kiwkiya«-- 10 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சங்க இலக்கிய ஆய்வு- 2  முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்  திருக்குறள் ஆராய்ச்சி ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+304 = 328 விலை : 410/- மறைமலையம் - 10 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 24339030 தொ.பே. 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி ர் எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு ர் படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்திரா அட்டை வடிவமைப்பு : கவிபாஸ்கர் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப் பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் 1972இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... சென்னை மாநிலத் தமிழர் மாநாட்டின் புலவர் பேரவையில் அவைத்தலைவராயிருந்து திருவள்ளுவராண்டு 1964 வைகாசித் திங்கள் 29 ஆம் நாளில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவே இந்நூல் அடிப்படையாகும். தமிழகத்தின் தனிச்சிறப்பும், தமிழின் இயலமைப்பும், தமிழர் தம் மெய்ம்மை விழையும் மேன்மையும், தமிழ்ப் புலவோர் தன்மையும், தமிழக மன்னர் மாண்பும், தமிழ்ப் பண்பாடு உலகளாவிய செய்தியும், பொய்மை யாளரின் பொல்லாங்கும், அயல் மொழி ஆர்வலர்களின் பொய்மைப் புனைவுகளுங் காட்டித் தமிழர்தம் கடமையுணர்த்தித் தமிழையும் தமிழரையும் மேலுமுயரச் செய்யும் உயரிய ஆய்வு நூலாக இது விளங்குகிறது. தம் முன்னோரின் நிலையுணர்ந்து அவ்வுணர்வால் நிகழ் கால வாழ்வினைச் சீர்திருத்தி, வருங்கால வாழ்வில் வளம் பெற இந்நூல் வழி வகை செய்கிறது. தமிழ் நாகரிக வளர்ச்சி பற்றிய வரலாற்றையும் இந்நூல் வழி அறிகிறோம். - நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின் இலக்கிய படைப்புகள் முன்னுரை திருவள்ளுவர் ஆண்டு 1964 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் திருநெல்வேலி மாநகரிற்கூடிய சென்னை மாகாணத் தமிழர்மாநாட்டின் புலவர் பேரவையில் யாம் அவைத் தலைவராய் நின்று நிகழ்த்திய சொற்பொழிவையே பின்னர் மிக விரித்தெழுதி முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் இந் நூலாக வெளியிடலானேம். இடையிடையே வெளியூர் களிற் கூடும் அவைகளை நடத்துதற்குப் போய் வந்தமையாலுஞ், செந்தமிழ் மொழியிலுஞ் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலக மெங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒரு கால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலாலும், இவற்றிடையே எம்முடைய பல புதிய தமிழ் நூல்களையுஞ் செலவாய்ப்போன பல பழைய தமிழ் நூல் களையும் அச்சிடுவித்துவருதலாலும், இவற்றின் பொருட்டு இரவு பகல் ஓவாது பற்பல நூல்களை ஆராய்ந்து வருதலாலும், பலதிறத்தவான இந் நன்முயற்சிகளினூடே உடம்பு நலங் குன்றிப் பின்னரது முன்போல் மீண்டு நன்றாதற்குப் பல நாட்கள் கழிதலாலும், இந்நூல் இடையிடையே விட்டு விட்டெழுதி முடிவுபெறுதற்கு இரண்டாண்டுகளும் மூன்று திங்களும் ஆயின. முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ்மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப், பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்துவந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்ணையும் விளங்க விளக்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாகத், தோன்றிய தமிழ்ப் புலவர்களோ பெரும்பாலுந் தம்முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப், பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களொடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல் லாதனவும் முழுப் பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய் வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ் விருதிறமும் பிரிந்து நனிவிளங்க விளக்கிக் காட்டினாலன்றி, இனித் தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம்படுத்தாரெனக் கருதியே இந் நூலை இயற்றலானேம். இதனைப் பயில்வார் பண்டைத்தமிழ் நல்லிசைப் புலவரின் அளக்கொணா மாட்சியும் மெய்வழக்கும் நன்கறிந்து, அவர் ஒழுகிய மெய் யொழுக்கத்தையே கடைப் பிடித்துத், தாம் மிக்குயர்வதொடு, தமிழையுந் தமிழ்மக்களை யும் மிக்குயரச் செய்வார்களாக! பல்லாவரம் பொதுநிலைக் கழகம் திருவள்ளுவர் யாண்டு, 1967 மறைமலையடிகள் ஆவணி 16 பொருளடக்கம் பக்கம் 1. மக்களின் முக்காலவுணர்வு 7 2. தமிழ் மக்களின் பண்டை நாகரிகம் 12 3. பணிகர் ஆரியர் அல்லர், தமிழரே 17 4. புலவர்களே நாகரிகத்திற்குத் தாயகம் 23 5. பண்டைப்புலவர் தமிழ் ஓம்பினமை 29 6. பண்டைப்புலவர் முப்பால் ஒழுக்கம் ஒம்பினமை 34 7. பொருளற வொழுக்கம் 40 8. அரசர்க்குரிய கடமை 73 9. குடிமக்கட்குரிய கடமை 75 10. புலவர்தம் இனிய இல்லற வாழ்க்கை 82 11. புலவர்தம் பரந்த தூய துறவுள்ளம் 91 12. பின்றைத் தமிழ்ப்புலவர் 102 13. தமிழாசிரியர் ஆரியத்தில் ஆக்கியவை 106 14. பிற்காலத் தமிழ்ப்புலவர் 125 1. மக்களின் முக்காலவுணர்வு முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலையினையும் பிற்காலத் துள்ள தமிழ்ப்புலவர் நிலையினையும் ஒப்பிட்டுப் பார்த்தாலன்றி, இனிவருந் தமிழ்ப்புலவர் தமது நிலையினை மேன்மேல் உயரச் செய்தலும், இத் தமிழ்நாட்டின்கண் உள்ள கல்வியறிவில்லாத் தமிழ்மக்களைக் கல்வியறிவில் உயர்த்து தலும் ஏலா. ஆதலால், முன்பின் என்னுங் கால வேறுபட்டால் நிலையும் வேறுபட்டுள்ள இருவேறு தமிழ்ப் புலவரின் தன்மை களை ஆராய்ந்துபார்த்தல் புலவர்க்கேயன்றித் தமிழ்மொழிப் பயிற்சியினை வேண்டுவார் அனைவர்க்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது. மேலும், இப்போதுள்ள நிலையளவில் அமைதி பெற்றிருப்பது பெரும்பாலும் விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றது. பசியெடுத்தவுடனே இரை தேடித் தின்பதும், பசி தீர்ந்தவுடன் உறங்குவதுங், காமவிருப்பு மிகுந்தக்கால் ஆணும் பெண்ணுமாய் மருவி யின்புறுவதும், அங்ஙனம் மருவுதலாற் பிறக்கும் இளங்குழவிகளை அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பருவம் எய்துந்துணையும் வளர்த்து அதன்பின் அவற்றொடு தொடர்பின்றி யொழுகு வதும், விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவ்வளவுக்குமேல், அவை தம்முடைய முற்கால நிலைமை யினை இப்போதுள்ள நிலைமையுடன் இணைத்துப் பார்த்து, இனிவருந் தமது எதிர்கால நிலைமையினை ஒழுங்குசெய்து கொள்ள வல்லன அல்ல. ஆனால் மக்களினும் தாழ்ந்த சிற்றுயிர்களில் எறும்பு தேனீ முதலான சில சிற்றுயிர்களோ தமது பிற்கால நிலைமையினையும் உணர்ந்து அதற்கேற்றபடி தமது நிகழ்கால முயற்சியினை இசைத்து நடக்குந் தன்மைய வேனும், அவை அங்ஙனஞ் செய்வதூஉந் தமக்குள்ள இயற்கை யுணர்ச்சியினால் அல்லாமற் பகுத்துணர்ச்சியினால் அன்று. ஆனால், மக்களோ உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறல் என்னும் நிகழ்கால நுகர்ச்சியளவில் அமைதி பெறாது தாமுந் தம்மைச்சார்ந்தாரும் நண்பரும் பகைவருமென்னும் இவரெல்லாம் முன்னிருந்த நிலமையினை எண்ணிப்பார்த்து, அதற்கும் இப்போது நடைபெறாநின்ற தமது நிகழ்கால வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினையுந் தொடுத்தாராய்ந்து, இனி வரக்கடவ தாகிய தமது எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டுங் கருவிகளையும் இப்போதே தேடிப்பெற்று, அவ்வெதிர்கால வாழ்க்கையைக் குறியாக வைத்தே தமது நிகழ்காலமுயற்சியினை நடைபெறச் செய்கின்றனர். இருந்தவாற்றால், மாபெருங்கடல் ஒன்றிலே யுள்ள மலைகளையும் மணல்மேடுகளையும் மிகுவிரைவாய்ப் பேராற்றலுடன் செல்லும் நீரோட்டங்களையும் மென்காற்றும் புயற்காற்றும் வீசும் பருவங்களையும் கோள்கள் நாள்களின் இயக்கங்களையுந் தான் செல்லும் நாடு நகரங்களின் இருப்புக் களையும் முன்னதாக நன்கறிந்த மீகாமன் ஒருவனே அதன்கண் இப்போது தான் கொண்டு செலுத்தும் மரக்கலத்தினைச் செவ்வனே செலுத்த வல்லனாவனல்லது, அவைதம்மை முன்னறியாப் பேதையொருவன் அதனை அதன்கண் நடத்த மாட்டுவனோ? அதுபோல, இவ்வுலகவாழ்க்கை யென்னும் மாபெருங்கடலிலே தமது உயிர்வாழ்க்கை யென்னும் மரக்கலத்தினை நடத்தலுறும் மக்கள் ஒவ்வொருவரும், தமது வாழ்க்கைக்கு இசைவான காலம் இடங் கருவிகளையும் அதற்கு மாறான காலம் இடங் கருவிகளையும், தம்மோடு ஒத்த தொடர்புடை யாரையுந் தமக்கு மாறாய்நிற்கும் பகைஞரையும், தமக்கு ஒத்தாரைத் துணைக்கொண்டு அல்லாரை விலக்கி யொழுகும் வகைகளையும் முன்னறிந்து, தமது வாழ்க்கை எதன் பொருட்டு நடைபெறுகின்றது? அஃது எதன்கட் சென்று எவ்வாறு நிலைபெறும்? என்னும் வருங்கால உணர்வினையும் உடையராயினல்லது, அவர் தமது வாழ்க்கையினை அறிவும் பயனும் இன்பமும் மேன்மேற் பெருக நடத்த மாட்டுவாரல்லர். செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கை யுடன் பிணைத்துப் பார்க்கவும், பார்த்து அதனை அவற்றிற்கேற்ப நடைபெறு விக்கவும் வல்ல தகுதி மக்களுக்கேயல்லாமல், மக்களல்லாத விலங்கினங் கட்கும் அவற்றினுங் தாழ்ந்த பிற சிற்றுயிர்கட்கும் பெரும்பாலும் இல்லையன்றோ? அத்தகைய தகுதியிருந்தும், அதனைப் பயன் படுத்தும் அறிவும் முயற்சியும் இல்லாதவர் மக்களெனப் படுவரோ? உணர்ந்து பார்மின்கள்! செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து, அதனை மேன்மேற் பெருகும் அறிவாலும் மேன்மேன் முறுகும் முயற்சியானுந் திறம்பட நடாத்துவாரே, அதனை அங்ஙனம் நடாத்தாத ஏனை மக்களினுஞ் சிறந்த நாகரிவாழ்க்கை வாய்ந்தவராய்த், தாமுந் தாம் பிறந்த மக்கட்கூட்டமும் எல்லா நலங்களிலும் எல்லா ஆற்றல்களிலும் மிக்குயர்ந்து, அங்ஙனம் உயரமாட்டா ஏனைமக்களை யெல்லாந் தம் அடிக்கீழ்ப்படுத்து இனிது வாழக் காண்கின்றோம். எனவே, தாம் பிறந்த மக்கட் குழுவின் முன்னோர் இருந்த நிலையினை நன்காராய்ந்து காண்டலும் இனித் தாம் அடையப்போகும் நிலையினை முன்னாய்ந்து தெளிதலுந், தான்நின்ற நிலையில் நின்றே முன்னும் பின்னும் நோக்கும் அரிமாவையொத்த உரவோரின் மாண்டகு செயல்களாதலும், அங்ஙனம் முன்பின் நோக்காது பிறரைச் சார்ந்து அவர் தருவன பெற்று உண்டு உடுத்து உறங்கி உறுவதுநினையாது கழிதல் நரிமாவையொத்த இரவோரின் இழிதரு செயல்களாதலும் நன்கு பெறப்படும். பெறப்படவே, முன்பின் நோக்கி இம்மை மறுமைக்காவன செய்யாதவர், கல்வியில் மிக்கவரேயாயினுஞ் செல்வத்திற் சிறந்தவரே யாயினும் நிலைகளில் உயர்ந்தவரேயாயினும், அவரெல்லாம் உண்டு உறங்கி இன்புற்றுக்கழியும் விலங்கின்வாழ்க்கை யுடைய ராயிருத்தலால் அவரை அவ்விலங்குகளோடு ஒத்தவராக வாதல், விலங்கு கட்கில்லாப் பகுத்தறிவு தமக்கிருந்தும் அதனைப் பயன் படுத்தாமையின் அவ்விலங்குகளினும் கடைப்பட்டவ ராகவாதல் வைத்துவிடுதலே செயற்பாலது. இனி, முன்பின் நோக்கித் தமது வாழ்க்கையைச் சீர்திருத்தி நடத்தல் மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்க்கே வாய்த்த பெரும் பேறாயினும், அப் பேற்றினைப் பயன்படுத்தி மேன்மேல் உயர்வார் சிறு கூட்டத்தவராகவே காணப்படுகின்றனர். அச் சிறு கூட்டத்தவருள்ளுந், தம் முன்னோரின் பழங்குடி வாழ்க்கையின் வரலாறுகளை யுணர்ந்து அவை விழுமியவாய் இருத்தலின் அவற்றாற் பயன்பெறுவார் மேலுஞ் சிறு பகுதியினராயுந், தாம் அறியப்புகுந்த தம் முன்னோரின் வாழ்க்கைநிலைகள் சிறந்த வல்லாமையின் அவற்றாற் பயன்பெறாதவர் பெரும்பகுதி யினராயும் இனித் தம்முன்னோர் எவ்வகையாலுஞ் சிறந்திலாமை யினாலும் அவரது வாழ்க்கையின் இயல்புகளை யுணர்தற்கு எத்தகைய கருவியும் வாய்த்திலாமை யினாலும் அவற்றை அறியப் புகுந்து ஏமாற்றம் அடைந்தவர் இன்னும் பெரும்பகுதியினராயுங் காணப்படுகின்றனர். இங்ஙனம் நால்வேறுவகைப் பட்ட மக்கட் குழுவினரையும் இவ் விந்தியநாட்டகத்தும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் இன்றுங் காணலாம். அவருட் சிலரை இங்கெடுத்துக்காட்டுவோம். தம்முன்னோரின் நிலைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து, தமது இம்மை வாழ்க்கையைச் சீர்திருத்தி, மேன்மேல் உயர்ந்து வருங் குழுவினர் ஆங்கில நன்மக்களாகவே காணப்படுகின்றனர். இனித், தம் முன்னோரின் வரலாறுகளை ஆராயப்புகுந்து அவை சிறந்தனவாயிருத்தலின் அவற்றோ டொப்ப வாழ்க்கை செலுத்திப் பயன்பெறுஞ் சிறு குழுவினர் நம் தமிழ் மக்களுள்ளேயே ஆங்காங்குச் சிதர்ந்து காணப்படுகின்றனர். இனி, இஞ்ஞான்றை இந்திய மக்களிற் சிறு சிறு கூட்டத்தினராய் ஆங்காங்கு உயிர்வாழ்குவார் பலருந் தம்மை ஆரியரெனக் கருதித், தம்முன்னோரின் வாழ்க்கை இயல்புகளைப் பெரிது ஆராய்ந்தும், அம் முன்னோர் ஆற்றிய வேள்விகள் பல்லுயிர்க்கொலையுஞ் சோமப்பூண்டை நறுக்கிப் பிழிந்து ஆக்கிய கட்குடியும் பலவேறு சிறு தெய்வவணக்கமும் வாய்ந்தனவா யிருத்தலாலும், அவர் கட்டிய மிருதி நூற்கோட்பாடுகளைத் தழீஇ நடந்தால் இஞ்ஞான்றை உயிர் வாழ்க்கை தமக்கு இனிது நடவாதெனக் கண்டமையாலும் அவை தம்மைப் பெரும்பாலுந் தழுவி நடவாதவராகவே காணப்படுகின்றனர். இனித், தெலுங்கர் மலையாளர் கன்னடர் முதலான பண்டைத் தமிழ் மக்கட் பகுப்பினர், தம்முன்னோர் அறுநூறு எழுநூறு ஆண்டுகட்குமுன் எத்தகைய வாழ்க்கை செலுத்தினர், அவர் எவ்வெந்நூல்கள் எழுதிவைத்தனர் என்று ஆராய்ந்து பார்த்தும், அவ் வாராய்ச்சியாற் றம் முன்னோரைப்பற்றிய குறிப்பு ஏதுமே புலனாகாமையின் அவரெல்லாம் அதில் ஏமாற்றம் அடைந்தவராகவே காணப்படுகின்றனர்; அல்லதூஉம் இற்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்தம் முன்னோர் சிலரும் வடமொழியிலுள்ள மாபாரதம் இராமாயணம் முதலான சில நூல்களை மொழிபெயர்த் துரைத்தவர்களே யல்லாமல், திருக்குறள் நாலடியார் சிலப்பதிகாரம் திருவாசகம் திருக்கோவையார் முதலான தனித்தமிழ் நூல்களைப்போல் எவையுஞ் செய்தவர் அல்லர். ஆகவே, தம் முன்னோரின் நிலைகளை யுணர்ந்து, அவ் வுணர்ச்சி வலியால் தமது நிகழ்கால வாழ்க்கையைச் சீர்திருத்தி, வருங்காலத்தில் தமது வாழ்க்கையை மேன்மேற் சுடர்ந் தொளிரச் செய்யவல்ல தகுதிவாய்ந்தவர் தமிழரும் ஆங்கிலரு மாகவேயிருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்விருவேறு வகுப்பினருள் ஆங்கிலர் தமது வாழ்க்கையைப் பலதுறையிலுஞ் சிறந்தெழச்செய்து, ஏனையெல்லாரிலும் அது மிக்கோங்கி ஒளிவீசத் திகழ்தலால், அவரைப் பற்றி நாம் இங்குப் பேசுதல்வேண்டா. மற்று, நந்தமிழ் மக்களிலோ அவர்போல் மேன்மேல் உயருந் தகுதி வாய்க்கப் பெற்றிருந்தும் அதனாற் பயன்பெறாதாரே மிகப் பலராயும், பயன்பெறுகுநர் மிகச் சிலராயும் ஆங்காங்கு ஒளி குறைந்து மின்மினியெனக் காணப்படுகின்றனர். 2. தமிழ் மக்களின் பண்டை நாகரிகம் இங்ஙனமாக நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் ஏனைப் பண்டை நாகரிக மக்கள் எல்லாரையும்விட அறிவு முயற்சி யிலுந்த தொழின் முயற்சியிலுந் தலைசிறந்து விளங்கின பான்மை, அவர் தம்மில் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்த மேன்மக்கள் இயற்றிய பழைய நூல்களாலுஞ் செய்யுட் களாலும் நன்கு தெளியப்படுதலுடன், அவர்தம் வரலாறுகளை நடுநின் றாராய்ந்து நூல்களை எழுதிய ஆங்கில ஆசிரியரின் உரைகளாலும், நடுவின்றி யாராய்ந்து நூல்கள் வரைந்த நம் இந்திய ஆசிரியர்கள் உரைகளாலுங்கூடத் தெற்றெனப் புலனாகின்றன. கால்ட்வெல் (Caldwell) ஆசிரியர் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே செய்த அரிய பெரிய சொல்லாராய்ச்சி சொற்பொருளாராய்ச்சியின் முடிபாகப், பண்டைத் திராவிடர்கள் எந்தவகையிலும் நாகரிகமில்லாக் கீழ்மக்களாகக் காணப்படவில்லை. கானக வாழ்க்கையிலிருந்த மக்களின் நிலை எத்தகையதாயிருப்பினுந், திராவிடர்கள் என்னும் பெயர்க்கு உண்மையில் உரியோர், தம்மிடையே பார்ப்பனர்கள் வந்து சேர்தற்கு முன்னமே, எவ்வளவு குறைந்த படியாய்ப் பார்த்தாலும் நாகரிகத்திற்கு மூலமானவை யெல்லாம் பெற்றிருந்தன ரென்பதில் ஐயுறுதல் ஏலாது,1 என்று வலியுறுத்திக் கூறினார். இவ்வாசிரியர் பழைய ஈபுருமொழி விவிலிய நூலிற் புகுந்த தோகை, அகில் முதலான தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்ட, அவற்றைக் கண்டு தமிழின் பழமை யுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்மூலர் (Max Muller) இச் சொல்லாராய்ச்சி உண்மை யாகுமானால், ஆரியக்குடியினர் இவ்விந்திய நாட்டுப்புகு முன்னரே, தமிழ்மொழிகள் வழங்கிய பழமையினை உறுதிப் படுத்துதற்கு அது சிறந்ததொரு கருவியாகும்2 என்று உண்மையுரை புகன்றார். இன்னும், இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வடமொழிப் புலமை நடாத்தும் ராப்சன் (Rapson) என்னும் ஆசிரியர், பண்டை ஆரிய மக்கள் இவ்விந்திய நாட்டிற் குடிபுகுந்து பரவிய வரலாற்றினை ஆராய்ந்துரைக்கின்றுழி, இப் பரவுதலானது, சமகிருதமும் அதிற் றோன்றிய மொழிகளும் எவ்விடத்தும் பரவிய அடையாளத்தைக் காட்டுகின்றது. ஆனாலுந், தென்னிந்தியாவிலேதான் அவர் அங்ஙனம் பரவுதல் தடுப்புண்டது; ஏனென்றால், தென்னாட்டிலே ஆரிய நாகரிகத்தினும் பழையவாகிய திராவிட நாகரிகமுந் திராவிட மொழிகளும் இன்றுகாறும் நிலைபெற்றுத் தலைசிறந்து தோன்றுகின்றன. என்றும், எவ்வாற்றானுந் திராவிட நாகரிகமானது, ஆரியர் வருவதற்கு முன்னரே இந்திய நாட்டில் முதன்மையுற்றிருந்தது. திராவிட மக்களிற் பலர் தமக்கு உரியவல்லா ஆரியமொழிகளையும் பிறமொழிகளையும் இப்போது பேசுகின்றனர் என்றும், திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தினையும் ஆரிய மதத்தினையும் பெரிதுந் தம் வழிப்படுத்தி உருவாக்கினர் என்றும் மெய்யுரை பகர்ந்தார்.2 இன்னும், சில்லாண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக் கழகத்திற் பொருணூல் ஆசிரியராய் அமர்ந்து, நம் இந்து மக்களின் வரலாறுகளையெல்லாம் நேரே பலமுகத்தான் ஆராய்ந்து உண்மைகண்டு ஓர் அரிய நூல் ஆங்கிலத்தில் எழுதிய லேட்டர் (Slater) என்பார் ஆரிய திராவிட நாகரிகத்தைப் பற்றிக் கூறவந்துழி, ஆரியர்கள், உழவுத் தொழிலை முற்றுமே அறியாதவர்கள் அல்லராயினும், அவர்கள் இடம் விட்டுப் பெயர்ந்து செல்லும் இடையர் வாழ்க்கையிலேயே முதன்மையாய் இருந்தவர்களென்பது ஐயமின்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதாகும்; ஆனால், திராவிடர்களோ நாம் அறிந்த மட்டில் ஆரியர்களினும் மிக்குயர்ந்த நாகரிக நிலையில் இருந்தவர் ஆவர், என்று முடிபு சொல்லி, அதற்கு அகச்சான்றாக ஆரியமொழியிலுள்ள இருக்குவேதத்திற் பண்டை ஆரியர், தமிழ்மக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும், உரைகளாகிய, இந்திரன் திவோதாசன் பொருட்டாகச் சம்பரனுடைய நூறுகோட்டைகளையுந் தகர்த்தெறிந்தான் இடியேற்றினைச் சுழற்றுவோனான இந்திரனே! நீ புரு குத்ஸன் பக்கத்தினின்று போரியற்றுங்கால் ஏழு நகரங்களை அழித்தொழித்தனை! சுதாசனுக்காக அங்கனுடைய செல்வத்தைத் தொலைத்தனை! ஆரியமகனுக்கு உதவியாய் நீ பிப்ருவின் நகரங்களை உடைத்தெறிந்தனை! தயுக்களுடன் செய்த சண்டையில் ரிஜிவானைப் பாதுகாத்தனை! நீ சுஷ்ணனது செல்வத்தை ஆண்மையுடன் துடைத்து விட்டனை; அவனுடைய கோட்டைகளையுந் தகர்த்து விட்டனை என்பவைகளையும் எடுத்துக்காட்டிக், கோட்டைகளும் நகரங்களுஞ் செல்வச் செழுமையும் நாகரிக மேம்பாட்டினைக் குறித்தற்குப் போதுமானவைகளாகும். மேலுந், திராவிட அசுரர்கள் செல்வவளமும், மந்திர ஆற்றலும், விழுமிய கட்டிடங்கள் அமைக்குந் திறமும், இறந்தவரை எழுப்பும் வன்மையும் பெற்றிருந்தனரென ஸமகிருத நூல்கள் நுவலுதலை ஒல்ட்ஹாம் என்பவரும் எடுத்துரைத்தனர் என்றும் மொழிந்தனர்.1 மேற்காட்டிய மேனாட்டாசிரியர் நால்வரும் ஆரியர் திராவிடர்களின் வரலாறுகளை அகச்சான்று புறச்சான்று களான் ஆழ்ந்தாராய்ந்து, திராவிடநாகரிகமே ஆரியநாகரிகத் தினுஞ் சிறந்ததும் முற்பட்டதும் ஆகும் என நடுநின்று முடித்துக் கூறினமை நினைவிற் பதிக்கற்பாற்று. இனி, நம் இந்திய ஆசிரியரில் தமிழர் ஆரியர் நாகரிக வரலாற்றினை ஆராய்ந்தார் சிலர், தமிழரது நாகரிகம் பழமையானதுஞ் சிறந்ததும் மேனாட்டவர் நாகரிகத்திற்குத் தாயகமாவதுமாமெனக் கிளந்தனரேனும், முடித்துக் கூறுங்கால் அதுதானும் ஆரிய நாகரிகத்தினின்றே பிறந்ததென நடுவின்றியுங் கூறினார். அச் சிலருள், இருக்கு வேதத்தை ஆராய்ந்து இரண்டு விரிந்த நூல்கள் ஆக்கிய வங்காள அறிஞரான அபிநா சந்திரதா என்பார் பின்வருமாறு கூறுகின்றார். சாலடி நாட்டில் தெல்லோகம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளினின்றும் பிரித்தெடுக்கப் பட்ட தலைகளின் அமைப்புந் தென்னாட்டிலுள்ள தமிழர்களின் முக அமைப்பும் வியக்கத்தக்கபடியாய்ப் பெரிது ஒத்திருத்த லாலுஞ் சுமேரியர் வழங்கிய மொழி திராவிட மொழிகளைப் போலவே பகுபத வுறுப்புகள் வாய்ந்திருத்தலாலுஞ், சோழர் களைப்போலவே சாலடியர்களும் உழவுத் தொழிலிற் சிறந்தவர்களாயுங் கால்வாய்கள் அமைப்பனராயும் இருந்தமை யாலுஞ் சோழர்களைப்போலவே அவர்கள் கடன்மேற் செல்பவர்களாயும் வணிகர்களாயும் விளங்கினமை யாலுஞ், சோழர்கள் தாமும் மரக்கலக்கலையையும் வாணிகமுறையையும் பணிகரிடமிருந்து கற்றே கடன்மேற் செலவிலும் ஏனை யெல்லாத் துறைகளிலும் அவர்களை யொப்ப நடந்தமையாலும், ஆசியாப் பெருந் தேயத்தின் மேற்கிலுந் தெற்கிலுமுள்ள எல்லா நாடு களிலுந் தென்னிந்தியக் கடற்கரை மருங்குள்ள நாடுகளுக்கும் பாரசிகக்குடாக் கடலோரமாயுள்ள நாடுகளுக்கும் இடையே தான் பண்டை நாள் வாணிகம் நடைபெற்று வந்தமையாலும், ஆசியாவின் தென்பகுதியிலாதல் ஆப்பிரிக்காவின் கீழ்ப்பகுதி யிலாதல், இந்தியர்களைப்போற் சென்று பாரசிகக் குடாக்கடற் கரை மருங்கிற் குடியேறிய அத்துணை உயர்ந்த நாகரிகமுடைய வர்கள் பிறர் இல்லாமையாலுஞ், சுமேரியர் என்பார் ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றியவர்களே யென்பது மறுக்க முடியாத உண்மையாம். இன்னும், பாபிலோனியர் அசீரியர் என்பாரின் உலகியல் நாகரிகமேயன்றிச் சமயக் கோட்பாடும், ஆரிய நாகரிக சமயக்கோட்பாட்டையுந் திராவிட நாகரிக சமயக் கோட்பாட்டையும் பின்பற்றியவை களேயாகும்1 என்பது. இம் மேற்கோளுரையில், திராவிடநாகரிகமே, மிகப் பழைய காலத்தில் நாகரிகத்தாற் சிறந்து விளங்கிய மேனாட்டவர் நாகரிகத்திற்கெல்லாம் அடிப்படையாய் நிற்கும் உண்மையை மறைத்தல் ஏலாமையின் அதனை விண்டுசொல்லிய நம் அபிநா சந்திரதாஸர் அவ்வளவிலமையாது, தாம் ஏற்றஞ்சொல்ல விழைந்த ஆரிய நாகரிகத்தினையுந் திராவிட நாகரிகத் துடன் கொணர்ந்து ஒட்டவைக்கும் விரகினையுங் காண்மின்கள்! அதுமட்டுமோ! சுமேரியர் முதலான மேனாட்டு நாகரிக மக்கள் அனைவர்க்கும் நாகரிக வாழ்க்கையினைக் கற்பித்தவர்கள், ஆரியர்க்குப் பன்னெடுங்காலம் முன்னே நாகரிகத்திற் சிறந் தோங்கிய தமிழர்களே யெனப் பலவலிய சான்றுகளான் நிலைநாட்டிய ஹால் என்னும் ஆங்கில ஆசிரியரையும் இராகொசின் என்னும் ஐரோப்பிய ஆசிரியரையும் மறுப்பான் புகுந்து, அதற்குத் தக்க வலியசான்றுகள் காட்டமாட்டாது ஆரியரது நாகரிகமே திராவிடரது கலைப்பயிற்சிமேல் அழியாத தனது இலச்சினையைப் பொறித்தது. அதுவே திராவிட மக்களை, முதன்மையாய்ச் சோழ பாண்டியர் களை மேலுயர்த்தியது. பின்னர்ச் சோழ பாண்டியர்கள் சீர்திருத்தப்பட்ட தமது நாகரிக வாழ்க்கையினைப் பாபிலோனிய நாட்டுக்கும் எகுபதி நாட்டுக்குங் கொண்டுபோயினர்2 என்று தாம் பிடித்த பிடியை விடாமற் கிளந்தார். பண்டைத் தமிழர்களே முதன்முதல் நாகரிகத்திற் சிறந்தவராய், ஏனைப் பழைய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்தவராய் இருக்கும் உண்மை வலிய சான்றுகளால் நிலைபெறுதல் கண்டு மனம்பொறாமல், அவரை ஆரியர்பால் நாகரிகங் கற்றவரென்று சொல்லி அவ்வெண்ணத்தை எப்படியாவது உண்டாக்கிவிட்டால், அவ் வெண்ணம் ஆராய்ச்சியில்லார்பால் எங்கும் பரவி, ஆரிய நாகரிகமே உலக நாகரிகத்திற்குக் காரணமாயிற்று என்னும் ஒரு போலிக் கொள்கை பரவிய வழக்காகிவிடுமெனக் கருதிப் போலும் மேற்குறிப்பிட்ட வங்காள அறிஞர் அங்ஙனம் வலிய சான்றுகட்கெல்லாம் மாறுபேசினார்! அற்றேல், அவர் தமது கூற்றுக்குச் சான்று ஏதுமே காட்டிற்றிலரோ வெனின்; நீரில் அமிழ்ந்துவோன் ஒருவன் தன் அருகு மிதந்துசெல்லும் ஒரு வைக்கோற்றுரும்பினைக் கைப் பற்றியவாறுபோல, அவ்வங்காள அறிஞருந் தாம் விழைந்ததனை நாட்டுதற்பொருட்டு, இருக்கு வேதத்திற் சொல்லப்பட்ட பணிகர் என்னும் ஆரிய வணிகவகுப்பினரே சோழ பாண்டியர்க்குக் கடன்மேற் செல்லும் வாணிக வாழ்க்கையினைக் கற்பித்தனர் எனவும், அவ் விருக்கு வேதத்திற் காணப்பட்ட மனா என்னும் எடைப்பெயர் ஆரியமொழிச் சொல்லாதலின் அதனை வழங்கிய திராவிடரும் பாபிலோனியரும் பணிகரென்னும் ஆரிய வணிகரிடமிருந்தே அதனைக் கற்றனரெனவுங் கூறினார். 3. பணிகர் ஆரியர் அல்லர், தமிழரே அபிநா சந்திரதாசர் சிறிதாயினும் நமது தமிழ் மொழியினைக் கற்றிருந்தனராயின் இங்ஙனம் எல்லாம் உண்மைக்கு முழுமாறானவை களைக் கூறி இழுக்குற மனந் துணியார்! அவர் அது கல்லாமையினாலும், ஆரியர்க்கே ஏற்றஞ் சொல்லவேண்டுமென்னும் பற்றுள்ளத்தினாலும் பெரிதும் பிழைபடக் கூறினார். மேலும், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இருக்கு வேதத்தில் ஒரு தினையளவு சான்று தானும் இல்லை. மற்று, அப் பணிகர் என்னும் வணிகக்கூட்டத்தார் ஆங்கீரசர் என்னும் ஆரிய இனத்தார்க்கு முற்றும் பகையானவரென்றும், அக்குழுவிலுள்ளார் அனைவருங் குவியல் குவியலாகப் பொன்னும் எருதுகளும் ஆக்களுங் குதிரைகளும் உடையவர்களா யிருந்தனரென்றும், பணிகர் தமது மலைமுழைஞ்சிலே தொகுத்து வைத்திருந்த சிறந்த செல்வத்தை ஆரிய ஆங்கீரசர் சுற்றிச் சுற்றித் திரிந்து பெரிது முயன்று தேடிக் கவர்ந்து கொண்டனரென்றும், பேரவாவுடைய பணிகர் ஒநாய்களாதலின் அவர்களை அழித்து விடுகவென ஆரியர்கள் விசுவதேவர்களை வேண்டினரென்றும் இருக்கு வேதம் (1, 83, 24, 6, 61, 14) நன்கெடுத்துக் கூறக் காண்டலிற், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கற்பாலதாகும். மேலும், ஆரியர்கள் தாம் உவந்து வழிபடும் பெருந்தெய்வமான இந்திரனை வேண்டும் இருக்குவேத ஆறாம் மண்டிலத்து முப்பத்துநான்காம் பதிகத்தில் (6-34-2) அவ் விந்திரன் பணிகரைத் தன் அம்பினாற் றுளைத்து அவர்களது பொருளைக் கொள்ளை கொண்டமையும் நுவலப்பட்டிருக் கின்றது. இன்னும் இங்ஙனமே பணிகரைப் பற்றிச் சொல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் ஆரியர்க்குப் பகையானவ ரென்றே இருக்குவேத வுரைகள் நுவலக் காண்டுமின்றி, அவர்கள் ஆரியவினத்தைக் சேர்ந்தவர்களென்று ஒர் எட்டுணையேனும் அவை கூறக் காண்கின்றிலேம். உண்மை இவ்வாறிருக்கப், பணிகர் ஆரிய வினத்தவரென்றும், அவரே தமது ஆரிய நாகரிகத்தைத் தமிழர்க்குங் கற்பித்தவ ரென்றும் அபிநா சந்திரதாசர் அதனை முழுதும் புரட்டிக்கூறியது மிகவும் வருந்தற்பாலதா யிருக்கின்றது. பற்றுள்ளம் உடையார் எத்துணைச் சிறந்த அறிவுடையராயினும், அவர் தமக்கு ஆகாத உண்மையினைக் கிளவாது புரட்டிவிடுவ ரென்பதற்கு இவ் வங்காள நண்பர் சான்றாய் நிற்றல் காண்மின்கள்! இனிப், பணிகர் என்பார் ஆரியரல்லராயின் அவர் வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவரென்பது சிறிது ஆராயற்பாற்று. பணிகரென்பார் வாணிக வாழ்க்கையிற் சிறந்தவர்களென்றும், அவர்கள் காலினுங் கலத்தினுஞ் சென்று பெருந்திரளான அரும்பொருள் ஈட்டியவர்களென்றும் அவர்கள் மேனாடுகளிற் சென்று குடியேறி அங்கிருந்த மக்களையெல்லாம் நாகரிகம் அடையச் செய்தனரென்றும், அங்ஙனம் மேனாடுகளிற் சென்று வைகிய பணிகரே பின்னர்ப் பீனிசியர் என வழங்கப்பட்டனரென்றும், இவர்கள் கடல் கொண்டொழிந்த குமரி நாட்டிலிருந்து மேனாடுகளுக்குச் சென்றமையாலுங் குமரிநாடு குசத்தீவு எனப் பழைய புராணங்களிற் சொல்லப் பட்டமையாலும் இவர்கள் குசமக்கள் என ஆரியரால் அழைக்கப்பட்டன ரென்றும், இற்றைக்கு ஐயாயிர ஆண்டு களின்முன் அமைக்கப்பட்டு இப்போது தென் பாபிலோனி யத்தின் கண்ணதான தெல்லோகத்திற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளின் தலைகள் இஞ்ஞான்றை நாட்டுக்கோட்டைச் செட்டிமார் களின் முகமுந் தலையும் போற் செவ்வையாக மழிக்கப்பட்ட வடிவுடன் காணப்படுதலின் அவைகள் பண்டை வணிக மக்களான பணிகரின் வடிவத்தையே குறிக்கின்றன வென்றும் அபிநா சந்திரதாசரும் அவர் தழுவி யெடுத்துக் காட்டிய ஐரோப்பிய ஆசிரியர்களும் ஒருப்பட்டு உரைக்கின்றனர்.1 ஆரியப்பற்றின்றித் திராவிட நாகரிகத்தின் உண்மைகளை உள்ளவாறு ஆழ்ந்தாராய்ந் துரைக்கும் வழியெல்லாம் அபிநா சந்திரதாசரின் ஆராய்ச்சி யுரைகள் பெரிதும் பாராட்டற் பாலனவா யிருத்தலையும் நம்மனோர் கருத்திற் பதித்தல் வேண்டும். இவ்வாறாகப் பல முகத்தானும் நன்காராய்ந்து காணுங் காற் பணிகர் எனபார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமை திண்ணமாய்ப் பெறப்படுவதுடன், அவர்கள் தென்னாட்டின் கட் பண்டைநாட் டொட்டு வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்ந்து வரும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களாகிய தூய தனித் தமிழ்மக்களே யாதலுந் தெளியப்படும். இவர்கள் இருக்குவேதப் பதிகங்கள் இசைக்கப்பட்ட மிகப் பழைய காலத்தே பணிகர் என்னுந் தூய தனித்தமிழ்ப் பெயரால் வழங்கப்பட்டதூஉம் இதற்கொரு பெரு வலிய சான்றாகும். அற்றேற், பணிகர் என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் காட்டுக வெனிற், காட்டுதும். பணிகர் என்பது பண் என்னும் முதனிலையிற் பிறந்தது; பண்ணல் ஆவது ஒரு தொழிலைச் செய்தல்; பணி என்பது ஒரு தொழிலை யுணர்த்தும்; இங்கே கொண்டுவிற்றலாகிய தொழிலே பணியென விதந்து வழங்கப் பட்டது. இஞ்ஞான்றுங் கொண்டுவிற்றல் செய்வாரைத் தொழில் செய்வார் எனக் கூறுப. ஆகவே, பண்டைநாளிற் கொண்டு விற்றலாகிய பணி செய்வார் பணிகர் என வழங்கப் பட்டனர். பணிகர் என்னும் பழைய தமிழ்ச்சொல்லே பின்னர் வணிகர் எனத் திரிந்தது. இங்ஙனஞ் சில தமிழ்க் சொற்களிற் பகரவெழுத்து வகரவெழுத்தாக மாறி நடத்தல், பகுப்பு என்பது வகுப்பு எனவும், பன்றி யென்பது வன்றி யெனவுந் திரிந்து வழங்குதலில் வைத்துக் கண்டு கொள்ளப்படும். இனி, வணிகர் நடத்துந் தொழிலே வாணிகம் என வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாற்றால், இருக்குவேதத்திற் பண்டைத் தமிழ் வணிகர்க்குப் பெயராக வழங்கப்பட்ட பணிகர் என்னுஞ் சொல் தூய தனித்தமிழ்ச் சொல்லேயாதல் கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இது தமிழ்ச் சொல்லாதல் தெரிந்தனராயின், அபிநா சந்திரதாசர், அகச்சான்று புறச்சான்றுகட்கெல்லாம் முழுமாறாகப் பணிகரை ஆரியவினத்திற் சேர்ந்தவராகக் கருதி, அவ்வாரியராற் பண்டைத் தமிழரும், அப் பண்டைத் தமிழராற் பிற நாடுகளிலுள்ளாரும் நாகரிகம் பெற்றனரெனப் பிழைபடக் கூறியிரார். இவ்வொரு சொல்லின் உண்மை யறியாமையின் எவ்வளவு பெரும்பிழை நேர்ந்துவிட்டது பார்மின்கள்! இனிப், பணிகர் வழங்கிய மனா என்னும் நிறுத்த லளவைச் சொல், இருக்குவேத எட்டாம் மண்டிலத்து அறுபத்தேழாம் பதிகத்திற் (8-67-2) குறிப்பிடப்பட்டிருத்தல் கொண்டு அதனைத் தாசர் ஆரியமொழிச் சொல்லென்றதூஉம் பொருந்தாவுரையாம். இவர்க்கு முன்னரே இச்சொல்லை யாராய்ந்த ஆசிரியர் மாக்மூலர், இச் சொல் இருக்கு வேதத்தில் இவ்வோரிடத்தே தவிர வேறு எங்குங் காணப்படவில்லை யென்றும், வடமொழியிலுள்ள வேறெந்த நூலிலுங்கூடக் காணப்படாத இஃது இலத்தீன் கிரேக்கம் பினீசியம் முதலான மொழிகளிலெல்லாம் ஒரு நிறையளவுப் பெயராகவே வழங்கப்படுகின்றதென்றுங் கூறினாரேனும்,1 இவ்வொரு சொல்லை மட்டும் ஆரிய மொழிப் புலவர் பாபிலோனி யரிடமிருந்து பெற்று வழங்கினாரென்றல் இசையாதென்றும் மொழிந்தனர். ஆனால், இராகொசின் என்னும் ஆசிரியரோ, இச்சொல் பழைய சாலடி நாட்டிலும் பாபிலோனிய நாட்டிலும் பண்டை நாளில் வழங்கப் பின்னர்க் கிரேக்க மொழியிற் புகுந்து அதன்பின் இலத்தீன் மொழியிலும் வழங்கலாயிற்றெனவுங், தென்றமிழ் நாட்டின் மலை நாட்டோரத்திலன்றி இந்தியாவில் வேறெங்கும் வளராத தேக்குமரத்தின் துண்டம் ஒன்று இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் சாலடிநாட்டில் ஊர் என்னும் இடத்தில் எடுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் கணிருந்து கண்டெடுக்கப்பட்டமையாலும், பண்டைப் பாபிலோனியர் பிறநாடுகளிலிருந்து தம்மூர்க்குக் கடல்வழியே வந்த பண்டங்களைக் குறிக்கும் பெயர்கள் பெரும்பாலுந் தமிழ்ச் சொற்களாகவே யிருத்தலால் அப் பண்டங்களை மரக்கலங் களில் ஏற்றுவித்துவிட்ட துறைமுகமுந்1 தமிழ்நாட்டின் கண்ணதாகவே யிருத்தல்வேண்டு மாகையாலும், பண்டைத் தமிழ் மக்களைத் தவிரப் பிறரெவருங் கடல்வழியே மரக்கலம் ஊர்ந்துபோந்து மேனாடுகளில் வாணிகஞ் செய்வதில்லாமை யாலும், மனா என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டுமெனக் கருதினார்2. இவ்வாசிரியர் கருதிக் கண்டமுடிபே உண்மை முடிபாகும். மனா என்னுஞ் சொல், மாக்மூலர் மொழிந்தவாறு பாபிலோனி யரிடமிருந்து ஆரியர் எடுத்த தொன்றாதல் இசையாது; ஏனென்றால், ஆரியர்க்கும் பாபி லோனியர்க்கும் இடையே அஞ்ஞான்று வாணிகம் நடந்ததே யில்லை. மேலும், அவ் விருவரும் எட்டாத்தொலைவிலுள்ள நாடுகளில் இருந்தவர் ஆனாற், பணிகர் என்னுந் தமிழ்மக்களோ, அப் பழைய நாளில் இவ்விந்திய நாட்டகத்தே ஆரியர் வருதற்கு முன்னரே செழுமையாயிருந்து, விருந்துவந்த ஆரியரின் நல்லாரை வரவேற்று அவர்க்கு வேண்டும் உதவிகளெல்லாஞ் செய்து, ஒரோவொருகால் அவ்வாரியராற் புகழ்ந்தேத்தப் பட்டவர்களாவரென்பது, இருக்குவேத ஆறாம் மண்டிலத்து நாற்பத்தைந்தாம் பதிகத்தால் (6-45-1) நன்கு விளங்கா நிற்கின்றது. ஆகவே, மனா என்னுஞ் சொல்லை, ஆரியர்கள், இராகொசின் ஆசிரியர் கருதியவாறு, தம்மை விருந்தோம்பித் தமக்குப் பொற்றிரள் வழங்கிய பணிகராகிய தமிழ்வணிக ரிடமிருந்தே பெற்று வழங்கினாரென்பது சிறிதும் ஐயுறவின்றித் துணியற் பாலதாயிருக்கின்றது. நன்று, அங்ஙனம் மனா என்பது தமிழ்ச்சொல்லாயின், அது தமிழ் வழக்கிற் காணப்படுதல் வேண்டுமாலெனின்; வேண்டும்; தமிழ்மக்கள் அல்லாதார் வாயில் மனஃ, ம்னா, மின, மனா எனச் சிதைந்து தோன்றிய சொல்லே, தனித் தமிழ் மக்கள் வாயில் மணங்கு எனத் திருத்தமாகத் தோன்றி இன்றுகாறும் வழங்கிவரா நிற்கின்றது. எட்டு வீசை கொண்டதோர் எடையை மணங்கு என இஞ்ஞான்றைத் தமிழ் வணிகர் மிகுதியாய் வழங்கி வருகின்றனர். பண்டைக்காலத்திருந்த வணிகர் எட்டுவீசை கொண்ட எடைக்கே அதனை வழங்கினரோ, அல்லததனிற் குறைந்த எடைக்கே அதனை வழங்கினரோ, இதுதான் என்று தெரிதற்குக் கருவியில்லை. அஃதெவ்வாறா யினும், மணங்கு என்பது ஒரு நிறுத்தலளவைக் குறிக்குங் தூய தமிழ்ச் சொல்லே யாதலும், பண்டைத்தமிழரொடு வாணிகம் நடாத்திய பண்டை மேனாட்டுமக்கள் அனைவரும் அதனைத் தமிழரிடமிருந்து கற்றே தாமும் அதனை நெடுக வழங்கினாராதலும் மறுக்கப் படாத உண்மைகளாமென்பது. இங்ஙனமாக மணங்கு என்பது தூய செந்தமிழ்ச் சொல்லாதலும், அது பண்டை ஆரியர் வாயில் மனா எனத் திரிந்து வழங்கியதாதலும் அபிநா சந்திரதாசர் சிறிதாயினும் அறிந்திருந்தனராயின், அதனை ஆரியச் சொல்லெனப் பிழைபடக் கொண்டு ஆரியநாகரிகமே ஏனை யெல்லா நாகரிகத்திற்கும் பிறப்பிடமா மெனக் கூறி யிழுக்கி இரார். பார்மின்! செந்தமிழ் உணர்ச்சி பெறாமையால் தமிழர் ஆரியர் வரலாறுகளை எழுதுவோர் எத்துணைப் பிழை பாடானவைகளை எழுதி உண்மையைப் பாழ்படுத்து கின்றனர்! அது கிடக்க. இனி, இவ்வாறு உலகமெங்கணும் நாகரிகத்தைப் பரவி விளங்கச்செய்த பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேராதவராய், ஆரியராற் பெரும்பகைவராகக் கருதப்பட்ட பண்டைத் தமிழ்மக்களில் வணிகவகுப்பைச் சேர்ந்தவராய்த், தமது வாணிக வாழ்க்கையிற் பயன்படுத்திவந்த பல அளவைச் சொற்களில் மணங்கு என்பதனை ஆரியர்க்கும் பிறர்க்குங் கற்பித்தவரென்பது பெறப்படவே, பண்டைநாளில் தமிழுந் தமிழ் நாகரிகமுமே உலக மெங்கணும் பரவி, ஏனை மக்கள் எல்லாரையும் நாகரிகத்தில் ஓங்கச்செய்த வாய்மையுந் தானே பெறப்படும். இவ்வுண்மையை முன்னரே நன்கு தெளியக் கண்டன்றோ நந்தமிழ்மக்களில் முதலாராய்ச்சிப் பேரறிஞராய்த் திகழ்ந்த சுந்தரம்பிள்ளை யவர்கள் தமது மனோன்மணீய நாடகத் தமிழ்த் தெய்வவணக்கத்திற், சதுமறை யாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே என்று இனிது இசைத்தார்? 4. புலவர்களே நாகரிகத்திற்குத் தாயகம் இனி, இதுகாறும் எடுத்து விளக்கியவாற்றாற் பண்டைத் தமிழ்மக்களே ஏனைப் பழையமக்கள் எல்லாரையும் விட முதன் முதல் நாகரிகத்தில் மிக்காராய்த், தாம் கற்ற நாகரிகவாழ்க்கை முறைகளைப் பிறர்க்கெல்லாங் கற்பித்தவரென்பது போந்ததாகலின், அத்தகைய தமிழ்மக்கள் அங்ஙனம் நாகரிகத்தில் முதன்மைபெறலானது யாங்ஙனம் என்பதனைச் சிறிது ஆராய்வாம். பழையநாள் மக்கள் வேட்டுவ வாழ்க்கையிலும், ஆடுமாடு மேய்க்கும் மேய்ப்பர் வாழ்க்கையிலும் இருந்தவரையில், தமக்கு உணவாக விலங்கினங்களைத் தேடித் திரிவதிலுங், தமக்குந் தாம் மேய்க்கும் ஆடுமாடுகளுக்கும் வேண்டும் பயறுகளையும் புல் நிலங்களையுங் தேடித்திரிவதிலுமே காலங்கழித்துவந்தமையின், அவர்கள் நாகரிகம் எய்துதற்கு வாயில் இல்லாமலே போயிற்று. ஆனால், அவர்களிற் கூர்த்த அறிவும் ஆராய்ச்சியும் உடையார் சிலர், அவ் விருவகை வாழ்க்கை நிலையுங் கடந்து, நிலத்தைக் கிண்டிக்கிளறி விதைகள் விதைத்து அவை ஒன்று பல்லாயிரமாய்ப் பயன்றரும் உழவுதொழிலைக் கண்டறிந்து, அதனை நன்கு நடாத்தும் முயற்சியும் உடையரான பின்னரே, இடம் இடமாய் அலைந்து அல்லற்படும் நிலையா வாழ்க்கையொழிந்து, சிற்சில வளவிய இடங்களில் நிலைபெறத்தங்கி இனிது வாழும் நிலையும் வாழ்க்கை உளதாயிற்று. இவ்வாறு உழவுதொழில் நாகரிக வாழ்க்கைக்கு முதற்பெருங் காரணமா யிருத்தல்பற்றியே ஆசிரியர் திருவள்ளுவர், சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் என்றும் உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும், பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர் என்றும் அருளிச் செய்தார். இனி, நன்செய் புன்செய்ப் பயிர்கள் மிகுதியான விளைபொருள்களைத் தர அவற்றை விளைத்த வேளாளர் தாம் அவற்றைப் பகுத்துண்டு, மிஞ்சிய பொருள்களைப் பிறர்க்கு விலைசெய்து, பிறரிடமுள்ள அரிய பண்டங்களைத் தாம் விலைகொண்டு, இங்ஙனமாக அவர்கள் விற்றல் வாங்கல் செய்யப் புகுந்த காலந்தொட்டு வாணிக வாழ்க்கை உளதாயிற்று. இவ்வாறு மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையா உழவு வாணிகம் என்னும் இருதொழிலும் பெருகவே, இவை தமக்கு உதவியாக வேறு பதினெண் கைத்தொழில்களும், அவற்றைச் செய்யும் மக்களும், அவர் வாழும் நாடு நகரங்களும், அவரைப் புரக்கும் அரசரும், நிலத்தினும் நீரினுஞ் செல்லுஞ் சகடைகள் மரக்கலங்களும், பலவேறு பிரிந்த தொழில்களின் நுட்பங்களை அறிவிக்குங் கலைகளும், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுங், கற்கும் மாணாக்கருங், கலைபயில் கழகங்களும், பொருள்நிலையும், உயிர்நிலையும், இம்மை மறுமை யியல்புகளும் ஆராய்ந்து இறைவனுண்மை தெளியும் அறிவு நூல்களும், எல்லாம்வல்ல ஒளியுருவினனான இறைவனைக் குறிவடிவில் வைத்து வழிபடுந் திருக்கோயில்களும், அறிவுநூல் கல்லா மாந்தர்க்கு இறைவன்றன் அருட்செயல்களைப் புலப்படுத்துந் திருவிழாக்களும் பிறவும் பெருகலாயின. இவை பெருகவே, மக்கள் அறிவும் இன்பமும் பெருகிய நாகரிகரிக வாழ்கை யுடையராயினர். ஆகவே, நாகரிக வாழ்க்கைக்குக் காரணம் உழவும் வாணிகமும் ஆமென்றும், அவை யிரண்டற்குங் காரணம் அறிவும் முயற்சியுமாமென்றும் அறிதல் வேண்டும். இனி, அறிவும் முயற்சியுமுடையார் தம்மில் ஒருங்கு கூடித் தாம் அறிந்தவைகளையுந் தாஞ் செய்பவைகளையுந் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து மேலும் மேலும் அறிவிலும் முயற்சியிலுந் தாம் மேம்படுதற்குந், தம்போல் அறிவும் முயற்சியும் வாயாத ஏனைப் பொதுமக்கட்குத் தம் அறிவையும் முயற்சியையும் புலப்படுத்தி அவரை அவ்விரண்டிலும் மேம்படுத்துதற்கும் இன்றியமையாக் காரணமாயிருப்பது அவரெல்லாரும் வணங்குந் தமிழ் முதலான மொழிகளேயாமென்றும்; அம் மொழிகள் நாளுக்கொருவகையாய்த் திரிபடைந்து ஒவ்வொரு மக்கட்குழுவில் ஒவ்வொரு வகையாய் மாறி வழங்கி, இலக்கண இலக்கிய நூல்களின்றி இலக்கண இலக்கிய வரம்பின்றிச், சிதைந்து கொண்டே போகுமானால் முன்னோர் கருத்தைப் பின்னோரும் பின்னோர் கருத்தை இனி வருவோரும் ஒரு மக்கட் குழுவினர் கருத்தைப் பிறிதொரு மக்கட் குழுவினரும் உணர்தற்கு வாயில் இன்றி, ஒருகாலத்தில் நிலைபெற்ற ஒரு மொழி வழக்கின் பயனாய்ச் சிறிதுண்டான சிறு நாகரிகமும் அம்மொழியின் திரிபாலுஞ் சிதைவாலுந் தானுந் திரிந்து சிதையுமாகலின் நாகரிக வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் அடிக்காரணமாவது தமிழ் முதலான மொழிகள் தம்முள் திரிபெய்தாமலும் அயல்மொழிக் கலப்பால் தம்முடைய சொற்கள் இறந்துபடாமலும் வழங்கப் பெறுதலே யாமென்றும்; இங்ஙனம் நாகரிக அடிக்காரணமான ஒரு மொழியின் நிலைபேறு அதனை நன்காய்ந்து பயின்று அதனை மேலும் வளம்படுத்தித் தம் கூட்டத்தார்க்குப் பயன்படுத்தும் புலவோரையே வேர்க்காரணமாய்க் கொண்டிருக்குமென்றும் நன்கு கருத்திற் பதித்தல் வேண்டும். இங்ஙனம் அறிவும் முயற்சியும் வாய்ந்த சிலரால் அவர் பிறந்த மக்கட்பகுதி உழவிலும் வாணிகத்திலுஞ் சிறந்தோங்க, அதற்கு முதற்பெருங்காரணமாய் நின்ற ஒருமொழியானது அவர் தம்மால் நிலைபேறுற்று நூல் வடிவில் வழங்கப்படலான காலந்தொட்டே, அம் மக்களுட் சிறந்த புலவரைப்பற்றியும் அவரியற்றிய நூல்களைப் பற்றியும் பிற்பிற் காலங்களில் வந்தார் அறியவேண்டுவனவெல்லாம் அறிந்து தாமும் அவர்போல் அறிவிலும் முயற்சியிலும் மேம்படுவாராயினர். ஆகவே, புலவர் என்பார் அறிவின்மிக்காரே யாவரெனவும், அறிவாவது உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்பவற்றின் இயல்புகளின் உட்புகுந்து அவற்றின் உண்மைகளை உள்ளவாறுணர்ந்து அவ் வியல்புகளுக்கொப்ப அவை தொழிற்படுங்கால் ஒன்று மற்றொன்றனுக்கு உறவாகவாதல் அல்லததற்குப் பகையாகவாதல் நின்று வினைசெய்யும் வகைகளையும், அவ் வினைகளால் மக்கள் தமக்கும் பிறர்க்கும் நலன் உண்டாக அவை தம்மைப் பயன் படுத்தும் முறைகளையும் ஒருங்கறிவதுவே யாமெனவும், அறிவு பெருகப்பெருக இன்பமும் உடன் பெருகுதல் இயல்பாதலல் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களில் தாம் நுண்ணிதாக நுழைந்தாராய்ந்தறிந்த அழகிய கூறுகளைப் பாக்களிலும் உரைகளிலுஞ் சுவைபெருகவமைத்தும் பயில்வார்க்கு அறிவோடு இன்பத்தையும் பயக்கவல்லவர்களே நல்லிசைப் புலவராவரெனவும், பொருளியல்புகளை உள்ளவாறறிந்து உண்மை தெருட்டவல்ல நல்லிசைப் புலவர்கள் உண்மைக்கு மாறாவன சொல்லின் அறியாமையுந் துன்பமும் உண்டாமாகலின் அவையிற்றை மறந்தும் உரையாராய் உண்மையொடு பட்டனவே மொழிகுவரெனவுங் கருத்திற் பதித்தல்வேண்டும். இங்ஙனமாக ஒருமக்கட் குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்கு வேராய் நிற்கும் நல்லிசைப்புலவர், மேனாடு கீழ்நாடுகளில் நாகரிகமெய்திய எல்லா மக்கட்பரப்பின் இடையேயுங்கிடந்து, நாகரிகத்தை வளம்பெற, வளர்த்து, அவர்க்கு அறிவும் இன்பமுமாகிய பயன்களைத் தந்தது உண்மையே யென்றாலும், நாகரிக மாந்தரனைவர்க்கும் முன்னே விளக்கிக்காட்டியபடி நாகரிகத்தைக் கற்பித்து இன்றுகாறும் அழியாது நிற்குந் தமிழ்மாந்தர்க்குட் பண்டு தோன்றிய நல்லிசைப் புலவரை ஏனை அப்புலவர்கள் பெரிதும் ஒவ்வார், ஏனென்றால், அம் மற்றைநாட்டுப் புலவர், நம் பண்டைத் தமிழ்ப்புலவோரைப்போற் பொருளுண்மை உள்ளவாறறிந்து, அதனைத் தம்மனோர்க்கு அறிவுறுத்தி அவரைச் சீர்திருத்தியிருந்தால் அவரும் அவரது நாகரிகமும் அழிந்துபடுதல் ஆகாதன்றோ? ஆனால் இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்னமே நாகரிகத்தில் மிக்கோங்கிய எகுபதியரும் அவரது வாழ்க்கையும் இப்போதெங்கே? இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகத்திற் சிறந்தாராய் வாழ்ந்த சாலடியர் பாபிலோனியர் மெக்சிகர் என்னும் மாந்தரெல்லாம் இப்போதெங்கே யுளர்? இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னமே நந்தமிழ் மக்களுடன் வந்து போராடிய ஆரியரும் அவர் தம் வழக்க வொழுக்கங்களும் இப்போதெங்கே? இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னே உயர்ந்த நாகரிகம் வாய்ந்தாராய் விளங்கிய கிரேக்கரும், இரண்டாயிர ஆண்டுகட்கு முன் மேனாடுகளை யெல்லாந் தமது செங்கோலாட்சியில் வைத்து அரசு புரிந்த உரோமரும் இப்போதெங்கேயுளர்? இவரெல்லாந் தாம் இருந்தவிடத் தில்லாது மறைந்து போக, இவர்கள் வழங்கிய மொழி களெல்லாம் நூல்வழக்கிலன்றி உலகவழக்கிலில்லாது இறந்து போக, இவர்கள் எடுப்பித்த எவ்வளவோ மிகப்பெரிய எவ்வளவோ மிக அழகிய அரண்மனைகளுங் கோயில்களும் மாளிகைகளும் எல்லாம் இடிந்து பாழாய்க்கிடக்க, எகுபதியார் சாலடியர் பாபிலோனியர் முதலான அச்சீரிய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்த தமிழர்களும், அவர் வழங்குந் தமிழ்மொழியும், அவரெடுப்பித்த திருக்கோயில்களும் எல்லாம் இன்றுகாறும் பழுதுறாமல் நிலைத்திருத்தல் என்னை? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், அது முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் தம் நுண்ணறிவின் திறத்தையும், அவர் அதனால் மடியாத ஆள்வினை மேற்கொண்டு தமது தமிழ்மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஒம்பிய வகையையும் நன்கு தெரிக்கின்றது அற்றேல், இஞ்ஞான்று தமிழ்மொழிப் பயிற்சி குன்றி வருதலுந், தமிழ் மக்களிற் பெருந்தொகையா யுள்ளவர் கல்விப் பயிற்சியும் ஆராய்ச்சி யுணர்வும் இல்லாராய் உண்மை நாகரிகத்தில் வரவரக் குறைந்து, உலகத்திலுள்ள ஏனை மக்கட் பகுப்பினரெல்லாம் இம்மை மறுமைக்குரிய எல்லாத் துறைகளிலும் பெருமையுற்றுவர இவர்கள் எல்லா வகைகளிலுஞ் சிறுமையுற்று வரல் யாது காரணத்தாலெனின்; இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் நுண்ணறிவும் நடுநிலை யாராய்ச்சியும் மடியா ஆள்வினையும் வாயாராய், அவை வாயாமையால் தமது தமிழ் மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஓம்புதற்குத் தக்க தகுதி யில்லாராய் இருத்தலினாலே யாமென்பது புலனாகின்றது. எக்காலும் நீர்வரத்துக் குன்றா ஓர்யாறு இருக்குந்தனையும் அதன் இருமருங்குமுள்ள நாடுநகரங்களெல்லாம் எல்லா வளனுங் குறைவரப்பெற்றுச் செழித்தல் போலவும், நந்தா மணி விளக்கு ஒன்று ஒளிருந்தனையும் அஃதொளிரும் இடனெல்லாம் இருளின்றி ஒளிகெழுமி விளங்குதல் போலவுங், குடிகளின் நலத்தையே எந்நாளுந் கோரும் ஒரு செங்கோன் மன்னன் அரசுபுரியுந்தனையும் அவனது வெண்கொற்றக் குடைநிழற்கீழ் வாழுங் குடிமக்கள் அனைவரும் இன்பவாழ்க்கையிற் றிகழ்தல்போலவும், விழுமிய புலவர் ஒருவர் இருந்தால் அவரைச் சூழ்ந்துவாழும் மாந்தரெல்லாரும் அவர்போல் விழுமியராய் வாழ்குவர். மற்று, விழுமிய புல்வர் இல்லாத மக்கட்குழுவோ, வறண்ட யாற்றையடுத்த ஊர்போலவும், ஞாயிறுந் திங்களும் விளக்கும் இல்லாஇராப் பொழுதுபோலவுஞ், செங்கோன் மன்னனில்லாக் குடிகள் போலவுஞ் சீரழிந்து போமன்றோ? அற்றேல், முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலைக்கும் பிற்காலத்துள்ள தமிழ்ப் புலவர் நிலைக்கும் வேற்றுமை காட்டுகவெனிற், காட்டுதும்; 5. பண்டைப்புலவர் தமிழ் ஓம்பினமை இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புலவர் அனைவருந் தமது தமிழ்மொழி திரிபடைந்து மாறுதற்கும் அயன்மொழிச் சொற்கள் அதன்கட் புகுந்து விரவுதற்கும் இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகோலித், தாமுந் தனித்தமிழிலேயே நூல்கள் இயற்றி, அதனை ஒருமுகமாய் நின்று f©Q§ கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தனர். தமிழ்ச் சொற்கள் திரிபடையாமலும், அயன்மொழிச் சொற்கள் விரவுதலாற்றன்சொற்கள் இறந்துபடாமலும் வழங்கி வருதலாலன்றோ இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களை நாம் இன்றைக்கும் எளிதிலே கற்றறியப் பெறுகின்றோம்? ஆசிரியர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டதாயிருந்தும், அதன் பாக்களின் சொல்லும் பொருளும் இற்றைக்கும் நம்மால் எளிதில் அறியப்படுகின்றன வல்லவோ? கற்றதனால் ஆய பயன்என்கொல வால்அறிவன் நற்றாள் தொழாஅ ரெனின் கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்காற் றான்நோக்கி மெல்ல நகும் என்றற் றொடக்கத்துத் திருக்குறட்பாவின் பொருள்களை அறியாதார் இஞ்ஞான்று தமிழ்மக்களில் எவரேனும் உளரோ? ஆனால், இச் செய்யுட்களில் வந்த சொற்கள் ஒவ்வொன்றும் நாளடைவில் வடிவு திரிந்து வேறுபட, அதனோடு அயன் மொழிச் சொற்களுங் கலந்து நந்தமிழ் மொழி வேறொரு மொழியாய் மாறுபடின், அதனைப் பேசுந் தீவினையுடைய நாம் நம் அருமைத் திருக்குறளை இன்று போல் எளிதில் அறிதல் கூடுமோ? உணர்ந்து பார்மின்கள்! இத்தகைய துயர்பட்ட நிலையன்றோ நம் பண்டைத் தமிழரினத்தைச் சேர்ந்தவர்களான மலையாளர் தெலுங்கர் கன்னடர் முதலாயினாரெல்லாம் இப்போதிருக்கின்றனர்? பண்டை நம் ஆசிரியர் நிறுத்திய இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாது, இத் தமிழ் மக்கட் பிரிவினர் நம் தமிழ்ச் சொற்களைத் தாம் வேண்டிய வேண்டியபடி யெல்லாந் திரித்துக் கொண்டு சென்றதல்லாமலும் வடமொழிச் சொற்களையும் வரை துறையின்றிச் சேர்த்து வழங்கிவந்தமையாலன்றோ, பண்டு தமிழாயிருந்த ஒருமொழியே இப்போது மலையாளந் தெலுங்கு கன்னடம் முதலிய பல மொழிகளாய்ப் பிரிந்து போக, அவற்றை வழங்கும் பழந்தமிழ் மக்களும் பல வகுப்பினராய்ப் பிளவுபட்டு, ஒருவர் மொழியினை மற்றவர் அறியாராய்க் குறுகிப் போயதனா லன்றோ, இவரெல்லார்க்குந் தாயகமான தமிழ் மொழிக்கண் உள்ள சீரிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருக்கோவையார் முதலான அரும்பெறல் நூல்களையும் அவரெல்லாம் அறியமாட்டாதவராயினர்! ஒருமொழி பலமொழியாவது அம் மொழித் சொற்கள் திரிபடைதலினாலே யாம்; ஒரு மக்கட் கூட்டத்தவராய் ஒற்றுமையும் வலிமையுங் கொண்டு வாழ்ந்தவர், பல வேறு மக்கட்பகுப்பினராய்ப் பிளவுபட்டு ஒற்றுமையும் வலிமையும் இழந்து வறுமைப்பட்டுத் தாழ்வது அவர் தமது பண்டைமொழிச் சொற்களைப் பலவாறு திரித்துப் பேசி அயன்மொழிச் சொற்களையும் எடுத்துச் சேர்த்து வழங்குதலினாலேயாம். பார்மின்! பண்டு ஒருமொழி பேசிய ஒரு மக்கட் பெருங்கூட்டமாயிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், தோடம், கோடம், கோண்டம், கொண்டம், ஒரம், இராசமாலம் முதலான பன்மொழிபேசும் பலவகை மக்கட் பிரிவினர் ஆயினார். ஐயோ 1 1911 ஆம் ஆண்டு எடுத்த குடிக்கணக்கின்படி இவ்விந்திய நாட்டில் திராவிடமொழி பேசுவோர் தொகை ஆறுகோடியே இருபது நூறாயிரமாகும். இத்துணைப் பெருந்தொகையினரான மக்கள் அனைவருந் தமக்குப் பழமையை உரியதான தமிழ்மொழி யொன்றையே வழங்கிவந்திருந்தனராயின், அவர் எத்துணை ஒற்றுமையும் வலிமையும் நாகரிகமும் வாய்ந்தவராய் வாழலாம்! பழைய தமிழைப் பலவாறு சிதைத்துத் திரித்தமையாலும் வட சொற்களைக் கலந்து கொண்டமையாலுமன்றோ இத்தனைப் பெருங்கூட்டத்தவரும் வெவ்வேறு சிறு கூட்டத்தவராய் ஒருவரோ டொருவர் அளவளாவுதற் கிடனின்றி, வெவ் வேறினத்தவர்போல் வெவ்வேறு நாட்டவர்போல நாட்கழிக் கின்றனர். இவர் எல்லாருந் தமிழாகிய தமது பண்டை மொழியையே வழங்கிப் பிளவுபடாதிருந்தாற், குமரிமுதல் இமயம் வரையில் இற்றைக்குந் தமிழுந் தமிழருமே பிறங்கி நிற்கும் பெரும்பேறு உளதாமன்றோ! இமயம் முதற் குமரி வரை யிலுள்ளாரெல்லாரும் நம் பண்டைப் பேராசிரியர் இயற்றியருளிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம் முதலான ஒப்புயர் வில்லாச் செந்தமிழ் நூல்களைச செவ்விதிற்பயின்று இம்மைமறுமைப் பயன் களெல்லாம் ஒருங்கெய்துவரல்லரோ! ஆதலாற், பண்டைத் தமிழகத் திலிருந்து பிரிந்து போய்த் தமக்குரிய இனிய செந்தமிழ்மொழியை ஓம்பாது அதனைப் பலவகையால் மாறுபடுத்தி அதனால் தாமும் பல்வேறினமாய் மாறித் தம் பிறவிப்பயனையும் இழந்த ஏனை மக்கள் போலாது, நம் பழைய நல்லிசைப்புலவரது ஆணை வழி நின்று, அவர் வழிவந்த புலவருந் தமிழைத் தூயதாக ஒம்பி வளர்த்துத் தந்த பேருதவிக்கு எளியரேம் எங்ஙனங் கைம்மாறு செலுத்தவல்லேம்! நம் பண்டையாசிரியர் இயற்றியருளிய நூல்களிற் செல்லுக்கும் ஆடிப்பெருக்கிற்கும் இரையாய்ப்போன எண்ணிறந்த நூல்கள் ஒழிய எச்சமாக இஞ்ஞான்று நாம் நம் கைகளில் ஏந்தி மகிழுந் தொல்காப்பியம், பரிபாடல், இறைய னராகப் பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலான அருந்தமிழ்நூல்களைச் சிறிதாயினும் உற்று நோக்குவாமாயின், நம் பழைய பேராசிரியர் நம் ஆருயிர்த் தமிழன்னையை எவ்வளவு கருத்தாய், எவ்வளவு அன்பாய்ப் பாதுகாத்து நின்றனர் என்பது தெற்றென விளங்காநிற்கும். இம் முன்னாசிரியர் நூல்களில் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடு கூட வடசொற்களைக் காண்டலரிது. இனி, இற்றைக்கு ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முன்னிருந்த தொல்லாசிரியர் ஆணைவழியே, அவர்க்குப்பின் இடைப்பட்டகாலத்திற் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார் முதலான விழுமிய நூல்கள் இயற்றிய ஆசிரியர்களும், அவர்களுக்குப்பின் புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, கல்லாடம், சூளாமணி, சீவக சிந்தாமணி, தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பெரிய புராணம் முதலான நூல்கள் இயற்றியருளிய ஆசிரியர்களுந் தமது செந்தமிழ்மொழியைத் தம்மால் இயன்றமட்டுந் தூயதாய் எவ்வளவு பாதுகாத்து வழங்கியுள்ளனர் என்பது அவையிற்றைச் சிறிதாராய்ந்து பயில்வாரும் நன்கறிவர், இடைக்காலத்திருந்த இவ்வாசிரியர் தமது காலத்திற் தமிழ்நாட்டிற் புகுந்த பௌத்த சமண்கோட்பாடுகளைத் தழுவியும் மறுத்துந், தமக்குரிய சைவ வைணவக்கோட்பாடுகளை ஆராய்ந்து நிறுவல் வேண்டி னமையிற், புதிதுபுகுந்த பௌத்த சமணர் வழங்கிய வட சொற்கள் குறியீடுகள் வழக்குகள் கதைகள் முதலியவைகளை அங்ஙனமே எடுத்தும் அவற்றையொப்பத் தாமுஞ் சிலபல படைத்தும் முன்வழங்கியவைகளை மாற்றியும் நூல்கள் யாக்கலாயினர். அங்ஙனம் யாத்த நூல்களில் மட்டுமே நூற்றுக்கு ஏழுமுதற் பத்து விழுக்காடு வடசொற்கள் புகுந்து கலப்பவாயின. மற்றுச், சமயப்பொருள் தழுவாத இவ்விடைக்காலத்து நூல்களிலுங் கூட நூற்றுக்கு மூன்று நான்கிற்குமேல் வடசொற்கள் கலந்தில. இனி, இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்து கடைக்காலத்திற்றோன்றிய சிவஞானபோதம் முதலான பதினான்கு சித்தாந்த நூல்களிலும், இராமாயணம், பாரதம், காந்தம் முதலான மொழிபெயர்ப்பு நூல்களிலும் நூற்றுக்கு ஏழு முதற் பன்னிரண்டு விழுக்காடே வடசொற்கள் கலந்துள்ளன. ஆனாலும், இக்காலத்தெழுந்த நளவெண்பா கலிங்கத்துப்பரணி முதலான இலக்கிய நூல்களிலும், மூதுரை, நல்வழி முதலான அறநூல்களிலும் நூற்றுக்கு மூன்று முதல் ஐந்து வடசொற்களே காணப்படுகின்றன. ஆகவே, இக் கடைக்காலத்திருந்த ஆசிரியர்களுந் தமிழைத் தூயதாக வழங்குதலிற் கருத்துள்ள வர்களாகவே யிருந்தனரென்பது புலனாம். 6. பண்டைப்புலவர் முப்பால் ஒழுக்கம் ஒம்பினமை இன்பவொழுக்கம் இனி, முன்னிருந்த நம் ஆசிரியர் நமதருந்தமிழ் மொழியைப் பொருந்திக் காத்தமைபோலவே, அம்மொழியாற் குறிக்கப்படும் இன்பமும் பொருளும் அறனும் என்னும் முப்பாற் பொருளையும், அவை காரணமாக வரூஉம் மூவகை யொழுக்கங்களையும், உலகவியற்கை மக்களியற்கையொடு பொருந்தக் கண்டு ஓம்பின பான்மையும் பெரிதும் பாராட்டற் பாலதாகும். ஆகவே அதனைச் சிறிதெடுத்துப்பேசுதல் இன்றியமையாததா யிருக்கின்றது இந்நிலவுலகிற் காணப்படும் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் இரண்டில் உயிர்ப்பொருளுக்குப் பயன்படுதற் பொருட்டாகவே உயிரில்பொருள்கள் அமைக்கப்பட்டிருத்தல் நன்கு புலனாகின்றது. ஆகவே இவ்வுலக அமைப்பும் இதன் இயக்கமும் எல்லாம் உயிர்களின் பொருட்டாகவே நடைபெறுகின்றன வென்பது எவரும் மறுக்கலாகாத உண்மையாகும். இத்துணைச் சிறந்த உயிர்கள் இவ்வுலக அமைப்பிற் புகுந்து சிறிது காலங் காணப்படுதலும், அதன்பின் அவை காணப்படாது மறைதலும், என்னையென்று நுணுகியாராயுங்கால், இவ்வுலகுக்கு வரும்பொழுது அறிவும் இன்பமும் இலவாய்த் தோன்றும் அவ்வுயிர்கள், இதன்கண் வந்து சிறிதுகாலந் தங்கியவளவானே அறிவுவளர்ந்து இன்பத்திற் றிளைத்தல் காண்கின்றேமாகலின், அவை அறிவுவளர்ச்சியும் அதன்வழியே இன்ப நுகர்ச்சியும் எய்துதற்கே இங்கு வருகின்றன வென்பது புலனாகின்றது. புலனாகவே, இவ்வுலகுக்குவரும் முன் அறியாமையுந் துன்பமும் வாய்ந்தனவாகவே எல்லாவுயிர்களும் இருத்தல் வேண்டுமெனவும், இங்கு வந்தபின் அவை அறிவும் இன்பமுஞ் சிறிதுசிறிதாகக் கைகூடப்பெறினும் அவை இரண்டும் முதிர்ந்த நிலைக்கு வரும் முன்னரே உயிர்கள் இதனைவிட்டு மறைந்தொழியக் காண்டலால், அரைகுறையாய்ப் பெற்ற அறிவு இன்பங்களுடனே அவ்வுயிர்கள் பிறவியை முற்றும் விட்டொழிதல் இசையாதெனவும், அறிவு இன்பங்களிரண்டும் ஒரு சிறு குறையும் இல்லையாய் நிறைந்த நிலைக்கு வரும்வரையில் இந்தவுலகத்திலோ அல்லது இதனையொத்த வேறு உலகங்களிலோ அவை பற்பல பிறவிகளை யெடுக்குமெனவும் உய்த்துணர்கின்றேம். எனவே, இப் பிறவியிற் காணப்படும் நிகழ்ச்சி கொண்டு இதனோடு தொடர்புடைய முற்பிறவி நிகழ்ச்சியும், இனித் தொடரும் பிற்பிறவி நிகழ்ச்சியுங் காணவல்ல அறிவு விலங்கினங்கட்கு இன்றி மக்களுயிர்க்குமட்டுமே அமைந்திருத்தலால், மக்கள் வாழ்க்கை யானது பகுத்தறிவு விளக்கத்தையும், அதன்வழியே இன்பப்பேற்றையுமே அவாவிநிற்றலும், அறிவு விளங்கப்பெறுவதெல்லாம் அறியாமைவாயிலாக வருந் துன்பங்களை நீக்கி இன்பத்தைப் பெறுதற்பொருட்டாகவே நிகழ்தலாற் பிறவி யெடுப்பதன் முடிந்தநோக்கம் மாறாப்பேரின்பப் பேறாகவே கடைக் கூடுதலுந் தாமே போதரும். இவையே பண்டை நந்தழிழாசிரியர் கண்ட முடிந்த வுண்மைகளும் ஆகும். இஃது ஆசிரியர் தொல்காப்பியனார், எல்லா உயிர்க்கும் இன்பமென்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (பொருளியல். 29) என்று அருளிச்செய்தவாற்றானும், உறுதிப்பொருள்களைப் பிற்காலத்தார் அறம் பொருள் இன்பம் எனப் பாகுபடுத் தோதியதுபோலாது, அவர் இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் எனக் களவியல் முதற்கண் ஓதியவாற்றானுந் தெளியப்படும் இனி, அறிவும் இன்பமும் பெற்றுவரும் மக்கள் அவை தம்மைத் தாந் தனித்திருந்து பெறமாட்டாராய், ஒருவர் மற்றொருவரோடு அளவளாவி ஒருங்குவாழும் உறவு முறையினாலேயே அவை தம்மைப் பெற்றுவருதலுங் காண்கின்றோம். இன்னும், இம் மக்களின் உறவுவாழ்க்கை யுள்ளும் ஆடவரும் மகளிருங், கணவரும் மனைவியருமாய் ஒருங்கு கூடி வாழும் வாழ்க்கையே அவர் இந்நிலவுலகில் இருக்குந் துணையும் நிலை பெற்றிருக்கும் நெருங்கிய நீண்ட வாழ்க்கையாய், மேலும் மேலும் உயிர்கள் பிறவிக்கு வருதற்கு ஏதுவாய், மக்கள் வாழ்க்கை யென்பதொன்று இம் மாநிலத்தில் நடைபெறுதற்கு அடிக்காரணமாய்ச் சிறந்து நிற்றலின் அத்துணைச் சிறப்பினதாகிய இல்வாழ்க்கையினையே நம் பண்டைப் பேராசிரியர் தாம் இயற்றிய நூல்களிலெல்லாஞ் சிறந்தெடுத்து, அதனைப் பலவாற்றானும் அழகுபடுத்துப் பாடியும் பேசியும் இருக்கின்றனர். ஒர் ஆண்மகனும் ஒரு பெண்மகளுங்கூடி நடாத்துவதாகிய அவ் வில்வாழ்க்கை மிக உயர்ந்த பேரன்பின்வழித்தாக நடைபெறுவதாமென்பதும், அவ் விருவர்க்குள் இயற்கையேயுண்டாம் அப்பேரன்புதான் காதல் என்னும் பெயரால் வழங்கப்படுமென்பதும், காதற் காமங் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி என்று பரிபாடலும் () சொற்பா லமிழ்திவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே என்று திருச்சிற்றம்பலக் கோவையாரும் (8) நுவலுமாற்றால் தெளியப்படும். இப் பெற்றித்தான சிறந்த காதலன் பிற்பிணைப் புண்டவழி மனைவி தன் கணவனையன்றி ஆடவர் பிறரைக் கனவிலும் நினையாமையின் அவட்கே உண்மைக் கற்பொழுக்கம் நிலைபெறும்; அவள் கணவனும் அவளை யன்றி மகளிர் பிறரைக் கருதாமையின் அவற்கும் உள்ளம் உரன் அழியாதாய் நிற்கும். இவ்விருவரின் சிறந்த கற்பியல் நிலை, மீண்டா ரெனவுவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே பூண்டா ரிருவர் முன் போயின ரே? புலி யூரெனைநின் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண்டேன், அயலே தூண்டா விளக்கனை யாய்! என்னை யோஅன்னை சொல்லியதே என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையாரால் (244) தெளிவுறுத்தப் படுதல் காண்மின்கள்! இத் திருப்பாட்டிற் சொல்லப்படுவது இது; தன் மகள் தன்னாற் காதலிக்கப் பட்ட ஒர் ஆண்மகனை மணந்து கொள்ளுதற்பொருட்டு அவனுடனே கூடித், தன்னவர் எவரும் அறியாமே அவனூர்க்குப் போய்விட்டனள். அவள் அங்ஙனம் போயதை யறிந்த செவிலித்தாய், தன் மகளும் அவள் காதலனுங் கூடிச் சென்றவழியை அவருடைய அடிச்சுவடு களால் அறிந்து அவ் விருவரையுந் தேடிச் செல்லத், தனக்கெதிரே ஓர் இளைய அழகிய மங்கையும் அவள் கணவனும் வரக்கண்டு தான் மேலுஞ் செல்வதை நிறுத்தி நின்றாள். நிற்க. எதிர்வந்த அவ்விருவந் தன்னருகு புகுந்ததுந், தம்மூர்க்குச் சென்ற என் மருமகனும் மகளுமே திரும்பி வருகின்றாரென நினைந்து நும்மைக் கண்டு மகிழ்ந்தேன்; ஆனால், நீவிர் வேறென்பது அணுகிவந்ததுந் தெரிந்தேன். நுங்களைப்போலவே எல்லாவகையிலுஞ் சிறந்தார் இருவர் நும்மை எதிர்ப்பட்டுச் செல்லக் கண்டீரோ? என அச் செவிலித்தாய் சொல்லி வினவ, அவ்விருவரில் ஆண்மகனாய் நின்றவன் அத் தாயை நோக்கி, அன்னாய்! புலியூர்ச்சிற்றம் பலத்தே புலனாய் நின்று என்னை அடிமைகொண்ட சிவபெருமானது மலைக்கண் உள்ள அரிமாவை யொத்தான் ஒர் ஆண்மகனை யான் கண்டேன் என விடைகூறி, அதன் பிறகு, தன் பக்கத்தேநின்ற தன் மனையாளை நோக்கித், தூண்டாத மணிவிளக்கை யொத்த காதலி! யான் கண்ட அவ் வாண்மகன் பக்கத்தே வேறொன்றை இவ் வன்னை சொல்லினளே; அஃது யாது? அதனை அவட்கு அறிவிப்பாயாக! என்று கூறித் தன் மனையாளை ஏவின பான்மையை உற்றுநோக்குமின்கள்! செவிலித்தாய் வினாவியதற்கு ஆளியன்னானைக் கண்டேன் என்றவன், அவன் பக்கத்தே சென்ற அவன்றன் காதலியைத் தான் கண்டதாகக் கூறிற்றிலன்; ஏன்? அவன் தன்னுடன் போந்த காதலியைத் தன்னுயிராகக் கருதித் காதலன்பு கொண்டிருந் தானாகலின் அவன் தன் மனைவியின் உருவத்தையன்றிப் பிறள் ஒருத்தியைச் சிறிதும் நினைந்திலன் அதனால், எதிரே சென்ற ஆடவனையன்றி அவன்றன் காதலியை அவன் கண்டுங் காணாதவனோயாயினான்; என்றாலுஞ் செவிலித்தாய் வினாவியதில் ஓர் ஆண்மகனேயன்றி ஒரு பெண்மகளுங் குறிப்பிடப்பட்டமையால், தான் காணாத அப் பெண்மகளைத் தன் மனையாளே கண்டிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அக் குறிப்புக்கு விடைதருமாறு ஏவின நுட்பம் பெரிதும் வியக்கற்பாலதாகும். இன்னும் செவிலித்தாய் கேட்ட அவ் வினாவுக்கு, அவ் விளைஞன் முதலில் விடையுரை பகர்ந்த நுட்பத்தினை ஓருங்கால், அவன்றன் மனையாள் அவன்மேற் பெருங்காதல் பூண்ட ஒழுக்கத்தினளாகலின் அவளுந் தன் கணவனை யன்றித் தம்மெதிரே சென்ற அவ் வாண்மகன் பிறனொருவன் உருவினை நினைந்திற்றிலள்; அதனால், அவள் அவன் பக்கத்தே போய பெண்மகளை மட்டும் நோக்கினாளா கற்பாலள் என்பதூஉம் போதரா நிற்கும். எடுக்குந்தோறுங் குறையாத் தெய்வக் கருவூலம் போல், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த இத் திருப்பாட்டு இங்ஙனம் எடுக்க எடுக்கக் குறையாப் பொருளாழம் வாய்ந்து, ஈருடம்பின் ஓருயிராய்த் திகழுங் கணவன் மனைவியரின் காதற்பெருங் கிழமையினையும் அதனால் அவர்க்கு நிலைபெற்ற கற்பொழுக்க விழுப்பத்தினையும் நன்கு தேற்றுமாறு கருத்திற் பதிக்கற் பாலதொன்றாம். இங்ஙனம் ஈருடம்பின் ஓருயிராய் நிற்குங் காதலரின் கற்பியல் வாழ்க்கைக்கு, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டும் உறுபெருஞ் சான்றாய்த் திகழ்கின்றனர். இவர் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத அத்துணைக் காதற்பெருங்கேண்மை யுடையராய் விளங்கினமை, தமிழ்மொழிவல்ல இவர் இருவரும் பாடிய பாட்டுக்களால் நன்கு தெளியப்படுகின்றது. ஒருகால் இப் பாண்டிவேந்தன் தன்னை எதிர்க்க முனைந்த அரசர்களைத் தாக்கி வெற்றிபெறேனாயிற் காதற்கிழமையிற் சிறந்த என் மனைவியைப் பிரிந்தேன் ஆகுக! என்று வஞ்சினங் கூறியதை, மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்தர் உடங்கியைத் தென்னோடு பொருதும் என்ப, அவர ஆரமர் அலறத் தாக்கித் தேரோடு அவர்ப்புறங் காணேன் ஆயிற் சிறந்த பேரமர் உண்கன் இவளினும் பிரிக! (புறநானூறு, 71 ) என்று அவன் அப்போது பாடிய அருந்தமிழ்ச் செய்யுளால் அறிகின்றேம். இவன் தன் மனையாளைத் தன் ஆருயிரெனக் கொண்டொழுகியவாறு போலவே, இவன்றன் மனையாளான பெருங்கோப்பெண்டும் இவனைத் தன் இன்னுயிராய்க் காதலித்து, அவன் இறந்துபட்டஞான்று அவனைப் பிரிந்து உயிர்வாழமாட்டாளாய்த் தீப்பாய முனைந்துழி, அருகிருந்த சான்றோர் அவளைத் தடுத்தும், அவள் அவரை நோக்கிப், பல் சான்றீரே! பல் சான்றீரே! செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ! பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கரி தாகுக தில்ல, எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுஞ் தீயும் ஓரற்றே (புறநானூறு. 246) என்று இவ்வருமருந்தன்ன செய்யுளைச் சொல்லித், தீப்பாய்ந்து உயிர்நீத்தனள். கல்வியிலும் அரச வாழ்க்கையிலும் நிகரின்றிக் கலித்த இவ்விருவரும் ஒருவரையொருவர் பிரியலாற்றாது மாய்ந்த காதற் கற்பின் மாட்சியினை யுள்ளுதொறும் உள்ளம் உருகாதார் யார்! 7. பொருளற வொழுக்கம் இனி, ஓர் ஆண்மகனும் அவன்றன் மனையாளும் அங்ஙனம் மாறாக் காதலன் பிற்பிணைந்து இல்வாழ்க்கையினை நடாத்து கின்றுழி, அதன்கட் பல்வகை யிடையூறுகளுந் துன்பங்களும் புகுந்து நிலைகலக்கினும், இருவரும் அவற்றைப் பொறுத்து, ஒருவர்மேல் ஒருவர் வருந்தாராய்ப் பண்டுபோல் அன்பில் மிகுந்து முயற்சியிற் றாழாராய்த் தங்கடமைகளை வழுவின்றி உவப்புடன் செய்குவர். வறுமையுந் துன்பமும் நீங்கி வளம்பெற்ற காலையிலும் அவர் தம் நிலையிற் றிரியாராய் எல்லார்க்கும் இனியன செய்தே ஒழுகா நிற்பர். இப் பெற்றித்தாகிய சிறந்த இல்வாழ்க்கையினை நம் பண்டைத் தமிழ்ப்புலவர் தாமே வாழ்ந்து காட்டினமை பெரிதும் பாராட்டற்பாலதாகும். இதற்குப், பழந்தமிழ்ப் புலவர் பெருந்தகையாகிய பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை வரலாற்றினை ஈண்டொரு சிறிது எடுத்துக்காட்டுதும். பெருஞ்சித்திரனார் என்னும் ஆசிரியர் ஒருகாலத்தில் மிகவும் மிடிப்பட்ட வாழ்க்கையில் இருந்தார். இவரது இல்லத்தின் அடுக்களையில் உணவுப் பண்டங்களே இல்லாது போனமையால், ஒருநாள் இவர்தம் மனைவியார் அதனுள்ளே செல்லாமல் அதனை மறந்து வருந்தியொருபக்கத்தே ஒடுங்கி யிருக்க, அவர் தஞ்சிறுபுதல்வன் நல்லுணவில்லாமையின் உதிர்ந்து சிற்சில மயிர்களே முளைத்து அழகு குறைத் தலையின் தோற்றம் வாய்ந்தவனாய், அங்ஙனம் ஒடுங்கியிருக்குந் தன் அன்னையின் பால் இல்லாத வெறுமுலையைச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும் அதிலிருந்து தினைத்தனைப் பாலும் பெறாமையிற், கூழுஞ்சோறுமாதல் பெறுவான் வேண்டி அவ் வடுக்களையுள் நுழைந்து, அகத்தே ஒன்றும் இல்லாத வெறும் பாண்டங்களை ஒவ்வொன்றாகத் திறந்துபார்க்க அங்கொன்றும் இல்லாமை கண்டு அழுதனனாக, அவன் அன்னை ‘அதோ புலி வருகிறது!’ எனச் சொல்லி அச்சுறுத்தியும், ‘உதோ அம்புலியைப் பார்! என நாப்புக் காட்டியும் அப்புதல்வன் அழுகை தீராமையின் அதற்கு உளம் நொந்தனளாய் நினது வாடிய நிலையை நின் தந்தைக்குக் காட்டு எனக் கூறி, அவனைப் பலவுஞ் சொல்லிக் கேட்ட படியாய் நனவின் கண்ணும் என் மனைவி பெருந்துயர் உழவாநின்றாள் என அவர் குமண வேந்தனை நோக்கிப் பாடிய,இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல்உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்பால்இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்கூழுஞ்சோறுங் கடைஇ ஊழின் உள்இல் வறுங்கலந் திறந்து அழக்கண்டுமறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்நொந்தனளாகி நுந்தையை உள்ளிப்பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்வினவல் ஆனாள் ஆகி நனவின் அல்லல் உழப்போள். என்னுஞ் செய்யுள் (புறநானூறு, 160) கன்னெஞ்சமுங்கரைய அவரது மிடிப்பட்ட வாழ்க்கை நிலையினை எடுத்துரைத்தல் காண்க. இன்றைநாளிற் போல நூல் எழுதிப் பரப்புதற்குரிய கடிதம் அச்சுப்பொறி முதலிய கருவிகளும், போக்குவரவுக்கேற்ற புகைவண்டிகளுங் கடிதப் போக்குவரவுக்கு இடனான செய்தி நிலையங்களுங், கல்வியறிவூட்டுங் கல்லூரிகளும் பண்டை நாளில் இல்லாமையிற், பழந்தமிழ்ப் புலவோரிற் பெரும்பாலார் தாங் கற்ற பெருங் கல்வியைப் பிறர்க்குப் பயன்படுத்தவும், அதனாற் றம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் பெற்று இனிது வாழவும் இயலாதவராய், ஈகையிற் சிறந்த அரசரையுஞ் செல்வரையுந் தேடிச்சென்று அவர் வழங்கிய பொருள் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டிய இடர்ப்பாடான நிலையில் இருந்தனர்! இத்துணை யிடர்ப்பாடான நிலையிலிருந்தும் பெருஞ் சித்திரனார் தாம் குமணவேந்தன்பாற் பெற்ற பெரும் பொருட்டிரளைத் தமக்கென்றுந் தம் மனைவி மக்கட்கென்றும் வரைந்து வைத்துக்கொண்டு கையிறுக்கமாய் இராது, அதனைத் தம் மனைவியார் கையிற்கொடுத்து, நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்குங் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னெடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லார்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே (புறநானூறு 163) என்று அவர் இசைத்த அரும்பெருஞ் செய்யுளால் அப்புலவர் பெருந்தகையின் பேரருட்டிறத்தை அறிந்து மகிழ்மின்கள்! இதன்கண், நின்பால் அன்புபூண்டு நின்னைச் சார்ந்திருக்கும் மகளிர்க்கும், நின்னால் அன்புசெய்யப்பட்ட மகளிர்க்கும், பல நற்குணங்களிலுஞ் சிறந்து மூத்துப்போன நின் முதிய மாதர்க்கும், நின் மிடிப்பட்ட சுற்றத்தாரின் கொடும்பசி நீங்குமாறு கொடுத்ததை நீ திருப்பிக் கொடுப்பாய் என எதிர்பார்த்துத் கொடுத்து உதவி செய்தார்க்கும், இன்னார்க்குக் கொடுப்போம் இன்னார்க்குக் கொடோம் எனக் கருதாமலும், என்னோடும் ஆராயாமலும், இனித் திறவிதாக வாழக்கடவேம் என எண்ணாமலும், யான் கொடுப்பதோடுகூட நீயும் எல்லார்க்குங் கொடுப்பாயாக என் மனைவியே, பல்வகைப் பழங்களுந் தொங்காநின்ற மரங்களையுடைய முதிரம் என்னும் மலைக்குத் தலைவனான திருந்துவேல் ஏந்து குமணன் எனக்கு வழங்கிய செல்வத்தை என்று அவ்வாசிரியர் தம் மனைவியார்க்கு அறிவுறுத்திய அறிவுரையானது எத்துணை மேம்பாடு வாய்ந்ததாய்த் திகழ்கின்றது! இதனால் அப் புலவர்பெருமான் தனக்கென வாழா அருளமுது பொதிந்து பொங்குந் திருவுள்ளம் பொருந்தியவராதல் பொள்ளெனப் புலனாகின்றதன்றோ? ஆற்றொணா வறுமையிற் கிடந்து நைந்தவர் மீண்டுஞ் செல்வம்பெற்றால், அச் செல்வத்தின் அருமையுணர்ந்து அதனைத் தமக்கெனவே வரைந்து வைத்துக் கொள்வ ரல்லது, அதிற் கடுகளவுதானும் பிறர்க்குக் கொடுக்க மனம் ஒருப்படார்; என்னை? அவர் தமது துன்பத்தையே பெரிதாக நினைப்பதன்றிப் பிறர்படுதுயரைச் சிறிதும் நினைப்ப தில்லையாகலின். ஆனால், நம் நல்லிசைப் பெரும் புலவரான பெருஞ் சித்திரனாரோ தாம் வறுமையிற்பட்ட துன்பத்தின் கொடுமையை நினைந்த போதெல்லாம், வறுமையிற்பட்ட பிறரது துன்பத்தையும் உடன்நினைந்து, அதனாற் றமது துயரினையும் மறந்தவராய்ப் பிறர்துயர்களைவதிலேயே கருத்து முனைந்து நின்றார். இவ்வாறு பிறர் துயர் நினைந்து நெக்குருகும் நெஞ்சம் வாய்ந்தாரே பெறற்கரிய கல்வியாற் பெறும்பேறு பெற்றாராவர். இனிப், பொறுத்தற்கரிய வறுமையிலுந் துன்பத்திலுங் கிடந்து உழன்றவழியும் புலமையின் மிக்க சான்றோர் தமது நிலைக்காகாதனவும் இழிதக்கனவுஞ் செய்யார் என்பதூஉம், ஆசிரியர் பெருஞ்சித்திரனாரது ஒழுகலாற்றால் நன்கு விளங்கா நிற்கின்றது. இவர் தமது வறுமையை நீக்கிக் கொளல்வேண்டிக் குமணவேந்தன்பாற் சென்ற காலத்து, அவன் எதனாலோ பரிசு கொடுத்தலிற் சிறிது காலந்தாழ்ப்ப, இவர் தமது உள்ளமேம்பாடு அவனுக்கு அறிவுறுத்துவாராய்ச் சிறிதும் அஞ்சாமல், உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினுந் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்துநீ இன்புற விடுதி யாயிற், சிறிது குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண! என்று கூறிய செய்யும் (புறநானூறு 159) எத்துணை விழுமிதாய் உயர்ந்தோங்கித் துலங்குகின்றது! பொருளுடையார்பால் அவர்தரும் பொருளை நச்சிச் சென்றவர், அவர் மகிழ்ந்திருக்குங் காலம் பார்த்து அவரது தலைவாயிலிலே அடங்கி யொடுங்கிக் காத்துக்கிடத்தலும், அவர் முன்னிலையிற் சென்றால் அவரிடத்தில்லாத குணங்களை யெடுத்து இருப்பனவாக வைத்து வரைகடந்து புகழ்ந்து பேசுதலும், அவர் ஏவியன விரைந்து பணிந்து செய்தலும் வழக்கமாய்க் காணப்படு கின்றன. அங்ஙனமிருக்க, நம் புலவர் விளக்கான பெருஞ்சித்திரனாரோ, மிகச் சிறந்த யானையையே பரிசிலாகப் பெறுவதாயிருந்தாலும், முகம் மாறியுங் காலந்தாழ்த்துங் கொடுக்கும் அதனை யான் கொள்ளேன்; அவ்வாறின்றி மகிழ்ந்து நீ விரையக் கொடுத்திடுவது குன்றிமணி அனைய சிற்றளவினதா யிருந்தாலும் அதனை யான் ஏற்பேன், என அவ்வரசனை நோக்கி மொழிந்தனர்; ஈது அவரது உள்ளப் பெருமையினை இனிது காட்டு கின்றதன்றோ? பின்னர் ஒருகாற் பெருஞ்சித்திரனார் பொருளுதவி பெறல்வேண்டி ஈகையிற் சிறந்த வெளிமான் என்னும் அரசன்பாற் செல்ல, அவன் அந்நேரத்திற் றுயில் ஒழியா நிலையில் இருந்தமையால், தன் தம்பியை விளித்து அப்புலவர் பெருமானுக்குப் பரிசில் கொடு என ஏவ, அவன் கையிறுக்கம் உடையனாதலால், அவரது பெரும்புலமையின் அளவறிந்து நிரம்பக்கொடாது குறையப் பரிசில் கொடுப்ப, அவர் அதனை ஏற்றுக்கொள்ளாது மீண்டுங் குமணமன்னன் பால் ஏகி, அவன் கொடுத்த களிற்றியானையைக் கொணர்ந்து, வெளிமான் ஊர்க்காவல் மரத்திலே அதனைக் கட்டிவைத்து, வெளிமான் றம்பியிடம் போந்து, நீ இரப்போரைப் பாதுகாப்பாயும் அல்லை; இரப்போரைப் பாதுகாப்பவர் இல்லாமற்போகவும் இல்லை; பெருந்தன்மை வாய்ந்த இரவலர் இருத்தலுங் காண்பாயாக! அவ்விரவலர்க்கு வேண்டியவளவு ஈவோர் இருத்தலுங் காண்பாயாக! நின் ஊர்க் காவன் மரத்திலே யாம் கொணர்ந்து பிணித்த சிறந்த யானையானது யாம் பெற்ற பரிசிலாகும்; அரசிளைஞனே! யான் போவேன் என்னும் பொருள் அடக்கி, இரவலர் புரவலை நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையுங்காண்! இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையுங்காண்! இனி நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானை எம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே என அவர் அருளிச்செய்த பாட்டின் ( புறநானூறு 162) திறனைக் காண்மின்! ஈயாது இவறிய அவ்வரசிளைஞனை ஒரு பொருட் படுத்தாது, அவன் வெட்குமாறு, ஈகையிற் சிறந்த குமண மன்னன்பாற் றாம் பெற்றுவந்த களிற்றியானையினை அவன் கண்முன்னே கொணர்ந்து காட்டி, உலகத்திற் பொருளாலுங் கல்வியாலும் மிக்கோங்கிப் புகழொடு பொலிவார் இயல்பினை அவன் அறியுமாறு துணிந்துகாட்டி, அவற்கு அறிவுதெருட்டிய பெருஞ் சித்திரனாரது உள்ள மாட்சியினை என்னென்பேம்! ஈதன்றோ நல்லிசைப் புலமை சான்ற நாவலர் திறமாகும்! இன்னும், இவ்வாசிரியர் ஒருகால், வள்ளற்பெருந்தகையாகிய அதியமான் நெடுமான்னஞ்சியுழைப் பரிசில் பெறற் பொருட்டுச் சென்றஞான்று, அவன் ஏதுகாரணத்தினாலோ இவரைக் கண்டு உரையாடுதற்குக் காலம்பெறனாய், இவரைக் காணாமலே இவரது தகுதிக்கேற்பப் பெரும்பொருளைப் பரிசிலாக ஒருவர் வழியே விடுத்து நல்கினான். ஆனாற், பெருஞ்சித்திரனரோ தம்மைத் தன்பால் அன்புடன் வருவித்து அளவளாவிப் பரிசில் கொடாமல், தம்மைக் காணாமலே அவன் பரிசிலாக விடுத்த அப் பெரும்பொருட்டிரளை ஏலாமல் வெறுத்து, அவனுக்குப் பின்வருஞ் செய்யுளைக் குறித்துவிடுத்தார் : குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந் தருளி ஈதுகொண்டு ஈங்கனஞ் செல்க தானென என்னை யாங் கறிந்தனனோ தாங்கருங் காவலன்? காணாது ஈத்தஇப் பொருட்கு யான்ஒர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினையனைத் தாயினும் இனிது அவர் துணையளவு அறிந்து நல்கினர் விடினே. (புறநானூறு 208) ஈதன்றோ உண்மைத்துறவுள்ளம்! ஈதன்றோ அழிந்து படுஞ் செல்வப் பொருண்முன் அழிந்துபடாக் கல்விப் பொருட்சிறப்பை நாட்டுந் திறம்! தமக்கு வரும் பெரும் பொருளைக் கண்ட துணையானே தமது கல்வியையுந் தமது மானத்தையும் இழந்து, விழுமிய மக்கட்பிறவிக்கு ஆகாதன செய்யும் புலவர் எங்கே! தமது கைக்கெளிதாய்க் கிடைத்த பெரும்பொருளையும் பொருள் செயாது தமது கல்விப்பெருமையினையுந் தமது மானத்தினையுங் காத்த இப் புலவர் எங்கே! இனி, இப் புலவர்பெருமான் பரிசில் வேண்டிச் சென்ற காலங்களி லெல்லாஞ் சிறிதும் மனங் கலையாது இவரது தகுதி யறிந்து இவர்க்குப் பெரும்பொருள் வழங்கி வந்த வெளிமான் என்னும் அரசன் இறந்து பட்டஞான்று, இவர் பெருந்துயரால் நெஞ்சம் பிளவுபட்டு நைந்து பாடிய செய்யுள் அவ்வரசனது வள்ளன்மையினையும், இவர் அவன் பால் வைத்திருந்த அன்பின் பெருக்கையும் மறவாநன்றியையும் நன்கு புலப்படுத்து கின்றதாகலின், அதனையும் ஈண்டு எடுத்துக்காட்டி மேற்செல்வாம். கவிசெந் தாழிக் குவியுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்குங் காடு முன்னினனே கட்கா முறுநன்! தொடிகழி மகளிரில் தொல்கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென் றனவே! தோடுகொள் முரசுங் கிழிந்தன கண்ணே! ஆள்இல், வரைபோல் யானையும் மருப்பு இழந்தனவே! வெந்திறற் கூற்றம் பெரும்பே துறப்ப எந்தை யாகுதல் அதற்படல் அறியேன்! அந்தோ! அளியேன்! வந்தனென் மன்ற! என்ஆ குவர்கொல் என்துன்னி யோரே! மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் ஆர்அஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக் கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரைஅளந் தறியாத் திரைஅரு நீத்தத்து அவல மறுசுழி மறுகலின் தவலே நன்றுமன்! தகுதியும் அதுவே! (புறநானூறு 238) பிணம் உள் இட்டுக் கவிழ்த்துப் புதைத்த சிவந்த சாடியின் குவிந்த முதுகின்மேல்இருந்த சிவந்த செவியினவான ஆண் கழுகும் பொகுவற் பறவையும் அஞ்சுதல் இல்லனவாய், வல்லாய்க் காக்கையுடனுங் கோட்டானுடனுங் கூடிக்கொண்டு, பேய்க்கூட்டத்தொடு தாம் வேண்டிய வாறெல்லாம் நடமாடுஞ் சுடுகாட்டிற்போய்ச் சேர்ந்தனனே மறவர்க்குரிய நறவினை விரும்பும் வெளிமான்! அவனை யிழந்தமையாற் றம்முடைய கைகளிலுள்ள வளையலைக் கழித்து விட்ட அவன்றன் கற்புடை மகளிரைப்போலப் பழைய அழகு சோர்ந்து புலவோர் சுற்றமும் ஒளிமழுங்கின தொகுதியாய் உள்ள கொடைமுரசு போர் முரசுகளும் மேற்போர்த்த தோல் கிழிந்தன! செலுத்தும் பாகர் இல்லாமையால் மலைபோன்ற யானைகளுந் தம்முடைய கொம்புகளை இழந்தன! கொடிய வலிமையினையுடைய கூற்றுவன் பெரியதொரு சாக்காட்டினை உண்டுபண்ணின னேனும் என் அப்பனாகிய வெளிமான் ஆவது அதனைத் தப்பாமல் அதன் கண்ணே அகப்பட்டது ஏனோ அறிகிலேன்! ஐயோ! எளியேன் இத் துயரத்தைக் காணவோ வந்தேன்! என்னை யடைந்த என் சுற்றத்தார் இவ் வள்ளற் பெருமான் இறந்து பட்டமை அறிந்தால் என்ன துன்பம் உழப்பார்களோ! மழைகாலத்து இரவிலே ஒரு மரக்கலமானது கடலிற் கவிழ்ந்துவிட அதன்கண் இருந்த கண் இல்லாத ஊமையன் ஒருவன் பொறுத்தற்கரிய துன்பம் மிக்க நெஞ்சுடனே அக் கடலின்கண் அமிழ்ந்தாற் போல, எல்லையளந்தறியப் படாததும் அலை யில்லாததுமான துன்பவெள்ளத்தின் சுழலிற் கிடந்து சுழன்றுவருந்துதலைக் காட்டினும் இறந்துபடுதலே நல்ல தாகும்! நமக்குத் தகுதியாவதும் அதுவேயாகும்! என்பன இப் பாட்டிற் சொல்லப்பட்ட பொருளாகும்; இதன்கண் அடங்கிய கருத்துக்களின் நுட்பங்களை எடுத்துரைக்கப் புகுந்தால் இது விரியும்; என்றாலும், ஒன்றிரண்டு காட்டுதல்வேண்டும். வெளிமான் இறந்ததனாற்றமது நெஞ்சத்தே பெருகுந் துயரினைப் புலப்படுக்கின்றுழித் தம் சுற்றத்தார் அவன் இறந்தமையறிந்தால் எத்துணைப் பெருந்துயர் உழப்பரென்பதனை நினைந்து மேலும் ஆற்றாராகின்றார் பெருஞ்சித்திரனார்; ஏனென்றால், இவர் வெளிமானுழைப்பெற்ற பெரும்பொருளை யெல்லாம் வறுமைப்பட்ட தம் சுற்றத்தவர்க்கே கொடுத்து உதவிசெய்து வந்தாரென்பது, மேலெடுத்துக்காட்டிய நின் நயந்துறை நர்க்கும் என்னுஞ் செய்யுளால் நன்கு விளங்குதலால் வெளிமானது சாக்காட்டினைக் கேட்டு அச் சுற்றத்தார் ஆவி சோர்ந்து அயர்தல் திண்ணமேயாகலின், வெளிமான் தமக்குதவியாற்றியதைப் பின்னுந், தம் வழியே தம் ஏழைச் சுற்றத்திற் குதவியாற்றியதை முன்னும் வைத்து நினைந்து வருந்தும் இவ்வாசிரியரது அருள்நெஞ்சப் பான்மையினை உற்றுநோக்குங்கால் இவர் தாமுறு துயரினும் பிறருறு துயரையே பெரிதுநினையும் பெற்றியினரென்பது இனிது விளங்காநிற்கின்றது, மேலுங், கண்ணில்லாத ஊமையன் ஒருவன் தான் ஏறியிருந்த மரக்கலங் கவிழக் கடல் நீரில் அமிழ்ந்துங்காற்பட்ட துயரினை இவர் எடுத்துக் கூறுதலி லிருந்து, இவர் வெளிமான் இறந்துபட்டதனை ஆற்றாது எவ்வளவு துன்புற்றாரென்பது தெற்றெனப் புலனாகின்றது. ஊமைகளா யிருப்பவர்க்கு வாய் பேசுதல் இயலாமையுடன் காதுங் கேளாது; பிறர் பேசுவன கேளாமையாலும், பிறரொடு தாம் ஏதும் பேசுதல் கூடாமையாலும் அவர் படுந்துயர் இவ்வளவினதன்று; வாயுங் காதும் இல்லையாய் ஒழியினுங், கண்ணாவது இருந்தால், பிறர் கூறுவனவற்றை அவர் குறிகளாலாயினுங் கண்டு கொள்வர்; தாம் தெரிவிக்க வேண்டுவனவற்றையும் பிறர்க்குக் குறிக்களால் தெரிவிக்கமாட்டுவர். ஆனாற், கட்பார்வையும் ஒருங்கு இழந்த ஊமையர்களோ எவரையும் எதனையுங் காண்டலும் இயலாது, எவரொடு பேசுதலும் இயலாது, பிறர் கூறுவதைக் கேட்டலும் இயலாது, அத்தகைய ஊமர் தமக்குரியவ ருதவியை முழுதும் பெற்றே தமது வாழ்நாளைச் சொல்லொணாப் பெருந்துன்பத்திற் கழிக்க வேண்டியவராவர். இப் பெற்றியினரான கண்ணில் ஊமர் பகற்காலத்திலேயே கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலங்கவிழப் பெற்றால் அதனுள் அழுந்தாமற் றப்புதல் அரிது; ஏனெனில், அருகு மிதக்கும் ஏதேனும் ஒரு மரத்துண்டத்தைப் பற்றிக்கொள்ளுமாறு எட்ட இருந்து கூவுவார் ஒலியைத் தம் செவி கேளாமையாலும், பிறரைத் தமக்கு உதவிசெய்யுமாறு கூவியழைத்தல் தம்மால் இயலாமையாலும் மரக்கலங் கவிழ்ந்து வீழ்ந்த ஊமையர் தப்புதல் அரிதேயாம்; என்றாலும், அது கவிழ்ந்தது பகற்காலமாயிற் கிட்டவோ எட்டவோ இருப்பவர் அவரது நிலையினைக் கண்டு இரங்கி நீந்திவந்து அவரைக் கைகொடுத்தெடுத்துத் தப்புவித்தலும் ஒரோவழிக் கைகூடினுங் கூடும். ஆனால், அது கவிழ்ந்தது இரவு காலமாயின் அவ்வூமை யரின் நிலையைக் கண்டு பிறர் அருகுவந்து அவர்க்குதவி செய்தல் இயலாது; இன்னும், நிலவொளி விளங்கும் இராக்கால மாயிற் பிறர் அவர்பால் வந்து உதவி செய்தல் ஒரோவழிக் கூடினுங் கூடும்: மற்று, நிலவொளியும் மறைபட்ட மழைக் காலத் திராப்பொழுதானாலோ, கடலிற் றத்தளிக்கும் அவ்வூமையரின் நிலையை அயலவர் கண்டு இறங்கி வந்து அவர்க்குதவி புரிதல் எவ்வாற்றானும் இயலாது. இயலாதாகவே, ஒரு சிறு துணையும் அற்றுத், தாம் தம் உயிர் இழத்தலைத் திண்ணமாய் உணர்ந்த கண்இல் ஊமர் கடற்பட்ட துன்பத்தின் மிகுதி உணருந்தோறும் உணருந்தோறும் மிகவுந் திகில் கொள்ளத்தக்கதாய் அளவிடப்படாததாயிருத்தல் உணர்வொருங்கிப் பார்ப்பார் எவர்க்கும் நன்கு விளங்கற்பாலதேயாம் இன்னும், மரக்கலம் உடைந்த தென்னாமற், கவிழ்ந்த தென்ற நுட்பத்தினை ஓருங்கால், மலைகளிற் றாக்கி அஃது உடைந்ததாயின் உடைந்த அதன் துண்டு ஒன்றனை அவ்வூமன் தானே பற்றிக்கொண்டு தப்புதலுங் கூடும்; மற்று உடையாமற் கவிழ்ந்த மரக்கலத்தைக் கொண்டோ அவ்வாறு தப்புதல் ஒரு சிறிதும் ஏலாதென்பது ஆசிரியர் அறிய வைத்தமை புலனாம். தமது வாழ்நாளெல்லாந் தம்மையுஞ் தஞ் சுற்றத்தாரையும் வைத்து நன்கு பாதுகாத்துப் போந்த வள்ளற் பெருந்தகையான வெளிமான் இறந்துபட்டமையால், தாமுந் தஞ்சுற்றமும் ஏதொரு பற்றுக்கோடுங் காணாது இறந்துபடும் நிலையில் அலமரும் அவ் வியல்வினை ஆசிரியர் பெருஞ்சித்திரனார், கண்ணில் ஊமன் மாரியிரவிற் கடற்பட்ட நிகழ்ச்சிக்கண் வைத்துப் புலப்படுத்திய நுட்பமுந் திறனும் ஆராயுந் தோறும் பெருவியப்பினைத் தருகின்றன; ஈதன்றோ நல்லிசைப் புலமை! ஈதன்றோ தம்முள்ளத்துறு காணாநிகழ்ச்சியினைப் பிறர்க்குக் காட்டுமாறு! அது நிற்க. இனிப், பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப்புலவர் தமது தமிழ்மொழியை ஆழ்ந்து கற்றது, அதுகொண்டு பொருள் ஈட்டுதற்குமட்டும் அன்று; அரசியலில் உயர்ந்த நிலைமைகளைப் பெறுதற்கும் அன்று. உலக இயற்கை மக்களியற்கைகளில் ஆழ்ந்து மறைந்தும் மேன்மிதந்து விளங்கியும் உள்ள அரும்பொருள்கள் நுட்பங்கள் அழகுகளையெல்லாம் ஒருங்கினி தறிந்து, அவ்வாற்றால் தமது அறியாமை நீங்கி அறிவு விளங்கி மேன்மேற் பெருகும் இன்பத்திற் றிளைத்தற்கேயாம். ஆகவே, அக் காலத்தில் அரசர் முதல் ஏழையெளியவர் ஈறான எல்லாருந் தமிழறிவு நிரப்புதலிற் பெருவிழைவும் பெருமுயற்சியும் முனைந்தவராயிருந்தனர்; அக் காலத்தில் ஆண்பாலா ரயன்றிப் பெண்பாலாருந் தமிழ்ப் புலமையில் தலைசிறந்து நின்றனர்; அக் காலத்தில் இன்ன சாதியார் கற்கலாம்; இன்ன சாதியார் கற்கலாகாது என்னும் வரையறை சிறிதுமே யிருந்திலது; அக் காலத்திற் பிறப்புக்காவது குலத்திற்காவது குடிக்காவது செல்வத்திற்காவது நிலைக்காவது உயர்வு கொடாமற் கல்விக்குங் கற்றவர்க்குமே உயர்வு கொடுத்து வந்தனர்; அக்காலத்திற் கற்றவர்கள், அரசராயிருப்பினும் எளியராயிருப் பினும், உயர்குலத்தவராயினும் உயர்வில் குலத்தவராயினும், உயர்நிலை யிலிருப்பினும் உயர்வில் நிலைலிருப்பினும், அவைபற்றி உயர்த்தப்படுதலுந் தாழ்த்தப்படுதலும் இன்றி, ஏதொரு வேற்றுமையும் இன்றி எல்லாராலும் பாராட்டப்பட்டு வாழ்ந்தனர். இத் தன்மைத்தாகிய பழைய புலவர் நிலை யினை, ஆரியப்படை கடந்த மன்னர்பெருமானாகிய பாண்டியன் நெடுஞ் செழியன் பாடிய, உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்பு ஒரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடை யோன்ஆறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே (புறநானூறு, 183) என்னும் அருந்தமிழ்ப் பாட்டினால் நன்கறிந்து கொண்மின்கள்! இவ் விழுமிய செய்யுளை இயற்றிய பாண்டியன் நிகரில்லா வெற்றிவேந்த னாதலோடு செந்தமிழ்ப் புலமையிலும் எத்துணைச் சிறந்த திறம்பெற்றவனா யிருக்கின்றான்! இவனும் இவன் காலத்து அரசர்களுஞ் செல்வர்களு மெல்லாங் கல்வியின் மிக்க புலவரையன்றி வேறெவரையுங் துணை கொளாது தமது அரசியலையும் வாழ்க்கையும் நடாத்தின பான்மை, ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அவருள், அறிவுடையோன் ஆறு அரசன் செல்லும் என்று அவர் கிளந்தெடுத்துக் கூறியவாற்றால் விளங்குகின்ற தன்றோ? அவர்கள் சாதி யுயர்வு தாழ்வு கருதாது, கல்வியறி வினையே முழுதும் பாராட்டிக் கீழ்ச்சாதியிற் பிறந்தாரையும் மேற்சாதியாரினும் மேலாக வைத்து அவர் கூறிய உறுதிமொழிவழியே ஒழுகினரென்பதூஉம், வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கட் படுமே என்னு அப்பாண்டி வேந்தன் பகர்ந்தவாற்றால் நன்கறிகின்றனம் அல்லமோ? அஞ்ஞான்றை வேந்தர்கள் அறங்கூறுந் தமது அவைக்களத்தே, கல்வியறி வாற்றலிலும் நடுவுநிற்றலிலுந் திறப்பாடு வாய்ந்தாரையே இருத்தி முறை செய்து வந்தனர். இவ் வரும்பெருஞ் செங்கோலரசு முறை வழாப் பேராண்மை, ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் பகைவர்மேற் படையெடுத்துச் செல்லுங்கால் வஞ்சினங்கூறிய வெஞ்சினப் பாட்டில், அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத் திறன்இல் ஒருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக! (புறநானூறு) எனப் போந்த பகுதியில் எத்துணை உரமாக எடுத்துரைக்கப் பட்டிருக் கின்றது! இப் பூதப்பாண்டியன் மனைவி இவனைப் போலவே தமிழ்ப் புலமையின் மிக்கவளாயிருந்தமை முன்னரே யெடுத்துக்காட்டப்பட்டது. இன்னும், ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் என்னும் மாதர்கள் செந்தமிழ்ப் புலமையில் மிகச் சிறந்து விளங்கினமை புறநானூற்றின்கண் அவர்கள் பாடிய பாட்டுக்களால் தெற்றென விளங்காநிற்கின்றது. குறச்சாதியிற் பிறந்த இளவெயினியர் இருவருங், குயச்சாதியிற் பிறந்த வெண்ணிக்குயத்தியாரும், மறச் சாதியிற் பிறந்த காவற்பெண்டும், பாணச்சாதியிற் பிறந்த ஔவையாரும் பிறரும் நிகரற்ற நல்லிசைப்புலவராய் வயங்கினமையும், அவரெல்லாரும் ஏனை நல்லிசைப் புலவராலும் அரசர்களாலும் ஏதொரு வேறுபாடுமின்றிப் பாராட்டப்பட்டமையும் ஓருங்காற், கீழ்ச்சாதியிற் றோன்றிய பெண்பாலாருங்கூட அப் பண்டைநாளில் எவ்வளவு கல்வியிற் சிறந்தவராய், எவ்வளவு நாகரிகத்தின் மிக்கவராய் விளங்கின ரென்பது புலனாகின்றது! இது கொண்டு, அஞ்ஞான்றைக் தமிழ்மக்கள் எவ்வளவு அறிவும் எவ்வளவு அன்பும் எவ்வளவு அருளும் எவ்வளவு அறமுங் கனிந்த பயன்மிகு நாகரிகவாழ்க்கை வாய்ந்தவராய்ப் பொலிந்தனரென்பதும் புலனாகின்றது! கல்வியறிவிற்சிறந்த பெண்மக்கள் உறையும் நாடு கடவுளர் உறையும் வான்நாடு ஆகுமேயல்லால், அவ்வறிவில்லா மாக்கள் திரியும் மண்ணாடு ஆகாதென்று தெளிமின்கள்! பண்டைநாளில் ஆண்பாலாரேயன்றிப் பெண் பாலாருங் கல்விப்புலமையிற் சிறந்து இத் தமிழகத்தில் விளங்கினாற்போல வேறெந்த நாட்டகத்தும் விளங்கியதில்லை. அஞ்ஞான்று அங்ஙனங் தமிழ்ப்புலமையிற் சிறந்து திகழ்ந்த ஆண்பெண்பாலார் ஒருவர் இருவர் சிலர் அல்லர், எண்ணிறந்ததோர் ஆவர்; இவ்வுண்மை, பழைய தமிழ் நூல்களைச் சிறிதாராய் வாரும் எளிதில் அறிவர். இனிக் குடிமக்களேயன்றி, அக்காலத்திருந்த தமிழ் மன்னர்கள் அத்துணைப்பேருந் தமிழ்க்கல்வியறிவிற் சிறந்த புலவோராய் மிளிர்ந்தமை மேலெடுத்துக் காட்டிய பூதப் பாண்டியன் பாட்டாலும் பாண்டியன் நெடுஞ்செழியன் பாட்டாலும் நன்கு விளங்கற்பாலதேயாம். இன்னும் அதனை யறிதல்வேண்டின், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் பகைவர்மேல் சினந்துபாடிய வஞ்சினப்பாட்டை ஈண்டெடுத்துக்காட்டி விளக்கவே அது விளங்கும்; அது வருமாறு: நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்; இளையன் இவனென உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோடு ஒருங்ககப் படேஎனாயிற், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக! ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைக என் நிலவரை! புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே! (புறநானூறு. 72) என்னும் இச் சிறந்த பாட்டைப் பாடி வஞ்சினங் கூறுகின்றுழி, இம் மன்னர்பிரான் ஆண்டில் இளைஞனாயிருந்தன னென்பது இதன் இரண்டாம் அடியினாற் புலனாகின்றது. இவ்வரசிளை ஞனை இளைஞனென்று இகழ்ந்தும், இவன் அரசாண்ட நாட்டைக் குறைத்துப் பேசியும் அஞ்ஞான்றிருந்த தமிழ் வேந்தர்கள் சிலர் இவனுக்குப் பெருஞ்சீற்றத்தை விளைத் தமையால், இவன் அவர்களோடு போர்புரிந்து வெல்வதுகுறித்து இதனை வெகுண்டு பாடினன். இவன் தன் அரசின்கீழ் வாழும் குடிமக்களின் நலத்தையும், அவர் தமது செங்கோன்மையை நெஞ்சாரப் புகழ்ந்து பேசுதலையுமே முதன்மையாய் விரும்பினவ னென்பது என் நிழல் வாழ்நர் சென்னிழற் காணாது என்பது முதலாக முதற்சொல்லிய மூன்றடிகளால் தெற்றென விளங்காநிற்கின்றது. அதனை யடுத்து இவன் இரண்டாவதாகக் கூறிய வஞ்சினவுரையால், இவன் செந்தமிழ்ப்புலவரது சேர்க்கையைப் பெரிது விழைந்தவனென்பதும், அஞ்ஞான்று தன் அவைக்களத்திருந்த புலவருள்ளெல்லாம் மதுரைக்காஞ்சி என்னும் முதுமொழி நூல் இயற்றிய மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் பெரும்புலவரையே தலைவராக வைத்துப் பாராட்டின னென்பதும் புலனாதல் காண்க. இனி, அதன்பின் மூன்றாவதாக இவன் எடுத்துரைத்த ஆணை மொழியால், வறுமையால் வாடிவந்த இரவலர் துன்பத்தைக் கண்டு இவன் சிறிதும் மனம்பொறாது அவரது வறுமைதீர நிறையக் கொடுக்கும் வள்ளற்பெருந்தகையாதலுந் தெள்ளிதிற் பெறப்படு கின்றதன்றோ! இவன் பகர்ந்த இம் மூன்று வஞ்சின மொழி களாலும், இவன் தான் மேற்கொண்ட அரசியற் கடமையினை நன்குணர்ந்த செங்கோன் மன்னனாதலொடு, மக்களின் புறநலனைத் தருஞ் செங்கோலரசின் திறம்போலவே அவர் தம் அகநலனாகிய அறிவுவிளக்கத்தைத் தரும் புலவர் கூட்டத்தையும், இவ்வகப்புற நலன்களால் விளையற்பாலவாம் ஈகையறங்களையும் இவன் வேண்டியுஞ் செய்தும் நின்றமை நன்கு புலனாகின்றதன்றோ! இம்மன்னர் பெருமான் தான் தமிழ்க்கலைவல்ல நல்லிசைப்புலவனாய் வயங்கியதொடு, தன்போற் சிறந்த தமிழ்வல்ல சான்றோரையுந் தன் அவைக்களத்து ஒருங்கு இருத்தி, அவர் தம்மால் தனித் தமிழ்மொழியை வளம்படுத்துவந்த அரும்பெருஞ்செயலுந் தமிழ்மக்களெல்லாராலும் என்றும் நினைந்து நன்றி பாராட்டுதற் குரித்தாகும். இனித், தமிழ்வல்ல சான்றோரைப் பழைய தமிழ் வேந்தர்களிற் பலர் தம்மோடொத்த நிலையில் வைத்து அரும்பெருநட்புச் செய்தும், மற்றும் பலர் அவரைத் தம்மினும் மேலான நிலையில் வைத்து அவரைத் தெய்வமாக வழிபட்டுப் போற்றியும் வந்த வரலாறுகளும் பல; அவற்றுள் ஒன்றிரண்டு ஈண்டெடுத்துக் காட்டுவாம் நல்லிசைப்புலவர்களான பிசிராந்தையார்க்கும் பொத்தியார்க்கும் ஆருயிர் நண்பனாய் விளங்கிய கோப்பெருஞ்சோழன் என்னும் வேந்தர்பெருமான் புகழ் பண்டைத் தமிழிலக்கிய மாப்பெரும் பொருப்பின் குவட்டின்மிசை மங்கா - மாமணியாய்த் தங்கி மாப்பேரொளி வீசாநிற்கின்றது இவன், பாட்டும் ஆட்டமும் வல்லார்க்கு நிரம்பக் கொடுக்கும் வள்ளன்மையின் மிக்கோனென்பதும், அறநெஞ்சம் உடையாராற் புகழப்பட்ட செங்கோலரசு செலுத்துபவனென்பதும், அறிவுமிக்க பெரியாராற் புகழ்ந்து பேசப்படும் அன்பிற் சிறந்த அண்ணலா மென்பதுந், தனக்குரிய மகளிர் பால் மென்றன்மை வாய்ந்தவனாய் ஒழுகுபவ னென்பதுந், தன்னொடு மாறுபட்ட வலியுடையார்க்குத் தானும் வலிது செய்யுந் தறுகணாண்மை யுடையனென்பதுங், குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிட மாவனென்பதும், நல்லிசைப் புலவரான பொத்தியார், பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே, ஆடுநர்க் கீத்த பேரன் பின்னே, அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே, திறவோர் புகழ்ந்த திண்ணன் பின்னே, மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து, துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் (புறநானூறு 221) என அவன் நடுகல்லாய் நிற்றல்கண்டு உள்ளந்தேம்பிப் பாடிய பாவால் இனிதறியக்கிடக்கின்றன. இத்துணைச் சிறந்த இச் சோழமன்னன் தன்புதல்வர் இருவர் தன்னைப் பகைத்துத் தன்னொடு பொரவந்தமையால், இனித் தான் உயிரோடிருத்தலாகாதென இம்மை வாழ்வை வெறுத்துத் தன் அரசுதுறந்து வடநாட்டின்கட் சென்றோ அல்லது வடக்கு நோக்கியிருந்தோ தன்னுடம்பை மெலிவித்து உயிர்நீத்தலை மேற்கொண்டான். அஃது அப்போது அவன் பாடிய செய்குவங் கொல்லோ நல்வினையெனவே என்னும் அரிய செய்யுளில், மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறநானூறு 214) எனப்போந்த அடிகளால் அறியப்படும் இவ்வாறு அம் மன்னன் வடக்கிருந்தவழித், தான் அங்ஙனம் உயிர் நீத்தற்கு வடக்கிருத் தலைக் கேட்ட துணையானே தன் ஆருயிர் நண்பரான பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான், தன்னைப் பிரிந்திருக்க லாற்றாது தன்பால் வந்து தாமுந் தம் இன்னுயிர் நீப்பரென அவன் கூற, அவன்பாலிருந்த சான்றோர், அவர்வாரார் என எதிர்மறுத்துரைப்ப, அதற்கு அச் சோழ வேந்தன், தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும் பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே (புறநானூறு. 215) என்று தனக்கும் அவர்க்குமுள்ள பிரியாநட்பின் கெழுதகைமை யினை அவர் அறிய எடுத்தோதினன். அவன் ஓதியவாறே பின்னர்ச் சிலநாட்களிற் பிசிராந்தையார் தம்மாருயிர் நண்பனான கோப்பெருஞ்சோழன் தன்னின்னுயிர் நீத்தற்கு வடக்கிருந்தானென்பது கேள்வியுற்று அவன்பாற் போந்து அவனொடு ஒருங்குயிர் நீத்தனர். இவ் வரும்பெருங்கேண்மை நிகழ்ச்சியை நேரிருந்து கண்டு வியந்து ஆற்றராகிய பொத்தியார், நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்! அதனினும் மருட்கை யுடைத்தே பிறன் நாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி இசைமர பாக நட்புக்கந் தாக இளையதோர் காலை ஈங்கு வருதல்! வருவன் என்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே! அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையுஞ் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னா வதுகொல்! அளியது தானே! (புறநானுறு 217) என நெஞ்சம் நெகிழ்ந்துரைத்த செய்யுளால் அதன்உண்மை ஐயுறுதலின்றித் துணியப்படும். இவ்வாற்றாற், கோப்பெருஞ் சோழவேந்தன் தன் ஆருயிரேயெனப் பிசிராந்தையாரைக் கேண்மை கொண்டிருந்தமையும் அவரும். அவனொடு பெருநட்புச் செய்திருந்தமையுந் தமிழ்மக்களாவா ரனைவருந் தம்முள்ளத்திருத்தி நினைந்து நினைந்து மகிழற்பாலார். இன்னும் பிசிராந்தையாரொடு மட்டுமேயன்றிப், பொத்தியாரோடுங் கோப்பெருஞ்சோழன் ஆருயிர்க் கேண்மை கொண்டொழுகினமை, ‘கோழியோனே கோப்பெருஞ் சோழன் பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇ வாயார் பெருநகை வைகலும் நக்கே’ (புறநானூறு 212) என்னும் பிசிராந்தையார் செய்யுளால் நன்கு தெளியப்படு கின்றது, உயிர்நீத்தற்கு வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனைப் பிரியகில்லாது பொத்தியாரும் ஒருங்குயிர் நீத்தற்கு அவன்பாற் போந்தனரென்பதூஉம், அப்போது பொத்தியார் மனைவி கருக்கொண் டிருந்தமையால் அதனை யறிந்த அவ் வேந்தன் “மகன் பிறந்தபின் வாரும்!” என்று அவரைப் போக்கி உயிர்நீத்துவிட, அவருந் தமக்கு மகன் பிறந்த பின் மீண்டுவந்து தாமும் அவன்பக்கத்தே கிடந்து உயிர்விடுதல் குறித்து இடம் வேண்டினரென்பதூஉம் அவர் அப்போது சொல்லிய, “அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாஎன என்இவண் ஒழித்த அன்பி லாள! எண்ணா திருக்குவை அல்லை! என்இடம் யாது? மற்றிசைவெய் யோயே!” (புறநானூறு222) என்னும் உருக்கமான செய்யுளால் உணரப் பெறுகின்றேம். இவ்வாறெல்லாந் தமிழ்ப்பெரும் புலவர்க்கு ஆருயிர் நண்பனாயுந், தானும் நல்லிசைப் புலமைமிக்க நாவலனாயும் விளங்கிய இக் கோப்பெருஞ் சோழவேந்தன், தன்னொடு மாறுபட்டுத் தன்மேற் போர்க்குவந்த தன்புதல்வர் இருவர் மேற் சீற்றங்கொண்டு தானும் அவர்மேற் போர்புரிதற்கு எழுந்தன னென்னுஞ் செய்தியை உணருங்கால் எவர்க்குத் தான் வியப்புண்டாகாது! தந்தை செய்த நன்றியை மறந்து அவனொடு மாறுகொண்டு நிற்கும் புதல்வர்கள் இக் காலத்துத் தான் உளர் என்று நினைக்கும் நம்மனோர், அப் பழைய நல்ல காலத்தும் அத்தகைய நன்றிகெட்ட புதல்வர்கள் இருந்தன ரென்பதை அறியுங்கால் வியப்படையாமல் இருத்தல் ஏலுமோ! தீய, நன்றிகெட்ட புதல்வர்களும் உடன் பிறப்பினரும் எக்காலத்தும் எவ்விடத்தும் உளர். ஈகையிற் சிறந்த அருள் உள்ளம் வாய்ந்த வள்ளற்பெருமானுங், கல்வியறிவின்மிக்க சான்றோரைத் தன் இன்னுயிரெனுங், உண்மையாய்க்கொண்டு ஒழுகினவனும், நல்வினை செய்தலையே தன் வாழ்நாள் முழுதுங் கடப்பாடாகக் கொண்டவனுந், தானுந் தமிழ்க்கல்வியறிவில் முதிர்ந்து நிற்வனும் ஆன இச் சோழவேந்தனைத் தமக்குத் தந்தையாகப் பெற்ற புதல்வர் நல்லறிவும் உள்ளன்பும் நல்வினையும் வாய்ந்த வராயிருந்தால், தாம் பெற்ற அப் பெறலரும் பேற்றின் அருமை பெருமையினை யுணர்ந்து, தம் தந்தைபால் எத்துணையன்பும் எத்துணை நன்றியும் உடையராய் நடந்திருத்தல் வேண்டும்! ஆனால், அப் புதல்வர் செய்த தீவினையோ, அன்றி அவர்க்குள்ள இறுமாப்போ, அன்றி அவர் தஞ் சீர்திருந்தா இயற்கையோ அவரை அவ் விழுமிய தந்தைபால் அன்பும் நன்றியும் இல்லாமற்செய்ததோடு, அவர் அவனொடு கலாய்த்து அவனைத் தாக்குதற்கும் அவரை ஏவியது! இப் புதல்வர் செயல் கொடிது! கொடிது! இவரது கொடிய செயலை நினைக்குங்கால் நல்லார் எவர்க்குத்தாம் நெஞ்சம் இரண்டாய்ப் பிளவாது! இத்துணைத் தீயராய் இருந்தமையாற்றான், ஆன்றமைந்தடங்கிய அறவுள்ளம் வாய்ந்தவனான இம் மன்னர்பிரான், அவ் விருவரையுந் தன் புதல்வரென்றும் பாராது செயிர்த்து அவர்மேற் போர்செய்தற் கெழுந்தனன். இங்ஙனம் புதல்வருந் தந்தையும் ஒருவரையொருவர் பகைத்துப் போர்புரிதற்கெழுந்த எழுச்சி நடைபெற்றிருந்தால், அவ்விரு திறத்தாரில் ஒருவர் ஒருவரை அழித்து மகார் தந்தையை யழித்த அல்லது தந்தை மகாரையழித்த மாயா வசையினை இத் தமிழுலகில் வழிவழி நிறுத்தியிருப்பார்! ஆனால், அவ் வசை யுண்டாகாவாறு ஆண்டும் ஒரு நல்லிசைப்புலவர் அவ் விருதிறத்தார்க்கும் இடையே புகுந்து அக் கொடும்போர் நிகழவொட்டாமற் றடுத்து, வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழற்கு வழிவழி மங்காஇசையே பொங்கிப் பெருகுமாறு செய்தனர். செயற்கரிய செய்த அப் புலவர் பெருந்தகைக்கு, இத் தமிழுலகம் யாது கைம்மாறு செய்யவல்லது! அங்ஙனம் அரியது ஆற்றிய புலவர் பெருமான் புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்படுவர். தன் மக்கள் இருவர் தன்மேற் போர்க்கு வந்தமையறிந்து சீற்றங்கொண்ட கோப்பெருஞ்சோழன் தானும் அவர்மேற் போர்செய்தற்கு எழுந்தமை யறிந்தவளவானே, இந் நல்லிசைப்புலவர் உடனே அவ்வரசன்பாற் சென்று கீழ்க்குறித்த செய்யுளை நுவன்று, அவனது சினத்தை யாற்றி, அக்கொடும்போர் நிகழாவாறு செய்து, அமைதியையுண்டாக்கித், தமிழுலகிற்கு ஒருபெரும் புகழினை நிலைநிறுத்தினார். அவர் அப்போது கோப்பெருஞ் சோழனை நோக்கி நுவன்ற செய்யுள் வருமாறு; “மண்டமர் அட்ட மதனுடை நோன்றாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை யுலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் தொன்றுஉறை துப்பின்நின் பகைஞரும் அல்லர் அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்; நினையுங் காலை நீயும்மற் றவர்க்கு அனையை அல்லை அடுமான் தோன்றல்! பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்குஉரித் தன்றே! அதனால், அன்ன தாதலும் அறிவோய்! நன்றும் இன்னுங் கேண்மதி இசைவெய் யோயே! நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், நின்பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? அமர்வெஞ் செல்வம் நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே! அதனால், ஒழிகதி லத்தை நின்மறனே வல்விரைந்து எழுமதி! வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு ஏம மாகும்நின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே; வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்துஎதிர் கொளற்கே” (புறநானூறு 213) இவ் வருந்தமிழ்ப் பாவில் எத்துணை நயமாக உண்மையை எடுத்துச்சொல்லி இந்நல்லிசைப்புலவர் அம் மன்னன் கொண்ட சீற்றத்தைத் தணிக்கின்றார் காண்மின்! நின்மேற் போர்க்கு வந்தார் இருவரையும் யாரென நினைத்துப் பார்ப்பின் அவர் நினக்குப் பகைவராய் உள்ளவர் அல்லார்; நீயும் அங்ஙனமே அவர்க்குப் பகைவனாய் உள்ளவன் அல்லை; நீ இங்கே நின் அழியா நற்பெரும்புகழை நிலை நிறுத்தி வானுலகுசெல்லும் ஞான்று, நீ விட்டுச்செல்லும் அரசுரிமை அவர்க்கன்றோ உரியதாகும்? இது நீ அறிந்ததுதானே. இன்னும், நின்மேற் போர்க்கெழுந்த இளைஞர் தோற்றே போனாரானாலும், நின் செல்வத்தினை அவர்க்கல்லாமல் வேறியார்க்கு விடுவை? நீ அவரொடு பொருது தோற்றனை யானால், நின் பகைவர் மகிழ உலகில் வசையினையன்றோ நிறுத்துவை! அதனால், அவரொடு பொருதல் ஒழிக! வறுமையால் வருந்தி வந்தார்க்கு நின் அடிநிழல் அது தீர்த்துத் தண்ணருள் வழங்குமாறு செய்க! என்று அப் புலவர் பெருந்தகை அஞ்சாதெடுத்துரைத்த நயமிகு மெய்யுரை எத்துணைச் சீற்றங் கொண்டிருந்தாலும் அது தணித்து வேந்தர்க்கு அறிவு தெருட்டுந் திறனுடைத்தாய்த் திகழ்தல் எவர்க்கும் விளங்காற்பாலதேயாம். இவ்வறிவுரை கேட்ட பின்னரே கோப்பெருஞ்சோழன் தன்மக்கள் இருவர்மேலும் போர் செய்தலை யொழிந்து தன் அரசியலையும் அவர்க்கே விட்டுத் துறவு பூண்டானாதல் வேண்டுமென்பது உய்த்துணரப் படும். இங்ஙனம் அறிவு தெருட்டி அவ் வேந்தர் பெருமானுக்கு எஞ்சாப் பெரும்புகழை என்றும் நிலவவைத்த எயிற்றியனாரது புலமையன்றோ உண்மை நல்லிசைப் புலமையாகும்! இவரது உண்மையுரையைக் கேட்டு உளந்திருந்திய அரசன் அல்லனோ உண்மையரசனாவன்! தமிழ்ப் புலமை நிறைந்த இச் சான்றோரைத் தன்னிலும் மிகமேலாக நன்குமதித்து அவரது சொல்வழி நடந்து தனது மெய்ப்புகழை நிலைநிறுத்திய கோப்பெருஞ்சோழனை யொத்த தமிழ்வேந்தர் இஞ்ஞான்றிருந் தனராயின், இத்தமிழ்நாடுந் தமிழ்மொழியும் எத்துணை மேலான நிலையில் திகழ்ந்திருக்கும்! அந் நல்வினை இப்போதிவற்றிற் கில்லையே! இன்னுங், கோப்பெருஞ்சோழனே யன்றி, அஞ்ஞான்றிருந்த வேறுபல் தமிழ்வேந்தர்களுந் தமிழ்வல்ல நல்லிசைப் புலவர்களைத் தம்மினும் மேலாகப் பாராட்டி, அவர் கூறிய அறிவுரை கேட்டுத், தம்முட் செற்றம் ஒழிந்து அன்பிற்கெழுமி இனிது வாழ்ந்த உண்மை வரலாறுகள் மேலும் எத்தணையோ பல உள. அவற்றுள் இன்னும் இரண்டு ஈண்டு எடுத்துக் காட்டுதும். போராண்மையிற் றனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லானாய் அடலேறெனநின்ற சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னர் பெருமான் ஒருகால் தன் தாயத்தானாகிய நெடுங்கிள்ளி யென்பவன்மேற் சினங்கொண்டு, அவன் அரசாண்ட ஆவூரை முற்றுகை செய்தனன். அங்ஙனம் அவன் முற்றுகை செய்தவழி, நெடுங்கிள்ளி அரசன் அவனை யெதிர்ந்து அவனொடு போர் புரியாமல் தனது கோட்டை வாயிற் கதவினை அடைப்பித்துக் கொண்டு, தன் அரண்மனை யினுள்ளே வாளா இருந்தனன். அஞ்ஞான்று அவரிருவர்க்கும் நண்பராயிருந்த கோவூர் கிழார் என்னும் நல்லிசைப்புலவர் அடைத்திருந்த நெடுங்கிள்ளி யுழைச்சென்று, “இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய, வெய்துயிர்த்து அலமரல் யானை உருமென முழங்கவும், பால்இல் குழவி அலறவும், மகளிர் பூஇல் வறுந்தலை முடிப்பவும், நீர்இல் வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம; ஈங்கு இனிது இருத்தல்; துன்அருந் துப்பின் வயமான் தோன்றல்! அறவை யாயின் நினதெனத் திறத்தல்! மறவை யாயிற் போரொடு திறத்தல்! அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்நிலைக் கதவின் நீண்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவு உடைத்துஇது காணும் காலே.” (புறநானூறு 44) என்னும் அரிய அறவுரைச் செய்யுளை அஞ்சாது நுவன்று அறம் மறம் என்னும் இருவகை நிலையில் ஒன்றை அவ்வரசன் மேற்கொள்ளுமாறு அறிவுதெருட்டினமை பெரிதும் வியக்கற் பாலதா யிருக்கின்றதன்றோ? ‘போர்செய்தலாற் பல்லுயிர்க்கும் வரும் ஏதம் அஞ்சி அதனை ஒழிதல் வேண்டும் அறவுள்ளம் உடையையாயின், “இந்நகரும் என்னரசும் நின்னுடையனவே” என இனிது கூறிப் பகைத்த மன்னனோடு உறவுகொள்ளல் வேண்டும்; அஃது இசையாதேல் ஆண்மையுள்ளம் உடையை யாய்ப் பகைத்து எதிர்த்தவன்மேற் போர்க்கு எழுதல் வேண்டும்; இரண்டிலொன்றுஞ் செய்யாது, நின் கோட்டையின் அகத்துள்ள குடிமக்களும் பிறவுயிர்களும் அளவிலாத் துன்பம் எய்த, நீ கோட்டைவாயிற் கதவை யடைத்துக் கொண்டு நின் அரண்மனையினுள்ளே இனிது வைகுதல் நாணத்தக்கதாகும்’ என்று இப் புலவர் பெருமான் அவ் வரசனை இடித்துக்கூறிய அஞ்சா உள்ள உரம் நினையுந்தோறும் பெரியதோர் இறும் பூதினைப் பயவாநிற்கின்றது! பகைத்து நின்றவர் எளிய மக்கள் அல்லர்; சோழவேந்தர் குடியிற் பிறந்த சோழ மன்னராவர், இவர் தமக்கு இடையே சென்று அஞ்சியிருந்த மன்னற்கு இடிப்பான அறிவுரை பகர எவரேனும் மனந்துணிவரோ! அஞ்ஞான்றை அரசர்கள், செந்தமிழ்ப் புலமை சான்ற பெரியாரைத் தம்மினும் மேலாக நன்குமதித்து அவர்தம் ஆணைவழி யொழுகி வந்தமையானும், அஞ்ஞான்றை நல்லிசைப் புலவர்களும் அவர் அங்ஙனந் தமக்கடங்கி யொழுகுமாறு ஆன்றமைந்த அறவுள்ளமும் பொய்யாநாவும் வாய்ந்தாராய் நன்றுசெய்தலிலேயே கருத்தொருங்கி நின்றமையானும், அங்ஙனம் அரசரும் புலவரும் அரியதொரு நட்பின் கெழுதகைமையின் வழாது திகழலாயினர் என்க. பின்னும் ஒருகாற் சோழன் நலங்கிள்ளிவேந்தன் தன் தாயத்தானான நெடுங்கிள்ளியின் மற்றொரு நகராகிய உறையூரின் மேற் படையெடுத்துச் சென்று அதனை முற்றுகை செய்ய, நெடுங்கிள்ளி முன்போலவே அவன்மேல் எதிர்ந்து செல்லாது, தனது கோட்டைவாயிற் கதவை அடைத்துக்கொண்டு உள்ளிருந்தனன். அதுகண்டு அவ்விருவர்க்கும் நண்பரான ஆசிரியர் கோவூர் கிழார், அவரிருவர்க்குள்ளும் உண்டான பகைமை யொழித்து, அவரை உறவு கொள்ளச் செய்யுங் கருத்தினராய் அவ்விருவரையும் நோக்கிப் பிற்குறித்த பாவினைப் பகர்வாராயினர்: “இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன், கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன், நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! ஒருவீர் தோற்பினுந் தோற்பது உங்குடியே! இருவீர் வேறல் இயற்கையும் அன்றே! அதனாற் குடிப்பொருள் அன்று நுஞ்செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.” (புறநானூறு 45) ‘சோழர் குடியிற் பிறந்தவராகிய நீவிர் இருவீரும் ஆத்தி மாலையைச் சூடுவீராவீர்! நின்னைப் பகைத்து வந்தவன் பனந்தோடு புனையுஞ் சேரனும் அல்லன், வேப்ப மாலையணியும் பாண்டியனும் அல்லன்; நும்முள் ஒருவீர் தோற்றாமலும் அது நுமது குடிக்கு வடுவேயாகும்; இருவீரும் வெற்றி யடைதலும் இயலாது; ஆதலால் நீவிர் ஒருவரை யொருவர் எதிர்த்தல் நுமது குடிக்குத் தக்கதன்று; இவ்வாறு நீவிர் எதிர்த்தல் நும் பகையரசர்க்குப் பெரியதொரு மகிழ்ச்சியினைப் பயப்பதாகும்’ என்று மிக நயமாக அறிவுரைகூறி இப் புலவர் பெருமான் அவ் விருவரையும் நட்புக்கொள்ளச் செய்தமை நினையுந்தோறும் எவ்வளவு மகிழ்ச்சியினை நமக்குத் தருகின்றது! இன்னும், இப் புலவர் பெருந்தகையார் செய்த பேரருட் செயல் ஒன்று அருளொழுக்கம் உடையாரெல்லாராலும் எஞ்ஞான்றும் நெஞ்சம் நெக்குருகி நினைந்து வியந்து பாராட்டற்பால தொன்றாயிருத்தலின், அதனையும் இங்கே எடுத்துக்காட்டுதும். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் தனக்குப் பகைவனான மலயமான் என்னும் அரசன் பயந்த சிறுபிள்ளைகளைக் கொணர்ந்து, அவரைத் தனது யானைக்காலின்கீழ் இட்டுக் கொல்லத் துவங்கியவழி, அதனைக் கண்ட நல்லிசைப் புலவரான கோவூர் கிழார் பெரிதும் மனங்கலங்கி, அவ்வரசனை நோக்கி, “நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும், இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்; புன்தலைச் சிறாஅர்; மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ உடையர்; கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே!” (புறநானூறு 46) என்னும் மிக உருக்கமான செய்யுளைச் சொல்லி, அச் சிறார் அவனால் அங்ஙனங் கொல்லப்படாமற் றப்பும்படி செய்தனர். இவ் விழுமிய செய்யுளில் ஆசிரியர், அம் மன்னன் அச் சிறார் மேற்கொண்ட சினத்தை ஆற்றி, அவன் அவர்மேல் அருளுடைய னாமாறு செய்யுந்திறம் பெரிது! பெரிது! ஒரு வேட்டுவனால் துரத்தப்பட்டுவந்த ஒரு புறாவினைப் பாதுகாத்தல் வேண்டி, அப் புறாவின் எடைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையை அறுத்து அவ்வேட்டுவற்குக் கொடுத்த அருட்செல்வனான பழைய ஒரு சோழ மன்னன் வழியிற் பிறந்தவன் நீ’ என்று அவனை நம் புலவர் பெருமான் முன்னிலைப்படுத்து, அவனது நினைவைத் தன்முகப்படுத்தலி னாலேயே சிற்றுயிர்கள் மாட்டும் அத்துணை அருள் நெஞ்சம் வாய்ந்தார் மரபிற்றோன்றிய கிள்ளிவளவன் ஏனைப்பிறவியிற் சிறந்த மக்கட் பிறவியில் வந்தார்மாட்டு இன்னும் எத்துணை மிகுந்த அருள்நெஞ்சம் வாய்ந்தானாய் ஒழுகல் வேண்டுமென்பது குறிப்பித்தாராயிற்று; இன்னும், மக்கட் பிறவியுள்ளுஞ் சிறந்த மன்னர் குடியிற் றோன்றித், தாம் உண்ணும் உணவையும் வறுமைப்பட்ட புலவர்க்கும் பகுத்துக் கொடுத்து அவரை யோம்பும் மலையாமானாட்டு அரசர் குடியின் வழித்தோன்றல்கள் இச் சிறுவர் என்று அதன்பிற் கூறியவாற்றால், அத்துணை ஈகையறங்களிற் சிறந்த அரசர் வழிப்பிறந்த இவ்வருட் குழவிகளை யானைக் காலின் கீழ் இட்டுத் தேய்ப்பித்தல் அறமாகுமோ என்பது குறிப்பித்தாராயிற்று; அதுவேயுமன்றி, இச்சிறார் யானையைக் கண்டு அஞ்சியழும் இளங் குழவிப் பருவந் தாண்டி, அதனைக் கண்டு வியந்துநோக்கும் பிள்ளைமைப்பருவத்தினர் என்றமையாற், சிறிது சிறிது அறிவு கூடப் பெற்றுவரும் இம் மக்களைக் கண்டு கன்னெஞ்சம் உடையாரும் கரைந்துருகுவரன்றி அவரைக் கொலைசெய்தற்குக் கருதாரென்பது குறிப்பித்தாராயிற்று; அதன்மேலுந், தாம் பழகியறியாத புதியதோரிடத்திற் றாம் வந்திருத்தல் கண்டு இச்சிறுவர் வெருண்டு நோக்குகின்றனர் என்றமையால், இவ் விளம்பிள்ளைகள் அஞ்சி விழித்தலைப் பார்த்து எத்தகைய வரும் உளம் இரங்குவரென்பது குறிப்பித்தாராயிற்று; இத்துணையும் எடுத்துரைத்தபின் நம் ஆசிரியர் அச் சோழவேந்தனை நோக்கி, ‘யாம் சொல்லிய இச்சொற்களை நீ நின் கருத்துவைத்துக் கேட்டாயாயிற், பின்னர் நீ விரும்பியது செய்க’ என்று எத்துணை நயமாகக் கூறி அவனைத் தம் கருத்துக்கு ஒருப்படுவிக்கின்றார்! பாருங்கள்! இவ்வாசிரியர் கோவூர்கிழாரின் அருள் நெஞ்சப் பான்மையும், அவ்வர சிளைஞரைக் காக்கும் பொருட்டு அவர் துணிந்தெழுந்து அவரைக் கொல்லப்புக்க அரசனுக்கு எடுத்துக்கூறிய அறவுரையும் எவ்வளவு மேதக்கனவாயிருக் கின்றன! இவ்வளவு மேதக்க அறவுரையைக் கேட்ட பின்னுந் தெருண்டு மனந்திருந்தாத ஒரு மகன் இருப்பனோ! ஆதலால், அக் கிள்ளிவளவன் தான் கொண்ட சினமுஞ் செற்றமுந் தீர்ந்து, அம் மலையமான் மக்கண்மேல் அருள் பெருகி அவர்களை உயிர் பிழைப்பித்துக் காத்தனன். இங்ஙனமே, பண்டைக்காலத்திருந்த அஃகா அறநெஞ்சமும் பொய்யாநாவும் வாய்ந்த அருந்தமிழ்ப் புலவர்கள் செய்த செயற்கருஞ் செயல்களும், அவர்தம் அறவுரைகேட்டு ஆண்மையின்மிக்க வேந்தர்களும் அவர்க் கடங்கி அறநெறிச்சென்ற வரலாறுகளும் இன்னும் எத்தனையோ பல உள; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின், இது மிக விரியும். இனிப், பழைய தமிழ்வேந்தர்கள், தமிழ்ப்புலவோரைத் தலைவராகவும் தம்மை அவர்க்கு ஏவலராகவுங் கொண்டொழுகின வரலாறுகளும் பல உள. அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுதும். ஒருகால் மோசிகீரனார் என்னும் நல்லிசைப் புலவர், சேரமான்தகடூர் எறிந்த பெருஞ்சோரலிரும் பொறை என்னுந் தம்மரசனது அரண்மனையிற் பல இடங்களின் காட்சிகளையும் நோக்கிக்கொண்டு வருகையில், அவ்வரசனது போர்முரசம் ஒன்று மிகவுந் தூய்மையாக வைத்துப் பாதுகாக்கப்படும் ஒர் அறையினுள்ளே வந்து சேர்ந்தனர். அப்போது அப்போர் முரசம் நீராடி வருதற் பொருட்டு நீர்த்துறைக்குச் சென்றிருந்தது; அது வைக்கப்படுங் கட்டிலோ எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போலும் மெல்லணை யிடப்பட்டிருந்தது; அதுகண்ட, அப் புலவர் பெருந்தகை அக் கட்டிலின் மேல் ஏறிப் படுத்தார். படுத்த அவர் தம்மை அறியாமலே அயர்ந்துறங்கி விட்டனர். அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் போந்த சேரவேந்தன், தனது போர்முரசு இருத்தற்குரிய அக் கட்டிலின் மேன் மோசிகீரனார் நன்கயர்ந்து உறங்குதல் கண்டு, அவர்மேற் சிறிதுஞ் சினவானாய்ப், பின்னும் அவர்மீது அன்பு மிகப்பெற்று, அருகிருந்ததொரு கவரியினைக் கைக்கொண்டு, இன்னும் அவர் நன்றாய் உறங்குதல் கருதி, மென்காற்று அவர்மேற் பட வீசுவானாயினன். பின்னர்ச் சிறிது நேரத்திலெல்லாம் உணர்வுகூடி யுறக்கம் நீங்கி யெழுந்த மோசிகீரனார் தம்மருகே சேரவேந்தன் நின்றபடியாகத் தமக்குக் கவரிவீசுதலைக் கண்டு முதலில் திடுக்கிட்டு, அதன்பின் மனவமைதியுற்று, அவனது தமிழ்ப் பேரன்பின் றிறனை வியந்து, “மாசுஅற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார் பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வாரா அளவை எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை அதூஉஞ் சாலும் நற்றமிழ் முழுதுஅறிதல்; அதனொடும் அமையாது அணுக வந்துநின் மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென வீசியோயே வியலிடங் கமழ, இவண்இசை உடையோர்க் கல்லது அவணது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசில் நீ ஈங்கிதுசெயலே” (புறநானூறு) என்னும் அரிய செய்யுளை அவனை நோக்கிக் கூறினர். “இம் மென்பூஞ்சேக்கைமீது, அது மிகவுந் தூயதாக வைத்து நின்னால் ஒம்பப்படுதலை யறியாமல், ஏறித்துயின்று பெருந்தவறிழைத்த என்னை, நீ நின் வாளால் இருகூறாக வெட்டி வீழ்த்த வேண்டியிருக்க, நீ அங்ஙனஞ் செய்யாது விட்டது, நீ தமிழ் முழுதும் நன்கறிந்து அதனால் தமிழறிவு மிக்காரது அருமையினை இனிதுணர்ந்த பயன் அன்றோ! அதுவேயுமன்றி, எனதருகே வந்து நின்று நீ கவரி கைக்கொண்டு என்மேல் மெல்லிய குளிர்ங்காற்றுப்பட இவ்விடமெல்லாம் மணக்கும்படி வீசிய பரிசை எண்ணிப் பார்க்குங்கால், இவ்வுலகத்தில் இங்ஙனஞ் செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்றார்க்கல்லது பிறர்க்கு மறுமைக்கண் உயர்ந்த இன்ப உலகத்தில் இருத்தல் வாயாது என்பதனை நீ விளங்கக் கேட்ட பெற்றி புலனாகின்ற தன்றோ?” என்னும் இப் பாட்டின் கருத்துப் பொருள், அச் சேரமன்னனது தமிழறிவின் மாட்சியினையும், அவன் இம்மையிற் கற்றாரை யோம்புதல் முதலான செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்று விளங்குதலையும், அதனான் அவன் மறுமைக் கண்ணும் இன்னுஞ் சிறந்த இன்பவுலகத்தைப் பெறுதல் திண்ணமாதலையும் மிகவும் நயமாக உள்ளடக்கி நிற்றல் வியக்கற்பாலதாயிருக்கின்றது. இன்னும், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்கு நண்பராயுள்ள தமிழ்ப் புலவோர் ஒரோவொருகால் தம்மை வெகுண்டு ஏசிய வழியும், அதற்காகத் தாம் அவர்மேற் சினவாது பொறுமை யோடிருந்து, பின்னர் அப்புலவோராற் பாராட்டப்பட்ட வரலாறுகளும் பல. அவை தம்முள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுவாம். சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னர் பெருமானின் தம்பி மாவளத்தானுந், தாமப்பல் கண்ணன் என்னும் புலவர் பெருந்தகையும் வட்டாடிக்கொண்டிருந்தவழிப், புலவர் அவ் வாட்டத்தில் ஏதோ சூதுசெய்ய, அதுகண்டு பொறாத அவ்வரசிளஞ் செல்வன் வெகுண்டு தன்கையிலிருந்த வட்டை வீசியெறியத், தாமப்பல் கண்ணனார் “நீ சோழனுக்குப் பிறர்தாய் அல்லை,” என்று மிகவுங் கொடுமையான சொல்லால் அவனை இழித்துப் பேசினர். அக்கொடுஞ்சொற் கேட்டும், மாவளத்தான் அவர்மேற் சீற்றங்கொள்ளாது, வாளாநாணித் தலைகவிழ்ந்திருந்தனன். இதற்குட் சினந்தணிந்த அப் புலவர், தாம் சூதுசெய்தது கண்டு அவன் வெகுண்டது முறையே யாமென்றுந், தாஞ்செய் பிழையினைத் தாம் உணராமல் தாம் அச் சிறந்த அரசிளஞ் செல்வனை அத்துணைக் கொடுஞ் சுடுசொல்லால் இழித்துப் பேசியது பெரும் பிழையே யாமென்றும், இங்ஙனம் இருகாற்றவறிழைத்த வழியுந் தமக்கு ஏதுந் தீதுபுரியாது வாளா நாணியிருந்தது அவற்கு ஒரு பெரு மேதகு குணமேயாகுமென்றுந் தெளிய வுணர்ந்து, “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சின் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற் றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் கொடுமர மறவர் பெரும! கடுமான் கைவண் டோன்றல் ஐயம் உடையேன், ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது ஞநர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே! தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக், காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின், யானே பிழைத்தனென்! சிறக்கநின் ஆயுள்! மிக்குவரும் இன்நீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே” (புறநானூறு 43) என்னும் உருக்கமான செய்யுளை மனங்குழைந்துரைத்து, அவ்வர சிளஞ்செல்வன் உள்ளத்தைக் குளிரச் செய்தனர். இங்ஙனம் ஒரு புலவர் தாம் நடுவிகந்து பிழை செய்தும், அப் பிழையினைத் தாம் உணராமையேயன்றிப், பிழையேதுஞ் செய்யாத ஓர் அரசிளஞ்செல்வனையுங் கொடியதோர் இழிமொழியால் இகழ்ந்துபேசியது எத்துணைப் பெருஞ் சீற்றத்தை விளைக்கத்தக்கதாகும்! நிலையிற்குறைந்தவரே இத்தகைய குறும்பினைப் பொறார். அங்ஙனமாக, மாப்பெருஞ் செல்வத்திலுந் தலைமையிலும் உயர்ந்து திகழும் ஓர் அரசிளைஞன் அத் தகுதியில் செயலைப் பொறுத்திருப்ப தென்றால், அஃது அவனுள்ளம் அறிவாலும் அன்பாலும் எத்துணை மென்பதம் வாய்ந்து அமைதியுற்றிருக்க வேண்டு மென்பதனை இனிது புலப்படுக்கின்றது! இதனை அப் புலவர்பெருமானே மேற்கிளந்த செய்யுளில் “நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய்போல் நனிநா ணினையே!” எனக் கூறுமாற்றானும் இங்ஙனம் பெரும்பிழை செய்தாரையும் பொறுத்தல் அவ்வரசிளைஞன்றன் அரச குடியிற் பிறந்தார்க்குத் தொன்று தொட்ட விழுப்பேரொழுக்க மாய்ப் போதருகின்ற சிறப்பினை அவர் “தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்” எனத் தெரிக்குமாற்றானும் நன்குணரலாம். இதனையும் இதனை யொத்த வேறு பழைய வரலாறுகளையும் ஆய்ந்தறியுங்காற், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்குத் தமிழ் வல்லார் செய்த பெரும் பிழைகளையும் அகத்துக் கொள்ளாது, அவரை யென்றும் ஒரு தன்மையாகவே பாராட்டி வந்தன ரென்பதுங், கற்றாரேயன்றி மற்றையார் செய்த பிழைகளையும் அவர் மிகப்பொறுத்து எதனையும் ஆய்ந்தோய்ந்து பார்த்து முறை செய்யும் இயல்பினராய் ஒழுகினரென்பதுந் தெற்றென விளங்காநிற்கின்றன. இன்னும், பண்டைத்தமிழ் அரசர்கள் தமது உயிர் வாழ்க்கையினுந் தமிழ்வல்ல சான்றோரின் உயிர் வாழ்க்கை யினையே மேலதாகக் கருதி, அவரை நீடுஇனிது வாழச்செய்வ திற் கண்ணுங்கருத்தும் உடையராயிருந்த அரும்பெருந் தகைமையுஞ் சிற்சில வரலாறுகளாற் புலனாகின்றது. இதற்கோர் உண்மை வரலாற்றினை ஈண்டெடுத்துக் காட்டுதும். ஈகையிற் சிறந்த வள்ளற்பெருமானாகிய அதியமான் நெடுமான் அஞ்சி என்பான் நீண்ட உயிர்வாழ்க்கையினைத் தருவதாகிய ஒரு கருநெல்லிக்கனியினை ஒருகால் தான் அரிதிற் பெற்றனன். பெற்ற அது தன்னையுண்டார்க்கு உடல்உரம் மன உரங்களை உண்டாக்கி, அவரது உயிர்வாழ்க்கையினை மிகவும் நீளச் செய்வ தொன்றாதலால், அஃதெல்லார்க்கும் எளிதிற் கிடைப்ப தன்றென்றும், அத்துணை அரிதாகிய ஒருகனியினை அரசனாகிய தான் உட்கொண்டு நீண்டகாலம் உயிர் வாழ்வதினும் அறிவிற்சிறந்த தமிழ்ப்புலவர் ஒருவர் உண்டு நீடுவாழ்வதே உலகத்திற்குப் பெருநன்மை பயக்குமென்றும் நினைந்துபார்த்தான்; பார்த்துத், தான் அறிந்த தமிழ்வல்ல சான்றோரில் ஒளவையாரே மிகச் சிறந்தவரெனவும், அவர் அப்போது முதுமைமிக்குச் சாநாளைத் தலைப்படுதலால் அவர் அக் கருநெல்லிக்கனியினை அருந்திச் சாதல்நீங்கி நீடுவாழ்தலே நன்றாமெனவுங் கருதி, அதனை அவர் கையிற்றந்து அவர் அதனை உட்கொண்டு பின்னும் பல ஆண்டுகள் நன்குயிர் வாழுமாறு செய்தனன். வறுமையும் நோயும் இன்றி எல்லாச் செல்வங்களிலுந் தழைத்து இனிதுவாழும் ஒர் அரசன் பின்னுந் தான் வலியுடன் வாழ்தற்கு ஒர் அருமருந்து பெற்றனனாயின் அதனைத் தான் அருந்தி நீடினிது வாழ விழைகுவனேயல்லது, அதனைச் செல்வவாழ்க்கையில் இல்லாப் பிறர் ஒருவர்க்குக் கொடுக்கச் சிறிதுமே மனந்துணியான். ஏனெனில் மக்களேயன்றி ஏனைச் சிற்றுயிர்களுங்கூடத் தாம் உயிர்வாழவே விரும்பு மல்லது, தம்முயிரைத் துறந்து பிறவுயிரை வாழ்விக்கத் துணியா; இஃது எல்லா வுயிர்களிடத்துமுள்ள பொதுவியற்கையாகும். ஆனால், தம்முயிரையும் நீத்துப் பிறவுயிரைப் புரக்குந் தன்மையோ எல்லாவுயிர்களிடத்தும் அங்ஙனம் பொதுவகை யாற் காணப்படாமல், அறிவும் அன்பும் ஆற்றலும் மிக்க ஒருசில வுயிர்களிடத்துமட்டுமே ஒரோவொருகாற் சிறப்புவகையாற் காணப்படுவதாகும். ஆகவே, அதியமான் நெடுமான் அஞ்சி யென்னும் வள்ளற்பெருந்தகை தான்நீடுவாழ்தலை வேண்டாது, தமிழ்ப்புலமை சான்ற ஒளவையார் நீடுவாழ்தலை வேண்டித் தான் அரிதிற்பெற்ற அக் கருநெல்லிக்கனியினை அவர்க்கு அளித்த வள்ளன்மை பெரிது! பெரிது! அதனலான்றோ அவன் ஒளவையார் திருமொழியால், ‘வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி! பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல, மன்னுக பெரும! நீயே! தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே’ (புறநானுறு 91) என்று பாராட்டி வாழ்த்தப்பட்டனன்! ‘தன்னை யுண்டவர் வாழ்நாளை நீள்விக்கும் அரியதொரு நெல்லிக்கனியினை நீ அரிதிற் பெற்றும், அதனை யுட்கொண்டு நீ யுயிர்வாழ நினையாமலும், அஃது அத்துணை மேதக்கது ஆதலை எனக்குத் தெரிவியாமல் நின்னுளத்தே அடக்கிவைத்தும், யான் சாதல் நீங்கி நீடுவாழுமாறு அதனை எனக்கே அளித்தனை! அதனால், தேவர் பிறரெல்லாந் தாஞ் சாவாமைப்பொருட்டு ஒருமருந்து பெற்ற அதனை அயின்றுஞ் சாக்காடு தீர்ந்திலராகத், தன்னை அணுகினாரை உடனே கொல்லும் ஒரு கொடு நஞ்சை அத் தேவர்கள் சாவாமைப் பொருட்டுத் தான் அயின்றுந் தான் ஊறுபடாதிருந்த ‘நீலமணிமிடற்றொருவனாகிய சிவ பிரானைப்போல் நீ என்றும் நிலைபேறுற்று வாழ்வாயாக!’’ என்று ஒளவையார் இதன்கட் கூறிய வாழ்த்துரைப் பொருளை உண்ணுழைந்து நோக்குங்கால், உயர்ந்தோர் பிறர் வாழ வேண்டுமென விரும்பாது தாமே வாழ வேண்டுமென நினைப்பவர் தம்மைப்பற்றிய அந் நினைவால் நீடுவாழா தொழிவரென்பதூஉம், பிறர் வாழ்தலையே வேண்டித் தமக்கு வரும் ஊறுபாட்டையும் நோக்காது அவர்க்கு நன்றுசெய்பவர் அவ் விழுமிய நினைவாகிய அருமருந்தால் தம்மையறியாமலே தாம் நீடுவாழ்வரென்பதூஉம் அவர் அதன்கண் அறிவுறுத்திய மனவியல் நுட்பம் இனிது விளங்காநிற்கின்றது. இவ்வா றெல்லாம், பண்டைத் தமிழ்ப்புலவர், தம்மினும் நீடினிது வாழ்தலையே அவர்காலத்திருந்த அரசர்களெல்லாம் வேண்டி நின்றமையால், பழைய தமிழகமானது தமிழ் வளங்கெழுமித் திகழ, அதன்கண் உயிர்வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்களெல்லாம் உயிரும் உடம்புஞ் செழித்து அறிவிலும் அன்பிலும் நாகரிகத்திலுந் தலைசிறந்து, இறைவனது அருட்பேற்றிற் குரியராய் விளங்காநின்றனர் என்பது. 8. அரசர்க்குரிய கடமை மேற்கூறியவாறெல்லாம் அரசர்களும் புலவர்களாய்ப், புலவர்களும் அரசர்களாய், ஒரோவொருகாற் புலவர்கள் அரசர்களினும் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்தவர்களாய், அவ் விருதிறத்தாருந் தம்மில் அளவளாய் வாழ்ந்த அப் பழங்கால நிலை இஞ்ஞான்றைத் தமிழ்நாட்டு நிலைக்கு எத்துணை வேறுபட்டதாய் இருக்கின்றது! அப் பழைய தமிழ்க்கால நிலையினை ஒப்பதொன்று இஞ்ஞான்று காணல் வேண்டுமாயின், அதனை இஞ்ஞான்றை மேல்நாட்ட வரிடத்தேதான் காணலாம். மேல்நாட்டு அரசர்களெல்லாருங் கல்வியில் வல்ல புலவர்களாய், அங்குள்ள புலவர்களுஞ் செல்வத்தின் மிக்க அரசர்களாய்ச், சிற்சிலகால் அவர் அரசரினம் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்து அவரையுந் தஞ்சொல் வழி நிறுத்து அடக்கியாள்பவராய், அங்ஙன மாயினும் அவ்விருதிறத்தாருந் தம்முள் அளவளாவி வாழ்தலிற் குறை ஏதும் இலராய்ப் புகழ்மேம்பட்டு விளங்கல் எவரும் அறிந்த தொன்றன்றோ? பழைய தமிழ்வேந்தர்கள் தங்கீழ் வாழுங் குடிமக்கள் நலத்தையே முழுதும் வேண்டி நின்றமைக்கு அவர் வஞ்சினங் கூறுங்காற் “குடிபழி தூற்றுங் கோலேனாகுக” என்று கூவிக் கூறினமையே சான்றாம். இனிக், குடிமக்களும், அக் குடிமக்களிற் சிறந்த புலவர்களுந் தம்மரசனை அங்ஙனமே தம்முயிராய்க்கொண்டு ஒழுகினமையும் அஞ்ஞான்றைப் புலவர்கள் பாடிய செய்யுட்களால் அறியப்பெறுகின்றேம். இதற்கு, மோசிகீரனார் என்னும் நல்லிசைப்புலவர் நுவன்ற, ‘நெல்லும்உயிர் அன்றே நீரும்உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்: அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே’ (புறநானூறு 186) என்னும் அரிய செய்யுளே சான்றாம். ‘இந்த உலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிர் ஆகா, அரசனே உயிராகும்; அதுபோலக், கல்வியறிவிற்சான்ற என்னோரன்ன புலவர் தனக்கு உயிராதலை அறிதல் அரசற்குக் கடமையாகும் என்னும் அதன்பொருள் எத்துணை நுட்பமாகவும் அஞ்சா அறநெஞ்சத்துடனும் எடுத்துரைக்கப்பட் டிருக்கின்றது! மன்னன் உலகத்தார்க்கு உயிர் என்பதை எல்லாரும் அறிவர். கல்வியறிவின் மிக்க புலவர் அம் மன்னற்கு உயிராம் உண்மையினையறிவார் எவர்? அறிந்தாலும் அதனை எல்லாரும் அறியக் கூறுவார் எவர்? கல்விவல்ல புலவர்களை இல்லாத நாடும் அரசுங் கானகத்தையும் அதில் உலவுங் கோளரியையுமே ஒக்கும். ஆதலால். அறியாமை இருளை அகற்றி அறிவொளி பரப்பி அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் பெருகச் செய்யும் புலவர் குழுவினையுடைய நாடே விண்ணவர் உறையும் வான்நாட்டினை யொப்பதாகும். இவ்வுண்மையினை யுணரவல்லார்க்கு, அரசியலுக்கு உயிராவார் புலவர்களேயென்ற மோசிகீரனாரது செய்யுள் நுட்பம் விளங்காதொழியாதென்க. 9. குடிமக்கட்குரிய கடமை இனித், தமது கடமையினை நன்குணர்ந்து செங்கோல் ஒச்சும் அரசரது அரசியலும், உழுதொழிலை இனிது நடாத்தி அதனால் வரும் விளைபொருள்களை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கும் வேளாண்வாழ்க்கைத் தாளாளரையே அச்சாணியாகக் கொண்டு ஊர்ந்துசெல்லாநிற்கின்றது, இது, “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழ லவர்” என்றும், “உழுவார் உலகத்தார்க்காணி.” என்றும், ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் கூறுமாற்றால் அறியப்படும். இன்னும் ஓர் அரசின்கீழ் வாழும் பல திறத்தரான குடிமக்கள் எல்லாரிலும், உழவும் வாணிகமும் மடியாது நடாத்தும் வேளாளக் குடிகளென்னும் அச்சுமரத்தின் இருபுறத்தும் உள்ள அவ்வுழவும் வாணிகமுமாகிய ஈருருளின் மேல் நின்றே அரசியலாகிய ஒரு பெருந்தேர் ஒடுகின்றதென்றும் உரைக்கலாம். இங்ஙனம் அரசியலுக்கு இன்றியமையாச் சிறப்பினரான வேளாண்மக்களின் வாழ்க்கை இனிது நடை பெறவே, அரசியல் இனிது நடைபெறுவதோடு, அவ்வரசின்கீழ் வாழும் ஏனைக் குடிமக்களின் வாழ்க்கையும் இனிது நடைபெறுமென்பது தானே போதரும். அஞ்ஞான்றிருந்த வேளாண்மக்கள் தாம் உலகிய லொழுக்கத்திற்கு முதல் வேராயிருப்பதனை நன்குணர்ந்து தங்கடமையின் வழா தொழுகினமையாற்றான், அவ்வுலகிய லொழுக்கஞ் செவ்வனே நடைபெறலாயிற்றென்று, பாண்டிமன்னனும் நல்லிசைப் புலவனுமாகிய இளம்பெருவழுதி என்பான், “உண்டால் அம்மஇவ் வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவிலர், துஞ்சலும் இலர்,பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர், அன்ன மாட்சி அனையராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே.” (புறநானூறு 182) என்று நன்கு விளக்கிச் சொல்லிய செய்யுள் நினைவிற் பதிக்கற் பாலதாகும். இச் செய்யுளை உரையாசிரியர் இளம்பூரணர், தொல்காப்பியப் புறத்திணையியல் 17 ஆஞ்சூத்திரத்திற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டி “நோன்றாட்பிறர்க்கென முயலுநர் வணிகவேளாளர்” என்றதூஉம் மறவற்க. விருந்து வந்தவர் தம்மினத்தவர் அல்லாக்கால், அவர் எத்துணைப் பசியோடிருப்பினும் அவரைப் புறத்தே வருந்தியிருக்க வைத்துக் கதவடைத்துத், தாம் அகத்தே தம்மவரோடிருந்து விலாப் புடைக்கத் தின்று, தாம் தின்று மிகுந்ததைப் பின்னர் அவ் விருந்தினர்க்கு இடும் ஆரியப் பார்ப்பனர் தம் தந்நல வொழுக்கம், பண்டை நம் தமிழாசிரியர்மாட்டும் அவரது ஆணைவழியொழுகிய உயர் குடிப் பிறப்பினரான பண்டை நம் வேளாண்மாந்தர் மாட்டும் இல்லாமை, “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத், தமியர் உண்டலும் இலர்” என இச் செய்யுண் முதலிற் சொல்லப்பட்டமையால் நன்கறியக் கிடக்கின்றது. வேற்றுமையின்றி மக்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவி வாழும் நேயவாழ்க்கை, உணவருந்துங் கால் அவர் ஒருங்கிருந்து மகிழும் வழியல்லது உண்டாகாமை யானும், ஒருவர் தம்மை உயர்வாகவும் விருந்துவந்த பிறரைத் தாழ்வாகவும் நினைந்து அவரோ டருகிருந்து உணவெடுக்க ஒருப்படாது அவரை யொதுக்கித் தாம் தம்மினத்தவரொடு மட்டுந் தனியிருந்து அயிலுங்கால் அவர்க்கும் அப் பிறர்க்கும் மனவொற்றுமை எவ்வாற்றானும் உளதாகாமையானும் அத்தகைய வேற்றுமை யுணர்ச்சி யுடையார் மிகுந்துள்ள நாடு சிறந்த நேயவாழ்க்கைக்குரிய நாடாகாமையினை நன்கு வற்புறுத்தவே அதன் ஆசிரியனான அரசன், தமியர் உண்ணா மக்கள் தங்காலத்து மிக்கிருந்து உலக வாழ்க்கையினை அன்பினால் நடைபெறச் செய்த முதற்பெருஞ் செயலினை முதற்கட் கூறுவானாயினன். இதனால், அஞ்ஞான்றிருந்த அரசர்களும் அவரது செங்கோலரசின்கீழ் வைகிய வேளாண் மாந்தர்களும், உணவருந்துங்கால் எவரோடும் வேற்றுமையின்றி அன்பினால் அளவளாவி மகிழ்ந்திருந்தருந்திய நேய வாழ்க்கையின் முதன்மையுஞ் சிறப்பும் நன்கு புலனாகா நிற்கின்றன. அங்ஙனம் அவர் எல்லாரோடும் அளவளாவியது எதனாலென்றால், தம்மவரல்லாரை வெறுக்கும் ஆரியப் பார்ப்பனர் போலாது, அவர் எவரையும் வெறாது ஒழுகிய பெருங் குணத்தினாலேயாம் என்பது தெரிப்பான் “முனிவுஇலர்” என அவர்க்குரிய நல்லியல்பினை அரசன் அதன்பின் எடுத்துக் கூறினான். இனி, அஞ்ஞான்றை வேளாண்மாந்தர் பிறர் துயருறக் கண்டால், அது தீர்க்கும் வரையில் தாம் கண் துயிலாரென்பதும், மெய்ப்புகழ் விளைக்கும் ஓர் அரும்பெருஞ் செயலினைத் தமது உயிர் கொடுத்தாயினும் முடிப்பரென்பதும், பிறிதொரு செயல் பழியைத் தருவதாயின் உலகத்தையே அது செய்தற்குக் கூலியாகக் கொடுத்தாலும் அவரதனைச் செய்யா ரென்பதும், அதனால் அவர் மனக்கவலையே இல்லாத பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்திருந்தன ரென்பதும், இங்ஙன மெல்லாந் தமக்கென்றே வாழாது பிறர்க்கென்றே வாழ்ந்த விழுமிய முயற்சியினரான வேளாண்மக்கள் உண்மையினாலே தான் இவ்வுலகம் இனிது நடவாநின்றதென்பதும் பாண்டி மன்னன் இளம்பெருவழுதியினால் மேலைச் செய்யுளில் எத்துணை அழகியவாக உருக்கமாக அடுத்தடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன! இவ்வாறு அப் பண்டைநாள் வேளாண்மக்கள் குணமுஞ் செயலும் மேதக்கனவாயிருக்க, இஞ்ஞான்றை வேளாளர் இயற்கையுஞ் செய்கையும் எத்துணை மாறுபட்டனவாயிருக் கின்றன வென்பதையுஞ் சிறிது ஓர்ந்து பார்மின்கள்! “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு, இனத்தியல்ப தாகும் அறிவு” என்று தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த படி, இந்நாள் உள்ள சைவவேளாளர்கள் தம்மை முகத்தெதிரே ‘வைசியர்’ ‘க்ஷத்திரியர்’ என்றுந் தம்மைக் காணாவிடத்தே ‘சூத்திரர்’ என்றும் இரண்டகமாய்ப் பேசித் தமது பொருளைப் பலவகையாற் கவர்ந்துவரும் ஆரியப் பார்ப்பனர் சேர்க்கையால், தாமும் இப்போது தம்மவரல்லாதார் தம்மில்லத்திற்கு விருந்தினராய் வந்தால் அவரைப் புறம்பே வைத்துத், தாம் தம்மவரொடு மட்டும் உள்ளிருந்துணவருந்தித் தாம் உண்டு மிகுந்ததைப் பின்னர் அவர்க்கு இடுகின்றனர். வேளாளராகிய தம்மைச், ‘சூத்திரர்’ எனப் பார்ப்பனர் வாய்கூசாது சொல்லுதலைக் கேட்டும், அதற்கு மருந்து தேடாது அதனை ஏற்றுக்கொள்ளும் அவர், தமக்குப் பலவகையிற் பயன்படும் ஏனை இனத்தவர்களைத் தாமும் ‘சூத்திரர்’ என இழித்துரைப்பது எவ்வளவு நகைப்புக்கிடமாய் இருக்கின்றது! இவ் வேளாண்மக்களிற் பலர் தாம் பார்ப்பன வழக்கத்தைப் பின்பற்றி, இறந்துபோன தம் முன்னோர்க்கு வழிபாடு ஆற்றியபின், தம்மவரோடிருந்துண்டு கழித்த மிச்ச உணவையும் ஏழையெளியவர்க்குக் கொடுத்தால் தமக்குத் தீட்டுண்டாமெனப் பிழைபடக்கருதி, அதனை நிலத்தே வெட்டிய பள்ளத்திற் கொட்டிப் புதைத்து விடுகின்றார்கள்! தமக்குரிய உழவு தொழிலைத் தாம் செய்யாமல் தம்மகத்தே அவர் மடிந்து களித்திருக்கத், தமக்காக மழையிலும் பனியிலும் வெளியிலும் அல்லும் பகலும் பாடுபட்டுப் பயிர் செய்து அவ்வேழைகள் விளைத்துக் கொடுத்த பெருஞ்சோற்றை அவ்வேளாளர் தாம் நன்றாக விழுங்கிய பின்னும், எஞ்சிய சிறு மிச்சிற் சோற்றை யாதல் அவ்வேழை மக்கட்கு வயிறு குளிரக் கொடுத்தால் அவர் தீட்டுப்பட்டா மாண்டு போய்விடுவர்! ஐயோ! இவ்வாறு திருக்குறள் முதலான எந்தப் பழைய தெய்வத் தமிழ் நூலிலாவது சொல்லப் பட்டிருக்கின்றதா? வேளாளர் முதலான தமிழ் மக்கட்குச் சிறிதும் இசையாத வடமொழி நூல்களிற் பார்ப்பனர் தம்மையே எவ்வாற்றானும் உயர்த்தி வைத்து, ஏனையோரையெல்லாம் முற்றும் இழித்து வைத்து எழுதிய பொல்லா உரைகளை நம்பி, இஞ்ஞான்றை நம் தமிழ்மக்கள் இங்ஙனம் ஏமாந்து இழிபுபடுதலுந், தமக்குள் ஒற்றுமையின்றிச் சீர் குலைதலுந் தெய்வத்திற்கு அடுக்குமா? தம்மில்லத்திற்கு விருந்துவந்தவரும் பிறரும் எவராயிருப்பினும் அவரை முன் ஊட்டித் தாம் பின் உண்ணுதலன்றோ பண்டை நம் வேளாண்மாந்தர்க்குரிய விழுமிய ஒழுகலாறாக, மேலே, நல்லிசைப்புலவனும் அரசனும் ஆகிய இளம்பெருவழுதி கட்டுறுத்துச் சொல்லியிருக்கின்றான்? ஆசிரியர் தெய்வத் திருவள்ளுவனும், “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” (குறள் 82) என்றருளிச் செய்திருத்தலை இஞ்ஞான்றே வேளாளர் அறிந் திருந்தால் இங்ஙனஞ் செய்து ஏதம் உறுவார்களா? அது கிடக்க. இனிப் பழைய தமிழ்க்குடிமக்கள் தாஞ் செய்து போந்த பலவேறு தொழில்களாற் பலவேறு இனத்தவர்களாய்ப் பாகுபடுற்று நின்றார்களாயினும், அதுபற்றி ஒருவர் பிறர் ஒருவர் செய்யும் தொழிலையும் அத்தொழில் செய்வாரையும் இகழ்தல் இலராய்ப், பொதுக்கூட்டங்களின் எல்லாருமாய் ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்கு அளவளாவி அன்பினால் இன்புற்று வாழ்ந்தது எதனாலென்றால், மக்களெல்லாரும் வாழ்க்கை நிலையில் ஓரியல்பினரேயாதலை அவர் நன்குணர்ந்து தெளிந்தமையினாலேயாம். எத்துணைப் பெருஞ்செல்வத்தில் இருப்பவராயினுஞ் செல்வமின்றி அன்றாடம் உழைத்துப் பெற்ற கூலிகொண்டு வயிறு பிழைப்பவ ராயினும், எல்லாரும் ஒரு நாளைக்கு உண்பது ஒருபடி அடிசிலேயன்றி அதற்குமேல் இல்லையே! அவரெல்லாரும் உடுப்பன மேலாடை கீழாடை இரண்டேயன்றி அவற்றிற்குமேல் இல்லையே! ஆதலால், மக்கள் செல்வத்தால் உயர்தலும் அஃதின்மையாற் றாழ்தலும் எல்லாம் வெறுஞ் சொல்லே! ஆகவே, பழந்தமிழ்மக்கள் வாழ்க்கையின் ஒத்த நிலைமையினை நன்குணர்ந்து பார்த்து, எவரையும் உயர்வுதாழ்வாக நினையாமல் எல்லாரையும் ஒத்த தன்மையின ராகவே நினைந்தொழுகினர்; ஒரோவொருகால் அவர் அந்நினைவிற் பிறழ்ந்து இறுமாப்புறக் கண்டால், அவரிடை யிருந்த நல்லிசைப் புலவர்கள் அவர்க்கு உடனே அவ்வுண்மை யினை அறிவுறுத்தி அவரைத் திருத்தி ஒருமையுறச் செய்து வந்தனர். இதற்கு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய ஒர் அரிய செய்யுள் சான்றாய் நின்று ஒளிக்கின்றது; அது வருமாறு; “தென்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி. உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே, செல்வத்துப் பயனே ஈதல். துய்ப்பேம் எனினே தப்புந பலவே.” (புறநானூறு 189) ‘உலகமெல்லாம் ஒரு வெண்குடை நிழலில் வைத்து அரசு செலுத்தும் வேந்தனேயானாலும், தான் பயிர்செய்த ஒரு தினைப்புனத்தின் விளைவைக் காட்டி யானைகளுங் காட்டுப் பன்றிகளும் புகுந்து அழித்துவிடாமல் இரவும் பகலுங் கண்ணுறக்கங் கொள்ளானாய் அதனைப் பாதுகாக்கும் ஒரு கானவனேயானாலும் எல்லாரும் ஒருநாளைக்குக் கொள்ளும் உணவு ஒரு நாழியேயாகும்; அவர் உடுப்பன இரண்டு ஆடை களேயாகும்; இவையேயன்றிப் பிறப்பும் இறப்பும் நோயுங் கவலையுந் துன்பமும் இன்பமும் எல்லாம் எல்லார்க்கும் உள்ளனவேயாகும்; ஆதலாற், செல்வத்தாற் பெற்ற பயன் ஈகை அறங்களைச் செய்தலே யாகும்; செல்வத்தைப் பிறர்க்குக் கொடாமல் யாமே நுகர்வமெனில் அது கைகூடாமல் தவறுதல் பலவாகக் காணப்படுகின்றன’ என்றும் இச் செய்யுட்பொருள் மக்கள் வாழ்க்கையின் ஒத்த தன்மையினைப் பசுமரத்தாணி அறைந்தாற்போல் எவ்வளவு திறமாகத் தேற்றுகின்றது! இத்துணைச் சிறந்த அரிய அறிவுரையினை அரிய மிருதி நூல்களிற் காண்டல் இயலுமோ? அம் மிருதி நூல்கள் பிறப்பளவில் மக்களுள் உயர்வு தாழ்வு வகுத்துக்கொண்டு, அவ் வகுப்புக்கேற்ற பயன் இல்லாப் புறவினைகளைச் செய்யுமாறு நுவன்றுசெல்லக் காண்கின்றனமேயன்றி, அறிவாலும், அன்பாலும், அறவினையாலுஞ் சிறந்தாரைச் சிறந்தெடுத்துப் பாராட்டிப் பிறப்பளவில் மக்களெல்லாரும் ஒரு தன்மையினரே யென அவை அறிவுறுத்தக் காண்கிலேம். அதனால், அந் நூல்கள் அவைதம்மை ஆக்கிய பார்ப்பனக் குருவினராலன்றி, ஏனை எல்லா மக்களாலும் எல்லாச் சமயத்தாராலுந் தழுவப் படாமலே ஒழிந்தன. மற்று, மேற்காட்டிய உண்மை அறவுரை போல்வனவே பொதிந்துள்ள திருக்குறள் நாலடியார் போன்ற தமிழ் அறநூல்களோ, தமிழ்மக்களேயன்றி, உலகம் எங்கணும் உள்ள எல்லாமக்களும் எல்லாச் சமயத்தவரும் விரும்பித் தலைமீதேற்றுப் போற்றும் மேம்பாடு வாய்ந்தனவாய்த் திகழ்கின்றன. அது நிற்க. இனி, மேலே விளக்கியவாறு அந்நாளிருந்த தமிழ்ப் பெருங்குடிகள் தாம் பிறப்பளவில் ஒத்த தன்மையினராதலை யுணர்ந்து, தம்முள் அன்பினால் அளவளாவுங் கடமையில் வழுவாதொழுகினமையாலும், ஒரோவொருகால் அவர் தம்மிற் சிலர் அக் கடமையின் வழுவக் கண்டால் அவர்காலத் திருந்த அறிவான் மிக்க நல்லிசைப்புலவராகிய சான்றோர் சிறிதும் அஞ்சாது விரைந்து சென்று அவர்க்கு அக் கடமையினை யெடுத்து இடித்துச் சொல்லி அவரைத் திருத்திவந்தமையாலும் அஞ்ஞான்றைக் குடிமக்கள் வாழ்க்கையும், அதற்குயிராய் உள்ள அரசவாழ்க்கையும், அன்பும் அறமும் நிரம்பித், தூய தீம்பால் பெய்த தூய பசும்பொற் குடமேயெனப் பொலிந்தன. அவ் விருதிறத்தார் வாழ்க்கைக்கும் இன்றியமையாத் துணையாய் நின்ற புலவர் வாழ்க்கையும், அத் தீம்பாற் பொலன்குடத்தைக் தமது திருக்கையிலேந்திய திருமாலேயெனத் தெய்வத்தன்மை மிக்கு விளங்கிற்று. அஃது அன்னதாதலைச் சிறிது விளக்குதும். 