16 தமிழ் இந்தியா தோற்றுவாய் தென்னிந்தியாவின் நில அமைப்பு உலகிற் பழமையுடையது.1 அதன் வரலாறும் அவ் வகையினதே. அதன் ஆராய்ச்சி கல்லில் நார் உரித்தல் போன்ற கடுமையுடையதாதலின் அதனை ஆதிமுதல் ஒழுங்குபடுத்தி எழுதினார் யாருமில்லை.2 வரலாற்று ஆசிரியர்கள் இதுவரையில் தென் னிந்தியாவின் பழைய வரலாற்றினை எழுத முயன்றிருக்கிறார்கள் என்று மாத்திரம் கூறலாம். உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியில் தென்னிந்திய பூர்வ வரலாற்றினை விளக்கும் பகுதிகள் இடையிடையே காணப்படுகின்றன. அவ் வகை ஆதாரங்களையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆங்காங்குக் காட்டியுள்ள குறிப்புகளையும் துணைக்கொண்டு இந் நூல் வரையப்படலாயிற்று. வரலாறு கற்பனைக் கதைபோலக் கூறத்தக்கதன்றாக லின் இன்றியமையாத இடங்களில் ஏற்ற மேற்கோள்கள் காட்டப்பட் டுள்ளன. இயல் - 1 தொன்மைக் காலம் தமிழ் இந்தியாவின் பழைய நில அமைப்பு நில நூலார் பழையகாலத்து இப் பூமியிற்றோன்றியிருந்த கண்டங் களையும் கடல்களையும்பற்றிக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றபடி, கிழக்குத் தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆப்பிரிக்கா முதலிய தேசங்கள் ஒரு பெரும் நிலப்பரப்பாக விளங்கின. அப் பெரிய நிலப்பரப்பிற்கு அவர்கள் கொந்வானா (Gondwana) எனப் பெயர் வழங்கியிருக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரித்தது. அராவலி மலைகளுக்கு வடக்கே கடல் இருந்தது. கொந்வானாக் கண்டத்தின் பெரும்பாகம் சிறிது சிறிதாகக் கடலுள் மறைந்தபோது இந்தியா ஆப்பிரிக்கா கிழக்கிந்தியத் தீவுகள் என்பன கடலாற் பிரிக்கப்பட்டன. இராத குமுத்முக்கேசி என்பவர் தென்னிந்தியாவின் பழைய நில அமைப்பைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். அது வருமாறு: கொந்வானா அல்லது லெமூரியா “நில நூலார் கொந்வானா எனப் பெயரிட்டுள்ள பெரிய பூகண்டத்தின் மிச்சமாக உள்ளது இந்திய நாடு. அப் பூகண்டம் தென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா வரையில் பரந்து கிடந்தது. இஃது அப் பகுதிகளில் கல்லாகச் சமைந்து கிடக்கும் பிராணிகள் தாவரங்களின் சின்னங்களைக்1 கொண்டு அறியப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரிக்கும் முகடுபோலமைந் திருந்தது. ஆதலினாலேயே இந்தியாவின் ஆறுகள் அராபிக்கடலை நோக்கி உற்பத்தியாகி வங்காளக் குடாக்கடலுள் வீழ்கின்றன. வடக்கே இரெதேக்2 கடல் மத்திய ஐரோப்பா சின்ன ஆசியா முதலிய நாடுகளை மூடிப் பரந்து கிடந்தது. இந்தியாவிலே அராவலி மலைகள் மாத்திரம் கடலைப் பார்த்து நின்றன. நீண்ட காலத்தின்பின் மலை (இமயம்) எழ ஆரம்பித்தது. இரெதேக் கடல் மேற்கு நோக்கிப் பின்வாங்கிற்று3.” விஞ்ஞானத்தின் சுருக்கம் என்னும் நூலில் கொந்வானாக் கண்டத்தைப்பற்றி அதிசயப்படத் தக்க நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: “ஐரோப்பாவில் நிலக்கரி உண்டாயிருக்கின்ற காலத்தில் ஆஸ்திரேலியா தென்னமெரிக்கா இந்தியா முதலிய இடங்களில் ஒரே வகைத் தாவரங்கள் வளர்ந்தன; ஆதலினால் இந் நிலங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொந்வானாக் கண்ட மாக விளங்கின” என்று முடிவு செய்யப்படுகின்றது.1 பேராசிரியர் வெசினர்2 புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: அவர் கூறுவது, “இக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று அண்மையில் இருந்தன. அண்டார் டிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெ ரிக்கா, இந்தியா முதலிய நாடு களைத் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிப் பொருத்தி வைக்கலாம். கடலின் அடியிலுள்ள கருங்கற் பாறை வெடித்தமையால் இக் கண்டங்கள் விடுபட்டுப் பனிக்கட்டி தண்ணீரில் மிதந்து செல்வதுபோல அகன்று சென்றுள்ளன. இது நில நூலார் கூறும் 3ஐந்தாவது உலகத்தில் நிகழ்ந்தது.” என்பதாகும். தாவர உயிர் நூலார் கொந்வானா என்னும் கண்டத்தை லெமூரியா என வழங்குவர். பழைய பூமி சாத்திரம் இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் பூமியின் நடுவே பெரிய பூகண்டமொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற் காட்டியுள்ள பகுதிகள் சில அப் பெரிய பூகண்டத்தைப்பற்றி ஓரளவு விளக்குவனவாகும். அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப் பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உந்தித் தானமாயுள்ள நாவலந் தீவு........இந் நாவலத்தீவின் நடுவே மேருவரை........மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்.........இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில் வாழ்வோர்..........இவற்றுட்1 பாரதவருடமும் ஒன்பது கண்டமாய் இந்திரத்தீவும், கசேருத்தீவும், தாமிரபர்ணித் தீவும், கபதித்தீவும், நாகத்தீவும், சாந்திரமத்தீவும், காந்தருவத்தீவும், வாருணத்தீவும், குமரித்தீவு மெனப் பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பலவேறு வகைப்பட்ட சாதிகளுமுடைத்தாய் வயங்கும். இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்டமொன்றே வேதாகமவழக்கும், சாதிவரம்பும், கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், காசி முதலிய புண்ணிய தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர் வாழிடங்களாம். “பூமியின் மேற்பரப்பு ஏழு கடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந் தீவினடுவே மேருவரை நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்....” இது மிருகேந்திரத்திற் கண்டது. மேரு உலகுக்கு நடு புராணங்களும் இதிகாசங்களும் பழைய கடல் நிலங்களைப்பற்றிப் பிறழக் கூறுமாயினும் மேரு உலகுக்கு மத்தியில் உள்ளது என்பதை எல்லாம் ஒருதலையாக ஏற்றுக் கொள்ளும். புத்த சைன நூல்கள் மேருவை மந்தரம் எனக் கூறும். பாகவத புராணமும் கந்தபுராணமும் ஒரு காலத்தில் காற்றுக் கடவுளுக்கும் மேருமலைக்கும் நேர்ந்தபோரில் காற்றுக் கடவுளால் முறித்துக் கடலுள் வீசப்பட்ட மேருவின் சிகரமொன்றே இலங்கை எனக் கூறுகின்றன. இது வெப்ப நாடுகளில் அடிக்கடி நேரும் காற்றுக்குழப்பம் ஒன்றையும் அக் காலத்தில் மேருவின் ஒரு பகுதி கடலுள் மறைந்த வரலாற் றினையும் குறிக்குமெனக் கருதப்படுகின்றது. ஆகவே இம் மலை பூமத்திய இரேகையை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததெனத் தெரிகின்றது. பிற்காலத்தில் இம் மலை இமயமலையை அடுத்தோ அதற்கு வடக்கிலோ இருந்ததெனக் கருதப்பட்டது. கி. மு. 4ஆம் நூற்றாண்டில் விளங்கிய மெகஸ் தீனஸ் என்னும் கிரேக்கர் மேருமலை பாண்டி நாட்டில் உள்ளதெனக் கூறியுள்ளார்.1 பாஸ்கராச்சாரியர் எழுதிய வானநூற் குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமத்திய இரேகை சுமத்திராவுக்கு ஊடாகச் செல்கின்றது. இலங்கைப் புத்த நூல்கள் இப்பொழுதுள்ள இலங்கை, முன்னைய இலங்கையில் பன்னிரண் டில் ஒரு பகுதி எனக் கூறுகின்றன. இப்பொழுது இலங்கைக்கு 400 கல் தூரத்திலுள்ள மாலைத்தீவு எனப்படும் தீவுக்கூட்டங்கள் இலங்கையின் பகுதியாக இருந்தன என்று நிலநூலார் கூறுவர். அத் தீவுகளில் வாழும் மக்கள் ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவிற் காணப்படும் சில மக்கட் கூட்டத்தினருக்கும் இனமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.1 செங் கோன்றரைச் செலவு என்னும் நூலில் கடல் கொண்ட நாட்டின் சில மலை, ஆற்று இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இறையனாரகப் பொருளுரை தலைச்சங்கமிருந்த மதுரையைக் கடல் கொண்டதெனக் கூறுகின்றது. இளங்கோவடிகள் பஃறுளியாறு, குமரியாறு முதலியவைகளைக் கடல் கொண்டதெனக் குறிப்பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் குமரிமுனைக்குத் தெற்கே கிடந்து கடல் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளைக் குறிப் பிட்டதோடு அந் நிலப்பரப்பு 700 காவத2 முடையதெனவுங் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தியக் குடாநாட்டின் அமைப்பு வேறு வகையில் இருந்ததென்பதை நன்கு விளக்குவன. கடல் கோள் இவ் வுலக மக்கள் எல்லோரும் ஒரு பெரிய கடல் கோளைப்பற்றிக் கூறுகின்றனர். ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரும் அது தத்தம் நாட்டில் நிகழ்ந்ததென்பர். இக் கதை சிறிய சிறிய வேறுபாடுகளுடன் ஒரே வகையாக எல்லோராலும் கூறப்படுகின்றது. ஆகவே உலக மக்கள் மத்திய இட மொன்றிலிருந்து பிரிந்து செல்வதன் முன் இக் கடல்கோள் நிகழ்ந்ததெனக் கருதப்படுகின்றது.3 இந்திய மக்கள் கடல்கோளைப் பற்றிக் கூறும் வரலாறு சதபதப் பிராமணத்தில் (கி. மு. 1300) முதன்முதற் காணப்படுகின்றது. வடமொழி நூலிற் றனித்து நிற்கும் கதையாயிருப்பதால் இது அக்கேடியரிடமிருந்தோ தமிழரிடமிருந்தோ ஆரியருக்குக் கிடைத்ததென வரலாற்று நூலார் கூறு கின்றனர். சதபதப் பிராமணத்திலும் புராணங்களிலும் கூறப்படும் வெள்ளப் பெருக்கின் வரலாறு வருமாறு: மனு தனது காலை வழிபாட்டைச் செய்து கொண்டிருக்கும்போது ஒரு மீன் அவரது கையில் வந்தது. அம் மீன் மனுவை நோக்கி, “என்னைக் காப்பாற்று நான் உன்னைக் காப்பேன்; ஒரு வெள்ளப் பெருக்கு எல்லா வுயிர்களையும் அழித்துவிடும்” என்றது. அவர் மீனை ஒரு முட்டியுள் விட்டார். அது பெரிதாக வளர்ந்தபோது அவர் அதனை ஒரு குளத்தில் விட்டார். அது இன்னும் பெரிதானபோது அவர் அதைக் கடலுள் விட்டார். பின்பு மீன் அவரை ஒரு தோணி செய்யும்படி வேண்டிற்று. மனு அப்படியே செய்தார். வெள்ளப் பெருக்கு நேர்ந்தது. மீன் தலையில் ஒற்றைக் கொம்புடன் வந்தது. மனு கொம்பில் ஒரு கயிற்றைக் கட்டினார். மீன் அவரை வடமலைக்குக் கொண்டு போய்விட்டது. மீன், “யான் உன்னைக் காப்பாற்றி விட்டேன், தோணியை மரத்திற் கட்டு,” என்று மனுவிடங் கூறிற்று. மாபாரதத்தில் இவ் வரலாறு வேறு வகையிற் கூறப்படுகின்றது. வைவ சுதமனு வைசாலவனத்தில் தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மீன் ஆற்றங்கரையில் வந்து மற்ற மீன்களைப் பார்த்துத் தன்னைக் காக்கும்படி கேட்டது. மனு அம் மீனை எடுத்துச் சாடியில் விட்டார். பின் மேற்கூறியவாறு சொல்லப்படுகின்றது. மனு ஏழு இருடிகளுடனும் பலவகை விதைகளுடனும் தோணியில் ஏறினார். மீன் தோணியை இமயமலைக்குக் கொண்டு போயிற்று. அத் தோணி ஒரு மரத்திற் கட்டப்பட்டது. பின்பு அம் மீன் இருடிகளை நோக்கி, “யானே பிரமா; யான் மீன் வடிவெடுத்து உங்கள் எல்லோரையும் காத்தேன்,” எனக் கூறிற்று. பாகவத புராணத்தில் இவ் விடம் தென்னிந்தியாவென்று கூறப்பட் டுள்ளது. அதில் மனு அல்லது சத்தியவிரதன் திராவிட வேந்தன் எனக் கூறப்படுகின்றான். அங்கு மனு மலைய மலையில் ஊற்றெடுத்து வருகின்ற கிருதமாலையில் (வையையில்) பலி செலுத்தும்போது மீன் அவருடைய கையில் வருகின்றது. புராணங்கள் பழைய ஞாபகங்களை ஓரளவிற் கூறியுள்ளன. இவ் வரலாற்றுள் சில உண்மைகள் இருக்கின்றன என்பது மறுத்தற்கில்லை. புராணங்கள் பிற்காலங்களில் கூட்டியும் திருத்தியும் குறைத்தும் எழுதப் பட்டுள்ளன.1 உலகமக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள் கி.மு. 4000 வரையில் உலகமக்களை எல்லாம் ஒரு கூட்டத்தில் இணைப்பதற்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்குரிய இரண்டு ஆதாரங்கள் மொழியும், வழிபாடுமாகும். கி.மு. 4000 வரையில் கிழக்குத் தீவுகள் சீனா அமெரிக்கா சுமேரியா பபிலோன் கிரேத்தா சைபிரஸ் முதலிய தேசங்களில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப் பட்டது. இவ் விடங்களிலெல்லாம் பாம்பும் இடபமும் பரிசுத்தமுடையன வாகக் கருதப்பட்டன. இவ் விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரி யர்கள் ஆராய்ந்து கூறியுள்ளவை சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். “செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரே வகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார்.”1 “நீலாறு, தைகிரஸ், சிந்து, கங்கை, இந்து ஆசியா, ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன.”2 (இவை ஒரேவகை அமைப்புடையன.) “அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கியோராயிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்.” “அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்க, அமெரிக்க,. பசிபிக்கிய, யப்பானிய, கோறிய, திராவிட, தாத்தாரிய, பின்னிய, துருக்கிய, பாஸ்க் மொழிகள் சேர்ந்தன.” “ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது.”3 “பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர் திராவிட (துரூயிதிய - Druid)க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல் மார்துக்1 எனப்பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார்.2 அவ் வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்கு, திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக் கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது.” “பகற் (Baal) கடவுளும், பலிபீடமும், இடபமும் (சூரியனைக் குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000க்கும் கி. மு. 5000க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (Drauvada) திராபட (Drapada) என்னும் பெயர்கள் பெரிதும் காணப் படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்.”3 “திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியா, ஈரான் முதலிய தேசங் களில் காணப்படுகின்றன. மித்தனி,4 என்னுமிடத்தில் பேசப்பட்ட மொழி இக் காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது”5 “சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தி யருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப் பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:” “தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்.”6 “தென்னிந்திய ஆலயங்களும், சீனா யப்பான் (Torii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (Figians) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டா மையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்.” “கிரேத்தா (Crete) பபிலோன் கிழக்கிந்தியத் தீவுகளில் 7சங்கு வாத்தி யங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத்தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிடமிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்துசீனா, சீனா, யப்பான் வரையும் கொண்டுசென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டுபோகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன.”1 “சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப் பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச் சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக்கட்டை களில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்பட வில்லை. அவர்களின் எழுத்து முழுவதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியா, சூசா, தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அறியப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது.” “சுமேரியர், இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவை களுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப்படுகின்றபோதும் எழுதப்படு கின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்.” “பிராமி எழுத்துக்கள் எல்லாம் அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக் களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஓரளவில் சரியாகவே கூறி யுள்ளார்கள். இவைகளும் அரப்பா மெகாஞ்சதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.”2 “சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசிய, கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரிய, எல்லம், மினோவ, கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுடையன என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்.”3 எச்சி வெல்ஸ் (H. G. Wells) என்னும் ஆசிரியர் உலகில் இன்று காணப் படுகின்ற மக்கள் எல்லோரும் தோன்றுவதற்கு அடிப்படையிலுள்ளோர் மத்தியதரைக்கும் கிழக்குத் தீவுகளுக்கும் இடையே கிடந்த பெரிய பூகண்டத்திலே தோன்றிப் பெருகிய கபிலநிற மக்களென்றும், மத்தியதரை நாடுகளில் ஆதியில் வழங்கியது பாஸ்க்கு (Basqu) மொழி என்றும், பாஸ்க் மொழியும் திராவிடமும் நெருங்கிய உறவுடையனவென்றும் கூறுவர். டாக்டர் பாஸ்டவ் (Dr. Basedow) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவது, “உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென் றும், நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்ட மிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேட வேண்டும்,” என்பதாகும்.1 இரிவெட் (Revert) என்னும் ஆசிரியர், சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா, யப்பான், தஸ்மேனியா வரையும் சென்று இந் நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார்.2 ஆரம்பகாலப் பொத்தகம்3 என்னும் நூலில், எகிப்திய மொழிச் சொற் களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (Tailor) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார். சுமேரியரும் தமிழரும் “சேர்யோன் மார்சலும் டாக்டர் ஹாலும் சுமேரிய மக்கள் திராவிட மக்களைத் தோற்றத்தில் ஒத்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். இது சுமேரி யரும் இந்தியரும் ஒரு தொடர்பிலுள்ளவர்களென்பதை வலியுறுத்துகின் றது. இருமக்களின் தோற்றப்பொலிவும், தலையை அலங்காரம் செய்யும் முறையும் ஒரேவகையின. அரப்பாவிற் கிடைத்த குத்துவாள்கள் சுமேரி யரின் அவ்வகை வாளை ஒத்திருக்கின்றன. சுமேரியர் சிந்து மக்களின் நீரருந்தும் கிண்ணங்கள் ஒரே வகையின. சிந்து மக்களின் உருளை வடி வான வெள்ளிப் பாத்திரங்கள் சுமேரியரின் கல்நார்ப் பாத்திரங்கள் போன் றன. இருமக்களும் வாசனைப்பொடி முதலிய மேனியலங்காரப் பொருள் களை வைக்கப் பயன்படுத்திய சிமிழ்கள் ஒரேவகையின. பூச்செண்டுகள் பூமாலைகளைப் பயன்படுத்தும் வகையும், வழிபாட்டில் மிருகங்களைத் தொடர்புபடுத்தும் முறையும் இரு நாடுகளுக்கு மொத்தன. இரு நாட்டவர் களும் வண்டி செய்யும் முறையைத் தனித்தனி கண்டுபிடித்தார்களெனக் கூற முடியாது. இரு நாடுகளின் வீட்டு அமைப்புக்களையும், முத்திரை வெட்டும் முறையையும், மட்பாண்டங்களின் செம்மையையும் நோக்கு மிடத்து மூவாயிரமாண்டுகளின் முன் சிந்துமக்கள் பாபிலோனியரை விட உயர்நிலை அடைந்திருந்தார்கள் என்பது புலப்படும். இது இந்திய நாகரிக காலத்தின் கீழ் எல்லையாகும். அதற்கு முற்பட்ட இந்திய நாகரிக காலத்தின் வீற்றினால் பபிலோனிய நாகரிகம் தோற்றியிருத்தல்கூடாதா? அப்படி யாயின் சுமேரிய மக்கள் சிந்து நாட்டினின்று அல்லது அதன் நாகரிக வாடை யைப்பெற்ற இன்னொரு இடத்தினின்று சென்றவர்களாகமாட்டார்களா? இங்குக் காட்டப்பட்ட இரு மக்களுக்கு மிடையிலுள்ள ஒற்றுமைகள் குல ஒற்றுமையைக் காட்டுவன. சிந்துவில் உள்ள சிலர் அல்லது அவர்கள் எண்ணங்களிற் பழகிய சிலர், சில்லுள்ள வண்டுகளையும் கிளிஞ்சல்களை யும் மற்றும் சுமேரியரது அழகிய பொருள்களையும் தெற்குப் பாபிலோ னுக்குக் கொண்டுபோயிருத்தல் கூடும்.”1 “இன்று காணப்படும் இந்தியன் ஒருவனுடைய முகவெட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்த சுமேரிய மக்களின் வடிவம் போன்றது. இக்கால இந்தியர் கிரேக்கர் இத்தாலியர்களிடையே ஆரிய ரல்லாத மக்களின் சாயல் காணப்படுகின்றது. உருவச் சிலைகளிலிருந்து அறியுமளவில் பழைய சுமேரியர் இந்தியாவிலுள்ள திராவிட மக்களை உடலமைப்பில் ஒத்திருந்தனர். அக் காலச் சுமேரியன் தமிழை அல்லது அது தொடர்பான மொழிகளை வழங்கும் இன்றைய ஒரு திராவிடனை மிக ஒத்திருந்தான். சுமேரியர் கடல் வழியாலும் தரைவழியாலும் தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத்தாக்குகளை அடைந்த இந்திய மக்கள் என்பது இருக்கக் கூடாததன்று. இவர்களின் நாகரிகம் இந்தியாவிலே சிந்துநதிப் பள்ளத்தாக்கு களில் வளர்ச்சியடைந்திருக்கலாமென்று யான் எண்ணுகின்றேன்.”2 உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியாளர் உலகின் ஆங் காங்கு வதியும் மக்களின் உடற்கூறு, மொழி, வழிபாடு ஆகியன ஒத்திருத் தலை இவ்வாறு ஆங்காங்குக் காட்டியிருக்கின்றனர். இவை மக்களின் ஒரு பொது உற்பத்தியையும் சிறப்பாகத் தமிழரின் பழமையை யும் நன்கு விளக்குவன. மனித இயலார் (Anthropologists) ஓர் ஆதித் தாய் தந்தையரி னின்றே உலகமக்கள் பெருகினார்கள் என வலியுறுத்துவர். உலகிலே மிகப் பழைய மனித எலும்பு யாவாதேசத்திற் கிடைத்தது. இதன் காலம் ஐந்துலட்சம் ஆண்டுகள் எனப்படுகின்றது. ஆகவே விஞ் ஞானிகள், பூமியின் மத்தியிற்கிடந்த பெரிய கண்டத்திலேயே மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனத் துணிகின்றனர். அவ்வாறாயின் பெரிய வெள்ளப்பெருக்கு, பூமத்தியில் விளங்கிய கண்டத்தில் நிகழ்ந்ததாகலாம் எனக் கூறுதல் பிழையாகாது. பெரிய கடல்கோளுக்குப் பின் சிறிய கடல் கோள்கள் பல நிகழ்ந்தனவாகலாம். பஃறுளியாறு குமரிக்கோடு முதலியவை களைக் கடல்கொண்ட வரலாறுகள் இவ்வகையினவே. மத்திய இரேகையை அடுத்த நாடுகளில் அடிக்கடி எரிமலைக் குழப்பங்கள் நேர்தலும் அதனால் தரை கடலுள் மறைந்துபோதலும் இயல்பு. 1883இல் 1கரக்கற்றோவாவில் நேர்ந்த பெரிய எரிமலைக் குழப்பமே இதற்குச் சான்று. மக்களின் தொட்டில் கீன் (Keane) என்னும் ஆசிரியர், மனித குடும்பத்தின் தொட்டில் மலாய ஆசியா (யாவா மனிதன்) வாகவிருக்கலாம் என்றும் இங்கிருந்து மக்கள் வடக்கு ஆசியா மேற்கு ஆப்பிரிக்கா கிழக்கு மேற்கு ஒசேனிய உலகம் என்பவைகளுக்குச் சென்று பரவினார்களென்றும் அக் காலத்தில் தரைத் தொடர்பு இருந்ததென்றும் பிற்காலங்களில் நிலங்கள் கடலுள் மறைந்து சுருங்கி விட்டனவென்றும் கூறுவர். கீத் (Keith) என்னும் ஆசிரியர், பத்துலட்சம் ஆண்டுகளின் முன் தோன்றிய யாவா மனிதனினின்றும் வளர்ந்து திருந்தியவர்களே ஆஸ்தி ரேலிய மக்களென்றும் அக் கூட்டத்தினின்றும் பெருகியவர்களே உலக மக்களென்றும் மக்களின் உற்பத்தித் தானத்தைக் குறித்த தமது ஆராய்ச்சி யிற் குறிப்பிட்டுள்ளார்.2 கிராம் வில்லியம் என்பார், இந்திய நாட்டிலே தொல்லுயிர்கள் வளர்ச்சியடைந்து பெருகினவென்றும் மனிதனும் அங்குத் தோன்றித் தத்தளித்து மேல் நோக்கி வந்திருத்தல் கூடும் என்றும் புகல்வர்.3 தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பிற நாடுகளிலிருந்து வந்து இந்தியாவிற் குடியேறினார் களா, அல்லது இந்தியாவின் பூர்வகுடிகளா என்பன வரலாற்றாசிரியர்களால் ஆராயப்பட்டுள்ளன. ஆதி மக்களின் கிளையினராய் அக் காலப்போக்கு களிலும் கொள்கையிலும் மாறுபடாதோராய்த் தொன்றுதொட்டு 4இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்போரே தமிழ் மக்களென்பது இற்றை ஞான்றை வரலாற்று ஆசிரியர் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இந்தியாவிற் கற்காலம் உலக மக்கள் பழைய கற்காலத்திலிருந்து படிப்படியான முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களென மக்கள் நூலார் கூறுகின்றனர். இந்திய நாட்டில் பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரையில் மக்கள் கையினாற்செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் மட்பாண்டங்களும் காணப்படுகின்றன. நருமதைப் பள்ளத்தாக்கில் அடி அழிந்த விலங்கின் என்புகளோடு கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதத்தின் காலம் 400,000 ஆண்டு வரையில் எனக் கருதப்படுகின்றது.1 டாக்டர் டி. தெரா (Dr. De. Terra) என்பவர் இந்திய மக்களின் பழைய கற்காலம் கி. மு. 30,000-க்கும் கி. மு. 20,000-க்கும் இடையில் எனக் கணக்கிட்டுள்ளார்.2 ‘விந்திய மலையில் பழைய கற்கால மக்கள் தீட்டிய சித்திரங்கள் காணப்படுகின்றன. அங்கு வேடர் ஈட்டிகளால் காண்டாமிருகத்தைத் தாக்கும் சித்திரம் ஒன்று காணப்படுகின்றது. அவ் வகையான காண்டா மிருகம் இப்பொழுது காணப்படவில்லை. காய்மூர் (Kaimur) மலையில் மானை வேட்டையாடும் சித்திரங்களும், கொஸ்லங்கபாத்தில் ஒட்டைச் சிவிங்கிகளின் சித்திரங்களும், சிங்கன்பூரில் கங்காரு மான் குதிரை முதலிய விலங்குகளின் சித்திரங்களும் காணப்படுகின்றன. இச் சித்திரங்கள் வரையப் பட்ட இடங்களில் புதிய கற்கால ஆயுதங்களும் கிடைத்தன. பழைய காலத்தவர்கள் பிணங்களைக் காட்டில் எறிந்தார்கள்.’ புதிய கற்கால மக்கள் பிணங்களைப் புதைத்தார்கள். புதிய கற்காலமக்களின் எலும்புகள் மிஸ்ரப்பூரில் (Mirazapur) மினுக்கமான மட்பாண்டங்களுடன் காணப்பட்டன. கோலாப்பூர் என்னும் இடத்தில் 54 புதிய கற்காலச் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுள் மட்பாண் டங்கள் காணப்பட்டன. பல்லாவரத்திற் காணப்பட்ட ஈமத்தாழிகளைப் போலச் செங்கற்பட்டு, நெல்லூர், ஆற்காடு முதலிய இடங்களிற் காணப் பட்டன. பலவகைக் கற்சமாதிகள் சென்னை, பம்பாய், மைசூர், நிசாம் இராச்சி யங்களிற் காணப்பட்டன. இவைகளுள் இரும்பு ஆயுதங்களும் கிடைத்தன. அக் காலத்திற் பிணங்களைச் சுடுதலும் உண்டு. தாழிகளில் சாம்பல் காணப் படவில்லை; உடலை வெட்டிச் சில துண்டுகள் தாழியில் இடப்பட்ட புதிய கற்காலத்தில் ஈமத்தாழிகள் பயன்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூரில் 114 ‘ஏக்கர்’ நிலத்தில் 1,000 தாழிகள் கிளறி எடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் திரு நெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோரத்திலுள்ளது. சில உலோகப் பொருள்கள் இல்லாவிடில் அவை புதிய கற்காலத்தனவாகலாம். அவைகளுள் இரும்பாயுதங்களும் வெண்கல ஆபரணங்களும் காணப் பட்டன. பிராமணபாத்து, சிந்து முதலிய இடங்களிலும் தாழிப் புதையல்கள் காணப்படுகின்றன. தக்கணத்திலும், தென்னிந்தியாவிலும் பழைய கற்காலப் பொருள்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை பூகோளக் குறுக்கு இரேகைக்கு இருபத் தைந்து பாகையின் கீழ்க் கிடைக்கின்றன. அக்கால மக்கள் ஒருவகைப் பளிங்குக் கல்லால் (Quartzite) ஆயுதஞ் செய்தார்கள். இவ்வகை ஆயுதங்கள் குண்டூர், கடப்பா என்னுமிடங்களில் அதிகம் காணப்பட்டன. இன்னும் பல இடங்களிலும் பழைய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொழுது அடி அழிந்துபோன காண்டாமிருக எலும்போடு ‘குவார்ட் சைட்’ (Quartizite) என்னும் பளிங்குக் கல்லாற் செய்யப்பட்ட ஆயுத மொன்று கண்டெடுக்கப்பட்டது. மிர்சாப்பூரில் புதிய கற்கால ஆயுதங்கள் பல கிடைத்தன. கங்கைப் பள்ளத்தாக்கில் குன்சிப்பூர் மாகாணத்தில் மீன் முள்ளாற் செய்த தூண்டிலொன்று ஆறிடு மணல்மேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. பழைய கற்கால மக்கள் கடப்பா, சென்னைக் கரைகளில் மாத்திரம் வாழ்ந்தார்கள். புதிய கற்காலத்தில் அவர்கள் இந்தியா முழுமையிலும் பரந்து வாழ ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆயுதங்கள் சிறிய தீத்தட்டிக் கற்கள், அவை அரை அங்குலம் முதல் ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளம் வரையில் உள்ளன. அம்புத்தலை, வில்லுப்பிறை இவை இரண்டும் கலந்த வடிவமுள்ள கல்லாயுதங்கள் பிடியில் இறுக்கிப் பயன்படுத்தப் பட்டன. இவை அதிகமாக விந்தியமலை பாகெல் கண்ட் (Boghel Kand), ரேவா (Rewah), மிர்சாப்பூர் மலைத் தாழ்வாரங்களிற் காணப்படுகின்றன. மக்கள் வாழ்ந்த ஒதுக்கிடங்களில் அடுப்புகரி, எலும்புகள், மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. உளி போன்ற ஒருவகை ஆயுதங்கள் சூடிய நாகபுரி அசாம் பர்மா இந்துச் சீனம் மலாயா முதலிய இடங்களிற் காணப்பட்டன. பழைய கற்கால ஆயுதங்கள் செய்யப்பட்ட இடங்கள் தென்னிந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் பாறைகளில் தீட்டிக் கூராக்கப் பட்டன. 10 அல்லது 14 அங்குலம் நீளமுள்ள குடையப்பட்ட பொருள்கள் காணப்பட்டன. இவைகளோடு உயர்தர மட்பாண்ட உடைவுகளும் செங்கற் களும் காணப்பட்டன. இந்தியாவிலே கற்சமாதிகளில் கோப்பை அடை யாளங்கள் காணப்படுகின்றன. வெண்கலக் காலம் தென்னிந்தியாவில் கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் இருந்தன. தகரத்தையும் செம்பையுங் கலந்து வெண் கலஞ் செய்யப்பட்டது. தென்னிந்திய சமாதிகளில் அழகிய வெண்கலப் பொருள்கள் காணப்பட்டன. மிக முக்கியமான செம்புப் பொருள்கள் மத்திய இந்தியாவில் கங்கேரியா (Gungeria) என்னுமிடத்திற் காணப் பட்டன. இங்கு 424 செம்பு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 2000 வரையில் பயன்படுத்தப்பட்டனவாகலாம் எனக் கருதப்படுகின்றன. அங்கு 102 வெள்ளித் தகடுகளும் காணப்பட்டன. அவைகளில் சில வட்டவடிவாயுள்ளன. சில தகடுகளின்மீது கொம்புள்ள மாட்டுத் தலைகள் வரையப்பட்டிருந்தன. வெள்ளி இந்தியாவில் அதிகம் கிடையாமையால் அது பிற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். செம்பு இந்தியாவிற் கிடைக்கக் கூடியது. இவையல்லாமல், செம்பினாற் செய்யப்பட்ட உளி, எறிஉளி, வாள், ஈட்டித்தலை முதலியனவும் கிடைத்தன. இவை கோன்பூர் வாதெல்கார் (Fatelgarh) மணிபுரி முத்தா என்னுமிடங்களிலும் வட இந்தியா முழுமை யிலும் காணப்பட்டன. தெற்கில் வாழ்ந்த மக்களே வடக்கிற் சென்று குடியேறினர் ஆராய்ச்சியாளர், தென்னிந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய கற்கால மக்களே மத்திய இந்தியா கங்கை யமுனை வெளிகள் வட மேற்கு இந்தியா முதல் இமயமலை வரையில் சென்று குடியேறினார்கள் எனக் கூறுகின்றனர். கி. மு. 4,000 வரையில் இந்தியா முதல் பாரசீகம் எகிப்து கிரேத்தா சைபிரஸ் வரையில் ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள்.1 அரப்பா, மகஞ்சொதரோ அரப்பா மொகஞ்சொதரோ காலம் இந்தியாவின் வெண்கலக் கால நாகரிகத்தை வெளியிடுகின்றது. இந் நகரங்களின் நாகரிகம் கி. மு. 3500 வரையில் என்று கருதப்படுகின்றது. நாகரிகம் வளர்வதற்கு இனி இடம் இல்லை என்னும்படி அக்கால நாகரிகம் உயர்நிலை அடைந்திருந்தது. நகரங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. மாடியுடைய வீடுகள் கிணறு களோடு கூடியனவாகவும், நீர் ஓடும் கால்கள் உடையனவாகவும் வீதிகளின் இரு மருங்குகளிலும் கட்டப்பட்டிருந்தன. மக்கள் பயிர்ச்செய்கை வாணிகம் என்பவைகளால் பொருளீட்டினர். வாணிகம் மெசபெதேமியா வரையில் நடைபெற்றது. யானை ஒட்டகம் நாய் ஆடு மாடு முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டன. வில்லு, அம்புகள், செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்த கோடரிகள், ஈட்டிகள், மயிர் மழிக்குங்கத்திகள், கத்திகள் முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், யானைத்தந்தம், கண்ணாடி ஓடுகள் முதலியவைகளால் ஆபரணங்கள் செய்யப்பட்டன. பஞ்சினால் ஆடை நெய்யப்பட்டது. மட்பாண்டங்கள் அழகாகவும் நிறங் கொடுத்தும் வனையப்பட்டன. ஓவிய எழுத்துப் போன்ற ஒருவகை எழுத்து முத்திரைகளிற் காணப்படுகின்றது. தாய்க்கடவுள், சூரியன், பசுபதி, இடபம், மரம் முதலியன வணங்கப்பட்டன. ஆரியர் வருகை தெற்கு இந்தியாவிலே மேற்கில் தான்யூப் நதிக்கும், கிழக்கில் காஸ்பியன் கடலுக்குமிடையே வாழ்ந்த வெண்ணிறமக்கள் ஆரியர் எனப்படுவர். இவர்கள் மந்தை மேய்க்கும் வாழ்க்கைப்படியை அடைந் திருந்தனர். இவர்கள் தம் மந்தைகளுடனும் பெண்டு பிள்ளைகளுடனும் கூடாரங்களைப் பெயர்த்துக்கொண்டு இடமிடமாகத் திரிவர். இவ்வாறு திரியும் மார்க்கத்தில் இவர்களில் ஒரு பிரிவினர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது கி.மு. 2000 வரையில் என்று சொல்லப்படு கின்றது. இவர்கள் இந்தியாவின் வடமேற்கு மூலைகளில் தங்கிச் சிறிது சிறிதாக ஏழு நதிகள் பாய்கின்ற பஞ்சாப் தேசம் முழுவதையும் கைப்பற்றி னர். ஆரியர் வருங்கால் அங்கு உன்னத நாகரிகத்தினராய் வாழ்ந்துகொண் டிருந்த தமிழ் மக்களைப்பற்றி ஆரியமக்கள் தங் கடவுளரை வழுத்திப் பாடிய பாடல்களில் காணப்படுகின்றது. முற்காலங்களில் சீர்திருந்திய சாதி யினரை முரட்டுச் சாதியினர் படையெடுத்து வென்றார்கள். இது கிரேக்கரை உரோமர் வென்றதும், ஹன்ஸ் (Huns) என்னும் முரட்டுச் சாதியினர் ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளைக் கலங்கச் செய்ததும் போன்ற நிகழ்ச்சிகளி னால் நன்கு அறியலாகும். ஆரிய மக்கள் தம்மை எதிர்த்த தமிழரை அசுரர், தைத்தியர், தாசர், நாகர் என வழங்கினர். வேத பாடல்களால் தாசுக்களைப்பற்றி அறியக் கிடப்பன வருமாறு: தாசுக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். அந் நகரங்களில் அரசர் வாழ்ந் தனர். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. அச் செல்வம் பசு தேர் குதிரை முதலியன. இவை நூறு கதவுகளுள்ள கோட்டைகளுள் வைத்துக் காக்கப்பட்டன. தாசுக்கள் மைதானங்களிலும் மலைகளிலும் சொத்துக்களை வைத்திருந்த செல்வப் பெருமக்கள். அவர்கள் பொன்னாபரணங்களை அணிந்தார்கள். தாசுக்கள் பொன் வெள்ளி இரும்புக் கோட்டைகளில் வாழ்ந்தனர். இந்திரன் தன்னை வணங்கும் தேவோதாசர்களின் பொருட்டு நூறு கற்கோட்டைகளிலிருந்த தாசர்களை வெற்றிகொண்டான். தாசுக்கள் ஆரியரின் கடவுளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மிகச் சீர் திருத்தம் பெற்று விளங்கினார்கள். கிருட்டிணன் என்னும் தாசன் தன் பதினா யிரம் வீரர்களுடன் இந்திரனை எதிர்த்தான். தாசுக்களில் பாணியர் என்னும் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள். கடல்வழியாகவும் தரைவழியாகவும் வாணிபஞ் செய்த தமிழ்நாட்டு வணிகர். கி. மு. 2000க்கும் கி. மு. 1400க்கு மிடையில் ஆரிய மக்கள் பஞ்சாப் முழுமையும் கைப்பற்றினர். இந்தியாவை அடைந்த ஆரியமக்களை விட அங்கு வாழ்ந்த திராவிட மக்கள் கூடிய தொகையினராயிருந்தனர். ஆரிய மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் விவாகக் கலப்புகள் நேர்ந்தன. வேதபாடல்களைச் செய்த முனிவர்கள் பலர்-வசிட்டர், அகத்தியர், விசுவா மித்திரர் முதலியோர்-தமிழ் மரபினர் என்பது அவர்கள் நிறம்பற்றித் தெரிய வருகின்றது. வருணன் என்னும் கடவுளே அசுரன் எனப்படுகின்றான்.1 பி.தி. சீனிவாச ஐயங்கார் ‘மந்திர காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை’ என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: படை எடுத்துவந்த ஒருசிறு கூட்டத்தினரால் பெரிய சாதிமாற்றம் ஏற்பட்டிருக்க இடமில்லை. திராவிட மொழியைப் பேசிய மக்கள் வேண்டிய அளவு சீர்திருத்தமுள்ளவர்களாகவும் புதியவர்களை விழுங்கிவிடக்கூடிய தொகையினராகவும் இருந்தார்கள். இவர்கள். தமது தொழில் வளர்ச்சி களுக்கேற்பச் செழிப்படைந்து கிடந்த தம் சொற்களை அவர்களுக்கு உதவினார்கள்.2 மொழியளவில் தமிழர்கள் எவ்வளவுக்கு ஆரியர்களானார்களோ, அவ்வளவுக்கு ஆரியர் கொள்கைகளில் தமிழர்களானார்கள் எனச் சிலாற்றர் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். இந்திய மக்களின் அரசியல் வாழ்க்கை வரலாறுகள் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. வேள்விகள் பழைய உலகமக்கள் எல்லோரும் உயிர்ப்பலியிட்டுக் கடவுளரை வழிபட்டனர்.3 ஆரியமக்கள் அலைந்து திரியும் வாழ்க்கைப்படியில் இருந் தமையின் அவர்கள் தங் கடவுளருக்கு நிலையான கோயில்கள் அமைத்துப் பலியிட்டு வழிபடவில்லை. சென்ற சென்ற இடங்களில் கடவுளைக் குறித்துப் பலியிட்டனர். இதுவே மற்றைய மக்களின் வேள்விகளுக்கும் ஆரிய மக்களின் வேள்விகளுக்கும் வேற்றுமை. பிற்கால மக்கள், வேள்விகள் அல்லது யாகங்கள் எனப்படுவன ஆரியமக்களுக்கு மாத்திரம் உரியன வென்று தடுமாறுவாராயினர். ஆரியர் பெரிய இராச்சியங்களைக் கோலிய பின் இவ் வேள்விகள் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டன. அக் காலங் களில் வேள்விகள் புரியும் கிரியை முறைகள் (பிராமணங்கள்) வரையப் பட்டன. இக்கிரியை முறைகளைப் பயின்று அவற்றில் வல்லுநரானோர் பிராமணர் எனப்பட்டனர். பிற்காலங்களில் இப் பெயர், கோயிற் குருக்கள் புரோகிதரையும் குறிக்க வழங்குவதாயிற்று. இதனால் பிராமணர் என்போர் ஆரியமக்கள் என்னும் எண்ணம் பலர் கருத்தில் பதிந்துள்ளது. இன்று தென்னாட்டிற் காணும் கோயிற் குருக்களும் புரோகிதரும் முற்காலத்தில் எகிப்திய பாபிலோனிய நாடுகளிற் காணப்பட்ட குருமார் போன்றவர்களே. பிராமண காலம் கி.மு. 1400க்குப் பின் ஆரியர் (கலப்பு ஆரியர்) கிழக்கு நோக்கிச் சென்று அங்குள்ள தமிழர் இராச்சியங்களை வெற்றி கொண்டனர். அக் காலங்களில் அவர்கள் யாகங்களை ஆடம்பரமாகச் செய்ய ஆரம்பித்தனர். அதன் பொருட்டு யாகக்கிரியை முறைகள் எழுதப்பட்டன.1 கங்கை ஆற்று வெளிகளிலுள்ள மக்களும் ஆரிய மக்களும் விவாகக் கலப்பால் ஒற்றுமை யடைந்து வலுவடைந்தனர். பிராமணங்களுக்குப்பின் ஆரணியங்கள் எழுதப்பட்டன. ஆரணியங்கள் என்பன காட்டில் வாசஞ் செய்யும்போது படித்தற்குரிய பாடல்கள். வேத பாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் காட்டிற்போய்த் தவஞ்செய்யும் வழக்குக் கூறப்படவில்லை என்றும், இவ் வழக்குப் பூர்வ குடிகளின் முறையைப் பின்பற்றி ஆரிய மக்களாற் கைக் கொள்ளப்பட்டனவென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 பாரதம் ஆரியர் கங்கைச் சமவெளிகளில் இராச்சியங்களைத் தாபித்த காலத்திலேயே பாரதப்போர் நிகழ்ந்தது. இது கி. மு. 1300 வரையில் நிகழ்ந்ததெனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பாரதப் போரில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களே. புறநானூற்றில் தருமனைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று காணப்படுகின்றது. வியாசர், அருச்சுனன், துரௌபதி, கிருட்டிணன் முதலானோர் கரிய நிறத்தினராகக் கூறப்படுகின்றனர். சில பெண்கள் பொன்னிற முடையவர்களாகச் சொல்லப்படுகின்றனர்.2 வெண் ணிறமுடையவராக யாரும் கூறப்படவில்லை.3 பாரதம் காலத்துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்ட பல பாடல் களுடையது. இது யவனர் பல்லவர்களைப் பற்றியும் கூறுகின்றது. அலக் சாந்தரின் படையெடுப்புக்குப் பின்னரே இந்தியர் யவனரைப்பற்றி அறிந் தார்கள். இதில் கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரையில் சேர்க்கப்பட்ட பாடல்கள் உண்டு என்பது வரலாற்று ஆசிரியர்களது கூற்று. இராமாயணம் ஆரியர் கங்கைச் சமவெளிகளை அடைந்தபின்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வரலாறே இராமாயணம்.4 இது கி. மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் விளங்கிய வான்மீகராற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. இராமாயணக் கதை1 சாதகக்கதைகளில் வேறு வகையாகக் கூறப்பட் டுள்ளது. வான்மீகி இராமாயணத்தில் இராமர் இராமேசுவரத்தில் இலிங்கம் வைத்துப் பூசித்த வரலாறு காணப்படவில்லை. இராமர் கரிய நிறத்தினராகக் கூறப்படுகின்றார். தென்னாட்டு வரலாறொன்றினை எடுத்துச் சோடித்து வான்மீகர் இராமாயணமாக எழுதினாரோ என்று சிலர் கருதுகின்றனர். சீதை யின் பிதாவாகக் கூறப்படும் சனகன் கி. மு. 1000 வரையில் விளங்கினான். இச் சனகனே யாக்ஞவல்கியருக்கு உண்மை ஞானத்தை உபதேசித்தவன். இவன் அக் காலத்தில் கல்வியிற் சிறந்து விளங்கினான். இந் நூலில் பல காலங்களிற் பாடிய பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வான்மீகி இராமாயணத் தில் இராமர் விஷ்ணுவின் அவதாரமாகக் கொள்ளப்பட்டிலர். உபநிடத காலம் ஆரிய மக்களின் வழிபாடு கடவுளுக்கு ஒன்றைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய ஒன்றைப்பெறும் கொள்கையளவில் இருந்தது. அவர்கள் உலகம் உயிர் கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளைப்பற்றி அறியாதிருந் தனர்.2 மறுபிறப்பைப்பற்றி அவர்கள் வேதங்களிற் கூறப்படவில்லை. இறந்த பின் உயிர்கள் நேரே கூற்றுவனுலகுக்குச் சென்று அங்கு நெடுக வாழ்ந் திருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஆரியர் இந்திய நாட்டை அடைவ தன் முன்னரே தமிழ் மக்கள் முப்பொருள் உண்மைகளை நன்கு ஆராய்ந்து அறிந்திருந்தார்கள். அவ் வுண்மை ஞானங்களின் வெளியீடாகிய உபநிட தங்களே தமிழர்களது ஞானமாகும். இதனை ஆராய்ச்சியாளர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். உபநிடதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படும் யாக்ஞவல்கியர் இந்தியாவின் கிழக்குப்பாகங்களில் வாழ்ந்தவராகலாம். இவர் எழுதியுள்ள நூல்கள் குரு பாஞ்சாலம் கோசலம் விதேகம் என்னும் இடங்களைப்பற்றிக் கூறுகின்றன. யாக்ஞவல்கியர் வாழ்ந்த இடம் அக் காலத்தில் கல்வித் துறையில் உயர்ந்து விளங்கிற்று. அறிவுப் பொருளைத் தேடி அங்குப் பலர் வந்தார்கள். யாக்ஞவல்கியர் கல்வி கற்றபின் உண்மை ஞானத்தைத் தேடி இடங்கள்தோறும் அலைந்து திரிந்தார். இவர்களுடன்கூடத் திரிந்தவர்கள் சுவேதகேது அருணேயன் சோமசுஸ்ம சத்தியஞானி என்போர். இவர்கள் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனைக் கண்டார்கள். அவன் வினாவிய கேள்விகளுக்கு யாக்ஞவல்கியர் ஏற்ற விடையளித்தார். சனகன் அவருக்கு நூறு பசுக்களைத் தானம் வழங்கினான். சனகன், தேரில் ஏறிச் செல்வதன் முன் தனக்கும் அவர்களுக்கும் உண்மைஞான அறிவில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதென்பதை விளக்கினான். இது பிராமணர் களாகிய அவர்களுக்கு அவமானமாக விருந்தது. யாக்ஞவல்கியர் சனக னுடன் சென்று அவனிடம் அரிய ஞானங்களைப் பயின்றார். அவர் காலத் தில் அவரே பெரிய ஞானியாக விளங்கினார். யாக்ஞவல்கி செய்த1 உபநிட தமே ஞான நூல்களுட் சிறந்தது. யாக்ஞவல்கியர் காலத்தில் பிராமணர் சத்திரியரிடத்தில் மாணாக்கராக அமர்ந்து ஞானம் கற்றனர். சனகனைப் போலவே காசி அரசனான அசந்தகேது, யைவாலி அரசன் பிரவாகனன் முதலியோர் விளங்கினார்கள்.2 யாக்ஞவல்கியர் காலம் கி. மு. 