் கவனித்த அறிஞரே இதற்கு விடை தர முடியும். ஐ.நா. அரசியலமைப்பு அரசாங்கங்களின் கூட்டுறவின் மீது அமைந்ததேயாயினும், அத்துடன் அது நின்றுவிட்டால், போரை அது சில பல நாள் தடுக்கலாம். நிலையாகத் தடுக்கத்தக்க அமைப்பாகவும் வளர முடியாது; உலக ஆட்சி அமைப்பின் இடைக்கால முன்னேற்பாட்டு அமைப்பாகவும் என்றும் மாறியமைய முடியாது. பாதுகாப்பு மன்றம் அதன் உயர்நிலை அமைப்பாக இருக்கும் வரை, அது ஒரு பெரிய வலுவான சர்வதேச சங்கமாக மட்டுமே இயங்க முடியும். ஆனால், நல்லகாலமாக, உலக அறிஞரின் குறிக்கோள் இந்நிலை கடந்து சென்றுள்ளது. ‘ஐக்கியநாட்டு மக்களாகிய நாங்கள்’ என்று உரிமை விளம்பரம் தொடங்கும்படி செய்தவர்கள் அவ்வறிஞர்களே. அரசாங்கங்கள் உரிமை விளம்பரத்தை உருவாக்கின. அரசாங்கங்கள் அதனை ஏற்றன. ஆனால், உருவாக்கினவர்கள் உருவாக்கியதும், ஏற்றவர் ஏற்றதும் தம் சார்பிலன்று; தம் மக்கள் சார்பிலேயே. இன்னும் உலக அடிப்படையில் அரசியல் விழிப்புப் பெறாத மக்கள் சார்பில் பொறுப்பாளராகவே அவர்களே செயலாற்றுகின்றனர் என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இங்ஙனம் ஒப்புக்கொள்ள வைத்த அரசியலறிஞர் அம்மக்களை விழிப்படையச் செய்து தம் பொறுப்பாளரான அரசாங்கத்தார்களின் கைகளுக்கு வலுத் தரவும், அவர்களிடமிருந்து அவர்கள் சுமைப் பொறுப்பைப் படிப்படியாக ஏற்கவும் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பது தெளிவு. சமூக பொருளியல் மன்ற வளர்ச்சியும், அதன் கிளைகளின் வளர்ச்சியும், ஐ.நா.க.வி.ப. கழக வளர்ச்சியும் இதைத்தான் குறிக்கின்றன. அறிஞரின் இக்குறிக்கோள் - அமைப்பின் வளர்ச்சியிலேயே காணப்படுகிறது. ஆயினும், பாதுகாப்பு மன்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கும் அளவுக்கு இவ்வளர்ச்சி வலுப்பட வேண்டுமானால், ஐ.நா. அமைப்பின் நோக்கங்களும், அதன் நடைமுறைகளும், வளர்ச்சி முறைகளும், உலகின் எல்லா நாட்டுப் பொதுமக்களிடையேயும், சிறப்பாகப் பிற்பட்ட நாட்டு மக்களிடையேயும், பரப்பப்பட வேண்டுவது மிக அவசியம். இவ்வகையில் உலகில் பொது மக்களிடையேயும், அறிஞரிடையேயும் கூட ஏற்பட்டுள்ள ‘அறிவு வறுமை’யை ‘ட்ரிக்வி லை’ திறம்படச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை தந்துள்ளார். மேலே குறிப்பிட்ட நூலின் முன்னுரையில் அவர் குறிப்பதாவது: “ஸான் ஃபிரான்ஸிஸ்கோவிலும், லண்டனிலும்: பாரிஸிலும், பிராஸ்ஸல்ஸிலும்: ஆஸ்லோவிலும், ஆம்ஸ்டர் டாமிலும், நேச நாட்டினர் போர்க்கால ஒற்றுமை தொடர்ந்து நீடிப்பது பற்றி ஆயிரக்கணக்கானவர் மகிழ்ச்சியுறுவதை நான் கண்டிருக்கிறேன். ஆயினும், அவர்கள் எதிர்காலத்தை ஆக்கிப் படைப்பதற்குரியதென்று அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப் பட்ட இவ்வமைப்பைப் பற்றி, அடிப்படையான தொடக்க நிலைக் கேள்விகள் கேட்டாற்கூட, அவர்கள் தோளைக் குலுக்கிக்கொண்டு அசட்டையாகத் தம் அறியாமையை ஏற்றுக்கொள்கின்றனர். “ஓர் அமெரிக்க மாதரார் - தம் கணவரை முதல் உலகப் போரிலும், தம் மூன்று புதல்வர்களை இவ்வுலகப் போரிலும் இழந்தவர் - புதிதாக அச்சிட்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் உரிமை விளம்பரத்தின் வாசகங்களைப் படித்துப்பார்த்து, ஒன்றும் விளங்காமல், மிரள மிரள விழித்துக்கொண்டிருந்தார். அது பார்க்கப் பரிதாபமாயிருந்தது. சிறிது நேரத்தில் அவர் அச்சிறு நூலை மூடிவிட்டு, ‘அமைதி ஏற்பட வேண்டும் என்று விழைவதுடனும், ஆண்டவனை நோக்கி வேண்டுவதுடனும் நான் அமைய வேண்டும். வேறு எதுவும் என்னால் முடியாது!’ என்று அசட்டையாகக் கூறிக்கொண்டார். “மற்றொரு ஃபிரெஞ்சுக் குடியானவன் கதை இது: எதிரி ஆதிக்கத்தின் போது தாய்நாட்டின் பல்வேறு எதிர்ப்புக் குழுக்களிடையே அவன் வீரசூரமிக்க தூதுவனாய் உழைத்தவன்; எவரும் கேட்டு நம்ப முடியாத தீரச்செயல்களைச் செய்தவன்; அத்துடன் நாஜியரை எதிர்த்து நின்றதற்குரிய விலையாகத் தன் வீடும் குடும்பமும் இழந்தவன். அமைப்புப் பற்றிய விளக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட பின், அவன் ‘சரி சரி; இதெல்லாம் எனக்குப் புரியக்கூடாதது. என் வயலை என்னால் உழ முடியும். நாட்டின் சுதந்தரத்துக்கு ஊறு நேர்ந்தால், என்னால் துப்பாக்கியை ஏந்தவும் முடியும். ஆனால், இந்தச் சிக்கல்கள் என் மூளைக்கு எட்டாதவை’ என்று கூறக் கேட்ட எனக்கு மிகவும் மனம் புண்பட்டது. “ஆயினும், அமைப்பின் உயர்தத்துவம் முழுவதும், அதன் அமைப்பு முறை விளக்கம் முழுவதும் மொத்த உருவில் உலகின் மக்களிடையே செல்வாக்கு மிக்கவர்களும், மக்கள் உள்ளப்பாங்கு களையும் அவர்கள் மொழிப் பாங்குகளையும் முற்ற அறிந்த முப்பெருந்தலைவர்களும் ஆன ஃபிராங்க்லின் டிலானோ ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோஸஃப் ஸ்டாலின் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டதே. இம்மூவருமே - இவர்களைப் பற்றித் தனித்தனி மனிதர் கொண்டுள்ள கருத்து வேறுபாடு எதுவாயினும் - தத்தம் நாடுகளில் செய்து முடித்துள்ள அருஞ்செயல்களின் வெற்றி மூலம், தத்தம் நாட்டுப் பொது மக்களிடம் எவ்வாறு பேசுவது என்பதையும், தத்தம் குறிக்கோட் கருத்துகளில் அவர்கள் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது எவ்வாறு என்பதையும் மிகத் திறம்பட அறிந்தவர்களே என்பதை எவரும் மறுக்க முடியாது. உரிமை விளம்பரத்தின் வாசகங்களை முடிவாக உருவாக்கிய செயலாளரும், பிற துணைவரும், யாவரும் பொது வாழ்வின் நெருக்கடிகளாகிய அனலில் நன்கு புடமிட்டுத் தேர்ச்சி பெற்றவரேயாவர். எல்லோருக்கும் விளங்கத்தக்க முறையில் சொற்களைத் தொடுப்பதில் அவர்கள் தேர்ந்தவர்களே. ஐ.நா. அமைப்பின் அமைப்புத் திறமுழுவதிலும் அவர்களது எளிமைத் திறத்தின் வெற்றியைக் காணலாம். பல்வேறு உறுப்புகளின் உரிமையெல்லைப் பகுப்பில் ஓரளவு கூறியது கூறல் குழப்பம் காணப்படலாமாயினும், எந்தநாட்டரசின் அமைப்புச் சட்டங்களையும் நோக்க, அது எளிமையிலும் வெற்றிகரமானதே. அரசியலமைப்புச் சட்டங்களுள் சொல்லெளிமைத் திறமிக்கவை எனக் கருதப்படும் அமெரிக்க ஃபிரெஞ்சு அரசியல் அமைப்புச் சட்டங்களைப் பார்க்கிலும் அது எளிமையுடையதே. “அப்படியானால், ஐ.நா. பற்றிய இப்பொதுமக்கள் அறியாமையின் காரணம் யாது? “உண்மை யாதெனில், முதலாவதாக, பெரும்பாலான மக்களுக்குத் தத்தம் நாட்டின் அரசியல் முறை பற்றியே உருப்படியான தெளிந்த அறிவு இல்லை. இரண்டாவதாக, புதிய அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிப் பத்திரிகைகளும் வானொலிகளும் போதிய அளவில் விளம்பரத்தொண்டு செய்யவில்லை. ‘ஐ.நா.’ பற்றிய செய்திகளை அவர்கள் கூடிய மட்டும் விளக்கமாகவே வகுத்துரைத்தனராயினும், அதன் விரிவான பல்வேறு கூறுகள், உறுப்புகள் வகையில் வாசிக்கும் மக்களின் கவனத்தைத் தூண்டி நிறுத்த அவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. “மேலும், கீழ்நாடு, மேல்நாடு என்பது போன்ற பகட்டான குறிக்கோள் அரங்குகளையும், போராட்டங்களையும், நாடக உணர்ச்சி தூண்டும் வகையில் விளங்கும் உறுப்பாகிய பாதுகாப்பு மன்றத்திற்கும்; உரிமை விளம்பரத்தின் வாசகங்களின் பொருள்கோள் விளக்கம் பற்றி அவ்வுறுப்பினரிடையே எழுந்த விதிர்விதிர்ப்பூட்ட வல்ல வாதங்களுக்கும், அவர்கள் முழுக் கவர்ச்சித் திறமும் வேண்டப்பட்டன. இவற்றைவிட வருங்கால வளர்ச்சிப் பண்புக்கு மிகுதியும் உரியவையான பொருளியல், சமூக, கல்வி, உடல் நலத்துறைகளுக்கு இரண்டாந்தரமான இடமே தரப்பட்டது. “இதுமட்டுமன்றி, உலகநாடுகளிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் எதுவும் ஐக்கியநாட்டுப் பிரச்சினைகளைத் தனது அரசியற்கட்சி மேடைக்குரிய பிரசாரக் கூக்குரல் ஆக்கிப் போராடவில்லை. உலக நாடுகளின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அரசியல் போராட்டத்தினிடையே உள்நாட்டுத் துறையே இன்னும் மக்கள் மனத்திரையில் புனைந்து தீட்டப்படும் பெரும்பான்மைப் பகுதியாய் இருந்து வருகிறது. “எனினும், ஐ.நா. அமைப்பின் வெற்றி தோல்விகள் முழுமையும் அதனை ஏற்றுள்ள நாடுகளின் மக்கள் அதனை முழுதுற உணர்ந்து கையாளுவதைப் பொறுத்ததே என்பதை மறுக்க முடியாது. அத்தகைய அறிவின்றி மக்கள் ஆழ்ந்த ஒத்துழைப்பாதரவு அதற்கிராது. பொது மக்கள் கருத்தாதர வில்லாவிடில் ஐ.நா. அமைப்பு வெற்றி பெறவும் முடியாது. இதனைக் கவனியாது, நேர்மையற்ற முறையில் கண்டிப்பதும், பொறுமையற்ற முறையில் விரைந்தூக்குவதும், முழு நிறை தோற்றமுடைய குறிக்கோள் திட்டம் வகுப்பதும் ஏதும் பயனற்ற செயலேயாகும்.” ட்ரிக்விலை தரும் இவ்விளக்கம் உலகமக்கள் சார்பில் ஐ.நா. அமைப்பியக்கத்தை நடத்தும் தலைவர்களின் ஒரு பெருங்குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, அவர்களை அறைகூவி அழைப்பதாயிருக்கிறது. போர் முயற்சியைத் தலைமை வகித்து நடத்திய நேசநாட்டுத் தலைவர்கள் நேரிடையாகத் தொடர்பு கொண்டுள்ள மேல் நாடுகள் பலவற்றிற்கூட இக்குறைபாடுகள் இருக்கின்றன வென்றால், பொது மக்களைப் பற்றியவரை, அவற்றிலிருந்து இன்னும் எட்டாத் தொலைவிலேயே உள்ள கீழ் நாடுகளின் நிலையைக் கூறவேண்டுவதில்லை. வருங்கால உலகம் மேல் நாட்டுலகாக மட்டும் இருந்துவிடப் போவதில்லை. இருந்துவிடவும் முடியாது. ஜப்பானின் ‘அச்சு வேக வளர்ச்சி’ வேறு எதைக் காட்டாவிட்டாலும், இதனைக் காட்டப் போதியது. கீழ் நாட்டு அரசாங்கங்கள் பொதுவாக இன்னும் மக்கள் அரசாங்கமாகவில்லை. மக்கள் தலைவர்களும் இன்னும் போதுமான அளவில் பொது மக்களுடனும், அவர்கள் வாழ்வு தாழ்வுப் பிரச்சினைகளுடனும், அவர்கள் பொருளியல், மொழி மரபுகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. ட்ரிவி லையின் அறைகூவல் அவர்கள் காதுகளுக்குச் சிறப்பான படிப் பினையாகவும் எச்சரிக்கையாகவும் உள்ளது. மேல் நாட்டுத் தலைவர்களும் இதற்கேற்ப உலகக் கவனத்தைக் கீழ் நாடுகளின் மீதும் திருப்புதற்குரியர் ஆவர். ஐ.நா. இயக்கம் - மக்கள் இயக்கம் என்பதனை முதன்முதல் உணர்ந்தமக்கள் பிரிட்டன் மக்களே என்னலாம். போர்க் காலத்திலேயே, ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸான் ஃபிரான்ஸிஸ்கோ மாநாட்டில் தீட்டப்பட்டு உரிமை விளம்பரம் உருவாகு முன்பே, வட அயர்லாந்துடன்கூடிய பிரிட்டனின் ஐக்கிய நாட்டுக் கழகமொன்று அமைக்கப்பட்டுவிட்டது. ஐ.நா. செய்திகளை அது உடனுக்குடனே வெளியிட்டுப் பிரசாரம் செய்ததுடன் உரிமை விளம்பரம் பத்திரிகைகளில் அறிவிக்கப்படும்போதே அதனை அச்சிட்டு ஆயிரம் பத்து நூறாயிரக்கணக்கில் விற்பனை செய்து பரப்பிற்று. விரைவில் உறுப்பு நாடுகள் பலவற்றுள்ளும் உறுப்பல்லாத பலநாடுகளிலும் இத்தகைய சங்கங்கள் அமைந்தன. மாணவர்களுக்கென்றும், ஆசிரியர்களுக்கென்றும், மாதர்களுக் கென்றும், பிரசாரக்கிளை உறுப்புகளும், பயிற்சிக்கூடங்களும், விவாதக்குழுக்களும் அமைக்கப்பட்டன. உலகநாட்டு ஐக்கிய நாடுகள் கழகங்கள் பலவும் இணைக்கப்பட்டு, அவ்விணைப்பின் முதலாண்டு விழா ஜெக் நாட்டு முதல்வர் டாக்டர் மசாரிக்குத் தலைமையில் லண்டனில் கூட்டப்பெற்றது. இவ்வைக்கிய நாட்டுக் கழக இணைப்பு ஐ.நா. அமைப்புடன் இணைப்புறவு பெற்று, அதன் பிரசார உறுப்பாய் இருந்து வருகிறது. ஆனால், ட்ரிக்வி லையின் அறைகூவலையும் எச்சரிக்கையையும் போலவே, இப்பிரசார அமைப்புப் பற்றிய செய்தியும் கீழ் நாடுகள் வரை வந்து எட்டவில்லை. உறுப்பு நாடுகள் அல்லாத மேல்நாடுகளிற்கூட ஏற்பட்டுள்ள இப்பிரசாரக் கழக அமைப்பு, பிரிட்டிஷ் பொது அரசில் இன்னும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவையோ, பாகிஸ்தானையோ, மற்றக் கீழ் நாடுகளையோ தீண்டவில்லை. இந்நிலை மாற, கீழ் நாட்டு அரசாங்கங்களும், அவற்றின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவின் அரசாங்கமும், இந்தியத் தலைவர்களும் பாடுபட வேண்டும். அரசாங்கங்களைக்கடந்து, ஆனால், அவைகளைப் புண்படுத்தாமல், அவற்றின் இணக்கம் பெற்றே, மக்களைச் சென்றெட்டும் ஆர்வத்தினாலேதான், ஐக்கிய நாட்டமைப் பாளர்கள் உறுப்பு நாடுகளின் அரசாங்கச் சார்பான அமைப்பு களுடன் மட்டுமன்றி, அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இத்தொடர்பில் சிற்சில இடங்களில் பெருஞ்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மற்ற யாவரினும் இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். தென்னாப்பிரிக் காவில் தென்னிந்தியருக்கும் பிற இந்திய மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் மட்டுமன்றி, அக்கண்டத்துக்கே உரிய பண்டைப் பழங்குடியினராக கறுப்பு நீகிரோக்களுக்கும் சரிசம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. குடியேறியுள்ள வெள்ளையர்களே இந்நாடுகளின் குடிமக்களாக வெள்ளையர் அரசியல் உலகில் கருதப்படுகின்றனர். பழங்குடியினரும் அவர்கள் இனத்தவரான மற்றக் கறுப்புநிறக் குடியேற்ற மக்களும் அவர்களிடம் உரிமை பெறக் கெஞ்ச வேண்டியவர்களாகியுள்ளனர். இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சியும் தன்மான உணர்ச்சியும் ஊட்டிய மகாத்துமா காந்தியடிகள் முதன்முதல் தென்னாப்பிரிக்காவில் உழைத்து அம்மக்கள் தனிமதிப்பையும் தற்சார்பையும் உயர்த்தினராயினும், அரசியலுரிமை வகையில் அவர்கள் இன்னும் பிற்பட்டே யுள்ளார்கள். ஐ.நா. அமைப்பு இந்தியர் குரலையும், ஆப்பிரிக்க நீகிரோக்கள் குரலையும் கேட்கின்ற தாயினும், அதில் செயலாற்றும் உரிமையைப் பெரிதும் பெற முடியவில்லை. ஏனெனில், அதற்குரிய பொறுப்பாட்சி மன்றம் அது வகையில் பெரிதும் உரிமையற்றது. தவிர, வெள்ளை அரசாங்கங்களின் கண்கள், வெள்ளையர் - கறுப்பர் வேறுபாட்டிடையே ஒரு வேளை நடுநிலையுணர்வு கொள்ளக் கூடுமாயினும், அது வகையில் மிகுதி ஆர்வம் கொள்ளக்கூடும் என்று கூறமுடியாது. கறுப்பு நீகிரோவர், ஆப்பிரிக்க இந்தியர் ஆகியவர்களுக்கு நாட்டரசியலிலும் அதன் மூலம் உலக அரசியலிலும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டாலன்றி, அவர்கள் குரலை உலகம் கேட்க முடியாது; உலகின் கவனம் அவர்கள் பால் செல்லவும் முடியாது. தென்னாப்பிரிக்காவில் தெளிவுபடக் காணப்படும் இவ்வுண்மை பிற இடங்களுக்கும் உரியதேயாகும். அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனேயே ஐ.நா. அமைப்புச் செயலில் முனையமுடியும் என்பதை நாம் உணரக் கூடுமானாலும், அரசாங்கத்தின் இடையீடு இல்லாமலே அமைப்பு மக்கள் கருத்துரைகளை நேரிடையாக அறியும் வகைகளும், மக்கள் அதனுடன் நேரிடையாகத் தகவல் கருத்து அறிவிக்கும் முறைகளும், அமைப்பில் இடம் பெற வேண்டும். கீழ் நாடுகளில் ஐ.நா. விவாதக் கழகங்களும், இளைஞர் கழகங்களும் அமைந்து, அவற்றின் முடிவை நடுநிலையுடன் வெளியிட்டுக் கூறும் நடுநிலை நோக்குடைய பத்திரிகைகளும் அமைக்கக் கூடுமானால், இத்துறைகள் ஓரளவு செம்மைப் படக்கூடும். ஆசியாவையும் இந்தியாவையும் ஐ.நா. இயக்கம் சிறிதும் தொடவில்லை என்பதற்கு இரண்டோர் எடுத்துக்காட்டுகள் கூறலாம். ஆசியாவெங்கும் சிறுதெய்வ வழிபாடு, உருவவணக்கம், மாயமந்திர நம்பிக்கை, சோதிடம், குறி, சூனியம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. குடியும் சூதும் வெறுத்தொதுக்கும் உயர் சமயவாதிகளிடையே, குடியும் சூதும் வறுமைப் பேயின் மேளதாளங்களுக்கிடையே வேறெப் பகுதியையும்விட இங்கே தாண்டவமாடுகின்றன. ஐ.நா. சமூக பொருளியல் மன்றத்திலும் சரி, ஐ.நா.க.வி.ப. கழகத்திலும் சரி, இதன் தற்செயலான குறிப்பீட்டைக் கூடக் காண முடியவில்லை. ஆசியாவின் சார்பில் சென்றுள்ள ஆங்கிலம் படித்த அறிஞர் பெருமக்களுக்கு ஆசியாவின் வாழ்வைவிட ஐரோப்பாவின் வாழ்விலேயே அறிவும் அக்கறையும் மிகுதி என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. ஆசியாவை விட்டு இந்தியாவுக்கு வருவதானால், இந்தியாவின் சமய, சமூக, பொருளியல் வாழ்வு கடந்து அரசியல் வாழ்வுரை சாதி வேறுபாடு என்ற தேசிய வாழ்வின் கறை தோய்ந்துள்ளது என்பதை அறியாதவர் மேனாட்டிற்கூட இருக்க முடியாது. இந்தியர் ‘கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமர்’ என்பதை இந்தியா பற்றி மேனாட்டினர் எழுதிய ஒவ்வொரு நூலும் படங்களுடன் காட்டத் தவறுவதில்லை. இந்தியாவில், இத்துறையில் மிகமிகச் சீர்கேடுற்றது தென்னாடே ஆயினும், இந்தியா சார்பில் சர்வதேச சங்கத்தில் இடம் பெற்றவரோ, ஐ.நா. அமைப்பிலும் அதன் கூறுகளிலும் இடம் பெற்றவரோ, இதுபற்றி வாய்திறந்ததேயில்லை. உலகின் மற்ற எல்லாப் பகுதியினரும் வியக்கும்படி, அவ்வந்நாட்டுக் காரியங்களையே விளக்கிக் கூறத்தக்க இந்நாட்டறிஞர், உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத இவ்வழுவை அறியாதவர்கள் என்று கூற முடியாது. ஏனெனில், இவர்களில் பலர் தென்னாட்டவர். ஐ.நா.கவி.ப. கழகத்தில் இந்தியக் குழுவின் தலைவரான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், இந்தியாவின் தத்துவ ஆராய்ச்சி நிபுணர். சாதி அடிப்படையை மேற்கொண்ட இந்து மதத்தை மட்டுமன்றி, அதனை மறுத்த புத்த சமண சமயங்களின் நூலாதாரங்களையும் வரலாற்றையும் கரை கண்டவர். அவருடன் அங்கே பேரும் புகழும் வகித்துவரும் ஸர் ஏ. இராமசாமி முதலியாரோ, தமிழ் நாட்டவர்; இந்தியாவில் சாதி மத மூட நம்பிக்கைகளை எதிர்த்த பல இயக்கங்களில் கலந்து தலைவராயிருந்தவர். சாதி வெறிப்பேய் அடும் மலையாள நாட்டவரும் உலக அமைப்புகளில் உள்ளனர். ஆனால், சாதி பற்றிய பேச்சு, சாதி முறை பேணாத வெள்ளையரிடையேகூடப் பேசப்படாமலிருக்கிறது! உலக மன்றத்தில் கேட்கப்படாத குரல்கள் , உலக மக்கள் மன்றத்தில் கேட்கப்படல் வேண்டும். இந்தியாவின் சார்பில் உலக அறிவு மன்றத்தில் அதன் பழங்கால வடமொழிச் சிறப்புகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. இதுவும் அறிஞர்களிடையே மட்டுமே. பெரும்பாலான உலகமக்கள் இந்தியாவென்றால், சமய நம்பிக்கைகளும், பழங்காலப் பழக்கவழக்கங்களும் நிறைந்த பழய உலகப்பரப்பு என்று மட்டுமே கருதிவருகிற இந்த நாளில், வடமொழியின் நல்லிலக்கியங்கூட அவர்களின் இத்தவறான கருத்தைப் போக்கப் போதியதன்று ஏனெனில், நல்லிலக்கியத்தையும் புராண இதிகாசங்களையும் ஒருங்கே இலக்கியமாகத் தரும் வழக்கம் மேனாட்டாசிரியரிடமும் இன்றும் இருந்து வருகிறது. தவிர, நல்லிலக்கிய வகையிலும் வடமொழி இலக்கியம் மக்கள் இலக்கியம் என்று கூற முடியாது. தாய்மொழி இலக்கியங்களே மக்கள் இலக்கியமாகக் காட்சி தரமுடியும். ஆனால், வடநாட்டுத் தாய்மொழிகளோ, இன்றுதான் இலக்கிய வடிவு பெற்று வருகின்றன. இவ்விலக்கிய வடிவும் இக்கால இந்திய வாழ்வையோ, இந்தியமக்கள் வளமைகளையோ, பண்பையோ படம்பிடிக்காமல், வடமொழிப் புராணங்களின் புதுப் பதிப்புக்களாகவே பெரிதும் விளங்குகின்றது. இந்தியாவுக்குரிய தாய்மொழிப் பண்பாட்டைத் தென்னாட்டு மொழிகளும் இலக்கியமும் காட்டத்தக்கவையாயிருக்கின்றன. சிறப்பாகத் தமிழ் இலக்கியம் பொதுவாகவும், பண்டைத்தமிழ்ச்சங்க இலக்கியம் தனிப்படவும். இந்திய நாகரிகச் சிறப்பையும், வளர்ச்சி தளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக்காட்டுவன வாயுள்ளன. தவிர, அவை கிரேக்க இலக்கியம் போல இன்னும் உலகுக்கு அறிவுக் கலையொளி தருவனவாயும் உள்ளன. திருக்குறள் போன்ற காலங்கடந்த தேசங்கடந்த நூல்கள் இவற்றில் உள்ளன. இன்று ஐ.நா.க.வி.ப. கழகத்தார் சார்பில் உலக நல்லிலக்கியக் கோவையை ஐக்கிய நாடுகளின் உலக மொழிகளில் மொழி பெயர்க்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருக்குறளும் பிற சங்க இலக்கிய நூல்களும் இவ்வுலகக் கோவையில் இடம்பெறுவது இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே நலம் தருவது. இவற்றின் நலனறிந்து, உலகின் இயக்கங்களுமறிந்து, இவற்றை உலக அரங்குக்கு அளிக்கவல்ல கலையன்பரும், அறிமுகப்படுத்த வல்ல அறிஞரும், ஐ.நா. அரங்கத்தைச் சென்றெட்டும் வகை செய்வது அரசாங்கத்தார், மக்கள் ஆகிய இருதிறத்தார்களுக்குமுரிய கடன். அமைப்பாளரும் நேரிடையாக இத்தகைய தொலைக் கோடி உலகச்செல்வங்களை நாடி அடையும் வகை துறைகள் வகுத்தல் நலம். இந்திய அரசாங்கமோ, அதனை ஊக்கிச் செயலாற்ற வைக்கும் முறையில் சென்னை அரசாங்கமோ, இவ்வகைகளில் முயன்றால், இவற்றைப் பற்றிக் கூறவல்ல அறிஞர் இன்று இந்தியாவின் சார்பில் வெளி நாடுகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அறிவுச் செல்வரிடையிலேயே கூட உண்டு. ஸர். ஏ. ராமசாமி முதலியார், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், ஸர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஆகியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாய் செல்லக்கூடுமானால், அவர்களே இவற்றைத் திறம்பட எடுத்துரைக்கத் தக்கவர்களாவர் என்பதைத் தமிழர் யாவரும் அறிவர். ஐ.நா. அமைப்பின் வெற்றி தோல்விக்கு இடம் செய்யும் இன்னொரு பண்பு அதன் உயர்தளமட்டமே (hiபா டநஎநட சயமே) ஆகும். அமைப்பின் பிரசாரம் எத்தகைய அறிஞரால் செய்யப்பட் டாலும், எத்தகைய உயர் அரசியல் அனுபவமுள்ளவரால் செய்யப்பட்டாலும், உலக மூலைமுடுக்குகளையும், உலகப்பொது மக்களின் தாழ்புறஞ் சேரிகளையும் சென்றெட்ட முடியாது. பல திறப்பட்ட உயர்வு தாழ்வு நிலையுடைய வகுப்பினரிடையே அவ்வம்மட்டத்தில் நின்று மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பொதுமக்கள் தலைவர்களாகிய அதனதன் பிரதிநிதிகளே அதனதன் சார்பில் பேசவும் விளக்கந்தரவும் தக்கவர்கள். ஆகவே, வகுப்படிப்படையான சங்க அமைப்புகள் எங்கும் ஏற்படுவதுடன் கூடுமான இடத்திலெல்லாம் செல்வாக்கற்ற தனி மனிதர் குரலும், உச்ச இடத்தில் சென்றெட்டும்படியான வகை துறைகள் செய்யப்பட வேண்டும். இவற்றைச் செய்வதில் சிக்கல்கள் இருக்கலாம். அவை வரம்பற்ற அளவு வேலையைப் பெருக்கலாம். ஆனால், அவற்றின் பயன் அனுபவத்தில் மிகமிகப் பெரிதாக இருக்கும். தனிமனிதன் உரிமையை அவை தட்டி எழுப்பும். வாயில்லா ‘மார்க்ஸ்’களுக்கும் ஆதரவற்ற ‘ஸாக்ரட்டீஸ்’ களுக்கும் அது வாயும் ஆதரவும் தரும். ஐ.நா. அமைப்பின் வெற்றி உலகின் வெற்றிமட்டுமன்று; அரசாங்கங்கள், அறிஞர், மக்கள் தலைவர் வெற்றி மட்டுமன்று; தனி மனிதர் வாழ்க்கை மறுமலர்ச்சியின் வெற்றி. எந்த ‘மக்கள் அரசியலும்’ எட்டா அளவுக்கு ஐ.நா. அமைப்பின் அன்புக்குரல்கள் தனி மனிதன் உள்ளத்திலும், கடைசித் தனிமனிதன் வாடிய முகத்திலும் சென்று தடவிப் புத்தொளி காண வேண்டும். இதனைக்குறிக்கோளாகக் கொண்ட இளைஞர், நங்கையர் உலகில் பல்கிப் பெருக்கமுறுவாராக! இரு கடற்கால்கள் முதற் பதிப்பு – 1960 இந்நூல் 2002 இல் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 17 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. 1. ஓருலகச் சாதனைகள் மனித இன வரலாற்றில் அருஞ்செயல்கள், பெருஞ்செயல்கள் பல. புரட்சிகரமாக உலகை மாற்றியமைத்தவையும், வாழ்வில் ஆக்கமும் வளமும் பெருக்கியவையும் பல உண்டு. ஆனால் இவ்வெல்லாவகைச் சிறப்புக்களும் நலங்களும் ஒருங்கே அமையப் பெற்ற உலகப் பெருஞ் சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை சூயஸ், பனாமாக் கடலிணைப்புத் திட்டங்களேயாகும். பண்டைக்கால உலகம் மனித இனப் பண்பாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களாக நமக்குப் பல வீர காவியங்களை, பெருங் காவியங்களை அளித்திருக்கிறது. தமிழில் சிலப்பதிகாரம், மணி மேகலை; வடமொழியில் இராமாயணம், பாரதம்; கிரேக்க மொழியில் இலியத், ஓடிஸி; பாரசிக மொழியில் ஷாநமா ஆகியவை இத்தகையன. தற்கால உலகம் எழுத்துருவில் இவற்றுக்கீடான பெருங்காப்பியங்கள், வீர காவியங்கள் எவற்றையும் எடுத்துக் காட்ட முடியாதிருக்கலாம். ஆயினும் செயலுருவில் அத்தகைய வீரகாவியங்களாக இவ்விரு பெருஞ் சாதனைகளும் அமைந்துள்ளன. வரலாற்றிலே, செயலரங்கத்திலே தீட்டிக் காட்டப்பட்ட பெருங் காப்பியங்களாக அவை திகழ்கின்றன. இயற்கையை வென்று மனிதன் ஆற்றியுள்ள செயல்களே அருஞ்செயல்கள். அவற்றுள்ளும் குறிப்பிடத்தக்க பெருமதிப் புடைய பேரருஞ்செயல்கள் இக்கடலிணைப்புத் திட்டங்கள். ஏனெனில் சூயஸ், பனாமா என்ற பெயர்கள் இயல்பாகக் கடற் பகுதிகளின் பெயர்கள் அல்ல. அண்மைக்காலம் வரை அவை நிலப்பகுதிகளாகவே நிலவின. ஆனால் மனிதன் நிலம் பிளந்து கடலாக்கியுள்ளான். அவற்றின் வழியாகக் கடலோடு கடலைக் கலக்கவிட்டு, அவற்றை உலகக் கடல் வழிகளின் உயிர் மையங்கள் ஆக்கியுள்ளான். நிலத்தைக் கடலாக்கி, மலையை மடுவாக்கவல்ல சித்தர் களைப் பற்றிப் பழங்கால மனிதன் கனவு கண்டதுண்டு. பாலை வனத்தைச் சோலைவனமாகவும், பாழ்வெளியைப் பூங்கா நகராக வும் ஆக்கவல்ல மாயாவிகளைப்பற்றி அவர்கள் கதை கூறியதுண்டு. ஆனால் அந்த அழகுக் கற்பனைகளை ஆக்கவளம் தரும் கண் கூடான செயல்களாக்கியுள்ளான், தற்கால மனிதன். சித்தும் செப்படிவித்தையும் இல்லாமல், மாயமில்லாமல், மந்திரமில்லாமல் இயல் நூலறிவின் துணைக்கொண்டே மனிதன் மலை பிளந்து, கடல் மடை திறந்து இயற்கையை ஆள முற்பட்டுள்ளான். கதையல்ல, கற்பனையல்ல இவை ஆனால் கதையுங் கற்பனையும் கடந்த வாய்மையின் வியக்கத்தக்க சாதனைகள்! இயந்திர ஊழியின் வியத்தகு செயல்களிடையே கூட, இவற்றையொத்த மிகப்பேரளவான பெருஞ் செயல்களை உலகம் இதற்குமுன் கண்ட தில்லை. மனித உலகின் அனுபவம்கடந்து சூயஸ் கடற்காலும், சூயஸ் கடற்காலின் அனுபவம் கடந்து பனாமாக் கடற்காலும் தம் சாதனைகளின் அளவைப் பெருக்கியுள்ளன. ஒருவர், இருவர் - ஓராண்டு ஈரண்டு ஆற்றிய பெருமை வாய்ந்த தனிச்செயல்கள் உண்டு. ஏனெனில் அவை ஒவ்வொன்றிலும் நடைமுறைத் திட்டங்களுக்கே பத்தாண்டுகள் பிடித்தன. கோடிக்கணக்கான வெள்ளிகளை அவற்றில் தனிமனிதர், செல்வர்கள் ஈடுபடுத்தினர். பல நாட்டுக் கூட்டுத் தொழிற் கழகங்கள், அரசியல்கள் தத்தம் கருவூலங்களைத் திறந்து அவற்றில் உழைத்தனர். ஆயிரக்கணக்கான பணிமக்கள், நூற்றுக்கணக்கான அறிஞர், பொறிவலாளர் அவற்றின் செயல்முறைப் பணிகளிலும், திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இத்தனை பேரும் சேர்ந்து நிறைவேற்றிய அரும்பணி, கடலிணைப்புத் திட்டங்களின் ஒரு பெரும்படி மட்டுமே. அது நிறைவேற்றப்படி. நிறைவேற்றப் படிக்கு முற்பட்ட கனவுப்படி, முயற்சிப்படி, முன்னேற்பாட்டுப்படி ஆகியவை பல தலைமுறைகள் பல நூற்றாண்டுகள் பிடித்தன. நிறைவேற்றப்படிக்குப் பின்னரும், திட்டங்களின் வளர்ச்சிப்படி, உலக சேவைப்படி ஆகியவை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. * * * உலகின் ஐந்து கண்டங்களில் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய மூன்றும் பழைய உலகம் என்று குறிக்கப்படு கின்றன. ஏனெனில் சென்ற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனித இன வரலாறு கண்ட மாநிலங்கள் இவை. இவற்றுக்கு மாறாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மற்ற இரு கண்டங்களும் புதிய உலகம் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை சென்ற நானூறு ஆண்டுகளுக்குள்ளாகவே நம் பழைய உலகத்தவரால் கண்டுணரப்பட்டுள்ளன. இந்த இருவேறு உலகப்பகுதிகளில், சூயஸ் கடலிணைப்புத் திட்டம் பழைய உலகுக்குரியது. பனாமாக் கடலிணைப்புத் திட்டம் புதிய உலகுக்குரியது. இரு திட்டங்களும் மனித உலக வரலாறளாவப் பரவியுள்ள முழு உலகத்திட்டங்களே. ஆனால் அவ்விரண்டினிடையேயும் பழைய உலகுக்குரிய சூயஸ்திட்டமே தொல் பெரும் பழைமை யுடையது. ஏனெனில் அதன் முழுவரலாறு பழைய உலகின் முழு வரலாற்றளவாகப் பரவியுள்ளது. அதன் கனவுகளும் அரைகுறை நனவு முயற்சிகளும் பழைய உலகின் நாலாயிர ஆண்டு வாழ்விலும் ஒளி வீசுகின்றன. அதே சமயம் பனாமாத் திட்டம் அதன் தொடர்ச்சியாக, தொடர்கிளையாக, புதிய உலகின் வரலாறு முழுவதும் பரவியுள்ளது. புதிய உலகின் நானூறாண்டு வாழ்விலும் அது புகழொளி வீசி வருகின்றது. முன்னது பழைய உலகின் பழம் பெருந்திட்டமானால், பின்னது புதிய உலகின் புதுப் பெருந்திட்ட மாய் இலங்குகிறது. பழைய உலகில் ஆசியா - ஐரோப்பாக் கண்டங்கள் கிட்டத் தட்ட ஒரே பரப்பாகக் கிடக்கின்றன. இப்பரப்பிலிருந்து நடு உலகக் கடல் (ஆநனவைநசசயநேயn ளுநய), செங்கடல் (சுநன ளநய) ஆகியவற்றால் கிட்டத்தட்டத் தனிப் பெரு நிலமாகப் பிரிக்கப்பட்டுக் கிடப்பது ஆபிரிக்கா ஆனால் ஆசியாவிலிருந்து ஆபிரிக்கா முற்றிலும் பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுங்கிய ஒரு நில இடுக்கு அவற்றை இணைக்கும் நில இணைப்பாக அமைந்துள்ளது. இந்நில இடுக்கே சூயஸ் நில இணைப்பு (ஐளவாஅரள டிக ளுரநண) இயற்கையில் நில இணைப்பாகக் கிடந்த இதனை வெட்டியே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சூயஸ் கடலிணைப்புத் திட்டத் தை மனித உலகம் நிறைவேற்றியது. புதிய உலகில் அமெரிக்கா தென் வடலாகக் கிடக்கிறது. இதன் இரு பெரும் பகுதிகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்டத் தனித் தனிக் கண்டங் கள்போல அவை பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் அவை முற்றிலும் துண்டுபட்டு விடவில்லை நீண்டொடுக்கிய ஒரு நில இடுக்கு அவற்றை இணைக்கிறது.இந்நில இடுக்கே பனாமா நில இணைப்பு (ஐளவாஅரள டிக ஞயயேஅய) இயற்கையில் நில இணைப்பாகக் கிடந்த இதனை வெட்டியே மனித இனம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பனாமாக் கடலிணைப்புத் திட்டமாக நிறைவேற்றியுள்ளது. நிலவுலகப் படத்தை நன்கு கவனித்து, அதன் கடல் நிலக் கிடைப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்தால், இந்த இரு திட்டங்களின் இன்றியமையாமையும் பெரும் பயனும் உயிர் முக்கியத்துவமும் இனிது விளங்கும் நிலவுலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப் பகுதிகள். அவை மனித இன, உயிரின வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள். அங்குள்ள கடல்களின் பரப்பு முழுவதும் ஆண்டின் பெரும் பகுதியிலும் பனிப்பாறை மூடியிருப்பவை. மீந்த நாள்களிலும் பனி அரை குறையாகவே உருகிப் பரப்பில் பனி மலைகளும் பனிப் பாளங்களும் மிதந்து திரியும் பனிப் புயலும், சூறாவளிகளும் அவற்றை எங்கும் கொண்டு சுழற்றும். எதிர்ப்படும் எப்பொருளையும் அவை மோதி அமிழ்த்திவிடவோ, நொறுக்கிவிடவோ வல்லவை இதனால் உலகின் கடல் வழிகள் அப் பகுதிகளையோ, அதன் கடல்களையோ அணுகுவதில்லை. கண்டங்களைப்போலவே உலகில் மாகடல்களும் ஐந்து உண்டு. அவற்றுள் வடமாகடலும் (யசஉவiஉ டிஉநயn) தென்மா கடலும்(யவேசயவi உடிஉநயn) துருவப் பகுதிக்குரியவை. ஆகவே அவை மனித உலகின் கடல் வழிப் போக்குவரவுக் குரியவையாய் இயங்கவில்லை. உலகின் எல்லாக் கடல் வழிகளுமே மீந்த மூன்று மாகடல்களில் தான் சென்றாக வேண்டும். ஆனால் பசிபிக் மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்து மாகடல் ஆகிய வாழுலகக் கடல்கள் மூன்றும் தென்கோடியில்தான் ஒன்றுடன் ஒன்று ஒரு சிறிதேனும் இணைகின்றன ஆசியா - ஐரோப்பா - ஆபிரிக்காப் பரப்புக்கள் இந்நிலையில் கடல் வழி செல்பவருக்கு உலகைஇருவேறு பாதிகளாகப் பிரித்து விடுகின்றன. ஏனெனில் அவற்றின் வடபகுதியான ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றின் வடகரை வடதுருவப் பகுதிக்கு உள்ளே சென்று வட மாகடலின் தென் கரைகளாய்க் கிடக்கின்றன. ஆபிரிக்காவின் தென்கோடியோ தென்மாகடலின் பனிப்பகுதியிலிருந்து ஒரு சிறிதே விலகிக் கிடக்கின்றது. ஆசியா - ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்கா வுடன் இணைக்கும் சூயஸ் நில இடுக்கை வெட்டிச் சூயஸ் கடலிணைப்புத் திட்டம் நிறைவேற்றியதன் மூலம் இவ்விரு பாதி உலகங்களும் ஓரூலகமாக ஒன்றுபட இடமேற்படுகிறது. சூயஸ் திட்டத்தின் இன்றியமையாப் பயனும் உயிர் முகியத்துவமும் இதுவே.