10. புலவர்தம் இனிய இல்லற வாழ்க்கை முன்னே எடுத்துக்காட்டிய கோப்பெருஞ்சோழன் என்னும் அரசர்பெருமான் தன்னரசு துறந்து உயிர்நீத்தற்கு வடக்குநோக்கி யிருந்தவழி, அவற்கு இன்னுயிர் நண்பரான பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் அவனைப் பிரிந்து உயிர்வாழ மாட்டாராய்த் தாமும் அவனோடு ஒருங்கு உயிர் நீத்தற்கு அவனிருந்த இடமே போந்தனர். அப்போது அவ்வரசனோடு உடனிருந்த சான்றோர்கள், பிசிராந்தையார் ஆண்டில் முதிர்ந்தும் உருவத்தில் இளையராய் விளங்குதல் கண்டு வியந்து, “கேட்குங்காலம் பலவாலோ, நரைநுமக்கு இல்லையாலோ?” என அவரை நோக்கி வினவ, அவர், ‘யாண்டு பலஆக நரைஇல ஆகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே’ (புறநானூறு 191) என்னும் அருமருந்தன்ன செய்யுளால் அச் சான்றோர்க்கு விடைகூறினர். தாம் ஆண்டில் முதிர்ந்தும் நரையிலா இளைய வுருவத்தொடு தாம் விளங்குதற்கு ஏற்ற காரணங்களைக் கூறுவான் புகுந்த ஆசிரியர் பிசிராந்தையார், தம் மனைவி மக்கள் எல்லா நற்குணங்களினாலும் நிரம்பினராயிருத்தலை முதற்கண் எடுத்துரைக்கும் நுட்பம் பெரிதும் நினைவுகூரற்பாலது. ஒராண்மகன் தானுந் தன் குடும்பத்தவரும் இனிதுவாழ்தற்கு இன்றியமையாது வேண்டும் பொருள் கடைக்கூட்டுதற் பொருட்டு, நாள் முழுதும் வெளியேசென்று முயலும்வழித், தனக்குத் தலைவராயினாரோடுந், தன்னோடு உடன்முயல்வாரோடும் பழகும் நேரம் மிகச் சிறிதேயாகும்; அங்ஙனம் பழகுங்காலும் அவன் தன்னுள்ளத்தைத் திறந்து வைத்து அவரொடு பழகுதல் இயலாது; அல்லதூஉந், தன் தலைவர்களுந் தன்னோடு உடன் முயல்வாருந் தன்னொடு மாறுபட்டவராய் இருந்தால் அவரால் அவன் படுந்துன்பம் அளவிடப்படாததாய் இருக்கும். இவ்வாறெல்லாம் வெளியே பலவகை அல்லல் உழந்து, மாலைப்பொழுதில் அயர்ந்து அவாவுடன் தன் இல்லத்திற்குத் திரும்பும் அவ் வாடவன், தன் அழகிய இனிய கற்பிற்சிறந்த அறிவுடைமனையாளால் நகையரும்பு குளிர்முகத்தோடு அன்புடன் எதிரேற்கப் படுவனாயின், அவன் தான் வெளியே பட்ட துன்பங் களெல்லாம் மறந்து எத்துணை ஆறுதலுங் களிப்பும் மிக்கவனாய்த் தன் இல்லத்தின் உள்ளே சென்று வைகுவன்! இனி, அவ்வாறின்றி அவள் தன் கணவனைக் கண்டவுடன் தன் கடுகடுத்த முகத்தாலும் வெடுவெடுத்த சொல்லாலும் அருவருத்த நடையாலும் அவனைப் பேய்போல் வாட்டி வருத்துந் தீய இயற்கை யுடையவளாயின், முன்னமே வெளியில் அல்லற் பட்டுவந்த அவன் தன் வீட்டின் அகத்தும் அங்ஙனந் துன்புற்று, அதனாற் கவலையும் நோயுங்கொண்டு செந்நீர் நஞ்சாகி இளமை யிலேயே மூத்துப்போவன்; மூத்து விரைவிலும் மாண்டு போவன். இவ்வுண்மை யுணர்ந்தன்றே ஒளவையார், “இல்லாள், வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்” என்றுந், திருவள்ளுவர், “மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனை மாட்சித் தாயினும் இல்” (குறள் 52) என்றும், “உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று” (குறள் 890) என்றும் அருளிச்செய்தனர். எனவே, ஆடவரும் மகளிரும் முதுமை எய்தாமல் நீண்டகாலம் இளமைச்செவ்வியுடன் இனிது வாழ்தற்கு, அவர், தம்மில் எஞ்ஞான்றும் அன்பினால் அகங்கெழுமிக் குளிர்ந்த முகனும் இழைந்த சொல்லுங் குழைந்த நடையும் வாய்ந்து மாறின்றி ஒழுகுதலேயாம் என்பது போதரும். அஞ்ஞான்றிருந்த நந் தமிழ்மேன்மக்கள், அன்புக்கும் அருளுக்கும் அறத்திற்குமே தலைமைதந்து, சாதிக் கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாடுகளை அவற்றின் தலைமைக்கீழ் அடக்கி வைத்து வாழ்க்கை செலுத்திவந்தமையால் ஆடவர் தமக்கேற்ற மகளிரையும், மகளிர் தமக்கேற்ற ஆடவரையுங் காதலன்பின் வழிச்சென்று மணக்கலாயினர். அங்ஙனம் இருபாலா ருள்ளமும் அன்பினாற் குழைந்துருகி ஒருமையுற்றபின், அவரது வாழ்க்கையிற் கவலையாதல், துன்பமாதல் நுழைதற்குச் சிறிதேனும் இடன் உண்டாமோ? அவ்வாறு மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த அவர்தந் திருவுருவம் என்றும் மூவாது இளமையாகவே விளங்குமல்லது பிறிதாமோ? இன்னும் இதன்விரிவை எமது ‘மக்கள் நூறாண்டுயிர்வாழ்தல் எப்படி?’ என்னும் நூலிற் கண்டுகொள்க. இத்துணைச் சிறந்த ஒர் அரும்பெரு நுட்பத்தைக் கண்டு அதனைத் தமது இளமைக்குத் தலைசிறந்த காரணமாக முதற்கண் எடுத்துரைத்த ஆசிரியர் பிசிராந்தை யாரின் கூர்த்த அறிவின் மாட்சி என்றும் நினைவுகூர்ந்து பாராட்டற் பாலதாகும். இனி, தாம் ஆண்டில் முதியராயிருந்தே வடிவில் இளைஞராய்த் தோன்றுதற்கான இரண்டாவது காரணத்தைத், தம் ஏவலர்பால் வைத்துரைக்கின்றார் பிசிராந்தையார். நம் புலவர் பெருந்தகைக்கு ஏவலராய் அமைந்தவர்கள் தம் தலைவன் கருத்தறிந்து, அதற்கொத்து நடப்பவர்கள் என்பது ‘யான் கருதி அதனையே கருதுவர் எனக்கு ஏவல்செய்வாரும்’ என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். தம் தலைவன் கருத்தை அறியாமல் நடப்பவராகவேனும், அறிந்தும் அதற்கேற்ப நடவாதவராகவேனும், அல்லததற்கு மாறாக நடப்பவராகவேனும் ஏவலர் ஒழுகுவராயின், அதனினும் மிக்க துன்பத்தையுங் கவலையையுந் தலைவற்குத் தரவல்லது பிறிதில்லை. ஓர் அரசன் ஒருகால் தன் பக்கத்திருந்த இருவரில் ஒருவனை நோக்கி, “என் மார்பில் உதைத்தான் கால்களுக்கு யாது செய்யலாம்?” எனப் புன்னகை புரிந்துகேட்ப, அவன் பரிந்து “அவனுடைய கால்களை இரண்டாகத் துணித்தெறிதல் வேண்டும்,” எனப் பரபரப்புடன் கூறினன். அதன்பின் அம் மன்னன் அங்ஙனமே புன்னகைசெய்து மற்றொருவனைப் பார்த்து, “என் மார்பில் உதைத்தான் கால்கட்கு யாது செய்யலாம்?” என வினவ, அவன் “அங்ஙனந் தங்கள் மார்பில் உதைத்த குறும்பன் கால்கட்குப் பொற் றண்டையுஞ் சதங்கையும் அணிதல் வேண்டும்” என மொழிந்தனன். பார்மின்! அரசன் மார்பில் ஏறி உதைக்கத்தக்கவன் அவன் ஈன்ற சிறானேயன்றிப் பிறனொருவனாதல் பொருந்தாதே! தன் மகன் தன் மார்பின் மீதேறி விளையாடினதை உட்கொண்டு வினாய அரசனது கருத்தை முன்னவன் அறியாதுரைப்பப், பின்னவன் அதனை யறிந்துரைத்த நுட்பம் எத்துணை வியக்கற்பாலதாய் மகிழற் பாலதாய் இருக்கின்றது! இனி ஒரு சிறந்த விருந்தினர் தமதில்லத்திற்கு வரப்பெற்ற ஒரு தலைவன் தன் சமையலாளை அழைத்து, “இப் பெரியார்க்கு நல்விருந்து செய்க!” என்று ஏவினன். அதற்கு அவ்வேலவன் மிகமகிழ்ந்து பல்வகைக் கறிகளுங், குழம்பும், அடிசிலும் பிறவும் அமைப்பானாய்ப் புகுந்து வந்த விருந்தினர்க்குப் பசியெடுக்கும் வேளை யிதுவாகுமென நினைந்து பாராமற் சமையல் தொழிலிலேயே முனைந்து நின்றான்; பிற்பகல் இரண்டு மணிக்கு மேலாகியும் விருந்துணா முடிந்தபாடில்லை. இதற்குள் விருந்தினர்க்குப் பசித்துன்பம் மிகுவதாயிற்று. தன் தலைவன் கருத்தும், விருந்தினர் பசிக்குறிப்புந், தன் சமையலாள் மடமையும் முன்னமே அறிந்து வைத்த அவ் வில்லத்தலைவி, மிகச்சிறந்த உணவன்றாயினும் பசிவேளைக்கேற்ற இன்சுவை யுணவாவ தனை விரைந்தமைத்துத் தம்மில்லம் வந்த அவ் விருந்தினர்க்குந் தங் கொழுநற்கும் படைத்து அவர்தம் பசித்துன்பத்தைப் போக்கினாள். ஆகவே, ஒருவரது கருத்தறிந்தும் அதற்கேற்ப நடவாமை எத்துணை அருவருக்கற்பாலதா யிருக்கின்ற தென்பதூஉம், அதனையறிந்து அதற்கேற்ப நடத்தல் எத்துணை விரும்பற்பாலதாயிருக்கின்ற தென்பதூஉம் இதனால் நன்கு விளங்குகின்றன வல்லவோ? இனித், தம் தலைவன் கருத்துக்கு மாறாக நடக்கும் மடமைக்கும் ஒன்றெடுத்துக் காட்டுதும். சிறந்த நிலையிலமர்ந்து வேலை பார்க்கும் அறிஞர் ஒருவர் ஒருகால் தமக்கொரு சமையற் காரனைப் புதிது அமைத்தார். அவர் ஒருநாள் விரைந்து வெளியே போகல்வேண்டினமையின் விரைந்து உணவமைக்கும்படி அவற்குக் கட்டளையிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவர் அடுக்களையிற் போந்து தமக்கு உண வமைக்கும்படி கேட்க, அச்சமையற்காரன் சோற்றைமட்டும் வேகவைத்துக் கொண்டிருந்தான்; குழம்பு கறிகள் ஏதும் இன்னும் அமைத்திலன். இவையெல்லாம் அமைப்பதற்கு மூன்று மணிநேரங்கள் முன்னமே அவர் தெரிவித்திருந்தும் அவன் அறிவின்மையினாலோ அல்லது ஒழுங்காகச் செய்ய மாட்டாமையினாலோ, சோற்றை முக்கால் வேக்காடாக அவித்தற்குமேல் வேறேதுஞ் செய்திலன்; அத் தலைவர் காலந்தாழ்த்தல் ஆகாமையின் செய்தவரையிற் கொணர்ந்து படைக்கவென அவனை ஏவினர். அவன் முக்கால் வேக்காட்டி லுள்ள சோற்றைமட்டுங் கொணர்ந்து படைத்து, ‘இன்னுஞ் சிறிது நேரத்திற் குழம்புகறிகள் ஆய்விடும்’ என நுவன்றனன். அவர் அவ் வாளின் மடமைக்கு உள்ளே மிகவருந்தி, ‘நல்லது, சோற்றில் விட்டுக்கொள்ளுதற்கு என்ன வாங்கி வைத்திருக் கின்றாய்?’ என வினவ அவன் ‘நெய்யுந் தயிரும் வாங்கி வைத்திருக்கின்றேன்’ எனக் கூறி உட்சென்று ஒரு தயிர்க் கிண்ணத்தை எடுத்துவந்தனன். ‘முதலிற் சிறிது நெய்யை விடு’ என அவர் கேட்ப, அவன் தான் கொணர்ந்த கிண்ணத்தைக் கவிழ்த்துப் பார்க்கத் தயிர் கீழே சிந்திப்போனதை அவன் உணராமல் ‘ஐய! நெய்யுந்தயிரும் வாங்க இரண்டு கிண்ணம் ஏதுக்கு என்று இந்த ஒரு கிண்ணத்தின் அடிப்பக்கத்துள்ள வட்டிலில் நெய்யும் மேற்பக்கத்துள்ள வட்டிலில் தயிரும் வாங்கிவைத்தேன். கீழேயுள்ள வட்டிலில் நெய்யைக் காணோம், மேலே யுள்ள தயிரையாவது விட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அக் கிண்ணத்தை மேலே திருப்பினான். கீழ்த் திருப்பியபோதே கொட்டிப்போன தயிரை நோக்காமல் அவன் செய்ததைப் பார்த்து, அவனது மடமைக்காக அவ்வறிஞர் சிரிக்க, அவன் அவர் தனது சமையல் தொழிலின் திறமையைக் கண்டு மகிழ்கின்றாரென நினைந்து, ‘பெருமானே! எனக்குச் சம்பளஞ் சிறிது கூடக் கொடுத்தருளல் வேண்டும்! என அவரைப் பணிந்து கேட்டனன். இங்ஙனந், தலைவன் கருத்துக்கு மாறாக நடக்கும் மடமைமிக்க ஏவலர் உளராயின், அவரையுடைய தலைவற்கு வசதியும் மனக்கிளர்ச்சியும் உண்டாகுமோ என்பதை நினைந்துபார்மின்கள்! அவரால் தலைவர்க்கு ஒயாக் கவலையுந் துன்பமுமே உளவாகுமாதலான், அவர் நீண்டநாள் நன்கு உயிர்வாழ்தல் இயலாது. மற்றுத், தந்தலைவன் குறிப்பறிந்து அவன் எல்லாவகையிலும் உவக்கும்படி ஏவற்றொழில் புரியவல்லாரே, அவற்குக் கவலையில்லா உள்ளக் களிப்பினையும், அதன் வாயிலாக நீண்ட வாழ்நாளினையும் அவற்கு விளைக்க மாட்டுவாராவர். இந் நுட்பமறிந்துரைத்த பிசிராந்தையாரது புலமை எத்துணை நுண்ணிதாய்த் திகழ்கின்றது! இங்ஙன மெடுத்துக்காட்டிய இரு காரணங்களும் ஒருவன் நீண்டநாட் கவலையின்றி வாழ்தற்கு இசைந்த அகக் காரணங்களாகும்; அஃதாவது ஒருவனது இல்லத்தே உளவாய காரணங்கள். இனி, ஒருவன் கவலையில்லா நீண்டவாழ்க்கையில் வாழ்தற்கு அவன் தன் இல்லின் புறத்தே உணவாதற்குரிய காரணங்களிரண்டைப் புலவர்பிரான் பிசிராந்தையார் நுவன்றதூஉம் ஒரு சிறிது ஆராயற்பாற்று. ஆசிரியர் குடியிருந்து வாழும் ஊர்க்கு அரசனாய் இருந்தவன் தனது அரசியன் முறையிற் றீயதேதும் புகாமற் செங்கோல் செலுத்திக் குடிபுறந்தந்தமையே தாம் கவலையின்றிப் முதுமை தெரியாமல் உயிர்வாழ்ந்ததற்கு ஏதுவாயிற் றென்கின்றார். அரசன் கொடியனாய்க் குடிமக்களை வருத்தி இறைப்பணம் வாங்குபவனாயிருந்தாலும், முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினர்க்கும் நடுநின்று அரசு செலுத்தாமல் நெறி வழிஇ ஒழுகுபவனாயிருந்தாலுங், குடிமக்கள் இனிது வாழ்தற்கு இன்றியமையாது வேண்டிய நற்செயல்களைப் புரியானாய்க் குடி சூது காமம் முதலிய தீச்செயல்களிலேயே முழுகினவனாயிருந்தாலும் அவனது நாட்டின்கீழ் வாழ்வார்க்குத் துன்பமே நோயே வறுமையே வாழ்நாட் குறைவேயல்லால் வேறு நன்மை சிறிது உளதாகாது. இது பற்றியே, “கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே” என்றும், “குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே” என்றும், “இன்று கொளற்பால நாளைக் கொளப் பொறான், நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன்” என்றும், “கெடுவல்யான் என்ப தறிகதன் னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்” (குறள் 116) என்றும் அறநூல்கள் கூறுவவாயின. ஆனாற், பிசிராந்தையார் காலத்திருத்த அரசனோ அரசியன் முறையிற் சிறிதும் பிறழாதவனாய்த் தீநெறிச் செல்லாதவனாய் எப்போதுங் குடிமக்கட்கு நன்மையே செய்பவனா யிருந்தமையின்,அவனது செங்கோல் நீழற்கீழ் வைகி உயிர்வாழ்ந்த ஆசிரியர்க்கு எவ்வகைக் கவலையுந் துன்பமும் நோயும் இலவாயின. அதனால் அவர் ஆண்டில் முதியராயிருந்தே உருவில் இளைஞராய்க் காணப்படலாயினர். இனி, மேற்கூறிய புறக்காரணமேயன்றி, ஆசிரியர் பிசிராந்தையார் தாம் வாழ்ந்த நாட்டிற், கல்வி கேள்விகளும் நற்குணங்களும் ஒருங்கமைந்து உயர்ந்தோர்க்குப் பணிந்து ஐம்புல அவாக்கள் அடங்கப்பெற்ற சான்றோர்கள் பலர் உளராதலாகிய பிறிதொரு காரணமும் எடுத்துக் காட்டு கின்றார். இப்பெற்றியரான சான்றோர் குழுவிற் சேர்ந்து, பொய்யா நாவினரான அவர் கூறும் ஆழ்ந்தகன்ற மெய்யுரை களைக் கேட்டலானும், அவர்க்குள்ள இயற்கை நற்குணங் களொடு பழகுதலானும், அவரை அங்ஙனஞ் சேர்ந்தார்க்கு உயர்ந்த அறிவும் விழுமிய இயல்பும் அவாவின்மையும் ஒரு தலையாக உண்டாதல் திண்ணம். மேலும், அவர் கூறுவன வற்றின் சொற்சுவை பொருட் சுவைகளில் உள்ளம் ஊறிஇன்பத்திற் றிளைத்தலால் அவருடைய உயிரும் உடம்பும் இன்பவொளியால் ஊடுருவப் பெற்று ஒளிரும். அதனால் அவர் காலத்தை மறந்து, சிற்றின்ப வேட்கையற்று என்றும் இளைஞராயே திகழுவர். இது குறித்தன்றோ தெய்வத் திருவள்ளுவர், “நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்” (குறள் 460) என்றும், “மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து” (குறள் 458) என்றும், “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு” (குறள் 452) என்றும் அருளிச் செய்தனர். இக் கருத்துப்பற்றியே நாலடியாரில், “தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்மிற் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி” என்னும் அரிய செய்யுளும் எழுந்தது. பார்மின்! இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே, நல்லிசைப்புலமை மிக்க ஆசிரியர் பிசிராந்தையார் நீண்டகாலம் நரை திரை மூப்பின்றி வாழ்தற்குரிய அகக் காரணங்களிரண்டும் புறக்காரணங் களிரண்டும் எத்துணை நுட்பமாக எடுத்தருளிச் செய்திருக் கின்றார்! ஆசிரியர் பிசிராந்தையார் பாடிய இச் செய்யுளினாலும், இவர் காலத்திருந்த ஏனை நல்லிசைப் புலவர்களும், நல்லிசைப் புலமை நிரம்பிய அரசர்கள் அரசியர்களும், முத்தமிழ்ப் புலமை மிக்க மாதர்களும் அருளிச்செய்த அருந்தமிழ்ப் பாடல் களினாலும், அஞ்ஞான்றிருந்த தமிழ்மக்களின் இல்லற வொழுக்கங் காதலன்பிற் பிணிப்புண்ட கணவரும் மனைவியரும் ஒருங்குகூடி நடாத்த நடைபெற்ற வரலாறும்; அத்துணைச் சிறந்த அன்பின் சேர்க்கையிற் றோன்றிய புதல்வர்களுந் தம் பெற்றோர்களைப்போல் அன்புக்கும், அருளுக்கும் அறத்திற்கும் உறையுளாய்த் திகழ்ந்த வரலாறும்; அஞ்ஞான்றை அரசர்களெல்லாருந் தாங் கல்வியில் தலைசிறந்து விளங்கித் தங்கீழ் வாழுங் குடிகளும் அதிற் புலமைமிக்குப் பொலியச் செங்கோலோச்சி வந்தமையால் இருபாலாருந் தீதின்றி நல்வழியிற் செல்லுதலையே கடைப் பிடியாய்க் கொண்டு வாழ்ந்த வரலாறும்; இவ்வாறு எல்லாருங் கல்வியறிவிலும் மேம்படு குணங்களிலும் நாளுக்கு நாட்பிறை மதிபோல் வளர்ந்து வாழ்ந்து வந்தமையால், அவருட் பொருள் வளமின்றி வறுமையால் வாடிப் பிறர்க்கு ஊழியஞ் செய்யப் புக்காரும் அவையிரண்டிலுங் குன்றுதலின்றித் தந் தலைவர் தங் கருத்தறிந்து ஒழுகிப் பயன்பட்ட வரலாறும்; அந் நாட்களிற் கல்வி யறிவு ஆராய்ச்சித் துறைகளின் ஆழங்கண்டு மனநலங் களெல்லாம் ஒருங்கே பொருந்தப்பெற்ற சான்றோர்குழாந் தலைநகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களிலுந் தொகை தொகையாயிருந்த வரலாறுந் தெற்றென விளங்குதல் கண்டுகொள்க. 11. புலவர்தம் பரந்த தூய துறவுள்ளம் இனிப், பழைய நாட் புலவர்களும், அவர்தம் ஆணை வழி நின்று தமது வாழ்க்கையை நன்கினிது நடாத்திய தமிழ் மக்களும் ஒரேயொரு முழுமுதற் கடவுளாகிய முக்கணானைத் தொழுது, தாமெல்லாரும் அம் முதற்பெருங் கடவுளாகிய ஒரே யொரு தந்தைக்கு உரிமைப் புதல்வர்களாம் உண்மைகண்டு, தமக்குள் ஏதும் வேற்றுமை இலராய் இம்மையிலேயே பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்துவந்தனர். பண்டைத் தமிழாசிரியருந் தமிழ்மக்களும், ஒரே முழுமுதற் கடவுள் உலகமே யுருவாய் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றொளிகளையும் மூன்று திருக்கண்களாக் கொண்டு, எல்லா வுயிர்க்கும் புறக்கண் அகக்கண்களை விளக்கி, அவர்தம் மெதிரேநின்று பேரருள் வழங்கும் பான்மையினைத் தெளியக்கண்டு அவனொரு வனையே முக்கணானென்னும் பெயரால் வணங்கி வழுத்தினமை, “பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” (புறம் 6) என்னும் மிகப்பழைய திருப்பாட்டில் அதனாசிரியர் காரிகிழார் ‘பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி’க்கு அறிவுரை தெருட்டு மாற்றானும், ஆரியராற் போற்றப்பட்ட ‘இந்திரன்,’ ‘வருணன்’, ‘அக்நி’ ‘மாதரிஸ்வான்’, ‘பிரமன்,’ ‘விஷ்ணு’ முதலியோரெல்லாம் உண்மையிற் கடவுளரல்ல ராய்ப் பிறந்திறக்கும் ஆருயிர்வகையிற் சேர்ந்தவராகலின் அவரெல்லாந் தம்மை யொத்த மாற்றாரால் தமக்குவரும் ஏதங்கள் களைய மாட்டாராய் இளைத்து வருந்தி எல்லாம் வல்ல இறைவனான முக்கணானை வேண்டிக் குறையிரப்ப, இறைவனே அவர்தம் அல்லல் களைந்து அவர்க்கருள் செய்தமை, “ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்” (புறநானூறு 55) என்னும் பழைய பாட்டில் மதுரை மருதனிளநாகனார் குறிப்பிடுமாற்றானும், அங்ஙனமே கலித்தொகை என்னும் பழந்தமிழ்ப் பெருநூலும், “தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கான் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வன” (பாலைக்கலி, 1) என்று மொழிந்திடுதலானும், பின்னர்க் காலங்கடோறும் வடவாரியர் செந்தமிழ்நாடு புகுந்து குடியேற அவர் வணங்கிய தெய்வங்களும், இத் தமிழகத்தார் வணங்கிய வேறு சில தெய்வங்களும் இங்குள்ளாராற் றொழப்படலானபோதும், அவ்வெல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக முக்கட் பெருமானே முதல்வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தமை, “ஏற்றுவல னுயரிய எரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங், கடல்வளர் புரிவளை புரையு மேனி அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும், மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும், மணிமயில் உயரிய மாறாவென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வர்” (புறநானூறு 56) என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அருளிச் செய்திருக்கு மாற்றானும் நன்கறிகின்றன மல்லமோ? இனி, அம் முழுமுதற் கடவுளாகிய முக்கணானுக்கு மக்களெல்லாரும் உரிமைப் புதல்வர்களாகலின் அவர் களெல்லாரும் ஒரே குலத்தினராய் ஒருவரோடொருவர் வேற்றுமை யேதுமின்றி அளவளாவி வாழ்தற்குரியரென்னும் உண்மையினையும் நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை. “யாதும் ஊரே, யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா: நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவதன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே; முனிவின் இன்னா தென்றலும் இலமே; மின்னொடு வானந் தண்டுளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉமென்பது, திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிரியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறநானூறு 192) என்னும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனா ரருளிய திருப் பாட்டால் நன்கு விளங்கிக்கிடத்தல் காண்மின்கள்! இவ்வரும் பெறற் செய்யுளிற் பொதிந்துள்ள மெய்ப்பொருள் விழுப்பத்தை என்னென்பேம்! முழுமுதற் கடவுள் ஒருவனே யென்றும், அம் முதற்பெருந் தந்தைக்கு எல்லா உயிர்களும் இனிய மகாரே யாவரென்றும், அவ் வுயிர்களுள்ளும் மக்கள் எல்லாரும் ஆறறிவுடையராகலின் அவர் தம்மைத் தோற்றுவித்த எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையையும் அத் தந்தைக்குத் தாம் எல்லாம் அருமைப் புதல்வர்களாம் உரிமையையும் நன்குணரத் தக்க நிலையினரேயென்றும் இனிதுணர்ந்தன்றோ இச் செய்யுளின் முதற்கண் ஆசிரியர் ‘எல்லாம் எமக்கு ஊராகும்; எல்லாரும் எமக்கு உறவினராவர்;’ என்றருளிச் செய்தார். தேய வேற்றுமையானும், மொழி வேற்றுமையானும், நிறவேற்றுமை யானும், நடையுடை யுணவுவேற்றுமையானுந் தம்மை வேறு வேறாகக் கருதி ஒரு பாலார் மற்றொரு பாலாரை இழித்துத் தம்மை அவரின் மேலாக உயர்த்தி, ஒருவரோ டொருவர் போராடிக்கழியும் இம் மாநிலத்தில், மக்களெல்லார்க்கும் பிறப்பு ஒன்றாய் இருத்தலையும், இடம் மொழி நிறம் நடையுடை யுணவு முதலாயினவெல்லாஞ் சில சில காரணத்தாற் றோன்றி அப்பிறப்பின் ஒப்புமையினைச் சிதைக்கமாட்டாவாய்க் கழிதலையும் உண்மையான் ஆராய்ந்துணர்ந்து பார்ப்ப வர்களுந், தாங் கண்ட அவ் வரும் பேருண்மையினைப் பிறர்க்கெடுத்துரைப்பவர்களும் அரியரா யிருக்கின்றனரன்றோ? அதிலும், இக் காலத்துப்போ லன்றி இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்காலத்திலேயே இவ்வுண்மை யினைக் கண்டார் நம் செந்தமிழ்ச் சான்றோரே யல்லால் வேறு பிறரல்லாமையினை, அப்பண்டை மக்கள் நூல்களை ஆராய்ந் துணரும் முகத்தால் நாம் அறியுந்தோறும் நந் தமிழ்ச் சான்றோரின் தூய உண்மை அறிவின் மாட்சி நமக்குப் பெரியதோர் இறும்பூதினை விளைக்கின்றது! தமிழரல்லாத ஆரிய முனிவர்களோ மக்களைப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுடையராகக் கற்பனை செய்து, அவருட் பார்ப்பனரே இறைவன் முகத்திற் றோன்றிய வரென்றும், ஏனை அரசர் வணிகர் ஏவலர் என்பார் இறைவன் றோளிலுந் தொடையிலும் அடியிலும் முறையே தோன்றியவ ரென்றும் ஒரு புனைந்துரை கட்டிப், பார்ப்பனர்க்கே இம்மை மறுமை இன்பநுகர்ச்சிகளை யெல்லாம் வரைந்து வைத்து, ஏனை யோரை யெல்லாம் அறியாமைக்குந் துன்பத்திற்கும் உரிய வராகக் கிளந்து அவரை இன்பத்திற்குப் புறனா வைத்தார். ஆனாலும், அவர் கட்டிய அப் புனைந்துரையும், அதன் வாயிலாக அவர் பிறரைத் தமக்கு அடிமைப்படுத்த முயன்ற முயற்சியும் பண்டைத் தமிழ் மக்கள் பாற் செல்லவில்லை. இனிப், பழைய நாகரிகமக்களில் எபிரேயரும் (ழநசெநறள) இசரவேல் என்னும் மாந்தர் குழுவே இறைவனுக்குரிய மக்கட் குழுவாமென்றும், ஏனையோர் அன்னரல்லரென்றும் நிறுவுதலிற் கடைப்பிடியாய் நின்றனர். இவரை யொப்பவே மகமதியருந் தம்மவரல்லாத பிறரையெல்லாங் கடவுளுக்குப் புதல்வர்களல்லரெனக் கரைகின்றனர். பௌத்தர்கள், மாந்த ரெல்லாரையும் ஒத்த நிலைமையில் வைத்து அறவுரை பகரினும் அவர்கட்குக் கடவுள் நம்பிக்கை யில்லாமையால், அவர் கூறும் பொதுவுரிமை பொருளற்றதா யிருக்கின்றது; ஏனெனில், தந்தையே யில்லாதபோது, புதல்வரென்னும் பெயரும், அவர் தமக்குள் நெருங்கிய உறவும், பொருளுக்குப் பொதுவுரிமையும் யாங்ஙனம் உண்டாம்? அவ்வவர் தேடும் பொருளும், அதற்காக அவ்வவர் செய்யும் முயற்சியும் பிறவு மெல்லாந் தனித்தனியே அவ்வவர்க்கே உரியவாகவன்றோ கொள்ளப்படும்? அங்ஙனங் கொள்ளப்படுங்கால் அவர் தம்முள் ஒருமித்து உறவாடி ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று வாழ்க்கை நலங்களை ஒருங்கு நுகர்ந்தின்புற்றிருக்குமாறு யாங்ஙனம்? ஆதலாற், பௌத்தர்கள் பகருங் கடவுளைக் கைவிட்ட அறவாழ்க்கையும் பயன் றருவதாகக் காணப்பட வில்லை. இனிச், சமணர்களும் பௌத்தர்களைப் போலவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களாதலால், அவர்கள் கூறும் அறவுரையும் மக்களை ஒருங்கு கூட்டி உறவாடச்செய்ய மாட்டாதாயிருக்கின்றது. மற்றுக் கணியன் பூங்குன்றனாரும், இவரது காலத்தும், இவர்க்கு முற்பட்ட காலத்தும் இருந்த தமிழ்ச்சான்றோருந் தழீஇ யொழுகிய கோட்பாடோ பிறவாயாக்கைப் பெரியோனான முக்கட் பெருமானையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடும் நீர்மையது. அங்ஙனம் அம் முழுமுதற் கடவுள் வழிபாட்டில் உறைத்துநின்ற தமிழ்ச்சான்றோர்களே, தாமுந் தம்மையொத்த எல்லாநிலத்து மாந்தர்களும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட எல்லாம் அம்முதற் கடவுளாகிய ஒரு பெருந்தந்தைக்கு உரிமைப் புதல்வர்களேயாய் நிற்கு முண்மையை ஐயந்திரிபின்றி யுணர்ந்தவர்களாதலால், அவர்களியற்றிய நூல்களிலும் நூற்பாக்களிலும், மக்களுட் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கற்பிக்கும் போலி வேறுபாடு ஓரெட்டுணையுங் காணப்படுகின்றிலது. அதுமட்டுமோ, கல்வியும் பிறநலங்களுமெல்லாம் எல்லாரும் பெறுதற்கு ஒத்த உரிமையுடைய ரென்பதூஉம் அவரால் அவரியற்றிய நூல்களிலும் பாக்களிலும் அடிக்கடி வற்புறுத்துரைக்கப்பட்டு மிருக்கின்றது. அப் பண்டைத் தமிழாசிரியர் கோட்பாட்டினையே ஒருங்கு தழீஇ அதனிற் சிறிதும் வழுவாதொழுகிய தெய்வத் திருவள்ளுவனாரும், “பிற்ப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால்” (குறள் 972 ) என்றும், “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர்” (குறள் 973) என்றும், “விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.” (குறள் 410) என்றும், “கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” (குறள் 393) என்றும், “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள் 2) என்றும், “அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று” (குறள் 259) என்றும், “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி” (குறள் 356) என்றும், “யான்என தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்” (குறள் 346) என்றும், அப் பண்டைத் தமிழ்ச்சான்றோர் கொள்கைகளையே தாம் அருளிச் செய்த திருக்குறளில் யாண்டும் வலியுறுத் துரைத்தல் காண்க. பிறப்பளவில் எல்லா மாந்தரும் ஒருங்கொத்தலால், அவ்வவர்தம் அறிவாலுங் குணத்தாலுஞ் செயலாலுமன்றி மற்றுப் பிறப்பொன்றே காரணமாகக் கொண்டு ஒருபாலாரை உயர்த்தலும் ஏனை யொருபாலாரை இழித்தலும் பொருந்தா வென்பதூஉம், பிறப்பளவில் தம்மை மேலோராகக் கருதியிருப்பவர் அறிவு குணச் செயல்களில் இழிந்தவராயின் அவர் மேலோராதல் செல்லா தென்பதூஉம், பிறப்பளவிற் கீழோராகக் கருதப்படுபவர் அறிவுகுணச் செயல்களில் உயர்ந்தோராயின் அவரே மேலோராவரென்பதூஉம், ஒருவரை மேலோருங் கீழோரும் ஆக்குவது கல்வியறிவின் உண்மை இன்மைகளே யாகலிற் கல்வியறிவில்லாதவர் எவராயிருப்பினும் அவர் மக்களுள் விலங்குகளே யாவரென்பதூஉம், அத்துணைச் சிறந்ததாகிய கல்வியறிவு காணப்பட்டதுகொண்டு காணப்படாத முழுமுதற் கடவுளை யறிதற்குத் துணைசெய்வதாகலின் அதனைப் பெற்றவர் கடவுளை யுணர்ந்து அவன் றிருவடிகளைத் தொழுது பெரும்பயன் பெறாராயின் அதனாற் பயனில்லை யென்பதூஉம், முழுமுதற் கடவுளைத் தொழுது பிறவிப்பயன் பெறுதல் கைவிட்டு மக்களைப் போலவே இறைவனால் அரிது படைக்கப் பட்ட ஆடு மாடு குதிரை முதலான உயிர்களைக் கொன்று ஆரியர் வேட்கும் உயிர்க்கொலைவேள்வி மேலும் மேலுந் தீவினையையே பெருக்குமல்லது தினைத்தனையும் நன்மை பயவா தென்பதூஉம், உலகு உயிர் முதல்வனைப்பற்றிய உண்மைகளைக் கற்றறிந்து மெய்ப்பொருளாகிய இறைவன் நிலையைக் கண்ட மெய்யறிவினரே மீண்டும் இப்பிறவிக்கு வராத பேரின்ப நெறிக்கட் செல்வரென்பதூஉம், முதல் வனல்லாத தன்னை முதல்வனாகவும் எப்பொருட்கும் உரியன் அல்லாத தன்னை அப்பொருட்கெல்லாம் உரியனாகவும் பிழைபடக் கருதிக் செருக்கும் முனைப்பு உளதாங்காறும் ஒருவன் தனது சிறுமையையும் எல்லாம் வல்ல இறைவனது பெருமையையும் உள்ளவா றுணரானாகலின் யான் எனதென்னுஞ் செருக்கற்றவனே இறைவன் திருவடியைத் தலைப்படுவனென்பதூஉம் ஆசிரியர் திருவள்ளுவனார்க்கும் அவர்க்கு முன்னும் பின்னுமிருந்த ஏனைத் தமிழ்ச் சான்றோர்க்கும் முடிந்த கொள்கைகளாகும். ஆகவே, ஈண்டுக் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே, யாவருங் கேளிர்” எனக்கூறிய உரிமையுரை, இறைவனாகிய ஒரு முழுமுதற் றந்தைக்குத் தாமும் தம்மை யொத்த எல்லா மாந்தரும் உண்மையிற் புதல்வர்களேயாயிருக்குந் தன்மையினைக் கண்டு பகர்ந்த மெய்யுரையேயாம். இனி, அப் பெற்றியினரான மக்கள் தம்முட் பலர் நல்லராயுஞ் சிலர் தீயராயும் இருத்தற்குக் காரணம் என்னை யென்று நமக்குள் ஐயம் நிகழுமாகலின், அதனைச் தீர்த்தற்குத் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று அருளிச் செய்தார்; ஒருவர் தீயராதற்கும் ஏனையொருவர் நல்லராதற்கும் அவரவர்தம் எண்ணமும் முயற்சியுமே காரணமாகுமல்லால், அவர் அவ்வாறாதற்குப் பிறர் காரணராகாரென்னும் அரும்பே ருண்மையினை இப் புலவர்பெருமான் தேற்றியதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே, மக்கள் ஒவ்வொருவர்க்கும், மக்களினுந் தாழ்ந்த ஏனை யெல்லாச் சிற்றுயிர்கட்குந் தாந்தாம் வேண்டியவா றெண்ணும் எண்ணமுந் தாந்தாம் வேண்டியவாறு ஒன்றைச் செய்தலும் பிறிதொன்றைச் செய்யாது விடுதலுமாகிய முயற்சியும் உளவென்றும், அவ்வெண்ணத்தைச் செவ்வனே எண்ணி அம் முயற்சியைச் செவ்வனே செய்துவரும் உயிர்கள், அறிவு விளக்கத்திலும் அவ் வறிவு விளக்கத்திற் கேற்ற உடம்பின் அமைப்பிலும் உயர்கின்றனவென்றுந், தம்முடைய எண்ணத்தையும் முயற்சியையுஞ் செவ்வனே செலுத்தாத உயிர்கள் வரவர அறிவு விளக்கத்தை இழந்து அதற்குத்தக உடம் பினமைப்புங் குன்றப் பெறுகின்றன வென்றும் இஞ்ஞான்றை உயிர்நூலார் (க்ஷiடிடடிபளைவள) கண்டறிந்துரைக்கும் அரும் பேருண்மை, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே கணியன் பூங்குன்றனாரால் நன்கறிந்துரைக்கப்பட்டமை வியக்கற்பாலதா யிருக்கின்றது. தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த, “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்” (குறள் 505) என்னுந் திருக்குறட் பொருளுங் கணியன் பூங்குன்றனார் கருத்தோடு ஒத்திருத்தலும் உணரற்பாற்று. இனித், தீய நினைவு, செயல்களால் வருந்துதலும், நல்ல நினைவு, செயல்களால் அவ் வருத்தந் தீரப்பெறுதலும் அவ்வவர்தம் மனமுயற்சி மெய்ம்முயற்சிகளால் வருவனவேயன்றி, அவை தாமும் பிறரால் வருவன அல்லவென்பதனையும் “நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்ன” என்னும் மெய்யுரையால் அறிவுறுத் தருளினார். உலகிற் பெரும்பாலும் மாந்தர்க்கு வரும் மனநோய் உடல்நோய்கள் அவ்வவர் எண்ணும் எண்ணத்தாலுஞ் செய்யுஞ் செயலாலுமே வருகின்றனவென்பது, அவற்றின் காரணத்தை ஆராய்ந்து பார்ப்பவர்க்கெல்லாம் நன்கு விளங்கும். நல்லது வரினுந் தீயது வரினும் மனம் பொங்காதுங் கலங்காதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் திருத்தலிலேயே பழகி விடுவார்க்கு எத்தகைய மனநோயும் உடல்நோயும் வருவதில்லை; வேறு சில புறக்காரணங்களால் வரினும் ஒளிமுன்இருள்போல அவை மிகுவிரைவில் அகன்றொழியும். ஏனென்றால், நல்லெண்ணங்களிலேயே தோயப்பெற்ற மனமுடையார்க்கு அவரது முகத்திலே எல்லாரையும் எல்லா உயிர்களையும் இன்புறுத்தும் ஓர் அருளொளி தோன்றி மிளிர்ந்து கொண்டேயிருக்கும். அதனால், அவர்க்குத் தீதுசெய்ய வருவாரும், வரும் உயிர்களுங்கூட அவரை அணுகியவளவிலே தாங்கொண்ட தீயவெண்ணம் விலகி அவர்பால் அன்பு மீதூரப் பெறுவர். ஆகவே, ஒருவர் துன்புறுதற்கும், அது தீர்ந்து இன்புறுதற்கும் அவர்தாமே காரணராவரல்லது, பிறர் காரணராகாரென்றது வாய்மையே யாம். அற்றேல், தீயது வரின் மங்காதும், நல்லது வரிற் பொங்கி வழியாதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் துயிர் வாழ்தற்கு வழி யாதெனின்; அதனையும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் இயற்கை நிகழ்ச்சியில் வைத்து இனிதறிவுறுக்கின்றார். அவ்வியற்கை நிகழ்ச்சி யாவன; “சாதலும் புதுவதன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” என்னும் அரிய தொடர் மொழிகளிற் காட்டப் பட்டனவேயாம். தமக்கு நெருங்கிய உறவினராவார் இறந்துபடுதல் கண்டு எவர்க்கும் ஆற்றொணாப் பெருந்துயர் உண்டாதல் காண்டுமாகலின், அத்துயர் தம்மால் வருவதல்லா தாய்த் தமக்குறவினராகிய பிறரால் வருவதன்றோவெனின்; அற்றன்று, அதுவுந் தம்மால் வருவதேயாம்; யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒருவர் தமக்கு உற்ற உறவினராவர் இறந்து பட்டவழி மனம் பிறிதுற்றுப் பெருந்துயர்கூர்ந்து நைந்தழக் காண்டுமேயல்லாமல், தமக்குறவினரல்லாத ஏதிலார் அங்ஙனம் இறந்துபடக் கண்டவழி அவ்வாறு பெருந்தயர்கூரக் கண்டதுண்டோ, இல்லையன்றே. ஆதலால், உறவின் கிழமையினை நினைந்தன்றோ அவர்க்கு அவ் வருத்தந் தோன்றாநிற்கின்றது. மற்று, அவ்வுற வுரிமையுனை நினையாது, ‘உலகந் தோன்றிய காலந்தொட்டு, உலகில் உடம்பொடுகூடிப் பிறந்த வுயிர்களெல்லாஞ் சில காலம் அவ்வுடம்பிலிருந்து பின்னரதனைவிட்டு இறந்துபோதல் எவராலும் மாற்றலாகா இயற்கைநிகழ்ச்சியாய்ப் போதருகின்றதன்றோ? இன்றைக்கு இவர் இறந்துபட்டால், நாளைக்கோ இன்னுஞ் சிலநாட் கழித்தோ யாமும் இறந்துபடுதல் திண்ணம்; ஆதலால் இதற்காக யாம் வருந்தி மனம் மாழ்குதல் எற்றுக்கு?’ என்று ஒருவர் சிறிது எண்ணிப் பார்ப்பரானால், அவர்க்குண்டாய அப் பெருந்துயரின் வன்மை குன்றிவிடும். அதுபற்றித்தான் சாதலும் புதிய நிகழ்ச்சியன்று, அது தொன்றுதொட்டு நிகழ்வ தொன்றென, அதனால் நிகழும் பெருந்துயர் தீர்தற்கு ஆசிரியர் எளியதொரு வழிகாட்டினாரென்க. அங்ஙனமே, நோயும் வறுமையும் இன்றிப் பல்வகையின் பங்களும் நுகர்ந்துவாழும் வாழ்க்கை வாய்த்துழியும், அஃது ஊழ்வினையானும் அதனோடொத்துத் தோன்றும் முயற்சி யானும் ஒரு சிலர்க்குக் கைகூடுதல் தொன்று தொட்ட நிகழ்ச்சியாய்ப் போதரலின், அதுகண்டு மனம் பொங்கி வழிதல் அறிவின் மிக்கார்பாற் காணப்படுதல் இல்லை. ஏனென்றால், அத்தகைய இன்ப வாழ்க்கையி லிருந்தோர், ஊழ்வினை மாறி விட்டால் அதற்குத் தக மனமடியுடையராகிச் செல்வமெல்லாம் ஒருங்கிழந்து, வறியராகி இரத்தலையும் ஆங்காங்குக் காண்கின்றோம்; ஆதலால், மெய்யறிவுடையார் செல்வ வாழ்க்கையைக் கண்டு மெய்ம்மறந்திரார் என்பது. அதுபோலவே, எவரானும் வெறுக்கப்படுவதாகிய வறிய வாழ்க்கையில் ஒருவர் இருந்துழியும், அவர் உலகியல் நிகழ்ச்சியினை உண்மையான் ஆராயுந் தன்மையினராயின், அதுபற்றி மனம் அழியாராய், ‘இஃது ஊழ்வினைப் பயனாகலின் இதனான் மனம் வருந்துவ தெற்றுக்கு? பெற்றதுகொண்டு மனவமைதியாயிருந்து வாழ்தலே செயற்பாலது’ என்று மனநிறைவொடு தமது வாழ்க்கையினைச் செலுத்தாநிற்பர். இன்னும், மழைபெய்தலாற் பெருகியோடும் ஒரு பெரிய யாற்றுவெள்ளத்தி னிடைப்பட்டதொரு தெப்பமானது அவ் வெள்ளஞ் சென்றவழியே செல்லுமல்லது அதனை எதிர்த்துச் செல்லாதன்றே; அதுபோல, மேற்சென்ற பிறவிகளிற் செய்த பழவினைத் தொகுதியாகிய ஊழின்வழியே உயிர்களின் நினைவும் முயற்சியுஞ் செல்வதல்லாமல், அவ் வூழுக்கு எதிராய் அவை செல்லவல்லனவாய் இருத்தலைப் பெரும்பாலும் யாண்டுங் காண்கிலேம். அதனாற், பழைய நல்வினைப்பயனால் நினைவும் முயற்சியும் வலிவேறப்பெற்றுப் பெரியராய்த் திகழ்வாரைக் கண்டு வியந்து பேசுதலும் இலம்; பழைய தீவினைப்பயனால் நினைவும் முயற்சியும் பழுதுபட்டுச் சிறுமையுடையராயிருப்பாரைக் கண்டு இகழ்ந்துபேசுதலும் இலம். ஆனாலும், பெரிய ராயினாரை, வியந்து பேசுதல் ஒரோவொருகால் நமக்கு இன்றியமையாததாயிருப்பினுஞ், சிறியராயினாரை இகழ்ந்து பேசுதல் நமக்கெக்காலத்தும் இசையாது. அதனால் நமக்கு “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் தாம் முற்றொடங்கிக் கூறிய ஒப்புயர்வற்ற கொள்கைக்குப், பிற்றொடர்ந்து கூறியவை களை ஏதுவாக வைத்துரைத்த நுட்பம் உண்மையறிவினா ரெல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்பம் பயப்பதா மென்க. இங்ஙனமாகப் பண்டை நல்லிசைத் தமிழ்ப்புலவரும் நல்லாசிரியரும் முழுமுதற் கடவுளாகிய முக்கணானையே தொழுது, தம்மையொத்த எல்லா மாந்தரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது அவற்குரிய உண்மை மகாராகவே நினைந்து, எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒருமித்து வாழ்ந்து வந்தமை இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது. இனிப், பிற்காலத் தமிழ்ப்புலவரின் நிலையினைச் சிறிதெடுத்து விளக்குவாம். 12. பின்றைத் தமிழ்ப்புலவர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்றொட்டே தமிழ் முன்னோர்கள் நாகரிகத்திற் றலைசிறந்து விளங்கித், தம் பின்னோர் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கான விழுமிய தமிழ் நூல்களைப் பல துறைப்பொருளுந் தெளிந்துவிளங்க இயற்றி வைத்தும், அவை யிற்றை அவர்தம் பின்னோர்கள் கருத்தாய்ப் பாதுகாத்து வையாமையின், அவையிற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. சிறுபான்மை அவ்வாறழிந்து போகாமல் தப்பித்தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதர்ந்து காணக்கிடந்த துண்டுப் பாட்டுகளே இடைக்காலத்துச் சான்றோர்களால் வருந்தித் தேடி யெடுத்து, ‘அகநானூறு,’ ‘புறநானூறு’ ‘நற்றிணை’ ‘குறுந்தொகை,’ ‘ஐங்குறுநுறு’ ‘பதிற்றுப்பத்து,’ ‘கலித்தொகை’ ‘பரிபாடல்’ என்னும் எட்டுத்தொகை நூல்களாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக் கின்றன. இங்ஙனந் தொகுத்து வைக்கப்பட்டுள்ள பாட்டு களிலும் எத்தனையோ பல சிதைந்த நிலைமையிலேயே இன்னும் வழங்கி வருகின்றன. மிகப்பழைய காலத்திலியற்றப் பட்ட தமிழ்ச்சான்றோர் நூல்களில், முழுநூலாக நமக்குக் கிடைத்திருப்பது தொல்காப்பியம் ஒன்றுமே யாம். ஏனைப் பல நூல்களிலிருந்து சிற்சில பாட்டுகளைத் தவிர, அந் நூல்கள் முற்றுமே அகப்படாமல் அந்தோ அழிந்தேபோயின! இனிப், பண்டைத் தமிழ்ச் சான்றோரது மெய்வழக்குத் தழீஇத் தொடர்பாக இயற்றப்பட்டுவந்த தனிச் செந்தமிழ் நூல்களில் ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இயற்றிய தெய்வத் திருக்குறள் நூலே இறுதியாவது. ஆகவே, திருக்குறணூற் கால எல்லைவரையிற் சென்றகாலமே பழந்தமிழ்க்காலமாமெனவும், அக்காலத்து நிலவிய தமிழ்வல்ல அறிஞர்களே “முற்காலத் தமிழ்ப்புலவர்” ஆவரெனவும் பிரிந்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இனித், திருக்குறளுக்குப் பின் எழுந்த நூல்களிற், முழுநூலாவதூஉம், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் தம் மெய்வழக்கே பெரும்பாலுந் தழீஇச் செல்வதூஉம் ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் விழுமிய பொருட்டொடர்நிலைச் செய்யுளேயாம். இஃது இத்துணைச் சிறந்த நூலேயாயினும், வடநாட்டிலிருந்து வந்து தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்த சமணர் பௌத்தர்க்குரிய கோட்பாடுகளும் அவர் வழங்கிய வடசொற்கள் சொற்றொடர்களும் இதன்கட் சிறுபான்மை இடையிடையே விரவிக் காணப்படுதலின், இது செந்தமிழ்ச் சான்றோரியற்றிய பண்டை நூல்வரிசை யில் வைக்கப்படுதற்குரிமையிலதாயிற்று. ஆயினும் பழந்தமிழ்ச் சான்றோர் காலத்துக்குப் பின்னெழுந்த நூல்களிற், சிலப்பதி காரங் காலத்தினால் முற்பட்டதாதலுடன், தமிழ்ச்சுவை நிரம்பித் துளும்புந் தகையானும் முன்வைக்கப்படுந் தகுதிப் பாடுடையதாகும். இனி, இச் சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றி அதனோ டொருகாலத்தினதாக வைக்கப்படும் முழு நூலாகிய மணிமேகலை என்னுந் தொடர்நிலைச் செய்யுள் தமிழ்ச் சொற்சுவையில் முதிர்ந்த பதம் வாய்ந்த தொன்றேயாயினும், இதன்கட் பௌத்தமதத்தினர் கட்டிய கதைகளும், அவர்க்குரிய வடசொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளுஞ், சிலப்பதிகாரத் தினும் பார்க்கப் பன்மடங்கு மிகுதியாய் விரவிக் காணப்படு கின்றமையின், இதுவும் பண்டைத் தமிழ்நூல் வரிசையில் வைக்கப்படுதற்கேற்ற தகுதியிலதாயிற்று. என்றாலும், இடைக்காலத் தெழுந்தநூல்களிற் சிலப்பதிகாரத்தொடு தோழமைகொண்டு, இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்னரே தோன்றிய பழைமையுடை சிறந்த தமிழ் முழு நூலாகலின் இதுவும் பாராட்டப்படுதற்குரிய செந்தமிழ் நூலேயாகும். இனிச், சிலப்பதிகார மணிமேகலை காலத்தை யடுத்துத் தோன்றிய திருவாசகமுந் திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் செந்தமிழ்ச் சொற்பொருட் சுவைநிரம்பித் ததும்பு மாட்சி யுடையவாதலுடன், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் அருட்பெருநிலையினை எல்லார்க்கும் விளங்கத் தெருட்டி, அவரை மீண்டு பிறந்திறவா மெய்ந்நிலையில் ஏற்றுவிக்கும் அருட்டிறம் வாய்ந்தனவுமாகும். இவற்றிற்குப் பிற்றோன்றிய இடைக்காலத்து நக்கீரனார், காரைக்காலம்மையார், இடைக்காலக் கபிலர் பரணர் கல்லாடனார், திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், பொய்கை பேய் ஆழ்வார்கள் அருளிச் செய்த செந்தமிழ் நூல்கள் தெய்வமாட்சியிற் சிறந்து விளங்குவனவாகும். இவ்விடைக்காலத்திற் றோன்றிய பெருங்கதை, புறப் பொருள் வெண்பாமாலை, நாலடியார், பழமொழி, கல்லாடம், சூளாமணி, சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம், ஞானமிர்தம், சிவஞானபோதம் சிவஞான சித்தி முதலிய நூல்களெல்லாஞ் செந்தமிழ்த் திட்பநுட்பஞ் செறிந்தனவாதலுடன், பிற்கூரிய நான்கு நூல்களும் மெய்யன்பும் மெய்யறிவுந் தேற்றுந் தனிப் பெருஞ் சிறப்பும் ஒருங்கு வாய்ந்தனவாகும். இங்ஙனந் திருவள்ளுவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்துத் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலை காலத்திருந்து, அவர்க்குப்பின் ஆயிரத்து முந்நூறியாண்டு கழித்துக் தோன்றிய சிவஞானபோதஞ் சிவஞானசித்தியார் காலம் வரையிற் றோன்றிய தமிழாசிரியர் சமயாசிரியர் சந்தானாசிரியர்களும் அவர் இயற்றிய தமிழிலக்கண இலக்கிய நூல்களுந் தெய்வ அருணுhல்களும், வடசொற்றொடர்கள் வடமொழி வழக்குகள் வரவர மிகுதியாய் எடுத்தாளக் காண்டுமாயினும், அவரும் அவரியற்றிய நூல்களும் பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் சென்ற நெறிவழாமல் அவர் தேற்றிய சொற்பொருள் வழக்கே கடைப்பிடித்துத், தமிழறிவு பெருக்கித் தமிழ்மக்களை அறிவிலும் அன்பிலும் விளங்கச் செய்தமை காண்டும். இவ் விடைக்காலத்துப் பெரியார்கள் வடமொழிச் சொற்கள் சொற் றொடர்கள் வழக்குகளைத் தழீஇ யொழுகினார்போற் காணப் படினும் அவர் தழீஇய அவையெல்லாம் ஆரியமுனிவர்க்கு உரியவல்லவாய், அவ் ஆரியமுனிவரைத் திருத்துதற் பொருட்டு, அத் தமிழ்ப் பெரியார் தம்மாலேயே அவ்விடைக்காலத்திற் படைக்கப்பட்டனவாகும். இவர் ஆக்கிய வடசொற்கள் சொற்றொடர்கள் கதை வழக்குகள் முதலியனவெல்லாம் வடமொழிக் குரியனபோற் காணப்படினும், அவையெல்லாம் ஆரியர்க்குரிய பண்டை இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலிய நால்வேதங்களிலாதல், அந் நால்வேத வழிவந்த பிராமணங் களிலாதல் காணப்படாமையின் அவை பண்டையாரியர்க்குரிய அல்லவென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கின்றது. அற்றாயின், முன்னை ஆரிய நூல்களிற் காணப்படாமல் இடைக் காலத்துத் தமிழ்ச்சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்ட அவை தம்முட் சில பல ஈண்டுக் காட்டுக வெனிற், காட்டுதும் : 13. தமிழாசிரியர் ஆரியத்தில் ஆக்கியவை ஈசுரன்றன் ஐம்முகங்களின் பெயர்களான ஈசானம், தத்புருஷம், அசோகம், வாமம், கத்யோஜாதம் என்பன பண்டை ஆரிய நால்வேதங்களிற் காணப்படவில்லை. சிவபெருமானுக்குரிய சிறப்புப் பெயர்களான அம்பிகாபதி, உமாபதி, ஈசானன், மகாதேவன் முதலான சொற்கள் மிகப் பழைய ஆரிய நூலாகிய இருக்கு வேதத்திற் காணப்படவில்லை. மற்று, இருக்குவேதத்திற்கு எத்தனையோ காலம் பிற்பட்டதாகிய எசுர்வேதத்திலே தான் இவை சிவபிரானுக்குரிய பெயர்களாக முதன்முதற் காணப்படுகின்றன. அற்றேல், உருத்திரன் எனும் பெயர் இருக்குவேதத்திற் பலவிடங்களிலும் காணப்படுதல் என்னையெனின்; ஆரியர் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளைப் பழந்தமிழ்க் குடிகளாகிய பரதர் வகுப்பிற் றோன்றிய வியாசர் என்னுந் தமிழ்முனிவர் தொகுத்து வகைப்படுத்திய ஞான்று, தமிழராகிய தமக்குரிய சிவபிரானையும் அவ் ஆரியர் வணங்கி நலப்படல் வேண்டித், தாம் ஆரிய மொழியில் உருத்திரன்மேல் இயற்றிய சில பதிகங்களையும் அவ் வியாசமுனிவர் அதன்கட் கோத்துச் சேர்த்துவைத்தார். அதனால், உருத்திரன் என்னுஞ் சிவபிரான் பெயர் இருக்குவேதத்தின் இடையிடையே விரவித்தோன்று வதாயிற்று. இனி, உருத்திரன் எனும் பெயர் இருக்கு வேதத்தில் ஒரோவிடங்களில் விரவிநிற்குமாறு தமிழ்ச் சான்றோர் செய்தாற்போலச், சிவன் எனும் பெயரும் அதன்கண் அங்ஙனம் நிற்குமாறு அவர் செய்யாமை யென்னையெனின்; சிவன் எனும் பெயர் மாயையைக் கடந்து நிற்கும் முழுமுதற் கடவுட்குரிய சிறப்புப் பெயராகும்; இதனாலன்றே அயல்நாட்டவரிற் பழைய நாகரிக மக்களாகிய எபிரேயரும் (ழநசெநறள) எல்லாம்வல்ல இறைவனைச் சிகோவா (துநாடிஎர) என்றுங் கிரேக்கர் (ழுசநநமள) ‘சியூஸ்’ (ஷ்நரள) என்றும், உரோமர் ‘சுபிதர் (துரவைநச) என்றுந் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றனர்; இப் பெயர்களெல்லாம் அம் மக்கள் தத்தம் மொழிகளிற் ‘சிவன்’ என்னும் பெயரைத் திரித்துப் பேசினமையாற் பிறந்தனவாகும். இனி, உருத்திரன் என்னும் பெயர் மாயைக்குள் நின்று அதனை இயக்கும் இறைவன் பெயராகும். இவ்விறைவன் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் ஆணைவழி நின்று மாயையை இயக்குபவனேயன்றிச், சிவத்தின் ஆணையைக் கடந்து நிற்பவன் அல்லன்; ஆயினும், இவன் சிவத்திற்கு அணுக்கனாய்நிற்றலால் இவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் அத்தனையுஞ் சிவன் பாற் சேறல் பற்றி, இவனைச் சிவபிரானாகவே வைத்துத் தமிழ் அறிவு நூல்கள் நுவலாநிற்கும். இஃது ஆசிரியர் சிவஞான முனிவர், “கண்ணுதல் யோகிருப்ப” என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டின் உரையிற் “சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும் பெயர்களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்பவுள வென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன வெல்லாம் முதல்வனுக்குரியனவே யாமெனக் கொள்க” என்று கூறியவாற்றானுந் தெற்றென விளங்காநிற்கும். இங்ஙனம் மாயைக்குள் நின்று அதனை யியக்கும் இறைவனையும் அறியமாட்டாது, தம்மில் இறந்துபட்ட மறவர்களையே ‘இந்திரன்,’ ‘வருணன்’ ‘மித்திரன்’ முதலிய தெய்வங்களாக வைத்து வெறியாட்டயர்ந்து வணங்கிய ஆரியர்க்கு மாயையைக் கடந்துநிற்கும் முழுமுதற் கடவுளாகிய சிவத்தை யறிதலும் வழுத்துதலும், இயலாமையிற், பண்டைத் தமிழாசிரியர் சிவபிரான் வழிபாட்டுக் குரிய பாட்டுகளை இருக்குவேதத்தின்கட் புகுத்தாமல், அவரதியற்கைக்கு ஒருவாற்றான் இசைந்த உருத்திர வணக்கவுரைகள் சிலவற்றை மட்டுமே அதன்கண் இடையிடையே நுழைத்துவைப்பா ராயினர். உருத்திர வழிபாடு பண்டை ஆரியர்க் குரியதல்லாமை, அவர் முன்னாளிற் சென்று குடியேறி வைகிய போகஸ்கோய் (க்ஷடிபாயணமடிi)1 என்னும் மேல்நாட்டூரிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்திரன், வருணன், மித்திரன், நாசத்தியரே அவர் வணங்கிய தெய்வங்களெனத் தெரிக்குமாற்றால் ஐயமின்றித் தெளியப்படும்; படவே, ஆரியர் இவ் விந்திய நாட்டுட் புகுந்து குடியேறிப், பண்டைத் தமிழ்மக்களோடு உறவாடி வாழலான போதுதான், அவர் வணங்கிப் போந்த உருத்திரனைத் தாமும் வணங்கலாயின ரென்பது துணியப்படும். இங்ஙனமாக உருத்திரனை வழுத்தும் பதிகவுரைகள் சிலவற்றை இருக்குவேதத்தின்கட் புகுத்திவைத்தாற் போலச், சிவபிரானை வழுத்தும் பதிகவுரை ஒன்றையேனும் பண்டைத் தமிழ்ப் பெரியார் அதன்கட் புகுத்தாவிடினுந், தம்மோடு ஆரியர்க்குண்டான தொடர்பு வளரவளர, உருத்திரனுஞ் சிவபிரானும் ஒருவரே யென்பது அவர்க்குப் புலனாகல் வேண்டி, அவர் இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் உருத்திரன் மேற்றான 92 ஆம் பதிகத்தின் 9 ஆஞ்செய்யுளில் ‘ஏபி : சிவ: ஸ்வவாந் ஏவயாவபிர்’ எனச் ‘சிவன்’ எனுஞ் சிறப்புப் பெயரைப் புணர்த்தோதி வைத்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. இவ்வாறு ஆரியர் முதன்முதற் றம்மொடு தொடர்பு கொண்டு பழகத்துவங்கிய இருக்குவேத காலத்தே, பண்டைத் தமிழ்ச் சான்றோர் அவர்க்கு மாயையுள் நின்ற உருத்திரனையன்றி, மாயையைக் கடந்துநின்ற சிவபிரானைக் காட்டாது மறைத்து வைப்பினும், அவர்க்குந் தமக்கும் உண்டான பழக்கம் முதிர முதிர அவருட் டூயராயினார் தமக்கு அணுக்கராகித் தமக்குத் தொண்டுபூண் டொழுகக் கண்டபிற், றாம் அவர்பால் இரக்கம் மிக்குடையாராகிப், பிற்காலத்ததாகிய எசுர் வேதத்தினிடை நடுவே சிவபிரான் மேற்றாகிய ‘திருவுருத்திரம்’ என்னுஞ் சிறந்த வழுத்துரையினை யியற்றிச் சேர்த்தருளினார். அத் திருவுருத்திரத்தின் நடுவில் (4-5-87) ‘நமச்சிவாயச் சிவதராயச” என்னுஞ் சொற்றொடருந், ‘தைத்திரீய ஆரணியகத்’ தில் (10-16-34) ஸர்வலிங்காயநம : சிவாயநம : சிவலிங்காயந : என்னுஞ் சிறந்த சொற்றொடரும் வருதல் காண்க. ‘சதருத்ரீயம்’ என்னும் பகுதி தனித்ததோர் உபநிடதமாய் வியாசராற் செய்யப்பட்டுப் பின்னர்ச் சுக்கில எசுர்வேதத்தி னிடையே சேர்க்கப்பட்டதென ‘யசோமித்திரர்’ என்னும் பௌத்த ஆசிரியர் கூறுமுரையும் எமது கூற்றிலுண்மையை நிறுவுதற்கொரு சான்றாய் நிலவுகின்றது.1 இங்ஙனமாக, ஆரியமுனிவர் தமிழ்ச் சான்றோரின் மெய்யறிவு மாட்சி தெரிந்து, அவர்க்குத் தொண்டராகி, அவர்பால் எல்லாம் வல்ல இறைவனியல்பும், உயிர் களியல்பும், மும்மலவியல்பும், உயிர் மும்மலப் பிணிப்பு நீங்கி இறைவன் றிருவருளின்பத்தைத் தலைக்கூடுமாறு மெல்லாம் அறியத் துவங்கிய பின்னரே, இப் பொருள்களின் பெயர்களும் விளக்கங் களும் எசுர்வேதத்திலும, அதற்குப் பின்வந்த ஆரியமொழி நூல்களிலும், அவற்றிற்கும் பின்வந்த உபநிடதங்களிலும், அவற்றிற்கும் பிற்றோன்றிய சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம், வேதாந்தம், இதிகாசம், புராணம் முதலிய வற்றிலுங் காலங்கடோறும் மிகுதியாய் இயற்றிச் சேர்க்கப் படலாயின. வடநூல் தமிழ் நூல்களின் காலவெல்லை களையும், அவ்வக்கால வெல்லைகளிற் றோன்றிய அவ்வம் மொழிநூல்களையும் நுனித்தாராய்ந்து ஒத்து நோக்கிக் காண்பார்க்கு யாம் ஈண்டுக் காட்டிய உண்மைகளெல்லாம் பிரிந்தினிது விளங்காநிற்கும். அதுகிடக்க. இனி, மேற்காட்டிய இறைவன் பெயர்களாகிய ஈசானன், மகாதேவன், அம்பிகாபதி, உமாபதி முதலியனவே யன்றிச், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐந்து சிவதத்துவப் பெயர்களும், அவ்வைந்தில் முதன் மூன்று தத்துவங்களில் வைகுவாரான வித்தைஈசர், மகேசுரர், சதாசிவர் முதலான கடவுளர்களும், அவர் தம்மைப் பொதுவகையிற் குறிக்கும் விஞ்ஞானாகலர், பிரளயாகலர் முதலிய சொற்களும் இருக்கு முதலான நான்கு வேதங்களிலும் ஒரு திணையளவு தானுங் காணப்படுகின்றில. இன்னும், மேற்காட்டிய சிவபிரான் பெயர்கள், சிவதத்துவப் பெயர்கள், சிவதத்துவங்களில் வைகும் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் பெயர்கள் முதலியனவே யன்றிக், காலம் நியதி கலை வித்தை அராகம் புருஷன் மாயை என்னும் ஏழு வித்தியா தத்துவப்பெயர்களும், அவற்றின் கண்நின்று அவற்றை இயக்குவாரான அனந்தர் சீகண்டர் முதலான கடவுளர் பெயர்களுங்கூட இருக்கு முதலான நால்வேதங்களிலாதல், அவற்றிற்குப் பின்வந்த பிராமணங்களிலாதல் ஒரு சிறிதுங் காணப்படுகின்றில. இனிச், சிவபிரானைத் தீவடிவில் வைத்து வணங்கி, எல்லா உலகமும் எல்லா உலகப்பொருளுந் தீயினால் எரிக்கப்பட்ட வழி எரிந்து மிச்சமாவது சாம்பற்பொடியே யாதலால் அத் தீ வணக்கத்தின்பின் அச் சாம்பற் பொடியாகிய திருநீற்றை எடுத்து நெற்றியில் தீற்றிக்கொள்வது தமிழ்மக்களுட் பண்டு தொட்ட வழக்கமாய்ப் போதருகின்றது. ஆரியர்க்குள் இவ் வழக்கம் இல்லாமையின், திருநீற்றுக்குப் பெயரான ‘விபூதி’ என்னும் வட சொல்லும், அதனை நெற்றியிலிடும் வழக்கமும் நால்வேதங்களிலும் பிராமணங்களிலும் எங்குங் காணப்படவில்லை. இங்ஙனமே, உருத்திரனுடைய கண்களாகக் கொண்டு தமிழ்மக்கள் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமது கழுத்தில் அணிந்துவருங் கொட்டைக்கு வடமொழிப் பெயராகிய ‘உருத்திராட்சம்’ என்னுஞ் சொல்லும் பண்டை ஆரிய நால்வேதங்களிலும் அவற்றின் வழி வந்த நூல்களிலும் யாண்டுங் காணப்படவில்லை. இனி, ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமேலாக எந்த நூலை ஓதத் துவங்கினாலும், எந்த வினையைச் செய்யப் புகுந்தாலும் முறையே ‘ஓம்’ என்னும் ஒலியாகிய பிரணவத்தை முன்வைத்தும், அவ்வோம் என்னும் வடிவிற்கு அடையாளமான விநாயகரை முன்நிறுத்தியும் ஒதுதலும் வழிபடுதலுஞ் செய்வாரான தமிழ்மக்களின் வழக்கம், பண்டை ஆரியநூல்களிற் சிறிதுங் காணப்படவில்லை. பிரணவம் என்னும் பெயராதல், விநாயகரென்னும் பெயராதல், விநாயகர்க்கு இளவலாக வைத்து வழுத்தப்படுந் தமிழ்தெய்வமாகிய முருகன்றன் வடமொழிப் பெயர்களான ‘சுப்பிரணியன்’ ‘கார்த்திகேயன்’ ‘ஸ்கந்தன்’ முதலான பெயர்களாதல் ஆரிய நான்மறைகளிற் சிறிதுங் காணப்படுகின்றில. ‘ஒம்’ என்னும் பிரணவத்தின் வடிவு ஆரியமந்திர வரிகளினிடையே வரையப்படுங்கால் ‘ஓ’ என்னுந் தமிழ் எழுத்தின் வடிவாகவே தீட்டப்படுதலானும், ஓசையைக் குறிக்கும் ஓதை, ஓசை, ஒலி என்னுந் தமிழ்ச் சொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டாற்போல ‘ஸப்தம்,’ ‘த்வநி’ முதலான வடசொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டிலாமை யானும் ஓங்காரமாகிய பிரணவந் தமிழ்மொழிக்கே உரித் தாதலைப் “பிரணவசொரூபம்” “திருவாசக விரிவுரை” முதலான எம்முடைய நூல்களில் முன்னரே விளக்கிப் போந்தாம். இங்ஙனமே, சிவாகமங்களில் நுவலப்படுந் திருக் கோயிலமைப்புகளுந், திருக்கோயிற் கிரியைகளும், அவை யிற்றைச் செய்யுங்கால் ஓதும் மந்திரங்களும், பௌஷ்கரம், மிருகேந்திரம் முதலான சிவாகம ஞானபாகங்களிற் கூறப்படும் முப்பொருள் ஆராய்ச்சிகளும், அவற்றின்கண் வழங்கப்படும் பல சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், பழைய ஆரிய வேதங்கள் பிராமணங்கள் ஆரணியகங்கள் கற்பசூத்திரங்கள் தன்மசூத்திரங்கள் முதலியவற்றில் ஒரெட்டுணையுங் காணப் படாமையின், இவையெல்லாம் இச்செந்தமிழ் நாட்டிலிருந்த பெரியார்களால் ஆக்கப்பட்டன வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்காநிற்கின்றன. அற்றேற், சிவாகம ஞானபாகங்களிற் காணப்படுங் கடவுள் உயிர் மலங்களைப்பற்றிய ஆராய்ச்சியோ டொத்தவை, வடமொழி யுபநிடதங்களிலுங் காணக்கிடத்தலால், அவையெல்லாந் தமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்றல் யாங்ஙன மெனிற் கூறுதும்; காலங்கடோறும் புராணங்களும் ஆகமங்களுந் தலபுராணங்களும் புதிய புதியவாய் ஆக்கப்பட்டு வந்தமைபோல, உபநிடதங்களுங் காலங்கடோறும் பற்பல சமயத்த வராலுந் தத்தஞ் சமயக் கொள்கைக்கிணங்கப் பற்பலவாகச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. முக்திபோக நிடதத்தில் நூற்றெட்டு உபநிடதங்கள் அது தனக்குமுன் இருந்தனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. வடமொழிவல்ல வீபர் என்னும் ஆசிரியர் தம்மாற் கண்டுபிடித்துக் கணக்குச் செய்யப்பட்டவை இருநூற்று முப்பத்தைந்து உபநிடதங்களென்று தெரிவித் திருக்கின்றார்.1 மகமதிய வேந்தரான அக்பர்காலத்திற் செய்யப்பட்ட ‘அல்லா உபநிஷத்’ ஒன்றும் உளதென்று வேதநூலாராய்ச்சியில் வல்லுநரான பிகாரிலால் சாஸ்திரி என்பவர் வரைந்திருக்கின்றார்.2 என்றாலும், பிருகதாரணியகம், சாந்தோக்யம், தைத்திரியம், ஐதரேயம், கௌஷீதகி, கேநம் முதலிய ஆறு உபநிடதங்களும் மிகப் பழைய காலத்தனவாகும்; இவை உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் ஆக்கப்பட்டவை: கடம், ஈசம், சுவேதாசுவதரம், முண்டகம், மகாநாராயணம் என்னும் ஐந்துபநிடதங்களும் ஆகும்; இவை செய்யுள் நடையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் எழுந்தவை; பிரசிநம், மைத்திராயணீயம், மாண்டூக்யம் என்னும் மூன்றுப நிடதங்களும் ஆகும்; இவை பிற்கால ஸமஸ்கிருத உரை நடையில் வரையப்பட்டிருக்கின்றன. இப்பதினான்கு உபநிடதங்களுக்கும் வரவரப்பிற்பட்ட காலங்களிலேதாம் ஏனை உபநிடதங்கள் இயற்றப்பட்டனவாதல் ஆராய்ச்சியாற் புலனாகின்றன.3 இவ்வாறு வரவரப் பெருகிய உபநிடதங் களெல்லாம் பழைய தமிழாசிரியர்களாலுந், தமிழ்மக்களுட் பிற் பிற் காலங்களிற் கிளைத்த ஆகம சைவ வைணவ மாயாவாத மதங்களைப் பரவச் செய்தற்கட் கடைப்பிடியாய் நின்றவர் களான அவ்வச்சமய குருமார்களாலும் புதிய புதியவாகவே இயற்றப்பட்டு வந்தன வென்பதூஉம் அவ்வுபநிடதப் பொருள்களை நடுநின்றாராய்தலால் நன்கு விளங்கா நிற்கின்றது. அற்றேலஃதாக; மிகப் பழைய உபநிடதங்கள் முதன் முதற் றமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்பதற்குச் சான்று காட்டுகவெனிற், காட்டுதும். முற்பட்ட காலத்தில் எல்லா உபநிடதங்களுக்கும் முற்பட்டதாக இயற்றப்பட்ட பிருகதாரணியாக உபநிடதத்திலேயே பழைய ஆரியப் பார்ப்பனர்க்கு அவரின் முற்றும் வேறான க்ஷத்திரிய அரசர் மெய்யறிவு தேற்றினமை நன்கெடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு : வேதநூல் வல்லானான பாலாகி முனிவற்கு மகனான கார்க்கியன் என்பான், காசிமன்னனான அசாதசத்துரு என்பவனை அணுகி, “யான் உனக்கு மெய்ப்பொருள் தேற்ற வந்திருக்கின்றேன்” என்றான். அதற்கு அசாதசத்துரு, “ஆ! உனக்கு நான் ஆயிரம் ஆக்கள் தருகிறேன்! சொல்” என்று விடை தந்தான். அதன்பிற் கார்க்கியன் பன்னிரண்டு வகையாக அதனைச் சொல்ல, அசாதசத்துரு அவன் சொல்லிய ஒவ்வொன்றிலு முள்ள குறை பாட்டை எடுத்துக்காட்டக், கடைசியாகக் கார்க்கியன் மேலேதுஞ் சொல்ல மாட்டானாய் வாயவிந்து வாளாவிருந்தான். அது கண்டு அசாதசத்துரு அவனைநோக்கி, “நினக்கு அத்துணை தான் தெரியுமோ?” என்று வினவ, அவன் “அத்துணை தான்” என்று விடை நுவன்றான். ஆனால், அசாதசத்துருவோ, “பிரமம் அவ்வளவுக்குமேற் செல்லாத அறிவினுள் அடங்குவதன்று” என மொழியக், கார்க்கியன் “யான் உமக்கு மாணவனாக வருகின்றேன்” என வேண்டினான். அதுகேட்ட அசாதசத்துரு, “மெய்யுணர்வு பெறுதற்பொருட்டு ஒரு அரசனுக்கு மாணவனாதல் மாறான வழியாயிருக்கின்றது. ஆனாலும், நீ வேண்டிய மெய்யுணர்வினை நினக்கு யான் அறிவுறுத்து கின்றேன். வா!” என அவன் கையைப்பிடித் தெழுந்தான். (பிருகதாரணிய கோபநிடதம், இரண்டாம் இயல், முதற்பிராமணம்.) என்னும் இப் பகுதியால், முழுமுதற்பொருளின் உண்மை நிலையினை, ஆரியப் பார்ப்பனர் முன்நாளில் அறியாதிருந் தமையும், அதனை அவர்க்குத் தமிழ் மன்னர்களே அந்நாளில் உணர்த்தினமையும், அங்ஙனம் அவருணர்த்திய மெய்யுணர்வு விளக்கமே ‘உபநிடதம்’ எனப் பெயர் பெற்றமையுந் தெற்றென விளங்குதல் காண்க. அற்றேல், ஒரோவொருகாற் றமிழ்வேந்தர்கள் ஆரியக் குருமார்க்கு மெய்யறிவு தேற்றியது உண்மையேயாயினும், ஆரியக்குருமார் எல்லாருமே மெய்யுணர் வில்லாதவரென்று அதுகொண்டு முடித்தல் பொருந்தாதாம் பிறவெனின்; அற்றன்று; பழமையிற் பிருகதாரணியகத்தோ டொத்த சாந்தோக்கிய உபநிடதத்திற் பார்ப்பனர் எவருமே மெய்யுணர்வுடைய ரல்லரென்பதூஉம், க்ஷத்திரியமன்னர்கள் மட்டுமே பண்டு தொட்டு மெய்யுணர்வுடையராய் விளங்கி அம்மெய்யுணர்வு வலியால் உலகமெல்லாந் தஞ் செங்கோலரசின் கீழ் வைத்து ஆட்சி செலுத்தி வந்தனரென்பதூஉம் ஐயுறவுக்குச் சிறிதும் இடனின்றிச் தெளித்துரைக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு: “பாஞ்சாலர் அவைக்குச் ‘சுவேதகேது அருணேயன்’ வந்தான். அவனை நோக்கிப் ‘பிரவாகனசைவலி’ என்னும் அரசன் வினவினான், ‘இளைஞனே, நின் றந்தை நினக்கு மெய்யறிவு புகட்டினரா?’ அதற்குச் சுவேதகேது, ‘புகட்டினர் ஐய,’ என மறுமொழி புகன்றான். அதன்மேல் அரசன் ‘உயிர்கள் இந்நிலவுலகவாழ்வை விட்டுச் செல்லுங்கால் எங்கே போகின்றன? அறிவையா?’ என்று வினவினான். அதற்கவன் ‘அறியேன், ஐய,’ என்றான். அரசன்: ‘அவை திரும்பப் பிறவிக்கு வருங்கால் எங்ஙனம் வருகின்றன?’ சுவேதகேது ‘அறியேன், ஐய,’ அரசன்: ‘தேவர்கள் பாற் செலுத்துவதும், பிதிரர்கள்பாற் செலுத்துவதுமான இரண்டுவழிகள் பிரியுமிடம் நினக்குத் தெரியுமா?’ சுவேதகேது; ‘தெரியேன், ஐய’ அரசன்: ‘மக்கள் இறந்த பிற் செல்லும் உலகு ஏன் நிறைக்கப்படுதல் இல்லை?’ சுவேதகேது : ‘அறியேன், ஐய,’ அரசன்: “ஐந்தாம் வேள்வியிற் புனல்கள் ஏன் ‘புருஷன்’ என அழைக்கப்படுகின்றன?” சுவேதகேது: ‘அறியேன், ‘ஐய’ அரசன் : ‘அற்றேல் நீ ஏன் மெய்யறிவு புகட்டப்பட்டேன் என்றனை? இவை தம்மை யெல்லாம் அறியாதான் ஒருவன் அறிந்தேன் எனக் கூறுதல் கூடுமோ?’ அதுகேட்ட அவ்விளையன் மனம் வருந்தினோனாய்த், தன் றந்தைபாற்சென்று ‘எனக்கு நீர் மெய்ப்பொருள் தேற்றா திருக்கையிலேயே அது தேற்றினேன் எனப் புகன்றீர். அந்த ராஜந்யன் என்னை ஐந்து வினாக்கள் வினாயினான்; அவற்றுள் ஒன்றற்கேனும் விடைசொல்லத் தெரிந்தேனில்லை,’ என விளம்பினான். அதற்கவன் றந்தை, ‘நீ கூறிய அவ்வைந்து வினாக்களில் ஒன்றுக்குக் கூட எனக்கு விடை தெரியாதே. யான் அவற்றை அறிந்திருந்தால் உனக்குச் சொல்லாமலிருப்பே னென்று எண்ணுகின்றனையா?’ என மொழிந்தார். அதன்பிற், கௌதமர் அவ் வேந்தன் பாற் செல்ல, அவன் அவரைச் சிறப்புடன் வரவேற்றான். மறுநாட்காலையில் அரசனால் அழைக்கப்பெற்று. அவர் அவனெதிரே போக, அவன் ‘மாட்சிமை தங்கிய கௌதமரே! மக்கள் வாழ்க்கைக்குரிய செல்வத்தில் நுமக்கு வேண்டியது கேளும்’ என நுவன்றான். கௌதமர் ‘மன்னர்பிரானே! அச் செல்வம் நுமக்குத்தான் உரியதாகற்பாலது; என் மகனைக் கேட்ட கேள்விகள் ஐந்திற்கும் விடைதாம் எனக்கு வேண்டும்,’ என வேண்டினர். அதன் மேல் அரசன் மனந் திகைத்து, அவரை நெடுநாள் தனதரண்மனையிலிருக்கும்படி கட்டளையிட்டான். பின்னர் ஒருநாள் அவரை வருவித்து, ‘ஓ கௌதமரே! இம் மெய்யுணர்வு உமக்கு முன்னிருந்த பார்ப்பனரை அணுகியதில்லையென நீர் எனக்கு மொழிந்த வண்ணமே, மற்றை எல்லா வகுப்பினருள்ளும் க்ஷத்திரிய வகுப்பினராகிய அரசராலேயே இஃது அறிவுறுக்கப்பட்டு வருவதொரு மெய்க்கல்வியாகும்’ எனக் கூறி, அதனை அவர்க்குச் செவியறிவுறுத்தினான்” என்பது (சாந்தோக்கியம், 5-3-1 ) மிகப்பழைய இச் சாந்தோக்கிய வாய்மையுரையாற், சாகாக் கல்வியை அறிந்தவரும் அதனை அறிவிப்பவரும் பண்டை நாளில் அரசவகுப்பினருள் இருந்தனரேயன்றி, ஆரியப் பார்ப்பனருள் எவரும் இருந்திலரென்று முண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத்தெளிய விளங்குகின்ற தன்றோ? அஃதொக்குமாயினும், க்ஷத்திரியரென்பார் தமிழஅரசரே யென்பது யாங்ஙனம் பெறுதும்? அவர் ஆரியருள்ளேயே ஒரு வகுப்பினராயிருத்தல் ஆகாதோ? எனின்; ஆகாது. ஆரியருட் டலை சிறந்த வகுப்பினராயும், வேத மோதுதலும் வேள்வி வேட்டலுமாகிய தலையாய வினைகளைத் தாஞ் செய்வதோடு பிறரையுஞ் செய்விப்பாராய் ஆரிய வகுப்பின ரெல்லார்க்குங் குருக்கண்மாராயும் உள்ள பார்ப்பனர் வழி வழி மெய்யறி வாராய்ச்சிக் குரியராயின் அவரன்றோ அதனை முற்றவுணர்ந்தாராகல் வேண்டும்? அவரன்றோ தம்மிற் றாழ்ந்த தம்மாரிய இனத்தவரெல்லார்க்கும் அதனை யுணர்த்துவாராகல் வேண்டும்? மற்று, அவரிற் றாழ்ந்தவராகவும், எந்நேரமும் உலகிய லொழுக்கங்களிலேயே நினைவுஞ்செயலும் இழுபட்டு, அவற்றைச் சீர் திருத்தி முறையாகப் புரிவதிலேயே கருத்தொருப் பட்டு நின்றவராகவும் உள்ள அரசர்கள் ஆரியராயின் அவர் மட்டுமே, அவ் வாரியப்பார்ப்பனர் அறியாத மறைபொருட் பெருங் கல்வியை யுணர்ந்திருந்தன ரென்றலும், அதனையவர்க்கு அறிவித்தனரென்றலும், என்னை? என்று உண்மையை யுள்ளவாறு ஆராய்ந்து உணர்வார்க்கு, மெய்ப்பெருங் கலையுணர்வு பெற்ற க்ஷத்திரியரென்பார் பண்டை நாளில் ஆரிய இனத்தைச் சேர்ந்தவரல்லராய், நாகரிகத்திற் பண்டே ஏனையெல்லாரினும் பார்க்க மிக்கோங்கித் திகழ்ந்த பழந்தமிழ் மக்களினத்தைச் சேர்ந்தவராய் நின்ற வாய்மை தெற்றென விளங்காநிற்கும். மேலும், பண்டை யாரியர் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு ஊர்ஊராய்த் திரிந்தவரேயல்லால், நாடு நகரங்கள் வகுத்து ஒருவனை அரசனாகவைத்து அவன்கீழ் அடங்கி முறையான நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்தவ ரல்லரென்பதூஉம் அந்நாளில் அவர் தாம் வணங்கிய சிறு தெய்வங்கண்மேற் பாடிய இருக்குவேதப் பழம்பதிகங்களால் நன்கறியக் கிடக்கின்றது. பண்டை ஆரியர் ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டும், அவை தம்மைக் காப்பதற்கு நாய்கள் வளர்த்துக் கொண்டும், அவற்றின் மேய்ச்சலுக்காகப் புற்பூண்டுகள் செழித்துப் பச்சென்றிருக்கும் நிலங்களைத் தேடிக் கொண்டும் நடு ஆசியாவிலிருந்து அதன் தெற்கே ‘நடுநிலக்கட’ லோரங்கள் வரையிலும், ஐரோப்பாவின் நடுப்பகுதிகளிலும் பஞ்சாப்பிலுஞ் சென்று பரவினர். “அந் நாட்களில் அவ் வாரியக் குழுவினர் வணங்கிய தெய்வங்கள்: தியாவா, பிருதிவி, தையஸ், மித்திரன், வருணன், வலன், அத்திரி, மருத்துக்கள், பகலிரவுகள், வைகறை, பர்ஜந்யன் முதலியோராவர். இரும்பு, செம்பு, பொன், வெள்ளி முதலியவைகளை அவர் அறியார். விலங்குகளின் தோலையும் மரங்களினின்றும் உரித் தெடுத்த பட்டைகளையுமே உடைகளாக உடுத்திருந்தனர். அவர்களுக்கு நூறுவரையிற்றான் எண்ணத்தெரியும். தாஞ் சென்ற நாடுகளிற் றமக்குமுன் குடியேறியிருந்த ‘துராணியரர்’ ‘மங்கோலியர்’ முதலான மக்கட்பிரிவினருடன் உண்ணல் கலத்தல்களை ஏதொரு தடையுமின்றிச் செய்து வந்தனர். அவர்கட்கு அப்போது உழவுத்தொழிலே தெரியாதாகையால், உழவுத்தொழில் வளத்தாற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்களின் நாடுநகர்களின் புறங்களிற் புகுந்து வைகி, அவர்களுடைய ஆடுமாடுகளையும் உணவுப் பொருள்களையும் பிற பண்டங்களையுந் திருடிச் சென்று அடர்ந்த காடுகளினுள்ளும் மலைமுழைஞ்சுகளிலும் ஒளிந்திருந்து காலங்கழித்தனர்,” என்று ‘அபிநாஸ் சந்திரதாசர்’ வரைந்திருக்கின்றார். 