1000 வரையில் எனப்படுகின்றது. கி.மு. 1000 வரையில் விந்தமலைக்கு வடக்கே தமிழ் மொழி வேறு மொழிகளாகத் திரிந்து வழங்கிற்று.3 ஆகவே, அக் காலம் தமிழ் உலகத்தின் வடக்கெல்லை விந்திய மலையாயிருந்தது. விந்திய மலைக்கு வடக்கு ஆரியவர்த்த மெனப்பட்டது. பேச்சு வேறுபடுவதன் காரணம் வீட்டிற் பேசுவது போல நாம் சபைகளிற் பேசுவதில்லை. இவ் வகை யான பேச்சுகளும் ஒரு கூட்டத்தினரின் பேச்சை உண்டாக்கும் (மாக்ஸ் மூலர்). வேற்றுமொழிச் சொற்கள் வந்து ஒரு மொழியுடன் கலப்பதாலும் இரு வேறுமொழிக்குரியவர்களுக்கிடையில் விவாகக்கலப்பு உண்டாகிச் சந்ததி பெருகுவதாலும் மொழிகள் மாறுபடும். மொழிகளை இலக்கண அமைப்புக்கொண்டு அறியலாம். மொழிகள் மாறிவிடினும் இலக்கணம் இலகுவில் மாறுபடாது. இலக்கணம் ஆற்றின் இருமருங்குமுள்ள அணையும், சொற்கள் அவைகளினிடையே ஓடும் நீரும் போன்றன. தமிழின் வழிமொழிகள் தமிழைச் சேர்ந்தன என்று காட்டு வதற்கு அம் மொழிகளில் வழங்கும் சொற்களைவிட இலக்கணம் உதவிபுரி கின்றது. ஒரு மொழியைத் தாங்கி நிற்பது இலக்கணம். இப்பொழுது வழங்கும் வட இந்திய மொழிகள் அமைப்பில் தமிழை ஒத்துள்ளன என்று மொழியாராய்ச்சியாளர் நுவல்கின்றனர். ஆகவே அக் காலத்தில் வடமொழி இக் காலம் எவ்வாறு வழக்கிலிருக்கின்றதோ அவ்வாறு இலக்கிய மொழியாக வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்; பேச்சுமொழி வேறாக இருந்திருக்க வேண்டுமென யூகிக்க வேண்டியிருக்கின்றது. பிராகிருதம் தமிழ் மயமாக்கப்பட்டது ஆரியர் இந்தியாவை அடைந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மொழி பழைய பாரசீகம் போன்ற ஆரியம். இதற்கு இலக்கண வரம்பு இல்லை. இம் மொழியிலேயே வேத பாடல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. “வேத பாடல் செய்யப்படுகின்ற காலத்தில் அங்கு எல்லோராலும் வழங்கப்பட்ட ஒரு வீறுடைய மொழி இருந்திருத்தல் வேண்டும். அம் மொழி1 பிராகிருதத்தினின்றும் உச்சரிப்பு முறையில் வேறுபட்டது. வேத பாடல்களில் பிராகிருத உச்சரிப்பினின்றும் வேறுபட்ட பல சொற்கள் ஆளப்பட்டிருக்கின்றன. இச் சொற்கள் மற்ற மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டன என்பதைவிட வேறு வகையாகக் கூறமுடியாது”2 “மந்திர காலத்தில் மூன்று இனமொழிகள் இந்தியாவில் வழங்கின. இவற்றுள் வேதமொழியாகிய இந்து செர்மனிய மொழி ஒன்று. இரண்டாவது, வேதமொழியோடு அமைப்பில் மாறுபட்ட திராவிட மொழி. இது, முன்னதின் அமைப்பு, சொற்கள் என்பவற்றைப் பெரிதும் வேறுபடுத்திற்று. ஆரியமொழி, இந்தியாவில் வளர்ச்சி யடைந்தபோது திராவிட மொழியின் வலிமையால் பல மாறுதல்களடைந்து திராவிட முறைகளைத் தழுவிற்று.” “திராவிட மக்கள் பொருள்களுக்கும் கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச்சொற்களல்ல. இக் கருத்து இன்னும் நன்கு ஆராயப்படவில்லை. ஆராய்ச்சியில் சமக்கிருத மொழியிற் காணப்படும் கலைச்சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப் பட்டன என்று புலப்படுதல் கூடும். இந்து செர்மனிய மொழியாகிய பிரா கிருதம் இந்தியாவில் வழங்க ஆரம்பித்தபோது அதன் அ, எ, ஒ என்னும் எழுத்துக்கள் எல்லாம் அ போலாயின; அதன் இலக்கணங்களும் சிறிது சிறிதாகத் தணிவுபட்டன.”1 மந்திர காலத்தில் ஆரியர் விந்தியத்துக்குத் தெற்கே குடியேறவில்லை மந்திரகால நூல்கள் அக் காலத்தில் விளங்கிய நாற்பது கூட்டத் தினரைப்பற்றி மாத்திரம் கூறுகின்றன. அவை விந்தியமலைக்குத் தெற்கே உள்ளவர்களைப்பற்றிக் கூறவில்லை. அக் காலத்தில் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் போக்குவரத்திருந்தமை மந்திரங்களில் முத்தைப் பற்றிக் கூறப்படுதலால் அறியலாம்.2 புத்தர் காலம் (கி. மு. 557-477) உபநிடத ஞானம் வளர்ச்சியுற்ற காலத்தில் புத்தர் தோன்றினார். இவர் திராவிட மரபினர்.3 இவரது ஞானமும் உபநிடத ஞானங்களை அடிப்படை யாகக் கொண்டது. இவர் வேதமதத்துக்கு மாறான புரட்சியைக் கொண்டு வந்தார். இவர் தம் உபதேசங்களை மகத மொழியிற்1 (பாளி) செய்தார். ஆகவே, புத்தர் காலத்தில் பாளிமொழி மக்களின் பேச்சுமொழியாக இருந் திருத்தல்வேண்டும். பாளி புத்தர் காலத்துக்கு இரண்டு மூன்று நூற்றாண்டு களின் முன் தோன்றியிருத்தல் கூடும். பௌத்தமதம் கலிங்கநாட்டில் மிகவும் வேகமாகப் பரவிற்று. ஆகவே, அங்குப் பாளிமொழி அதிகம் பயிலப் பட்டது. அதனால் அங்கு வழங்கிய தமிழ் சிதைந்து வடுகு அல்லது தெலுங்கு ஆயிற்று. இலங்கைப் பௌத்தமக்கள் கலிங்க தேசக் கலைகளைப் பின்பற்றினர். அங்கு வழங்கிய தமிழும் பாளி மொழிக் கலப்பினால் சிங்கள மாக மாறிற்று.2 மக்கள் எம்மொழியைச் சமய மொழியாகக் கொள்ளுகிறார் களோ, அம் மொழிச் சொற்கள் அவர்களின் மொழியிற் கலந்து மொழியை வேறுபடுத்தி விடுகின்றது. பெருந்தேவனார் பாரதத்திற் காணப்படும் மணிப்பிரவாள நடையும் இதற்கு உதாரணமாகும். தமிழ்மக்கள் தமிழ் உணர்ச்சியினால் ஆரியத்தை எதிர்த்துப் போராடிவந்தமையின், தமிழ் வேறு மொழியாகச் சிதைந்து விடாமல் பிழைத்தது ஆயினும், அதன் ஓரங்கள் கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் என மாறுபட்டன. இன்றைய தமிழ் மொழியில் வடமொழிக் கறை அதிகம் ஏறியிருத்தலை நாம் அறியலாம். புத்தர் காலத்திற்குப் பின் கலிங்க நாடு வடுகு நாடாக மாறியிருத்தல் வேண்டும். இது கி. மு. நாலாம் நூற்றாண்டு வரையில் என உத்தேசமாகக் கூறலாம். தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வடக் கெல்லை வடவேங்கடம் எனப்படுகின்றது. இது “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனப்படுகின்றமையானும் அப் பன்னிரு நாடுகளும் சேர சோழ பாண்டிய நாடுகளுக்குட்பட விருந்தமையானும் அறியப்படும். ஆகவே தொல்காப்பியம் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குச் சிறிது முன்பின் செய்யப்பட்டிருத்தல் கூடும். “மலை தேய்ந்து மண்ணாங்கட்டியானது” என்பது நாட்டுப் பழமொழி. அதை ஒப்பக் குமரி முதல் இமயம் வரையில் பரந்து கிடந்த தமிழ் நாட்டைப் பிறமொழிகள் கவர்ந்து கொள்ள இன்று தமிழ் இந்தியக் குடாநாட்டின் சிறியவெல்லையுள் மாத்திரம் வழங்குகின்றது. அதன் ஓரங்களையும் அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு கன்னடம் ஹிந்தி முதலிய மொழிகள் சிறிது சிறிதாகக் கவர்ந்து வருகின்றன. இன்று திராவிட மொழிகளை வழங்கும் மக்களின் எண் 63,000,000 எனக் கணக் கிடப்பட்டுள்ளது. தமிழ் வழங்குவோரின் எண் 19,000,000.  இயல் - 2 ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம் இன்று இந்திய மக்களிடையே காணப்படும் பழக்க வழக்கங்களும் பிறவும் பழைய தமிழர் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டனவென்று கருதப்படுகின்றன. சங்க காலத் தமிழர் நாகரிகம் கலப்பில்லாத பழந்தமிழ் நாகரிகமேயாகும். ஒரு மொழியிலுள்ள பழைய சொற்கள் அம் மொழிக் குரிய மக்களின் பழைய நாகரிகத்தை நன்கு விளக்குவன. அரப்பா மொகஞ் சொதரோ என்னுமிடங்களிற் காணப்பட்ட பழம் பொருள்களைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு பழைய சொல்லும் ஒவ் வொரு பழம்பொருளுக்கு நேர். பாரை என்னும் சொல் கல்லால் செய்யப் பட்ட கிண்டும் கருவியைக் குறித்தது. அப் பெயரே இன்று இரும்பு முதலிய உலோகங்களாற் செய்யப்பட்ட அவ்வகைக் கருவியைக் குறிக்க வழங்கு கின்றது. உலோகத்தைப்பற்றி அறிய முன்மக்கள் கல்லாற் செய்த பாரையைப் பயன்படுத்தினார்கள் எனப் பாரை என்னும் சொல் அறிவிக்கின்றது. இவ்வாறு பண்டையோர் தாமறிந்த பொருள்களுக்கும், செயல்களுக்கும் இட்டு வழங்கிய சொற்கள் அவர்களது வரலாற்றினைக் கூறுவனவாகின்றன. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் நாகரிகம் எவ்வாறிருந்ததென்பது இம் முறையில் அறிந்து கூறுதல் இயன்றது. நிலப்பிரிவும் மக்கட் பிரிவும் இவ்வுலகம் மலையும் காடும் வயலும் கடற்கரையும் பாலைநிலமு மெனப் பலவகை இயற்கைப் பிரிவுகளுடையது. இவ்வகைப் பிரிவுகள் தமிழர் வாழ்ந்த 1இந்திய நாட்டிலும் உண்டு. ஒவ்வொரு நிலத்தில் வாழ்ந்த மக்களும் வெவ்வேறு வகை வாழ்க்கை நடத்தினர். மலை காடு வயல் கடல் என்பனவும், அவை சார்ந்த நிலங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் பெயர்கள் பெற்றன. மணல்வெளி பாலை எனப்பட்டது. அந் நிலங்களில் வாழ்ந்தோர் முறையே குறவர் இடையர் உழவர் பரதவர் மறவர் எனப்பெயர் பெற்றனர். நிலம் பற்றிய இப் பிரிவையன்றி அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அடியோர் எனத் தொழிற் பாகுபாடு பற்றிய பிரிவினரும் வாழ்ந்தார்கள். வினைவலர் பல தொழில் புரிவோரா யும், அடியோர் கால்வழியாகத் தொண்டு புரிவோராயு மிருந்தனர். அடிமை களை விற்று வாங்கும் வழக்குப் பண்டை நாட்களில் எல்லா நாடுகளிலும் காணப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறும் அரிச்சந்திரன் கதையும் இதற்குச் சான்றுகளாகும். வினைவலர் அடியோர் என்னும் இரு பிரிவினரும் கீழோரெனவும் ஏனையோர் மேலோரெனவும் அறியப்பட்டனர். மறவர் இவர்கள் எயினர் வேடர் புளிஞர் எனவும் கூறப்படுவர். இவர்கள் அலைந்து திரியும் திருந்தாத வாழ்க்கையர்; மணல் வெளிகளின் இடை யிடையே கிடக்கும் பற்றைகளில் தங்கி வேட்டையாடியும், வழிச்செல் வோரை வழிபறித்தும், முல்லை நிலத்தே சென்று பசுக்களைக் கொள்ளை யடித்தும் வாழுநர். தமிழ் இலக்கியங்களில் இப் பாலைநில மக்களின் கொடிய செயல்கள் பலவாறு வருணிக்கப்பட்டுள்ளன. அவைகளிற் கூறப் பட்டவைகளின் சுருக்கம் வருமாறு: மறவர் செம்மறிக்கடாவின் கொம்பு போன்று முறுக்கிய மீசையும் புலியின் மீசை போன்ற தாடியுமுடையர்; நெருப்பில் நீர் விட்டாற்போன்ற நிறத்தினர்; செருப்புத் தொட்ட காலினர்; இப்பியும் சோகியும் கலந்து கோத்து அணிந்த கழுத்தினர்; முறுகிய சடை யினர்; வில்லும் அம்பும் கொண்ட கையினர்; வழிப்போக்கரை எதிர்ப்பார்த் திருக்கும் இயல்பினர்; தறுகண்மையே உருக்கொண்டாலன்ன கொடுமையர்; இவர்கள் வழிச்செல்லும் வணிகர் கூட்டத்தவரின் தலைகளைக் கொய்து அவர்களின் விலையுயர்ந்த பண்டங்களைக் கொள்ளையிடுவர்; அப் பண்டங்களைச் சிறு விலைக்கு விற்பர்; வழிபோக்கரின் கட்டுச் சோற்றைப் பறித்துச் சீலை உறியிற் பத்திரப்படுத்துவர்; வணிகரிடம் கொள்ளை கொண்ட பெண்களணியும் மேகலாபரணங்களையும் அசோகந் தழையையும் உடுப்பர். கையிற்பட்ட வழிப்போக்கரை ஆடென நினைந்து காளிக்கு வெட்டிப் பலியிடுவர். அரம்போன்ற கற்களுடைய பாலை நிலத்தே இறந்தவர்களை இட்டு மூடிய கற்கும்பங்கள் பல கிடக்கும். தட்பக் காலத்தும் வெம்மை தோன்றும் அவ்விடத்து வறந்த சுனைகளும் ஆறுகளும் கூவல்களும் காணப்படும்.1 மறவரின் குடில் வீடுகள் எலியும் அணிலும் நுழையாதபடி ஈந்தின் ஓலைகளால் வேயப்பட்டிருக்கும். மறப்பெண்கள் பாரையைக்கொண்டு எறும்புப் புற்றுகளைக் கிண்டிப் பெற்ற புல்லரிசியை முற்றத்தே கிடக்கும் நில உரலிற் றீட்டி, கிணற்று நீரை மொண்டு பானையில் உலைவார்த்து ஆக்கிய சோற்றை உப்புக்கண்டத்தோடு தேக்கிலையில் உண்பர். மறவர் கூட்டமாக வாழும் இடங்கள் பறந்தலை எனப்படும். இக் குடியிருப்பு ஊகம்புல்லால் வேய்ந்த மதிலாற் சூழப்பட்டிருக்கும். தலை வாயிலில் அம்புக் கட்டும் பறையும் தூங்கும்; வாயிலிடத்தே சங்கிலியிற் கட்டிய, நாய் நிற்கும். இந் நிலத்துக்குத் தெய்வம் காளி. கொற்றவை விந்தை, காடுகிழாள் என்பவையும் காளியின் மறுபெயர்கள். காளி என்பது கறுப்பி என்னும் பொருள் தரும் பெயர். காளிக்கு நரபலியும் பிற உயிர்ப்பலியு மிடப்படும்.1 குறவர் மலையில் வாழும் குறவர் அலைவதும் அலையாதிருப்பதுமாகிய வாழ்க்கையினர். அவர்கள் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடினர்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோலை உடுத்தினர். அவர் மகளிர் மரவுரி தழை உடைகளை அணிந்தனர். ஆகவே, மன்றற்காலங்களில் மண மகன் மணமகளுக்குத் தழைகளாலும் பூக்களாலும் கட்டிய உடைகளைக் கொடுக்கும் வழக்கு உண்டாயிற்று. இது மலையாளத்தில் முண்டு கொடுக்கும் வழக்கமாக இன்றும் நிலவுகின்றது; மற்றைய நாடுகளில் கூறை கொடுக்கும் வழக்கமாக நிலைபெறுகின்றது. மகளிர் மூங்கிலை வார்ந்து கூடை முடைந்த னர். இத் தொழில் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றது. அவர் களின் குலதெய்வம் முருகன். முருகக்கடவுள் ஆதிகாலம் முதல் மலை உச்சிகளில் வைத்து வணங்கப்பட்டார். முருக வழிபாட்டிற்குரிய ஆடல் வேலன் ஆடல் அல்லது வெறியாட்டு எனப்படும். முருக வழிபாட்டிற்குரிய இவ்வாடல் முருகபூசை செய்வோனால் ஆடப்பட்டது. முருகக்கடவுளைப் போல வேலைக் கையில் வைத்திருத்தலால் அவனும் வேலன் எனப்பட் டான். திருமுருகாற்றுப்படை என்னும் சங்க நூலில் குறமாது முருக வழிபாடு செய்யும் முறை நன்கு கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: மலையிடத்துள்ள அகன்ற நகரிடத்தே குறமாது கோழிக்கொடியை நட்டு அதற்கு நெய்யும் வெண் சிறு கடுகும் அப்புவாள்; வழிபாட்டிற்குரிய மந்திரங்களை உச்சரித்து அழகிய மலர்களைத் தூவுவாள்; மாறுபட்ட இரண்டு நிறமுடைய பட்டாடைகளை உள்ளொன்றும் புற மொன்றுமாக உடுப்பாள்; சிவந்த நூலைக் காப்பாகக் கையிற் கட்டுவாள்; வெண்பொரி களைத் தூவுவாள்; இரத்தத்தோடு கலந்த வெள்ளரிசியைப் பலியாக இடுவாள்; செவ்வலரி மாலைகளையும் பிற மாலைகளையும் ஒரே அளவாக நறுக்கி அசையும்படி தூக்குவாள்; மலைப்பக்கத்தே உள்ள ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் வருத்தாதொழிக என வாழ்த்தி நறிய தூபங் காட்டுவாள்; மலையிடத்து வீழ்கின்ற அருவியோடு வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கச் சிவந்த மலர்மாலைகளைத் தூவி உதிரமளைந்த தினையைப் பரப்பி முருகக்கடவுள் மகிழும்படி வழிபாடு செய்வாள். முருகனாற் குறைநேர்ந்த பெண்களுக்கு முருக பூசை செய்யும் வேலன் வெறியாடி ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அவ் விரத்தத்தைத் தொட்டு அவன் நெற்றியிற் றடவுவதும் வழக்கு. குறிஞ்சி நிலத்தைப்பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் சங்கநூல் களிற் காணப்படுவன சில வருமாறு:- 1மலையிடத்தே பலாவும் வாழையும் செழித்து வளரும். குறவரின் வீடுகள் புல்லால் வேய்ந்த சிறு குடிசைகள். வீட்டின் முற்றத்தே வேங்கை மரமும் பலாவும் நிற்கும். குறவர் அம்மரங்களின் கீழ் இருந்து தேட்கடுப்புப் போன்ற நாட்பட்ட கள்ளைக் குடித்து, சந்தனக்கட்டை விறகாற் சுட்ட இறைச்சியை யுண்டு மகளிரோடு குரவையாடுவர். மலை முகடுகளிலே தேன்கூடுகள் தொங்கும். குறவர் உயர்ந்த மூங்கில் ஏணிகளைச் சார்த்தி ஏறி அத் தேன் கூடுகளை அழித்துத் தேன் கொள்வர். இராக்காலத்தே வேட்டை யாடச் சென்ற குறவன் பகற்காலத்திற் புலித்தோல் மீது படுத்து உறங்குவான். கள்ளை உண்ட குறவன் இராக்காலத்தே பரண்மீதிருந்து தினைப்புனத்தைக் காவல் காக்கக், குறத்தி சந்தனம்பூசிய தனது கூந்தலைத் துளர்ந்து ஆற்றிக் குறிஞ்சிப் பண்பாடுவாள். தினைப்புனத்தை மேயவந்த யானை அவ் வோசையைக் கேட்டு மெய்மறந்து தூங்கும். தினைப்புனத்தை மேயவரும் பன்றி, குறவன் பரண்மீது மாட்டிய கொள்ளியைக் கண்டுநிற்கும். குறச் சிறுமியர் கையிற் சங்குவளையணிந்து2 முதுகிற் றூங்கும்படி கூந்தலைப் பின்னி விடுவர்; தினைமீது விழும் கிளிகளைத் தட்டை குளிரி முதலிய கருவிகளைத் தட்டியும், அசோகந் தளிரை ஓச்சியும், ஆயோ எனச் சத்த மிட்டும் ஓட்டுவர்; அசோகிலும் தாழையிலும் கட்டிய ஊசல்களில் ஏறியாடு வர்; வேங்கைப் பூவைக் கொய்து புலிபுலியெனச் சத்தமிடுவர். சிறுமிக்குத் தெய்வத்தால் நேர்ந்த குறையைப் போக்க அன்னை பூக்களைப் பலியாகத் தூவி வீட்டைக் காவல் செய்து வெறியாடும் பொருட்டு முருக பூசை செய்வோனை வீட்டுக்கு அழைப்பாள். பலாப் பழத்தாற் சமைத்த கள்ளைக் குறத்தியர் வார்க்க வார்க்கக் குறவர் வாங்கி உண்டு மகிழ்வர். யானைகளின் கொம்பைப் பெறுதற்குக் குறவர் யானைகளை வேட்டையாடுவர். மின்மினி மொய்த்திருக்கும் கறையான் புற்றைக் கரடி இராக்காலத்தே இருந்து தோண்டும்; அக்காட்சி கொல்லன் இரும்பில் வேலை செய்வது போன்றது. யானையை வேட்டையாடப் புலி பதுங்கியிருக்கும். பிறைபோன்ற கொம் புடைய பன்றி பறைக்கண் போன்று நிறைந்த சுனையிடத்தே நீரைப் பருகிச் சேம்பின் கிழங்கை உண்ணும். சிவந்த ஆரமுடைய கிளி, பறித்துத் தூக்க மாட்டாது போட்டுச் சென்ற சாமைக் கதிரைக் கோழிகள் நின்று உண்ணும். முற்றி விளையும்படி கள் மூங்கிற் குழாய்களில் வைக்கப்பட்டிருக்கும். குறவர் கடப்ப மரத்திற் கொடிகட்டி மாலை தூக்கிப் பலவகை வாத்தியங் களை ஒலித்துக் கூத்தாடி முருகனை வழிபடுவர். வேளாளர் ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம் கபிலை பிழா இடா முதலியவைகளால் இறைத்துச் சாமை அவரை துவரை முதலிய தானிய வகைகளையும் விளைவித்தனர். அதற்கு அப்பால் பருத்தி விளைந்தது. கற்காலத்திலேயே இந்திய மக்கள் பருத்தி ஆடை உடுத்தார்கள். அக் காலத்தில் மற்றைய நாடுகளில் மக்கள் தோல் கம்பளி சணல் ஆடைகளை உடுத்தினர்; அல்லது ஆடையின்றி யிருந்தனர். ஆற்றுச் சமவெளிகளில் ஆடை நெய்தற்கு வேண்டிய கற்காலப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. இதனால் அக்கால மக்கள் ஆடை நெய்வதில் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்று விளங்குகின்றது. அவர்கள் மரத்தினால் வீடுகட்டி வாழ்ந்தார்கள்; நெற்களஞ்சியங்கள் மரத்தினாற் செய்யப்பட்டன. வண்டியும் மரத்தினாற் செய்யப்பட்டது. வண்டி உரல் உலக்கை தொட்டில் முதலியன இக் காலத்திற் போலவே இருந்தன. இக் காலத் தச்சர் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்று கல்லாற் செய்யப்பட்டவை புதிய கற்காலக் குடியிருப்புகளிற் கண்டெடுக் கப்பட்டன. இந் நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக் கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள்.1 பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான். இது தமிழர் ஆரியர் கலப்பு நேர்ந்த பிற்கால வழக்கு. ஆரியர், இந்திரன் தேவர்களுக்கு அரசன் எனக் கருதினர். வேளாண் மக்கள் இந்திரனுக்கு விழாக்கள் சிறப்பாக எடுத்தனர். இவ்வகை விழாக்களைப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் அழகுறக் கூறுகின் றன. வேளாண் மக்கள் உழுதுண்போர் உழுவித்துண்போர் என இருவகை யினர். இவருள் உழுவித்துண்போர் வேள் எனப்பட்டுக் குறுநில மன்ன ராகவும் ஆட்சிபுரிந்தனர். இவ் வகுப்பினர் அரசனால் கணிக்கப்பட்ட பெரு மக்களாவர். மாடு ஒருகாலத்திற் செல்வமாக மதிக்கப்பட்டது. பின்பு தானியம் போன்ற உணவுவகைகள் செல்வமாக மதிக்கப்பட்டன. அதிக உணவுப் பொருள்களை வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான். வேளாண் மக்கள் அதிக தானியங்களை விளைவித்துச் செல்வராய் வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுவாயில்களையும் அமைத்தனர். அவர்களுக்கு வேண்டிய மட்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள் ஏர்த்தொழிலுக்கு வேண்டிய கலப்பை நுகம், கொழு முதலியன, அவர் மகளிர் அணியும் ஆபரணவகை, உடுக்கும் ஆடைகள் இவையும் இவை போன்றவைகளும் செய்துதவும் தொழிலாளர் மருதநிலத்தே வந்து தங்கினர். பிற நிலங்களில் வாழ்வோர் தம் நாடுகளிற் கிடைக்கும் பண்டங்களைத் தானியங்களுக்குப் பண்டமாற்றுச் செய்ய வந்தனர். இவ்வாறு மருதநிலம், மக்கள் போக்குவரத் தும் ஆரவாரமுமுடைய நகரமாக மாறிற்று: இங்குப் பொழுது போக்குக் குரிய ஆடல், பாடல், விழா முதலியன நிகழ்ந்தன, இன்பக்கலைகள் வளர்ச்சி யுற்றன. ஒவ்வொரு தொழிலாளரும் வாழும் வீதிகளுடைய நகரங்கள் இங்கே தான் தோன்றின. தமிழ் இலக்கியங்கள் மருதநில மக்களின் உண்டாட்டுக் களியாட்டு நீராட்டு விளையாட்டுகளையெல்லாம் அழகாகக் கூறுகின்றன. பரதவர் கடற்கரை மக்கள் மீன் பிடித்தும் உப்பு விளைத்தும் வாழ்ந்தனர். அவர்கள் உப்புக் கண்டத்தையும் உப்பையும் தமக்கு வேண்டிய நெல்லுக் கும் பிறபொருள்களுக்கும் பண்டமாற்றுச் செய்தனர். அவர்கள் மரத்தைக் குடைந்து குடைவு தோணிகளையும் பெருங்கடலிற் செல்லத்தகுந்த நாவாய் களையுஞ் செய்தனர். முன்னர் அவர்கள் கரையை அடுத்துத் தோணிகளிற் சென்றனர்; பின்பு கருங்கடல் வழியாகத் தூரதேசங்களுக்குச் சென்று தென்னிந்திய ஆடைகளையும் மரங்களையும் பிறநாட்டுப் பொருள்களுக்கு மாற்றினர்.1 மகளிர் தழையுடை யுடுத்தனர். தந்தையர் கணவர் கொணர்ந்த மீன் இறால் என்பவைகளைக் காயவிட்டுப் புன்னை நிழல்களிலிருந்து புட்கள் ஒப்பிக் காவல் காத்தனர். நெய்தல் நிலமக்கள் பனைச் செறிவுகளில் சிறு குடில்களமைத்து வாழ்ந்தனர். அவை புல்லு அல்லது பனையோலை யால் வேயப்பட்டன. அவர்கள் பூரணைக் காலங்களில் சுறாக்கோடு நட்டுப் பூமாலை அணிந்து கூத்தாடி வருணனை வழிபட்டனர்; தலையில் தழை களை அணிந்தனர். வருணன் தமிழர் கடவுளென்றும் இக் கடவுள் ஆரிய மக்களால் வழிபடப்பட்டதென்றும் முன் காட்டப்பட்டது.1 கடற்கரைத் துறைமுகங்களில் பெரிய பண்டசாலைகள் இருந்தன. இவைகளில் அரேபியா, யவன தேசம் முதலியவைகளிலிருந்து வந்த பண்டங்கள் சுங்கங்கொள்ளும் பொருட்டு அடுக்கிக் கிடந்தன. பிற நாடு களுக்கு அனுப்பும் பொருட்டு வண்டிகளிலும் கழுதைகளிலும் பொதிமாடு களிலும் கொண்டுவரப்பட்ட மூடைகள் அரசமுத்திரை குத்தப்பட்டுப் பண்டசாலையின் இன்னோரிடத்து அடுக்கப்பட்டுக் கிடந்தன. பண்டசாலை யில் அரச ஊழியம் புரியும் கணக்கரும் சேவகரும் பலர் கடமை புரிந்தனர். கடற்கரைத் துறைமுகங்களில் வாணிகம் வளர்ச்சியடைந்தது. அங்கு வணிகர் கூடினர். பெரிய மாளிகைகள் எழுந்தன. வண்டிகள் செல்வதற்கு நல்ல வீதிகள் அமைக்கப்பட்டன. மாளிகைகள் குன்று நிமிர்ந்தது போன்ற உயரமுடையனவாகவும் பல சாளரங்களோடு கூடிய மாடிகளும் ஓடு கற்றை முதலியவற்றால் வேயப்படாது மூடு சாந்திட்டு நிலாமுற்றங்கள் விடப் பட்டனவாயுமிருந்தன. அவை ‘வேயா மாடம்’ எனப்பட்டன. சாளரங்கள் மானின் கண்போன்றனவாகச் செய்யப்பட்டிருந்தன. கடலிற் செல்லும் மரக்கலங்கள் திசையை அறியும்பொருட்டு உயர்ந்த கட்டிடங்களில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் கலங்கரை விளக்கங்கள் எனப்பட்டன. இக் கலங்கரை விளக்கங்கள் அலக்சாந்திரியாவில் தாலமி சோதர்1 அமைத்த வெளிச்ச வீட்டுக்குப் பன்னெடுங்காலம் முற்பட்டது. கப்பலோட்டும் மாலுமி மீகான் எனப்பட்டான். மீகான் என்பதே மீகாமன் எனத் திரிந்து வழங்கும். சங்க நூல்களில் நெய்தல் நிலத்தைப் பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் காணப்படுவன சில வருமாறு: குறச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து கருவாட்டைக் காவல் காத்துப் புள்ளோப்புவர். உமணர் எருதுகள் பூட்டிய வண்டிகளில் உப்பை யேற்றிச் சென்று விற்பர். பனைமரங்களில் இராக்காலத்தே அன்றிற் பறவைகள் தங்கும். இரவில் மீன்பிடிக்கும் பரதவரின் திமில் விளக்குப் பாசறையில் உறையும் அரசரது யானைமுகத்து நெற்றிப்பட்டம்போல் விளங்கித் தோன்றும். நாவாய்களின்மீது பெரிய கொடிகள் அசையும். கழியிடத்தே விளைந்த உப்பை உமணப் பெண்கள் எடுத்து நெல்லுக்கு உப்பு என விலை கூறி விற்பர். பரதவர் சிறுமியர் உப்புக் குப்பங்களில் ஏறி நின்று கடலில் வரும் திமில்களை எண்ணுவர். பெண்கள் மாந்தழை நெய்தல் இலை முதலியவற்றை உடுப்பர். உப்பு வாணிகரோடு அவர்கள் வளர்க்கும் மந்தியும் கூடச் செல்லும். பரத்தியர் மீன்களை விலைபகர்ந்து செல்வர். சிறுமியர் கடற்கரையில் வண்டற் பாவை செய்தும், சிற்றில் புனைந்தும் சிறுசோறட்டும் விளையாடுவர். பரதவர் முற்றத்தே சுறாக் கிழித்த வலை தூங்கும். கோன் அரசியல் தமிழரிடையே மிகப் பழமைபெற்றது. கோன், ஏந்தல், வேந்தன், மன்னன், குரிசில், இறைவன், வள்ளல், அண்ணல், குறுநிலமன்னர் முதலிய பழந்தமிழ்ச் சொற்களே இதற்குச் சான்று. அரசன் குடிகளை ஆள்வது ஆட்சியெனப்பட்டது. ஆள் என்பது மக்கள் ஒருமை. ஆட்சி என்பது இடையன் மந்தைகளைக் காப்பதுபோல மக்களைப் பகைவரினின்றும் காப்பது எனப்பொருள்பட்டது. ஏந்தல் என்பது போலவே வேந்தன் என்ப தும். ஏந்து என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். அரசனுக்குப் பழைய பெயர் கோ அல்லது கோன். இதற்குப் பசுக்களை மேய்ப்பவன் என்பது பொருள். இது, ஆட்சி முதலில் முல்லை நிலத்தில் ஆரம்பித்து வளர்ச்சி யடைந்ததென்பதை விளக்கும். இந் நிலைமையிலேயே மக்கள் மாடு பசு எனப்படும் செல்வத்தைத் தேட ஆரம்பித்தார்கள். ஆயர் தமது செல்வ மாகிய மந்தைகளுடன் புற்றரைகளிற் றங்கி வாழவேண்டியவர்களாயினர். மற்றச் செல்வங்கள்போலல்லாமல் ஆடுமாடுகள் கன்றுகளை ஈன்று பெருகும் இயல்பின. ஆயரின் புதல்வர் தங்குடும்பத்துக்குரிய மந்தை களைப் பிரித்துக்கொள்ளலாம். மேய்ச்சல் நிலங்களைப் பிரித்தல் முடியாது. மேய்ச்சல் நிலங்கள் ஓரளவுக்குமேற் சிறியவையாக்கப்பட்டால் அவை ஆடு மாடுகள் மேய்வதற்குப் பயன்படா. ஆகவே குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழும் முறை உண்டாயிற்று. குடும்பத்தின் தலைவன் அதிகார முடையவனானான். பின் பல குடும்பங்களுக்கு அதிகாரமுடைய ஒருவன் தலைவனானான். அவன் சிறப்பாகக் கோன் எனப்பட்டான். இவ்வாறு அரசன் உண்டாயினான். அரசன் வாழும் மனை கோட்டை எனப்பட்டது. அரசனது அதிகாரம் உயர உயரப் போரும் வளர்ச்சியடைந்தது. கோட்டையைச் சூழ்ந்து மதில் அரண் செய்தது. ஆகவே, கோட்டை, அரண்மனை எனப்பட்டது. மதில் மண்ணோடு கேப்பைக் கழி கலந்து கட்டப்பட்டது. இது செங்கல் மதிலினும் வலிவுடையது. கோட்டையைச் சூழ்ந்து அகழ், அகப்பா, அல்லது அகழி இருந்தது. இச் சொற்கள் அகழ் என்னும் அடியாகப் பிறந்தன. உடு, ஓடை, கயம், பரிகம், பரிகை, பாம்புரி என்பனவும் அகழின் மறுபெயர்கள். பாம்பின் உரி பாம்பை நெருங்கி மூடியிருப்பதுபோல் இருத்தலின் அகழ் பாம்புரியெனப் பெயர் பெற்றிருத்தல் கூடும். கோட்டையின் வாயில் கொட்டி எனப்பட்டது. மதிலின் பின்புறத்தே நிலத்திலிருந்து மேலே யெழுந்து மேடைபோலிருப்பது கொத்தளம் எனப்பட்டது. மதிலின் மீது வீரர் மறைந்திருந்து அம்பு எய்தற்கு அமைக்கப்பட்டுள்ள மறைவிடம் ஞாயில் ஏவறை எனப்பட்டது. அரண்மனையிற் பல அறைகள் இருந்தன. தானியக்களஞ்சியம் கொத்தறை எனவும், அரசன் வீற்றிருக்கும் மண்டபம் கொலுவிருக்கை எனவும், ஆயுதங்கள் வைக்கும் அறை ஆயுதக் கொட்டில் எனவும் கூறப்பட்டன. கொலுவிருக்கை கொடி துகில் தோகை பூ இலைகளால் அலங்கரிக்கப்பட்டது. அரசன் வட்டித்த கூர்நுதி முடி யணிந்தான். அரசரும் வள்ளல்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அரசன் அரையில் தங்கப் பட்டிகையும், கையிற் கடகமும், கமக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையில் சதங்கைகளையுடைய கழலும், கழுத்தில் பவள முத்து மாலைகளும், காலில் வீரச்செயல் பொறித்த வீர தண்டையும், காதிற் குண்டலங்களும் அணிந்திருந்தான். அவன் கொலுவிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அரசன் சாய்வதற்கு அரியணையிருந்தது. அவனைச் சூழ்ந்து அடியார், உழையர், புகழ் கூறும் அகவர், கட்டளைகளை வெளிப் படுத்தும் வள்ளுவர், அரசனது வீரம் கொடை ஆகியவற்றைப் பாடும் புலவர், அண்ணல், வள்ளல் முதலிய பெருமக்கள் இருந்தனர். அரசன் குடிமக்களின் குறைகளை நேரிற் கேட்டு முறை செய்தான். அவன் பரிசனர் புடைசூழ வீற்றிருந்தான். அரி, கவரி, குயவு, கூவிரம், திகிரி, வையம் என்பன தேரின் பெயர்கள். ஆகவே, அக் காலத்துப் பலவகைத் தேர்கள் இருந்தனவென்று தெரிகிறது. தேர்கள் யானை அல்லது எருதுகளால் இழுக்கப்பட்டன. தேரின் நடுப்பாகம் தட்டு அல்லது நாப்பண் என்றும், அதன் தட்டுப் பார் என்றும், தேரைச் சுற்றியுள்ள பலகைகள் கிடுகு என்றும், சக்கரம் ஆர் என்றும், தேரின்மீது ஏறுதற்கு அமைக்கப்பட்ட படிகளோடு கூடிய மேடை, முட்டி அல்லது பிரம்பு என்றும் வழங்கின. தேர் ஆடை களால் அலங்கரிக்கப்பட்டது. அரச வருவாய் அரசனுக்குரிய நிலங்களால் மாத்திரமன்று. வரி, சுங்கம், திறை, கப்பம் முதலியவைகளாலும் வந்தன. ஆட்சி முல்லை நிலத்திற்றோன்றி மருதநிலத்தில் வளர்ச்சியுற்றது. ஆகவே, அரசனது நகர் பெரும்பாலும் மருத நிலத்திலேயே இருந்தது. பார்ப்பார் எல்லாத் தேசங்களிலும் ஆலயங்களில் கடவுளுக்குப் பலிசெலுத் தும் குருமார் இருந்தனர். அவ்வகையினர் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இவர்கள் பார்ப்பார் எனப்பட்டனர். கோயில் தொடர்பான கருமங்களைப் பார்த்தலின் இப்பெயர் அவர்களுக்கு இடப்பட்டிருக்கலாம். கடவுள் வழி பாட்டினும் பிறவகையினும் இவர்கள் பொதுமக்களுக்கு அறிவு கொளுத்தி வந்தனர். இம் முறையில் இவர்கள் மக்களின் புரோகிதருமானார்கள். புரோகிதம் என்பது புர என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். புரோகிதனாகிய பார்ப்பானே அகப்பொருட்டுறையில் வரும் பார்ப்பனப் பாங்கனாவன். புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவனாகவும் இருந்தான். தொல்காப்பியத்தில், “நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய,” எனக்கூறப்படும் அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை. இது: 1“பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் மானுரி மடியு மந்திரக் கலப்பையும் கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த கூறை வெள்ளுரிக் குண்டிகைக் காவினர்” (உதயணன் கதை) என்பதால் நனி விளங்கும். காதல் முற்காலப் புலவோர் காதல், போர் என்னும் இரு துறைகளிலும் பாடல்கள் புனைந்தனர். இப் பாடல்களிற் காணப்படும் ஒழுக்கங்கள் வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டு வருவன. மகளிரும் மைந்தரும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்துக் கிழவன் கிழத்தியராதலே பண்டை நாள் மன்றல். பிறரறியாவகை சிலநாட் கரந்தொழுகும் காதலொழுக்கம் கள வெனவும், பலரறிய மணந்து கிழவன் கிழத்தியராய் இல்லிருந்து நல்லறம் நடத்தும் ஒழுக்கம் கற்பெனவும்படும். கூடிய காதலர் பிரிந்தவிடத்து இரங்கல், பிரிந்தவர் வருவாரென்று அவரை எதிர்நோக்கி ஆற்றியிருத்தல், ஒருவரோடு ஒருவர் பிணங்கி ஊடுதல் என்பன போன்ற பொருள்களைப் பலவாறு கற்பித்துப் பண்டைப் புலவோர் பாடல் புனைந்தனர். மலைநாட்டு மகளிரும் மைந்தரும் ஆதிகாலத்திற் களவிற்கூடிப் பின் மணந்து கொண் டனராதலின் புணர்தலும் அது காரணமாயுள்ள பொருள்களும் குறிஞ்சிக்கு உரித்தாக்கப்பட்டன. முல்லை நிலத்தில் மணங்கள் முதியவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டன. முல்லைநிலமகளிர் காலையில் மந்தைகளுடன் சென்ற காதலர் மாலையில் மீளும் வரையும் அவரை எதிர்பார்த்திருத்தலின் முல்லைக்கு இருத்தல் உரித்தாக்கப்பட்டது. கடற்கரை மகளிர் மரக்கலங் களிற் றொலைவிடஞ் சென்ற கணவரை நினைந்து இரங்கியிருத்தலின், இரங்கல் நெய்தற்கு உரித்தாக்கப்பட்டது. பொருள் தேடுதல் அரசர் ஏவலை நிறைவேற்றுதல் முதலிய ஏதுக்களை முன்னிட்டுக் காதலர் பாலைநில வழியே செல்லுதலின், பாலை பிரிதலுக்கு உரித்தாக்கப்பட்டது. இவ் வொழுக்கங்கள் எல்லாம் எல்லா நிலங்களிலும் நிகழத்தக்கன. மன்றல் அக் கால மன்றல் புரோகிதர் இன்றி நடந்தன. கணி எனப்பட்ட சோதிடர் கலியாணத்துக்கேற்ற நல்ல நாளை ஆராய்ந்து கூறினர். சங்க நூல் களிற் காணப்படும் மன்றல் முறை வருமாறு: உரோகிணி சந்திரனோடு கூடும் பூரணை நாளில் கலியாண முகூர்த்தம் வைக்கப்பட்டது. வீட்டின் முற்றத்தே கால்கள் நட்டு அழகிய பந்தல் இடப்பட்டது; தரையில் ஆற்றின் வெண்மணல் பரப்பப்பட்டது. அழகிய பூமாலைகளையும் இலைகளையும் தூக்கிப் பந்தல் அலங்கரிக்கப் பட்டது. பருப்பு இட்டு ஆக்கிய சோற்றுக்குவியல் பலர் கூடியிருந்து உண்ட பின்னும் மிகுந்து கிடந்தது. பெரிய மேளங்களும் மணவாத்தியங்களும் ஒலித்தன. அறுகங்கிழங்கை நூலாற் சுற்றிச் செய்த தெய்வ உருவம் வாழை யிலையின் மீது வைத்துப் பூவால் அலங்கரிக்கப்பட்டது. விளக்குகள் கொளுத்தப்பட்டன. கலியாணத்தைப் பார்ப்பதற்குப் பூப்போன்று அழகிய கண்களையுடைய பெண்கள் வந்து கூடினார்கள். புதிய நீர்க்குடங்களைத் தலையிலும், கையில் புதிய வாயகன்ற பாலிகைச் சட்டிகளையுமுடைய பெண்கள் வந்தார்கள். அப்பொழுது பெண்கள் ஆரவாரஞ் செய்தனர். அவர்கள் அப் பாத்திரங்களை ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றினர். புதல்வரைப் பெற்றோரும் தாலிதரித்தோருமாகிய அழகிய நான்கு முதுபெண்கள் அந் நீர்க் குடங்களை வாங்கி மணமகளை முழுக் காட்டினர். மணமகளின் கரியகூந்தல் நீருடன் வந்த நெல்லாலும் மலராலும் மறைந்தது. அம் முதுபெண்டிர் “நீ கொண்டானுக்கினியளாய் அவனைப் பேணி இனிது வாழுதி” என வாழ்த்தினர். மணமகளுக்கு ஆபரணங்கள் நிறையப் பூட்டப்பட்டன. அவ்வாபரணப் பொறையைப் பொறுக்கமாட்டா மையால் அவளுக்கு வியர்வை தோன்றிற்று. அழகியபெண்கள் விசிறி கொண்டு வீசினர். குற்றமில்லாத முகூர்த்தம் வந்தது. தமர் விரைவில் வந்து கிழத்தியைக் கிழவனுக்கு அளித்தார்கள். மருதநிலத்தே ஆடல் பாடல்களிற்றேர்ந்த கூத்தியர் விறலியர் முதலியோர் வாழ்ந்தனர். இவர்கள் பரத்தைமையினர். இவர்கள் நிமித்தம் மருதநிலத் தலைவன், தலைவியர்களுக்கிடையில் ஊடல், புலவி முதலிய பிணக்கங்கள் நேர்வதுண்டு. கைக்கிளை, பெருந்திணை என்னும் இரு வகைக் காதல்களும் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. கைக்கிளை என்பது தம்மாற் காதலிக்கப்பட்ட மகளிர் தம்மைக் காதலியாதவிடத்து மைந்தர் தம் காதலை வெளிப்படுத்திப் பலகூறுதல். பெருந்திணையாவது ஆடவன் காதலியாதவிடத்து அவனைக் காதலிக்கும் ஒருத்தி காதல் மிகுதி யால் பல மொழிந்து கரைதல். தாம் காதலித்த மகளிர் தம்மைக் காதலித்து மணக்க உடன்படாதவிடத்து மைந்தர், பனங்கருக்கினாற் செய்த மணி கட்டிய குதிரை மீது ஏறி ஆவிரம்பூ, எருக்கம்பூ, எலும்பு மாலைகளைச் சூடிப், பெண்ணின் வடிவை ஓலையில் எழுதிக், கையிற்பிடித்து (சிறுவர் இழுக்க) வீதியில் ஊர்தலும் பெருந்திணை எனப்படும். இது நல்லது இனியது எனப் புலவர் நாட்டிய புலநெறி வழக்கென்ப. போர் தமிழ்நாட்டு மன்னர் பிற அரசரைக் கீழ்ப்படுத்தித் தம்மாணையை மேம்படுத்தற் பொருட்டுச் செருக்கள் பல மலைந்தனர். ஒவ்வோர் அரச னுக்கும் வெவ்வேறு கொடியும் மாலையும் இருந்தன. போருக்குச் செல்லும் போது வீரர் தத்தம் வேந்தர்க்குரிய மாலைகளையணிவர். மாற்றரசரின் நிரைகளைக் கவர்தலே முற்கால அரசர் போர் தொடங்கும் முறையாகும். துரியோதனன் விராடனின் நிரையைக் கவர்ந்தது பாரதத்திற் கூறப்படு கின்றது. மாற்றரசர் நிரையினைக் கவரச்செல்லும் வீரர் தம் முடியிடத்தே வெட்சிப் பூவைச் சூடுவர். ஆகவே, நிரை கவர்தல் வெட்சியெனப்பட்டது. நிரை கவர்தலன்றிப் பகையரசனின் நிலத்தைக் கவர்தற் பொருட்டுப் படை யெடுத்துச் செல்லுதல் வஞ்சியென்றும், கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞை என்றும், எதிர்த்துப் பொருதல் தும்பை என்றும், வெற்றிபெறுதல் வாகை என்றுங் கூறப்பட்டன. அவ்வப்போது வீரர் அவ்வப் பூக்களைச் சூடிய காரணத்தால் அவ் வொழுக்கங்களுக்கு இப் பெயர்கள் இடப்பட்டன. புலவோர் அரசனின் புகழைப்பாடுதல் பாடாண் எனவும், உலக நிலையாமையை உணரும் பகுதி காஞ்சி எனவும்பட்டன. போர் செய்யும் நிலம், களரி, பறந்தலை, முதுநிலம், களம் எனப்பட்டது. படைகள் உண்டை, ஓட்டு, அணி, தானை எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. முன்னணிப்படை அக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரை என்றும்; பின்னணிப்படை கூழை என்றும் வழங்கின. பிற்காலங்களில் தேர், யானை, குதிரை, காலாளெனப் படைகள் நான்காகப் பிரிக்கப்பட்டன.1 குதிரைப் படை ஆரியர் வருகைக்குப்பின் தோன்றியிருத்தல் கூடும். மொகஞ்சதரோ மக்கள் குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யானைவீரன் அம்பு துளைக்கமுடியாத புலித்தோற் கவசம் பூண்டு யானைமீது வீற்றிருந்தான். யானை கருங்கடலிற் செல்லும் நாவாய்போல வும், உடுக்கூட்டத்தின் நடுவே செல்லும் திங்களைப்போலவும் சென்றது. அதனைச் சூழ்ந்து போர்மறவர் சுறாக்கூட்டங்கள் போன்று சென்றனர். யானைகள் நன்றாகப் பழக்கப்பட்டுக் கந்துகளிலும், தறிகளிலும் ஆலை யிடத்தே கட்டப்பட்டன. அவைகளுக்கு வெல்லத்தோடு கலந்த அரிசி ஊட்டப்பட்டது. யானைகளும், குதிரைகளும் பழக்கப்படுமிடம் செண்டு வெளி எனப்பட்டது. குளங்களிற் குளிப்பாட்டியபின் அவைகளின் முகம் நிறப்பொடிகளால் அலங்கரிக்கப்பட்டபின் நெற்றி, ஓடை என்னும் நெற்றிப் பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டது. தேரில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் பூட்டப்பட்டன. தேரோட்டுவோன் வலவன் அல்லது பாகன் எனப்பட்டான். தேரில் பலவகை உருவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அது பலவகை நிறம்பூசிய தடிகளாலும் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதன்மீது துகிற்கொடிகள் அசைந்தன. வீரர் பலவகை ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுட்பல கற்காலந்தொட்டு மாறுபடாமல் வந்தன. அவை எறுழ், தண்டு, வில், கொக்கரை, சிலை, தடி, தவர், குணில் முனி முதலியன. நூற்றுக்கணக்கான ஆயுதங்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.1 அவை கைவிடும்படை, கைவிடாப்படை என இருவகையின. வில் நாணில் அம்பு வைத்தெய்யுமிடம் உடுவெனப்பட்டது. தற்காப்புக்குரிய ஆயுதம் கேடகம்; அது கிடுகு கடகம் தட்டு பரிசை பலகை பறை வட்டணை பட்டம் தோல் தோற்பாரம் எனப் பலவகையினது. மெய் காக்கும் சட்டை மேலகம் அரணி ஆசு எனவும், கைக்கவசம் கைப்புடை எனவும் அறியப்பட்டன. இசைக் கருவிகள் போரிலே யானை குதிரை காலாள் முதலிய படைகளை ஊக்க மூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. இயம் வாத்தியம் வாச்சியம் என்பன இசைக்கருவிகளைக் குறிக்க வழங்கும் பொதுப்பெயர்கள். அவை தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி மிடற்றுக்கருவி என நால்வகைப்படும். குரல், துத்தம், கைக்கிளை உளை இளி விளரி தாரம் என்பன பாடுமிடத்துப் பிறப்பிக்கப்படும் ஏழு தமிழ் இசைகளாகும். ஊதப்படுவனவற்றுள் குழல் முதன்மையுடையது. பனை ஆம்பல் கொன்றை முல்லை முதலிய பலவகைக் குழல்களும் இயங்களும் வழங்கின. ஊதப்படும் பெரிய வாத்தியங்கள் காகளம், அம்மியம், சின்னம், கொம்பு, கோடு, இரலை, வயிர் என்பன. நரம்புக் கருவிகளில் முதன்மையுடையது யாழ். ஒவ்வொரு நிலத்தும் ஒவ்வொரு வகை யாழ் வழங்கிற்று. நாலு முதல் பதினான்கு பதினேழு இருபத்தொரு நரம்புகளையுடைய யாழ்கள் வழக்கில் இருந்தன. இவை கைவிரல்களினால் தடவியும் தெறித்தும் வாசிக்கப்பட்டன. பழைய யாழ்கள் உருத்திர வீணை போன்ற வடிவினவாய் மேல் நாடுகளில் வழங்கிய ‘காப்’ (Harp) என்னும் யாழ் போன்று நரம்பு கட்டப்பட்டன என்று கருதலாம். இவ்வகை யாழ்கள் பழைய எகிப்தில் வழக்கிலிருந்தன. ‘காப்’ போன்ற யாழ்கள் பழைய சுமேரியராலும் பயன்படுத்தப்பட்டன. பறைகள் பலவகையின.1 தடாரி, உடுக்கை முதலியன பாணர் கையில் இருந்தன. தட்டை, கரடிகை என்னும் பறைகள் கரடி கத்தும் ஓசையைப் பிறப்பித்தன. பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன அக் காலத்து வழங்கிய பண்கள். இசை நுணுக்கம் பேரிசை சிற்றிசை முதலிய நூல்கள் தமிழிசையிலக்கணங்கூற எழுந்தன என்று பழைய உரைகள் கூறுகின்றன. அந் நூல்கள் இஞ்ஞான்று இறந்துபட்டன. அரசரும் பெருமக்களும் வேட்டையாடுமிடத்து மேற்கூறிய பறைகளைப் பயன்படுத்தினர். நாடு நகரங்களும் மக்கள் குடியிருப்புகளும் அரசன் வாழும் கோட்டையைச் சுற்றிப் பேட்டைகள் இருந்தன. ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு தொழில் புரிவோர் வாழ்ந்தனர். இவ்வாறு பல குடியிருப்புகள் நகரைச் சூழ்ந்திருந்தன. பேட்டைகளைச் சுற்றி நெல் வயல்கள் இருந்தன. செல்வப்பெருமக்கள் வீடுகள் மாடங்கள் அல்லது மாளிகைகள் எனப்பட்டன. இவை மாடிகளுடையனவாய்ச் செங்கல்லினா லும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இறப்பு, இறை, தாழ்வாரம், முன்றில், முற்றம், நிலாமுற்றம், உத்திரம், தூலம், சுற்றுவாரி, தாழ், துடை, முகடு, விடங்கம், திண்ணை, குறடு, ஒட்டுத்திண்ணை முதலியன வீட்டின் உறுப்பு களிற் சில. வீட்டின் முன்னே திண்ணையிருந்தது. திண்ணைக்கு முன்னாற் குறடிருந்தது. திண்ணைகள் மண் கரி சாணி என்பவை கலந்து மெழுகி அழுத்தஞ் செய்யும் கருவியால் மினுக்கப்பட்டன. வீடுகளுக்குக் கதவுக ளும் நிலைகளும் சாளரங்களும் இருந்தன. வீடுகளின் கழிவுநீர் வெளியே செல்லச் சாக்கடை அல்லது சாலகங்களிருந்தன. வீட்டுச் சுவர்களில் முக் கோண வடிவான மாடாக் குழிகள் இருந்தன. இவைகளில் மண்ணினால் அல்லது உலோகத்தினாற் செய்த கைவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. வீட்டிற்குப் பின்னால் கிணறு இருந்தது. கிணற்றுக்கு அப்பால் கொல்லையும், கொல்லையில் ஆடு மாடு நிற்கும் கொட்டிலும், அப்பால் வயலுமிருந்தன. உரல், உலக்கை, அம்மி, திரிகை, குழவி, ஆட்டுக்கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மனை, கட்டுப்பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல் (வீசுபலகை), உறி (சுமைதூக்கு), காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி), பரண், ஞெலிகோல் (நெருப்புண்டாக்குந் தடி), நிறைகோல், கவண், பாய் முதலியன வீட்டுப்பொருள்களிற் சில. வறியோர் குடிசைகளிலும் குடில்களிலும் வாழ்ந்தனர். சுவர்கள் தடிகளை நட்டு மண்ணை எறிந்து எடுக்கப்பட்டன. அவை பெரும்பாலும் வட்டமானவை. கூரையின் முகட்டில் கலசம் வைக்கப்பட்டது. இம் முறையைப் பின்பற்றியே ஆலயங்களும் கட்டப்பட்டன. மன்றம் என்னும் பெருந்தெருக்களும், கோணம் என்னும் குறுந்தெருக்களும் இருந்தன. குறிஞ்சிநிலக் கிராமம் சிறுகுடி என்றும், முல்லை நிலக் கிராமம் பாடி, சேரி என்றும், மருத நிலக் கிராமம் ஊர் என்றும், நெய்தல் நிலக் கிராமம் பாக்கம் என்றும், பாலைநிலக் கிராமம் பறந்தலை என்றும் வழங்கப்பட்டன. அவை களில் கீழோரும் மேலோரும் வாழ்ந்தனர். உடை பருத்தி இந்தியாவில் விளைவது. பஞ்சிலிருந்து நூலும் நூலி லிருந்து ஆடையும் நெய்யப்பட்டன. நீளமாக நெய்யப்பட்ட ஆடைகள் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே அறுவை, துண்டு, துணி என்பன ஆடையின் பெயர்களாக வழங்கின. பட்டு, மயிர் என்பவைகளாலும் ஆடை நெய்யப்பட்டது. நூலிழைகள் சென்ற இடமே தெரியாத மெல்லிய ஆடைகள் அக்கால மக்களால் அணியப்பட்டன. பலவகை ஆடைகளும் உடைகளும் அக்காலத்து வழங்கின என்பதற்கு அவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்களே போதிய சான்று.1 புடைவைகளுக்குப் பலவகைச் சாயங்கள் தோய்க்கப்பட்டன. கரம்பு, பணி, பரணம், பாளிதம் என்பன பட் டாடைகள் சிலவற்றின் பெயர்கள். கம்பளியினாற் செய்யப்பட்ட ஆடைகள் மயிரகம், உயிரகம் எனப்பட்டன. ஆடைகள் அழகிய கரைகளும், பூ வேலைப்பாடுகளும், கண்கவர் வனப்பும் உடையனவாயிருந்தன. ஆட வரும் மகளிரும் கிழித்துத் தைக்கப்படாத உடைகளையே பயன்படுத்தினர். ஊசி, இழை, வங்கி, சன்னல், தையல் முதலிய சொற்களால் அக் காலத்தவர் தையற்றொழிலை அறியார் என்று கூறமுடியாது. இறவுக்கை என்பது இரண் டாயிரம் ஆண்டுகளின்முன் தமிழ் அரசருக்கு மெய்காப்பாளராக அமர்ந் திருந்த கிரேக்க உரோமன் அணங்குகளால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டது. ஏவலாட்களும் வீரரும் சட்டை இட்டனர். குப்பாயம் தைப்பை மெய்ப்பை என்பன சட்டையின் பெயர்கள். மக்கள் (தலைப்) பாகை, குடை, செருப்பு, மிதியடி முதலியவைகளைப் பயன்படுத்தினர். ஆடை ஆபரண அலங்காரம் தமிழ் மக்கள் உடைகளாலும் ஆபரணங்களாலும் தம்மை நன்கு அலங்கரித்தனர். வீட்டுச்சுவர்களில் அழகிய சித்திரங்கள் வரையப்பட்டன. வீட்டு வாயில்களில் இன்றும் பெண்கள் கோலமிடுவது முற்கால வழக்குப் பற்றியது. செல்வப் பெருமக்கள் இல்லங்களில் வண்ணமகளிர் என வீட்டை யும் பெண்களையும் அலங்கரிக்கும் பெண்கள் இருந்தார்கள். வீட்டிற் பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் வேலைப்பாடுடையதாகச் செய்யப்பட்டது. வீட்டுக் கதவு நிலை கைமரங்களின் அந்தலை தூண் என்பனவெல்லாம் அழகிய வேலைப்பாடுகளால் அழகு செய்யப்பட்டன. சுருங்கக் கூறுமிடத்து மக்கள் பயன்படுத்திய எந்தப் பொருளும் அழகிய வேலைப்பாடின்றிச் செய்யப்படவில்லை. தமிழ் நாட்டுச் சிற்பிகள் அழகிய சிற்பங்கள் அமைக்குந் திறமைகளையெல்லாம் கோவில்களிற் காட்டியுள்ளார்கள். மகளிர் கூந்தலைப் பலவாறு கோதியும் பின்னியும் முடிந்து பல வகைத் தலை அணிகளை அணிந்து பூக்களால் வேய்ந்தனர். மேனியைச் சந்தனக்குழம்பு குங்குமம் முதலியவைகளால் அலங்கரித்தனர்;1 மான்மதம் முதலிய வாசனைப் பொருள்களைப் பூசினர்; காதிற்றுளையிட்டுப் பொன் னோலையணிந்தனர். மணம் முடித்த பெண்கள் தாலி அணிந்தனர். முத்து மாலை, பவளமாலை, பொற்சங்கிலி, பாதசரம், சரப்பளி, நெற்றிச்சுட்டி, சங்கு வளை, பொன்வளை, மோதிரம் முதலிய பல அணிகலன்கள் அணியப்பட் டன. யானை குதிரை எருது முதலியவற்றிற்கும் அணிகள் அணியப்பட்டன. பொழுதுபோக்கு விழாக்காலங்களில் ஆடல் பாடல் உண்டாட்டுக் களியாட்டு முதலிய கொண்டாட்டங்கள் நடந்தன. வேட்டையாட்டம், மற்போர், வாட்போர், சிலம்பம், தேர், யானை, மாட்டுப் பந்தயங்கள், அம்மானை, பந்து, 1ஊஞ்சல் விளையாட்டுகள், காடைப்போர், கௌதாரிப்போர், ஆட்டுப்போர் முதலி யன அக்கால மக்கள் பொழுது போக்குகள். இசைபாடுதலும் பொழுது போக்குகளில் ஒன்று. பழைய குறிஞ்சிப்பண் இன்று குறிஞ்சி இராகமாகவும், மருதம் கேதார இராகமாகவும், நெய்தல் புன்னாகவராளியாகவும் வழங்கு கின்றன. ஒவ்வொரு கருமங்களுக்கும் ஏற்ற வெவ்வேறு பறைகள் முழக்கப் பட்டன. மாடு கவரச் செல்வோர் ஏறுகோட் பறையும், வெறியாடுவோர் முருகியமும், திருமணம் கொண்டாடுவோர் மணமுரசும், வேளாண்மை யறுப்போர் நெல்லரிகிணையும், தேரிழுப்போர் தேரோட்டுப் பறையும், அரசனது அல்லது தெய்வத்தின் ஊர்வலத்தை அறிவிப்போர் புறப்பாட்டுப் பறையும், மீன் பிடிக்கச் செல்வோர் மீன் கோட் பறையும், சூறை அடிப்போர் சூறைகோட் பறையும் கொட்டினர். ஒவ்வொரு வாத்தியமும் வெவ்வேறு ஓசையை எழுப்பின. கூத்துகள் பல வகையின. களிகுனிப்பு எனப்பட்ட கூத்து, ஒரு பாட்டிலுள்ள பொருளை ஆட்டத்தாலும் சைகைகளாலும் காட்டுதல். இவ் வழக்குப் பற்றிய கோவிற்கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. பரத நாட்டியம் என வழங்குவதும் இதுவே. கூத்த மகளிர், கூத்தியர் எனப்பட்ட னர். இப்பெயர் பரத்தையரைக் குறிப்பதாயிருக்கின்றது. சிறுமியர், கும்மி, தெள்ளேணம், சாழல், ஓரை முதலிய ஆடல்கள் புரிந்து களித்தனர். சிறுவர் கிட்டிப்புள் விளையாடினர். இது மேல்நாட்டவரின் சாட்டைப் பந்தடி (Cricket) விளையாட்டுப் போன்றது. பாணர் யாழ் மத்தளம் முதலியவைகளுடன் அலைந்து திரிந்து அரசர், பெருமக்கள் வாயில்களில் பாடினர். வேடர் வலையேற்றி மான் பன்றி முதலிய விலங்குகளைப் பிடித்துப் பொழுது போக்கினர். மற்போர் பொது வான பொழுதுபோக்குகளில் ஒன்று. போக்கு வரவு அக்கால மக்கள் பலவகை வண்டிகளைப் பயன்படுத்தினர். வண்டி, ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலிய பெயர்களால் இது அறியப் படும். வளையம், வட்டில், வட்டம், வட்டணை, வட்டு, வணங்கு, வணர், வளி, வள்ளம், வள்ளி, அச்சு, ஆணி முதலிய வண்டியின் உறுப்புகளை உணர்த் தும் பெயர்களால் அவர்கள் வண்டியின் பயனை நன்கு அறிந்திருந்தார் களென விளங்குகின்றது. வண்டி பெரும்பாலும் வாணிகத்தின் பொருட்டே பயன்படுத்தப்பட்டது. அரசரும் பெரு மக்களும் தேர்களிலும் பல்லக்கு களிலும் சென்றனர்; நீரிலாயின் ஓடங்களில் சென்றனர்; தோணிகளின் முகப்பு யானை குதிரை சிங்கம் முதலியவைகளின் தலைகள்போலச் செதுக்கப்பட்டிருந்தது. அக் காலம் பலவகைத் தோணிகள் வழங்கின வென்பதற்குக் கப்பல், ஓடம், அம்பி, தோணி, தெப்பம், பரிசில், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பட்டி, படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலிய பெயர்களே சான்று. உணவு தமிழ் மக்கள் ஊனைக் கறியாகவும் தாவர வகைகளையும் தானியங் களையும் முக்கிய உணவாகவுங் கொண்டனர். அவர்கள் இறைச்சியை மிளகு தூள் இட்டு ஆக்கிக் கறியாகப் பயன்படுத்தினர். மிளகாய் பிற்காலத்தில் இந்தியாவோடு வாணிகம் செய்த ஐரோப்பிய மக்களாற் கொண்டுவரப்பட்டது. இது தென்னமெரிக்கப் பயிர். ஆகவே, அதற்கு இடுகுறிப்பெயர் இல்லை. மிரியல், கறி, கலினை, காயம், திரங்கம் முதலிய பெயர்கள் மிளகைக் குறிக்கும். கிரேக்கரும் உரோமரும் இந்தியாவினின்றும் அதிக மிளகைக் கொண்டு சென்றனர் அவர்கள் மிளகைப் பிப்பிலி என வழங்கினர். தமிழ்மக்கள், தாளிதக்கறி (குய்), பொரிக்கறி, வறை, துவட்டல், துவை, புளிங்கறி, காடி, ஊறுகாய் முதலிய பலவகைக் கறிகளை உண்டனர். தமிழ் மக்களின் முக்கிய உணவு நெல். நெல் புழுக்கி உலர்த்திக் குத்தி அரிசியாக் கப்பட்டது. அவ்வாறு குத்தப்பட்ட அரிசி புழுங்கலரிசி எனப்பட்டது. அரிசி சோறாக அட்டு உண்ணப்பட்டது. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழுப்பு, உணா, ஊண், உண்கூழ், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர், புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி என்பன சோற்றின் பெயர்கள். ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட சோற்றை உணர்த்தலாம். பருப்போடு சேர்த்துப் பொங்கப்பட்ட சோறு பொங்கல் எனப்பட்டது. களி, கூழ், துழவை, கஞ்சி, நீராரம், தோசை, அடை முதலியன வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட உணவுகளாகும். அப்பம், பிட்டு, அஃகுல்லி, இலையடை, நொலை, மெல்வடை, பொல்லல், இடி, சஃகுல்லி, நுவணை, ஒச்சை, துவை, சீடை, வடை முதலியன பணியார வகையுட் சில. மக்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப உண்ணப்படும் தானியங்கள் வேறு பட்டன. முல்லை நிலமக்கள் வரகு, சாமை, முதிரை முதலிய தானியங்களை யும், குறிஞ்சிநில மக்கள் ஐவனம், தினை, மூங்கிலரிசி முதலியவைகளையும், மருதநில மக்கள் செந்நெல், வெண்ணெல் முதலியவைகளையும், நெய்தல் நிலமக்கள் மீனுக்கும் கருவாட்டுக்கும் மாற்றிய தானியங்களையும் உண வாகக் கொண்டனர். தேனுந் தினைமாவும் சுவையுள்ள உணவாகும். மருத நில மக்கள் தேனுக்குப் பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் கருப்பஞ்சாற்றைக் காய்ச் சிச் சர்க்கரை கற்கண்டு முதலியவைகளைச் செய்தனர். பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்பன மக்களால் விரும்பி உண்ணப்பட்டன. பலவகைப் பழங்கள் புசிக்கப்பட்டன. பழந்தமிழர் பல வகை மதுவை அருந்தினர். உப்பு அதிகம் விளைவிக்கப்பட்டது. உப்பு விளையும் வயல்கள் உப்பளம், அளக்கர், உவர்க்களம், கழி எனப்பட்டன. நிலங்கள் நன்செய் புன்செய் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. திருத்தி விளை விக்கப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. நன்செய் புன்செய் நிலங்கள் செய் எனப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பணை, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேள் ஆண்மை எனப்பட்டது.1 வேள் - நிலம்; ஆண்மை - அரசு அல்லது ஆளுந்தன்மை. வேளாண்மை எல்லாத் தொழில்களிலும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. பெரிய நிலத்தையுடையோர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநில மன்னர்களாகவும் இருந்தனர். வேளாண்மை என்பது தமிழில் கொடை, ஈகை என்பவைகளைக் குறிக்க வும் வழங்கும். வேளாண் மாந்தர் இயல்புகள் பத்து. அவை, ஆணைவழி நிற்றல் (சத்தியம் கடைப்பிடித்தல்), அழிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல் (மற்றவர்களைக் கடமைப்படுத்தல்), கசிவு அகத்துண்மை, ஒக்கல் போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறை கருதல் (அரசனுக்குச் செல்ல வேண்டிய கடமையைச் செலுத்தல்) ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய ஒழுக்கம் என்பன. வயல் வேலைக்குரிய ஒவ்வொரு தொழிலுக்கும் தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. தொத்தல், உழக்கல், மிதித்தல், உழுதல் முதலியன நிலத்தைப் பண்படுத்தும் வினைகளின் பெயர்கள். வேளாளனது முக்கிய தொழிற்கருவி கலப்பை. இதை உழுபடை, கலனை, நாஞ்சில், தொடுப்பு, படை, படைவாள் என்பன கலப்பையின் பெயர்கள். வயல்களுக்கு நீர் ஆற்றிலிருந்து பாய்ச்சப்பட்டது. ஆறுகளுக்கு அணைக்கட்டுகள் இருந்தன. ஆற்றுநீர் கால்வாய் அல்லது கால்வழியே சென்றது. கிணறு குளங்களிலிருந்து நீர் ஏத்தம், கபிலை அல்லது இறை கூடையினால் இறைக்கப்பட்டது. கைத்தொழில் உலோகங்களில் வேலை செய்வோர், கம்மாளர், அக்கசாலையர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் எனப்பட்டனர். இவர்கள் இரும்பு, உருக்கு, செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலியவற்றில் வேலை செய்தனர். பழைய சமாதிக் குழிகளில் காணப்பட்ட நகைகள் ஏனங்கள் முதலியன அக் காலத்தில் உலோகங்களில் வேலை செய்வோரின் திறமையைக் காட்டுகின்றன. பெரிய உலோகத் துண்டுகளை அடித்துத் தகடாக்கிப் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. உலோகத் தகடுகள் அடர் எனப்பட்டன. தையலர், அணிகலன்களை மிக விரும்பினர். ஆகவே அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மலை, மிலை, மிளை, வேய், எய், வெய் எனப் பல சொற்கள் காணப்படு கின்றன. கடைநர் என்போர் சங்கை அறுத்து அழகிய வளைகளைச் செய்தனர். குயினர் இரத்தினக் கற்களிற் றுளையிட்டனர். ஆடை நெய்வோர் கம்மியர், சேணியர், காருகர் எனப்பட்டனர். நெசவுத் தொழில் மிக வளர்ச்சியுற்றிருந்தது. வாணிகம் தமிழிலே வாணிகத் தொடர்பான சொற்கள் பல உண்டு. நிறைகோல், ஞெமன்கோல், தராசு, வட்டி, முதல், வாசி, கடை, அங்காடி, சந்தை என்பன அவற்றுட் சில. நெய்தல் மருத நிலங்களில் வாணிகம் தொடங்கி யிருக்கலாம். உமணர் வயல்களில் பாத்தி கட்டி விளைவித்த உப்பைப் பொதிமாடுகளிலும் கழுதைகளிலும் கொண்டு சென்று இடங்கள்தோறும் விற்றனர். வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வண்டிகள் பயன்படுத்தப் பட்டன. உருளை, சூட்டு, ஆர், குறடு முதலியன வண்டியின் உறுப்புகளை உணர்த்தும் சில பெயர்கள். வாணிகம் செய்யும் செட்டிகள் பலர் இருந்தனர். வணிகருக்குச் சாத்தர் என்பதும் சங்க காலத்து வழங்கிய இன்னொரு பெயர். செட்டி என்னும் சொல் வடமொழியில் சிறெஸ்தி சிறஸ்தா எனத் திரிந்து வழங்கிற்று. வேதகாலத்தில், முத்து, பவளம், சந்தனக்கட்டை, மிளகு முதலியவைகளை வடநாட்டுக்குக் கொண்டு சென்று வியாபாரஞ் செய்தோர் பாணியர் எனப்பட்டனர். பாணியர் என்பது வணிகர் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். சமக்கிருத பண்டிதர்கள் சமக்கிருதம் கடவுள் மொழியாயிருத்தலின் அது மனித மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற்றிருக்கமாட்டாது என்னும் குருட்டு நம்பிக்கை யால் பிற மொழிகளினின்று சமக்கிருதத்துக்குச் சென்றுள்ள சொற்களுக்கு ஒவ்வாத சமக்கிருத உற்பத்தியைக் கற்பித்துக் கூறுவர்.1  இயல் - 3 புத்தருக்கு முற்பட்ட இந்தியா மெகிதா1 என்பவர் சாதகக் கதைகளில் காணப்படுகின்றபடி அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் நிரைப் படுத்தி எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் பழைய தமிழ் இலங்கை மக்க ளிடையே காணப்பட்டன போலவே உள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங் களால் அறியக்கூடாத பல செய்திகள் அதனகத்தே காணப்படுதலின், அதன் சில பகுதிகளைச் சுருக்கி ஈண்டுத் தமிழில் தருகின்றோம். அரசன் அரசன் எல்லா அதிகாரமும் உடையவனாயிருந்தான். அவனைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள் எதுவும் இருக்கவில்லை. அரசரின் குழந்தைகளைக் கைத் தாயர் பாலூட்டி வளர்த்தனர்; வளர்ந்தபின் அவர்கள் தனி ஆசிரியர்களிடம் கல்விகற்க விடப்பட்டனர். (பாண்டவர் துரியோத னாதியோர் துரோணரிடம் கல்வி பயின்றமை மாபாரதத்திற் கூறப்படுகின் றது.) கல்வி பயின்ற பின் அவர்கள் நாட்டின் ஒவ்வோரு பகுதிக்கு உவ அரசர்களானார்கள். அரசனுக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் பட்டத்தரசியின் மூத்த புதல்வனே பட்டமெய்தினான். அரசாட்சி, தந்தையி லிருந்து மகனுக்கு வழிவழியே சென்றது. அரசனுக்குப் பிள்ளைகள் இல்லாதவிடத்து அவன் உடன் பிறந்தோனும், உடன் பிறந்தான் இல்லாத விடத்து மருமகனும் ஆட்சி ஏற்றனர். இளவரசுப் பட்டம் கட்டும் போது புரோகிதர் வலம்புரிச் சங்கிலும் பொற்குடத்திலுமிருந்து இளவரசன்மீது நீர் தெளித்தனர். அக் காலத்தில் அவன் மனைவியும் உடனிருத்திப் பட்டத்துத் தேவியாக்கப்பட்டாள். பின்பு வெண்கொற்றக் குடை விரிக்கும் கிரியை நடத்தப்பட்டது. நகர மாந்தர் நகரை அணி செய்தார்கள். இளவரசன் பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தான். அரசனது மனை நகரின் நடுவிலிருந்தது. அது ஏழு மாடிகள் அல்லது பல மாடிகளுடையது. தானியக்களஞ்சியமும் நிதியும் அரண்மனையி லிருந்தன. அரண்மனையின் பொது மண்டபம் மிகவும் விசாலமானது. வழக்குகளின் தீர்ப்பைப் பெறுவதற்கு அல்லது அங்கு நடக்கும் கொண் டாட்டங்களைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டமாகச் சென்றார்கள். நகரத்தில் நடக்கும் எல்லாவகைக் களியாட்டங்களையும் அரசன் பார்வையிட்டான். அரசன் தனது சுற்றத்தாரோடு மகிழ்ந்திருக்கும் மண்டபம் சந்தனம் பன்னீர் முதலியன தெளிக்கப்பெற்று நறுமணங் கமழ்ந்தது. அது பலவாறு அழகு செய்யப்பட்டிருந்தது. அரசிருக்கை மண்டபத்தில் அரசன் அமைச்சர்களா லும் நடன மாதராலும் சூழப்பட்டிருந்தான். அரசனது பள்ளியறை மாடி மீது இருந்தது. அதனிடத்தே அழகிய கட்டிலும் அதன் மீது அணைகளும் இடப்பட்டிருந்தன. அதன் அயலே சூதாடும் மண்டபம். அங்கு வெள்ளி நாற்காலிகளும் பொன் சூதாடு காய்களுமிருந்தன. அரசன் பொதுமண்ட பத்தே இருந்து மக்களின் வழக்குகளை உசாவித் தீர்ப்பு அளித்தான். அரண் மனையைப் பெரிய மதில் சூழ்ந்திருந்தது. அங்கு 16,000 நடனமாதர் இருந் தனர். இளவரசரும் இளவரசியரும் உறைவதற்கு வெவ்வேறு மாளிகை களிருந்தன. அட்டிற்சாலையில் மீன் இறைச்சி, சோறு, கஞ்சி முதலியன ஆக்கப்பட்டன. அரசன் உண்பதற்குச் செய்யப்படும் சமையல் நூறு வகையினது. அரசனது நாவிதன் பொன் கத்தியினால் அரசனின் மயிரைக் களைந்து, அவனை முழுக்காட்டி நறுமணம் பூசினான். நாவிதன், அரண் மனையில் கவனத்துக்குரியவனாகவிருந்தான். அரசன், அணி செய்யப் பட்ட தலைப்பாகை அணிந்து பட்டாடை உடுத்துப் பொன் செருப்புத் தரித்தான். அவன் செல்லும் தேரில் வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டன.1 விழாக் காலங்களில் அவன் யானைமீது சென்றான். யானை பொன்னாலும் ஆடையாலும் அணி செய்யப்பட்டது. அரசனுக்குப் பெரிய மாளிகைகள், பல மனைவியர், விலை உயர்ந்த உடைகள், மணப்பண்டங்கள், பொன், வெள்ளி, முத்து, இரத்தினம், செம்பு, இரும்பு, தந்தம், சந்தனமரம், மான்தோல் முதலிய பல செல்வங்கள் உண்டு. அவன் வேட்டை நாய்களோடு வேட்டையாடச் சென்றான்; மது அருந்தி னான்; பெண்களும் (பெரும்பாலும் நடனமாதர்) மதுவருந்தினர். அரசனது பூங்காவனம் பதினெட்டு முழம் உயர்ந்த மதிலாற் சூழப்பட்டது. அதன் ஒருபக்கத்தே பெரியகதவுகள் இருந்தன. அங்கு அரசனும் தேவியரும் நீராடிக் களிக்கும் கேணியிருந்தது. அங்கு அவனுக்கென அமைக்கப்பட்ட இருக்கையில் அரசன் இருந்தான் அப்பொழுது அவனெதிரே நடனமாதர் நாட்டியம் ஆடினர். சிலர் இனிய வாத்தியங்களை ஒலித்தனர். வாத்தியங் களை இயக்கிப் பாடுதல் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது. நால்வகைப் படைகள் அரசனிடத்தில் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகள் இருந்தன. தேர்களிற் பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவை மீது வெள்ளைக் குடைகளும் பலநிறக் கொடிகளும் நாட்டப்பட்டிருந்தன. கைதேர்ந்த பாகன் தேரை யோட்டினான். அவன் கவச மணிந்து கையில் வில்லைப் பிடித்திருந்தான். சில நேரங்களில் அரசனே படையை நடத்திச் சென்றான். அக் காலங் களில் அவன் யானை மீதிருந்து பகைவரைத் தாக்கினான். யானைகள் பெரும்பாலும் மதிற் கதவுகளைத் திறப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. அறுபது வயது வந்ததும் உறுதியான கொம்புடையதுமாகிய யானை போருக்குச் சிறந்ததெனக் கருதப்பட்டது. பாகர் குத்துக் கோலும் தோட்டி யும் வைத்திருந்தார்கள். விளங்குகின்ற அணிகலன்களணிந்து வாளைக் கையிற்பிடித்த அரசர் யானை மீதிருந்தார்கள். வலிய மறவர் கொடிகளை வீசிக் கொண்டு பக்கத்தே இருந்தனர். யானைகளைப் பழக்குவதற்கெனத் தனி ஆட்கள் அரசனிடமிருந்தார்கள். குதிரைகளுக்கு இரும்புக் கவசங்கள் இடப்பட்டன. குதிரை வீரர் வில்லும் வாளும் வைத்திருந்தார்கள்.1 காலாட்கள் வில், வாள், வேல், கேடகம் முதலியன கொண்டு சென்றனர்; அவர்கள் கவசம் அணிந்திருந்தனர். படையின் பின்னே தச்சர் ஆயுதங்களுடன் சென்றார்கள்.2 சங்கு மேளம் முதலியவைகளை ஒலிக்கும் வாத்தியக்காரரும் சென்றனர். படை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எல்லாப் படைக்கும் தலைவனாக ஒரு சேனாபதியிருந்தான். அவன் பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டான். அமைதியான காலங்களில் அவன் நீதிபதியாகக் கடமை பார்த்தான். பெரும்பாலும், போர், தலைநகரைச் சுற்றி நடந்தது. படைகள் கூடாரங்களிற்றங்கின. அவை நிரை நிரையாகவும் ஒழுங்காகவும் சென்றன. போர் தொடங்குவதன் முன் அரசன் அல்லது அரசனோடு சென்ற புலவன் படைக்கு ஊக்கம் எழக்கூடிய சொற்பொழிவு செய்தான். சென்ற படை, நகரை முற்றுகையிட்டு மாற்றரசனைப் பணியும்படி அல்லது போர் தொடுக்கும்படி தூண்டும். பணிதற்கு ஒருப்படாத மாற்றரசன் போர் தொடுப்பான். இக் காரணம் பற்றிக் கோட்டை மிகவும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. கோட்டை யின் இடையிடையே கோபுரங்களும் கதவுகளும் இருந்தன. மதிலைச் சுற்றி அகழ் இருந்தது. அது பகைவரை அணுகாதபடி தடுத்தது. மதில்மீது பகைவர் காணாது நின்று பார்க்கக்கூடிய கோபுரங்களிருந்தன. முற்றுகையிடுவோர் அகழியைத் தூர்த்து அல்லது அதனை நீந்திக் கடக்க முயன்றனர். அகழி ஆழமுடையதாயும் பாம்பு முதலைகள் உறைவதாயும் இருந்தது. அதனைக் கடப்பது எளிதன்று. கோட்டை மதில் மீது நிற்பவர்கள் உருக்கிய உலோகங் களையும், கொதிக்கும் எண்ணெயையும், சூடான கல் சேறு என்பவை களையும் பகைவர் மீது வீசி எறிந்தார்கள். அகழை நீந்திக் கடக்க முயன்ற போது மதிலின் மீதுள்ளோர் அம்பு, ஈட்டி, வேல் முதலியவைகளைப் பகை வர்மீது சொரிந்தனர். கோட்டையுள் இருப்போர், தம் முயற்சி பயனளியா விடில் பணிந்தார்கள். முற்றுகைக் காலங்களில் உணவுக்குறைவு நேராதபடி வேண்டிய உணவுவகைகள் உள்ளே சேமித்து வைக்கப்பட்டன. இருகட்சி1 ஒற்றர்களும் எதிரியின் மறைவுகளை அறிய முயன்றார்கள். செய்திகள் ஓலை நறுக்குகளில் எழுதி அம்பிற் கட்டி எய்து அறிவிக்கப்பட்டன. செய்தி கொண்டு வருபவனை அல்லது தூதனைக் கொல்லுதல் கூடாதென்பது நீண்ட நாள் வழக்கு. போரிற் காயப்பட்டவர்கள் பலகைகள் மீது வைத்து எடுத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை செய்யப்பட்டனர். வெற்றிபெற்ற அரசன் தனது நகரத்துக்கு ஆடம்பரத்தோடு சென்றான். வீரர் விருந்து கொண்டாடி னர். இராக் காலங்களில் நகர்க் கதவுகள் அடைக்கப்பட்டன. நகர் காவலர் நகரைப் பறைகொட்டிக் காவல் செய்தனர். அவர்கள் சிவந்த பூமாலைகளை அணிந்திருந்தனர். பலவகைத் தொழில் புரிவோர் மக்கள் பெரும்பாலும் வேட்டையாடினார்கள். ஊன் பெரிதும் விரும்பப்பட்டது. சுவையுள்ள இறைச்சியைப் பெறும்பொருட்டும் அரசன் வேட்டையாடச் சென்றான். வேட்டையாடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட கூட்டத்தினரும் பலர் இருந்தனர். அவர்கள் வில், அம்பு, வலை களுடன் விலங்குகளைத் தேடி மலைகளில் அலைந்தார்கள்; தோலாற் பின்னிய வலைகளை ஏற்றி மான்களைப் பிடித்தார்கள்; தோலுக்காகப் புலியும், தந்தத்துக்காக யானையும் வேட்டையாடப்பட்டன. வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காகவும் குருவிகள் பிடித்து விற்கப் பட்டன. சில கிராமங்களில் எல்லோரும் குருவிகள் பிடிப்போராகவேயிருந் தார்கள். அவை வலையேற்றியும் பொறிவைத்தும் பிடிக்கப்பட்டன. வலை குதிரைவால்மயிராற் பின்னித் தடியிற் கட்டி நிலத்தில் வைக்கப்பட்டது. சிலர் பழக்கப்பட்ட பட்சிகளின் உதவியால் அவைகளைப் பிடித்தார்கள். பழக் கப்பட்ட குருவிகளின் குரலைக் கேட்டு அவ்வினப்பட்சிகள் வந்து கூடின. அப்பொழுது அவைகள் வலையில் அகப்படுத்தப்பட்டன. ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் வாழ்ந்தோர் மீன்களை மிகுதியும் உண்டார்கள். மீன்களைப் பிடிப்பதற்கு வலை, தூண்டில், கூடு என்பன பயன்படுத்தப்பட்டன. அழகிய பட்டாடைகள் நெய்யப்பட்டன. அரசன் சரிகைத் தலைப் பாகை தரித்தான். பட்டத்து யானை சரிகைத் துணிகளால் அலங்கரிக்கப் பட்டது. மக்கள் பெரும்பாலும் பஞ்சு ஆடை உடுத்தார்கள். பெண்கள் பஞ்சு ஆட்டி நூல் நூற்றனர். சீலை நெய்வோரும் சீலைகளுக்குச் சாயந்தோய்ப் போரும் இருந்தனர். பொன் வெள்ளி இரத்தினக்கல் முத்து முதலியவைகளால் அழகிய நகைகள் செய்யப்பட்டன. பொன் நகைகளுக்கு இரத்தினக்கல் பதிக்கப்பட்டது. வளையல், மோதிரம், மாலை, குண்டலம், மேகலை, தண்டை, கொண்டை யூசி முதலிய பலவகை அணிகள் வழக்கிலிருந்தன. அரசன் அரண்மனை யில் வெள்ளி தங்கக் கலங்களைப் பயன்படுத்தினான். நாற்காலிகள், படுக்கைகள், சிங்காசனங்கள் பொன்னழுத்தி நன்கு அழகு செய்யப்பட்டன. அழுத்தஞ் செய்யப்பட்ட உலோகத் தகடுகள் முகம் பார்க்கும் கண்ணாடி களாகப் பயன்படுத்தப்பட்டன. உணவருந்தும் கலங்கள் வெள்ளியாற் செய்யப்பட்டன. பானை, தட்டு, சட்டி முதலியன செம்பு பித்தளை வெண்கலம் என்பவைகளாலானவை. இரும்பு உருக்கு ஆக்கப்பட்டு, அதனால் அரிவாள், உளி, நாவிதன் கத்தி, சுத்தியல், போர்க்கருவிகள், கவசம், ஊசி, இசைக்கருவிகளின் நரம்புகள் என்பன செய்யப்பட்டன. தந்தத்திலும் அரிய வேலைகள் செய்யப்பட்டன. குயவர் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள். இவர்கள் அழகிய சட்டி பானை சாடி முதலியன செய்தனர். கொத்தர் செங்கல்லினால் அழகிய வீடு களைக் கட்டினார்கள். வீடுகளுக்குக் கைமரங்கள் தூண்கள் கதவுகள் சாள ரங்கள் முதலியவைகளை மரத்தினாற் செய்துதவும் தச்சர்களிருந்தார்கள். இவர்களால் அழகிய நாற்காலி, முக்காலி, கட்டில், ஏணி, பேழை முதலிய வீட்டுப் பொருள்கள் செய்யப்பட்டன. கயிறு, செருப்பு, பை, கேடகம் முதலியவற்றைத் தோலினாற் செய்யும் தொழிலாளர் பலர் இருந்தனர். மூலிகைகளைப் பையிலிட்டுக்கொண்டு திரியும் மருத்துவர், மூக் கில்லாதோர்க்குப் பொய்மூக்கு வைப்போர், மனைக்கு இடங்குறிப்போர், உறுப்புகளை நோக்கி மக்களின் நன்மை தீமைகளைக் கூறுவோர், வாய்ப்புக் கூறுவோர், கோள்நிலையறிந்து பயன்கூறுவோர், பேயோட்டுவோர், காணாது ஓடியவர்களின் அடியைத் தொடர்ந்து அவர்களைக் கண்டுபிடிப்போர், பாட்டுக்கள் பாடி மிகுந்த பொருளீட்டும் புலவர், குரங்கைப் பழக்கி அத னுதவியால் பாம்பைப் பிடிப்போர், கீரியைப் பழக்குவோர், வாத்தியகாரர், முரசறைவோர், கூத்தர், நடிகர், மாயவித்தை காட்டுவோர், கம்பங்கூத்தர், பாவையாட்டுவோர் முதலிய பல தொழிலாளரும் வாழ்ந்தனர். தகப்பன் செய்த தொழிலையே மகனும் செய்தான். இதனால் ஒவ் வொரு கூட்டத்தினரும் அவரவர் செய்யும் தொழிலால் அறியப்பட்டனர். வேடர், மீன் பிடிப்போர், தச்சர், குயவர், நாவிதர், தெருக்கூட்டுவோர் கீழ் மக்கள் எனப்பட்டனர். கூலி வேலை செய்வோரும் அடிமைகளும் இருந்த னர். வறியவர்களின் வீடுகள் நகர்ப்புறத்தே இருந்தன. அடிமைகள் வீட்டி லேயே இருந்து வீட்டுவேலைகளைச் செய்தனர். உணவு சமைத்தல், தண்ணீ ரெடுத்தல், மாவரைத்தல், வயலைக் காவல்காத்தல், வயலுக்கு உணவு எடுத்துப்போதல், பிச்சை கொடுத்தல், வீட்டுத் தலைவனுக்குப் புத்திகூறுதல், உண்ணும் தட்டுகளைக் கழுவுதல், வீட்டிலுள்ளோர் உணவருந்தும்போது விசிறியால் விசிறுதல் போன்றன அவர்கள் புரியும் வேலைகளாகும். சேமிப்பு மாசா என்னும் பொன் நாணயங்களும் செம்பு நாணயங்களும் வழங்கின. செல்வர் தமது பணத்தைப் பொன்னாக மாற்றி உறுதியான பெட்டி களிலும் பாதுகாப்பான அறைகளிலும் பூட்டிவைத்தனர். அணிகளும் பண மும் பெரும்பாலும் தலையணைகளுக்குள் வைத்துக் காக்கப்பட்டன. உணவு பொதுமக்கள் உயர்ந்த உணவைக் கொள்ளவில்லை. கஞ்சி, பணியாரம், கீரைவகை, காய்கறிகள், பால் முதலியன பொதுமக்களின் உணவுகள். செல்வர் வெல்லம், தேன், நெய், பால் முதலியன பெய்து சமைத்த கஞ்சியை உண்டனர். காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக இரு உணவுகள் கொள்ளப்பட்டன. உடை பஞ்சு ஆடைகள் பெரும்பாலும் உடுக்கப்பட்டன. ஆடவர் அரை யில் ஒன்றும் தோளில் ஒன்றும் தலையிலொன்றுமாக மூன்று துணிகளைப் பயன்படுத்தினர். அவர்கள் அரையில் பைகளைக்கட்டி அவைகளில் விலையுயர்ந்த பொருள்களை வைத்திருந்தனர். வீடுகள் பொதுமக்கள், வீடுகளைச் செங்கல்லாற் கட்டினார்கள். வீட்டின் முன்னும் பின்னும் கதவுகள் இருந்தன. சாளரங்கள் வீதியை நோக்கி யிருந்தன. கதவுகள் தாழிடப்பட்டன. பெரிய வீடுகள் சாந்துபூசி வெள்ளை யடிக்கப்பட்டன. உல்லாச வாழ்க்கை மக்கள் உல்லாச வாழ்க்கையை விரும்பினர். ஆடவர் மயிரையும் தாடியையும் கத்தரித்து மட்டஞ் செய்தார்கள். பெண்கள் அழகிய நகை களை அணிந்தனர்; மணப்பொருள்களையும் பூக்களையும் பெரிதும் பயன் படுத்தினர். பிராமணர் ஒழுக்கமுடைய பிராமணர் பெரிதும் மதிப்புப் பெற்றனர். உணவு அருந்தும்படி அவர்கள் வீடுகளுக்கு அழைக்கப்பட்டார்கள். நீராடிய பின் அவர்கள் வீட்டுக்கு வந்து வீட்டுத் தலைவன் செம்பிற்கொடுக்கும் நீரை வாங்கி முகத்தைக் கழுவிய பின் இருந்து உண்டார்கள். உண்டு முடிந்ததும் வீட்டுத் தலைவன் கொடுக்கும் தக்கணையைப் பெற்று மங்கலங் கூறிச் சென்றனர். உலகப்பிராமணர் என இன்னொரு வகையினர் இருந்தனர். இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் நில்லாதவர்கள். இவர்களுட் சிலர், மருத்துவராகவும், தூது போவோராகவும், வேளாண்மை செய்வோராகவும், ஆடு வளர்ப்போராகவும், வாய்ப்புக் கூறுவோராகவும், வாள், கோடரி, கேடகம், கண்டகோடரிகளைத் தாங்கி வியாபாரக் கூட்டங்களுக்கு முன் செல்வோராகவும் இருந்தனர். இவர்கள் தம் மகளிரைப் பொன்னுக்கு விற்பர்; தாம் விரும்பிய எத்தொழிலையும் புரிவர். சண்டாளர் முதலியோர் கூத்தாடிகளும் வாத்தியக்காரரும் கிராமங்கள்தோறும் சென்று கம்பங்கூத்து மாயவித்தை புரிந்தும், பாவை யாட்டியும் பொருள் பெற்றனர். பாம்பாட்டிகளும் இவ்வாறே ஊர் ஊராகத் திரிந்தனர். சண்டாளர் நகர்ப் புறத்தே வாழ்ந்தனர். இவர்கள் தீண்டப்படாதவராவர். இவர்கள் தமக்குள் ஒருவகைக் குழூஉக்குறியைப் பேசினர். பிணஞ் சுடுதல் வீதிகளைப் பெருக்குதல் முதலிய வேலைகளை இவர்கள் புரிந்தனர். மகளிர் இசையும் நடனமும் மகளிர்க்குச் சிறந்த கல்விகளாகக் கருதப் பட்டன. சுயம்வரம், காந்தருவம், பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படுவது என மணம் மூவகைப்பட்டது. நல்ல முகூர்த்த வேளையில் மணமகன் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணை மணந்தான். அரசியர் அரசகுமாரியர் பிரபுக்களின் மகளிர் என்போர் மட்டும் மூடப்பட்ட வண்டிகளிற் சென்றார்கள். மகளிர் பட்டு, பஞ்சு, சணல் ஆடைகளை உடுத்தார்கள். மாலை, குண்டலம், காதோலை, மேகலை, கைவளை, கால்வளை, கடயம் போன்ற நகைகள் அணிந்து கொள்ளப்பட்டன. கூந்தல் பலவாறு வகிர்ந்து பின்னி முடிக்கப்பட்டது. நகங்கள் சிவப்பூட்டப்பட்டன. உயர் குடும்ப மகளிர் யானைத் தந்தக் கைப்பிடியுடைய முகம் பார்க்கும் கண்ணாடிகளையும், செருப்பையும் பயன்படுத்தினர். மேல்வகுப்புப் பெண்களைத் தவிர மற்றவர்கள் தமது வாழ்க்கையின் பொருட்டுப் பலவகை வேலைகளைச் செய்தனர். கிராமப் பெண் வயலைக் காவல் காத்தல், நெசவு தொடர்பான வேலைகள் போன்றவைகளைப் புரிந்தாள். சிலர் பூ விற்றனர். வறிய பெண்கள் வீடுகளில் வேலைக்காரியராகவும் தாதியராகவும் அமர்ந்தனர். நடன மாதர் பரத்தையர்களாக வாழ்ந்தனர். பிச்சை எடுத்து உண்ணும் பெண் துறவிகளும் இருந்தார்கள். வான ஆராய்ச்சி வானநூல் சோதிடம் என்பன வளர்ச்சியடைந்திருந்தன. கோள்களின் செலவுகள் முன்னமே அறிந்து கூறப்பட்டன. திங்களில் முயல் இருப்பது திங்களை இராகு விழுங்குவது முதலிய நம்பிக்கை இருந்தது.1 இசை இசைக்கருவிகளுள் வீணை மிகவும் முக்கியமுடையது. ஆடவரும் மகளிரும் விரும்பி அதிற் பயின்றனர். அது தனியே அல்லது பாட்டு களுடன் வாசிக்கப்பட்டது. இது கைவிரலின் நுனிகளால் நரம்புகளைத் தடவியும் தெறித்தும் மீட்டப்படும். மயிற்பெடைகளும் சேவல்களும் கைகொட்டும் தாளத்துக்கு ஆடும்படி பயிற்றப்பட்டன. ஓவியமும், சிற்பமும் சுவர்களிலும் பலகைகள் மீதும் ஓவியங்கள் வரையப்பட்டன. அசந்தாக் குகை ஓவியங்களே அக் காலச் சித்திரங்களுக்கு எடுத்துக்காட்டு. சிறுவர் விளையாடும் அழகிய பாவைகளும், மற்றும் பிற விளையாட்டுப் பொருள்களும் செய்யப்பட்டன. சில அரண்மனைகள் ஒற்றைத் தூணுடையன வாகவும், சில எட்டுச் சதுரமுடைய ஆயிரந்தூணுடையனவாகவும் கூறப்பட் டுள்ளன. பெரிய நிலவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து அவை மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அங்குப் பூமாலைகள் தூக்கி நறும்புகை காட்டப்பட்டது. சில நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் மதியம், அமாவாசைக் காலங்களில் மக்கள் விரதமிருந்தார்கள். ஒருவன் தும்மினால் ‘சாவில்லை’ அல்லது ‘நீடு வாழ்க’ என்று சொல்லப் பட்டது. ஒருவரை நிறைவாக ஒரு கருமத்தைச் செய்தால் அவன் முதுகிற் றட்டி அதன் மகிழ்ச்சி அறிவிக்கப்பட்டது. பெண்ணின் வலக்கண் துடிப்பது தீமை நேர்வதற்கு அறிகுறி எனக் கருதப்பட்டது. பெண்கள் தமக்குத் துன்பம் இழைத்தவர்களைத் திட்டினார்கள். குருவின் பெயரைச் சொல்வது பாவம் எனக் கருதப்பட்டது. குருவை மூன்று முறை வலம் வந்து விழுந்து கும்பிடுவது பொதுவழக்கு. மனிதன் நூறு அல்லது நூற்றிருபது ஆண்டு வாழ்வான் என நம்பப்பட்டது. வாயிலிற் கதவிடப்பட்ட சுடலைகள் இருந்தன. பந்து விளையாட்டுச் சிறுவரால் மிகவும் விரும்பப்பட்டது. ஊஞ்சலில் ஆடுவதை அரசரும் விரும்பினார்கள். அரசரும் பெரு மக்களும் ஆறுகளிலும் குளங்களிலும் நீந்திக் களித்தனர். விழாக்கள் பறை யறைந்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. விழாக் காலங்களில் வறியவர் களும் புது ஆடை உடுத்துப் பூமாலையணிந்து நறுமணம் பூசி மனைவிய ருடன் மதுவருந்திக் களித்தனர். கார்த்திகைத் திங்களின் மத்தியில் வரும் விழா மிகச் சிறப்புடையது. அன்று அரசன் நகரைச் சுற்றி உலாவருவான். வழக்கமான மதுக்கடைகளைத் தவிர விழாக்காலங்களில் புதிய மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மகளிர் மைந்தர் சிறுவர் என்போர் திரண்டு நின்று கூத்து, வாத்தியம், பாட்டு, யானைப்போர், ஆட்டுப்போர், மற்போர் முதலிய வைகளைப் பார்த்து ஆரவாரஞ் செய்தனர். மரவணக்கம் மக்கள் மரங்களைத் தெய்வமாக வணங்கவில்லை; ஆனால் மரங்களிலுறையும் தெய்வங்களை வணங்கினார்கள். இத் தெய்வங்களுக்குச் சிலவேளை நரபலிகள் கொடுக்கப்பட்டன. மரத்தில் மாலையும் கொம்பு களில் விளக்குகளும் தூக்கப்பட்டன. மரத்தின் அடியில் ஆடு கோழி பன்றி முதலியன பலியிடப்பட்டன. உயிர்ப் பலிகள் நிறுத்தப்பட்டபின் இரத்தத் திற்குப் பதில் மரத்தில் குங்குமம் பூசப்படுகின்றதாயிருத்தல் கூடும். தண்டனை அக் காலத் தண்டனை, தண்டம், சிறை, உறுப்புகளைக் களைதல், சிரத்தைக் கோடரியாற் பட்டடையில் வைத்துத் தறித்தல் போன்றன.  இயல் - 4 புத்தருக்குப் பிற்பட்ட இந்தியா மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுப்த மயூரனின் அரண்மனை யில் கி. மு. 302 முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன: இந்திய மக்களின் ஏழு பிரிவுகள் இந்தியர் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவ சாத்திரத் திற்றேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங் குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ் வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர். பொதுமக்கள் இவர்களால் பெரிய நன்மை களை அடைந்தனர். ஆண்டின் ஆரம்பகாலத்தில் மக்கள் கூட்டங்கூடி இருப்பார்கள். அப்பொழுது இவர்கள் அவ் வாண்டில் நிகழவிருக்கும் பிணி, பஞ்சம், காற்று, மழை ஆகியவற்றை அறிவிப்பார்கள். இவற்றை அறிந்துகொண்ட மக்களும், அரசனும் நிகழ விருக்கும் துன்பங்களுக்கு ஆயத்தமாகவிருந்தனர். தாம் கூறிய வருங்காலப் பலன்களிற் பொய்த்த தத்துவ சாத்திரிகள் தமது ஆயுளின் மீதிக்காலத்தை நிகழ்கால வருங்கால பலன்களைக் கூறாது மௌனமாகக் கழித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளோர் உழுதூண் வாழ்க்கையர். இவர்கள் மற்றவர்களிலும் கூடிய தொகையினர். இவர்கள் போர் முதலிய பொதுக் கருமங்களுக்குரிய காலத்தைத் தவிர மீதி நேரம் முழுவதையும் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடுவதிற் செலவிடுகின்றனர். நாட்டின்மீது படை எடுத்து வருவோர் இவர்களைத் துன்புறுத்துவதில்லை. பொது நன்மைக் குரியோர் என்னும் எண்ணத்தினால் இவர்கள் எல்லா ஆபத்துக்களி னின்றும் காக்கப்படுகின்றனர். பகைவரால் அழிக்கப்படாதனவும், மிகுந்த விளைவைக் கொடுப்பனவுமாகிய நிலங்களின் பயன் நாட்டு மக்களின் உணவுக்குப் போதுமானதாயிருந்தது. இவர்கள் குடும்பங்களோடு நாட்டை உறைவிடமாகக் கொண்டனர். நகர வாழ்க்கையை இவர்கள் விரும்பினார்க ளல்லர். இந்திய நாடு முழுமையிலுமுள்ள நாடு அரசனுக்குச் சொந்தமானது. எவரேனும் சொந்தமான நிலம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நில வரியைத் தவிர விளைவில் நாலில் ஒன்றும் அரசனுக்கு உரியதாயிருந்தது. மூன்றாவது படியிலுள்ளோர் இடையர். இவர்கள் பெரும்பாலும் ஆடு மாடுகளை மேய்ப்பர். இவர்கள் நாட்டிலாவது நகரங்களிலாவது நிலையாக வாழாது கூடாரங்களின் கீழ்த் தங்கினர்; வேட்டையாடியும் பொறி வைத்தும் துட்ட விலங்குகளைப் பிடித்தனர். நான்காவது படியிலுள்ளோர் சிற்பிகள். இவர்களிற் சிலர் ஆயுதங் களைச் செய்தனர். சிலர் பயிரிடுவோருக்கும் பிறருக்கும் வேண்டிய கருவி களைச் செய்துகொடுத்து அவர்களுக்குத் துணை புரிந்தனர். ஐந்தாவது படியிலுள்ளோர் படையாச்சிகள். இவர்கள் போர் செய்யும் முறையிற் பயின்றிருந்தனர். தொகையளவில் இவர்கள் இரண்டாவ தாக விருப்பர். போர் இல்லாத காலங்களில் இவர்கள் பொழுது போக்கு களிலும் சோம்புத்தனத்திலும் காலத்தைப் போக்கினர். ஆறாவது படியிலுள்ளோர் கண்காணிமார். நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து சொல்வது இவர்களுக்கு வேலையாயிருந்தது; அரசன் இல்லாத விடங்களில் அவர்கள் தாம் அறிந்தவற்றை நியாயம் வழங்கும் அதிகாரிகளிடம் கூறினர். ஏழாவது படியிலுள்ளோர் பொதுக் கருமங்களில் ஆலோசனை கூறும் கூட்டத்தினர். மற்றவர்கள் எல்லோரையும்விட இவர்கள் சிறு கூட்டத் தினர். உயர்ந்த ஒழுக்கத்துக்கும் அறிவுக்குமாக இவர்கள் மதிக்கப்படுகி றார்கள். அரசனது கருவூலத்துக்கும், அரசனுக்கு ஆலோசனை கூறுதற்கும் இக் கூட்டத்தினின்றுதான் சிலர் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். படைத்தலை வனும் தலைமை நீதிபதியும் இவ் வகுப்பைச் சேர்ந்தவர்களே. இந்திய அரசாங்கம் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றது. தத்தம் கூட்டத்தைக் கடந்து மணம் முடிக்க எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தமது வகுப்புக்குரியதல்லாத தொழில் புரிவதற்கும் ஒருவரும் அனுமதிக்கப் படவில்லை. உதாரணமாகப் போர்வீரன் ஒருபோதும் பயிரிடுவோனாக வரமுடியாது; சிற்பி அறிவனாய் (தத்துவ சாத்திரி) வரமுடியாது. மக்களின் பழக்க வழக்கம் இந்திய மக்கள் எல்லோரும் செட்டான வாழ்க்கையுடையவர். சிறப்பாக, கூடாரங்களில் தங்கும்போது இவர்கள் இவ்வாறிருக்கின்றனர். ஒழுங்கற்ற கூட்டத்தினரை அவர்கள் வெறுத்தனர். ஆகவே அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டனர். களவு சிறிதாக இருந்தது. சந்திரகுப்தனின் கூடாரத்தில் 400,000 வீரர் தங்கினார்கள். எப்பொழுதாவது 200 திறாமச்1 பொன்னுக்கு அதிகமாகக் களவு நடந்ததாகக் கூறப்படவில்லை. அவர் களுக்கு எழுத்து மூலம் பிரமாணங்கள் கிடையா. அவர்கள் எழுத்தைப்பற்றி அறியார். கொடுக்கல் வாங்கல்கள் ஞாப கத்தைப் பொறுத்திருந்தன. ஆடம்பரமல்லாத வாழ்க்கை நடத்தியபோதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். வேள்விகளிலன்றி அவர்கள் மது அருந்தவில்லை. மது நெல்லிலிருந்து வடிக்கப்பட்டது. அரிசியாற் சமைத்த கஞ்சி அவர்களின் பிரதான உணவு. அவர்களின் சட்டங்களைக் கவனிக்கும் போது அவர்கள், அருமையாக வழக்குக்குச் சென்றார்கள். கொடுக்கல் வாங் கல்கள் ஒருவர் மற்றவரிடத்திற் கொண்ட நம்பிக்கையைக் கொண்டு நடை பெற்றமையால் பத்திரங்கள் எழுதப்படவில்லை. அவர்கள் வெளியே சென்றபோது வீட்டையும் வீட்டிலுள்ள பொருள்களையும் காப்பதற்கு எவரையும் நிறுத்தவில்லை. அவர்கள் எப்பொழுதும் தனிமையாகவே உண வருந்தினார்கள். இன்ன நேரத்தில் உணவருந்த வேண்டும் என்னும் நியதி இருக்கவில்லை; பசி கொண்ட நேரங்களில் ஒவ்வொருவரும் உண்டனர். உடம்பை உரைஞ்சுவதையே அவர்கள் சிறந்த உடற் பயிற்சியாகக் கருதினர். அதற்காகப் பலமுறைகள் கையாளப்பட்டன. அழுத்தமான கருங் காலி உருளைகளை உடம்பில் அழுத்தி உருட்டுவதே அவற்றுட் சிறந்தது. அவர்களின் சமாதிகள் ஆடம்பரமின்றி எளியவகையில் இருந்தன. சமாதிக்குமேல் மண்கொட்டி மேடு செய்யப்பட்டது. அவர்கள் அழகையும் அணிகலன்களையும் விரும்பினர். உடைகள் பொன்னினால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஆபரணங்களில் வயிரங்களும் விலையுயர்ந்த கற்களும் அழுத்தப்பட்டிருந்தன. பூவேலை செய்த மசிலின் (சல்லா) துணிகளை அவர்கள் உடுத்தனர். பரிவாரங்கள் அவர்களின் பின்னாற் குடை பிடித்துச் சென்றன. உண்மையும் புகழும் போற்றப்பட்டன. அறிவுத் திறமில்லாத முதியவர்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பல பெண்களை மணந்தனர். அவர்கள் ஒரு சோடி எருதைப் பெண்களுக்கு விலையாகக் கொடுத்து அவர்களைப் பெற்றோர் களிடமிருந்து வாங்கினர். சிலர் தமக்கு வாழ்க்கைத் துணை வேண்டுமென்று மணஞ் செய்கின்றனர். பலர் இன்பத்திற்காவும் வீடுகளைப் பல குழந்தை களால் நிரப்புவதற்கும் மணஞ் செய்கின்றனர். வேள்விச் சாலைகளிலும் கடவுட் பூசைகளிலும் ஒருவரும் முடி அணியவில்லை. பலியிடும் விலங் குகள் வெட்டிக் கொல்லப்படவில்லை; மூச்சைப் பிடித்துத் திருகிக்கொல் லப்பட்டன. பொய்ச்சாட்சி சொல்வோனுக்குக் கடுந்தண்டம் விதிக்கப்பட்டது. ஒருவனது உறுப்புக்குப் பங்கம் விளைத்தவனது அதே உறுப்பு வெட்டப் பட்டது; கையும் வெட்டப்பட்டது. சிற்பிகளின் கண்ணுக்கு அல்லது கைக்கு ஊறு விளைத்தவன் கொலை செய்யப்பட்டான். அரசனுடைய உயிர் பெண்களின் கையில் இருந்தது. அப் பெண்கள் தாய் தந்தையரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள். வாயிலுக்கு வெளியே காவலாளரும் போர் வீரரும் காவல் புரிந்தனர். அரசன் மது வுண்ட மயக்கத்திலிருக்கும்போது அவனைக் கொன்றவள் இனிவரும் அரசனுக்கு மனைவியாகின்றாள். அரசன் பகலில் துயில் கொள்ளான். தனக்கு மாறாக நடக்கக்கூடிய சதிகளுக்குப் பயந்து அவன் அடிக்கடி தனது படுக்கையை மாற்றுவதுண்டு. போர்க்காலங்களில் மட்டுமல்லாமல் வழக்குத் தீர்ப்பளித்தற்கும் அவன் வெளியே செல்கின்றான். நீதி செலுத்தும் மண்ட பத்தில் அவன் முழு நேரத்தையும் செலவிடுகிறான். அந் நேரத்தில் நான்கு வேலையாட்கள் அவனது உடம்பை மர உருளைகளால் உரைஞ்சுகின்றனர். உருளைகளால் உரைஞ்சும்போதே அவன் வழக்குகளை விசாரணை செய் கின்றான். வேட்டையாடுதற்கும், வேள்விச் சாலைகளிற் பலி செலுத்து தற்கும் அவன் வெளியே செல்கின்றான். வேட்டைக்குச் செல்லும்போது பெண்கள் பலர் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர்.1 இவர்களுக்குப் புறத்தே ஈட்டி தரித்த வீரர் சூழ்ந்து நிற்கின்றனர். வீதிகளிற் கயிறுகள் கட்டப்பட்டிருக் கின்றன. கயிற்றைக் கடந்து செல்லும் ஆண் அல்லது பெண்ணுக்கு மரண தண்டணை விதிக்கப்படுகின்றது. மேளம், சல்லரி முதலிய வாத்தியங்க ளோடு பரிவாரங்கள் செல்கின்றன. அரசன் வளைத்தடைக்கப்பட்ட இடத்தே உயரமான இடத்தில் நின்று அம்புகளை எய்கிறான். அவனுக்குப் பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று ஆயுதந்தரித்த பெண்கள் நிற்கின்றனர். வெளி யிடங்களில் வேட்டையாடும்போது அரசன் யானையின் அம்பாரிமீதிருந்து அம்புகளை எய்கிறான். பெண்கள் சிலர் தேர்மீதும் சிலர் யானை மீதும் செல்கின்றனர். போருக்குச் செல்வதை ஒப்ப அவர்கள் பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்கின்றனர். அரசாங்க அமைப்பு அரசாங்க உத்தியோகத்தரிற் சிலர் சந்தைகளையும், சிலர் இராணு வத்தையும், சிலர் நகரத்தையும் மேற்பார்க்கின்றனர். சிலர் ஆறுவழியாக நிலங்களுக்கு நீர்பாய்ச்சுவதையும், சிலர் நில அளவைகளையும், சிலர் ஆற்றின் சிறிய கால்வாய்களால் நீர்செல்லும் மடைகளையும் கவனிக்கின் றனர். சிலர் விறகு வெட்டுவோர், தச்சுவேலை, கொல் வேலை, சுரங்கவேலை முதலியன புரிவோரை மேற்பார்த்து வரி அற விடுகின்றனர். இவர்கள் வீதி களையும் அமைக்கின்றனர். தூரத்தையும் கிளைப்பாதைகளையும் அறிவிக் கும் கற்கள் ‘மைலுக்கு’ ஒன்று நடப்பட்டுள்ளன. நகர ஆட்சி ஆறு சபையினரால் நடத்தப்படுகின்றனது. முதற்பிரி வினர் கைத்தொழில் தொடர்பான எல்லாவற்றையும் கவனிப்பர். இரண்டா வது பிரிவினர் பிற நாடுகளினின்றும் வருவோரைக் கவனித்து அவர்கள் தங்குவதற்கேற்ற வசதிகளைப் புரிவர். அப் புதியவர்களுக்குத் துணையாக விருப்போர் அவர்களின் போக்கைக் கவனித்து அதிகாரிகளுக்கு அறிவிக் கின்றனர். பிற நாட்டவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களின் உடைகள் உறவி னரிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன. மூன்றாவது பிரிவினர் நாட்டில் ஏற்படும் இறப்புப் பிறப்புகளைக் கவனிக்கின்றனர். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கிடையிலும் நேரும் இறப்புப் பிறப்புக்கள் தவறாமல் பதிவு செய்யப்படுகின்றன. நான்காவது பிரிவினர் சந்தைகளைக் கவனிக்கின்றனர். இவர்களே நிறைகளுக்கும் அளவுகளுக்கும் பொறுப்பா யுள்ளோர். மக்களுக்கு விளம்பரஞ் செய்தபின் காலத்திற் கிடைக்கும் விளைபொருள்கள் பகிரங்கத்தில் விற்கப்படுகின்றன. ஒன்றுக்கு அதிகமான பண்டங்களில் வாணிகம் புரிய எவரும் அனுமதிக்கப்பட்டிலர். ஐந்தாவது பிரிவினர் கைத்தொழிற் பொருள்களைக் கவனிக்கின்றனர். புதிய பொருள் களும் பழைய பொருள்களும் வெவ்வேறாக வைத்து விற்கப்படுகின்றன. புதியவற்றையும், பழையவற்றையும் கலந்து விற்போருக்குத் தண்டம் விதிக் கப்படுகின்றது. ஆறாவது பிரிவினர் வாணிபப் பொருள்களின் விலையிற் பத்திலொன்றை அறவிடுகின்றனர். இவ்வாறு ஆறு பிரிவினர்களும் கடமை யாற்றுகின்றனர். இவர்கள் ஒன்றுசேர்ந்து பொதுக்கட்டிடங்களின் புழக்கம், அவற்றின் பழுதுபார்ப்பு, பண்டங்களின் விலை, சந்தை, துறை முகம், கோயில்கள் முதலியவற்றிற்குப் பொறுப்பாயிருக்கின்றனர். நகரின் நியாய அதிகாரிகள் இராணுவத்தை நடத்துவிக்கின்றனர். இவர்கள் ஐந்து உறுப்பினர் அடங்கிய ஆறு சபைகளாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றனர். ஒன்று, கடற்படை அதிகாரியோடு ஒத்துழைக்கின்றது. இரண் டாவது போருக்குரிய இயந்திரங்களையும், போர்வீரரின் உணவையும் பிற பொருள்களையும் கொண்டு செல்லும் எருதுகளையும் வண்டிகளையும் கவனிக்கின்றது. இது, வேலையாட்களையும், பறை கொட்டுவோரையும், சல்லரி போடுவோரையும், குதிரைப் பாகரையும், இயந்திரம் பழுது பார்ப் போரையும் அவர்களின் உதவியாளரையும் அளிக்கின்றது. சல்லரிகளாற் செய்யப்படும் ஓசையை அறிந்து வேலையாட்கள் குதிரைகளுக்குப் புல் கொண்டு வருகின்றனர். மூன்றாவது பிரிவு காலாட்படைக்குப் பொறுப்பா யிருக்கின்றது. நாலாவது குதிரைப்படைக்கும், ஐந்தாவது தேர்களுக்கும், ஆறாவது யானைப் படைக்கும் பொறுப்பாயிருக்கின்றன. அரசனின் ஆயுதச்சாலை உண்டு. ஒவ்வொரு போர் வீரனும் 1ஆயுதங்களை ஆயுதச் சாலையிலும், குதிரையை அல்லது யானையைப் பந்தியிலும் விட்டுச் செல் கின்றான். அவர்கள் யானைக்குக் கடிவாளமிடுவதில்லை. தேர்களை எருதுகள் இழுத்துச் செல்கின்றன. தேரை இழுத்துக் களைப்படையாதபடி குதிரைகள் பக்கத்தே நடத்திச் செல்லப்படுகின்றன. தேர்ப்பாகனின் இரண்டு பக்கங்களி லும் ஒவ்வொரு வீரர் இருக்கின்றனர். போர் யானை நான்கு வீரரைக் கொண்டு செல்கின்றது. ஒருவன் பாகனும் மூவர் போர் செய்வோருமாவர். தத்துவ சாத்திரிகள் தத்துவ சாத்திரிகளின் ஒரு பிரிவினர் பிராச்மேன் (பிராமணர்) என்றும், மற்றப் பிரிவினர் சார்மேன்1 எனவும் அழைக்கப்படுவர். பிராச் மேனின் கொள்கைகள் உண்மையாகவிருக்கின்றன. ஆகவே, அவர்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். கருப்பத்தில் இருப்பது முதல் அவர்கள் அறி வாளிகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர். தாயினதும் குழந்தையினதும் நலத்துக்காகச் சில கிரியைகளைச் செய்வதாகப் பாசாங்கு செய்து அறிவாளிகள் அவளுக்குப் பல புத்திமதிகளைக் கூறுகின்றனர். அவர்களின் புத்திமதிகளை ஆவலோடு கேட்கின்றவள் மிகவும் புண்ணியசாலி என்று கருதப்படுகின் றாள். பிறந்த பின் குழந்தை, ஒருவரின்பின் ஒருவராக அறிவில் உயர்ந்த பலரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. தத்துவ சாத்திரிகள், வளைத்தடைத்த சோலைகளின் மத்தியில் வாழ் கின்றனர். அவர்களின் வாழ்க்கை எளிதானது; புல், மான்தோல் முதலியவற் றின்மீது அவர்கள் படுக்கின்றனர். அவர்கள் விலங்குகளின் இறைச்சியைப் புசிப்பதில்லை; பெண்போகத்தை அவர்கள் வெறுப்பர். அவர்கள் பேசு வதைக் கேட்போர் மௌனமாகவும் அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இப் பிராமணத்தைத் தாண்டும் எவரும் இரக்கமின்றி அக் கூட்டத்தினின்றும் விலக்கப்படுகின்றனர். இவ்வாறு வாழும் ஒவ்வொருவரும் முப்பத்தேழு ஆண்டுகளின்பின் தத்தம் இல்லங்களுக்குச் செல்கின்றனர். அப்பொழுது அவர்கள் அழகிய மசிலின் (சல்லா) ஆடைகளை உடுக்கின்றனர்; விரல் களில் ஆழிகளும், காதிற் குண்டலங்களும் அணிகின்றனர்; தொழில் செய் கின்ற விலங்குகளல்லாத பிறவற்றின் ஊனைப் புசிக்கின்றனர். காரமுள்ளதும் தாளிதஞ் செய்ததுமாகிய உணவை அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மனைவியரையும் அவர்கள் மணந்துகொள்ளலாம். அடிமைகளின்மையின் கூடிய தொகை மனைவியர்களையும், பிள்ளைகளையும் உடையராயிருத் தல் தமது வாழ்க்கைக்கு வசதியாகுமென அவர்கள் எண்ணுகின்றனர். பிராச்மேனியர் சாத்திர உண்மைகளைத் தம் மனைவியருக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. பிறருக்கு மறைக்கப்பட்ட அவ்வுண்மைகளை வெளிப்படுத்தி அவற்றின் தூய்மையைக் கெடுத்துவிடுவார்கள், அல்லது உண்மை அறிவு மிகுந்து தம்மை விட்டுப் பிரிந்துவிடுவர் என அவர்கள் அஞ்சுகின்றனர். நல்ல மனைவியரும், கணவனும் இன்பதுன்பங்களைச் சமமாகப் பாவித்து வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் அடிக்கடி பேசும் பொருள்களுள் மரணம் ஒன்றாகும். பிறப்பைப்போல இறப்பும் வரும் என்று அவர்கள் சாத்திரங் கூறுகின்றது. மனிதனுக்கு நேரும் இன்பதுன்பங்க ளெல்லாம் கனவு போன்ற மாயை என்றும், இல்லாவிடின் ஒரு பொருள் சிலருக்குத் துன்பத்தையும் வேறு சிலருக்கு இன்பத்தையும் கொடுக்கமுடியா தென்றும், ஒரே பொருள் வெவ்வேறு காலங்களில் நேர்மாறான நுகர்வு களைக் கொடுக்கக் காரணமென்னவென்றுங் கூறுகின்றனர். இயற்கை நிகழ்ச்சியைக் குறித்த அளவில் அவர்கள் குறைவான விளக்கமுடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் கட்டுக்கதைகளை நம்புகின்றனர்; ஊகை ஆராய்விலும் பார்க்கச் சாதனையில் திறமையுடைய வர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் கொள்கைகள் பலவகையில் கிரேக்கர் கொள்கைகளோடு ஒற்றுமையுடையனவாய்க் காணப்படுகின்றன. கிரேக்கரைப்போலவே அவர்களும் உலகம் ஒரு காலத்தில் உற்பத்தியான தென்றும், அது உருண்டை வடிவினதென்றும், அதனை உண்டாக்கிய கடவுள் அதன் எல்லாப் பாகங்களிலும் செறிந்திருக்கிறாரென்றும் கூறுகின்றனர். இவ் வுலகின் உற்பத்திக்கு முதற் காரணமுண்டென்றும், அது நீரினின்று உண்டா யிற்றென்றும், நிலம், தீ, நீர், காற்று என்னும் நாலு பூதங்களைவிட ஐந்தாவது பூதம் ஒன்று உண்டென்றும், அதினின்றும் வானமும் நட்சத்திரங்களும் உண்டாயினவென்றும் அவர்கள் நம்புகின்றனர். பூமி உலகின் மத்தியில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. சிருட்டி உயிரின் இலக்கணம் இவை போன்ற பல பொருள்கள் கிரேக்கர் கொள்கைகளோடு ஒத்திருக்கின்றன. சார்மேன்களின் ஹைலேபியோய் என்னும் பிரிவினர் மிகவும் மரியாதை காட்டப்படுகின்றனர். அவர்கள் காட்டில் வசித்து அங்குக் கிடைக்கும் இலை களையும், பழங்களையும் புசிக்கின்றனர்: மரப்பட்டையால் தைத்த உடையை உடுக்கின்றனர். பெண் போகமும், மதுவும், ஊனும் அவர்களுக்கு விலக்கு. அரசன் தூதுவர் மூலம் இவர்களிடம் தனக்கு வேண்டிய ஆலோசனை களைக் கேட்கிறான்; இவர்கள் மூலம் கடவுளுக்கு வழிபாடு செய்விக்கிறான். இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளோர் மருத்துவர். இவர்கள் மனிதனின் இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சி செய்கின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் எளியவை. அவர்கள் வயல்களில் வசிப்பதில்லை. அவர்களின் உணவு அரிசியும் பிறவும். இவற்றை அவர்கள் எவரிடமேனும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகின்றனர்; அல்லது விருந்தாளிகளாகத் தங்கு மிடங்களிற் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் கலைகளின் சிறப்பினால் மகிழ்ச்சிக்குரிய மணங்களை ஒழுங்குபடுத்துவர்; பிறக்கும் குழந்தைகள் ஆண் அல்லது பெண் என்று முன் அறிந்து கூறுவர். அவர்கள் உணவு முறை களால் நோயை மாற்றுகின்றனர். மருந்தை அருமையாகப் பயன்படுத்து கின்றனர்; மற்றைய முறைகள் இயற்கைக்கு மாறுபட்டன என்று கூறுகின் றனர். இவர்களும் வேறு சில வகுப்பினரும் நாள்முற்றும் அசையாது ஓரிடத்தில் நிற்றல்போன்ற பழக்கங்களைச் செய்கின்றனர். இவர்களையன்றி மந்திர வித்தைக்காரரும் வேடம் பூண்டோரு மிருக்கின்றனர். இவர்கள் தாமும் உயர்ந்த திருத்தமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். மறு உலகத்தைப்பற்றிய நினைவு அன்பையும் தூய்மையையுமுண்டாக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் சிலரிடமிருந்து பெண்கள் சமய சாத்திரங் கற்கின்றனர். பாடலிபுத்ரா கங்கையாற்றின் அகலம் 100 ஸ்ரேடியா.1 அதன் குறைந்த ஆழம் 120 அடி. கங்காநதியும் இன்னொரு ஆறும் கூடும் இடத்தில் ‘பலிபோத்திரா’ என்னும் ஒரு நகர் இருக்கிறது. இதன் நீளம் எண்பது ஸ்ரேடியா; அகலம் பதினைந்து ஸ்ரேடியா. அது நீண்ட சதுர வடிவமானது. அதைச் சுற்றி மரத்தி னால் இடப்பட்ட அரண் உண்டு. அம்புகள் எய்யக்கூடியதாகச் சுவரின் இடையிடையே சந்துகள் செய்யப்பட்டன. சுவரின் முன்னே அகழி ஒன்று இருக்கின்றது. நகரின் கழிவு நீர் இதனுள் விழுகின்றது. இங்கு வாழ்வோர் இந்தியா முழுமையிலும் வாழ்வோரினும் சிறந்தோர். அரசன் தனது குடும்பப் பெயரோடு ‘பலிபோத்திரா’ அல்லது ‘சந்திர கோத்திரா’ என்னும் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அகழிகள் 600 அடி அகலமும், 30 முழ ஆழமுமுடையன. மதில் 570 கோபுரங்களும் அறுபத்து நான்கு வாயில்களும் உடையதாயிருந்தது.1 இந்திய மக்கள் சுதந்திர வாழ்க்கையினர். அடிமைகள் ஒருவரும் காணப்பட வில்லை. பாண்டிய சாதியினர் பெண்களால் ஆளப்படுகின்றனர். அவர்களின் முதல் அரசி கெகுலிசின் புதல்வி எனப்படுகின்றாள். இந் நாட்டிலுள்ள நிசா (Nysa) என்னும் பட்டினமும் மேற்கூறியப்படி பெயருடைய மலையும் யூபிதர் கடவுளின் பரிசுத்த இடங்கள், இம்மலையிலுள்ள குகையில் பக்கஸ் கடவுள் வளர்ந்தார் என்று இந்தியர் உறுதியாகக் கூறுகின்றனர். எகுலிஸ், தனது புதல்விக்குக் கொடுத்த நாட்டை 365 கிராமங் களாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்தையும் முறையே வருடத்தின் 365 நாளும் திறை கொடுக்கும்படி விதித்தார்.2 பக்கஸ் (Father Bacchus) காலம் முதல் அலக்சாந்தர் காலம் வரையில் பாண்டிநாட்டை ஆண்ட அரசர் 154 பேர். இவர்களின் ஆட்சி 6431 ஆண்டு 3 திங்கள் நடைபெற்றது. தபிரபேன் என்னும் தீவு இந்தியாவினின்றும் ஒரு சிறிய ஆற்றினாற் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இந்தியாவிற் கிடைப்பதிலும் அதிக பொன்னும் முத்தும் கிடைக்கின்றன. அங்குள்ள யானைகள் இந்திய யானை களிலும் பெரியன. தபிரபேன் 7000 ஸ்ரேடியா நீளமும், 5000 ஸ்ரேடியா அகலமுமுள்ளது. அங்கு 700 கிராமங்கள் உண்டு. கடல் ஓரங்களில் ஆமைகள் அதிகம். அவைகளின் ஓடு 15 முழ நீளம். தாம்பிரபர்ணி என்னும் கடலுள் இருக்கும் இத் தீவில் தென்னைகள் நிரையாக நடப்பட்டிருக்கின்றன. இங்கு யானைகளும் அதிகம். அத் தீவின் மக்கள் அவைகளைப் பிடித்துக் கலிங்க தேசத்துக்கு அனுப்புகின்றனர். கரை ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்து வாழ்வர். அக் கடல்களில் சிங்கத்தலை விலங்குத் தலைகளுள்ள மீன்கள் உலாவுகின்றன. பெண்களின் தலையுடைய மீன்களும் அங்கு உண்டு; அவைகளுக்கு மயிருக்குப் பதில் முட்கள் காணப்படுகின்றன.  இயல் - 5 தமிழ் வேந்தரும் அவர் ஆட்சியும் பிற்காலத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளாலும் பட்டயங்களாலும் தமிழிலக்கியங்களிற் காண முடியாத பல அரிய செய்திகள் கிடைக்கின்றன. அரசியல் தொடர்பான தனித்தமிழ்ச் சொற்கள் காணப்படுதலின் அவ்வாட்சி முறை மிகப் பழைமை தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்ற தெனத் துணியலாம். தமிழ்நாட்டிலே மூவேந்தரது ஆட்சி முறையும் ஒரே வகையாக நடை பெற்றது. எல்லா அதிகாரமும் அரசனுக்கு இருந்தது. அவனுக்கு உறுதிகூறும் அமைச்சர் நகரப் பெருமக்கள் முதலிய சுற்றத்தினர் இருந்தனர். அரண் மனையில் ஏவல் புரிவோர் பல கூட்டத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சமையல் அறை குளிக்கும் அறைகளிற் பெரும்பாலும் ஆடவரே வேலை புரிந்தனர். வேலையாட்கள் வேளம் என்னும் கூட்டத்தினின்றும் தெரிந் தெடுக்கப்பட்டார்கள். அவர்கள், போரிற் சிறை பிடிக்கப்பட்டவர்களாவர். சோயுகுவா என்னும் சீனன், சோழர் ஆட்சியைப் பற்றி எழுது மிடத்துக் குறிப்பிட்டிருப்பது வருமாறு: அரண்மனை விருந்துக் காலங் களில் அரசனும் நான்கு அமைச்சர்களும் சிங்காசனத்தின் அடியை வணங்கு கிறார்கள்; உடனே அங்குக் குழுமியிருப்போர் வாத்தியங்களை ஒலித்து ஆடல் பாடல்களைத் தொடங்குகின்றனர். அரசன் மது அருந்தமாட்டான்; ஊன் அருந்துவான். நாட்டு வழக்கப்படி அவன் பஞ்சு ஆடையை அணிந்து கொண்டு தானிய மாவினாற் செய்த பணியாரங்களை உண்கிறான். உண வருந்தும் அறையிற் சேவிப்பதற்கும் தன்னைச் சூழ்ந்து திரிவதற்கும் அவன் திரளான நடன மாதரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். நாள் ஒன்றுக்கு முறை முறையாக அவனைச் சேவிக்கும் பேர் மூவாயிரம் மாதர்.1 அரசனுக்கும் தேவிக்கும் தனிச் சேவகம் புரியும் பணியாளருமிருந்தனர். படையில் யானை குதிரை வீரர், காலாள், தேர்வீரர் என்போர் இருந்த னர். யானைவீரர் யானையாட்கள் குஞ்சரமள்ளர் எனவும், குதிரை வீரர் குதிரைச் சேவகர் எனவும், காலாட்படையினர் கைகோளப் பெரும் படை யினர் எனவும், வில்லாளர் வில்லிகள் எனவும், வாட் படையினர் வாட்பெற்ற கைக்கோளர் எனவும் பட்டனர். யுத்த காலத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் வீரர் அரசனின் வலங்கை எனப்பட்டனர். நகரங்களில் படை தங்குமிடங்கள் கடகங்கள் எனப்பட்டன. படைகளின் தலைவன் படைத்தலைவன் சேனாபதி அல்லது படைமுதலி எனப்பட்டான். வரி தண்டும் கருமி (மேல் உத்தியோகத்தன்) நாடுவாகை எனப்பட்டான். வரி தண்டும் வேலையில் போர் வீரர்களும் பயன்படுத்தப்பட்டனர். கால்வழியாக வரும் படை மூலப்படை எனப்பட்டது. மேற்கூறியபடி சீன ஆசிரியன் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதியிருப்பது வருமாறு: இவ் விராச்சியத்தில் (சோழ நாட்டில்) பதினாயிரம் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டு முழம் உயர முடையது. போர் புரியும்போது அவை முதுகின்மீது வீடுகளைக்கொண்டு திரிகின்றன. வீடுகள் நிரம்ப வீரர்கள் இருந்து அம்புகளை எய்கின்றனர். வெற்றியடைந்தபின் யானைகளுக்குக் கௌரவப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. நாளும் அவை அரசனுக்குமுன் கொண்டுவரப்படுகின்றன. போரில் கொள்ளையடிக்கப்படும் பொருள் அரசனுக்குச் சொந்த மானது. அரசனது வாய் உத்தரவு ‘திருவாய்க் கேள்வி’ எனப்பட்டது. அதனைக் கேட்டு எழுதும் கருமிகள் பலர் அவனுடன் இருந்தனர். எழுதுவோன் ‘தீட்டுக்காரன்’ எனப்பட்டான். அரசன் வழக்குகளை நேரிற் கேட்டு நாட்டு வழக்கப்படி தீர்ப்பளித்தான். பெரிய கருமிகளுக்கு ஏனாதி, மாராயன் என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. மாராயன் என்பதன் பெண் பால் மாராசி. உயர்ந்த கருமிகள் அதிகாரிகள் எனப்பட்டனர். மேல் கீழ் அதிகாரிகளைக் குறிக்கப் ‘பெருந்தரம்’ ‘சிறுதரம்’ என்னும் பெயர்கள் வழங் கின. உத்தியோகத்தர் ‘கருமிகள்’ எனவும், வேலையாட்கள் ‘பணி மக்கள்’ எனவும் கூறப்பட்டனர். நியாயாதிபதிகள் ‘நியாயத்தார்’ எனப்பட்டனர். ஒரு கிராமத்தின் அல்லது அதன் பகுதியின் கடமைகளைப் பார்க்கும் கருமிகள் ‘உடையார்’ அல்லது ‘கிழார்’ எனப்பட்டனர். ஒவ்வொரு கிராமமும் பெரு மக்கள் கூட்டங்களால் ஆளப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், நாடு அல்லது கோட்டம் எனப்பட்டது. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வள நாடு. வள நாட்டிலும் பெரியது மண்டலம். 1நாட்டு ஆட்சி மாசனங்களும் சனங்களும் கூட்டங்களும் அரசியற் கருமங்களை நடத்தின. ஒவ்வொரு கூட்டமும் தனித்தனி ஒவ்வொர் கருமத்தைக் கவனித் தது. கிராமங்கள், சேரிகள், தெருக்கள் என்னும் வகையாகப் பிரிவுகள் செய் யப்பட்டன. ஒவ்வொரு தெருவிலுள்ளோரும் தனித்தனிக் கூட்டங்களாகச் சேர்ந்து ஒவ்வொரு கருமத்தைக் கவனித்தார்கள். அறச் சொத்துகளை மேற்பார்வை செய்தோர் ‘தானத்தார்’ எனப்பட்டனர். திருக்கோயில்களுக் குள்ள நிலங்களுக்கு வரிகள் நீக்கப்பட்டிருந்தன. கிராமம் அல்லது பட்டினம், ஊர் எனப்பட்டது. ஊர், ஆளன்கணம் என்னும் கணத்தால் ஆளப்பட்டது. ஊர் ஆள்வார் என்பதும் அக் கூட்டத்தின் பெயர். இக் கூட்டத்தின் கீழ் ஊர்வாரியம் என்னும் கூட்டங்கள் இருந்தன. இச் சொல் வாரி (இனம்) என்னும் அடியாகப் பிறந்தது. தனிப்பட்ட கடமைகளைப் பார்க்க இக் கூட்டத்தாரால் அமைக்கப்பட்டோர் வாரியர் எனப்பட்டனர். கூட்டங்களின் காரியக்கூட்ட உறுப்பினர் ‘வாரியப் பெருமக்கள்’ எனப்பட்டனர். ஊரின் ஒவ்வொரு பிரிவும் ‘குடும்பு’ (Ward) எனப்பட்டது. ஒவ்வொரு குடும்பிலும் உள்ள உறுப்பினர் ‘குடஓலை’ வாயிலாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர்.2 பெரிய குற்றம் ‘மேற்படு குற்றம்’ எனப்பட்டது. வினைக்கேடு (கெட்ட நடத்தை) உள்ளவர்களும் கைக்கூலி வாங்குவோரும் தண்டிக்கப்பட்டனர். ஊரவர் களிடம் உள்வரி (மறைவாக வாங்கும் வரி) வாங்குதல் ஊர்க்குக்கரவு (துரோகம்) செய்தலாகக் கருதப்பட்டது.3 சபை மாசபை என்பன முறையே குறி, பெருங்குறி என வழங்கின. உறுப்பினர் பெருமக்கள் எனப்பட்டனர். சபைகள் பெரும்பாலும் கோயில் மண்டபங்களிற் கூடின. சபை பறை சாற்றிக் கூட்டப்பட்டது. சபை கூட்டுவது (சேமக்) கலம் அல்லது இரட்டைக் கலம் தட்டி அறிவிக்கப்பட்டது. அரசனது வாய்க்கட்டளை (திருமுகம்) திருமந்திர ஓலை என்னும் கருமியால் எழுதப்பட்டுப் பொத்தகத்திற் புகுத்துமுன் ‘திருமந்திர ஓலை நாயகம்’ என்பவனால் ஒப்பு நோக்கப்பட்டது. பின்பு ஓலை நாயகம் வரியிழுத்துக் கொள்க எனக் கருமி ஒருவனுக்குக் கட்டளையிட, அது பொத்தகத்திற் புகுத்தப்பட்டுத் தீட்டு (Document) ஆனது. ஏற்பாடுகள் (ஆவணங்கள்) தொடர்பாகப் புரவு வரி, வரிப் பொத்தகம், முகவெட்டி, வரிப் பொத்தகக் கணக்கு, வரியிழுத்து, கண்காணி, பட்டோலை, நடுவிருக்கை முதலிய கருமிகள் இருந்தனர். நாட்டிலுள்ள சபைகளுக்கு அனுப்பப்படும் செய்தி ஓலைகள் ‘திருமுகம்’ எனப்பட்டன. ‘நடுவிருக்கை’ என்பவன் மனுச் செய்பவனுக்கும் கருமிக்கும் இடையில் நின்று செய்திகளை அறிவிப்பவன். ஆவணத்தி என்பவன் காரிய (Executive) உத்தியோகத்தன். வரிப் பொத்தகம் நாட்டு வரி தொடர்பான கணக்குகள் தீட்டப்படும் பொத்தகம். அதற்குப் பொறுப்பா யுள்ள கருமியும் அப் பெயரால் அறியப்பட்டான். புரவுவரி என்பது நிலவரி. புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரிப் பகுதி (Land Tax Department). வழக்காளியின் வாக்கு மூலம் முறைப்பாடு எனப்பட்டது. நிலம் தொடர்பான வழக்குகள் ஆட்சி ஆவணம் முதலியவைகளை நோக்கி முடிவு செய்யப் பட்டன. மக்கட் பிரிவு மக்கள் தொழிற் பிரிவுகள் பற்றிக் கூட்டங் கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்தபோதும் பொதுக் கருமங்களில் ஒத்துழைத்தார்கள். 1ஈழவர் அக் காலத்தில் பனை தென்னைகளில் ஏறி மது இறக்கவில்லை. வருணம் என்பது தென்னிந்திய மக்களாற் கைக்கொள்ளப்படவில்லை. சில பிரிவினர் சிற்சிலவற்றைச் செய்தல் கூடாதென்னும் வழக்கு இருந்தது. இது கம்மா ளருக்குச் சோழ அரசன் எழுதியளித்த பட்டயமொன்றால் விளங்குகிறது. வீட்டில் நடக்கும் நன்மை தீமைகளில் இரண்டு சங்கு ஒலித்தல், மேளமடித் தல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மிதியடிதரித்தல், வீட்டுக்கு வெள்ளையடித்தல் இரண்டு மாடி வீடு கட்டுதல் வீட்டின் முன்புறத்தைத் தாமரை ஆம்பல் முதலிய பூமாலைகளால் அலங்கரித்தல் போன்ற சகா யங்கள் அப்பட்டயத்தில் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களிடையே ‘வலங்கை’ ‘இடங்கை’ என்னும் கட்சிகள் இருந்தன. இடங்கையினர் பிராம ணர்களின் மிதியடிகளையும் குடைகளையும் தூக்கிச் சென்றனர். அரசரும் பெருமக்களும் பல மனைவியருடையராயிருந்தனர். மனைவியர் 1உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. வரலாற்றுக் காலத் துக்கு முன்தொட்டு ஆடல் பாடல் மாதர் மிகவும் கவர்ச்சிக்குரியவர்களா யிருந்தார்கள். விழாக் காலங்களில் அவர்கள் வரவு மிகவும் வரவேற்புக் குரியதாயிருந்தது. அவர்கள் ஆடவர்களுடன் தாராளமாகப் பழகினார்கள். அம்பலங்களில் (Rest Houses) தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. வரியும் வருவாயும் அரசனது நிதி நிலையம் தலம் எனப்பட்டது. நிதியிற் பெரும்பாலன, நகைகளாகவும் விலையுயர்ந்த மணிகளாகவும் இருந்தன. அபுசா செட் (Apuza Zed) என்பவன் பத்தாம் நூற்றாண்டில் எழுதியிருப்பது வருமாறு: தங்கத்தில் இரத்தினக்கற்கள் பதித்த குழைகளை இந்திய அரசர் அணி கிறார்கள். அவர்கள் கழுத்தில் இரத்தினம் வைடூரியம் முதலியவைகளாற் செய்த மாலைகள் இலங்குகின்றன. ஆனால், முத்துக்கள் மிகவும் விலை யேறப்பெற்றவை. அரசரின் நிதிச் சேமிப்புப் பெரும்பாலும் முத்துக்களா யிருக்கின்றது. அதிகாரிகளும் உயர்ந்த கருமிகளும் அரசன் அணிவது போன்ற விலையுயர்ந்த முத்து மாலைகளை அணிகிறார்கள். வரி பெரும்பாலும் இறை எனப்பட்டது. பணம் இறுக்கும்படி விதிக் கப்படும் தண்டனை தண்டம் எனப்பட்டது. ஆயம் என்னும் சொல்லும் இறை என்னும் பொருளில் வழங்கிற்று. அரசனது வாயில் ‘திருக்கொற்ற வாயில்’ எனப்பட்டது. மத்திய அரசைச் சேரவேண்டிய நிலவரிக்குக் கிராம சபைகள் பொறுப்பாயிருந்தன. வரிகள் நில விளைவுகளிலிருந்தும் பிற வகைகளி லிருந்தும் வாங்கப்பட்டன. 2வெட்டி என்பது கூலி இல்லாத கட்டாய வேலை. நகரவரி (ஊரிடுவரி), ஏரிவரி, வேதனைவரி (அணைகட்டும் கட்டாய வேலை), சிலவரி, மகன்மைவரி, பேர்வரி (Poll Tax), கார்த்திகை யரிசி, கார்த்திகைப் பச்சை (காசு ஆயம்), கடை இறை, படிகாவல், நகர்காவல் எனப் பல வரிகள் இருந்தன. சில நேரங்களில் வரி கொடாதாரைத் தண்ணீரிலிட்டும் வெயிலில் நிறுத்தியும் வேதனை கொடுத்தும் வரி வாங்கப்பட்டது. வாணிகம் வியாபாரத்தின் பொருட்டு மக்கள் இடங்கள்தோறும் சென்றார்கள். பெரிய தெருக்கள் ‘பெருவழி’ எனப்பட்டன. பண்டங்கள் கழுதை, பொதி மாடு, எருமைகளில் கொண்டு போகப்பட்டன. பணம் கடன் கொடுத்தவர், வாங்கியவரிடத்திற் பெறும் சீட்டு (Pronote) ‘கையெழுத்தோலை’ எனப் பட்டது. தமிழ் வியாபாரிகள் மலாயத் தீபகற்பம். இந்து சீனம், சீனா முதலிய நாடுகளுக்குச் சென்றனர். மாவலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், சாலியூர், கொற்கை முதலியன கிழக்கிலும், கொல்லம் மேற்கிலும் பெரிய வியாபாரப் பதிகளாயிருந்தன. இலங்கை நிக்கவாரம் (Nicobars) இலக்க தீவு, மாலை தீவுகள் மேற்கிலும், கப்பல்கள் தங்குதற்கு ஏற்ற இடங்களாயிருந்தன. சீன நாவாய்கள் மலையாளக்கரையிலுள்ள கொல்லம்வரையிற் சென்றன. அராபியாவிலிருந்து குதிரை வியாபாரிகள் குதிரைகளைக்கொண்டு வந்தனர். அடிமைகள் அக் காலத்தில் பணத்துக்கு விற்று வாங்கப்படும் அடிமைகள் இருந் தார்கள். உயர்குலத்தவர்களும் சில சமயங்களில் அடிமைகளாக வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் தம்மைக் கோயில்களுக்கு விற்றார்கள். அடிமை களை விற்று வாங்குவதற்கு அரசியல் ஆவணங்கள் எழுதப்பட்டன. கோயில்களுக்கு விற்கப்படும் பெண்கள் ‘தேவராட்டியர்’ எனப்பட்டனர். வேலையாட்களுக்குக் கூலி தானியங்களாகவே கொடுக்கப்பட்டது. கிராமம் கிராமங்களில் மக்கள் எளியவாழ்க்கை நடத்தினர். பண்ணைக்காரன் அல்லது நிலம் வைத்திருப்போன் மேலான நிலைமையில் இருந்தான். கிராம சபைகள் பெரும்பாலும் நிலம் வைத்திருக்கும் பெருமக்களின் கூட்டமா யிருந்தது. கிராமங்களைச் சுற்றிச் சில பகுதிகள் ஊர்ப் பொதுவாகவிருந்தன. வரி யிறுக்கும் மக்கள் கிராம ஆட்சியில் பெரும் பங்கு பற்றினர். ஒவ்வொரு கிராமத்திலும் கால்வழியாகவரும் வேலையாட்கள் இருந்தனர். சேக்கிழார், பெரிய புராணத்தில் நந்தனாரைப்பற்றிக் கூறும் பகுதி, அக்காலக் கிராம வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். தானியம் சேர்த்து வைக்கப்படும் இடம் ‘கொட்டகாரம்’ எனப்பட்டது. நிலம் செய்வோன் காணியாளனுக்குக் கொடுக்கும் பாகம் மேல்வாரம் எனப்பட்டது. அளவைகள் நிலங்கள் கோலால் அளக்கப்பட்டன. ஒரு கோல் 16 சாண்; 18 கோல் கொண்டது ஒரு குழி; 256 குழி கொண்டது ஒரு மா; 20 மா கொண்டது ஒரு வேலி. இடங்கள்தோறும் குழி அளவு மாறுபட்டது. ஆண்டு 360 நாட்களாகவும், சில காலங்களில் 365 நாட்களாகவும் கணக்குச் செய்யப்பட்டது. தானிய அளவை 2 செவிடு ஒருபிடி; 5 செவிடு ஓர் ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி ஒரு நாழி; 8 நாழி ஒரு குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 2 பதக்கு 1 தூணி அல்லது காடி; 3 தூணி ஒரு கலம். பொன் அளவை ஒரு மஞ்சாடி 2 குன்றி; 1 குன்றி 5 மா; 1 மா 4 காணி; (ஒரு மஞ்சாடி=2 குறுணி=10 மா=40 காணி) 20 மஞ்சாடி ஒரு கழஞ்சு (68 முதல் 72 தானிய எடை;) மா 1\20-யும் காணி 1\80-யும் குறிக்கும். பண எடை என்பது 1\10 கழஞ்சு. நீட்டலளவை 8 தோரை (தானியம்) ஒரு விரல்; 12 விரல் ஒரு சாண்; 2 சாண் ஒரு முழம். பள்ளிக்கூடங்கள் முற்காலம் பள்ளிக்கூடங்கள் மரத்தடி, 1கோயிற்சாலை அல்லது மடங்கள் அல்லது உவாத்தியாயர் வீட்டுத் திண்ணையிற் கூடின. பேர் பெரிய திண்ணைச்சட்டம்பியார் என்பது இன்றும் வழக்கு. ஆசிரியனுக்கு மாணவர் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயின்றனர். ஏட்டில் எழுதப்பட்ட புத்தகங்கள் வழங்கின. ஏடும் எழுத்தாணியும் கணக் காயராற் பயன்படுத்தப்பட்டன. சிறுவர் மணலில் எழுதிப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் அவனுக்கு உதவியாளனாயிருந்தான்; அவன் சட்டாம்பிள்ளை எனப்பட்டான். மாணவர் அவனுக்கு அடங்கி நடந் தார்கள். காலையில் மாணவர் மரத்தடியிலோ திண்ணையிலோ கூடினார்கள். ஆசிரியன் வந்ததும் அவர்கள் எல்லோரும் எழுந்து இருவென இருந்து அவன் கூறுவதைக் கருத்தாகக் கேட்டுப் பயின்றனர். தொல்காப்பியர் காலத்தில் இவ் வகைப் பள்ளிக்கூடங்களே இருந்தன. மாணாக்கர் ஆண் டில் ஒரு முறையோ இரு முறையோ உவாத்தியாயருக்கு வேண்டியவற்றை (பெரும்பாலும் தம் வயல்களிலும் கொல்லைகளிலும் கிடைப்பவைகளை) கையுறையாகக் கொடுத்தனர். மாணாக்கன் கல்வியை நிறுத்துங்கால் பெரிய கூட்டங்கூடி அவன் பயின்ற நூலைச் சபையோருக்குப் பிரசங்கிப்பித்து அவன் திறமையைக் காண்பிப்பதும் மரபாயிருந்தது. இலங்கை அரசர் வரலாற்றால் அறியப்படுவன சில இலங்கை அரசர் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது தமிழ் இரத்தக் கலப்புடையவர்களாக இருந்தனர். இவர்களின் அரண்மனைப் பழக்க வழக்கங்கள் தமிழ் அரசருடையனபோலவே இருந்தன. அரசனுக்குப் பக்கத்தில் ‘வலங்கை’ ‘இடங்கை’ என்னும் பெருமக்கள் இருந்தனர். சேனாபதி அரசனுக்கு அடுத்தபடியில் அதிகார முடையவனாயிருந்தான். அரண்மனைச் சமையலறையில் ஆடவரே வேலை செய்தனர். சமையலறை யில் புழங்கும் தட்டுக்களும் பாத்திரங்களும் வெள்ளி தங்கம் என்பவை களாற் செய்யப்பட்டவை. நாடோறும் காலையில் மருத்துவன் அரசனது உடல் நிலையைச் சோதித்து அதற்கேற்ற உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிச் சமையலறைத் தலைவனிடம் கொடுத்தான். உணவு சமைத்ததும் அரசன் உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சமைய லறைத் தலைவனுக்குச், சமைத்த எல்லாவகை உணவிலும் சிறிது சிறிது எடுத்துக் கொடுக்கப்பட்டன. அவன் உண்டு ஒரு மணி நேரத்துக்குப்பின் அரசன் உணவு அருந்தினான். அக்கால அரசர் உணவில் நஞ்சு இடப்படு வதைக் குறித்துப் பெரிதும் அஞ்சினர்.1 அரசனுக்குச் சோறும், நூறு (பல) வகையான கறிகளும் சமைக்கப்பட்டன. அரசன் அவைகளுட் சிலவற்றை மட்டும் கொண்டு வரும்படி செய்து உண்டான். அவனுக்குச் சமயலறையில் சேவிப்போரெல்லோரும் வாயைத் துணியாற் கட்டியிருந்தனர். பெரியோர்க்கு முன் கைகட்டி வாய் புதைத்து நிற்றல் என்பன பழைய மரபுகள். இன்றும் கதிர்காமத் திருகோயிலிற் பூசை செய்யும் சிங்கள குருமார் பூசை நேரத்தில் தமது வாயைத் துணியாற் கட்டிக்கொள்வர். புரோகிதன், அரசன் வெளியே செல்வதற்கும் பிற கருமங்களைச் செய்வதற்கும் நல்ல நேரம் அறிந்து கூறினான். அரசனைக் காணச் செல்வோர் அவனைப் பார்த்தபின் சிறிது தூரம் பின் நோக்கி நடந்து சென்று அப்பால் திரும்பிச் செல்வர். அரச னுக்குப் பின்காட்டிச் செல்வது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது. மக்கள் அரசனுடன் பேசும்போது தம்மை அடிமைகள் (அடியேன்) நாய்கள் (நாயேன்) என்று குறிப்பிட்டுப் பேசுவார்கள்.2  இயல் - 6 கிழக்கே தமிழரின் குடியேற்ற நாடுகள் கிறித்தவ ஆண்டுகளின் முன்னர் தமிழ்மக்கள் சுமத்திரா, யாவா, பாலி முதலிய தீவுகளிலும், பர்மா, சீயம், இந்துச் சீனம், மலாய், குடாநாடு முதலிய நாடுகளிலும் குடியேறி இராச்சியங்களைக் கோலி ஆட்சிபுரிந்தனர். அக் காலத்தில் அக் குடியேற்ற நாடுகளில் சைவமதம் பரவியிருந்தது. அந் நாடுகளிற் காணப்படுகின்ற பழைய அழிபாடுகளும் கல்வெட்டுகளும் பழங்கதைகளும் நன்கு ஆராயப்பட்டுள்ளன. அவைகளை ஆதாரமாகக் கொண்டு அந்நாட்டு வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவ் வரலாறு களால் அக் காலத்துக் கடல் கடந்து சென்ற தமிழரைப்பற்றி யாம் நன்கு அறிதல் கூடும். மணிமேகலை என்னும் தமிழ்நூல் (கி.பி. 200) சாவகத் தீவிலே நாகபுரத்திலிருந்து அரசாண்ட பூமிசந்திரன், புண்ணியராசன் என்னும் அரசர் இருவரைக் குறிப்பிடுவதோடு தமிழ்வணிகர் மரக்கலங்களில் சரக்குகளை ஏற்றித் தொலைவிடங்களிற் கொண்டு சென்று விற்றுப் பெரும் பொருளீட்டினார்கள் என்றும் கூறுகின்றது. திரிதிரயதா என்னும் பிராமணன் கம்போதியாவினின்றும் எண்ணூறு கிளிங்குக் (Kling) குடும்பங்களோடு சென்று பிரமாரி காளி என்னும் யாவக மாதை மணந்து அந் நாட்டுக்கு அரசனானான் என அந் நாட்டுப் பழங் கதைகள் கூறுகின்றன. யாவகத்தின் முதல் அரசனுக்கு ஸ்ரீமாறன் என்று பெயர். இப் பெயர் சாவக நாட்டின் அரச பரம்பரை தமிழ் உற்பத்தியுடைய தென்பதை நன்கு விளக்கும். யாவாவிலுள்ள பெரொக் என்னும் மக்களிடையே இன்றும் திராவிடக் குடும்பப் பெயர்கள் வழங்குகின்றன.1 யாவாவிலே மிகப் பெரிய சில ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. பழைய புராணங்களில் யாவகத் தீவு, சுவர்ண பூமி எனக் கூறப்பட்டுள்ளது. யாவகத் தீவிலும் அதனை அடுத்துள்ள தீவுகளிலும் காணப்படும் அழிபாடுகளாலும், கிடைத்துள்ள பழம்பொருள்களாலும் பிறவற்றாலும் அறியக்கிடப்பன பின்வருமாறு: 1யாவாத் தீவிற் காணப்படும் திருக்கோயில்களுட் பல சிவனுக்கு உரியன. யாவக மக்களின் அமரமாலை என்னும் நூல் பழமை யுடையது. அஃது அம் மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறுகின் றது. அந் நூலினால் அந் நாட்டினர் சிவனையே தலைமையாகக்கொண்டு வழிபட்டார்களெனத் தெரிகின்றது. சிவன், குரு, ஈஸ்வரன் என்னும் பெயர் களால் வழிபடப்பட்டார். சுமத்தியாவிலே லாரா யொங்றாங் (Lara Yongrang) என்னுமிடத்தில் ஆலயக் கூட்டங்களின் பெரிய அழிபாடு உள்ளது. இதன் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இருமருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங்களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி உமையுமாகவுள்ள அர்த்தநாரீசுவரத் திருவடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல இங்குள்ளன. இவை இந்திய ஆலயங்களிற் காணப்படும் திருவுருவங்களைச் சாலவும் ஒத்தன. போர்க் கடவுளாகிய கார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் யாவாவிற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில்மீது ஏறிச்செல்வது போன்ற உருவங்களே பெரும்பாலும் உள்ளன. ஆறு தலையும் பன்னி ரண்டு கையுமுள்ள திருவுருவங்கள் சிலவும் காணப்படுகின்றன. சிவன் இலிங்க வடிவிலும் வழிபடப்பட்டார். சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்திருக்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவுருவங்களும் கிடைத்துள்ளன. பாம்பின்மீது படுத்துத் துயில் கொள்ளும் திருவுருவங்கள் சிலவும் இங்குக் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இரு பக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலித் தீவிற் கண்டுபிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை தாமரை கரகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகமுடைய பிரமாவின் விக்கிரகம் யாவாவிற் காணப்படுகின்றது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் மும்மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற் செய்யப்பட்ட சிவன் திருவுருவம் ஒன்றுங் கிடைத்தது. செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந் நாட்டு மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபாட் (Crawfurd) என்பார் நியுகினியிற் காணப் படும் சமயக்கிரியைகள் சிவவழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட் டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுடன் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது. 1மலாய்க் குடா நாட்டிலுள்ள தீவுக்குச் சிங்கபுரம் என்னும் பெயர் அந் நாட்டு மக்களாற் கொடுக்கப்பட்டதன்று; யாவாத் தீவிற் குடியேறி அங்கு நின்றும் வெளிப்போந்த தென்னிந்திய மக்களால் இடப்பட்டது. அதற்குத் தமசக் அல்லது தமசா2 என்னும் பெயர் இருந்ததெனக் கொள்ளி னும், அதுவும் இந்திய உற்பத்திக்கு உடையதாகும். சுமத்திரா என்பதும் இந்திய மக்களாற் கொடுக்கப்பட்ட பெயரே. சுமத்திரா என்பதற்கு நல்ல பொருள் என்ற கருத்து.3 கி.பி. 1601 முதல் சிங்கபுரம் சிங்கப்பூர் என வழங்கப்படுகின்றது மலாய்க் குடா நாட்டிலே கொபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அழகிய நடராசத் திருவுருவ மொன்றும் காணப்பட்டது. இன்று மலாய்க் குடா நாட்டிற் காணப்படும் மக்கள் தமிழரினின்றும் தோன்றியவர்களாவர் எனச் சுவற்றின்காம் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். கம்போதிய மக்களின் பழங்கதைகளில் கம்புசுவாயம் பவ என்பவருக்குச் சிவன் அளித்த மேரா அல்லது பேரா என்பவளிடம் பிறந்து பெருகியவர்களே அந் நாட்டு மக்கள் எனக் கூறப்படுகின்றது. கம்போதியா கொச்சின் சீனா தெற்குச் சீயம் முதலியன அடங்கிய பகுதியைச் சீனர் பூனான் (Funan) என வழங்கினர். கவுண்டினியா என்னும் பிராமணன் நாகினி சோமா என்னும் அரசகுலப் பெண்ணை மணந்து கம்போதியாவுக்கு அரசனானான் என அந் நாட்டுப் பழங்கதையுள்ளது.4 இலங்கை தென்னிந்திய கிழக்குக் கரையோரங்களில் வாழ்ந்த மக்களே கம்போதியாவில் குடியேறி னார்கள்.5 கம்போதிய அரசர், வர்மன் என்னும் பட்டப்பெயர் புனைந்து முடிசூட்டப்பெற்றனர். தென்னிந்திய பல்லவ அரசர்களும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சந்திரவர்மன் என்னும் கம்போதிய அரசன் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அங்கோர்வாட் (Ankor-Vat) என்னுமிடத்திற் காணப்படும் கோவிற் கோபுரங்கள் தென்னிந்திய கோயிற் கோபுரங்களை ஒத்துள்ளன. இங்குக் காணப்படும் நடராசத் திருவுரு வங்களும் பிறசான்றுகளும் இங்குக் குடியேறினோர் தென்னிந்திய மக்களே என்பதை விளக்குகின்றன.1 கம்போதிய அரசருள் பாவவர்மன் என்போன் சிறந்த சிவபத்தன். இவன் கி. பி. 616இல் கம்பீரவாணர் என்னும் ஒரு சிவலிங்கத்தை நாட்டி வழிபட்டு வந்தான். கம்போதியர் கடவுளருள் சிவனே தலைமைபெற்றிருந்தார். பிரசார், சினெங், கறாபி முதலிய இடங்களிற் சிவன் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப்படு கின்றன. இடபத்தின்மீது வீற்றிருக்கும் வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பல கம்போதி யாவிற் கிடைத்துள்ளன. சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன.2 இவை களின் முன்னே பொதுமக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவலிங்கமொன்று உள்ளது. பெண்கள் இதனைச் சுற்றிவந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மலாயர் யாவகர் மகமதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வது போலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ் வாலயத்தில் வழிபடுகின் றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயங்கட்டி அங்குச் சிவலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டிற் காணப்படு கின்றது. கம்போதியாவிலே சிவன் கோயில் ஒன்றிற் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டிற் காணும் விபரம் பின்வருமாறு: யோகவர்மன்,3 ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காசு, குதிரை, எருமை, யானை, ஆடவர், மகளிர், பூமாலை முதலிய வற்றை அரசர் எவரும் கவர்ந்துகொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசனின் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளே செல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொதுமக்க ளும் ஆடம்பரமில்லாத உடையுடன் உள்ளே செல்லாம்; அவர்கள் நந்தி யாவர்த்த மாலையையன்றி வேறு மாலைகளை அணிந்துகொண்டு செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் இருந்து எவரேனும் வெற்றிலை போட்டுக்கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர்களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம். அரசனையன்றி வேறெவராவது ஆலயத்துக்கு முன்னால் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட்டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள், திருமாலை வழிபடும் குருமார், பொதுமக்களுள் சிறந்தோர் முதலியவர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலைமைக் குரு இவர் களை வரவேற்றுச் சொன்ன முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண்டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக்கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவும் நரகத்தைச் சேர்வார்கள்; இக் கட்டளை களுக்குட்பட்டு அவைகளை வலுப்படுத்துகின்றவர்கள் இத் தருமத்தை உண்டாக்கியவர் பெறும் பலனிற் பாதியைப் பெறுவர். கலிங்க நாட்டினின்றும் எழுநூறு தோழரோடு சென்ற விசயனென் னும் இராசகுமாரனே இலங்கையின் முதல் அரசன் எனப்படுகின்றான். கலிங்கர் தமிழர்களே என்பது எவருமறிந்த உண்மை. முன் ‘எல்லம்’ என வழங்கிய இலங்கைத்தீவு சிங்க வமிசத்தவனாகிய கலிங்க அரசன் ஆண்ட மையின் சிங்கலம் (சிங்களம்) எனப் பெயர் பெற்றது. இன்னும் சிங்கள மக்கள் தாம் விசயனதும் அவன் 700 தோழர்களதும் வழித்தோன்றல்கள் என நம்பி வருகின்றனர். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம், மலாயா, இலங்கை முதலிய நாடுகளி லெல்லாம் நாகவழிபாடு காணப்பட்டது. இது காரணமாக அந் நாடுகளின் மக்கள் நாகர் எனவும் அறியப்பட்டனர். யாவாத் தீவிலே அரசனும் அவனைச் சூழ்ந்து திரியும் பெருமக்களும் பொன் பாம்பு, பொன் யானை, பொன் மான், பொன் கோழி, அர்ச்சுனனின் அனுமக்கொடி என்பவைகளைக் கையில் வைத்திருந்தார்கள். இங்குக் கி. பி. 11ஆம் நூற்றாண்டிற் றமிழிற் பொறிக்கப்பட்ட பட்டையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.1 இதனால் ஒரு காலத்தில் தமிழ் யாவாத்தீவில் அரசினர் மொழியாக இருந்ததென நன்கு அறியலாம். அருச்சுனன் நாகர் குலக் கொடியாகிய யாவகமாதை மணந்து அரவானைப் பெற்றானென்று யாவக மக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலே பௌத்த சமயம் தலையெடுத்தபின் பலி மரபினர் கடல் வழியாகச் சென்று பாலித்தீவிலும் அயலேயுள்ள தீவுகளிலும் குடி யேறினர். இத் தீவுகளில் வாழும் மக்கள் திராவிட மக்களை ஒத்த ஒழுக்க முடையவர்களாகக் காணப்படுகின்றனர் என அகரம் என்பவர் குறிப்பிட் டுள்ளார்.1 மாபலி அசுரன் எனப்படுகின்றான். அசுரர்கள் வேதகாலத்துக்கு முன்பும் அதன் முற்பகுதியிலும் தேவர்கள் எனப்பட்டனர். பிற்காலத்தில் அவர்கள் இராக்கதர் அல்லது தேவர்களின் பகைவர் எனப்பட்டனர்.2 இராமாயணத்திற் கூறப்படும் வாலியும் சிவலிங்க வழிபாட்டினன். வாலியின் மரபும் பலியின் மரபும் ஒன்றோவென்பது ஆராயத்தக்கது.  இயல்-7 தமிழர் சமய வரலாறு இன்று இவ் வுலகில் பல்வேறு நிறத்தினரும் மொழியினருமாகிய மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். மனிதவரலாற்று, மொழி வரலாற்று ஆராய்ச்சியாளர், இவர்கள் எல்லோரும் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்களேயென ஆராய்ந்து அறுதியிட்டுள்ளார்கள். இதனை ஒப்பவே மக்களின் சமயமும் ஒன்றாயிருந்து வளர்ச்சியுற்றுப் பின் பலவேறு கிளைகளாகப் பிரிந்ததென்பது உய்த்தறியப்படும். அம்மை வழிபாடு மக்களிடையே ஆதியிற்றோன்றியது தாய் வழிபாடு. வீரம் செல்வம் கல்வி போன்றவைகளுக்கெல்லாம் தலைமை பெற்றிருக்கும் கடவுளர் பெண்பாலினரே. உலகில் ஆதியிற்றோன்றியது பெண் ஆட்சி. அக் காலத்தில் மணத் தொடர்புகள் இறுக்கம் அடையவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமானவை; தந்தைக்கு அவைகளிடம் உரிமை உண்டாகவில்லை.1 இன்றும் இவ் வழக்குத் திருந்தாத மக்களிடை யும் திருந்திய மக்கள் சிலர் இடையும் காணப்படுகின்றது. மலையாள நாட்டில் மருமக்கட்டாயம் என்னும் வழக்குண்டு. இதன்படி தந்தையின் சொத்துப் பிள்ளைகளைச் சேராது அவன் சகோதரியின் பிள்ளைகளை அடைகின்றது.2 திருவிதாங்கூர் அரசுரிமையும் பெண்வழியையே சேர்கின் றது. அரசனின் மருமகனும் மருமகளுமே இளைய இராசர், இளைய இராணி என்னும் பட்டம் பெறுகின்றனர். அரசனின் பிள்ளைகளுக்கு இராச்சியத்தில் ஒருவகை உரிமையும் இல்லை.1 இவ் வழக்குகளெல்லாம் பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்தின் எதிரொலிகளே. சகோதரியின் மகன் மகளை மணம் முடித்தலினாலேயே பெண்ணின் தந்தையின் சொத்து மருமகனைச் சீதனமாக அடைகிறதெனத் தேயிலர் என்னும் மனிதவியலார் குறிப்பிட் டுள்ளார். ‘தாயம்’ என்பது பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்துத் தோன்றிய சொல். இது, சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளை அடைந்தது என்பதை நன்கு விளக்குவது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில் பிள்ளைகள் தாயைச் சூழ்ந்திருந்தார்கள். தாயிடத்தில் எல்லா அதிகாரமும் இருந்தன. எல்லா அதிகாரமுடைய தாய் தெய்வமாக வணங்கப்பட்டாள். ‘தாயிற் சிறந் தொரு கோயிலில்லை’ அல்லவா? இவ் வழிபாடு மக்கள் வாழ்க்கைப் பருவத்தின் மிக முற்காலத்திலேயே தோன்றியிருந்தது. இன்று தாய்க்கடவுளின் சிலைகள், வளர்ந்த கடைவாய்ப் பற்களுடையனவாகக் காணப்படுகின்றன. தென்னிந்திய மக்களின் நாகரிகம் படைப்புக்காலம் முதல் படிப்படியே வளர்ந்துவந்துள்ளதென்பது முன்னமே காட்டப்பட்டுள்ளது. இத் தாய்க்கடவுளின் வடிவமும் ஆதிகாலத்தில் மக்கள் கொண்டு வழிபட்ட வடிவைப் பின்பற்றியே வெட்டப்பட்டும் எழுதப்பட்டும் வரு கின்றதெனக்கொள்ளுதல் தவறாகாது. தார்வின் (Darwin) என்பார் எல்லா ராலும் உச்சிமேல் வைத்துப் புகழப்படும் உயிர்நூற் புலவர். இவர் ஆதிகால மக்களுக்கு வளர்ந்த கடைவாய்ப்பற்கள் இருந்தனவென்றும், அவை பச்சை இறைச்சியைக் கிழிப்பதற்குப் பயன்பட்டன வென்றும், அவைகளின் பயன் குறைந்தகாலத்தில் அவை வளர்ச்சிக் குன்றி வேட்டைப் பல் (Canine teeth) அளவில் இருக்கின்றனவென்றும் கூறியுள்ளார்.2 ஆகவே, தாய்க்கடவுள் வழிபாடு மக்களுக்குக் கடைவாய்ப் பற்கள் வளர்ச்சியடைந்திருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்ததெனக் கொள்ளலாம். தாய்க்கடவுளின் வாகனம் சிங்கம். அவள் கையிலிருக்கும் ஆயு தங்கள் தண்டும் கேடகமும். கடவுளருக்கு நான்கு கைகளும் பல கைகளும் கொடுக்கும் வழக்கம் கிறித்தவ ஆண்டுக்குப் பின்னையது என 1மாக்டனல் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர் கூறுவது: “இந்துக் கடவுளரின் வடிவங்களை அமைக்கும் முறையில் கிறித்தவ ஆண்டின் ஆரம்பத்தில் சில மாற்றங்கள் உண்டாயின. அதற்கு முன் இக் கடவுட்சிலைகள் மனிதனைப்போல இரண்டு கைகளுடையனவாயிருந்தன. இவ்வகை வடிவங்களே பௌத்த சிற்பங்களிற் காணப்பட்டன. இரண்டாம் கற்பீஸ் (Kadphis II; 50. A.D.) என்னும் கிரேக்க இந்திய அரசனின் நாணயத்தில் சிவன் இரண்டு கைகளுடையவ ராகவே காணப்படுகிறார்.” மொகஞ் சொதரோவிற் காணப்பட்ட சிவன்வடிவுக்கு இரண்டு கைகள் இருப்பதும் மேற்படி கூற்றை வலியுறுத்துகின்றது. சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் நாடு ஒன்று உள்ளது. இம் மக்களின் வழிபாடு நாகரிகம் முதலியன தமிழ் மக்களுடையன போன்றன. இங்குக் காணப்பட்ட பழைய நாணயமொன்றில் ஒரு கையிற் றண்டும் மற்றக் கையிற் கேடகமும் பிடித்துச் சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தாய்க் கடவுளின் உருவம் பொறிக்கப்பட் டிருக்கின்றது. இதனால் பண்டைய தாய்க்கடவுளின் வடிவம் இரண்டு கைக ளுடையதாகவே இருந்ததெனத் துணியப்படும். பெண் சிங்கத்தின் மீதிருக்கும் குடைசு என்னும் தாய்க்கடவுளே எகிப்தியரது போர்த் தெய்வமாகும். தாய்க்கடவுள் மேற்கு ஆசிய மக்களால் அஸ்ரெறெத் ஹெரா, றியா முதலிய பல பெயர்களால் வழிபடப்பட்டது. மக்கள் மிகத் தாழ்நிலை அடைந்திருந்த காலத்தே தாய்க் கடவுள் வழிபாடு ஆரம்பித்ததென்பது அதன் வழிபாட்டு முறைகளால் நன்கு அறிதும். தமிழ் மக்கள், காடுகிழாள், கொற்றவை, விந்தை, காளி முதலிய பெயரால் தாய்க்கடவுளை வழிபட் டார்கள். தாய்க் கடவுளுக்கு நரபலியும், எருமை ஆடு முதலிய பிற பலிகளும் இடப்பட்டன என்று பழந்தமிழ் நூல்களால் அறிகின்றோம். காளி பாலை நிலத்தெய்வம். பாலைநில மக்கள், வேடர், இடையர், உழவர் என்னும் மக்க ளின் வாழ்க்கைப் படிகளில் ஆரம்பப் படியிலுள்ளோர். ஆகவே, தாய்க் கடவுள் வழிபாடு, மக்கள் பயிரிடாதும், மிருகங் களைப் பிடித்துப் பழக்கி வளர்க்க அறியா தும் இருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்த தாகும். தாய்க் கடவுள் வழிபாட்டின்போது பாம்பு வழிபாடு ஆரம்பிக்க வில்லை போலும். நாணயத்தில் இடபத்தின் மீது இருக்கும் அப்பரும், அருகில் சிங்க வாக னத்தின் மீதிருக்கும் அம்மையும் காணப் படுகின்றனர். சிரியா, பாபிலோன், எகிப்திய நாடுகளிலும் சிங்க வாகனமுடைய தாய்க் கடவுளே மேலான தெய்வமாக வழிபடப்பட்டது1. அப்பர் வழிபாடு தாய்க்கடவுள் வழிபாடு இவ்வாறு தோன்றி நடைபெற்று வரும்போது திரு மணக் கட்டுப்பாடு இறுக்கமடைந்தது; தந்தை ஆட்சி உண்டாயிற்று. தந்தையே எல்லா அதிகாரமும் உடையவனானான். ஆகவே, தந்தை வழிபாடு உண்டாயிற்று. ஒளவைப்பிராட்டியர். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என அருளிச்செய்திருக்கின்றமையும் அம்மை அப்பர் வழிபாட்டை ஓரளவு விளக்குவதாகும். தந்தை வழிபாடு, காலத்தில் வேந்தன் வழிபாடாக மாறிற்று. தாய்க்கடவுளை ஒப்பப் பழைய மக்கள் வழிபட்ட தந்தை வடிவம் இன்றைய சிவன் வடிவமே எனத் தெரிகின்றது. கித்தைதி நாட்டிலே காணப்பட்ட பழைய நாணயத்தில் தாய்க் கடவுளுக்கு வலப்பக்கத்தே, முத்தலைவேலும் கண்டகோடரியும் கையிற் றாங்கிய அப்பர் வடிவம் ஒன்று இடபத்தின்மீது நிற்கின்றது.1 இதே வடிவின தாகக் கல்லாற் செதுக்கப்பட்ட சிலைகளையும் அந்நாட்டு மக்கள் வழி பட்டார்கள். சிவனுக்குரியனவாகச் சொல்லப்படும் எலும்பு, ஊமத்தை மாலை, சங்க வெண்குழை, புலித்தோலுடை முதலியவைகளால் மக்கள், தோலை உடையாகவும், எலும்பு இப்பி முதலிய வைகளை அணிகளாகவும் கொண்ட ஒரு காலத் தில் இவ் வழிபாடு தோன்றிற்று என்று நன்கு சிந்தித் தறியலாகும். முற் காலத்தில் இந்திய மக்களுக்கு வாகனமாகப் எருதுகளே பயன்பட்டன. இன்றும் ஆலயங்களில் எருதுகளின்மீது வாத்தியக்காரர் ஏறியிருந்து பேரிகை கொட்டிச்செல்வதை நாம் பார்க்கலாம். ஆகவே, அக் காலத் தந்தைக்கட வுளுக்கு இடபம் சிறந்த ஊர்தி ஆக்கப்பட்டது. கிதைதி, சீரியா, கிரேத்தா, சுமேரியா முதலிய நாடுகளின்2 நாணயங்களில் இமில் உள்ள இந்திய இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இடபத்தை ஊர்தியாகவுடைய தந்தை வழிபாடு இந்திய நாட்டிலேயே ஆரம்பித்திருத்தல் வேண்டும். கிதைதி நாட்டு அரசனுக்கும் இரண்டாம் இரம்செ என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கை ஒன்று சூளையிட்ட களிமண் தகடுகளுட் கண்டெடுக்கப்பட்டது. அவ் வுடன் படிக்கை கி. மு. 1290இல் எழுதப்பட்டுள்ளது. அதில் இடியேற்றைக் கையிற் பிடித்திருக்கும் தந்தைக் கடவுளே எல்லாக் கடவுளரிலும் மேலானவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. Golden Bough-IV, P. 137. “His hands are raised, in his right he holds a single headed axe or hammer, in the left a trident of wavy lines, which is thought to stand for forked lightning or a bundle of thunderbolts...... The combination of the bull with the thunderbolt as emblems of deity suggests that the animal may have been chosen to represent the sky God not merely of its virility but of its voice; for in the peal of thunder premitive man may well have heard the bellowing of a cellestial bull.-Ibid. It is from the Indian mythology that we get our nearest insight into the character of these deities and the meanings of those sculptures. For the bull represents Siva whose emblem was a trident and also an exe-The Hittite empire-John Garstang. கித்தைதி நாட்டில் காணப்பட்ட வேறு சில சிற்பங்களில் அக் கடவுள் முக்கோண வடிவான வில்லும் சூலமும் பிடித்து இடபத்தின்மீது நிற்கின்றார். இடபத்தின் கொம்புகள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. “In his right hand which is drawn pack there is a triangular bow. The horns of the bull are wreathed with garlands-Ibid P. 202. சிரியா மக்கள் வழிபட்ட அடாட் என்னும் சிவன் கடவுளின் திருவடிவம் ஒன்று அவ் விடத்திற் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத் தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அக் கடவுள் ஒரு கையில் இரண்டு அலகுள்ள கோடரியையும் (மழு) மற்றக் கையில் கீழும் மேலும் முத்தலைகளுடைய வேலை யும் பிடித்திருக்கின்றார். மேற்கு ஆசிய மக்கள் முத் தலை வேல் அல்லது சூலத்தை இடியேறு என வழங் கினார்கள். “At his(The Jupiter of Syria) side hangs his sword in its scabbard. His right hand brandishes a double axe; his left grasps a thunderbolt consisting of six spirally-twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between eyes-Zeus P. 619. இடபத்தின் நெற்றியில் பூமாலை கட்டப்பட் டுள்ளது. “....for in the Roman art he reappears under the title of Jupiter Dolichenus, wearing a phrygian cap, standing on a bull, and weilding a double axe in one hand and a thunderbolt on the other. In this form his worship was transported from the native home by soldiers and slaves till it had spread over a large part of the Roman empire, specially on the frontiers where it flourished in the camps of the legions”-The golden bough-a study of art and religion-part IV, P. 134-J.G. Fracer. அம்மை அப்பர் வழிபாடு இவ்வாறு அம்மை அப்பர் வழிபாடுகள் ஆதியிற் றனித்தனியே தோன்றின. பின்பு மக்கள் இவர்களை மனைவி கணவன் என்னும் முறையின ராகக் கொண்டு வழிபடலாயினர். கிதைதி நாட்டில் நாணயத்திற் காணப் பட்ட வடிவங்களும் இதனையே குறிப்பிடுகின்றன. மேற்கு ஆசிய நாடு களில் அம்மை அப்பர் வழிபாடு இன்னொரு வகையிலும் ஆரம்பித்தது. ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகள் அவர்களிடையே தோன்றிய காலத்தில் அவர்கள் திங்களைத் தாய்க்கடவுளாகவும் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாக வும் கொண்டு வழிபட்டனர். ஆகவே, பழைய அம்மை அப்பர் வழிபாடுகள் மேற்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகளுள் நுழைந் துள்ளன. ஞாயிற்று வழிபாடு இதன்மேல் இவ்வுலகில் இருளைப்போக்கி ஒளியைக் கொடுக்கும் ஞாயிறே முழுமுதற் கடவுள் என்று மக்கள் உணர ஆரம்பித்தனர். அவர்கள் சிவந்தவன் அல்லது சிவந்த ஒளியுடையவன் என்னும் பொருளில் ஞாயிற்றுக்குச் சிவன் என்னும் பெயர் கொடுத்து வழிபடுவாராயினர். இப் பெயரே ஆதியில் ஞாயிற்றுக்குப் பெயராக வழங்கிற்று என்பதைச் சிவன் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சிவன் என்பதற்கு அடுத்தபடியில் எல் என்னும் பெயர் கதிரவனின் பெயராக வழங்கிற்று. மேற்கு ஆசியாவில் எல்லின் திரிபாகிய பெயர்களே ஞாயிற்றைக் குறிக்கப் பெரிதும் வழங்கின. உலக மக்கள் எல்லோரும் கடவுளின் பெயராக ஆண்ட பெயர்களை ஆராயு மிடத்து அவை ஒளி அல்லது ஒளியுடையவன் என்னும் பொருளையே கொடுக்கின்றன.1 எல் என்பது ஞாயிற்றையும் ஒளியையும் குறிக்கத் தமிழில் வழங்கிய சாலப் பழைய பெயர். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப் பியம். ஞாயிற்றுக் கடவுளை மக்கள் மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டனர். ஆகவே உலகம் முழுமையிலும் இக் கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என்று கொள்ளப்பட்டது. இன்றும் சிவன் கைலாய மலையில் இருக்கிறார் எனப் பொதுமக்களும் பிறரும் நம்பி வருகின்றனர். மலைகள் இல்லாத நாடுகளில் ஞாயிற்றுக் கடவுள் செய்குன்றுகள் மீது வழிபடப்பட்டார். இவ் வகைச் செய்குன்றுகளி லொன்றே பேபெல் என்னும் கோபுரம்2 இவ்வகைச் செய்குன்றுகள் மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா என்னும் நாடு களிற் பல உள்ளன. உலக வியப்புக்கள் எனப்படும் எகிப்திய கூர்நுதிக் கோபுரங்களும் இவ் வகையினவே. இவை ஞாயிறு நடு உச்சிக்கு வரும் நாளில் அது எழும் திசையைப் பார்க்கும்படி கட்டப்பட்டுள்ளன.1 தென்னிந் திய ஆலயங்களும் கிறித்தவர்களின் ஆலயங்களும் இவ்வாறே கட்டப் படுகின்றன. சலமனின் ஆலயமும் கிழக்குத் திக்கை நோக்கியே நின்றது. இலிங்க வழிபாட்டின் தொடக்கம் அடுத்தபடியில் மக்கள் செய்குன்றுகளுக்குப் பதில்அடி நிமிர்ந்து தலைகுவிந்த கற்களைச் சோலைகளிலும் வெளிகளிலும் நட்டு வழிபடுவா ராயினர். திருவானைக்கா, தில்லையம்பலம், திருவாலங்காடு முதலிய தென்னிந்திய ஆலயங்களின் பெயர்களால் இதன் உண்மை நன்கு தெளிதும். முன் இலிங்கங்கள் நிறுத்தி வழிபடப்பட்ட இடங்களிலேயே பின்பு ஆலயங்கள் எழுந்தன. உலகம் முழுமையிலும் இவ்வகை வழிபாடு ஒரு காலத்திற் காணப்பட்டது. ஆலமர் கடவுள் ஒவ்வொரு கிராமங்களிலும் மன்றங்கள் உண்டு. மன்றமென்பது ஊருக்கு நடுவே மக்கள் கூடும் மரத்தடி. மரத்தைச் சுற்றித் திண்ணையிருந்தது. ஞாயத் தீர்ப்பு, பள்ளிக்கூடம், ஆடல் பாடல் முதலிய பொழுது போக்குகள் இன்னும் கிராம மக்களின் எல்லாக் கிளர்ச்சி, நிகழ்ச்சி என்பவைகளுக்கு இடம் இதுவே. மன்றத்தே பெரும்பாலும் ஆலமரம் நின்றது. நிழல் மரங்களில் ஆல் தலைமையுடையது. மன்றத்து மரங்களின்கீழ் இலிங்கம் நிறுத்தப் பட்டிருந்தது. இதனைச் சுற்றித் தினமும் அலகும் மெழுக்குமிடப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது.1 ஆலின் கீழ் இருந்தமையின் கடவுளுக்கு ‘ஆலமர் கடவுள்’ ‘ஆலமர் செல்வன்’ என்னும் பெயர்கள் உண்டாயின. பழந்தமிழ் நூல்களில் இப் பெயர்களே சிவனைக் குறிக்கப் பெரிதும் காணப்படுகின்றன. ஆல் ஐயன் இடம் ‘ஆலயம்’ எனப்பட்டது. மேற்கு ஆசிய நாடுகளிலும் அருட்குறிகள் கருவாலி மரங்களின்கீழ் வைத்து வழிபடப்பட்டன;2 கிரேத்தாவில் யூகாவிப்ரஸ் மரங்களின்கீழ் கற்றூண்கள் நிறுத்தி வழிபடப்பட்டன. எகிப்தியரும் கிரேக்கரும் ஆலி னத்தைச் சேர்ந்த அத்தி மரத்தைப் பரிசுத்தமுடையதாகக் கொண்டு, அதனால் இலிங்கங்கள் செய்தனர். திங்கள் வழிபாடு ஞாயிற்று வழிபாட்டுக்குப் பின் திங்கள் வழிபாடு தோன்றிற்று. இந்திய நாட்டில் சந்திரன் ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. மேற்கு ஆசிய நாட்டவர் இதனைப் பெண் தெய்வமாகக் கொண்டனர். அன்னோர் மரத்தின்கீழ் நிறுத்தப்பட்ட கற்றூணை ஞாயிறாகவும் மரத்தைத் திங்க ளாகவும் கொள்வாராயினர். பின்பு திங்கட் கடவுள் ஞாயிற்றுக் கடவுளின் மனைவியாக்கப்பட்டது. மரங்களும் சோலைகளும் திங்கட்கடவுளாக வழி படப்பட்டன. மரத்துக்குப் பதில் மரத்தூண்களும் நிறுத்தி வழிபடப்பட்டன. இவ்வாறு மேற்கு ஆசிய நாடுகளில் ஆண் கடவுள் பெண் கடவுளரைக் குறிக்க இலிங்கங்கள் நிறுத்தப்படலாயின. தமிழ் நாட்டில் இவ்வாறு நிகழ வில்லை. இலிங்க வணக்கம் உலகம் முழுமையும் காணப்பட்டது எச். சி. வெல்ஸ் என்னும் ஆசிரியர் இலிங்க வழிபாடு இங்கிலாந்து முதல் கிழக்கே யப்பான் வரையும் காணப்பட்டதெனக் காட்டியுள்ளார். அமெரிக்காவின் சில பாகங்களில் இன்றும் இவ் வணக்கம் காணப்படுவதை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். முக்கேர்சி என்பவர் இந்திய நாகரிகமும் அதன் பழமையும் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ள வற்றின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். 1“இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத்தைத் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ் வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத் துள்ளன. சீனா, யப்பான், இந்துக் கடல், பசிபிக்கடற் றீவுகள் முதலிய இடங் களில் இவ் வழிபாடு முற்றாகத் தூர்ந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க2 மக்களிடையும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பபிலோனிய மக்களிடையும் இவ் வணக்கம் காணப்பட்ட தென்பதைக் கிறித்தவ மறை வாயிலாக அறிகின்றோம். சின்னாட்களின்முன் பபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோறஸ், இஸ்றஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக் கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங் கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ் வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஓட்டுவதற்குக் கிறித்தவ குருமார் மிக ஊக்கம் எடுத்தார்கள். கிரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கத் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள், பல கிறித்தவ ஆலயங்களுட் காணப்படுகின்றன. அவை ‘சீலநாகிக்’ (Sheila-na-gig) என்று வழங்குகின்றன. இஃது ஒருபோது சிவ லிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கி லாந்திலும் இஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தனர். இவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளை யும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இவ் வணக்கத்தை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல்கூடும். செர்மனியிலும் பிரான்சியிலும் இவ் வணக்கம் மிக்கு வழங்கியிருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. லிதுவேனிய மக்கள் (Lithuanians) 14ஆம் நூற்றாண்டு வரையில் இவ் வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, புத்தான் (Bhutan) என்னு மிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசிம் (Shin-toism) என்னும் யப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெச்சிக்கோ, பேரு, கைதி தீவு (Hyti)களில் சிவலிங்கம் வழிபடப்பட்டது. ஸ்பானியர் முதல் முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டதைக் கண்டார்கள். ஆப்பிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது. “இலிங்க வணக்கம் அசீரியாவிற்றோன்றி அயல் நாடுகளிற் பரவிற்று என்று சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ் (Bacchus) தயோனிசஸ் (Dionysus) வழிபாடுகள் தொடர்பாகச் சிவலிங்கம் வழிபடப் பட்டது. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிகள் வழியே உலாக் கொண்டு வரப்பட்டது. எகிப்தியரின் ஓஸ்றிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்பதன் இன்னொரு வேறுபாடே. பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரந்திருந்தது. பக்கஸ் கெபன் (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் கெபி (Hebe - கௌரி) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் 1புலித்தோலை யுடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். ஆதலால் கெபன் சிவன் என்றும், கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின்தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் அருந்தும் மண்டையும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக்கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch) மெரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சபாசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பாகேஓஸ் (Bagaios) என்னும் பெயர்களுடன் வழிபடப்பட்டார். வெஸ் தொப் (Westropp) என்பவர் அதோனிசஸ் என்பது அர்த்தநாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின்முன் எகிப்திலே ‘துர்க்கம்மா’ என அடியில் எழுதிய ஒரு துர்க்கை உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.” றொடேசியாவில் (ஆப்பிரிக்கா) காணப்பட்ட இலிங்கங்களிலும் சிரியாவிற் காணப்பட்ட இலிங்கங்களிலும் பூமாலைகள் வெட்டப்பட் டிருந்தன. பொனீசிய மக்கள் தயர் நகரிலே பகலவன் ஆலயத்தில் மரகதத் தினாலும் பொன்னினாலும் செய்த இலிங்கங்களை வைத்து வழிபட்டார்கள். இவ்வகை இலிங்கங்களை அவர்கள் சிபிறால்டரில் நாட்டியிருந்தமையின் அவ்விடம் இன்றும் “கெக்குவிசின் தூண்கள்” என வழங்குகின்றது. மேற்கு ஆசிய நாடுகளிற்1 பேழைகள் (பெட்டி) வழிபடப்பட்டன. இன்று இலங்கையிலுள்ள கதிர்காமம் என்னும் ஆலயத்தில் வழிபடப்படு வதும் பேழையே. மேற்கு ஆசிய நாட்டுப் பேழைகளுள் சிறிய இலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. நிலைபோல இரண்டு கற்களை நிறுத்தி மேல் ஒரு பாவு கல்லை வைத்து மூடிய கட்டிடங்களின்கீழ் (Dolmen) வைத்து இலிங்கங்கள் வணங்கப்பட்டன. இதிலிருந்தே பேழையில் இலிங்கத்தை வைத்து வழிபடும் முறை ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. விவிலிய மறையில் பேழையில் வைக்கப்பட்ட சாட்சிப் பத்திரம் என்பது நம்மவரின் “இயந்திரத் தகடு” என்பதை ஒத்ததே. இலிங்க வழிபாட்டின் வளர்ச்சி கடவுள் ஒருவரே உளர் என உணர்ந்த மக்கள் அம்மை அப்பர்களின் அருட்குறிகளே இறைவனின் ஆண் தன்மை பெண் தன்மை என்பவை களை உணர்த்தும் எனக் கொண்டனர். ஆண் தன்மை பெண் தன்மைகளை விளக்கும் அறிகுறியாக அவர்கள் ஆண்குறி பெண்குறி வடிவான அடை யாளங்களையும் வைத்து வழிபடுவாராயினர். பின்பு இவ் விரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுக் கடவுள் ஆண் பெண் இயல்பினர் என்னும் இலப்பினும் வழிபடப்பட்டன. இவ் வடிவங்கள் எலோகிம் எனப்பட்டன. மொகெஞ் சொதரோவிலும் ஆண் கடவுளைக் குறிக்க ஆண்குறியும், பெண் கடவுளைக் குறிக்கப் பெண் குறியும் வழங்கின.2 எலோகிம் வழிபாடே இந்தியாவில் ஆவுடையார் வழிபாடாகும். பண்டைய இலிங்கங்கள் தூண் வடிவின. ஆண் பெண்குறி வடிவுகள் ஐரோப்பாவிலே கிறித்தவ ஆலயங் களில் இன்றும் காணப்படுகின்றன.3 எருசலேமிலே ஒரு காலத்தில் ஒவ் வொரு வீதியிலும் இலிங்கங்கள் வைத்து வணங்கப்பட்டன.1 ஞாயிற்றையும் திங்களையும் ஒப்பத் தீயும் வழிபடப்பட்டது. இலிங்கம் தீயின் வடிவாகவும் கொண்டு வழிபடப்பட்டது. தீ வழிபாடு ஞாயிற்றையும் திங்களையும் ஒப்ப ஒளியுடைப் பொருளாகிய தீயும் மக்களால் வழிபடப்பட்டது. விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டில் நிம் றொட் என்னும் அரசன் தீவழிபாட்டைப் பலஸ்தீன் நாட்டில் ஆரம்பித்தான் எனக் கூறப்படுகின்றது. இவ் வழிபாடு இன்னும் பாரசீகரிடையே சொராஸ்ரிய மதக் கொள்கையாக நிலவுகின்றது. தீயும் இலிங்க வடிவில் வழிபடப்பட்டது. பீடத்தோடு கூடிய இலிங்கத்துக்குத் தீக்கடை கோலை ஒப்பிட்டுத், தீக் கடைகோலையே இலிங்க வடிவமாக அமைத்து மக்கள் வழிபட்டார்கள் எனச் சில ஆராய்ச்சியாளர் கருதினர். தமிழ் மக்களிடையே முச்சுடர் வழி பாடுகளும் இருந்தன. தீயை எந்த நேரமும் உண்டாக்கி வழிபடுதல் கூடும். ஞாயிற்றையும் திங்களையும் எந்த நேரத்திலும் கண்டு வழிபடுதல் அரிது. ஆகவே அவர்கள் ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களின் வடிவைக் குறிக்கும் வட்டம், வில் அல்லது பிறை, முக்கோணம் வடிவான குண்டங் களை அமைத்து அவைகளில் தீ வளர்த்துக் கடவுளை வழிபடுவாராயினர். இதுவே முத்தீ வேட்டல் என்னும் வழக்கு. ஆரிய மக்களின் தீ வழிபாடு இவ் வுண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததன்று. அவர்கள் காலையில் எழுந்து தோய்ந்து, தீமூட்டி எரித்துக் குளிர் காய்ந்து அதன் பக்கத்தே நின்று கடவுளைத் துதித்தனர். இவ் வழக்கிலிருந்தே அவர்களது அக்கினிகோத்திரம் எனப்படும் தீ வழிபாடு எழுந்தது. சனகன் யாக்ஞவல் கியையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி நீவிர் அக்கினிகோத் திரம் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சரியான விடை அளிக்கவில்லை. இதற்குக் காரணம் ஆரியரது தீ வழிபாடும் தமிழரது தீ வழிபாடும் வெவ்வேறு வகையினவாதலே. ஆகமங்களும் வேதங்களும் நேர்மாறானவை என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. தீ வழிபாடு துரானிய மக்களுக்குரியதென்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.2 “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். புற. 33) என்னும் தொல்காப்பியத்திற் கூறப்படும் வழிபாடுகள் முறையே ஞாயிறு தீ, திங்கள்களின் வழிபாடுகளே. பழங்காலப் பலிபீடங்களும் பிற்காலம் இலிங்கமாக வழிபடப்பட்டன.1 திருவண்ணாமலையில் இறைவன் சோதி வடிவாய் நின்றானென்பது இலிங்கவழிபாடு தீ வழிபாட்டினின்று தோன்றி யது என்னும் ஐதீகத்தைக் குறிப்பது. முற்காலத்து ஒடுங்கிய கொடுமுடி களுடன் நிமிர்ந்து வளர்ந்த மலைகள் இலிங்கங்களாக வழிபடப்பட்டன.2 வேந்தன் மக்கள் ஞாயிற்றைத் தனிப்பெருங் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசன் ஞாயிற்றின் 3புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் மக்கள் நம்பினார்கள்.4 ஆகவே அரசனின் சாமாதியின்மீது ஞாயிற்றுக் கடவுளின் அருட்குறியாக இலிங்கம் நடப் பட்டது. அவ் விடங்கள் வழிபாட்டுக்குரிய ஆலயங்களாகவும் இருந்தன. இவ் வகை ஆலயங்கள் பல எகிப்தில் காணப்படுகின்றன. ஞாயிற்றுக் கடவு ளாக மாறிய அரசர்கள் எகிப்தில் இறா (இரவி) என்னும் பெயர் பெற்றனர். றா என்பதிலிருந்து இராசன் என்னும் சொல் பிறந்ததெனச் சிலர் கூறுவர். நந்திவழிபாடு அப்பன் என்னும் தந்தைக் கடவுளின் ஊர்தியாகிய நந்தி மேற்கு ஆசிய நாடுகளில் வழிபாட்டிற்குரியதாயிருந்தது. பலஸ்தீன் நாட்டில் ஆன்கன்று அல்லது நந்தி வழிபடப்பட்டமை கிறித்தவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படுகின்றது. தாவீதின் (David) மனைவிக்கே ஆன்கன்று என்று பெயர்.1 கிதைதி நாட்டிலே எயுக் (Eyuk) என்னுமிடத்திலே நந்திச் சிலை கருங்கற் பீடத்தில் வைத்து மக்கள் எல்லோராலும் வழிபடப்பட்டது. இவ் விடபக் கடவுளைச் சேவிக்கத் தனிக்குரு இருந்தார். எகிப்திய மக்கள் ஓசிறிஸ் கடவுளின் வாகனமாகய அபிஸ் என்னும் இடபத்தை வழிபட் டார்கள். எல்லா மத்தியதரை நாடுகளாலும் இடபம் வழிபடப்பட்டது. இடபத் தின்மீது சத்தியஞ் செய்வதை மக்கள் பெரிதும் அஞ்சினார்கள்.2 முக்கட் செய்லவர் மக்கள், ஞாயிறு திங்கள் தீ என்பவைகளுக்கு மேலான தனிப் பெரும்பொருள் ஒன்று உண்டு என்று கொண்ட காலத்தில் அவர்கள் பழைய அப்பன் வடிவத்துக்கு முச்சுடர்களைக் கண்கள் எனக் கொண்டனர். ஆங்காங்கு மக்கள் வழிபட்ட பேய்கள் அவரின் பரிவாரங்களாயின. உலக மக்களெல்லாராலும் வழிபடப்பட்ட பாம்பு அவரின் ஆபரணங்களாயின; பயங்கரமான தாய்க் கடவுள் இப்பொழுது சாந்த வடிவினளாய் அவரின் பாரியாயினள். உமை, எஞ்ஞான்றும் கன்னி எனப்பட்டார்.3 மொகஞ்சொத ரோவிற் காணப்பட்ட சிவன் திருவுருவத்துக்கு மூன்று கண்கள் உள்ளன.4 மாதொருபாதி இறைவன் அம்மை அப்பர்க் கடவுளர், பாதி ஆண், பாதி பெண் வடிவிலும் வைத்து வணங்கப்பட்டனர். இவ் வடிவு “அர்த்த நாரீசுரர்” வடிவம் எனப் படும். அர்த்தநாரீசுர வடிவமே ஆதோனிஸ் என மேற்குத்திசை நாடுகளில் வழங்கிற்று என முன் கூறப்பட்டது. இவ் வடிவம் பழைய சுமேரிய மக்க ளாலும் வணங்கப்பட்டது.5 மொகஞ்சொதரோ மக்கள் அப்பரை ஆண் என்றும் அம்மையை அம்மை என்றுமே வழிபட்டனர். சுமேரியா நாட்டி லும் இதே பெயர்கள் வழங்கின. அம்மை அப்பரின் புதல்வர் சுமேரியரால் என்லில் எனப்பட்டார். மொகஞ்சொதரோவில் அம்மை மீன்கண்ணி எனப்பட்டார். இப்பெயரே மீனாட்சி என வழங்குகின்றது. பாம்பு வணக்கம் இவ் வுலகின் எல்லாப் பாகங்களிலும் பாம்பு வணங்கப்பட்டது. மொசே வெண்கலத்தினாற் செய்த பாம்பை இஸ்ரவேலர் வணங்கி வந்த வரலாறு, கிறித்துவ மறையிற் காணப்படுகின்றது. கிறித்துவ மறையிற் காணப்படும் படைப்பு வரலாறு முதலியன சாலடிய மக்களிடமிருந்து கிடைத்தன என்று கருதப்படுகின்றன. சாலடிய மக்கள் திராவிடர்களே என்பது வரலாற்று ஆசிரியர்களது முடிவு. பாம்பு வணக்கம் இல்லாத நாடு இவ் வுலகில் இல்லை. இதனை ஆராய்ந்து விளக்கும் தனி நூல்கள் பல ஆங்கில மொழியில் எழுதப் பட்டுள்ளன. இன்றும் சில நாடுகளில் உயிர்ப் பாம்புகள் வணங்கப்படு கின்றன; சில நாடுகளில் பாம்பின் சிலைகள் வணங்கப்படுகின்றன. “ஆப்பிரிக்க மக்களின் முக்கிய தெய்வம் பாம்பு. மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபடு கின்றனர். இவ் வகையாக உரோமரும் ஒருகாலத்திற் செய்தனர். ஒரு நிகிரோ வனாவது வேண்டுமென்று பாம்புக்கு ஒருவகையான தீமையுஞ் செய்யமாட் டான். தற்செயலாய்ப் பாம்பு ஒன்றைக் காயப்படுத்துகிறவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். ஒருமுறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர் தாங்கள் தங்கிய விட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக்கொன்றார்கள். அதற்காக இவர்கள் அங்குள்ள மக்களால் கொடுமையாகத் தாக்கிக் கொல்லப்பட் டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள் நாடு எங்கும் காணப்படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக்கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின் றன. ஒவ்வொரு வகைப் பாம்பைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வேலைக் காரன் இருக்கிறான்.” “நியுகினியில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக் கின்றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக்கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன”1 இது பாம்பு வணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வணக்கம் எவ்வாறு உண்டானதென்று வரலாற்று ஆசிரியர் களால் நன்கு அறிந்து கூற முடியவில்லை. இதன் தொடக்கம் மறைவாக இருக்கின்றது. உலகில் காணப்படும் மக்கட் கூட்டத்தினர் தத்தம் குலக்குறி களாக (Totem) மயில், ஆடு, முயல், ஆமை போன்ற யாதேனும் ஒன்றைக் கொண்டிருந்தனர்; இன்றும் கொண்டிருக்கின்றனர். இக் குலக்குறிகள் பிற்பாடு வழிபடவும்பட்டன. இவ் வகைக் காரணத்தைப் பாம்பு வணக்கத் திற்கும் கொள்ளலாமோ என்பது ஆராயத்தக்கது. இந்திய நாட்டில் பாம்பு வழிபாடு நடைபெற்று வருவதைக் கூறவேண்டியதில்லை. பாம்புச் சிலைகள் இல்லாத ஆலயங்களே இல்லை எனக் கூறலாம்.1 முருக வழிபாடு முருக வழிபாடு ஞாயிற்று வணக்கத்தின் இன்னொரு வகை. கடல்மீதெழும் உதயகால ஞாயிறு,2 மயில்மீதெழுந்தருளும் முருகனாக உருவகப்படுத்தப்பட்டடுள்ளது. முருகன் என்பதற்கு இளையவன் என்று பொருள். யூதமக்களும் பகற் கடவுளை முதியபகல், இளம்பகல் (Ba-al) என இருவகையாக வழிபட்டனர். முதிய பகல் தாடியுடைய முதிய வடிவுடனும், இளம்பகல் குழந்தை வடிவுடனும் வழிபடப்பட்டன. யூத மக்களுக்குச் சமய அறிவு கொளுத்தியவர்கள் தமிழ் மரபைச் சேர்ந்தோர் எனப்படுகின்றமையின் அவர்களிடையே தமிழர்களுட் காணப்படும் பல கொள்கைகள் நிலவின. இளம் கடவுள் யூதரால் போர்க் கடவுளாகவும் கொள்ளப்பட்டது. இளம்பகலே பின் உரோமரின் மார்ஸ் என்னும் போர்க் கடவுளாகவும் மாறிற்று. முருகக்கடவுளுக்கும் அசுரர் எனப்பட்ட மக்க ளுக்கும் இடையில் நிகழ்ந்த போர்கள் என்பன முருக வழிபாட்டினருக்கும் சிவவழிபாட்டினருக்கும் நிகழ்ந்த போர்களாகும். அசுரர் சிவவழிபாட்டினர் என்பது முன்னமே கூறப்பட்டது. யெகோவா என்பது எல் கடவுளையே குறிக்கும் பெயரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். யெகோவா வழிபாட் டினர் எல்லின் வேறுவகை வழிபாடுகளாகிய பகல் (Ba-al) மொலொச் முதலிய வழிபாடுகளை அழிக்க முனைந்து நின்ற வரலாற்றுடன் இதனை ஒப்பு நோக்குக. மக்களிடையே நிகழ்ந்த போர்கள் மக்கள் வழிபட்ட தெய் வங்கள்மீது ஏற்றிக் கூறப்பட்டன. வேத பாடல்கள், இந்திரன் தாசுக்களின் செல்வங்களைக் கொள்ளைகொண்டு அவர்களை அழித்தானென்று கூறு கின்றன. ஆரிய மக்கள் தாம் பெற்ற வெற்றிகளைத் தாம் வழிபட்ட கடவுள் மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு கூறுதல் அக்கால மரபுபோலும். மால் வணக்கம் மால் (மா+1எல்) வணக்கமும் ஞாயிற்று வணக்கத்தின் இன்னொரு வகை. திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் ஞாயிற்றையே குறிக்கின்றது. “அரியல்லாற் றேவியில்லை ஐயனையாறனார்க்கே”. பெருமாள் (பெரு மானின் பெண்பாஃ) என வருவன ஆராயத்தக்கன. ஒருபோது கரிய தாய்க் கடவுள் மாஎல் என வழிபடப்பட்டதோ என்பது சிந்திக்கத்தக்கது. பாரத காலத்துக்குப் பின் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியுள்ளது. திருமால் மூவுலகை அளந்தாரென வரும் புராணக்கதை ஞாயிறு காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களில் செல்லும் செலவினை உணர்த்துமெனக் கூறப்படுகின்றது. சிவன் ஞாயிறே சிவன் என்னும் பெயரால் ஆதியில் வழிபடப்பட்ட தென்பது உலகமக்களின் பழைய வரலாறுகளை நோக்குமிடத்து நன்கு புலனாகும்.2 “அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்-அருக்கனாவான் அரனுருவல்லனோ” (திருநா-தே) என்பதும் இதனையே உணர்த்தும். ஞாயிறு, ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வீட்டில் தங்கும். ஒவ்வொரு வீட்டில் நிற்கும்போதும் அது வெவ்வேறு வடிவில் வழிபடப் பட்டது.3 ஆகவே, ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு உரித்தாக்கப்பட்டிருந்தது. இவ் வழக்கு மேற்கு ஆசிய எகிப்திய இந்திய நாடுகளுக்கெல்லாம் பொது. எபிரேய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் என அறியப்பட்டது.1 ஆசியாவிலும், பாபிலோனிலும் ஆண் டின் மூன்றாம் மாதம் சிவன் அல்லது சிமானு எனப்பட்டது. பாபிலோனில் இதே பெயருடைய இடம் ஒன்றும் இருந்தது. இஃது அங்கே களிமண் ஏடுகளில் எழுதிவைக்கப்பட்ட உறுதி (Documents) களிற் காணப்படுகின்றது.2 இதனால் பாபிலோன் ஆசியா பாலஸ்தீன நாடுகளில் சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்ட கடவுள் ஒன்று இருந்ததென்பது தெள்ளிதிற் புலப்படும். அரேபியரும் யூதரும் சாலதியாவி லுள்ள ஊர் என்னும் நகரினின்றும் சென்று கானான் தேசத்திற் குடியேறிய ஆபிரகாமின் (கி. மு. 2153) சந்ததியினர் என்று கூறப்படுகின்றனர். ஆகவே யூத மக்கள் சாலதியரைப் பின்பற்றியே திங்கள் பெயர்களையும் வழங்கி னார்களாதல் வேண்டும். சாலதியாவில் இப் பெயர் சாலப் பழையதாய் வழங்கினமையினாலேயே அது திங்களுக்குப் பெயராக்கப்பட்டது. பாபிலோன் மக்களும் பாலஸ்தீனரும் எல்சடை என வழங்கிய கடவுள், சிவனைப் போலவே மலைமுகடுகளிலிருப்பவராகக் காணப்படுகின்றனர்.3 கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும், கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டது.4 இதில், மொசே என்பவர், யெகோவா அருளிய பத்துக் கட்டளைகளைச் சினாய் மலைமீது நின்று சிவன் மாதத்தின் ஆறாவதுநாள் மக்களுக்கு வெளியிட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் சிவன் என்னும் பெயர் திங்களின் பெயராகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும் வழங்கிற்று என்பது ஊகித்தறியப்படும். கிறித்துவ மறையிலே சியன் எனக் கூறப்படும் கடவுள் சிவனே என்பதை மேல் நாட்டறிஞர்களே ஆராய்ந்து கூறுகின்றனர்.1 ஆதர்லில்லி என்பார் கூறுவது பின்வருமாறு: “சிவன் என்னும் சொல் வலித்தும் மெலித்தும் இந்தியாவின் பல பகுதிகளில் உச்சரிக்கப்படுகின்றது. பிரான்சு மக்கள் ‘ச்சிவன்’ என உச்சரிப்பர். கிறித்துவ மறையிலே (Amos. V. 26) வரும் சியன் என்பது சிவனே என ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்கள்”. எபிரே யரின் யெகோவா என்னும் சொல் சிவா என்பது போன்ற ஹெவா, செவா என்னும் சொற்களினின்றும் பிறந்ததென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.2 எகிப்திலே சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உண்டு. இங்குப் பழைய அமன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அமன் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுள். அமன் வழிபாடு பண்டு நாட்டினின்றும் சென்றதாக அவர்கள் வரலாறுகளிற் காணப்படுகின்றது. அமன் வழிபாடு சியஸ் (Zeus) யூபிதர் வழிபாடுகளாகக் கிரேக்க உரோமை நாடுகளில் வழங்கிற்று. சியஸ் யூபிதர் வழிபாடுகளும் ஞாயிற்று வழிபாடுகளே. இப் பாலைவனப் பசுந் தரையில், ஞாயிற்றுக் கடவுள், சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்டமை யினாலேயே அதற்குச் சிவன் என்னும் பெயர் உண்டாயிற்று என எளிதில் ஊகித்தறியலாம். சிவன் என்பதே அமன் எனப் பிற்காலந் திரிந்து வழங் குதல்கூடும். அமன் (Amon) என்பதே கிறித்தவர்கள் வழிபாட்டு முடிவில் கூறும் ஆமென் எனத் திரிந்து வழங்குகின்றதென்பது வரலாற்று ஆசிரி யர்கள் சிலரது கருத்து. மேற்கு ஆசியாவில் இடங்களுக்கும் மாதத்துக்கும் மாத்திரமன்று; மக்களுக்கும் சிவன் என்னும் பெயர் இட்டு வழங்கப்பட்டது. 