சூயஸ் கடலிணைப்பு ஏற்படவில்லை யென்றால் அட்லாண்டிக் மாகடலிலிருந்தும் அதன் மேற்கிலுள்ள உலகப் பாதியிலிருந்தும் இந்துமாகடலுக்கும், அதன் கிழக்கிலுள்ள உலகப் பாதிக்கும் போக்குவரவு நடத்த ஒரே வழிதான் உண்டு. கப்பல்கள் ஆப்பிரிக்காக் கரை முழுவதும் சுற்றியாக வேண்டும். இந்நெடுஞ் சுற்று வழியை விட,சூயஸ் திட்டத்தால் ஏற்படும் புதுவழி பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பல நாட் பயணத்தையும், அதற்காகும் பெரும் பணச் செலவையும், தொல்லைகளையும் குறைத்து விடுகிறது.இது போலவே அமெரிக்காவின் தென் வடலான நெடும் பரப்பும் கடல் வழி செல்பவருக்கு உலகை இருவேறு பாதிகளாகப் பிரித்து விடுகிறது. ஏனெனில் வட அமெரிக்காவின் வடகரை வடதுருவப் பகுதிக்குள் சென்று வடமாகடலின் தென்கரையாய்க் கிடக்கிறது. தென் அமொக்காவின் தென்கோடியும் தென்துருவத்தினுட் சென்று தென்மாகடலின் வடபகுதியாய் அமைகிறது. தென்கோடி யிலுள்ள ஒரு சிறு கடற்கால் தான் அருமுயற்சியுடன் அது கடந்து கப்பல்கள் செல்ல வழிவிடுகிறது. வடதென் அமெரிக்காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடலிணைப்பாக்கியதன் மூலம் இவ்விரு பாதி உலகங்களும் ஓருலகமாக ஒன்றுபட இடமேற்படுகிறது. பனமாத் திட்டத்தின் இன்றியமையாப் பயனும் உயிர் முக்கியத்துவமும் இதுவே. பனாமாக் கடலிணைப்பு ஏற்படவில்லையென்றால், பசிபிக் மாகடலிலிருந்தும் அதன் மேற்கிலுள்ள உலகப் பாதியிலிருந்தும், அட்லான்டிக் மாகடலுக்கும் அதன் கிழக்கிலுள்ள உலகப் பாதிக்கும் போக்குவரவு நடத்த ஒரே வழிதான் உண்டு. தென்னமெரிக்காக் கரை முழுவதும் சுற்றியாக வேண்டும். இந்நெடுஞ் சுற்று வழியைவிட, பனாமாத் திட்டத்தால் ஏற்படும் புது வழி பல ஆயிரக்கணக்கான, சில சமயம் பல பதினாயிரக் கணக்கான கல் தொலைவையும், பல நாட்கள், வாரங்களின் பயணத்தையும், அதற்கு ஆகும் பெரும் பணச் செலவையும், தொல்லைகளையும் குறைத்துவிடுகிறது. கடலிணைப்புத் திட்டங்கள் இரண்டுமே இங்ஙனம் உலகை ஓருலகாக்க உதவுகின்றன. உலகக் கடல் வழிப் போக்குவரத்தை விரைவுபடுத்தியும், மிகுதிப்படுத்தியும் உலக வாணிக வளம், தொழில்வளம் ஆகியவற்றைப் பெருக்குகின்றன. * * * சூயஸ், பனாமாத் திட்டங்களுக்குரிய மற்றொரு பெருஞ் சிறப்பு, தமிழகத்துக்குச் அவற்றுக்கும் இடையேயுள்ள பல்வகை உயிர்த் தொடர்புகளாகும் திட்டங்களின் பிறப்பிலும். செயல் நிறைவேற்றித்திலும் தமிழகத்துக்குச் சிறந்த தொடர்புண்டு. அவை தமிழன் உலகளாவிய கனவிலிருந்தே பிறந்தன. அத்துடன் தமிழகம் பற்றி அகல் உலகம் கண்ட கனவுகளும் உண்டு. இக்கனவுகளின் இளவெயிலொளிலேயே திட்டங்கள் வளர்ந்து செயலரங்கம் கண்டன. வருங்காலத்திலும் உலகின் நனவூடாகத் தமிழகத்தின் கனவுகளும் தமிழகத்தின் நனவூடாகத் தமிழகத்தின் கனவுகளும், தமிழகத்தின் நனவூடாக உலகின் கனவுகளும் பின்னிப் பிணைடந்தே உலகின் புதுவாழ்வு அமைய வேண்டும். அப் புது வாழ்வைத் தம் பூம்பந்தராகக்கொண்டு அதை நோக்கியே திட்டங்களின் இளந்தளிர்க் கரங்கள் ஊசலாடு கின்றன எனலாம். மனித நாகரிகம் இன்று தான் ஓருலகம் காணத் துடிக்கின்றது. உலகை ஓருலகாக்க விழைகின்றது. நாடுகள் கடந்த ஒரு பெருநாடாக குடும்ப எல்லையும் நாட்டெல்லையும் கடந்த ஒரு மாபெருங் குடும்ப மாக உலகை ஒன்றுபடுத்த உலக மக்கள் இன்று திட்டமிடுகின்றனர். தமிழருக்கு இது ஒரு புதிய குறிக்கோளன்று. பழந்தமிழகம் தொன்று தொட்டுக் கண்டுவரும் கனவே இது. ‘ஒன்றே குலம்’ ஒருவனே தேவன்! இது பண்டிலிருந்தே தமிழகம் பாடிவரும் பண் தமிழரின் ஒரு கடவுட் கோட்பாடாக மட்டுமே இன்று இது உணரப்பட்டு வருகிறது. ஆனால் பண்ணின் உயிர்க்கூறு அதன் பிற்பகுதியன்று; முற்பகுதியே . மனித இனம் ஒன்று. இது தமிழர் கோட்பாடு இனம் ஒன்றாதலால் இனத்தாயகமான உலகம் ஒன்று இது தமிழர் கோட்பாட்டில் மலர்ந்த மலர்ச்சி தமிழர் பண்பு உலகம் ஒன்றாதலால், அதன் தலைவரான இறைவர் ஒருவரே. இது தமிழர் பண்பாட்டில் விளைந்து முதிர்ந்த இன்கனி - தமிழர் சமயம், தமிழர் நீண்டகால வாழ்க்கைத் திட்டம். இன்பம், வீடு, இறைவன், தலைவர் ஆகிய சொற்களே இவ்வுண்மைக்குச் சான்றுகள் ஆகும். இன்பம் குடும்ப எல்லை கடந்த இன எல்லையில் பேரினமாகிறது. இரண்டின் தலைமைக்கும் தலைவர் என்பதே பெயர். இரண்டின் தாயகமும் வீடே. அத்துடன் இறைவன் நாட்டுத் தலைவனுக்கும் பேரின்பத் தலைவனுக்கும் பொருந்தும் ஒரே சொல். வீடு, நாடு, இனம் என்ற முத்தளங்களில், ஒன்றன் விரிவே மற்றொன்று என்று தமிழர் கருதியதை இது காட்டுகிறது. கால இடங்கடந்து தமிழர் கண்ட கனவைக் கால இடங்கள் வென்றே உலகம் காணமுடியும். இந்நிலை நம் காலத்திலேயே ஏற்பட்டு வருகிறது. விசை ஊர்திகள் (யரவடிஅடிbடைநள யானே டடிஉடிஅடிவநைள), நீராவிக் கப்பல்கள், வான் கலங்கள் (யசைஉசயகவ) பத்திரிகைகள், அஞ்சல் தந்திகள், வானொலி (சயனiடி), தொலை பேசி (வநடநயீhடிநே), தொலை அச்சு (வநடநயீசiவேநச), சேணொலி அல்லது கம்பில்லாத் தந்தி (றசைநடநளள), தொலைக்காட்சி (வநடநஎளைiடிn), சேண்கதிரி (சயனயச) முதலிய இயல் நூல் புதுமைகள் இன்று காலமும் இடமும் துடைத்து உலகைச் சிறிதாக ஆககியுள்ளன. இவற்றைத் தாமும் பயன்படுத்தி, கட லிணைப்புத் திட்டங்கள் மேலும் விரைந்து உலகை ஓருலகாக்கி வருகின்றன. இவற்றின் மூலம் மனித உலகத் தொடர்புகள் - நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள் உள்ள தொடர்புகள் - வீட்டுக்கு வீடு, அறைக்கு அறை நிலவி வந்துள்ள தொடர்புகள் போன்றன ஆகியுள்ளன. ஆண்டுக்கணக்கான, மாதக்கணக்கான பயணங்கள் நாட்கணக்கான, மணிக்கணக்கானவையாகக் குறுகியுள்ளன; மேலும் குறுகி வருகின்றன. கேளாத் தொல்லைகள், காணா இடங்கள் இன்று நேருக்கு நேர் நின்று கேட்டும், கண்டும் பேசும் நிலை அடைந்து வருகின்றன. இவ்வெல்லாப் புதுமைகளும், கடலிணைப்புத் திட்டங்களும் ஓருலக வாழ்வை ஊக்கியுள்ளவையே தவிர, அதன் பயன்களல்ல. அவை பண்டைத் தமிழகத்தின் ஓருலகக் கனவிலிருந்து தோன்றி, உலகின் புது மலர்ச்சி அவாவாகிய ஓருலகத் திட்ட நோக்கி வளர்வனவேயாகும். * * * தற்கால உலகப் போக்குவரவுகள் மூவழியாக நடைபெறு கின்றன. அவையே நில வழி, கடல் வழி வான் வழி என்பன. இவற்றுள் வான் வழி மிகப் பிற்பட்டது.அது பிறப்புற்றதும், பரவி வளர்வதும் நம் 20 ஆம் நூற்றாண்டிலேயே. மற்ற இருவழிகளிலும் நில வழியே முற்பட்டதென்றும், கடல் வழி பிற்பட்டதென்றும் பொதுவாகக் கருதப்பட்டு வருகிறது. இது முற்றிலும் சரியன்று. கடலிணைப்புத் திட்டங்களுக்குரிய கனவுகளின் பழைமை - சிறப் பாக சூயஸ் கனவின் தொல்பழைமை இதைச் சுட்டிக் காட்டுகிறது. நிலவழி செல்பவர் போக்கைக் கடலிடுக்கு குறுக்கிட்டுத் தடுக்க வழியுண்டு. கல் வழியறியாமல் நில வழியாகவே மனிதன் நடமாடிய ஊழிகளிலோ, அல்லது கடல் வழிப் பழக்கமில்லாமல் நிலவழி பரவிய இனங்களிலோ, இத்தறுவாய்களில் கடல்மீது அணைகட்ட அல்லது பாலம் அமைக்க மனிதன் கனவு காண்பது இயல்பு. ஆனால் நில இடுக்குகள் நிலவழி செல்பவர் போக்கைத் தடுக்க முடியாது. கடல் வழி செல்பவர் போக்கையே - சிறப்பாக, நிலவழியை விடக் கடல் வழியையே எளிதாகக் கருதிய ஒரு கடலோடி இனத்தவர் போக்கையே - தடுக்க முடியும். நில இணைப்பை வெட்டிக் கடலணைப்பாக்கும் கனவும் அத்தகைய கடலோடி இனங்களுக்கே உரியது. மேற் கூறப்பட்ட இருவகைக் கனவுகளில் சூயஸ், பனாமாக் கடலிணைப்புக்கள் பற்றியவை பிந்திய வகை சார்ந்தவை. அவற்றுள் பனாமாத் திட்டமும் அதன கனவும் சென்ற நான்கு நூற்றாண்டு களுக்குரியவை. மனித உலகம் அந்நாளைக்குள் கடல் வழி பரவும் நாகரிக உலகமாக வளர்ந்துவிட்ட தென்பதில் ஐயமில்லை. ஆனால் சூயஸ் கடலிணைப்பின் கனவு மட்டுமல்ல, நனவு முயற்சிகளே நாலாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கிட்டத்தட்ட மனித நாகரிகத்தின் தொடக்க காலம், வரலாற்றின் விடியற்போது என்று அந்நாட்களைக் குறிக்கலாம். அவ்வளவு தொல் பழமை மிக்க காலத்தில் உலக முழுதும் கடல்வழி நாகரிகம் பரந்து விட்டதென்று எவரும் கூறமுடியாது. இக்கனவும் நனவுருவான அதன் முதல் முயற்சிகளும் இவ்வாறு கடல்வழி பரவிய உலகின் முதற் கடலோடி இனங்களில் ஒன்றினுக்கே உரியது என்பதை இது வலியுறுத்திக் காட்டும். நிலவழி செல்பவருக்கு, ஒரு கடலிடுக்கே தமிழகத்தலை நிலத்தை இலங்கை அல்லது ஈழத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் வரலாற்றுக்கால முழுவதும் தமிழகக் கடலிடுக்கு தமிழர் வாழ்வில் ஒரு சிறிதும் தொன்றுதொட்டே தமிழர் கடலிடுக்கின் இருதிசைகளிலும் வாழ்ந்து வந்தனர். வாணிக உறவும், மண உறவும் இரு நிலங்களிடையேயும் எப்போதும் நடைபெற்று வந்துள்ளன. அதனுடன் தென்னக மக்கள் இலங்கையிலும், இலங்கை மக்கள் தென்னகத்திலும் பண்டிருந்தே குடிபுகுந்து இடமாறியுள்ளனர். இருதிசை அரசர் பேரரசர்களிடமும் வாணிகக் கப்பற்குழாம் மட்டுமன்றி, கடற்படைகளும், கடற்படைத் தளங்களுமே இருந்தன. தென்னகப் பேரரசர் இலங்கைமீதும், இலங்கைப் பேரரசர் தென்னகத்தின் மீதும் படையெடுத்து வென்றதும் ஆண்டதும் உண்டு. கடலிடுக்கையன்று, அகல் பெருங்கடல்களையே கடந்து தென்னகப் பேரரசர்கள் இலக்கத்தீவம், மாலத்தீவம், அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், மலாயா, தென் கிழக்காசியத் தீவுகள் ஆகியவற்றின் மீது படையெடுத்துச் சென்று அவற்றை வென்று ஆண்டதுண்டு. மேலையுலகில் இதுபோல பினீஷியரும் பிற இனத்தவரும் நடு உலகக் கடலைத் தங்கள் வாணிகத் தெப்பக்குள மாக்கியதுடன், பிரிட்டனுடனும் தொலைதூர அமெரிக்காவுடனும் தொடர்பு கொண்டதுண்டு. புது உலகாகப் பின்னாளில் கருதப்பட்ட இதே அமெரிக்காவுடன் தென்கிழக்காசிய மக்களும் தொடர்பு கொண்டு, அங்கே தம் தொல்பழங்கால நாகரிகம் பரப்பியதாக அமெரிக்கப் பழம்பொருளாராய்ச்சியாளர் கருதுகின்றனர். நடு நிலக்கடலக மக்கள், தமிழினத்தவர், பிற தென்கிழக்காசிய மக்கள் ஆசிய இம்முத்திறத்தவர்களுமே நாலாயிர ஐயாயிர ஆண்டுகட்கு முன்னிருந்தே உலகின் கடலோடி இனங்களாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து உலகெங்கும் நாகரிகம் பரப்பியவர்களாவர். சூயஸ் திட்டம் பற்றி வரலாற்று விடியற்போதிலேயே கனவு கண்ட எகிப்தியர்கள் பண்டை நடு நிலக் கடலக இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. எகிப்தியப் பேரரசர் சூயஸ் நிலக்காலைக் கடற்காலாக்கக் கனவு கண்டதுபோலவே, தென்கிழக்காசியாவில் பர்மியப் பேரரசர் ‘கிரா’ நிலக் காலைக் கடற்காலாக்கக் கனவு கண்டனர் என்று அறிகிறோம். சூயஸூம் பனாமாவும் நிறைவேறியபின்னும், இது இன்னும் உலகின் நிறைவேறாக் கனவாகவே உள்ளதென்பது வியப்புக்குரியதன்றோ? சூயஸ் பனாமாத் திட்டங்கள் இவ்வாறு தமிழக ஓருலகக் கனவுகள் மட்டுமல்ல, தமிழகக் கடல் மரபுடனும் தொடர்பு கொண்டது என்று காணலாம். பண்டைக் கடலோடிப் பேரினங்கள் மூன்றில், நடு நிலக்கடலக இனம், தென்கிழக்காசிய இனம் ஆகிய இரு திசை இனங்களின் இடையே நடுநாயகக் கடலோடி இனமாகத் தமிழகம் பண்டு விளங்கி வந்தது. * * * எகிப்தியர் கனவு கண்டு நனவாக்க விரும்பிய கடற்கால் முதலிலேயே இரு கடல்களை இணைக்க முனையவில்லை. முதலில் அவர்கள் செங்கடலுடன் நீலாற்றையே இணைக்கத் திட்டமிட்டனர். நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட எகிப்தியரின் இம்முதல் திட்டம் அத்தொல்பழங்கால உலக வரலாற்றின் மீது ஒரு புதிய ஒளி படரவிடுகின்றது. எகிப்திய நாகரிகத்தின் உயிர்த் தொடர்புகள் அன்று எகிப்தின் மேல் திசையில் இல்லை,கீழ்த் திசையில்தான் இருந்தன. அக்கீழ்த் திசையுடன் தொடர்பு கொள்ளவே எகிப்தியர் முதற் கனவு அவாவிற்று. கி.மு. 2000 ஆண்டுக்கு முற்பட்டே எகிப்தியர் ‘பண்ட்’ என்ற ஒரு கீழ்த் திசை நாட்டுடன் வாணிக, கலை, நாகரிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமாகிய ‘ஓபிர்’ என்ற இடத்திலிருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலிய பொருள்கள் பெற்று வந்தனர். தங்கள் நாகரிகத்துக்குரிய மூலத் தாயகமே அந்தப் ‘பண்ட்’ நாடுதான் என்றுகூட அந்நாளைய எகிப்தியர் கருதினர். இத்தகைய ஒரு நாட்டினுன் உயிர் வாணகித் தொடர்பு கொள்ளும் அவாவே அவர்களை நேரேடிக் கடற்கால் வழி பற்றிக் கனவு காணத் தூண்டிற்று. தங்கம் விளையும் இந்தப் ‘பண்ட்’ நாட்டையும், அதை ஏற்றுமதி செய்து வந்த ‘ஓபீர்’த் துறைமுகத்தையும் அராபிய, ஆபிரிக்கச் செங்கடற் கரைகளிலோ, கிழக்காப்பிரிக்கக் கரையிலோ நேரடிக் காண மேலையுலக அறிஞர் இடைவிடா முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவற்றின் தடத்தை எங்கும் காண அவர்களால் இயலவில்லை. அதே சமயம் நல்லாயர் கால்டுவெல் (க்ஷiளாடியீ ஊயடனறநடட) அத்தொடர்புகளைத் தமிழகத்தில் தெள்ளத் தெளியக் கண்டு சுட்டிக் காட்டியுள்ளார். ‘பண்ட்’ என்பது தமிழகத்தின் பாண்டி நாடேயென்றும், ‘ஓபீர்’ என்பது தமிழக நெல்லை மாவட்டத்திலுள்ள ‘உவரி’யே என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பழங்கால வரலாற்றுடனும், வரலாறு மூலம் நாம் அறியும் செய்திகளுடனும் இது முற்றிலும் பொருந்துகிறது. ஏனெனில் சங்க கால முதல் - சிந்து வெளி நாகரிக கால முதலே - தமிழகத்தில் குடகிலும், கொங்கு நாட்டிலும், கோலாற்றிலும், வைகை, காவிரிக் கலைகளிலும் தங்கம் வெட்டியெடுக்கப் பட்டு வந்தது. தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம் முதலிய பொருள்களும், அவற்றின் தமிழ்ப் பெயர்களும் பண்டை நாளிலிருந்தே உலகெங்கும் பரவின. அத்தமிழ்ப் பெயர்களே பல உருவிலும் மருவி உலக மொழிகளில் இன்றளவும் அவற்றின் பெயர்களாக வழங்குகின்றன. இதே பொருள்களின் இதே வாணிகம் கி.மு. 2000இல் மட்டுமன்றி, அது முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரையும் உலகின் முக்கிய வாணிகமாய் இருந்து வந்துள்ளது. அத்தொல்பழங்காலத்தில் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொள்ளும் அவாவிலிருந்தே எகிப்தியரின் சூயஸ் கனவு தோன்றிற்று என்பதை இது காட்டுகிறது. * * * சூயஸ் கடற்காலின் தொல்பழங்காலக் கனவுகளிலே மட்டு மல்ல, அதன் தற்கால மறுமலர்ச்சித் திட்டத்திலும் நிறைவேற்றத் திலும் வளர்ச்சியிலுங்கூடத் தமிழகத் தொடர்பின் அவாவே ஊக்கும் உயிர் முதலாய் இயல்வது காண்கிறோம். 15ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை தென் னாப்பிரிக்க நன்னம்பிக்கைமுனை வழியே இந்தியாவுக்கு வரும் வழியாய் இருந்தது. ஆனால் இந்த வழியின் முழுப் பயனையும் பிரிட்டிஷாரே பயன்படுத்தினர். வேறு புது வழி கண்டு இந்திய வாணிகத்திலும், வளத்திலும், அதன் மூலம் வரும் உலக ஆதிக்கத் திலும் போட்டியிட மற்ற மேலை நாட்டவர்கள் பொதுவாக, சிறப்பாகப் பிரஞ்சுக்காரர் அரும்பாடு பட்டனர். பிரெஞ்சு மக்களும் மற்ற மேலை நாட்டவர்களும் காட்டிய இந்த ஊக்கமே சூயஸ் கடற்காலின் புதியமறுமலர்ச்சிக் கனவையும் திட்டத்தையும் முழு அளவில் நிறைவேற்ற உதவின. புதிய மறுமலர்ச்சித் திட்டத்தின் முதல் வடிவிலிருந்தே தமிழக வாணிகத் தொடர்பின் அவாவில் இருந்துவந்த போட்டி சூயஸை ஐரோப்பியப் போர்களுக்கும் உலக வரலாற்றுக்கும் உரியமையமாக்கிற்று. இரண்டு நூற்றாண்டுகளாக உலகநாடுகள், வல்லரசுகள் ஆகியவற்றின் அரசியல் திட்டங்களுக்கும், உலக அரங்கின் கொந்தளிப்புக்களுக்கும் அதுவே மையச் சுழலச்சாக இயங்கி வந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வாணிகத் தையும் செல்வ வளத்தையும் அவற்றின் மூலம் இந்திய ஆட்சி வளத்தையும் உலக ஆதிக்கத்தையும் பிரிட்டனிடமிருந்து கைப் பற்றும் எண்ணம் பிரஞ்சு மாவீரத் தலைவன் நெப்போலியனுக்கு உண்டாயிற்று. அதற்காக அவன் எகிப்தைக் கைப்பற்றி, தென்னகப் பேரரசனான திப்பு சுல்தானுடன் உடன் படிக்கையும் செய்து கொண்டிருந்தான். அந்நோக்கங்களுக்காக சூயஸ் கடலிணைப்புக்கான முதல் முன்னேற்பாடுகளையும் அவனே தொடங்கினான். போரின் போக்கு ஒன்றே அவன் ஆர்வத் திட்டங்களை மண்ணொடு மண்ணாக்கிற்று. நெப்போலியனைப் போலவே 20ஆம் நூற்றாண்டின் முதற் பாதிக்குள் முதல் உலகப் போரில் ஜெர்மன் பேரரசர் கெய்ஸரும், இரண்டாம் உலகப் போரில் இத்தாலிய வல்லாளர் முஸ்ஸோலினி யும் ஜெர்மன் வல்லாளர் ஹிட்லரும் எகிப்தைக் கைப்பற்றி இந்திய வாணிகத்தின் உயிர்ப்பொருத்தான சூயஸையும் கைக்கொள்ளப் பெருமுயற்சிகள் செய்தனர். போர்களின் போக்குகள்தாம் இங்கும் இம்முயற்சிகளை முறியடித்தன. சூயஸின் முக்கியத்துவமும் எகிப்தின் முக்கியத்துவமும் உண்மையில் இந்திய வாணிகத்தின் முக்கியத்துவமே என்பதைப் பிரிட்டன் சூயஸ் வகையில் கொண்டபோக்குகளும், இத்தாலி முதலிய வல்லரசுகளின் போக்குகளும் நன்கு காட்டுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியிலும் பிரிட்டன் சூயஸிலோ எகிப்திலோ சிறிதும் அக்கரை காட்டவில்லை. இந்திய வாணிக வழியாக அது நன்னம்பிக்கை முனை வழியையே தாரக மாகக் கொண்டிருந்தது. அனால் வேறு எந்த வல்லரசுகளும் சூயஸ் அருகில் செல்வாக்குப் பெற்றுவிடாமல் தடுக்க அது விழிப்பா யிருக்கத் தவறவில்லை. சூயஸ் திட்டத்துக்கு ஓயாது முட்டுக்கட்டை போடவும் அது முயன்றது. ஆனால் திட்டம் நிறைவேறியதும் அதன் போக்குமாறிற்று. திட்டத்தின் செயலாட்சிக்குரிய வாணிகக் கழகத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை வாங்கி அது திட்ட ஆட்சியில் முதலுரிமை கொள்ளத் துடித்தது. சூயஸ் கடலிணைப்புக்குரிய நிலப்பகுதி எகிப்தின் ஆட்சிக் குரியது. நெப்போலியனைப் போலவே அதைத் தம் ஆட்சிக்குக் கொண்டுவர 19-20 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டன் முழுமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளது. எகிப்தின் புதிய தேசீய உணர்ச்சியே சூயஸையும் எகிப்தையும் அதன் பேரவாவிலிருந்து காத்துள்ளன. இந்திய வாணிகத்தின் புதுவழியில் சூயஸ் உயிர்ப் பொருத்து மட்டுமே. ஆனால் அவ்வழி முழுவதும் உண்மையில் அவ்வாணிகத்துக்குரிய உயிர் வழியேயாகும். இக்காரணத்தாலேயே சூயஸ், எகிப்து ஆகியவற்றை மட்டுமன்றி, அவ் உயிர்வழியின் ஒவ்வோ ரங்குலத்திலும்தாமே இடம்பெற மேலை வல்லரசுகள் யாவும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் முயன்று, பல படியான வெற்றி தேர்லிவகள் கண்டுள்ளன. பிரிட்டன் இவ்வகையிலேயே ஜிப்ரால்டர், மால்ட்டா, சைப்ரஸ், பிரிட்டிஷ் சோமாலிலாந்து, ஏடன் ஆகியவற்றைக் கைப்பற்றி ஆண்டு வந்துள்ளது. வட ஆபிரிக்காக் கரையெங்கும் ஐரோப்பாவின் வேட்டைக்களமாயிருப்பதும், மொராக்கோ, அல்ஜீரியா, டுனிஸியா ஆகியவை உலகப் போர்க் களங்களாகவோ, அரயில் கொந்தளிப்பு மையங்களாகவோ அமைந்துள்ளதும் இதனாலேயே. மற்றும் இத்தாலி சோமாலிலாந்தில் இடம் பெற்றுக் கொண்டதும், இரண்டு ஆண்டுகள் போர்செய்து அபீசீனியாவைக் கைப்பற்றி ஆளமுயன்றதும் இதே அடிப்படை நோக்கத் துடன்தான் சூயஸ் செயலாட்சிக் கழகத்திலும் படிப்படியாகச் சலுகை பெற்று உயிர்ப்பங்கு பெற முஸ்ஸோலினி கால இத்தாலி பெருமுயற்சி செய்து வந்தது. * * * தமிழக வாணிகத் தொடர்பு பற்றிய அவா சூயஸ் திட்டத்தை யும் அதன் மூலமாக உலகையும் ஆட்டிப் படைத்தது போலவே, பனாமா திட்டக் கனவையும், திட்டத்தையும் தூண்டும் பின்னணியாக நிலவி வந்துள்ளது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலையுலகம் முயன்ற சமயமே, உலகம் உருண்டை என்ற கருத்து உலகில் பரவி வந்த சமயமாகும். ஆகவே கடல்வழியாக நேரே மேற்கே சென்றால், உலகம் சுற்றியாவது இந்தியாவின் கீழ்க்கரை அடைந்துவிடலாம் என்று அன்று மேலையுலகினர் எண்ணினர். நன்னம்பிக்கை முனை வழி புதிதாகக் காணப்பட்ட அதே வேளையிலே, கொலம்பஸ் என்ற கடலோடி இவ்வழி தேடிச் சென்றார். அவர் இந்தியாவை அடையவில்லை ஆனால் புதிய உலகப் பகுதியாகிய அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் பெரும் பேறும் புகழும் அவருக்கு உரியதாயின. இந்தியாவுக்கு மேல்திசைவழி காண எண்ணி உலகம் சுற்றி யவர்களே பின்னாட்களில் ஆஸ்திரேலியாவையும் கண்டுபிடித்தனர். மற்றும் சிலர் தென் கிழக்காசியத் தீவுகளில் இறங்கித் தம் ஆர்வத் தால் அவற்றையும் இந்தியா என்று தவறாக எண்ணிவிட்டனர். இந்தியாவுக்கு வழி காணும் இந்த ஆர்வம் மேலையுலகில் அமெரிக்காவிலும, கீழையுலகில் தென் கிழக்காசியாவிலும் தன் தடம் பொறித்துள்ளது. அமெரிக்கப் பழங்குடி மக்களை இன்றளவும் செவ்விந்தியர் என்றும், அமெரிக்க மெக்ஸிக்கோ வளைகுடாவை அடுத்த தீவுகளை மேலை இந்தியத் தீவுகள் என்றும் வழங்குகிறோம். அது போலவே தென் கிழக்காசியத் தீவுகள் கீழை இந்தியத் தீவுகள் அல்லது இந்தோனேஷியா என்று அழைக்கப்பட்டு வருகின்றன. பனாமாக் கடலிணைப்புக்கும் அதன் வரலாற்றுக்கும் தாயகமான அமெரிக்காக் கண்டமே இவ்வாறு தமிழக வாணிகத்துக்கான புதுவழி அவாத் தந்த பரி ஆகும். அதனுடன் அமெரிக்காவில் முதன் முதலில் கால்வைத்த கடலோடிகள் அது கடந்து இந்தியா செல்லும் ஆர்வத்தில் பனாமாக் கடலிணைப்புப் பற்றியும் கனவு கண்டதாக அறிகிறோம். இவ்வாறு தமிழகக் கனவில் பிறந்த மாநிலத்திலே, தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பு கனவையும் தூண்ட உதவிற்று. * * * உலக வரலாற்றையே, மனித இன நாகரிக வளர்ச்சியையே சூயஸ், பனாமாத் திட்டங்கள் இரண்டும் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழொளியும் வீசுகின்றன. இரு திட்டங்களுமே மனித இனத்தின் செயல்துறைப் பெருங் காப்பியங்கள், வீரகாப்பியங்கள். அம்முறையில் தமிழகத்துக்கும் உலகுக்கும் அவை தரும் படிப்பினைகள் பல. இரண்டிலுமே மனிதன் இயற்கையின் பாரித்த பெருந்தடை களையும் பேரிடர்களையும் தாங்கி, தன அறிவாற்றல், கூட்டுழைப்பு, திட்டமிடும் திறலாண்மை ஆகியவற்றின் மூலமே வெற்றி நிறுவியுள்ளான். அறியாமை, முன் அனுபவமின்மை, எதிர்பாராத் தோல்விகள், மனக் கசப்புக்கள் ஆகியவற்றுக்கு இரண்டுமே ஆளாகியுள்ளன. இரு திட்டங்களிலும் பாலைவனத்தின் வெப்பம், வறட்சி, வெப்ப மண்டலத்தின் கொடிய நோய்கள், கொள்ளைச் சாக்காடு, மிகப் பேரளவான நிலச் சறுக்கல்கள், மலைக்க வைக்கும் பாரப் பொறுப்புக்கள் ஆகியவற்றை மனிதன் சமாளிக்க நேர்ந்துள்ளது. கடைசியாக, இரண்டிலுமே அரசியல் சிக்கல்கள், அவநம்பிக்கைகள், தப்பெண்ணங்கள், கண்மூடிக் கருத்துக்கள், உலக நாடுகளின் போட்டிப் பூசல்கள், குறுகிய நோக்குகள் ஆகியவற்றிடையே மனிதன் நேர்மை என்னும் நேர்வழியும், மனிதத்தன்மை என்ற அகன்ற நோக்கும் கொண்டு ஓருலக மனப்பான்மை வளர்ந்து வந்திருக்கிறான். ஓருலக வரலாற்றுடனும் மனித இன நாகரிக வாழ்வுடனும் வளர்ச்சியுடனும் இந்த ஓருலகச் சாதனைகள் இரண்டும் கொண்டுள்ள தொடர்புகள் இன்னும் குறைந்து விடவில்லை, வளர்ந்து கொண்டுதான் வருகின்றன. ஆண்டு தோறும், மாதந்தோறும், நாள்தோறும் உலக வாணிகத்துக்கு, உலகின் தொழில் வளத்துக்கு, உலக மக்களின் வாழ்க்கை வளத்துக்கு அவை மேன்மேலும் பொங்கல் பெருவளம் அளித்து வருகின்றன. வருங்கால உலகில் இவை இரண்டுமே இரண்டு உயிர் மையங்களாக, மேன்மேலும் வளம் பெருக்கும் இரண்டு வாழ்வு மையங்களாக வளர்ந்து கொண்டே வரும் என்பதில் ஐயமில்லை. 2. சூயஸ் கடற்கால் வரலாறு தற்கால இயந்திர ஊழிக்குமுன், கிட்டத்தட்ட மனித வாழ்வின் நாகரிக சாதனங்கள் யாவுமே கீழை உலகில் தான் தோன்றி வளர்ந்தன. கால்வாய்கள், செயற்கை ஏரிகள், செயற்கைக் கடற்கால்கள் ஆகியவை இப்பொது விதிக்கு விலக்கல்ல. உலகின் முதன் முதல் கால்வாய்கள் தமிழகம், எகிப்து, பாபிலோன் (தற்கால ஈராக்), சீனம் ஆகிய நாடுகளில்தான் வெட்டப் பட்டதாகத் தெரிய வருகிறது. பெருங்கால்வாய்களைச் செயற்கை ஆறுகள் என்று கொண்டனர் தமிழர். வெட்டாறுகள் என்றோ, செய்யாறுகள் என்றோ அவற்றைக் குறிப்பிடுவது தமிழ் மரபு. சங்க காலத்துக்கு நெடுநாள் முன்னரே வேளாண்மை பெருவாக்காயிருந்தது. அரசர் கடமைகளில் ஒன்றாக இதைச் சங்கப்புலவர்கள் வலியுறுத்தினர். அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே, நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண்தட் டோரே- தள்ளா தோர்இவண் தள்ளா தோரே! (புறம். 18) “வான மழையால் வேளாண்மை வளம்பெறும் இடங்கள் இருக்கலாம். ஆனால் இவை அரசன் முயற்சிக்கும் புகழுக்கும் பெருமை தருவனவல்ல. ஆகவே, போர் வீரமிக்க பாண்டியனே! புகழ் தரத்தக்க உன் கடமைகளை நீ புறக்கணிக்காதே. விரைந்து அக்கடமைகளை ஆற்றுவாயாக. நிலம் மேடுபள்ளமாக இருக்கு மிடங்களில் தக்கபடி நீர் கொண்டு சென்று தேக்கிக் கொள்க. இவ்வாறு நீரைக் கட்டுப்படுத்திய அரசர்களே புகழை அணைத்துக் கொண்டவர்கள். நீரைக் கட்டுப்படுத்தாத அரசர்கள் புகழை அணைத்துக் கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்”- இவ்வாறு பாண்டியன் தலையாலங் கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியனிடம் புலவர் குடபுலவியனார் கட்டுரைத் துள்ளார். தமிழக வரலாற்றில் நாம் கேள்விப்படும் முதற் பெருங் கால்வாய் கடல்கொண்ட தொல்பழங்காலத் தமிழகத்துக்குரிய பஃறுளியாறே. தொல்காப்பிய காலப் பாண்டியன் நெடியோன் அல்லது அவனுக்கு முற்பட்ட முன்னோர் வெட்டிய ஆறு அது என்று அறிகிறோம். இச் செயல் எவ்வளவு பழைமையானது என்பதை இன்று நாம் வரை யறுத்துக் கூறமுடியவில்லை. ஆனால் இது சங்க காலத்துக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்டதாயிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. எகிப்திலும், பாபிலோனிலும், சீனத்திலும் கி.மு. 3500 க்கு முற்பட்டே, அதாவது இன்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்டே, கால்வாய்கள் நடைமுறையிலிருந்தன என்று பழைமை ஆய்வாளர் கூறுகின்றனர். பழங்காலக் கால்வாய்கள் முதலில் வேளாண்மைக்குரிய பாசனக் கால்வாய்களாகவே இருந்திருத்தல் இயல்பு. ஆனால் பின்னாட்களில் அவை வடிகால் வசதிகளுக்கும், போக்கு வரவுக்கும் பயன்படுத்தப்பட்டன. தற்காலங்களிலோ, நீர்மின் ஆற்றல் மூலம் அவை எண்ணற்ற இயந்திரத் தொழில்களுக்கும், வாழ்க்கை வாய்ப்பு நலங்களுக்கும் உரியனவாகியுள்ளன. முதன் முதல் போக்கு வரவுக்குப் பயன்பட்ட கால்வாய்கள் எகிப்தில்தான் தோன்றின என்று தெரிய வருகிறது. கி.மு. 500க்கு முற்பட்டே அங்கே கால்வாய்களில் படகுப் போக்குவரவு தங்கு தடையின்றி நடந்து வந்தது. அந்நாளைய கப்பல்கள் போகவர உதவிய கடற்காலும் மிகப் பழங்காலத்திலிருந்தே எகிப்தில்தான் தோன்றிற்று. * * * தற்கால சூயஸ் கடற்காலின் முன்னோடியான நீலாற்றுக் கால்வாய் மிக மிகப் பழமை வாய்ந்தது. அரிஸ்டாட்டில், ஸ்டிராபோ, பிளினி ஆகியவர்கள் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த கிரேக்க அறிஞர்கள். அவர்கள் காலத்திலேயே அது பழங்கதை ஆகியிருந்தது. கால்வாயின் புகழை அவர்கள் கி.மு. 2000இல் வாழ்ந்த எகிப்திய மன்னன் செஸோஸ்திரிஸுக்கு உரிமை யாக்கியுள்ளனர். பண்டைய எகிப்திய மன்னர்கள் பரோவாக்கள் என்று கட்டப் படுகின்றனர். அவர்கள் பெயரால் நீலாற்றுக் கால்வாய் பரோவாக்களின் கால்வாய் என்று வழங்கிற்று. அது இன்றைய சூயஸ் கடற் காலைப் போல நடுநிலக் கடலிலிருந்து தொடங்கவில்லை. நீலாற்றிலிருந்து பிரியும் பெலியூஸக் ஆற்றின் கிளையான பூபாஸ்டிஸிலிருந்தே அது புறப்பட்டது. துமிலாத், கைப்பேரி (க்ஷவைவநச டயமந) ஆகியவற்றைக் கடந்து அது செங்கடலிலே சென்று முடிவுற்றது. ஆனால் அந்நாளில் செங்கடல் கைப்பேரிக் கருகாமை வரை பரவியிருந்தது. இடைக்காலத்தில் கடல் பின்வாங்கிய காரணத்தால், பழைய கால்வாய் முடிவுற்ற இடம் இன்று நிலமாக மாறிக் கிடக்கிறது. நீலாற்றுக் கடற்காலின் பிறப்புக்குத் தொல்பழங்கால வரலாறும், தொல்பழங்கால வரலாற்றுக்கு நீலாற்றுக் கடற்காலின் பிறப்பும் சில ஒளிவிளக்கங்கள் தருகின்றன. தமிழகத்துக்கும் எகிப்துக்கும் உள்ள தொடர்பு கி.மு. 2000க்கும் முற்பட்டது என்று அறிகிறோம். ஏனெனில் தொடக்கக்கால எகிப்திய பாரக் கூம்புகளிலேயே (ஞலசயஅனைள) தமிழகத் தேக்கும் பிறபொருள்களும் பயன்பட்டிருந்தன. ஆனால் கி.மு. 2000க்கும் கி.பி. 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழக எகிப்திய வாணிகத் தொடர்பு புது மலர்ச்சி பெற்றுத் தழைத்தது. இதுவே தமிழக மேலையுலக வாணிகமாக உலக வரலாற்றுக் காலமுழுவதும் இடையறாது 19ஆம் நூற்றாண்டு வரையும் அது கடந்தும் நிலவி வருகிறது. கி.மு. 2000க்கு முன் நாகரிக உலகின் வாணிக முழுவதும் இருபெருவழிகளில் இயங்கிற்று. ஒன்று சீனத்திலிருந்து ஆசிய நடுமேட்டு வழியாக எகிப்து சென்றது. மற்றது தென்கிழக்காசியா விலிருந்து தமிழகக் கடல் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி. இரண்டாவது வழி இடையிடையே தென்கிழக்காசியா விலும் தமிழகத்திலும், சூயஸ் அருகிலும் நிலவழியூடாகச் சென்றது. இவ்விரு பெருவழிகளில் முன்னையது கி.மு. 2000 இல் இருந்து கி.பி. 1200 வரை மூவாயிர ஆண்டுகளாக உலக வரலாற்றி லிருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. ஏனெனில் இந்த மூவாயிர ஆண்டுக் காலங்களிலும் இவ் வழிக்கு வடதிசையில் ஏற்பட்ட பருவ மாறுதலால், அங்கே பெருந்திரளாக உலவிவந்த பண்படா நாடோடி இனங்கள் பல அவ்வழியெங்குமுள்ள நாகரிக இனங்களின் மீது அலையலையாகப் பரவத் தொடங்கின. இதனால் அந் நாகரிக இனங்களின் வாழ்வு சீர்குலைந்து, வழியும் பயன்படாது போயிற்று; இதனால் தமிழகத்தினூடாகச் சென்ற கடல்வழி ஒன்றே கி.மு. 2000 முதல் நாகரிக உலகின் ஒரே வழியாயிற்று. தமிழகக் கடல்கள் மட்டுமன்றி, நில வழிகளும் இத்தென்னுலக வழியில் நடுநாயகப் பங்கு கொண்டதனால், தமிழகத்தில் முன்னிலும் பன்மடங்காக வாழ்வும் வளமும் பொங்கலுற்றன. தொல்பழங்காலத் தமிழகத்தின் முத்தமிழ், முச்சங்க வாழ்வு இப்பொங்கல் வளத்தின் ஒரு கூறே யாகும். எகிப்தியப் பேரரசர்களான பரோவாக்களை நீலாற்றுக் கால்வாயின் கனவில் தூண்டியது தமிழக வாணிகத்தின் இப்புது மலர்ச்சியில் பங்கு கொள்ளும் அவாவேயாகும். ஏனெனில் தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல் வழியாகத் திறந்த கடற்காலாக வும், மறு திசையில் ஆற்றுடன் இணைந்த ஆற்றுக் கால்வாயாகவும் இயங்கிற்று. ‘பண்ட்’ என்ற பெயரால் தமிழகப் பாண்டி நாடும், ‘ஓபிர்’ என்ற பெயரால் தங்கம் ஏற்றுமதி செய்யும் தமிழகத் துறைமுகமும் எகிப்திய வரலாற்றில் புகழ் பெற்ற காலம் இதுவே. கி.மு. 1380இல் வாழ்ந்திருந்த எகிப்திய மன்னன் முதலாம் சேதி ‘கர்னாக்’ என்னுமிடத்தில் நிறுவிய கல்வெட்டு ஒன்றின் மூலமாக, பரோவாக்களின் கால்வாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்பட்டு வந்திருந்ததென்று அறிகிறோம். ஆனால் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குள் அது எக்காரணத்தாலோ பேணுவாரற்றுத் தூர்ந்து போய்விட்டது. அடுத்த நூற்றாண்டின் இறுதியில் மன்னன் நெக்கோ (கி.மு. 612இல்) தன் பாலஸ்தீனப் பெருவெற்றிகளின் பின் 1,20,000 போர்க்கைதிகளை வேளையிலீடுபடுத்தி நீலாற்றுக் கால்வாயைச் செப்பனிட முயன்றான். ஆனால் அவன் அமைச்சர்களுக்கு இப்பணி பிடிக்கவில்லை. கால்வாய்க்கு அப்பால் வாழ்ந்த நாகரிகமற்ற முரட்டு இனங்கள் அதன் வழியாக வந்து செல்வ வளமிக்க எகிப்தின் மீது பாயக் கூடுமென்று அவர்கள் அஞ்சினர். இது காரணமாகக் கால்வாய்த் திட்டம் கைவிடப்பட வேண்டியதாயிற்று. கி.மு. 6,5ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடு உலக முழுவதும் வெற்றிவீரரான பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. அவர்களில் பேரரசன் டேரியஸ் (கி.மு. 526இல்) கால்வாய் புதுப்பிக்கும் வேலையில் ஆரவாரத்துடன் ஈடுபட்டு, அச்செயலைத் தன் கல்வெட்டு விளம்பரங்களிலும் பெருமையுடன் விரித்துரைத்தான். ஆயினும் வேலையின் கடைசிப் பகுதி எக்காரணத்தாலோ தொடர்ந்து முற்றுவிக்கப் பெறாமல் நின்றுவிட்டது. ஆனால் அடுத்த பேரரசன் ஸெர்க்ஸிஸ் (ஓநசஒநள) காலத்தில் கால்வாய் முற்றிலும் சீரமைக்கப்பட்டு, படகும் போக்கு வரவு அதில் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது. படகுகள் கால்வாயை முழுவதும் கடக்க அக்காலங்களில் நான்கு நாட்கள் பிடித்தன.கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடு உலக அரசியல் வாழ்வில் மீண்டும் பெருமாறுதல் ஏற்பட்டது. கிரேக்கப் பேரரசன் அலெக்ஸாண்டர் பாரசீகர்களை வென்று நடு உலக முழுவதும் தன்னடிப் படுத்தினான். அவனுக்குப்பின் அவன் படைத்தலைவர் களும் மரபினரும் அதன் பல பகுதிகளில் ஆட்சி செய்தனர். எகிப்தின்மீது ஆட்சி செலுத்திய இந்தக் கிரேக்க மரபினரில் டாலமி பிலாடெல்பஸ் (கி.மு. 285) என்பவனும், யூர்கெடிஸ் என்பவனும் (கி.மு. 246) கால்வாயை முற்றிலும் சீரமைத்ததுடன், செங்கடலிலுள்ள ஆர்சினோ என்ற துறைமுகத்துடன் அதை இணைத்தனர்.டாலமி பிலாடெல்பஸ் கால்வாயைச் செங்கடலுடன் மட்டு மின்றி, நடுநிலக்கடலுடனும் இணைக்கக் கனவு கண்டான் என்று அறிகிறோம். சூயஸ் கனவு இவ்வாறு கடற்கால் கனவாகவே கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுவது காகிறோம். ஆயினும் இக்கனவு செயற்படவில்லை. செங்கடலின் நீர்ப்பரப்பு மட்டத்துக்கும் நடு நிலக்கடலின் நீர்ப்பரப்பு மட்டத்துக்கும் வேற்றுமை இருந்ததென்ற அச்சமே இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. கடற் காலின் கன்னிக் கனவு பிறக்கு முன்பே இவ்வச்சம் அதை நிறைவேறாக் கனாவய் அடங்கச் செய்துவிட்டது. இந்த அச்சம் எவ்வாறு ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆனால் எவ்வாறு ஏற்பட்டாலும் கடற்கால் திட்டத்தை இரண்டாயிர ஆண்டு ஒத்திப் போடச்செய்த அச்சமாக அது அமைந்தது. கிட்டத்தட்ட நம் நாகரிகக் காலத்திலேயே, கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை, இது எளிதில் நீக்க முடியாத நீடித்த நம்பிக்கையாய் இருந்து வந்தது. ஆராயாக் குருட்டு நம்பிக்கைகள் நாகரிக ஊழிகளில் கூட எவ்வளவு விடாப்பிடியாய், அறிஞர் அறிவைக்கூட மறைக்குமளவு, வேரூன்றி விடக்கூடும் என்பதை இது காட்டுகிறது. * * * கிறிஸ்தவ ஊழி தொடங்குவதற்கு முன்னே நடுவுலக அரங்கம் முழுவதிலும் மீண்டும் பெருமாறுதல் ஏற்பட்டது. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப்பேரரசு விரிவுற்று ஐரோப்பாவின் தென்பகுதி, ஆசியாவின்மேல்பகுதி, ஆபிரிக்காவின் வடபகுதி ஆகிய பெரும் பரப்பு முழுவதையும் தன் கொடிக்கீழ்க் கொண்டு வந்தது. எகிப்து அப்பண்டை உலகப் பேரரசின்ஒரு மாகாணமாய் விட்டது. உரோமப் பேரரசனான திராஜன் கி.பி. 98இல் கால்வாயை விரிவுபடுத்தினான். கால்வாய் தொடங்குமிடத்தை அவன் பூபாஸ்டிஸ் ஆற்றிலிருந்து பாபிலோன் என்று அழைக்கப்பட்ட கெய்ரோ வரை கொண்டு சென்றான். விரிவுபடுத்தப்பட்ட இக்கால்வாயை நாம் இரண்டாம் நீலாற்றுக் கால்வாய் என்னலாம். அந்நாளில் அது திராஜன்கால் என்றும் ஆக்ஸ்டஸ் கால் என்றும் வழங்கிற்று. எச்.ஆர்.ஹால் போன்ற சில தற்கால வரலாற்றாசிரியர் இந்த இரண்டாம் கால்வாய் உரோமப் பேரரசர் காலத்துக்கேயுரிய தன்று என்றும், பின்னாளைய அராபிய ஆட்சியாளர் ‘அம்ரு’ வுக்கே உரியதென்றும் கூறுகின்றனர். இது எவ்வாறானாலும், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் காலத்துக்குள் அது மீண்டும் பாழடைந்து விட்டது. உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்றும இரண்டு நூற்றாண்டுகளுக் குள்ளாக, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எகிப்து அராபியர் ஆட்சிக்குட் பட்டது. அராபிய ஆட்சியில் எகிப்துத் தலைவராயிருந்த ‘அம்ரு’ கால்வாயைச் செப்பனிட்டு மீண்டும் பயன்படுத்தினான். இதனாலேயே அது ‘அம்ரு’வின் கால்வாய் என்றும், ‘இஸ்லாமியத் திருநெறிக் கால்வாய்’ (ஊயயேட டிக வாந குயiவாகரட) என்றும் வழங்கலாயிற்று. ஆட்சித் தலைவர் ‘அம்ரு’ கால்வாயைத் ‘திமாஷ்’ ஏரியிலிருந்து வடக்காகக் கொண்டு சென்று நடுநிலக் கடல்வதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.ஆனால் கடற்காலின் இந்த இரண்டாவது கனவும் அரசியல் சட்டங்கள் காரணமாக நிறைவேறாது போயிற்று. மேல்திசைக் கிறிஸ்தவ நாடுகள் அதைப் பயன்படுத்தி வளர்ச்சியடைய நேரிடுமென்று இஸ்லாமிய உலகம் அன்று கருதிற்று. இரண்டாவது அபாசீத் கலிபாவான ஜாபர் அலி மன்சூர் கி.பி. 776 இல் இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை முன்னிட்டுக் கால்வாயை மூடி விடும்படி கட்டளையிட நேர்ந்தது. அந்நூற்றாண்டிலேயே ஹரூன் அல்ராஸ்சித் என்ற புகழ் சான்ற மன்னன் கால்வாயை விரிவுபடுத்த முன்வந்தான். ஆனால் முன்னேறி வரும் துருக்கியின் கடற்படை அராபிக் கரை வர அது உதவிவிடும் என்ற அரசியல் அச்சம் இதைத் தடுத்தது. இதன்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, கி.பி. 1000இல் சுல்தான் ஹாக்கிம் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றும், அம்முயற்சி வெற்றி காணவில்லை. 15ஆம் நூற்றாண்டில் நடுவுலகெங்கும் பரவித் துருக்கியின் தலைமையில் இயங்கத் தொடங்கிய இஸ்லாமியப் பேரரசில் எகிப்து ஓர்அங்கமாயிற்று. இந்நாட்களில் எவரும் பேணாத நிலையில் கூட, கால்வாயின் பெரும் பகுதியிலும் நீலாற்றின் நீர் இயல்பாகப் பாய்ந்து நிரம்பி வந்ததனால், அது 19ஆம் நூற்றாண்டுவரைகூட மக்களுக்குப் பயன்பட்டே வந்தது. துருக்கியின் மேலாட்சியின் கீழ் எகிப்தை ஆண்ட பாஷா முகமத் அலி 1811இல் அதை மூடும்படி கட்டளையிட்டபின்கூட இந்நிலை முற்றிலும் மாறவில்லை. ஏனெனில் மூடுவேலை அரைகுறையாகவே நிறைவேற்றப்பட்டது. இதனால் 1861இல் சூயஸ் கடற்கால் திட்டவேலை தொடங்கிய பின்னும் பூபாஸ்டிஸ் முதல் காசாசின் வரை நீலாற்று நீர் மெல்ல மெல்ல ஓடிச் சென்று கொண்டுதான் இருந்தது. கடற்கால் திட்டத்தின் முதற் படியான நன்னீர்க்கால் அமைக்க, திட்ட வேலையினர் இந்தப் பழங்கால்வாயின் தடத்தையே பயன்படுத்தினர். இவ்வாறு நாலாயிர ஆண்டுகளுக்கு மேலாக நீலாற்றுக் கால்வாய் சூயஸ் கடற்கால் திட்டத்தின் முன்னோடி முதற் படியாக அமைந்தது. ஆனால் அது இதனுடன் நின்று விடவில்லை. புதிய மறுமலர்ச்சித் திட்டத்தினுள்ளும் அது திட்டக் கூறாகப் புகுந்து நிலவரமாகப் பயன்பட்டது. படகுக் கால்வாய் புதிய ஊழியில் பாசன, குடிநீர்க் கால்வாயாகப் புதிய வடிவம் பெற்றுப் புதுப்பயன் கண்டது. நீலாற்றுக் கடல்முகத்தை அடுத்துள்ள கால்வாய்ப் பகுதி இதன் பின்னும்கூட முற்றிலும் தடமழியாமல் 1897 வரையிலுமே நீடித்திருந்தது. அதனை முற்றிலும் மூடி நிரப்பிச் சமதளப்படுத்த ஆட்சியாளர் அவ்வாண்டில் ஆணை பிறப்பித்து நிறைவேற்ற வேண்டிவந்தது. * * * மார்க்கோபோலோ போன்ற உலகு சூழ்வரவாளர் மூலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் நிலவழியில் கீழ்த்திசையுடன் புதுத் தொடர்பு ஏற்பட்டது. மூவாயிர ஆண்டுகளுக்கு முன் நடைமுறை யிலிருந்த ஆசியப் பெருவழியின் ஒரு பகுதி இப்போது தமிழகக் கடல் வழியுடன் அராபியாவின் கடற்கரையில் சென்று இணைந்தது. மேல் திசையில் இவ்வாணிகத் தொடர்பால் வெனிஸ் நகரம் வளமும் வலிமையும் செல்வாக்கும் புகழும் பெற்றது. 15ஆம் நூற்றாண்டு வரை மூன்று நூற்றாண்டுகளாக அது மேலையுலகின் கடலரரசியாகவும், ஒரு கடற் பேரரசின் மையமாகவும் திகழ்ந்தது. வெனிஸியரின் இத்தனிப் பெருவளங் கண்டு மற்ற ஐரோப்பிய நாட்டினர் பொருமினர். அவ்வாணிகத் தொடர்பில் பங்கு கொள்ளவும், போட்டியிடவும் துடித்தனர். ஆனால் திடீரென நிலைமையில் எதிர்பாரா மாறுதலேற்பட்டது. 1453இல் மேலையுலகக் கலைத் தலைநகரான கான்ஸ்டான்டினோப்பிள் துருக்கியர் கைப்பட்டது. நடு உலகெங்கும் துருக்கிப் பேரரசாட்சி பரவி, எகிப்து அதன் மாகாண மாயிற்று. கீழ்த்திசை வாணிக வழி இதனால் மேலை யுலகுக்கு முழுவதும் அடைபட்டது. தமிழக உயிர் வாணிகத்தின் தொடர்பிழந்த வெனிஸ் உலக வரலாற்றில் பின் என்றுமே மீளாவகையில் படு வீழ்ச்சி யடைந்தது. தான் வகித்திருந்த புகழ்ப் பேரரசு நிலையை முற்றிலும் இழந்து, இத்தாலி நாட்டு நகரங்களுள் அதுவும் ஒரு நகரமாய் அமைந்து விட்டது. நிலவழி அடைபட்டதனால் கீழ்த்திசை வாணிக அவா தடைபட்டு விடவில்லை. அது மேல்திசையெங்கும் அடக்க முடியா ஆர்வத்துடிப்பாய்க் குமுறி எழுந்தது.அதனுடன் கீழ்த்திசை வளம்பற்றிய பல கற்பனைக் கதைகள் 16ஆம் நுற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை மேல் திசையெங்கும் பரவியிருந்தன. தமிழகம் உள்ளடக்கிய இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் சீனா ஜப்பானிலும் பொன்னும் ஆடையணி மணிகளும் பிற அரும்பொருள்களும் மரங்களிலேயே தாமாகப் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கின என்று அத் திசைகளில் நம்பப்பட்டு வந்தது. இது வாணிக நாட்டத்தைப் பெருக்கிப் புதுவழித் தேட்டத்தை ஊக்கிற்று. ஆனால் நன்னம்பிக்கை முனைவழி ஒன்றே இதன் பயனாக உருப்படியான வழியாய்ச் சமைந்தது. 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை அதுவே போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரஞ்சுக்காரர், பிரிட்டிஷாரர் ஆகியோருக்குரிய ஒரே கீழ்த்திசை வழியாய் இயங்கிற்று. நன்னம்பிக்கை முனைவழி நாளடைவில் பிரிட்டிஷாருக்கே யுரிய நல்வாழ்க்கை நெறியாய் விட்டது. இந்திய வாணிக வளமும் இந்திய நில ஆட்சியும் அவர்களுக்கு ஐரோப்பாவில் செல்வ வளத்திலும், செல்வாக்கிலும் முதன்மையளித்து வந்தது. முன்பு வெனிஸியரின் தனிவளம் கண்டு பிரிட்டனும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் பொறாi கொண்டது போலவே, இப்போது பிரிட்டனின் தனி வளங்கண்டு மற்ற ஐரோப்பிய நாடுகளும், வெனிஸுமே பொறாமை கொண்டன. இதனால் மீண்டும் போட்டி நாட்டமும் புதுவழித் தேட்டமும் பொங்கி எழுந்தன. இப் பொறாமையிலும் போட்டியிலும் புதுவழித் தேட்டத்திலும் பிரான்சு முனைப் பான பங்கு கொண்டது. ஏனெனில் ஐரோப்பிய அரசியல் வாழ்விலும் நடுநிலக் கடலாட்சியிலும் ஏற்கெனவே அது புதுவளம் பெற்று வளர்ந்து வந்தது. கீழ்த்திசை வாணிகம், ஆட்சி சிறப்பாக இந்திய வாணிகம், இந்திய ஆட்சி ஆகியவற்றின் மூலம் அது பிரிட்டனுடன் உலக ஆதிக்கப் போட்டியில் முனைய அவாக் கொண்டது. * * * நீலாற்றுக் கால்வாய்த் திட்டங்களிடையே கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒரு தடவையும், கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஒரு தடவையும் கடற்கால் பற்றிய கனவு காணப்பட்டதுண்டு. 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளிடையே பொதுவாகவும், பிரஞ்சு நாட்டினரிடையே சிறப்பாகவும் நிலவி வந்த போட்டி யார்வம் புதுவழி நாட்டம் ஆகியவை மீண்டும் கனவுகளையும் ஆர்வத்திட்டங்களையும் தூண்டின. ஆனால் மீண்டும் அச்சங்களும் சூழ்நிலைகளும் குறுக்கிட்டுத் திட்ட நிறை வேற்றத்தைப் பின்னும் சில நூற்றாண்டுகள் ஒத்தி வைத்தன. வீழ்ந்து விட்ட தம் நாட்டின் புகழ் வளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் எண்ணத்துடன் வெனிஸிய வாணிகத்தூதுக் குழு ஒன்று கி.பி. 1504இல் ஒரு புதுமுயற்சியிலீடுபட்டது. இச்சமயம் சூயஸும் அந்நிலப்பகுதியை உட்கொண்ட எகிப்தும் துருக்கியின் மேலாட்சிக்கு உட்பட்டிருந்தன. அம்மேலுரிமையின் கீழ் எகிப்தை ஆட்சி செய்த பாஷாவைத் தூதுக்குழு அணுகிற்று. சூயஸ் நில இணைப்பைக் கடற்காலாக வெட்டிப் புதுவழி காண அவரிடம் குழுவினர் கோரினர். ஆனால் பாஷாவும் துருக்கி மேலாசியும் இதனை விரும்பாததால், அவர்கள் ஆர்வ அவா நிறைவேறாது போயிற்று. அதே நூற்றாண்டின் இறுதியில் பாஷா யூட்ஸ் லி புதுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்பினார். இதைக் கேள்வியுற்றுத் தன்வயமிழந்தவர் பிரஞ்சு மன்னர் மூன்றாம் ஹென்ரி.ஏனெனில் அவர் கீழ்த்திசை வாணிக வளம், கீழ்த்திசை ஆட்சி ஆகியவை பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தார். தம் ஆர்வம் நிறைவேறும் நாள் வந்துவிட்டதாகவே கற்பனைக் காட்சி கண்டு அவர் மகிழ்ச்சிக் கூத்தாடத் தொடங்கினார். ஆனால் திட்டம் வீண் செலவில் கொண்டு விடுமேயன்றிச் செயல் வெற்றி தராது என்று பாஷாவின் அமைச்சர்கள் கருதினர். இதனால் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. அரசர்,ஆட்சியாளர் கனவுகள் இப்போது மக்களிடையே பரவின. பேராசிரியர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், கடலோடிகள் செயலார்வலர்கள், பொறிவலாளர்கள், அரசியல் மேதைகள் ஆகியோர், புதுவழி பற்றியும், அதன் அரசியல் நலங்கள், வாணிக நலங்கள் பற்றியும் பேசவும் எழுதவும் முற்பட்டனர். சிலர் கடற்கால் கெய்ரோவிலிருந்து தொடங்க வேண்டுமென்றும், வேறு சிலர் அது நில இணைப்பில் ‘தாமெத்தோ’த் துறைமுகத்திலிருந்து தொடங்கவேண்டு மென்றும் கருத்தளித்தனர். ஜாக்ஸ் ஸாவ்ரே என்பவர் ‘நிறை வாணிகன்’ என்ற ஓர் ஏட்டில் பிந்திய கருத்தி வலியுறுத்தி யிருந்தார்.அதில் அவர் புதிய வழியினால் செலவு குறையும் என்பதையும், ஆதாயம் பெருகும் என்பதையும் வாணிக உலகுக்கு எடுத்துரைத்தார். தமிழக வளம் நாடியதன் இடைவிளைவாக மேலையுல குக்குப் ‘புதிய உலகின்’ வளங்கள் கிடைத்திருந்தன. ஆனால் 18ஆம் நூற்றாண்டில் வல்லரசுகளிடமிருந்து அவை கை நழுவிப் போயின. பிரான்சு கானடாவை இழந்தது. பிரிட்டன் அமெரிக்கக் குடியேற்றப் பகுதிகளை இழந்தது. அதே சமயம் இந்திய வாணிக வளமும் தமிழகம் பற்றிய மேலையுலகக் கனவும் உச்சநிலை அடைந்தன. மேற்கில் இழந்ததைக் கிழக்கில் ஈடுசெய்யப் பிரிட்டனும் பிரான்சும் மும்முரமாக முயன்றன. இது அவர்கள் போட்டியை வளர்த்தது. மக்களிடையேயும் அறிஞரிடையேயும் நிலவிய கடற்கால் திட்டம் இப்போட்டியிடையே மேலும் ஊக்கம் பெற்றது. ஜெர்மன் பேரறிஞர் லைப்னிட்ஸ், பிரஞ்சு மாமன்னன் பதினான்காம் லூயியின் நண்பராயிருந்தார். எகிப்தையே கைப்பற்றி இந்தியாவுக்குரிய புதிய வாணிகவழி அமைப்பதே பிரான்சின் வருங்கால வளத்துக்கும் வலுவுக்கும் ஏற்றது என்று அவர் மன்னருக்கு அறிவுரை கூறினார். ஆனால் பிரஞ்சு அயல் நாட்டமைச்சர் எகிப்தை எதிர்க்க விரும்பவில்லை. நேச உறவு மூலமே உடன்படிக்கை உரிமைகள் பெருக்க அவர்கள் அவாவினர். இவ்வரசியல் போட்டியிடையே தனி மனிதரும் வணிகரும் தத்தம் நாட்டு நலங்களுக்குரிய சூழ்நிலைகளை அமைப்பதில் முனைந்தனர். நடுஉலக அரசுகள் இதுவரை கிறிஸ்தவ நாடுகளுக்கு எந்த உரிமையும் அளிக்க மறுத்து வந்தன. ஆனால் ‘கோல்பெர்ட்’ என்பவர் அவற்றின் ஆதரவு பெற்றுச் செங்கடல் துறைமுகங்களுடன் வாணிகஞ் செய்யும் உரிமை பெற்றார். அதைச் செயல்படுத்தக் கூட்டுக் கழகம் ஒன்றும் அமைத்தார். பிரிட்டிஷாரும் இதற்கீடாக, எகிப்தியத் துறைமுகங்களில் உரிமைபெற்று ‘லெவாண்ட் கழகம்’ என்ற நிறுவனம் ஒன்று அமைத்தனர். அதனுடன் பிரிட்டிஷ் கடலோடிகள் உரிமை யுடனும், உரிமை மீறியும் எகிப்தியக் கடல்களில் ஊடாடினர். எகிப்து மூலம் பிரான்சு கீழ்த்திசை வாணிகமும் ஆட்சியும் பரப்ப முயன்று வந்தது என்பதைப் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் தம் அரசியலுக்கு அடிக்கடி தெரிவித்து எச்சரிக்கை செய்துவந்தனர். ஆனால் பிரிட்டன் நடுநிலக் கடலில் பிரான்சுக்குச் சரிசமமாக உரிமை பெறுவதில் மட்டுமே நாட்டங் கொண்டிருந்தது. எகிப்தில் பிரான்சு காலூன்றி விடாமலும் ஒருகண் ஓடவிட்டு வந்தது. எனினும் சூயஸ் வழிபற்றி அது எத்தகைய கனவுகளும் காண வில்லை, எத்தகைய அச்சமும் கொள்ளவில்லை. நன்னம்பிக்கைமுனை வழியிலேயே தன்னம்பிக்கையுடன் மனநிறைவு கொண்டமைந்தது. இதற்கேற்ப, 1785 இல் ‘ஜேம்ஸ் காப்பர்’ என்ற ஆங்கிலேயர் ‘இந்தியாவுக்குரிய வழி’ என்ற ஏட்டில் சூயஸ் வழியின் கேடுகளை எடுத்துக்காட்டி, நன்னம்பிக்கைமுனை வழியே சிறப்புடையதென்று வாதாடியிருந்தார். பிரிட்டிஷ் அரசியலார் கருத்துக்கோணத்தின் நிழற்படப் பதிவாக இது அமைந்தது. பிரஞ்சுப் புரட்சியையடுத்து 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பிரிட்டிஷ் அரசியலாரின் மேளாப்புக்கு ஒரு பேரதிர்ச்சி தந்தன. பதினான்காம் லூயிக்குப் பேரறிஞர் லைப்னிட்ஸ் தந்த அதே போதனையைப் பிரஞ்சு அரசியல்வாணர் தாலிராந்து பிரஞ்சு மாவீரப் படைத்தலைவன் நெப்போலியனுக்கும் வழங்கினான். எகிப்தில் பிரஞ்சுத் தூது மனைத் தலைவராயிருந்த சார்ல்ஸ் மக்கெல்லனும்,பிரஞ்சு ஆட்சியாளரும் இதற்கு ஆதரவுதந்து இசைவளித்தனர். 1798இல் நெப்போலியன் நடுஉலகில் தன் பிடி பரப்பி எகிப்துமீது படையெடுத்தான். எகிப்தைக் கைப்பற்றியதுடன் நெப்போலியன் நிற்கவில்லை. சூயஸ் கடல்வழி திறப்பதற்கான செயல்முறை ஏற்பாடுகளிலேயே இறங்கினான். திட்டத்துக்கான நில அளவை ஆராய்ச்சிகளும் தொடங்கப்பட்டன. இந்தியாவுக்குப் புதுவழி காணும் இம்முயற்சியுடன் முயற்சியாக, கீழ்த்திசையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பேரெதிரியாகிய தென்னகப் பேரரசன் திப்பு சுல்தானுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்துகொண்டான் அவன். இந்தியப் பேரரசுக் கனவை இது பிரிட்டிஷ் அரசியலாருக்கு முதல் தடவையாக வெட்ட வெளிச்சமாகக் காட்டிற்று. கடலமைப்புத் திட்டத்திற்கெனப் பிரான்சில் எகிப்துக் கழகம் என்ற ஒரு கூட்டமைப்பையே ஏற்பட்டிருந்தது. அதன் சார்பில், அதன் உறுப்பினர்களாகப் பொறிவலாளரும், திட்ட நுணுக்கத் துறை அறிஞரும் நெப்போலியன் படையுடன் படையாகச் சென்றிருந்தனர். ஜே.எம்.லெப்பேர் என்ற பிரஞ்சுப் பொறிவலாளர் தலைமையில் நில அளவை ஆராய்ச்சிகள் முற்றுப்பெற்றன. ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் முதல் கடற்கால் கனவுக்குக் குந்தமாக ஏற்பட்டிருந்த அச்சம் இப்போதும் தலை காட்டிற்று. நடுநிலக் கடல் மட்டத்தைவிடச் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவையாராய்ச்சியின் பின் லெப்பேர் முடிவு செய்தார். இதை ‘லாப்லேஸ்’, ‘புரியர்’ ஆகிய சிலர் மறுத்தனரானாலும், இக்கருத்துக் காரணமாக, கடற்கால் திட்டம் கைவிடப்பட்டு, பழைய கால்வாயே திருத்தியமைக்கப் படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. லெப்பேரின் திட்டப்படி 15 இலட்சம் பொன் செலவில் 10,000 வேலையாட்களுடன் வேலை 4 ஆண்டுகளில் முடியும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. எகிப்திலும் ஐரோப்பியத் தலைநிலத்திலும் நெப்போலி யனுக்கு ஏற்பட்ட தோல்விகளின் பயனாக, நெப்போலியனின் திட்டத்தை மட்டுமன்றி, கீழ்த்திசைப் பேரரசுக் கனவையே பிரஞ்சு அரசியலார் கைவிட நேர்ந்தது. * * * நடு உலகில் துருக்கியின் வலிமை 19ஆம் நூற்றாண்டில் படிப்படியாகத் தளரலாயிற்று. சிறப்பாக 1829இல் கிரீசு, அதன் பிடியிலிருந்து விலகி விடுதலை பெற்றபின், அதன் பேரரசுநிலை பெயரளவிலேயே மேலுரிமையாயமைந்தது. இதன் பயனாக பாஷா முகம்மது அலியின் ஆட்சியில் எகிப்து வளமும் அமைதியும் கண்டு வளர்ச்சியுற்றது. கீழ்த்திசைக்குரிய வாயில் என்ற முறையில் அதற்கு இப்போது புதுமதிப்பு ஏற்பட்டது. மேலையுலகில் எகிப்து மேலை நாடுகளின் கவனத்துக்குரிய கவர்ச்சிமயமாக வளர்ந்தது. கீழ்த்திசைக் கனவு வளருந்தோறும் மேலை வல்லரசுகள் தத்தமக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆதரவுகளையும் பெறுவதற்காக, எகிப்திய பாஷாவுடன் தூதுறவு கொண்டு அவர் நேசம் பெறுவதற்காகப் போட்டியிட்டனர். தூதர்களின் அரசியல் சூழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவற்றினிடையே பாஷாவின் ஆற்றல் மேன்மேலும் வளர்ந்து வந்தது. நெப்போலியன் காலமுதல் பிரிட்டிஷார் அரசியல் துறையிலே எகிப்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண் டிருந்தனர். இருந்த போதிலும் இந்தியாவுக்குரிய நிலைத்த வழியாகச் சூயஸை அவர்கள் நெடுநாள் மதிக்கவில்லை. இந்நிலையில் ஒரு பிரிட்டிஷார் செயலே உலகின் அக்கருத்தை வலியுறுத்தி சூயஸ் கடற்கால் திட்டத்தை விரைவுபடுத்த உதவியது வியப்பேயாகும். அவரே லெப்டினண்டு வாக்ஹார்ன் ஆவர். கீழ்த்திசை அஞ்சல்கள் 19ஆம் நூற்றாண்டு வரை நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்று கொண்டிருந்தன. ஆயினும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே எகிப்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு வாக்ஹார்ன் எகிப்து வழியாக இந்தியாவுக்கே அஞ்சல் வழி வகுக்க எண்ணினார். 1829, 1830ஆம் ஆண்டுகளில் அவர் இதற்கான கடல் நில வழிகளைத் தாமே நேரில் சென்று ஆராய்ந்தார். நன்னம்பிக்கை முனை வழியாகச் செல்வதைவிட இந்த வழியில் செல்வதில் 70 நாட்கள் குறைவாகும் என்பதைத் தம் அனுபவத்திலிருந்தே வாக்ஹார்ன் 1835இல் எடுத்துக் காட்டினார். அதன்பின் 1837இல் புதிய அஞ்சல் வழி ஏற்பட்டது. பி. அண்ட். ஓ. குழாத்தினர் (ஞநniளேரடயச யனே டீசநைவேயட ஊடிஅயீயலே) அதன் பொறுப்பேற்றனர். அவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசிய லாருக்கும் இவ் வகையில் ஒப்பந்தம் உருவாயிற்று. கடலிலிருந்து கடலுக்கு எகிப்திய நில வழியில் அஞ்சல் போக்குவரவு இணைக்கும் பொறுப்பை வாக்ஹார்னே ஏற்றுக்கொண்டார். பின்னாட்களில் சூயஸ் திட்டத்தை நிறைவேற்றிப் பெரும் புகழ் பெற்றவர் ‘பெர்டினாண்ட் டி லெஸப்ஸ்’ தம் பணிக்கு வாக்ஹார்ன் வழிகாட்டியாயிருந்து செய்த சேவை எவ்வளவு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதை உலகுக்குத் தெரிவிக்கும் முறையில் அவர் கடற்காலின் வாயில் முகப்பிலேயே வாக்ஹார்ன் உருவச்சிலை ஒன்றை எழுப்பினார். அதன்கீழே பொறிக்கப்பட்ட கற்பொறிப்பில் ‘எகிப்து வழியாக அஞ்சலிணைப்பு ஏற்படுத்த முடியும் என்று காட்டியதன் மூலம், இரு கடல்களை இணைக்கும் கடலோடி வாணிக வழிக்கு வழிகாட்டிய முதல்வர்’ என்று வாக்ஹார்னை அவர் பாராட்டியுள்ளார். லெப்டினன்ட் வாக்ஹார்ன் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் லெட்டினன்ட் கர்னல் எப். ஆர். செய்னி, லினன்ட் பே ஆகியவர்கள். இரு கடல் மட்ட வேறுபாடு பற்றிய அச்சம் கடற்கால் திட்டத்துக்கு எவ்வளவு முட்டுக்கட்டை போட் டிருக்கிறது என்பதைச் செய்னி உணர்ந்தார். அதன் உண்மை கண்டறிய அவர் அளவை ஆராய்ச்சிகளில் முனைந்தார். ஆனால் இது முடிவான பயன் தரவில்லை. இரண்டாவது நண்பரான லினன்ட் பே 1841க்குள் கடற்காலுக்கான ஒரு திட்டத்திலேயே முனைந்தார். பெலூஸியத்திலிருந்து சூயஸ் வரை கடற்கால் வகுக்கும் திட்டத்தை அவர் வெளியிட்டார். பின்னாட்களில் கடற்கால் திட்டம் வகுத்தவர்களுக்கு இதுவே முன் மாதிரி அடிப் படையாய் அமைந்தது. 19ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலே சமயச் சார்பான கழகமாகிய தூய திரு சைமன் சங்கத்தினர் தம் உலகத் திட்டத்துடன் திட்டமாக சூயஸ் பனாமாக் கடற்கால் திட்டங்கள் பற்றியும் பிரசாரம் செய்து வந்தனர். அடிக்கடி சூயஸ் திட்டத்தைச் செயற் படுத்துவதில் அவர்கள் ஆர்வமுயற்சி மேற்கொண்டனர். சங்கத் தலைவர் 1825இல் இயற்கையெய்தி விட்ட பின்னும் சங்கம் மேலும் திட்டப் பிரசாரத்தில் தொடர்ந்தது. 1833இல் அவர்கள் செயல் துறையில் இறங்கியபோதிலும் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் 1846இல் அவர்கள் திட்ட வேலையை மேற்கொள்ள ஒரு சர்வதேசக் கூட்டுக் கழகம் அமைத்தனர். திட்ட நிதிக்காக 1,50,000 பொன் வரை பங்குகள் திரட்டினர். திட்ட வேலையை மேற்பார்வையிடவும் அறிவுரை கூறவும் சைமன் சங்கத்தார் மூவரடங்கிய ஒரு வல்லுநர் குழு அமைத்தனர். மூவரும் மூன்று நாட்டுக்குரியவர்கள். திட்டத்தின் நிலப்பகுதியின் மூன்று அரங்கங்கள் அம்மூவர் பொறுப்பிலும் விடப்பட்டிருந்தன. நெக்ரெல்லி என்ற ஆஸ்டிரியர் நடுநிலக் கடற் பக்கமுள்ள வட அரங்கத்துக்கும், ராபர்ட் ஸ்டீபென்சன் என்ற ஆங்கிலேயர் செங்கடற் பக்கமுள்ள தென் அரங்கத்துக்கும், பாலின் தலபாட் என்ற பிரஞ்சுக்காரர் நடுவரங்கத்துக்கும் பொறுப்பளராக்கப் பட்டனர். திட்ட முன்னேற்பாடுகள் இவ்வாறு வெற்றிகரமாக விரைந்தன. ஆனால் அரசியல் சூழ்நிலைகள் அதை மேலே செல்லவிடாமல் தடுத்தன. பிரான்சும் ஆஸ்டிரியாவும் இந்த அறவோர் சங்கத் திட்டத்துக்கு ஆதரவளித்தன. ஆனால் பிரிட்டன் கடலிணைப்பில் முற்றிலும் இரண்டக நிலையே கொண்டிருந்தது. அது கடலிணைப்பில் தானும் நம்பிக்கை கொள்ளவில்லை. அதே சமயம் பிறர் அதை மேற்கொள்ளவும் விடவில்லை. ஏனெனில் நன்னம்பிக்கை முனை வழிக்கு மாற்று வழி அமைவதையோ, நடுவுலகருகே வேறு எந்த வல்லரசும் வலுப்பெற்று விடுவதையோ அது விரும்பவில்லை. இக்காரணங்களால் அது கடற்கால் திட்டத்துக்கு எதிர்த் திட்டமாக அலெக்ஸாண்டிரியா - கெய்ரோ இருப்புப் பாதைத் திட்டம் ஒன்று வகுத்து அதற்கு 1834ஆம் ஆண்டு பாஷாவிடம் உரிமை பெற்றிருந்தது. கடற்கால் திட்டத்தைக் கெடுத்து இதை நிறைவேற்ற அது பாடுபட்டது. இச்சமயம் பாஷா முகமத் அலி 80 வயதுடையவரா யிருந்தார். அவர் துணிந்து அரசியலில் எப்பக்கமும் சாயாமல், கடற்கால் திட்டம், இருப்புப் பாதைத் திட்டம் ஆகிய இரண்டுக்குமே இசை வளிக்காமல் காலங் கடத்தி வந்தார். ஆனால் 1849இல் அவர் மறைவுக்குப் பின் அடுத்து வந்த பாஷா அப்பாஸ் பிரிட்டிஷார் பக்கமே சாய்ந்தார். இதனால் இருப்புப்பாதைத் திறக்கப்பட்டது. கடற்கால் திட்டத்துக்கு விடிவு ஏற்படாமல் அது பின்னும் தூங்கிக் கொண்டிருந்தது. தூய திரு சைமன் சங்கத்தினரின் ஆர்வத்திட்டம் பிரிட்டனின் எதிர்ப்பால் இவ்வாறு கருவிலே முறிவுற்றாலும், அதனால் கடற்கால் திட்டத்துக்கு ஓர் அரிய நலன் ஏற்பட்டது. லெப்பேரின் அளவை யாராய்ச்சியின்போது, நீர் மட்ட வேறுபாடு பற்றிய அவர் முடிவை லாப்லேன்ஸும் புரியரும் மறுத்திருந்தனர். ஆனால் 1846-47இல் தூயதிரு சைமன் சங்கத்தைச் சார்ந்த பேராசிரியர் ‘அன்பாந்தின்’ நிறுவிய ஆராய்ச்சிக்கழகம் (ளுடிஉநைவந ‘ன’நவரனநள) இதனை ஆய்ந்து கணித்தது. அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது என்று அக்கழகம் முடிவு செய்து விட்டது. தமிழக ஓருலகக் கனவைத் தாயாகவும், தமிழகம் பற்றிய உலகக் கனவைத் தந்தையாகவும் கொண்டு மேலையறிஞர் கனவுக் கருவில் உருவாகிவந்த உடற்கால் திட்டம், இவ்வாறு பிரிட்டனின் தொலைநோக்கற்ற குறுகிய ஆதிக்க எண்ணத்தால் கருவிலே பலபலவகைத் தொல்லைகளுக்கு இலக்காயிற்று. திட்ட முதல்வராகிய பெர்டினாண்ட்டி லெஸப்ஸ் அதற்கு ஓர் ஒப்பற்ற மருத்துவராய் அமைந்தனாலேயே,அதன் நிறைவேற்றப் பேறு எளிதாகி, ஓருலக அன்னையின் மடியில் அது தவழ இடமேற்பட்டுள்ளது என்னலாம். 3. சூயஸ் திட்ட முதல்வரும் திட்டமும் எகிப்திய உலகின் இரண்டு பேரூழிகளாலும், மூன்றாம் ஊழியில் நான்கு நூற்றாண்டுக்கால உலக அரசியல்களாலும், அறிஞர்களாலும்,நிறுவனங்களாலும் நிறைவேற்றப்பெறாத உலக அரும்பெருஞ் செயல் சூயஸ் கடற்கால் திட்டம். ஆனால் அவற்றின் முடிவில் ஒருதனி மனிதரின் அயரா உழைப்பால், ஒப்பற்ற ஒரு வீரத்தியாகியின் ஆர்வ வாழ்க்கைப் பணியால் அது இனிது நிறை வேற்றம் உற்றது. அந்த ஒரு தனிமனிதரே, ஒப்பற்ற வீரத்தியாகியே பெர்டினாண்ட் டி லெஸெப்ஸ். திட்டம் கனவுகண்ட பழய ‘ஓருலகு’க்கும், திட்டம் வளர்த்துப் பயன் நுகர்ந்து வரும் நம் புதிய ‘ஓருலகு’க்கும் இடையே - ஓருலகக் கனவுக்கும் ஓருலக நனவுக்கும் நடுவே தனிமனித உருவான ஒரு பாலமாய அவர் விளங்குகிறார். உலகச் செய்ல உருப்பெற உதவிய உரவோர், உலக மனிதர் ஆவர் சூயஸ் பெருங்காப்பியத்திடையே, வீர காதையிடையே அவர் வாழ்க்கை ஒரு பெருங்காப்பியம், ஒரு வீரகாதை. அவர் தனி வாழ்க்கை கிட்டத்தட்டத் தொடக்கமுதல் இறுதிவரை இன்னல்கள், இடர்கள் நிரம்பியது.அதன் முடிவுகூட இருள் சூழ்ந்ததென்றே கூறவேண்டும். ஆனால்அவர் அதனிடையே ஒளிப்பிழம்பாய்த் திகழ்கிறார். ஏனெனில் அவர் வாழ்க்கை முழுவதுமே ஒரு உழைப்பு,அயரா உழைப்பாய் அமைந்தது. அவ்வுழைப்பும் அவர் ஒரே குறிக்கோளாக இலக்கிய உலகத்திட்டம் பற்றியதே. திட்டத்துடன் அவர் கொண்ட தொடர்பின் ஒவ்வொரு கூறும் முற்றிலும் பொன்னான கூறு - பொன்துகள், பொற்கம்பி, பொன் தகடு, பொற்பாளம்! அவர் புகழ் மேனியை அது கலப்பற்ற பொன்மேனியாகத் திகழ வைக்கிறது. அவர் தாயக அரசியல் அவரை ஒறுத்ததுண்டு, பழித்ததுண்டு. ஆதரவுதந்து பாராட்டி வாழ்த்தியதுமுண்டு. பிரிட்டனில் மக்களும் மாமன்னரும் அவருக்கு ஆதரவு காட்டியதுண்டு, அவரை மதித்ததுண்டு அதே சமயம் பிரிட்டனின் அரசியலார் அவரை ஓயாது மறைமுகமாக எதிர்த்து அவர் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை இட்டனர். ஆனால், ‘மெய்த்திருவந் துற்றபோதும், வெந்துயர் வந்துற்றபோதும் ஒத்திருக்கும் உள்ளத்து.’ உரவோராக அவர் புகழ்வானில் என்றும் ஒளிவீசுகிறார். உலகுவாழ வாழ்ந்தவர் அவர். உலகு புகழினும் இகழினும், போற்றினும், புறக்கணிப்பினும் அவ்வுலகு வாழவே வாழ்ந்த பெரியார்களுள் அவர் ஒருவர். மலர் பொலிவுற்று வாழ்வதற் காகவும், சிறுவர் சிறுமியர் விளை யாடுவதற்குரிய பொன்சிறகுகள் உதிர்ப்பதற்காகவுமே விரைந்து வாழ்ந்து மடிந்துவிடும். பொன் சிறைத்தும்பிபோல, உலகுக்கு அவர் தம் முழு ஆற்றலுடன் நல்லனவே செய்தளித்து விட்டு, அல்லனவற்றைத் தாம் பரிசாகக் கொண்டு சென்றார். அவரைப் பெற்ற தாயகம் பிரான்ஸ். அதற்கு அவர் வாழ்வு பெருமை அளித்தது. திட்டக் கனவில் தோய்ந்த அவரது உற்ற தாயகம் எகிப்து.அதற்கு அவர் வாழ்வு பீடளித்தது. பெருவாழ்வுக் காலங்கள் கூடக் காணாத உயிர்த் தேசீயப் புகழை அத் தேசத்திற்கு அவர் பணி வழங்கிற்று. அவருக்கு ஓயாது இடர்செய்த சேயகம் பிரிட்டன். திட்டத்தில் பெரும்பயனுகர்ந்தது அதுவே. உலகுக்கோ அவர் அளித்த திட்டம் ஓருலகத்திட்டம், அதனுடன் ஓருலகப் பண்பும் இணைய அளித்த பெருமை அவருக்கே உரியது. சூயஸ் திட்டத்தில் அத்திட்ட நிறைவேற்ற மூலம் பழைய ஓருலகையும் புதிய ஓருலகையும் இணைத்தவர் மட்டுமல்லர் அவர். பழைய உலகுக்குரிய சூயஸ் திட்டத்தையும் புதிய உலகுக்குரிய பனாமாத் திட்டத்தையும் உள்ளார நின்றிணைக்கும் தமிழகக் கனவே போல, அவற்றைப் புறநின்றிணைக்கும் வாழ்வாக அவர் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் சூயஸ் திட்டத்தில் இன்னல்கள் பலவும் கடந்து அவர் பெற்றது வெற்றி, புகழ் பனாமாத் திட்டத்திலோ அவர் பெற்றது தோல்வி, தோல்வி மேல் தோல்வி, பழி எனினும் இரண்டிலும் அவர் உள்ளார்ந்த பெருமை ஒன்றே - ஒன்றில் அவர் உலகின் தோல்விகள் மீது வெற்றி கண்டார்; மற்றதிலோ தன் தோல்வி மீது உலகம் வெற்றி காணும்படி விட்டுச் சென்றார். * * * பெர்டினாண்ட்டி லெஸெப்ஸ் பிரான்ஸ் நாட்டிலுள்ள வெர்செயில் என்ற நகரில் 1805ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பிறந்தவர். அவர் குடும்ப மரபு பிரான்சின் உச்ச உயர்தள அரசிய லரங்கத்துக்குரியது.அவர் தந்தை மாத்யூடி லெஸெப்ஸ் எகிப்தில் பிரஞ்சுத் தூது மனைத் தலைவராயிருந்தார். பாஷா முகமதலி பதவிக்கு வர உதவியவர் அவரேயாதலால், அவருக்கு எகிப்தில் செல்வாக்கும் மதிப்பும் மிகுதியாயிருந்தது. பெர்டினாண்டின் இளமைக் காலத்தில் எகிப்திய பாஷா முகமதலியின் இளையபுதல்வர் முகமத் சயீத் அவருக்கு தோழராகவும் நண்பராகவும் இருந்தார்.அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நட்பு நீடித்தது சூயஸ் திட்டத்திலே இருவர் புகழும் இணைமலராகப் பிற்காலத்தில் பின்னி வளர்ந்தது. இளவரசர் நட்பு அவருக்குத் தந்த மதிப்பைவிட,அவர் இனிய தோற்றமும், நடையும், திறமையும், நய நாகரிகமும் அவருக்கு மிகுதியான புகழும் மதிப்பும் தந்தன. அவர் குதிரை ஏற்றத்திலும் கேளிக்கைகளிலும் வல்லவராக விளங்கினார். அவர் பேச்சுக்கள் எல்லோரையும் கவர்ந்தன. எகிப்தியரிடையேயும் ஐரோப்பியரிடையேயும் இளமையிலேயே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. எகிப்திலேயே துணைத் தூதுவராகச் சில காலம் இருந்த பின் அவர் மார்ரிக் மாநகரில் அமைச்சராகப் பதவி பெற்றார். இதன் பின் 1837 வரை தூதுவராயிருந்து, ராட்டர் டாம் மாநகருக்கு மாற்றப் பெற்றார். 