1 இப் பெற்றியினரான பழைய ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கேயுள்ள பஞ்சாபு தேயத்திற் குடிபுகுந்து, ஆண்டு நின்றும் அதன் கிழக்கே கங்கையாறு பாயும் நாடுகளிலுங், கங்கையாற்றின் தெற்கே விந்திய மலைவரையிலுள்ள நிலப்பகுதிகளிலும், விந்தியமலைக்குந் தெற்கே கோதாவரியாறு பாயும் இடங்களிலும், அதற்குந் தெற்கே குமரிமுனை வரையிலும் நாளேற நாளேறப் படிப்படியே பரவி, அவ் வாரியர்க்கு முன்னே ஆங்காங்கே நாகரிகத்திற் சிறந்தாராய் உயிர்வாழ்ந்த தமிழ் வேந்தர்களாலுந், தமிழ்ச் செல்வர்களாலும், தமிழ்ப் பொது மக்களாலும் உதவப்பட்ட உண்டியும் உடையும் உறையுளும் பெற்றுப், பின்னர் அவரிற் சான்றோராயினார் ஆராய்ந்தறிந்த இலக்கண இலக்கியக் கலையறிவுகளும் அவர் அறிவுறுத்த அறிந்து, தாம் வணங்கிப்போந்த வருணன் மித்திரன் இந்திரன் முதலியோரெல்லாம் போர்க்களத்தில் இறந்து பட்ட மறவரின் ஆவிகளேயாதலால் அவரெல்லாங் கடவுளர் ஆகாமையும், பிறப்பிறப்புக்களிற் சுழலும் எல்லா உயிர்களையும் அவ்வுயிர் களிருக்கும் உலகங்களையுந் தோற்றுவித்துச் சுழற்றுவது பிறப்பிறப்பில்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய உருத்திரசிவம் ஒன்றேயாதலும் அவர் தேற்றத் தெளிந்து வாழ்க்கை செலுத்துலாயினர். இவ்வாறு மிகவுங் கீழ்ப்பட்ட நிலையிலிருந்த பண்டை ஆரியர், இவ் விந்திய நாட்டுட் புகுந்து, ஈண்டு அவர்க்கு முன்னமே நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய பண்டைத்தமிழ் மாந்தருதவியால் நாகரிகம் எய்தி வாழ்ந்த வரலாறுகளை உண்மையான் ஆராய்ந்தறியாமல், இவ் விந்துதேய வரலாறு வரைந்தார் சிலர், ஆரியரே பண்டுதொட்டு நாகரிகத்தின் மிக்காராய்த் திகழ்ந்தனரென்றும், அவ் இவ் இந்திய நாட்டுட் புகுந்து தமிழ்மக்களைப் போரில் வென்று அவரை யெல்லாந் தமக்கடிமை ஆக்கினரென்றும், அவ் ஆரியரின் நாகரிகத்தில் ஒரு சிறுகூறே தமிழர் பெற்றனரென்றும் ஏதொரு சான்றுங் காட்டாது, தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்து கட்டிக் கூறினர். மற்று, இருக்குவேதப் பழம்பதிகங்களோ, ஆரியர் அலைந்துதிரியும் மேய்ப்பராய் இருந்தமையுந், தமிழர் நாடு நகரங்கள் வகுத்து வலிய கோட்டைகளிற் பகையச்சமின்றிச் செல்வத்திற் செழித்திருந்தமையும் நன்கெடுத்து நுவல்கின்றன. ஆரியர் பூஷணை வேண்டி வழுத்திய இருக்குவேத முதன் மண்டில 42ஆம் பதிகத்தில், “ஓ பூஷனே! எங்களுடைய வழிகளைச் சுருங்கச் செய், வழியிலுள்ள இடையூற்றை அகற்று. எம்மொடு கூடி எமக்கு முன்னேசெல், முகிலிற் றோன்றிய முதல்வனே! எமக்குத் தீங்கிழைக்கும் பொருட்டுப் பதுங்கியிருக்கும் பொல்லாத தீக்குறியான ஓநாயை, எமது வழியினின்றுந் துரத்து, பூஷனே!” கள்ளநெஞ்சினனான கொள்ளைக்காரன் யாங்கள் செல்லும் வழியினருகே ஒளிந்திருக்கின்றான்; அவனை அவ் வழியினின்றும் பின்றொடர்ந் தோடச்செய்! * * * யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறுசெய்! புல்லடர்ந்திருக் கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச் செலுத்து! எங்கள் வழியிலே விரைந்து வெப்பம் வராமற் செய்! * * * எம்பால் அருளுடையையாய் இரு! எமக்கு வயிறு நிறைய உணவுகொடு! எமதுடம்புக்கு உரம் ஏற்று! எனப் போந்த வேண்டுகோளுரையால் பண்டை யாரியர் தொலைவான இடங்களிலுள்ள மேய்ச்சல் நிலங்களைத் தேடி நெடுவழி நடந்து எய்த்தமையும், அவர் சென்ற நெறிகளிலே ஓநாய்களுந் கள்வர்களும் பதுங்கியிருந்து அவர்க்குத் தீங்கிழைத்தமையும், அவர்கள் பொருளுக்குப் பெரிதும் மிடிப்பட்டமையும், ஒருவேளை கூட வயிறார உண்ணுதற்கு உணவு கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து அவர்கள் பெருந் துன்புழந்தமையும் நன்கு புலனாதல் காண்க. இனி, அவ் இருக்குவேத முதன் மண்டிலத்தின் கண்ணதான 44 ஆம் பதிகத்தில் இந்திரனைநோக்கி ஆரியர் செய்து கொண்டனவான, “இந்திரனே, நீ நின் துணைவர்களுடன் சென்றாலுஞ், செல்வத்தில் சிறந்த தஸ்யுக்களை நீயே தனியாக நின் குலிசப்படையாற் பிளந்து கொன்றனை! கிரியைகளைச் செய்யாத அப் பண்டை மக்கள் வான் நிலத்தினின்றும் பலமுகமாய்ச் சிதர்ந்தோடிச் சேய்மைக்கண்ணே அழிந்துபட்டனர்.” என்றும், “பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலுந் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் இந் நிலத்தை மறைத்து ஓர் ஆடை விரித்தார்கள்.” என்றும், “இந்நிலத்தின் கடைக்கோடிவரையில் ஊடுருவிப் பரவி நிற்கும் அவர்கள் தம் மந்திர ஆற்றல்களால் இந்திரனை வெல்லமாட்டாராயினர்” என்றும், “இந்திரன் இலிபிசனுடைய வலிய அரண்மனைகளைத் தகர்த்தனன்” என்றும், “தனது கூரிய குலிசப்படையால் அவர்களுடைய கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான்.” என்றும், “சுவித்திராளின் இளங்கன்றே, ஓ மகாவானே, துக்கிரனுடைய வீடுகளினிடையே எமக்கு நிலங்கிடைத்தல் வேண்டி நடந்த போரில் எமக்குதவி செய்கின்றனை!” என்றும் போந்த வேண்டுகோள் மொழிகளினாலேயே, ‘தஸ்யுக்கள்’ என ஆரியரால் அழைக்கப்பட்ட பண்டைத் தமிழர்கள் செல்வத்திற் சிறந்தாராயிருந்தமையும், அவர் ஆரியர் செய்து போந்த சிறுதெய்வ வெறியாட்டுக் கிரியைகளைத் தாம் தழுவா திருந்தமையும், அவர்கள் பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட உயர்ந்த அணிகலங்களைப் பூண்டிருந்தமையும், அப் பழைய தமிழ்மக்கள் இவ் விந்திய நாட்டின் கடைக்கோடி வரையில் எங்கும் பரவி யுயிர் வாழ்ந்தமையும், அவர்கள் மந்திர ஆற்றலிற் சிறந்தாராயிருந்தமையும், இலிபிசன் என்னுந் தமிழ்மன்னன் வலிய அரண்மனைகள் பல உடையனா யிருந்தமையும், பொதுவாகத் தமிழ்மன்னர் பலருந் திண்ணிய கோட்டைகள் அமைத்து அவற்றினுள்ளிருந்து செங்கோல் செலுத்தினமையுந், தமிழ் மக்கள் தொகுதி தொகுதியாக வீடுகளமைத்து வாழ்ந்த நாடு நகரங்களினிடையே ஆரியர் தாமுங் குடியிருக்க நிலம் வேண்டினமையும் நன்கு பெறப்படுதல் காண்மின்கள்! இங்ஙனம் பலவகையானும் நாகரிகத்திற் சிறந்தாராய், மெய்யுணர்விலும் மந்திர ஆற்றலிலும் மிக்கோங்கி வலியராய்த் திகழ்ந்த பண்டைத் தமிழ்மக்களை, ஓரிடத்தும் நிலை பெறுதலின்றி ஊர் ஊராய்த் திரிந்து உண்டிக்கும் உடைக்கும் மிடிப்பட்டு வந்த பழைய ஆரியர் போரில் வென்றாரெனப் புகல்வது எட்டுணையேனும் பொருந்துமோ? அற்றேல், அவர் வணங்கிய இந்திரன், தஸ்யுக்களைத் தன் குலிசப்படையாற் கொன்றனனென்றும், இலிபிசனுடைய வலிய அரண்களைத் தகர்த்து அழித்தனனென்றும். இன்னும் இங்ஙனமே பலவாற்றான் அவர்களைப் போரில் வென்றனனென்றும் ஆரியர் தம்முடைய வேண்டு கோளுரைகளிற் றமிழர்களைத் தாம் போரில் வென்ற குறிப்புத் தோன்றக் கூறுதல் என்னை? எனிற், கூறுதும்: ஆரியர் உண்மையாகவே தமிழரைப் போரில் வென்றனராயின், தாம் அடைந்த அவ் வெற்றித் திறத்தைத் தம் மேல் வைத்துக் கூறாதிரார். மற்றுத், தாம் அவரை வேறல் கூடாமையால், தாம் வணங்கிய இந்திரனே அவரை யழித்தானென அவன்மேல் வைத்து அவரை வென்றாற்போற் கூறினர். வலியான் ஒருவனை வெல்லமாட்டாமல் அவனால் தோல்வியுற்றவர், தாம் வணங்குந் தெய்வத்தின் முன்னே சென்று மண்ணை வாரியிறைத்து ‘அவனை அழித்துவிடு’ என்றோ ‘அவனை அவன் குடியோடு அழியச் செய்தனை’ என்றோ வைதுரைத்தல் இஞ்ஞான்றுங் கீழ்மக்கள்பாற் காணப்படுகின்றதன்றோ? இதுபோலவே வலியிலரான பழைய ஆரியருந் ‘தமிழரை அழிக்க’ என்றோ; ‘அழித்தாய்’ என்றோ இந்திரனைநோக்கித் தம்முடைய வேண்டுகோண்மொழிகளில் வயிறெரிந்து வைதுரைத்தாரென்பது. ஆரிய மொழியையும் ஆரிய நடையையும் பின்பற்றித் தம்மை ஆரியரென உயர்த்திச் சொல்லிக் கொள்ளும் இஞ்ஞான்றை மாந்தர் பலரைப் போற், பண்டிருந்த ஆரிய மாந்தருந், தம்மவரல்லாத பிறர் நன்கு வாழ்தலைக் கண்டு மனம் பொறாது வயிறெரியும் வன்மைய ரென்பது அவர் பாடிய இருக்குவேதப் பதிகங்களினாலேயே நன்கறியக் கிடக்கின்றது. ஆரியர்கள் இந்திரனைநோக்கிப் பாடிய இருக்குவேத முதன் மண்டில 106 ஆம் பதிகத்தில், “தெய்வங்கள் இந்தத் தாசனது சீற்றத்தைத் தணிப்பனவாக! எங்களினத்தவரைச் செல்வ வாழ்க்கைக்குச் செலுத்துவனவாக!” தனது விருப்பத்தைத் தவிரத் தனக்கு வேறு உரிமை ஒன்று மில்லாதவன் தன்னையே தான் சார்ந்திருக்கின்றான்; நீரினிடையே நுரையினையே அள்ளித் தன்மேற் சொரிந்து கொள்கின்றான். குயவன்றன் மனைவியர் இருவருமோ பாலிலே தலை முழுகுகின்றனர்!அவர்கள் சிபாயாற்றின் ஆழத்திலே அமிழ்த்தப்படுவாராக! எனப் போந்த வேண்டுகோளுரையிற், குயவன் என்னுந் தமிழ் மன்னன்றன் மனைவிமார் இருவரும் மிக்க செல்வ வளத்தொடு நீராடுதல் கண்டு மனம்பொறாது வயிறெரிந்து, அவர் களிருவரும் நீராடுஞ் சிபாயாற்றின் ஆழத்திலே அமிழ்த்தப் படுகவெனக் கூறிய வன்கண்மையை நோக்குங்கால், ஆரியர்கள் பண்டைத் தமிழரின் செல்வ வாழ்க்கையைக் கண்டு எத்துணை நெஞ்சம்புழுங்கி அவிந்தனரென்பது புலப்படவில்லையா? இங்ஙனமே வறுமையிலுழன்று வதங்கிய ஆரியர் தமிழரின் வளவிய நாகரிக வாழ்க்கையைக் கண்டு வயிறெரிந்து வைத வசவுகளையெல்லாம் ஈண்டெடுத்துரைப்பின் இது மிக விரியும். எமது “பண்டைத் தமிழர் ஆரியர்” என்னும் நூலில் இதன் விரிவுகளைக் காண்க. என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரியர் தாம் வணங்கிய சிறு தெய்வங்களை நோக்கித், தமிழரை வைதுரைத்த உரைகள் அவர்கள் தாம் அடைந்த வெற்றியினைக் குறியாமல், அவர்களது மிடிப்பட்ட வாழ்க்கையினையும் அவர்களது பொறாமையுள்ளப் பான்மையினையுமே குறிக்கின்றனவென்று உணரற்பாற்று. பண்டைத்தமிழர் நாகரிகத்தானும் நுட்பவறிவின் திறத்தானும் படைவலியில் மிக்காராய் விளங்கினமையின், அவர் எஞ்ஞான்றும் ஆரியரால் தோல்வியடைந்ததிலர். மற்றுப், புதிதுவந்த ஆரியர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் நல்கி, அவர்க்கும் பிறர்க்கும் வேந்தராயும், அவர்க்கு நல்லறிவுச் சுடர்கொளுவிய ஆசிரியராயுமே வென்றிபெற்று விளங்கினர். எனவே, ஆரியர்க்கு மெய்யறிவு தேற்றிய க்ஷத்திரியரென்பார் தமிழ்மன்னர்களேயாதல் தெற்றெனத் துணியப்படும். மநுநூல் ஆக்கிவைத்த பார்ப்பனர்களே, சோழவேந்தர்களையும் ஏனைத் தமிழர்களையும் முதலில் க்ஷத்திரிய இனத்தவர் என்று சொல்லிவைத்துப், பின்னர். அவர்கள் பார்ப்பனரைப் பெருமைப்படுத்தாமையானுந், தாஞ் செய்யுஞ் சிறந்த வினைகளுக்குப் பார்ப்பனருடைய கருத்துக்களைக் கலந்து அவற்றைச் செய்யாமையானும் அவர்கள் சூத்திராயினரென்று அம் மநுநூலில் எழுதி வைத்திருக்கின்றனர் (மநு: 10-43-44) ஆகவே, தமக்கு எல்லாவகையான உதவியுஞ் செய்து தம்மைக் கொண்டாடும் வரையில் தமிழர்களையுந் தமிழ்வேந்தர் களையும் ‘க்ஷத்திரியர்’ என்னும் வடசொல்லால் உயர்த்துக் கூறுதலுந், தம்முடைய இரண்டகச் செயலையும் படிற் றொழுக்கத்தையுந் தெரிந்துகொண்டு தமக்குச் செய்து போந்த உதவிகளை அவர் நிறுத்தித் தம்மைப் பாராட்டு தலையுங் கைவிட்டபிற், சிறிதும் நன்றியறிதலின்றி அவர் தம்மை யெல்லாஞ் ‘சூத்திரர்’ ‘தாசர்’ ‘தஸ்யுக்கள்’ என்னும் இழி சொல்லால் இழித்துக் கூறுதலும் ஆரியர்க்கும் அவர்தம் ஒழுகலாற்றை விடாப்பிடியாய்க் கைக்கொண்ட பார்ப்பனர்க்கும் இயற்கை இரண்டகச் செயல்களாய்ப் படிந்துவிட்டன. என்றாலுந், தம்மை யடுத்துவேண்டிய ஆரியப் பார்ப்பனர்க்குப் பழந்தமிழாசிரியர்கள் சிறிதும் ஒளியாமலே மெய்ப்பொருள் அறிவுறுத்தி வந்த உயர்குணமாட்சி, மேலே பிருகதாரணிய கோபநிடதத்தினின்றுஞ் சாந்தோக்கிய உபநிடதத்தினின்றும் எடுத்துக் காட்டிய இரண்டு மெய்ந்நிகழ்ச்சிகளாலும் இனிது விளங்காநிற்கும். இன்னும், அச் சாந்தோக்கிய உபநிடதத்திலேயே (5.11.24) ‘உத்தாலக ஆருணி’ என்னும் பெயர்போன ஆரியகுரு, தம்பால் வைஸ்வாநர ஆன்மாவைப் பற்றித் தெளிதல்வேண்டிப் போந்து உசாவிய கலைவல்ல பார்ப்பனர் ஐவர்க்கு, அதன் உண்மை தெரிவிக்கும் மெய்யுணர் வில்லாராய்க் கலக்கமெய்திப், பின்னர் அவ் ஐவரோடும் ‘அசுவபதி கைகேயன்’ என்னுந் தமிழ் மன்னன் பால் அணுகித், தமது சிறுமையுந் தாம் வினாய மெய்ப் பொருளின் பெருமையும் அவனால் ஒருங்கு அறிவுறுக்கப் பட்டுத் தெளிந்த உண்மைவரலாறு நன்கெடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது. இன்னும், அச் சாந்தோக்கியத்தின் ஏழாம் இயலிலே, நாரதமுனிவன் சநற்குமாரரை அணுகிப், “பெருமானே!” யான், இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களும், இதிகாசபுராணங்களும், வியாகரணம் முதல் தேவஜனவித்தை ஈறான பதினான்கு கலைகளும் உணர்ந்திருக்கின்றேன். இறைவனே! யான் உணர்ந்தனவெல்லாம் மந்திரங்கள் அல்லது வெறுஞ் சொற்களே யன்றி, அவற்றின் உண்மைப் பொருள் அல்ல. உலகத்தில் துன்புற்றவர்கள் தேவரீரை அடைந்து அத் துன்பம் நீங்கப் பெறுவரென்று கேள்வியுறுகின்றேன். பெரும, யானும் மனங் கவன்று கலங்குகின்றேன், அதனைத் தீர்த்தருளும்!” என்று வேண்டச், சநற்குமாரர் “நீ கொண்டாடிய வேதங்களுங் கலைகளுமெல்லாம் வெறும்பெயர்களேயன்றி வேறல்ல. மற்று, அப்பெயர்கட்கு மேலாகவுள்ள மெய்ப்பொருளியல்பினை அறிவுறுத்துகின்றாம். கேள்!” என நுவன்று, அதன்மேல் அம் முழுமுதற் பெரும்பொருளியல்பினை அவற்கு விரித்து விளம்பினாரென்பது சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே ஆரியமுனிவனாகிய நாரதற்கு உண்மைப் பெரும்பொரு ளியல்பினை அறிவுறுத்தினவர் தமிழ்த்தெய்வமாகிய முருகப் பிரானே யென்பது குறிக்கப் பட்டிருத்தலால், மெய்ப் பொருளுணர்வு அந்நாளில் தமிழாசிரியர்மாட்டேதான் விளங்கியதென்பது ஒருதலை. முருகப்பிரானே வடநூல்களிற் ‘சனற்குமாரர்’ என வழங்கப் படுவர். என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரிய வேதப்பதிகங்கள் ஒருசில வற்றிற் காணப்படும் ஒரு முழுமுதற்கடவுளுணர்வும், அக்கடவுட் பெயர்களான ‘உருத்திரன்,’ ‘சிவன்’ என்னுஞ் சொற்களும், அக்கடவுளையும் அதனின் வேறான சிற்றுயிர் களையும் அச் சிற்றுயிர்களைப் பிணித்த மும்மல இயல்பு களையுந் தெரிக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், ஆரியர் வணங்கிய இறந்தோராவிகள் தெய்வங்களாகாமையும், பிறப்பிறப்பில்லா முதற்பெரும் பொருளாகிய சிவம் ஒன்றே உலகுயிர்களைத் தோற்றுவித்த முழுமுதற்கடவுளாதலும் பிரித்து விளக்குஞ் சில புராணகதைகளுஞ், சைவசித்தாந்த உண்மைகளை அகத்தடக்கிய பழைய உபநிடதங்களும், அவ்வுண்மைகளை ஆராய்ந்து தெளிதற்குக் கருவிகளான சாங்கியம் யோகம் நையாயிகம் வைசேடிகம் வேதாந்தம் முதலான நூல்களும் பண்டைத்தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிவைத்தனவாதல் நன்கு தெளியப்படுமென்பது. இவ்வாற்றால், திருவள்ளுவர் காலத்துக்கு ஒரு நூற்றாண்டு கழித்துத் தோன்றிய ‘சிலப்பதிகார’ ‘மணிமேகலை’ காலத்திருந்து, அவர்க்குப்பின் ஓராயிரத்து முந்நூறியாண்டு வரையிற் றோன்றிய இடைக்காலத்துத் தமிழாசிரியர் அத்தனை பெயருந், தமக்குமுன்னிருந்த பண்டைத் தமிழாசிரியர் ஆழ்ந்தாராய்ந்து கைக்கொண்ட கொள்கைகளையே ஓர் இம்மியளவும் பிழையாது தாமுந் தழீஇ அவற்றிற் கடைப் பிடியாய் நின்றனரேனும் வடநாட்டினின்றும் புகுந்து வைகிய பௌத்தர் சமணர் மாயாவாத வைணவப் பார்ப்பனர் முதலாயினார்க்கு மெய்யறிவுச் சுடர்கொளுவுதற் பொருட்டு, அவர் கொணர்ந்து மிகுத்துவழங்கிய வடமொழியைத் தாமுங் கையாண்டு, தம்முடைய கோட்பாடுகளை விளக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகள் கதைகள் முதலானவைகளை வடமொழியினாலேயே தாமும் வழங்கத் தலைப்பட்டனர். அதனால், திருவள்ளுவர் காலம்வரையில் மிகவுந் தூயதாய்ச் சுடரொளி விரிந்து திகழ்ந்த தனித்தமிழ் ஞாயிறு அதற்குப் பின்னர்த்தாகிய இவ் இடைக்காலத்தில் உண்டான வடமொழிக் கலவையாகிய மூடுபனியால் தனது தூய பேரொளி சிறிதுசிறிதே மங்கித் தோன்றியதாயினும், அப் பனியினைத் தனது பேரொளிவெப்பத்தால் உரிஞ்சித், தனதியற்கையொளி குன்றாமலே விளங்கி இயங்கியது. இவ்வாறு தனித்தமிழ் ஞாயிறு தனது தூய பேரொளி குன்றாதே விளங்கியகாலம், சைவசித்தாந்த ஆசிரியரில் இறுதியாக நின்றவரான உமாபதி சிவனார் வயங்கிய காலம் வரையிலேயாம். இவ்வுமாபதி சிவனார் ‘சங்கற்பநிராகரணம்’ என்னும் நூல் இயற்றிய காலம் இற்றைக்கு 623 ஆண்டுகளக்கு முன்னென்பது அந் நூற்பாயிரங் கூறுமாற்றால் நன்கு பெறக்கிடக்கின்றது. 14. பிற்காலத் தமிழ்ப்புலவர் இவ்வாறு திருவள்ளுவர் காலத்திற்குப் பின்னேயிருந்து உமாபதிசிவனார் காலத் திறுதிவரையில் திகழ்ந்த இடைக் காலம் போக, அதற்குப் பின் அறுநூறு ஆண்டுகளாகச் செல்லுங்காலமே தமிழ்மொழிக்குப் பிற்காலமெனவும், இதன்கண் இருந்த தமிழ்ப் புலவர்களே பிற்காலத் தமிழ்ப் புலவரெனவும் பகுத்தறிதல் வேண்டும். இப் பிற்காலத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் தமிழுக்கு ஆக்கமாவது ஏதேனுஞ் செய்தனரோவென்று ஆராய்ந்துபார்ப்பின், அவர் அத்தகைய தேதுஞ் செய்தில ரென்பதே தெளியப்படுகின்றது. ஆக்கமாவது செய்யாதொழியினும், அதற்குக் கேடு தருவதேனுஞ் செய்யாது வாளா இருந்திருப்பரேல் அதுவே அவர் தமிழுக்குச் செய்த ஆக்கமாகும் ஆனால், அவர், பண்டைத் தமிழாசிரியரும் அவர்க்குப்பின் இடைக்காலத்தே வந்த தமிழாசிரியரும் செந்தமிழ் மொழியை இயற்கைச் சொற்பொருள் வகையிற் பேணியவாறுபோற் பேணாது, அவரொடு திறம்பிச் செயற்கைச் சொற்பொருட் குறுநெறியே புகுந்து அதனொளியையும் வனப்பையுங் குறைத்து அதனைக் குற்றுயிருங் கொலையுயிருமாய் வலிவிழந்து கிடக்கச்செய்தனர். இவர் இங்ஙனஞ் செய்யலானது, பண்டைத் தமிழ்வளனும் அதனையோம்பிய பேராசிரியரின் நுண்மான் நுழைபுலனும் ஒரு தினையளவுதானும் இவர் ஆராய்ந்து அறியப் பெறாமை யினாலேயாம். சொல்வகையானும் பொருள் வகையானும் இவர் தமிழுக்கிழைத்த தீங்கு பெரிது! பெரிது! இவர் சொல்வகையாற் செய்த தீங்கு, ‘தலைக்குத்தக முடியமைப்பேன்’ என்னாது, ‘முடிக்குத்தகத் தலையைச் சீவுவேன்’ என ஒரு பொற்கொல்லன் முடிவேண்டினார் தலையை ஒரு கூர்ங்கத்தியாற் சீவப் புகுந்தாற்போல, இவர் பொருளுக்குத்தகச் சொல்லமையாமற் சொல்லுக்குத் தகப் பொருள் புகுத்துவதிலேயே கருத்தீடுபட்டு நின்றார். இப்பிற்காலப் புலவர் ஆக்கிய ‘அந்தாதிகள்’ ‘கலம்பகங்கள்’ ‘கோவைகள்’ ‘உலாக்கள்’ ‘பிள்ளைத் தமிழ்கள்,’ ‘பரணிகள்,’ ‘விடுகவிகள்,’ ‘சீட்டுக்கவிகள்,’ போல்வனவெல்லாம் பெரும் பாலும் பொருள் சென்ற வழியே சொற்செல்லாமற், சொற் சென்றவழியே பொருள் செலுத்தப்பட்டு, பொருட்பயன் தருவனவல்லவாய்ப் பொலிவிழந்து காணப்படுகின்றன. நூல் பயில்வதெல்லாம் உணராத பொருளை உணர்ந்து அறிவு பெறுதற்கும், உணர்ந்த பொருளை மேலும் அழகுறக் கண்டு இன்புறுதற்குமேயாம். இவ்வாறு அரிய பொருளும் அழகிய பொருளும் நுவலப்படுங்கால் அவற்றின் இயல்புக்கிசைந்த சொற்கள், ஓர் இழையில் முழுமணிகள் கோக்கப்பட்டாற் போற், கவினுறப் போந்தமைய உருவானும் உள்ளுறை பொருளானும் அறிவும் இன்பமும் மேன்மேற் பெருகச் செய்வதே ஒரு விழுமிய நூலின் தன்மையாகும். மற்றுச், சொற்களைத் திரித்தும் புணர்த்தும் பலவாறு பிரிந்து பொருடர இயைத்தும் பெரிது அறிவுழன்று செய்த ஒரு நூலை அங்ஙனமே அறிவுழன்று பலநாட் பயின்றுங் கடைசியாக அப் பயிற்சியாற் பெற்ற பயன் யாதென்று அறியலுறுவார்க்கு, அதனாற் போந்த பொருட்பயன் ஏதுமே இல்லையென முடியுமாயின், அஃது “உமிக்குற்றிக் கை சலித்த” பான்மையாய் முடியுமன்றே? இதனை ஓர் எடுத்துக்காட்டான் விளக்குதும். துறைமங்கலஞ் சிவப்பிரகாச முனிவராற் செய்யப்பட்ட “பழமலையந்தாதி” என்பது அந்தாதி நூல்களிற் சிறந்த தொன்றாக வைத்துப், பழையவழியே தமிழ்கற்கும் மாணவர்க்குத் தமிழாசிரியரான் முதன்முதற் கற்பிக்கப்பட்டு வருகின்றது. யாம் எமதிளமைக் காலத்தில் ஆசிரியரது கட்டளையால் முதன்முதற் பயின்றதும் இவ்வந்தாதியே யாகும். இதிற் போந்த செய்யுட்களில் ஒன்று வருமாறு : ‘ஒழியாக் கவலையொழிவதென் றோசொல் லுழல்புலத்தின் வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக் கவலை மனமே பரந்து பரவிலைவேல் விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே.’ இச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் முதலிரு சீரின் கண்நின்ற சொற்கள் முதற்சீர் முதலெழுத்தொழிய ஏனையெழுத்தெல்லாம் ஒரே யுருவினவாயிருத்தல் காண்க. அங்ஙனம் அவை ஒரே யுருவினவாய் இருந்தாலும். பொருளுரைக்கப் படுங்கால் அவை வெவ்வேறு சொற்களாகப் பிரிந்து வெவ்வேறு பொருள்களைத் தரல்வேண்டுமென்பது இன்னோரன்ன அந்தாதி நூல்களுக்குப் பிற்காலத்தார் சொல்லும் இலக்கணமாகும். அதற்கியையவே இச் செய்யுளின் முதலிருசீர்க்கண் நிற்குஞ் சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருடரல் காண்மின்கள்! முதலடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘ஒழியாத’ ‘கவலை’ எனப் பிரிந்து ‘நீங்காத மனக்கவற்சி’ எனப் பொருள்படுகின்றன! இரண்டாமடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘வழி’, ‘யாக்கு’ ‘அ’ ‘வலை’ எனப் பிரிந்து ‘வழியிலே கட்டிவைக்கும் அந்தவலை’ எனப் பொருள் தருகின்றன; மூன்றாமடியின் முதலிருசீர்ச் சொற்கள் ‘பழி’ ‘ஆக்க’ ‘வல்லை’ எனப் பிரிந்து ‘பழியை உண்டாக்கவல்லை’ எனப்பொருள் பயக்கின்றன! இவற்றுள் ‘வல்லை’ என்னுஞ் சொல்லின் நடுநின்ற லகர ஒற்றுக் கெட்டு ‘வலை’ என நின்றதாக அதனை வைத்தல் வேண்டும்; நான்காம் அடியின் முதல்நின்ற சொற்கள் ‘விழி’ ‘ஆக்க’ ‘அலை’ எனப் பிரிந்து முன்னும் பின்னுமுள்ள ‘வேல்’ ‘மகள்’ என்னுஞ் சொற்களோடு இயைந்து ‘வேலையொத்த விழியினளாய்ச் செல்வத்தைத் தரும் அலைமகள்’ எனப்பொருள் தருகின்றன; ஈண்டுச் செல்வம் எனப்பொருள்படும் ‘ஆக்கம்’ என்னுஞ்சொல் ஈறுகெட்டு ‘ஆக்க’ என நின்றதெனக் கொள்ளல்வேண்டும்; ‘அலைமகள்’ என்றது கடலரசன் புதல்வியாகிய உமைப் பிராட்டியாரை. இவ்வாறு முதலிரு சீர்ச்சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருள்களைத் தருமாறு இயற்றப்பட்ட இச் செய்யுளின் பொழிப்புரை இது: ‘நீங்காத மனக்கவற்சி நீங்குவது எந்நாளிலோ சொல்; தான் உலவித்திரிகின்ற கானகத்தின் வழியிலே வேட்டுவர் கட்டிவைத்த வலையினிடத்தே அகப்பட்டுக் கொண்ட ஒரு மானைப்போல் உணர்வு திரிபுற்று நின்று, என்னைப் பழிக்கு உள்ளாக்கவல்லை என் மனமே! உள்ளம் விரிந்து வழுத்துகின்றிலை, வேலை யொத்த விழியினளாய்ச் செல்வத்தைத் தரும் அலைமகளாகிய உமைப் பிராட்டியார்க்குக் கணவனாகிய சிவபிரான் தங்கியிருக்கும் பழமலையை.’ மனமே! அலைமகளிரை தாழ் பழவெற்பினைப் பரவிலை; (அதனால்) ஒழியாக்கவலை யொழிவதென்றோ சொல்! வலையிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக்கவல்லை என வினைமுடிவு செய்க. இச் செய்யுளைச் சொன்ன அளவிலே சிறந்த தமிழறிவுடை யாரும் இதன் பொருளை உடனே அறியாது திகைத்துப், பின்னர்த் தமதறிவை அதன்கண் உய்த்து, ஒவ்வோரடியின் முதலிருசீர்ச்சொற்களையும் பலவகையாலெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்த்து, அதன்பின் இதன் பொருள்களை உணர வல்லராவர். இதனை முதற்கட் பயில்வார் இதன் சொற்களை அங்ஙனம் பலவகையாற் பிரித்து வருந்திப் பின்னர் இதன் பொருளை அறிதல் போலவே இச் செய்யுளை அமைக்கப் புகுந்த புலவரும் முதலிற் றாங் கருதிய பொருளைத் தாங் கருதியவாறே அமைக்க இயலாதவராய், முதலிரு சீர்ச்சொற்கள் பலவகையிற் பிரிந்து பலவாறு பொருடருமாறு பலவகையால் வருந்தியமைத்து, அங்ஙனம் அமைத்த சொற்பொருள்கட் கேற்ப ஏனைச் சொற்பொருள்களைத் தொடுத்து இச் செய்யுளை மிகவருந்தி யமைத்தாராவர். இங்ஙனமெல்லாம் வருந்தியமைத்தும், இச் செய்யுளும் இதன்பொருளும் இறைவன் மேலனவாயிருந்தும், இவை இதனை ஓதுவாருள்ளத்தை உருக்கவல்லனவாயில்லை. மற்று, இங்ஙனமெல்லாஞ் சொற்படுகரிற் கிடந்து அலக்கண் உறாது, இறைவன்பால் நெஞ்சம் நெக்குருகி மாணிக்கவாசகப் பெருமான் தாம் கருதிய பொருள்வழியே கரைந்துரைத்த தாகிய, “அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன், என்கொண் டுன்னைப் பணிகேனே” என்னுந் திருவாசகச் செய்யுளை மேற்காட்டிய பழமலையந்தாதிச் செய்யுளோடு ஒருங்குவைத்து ஒப்பிட்டுப் பார்மின்கள்! பழமலையந்தாதிச் செய்யுள், தன்னை ஒதுவார் எத்துணைத் தமிழறிவிற் சிறந்தாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளை எளிதிற் காட்டமாட்டாதாய்க் கருதி நிற்பப், பிற்காட்டிய திருவாசகச் செய்யுளோ, தன்னை யோதுவார் தமிழறிவிற் சிறவாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளைத் தன்னை அவரோதும் அப்பொழுதே தெளிபளிங்கின் றெண்ணீரெனத் தெளியக்காட்டி அவரது நெஞ்சத்தை நீராய் நெகிழ்த்தி ஒளிர்ந்து நிற்றல் காண்க. மேற்றந்த பழமலையந்தாதிச் செய்யுட் சொற்களைப் பிரித்துப் பொருள் விளக்கியவாறுபோல் அத் திருவாசகச் செய்யுளைச் சொற்பிரித்துப் பொருள் விளக்க வேண்டிய இடர்ப்பாடில்லாமையும் அறிந்து கொண்மின்கள்! திருவாசகத்தைப் போலவே, பண்டைச் செந்தமிழச் சான்றோர் இயற்றிய நூற்பாக்களும், இடைக்காலத்துப் பெரியார் இயற்றிய நூற்பாக்களும் பெரும்பாலும் இடர்ப்பாடின்றிப் பொருள் சென்ற வழியே சொற்சென்று தம்மை யோதுவார்க்கும் பயிலவார்க்கும் அறிவும் இன்பமுமாகிய பெரும்பயன்றந்து பிறங்குவனவாகப், பிற்காலத்துப்புலவர்கள் இயற்றிய நூற்பாக்களோ சொற் செருகப்பட்ட புழைவழியே பொருள் துறுத்தப்பட்டுத் தம்மை யோதுவார்க்கும் பயில்வார்க்கும் பொருட்பயன்றருவன வல்லவாய் இருண்டுகிடத்தல் பகுத்தறிந்து கொள்ளற்பாற்று. வெறுஞ் சொன்மயக்குடைய செய்யுட்கள் இத்தகையன சில பெரும் பொருட்டொடர் நிலைகளில் (காவியங்களில்) ஆங்காங்கு அருகிவருமாயின் அதனைக் குற்றமாகக் கருதுதல் ஆகாது. ஆனால், இஞ்ஞான்றைப் புலவர்கள் இயற்றிய நூல்கள் பெரும் பாலும் இத்தகைய சொற்றொடர் நிலைகளான அந்தாதிகள், கலம்பகங்கள், உலாக்கள், கோவைகள் முதலியனவாகவே காணப்படுகின்றன. இவை தம்மைப் பயிறலாற் பெரும்பயன் விளையாமை இவை தம்மை நுண்ணறிவினாற் சிறிது பயின்று பார்ப்பினும் நன்கு விளங்கும். இத்தன்மையாவன பயனில் நூல்கள், பண்டைச் செந்தமிழ்க்காலத்திலும் இடைக் காலத்திலும் அருகியல்லது இயற்றப்படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. இனிப், பொருள்வகையாலும் பிற்காலத் தமிழ்ப் புலவர் தமிழுக் கிழைத்த தீங்கு பெரிதென்பது காட்டுவாம். முற்காலத்துப் புலவர்கள் இயற்கைத் தோற்றங்களையேனும் மக்கள் இயல்புகளையேனும் பாடப்புகுந்தால், உண்மைக்கு மாறாகாமல் ஓவியம் வரைந்து காட்டினாற்போல் அவை தம்மை நம் அகக்கண்ணெதிரே விளங்கக் காட்டுவர். அவர் பாடிய தோற்றங்களையும் மாந்தர்தம் நிலைகளையும் நாம் நேரே சென்று காண்டல் கூடுமாயின், அவை அவர் பாடியவாறே யிருக்கக்கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் எய்துவம். அவர் பாடியவெல்லாம் அங்ஙனம் பட்டாங்கு மொழியும் பெற்றியவாயிருத்தலைச் சில செய்யுட் காட்டி விளக்குவாம். காவற்பெண்டு எனப் பெயரிய நல்லிசைப் புலமைவாய்ந்த நங்கையாரை, அவர்க்கு நண்பரான மற்றொரு மாதரார் காணவந்துழிக், காணவந்த அவ்வம்மை தமதில்லினுள்ளே புகுந்து நின்ற பரிசும், நின்று தம் மகனைப்பற்றி அவர் உசாவிய பரிசும், அதற்கு அந்நங்கையார் கூறிய விடையும் விளங்க அக் காவற்பெண்டு என்னும் அவரே பாடிய செய்யுள் உருவிற் சிறிய தொன்றாயினுந் தன்னகத் தடங்கிய அப் பொருட் பொலிவால் எத்துணைப் பெரியதாய் இலங்குகின்றது! அது வருமாறு: “சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டுள னோஎன வினவுதி: என்மகன் யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!” (புறநானூறு 86) “எனது சிறிய வீட்டிலே நிறுத்தப்பட்டிருக்கும் அழகிய தூணைப் பிடித்து நின்றுகொண்டு ‘நின்மகன் எவ்விடத்தே இருக்கின்றான்?’ என என்னைக் கேட்கின்றாய்; என் மகன் எவ்விடத்தி லிருக்கின்றானாயினும் யான் அதனை அறியேன்; ஒரு புலியானது படுத்துக்கிடந்து பின் விட்டுப்போகிய மலை முழைஞ்சு (குகை) போல அவனைப் பெற்ற வயிறோ இது; என் மகனோ போர்க்களத்தின்கண்ணே காணப்படுவன்,” என்பது மேலைச் செய்யுளின் பொருளாகும். காவற்பெண்டு என்னும் புலவர் பெருமாட்டி ஆறடியில் அடக்கிப் பாடிய இவ் அகவற்பா எத்துணை அழகும் அறிவும் வாய்ந்து மிளிர்கின்றது. தம்மைக் காணவந்த மாது தமது இல்லிலே ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு நின்ற நிலையை முதலில் அறிவிக்கின்றார்; இங்ஙனம் அறிவிக்குங்கால், தமது இல்லம் பெரியதொரு மாளிகையாயிருந்துந் தாழ்மைதோன்ற அதனைச் சிறிய இல் என்கின்றார்; உண்மையிலே அஃதொரு சிறுகுடிலாயிருந்தால் அதன்கண் அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருத்தல் ஆகாமை யால், அம்மையாரது இல்லம் பெரியதொன்றேயாதல் திண்ணம். வந்த அம்மாது தம் மகன் எங்கே உளன் என வினாயதற்கு, அவனிருக்குமிடந் தமக்கு உறுதியாய்த் தெரியாதேனும், அவன் போர்க்களத்திலேதான் இருக்கற்பாலன் என ஒரு குத்துமதிப்பாய் மறுமொழி தருகின்றார். இவ்வாறு மறுமொழி தருகின்றுழி, அப் புதல்வனை ஈன்ற தம் வயிற்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு, ஒரு புலிகிடந்து துஞ்சிப்போகிய மலைமுழைஞ்சினை உவமை சொல்லுகின்றார். இவ்வாறு அவர் சொல்லிய இச் செய்யுளில், அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறந்த இல்லத்தின் உருவமும், அதனுள் தம்மைக் காணவந்த ஒருமாது அத் தூண்களில் ஒன்றை ஒரு கையாற் பற்றிக் கொண்டு தம் மகனைக் குறித்து வினவிய நிலையுந், தம் மகன் போராண்மையிற் சிறந்து தம்மைப் பிரிந்துபோய்ப் போர்க்களத்தில் மறஞ் சிறந்து நிற்குந் தோற்றமும், அவனை ஈன்ற தம் வயிற்றுக்கு உவமையாகக் காட்டிய புலிகிடந்து துஞ்சிப்போன மலைமுழைஞ்சின் தனித்தோற்றமும், ஓவியத்தில் வரைந்துகாட்டினாலென நமதுளக்கண்ணெதிரே விளக்கமாய்த் தோன்றி நம்மை இன்புறுத்துதல் நோக்கு மின்கள்! இங்ஙனஞ் சில சொல்லிற் பலபொருட்டோற்றமும் உலக இயற்கை மக்களியற்கையில் உள்ளவாறே எழில் கெழும எழுதிக்காட்டும் பேரறிவாற்றல் பண்டை நல்லிசைப் புலவரெல்லார் மாட்டும் வீறி விளங்காநிற்கின்றது. இனிப், பண்டைச் செந்தமிழ்ப் புலவரேயன்றி, இடைக்காலத்து வந்த தமிழ்ச்சான்றோரும் உலக இயற்கை மக்களியற்கையை அவையிற்றின் உண்மைக்கு மாறாகாமலே ஓவியத்தில் வரைந்து காட்டுவதுபோற் காட்டி அரும்பெருஞ் செய்யுட்கள் இயற்றிவந்தனர். இதற்கு, மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் என்னுந் தமிழ்த்தேன் நிறைந்த பொலன் குடத்திருந்து ஒரு நறுந் திவலையினை எடுத்து ஈண்டு நுஞ்செவிவாய்ப் பெய்குதும்: “ஈவிளை யாட நறவினை வோர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடுவெற்பா! உற்று நோக்கிஎம் மெல்லியலைப் போய்விளை யாடல்என் றாள்அன்னை; அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே” என்னும் இச் செய்யுள், ஒரு மலைநாட்டுத் தலைவி தன் மகளுக்கும் பிறனொருவனுக்கும் இடையே மறைவில் நிகழ்ந்து வருங் காதலொழுக்கத்தினைத் தன் மகடன் வடிவ வேறுபாடுகளை உற்றுநோக்கு முகத்தால் உய்த்தறிந்து, இனி நீ அம்பலத்தான் மலைக்கண்ணே சென்று விளையாடல் வேண்டாம்’ எனக் கூறி அவளைத் தடைசெய்துவிட்டாள் என்னுஞ் செய்தியை அப் பெண்ணின் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்து, அவன் அவளைக் காலந்தாழாதே மணஞ்செய்து கொள்ளல் வேண்டுமென அவனுக்குக் குறிப்பாக உணர்த்தும் முறையில் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கட் டோழி தலைவனை முதலில் முன்னிலைப் படுத்துகின்றுழி, அவனும் ஒரு மலை நாட்டுக்குத் தலைவன் என்பது புலப்பட அவனை ‘வெற்பா’ என்றழைக்கின்றாள்; அங்ஙனம் அழைக்கும்வழி, அவனது மலைக்கண்ணே தேனீக்கள் மேலெழுந்து சுற்றிச்சுற்றிப் பறத்தலைக் கண்டு, அதன்கண் அத் தேனீக்கள் கட்டிய தேனடை தேன் நிரம்பிவிட்டதனையுணர்ந்து செங்குத்தான அம் மலைமுகட்டின் ஒரு புறத்தே தொங்கும் அத் தேனடை யினை எடுக்கல் வேண்டித் தன் சுற்றத்தாரான வேட்டுவர் கண்ணேணியினைச் செய்கின்றனர் என நுவல்கின்றாள். மால்பு என்பது கண்ணேணி; அஃதாவது நீண்ட ஒரு பச்சைமூங்கிலை யெடுத்து, அதன் கணுக்களின் நெடுகஉள்ள கிளைகளை ஒரு சாண்விட்டு நறுக்கி அமைப்பது: இங்ஙனம் அமைத்த அம் மூங்கிற் கோலைச் செங்குத்தான ஒரு மலையின் புறத்தே சார்த்திவிட்டால், அதன் கணுக்கள் நெடுக ஒருசாண் நறுக்கி விடப்பட்ட கிளைகளிற் காலை வைத்து வைத்தேறி எவ்வளவு உயரமான இடத்தின் உச்சிக்கும் வேட்டுவர் ஏறிவிடுவர். இங்கே அத் தலைமகனது தலையினுச்சியின் உள்ள தேனடையில் தேன் நிரம்பிவிட்டதனை, அத் தேனடையின் மேலெழுந்து சுழன்று பறக்குந் தேனீக்களின் இயக்கத்தாற் கண்டுணர்ந்து தன் உறவினரான வேட்டுவர் அதன் தேனை யெடுக்கக் கண்ணேணி அமைக்கின்றரெனத் தோழி கூறிய உரையினுள்ளே, ‘நினக்கும் நின் காதலிக்கும் இடை நிகழும் இக் காதலொழுக்கத்தினை எம் வேட்டுவச் சுற்றஞ் சில குறிப்பான் அறிந்து நின் காதலியை மணஞ்செய்து கொடுத்தற்குரிய முயற்சிகளைச் செய்கின்றனர்; அதனால் நீ அவளை விரைந்து மணம்புரிதல் வேண்டும்’ என்னுங் குறிப்புப் பொருளும் அடங்கிநிற்றல் காண்க. இச் செய்யுள் நான்கடிகளால் அமைக்கப்பட்ட சிறிய வடிவினதா யிருந்தும் ஆழ்ந்த பொருள் பெரிதுடைத்தாய், நம் அகக் கண்ணெதிரே இயற்கைக் காட்சியினையும் மக்கள் நிலை யினையும் முறைபிறழாமல் இனிது விளங்கக் காட்டுதல் நினைவிற் பதிக்கற்பாற்று. ஒரு மலைமுகட்டிலே தேனடை யொன்று தொடுக்கப் பட்டிருத்தலும், அதனைத் தொடுத்து அதன் கட்டேனை நிரப்பிய தேனீக்கள் தமக்குணவு நிறைய இருத்தலால் மகிழ்ச்சிமிக்கு அவ் அடையினைச் சுற்றிச்சுற்றிப் பறத்தலும், அதுகண்ட அம் மலைவாணரான குன்றவர்கள் அவ் அடையிலுள்ள தேனை எடுத்துக் கொள்ளுதற்காக அம்மலைக் கண் வளர்ந்த மூங்கிலொன்றை வெட்டிக் கொணர்ந்து ஒரு கண்ணேணி இயற்றுதலுந், தன் தலைமகளின் அன்னை அவடன் வடிவ வேறுபாட்டை உற்றுநோக்கி அவள் காதல் வயப்பட்ட உள்ளமுடையளாயிருத்தலை உணர்ந்து ‘இனி நீ அம்பலத்தான் மலையிற் போய் விளையாடாதே’ எனத் தடை செய்ததனைத் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்தலும் இஃது எத்துணை உண்மையாக எத்துணை அழகாக நம் உளக்கண்ணெதிரே கொணர்ந்து காட்டுகின்றது! இங்ஙனமே, இடைக்காலத் தாசிரியர்களில் முதற் றோன்றிய வர்களான இளங்கோடிவகளுங் கூலவாணிகன் சாத்தனாருந் தங்காலத்து நிகழ்ந்த கோவலன் கண்ணகி வரலாறுகளும், மணிமேகலை உதயகுமரன் வரலாறு களுமாகிய மெய்ந்நிகழ்ச்சிகளையே யமைத்துச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும்பொருட் டொடர்நிலைகளை (காப்பியங்களை) இயற்றினார். வடநாட்டு ஆரியமொழியின் வழியே புனைந்துரைப் பொய்க்கதைகள் இத் தமிழ்நாட்டுட் புகுந்து தமிழ்மக்களின் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் அனைவரும் மெய்ந்நிகழ்ச்சி களைப் பாடுதலிலேயே கடைப்பிடியாய் நின்றனர். ஒரோ வொருகாற் றமிழ்ப்புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய் வழக்கினைப் பருகி அறிவு மயங்கி அப் பொய்யினை மெய்யாகப் பிறழக்கொண்டு ‘பாரதம்,’ ‘சூளாமணி,’ ‘கொங்குவேள் மாக்கதை,’ ‘குண்டலகேசி’ ‘வளையாபதி’ ‘சீவகசிந்தாமணி’ ‘இராமாயணம்’ முதலான பொய்ந்நூல்களை ஆக்கினாராயினும், மெய்கூறுதலிலேயே மெய்யுணர்தலிலேயே பழகிப்போந்த பழைய தமிழ்மக்கள் உள்ளத்திற்கு அவை இன்பம் பயவாமையின், அவை பெரும்பாலும் வழங்காதேபோயின; அன்றி ஆரியர் வயமான பேதைமாக்கள் குழுவிலே அருகி வழங்கின. இதனாலன்றோ திருவள்ளுவர் காலத்தை யடுத்துத் தோன்றிய ‘பெருந்தேவனார்’ என்னுந் தமிழ்ப்புலவர் வடமொழி யிலிருந்து பாரதக் கதையைத் தமிழிலே மொழிபெயர்த் தியற்றியும், அந் நூல் இங்கு வழங்காமலே அழிந்துபோயிற்று. இப்பாரதக் கதையினும் பொய்ம்மை நிறைந்ததாயிருத்தல் பற்றி வடமொழியிலுள்ள இராமாயண கதையைப் பண்டையாசிரியர், இடைக்காலத்தாசிரியர் எவருந் தமிழில் மொழி பெயர்த்துச் செய்திலர். இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கம்பரென்னும் புலவராற் பாடப் பட்ட இராமாயணம், வடமொழியிலுள்ள வான்மீகி ராமாயணத்தைப் பார்த்துச் செய்யப்பட்டதாயினும், அதனினும் பார்க்கப் பொய்ம்மை நிறைந்ததாய்ப், பழைய தமிழாசிரியர் கைக்கொண்ட இயற்கை வழக்கொடு மாறுபட்டதாய்த் தோன்றினமையின்; அக் கம்பர்க்குப் பிற்பட்டிருந்த சிறந்த உரையாசிரியர்களாலும் அஃது ஏற்றுக்கொள்ளப் படாததாயிற்று. இங்ஙனமாக இவ் விடைக் காலத்து நடுவிலும் இதன் இறுதியிலும் இருந்த தமிழ்ப் புலவர் சிலரால் வடமொழிப் பொய்வழக்குத் தழீஇ ஒரோ வொருகால் இயற்றப்பட்ட சூளாமணி, சிந்தாமணி முதலான பொருட்டொடர் நிலைகள் பெரும்பாலும் பொய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டமையாற்றான், பண்டைத் தமிழாசிரியர் சென்ற மெய்ந்நெறியே செல்லுங் கடப்பாடுடையரான ஆசிரியர் சேக்கிழார் உண்மை நாயன்மாரின் அரிய அருள் வாழ்க்கை வரலாற்றுண்மைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணம் என்றும் வழங்குஞ் செந்தமிழ்ச் செம்பொருட்டொடர் நிலையினை இயற்றியருளினார். இடைக்காலத் துவக்கத்திலெழுந்த ‘சிலப்பதிகாரம்,’ ‘மணிமேகலை’ தவிர ஏனைப் பொருட்டொடர் நிலைகளுள் எதுவும், பிற்காலத்துத் தோன்றிய ‘கம்பராமாயணம்,’ ‘கந்தபுராணம்’ ‘வில்லிபுத்தூரர்பாரதம்,’ ‘நைடதம்’ முதலியனவும், பெரியபுராணம் என்னுஞ் சுடரொளி ஞாயிற்றின்முன் மின்மினித்துணையும் விளங்காவென்பது நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்வாரெவர்க்குந் தெற்றென விளங்கற் பாலதேயாம். மேலும், இடைக்காலத்தும் பிற்காலத்துந் தோன்றிய இந் நூல்கள் வர வர வடசொற்களை மிகுதியாய் எடுத்தாண்டு, பல்லாயிரந் தனிச் செந்தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந் தொழிதற்கும் இடஞ்செய்தன. இங்ஙனஞ் சொல்வகையாலும் பொருள் வகையாலுந் தமிழ்க்குந் தமிழ் மக்களது அறிவு விளக்கத்திற்கும் பேரிடர் பயப்பனவாயும் அவற்றைக் கவிந்த பொய்ந்நூல்களாயும் எழுந்த இருட்பெரும் பரவையினைக் கீழ்ந்த மெய்ந்நூல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் என்னுஞ் செம்பொருட் செந்நூல்களேயாகும்; இவை தோன்றித் தஞ்செஞ்சுடர்க் கதிர்களை எங்கும் பரப்பிய தில்லையாயின், இத் தமிழ்நாடு பொய்யும் அறியாமையுமாகிய திண்ணிருளாற் கவரப்பட்டுத் தன் பண்டைநாகரிகத்தினை ஒருங்கே இழந்துபோயிருக்கும்! மற்று, அஃது அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு இம் மெய்ந்நூல்களை இதன்கண் இடையிடையே தோற்றுவித்த இறைவன் தன் அருட்டிறம் பெரிது! பெரிது! அஃதொக்கும், பிற்காலத்துத் தோன்றிய பொருட் டொடர் நிலைகளிற் பெரும்பாலன உண்மையில் நடவாப் பொய்க் கதைகண்மேல் எழுந்தனவாயினும், அவையிற்றிற் காணப்படும் இலக்கியச் சுவை பயில்வார்க்கு இன்பம் பயத்தலின், அதுபற்றி அவை பாராட்டற் பாலனவல்லவோ வெனின்; அல்ல. அந் நூல்களை ஆக்கிய புலவர்கள் தாம் பாடுதற் கெடுத்துக்கொண்ட கதைகளில் மெய் இவை பொய் இவை யென்று ஆராய்ந்துரைத்தவரல்லர்; கதை பொய்யே யாயினும் அவற்றால் அறியப்படும் உறுதிப் பொருள்கள் இவையென்பது தேற்றிப் பாடினவருமல்லர். பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக்கொண்டு தாம் நம்பிய தல்லாமலும், அவற்றைப் பயில்வார் கேட்பாரெல்லாரும் அங்ஙனமே நம்புமாறுசெய்து உலகத்திற் பொய்யைப் பரப்பி மெய்யே விளங்க வொட்டாமலுந் திரிபுபடுத்தினர். அவ்வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும் அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப் புலவரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டமையால், அவர் கதையைவிட்டு இலக்கியச் சுவை தோன்றக் கூறுமிடங்களிலும் மெய்யுரை பகரமாட்டாராய்ப் பொய்யே கூறுவாராயினர். மற்றுப், பண்டைத் தமிழாசிரியர்களும், அவர்வழி பேணிய இடைக்காலத்தாசிரியர் சிலரும் யாண்டுந் தாம் மெய்யே காண்பதொடு, தாங்கண்ட மெய்யையே பிறர்க்குங் காட்டுவாராய்த் திகழ்ந்தமையின், அவர் இலக்கியச் சுவை தோன்றக் கூறுவனவும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து மெய்யாகவே மிளிர்கின்றன. இவ் வேறு பாட்டினை இரண்டு எடுத்துக் காட்டுகளான் விளக்குதும்: கொல்லி மலையாண்ட வல்வில் ஓரி என்னுந் தலைவனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவாபெருமானான வன்பரணர் அவனது விற்றொழிலாண்மையினைச் சிறந்தெடுத்துக் கூறுதற்குப் புகுந்து, “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக் கேழற் பன்றி வீழ அயலது ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோம்” (புறநானூறு 152) என்று அதனை வியந்துபாடியிருக்கின்றார்: இதன்பொருள் வருமாறு: ‘யானையைக் கொன்று கீழேவிழச்செய்த, சிறந்த நாணினின்றும் விடுக்கப்பட்ட அம்பானது பெரிய வாயினை யுடைய ஒரு புலியை ஊடுருவி இறக்கப் பண்ணித், துளையுள்ள கொம்புகளைத் தலையில் உடைய ஒரு புள்ளிமான் கலையைக் கீழே உருளப்படுத்தி, உரல்போலுந் தலையினையுடைய காட்டுப்பன்றி யொன்று நிலத்தே விழுமாறு சென்று, பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின்கட் கிடக்கும் உடும்பின் உடம்பிலே பட்டு நிற்கும் அத் துணை வலிய வில்லாண்மை வேட்டத்தில் பெற்றியை யுண்டாக்கி யிருந்தவனான ஒரி!’ என்பது, இங்ஙனம் ஓரியென்னும் மலையரசன் ஓர் யானையை நோக்கி எய்த அம்பானது அவ்வியானையைக் கொன்று கீழே வீழ்த்திய தல்லாமலும், அது தான்சென்ற கடுவிசையினால் தான் சென்ற வழியின்கண் ணிருந்த ஒரு புலியின் திறந்த வாயினுள் நுழைந்து அதனை ஊடுருவிப்போய்ப் போகும் நெறியில் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானையும் உருட்டிவிட்டு, அதன் பின் ஒரு காட்டுப் பன்றியையுங் கீழ்விழச் செய்து, அவ்வளவிற் றன்விசை குறைதலின், அப்பன்றி வீழ்ந்த பக்கத்தேயுளதான ஒரு புற்றின்கட் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிலேபட்டு நின்றது என, அவ்வம்பை ஏவிய அவனது விற்றொழில் வல்லமையினையும், அதனைப் புலப்படக் காட்டும் அவ்வம்பினது விசையினையும் ஆசிரியர் வன்பரணர் நன்கெடுத்துக்காட்டினார். இதன்கண் இயற்கைக்கு மாறாகக் கருதற்பாலது ஏதுமேயில்லை. ஏவப்பட்ட மிகக் கூரிய அம்பு, ஏவியவனது பேராற்றலாற் கடுவிசையிற்சென்று ஒர் யானையை யூடுருவிப்போய்ப், பின் அவ்வியானையை நோக்கித் திறந்த வாயுடன் வந்த ஒரு புலியின் வாயினுள்ளே நுழைந்து அப் புலியினையுங் கீண்டுசென்று, அவ் வளவிற் றனது விரைவு சிறிது சிறிது குறைதலின் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானைக் கீழே உருளச்செய்து, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியைக் கீழ்விழமோதி, கடைசியாக அதன் பக்கத்தேயிருந்த ஒரு புற்றினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த ஓருடும்பின்மேற் றைத்து நின்றுபோதல் நிகழக் கூடியதேயாம். மற்றுப், பிற்காலத்துப் புலவரான கம்பர் அங்ஙனமே இராமனது விற்றொழிலாண்மையினைப் புலப்படத்துதற்குப் பாடிய இரண்டு செய்யுட்களையும் அற்றின் பொய்ம்மை யினையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்: “அலையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கு ஐயா! உலையுருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி மலையுருவி மரம் உருவி மண்உருவிற்று ஒருவாளி” (பால, குலமுறை 26) “ஏழு மாமரம் உருவிக்கீழ் உலகமென்று இசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடன் அடுத்து இயன்ற ஏழுஇ லாமையின் மீன்டதுஅவ் விராகவன் வாளி” (கிட்கிந், மரா, 138) இவ்விரண்டனுள் முதற்செய்யுள் இராமனது வில்லாண்மையினை அவனை யுடனழைத்துச்சென்ற விசுவாமித்திரர் சனக மன்னனுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துக் கம்பராற் பாடப்பட்டிருக்கின்றது. அதன்பொருள் வருமாறு: ‘அலைகளையே தனக்கு உருவமாய்க்கொண்ட கடலைப் போலும் நீலநிறத்தினும் ஆண்மைக் குணத்தினனுமான இராமனுடைய நீண்டு நிமிர்ந்த நிலையினையே வடிவாக வுடைய தோள்களின் வலிமையை நீ ஊடுருவப் பார்த்தல் வேண்டும் ஐயனே! கொல்லனது உலைக்களத்திலே செக்கச் சிவந்து தோன்றுங் கனலையொப்பத் தீயைக் கக்குங் கண்களையுடைய தாடகையென்னும் அரக்கியின் மார்பைத் துளைத்துச் சென்று, அதன்மேலும் மலையினையுந் துளைத்துப்போய், அதனாலுஞ் தன்விசை அடங்காமையின் மரத்தினையும் நிலத்தினையுந் துளைத்து ஏகிப், பின்னும் அது குறையாமையின் துளைத்தோடியது அவன் ஏவிய ஒருகணை.’ இப்பொருளைச் சிறிதறிவுடையாரும் உற்று நோக்குவராயின், இஃது எத்துணைப் பொய்ம்மை நிறைந்த தாயிருக்கின்ற தென்பதனை யுணர்ந்து அதன்கண் அருவருப்பு எய்துவர். இராமன் ஏவிய ஓர் அம்பு தாடகை தன்மார்பைத் துளைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அஃது அதன்பின் ஒரு மலையினைத் துளைத்துச் சென்ற தென்றதும், அதன் பின்னும் ஒரு மரத்தையோ பல மரங்களையோ துளைத்துப்போய தென்றதும், அதனானும் அதன் விரைவு குன்றாமல் இந் நிலத்தையே ஊடுருவி ஏகிய தென்றதும் இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத, கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யா யிருக்கின்றவல்லவோ! இருப்புக் கோலிற் செய்த ஒருகணை மலையைத் துளைத்துச் செல்லுதல் கூடுமோ! அதனைத் துளைத்தபின்னுந் தன் விரைவுங் கூர்மையும் மழுங்காமல் துளைத்துப், பின்னர் இந் நிலவுலகத்தையுந் துளைத்து அப்பாற் போகியதென்றது எத்துணைப் பெரும் புளுகாயிருக்கின்றது! இதனை நன்குணர்ந்து பார்மின்கள் அறிவுடையீர்! ஒருவனது வலிவை, ஒரு பொருணிகழ்ச்சியைச் சிறப்பிக்க ‘உயர்வுநவிற்சி’ சொல்லுங்கால் இங்ஙனம் இயற்கைக்கு முழு மாறுபாடுண் டாகச் சொல்லுவது நல்லிசைப் புலமையாகுமா? கூர்ந்து பாருங்கள்! மற்று, மேலெடுத்துக் காட்டிய பழந்தமிழாசிரியரான வன்பரணர் ஓரியினது வில்லாண்மையை வியந்து பாடிய அரிய செய்யுளிற் காணப்படும் ‘உயர்வு நவிற்சி’ உலக இயற்கைக்கு எத்துணைப் பொருத்தமுள்ளதாய் விளங்கி நமக்குத் தேருந்தொறும் ஆராமகிழ்ச்சியினைத் தருகின்றதோ, அத்துணைக்கு இயற்கையொடு பொருந்துவதிலதாய்க் கம்பர் கூறும் இவ் வுயர்வுநவிற்சி நினைக்குந்தொறும் நமக்குப் பேரா வெறுப்பினையே விளைக்கின்றது! இன்னும்; ஆசிரியர் வன்பரணரது செய்யுளில் மற்றுஞ் சில நுட்பங்களுந் தோற்றங்களும் ஓவியத்தில் வரைந்து காட்டினாலென நமதுளக் கண்ணெதிரே தோன்றி நம்மை இன்புறுத்துதலும் அறியற்பாற்று. ஓரிமன்னன் ஒரு வேழத்தை நோக்கியெய்த கடுங்கணை அவ் வேழத்தை ஊடுருவிப்போய், அதனைக் கொல்லுதற்கு அங்காந்தவாயுடன் வந்த ஒரு புலியையுங் கொன்ற நிகழ்ச்சியும்; அதன்பின் துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளிமான் ஒன்றையும் உருட்டி, அதன்பின் உரல்போலுந் தலையினையுடைய ஒரு காட்டுப்பன்றியையும் வீழ்த்திய நிகழ்ச்சியுங் கடைசியாக அப் பன்றியின் பக்கத்தே ஒரு புற்றினுள்ளே அடங்கிக்கிடந்த ஒர் உடும்பின் உடம்பிற்சென்று தைத்து அவ் வளவில் நின்றுபோன நிகழ்ச்சியும்; இயற்கையில் உள்ளவைகளை உள்ளவாறே கைவல்லான் ஒருவன் வரைந்து காட்டும் ஓவியங்கள்போல் நம் கண்ணெதிரே தோன்றுகின்றமயுங் காண்மின்கள்! இத்தகைய இயற்கைத்தோற்றவனப்பு மேற்காட்டிய கம்பரது செய்யுளிற் சிறிதும் இல்லாமையும் நோக்குமின்கள்! இனி, இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தற்கு ஏவிய ஓர் அம்பு அவைதம்மைத் துளைத்துச் சென்றதாகக் கம்பர் கூறும் இரண்டாவது செய்யுட்பொருள் வருமாறு : அவ்விராமன் தனது வில்லினின்றுங் தொடுத்துவிட்ட ஒரு கணையானது ஏழு பெரிய மராமரங்களையுந் துளைத்துச் சென்று, அதன் பின்னுந் தனது கடுவிசை சிறிதுங் குறையாமையின், கீழுலகம் என்று சொல்லப்படும் ஏழினையும் நடுவே புகுந்து துளைத்துப்போய்ப், பின் அக் கீழ் ஏழ் உலகங்களை உடன் அடுத்துத் தொடர்பாக உள்ள வேறு ஏழ் உலகங்கள் இல்லாமையினாலே திரும்பிவந்தது. என்னும் இப்பொருளை நோக்குங்காற், கம்பர் மேலெடுத்துக் காட்டிய முதற் செய்யுளிற் புளுகியதினும் பன்மடங்கு மிகுதியாக இச் செய்யுளிற் புளுகிவிட்டனரென்பது நன்கு புலப்படு கின்றதன்றோ? மராமரங்களேழனைத் துளைத்தற்கு ஏவிய ஒரு வாளி அம் மராமரங்கள் ஏழனையுந் துளைத்துச் சென்ற தல்லாமலுங் கீழ் ஏழ் உலகங்களையுந் துளைத்துப் போய்ப், பின்னர்த் துளைத்துச் செல்லுதற்கு ஏதும் இல்லாமையின் திரும்பி இராமனிடமே வந்து சேர்ந்த தென்பது உலகிலுள்ள புளுகுகட்கெல்லாம் முதற்பெரும் புளுகாய் முன் நிற்கின்றது. மேலே வன்பரணர் பாடிய செய்யுளில் ஓரிமன்னன் ஏவிய வாளி, யானை புலி மான் உடும்பு முதலான உயிர்களின் ஊன் உடம்பைத் துளைத்துச் சென் றடங்கியதென்று சொல்லப்பட்டதே யல்லாமல், மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றதெனச் சொல்லப்பட்டதில்லை. ஏனெனில் இரும்பிற் செய்த கூர்ங்கணை விலங்குகளைக் கொல்லுதற்பொருட்டும், மக்களைக் கொல்லுதற் பொருட்டும் அக் காலத்திற் செய்யப் பட்டனவே யல்லாமல் மரங்களை மலையை நிலத்தைத் துளைத்தற்காகச் செய்யப்பட்டன அல்ல. ஆதலால், அவை மெல்லிய தசையுள்ள யானை புலி மான் முதலான உயிர்களின் உடம்பைத் துளைத்துச்சென்றன வென்பதுதான் பொருத்தமாகுமே யல்லாமல், அவை மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றனவெனக் கூறுதல் ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகாது; பொருத்தமுடைத்தாகாமையின் அக் கூற்று உண்மையுடைத் தாகலுமில்லை. இல்லையாகவே, இராமன் மராமரங்கள் ஏழனை ஒரு கணையாற்றுளைத்து விட்டன னென்பது, பார்ப்பனர் இராமனது திறலை மிகுதிப் படுத்திக் காட்டுதற்குக் கட்டிவிட்ட ஒரு பொய்க்கதையே யாம். வான்மீகி இராமாயணத்திற் கட்டிவிடப்பட்ட இப் பொய்க் கதையினை உண்மையென நம்பிக் கம்பருந் தமிழில் இதனை எடுத்துப் பாடியது, பண்டைத் தமிழாசிரியரது மெய் வழக்கிலேயே பழகினார்க்கு உவர்ப்பினையும் வருத்தத் தினையுந் தாராதொழியுமோ? இவ்வாறு கம்பர் நடவாத பொய்க்கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமையால், வடமொழிப் பொய்வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்றக் கூறவேண்டும் இடங் களிலும் பொய்யாவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பருக்குப் பின்வந்த தமிழ்ப்புலவர்களெல்லாரும், பொதுமக்களை ஏமாற்றுதற்பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையுந் தலபுராணங்களையுமே பெரும்பாலுந் தமிழில் மொழிபெயர்த்துவைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய்வழக்கினை அடியோ டழித்துவிட்டார். இப் பிற்கால மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவுவரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது. அற்றேல், ஆங்கிலம் முதலான இஞ்ஞான்றை நாகரிக மொழிகளிற் பொய்யாகப் புனைந்த கட்டுக்கதைகளுங், கட்டுக் கதைகண்மேற் பாடப்பட்ட செய்யுள் நூல்களுஞ் சாலப் பெருகிவருதலும், அவற்றின் பயிற்சியைச் சிறந்த அறிவுடை யாரும் பாராட்டிப் பேசுதலும் என்னையெனின்; அப் பிறமொழிக் கட்டுக்கதைகளை ஆக்கிய புலவர்கள் அவற்றைக் கட்டுக்கதைகளென்றே கூறுதலோடு, அவற்றைப் பயில்வாரும் அவை பொய்யெனவே யுணர்ந்து அவையிற்றை அயர்வுதீர்ந்து இன்புறுதற் கருவியாகவே கைக்கொண்டு பயில்கின்றனர். அதனால் அந் நூல்களைப் பயிறலில் தீங்கேதும் விளைவ தில்லை. மற்றுப், பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களோ வடமொழிக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து அவற்றுட் பொய்யாவன இவை மெய்யாவன இவையென்று தெளியும் பகுத்தறிவில்லாதவர் களாய்ப், பொய்யை மெய்யாக நம்பித் தாம் அறிவுமழுங்குவ தோடு, அப் பொய்யை மெய்யாகப் பிறரும் நம்புமாறு காட்டி அவரதறிவையும் மழுக்குவதால் இவரால் தமிழ்க்குந் தமிழ்மக்கட்கும் உண்டாங் கேடு அந்தோ! பெரிது! பெரிது! அஃதொக்கும்; இடைக்காலத்துப் புலவர்கள் ஆக்கிய ‘உதயணன் கதை,’ ‘சூளாமணி’ ‘சிந்தாமணி’ முதலியனவுங் கட்டுக்கதைகண்மேல் எழுந்த பொருட்டொடர் நூல்களே யாதலால், அவைதம்மை விழுமியவெனத் தமிழ் வல்லார் கொண்டாடுதல் என்னையெனின்; அங்ஙனம் அவற்றைக் கொண்டாடுதல் அவை கூறுங் கதைக்காகவன்று; அக் கதைகளை மெய்யென நம்புவார் ஈண்டு யாரும் இலர்; மற்று, அவை தம்மை ஆக்கிய புலவர்கள் அந்நூல்களில் இலக்கியச் சுவைமுதிரத் தொடுக்கு மிடங்களிலெல்லாந், தொல்லாசிரியர் சென்ற நெறியே சென்று, பெரும்பாலும் இயற்கைக்கும் மக்களொழுகலாற்றிற்கும் முரணாகாத முறையிலேயே வைத்து அவைதம்மைப் புனைந்துரைத்தலால், அதுபற்றி அவையிற்றை அவர் கொண்டாடி வருகின்றனரென்க. இங்ஙனமே, வடமொழியின்கண்ணுங் கதைகண்மேற் கட்டப்பட்ட சில காவியங்களும் நாடகங்களும் நடவாத நிகழ்ச்சிகளை நடப்பனபோல் வைத்துரைப்பினும், இலக்கியச் சுவை மலியக் கிளக்கு மிடங்களிbல்லாம் பெரும் பாலும் உலகவியற்கைக்கும் மக்களியற்கைக்கும் மலைவாகாத முறையில் வைத்தே அவைதம்மைப் புனைந்துசெல்லுதலால் அவையும் பாராட்டப் படுவனாவாயிருக்கின்றன. அத்தகைய வடநூல்கள் வடமொழியிற் காளிதாசர் என்னும் பெரும்புலவர் இயற்றிய ‘சாகுந்தலம்,’ ‘குமாரசம்பவம்’ முதலியனவும்; பாரவி என்பார் இயற்றிய ‘கிராதார்ச்சுரீயம்’ முதலியனவும் ஆம். இன்னோரன்ன வடமொழி நூல்களைப் பின்றைத் தமிழ்ப்புலவ ரெவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாது, ஒருவகையினும் பாராட்டுதற் குரியவல்லாப் புராணங்களை மட்டும் அவர் கணக்கின்றிச் செய்துவைத்தது மிகவும் வருந்தற்பாலதே யாம். இன்னும், வடமொழியிற் பண்டைத் தமிழாசிரியர் ஆக்கிவைத்த பழைய உபநிடதங்கள், சாங்கியம், யோகம், நையாகிகம், வைசேடிகம்,வேதாந்தம் முதலான அறிவு நூல்களையும் பின்றைத் தமிழ்ப்புலவர் எவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாததும் பெரியதொரு குறைபாடே யாம். இனியேனும், நம் செந்தமிழ்ப் புலவர்கள் பண்டை நந்தமிழாசிரியர் காட்டிய மெய்ந்நெறியே கடைப்பிடித்துத், தனித்தமிழில் மெய்யறிவு நூல்கள் மெய்யுணர்வு நூல்கள் இயற்றித் தமிழை வளம்படுத்து, நந்தமிழ்மக்களைச் சிறந்த துறைகளெல்லா வற்றிலும் முன்னேற்றி நலம் பெருக்குவாராக! முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர் - முற்றும் - பொருளடக்கம் பக்கம் 1. ‘திருக்குறள்’ என்னும் பெயர்க்காரணம் 149 2. திருக்குறள் தோன்றிய காலநிலை 154 3. நூற் பெருமை 166 4. நூல் நுதலிய பொருள் 178 5. ஆக்கியோன் வரலாறு 187 6. ஆசிரியர் காலம் 207 7. ஆசிரியர் மதம் 221 8. திருவள்ளுவர் திருக்குறள் 230 9. திருவள்ளுவர் 248 10. திருவள்ளுவர் வாழ்க்கை 263 ² திருச்சிற்றம்பலம் திருக்குறள் ஆராய்ச்சி 1. ‘திருக்குறள்’ என்னும் பெயர்க்காரணம் தமிழ்மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் குறள் என்று பெயர். இஃது எழுசீரான் வந்த இரண்டு அடி உடையது. எழுசீரான்வருங் குறள் வெண்பாவினை ஆசிரியர் தொல்காப்பியனார் குறுவெண்பாட்டு என்பர்.1 தமிழில் இதனினுஞ் சிறிய யாப்புக் காணப்படுவதில்லை. தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் தங்கருத்தினை விளக்குதற்கு மிகச் சுருங்கிய இவ்வெண்பா யாப்பினைத் தெரிந்தெடுத்தவா றென்னையெனின்;- மக்கள் உயிர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் உறுதிப் பொருள்களைத் தங்கூரிய அறிவினான் நன்கு ஆய்ந்து, அவைதம்மை அவர் அறிவிற் பதியச் சுருக்க வகையான் விளக்குதற்பொருட்டு ஆசிரியர் இதனையே எடுத்துக் கொள்வாராயினர். நுண்ணிய பொருள் ஒன்றை ஒருவற்கு விளக்கலுறின், அதனைக் கேட்போன் உணர்வு சலியாவண்ணம் நன்கெடுத்துப் புகட்டுதல் வேண்டும். அவ்வாறன்றிக் கேட்போ னுணர்வு இளைப்புற்று ஒழிய வாளாது விரித்துச் சொல்லப்படுமாயின் அப்பொருள் எத்துணை நுண்ணியதாயினும் அஃது அவன் உள்ளத்தின்கண் அழுந்த மாட்டா தாய்ப்போம். மக்களுயிர்க்கு வேண்டப்படும் பொருட்டுறைகளெல்லாம் விரித்துரைப்போமெனப் புகுந்த வடமொழி மிருதி நூல்கள் வரம்பின்றி விரிந்தமையாற்றான் பயன்படுதலின்றி வழக்கு வீழ்ந்து ஒழிந்தன. உயிர்க்கு உறுதிப் பொருள் நாடி அவற்றையெல்லாந் தொகுத்து உரைக்க ஒருப்பட்ட திருவள்ளுவனார் இந்நுட்பம் தேர்ந்து தாங்கருதிய பொருளைக் கருதியவாறே தெரித்தற்குச் சிறந்த கருவியாக இக்குறள் வெண்பாவினால் நூல் இயற்றுவாராயினர். ஒருவன் அறிவை மயக்கி அவனைத் தன்வயப்படுத்தலும், ஒருவற்கு ஒரு பொருளின் உண்மைத் தன்மை காட்டி அவனறிவை நன்கு விளக்கி அவனைத் தன்வயப்படுத்தலும் என நூல்களாற் கொள்ளப்படும் முறை இருவகைத்தாம். இதனை ஓர் எடுத்துக் காட்டின்கண் வைத்துக் காட்டுதும். ஒரு பெண், பொற்பூ இடைமிடைந்து பொற்சரிகை விளிம்பு கோத்து மிளிரும் நீலப்பட்டாடை நலம்பெற உடுத்து, நிறந்தெரிந்த முழுமணிகள் அழுத்தி, நறிது முற்றிய நல்லணிகலன் அணிந்து, புழுகு நெய்யும் நானமும் விரைகமழ நறுங்கூந்தலில் உரைத்து, உறுப்புத் திருத்தி ஒய்யாரங்காட்டி உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து ஓர் ஆண்மகனைத் தன்வயப்படுத்தல் போல்வது முதலில் கூறிய முறை. இரண்டாவது முறையோ அவ்வாறன்றி, இயற்கையழகு வாய்ப்பப் பெற்றாள் ஒரு திருமகள் செயற்கை நலம் பெறாளாய்க் கருகி நீண்ட விரிகுழற் கற்றையும், சேலெனப் பிறழும் பெருமதர் விழியும், முல்லை மொக்குள் போன்ற மெல்லிய மூக்கும் கொவ்வைப் பழத்தைப் பழித்த செவ்விய இதழும், யானை மருப்பிற்பொலியும் இசைந்த எயிறும், கடைந் துருட்டிய தன்ன பச்சிளந் தோளும். பூங்கொம்பு போல் துவளும் ஒசிவும் உடையவளாய்க், கள்ள நோக்கமின்றி உள்ளஞ் செவ்வியளாய் கிளியென மிழற்றி மயிலென உலவித் தன்மாட்டு முதிர்ந்த அன்புடைய காதலன்பாற் றானும் உள்ளம் உருகி ஒருமித்து அவனைத் தன்பாற்படுத்தல் போல்வதாம். இவ்வாறு இருதிறப்பட்ட நூன்முறைகள் ஓர் உண்மையைப் பலவகையாற் புனைந்து விரித்துரைக்கும் நெறிமழுங்கிய அறிவினார் பொருட்டும் ஓர் உண்மைப் பொருளைக் கிடந்தவாறே எடுத்துச் செவ்விதின் விளக்கி அறிவுகொளுத்து நெறிமிக்க நுண்ணுணர்வினார் பொருட்டும் நூல்களான் மேற்கொள்ளப் பட்டன. இவ்விரண்டினுள்ளும் பிற்கூறிய நெறியே சிறப்புடைத்தாதல் எல்லார்க்குந்தெற்றென விளங்கும். ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் மக்களுயிர்க்கு உறுதிப் பொருளாவனவற்றைத் தொகுத்தெடுத்து, மற்று அவை தம்மைப் பலவகையாற் புனைந்து கூறுதற்கு இசையாராய். உண்மைத் தன்மை உள்ளவாறே புலப்படத் தெளித்துக் கூறுகின்றாராகலின், இந்நூல் நுண்ணறிவு விளங்கப் பெறுதலுடைய மாணாக்கரை நோக்கி எழுந்த தென்றுணர்க. இன்னோர் நல்லறிவிற்குப் பொருந்தச் சுருங்கத் தெரித்தல் வல்ல யாப்புக் குறுவெண்பாட்டையன்றிப் பிறிதொன்று காணப் படாமையின், இதுவே இந்நூலுக்கு இணங்கிய கருவியாயிற்று என்க. மற்றைப் பாவிலும் பாவினங்களிலும் இங்ஙனம் ஓர் உண்மைப் பொருளைச் சொற்சுருங்க ஓதி அவ்வுண்மை மட்டுமே புலப்படுத்தல் ஒருவாற்றானும் முடியாமை காண்க. இது தெரிதற்பொருட்டு இந்நூலின்கண் ஒரு செய்யுளை நாலடியாரிற் செய்யுளொன்றனோடு ஒப்பவைத்து விளக்கிக் காட்டுவாம். அறிவுடையார் நட்பு நாடோறும் பெருகுதலும் அறிவிலார் நட்பு முன்கொண்ட அளவிற் றேய்ந்து அருகுதலும் உணர்த்துதற்கு ஆசிரியர், 2“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” (குறள் 782) என்று கூறியருளினார். இதன் பொருள்: ‘நீரவர் கேண்மை பிறை நிறை நீர’ எனவும், “பேதையார் நட்பு மதிப்பின் நீர’ எனவும் பிரித்து இயைத்து, ‘அறிவுடையார் கேண்மை முன்கொண்ட அளவிற்றன்றிப் பிறை நாடோறுங் கலை வளர்தல்போல வளரும் இயற்கைத்தாம்; அறிவில்லார் கேண்மை அவர் அது கொள்ளுங் காலத்துப் பெரிதாய்ப் பின் நாட்களிற் கலைமுற்றியமதியந் தேய்ந்து அறுதல்போலத் தேய்ந்தொழியுந் தன்மைத்தாம்’ என்க. ‘பிறை’ நேயம் வளர்தலையுணர்த்துதற்கும், ‘மதி’ அது தேய்தலையுணர்த்துதற்கும் உவமைகளாய் எழுந்தன. ‘பிறை’ ‘மதி’ என்னுஞ் சொற்களானே ஆசிரியர் கருதிய பொருள் இனிது விளங்குமாகவும், ‘நிறை’ என்னும் ஒரு சொல் வேண்டா கூறலாமெனின்;- ‘மதி பின் குறை நீர’ எனப் பின்னுள்ள சொற் றொடர்ப் பொருள் நிரம்புவதற்கு வருவிக்கப்படுங் ‘குறை’ என்னுஞ் சொல் அதனாற் பெறப்படுதலானும், உவமைக்கும் பொருளுக்குமுள்ள பொதுத்தன்மையினை விளக்குதற்கு அச்சொல் இன்றியமையாது வேண்டப்படுதலானும் அது வேண்டா கூறலாவது யாங்ஙனமென மறுக்க. ‘நிறை’ என்னும் அச்சொல் இல்வழியும் ‘பிறை’ ‘மதி’ என்பவற்றால் ‘நிறை’ ‘குறை’ என்னுஞ் சொற்கள் உயர்த்துணர்ந்து வருவிக்கப்படுமாகலின், அது வேண்டா கூறலேயாம் பிறவெனின்;- அற்றன்று, சொற்றொடர்ப் பொருட்குவேண்டும் யாதானும் ஒரு சொல் நின்று மற்றொன்றனை வருவிப்பதன்றி அஃதின்றியே அவை வருவிக்கப்படுமென்றால் பொருந்தாக்கூற்றாம். அற்றன்று. ‘பிறை’ ‘மதி’ என்பவற்றால் அவை உய்த்துணரப்படுதல் ஒருதலை யாகலின் அச்சொல் நின்று பயமின்றே யெனின்;- முழுவதும் வருவிக்கற்பாலதனை உய்த்துக்கொண்டுணர்தல் ஒரு சொல் இல்வழியேயன்றி உள்வழிப் பொருந்தாதெனச் 3சேனாவரை யருமுரைத் தாராகலின், அங்ஙனங் கடாவுதல் இசையாதென விடுக்க. இனி, அச்செய்யுட் பொருளையே விளக்க நாலடியாரில், “4பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்-வரிசையால் வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு.” என்றொரு செய்யுள் வருகின்றது. இச்செய்யுட்கண் பெரியவர் கேண்மை என்பது மேலைத்திருக்குறளில் ‘நீரவர் கேண்மை’ என்பதிலும், ‘பிறை போல நாளும் வரிசை வரிசையா நந்தும்’ என்பது ‘பிறைநிறை நீர’ என்பதிலும், ‘சிறியார் தொடர்பு’ என்பது ‘பேதையார் நட்பு’ என்பதிலும், ‘வரிசையால் வானூர் மதியம் போல் வைகலுந் தேயுமே’ என்பது ‘மதிப்பின் நீர’ என்பதிலும் அடங்குதல் காண்க. இச்செய்யுளிற், போல, வைகலும், தேயுமே, தானே முதலிய சொற்கள் வேண்டா கூறலாய் நிற்றல் காண்க. அற்றேல், இச்செய்யுள் குற்றம் படுமோவெனின்;- படாது. என்னை? அச்சொற்களெல்லாம் ஓர் அணியியல் குறித்து மழுங்கிய உணர்வினார்க்கு மகிழ்ச்சி தருமாகலானும், நுணுகி யறிய வேண்டாது எளிதிலே அவர்க்குப் பொருள் புலப்படுத்த லானுமென்க. ‘வானூர் மதியம் என்பது ‘குழவியூர்தலை’ நினைப்பித்தலின் அஃது ஓரணியியலாயிற்று. இந்நாலடியாரிற் செய்யுள் வாயகன்ற பொன் வள்ளத்தில் நிரப்பிய பனிநீர் போல்வதாம்; மற்று அத்திருக்குறட் பாவோ மாணிக்கச் செப்பினும் பொதிந்திட்ட நானம் போல்வதாம், மாணிக்கச் செப்பு விலையேறப் பெறுதலுடன் செய்தமைத்தற்கும் அருமை யுடைத்தாம்; பொற்கிண்ணம் விலை குறையப் பெறுவதுடன் செய்தமைப்பதற்கும் எளிதின் நெகிழ்தலுடைத்தாம். நாலடியார் செய்யுளியற்கைக் குணஞ் சிறிதாதலுடன் புலவனாற் பாடுதற்கும் எண்மை யுடைத்தாம்; திருக்குறு வெண்பாட்டோ குணம் பெரிதாதலுடன் அமைத்தற்கும் அருமையுடைத்தாம். இனி, அப்பொன்வள்ளத்தில் நிறைத்த பனிநீர் நெகிழ்ந்த வுருவின் விரைந்தழியும் மணமுடைமை போல், நாலடியாரிற் செய்யுட்பொருளுங் கேட்கும் பருப்பொருளறிவினார்க்குச் சில கணங்கண் மாத்திரையே மகிழ்ச்சி பயந்து பின் அவ ருள்ளத்தே நிலைபேறின்றி ஒழியும்; மாணிக்கச் செப்பினுட் செறித்துவைத்த நானங் கட்டுருவினால் நிலை பெறக் கமழும் நறுமண முடைமைபோலத் திருக்குறட்பொருளுங் கேட்கும் நுண்ணுணர்வினார்க்கு நினைத்தொறும் உரைத்தொறும் மகிழ்ச்சி பயந்து அவருள்ளத்தே ஆழ்ந்து நிலைபெறுவதா மென்க. இதனால், நாலடியார் முதலான நூல் யாப்புகள் பொதுவறி வினார்க்கு அறிவுறுத்தும் பொருட்டுப் புனைந் துரை வகையாற் சொற்பொருள் நெகிழ்ந்து ஒழுகும் முறை பற்றிச் செய்யப்பட்டனவாமென்பதூஉம், திருக்குறள் யாப்பு நுண்ணுணர்வினார் பொருட்டுச் சொற்சுருக்கமும் பொருட் செறிவும் பொதுள இறுகிய நுண்நிலையால் அமைக்கப் படும் நெறிதழுவி வந்த தாமென்பதூஉம் நன்கறியப்படும் என்க. மக்களுயிர்க் குறுதிப்பொருள் விளக்குதலே உள்ளுறையாக் கொண்டு எழுந்த காப்பிய நூல்கள் புனைந்துரை வகைபற்றி வந்தனவே யாமென்க. அற்றேற், காப்பிய நூல்களுஞ் சொற் செறிவு பொருட்செறிவு நன்கமைந்து விளங்கக் காண்டு மாகலின், அவையெல்லாம் நெகிழ்ந்தொழுகும் புனைந்துரை நெறிபற்றி வந்தனவென் றுரைத்தல் பொருந்தாதாம் பிறவெனின்;- நன்று கூறினாய், அக்காப்பிய நூல்கள் தம்மிற்றாழ்ந் தவற்றை நோக்கச் சொற்செறிவு பொருட்செறிவு உடையவெனப்படுமல்லது தம்மின் மிகவுயர்ந்த இத்தெய்வத் திருக்குறள் நூலை நோக்க நெகிழ்ந்த நிலையினவேயாம் என்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், செய்யுளியல், 159-வது சூத்திரம், பேராசிரியர் உரை, 2. திருக்குறள். 79-2 3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 11-வது சூத்திரவுரை. 4. நாலடியார், தீவினையச்சம், 5-வது செய்யுள். 