3சொய்றோ ரோயிஸ் என்னும் சுமேரிய அரசனது மனைவியின் பெயர் சிவன். இவளுக்கு மாத்திரம் சிவன் என்னும் பெயர் இடப்பட்டதெனக் கருதுதல் கூடாது. அக் கால மக்கள் பலருக்கு இப் பெயர் இட்டு வழங்கப் பட்டதென்றும் அம் மரபுபற்றி இவளுக்கும் இப் பெயர் கொடுக்கப்பட்ட தென்றும் நன்கு உய்த்தறியலாகும். அமெரிக்காவிலே கொலறடோப் பள்ளத்தாக்கிலுள்ள பீடபூமியில் பத்தாயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்கரின் சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. இது, சியஸ் மலையில் இருப்பவராயும் மூன்று கண்களுடையராயும் கூறப்படுதலால் நன்கு அறிதும். யூபிதர் என்னும் பெயரும் செவா என்னும் அடியாகப் பிறந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 உக்கிரோ பின்னிய துரானிய மொழிகளில் சிவன் சிவோ என வழங்கும். இலாப்பியரின் காத்தற் கடவுள் சிவன். துருக்கி மொழியில் செவ் என்பது அன்பை உணர்த்தும். அக்கேடிய மொழியில் செ கருணையையும், செப் உள்ளத்தையும் உணர்த்தும்.2 ஆரிய மக்களிடையே வேதகாலத்தில் சிவாக்கள் (Sivas) என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தனர். பாணினியின் இலக்கணத்திற் கூறப்பட்ட சிவபுரம் 3, இவர்களின் நகரமாகலாமெனக் கருதப் படுகின்றது. மெசபெதேமியாவிலே பழைய பாபிலோன் மக்களின் மரபின ராகிய சிறுகூட்டத்தினர் சிலர் காணப்படுகின்றனர். இவர்கள் கபில் சிவா, றபில் சிவா என்னும் கடவுளரை வணங்கினர். பழைய இலங்கை அரசர் பலர் சிவன் என்னும் பெயரைத் தமது பெயரின் இறுதியிற் சேர்த்துவழங் கினர். அரசரல்லாத சிலருக்குச் சிவனென்றும் பெயரிருந்தமை மகாவமிச மென்னும் பௌத்த நூலாலறியப்படுகின்றது. சிவன் ஒளிமலை என்னும் பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. கிரேத்தா(Crete)விலுள்ள ஓர் இடத்துக்கும் சிவன் என்று பெயர். மரவணக்கம் மரங்களின்கீழ் கடவுள் வடிவங்கள் வைத்து வழிபடப்பட்டமையின், மக்கள் மரங்களிலும் கடவுள் உறைவதாக நினைந்து அவைகளை வழிபடலாயினர். இவ் வணக்கமும் உலகம் முழுமையிலும் காணப்பட்டது; இன்றும் காணப்படுகின்றது.4 இன்று கிறித்தவரின் தேவாலயத்துக்கும் பெயராக வழங்கும் ‘சேட்ச்’ என்னும் பெயர், கருவாலி மரத்தைக்குறிக்கும் ‘கேர்க்’ என்னும் சொல்லினின்றும் பிறந்ததென ஆராய்ச்சியாளர் காட்டி யுள்ளார்கள்.5 மரவணக்கத்தில் மரங்களின் உச்சிக்கிளைகள்மீது ஆடைத் துண்டுகளைக் கொடிபோலக் கட்டிப் பறக்கவிடுவது வழக்கு. நடராச வணக்கம் நடராச வடிவில் இறைவனை வழிபடும் வழக்கு மொகஞ்சொதரோ காலத்திலேயே காணப்பட்டது.1 அங்குள்ள முத்திரைகளில் இறைவனைக் குறிக்கத் தாண்டவன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; அரசன் ஒருவன் தானே ஒப்பற்றவன் என்னும் பெருமிதத்தினால் ஆடும் ஆடலை இவ் வடிவம் குறிக்கின்றது. காலின் கீழ் ஒருவனை மிதித்து நிற்றல் ‘ஒன்னார்த்தெறல்’ என்பதையும், அமர்த்தி நிற்கும் கரம் அடைந்தாரை ஆதரித்து அடைக்கலம் காத்தலையும் குறிக்கின்றன. தம்மைப் பணியும் சிற்றரசர்கள் முடிமீது தமது காலைத்தூக்கி வைத்து அருள்வது அக் காலப் பெருமன்னர் மரபு. அவ் வழக்கே ‘திருவடித் தீக்கை’யுமாம். கோயில் மரங்களின்கீழ் இருந்த அருட்குறிகளைச் சுற்றிக் கற்களை அடுக்கி மதில் அல்லது வேலி செய்வதிலிருந்து கோயில் ஆரம்பமாயிற்று. மனித னின் வீடு ஒன்றைப் பார்த்து அமைக்கப்பட்டதே கோயில்.2 கோயில் என்பது அரசனின் வீடு எனப் பொருள்படும். ஆலயம் கோயில் எனப்பட்டது போலவே அரசனது இல்லம் கோயில் எனப்பட்டது.3 மொகஞ்சொதரோ வில், சிறிது அறைகளும் தடித்த சுவர்களுமுடையதாகக் காணப்பட்ட கட்டிடம் அக் கால ஆலயம் எனக் கருதப்படுகின்றது. அதன் அமைப்பைக் கொண்டு அது பல மாடியுடையதாயிருந்ததெனக் கருதப்பட்டது. மாடிகளே இன்று கோபுரங்களளவில் சுருங்கிவிட்டன போலும். மேற்கு உலகத்திலும் ஆதியில் ஆலயங்கள் மரமும் இலிங்கமும் கிணறும் பலிபீடமும் அளவில் இருந்தன. பலிபீடமென்பது மேலே சிறிய தீ மூட்டக்கூடிய ஒரு கல். “ஆரம்பத்தில் மரமும், பின் சோலையும் கிணறும், பின் இலிங்கமும், பின் செதுக்கி மட்டஞ் செய்யப்படாத கல்லாகிய பலி பீடமும், பின் கொடிகள் அல்லது பாம்புகளும் முறையே ஓரிடத்தில் கூடி ஆலயங்களாயின. மெக்காவில் உள்ள காபா, மரமும் இலிங்கமும் கிணறுமாகிய இவ்வளவில் உள்ள கோயிலாக இருந்தது. இங்கிலாந்திலுள்ள கல் வட்டங்களுக்கு அயலில் தோப்புக்களும், கிணறுகளும் இருந்தன.”1 என்று பர்லாங் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். “ஆதியில், சதுரமான அல்லது வட்டமான கல் வேலிகளின் நடுவே இலிங்கமும் அதன் முன்னால் பலிபீடமும் வைத்து வழிபடப்பட்டன. இவ்வகைக் கல்வேலி யின் ஒருபுறத்தே மூன்று கல்லினால் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் (கவிழ்ந்த ‘ப’ போன்றன) பொனிசியாவிற் காணப்படுகின்றன. இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பாபிலஸ் (Babel) பால்பெக்2 ஆலயங்கள் எழுந்தன. மெக்காவில் உள்ள காபா ஆலயம் முற்கூறிய வகை ஆலயத் துக்கு உதாரணமாகும்” என ‘சீரியாவில் கற்களிற் காணப்படும் வரலாறு’ என்னும் நூல் கூறுகின்றது.3 தென்னிந்தியாவில் மிகப் பழைய ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படவில்லை. தென்னிந்தியாவில் ஆலயங்கள் மரத்தினாற் கட்டப் பட்டனவென்றும், பின்பு அம் மரக்கோயில்களின் அமைப்பைப் பின் பற்றிக் கல்லினால் ஆலயங்கள் எடுக்கப்பட்டனவென்றும், அதனாலேயே மிகப் பழைய ஆலயங்களும் அவைகளின் அழிபாடுகளும் தென்னிந்தியா விற் கிடைக்கவில்லையென்றும் பழைய கட்டிடக் கலை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தென்னிந்திய கட்டிடக்கலை ஆராய்ச்சியாளருள் சிறந்த யோவு தெபுருஇல் (Jouveau Dubreuil) என்பார் தென்னிந்திய கட்டிடக் கலையைப்பற்றிக் கூறியிருப்பன சில பின்வருவன: “திராவிடரின் கட்டிடக் கலை 1500 ஆண்டுகள் வரையில் மற்றைய நாட்டு அவ் வகைக்கலை யினால் பாதிக்கப்படாது தனிமையாக நின்றது. இது மற்றைய நாட்டவரின் கட்டிடக் கலைகளினின்றும் எதையும் கடன்பெறவில்லை. இது படிப்படியே வளர்ச்சியடைந்திருக்கின்றது. திராவிட நாட்டின் ஒவ்வொரு காலத்துக் கட்டிடங்களையும் நோக்கும்போது அவைகளின் அமைப்பு மெதுவாக வளர்ச்சியடைந்துள்ளதென்று விளங்குகின்றது. இது மனித நூலார் குரங்கு போன்ற மனிதனுடைய மண்டை முதல் இன்றைய மனிதனின் மண்டை வரையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமையைக் காட்டுதல் போன்றது. மாமல்லபுரத்தில் காணப்படும் தேர்களுக்கும் திருப்பாப்புலி யூரிற் காணப்படும் தேர்களுக்கும் மாதிரியில் வேறுபாடு உண்டு. இது கொரமாங்கன்1 மனிதன் மண்டைக்கும் இன்றைய மனிதன் மண்டைக்கு முள்ள வேறுபாடு போன்றது.” “கற்சிப்பிகள் தம் முன்னோர் தமக்குக் கற்பித்த பரம்பரை முறைப் படியே கட்டிடங்களை அமைத்தார்கள். தமிழிலே வழங்குகின்ற எழுத்துக் களின் வடிவுகள் காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளன. இது போலவே மொழியும், மொழி வழக்குகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் மாறு பட்டு வந்துள்ளன; சமயமும் கிரியை முறைகளும் சமயக் கோட்பாடுகளும் தணிவு பெற்று வந்துள்ளன. மிகப் பழைய உருவச் சிலைகளுக்கும் இன்றைய அவ்வகைச் சிலைகளுக்கும் வேற்றுமை காணலாம். நில நூலார் நிலத்தில் அடுக்கு அடுக்காகக் காணப்படும் பாறைகளைப் பார்த்து அவற் றின் வயதைக் கூறுகின்றார்கள். இதுபோலவே கட்டிடக்கலையில் தேர்ந்த ஒருவனுக்குக் கட்டிடங்களிற் காணப்படும் கூடு, அல்லது போதிகையின் வடிவங்கள் ஆராய்ச்சிக்குப் போதுமானவை. இது பாறைகளிற் காணப்படும் தொல்லுயிர்களின் என்புக் கூடுகள் (Fossils) அப் பாறைகளை இன்ன இன்ன பாறை என்று கூறுவதற்கு நிலவியலாருக்குப் பயன்படுவதுபோலாகும்.” வெர்கூசன் (Fergussion) என்பார் தென்னிந்திய ஆலய அமைப்புகள் எகிப்திய கோயில்களை ஒத்தனவென்று காட்டியுள்ளார்.2 தேஸ்ரன் என்பார் இந்தியாவின் பழைய கட்டிடங்களில் எகிப்திய சாலடிய பொனீசிய அமைப்பு முறைகள் கலந்துள்ளன எனக் கூறியுள்ளார்.1 மலையாளத்தில் சில ஆலயங்கள் குடில்போல வட்டவடிவாக அமைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவிலிருந்தே பின் சதுர வடிவு ஆரம்பித்திருத்தல் வேண்டும். மக்கள் ஆதியில் கட்டி வாழ்ந்த வீடுகள் வட்டவடிவினவே. கருவுக்கு (கர்ப்பக் கிருகம்) மேல் உள்ள பாகம் இன்றும் வட்டவடிவாகவே அமைக்கப்படுகின்றது. முடி என்பது குடில் வீடுகளுக்கு உச்சியில் வைக்கப்பட்ட பானையே யாகும். அரசன் இல்லத்தைச் சுற்றி அவனுடைய சுற்றத்தினர் சேனாபதியர் இருப்பதுபோலக் கோயிலின் உள் வீதியைச் சுற்றிப் பரிவார தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டன.2 ஆதியில் மரமும் இலிங்கமுங் கிணறுமாகவிருந்த ஆலயம் இவ்வாறு வளர்ச்சியுற்றது. தலவிருட்சம் இலிங்கத்தைச் சுற்றிக் கட்டிடமெழுந்தது. அப்பொழுது மரம் இடம் பெறவில்லை. எந்த மரத்தின்கீழ் இலிங்கம் ஆதியில் வைத்து வழிபடப் பட்டதோ அம் மரம் அவ் வாலயத்தின் தலவிருட்சம் எனப்பட்டது. மேற்கு ஆசிய நாடுகளிலும் எகிப்திலும் கிரேத்தாவிலும் தென்னிந்திய ஆலயங் களிற் காணப்படும் கொடிமரம் போன்ற மரத்தூண்கள் ஆலயங்களில் நிறுத் தப்பட்டு ஆண்டுவிழாக் காலங்களில் கிரியைகளுடன் வழிபடப்பட்டன. கொடி மரத்தின் நுனியில் மூன்று கிளைகள் காணப்படுதல்போல அம் மரங்களுக்கும் கிளைகள் இருந்தன. தலவிருட்சமே, காலத்தில் கொடிமரமாக மாறியுள்ளதோ வென்பது ஆராயத்தக்கது.3 இலிங்கம் வைக்கப்பட்டுள்ள மரங்களின் கிளைகளில், ஆண்டில் ஒருமுறை சிறப்பாக நடைபெறும் பொங்கி மடையிடுதல் போன்ற வழிபாட்டை அறிவிக்க ஆடைத் துணியைக் கட்டி விடுதல் இந்திய நாட்டிலும் பிறவிடங்களிலும் உள்ள வழக்கு. திரை அரசன் உறையும் உள் மண்டபத்தின் எதிரே திரை இடப்பட்டிருக் கும்.1 அதனை ஒப்ப ஆலயங்களிலும் உள்மண்டபத்தின் எதிரிலும் திரைச் சீலை இடப்பட்டிருந்தன. ஆலயங்களில் இன்றும் திரைச் சீலையிட்டிருப் பதை நாம் காணலாம். மேற்கு ஆசிய நாடுகளிலும் ஆலயங்களுக்குத் திரைச்சீலையிடப்பட்டிருந்தது.2 ஐயர் அரண்மனையில் அரசனைச் சேவிக்கும் பணியாளர் பலர் இருந்த னர். அவர்கள் பலதரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள், அவருள் ஒருவன் தலைவனாகவிருந்தான். இதனை ஒப்பவே ஆலயங்களிலும் ஐயனைச் சேவிக்கும் அடியவர்கள் பலர் இருந்தனர். அரசன் துயில்விட்டு எழுந்தது முதல் அவன் துயில்கொள்ளப் போகும் வரையில் அவன் அடியோர் என்ன என்ன பணிகளைச் செய்கின்றார்களோ அவ் வேலைகளையெல்லாம் ஐயனது அடியாரும் செய்தனர்.3 ஐயனைச் சேவித்தலின் இவர்கள் ஐயரென் றும், கோயிற் கருமங்களைப் பார்த்தலிற் பார்ப்பார் என்றும் பெயர் பெற்ற னர். அன்னோர் பழைய நாளில் ஆறு தரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.4 கிறித்துவ மறையில் சேர்மையா, நேசையா என ஐயாவில் முடியும் பல பெயர்களைக் காணலாம். தமிழ்மொழியில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய மொழிகளிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது. அராபி மக்கள் பாபிலோன் நாட்டைச் சின்-ஐயர் என வழங்கினர். சின்-ஐயா என்பதற்கு ஞாயிற்றுக் கடவுள் என்று பொருள். பழைய கெல்திய மொழியிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது.1 ஐயர் என்பது ஆரியர் என்பதன் திரிபு எனச் சிலர் கருதலாயினர். இது சிறிதும் பொருந்துவதன்று. தொல்காப்பியத்தில் “ஐயர் யாத்தனர் கரணமென்ப” என ஐயர் என்னும் பெயர் வந்துள்ளது. ஆராய்ச்சியாளர் ஐயர் என்பது தூய தமிழ்ச்சொல் என்றே அறுதியிட்டுக் கூறியுள்ளார்.2 வடமொழிப் பிரளயம் தென் தேசத்தே படை எடுத்து வந்த ஒரு காலத்தில், தமிழ்ப்பெயர்களின் இடத்தை வடமொழிப் பெயர்கள் எடுத்தன. அவ்வாறு வந்த பெயர்களுள் பிராமணர் என்பதும் ஒன்று. இன்றும் கோயிற்றொண்டு செய்யும் குலத்தவர் ஐயர், ஐயங்கார், நம்பி, பட்டர் முதலிய தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்படுகின்றனர். தமிழ் நாட்டுக் குருமாரை மேற்கு ஆசிய நாட்டுக் குருமாரோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பல உண்மைகள் வெளியாகின்றன. எகிப்திய குருமாரின் ஒழுக்கங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுக் குருமாரின் ஒழுக்கங்களை ஒத்தனவென்பது கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளவைகளால் விளங்கும்.3 புரோகிதர் ஐயர், மக்களுக்கு சமயப் பொருளில் வழிகாட்டியாக விருந்தார். அவர் இறந்தவர், இருப்பவர்களுடைய நன்மையை முன்னிட்டுப் பல கிரியைகளைச் செய்ய ஆரம்பித்தனர். மக்கள் அவர் புரியும் கிரியைகளில் அளவு கடந்த நம்பிக்கை வைத்தனர். மக்களை எல்லாத் தீமைகளினின்றும் காப்பவர் என்னும் பொருளில் அவர் புரோகிதர் எனப்பட்டார். சோதிடம், வான ஆராய்ச்சி, மந்திர வித்தை முதலியவைகள் எல்லாம் முற்காலத்திற் குருமார்களிடத்திலேயே இருந்தன. இதனால் பொது மக்கள் குருமாருக்குப் பெரிதும் அடங்கி நடந்தார்கள். இது உலக வரலாற்றில் எல்லா நாடுகளிலும் காணப்பட்ட உண்மை. புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவ னாகவும் இருந்தான். அரசர் அவைகளில் ஐயருக்குத் தனிப்பட்ட மதிப்புக் கொடுக்கப்பட்டது. அரச சபைகளில் ஐயருக்குத் தனது கருத்துக்களை எடுத்துக்கூறும் அதிகாரம் இருந்தது.1 ஐயரும் புரோகிதனும் ஆரியன் என்று நினைப்பது தவறுடைத்து. கோயிற் கிரியைகள் ஓர் அரசனுக்கு அவன் வேலைக்காரன் நித்திரை விட்டெழுந்தது முதல் நித்திரைக்குச் செல்லும்வரையில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ, அவ் வகை வேலைகளை எல்லாம் கடவுளுக்குச் செய்வதே ஆலயக் கிரியைகளாகும்.2 விழாக்கள் என்பன அரசன் உலாவரும் காலத் தில் நடைபெறுவதுபோல நடத்திக் கண்டு மகிழ்தல், விழாக்களையும் நித்திய கிரியைகளையும் கொண்டு பண்டை அரசரின் வாழ்க்கையை இனிது அறிந்து கொள்ளுதல் கூடும். அவ்வத்தேச வழக்குகளுக்கேற்ப இக் கிரியைகள் சிறிது வேறுபடும். திருவுருவத்துக்கு நறுமணத்தைலம் தேய்த்தல், திருமுழுக் காட்டுதல், ஆடை உடுத்தல், நறும் புகையும் தீபமும் (ஆலத்தி) காட்டுதல், உணவு படைத்தல் போன்ற கிரியைகள் எல்லா நாடுகளுக்கும் பொது வானவை. கிறித்துவ ஆலயங்களில் நடைபெறுவன போன்றவே. சாலமன் கட்டிய ஆலயத்தில் நடைபெற்ற கிரியைகளும் இவ் வகையின. சீரியா, றொடேசியா முதலிய இடங்களிற் காணப்பட்ட இலிங்கங்களில் பூமாலைகள் வெட்டப்பட்டிருந்தன.1 சீரியாவிலே கடாட் (Hadad) என்னும் சிவன் கடவுளுடைய இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.2 இதனால் பொனீசியா சீரியா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் வழிபாட்டில் பூமாலைகள் பயன்படுத்தப்பட்டன வென்பது தெரிகின்றது. யூதர் வழிபாடு பழைய அக்கேடிய பொனீசிய வழிபாடுகளை ஒத்தது. ஆதலின் அக் காலத்து அந் நாடுகளிலும் இவ் வகைக் கிரியைகளே நடைபெற்றன வென்பது தெற்றெனப் புலப்படும். ஆலத்தி காட்டுதல் தென்னாட்டுப் பழைய வழக்கு. அரசருக்கு முன்னாலும் இது காட்டப்பட்டது. தீபம் ஞாயிற்றைக் குறிக்குமெனச் சிலர் கூறுகின்றனர்.3 மக்களின் வழிபாடு அரசனைக் காணுவதற்கு மக்கள் எப்படிச் செல்லுகிறார்களோ அப்படியே ஆலயத்துக்கும் சென்றனர். பெருமக்களைக் காணச் செல்லு மிடத்து வெறுங்கையோடு செல்வது தமிழர் மரபன்று. “போனவன் வெறுங் கையோடே போகாவண்ணஞ் சென்று ஞான சற்குருவை நன்றாய் வணங்கி நின்று” (கைவல்யம்); ஆகவே, அவர்கள் செல்லுமிடத்துக் கையுறையுடன் சென்றனர். நடுவிருக்கை என்னும் கருமிமூலம் அரசனுக்குத் தமது செய்தி களை அறிவித்தல்போல அவர்கள் தமது கையுறையை நடுவிருக்கைகளாகிய குருமார் (ஐயர்) மூலம் கடவுளிடத்தில் சேர்ப்பித்துத் தம்குறைகளையும் அவர் மூலம் உணர்த்தினர். இதற்குக் கைமாறாகக் குருமார் கூலியும் பெற்றனர். பத்தர்கள் கடவுளின் எதிரே நின்று அவன் புகழ்பாடிக் கும்பிட்டுக் கூத்துமாடினர்.1 மேற்கு ஆசிய நாடுகளில் இவ் வகைக் கூத்து இன்றும் நடைபெறுவதை வரலாறுகளிற் காண்கின்றோம். சாலமன் அரசனின் தந்தை யாகிய தாவீது (David) பேழைக்கு முன்னால் துள்ளி ஆடின வரலாறு கிறித்தவ மறையில் (2. Sam VI, 14, 15) கூறப்படுகின்றது. தேவதாசிகள் அரசரின் அரண்மனைகளில் அரசனைப் பாட்டாலும் கூத்தாலும் மகிழ்விக்கும் மகளிர் பலர் இருந்தனர். அவ்வாறே ஆலயங்களிலும் அவ் வகை மகளிர் பலர் இருந்தனர். இந்திய நாட்டில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய நாடுகளிலும் உரோமிலும் இவ் வகை மகளிர் இருந்தனர். இவர் களின் ஒழுக்கம் இன்று இந்திய நாட்டுத் தேவதாசிகளின் ஒழுக்கத்தைப் பெரிதும் ஒத்தது.2 பாலஸ்தீன் ஆலயங்களிலும் தேவதாசிகள் இருந்தார்கள். இதற்கு ஆதாரம் கிறித்துவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படு கின்றது. இராசராசன் கட்டிய தஞ்சாவூர் ஆலயத்தில் நானூறு தேவதாசிகள் இருந்தார்கள் என்று ஒரு கல்வெட்டிற் காணப்படுகின்றது. மகமத் கசனி காலத்தில் சோமநாத ஆலயத்தில் 300 தேவதாசிகள் இருந்தனர். சங்கு வாத்தியம் தென்னிந்திய ஆலயங்களில் சங்கு வாத்தியம் ஒரு சிறப்பு. சிவன், காதில் அணிந்திருப்பது “சங்க வெண்குழை”; திருமால் கையில் வைத்திருப் பது சங்கு. “சங்காபிடேகம்” என்னும் பெயருடன் இன்றும் ஆலயங்களில் மாபெரும் கிரியைகள் செய்யப்படுகின்றன. இந்திய மக்கள் பரிசுத்தமாகக் கொள்ளும் பொருள்களுள் சங்கும் ஒன்று. சங்கு இந்தியநாட்டில் மாத்திர மன்று; இவ் வுலகம் முழுமையிலும் தூய்மையுடையதாகக் கருதப்பட்டு ஆலயங்களில் வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எலியட் சிமித் என்னும் ஆசிரியர், சங்கை வாத்தியமாகக்கொள்ளும் வழக்கம் தென்னிந்தி யாவில் ஆரம்பித்துக் கிழக்கு நோக்கிச் சீனா யப்பான் கீழைத்தீவுகள் பசுபிக் கடற்றீவுகளுக்கு ஊடாகச் சென்று அமெரிக்காவையும் அடைந்ததெனக் கருதினார்.1 கிரேத்தாத் தீவின் பழைய மக்கள், ஆலயங்களில் கடவுளை வீதி வழியே அழைத்து வரும்போது சங்கு வாத்தியம் ஊதினார்கள்.2 இன்றும் கிறித்துவ ஆலயங்கள் சிலவற்றில் சங்கு வாத்தியம் ஊதப்படுவதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றும் சீனாவிலே பௌத்த ஆலயங்களில் சங்கு ஊதப்படுகின்றது. கிறித்துவமறையின் புதிய ஏற்பாட்டில் சங்கு ஒலி, உயிர்த்தெழுவதின் அடையாளமாகக் கருதப் பட்டது.1 மெக்சிக்கோவில் பழைய கையெழுத்துச் சுவடி ஒன்றில், இரண்டு குருமார் தங்கள் காதுகளைத் துளைத்து ஞாயிற்றுக் கடவுளுக்குப் பலி செலுத்துவதுபோலவும், இரண்டு குருமார் சாம்பிராணிப் புகை இடுவது போலவும், இன்னும் இரண்டு குருமார் சங்கு ஊதுவதுபோலவும் உள்ள படம் காணப்படுகின்றது. இக் கையெழுத்துச் சுவடி இப்பொழுது புளோ றன்ஸ் (Florance) என்னுமிடத்தில் உள்ளது.2 ஞாயிற்று வணக்கம் எங்கெங்கு காணப்பட்டதோ அங்கு எல்லாம் சங்கு வாத்தியமும் பயன்படுத்தப்பட்டது. கடல் உயிர்களின் ஓடுகள் மிக முற்பட்ட கால மக்களால் புனிதமாகக் கருதப்பட்டனவென்றும், அவற்றுள் கவடி (சோகி) போன்றவை வழிபடப் பட்டனவென்றும், கடவுள் தன்மையுடையனவாதலின் கவடிகள் மக்களால் அணியப்பட்டனவென்றும், பிற்காலங்களில் அவைகளுக்குப்பதில் அவை (சங்கு) கொடுக்கும் முத்து சீவ ஒளி அளிப்பன எனக்கருதி அணியப்பட லாயின என்றும் கூறுகின்றனர். முத்துக்களை அணியும் வழக்கிலிருந்தே பிற்காலத்தில் சீவசத்து உடையதாகிய உருத்திராக்கம் அணியும் வழக்கு உண்டாயிற்று எனக் கருதப்படுகின்றது. முத்து நகை, முத்துப் பல்லக்கு, முத்து ஆபரணம் என்பன அரசர், கடவுளர்களுக்குச் சிறந்தனவாகக் கொள்ளப்படலாயின. துவராடை சிவன், திருமால் அடியவர்கள் துவராடை உடுக்கின்றனர். துவராடை உடுத்தற்கும் பழைய வரலாறு உண்டு. இவ் வழக்குப் பண்டை மக்கள் பல ரிடையே காணப்பட்டது. சங்கு வாத்தியம் எங்கெங்குப் பயன்படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் ஒருவகைச் சிவப்புச் சாயம் உற்பத்தியாக்கப் பட்டது.3 பொனீசிய மக்கள் சிவப்புச் சாயம் ஊட்டிய ஆடைகளை உலகின் பல பாகங்களுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். பொனீசியாவிற் செய்யப்பட்ட சிவந்த ஆடைகள் அக் காலத்து உயர்ந்த வாழ்க்கைப் பொருள் களுள் ஒன்றாக விருந்தன. சில சமயங்களில் அதன் விலை பொன்னுக்குச் சமனாகவிருந்தது.1 அக் கால அரசரும் பெருமக்களும் குருமாரும் இவ் வாடைகளையே உடுத்தனர். கோயில்களிலும் இவ் வாடைகள் அலங் காரத்தின் பொருட்டுத் தூக்கப்பட்டன. மோசே, யெகோவாவின் கூட்டுக்கு (விமானம்) சிவப்பு ஆடையையே பயன்படுத்தினர். குருமாரும் அந்நிற உடையை அணிந்தனர். பாபிலோனிய தெய்வங்களுக்குச் சிவப்பு ஆடை களே உடுக்கப்பட்டன. எகிப்திய பாபிலோனிய அரசரும் இந்நிற உடை களையே உடுத்தினர். கிரீசிலும் உரோமிலும் அரசரும் பெருமக்களும் குரு மாரும் உயர்ந்த கருமிகளும் மாத்திரம் சிவப்பு உடை அணிந்தனர். ஏனைய மக்களுக்கு இவ் வுரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக் கட்டுப்பாட்டை மீறிச் சிவப்பு ஆடை அணியும் பொதுமக்கள் கடுந்தண்டனை அடைந்தார்கள்; சில சமயங்களில் கொலைத் தண்டனையும் பெற்றனர். பப்புறா (PauPra) என்னும் சொல்லே சிவப்பை உணர்த்தும் பேப்பிள் (Purple) என்னும் சொல்லாக மாறிற்று. பொனீசிய மக்கள் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து விற்ற சிவப்பு ஆடை பச்சைவடம் எனப் பெயர் பெற்றது. பச்சை என்பது பப்புறா என்பதன் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருதப்படுகின்றது. இந்திய நாட்டிலும் சிவப்பு உடை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. தெய்வங்களுக்குச் சிவந்த ஆடைகளே உடுக்கப்பட்டன. திருமுருகாற்றுப் படையில் தெய்வ மகளிர் தம்பலப்பூச்சி போன்ற நிற ஆடை உடுப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல், திருமால் சிவந்த பட்டாடை உடுத்தி யிருப்பவராகக் கூறுகின்றது. முருகக் கடவுள் உடுத்தியிருப்பது சிவந்த ஆடை (முருகு). மற்றும் கடவுளரும் சிவந்த ஆடையையே உடுத்தியிருப் பதாகப் படங்கள் வரையப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை யில் தீக்கை பெற்றபோது அணிந்திருந்தது சிவப்பு ஆடை (திருவா. பு). இதனால் கடவுளர் பெருமக்கள் குருமாரின் உடைகள் சிவப்பு நிறமா யிருந்தன வென்றும், அம்மரபைப் பின்பற்றியே கடவுள் அடியார் துவர் ஆடை அணியும் வழக்கு ஏற்பட்டதென்றும் நன்கு துணியப்படுகின்றது. சுவத்திகம் சுவத்திக அடையாளம் புத்தர் காலத்துக்குப் பின்பே வழங்குகின்ற தெனப் பலர் கருதலாம். ஞாயிற்று வழிபாடு, சங்கு வாத்தியம் என்பவை களைப்போலவே இக் குறியும் மிகப் பழமையுடையது. வரலாற்றுக் காலத் துக்கு முற்பட்ட சுவத்திகம் பொறித்த பழம்பொருள்கள் தென் இந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 ஆதிகால மக்கள் ஞாயிற்றைக் குறிக்கப் புள்ளடியை (X) அல்லது புள்ளடியைச்சுற்றி வட்டமிட்ட குறியை வழங் கினர்.2 இப்புள்ளடி குரிசு (Cross) என ஆங்கில மொழியில் வழங்கும். புள் ளடியிலுள்ள கோடுகளின் வளைவே சுவத்திகக் குறியாகும். இதனால் புள்ளடி சுவத்திகமாக வளர்ச்சியுற்றதென அறியலாம். சுவத்திகம் என்பது வடமொழிப்பெயர். ஆங்கிலோ சாக்சனியர் இதனை ‘வவர்வொற்’ (Fowerfot) என்றும், பிரான்சியர் குறோயிக்ஸ்கிறாமி (Croix Grammee) என்றும், ஸ்காந்தினேவியர் தோர்க்கடவுளின் சுத்தி (Thor’s Hammer) என்றும் வழங்கினர். சுவத்திகம் என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். பதஞ் சலியின் யோக சூத்திரத்தில் யோகாசனத்தில் ஒன்று சுவத்திகம் எனப்படு கின்றது. இது இந்தியாவிலோ கிழக்குத் தேசங்கள் ஒன்றிலோ தோன்றி இவ் வுலகம் முற்றிலும் பரவியிருத்தல் வேண்டுமென ஆராய்ச்சியாளர் துணிகின் றனர். மாந்தர் நூலார் உலகில் எல்லாப் பாகங்களினும் இவ் வடையாளம் சமயக்குறியாக வழங்கியதெனக் கூறி உலகப்படத்தின் எல்லாப் பாகங்களி லும் புள்ளியிட்டுக் காட்டியிருக்கின்றனர்.3 சிவன் என்னும் பெயர் ஞாயிற் றுக்குச் சாலப் பழைய பெயர் என்று முன் விளக்கப்பட்டது. சுவ என்பதே சிவ என வந்ததென மொழியாராய்ச்சியாளர் கூறுவர். சிவன் சம்பந்தமான குறி என்னுங் கருத்துப்பற்றியே ஞாயிற்றுக்குறிக்கு சுவத்திகம் எனப் பெயர் இடப்பட்டது என நாம் நன்கு உய்த்துணரலாம். சுவத்திகக்குறி ஆரியரின் இந்திய வருகைக்கு முற்பட்டது. ஹெரஸ் பாதிரியார் கூறுவது: மொகஞ்சொதரோவில் வாழ்ந்த திராவிடமக்கள் சிறிய சதுரமான நகைகளைப் பயன்படுத்தினர். அவைகளில் சுவத்திகம் பொறிக்கப்பட்டிருந்தது. அங்குக் கிடைத்த பட்டையங்களிலும் இக் குறி காணப்படுகின்றது. இவ் வடையாளம் திராவிட மக்களுடையது. புதிதாக இந்தியாவை அடைந்த ஆரியர்தாம் புதிதாகக் கைக்கொண்ட பலவற்றோடு இவ் வடையாளத்தையும் பயன்படுத்தினர். இச் சுவத்திக அடையாளம் தமிழருடன்கூட மேற்கே கிரேத்தா (crete), கிரீஸ், ஏற்றூனா (Etruna), ஐபீரியா (ஸ்பெயின்) முதலியவும் பிறவுமாகிய நாடுகளுக்குச் சென்றது. மொகஞ்சொதரோவிலும், இலங்கையிலும் வழங்கியதுபோல அது அந் நாடுகளிலும் சுகம் என்னும் பொருளைக் குறித்தது. குடிக்கும் கிண்ணத் தில் இவ் வடையாளம் இருக்குமாயின் அது குடிப்பவனுக்குச் சுகம் தருவ தாக என்னும் பொருளைக் குறித்தது. இவ் வடையாளம் எற்றுஸ்கிய (Etrus-cian) சமாதித் தூண்களிலும், கிறித்தவரின் கல்லறைகளிலும் பொறிக்கப் பட்டன. இது, இவ் வடையாளத்தின் கீழ் அடக்கஞ்செய்யப்பட்டவர் மறு உலகில் சுகமாக இருக்கட்டும் என்னும் பொருளைக் குறித்தது. ஆகமங்கள்1 ஆலயம் அமைக்கும் முறைகளையும், அங்கு நடக்கவேண்டிய கிரியை வகைகளையும், மக்கள் ஆலயங்களில் கடவுள் வழிபாடு செய்ய வேண்டிய முறைகளையும் கூறும் நூல்கள் ஆகமங்கள் எனப்படும். வேதங் களும் ஆகமங்களும் நேர்விரோதமுடையன.2 வேதங்களிற் கூறப்படும் தெய்வங்களும் ஆகமங்களிற் கிளக்கப்படும் தெய்வங்களும் வேறு. வேதங்கள் வருணாச்சிரம தருமங்களை வலியுறுத்துகின்றன. ஆகமங்கள் சரியை கிரியை முதலியவைகளைக் கூறுகின்றன. ஆலய வழிபாடு வேதங் களுக்கு அன்னியமானது. ஆகமங்கள் வடமொழியில் எழுதப்பட்டிருத் தலின் அவை தமிழருடையனவாகா எனச் சிலர் கருதுதல்கூடும். எம் மொழி யில் ஆகமங்கள் எழுதப்பட்டுள்ளனவேனும் அவைகளிற் பொதிந்துள்ள பொருள்களைக்கொண்டு அவை எவருக்குச் சொந்தம் என அறிதல் எளிது. ஆகமங்கள் தமிழருடையனவே என்பது வரலாற்று நூலார் நன்கு ஆராய்ந்து அறுதியிட்ட முடிவு. உபநிடதங்கள் பாரசீக மொழியிலும் இலத்தீன் மொழி யிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரசீகரும், இத்தாலியரும் அந் நூல்கள் தங்களுடையனவென்று வாதாடமாட்டார்கள். ஆலயம் கட்டும் சிற்பக்கலை, திருவுருவங்களைச் செய்யும்முறை முதலியனவும் இவை போன்றனவும் பெரும்பாலும் அவ்வத் தொழில்களுக்குரிய கூட்டத்தின ரிடையே ஏட்டிலெழுதப்படாது பரம்பரையாகத் தொடர்ந்து வந்துள்ளன. இவ் வகை வழக்குகள் எல்லாவற்றையும் திரட்டிப் பிற்காலத்தில் ஐயர்மார் எழுதிவைத்தனர். திருவுருவங்கள் உலோகங்களில் அமைக்கும் முறைகள் நீண்டகாலம் எழுதப்படாது பரம்பரையாக வந்ததென்பதைக் கன்கூலி என்பார் தென்னிந்திய வெண்கலத் திருவுருவங்கள் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.1 ஆகமங்களில் கூறப்படும் யோகம், ஞானம் முதலிய பகுதிகள் பிற் காலத்து எழுதப்பட்டனவாதல் வேண்டும். தமிழில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாக நூல் செய்தலே வழக்கு. வீடுபற்றி நூல் செய்தல் வழக் கின்று.2 “அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப” (தொல். செ. 106) இவ் வழக்குப்பற்றியே திருவள்ளுவரும் முப்பாலாக நூல் செய்தார். ஆரிய ரின் முறையைப் பின்பற்றியே தமிழில் நூல்கள் செய்யப்பட்டன என்று சிலர் வாதிப்பர். இது தந்தைக்கு மகன் முப்பாட்டன் என்பது போன்ற தோர் கொள்கை. நாற்பாலாக நூல் செய்தலே ஆரியர் மரபு. புராணங்கள் புராணங்கள் என்பன பழைய வரலாறுகள். புராணங்களில் பழைய அரசர் வரலாறுகளும் அவர்கள் காலங்களில் நிகழ்ந்த பெரிய செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசர்களது சபைகளிலே புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசனது பரம்பரையிலுள்ள வரலாறுகளை எல்லாம் திரட்டிப் பெருநாட்களில் அரச சபைகளில் கூறுவது வழக்கம். இவ்வாறு வடநாட்டு அரசர் சபைகளில் இருந்த புலவர்கள் சூதர் எனப்பட்டனர். இதனாலேயே புராணங்கள் சூத முனிவராற் சொல்லப்பட்டன என்று வழங்குகின்றன. இவ்வாறு கன்ன பரம்பரையில் வந்த வரலாறுகள் பிற்காலத்துத் திரட்டி எழுதப்படலாயின. இவைகளே பழைய இந்திய மக்களின் வரலாறுகளாகும். மற்றைய நாடுகளிற் காணப்படும் பழைய வரலாறுகள் புராண வரலாறுகளை விடச் சிறந்தன என்று கூறமுடியாது. அபஸ்தம்பர் (கி. மு. 400), கௌடலியர் முதலானோர் புராணங்களைக் குறிப்பிட்டுள்ளமையின் அக் காலத்திலேயே புராணங்கள் தோன்றியிருந்தனவென பார்கித்தர் (Pargiter) என்னும் ஆரியர் கூறுவர். புராணங்களை நன்கு ஆராய்ந்து, இந்திய மக்களின் வரலாற்றுக் கதைகள் என நூல் எழுதிய பார்கித்தர் என்பார் கூறியிருப்பதின் சுருக்கம் பின் வருமாறு: புராணக்கதைகள் எனப்படும் பழைய வரலாறுகளில் பிராமணர் கை யிட்டு அவைகளை வேண்டியளவு பெருக்கியும், பிராமணக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் சேர்த்தும், தங்கள் சாத்திரக் கொள்கைகளையும் கிரியைகளையும் புகுத்தியும் இருக்கின்றனர். பிராமணரின் கதைகள் பிராமணருக்கு எப்படிப் புலப்படுமோ அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. அக் கதைகளில் பிராமணரின் கருத்துக்களும், பிராமணரின் உயர்வும், அவர் களின் புனிதத் தன்மைகளும், அவர்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட நிலை யில் இருப்பதும், இவைபோன்றனவுமாகிய அவர்க்கு மாத்திரம் வாய்ப் புடைய கொள்கைகள் கூறப்படுகின்றன. அக் கதைகள் சிறிதும் பொருத்த மற்றன. பிராமணர்களின் பிழையினால் புராணங்கள் மதிப்பை இழந்து விட்டன.1 வரலாற்று நூல்களாகிய புராணங்கள் பிராமணரின் கையீட்டினால் சமய நூல்களாக மாறியுள்ளன. சிறுவன் ஒருவன் சிறிதாயுள்ள இரப்பர்ப் பையை (Baloon) எப்படி ஊதிப் பெருக்கச் செய்கிறானோ அவ்வாறு சிறிய அளவில் இருந்த பண்டை மக்கள் வரலாற்றை அதனினும் பன்மடங்கு பெரிதாகப் பிராமணர் தம் சொந்த நலம் கருதிப் பெருக்கியுள்ளனர். இதிகாசங்கள் இதிகாசம் என்னும் பெயருடன் வழங்குவனவும் புராணங்கள் போன்ற பழைய வரலாறுகளே. இவ்வரலாறுகளிலும் பல கட்டுக்கதைகள் நுழைந்துள்ளன. புராணங்களில் கையிட்டதுபோலவே இதிகாசங்களிலும் பிராமணர் கையிட்டு அவைகளின் பெருமையைக் குறைத்துவிட்டனர். பார்கித்தர் கூறுவது: “பிராமணரின் கதைகள் பொதுவில் நம்பத்தக்கன வல்ல. இராமாயணத்தில் பிராமணக் கொள்கைகள் பெரிதும் காணப்படு கின்றன. கதையும் புதுமுறையாகவும் நம்பக்கூடாததாகவும் இருக்கின்றது.”1 மத்தியதரை மக்கள் எல்லோருக்கும் ஆகமம் ஒன்றே மேல் நாட்டு மக்கட்குல நூலார் மத்தியதரைச் சாதியினர் எனப்பிரிக் கும் பெருங்கூட்டத்தில் பொலிநீசியர், தமிழர், எகிப்தியர், பாபிலோனியர், கிரேத்தா மக்கள் பழைய இத்தாலியர் முதலியோரும், இன்னும் மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளில் வாழும் மக்களும் அடங்குவர். இம் மக்கள் எல்லோரும் ஒருகாலத்து ஒரு கூட்டமாக வாழ்ந்து பின்பு பிரிந்து சென்றோர். மத்தியதரை நாடுகளிலுள்ள மக்களே ஒருகாலத்தில் இந்தியாவை யடைந்து தமிழர் என்னும் சாதியினராகப் பெருகினார்கள் எனக் கருதப் பட்டது. பழைய மக்கள் வரலாறுகள் ஓரளவு வெளிச்சம் அடைந்துள்ள இக் காலத்து, தமிழ் மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என்னுங் கொள்கை வலுத்துள்ளது. ஹெரஸ் பாதிரியார் ஆரம்பத்தில் முன்னைய கொள்கையுடையவராகவே இருந்தார். மொகஞ்சொதரோ, அரப்பாவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு எழுத்துப்பொறித்த முத்திரை களை வாசித்தபின் அவர் தமிழர்களே மத்தியதரை நாடுகளிற்சென்று குடி யேறினார்கள் எனப் பலவகையில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.2 விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில், மத்தியதரை மக்கள் எல்லோருடைய வழிபாடுகளும் ஒருவகையின என்பதற்குரிய ஆதாரங்கள் நிறையக் கிடைக்கின்றன. அவற்றுட் சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். அவற்றை இன்றும் இந்தியநாட்டிற் காணப்படும் வழக்குகளோடு ஒப்பு நோக்கி உண்மை ஓர்க. “யெகோவா மொசேயை நோக்கி அதிஉத்தம சுகந்த திரவியங் களாகிய சித்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்நானத்திற்குச் சேக்கலின்படி 5000 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற் பாதியாகிய 2500 சேக்கலும் சுகந்த வசம்பு 2500 சேக்கலும், இலவங்கப்பட்டையில் 500 சேக்க லும், சீதவிருட்சத்தெண்ணெயில் ஒரு கின்னும் எடுத்து, பரிமள தைலக் காரனுடைய செய்கையாகச் செய்யப்பட்ட பரிமள தைலத்தைப்போல, அவை களினாற் சுத்த தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாக இருக்கவேண்டும். அதனாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப் பெட் டிக்கும், பீடத்துக்கும் கிளை விளக்குக்கும் தூபவேதிகைகளுக்கும், தகன பலிவேதிகைக்கும் அபிஷேகம் பண்ணக்கடவாயாக. ஆரோனும் அவன் புத்திரரும் எனக்கு ஆசாரியத்தொண்டு புரியும்படி நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாய். (யாத்: 30. 22-33) (யாத்: 25. 30) என் சந்நிதியில் எப்பொழுதும் பீடத்தின்மீது அப்பம் வைக்கவேண்டும். நைவேத்தியத்துக்கு ஒரு கூடையில் எண்ணெயிற் பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினாற் செய்த அதிரசங்களையும் எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் கொண்டுவரக் கடவன். அவைகளை ஆசாரியன் கொண்டுவந்து யெகோவாவின் சந்நதி யில்... பலியாக இடக்கடவன். நைவேத்தியமாகும் பொருட்டு அடுக்குந் தோறும் சுத்தகுந்துருவை இடக்கடவாய்.......நித்தியமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுள் அவை மிகவும் பரிசுத்தமான வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திரர்களுக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்திற் புசிக்கக்கடவர்கள். (லேவி. 16 12-13.) யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தகனதூப கலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூப வர்க்கத்தில் தன் கை நிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டு வந்து சாட்சிப் பத்திரத்தின் மேலிருக்கும் கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூப வர்க்கத்தைப் போடக் கடவன். (லேவி. 24. 1-4) யெகோவா மொசேயை நோக்கி நித்தமும் விளக் கேற்றும்படிக்கு இஸ்ரவேலர் இடித்துப்பிழிந்த சீதவிருட்சத்தின் சுத்தமான எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளை யிடு. ஆரோனானவன் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலம் தொடக்கம் விடியற்கால பரியந்தம் யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் விளக்கு ஏற்றக்கடவன்; (எண் 8. 1-4) யெகோவா மொசேயை நோக்கி ஆரோனுக்கு நீ விளக்கேற்றும்போது ஏழு தீபமும், கிளைவிளக்குத் தண்டுகளுக்கு நேரே ஒளிகொடுக்க வேண்டுமென்று சொல் என்றார். (நாளா 15. 15-16) யெகோவாவின் வாக்கின்படி, மொசே கட்டளை யிட்ட பிரகாரம் தேவனுடைய பெட்டியைத் தண்டோடும் தங்கள் தோளின் மேல் எடுத்துக்கொண்டு வந்தார்கள்; தங்கள் சகோதரரைத் தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க ஆனந்தக் கூத்துடன் உரத்த சத்தமாய்ப் பாடும்படி ஏற்படுத்தும்படி தாவீது கட்டளை யிட்டான் (மேற்கூறியபடி அதி. 2.). ஊது கொம்போடும், பூரிகைகளோடும், கைத்தாளத்தோடும், தம்புருவும், கின்னரமும் முழங்க இஸ்ரவேலரனை வரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். (எண். 8-10) உங்கள் ஆனந்த தினத்திலும், உற்சவ நாளிலும் மாசாரம் பங்களிலும் உங்கள் தகன பலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தும்போது எக்காளங்களை ஊதவேண்டும். (சங். 18-5) கின்னரத்தி னாலும் கின்னரத்தோடு, கீதத்தினோசையினாலும் யெகோவாவைப் பாடுங்கள். (2. சாமு 6.5) தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் சமஸ்தரும் யெகோ வாவின் சமுகத்தில் தேவதாருவினாற் செய்த கின்னரமும், தம்புருவும், மிரு தங்கமும், வீணையும், கைத்தாளமுமாகிய நானாவித வாத்தியங்களையும் முழக்கினார்கள். (லேவி. 2-3) ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும், பூரணை யும், உற்சவ நாள்களும் புண்ணிய காலங்கள். அந்தக் காலங்களிலே நித்தி யாக்கினியிலே இறைச்சி முதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல் வேண்டும். தங்கள் சங்கற்பத்தின்படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரதமனுட்டித்தல் வேண்டுமென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. (லேவி. 12. 1-5) ஒரு ஸ்திரி கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றால் அசுசியின் நிமித்தம் ருதுமதியைப்போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். பின் அவள் உதிரசுசி நிமித்தம் முப்பத்து மூன்றுநாள் வரையும் அசுசியாயிருப் பாளாக. சுசிக்கேற்ற தினங்கள் நிறைவேறுமளவும் எந்தப் பரிசுத்த வஸ்து வையும் பரிசிக்கவும் பரிசுத்த ஸ்தானத்திற் பிரவேசிக்கவும் கூடாது. (நாளா. 15. 19-24) ருதுமதியான ஸ்திரி தன் சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழு நாள ளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனொருவனோ அவன் சாயங்கால பரியந்தம் அசுசியாகவிருப்பான். அவள் அசுசியாயிருக் கையில் அவள் படுத்த எந்தப் படுக்கையும் அவளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும்.” 1ஆசாரியபிடேகம், விரதம் அனுட்டித்தல், மரண, செனன தீட்டுக் காத்தல், ஆலயங்களில் கிரியைபுரிதல், தீயில் பலியை இடுதல், இவையும் இவை போன்றனவும் தமிழர் ஆரிய மக்களிடமிருந்து கற்றுக்கொண்டன வல்ல வென்பதற்கு மேற்காட்டியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பழைய தமிழ்நாட்டு வழக்குகளையே நம்மவர் தவறாக ஆரியக் கொள்கை களெனக் கருதி வருகின்றனர். சமயத்தின் அகவளர்ச்சி இதுகாறும் கூறியன சமயத்தின் புறவளர்ச்சி முறைகள். சமயம் இன்னொரு வகையிலும் வளர்ச்சியடைவதாயிற்று. அதனை அகவளர்ச்சி எனக் கூறலாம். மக்கள் இவ் வுலகத்தையும், தம்மையும் ஒருங்கே இயக்கும் மேலான ஒரு பொருளையும்பற்றி ஆராயத் தலைப்பட்டனர். அவர்கள் அம் மேலான பொருள் தமது சிந்தைக்கு வராததென்றும் அதுவே எல்லாப் பொருள்களையும் இயக்குகின்றதென்றும் கண்டார்கள். ஆகவே அவர்கள் அப்பெரும் பொருளுக்கு ‘உள்ளத்தைக் கடந்தது’ என்னும் பொருளில் கடவுள் என்றும், எல்லாவற்றையும் இயக்குவது என்னும் பொருளில் இயவுள் என்றும் பெயர்களை இட்டு வழங்கினர். இப் பெயர்கள். தமிழில் மிகப் பழமையுடையன. மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள் என்னும் பெயர் இருத்தலை ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார்.1 மொகஞ்சொத ரோவிற் காணப்பட்ட திருவுருவம் ஒன்று, கடவுள், பசுபதி என்னும் கருத்தை விளக்கா நிற்கின்றது. அவ்வுருவம் யோகத்திலமர்ந்திருக்கும் திருக்கோலத் துடனுமுள்ளது.2 இதனால் அக் கால மக்கள் முப்பொருள் உண்மைகளை யும், சிந்தையையடக்கிச் சும்மாவிருக்கின்ற யோகமுறைகளையும் நன்கு அறிந்திருந்தார்களென்பன தெற்றெனப் புலப்படும். மற்றைய நாடுகளில் இவ் வுண்மைகள் அறியப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் காணப்பட வில்லை. தமிழ் மக்களின் சமய அகவளர்ச்சி மிக உயர்நிலை பெற்றிருந்தமை யினாலேயே அவர்கள் புதிதாக வந்த ஆரிய மக்களின் சமயக்கொள்கை களுக்கு உடம்படாராயினர். ஆரியருக்கும், தாசுக்கள் என அவர்களால் இழித்துக் கூறப்பட்ட தமிழர்களுக்குமிடையில் நேர்ந்த போர்களுக்கு முக்கிய காரணம், தாசுக்கள் ஆரியர் தெய்வங்களை வழிபட மறுத்ததோடு அவர்கள் வேள்விகளையும் வெறுத்தமையேயாகும். இராவணன் ஆதியோர் வட நாட்டு முனிவர்கள் உஞற்றும் வேள்விகளுக்கு இடையூறாய் நின்று அவை களை அழித்து வந்த வரலாறும் இராமாயணத்திற் கூறப்படுகின்றது. ஆரியர், இந்தியாவை அடைந்தபோது உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்திருக்கவில்லை. மறுபிறப்பைப் பற்றியே வேதங்கள் அறியா என்று முன் காட்டப்பட்டது. வேதமதம் தத்துவக் கொள்கை (Philosophy) இல்லாத மதம். ஆரியமக்கள் இந்திய நாட்டிற் குடியேறிய காலத்தில் ஆரியர் தமிழர் என்னும் இரு கூட்டத்தின ரும் கலந்து ஒன்றுபட்டனர். அக் காலத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் ஆரியர் ஆரியரல்லாதார்களின் கலப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் உண்டாயிருக்கவில்லை.3 அக் காலத்தில் தமிழ் மக்களின் கொள்கைகள் பலவற்றை ஆரியமக்கள் பின்பற்றலாயினர். அவற்றுள் காட்டிற் சென்று தவஞ்செய்தலாகிய வழக்கு ஒன்று. காட்டிற் சென்று தவஞ்செய்தலைப்பற்றி இருக்குவேதத்திற் காணப்படவில்லை என ஆர். சி. தத்தர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ் வழக்குத் தமிழர்களுடையதே என்று நன்கு துணிதும். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் 1சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” (தொல். கற்-51) என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் இதனை வலியுறுத்தும். உபநிடதங்கள் உபநிடதங்களே தமிழர்களின் பண்டைமறைகள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட்டது. ஆரியப் பிராமணர்களுட் சிலர் உண்மைஞானங் களை அறியும் தாகம் உடையவர்களாய் இடங்கள்தோறும் அலைந்து திரிந்தனர். இவ்வாறு திரிந்த யாக்ஞவல்கியும் அவருடன் சென்ற மற்றைய பிராமணர்களும் விதேக நாட்டரசனாகிய சனகனைக் கண்டார்கள். யாக்ஞ வல்கி சனகனிடத்தில் மாணாக்கனாக அமர்ந்து உண்மை ஞானத்தைப் பயின்றார். இதன்பின் பிராமணர், தாம் முன்னொருபோதும் அறிந்திராத உண்மைஞானங்களை அரசமரபினரின் பாதங்களின்கீழ் மாணாக்கராயிருந்து பயின்றனர். அதன்பின்பே ஆரியருடைய மதம் தத்துவக் கொள்கையுடைய தாக மாறிற்று. வின்ரணிச்2 என்னும் அறிஞர் உபநிடதங்களைப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பதின் சுருக்கம் பின்வருமாறு: “உபநிடதஞானம் அரசர்களிடம் மாத்திரமன்று, பெண்களிடமும் ஐயமான குலத்தவர்களிடையும் இருந்தது. பிராமணன் மாத்திரம் ஆசிரிய னாக அமர்ந்து மூவருக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என வற்புறுத்தி ஆரியர்களுடைய நீதி நூல்கள் கூறுகின்றன.3 ஆனால் அரசரும் அரசர் குலத்தவர்களுமே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தனர் என்றும், அவர்க ளிடமிருந்தே பிராமணர் அவ்வறிவைப் பயின்றனரென்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. அரசர் அவ்வாறு அளித்த ஞானம் மறுபிறப்புத் தொடர்புடை யது என்று கூறப்படுகின்றது. இஞ்ஞானம் பிராமணர் சிறிதும் அறியாதது. உபநிடத மென்பதற்குக் கிட்ட இருப்பது என்று பொருள். ஆசிரியன் ஒருவ னிடத்தில் சில மறைவான உண்மைகளைப் படித்தற்கு மாணாக்கனாயிருத் தல் என இது பொருள்படும். அவ்வாறு கொடுக்கப்படும் ஞானம் மறை (இரகசியம்) எனப்பட்டது. உபநிடதங்கள், அம்மறையைத் தகுதியில்லாதவர் களுக்கு அளித்தல் கூடாதென வற்புறுத்துகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, இம் மறையைத் தந்தை தன் மூத்த புதல்வனுக்கு அல்லது உண்மையான மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ் வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந் தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக் கனாக அமர்ந்து பலமுறை வருந்திக் கேட்டபோது இஞ்ஞானம் வெளி யிடப்பட்டதென உபநிடதங்கூறுகின்றது.” உபநிடத காலத்தை ஆராய்ச்சி யாளர் பலவாறு கூறுவர். 