1849 இல் அவர் ரோம் நகர் வந்தார். இத்தனை பணிகளிலும் அவர் ஒரு சிறிதுகூட உழைப்பிலும வாய்மையிலும் குறைபடவில்லை. ஆயினும் எப்படியோ தாயகத்தில் அவரிடம் பொறாமை கொண்டவர்கள் அவர்மீது பழியும் குற்றமும் சாட்டினர். தீர்ப்பும் அவருக்கு எதிராயிருந்தது. அவர் பதவிகளைத் துறந்தார். ஆனால் பதவி இழப்பைவிட, குற்றச் சாட்டின் கறையே அவரை வேதனைக்குள்ளாக்கிற்று. இன்னொருவர் வாழ்வில் இளமையின் இந்தத் தோல்வியும் கசப்பும் வாழ்க்கை யார்வத்துக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கும். ஆனால் லெஸெப்ஸின் இயல்பும் பண்பும் வேறு வகையாயிருந்தன. தோல்விகள் பின்னும் சீரிய பெருஞ் சேவைக்கே அவரைத் தூண்டின. அவர் பதவி காலப் பயணங்களில் ஒன்றில் அவர் கப்பல் சில நாட்கள் ஒரே இடத்தில் தங்கிக்கிடக்க வேண்டிவந்தது. அப்போது பொழுது போக்குவதற்காக அவர் புரட்டிய புத்தகங்களிடையே லெப்பேரின் சூயஸ் கடலிணைப்புத் திட்ட அறிக்கை அவர் கண் களில் பட்டது.அது எப்டியோ அவர் கருத்தைக் கவர்ந்தது. அவர் பொழுதைப் போக்க மட்டும் அது உதவவில்லை. அது அவர் சிந்தனையைத் தூண்டிக் கற்பனையை வளர்த்தது. பயணத்திடையே ஏற்பட்ட இத்தடங்கலே அவர் வாழ்க்கைப் பணிக்குரிய விதை விதைப்புப் பருவமாய் அமைந்தது. அவர் உள்ளம் ஓயாது அவ்வறிக்கை யிலேயே ஆழ்ந்து திளைத்தது; அதைச் செயல் துறைக்குரிய ஓர் ஆர்வத் திட்டக் கோட்டையாக்கிற்று. பதவியிலிருந்து ஒதுங்கியதும் அவர் இதையே தம் வாழ்க்கைப் பணியாகத் தேர்ந்தெடுத்தார். அதைச் செயல் துறைக்குக் கொண்டு வருவதற்குரிய வேளை, வகை துறைகளை அவர் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார். எகிப்தில் இச்சமயம் டச்சுத் தூதர் மனைத் தலைவராயிருந்தவர் அவருடன் ராட்டர்டாம் நகரில் பழகியவர் 1852இல் அத்தலைவருக்கு அவர் ஒரு முடங்கல் வரைந்தார். சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கான உரிமையை அவர் மூலமாகவே எகிப்திய பாஷா அப்பாஸிடம் கோரினார் பாஷா அப்பாஸ் இதில் ஒரு சிறிதும் கருத்துச் செலுத்த வில்லை. ஆயினும் லெஸெப்ஸ் முயற்சியில் தளரவில்லை. விரைவில் காலம் அவருக்கு உதவிற்று. அவர் இளமைக்கால நண்பரே பாஷாவின் பீடமேறினார். இதன் பின் லெஸெப்ஸ் 1854 இல் மறுபடியும் உரிமைகோரி முடங்கல் தீட்டினார். பாஷா சயீதின் மறுமொழி ஆட்சியாளரின் வழக்கமான மறுமொழி வடிவில் வரவில்லை. நண்பரை எகிப்துக்கே வரவழைக்கும் அன்பழைப்பு வடிவாக அது வந்தது. பாஷா அவருக்கு அளித்து வரவேற்பும் ஓர் அரசியல் தூதுவரை வரவேற்கும் முறையில் அமைந்தது. அவர் நண்பரை நண்பரென்ற முறையிலே ஆர்வமுடன் அணைத்து உண்டாடி உலாவி மகிழ்ந்தார். இவ்வாறு ஆட்சியாளரே நண்பராக அமைந்தாலும், அரசியல் தகுதியும் முறையும் உணர்ந்த லெஸெப்ஸ் அதை உடனே பயன்படுத்திக் கொள்ளவில்லை.அவர் தக்க தறுவாயறிந்துபேசக் காத்திருந்தார் நவம்பர் 15ஆம் நாள் மாலையுலாவின்போதுபேச்சு இயல்பாக லெஸெப்ஸ் கோரிக்கைப் பக்கமாகச் சாய்ந்தது. எடுத்த எடுப்பிலேயே பாஷா திட்டத்தை ஏற்று ஆவன செய்வதாக இன்முகத்துடன் உறுதியளித்தார். 1854ஆம் ஆண்டு நவம்பர் 15இல் வாய்மொழியாக அளிக்கப் பட்ட இவ்வுரிமை, நவம்பர் 30க்குள் எழுத்து வடிவம் பெற்றது. அரசியல் தொழில் முறை ஏற்பாடுகளின் பின் 1856ஆம் ஆண்டு ஜனவரி 5க்குள் அது துறை நுணுக்க விரிவான அரசியல் பத்திர உரு அடைந்தது. இவ்வாறு இருவர் நட்பின் அருமையிலே, இருகடல்களின் இணைப்புத் திட்டத்துக்கு விதை தூவப்பட்டது. * * * 1854இலும் 1856இலும் லெஸெப்ஸுக்குப் பாஷா அளித்த இந்தச் சலுகைகளே சூயஸ் திட்டத்துக்கும்ஆட்சிக் குழுவுக்கும் உரிய அடிப்படை மூல உரிமைகளாகும்.அவற்றில் காலத்துக்குக் காலம் சூழ்நிலைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்பச் சிறிய, பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டதுண்டு. ஆனால் இச்லுகைகளின் மூல எழுத்துப்படிவமே அவைகளனைத்துக்கும் உரிய அடிப்படைப் பத்திரமாய் அமைந்தது. இச்சலுகைகளின்படி சூயஸ் நில இணைப்பை வெட்டி அதனூடாக ஒரு கடற்கால் அமைக்கும் உரிமை பெர்னாண்ட்டி லெஸெப்ஸுக்கும் அவர் தலைமையில் அமையும் உலகளாவிய கூட்டுக் கழகத்துக்கும் பாஷாவால் அளிக்கப்பட்டது. கூட்டுக் கழகம் சூயஸ் கடற்கால் முழுஉலகக் கழகம் (ஊடிஅயீயபnநை ருniஎநசளநடடந னர ஊயயேட னந ளுரநண) என்ற பெயருடன் நிலவ வேண்டும். தரப்படும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளிலிருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் முடிவில் வழங்கியவரிடமே அது மீண்டுவிடும். கழகம் எகிப்திய அரசியலுக்கு ஆண்டுதோறும் நிகர ஆதாயத்தில் 15 சதமானம் இறைவழியாகச் செலுத்த வேண்டும். கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்பு வசதிகள் அரசியலாரால் கழகத்துக்கு விட்டுத்தரப்படும். இவை தவிர, நுணுக்க விரிவான உரிமை வகுப்பில் கட்டுப் பாடுகளும், சலுகைகளும் தொகுக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் சில குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் திட்ட வரலாற்றில் அவை எதிர் பாராச் சிக்கல்கள் விளைவித்தன. கடற்கால் வேலைகளில் ஐந்தில் நான்கு பங்கு தொழிலாளர் கள் எகிப்தியராயிருக்க வேண்டுமென்பது ஒரு கட்டுப்பாடு. இதற்கெதிராக,வேண்டிய அளவு எகிப்திய வேலையாட்களை அளிக்கும் பொறுப்பை எகிப்திய அரசியலின் சார்பில் பாஷாவே ஏற்றுக் கொண்டிருந்தார். அவர்களுக்குரிய உணவும், உறையுளும் குறிப்பிட்ட கூலியும் மட்டுமே கழகத்தில் பொறுப்பு பின்னாட் களில் இவ்விதி முழுவதுமே மாற்றப்பட வேண்டியதாயிற்று. சலுகைகளிலும் இதுபோலத் தொல்லை தந்த பகுதி உண்டு. கால்வாய்ப் பகுதியில் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாஷா விட்டுக் கொடுத்திருந்தார். பல சிறப்புரிமைகளையும் கழகத்துக்குத் தந்திருந்தார். தவிர, கழகம் எகிப்தியச் சட்டங்களுக்கும் எகிப்தியச் சூழல்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் உட்பட்டதானாலும், அதன் உலகளாவிய சேவை வலியுறுத்தப்பட்டு, பெயரும் ‘முழு உலகக் கழகம்’ என்று வரையறுக்கப்பட்டிருந்தது. சூயஸ் கால்வாய்ப் பகுதி எகிப்துக்குரியது. எகிப்து அரசியல் இச்சமயம் கிட்டத்தட்டத் தன்னுரிமை உடையதாகவே இருந்தது. ஆயினும் துருக்கி பெயரளவிலேனும் மேலுரிமை தாங்கி வந்தது. பாஷாவும் அம்மேலுரிமையை மதிக்கத் தவறவில்லை. திட்ட உரிமை முழு விரிவுடன் வகுக்கப்பட்ட பின்னும், துருக்கி சுல்தான் ஏற்பிசைவு பெற்ற பின்னரே வேலை தொடங்க வேண்டுமென்றும் கழகம் அமைக்க உதவுவதற்காக மட்டுமே, பத்திரத்தின் கைப்படியை அனுப்புவதாகவும் பாஷா லெஸெப்ஸுக்குத் தெரிவித்திருந்தார். முழு உலகக் கழகம் அமைப்பதற்கான முன்னேற்பாடாகப் பாஷா ஒரு சர்வதேசக்குழு அமைத்தார். அவ்வமைப்புக்காக 1855 அக்டோபரில் பாரிஸிலுள்ள லெஸெப்ஸின் மாளிகையிலேயே பல நாடுகளிலிருந்தும் பல்துறை வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருந் தனர். அவர்களிடையேதான் சர்வதேச குழு வகுக்கப் பட்டது. எகிப்துக்குச் சென்று திட்ட நிலக்கிடப்பும் சூழலும் நேரிலேயே பார்வையிட்டு ஆய்வுரை கூற ஒரு துணைக் குழுவும் இங்கேயே அமர்த்தப்பட்டது. அதன் செலவுக்காகச் சர்வதேசக்குழு வரையறுத்த 60,000 பிரஞ்சு வெள்ளிகளையும் பாஷா தம் பெறுப்பிலேற்றுத் திட்டத்தை மனமார ஊக்கினார். துணைக்குழு ஜூன் முதல் நாள் தன் அறிக்கையை வழங்கிற்று. கடற்கால் வெட்டுவதற்கு 20 கோடி பிரஞ்சு வெள்ளிகள் செலவாகு மென்று குழு மதிப்பிட்டது. பாஷா அறிக்கையை ஏற்று, திட்ட முன்னேற்பாடுகளிலும் கூட்டுக்கழக அமைப்பிலும் லெஸெப்ஸை ஈடுபடுத்தினார். திட்டத்தின் கருப்படிவத்தை உருவாக்க லெஸெப்ஸூக்கு உதவிய துணைவர்கள் காலிஸ் பே, மோகல் பே என்ற பொறிவ லாளர்கள். முந்திய தலைமுறையில் வாக்ஹார்னின் நண்பரான லினன்ட்பே உருவாக்கிய திட்டமே அவர்களுக்கு அடிப்படை அமைப்பாயிற்று. அதன்படி கடற்கால் செங்கடலில் சூயஸ் துறை அருகிலிருந்து புறப்பட்டது. அது திமாஷ் ஏரி,கைப்பேரி (க்ஷவைநச டயமந) ஆகியவற்றினூடாகவும் மென்சாலா ஏரி அருகாக அதைச் சுற்றியும், செல்வதாகத் திட்டமிடப்பட்டது. நடுநிலக்கடல் முகப்பு பெலூஸியம் குடாவருகில் முடிவதாயிருந்தது. ஆனால் வல்லுநர்கள் அறிவுரை மீது 1855லேயே இதில் இரண்டு மாறுதல்கள் செய்யப்பட்டன. நடுநிலக் கடற்கரையில் வளைகுடாப் பகுதியைவிட அதற்கு 17ஙூ கல் மேற்கிலுள்ள பகுதி கரையருகிலேயே மிகவும் ஆழமுடைய தாயிருந்தது. நடுநிலக் கடல் முகப்பு இங்கேயே அமைவது நலம் என்று தீர்மானிக்கப் பட்டது. சயீத் துறைமுகமாகக் கட்டமைக்கப் பட்ட இடம் இதுவே. இம்மாறுதலுக்கேற்ப, கடற்கால் மென்சாலா ஏரி சுற்றிச் செல்லாமல் அதனூடாகக் கடந்தது. முன்பு மென்சாலா ஏரியாயிருந்த பரப்பில் ஒரு பகுதியிலேயே இப்போது புதிய சயீத் துறைமுகத்தின் இரேவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. கடற்கால் அமைப்புடன் அமைப்பாகப் பாசனம்,நீர்ப் போக்கு வரத்து, குடிநீர் ஆகிய மூவகையிலும் பயன்படும்படியான ஒரு நன்னீர்க் கால்வாயும் துணையமைப்பாகத் திட்டமிடப் பட்டது. பாஷாவின் பத்திரத்திலேயே இடம் பெற்ற செய்தி இது. இக்கால்வாய் நீலாற்றில் கெய்ரோ அருகில் புலாக் என்னுமிடத்தில் தொடங்கி, தோமிலாத் அருகிலுள்ள வாடிப்பள்ளத்தாக்கு வழியாகச் சென்று திமாஷ் ஏரியருகில், தற்போது இஸ்மாயிலியா நகரம் அமைக்கப் பட்டிருக்கும் இடத்தில் கடற்காலில் கலக்கவேண்டும். இக் கால்வாயிலிருந்து ஒரு குடிநீர்க் காலின் கிளை தெற்கு நோக்கி சூயஸுக்கும் மற்றொரு, கிளை வடக்கு நோக்கிப் பெலூஸியம் குடாவுக்கும் செல்ல வேண்டுமென்று பத்திரம் திட்டம் வகுத்திருந்தது. திமாஷ் ஏரியில் நடுவே ஒரு தீவமைத்து, ஏரியை ஒரு முதல்தர உள்நாட்டுத் துறையாக்க வேண்டுமென்று கூடப் பாஷா பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். என்றும் நிறைவேற்றப்படாமல் ஒதுக்கப்பட்டு விட்ட பத்திரப் பகுதிகளில் இது ஒன்று. திட்டத்தின் செயல் முறைகளைத் துணைவர்களிடம் விட்டு விட்டுக் கூட்டுக்கழக முயற்சியிலும், மேலுரிமை ஏற்பிசைவு பெறும் முயற்சிலும் லெஸெப்ஸ் கருத்துச் செலுத்தலானார். * * * பல தலைமுறைகளாக எகிப்திய பாஷாவிடம் பல்வேறு சலுகைகளுக்காக உலக வல்லரசுகளெல்லாம் அரும்பெரும் முயற்சிகள் செய்து காத்துக் கிடந்தன. நடு உலகில் அவ்வல்லரசுகளுக் கெல்லாம் கிட்டாத பெருஞ் சலுகை ஒரு தனி மனிதருக்கு அளிக்கப் பட்டது கண்டு, உலகெங்குமே பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் பொதுவாக பிரான்சும் ஆஸ்திரேலி யாவும்இவ்வுரிமையில் மன நிறைவே கொண்டன. பிரிட்டனும், ஆஸ்டிரியாவும், ருஷ்யாவும் மட்டுமே மனக்குறைப்பட்டன. பிரிட்டன் தன் தூதுவான தானைத் தலைவர் புரூஸ் மூலம் பாஷாவிடம் நேரடியாகவே மனக்குமுறலைத் தெரிவித்துக் கொண்டது. பிரிட்டிஷ் அரசியலார் இத்துடன் அமையவில்லை. துருக்கியில் பிரிட்டிஷ் தூதரங்க முதல்வராயிருந்த ரெட்கிளிப் பெருமகனார் துருக்கி சுல்தானிடம் மிகுந்த செல்வாக்குடையவர். இதைப் பயன் படுத்தித் திட்ட உரிமைக்குச் சுல்தான் ஏற்பிசைவு அளிக்காதபடி அவரைத் தூண்டவும் பிரிட்டிஷார் முற்பட்டனர். இச் சூழ்ச்சியின் விளைவாக, லெஸெப்ஸ் துருக்கி சென்ற போது சுல்தான் அவருக்கு ஆதரவு காட்டவில்லை. அவர் நேரே பிரிட்டிஷ் தூதரங்க முதல்வரைக் கண்டு பேச முயன்றார். ஆனால் அவரும் நேரிடையாகக் காணவிடாமலே நாட்கடத்தி வந்தார். அதன்மீது 1855ஆம் ஆண்டு ஜூன் மாதம் லெஸெப்ஸ் பிரிட்ட னுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்ஸ்டனிடம் வாதாடினார். சூயஸ் திட்டம் பிரிட்டனின் நலங்களுக்குக் குந்தகமான தென்றும், அதற்கு ஆதரவு காட்டமுடியாதென்றும் அவர் முடிவாகக் கூறி விட்டார். ‘டைம்ஸ்’, ‘டெய்லி நியூஸ்’ போன்ற பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் இதே போக்கில் எழுதி அவருக்கு எதிரான சூழலை வளர்த்தன. உலகரங்கில் பொதுவாகவும், பிரிட்டிஷ் மக்கள் மன்றத்தில் சிறப்பாகவும் லெஸெப்ஸ் தம் திட்டத்திற்கு ஆதரவாக இடை விடாது பிரசாரம் செய்து வந்தார். 1856 இலும் 1857இலும் அவர் மீண்டும் பிரிட்டன் சென்று அரசியலார், பொதுநிலையங்கள், வாணிக நிலையங்கள், கப்பல் கழகங்கள் ஆகியவற்றை நேராகவே அணுகினார். பொதுமக்களிடையே கூட்டங்களில் பேசினார். பத்திரிகையாளர்களிடையே பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் கருத்துப் பரப்பியும் விளக்கங்கள் தந்தார். சூயஸ் திட்டம் அரசியல் சார்பானதல்ல, பொதுhன உலக நலம், வாணிக நலங்களுக்குரியது என்பதை அவர் எடுத்துக் காட்டினார். கப்பல்களின் நிலக்கரிச் செலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, நாட்டுக்கு நாடு நேச உறவை அது வளர்க்கு மென்பதை எல்லார் உள்ளங்களிலம் பதிய வைத்தார். லெஸெப்ஸின் இந்தப்பிரசாரம் பெரும் பயன் தந்தது. ஆயினும் அது கருதிய விளைவை அளிக்கவில்லை. பிரிட்டனில் மக்கள் எங்கும் ஆதரவு காட்டினர். தனிப்பட்ட முறையில் 1856இலே விக்டோரியா அரசியே அவரை வரவேற்றுத் திட்டத்தில் அக்கரை காட்டினார்.மன்னுரிமை நில நூற்கழகம் (சுடிலயட ழுநடிபசயயீhiஉயட ளுடிஉநைவல) அவருக்கு நன்மதிப்புத் தந்தது. அறிஞர் பலர் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று மனநிறைவு தெரிவித்தனர் வணிகர், கப்பல் கழகத்தினர், அறிஞர் பேராதரவு காட்டினர். இதற்குச் சான்றாக, லெஸெப்ஸ் அவர்கள் ஆதரவுக் கையொப்பங்களையே ஆயிரக்கணக்கில் திரட்டி அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் இத்தனைக்குப் பின்னும் பாராளும் மன்றத்தில் பிரிட்டனின் அமைச்சர்கள் தம் அரசியல் வாதங்களால் மக்கள் எதிர்ப்பை மழுப்பிச் சமாளிக்கவே முயன்றனர். பிரிட்டிஷ் அரசியலார் இச்சமயம் துருக்கியின் நலம் பற்றியும் பாதுகாப்புப் பற்றியும் மிகுந்த கவலை தெரிவித்தனர். துருக்கியின் கடற்படைப் போக்குவரவைப் போர்க்காலங்களில் தடுப்பதற்கே பிரான்சின் தூண்டுதலால் எகிப்து சூயஸ் திட்டத்தை ஆதரிக்கிறது என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் கூறினர். துருக்கிக்கும் எகிப்துக்கும் இடையே மனக்கசப்பை உண்டு பண்ண இது பயன்பட்டது.ஆனால் பின்னாளய வரலாறும், போக்கும் பிரிட்டனின் இவ்வாதத்தைப் பொய்ப்பிக்கின்றன. ஏனெனில் அடுத்த நூற்றாண்டில் துருக்கியிடமிருந்து எகிப்தைப் பாதுகாக்கத்தான் அது பெரும்பாடுபட்டு வந்தது.அதனுடன் பிரிட்டனின் அனுபவத்திலேயே சூயஸின் பயன் நன்கு தெரிய இடமிருந்தது. இந்தியாவில் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை அடக்கப் படைகளை நன்னம்பிக்கைமுனை வழியாக விரைந்தனுப்ப முடியாமல் பிரிட்டன் திணறிற்று. முதலில் துருக்கி நலனிலும், பின்னால் எகிப்து நலனிலும் பிரிட்டன் கொண்ட அக்கரை உண்மையில் நடுவுலகில் தானே ஆதிக்கம் கொள்வதற்கான அரசியல்வாதமேயன்றி வேறன்று. அதன் உண்மை நோக்கம் எகிப்து மீது துருக்கிக்கு இருந்த மேலுரிமையைத் தனதாக்கிக் கொள்வதேயாகும். துருக்கியின் போக்கும் பிரிட்டனின் நோக்கும் கண்ட பாஷா சயீதுக்குத் தன்மான உணர்வும் துணிவும் எழுந்தன. சூயஸ் திட்டம் எகிப்தின் உள்நாட்டுத் திட்டமேயாதலால், இதில் துருக்கியின் மேலுரிமை ஏற்பிசைவுக்கு அவசியமேயில்லை யென்று அவர் அறிவித்தார். கூட்டுக் கழகம் தொடங்குவதற்கு மட்டுமன்றி, திட்டவேலை தொடங்குவதற்கே அவர் இசைவளித்தார். பிரிட்டன் தன் கடைசி முயற்சியாகப் பிரான்சுடன் அரசியல் பேச்சுக்கள் நடத்திற்று. அதில் எதிர்பார்த்த விளைவு கிட்டவில்லை. திட்டத்தை இரு நாட்டின் அரசுகளும் தனி மனிதர் முயற்சியாக விட்டுவிடவேண்டும் என்ற முடிவே ஏற்பட்டது. சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகத்துக்கு உலகக் கடலோடி நாடுகள் எல்லாவற்றின் ஆதரவும் பங்குகளும் இருக்கவேண்டு மென்று லெஸெப்ஸ் கருதினார். அதற்கிசைய அதன் திட்டம் அமைக்கப்பட்டது. கழகத்தின் உரிமைபெற்ற பங்குமூலதனம் 20 கோடி பிரஞ்சு வெள்ளிகள். பங்கு ஒன்றுக்கு 500 வெள்ளியாக, இது 4 இலட்சம் பங்குகள் கொண்டதாகும். எல்லா நாடுகளுக்கும் நேரிய பிரதி நிதித்துவம் இருக்க வேண்டுமென்பதற்காக, நாட்டுவாரியாகப் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தொடக்க மூலதனமாக, 3,14,944 பங்குகள் கோரி லெஸெப்ஸ் எல்லா நாடுகளுக்கும் அறிக்கை வெளியிட்டார். பங்குகள் எளிதில் திரண்டன. 1858இல் சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகம் நிறுவப்பட்டது. கழகத் தலைமை நிலையம் எகிப்திலும், பணிமனை பாரிஸிலும் நிறுவப்பட்டன. பிரான்சு 2,00,000 பங்குகளும், துருக்கி 96,000 பங்குகளும் எடுத்தன. எகிப்தியப் பாஷா தம்சார்பில் 85,506 பங்குகள் தொடக்கத்திலேயே ஏற்றார். ஆனால் பிரிட்டனுக்கு 80,000 பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பிரிட்டன் சார்பில் பங்குகள் தீண்டப்படவில்லை. அரசியல் முறையில் முதலமைச்சர் பாமர்ஸ்டனும், தொழில் துறை அறிஞர் ராபர்ட் ஸ்டிபன்ஸனும் அதை எதிர்த்ததனாலேயே இந்நிலை ஏற்பட்டது. தனிமுறையில் பிரிட்டிஷ் அரசியலார், மக்கள் ஆகிய இரு சாராரின் ஆதரவும் இருந்தும், பிரிட்டனின் குறுகிய நோக்குடைய தேசிய உள்ளம் வேறாகவே அமைந்தது. பிரிட்டிஷ் அரசியல்வாதி களின் மறைமுக முட்டுக்கட்டை நிலையும் நீடித்தே வந்தது. இந்த அரசியல் சிக்கல்களிடையே லெஸெப்ஸின் தன்னலங் கடந்த போக்கும், தொழிலாளர்களிடம் அவர் கொண்ட பாசப்பரிவும் திட்டச் செயலில் அவர் மேற்கொண்ட அரசியல் கடந்த உலக நோக்கும் திட்டத்துக்கு உயிர் மூச்சாய் இருந்து காத்தன. பாஷா சயீதின் நட்பாதரவு அதற்கு எவ்வளவு இன்றியமையா நலன் என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார். ஆனால் மேலையுலகில் இதனுடன் இன்னும் நல்ல உறுதி வாய்ந்த காப்பு நலம் தேடும் எண்ணத்துடன் அவர் பிரஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை அணுகினார். உலகக் கழகத்துக்கு அவரை ஆதரவாளராக இருக்கும் படி வேண்டினார். மன்னர் நெப்போலியன் இதனை ஏற்றார். லெஸெப்ஸுக்கும் பாஷா சயீதுக்கும் அடுத்தபடியாகத் திட்டத்தின் வாழ்வுக்கு உயிர்வலுத் தந்தவர் மன்னர் மூன்றாம் நெப்போலியனேயாவர். பாஷாவின் பெயரைக் கடற்காலின் நடுநிலக் கடல் முகப்பிலுள்ள சயீத் துறைமுகத்துக்கு அளித்து, லெஸெப்ஸ் தம் நண்பர் பால் தமக்குள்ள ஆர்வ நன்றியைத் தெரிவித்திருந்தார். சூயஸ் துறைக்கருகே பண்டைப் பெருமை மிக்க பகுதியில், எழுப்பப் பட்ட நெப்போலியன் கோட்டைக்கு இது போலவே மன்னன் நெப்போலியனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இருவர் முயற்சிகளுக்கும் மூல உயிர் தந்தவரான லெஸெப்ஸுக்குத் தாம் நன்றி தெரிவிக்கும் முறையில் திட்ட ஆட்சியாளர் சயீத் துறைமுகத்தில் அவர் வீரத்திருவுருவச் சிலையை வீறுடன் எழுப்பியுள்ளனர். பாஷா சயீதுக்குப்பின் வந்த பாஷா இஸ்மாயிலின் பெயரும், 20ஆம் நூற்றாண்டில் எகிப்தின் முதல் அரசராய் இருந்த மன்னர் பவூத் பெயரும் கடற்காலில் திமாஷ் ஏரி அருகிலுள்ள இஸ்மாயிலியா நகருக்கும், நடுநிலக் கடல் முகப்பிலேயே சயீத் துறைமுகத்துக்கு எதிரிலுள்ள பவூத் துறைமுக நகருக்கு இடப்பட்டுள்ளன. சூயஸ் திட்ட வேலையின் தொடக்க விழா 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் நடைபெற்றது. நடுநிலக் கடலையடுத்து ஓர் இடம் வேலை தொடங்கும் பகுதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. அவ்விடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர், கழகப் பணியாளர், பொறிவலாளர், அரசியல் பணியாளர் வந்து குழுமினர். அவர்கள் அனைவரின் ஆரவார வாழ்த்தொலிகளுக் கிடையே லெஸெப்ஸ் தாமே மண்வெட்டியேந்தி, முதன் முதலாக ஒரு கூடை மண்ணைவெட்டி அப்புறப்படுத்தினார். இது வேலை தொடங்குவதற்குரிய சமிக்கையாகிற்று. இதுமுதல் நாள்தோறும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. எகிப்திய அரசியலாரின் பெருமுயற்சியால் 60,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் இப்பெரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். அவர்ளில் எகிப்தியர் மட்டுமின்றி, அராபியர், நூபியர், கிரேக்கர்,நீகிரோவர், தொலைவிலுள்ள சிசிலித் தீவினர் ஆகிய பல்வேறு நாட்டு மக்கள் இருந்தனர். பாலைவனமாகக் கிடந்த கடலிணைப்புப் பகுதியிலே அவர்கள் பகலெல்லாம் புற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புகள் போல் சாரிசாரியாகத் திரிந்து பணியாற்றினர். இரவில்கூட அவர்களுக்காக வரிசை வரிசையாக எழுப்பப்பட்டிருந்த தங்கல் தளங்கள் உயிரற்ற பாலைவன வாழ்வுக்கு உயிர்கொடுத்தன. மனித உலகம் 18ஆம் நூற்றாண்டிலேயே இயந்திர ஊழியை எட்டிப் பிடித்திருந்தது. ஆகவே விரைந்த பேரளவான வேலைப் பாடுகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒரு சிறிதும் புதிதல்ல. ஆயினும் இயந்திர ஊழிக்கு முன்னும் சரி, அவ்வூழியிலும் சரி - சூயஸ் கடற்கால் திட்டத்தை ஒத்த பார அளவான வேலைப்பாட்டை உலகம் அதற்கு முன் கண்டதில்லை என்றே கூறலாம். உண்மையில் எகிப்தின் பாரகோபுரங்களையும் சீனத்தின் நெடுமதிலையும் மட்டுமே அதனோடொத்த மக்கட் பெருஞ் செயல்கள் என்று கூறத்தகும். ஆனால் பயனிலும் நிலைத்த வளத்திலும் சூயஸ் கடற்கால் அவற்றைப் பன்மடங்கு மிஞ்சியது என்பதில் ஐயமில்லை. கடற்கால் கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளமுடையதாயிருந்தது. இந்த முழு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லும் அளவாக ஆழ அகலமுடைய கடல் போன்ற கால்வாய் வெட்ட வேண்டியிருந்தது. இந் நீள அகல ஆழ முழுவதிலும் சில இடங்களில் மண்ணையும், சில இடங்களில் மணலையும் வாரிக் கொட்ட வேண்டியிருந்தது. சில இடங்களில் கரும் பாறைகளையே சுரங்கம் வைத்துப் பிளந்து வழிசெய்ய வேண்டியதாயிற்று. இரு புறமும் மண் சரியாமல் வலிமை வாய்ந்த கட்டுமானங்கள், ஆங்காங்கே ஒதுங்குவதற்கான துறைகள், தங்குவதற்கான துறைமுகங்கள் முதலியவை எழுப்பவேண்டும். இவற்றுக்குவேண்டிய மூலப் பொருட்கள், கருவிகள்,வேலை செய்பவருக்கு வேண்டிய குடிநீர் வாய்ப்புக்கள், குடியமைப்பு வசதிகள் ஆகியவை மிகப் பேரளவில் தேவைப்பட்டன. உரிமைப் பத்திரத்தில் கோரப்பட்டபடி, கடற்கால் வேலை யுடன் வேலையாக நன்னீர்க்கால்வாயின் வேலையும் இணை கூட்டாகவே தொடங்கப்பட்டது. அதனுடன் கடற்கால் வேலை எளிதாகவும், விரைவாகவும் முன்னேறும்படி, முதலில் அதற்கென்று குறிக்கப்பட்ட பாதையருகிலேயே பணியாளர்களும் பணிகளுக்குரிய பொருள்களும் கொண்டு செல்வதற்குரிய தற்காலிகப் பணிமுறைக்கால் ஒன்றும் வெட்டப்பட்டது. இது 20 அடி அகலத்துடனும் 5 அடி ஆழத்துடனும் கடற்காலின் நீளத்தில் ஒரு பகுதி வரை சென்றெட்டிய பின்னரே, கடற்கால் வேலை தொடங்கப் பட்டது. பாலைவன நீரூற்றுக்களில் இறங்கிய பின்தான் ஆழம் தெரியும் என்பர். லெஸெப்ஸுக்கும் கடற்கால் கழகத்திற்கும் ஏற்பட்ட அனுபவம் இதைப் பேரளவில் உண்மையாக்கிற்று. ஓயாத அரசியல் முட்டுக்கட்டைகள் திட்டமிட்டதற்கு மேற்பட்ட செலவு, தாங்க முடியாத பணமுடை, வேலை நடைமுறையில் முன் அனுபவமற்ற புதுமை காரணமான எதிர்பாரா இடர்கள், இடையூறுகள் ஆகிய வற்றிடையே அதன் முதல் ஐந்தாண்டுகள் திட்டத்தின் உயிர்ப் போராட்ட ஆண்டுகளாய் அமைந்தன. * * * சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகத்தின் தொடக்க மூலதனம் முதலாண்டுகளிலேயே கரைந்துவிட்டது. கழகத்தின் வாழ்வே முறிவடைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷார் இதற்கிடையே எண்ணற்ற முட்டுக்கட்டைகளையும் தொல்லைகளையும் உண்டு பண்ணினர். எப்படியாவது கழகத்தையும் திட்ட வேலையையும் மூடி விடவே அவர்கள் அரும்பாடுபட்டனர். இதற்காக அவர்கள் ஓயாது எகிப்திய சுல்தானைத் தூண்டிக் கொண்டும் வந்தனர். பாஷாவின் 1856ஆம் ஆண்டுப் பத்திரப்படி பேரளவில் எகிப்திய வேலையாட்கள் திட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். பாஷாவின் திட்டப்படி அவர்களுக்குக் கூலி தரப்பட்டாலும், வேலை கட்டாயப்படுத்தியே வாங்கப்பட்டது. இது மனிதப் பண்புக்கும் உலக நாகரிக முறைகளுக்கும் ஒவ்வாதது என்று பிரிட்டிஷார் கூக்குரலிட்டனர். இதைக் காரணமாகக் காட்டித் திட்டத்தை உடனடியாக நிறுத்தி விடும்படி கட்டளையிடச் சுல்தான் வற்புறுத்தப் பட்டு வந்தார். பிரஞ்சு அரசியல் இப்போக்கைக் கண்டித்தும் அது தடைபடவில்லை. இதற்கிடையில் லெஸெப்ஸின் போதாக் காலமாக 1863ல் அவர் நண்பரான பாஷா சயீத் காலமானார். அடுத்த பாஷா இஸ்மாயிலும் துருக்கி வெளி நாட்டமைச்சர் நுபார் பாஷாவும் பிரிட்டிஷார் செல்வாக்குக்கு உள்ளாயினர். கட்டாய வேலை நிறுத்தப்பட்டது. திட்டம் இதனால் கலகலத்துவிட்டது. அதனுடன் கடற்கால் பகுதி நிலங்களுடன் அளிக்கப்பட்ட நன்னீர்க்கால் பகுதிகளையும் திருப்பிக் கொடுக்கும்படியும், வேலையை நிறுத்தி விடும்படியும் கழகத்திற்குப் புதிய பாஷாவின் அவசர ஆணை பிறந்தது. தலைமைப் பொறிவலாளர் வேலை நிறுத்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார். இது ஒன்றே அச்சமயம் கழகத்தின் வாழ்வை உடனடி அழிவினின்று காத்தது ஆயினும் தலைமை நெருக்கடியாயிற்று. லெஸெப்ஸுக்கு இச்சமயம் ஒரே ஒரு போக்குத் தான் இருந்தது. அவர் பிரஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை அடுத்து, நடுநிலை வகித்து முடிவு காணும்படி வேண்டினார். இரு சார்பினரும் இதை ஏற்றபின்,அவர் நடுநிலைத் தீர்ப்பு வழங்கி இரு சார்பினருக்கும் ஓரளவு மன நிறைவு உண்டு பண்ணினார். மன்னன் நெப்போலியன் தீர்ப்பு 1864 ஜூலையில் வழங்கப் பட்டது. கட்டாய வேலையின் நிறுத்தம், பாசன நிலங்களைத் திருப்பிக் கொடுத்தல், நன்னீர்க்கால் பகுதியை விட்டுக் கொடுத்தல் அகிய பாஷாவின் மூன்று கோரிக்கைகளையும் மன்னர் வற்புறுத்தி, பிரிட்டிஷாருக்குச் சலுகை காட்டினார். அதே சமயம் கட்டாய வேலையின் நிறுத்தத்துக்கு ஈடாக 380 இலட்சம் வெள்ளியும், நிலங்களைத் திருப்பித் தருவதற்கீடாக 300 இலட்சம் வெள்ளியும், நன்னீர்க்கால் பகுதிக்கீடாக 840 இலட்சம் வெள்ளி இழப்பீடாகத் தரவேண்டுமென்று வகுத்து அவர் கழகத்துக்கும் ஆதரவு காட்டினார். திமாஷ் ஏரியிலிருந்து நடுநிலக் கடற்கரை செல்லும் நன்னீர்க் கால்வாயின் பகுதியை இடையிடையே நீர் வழங்கும் ‘கணுவாய்’ கள் உள்ள குழாயாக்கி அரசியலாருக்கு அளிக்கலாமென்றும் மன்னர் தீர்ப்புச் சலுகை தந்தது. ஆயினும் 1880இல் இது கால்வாயாகவே பின்னால் வெட்டப்பட்டது. * * * கழகம் நினைத்ததைவிட அறிவார்ந்த மன்னர் நெப்போலியன் தீர்ப்புத் திட்டவேலைக்கு மிகவும் நலம் செய்வதாயிருந்தது. ஏனெனில் கட்டாய வேலை நிறுத்தப்பட்டதன் மூலம் தற்காலப் ‘பொறியாண்மை முறை’களையும் இயந்திர சாதனங்களையும் வழங்குவது எளிதாயிற்று. இயந்திர மண்வாரிகளும் (னசநனபநள) பிற பெரும் பொறிகளும் இதன்பின் திட்டவேளையில் ஈடுபடுத்தப் பட்டன. வேலைப்பாட்டின் பெரும் பகுதி நாலு குத்தகை வகுப்புகளுக் கிடையே பகுக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பு சயீத் துறைமுகத்திற் குரிய இரேவுகளுக்கான 2,50,000 கன மீட்டர் நீற்றுக் கட்டிப் பாளங்களை (ஊடிnஉசநவந ளடயளெ) உருவாக்கும் பணியேற்றது. இரண்டாவது வகுப்பு கடற்காலின் முதல் 60 கிலோமீட்டர் மணலையும் மண்ணையும் வாரி அப்புறப்படுத்தும் பணி மேற்கொண்டது. மூன்றாம் வகுப்பு இத்தொலை கடந்து எல் கிஸ்ரி வரையுள்ள 13 கிலோ மீட்டர் கடு நிலப்பகுதியின் பாறை பிளக்கும் வேலையிலீடு பட்டது. கடைசி வகுப்பு நான்கிலும் பெரிதாயிருந்தது. அது திமாஷ் ஏரிக்கும் செங்கடலுக்கும் இடையேயுள்ள பகுதியின் பொறுப்பு மேற்கொண்டது. கடைசி வகுப்புக்குரிய குத்தகை நிலையம் ‘பால் போரல் அலக்ஸாண்டர் லெவாலிங்’ என்பது. இதுவே இரண்டாவது வகுப்புக்கும் இறுதிப் பொறுப்பேற்றது. செங்கடலடுத்த பகுதியிலும் திமாஷ் ஏரிக்கு வடக்கிலுள்ள பகுதியிலும் வேலை எளிதாகவே இருந்தது. வேகமும் மட்டமாக அமைந்தது. ஆனால் இடைப்பட்ட பகுதியில், சிறப்பாக, சாலப், செராப்பியம் வட்டாரங்களில் கடும்பாறைகளில் சுரங்கமிட்டுக் கொண்டே சென்று வழிகாண வேண்டி வந்தது. வேகமும் இங்கே இதற்கேற்ப மிகக் குறைவாகவே அமைந்தது. கடற்காலின் 100 கல் நீளத்தில் 5இல் 4 பங்கு அதாவது 77 கல் தொலைக்குக் கடற்கால் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடித்தலத்தில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் உடையதாகத் திட்டமிடப்பட்டது. மீந்த பகுதியில் மேற்பரப்பகலம் மட்டில் 196 அடியாய் அமைந்தது. கடும்பாறைகளிடையே 220 அடி அகலமும், 90 அடி ஆழமும் உடைய நேர்வழி பிளக்கப்பட்டது. பண்டை நீலாற்றுக் கால்வாய்த் தடத்திலே வெட்டப்பட்ட நன்னீர்க் கால்வாய் 40 அடி அகலமும் 9 அடி ஆழமும் உடையதாகத் திட்டமிடப் பட்டது. 1862ஆம்ஆண்டில் நன்னீர்க் கால்வாய் திமாஷ் ஏரியை அணுகிவிட்டது. அவ்வாண்டின் இறுதியிலேயே கடற்காலும் ஒடுங்கிய முதல் வடிவில் திமாஷ் ஏரிக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டுக்குள் நன்னீர்க் கால்வாய் சூயஸ் துறைமுகத்தை எட்டிற்று. 1865இல் வேலை எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந் துள்ளது என்பதைக் காணவும், தக்க ஆய்வுரை கூறவும் பல நாட்டு வாணிகக் கழகப் பிரதிநிதிகளையும் லெஸெப்ஸ் பார்வையாளராக அழைத்தார். 100 பிரதிநிதிகள் அவர் விருந்தினராக வந்திருந்து வேலைகளைக் கண்டு மனநிறைவெய்தினார். சூயஸ் திட்ட வகையில் இதற்குள் பிரிட்டிஷ் அரசியலார் நீங்கலாக உலகெங்குமுள்ள அரசியல்களும் மக்களும்பேராதரவு காட்டத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவாகத் துருக்கி அமைச்சரவையின் மனப்பான்மையிலும் மாறுதல் ஏற்பட்டு வந்தது. 