2. திருக்குறள் தோன்றிய காலநிலை ஆரியர் வரவும் வாழ்க்கையும் இனி, இங்ஙனஞ் சொல்லும் பொருளுஞ் செறிந்து ஆழ்ந்த திருக்குறள் யாப்பிற்கும், அஃது எழுந்த கால நிகழ்ச்சிக்கும் நிரம்ப ஒற்றுமை யுண்டென்பதூஉம் காட்டுவாம். வடக்கே ஆசியாக் கண்டத்தின் இடையிலிருந்து தமிழ்நாடெனப்படும் இவ்விந்திய தேயத்துட்புகுந்த ஆரியர் தமிழருடன் ஒற்றுமையாய் வாழத் தொடங்கிய காலம் கிறித்து பிறப்பதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயாம். அவ்வோராயிர ஆண்டுகட்கு நெடுநாள் முன் ஆரியர் நாகரிகமில்லாத நிலையிலிருந்தனர். சிந்துநதி ஓடும் தேயங்களில் அவ்வாரியர் தம் நிலைக்கு ஒவ்வாத் தமிழரொடு மலைந்து மாறுபட்டு நின்றுழி, உலக இயற்கையிற் றோன்றுந் தோற்றங்களை மருண்டு வணங்கித் தம்மோடு எதிரிய தமிழரை அழிக்கும்படி வேண்டினர். இதனை இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டிலத்து இருபதாவது பண்ணிற் போந்த ஆறாவது ஏழாவது பாட்டுக்களான, “அரிய காரியங்களை முடிப்பவனும் மிகப் புகழ் பெற்ற கடவுளுமான இந்திரன் ஆரிய மகனை உயர்த்துகின்றான். வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அவன் அருவருக்கப்படுந் தாசனைத் தலைகவிழச் செய்கின்றான். “விருத்திரனைக் கொன்றவனும் நகரங்களை யழிப்பவனுமான இந்திரன் அறிவில்லா மக்களான தாசருடைய படைகளைச் சின்ன பின்னமாக்கு கின்றான். அவன், ஆரிய மகனுக்கு என்று நீரையும் நிலத்தையும் படைத்து, வேள்வி செய்வோர் விரும்பியவற்றைத் தருகின்றான்” என்பவற்றானும், ஏழாவது மண்டிலத்துத் தொண்ணூற்றாறாவது பண்ணிற் பதின்மூன்றுமுதற் பதினைந்து வரையிலுள்ள பாட்டுக்களான, “விரைந்து செல்கின்ற கரிய மறவன் அஞ்சுமதி யாற்றங்கரையில் பதினாயிரம் படைகளுடன் இருந்தான். இந்திரன், உரத்து ஊளையிடுகின்ற இத்தலைவன் இருப்பை அறிந்து, ஆரியமக்களின் நன்மைக்காக அக்கொள்ளைக் கூட்டத்தாரை அழித்தனன். “மாசியிற் பகலவன் மறைந்திருத்தல்போல அஞ்சுமதி யாற்றங்கரைப் பக்கங்களில் அக்கரிய மறவன் ஒளிந்திருத் தலைக் கண்டேன். ஓ மருத்துக்களே! நீங்கள் அவனுடன் மலைந்து அவனை அழிக்கும்படி விரும்புகின்றேன்” என்று இந்திரன் கூறினான். “அக்கரியமறவன் பிறகு அவ்வஞ்சுமதி யாற்றங்கரையில் விளங்கித் தோன்றினான். இந்திரன் பிருகற்பதியைத் தன்னுடன் கூட்டிக் கொண்டுபோய் இரக்கமில்லாத அப்படையை அழித்தனன்.” என்பவற்றானும் நன்கு அறியலாம். ஆரியர் இங்ஙனந் தமிழரொடு மலைவு கொண்டிருக்கையில் தமக்கு வலிவு ஏறுதற் பொருட்டும், தமக்குத் துணைசெய்யும் இந்திரன், மருத்துக்கள் முதலான தேவர்க்கு உரம் பெருகுதற் பொருட்டும் சோமச்சாற்றையும் நெய்யையுஞ் சொரிந்து அளவிறந்த விலங்குகளைக் கொன்று வேள்விகள் வேட்டுவந்தனர். இவைகளைச் சீர்பெற நடத்துதலிலும், இவற்றிற்கு வேண்டும் பெரும் பொருளைத் திரட்டுவதிலும் மிக முயன்றனர். இவ்வாறு வேள்விச் சடங்குகட்கு முதன்மைதந்து ஆரியர் ஒழுகிய நாட்களில் மெய்ப் பொருட்டன்மை காட்டும் நூல் ஒன்றேனும் அவர்களால் வரையப்படவில்லை. இங்ஙனம் அவர் மிக முயன்று செய்யும் வேள்விச்சடங்கிற்கு ஒரு சிறிதும் ஒருப்படாத தமிழ் மக்கள் தம் வழியே மெய்ப்பொரு ளாராய்ச்சியிற் றலைப்பட்டு விளங்கினர். வடநாட்டிற் செங்கோலோச்சிய தமிழ அரசர்கள் ஆரிய மக்கள் மாட்டு மாறுபடுதல் இலராயினும், அவர் செய்யுங் கருமச் சடங்கிற்கு ஒருவகையால் இணங்கிப் பெரும்பாலுந் தமக்குரிய மெய்ப்பொருளாராய்ச்சியிலேயே நிலைபெற்று நின்றனர். ஆரியரோ வேள்விகளின் உயர்வும் அவற்றை வேட்கு முறைகள் பலவும் மிக விரித்து ஆய்ந்து பிராமணங்கள் எழுதுவா ராயினர். ஆரியமக்கள் தாஞ்சார்ந்து நின்ற தமிழவரசர்கள் பலர்க்கும் அவ்வேள்விச் சிறப்பினை உணர்த்தி அவரும் அது செய்யுமாறு வலியுறுத்துதற்குப் புகுந்தனர். புகுத, ஒரு சிலர் அதற்கு ஒருப்பட்டார்; ஒரு சிலர் அது செய்தற்கு உடன்படாராயினர். விதேகர்கட்கு வேந்தனான சனகன் என்னும் அரசன் அவைக்களத்தில் ஆரியக் குருக்கண்மார் பலர் இடம்பெற்றனர். அவருள் மிகச்சிறந்த யாஞ்ஞவற்கியர் என்னும் ஆரிய குரு, அவ்வேந்தன் உதவியால் வடமொழிப் பயிற்சியினைப் பெருகச் செய்து எசுர் வேதத்தினைப் பாகுபாடு செய்து ஒழுங்குபடுத்தினார்; அவராற் பாகுபடுத்தப்பட்ட எசுர்வேதபாகம் இக்காலத்துச் சுக்கில எசுர்வேத மென்று பெயர் பெறுகின்றது. இவ்வெசுர்வேத பிராமணத்திற்கு விரிந்த ஓர் உரையும் இவரால் இயற்றியிடப்பட்டது. “ஆரிய முனிவர்க்குத் தமிழ் மன்னர் மெய்ப்பொருள் தேற்றினமை” இங்ஙனஞ் சிறந்த இவ்யாஞ்ஞவற்கிய முனிவரை யுள்ளிட்டு ஆரியக்குருக்கண்மார் மூவர். இச்சனக வேந்தன் வினாவிய தத்துவப் பொருள்களை அறிய மாட்டாராய்த் தலைதாழ்க்கப் பட்டுப்போக, யாஞ்ஞவற்கியர் மட்டும் பின்னும் அப்பொருள் நுட்பந்தேரும் வேட்கை பெரிதுமுடையராய் சனகனுக்குக் குற்றவேல் புரிந்து, அவன் தேரிற் செல்கையில் அவனுடன் சென்று அதனால் அவ்விரகசியப் பொருள் அறிவுறுக்கப்பட்டுத் தெளிந்தாரென்பதும், 1காசிக் குடிகட்கு இறைமகனான அசாதசத்துரு என்பவனொடு பாலாகி என்னும் ஆரியக்குரு ஒருவர் செருக்குற்றுச் சென்று வழக்காடி அவன் வினாவியவற்றிற்கு இறை தரமாட்டாராய் வாளாதிருப்ப அவன் அவரை நோக்கி, “ஓ பாலாகி, இவ்வளவுதான் நீர் அறிவீர்!” என, அக்குருவும், “ஓம் அவ்வளவுதான்” என, அவ்வரசன். “ஓ பாலாகி, இவை எல்லாச் சடங்கிற்கும் முதல்வனாய் எல்லா வற்றையும் படைக்க வல்லனான இறைவன் ஒருவனே அறிந்து வழிபடற்பாலன்” என்றவர்க்கு உணர்வு கொளுத்தினா னென்பதும், 2சுவேதகேது வென்னும் மற்றும் ஓர் ஆரியக்குரு பாஞ்சாலர் கூடிய பேரவையிற்சென்று, அங்குச் சைவலி என்னும் ஒருவனோடு வழக்கிட்டுத் தோல்வியடைந்து வருந்தியவுள்ளமுடையோனாய் அவ்வுண்மைப் பொருளைத் தனக்கு அறிவுறுத்துகவென்று அவ்வரசனைக் குறையிரப்ப, அவனும் அவற்கு அதனை விளங்கவுரைத்தும், பின்னும், “நினக்கு முன்னே, இவ்வரிய ஞானப்பொருள் பிராமணர் எவர்க்குஞ் சொல்லப் பட்டிலது; இந்த ஞானபோதனை இவ்வுலகமெங்கணும் எம்முடைய வகுப்பினர்க்கே உரித்தாயுள்ளன. பிறரதனை அறியார்” என்று கூறினானென்பதும் 3உபநிடதங்களிற் பொருள்பெறக் கிளந்தோதப்பட்டமை காண்க. இவற்றாற், பிராமணரின் வேறாகப் பிரித்துரைக்கப்பட்ட அரசவகுப்பினர் ஆரியரல்லாமையும், பிராமணர் இயற்றிய வேட்டல் நெறிகள் அவரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டமையும், பிராமணர் அறியாத மெய்ப்பொருளாராய்ச்சி அவ்வரச வகுப்பினர்க்கே ஓர் உரிமைப் பொருளாயிருந்தமையும், அந்நுண்பொருள் வழக்கு நேர்ந்துழியெல்லாம் பிராமணர் மருண்டு அவரால் தெளிவுறுத்தப்பட்டமையும் நன்குபெறக் கிடந்தன. ஆரியர் தமிழரைப் பகைத்தமை இன்னும் இருக்குவேதந் தொகுத்துப் பாகுபடுத்தப்பட்ட காலத்தே ஆரியக் குருக்கண்மார்க்குந் தமிழக் குருக்கண்மார்க்கும் மாறுபாடு பெரிதாயிற்றென்பது, இருக்கு வேதத்தின் மூன்றாவது மண்டிலத்தை இயற்றிய விசுவாமித்திரரென்னும் அரசவகுப்பினர்க்கும். அதன் ஏழாம் மண்டிலத்தை இயற்றிய வசிட்டரென்னும் ஆரியவகுப்பினர்க்கும் இடை நிகழ்ந்த பொறாமையே சான்றாமென்பது. இவ்வாறே ஆரியவகுப்பினரிற் சேர்ந்த சமதக்கினி என்னும் இருடிக்குப் புதல்வராய்ப் பிறந்த பரசிராமர் திராவிட வகுப்பிற்குரியரான அரசரையெல்லாம் வேரொடு அழிக்க வேண்டுமென்னும் வஞ்சம் முதிர்ந்து திர்ந்ததூஉங் காண்க. தசரதன் என்னும் வேந்தனும் அவனருமைப் புதல்வர்களான சீராமன் முதலியோருந் திராவிட தேயத்துத் திராவிட அரசர்களே என்பது கொழும்பிற் புகழோங்கிய அறிஞரான வி.ஜே. தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய 4‘இராமரும் குரங்கு வீரர்களும்’ என்னும் ஆராய்ச்சி யுரையானும் நன்கு துணியப்படும். இஃதென்னை? வடநாட்டிற் பிறந்து வடமொழியே வழங்கி வடநூல்களே எழுதிய விசுவாமித்திரர், சனகன் முதலியோரைத் தமிழரெனக் கூறியது ஒரு சிறிதும் பொருந்தாதாம் பிறவெனின், அற்றன்று; ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகுதன் முன் ஈண்டுறைந்தார் தமிழரே என்பது வரலாற்றுநூல் வல்லார்க்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின், வடநாட்டிலிருந்த தமிழர் ஆரியர் வந்தபின் அவரோடொருமித் திருந்தும், அவரொடு மறுதலைப்பட்டு மலைந்தும் உழிதருகையில், அவர் சொல்லைத் தாங்கற்று அவர்க்குடன்படாது மாறாடுவாராயினராகலான் தமிழர்க்கும் வடசொல் உரித்தாயிற்று. இடவேறுபாட்டானுஞ் சொல் வேறுபாட்டானும் ஒரு சாதியாரைப் பிற சாதியாராகக் கருதல் அளவை நூல் வழக்கன்று. வங்காளத்து இந்தியர்கள் பலர் ஆங்கில மொழியினைத் திறம்படக் கற்று ஆங்கிலநாட்டிற் சென்று உறைதல் பற்றி அவரெல்லாம் ஆங்கில சாதியாரென்றே கொள்ளப்படுவரோ? படாரன்றே. “குலவிச்சை கல்லாமற் பாகம் படும்” என்றவாறு, அவரவர் குலத்திற்குரிய குணமும் ஒழுக்கமும் இயற்கையிலே உளவாம். ஆகவே, “நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங், குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்” என்னும் அருட்டிருமொழியின்படி அவரவர் ஒழுகலாற்றான் மட்டும் அவரவர் குலவியற்கை அறியற்பாலதாகுமென்க. பண்டைக்காலம்தொட்டுத் தமிழ்மக்களியற்றிய நூல்களிலெல்லாம் ஆழ்ந்த மெய்ப்பொருளாராய்ச்சியே காணக்கிடக்கின்றது. தொன்றுதொட்டு ஆரியமக்களியற்றிய நூல்களிலெல்லாம் இயற்கைத்தோற்ற வழிபாடும் வேட்டன் முதலான கருமங்களியற்றுதலில் உறைப்புமே காணப்படுகின்றன. தொல்காப்பியமும் இருக்கு வேதமும் இவ்வாறு இவ்விருசாதியார்க்குரிய சிறப்பியல்புகளை அறியல்வேண்டிற் றமிழர்க்குத் தொல்காப்பியமும் ஆரியர்க்கு இருக்கு வேதமுங் கருவியாயிருந்து உதவுகின்றன. தமிழர்க்குத் தொல்காப்பிய மொன்றுமே மிகப் பழைய நூலென்பது, உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர் அறிதல் வேண்டி வியாதர் வேதங்களை நான்கு கூறாகப் பகுக்கு முன்னரே தொல்காப்பிய மியற்றப்பட்டது”5 என்று ஓதுமாற்றால் நன்குணரப்படும். இங்ஙனம் மிகப்பழையதான தொல்காப்பிய நூல் எழுத்துச் சொல்லியல்புகளை நன்காராய்ந்துணர்த்தியபின், மக்களுயிர்க் குறுதியென நாடப்படும் எல்லாப் பொருள்களையும் அகம், புறம் எனப் பகுத்து முறைவழாது தெரித்துச் செவ்விதின் விளக்கி, அவ்வாறு விளக்கும் பகுதிக்குப் பொருளியல் என்னும் பெயருங்காட்டித் திகழுகின்றது; அது, மக்கள் மனவறிவு புறத்தே விரிந்து சென்றறியும் பொருட்பகுதியினை இனிது விதக்குமாறு போலவே, அவ்வறிவு அகத்தே குவிந்து மடங்கி உலகிற்கு முழு முதற்பொருளான இறைவன்பால் ஒருங்குபட்டு நிற்றன்மரபும், அங்ஙனம் ஒருங்குபட்டு நிற்றற்கு நிலைக்களனான அம்முதற்பொருள் “ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருளாங் கந்தழி6 யினியற்கையுந் தெளிவுபெறக் குறித்து நின்றது. இவ்வாறு நுனித்தறியப்படும் பொருள் மலிந்து பாகுபாடுற்று நடை பெறுந் தொல்காப்பிய முழுமுதனூலோடு ஒத்துப் பார்க்குமிடத்து, ஆரியர்க்கு மிகப்பழையதாயுள்ள இருக்கு வேதம் மிகத் தாழ்ந்த தொன்றேயாதல் நடுநிலையாளர்க்கெல்லாம் நன்கு விளங்கும். இருக்கு வேதத்தில் நிரம்பிய பொருளெல்லாம் ஆரியர் தமக்குரிய ஆடு மாடுகள் பல்கல் வேண்டியும், தாமுறையும் நிலஞ் செழிக்கல் வேண்டியும், தாம் மக்கள் மனைவியரோடு நன்கு வாழல் வேண்டியும், தியூ, வருணன், மித்திரன், இந்திரன் என்பவரைக் குறையிரந்து பாடின பாட்டுக்களும், வேள்விவேட்குமுறைகள் சிலவுமேயாம். இது பத்து மண்டிலங்களுடையது. இவற்றுள் முதன் மண்டிலமும் பத்தாவது மண்டிலமும் இருடிகள் பலராற் செய்யப்பட்ட பாட்டுகள் ஒருங்கு தொகுக்கப்பட்ட பகுதிகளாம். இரண்டாவது மண்டிலம் பிருகு குடியினரைச் சேர்ந்த கிரிச்சமதரால் தொகுக்கப்பட்டது. மூன்றாவது மண்டிலம் விசுவாமித்திரராற் றொகுக்கப்பட்டது. நான்காவது மண்டிலம் வாமதேவராற் றொகுக்கப்பட்டது. ஐந்தாவது மண்டிலம் அத்திரியாற் றொகுக்கப்பட்டது. ஆறாவது மண்டிலம் பாரத்துவாசராற் றொகுக்கப்பட்டது. ஏழாவது மண்டிலம் வசிட்டராற் றொகுக்கப்பட்டது. எட்டாவது மண்டிலம் கண்ணுவராற் றொகுக்கப்பட்டது. ஒன்பதாவது மண்டிலம் ஆங்கீரசால் தொகுக்கப்பட்டது. விசுவாமித்திரராற் றொகுக்கப்பட்ட மூன்றாவது மண்டிலத்தில் மிகச்சிறந்த காயத்திரி மந்திரமான “ஓம்தத்சவிதுர் வரேணியம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோயோ நஹ் ப்ரசோதயாத்” என்பது காணப்படுகின்றது. இம்மந்திர வுறையுளிற் பெறப்படுகின்ற பொருள், “அன்பினாற் செய்யப்படும் எம் வேள்வி முறைகளை நடைபெறுவிக்குந் தெய்வத் தன்மையுடைய சாவித்திரியின் விழையத்தக்க ஒளியை யாம் வழிபடுகின்றேம்” என்பதேயாம். இங்ஙனஞ் சிறந்த மந்திரவுறையுளான காயத்திரியிலும் ஞாயிற்றின் வழிபாடே காணப்படுகின்றது. இப்பெற்றித்தாகிய இருக்கு வேதம், ஆழ்ந்த நுண்பொருளுடைய தொல்காப்பிய நூலோடு ஒப்புப் பெறுதலும் அதனினும் உயர்தலு மில்லையாதல் தேற்றமேயாம். இதுவேயு மன்றித், தொல்காப்பிய நூலோடு ஒப்புப்பெறும் விழுப்பமுடைய பழைய நூல் உலகத்திற் பரந்துகிடக்கும் எம்மொழியிலும் இல்லையென்பது துணிபொருள். ஆகவே, இவ்விரு நூல்களின் வாயிலாக அறியப்பட்ட இவ்விரு சாதியாரின் சிறப்பியல்புகள் விரவிக் காணப்படும் நூல்கள் எந்த மொழியிலே எழுதப் பட்டிருப்பினும், அவை அவ்விருவர்க்கும் உரிமையுடையவாதற்கு இழுக்கில்லை யென்க. இருக்கு வேதத்தின் பின்னெழுந்த ஆரிய மொழி நூல்களிலெல்லாம் இவ்விருவகைச் சாதியார்க்குமுரிய இருவேறு அறிவுத்திறங்களும் விரவிக்கிடத்தலால், அவ்விரு வேறு அறிவுமுடைய அவரிருவரும் ஒருங்கு விராய் உறைந்த காலத்தில் அவை இயற்றப்பட்டன வென்பது தெற்றெனப் புலப்படும். இவ்வாறு இவர்தம் இருவேறு அறிவுத்திறங்களுள் தமிழர்க்குரிய உண்மை நுண் பொருளாராய்ச்சியின் ஏற்றம் உயர்ந்து, ஆரியர்க்குரிய வேட்கு முணர்வு சுருங்கிய காலத்தில் சாந்தோக்கியம் முதலான உபநிடதங்கள் எழுந்தன. இவ் வுபநிடதங்களெல்லாம் ஒரு முகமாய் நின்று, ஆரியர் இயற்றிப்போந்த வேள்விப் பயன்களை மறுத்து அறிவுப் பொருளை விதந்தெடுத்து விரித்து வரையுறுத்துகின்றன. இது கிடக்க.சூத்திரங்களின் தோற்றம் இனி, இவ்வுபநிடத ஞானகாண்டப் பொருள் ஆங்காங்கு மலிந்து பரவுதலும், அந்த ஞானகாண்டப் பொருளொடு பெரிதும் இகலி வேதங்களின் கன்ம காண்டப் பொருளே உறுதிப் பொருள்களென வலியுறுத்தற் பொருட்டு, ஆரியர் தமக்குள் மனவெழுச்சி மிகவுடையராய் வழக்கு நிகழ்த்துகையில், அவர்களுட் சிறந்த சைமினி என்னும் ஆரியமுனிவர் ஒருவராற் பூருவமீமாஞ்சை எனப்படும் ஒருநூல் இயற்றப்பட்டது. இவ்வாறு-சைமினி முனிவர் கன்மகாண்டப் பொருள் நிறுவற்கெழுந்து அப்பொருள் தெரிக்கும் வேதப்பகுதிகளை நிரம்பவும் உயர்த்தெடுத்துப் பாராட்டுவாராயினர். இதுகண்டு தமிழர்க்குள் அக்காலத்து நிரம்பச் சிறந்த சான்றோராய் விளங்கிய கபிலர், “கன்மகாண்டப் பொருள் போதிக்கும் வேதங்கள் அசுத்தம் பெரிதுடைய” வென்றும், அப்பெற்றிப்பட்ட அவ்வேதத்தை ஒரு பெரும் பிரமாணமாகக் கோடல் வழுவா மென்றுஞ், சைமினி மதம் ஒரு சிறிதும் பொருந்தாதென்றும் விளங்கக்காட்டி, நிலம் முதல் உயிரீறாகக்கிடந்த மெய்ப் பொருள்களி னியற்கையை உள்ளவாறு அறிந்து அறியாமை யினை நீக்கிப் பற்றறுத்தலே பேரின்பம் பெறுதற்கேதுவாமென்று அறிவுறுத்திச் சாங்கியசூத்திரம் இயற்றியிட்டார். இவர் சகேத நாட்டரசனான சுசதா என்பவன் காலத்திருந்தார் என்றும், அவ்வரசன் கௌதமசாக்கியர் பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்தானென்றும், இதனால் இவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரத்துத் தொள்ளாயிர ஆண்டுகட்கு முன்னதாமென்றும் மகா போதியிற் பண்டிதர் வித்யாபூஷண மென்பவர் நன்கு விரித்துக் காட்டினார். சாங்கியசூத்திரம் அருளிச்செய்த கபிலர் கடவுளிருப்பைப்பற்றி ஏதும் மொழிந் திடாமையின், அதனையும் நிறுவிச் சைமினி சூத்திரப் பொருளையும் மறுத்தற் பொருட்டுப் பதஞ்சலி முனிவரானும் வாதராயண வியாசரானும் முறையே யோகசூத்திரமும், வேதாந்த சூத்திரமும் அருளிச் செய்யப் பட்டன. இக்காலத் திங்ஙனந் திரவிட வாசிரியர், சைமினியற்றிய பூருவமீமாஞ்சைப் பொருண் மறுப்பாய் சாங்கிய சூத்திர முதலியன இயற்றுவாராக, இவர் செய்த ஆராய்ச்சித் திறங்களை அளந்தறிதற் கருவி யாகக் கௌதமரால் நியாய சூத்திரமுங் கணாதரால் வைசேடிக சூத்திரமுஞ் செய்யப்பட்டன. சைமினி சூத்திரம் ஒழித்து ஒழிந்த ஐவர் நூல்களும் மெய்ப்பொருளாராய்ச்சித் திறன் வலியுறுத்தி மக்கட்கு நலம் பயப்பவாயின. இவ்வாறு இச்சூத்திரங்கள் நிலைபெறலாகி விரிந்து விளங்கும்பொழுது, ஆரியரொடு மறுதலைப்பட்ட தமிழச் சாதியார் மனவெழுச்சி மேன்மேன் மிகப்பெற்றாராய்த் தமக்கு இயற்கையே தோன்றிய கொல்லாமை, புலாலுண்ணாமை, பிறர்க்குதவுதல் முதலிய அறத்தின் கூறுகளை ஆங்காங்கு விரித்துரை நாட்டுதற்குத் தலைப்பட்டனர். கபில வாஸ்து வென்னும் நகரத்திலிருந்த கௌதமசாக்கிய ரென்னுந் திராவிட அரசிளைஞரும் அறப்பொருள் விழுப்பந்தோன்ற ஆரியர்க்கும் பிறர்க்கும் அறிவு கொளுத்திப் புகழ் பெறுவா ராயினர். தமிழர் தம் நுட்பமதியாற் கண்ட கடவுளிருப்பு, உயிர்களிருப்பு, மாயையிருப்பு என்னும் முத்திறமும், இவற்றோடு உடன் எண்ணப் படுவனவாகும் இருவினை, மறுபிறவி, துறக்க நிரயங்கள், கொல்லாமை, புலாலுண்ணாமை முதலியவும் அவரெல்லார்க்கும் உரிய கொள்கைகளாகும். இவற்றுள் ஏனைப்பிறவற்றைக் கபிலர் முதலான தொல்லாசிரியர் விளக்குதல் பற்றி அவற்றை விடுத்து அறத்தின் சிறப்பைமட்டுங் கௌதமபுத்தர் எடுத்துரைப்பாராயினர்.7 இப்பெற்றி தேறாத இவர் சீடர் நால்வரும் இவர்க்குப்பின் இவர்தம் உள்ளக் கருத்தினியல்பறியாது முரணி நால்வகை மதங்கள் கட்டி நடத்தினர். இவர் நால்வரும் புத்தர்க்கு மாணாக்கராதல்பற்றி இந்நால்வர் பிரித்த மதங்கள் ஒருங்கியைந்து பௌத்தம் எனும் பெயரால் வழங்கப்பட்டன. இது கிடக்க. இனி, மேலே கூறிய வரலாற்றினாற் பண்டைக் கால நூல்வரலாறு மூன்றுகூறாக வரையறுக்கப்படுதலும் அறியற்பாற்று. அவை வேதகாலம், உபநிடதகாலம், சூத்திரகால மென்பனவாம். இவற்றுள் வேத காலம் என்பது கிறித்து பிறப்பதற்குமுன் 3400 ஆண்டு முதல் 2400 -வரையுமாகும். ஈண்டு யாங் கணக்கிட்டகாலம் உரோமேஷ் சந்திர தத்தர் முதலான நூலாசிரியர் வரையறுத்த கால வளவைக்கு மேல் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் மேற்படினும், பாலகங்காதர திலகர் அரியதோர் நுட்பவாராய்ச்சி செய்து வெளியிட்ட ‘வேதங்களின் வடநில இருப்புகள்’3 என்னும் நூன்முடிபுக்குப் பெரும் பான்மையும் பொருந்துதலானும், இங்ஙனங் கணக்கிடுதற்குக் காரணங்கள் பலவுளவாதலானும் அவ்வாறு வரையறுப்புச் செய்தாமென்க. இக்காலத்தில் ஆரியருந் தமிழரும் போர் மலைந்து அலைப்புண்டு சிறுகச் சிறுக ஒருமை யுறுதற்குத் தொடங்கினர். இனி உபநிடத கால மென்பது கி.முன் 2400 ஆண்டு முதல் 1400 வரையுமாகும். இக்காலத்தில் ஆரியருந் தமிழருங் குடியிருப்பளவிலே ஒருமையுறினுங் கருத்தொருமையுறாது சிறிது சிறிதாய் ஒருவர் கருத்தினை மற்றவர் தழுவுதற்குத் தொடங்கினர். இக்கால இறுதியில் தமிழர்க்குரிய மெய்யுணர்ச்சி மிகுந்து தலையெடுத்தமையால் ஆரியர்க்குரிய பண்டைவேள்வி ஆற்றும் கடப்பாட்டுணர்ச்சி சுருங்குவதாயிற்று. இனிச் சூத்திர காலமென்பது கி.முன் 1400 முதல் கி.பி. துவக்கம் வரையுமாகும். இக்காலத் தொடக்கத்தில் சைமினி என்னும் ஆரிய முனிவரெழுந்து உபநிடதப்பொருளை மறுத்துப் பண்டை வேதபாகத்திற்கு உயர்வுகற்பித்து ஆரவாரிப்பவே, அவர் தம்மை மறுத்து அறிவுப்பொருளை நிறுவுதற்பொருட்டுச் சாங்கிய சூத்திர முதலாயின கிளர்ச்சியுற்று எழுந்தன. இக்காலத்துக் கௌதமசாக்கியர் மேற்கொண்ட அறவுரையும் ஆங்காங்குப் பன்முகமாய் விரிந்து பரவி மெய்யுணர்ச்சிக்கொரு பெருந்துணையாயிற்று. இனி, இங்ஙனம் போந்த சூத்திர காலத்திலே தான் செந்தமிழ்த் தென்னாட்டின் தலைநகரான மதுரையிற் கடைச்சங்கம் நிலைபெற்று விளங்கிற்று. இப்போது தமிழென்னும் நங்கை வளர்ந்து முற்றுதற்குரிய உறுப்பின் வளனெல்லாந்திரண்டு பேரெழிற்றோற்ற முடையளாய்க் கண்டார் கண் ஆற்றாப் பேரொளி வீச விளங்கினள். அவள் அருமைக்கொழுநனான இறையனாரால் இறையனாரகப் பொருட்சூத்திரமும், அருமைப் புதல்வரான தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரால் திருக்குறள் என்னும் ஒப்புயர்வில்லா அரியபெரிய நூலும் அருளிச்செய்யப்பட்டன. நன்றறிந்தேன், இவ்விரு நூல்கட்கும் இவையெழுந்த காலத்திற்கும் நிரம்ப ஒற்றுமை யுண்டென்றதனை அறிதல் வேட்கை மிகவுடையே னெனிற் கூறுதும். வேதகாலத்தின் எழுந்த நூல்களெல்லாம் பலராற் பலவகையால் எழுதப்பட்டு ஒருதுறைப்படுதலின்றி ஒன்றோடொன்று இணங்காவாய் வாளா விரிந்து கிடந்தன. உபநிடதகாலத்தில் எழுந்தனவோ ஆழ்ந்த நுண்ணறிவுடைய சிலரால் எழுதப்படினும் நுண் பொருண் மாத்திரையே கிளந்துரைத்தற் கடப்பாடுடையவாய்க் கிடந்தன; இவற்றில் நுண்பொருள் ஒருதுறைப்படுமாறு நன்கமைக்கப்படாது சிதர்ந்து விளங்கின; இவ்வாறு இறைந்து ஒழுங்கின்றி எழுதப்பட்ட அந்நூல் நுண்பொருள் தேறமாட்டதார் தாந்தாம் வல்லவாறு அவற்றிற்குத் தாங்கருதிய பொருளை ஏற்றி இடர்ப்படுவா ராயினர்.9 மற்றுச் சூத்திரகாலத்திலோ, இங்ஙனம் ஞானகாண்டப் பொருள் தெரிவுறுக்கும் உபநிடதங்கள் அறியார் பலரால் அலைத்துப் பொருள் செயப்படுத லோர்ந்து அவற்றின் பொருள் உறுதி பெறுவித்தற்பொருட்டுச் சொற்சுருங்கிய விழுமிய யாப்பினாற் பொருட்டிட்ப நுட்பஞ் செறியப் பாகுபாடு நனிவிளக்கிச் சூத்திரங்கள் எழுதப்பட்டன. இச்சூத்திரங்களில் வேண்டா கூறுதலான அடைமொழி ஒன்று தானுங் காணப்படு வதில்லை. பொருளுணர்த்துதற்கு வேண்டு மாத்திரையே சொற்கள் திறம்படு முறையால் வாய்ப்பப் பொருத்தப்பட்டன. இச்சூத்திரங்களெல்லாம் ஈண்டைத் திருக்குறள் போலவே பெரும்பான்மையாற் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் வாய்ந்து சூத்திர அடைவு அதிகார அடைவு நனிதுலங்கி நடைபெறுகின்றன. பண்டைக் காலத்திருந்த வெறுஞ் சொல்லாரவார விரிவெல்லாம் ஒருங்கே மறைந்தன. தமிழிலேயும் அகப்பொருளிலக்கண விரிவெல்லாஞ் சுருக்கி அறுபதுசூத்திர வுருவிலே இறையனாரகப் பொருள் இயற்றப்பட்டமையும் மக்களுயிர்க்குறுதி பயப்பனவாகும். எல்லாப் பொருளும் மெய்பெறத் தெரித்து மிகச் சுருங்கிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறுவெண் பாட்டுக்களிலே திருக்குறள் இயற்றப் பட்டமையுங் கடைப்பிடித் துணருங்கால் இச்சூத்திர காலத்திற்கும் இதன்கண் எழுந்த களவியல், திருக்குறள் என்னும் இரண்டு நூல்கட்கும் நிரம்ப வொற்றுமை யுண்டென்பது மலைவின்றிப் பெறப்படுதல் காண்க. இன்னும் வடமொழியி லெழுதப்பட்ட அவ்வறுவகைச் சூத்திர நூல்களினும், இத்திருக்குறள் மாட்சி பெரிதுடைத்தாம். என்னை? அந்நூல்களெல்லாம் ஒரோவொரு பொருளையே மரபுவழாது நன்கெடுத்துக் குறிப்பனவாக, மற்றுத் திருக்குறளோ அவற்றாலுணர்த்தப்படுவனவும் படாதனவுமாகிய எத்திறப் பொருளும் நலம் பெருகக் கோத்தெடுத்து அமிழ்தெனுஞ் சுவை முதிரக் கூறுதலாலென்க. இம்முறையால் தெய்வத் திருக் குறளுக்கும் அஃதெழுந்த காலத்திற்கும் ஒற்றுமை உண்டென் பதனை நிறுவல் வேண்டி இத்துணையும் விரிந்ததென்றுணர்க. இதனாற் றிருக்குறணூல் சுருங்கிய குறுவெண்பாட்டால் யாக்கப்பட்ட தற்குப் பிறிதொரு காரணமும் புலப்படுவதாயிற்றென்க. அடிக்குறிப்புகள் 1. சதபத பிராமணம், 11, 4, 5 2 கௌஷீதகி உபநிஷத்-4 3. சாந்தோக்கிய உபநிஷத். 5, 9 4 Rama and the Monkey Heroes. 5. தொல்காப்பியம், எழுத்து, பாயிரவுரை. 6. தொல்காப்பியம், பொருள், 88-வது சூத்திரம். 7. Vide Dr. Rhys Davids, Buddhism, ch. IV 8. Vide ‘The Arctic Home In The Vedas.’ 9. Vide Dr. Thibaut’s Introduction to his Eng. Translation of the vedanta Sutras with Sankara Bhashya: from Page, cii. 3. நூற்பெருமை திருக்குறள் பொதுமறை இனி, இங்ஙனம் இரண்டடிகளாற் குறள் வடிவாய் நின்றே இவ்வரிய பெரிய நூல் திருமாலைப் போல் எல்லாவுலகங் களையும் அளக்கும் பெருமைத் தாயின், இதன் பெருமை விரித்துரைக்க வல்லார் யார்? அறப்பொருள் தேற்றப் போந்த வடநூல் தமிழ்நூல் எல்லாவற்றையும் ஒருங்கெடுத்து ஒரு தட்டிலிட்டு இத்திருக்குறணூலை மற்றோர் தட்டில் வைத்து நிறுத்துப் பார்ப்பின் அப்போதும் இது பொறை மிகவுடைமை யால் கீழ்த்தாழுமன்றோ! வடமொழி மிருதி நூல்கள் எல்லாம் ஓரோவொரு சாதியார்க்கே உரிய கரும முறைகளை வகுத்துக் கூறி விதவா நிற்கும்; அவற்றின்கட் சொல்லப்பட்ட நெறிகளை மற்றைச் சாதியார் தழுவுதற்கு ஒருப்படார்; படாராகவே, ஏனைய பெரும் பாலார்க்கு அவை பயப்பது சிறிதுமின்றாமென்பதுபட்டு அந்நூற் பெருமைகளெல்லாஞ் சிற்றளவினவாய் ஒடுங்குமென்பது. மற்றுத் திருக்குறளென்னும் இச்செம்பொருணூலோ எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் இன்றியமையாது வேண்டப்படும் அறநெறிகளை நன்கு வகுத்துரைத்தலிற் பயன் பெரிதுடைத்தாய், அவர்தாம், “அறியாமைநோயான் வருந்தும் எம்முயிர்க்கிஃது ஓர் அருமருந்தாம்; எம்புன்றலைமேற் றிகழும் பொன்றா மணிவிளக்காம்; நன்பொருள் வேட்டுத் திரிதரும் எமக்கு ஓர் இன்புறும் அமிழ்தமாம்; சிற்றறிவினேமுக்கு உற்றநற் றுணையாம்; வேண்டுவார் வேண்டுந் திருவழங்கும் காண்டகு களஞ்சியமாம்” என்றுரைத்துப் பெரிது ஏத்தும் பெரும் பெருமைத்தாகலின் இதன் நன்மாட்சி அளப்பரிய விளக்க முடைத்தென்க. இது பற்றியன்றே கல்லாடர் என்னுஞ் சங்கப் புலவரும், “ஒன்றே பொருளென்னின் வேறென்ப வேறென்னின் அன்றென்ப வாறு சமயத்தார்-நன்றென்ன எப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி” என்று கூறுவாராயினதூஉமென்க. இன்னும் இந்நாலுணர்ந்த பின்றை மற்றெந்நூலுங் கேட்டல் வேண்டாவென்பதுபற்றி, “ஆயிரத்து முந்நூற்று முப்பத்தருங்குறளும், பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின், போயொருத்தர், வாய்க் கேட்க நூலுளவோ” என்று நத்தத்தனார் என்னுஞ் சங்கப் புலவரும் ஓதுவாராயினர். இன்னுமவர் கூறிய திறங்களெல்லாம் விரிப்பிற் பெருகும். சங்கப்புலவர் இல்லது புனைந்து கூறாது பட்டாங்கு கிளக்கும் ‘புலவுத் துறந்து பொய்யா நோன்பினர்’ 1என்று பேராசிரியரு முரைத்தாராகலின், அவர் திருக்குறணூற் பெருமை உலகம் நன்கறியல் வேண்டித் தெளித்துரைத்த கட்டுரை மொழிகள் புனைந்துரைபோலுமென மயங்கற்க; அவையெல்லாம் உண்மை மொழிகளென்றே கடைப்பிடிக்க. வடமொழி மிருதி நூலியல்பு இனி, வடமொழியிற் போதாயணர், ஆபத்தம்பர், கௌதமர், வசிட்டர், மனு முதலாயினோர் எழுதிய மிருதி நூல்களோடு இது தன்னை ஒப்பவைத்து ஆராய்ந்து பார்க்குங்கால் இத்திருக்குறள் மாட்சி நன்கு விளங்கு மாகலின் தாலிபுலாநயம் பற்றி ஆண்டாண்டு ஒருசில அங்ஙனம் எடுத்துக்காட்டுதும். பிராமணன் ஒருவன் மற்றை யொரு பிராமணன் பொருளைக் கவர்ந்தானாயினும், அன்றி யவனைக் கொன்றானாயினும், தன் குருவின் மனைவியைப் பற்றினானாயினும், கள் அருந்தினானாயினும், அரசன் அவன் நெற்றியிற் காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டு அவனை ஊரை விட்டுத் துரத்தல் வேண்டும் எனவும், பிராமணரினுந் தாழ்ந்த சாதியான் ஒருவன் அக்குற்றங்களில் ஒன்றைப் பிராமணன் மாட்டுச் செய்வானாயின், அவனது உயிர் வாங்கி ஒறுத்தலோடு அவன் பொருளையுங் கொள்ளையிடுதல் வேண்டுமெனப் போதாயனாரால் ஒன்று குறிக்கப்பட்டது.2 பிராமணர் முதலான மூன்று சாதியாரில் ஒருவன் சூத்திரப் பெண் ஒருத்தியுடன் கூடுவனாயின் அவன் ஊரினின்றுந் துரத்தப்படுதல் வேண்டும் என்றும், சூத்திரன் ஒருவன் ஏனை மூன்றுசாதிப் பெண்களுடன் கூடுவனாயின் அவனுயிரைப் போக்குதல் வேண்டும் என்றும் ஆபத்தம்பரால் ஒன்று குறிக்கப்பட்டது.3 இன்னுஞ் சூத்திரன் ஒருவன் தன்னின் மேற்குலத்தானை வசை கூறுவனாயின் அவன் நாவினை அறுத்தல் வேண்டுமெனவும், அவன் அவரோடு சமநிலையடைய விரும்பின் அவன் முதுகில் கசையாலடிக்க வேண்டுமெனவும் அவரால் மற்றொன்று குறிக்கப்பட்டது. சூத்திரன் ஒருவன் பிராமணர் ஓதும் வேதவுரைகளைக் கேட்பனாயின் அவன் காதில் ஈயத்தை உருக்கி உகுத்தல் வேண்டுமென்றும், அவன் அவற்றை மொழிந்திடுவனாயின் அவன் நாவை அரிதல் வேண்டுமென்றும், அவன் அவ்வேத வுரைகளை நினைவிலமைப்பனாயின் அவன் உடம்பை இரண்டு கூறாகப் பிளந்து கொல்லுதல் வேண்டுமென்றும் கௌதமரால் ஒரு கட்டளை இடப்பட்டது4 மனுவென்பவராற் குறிக்கப் பட்டவை இன்னுங் கொடுமையாக இருக்கின்றன. பிராமணன் க்ஷத்திரியனை வைதானாயின் ஐம்பது பணம் இறை இறுத்தல் வேண்டும்; வைசியனையாயின் இருபத்தைந்து பணமும், சூத்திரனையாயின் பன்னிரண்டு பணமும் இறுத்தல் வேண்டும்; சூத்திரன் பிராமணனைப் புறம்பழித்தானேல் அவன் நாவை அறுப்பதுடன் பத்தங்குல நிகளமுடைய இருப்பாணியைப் பழுக்கக்காய்ச்சி அவன் வாயினுள் நுழைப்பித்தல் வேண்டும். இன்னுந் தாழ்ந்த சாதியிற் பிறந்தவன் தன் மேற்குலத் தோனுக்கு எந்த உறுப்பினால் தீங்கிழைக்கின்றானோ அந்த உறுப்பை வெட்டியெறிதல் வேண்டும்5 என்பன பிறவுமாம். இவ்வாறே வட மொழி மிருதிநூல் எழுதின ஆரியர் தம்மின் வேறான மற்றைச் சாதியர்களை யெல்லாம் நிரம்பக் கொடுமையாக நடத்துவதற்கு வேண்டுவனவெல்லாம் தாம் வேண்டியவாறே எழுதி வைத்தனர். இவர் எழுதிய இந் நூல்களைத் ‘தரும சாத்திரங்கள்’ என்று உரைப்பின் அறக்கடவுள் நாணித் தலைகவிழு மென்பது சொல்லவும் வேண்டுமோ! நடுநிலை திறம்பாது முறைசெய்யும் வேந்தர் எவரும் இவ்வதரும சாத்திரங்களை மேற்கோளாகக் கொண்டு முறை செய்ய ஒருப்படுவரோ? அறிவுடையீர் கூறுமின்! திருக்குறளின் அறவுரைச் சிறப்பு இறைவனாற் படைக்கப்பட்ட ஆறறிவுடைய மக்கட் டொகுதியில் எவர் பெரியர்? எவர் சிறியர்? பிறவுயிர்களை வருத்துதன் முதலான தீக்குணமுடையோரே சிறியரெனவும், எல்லா வுயிர்கண்மாட்டும் அருள்கனிந்து அவற்றை அன்பாய்ப் பாதுகாப்பாரே பெரியரெனவும் அன்றே உலகம் உறுதியுரை கூறா நிற்கின்றது. இங்ஙனம் இவ்வுலகம் ஒருங்கு ஒப்பிய உறுதியுரையினைத் தெரிந்து விளக்கிய சான்றோர் எம்பெருந்தகையாளரான தெய்வப் புலமைத் திருவள்ளுவரல்லரோ! அவர், “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (குறள் 972) என்று ஓதி, “அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள் 30) என்னும் மெய்யுரையால் அந்தணர் என்னுஞ் சொல் உயிர் கண்மாட்டு உண்மையருள் ஒழுக்கமுடையார் மேற்றன்றி ஏனையோர்மேற் செல்லாதென்பது நன்கு வலியுறுத்தினார். ஒருவற்கு உயர்ச்சி பிறப்பினால் வருவதன்று; அஃதவன் ஒழுக்கத் தினாலேயே வரற்பாலதாம். ஒழுக்கமில்லா வழிப் பிறப்புரிமை பற்றி உயர்வு கூறுதல் ஒரு சிறிதும் பயன்படாதென்பது விளக்கவன்றே ஆசிரியர், “இல்லை ஒழுக்கமில்லான்கணுயர்வு” என்று கட்டளை தருவராயினர். இங்ஙனம் விழுப்பந்தருதல் வல்ல ஒழுக்கத்தில் உண்மையின்மைபற்றி உயர்த்தலும் இழித்தலும் வேண்டப் படுவதாகவும், இந்நடுநிலைவழுவி வடமொழி மிருதி நூலார் பிறப்புரிமை பற்றி ஒறுத்தல் செயற்பாற்று என்றவுரை அறிவுடையார் வருந்துதற்கேதுவாங் கொடுமையுடைத்தாதல் காண்க. இங்ஙனமே அவர் ஏனைச் சாதியார் மாட்டுள்ள பொருள்கவரற் பொருட்டு நீத்தார் வழிபாடு முதலிய செயல்கள் செயக் கட்டளையிட்டுப் பலப்பல விரித்தெழுதினார்; இவையெல்லாம் அகந் தூய்மையுடையார்க்கு ஒரு சிறிது மாகாமையால் அவை யறிவுடையாராற் கொள்ளற் பாலன வல்லவென்க. இவையெல்லாம் வெறும் போலிக்கடன்களாதல் தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர், “மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்” (குறள் 278) என்று அருளிச் செய்வாராயினர். இங்ஙனம் இவர்க்கு இறந் தார் பொருட்டுக் கொடுக்கும் பொருளெல்லாம் அறப் பொருட்டாக மாட்டா; தமக்கு இயன்றவற்றை அன்புடன் எல்லாவு யிர்க்கும் பகுத்துக் கொடுத்து அருள்வழங்கும் அருஞ்செயலே அறமென்று சிறப்பிக்கப்படும் என்று ஆசிரியர், “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.” (குறள் 322) என்பதன்கண் ஓதுதல் காண்க. இன்னும் கல்வியென்பது ‘மக்கள்’ மனவழுக்கைக் கழுவி அவரறிவினை விரிதரச் செய்யுந் தெள்ள மிழ்தமாம்; இஃதவர் மனவறையிற் செறிந்த பேரிருளைத்துரந்து விளங்கும் நந்தாமணிவிளக்காம். இப்பெற்றித்தாகிய கல்வி வளம் பெறக் கிடைத்தோரே கண்ணுடையர், ஏனையோர் முகத்தே புண்ணிரண்டுடையர் என்பது புலப்படக், “கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” (குறள் 393) என ஆசிரியர் வற்புறுத்திக் கூறிக், கல்லார்க்குங் கற்றார்க்கும் உள்ள வேறுபாடு நன்கு புலப்பட, “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்” (குறள் 410) என்றும் ஓதி யருளினார். இவற்றாற் கல்வியறி வென்பது எப்பாலார்க்கும் இன்றியமையாது வேண்டப்படும் உற்ற நற்றுணையேயாக, அது தன்னைப் பிராமணர்க்கு மாத்திரம் வரைந்து சொல்லி ஏனையோர்அது பெறமுயலினும் அவரை ஒறுத்து வருத்துக என்று கூறிய மிருதி நூல்கள் என்ன பயனுடையவாம்? கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டி வேந்தன், 6“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயு மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பிற் மேற்பா லொருவனு மவன்கட் படுமே” என்றுங், 7“கல்லா வொருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.” என்றுங் கூறிய அருமருந்தன்ன அறவுரைகளொடு மேற்கூறிய மிருதி நூல் உரைகளை ஒத்து நோக்குங்கால், அவை ஒளி முன் மறைந்த இருள்போலாதல் தெற்றென விளங்கும். இன்னும், நுண்ணறிவானும் மெய்ப்பொருளாராய்ச்சியானுஞ் சிறந்து விளங்கிய தமிழாசிரியர். வடமொழி வேதங்களையும் பிறவற்றையுங் கற்பின், அவற்றின் நுண்பொருளின்மை பற்றி நகையாடுவர் என்பதனை நன்குணர்ந்து போலும் அம்மிருதிநூல் இயற்றினார் அங்ஙனங் கூறினர். அவ்வடமொழி நூற்பெற்றி அறிதற் பொருட்டு ஒருசிலரன்றி மற்றைப் பெரும்பாலார் தமிழர் அவ்வட நூற்பயிற்சி செய்தல் வேண்டா வென்னுங் கருத்துடையோம். தமிழில் தொல்காப்பியம், திருக்குறளை யுள்ளிட்ட சங்க இலக்கியம், பன்னிரண்டு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள், திருவாய்மொழி முதலான அரிய பெரிய நூல்கட்கு ஒப்புமுயர்வுமுடைய நூல்கள் வடமொழியிற் காணப்படுவதின்மையின் இத்தமிழ்நூற் பயிற்சியே சாலவும் வாய்ப் புடைத்தாமென்பது கடைப்பிடிக்க. ஆகவே, அம்மிருதி நூலாரும் அவரோடொத்த பிறரும் அந்நூல்களைத் தம்மிற்றாமே வைத்து மகிழ்ந்து பாராட்டக் கடவராக. இது கிடக்க. இனி, ஒருதலைகோடும் மிருதிநூற் பொருள போலாது தெய்வத் திருக்குறளாசிரியரான தோலாநாவின் மேலோர், மக்களெல்லார்க்கும் உறுதி தரும் பொருள் நாடி யுணர்த்தற்குத் திருவுளங்கொண்டு அருளிச் செய்தவற்றுள் ஒரு சிலவற்றின் மாட்சி ஈண்டு எடுத்துக்காட்டுவாம். ஒவ்வொரு சமயத்தாருந் தம்முட்டாமே முரணிக்கூறுந் தேவர் தம்மை வணங்குக வென்று உணர்த்தல் செய்யாது, அவர் தமக்கெல்லாம் ஒப்பமுடிந்த ஒரு முழுமுதற் கடவுளை வணங்குகவெனப் பிறதேயங்களில் உள்ள சாதியாரெல்லாம் விரிந்த உணர்ச்சிப் பேறின்றி அநாகரிக முற்றுத் தோப்புகளில் மரங்களையும் வானிற்றோன்றும் கோள்கள் முதலிய வற்றையும் வணங்கிக் கொண்டிருந்த இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தெய்வப் புலவர் நிலைத் திணை இயங்குதிணை யெனப்படு மெல்லா வுலகங்கட்கும் முதல்வனாய், அவற்றை நடைபெறுவித்தற்குரிய முற்றறிவும் முடிவி லாற்றலுமுடைய இறைவன் ஒருவனுண்டென்பதூஉம், அவனே யாவரானும் வழிபடற்பால னென்பதூஉம் நன்கு விளக்கியருளினார். “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.” (குறள் 28) என்பதனால், முதல்வன் அருட்பேற்றிற்கு உரியரான துறவோர் தூய வுள்ளமும் தூய வொழுக்கமு முடையராய்த் தம்மைச் சார்ந்து வழிபடுவார்க்கு அறநெறி காட்டுதற் பொருட்டு எல்லாத் தேயங்களினும் ஆங்காங்கு உறைவரென்பதூஉம், அவர் பெருமை அவர் அருளிச் செய்யும் மந்திர மொழிகளால் நன்குணரப்படுமென்பதூஉம் வகுத்துக் கூறினார். அதனால் ஆரியர் தமக்குள்ளே மட்டுந்தான் துறவிகள் உளர், ஏனையோர் துறவொழுக்கம் பெறற்குத் தகுதியுடைய ரல்லரெனக் கூறும் மிருதி நூற்பொருள் மறுக்கப்பட்டமை காண்க. இறைவன் அருட் குறிப்பால் எல்லாத் தேயத்துள்ளார்க்கும் அறிவு தெருட்டல் வேண்டித் துறவோர் ஆங்காங்குப் போதருவ ரென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின் திருவள்ளுவர் கருத்துப் பெரிதும் பொருத்தமாவதேயாமென்க. அறத்தின் உண்மை இனி ஆசிரியர் மக்களுயிர்க்குறுதியாம் அறத்தினியல்பு உணர்த்துவான் புகுந்து ‘அறமென்பது உள்ளத்தில் மாசின்றி நிலைபெறுதல்’ எனவும், ‘அவ்வுள்ள மாசாவன அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல்’ எனவுந் தெளிய எடுத்து ஓதி, ‘அருள்’ எனப்படுஞ் சீவகாருணியம் இல்வழி அவ்வறம் எனைத்தானும் நிலைபெறாதென்பதூஉம் தெரித்தருளினார். கணக்கின்றிப் பொருட்செலவிட்டு வேட்குதும், பார்ப்பார்க்குப் பல ஆக்கள் கன்றொடுங் கொடுத்துக் குமரித் துறையாடுதும், கோயில்கள் புதுக்குதும், அறவைச் சோறளிக்குதும், தண்ணீர்ப் பந்தர் வைக்குதும், வழிச்செல்வோர்க்கு இளமரக்காவமைத்துக் குளந்தொடுதும் எனப் பலவகையான் ஆரவாரம் புரிந்து ஒழுகும் ஒழுகலாறு அறத்தினியற்கையன்று. பிறர் வளம்பெறுதல் கண்டு பொறாமை எய்தாது, பிறர்க்குரிய அறம்பொருள் மேல் விழைவுறாது, பிறர் தமக்குத் தீது இயற்றிய வழியும் அவர் மேல் வெகுண்டு தாமும் தீது செய்தலின்றி யவர்க்கு நலமே புரிந்து யார்மாட்டும் இன்சொற் சொல்லுதலையே கடமையாகக் கொண்டு ஒழுகும் விழுமிய ஒழுகலாறு ஒன்றுமே அறத்தின் உண்மையாம். இவை எங்ஙனம் உண்டாம் எனின், ‘இறைவனாற் படைக்கப்பட்ட இவ்வுயிர்கள் எல்லாரும் எமக்கு மிக இனியராவன்றே என்றுட் கொண்டு, அவர் வருந்தக் கண்டுழி, “ஐயோ! இவர் ஏன் இங்ஙனம் வருந்துகின்றனர்! இவர்க்கு யாது நேர்ந்தது! எமக்குப் பசி நேர்ந்த காலத்தில் நோய் உண்டாகின்றது; இவர்க்கும் அதுவேயோ? எமக்கு ஒருவகையால் துயரம் நேரிட்ட காலையில் எங்கண் கலுழ்கின்றது; இவர்க்கும் அதுவேயோ? யாம் துன்புறினும் இவர் வருந்தப்போறேம்” என்று, உள்ளுருகி வெம்பி வெதும்பி அவர் துன்பந் துடைக்குமளவும் வேறொன்றினுங் கருத்து ஊன்றாராய் இளகிய நெஞ்சத்தோடும் ஒழுகுவார்மாட்டு வைத்துக் கண்டு கொள்ளப் படுமாகலின், அருள் தோன்றுமுறை இங்ஙனம் என்று உணர்க. இது விளக்கியவன்றே ஆசிரியர், “அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம்” என்றும், “மன்னுயிரோம்பி யருளாள்வார்” என்றும் தெருளாதான் “மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரின், அருளாதான் செய்யுமறம்” என்றும் விதந்தருளியதூஉம் என்க. குறைந்த தரத்தின் நிகழ்வதனை அன்பு எனவும் மிகுந்த தரத்தின் நிகழ்வதனை அருள் எனவும் பெயரிட்டு இல்லறத்தாரை நோக்கிப் பகர்கின்ற காலையில் அன்புடைமையினை விதந்து வற்புறுத்தியும், துறவறத்தாரை நோக்கிப் புகல்கின்ற காலையில் அருளுடைமையினை விதந்து வற்புறுத்தியும் ஆசிரியர் அருணிலையின் இன்றியமையா அறநெறியை நன்கு தெருட்டியருளினார். இருந்தவாற்றால் இத்தெய்வத் திருக்குறணூல் முழுதுங் கூறப்பட்ட அறத்தொகுதிகள் தேனிறாலைச் சுற்றித் தேனீக்கள் மொய்த்துக்கொண்டு அதன்கட்டேனை உரிஞ்சி உயிர்வாழ்தல்போல, இவ்வருள் என்பதனைச் சூழ்ந்து நின்று நிலைபெறுகின்றமை காண்க. இன்னும் ஞாயிறு ஒன்றானே ஏனை வான் மீன்களும் பிறவும் விளக்கம் எய்துமாறுபோலத் திருவுறுகின்றன; பொன் ஞாணிற் கோத்த முழு மணிகள்போல இயைபு நனியுறுகின்றன. இனி, ஆசிரியர் நினைப்பனவுஞ் சொல்வனவுஞ் செய்வனவும் எல்லாம் அருள்; அவரது அறிவின்றோற்றமே அருள்; அவர் காண்பனவுங் கேட்பனவும் எல்லாம் அருள். இங்ஙனம் எல்லாம் அருளுருவாய் காணவல்ல செந்நாப்போதார் அவ்வருட்டன்மையினை விளங்க விரித்து அறிவுறுக்குமாறு போலப் பிறர் யாரும் அங்ஙனஞ் செய்திலர். அருளையின்றி உயிர்கள் பெறுஞ் செல்வம் பிறிதொன் றில்லை. அவ்வருள்வண்ணமயமாய் விளங்கப் பெறுதலே வீடுபேறு; அஃதொன்றான்மட்டுமே பிறவியறும். இவ்வாறு இதன் சிறப்பு முந்துறுத்து உணர்த்துகின்றாராகலின் ஆசிரியர் அவ்வருணெறிக்கோர் உறுபெருந் தடையாய் உள்ள கொலையை மிகவிலக்கி அறமறிவுறுத்தார். தன் உடம்பு கொழுமை பெறுதல் வேண்டிப் பிறிதொன்றன் உடம்பைச் சிதைத்து அதன் ஊனை உண்பானுக்கு அருள் நிகழுமென்றல் பொருந்தாவுரையாம். “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி நூனுண்பான், எங்ஙனம் ஆளும் அருள்” (குறள் 251) என்று ஆசிரியர், கொலை, நிகழ்வுழி அருள் நிகழாமையினை நன்கு வலியுறுத் தருளினார். தனக்கு என்றும் நீங்காத நிரயத்துன்பம் அதனான் வருவதாயினும், கொலை மறுத்த லினின்றும் ஒருவன் விலகற்பாலன் அல்லன். துறக்க நாட்டின் நுகர்ச்சியெல்லாம் எனக்கு ஒருங்கே வருவதாயினும் யான் கொல்லாமை யறத்தினின்றும் வழுவேன் என்பானுக்கு அருட்பேறு ஒருதலையாமென்க. யான் வருந்தினும் வருந்துக, என்பொருட்டுப் பிறிதோர் உயிர் வருந்தல் வேண்டேன் என்பது துறவிக்குச் சிறந்த ஒழுகலாறு; இதனைத், “தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை” (குறள் 327) என்று ஆசிரியர் கூறுதலாற் கடைப்பிடிக்க. ஆசிரியர் மற் றெந்தச் சாதியார்க்குஞ் சமயத்தார்க்குந் தேறற்கரிதாய் கிடந்த இவ்வருட்பான்மைக் கொல்லாவறத்தினை நிறுத்துவான் கருதி, ஆரியர் வேள்விவேட்டற்கண் உயிர்க்கொலை செய்தலாம் என்று கூறுதலை மறுத்து, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர்செகுத் துண்ணாமை நன்று” (குறள் 259) என்று முடிபுரைக் கட்டளையிட்டருளினமை காண்க. அறநெறி விளக்குதலே தமக்குக் கருத்தாகவுடைய கௌதம சாக்கியர் அறிவுறுத்திய எண்வகை யறங்களும் பிறவும், தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் கூறியருளிய இவ்வருளறத்தின் சிறப்புடையவாகாமையும், அவையும் இஃதொன்றன் கண்ணே அடங்குதலும் கண்டு கொள்க. அற்றேல் அஃதாக, ஆரியர் வேள்வி வேட்டற்பொருட்டு உயிர்க்கொலை வேண்டுமென்ற தன்றி, உயிர்க்கொலைப் பொருட்டு வேட்கற்பாற்றென்று கூறியதில்லை யாலோ வெனின்;- அது பொருந்தாது; பிள்ளைக்குச் சோறு தீற்றுதலாகிய ‘அன்னப் பிரசானஞ்’ செய்யும் வினை கூறும் போது, “உடல் நலங் கருதினால் வெள்ளாட்டுக் கறியும், அறிவும் பெற வேண்டினால் கவுதாரிக் கறியும் ஊட்டுக” என்று ஆசுவலாயனரும் சாங்காயனரும் கூறுதலானும், “மிகவுந் திறமையாகப் பேசல் வேண்டின் பாரத்துவாசி என்னும் பறவைக்கறியும் , விரைவாகப் பேச விரும்பினால் மீன்கறியும் ஊட்டுக” எனப் பாரஸ்கரருங் கூறுதலானும் ஆரியர் ஆவும் எருமையுங்காளையும் என்னும் விலங்குகளின் இறைச்சியை அட்டு உண்டமையும், ஆவை அறுக்குங் கொட்டிலும், சிறந்த வந்தவர்க்குக் காளை ஆ இவற்றையறுத்துக் கறி சமைத்தலும் இருக்கு வேதத்திலும் ஐதரேயபிராமணத்தினும் நன்கு விரித்துக் கூறப்படுதலானும், இறைச்சி யுண்ண வேண்டினோன் வேட்டு உண்ணுக என்னுங் கட்டளை பின் வந்த மிருதி நூல்களிலுங் காணப்படுதலானும், வடநாட்டு மாகாணங்களில் இன்றும் ஆரியப் பிராமணருள் ஒருசாரர் மீன்கறி முதலியன வுண்டு வாழ்த லானும், ஆரியர்க்குள் உயிர்க்கொலை வழக்கமாயிருந்ததென்று உணர்க. இனி, இந்தியாவில் ஒரு பகுதியிலொழிய ஏனைப் பெரு நிலப் பிரிவுகளில் இருக்கும் மக்களெல்லாரும் உயிர்களைக் கொன்று தின்னக் காண்டுமாகலின் ஈண்டாசிரியர் வலியுறுத்த, கொல்லாவறம் எல்லார்க்கும் ஒப்பமுடிந்திலதாமெனின்;- நன்று சொன்னாய்; அருளறத்தின் உயர்ச்சி கூறாத சாதியருஞ் சமயத் தாரும் உலகில் இல்லை. உயிர்கண்மாட்டு அருள் பூண் டொழுகுதல் மக்கட்குரிய கடமை யாமென்பதனை அறிந்த அவர், பின்னர் அவற்றைக்கொன்று உண்பது பொருந்தாத செய்கையாம்; உயிர்க்கொலை நிகழாவிடத்தன்றி அருளொழுக்கம் இல்லாமையின், அருளொழுக்கமுடையேமெனக் கூறிக்கொண்டு உயிர்க்கொலை புரிவார் திறம் பெரிதும் வெறுக்கற் பாலதேயாம். அமெரிக்கா முதலான மற்றை நாடுகளிலுள்ள அறிவுடையோர் இஞ்ஞான்று கொலைமறுத்தலை வலியுறுத்தி அருளறத்தின் கண்ணராய் நிலைபெற்று வருதலும் ஈண்டறியற் பாற்று. எனவே, அருளறத்தின் உண்மை நன்குணர்வார் எவராயினும் அவர்க்கெல்லாம் அஃது ஒப்பமுடிவதொரு விழுப்பொருளாகலின் அவ்வாறு கடாவுதல் யாண்டைய தென்று ஒழிக. இக்கூறியவாற்றால் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் மக்களுள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு அவரவர் ஒழுக்க வுண்மையின்மை பற்றி யன்றிப் பிறப்பினாலேயே சொல்லப்படுதலாகா தென்பதும், கல்வி யானது எல்லார்க்கும் ஒத்த உரிமைத்தாகலின் அதுதன்னை ஒரு சிலர்க்கு வரைந்துரைத்தல் நடுநிலை திறம்பலா மாகலின் அஃதெல்லாரானும் பெறற்பாற்றென்பதும், உலகிற்கு முதற்கடவுள் ஒன்றே; அதனிருப்பை யாண்டும் விளக்கும் அறவோர் பலரேயென்பதும், கொல்லாமையினால் நிலை பேறுற்று விளங்கும் அருளறமே மக்களுயிர்க்குறுதி பயப்பதா மென்பதும் விளக்கி யருளினமை நன்கு காட்டப்பட்டது. ஆசிரியர் விரிந்து பரந்த தமதுணர்ச்சியான் எடுத்துக் கூறிய மற்றைப் பொருள் நுட்பங்களும் இதுபற்றி யறியப்படு மாகலானும் அவ்வவ்வதிகார வாராய்ச்சியுள் அவை விரித்துக் காட்டப்படுமாகலானும் ஈண்டை நூற்பெருமை புலப்படுத்தற்கு இத்துணையே கூறினாம். அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், மரபியல், 14-து சூத்திரவுரை. 2. பௌதாயனம், 1-10, 18, 19. 3. ஆபத்தம்பம், 2, 10, 27. 4. கௌதமர், 12. 5. மனு, 8, 298-271, 279. 6. புறநானூறு, 983 7. நறுந்தொகை 4. நூல் நுதலிய பொருள் இனி, இந்நூலால் நுவலப்படும் பொருளெல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பாலில் அடக்கி வகுத்துக் கூறினார். ஆசிரியர் செந்தமிழ் மொழியில் நூலியற்றுகின் றாராகலின், அவர் தாமேற்கொண்ட செந்தமிழ் வழக்கிற்கு ஏற்ப எல்லாவுறுதிப் பொருளையும் அறம் பொருளின்பம் வீடென அவ்வாறு பாகுபடுத்தோதினார். இப்பாகுபாடு தமிழ் வழக்கிற்கே உரித்தாமென்பது, “இன்பமும் பொருளு மறனுமென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருகின்” என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும், “அறனும் பொருளு மின்பமு மூன்று” மென உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், “சிறப்புடை மரபிற் பொருளுமின்பமும், அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல” எனக் கோவூர்கிழாருங் கூறுமாற்றால் தெளியப்படும். இப்பெற்றியறியாத பரிமேலழகியார் காமத்துப்பால் முகவுரையில், “இவர் பொருட்பாகுபாட்டினை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான்” என்று கூறுவது பொருந்தாதென மறுக்க. வடமொழியில் மனுமுதலான மிருதி நூல்களெல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது, அறம்பொருளின்ப வழக்குப் பற்றி யோதாமையும் யாங்கூறியதே பொருளென்பதை வலியுறுத்தும். இனி, ஆசிரியர் இந்நூலை அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டமாய்க் கூறியதன்றி வீடுகூறிற்றிலராலெனின்;- அறத்தை இல்லறந் துறவறமெனப் பகுத்தெடுத்துப் பின்னையதான துறவறத்தில் வீடுபேறு எய்தற்காம் நன்னெறி கடைப்பிடித்து இனிது விளக்கினா ராகலின் வீடு கூறினாரென்றே துணிக. துறவறத்தின் வேறாகக் கூறப்படும் வீடுபேற்றியல் பிறிதின்மையின் இஃது அதனின் அடங்குமாறு வாய்வதேயாம் என்க. இது தெரித்தற்கன்றே நக்கீரனார், “தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால், ஆனாவறமுதலாவந் நான்கு - மேனோருக், கூழினுரைத்தார்க்கு” எனவும், மாமூலனார், “அறம்பொருளின்பம் வீடென்னு மந்நான்கின், றிறந்தெரிந்து செப்பியதேவை” எனவும், நரிவெரூத்தலையனார், “இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழி நூல்” எனவும், கொடிஞாழன் மாணிபூதனார், “அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின், றிறன றிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த, வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற், கேளாதன வெல்லாங் கேட்டு” எனவுங் கிளந்துரைத்துப் பாயிரஞ் செய்திட்டார். இந்நுட்பமறியாதார், வீடுபேற்றின்பம் இத்தன்மைத்தென ஒருவாற்றானும் உரைக்கப்படாமையின் அஃது ஒழித்து ஏனை மூன்றுமே நூல்களுட் சொல்லப் படுமென்று தத்தமக்குத் தோன்றியவாறே கூறுப. அன்பின் ஐந்திணை யொழுக்கம்பற்றி வரும் இன்பமும் நுகர்வார் தமக்கே புலனாவதல்லது பிறர்க்கு இவ்வியல்பிற்றென விளங்கக் காட்டுதலாகாமையின், அதுவும் நூல்களாற் கூறப்படா தெனல் வேண்டும். அது பொருந்தாமையின், பேரின்ப வுருவின தாம் வீடுபேற்றின்பம் உரைக்கவுங் கருதவும் ஆகாமை பற்றி அஃது எய்தற்காம் தரங்கூறுதல் நூல்களிடத்தில்லை யாயிற்றென்றல் போலியுரை யென்றொழிக. ஈண்டு ஆசிரியர் ‘மெய்யுணர்தல்’ என்னுமதிகாரத்தில், ஒருவன் மெய்யுணர்வு தலைப்படுமாறும், அது தன்னால் வீட்டுநெறி தலைக்கூடுமாறும் நன்கு வகுத்துக்கூறுதலின் மேற் கடாவுதல் என்கொலோவென்பது. இனி, மக்கள் என்போர் பண்டுதொட்டு ஒருங்கிருந்து கூடிவாழு மியல்பினராய்ப் போதருகின்றார். இவர் எக் காலத்தும் ஒருவர் ஒருவரை யறியாமல் தன்னந் தனியராய் வாழ்ந்திலர். ஆகவே, ஒருவர்க்கு ஒன்று வகுக்குங்கால் அவர்தாமே கைக்கொளற் பாலனவும், அவர் பிறர்மாட்டு நெருங்கி ஒழுகும் பொழுது மேற்கொள்ளற்பாலனவும் முறைப்படுத்துக் கூறுதல் வேண்டும். ஈண்டு அம்முறை வழாது ஆசிரியர் தாம் விளக்க வெடுத்துக்கொண்ட உறுதிப் பொருள்களுள் அறம் என்பது ஒருவன் தன் உள்ளத்தின் கண் மாசு இலனாதலும், பிறர்மாட்டு அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்னு நான்கு குற்றமுமின்றிப் பயன்பட ஒழுகுதலுமாம். “மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற” (குறள் 34) என்ற திருமொழி ஒருவன்றான் கைக்கொளற்பாலது இது வென்பதனை நுதலி யெழுந்தது. அதற்கடுத்த, “அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல் நான்கும் இழுக்கா வியன்ற தறம்” (குறள் 35) என்பது அவன் பிறர்பாற் பொருந்தி நடத்தற்கண் மேற் கொளற் பாலனவற்றை வகுத்தற் பொருட்டு எழுந்தது. இங்ஙனம் ஒருவன் இருதிறமும் பிறழாது ஒழுகல் வல்லுமாயின் அவற்கு அதனான் விளைவது பேரின்பம் என்று உணர்த்துவார், “அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில” (குறள் 39) என்றோதி யருளினார். இதனால், நல்லொழுக்கம் என்பது ஒருவற்கு முன்னே துன்பம் பயந்து பின்னர்ப் பேரின்பம் பயப்பதெனவும், தீயொழுக்க மென்பது முன்னே ஒருவற்கு ஒரு நொடியே நிலைவதான இன்பம் பயந்து பின்னர் பெருந் துன்பம் பயப்ப தெனவுங் கூறுதல் ஆசிரியர்க்குக் கருத் தாயிற்று. இவ்வாறே இக்காலத்து ஒழுக்கநூல் வல்லாரு முறைப்பது காண்க. கட்களவு இன்னாச்சொல் முதலியன வெல்லாம் ஒருவற்கு முதலிற் சிறுவரைத்தான இன்பம் நல்கிப் பின்னெல்லாம் அவற்குப் பேரிடும்பை விளைத்து வருதலும் இதுபற்றி யுணர்ந்து கொள்க. இனி, ஆசிரியர் இப்பெற்றிப்பட்ட அறத்தினியல்பை இருவகைப்படுத்து இல்லறந் துறவறமென வைத்து உணர்த்து கின்றாராகலின், அவை யிரண்டற்கும் பொதுப்பட அறத்தின் மாட்சி வலியுறுத்தற்கு அவற்றின்முன் அறன்வலியுறுத்தல் என்னும் ஓர் அதிகாரங் கூறுவாராயிற்று. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை என்னும் மூன்றதிகாரங்களும் நூன்முழுமைக்கும் மங்கலந்தரும் பாயிரவுரையாய் முன் நின்றன. ‘அறன்வலி யுறுத்தல்’ என்னும் அதிகாரம் வருபொருளுரைத்தல் என்னும் பாயிரவுரையாய் முன் நின்றது. இஃதுணராத பரிமேலழகியார் ‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்திற்குச் சிறிதும் இணக்கமின்றாக ‘அறத்தான் வருவதே யின்பம்’ என்பதற்கு, ‘இல்லறத்தொடு பொருந்தி வருவதே யின்பமாவது’ என்று உரையுரைத்தார். இது பொருந்தாமை அதிகார வாராய்ச்சி யுள்ளும் விரித்துக் காட்டுவாம். இனி, ஆசிரியர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டமாக இந் நூலியற்றுதற்குத் தொடங்கி அம்முறையே அவற்றை நிறுத்தக் கூறிய தென்னையெனின்;- மக்கட் சிற்றுயிர்க்கு நற்றுணையாவது அறத்தின் வேறின்மையின் அவ்வறத்தினையே விதந்துரைத் தற்குத் தந்திருவுளம் அமர்ந்த குறிப்புத் தோன்றவும், இது முழுவதூஉம் அறநூலே என்பது யார்க்கும் பொள்ளெனப் புலப்படவும் அறத்துப் பாலை முதற்கண் நிறுத்துவாராயினர். இனி, அவ்விருவகையறனும் நிலைபெறுதற் ஓர் இன்றியமையாக் கருவிப் பொருளாய் வருதல் பற்றிப் பொருட்பாலை அதன்பின் நிறுத்தினார். இனி, “அறத்தான் வருவதே யின்பம்” என்ப வாகலின் அறத்தின்பின் நிறுத்தற் பயத்தாம் இன்பம் பொருள் இல்வழித் தோன்றுதல் அருமைபற்றி அக்கருவியின் வழிவைத் தோதினாரென்க. இவ்வாறு காரணகாரிய வியைபுடைய அறம் இன்பமென்னும் மிரண்டனையும் பயத்தற் கருவியாய் அவற்றின் வேறாதல் இனிது விளங்கற் பொருட்டுக் காரணமாம் பொருளை இடையிட்டு மொழிந்தமையின் ஆசிரியர் பொருளின் மாட்சி நன்கு விளக்கியருளினாரென்று உணர்க. மாணிக்கவாசகப் பெருமானும் திருக்கோவையாரில் “முனிவரு மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்” எனத் திருவாய் மலர்ந்தருளினர். சிந்தாமணியுடையாரும், “அப்பொருள் துன்னுங் காலைத் துன்னாதன வில்லையே” என்று கூறினார். அறமே யமையும்; பொருளைத் தொடுதலும் வேண்டாமெனக் கூறும் பௌத்த நூலார்கோட்பாடு உலகநெறிக்கு ஒருசிறிதும் இயையாதாகலின், அதனை மறுத்து ஆசிரியர், “பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்” என்று உலகநெறியும் அகப்படுத்து விரிந்த நோக்கந்தான் அறவியல் விளக்கியருளிய நுட்பம் பெரிதும் பாராட்டற் பாலதாம். இனி, ஆசிரியர் அறத்தை இருவகைப்படுத்து இல்லற வியலை முதலினும் துறவறவியலை அதன்பின்னும் நிறுத்தி யருளினார். 1“அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலுந், துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின், விருந்தெதிர் கோடலும்” ஆகிய கடமை வழுவாது இல்லறவொழுக்கத் தின் கண்ணராய் நிலைபெற்று ஐம்புலன்களும் ஆரத்துய்த்துக் காமவின்பத்தில் உவர்ப்புத்தோன்றி, அறிவு முறுகித் துறவறத்தை மேற்கோடலே மரபாதலானும், அவ்வாறு மேற் கொள்ளப்படுந் துறவறவொழுக்கம் உறுதி மிகவுடைத்தாய் விடுதலைப் படுவித்தல் ஒருதலையாதலானும் இல்லறவியல் முன் வைத்து விளக்கப்பட்டது. புன்முதலான ஓரறிவுயிர் தொடங்கி ஆறறிவுடைய மக்களீறாக மன்னுயிரெல்லாம் ஆண்பெண் என்னும் இருபாற்கட்டு ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டு இன்பம் நுகர்ந்து போதுகின்றனவாகலின், இந்நுகர்ச்சிநெறி இறைவன்றன்னால் நிறுத்தப்பட்ட இயற்கையேயாகும். இவ்வியற்கையொடு பொருந்தத் துறவறம் நடாத்துதலே முறையாகலின் ஆசிரியர் கொண்ட மரபே நன்மரபாம். ஏனைப் புத்தர் சமணர் முதலாயினார் இல்லற வியற்கையொடு மாறு பட்டுத் துறவறமே மேம்பாடுடைத்தெனக் கூறுவதும், உலகாயதர் துறவறத்தோடு பெரிதும் முரணி இல்லறமே உறுதியுடைத் தெனக் கூறுவதும் பொருந்தாமை காட்டி, அவை யிரண்டற்கும் நடு நிகர்த்ததாம் ஒரு விழுப்பமுறையானே ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் அவையிருபாலும் ஒருங்குதழீஇ அவற்றின் கண் ஒழுகுமாறு இறைவன் வகுத்த முறையுணர்ந்து உரைத்தாராகலின், இதுவே எல்லாரானுங் கடைப்பிடித்துப் போற்றப்படுஞ் சீர்மை பெறலாயிற் றென்றறிக. இனி, இவ்வில்லறவியல் இருபது அதிகாரங்களுடைத்து. இதில் அன்பு, விருந்தோம்பல், இன் சொற்புகறல், பிறர்க்கு இன்னாசெய்யாமை, பொறை முதலிய அறங்கள் இனிது விளக்கப்படுதல் காண்க. இனித் துறவறவியல் பதின்மூன் றதிகாரங்கள் உடைத்து. இதன்கண் அருள், கொல்லாமை, பொய்யாமை, மெய்யுணர்தல் முதலிய அறங்கள் நன்கு விளக்கப் பட்டமை காண்க. அற்றேல், கொல்லாமை, பொய்யாமை என்றிவற்றை இல்லறவி யலின்கட் சொல்லாது துறவறத்திற்கே வரைந்து வைத்துரைத்தவா றென்னை யெனில்:- புன் முதலியனவும், எறும்பு ஈ என்றற்றொடக்கத்துயிர்களும் இறவாமைப் பாதுகாத்தொழுகல் இல்வாழ்வார்க்குக் கூடாமை யானும், இல்வாழ்வார்க்குக் கொலைத்தொழில் ஒரோவிடத்துக் குற்ற மாகாதென்பதற்கு ஆசிரியர், “நன்றாகு மாக்கம் பெரிதெனினும்” என்று கூறுதலே சான்றா மாகலானும், “பொய்துறந்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின்” என்று பரிமேலழகியார் தாமும் உரை கூறுதலானும் பயனில சொல்லாமை இவ்வறங்களெல்லாந் துறவறத்திற்கே உரியவாயின வென்றறிக. மக்களாற் செய்யலாகா தவற்றை வற்புறுத்தலாற் போதரும் பயன் சிறிது மின்மை யான், ஈண்டாசிரியர் அந்நுட்பம் மிக நுணுகி யறிந்து, அவரவர் நிலைக்கியைந்தவகையான் அறவுரை கூற ஒருப்பட்ட அருட்டிறத்திற்கு எம்போலுஞ் சிற்றறிவினார் யாது கைம்மாறு புரிய மாட்டுவார்? வட மொழி மிருதிநூல்கள் மக்கள்நிலையும் அந்நிலைக்குரிய ஆற்றலுஞ் சிறிது மோராது தமக்குத் தோன்றிய பல்வேறு வகைப் பயனில் ஒழுகலாற்றினைத் தொகுதி தொகுதியாகக் கூறிப் பின் அவற்றைக் கைக்கொள்வார் இல்லாதொழியவே வறியவாயின; நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தல் வேண்டுமெனக் கூறிய மிருதி நெறி எக்காலத்து எவரான் மேற்கொள்ளப் பட்டது? ஆசார காண்டத்தில் ஒருவன் வைகறையில் விழித்தெழுந்து இரவிற் கண்டுயில் கொள்ளச் செல்லும் அளவுஞ் செயற்பாலவென வற்புறுக்கப்பட்ட வினைகள் எக்காலத்து எவரான் தழுவப்பட்டன? என்றும் எவராலு மில்லையென்க. அற்றேல் அஃதாக, கொல்லாமை பொய்யாமை முதலிய அறங்கள் துறவோர்க்கே வரைந்து சொல்லுதலின், உயிர்களைக் கொன்று புலாலுண்டலும் பொய்த்தலும், இல்லறத்தார்க்கு ஆகுமோ வெனின்;- சிறிதும் ஆகாது. கொலைமை யுள்வழி உயிர்கள் மாட்டு அன்பு செய்த லாகாமையின் அன்புடைமை என்னும் அறம் வற்புறுப்பவே கொல்லாமை புலான் மறுத்தலென்னு மிரண்டும் இல்லற வொழுக்கத்திற்கு இன்றியமையாதன வென்பது தானே போதரும். நடுவுநிலைமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை என்னும் அதிகாரங்களால் பொய்யாமை யறம் இல்வழி அவை நடைபெறாமை திண்ணமென்பது புலப்படுதலின் அதுவும் அவ்வொழுக்கத்திற்கு இன்றியமையாததேயா மென்க. கொல்லாமை பொய்யாமை என்னும் அவ்விரண்டையும் துறவறத்திற்குப் போலச் சாலவும் போற்றி யொழுகல் இல்லற வொழுக்க முடையார்க்கு மாட்டாமை பற்றி அவை யங்ஙனம் வெளிப்படையாய் வற்புறுத்துக் கூறப்படவில்லை யென்றுணர்க. பொருட்பால் இனிப் பொருட்பாலுள் அறந்திறம்பா நெறியார் பொரு ளீட்டுமாறும், அது தன்னைப் போற்றித் தானுந்துய்த்துப் பிறர்க்கும் ஆர்த்துமாறுங் கூறப்படும். இது மட்டுமே கூற வேண்டியவர் அரச னீதி யுணர்த்தப் புகுந்த தென்னை யெனின்;- நாட்டின்கண் மெலியார் பொருட்டிரளை வலியார் கவராமல் நாடு வளம்படுத்து, வாணிகம் பெருகி நடைபெறச் செய்வித்து, நல்லார்க்குத் தீதுபுரியுங் கொடியாரை ஒறுத்து முறைசெய்யும் மன்னன் இல்வழிப் பொருள் கடைக்கூட்டுதல் ஆகாமையின் அரசனீதி கூறுவான் எடுத்துக்கொண்டா ரென்க. அப்பால், அரசியல், அங்கவியல், குடியியல் என்னும் மூன்று பகுப்புடைத்து. மூன்றாவது பகுப்பு ஒழிபியல் என்று பெயர் கூறப்பட்டதாலோ வெனின்;- அற்றன்று. அரசன் செங்கோல் நடாத்து முறையும், அவனுக்குத் துணைக் காரணமாம் அங்கங்களின் இயல்புங் கூறியபின், அவ்வரசனாற் பாதுகாக்கப்படுங் குடிமக்கட்கு உரிய ஒழுகலாறு சொல்லல் வேண்டுமாகலானும், ஆசிரியர் நூலியற்றுகின்ற காலத்துக் குடியியலென்றே பெயர் கூறினாரென்பதற்குப் போக்கியார் என்னுஞ் சங்கப் புலவர் பொருட் பாலியல் அதிகாரத்தொகை கூறுகின்றுழி, “அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துருவல் லரணிரண்டொன் றொன்கூழ்-இருவியல் திண்படை நட்பும் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை” என்று இதன் இறுதியிலுள்ள பகுதிக்குக் குடியியலென்று பெயர் கூறியவாற்றாலும் நன்கறியப்படும். அப்பெயரை மாற்றினார் பரிமேலழகியாரோ, அன்றி அவர்க்கு முற்பட்ட உரை யாசிரியரோ இன்னாரென்பது தெளியப்படவில்லை. போக்கியார் செய்யுளிற் காணப்பட்ட முறையானன்றிப் பொருட்பாலை மூன்று பகுப்பாக்கி யுரைசெய்தாரும் பிற்காலத்தவரே யாகலின், அவர் தம்மானே ‘குடியியல்’ ‘ஒழிபியல்’ என்று மாற்றப் பட்டது போலும் என்க. இனி, ‘அரசியல்’ இருபத்தைந்து அதிகாரத் தானும், ‘அங்கவியல்’ முப்பத்திரண்டு அதிகாரத் தானும், ‘குடியியல்’ பதின்மூன்றதிகாரத்தானும் வைத்து விளக்கப் பட்டன. இம்மூன்றியலுள்ளுங் கூறிய பொருளருமைகளை ஈண்டு விரிப்பின் அவை மிகப் பெருகுமாதலால் அதிகார வாராய்ச்சியுட் காட்டுதும். பொருட்பாலிற் கூறிய நீதிகள் சிறப்பு வகையால் அரசற்கே உரியவாயினும், பொதுவகையால் அவனாற் புரக்கப்படும் எல்லார்க்கும் உரியவென்பது பரிமேலழகர் களவியலிற் கூறியவாற்றால் துணியப்படும். இது கிடக்க. இனிக், காமத்துப்பாலில் எவ்வாற்றானுங் குறைபடுதலிலராகுந் தலைமகனுந் தலைமகளும் உழுவலன் பின் முதிர்ச்சியான உள்ளம் உருகி ஒருமையுற்று இன்பநுகர்தற் சிறப்புக் கூறப்படுகின்றது. இவ்வின்பம் அறத்தின் பயனாகத் துய்க்கப்படும் விழுப்பேறாகலின், அவ்வறம் இருவகைத் தாதல் போல இதுவும் இருவகைத்தாதல் வேண்டும். இல்லறத்தின் ஈடுபட்டு ஒழுகும் மனைக்கிழவனுங் கிழத்தியுந் துய்க்கும் இன்பநெறியும், துறவறத்தின் மேம்பட்ட அறவோர் இறைவன் றிருவடிப் பேற்றினைத் தலைப்பட்டுத் துய்க்கும் இன்பநெறியுமான இரண்டும் இவ்வியலின்கண் உணர்த்தப்படுகின்றன. இவற்றுள் இல்லறத்தின்வழித் துய்க்கப்படும் இன்பநெறி மாத்திரையே உரைகாரர் விளக்கினார்; ஏனையது இது கொண்டுணரப்படுதலானும், தெளிவுபெற விரித்து அறிவித்தற்கு அருமையுடைத்தாகலானும் அதனை விளக்கிற்றிலர். இவ்வாறே திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச் செய்த திருவாதவூரடிகளும் ‘அறிவன் நூற்பொருளும் உலக நூல்வழக்குமென, இருபொருளுநுதலியெடுத்துக் கொண்ட’2மையும், அவற்றுள் ‘உலகநூல்வழியின் நுதலிய பொருள்’ மாத்திரையே உரையுள் உரைக்கப்படுமென்பதும் ஆண்டுப் பேராசிரியர் இனிது விளக்கியருளினார். முதல்வன் திருவடிப் பேற்றின்கட் டோன்றும் பேரின்பமே தலைவி யாகவும், அவ்வின்பத்தினைப் பெறுதல்வேண்டிக் குறையிரக்கும் அறிவனுயிரே தலைவனாகவுங் கொள்ளப்பாற்று. இறைவன் றிருவடியே பேரின்பவுருவாகுமென்பது நச்சினார்க்கினியரது திருமுருகாற்றுப்படை யுரையானும், “தாட்டாமரைகாட்டித் தன் கருணைத் தேன்காட்டி” என அதனை உண்மையான் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தவாற்றானும் அறிந்துகொள்க. இனி, இக்காமத்துப்பால் களவியல், கற்பியல் என இரண்டு பகுப்புடைத்தாம். இவற்றுட் களவியல், ஏழதிகாரங்களுடைத்து. கற்பியல் பதினெட்டதிகாரங்களுடைத்து. இன்னும் இவ்ற்றின் பரப்பெல்லாம் அதிகார வாராய்ச்சியுட் காட்டுதும். இங்ஙனம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை யுறுதிப் பொருளுங் கருக்கொண்டு நிறைய நூற்றுமுப்பத்து மூன்றதி காரங்களிலே இயற்றப்பட்ட இவ்வரிய பெரிய நூலுக்கு, வடமொழி நான்மறையுள்ளிட்ட எந்நூலும் ஒப்பாகாதென்பது தோன்றப் பாரதம் பாடிய பெருந்தேவனார், “எப்பொருளும் யாரும் மியல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பரு-முப்பாற்குப் பாரதம்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்” என்று கூறினார். அடிக்குறிப்புகள் 1. சிலப்பதிகாரம் 2. பேராசிரியர், பாயிரவகவல் 5. ஆக்கியோன் வரலாறு இனி, இங்ஙனம் பிறவற்றிற்கில்லாப் பெருஞ்சிறப்புற்று, அருமை பெருமை மிகவுடைத்தாய் ஆன்றோர் ஒழுக்கநெறிக்கட் டலைநின்று விளங்கும் இத்தெய்வத் திருக்குறணூலின் ஆசிரியரான தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் வரலாறு ஒரு சிறிது உரைக்கப்படும். ஆசிரியர்க்கு வள்ளுவர் என்னும் பெயர் அவர் சாதி பற்றி வந்த தொன்றேயாம். வள்ளுவர் என்போர் பறையருட் குருமாராய்க் குறி சொல்லிப் பிழைக்கும் ஒரு வகுப்பார். இச்சொல் ‘வள்’ என்னும் முதனிலையிற் பிறந்து தோல் வினைஞர் என்னும் பொருட்டாம். வள்பு என்பது தோலிற் செய்த வாரை யுணர்த்துதல், “மாசற விசித்த வாருறு வள்பின்” என்னும் புறநானூற்றானும், “வள்பு தெரிந்தூர்மதி வலவ” என்னும் ஐங்குறுநூற்றானுங் கண்டுகொள்ளப்படும். வாரினால் இறுக்கிக் கட்டப்படும் பறையறிவிக்கும் வினையினைச் செய்வோர் வள்ளுவர் ஆவர். இங்ஙனம் பறையறிவித்தற்றொழிலுடையோர் பண்டைக் காலத்துப் பறையராயினது பற்றி அவர்க்கு வள்ளுவர் என்னும் பெயர் வழங்கியது எனவும், அவர் தம்முள் ஒரு சாரார் பிறர் தமக்கு நேரும் ஊழ்வினைப் பயன்களை நன்கறிந்துரைக்கும் அவ்வினையும் பின்நேர்வதனைப் பறை சாற்றி யறிவிக்குந் தொழிலோடு ஒப்புமை யுடைத்தாகலான் அவர்க்கே பின் அப்பெயர் சிறப்புவகையான் உரிமையுடைத் தாயிற் றெனவுந் துணியப்படும். கல்வியறிவு சிறிதுமில்லாப் பறையர்க்குட் கோள் நூற் புலமை நிரம்பிப், பிறர்வினைப் பயன்களை அளந்துரைக்கும் வள்ளுவர் அவரின் வேறாய் அவர்க்குக் குருமாராய் அமைந்து பாராட்டப் பெறுதல் இயற்கையேயாம்; இப்பெற்றியரான வள்ளுவரிற் சிறந்த ஒரு நன்மகனால் எடுத்து வளர்க்கப்பட்டது கொண்டு ஆசிரியர் வள்ளுவரெனப் பெயர் பெறுவாராயினர். இப்பெயர் ஆசிரியர்க்குச் சாதிபற்றி வந்ததென்பது, அவரோடு ஒரு காலத்தினரான மாமூலனார், “அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்” என்று கூறுமாற்றால் இனிது விளங்கும். இஃதுணராதார், ஆசிரியர் அரியபெரிய பொருள்களை உலகிற்கு வழங்கி யருளின வள்ளன்மை தோன்ற அவர்க்கு வள்ளுவர் எனும் பெயர் சிறப்பதாயிற்றென்பர். அச்சொல் அவர் கூறுமாறு வள்ளன்மைப் பொருள் குறிப்பதாயின் வள்ளல் என நிற்பதன்றி வள்ளுவர் என நில்லாமையின் அது பொருந்தாக் கூற்றாம். தொல்லாசிரியர் நூலுரைவழக்கில் யாண்டும் வள்ளுவர் என்னுஞ் சொல் வள்ளன்மைப் பொருள் தரக்காணாமையின், அச்சொல்லுக்கு யாங் கூறியதே உண்மைப் பொருளாதல் திண்ணம் என்க. தமிழ்க்கவிசரிதமுடையார் “வள்ளுவன் என்னுஞ் சொல்லிற்குக் கற்றுணர்ந்தவன் என்பது தாதுப்பொருள்” என்கிறார். வள் என்னும் பகுதியாலுணர்த்தப்படும் பலபொருள்களுட் கற்றுணர்தல் என்னும் பொருள் யாண்டும் பெறப்பட்ட வாறில்லை. வள் என்பது செழுமை என்னும் பொருளில் வருமாகலின் ஈண்டைக்கேற்பக் கல்விச் செழுமை என்று பொருள் உரைத்தலே எமக்குக் கருத்தாமால் எனின்;- அது பொருந்தாது. வள்ளென்னும் பகுதியே கல்விச் செழுமையினை உணர்த்தாது; அது விகுதி முதலிய உறுப்புகளோடு இயைந்து ஒரு சொற்றொடரில் இணைந்து நின்றுழித் தந்த பொருளுக்கு இணங்க ஓரோவோரிடத்து அப்பொருளுணர்த்துதற் கமையும், இனி, அஃதங்ஙனமுணர்த்துவதும் பம், அம் எனும் விகுதிகளொடு புணர்ந்து வளப்பம், வளம் என நிரம்பிய வழிச் சொல் வளப்பம், கல்விவளம் என்னும் பொருளுணர்த்து தற்கு ஏற்பதாம். வள்ளுவர் எனுஞ் சொல்லிற் பகுதிக்கு வேறு பொருளுண்டென்பது முன்னரே காட்டினாமாகலானும், விகுதி முதலியன வேறுபட்டமையானும் இதற்கு அப்பொரு ளுரைத்தல் சாலாதென்க. இன்னுமப் பொருள் பொருந்தா தென்பதற்கு அவர் காட்டிய மேற்கோள்களே அமையுஞ் சான்றாம். இது கிடக்க. இனி, ஆசிரியர் பிறப்புவரலாறு சிறிது காட்டுதும்: இவர் தந்தை பகவன் என்பதும் தாய் ஆதியென்பதும் தொன்றுதொட்ட வழக்காய் அறியப்படுகின்றன. இவர்தம் இளவலான கபிலரால் அருளிச் செய்யப்பட்ட அகவலில், “அருந்தவ மாமுனி யாம்பக வற்கு1 1இருந்தவா ரிணைமுலை யேந்திழை மடவரல் ஆதி வயிற்றினி லன்றவ தரித்த கான்முளை யாகிய கபிலனும் யானே” எனப் போந்தபகுதியானும் இவ்வுண்மை யினிது புலப்படும். இவர் தந்தைக்கு யாளிதத்த முனிவர் என்னும் வேறுமொரு பெயர் உண்டென்று ஞானாமிர்தத்தில் ‘அறப்பயன்றீரின்’ என்னும் அகவலில், “யாளி, கூவற்றூண்டும் ஆதப் புலைச்சி காதற் காசினி யாகி மேதினி இன்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே” என்பதற்கு விரிந்த “யாளிதத்தமுனிவன் தனக்கு விகிர்தமாய்த் தன்னாலே வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட அறிவில்லாத சண்டாளப் பெண்ணை, ஓர் பிராமணன் எடுத்துக் கொண்டுபோய் உத்தர பூமியிலே வளர்த்துப் பின்பு இவனுக்கே கொடுக்கச் சினேகத்துக்குக் கிருப்பிட மானவளாய்ப் பிராமணியாய்ப் பூமியிலே நிற்கும் இனிய கீர்த்தியை யுடைய கபிலருள்ளிட்ட ஏழு பிள்ளைகளையும் பெற்றனளன்றோ இவ்விடத்திலே” என்னும் பழையவுரையால் நன்கு தெளியப் படுகின்றது. இன்னும் இதனானே, அவ்யாளி தத்தமுனிவர் துறவொழுக்கத்திலே நிலைபேறுற்று விளங்கினா ரென்பதூஉம், இவர் தாம் துறவு நடாத்துகின்ற விடத்துப் பணிப்பெண்ணாய் இவரிட்ட ஊழியஞ் செய்து கொண்டிருந்த ஒரு புலைப்பெண், தன் அறியாமையினால் இவர் மிக வெகுளுமாறு ஏதோவொரு பிழைசெய்ய, அதனால் இவர் அவளைக் கிணற்றில் அடித்து வீழ்த்திப் போயினாரென்பதூஉம், அதன்பின் அக்கிணற்றருகே சென்ற ஒரு பார்ப்பனன் அவளை யெடுத்துக்கொண்டு வடநாடு சென்று சிறக்க வளர்த்துப் பின்னுந் தெய்வச் செயலாய் தன்மாட்டு வந்த அவ்யாளி தத்தருக்கு இவளை மணம் புகுத்த, இவளும் அவர்க்கினிய மனையுரிமைக் கிழத்தியாய் அமைந்து கபிலர் முதல் எழுவரைப் பயந்தாளென்பதூஉம் தொகுத்துரைக்கப்பட்டவாறு காண்க. இதன் கண் இவளை ‘ஆதப்புலைச்சி’ என்றே மொழி யடுத்து வழங்கினமையின், அப்புலைப்பெண் மகளிர்க்குரிய நால்வகைக் குணங்களில் அறியாமைக் குணம் மிகப் பெற்றிருந்தா ளென்றும், அவட்குரிய அவ்வறியாமைக் குணம்பற்றியே ‘ஆதி’ எனக் காரணக்குறியடுத்துப் பெயர் வழங்கினாரென்றும் உணர்க. ‘ஆதம்’ என்பது ‘அறியாமை’ என்னும் பொருட்டாம்; ஆதமுடையாள் ஆதி என்க. மகளிர்க்குரிய கள்ளங்கவடு முதலிய விரகறியாது வெள்ளைமையுடைய உள்ள நலம் உடையரா யிருந்தது பற்றி இவர் தம் சிறப்பறியாப் பித்தவுலகினர் ‘அறியாதவள்’ என்னும் பொருள்பட உலகன்னை யாவாரை ‘ஆதி’ எனப்பெயர் வழங்கினர். தீயசொல்லுந் தீயவொழுக்கமுந் தீதுடை நெஞ்சமும் இலராயின்மையின் அன்றே இவர் பயந்த மக்கள் எழுவரும் பெருந்தகையாளராய் விளங்கி உலகை நன்னெறிப் படுத்துவாராயினர். இனி, இவர் தந்தை அறவொழுக்கத்திற்றலை நின்று மேதகு குணங்களாற் பொலிந்தனராயினும் பிறர் பிழை கண்டவழிப் பொறாது மிகுவெகுளும் இயல்பினரென்பது. இவர், சிறு பருவத்தினளாய் அறியாமையிற் பிழைசெய்த அப்புலைப் பெண்ணைக் கிணற்றில் வீழ்த்தினமையானே நன்கு துணியப் படும். நல்ல ஒழுக்கத்திற்றாம் ஒரு சிறிதும் வழுவுதலில்லார் பிறர் பிழைகண்ட வழிப் பொறாதுவெகுண்டு அவரை ஒறுப்பர். அவ்வாறு தமக்குச் சடுதியில் அவர்மேல் எழுந்த வெகுளியால் அவரை ஒறுப்பராயினுந், தமது வெகுளிமாறிய மற்றை நேரத்தே தாம் ஒறுத்ததனால் அவர் வருந்துவது கண்டு மிக இரங்குவர். இத்தகையதோர் இயற்கை மிகப் பெரியாரிடத்தே பெரும்பாலுங் காணப்படுகின்றது. கொடுந்தொழில் புரிதலே தமக்கியற்கை யாகவுடைய கயவர் இங்ஙனம் ஒருவர்க்குக் கதுமெனத் தீங்கு இழையார்; மிக ஆய்ந்து தீங்கியற்றிப் பின் அது பற்றி ஒரு சிறிதும் இரங்குவதில்லாக் கன்மனம் உடையராவர். திருவள்ளுவனார் ‘பொறையுடைமை’ எனும் அதிகாரம் வரையும் பொழுதும். “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” (குறள் 29) என்னுந் திருக்குறட்பா வருளிச் செய்யும்பொழுதுந் தந் தந்தையார் வெகுட்சியினையும், அவர் தந் தாய்க்கு இழைத்த கொடுமை யினையும் நினைந்து எழுதினாரென்று கோடல் இழுக்காகாது. இவர் தந் தமக்கை ஒளவையாரும், “விற்பிடித்து, நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்” என்ப துரைத்துழித் தந்தையை நினைந்தாரென்பது குற்றமாகாது. இனி, அப்பகவன் என்பவர் ஆதியை மணந்த பின்றை ஓர் ஊரிலேயே நிலைபெறுவதின்றிப் பலப்பல வூர்கட்குஞ்சென்று ஆங்காங்குச் சின்னாள் தம் மனைவியுடன் உறைந்தனர். ஆழ்ந்த அறிவுடையார் ஒரேயிடத்தில் நிலையாக விருத்தற்கு விரும்பார். ஒரே வகையான பொருட்களை நாடோறும் காண்டலில் மிக வெறுப்புக்கொள்வர். பலவயிற்சென்று பல நிலவளங்களையும், உலக இயற்கைத் தோற்றங்களையும், ஆங்காங்கு உறைதரும் மக்கள் ஒழுகலாறுகளையுங் கண்டு கண்டு அவற்றின் கண்ணெல்லாம் இறைவன் அருளும் அறமும் விளங்கப் பெறுதலை நினைந்து வியந்து இன்புறுவர். இங்ஙனமே இப்பகவன் என்பவர் பலநாடுகளுந் திரிந்து உலகியலறிவின் முதிர்ச்சிப் பேற்றால் திண்ணிய நுண்ணறிவு வாய்ப்பப் பெற்றமையான் அன்றே, இவரைத் தெள்ளிவடித்த தேறலாய்ப் பிறந்த திருவள்ளுவனார் உலகவியல் முற்றும் ஒருங்குணர்ந்து நூலருளிச் செய்வாராயினர். இங்ஙனம் பகவனும் ஆதியும் ஊற்றுக்காடு என்னும் ஊரில் வைகி வாழ்ந்து வருகையில் அவர்க்கு உப்பை என்னும் ஒரு பெண் மகவு பிறந்தது. அதனை ஆங்குச் சின்னாட்போற்றி வளர்த்துத் தாமிருந்த இல்லத்தருகேயுள்ள அகத்தில் வண்ணார் தமக்குப் பிள்ளைப்பேறின்றி வருந்துதலைக் கண்டு இரங்கி, அவர்க்கு அதனை ஈந்து, பின் அவர் காவிரிப்பூம் பட்டினஞ் சென்று ஆங்கிருந்தனர். அங்கிருக்கையில் உறுவை, ஒளவை என வேறிரு பெண்மகப் பிறந்தன; அம்மகாரையும் மகப்பேறின்றிக் குறையிரந்த கள் வினைஞராகுஞ் சான்றார்க்கும். யாழ் இசைக்கும் பாணர்க்குமாக முறையே நல்கிப் பின் அவ்விருவருங் குறவர் தம் உறையுளான ஒரு மலைச்சாரலிற் சென்று வைகினர். ஆங்கிருக்கையில் வள்ளி என்னும் மற்றுமொரு பெண் பிள்ளை பிறந்தது; அம்மலைத் தலைவனான குறவன் தனக்கு மகப் பேறின்மையால் வருந்துதல் கண்டு அவனுக்கும் அப்பிள்ளை யினை நல்கி, ஆண்டு நின்றும் பெயர்ந்து தொண்டைமண்டிலஞ் செய்த பெருந்தவப்பயனால் அவர் இருவருந் திருமயிலாப்பூர்க்கு வந்தனர். அங்கு அவர் வாழ்க்கையில் அவராற்றிய தவப்பயனெல்லாம் ஓர் உருவாய்த் திரண்டு கொழுந்தமிழ் மணங்கமழுந் திருவாயும் அருள் துளும்பும் பொறை நோக்கமுமுடையதாய் வந்தாலென்ன ஓர் ஆண்மகப் பிறந்து இளவளஞாயிறெனப் பிறங்கிற்று. இவ்வரிய பிள்ளை வளர்ந்த பின்றை யுலகத்தார் திருவள்ளுவர் என்னும் அருந் திருப் பெயரிட்டு வழங்கி மகிழ்ந்தனர். பின்னர் அவர் அவ் விடம் விட்டுப் பெயர்ந்து வஞ்சி நகரஞ் சென்று இருப்புழி அங்கு மற்றுமோர் ஆண்குழவி பிறந்தது. அதனை அவ்வூரிற் பெருந்திரு வாழ்க்கை யுடையவனாய்ப் பிள்ளைப் பேறின்றி வருந்திய அதியமான் என்பவற்குக் கொடுத்துப் போயினர். அதியமானால் வளர்க்கப்பட்டமையின் அப்பிள்ளை அதியமான் அஞ்சி யெனப் பெயர் வாய்ந்து வள்ளற்றன்மையில் வயங்கிற்று. அவர் பின்னர்த் திருவாரூர் சென்று உறையும் நாளில் செந்தமிழ் செய்த தவப்பெருமையால் கபிலன் எனப் பெயரிய மகப்பிறந்ததாக அவனை அவ்வூரில் ஓர் அந்தணர் கையின் நல்கிச்சென்றார். இவையெல்லாங் கபிலர் தாமே கூறிய, “என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில் ஆண்பான் மூவர் பெண்பால் நால்வர்; யாம்வளர் திறஞ்சிறி தியம்புவல் கேண்மின் ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்; காவிரிப்பூம் பட்டினத்திற் கள்வினைஞர் சேரியிற் சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்; நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியிற் பாண ரகத்தில் ஒளவை வளர்ந்தனள்; குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்; தொண்டை மண்டிலத்தில் வண்டமிழ் மயிலையில் நீளாண்மை கொளும் வேளாண் மரபுயர் 2துள்ளுவ ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்; அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி அதியமா னில்லிடை யதியமான் வளர்ந்தனன்; பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில் அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.” என்னும் வரலாற்றினால் இனிது பெறப்படுவனவாம். இங்ஙனம் ஆதிபகவ ரிருவருந் தம் மக்களை இரந்து வேண்டினர்க்கு வழங்கிப்போயினும், அவர்களெல்லாரும் பருவமுதிர்ந்த பின்றை அவர்களைப் போய்க்கண்டு அவர்க்குத் தாம் தாய்தந்தைய ராதலும் அவர் பிறந்த வரலாறும் உணர்த்தி வாழ்ந்தன ரென்பது உய்த்துணரப்படும். என்னை? இவ்வாறு அவர்தம் மக்கட்குப் பிற்றை நாளில் அறிவுறுத்திலராயின், குழவிப் பருவத்தே பிறர்க்கு ஈந்திடப்பட்ட கபிலர் பின்னர் தந் தாய் தந்தையரும் உடன் பிறந்தாரும் இன்னாரென்பதும் அவர் வரலாறுங் கிளந்துரைத்தல் முடியாதாகலின் என்க. இனிக் கபிலர் வளர்ப்புத்தாய் தந்தையர்க்கு ஆதிபகவர் விரித்துரைத்த தம் வரலாற்றினைப் பிற்றை ஞான்று அவர் அவர்க்குத் தெரித்தனர் என்பார்க்கு, ஆதிபகவர் தாம் பயந்த மக்களை வழிநாட்களிற் கண்டு மகிழாத வன்கண்மை யுடையராயினார் என்று சொல்லல் வேண்டுதலின் அது குற்றமாம் என்க. இனி, இவ்வகவல் எளிய தமிழ் நடையில் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அதன் பொருட் பெருமை உணர மாட்டாதார், இது கபிலர் இயற்றியதுதானா வென்று ஐயுறுவர். கபிலர் தமக்கு அவர்தம் வளர்ப்புத் தாய் தந்தையர் பூணூல் பூட்டுகின்ற ஞான்று ஆண்டுக் குழுமிய பார்ப்பன மாக்கள் இவர்க்கு அது செய்யலாகாதென்று தடுத்த வழி, அவர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டு இவ்வகவல் அவரால் அருளிச் செய்யப்பட்டது. செந்தமிழ்ப் புலமை நிரம்பாத அப் பார்ப்பனக் குழுவில் திரிசொற் புணர்த்தி அதனை அருளிச் செய்தனராயின் அவர் சொல் ஆண்டைக்குப் பயன்படாதா யொழியும். இஃதுணர்ந்து இனிய செந்தமிழ் இயற்சொற்களாற் பெருந்தன்மையான செய்யுள் நடையிலே அறப் பொருட்டுறைகளை விளங்க அமைத்து அறிவுறுக்க லாயினர். பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய வற்றிலுள்ள கபிலரின் செய்யுள் நடைக்கும் இவ்வகவல் செய்யுள் நடைக்கும் பெருமைக்குணம் ஒரு தன்மைப்பட ஊடுருவி நிற்றல் அறிவுடையார்க்கெல்லாம் புலப்படும். நடை எளிமை அருமைபற்றி ஒருவரே இயற்றிய செய்யுட்களை வேறு வேறென்றல் அறிவிலார் கூற்றாம். அவ்விருவேறு நடையிலும் ஒத்து நிகழுங் குணமும் பொருளமைதியுமே ஆக்கியோனை யறிதற்குக் கருவியாவனவாம். இம்முறை வழுவாது கடைப் பிடித்துணரவல்லார்க்கு அறிவியல் நுண்பொருள்களைத் தெள்ளிய செந்தமிழ் இயற் சொன்னடையில் விளக்க எழுந்த கபிலரகவல் கபிலர்க்கே உரியதாதல் தெற்றெனப் புலப்படும். “இன்புறு நாளுஞ் சிலவே யதாஅன்று துன்புறு நாளுஞ் சிலவே யாதலாற் பெருக்கா றொத்தது செல்வம் பெருக்காற் றிடிகரை யொத்த திளமை யிடிகரை வாழ்மர மொத்தது வாழ்நா ளாதலால்,” எனவும், “உயிரினை யிழந்த வுடலது தன்னைக் களவு கொண்ட கள்வனைப் போலக் காலு மார்த்துக் கையு மார்த்துக் கூறை களைந்து கோவணங் கொளுவி ஈமத் தீயை எரியெழ மூட்டிப் பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப் போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்.” எனவும், “திருவும் வறுமையும் செய்தவப் பேறும் சாவதும் வேறிலை தரணி யோர்க்கே குலமு மொன்றே குடியு மொன்றே இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே வழிபடு தெய்வமு மொன்றே யாதலான் முன்னோ ருரைத்த மொழிதவ றாமல் எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்து நிலைபெற வறத்தின் நிற்பதை யறிந்து ஆணும் பெண்ணு மல்லதை யுணர்ந்து பேணி யுரைப்பது பிழையெனப் படாது சிறப்பும் சீலமு மல்லது பிறப்புநலந் தருமோ பேதை யீரே.” எனவும் போந்த அவ்வகவற் பகுதிகளைத் தமிழறிவுடைய எவர்தாம் கபிலருடைய வல்லவென மறுக்க முந்துவார்? இவற்றின் செந்தமிழ் நடையருமையினையும் பொருட்பெருமை யினையும் வியவாதவர் தமிழறிந்தவ ரெனப்படுவரோ? தமிழ் நாவலமுடையீர் கூறுமின்! இனித், திருமயிலையிற் பிறந்த ஆண்மகவை, ஆதிபகவர், ஆண்டுத் தம்மாட்டு மிக அன்புடையனாய் ஒழுகிய வேளாளத் திருமகன் ஒருவன் மகப்பேறின்றி உளம் புழுங்குதல் கண்டிரங்கி அவற்கே அதனை ஈந்து போயினார். அவ்வரிய ஆண்மகவைப் பெற்ற அவ்வேளாண்டிருமகன் அதனைப் பொன்போற் பொதிந்து போற்றுகின்ற நாளில், அவன்றன் உறவினர் பலரும், ‘யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற்றுப் போட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார்; இஃதென்னை?’ என்று பழி கூறுவாராயினர். அது கண்ட அத்திருமகன் மிகவருந்தி அம்மகவைப் பிரிதற்காற்றனாய்த் தன் விளைபுலத்தின் உழவு தொழில் செய்யும் பறைக் குடும்பத்திற்குக் குருவாய் உள்ள வள்ளுவனை அழைத்து அவன் கையிலதனை ஈந்து ‘இதனைப் போற்றி வளர்க்க’ என்றுரைத்துப் பெரும் பொருட்டிரளும் நல்கினான். அரிய விழுப்பேறாயுள்ள அம்மகவையும் பொருட்டிரளையும் பெற்றுக் கொண்ட அவ்வள்ளுவன் தன் றவப் பெருமையை மிகவியந்து மகிழ்ந்து அம்மகவைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வருவானாயினன். இங்ஙனம் வள்ளுவனாற் போற்றி வளர்க்கப்படுதலின் வள்ளுவப் பிள்ளை எனப் பலரானும் அழைக்கப் பெற்ற நம் ஆசிரியர் பருவம் முதிருந்தோறும் இயற்கைச் செவ்வறிவும், நூற்புலமையுங் கலைமதியென ஒருங்கு நிரம்பி விளங்கினார். தாங் கட்டிளமைப் பருவம் எய்து முன்னரே எல்லாம் வல்ல அருந்தமிழ்ச் செந்நாவன்மை முற்றப்பெற்று அருளிரக்கம் பொறுமை முதலிய குணமாட்சியாற்றிகழப் பெற்றார். பிற்றைஞான்று தம்மைக் காணப் போந்த ஆதிபகவரென்னும் பெற்றோருடன் அளவளாவி அவராற்றம் பிறப்பு வரலாறு முழுதுந் தேர்ந்து, தம்மைப் பெற்றாரிடத்தும் வளர்க்க வெடுத்த வேளாண் டிருமகனிடத்தும், வளர்த்து வந்த வள்ளுவனிடத்தும் பேரன்பும் பெருநன்றியும் பாராட்டினார். உயர்குண வொழுக்கங் களாற் சிறந்த தந் தந்தையார் புலைச்சியை மணந்தாரெனவும், தன்னைக் குழவிப் பருவத்தே வளர்க்க எடுத்த வேளாளன் இழிந்த அகதிப் பிள்ளையை ஏற்றமையாற் குலமிழிந்தான் எனவும், தம் வளர்ப்புத் தந்தை கல்வி யறிவு ஒழுக்கங்களாற் சிறப்புற்றிருந்துங் குலவிழிவு குறித்து அவனைத் தொடுதலுமாகா தெனவும் வையத்தார் பழியுரை மொழிந்து அலக்கணுறுவது அறிந்து அவர்க்கு மிக இரங்கினார். “என்னை! மக்களும் பிறவுயிரும் இறைவன் திருவருள் வெள்ளத்திற் கிடந்து அதனைப் பருகி ஆக்கம் எய்தும் அவன் மக்களேயல்லவோ! அவன் அருட்டிருவை எய்துதற்கு உரிமையுடையரான இவர், தம்முள் வேற்றுமை கொண்டு சினம், பொறாமை, கொலை முதலிய தீய செயல்களைச் செய்து இடர்ப்பட்டு மக்கட் பிறவிப் பயனை இழந்து போகின்றனரே! இறைவன் திருவருட் பேரொளி ஒவ்வோர் அணுவினும் என்பில்லாத புழுவினும் ஊடுருவி நிறைந்து துளும்புகையில், இவ்வுயிர்கள் தம்முள் எவை உயர்ந்தன? எவை தாழ்ந்தன? பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒக்கும் அன்றே? உயிர்கள் தாம் முதல்வனுக்குப் புதல்வர்களாம் அருமையை உணராமையினன்றோ தம்மை மேலாகவும் பிறரைக் கீழாகவும் நினைக்கின்றனர்? உள்ளம் உருகி அன்பினால் ஒருமைப்படுவாராயின் தம் என்பையும் பிறர்க்கு உதவி அவரை இன்புறுத்துவர். அவ்வன்பு இல்வழித் தாமே நலம் பெற வெண்ணுவர். ஒருவன் தன்னை உயர்வாகவும் பிறரை இழிவாகவுங் கருதுமிடத்துத் தான் செருக்குற்று அவர்பால் அன்பிலனா கின்றான். தன்னிற்றாழ்ந்தோன் கல்விப்பேற்றான் நன்கு மதிப்பு எய்துகின்றுழி அவன்மேல் அழுக்காறு எய்தி அவனைத் தாழ்த்துதற்கு வேண்டுந் தீச்செயல்கள் புரிய மனம் ஒருப்படு கின்றான். என்னே! என்னே! உடம்பினோடு அழிந்து போவதாய் வெறும் போலியாயுள்ள குலவேறுபாடு ஒன்றே பலவகைத் தீங்குகளையும் பயப்பிக்கின்றது!” என நம் ஆசிரியர் மிக ஆழ்ந்து நினைந்து, தம்மைப் புடைசூழ்ந்த மாணவர்க்கும் பிறர்க்கும் மக்கள் தம்முள் ஏற்றத் தாழ்வு கருதாது எய்தற் பாலதாம் மனவொருமைப்பாட்டை நன்கு விரித்து உரை நிகழ்த்துவாராயினர். ஆசிரியர் நெஞ்சம் நெகிழ்ந்துருக அருள்வழியராய் நின்று விரித்துரைத்த அருமையுரைகள் யாண்டும் பரவலாயின. மிக இழிந்த குலத்திற் பிறந்த யாரோ வள்ளுவப் பிள்ளையொருவன் மிகச் சிறந்த புலமை யுடையவனாய்த் திகழ்கின்றான் என்பது கேட்டார் பலரும் பல நாடுகளிலிருந்துந் தொகுதி தொகுதியாக வந்து இவரைக் காண்டற்குக் குழீஇயினார். பலதேயங்களிலுள்ள அறி வுடைய நன்மக்களும் ஆசிரியர் அறவுரைகளைக் கேட்டு உய்தற்பொருட்டுப் போதருவாராயினார். ஆசிரியர் அவர் தம்மையெல்லாம் அருள் துளும்புங் கடைக்கண்ணால் விழைந்துநோக்கி, “அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல்போர்த்த உடம்பு” என்னுங் குறட் பொருளை விளங்க அறிவுறுத்துதற்குப் புகுந்து, “அன்பர் காள்! நம்முடைய உயிரினுட் சாரமாய் அதற்கும் ஓர் உயிராய் நிலைபெறுவது அன்பு என்று அறிதல் வேண்டும். அன்பு உயிரின்கட்டோன்றும் இறைவனது அருள் விளக்கம் ஆகும். அவ்வருள் விளக்கத்தை உணர்வு சலியாது தம்மகத்தே அறிவுக் கண்கொண்டு விளங்க அறிந்து, அஃது எல்லாவுயிர் கண்மாட்டும் உயிராய்ப் பொலிதரும் நன்முறையும் உணர வல்லிரேல் அறியாமையின் உயிரைப்பற்றி வருகின்ற துன்பங் களெல்லாம் ஒருங்கே விலகும். அன்பு இல்வழி எல்லா உயிர்களும் உயிர் ஒழியப்போன வெற்றுடம்புகளேயாம். புழுத்தழியுந் தசைப்பிண்டங்களான அவ்வுடம்புகள் தம்முள் வேறுபாடு கற்பித்துக்கொண்டு அறமல்லவற்றை ஈட்டி மக்கட் பிறவிப்பயன் இழத்தல் நம்மனோர்க்குச் சிறிதும் பொருந்தாது. எல்லா வுயிர்களையும் நும் உயிர்போற் போற்றுமின்! ஓர் உயிர்க்கும் நும் மனத்தானுந் தீங்கு நினையன்மின்! நும்முடைய ஊன்பிண்டம் பெருக்கற்குப் பிறவுடம்பினைச் சிதைத்து உண்டல் ஒழிமின்! மன வொருமையின்றிக் கணக்கிறந்த பொருளை அழித்துக் கணக்கின்றிப் பல விலங்கினங்களை அறுத்து ஆரியர் செய்யும் வேள்வித் தொழிலிற் கருத்தினைப் புகுதவிடேன்மின்! நும்மால் இயன்றளவு பிறர் துயர் எய்தக் கண்ட வழி அது துடைத்தற்கு வேண்டும் உதவியினை விரும்பிச் செய்ம்மின்! இரப்பவர்க்கு இல்லை என்னாதீர்! ஒருவர் செய்ந்நன்றியினை மறவாதீர்! செய்ந்நன்றி மறத்தலின் மிக்கபாவம் இல்லை! ஒருவர் தீது செய்யினும் அதனை மறந்து அவர்க்கு நன்மையே செய்ம்மின்! பிறர் அறியாமையாற் செய்யும் பிழைகளைப் பொறுமின்! அப்பொறையால் அன்பு முதிரப்பெற்று நும் உயிர் உடம் பெல்லாம் அவ்வன்பமிழ்தம் புரைகடோறும் நிறையப் பெறுவீர்! அதனான், நும் உடம்பும் உயிருந் தமக்குள்ள வாலாமை நீங்கித் தூய்தான அவ்வன்புருவாய்த் திரிந்து பொலிகுவிராதலால் நீவிர் இறைவனுருவேயாதல் திண்ணம். இறைவன் நும்மின் வேறாகான்; இறைவனின் நீவிர் வேறாகீர்! எல்லாம் அன்புருவாம்; எல்லாம் இன்புருவாம்” என்று கேட்போர் உள்ளங் கரையக் கரைய விரித்துரைப்பர். கேட்போர் பேரின்பப் பெருக்கில் முழுகினாற்போலப் பேரறிவு விரிதரப்பெற்று நம் ஆசிரியரைப் பிரிதற்கு இசையாது பலநாள் அவரோடு உடன் உறை வாராயினர். தமிழ்நாடெங்கும் ஆசிரியர் அருமை பெருமை விரைவில் விரிதரலாயின. தமிழ் நாடெங்குமுள்ள தக்கார் அனைவரும் ஆசிரியர் அருளுரையமிழ்தம் பருகுதற் பொருட்டுக் குழாங்கொண்டு போந்தனர். தம் அறிவுரை கேட்டு உய்தற்கு வந்தோர் ஒரு நீரரின்றி, இல்லற வொழுக்க முடையாரும், துறவற வொழுக்க முடையாரும், அரசியல் வழிப்பட்டோரு மாயிருந்தனர். அவரையெல்லாம் அன்பு நெறியிற்படுத்து நாடோறும் அறிவு கொளுத்துதற் பொருட்டுத் தாம் கூறவெண்ணிய நுண்கருத்துக்களை யெல்லாம் அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பகுத்து ஒவ்வோர் அறப்பொருளையுஞ் சுருங்கிய பத்துத் திருக்குறளால் விளக்கி ஒவ்வோர் இயலாக்கிச் செந்தமிழ் நங்கையும், செந்தமிழ்ப்புலவரும், செந்தமிழ் நாடும் ஆற்றிய அறத்தின் பயன் எல்லாம் ஒருவழித் திரண்டெழுந் தாலென்ன, நூற்றுமுப்பத்துமூன் றதிகாரங்களிலே அரிய பெரிய தெய்வத்திருக்குறணூல் அருளிச்செய்திட்டார். இவ்வரிய பெரிய நூற்பொருளையே ஆசிரியர் யாண்டும் விரித்து விளக்கு தலின் உலகம் நல்லொழுக்கத்திற் றலைப்பட்டுப் பிழைத்தது. இங்ஙனம் ஆசிரியர் அறவுரை செய்தருகின்ற ஞான்றுத் தொக்க பெருந் திருவாளர் தம் பொருட்டிரளையெல்லாம் ஆசிரியர் திருவடியிற்கொண்டு உய்த்தவளவில், அவர் தாம் ஐம்புல அவாவுந் துவரத்துறந்த பெருநீர்மை யுடைமையால், அதனைப் பகுத்துப் பல்லுயிர்க்கும் பலவகையான் வழங்கி ஓம்புதன் மேற்கொண்டு, தாம் தம் ஆள்வினையால் தமக்கு உணவு தேடிக்கொள்வர். எல்லாத் தொழிலினும் பாவமில்லாதது நெய்தற்றொழில் ஒன்றேயாகலின் தமக்கு வேண்டுமளவே அரைப் பணத்திற்கு நூல் வாங்கித் திறம்பட நெய்து, நெய்த ஆடையை ஒரு பணத்திற்கு விற்று, அதில் ஊதிய அரைப் பணத்தால் உணவுண்டு. மற்றை அரைப் பணத்தை முதலாக வைத்துக் கொள்வர். பிறர்பால் இரந்துண்டு துறவு நடாத்துவார் போலாது ஆசிரியர் மடிந்திராது தாமே முயன்று தமது திருமேனி யோம்பிய ஆள்வினையுடைமை துறவொழுக்கமுடையார்க்கு ஒரு நன்முறையாய் வியக்கப்படுதல் காண்க. ஆசிரியர் மிக விரிந்த வளங்கள் தொகுத்து இனிது காலங் கழித்தலை விழையாது, சுருங்கிய செலவால் வேண்டுந் துணையே வாழ்க்கை நடாத்தினா ரென்பதற்கு, அவர் அருளிச் செய்த “ஆகாறளவிட்டிதாயினுங் கேடில்லை, போகாறகலாக் கடை” என்றோதுதலே சான்றாதல் காண்க. இவரருமைத் தமக்கையார் ஒளவையும் இங்ஙனமே வாழ்க்கை நடாத்தினா ரென்பது, “உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம்” என்றோதினமையால் நன்கு துணியப்படும். இனி, இவ்வாறு ஆசிரியர் ஒழுகுகின்ற காலையில் இளமைப் பருவம் நிரம்பிற்று. இவர் இளமைப் பருவத்துண்டாம் ஐம்புலக் குறும்புகளையும் ஆமை தன்னுறுப்பினை அடக்குமாறுபோல இடர் புகுதாமல் ஒடுக்குவர். தம்மொடு தலைப்பெய்த தக்காருடன் அறிவியற்கையினையுங் கல்விச் சிறப்பினையும் எடுத்துப்பேசி அவர்க்கெல்லாம் அவற்றின் மெய்ப்பொருள் காட்டுவர். தம்முடம்பிற்கு உணவூட்டு தலையுங் கல்வி கேள்விகள் முடிந்த பின்றையே நோக்கினா ரென்றற்குச், “செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கு மீயப்படும்” என்றருளிச் செய்தமையே சான்றாகும். இவர் பருவத்தால் முதிர்ந்தோர், இவர் அதனாற்றாழ்ந்தோர் என்றெண்ணி அவ்வவரிடத்துள்ள அருமைகளைப் பெறாதுவிடுதல் குற்ற மென்றும், எப்பொருள் எவ்வகைத் தோற்றமுடைத்தாயினும் அதன் தோற்றத்தைக் கண்டு மருண்டொழியாது அதன் உண்மைத் தன்மையினை அறிதல் வேண்டுமென்றும் வற்புறுத்து வந்தார். இவரறி வுறுத்திய உண்மைகளால், ஆரியர் தாங் கூறுவனவற்றை ஆராயாமலே யாரும் உடன்பட்டுத் தழுவிக் கொள்ளல் வேண்டுமென்ற போலி யுரைப்பொருள் ஞாயிற்றின்முன் மறைந்த பனிபோல் ஒழிந்தது. உயர்ந்தோர் தாழ்ந்தோர் எவர்க்கும் மெய்ப்பொரு ளுணர்ச்சி வலியும், அது பெறுதற்காம் வேட்கையும் பெருகின. எல்லாரும் ஒருவரொடு ஒருவர் ஏற்றத் தாழ்வு கருதாது உழுவலுரிமை யன்பு பாராட்டு வாராயினர். திருவுடையோர் பொருளைச் செவ்விய வழியில் செலவிட்டு அறத்திறங்களை விரித்துப் பெருக்கினர். ஆசிரியர் இங்ஙனம் பெருகி விரிந்த அருளற விசும்பினிடையே செஞ்ஞாயிறுபோற் கட்டிளமைப் பருவச் சிறப்போடுந் திகழ்ந்தனர். இஃதிங்ஙனம் நிற்பக், காவிரிப்பாக்கம் என்னும் ஊருக்குத் தலைவராய் ஆயிரம் ஏர்வைத்து உழவுத் தொழில் நடாத்தும் வழித்துணைவர் அல்லது மார்க்க சகாயர் என்னும் வேளாளச் செல்வர், தம்முடைய விளைபுலங்கள் வித்திடப் பட்டுப் பயிர் கிளைக்குங் காலத்து யாருமறியாவாறு கருகி யழிந்து முழுவதூஉம் பாழாய் விடுவது கண்டு மிக வருந்திப், “பல்லாயிரம் ஏழை மக்கள் பசிப்பிணியான் வருந்த இவை யிங்ஙனம் அழிகின்றனவே; என்செய்வோம்? இக்குறையினை நீக்கும் பெரியார் எவராயினும் அவர்க்கு என் அருமை மகளை வாழ்க்கைப்படுத்துவேன்” என்றெண்ணி, ‘இது நீக்குவார் யார்?’ என்று பலரையும் உசாவுவர். பிற்றை ஞான்று நம் ஆசிரியர் பெரும் புகழ் இவர் தமக்கு நண்ணவே, இவர் ஆசிரியர்பால் மிக வொடுங்கிப் பணிந்து, “எம்மை வாழ்விக்குஞ் செல்வமே! ஏழை மக்கள் பலர் பிழைத்தற்கு இடனாயுள்ள அடியேனது விளைபுலம் பயிர் இலை விரியுங் காலத்துக் கருகிப் பாழாய்விடுகின்றது; பலர் அதனான் மிக வறியராய்ப் பசிப்பிணியாற் சொல்லுதற்கரிய துயர் உழக்கின்றனர்; அடிகளது அருட் கடைக்கண் நோக்கம் அதன்மேற் படுமாயின் அக்குறை தீர்ந்து அது பலர்க்கும் பயனுடைத்தாம்” என்று தெரிவித்துக் கொண்டனர். அதனைத் திருவுளத்தமைத்த ஆசிரியர் அச்செல்வரின் வேளாண்மை யுள்ளப் பெற்றி யுணர்ந்து, அவண் விளை புலத்தாற் பயனெய்தும் ஏழை மக்கட்கு மிக இரங்கித் தாமே அவ்வூர் சென்று அவ்விளை புலத்தை இறைவன் அருள் வடிவாய்க் கண்டு, “வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்” என்ற திருக்குறட்பாவை மொழிந்தனர். ஆசிரியர் கடைக் கண் நோக்கம் பட்ட அக்கணந்தொட்டு அவ்விளை புலம் கொழுமையுற்று இடையூறேதுமின்றிப் பெருவிளைச்சல் பயப்பதாயிற்று. அதனால் பலவுயிர்கள் பசிப்பிணி நீங்கி மகிழ்ந்தன. அன்பே தமக்குரிய வுருவாய்த் தூய்மை பெரிதுடைய பெரியோரைச் சாரும் எப்பொருளும் தூய்தாகிச் செழிக்கின்றனவென்பது கட்புலனெதிரே கண்டு துணியப்பட்ட ஓர் உண்மையாம். பெரியோரது தூய குணப்பாற்கடலிற் சென்ற நீரெல்லாம் பாலாய் மாறுகின்றன. தீயோரும் நல்லோர் கூட்டுறவாற் றங்குணம் மாறிவிடுகின்றனர். விலங்கினங் களும் அமைதிக்குண மிக்குள்ள பெரியார் மாட்டு ஒடுங்கி நிற்கின்றன. ஞாயிற்றின் எதிரிலே புற்பூண்டுகள் வளர்கின்றன. ஆகையால், அன்பிற்கு ஒரு நிலையமாய் விளங்கிய ஆசிரியர் அருட்கடைக்கண் நோக்கப் பேற்றிற்கு உரியவான எல்லா வுயிர்களும் தூயவாமாகலின், அவர், நோக்கமாத்திரையானே அவ்விளைபுலம் முன்னுள்ள குறை நீங்கிக் கொழுவி தாயிற்றெனல் வியப்பன்று.ஆசிரியரது அருமையினைக் கண்ட அவ்வேளாளச் செல்வர், ‘இக்குறை நீக்குவார்க்குத் தன் மகளை வாழ்க்கைப் படுத்துவேன்’ என்ற தம் குறிக்கோளை ஆசிரியர்க்கு மிக அஞ்சி வெளிப்படுத்த, அவரும் அதற்கு ஒருவகையால் இணங்கி, “நும் மகள் யாந்தரும் இவ்விருப்புக் கடலையினைச் செவ்வையாக அவைத்துத் தருகுவளாயின் அதற்கு இணங்குவேம்” என்றனர். அவரும் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய் நாயனார் குறிப்பறிவித்துக் கொடுப்ப, அந்நங்கையார் அத்துணைப் பெரிய அறிவாளரே இதனை அவைத்தலாகு மென்றெண்ணி விடுத்தன ராகலின், அப்படியே யாகுமென்று தாமுங் கருதிப் பிறிதுரையாது வாங்கி மணமுறச்சமைத்துப் படைத்தார். அதுகண்ட நம் ஆசிரியர் அம்மகளாரை மணம் புரிந்தருளினார். அறிவுடைமை யிற், சிறந்த தன் கொழுநன் கற்பித்தவாறே வழுவாது ஒழுகுதல் மனைவிமாட்டுப் பேரன்பு உள்வழியே நிகழற்பாலதாம். தன் கொழுநனிடத்து நம்பிக்கையில்லாவிடத்தும், அவன் அறிவுடைமையிற் றனக்கு நன்கு மதிப்பில்லாவிடத்தும், அவன் சொல்வனவற்றை மனைவி மறுத்துரையாடுவள். அவநம்பிக்கை, நன்கு மதிப்பின்மை முதலிய செயல்கள் மனைவிமாட்டு உண்மைப் பேரன்பு இல்வழியே உண்டாகற்பாலனவாம். அஃதுள்வழி அவை உளவாகா. நாயனார் உள்ளக் குறிப் புணர்ந்த நங்கையார், தாம் அவர் பாற் பேரன்புடையாளாதல் தெற்றெனப் புலப்பட அவர் வேண்டியவாறே விரும்பிச் செய்தனர்; இருப்புக் கடலை அவைக்கப் படாமை நன்குணர்ந்தன ராயினும், நாயனார் அஃதாம் எனக்கருதலின் தாமும் அவ்வாறே ஐயுறுதலின்றித் துணிவுள்ள முடையராயினார்; உண்மையாக நம்புதலினால் அவைக்கப்படாத இருப்புக் கடலையும் அவைக்கப் படுவதாயிற்று. “கடுகளவு நம்பிக்கை உளதாயின் மலையைப் பார்த்து நகர்க எனினும், அது நகரும்” என்று பிறரும் மொழிந்தா ராகலின், உண்மை நம்பிக்கை யான் முடியாத தொன்றில்லை. நம்பிக்கை உண்மையினாலே தான் அரிய பெரிய உலக வொழுக்கங்களெல்லாம் நடை பெறுகின்றன. 3உவில்லியம் ஜேம்ஸ் என்னும் உளநூல் ஆசிரியரும் நம்பிக்கையான் நிகழும் அருந்தொழிற்றுறை களை நன்கு விளக்கிக் காட்டினார். பொன்னைப் பொன்னென்றே கருதுதலும் இரும்பை யிரும்பென்றே கருதுதலும் நம்பிக்கையே யன்றிப் பிறிதில்லை. அந்நம்பிக்கையுட் சிறிதேனும் ஐயம் நிகழுமாயின் அவ்வுணர்ச்சி ஒருவாற்றானுந் தோன்றாது. இரும்பினாற் செய்த கடலையை அங்ஙனம் உணராது உண்ணுதற்கு இசைவான கடலையென்றே உண்மையான் நம்பியவிடத்து அஃது அங்ஙனமே யாதல் ஒருதலையாமென்க. ஒருசார் பறவையினங்கள் இரும்பை உணவாக விழுங்க வில்லையா? பிறிதொரு சாரன கல்லைக் கறித்து உண்ண வில்லையா? கல்லும் இரும்பும் உண்ணுதற்கு ஆகாவென அவை நினைப்பின் அவற்றை யுண்ணுமோ? அவைதம் இயற்கையால் அவற்றை உண்டற்குரியவென வெண்ணியுண்டு உயிர்வாழ்தல் கண்கூடாய் அறியப்படுதல்போல, இருப்புக்கடலையினை நாயனார் அட்டுத் தருகவெனக் கொடுத்தாரென்பதும், அவை தம்மை அந்நங்கையார் அங்ஙனமே வேவுவித்துப் படைத்தா ரென்பதும், உண்மையன்பான் நிகழ்ந்த அருஞ்செயல்களாதலின் அவை பொருத்த மாவனவேயா மென்பது துணியப்படும். இனி, நாயனார் அம்மாதரை ஆராய்தற் பொருட்டு அவ்வாறு செய்தாரல்லது அவ்விருப்புக் கடலையினை அவைத் தலாகும் என்றெண்ணினாரல்லரெனில்:- ஒருவாற்றானும் அவைத்தற்கு ஏலாத அவற்றைக் கொண்டு அங்ஙனம் ஆராய நினைந்தன ராயின் அது நடுவண்மையாய நாயனார்தஞ் செவ்விய வுள்ளத்திற்குக் குற்றமா மாதலானும், அவர் நினைந்தவாறே அம்மாதருந் தம்மைத் தாம் அவைத்துத் தருதற்கு இணங்காராத லானும், இருவர்க்கும் உள்ளத்தின்கண் நம்பிக்கை யின்றென்பது பட்டு, அஃதெல்லாம் வெறுஞ் சொன்மாத்திரையேயாய் விடுமாதலானும், அது பொருந்தாதென மறுக்க. அது நிற்க. இனி, நாயனார் தமக்கு மிக இசைந்த அந்நங்கை யாரோடும் ஒருப்பட்டு இல்லறம் நடாத்துவா ராயினர். தம் இல்லற வொழுக்கம் விருந்தோம்பன் முதலான செயல்க ளோடு இனிது நடைபெறற் பொருட்டு இன்றியமையாது வேண்டப்படும் பொருளுக்கு ஏற்ப நூல் வாங்கிச் சீரை நெய்து விற்று முன்போலவே சுருங்கிய செலவின்கண் வாழ்க்கையை நிகழ்த்துவர். ஒழிந்த காலங்களினெல்லாம் தம்மிடத்து அறங்கேட்க வருவார்க்கு அவ்வறத் துறைகளை விரித்துத் தெருட்டுவர். இங்ஙனம் இல்வாழ்க்கை செலுத்துகின்ற நாளிலே, இவர் விளக்கும் அறப்பயனுட்பங்களை அறியமாட்டாத ஒருவர் இவர்பாற் றனித்துச்சென்று, “அடிகளே! இல்லறமோ மற்றுத் துறவறமோ எது சிறந்தது?” என்று வினாவ, அவர்க்கு அதனை அறிவிக்க அவரைத் தம் அகத்தேயிருத்தி, ஒரு நாட்டம்மனை வியார் தமக்கு விடியற் காலையிலே பழஞ்சோறு பரிமாறிப் போய் கிணற்றில் நீர் முகந்துகொண்டிருக்கப், “பெண்ணே! அமுது மிகச் சுடுகின்றது; விசிறி கொண்டுவந்து வெம்மை யாற்றுக” எனக் கூவ, அவ்வம்மையும் சடுதியிலே தாமெடுத்த நீர்க்குடத்தைக் கயிற்றோடும் விட்டு ஓடிவந்து விசிறிகொண்டு வீச, அப்பழஞ் சோற்றில் ஆவி குமுகுமுவென்று எழுந்தது; பின் கிணற்றிற்சென்று பார்க்கக் கிணற்றிற் பாதியளவு மெழுந்து நிறுத்தப்பட்ட நீர்க்குடமுங் கயிறுங் கீழ்விழாது அவ்விட்ட விடத்தே இடைவெளியில் நின்றன; இப்புதுமையினை அங்கு இருந்த அம்மாணவர் கண்டு வியந்தனர். பின்னும் ஒருநாட் பகலில் ஆசிரியர் ஆடை நெய்து கொண் டிருக்கையில், தங்கையிலிருந்த குழல் என்னும் நெய்தற்கருவி கீழ்விழுந்ததாக, அதனை எடுத்தற்கு விளக்கெடுத்துவா பெண்ணே என்றழைப்ப, அவ்வம்மையாரும் பகலென்று நினையாமற் கணவன் சொல்வழியே நினைவுடையராய் விளக்கம் எடுத்து வந்தனர். இன்னும் இவ்வாறு தங்கொழுநன் கட்டளை திறம்பாது அம்மையார் ஒழுகுஞ் சீர்பாட்டினைக்கண்டு அங்கிருந்த மாணவர், “அன்பிற்சிறந்த கற்புடை மனையாள் வாய்க்கு மாயின் இல்லறமே சிறந்தது; அங்ஙனம் வாயாவிடின் துறவறமே நன்று” என்று தெளிந்து ஆசிரியர்பால் விடை பெற்று ஏகினார். பின் ஒருநாள் இவர்தந் திருக்குறளுரை யினைக்கேட்ட சிறான் ஒருவன் இவரது பொறையுடைமையை ஆராய வேண்டி, இவர்தாம் நெய்த ஆடையை விற்குமிடத்தே வந்து, அதனை அவர் கையினின்றும் வாங்கி, ‘இதன் விலை என்ன?’ என்று வினாவினான்; வினாவலும் ‘அஃது ஒருபணம்’ என்றார். பின் அதனை இரண்டு கூறாகக் கிழித்து, ‘இப்பாதித் துண்டின் விலை யாது?’ என்றான்; அதற்கவர், ‘அரைப்பணம்’ என்றார்; பின்னும் அப்பாதியினை இரண்டு பங்காகக் கிழித்து, ‘இத்துண்டின் விலை யாது?’ என்றான்; அவர், ‘காற்பணம்’ என்றார். இவ்வாறு சிறிதும் வெகுளாது மிகப் பொறுமை யோடும் விடை கூறிய நாயனார் அருமையினை அயின்று மிக வியந்து போயினான். வழிநாளினும் அவர் பெருமையினை ஆயவேண்டி அவர் இல்லத்தே சென்று, அவர் மனையாளை வம்புக்கு இழுத்தனன். அதனைக் காண்டலும் நாயனார் அவனைத் தூணிற்பிடித்துக் கட்டிப் பிரப்பங் கோலாற் புடைத்தனர். அதற்கு அச்சிறுவன், “ஐயரே! ‘அகழ்வாரைத் தாங்கு நிலம் போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்தறலை’ என்று நீர் கூறிய குறட்பாட்டு நும்மளவிற் பயனின்று போலும்!” என இழித்து உரைப்ப, அதற்கவர், “நீ அந்நூன் முழுவதும் உணர்ந்திலை; ‘செய்தக்கவல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங்கெடும்’ என்ற குறளை நன்கறிவாயாக” என்றனர். உடனே அச்சிறுவன் மனந்திருந்தித் தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டிப் போயினான். இங்ஙனம் ஆசிரியர் இல்லறத்தின் கண்ணராய் நின்று ஒழுகுகின்ற நாளிலே, இவரது ஒழுக்க விழுப்பத்தினைக் கண்டு திருந்தினார் பலர். ஒருநாள் ஆசிரியர் நூல் வாங்கும் பொருட்டு ஏலேலசிங்கர் என்னும் வேளாளச்செட்டியாரிடஞ்சென்ற போது, வீட்டிலுள்ளார் அவர் இறைவனைத் தொழுது கொண்டிருக்கின்றார் என்றனர். அதற்கு இவர், ‘இல்லை! இல்லை! அவர் வரவுசெலவுக் கணக்குப் பார்க்கின்றார்’ என, அதனைக் கேட்டோர் செட்டியாரிடஞ் சென்று நிகழ்ந்தது தெரிவிப்பச், செட்டியார் நாயனார் தமதுள்ளம் ஒருமைப் பாடமையினைக்கண்டு கூறியதற்கு வியந்து அஞ்சி, ‘அடிகாள்! அடியேனது அறிவின்மையைக் களைந்து தந்திருவடித் தொழும்பிற்கு நாயேனை ஆளாக்கிக் கொள்ளுதல் வேண்டும்” என இரப்ப, நாயனார், ‘என்னுடன் வருக’ என்றழைத்துப் போய், ஒரு மரத்தின்மேல் அவரை ஏற்றுவித்துக், ‘கிளையைப் பற்றிக் கொண்டு தொங்குக’ என்றார். செட்டியார் அவ்வாறே செய்தபின், ‘இரண்டு கைகளையும் விட்டு விடுக’ என்றார்; ஆசிரியர் கட்டளை வயத்தராய்ச் செட்டியார் அப்படியே சிறிதும் அஞ்சாது விட்டுவிட, அவர் கீழே விழாது சிறிதும் வருத்தமின்றி இடைவெளியில் நின்றனர். அது முதற்கொண்டு ஏலேலசிங்கர் ஆசிரியரிடத்து உண்மையன்பு பாராட்டுவாராய், அவர் குறிப்பின்வழி யொழுகி அவர் அடிநீழல் பிரியாது வைகினார். ஏலேலசிங்கர் வாணிக வாழ்க்கையை ஆசிரியர் கட்டளைப் படியே முன்போல் நடாத்தி வந்தனராயினும், தங்கருத்தெல்லாம் முதல்வன் அருட் பெருக்கிற் றோய்ந்து விளங்கினார். அவரது வாணிகமும் முன்னிலும் பன்மடங்கு மிகுதியாய் நடை பெறலாயிற்று. ஓர்யாண்டு எங்கும் மழையின்றி நிலம் வறண்டு அஃகம் சுருங்கிப்போக, ஆசிரியர் ஏலேலசிங்கரை நோக்கித், “தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” என்றுரைத்து, ‘நுங் களஞ்சியத்துள்ள நென்மணிகளை யெல்லாந் திறந்து வழங்குக’ என்று கட்டளை யிட்டனர். அவரும் அவ்வாறே செய்து வற்கடம் போக்கினா ரென்ப. இன்னுமிதனைப் பிறவாறுந் திரித்துக் கூறுவாருமுளர். அவையெல்லாம் பொருந்தாமை காண்க. இனித் தம் அன்பிற்கினிய இல்லக்கிழத்தியார் உயிர் துறந்த ஞான்று அவரது பிரிவான் ஆசிரியர் மிக உருகியாற்றாது, “அடிசிற் கினியாளே யன்புடை யாளே படிசொற் கடவாத பாவாய்! - அடிவருடிப் பின்றூங்கி முன்னெழுஉம் பேதையே போதியோ என்றூங்கு மென்க ணிரா.” என்றோர் அருமைத் திருப்பாட்டை அருளிச் செய்தன ரென்ப. இதனான் ஆசிரியரது அன்புடைமை நன்கு விளங்குகின்றது. ஆசிரியர் தம் இல்லாளைப் பிரிந்தபின், தாம் இளம் பருவத்துத் தொடங்கிய துறவொழுக்கத்தினை நன்கினிது மேற்கொண்டார். இல்லறவொழுக்கத்தின்கண் அறிவுடைய ராய்த் துறவுபூணுதற்குத் தகுதி வாய்ந்தோராய் வந்தோர்க்கெல்லாம் அவ்வறச் சிறப்பை விரித்து விளக்குவான் புகுந் தனர். அஞ்ஞான்று இவர் அருமைத் தமக்கையரான ஒளவையார், தம்பியரான கபிலர் முதலாயினரும் இவருடன் வந்திருந்து அளவளாவி இவர் அருளிச்செய்த திருக்குறளை மிகப் பாராட்டினர். திருமயிலாப்பூர் என்கிற திருநகர் தேவரமிழ்தம் பிறந்த திருப்பாற்கடலெனப் பொலிவுற்றது; அவ்வமிழ்தத்தை உட்கொள்ள மொய்த்த தேவரினங்களைப் போன்றனர் பல நாடுகளிலிருந்து அறப்பொருள் கேட்க வந்தோர்; அவ்வமிழ்தம் பருகவொட்டா தெழுந்த நஞ்சம் போன்றது அங்குத்தொக்க மாந்தர்தம் அறியாமை; அந்நஞ்சத்தினைத் தான் விழுங்கித் தேவர்க்கு அமிழ்தம் பகுத்தருளிய இறைவன் போன்றனர் அவரறியாமையினை நீக்கித் திருக்குறளுரை செய்தருளிய ஆசிரியர் திருவள்ளுவனார். இங்ஙனம் ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் உலகனைத்தையும் நல்லறவொழுக்கத்திற் படுத்துத் தம்முடைய திருமேனியினை முதல்வன் அருள்வெள்ளத் தழுத்தி அதனை அவ்வண்ணமாக்கித் தாம் இறைவன் றிருவடியோடு ஒன்றி ஒன்றறக் கலந்திட்டார். ஏலேலசிங்கர் முதலாயினோர் ஆசிரியர் பிரிவிற் காற்றாது மிகவருந்தி ஆசிரியருரைத்தருளிய, “நெருந லுளனொருவன் இன்றில்லையென்னும், பெருமை யுடைத் திவ்வுலகு” என்னும் அருமையுரையைக் கடைப்பிடித்து ஆறுதலுறுவாராயினர். இவர் தம் முதன் மாணாக்கரான ஏலேலசிங்கரால் ஆசிரியரது படிவம் செய்விக்கப்பட்டு நிறுத்தப் பட்டதென்றும், அத்திருவுருவமே இப்போது திருமயிலாப்பூரில் எல்லாரானும் வணங்கப்படுகின்றதென்றும் அறிவுடையோர் கூறுகின்றனர். அடிக்குறிப்புகள் 1. “கருவூர்ப்பெரும்பதிக்கட் பெரும்புலைச்சி’ என்பதும் பாடம். 2. ‘பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்’ என்பதும் பாடம். 3. ஞசடிக. று. துயஅநள’ கூhந றடைட டிக நெடநைஎந. 6. ஆசிரியர் காலம் இனி, ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இருந்த காலம், அவர் அருளிச்செய்த திருக்குறணூற் செய்யுட்கள் ஒரோ வொன்று பின்னை நூலாசிரியரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுவதொருமுறை கடைப்பிடித்து இனிது நிறுவப் படும். பண்டைச் செந்தமிழ் நூலாசிரியரிற் சிலப்பதிகாரம் என்னும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளியற்றிய இளங்கோவடிகளும், அவரோடு ஒருகாலத்தினரும் மணி மேகலைத் தொடர்நிலைச் செய்யுளாசிரியருமான மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனாரும் திருக்குறட்பாக்களைத் தம் நூலகத்தே மேற்கோளா யெடுத்துரைத்தனர். அவருள் இளங்கோவடிகள் வஞ்சினமாலையிற், “பிறர்க்கின்னா முற்பகல் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்” (குறள் 319) என்னுந் திருக்குறட்பாவை, “முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்” எனவும், கட்டுரை காதை யிறுதியில், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” (குறள் 55) என்னுந் திருக்குறளைத் “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணமால்” எனவும் எடுத்துக் காட்டினர். அதுவேயுமின்றி, ஆசிரியரின் தமக்கையார் ஒளவையாரால் அருளிச் செய்யப்பட்ட “அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்’ என்னும் மூதுரைத் திருப்பாட்டை வழக்குரைகாதை யிறுதியில், “அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே” எனவும், “பேதமை என்பது மாதர்க்கணிகலம்” என்னுங் கொன்றைவேந்தன் நூற்றிருப்பாவை வஞ்சின மாலையில், “பெண்ணறி வென்பது பேதைமைத்தே யென்றுரைத்த நுண்ணறிவினோர் நோக்க நோக்காதே” எனவும் எடுத்தாண்டனர், இனிச் சீத்தலைச் சாத்தனாரும், 1“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று திருக்குறளை யெடுத்தாண்டு ஆசிரியர் மாட்சியினை வலியுறுத்திக் கூறினார். இவை தம்மால் இளங்கோவடி கட்கும் சாத்தனாருக்கும் முற்பட்டவர் திருவள்ளுவராதல் தெற்றெனத் துணியப்படும். இனி, இளங்கோவடிகள் காலம் இனைத்தென்பது காட்டுதும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன், சோழன் மணக்கிள்ளி மகளை மணந்து செங்குட்டுவன், இளங்கோ வென்னும் புதல்வர் இருவரைப் பயந்தனன். இஃது இளங்கோவடிகள் தாமே கூறிய, “குமரியொடு வடவிமயத்து ஒரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத், திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர்செங் களம் வேட்டுக் கங்கைப்பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்” என்னும் உரைப்பாட்டு மடையானும், பரணர் பாடிய, “வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்” என்னும் பதிற்றுப் பத்தானும் இனிது பெறப்படும். இஃதிங் ஙனமாகவும், இவ்வுண்மை யுணராத கனகசபைப் பிள்ளை என்பார் தாம் எழுதிய பதினெண் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழர் என்னும் புத்தகத்திலே, நெடுஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தான் மகள் சோணை யென்பாளை மணந்தான் எனத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அடியார்க்கு நல்லாருஞ் சிலப்பதிகார வுரையிலே 2வாளாது சோழன் மகள் சோணை என்றதேயன்றிக் கரிகாற் பெருவளத்தான் மகள் என்று யாண்டுங் கூறிற்றிலர். உண்மைப் பொருள் பயின்று வரும் வரலாற்றுரையிலே, மேற்கோளின்றித் தமக்குத் தோன்றியவாறே கரிகாற் பெரு வளத்தான் மகள் என்று பிழைத்துணர்ந்து கூறியது சிறிதும் பொருந்தாது. இனி, நெடுஞ்சேரலாதன் மக்கள் இருவருட் செங்குட்டுவன் என்னுந் தந் தமையன் பொருட்டு இளங்கோவடிகள் இளமைப் பருவத்தே தறவு பூண்டா ரென்பது. 3“குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு” என்பதனாலும், அதற்கு அடியார்க்கு நல்லாருரைத்த உரைப் பகுதியானும் இனிது தெளியப்படும். கண்ணகி, கணவனையிழந்து துறக்கநாடுபுக்க பிற்றை ஞான்று செங்குட்டுவன் அவள் தெய்வக்கற்பினை மிக வியந்து அவளை வழிபடு தெய்வமா நிறுத்தற் பொருட்டு இமயஞ் சென்று கற்கொணர்ந்து அதன்கண் அவளை நிறுத்தி நட்டுக் கோட்டஞ்சமைத்து விழாக்கொண்டாடிய விடத்து இலங்கைக் கரசனான கயவாகு வென்பவன் போந்து செங்குட்டுவனுட னிருந்து வழிபட்டான்; இது, 4“உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமைய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியுள் வந்தீ கென்றே வணங்கினர் வேண்ட” என்று ஆங்குடனிருந்த இளங்கோவடிகள் கூறுமாற்றான் அறியப்படும். இங்கே மொழிந்திடப்பட்ட கயவாகு என்னும் வேந்தன் சிங்கள சரித்திர நூல்களான மகாவஞ்சம், தீப வஞ்சம் என்பவற்றான் அறியப்பட்ட முதற் கயவாகு வேந்தனே யாவன். இவ்வரசன் கி.பி. 113-வது ஆண்டு முதல் 125-வது ஆண்டு வரையிற் செங்கோல் ஓச்சினானென்று அந்நூல் களால் அறிகின்றோம். இரண்டாங் கயவாகு என்னும் வேந்த னொருவனும் உளன் என்பது அந்நூல்களால் அறியப்படினும், அவன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டென்று அவற்றிற் றெளிவுபெறச் சொல்லப்படுதலால், அவனைப் பற்றி ஈண்டு ஆராய்ச்சி இல்லையென்க. இனிச், சேரமான் செங்குட்டுவனும் கயவாகுவும் ஒரு காலத்தின ரென்பது பெறப்பட்டமையால், இச்சேரமான் கயவாகுவின் காலத்திடை வரையும் இருந்தான் என்று கோடல் இழுக்காது. இச்செங்குட்டுவன் ஐம்பத்தைந்தாண்டு அரசு வீற்றிருந்தானென்பது பதிற்றுப்பத்துரையால் 5விளங்குதலின், கயவாகுவின் காலத்திடையான கி.பி. 119-வது ஆண்டினின்றும் 55 ஆண்டுகள் கழிப்பவே இச்சேரன் கி.பி. 64-ஆம் ஆண்டில் அரியணை ஏறினானென்பது பெறப்படும். இவன் றந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட் டியாண்டு அரசு செலுத்தினானென்பது 6அப் பதிற்றுப்பத்துரை யானே நன்கு விளங்குதலின், இவன் கி.பி. 6-ஆம் ஆண்டில் அரியணை யேறினானாதல் யார்க்கும் பொள்ளெனப் புலப்படா நிற்கும். இவற்கு முற்பட்ட சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை பதினேழி யாண்டு செங்கோலோச்சினா னென்பது7 பதிற்றுப்பத்துரையிற் சொல்லப்படுதலின், இவன் கிறித்து பிறப்பதற்கு முன் 11-ஆம் ஆண்டில் அரியணை ஏறினானென்பது கொள்ளப்படும். இவன் 8றந்தை சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தைந்தாண்டு9 அரசு புரிந்தான் என்பதுரைக்கப்பட்டமையின், இவன் கி.முன் 36-ஆம் ஆண்டு அரசுகட்டில் ஏறினானென்ப துணரற்பாற்று. இவற்கு முற்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு போரியற்றிப் புறப்புண் நாணி வடக்கிருந்தான். இவன் அங்ஙனம் இருந்தவழிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் அரியணை வைகியிருந்து செங்கோல் செலீஇயினானென்பது உணரப்படும். ஆகவே, இவன் காலத்தினான சோழன் கரிகாற் பெருவளத்தான் கி.முன். முதல் நூற்றாண்டின் இடையிலே அரசியற்றப் புகுந்தானா கற்பாலன். கரிகாற் பெருவளத்தானுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் இடையே ஒரு நூற்றாண்டு கழிந்தமை இவற்றால் நன்கு தெளியப்படுமாகலின், இச்சோழன் ஏனைச் செங்குட்டுவன் காலத்திருந்தான் எனக் கூறினாரது உரை ஒரு சிறிதும் பொருந்துமாறில்லை யென்க. இன்னும் இவ்வுண்மையினை இளங்கோவடிகள் கூறுமுகத்தானும் விளக்கிக் காட்டுவாம். இவர், 10”செருவெங் காதலிற் றிருமா வளவன் வாளுங் குடையு மயிர்க்கண் முரசும் நாளொடும் பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்.” எனவும், 11“மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் றன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பிற்சென்று கன்னவி றோளாயோ வென்னக் கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” எனவுங் கூறுமாற்றால் அவ்வரசன் தமக்கு முன்னேயிருந்தவன் என்பதை நன்கு அறிவுறுத்திட்டார். சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சி நடைபெறுகின்றுழிக் கரிகாற் சோழன் இருந்திலன் என்பதற்குப் புகார்க் காண்ட முடிவிற் றொகுத்துக் கூறும் பதிகத்தில் அவ்வரசன் பெயர் ஏதும் அவர் எடுத்துக் கூறாமையே சான்றாகும். மற்று, மதுரைக் காண்டத்திறுதியினும் வஞ்சிக் காண்டத் திறுதியினுங் கூறிய ஏனையிருபதிகங்களினும் முறையே பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான் செங்குட்டுவனையும் அவர் கிளந்தெடுத்துரைத்ததூஉங் காண்க. அற்றேல், அடியார்க்கு நல்லார், “ஏழாண் டியற்றி யோர் ஈராறாண்டிற் சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி” என்ற அரங்கேற்றுகாதை அடியுரையிற் ‘கரிகாற்பெரு வளத்தாற்கு அவன் அவையரங்கேறிக் காட்டலை விரும்பி’ எனக்கூறிய தென்னையெனின்;- அவர் நூன்முழுவதூஉம் முன்னொடுபின் மலைவின்றிப் பார்த்து வரலாற்று முறையறிந்து காணாது எழுதினா ராகலின் அவருரை கொள்ளற் பாற்றன்றென விடுக்க மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் விழா வறைகாதையில், “மன்னன் கரிகால்வளவ னீங்கிய நாள் இந்நகர் போல்வதோர் இயல்பினதாகி” என்றதூஉம், செங்குட்டுவன் காலத்தே புகார் நகரிற் செங்கோல் செலுத்தின வேந்தன் சோழன் நெடு முடிக்கிள்ளியும் அவன் புதல்வன் உதயகுமரனுமே யாவரென்பதூஉம், யாங்கூறியதே பொருளென்று வற்புறுத்தல் காண்க. இதனாற் சோழன் கரிகாற் பெருவளத்தான் நெடுமுடிக்கிள்ளிக்கும் முன்னிருந் தோனாதல் ஒருதலை என்க. இனி, இக் கரிகாற் பெருவளத்தானுக்குத் தந்தையாவான் சோழன் உருவப்பஃறே ரிளஞ்சேட் சென்னி என்றறிதல் வேண்டும்12. அதனான், இவன் கி-முன் முதல் நூற்றாண்டின் றொடக்கமுதல் அதன் இடையளவும் இருந்தான் என்று உணர்க. இவ்வரசனைப் பெருங்குன்றூர்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாடினர்13. இன்னும் இப்பெருங்குன்றூர் கிழாராற் பாடப்பட்டோன் வையாவிக்கோப் பெரும் பேகன்.14 என்பவனாவன். இவ்வையாவிக்கோப் பெரும் பேகனையே கபிலரும் பாடியுள்ளார்15. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்மேற் கபிலர் ஏழாம் பத்துப்பாடிப் பரிசில் பெற்றாரென்பது பதிற்றுப்பத்தால் அறியப்படுதலின், கபிலரும், பெருங்குன்றூர் கிழாரும், செல்வக் கடுங்கோவாழியாதனும், உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னியும் சிறிதேறக்குறைய ஒரு காலத்தினரென்பது தெளியப்படும். மேலே, சேரன் செல்வக் கடுங்கோ கி-முன் 36-ஆம் ஆண்டு அரசியற்றத் தொடங்கினா னென்பது காட்டப்பட்டமையின், இவரெல்லாம் கி-முன் முதல் நூற்றாண்டின் இடையிலே இருந்தாரெனல் தேற்றமாய் நிலைபெறுதல் காண்க. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்குமுன் பெருஞ்சேர லிரும்பொறையும், அவற்குமுன் செல்வக்கடுங்கோவும் அரசியற் றினாரெனல் யாங்ஙனமெனிற், - கூறுதும். இமயவரம்பன் நெடுஞ்சேரலா தற்கும், செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக்கோமான் மகட்கொடுத்தானென்பது பதிற்றுப் பத்தில் ஆறாம்பத்தி னிறுதிப் பதிகத்தானும் எட்டாம் பத்தின் இறுதிப்பதிகத்தானும் இனிதறியக் கிடக் கின்றது. இதனால், வேளாவிக்கோமான் தான் பெற்ற பெண்மக்களுள் இருவரை அவர் தமக்கு முறையே வாழ்க்கைப் படுத்தினா னென்பதும், அவ்விரண்டு சேர மன்னருந் தமக்குள் உறவுரிமை யுடையரா மென்பதும் தெற்றென விளங்கும். நெடுஞ்சேரலாதன் றந்தை உதியஞ்சேரலெனவும் செல்வக்கடுங் கோவின் றந்தை அந்துவஞ்சேரலெனவும் பதிற்றுப்பத்தால் நன்கறிகின்றோம். இவ்வாறு அறியப் படுகின்றுழி உதியனும் அந்துவனும் உடன் பிறந்தாராக வேண்டு மென்பதும் உறுதிப்படுகின்றது. யாங்ஙனமெனில், இவர் புதல்வோர் இருவரும் வேளாவிக் கோமான் பெண்களை மணந்தனரென்றமை யானே இவர் இருவரும் அவ்வாறு ஒருவன் மக்களையே வதுவை கூடுதற்கு ஒரு காரணம் பெறப்படல் வேண்டுமென்றோ? இவ்விருவரும் உடன்பிறந்த இயைபுபற்றியே ஒருதாய் மக்களைத் தமக்கு மனைவியராக வேண்டின ரென்பது முடிக்கப்படும். இனி, இவர் தமக்கு வேறுவேறு தந்தையர் காணப் படுதலால், இவர் தந்தைமாரே உடன்பிறந்தாரெனவும் அவர் அங்ஙனமாகவே அவர் தம் புதல்வரான மற்றிருவரும் உடன் பிறந்தார் போல்வதோர் இயல்புடைய ராயினரெனவுங் கருதல் இழுக்காது. இனி, நெடுஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெரு வளத்தானோடு பொருது புறப்புண்நாணி வடக்கிருந்த வழி, அவனில்லா நேரத்தில் அவனுடன் பிறந்தோனான செல்வக் கடுங்கோ அரசியல் நடாத்தினான். செல்வக் கடுங்கோ இருபத் தைந்தாண்டு அரசியற்றித் துஞ்சியபின்னரும் நெடுஞ்சேரலாதன் வந்திலாமை பற்றியே அச்செல்வக் கடுங்கோ மகன் பெருஞ் சேரலிரும் பொறை அரசியற்றினானாகற்பாலன். பெருஞ் சேரலிரும்பொறை பதினேழியாண்டு முற்றியபின்னர்த் தன்பெருந் தந்தை சேரலாதன் மீண்டு வந்தமையால் அவற்கு அவ்வரசியலை ஈந்தனனென்றாதல் கோடலே பொருத்தமுடைத்தாம். ஆகவே, கி.பி. 6-ஆம் ஆண்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரியணையேறி வைகுமுன், பெருஞ்சேரலிரும்பொறை அரசியற் றினானெனயாம் முன்னுரைத்தவுரை பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. அஃதங்ஙனம் பொருத்த முடைத்தாதல் காண்க. அஃதங்ஙனம் பொருத்தமுடைத்தாகவே அவன்றந்தை சேரன் செல்வக்கடுங்கோ கி.முன் 36-ம் ஆண்டு அரசியற்றப் புகுந்தானென்றதூஉம் வலியுறுத்தப்பட்ட தாயிற்றென்க. இனிக் கி.முன் முதல் நூற்றாண்டின் இடையிலிருந்த செல்வக் கடுங்கோவின் புதல்வன் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறை தகடூரில் அதியமான் அஞ்சியொடு பொருதானென எட்டாம்பத்தில், “தகடூர்எறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேரலிரும் பொறை” என்று சொல்லப்படுதலின், அதியமானஞ்சியும் அவனைப் பாடிய அவன் தமக்கையார் ஒளவையாரும் 16கடுங்கோவைப் பாடிய கபிலருமெல்லாம் ஒரு காலத்தினரென்பது பெறப்படுதல் காண்க. இக்கபிலரும் ஒளவையாரும் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனையாதல், சேரன் செங்குட்டுவனை யாதல், சோழன் நெடுமுடிக் கிள்ளியையாதல் பாடிற் றின்மையின் இவர் கி.முன் முதல் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னே யிருந்திலரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போற் வெள்ளிதிற் புலப்படும். இருவருள்ளுங் கபிலர் கி.முன் 11-ஆம் ஆண்டு அரியணையேறிய பெருஞ்சேரலிரும்பொறையாற் பொரப்பட்ட அதியமான் அஞ்சியைப் பாடியதின்மையின், இவர் அவற்கு முன்னே துறக்கம்புக்கார் என்பதும், ஒளவையார் அவனை மிகவியந்து பாடிய பாக்கள் பலவுண்மையின் இவர் அவற்குப் பின்னேயும் இருந்தார் என்பதும் அறியப்படுகின்றன. அதியமான் அஞ்சியினாற்றரப்பட்ட ஓர் அரிய நெல்லிப் பழத்தை யுண்டாராகலின், ஒளவையார் நோயின்றி வலிவேறிய வுடம்பினராய் அவன் மகன் பொகுட் டெழினியையும் பாடிக் கொண்டு கி-முன் முதல் நூற்றாண்டு இறுதிகாறும் இருந்தா ரெனல் துணியப்படுகின்றது. இங்ஙனம் இவர் நீண்ட வாழ்நாளுடையராயிருந்ததுபற்றியே இவர்க்கு ஒளவை என்னும் பெயர் வழங்கப்படுவதாயிற்று. இத்திறங்களெல்லாந் தொகுத்து நுணுகி ஆராய்கின்றுழி, இவர் கி-முன் முதல் நூற்றாண்டின் றொடக்கமுதல் அதன் இறுதி காறும் நூறியாண்டு உயிர் வாழ்ந்திருந்தன ரென்றுரைப்பது வழுவின்றிப் பொருத்த முடைத்தாதல் தெற்றென விளங்கற்பாலதேயாம். இது கிடக்க. இனி, ஒளவையாராற் பாடப்பட்ட கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் காலம் ஆசிரியரது காலத்தை நிறுவுதற்கு இன்றியமையாது வேண்டப்படுதலால் அதனையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். இவ்வுக்கிரப்பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் நண்பரென்பது ஒளவையார் பாடிய, “நாகத்தன்ன பாகார் மண்டிலம்” என்னும் புறநானூற்றுச் செய்யுளாற் றெளியப்படுகின்றது. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறைக்கும் போர் நிகழ்ந்தவாறு “பருத்திப் பெண்டின்” என்னும் புறப்பாட்டினால் நன்கறியப்படுகின்றது. தகடூர் எறிந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மூத்த புதல்வரென்ப தூஉம், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை அவர்க்கு இளைய புதல்வரென்பதூஉம் அவர் பெயரொற்றுமையானே நன்கு துணியப்படும். அவர் மூத்த பிள்ளையாதலாற் ‘பெருஞ்சேரல்’ எனவும், இவர் இளையபிள்ளையாதலால் வாளாது ‘சேரல்’ எனவும் மொழி யெடுத்துப் பெயர்பெறுவாராயினர். செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர் இவர்க்குச் சிறந்த நண்பராயினும், இவர் முடிசூடிக் கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்னும் பட்டம் பெறுகின்ற காலையிலெல்லாம் அக்கபிலர் இறந்து பட்டாரென்பது பொருந்தில் இளங்கீரனார், 17 “செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன்.” என்று அவரைச் சிறப்பித்து அவ்வரசன் கூற்றாகச் சொல்லியவாற்றான் இனிதறியப்படுமென்க. இதனானே, தகடூரெறிந்த பெருஞ்சேரல் சிங்காதனம் ஏறுமுன்னரே இவர் இறந்து பட்டாரென மேலே யாமுரைத்தவரை வலிபெறுதல் காண்க. இவ்வியானைக்கட்சேய் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாற் பிணிப் புண்டாரென்பது 17-வது புறப்பாட்டினால் அறியப்படுதலின், உக்கிரப்பெருவழுதி தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனே என்றாதல், அல்லதவனின் வேறொன்றாதல் கொள்ளப்படும். மற்று வேறென்றே கொள்ளும்வழி உக்கிரப் பெருவழுதி அப் பாண்டியனுக்குப் பின்னே அரியணை வீற்றிருந்தா னென்று கோடலே பொருத்தமாம். சேரமான் செல்வக்கடுங்கோ கி.முன் 36ஆம் ஆண்டு அரசுபுரியத் தொடங்கினானென்று முன்னரே காட்டினேமாதலால், இவன் இளைய மகனைப் பிணித்த தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், கி-முன் 30-ஆம் ஆண்டிலிருந்தனெனவும், இவற்குப் பின்னே 26-ஆம் ஆண்டில் உக்கிரப்பெருவழுதி அரியணை யேறினா னெனவுங் கோடல் குற்றமாகா தென்றறிக. பின் கி.முன் 20-ஆம் ஆண்டிலே உக்கிரப்பெழுவழுதி சங்கம் நிறுவிச் செந்தமிழ் மிக வளம்படுத்து வளங்கினான் என்றுணர்க. இங்ஙனங் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் வேந்தர்பெருமானாற் றமிழ் மிகப் பொலிவு பெறு கின்ற காலையில், திருமயிலாப்பூரில் வீற்றிருந்தருளி அற வுபதேசஞ் செய்யும் நம் ஆசிரியர் பேரறிவும் அவர் அறவுப தேசமாட்சியும் இவ்வேந்தன்பால் எய்துவவாயின. ஆசிரியர்க்கு அருமைச் சகோதரியாராம் ஒளவைப் பெருமாட்டியாரானும் ஆசிரியர் அருமை பெருமைகளை இவ்வரசன் நன்கறிந்து மகிழ்ந்தனன். அவர் அருளிச்செய்த தெய்வத் திருக்குறள் நூலை அவர்தாமே தந் திருவாய் மலர்ந்துரை விரித்துரைப்பக் கேட்டல் வேண்டும் என்னும் வேட்கை அரசற்கு மிகுதியும் பெருகுவ தாயிற்று. சங்கத்து வீற்றிருக்குங் கபிலர்க்கும் தன் மாட்டுவரும் ஒளவையார்க்குந் தன் கருத்தினை அறிவிப்ப அவர் இருவரும் அவ்வாறே ஆசிரியரை மதுரைமாநகர்க்கு எழுந்தருளச் செய்விக்கும் பொருட்டுத் திருமயிலாப்பூரிற் போந்து அவர்பால் அளவளாவிப் பாண்டியன் கருத்தறிவித்து அவரை அதற்கு ஒருப்படுவித்து அவரைக் கூடன்மாநகர்க் கெழுந்தருளச் செய்வவித்துத் தாமும் உடன் போயினர். பாண்டியனும் ஆசிரியர் வருகையினையறிந்து வரம்பறியா மகிழ்ச்சியெய்தி எல்லாச் சிறப்புக்களோடும் எதிர்சென் றழைத்துப்போய்ப் புலவர் அமர்ந்திருக்கும் பெரும் பீடிகையின் நடுவே அவரை வீற்றிருந்தருளச் செய்து வணங்கியிருந்தான். ஆசிரியர் அப்புலவர் குழாத்திடையே வான்மீன் நடுவில் நாண்மதியென்ன வயங்கினார். அப்பீடிகையில் உடனிருந்த புலவரெல்லாரும் இத்தெய்வ வருளாளரான ஆசிரியரோடு யாமெல்லாஞ் சமமாக விருத்தல் குற்றமென் றெண்ணி அதனைவிட்டு இழிந்து கீழே இருந்தனர். இதற்குட் பாண்டியன் எழுந்து, ‘ஆசிரியரோடு ஒருங்கிருந்து அவர் கூறுந் திருக்குறளுரை கேட்டற்குரியார் யார்?’ என வினவலும், அங்கிருந்த புலவரெல்லாரும் ஒருப்பட்டு ஒருமுகமாய் “முன்னே இறையனாரகப் பொருட்கு நக்கீரனாருரைத்தவுரையே மெய்யுரையெனத் தேற்றிய உப்பூரிகுடிகிழார் மகனாவார் உருத்திரசன்மரே!” என உரத்துக் கூவினர். அதன்பின், பாண்டியன் உருத்திரசன்மரை ஆசிரியரோடு உடன் இரீஇயினான். ஆசிரியரும் அவ்வுருத்திரசன்மரை முற்படுத்து “அகரமுதல” என்னுந் திருக்குறடொடங்கி மெய்யுரை யுரைப்பாராயினார். ஆசிரிய ருரைக்குங்காற் சொற்றொறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்திக் கையுடைத்து உருத்திரசன்மரெனும் அவ்வற்புதப்பிள்ளை உவகை துளும்பி யாரவாரித்தலிற் பாண்டியனை யுள்ளிட்ட புலவரெல்லாரும் இறும்பூது மிக்கு, ‘இஃதொப்பதோர் நூலும் இவரை யொப்பாரோர் ஆசிரியருங் கண்டிலேம் கண்டிலேம்!” என்று மிகவியந்து களிப்பாற் றதும்பினார். இங்ஙனம் அத்தெய்வத் திருக்குறணூலுரை யுரைக்கப்பட்டு முடிந்த வளவிலே, அங்கிருந்த உக்கிரப்பெருவழுதி, கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார் முதலியோரெல்லாரும் ஆசிரியரையும் அவரருளிச்செய்த திருக்குறளையும் வியந்து பாராட்டி ஒவ்வோர் வெண்பாட்டு உரைத்திட்டார். இஞ்ஞான்று திருவள்ளுவமாலையெனப் பெயரிய தொகுதியிற் பாட்டுக்கள் சொற்ற புலவரெல்லாரும் ஆசிரியரோடு ஒருங்கிருந்து கேட்டாரல்லர். அதன்கட் காணப்படுவார் பலர் அத்திருக்குறண்மாட்சி நன்கு புலப்படுதல் வேண்டி அங்ஙனஞ் செய்யுட்செய்த பிற்றை ஞான்றை நல்லிசைப் புலவரென்றே துணிக. மதுரைக் கூலவாணிகன் சாத்தனாருஞ், செங்குட்டுவன்மேல் ஐந்தாம் பத்துப் பாடிய பரணரும் நீண்ட ஆயுள் பெற்று நெடுநாளுயிர்த்திருந்தார் என்று தோன்றுதலால், அவர் செங்குட்டுவன் காலம் வரையில் இருந்தது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லையென்க. பரணரும், சாத்தனாரும் ஆசிரியர் திருக்குறள் இருந்துகேட்ட ஞான்று இருபத்துநான்கு அல்லது இருபத்தாறு ஆண்டு நிரம்பி இளம்பருவத்தினரா யிருந்தனரென்று கோடல் வழுவாமா றில்லை என்பது கடைப்பிடிக்க. இன்னும் ஒருண்மை காட்டுவாம். சாத்தனார் மணிமேகலைக் காப்பியம் இயற்றியபோது மதுரையிற் கடைச்சங்கஞ் சிதர்ந்து போயிற்று என்பதற்கு, அவராவது அவரோடு உடனிருந்து சிலப்பதிகாரஞ் செய்த இளங்கோவடிகளாவது அதனைப்பற்றி ஏதும் மொழிந்திடாமையே உறுசான்றாம். உக்கிரப் பெருவழுதிக்குப்பின்னே அரசு தொடங்கிய ஆரியப்படை தந்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தெல்லாம் செந்தமிழ்வளஞ் சுருங்கலாயிற் றென்ப தற்கு, அவன் எல்லாருங் கல்விபயிறல் வேண்டுமென்று வற்புறுத் துரைத்த “உற்றுழியுதவியும்” என்னும் பாட்டே சான்றாதல் காண்க. தமிழ்க்கல்வி சுருங்காது மிக விரியுமாயின் அப்போதவன் இவ்வாறு வற்புரை கூறல் வேண்டுவதின்றாம். இங்ஙனஞ் சுருங்குகின்ற நாளிலே தமிழை மறித்தும் வளம்படுத்துதற்குக் கருதியிருந்த இவ்வரசன், அந்தோ! கோவலனை அறியாமையாற் கொலை செய்வித்துப் பின் கண்ணகி தெருட்டத் தன் பிழையை நினைந்து உயிர் துறந்தான்; இவன் சடுதியில் இறந்தமையாற் பாண்டிநாட்டிற் பெருங்குழப்பம் நேர்ந்தது; கண்ணகியின் வெஞ் சினத்தாலும் ஊர் தீக்கொளுவப் பட்டுப் பொலிவிழந்தது; பன்னீர்யாண்டு எங்கும் பஞ்சம் உண்டாயிற்று; சாத்தனாரும் மதுரை நீங்கிச் சேரன் செங்குட்டுவன்பாற் போய் இருந்தனர். சாத்தனார் மணிமேகலையில், 18“பன்னீரியாண்டு, பாண்டிநன்னாடு மன்னுயிர்மடிய மழைவளமிழந்தது” என்று தாமே நேரிற்கண்டு கூறாமாற்றாற் கண்டு கொள்க. சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தினையும், அரங்கேற்றுதற்குக் கடைச்சங்க மொழிந்தமையால் இளங்கோ வடிகள் கேட்பவே அதனை யுரைத்துச் சேரனவையில் அரங்கேற்றினார். இஃது, “இளங்கோ வேந்த னருளிக்கேட்ப வளங்கெழுகூல வாணிகன் சாத்தன் மாவண்டமிழ்த்திற மணிமேகலைத்துற வாறைம்பாட்டினு ளறியவைத்தனனென!” என்னும் மணிமேகலைப் பதிகத்தானுணர்க. அல்லதூஉம், ஆரியப்படைதந்த பாண்டியன் காலத்துச் சங்கம் ஒடுங்கி விட்டமையான் அன்றே, அவன் புலவர் யாரானும் பாடப்படவில்லை யென்க. இங்ஙனங் கடைச் சங்கம் ஒடுங்கிய பின்றைத் தமிழ்ப்புலவரை யோம்பித் தமிழ்வளம்படுத்துதல் சேரமன்னர் பாலதாயிற்று. இதனைப் பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு முதலிய நூல்களே கரிபோக்குமென்க. இங்ஙனஞ் சங்கமொடுங்கியவாறு என்னையெனச் சூழப்புகுந்த பின்னையார் ஒருசாரார் திருவள்ளுவராற் சங்க மழிந்ததெனத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அவர் கூறுவனவெல்லாம் உண்மைச்சரிதவியல் அறியமாட்டாதார் கூறும் வழுவுரைகளாய் முடியுமாதலின், அவையீண்டு ஆராயற்பாலனவல்லவென வொழிக. இனி, இங்ஙனம் ஆராய்ந்துணர்த்திய சரிதவழியே புகுந்து நோக்கும் வழி ஆசிரியர் பிறந்தவாண்டு ஒருவாறு உறுதிப்படுத்தப்படும். கி-முன் 20-ஆம் வருடத்திலே ஆசிரியர் திருக்குறள் அரங்கேற்றிய பின்னரும் பத்துவருடம் இருந்தாரெனக் கொண்டு, பண்டைக்காலத்து மக்களெல்லாம் நெடுநாளுயிர்த்திருப்பதோர் முறைபற்றி ஆசிரியரும் எண்பத்தைந்து வருடம் இருந்தாரெனக் கொள்வோமாயின், இவர் கி-முன் 95-ஆம் ஆண்டிலே பிறந்தாரென்று நிலை பெறுத்தப்படும். இவ்வாறு நிறுவுதல் சரிதமரபுக்கு இசைந்த வழக்கேயாமென்க. ஆசிரியர் மருந்து என்னும் அதிகாரத்தில் விளக்கிய நன்முறைகளை உற்று நோக்குங்கால், இவர் உடல் ஓம்புஞ் சுகாதார நன்முறை நன்கறிந்திருந்தா ரென்பது தேறப்படும். ஆகவே, ஆசிரியர் எண்பத்தைந்தியாண்டு உயிர்த்திருந்தாரென்றல் உலகவியற்கையோடு மாறுபடுதல் ஒரு சிறிதுமில்லையென்பது கடைப்பிடிக்க. அடிக்குறிப்புகள் 1. மணிமேகலை, சிறைசெய் காதை. 2. சிலப்பதிகாரம், பாயிரவுரை, பக்கம் 90. 3. சிலப்பதிகாரம், பதிகம் 4. சிலப்பதிகாரம், வரந்தரு காதை. 5. ஐந்தாம் பத்து: ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டு வீற்றிருந்தான்.” 6. இரண்டாம் பத்து: “இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டி யாண்டு வீற்றிருந்தான்.” 7. எட்டாம்பத்து: “தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழி யாண்டு வீற்றிருந்தான்.” 8. “பொய்யில் செல்வக் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் றேவி யீன்ற மகன்” எட்டாம்பத்து, பதிகம். 9. ஏழாம்பத்து: “செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.” 10. சிலப்பதிகாரம், இந்திரவிழவூ ரெடுத்த காதை. 11. சிலப்பதிகாரம், வஞ்சினமாலை, 12. “உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெரு வளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார்” என்பது நச்சினார்க்கினி யருரை: தொல்காப்பியம், பொருளதிகாரம். 13. புறநானூறு, 266. 14. புறநானூறு, 147. 15. புறநானூறு, 143. 16. புறநானூறு, 99 17. புறநானூறு, 53 18. மணிமேகலை, பாத்திரமரபு கூறிய காதை. 