1றனேட் என்பார் உபநிடத காலம் கி.மு. 1200க்கும் கி.மு. 600க்கும் இடையில் எனக் கூறுவர். இது காறும் மறைவாக மறை என்னும் பெயருடன் நிலவிய தமிழர்களின் உண்மைஞானங்கள் அவ் வாரிய மக்கள் வாயிலாக உபநிடதம் என்னும் பெயருடன் வெளிவரலாயின. அக் காலத்திலேயே சிவவழிபாடு ஆரியருக்குள் தலைமை பெற்றிருந்தது. ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுளும் சிவனும் ஒருவராகக் கருதப் பட்டனர்.2 உபநிடதங்கள் உயிர், உலகம், இறைவன் என்னும் முப்பொருள் களின் உண்மைகளை ஆராய்கின்றன; யோகத்தைப்பற்றிக் கூறுகின்றன; ஓங்காரத்தை உச்சரிக்கும்படி வலியுறுத்துகின்றன; மாயை உள்பொருள் எனக் கொள்கின்றன. இவைகளிற் கூறப்படும் உண்மைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாமக்களுக்கும் பொதுவானவை.1 உபநிடதஞானம் ஞாயத்துக்கு உட்பட்டது; வேதங்களுக்கு மாறானது.2 உபநிடதங்களில் கூறப்படும் பிரணவம் தமிழுக்கே உரியது. வட மொழியில் எ, ஒ என்னும் குறில்கள் இல்லை. எந்த மொழியில் எ, ஒ என்னும் குறில்கள் காணப்படுகின்றனவோ அம் மொழிக்கே ஓ, ஏ என்னும் நெடில்களும் உரியன. இம் முறையைக்கொண்டு, பந்தாக்கர், பாலிமொழி யில் எ, ஓ என்னும் குறில்கள் காணப்படுகின்றமையின் மகதநாட்டில் தமிழ் வழங்கியதென்றும், எகர ஒகரங்கள் தமிழுக்கே உரியனவென்றும் காட்டி யுள்ளார். சாங்கியம் உபநிடதங்களுக்குப்பின் தோன்றியது கபிலரின் சாங்கிய நூல். சாங்கிய மதக்கொள்கை ‘சத்காரியவாதம்’ எனவும் வழங்கும். இது மாயை உள் பொருளெனக் கூறுகின்றது; வினை, வினைப்பயன்களை வலியுறுத்து கின்றது. இது கடவுளைப்பற்றி யாதும் பேசவில்லை. ஆகவே, இது நீரீச்சுர சாங்கியம் எனவும்படும். கபிலரின் நூற்கொள்கைகளுக்கு அடிப்படை உபநிடதங்கள். சாங்கிய நூல் கி. மு. 760 வரையிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. கிரேக்க தத்துவசாத்திரியாகிய பதகோரஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து கபிலரின் சாங்கியநூற் கருத்துக்களைப் பயின்று அவற்றைக் கிரீசில் வெளியிட்டார் எனக் கருதப்படுகின்றது.3 புராணங் களிலே கபிலரின் வேள்விக் குதிரையைப் பிடித்துக்கட்டிய கபிலர் ஒருவர் காணப்படுகின்றார். அவர் தமிழ்மரபினர் என ஒல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார்.4 கௌதமபுத்தர் கபிலர்மரபில் வந்தவரென்றும், அவர் தமிழ்மரபினரென்றும் கருதப்படுகின்றனர்.1 சாங்கியநூல் ஒவ்வொன் றையும் நியாயவாயிலாக ஆராய்கின்றது. சாங்கியம் வேதமார்க்கத்துக்கு முற்றும் முரண்பட்டது. பௌத்தம் கபிலருக்குப்பின் தோன்றியது புத்தமதக்கொள்கை. இம் மதக்கொள் கைக்கு அடிப்படை உபநிடதங்களும் சாங்கியநூலும். புத்தமதம் மாயையை இல்பொருளெனக் கூறும். ஆகவே, அம் மதக் கொள்கை சூனியவாதம் எனப்படும். சாங்கியம், புத்தம் முதலிய மதங்கள், உபநிடதக் கொள்கைகள் எவ்வாறு சிறிது சிறிதாக மாறுபட்டு வெவ்வேறு மதக் கொள்கைகளாக மாறியுள்ளன என்று காண்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். புத்தமதம் வேத மதத்துக்கு மாறானது. புத்தரின்ஞானம் தமிழர் ஞானத்தை அடிப்படை யாகக் கொண்டதென மேல்நாட்டு ஆசிரியர் தாமும் எளிதிலறிந்து கூறியுள் ளார்.2 ஆல்டன்பேக் என்னும் ஆசிரியர் உபநிடதங்கள் புத்தருக்கு எவ்வாறு வழிகாட்டிகளாயிருந்தனவென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்.3 யோகம் குரு மாணாக்க முறையில் நெடுங்காலம் வந்தனவும் உபநிடதங் களிற் கூறப்பட்டனவுமாகிய யோகநூற் பொருள்களைப் பதஞ்சலி முனிவர் திரட்டி (கி.மு. 150) யோக சூத்திரங்களாகச் செய்தார்.4 யோகம் என்பது மனத்தை ஓரிடத்தில் நிறுத்திச் செய்யப்படும் தியானம். யோகநூலில் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதற்குரிய பயிற்சிகளும் யோகத்தினால் அடையும்பேறும் நன்கு விளக்கப்படுகின்றன. யோகநூலும் நியாய முறையாக உண்மைகளை ஆராய்ந்து. யோகத்தின் முடிவு, பிறப்பை ஒழித்தல். கடவுளை அடைதல் எனக் கூறுகின்றது. ஆதலின் இது, ‘ஈசுவர சாங்கியம்’ எனப்படும்.1 யோக நூல் பிரணவத்தை உச்சரிக்கவேண்டும் என வற்புறுத்துகின்றது. மனம் சார்ந்ததன் தன்மையை அடைகின்றதென்று கூறுகின்றது;2 பற்றை அறுக்க வேண்டுமென மொழிகின்றது; அப் பற்றை அறுப்பதற்கு ஈசுவரனைப்பற்ற வேண்டுமென நவில்கின்றது. கடவுள் பத்தி, யோகங்களிற் சிறந்ததென அறைகின்றது.3 அகத்தூய்மை புறத்தூய்மைகளைப் பற்றிப் பேசுகின்றது. நல்லவர் இணக்கத்தைப்பற்றிச் சாற்றுகின்றது; மனம் உயிரின் அகக் கருவி யாதலைப்பற்றிப் புகல்கின்றது. சாங்கியநூலும் யோகநூலும் உயிர்கள் பல எனக் கொள்கின்றன.4 இவ் வகை யோகவழிகளை எல்லாம் தமிழ்மக்கள் மிகமிக முற்பட்ட காலத்திலேயே அறிந்திருந்தார்கள் என்பது மொகஞ் சொதரோவிற் காணப்பட்ட திருவுருவங்களால் நன்கு தெளிவுறுகின்ற தென்பது முன்னோரிடத்திற் கூறப்பட்டது. யோகமும் ஆலய வழிபாடும் யோகப் பழக்கத்துக்கு ஒரு வடிவை மனத்தில் நிறுத்துதல்வேண்டும். அல்லாவிடின் மனம் ஓர் இடத்தில் நில்லாது. ஆகவே, குணங்குறியில்லாத கடவுளை ஒரு வடிவம் கொடுத்து நினைக்க வேண்டியதாயிற்று. அதற்கு ஆலயங்களிலுள்ள திருவுருவங்கள் பயனளித்தன. சமய தீக்கை, மந்திரங் களை நூற்றெட்டு ஆயிரத்தெட்டு என்று உச்சரித்தல் முதலியன. அவ்வாறு செய்யுமிடத்து மணிகளை எண்ணுதல் மூச்சுப்பயிற்சி புரிதல் போல்வன யோகப் பயிற்சியின் முதற்படிகளாகும். இப்பொழுது, ஆலய பூசை அரசனுக்குச் செய்யும் வழிபாடுபோல் கருதப்படாது, யோகநிலையிற் கை வந்தார் ஒருவர் இவ் வுலக மக்கள் எல்லோரும் தீவினைகளினின்றும் நீங்கி நல்வழிப்படவேண்டுமென நினைந்து கடவுளை நினைப்பது எனக் கருதப் படுவதாயிற்று. இது பரார்த்த பூசை (பிறர்பொருட்டுச்செய்யும் பூசை) எனப்படலாயிற்று. “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.” என்றவாறு வேண்டுதல் பரார்த்த பூசைக்கு எடுத்துக்காட்டாகும். யோக நிலை கைவரப்பெறாத பார்ப்பானையே திருமூலர் “பேர்கொண்ட பார்ப்பான்” எனக் கூறினார் ஆதல்காண்க. யோகம் கைவந்த பெரியோர் நினைப்பன நினைத்தபடி ஆகும். என மக்கள் நம்பினார்கள்.1 சித்தர்கள் எனப்பட்டோர் யோகத்தின் மகிமையி னால் பல புதுமைகளைச் செய்தோர்களேயாவர். எல்லாச் சமயத்தவர்களும் தத்தம் சமய முதல்வர்கள் புதுமைகளை விளைத்தார்களெனக் கூறுகின்றனர். இறைவனிடத்தே, உள்ளம் படிந்து நிற்கும் உயிர்களிடத்து இறைவனின் இறைமைக் குணங்கள் சில உண்டாவது இயல்பு எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறும். மருத்துவம் சோதிடம் போன்ற பெரிய உண்மைகள் யோகி களால் தமது தெளிந்த உள்ளக்காட்சியிற் கண்டு கூறப்பட்டனவென்று நம்பப்படுகின்றன. திருமந்திரம் தமிழ்மக்களிடையே வழங்கிய உண்மை அறிவுகள் எல்லாவற்றின் திரட்டாக வெளிவந்துள்ளது திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூல். இந் நூலிற் காணப்படும் அகச்சான்றுகளால் இதிற் கூறப்படும் பொருள்கள் தமிழ்மக்களிடையே வழங்கியவை என்பது தெளிவாகின்றது. பற்றறுத்தல், அன்பு கனிந்து இளகிய உள்ளத்தர் ஆதல், கடவுளிடத்தில் பத்தி செய்தல் போன்றனவே முத்திக்கு வழி என இவர் கூறுவர். எல்லா ஞானங்களும் பத்தியில் அடக்கம். “என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை எய்தவொண் ணாதே” “அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பம் ஆசை விடவிட ஆனந்த மாமே” (திருமந்திரம்) “பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (குறள். 350) திருமந்திரம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. சித்தர் நூல்களிலும் திருமந்திரத்திற் கூறப்படும் உண்மைகள் காணப்படுகின்றன. திருமுறைகள் தமிழ்மக்களின் சமயக் கருத்துக்கள் திருமுறைகளிலும் ஆழ்வார் பாடல்களிலும் ததும்பிக்கிடக்கின்றன. தோத்திரங்களுடன் அவை மிடைந்து கிடத்தலின் அவை சாத்திரமாகப் பயன்படா. ஆயினும் சாத்திரங் களுக்கு மேற்கோள் அத் தோத்திரங்களே. சித்தாந்த நூல்கள் பண்டுதொட்டுத் தமிழ்மக்களிடையே ‘மறை’ எனப்பெயர் பெற்று வந்த சமய தத்துவக்கொள்கைகள் எல்லாவற்றையும் தொகுத்து முறைப் படுத்திச் செய்யப்பட்டனவே சைவசித்தாந்த நூல்கள் பதினான்கும்.1 “ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த-சாரங் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது” (குமரகுருபரர்) வேதாந்தம் - உபநிடதம். வீடு தமிழ்மக்கள் வீடு எனக்கொண்டது மெய்யுணர்வினாற் பற்றற்றுத் திருவருட் பண்புறுதலேயாகும். “பரனைநினைந்திம்மூன்றும் விட்டது பேரின்பவீடு” (ஒளவையார்). தொல்காப்பியத்திலும் வீடுபெற நிற்றல் துறவு எனக் கூறப்பட்டது. திருக்குறளில் நீத்தார் பெருமையும் இதனையே குறிக் கின்றது. சைவசமயத்தின் முடிவு, “அவனருளாலே அவன்றாள் வணங்கி” அவனை அடைதல். “காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம் போற் காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா வன்பின் அரன்கழல் செலுமே” (சி. போ. -10சூ.) சிவ வழிபாட்டின் தொன்மை சிவ வழிபாடு அறிய முடியாத பழைமையுடையது. சிந்துவெளிப் புதைப்பொருள் ஆராய்ச்சி நிகழ்த்திய சேர்யோன்மார்சல் என்பார் சிவ மதத்தின் பழைமை கற்காலத்துக்கும் அப்பாற் செல்கின்றதென்றும், இப் பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்ட தென்றும் கூறியுள்ளார்.1 பனேசி என்பார், “மொகஞ்சொதரோ அரப்பா என்னுமிடங்களிற் கிடைத்த, களிமண்ணாற் செய்யப்பட்ட உருவங்களும், கடவுள் வடிவங்களும் இலிங்கங்களும் நாம் இதுகாறும் எண்ணியதை விடத் துர்க்கை சிவ வழிபாடுகள் மிகப் பழைமையுடையனவென்று அறி விக்கின்றன” எனக் குறிப்பிட்டனர்.2 பழைய சமயநூல்கள் வடமொழியில் எழுதப்பட்டமைக்குக் காரணம் முன்னோரிடத்திற் கூறியாங்குத் தமிழ்மக்கள் வீட்டு நெறிக்குரிய உண்மை ஞானங்களைக் குருமாணாக்கர் முறையிற் பயின்றுவந்தனர். இவ் வுண்மைகளைத் தமிழர்வாயிலாக அறிந்த ஆரியமக்கள் சிலர் அவற்றை மற்றைய தம் குழுவினர்களுக்கு முணர்த்துவான் விழைந்து, அவைகளை அவர்கள் படித்து விளங்கக்கூடிய மொழியில் வெளியிட்டனர். வடக்கி லுள்ளவர்களின் மொழியைத் தெற்கிலுள்ளவர்களும் அறிந்திருந்தனர். தெற்கிலுள்ளவர்கள் தம்மிடத்திலுள்ளனவும் வடக்கிலுள்ளவர்கள் நன்கு அறியாதனவுமாகிய உண்மைப் பொருள்களை அவர்கள் கண்டு வியக்கு மாறும் நூல்கள் இயற்றினர். இது, இக் காலம் திருக்குறள், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகம் போன்ற பொருள்களைத், தமிழ் அறியாத மேல்நாட்டு அறிஞரும் வடநாட்டு அறிஞரும் கண்டு வியக்குமாறு தமிழ் அறிஞர் ஆங்கிலமொழியில் வெளியிட்டு வருதல் போன்றதோர் வழக்கு. ஆங்கில மொழியில் எழுதப்படும் நூல்கள் எல்லாம் ஆங்கிலமக்கள் எழுதியனவாகா தனபோல வடமொழியில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் வடவர் எழுதியன வாகா. வடமொழி வடக்கே உள்ளவர்களது என்று கருதப்படினும் தெற்கே உள்ளவர்களே அதனையும் நன்கு கற்று அம் மொழியில் அரிய நூல்கள் இயற்றி அதனையும் வளம்படுத்தினர். போதாயனர், காத்தியாயனர், சாணக்கியர், இராமானுசர், சங்கரர், நீலகண்டர் போன்று வடமொழியிற் சிறந்த நூல்கள் செய்து அம் மொழியை வளம்படுத்தியவர்கள் யாரு மில்லை. கபிலரும் அவர்மரபில் வந்த சித்தார்த்த புத்தரும் தமிழர்களே என்பது முன்பு விளக்கப்பட்டது. பழைய கட்டிடக்கலை இருக்கின்றது; எந்தத் தேசத்திற் காணப்படும் பழைய கட்டிடங்களையும் நோக்கி, அவை இன்ன நாட்டுக் கட்டிடக்கலை அமைப்புள்ளன என, அந் நூல் அறிஞர் எளிதில் அறிந்துகூற வல்லுநராவர். அதனை ஒப்பவே எம்மொழியில் எழுதப்பட்டிருப்பினும் நூல்களில் பொருளையும் போக்கையும்கொண்டு அவை எவருக்குரியன என எளிதில் நிச்சயம் செய்யலாம். தமிழ்த்தெய்வங் களுக்கு ஐயர்மார் வடமொழியைச் சாற்றியே பூசை செய்கின்றார்கள் எனின், இது வடமொழியில் நம்பிக்கை வைத்த பிற்கால அரசர்களின் ஆணையால் உண்டான வழக்கு. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” அரசினர் தலையீட்டி னால் பெரிய மாற்றங்கள் எளிதில் உண்டாகும். இதற்குச் சான்று தாழ்ந் தோரும் தாழ்த்தப்பட்டோரும் ஆலயங்களிற் புகுத்தப்படுவது ஒன்று; இந்தி கட்டாயக் கல்வியாக வந்தது மற்றொன்று. சமயச் சொற்கள் சமயத் தொடர்பாகத் தமிழில் வழங்கும், ஆணவம், கன்மம், மாயை, பதி, பசு, பாசம் போன்ற சொற்களும் பிறவும் வடமொழிச் சொற்க ளெனப் பெரும்பாலும் கருதப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களில் ஒருசாரார் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பட்டுள்ள சொற்களை மாத்திரம் தூய தனித் தமிழ்ச் சொற்களாகக்கொண்டு ஏனையவைகளைப் பிறமொழிச் சொற்க ளென ஒதுக்கிவருகின்றனர். மேல்நாட்டு மொழிகளில் எழுதப்படும் நூல் களில் ஒவ்வொரு கலைக்கும் உரிய தனிச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப் பட்டுள்ளன. இம் முறை எல்லாமொழியினருக்கும் பொது. யாப்பருங்கல விருத்தியில், ஆடை நூல் அணிகலநூல் என, எத்தனையோ துறைகளைத் தனித்தனி விரித்துக்கூறும் பலநூல்கள் தமிழில் நிலவின என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளையும் விளக்க எழுந்த தனிநூல் களில் அவ்வத்துறைகளுக்குரிய தமிழ்ச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப் பட்டன என்று கூறுதல் கற்பனை எனல் சாலாது. பற்பல காரணச்செறிவால் பழந்தமிழ் இலக்கியங்கள் சில நீங்கலாக ஏனைய மாண்டொழிந்தனவென்ப தும் கற்பனையன்று. இப்பொழுது பழந்தமிழ் நூல்களிற் காணப்படுவன பெரும்பாலன இலக்கியச் சொற்களே. இவ் விலக்கியச் சொற்களை மாத்திரம் பழந்தமிழ்ச் சொற்கள் எனக்கொண்டு அவையல்லாத பிறவற்றைப் பிற மொழிச் சொற்கள் என ஒதுக்கிவிடுதல் நியாயமன்று. இன்றும், ஓடஞ்செய் வோர், ஆடைநெய்வோர், சிற்பவேலைபுரிவோர், பானைசட்டிவனைவோர் போன்று ஒவ்வொரு தொழில்புரிபவர்களிடையே அவ்வத்தொழில்களுக் குரியனவும் யாம் அறியாதனவுமாகிய பல தமிழ்ச் சொற்கள் வழங்குதலைக் காணலாம். யோவுடுபிறியில் (Jouveau Dubreuil) என்னும் பிரான்சியர் எழுதிய தென்னிந்தியக் கட்டிடக்கலை என்னும் நூலில் கட்டிட உறுப்புகளை உணர்த்தும் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. அவை நமக்குப் புதியனவாகத் தோன்றுகின்றன. ஒரு கலை எந்த மக்களிடத்தில், ஆதியிற் றோன்றி வளர்ச்சியடைகின்றதோ, அம் மக்களின் மொழியில் அதற்குரிய கலைச்சொற்கள் பல தோன்றிவழங்கும். அக்கலை இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு அது அங்கு வளர்ச்சியடையுங்கால் அக் கலைச் சொற்கள் அயல் மொழிகளில் கருத்திற்கேற்ப மொழிபெயர்த்து அல்லது, அம் மொழிகளுக்கேற்ற உச்சரிப்பு முறையில் திரித்து வழங்கப்படுதல் இயல்பு. முற்காலத்து இந்தியாவினின்றும் எகிப்து, கிரீசு, பாபிலோன், பாலஸ்தின் முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட குரங்கு, மயில், அரிசி, இஞ்சி, கருவா, தந்தம், திப்பிலி, ஆடை முதலியவைகளின் பெயர்கள் அந் நாட்டு மொழிகளில் திரித்து வழங்கப்பட்டமையே1 இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஆரியமக்கள் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளினின்றும் வந்தோர். இவர்களது மொழியும் பழக்கவழக்கங்களும் கிரேக்க, உரோம, தியுதோனிய, சிலாவிய மக்களின் மொழிக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இனமுடையன. மக்கள் தம்மைச் சூழ்ந்துள்ள பிறமக்களின் சேர்க்கைக் கேற்பப் பழக்கவழக்கம், மொழி, குணம் ஆகியவற்றால் மாறுபடும் இயல் பினர்; “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு-இனத்தியல்ப தாகு மறிவு” (குறள். 452). இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொதுவாகிய சொற்களும் பழக்க வழக்கங்களும் பலவுண்டு. புதிதாக வந்த ஆரியமக்கள் புதிதாகக் கை யாண்ட பழக்கவழக்கங்களையும் புதிய சொற்களையும் அறிந்துகொள்ள வேண்டுமானால் இந்து ஐரோப்பிய மக்களுக்குமாத்திரம் பொதுவாயுள்ள அவைகளை இந்து ஆரிய மக்களிடையே காணப்படுவனவற்றிலிருந்து கழித்துப் பார்த்தல்வேண்டும். இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொது அல்லாதனவெல்லாம் இந்திய ஆரிய மக்களுக்கு, இந்திய பூர்வமக்களிட மிருந்து கிடைத்தனவே. ஆரிய மக்களுக்குள்ளவற்றை ஆரியருக்கு இல்லாதவற்றினின்று பிரித்தறிய வேண்டுமாயின் இம் முறையைக் கையாள வேண்டுமென ஆராய்ச்சி நுண்ணுணர்வு படைத்தார் நுவல்கின்றனர்.2 ஆரியர் முன் வாழ்ந்த நாடு மிக்க குளிர் உடையது. அவர்கள் புதிதாக வந்தடைந்த மத்திய வெப்பதட்ப நிலையுடைய நாட்டில் தாம் முன் அறிந்திருந்த குளிர்தேசத் தாவரங்களையும் பறவைகளையும் விலங்கு களையும் பிறவற்றையும் காணமுடியாது. அவர்கள் இந்தியநாட்டை அடைந்தபின் தாம் புதிதாக அறிந்த பொருள்களுக்கு, ஆதி மக்களின் மொழிகளில் வழங்கிய பெயர்களையே இட்டு வழங்கினார்கள் என்பதில் ஒரு புதுமையும் இல்லை. இவ்வாறு கொல் (Kol) மொழியினின்றும் வேத மொழியிற் சென்று ஏறியுள்ள பல சொற்களை பிறிஸ்லுஸ்கி என்பார், ‘ஆரியருக்கும் தமிழருக்கும் முற்பட்ட இந்தியா’ என்னும் நூலில் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். கொண்டர், முண்டர், சாந்தால், எனப்படும் மக்கள் தமிழரின் பிரிவினரே யென்றும், அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் வழக்கு நின்றுபோன பழந்தமிழ்ச் சொற்களென்றும் ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். இதனை முண்டர் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சத்தேசி என்பார் இருக்கு வேதத்திற் காணப்படும் அணு, அரணி, கபி, கருமாரா, காலம், கானம், நானா (பல) நீலம், புட்பம், பூசான பல (பழம்), பீசம், மயூரம், இராத்திரி, உருவம் முதலிய பல தமிழ்ச்சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார்.1 தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் சென்றபோது, முத்தா (முத்தா) மீனா (மீன்) என்பனபோலச் சிறிது வேறுபாடுகளை அடைந்தன. இவ்வாறு கலந்த பல சொற்கள் மேலும் மேலும் திரிந்து உருத்தெரியாவகை கரந்தனவாயினும், மொழி ஆராய்ச்சியில் அச் சொல் மூலங்கள் தமிழே என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் வகைச் சொன்மூலங்கள் பலவற்றை யாழ்ப்பாணம், வண. சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டுள்ள தமிழ் ஒப்பியல் அகராதியிற் காணலாகும். ஐரோப்பிய ஆரியர் இந்து ஆரியர்களின் சமயங்கள் ஒரே வகை யினவல்ல. இப்போதைய அல்லது வேதகால ஆரியமதத்திலிருந்து இந்து ஐரோப்பியருக்குப் பொதுவான சமயக் கொள்கைகளை கழித்துப் பார்ப்பின் எஞ்சி நிற்பன தமிழர்களுடையனவே. இம் முறையைக்கொண்டு வேத காலத்திலேயே தமிழர் சமயக்கொள்கைகள் ஆரிய மதத்தைத் தன் வண்ண மாகத் திரிக்கத்தலைப்பட்டுவிட்டன வென்பது தெளிதல்கூடும். மொகஞ் சொதரோ காலத்தில் தமிழருக்கு ஆலயங்களும் ஆலயக் கிரியைகளும் இருந்தன. ஆலயங்கட்டும் விதிகளையும் ஆலய வழிபாட்டையும் பற்றிக் (கிரியைகள்) கூறும் நூல்கள் ஆகமம் எனப்பட்டன. வேதங்களுள் ஆகமக் கொள்கைகள் (கிரியைமுறைகள்) கலந்துள்ளனவென்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். ஆகமக் கொள்கைகள் வேதங்களில் முகிழ்த்து ஆரணி யகங்கள் காலத்தில் அரும்பி மொட்டாகிப் பிராமண காலத்தில் முறுக்கவிழ லாயின.1 பிராமணக் கிரியைகள் ஆகமங்களைப் பின்பற்றினவையே. ஆரணியகங்கள் காலத்து ஆகமங்களைப்பற்றிய புகழ் இருந்தது.2 தமிழர் உள்ளத்திற்றோன்றி மலர்ந்த ஆகமக் கொள்கைகள், உபநிடத ஞானங்கள் என்பனவற்றோடு தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் இருந்தனவென்பது நன்கு உய்த்தறிதும். ‘பண்டை இந்தியாவில் மக்கள் வாழ்க்கை’ என்னும் நூல் எழுதிய பி. தி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், “தமிழர்களின் தொழில், கலைத் தொடர்பாக வழங்கும் சொற்கள் எல்லாம், தமிழ் சமக்கிருதத்தி னின்று இரவல் பெற்றனவல்ல இவ் வாராய்ச்சி நன்றாக ஆராயப்பட்டு முடிவு பெறவில்லை; ஆராய்ச்சியில் இது உண்மையாக முடிதல் கூடுமானது. கலைத் தொடர்பாக வடமொழியில் வழங்கும் சொற்கள் திராவிட மொழியி னின்று கடன்பெற்றவை என்று திரும்பலாம்”3 எனக் கூறியுள்ளார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சமயத்தொடர்பான சொற்கள் நிரம்பக் காணப்படுகின்றன. தாம் கூறும் ஞானங்கள் இத் தமிழ் உலகில் முன்னமே உள்ளன என்பதைத் “தமிழ்மண் டலமைந்தும் தாவிய ஞானம்” “செந்தமி ழாதி தெளிந்து வழிபடு - நந்தி யிதனை நவமுரைத்தானே” எனப் பலவிடங்களிற் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் நூலில் வேதமென வருவது ஆரியமக்களின் பாடல்களெனத் தெரியவில்லை. வேதம் சனகாதி முனிவருக்கு இறைவனாற் கல்லால நீழலின்கீழிருந்து அறிவுறுத்தப்பட்ட தென்பது, பண்டு தொட்டுள்ள தமிழ்மக்களின் ஐதீகம். இறைவன் மௌனமா யிருந்தே வேதத்தை அறிவுறுத்தார் என்பதனால் தமிழர் கூறும் மறை, பாடல் களும் பாடற் றொகுப்புகளுமன்று; தாயுமான அடிகளுக்கு மௌனதேசிகர் அருளியதுபோன்ற உபதேசம். தமிழரின் பண்டைச் சமய ஞானங்களைக் கூறும் திருமந்திரத்தில் வந்துள்ள சமயச்சொற்கள் தமிழ் எனக் கொள்ளலா மெனத் தெரிகின்றது. சைவசித்தாந்தமென்பது தமிழரின் சொந்த உடைமை. சித்தாந்தப்பொருள்களை உணர்த்த வழங்கும் சொற்கள் ஆராய்ச்சியின்றிப் பிறமொழிச் சொற்களென விலக்கற்பாலனவல்ல. தமிழ்ச்சொற்கள் வட மொழியிற்றிரிந்து வழங்கப்பட்டு, அவை மறுபடியும் தமிழில் வேறு உருவத் துடன் புகுந்திருத்தல் கூடும். இதற்கு உதாரணம் சென்னையிலுள்ள அம்பட்டன் பாலமே. ஆதியில் ஹாமில்டன் பாலமெனப்பட்ட இப் பாலம் உச்சரிப்போரது சோர்வினால் அம்பட்டன் பாலமாக நிலவுகின்றது. ஆங்கில மொழியில் அது “பார்பர்ஸ் பிரிட்ஜ்” என வழங்கும். “ஹாமில்டன்” “பார்பர்” (அம்பட்டன்) ஆனதுபோலப் பல தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் புகுந்து தமது உருவத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக் கின்றன என்று யாம் கருதுகின்றோம். “ஆரியமக்கள் இந்தியநாட்டை அடைவதன்முன் தமிழருக்கு, நாகரிகமில்லை; சமயமில்லை; கலைகளில்லை. ஆரியர் வந்த பின்புதான் தமிழர் ஆரியரைப் பார்த்து மெல்லமெல்ல நாகரிகமடைந்து மிருக நிலையி னின்று மேல்நோக்கி வந்தார்கள்” என்னும் பொல்லாத கொள்கை பழைய வரலாற்றாசிரியரிடத்திற் குடிகொண்டிருந்தமையால் அவர்கள் தமிழர் களிடத்துக் காணப்படும் உயர்வுகளெல்லாம் ஆரியமக்களின் சேர்க்கை யால் நேர்ந்தனவென்று குருட்டுத்தனமாகக் குறிப்பிட்டனர். சேர்யோன் மார்சல் என்பவரே (மொகஞ்சொதரோ அழிபாட்டு ஆராய்ச்சிக்கு) ஒரு கணத்துக்குமுன் “தமிழர்கள் ஒரு காலத்தில் நாகரிகமடைந்திருந்தார்க ளென்று இவ்வுலகம் அறியவில்லை” என வியப்புற்றுக் கூறியுள்ளார்.1 வட இந்திய மக்கள் தனி ஆரியரே என்று கருதிவிடுதல் கூடாது. அவர்களிடையே நெருங்கிய திராவிடக் கலப்பு உண்டு. இதனால் அவர் களின் மொழியும் பழக்க வழக்கங்களும் மாறுபட்டன.2 மொகஞ்சொதரோத் தமிழரின் சமயம் ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட ஆயிரத் தெண்ணூறு பட்டையங்களை நன்கு ஆராய்ந்தும், அவைகளில் எழுதப் பட்டவற்றை ஒலிமுறையில் வாசித்தும் அறிந்த உண்மைகள் சிலவற்றை மாதவெளியீடுகள் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார். அவற்றின் சுருக்கமோ விரிவோ இதுகாறும் தமிழில் வெளிவந்தில. பம்பாய்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் (யூலாய்-1936) அவர் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றைச் சுருக்கி ஈண்டுத் தருகின்றோம். ஒரு பட்டையத்தில் “இறுவன் கொம்மின்னிர்” எனப் பொறிக்கப்பட் டிருக்கின்றது. (கடவுளின்) கொம்பு வாத்தியமூதும் மீனவர் என்பது இதன் பொருள். இன்னொரு பட்டையத்தில் “கோயில் எல்லாக் கடவுள் ஆண்” எனக் காணப்படுகின்றது. ஆலயத்திலுள்ள எல்லாக் கடவுளுக்கும் தலைவர் என்பது இதன் பொருள். இன்னொரு பட்டையத்தில் நாலூரியிருக்கும் கடவுள் “விடுகண்” எனக் காணப்படுகின்றது. விடுகண் என்பது திறந்த கண். கடவுள் இமையா தவர் (“இமையா நாட்டம்” உடையவர்) இக் காலத் தமிழர் ஐதீகத்தோடு இது ஒத்துள்ளது. கடவுள் மக்களுக்கு எல்லா உதவியும் அளிப்பவர் எனவும் அக் காலத்தவர் நம்பினர். இது, “இது உதவு மின் அடு ஆண்” எனப் பொறிக் கப்பட்ட பட்டையத்தால் விளங்குகின்றது. (கடவுள்) உதவி செய்கின்ற மீனவரின் கடவுள் என்பது இதன் பொருள். ஒரு முத்திரையில் மூன்று முகமும் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுமுடைய ஒரு வடிவம் காணப்படுகின்றது. இவ் வடிவைச் சுற்றிப் பல விலங்குகள் இருக்கின்றன. இது, கடவுள் பசுபதி என்னும் கருத்தை விளக்க அமைக்கப்பட்ட வடிவம் எனக் கருதப்படுகின்றது. பல குலக் குறி களை (Totem) யுடைய நாட்டு மக்கள் எல்லாரும் வழிபடும் கடவுள் என்பதை விளக்க இது கற் சிற்பியால் வெட்டப்பட்டதாகலான். ஓரிடத்தில் கடவுளின் பெயராக எண்மை என்னும் சொல் காணப்படு கின்றது. இன்னொரு முத்திரை கடவுள் எட்டாக இருக்கிறார் எனக் கூறு கின்றது. கடவுள் மீன் வடிவில் நாட்டில் பல பகுதிகளில் வழிபடப்பட்டார். தலையிலே சூலம் உடைய கடவுள் வடிவங்கள் முத்திரைகளிற் காணப்படு கின்றன. கடவுள் மூன்று கண்ணுடையவரென்று முத்திரைகள் தெளிவாகக் கூறுகின்றன. ஒவ்வொரு கண்ணும் தனித்தனி வழிபடப்பட்டது. பட்டை யங்களில் மூன்று கண் என்பது “மூன்கண்” எனக் கூறப்பட்டுள்ளது. மூன்று கண்ணுடைய பெரிய மீன் என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. தாய்க்கடவுள் மீன் கண்ணி எனப்படுகின்றார். மீன் கண்ணியே மீனாட்சி என இக் காலத்து மருவி வழங்குகின்றது போலும். மேற்கு ஆசியா நாடுகளிலும் கடவுளரின் தலையில் இரண்டு கொம் புகள் காணப்படுகின்றன. அரசரும் கொம்புகளை அணிந்தனர். கொம்புகள் மேலான அதிகாரத்தைக் குறிப்பன வென்றும் அவை ஞாயிற்றின் கதிர் களின் குறிகளென்றும் கருதப்படு கின்றன. “The husband God like Baal of Tarsus was identified by the Greeks with Zeus and Lucian tells us that the resemblance of his image to the images of Zeus was in all respects unmistakable. But his image unlike those of Zeus was seated upon bulls. A similar God of thunder and lightning was worshipped from early times by the Babylonians and Assyrians. His image is represented.........wearing a cap with two horns - Golden Bough. விடுகண், எண்மை, ஆண், கடவுள், பேர்ஆண், தாண்டவன் என்பன கடவுளின் பெயர்களாக மொகஞ்சொதரோ மக்களால் ஆளப்பட்டன. நாலு மரங்களின் இடையிலுள்ள தாண்டவன் என ஒரு பட்டையங் கூறுகின்றது. மொகஞ்சொதரோ மக்கள் இலிங்கத்தை வழிபட்டார்கள் என்பது ஐயமின்றி விளங்குகின்றது. மொகஞ்சொதரோ அரப்பா என்னுமிடங்களில் இவ் வகைக் கற்கள் பல கண்டெடுக்கப்பட்டன. மீனவர் இவ் வழிபாட்டை ஆரம்பத்தில் எதிர்த்தார்களெனத் தெரிகின்றது. மீனவர் பிற்காலத்தில் மச்சயர் எனப்பட்டனர். இலிங்கங்களாகிய கடவுளருக்கு வீடுகள் முதலிய மானியங்கள் விடப்பட்டிருந்தன. சுமேரிய மக்களின் மும்மூர்த்திகள் ஆண், அம்மா, என்லில் என்பன. தமிழரின் மும்மூர்த்திகள் ஆண், அம்மன், முருகன். அம்மன் மீன்கண்ணி எனப் பட்டையங்களிற் கூறப்பட்டுள்ளார். பாகம் பெண்ணாயுள்ள வடிவம் (அர்த்தநாரீசுர வடிவம்) காணப்படுகின்றது. இவ் வடிவம் சுமேரியாவிலு முண்டு. கழனிகளின் கடவுள், இடிக்கடவுள், சாக்கடவுள் (யமன்), மீன் கடவுள் என்பன அக்கால மக்களால் வழிபடப்பட்டன. சூலங்கள் ஆலயங் களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடப்பட்டன. ஒரு பட்டையத்தில் பாம்பு மூன்று கண்ணுடையதாகக் கூறப்படுகிறது. சூலத்துக்குப் பதில் கோடரியும் நட்டு வழிபடப்பட்டது. சில பட்டையங்களில் மக்கள் கடவுளின் மூன்று கண்களையும் தியா னித்தார்கள் எனக் கூறப்படுகின்றது. புனிதமுடைய கடவுள் திரு உருவங் கள்மீது தண்ணீர் அல்லது பால் தெளிக்கப்பட்டது. (அவ் வழக்கு இன்றும் காணப்படுகிறது). துதி பாடுதல், கடவுளின் பெயரை உச்சரித்தல், (செபித்தல்) நேர்த்திக்கடன் செய்தல்போன்ற வணக்கங்களும் இருந்தன. அரசன் உழவன் எனப்பட்டான். அரசனே ஆலயங்களில் ஐயராகவிருந்தான். விருந்தே அக் கால விழாவாகத் தெரிகிறது. (பொங்கல், குருபூசை, சங்காபிடேகம், விழாக்கள் என்பவைகளில் இன்றும் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது.) ஒவ்வொரு கிராமத்திலும் வைத்து வழிபடப்பட்ட சூலம் அல்லது சூலத்தைத் தலையிலுடைய கடவுள் அடுத்த கிராமத்துக்குக் கொண்டுப்போகப்பட்டது. அக்காலம் பெரிய விழாக்கள் கொண்டாடப் பட்டன. நகரத்தில் வீதிகள் சந்திக்குமிடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டன. தென்னந்தோப்புகளின் மத்தியில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. வீடுகளிலும் சிறிய கோயில்கள் இருந்தன. இறந்தவர்களைச் சுடுதலும் புதைத்தலும் அக்கால வழக்கு. இறந்தபின் நியாயத் தீர்ப்பு நடப்பதாக மக்கள் நம்பினார்கள். ஞாயத்தீர்ப்பு என்பதற்குத் “தீர்ப்பு” என்னும் சொல் முத்திரைகளில் ஆளப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது.  இயல் - 8 இந்தியாவும் மேற்கு உலகமும் நோவா பேழை கட்டுதற்கு முன்பு எகிப்தியர் தமிழ் நாட்டுக்கு மரக்கலங்களிற் பயணஞ்செய்த வரலாறு அவர்களின் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. பண்டு நாட்டுக்குப் பயணஞ்செய்த கன்னு என்னும் மாலுமி கூறியிருப்பதன் விபரம் வருமாறு: “நான் சேபா என்னும் துறைமுகத்தை அடைந்தேன். யான் கொண்டுவரவேண்டிய பண்டங்கள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டன. யான் எருதுகளையும் பசுக்களையும் ஆடு களையும் பலி கொடுத்தேன். யான் பண்டு என்னும் பரிசுத்த நாட்டிலிருந்து அரசனுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொண்டுவந்தேன்.” கி. மு. 1600இல் பண்டு தேசத்துக்குச் சென்ற இன்னொரு பயணத்தின் முழு விபரமும் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. அப்பொழுது இஸ்ரவேலர் எகிப்தில் மறியற்படுத்தப்பட்டிருந்தார்கள். அதன் விபரம் வரு மாறு: “பதினொரு கப்பல்களில் பண்டுதேசத்தின் வியப்பு மிக்க பொருள்கள் ஏற்றப்பட்டன. அவை விலை உயர்ந்த மரங்கள் குங்குலியம்போன்ற மணப்பொருள்கள், மணமரங்கள், அமு என்னும் நாட்டிற் கிடைக்கும் பொன்னழுத்திய யானைத்தந்தம், கண்ணுக்குத் தீட்டும் மை, நாய்த்தலைக் குரங்கு, வேட்டைநாய், புலித்தோல், அந் நாட்டு மக்கள் குழந்தைகள் என்பன.” எகிப்திய மொழியில் குரங்கையும் யானைத் தந்தத்தையும் குறிக்க கவு, எப் என்னும் சொற்கள் வழங்கின. இவை முறையே கவி இபம் என்னும் சொற்களின் திரிபு.1 வரலாற்றுக் காலத்திற்கு முன் தொட்டு இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்குமிடையில் மூன்று வணிகப் பெரும்பாதைகள் இருந்தன. இவற்றுள் மிக இலகுவானது சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து அராபியக் குடாக்கடல் வழியாக யூபிராதஸ் முகத்துவாரத்தை அடையும் கடற்பாதை. இன்னொன்று பாரசீகத்தினூடாகத் தரைவழியே செல்வது. செங்கடல் வழியாகச் செல்வது மற்றொன்று. சிந்துநதி முகத்துவாரத்துக்கும் யூபிராதஸ் பள்ளத்தாக்குகளுக்கும் இடையிலுள்ள வாணிகம் மிகத்தொன்மையுடையது. இவ் வாணிகத்தைக் குறித்த செய்தி மித்தனி (Mitanni) நாட்டையாண்ட கிதைதி அரசனின் பட்டயங்களிற் காணப்படுகின்றது. இப் பட்டையங்கள் கி.மு. 14ஆம் நூற் றாண்டிற் பொறிக்கப்பட்டவை. அசுர்பாணிப் பாலின் (Assurbanipal) புத்தக நிலையத்தில் (கி. மு. 668-626) காணப்பட்ட சிந்து1 என்னுஞ்சொல் இந்தியப் பஞ்சு என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இச் சொல் மிகப் பழமை யுடையது. இச் சொல் அக்கேடிய மொழியில் தாவர ஆடை என்னும் பொருளில் வழங்கிற்று. அசுர்பாணிப்பால் என்னும் அரசன் பெரும்பயிர்த் தொழில் புரிவோனாயிருந்தான். அவன் இந்தியாவினின்றும் ‘கம்பளி காய்க்கும் மரங்களை’ப் பெற்றான். மேற்கு ஆசியாவில் நடைபெற்ற பஞ்சு வியாபாரம் மிகப் பழமையுடையது. கிரேக்கர் முதல் முதல் இந்தியரைப் பற்றி அறியவந்தபோது அவர்கள் ‘மரத்திற் காய்க்கும் கம்பளியை’ உடுத்திருந்தார்கள். இருக்கு வேதத்தில் இரவும் பகலும் இரண்டு நெசவு செய்யும் பெண்களாக உவமிக்கப்பட்டுள்ளன.1 முகயரிலே (Mugheir-ur of Chaldees) திங்கட் கடவுளின் ஆலயத்திலும் நேபுசண் நிசரின் (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) அரண்மனையிலும் இந்தியத் தேக்கமரத் துண்டுகள் கண்டு எடுக்கப்பட்டன. தேக்கு, கருங்காலி, சந்தனம் முதலிய மரங்கள் பர்காசா (Bargaza) புறூச் எனப்பட்ட இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள துறை முகத்திலிருந்து தைகிரசுக்கு அனுப்பப்பட்டன. இவ் வாணிகம் கி. பி. 2ஆம் நூற்றாண்டு வரையில் நடைபெற்றது. சாலமன் நேசரின் (Salamanesar III கி. மு. 860) தூணில் குரங்கு, இந்திய யானை, பக்தீரிய (பரசீக) ஒட்டகம் முதலிய விலங்குகளின் உருவங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பவேரு சாதகம் (கி. மு. 500) இந்திய வணிகர் பவேருக்கு (பாபிலோன்) கடல்வழியாகச் சென்ற வரலாற்றைக் கூறுகின்றது. அங்குப் பறவைகள் அருமை. இந்திய வணிகர் முதன்முறை ஒரு காகத்தை அங்குக் கொண்டுசென்றனர். அந் நாட்டு மக்கள் அதன் அழகைப் பார்த்து அதிகம் வியந்தார்கள். அடுத்த பயணத்தில் அவ் வணிகர் நன்றாக ஆடும் மயில் ஒன்றைக்கொண்டு சென்றனர். மயிலின் அழகாற் கவரப்பட்ட அந் நாட்டுமக்கள் காக்கையின் அழகைக் கொண்டாடினார்களல்லர். பண்டைக் காலத்தில் இந்தியர் அனுபவம் வாய்ந்த கடலோடிகளாக விருந்தனர். பழைய இந்திய இலக்கியங்கள் இந்தியரின் துணிகரமான கப்பற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. பிற்காலங்களில் மத்திய தரைகளில் ஓடிய கப்பல்களைவிடப் பெரிய கப்பல்களை இந்தியர் கட்டினர். கி. மு. 6ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டினின்றும் இலங்கைக்குச் சென்ற விசய இராசனின் கப்பல் 700 மக்களை ஏற்றிச்சென்றது. சாதகக் கதைகள் முந்நூறு முதல் எழுநூறு பேரை ஏற்றிச்செல்லக்கூடிய மரக்கலங்களைப் பற்றிக் கூறுகின்றன. கிழக்குக் கரையிலுள்ள பெரிய துறைமுகங்கள் சம்பா, தாமிரலிப்தி என்பன; மேற்கிலுள்ள பறுகாசா சுப்பிரா என்பன. விநோத மான பறவைகள், சிந்துக்குதிரைகள், தந்தம், ஆடைகள், அணிகலன்கள், பொன், வெள்ளி முதலியன இத் துறைமுகங்களினின்றும் வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டன. அக் கால மக்கள் கடல்வழியாக அயல்நாடு களுக்குச் செல்வது சாதாரண நிகழ்ச்சி. கெவெட்டுசூத்த (Keveddhusutta) என்னும் நூலில் கரைதெரியாத கடலில் கரையைக் காட்டும் பறவைகளுடன் வணிகர் பயணம்செய்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பறவைகள் எப்பொழு தும் கரையிருக்கும் திசையை நோக்கிப் பறக்கும் இயல்புடையன. கரையை அறிவதற்கு நோவா பறவைகளைத் திறந்துவிட்ட வரலாறு கிறித்துவமறை யிற் காணப்படுகின்றது. பிளினி, கொஸ்மஸ் என்போர் கரையை அறி வதற்குக் குருவிகளைப் பயன்படுத்தும் வழக்கம் சிங்கள மக்களிடையே உண்டு என எழுதியுள்ளார்கள். பாரசீகக் குடாக்கடல் வியாபாரம் ஆரம்பத்தில் சாலடியர்வசம் இருந்தது. இவர்கள் கடற்கொள்ளைக்காரராகவிருந்தனர். கி. மு. 694இல் இக் கடற்கொள்ளைக்காரர் சென்னாசெரிப் (Sennacherib) என்னும் சாலடிய அரசனால் ஒழிக்கப்பட்டார்கள். இவ் வாணிகம் பின்பு பொனீசியர் கைக்கு மாறிற்று. பாரசீகக் குடாவிலுள்ள பகேரின் (Bharein) தீவுகளில் இவர்கள் வாணிகம் நடத்தியதைக் குறிப்பிடும் பழைய புதைபொருள்கள் கிடைத் துள்ளன. கி. மு. 606இல் பாபிலோனியர் அசீரியரை வென்றனர். அப்பொழுது நினேவா கிழக்குத்தேசங்களின் பெரிய சந்தையாக விளங்கிற்று. அங்கு, பொனீசியர், யூத அடிமைகள், அயோனியர், இந்தியர் முதலியோர் தமது வியாபாரப் பண்டங்களை விற்கும் பொருட்டுக் கூடினார்கள். அக் காலத்தில் பாபிலோனியர் இந்தியக்கரைகளிற் குடியேறியிருந்திருந்தார் களாதல் கூடும். அலெக்சாந்தர் இந்தியாவை அடைந்தபோது பாபிலோனில் நடத்தப்படுவது போன்ற விவாகச்சந்தைகள்1 அங்கு நடத்தப்பட்டன என்று ஸ்ராபோ கூறியுள்ளார். இந்தியாவுக்கும் செமத்திய மக்களுக்குமிடையிலுள்ள வணிகம் பெரும்பாலும் கடல்வழியாக நடைபெற்றது. பழைய ஆசிய நாகரிகம் இந்தியா, சீனா, இலங்கை, மத்தியதரை நாடுகள் வரையில் பரந்து காணப்பட்டது. இவ் விடங்களிற் கிடைத்த பழையமண்டபங்கள், உலோகப் பொருள்கள், நெசவுப்பொருள்கள் என்பன ஒரேவகையின. கிழக்கு மத்தியதரை, நாகரிக உலகின் மேற்கு எல்லையாக ஒருபோது இருந்தது. கழுதை ஒட்டகம் பொதிமாடு என்பவைகளில் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வணிகர் கூட்டத்தினர், மிக முற்காலந்தொட்டு இந்தியா, சீனா, மேற்கு ஆசியா என்பவைகளைத் தொடுத்திருந்த பெரும்பாதையாற் பிர யாணஞ் செய்தனர். ஒக்சஸ் (Oxus) ஆற்றிலிருந்து கஸ்பியன் கடல்வரை யில் பண்டங்கள் கட்டுமரங்கள் வாயிலாகக் கொண்டுபோகப்பட்டன. இந்தியத் துறைமுகங்களினின்றும் சரக்குகள் ஏடின் துறைமுகத் துக்குச் சென்றன. சலமன் அரசன் பொனீசிய அரசனின் நட்பைப்பெற்றுப் பொனீசிய மாலுமிகளின் உதவியால் பொன், வெள்ளி, யானைத்தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில், அகில், இரத்தினக்கற்கள் முதலியவைகளை இந்தியாவினின்றும் பெற்றான். ஒபிர் பொன்னுக்குப் பேர்போனது; ஆகவே, எபிரேயத்தில் ‘ஒபிர்ப் பொன்’ என்னும் முதுமொழி உண்டாயிற்று. ஒபிர் என்பது இந்தியாவிலுள்ளதென்பது உடனே தெளிவாகின்றது. யூதர் நூல் களில் இந்தியமொழிச் சொற்கள் பல காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்கப் புலவராகிய ஹோமர் ஆப்பிரிக்க எதியோப் பியர், கிழக்கு எதியோப்பியர் என்னும் இரு மக்களைப்பற்றிக் குறிப்பிட் டுள்ளார். அவர் கூறிய கிழக்கு எதியோப்பியர் என்பது திராவிடரைக் குறிக்கும். ஹோமர் காலத்தில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனவென்றும், இந்துமாக்கடல், மத்தியதரைக்கடல் இருப்பதுபோல முன்பு இடையில் இருந்ததென்றும் நம்பப்பட்டது. எபி ரேயத்திலும் சமக்கிருதத்திலும் கிரேக்கரைக் குறிக்க வழங்கிய சொல் யவன என்பது. கெரதோதசு கி. மு. 484இல் பிறந்தார். இவர் தமது நூலில் இந்தியரைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறுவது: “இந்திய மக்கள் வெவ்வேறு மொழி களை வழங்கும் பல சாதியினராக வாழ்கின்றனர். தெற்கேயிருப்போர் எதியோப்பியரைப் போன்றோர். அங்கு ஓர் உயிரையுங் கொல்லாத ஒரு கூட்டத்தினரும் காணப்படுகின்றனர். அவர்கள் தானியங்களையும் தாவரங் களையும் உணவாகக் கொள்வர்.” “இந்தியாவில் ஒருவகை எறும்புகள் உண்டு. இவை புற்றெடுக்கும் போது வெளியே தள்ளும் மணலொடு பொன்தூளும் வெளியே வருகின் றது. அவ் வெறும்புகள் நாயிற் சிறியனவும் நரியிற் பெரியனவுமாய் இருக் கும். அவை பொன்னைக் காவல் காத்துக்கொண்டிருக்கின்றன. நடுப்பகலில் அவை புற்றுக்குள் இறங்கிச்சென்று நித்திரை கொள்ளுகின்றன. இந்தியர் பெண் ஒட்டகங்களில் சென்று பொன்தூள்களைச் சாக்குகளில் கட்டிக் கொண்டு விரைந்து செல்கின்றனர். அவ் வெறும்புகளிற் சிலவற்றைப் பாரசீக அரசன் பிடித்து வைத்திருக்கின்றான். இக் கதை, சமக்கிருதத்திலுள்ள பப்புலிக்கா (Paippilika) என்னும் எறும்புத் தங்கம் என்னும் பொருள் தரும் சொல்லினின்றும் முளைத்ததா யிருக்கலாம். அக் காலத்தில் ததிஸ்தான் (Dardistan) என்னுமிடத்தில் தங்கம் அரிக்கப்பட்டது. கெரதோதசு இந்தியப் பஞ்சு கம்பளியிலும் நயமானது என்றும், இந்திய மக்கள் அதனால் ஆடை நெய்தார்கள் என்றும் கூறி யுள்ளார். கெரதோதசுவுக்குப்பின் இந்தியாவைப்பற்றிக் கூறியவர் கெற்சியஸ் (Ktesias) என்னும் கிரேக்கர் (கி. மு. 416) இவர் இந்தியாவைப்பற்றிப் பிறர் வாயிலாக அறிந்தவைகளைத் திரட்டி இந்திக்கா (Indika) என்னும் நூல் செய்துள்ளார். இவர் கூறியிருப்பன பெரும்பாலும் கட்டுக்கதைபோல்வன. இவர் கருவாப்பட்டையைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் அதனைக் ‘காருப்பு’ (Karuppu) எனக் கூறியுள்ளார். இந்தியாவில் நஞ்சை அறியும் புறாவும் காயத்தை ஆற்றும் கல்லும் இருந்தனவென்றும், அங்கு ஒற்றைக் கொம்பு முளைத்த கழுதைகளும் குதிரைகளும் உண்டு என்றும், அக் கொம்புகளிற் செய்த சிமிழ்களிற் பானஞ்செய்யின் விடத்தின்வலிமை தலை காட்ட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (காக்கை நஞ்சை அறியும் இயல்பினதென்றும், காண்டாமிருகத்தின் கொம்பில் ஊற்றி உண்ணும் பானங்களில் நஞ்சு கலந்திருப்பினும் தீமை நேராதென்றும் இன்றும் இந்தியமக்கள் நம்பி வருகின்றனர்.)பாணினி முனிவர் பெண்பால் போன்ற யவனி என்னும் சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உரையெழுதிய கார்த்தியாயனர் அது யவன இலிபியைக் குறிக்குமென வரைந்துள்ளார். அலக்சாந்தர் கி. மு. 329இல் இந்தியாமீது படை எடுத்துவந்தார். கி.மு. 315இல் பஞ்சாப்பில் கிரேக்கர் ஆட்சி ஒழிந்தது. அதன்மேலும் கிரேக்க இந்தியர் கலப்பிற்றோன்றிய மக்கள் பலர் பஞ்சாப்பிற் காணப்பட்டார்கள். இவர்கள் காலத்தில் அங்குள்ள மக்களோடு கலந்து மறைந்துவிட்டனர். சந்திரகுப்த அரசனே கிரேக்கப் பெண்ணை மணந்திருந்தான். வட இந்தியா வில் சகர் எனப்படும் ஸ்கித்தியர் ஆட்சி கி. மு. 93இல் தொடங்கியது. 1தாலமி பிளாப்பிஸ் (கி. மு. 321) காலத்தில் இந்திய வேட்டை நாய் களும், இந்தியப் பசுமாடுகளும் எகிப்தில் காணப்பட்டன. இந்தியப் பெண் களும் அங்குக் காணப்பட்டனர். இந்திய மணப்பண்டங்கள் ஒட்டகங்களி லேற்றிக்கொண்டு போகப்பட்டன. பெரிபுளூஸ் என்னும் நூல் (கி. மு. 