1866ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாளில் சுல்தான் இறுதியாகத் திட்டப் பத்திரத்துக்குத் தம் ஏற்பிசைவளித்தார். இது மன்னர் நெப்போலியன் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாய் அமைந்தது. அதனுடன் முழு உலகக் கழகம் எகிப்தியக் கழகமாக, எகிப்தியச் சட்டங்களுக்கு உள்ளடங்கிய தாக இருக்க வேண்டு மென்பதை இது மேலும் வற்புறுத்திற்று. தொடக்கத் தொல்லைகள் ஓரளவு ஆறி அமைந்து, 1866க்குப் பின் திட்டமும் திட்ட வேலையும் வேகமாக முன்னேறின. இறுதியில் 1869ஆம் ஆண்டில் செங்கடலிலிருந்தும் நடுநிலக் கடலிலிருந்தும் இரு திசையில் வெட்டப்பட்ட கடற்கால்களும் ஒன்றை ஒன்று வந்து அணுகின. இடையே ஒரு திட்டு மட்டுமே எஞ்சியிருந்தது. அதை வெட்டிக் கடலுடன் கடலை இணைவிக்கும் நிகழ்ச்சி ஒரு சிறு விழாவாகக் கொண்டாடப்பட்டது. பொறிவலாளர் கள், தொழிலாளர்கள் ஆர்வ ஆரவாரங்களிடையே, கீழையுலகும் மேலையுலகும் வந்து கலப்பது போலக் கீழ்க்கடல் அலைகள் மேல் கடல் அலைகளுடன் வந்து கலந்தன. தொடக்க விழாவில் முதல் கூடை மண்ணை வெட்டிய லெஸெப்ஸ் கைகளே, இறுதிக் கூடை மண்ணும் வெட்டிக் கடலிணைப்பு வேலைக்கு மகுடம் வைத்தன. கடற்காலின் திறப்பு விழா 1869ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாளன்று ஓருலகப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. எகிப்திய பாஷா உலக நாடுகளுக்கெல்லாம் முடங்கல் போக்கி, உலக அரசியல் முதல்வர்கள், வாணிகப் பெருநிலையப் பேராட்கள், அறிவு முனைவர்கள் முதலியவர்களை யெல்லாம் விழாவிற்கு வரவழைத்திருந்தனர். தொல்பழங்கால எகிப்தியப் பேரரசர் திறைகள் பல ஏந்திய வண்ணம் வெற்றிப் போர்க்களங்களிலிருந்து மீண்டபோது, எகிப்தெங்கும் அவரை அணியணியாக நின்று குழுமி வரவேற்ற காட்சியையே நினைப்பூட்டும் வகையில், கடற்கால் முகப்பில் மட்டுமன்றி, கால்வாயின் நூறு கல் நீளமுள்ள தொலை முழுவதிலும் இரு கரைகளிலும் நடுவுலகப் பெருங்குடி மக்கள் வந்து நின்று திரள் திரளாகக் காத்திருந்தனர். நவம்பர் 16ஆம் நாள் மாலையிலேயே பல நாடுகளுக்குரிய போர்க்கப்பல்கள், வாணிகக் கலங்கள், படகுகள் சயீத் துறை முகத்தில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அவ்வந் நாட்டுக்குரிய கொடிகள், அவ்வந் நிலையங்களுக்குரிய அடையாளங்கள் விழாக்கோலம் பூண்டு பறந்தன. 17ஆம் தேதி காலை 11 மணிக்குக் குண்டுகள் முழங்கின. தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டவண்ணம் போர்க் கப்பல்கள் புறப்பட்டன. அவற்றின் நடுநாயகமாகக் கழுகுக் கொடியுடன் ‘கழுகுக்கலம்’ அல்லது ‘லேகிள்’ என்ற பெயர் தாங்கிய பிரஞ்சுக் கொடிக் கப்பல் வீறுடன் முன்சென்றது. அதன் தளத்தின் மீது பிரஞ்சுப் பேரரசி யூஜினும், எகிப்திய பாஷா இஸ்மாயிலும் பெருமிதத்துடன் வீற்றிருந்து இரு திசை மக்களின் ஆரவார வாழ்த்துக்களுக்கு எதிர்வாழ்த்தும் வணக்கமும் செய்தவாறு சென்றனர். பேரரசர் பிரான்சு ஜோசப், பிரஷ்ய இளவரசர் பிரடெரிக் வில்லியம், ஹனோவர் இளவரசர் ஜார்ஜ், இளவரசர் அப்துல்காதர் ஆகியோரும் இந்த விழாவணியில் கலந்து கொண்டிருந்தனர். பிரஞ்சுக் கப்பலின் தலைமையில், அதன் பின்னே வரிசை வரிசையாக 11 நாடுகளுக் குரிய 67 கப்பல்கள் அணிவகுத்து சயீத் துறைமுகத்திலிருந்து புதிய கடற்கால் வழியாக ஊர்வலமாகச் சென்றன. கடற்காலின் இருமருங்கிலும் பகலில் வண்ணக்கொடி வரிசைகளும் இரவில் வண்ண ஒளி விளக்க வரிசைகளும் ஊர்வலக் காட்சியைக் கண்கொள்ளாக் காட்சியாக்கின. இரு பாரிசங்களிலும் ஆடல் பாடல் கேளிக்கைகள், வாண வேடிக்கைகள், இன்னிசை யரங்குகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. இவ்வாறு விழாக் கோலத்தில் முதல் நாற்பது கல்தொலை செல்வதற்கே 12 மணிநேரம் பிடித்தது. இரவு நேர முழுவதும் விழாக்குழுவினர் இஸ்மாயிலியா நகரில் விழாவினுள் தனி விழா நடத்தினர். அடுத்த நாளும் அந்நகரிலேயே அனைவரும் இளைப்பாறியிருந்து 19ஆம் தேதி மீட்டும் பயணம் தொடங்கினர். மறு நாளிலேயே ஊர்வலம் சூயஸ் துறைமுகம் சென்று செங்கடலில் செஞ்சீருடன் விழா முற்றுப்பெறு வித்தது. நாற்றிசையும் புகழ் பரப்பிய உலகின் முதல் ஓருலக விழா இவ்வாறு நான்கு நாள், நான்கிரவில் முழு நிறைவுற்றது. திறக்கப்பட்ட கடற்கால் வழியாக மறு நாளிலிருந்தே உலகக் கப்பல்கள் மேலையுலகிலிருந்து நேரே கீழை உலகுக்கும், கீழை உலகிலிருந்து நேரே மேலையுலகுக்கும் சென்று தொடர் உண்டு பண்ணத் தொடங்கின. இடர்களும் இன்னல்களும் பல கடந்து வெற்றி பெற்ற லெஸெப்ஸைப் பாராட்டி இப்போது உலகெங்குமிருந்து ஆயிரக் கணக்கான மகிழ்ச்சிக் கடிதங்கள் வந்து குவிந்தன. அவர் புகழ் திக்கெங்கும் பரவிற்று. பிரெஞ்சு அரசியலார் அவருக்குக் கோமான் (ஊடிரவே) என்ற பட்டம் தந்து அவரை நன்கு மதித்தனர். பிரிட்டன் கூட அவர் புகழ்மீது புகழ் முடிசூட்டத் தயங்கவில்லை. வெளி நாட்டமைச்சர் கிளாரண்டன் அவரை வாயாரப் புகழ்ந்து முடங்கல் தீட்டினார். இலண்டன் மாநகரம் அவருக்குத்தன் கௌரவக் குடியுரிமையளித்துத் தன் பெருமையை நாட்டிற்று. விக்டோரியா அரசியார் அவரைத் தம் ‘பளிங்கு மாடத்தில்’ வரவேற்றுப் பட்டங்கள் வழங்கினார். குமுறலிடையே தொடங்கிய திட்ட வாழ்வு இவ்வாறு புகழ் குலாவிற்று. ஆனால் இக்கட்டுகள், இடர்ப்பாடுகள் இன்னும் நீங்கவில்லை. அவை உருமாறிப் பின்னும் சில காலம் உறுமின. * * * சயீத் துறைமுகம் இப்போது கப்பல் தங்கும் துறைகள், ஏற்ற இறக்கப்பொறிகள், செப்பவேலைக்குரிய பட்டறைகள், மின் ஒளி விளக்கு வாய்ப்புகள் ஆகிய தற்கால வசதிகள் நிரம்பிய துறைமுக நகரம் ஆகியுள்ளது. உயரிய ஒரு கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது. துறைமுகத்தில் 2070 கெஜம், 2730 கெஜம் நீளமுள்ள இரண்டு அலைதாங்கிகள் கட்டப்பட்டுள்ளன. சயீத் துறைமுகத்திலிருந்து கடற்காலில் பயணம் செய்பவர் மிகுதி ஆழமில்லாத மென்ஸாலா ஏரி வழியாக 24 கல் செல்வர். இத்தொலை முழுதும் கடற்காலில் ஏரி நீர் கலக்காமல் அது இருபக்கமும் திண்ணிய காரைக்கட்டுக் கரையுடன், ஏரியைவிட மிக ஆழமாக வெட்டப்பட்டுள்ளது. இது கடந்து மூன்று நான்கு கல் பாலைவன மணல் சென்றபின், மீண்டும் கடற்கால் பல்லா ஏரி வழி 8 கல் கரை இணைத்துச் செல்கிறது. அடுத்த 8 கல் தொலை பெருமுயற்சியுடன் பாறையிடையே குடையப்பட்ட பிளவு ஆகும். கடற்காலின் நீளத்தில் ஏறத்தாழ நடுப்பகுதியில் அமைந் துள்ளது திமாஷ் ஏரி. கற்கால் அமைக்கப்படுவதற்கு நெடுநாள் முன்னரே இது பாலைவன வறட்சியால் முற்றும் வற்றி உலர்ந்து விட்டது.ஆனால் கடற்காலின் மூலம் அது நிரப்பப்பட்டு, இப்போது மீன் வளமுடையதாக்கப்பட்டுள்ளது. இதையே ஒரு உள்நாட்டுத் துறைமுகமாக்க 1854இல் தரப்பட்ட சலுகைகள் கட்டளையிட்டாலும் இக்கட்டளை நிறைவேறவில்லை. எனினும் கடற்காலில் செல்பவர்களுக்கு அது வாய்ப்பான இடைத் தங்கலுடைய ஒரு அகலப் பரப்பாய் உள்ளது. அதன் கரையிலே கால்வாயின் புது வளத்தால் வளம் பெற்ற இஸ்மாயிலியா நகரம் உள்ளது. கெய்ரோ வுடன் இருப்புப் பாதைகள் இணைக்கப்பட்டு அது தற்கால வசதிகள் படைத்த நகரமாய் விளங்குகிறது. திமாஷ் ஏரி கடந்து 9 கற்கள் பின்னும் கடும் பாறைகள் குறுக்கிடுகின்றன. கடற்கால் அவற்றை ஊடறுத்துக்கொண்டு செல்கிறது. பாறைகளை அப்புறப்படுத்தும் வேலை இங்கேதான் மிகக் கடுமையாய் அமைந்தது. திமாஷ் ஏரியைவிடக் கைப்பேரி பெரியது. ஆனால் அதைப் போலவே இதுவும் முன்பு உலர்ந்து கிடந்தது. இப்போது அது கடல் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வேரி கடந்து ஆழமற்ற ஏரிப்பகுதி யூடாகவும் மணல்வெளியூடாகவும் 17 கல் தொலை சென்றபின் கடும் பாராகிய ஷாலப் வட்டாரத்தினூடாகக் கடற்கால் செங்கடலில் சூயஸ் துறை சென்று சேர்கிறது. சயீத் துறைமுகத்தைப் போலவே சூயஸும் பல வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் புதிய கட்டுமானங்களுள் 850 கெஜம் நீளமுள்ள பார அலை தாங்கி முக்கியமானது. தவிர எகிப்திய சுல்தானால் 413 அடி நீளம், 95 அடி அகலமுள்ள ஓர் இரேவும் பி. அண்டு ஓ கழகத்தாரால் 300 அடி நீளம் 85 அடி அகலமுள்ள மற்றொரு இரேவும் அமைக்கப்பட்டுள்ளது. * * * திட்டவேலையின் போதே கழகத்தில் பொருளியல் நெருக்கடி பெரிதாகிக்கொண்டு வந்தது. ஏனெனில் திட்டத்துக்காக மதிப்பிட் டிருந்த செலவு 20 கோடி வெள்ளி. இதை எதிர் நோக்கியே கழகப் பங்கு மூலதன எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் மெய்யான செலவு 43,28,07,882 வெள்ளிகள் ஆய்விட்டன. இதன் பயனாக 1866இல் எல்வாடி என்ற கடற்கால் பகுதியை எகிப்திய அரசியலாருக்கு விட்டுக்கொடுத்துக் கழகம் ஒரு கோடி வெள்ளி பெறவேண்டி வந்தது. அத்துடன் மன்னர் தீர்ப்பின்படி 1879இல் கொடுத்துத் தீர்க்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையை 1869க்குள்ளேயே கொடுத்துத் தீர்ப்பதாகப் பாஷா ஒப்புக்கொண்டு கழகத்துக்கு ஆதரவு காட்டினார். அடுத்த ஆண்டில் பின்னும் வேலைக்குப் பொருள் முடை ஏற்படவே 10 கோடி வெள்ளி பிரான்சிலேயே கடனாக எழுப்பப் பட்டது. கடன் வழங்குபவர்களுக்கு நல்ல வட்டி வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதிலும் கழகப் பொருளியல் மதிப்பு இன்னும் மோசமாகவே இருந்ததால், கடன் கோரிக்கையுடன் யோகப்பரிசு ஆவலும் ஊட்டிய பின்னரே, தொகை முழுவதும் எழுப்பப்பட முடிந்தது. திட்டம் வெற்றிகரமாக முடிவுற்ற ஆண்டில் கூடக் கழகத் துக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. பங்குதாரர்கள் பல ஆண்டு களாகியும் வருவாய்க்கு வழியில்லையேயென்று நம்பிக்கை இழந்து கூக்குரலெழுப்பினர். இதனால் பங்குக்களத்தில் பங்குகளின் மதிப்பு அச்சந்தரும் முறையில் குறையத் தொடங்கிற்று. கழகத்தார் அவசர அவசரமாகத் தம் வசமுள்ள தனி உரிமைகளையும் மருந்தகங்கள், பட்டறைகள் முதலிய அரிய பெரிய கட்டடங்களையும் எகிப்திய அரசியலாரிடம் ஒப்படைத்து அவற்றுக் கீடாக 30 கோடி வெள்ளிகள் பெற்றனர். ஆனால் இந்நிலையிலும் பங்கின், மதிப்புமுகப்பு மதிப்பான 500 வெள்ளிகளுக்கும் கீழே இறங்கின. ஆயினும் 272 வெள்ளி மதிப்புக்குக் குறைந்தன. கடற்கால் வருவாய் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளே பெருகியதனால் இந்தப் படியிலும் கழகத்தின் முறிவு பற்றிய அச்சம் நீங்க வழி ஏற்பட்டது. 1870இல் கடற்கால் வழி சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 480 ஆகவும், சரக்குகளின் எடை, 6,54,915 பாரங்களாகவும் இருந்தன. வருவாய் 43 இலட்சம் வெள்ளிகள் மட்டுமே. ஆனால் 1929க்குள் கப்பல்களின் எண்ணிக்கை 6,274 ஆகவும், சரக்குகள் எடை 3,34,66,014 பாரங்களாகவும், சுங்க வருமானம் 111,55,20,000 வெள்ளிகளாகவும் உயர்ந்தன. கடற்கால் முழு உலகக் கழகத்தின் வாழ்வில் 1875 ஒரு திருப்பு முகம் என்னலாம். ஏனெனில் பங்குகள் முகப்புவிலை கடந்து மதிப்புயர்வு பெற்ற ஆண்டு அதுவே. அத்துடன் இவ்வாண்டி லிருந்தே சூயஸில் பிரிட்டனின் முட்டுக்கட்டைப் போக்கு எதிர் பாராது திடுமென மாறி, முழுதும் கைப்பற்றும் போக்காக வளரத் தொடங்குவதைக் காண்கிறோம். இதன் முன்னிழற் சாயல் 1874லிலேயே தென்படுகிறது. சூயஸ் கடற்காலின் ஆட்சியை ஓர் உலக நாடுகள் குழுவின் பொறுப்பில் விடுவது நல்லது என்று அவ்வாண்டில் மேல் சபையில் டார்பிப் பெருமகனார் பேசினார். அடுத்த ஆண்டிலேயே பாஷாவுக்கிருந்த 3,50,000 வெள்ளி கடனை முன்னிட்டு முதல்வர் பாமர்ஸ்டன் தூண்டுதலின் பேரில் டிஸ்ரேலிப் பெருமகனார் அவரிடமிருந்து 1,76,602 பங்குகளை 39,76,582 பிரிட்டிஷ் பொற்காசுகள் விலை தந்து வாங்கினார். முழு உலகக் கழகத்தில் பிரிட்டன் இப்போது மிகப் பெரும் பான்மைப் பங்குகள் கொண்டு அதன் வாழ்வில் பிரான்சுடன் ஒப்பான அக்கரை காட்டத் தொடங்கிற்று. கடற்காலைப் பயன் படுத்தும் நாடுகளில் முதன்மை பெற்றதுடன் ஆட்சியில் முதன்மை நிலைபெற அது பாடுபடத் தொடங்கிற்று. * * * ஓருலகக் கனவுடன்தொடங்கி, மேலையுலகின் தமிழகக் கனவில் வளர்ந்த கடலிணைப்புத் திட்டத்தை ஓருலக நோக்குடன் வளர்த்தவர் டி லெஸெப்ஸ். அதன் ஓருலக ஆற்றல் வீழ்ந்துபட்ட கீழை உலக விழித்தெழச் செய்யவும், மறைந்த எகிப்தின் மாண்பை மறுமலர்ச்சியுறச் செய்யவும் எளிதில் வழிவகுத்தது. அம்முறையில் 19-20ஆம் நூற்றாண்டுகளின் வாழ்வு கடற்கால் வாழ்வை வளர்த்தது. பனாமாக் கடற்காலையும் பிற சில கால்வாய்களையும் போல, சூயஸ் கடலிணைப்புப் பூட்டுக்களும் நீர் மட்ட வேறுபாடு களும் உடையதன்று. இருபுறக் கடல் மட்டத்துடன் மட்டமான கடற்காலாகவே அதுஇயங்குகிறது. கப்பல்கள் கால்வாயில் மணிக்கு 5 அல்லது 6 கடற்பாகை (முnடிவள) வேகத்தில் செல்கின்றன. 12 பாகை வேகம் வரை செல்லக் கடற்கால் விதிகள் இசைவளிக்கின்றன. கடலிலிருந்து கடலுக்குச் செல்லும் நேரம் 1866இல் 36 மணியளவாய் இருந்தது. இது 1927 லேயே பாதிக்கு மேல் குறைந்து 15 மணி 6 கணங்கள் ஆகியுள்ளது. கடற்காலின் ஆழ அகலங்கள் மிகப் பெரிய கப்பல்கள் செல்லும்படி படிப்படியாகச் சீர்திருத்தப் பெற்றுள்ளன. தொடக்கத்தில் அடியகலம் 22 மீட்டராகவும், ஆழம் 8 மீட்டராகவும் இருந்தது. 1867லிருந்து இதில் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1855இல் எடுக்கப் பட்ட நடவடிக்கையின்படி, நீள முழுவதிலும் ஆழம் தொடக்கத்தில் 8ஙூ மீட்டர் ஆக்கப்பட்டு, இதுவே நாளடைவில் 9 மீட்டர் ஆக உயர்த்தப்பெற்றது. அகலமும் சயீத் துறைமுகத்திலிருந்து கைப்பேரி வரை 65 மீட்டராகவும், அதற்கப்பால் தெற்கே 75 மீட்டராகவும், வளைவு நெளிவுள்ள இடங்களில் 80 மீட்டராகவும் செப்பஞ் செய்யப்பட்டது. இத்திருத்தங்களுக்காகக் கழகத்துக்கு ஒரு கோடி வெள்ளி கடனுதவி அளிக்கப்பட்டது. 1913க்குப்பின் 31ஙூ அடி நீராழ்வு (னுசயரபாவ) உள்ள பெருங்கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லும்படி ஆழம் 36 அடி ஆக்கப்பட்டது. கப்பல்கள் தொடக்கக் காலங்களில் கடற்காலின் சில குறிப் பிட்ட இடங்களில்தான் ஒன்றை ஒன்று கடக்க முடியும். இத்தகைய ‘கடவு’ இடங்களின் (பயசநள) மொத்த நீளம் ஒரு கல்அளவாகவே இருந்தது.மேலே குறிப்பிட்ட திருத்தங்களின் பின் கடற்காலின் பெரும் பகுதியிலும் ஒரு திசை செல்லும் கப்பல் நின்று, மற்றக் கப்பல்கள் எளிதாகக் கடக்க வழி ஏற்பட்டது. ஒளிகாலும் தொலை மின்விளக்குடைய கப்பல்கள் 1885லேயே இரவில் பயணம் செய்ய இசைவளிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1913இல் கரை முழுவதும் ஒளி விளக்கம் அமைக்கப்பட்டு விட்ட படியால் இரவுப் பயணம் பகற்பயணம் போலவே தங்குதடையற்ற தாகிவிட்டது. சூயஸ் கடற்கால் உலக நாடுகள், எல்லாவற்றுக்குமே இன்றி யமையாப் பயனுடையதாதலால், அதனை எக்காலத்திலும் எல்லா நாடுகளும் எத்தகைய வேறுபாடுமின்றிப் பயன்படுத்தத் தக்க முறையில் கழக ஆட்சி நடைபெற வேண்டுமென்றும், நேர்மையான கட்டணம் விதிக்கப்பட வேண்டுமென்றும், மூல உரிமைப் பத்திரம் வலியுறுத்திற்று. முதல் அமைதியைக் கழகம் அரும்பாடுபட்டுக் காத்துள்ளது. ஆனால் கட்டண வகையில் தொடக்கத்திலிருந்தே கப்பல் உரிமையாளர் கிளர்ச்சிகள் செய்து வந்துள்ளனர். மூலச் சலுகைகள் அன்று நடைமுறையிலிருந்த பிரிட்டிஷ் சட்ட வழக்கப்படி முறையின் கப்பலின் நிகரபார அளவை மதிப் பிட்டிருந்தன. அந்த அளவின்படி பாரம் ஒன்றுக்கு 10 வெள்ளிகள் என்ற கட்டணம் வரையறுக்கப்பட்டிருந்தது. 1872இலும் 1873இலும் கான்ஸ்டான்டி னோப்பிளில் நடைபெற்ற உலக நாடுகள் மாநாட்டில் இதில் சிறுசிறு மாறுதல்கள் செய்யப்பட்டன. ஆனால் 1883இல் கழகப் பணியாளரும் கப்பல் உரிமையாளரு மடங்கிய இலண்டன் மாநாட்டில் இவ்வகையில் புரட்சிகரமான ஒரு மாறுதல் தொடங்கி வைக்கப்பட்டது. கட்டணம் 1885இல் உடனடியாக 9ஙூ வெள்ளி யாக்கப்பட வேண்டுமென்றும், கழக ஆதாயம் வளரவளர, அதற்கிசையப் படிப்படியாக அரை வெள்ளி குறையவேண்டுமென்றும், ஆதாயம் 25 சதமானம் ஆனபின், கட்டணத்தை 5 வெள்ளியளவு வரை குறைப்பதற்கே மிகையாதாயம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு முடிவு செய்தது. இதன்படி 1906இல் கட்டணம் 7ஙூ வெள்ளியாயிற்று. 1928இல் சரக்குக் கப்பல்களுக்குக் கட்டணம் 7ஙூ வெள்ளியாகவும் ஏனைய வற்றுக்கு 4ஙூ ஆகவும் குறைந்தது. கடற்காலின் பயன் இவ்வாறு உலகை வளர்த்தாலும் அதன் தாயகமான எகிப்துக்கு அது அந்த அளவு பயன்படவில்லை என்று எகிப்திய மக்கள் எண்ணினர். எகிப்தின் தேசீய வாழ்விலே இவ் வெண்ணமே ஒரு பெரு மாறுதலை உண்டுபண்ணத் தொடங்கிற்று. 4. எகிப்தின் புதுவாழ்வு சூயஸ் திட்டத்தின் முழு வரலாறு உலகளாவியது. உலக வரலாறு முழுவதும் பரவி, அதையே தன் வரலாறாகக் கொண்டுள்ளது. உலக வரலாற்றையே இரண்டு பெருங்கூறுகளாகப் பிரிக்க அது உதவுகிறது.அதன் முற்பகுதியான நீலாற்றுக் கால்வாய் வரலாறு புகழ் மாண்ட ஒரு தொல்பழங்கால ஊழியின் வரலாறாக முடிவுறுகிறது. அதன் அழிபாட்டிலிருந்து பூத்த புது உலக வாழ்வாக கடற்கால் திட்ட வரலாறு அமைகிறது. எகிப்திய வரலாற்றின் மீது திட்டத்தின் ஒளி இன்னும் முனைப்பானது. அது எகிப்திய வாழ்வின் மூன்று வரலாற்றூழிகளை மூவேறாகப் பிரித்துக்காட்ட உதவுகிறது. முதல் நீலாற்றுக் கால்வாய் வரலாறு எகிப்திய வாழ்வின் முதலூழியாகவும்; இரண்டாம் நீலாற்றுக் கால்வாய் வரலாறு அதன் இரண்டாம் ஊழியாகவும்; திட்ட நிறைவேற்றம் கடந்த கடற்கால் வாழ்வும் வளர்ச்சியும் அதன் தேசீய மலர்ச்சிக்குரிய புது வாழ்வாகவும் அமைகின்றன. பரோவாக்களின் முதல் கால்வாய்க்குரிய எகிப்து, புகழின் உச்ச உயர் கொடுமுடிகண்ட எகிப்து - உலகுக்கு நாகரிகமளித்த முதன்மை நாடுகளிலும் முன்னணி நாடாக அன்று அது நிலவிற்று. வானளாவிய தமிழகக் கோபுரங்களைக் கூடக் குழந்தைகளாக மடியில் தவழவிடக்கூடிய அளவு பாரித்துயர்ந்த பாரக் கூம்புகள் (ஞலசயஅனைள) அப்பாரக் கூம்புகளையும் உலகையுமே பார்த்து ஏளன நகை நகைப்பதுபோல அமைக்கப்பட்டுள்ள கன்னிமுகச் சிங்கக் குன்றம் (ளுயீhலnஒ) ஆகிய அவ்வூழி எகிப்தின் சாதனைகளைக் கண்டு உலகம் இன்று மலைத்து நிற்கிறது. உலகம் வாழ்வு காணுமுன் ஆயிரக்கணக்கான ஆண்டு முழு வரலாறு கண்ட, உலகில் மொழிகள் உருவாகுமுன் மொழியும், எழுத்துமுறையும் இலக்கிய இலக்கணங் களும், கலையும் அறிவுத்திறனும் அறிவாராய்ச்சிகளும் வளர்த்து உலகு களித்த மனித இனநாகரிக அன்னையாக அது அன்று விளங்கிற்று. எகிப்தின் முதலூழி உலகம் கிழக்கு முகமாகத் திரும்பியிருந்த உலகம். நாகரிகத்தில் அன்று எகிப்துடன் தோழமை வகித்த, உயிர்த் தொடர்புகொண்ட இனங்கள் கீழ்த்திசை இனங்கள் அவற்றுள் சிறப்பாக, ‘பண்ட்’ நாடு என்று எகிப்தியர் குறித்த தமிழகத்தின் வாணிக, கலைத் தொடர்பின் அவாவே பரோவாக்களின் கடற்கால் கனவுகளுக்கும் நனவு முயற்சிகளுக்கும் தூண்டுதலாயிருந்தது. கிழக்கிலிருந்து நாகரிக ஒளி பெற்று, அதை மேற்கே பரவ விடும் ஒளி மணியாக அன்று எகிப்து நிலவிற்று. வரலாற்றில் அதன் தனிப் பெருமைக்கு அன்று உதவிய செய்தி இதுவே. எகிப்திய வரலாறு உலக வரலாறு ஆகிய இரண்டுமே இதற்குச் சான்றுகள் தருகின்றன. ஏனெனில் மீண்டும் அதே ஒளியின் கனவு நிழலிலேயே எகிப்து புதுவாழ்வு கண்டுள்ளது. புகழூழியில் உலகாண்ட எகிப்து, அடுத்த ஊழியில் உலகாண்ட இனங்களுக்கு அடங்கிப் படிப்படியாக நலிவது காண்கிறோம். ஆனால் எகிப்துடன் தோழமை கொண்ட யூத, பினிஷிய, சால்டிய, சிந்துவெளி இனங்களும் சரி - எகிப்தாண்டு உலகாண்ட பாரசிக, கிரேக்க உரோமக, அராபிய, துருக்கிய, மேலை ஐரோப்பிய இனங்களும் சரி அது ஏற்ற ஒளியைத் தாமும் ஏற்றே உலகில் வளமும் ஆட்சியும் செலுத்தியுள்ளன. ஆனால் அவ்வினங்கள் யாவுமே அவ்வொளி பெற்றுத் தம் வாழ்வில் ஒரே ஒரு மலர்ச்சிதான் பெற்றன - ஒரே ஒருபுகழ் ஊழிதான் கண்டன. எகிப்தோ அவ்வினங்களின் புகழ் வாழ்வுகள் முழுவதையும் தன் நீண்ட இடையிருட் காலத் துயில் வாழ்வாகக் கொண்ட, மீண்டும் புது மலர்ச்சியடைந்துள்ளது. மேலையுலகின் கனவில் மலர்ந்த சூயஸ் வாழ்வே அதற்கு இவ்வாறு மூன்றாம் ஊழியில் புதிய தேசீய வாழ்வளித்துள்ளது. எகிப்தை ஆட்கொண்ட இனங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றி னிடையே அராபிய இனத்துககும் இஸ்லாமிய நாகரிகத்துக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. எகிப்து அவற்றுடன் இரண்டறக் கலந்துவிட்டது. எகிப்தின் இடையிருட் கால ஊழியிலேயே இஸ்லாமிய உலகுதன் உலகப் புகழ் ஊழிகண்டது. ஆனால்அப்புகழ் ஊழியின் எல்லை தாண்டி, எகிப்து புதுப் புகழ் ஊழியில் காலெடுத்து வைத் துள்ளது. அதனுடன் அராபிய இன எழுச்சிக்கும் இஸ்லாமிய உலகின் புது வாழ்வுக்கும் அதுவே தலையூற்றாகவும் உயிர்த்தூண்டுதலாகவும் அமைந்து வருகிறது. இவ்வெல்லா ஒளிகளுக்கும் ஒளி ஊட்டி, எல்லாப் புகழ்வாழ்வு களையும் தன் இடையிருட்காலத் தளர் ஒளிக் கதிர்களாக கொண்ட தமிழகத்தின் ஓருலகப் புது மலர்ச்சிக்கும் அதுவே ஒரு முன்னறி குறியாய் அமையத்தக்கது என்னலாம். * * * மேலையுலகின் ஒருநாடு வளம் பெறவேண்டுமானால், அது கீழ்த்திசை வாணிக வழியின் ஆட்சி பெற வேண்டும். மேலை யுலகில் செல்வாக்கும் வலிமையும் ஆதிக்கமும் வேண்டுமானால், கீழ்த்திசையாண்டு, கீழ்த்திசை வளமாக வேண்டும். ஆனால் இந்த இரண்டும் சூயஸையும் எகிப்தையும் கைக்கொள்ளாமல் முடியாது - இதுகே பேரறிஞன் லைப்னிட்ஸ் நெப்போலியனுக் களித்த அரசியல் அறிவு நுட்பம். ஒரு நூற்றாண்டு சென்றே ஹிட்லரும் முஸ்ஸோலினியும் இதனை உணர்ந்து மேலையுலகெங்கும் வீறிட்டு வெற்றி முழக்கி எகிப்தை நோக்கி விரைய முயன்றனர். அம்மூவர் அவாவும் நிறைவேறாமல் எகிப்தைக் காத்தது பிரிட்டன்தான். ஆனால் அது எகிப்தை எகிப்துக்காகக் காக்கவில்லை. தனக்காகவே காத்தது. அது மட்டுமல்ல.அவர்கள் கண்ட உண்மையை அவர்கள் துணையுடன் காணவே, அதற்கு அரை நூற்றாண்டும், அவர்களுக்கு ஏற்பட்ட முடிவின் படிப்பினை உணரப்பின்னும் அரை நூற்றாண்டும் சென்றன. 20ஆம் நூற்றாண்டின் முதற் பாதி கழிந்த பின்பே பிரிட்டன் வல்லாளர் வழிநின்று செயலாற்றத் துணிந்தது. ஆனால் வரலாற்றில் முதல் தடவையாக, மேலையுலக வல்லாண்மை மரபை, ஒரு புதிய கீழ்த் திசைத் தேசீய மரபு எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளது. அலக்ஸாண்டர் - சீசர் - நெப்போலியன் மரபின் மாலைச் செவ்வொளி தரும் அழகு வண்ணக் காட்சி இதுவே. பிரிட்டனின் வல்லாண்மை மரபுப் போக்கின் முதற் படியை நாம் 1874 - 75இல் காண்கிறோம். முந்திய ஆண்டில் சூயஸ் கடற்கால் ஆட்சி உலகப் பொதுக்குழு ஒன்றின் பொறுப்பில் இருப்பது நலம் என்று டார்பிப்பெரு மகனார் விரும்பினார். அடுத்த ஆண்டில் பிரிட்டன் உலகக் கழகத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கி, கடற் காலாட்சியில் அக்கரையும் பங்கும் கொண்டது. ஆனால் இவற்றுடன் பிரிட்டனின் உள்ளவா ஒரு சிறிதும் நிறைவுற வில்லை. சூயஸ் நில இணைப்பையே பின்னும் வேறிடம் வெட்டி, ஒரு மாற்றுக் கடற்கால் அமைக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் கப்பல் உரிமையாளர் பிரிட்டிஷ் அரசியலாரிடம் வேண்டினர். அரசியலார் இதைக் கருத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் அதற்குள்ளாக, எகிப்தில் தம் பிடியை வலுப்படுத்தி, கடற்காலைத் தம் வசப்படுத்திவிடும் வாய்ப்பு அவர்களுக்குக் கட்புலனாகி வந்தது. உலகக் கழகத்தில் பெருவாரியான பங்குகளைப் பிரிட்டிஷ் முதல்வர் வாங்கியதனால் பிரிட்டனில் அரசி முதல் ஆண்டிவரை எல்லாரும் மனநிறைவு கொண்டனர். ஆனால் எகிப்தில் நிலை வேறு வகையாயிருந்தது. இது வரை யார் ஆண்டாலென்ன, எவர் மாண்டாலென்ன என்றிருந்தார்கள் எகிப்தியர்கள். இந்நிலை மாறி, முதன் முதலாகத் தேசிய உணர்வு தூண்டப்பட்டது. தம் ஊதாரித் தனத்தால் தேச உடைமையையே அயலானுக்களித்த பாஷா மீதும், அவ்வயலார் மீதும் மக்கள் உள்ளம் கொதித்தெழுந்தது. 1881 - 82இல் இது பெருங் கிளர்ச்சியாக மூண்டது. கிளர்ச்சியை அடக்கப் பாஷா எவ்வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரஞ்சுக்காரர்கூட ஒதுங்கியே இருந்துவிட்டனர். கிளர்ச்சிகளில் ஐரோப்பியர் உடைமைகள் அழிவுக்காளாயின. ஜூன் 11இல் அலக்ஸாண்டிரியாவில் ஐம்பது ஐரோப்பியருக்கு மேல் உயிரிழந்தனர். பிரிட்டிஷார் இத்தறுவாயைப் பயன்படுத்திச் செயலில் விரைந்தனர். பிரிட்டிஷ் படைத் தலைவர் சர் கார்னெட் அலெக்ஸாண்டர் உல்ஸ்லி கடற்காலில் கப்பர் போக்கு வரவையே தற்காலிகமாக இடைமறித்து வைக்க உத்தரவிட்டார். கடற்படைத் தலைவர் செய்மர் அலெக்ஸாண்டிரியாவைத் தாக்கிஅதைத் தம் கட்டுக்குட்படுத்தினார். கடற்கால் பாதுகாப்புக்கும் விரைந்தார். பிரஞ்சுக்காரரும் இப்போது உதவிக்கு வந்தனர். இரு நாட்டுக் கப்பற்படைகளும் போரிலீடுபட்டன. ஆகஸ்டு 21ஆம் நாள் இஸ்மாயிலியா நகரம் பிரிட்டிஷார் கைப்பட்டது. செப்டம்பர் 13க்குள் கலகம் அடக்கப்பட்டு விட்டது. ஆனால் எகிப்திலும் சூயஸிலும் பிரிட்டிஷார் பிடி இதனால் வலுவடைந்தது. பிரஞ்சுக்காரர் தயக்கத்தால், அவர்கள் நடு உலகில் முன் பெற்றதெல்லாம் இழந்தனர். பிரிட்டிஷார் உடனடிச் செயலால் நடு உலகாட்சியில் முன்னேறினர். சூயஸ் கடற்கால் பாதுகாப்பிற்கும் எகிப்தின் பாதுகாப்பிற்கும் இனி பொறுப்பு வகிக்க வேண்டியவர்கள் தாங்களே என அவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பை மற்ற உலக நாடுகள் எளிதில் ஏற்கவில்லை. ஆனால் 1888 அக்டோபர் 29இல் கான்ஸ்டான்டினோப்பிளில் வடிய பல நாட்டுப் பிரதிநிதிகளும் சூயஸ் கூட்டு ஒப்பந்தம் ஒன்று வகுத்தனர். அதன்படி எகிப்தின் சார்பில் சூயஸ் கடற்கால் ஆட்சியின் பாதுகாப்பை பிரிட்டன் மேற்கொள்ள இசைவு அளிக்கப் பட்டது. ஆனால் போர்க் காலத்தில்கூட, எகிப்து போரில் இறங்க நேர்ந்தாலன்றி, எல்லா நாடுகளின் கப்பல்களுக்கு கடற்கால் திறந்தே இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டது. இக்கூட்டு ஒப்பந்தத்தில் பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆஸ்டிரியா, ஹங்கேரி, இத்தாலி, பிரஷ்யா, ஸ்பெயின், துருக்கி, நெதர்லாந்து (ஹாலந்து) ஆகிய நாடுகள் சார்பில் கையொப்பங்கள் இடப்பட்டன. * * * அமைதி நாடி மேற்கொள்ளப்பட்ட கான்ஸ்டான்டி னோப்பிள் ஒப்பந்தம் நடு உலக வாழ்வின் அமைதிமீது எறியப்பட்ட ஒரு கல் ஆயிற்று. பிரிட்டன் எகிப்தை முழுதும் ஆட்கொள்ளக் கனவு கண்டது அதன் மூலம் கீழையுலகின் வாயிலான சூயஸைத் தன் பிடிப்பில் வைத்துக் கொள்ள எண்ணிற்று. அதே சமயம் தன் வாய்ப்புக்களை நழுவிட்டுவிட்ட பிரான்சு அவற்றை மீட்டும் பெற அவாவிற்று. பிரிட்டன் அவற்றை கைப்பற்றுவதைத் தடுக்கவும் விரும்பிற்று. இது காரணமாக அது எகிப்து மீது துருக்கியின் மேலுரிமையை வற்புறுத்தத் தொடங்கிற்று. துருக்கியின் பாதுகாப்புப் பற்றி மிகவும் கவலை தெரிவித்த பிரிட்டன் இப்போது எகிப்தின் பாதுகாப்பில் அடுத்த ஒரு நூற்றாண்டின் உலக வரலாறு இதுவே என்று கூறலாம். சூயஸ் பகுதியை உள்ளடக்கிய சினாய் நிலத்தொங்கலிலிருந்து எகிப்து தன் படைகளைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று துருக்கி பிரான்சின் தூண்டுதலால் கட்டளையிட்டது. துருக்கியே அப்பகுதிவரை இருப்புப்பாதை இடவும் முனைந்தது. ஆனால் அதே சமயம் எகிப்தின் பக்கம் நாடவேண்டாமென்று பிரிட்டன் அதற்கு எச்சரிக்கை அனுப்பிற்று. பிரிட்டிஷ் கப்பல்கள் எகிப்துக் கரைக்கு அனுப்பப்பட்டன. அதன் மேல் துருக்கி தன் எழுச்சிகளை அடக்கிக் கொண்டு பணியவேண்டியதாயிற்று. அந்நூற்றாண்டிலேயே சூயஸ் வழி செல்லும் உயிர் வழியில் 1839இல் பிரிட்டன் ஏடனைக் கைப்பற்றிக் கொண்டது போல, இத்தாலி மஸாவா, பெய்லுல் ஆகிய பகுதிகளையும், பிரிட்டனும் இத்தாலியும் ஸோமாலிலாந்தின் இருபகுதிகளையும், பிரான்சு டுனிசியாவையும், ஜீபூதியையும் கைப்பற்றிக்கொண்டன. இத்தாலி 1911லும் 1922லும் டோடகானிஸ் தீவுகளையும் லிபியாவையும், 1936லிருந்து அபிசீனியாவையும் அல்பேனியாவையும் தன்வயப் படுத்திக் கொண்டிருந்தது. இவற்றுக்கிடையே பிரிட்டன் 1899 ஜனவரியில் எகிப்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சூடானிலும் தன் பாதுகாப்பாட்சி நிறுவிற்று. நடுநிலக்கடலில் இத்தாலி பிரான்சின் செல்வாக்குக் கண்டு தான் அச்சமும் பொறாமையும் கொண்டது. பிரிட்டன் முன்னேற்றத்தை அது வெறுக்கவில்லை. அது பிரான்சின் வேகம் தடுக்கவும் தன் வளர்ச்சி ஏக்கவும் பயன்படும் என்றே நினைத்தது. ஆனால் இத்தாலியின் அச்சத்தைப் பயன்படுத்தி அதனுடனும் ஆஸ்டிரிய வுடனும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து ஜெர்மனி மிக வேகமாக முன்னேறி வந்தது. ஜெர்மன் பேரரசர் கெய்ஸர் இரண்டாம் வில்லியம் 1898இல் துருக்கி சுல்தானால் வரவேற்கப் பட்டு, கான்ஸ்டான்டினோப்பிளுக்கும் பாலஸ்தீனத்துக்கும் வருகை தந்தார். 1892இல் துருக்கியுடன் நேச உறவு கொண்டு அவர் ஜெர்மனியிலிருந்து கான்ஸ்டான்டினோப்பிள்வரை இருப்புப் பாதைத் தொடர்பு ஏற்படுத்தினார். இதையே பாக்தாதுவரை செல்லும் பாதையின் ஒரு பகுதியாகக் கொள்ளவும் பாரசிக வளைகுடாவரை செல்லவும் 20ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி திட்டமிட்டது. மேலும் துருக்கியை முழுதும் ஆட்கொண்டு, எகிப்தையும் சூயஸையும் கைப்பற்றி விடலாமென்றுகூட ஜெர்மானியர் கனவு கண்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியும் திட்டங்களும் பிரிட்டனுக்குக் கிலியூட்டின. பாக்தாது கடந்த பாரசிகக் குடாவரை தொடரும் பாதை தம் உரிமை என்று பிரிட்டிஷார் வலியுறுத்தினார்.இதில் அவர்கள் வெற்றி பெற்றாலும், ஜெர்மனியின் உதவி பெற்றுத் துருக்கி சினாய் நிலத்தொங்கல் நோக்கி இருப்புப்பாதை போட முயன்றதைத் தடுக்க முடியவில்லை. அதனுடன் அரசியல் சூழலால் துருக்கி ஒருபுறம், தேசீய உணர்ச்சியால் எகிப்து மக்கள் மற்றொரு புறம் பிரிட்டனுக்கெதிரான உணர்ச்சி கொள்வதையும் அவர்களால் மாற்ற இயலவில்லை. சூயஸ் உலகக் கழகம் இச்சமயம் கட்டணம் குறைத்தும் கடற்காலை ஆழ அகலப்படுத்தியும், சயீத், சூயஸ் துறைமுகங்களை விரிவுபடுத்தியும் போக்குவரவில் முன்னேற்றம் ஏற்படுத்தும் திட்டங்களில் முனைந்திருந்தது. ஆனால் 1914இல் ஏற்பட்ட முதல் உலகப் பெரும்போர் இவற்றைப் பத்தாண்டுகள் தள்ளி வைத்து விட்டது. * * * முதல் உலகப்போரில் துருக்கி முதலிலேயே ஜெர்மனியுடன் சேரவில்லை. ஆனால் நடுநிலை வகித்துக் கொண்டே ஜெர்மனி பக்கம் ஆதரவாய் இருந்தது. இதே சமயம் பிரிட்டன் எகிப்தை ஒரு நேசநாடாகக் கருதி, அதன் பாதுகாப்புக்குரிய தன் பொறுப்பையும் வலியுறுத்திற்று பாஷா அப்பாஸ் ஹில்மி, துருக்கி ஆதரவாளராயிருந்தாலும் எகிப்திலிருந்து கொண்டு பிரிட்டனை எதிர்ப்பில் பயன் காணாமல் கான்ஸ்டான்டி னோபிளுக்கே சென்று தங்கிவிட்டார். 1914 நவம்பர் 2இல் பிரிட்டிஷ் படைத் துறைத்தலைவர் மாகஸ்வெல் இலண்டனிலிருந்த வண்ணமே எகிப்தில் படைத் துறைச் சட்ட ஆட்சி நிலவும் என்று அறிவித்தார். எகிப்து, துருக்கிப் பேரரசுப் பகுதியாகக் கருதப்படும் என்று துருக்கிய வெளி நாட்டமைச்சர் இச்சமயம் கூறிவந்தார்.ஆகவே பிரிட்டிஷார் டிசம்பர் 18இல் எகிப்து மீது துருக்கி மேலுரிமை முடிந்து விட்டதென்றும் அப்பாஸ் ஹில்மி பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டதாகவும் அறிவித்தனர். இளவரசர் ஹுசேன் காமில்பாஷா கிட்டத்தட்டச் சுல்தானுக்கு இணையான மதிப்புடன் எகிப்தின் ஆட்சியுரிமை அளிக்கப்பட்டார். எகிப்து பிரிட்டிஷாரின் காப்பாட்சிக்குள்ளாயிற்று. கடற்கால் பகுதியின்மீது துருக்கியர் நடுப்பகுதி யூடாகவே தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குண்டுகள் வடக்கிலும் தெற்கிலுமே வீசப்பட்டன. 1915 ஜனவரி 26ஆம் நாளன்று, கண்டாராவுக்கக் கிழக்கே ஏழுகல் தொலைவில் அகழ் அரண்காப்புச் செய்து கொண்டு துருக்கியர் பிரிட்டிஷ் படையின் மீது தாக்கினர். இதனால் ஜனவரி 27ஆம் நாளில் கடற்கால் போக்குவரவு முழுதம் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. அதனுடன் அப்பகுதி இடர்ப்பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. கடற்காற்பகுதி கடந்து எகிப்துமீது படையெடுக்கவும் துருக்கியர் எண்ணியிருந்தனர். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் போர் துருக்கிக்கு எதிராயிற்று. கடற்கால் பகுதிக்குரிய இடர் அகன்றது. எகிப்துமீது படையெடுக்கும் கருத்தையும் கைவிட்டுத் துருக்கிப் படைகள் பின்னேறின. கிழக்கிலிருந்து மட்டுமன்றி, மேற்கிருந்தும் எதிரிகள் எகிப்தைத் தாக்க எண்ணினர். ஆனால் செனூஸி வழியாக அவர்கள் படை யெடுத்து வந்தபோது முறியடித்துத் துரத்தப்பட்டனர். 1915இல் கடற்காற் பகுதிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. எதிரிப் படைகள் பாலஸ்டினில் குவிக்கப்பட்டன. ஆனால் இதற்குள் பிரிட்டினின் குடியேற்ற நாட்டுப்படைகளும் கடற்கால் பகுதியில் குவிக்கப்பட்டதனால் நெருக்கடி விரைந்து தளர்ந்தது. 