7. ஆசிரியர் மதம் இனி, ஆசிரியர் திருவள்ளுவனார் மேற்கொண்டொழுகிய மதம் இதுவென்று பகுத்தறியாமையால், அவரைப் பல்வகைச் சமயத்தாரும், தத்தமக் குரியராகக் கொண்டு எழுதி ஒருவரோ டொருவர் மிக முரணுகின்றாராகலின், இவரது மதம் இதுதானென ஈண்டு நிறுவுதல் இன்றியமையாது வேண்டற் பாலதாம். இனி, இஞ்ஞான்று, இவ்விந்திய தேசத்தின் கண் நடை பெறும் மதங்கடம்முள் ஒன்றனை ஆசிரியர் மேற்கொண் டொழுகினாரென்றல் சிறிதும் ஏலாது. இற்றைக்கு இரண் டாயிர வருடங்கள்முன் நடைபெற்ற மதவியல்பும் இஞ் ஞான்று நடைபெறும் மதவியல்புந் தம்முட் பெரிதும் பேதமுடையனவாய்க் கிடக்கின்றன. உலகவியற்கைப் பொருள்களெல்லாங் காலங்கடோறும் வேறுபட்டுவரும் இயல்பினவாம். ஆகவே, இஞ்ஞான்றை மதங்களுள் ஒன்றன் பால் வைத்து ஆசிரியர் மதம் இதுவெனத் துணிதல் இழுக்காமென்க. மற்று ஆசிரியர் தழீஇ ஒழுகிய திதுவென்றாராய்ந்து உரைநாட்டுதலே பொருத்த முடைத்தாமாகலின் ஆசிரியர் காலத்து நடைபெற்ற மதங்களிவை யென்பது ஈண்டு விளக்குவாம். ஆசிரியர் காலத்திற்குச் சிறிது பின்னே இயற்றப்பட்ட தாயினும், ஆசிரியர் காலத்தும் அவர்க்கு முன்னும் நடை பெற்ற நிகழ்ச்சிகளையே எடுத்துக் கூறுதலால் மணிமேகலை என்னுங் காப்பியமே ஈண்டு ஆசிரியர் மதம் இதுவென நிச்சயித் தற்குப் பெரிதும் பயன்படுவதாம். அக்காப்பியத்திற் சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் அக்காலத்துள்ளா ராற்றழுவப்பட்ட மதங்களும், அவர் தம்மால் ஆராய்ந்தறியப் பட்ட தத்துவ சாத்திரங்களும் இனிது காட்டப்பட்டிருக்கின்றன. அஞ்ஞான்று நடைபெற்ற மதங்கள் உலோகாயதம்1, பூத வாதம்2, பௌத்தம்3, நையாயிகம்4, வைசேடிகம்5, சைனரில் ஆசீவக மதம்6, சைனரில் நிகண்ட வாதமதம்7, மீமாஞ்சகம்8, வேதமதம்9, பிரமமதம்10, வைணவ மதம்11, சாங்கியம்12, சைவ சமயம்13 முதலியனவாம். இனி, இவை தம்முள் உலோகாயதமென்பது மண், புனல், அனல், கால் எனப் பூதங்கள் நான்கே உள்ளனவென்றும், இவை தம்மை நேரே உணர்கின்ற பிரத்தியக்கமே பிரமாணமல்லது ஏனை அனுமானம் பிரமாணமாக மாட்டாதென்றும், ஆத்திப்பூவுங் கருப்பங்கட்டியும் வேறு சிலவும் சேர்த்தவழி மதுவின்கண் மயக்கத்தைத் தருங்களிப்புத் தோன்றினாற் போல, இந்நான்கு பூதங்களுங் கூடுங்கால் அக்கூட்டத்தில் ஓர் உணர்வு தோன்றும் என்றும், அப்பூதக் கூட்டம் பிரிந்து அழியுங்கால் அவ்வுணர்வும் உடன் அழிவெய்துமென்றும், இவ்வுணர்வின் வேறாக உயிர் என்பதொரு பொருளில்லை யென்றும், இறந்த வுயிர் மீளப் பிறவாமையின் முற்பிறப்பும் பிற்பிறப்பு மில்லை யென்றும், இருவினையுஞ் சுவர்க்க நரகங்களும் தேவர் நரகரும் கடவுளும் எல்லாம் பொய்ப் பெருள்களா மென்றும் வற் புறுத்துக் கூறும். இனிப் பூவாதமென்பது இவ்வுலகாயதக் கொள்கையில் விடப்பட்ட ஆகாயம் ஒன்றனையுங் கூட்டிப் பூதங்கள் ஐந்தா மெனக் கொண்டு, ஏனை அதன் கொள்கைகள் முழுவதூஉம் ஒருப்பட்டுக் கூறுவதாம். ஆகவே, உலகாயதமும் பூதவாதமுந் தம்முட் பேதம் பெரிது மில்லாதனவாம் என்க. இனி, ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் உலகாயதம் பூதவாத மென்னு மிவற்றைத் தழுவி ஒழுகினரா வென்று ஆராய்வாம். ஆசிரியர் மண், புனல், அனல், கால், விசும்பு என்னும் ஐம்பூதங்களும் பிறத்தற் கிடமாம் “சுவையொளி யூறோசை நாற்ற மென்றைந்தின் வகை”யினைக் கூறுதலானும், “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்து மகத்தே நகும்” என்புழிப் பூதங்கள் ஐந்தேயாமெனக் கிளந்து கூறினாராகலானும், இவர் உலகாயதவாதி யல்லராதல் நன்கு துணியப்படும். இனி, ஆசிரியர் காணப்பட்ட வுலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுவான் வேண்டித் தொடங்கிய “அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு” என்னு முதற்செய்யுளிலேயே பூதவாதிக்கு உடம்பாடல்லாத அனுமானப் பிரமாணத்தைத் தழுவினார். மேலும் அவ்வாதி ஐம்பூதக் கலப்பான இவ்வுடம்பே உயிராகு மென்னுந் தேகான்ம வாதத்தை உடம்படாது, ஆசிரியர் உயிர் உடலின் வேறென்பது பொள்ளெனப் புலப்படுமாறு “கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலை” என வைத்து உயிர் நிற்றற்கு உடம்பு ஓர் இடமா மெனவும், “உயிருடம்பின் நீக்கியார்” எனவும். “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே, உடம்போடுயிரிடை நட்பு” எனவும், “ஊனைக் குறித்த வுயிரெல்லாம்” எனவும், “உடம்போடு உயிரிடை யென்ன மற்றன்ன, மடந்தைணெயா டெம்மிடை நட்பு” எனவும் தங்கருத்து நன்கு விளக்கிக் கூறுதலானும், அவர் இறந்தவுயிர் மீளப்பிறவா தெனக் கூறுதலைத் தழுவாது, “அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது, பொன்றுங்காற் பொன்றாத் துணை” என்பதனால், இவ்வுடம்பு ஈண்டு ஒழியினும் அறப்பயன் அவ்வுடம்பின் நின்ற உயிர்க்கு மறு பிறவியிற் றுணையாம் எனவும், “வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன், வாழ்நாள் வழியடைக் குங்கல்’ என்பதனால் ஒருவன் றான் செய்த அறப்பயன் அவனுக்குப் பிறவிகள் வரவொட்டாது தடுக்கு மெனவும், “மகன் றந்தைக் காற்றுமுதவி யிவன் றந்தை. என்னோற்றான் கொல் லென்னுஞ் சொல்” என்பதனால் முற்பிறவி உண்டெனவும், “சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு மிம்மையு மின்பந்தரும்” என்பதன்கண் இன்சொல் ஒருவற்கு மறுமையினும் இன்பம் பயக்கு மெனவும், “எனைப் பகையுற்றாரு முய்வர் வினைப்பகை, வீயாது பின்சென் றடும்” என்பதனால் பிறவிகள் பல உளவாம் எனவும், “தவமுந் தவமுடையார்க் காகுமவமதனை, அஃதிலார் மேற்கொள்வது” என்பதில் இப்பிறப்பில் தவஞ் செய்வார்க்கு அதனைச் செய்தற் கேதுவாக முற்பிறவியிற் செய்த தவம் உண்டெனவும், “இம்மைப் பிறப்பிற் பிரியலமென்றேனாக், கண்ணிறை நீர் கொண்டனள்” எனவும்; “எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கட்பெறின்,” “எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண், விழுமந்துடைத்தவர் நட்பு”, “ஒருமை யுளாமைபோ லைந்தடக்க லாற்றின், எழுமையு மேமாப் புடைத்து,” “ஒருமைக்கட்டான் கற்ற கல்வியொருவர்க், கெழுமையு மேமாப் புடைத்து,” “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டுஞ் செய்யா, திகழ்ந்தார்க் கெழுமையு மில்”, “ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு” என்றற் றொடக்கத்தனவற்றால் பிறப்புகள் ஏழாமெனவும், “அவாவென்ப தெல்லா வுயிர்க்கு. மெஞ்ஞான்றுந், தவாப் பிறப்பீனும் வித்து” என்பதன் கண் அவாவினால் உயிர்கட்குப் பிறவிகள் இடையறாது வருமெனவும் விளங்க விரித்துக் கூறுதலானும், உடம்பு வேறு உயிர்வேறு என்பதும், அவ்வுயிர்க்கு முற்பிறவியும் வேறு பல்பிறப்புக்களு முளவா மென்பதும், ஆசிரியர்க்குக் கருத்தாதல் தெற்றெனப் புலப்படும். இனி, இருவினையும் அவற்றிற்குக் காரணமாம் ஊழும் இலவென்னும் அப்பூதவாதி கூற்றை உடம்படாது, “இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள் சேர்புகழ்புரிந்தார் மாட்டு” என்றும், “தம்பொருளென்பதம் மக்கள வர்பொருள், தந்தம் வினையான் வரும்” என்றும், “கேடும் பெருக்கமுமில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கணி” என்றும், “ஆகூழாற்றோன்று மடி” என்றும், “ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று சூழினுந் தான்முந்துறும்” என்றும் வற்புறுத்துக் கூறுமாற்றால், ஆசிரியர்க்கு இருவினையும் அவற்றின் காரணமாம் ஊழும் உண்டெனல் துணிபாயிற்று. இனித் துறக்கநிரயங்கள் பொய்யாமெனும் அப் பூதவாதி போலாது. ஆசிரியர் துறக்கத்தைச் செல்வமென வைத்துச் “சிறப்பீனுஞ் செல்வமுமீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு” எனவும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்” எனவும், “அடக்கமமரருள் உய்க்கு மடங்காமை, யாரிரு ளுய்த்து விடும்” என்பதனால் துறக்கத்திற் செல்லுதற்கும் நிரயத்தில் விழுதற்கும் அடங்குதல் அடங்காமை யிரண்டுங் காரணமாமெனவும், “அழுக்காறென வொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்” என்பதில் அழுக்காறென்பது இம்மையிலும் திருவை இழப்பித்து மறுமையில் நிரயத்திற் போக்குமெனவும், “புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே. யொப்புரவினல்ல பிற” என்பதனால் ஒப்புரவினுஞ் சிறந்த ஒழுக்கத்தைத் துறக்கத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதலரிதா மெனவும், “நல்லா றெனினுங் கொளறீது மேலுலக, மில்லெனினு மீதலே நன்று” என்பதில் ஈகையினால் துறக்கம் வராதாயினும் அதுவே செயற் பாற்றெனவும், “அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்” என்பதில் அருளுடையார் இன்னாமை பயப்பதான இருள் நிறைந்த நிரயத்துட்புகா ரெனவும், “உண்ணாமையுள்ள துயிர்நிலை யூனுண்ண, அண்ணாத்தல் செய்யா தளறு” என்பதனால் ஊனுண்டவர் நிரயத்துளழுந்திப் பின் அதனின்றும் மீளாரெனவும், “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையுந், தான்புக் கழுந்து மளறு” என்பதன்கண் மடவோனாயினான் தான் எழுபிறப்புஞ் சென்று நிரயத்தில் அழுந்துதற்கு ஏதுவான பாவகருமங்களைத் தன் ஒரு பிறப்பினுள்ளேயே ஈட்டிக் கொள்வானெனவும், “வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்களாழு மளறு” என்பதனால் வரைவின் மகளிர் மென்றோள் முயக்கம் கீழ்மக்கள் சென்றுபடும் நிரயமாமெனவும், பலவிடத்து வற்புறுத்துக் கூறுதலால் துறக்க நிரயங்கள் உண்மை அவர்க்குத் தேற்றப் பொருளாதல் இனிது பெறப்படுகின்றது. இனித் துறக்கவுலகத்தில் உறையுந் தேவரையும் நிரயத்துள் உலாவும் நரகரையும் பூதவாதி உளரெனக் கொள்ளாது மறுப்பாராக. ஆசிரியர் திருவள்ளுவரோ, “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு”, “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங், கைம்புலத் தாறோம்பறலை”, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்”, “பெற்றார் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப், புத்தேளிர் வாழு முலகு”. “நிலவரை நீள் புகழாற்றிற் புலவரைப், போற்றாது புத்தெ ளுலகு”, “செவியுணவிற் கேள்வியுடையா ரவியுணவின், ஆன்றாரோ டொப்பர் நிலத்து”, “இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள், அமையார்தோளஞ்சு பவர்”, “தேவரனையர் கயவர வருந்தா மேவன செய்தொழுக லான்” என்றற் றொடக்கத்துச் செய்யுட்களில் முறையே இங்கு வானம் நீர்பெய்யாது வறக்கு மாயின் தேவர்க்கும் விழாவும் பூசனையும் நடவா எனவும், தென்திசையில் வாழும் பிதிரராகிய தேவரையும் தெய்வத்தையும் வரும் விருந்தினரையும் உறவினரையும் தன்னையும் ஓம்புதல் இல்லறத்தார்க்குக் கடமை யாமெனவும், இல்லற நெறி வழாது வாழ்க்கை செலுத்து வோன் மறுமையிற்றேவர் குழாத்திடையே வைக்கப்படுவா னெனவும், மகளிர் தங்கணவர் சொல்வழி நடப்பாராயின் தேவர் உறையுந் துறக்கநாடு புகுவரெனவும், இந்நிலவுலகத்திற் பொன்றாது நிற்பதான புகழை ஒருவன் ஈட்டுவானாயின் அவனையே துறக்கநாடு போற்றுமல்லாது தன்கண் உள்ள தேவரையும் அதுபேணாதெனவும், பிறர் பொருளைக் கவர்வார்க்குத் தம்முடம்புந் தவறியொழியும் அது செய்யார்க்குத் தேவருலகுந் தவறாது கிடைக்கும் எனவும் நுண்பொருள் கேட்டலாகிய செவியுணாவினைப் பெறுகின்றவர் அவியுணாவினைப் பெறுந் தேவரோடொப்பரெனவும், தன் மனையாள் போகத்தையே விழைந்து அவட்கு அஞ்சிநடப்போர் தேவரைப்போற் செல்வமுடையராயினும் பெருமை எய்தார் எனவும், கீழ்மக்கள் தாம் வேண்டியவாறெல்லாம் ஒழுகுதலின் அவர் தேவரை ஒப்பர் எனவுந்தாந் தேவருண்டென்பதனைத் துணிபு தோன்றக் கூறியருளினார். இன்னும் ‘அருஞ்செவ்வி யின்னாமுகத்தன் பெருஞ் செல்வம், பேஎய்க் கண்டன்ன துடைத்து” என்பதனால், தன்னைக் காணவேண்டு வார்க்குக் காலந்தரானாய்க் கண்டவர்க்குச் சுளித்த முகத்தோனாய் உள்ள அரசற்குரிய பெருஞ்செல்வம் பேயாற் காவல் செய்யப்பட்ட பொருட்புதையல் போலுமெனவும், “உலகத்தா ருண்டென்பதில் லென்பான், வையத்தலகையா வைக்கப்படும்” என்பதனால் அறிவுடையார் பலருடையார் பலரும் உண்டென்பதொன்றை இல்லையென்றுரைக்கும் புல்லறிவாளன் ஈண்டு ஓர் பேய் என்று வைக்கப் படுவானெனவும், “அணங்கு கொலாய்மயில் கொல்லோ கனங்குழை, மாதர்கொன் மாலுமென் னெஞ்சு” என்பதனால் என்னாற் காணப்பட்ட இப்பெண் வருத்து கின்ற சூரரமகளோ சிறந்தமயிலோ மாதரார் தாமோ இன்னளென அறியமாட்டாமல் என்னெஞ்சம் மயங்குகின்ற தெனவும் பேய் மோகினி முதலிய நரகருண்மையினை ஆசிரியர் தெருட்டினாராகலின் இவர் பூதவாதிக்கு முற்றும் மாறாவரென்பது துணிபொருளாம். இனிக் கடவுளென ஒரு பொருளில்லையென்று நிறுவுறுதலே பூதவாதியின் முடிந்த கொள்கையாம். மற்று நம் ஆசிரியரோ தம்மருமைத் திருக்குறளின் முதலிலே கடவுள் வாழ்த்து என ஓரதிகாரம் வகுத்துக் கொண்டு அம்முழுமுதற் பொருளை ‘ஆதிபகவன்’, ‘வாலறிவன்’, ‘மலர்மிசை யேகினான்’, ‘வேண்டுதல் வேண்டாமையிலான்’, ‘இறைவன்’ ‘பொறி வாயிலைந் தவித்தான்’, ‘தனக்குவமையில்லாதான்’, ‘அறவாழி யந்தணன்,’ ‘எண்குணத்தான்’ எனவும், பிற அதிகாரங்களில். “தெய்வந்தொழா அள்கொழுநற்றொழு தெழுவாள் பெய் யெனப்பெய்யு மழை,’ ‘ஐயப்படாஅ தகத்த துணர்வானைத், தெய்வத்தோ டொப்பக் கொளல்”, “குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம், மடிதற்றுத் தான்முந்துறும்’ எனவுங்கூறி வற்புறுத்தாராகலின், கடவுள் உண்டென்று நாட்டுதலே ஆசிரியர்க்குப் பெருங் குறிப்பாயிற்று. அற்றன்று; திருவள்ளுவர் தம்முடைய அன்னை ஆதியையும் தந்தை பகவனையுங் கூறக்கருதி ‘ஆதிபகவன்’ எனக் கூறியதே யல்லது அச்சொற்றொடராற் கடவுளைக் கூறக்கருதினாரல்லரெனின்;- அவ்வாறாயின், தம்முடைய தாய்தந்தையரை உலகிற்கெல்லாம் முதல்வரெனக் கூறல் பொருந்தாமையின் அதுகடாவன்றென மறுக்க. “அகரமுதல வெழுத்தெல்லாம்” என்னும் உவமை எடுத்துக்காட்டிப் பின் உலகிற்கெல்லாம் முழுமுதற் கடவுளுண்டென்று தெருட்டின அவ்வாக்கியத்திற்கு அங்ஙனம் பொருளுரைத்தல் போலியா மென்க. அல்லதங்ஙனம் அம்முதற் செய்யுளுக்கு மாத்திரம் உரைகூறின், அவ்வதிகாரத்தில் அக்கடவுளியல்பை விரித்த ஏனை ஒன்பது செய்யுட்களுக்கும் அங்ஙனமே பொருள் உரைத்த லாகாமையானும், ‘தெய்வத்தோ டொப்பக் கொளல்’ முதலாகப் பிறாண்டும் அவர் கூறும் அவ்வாக்கியங்க ளெல்லாம் கடவுளையே வெள்ளிடை மலைபோல் விளங்கக் காட்டுதலானும் அவ்வாறுரைத்தல் ஆசிரியர் கருத்துக்கு முற்றும் மாறுபாடாமென்றொழிக. மேலும், அச்சொற்றொடர் முடிபை இலக்கண நெறியால் நோக்கும் வழியும் அவ்வுரை பொருந்தாமை தெற்றெனப் புலப்படுகின்றது. இரண்டும் பலவுமாகிய உயர்திணைச் சொற்கள் இடையில் உம்மையின்றிப் புணர்ந்து நிற்குமாயின் அத்தொகைச் சொற்றொடர் பலர்பால் ஈற்றான் வழங்கப்படுமென ஆசிரியர் தொல்காப்பியனார், “உயர்திணை மருங்கினும்மைத் தொகையே, பலர் சொன்னடைத்தென மொழிமனார் புலவர்” என்று கூறினாராகலின், ஈண்டு ‘ஆதி’ ‘பகவன்’ என்னும் உயர்திணைச் சொற்கள் இரண்டும் இடையில் உம்மையின்றிப் புணருமாயின் ‘ஆதி பகவர்’ என நிற்றல் வேண்டுமேயல்லது ‘ஆதி பகவன்’ என ஆண்பாற்குரிய ஈற்றான் நிற்றல் சிறிதும் ஏலாதாம். ஆதலால், ஈண்டு ஆசிரியர் தந் தாய்தந்தையரைக் கூறக் கருதினா ரல்லரென்பதும், முதலில் நின்ற ‘ஆதி’ என்னும் வடசொல் முதன்மை என்னும் பண்புப் பொருளையுணர்த்தும் அஃறிணைப் பண்புப் பெயராய்ப் பின்வரும் உயர்திணைப் பெயரோடு இயைந்துநின்று பண்புத்தொகையாய் முதற் கடவுளையே உணர்த்துமென்பதும், ‘ஆதிபகவன்’ என்னுமச் சொற்றொடர் இலக்கணநெறியால் இனிது விளக்கிற்றாகலின், அவ்வியல்பறியாது நாத்திகவாதிகள் நிகழ்த்தும் ஆசங்கை நிலைபெறமாட்டாதென்க. ஆகவே ஆசிரியர்க்கு உலோகாயதவாதி பூதவாதி முதலான நாத்திகர் கூறுமுரை உடம்பாடன்மை தெளியக் கிடந்தது. இனிக் கபிலவாஸ்துவிற் பிறந்து சீவகாருணிய வொழுக்க நல் அறவுபதேசஞ் செய்தருளிய கௌதம சாக்கியர் அவ்வற உபதேசம் மாத்திரஞ் செய்து போந்தனரன்றி, ஆன்மநிலை கடவுள் நிலைகளைப் பற்றிச் சிறிதும் பேசினாரில்லை. எனவே, ஆதிபுத்தரால் விளக்கப்பட்ட பௌத்தம் ஒரு சன்மார்க்க நெறியே யாகுமல்லது, அதனை ஒரு மதமென வைத்துக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. கௌதமர், “பிறப்பு உளதாங்காறும் பிறவித் துன்பங்கள் இடையறாது வருகின்றன; அப்பிறவித் துன்பங்களை அறுத்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நல்லொழுக்கங் களை மேற்கொண்டொழு குதலே யாவருஞ் செயற்பாலதாம்; திருந்திய நல்லொழுக்கங்களாவன தூயவுள்ளமும், தூய சொல்லும், தூயசெய்கையுமாம்; இவைதம்மைச் சலிப்பின்றிக் கொண்டு நடத்தலால் உயிர்கட்கு நிருவாணம் என்னும் வீடுபேற்றின்பம் எய்தக் கிடக்கும்” என்பதையன்றி வேறு சிறிதும் உபதேசித்தலர். இங்ஙனங் கௌதமர் அறவுபதேசமன்றிப் பிறிதொன்றுஞ் சொல்லாமையானே அவர் சீடரிற்பலர் ஆன்மநிலை கடவுள் நிலையைப்பற்றித் தாம் பலவாறு சிந்தித்தும் அவற்றிற் றுணிவுப் பொருள் பிறவாமையானே. அவர்பாற் சென்று அவை தம்மை உசாவிய வழி அவர் அவர்க்கு அவை தம்மை அறிவுறுத்திலர். ஒருகால் மலூக்கிய புத்தர் என்னும் அவர் சீடர் ஆன்ம நிலையைப் பற்றிக் கௌதமரிடம் உசாவப் புகுந்து, “எல்லாம் முற்றுப்பெற்ற புத்தர் இறந்தபின் இருப்பரோ இராரோ?” என்று வினவினார். அதற்குக் கௌதமர், “மலூக்கிய புத்த, ‘நீ என்னிடம் வந்து எனக்குச் சீடனாயிரு; உனக்கு நான் இவ்வுலகம் என்றும் உள்ளதா இல்லதாவென்று உபதேசிப்பேன்’ எனக் கூறினேனா?” என்று கேட்டார். அதற்குச் சீடர், “ஐய, அங்ஙனம் நீர் கூறியதில்லை” என்றார். அதன்மேல் அவர், “அற்றேல் இதனை என்னிடம் வற்புறுத்துக் கேளாதே. அம்பினாற் புண்பட்டான் ஒருவன் வைத்தியனிடத்துப்போய் இவ்வம்பை என்மேல் எய்தான் பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால்வரில் இன்னாரெனக் கூறினாலன்றி நீ இதனை ஆற்றுவதற்கு உடம்படேன்” என்று கூறுவனோ? ஆகையால், மலூக்கியபுத்த, என்னால் வெளியிடப்படாதனவெல்லாம் அங்ஙனமே இருப்பனவாக.”-என்றார். ஆசிரியர் அவர்களால் எழுதப்பெற்று ஞான சாகர இதழ்களில் வெளிவந்த திருக்குறளா ராய்ச்சி இந்த அளவோடு நின்றுவிட்டது. முழுமையும் வெளிவராமற் போயினமை தமிழர்தம் தவக்குறையேயாகும். - பதிப்பகத்தார். அடிக்குறிப்பு சமயக்கணக்கர் தந்திரங் கேட்ட காதை 78 - வரி 8. திருவள்ளுவர் திருக்குறள்* “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (குறள் 1) “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.” (குறள் 3) திருவள்ளுவநாயனா ரியற்றிய திருக்குறள் நூலைப் பற்றி அவர் காலத் திருந்தவர்களும், அவரைப் போன்ற தமிழறிவு வாய்ந்திருந்தவர்களும் ஆகிய தமிழ்ப் புலவர்களே பலபடப் பாராட்டிக் கூறியுள்ளார்கள். “எல்லாப் பொருளு மிதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளு மில்லையால்”, என்று அவர்களில் ஒருவர் கூறியாங்கு, மக்களாகிய நாம் எல்லோரும் அறிய வேண்டுவன எல்லாம் இத் திருக்குறள் நூலின்கண் உள. ஆகவே, அத்தகைய பெருமை வாய்ந்த ஒரு நூலைப் பற்றிச் சிறிது நேரத்தில் ஒரு சிறிது எடுத்துப் பேசுவது அருமையிலும் அருமையாகும். கடல் நீரை அளக்கக் கருவியு முண்டோ? “ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடலில் நாழி முகவாது நானாழி”. ஆகவே, கடல் நீரை அளந்தெடுத்து அறுதியிட்டுக் கூறுதற்குரிய கருவி ஒன்றை யாம் இதுகாறுங் கண்டிலம். அது போலவே, குறளாகிய கடலிலுள்ள அரும்பொருளாகிய நீரை அளந்தறியும் கருவியு மொன்றுண்டு கொல்! ஆகவே குறளாகிய அப்பேராழியில் என் சிற்றறிவாகிய சிறு நாழி கொண்டு எத்துணை முகத்தற் கூடுமோ, அத்துணையளவுக்கு முகந்தெடுத்துக் கூற முயல்வேன். இம் முயற்சிக்கு உறுதுணையாகத் திருவள்ளுவர் காலத் திருந்த ஓராசிரியர் பாடிய பாட்டொன்றையே முதற்கண் துணைக்கொள்வேன்; “ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி” -கல்லாடர் என்பது அப்பாட்டு. திருவள்ளுவர் காலமோ, இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேற்பட்டதாகும். அக்காலத்திலிருந்த பல திறப்பட்ட மதக் கொள்கைகள் ஆறு சமயங்களாகப் பிரிக்கப்ட்டிருந்தன. இவ்வாறு சமயத்தோரும் தத்தம் சமயமே பெரிதென்றும், தத்தஞ் சமயக் கொள்கைகளே தலைச்சிறந்தனவென்றும் வழக்கிட்ட தோடன்றிப் பிற சமயங்களை மனம் போனவாறு இழித்துங் கூறிவந்தார்கள். இவ்வாறாக மாறுபட்ட இவ்வறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார். அன்றியும் பல வகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அந்நூல் செய்யப்ட்டிருந்தமையினாலேயே அதனை “எப்பாலவரும்” தழுவிக் கொள்வாராயினர். முப்பால் என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமேயாம். இந்த முறையிலேயே திருக்குறள் நூல் யாக்கப் பட்டதாகும். இதுபற்றியும் அந்நூல் யாவராலும் மாறுபாடின்றித் தழுவப்பட்டு வருவதாயிற்று. ஒரு நூலை இயற்றுங்கால் அந்நூல் எல்லோர்க்கும் உறுதியளிக்கத் தக்க வகையில், பயன்றரத் தக்க வகையிலும், எல்லோரையும் புனிதப்படுத்தத் தக்க வகையிலும் அதனை இயற்றி முடித்தல் என்பது எல்லார்க்கும வாய்ப்ப தொன்றன்று, அஃதவ்வாறாக, “அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின் றிறன றிந்தேம் வீடு தெளிந்தே - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு”. என்று வள்ளுவர் காலத்துப் புலவரொருவர் வியந்து பாடுமாறு நூலியற்றினார் வள்ளுவனார் எனின், அவர் பெருமை இனைத்தென்று சொல்லவும் போமோ? “அறம்பொரு ளின்பம்வீடு டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்”. என்றார் மற்றொரு மாப்புலவர் மாமூலனார். “தேவை” என்றது தெய்வத்தை என்று பொருள்படும். உண்மைத் தெய்வங்களை யன்றி மக்களை எளிதிற் பாடிப் புகழாத் தன்மை வாய்ந்த ஒரு பெரியார் வள்ளுவனாரைத் “தேவை” எனப் புகழ்ந்தனர்; ஆம், அக்கால இயற்கைக்கு மாறாகப் புகழ்ந்தனர். எத்துணைக் கற்று எத்தனை எழுதினும், மகனாய்ப் பிறந்த ஒருவனைத் தெய்வம் என்று புகழ்ந்து கொண்டாடுதல் அன்றும் இன்றும் ஆங்கிலேய ரிடம் காணப் பெறாமை நோக்கத் தக்கதாகும். நிற்க, இப்பாட்டே துணையாக வள்ளுவனாரை வள்ளுவச் சாதியிற் பிறந்தவராகக் கொண்டு கூறுவோர் கூற்று, அறிவில் கூற்றேயாகும். முப்பாலின் பயன் விடென்பது ஒப்ப முடிந்ததோர் உண்மையாகும். வீடு என்பதையும் முப்பாலுடன் சேர்த்து நாற்பால் என மொழிதலும் உண்டு. அத்தகைய விழுப்பயனாகிய வீட்டை உய்த்தறியுமாறு உள்ளடக்கி வைத்து, “முப்பாலில் நாற்பால்” மொழிந்த பெருமை திருவள்ளுவர்க்கே உரித்து. இனி, வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டு கட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரிவான ஆராய்ச்சி செய்து, “திருக்குறளாராய்ச்சி” என்று முன்னர் எழுதிய ஒரு முற்பகுதியிலும், “மாணிக்க வாசகர் காலமும் வரலாறும்” என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றில் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை, சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் “மணிமேகலைமே லுரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” என்பதனால் அறியப்படும். மணிமேகலைமேலுரைப் பொருள் முற்றிய நூலொன்றை இயற்ற எண்ணங்க கொண்ட வாராய் ஆசிரியர் கோவலன் கதையைக் கூறி “அரசியல் பிழைத் தோர்க் கறங் கூற்றாவதூஉ, முரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலு, மூழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉஞ், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச், சிலப்பதிகார மென்னும் பெயரா, னாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரிய, தடிகணீரெ யருளுக”, என, “உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்” என்பது உற்று நோக்கற்பாலது, சாத்தனார் பாண்டியனவைக்களப் புலவர்; அவர் “சிலப்பதிகாரம்” இயற்றப் புகுவாராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங்கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும் துறவிக்கு வேந்தன் துரும்பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த்துணரற் பாலனவாம். “வேந்தர் மூவர்க்கு முரிய தடிகணீரே யருளு கென்றாற்கு” என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “தான் பாடக்கருதி வினாவின சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனங் கூறினாரென்க. என் சொல்லியவாறோ வெனின் இச் செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரை யாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே அருளு மென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டா ரென்பதாயிற்று” என உரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று. இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட்டுவனின் இளவல். ஒரு நாள் அரசவையில் இவர்தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்திகன் வந்து இவரை அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அது கேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறுமிகுந்து கண்ணெரி தவழ அண்ணலை நோக்குவதைக் கண்ட இவர், உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவுபூண்டு “சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத் தரைசாள் வேந்த”ராயினார். இத்தகையப் பெரியாராகிய இளங்கோவடிகளும் கூல வாணிகன் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என மேலே கூறினாம். சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெறுங்காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அவனுடைய காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும். அக்காலத்ததே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலையு மாகும். அம் மணிமேகலையில் “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை” என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார். எனவே, திருவள்ளுவனார் காலம் 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுயாம் ஆராய்ந்து கண்ட முடிபாகும். இனி, திருவள்ளுவரின் பெற்றோர் யாரென ஆராய்வாம்; எண்ணுhறு ஆண்டுகட்குமுன் எழுதப்பட்ட ஞானாமிர்தம் என்ற நூலில் அவர்கள் பெயர் யாளிதத்தன் என்றும ஆதியென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கபிலரகவல் என்ற மற்றொரு சிறந்த தமிழ்ச் செய்யுணுhலில் அவை பகவன் என்றும் ஆதியென்றும் குறிக்கப் பட்டுள்ளன. இக்கபிலர் சங்க காலக் கபிலரே என்பதும், இவர் கூறிய கதையில் பிறழ்ச்சி யொன்றுமில்லையென்பதும் உண்மை களாகும். சொற்போக்கு, பொருள்வளம், நடை முதலியவற்றை ஒப்பிடுவோர்க்கு இவ்வகவல் சங்க காலத்ததே என்பது புலனாம். ஆகையால், இதன்கண் கூறப்படும் உண்மைகள் கொள்ளத் தக்கனவே. இவ்வகவலில் “வள்ளுவர் வளர்க்க வள்ளுவன் வளர்ந்தனன்” என்று கூறப்பட்டுள்ளது. இனி, குறளிற் காணப்படுஞ் சொற்களெல்லாம் தனித்தமிழ்ச் சொற்களே. அந்நூலெழுந்த காலம் தனித்தமிழன்னை அம்பலக் கூத்தனோடு தாண்டவமாடிய காலம்; உருக்கி வார்த்த பசும்பொற் பாவைபோல் அவ்வன்னை இன்பக் கூத்தாடிய காலம். மாசு நிறைந்து,திருவழிந்து, ஆரியமும், ஆங்கிலமும் ஆகிய அம்மைத் தழும்புகளுடன் தோன்றும் இக்காலத் தமிழன்னையை யொத்து அக்கால அன்னையைக் காணல் முடியாது. எழுதிய வெல்லாம் தூய தமிழில் எழுதப்பட்ட அக்காலத்தில் எழுந்த தாகும் குறள் என்னும் ஒப்பிலாத தூய தமிழ் மறை. அவ்வாறு கலப்பில்லாத தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலின் றொடக்கத்திலேயே ஆசிரியர் “ஆதிபகவன்” என்ற இரு வடசொற்களை யமைத்திருத்தற்கு ஒரு சிறப்புக் காரணம் இருந்திருத்தல் வேண்டும் என்பது எளிதில் ஊகிக்கப்படும். தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையரை ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியர் போற்றுவதற்காகவே அவ்விரு சொற்களையும் முதற்கண் வைத்தார் என்று கோடல் மிகையாகாதென்பதே எமது கருத்தாகும். பண்டைக் காலந் தொட்டே பரம்பொருளை அம்மை யப்பராகப் போற்றி வரும் வழக்கம் தமிழ் நாட்டின்கண் இருந்து வந்துளது. இவ்வழக்கம் எகிப்து,பாபிலோனியா, எருசலேம் முதலிய நாடுகளிலும் பண்டைக் காலத்திலிருந்தமை ஒப்புநோக்கி மகிழ்தற்குரியதாம். கத்தோலிக்கர்களின் கருத்தும் இக்கருத்தை ஒத்திருப்பதும் நோக்கற்குரியதாகும். கடவுள் மகனைத் தன் வடிவிலேயே படைத்தார் என்பது விவிலிய நூற் கருத்து. கடவுளை ஆண் தத்துவத்தில் அப்பானகவும் பெண் தத்துவத்தில் அம்மையாகவும் பரம பிதா என்றும் பரிசுத்த ஆவி என்றும் இன்றும் கிறித்தவர்கள் வணங்கி வருவது யாவருமறிந்ததே. ரிக் வேதத்திலும் ஆண் வடிவமாகிய உருத்திரனுக்குப் பக்கத்தில் அம்மை வடிவமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உலகமே ஆண் பெண் வடிவு கொண்டதாகும். ஓரறிவு முதல் ஆறறிவீறாகவுள்ள எல்லா உயிர்களின் மாட்டும் காணப்படும் இவ்விருகைத் தோற்றத்திற்கு மூலம் இறைவனதுள்ளமே. ஆகவே, இவ்விருமைப் பண்பு தோற்றும் குறியீடாகிய உடம்பை இம்மண்ணிடைத் தமக்களித்த பெற்றோர்களுக்கு நன்றி கூறுவான் கருதியே ஆசிரியர் “ஆதிபகவன்” என்ற சொற்களை முதற்கண் அமைத்தார். இனி, எல்லாம் அறிந்த ஞானியாகிய வள்ளுவர் அழிதன் மாலைத்தாகிய இவ்வுடம்பு பெற்றமை கருதி மகிழ்வாரோ என்ற ஐயம் நிகழலாம்! “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.” என்பது திருமூலர் வாக்கு. இப்பாட்டின் முதல் வரியில் கூறியாங்கு, உடம்பு இழுக்காகும்; அது தீயது; ஒழித்தற் பாலது என்று ஒருகாற் கருதி வந்தது புத்த சமணக் கொள்கைகளைப் பின்பற்றியேயாம். தமிழ் நாட்டவரோ, “உடம்பா ரழியின் உயிரா ரழிவர், திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவு மாட்டார்” என்ற துணிபுடையவர். மணிமொழியாரும் முதலில் உடலை இழித்துப் பேசி “காயத்திடுவாய், உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே” என்று கூறினும், பின்னர், “புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே!” என்பதனால், உடல் ஆண்டவன் தந்த அரும்பொருள் என்பதனை உணர்ந்து பாடியுள்ளமை உய்த்துணரற் பாற்று. இற்றைநாள் அறிவியின் முறைப்படி என்னென்ன புதுமைகளை இயற்றக் கூடுமாயினும், தாய் தந்தையின் சேர்க்கைக் காரணமின்றிப் புதிதாக ஓருடலைப் படைக்குமாறில்லை என்பதியாவரும் அறிந்ததே. இது கருதியன்றோ வள்ளுவரின் தமக்கை யாராகக் கருதப்பட்டு வரும் அவ்வையாரும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அறைந்ததாகும்! அம்மை காட்ட அப்பனை அறிவதே தமிழர் தத்துவம் என்பதும் இங்குக் குறிக்க வேண்டுவதொன்றாகும். அது கருதியே அவ்வையார் “அன்னையும் பிதாவும்” என்று முறைப் படுத்தியதும், ஆசிரியர் “ஆதி பகவன் என்று அமைத்ததுமாகும். இக்கூறியவாற்றல் தமக்கு உடம்பை யளித்து உயிரை மேன்மையுறுமாறு செய்த ஆண் பெண் தத்துவங்களாகிய அம்மையப்பரைப் போற்றும் எண்ணங் கொண்டே ஆசிரியர் “ஆதி பகவன்” என்ற இரு வடசொற்களை முதற்கண் அமைத்தார் என்று கூறினேன். இக்கருத்து ஏற்குமேற் கொள்க. இனி, திருவள்ளுவர் தம் பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. பண்டைக் காலத்தில் வரலாறு குறிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருகால், தப்பித் தவறிக் குறித்து வைத்திருந்த போதிலும், அக்குறிப்புகள் செல்லுக் கிரையாயினவோ, அன்றி, ஆடிப் பெருக்கில் மறைந்தனவோ, ஒன்றும் துணிந்து கூறுதற்கில்லை. வள்ளுவர் என்று ஒரு மகன் பெயரிடப்படுதல் யாண்டும் வழக்கி லிருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், தொன்மையாக அப்பெயர் இருந்து வருவது குறித்து அஃதே பெயராகக் கொள்ளலே அறிவுடைமை யாகும். அப் பெயர் தமிழ்ப் பெயர் என்பது ஒன்று மட்டும் சற்று ஆறுதல் அளிக்க வல்லதாம். இனி,அவர் மனைவியாரின் பெயர் சற்று ஐயம் விளைப்பதாகும். பலர் கூறுகிறபடி அப்பெயர் வாசுகி என்பதாம். இது வடசொல் என்பது யாவருமுணர்ந்ததே. திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் சங்க காலத்திற்கு முந்திய காலத்தில் இப்பெயர் ஒரு தமிழ்ப் பெண் மணிக்கு இருந்திருத்தல் கூடுமோ? பீலிவளை என்றும் வெள்ளி வீதி என்றும், நச்செள்ளை என்றும் பெயர்கள் வழங்கி வந்தமைக்குச் சான்றுகளிருப்ப, வாசுகி என்னும் பெயரமைந்தது எவ்வாறு? தமிழ்ப் பெயர்களை யெல்லாம் வடமொழியாக்கிக் கூறும் வழக்கம் அப்பொழுதே கால் கொண்டதோ? அன்றி, வாசுகி என்ற பெயர் பின்னர் வரலாறு எழுதப் புகுந்தோரால் புனைந்தெழுதப்பட்டதோ? வாசுகி என்பது பாம்பு. பாம்பு என்பதைப் பாப்பு என்று வலித்துக் கூறுதலுமுண்டு. இனி, தமிழ் நாட்டில் பாம்பு என்னும் பெயர் பெண்களுக்குப் பண்டைக் காலத்திலிருந்தே இடப் படுதல் பெருவழக்காகும். நாகம்மை என்றும் பாப்பம்மை என்றும் பெயர்கள் அன்றும் இன்றும் காணக் கிடப்பனவாம். எனவே, வள்ளுவர் மனைவியாரின் பெயர் பாப்பம்மையாக இருக்க, வரலாறு எழுதிய பிற்காலத்தாரால் அது வாசுகி என்று மொழி பெயர்த் துரைக்கப் பட்டதுபோலும்! மனைவியாரின் பெயர்போலவே, அவ்வம்மையாரின் தந்தையாரின் பெயரும் வடமொழியிலேயே அமைந்துள்ளது. மார்க்க சகாயர் என்ற அப்பெயர் தமிழில் வழித்துணைவர் என்று பொருள்படும். இனி, வள்ளுவர் மனைவாழ்க்கையைப் பற்றி எழுந்துள்ள பழங்கதைகள் பற்பல. “இழை நக்கி நூல் நெருடும் ஏழை யறிவேனோ, குழை நக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” என்பதைக் கொண்டு, அவர் நெசவு செய்து வாழ்ந்ததாகவும், இறைவனே திருவள்ளுவரைக் கேட்டுணருமாறு குறித்ததாகவும் கதைகள் கூறப்பட்டன. “அடிசிற் கினியாளே, அன்புடையாளே, படிசொற் கடவாத பாவாய்,” என்ற ஒரு தனிச் செய்யுளே பற்றுக கோடாகப் பழஞ்சோற்றிற்கு விசிறி கொண்டு வீசச் சொன்னதும், பகலில் விளக்கேற்றச் சொன்னதும், நீர் முகந்து கொண்டிருக்கையில் விளித்துக் கைக்கயிற்றை விட்டுவரச் சொன்னதுமாகிய பல கதைகள் உலவுகின்றன. இனி, அவர் நெய்து விற்கக் கொண்டுவந்த ஓராடையை விலைகேட்ட ஒரு பொடியன், 2 பணம் என்ற வுடன் பாதியாகக் கிழித்து விலை கேட்க ஒரு பணம் என்றதாகவும், அதையும் இரண்டாகக் கிழித்து விலை கேட்க அரைப்பணம் என்றதாகவும் ஒரு கதை அவர்தம் பொறுமையைக் காட்ட எழுந்துள்ளது. ஒரு நாள் ஒரு குறும்பன் அம்மையார் கையைப் பிடித்திழுத்ததாகவும், உடனே ஆசிரியர் அவனை ஓங்கி அறைந்ததாகவும், அடிபட்ட அவன் “இவ்வளவுதானா உமது பெற்றி? “அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்த றலை.” (குறள் 151) என்று நீர் கூறிய நீதி உமக்கன்றோ?” என்று கேட்டானாக, “அறிவிலீ, ‘செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’. (குறள் 466) என்பது ஓதிற்றிலையோ?” என மடக்கினார் என்றும் ஒரு கதையுண்டு. இன்னும் இத்தகைய கதைகள் பல கூறுவர். இவை யாவும் உண்மையோ, பொய்யோ என்று துணிந்து கூறுதற் கில்லை. இனி, ஆசிரியரியற்றியவாக வழங்கும் சிறு நூல்கள்- சித்தர் நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள்- அளவற்றன. இவையெல்லாம் அவரியற்றின என்று துணிவதற்குஎத்தகைய சான்றுங் காணவில்லை. ஆகவே, குறள் ஒன்றே ஆசிரியரியற்றி முடித்த ஒரு நூல், ஒரு தனி நூல் என்றே கொள்ளக் கிடக்கின்றது. அதனை ஒத்த ஒரு நூலை இயற்றி முடிக்க ஓர் உண்மை ஆசிரியர்க்கு அவரது ஆயுட்காலம் முழுதும் பிடிக்குமென்றும், அதனை இயற்றி முடித்தபின் வேறொன்று தொடும் நோக்கமே அவர்க்கு இருந்திருத்தல் முடியாது என்றும் நான் கருதுகிறேன். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறுவளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினாலொக்க. திரண்ட காப்பியங் களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டிய தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். இச்சுருங்கிய திருக்குறள் நூலோ, உண்மையாய் நோக்கப் பரந்ததொரு வான்வெளியாம். இந்நூலிலடங்காத பொருளில்லை. எல்லாப் பொருளும் இதன்கண் அடங்கும். அவ்வாறாக, சொல்லாற் பரந்த பாவாலென் பயன்? வள்ளுவனார் சுரந்த பாவே வையத்துணையாம். அதிலும், ஓயாப் பிறவி பிறந்தெய்க்கும் இந்நிலையில் வாழ்க்கைக்குச் சொற் பரந்த பல நூல்களாலாவதென்னை? அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திய அருங்குறணுhலே உறுதுணை. இத்தகைய ஒரு நூலை இற்றைக் காலப் புதுக் கதைகளைப்போன்று ஓரிரவிலோ அன்றி ஈரிரவிலோ எழுதி முடித்தலியலுமோ? உலக வாழ்க்கையினியல்பு, உலகிடை அல்லற்படும் ஆருயிரியல்பு, அறியாமை, அறியாமை நீக்கம், இறைவனடி சேர்தல் ஆகிய அரும் பெரும் உண்மைகளைப் பன்முறை ஆய்ந்தாய்ந்து, பார்த்துப் பார்த்து, முடிபுகள் எய்த எய்த அவற்றைக் குறித்துக்கொண்டு வந்திருத்தலே இயல்பாகும். இளமை முதல் முதுமைவரை இதையொழிந்த வேறொன்றை எண்ணிப் பார்க்க ஆசிரியர்க்கு நேரம் இருந்திராது என்று கூறுதல் மிகையாமோ? ஜான் ஸ்டூவர்ட் மில் என்ற ஆங்கிலப் பேராசிரியர் “லிபர்ட்டி” (விடுதலை) என்ற ஒரு கட்டுரையை எழுதி முடிக்க ஏழாண்டுகள் ஆயினவென்றும், கிரை என்ற மற்றோராசிரியர் “எலிஜி” என்ற இரங்கற் பாவொன்றைப் பாடி முடிக்க ஏழெட்டாண்டுகள் ஆயிற்றென்றும் அறியின் மேற்கூறிய கூற்று மிகையாகாதென்பது எளிதில் விளங்கும். இதனைத் தெரிக்க ஒரே ஒரு சான்று யாதெனின், குறணுhலிலுள்ள குறள்களில் யாதேனு மொன்றிலுள்ள ஒரு சொல்லை நீக்கி, எளிமையும், அழகும் பொருள் வளமும், இயைபும் கெடா வண்ணம் மற்றொரு சொல்லை யமைக்க முடியுமா? முடியாது என்பதேயாம். எனவே, இத்தகைய ஒரு நூலை ஒருவர் தம் ஆயுட்கால முழுதும் அரிதில் முயன்று திருத்தி அமைத்துள்ளார் என்பதில் காணக் கிடப்பதோர் இழுக்கில்லை யென்க. எனவே, மக்கள் வாழ்க்கைக்கு எவ்வாற்றானும் இந்நூலொன்றே சாலும்; இதற்கு மேலும் நுணுகிச் சென்று சிந்தித்து மகிழ விரும்புவோர்க்குத் திருவாசகம் ஒன்றுபோதும். இது புறனடை. இத்திருத்தகு தெய்வத் திருமாமறை மதுரைக் கடைச்சங்கத் தரங்கேறியது குறித்தும் ஒரு கதை எழுந்துள்ளது. அரங்கேற்றற்குத் தலைமை தாங்கிக் கேட்டற்குரியார் உருத்திரசன்மர் ஒருவரே என்று ஓரசரீரி கூறிற்றாம். அவர் ஒரு குழந்தை யென்றும், மூங்கை யென்றும் நக்கீனாருரை கூறும். மூங்கையா யிருப்பானொருவன் இயற்கையாய்ச் செவிடாகவு மிருப்பானென்பதை நோக்குங்கால் களவியற் பாயிரக் கூற்று முழுவதும் நம்பத் தக்கதோ என்ற ஐயம் எழுகின்றது. எனினும், உடனிருந்து தலைமை தாங்கிக் கேட்ட ஒருவர் ஓரளவிற்குத் தெய்வத் தன்மை வாய்ந்தவராயிருந்திருத்தல் வேண்டும் என்பதை மட்டும் உண்மைக்குப் புறம்பின்றி உய்த்துணரலாம். இதுபோன்றே சங்கத்துத் தலைமை தாங்கி நூல் கேட்கும் கூலவாணிகன் சாத்தனார் தாம் கேட்கும் நூல்களிற் குற்றங் கண்டபோதெல்லாம் எழுத்தாணி கொண்டு தம் தலையிற் குத்திக் கொள்வர் என்றும்; அதனாற் சீழ்ப்படுத்த தலையுடையவராய் அவர் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயர் பெற்றார் என்றும் வழங்கும் கதையும் நம்பத் தகுந்ததாய்த் தோற்றவில்லை. அதிலும், சீத்தலை என்பது ஓரூரென்பதையும், சீழ் கொண்டதலை சீழ்த்தலையாகுமே யன்றிச் சீத்தலையாமாறில்லை என்பதையும் நோக்குங்கால் கொண்ட ஐயம் வலுப்பெறுமேயன்றிக் குறையு மாறில்லை. ஆயின், “ சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்” என்ற பாட்டில் உள்ளுறை உண்மையேதும் இல்லையோ எனின், உண்டு. சாத்தனார்க்கு உண்மையாகத் தலைக்குத்து என்னும் நோயிருந்திருந்தால், அந்நோய் அறிவு நிரம்பிய திருக்குறணுhலைப் படிக்கக் கேட்டவளவானே நீங்கிற்று என்பதே அவ்வுண்மை யாதல் வேண்டும். மருந்தால் தீராத நோய்களை நூற்களைப் படித்தலினால் தீர்த்து வைக்கும் முறை அமெரிக்கா நாட்டில் இன்றும் கையாளப் பட்டு வருதல் பலரறிந்த தொன்றாகும். படிக்கக் கேட்கும் நூலிலுள்ள பொருளில், கேட்கும் நோயாளியின் அறிவு சென்று பதிந்துறைவதால் கொண்ட நோய் மறைந்தொழிகிறது என்பதே அம்முறையின் அடிப்படையான கொள்கை. இசை பாடுவதாலும், கடவுளைப் பராய்ப் பாடுவதாலும் உடல்நோய் தீரக் காண்டற்கும் இதுவே அடிப்படையாகும். எனவே, செந்தமிழாகிய திருக்குறள் தேன் காதுகளில் நுழையவே சாத்தற்குத் தலைக்குத்துத் தீர்ந்தது போலும்! நோய்க்கு மருந்தாவதும் திருக்குறளே என்பதும் இதனாற் பெறப்படும். அருமருந்தாயமையும் இந்நூலை யருளிய ஆசிரியர் தம் இல்லற வாழ்க்கையைக் குறித்து, “அடிசிற் கினியாளே அன்புடையாளே” என்ற தொடக்கத்துச் செய்யுளிற் குறிக்கப் பட்ட தொன்றைத் தவிர்ந்த பிற அகச்சான்று ஒன்றும் கிடைக்க வில்லை “அடிசிற் கினியாளே” என்று ஆசிரியர் முதற்கண் அட்டிற் றிறத்தை வியந்து விளித்தமை ஏனொவெனின், அத்திறத் தினாலேயே பெண்பாலார் தம் அன்புடைமை வெளிப்படுமாதலி னென்க. அன்போ, குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும்போல ஒருவர் தந்து காட்ட இயலாத தொன்று. அற்றாக, நாண்மிகுந்த மனைவியர் தம் கணவர்பால் அன்பு செலுத்தி ஈடுபட்டிருப்பதை அன்னார் விரும்பியாங்கு உணவு திருத்திச் சமைத்துப் படைத்தலி னாலேயே வெளிக் காட்டுவார். இதை யுணர்த்தவே, “அடிசிற் கினியாளே” என்று வியந்த ஆசிரியர் “அன்புடையாளே” என்று அடுத்து அரற்றி உண்மை தெரித்தனர். கணவன் மனைவி வாழும் முறை மிகவுஞ் சிறந்த தாக இருக்க வேண்டுமாயின், மனைவி, “மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள் 51) என்பதற்கிலக்கா யிருத்தல் வேண்டும் என்று ஆசிரியர் நன்கு எடுத்து விளக்கி யுள்ளார். அக்கூற்று அவர் தம் வாழ்க்கையிற் றாம் அறிந்துணர்ந்ததே என்பதை நோக்கின், வியக்காமலிருத்தலு மொல்லுமோ? மனைவியார் இறந்ததன் பின் எத்துணைக்காலம் ஆசிரியர் வாழ்ந்திருந்தார் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் ஆசிரியர் எண்பது ஆண்டுகட்குக் குறையாமல் நூறு ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்திருக்கக் கூடும் என்பதே என் கொள்கை. இக் கொள்கை தானும் ஆசிரியரே எழுதியுள்ள “மருந்து” என்னும் அதிகாரத்திற் கண்ட உண்மைகளைக் கொண்டு ஆராய்ந்து துணியப் பட்டதாகும். “அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து” (குறள் 944) என்று ஆணையிட்டார் ஆசிரியர். தேரையரும் ஞாலமே வந்திட்டாலும் “பசித்தொழிய உண்ணோம்” என்றார். இதனால் பசியாமலுண்டால் நோய் அணுகும் என்பதும், நோயணுகுங்கால் உண்ணாது பட்டினி கிடந்தால் நோய் விலகும் என்பதும் போதருவனவாம். டாக்டர் டியூபி என்ற மேனாட்டு மருத்துவர், இன்றும் இவ் வுண்மையைப் பின்பற்றி நோயாளிக்கு வேறு மருந்தொன்றும் கொடாமல், மலக்குடலைக் கழுவச் செய்தபின் 10 நாட்களென்றும் ஒரு திங்களென்றும் இரண்டு திங்களென்றும் பட்டினி கிடக்கச் செய்து நோய் தீர்த்து வருகிறாரென்று கேட்டிருக்கலாம். இது கொண்டு வெறும் பட்டினி கிடந்து மருந்தொன்றும் எடாமலிருப்பதால் நோய் தானே தீர்ந்து விடுமென்று கருதிவிடக் கூடாது; குறிப்பிட்ட சில செயன் முறைகளையும் உடன் கையாள வேண்டும். பெற்றோரின் ஒழுக்கக் கேட்டாற் பல நோய்களுக்கு ஆளாகப் பிறந்த ஒரு சிறுவர் அளவற்ற மருந்துண்டும் நோய் தீராராய், இறுதியில் 35 நாள் பட்டினி கிடந்து முழுநலம் எய்தியதாகக் குறிக்கப்பட்டுள்ளது; பண்டைக்காலத்து நம் நாட்டு முனிவர்கள் பட்டினியால் நோய் நீக்கும் முறையைக் கையாண்டதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முறையாகப் பட்டினி கிடப்பதால் உடல் சுடர்விரி பசும் பொன்னென இலகும் என்பதும் பண்டைக் கோட்பாடு. ஆங்கிலத்தில் பட்டினியின் உண்மைப் பொருள்” (கூhந ஞாடைடிளடியீhல டிக குயளவiபே) என்றே ஒருநூல் எழுதப்பட்டுள்ளது. இஃதிவ்வாறாக, இற்றைநாளில் தமிழ் நாட்டு மருத்துவர்கள் தங்கள் மருந்து பிடிப்பதற் கெனச் சாராயத்தையும், எலும்புச் சாற்றையும், ஊன் சாற்றையும், முட்டையையும் உண்ண வைத்தல் எத்துணை இரங்கத் தக்கது! “மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு” (குறள் 945) என்று வள்ளுவர் அறிவு தெருட்டியதை அவர்கள் ஓர்ந்திலர்கள் போலும்! அஃதொன்றுமே யன்றி அவர்கள் கையாளும் முறையால் மறைமுகமாகப் புலா லுண்ணல், கொலை என்ற குற்றங்களுக்கும் ஆளாகின்றனர் என்பதையும் அவர்கள் உணர்வார்களாக. இனி, குறித்த முறைப்படி வாழ்ந்து வந்தால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்திருத்தல் கூடும் என்பது இற்றை நாளிலும் காணக்கிடப்பதோர் உண்மையாகும். மேனாட்டார்களிற் பலர் நூற்றுக்கு மேலும் வயது சென்றும் உயிர் வாழ்ந்திருப்பதாகக் கேட்கவில்லையா? சீனநாட்டில் ஒருவர் 340 ஆண்டுகள் உயிருடனிருக்கவில்லையா? “சந்ததமும் இளமையோடிருக்க லாம்” என்று தாயுமானர் அறுதியிட்டுக் கூறவில்லையா? முதுமை என்பது உண்மையில் முறைகேடான வாழ்வினால் எய்துவதொன்றே அன்றோ? முதுமை யெய்தின் சாவு பின் தொடரும் என்பதைக் கேட்கவும் வேண்டுமோ? எனவே, தாம் சொல்லியபடி உண்மையில் நடந்து காட்டும் பேராற்றல் வாய்ந்த நம்மாசிரியர் எண்பது முதல் நூறு ஆண்டுகள் வரையேனும் உயிர் வாழ்ந் திருத்தல் வேண்டும் என்று கொள்வதில் காணக்கிடப்ப தோர் இழுக்கில்லை. இவ்வளவே நம் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து உய்த்துணரக் கூடியனவாம். இனி, நூலைப்பற்றி ஒரு சிறிது விளக்கிக் கூறி என் தலைமை யுரையை முடிப்பேன். முப்பால் என்றது அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பால்களை என யாவரும் எளிதிலுணரக் கூடும். அம்மூன்றையும் பற்றி இந்நூல் என்ன கூறுகிறது என்றாலோ, யாவரும் அறிந்த உண்மைகளையே திருத்தமாகக் கூறுகிறது. இதிலென்ன வியப்பு என்று கேட்கலாம். தெரிந்த ஒரு பொருளை விளக்கிக் கூறுவது எளிதன்று. அவ்வரிய செயலைச் செவ்வனே செய்து முடித்ததே ஆசிரியர் பெருமையாகும். ஒரு மாணவன் “திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றிக் கூறுகின்றது என்றீர்களே! அறம் என்றால் தர்மந்தானே?” என்று கேட்டான். அதற்கு ஓராசிரியர் “அறம் தர்மம் என்று வடசொல்லாற் குறிக்கப்படும் பொருளை மட்டுங் குறிப்பதன்று. சிறந்த பொருளை உட்கொண்டிருக்கும் அறம் என்ற தமிழ்ச் சொல் குறிப்பது “நல்ல ஒழுகலாறு என்பதாம்” என்றார். “நல்ல ஒழுகலாறு என்றால் அஃதென்ன?” என்று மடக்கினான் மாணவன்; மறுமொழி கூறாது திகைத்தார் அவ்வாசிரியர். தெரிந்த ஒரு பொருளை விளக்கிக் கூற முடியாமல் விழிப்பதைப் பலர்மாட்டும் இன்றுங் காணலியற்கை. அறம் என்பது இரவலர்க்குப் பொருளீயும் ஈகை மட்டுமன்று, “அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கு மிழுக்கா வியன்ற தறம்”. (குறள் 35) என்றார் ஆசிரியர். இந் நான்கும் சேராமற் காத்தலே அறம் என்றார். அழுக்காறு என்ற ஒன்று, கொண்டவனுக்கும் அதற்கு இலக்கானவனுக்கும் ஒருங்கே கேடு பயக்கும். பேராவல் அல்லது பேராசையால் பல துன்பங்கள் எய்தும் என்பது கண்கூடு. இனி, வெகுளியோ, சினக்க வேண்டிய விடத்திற் சினவாமல், அல்லிடத்துச் சினத்தலாம். இச் சினத்தால் பிறர்க்கே யன்றிச் சினங் கொண்டானுக்கும் துன்பம் நேர்தலுறுதி. சினம் கொள்வதால் உடல் ஒருவித நடுக்கமுறுகிறது. இதனாலேயே, “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று கூறிய ஆசிரியர் அதனை நன்கு விளக்குவான் கருதி, “சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”. (குறள் 307) என்று அடுத்து மொழிந்தார். மிகுந்த சினத்தினால் திடுமென ஒருவர் உயிர் நீத்ததை நானறிவேன். ஒரு தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கீழே கிடத்தினாள்; குழந்தை இறந்துவிட்டது. காரணந் தெரியவில்லை. ஆராய்ச்சி செய்து பார்த்ததில் தாயின் பால் நஞ்சாக மாறியிருந்த தறுவாயில் குழந்தை அப்பாலையுண்ட தால் இறக்க நேரிட்டதென்றும், அவ்வாறு பால் நஞ்சாக மாறியது, பால் கொடுக்குங் காலத்து அண்டை வீட்டுக்காரி ஒருத்தியுடன் தாய் மிகவுஞ் சினந்து சண்டை போட நேர்ந்தமை தானென்றும் தெரியவந்தன என்று ஒரு மேனாட்டறிஞர் குறித்துள்ளார். சில நேரங்களில், என்னையுமறியாமல் எனக்குச் சினம் மிகுந்த காலை, என் உயிரே போவது போல எனக்குத் தோன்றியதுண்டு; அன்றியும், அதன்பின் ஏழெட்டு நாட்கள் வரை உடல்நலங் குன்றிக் கிடப்பேன். இனி, இன்னாச் சொல்லும் விலக்கற் குரித்தாம். “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினு மஞ்சப் படும்”. (குறள் 202) தீமை என்றவுடனே துறக்க நிரயம் என்று கொண்டுவிட வேண்டுவதில்லை. “அறஞ் செய்தான் சுவர்க்கம் புகும்; மறஞ் செய்தான் நிரயம் புகும்” என்று கூறுவதெல்லாம், ‘நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும்’ என்பதைக் குறிப்பதற்கேயாம். சிலர்க்கு அறஞ் செய்வதால் பெரியதோரின்பம் விளையக்கூடும். “ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்”. (குறள் 228) என்று ஆசிரியர் கூறியது இது கருதியேயன்றோ? இத் திருவள்ளுவர் திருநாட் கழகத் தலைவராயிக்கும் என் நண்பர் திரு. கா. நமச்சிவாய முதலியாரவர்கள் வீட்டிற்குச் சென்றவர்கள் இல்லை என்று திரும்பியதில்லை என்று நான் பன்முறை கேள்விப்பட்டிருக்கிறேன்; வறியர் வறுமை தீர்வர்; பசித்தார் பசி தீர்வர், உதவி நாடியோர் உதவி பெறுவர். இவரன்றோ உண்மைத், தமிழர்! இனி ஈத்துவக்கும் இன்பத்திற்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டாகச் சங்கச் செய்யுட்களில் வழங்கும் குமணானர் பெருஞ்சித்திரனார் நிகழ்ச்சி யாவருமறிந்ததே. இரந்தவன் இன்முகங் காணுவதே இலக்காக அக்காணுமளவு ஈதலே ஈகையாம். இத்தகைய ஈதலறத்திற்கு முதற்கண் வேண்டப்படுவது நட்பினர், பகைவர், நொதுமலர் என்றின்றி, வருவோர் யாவர் மாட்டும் இன்முகங் காட்டி இன்சொற் கூறுதலேயாம். இதனாலேயே இன்னாச் சொல் நீக்கத்தின் இன்றியமையாமை தெற்றென விளங்கும். இனி அறத்தை இல்லறம் துறவறம் என்று இரண்டாகப் பகுத்துக் கூறியது திருவள்ளுவர்தாம். அவர் காலத்திற்கு முன் அவ்வாறு பகுத்துக் கூறப்பட்டுள்ளதாகக் காணப்படும் நூல் ஒன்றுமில்லை. தமிழுக்கு வைரத் தூணெனக் கருதப்படும் தொல்காப்பியத்திலும் இப்பிரிவினை காணப்படவில்லை. மனைவியோ டுடனிருந்து அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றி ஏமஞ்சான்ற மக்களோடு துவன்றி இறைவனை நினைந்திருத்தலே சிறந்த செயலாகத் தொல்காப்பியத்திற் கூறப்பட்டது. பௌத்த சமணக் கொள்கைகள் பரவி, மனை வாழ்க்கை வெறுக்கப்பட்டு, துறவறம் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த காலத்தே ஆசிரியர் குறளை எழுத நேரிட்டதாகையால், இப் பிரிவினையைத் தாம் கைக்கொண்டார் போலும்! துறவறத்தைக் கூற வந்தாரேனும், ஆசிரியர் பௌத்த சமணர்களைப் போல் கடிய கொடிய முறைகளைக் கூறாமல், “பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.” (குறள் 350) என்று திருந்த மொழிந்தார். உள்ளம் வேறு ஒன்றைப் பற்றி னாலன்றிப் பற்றிய ஒன்றை விடாது. குடிகாரனைக் குடியாதே என்று சொன்னாற் கேளான்; ‘கள்ளைக் குடியாதே, பாலைப் பருகு; பழச்சாற்றைக் குடி’ என்றாற்றான் வழிக்கு வருவான். இது மன நூலிற் கண்ட உண்மை. இனி, திருக்குறளாகிய நீதி நூலைப் படிப்பதில் ஒருவர்க்கு மனம் அதிர்ச்சியடையக் கூடும். இருந்தாலும், பெரும்பயன் கருதி அதனைப் படித்தலே சீரிதாம். படித்த குறளைக் கொண்டு தான் அவ்வழி நின்றாலன்றி, ஒருவன் பிறன் மாட்டுங் குற்றங் கண்ட விடத்து அவனைத் திருக்குறட் சான்றாகத் திருத்த முயலு தலாகாது. கற்றதற்குத் தக ஒழுகுதலே சிறந்தது என்பது ஆசிரியர் முடிபு. ஒவ்வோர் அறநெறியையும் செய்துதான் ஆக வேண்டும் என்று ஆசிரியர் வற்புறுத்திக் கூறவில்லை; “ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்” (குறள் 33) என்றுதான் கூறினார். ஒவ்வொன்றைப் பற்றிக் கூறும் போதும் அதனினும் சிறந்தது வேறில்லை என்று ஆசிரியர் கூறியுள்ளா ரேனும், மிகவும் நுணுக்கமாகத் தராதரம் உய்த்துணருமாறு வைத்தே கூறிப் போந்துள்ளார். “பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”. (குறள் 297) என்று “வாய்மை” யிற் கூறிய ஆசிரியர், “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”. (குறள் 323) என்று வகுத்துள்ளார். இதுவே அவர் நூலியற்றும் நுணுக்கச் சிறப்பாகும். இனி, “வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதென்றும் தீமை யிலாத சொலல்”. (குறள் 291) என்று ஆசிரியர் வரையறுத்துக் கூறியது ஜான் ஸ்டூவர்ட் மில் என்பாரின் “பெரும்பயன்” என்ற “யுட்டிலிட்டேரி யானிஸம்” (ருவடைவையசயைnளையஅ) என்ற கொள்கைக்கு அரண் கோலுவது கண்டு வியவாதார் யார்? இன்னும் இவ்வாறே விரிக்கிற் பெருகும். 1330 அருங்குறளையும் பாடம் பண்ணியிருந்த யான் இப்பொழுது பாதிக்குமேல் மறந்துவிட்டிருக்கிறேன். மறப்பென்னும் பகைவன் வாரிக்கொண்டான். என் செய்வது! ஒப்பில் பெரு நூலாகிய இக்குறணுhலின் பெருமையையும் ஆசிரியர் பெருமையையும் யான் கூறித் தங்களை மகிழ்வித்தற்கு வசதி கிடைத்தமை நோக்கி இறைவனருளை வழுத்துகிறேன். 9. திருவள்ளுவர் செந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்க மாய்த் தோன்றித், தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத், தான்பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமே யன்றி, இந்நிலவுலகின் பிறபகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமையின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழுமுதற்கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமைமகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியாரையும் அவரது வரலாற்றையும் அறிய விரும்பாதார் யார் ? எவரும் இராரன்றோ? ஆதலால் அவரைப்பற்றிய குறிப்புகள் சிலவற்றை இங்கு வரைவாம். திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினாரென்பதை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பல நூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க. இவர்தந் தந்தையார் பெயர் ‘பகவன்’ எனப்படுமென்றும், இப்பகவன் தமிழ்நாட்டுத் தாபத வொழுக்கத்தினரான ஓர் அந்தணராவரென்றம், இவர் தம் அன்னையார் கருவூரிற் புலையர் குலத்திற் பிறந்து ‘ஆதி’ எனப் பெயர் பெற்றவரென்றும் கபிலரகவல் கூறுகின்றது. இனி ஞானாமிர்தம் என்னும் வீட்டு நூல் திருவள்ளுவரின் தந்தையார் பெயர் ‘யாளிதத்த முனிவர்’ எனக் கூறுமேனும், இவர் தம் அன்னையார் ஒரு புலைச்சி யென்றே மேலை வரலாற்றோடு ஒருப்பட்டுரைக்கின்றது. யாளிதத்த முனிவரென்பது இயற் பெயராகவும், பகவன் என்பது சிறப்பு பெயராகவுந் திருவள்ளுவரின் தந்தையார் ஒருவர்க்கே வழங்கி வந்தமை இவ்விரு நூல்களாலும் அறியப்படும். தமிழ்நாட்டிலுள்ள வர்கள் தம்மின் மூத்தாரையுங் கல்வியறிவின் மிக்காரையும் பிற சிறப்புகள் உடையாரையும் அவர்க்குரிய இயற்பெயரான் வழங்குவது குற்றமாமெனக் கருதி, அவர் பிறந்த ஊர்ப் பெயரானாதல் அன்றி வேறு சிறப்புப் பெயர்களானாதல் அவரைக் குறித்து உரையாடுதல் தொன்றுதொட்ட வழக்க மாய்ப் போதருகின்றது. ஆதலாற், திருவள்ளுவரின் தந்தையார்க்கு இரண்டு நூல்களில் இரு வேறு பெயர்கள் ஓதப்பட்டதில் ஏதும் மாறுபாடில்லை யென்க. திருவள்ளுவர் தந்தையாரின் பெயரளவிற் சிறிது மாறுபாடு காணப்படினும், அவர் தவவொழுக்கத்திற் சிறந்த முனிவரென்பதும், அவர் தம் அன்னை யார் ஒரு புலைச்சியே யென்பதும் கபிலரகவற்கும் ஞானாமிர்தத் திற்கும் ஒத்த முடிபாயிருத்தலே கருத்திற் பதிக்கற்பாலதாகும். அம் முனிவர்பிரான் விழுமிய அந்தணர் மணியாயிருந்தும், பிறப்பளவில் இழிந்தாளாகக் கருதப்படும் ஒரு புலைச்சியை விழைந்து அவளை அவர் மணந்துகொண்ட பான்மையினை நினைத்துப் பார்க்குங்கால், அத்துணைச் சிறந்த பெரியா ருள்ளத்தைக் கவரத்தக்க மனநலமுங் கற்பொழுக்கமும் வனப்பும் அவ்வம்மையார் உடையாராயிருந்தாராகல் வேண்டு மென்பது இனிது விளங்கா நிற்கும். தாம் ஈன்ற குழவிகளை ஈன்ற இடங்களில் உள்ளார்க்கே தந்து பற்றின்றிச் சென்ற பகவனாரின் கருத்துக்கு, மாறின்றி யொழுகி, அவருடன் நிழல்போற் சென்ற ஆதியம்மை யாரின் பற்றற்ற உள்ளமுங் காதற் கற்பொழுக்கமும் மிகவும் பாராட்டற்பாலனவாகும். இனித், தம் தந்தையார் பெயர் ‘பகவன்’ என்றிருத்தலையுந்,தம் தாயார் பெயர் ‘ஆதி’ என்றிருத்தலையுங் கருதித், தம்மைப் பெற்ற அவ்விருவர் செய்த நன்றியையும் அன்பினால் அகங்குழைந்துருகி நினைந்தமையாற்றான், ஆசிரியர் திருவள்ளுவர் தாம் இயற்றியருளிய திருக்குறள் என்னும் ஒப்புயர்வில்லாத் தனிச் செந்தமிழ் நூலின் முகத்தே கடவுள் வழிபாடு செய்கின்றுழி அம்முழுமுதற் கடவுள் பெயராக ஆதிபகவன் என்னும் அவ்விரு வடசொற்றொடர்ந்த தொடரை முதற் செய்யுளிலேயே அமைத்தருளினார். ‘திருக்குறள்’ நூன் முழுதுந் தனிச் செந்தமிழ்ச் சொற்களினாலேயே யாத்திட்ட அப்பேராசிரியர், அந்நூன் முகத்திற் கடவுளைக் குறித்தற்கு எத்தனையோ பல தனித் தமிழ்ச் சொற்க ளிருப்பவும் அவற்றை யெல்லாம் விடுத்து, ‘ஆதிபகவன்’ என்னும் வடசொற்றொடரைத் தெரிந்தமைத்ததற்குக் கழிபெருங் காரணம் ஒன்றிருத்தல் வேண்டுமன்றோ? அக்காரணந்தான் யாதோவெனிற், றம் தாய் தந்தையர் தமக்குச் செய்த நன்றியை அதனால் நினைவு கூர்தற்கு அவர் விழைந்தமையே உறுபெருங் காரணமா மென்க. இங்ஙனமே, நூலியற்றும் பேராசிரியர், தம் தாய் தந்தையர் உடன்பிறந்தார் சுற்றத்தாரைப் பற்றிய குறிப்புகளையும், தம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளையுந் தாமியற்றும் நூல்களிலே ஆங்காங்குக் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவன்று செல்லுதல் இயல்பு, சைவ சமயாசிரியர்களான திருஞானசம்பந்தர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வருந் தாம் அருளிச் செய்ததேவார திருவாசகங்களில் தம்முடைய வரலாற்றுக் குறிப்புகளைப் பெரும்பாலும் வெளிப்டையாகவுஞ் சிறுபான்மை உய்த்துணரவைப்பாகவும் அமைத்துரைத்தல் காண்க. ஏனை நூலாசிரியர் அவர்போற் றம்முடைய குற்றங் குறைகளை இறைவனிடத்தே முறையிட்டுச் சொல்லிப் பாடுதலிலராய், அறம் பொருள் இன்பங்களையும், ஒரு கதை தழுவிவருந் தொடர்நிலைச் செய்யுட்களையும் இயற்றினார்களாகலின் அவை தம்மிற் றம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளை வெளிப்படையாய்ச் சொல்ல இடம்பெறாது, அவை தம்மிற் சிலவற்றை ஆங்காங்குக் குறிப்பாகவே நுவலலாயினர். நூலாசிரியர்க்குரிய இவ்வழக்காறு, தமிழ்நூலாசிரியர்பாலேயன்றி, ஆங்கிலம் ஆரியம் முதலான ஏனை மொழி நூலாசிரியர்பாலுங் காணப்படுதலும், அவருடைய நூல்களை ஆராய்ந்து நுட்பங்கள் வரையும் உரை வல்லார்கள் அதனைத் தெரிந்தெடுத்தெழுதலும் அவ்வந் நூல்வல்லார்வாய்க் கேட்டுணரப்படும். ஆகவே, இங்குத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், தமது தெய்வச் செந்தமிழ் மொழிமேல் வைத்த பற்றினையும், செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் தம் காலத்து நல்லிசைப் புலவர் மேற்கொண்ட தனிச் செந்தமிழ் வழக்கினையும் மீறி “ஆதிபகவன்’ என்னும் வடசொற்றொடரால் முழுமுதற் கடவுளுக்குத் தமது நூலின் முதலிலேயே பெயர் கூறுவாரானது, அத் தொடரின் முன்நின்ற ‘ஆதி’ என்பது தம் அன்னையார்க்கும், பின்நின்ற ‘பகவன்’ என்பது தம் தந்தையார்க்கும் பெயராயமைந்து, அவ்விருவரையுந் தமது நினைவிற் கொணர்தல் பற்றியேயாமென்பது திண்ணம். திருவள்ளுவனாரோடு உடன்பிறந்தவரான ஒளவையாரும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று கூறியிருத்தலை உய்த்துணருங்கால் அவருந் தவ நலத்திற் சிறந்த தம் தாய் தந்தையரை நினைந்தே அங்ஙனம் கூறினார் என்பது புலனாம். இனித் திருவள்ளுவனாரோடு ஒரு வயிற்றிற் பிறந்த கபிலர் என்னும் அந்தணர் பெருமான் தமது வரலாற்றினைத் தங்குடியினரான பார்ப்பனருக்குத் தெரிப்பான் வேண்டி இயற்றிய அகவலில், “அருந்தவ மாமுனி யாம்பக வற்குக் கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி ஆதிவயிற்றினில் அன்றவ தரித்த கான்முளை யாகிய கபிலனும் யானே, என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில் ஆண்பான் மூவர் பெண்பால் நால்வர், யாம்வளர் திறஞ்சிறிது இயம்புவல் கேண்மின்! ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே வண்ணார் அகத்தினில் உப்பை வளர்ந்தனள், காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில் சான்றார் அகந்தனில் உறுவை வளர்ந்தனள், நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியிற் பாணர் அகத்தினில் ஒளவை வளர்ந்தள்: குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள், தொண்டை மண்டிலத்தில் வண்டமிழ் மயிலையில் நீளாண்மை கொளும் வேளாண் மரபுயர் துள்ளுவரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர், அரும்பார் சோலைக் கரும்பார் வஞ்சி அதியன் இல்லிடை அதியமான் வளர்ந்தனன், பாரூர் நீர்நாட்டாரூர் தன்னில் அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்” என்று தம் தாய் தந்தையர் ஆதியும் பகவனும் ஆவரெனவுந், தம்முடன் பிறந்தவர் உப்பை உறுவை ஒளவை வள்ளி எனப் பெண்பால் நால்வரும், வள்ளுவர் அதியமான் கபிலர் எனத் தம்மைச் சேர்த்து ஆண்பால் மூவரும் ஆவரெனவுங் கூறும் இதனினும் மிக்கதொரு சான்று பிறிதின்மையிற் றிருவள்ளுவரின் பெற்றோர் ஆதியும் பகவனுமே யென்றலிற் சிறிதும் மாறுபாடில்லையென்க. இனி, இக்கபிலரகவல் எளிய தமிழ் நடையில் இயற்றப்பட்டிருத்தல் கொண்டுங், கபிலர்க்குப் பூணூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறு பிள்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தாரென வழங்குங் கதை நம்பத்தகாததாயிருத்தல் கொண்டும் இது கபிலராற் செய்யப்பட்டதன்றென்றும், இஃதொரு “கட்டுநூல்” என்றுங் கூறினாருமுளர். இக்கபிலரகவல் இயற்றப்பட்டதற்குக் காரணங் கூறுங் கதை நம்பத்தகாததுபற்றி இந் நூலையே கட்டு நூலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும். கல்விநலம் மனநலம் ஒழுக்கநலம் முதலியவற்றை நோக்hது, இந்நலங்கள் இல்லாரையும் பிறப்பளவில் உயர்த்துதலும், இந்நலங்கள் உடையாரையும் பிறப்பளவில் இழிபடுத்துதலுஞ் செய்துபோந்த அஞ்ஞான்றைப் பார்ப்பனமாந்தர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டாகவே இவ்வரிய நூல் கபிலரால் இயற்றப்பட்ட தென்பதுமட்டும் மறுக்கப்படாததாகும்; இதற்கு அகச் சான்றாகப் போந்த, “பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்! இறந்தவராய் உமை இல்லிடை யிருத்திப் பாவனை மந்திரம் பலபட உரைத்தே உமக்கவர் புத்திரர் ஊட்டின போது அடுபசி யாற்குலைந் தாங்கவர் மீண்டு கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்! அருந்தியஉண்டியால் யாபசி கழிந்தது? ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சீனர் பற்பல நாட்டினும் பார்ப்பார் இலையால்; முற்படைப் பதனிவ்வே றாகியமு றைமைபோல் நால்வகைச் சாதிஇந் நாட்டில்நீர் நாட்டினீர்! மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்; பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே, அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ? ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பினில் இருவகை யாகநீர் இயம்பிய குலத்துள் ஆண்பெண் மாறி யணைதலும் அணைந்தபின் கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின் றிலிரோ? எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ அந்நிலத் தந்தவித் தங்குதித் திடுமால், மாறிவே றாகும் வழக்கம்ஒன் றிலையே; பூசுரர்ப் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ? பெற்றமும் எருமையும்பேதமாய்த் தோன்றல்போல் மாந்தரிற் பேதமாம் வடிவுஎவர் கண்டுளார்? வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில் வேற்றுமை யாவதும் வெளிப்பட லின்றே; தென்றிசைப் புலையன் வடதிசைக் கேகிற் பழுதற ஓதிப் பார்ப்பான் ஆவன்; வடதிசைப் பார்ப்பான் தென்றிசைக் கேகின் நடையது கோணிப் புலையன் ஆவன் - அதாஅன்று சேற்றிற் பிறந்தசெங் கழுநீர் போலப் பிரமற்குக் கூத்திவயிற்றிற் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றிற் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப் புலைச்சிதோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசர்க்கு மீன்வாணிச்சி வயிற்றிற் பிறந்த வியாசரும் வேதங்கள் ஓதி மேன்மைப் பட்டு மாதவர் ஆகி வயங்கின ரன்றோ?” என்னும் அக்கபிலரகவலின் அடிகளே அவ்வுண்மையைப் புலப் படுத்துவனவாம். சாதிவேற்றுமையென்பது இறைவனது அமைப்பிலேயே வடிவ வேறுபாடுடைய விலங்கினங்களுக்கே யல்லாமல், வடிவ வேறுபாடு சிறிதும் இல்லா மக்களுக்கு இசையாதென்பதை, மேற்போந்த அடிகளில் ஆசிரியர் கபிலர் எத்துணை நுட்பமாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்! ஆவும் எருமையும் இயற்கையமைப்பிலேயே எவ்வளவு வேறுபட்ட வடிவம் வாய்ந்தனவாயிருக்கின்றன! ஆவும் எருமையுந் தத்தஞ் சாதியிலுள்ள ஆணையே கூடிக் கருவுறுகின்றன அல்லாமல் மாறிக் கூடிக் கருப்பெறல் இல்லையன்றே! மற்று, மக்களெல்லாரும் ஒரே இயற்கை யமைப்பினை யுடையராயுஞ், செயற்கையாக வகுக்கப்பட்ட சாதிமுறையில் அடங்காது ஆண்பெண் மாறிக் கலந்து கருவுற்று அதனை உயிர்ப்பவராயும் இருத்தலை யறியாதார் யார்? இறைவன் இயற்கை யமைப்பிலேயே பார்ப்பனரை வகுத்தனனென்று அவர் கட்டிவிட்ட புராணகதை கூறுவது உண்மையாயின், இந்நிலவுலகத்தின் ஒருசிறு பகுதியாகிய இவ்விந்தியநாட்டின் மட்டுமே யன்றி, மற்றை நாடுகள் எல்லாவற்றின்கண்ணுமுள்ள மற்றை எல்லா மக்கட் குழுவுகளிலும் பார்ப்பனச்சாதியானது காணப்படுதல் வேண்டும்; மற்று, ஒட்டியர், மிலேச்சர், ஊணர், சிங்களர், சோனகர், யவனர், சீனர் முதலான மக்கட் கூட்டத்தாரிற் பார்ப்பனச்சாதி காணப்படாமையின் அவரது புராணக் கூற்று வெறும் பொய்யேயல்லாமல் உண்மையன்று என ஆசிரியர் அதனை எடுத்துக்காட்டி விளக்கிய திறம் பெரிது! பெரிது! மேலோர் கீழோர் என வழங்கும் வழக்கெல்லாம் அவரவர்தம் ஒழுக்கத்தின் உயர்வானும் இழிபானும் உண்டாயின பான்மையை “மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்” என்றுஞ், “சிறப்புஞ் சீலமும் அல்லது, பிறப்பு நலந் தருமோ பேதையீரே” என்றுங் கபிலர் அறிவுறுத்தினாற் போலவே, இவர்தந் தமையனார் திருவள்ளுவரும், “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” (குறள் 133) என்றும், “மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (குறள் 134) என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால்” (குறள் 972) என்றும், “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர்” (குறள் 973) என்றும் அருளிச் செய்திருத்தல் நினைவிற் பதிக்கற் பாற்று. மேற்காட்டியவாற்றால் இக்கபிலரகவல் என்னுஞ் சிறந்த தமிழ்நூல், சாதியிறுமாப்புக் கொண்டு, தம்மவரல்லாத பிறரிற் றோன்றிய சான்றோரை யெல்லாம் இழித்துக்கூறி, அவரது அறிவின் பயனை மக்கள் பெறவொட்டாது தடைசெய்யும் பார்ப்பன வகுப்பினர்க்கு அறிவு தெருட்டும்பொருட்டு ஆக்கப் பட்டதொன்றாதல் தெற்றென விளங்குதலின், இதனைக் கட்டு நூலென்றார் உரை மெய்ம்மை யுணராக் கட்டுரையாமென்க. மேலும், ஊற்றுக்காட்டில் உப்பை என்னுந் தம் தமக்கையார் பிறந்து ஒரு வண்ணாரகத்தில் வளர்ந்தமையுங், காவிரிப்பூம்பட்டினத்திற் கள்விற்பார் சேரியில் தம் மற்றொரு தமக்கையாரான உறுவை பிறந்து ஒரு சான்றார் வீட்டில் வளர்ந்தமையும், அப்பட்டினத்திலேயே யாழ் பயிலும் பாணச்சேரியில் ஓர் யழ்ப்பாணரில்லில் தம் மற்றொரு தமக்கை யாரான ஒளவையார் வளர்ந்தமையும், வள்ளிமலையில் தினைப்புனஞ் சூழ்ந்த மலைச்சாரலில் தம் மற்றொரு தமக்கையாரான வள்ளி பிறந்து ஒரு குறவர் தலைவன் வீட்டில் வளர்ந்தமையுந், தொண்டைமண்டலத்தின் கண்ணதான திருமயிலாப்பூரில் தந் தமையனரான திருவள்ளுவர் பிறந்து ஒரு துளுவ வேளாளரிடத்தில் வளர்ந்தமையும், வஞ்சிமா நகரிற் றம் மற்றொரு தமையனாரான அதியமான் பிறந்து அதியமான் இல்லில் வளர்ந்தமையுங், கடைமுறையாக எல்லார்க்கும் இளவலாகிய தாந் திருவரூரிற் பிறந்து ஓர் அந்தணர் இல்லில் வளர்ந்தமையும் நிகழ்ந்தன நிகழ்ந்தாங்கு எடுத்துக்கூறும் இவ்வுண்மை நூலைக் கட்டு நூலென்றார் உரையே பெருங்கட்டா யிருக்கின்றது! மேலுந், தம்மை யுயர்த்தி மற்றை யெல்லா வகுப்பினரையும், வேசிமக்கள் அல்லது அடிமைகள் எனப் பொருள்படுஞ் “சூத்திரச்” சொல்லால் வழங்கும் பார்ப்பனரின் நூல்களாகிய “மிருதி”களையும் “புராணங்களை”யும் “வேதங்களை”யும் பார்ப்பனர்கள் தாமே எழுதி வைத்துக்கொண்டு, அவைகளைத் தாமெழுதிய நூல்கள் என்றால் அவற்றுள் நடுவிகந்து சொல்லியவைகளைப் பிறர் நம்பாரெனக் கருதி, அவைகளெல்லாம் இறைவன்அருளிச் செய்தவைகள் என்று அவர்கள் கட்டி விட்டாற் போல, இக்கபிலரகவல் நூலில் உலகவியற்கை மக்களியற்கைக்கு வேறாய் நடுவிகந்து கட்டிச் சொல்லப்பட்டது ஏதேனும் ஓரெட்டுணையாயினும் உண்டா? ஒரு சிறிது மில்லையே. இக்கபிலரகவலிற் சொல்லப்பட்ட அறங்கள் அத்தனையும் எல்லா மதத்தவராலும் எல்லா மக்கட் பிரிவினராலும் உவந்தேற்றுக் கொள்ளப்படும் விழுப்பம் வாய்ந்தனவா யிருத்தல், அதன் மேற்காட்டிய பகுதிகளால் விளங்குவதொடு பிற்காட்டப்படும் பகுதியானும் நன்கு விளங்குதல் காண்க. “மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மாநிலஞ் சுமக்க மாட்டே னென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? வாழ்நான்கு சாதிக் குணவு நாட்டிலுங் கீழ்நான்கு சாதிக் குணவு காட்டிலுமோ? திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறுஞ் சாவதும் வேறிலை தரணி யோர்க்கே. குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே. இறப்பும் ஒன்றே, பிறப்பும் ஒன்றே, வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால், முன்னோர் உரைத்த மொழி தவறாமல் எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப், புலையுங் கொலையுங் களவுங் தவிர்ந்து நிலைபெற அறத்தின் நிற்பதை அறிந்து ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து, பேணி யுரைப்பது பிழையெனப் படாது” என்னும் இப்பகுதி எத்துணை மேதக்க அறவுரை பொதிந்த தாய் எந்நாட்டவரானும் எக்கொள்கையினரானும் பொன்னே போற் போற்றற்பாலதா யிருக்கின்றது? கஙஅ அடிகளே யுடைய இக்கபிலரகவலிற் பொதிந்துள்ள அறிவுரைகளத்தனையுந், திருக்குறளிற் போந்த அறவுரைகளோடு ஒத்து, அவற்றினுஞ் சுருக்கமுடையனவாய்ப், பயில்வோருள்ளத்திற் பசுமரத்தாணியெனப் பதியுங் கூர்மை வாய்ந்து திகழ்கின்றன. இத்துணைச் சிறந்த அறவுரை பகரும் ஒரு விழுமிய நூலை ஒருவர் பொய்யாகக் கட்டி, அதனைக் கபிலர் பெயராற் புனைந்து விட்டாரென்னும் பொய்யுரையினும் மிக்கதொரு புளுகுரையினை யாண்டுங் கண்டிலேம். மேலும், ஒருவர் தம்மை யுயர்த்துதற் பொருட்டுப் பொய்யான பல கதைகளைக் கட்டி ஆக்கியதொரு நூலாயின் அதனைக் கட்டு நூலென்றல் வாய்வதேயாம். மற்று, இக் கபிலரகவலின் ஆசியராகிய கபிலரோ தம் அன்னை புலைச்சி யென்றும், அவள் ஒரு முனிவரைக் கூடித் தம்மை யுள்ளிட்ட எழுவர் மக்களைப் பயந்தனளென்றும்; அவருள் ஒருவர் வண்ணாரகத்திலும், மற்றொருவர் கள்விற்பார் சேரியிற் சான்றார் வீட்டிலும், மற்றொருவர் பாணரில்லத்திலும், பின்னுமொருவர் குறவர் குடிசையிலும், ஏனையொருவர் துளுவவேளாள ரகத்தினிலும், வேறொருவர் அதியமான் இல்லிலுந், தாம் அந்தணரகத்திலும் வளர்ந்தனரென்றுந் தமது பிறப்பினிழிபையுந், தம்முடன் பிறந்தாரிற் பலர் இழிந்த குலத்தாரிடம் வளர்ந்த இழிபையுந் தினைத்தனையும் ஒளியாமல் நிகழ்ந்தவற்றை நிகழ்ந்தவாறே எடுத்துரைக்கும் பொய்யா நாவிற் சான்றோராகிய கபிலர் பெருமான் ஆக்கிய இவ்வுறுதி நூலைக் கட்டுநூலென்றார் உரையே பெரியதொரு பொய்க் கட்டாம். இது கட்டு நூலாயின், எழுவரின் இழிந்த பிறப்பும், அவர் பெயரும், அவர் பிறந்த ஊரும், அவர் வளர்ந்த இடமும், அவரிற் பெரும்பாலார் வளர்ந்த இழிந்த குடியும், எல்லா மக்களுயிர்க்கும் உறுதி பயக்கும் விழுமிய அறவுரைகளும் இதன்கட் சொல்லப்படுமோ வென்று நடுநின்று ஆராய்ந்து காண வல்லார்க்கு, இதனைக் கட்டு நூலென்று கரைந்தார் பார்ப்பனரும் அவர் வழிப்பட்டார் சிலருமே யல்லால், ஏனைப் பொய்யா நாவினர் அங்ஙனஞ் செய்யாரென்பது தெற்றென விளங்கா நிற்குமென்க. மேலுந், திருவள்ளுவர் திருமயிலையில் ஓர் இருப்பை மரத்தின் கீழ்க்கண்ணதான குடிலொன்றிற் றோன்றினாரென வழங்குந் தொன்றுதொட்ட வழக்கிற் கேற்பவே, இன்றும் அவ்விருப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயிலொன்றுந் திருமயிலையிலிருக்கின்றன; அதுபோலத், திருவாலவாயிலா தல் வேறெந்தவூரிலாதல் அவை யிரண்டும் இருத்தல் அறியப்படாமையிற் றிருமயிலையே அவர் பிறந் தருளிய இடமாகுமெனக் கபிலரகவல் நுவலும் வரலாறே உண்மை வரலாறாகு மென்று கடைப்பிடிக்க. இனித், திருமயிலையில் ஒரு துளுவ வேளாளர்பால் விடப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டு வந்த மகவைக் கண்டு, அவ்வேளாண் டலைவரின் உறவினர் “யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற்றுப் போகட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார்! ஈதென்னை!” என்று பழி கூறாநிற்ப, அதற்கு மிக வருந்திய அச்செல்வர் அம் மகவைப் பிரிதற் காற்றாராய்த் தம் விளை புலத்தில் உழுதொழில் செய்யும் பறைக் குடிகளுக்குக் குருவாய் உள்ள ஒரு வள்ளுவனை அழைத்து, அவன் கையில்அதனை ஈந்து “இதனைப்போற்றி வளர்ப்பாயாக!” எனக் கூறி, அவற்கு அதன் பொருட்டு ஆம் செலவுகட்கும் வேண்டும் பொருள் நல்கினார். அதுமுதல் அக்குழவி அவ்வள்ளுவன்பால் வளர்வதாயிற்று. அங்ஙனம் வள்ளுவனாற் போற்றி வளர்க்கப் பட்டமை பற்றியே நம் ஆசிரியர்க்குந் திருவள்ளுவரெனும் பெயர் வழங்குவ தாயிற்று, ஆகவே, ஆசிரியர்க்கு அது சாதிபற்றி வந்த பெயரே யாதல் திண்ணம். இஃது ஆசிரியரோடு ஒரு காலத்தினரான மாமூலனார், “அறம்பொரு ளின்பம் வீடென்னும் அந்நான்கின் திறத்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதைஅவன் வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார்” என்று தாமருளிய செய்யுளால், ஆன்ற புலமையிற் சிறந்து தெய்வத் தன்மையுடையராய் விளங்கும் பெருமானைச் சாதிபற்றி ‘வள்ளுவன்’ என இழித்துக் கூறுவோன் எவனேனும் உளனாயின் அவன் அறிவில்லா மடவோனே யாவனென வலியுறுத்திச் சொல்லியவாற்றால் நன்கு விளங்கும். வள்ளுவர் என்பார் பறையர்க்குக் குருமாராய்க் குறி சொல்லிப் பிழைக்கும் ஒரு வகுப்பினர் ஆவர். இச்சொல் ‘வள்’ என்னும் முதனிலையிற் பிறந்து ‘தோல்வினைஞர்’ எனப் பொருள்படுவதாகும். ‘வள்பு’ என்பது தோலிற் செய்த வாரை யுணர்த்துதல், “மாசற விசித்த வாருறுவள்பின்” என்னும் புறநானூற்றனும் (50), “வள்புதெரிந்தூர்மதி வலவ” என்னும் ஐங்குறு நூற்றானும் (486) அறியப்படும். வாரைக் கொண்டு இறுக்கிக் கட்டப்படும் பறையினை அறைந்து ஊரார்க்குச் செய்தி யறிவிக்குந் தொழிலினை யுடையார் வள்ளுவரெனப் பட்டமை, “திருநாள் படைநாள் கடிநாள் என்றிப் பெருநாட் கல்லது பிறநாட்கு அறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்” எனப் பெருங்கதையுட் போந்த பகுதியானும் (2-32-34) நன்கு விளங்கா நிற்கும். இங்ஙனம் பறை யறையுந் தொழிலினையுடையார் பண்டைக் காலத்திற் ‘பறையர்’ ஆயினதுபற்றி, அவரிற் சிறிது ஏற்ற முடையார்க்கு ‘வள்ளுவர்’ எனும் பெயர் வழங்க லாயிற்று; யாங்ஙனமெனிற், பிறர் தமக்கு நேரும் ஊழ்வினைப் பயன்களை நன்கறிந்துரைக்குந் தொழில், பின் நேர்வதனைப் பறை சாற்றி யறிவிக்குந் தொழிலோடு ஒப்புமை யுடையதாகலின் என்பது, கல்வியறிவு சிறிதுமில்லாப் பறையர்க்குட் கோணூற் புலமை நிரம்பிப் , பிறர்தம் வினைப் பயன்களை அளந்துரைக்கும் வள்ளுவர், அவரின் வேறாய், அவர்க்குக் குருமாராய் அமைந்து பாராட்டுப்படுதல் இயற்கையேயாம். இனி, நம் பேராசிரியர் இங்ஙனம் வள்ளுவரெனப் பெயர் பெற்றதன் காரணம் உணராமையினாலோ, அல்லது அவரது சாதியிழிபினை மறைத்து அவர்க்கோர் ஏற்றங் கற்பிக்க விழைந்த கருத்தினாலோ, உலகத்தின் கண்ணுள்ள எல்லாச் hதியினராலும், எல்லா மதத்தினராலும் ஒருங்கு தழுவப்படுஞ் செந்தமிழ் மாமறையை உலகத்தினர்க்கு வாங்கிய நல்லிசைப் புலவர் மாமணியை உயர்குலத்தவராகக் கூற வேண்டு மென்னுஞ் சாதிப் பற்றினாலோ, ஒருசாரார், ஆசிரியர் அரிய பெரிய பொருள்கள் அகத்தடங்கிய ‘திருக்குறளை’ உலகிற்கு வழங்கி யருளின வள்ளன்மை தோன்ற அவர்க்கு வள்ளுவர் எனும் பெயர் வழங்கலாயிற்றென் றுரை கூறினார். அச்சொல் அவர் கூறுமாறு வள்ளன்மைப் பொருள் பயப்பதாயின், அது ‘வள்ளல்’ என நிற்க வேண்டுமல்லாமல் ‘வள்ளுவர்’ என நில்லாது. தொல்லாசிரியர் நூலுரை வழக்கில் யாண்டும் வள்ளுவர் என்னுஞ் சொல் வள்ளன்மைப் பொருள் தரக் காணாமையின், அச்சொல்லுக்கு யாங்கூறியதே உண்மைப் பொருளாதல் திண்ணமென்க. இனி, மற்றுமொருசாரார் “வள்ளுவன் என்னுஞ் சொல்லிற்குக் கற்றுணர்ந்தவன் என்பது தாதுப் பொருள்” என்று பொருளுரைத்தார். ‘வள்’ என்னும் முதனிலையால் உணர்த்தப் படும் பல பொருள்களுட் ‘கற்றுணர்தல்’ என்னும் பொருளும் ஒன்றென்பது பழைய தமிழ்நூல் எதனாலும் பெறப்படவில்லை, அற்றன்று, ‘வள்’ என்பது செழுமை என்னும்பொருளில் வருமாகலின், இவ்விடத்திற்கு ஏற்பக் ‘கல்விச்செழுமை’ என்று பொருளுரைத்தலே எமது கருத்தாகுமெனின்; அது பொருந்தாது; ‘வள்’ என்னும் முதனிலையே கல்விச் செழுமையினை உணர்த்து வதன்று; அஃது ஈறு இடைநிலை முதலான உறுப்புகளோடு கூடி ஒரு சொற்றொடரில் நின்ற வழி, அச்சொற்றொடர்ப் பொருளுக்கு இணங்க ஒரோ ஒருகால் அப்பொருள் உணர்த்தாநிற்கும், இன்னும் அஃது அங்ஙனம் பொருளுணர்த்துவதும், ‘பம்’, அம்’ முதலான ஈறுகளோடு புணர்ந்து ‘வளப்பம்’, ‘வளம்’ என்றாகிச், ‘சொல் வளப்பம்’, ‘கல்வி வளம்’ என வேறு சொற்களோடு இயைந்து நின்ற வழியேயாம். மற்று, வள்ளுவர் என்னுஞ் சொல்லின் முதனிலையாகிய ‘வள்’ என்பதற்கோ வேறு பொருளுளதாதலை முன்னரே காட்டினமாகலானும், அதன் ஈறு சாரியை முதலியன வேறுபட நிற்றலானும் அதற்கு அப் பொருளுரைத்தல் சாலாதென்க. இனித், தமக்கு வளர்ப்புத் தந்தையாய் அமைந்த வள்ளுவத் திருமகன் கல்வியிற் சிறந்தவனாகலின், அவ னாலும், அஞ்ஞான்றிருந்த ஏனைத் தமிழாசிரியராலுந் தமிழ் இலக்கண இலக்கியங்களும், பலகலை நூல்களுங் கற்பிக்கப் பட்டு, இயற்கையிலே நுண்மாண் நுழைபுலமுடையராயிருந்த நம் ஆசிரியர் கலை நிரம்பிய முழுமதியெனக் கல்வியறிவும், இயற்கையறிவும் ஒருங்கு நிரம்பித் திகழ்ந்தனர். இவ்வாறு நம் ஆசிரியர் செந்தமிழ்ப் புலமைக்கு ஒரு வரம்பாய்ப் பொலிவுறுகின்ற காலத்து இவர்க்குக் கட்டிளமைப் பருவம் நிரம்பிற்று. அப்போது, காவிரிப்பாக்கம் என்னும் ஊர்க்குத் தலைவராய் ஆயிரம் ஏர்வைத்து உழவுத்தொழில் நடாத்துவாரான வழித்துணைவர் (மார்க்க சகாயர்) எனப்பெயரிய ஒரு வேளாண்செல்வர் தம்முடைய விளைபுலங்கள் வித்திடப் பட்டுப் பயிர்கிளைக்குங்காலத்து யாரும் அறியாமலே கருகியழிந்து முழுவதூஉம் பாழாய் விடுவது கண்டு மிகவருந்திப், “பல்லாயிர ஏழைமக்கள் பசிப்பிணியால் வருந்த இவையிங்ஙனம் அழிகின்றனவே! என் செய்வோம்! இக்குறையினை நீக்கும் பெரியார் எவரேனும் உளராயின், அவர்க்கு என் அருமை மகளை வாழ்க்கைப்படுத்துவேன்” என்றெண்ணி, “இது நீக்கவல்லார் யார்?” என்று பலரையும் வினாவிவலரலானார். பின்னர் நம் ஆசிரியரது பெரும் புகழ் எங்கும் பரவவே, வழித் துணைவர் அவரை யணுகிப் பணிந்து, “அருட்பெருந்தகையே, ஏழைமக்கள் பலர் பிழைத்தற்கு உதவியாயுள்ள அடியேனது விளைபுலம் பயிர் இலை விரியுங்காலத்திற் கருகிப் பாழாய் விடுகின்றன! பலர் அதனால் மிகவறியராகிப் பசிப்பிணியாற் சொல்லுதற்கரிய துயர் உழக்கின்றனர்! அடிகளது அருட் கடைக்கண் நோக்கம் அதன்மேற் படுமாயின், அக்குறை தீர்ந்து அது பலர்க்கும் பயன்படும்” என்று தமது பெருங்குறையினைத் தெரிவித்துக் கொண்டனர். அதனைச் செவியேற்ற ஆசிரியர் அச்செல்வரின் கசிந்த வேளாண்மை யுள்ளப்பெற்றி யுணர்ந்து, தாமே ஆவ்வூர் சென்று, அவ்விளைபுலங்களை நோக்கி, அவை தம்மை இறைவன் திருவருள் நிலையமாக நினைந்து, “வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்” (குறள் 85) என்னுந் திருக்குறட் பாவினை மொழிந்தருளினார். ஆசிரியரது கடைக்கண் நோக்கம் பட்ட அப்பொழுதே அவ்விளைபுலங் கொழுமையுற்று இடையூறு தீர்ந்து பெரு விளைச்சல் விளைந்தன. அதனாற் பல்லுயிர்களும் பசிப்பிணி நீங்கி மகிழ்ந்தன. ஆசிரியரது அருட்பெருந்தகைமையினையும் அவர் தம் பேராற்றலினையும் நேரேகண்ட வழித்துணைவர் பெரிய தொருவியப்பும் உவகையும் நிரம்பிய உள்ளத்தினராய் அவரைப் பணிந்து, “பெருமானே, அடியேற்கு நேர்ந்த இப்பெருங்குறையினை நீக்குவார்க்கு என்மகளை வாழ்க்கைப் படுத்துவேன் என்றோர் உறுதி செய்துளேன்” எனத் தாங் கொண்ட குறிக்கோளைத் தெரிவித்தார். அஃது உணர்ந்த ஆசிரியர் “நும்மகள் யாம் தரும் இருப்புக் கடலையினைச் செவ்வையாக அவைத்துத் தருகுவளாயின், யாம் அவளை மணஞ்செய்துகொள்ள ஒருப்படுவோம்” என மொழிந்தனர். இருப்புக் கடலை என்பன இரும்பினாற் செய்தவைகள் அல்ல. கடலையிலேயே எளிதில் வேகாத ஒரு வகையே இருப்புக் கடலையென வழங்கப்பட்டு வருகின்றது. வழித் துணைவரும் அக்கடலையினைப் பெற்றுக் கொண்டு போய்ப் பாப்பம்மையார் (வாசுகி) என்னுந் தம் அருமைப்புதல்வியார் கையிற் கொடுத்து, நாயனாரது உள்ளக்கிடக்கையினை அறிவிப்ப, அந்நங்கையார் “அத்துணைப்பெரிய அறிவாளரே இவை அவைத்தற்கு இசையும் எனக் கருதி விடுத்தனராகலின், இவை அவர் குறித்தவாறே வெந்து பதமாகும்” என நினைந்து, பிறிதுரையாது, அவைதம்மை வாங்கி மணமுஞ் சுவையும் பெருகச் சமைத்து, ஆசிரியர்க்குப் படைத்திட்டார். அது கண்ட நம் நாயனார் அவ்வருமை நங்கையாரை மணம்புரிந்தருளி, அவருடன் பூவும் மணமும் போற், பாலுந்தேனும்போற், பழமும் சாறும்போல் ஒருங்கிருந்து இல்லறம் நடாத்தி வரலானார். இவர் நடாத்திய இல்லறவாழ்க்கையின் மாட்சியினைப் பின்னே எடுத்துக் காட்டுவாம். அடிக்குறிப்புகள் 1. செந்தமிழ், 1,2. 