1917-18இல் துருக்கிப்படைகள் பாலஸ்தீனத்திலேயே முறிவுற்றன. வெற்றிற்குப் பின் 1918இல் ஏற்பட்ட வெர்ஸெயில் ஒப்பந்தம் பிரிட்டனுக்கு எகிப்தில் முன்னிருந்த உரிமைகள் யாவற்றையும் மீண்டும் வலியுறுத்திற்று. போர் நடந்த நான்கு ஆண்டுகளிலும 1915 பிப்ரவரி 3இல் ஒருசில மணிநேர மட்டுமே கடற்கால் போக்குவரவு முற்றிலும் முடக்கப்பட வேண்டியதாயிருந்தது. கப்பல் போக்கு வரவுகள் சற்றுக் குறைந்தாலும் தடைபடாமல் இயங்கியே வந்தன. ஆயினும் போர்க்கால முழுதும் கடற்காலின் இருகரையும் ஒரே போர் வீரர் பாசறையாகத் தான் காட்சியளித்து வந்ததது. போர் கழிந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் இத் தோற்றம் முற்றிலும் மாறிற்று. போரை நினைப்பூட்டும் இடங்களாக, சயீத்துறைமுகம், இஸ்மாயிலியா, சூயஸ் துறைமுகம் ஆகிய மூவிடங்களிலும் உள்ள வெற்றிச் சின்னங்களும், அல்லன்பரிப் பெருமகனாரால் போடப்பட்ட பாலஸ்தீன இருப்புப் பாதையும் மட்டுமே மீந்தன. * * * முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட கடற்கால் முன்னேற் றங்களுள் குறிப்பிடத் தக்கது பவூத் துறைமுகமும் நகரமுமேயாகும். இது நடுநிலக் கடல் முகத்தில் கடற்காலையடுத்து சயீத் துறைமுகத்துக்கு எதிர்த்திசையில் உள்ளது. தற்கால எகிப்தின் முதல் அரசராய் அமைந்த மன்னர் பவூத் பெயர் அதற்குச் சூட்டப்பட்டது. அவரே அதை 1926 டிசம்பர் மாதத்தில் திறந்து வைத்தார். கடற்காலும் நாளடைவில் இரண்டு பெருங் கப்பல்கள் எங்கும் ஒன்றை ஒன்று எதிரெதிர்த் திசையில் கடக்குமளவு ஆழ அகலப்படுத்தப்பட்டது. பல இடங்களில் வளைவுகளும் இதற்கேற்பச் செவ்வொழுங்கு படுத்தப்பட்டன. 1934இலிருந்து சூயஸ் கடற்கால் போக்கு வரவில் இத்தாலியின் பங்கு பெரிதாயிற்று. அதுவரை அதன் பயனீட்டில் 5 ஆம் இடத்தில் இருந்து வந்த அந்நாடு அவ்வாண்டில் 4ஆம் இடத்திற்கும், அடுத்த ஆண்டிலேயே 2ஆம் இடத்திற்கும் உயர்வுற்றது. அபிஸீனியா மீது அதுபோர் தொடுப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னிருந்தே செங்கடற் கரைக்குச் சூயஸ் கடற்கால் மூலம் அதன் போர்க்கப்பல்களும் போர்த் தளவாடங்களும் பேரளவில் கொண்டு செல்லப்பட்டு வந்தன. அப்போரின் போதும் இப்போக்குவரவு ஒரு சிறிதும் நிற்கவில்லை. அபிஸீனியச் சக்கரவர்த்தி ஹெலிசெலாஸி அந்நாளைய உலகச் சங்கத்திடம் எவ்வளவு வேண்டுகோள் விடுத்தும், இத்தாலியின் போக்குத் தங்கு தடையற்ற போக்காகவே தொடர்ந்தது. ஏனெனில் எகிப்தைப் போரிலீடுபடுத்திப் பிரிட்டன் தானும் போரில் இறங்கினா லல்லாமல் மூலச் சலுகைப் படியும் சூயஸ் ஒப்பந்தப்படியும் கடற்காலை இத்தாலிக்கு மூடிவிட வழியில்லா திருந்தது. 1939இல் இத்தாலி சார்பில் முஸ்ஸோலினி கடற்கால் ஆட்சியிலும் உலகக் கழகத்திலும் செயலாட்சிப் பங்கே வேண்டு மென்று கோரினார். ஆனால் உலகக் கழகத்தின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லாததால் அவர் எண்ணம் ஒரு சிறிதும் ஈடேற வழி யில்லாது போயிற்று. இரண்டாம் உலகப் போரில் கடற்கால் பகுதிக்கும் எகிப்துக்கும் உள்ள இடாநிலை முதல் உலகப் போர்க்காலத்தில் இருந்ததைவிட மிகவும் பெரிதாகவே அமைந்தது. உண்மையில் போரின் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நடு உலகப் பகுதிப் போரே நேச நாடுகளுக்கு உயிர்ப் போராட்டமாயிற்று. போர்த் தொடக்கத்தில் எதிரிக்கப்பல்கள் கடற்காலிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டன. ஆனால் கால்வாயின் உலகப் பொதுச் சேவை இப்போது எதிரிகள் வகையில்கூட ஒரு சிறிதும் தளராமல் பாதுகாக்கப்பட்டது. அவை வெளியே இடையூறின்றிச் செல்ல இசைவு தரப்பட்டதுடன், கைதாகாமல் கரையோரத்தில் உலவவும் விடப்பட்டன. கடற் சட்டப்படி கரை எல்லை கடந்த பின்னரே அவை எதிர்ப்புக்கு ஆளாயின. போர்த் தொடக்கத்தில் எகிப்திலுள்ள பிரிட்டிஷ் படைகள் ஐரோப்பா செல்ல நேர்ந்தது. ஆஸ்திரேலிய, நியூஸீலாந்துப் படைகளும், இந்தியாவின் இருகாலாட் படைகளும் எகிப்துப் பாதுகாப்பைப் பொறுப்புடன் ஏற்றன. முதல் உலகப் போரில் துருக்கி வகித்த நிலையையே இப்போது இத்தாலி மேற்கொண்டது. சூயஸ் கடற்கால் வழியாக இத்தாலியக் கப்பல்கள் செல்வதையும் அருகே ஊடாடுவதையும் தடை செய்யாமல் இருக்க வேண்டி வந்தது. இத்தாலி போரில் இறங்கியபின் நிலைமை இன்னும் மோசமாயிற்று. கடற்கால் பகுதி கிட்டத்தட்ட முற்றுகை நிலைக்கே ஆளாயிற்று. எண்ணெய்த் துரப்புரவுச் சாலைகளைக் காக்கும் பொறுப்பு மிகப் பெரிதாயிருந்தது. இத்தாலியக் கப்பல்கள் சயீத்துறை முகத்தைத் தாக்க மீண்டும் மீண்டும் முயன்றன. முதல் முயற்சியின் இறுதியில் 4000 இத்தாலி ஐந்தாம் படையினர் சரணடைந்து கைதாயினர். இந்நடவடிக்கைகளால் நடுநிலக் கடலில் போக்குவரவு தளர்வுற்றது. ஆனால் இந்தக் காலத்திலும் சயீத் துறைமுகம் சிறப்புக் குன்றாமலே இருந்து வந்தது. 1940 ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் இத்தாலிய வானூர்திகள் அதன்மீது குண்டுகள் பொழிந்தன. எனினும் அவை பாலை வனத்திலோ, மென்ஸாலா ஏரியிலோ தான் பெரும்பாலாக விழுந்தன. கடற்கால் மிகுதி பாதிக்கப்படவில்லை. இத்தாலியின் கிரேக்க நாட்டுப் படையெடுப்பு பெருஞ் சேதம் விளைவித்தது. ஜெர்மனி அதன் உதவிக்கு வரவேண்டிய தாயிற்று. ஹிட்லரின் ‘லுப்த்வாப்’ வானூர்திகள் இதனால் நடுநிலக் கடற் பகுதிகள் மீது தாக்கின. கடற் கண்ணிகளும் எங்கும் பரவ விதைக்கப்பட்டன. கடற்கண்ணி அகற்றும் பொறுப்பு எகிப்தியப் படைகளிடமே விடப்பட்டிருந்தது. கடற்காலில் கண்ணிகள் மிகுதி விழவில்லையானாலும், இவ்வச்சம் கடற்காலின் நிலையை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கிற்று 1941 மார்ச்சு 3 ஆம் நாள் கடற்காலிலேயே 12 கடற்கண்ணிகள் விழுந்தபோது கலங்கா நெஞ்சு படைத்த சர்ச்சில் கூடக் கவலை தெரிவிக்க வேண்டும் நிலை ஏற்பட்டது. ஆயினும் அவ்வாண்டு தொடங்கப்பட்ட எதிர்த் தாக்குதல்கள் நிலைமையைச் சமாளிக்க உதவின. 1941 ஆகஸ்டு முதல் சயீத், சூயஸ் துறைமுகங்களும் இஸ்மாயிலும் தாக்குதலுக்களாயின. ஆகஸ்டு 11ஆம் நாள் இதனால் போக்குவரத்து முழுதும் நிறுத்தப்பட வேண்டிய தாயிற்று. எகிப்தின் திசையில் இத்தாலியப் படைத்தலைவர் கிராஸியாணி இரண்டரை இலட்சம் படை வீரருடன் முன்னேறினார். எகிப்தில் பிரிட்டிஷ் படைத் தலைவராயிருந்த வேவலிடம் படை வீரர் எண்ணிக்கை மிகக் குறைவாயிருந்ததால் அவர் எதிரி முன் சென்று தாக்கவில்லை. 1940 டிசம்பர் 9இல் கிராஸியானி நீலாற்றை அணுகிய பின்னரே அவர் எதிர்த் தாக்குதல் தொடங்கினார். கிரீசில் பிரிட்டிஷார் தலையிட்டுப் போராடியதால் நேச நாடுகளின் பக்கம் சேதமும் பொருட் செலவும் மிகப் பெரிதாயிற்று. ஆனால் கடற்காலுக்குக் கரை வழி இருந்த பேரிடர் இதனாலேயே மிகவும் தளர்ந்தது. சிரியா நேச நாடுகளின் கைப்பட்ட பின் இது அத்திசையில் முழுப் பாதுகாப்பு அளித்தது. 1941-42ஆம் ஆண்டுகளில் ஆபிரிக்காக் கரையெங்கும் நேச நாடுகளுக்கு உரியதான பின், மறுதிசைப் பாதுகாப்பும் உறுதியாயிற்று. 1942ஆம்ஆண்டில் போர் உச்ச நிலையிலேயே இருந்தது. ஏனெனில் முந்திய ஆண்டிறுதியில் போர் தொடங்கிய ஜப்பான் அதற்குள் இந்தியக் கடல்களை அணுகிவிட்டது. ஜெர்மனியும் கிரிமியா வரை வந்துவிட்டது. ஜூன் மாதத்திறகுள் ஜெர்மானியர் காக்கஸஸுக்கும், ஜப்பானியர் பாரசிகக் குடாவுக்கும் அருகாக வந்து ஒன்றுகூடி விடுவர் என்றுகூட நம்பப்பட்டது. ஆனால் இது நிகழவில்லை. நவம்பருக்குள் ஜெர்மானியர் ஸ்டாலின் கிராடில் தம் முதல் பெருந் தோல்வி கண்டனர். இதே ஆண்டில் அமெரிக்கா, போரில் மும்முரமாக இறங்கிற்று. நடு உலகச் சார்பில் படைத் தலைவர் அலக்ஸாண்டரும், கீழ்த் தசையில் எட்டாம் படைத் தலைமையில் படைத் தலைவர் மாண்ட் கோமரியும் அமர்த்தப்பட்டனர். போர் இது முதல் எதிரிகள் மீதே திரும்பிற்று. தாக்கிய நாடான இத்தாலியே தாக்கப்படும் நிலை அடைந்தது. உலக வல்லரசுகள் பலவற்றின் நோக்கும் சூயஸ் மீதும் எகிப்து மீதுமே இருந்தன என்பதை இரண்டாம் உலகப் போர் நன்கு எடுத்துக் காட்டிற்று. * * * கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எகிப்து பாரசிகப் படையெடுப் புக்கு ஆளான நாளிலிருந்து அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முற்றிலும் தன்னுரிமையில்லாமலே இருந்து வந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாடு வளமும் கிட்டத்தட்டத் தன்வலுவும் பெற்று வந்தாலும், துருக்கியின் மேலுரிமை 1914 வரை மாறாமலே இருந்தது. துருக்கி மேலுரிமையை எதிர்த்து எகிப்தில் படிப்படியாக வலிமை பெருக்கி வந்த பிரிட்டன் 1914இல் போர் நிலையைப் பயன்படுத்திக் காப்பாட்சி நிறுவிற்று. பெயரளவில் ஓர் ஆட்சியாளரை ஏற்படுத்தி, அவர் பெயரால் எகிப்தில் ஆதிக்கம் செலுத்திற்று. அரசியல் வாழ்வில் இது தீச்சட்டியிலிருந்து தீயில் விழுந்ததாக அமைந்தது. 1919இல் எகிப்தின் தேசீய உணர்ச்சி காப்பாட்சியை எதிர்த்துத் தன்னாட்சிக் குரலெழுப்பிற்று.அதன் சின்னமாக ‘வாப்த்’ கட்சி என்ற தேசீயக் கட்சியும் அமைந்தது. சாத் பாஷா சாக்லுல் என்பவர் தலைமையில் அது செய்த போராட்டத்தின் விளைவாக, 1922இல் காப்பாட்சி முடிந்துவிட்டதாக. அறிவிக்கப்பட்டது. ஆட்சியாளர் பவூத் எகிப்தின் மன்னராகவே விளம்பரப்படுத்தப்பட்டார். ஆனால் வாப்த் கட்சி இதில் பெயர் மாற்றம் தான் கண்டது. அவர்கள் தன்னுரிமைக் கூக்குரல் தொடர்ந்தது. பிரிட்டனில் தொழிற் கட்சி ஆட்சி ஏற்றபோது நிலைமை மாறுமென்று எகிப்து போன்ற உரிமையற்ற நாடுகள் எண்ணின. ஆனால் பிரிட்டனில் உள்ள கட்சி வேறுபாடுகள் அதன் ஆதிக்க வகையில் கொள்கை வேறுபாடு கொள்ளாமல், தொனி வேறுபாடே காட்டின. 1924 இல் சாக்லுல் பாஷா பிரிட்டனின் முதுல் ராம்சே மாக்டனால்டுடன் பேச்சுக்கள் நிகழ்த்தினார். எகிப்திலிருந்து பிரிட்டிஷ் படைகளும் நிதி, நீதி அரங்க ஆலோசகர்களும் மீட்கப்பட வேண்டுமன்றும், எகிப்தின் ஆட்சியிலும் வெளி நாட்டுத் தொடர்பிலும் பிரிட்டன் தலையிடக் கூடாதென்றும், எகிப்தில் சிறுபான்மையினரையும் அயலாரையும் சூயஸ் கற்காலையும் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரிட்டன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் சாக்லுல் பாஷாவின் ஐங்கவர்க் கோரிக்கைகள் வலியுறுத்தின. சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகம் தனக்குத் தரப்பட்ட உரிமையை அதன் கால எல்லையாகிய 1968 கடந்தும் நீட்டிக்கும் படி 1909லேயே எகிப்தினிடம் கேட்டிருந்தது. எகிப்து இதனை ஏற்கவில்லை. இப்போது தன் சூயஸ் பாதுகாப்புரிமையை விட்டுக் கொடுப்பதானால்,அதன் ஆட்சியைச் சர்வதேச சங்கத்திடம் விடலாமென்றும் பிரிட்டன் சார்பில் ஆலோசனை கூறப்பட்டது. இது உண்மையில் 1874இல் டார்பிக் கோமகனார் வறிய யோசனையே, பிரிட்டன் எகிப்தின் தன்னுரிமையையோ, கடற்காலாட்சியில் அதன் உரிமையையோ விரும்பவில்லை என்பதை இவை காட்டுகின்றன. 1930இல் இலண்டன் மாநாட்டில் பிரிட்டிஷ் படைகளை இஸ்மாயிலியாவில் நிறுத்திக்கொள்வதென்றும், கடற்காலின் பாதுகாப்பை எகிப்தும் பிரிட்டனும் கூட்டுப் பொறுப்பாக ஏற்ப தென்றும் பேசப்பட்டது. இந்தப் பேச்சு முறிவடைந்தாலும் கிட்டத்தட்ட இதே அடிப்படையிலேயே 1936ஆம் ஆண்டு ஆங்கிலோ எகிப்திய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி எகிப்து பிரிட்டனின் நேசநாடாகக் கருதப்பட்டது. அம் முறையில் எகிப்திய நாட்டுப் படைகள் வலிமைபெற்று வளரும்வரை பிரிட்டிஷ் பகைடள் நீடித்திருப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அடுத்த ஆண்டில் கடற்கால் கழகத்துக்கும் எகிப்திய அரசியலுக்கும் இடையே மற்றோர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, கழகம் தன் செயலாட்சியாளர்களில் இருவரை எகிப்தியர்களாகத் தேர்ந்தெடுப்பதாக ஒப்புக்கொண்டது. ஆண்டு தோறும் எகிப்திய அரசியலுக்கு இறைவரியாக 3 இலட்சம் பொன் கொடுப்ப தென்றும், பணியாளர்களில் ஆண்டுதோறும் எகிப்தியர் எண்ணிக்கையைப் பெருக்கி, 1958க்குள் மூன்றில் ஒருபங்கினரை எகிப்திய ராக்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டது. * * * எகிப்திய உணர்ச்சிகளை மதித்துப் பிரிட்டன கைப்பற்றிய உரிமைகளைப் படிப்படியாக விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் வந்தது. ஆனால் இதனால் இரு நாடுகளுக்கு இடையே நேச உணர்வு வளரவில்லை. பிரிட்டனின் விட்டுக் கொடுப்பை யல்ல, வெளியேற்றத்தையே அவர்கள் எதிர்நோக்கினர். இதற்குரிய காரணம் ஒன்று தான் எகிப்து புதிய எகிப்தாக, தன்னுணர்வுடைய தேசீய இனமாக வளரத் தொடங்கிவிட்டது. உலகாண்ட பண்டைக் காலப் புகழ்சான்ற எகிப்துக்குக் கூட இல்லாத புது வலிமை இப்போது புத்தூழியில் தேசீய எகிப்துக்கு ஏற்பட்டு வந்தது. அது கோரியது உரிமைகளையல்ல, உரிமையை தன்வாழ்வையும் வளத்தையும் தன்விருப்பப்படி வளர்க்கும் தங்கு தடையற்ற தன்னுரிமையைத் தான்அது விரும்பிற்று. சூயஸ் கடற்கால் தம் தேசீயச் செல்வம் என்று எகிப்தியர் 19ஆம் நூற்றாண்டில் எண்ணவில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட பாஷாவின் உரிமை என்ற அளவில்தான் அது உணரப்பட்டிருந்தது. அது நாட்டு மக்கள் செல்வம் என்பதையும் நாட்டு மக்கள் வருங்கால வாழ்வின் திறவுகோல் அதிலேயே அடங்கியுள்ளது என்பதையும் 1937க்குப் பின்னரே அவர்கள் உணர முடிந்தது. அதன் ஆதாயத்திலிருந்து அயலார் விட்டுக் கொடுத்த சிறு சிறு தூசுகளே, பாலைவனங்களைச் சோலைவனங்களாகவும், பாழ் வெளிகளைத் தற்கால வாழ்க்கை வாய்ப்புக்கள் வாய்ந்த பாரிய நகரங்களாகவும் ஆக்குவது கண்டனர். தம் வெண்ணெயை அயலாரிடம் விட்டுவைத்து, அவர்களிடம் நெய்க்குக் கெஞ்சி மன்றாடுவது எவ்வளவு அறியாமை, இழிவு என்பதை அவர்கள் உணர்ந்தனர். இவ்வுணர்வுத் திட்பத்தையும், அதன் பயனான தன்னுறு தியையும் அடுத்த கால் நூற்றாண்டு எகிப்திய வரலாறு காட்டுகிறது. தம் தேசீய ஆர்வத்தை என்றும், எப்படியும், எப்பாடுபட்டும் நிறை வேற்றியே தீருவதென்று துணிவுடன் அவர்கள் எத்தகைய தியாகத்துக்கும் இடருக்கும் தம்மை வரிந்து கட்டிக்கொள்ளலாயினர். பிரிட்டிஷ் படைகள் எகிப்திலிருக்கக்கூடாது. உடனடியாக அதை அப்புறப்படுத்தும் திட்டம் தொடங்கப்படவேண்டும். சூயஸ் கடற்கால் கழக அமைப்பு முற்றிலும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.இந்த இரண்டுமே எகிப்தின் விடாப்பிடியான தேசீயக் கோரிக்கைகளாய் அமைந்தது. இவற்றில் குறைந்த எதையும் அவர்கள் ஏற்க ஒருப்படவில்லை. 1946ஆம் ஆண்டில் ஸ்டான்ஸ்கேட் பெருமகனார் எகிப்தியப் பிரதிநிதிகளுடன் கெய்ரோவிலும் இலண்டனிலும் நீடித்த பேச்சுக்கள் நடத்தினார். பிரிட்டிஷ் படைகளைப் பல கட்டங்களில் படிப்படியாகப் பின்வாங்கவும், 1936ஆம்ஆண்டு உடன்பாட்டைப் புதுப்பிக்கவும், கடற்கால் பாதுகாப்பைப் பிரிட்டன், எகிப்து அரசியல் பிரதிநிதிகளங்கிய குழுவிடம் விடவும் இருசார் இசைவு ஏற்பட்டது. ஆனால் சூடான் பற்றி எழுந்த வேறுபாடு இந்த ஒப்பந்தத்தை முறிவு செய்ததுடன், இரு நாடுகளிடையே பெருத்த மனக்கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. ‘இஸ்ரேல்’ இதற்குள் கீழ்த்திசையில் அராபிய இனத்தின ரிடையே ஒரு புதிய முள்ளாகத் தோன்றி, நடுவுலக நாடுகளுக்குப் புதுத் தொல்லை தந்தது. மேலை வல்லரசுகள் சூயஸ் வழி இஸ்ரேலுக் குப்போர்த் தளவாடங்கள், எண்ணெய் ஆகியவற்றை அனுப்புவது பற்றி மேலும் மனக்கொதிப்பு வளர்ந்தது. எண்ணெய்க் கப்பல்களை மட்டும் நன்னம்பிக்கை முனைவழி அனுப்பி 1949இல் பிரிட்டன் பூசலுக்கு ஒருதற்காலிக முடிவு கண்டது. ஆனால் 1950இல் தேசீயக் காட்சியாகிய ‘வாப்த்’ ஆட்சிக்கு வந்தது. இதுவும் 1945இல் நடைபெற்ற குடியரசுப் புரட்சியும் பிரிட்டனுக்குப் புதுத்தலைவியாயின. ஏனெனில் இப்போது எகிப்தின் சார்பில், அவர்கள் பழைய கைப்பாவைகள் பேசவில்லை. எகிப்தே, புதிய எகிப்தே பேசிற்று! ஆங்கிலோ - எகிப்திய ஒப்பந்தம் உலக நாடுகள் வகுத்த உரிமைக்கே மாறானதென்றும்,அது முடிந்துவிட்டதாகவும் புதிய எகிப்து அறிவித்தது. அதனுடன் அது பிரிட்டனுக்கு ஒரு மாற்றுத் திட்டம் அனுப்பிற்று. அதன்படி பிரிட்டிஷ் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்துக்கு இடர் ஏற்பட்டால் அவர்கள் திருமபி வந்து உதவலாம்.ஆனால் இடர் விலகியதும் விலகிவிட வேண்டும்.மேலும் எகிப்துக்கு வேண்டிய இம்மாற்றுத் திட்டத்தைப் பிரிட்டன் ஏற்காவிட்டால் 1936ஆம் ஆண்டு ஒப்பந்தம் மட்டு மன்றி, 1899ஆம் ஆண்டு ஒப்பந்தமும் முடிந்துவிடுமென்று எகிப்து எச்சரித்தது. * * * எகிப்தில் மன்னர் பரூக் 1952 ஜூலையில் நடந்த படைவீரர் புரட்சியின் விளைவாக அரச பீடத்திலிருந்து அகற்றப்பட்டார். எகிப்து முழுத்தேசீய எகிப்தாக, குடியரசாகப் புத்துயிர் பெற்றெழுந்தது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர் முதல் நடவடிக்கைகளே சூயஸ் கடற்கால் ஆட்சியில் புதுத் தேசீய மணம் புகுத்துவதா யிருந்தது. கப்பல்களின் வழிகாட்டிகளாகக் கடற்காற் கழகம் எகிப்தியரையே அமர்த்த வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார். கழகத்துக்குச் செலாவணி வகையிலிருந்த தனிச் சலுகைகளை 1955இல் ஒழித்தார். உலகக் கடற்கால் கழகம் இப்புது முறைகளைப் படிப்படியாக மேற்கொண்டுவிட இணங்கிற்று. அடுத்த ஆண்டிலேயே 32 புது ஆட்களை வழிகாட்டிகளாக அமர்த்துவதென்றும், எகிப்தியர் வகையில் அவர்கள் அனுபவத் தகுதி பற்றிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதென்றும் ஒப்புக்கொண்டது.ஆனால் இந்த வழியிலும் அவ்வாண்டில் 246 வழி காட்டிகளில் 62 பேரே எகிப்தியராக முடிந்தது. ஆட்சிப் பொறுப்பாளர்கள் (டைரக்டர்கள்) 32 பேரில் எகிப்தியர் 5 போரே யிருந்தனர். உடன்படிக்கைகளினாலோ ஒப்பந்தங்களினாலோ இனி எகிப்தையும் சூயஸ் கடற்காலையும் தம் ஆதிக்கத்துக்குள் வைத் திருக்க முடியாது என்பதைப் பிரிட்டன் இப்போது கண்டு கொண்டது. அரசியல் அரங்கிலும் பொருளியல் துறையிலும எகிப்துடன் அது மறைமுகப் போராட்டம் தொடங்கிற்று. எகிப்தியரின் தேசீய எழுச்சிக்கு உலகில் பெருவலுத் தந்தது. அராபிய இன எழுச்சியாகும். ஆனால் அராபிய இனம் பல பெரிய, சிறிய அரசுகளாகப் பிரிவுற்றிருந்தது. இதனால் பிரிட்டன் அவற்றிடையே பிளவு உண்டு பண்ண முடிந்தது. புதிதாக 1947இல் அமைந்த பாகிஸ்தானையும் வேறுசில இஸ்லாமிய அரசுகளையும் ஒன்றுபடுத்திஅது அராபியக் கூட்டு ஒன்று உருவாக்கிற்று. எகிப்து இச் சூழ்ச்சி கண்டு, அதில் தான் சேர்வதில்லை என்று கூறித் தேசீய உரிமையில் நின்றுவிட்டது. புதிய உறவுகளம் உண்டுபண்ணிக் கொண்டது. பொருளியல் துறையிலும் படைத்துறையிலும் எகிப்து மிகுதியாகப் பிரிட்டனைச் சார்ந்து இது வரை வாழ்ந்து வந்தது. அதன் முக்கியச் செல்வம் பருத்தி,அப்பருத்தியில் பெரும்பகுதியைப் பிரிட்டனே வாங்கி வந்தது. இப்போது பிரிட்டன் அதனை வாங்காமல் பொருளியல் முட்டுக்கட்டையிட்டது. படைத்துறைக் கான தளவாட உதவியையும் செய்ய மறுத்தது. எகிப்து இரண்டிலும் உலக நாடுகளுடன் புதிய உறவு கொண்டது. சிறப்பாக ருஷ்யா எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமலே அதற்கு நேச முறையிலே தளவாட உதவி செய்ய முன் வந்தது. மேலும் புதிய பொருளியல் வளம்நாடி எகிப்து நீலாற்றில் ‘அஸ்வான் திட்டம்’ என்ற புதிய அணைத்திட்டம் ஏற்படுத்த விரும்பிற்று. இதனால் 25 இலட்சம் ஏக்கர் பாலைநிலம் சாகுபடிக் குரியதாகிப் செழுஞ்சோலைகளாக வாய்ப்பு இருந்தது. அதற்காக 500 கோடி வெள்ளி செலவாகுமென்றும் மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்துக்காக எகிப்து உலகப் பொருளகத்தில் (பாங்கில்) கடனெழுப்ப எண்ணிற்று. ஆனால் பிரிட்டனும் அமெரிக்காவும் துணை நிற்காமல் கடன் தர அவ்வுலகப் பெருமனை மறுத்தது. விழிப்புற்ற எகிப்து இப்போது புதுநோக்குடன் சூயஸ் பக்கம் திரும்பிற்று. தேசீயச் செல்வத்தைத் தேசீய மயமாக்கித் தேசீயச் சேம நலம் பெருக்க எண்ணிற்று. 1956 ஜூலை 27இல் சூயஸ் கடற்கால் தேசீய மயமாக்கப் பட்டது. முழு உலகக் கழகத்தினிடமிருந்து அதன் ஆட்சியுரிமை கைப்பற்றப்பட்டு, அவ்வுரிமை எகிப்தின் தேசீய ஆட்சிக்கு மாற்றப் பட்டது. கீழையுலக நாடுகளைத் தம் பகடைகளாக்கி ஆடியவை மேலை வல்லரசுகள். அவற்றுள் தலையான பிரிட்டன் - புதிய எகிப்தின் செயல் கண்டு அது சீறிற்று. தேசீய உரிமைச் சட்டப்படி கழக வேலையிலிருந்து நீங்குபவர் தண்டிக்கப்பெறுவர்.ஆனால் கழகத்திலிருந்த வழிகாட்டிகள் இன்னும் பெரும்பாலோர், 100க்கு 80 பேர், அயலார். அவர்கள் ஒரே கூட்டாக வேலை மறுத்தனர். புதிய தேசீய உணர்வு கனன் றெழுந்த உள்ளங்களுடன் 100க்கு 20 பேராயிருந்த எகிப்தியர்களே நூறு பேர் வேலையையும் அரும்பாடுபட்டுச் செய்து காடினர். தேசீயமயமானதன் பின்னும் கடற்கால் போக்குவரவு குறைய வில்லை. இப்போது பிரிட்டன் பிரான்சையும் பக்கம் சேர்த்துக் கொண்டு உலகநாடுகள் அமைப்பில் எகிப்துக் கெதிராக வாதாடிற்று. ஆனால் அந்த அவை ஒருமுடிவுக்கு வருமுன்னே இலண்டனில் அவர்கள் சூயஸ் பயன் கொள்வோர் என்ற முறையில் 18 நாடுகளின் பேராட்களைக் கூட்டி, அதில் 15 நாடுகள் கொண்ட நிறுவனம் ஒன்று ஏற்படுத்தினர். பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, நியூஸீலாந்து, மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், துரக்கி ஆகியவை சேர்ந்த இவ்வமைப்பே சூயஸ்மீது ஆட்சி செலுத்த வேண்டுமென்று இம்மாநாடு பிரசாரம் செய்தது. இக்குழப்பங்களைத் தீர்த்துவைக்க உலக நாடுகள் அமைப் பிலும் வெளியிலும் பல நாடுகள் கூட்டு முறைகள் வகுத்தன. ரூஸ்வெல்ட், நேரு போனற் உலக நாடுகளின் பெருந் தலைவர்களும், வி.கே. கிருஷ்ணமேனன் போன்ற சிறந்த அரசியல் வல்லுநர்களும் பல மாற்று முறைகளை வகதுதும் ஒட்டுறவு காண முயன்றனர். ஆனால் இந்நடவடிக்கைகளைத் திரையாகக் கொண்டு, மறைவில் பிரான்சின் ஒத்தாசையுடன் பிரிட்டன் சூழ்ச்சிகளிலும் வலுக்கட்டாயப் போர் முறைகளிலும் இறங்கிற்று. பிரிட்டன், பிரான்சு ஆகியவற்றின் தூண்டுதலின் மீது 1956 ஏப்ரல் 29ஆம் நாள் இஸ்ரேல் எகிப்தின்மீது தாக்குதல் தொடங்கிற்று. அதனுடன் 24 மணி நேரத்துக்குள் கடற்கால் பகுதியிலிருந்து 10 கல் தொலைவுக் கப்பால் படைகளைப் பின்வாங்கும்படி எகிப்துக்கு கண்டிப்பான அறிவிப்புச் செய்துவிட்டு,பிரிட்டனும் பிரான்சும் எகிப்தையும் சூயஸ் பகுதியையும்திடீரென்று தாக்கின. சூயஸ் கடற்கால் மீது கெய்ரோமீதும் குண்டுகள் பொழிந்தன. கடற்காலிலுள்ள ஒரு சிறு கப்பல் குண்டினால் மூழ்கடிக்கப்பட்டு, கடற்கால் போக்குவரவுக்கும் தடங்கல் ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரேல் தாக்குதலை அடுத்து இரண்டு நாட்களுக்குள் இத்தனையும் முன்கூட்டித் திட்டமிட்டு நடத்தப்பட்டன. தாக்கியவனை ஒதுக்கி விட்டுத் தாக்கப்பட்டவனைத் தாக்கிய இந்த அடாச் செயல் கண்டு உலகம் மலைத்தது. அதனுடன் எகிப்துக்கு இடர் வந்தால் அதன் பாதுகாப்புக்கு வருவது என்ற ஒப்பந்தத்தைப் பிரிட்டன் தலைகீழாக்கி, எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பவருடன் சேர்ந்து ஊறு விளைவிக்கத் தொடங்கிற்று. இந்தப் பட்டப்பகல் அநீதி கண்டு கீழையுலகம் கிளர்ந்தெழுந்தது. உலகம்தன் கண்களையும் காதுகளையும் நம்ப முடியாமல் விழித்தது. ஆனால் உலக வரலாற்றில் முதல் தடவையாக உலக அரங்கின் செயல்மரபில் முன் என்றுமில்லா முறையில் உலகச் செயல்முறைகள் விரைந்து நடைபெற்றன. அமெரிக்கா, ருஷ்யா,இந்தியா முதலிய நாடுகள் இவ்வடாத் தாக்குதல்களைக் கண்டித்தன. தாக்குதலடுத்து இரண்டு நாட்களுக் குள்ளேயே, உலக நாடுகள் அமைப்புக் கூட்டப்பட்டு நவம்பர் 2இல் அமெரிக்காவின் கண்டனத் தீர்மானம் 64 உலக நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிற்று. 19 ஆசிய ஆபிரிக்க நாடகளின் கூட்டுத்தீர்மானத்தை இந்தியா கொணர,அதுவும் மிகப் பெரும் பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிற்று. இவற்றின் பின் போரை உடனடி நிறுத்தவும், அதை நிறைவேற்றச் சர்வதேசப்படை திரட்டவும் 48 மணி நேரத்துக்குள் அமைப்பின் செயலாளர் திட்டம் உருவாக்க வேண்டுமென்ற கானடாவின் முடிவும் நிறைவெய்திற்று. மேலையுலகிலேயே - பிரிட்டனிலேயே - பொதுமக்கள் இப்போது உலக நோக்கும், உண்மை நிகழ்ச்சிகள் உணரும் திறமும், குறுகிய நலன்கள் கடந்த உலகநல ஆர்வமும் கொண்டிருந்தனர். தாக்கும் நாடுகளிலேயே மக்கள் குரல் தாக்குதலை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தது. கீழ்த்திசை எழுச்சிக்கு, உலக மக்கள் குரலுக்கு, தன் எல்லை யிலேயே,குடிமக்கள் முடிவுக்கு, பிரிட்டன் பணிந்தது. போர் நின்றது. உலகம் மீண்டும் அமைதி கண்டது. உலகு இதுவரை காhணச் செயலை ‘ஓருலகு’ கண்டது. ஓருலகக் கனவை நனவாகத் தொடங்கி வைத்து, அதை உலக மக்கள் காணச் செய்த பெருமை - ஓருலக உறவையும், ஓருலக அமைதியையும், ஓருலக வளத்தையும் பெருக்கி, ஓருலக ஒருமைக்கு வித்திட்ட பெருமை சூயஸ் திட்டத் துக்கு உரியதாகும். அஸ்வான் திட்டத்துக்கு முன்போலவே கட்டுப்பாடின்றி உதவ ருஷ்யா முன்வந்தது. ருஷ்யாவின் 40 கோடி ரூபிள் கடனுதவி ஏனைய வல்லரசுகளின் ஆதிக்கத் தன்னலத்துக்கு ஒரு சூடிற்றுக் காட்டுவதாய் அமைந்தது. அதனைப் பின்பற்றி அமெரிக்காவும் உதவ வேண்டுமென்று செல்வாக்குள்ள அமெரிக்கத் தலைவர்கள் வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். சூயஸில் தேசீய ஆட்சி கடற் காலாட்சியில் தம் திடீர்ச் செயலால் முறிவு காணும் என்று வல்லரசுகள் எதிர்பார்த்தன. ஆனால் உலகக் கப்பல்கள் பெரிதுழம் தடைப்படாமல் சென்றே வருகின்றன. அதனுடன் கடற்காலை 30 மீட்டர்வரை அகலப்படுத்தி, ஆழ்கடற் பெருங் கலங்களும் செல்லும்படி செப்பனிட்டுப் பெருந் திட்டம் இப்பொழுது மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் நாள் தோறும் 30,000 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும், நாள் தோறும் 3 கோடி கன மீட்டர் மணல் அப்புறப்படுத்தப்படு மென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5. புத்துலகக் கனவு பல ஆயிர ஆண்டுகளாகப் பழங்கால உலகம் முயன்று முயன்று முற்றுவிக்க முடியாதிருந்த செயல் சூயஸ் திட்டம். அதை நிறைவேற்றிய பெருமை 19ஆம் நூற்றாண்டுக்கு உண்டு. ஆனால் புதிய உலகம் 19ஆம் நூற்றாண்டு உட்படப் பல நூற்றாண்டுகளாக முயன்று முயன்று நிறைவேற்ற முடியாதிருந்த அருஞ்செயல் பனாமாத் திட்டம். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வைத்த பெரும்புகழ் 20 ஆம் நூற்றாண்டுக்கு உரியது. பழங்கால உலகில் இராமாயணத்துக்கு எதிராக ஒரு பாரதம், இலியதுக்கு எதிராக ஒரு மூவாப்புகழ் மேகலை ஆகியவை அமைந்தது. போலவே, தற்காலத்தில் சூயஸுடன் புகழ்ப் போட்டி யிடும் செயற் பெருங்காப்பியமாகப் பனாமா விளங்குகிறது. கால்வாய்ப் பணியில் கைத்தேர்ந்த மனிதன் அத்தேர்ச்சியின் முகடாகக் கடற்கால் கண்டான். கடற்கால் பணிகளிலேயே அவன் கண்ட தேர்ச்சி முகடாகப் பனாமா விளங்குகிறது. இயற்கைமீது அன் கண்டு வரும் வெற்றிகளுக்கும் அது சான்றாய் அமைகிறது. பனாமாத் திட்டம் நிலம் பிளந்து கடலாக்குவதுடன் அமைய வில்லை. நிலத்தினூடாக மலை பிளக்கவேண்டியிருந்தது. சூயஸில் மனிதன் பாலைவனங்களுள் நீர் வறட்சியை மட்டுமே எதிர்க்க வேண்டி வந்தது. ஆனால் பனாமாவிலோ சதுப்பு நிலக் காடுகளில் உயிர்ப்பலி கொள்ளும் கொள்ளை நோய்கள் அவனை நோக்கிக் கொக்கரித்தன. அவற்றைச் சமாளிக்க வகை கண்டபின்னரே கடற்காற் பணியை நன்கு தொடங்க முடிந்தது. தவிர,சூயஸ் கடற்காலைப் போலப் பனாமாக் கடற்கால் கடலுடன் கடல் கலக்கவிடும் ஒரு நீள்மடையாக மட்டும் அமையவில்லை. கடலி லிருந்து கடலுக்கு நிலங் கடந்து கப்பல்கள் ஏறிச் செல்லும் ஒரு நீரேணி போலவே அது கட்டமைக்கப் பட்டுள்ளது. தற்காலக் கால்வாய்கள், கடற்கால்கள் இருவகைப் பட்டவை. சில ஒரே மட்டம் உடையவை. பெரிதும் சமதளத்தில் செல்பவை. இவ் வகையைச் சார்ந்த கடற்கால்கள் கடல் மட்டத்துடன் இணைவதால், கடல்மட்டக் கால்கள் எனப்படு கின்றன. சூயஸ் கடற்கால் இத்தகைய கடல் மட்டக்கால் ஆகும். ஆனால் பனாமாக் கடற்கால் மற்றொரு வகை சார்ந்தது. இவ்வகைக் கால்களில் நீர்ப்பரப்பு வேறுவேறு மட்டம் உடையவை. மட்டத்துக்கு மட்டம் நீர் உயரவும் தாழவும் பூட்டுச் சீப்புமுறை கையாளப்படுகிறது. இதனால் பனாமா போன்ற இத்தகைய கடற்கால்கள், கால்வாய்கள் பன்மட்டக் கால்கள் என்றோ, பூட்டுக் கால்கள் என்றோ குறிக்கப்படுகின்றன. சமதளக் கால்வாய்கள், கடல் மட்டக் கால்கள் ஆகியவற்றில் மட்டுமே கலங்கள் இயல்பாகத் தொடர்ச்சியாய் மிதந்து செல்ல முடியும். எனவே தொடக்கக்காலங்களில் மனித இனம் இவ்வகை ஒன்றையே அறிந்திருந்தது. கால்வாய்க்குக் கால்வாய், அல்லது கடற்காலுக்குக் கடல் இடத்துக்கு இடம் மட்டவேறுபாடு உள்ள இடங்களில், ஒரு மட்டத்திலிருந்து மற்ற மட்டத்துக்குப் படகுக் கலங்கள் சில சமயம் கரையேற்றி கொண்டு செல்லப்பட்டன. சில நாட்டவர் மட்டங்களுக்கிடையே சாய் சறுக்குத்தளம் அமைத்து, படகுகளையும் கலங்களையும் அதன்மீது பெரு முயற்சியுடன் சறுக்கி ஏற்றியோ, இறக்கியோ வந்தனர். கரை மீதிருந்து சாய் சறுக்கலில் இழுத்தேற்றி இறக்கும் முறையும் இருந்து வந்தது. ஆனால் பூட்டுக்கால் முறை வந்தபின் நிலைமை புரட்சிகரமாக மாறிற்று. ஒரு மட்டக் கால்வாய்கள், கடற்கால்கள் வெட்டப்பட முடியாத இடங்களில் பல மட்டக் கால்வாய்கள், கடற்கால்களே வகுக்க முடிந்தது. பூட்டுச் சீப்பு முறையை உலகில் யார், எந்நாட்டவர் முதன் முதல் புதுவதாகக் கண்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்குள் இத்தாலியிலும் ஹாலந்திலும் அது நடைமுறை வழக்கமாயிருந்து வந்தது. 17ஆம் நூற்றாண்டில் பிரான்சும் அதன்பின் பிற நாடுகளும் அதனைப் பெரிய அளவிலும் பரவலாகவும் பயன்படுத்தத் தொடங்கின. பனாமாக் கடற்கால் இம் முன்னேற்றங்களனைத்தையும் முழுதும் பயன்படுத்தியுள்ளது. ஆனால் உலகம் முன் என்றும் கண்டு கேட்டிராத, கனவு கண்டிராத அளவில் மாபெரும் கப்பல்களையே ஏற்றியிறக்கத்தக்க பார அளவான பூட்டுச்சீப்பு முறை வகுப்பு உடையதாக அது அமைக்கப் பட்டது. தற்கால உலகுக்குரிய பொறியாண்மைத் துறையின் (நுபேiநேநசiபே ளுஉநைnஉந) திறத்துக்கு ஒரு செயல்முறைப் புகழ்ச் சான்றாக அது விளங்குகின்றது. * * * நம் பழைய உலகத்து மனித இனம் புதிய உலகாகிய அமெரிக்காவைக் காண நேர்ந்தது, 15 ஆம் நூற்றாண்டின் கடைசி ஒன்றிரண்டு ஆண்டுகளில்தான், ஆனால் புதிய உலகு கண்ட அன்றே மனிதன் புத்துலகப் புதுவாழ்வு பற்றிக் கனவு காணத் தொடங்கிவிட்டான். அக் கனவுடன் கனவாக, பனாமாத் திட்டமும் கனவு காணப்பட்டு விட்டது. திட்டம் நிறைவேறிய பின்னும் புதிய உலகின் வாழ்வுடன், உலகின் புதிய வாழ்வுடன் வாழ்வாக அதன் வளமும் வளர்ச்சியும் தொடர்ந்து வந்துள்ளன. தென் அமெரிக்காவும் வட அமெரிக்காவும் மெக்ஸிக்கோ வளைகுடாவடுத்தே ஓர் இடைநிலைக் கோட்டின் மூலம் கூடு கின்றன. இக்கூடற்பகுதியை நடு அமெரிக்கா என்று கூறுவதுண்டு. மனித இன நாகரிகத்தின் உயிர்மையங்களுள் இது ஒன்று. பழைய உலகில் தமிழகம், சீனம், பாபிலோன், எகிப்து ஆகியவற்றுடன் தோழமை கொள்ளும் புது உலகப்பகுதி இது. மேலையுலகினர் அப்பகுதியில் கால் வைத்த அன்றே, அப்பகுதியின் மிகப் பழைமை வாய்ந்த ‘மய’ நாகரிகம் முழுவளர்ச்சியடைந்து முற்றி, அதன் பின்வற்றி மரபிழந்து மறக்கப்படும் நிலை அடைந்திருந்தது. அதன் அழிபாட்டின் மீது வளர்ந்த ‘இங்கா’ நாகரிகம் முழுமலர்ச்சிப் பருவ மெய்தியிருந்தது. தமிழக, தென்கிழக்காசிய நாகரிகங்களுடன் நடு அமெரிக்கா வின் இப்பழைய நாகரிகங்கள் மிகத் தொல் பழங்காலத் தொடர் புடையவை என்று பழைமையாராய்ச்சி யாளர் கருதுகின்றனர். வட ஆசியா, வட அமெரிக்காவுடன் ஒட்டிக்கிடந்த நாட்களில் தென் கிழக்காசியாவிலிருந்து பரவிய மக்களே அமெரிக்கப் பழங்குடிகள் என்று எண்ணுகின்றனர் சிலர். மண்ணியல் நூலாராய்ச்சியாளர் அமெரிக்காவின் நடுப்பகுதியும் மேல் பகுதியும் பண்டைத் தமிழகப் பகுதிகள் கடல் கொள்ளப்படுமுன், அதனுடன தொடர்புபட்டுக் கிடந்த குமரி மாகண்டத்திலிருந்து பிரிந்து சென்று விட்ட பகுதி களே என்று கருத்துரைக்கின்றனர். மேலை நாட்டவர் புது உலகம் காண நேர்ந்தது புது உலக அவாவின் பயனாகவோ, புது உலகக் கனவின் பயனாகவோ, அல்ல. தமிழக வாணிக அவாவாலும், தமிழகக் கனவாலுமே அதைக் கண்டனர். அதுவும் இந்தியா என்று கருதியே அதைக் கைக்கொண்டனர். தமிழகக் கனவால் வந்த அந்த மாநிலத்தில் தமிழக வழிகாணும் அவாவே பனாமாக் கனவாக வளர்நத்து. அவ் வளர்ச்சியும் பண்டைத் தமிழக மாநிலப் பகுதியில், பண்டைத்தமிழக, தென் கிழக்காசியத் தொடர்புடைய நாகரிகம் வாழ்ந்த பகுதியில் அமைவுற்றது. தமிழகத்துடனும் அதுபோல எகிப்துடனும் சூயஸுடனும் இத்தனை தொடர்புகள் கொண்டதாகப் பனாமாத் திட்டம் விளங்குகின்றது. * * * அமெரிக்காவை முதன்முதல் கண்ட கடலோடி கிரிஸ்தபர் கொலம்பஸ். அவர் பெயரால் கொலம்பியா என்ற ஒரு குடியரசும், அமெரிக்கக் கூட்டரசின் ஓர் உறுப்பும் இன்று பெயர் பெற்றுள்ளன. தவிர, பனாமாக் கடற்கால் பகுதியிலேயே கிரிஸ்டோபெல் துறைமுகத்தின் பெயரும், கோலன் என்ற நகரப் பெயரும் அவர் புகழ்ப்பெயரின் பகுதிகளை நினைவூட்டுவனவே யாகும். முதன் முதல் அமெரிக்கா கண்டவர் கொலம்பஸானாலும், பனாமாக் பகுதியில் முதுல் முதல் இறங்கியவர் ரோடாகோடி பஸ்டிதஸ் என்பவர் ஆவர். அவர் 1501இல் இறங்கிய பகுதி பின்னாட்களில் போர்ட்டோ பெல்லோ என்ற துறைமுகாகியுள்ளது. அவரையடுத்தக் கொலம்பஸும் 1502ல் தம்நான்காம் பயணத்தில் இப்பகுதிகளில் உலாவியதாக அறிகிறோம். பனாமாப் பகுதி கடந்து செல்ல ஒரு கடற்காலே இருப்பதாக மேலை இந்தியத் தீவுகளிலுள்ள பழங்குடி மக்கள் அவரிடம் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அதன் உண்மை காணுமுன் அவர் வாழ்வு கழிந்து விட்டது. அவருக்குப் பின் வாஸ்கோ நூனெஸ் டி பல்போவா என்பவர் வந்த போதும் இதே செய்திஅவர் செவிப்பட்டது. ஆனால் அவர் நில இணைப்புப் பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தவர். 