2. இருக்குவேதம். 3. See The Sanscrit English Dictionary of Apte. 4. திருமந்திரம், 86 10. திருவள்ளுவர் வாழ்க்கை திருவள்ளுவ நாயனார் தம் மருமை மனைவியார் பாப்பம்மையாரோடு அன்புடன் அளவளாவி இல்லற வாழ்க்கையினை இனிது நடாத்தப் புக்கபின், அதனை இடர்ப்படாது நடத்துதற்கு இன்றியமையாது வேண்டிய பொருள் ஈட்டுதற்கருவியாவது யாதென ஆராயலானார். உலகியல் வாழ்க்கைக்கு முதலதான உணவுப் பொருளைத் தரும் உழவு தொழிலே எல்லாத் தொழில்களினுஞ் சிறந்ததென முடிவுகண் டுரைத்தாராயினும், உழவினைச் செய்யுங்கால் ஓரறிவுயிர்களான பல்வகைப் புற்பூண்டுகளுங்களைந் தெறியப்படுதலானும், ஈரறிவுயிர்களான நத்தை கிளிஞ்சில் முதலியன நசுக்குண்டு இறத்தலானும், மூவறிவுயிர்களான எறும்பும் அட்டையும் மிதியுண்டு அழிதலானும், நான்கறி வுயிரான நண்டும் ஐயறிவுயிர்களான மலங்கும் பாம்பும் ஏரின்கொழுவாற் கிழிவுண்டு மாய்தலானுங், கொல்லா அறத்தினையே முதலறமாய்க் கைக்கொண்ட தமக்கு அவ்வுழவு தொழில் ஆகாமையினை ஆய்ந்துணர்ந்தார். இனி, ஓர் அரசன் கீழாயினும் ஒரு பெருஞ்செல்வரை அடுத்தாயினும் ஒரு தொழில் புரிந்து பொருள் ஈட்டலா மெனின், அவர் ஏவிய வழியன்றிச், தமக்கென ஓர் அறிவுந் தமக்கென ஒருசெயலும் இல்லா ஒரு மரப்பாவை போல் இயங்கி, எந்நேரமும் அச்சத்திலுங் கவலையிலும் ஓய்வின்றி வாழ்நாட் கழிக்கவேண்டி வருமாகலின், அதுவுந் தமக்கு ஆகாதென உணர்ந்தார். இவரது மனநிலை இன்னதாதல், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்” (குறள் 1033) என்றும், “என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை” (குறள் 652) என்றும் அவர் அருளிச் செய்த திருக்குறட் பாக்களால் இனிதறியப்படும். இனிப், பல்பண்டங்களை விலைகொண்டு விற்கும் வாணிக வாழ்க்கையை நடாத்திப் பொருள் பெறலா மெனின், எந்நேரமும் உயர்ந்த பொருட்பயன் ஆராய்தலிலுந், தமக்கு முன்னிருந்த சான்றோர் அருளிய நூல்களைப் பயிறலிலும், அவற்றைப் பயின்றதன் பயனாக எல்லா அறிவும் எல்லா முதன்மையும் ஒருங்குடைய இறைவன் திருவடிகளை ஓவாது தொழும் அருந்தவப் பயிற்சி செய்தலிலுங் கருத்து ஈடுபட்டு நிற்குந் தமக்குப், பலநாடு சென்று பல பண்டங்கள் தேடிக்கொணர்ந்து விற்கும் வாணிக வாழ்க்கையும் ஆகாதென நன்குணர்ந்தார். மேலும், வாணிகம் நடாத்துதலிற், பிறருடைய பொருளைத் தம் பொருள்போற் கருதும் நடுவு நிலை வாய்த்தலும் அரிதெனக் கண்டார். இவரது மனப்பான்மை இப் பெற்றியதாதல், “நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று” (குறள் 407) எனவுந், “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” (குறள் 396) எனவுங், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள் 2) எனவுந், “தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு” (குறள் 266) எனவும், “வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின்” (குறள் 120) எனவும் அவர் அருளிச் செய்தவாற்றால் நன்கறியப்படும். ஆகவே, நாயனார் தமதில்லற வாழ்க்கையைச் சுருங்கிய செலவில் ஆரவாரமின்றி நடத்தினாற், பொருள் வருவாயை மிகுதியாக நாடவேண்டுவதில்லை யெனவும், பொருள் வருவாயை மிகுதியாக நாடாதபோது வாணிகஞ் செய்தலும் பெருஞ் செல்வரின் கீழ் ஊழியஞ் செய்தலும் வேண்டா வெனவும் முடிவு செய்தார்; இஃது, “ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை” (குறள் 478) என அவரருளிச்செய்த திருக்குறட் செய்யுளால் இனிது விளங்கா நிற்கின்றது. இவ்வாறாக ஊழியமும் வாணிகமுந் தமக்கு ஆகா எனக் கண்டபின், தமது எளிய வாழ்க்கைக்கு இசைவதாவது, ஆடை நெய்துவிற்று, அதில்வருஞ் சிறியதோர் ஊதியங்கொண்டு தாமுந் தம்மனைவியாரும் இல்லறம் நடாத்துதலேயாம் என முடிவு செய்தார். இங்ஙனம் முடிவு செய்தபின், நாடோறும் ‘ஏலேலசிங்கர்’ என்னும் வணிகர் பாற் சென்று, அவரிடமிருந்து ஐந்து பணத்திற்கு நூல் வாங்கி அதனை ஆடையாக நெய்து, தமது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு வேண்டிய அளவு அதனை ஊதியத்துக்கு விற்று, ஊதியத்தை மனைச்செலவுக்கும், மிச்சம், ஐந்து பணத்தை அடுத்தநாள் நூல்வாங்குதற்கு முதலுமாக வைத்துத், தம் அருமை மனைவியாருடன் காதலன் பிற்றிளைத்த படியே, தமது அருந்தவ வொழுக்கத்தைப் பொருந்துமுறையில் ஆற்றிவந்தார். நாயனார் செய்தது நெய்தற் றொழிலேயென்பது, “பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி யளந்தோனுந் தாமிருக்க - நாவில் இழைநக்கி நூனெருடும் ஏழையறி வேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” என்னும் இவரது தனிச்செய்யுளினால் அறியப்படும். இச் செய்யுள் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுகின்றது. இங்ஙனம் இல்லறம் என்னுந் தீம்புனல்யாறு ஒரு புறமுந், துறவறம் என்னுந் தண்புனல் யாறு மற்றொருபுறமும் வந்துநிறையும் ஒரு மலர்வாவிபோல, நாயனார் இருவகை யொழுக்கமும் ஒருவகையிற்கொண்டு தமக்கும் பிறர்க்கும் பெரிதும் பயன்படுதலுடையராய் வாழ்ந்து வரலானார். அதனோடு அஞ்ஞான்று தமிழிலும் வடமொழியிலும் வழங்கிய அரிய பெரிய நூற்பொருள்களை யெல்லாம் ஆழ்ந்து நுண்ணிதின் ஆராய்ந்தறிந்து கல்விக் கடற்கோர் எல்லையாயும் விளங்கினார் நாயனார். இங்ஙனந் தமிழ்ப் பேராசிரியராய் இவர் விளங்குதலைக் கண்ட கலைவல்லாரெல்லாம், இவர்தந் திருவடிகளை அடைந்து இவர் அறிவுறுத்தும் அரும்பொருள் அறிவுரைகளைச் செவியாரப் பருகித், தம்முளத்தை அவ்வறிவுப் பேரமிழ்திற் றோய்விக்கும் விழைவு பெரிதுடையராய்க் குழுமினார். அதனால், தவப் பெருந் தலைவரான நாயனார், மக்களுயிர்க்கு இம்மை மறுமையில் உறுதி பயப்பவான ஒவ்வொரு பொருளினையும், பாலைத் துழாவித் துழாவிக் காய்ச்சி அதன் பரப்பனைத்தினையுஞ் சுருங்கத் திரட்டி மாற்றுயர்ந்த ஒரு சிறு பொன்வள்ளத்தில் நிறையவைத்தா லென்ன, மிகச் சில விழுமிய சொற்களால் மிகச்சிறிதாய் நறுவிதாய் அமைத்த குறட்பாவிற் செறிந்து, அங்ஙனஞ் செறிந்த அவ் வரும்பெரும் பொருளை யெல்லாற், தம்மை யணுகிய மாணாக்கர்க்கு உளங்கொளத் தேக்கும் பெருதவியினைச் செய்து வரலானார். பிறரெல்லாம் எண்ணுவதொன்றுஞ் சொல்லுவது மற்றொன்றுஞ் செய்வது பிறிதொன்றுமாகத் தாமே தம்மிற் பெரிதும் முரணி நிற்பர். அங்ஙனந் தாமே முரணி நிற்றலால், அவரெல்லாந் தமது வாழ்க்கையினைச் செவ்வனே நடத்தமாட்டாமற் றாம் பெரிதுந் துன்புறுதலுடன், தம்மைச் சார்ந்தா ரத்தனைபேரும் மிக்க துன்பத்தினை எய்துமாறுஞ் செய்வர். மற்று, நாயனாரோ தாம் நன்கு ஆராய்ந்து நினைந்ததனையே பிறர்க்குஞ் சொல்லினர்; தாமுஞ் செய் தனர். நாயனார் அறங்களுள் மிகச் சிறந்ததெனத் தெளிந்தது ஓருயிரையுங் கொலை செய்யாத கொல்லா அறமே யாம்; தாங் கண்ட அவ்வுண்மையினையே, “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று” (குறள் 323) என்று தாம் அருளிச்செய்த திருக்குறளிலும் பலரறியச் சொல்லினர். அங்ஙனஞ் சொல்லியதற் கேற்பவே, உயிரழிவுக் கிடமான மற்றைத் தொழில்களெல்லாஞ் செய்தலை விட்டு, உயிரழிவுக்கு இடமில்லா நெய்தற்றொழிலையே செய்து போந்தனர். இனிக், கொல்லாமைக்கு அடுத்தபடியிலே நாயனார் சிறந்த அறமெனக் கொண்டது பொய் கூறாமையே யாம். வாணிகஞ் செய்தலில் எங்ஙனமேனும் பொய் வந்து நுழையு மாதலால், அது செய்தற்குத் தமதுளம் ஒருப்படாராய்த் தாம் அன்றாடம் நெய்த ஆடையினை விலைசெய்து பெற்ற சிறுபொருள் கொண்டே தமது வாழ்க்கையினை வளனுற நடாத்திவந்தார். இவர் இவ்வாறு சிறிய வருவாய்ப் பொருள் கொண்டு மனையறம் நடாத்துதற்கு, இவர் தம் மனைவியார் மிகவும் மனம் ஒத்து நடந்தவராகல் வேண்டும்; இல்லை யானால், நாயனார் தாங்கண்ட அறநெறியிற் செல்லுதல் இயலாது. பார்மின்! இஞ்ஞான்றை மாதரார் பொற்சரிகை மிடைந்த பட்டாடை உடுப்பதிலுங், கதிரொளி மிளிரும் மணிக்கலன் பூண்பதிலும், அறுசுவைமிக்க நொறுவைகள் உண்பதிலும், நறுமலர் புழுகு நாளும் அணிதலிலும், நாடகக் காட்சியும் நகைச்சுவைப் பாட்டும் நாடொறுங் கண்டு கேட்டுக் களிப்பதிலும் அடங்கா வேட்கையுடையராய்த், தங்கணவரின் வருவாய்க் குறையினைச் சிறிதுங் கருதிப்பாராது, அவரைப் பெரும்பொருள் கொணரும்படி ஓவாது வருத்தி வருகின்றனர்! அதனால், ஆடவரிற்பலர், தீதும் பழியும் பாராது, தமது தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப வருவாய்ப் பொருளளவில் அமைதிபெறாது, வரம்பு கடந்து சென்று, பிறரை ஏழை எளியரென்றும் நினையாது பலவகையால் நெருக்கி, அவரிடமிருந்து பிழிந்தெடுப்பது போல் எடுத்துப் பெற்ற தொகைகொண்டு தம் மனைவியர் வேண்டுமாறெல்லாம் நடந்து அவரை உவப்பிக்கின்றனர்! இவ்வாறு தொடர்பாகத் தீநெறியிற் பொருள் தொகுக்கும் இவர்கள், தமக்கு மேலுள்ள தலைவர்களால் தமது குற்றங் கண்டுபிடிக்கப்பட்டுச் சிறையிடப்படுதலும் உண்டு; அதற்குத் தப்பினால் தம்மாற் பெரிதுங் துன்புறுத்தப்படுங் குடிமக்களிற் றீயராற் கொலை செய்யப்படுதலும் உண்டு; அதற்குந் தப்பினால் அச்சத்தாலுங் கவலையாலும் ஓயாமுயற்சியாலும் உள்ளம் வெந்து, என்புருக்கி நோய் முதலியன கொண்டு, ஆற்றொணாத் துன்புழந்து காலம் முதிராமுன்னரே மாய்தலும் உண்டு. எவ்வாறேனும் பிறன் கைப்பொருளை வெஃகி அறனல்ல செய்பவர் கெட்டொழிதல் திண்ணம்; அவரேயன்றி அவரது குடிமுழுதும் மாயுமென் பதனையும் நாயனாரே, “நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்” (குறள் 171) என்று அருளிச் செய்திருக்கின்றார். இங்ஙனமாக, ஆடவர்தந் தீவினைக்கு அவர்தம் மனைவியரின் அடங்காப் பேரவாவே காரணமாயிருத்தலால், அவர்தம் நல்வினைக்கும் அவர்தம் அவாவின்மையே காரணமாயிருக்கின்றது. இவ்வுண்மையினை நாயனாரே, “மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள் 51) என்றும், “மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்” (குறள் 52) என்றும், “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை” (குறள் 53) என்றும் நன்கு விளக்கியிருத்தல் காண்க. இங்கே கூறியது கொண்டு மகளிரெல்லாருந், திருவள்ளுவரின் மனைவியாரைப் போல், மிக்க எளிய நிலையிலேயே காலங்கழிக்க வேண்டு மென்பது எமது கருத்தாகக் கொள்ளற்க. மகளிராவார் தங் கணவரின் வருவாய்க்குத் தக்கபடியாகவும், உயர்ந்த முறையிலோ, அன்றி நடுவானமுறையிலோ, அன்றி எளிய நிலையிலோ மனப்புழுக்கமின்றித் தங்கொழுநரோடு ஒத்து வாழ்க்கை செலுத்தல் வேண்டுமென்பதே எமது கருத்தாவதாம். தீதின்றி வந்த பெரும் பொருள் உளதாயின், அதனைக் கற்றார்க்கும் வறியார்க்கும் ஏழைமக்கட்குங் கொடுத்துதவிசெய்வதுடன், தாமும் உயர்ந்த முறையில் ஐம்புலநுகர்தலிற் குற்றம் ஏதும் இல்லை. பெருஞ்செல்வர் செயல் இங்ஙனம் நடைபெறற் பாலதென்பதனை நாயனாரே, “வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்” (குறள் 1001) எனவுங், “கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல்” (குறள் 15) எனவும், “ஏதம் பெருங்செல்வந் தான்றுவ்வான் தக்கார்க்கொன் றீதல் இயல்பிலா தான்” (குறள் 1006) எனவுந் ஓதுமாற்றால் நன்கு தெளிந்துகொள்க. அஃதொக்கும், மிகுந்த செல்வம் உடையாருந் தமது பெரும் பொருளை அற்றார்க்கும் அலந்தார்க்கும் பயன் படுத்துதலே முறையாமல்லது, உயர்ந்த ஐம்புல இன்பங்களைத் தாம் நுகர்தலிலும் அதனை அழித்தல் நன்றாமாறு யாங்ஙன மெனிற், கூறுதும். அற்றார் அழிபசி தீர்த்தலும், அவருடுக்கக் கூறை கொடுத்தலும், அவர் மேலு மேலுந் தம் வயிறு கழுவுதற்கு ஆவனசெய்து வைத்தலும் எல்லாம் அவரது உடம்பினை ஓம்புதற்குப் பயன்படும் அவ்வளவே யல்லாமல், அவரது அறிவினை வளர்த்து அதனை ஒளிபெறச் செய்தற்குப் பயன்படுதல் கண்டிலமே. அதனால், அவரது உடம்பினை மட்டும் பேணுதற்குத் தக்கதாகப் பொருளைப் பயன்படுத்தும் ஒரு துறையிலேயே செல்வர் தமது முயற்சியினை ஊன்றிச் செய்தல் நிலையான பெரும் பயனைத் தரவல்லதன்று. அவரது அறிவு வளர்ந்து ஒளிர்தற்கான பல கலைத் துறை களிலும் அவர்களைப் பயிற்றுதலிலுந் தம் பொருளையும் முயற்சியையும் பயன்படுத்துதலே அவர் தமக்கு இன்றியமை யாத அறமுங் கடமையுமாகும். அவ்வாறு ஏழை யெளியவர் களைப் பல்வகைக் கல்விகளிலும் பயிற்றி, அவரை அறிவிலும் முயற்சியிலும் மேம்படச் செய்து விட்டால், அவர் பின்னர்ப் பிறருதவி வேண்டாது தமது வாழ்க்கையினைத் தாமே இடர்ப் படாது நடாத்தித் தமக்கும் பிறர்க்கும் பயன்படுவர். ஆகவே, செல்வத்தின் அளவுக்கு ஏற்றபடி அதில் ஒரு பகுதியை அற்றார் அலந்தார் அழிபசி தீர்த்தற்கும், அவர் பலதுறைக் கல்வியில் தேர்ச்சி பெறுதற்கும் பயன்படுத்தி வைத்து, மிச்சத்தைத் தாம் ஐம்புலவின்பம் நுகர்தற்குங், கருவி நூல் வீட்டு நூல் ஓவாது கற்றுப் புலமை நிரப்புதற்குந், திருக்கோயில்கடோறுஞ் சென்று இறைவனை வழிபட்டுப் பிறவியைத் தூய்தாக்குதற்கும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். ஐம்புல இன்பங்களை நுகராக்கால் எவர்க்கும் மனக்கிளர்ச்சி குன்றிவிடும்; மனக் கிளர்ச்சி குன்றவே அறிவு மழுங்கும், முயற்சி அவியும்; அறிவும் முயற்சியுங் குறையவே கருவிநூல் வீட்டுநூல் கற்றலில் அவா வுண்டாகாது; அவை யிரண்டுங் கல்லாக்கால் இவ்வுலக வாழ்க்கை இனிது நடவாமையோடு இறைவனை யுணர்ந்து அவனை வழிபடுதற் கண்ணுங் கருத்துச் செல்லாது. ஆதலாற் புலன்களை ஒழுங்கான முறையில் நுகர்தல் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்குப் பெரிதுந் ணைசெய்வதேயாகும். என்றாலும், ஐம்புல நுகர்ச்சியிலேயே முழுதும் உணர்வு இழுப்புண்டு, அதனின் விழுமியவான கல்விப் பயிற்சியினையும் அதன் பயனான கடவுள் வழிபாட்டினையுங் கைவிடுதல் இழுக்காமென்பதே திருவள்ளுவ நாயனார் கருத்தாகும். இது, “சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்” (குறள் 173) என்று அவர் ஓதுமாற்றான் அறியப்படும். ஆகவே, ஐம்புல இன்பங்களை ஒழுங்கான முறையில் நுகர்ந்து, அந் நுகர்ச்சியின் வாயிலாக வரும் அறிவையும் முயற்சியையுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்த லிலுஞ்செலுத்தல் வேண்டுமென்பதே எமது கருத்தாகக் கொள்க. மேற்சொல்லியவாறு நாயனாரின் மனைவியார் தமது மிகச் சிறிய வருவாய்க்குத் தக்கபடி தங் கணவரோடுஉளம் ஒருமித்துத் தமது வாழ்க்கையை எல்லாவகையிலும் இனியதாகவே நடத்தி வந்தனரென்பது, “அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படுசொற் பழிநாணுவாளை- அடிவருடிப் பின்றுஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்றுஞ்சும் என்கண் எனக்கு”1 என்று நாயனார் அவர் இறந்துபட்ட ஞான்று நெஞ்சம் நெக்கு நெக்குருகிப் பாடிய செய்யுளால் நன்கறியப்படும். உடம்பினை நோய் அணுகாமற் பாதுகாத்து, அதனால் அறிவும் முயற்சியும் மிக்கு இன்பந் துய்த்தற்குப் பேருதவி செய்வது செவ்விய முறையில் அமைத்த உணவேயாகும். நறுவிதாகச் சமைத்த உண்டியே உடம்பிற்கும் உயிருக்குஞ் செழுமையினைத் தந்து, நோய் விலக்கும் மருந்தும் ஆகி, இன்பம் இன்ன தென்பதனை மக்களுக்கு முதன்முதற் புலப்படுத்துவ தாகும். ஈன்றணிய சிறுமகவு தாய்தருந் தீஞ்சுவைப்பாலைப் பருகுங்கால் தன் பசித்துன்பத்தை மறந்து எத்துணை மகிழ்ச்சி யுடையதாய்க் காணப்படுகின்றது! கீழோராயினும் மேலோராயினும் இன்சுவை வாய்ந்த உணாப்பொருள்களை அருந்துங்கால் அவர் எவ்வளவு உள்ளந் தளிர்க்கின்றனர்! சாறற்ற சக்கை போன்ற பண்டங் களையுங், காரமுங் கைப்புங் கசப்பும் மிகுந்த உணவுகளையும் ஒரோவொருகால் தின்ன நேர்ந்தக்கால் அவரெல்லாம் எத்தகைய மனக்கொதிப்பு உடையராகிச் சினமும் வருத்தமும் எய்து கின்றனர்! சுவையறியா மக்களுக்கும் வைக்கோலைத் தின்னும் மாடுகளுக்கும் ஏதேனும் வேற்றுமையுண்டோ? சிறிதுமில்லை. சுவையுடைய நறும்பண்டங்களைக் கூர்ந்து பார்த்து அமைதியாய் உட்கொள்பவர் எவராயினும் அவர்க்கு நுண்ணறிவு மிகும், அவர்க்கு நோய் வராது, அவர் நன்முயற்சி வாய்ந்தவரா யிருப்பர். உணவுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உளது. அறிவுமிக்காரெல்லாம் இன்சுவை கனிந்த உணவினையே சிறிதாய் அமைதியாய் அயின்று உள்ளம் மகிழ்பூத்திருப்பர். இதனாலன்றோ நாயனார் தமக்கு நறுஞ்சுவை யுணவு அமைத்த தம் மனைவியாரின் அன்பையும் அறிவையும் அருந்திறனையும் முதன்முதல் வியந்தெடுத்துக் கூறினார். தங் கணவர்பாற் காதலன்புடைய மனைவியர் ஒருசிலரே, தங் கணவரின் உடலோம்பவும் அவர் உள்ளம் உவக்கும் வகையா னெல்லாம் இனிது ஒழுகவும் நன்காராய்ந்து உணவு அமைப்பதும், இல்வாழ்க்கை நடாத்துவதுஞ் செய்வர். அத்தகைய பேரன்பு வாயாத மகளிரோ அங்ஙனஞ் செய்ய மாட்டுவார் அல்லர். இதனை நாயனாரே, “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை” (குறள் 53) என நன்கெடுத்து வற்புறுத்தினார். ஆகவே, மகளிர் உணவு சமைத்துத்தரும் முறையிலிருந்து அவர்தங் கணவர்பால் எவ்வளவு அன்பு வைத்துளாரென்பது தெள்ளிதின் அறியப்படும். மேலுந், தங் கணவர்பாற் காதலன்பு பூண்டு ஒழுகும் ஒரு மங்கை, தன் உறவினர் மாட்டும் அண்டை அயலார் மாட்டும் முறையான அன்பு வைத்து அவரெல்லாம் உவக்குமாறு அடக்க வொடுக்கத்துடன் நடப்பள். ஏனெனில், அவள் இந்நடையிற் சிறிது பிசகினும், எல்லாரும் அவளைக் கொண்டான்மேற் பழி கூறாநிற்பர். அங்ஙனந் தன்னால் தன் கணவன் பழிச்சொற்கு ஆளாக மனம் பொறாளாய் அவள் தன்னைப் பலவகையிலுங் காத்துக் கருத்தாய் அமைதியாய் அறிவாய் நடந்துகொள்வ ளென்னுங் குறிப்பு, நாயனார்தம் மனைவியார் நடையினை வியந்து “படுசொற் பழி நாணுவாளை” என்று நுவன்ற வாற்றால் தெளியப்படுகின்றது. இனி, நூலாராய்ச்சியிலும், நூலியற்றுதலிலும், மாணாக்கர்க்கு நூற்பொருள் அறிவுறுத்துதலிலுந், தவ வொழுக்கத்திலும், ஆடைநெய்து விற்றலிலும், விற்றுக் கொணர்ந்து சிறு பொருளால் இல்வாழ்க்கையைச் சிறக்க நடாத்துதலிலும் நாள் முழுதும் இரவின் முற்பாதிவரை யிலுந் தொடர்பாக முயன்று அயர்வுற்ற நாயனார்க்கு அவ் வயர்வுதீர்த்து, அவரை நன்றாகத் துயிற்றுதற் பொருட்டு அவர்தந் திருவடிகளை அவர்தம் மனைவியார் மெல்னெத் தடவிக் கொடுத்து அவர் இனிது துயின்றபின் நாந்துயின்று, அவர் துயில்நீங்கி விழிப்பதன் முன்தாம் விழித்தெழுந்த முறைகளை யெல்லாம் நாயனார் சுருங்கிய சொல்லில் விளங்கக் கூறியிருப்பது காண்க. இச்செய்யுளில் தம் மனைவியார் பகலிலும் இரவிலும் இல்லற வொழுக்கத்தைப் பேரன்பின் வழியராய் நின்று தாமும் பிறரும் வியந்து பாராட்டுமாறு நடாத்திய அருந்திறன் எத்துணை நுண்ணிதாக எத்துணைச் சுருக்கமாக எடுத்து நுவலப்பட்டிருக்கின்றது! இவ்வாறு நாயனாரும் அவர்தம் மனைவியாரும் பழமுஞ்சுவையும்போல், மலரும் மணமும்போல், உயிரும் உடலும் போற் காதலன்பால் ஒருங்கொத்து இல்வாழ்க்கை நடாத்து கின்றுழி, அவ்வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் சில அவர்தம் அன்பின் மிகுதியினைக் காட்டும் அடையாளங்களாகத் தமிழறிஞர்களால் தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருகின்றன. அவை தம்மை இங்கெடுத்து வரைவாம். நாயனார் மனைவியாருடன் கூடி இல்வாழ்க்கை நடாத்தும் அருமைப் பாட்டினைத் தமிழ்நாட்டவ ரெல்லாம் வியந் தெடுத்துப் பேசுதலை அறிந்த தமிழ்வல்லார் ஒருவர், நாயனாரை அணுகி அவரை வணங்கி, “ஐயனே, இல்லற வாழ்க்கையோ துறவறவாழ்க்கையோ எது சிறந்தது? அதனை அடியேற்குப் புலங்கொள அறிவுறுத்தருளல் வேண்டும்” என்று வேண்டினார். அவ்வேண்டுகோளைச் செவியேற்ற நாயனார், அவர்க்கு அவ்வுண்மை யினைச் சொல்லாற் சொல்லி விளக்கு தலினுஞ் செயலாற்காட்டி விளங்கவைத்தலே உண்மையை உள்ளபடி காட்டுமெனக் கருதி, அவரைச் சிலநாட்கள் தம்முடன் இருக்கு மாறு கற்பித்தார். அவ்வாறே வந்த அறிஞர் நாயனாரில்லத்தில் விருந்தினராய் இருந்து வருகையில், ஒருநாட் காலையில் நாயனார் தமக்குப் பழஞ்சோறு இடுகவெனத் தம் மனைவி யார்க்குக் கட்டளை இட்டனர். அங்ஙனமே அம்மையார் அவர்க்குப் பழையது பரிமாறிவைத்து, அவரதனை உட்கொண்டபின் வாய் கழுவுவதற்காகத் தண்ணீர் முகந்து கொண்டு வரும்பொருட்டுக், கிணற்றண்டை சென்று, அதனுள்ளிருக்குந் தண்ணீரைத் தாம்புக்கயிறு கொண்டு ஒரு குடத்தால் முகந்து மேலிழுக்கும் நிலையிலிருந்தார். அப்போது சடுதியில் நாயனார், “பெண்ணே, சோறு சுடுகிறது! விசிறி கொண்டுவா! ” எனக் கூவியழைத்தார். அச்சொற் கேட்ட அம்மையார், கிணற்றின் அடியிலிருந்து அரைவாசி மேலிழுத்த குடத்தை முழுதும் மேல்இழாமல் அந்நிலையே விட்டுத், துடித்தோடி வந்து ஒரு விசிறி கொண்டு வீசினார்; வீச அப்பழஞ் சோற்றின் மேல் ஆவி குமுகுமுவென் றெழுந்தது. அதன்பின் அம்மையார் மீண்டுங் கிணற்றண்டை போய்ப் பார்க்கத், தண்ணீர்க் குடமுங் கயிறுங் கிணற்றுள் விழாமல் விட்ட நிலையிலேயே நிற்பதனைக் கண்டு வியந்து, அதன்நீரை நாயனார் கைக்கு நீட்டினார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் நேர் இருந்து கண்ட அவ்விருந்தினர்க்கு, அம்மையார் தாம் பரிமாறியது குளிர்ந்த பழங்சோறே ஆதலை உணர்ந்திருந்துந், தங் கணவர் சோறு சுடுகின்றது எனக் கூவியதனைக் கேட்டதும், அவ்வுணர்ச்சியினை மறந்து, நாயனாரது சொல்லின் வழியராய், அரைவாசியில் இழுத்த குடத்தையுங் கயிற்றையுங்கூட உடன்மறந்து ஓடிவந்து விசிறிகொண்டு வீசியதும், நாயனாரது சொற் பழுதாகாமல் அப் பழஞ்சோற்றிலிருந்து ஆவி குமுகுமுவென்று மேலெழுந்ததுந், திரும்பிக் கிணற்றண்டை அம்மையார் செல்லும்வரையில் அவர் அரைவாசியில் விட்டபடியே தண்ணீர்க்குடமுங் கயிறும் இடைவெளியில் நின்றதும் எல்லாம் பெரியதோர் இறும் பூதினை விளைவித்து, அம்மையாரின் காதலன்பின் பெருமை யினையும் அதன் வழித்தான அவர்தந் தெய்வக் கற்பின் மாட்சி யினையும் அவர்க்கு நன்கு புலப்படுத்தின. பின்னர் ஒருகாற், பகற்பொழுதில் தமது நெசவு தறியின்கண்ணே ஆடை நெய்துகொண் டிருக்கையிற்றமது கையிலிருந்த நூனாழி கீழே வழுவிவிழ, உடனே அவர் அதனை யெடுத்தற்கு விளக்கேற்றி வரும்படி தம் மனைவியரை அழைத்தனர். அழைத்த வண்ணமே அம்மையார் விரைந்து விளக்கேற்றி வந்து அதனை ஏந்தினர். பகற்காலத்திற் கீழ் விழுந்ததனை எடுத்தற்கு விளக்கு ஏதுக்கென வினவாமல், நாயனார் விரும்பியபடியே விரைந்து விளக்கேற்றிக் கொணர்ந்த அம்மையாரின் மனவொருமையினைக் கண்டு அவ்விருந்தினர் மிகவும் வியப்பெய்தினர். இங்ஙனமாகக் கணவன் ஏவியவைகளை ஏவியவாறே மறாது மனவொருமையுடன் செய்யுங் காதன் மனையாள் வாய்ப்பின் அவளுடன் கூடியிருந்து ஐம்புலவின்பங்களை ஆரத்துய்த்து, மறுமை யின்பத்தைப் பெறுதற்காவனவும் இடரின்றிச் செய்தற்கேற்ற இல்லறத்தை நடாத்துதலே விழுமிதென்றும், அங்ஙனங் காதற்கற்புடைய மனையாள் வாயாவிடின் இம்மையின்பங்களை வெறுத்து மறுமை யின்பத்தையே நாடித் தவ வொழுக்கத்தில் துளங்காது நிற்குந் துறவறத்தை மேற்கொள்ளுதலே வேண்டற்பாலதென்றுந் தெளியவுணர்ந்து அவ்விருந்தினர் நாயனாரை வணங்கி விடைபெற்று ஏகினரென்ப. இன்னும், பாப்பம்மையார் தங் காதற் கணவராகிய நாயனார் கற்பித்தவைகளைக் காரணங் கேளாமலே செய்யும் இயல்பினராய் ஒழுகிவந்தன ரென்பதூஉம் , அறிவுடையார் கூறும் பின்னும் ஒரு செய்தியானும் நன்கு விளங்கா நிற்கின்றது. தமக்கு உணவு படைக்கும்போதெல்லாம் பரிகலத்தின் பக்கத்தே ஒரு சிறு வட்டிலில் தண்ணீரும், அவ்வட்டிற் பக்கத்தே ஒரு சிறிய ஊசியும் வைத்திடுமாறு நாயனார் அம்மையார்க்குக் கற்பித்திருந்தார்; அவ்வாறே அம்மையாரும் அங்ஙனம் வைத்தலின் காரணங்கேளாமலே தமது இறுதிக்காலம் வரையிற் செய்து போந்தனர். பின்னர்த் தமக்கு இறுதிக்காலம் நெருங்க, அம்மையார் தமதுயிர் பிரியுந் தறுவாயில், அங்ஙனம் நீண்டகாலமாகத் தாம் வட்டிலிற் றண்ணீரும் அதனண்டையில் ஓர் ஊசியும் வைத்து வந்ததும், வைத்த அவை முடிவுவரையிற் பயன்படுத்தப்படாமலே இருந்ததும் என்னை? என்றறியும் வேட்கையால் உயிர் நீங்கமாட்டாமல் தத்தளித்தல் கண்ட நாயனார், “பெண்ணே, நீ ஏன் இங்ஙனம் வருந்துகின்றனை? நீ ஏதேனுங் கேட்க வேண்டுவதிருந்தால் ஐயுறவின்றிக் கேள்!” என்று கட்டளை தந்தனர். அச்சொற்கேட்ட அம்மையார் முகமலர்ந்து மெல்லியகுரலிற், “பெரும, வட்டிலில் தண்ணீரும் ஊசியும் பரிகலத்தின் அருகே நாடோறும் வைத்தும், அவை பயன்படுத்தப்படவில்லையே?” என வினவினர். அதற்கு நாயனார், “பெண்ணே நீ சோறிடுங்காற் சோற்றுப் பருக்கை கீழ் விழுந்தால், அதனை அவ்வூசியாற் குத்தியெடுத்து, வட்டிலின் தண்ணீரிற் கழுவிப் பரிகலத்திற் பெய்துகொள்ளுதற்காகவே அங்ஙனம் அவ்விரண்டையும் வைக்கச் சொன்னேன். ஆனால், நீ மிகவுங் கருத்தாகச் சோறு கீழே சிந்தாமல் நாடோறும் பரிகலத்திற் பெய்து வந்தமையால், அவை யிரண்டும் பயன்படுத்தப்பட வில்லை!” என விடை பகர்ந்தார்; அதுகேட்ட அம்மையார் மனநிறை டையராய் நாயனாரைத் தொழுத படியே உயிர்நீங்கின ரென்ப. இங்கொன்று ஆராயற்பால துளது. நாயனாரின் மனைவியார் தங்கணவர் ஏவியவைகளிற் காரணம் புலனாகாதவற்றிற்குக் காரணங் கேளாது செய்தல், பகுத் தறிவும், ஆராயும் உணர்ச்சியும் வாய்ந்த மக்கட் பிறப்பினர்க்கு ஆகுமோ? வெனின்; அதனை ஒரு சிறிது விளக்குவாம். இல்லொழுக்கத்தில் விரைந்து செய்யவேண்டும் நிகழ்ச்சி களே மிகப்பல. அமைதியாகக் காலந்தாழ்த்துச் செய்ய வேண்டுவன மிகச்சில. இன்னும், இல்லத்தின் உள்ளே செய்யவேண்டுஞ் செயல்களினும், வெளியே சென்று செய்ய வேண்டுவன மிகவிரைந்து நடைபெற வேண்டுவனவாயிருக்கும். இல்லத்தினுள்ளிருந்து வேண்டுவன செய்வார் பெண் மக்களும், அதன் வெளியே சென்று வேண்டுவன செய்வார். ஆண்மக்களுமாய் இருக்கின்றனர். வெளியே சென்று பொருள் ஈட்டும் ஆடவர், அப்பொருள் ஈட்டும் முயற்சியில் தம்மோடு இணங்கியும் அதற்கு மாறுபட்டும் நடப்பார் பலருடன் தொடர்புற்று நின்று அதனை மிக விழிப்பாய்க் கூர்த்த அறிவோடு நடத்தவேண்டி யிருத்தலின், அவர் தாம் விரும்பிய படியெல்லாம் அதனைக் காலந்தாழ்த்துப் பாராமுகமாய்ச் செய்தல் இயலாது; அதிற்றம்மொடு தொடர்புடையார் செய்யிம் முயற்சிக்குத்தக அவரோடு இணங்கியோ இணங் காமலோ தாம் அதனை விரைந்து அறிவாய்ச் செய்து முடிக்கவேண்டி வரும். இதனை ஒரு நிகழ்ச்சியில் வைத்து விளக்குவாம். பழங்கள் மொத்தமாய் வாங்கி விற்பனை செய்யும் ஒரு வணிகர், குடகு நாரத்தம்பழம் வருவித்து விற்பனை செய்யும் மற்றொருவர்பால் தமக்கு ஐம்பது வெள்ளிக்காசுக்கு அப்பழங்கள் வேண்டுமெனவும், அவை வந்திறங்கியவுடன் தமக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவித்திருந்தார். அங்ஙனமே வேறு வணிகர் சிலரும் அப்பழங்கள் விலைகொளல்வேண்டி அவை வரும் நேரத்தைத் தமக்குத் தெரிவிக்கும்படி அறிவித்திருந்தார்கள். பின்னர் ஒரு நாட்காலையிற் றிடுமெனக் குடகுநாரத்தம் பழங்கள் கூடைகூடையாய் வந்திறங்கின. வருவித்தவர் உடனே தம் ஏவலாட்களை வணிகர் பலரிடமும் போக்கி அதனை அவர்க்கு அறிவித்தனர். முதலிற்கூறிய வணிகர் விழிப்பும் அறிவுஞ் சுருசுருப்பும் உடையர்; அவர் மனைவியாரும் அவரோடு ஒத்து அவர் வேண்டுவனவெல்லாங் காரணங்கேளாமல் உடனே செய்யும் இயல்பினர். ஆகவே, அவர் காலை ஏழுமணிக் கெல்லாந் தாம் வெளியே செல்லல் வேண்டுமெனவுஞ் செல்லுங்கால் தாம் ஐம்பது வெண்பொற் காசு கொண்டு செல்லல் வேண்டுமெனவுந் தம் மனைவியார்க்கு ஆறு மணிக்கே தெரிவித்திருந்தார். உடனே அவ்வம்மையார் தங் கணவர்க் கான காலையுணவு செய்துகொடுத்துத், தமது முதற்பொருளிலிருந்து ஐம்பது வெள்ளியும் எடுத்து வந்து வைத்திட்டார். அவ்வணிகர் அமைதியாக உணவுகொண்டு, ஐம்பது காசுகளுடன், பழங்கள் வருவித்தவர்பாற் சென்று, நயத்தவிலையில் தாம் வேண்டியவளவு பழங்களை வாங்கிக் கொண்டார். இவர் வாங்கிக்கொண்டபின், மற்றை வணிகர் ஒவ்வொருவராய் ஒருவர்பின் ஒருவராய் வந்து பழங்களை வாங்குவாராயினர். வருவித்த பழங்கள் விலையாக விலையாக மிச்சமுள்ள பழங்கள் விலை ஏற்றப்பட்டன. கடைசியாக வந்தவர்க்குப் பழங்களே கிடைக்கவில்லை. ஆகவே, முதன்முதல் வந்து நயத்தவிலைக்குப் பழங்களை வாங்கிக் கொண்ட வணிகரைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் பட்டுத், தக்க நேரத்தில் தாம் வரக்கூடாமைக்குக் காரணந் தம் மனைவி மாரே எனச் சொல்லி ஒருவரோடொருவர் வருந்த லாயினர். ஒரு வணிகர், “நான் ஏழு மணிக்கு வெளியே போகல் வேண்டுமெனச் சொல்லியும், என்மனைவி ஏழுமணிக்குத் தான் மெல்ல எழுந்து சிற்றுண்டி செய்து எட்டுமணிக்குப் படைத்தாள்; அதனால் யான் பிந்திப்போனேன்” என்றனர். மற்றொருவர், “எதற்காக இவ்வளவு காலையிற் போகல் வேண்டும்? எட்டுமணிக்கு வழக்கம்போற் போனால் என்ன? நீங்கள் போவதற்குள் மற்றைக் கடைக்காரர் வரமுடியுமா? அவரவர் வீட்டிற் பெண்பிள்ளைகளுங் காலைக் கடன்களை முடித்துக் கொண்டுதானே அடுக்களையிற் செல்வார்கள்?” என்று கேள்விமேற் கேள்விகேட்டுக் கொண்டிருந்தமையால், அக்கேள்விகளுக்கு விடை சொல்லி முடிப்பதற்கே எட்டுமணியாயிற்று!” என்றனர். பின்னர் ஒருவர், “என் மனைவி, இன்றைக்குத் திங்கட்கிழமை, ஏழரை மணிமுதல் ஒன்பது மணிவரையில் இராகுகாலம், அது கழித்துத்தான் போகவேண்டும்” என்று வற்புறுத்தி மிகமெதுவாகத் தன் வீட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தமையால், யான், ஒன்பது மணிக்குமேற் பட்டினியாகவே இங்குவந்தும் பயன்பட வில்லை’என்றனர். வேறொருவர், “என் மனைவி ‘நான் பட்டுப் புடவையுந் தங்கச்சங்கிலியும் வாங்க வைத்திருக்கும் பணத்தைப் பழம் வாங்கக் கொடுக்கமாட்டேன்; கடனுக்கு வாங்கிவிற்றுக் கடனைச் செலுத்தும்’ என்று சொல்லிவிட்டனள்; அதனால் நேரங்கழித்துக் கையிற் காசின்றி வரலாயிற்று!” என்றனர். இங்ஙனமே பிந்தவந்தவர் ஒவ்வொருவருந் தம் மனைவிமார்மேற் குறைசொல்லினர். முந்திவந்தவர் சிலர்தம் மனைவிமாரின் அறிவையும் முயற்சியையுஞ் சுருசுருப்பையும் பாராட்டிப் பேசினர். முதன்முதல் வந்தவரும், அவரை யடுத்துவந்த ஒரு சிலரும் அப்போது வந்திறங்கிய குடகுநாரத்தம்பழங்கள் அவ் வளவையும் நயத்தவிலையில் வாங்கிக்கொண்டமையாற், பின்வந்த வணிகர்கள் அவர்களிடத்திலேயே மிக்கவிலை கொடுத்து அவைகளை வாங்கிக் கடையில் வைத்து விற்பனை செய்ய வேண்டியவரானார்கள்; அவை விற்பனையாக ஒரு கிழமை வரையிற் சென்றமையால், அப்பழங்களிற் சிலபல அழுகியும்போயின; குடகுக்கிச்சிலிகள் விரைவில் அழுகுந் தன்மைய. முதலிற்சென்று வாங்கிய வணிகரோ உடனே மற்றைக் கடைக்காரர்க்கு அவைகளை விற்பனை செய்து விட்டமையால், அவர்க்கு ஏதும் விரையம் நேராமையொடு, மிகுந்த ஊதியமும் பெற்றனர். அதுகொண்டு, தங்கணவரின் அறிவும், முயற்சியும் நன்கறிந்த பெண்டிர், அவர் விரைந்து செய்யும் முயற்சிக ளுக்குக் காரணங் கேட்டுக் கொண்டு இராமல், உடனே அவர் ஏவியவைகளை விரைந்து செய்தல் பெரிதும் நலந்தருவதாதல் விளங்குகின்றதன்றோ? ஆதலாற், றங்கணவர் விரைந்து ஒன்று செய்கவென ஏவிய போதும், அவர் தாம் வழிநாட்களில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப்பற்றி ஆழநினைந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் போதும், மனைவிமார் அவரைக் கேள்விமேற் கேள்வி கேட்டு அவர்தம் முயற்சியையும் நினைவையும் பழுதுபடுத்தல் ஆகாது. அங்ஙனமாயின், மனைவிமார்க்குத் தங் கணவன்மார் செய்யும் முயற்சிகளையும் அவர் எண்ணும் எண்ணங்களையும் அறிந்துகொள்ளுதலில் அவா எழுதல் இயல்பன்றோ? அதனால், அவர் அவற்றை யறிய வினாவுதலும் இயல்பே யன்றோ? எனின்; கணவன்மார் தாஞ்செய்யும் முயற்சிகளையும், அவற்றைக் குறித்துத் தாம் எண்ணும் எண்ணங்களையுந் தம் மனைவி மார்க்கு உரையாதிரார். கணவற்கு மனைவியினும் உற்றார் பிறர் இல்லாமையின், தம்முள்ளத் துள்ளவைகளை அவன் ஒழிவு நேரங்களில் அவட்கு வெளிவிட்டுச் சொன்னால் அல்லாமல், அவனதுள்ளம் அமைதி பெறுவதில்லை. ஆதலால், அவன் பரபரப்பாயிருக்கும் நேரங்களில் அவனை ஏதுங் கேளாமல், அவன் ஏவியவைகளை அறிவாய் விரைந்து செய்து முடித்துச் சிறிது பொறுமையாக இருப்பாளாயின், அவனே அவற்றின் காரணங்களை அன்றைப்பொழுதிலோ அல்லது பின் னாளிலோ அவட்குக் கட்டாயந் தெரிவித்துவிடுவன். இந்நுட்பம் உணர்ந்த பெண்டிர், தங்கணவர் தமக்குத் தெரிவிக்க வேண்டுவனவற்றைத் தெரிவிக்குமுன்னரே ஏதுங்கேளார். இந்நுட்பம் உணராத மகளிரோ அவரை ஒவ்வொன்றுங் கேட்டு வருத்துவர். திருவள்ளுவரின் மனைவியாரான பாப்பம்மை யாரோ நுண்ணுணர்வு வாய்ந்தவராகையால், தங் கணவரின் மனப்பான்மையும் அவரது பேரறிவும் நன்கறிந்து அவர் தமக்குத் தெரிவிக்க வேண்டியவைகளைத் தெரிவிக்க வேண்டுங் காலங்களில் திண்ணமாய்த் தெரிவிப்பர் என நம்பி, அவர் ஏவியவைகளைக் காரணங் கேளாமல் உடனே செய்துவந்தன ரன்றித், தமக்குப் பகுத்தறிவும் ஆராய்ச்சியுணர்வும் இல்லாமை யால் அங்ஙனஞ் செய்தாரெனக்கோடல் பொருந்தாது. நாயனார் ஏவியவைகளுக்கு முதலிற் காரணங் கேளாது அவர் ஒழுகி வந்தனராயினும் பின்னர் அவற்றின் காரணங்களைத் தெரிந்து கொள்வதில் அவர் வேட்கை மிகுதியுமுடையரா யிருந்தன ரென்பதும், அக்குறிப்பறிந்து நாயனாரும் அவர்க்கு அவற்றை உரிய காலத்திற் றெரிவித்துவந்தன ரென்பதும், அம்மையார் இறக்குந்தறுவாயில், நாயனார் அதுகாறுந் தெரிவியாது விட்ட ஊசியும் ஒருசிறு கிண்ணந்தண்ணீரும் அவர்தாம் உண்ணும் பரிகலத்தின் பக்கத்தே நாடோறும் வைக்கும்படி கற்பித்ததன் காரணத்தை அறிந்துகொள்ளும் வேட்கையினால் உயிர்நீங்கா திருந்த நிகழ்ச்சிகொண்டு நன்கு அறியப்படும். இவ்வாறாக நாயனாரும் அவர்தம் அருமை மனைவி யாரும், ஓர் ஆவிற்கு இருகோடு தோன்றினாற் போலவும் ஒரு காக்கையின் இருகண்ணிற்கும் ஒருமணியே கலந்தியங்குதல் போலவுந் இருதலைப் புள்ளினுக்கு ஓர் உயிரே உள் நின்று உலவுதல் போலவும், ஒருங்கியைந்து இல் வாழ்க்கை நடாத்தும் மாட்சி வரவர எங்கும் பரவி விளங்கலாயிற்று. அதுகண்ட ஒரு தமிழ் மாணவன், நாயனார் தாம் அருளிச்செய்த திருக்குறளிற் சொல்லியபடியேயாவுஞ் செய்து வருதலைத், தான் பின்னும் ஆராய்ந்து தெளிதல்வேண்டி, நாயனார் தாம் நெய்த ஆடை யினை விற்கும் இடஞ் சென்று, அவர் கையிற் பிடித்திருந்த அவ்வாடையினைத் தன் கையில் வாங்கி ‘இதன் விலை யாது? என்று வினவ, அவர் ‘அதன் விலை இரண்டு பணம்’ என்றனர். அதன்பின் அவன் அதனை இரண்டாகக் கிழித்து, ‘இத்துண்டு ஒவ்வொன்றின் விலை என்ன? என்று வினவ, அவர், ‘ஒவ்வொன்றின் விலை ஒவ்வொரு பணம்’ என்றனர். பின்னும், அவன் அவ்வொவ் வொரு துண்டினையும் இவ்விரண்டாகக் கிழித்து, ‘இச் கிழிவு ஒவ்வொன்றின் விலை யாது? ’ என வினவ, அவர், ‘அக்கிழிவு ஒவ்வொன்றின் விலை அவ்வரைப்பணம்’ என அமைதியாக விடை நுவன்றனர். அதன் மேலும் அவன் அவ்வொவ்வொரு கிழிவினையும் இவ் விரண்டாகக் கிழித்து, ‘இச் சிறுகிழிவு ஒவ்வொன்றின் விலை யாது?’ எனக்கேட்ப, அவர், ‘காற்காற்பணம்’ என்ப பின்னும் பொறுமையாகவே விலை கூறினர். முகத்திற் சிறிதுஞ் சினக்குறி காணப்படாத அவரது உள்ளப் பொறுமையினைக் கண்ட அம்மாணவன் பெரிதும் வியப்படைந்து, அம்முழு ஆடைக்குரிய விலை யினையும் அவர் கையில் வைத்து அவரை வணங்கிப் போயினன் என்ப. அங்ஙனஞ் சென்ற அம்மாணவன் அவ்வளவில் அமைதி பெறானாய்ப் பின்னும் அவரது பொறுமையினை ஆராய்ந்து காணும் விருப்பினனாய், மற்றொரு நாள் நாயனாரது இல்லத்திற்குச் சென்று, “பசித்து வந்தேன், எனக்குச் சோறிடுக” எனவேண்ட, நாயனாரும் அவற்கு இரங்கித், தம் மனைவியாரை விளித்து, ‘இப்பிள்ளைக்கு உணவு கொடு’ எனக் கட்டளை யிட்டார். அம்மையாரும் பரிந்து அவ் விளைஞற்கு உணவு படைத்தார். அதனையுண்டு சிறிது நேரம் அமர்ந்தபின், அவன் அம்மையாரது வலதுகையைப் பிடித் திழுக்க, அம்மையார் திடுக்கிட்டுக் கூவினார். நாயனார் உடனே உள்ளே சென்று நோக்க, அவ்விளைஞன் தம் மனைவியாரின் கையைப் பிடித்திழுக்கக் கண்டார். கண்டு சினங்கொண்டு அவனைப்பிடித்து அருகுநின்ற ஒரு தூணிற் பிணைத்து ஒரு பிரப்பங்கோலால் தொடைமேல் நன்றாய் விளாசினார். அதுபற்றி அவன் நாயனாரை நோக்கி, “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்” (குறள் 158) என்று நீர் நுமது திருக்குறளில் எழுதி வைத்தது பிறர்க்கு மட்டுமோ? நுமக்கும் உண்டோ?” எனக் கடிந்து வினவினான். அதுகேட்ட நாயனார், ‘அஃதெல்லார்க்குமே; ஆயினும், யாம் அதற்குமேல் எழுதிய, “செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானுங் கெடும்” (குறள் 466) என்னுஞ் செய்யுளை நீ உணர்ந்திலைபோலும்! பொறுமைக் கும் ஒரு வரம்புண்டு; செயத்தக அல்லாத பெருங்குற்றத்தை ஒருவன் செய்வனாயின், அவன்பாற் பொறுமைகாட்டுதல் எவர்க்குமே ஆகாது’ என நுவன்று அவனுக்கு அறிவு தெருட்டினார்; அவ்விளைஞனும் அவ்வுறுதிமொழிகேட்டு அறிவு தெருண்டு நாயனாரை வணங்கிப் போயினன் என்ப. இங்ஙனமே, நாயனார் நடாத்திய இல்வாழ்க்கையின் நுட்ப நிகழ்ச்சிகள் இன்னும் பலஉள. இனி, நாயனார் தாம் அருளிச்செய்த ‘திருக்குறளில்’ இல்வாழ்க்கையின் பயனாவது நன்மக்கட்பேற்றினை எய்துவதேயென்று தேற்றி, “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட்பேறு” (குறள் 60) எனக் கூறுதலாலும், தம் பிள்ளைகளின் மழலைச் சொல்லி னிமையினைக் கேட்டு இன்புற்றறியாதவர்களே குழலொலி யாழொலியினை இனிதெனக் கூறுவரெனக் கிளந்து, “குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்” (குறள் 66) என மொழிதலாலும், தம் மக்களின் சிறிய கையினால் அளாவப்பட்டது புல்லிய கூழாயிருப்பினும் அஃது அமிழ் தினும் இனிதாகுமென்பது விளங்க, “அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்” (குறள் 64) என நுவலுதலாலும், தாய் தந்தையர்க் கின்பமாவது தம் பிள்ளைகளின் மெல்லிய வுடம்பைத் தொடுதலேயா மென்பது தோன்ற, “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” (குறள் 65) எனக் கிளத்தலாலும் நாயனார்க்கு மக்கட்பேறு வாய்த் திருந்தமை உய்த்துணரப்படும். என்னை? மக்கட்பேறு வாயாதவர்க்கு இவ்வுண்மைகளை யுணர்ந்து பகர்தல் இயலாதாகலின் என்க. ஆனாலும், அவர் ஈன்ற மகாரின் வரலாறு சிறிதும் அறியக்கூடவில்லை. என்றாலும், அவர்க்கு மகப்பேறு வாய்ந்திருந்தமை மட்டும் திண்ணமாமென்க. அடிக்குறிப்பு 1. இச்செய்யுள், தொல்காப்பியக் கற்பியல் 12-ஆஞ் சூத்திரத்தின் இளம்பூரணர் உரையில் எடுத்துக் காட்டப்பட்டுளது. சில பாட வேறுபாடுகளுடன் இது நச்சினார்க்கினியர் உரையிலுந் “தனிப்பாடற் றிரட்டிலுங்” காணப்படுகிறது. திருக்குறள் ஆராய்ச்சி - முற்றும்- பின்னிணைப்பு அடிகளாரின் திருக்குறள் ஆராய்ச்சித்திறன் தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பெருந் தலைவராக மறைமலையடிகள் விளங்குகிறார். அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அகன்ற ஆங்கில அறிவும் பரந்த சமற்கிருத மொழிப் புலமையும் தமிழின் மறுமலர்ச்சிக்கும் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாய் அமைந்தன. `தமிழன்’ எனும் அவருடைய எண்ணத்தின் எழுச்சியும், `சைவன்’ எனும் உணர்வினால் அவர் உள்ளத்தில் உண்டான மலர்ச்சியும் தமிழ் ஆராய்ச்சியுலகில் புதியதொரு திருப்பத்தை உண்டாக்கின. இதனால், பண்டைத் தமிழரின் பழம் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைச் சிறப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அடிகளாரின் ஆராய்ச்சிப்பணி அமைந்ததைக் காணுகின்றோம். அவருடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த தமிழ் இலக்கியங்கள் திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம், திருக்கோவையார் என்பன. இவற்றுள் திருவாசகமும் திருக்குறளும் முதன்மையிடம் பெற்றுள்ளன. திருக்குறளின் கருத்துகளை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் எடுத்துரைத்துள்ளார். அவருடைய புதினங்களில் திருக்குறள் கருத்துகள் கதிர்மணிகளாக ஒளி விடுகின்றன. முப்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களை அடிகள் வரைந்துள்ளார். அவற்றுள் எல்லாம் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிப் பகுதிகள், விளக்கங்கள், புத்துரைகள் இடம் பெற்றுள்ளன. `திருக்குறள்’ எனும் பெயரினைக் கொண்டு அவர் இரண்டு நூல்கள் இயற்றியுள்ளார். முதற்குறள் வாதநிரா கரணம் என்பது முதல் நூலாகும். `அகரமுதல எழுத்தெல்லாம்’ எனத் தொடங்கும் முதற்குறட்பாவிற்கு அத்துவிதத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மறுக்கும் நூல் இது. `எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே முதலாக உடையன; அதைப்போல, உலகம் இறைவனை முதலாக உடைத்து’ எனும் கருத்தினை விளக்குகின்ற நிலையில் முதலாக எனும் தொடர் மயக்கம் தருவதாக அமைந்துள்ளதை அடிகள் நன்கு தெளிவுறுத்தி யுள்ளார். `இறைவன், உலகம், உயிர்’ எனும் முப்பொருள்களுள் இறைவன் முதன்மைனயானவன் என்பதை அவர்கள் தக்க காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார். அடிகளின் மற்றொரு நூல் திருக்குறளாராய்ச்சி என்பதாகும். திருக்குறளைப் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்நூல் சிறந்ததோர் அறிமுக நூலாகப் பயன்படுவதாகும். தமிழக வரலாற்றின் கலங்கரை விளக்கம் மறைமலையடிகளாரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியில் தன்னிகரற்று விளங்குவது திருவள்ளுவரின் காலத்தைக் கணித்து, தமிழருக் கென்று ஒரு சகாப்தத்தை (நுசய) வரையறுத்துத் தந்துள்ளமையாகும். இந்திய வரலாற்றில் எத்தனையோ சகாப்தங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழருக்கென்று இதுவரையில் சகாப்தம் கண்டவர் யாருமிலர். எனவே, அஃது ஒரு பெருங்குறையாகவே இருந்து வந்தது. அக் குறையைப் போக்குகின்ற வகையில், யுவ ஆண்டுத் தைத் திங்கள் ஐந்தாம் நாள் (18-1-1935), திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை பூண்டருளிய அடிகள், “கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.1 என்று அறிவித்துத் திருவள்ளுவர் நூற்றாண்டைத் தொடங்கி வைத்தார். வருங்காலத்தில் தமிழ் வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் ஆராய்வோருக்கு இத் திருவள்ளுவர் நூற்றாண்டு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கும் என்பது உறுதி. திருக்குறள் ஆராய்ச்சி திருக்குறளை உலகிற்கு வழங்கிய தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பெயர்க் காரணம், திருக்குறளின் சிறப்பு, திருவள்ளுவரின் வரலாறு போன்ற பல செய்திகளை ஆய்ந்து உண்மையை நிலைநாட்டுவதில் ஆசிரியர் பேரீடுபாடு கொண்டிருந்தார். இதனால், பல சமயங்களில், `திருவள்ளுவர் திருக்குறள்’, `திருவள்ளுவர்’ எனும் பொதுக்கட்டுரைகளை அடிகள் எழுதியுள்ளார்.2 இவை அல்லாமல், `ஞானசாகரம்’ எனும் திங்கள் இதழில், திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில வெளிவந்துள்ளன. அவை, இப்பொழுது திருக்குறளாராய்ச்சி எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.3 இவை யாவும் அடிகளின் ஆழ்ந்த திருக்குறள் புலமையையும், ஆராய்ச்சி நோக்கையும் நமக்கு அறிவிக்கின்றன. `வள்ளுவர்’ எனும் பெயர்க் காரணத்தை ஆராய்ந்த மறைமலையடிகள், `வள்ளுவர் என்று ஒரு மகன் பெயரிடப்படுதல் யாண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை! ஆயினும், தொன்மையாக அப் பெயர் இருந்துவருவது குறித்து அஃதே பெயராகக் கொள்ளல் அறிவுடைமையாகும்”4 எனத் துணிந்துள்ளமை இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். திருக்குறள் `அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்’ எனும் முப்பெரும் பிரிவுகளை உடையதாக அமைக்கப் பட்டிருப்பதைப் பற்றிப் பலர் ஆராய்ந்துள்ளனர். பொருளை `அகம், புறம்’ எனப் பகுப்பது பண்டைத் தமிழர் மேற்கொண்ட முறை. ஆனால், திருவள்ளுவரோ இவ்வாறு பாகுபடுத்தவில்லை. இதனை, “இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருளின்ப மென வடநூல் வழக்குப் பற்றி யோதுதலான்” என்று பரிமேலழகர் குறிப்பிடுவர்.5 ஆனால் அடிகளோ, “..... என்று கூறுவது பொருந்தாது என மறுக்க. வடமொழியில் மனுமுதலான மிருதி நூல்கள் எல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது அறம் பொருளின்ப வழக்குப் பற்றியோதாமையும் யாங் கூறியதே பொருள் என்பதை வலியுறுத்தும்”6 என்று விளக்கியுள்ளார். மற்றும் `இன்பமும் பொருளும் அறனும்’ எனும் தொல்காப்பியர் வைப்பு முறைக்கு மாறாகத் திருவள்ளுவர் `அறம் பொருள் இன்பம்’ என்று தம் நூலினை அமைத்ததற்குரிய காரணங்களை அடிகள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். “ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் இன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழமுறை யன்றாம்”7 என்று அடிகள் அறிவிக்கின்றார். அதற்குரிய காரணத்தை, “திருவள்ளுவனார், தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பௌத்த சமண் மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு அவர் வழியே சென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன் வைத்து நூல் செய்வாராயினர்”8 என்று விளக்கி யுள்ளமை இங்குக் கருதத் தக்கது. தென்புலத்தார் இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் வரும், “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை” எனும் குறட்பாவிற்குப் பலர் பலவகையான விளக்கங்கள் கொடுத்துள்ளனர். சிறப்பாக, `தென்புலத்தார் யார்?’ என்பதில் பண்டை உரையாசிரியர்கள் இடையேயும் கருத்து வேற்றுமை உண்டு. மறைமலையடிகளார் இதைப்பற்றி நீடு நினைந்துள்ளார். பழைய ஆசிரியர்களின் கருத்துகளின் பொருத்தமின்மையைப் புலப்படுத்தி, “தென்புலத்தில் மிக்க நாகரிக முடையவராயிருந்து காலஞ்சென்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நன்றிக் கடன் செலுத்துவதே அம் மூதாதையர் வழிவந்த நமக்கு உரியதாம்”9 எனத் தம் கருத்தினை நிறுவியுள்ளார். வாய்மையின் பயன் வள்ளுவர் வாய்மைக்கு அளித்துள்ள விளக்கம் புதுமையானது; போற்றத்தக்கது. “வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்” (குறள் 291) எனும் குறட்பாவிற்கு அடிகள் நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளார். இக் குறட்பாவில் `பெரும்பான்மையோருக்குப் பெரும்பயன் அளிப்பதாக வாய்மை’ விளக்கப்பட்டுள்ளது’ என்று அடிகள் குறிப்பிட்டுள்ளார். மற்றும் “என்று ஆசிரியர் வரையறுத்துக் கூறியது ஐhன்ஸ்டூவர்ட் மில் (து.ளு. ஆடைட) என்பாரின் `பெரும் பயன்’ என்ற `யுட்டிலிட்டேரியனிஸம்’ (ருவடைவையசயைnளைஅ) என்ற கொள்கைக்கு அரண் கோலுவது கண்டு வியவாதார் யார்?”10 என்று வினவுகிறார். அகர முதல எழுத்து திருக்குறளின் முதற் பாவிற்கு மறைமலையடிகள், `சிவஞானபோத ஆராய்ச்சி’ எனும் நூலில் தந்துள்ள விளக்கம் சிறப்புமிக்கது. “விந்து நாதங்கள் இவ் விரண்டனுள்ளும் விந்து முதலாய் நிற்றல் தெளித்தற் பொருட்டன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனர், `அகர முதல எழுத்தெல்லாம் என்று ஓதுவாராயினதூஉ மென்க. ஈண்டு `எழுத்தெல்லாம்’ என்றது வரிவடிவு ஒலிவடிவில் நின்ற எல்லா எழுத்துக்களையும் அகப்படுத்துதற் பொருட்டு; `அகரம்’ என்றது புலப்பட்டும் புலப்படாததும் நின்ற அகரவொலியினையும் அகரவடிவினையும் உணர்த்து தற் பொருட்டுப் பொதுப்பட நின்றமையும் உய்த்துணரற் பாலதாம் என்க”11 எனும் விளக்கம் அடிகளின் மதிநுட்பத்தையும் ஆராய்ச்சித் திறனையும் வெளிப்படுத்துகிறது. திருக்குறளே தலைசிறந்த பிரமாண நூல் இறைவனின் இயல்புகளை விளக்குகின்ற இடத்து, “பிரமம் உள்பொருளாய்க் குணமுடைத்தாதல் பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார். `எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்று அருளிச் செய்வாராயினர். திருக்குறளின் மேற்பட்ட பிரமாண நூல் உலகத்தின்மையின், இவ் வருமைத் திருவாக்கிய வுரையோடு முரணி எவர், யாது கூறினும் அஃதெல்லாம் பிரமாணமாதல் இல்லையென் றொழிக!”12 எனத் திருக்குறளை ஒப்புயர்வற்ற பிரமாண நூலாக மறைமலையடிகள் போற்றியுள்ளார். அடிகளின் திருக்குறள் ஆராய்ச்சித் திறனுக்கு இவை போதிய சான்றுகளாகும். மக்களிடையே திருக்குறளைப் பற்றிய கருத்துக்களைச் சொற்பொழிவுகளின் மூலமும், எழுத்துரைகளின் மூலமும பரப்பிக் கொண்டிருந்த காலத்தில் திருக்குறளைப் பற்றி அவர் செய்துள்ள நுட்பமான ஆராய்ச்சிகள் மிகப் பலவாகும். தமிழனுக்கு ஒரு சகாப்தத்தை - திருவள்ளுவர் நூற்றாண்டை அளித்த அடிகளின் திருக்குறள் ஆராய்ச்சித் திறனை என்போன்றார் மதிப்பிடத் துணிவது அறியாமையை வெளிப்படுத்துவதாகவே அமையும்! அடிக்குறிப்புகள் 1. திருவள்ளுவர் நினைவுமலர், யுவ - தை (1935), பக். 117. திருவள்ளுவர் நூற்றாண்டைக் கிறித்துவ சகாப்தத்தோடு 31 (30+1) ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிட வேண்டும என்பது அடிகள் கருத்து. எ-டு: இப்பொழுது கி.பி. 1976 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனுடன் 31 ஆண்டுகளைச் சேர்ப்போமானால், 2007 ஆம் ஆண்டு வரும். இது திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகும். இதையே திருவள்ளுவர் நூற்றாண்டின் தொடக்கமாக அடிகள் அறிவித்துள்ளார். 2. அறிவுரைக் கோவையில் (கழகம், சென்னை 1971) `திருவள்ளுவர் திருக்குறள்’ எனும் கட்டுரையும், உரைமணிக் கோவையில் `திருவள்ளுவர்’ எனும் கட்டுரையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். 3. திருக்குறள் ஆராய்ச்சி, பாரிநிலையம், 1957. 4. அறிவுரைக் கோவை, பக். 88. 5. திருக்குறள், பரிமேலழகரின் காமத்துப்பால் முகவுரை. 6. திருக்குறள் ஆராய்ச்சி, பக். 40-41. 7. பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் (கழகம், சென்னை, 1968), பக். 71. 8. பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், பக். 73. 9. உரைமணிக் கோவை, பக். 60. 10. அறிவுரைக் கோவை, பக். 100. 11. சிவஞானபோத ஆராய்ச்சி, (கழகம், சென்னை, 1971), பக். 141. 12. மேற்படி பக். 13. திருக்குறள்மணி க. த. திருநாவுக்கரசு உலகத் தமிழ் ஆராய்ச் நிறுவனம், சென்னை மறைமலையடிகள் நூற்றாண்டு மலர் (பக் 51-55) திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள் செந்நாப் புலவர் செந்நாப் போதார் திருத்தகு தெய்வத் திருவள்ளுவர் தெய்வத் திருவள்ளுவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தெய்வப் புலவர் தேவர் தேவர் திருவள்ளுவர் தேவிற் சிறந்த திருவள்ளுவர் நாயனார் புலவர் பெருநாவலர் பொய்யா மொழியார் பொய்யில் புலவர் மாதாநுபங்கியார் முதற் பாவலர் வள்ளுவ தேவன்(ர்) வள்ளுவர் திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள் அறம் இரண்டு உத்தரவேதம் எழுதுண்டமறை குறள் தமிழ் மறை திருவள்ளுவப் பயன் திருவள்ளுவர் தெய்வ நூல் தெய்வ மாமறை நம் மறை பழமொழி பால்முறை புகழ்ச்சி நூல் பொது மறை பொய்யா மொழி பொருளுரை முதுநெறி முதுமொழி முப்பால் முப்பொருள் மெய் வைத்த சொல் வள்ளுவ தேவன் வசனம் வள்ளுவம் வள்ளுவ மாலை வள்ளுவர் வள்ளுவர் வாய்மொழி வள்ளுவர் வைப்பு வள்ளுவன் வாய்ச் சொல் வாய்மை வாயுறை வாழ்த்து திருக்குறளைத் தம்மில் ஒரு பகுதியாக வைத்துப்போற்றும் விளக்க நூல்கள் இரங்கேச வெண்பா சிவசிவ வெண்பா சினேந்திர வெண்பா சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் குமரேச வெண்பா திருக்குறள் விளக்க வெண்பா திருத்தொண்டர் வெண்பா திருப் புல்லாணி மாலை திருமலை வெண்பா தினகர வெண்பா பழைய விருத்த நூல் முதுமொழி மேல் வைப்பு முருகேசர் முதுநெறி வெண்பா வடமலை வெண்பா வள்ளுவர் நேரிசை புகழ் மாலை திருவள்ளுவ மாலைத் தொகுப்பு என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது. - இறையனார் தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால். - கபிலர் வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவ வெல் லாம்அளந்தார் ஓர்ந்து - பரணர் தானே முழுதுணர்ந்து தண் தமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்(கு) ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழிஉல கென்னாற்றும் மற்று. - நக்கீரர் பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச் சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால். - அரிசில் கிழார் ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். - நத்தத்தனார் ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீ தற்றோர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. -மாங்குடி மருதனார் எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார் சுரந்தபா வையத் துணை. - மதுரைத் தமிழ்நாகனார் அறந்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு சிறந்த நெய் செஞ்சொல்தீத் தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு - நப்பாலத்தனார் பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து. - தேனீக்குடிக் கீரனார் அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு. - கொடிஞாழல் மாணி பூதனார் சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து -முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா. - கவுணியார் கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். - இடைக்காடர் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். - ஒளவையார் இடைக்கால - பிற்காலப் புலவர்கள் இயம்புவன - பாடல் சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன். - கல்லாடனார் என்னடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும் என்றலையில் இருந்தும் இறை. - சிவப்பிரகாசர் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகு கருதியும் -பாரதியார் வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி - பேராசிரியர் பெ. சுந்தரனார் வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ் மாதின் இனிய உயிர்நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும் உத்தமராகி ஒழுகுவமே. புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் - வித்தகன் தெய்வப் புலவன் திருவள்ளுவன் சொன்ன பொய்யில் மொழியிருக்கும் போது. - கவிமணி தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் அள்ளு தொறுஞ் சுவை உள்ளு தொறுணர் வாகும்வண்ணம் கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும் கொடுத்ததிரு வள்ளு வனைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே. வானுக்குச் செங்கதிர் ஒன்று - புனல் வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டுநல்ல மானத்தைக் காத்துவாழ என்றுமிந்த வையத்துக் கொன்று திருக்குறள். - பாவேந்தர் உரைநடை திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப் பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ, ஒருமதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு - உலகுக்குப் பொது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார். உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந்நினைவை யூட்டும்? அஃது உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக் காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல் முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொதுநெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற. - திரு.வி.க. செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழி வகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; வள்ளுவர் தனிப்பொது நெஞ்சம் யாது? செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க. திருக்குறள் கருத்து வகையால் உலக மக்கட்கு எல்லாம் உரியது. எனினும், மொழிகாரணமாய்! நமக்கு உறவுடையது. ஆதலின் அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழிபெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு. - மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற் கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, `தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். - திருவள்ளுவர் செய்த திருக்குறள் தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களை யெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டிய தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். - மறைமலையடிகளார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் மக்கள் உய்யத் திருவாய் மலர்ந்தருளிய தமிழ்மறை, உலகிருள் அகற்ற வந்த ஒற்றைத் தனியாழிப் பரிதி என்னின்; `மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்னும் குறட்பா அவ்வாழியின் அச்சாணி எனத்தக்க அருமை உடையதாதல் கண்டு உணர்ந்து உளங்கொளற் பாற்று. - நாகை சொ. தண்டபாணியார் வள்ளுவர் குறள் தமிழில் தனிமுதல் அறநூலே. - நாவலர் பாரதியார் உலகப் பெருஞ்சான்றோர்கள் உரைப்பன திருக்குறளைப் பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று என் உள்ளத்தில் எழுந்த ஆர்வமேயாம். - காந்தியடிகளார் வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மை யுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது. - ஆல்பர்ட்டு சுவைட்சர் திருக்குறளை நன்றாய்க் கற்பவர்களுக்கு வேறு கல்வி வேண்டியது இல்லை என்பது என் துணிவு. பேரறிஞர் மெக்காலே பிரபுவின் புத்தகக் களஞ்சியம் முழுவதையும் விட இவ்வியப்புக் குரிய நூல் ஒன்று மட்டும் சாலச் சிறந்தது என்றும், மாந்தர் இனத்திற்கு மிக நன்மை பயக்கக் கூடியது என்றும் எண்ணு கின்றேன். தமிழர்களாகிய நாம் நம்முடைய பழந்தமிழ் நாகரிகத்தை எல்லாம் இழந்து வருவதாகப் பகர்கிறோம். பொருநை காவிரி முதலிய ஆறுகளையோ திருக்கோயில்களையோ அரண்மனை களையோ பிற வளங்களையோ இழக்க நேர்ந்தாலும் திருக்குறளை இழக்க மாட்டோம். - எம். எசு. மைக்கேல் ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலகமக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையே தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந் துள்ளார். இவ்விரிந்த உணர்வால் மற்றை மனு முதலிய நூல்களில் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது. - அறிஞர் துறு இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது. - போப் ஐயர் திருக்குறள் அமைப்பு வகையாலும் பாவகையாலும் வட மொழித் தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்தியங்கும் தனிப் பெருமையுடையது. - இராபர்ட்டு கால்டுவெல் திருக்குறள் மேலும் விரித்துரைக்க இயலாத கட்டுத்திட்ட அமைப்புடையது. அது சீரிய பளிங்குக் கல்பரப்பு. அதன் ஒரு சிறு கல்லின் அமைப்பிலோ வடிவிலோ வண்ணத்திலோ சிறியதொரு மாற்றம் செய்தாலும் அப்பரப்பின் முழுதுறு அழகும் பழுதுறும். குறள் தூய செந்தமிழால் இயன்றதொரு நூல். நல்லொழுக்கமே விளை நிலமாய் அமைந்த ஒரு நாட்டிலன்றி இத்தகைய நூல் தோன்றாது. - முனைவர் இலாசரசு திருக்குறள் வழங்கும் செவ்விய இன்பம் இத்தகையது என்று எந்த மொழி பெயர்ப்பாலும் ஒரு சிறிதாயினும் கொடுக்க இயலாது. திருக்குறள் உண்மையாகவே வெள்ளியால் செய்யப் பெற்ற எழிற்பேழையில் இட்டு வைக்கப் பெற்ற பொன் ஆப்பில் பழம் போன்றது ஆகும். - முனைவர் கிரௌல் ஒருநாள் வழக்கப்படி திருக்குறள் படித்தபோது `தாமின் புறுவதுலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ எனக் குறள் ஒன்று தென்பட்டது. அதைப் பார்த்துத் தமிழர்கள் திருக்குறளைப் படித்துச் சுவைப்பது போல் உருசியக்காரர்களும் படித்துச் சுவைக்குமாறு ஏற்பாடு செய்யலாமா என்று நினைத்துக் கொண்டேன். - எம். அந்திரோனவ் திருக்குறளை ஓதி உணர்ந்தால் அல்லது எவனும் தமிழறிந்தவன் என்று கூறிக்கொள்ள முடியாது. - பிரடெரிக்கு பின்காட்டு வள்ளுவத்தின் வான்புகழ் தால்சுதாய் 1906இல் `இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்’ என்பதை எழுதியுள்ளார். அதில் திருக்குறளை `இந்துக்களின் குறள்’ என்கிறார். அதில் தம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஆகும். குறட்பாக்களைக் குறிப்பிடுவதுடன் விளக்கவுரையும் வரைகின்றார். இக்குறட் பாக்கள் தால்சுதாயின் இன்னா செய்யாமை (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவதைப் பற்றிய அவருடைய சிந்தனைக்கு உரமாக அமைந்தன. தால்சுதாயின் இக்கடிதத்தினால்தான் காந்தியடிகள் திருக்குறளை அறிந்து கொண்டு, ஏரியல் என்பார் மொழி பெயர்த்த பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூலைப் படித்து அதன் சிறப்புணர்ந்தார். “உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள் 339) என்னும் குறளைக் காட்டி “இதைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?” என வினாவுகிறார். இங்கர்சால் என்னும் பகுத்தறிவாளர் திருக்குறளிடத்துப் பேரீடுபாடு கொண்டு இருந்தார். திருவள்ளுவருடைய கட்டற்ற சிந்தனைப் போக்கும், அறிவை முதன்மையாகப் போற்றும் பண்பும் இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. “அறிவு அற்றம் காக்கும் கருவி” (குறள். 321) “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (குறள். 453) “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (குறள். 424) என்னும் குறட்பாக்களை இங்கர்சால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்துள்ளார். - சான்றோர் கண்ட திருவள்ளுவர் “இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து” என்னும் பாடலைச் செருமானிய அறிஞர் கால் கிரௌல் என்பவர் அறிந்தார். அதன் பொருள் ஆழத்திலும் கலை அழகிலும் ஈடுபட்டுத் திருக்குறளை முழுமையாகக் கற்றார். பின்னர் 1754இல் செருமானிய மொழியிலும் 1856இல் இலத்தீன் மொழியிலும் திருக்குறளை மொழி பெயர்த்தார். உருசிய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுத்துளையாச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அருநூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும். விக்டோரியாப் பேரரசியார் தம் மறை நூலைப் போலப் போற்றி வைத்திருந்த நூல் திருக்குறள். காலையில் கண் விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளைக் கொண்டு இருந்தார் என்பது அவரது பெருநிலைச் சான்றாவதுடன் திருக்குறளின் பெருமைச் சான்றுமாகும். இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைத்துப் போற்றப்படும் திருநூல் திருக்குறள் ஆகும் என்பர். திருக்குறளால் தோன்றிய நூலகம் தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த சரபோசி மன்னர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அப்படியே கல்கத்தாவில் இருந்த அரசப் பேராளரைக் கண்டு மகிழ்ந்தார். அரசப் பேராளர் திருக்குறளை ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகக் கற்றிருந்தவர். அதனால் தமிழ்ப் பகுதியில் ஆட்சி நடத்தும் சரபோசியின் வழியே திருக்குறளைப் பற்றி அறிய விரும்பினார். அதுவரை அதைப் பற்றி அறியாதிருந்த சரபோசி, “நான் ஊர் போய்ச் சேர்ந்ததும் அப்புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டார். அதன் பின்னரே தமிழ்ச் சுவடிகளைத் தொகுக்கத் தொடங்கினார். `சரசுவதி மால்’ என்னும் கலைக் கருவூலம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தது இத்தூண்டலே யாகும்.