1519ஆம் ஆண்டில் மேலை நாட்டவரிடையே முதன் முதல் பசிபிக் மாகடலைக் கண்டவர் என்ற புகழுக்கும் அவர் உரியவரானார். பனாமாவில் கடற்கால் கிடையாது, நிலக்காலே உண்டு என்று கண்டபின், நிலக்காலைக் கடற்காலாக்க அவரே முதல் முதல் கனவு கண்டவர் ஆவர். பசிபிக் மாகடலைக் கண்ணாரக் கண்டு, பனாமாத் திட்டத்தையும் கனவாகக் காணும் பேறு பெற்ற இம் முதல்வர் பெயரே பனாமாக் கடற்காலின் பசிபிக் மாகடல் கோடியிலுள்ள பல்போவாத் துறைமுகத்தின் பெயராக அமைந்துள்ளது. இரு கடல்களையும் இணைக்கச் செயல் முறையிலேயே முதன்முதலில் நடவடிக்கை எடுக்கத் துணிந்தவர் ஸ்பானிய நாட்டின் பேரரசர் ஐந்தாம் சார்ல்ஸ் ஆவர். அவர் 1534இல் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு இவ் வகையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அவர் கடற்காலுக்காக ஆராயும்படி பணித்த பகுதி சாக்ரிஸ் நியோகிராந்து ஆறுகள் வழியில் சென்றது. இதுவே கிட்டத் தட்டத் தற்போதைய கடற்காலின் போக்கு ஆகும். ஆனால் பேரரசர் விரும்பியபடி நில ஆராய்வு வெற்றி பெறவில்லை. வட்டாரத் தலைவர் கடற்காலமைப்புக்குப் பாகமான முறையில் அது பற்றிய அறிக்கை உருவாக்கி அனுப்பியிருந்தார். மெக்ஸிக்கோவை வென்ற வெற்றி வீரனான ஹெர்னாண்டோ கார்டெஸ் கடலிணைப்புக்குச் சரியான போக்கு எது என்று கண்டறிய நாலு பாதைகளில் அளவையாராய்ச்சி நடத்தியிருந்தார். டேரியன்வழி, நிகராகுவா வழி, தெகுவாந்தெபெக் வழி, பனாமா வழி ஆகியவையே அந்நான்கு வழிகளென்று தெரிய வருகிறது. 16ஆம் நூற்றாண்டிலிருது கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு வரை பல நாடுகளின் சார்பில் நில இயலறிஞரும் அரசியல் தலைவர்களும், கடலோடிகளும் வணிகப் பெருமக்களும் கடலிணைப்புப் பற்றிப் பலவாறாகவும் பல வேறு வகைகளிலும் பேசியும் எழுதியும் ஆய்வுரைகள் கூறியும் வாதிட்டும் அக்கனவை ஓயாது வளர்த்த வண்ணமேதான் இருந்து வந்தனர். செயல் துறையிலிறங்கித் திட்டமிட்டவரும் நில அளவை ஆராய்ச்சிகளில் புகுந்தவரும் மிகமிகப் பலர்.இவ்வகையில் நடு அமெரிக்காவைப்பல இடங்களில் கடந்து செல்லும் வழிகள் 20க்குக் குறையாமல் அடிபட்டன என்று தெரிகிறது. அவற்றுள் தற்காலக் கடற்காலடுத்துள்ள ஸான்பிஸாஸ் வழி, பனாமாக் கொலம்பியாக் குடியரசுகளின் எல்லைகளையடுத்துச் செல்லும் அல்டிராட்டோ ஆற்று வழி, வடமேற்குப் பனாமா வூடாகச் செல்லும் சிரிக்கி வழி, மெக்ஸிக்கோவிலுள்ள நிகராகுவா தெகுவாந் தெபெக் வழி ஆகியவை மிகுதி ஆராய்வுக் குரியவையாயிருந்தன. * * * கடலிணைப்பு வகையில் கனவுகளும் சிறு செயல்களும் பெருஞ் செயல் திட்டங்களாக வளர்வதற்குச் சில செய்திகள் உதவின. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோமகன் வான் ஹம்போல்ட் என்பவர் புதிய உலகெங்கும் சென்று பார்வை யிட்டார். அவர் எழுத்துக்களின் ஆற்றல் ஐரோப்பா, அமெரிக்கா எங்கும் பரவியிருந்தது. கடலிணைப்புத் திட்டம் பற்றிய அவர் ஆர்வம் அவர் எழுத்துக்கள் வழியாக உலகெங்கும் பரவிப் பலர் சிந்தனையைத் தூண்டிற்று. இதே காலத்தில் வாழ்ந்தவர் அமெரிக்க நாட்டில் நாட்டுத் தந்தையர்கள் என்று குறிப்பிடப்படும் முதல்வருள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்லின். கடலிணைப்புத் திட்டம் பற்றிக் கனவுகண்ட அமெரிக்கருள் அவர் முதல்வர் ஆவர். கடலிணைப்புத் திட்டங்களுக்கெல்லாம் உரிய தாய் நிலம் நடு அமெரிக்கா. அதிலும் அதன் தெற்கே பரவியிருந்த தென் அமெரிக்காவின் வடபகுதியிலும்தான் ‘இங்கா’, ‘பெருவிய’ நாகரிகங்கள் பரவியிருந்தன. 16ஆம் நூற்றாண்டில் இவற்றைக் கைக்கொண்டு ஆண்டவர்கள்தான் ஸ்பானியர். அவர்கள் அந்நாகரிய மக்களின் அரசுகளையும் பேரரசுகளையும் அழித்து,அவற்றின் செல்வத்தைச் சூறையாடினர். அப்பகுதிகளில் வெள்ளி தங்கச் சுரங்கங்களும் ஏராளமாக இருந்தன. இவற்றை ஸ்பானியர் மேல் கரைத் துறைமுகங்களிலிருந்து பனாமா நில இணைப்பின் மேல் கரைக்குக் கொணர்ந்து, அந்நில இணைப்பைக் கடந்து மீண்டும் கப்பலேற்றியே தம் தாயகம் கொண்டு சென்றனர். கடலிணைப்புக்கு நெடுநாள் முன்பே இவ்வாறு நில இணைப்பு மேலுலகப் போக்கு வரவுக்குரிய கவர்ச்சி மையமாயிற்று. 16, 17ஆம் நூற்றாண்டுகளில் ஸர் பிரான்ஸிஸ் டிரேக், ராலே, யென்றி மார்கன் போன்ற பல ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் இத்திசையில் கொள்ளையடித்து அச் செல்வத்தில் பங்கு கொண்டு வந்தனர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தூயதிரு சைமன் சங்கத்தினர் தம் உலகத் திட்டத்தில் சூயஸ் கடலிணைப்புடன் பனாமா இணைப்பையும் சேர்த்தே பிரசாரம் செய்து வந்தனர். அந்நூற்றாண்டின் முதற்காலிலேயே புதிய உலகக் குடியேற் றங்கள் மீது ஸ்பானியத் தாயகத்துக்கு இருந்த ஆதிக்கப்பிடி முறிவுற்றது. அமெரிக்கரும், பிற மேலை நாட்டவரும் தங்கு தடையில்லாமல் பனாமாத் திட்டத்தில் பொது முறையில் அக்கரை கொள்ள இது தூண்டிற்று.அமெரிக்காவின் உள்நாட்டமைச்சரா யிருந்த ஹென்ரிகிளே என்பவரும் ஜான் ஸி. காலன் என்பவரும் அதற்கான திட்டப் படிவங்கள் வகுப்பதிலேயேஈடுபட்டனர். நியூயார்க் நகரைச் சார்ந்த ஏரான் எச். பாமர்ஸ் என்வர் கால்வாய் வெட்டுவதற்குக் கொலம்பியாக் குடியரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், அதற்காக 50 இலட்சம் அமெரிக்க வெள்ளி கடனுதவி எழுப்பவும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். அமெரிக்க இணையரசுத் தலைவர் ஜாக்ஸன் தம் பேராளாக ஒருவருக்கு நிக்கராகுவா வழிபற்றி ஆய்வாராய்வு செய்யும் உரிமை தந்து அவரை அனுப்பியிருந்தார். 1846இல் கொலம்பியா அரசுடன் இதற்கான ஒப்பந்தம் உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இம்முயற்சிகள் யாவும் போதிய துணையாதரவும் ஊக்க வலுவும் இல்லாமல் அரைகுறையாக நின்றுவிட்டன. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மக்கள் கவனத்தையும், பெருமக்கள் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துத் திட்டத்துக்கு வலுத்தரும் சூழல்கள் வளர்ந்தன. இவற்றுள் 1849இலிருந்து அமெரிக்க இணையரசின் மேல்கரைப் பகுதியிலுள்ள காலிபோர்னியாவில் தங்கம் கண்டெடுக்கப்பட்டது ஒன்று. அதுவரை பிற்போக்காயிருந்த மேல் கரையின் செல்வாக்கும் வளமும் மிக விரைந்து வளர்ச்சியுற்றன. கீழை அரசுகளுடன் அதை விரைந்து தொடர்புபடுத்தும் வகையிலும், அதன் தங்கத்தைக் கீழ் கரைக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் பனாமாப் பகுதி இப்பொழுது முக்கியத்துவம் அடைந்தது. இருதிசைத் துறைமுகங்களும், அவற்றின் இடைப்பட்ட நில வழிகளும் உயிர் வாணிகப் பகுதிகள் ஆயின. வாணிக வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட பல அமெரிக்க மக்கள் இப்போது இரு கரைகளையும் நில வழியாகவேனும் முதலில் இணைப்பதில் ஆர்வம் காட்டினர். ஜான் லாயிட் ஸ்டீபன்ஸ் என்பவர் தலைமையில் அவர்கள் கடற்கரையிலிருந்து கடற்கரை வரை செல்லும் பனாமா இருப்புப் பாதை அமைத்து வெற்றி கண்டனர். அமெரிக்காக் கண்டத்தில் மேல்கரையி லிருந்து கீழ்க் கரைவரை செல்லும் முதல் முழு மாநிலப் பெருவழி இதுவே. அமெரிக்கப் பொது மக்கள் முயற்சியால் அமெரிக்க இணையரசுக்கு வெளியே இத்தகைய பாதை அமைந்ததனால், அமெரிக்க வாணிகத் துக்குப் பனாமா எவ்வளவு உயிர் முக்கியத்துவம் உடையதாகி வந்தது என்பது உலகுக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. பனாமா இருப்புப் பாதைத் திட்டத்தில் அக்கரை காட்டிய வருள் ஒருவர் அச்சமயத்திலேயே சூயஸ் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்சு நாட்டுப் பெரியார் பெர்டினாண்டுடி லெஸெப்ஸ் ஆவர்.அவர் தலைமையிலேயே 1876இல் பனாமாத் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. சூயஸ் திட்டத்தில் இதற்கு முன் அவர் வெற்றியும் புகழும் பெற்றுவிட்ட தனால், அமெரிக்கப் பனாமாத் திட்டத்தில் இது முதல் அவர் பெரும் பங்கு கொள்ளலானார். ஆனால் சூஸில் அவர் அடைந்த புகழ் வெற்றி இங்கு அவரை அணைக்கவில்லை. எனினும் சூயஸ் திட்டத்துக்கு அவர் செய்த சேவையை விட பனாமாவுக்கு அவர் செய்தது குறைந்ததல்ல என்பதைக் காலம் காட்டியுள்ளது. * * * லூஷியன் என்.பி.வைஸ் என்பவர் சில தோழர்களுடன், கூட்டுச் சேர்ந்து தனி முயற்சியிலே கொலம்பியா அரசியலாரிட மிருந்து கடற்கால் வெட்டுவதற்கான சலுகை உரிமைகளைப் பெற்றார். சூயஸ் திட்டங்களில் எகிப்திய பாஷா அளித்த சலுகையைப் போலவே, இதுவும் 99 ஆண்டுகளுக்குச் செல்லும்படியாய் இருந்தது. பின்னாட்களில் திட்டஅமைப்பு வகையில் ஏற்பட்ட ஒப்பந்தத் துக்கும் இம்முதல் ஒப்பந்தத்துக்கும் அடிப்படை வேற்றுமைகள் பல உண்டு. பின்னாள் ஒப்பந்தம் பனாமாக் குடியரசு தனி அரசாய் அமைந்த பின் அப்புதுக் குடியரசுடன் ஏற்பட்டது. முந்தியது கொலம்பியாக் குடியரசுடன் ஏற்பட்டது. பின்னால் ஒப்பந்தம் அமெரிக்க இணையரசின் அரசியலாரால் நிலவரமான அமெரிக்க முழு உரிமையுடன் பெறப்பட்டது. முந்தியதோ சூயஸின் எகிப்திய ஒப்பந்தத்தைப் பின்பற்றி முழு நில உரிமையும் நிலவரவுரிமையும் கொலம்பியா விடமே விட்டு வைத்திருந்தது. வைஸ் பெற்ற ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் இறுதி ஒப்பந்தம் நிறைவேறும் வரை அதுவே நீடித்தது என்பதும், அது ஏற்படத்தக்க அரசியல் சூழ்நிலைகளையும் மாறுபாடுகளையும் அதுவே உருவாக் கிற்று என்பதுமேயாகும். அடுத்த ஆண்டு மே 10ஆம் நாள் உலகெங்கும் பல நாடுகளி லிருந்தும் வந்த பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேசப் பேரவை ஒன்று கூட்டப்பட்டது. கடலிணைப்புத் திட்டம் பற்றியும், கடலிணைப்புக் குகந்த வழிகளைப் பற்றியும் அது விரிவாக விவாதித்தது. இப்பேரவை யில் மொத்தம் 175 உலகப் பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்க இணையரசின் சார்பில் 11 பிரதிநிதிகள் வந்திருந்தனர். பிரஞ்சுப் பிரதிநிதிகளிடையே சூயஸ் திட்ட முதல்வர் பெர்டினாண்ட் டிலெஸெப்ஸ் நடுநாயக இடம் வகித்தார். வழிகள் பலவற்றுள்ளும் பனாமா வழியே செயல் முறைக்கு கந்தது என்றுபேரவை தேர்ந்தெடுத்தது. கடற்கால் கடல் மட்டக் காலாகவே அமையவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. திட்டத்துக்கான செலவு 24 கோடி அமெரிக்க வெள்ளிகள் என மதிப்பிடப்பட்டது. 1879 ஆகஸ்டு 17இல் கொலம்பியாவிடமிருந்து வைஸ் பெற்ற கடலிணைப்பு உரிமை வாங்கப்பட்டு, திட்ட நிறைவேற்றத்துக் கான பிரஞ்சுக் கூட்டுக் கழகம் அமைகப்பட்டது. சூயஸ் திட்டத் துக்காக அமைந்த கழகத்தைப் போலவே இதுவும் முழு உலகக் கழகம் (ஊடிஅயீயபnநை ருniஎநசளநடடந) என்ற பெயருடன் லெஸெப்ஸின் தலைமையில் 1880 ஆம் ஆண்டு ஜனவரி 10இல் நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் கடற்கால் வேலையே தொடங்கப்பெற்றது. சூயஸ் திட்டத்தில் எதிர்ப்பிடையே செயல் வெற்றி கண்டவர் லெஸெப்ஸ். ஆனால் பனாமாத் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த ஊழியே இருளார்ந்த இடிமின்னல் ஊழியாய் அமைந்தது. இன்றைய கடற்காலில் அட்லான்டிக் கடலோர முள்ள முதல் ஏழுகல் தொலைவுள்ள பகுதியே லெஸெப்ஸ் ஊழியின் முழுமுயற்சிக்குரிய பகுதியாகும். அது கடல் மட்டத்திலேயே அமைந்த பகுதி.இது வெட்டுவதற்கு எளிதானாலும், வெட்டிய இடத்தை உறுதியாகக் காப்பதற்கு அரிதாயிருந்தது. அத்துடன் சதுப்பு நிலக் காடுகளுக்குரிய நோய்கள் உழைப்பவர்கள் உழைப்பின் ஊதியம் பெறுமுன் அவர்கள் உயிரைக் குடிப்பவையாயிருந்தன. பிரஞ்சுக் கழகத்தினரும் லெஸெப்ஸும் ஒன்பது ஆண்டுகளாக இப்பகுதியில் காட்டிய தீரமும் விடா முயற்சியும் பெரிது. ஆனால் தொகுதி தொகுதியாகத் தொழிலாளர்கள் கொண்டுவந்து இறக்கு மதி செய்யப்பட்டும், திட்ட மதிப்பீட்டின்படியான பணமுழுவதுமே செலவுசெய்தும், திட்டத்தில் பத்தில் ஒரு பங்கு வேலை கூட முடியவில்லை. அதனுடன் அச்சுறுத்திப் பலவந்தமாகத் தொழிலாளரைத் திரட்டி வந்தால்கூட அவர்கள் பனாமாவின் பெயர் கேட்டவுடன் நடுங்கும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் தொழிலாளர் கல்லறை என்ற பெயருக்கே அது உரியதாயிற்று. புகழுக்குப் பதில் எட்டுத் திசைகளிலிருந்தும் இகழும் இடித்துரைகளுமே லெஸெப்ஸின் காதுகளைத் தாக்கின. அவர்நிலை அன்று குளவிக்கூட்டில் கையிட்டவன் நிலையாயிற்று. 1888ஆம் ஆண்டு மனநைவுற்றுஅவர் தலைமைப் பதவி துறந்து தாயகம் சென்றார். ஆனால் அங்கும்அவர் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, சட்டத்தின் தண்டனைகளுக்கும் தொலைநோக்கற்ற மக்கள் கண்டனங்களுக்கும் உரியவராய் வாழ்வின் இறுதிக்காலத்தை அல்லலில் கழித்தார். பிரான்சின் பெரும் புதல்வர் பலருக்குப் பிரஞ்சுத் தாயகம் அளித்த கசப்பான இறுதி வரவேற்பு அவருக்குக் கிடைத்தது. லெஸெப்ஸின் தோல்விக்குப் பின்னும் திட்டம் சீர்படுத்த இறுதிநேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்காலைப் பூட்டுக் காலாக்கும் கருத்துரையும் தரப்பட்டது. ஆனால் திட்டம் சீர்படுத்த முடியாத அளவில் சரிவை நோக்கிச் சென்றுவிட்டது. பிரஞ்சுக் கழகம் 1889இல் முற்றிலும் கலைக்கப்பட்டு,அதன் உரிமைப் பொறுப்புக்கள் ஒரு காப்புரிமையாளரிடம் (டுiளூரனையவடிச) ஒப்படைக்கப்பட்டது. * * * பிரஞ்சுக் கழகம் விட்டுவிட்டுச் சென்ற வேலையைப் பின் எடுத்து நடத்தியவர்கள் அக்கழகத்தின் செயலையும் லெஸெப்ஸின் தொண்டையும் சரிவர மதிப்பிட்டுள்ளார்கள். ‘தொலைவிலிருந்து ஒரு முயலை எய்து கொன்று வெற்றி பெற்ற வேடன் செயலைவிட, அருகே சென்று கைவேலால் மதயானையைத் தாக்கி,அதைக் கொல்ல முடியாமல் அழிவுற்ற மறவீரன் செயல் எவ்வளவோ பெருமையுடையது’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ லெஸெப்ஸின் சூயஸ் திட்டமும் யானையெறிந்த வேலின் செயல்தான்; பனாமாத்திட்டப்பணியும் அதேவேலின் செயல்தான். வேற்றுமையெல்லாம், முந்தியதில் அவர் வெற்றி கண்டார்; பிந்தியதில் தோல்வியுற்றார் என்பது மட்டுமே. ஆனால் திட்டத்தின் இத்தோல்வி கூடக் கால இடச் சூழலுக்கே பெரிதும் உரியதென்று உலகம் இன்று மதிப்பிட்டுள்ளது. இயற்கையின் எதிர்பாரா இடைஞ்சல்கள், மதிப்பீட்டின் குறைபாடு, சரியான முன் அனுபவமின்மை, கட்டுப்பாடின்மை, போதிய பணமின்மை, திட்ட அளவுக்கு ஒரு சிறிதும்போதாத கருவிகல வசதிவளம் ஆகியவையே பிரஞ்சுக்கழக இடர்ப்பாடு களுக்கு வழி வகுத்தன. ஆனால் இந்நிலையிலும் அவர்கள் 67,81,46,960 குழிக்கோல் (கனகச) அளவு பாறை அகழ்ந்திருந்தனர். இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பகுதி அதாவது 2,99,08,000 குழிக்கோல் (கனகச) அளவு தற்போதைய கடற்கால் வேலை யிலேயே பயன்பட்டுள்ளது. தவிர, பிரஞ்சு மக்கள் விட்டுச்சென்ற மனைப்படங்கள், அளவைத் திட்டங்கள், நிலவரைப் படங்கள், ஆதாரங்கள் பின்னாளைய திட்டங்களுக்கு இன்றியமையாப் பெரும் பயன் தருபவையாயிருந்தன. 1894இல் புதிதாக மற்றும் ஒரு பிரஞ்சுக் கூட்டுக் கழகம் நிறுவப்பட்டது. முந்திய கழகத்தின் உரிமைகளை இது விலை கொடுத்து வாங்கித் திட்டத்தில் கருத்துச் செலுத்திற்று. ஆனால் முந்திய கழகத் தொல்லையின் நிழல் இதன் பாதையில் குறுக்கிட்ட வண்ணமே இருந்தது. இகழுக்கு ஆளான முந்திய கழகம் செய்த அளவில்கூட இதன் ஒன்பது ஆண்டு வாழ்வுக்காலத்தில் இது எதுவும் செய்யமுடியவில்லை. திட்டத்தின் தோல்விகளே இப்போது அதன் உள்ளார்ந்த மதிப்பை அமெரிக்க அரசியலுக்கு எடுத்துக் காட்டிற்று. உலக வரலாற்றில் பிரஞ்சு மக்கள் தங்கள் வழக்கப்படி உழுது விதைத்து உழைப்பின் சேற்று மணத்துடன் ஒதுங்கினர். அதன் முழு வெற்றிப் பயன் காண, உலகுக்கு அதன் வளந்தர அமெரிக்கா முன் வந்தது. 6. பனாமாத் திட்ட மறுமலர்ச்சி பனாமாத் திட்டத்தில் மேலையுலக முழுவதுமே ஈடுபட்டி ருந்தது உலக முழுவதுமே அதனால் பயன் அடைந்து வருகிறது. ஆயினும் அத்திட்ட மலர்ச்சியில் பெரும் பங்கு கொண்ட நாடுகள் இரண்டு. அவை அமெரிக்க இணையரசு, பனாமாக் குடியரசு ஆகியவைகளே.இரண்டின் ஒத்துழைப்பிலும் உயிர் நேசத்திலும் திட்டம் பிறப்புற்றது. மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் இரண்டின் நலங்களும். கூட்டுறவும் விரவி வளம் பெறுகின்றன. இரு அரசுகளும் மேலையுலகின் குடியேற்றங்களாகத் தொடங்கின. வடதிசை அரசான இணையரசு பெரிது, பழைமை வாய்ந்தது. அது 18ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை பெற்றக் கூட்டாட்சி வகுத்திருந்தது. தென் திசை அரசு சிறியது, அதனுடன் புதியது. அது ஸ்பெயின் நாட்டின் நடு அமெரிக்கக் குடியேற்றப் பரப்பில் ஒரு பகுதியாகப் பிறப்புற்றது. குடியேற்றத்தின் முதல்வர் பஸிபிக் மாகடல் கண்ட பல்போவாவேயாவர். ஆனால் பனாமா நகரம் அடுத்த வட்டாரத் தலைவர் பெட்ராரியாஸ் என்னும் பெட்ரோ அட்ரியாஸினால் 1519இல் புதிதாக எழுப்பப்பட்டது. 18ஆம் நூற்றாண்டுவரை பனாமாவே குடியேற்றத்தின் பெரும் பகுதிக்குரிய தலைமையிடமாயிருந்தது. ஆனால் நாளடை வில் கிரெனடா மாநிலத்தில் அது ஒரு பகுதியாயிற்று 19ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அது பிரிவினையும் தனியாட்சியும் கோரிப் போராட்டங்கள் நடத்தி, 1855இல் ஓரளவு தனியுரிமை பெற்றது. ஆனால் மேலாட்சியாளரின் மைய வல்லாட்சியால் அது மீண்டும் மறுகிற்று. அந்நூற்றாண்டின் இறுதியில் அது கொலம்பியா அரசுடன் பிரிவினை உரிமை கோரி உயிர்ப் போராட்டம் நடத்தி வந்தது. இப்பிரிவினை இயக்கத்தில் எதிர்பாரா வகையில் அமெரிக்க இணையரசின் ஊக்குதவி அதற்குக் கிடைத்தனால், அது 1903இல் எளிதில் தனியாட்சியும் சுதந்திரமும் பெற்றது. புதிய குடியரசின் பிறப்புக்குப் பனாமாத் திட்ட மலர்ச்சியும், திட்ட மலர்ச்சிக்குக் குடியரசின் பிறப்பும் ஒன்றுக்கான்று துணை தந்தன. * * * அலையலையாக அடுக்கி வந்த பல நிகழ்ச்சிகள் திட்ட மலர்ச்சிக்கு முன்னீடுகளாயமைந்தன. அமெரிக்க இணையரசுத் தலைவர் மக்கின்லி 1899இல் இடை நிலக் கடற்கால் ஆணைக் கழு (ஐளவாஅயைn ஊயயேட ஊடிஅஅளைளiடிn) ஒன்று நிறுவினார். கடற்காலுக்கான ஆய்வாராய்வுகள் நடத்தி அதற்குரிய திட்ட ஆலோசனை கூறும்படி அவர் குழுவைப் பணித்திருந்தார். முதலில் அக்குழு நிக்கராகுவா வழிக் கடற்காலையே தேர்ந்தெடுத் திருந்தது. அதனுடன் சரிந்து வந்து கொண்டிருந்த பிரஞ்சுக் கழகத்தின் உரிமை, கடமைகளை அமெரிக்க இணையரசுக்கு மாற்றுவதற்கான பேச்சுறவுகளும் தொடங்கப்பட்டன. இதற்கிடையே கடற்கால் வழி பற்றிய முந்திய தேர்வு முடிவு மாறித் தற்போதைய பனாமாக் காலாக அது உறுதி பெற்றது. கடற்கால் திட்டத்தை அமெரிக்க இணையரசின் அரசியலேற்று நடத்துவதற்கு இசைவு தரும் சட்டமொன்று “ஸ்பூனர் சட்டம்” என்னும் பெயருடன் கூட்டரசு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அந்நாளில் கடற்காற் பகுதி கொலம்பியக் குடியரசின் பகுதியாய் இருந்தது. ஆகவே கொலம்பியாவுடனும் அமெரிக்க இணையரசு 1903 ஜனவரி 29இல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் பேரளவில் முன்பு வைஸ் பெற்றிருந்த சலுகைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. கொலம்பியா ஒப்பந்தப்படி, பிரஞ்சுக் கழகம் தன்னிட மிருந்த உரிமை உடைமைகளை அமெரிக்க இணையரசுக்கு மாற்றிக் கொடுக்க இசை வளிக்கப்பட்டது. தரப்பட்ட சலுகைகள் 100 ஆண்டுஅளவுக்குச் செல்லுபடியாகவும்,அதன்பின் நூற்றாண்டு தோறும் புதுப்பித்துக் கொள்ளத் தக்கதாகவும் அமைந்தன. திட்டப் பகுதியின் நில உரிமையும் நிலைத்த ஆட்சியுரிமையும் கொலம்பியா வுக்கே என்றும் உரியது என்பது தெளிவாக வகுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க இணையரசு திட்டப் பணியை 4 ஆண்டுகளில் முடிக்க வேண்டுமென்றும், அதன்பின் ஆண்டுதோறும் 2ஙூ லட்சம் வெள்ளியும் அளிப்பதென்றும் உறுதி செய்யப்பட்டது. கொலம்பியாவுக்கே மிகவும் சாதகமாயிருந்த இந்த ஒப்பந்தத் துக்கு அமெரிக்க இணையரசு மன்றம் இணக்கம் அளித்துவிட்டது. ஆனால் கொலம்பியா அரசு மன்றம் ‘மீனம் மேடம் பேசி’ மறுத்தது. அமெரிக்க இணையரசுத் தலைவரான தியோடார் ரூஸ்வெல்ட் கொலம்பியா அரசியல்வாதிகளின் இந்தப் பித்தலாட்டங்கள் கண்டு கடுஞ் சீற்றங்கொண்டார். அவர்கள் செய்த அவமதிப்புக்குத் தண்டனையாக, அவர்களை எதிர்த்து நீண்ட நாள் பிரிவினைக் கிளர்ச்சி செய்து வந்த பனாமாவுக்கே ஆதரவளித்தார். 1903, நவம்பர் 3இல் பனாமா பிரிவுற்றுத் தனிச் சுதந்திரச் சுயாதீனக் குடியரசாயிற்று. அவ்வாண்டிலேயே புதிய குடியரசுடன் திட்டத்துக்கான புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. 1904 மேல் 4இல் பழய பிரஞ்சுக் கழகத்தின் உரிமை உடைமை கள் யாவும் 4 கோடி அமெரிக்க வெள்ளி விலைக்கு முறைப்படி அமெரிக்க இணையரசால் வாங்கப்பட்டது. அதற்குரிய பத்தினம் பனாமா நகரிலேயே நிறைவேறிற்று. அமெரிக்க இணையரசும் புதிய பனாமாக் குடியரசும் செய்து கொண்ட ஒப்பந்தம் கடற்கால் திட்டத்துக்காகக் கடற்கால் பகுதிக்குரிய நில முழுவதையும் அமெரிக்க இணையரசுக்கே நிலவரமாக அளித்து விட்டது. அதன் பயனீடு, செயலாட்சி, உடைமை உரிமைகள் ஆகிய எவற்றிலும் பனாமாக் குடியரசுக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது. அப்பகுதியில் கடற்பாலாகவோ மற்றெவ் வழியிலோ போக்குவரவுக்கு வேண்டிய பாதைகள் அமைப்பது முதலிய எல்லா உரிமைகளும் அதற்குரிய துணை வாய்ப்புக்களான உரிமைகளும் முழுமையாக அமெரிக்க இணையரசு புதிய பனாமாக் குடியரசின் விடுதலை உரிமையை மதித்து அதற்கு உத்தரவாதமளித்தது.அத்துடன் அது புதுக்குடியரசுக்கு உடனடித் தொகையாகக் ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுதோறும் 21/2 இலட்சம் வெள்ளியும் அளிக்க உறுதி கூறிற்று. 1936லும், 1955லும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த அடிப்படை மாறாமலே ஆண்டு தோறும் அளிக்கப்படும் தொகைமட்டும் 1936ல் 4,30,000 வெள்ளியாகவும், 1955இல் 19,30,000 வெள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. உலக வளத்தில் மட்டுமின்றி, ஆற்றலிலும் பெரிய வல்லரசான இணையரசின் வாழ்விலும் புதிய குடியரசின் வாழ்விலும் பனாமாத் திட்டம் புத்தொளி வீசி வருகிறது. * * * சூயஸ் காலின் திட்டத்தைப் போலவே பனாமாக் காலின் பணியும் ஏறத்தாழப் பத்தாண்டுகளே பிடித்தது. அதுவே 1904மே 4இல் தொடங்கப்பெற்று 1914 ஆகஸ்டு 15க்குள் முடிவடைந்து விட்டது. பொதுவாக அட்லான்டிக் மாகடல் அமெரிக்காவுக்குக் கிழக்கிலும் பசிபிக் மாகடல் அதற்கு மேற்கிலும் கிடக்கின்றன. ஆனால் கடற்கால் வெட்டப்பட்டுள்ள இடத்தில் பனாமா நில இடுக்கு ஒரு சிறிது பாம்பு வளைவாக வளைந்து கிடக்கிறது. இதனால் கடற்காலைப் பொறுத்த அளவில்,அதன் அட்லான்டிக் மாகடல்வாய் மேற்காகவும், பசிபிக்மாகடல் வாய் கிழக்காகவும் கிடக்கின்றன. தென் கிழக்கில் பசிபிக்மாகடல் முகத்திலுள்ள ‘பல்பாவோ’த் துறைமுகத்திலிருந்து தொடங்கி அது வடமேற்கில் அட்லான்டிக் மாகடல் முகத்தில் ‘கிரிஸ்டோபல்’ துறைமுகத்தில் சென்று முடிகிறது. கடற்காலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நில இடுக்கில் மிக நெருங்கிய பகுதி வட அமெரிக்காவிலிருந்து அதனூடாகத் தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடர் (கூhந ழுசநயவ னுiஎனைந) என்ற மலைக்கோடும் இங்கேயே மிகவும் உயரம் குறைந்ததா யுள்ளது. ஆயினும் கடல் மட்டத்திலிருந்து 320 அடி உயரமுள்ள அதன் ‘பிடரி’யை 270 அடி அளவாக வெட்டிக் குறைத்த பின்னரே கடற்காலின் அடித்தளத்துடன் அது இணைய முடிந்தது. கடற்காலின் மொத்த நீளம் ஆழ்கடலிலிருந்து ஆழ்கடல் வரை 50 கல் ஆகும். அதன் நடுப்பெரும் பகுதி கேதன் ஏரி (ழுயவரn டுயமந) என்ற நீர்த்தேக்கத்தினூடாகச் செல்கிறது. இது கடல் மட்டத்துக்கு மேல் 85 அடி உயரமுடையது. மொத்தம் 32 கல் தொலை நீளமுடையது. கடற்காலின் உச்ச உயர் மட்டம் இதுவே. அட்லான்டிக் மாகடலின் திசையில் கேதன் ஏரியின் கோடியில் கேதன் பூட்டுக்கள் என்ற அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இது மூன்று படிகளுள்ள ஒரு பெரிய ‘நீரோணியாக,’ இவ்வுயர் மட்டத்தி லிருந்து கடல் மட்டத்துக்கும், கடல் மட்டத்திலிருந்து உயர் மட்டத்துக்கும் கப்பல்களை ஏற்றவும் இறக்கவும் உதவுகிறது.இது கடந்து கடற்கால் 7 கல் கடல் மட்டத்திலேயே ஓடி, அட்லான்டிக் மாகடல் முகப்பில் கிரிஸ்டோபல் துறைமுகத்தில் சென்று முடிகிறது. பசிபிக் மாகடலின் திசையில் கேதன் ஏரி கடந்த பகுதி ‘மிராப்ளோர்ஸ்’ ஏரி என்ற நீர்த் தேக்கத்தினூடு செல்கிறது. இது 3 கல் நீளமுடையது. இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. ஆனால் கடல் மட்டத்தைவிட 54 அடி உயரமுடையது கேதன் ஏரிக்கும் இதற்கும் இடையேயுள்ள ‘பெட்ரோ மிகுவெல் ‘பூட்டு ஒருபடியுள்ள ஓர் ஏணியாகக் கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி இம்மட்டத்துக்குக் கொண்டு வருகிறது. இது கழிந்தபின் மிராப்ளோர்ப் பூட்டுக்கள் என்ற அமைப்பு இரண்டு படிகளுள்ள ஏணியாகக் கப்பல்களை 54 அடி ஏற்றி இறக்கி, மீண்டும் கடல் மட்டத்தில் கொண்டு விடுகிறது. கடற்கால் 7 கல் கடல் மட்டத்தில் சென்றபின் பசிபிக் மாகடல் முகப்பில் பல்பாவோத் துறைமுகத்தில் சென்று முடிகிறது ஊடு நெடுந் தொடரை வெட்டிக் குறைத்துப் பெருமுயற்சி யுடன் அமைக்கப்பட்ட கடற்காற் பகுதி பெரும் பிளவு (வாந ஊரவ) என்றே குறிக்கப்படுகிறது. கட்டுமான காலத்தில் இது ‘குலெப்ரா’ப் பிளவு என்று வழங்கப்பட்டது. அப்பகுதியின் அரும்பணியை வெற்றிகரமாக முடித்த பொறிவலாளர் பெயரால் அது இன்று ‘கால்லியர்டுப் பிளபு’ (ழுயடடயைசன ஊரவ) என்று பெயர் பெற்றுள்ளது. கேதன் ஏரிப் பகுதியில் பசிபிக் மகாகடல் திசையிலுள்ள முதல் 10 கல் தொலை இதுவே. கால்லியர்டுப் பிளபு கழிந்தவுடன் ‘சாக்ரிஸ்’என்ற ஓர் ஆறு கடற்காலில் வந்து விழுகிறது. கேதன் ஏரித் தேக்கத்துக்கு மூலகாரணமான நீராதாரம் இதுவே.இந்த ஆறு கால்வாயை விட்டுப் பிரிந்த பின் சிறிது தொலைவில் கேதன் அணை என்ற ஒரு பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. தேக்கத்துக்கு மூலகாரணமான கடற்காலின் அமைப்புஇது. நீர் பரந்து பெருகித் தேக்கம் பெரிதாகுமுன் இப்பகுதியிலிருந்த குன்றுகளெல்லாம் இப்போது தேக்கத்தின் பெரும் பரப்பில் இடையிடையே சிறிய பெரிய தீவுகள் ஆகியுள்ளன. அத்தீவுகளில் மிகப் பெரியது ‘பாரோ கொலராடோ’ என்பது. கடற்கால் திட்டம் முடிவுற்று 16 ஆண்டுகள் சென்றபின், இந்நீர்த் தேக்கத்தின் நீர்வளத்தைப்பின்னும் பெருக்க ஒரு புது அமைப்பு உருவாயிற்று. இதுவே ‘மாடன் அணை’, இது சாக்ரிஸ் ஆறு கடற்காலுடன் சேருமிடத்துக்கு முற்பட்டுச் சிறிது தொலைவில் கட்டியமைக்கப்பட்டது. இது கடற்காலின் ஆட்சிப் பகுதிக்கு வெளியே பனாமாக் குடியரசின் எல்லைக்குள் இருக்கிறது. திட்டக்காலத்தில் கேதன் ஏரியும் கேதன் அணையுமே மனித உலகு கண்ட மிகப் பெரிய செயற்கை ஏரியாகவும், அணைக்கட்டு மானமாகவும் விளங்கின. இன்றும் அவை உலகில் இரண்டாம் இடம் வகிக்கின்றன. * * * கடற்கால்களும் பூட்டமைப்புடைய கால்வாய்களும் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பே உலகில் பல ஏற்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் அனுபவமோ, அவற்றில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களோ பனாமா வகைக்கு முற்றிலும் பயன்படவில்லை. ஏனெனில் பனாமாத் திட்டத்தில் இவை யாவும் உலகம் முன் என்றுங் கண்டிராத பாரிய அளவில் தேவைப்பட்டன. திட்டவேலையில் மொத்தம் 20 கோடி குழிக்கோல் (கனகச) அளவான மண்ணும் பாறையும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. கேதன் அணை யொன்றில் மட்டும் 230 இலட்சம் குழிக்கோல் அளவான மண்ணும் பாறையும் ஈடுபடுத்தப்பட்டன. 430 இலட்சம் குழிக்கோல் நீற்றுக்காரை (ஊடிnஉசநவந) வேலையில் பயன்படுத்தப் பெற்றது. பூட்டுக் கால்வாய்களும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களும் இதுவரை படகுகள், சிறு கலங்களுக்காகவே அமைந்தவை பனாமாவில் மிகப் பெரிய நீராவிக் கப்பல்கள், போர்க் கப்பல்களுக்கு உதவும் அளவில் அவை தேவைப்பட்டன. இத்தகைய பார அளவுக்கு அவற்றைப் பெரிதாக்குவது மட்டுமல்ல, கிட்டத்தட்டப் புது முறையில் உருவாக்குவதே இன்றியமையாததா யிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் இயந்திர சாதனங்கள், கருவிகள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன. பனாமாத் திட்டம் இவற்றுக்குத் தூண்டுதல் தந்தது. ஆனால் இவை இல்லாமலே, ஐம்பது ஆண்டுகட்கு முன்னிருந்த குறைபட்ட சாதனங்களைக் கொண்டு பனாமாத் திட்டம் இவற்றுக்குத் தூண்டுதல் தந்தது. ஆனால் இவை இல்லாமலே, ஐம்பது ஆண்டுகட்கு முன்னிருந்த குறைபட்ட சாதனங்களைக்கொண்டு பனாமாத் திட்ட முதல்வர்களும், பணியாளர்களும் அத் திட்டத்தைத் திறம்பட நடத்தியுள்ளனர். சாதனங்களின் குறைபாட்டைத் திட்ட முதல்வர்களின் அறிவுத் திறமும், பணியாளர்களின் ஆர்வக் கட்டுழைப்பும் சரிசெய்து, திட்டத்தின் புகழ் வளர்த்துள்ளன. திட்டத்தின் முதல் இரண்டாண்டுகள் இதை மெய்ப்பித்துக் காட்ட உதவுகின்றன. அந்த இரண்டாண்டுகளிலும் வெளிப் பார்வையில் உருப்படியான எந்த வேலையும் நடைபெற்றதாக எவரும் காணமுடியாது. ஆனால் பிரஞ்சுக் கழகத்தின் தோல்வியி லிருந்தது திட்ட முதல்வர்கள் சரியான படிப்பினை கற்றுக் கொண்டிருந்தனர். வேலையின் வெற்றி உழைப்பையும் விரைவையும் மட்டும் பொறுத்தவையல்ல. தொழிலாளர்களின் உழைப்பும் ஆர்வமும் மட்டுமன்றி, அவர்கள் கூட்டமைதியும் நல்வாழ்வு வசதிகளும், திட்ட முதல்வர்களின் திறமை மட்டுமன்றிச் சாதனக் கருவிகல நிறைவும், முன்னேற்பாடுகளும் அதற்கு இன்றியமை யாதவை என்பதை அவர்கள் உணர்ந்து செயலாற்றினர். வேலை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு தொழில்களுக்கும் உரிய பணியாளர்கள் தொகுதி தொகுதியாகத் திரட்டப் பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய குடியிருப்பு மனை வசதி, குடிநீர் முதலிய வாய்ப்பு நலங்கள், உடல் நல மருத்துவப்பணி யுதவிகள் ஆகியவை முன் கருதலுடன் வகுக்கப்பட்டன. திட்டப் பகுதியின் ஆட்சி முறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந் தன.இயந்திர சாதனங்கள் தருவிக்கப்பட்டன. இவையனைத்துக்கும் மேலாக, முன்பே அமைக்கப்பட்டிருந்த பனாமா இருப்புப்பாதை திட்ட காலப் போக்கு வரவுக்கு உறுதுணை தரும்படி, புது முறையில் செப்பஞ் செய்யப்பட்டது. அமெரிக்க இணையரசில் மீண்டும் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பீடும் பெருமையும் பெரியார் தியோடோர் ரூஸ்வெல்ட் பெற்றிருந்தார். பனாமாத் திட்டத்தை அவர் அமெரிக்காவின் வெற்றிச் சாதனைகளிடையே மிகப் பெரிய வெற்றிச்சாதனை என்று கருதினார். அமெரிக்காவின் வினை முனைப்பு,அறிவூக்கம், உயரிய நோக்கம், பொருளியல் சிக்கனம் ஆகிய அனைத்துக்கும் பனாமாத் திட்டம் ஓர் அரிய நற்சான்று என்று அவர் குறிப்பிட்டார். அதனை அவ்வாறு ஆக்கிய பெருமை திட்டத்தின் உயிர் முக்கியத்துவமுடைய அரங்கங்களுக்குப் பொறுப்பு வகித்து ஒழுங்கமைத்த வல்லுநர்களைச் சார்ந்ததாகும். பனாமாத் திட்டத்தில் வெற்றி நாட்டுவதற்கு உதவிய உயிர் முக்கியத்துவமுடைய அரங்கங்கள் அமைப்பாண்மை, பொறி வலாண்மை, உடல் நலத்துறை ஆகிய மூன்றுமே என்னலாம். அமைப்பாண்மை,முழுவதற்கும் பொறுப்பேற்ற ஆட்சித் தலைவர்களுள் குறிப்பிடத் தக்கவர் தியோடோர் ரூஸ்வெல்ட்டேயாவர். அவருக்கு உற்ற அருதுணைவராக வில்லியம் ஹோவர்டு டாப்ட் அமைந்தனர். பொறிவலாண்மைத் துறையிலும், இயக்கும் திறத்திலும் ஜான், எப். வாலஸ், ஜான் எப். ஸ்டீவென்ஸ், தியோடோர் பி. ஷான்ட்ஸ், கர்னல் ஜார்ஜ் டபள்யூ. கெதால்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். உடல் நல மருத்துவ சேவைத் துறையிலோ, கர்னல் கார்கஸும் அவர் துணைக் குழுவினரும் மக்கள் உள்ளங்கள் மீதும் கடற்கால் திட்ட நிறுவனங்களின் மீதும் தம் புகழ் மரபும் பெயர் மரபும் ஒருங்கே பொறித்துள்ளனர். மலையை மடுவாக்குதல், அம்மடுவை மாபெருங் கப்பல்கள் மிதந்து தவழத்தக்க கடற்காலாக்குதல், இயற்கை மலைகளிடையே இயற்கை மலையாகத் தோன்றத்தக்க வகையில் செயற்கை மலை எழுப்புதல், கப்பலுடன் கப்பல் மிதக்கும் கடலையுமே சேர்த்துப் பெட்டி தூக்குவது போல அந்தரத்தில் ஏற்றி இறக்குதல், சரியும் நிலப்பாளங்களையும், மலைகளையும் சரியாது தடுத்து நிறுத்துதல், இருப்புப்பாளங்களை மிதக்க வைத்தல், இமைக்கு முன் சந்தடியின்றிப் பாரிய இயக்கங்களை இயங்க வைத்தல் போன்ற கண்கட்டு வித்தைகளை மாயமோ மந்திரமோ இல்லாமல், அறிவுக் கண்ணால் ஆய்ந்து மனக்கண்ணினால் திட்ட உருவாக்கிச் செயற்படுத்திய அருந்திறலாளர்கள் இவர்களே யாவர். திட்ட நிறைவேற்றத்தின் பின்னும் இத்தகு செயல்கள் நாள் தோறும் வாரந்தோறும், ஆண்டாண்டாக, நடைபெற்றுக் கொண்டே வருகின்றன; பெருக்கமடைந்து கொண்டே வருகின்றன. அவற்றிற்கான செயலாட்சி, அமைப்பாட்சி, நில ஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி ஆகியயாவற்றையும் மணிப்பொறியின் உறுப்புக்கள் போல ஒரே வில் முறுக்கில் இயங்கச் செய்துள்ளனர் அவர்கள். வெப்ப மண்டலத்துக்குரிய கொள்ளை நோயினைக் கடற்காற் பகுதியிலிருந்து மட்டுமன்றி, உலகிலிருந்தே ஓட்டும் பணியில் கடற்கால் திட்டமருத்துவர் பணி, மனித இனத்திலேயே தன் புகழ் நிறுவியுள்ளது. புதிய உலகம் என்ன செய்ய முடியும். மக்களாட்சி போர்சாரா ஆக்க வாழ்விலேயே என்ன சாதிக்க முடியும் என்பதைப் பனாமா காட்டிற்று என்பதில் ஐயமில்லை. இணையரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டு மட்டுமல்ல, எழுகடலுலகே இதைக்கண்டு வியந்து பாராட்டுகின்றது! * * * கப்பல்கள் இன்று கடற்கால் கடந்து மாகடலிலிருந்து மாகடல் செல்ல எட்டுமணிநேரமே பிடிக்கிறது. பசிபிக் கோடியிலுள்ள பல்போவாத் துறைமுகமும் அட்லாண்டிக் கோடியிலுள்ள கிரிஸ்தோபெல் துறைமுகமும் கடற்கால் திட்டத்தின் பகுதிகளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இரண்டும், சிறப்பாகக் கிறிஸ்தோபெல் துறைமுகம், உலகின் மாபெருங் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்கும் தளங்களாகவும், கப்பல்கள் செப்பஞ் செய்யப்படும் பட்டறைகளாகவும் அமையும் படி ஆழ அகலப்படுத்தப்பட்டு, கட்டுமானங்கள், சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கடற்கால் நடைமுறை ஆட்சியின் அரங்கங்கள், அரசியல் ஆட்சி அரங்கம், படைத்துறைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் ஆகியவர்களில் குடியிருப்புக்களும் பணிமாடங்களும் பெரும்பாலும் இந்த இருகோடிகளிலுமே உள்ளன. கடற்காலின் ஒவ்வொரு பக்கமும் 5 கல் தொலை அளவாக மொத்தம் 10 கல் அகலமுடைய கடற்காற் பகுதி கடற்காலின் தனியாட்சிக்கு உரியது. குடியிருப்புக்கள் இங்கும் பல உண்டு. ஆழ அகலம் பேணும் சீராட்சியரங்கம் (னுசநனபiபே னுiஎளைiடிn) பூட்டு இயக்கும் பொறித்துறை, அணைசீப்பு அரங்கம் ஆகியவற்றின் பணியாளர்களும் ஆங்காங்கே தத்தம் வினைக்களங்களுக்கு அருகாமையில் குடியிருப்புக் கொண்டுள்ளனர். கடற்காலில் எங்கும் காணப்படும் நடைமுறை ஒழுங்கும் வாய்ப்பு நலங்களும் உலகில் வேறெங்கும் எளிதில் காணமுடியாதவை. கப்பல்கள் துறைமுகத்தை அணுகுவதற்கு 48 மணி நேரம் முன்பாகவே துறைமுக வரவேற்பரங்கத்தார் ஒலிபரப்பு மூலம் தொடர்பு கொண்டு யாவும் திட்டம் செய்து விடுகின்றனர். கற்கால் வழிகாட்டி கப்பலை எதிர் நோக்கிச் செல்கிறார். பல்போவாத் துறைமுகம் அணுகுமுன்பே கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து, கரைவரை ஓர் அணைகரை யிடப்பட்டுள்ளது. கடற்காலிலிருந்து வெட்டிய மண்ணும் பாறையுமிட்டு அது கடலடைத்து அமைக்கப்பட்டுள்ளது. கப்பலை எதிர் கொண்டு வரவேற்கச் செல்லும் வழிகாட்டிக்குப் பயன்படத்தக்க முறையில் இது அமைந்துள்ளது. காண்பவரையும் கேட்பவரையும் வியப்பூட்டி ஆர்வம் பிணிக்கவல்ல கடற்காலின் உறுப்புக்கள் கால்லியர்டுப் பிளவு, கேதன் ஏh, கேதன் அணை, மட்டங்களை இணைக்கும் பூட்டுக்கள், பாரோ கொலராடோத் துவு,மாடன் அணைக்கட்டு ஆகியவையே. இவற்றுள் கடற்கால் வரலாற்றிலேயே பேரிடம் வகித்துள்ள பகுதி கால்லியர்டுப் பிளவேயாகும். பனாமா கடற்கால் விளக்கம் 1. கோலன் நகரம் 2. கிரிஸ்டோபெல் துறைமுகம் 3. வானவில் நகரம் 4. மார்கரிதா நகரம் 5. கேதன் பூட்டுக்கள் 6. கேதன் அணை 7. கேதன் ஏரிப்பகுதி 8. கம்போவா நகரம் 9. சாக்ரிஸ் ஆறு 10. கால்லியல்டுப் பிளவு 11. குத்தகைக்காரர் குன்று 12. தங்கக் குன்று 13. பெட்ரோ மிகவெல் பூட்டுக்கள் 14. மிராப்ளோர்ஸ் ஏரி 15. மிராப்ளோர்ப் பூட்டுக்கள் 16. தியாப்ளோ மேடு 17. பல்போவாத் துறைமுகம் 18. அங்கன் குன்று 19. கோட்டைத் தீவுகள் கப்பல்கள் கால்லியர்டுப் பிளவுப் பகுதியில் செல்லும் போது, அதில் உள்ளவர்களுக்கு ஓர் ஆழ்கிடங்கில் செல்வது போன்ற தோற்றமே மிகுதியா யிருக்கும். கட்டுமான காலத்தில் கடற்காலை அதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ‘கிடங்கு’ என்றே பழக்க உரிமையுடன் அழைத்தனர். இது மலைகுடைந்து உருவாக்கிய பகுதி என்பதை இருதிசைக் காட்சி களும் தெள்ளெனத் தெளியக் காட்டு கின்றன. இருபக்கத்திலு முள்ள மலைகள் பாறைகளும் காண்பவரை மலைக்க வைப்பவை. இவற்றுள் தங்கக் குன்று என்பது செங்குத்தாக 660 அடி உயர்ந்து வானோக்கி நிமிர்ந்து நிற்கின்றது. ‘குத்தகைக்காரர் குன்றம்’ (ஊடிவேசயஉவடிசள’ ழடைட) என்பது முன்பு 410 அடி உயரமாயிருந்தது. அதன் பாறைகள் அடிக்கடி கடற்கால்மீது சாய்ந்து இடரும் இடரச்சமும் விளைவித்தமை கருதி, அதன் முகடும் சரிவுகளும் பெரிதும் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. பாரப்பொறிகள் ஏற்படாத அந்நாட்களில் இப்பகுதி முற்றிலும் இருப்புப் பாதைகள் வண்டிப் பாதைகள் ஆகியவற்றின் ஒரு பின்னால் வலையாக காட்சி தந்தது. புற்றைச் சுற்றிலும் பரபரப்புடன் திரித்து மொய்க்கும் எறும்புகள் போலத் தொழிலாளர்களின் நடமாட்டம் அமைந்திருந்தது. பிளவு வேலை பல ஆண்டுகள் நீடித்தது. 1908 லேயே அது உச்சநிலை அடைந்தது. அவ்வாண்டில் மட்டும் 370 இலட்சம் மண்ணும் பாறையும் அகற்றப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் ஒரே நாளில் வேலை இன்னும் மும்முரமாக நடைபெற்றது. ஒவ்வொன்றும் 400 பாரம் (டன்) பாறைகளை ஏற்றிச் செல்வனவாக 333க்கு மேற்பட்ட விசை வண்டிப் பெட்டிகள் ஓய்வொழிவின்றி வேலை செய்து வந்தன. திட்ட வேலையின்போதே அடிக்கடி இப்பகுதியில் நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. திட்ட வேலை முடிந்தபின்னும் கூட, கடைசித் தடவையாக 1916இல் ஒரு பெருஞ் சறுக்கவேற்பட்டது. இவற்றால் ஏற்பட்ட உயிரழிவு, பொருளழிவு பெரிது. அதனுடன் வெட்டிய காலில் கொட்டிய மண்ணை மீண்டும் பெரு முயற்சி யுடன் வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. சறுக்கலின் கொடுமையை அதனிடையே அகப்பட்ட இருப்பு வண்டிகளும், இருப்புப் பாதைத் தண்டவாளங்களும் காட்டின. முந்தியவை தவிடுபொடியாயின. தண்டவாளங்களோ தொய்வக (ரப்பர்) இழைகள் போல உருச் சிதைந்து சுருண்டு சுருண்டு நெளிவுற்றுத் திருகிக் கிடந்தன. கால்லியர்டுப் பிளவில் ஏற்பட்ட பல சறுக்கல்களின் தழும்பு களை அதன்வழிச் செல்வோர் இரு புறங்களிலும ஆங்காங்கே காணலாம். இப்பகுதி வேலையைத் திறம்படச் செய்த புகழ்ப் பொறிவலாளர் கர்னல் டி.டி. கால்லியர்டின் பெயரே பிளவுக்கு இடப்பட்டுள்ளது. தவிர, அவர் வெண்கலச்சிலை உருவம் கரையிலுள்ள குத்தகைக்காரர் குன்றின் மீது எழுப்பப் பட்டுள்ளது. * * * கால்லியர்ட் பிளவு நீங்கலான கேதன் ஏரிமட்டப் பகுதியே கேதன் ஏரிப் பகுதியாகும். இது 23 கல் நீளமும், 500 அடிக்கும் 1000 அடிக்கும் இடைப்பட்ட அகலமும் 85 அடிக்கும் 1000 அடிக்கும் இடைப்பட்ட அகலமும் 85 அடி நிலைத்த ஆழமும் உடையது. கரையோரச் சுற்றளவு 1,100 கல் ஆக, 16,338 சதுரக் கல் அளவு அது பரநது கிடக்கிறது. கேதன் ஏரியினிடையேயுள்ள பெருந் தீவான பாரோ கொலராடோ ஓர் இயற்கை பொருட்காட்சி மனையாகவே உள்ளது.ஏரி நீர் பெருகிய சமயம் குன்றுகளாயிருந்த தீவுகளிலும், காடாயிருந்த நீரடியிலும் வாழ்ந்த செடி கொடி உயிர்கள், விலங்கு, பறவைகள், பூச்சியினங்கள் ஆகியவை இங்கே அடைக் கலம் பெற்றன. தீவையும், தீவில் இவற்றின் தொகுப்பால் அமைந்த காட்சி மனையையும் ஆய்வுக் கூடத்தையும் ‘ஸ்மித்ஸோனியக் கழகம்’ என்ற ஆராய்ச்சி நிலையம் ஆட்சி செய்கிறது. கேதன் அணை இப்போது கடற்காலமைப்பின் உயிர்த் திறவாகக் கருதப்படுகிறது. ஆயினும் கட்டுமான காலங்களில் அது அமெரிக்க மன்றங்களிலும், பத்திரிகைகளிலும் பெருத்த ஆதரவு எதிர்ப்புக்களுக்கு ஆளாகியிருந்தது. அந்நாளைய சிறந்த பொறிவ லாளர்களில் மிகப் பலர் அதன் வலுவிலும் உறுதியிலும் பெருத்த அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இரண்டு இயற்கைக் குன்றுகளிடையே சாக்ரிஸ் ஆற்றுக்குக் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதில் இணைந்துள்ள 230 இலட்சம் குழிக்கோல் மண்ணும் பாறையும் இயற்கைக் குன்றுகளுடன் முற்றிலும் இணைந்து ஒன்றுபடுத்தப் பட்டுள்ளது. அது செயற்iக்க கட்டுமானம் என்பதை ஒருவரும் எளிதில் காண முடியாதவாறு வேலைப் பாடும் இணைப்பும் திறம்பட இயற்றப் பட்டுள்ளன. இவ்வணை ஒன்றரைக் கல் நீளமும் அடித்தளத்தில் அரைக்கல் அகலமும் உடையது. இதனடியிலுள்ள நீர் செல்பாதை1200 அடி நீளம் 285 அடி அகலமுடையது. மதகுகள் ஒவ்வொன்றும் 45 அடி அகலமுடையதாக, 14 மதகுகள் உள்ளன. 14உம் திறக்கப்பட்டால் ஒரு நொடிக்கு 150 ஆயிரம் குழி அடி நீர் அவற்றின் வழி வடியும். இவ்வளவு நீர் சாக்ரிஸ் ஆற்றில் என்றும் வடிந்ததில்லை.ஆகவே துருவெடுப்பு வேலையின்போது மட்டுமே 14 மதகுகளும் திறக்கப் பெறுகின்றன. வெள்ளக்கட்டுப் பாட்டுக்காகப் பொதுவான 8க்கு மேற்பட்ட மதகுகள் திறக்கப்படுவதில்லை. கேதன் ஏரி கடல் மட்டத்தைவிட மிகவும் உயர்ந்ததாதலால், பனாமாக் கடற்காலின் பூட்டுக்களின் ஏற்ற இறக்கத்துக்கு நீர் இறைக்கவோ, அதற்கான இயந்திர ஆற்றல் செலவு செய்யவோ தேவை ஏற்படவில்லை. இயல்பான நீரோட்டத்தின் மூலம் அது நடைபெறுகிறது. ஆனால் ஒவ்வொரு தடவை கப்பல் செல்லும் போதும் 520 இலட்சம் காலன் நீர் கடலுக்குச் செல்கிறது. பொதுவாக ஓர் ஆண்டுக்கு இவ்வாறு 4,850 கோடி குழியடி நீர் செலவாகிறது. ஏரிப் பரப்பில் ஆவியாகவும் பேரளவில் நீர்வற்றுகிறது. இவற்றுக் கெதிராக நீரின் சேம வளம் பெருக்க உதவும் முறையில் திட்ட வேலைக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டுக்குப் பின் மாடன் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறும் வளம் பூட்டுக்களுக்கு மட்டுமன்றி மற்றும் பல்வேறு வகைகளுக்கும் பயன்படுகிறது. நீர்மின்சார மாக்கப்பட்டு அது பல நகரங்கள், குடியிருப்புக்களுக்கு ஒளி வசதி, தொழில்களுக்கும் இயந்திரங்களுக்கும் ஆற்றல் வசதி அளிக்கிறது. அதுவே நேரடியாக நீர் வசதியும் தருகிறது. * * * பூட்டுக்கள் ஒவ்வொன்றும் குத்தாயமாக ஒரு கல் நீளமுடையது. மிராப்ளோர்ஸூம் கேதனும் ஒரு கல்லுக்கு மேற்பட்ட நீளமும் பெட்ரோமிகுவெல் ஒரு கல்லுக்குக் குறைந்த நீளமும் உடையவை. பூட்டின் படி ஒவ்வொன்றும் ஒரு பெரிய பேழையாகச் சமைந்துள்ளது. ஆனால் இரு திசையிலிருந்தும் ஒரே சமயம் கப்பல்களை ஏற்ற இறக்க உதவும் முறையில் கடற்காலின் இரு அருகுகளிலும் இரண்டிரண்டாகப் பேழைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேழையிலும் இயங்கும் பகுதி 1000 அடி நீளமும், 110 அடி அகலமும் உடையது. கப்பல் பூட்டை அணுகும்போது, இணைபேழைகளில் எப்பக்கப் பேழை வழி செல்லவேண்டுமென்று வழி காட்டிக்குத் தெரிவிப்பதாக, நீரிலேயே அம்பு வடிவான ஓர் ஒளிக்கோடு தோன்றுகிறது. இந்த ஒளிக்கோட்டையும், பூட்டின் பிறவேலை களையும் இயக்கம் பணிமனை ஒருகல் தொலைவில் உள்ளது. பூட்டின் நடுச்சுவர் மீதமைந்த இந்த இரண்டடுக்குக் கட்டடத்தில் பூட்டின முழுப் படிவமும், அதன் இயந்திரங்களும் மிகச் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிறு படிவத்தை இயக்கினால் பூட்டு முழுவதும் இயங்கும்படி அவை இணைக்கப்பட்டுள்ளன. மிராப்ளோர்ஸ் பூட்டமைப்பில் இச் சிற்றுருப் படிவமே 60 அடி நீளமுடையது. பேழையின் இருதிசையிலும் வாயிற்கதவுகள் இரண்டு அலகுகளாக இணைந்துள்ளன. இருபக்கமும் காரைக் கட்டுக்குள் அமைந்த புழையினுள் நழுவி உட்செல்லும படியும், வெளிவரும் படியும் அவை அமைக்கப்பட்டுள்ளன. அலகுகள் உட்செல்ல, வாயில்திறக்கும். வெளிவந்து இணைய அது மூடும். அலகுகள் கண்ணறை கண்ணறைகளாக அமைந்திருப்பதால், இருபுறக் கொளுவிகளில் பளுத் தாக்காமல் நீரில் மிதந்து நிற்கும்படியே உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக அலகுகள் 7 அடி நீட்டமும் 47 அடி உயரமும் 390 பார (டன்) எடையும் உடையவை. ஆனால் பசிபிக் மா கடலில் வேலி ஏற்ற இறக்க மட்டம் பேரளவில் வேறுபடுவதால் அக்கோடியிலுள்ள அலகுகள் மட்டும் 82 அடி உயரமும் 730 பார எடையும் உடையன. பூட்டுக்களில் நீர் உயர்வதாக யாருக்கும் தென்படாது. கப்பல் அசைவதாகவே ஒரு சிறிதும் தெரிவதில்லை. அவ்வளவு அமைதி யுடன் ஏற்றஇறக்கம் நடை பெறுகிறது. மட்ட ஏற்றத் துக்குக் கேற்ப நீர் கேதன் ஏரிமட்டத் திலிருந்து பூட்டுப் பேழைகளுக்கு வருகிறது அல்லது பூட்டுப் பேழை களிலிருந்து கீழ்மட்டங்கள் வழி கடலுக்குச் செல்கிறது. ஏற்றத்தின் போது நீர் பூட்டின பக்க மதில்களிலும் ஊடு மதில்களிலும் புதைக்கப்பட்ட பெருங்குழாய்கள் வழியாகச் சென்று, பக்க மதில்களிலிருந்து பூட்டின் அடித்தளத்தினூடாக ஓடி பேழையன் கீழுள்ள புழைகள் மூலம் மேலே பாய்கிறது. இறக்கத்தில் இதே வழியில் நீர் கீழ்மட்டத் துக்கு வடிகிறது. பெருங்குழாய்கள் 18 அடி குறுக்களவும், சிறு குழாய்கள் தட்டையாக 33 முதல் 44 சதுர அடிவரை உட்பரப்பும் உடையவை. பெருங்குழாய்கள் நாலடுக்காக வண்டிகள் போகவும், சிறு குழாய்கள் ஓரடுக்காக வண்டிகள் செல்லவும் போதிய அகல உயரம் உடையன. அலகுகள் ஒரு சிறிதும் சிக்கலில்லாமல் சரிசமமுடையவை யாய் அமைக்கப்பட்டிருப்பதால், 25 பரித்திற ஆற்றலுடன் (ழடிசளந ஞடிறநச) இயங்கி, இருகணங்களுக்குள் திறந்து மூடிவிடுகின்றன. கப்பல்கள் வாயிற்கதவுகளில் மோதி விடாமல் தடுக்க ஒரு பெரிய சங்கிலி பாதுகாப்பாக இடப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு கண்ணியும் 70 கல் (பவுண்டு) எடையுடையது. மொத்தம் 30,000 கல் எடையுள்ள இப்பளுவான சங்கிலி மீது கப்பல் சிறிது தட்டிவிட்டால்கூட, அது தொய்வகப் பந்துபோல எதிரிட்டுப் பாய்ந்து கப்பலை உந்தித் தள்ளி விடும் இயல்புடையது. கடற்காலில் கப்பல்கள் பொதுவாகத் தம் இயந்திர ஆற்றலுடனேயே செல்கின்றன. ஆனால் பூட்டுக்களில் அவை விசையாற்றல் மிக்க இழுப்புக் கலங்களால் ஈர்த்துச் செல்லப்படு கின்றன. இவை ‘வேசரிகள் (ஆரடநள) என்று வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கப்பலுக்கும் 6 முதல் 10 வரை வேசரிகள் இணைக்கப் படுகின்றன. பக்கத்துக்குப் பக்கமாக, அவை கப்பலுக்கு முன் இரண்டும், பின் இரண்டும், பக்கத்தில் இரண்டுமாகச் செல்கின்றன. முன்னிணைகள் இழுக்கின்றன. பின்னிணைகள் தேவைப்பட்ட இடத்தில் வேகம் தடுக்கின்றன. பக்க இணைகள் இருவகையிலும் இயங்குகின்றன. வேசரிகள் ஒவ்வொன்றும் ஓர் இலட்சம் கல் எடையுடையது. 25,000 கல் எடை இழுக்கவல்லது. * * * கேதன் பூட்டுக் கழிந்த சதுப்பி நிலச் சமதளப் பகுதியே பிரஞ்சுக் கழகத்தின் பேருழைப்புக்கும் எல்லையற்ற தொல்லை கட்கும் இலக்கான பகுதியாகும். கால்வாய் ஆட்சியின் மருத்துவ அரங்கப்பணி கொள்ளை நோய்களின் மூலதனமாயிருந்த இப்பகுதி யிலிருந்து அத் தொல்லைகளை ஓட்டியுள்ளது. திட்டத்தொடக்கத்தில் வேலை நிறைவேற்றத்துக்குக் குறிக்கப் பட்ட நாள் 1915 ஜனவரி முதல் நாளாகும். ஆனால் நிலச் சரிவுகள் போன்ற எதிர்பாரா இடர்கள் குறுக்கிட்டபின்னும் திட்ட நாளுக்குப் பல மாதங்கள் முற்பட்டு 1914 ஆகஸ்டு 15 ளேலயே முழுதும் முடிவுற்று, கடற்காலின் திறப்புவிழா இனிது நடைபெற்றது. திறப்புவிழா அன்று பனாமா இருப்புப் பாதைக்குரிய கப்பல் ‘ஆங்கன்’ கடற்காலின் வழியாக முதற் பயணம் சென்றது. அது முதல் ஆண்டுதோறும் பல நாடுகளுக்குரிய கொடிகளுடன் உலகெங்கு முள்ள வாணிகக் கப்பல்களும், பயணக் கப்பல்களும், போர்க் கப்பல்களும் அதன் வழி சென்று பெரும் பயனடைந்து வருகின்றன. கடற்காற் பணிக்கான செலவு தொடக்க மதிப்பீடு கடந்து மொத்தம் 38 கோடி வெள்ளியாகியுள்ளது. கடற்காலின் ஆட்சிமுறை 1914 வரை ஸ்பூனர்ச் சட்டத்தின் படி அமெரிக்க அரசியல் மேற்பார்வையில் இருந்தது. அவ்வாண்டு பனாமக் கடற்காற் கழகம் என்ற தனி அமைப்பிடம் அது ஒப்படைக் கப்பட்டிருந்தது. பனாமா இருப்புப் பாதைக் கழகம் அதனுடன் ஒத்துழைத்தது. ஆனால் 1951 ஜூலை 1 இல் பனாமா இருப்புப் பாதைக் கழகம் கடற்காலின் செயலாட்சிக் கழகமாக்கப்பட்டு அமெரிக்க இணையரசிடம் தொடர்பு கொண்ட ஒரு தனியாட்சிக் கழகமாயிற்று. அதே சமயம் கடற்காற் பகுதிக்கு ஒரு நிலவரை ஆட்சியும் (ஷ்டிநே ழுடிஎநசnஅநவே) அமைக்கப்பட்டது. செயலாட்சிக் கழகத் தலைவரே நிலவரை ஆட்சியின் ஆட்சி முதல்வராக அமைந்தனால் இரண்டும் தனித்தனியாக, ஆனால் நோக்கத்தில் இணைந்து செயலாற்ற முடிகிறது. கடற்காலின் எல்லாச் செலவுகளுக்கும் ஈடு செலுத்தும் முறையில் அதன் சுங்க வரிவிகிதம் அமையவேண்டுமென்று சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நில ஆட்சியின் செலவை இணையரசே ஏற்றாலும், அதுவும் இவ்வாறு கழகத்தால் ஈடு செய்யப்படுகிறது. இதனால் கடற்காலின் நடைமுறையாட்சியால் இணையரசுக்குப் பெயரளவில் இழப்பும் இல்லை, ஆதாயமும் இல்லை. ஒரு சேவை அமைப்பாகவே அது நடத்தப்படுகிறது. ஆனால் அதன் சேவை இணையரசுக்கும் பனாமாக் குடியரசுக்கும் மட்டுமன்றி உலகுக்கே ஆதாயம் தருவதாகும். இருபதாம் நூற்றாண்டின் உலகப் பெரும் போர்கள் இரண்டில், முதல் போர் தொடங்கிய ஆண்டில், போர் தொடங்க ஒரு மாத முன்னரே உலகின் அமைதித் துறைப் பெரு வெற்றியாகப் பனாமாத் திட்டம் நிறைவேறிற்று. ஆனால் முதல் உலகப்போர் காரணமாக 1920 வரையும், இரண்டாம் உலகப் போர் காரணமாக மீண்டும் முன்னிலும் பேரளவில் 1950 வரையும் கடற்கால் வழிப்போக்கு வரவு மிகக் குறைந்த அளவாயிருந்தது. இக்காலமுழுமையிலும் மிகக் குறைந்த போக்கு வரவுடைய ஆண்டு 1944. அப்போது கடற்கால் வழி சென்ற கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 1562 ஆகக் குறைவுற்றது. 1929இல் கப்பல்களின் எண்ணிக்கை 6289 என்ற உச்ச எல்லையையும், சுங்க வருவாய் 2,71,11,000 வெள்ளியையும் எட்டிற்று. 1952 முதல் 1956 வரை ஆண்டுதோறும் இவ்வெல்லை தொடர்ச்சியாகத் தாண்டப்பட்டு 1956இல் கப்பல்கள் எண்ணிக்கை 1,88,968 ஆகவும், சுங்க வருவாய் 80,54,53,516 வெள்ளியாகவும் உச்சநிலை அடைந்தது. 1956க்குள் உலகக் கடல் வாணிகத்தின் இவ்வுயிர் வாயில் மூலமாக 25,00,000 கப்பல்கள் பயண முடித்துள்ளன. வாணிகச் சரக்குகளின் அளவு 100 கோடி பார எல்லை அடைந்த நிகழ்ச்சி ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டுக் கடற்காலின் உயிர் முக்கியத் துவம் உலகுக்குக் கண்கூடாக எடுத்துக் காட்டப்பட்டது. 7. பொங்கு மாவளம் மக்கள், மக்களுக்காக, மக்கள் மூலமாக ஆளும் ஆட்சியே குடியாட்சி! குடியாட்சி பற்றிய அரசியலறிஞரின் விளக்கம் இது. ஓருலக அரங்கத்தில் இதற்கிணையாக ஒரு மேற்கோள் வாசகம் காணலாம். உலகம், உலகத்துக்காக, உலக வரலாறு முழுவதையுமே தளமாகக் கொண்டு வகுக்கும் செயலே ஓருலகச் செயல்.சூயஸ், பனாமாத் திட்டங்கள் இரண்டுமே இத்தகைய உலகச் செயல்கள், ஓருலகச் சாதனைகளாகும். அவை மனித இன வாழ்வில் வளமூட்டி, மனித இன வரலாற்றின் உள்ளீடாக ஒளிரும் பொன்னிழைகளாகும். உலகில் இவ்விரு சாதனைகளும் விளைவித்துள்ள மாறுதல்கள் எண்ணற்றவை.மனித வாழ்வில் அவை ஊக்கியுள்ள, ஊக்கிவரும் ஆக்கவளமும் மிகப் பெரிது. அதோடு, உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலுமே அவை புகுந்து புதிய ஆற்றும் புத்தாக்கமும் அளித்து வருகின்றன. உலகை ஓருலக வாழ்வாக ஒன்றுபடுத்தி அவை மனித இன வாழ்வை ஊழி கடந்து ஊழியாகப் பொங்கு மாவள நோக்கி இடையறாது இட்டுச் சென்று கொண்டே இருக்கின்றன. இரு திட்டஙகளிலும் ஒற்றுமைகள் மிகப்பல, வியக்கத்தக்க முறையில் பல. ஆயினும் வேற்றுமைகளும் சில உண்டு கால இட வரலாற்றுப் பின்னணிச் சூழல்களின் விளைவுகளாக அமைபவை அவை. இந்த ஒற்றுமை வேற்றுமைகளில் ஒருங்கே கருத்துச் செலுத்தினால்தான், வருங்கால வாழ்வில் அவற்றுக்குரிய தனித்தனி முக்கியத்துவமும் விளங்கும். இரண்டும் தோற்றம், வளர்ச்சி, வளம் ஆகிய மூவகையிலும் உலகச் செயல்கள், ஓருலகச் சாதனைகள் உலக நோக்குடன் உலக முழுமைக்கும் வேறுபாடின்றிச் சேவைசெய்பவை. இரண்டும் தமிழகக் கனவிலும் தமிழகம் பற்றிய கனவிலும் தோன்றி அக்கனவை வளர்ப்பவையாக இயல்கின்றது. இரண்டும் இயல்பாகக் கடற்கால்களல்ல, இயல்பாக நில இணைப்புக்கள். செயற்கைக் கடற்கால்களாகவே அவை இரண்டும் மனித இனமுயற்சியால் உருவாக்கப் பெற்றுள்ளன. அவற்றின் தமிழகக் கடலோடி மரபை இவை வற்புறுத்துகின்றன. திட்டங்களிடையே நாம் காணுகிற முழு ஒற்றுமைகள் இவையே. ஒற்றுமைகளினூடாகத் தமிழகக் கனவு கூறு தொக்குலவு வது குறிப்பிடத்தக்கது. வேற்றுமைகளிடையே குறிப்பிடத்தக்க அடிப்படை வேறுபாடு நில இயல், வரலாற்றுப் பின்னணி சார்ந்தது. இவ்விருத்திட்டங் களில் ஒன்று பழைய உலகம் சார்ந்தது. பழைய உலகின் 4000 ஆண்டு வரலாறு அளாவியது. மற்றது புதிய உலகம் சார்ந்தது. அதன் 400 ஆண்டு வரலாறு அளாவியது. பழைய உலகில் வளர்ந்து தற்போது தளர்ந்துள்ள கீழைத் தேசியங்களுக்கும், புதிதாக வளர்ந்துவிட்ட மேலைத் தேசீயங் களுக்கும் இடையே சூயஸ் நிலவுகிறது. பனாமாவோ புதிய உலகில் வளர்ந்துள்ள ஒரு தேசீயத்துக்கும், வளர்ந்துவரும் தேசீயங்களுக்கு மிடையே நிலவுகிறது. நில இயலின்படி பனாமா இணைப்பு இருமாக்கடல்களை ஒன்று சேர்ப்பது. ஆனால் சூயஸ் இருமாகடல்களை இணைக்கும் இரு சிறு கடல்களையே இணைப்பது. இம்முறையில் மாகடல் களுடன் தொடர்பு பெற அதற்கு இரு திசையிலும இரண்டு இயற்கைக் கடற்கால்கள் ஜிப்ரால்ட்டரும் ஏடனும் துணைவாயில் களாய் அமைந்துள்ளன. பனாமாவை விடமிகுதியாக அது வல்லரசுகளின் பிடிக்கு ஆளாய், வல்லரசுகளின் உலகச் சதுரங்கச் சூழலில் சிக்கி வந்துள்ளதன் காரணம் இதுவே. உலக நோக்கில் இரண்டிற்குமுள்ள உயிர் வேற்றுமை, தேசீயம், உலகநோக்கு ஆகியவை பற்றியது. சூயஸ், தாய்நிலத் தேசீயத்தில் தோன்றி இடையில் தனி மனிதர் பெருமுயற்சியால் வெற்றிபெற்றுள்ளது. தனிப்பட்ட கழக ஆட்சியில் வல்லரசுகளின் போட்டிக்காளாயினும் அது இறுதியில் தாய் நிலச் தேசீயத்தின் மலர்ச்சி வகுத்துள்ளது. ஆனால் பனாமாவோ உலக உயிர் நாகரிக மையமான நிலத்தில் தோன்றினாலும், தனி மனிதர், கழகங்கள் முயற்சிகளுக்கு இடந்தந்தாலும்,முற்றிலும் ஒரு தேசீய ஆட்சிக்கே உரியதாகி உள்ளது. வாணிக நிலையில் உலகநோக்கு சூயஸ், பனாமா ஆகிய இரண்டுக்கும் உரியதாயினும், அரசியல் நோக்கு இவ்வகையில் வேறுபடுவதாகும். இது தேசீய நோக்கையும் உலக நோக்கையும் பாதிப்பதேயாகும். சூயஸில் அதன் தாய் நிலத் தேசீயமே வளம் பெற்றுள்ளது. அதன் உரிமையைத் தேசீயம் வளர்க்கிறது. பனாமாத்திட்டமும் இதுபோல பனாமாக் குடியரசைப் பொருளியல் வழியிலும், அரசியல் வலுவிலும்கூட வளர்த்துள்ளது. வளர்த்து வருகிறது. எனினும் பனாமாக்குடியரசு அதில் முற்றிலும் உரிமை இழந்துள்ளது. உலகின் வேறு எந்த வல்லரசும் அமெரிக்காக் கண்டத்தின் காலூன்றாமல் அமெரிக்கா அக்கரையுடன் பார்க்கிறது. அதன் இக்கொள்கை முன்னாட்களில் ‘மன்ரோ’க் கோட்பாடு எனக் குறிக்கப்பட்டு அதே சமயம் அதன் பொருளியல், அரசியல் வன்கரங்கள் உலகெங்கும் பரவாமல் இல்லை. உலகில் நேரடிப் பேரரசாகப் பிரிட்டன் மேற்கொண்ட உலக அக்கரையை இது நினைவூட்ட வல்லது. மேலையுலகம் இந்தியா செல்லும் வழியின் வாயிலாகவே சூயஸைப் பிரிட்டன் கட்டிக்காக்க விரும்பிற்று. அதுபோலவே, அமெரிக்காவும் கீழ்த்திசை செல்லும் மேல்திசை வாயிலான பனாமாவைக் கட்டிக்காக்க விரும்புகிறது என்னலாம். ஒற்றுமைக் கூறுகளின்மீது ஒளிபரப்பும் தமிழக நிழற் கூறுகள், இவ்வேறுபாடுகளிடையேயும் ஒற்றுமை காட்டுபவையாகும். தமிழகத்துக்கு அருகே ஒரு தமிழகக்கடற்கால் இருந்தாலும், அது உண்மையில் பனாமா, சூயஸ் ஒத்த செயற்கைக் கடல்வாயிலோ, ஜிப்ரால்ட்டர், ஏடன் போன்ற இயற்கைக் கடல்வாயிலோ அல்ல. அது ஒருமா கடலளாவி அதன் மையமாக, முக்கூட்டு மைய மகுடமாக இலங்கை யணைத்து நிற்கிறது. அம் மாகடல் வாழுமுலக மாகடல்கள் இரண்டையும் இணைப்பதுடன், ஒருபூறம் ஏடன், சூயஸ், ஜிப்ரால்ட்டரையும், மறுபுறம்,சிங்கப்பூர், பனாமாவையும் இணைக்கும் மையமாக உள்ளது. கடல் இணைப்பாயினும் கடல் வாயிலாய் அமையாமலே அது உடலுலகின் மையமாகவும், நில உலகின் மையமாகவும், வானெறிகளின் மையமாகவும் இயங்குகிறது. வடதென் துருவ வழி வானெறிகள் அமையும் நாளில், அது அந் நெறிகளுக்கும் நடுநாயக இடம் வகிப்பதாகும். தமிழகத்தின் நிலம், கடல் வான் அளாவிய இவ்வுலக மைய நிலை, அதன் உலகளாவிய தேசீய நிலை குறிப்பதாகும். தமிழகக் கனவுகளில் நீடித்தாழ்ந்த சூயஸ் இதில் பங்கு கொண்டுள்ளது. தமிழகத்துககு அருகே உள்ள சூயஸின் தாய் நிலத் தேசீய மளாவிய உலக நோக்கு வல்லாட்சி கலவாத தமிழகக் கனவு நோக்கு மேற்கொண்டுள்ளது. கீழைத் தேசீயங்களையே அது மலர்வித்தும் வருகிறது. பனாமாவுக்கு வருங்காலத்தில் தமிழகக் கனவில் மேலும் அளாவி அந்நிலை பெறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். தாய் நிலத் தேசீய மலர்ச்சியைத் தளமாகக்கொண்டு சூழ் திசைச் தேசீயங்களை இயக்கும் ஓருலகப் பொங்குமா வளமைய மாகச் சூயஸும், அதைப்போலவே பனாமாவும் மிளிரும் நாள் தமிழகம் அரைத் துயிலொழிந்து முழு விழிப்படையும் நாளாகவே அமையும் என்னலாம். * * * மனித இன வாழ்விலும் வரலாற்றிலும சூயஸும் பனாமாவும் இரண்டு தனித்தனி உயிர் மையங்கள் மட்டுமல்ல. அவை நெருங்கிய தொடர்புடைய உயிர்மையங்கள். ஒன்று இந்தியாவுக்கு வரும் கீழ்த் திசை வழியின் உயிர்ப் பொருத்தாகவும், மற்றது இந்தியாவுக்கு வரும் மேற்றிசை வழியின் உயிர்ப் பொருத்தாகவும் மனித இனக் கனவில் கருவுயிர்த்தன என்பது இதனை வலியுறுத்திக் காட்டும். இரு திசைகளிலிருந்தும் தமிழகத்தை ஆவி அணைக்க எழுந்த உலகின் இரு கைகளின் மையப் பூட்டுக்களாக,அல்லது தமிழகம் உலகை ஆவி அணைக்க எடுத்த இருகைகளின் உயிர்ப்பூட்டுக்களாக அவை திகழ்கின்றன. இரண்டும் ஒரே ஓருலக உயிர் மண்டலத்தின் இரு பாதிகளின் மையங்கள், தமிழகம் அம்மையங்களின் இணைப்பு என்னலாம். பனாமா, ஜிப்ரால்ட்டர், சூயஸ், ஏடன், தமிழகக் கடலிடுக்கு, சிங்கப்பூர் - உலக நடுவூடாகச் செல்லும் உயிர் மண்டலத்தின் கணு மையங்கள் இவை. வரலாற்றில் இயல்பாக மனித இன நாகரிகம் வளர்த்த உயிர் மண்டலம், கடல்வழி மரபையும் நாகரிகத்தையும் உலகெலாம் பரப்பிய இனங்களின் தாயகங்களை இணைக்கும் நாகரிக மண்டலம் இதுவே. நில வழியிலும் கடல் வழியிலும் வான் வழி.0யிலும் உலகின் இயல்பான மைய மண்டலமும், கதிரவனை நோக்கியவாறே நிலவுலகம் சுற்றும் கதிர்வழி மண்டலமும் இதுவே. கடல்வழி செல்பவர் இம்மண்டலத்தினூடாகச் செல்லாமல் தடுத்து வந்த இருநில இடுக்குகள் சூயஸ், பனாமா ஆகியவையே - இயற்கை யுணர்வால் உந்தப்பட்டு, ஓருலகக் கனவால் இயக்கப்பட்டு மனிதன் இவ்விரு தடைகளையும் அகற்றிக் கடல் வழியிலேயும் இவ்வுயிர் மண்டலத்தைத் தங்கு தடையற்ற போக்குவரவுக் குரியதாக்கியுள்ளான். இக்கடலிணைப்புக்கள் மூலம் பண்டை நாளில் கடல் வழி நாகரிகம் வளர்த்த இனத் தாயகங்கள் மீண்டும் உலகின் கடல் வழி மையங்கள் ஆகி வருகின்றன. அந் நாகரிகங்களுள் ஒன்றாய், அவற்றின் உயிர்மையமாய், அவற்றுள் மூவா இளநலமடைய முதல் நிலமாய் விளங்கும் தமிழகத்துக்கும் உலகுக்கும் மீண்டும் புது மலர்ச்சி ஏற்படும் என்பதற்கு இது ஒரு முன் அறிகுறி யாகும். தமிழகக் கடலிடுக்கு இராமாயணக் கனவுடன் தொடர் புடையது. அதனை நினைவூட்டும் வகையில் அதனை ஆழ்கடற் கலங்குகளுக்குரிய வழியாக்குவதற் கான இன்றைய கனவுத் திட்டம் ‘சேது மாகடல் திட்டம்’ என்று குறிக்கப்படுகிறது. உயிர் மண்டலத்தின் உயிர் மையத்துககுரிய இவ்வெதிர் காலத் திட்டம் சூயஸ் இணைப்புக்கும் பனாமா இணைப்புக்கும் இணை மையமாவதுடன், உயிர் மண்டலத்துக்கும் புத்துயிர் ஊட்டும் என்னலாம். நாகரிக உலகின் நடுக்கடல் நடவுலகக் கடலானால், அதன் நடு மாகடல் இந்து மாகடல் என்று இன்று அழைக்கப்படும் குமரி மாகடலே. அதன் மகுடமென்றும் மகுட மணி என்றும் தமிழகமும் இலங்கையும் அணிந்துரைக்கப்படுவதுண்டு. சேது மாகடல் திட்டம் சூயஸ், பனாமாத் திட்டத்துக்குப் புதுவளம் தருவதுடன், இந்த இருநிலங்களுக்கும் நாகரிக உலகிலே அந்த அணிந்துரையை வாய்மொழி உரையாக்கும் என்று நம்பலாம். அப்பாத்துரையம் - 10 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  குடியாட்சி  ஐக்கிய நாடுகளின் அமைப்பு  இரு கடற்கால்கள் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 10 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+392 = 408 விலை : 510/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 408  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் குடியாட்சி 1. ஆட்சி முறையின் தோற்றம் ... 3 2. ஆட்சி வகைகள் ... 19 3. பழங்கால ஆட்சி வகைகள் ... 27 4. பண்டைய அரசியல் முறைகள் ... 34 5. ஆங்கில நாட்டு அரசியல் புரட்சி ... 43 6. அமெரிக்கநாட்டு அரசியல் வளர்ச்சி ... 85 7. ஐரோப்பிய ஆசிய நாடுகளின்- அரசியல் வளர்ச்சி... 95 8. பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள் ... 110 9. தற்கால இந்திய அரசியல் முறையும் - அரசியல் இயக்கங்களும் ... 116 10. உருசியப் பெருநாடும்- பொதுஉடைமை ஆட்சியும் ... 134 11. தமிழ்நாட்டிற்கான படிப்பினைகள் ... 147 ஐக்கிய நாடுகளின் அமைப்பு முகவுரை ... 158 1. தோற்றுவாய் ... 160 2. ஐ.நா. அமைப்பின் தோற்றம் ... 177 3. நோக்கமும் கோட்பாடுகளும் ... 194 4. ஆக்கமும் செயல் முறைகளும் - ஐ ... 214 5. ஆக்கமும் செயல் முறைகளும் - ஐஐ ... 228 6. இணைப்பமைப்புகள் ... 239 7. அமைப்பின் வருங்காலம் ... 253 இரு கடற்கால்கள் 1. ஓருலகச் சாதனைகள் ... 275 2. சூயஸ் கடற்கால் வரலாறு ... 291 3. சூயஸ் திட்ட முதல்வரும் திட்டமும் ... 308 4. எகிப்தின் புதுவாழ்வு ... 333 5. புத்துலகக் கனவு ... 354 6. பனாமாத் திட்ட மறுமலர்ச்சி ... 367 7. பொங்கு மாவளம் ... 387