60) இந்தியாவுக்கும் எகிப்துக்கும் வாணிகம் நேராக நடக்கவில்லையென்றும், அக்கால வணிகர் இந்தியா வுக்கு நேரே பயணஞ் செய்யத் துணியாமையால் எயுடாமன் (Eudaemon) என்னுமிடத்திற் சந்தித்தார்களென்றும், அலக்சாந்திரியாவைப்போல எயு டாமன் அக் கால வாணிப நடு இடமாயிருந்ததென்றும் கூறியுள்ளார். சீனாவிலிருந்து பட்டும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நல்ல மசிலின் ஆடையும், அணிகலன்களும், மரகதம், முத்து, மணச்சரக்கு முதலி யனவும் உரோமுக்குச் சென்றன. மருந்துச்சரக்கும் மணப்பொருள்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. மிளகுக்கு மானம் இருந்தது. பிளினி காலத்தில் உரோமில் ஒரு இராத்தல் மிளகின் விலை 15 டனாரி (Denari). நடுக்காலம் வரையில் மிளகு மேல் நாடுகளில் உயர்ந்த வாழ்க்கைப் பொருள் களில் ஒன்றாக இருந்து வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஒரு இராத்தல் மிளகின் விலை இரண்டு ‘சிலின்’. அலாரிக் (Alaric) என்னும் கிரேக்கன் உரோம் நகர்மீது தான் இட்ட முற்றுகையை எடுப்பதற்குக் கேட்ட பொருள்களுள் 3000 இராத்தல் மிளகும் ஒன்று எனக் கிபன் (Gibbon) என்பார் கூறியுள்ளார். பிளினி என்பார் உரோமரின் ஆடம்பர வாழ்க்கையால் இந்தியா வுக்கு மிகுதியாகப் பணம் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா வில் நாணயப் புழக்கம் குறைவு. முதல் ஐந்து ‘உரோமைச் சக்கரவர்த்திகள்’ கால நாணயங்கள் ஏராளமாக இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. நிரோ (Niro) காலத்தில் இந்தியாவினின்றும் உரோமுக்குச் சென்ற உயர்தர வாழ்க்கைப் பொருள்களின் அளவு உச்சநிலை அடைந்தது. இதற்குப்பின் அங்கு நேர்ந்த உள் நாட்டுக் குழப்பங்களால் அவ் வாணிகம் குறைந்து விட்டது. உரோமை அரசனின் 612 பொன் நாணயங்களும் 1187 வெள்ளி நாணயங்களும் இந்தியாவில் நிலத்தின்கீழ் இருந்து கிண்டி எடுக்கப்பட்டன. இவை பானை நிரம்பிய, ஆட்சுமையுள்ள என்று குறிக்கப்பட்ட நாணயங் களைவிட வேறானவை. இவைகளுட் பெரும்பாலன ஆகஸ்தஸ் காலத்தன. திபேரியஸ் பிளினி (Tiberious-Pliny) என்பார், இந்தியா, சீனா, அராபியா முதலிய நாடுகள் ஓர் ஆண்டில் நூறுகோடி ‘செஸ்ரர்செஸ்’ தங்கத்தைக் கவர்ந்துகொள்கின்றன எனக் கூறியுள்ளார். இத் தொகை 11,00,000 தங்க நாண யங்களுக்குச் சரி எனக் கணக்கிடப்படுகின்றது. இதிற் பாதி இந்தியாவை அடைந்தது. அக் கால உரோமர் இறந்தவரின் உடல்மீது ஏராளமான மணச் சரக்குகளைக் கொட்டி எரித்தார்கள். நிரோ அரசன் (கி. பி. 66) பொபோகா (Popoka)வின் உடல்மீது கொட்டி எரித்த மணச் சரக்கு அராபியாவிற் கிடைக்கும் ஓராண்டு விளைவுக்கு நேர் என்று கணக்கிடப்பட்டது. இவ்வீண் ஆடம்பரம் இந்தியா அராபியா ஏடின் முதலிய நாடுகளுக்கு அதிக வருவாயைக் கொடுத்தது. ஸ்ராபோ என்பவர் ஆகஸ்தஸ் காலத்தவர். இவர் ஆசிய கிரேக்கர். “மெஓஸ் கோமாஸ்” (Myos Homas) என்னும் மத்தியதரைத் தீவுகளுக்கு அருகாமையில் இந்தியாவுக்குப் பயணப்பட்டுச் செல்லும் 120 கப்பல்களை யான் பார்த்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். குளோடியஸ் அரசன் காலத்தில் இலங்கைக்கு அருகே குதிரை முனைக்கு அணித்தில் கிரேக்க கப்பல் ஒன்று உடைந்துபோயிற்று. அதி னின்று தப்பி மீண்டவர்களிடம் கேட்டறிந்தவற்றை ஆதாரமாகக்கொண்டு பிளினி இலங்கைப்படம் வரைந்தார். அவர் இந்தியநாட்டின் படமொன்றும் வரைந்துள்ளார். அவர் கி. பி. 150 வரையில் வாழ்ந்தார். பாண்டிய அரசன் ஒருவன் ஆகஸ்தஸ் அரசனிடம் தூதனுப்பினான்; (கி. மு. 21) இலங்கை அரசனும் தூதனுப்பியிருந்தான். கிப்பாலுஸ் (Hippalus) என்பார் கப்பல்கள் இந்தியாவுக்குப் பாயெடுத்துச் செல்வதற்கேற்ற பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். முசிறியில் கடற் கொள்ளைக்காரர்1 மிகுதியாக இருந்தமையின், ‘முசிறியில் இறங்குவதிலும் பறக்கை (Barake)யில் இறங்கு வதை வணிகர் விரும்பினார்கள்’ எனப் பிளினி கூறியுள்ளார். பறக்கை மிளகு வர்த்தகத்திற்குப் பேர்போனது. மிளகு விளையும் நாடுகளின் நடுவி லுள்ளது தெல்லிச்சேரி. பரகாசாவிலிருந்து சந்தனக்கட்டை தேக்கு கருங்காலி முதலிய இந்திய மரங்கள் அனுப்பப்பட்டன என்று பெரிபுளுஸ் என்னும் நூல் கூறுகின்றது. சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து இலைசியம் என்னும் ஒருவகை வாசனைச் சரக்கு, இரத்தினக்கல், நீலக்கல், தோல், சீனப்பட்டு முதலியன ஏற்றுமதியாயின. பிற்காலங்களில் பட்டு தரை வழியாக உரோ முக்குக் கொண்டுபோகப்பட்டது. உரோமர் ஆரம்பத்தில் பட்டு எப்படியுண் டாகிறதென்று அறியாதிருந்தார்கள். அவர்கள் அது மரத்தில் காய்ப்பது என நம்பிவந்தனர். பர்காசா என்பது இக் காலம் புறூச் (Brooch) என அறியப் படும். தமிழகம் உரோமை ஆசிரியர்களால் தமிறிகே (Damirike) என வழங்கப்பட்டது. தென்னிந்தியத் துறைமுகங்களுட் சிறந்தது முசிறி. இது இப்பொழுது கரங்கனூர் என வழங்கும். முசிறியில் அகஸ்தஸ் அரசனுக்கு ஆலயம் ஒன்று இருந்ததெனப் பெதுருங்கேரியர் அட்டவணை (கி. பி. 222) கூறுகின்றது. யவனவணிகர் ஆடிமாதத்தில் வந்து மார்கழி மாதத்திற் புறப் பட்டார்கள். குமரி முனையில் குமரித் தெய்வத்தின் ஆலயம் இருந் தமையைப் பெதுருங்கேரியரின் அட்டவணை குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்ரோஸ்ரம் (Dio-Chrisrostam கி.பி. 117) என்பார் இந்திய வணிகரைத் தாம் அலக்சாந்திரியாவிற் சந்தித்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.1 பரகாசாத் துறைமுகத்திலே (புறூச்) அடிக்கடி கிரேக்கப்பெண்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்திய அரசரின் அரண்மனைகளில் யவனப்பெண்கள் இருந்தார்கள்; சகுந்தலை நாடகத்தில் இவ்வாறு காணப் படுகின்றது. தென்னிந்தியாவிலே அரசனின் மெய்காப்பாளர் ஊமராகிய மிலேச்சராயிருந்தனர். பரதர் செய்த நாட்டிய சாத்திரத்தில் அரங்கில் ஒரே முறையில் தோற்றக்கூடிய நடிகரின் கூடிய எண் ஐந்து என வரையறுக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாடகங்களிற் போல இந்திய நாடகங்களிலும் பயங்கரமான அல்லது பார்ப்பதற்கு இன்பம் அளியாத காட்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்திய நாடகங்களில் யவனிகா என்னும் திரைச்சீலை பயன்படுத்தப் பட்டது. யவனி என்னும் கிரேக்கப் பெண்கள் அரசர் அல்லது அரச குடும்பத்தினரின் பரிவாரங்களாகவிருந்தனர். திரைச்சீலை கிரேக்கரைப் பார்த்துச் செய்யப்பட்டதன்று. கிரேக்கர் திரைச் சீலையைப் பயன்படுத்த வில்லை. சாதகக் கதைகள் எழுதப்பட்ட காலம் முதல் இந்திய நாட்டுக் கதைகள் மேல்நாடுகளுக்குச் சென்று வழங்கியமைக்குச் சான்றுகளுண்டு. உரோமன் வர்த்தகப் பாதுகாப்பின் பொருட்டு இரண்டு உரோமைப் பட்டாளங்கள் முசிறியில் நிறுத்தப்பட்டிருந்தனவென்று பெதுருங்கேரி யரின் அட்டவணை என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. பிளினி என்பவர் உரோமை அணங்குகளின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி எழுதி யிருப்பது பின்வருமாறு: 1எங்கள் நாட்டுப் பெண்கள் கைவிரல்களில் அல்லது காதில் இரண்டு அல்லது மூன்று முத்துக்களை கட்டித் தொங்கவிடுகிறார்கள். அவை ஒன் றோடு ஒன்று முட்டி அசைவதைக் கண்டு அவர்கள் மகிழ்கின்றனர். வறிய வர்கள் தாமும் முத்துக்களை அணிகின்றனர்! செருப்புகளும் அதன்வார் களும் முத்துக்களால் அலங்கரிக்கப்படுகின்றன. முத்தை அணிவது மாத்திர மல்லாமல் அவர்கள் முத்தின் மீது மிதித்தும் நடக்கிறார்கள். ஒருபோது யான் கயஸ் (Caius) சக்கரவர்த்தியின் மனைவியைப் பார்த்தேன். யான் பார்த்த நேரம் விழாக்காலம் அல்லது பரிசுத்தமான கிரியைகளைப் புரியும் நேரமன்று. அவள் அணிந்திருந்த முத்துக்களும் இரத்தினக் கற்களும் அவள் தலைமீது பந்தி பந்தியாகக் கிடந்து ஒளிவிட்டன. கூந்தல்மீதும், சூடி யிருந்த பூமாலைகளிலும், காதுகளிலும், கழுத்திலும், கழுத்து மாலைகளி லும் கைவிரல்களிலும் அவள் அணிந்திருந்த முத்து பவளம் என்பவை களின் பெறுமதி 40,000,000 செஸ்ரர்செஸ் (Sesterces). அவைகளின் பெறுமதி அத் தொகை என்று உறுதிப்படுத்துவதற்குள்ள பத்திரங்கள் அவளிடம் இருந்தன. அவை பிறரால் வெகுமதி அளிக்கப்பட்டனவல்ல; ஆனால் நாட்டு மக்களின் பணத்தைக்கொண்டு வாங்கித் தலைமுறை தலைமுறையாக அணியப்பட்டு வருவன. மக்களைக் கொள்ளையிடும் முறை இவ்வாறிருக் கின்றது. லலியாபோலினா என்பவளை மூடியிருந்த நான்கு கோடி செஸ்ரர் செஸ் பெறுமதியுள்ள அணிகலன்களின் வெளிச்சத்தில் அவள் பேர்த் தியைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆண்டில் 55,000,000 செஸ்ரர்செஸ்சை (486,979 தங்க நாணயம்) இந்தியா கவர்ந்து கொள்ளுகிறதென்றும் இந்தியாவினின்றும் வாங்கப்பட்ட பொருள்கள் உரோமில் நூறு மடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டனவென் றும் அவர் கூறியுள்ளார். யூலியர் சீசர், புறுத்தசின் (Brutus) தாயாகிய சேவிலியா (Servilia) என்பவளுக்கு ஒரு முத்தை வெகுமதியாக அளித்தார். அதன் பெறுமதி 47,457 தங்க நாணயம் (பவுன்). கிளியபத்திரா என்னும் எகிப்திய இராணி காதில் அணிந்திருந்த முத்துக் கடுக்கன்களின் விலை 151,450 தங்க நாணயம். பெரிப்புளுஸ் என்னும் நூல் இந்திய மேல்நாட்டு வாணிகத்தைப் பற்றிக் கூறுவது பின்வருமாறு: இந்தியாவில் மிளகும் முத்தும் அதிகம் வாங்கப்படுகின்றன. தந்தமும், ‘சிலந்திவலை’1 என உரோமரால் வாங்கப்பட்ட பட்டும், ஸ்பைக் நாட் (Spikenard) எனப்பட்ட மணப்பொருளும், கங்கை முகத்துவாரத்தில் விலைக்குக் கிடைத்தன. மலைப்பாத்திரம் (Malabothram) இதற்குக் கிழக்கே யுள்ள நாடுகளிற் கிடைத்தது. எல்லாவகைப் பளிங்குக் கற்களும், இரத்தினக் கற்களும், பவளங்களும் ஆமையோடும் தமிழகத்துக்கு அப்பாலுள்ள இலங்கைத் தீவினின்றும் வாங்கப்பட்டன. முசிறித் துறைமுகத்தில் மலைப்பாத்திரம், மிளகு என்பவைகளை வாங்கி அனுப்புவதற்கேற்ற வசதிகள் உண்டு. வணிகர் இவைகளையும் பிற மணப்பொருள்களையும் இங்குக் கொண்டுவருகின்றனர். இன்னும் இங்கு இறக்குமதியாகும் பொருள்கள் நிறக்கற்கள், பவளம், படிகம், பித்தளை, ஈயம், மது (Wine), சாதிலிங்கம், ஆடை, பாஷாணம் (Arsenic) முதலியன. முத்துக் குளிப்பைப் பற்றிக் கூறுமிடத்துக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டவர் களே முத்துக் குளிப்பிற் பயன்படுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட் டுள்ளார். அக் காலத்தே வியாபாரத்தின் பொருட்டு வந்த கிரேக்கரும் பிறநாட்டு மக்களும் மதுரை, புகார் போன்ற நகர்களிற்றங்கி வாழ்ந்தார்கள். இவர்கள் வாழும் வீதிகளைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. 2“இந்தியாவுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் அலக்சாந்திரியாவி லிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள யூலியோபொலிஸ் (Juliopolis) என்னும் இடத்தில் இறக்கப்பட்டன. பின்பு அவை நீலநதி வழியாக கொப்தஸ் (Coptus) என்னும் பட்டினத்துக்குக் கொண்டுபோகப்பட்டன. யூலியோபொலிசுக்கும் கொப்தசுக்கும் இடையே உள்ள தூரம் 303 மைல். இத்தூரம் 12 நாட்களில் கடக்கப்பட்டது. கொப்தசிலிருந்து பெர்னிஸ் (Ber-nes) என்னும் அராபியக் குடாக்கடலிலுள்ள பட்டினத்துக்கு மறுபடியும் அச் சரக்குகள் கொண்டுபோகப்பட்டன. இவ் விரண்டு பட்டினங்களுக்கு மிடை யிலுள்ள தூரம் 258 மைல். சூடு மிகுதியால் வணிகர் கூட்டங்கள் இரவில் மாத்திரம் பயணஞ் செய்தன. இத் தூரத்தைக் கடக்க 12 நாட்கள் பிடித்தன. பெர்ணிஸ் என்னும் துறைமுகத்திலிருந்து மறுபடியும் சரக்குகள் அராபியக் குடாக்கடலிலுள்ள கேனி (Cane) என்னும் துறைமுகத்துக்குக் கொண்டு போகப்பட்டன. அங்கு நின்றும் கப்பல்கள் முசிறித் துறைமுகத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. பின்பு மார்கழி மாதத்திற் கப்பல்கள் திரும்பின. இவ்வாறு கப்பல்கள் போய்த் திரும்ப ஒரு வருடம் பிடித்தது. அக் காலத்தில் உரோமாபுரி ஆலயங்களில் அதிக சாம்பிராணி எரிக்கப்பட்டது. உரோமர் விலை உயர்ந்த வாசனைப் பொருள்களால் இறந்தவர்களை மூடி எரித்தார்கள். சிசிலியா என்பவளின் சவத்தின் மீது 210 மூடை மணப் பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. நிரோ (மரணம் கி. பி. 68) என்பவர் பப்போயி (Pappoe) என்பவரின் சவத்தின்மீது ஒரு நாட்டில் ஓராண்டில் விளைவாகும் மணப்பொருள் அவ்வளவு கொட்டி எரித்தார். இறந்தவர்கள் மீது கொட்டி எரிக்கப்படும் மணப்பொருள்களையும், தெய் வங்களுக்கு எரிக்கப்படும் அவ் வகைப் பொருள்களையும் ஒப்பிடுமிடத்துத் தெய்வங்களுக்கு எரிக்கப்படுவது தானிய நிறைதானும் இல்லை எனப் பிளினி என்பவர் கூறியுள்ளார். அயுரேலியன் (Aurelian) காலம்முதல் பட்டாடைகள் உரோமில் பொன்னுக்குச் சரியாக நிறுத்து விற்கப்பட்டன. இந்திய மிளகு வாணிகம் தொன்மைதொட்டு இந்தியாவினின்றும் மிளகு வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கி. பி. 47 வரையில் இவ் வாணிகம் மும்மரமாக நடை பெற்றது. அக் காலத்துச் செங்கடல் வழியாக இந்தியாவுக்கும் அலக்சாந்திரி யாவுக்கு மிடையில் மரக்கலப் போக்குவரத்து இருந்தது. இந்திய அராபிய வியாபாரிகள் பருவக்காற்றுக் காலங்களை நன்கு அறிந்து கப்பற்பயணஞ் செய்தனர். செங்கடல் முகத்துவாரத்திலுள்ள ஓசிலிஸ் (Ocelis) என்னும் பட்டினத்திலிருந்து பாயெடுத்த கப்பல்கள் துடுப்புகளால் ஓட்டப்பட்டு முசிறிப் பட்டினத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. இவ்வாறு அலக்சாந் திரியா வழியாக இந்தியாவுக்கும் உரோமைக்குமிடையில் கி. பி. 215 வரை யும் இவ் வாணிகம் மும்முரமாக நடைபெற்றது. கிழக்கிலிருந்து உரோ முக்குச் சென்ற பொருள்களுள் முக்காற்பகுதி மிளகு. அக் கால வாணிபத் திற்குத் தேவைப்பட்ட மிளகு முழுமையும் மலையாளக் கரையிலிருந்து சென்றது. மிகப் பழங்காலந்தொட்டு மிளகு ஐரோப்பிய நாடுகளில் இறைச் சியைப் பழுதுபடாமற் பாதுகாக்கவும், உணவுகளுக்குச் சேர்க்கவும் பயன் படுத்தப்பட்டது. கிரேக்கர் மருந்து முறையில் இதனை மிகுதியாகப் பயன் படுத்தினர். கிப்போக்கிறேற்சு (Hippocrates) என்பவர் இதனை இந்திய மருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்தஸ் காலத்தில் மிளகு உரோமில் மிக மதிப்புள்ள சரக்காகக் கருதப்பட்டது. அக் காலத்து ஓர் இராத்தல் மிளகின் விலை ஏழு ரூபாய்; இந்தியாவில் அதன் விலை இதன் பாதி அளவு தானும் இல்லை. பருவகாலத்தை அறிந்து கப்பல்கள் மிகுதியாக இந்தியா வுக்கு ஓடத்தொடங்கிய காலத்தில் மிளகின் விலை குறைந்துவிட்டது. அது மாவாக இடித்துப் பொட்டணங்களாக விற்கப்பட்டது. அலாறிக் என்னும் கொதியன் உரோமை முற்றுகை இட்டபோது, முற்றுகையை விடுவதற்கு, அவன் ஏனைய பொருள்களோடு 3,000 இராத்தல் மிளகையும் கேட்டான். உரோமிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் மிகக்குறைவு. ஆகவே, உரோமிலிருந்து ஏராளமான செல்வம் இந்தியாவை அடைந்தது. உரோமிலிருந்து ஏராளமான தங்க, வெள்ளி நாணயங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவிற் காணப்பட்ட பல்லாயிரக்கணக்கான உரோமன் நாணயங்களுட் பெரும்பாலன மலையாளக்கரையிலும் அதனை யடுத்த கோயமுத்தூர்க் கோட்டம், மதுரை என்னும் இடங்களிலும் காணப் பட்டன. இந் நாணயங்களிற் பெரும்பாலன திபேரியஸ் குளோடியஸ் கேயஸ் (Tiberius, Gaius and Claudius) காலத்தன. “யவனர்தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என அகநானூற்றிற் கூறப்பட்டுள்ளது. முசிறி மலையாளக்கரையிலே பேர் ஆற்று முகத்துவாரத்திலுள்ளது. தமிழ் நூல்கள் இதனைப் பெரிய துறைமுகப்பட்டினமாகக் கூறுகின்றன. பொனீசியாரும் அராபியரும் இத் துறைமுகத்தில் வியாபாரம் நடத்தினர். உரோமிலிருந்து பாவை, அன்ன விளக்குகள், நகைப்பேழைகள், மண முள்ள மது என்பன இறக்குமதியாயின. அரசரும் செல்வரும் இம் மது வினை உண்டனர். பெதுருங்கேரியரின் அட்டவணையின்படி முசிறியில் ஆகஸ்தஸின் கோயில் ஒன்றிருந்தது. தமிழ் அரசரின் பண்டசாலைகளை யவன வீரர் காவல் புரிந்தனர். முசிறியில் யூதர் அராபியர் பாரசீகர் குடியேறி யிருந்தனர். அவர்கள் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தனர். தோமஸ் ஞானி யார் (Apostle Thomas) முசிறிக்கு அயலிலுள்ள மல்லன்காராவில் கி. பி. 50இல் வந்து இறங்கினாரெனச் சீரிய கிறித்தவர்கள் நம்பி வருகின்றனர். கி.பி. 215க்குப்பின் இவ் வாணிகம் விழுந்துவிட்டது; பாரசீகக் குடாக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் ஓரளவு நடைபெற்றது. சீனர் தம் மரக்கலங்களில் சீனாவுக்கு மிளகு கொண்டு சென்றனர். இடைக்காலத்தில் கோயில்களுக்கு மிளகு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. அக் காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை நாலு சிவின். அது தச்சு வேலை செய்பவன் ஒருவனின் நாலு நாட்கூலி. இவ் வாணிகம் வெனிஸ், செனோவா (Genoa) வியாபாரிகளின் கையில் இருந் தது. அவர்கள் இதனை அராபியரிடமிருந்து வாங்கினர். இவ் வியாபாரிகள் பணஞ் சம்பாதிப்பதை அறிந்த மேற்கு ஐரோப்பிய மக்கள் கிளர்ச்சி கொண் டனர். அதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் கிட்டிய பாதையை அறிய முயன்றனர். இதனால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித் தான். வாஸ்கோடகாமா என்னும் போர்த்துக்கேயர் கள்ளிக்கோட்டையை 1498ஆம் ஆண்டு அடைந்தார். 16ஆம் நூற்றாண்டளவில் டச்சுக்காரர் ஐரோப்பாவில் மிளகு வியாபாரத்தைக் கைப்பற்றினர். அக் காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை மூன்று ‘சிவின்’; முன் ‘ஆறுசிவின்’ வரையி லிருந்தது. இதனால் இலண்டன் வியாபாரிகள் கிளர்ச்சி கொண்டார்கள். சிலர் எலிசபெத் இராணியிடம் உத்தரவுபெற்றுக் கிழக்கு நாடுகளுடன் வியா பாரஞ் செய்யப் புறப்பட்டனர். அவர்கள் கிழக்கே அரசுகளைக் கோலினர்.  இயல் - 9 மொழி அவர்கள் தம் எண்ணங்களைப் பிறர்க்குணர்த்த விழைகின்றனர். அப்பொழுது மொழி உண்டாகின்றது. ஆதியில் மக்கள் ஊமரும் செவிட ரும் பேசுவதுபோலச் சாடைகளாலும் சைகைகளாலும் முகக்குறிகளாலும் பேசினர். இது நடிப்பு முறையில் உள்ள பேச்சு. இம் முறையிலிருந்தே நாடகத் தமிழ் வளர்ச்சியுற்றது. மக்களைச் சூழ்ந்து பலவகை இயற்கைப் பொருள்களும் குருவிகள் விலங்குகளும் இருந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒலியை எழுப்பின. இது ஆதிமக்களின் கவனத்துக்கு வந்தது. அவர்கள் இவ்வொலிகளை உற்றுக்கேட்டு அவ் வொலிக் குறிகளை அவ்வப் பொருள்களைக் குறிக்க வழங்கினர். ‘கா கா’ எனக் கத்தும் பறவையைக் காகம் என்றும், ‘கூ கூ’ எனக் கூவும் குருவியைக் குயிலென் றும், ‘மா’ என்று அழும் விலங்கை மாடு என்றும் வழங்குதல் இதற்கு எடுத்துக்காட்டு. இப்பொழுது நடிப்போடு ஒலிக்குறிகளும் கலந்து மொழி உண்டாயிற்று. அதன் பின்பு அவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பொருள்களையும், குணங்களையும், செயல்களையும் குறிக்க ஒவ்வோர் ஒலிக்குறிகளை அமைத்து ஒலிமுறையான மொழியை ஆக்கிக்கொண்ட னர். இன்றும் பேச்சாளர் மேடைகளில் நின்று பேசும் போதும் பேச்சுக்கேற்ற பல அவிநயங்களைக் காட்டுகின்றனர். இவை பழைய பேச்சு வழக்கின் தேய்வுகளே. ஆதி மக்கள் சொற்களை ஆக்குவதற்குக் கைக்கொண்ட 1காரணங்கள் (மொழிப் பொருட்காரணம்) பெரும்பாலும் இன்று நம்மால் அறிந்து கூறமுடியாமல் இருக்கின்றன. சொற்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் தொடர்ந்து வருகின்றன. காலந்தோறும் புதிதாக அறியப்படும் பொருள்களையும் செயல்ளையும் குறிக்கப் புதிய சொற்கள் தோன்றும். இவ்வாறு ஒருவகையில் மொழி வளர்ந்துகொண்டு செல்லும்போது பழைய சொற்கள் சில வழக் கொழியும்; அவற்றின் இடத்தைப் புதிய சொற்கள் சில ஏற்கும். இதனால் மக்கள் வழங்கும் மொழியில் காலந்தோறும் வேறுபாடுகள் காணப்படும். முன்னோர் எவ்வாறு சொற்களை உச்சரித்தார்களோ அவ்வாறு அவைகளை உச்சரிக்க அறிதலும், அவைகளை அவர்கள் பயன்படுத்திய மரபில் பயன்படுத்துதலுமே திருந்திய மொழிப்பயிற்சியாகும். பரதநாட்டியம் போன்று நடிப்பு மாத்திரத்திலுள்ள கூத்தைத் தமிழர் நாடகத்தமிழ் என வழங்கினர். மக்களின் அக உணர்ச்சிகளுக்கேற்ப எழும் இயற்கை ஒலி களைப் பின்பற்றி, மகிழ்ச்சி, வீரம், சோகம் போன்ற உணர்ச்சிகளை எழுப்புந் தொனியிற் பாடப்படும் பாடல்கள் இசைத்தமிழ் எனப்பட்டன. இவை போலல்லாத பாடல்களும், இலக்கணங்களும் இயற்றமிழ் எனப்பட்டன. ஆதிகாலத் தமிழுக்கும் பிற்காலத் தமிழுக்கும் சிறிது வேறுபாடு உண்டு. “மொழிகள் தற்காலம் தாங்கி நிற்கும் விகுதி, வேற்றுமை யுருபு முதலிய குறியீடுகள் யாவும், நாளடைவில் வந்து புகுந்தன. இது மொழியாராய்ச்சி யாளர் கண்டு அறுதியிட்ட முடிவு. தனியே நின்று பொருள் பயவாக் குறியீடு களாகிய இவ் வுருபுகள் யாவும் தனியே நின்று பொருள் தந்து உதவிய மொழிகளின் சிதைவில் வந்த மிச்சமெனவும் அவர்கள் துணிந்துள்ளார்கள். ஒரு காலத்தில் திணை பால் இடம் சுட்டா வினைமுற்று ஆட்சி நடைபெற் றிருக்கலாம் என்றும் துணியலாம். மலையாளத்தில் திணைபால் இடம் சுட்டாது காலம் ஒன்றனையே சுட்டும் வினை முற்று ஆட்சி காணப்படு கின்றது.” மொழி, எழுத்துநிலை இலக்கியநிலை இலக்கணநிலை என்னும் நிலைகளை முறையே எய்துகிறது. உலகியல் மொழியின் தெளிவே செந்தமிழ். பேச்சுமொழி, எழுத்துநிலை அடையும்போது ஒரு சீர்திருத்தமும், எழுத்துநிலை கடந்து இலக்கியநிலை பெறும் போது ஒரு திருத்தமும், இலக்கிய நிலையில் நின்று இலக்கணநிலை அடையுமிடத்து இன்னொரு திருத்தமும் அடைகின்றது. 1கொடுந்தமிழென்பது மக்களிடையே எளிய வழக்கிலுள்ள தமிழ். கொடுமை - வளைவு. “இயற்கைக் கலையின் திட்டத்தையும் மொழிவரலாற் றுண்மையையும் கைக்கொண்டு அவற்றின்வழி நோக்கின் திணை பால் இடம் விகுதிக் குறியீடனைத்தும் வினைமுற்றுச் சொற்களுக்குப் பிற்காலத்துத் தான் வந்தடைந்தனவென்பது போதரும். பன்னெறிப்பட்டு வரம்பு உணர்த்தற்கின்றிப் பேச்சுநிலையில் மாத்திரமிருந்த மொழியை இலக்கண வரம்பு கொடுத்துச் செந்தமிழாக்கின காலத்துக்குச் சிறிது முன்னர் இவை வழக்கிற் புகுந்திருக்கலாம். “இலக்கண நூல்கள் இயற்றப்பெற்ற காலத்தில் அந் நூல்கள் விதித்த வரம்புக்கு உட்படாது நின்ற இயற்கை மொழி ஒன்று இருந்திருக்க வேண்டு மெனப் போதிய நியாயங்களால் ஊகிக்கலாம். அவ்வியற்கை மொழியில் திணை பால் இடஞ்சுட்டா வினைமுற்று வழக்குப் பிரயோகம் நடைபெற் றிருக்க வேண்டுமெனவுந் துணியலாம். “மொழியுற்பத்திக் காலத்தில் முதற்றோன்றியனவாகிய பொருட்குறிப் பும், இயக்கப்பண்புக்குறிப்பும், நிலைப்பண்புக் குறிப்பும் பற்றிய பெயர்ச் சொல் வினைச்சொல் உரிச்சொல் என்னும் மூன்றையும் நீக்கிய பிறசொற்க ளெல்லாம் இடைச்சொல் என்னும் ஒரு பெயருள் அடக்கப்பட்டுள்ளன.”1 அரப்பா மொகஞ்சொதரோப் புதைபொருள் ஆராய்ச்சியிற் கிடைத்த பட்டையங்கள் சிலவற்றை ஹெரஸ் பாதிரியார் வாசித்துள்ளார். இப் பட்டையங்களை ஒலிமுறையில் வாசிப்பதற்குக் கருவியாயிருந்தவை பழைய சுமேரிய எழுத்துக்களேயாகும். மொழிகளின் இயற்கை என்னும் நூலில் மாக்ஸ்மூலர் என்னும் பண்டிதர் சீர்திருந்திய மக்களின் மொழிகள் மாற்றமெய்தும் இயல்பையே இழந்துவிடுகின்றன எனப் புகன்றுள்ளார். இதற்குத் தமிழ்மொழி சிறந்த எடுத்துக்காட்டு.2 இந்திய நாட்டுள் ஆரியர், பாரசீகர் ஐரோப்பிய கிரேக்கர், ஸ்கீதியர், கன்ஸ் (Huns), அப்கானியர், தாத்தாரியர், மங்கோலியர், அராபியர் முதலிய பல இனமக்கள் புகுந்து இந்தியமக்களுடன் கலந்துள்ளார்கள். அதனால் புதிய மக்கட் கூட்டங்களும் புதிய மொழிகளும் எழுந்தன. 3இறைஸ்லி என்னும் ஆசிரியர் இந்திய மக்கள் என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு: மேற்கு இந்தியாவில் வாழ்வோர் சித்திய திராவிடர். இப் பிரிவில் மராட்டியப் பிராமணர் குன்பியர் (Kunbis) குறுக்கர் முதலியோரடங்குவர். இவர்கள் சித்தியர் திராவிடர் கலப்பிற்றோன்றினோர். பஞ்சாப், சிந்து, கூர்ச்சரம், இராசபுத்தான, மத்திய இந்தியா முதலிய இடங்களில் ஸ்கிதியர் ஒருபோது காணப்பட்டனர். ஆரியத் திராவிடர் ஐக்கிய மாகாணத்திலுள்ள அக்ரா, அயோத்தி, இராசபுத்தானா, பிகார் முதலிய இடங்களில் காணப்படு கின்றனர். மங்கோலிய திராவிடர் வங்காளத்தின் தென்பாகத்திலும், ஒரிசாவி லும் காணப்படுகின்றனர். நேபாளம், அசாம், பர்மா, இமயமலைப் பக்கங்களி லுள்ள தமிழ் மக்களின் கண்கள் மங்கோலிய மக்களின் கண்கள் போன்றன. பர்மியர், மங்கோலியருடன் கலந்த தமிழர். துருக்கிய இரானிய தமிழர் பலுச்சிஸ்தானத்திலும் மேற்கு எல்லைப் புறங்களிலும் காணப்படுகின்றனர். அராபிய அல்லது அப்கானிய கலப்புடைய தமிழர் தோற்றத்தில் ஸ்கிதியர் அல்லது துருக்கியரைப் போன்றோர். இவர்கள் பல இன மக்களின் கலப்பி னால் தோன்றியவர்கள் ஆகலாம். திராவிடர் இலங்கை முதல் கங்கைவெளி வரையிற் காணப்படுகின்றனர். எழுத்து மக்கள் பேச்சினால் தம் எண்ணங்களை அண்மையிலுள்ளவர் களுக்கு விளக்கினார்கள். சேய்மையிலுள்ளவர்களுக்குத் தம் எண்ணங் களை விளக்குவதற்கு அது பயன் அளிக்கவில்லை. ஆகவே சேய்மைக் கண் உள்ளவர்களுக்குத் தம் கருத்துக்களை உணர்த்தும் முகத்தான் எழுத் துக்கள் தோன்றின. ஆதியில் மக்கள் தங்கருத்துக்களைச் சித்திரங்கள் வாயி லாக விளக்கினர். ஒருவன் மற்றொருவனை வாளினாற் கொன்றான் என்னும் கருத்தை வெளியிட வேண்டுமாயின், கீழே ஒருவன் உதிரம் நாற்புறமும் பரவும்படி படுத்துக்கிடப்பது போலவும், மற்றொருவன் கையில் வாளை வைத்துக்கொண்டு ஓங்கி வெட்டுவதுபோலவும் எழுதிக்காட்டுவது வழக்கம். இவ் வகைச் சித்திரங்களும், உருவக் காட்சிகளும் மனிதருடைய புறத் துறுப்பைப் பற்றிய செயல்களைக் காட்டுவதற்காக மாத்திரம் பயன்பட்டு வந்தனவேயன்றி, மனத்தின் நிகழ்ச்சிகளாகிய கோபம், பொறாமை, துக்கம், மகிழ்வு, செருக்கு, வீரம், பயம் முதலிய தோற்றங்களைக் காட்டுவதற்குப் பயன்படவில்லை. ஆகவே மக்கள் இவ் வகை மனத்தோற்றங்களையும் மேற்படி உருவங்கள் மூலமாகத் தெரிவிக்கவெண்ணிப் பாடுபட்டு வந்தமை யால், அவர்கள், சித்திரவேலையிலும் கல், மரம் முதலியவற்றால் உருவங் களைச் செதுக்குவதைப் பற்றிய வேலைகளிலும் திறமையடைந்தனர். எழுத் துக்கள் உண்டாயிராத காரணத்தினாலேயே ஆதியில் சித்திர வேலைகளும் உருவம் செதுக்கும் வேலைகளும் வளர்ச்சியடைந்திருந்தனவென்று கூறலாம். சித்திரங்கள் பெரும்பாலும் கட்புலனாகும் பொருள்களை யன்றிக் கட்புலனாகாத மனவுணர்ச்சிகளையும் பிற பண்புகளையும் விளக்குவ தற்குப் பயன்படாமலிருந்தன. ஆகவே மன உணர்ச்சிகளையும் பண்பு களையும் உணர்த்தும் சில குறியீடுகள் சித்திரங்களுடன் கலந்து எழுதப்பட் டன. இது அறிவைக் குறிக்கக் கண்ணையும், காலத்தைக் குறிக்க வட்டத்தை யும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பையும், விடாமுயற்சிக்குத் தேனீயை யும், வெற்றிக்குக் கருடனையும் எழுதிக் காட்டுதல் போன்றது. பேரு (தென் அமெரிக்கா) தேசமக்கள் எழுத்துக்குப் பதில் கயிறுகளில் பலவாறு முடிச்சு களிட்டு வழங்கினர்.1 இவ்வாறு எழுதுவதாலும் மக்கள் உச்சரிப்பு முறையான மொழியில் தம் எண்ணங்களைப் பிறர்க்கு உணர்த்த மாட்டாதவர்கள் ஆயினர். ஆகவே, அவர்கள் சில சித்திரங்களை எழுதி அச் சித்திரங்கள் குறிக்கும் பொருள் களுக்குரிய பெயர்களின் முதல் அசைகளைச் சேர்த்து, வாசிக்கக் கருதிய சொற்களின் உச்சரிப்பு வரும் முறையில் எழுத ஆரம்பித்தார்கள். இது கத்தரிக்காயையும் அதன் பக்கத்தே ஒரு கோலையும் எழுதிக் கத்தரிக்கோல் என வாசித்தல் போன்றது. இம் முறையில் எழுதுவதும் மிகக் கடினம் அளித்தமையின் ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்புக்கும் ஒவ்வொரு குறியீடு அமைக்கப்பட்டது. இந் நிலைமையிலுள்ளனவே சீன எழுத்துக் களும், மொகஞ்சொதரோ எழுத்துக்களுமாகும். பின்பு மொழியில் எத்தனை ஒலிகள் இருக்கின்றன என்று உச்சரித்து அறிந்து ஒவ்வொரு ஒலியையும் குறிக்க ஒவ்வோர் குறியீடு அமைக்கப்பட்டது. அக் குறியீடுகளாகிய எழுத் துக்களைச் சேர்த்துச் சொல்லை உச்சரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்திய மொழியில் சித்திர எழுத்துக்கள் அடைந்த பலவகை மாற்றங்கள் அறியப்படுகின்றன. சித்திர எழுத்துக்கள் மண் தகடுகளில் சதுரமான நாணற் குச்சிகளால் எழுதப்பட்டபோது கீறுகளாக அமைந்தன. அவ்வகை எழுத்துக்கள் ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன. தமிழ் எழுத்துக்கள் சித்திர எழுத்தில் ஆரம்பித்துப் படிப்படியான பல மாற்றங்கள் அடைந்துள்ளன. தமிழர் பயன்படுத்திய அவ் வகை எழுத்துக்கள் என்றேனும் நமக்குக் கிடைத்தில; சீன எழுத்துக்கள் போன்ற அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்களே கிடைத்துள்ளன. சித்திர எழுத் துக்கள் தமிழில் வழங்கின என்பதற்குரிய பிராமணங்கள் யாப்பருங்கல விருத்தி மேற்கோள், திவாகரம் முதலிய நூல்களிற் காணப்படுகின்றன. “காணப் பட்ட வுருவ மெல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவி லோவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்.” (யாப்பருங்கலவிருத்தி. மேற்கோள்) “உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய.” (இலக்கணக் கொத்து. மேற்கோள்) மொகஞ்சொதரோ எழுத்தினின்றும் பிராமி எழுத்துத் தோன்றிற்று. இது அசோகன் காலத்தும் அதற்கு முன்பும் வடபிராமி, தென்பிராமி என இரு வகையாக நடைபெற்றது. பிராமி எழுத்துக்கள் கி. மு. 9ஆம் நூற்றாண்டுக்கு முன்பு உள்ளதென்பதற்கு ஆதாரமுண்டு. இவ் வகை எழுத்துப் பொனிசியா விலே மோப்நகரின் (Moab) அரசனது (கி.மு. 850) பட்டையத்திற் காணப்படு கின்றது. இக் காரணத்தினால் பொனீசிய வியாபாரிகளிடமிருந்து இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள் என்று வரலாற்று நூலார் எல்லோருந் துணியலாயினர்.1 ஆனால், மொகஞ்சொதரோ எழுத்துக்கள் ஆராயப்பட்டபின் இம் முடிவு நேர்மாறாக மாறியுள்ளது.2 பிராமி எழுத்துக் களினின்று பொனீசிய எழுத்துக்களும், பொனீசிய எழுத்துக்களினின்று கிரேக்க, உரோமை எழுத்துக்களும், இவைகளினின்றும் ஏனைய ஐரோப்பிய எழுத்துக்களும் தோன்றின. பிராமி எழுத்துக்களினின்றும் தமிழ் வட்டெழுத் துக்களும், வட்டெழுத்துக்களிலிருந்து இக் காலத் தமிழெழுத்துக்களும் வளர்ச்சியடைந்தன. வட்டெழுத்து அண்மைக்காலம் வரையில் மலை யாளத்திலே கோலெழுத்து என்னும் பெயருடன் வழங்கிற்று. மத்தியதரைமக்கள் இனத்தினர் எல்லோருக்கும் மொழியும் எழுத்தும் ஒன்றே உலகில் மக்கட்குலம் எப்படி ஒன்றாயிருந்ததோ அப்படியே மொழி யும் ஒன்றாயிருந்ததென்பது மொழிநூலார் நன்கு ஆராய்ந்து காட்டிய உண்மை. உலகில் மிகப் பழைய மக்கள் மத்தியதரை முதல் கிழக்கிந்தியத் தீவுகள்வரையில் வாழ்ந்தோராவர்.3 இந் நாடுகளில் வழங்கிய முதியமொழிகள் ஓர் அடிமரத்தினின்றும் கவர்விட்ட கொம்பர்கள் போன்றன என்று ஆராய்ச்சி வீரர் நிலைநாட்டியுள்ளனர். இதனால், தமிழ், ஆதிமொழிக்கு மிக அண்மையில் உள்ளது எனத் தோன்றுகின்றது. சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் கிடைத்த முத்திரைகளிற் காணப்பட்ட எழுத்துக்களோடு உலகின் பல பாகங் களில் வழங்கிய எழுத்துக்களையும் ஒப்புநோக்கிய கெரஸ் பாதிரியார் கூறி யிருப்பது வருமாறு: “மொகஞ்சொதரோ எழுத்துக்களைப் போன்றன இலிபிய வனாந் தரத்தை அடுத்த செலிமா என்னுமிடத்திற் காணப்படுகின்றன. இதனைப் பேராசிரியர் இலாங்டன் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். “மொகஞ்சொதரோ எழுத்துக்குறிகள் போன்ற (ஸ்பானிய எழுத்துக் குறிகளையும் அவைபோன்ற உச்சரிப்பு ஒலிகளையும் ஐபீரிய மொழியிற் காணலாம். (இம் மொழி பாஸ்கு எனவும் வழங்கும்.) “எதிரூஸ்கிய (பழைய இத்தாலிய) மொழி எழுத்துக்கள் இலிபிய மொழி இனத்தைச் சார்ந்தன. இம் மொழியில் மொகஞ்சொதரோ எழுத்துக் குறியீடுகளையும் உச்சரிப்பு ஒலிகளையும் காண்பது கடினமன்று. “பிந்திய இலிபிய மொழி எழுத்துக்களும் நுமிதிய பேபெரிய (Numidic and Berberic) எழுத்துக்களும் முன் குறிப்பிட்ட இயல்பினவே. “மினோவ (Crete) எழுத்துக்கள் மிகப் பழையன. இவை மொகஞ் சொதரோ எழுத்துக்களோடு கிட்டிய ஒற்றுமையுடையன. சைபிரஸ் எழுத்து மினோவ எழுத்தின் ஒரு பிரிவினதே. “சில மொழிகள் எழுத்துக்கள் இல்லாமல் இருந்தன. அம் மொழி களுக்குரியோர் திராவிட மக்களோடு ஊடாடிய பின் மொகஞ்சொதரோ எழுத்துக்களைக் கையாண்டனர். பின்பு அவர்கள் அவ் வெழுத்துக்களைத் தாமே வளர்ச்சி செய்தனர்.” “சுமேரிய மொழிக்கும் மொகஞ்சொதரோ மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இக் கொள்கையைப் பேராசிரியர் இலாங்டன் தம் விரிவுரை களில் நன்கு வலியுறுத்தியுள்ளார். “ஆப்பெழுத்துக்கள் சுமேரிய எழுத்துக்களினின்றும் பிற்காலங் களில் வளர்ச்சியடைந்தன.” “பழைய எல்லம் மொழி எழுத்துக்கள் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன.” “பழைய சீன எழுத்துக்கும் மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது இவ்வளவு காலமும் ஒருவர் கருத்திலும் படவில்லை. மொகஞ்சொதரோ எழுத்துக்களும் பழைய சீன எழுத்துக் களும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த இரண்டு பிள்ளைகள் என்று கூறலாம். கோயங் (Hoang கி. மு. 2500) கூற்றால் இது வலியுறுகின்றது. “சாபிய அல்லது தென் அராபிய எழுத்துக்கள், இன்னும் மொகஞ் சொதரோ எழுத்துக்குறிகள் சிலவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன. கிழக்குத் தீவுகளில் எழுத்துக்கள் பெரும்பாலும் மொகஞ்சொதரோ எழுத் துக்களைப்போலவேயிருக்கின்றன: சில ஒன்றாகவே காணப்படுகின்றன.”1 பேராசிரியர் சி.ஆர். கன்றர் கூறியிருப்பது வருமாறு: “துளையிட்ட பழைய இந்திய நாணயங்களிற் காணப்படும் அடை யாளங்களும் மொகஞ்சொதரோ எழுத்துக்களைப் பின்பற்றியனவே. மொகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்து மாத்திரமன்று; தென் அரேபிய, மினோவ, எழுத்துக்களும் பிறந்தன. மொகஞ்சொதரோ எழுத்துக்கள் தெற்கு ஆசியா வழியாக வந்து பொனீசிய கிரேக்க உரோமை எழுத்துக்களைப் பிறப்பித்திருக்கின்றன.”2 “சுமேரியம் எல்லம் முதலிய மொழிகள் திராவிட மொழிகளோடு ஒலி முறையில் ஒற்றுமையுடையன. ஆகவே டாக்டர் சர்தேசி என்பவர் கிரேத்தா, இலிசிய, சுமேரிய, எல்லம் மொழிகள் ஒரே தொடர்புடையன வென்றும், ஐசியன் தீவுகள் சின்ன ஆசியா, மெசபெதேமியா முதலிய நாடுகள் ஒரே நாகரிக இணைப்புடையனவாயிருந்தனவென்றுங் கூறுவர்.” (“திராவிட இந்தியா” பக்கம் 41-42) எப்படி மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரே இனத்தவர் களாகக் காணப்படுகின்றார்களோ, அப்படியே அவர்கள் மொழிகளும் ஒரே இனத்தைச் சார்ந்தன என இக் கால மொழி நூலார் ஆராய்ந்து கூறியுள்ளனர். மொழி நூலார் கூறிய முடிவுகளை எல்லாம் ஒருங்கு வைத்து ஒப்புநோக்கிய வெல்சு என்னும் ஆசிரியர் மத்தியதரை நாடுகளில் ஆதியில் வழங்கிய ஆரியமல்லாததும் கமத்தியம் அல்லாததுமாகிய மொழி, பாஸ்க்கு (Basque) எனப்படும் என்றும், அது திராவிட மொழிக்கு நெருங்கிய உறவுள்ளதென் றும் குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு: “பாஸ்க்குமொழி, காக்கேசிய மலைப்பக்கங்களிற் பேசப்படும் மொழிக்கு இனமுடையது; ஒருகாலத்து அது மிகவும் பரவலை அடைந் திருந்தது; முந்திய கமத்திய மொழிக் கூட்டங்களாகப் பரந்து மத்தியதரை மக்களாற் பேசப்பட்டது; தெற்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வழங்கியது; இந்தியாவிலுள்ள திராவிட மொழிக்கு நெருங்கிய தொடர் புடையது. மேற்குத், தெற்கு ஐரோப்பாவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் மொழிக்கூட்டங்கள் தோன்றியிருந்தன. ஆரியம் வருதலும், அவை மறைந் தன. பழைய மொழியைச் சார்ந்தவை கிரேத்தா (Crete) இலிதிய மொழிகள், இவை 1பாஸ்க்கு மொழியைச் சேர்ந்தவை ஆகலாம். மங்கோலியம், பாஸ்க்கு, காக்கேசியம் முதலிய மொழிகளை இணைக்கும் மொழி சுமேரியமாக விருக்கலாம். இது மெய்யாகவிருந்தால், பாஸ்க்கு, காக்கேசியம், திராவிடம், மங்கோலியம் முதலிய மொழிகள் இன்னும் மிகப் பழைய மொழிகளாகும். ஆரியம் செமித்தியம் கமித்தியம் முதலிய மொழிகளைத் தொடுக்கும் மொழி ஒன்று கண்டுபிடிக்கப்படாம லிருக்கலாம். குட்டியீனும் விலங்குகள் எப்படிப் பல்லி முன்னவையிலிருந்து (ancestors) வளர்ச்சியடைந்து பல்லிக்கு இனமாயிருக்கின்றனவோ அது போன்ற இனமே அம் மொழிகளுக்கும் இம் மொழிக்கும் இருக்கலாம்.”2 மொகஞ்சொதரோ எழுத்துக்கள் இவ் வெழுத்துக்களைப் பற்றிக் கெரஸ் பாதிரியார் வெளியிட்டுள்ள சில உண்மைகளை ஈண்டுத் தருதும். “இவ் வெழுத்துக்கள் ஓவிய எழுத் துக்கள் தொடர்பானவை. இவை கிழக்குத் தீவுகள் முதல் இஸ்பெயின் தேசம் வரையில் வழங்கின. இவை ஓவிய எழுத்துக்களுக்கும் ஒலிமுறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்கும் இடைப்பட்டன; இந்திய நாட்டுக்கு அயலில் வழங்கிய எழுத்துக்களுக்கும் சீன சுமேரிய எகிப்திய எழுத்துக்களுக்கும் இனமுடையன. மனிதன், மீன், பறவை, மரம், நாற்காலி, மேல், கீழ் என்ப வற்றை அடையாளங்களாற் குறிப்பிட்டுக் காட்டுவது எளிது. மொகஞ்சொதரோவில் வழங்கிய சொற்களில் பல திராவிட மொழி களிற் காணப்படுகின்றன. ஆகவே திராவிட மொழிகளுக்குத் தாய் மொகஞ் சொதரோ மொழி எனக் கூறலாம். திராவிட மொழிகளிற் காணப்படும் மொகஞ் சொதரோ மொழிச்சொற்களில் பல தமிழிற் காணப்படுகின்றன. ஆகவே தமிழ் மற்றைய திராவிட மொழிகளிலும் மூப்பு உடையது என்று கருதப்படு கின்றது. மற்றைய திராவிட மொழிகளில் சில சொற்கள் காணப்படுகின்றன. துன்பத்தில் ஆழ்ந்திருத்தல் என்னும் பொருள் தரும் பகில் (Pagil) என்னும் சொல் கன்னடத்தில் உள்ளது. முதலிலும் கடையிலும் என்பதைக் குறிக்கும் கடிதல, கொடிதல என்னும் சொற்கள் துளு மொழியில் காணப்படுகின்றன. பழைய திராவிடச் சொற்கள் பிராகூய் மொழியிற் காணப்படலாம். கண் கல் என்னும் சொற்கள் க்கண் (Khan) க்கல் (Khal) என அம் மொழியில் வழங்குகின்றன. “யான் மொகஞ்சொதரோப் பட்டையங்களிற் காணப்பட்டவற்றை ஒலிமுறையில் எழுதி வைத்திருந்து அவைகளை யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் அவைகளின் இடையே இருபத்தைந்து செய்யுட்களின் பகுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்தார். அப் பாட்டுக்கள் பலவகைப் பா இனங்களில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்து, குறள் வெண்பாக்கள். படிப்பவர்கள் அதில் ஒன்றைக் கேட்க விரும்பலாம். ஆகவே அவற்றுள் ஒன்றை ஈண்டுத் தருகின்றேன். நண்றுறுறு தூக்குஅடு கார்முகில்ஊர் வேலிஒரூர் எடுஎட்டு றுஉயர்எல் இர்ஆர்இரி பேர்கடவுள் ஓர் ஊர் என்னும் ஆண்டை அடைகின்ற சத்தமிடும் உயரச் செல்லும் ஞாயிற்றின் இரண்டு வழிகளையுடைய பச்சைக் (பயிர்?) கடவுள் மலைமுகில்களும் இடியுமுடைய நாட்டுக்கு வெளியே உள்ளது.1 இன்னொரு பட்டையத்திற் காண்பது, “கல்லர் மீனவர் கான் கடஎர் வல்விடடு கல்குறவ வல் குரங்கர் நால்” என்பது. கலந்த (உறவுகொண்ட) நாடுகளின் மக்களிடையே நாலு வலிய குரங்கர் தோன்றும் (அம்மக்களின்) கோட்டை வலிய காலுள்ள மீனவராற் பிடிக்கப்பட்டது என்பது இதன் பொருள். தல் தா விட்டில் என்பதற்கு விளங்குகின்ற வீடு என்று பொருள். தல் விளங்குதலைக் குறிக்கும். முகில் என்பது மழையில்லாத முகிலையும், கருமுகில் என்பது மழை முகிலையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளன. கல்பேட் என்னும் ஆசிரியர் கோரியா மொழி இலக்கணம் திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒத்திருப்பதை ஆராய்ந்து காட்டியுள்ளார்.2 இடப்பெயரும் மக்கட்பெயரும் முற்காலத்தே ஊர்கள் பெரும்பாலும் கோயிலைச் சுற்றி எழுந்தன. அவ்வாறு எழுந்த இடங்கள் கோயிலின் பெயர்களால் அறியப்பட்டன.1 மேற்கு ஆசியாவிலே அசுர் என்னும் கடவுளின் கோயில் எழுந்த இடம் அசிரியா எனவும், பேபெல் என்னும் கோயில் தோன்றிய இடம் பாபிலோன் எனவும், நினேவ் என்னும் ஆற்றுத் தெய்வம் கோயில் கொண்ட இடம் நினோவா எனவும் பெயர் பெற்றன. சிறிய ஊர்கள் பல சேர்ந்தது ஒரு நாடாகும். சிறிய ஊர்களில் வாழும் மக்கள் சிறப்பாக நாட்டின் பெயரால் அறியப்பட்டனர். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிற் சென்று குடியேறி னால் அந் நாடு குடியேறிய மக்களின் பெயரை ஏற்றலும் இயல்பு. இது பிரித் தனில் அங்கிளர் குடியேறினமையின் அது அங்கிள்லாந்து (இங்கிலாந்து) எனப்பட்டது போன்ற வழக்கு. ஆதியில் ஆண்ட அரசனின் பெயர்களைக் கொண்டு இடங்களுக்குப் பெயர் உண்டாவதுமுண்டு.2 மக்கட் பெயரிலிருந்து மொழிப்பெயர் மக்கள் எப்பெயரால் அறியப்படுகிறார்களோ அப் பெயரிலிருந்தே மொழிப்பெயர் தோன்றுதல் இயல்பு. சேர்மனி, சேர்மனியர், சேர்மனியம்; கிரீஸ், கிரேக்கர், கிரேக்கம்; மலையாளம், மலையாளர், மலையாளம்; தெலுங்கானம், தெலுங்கர், தெலுங்கு போன்றன இதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்ச்சொல் தோற்றமும் இவ் வகையினதே தமிழ் ஆதியில் மொழிக்கு உண்டான பெயரென்றும், அப் பெயரி னின்றும் மக்களுக்கும் நாட்டுக்கும் பெயருண்டாயிற்றென்றும், அண்மைக் காலத்து ஆசிரியர்கள் பிறழ உணர்ந்தமையால் தமிழின் தோற்றத்தைப் பற்றிப் பலவாறு கூறியிருக்கின்றனர். மக்கட் பெயரிலிருந்தே மொழிப் பெயர் உண்டாதல் விதி என்பதை விளக்கி ஆசிரியர் சிவராசபிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் பகுதி வருமாறு: “அதனைப் (மொழியைப்) பேசும் மக்களிலிருந்து மொழி பெயர் பெற்றதெனக் கொள்வதே தகுதி. மொழிப்பெயரிலிருந்து மக்களின்பெயர் தோன்றிற்றென்பது ஏற்புடைத்தன்று. சங்ககாலப் புலவர்களின் சொல்லாட்சி யிலிருந்து தமிழ் என்பது மொழிப் பெயரிலும் பார்க்கச் சாதிப்பெயரளவில் மிகப் பழமையுடையதெனத் தெரிகின்றது. இது உலகின் மற்றப் பாகங்களி லுள்ள மக்கள் வரலாற்றோடும் ஒத்திருக்கின்றது. ஆகவே இதுகாறும் தமிழ்ச் சொல் தோற்றத்தைப்பற்றிக் கூறப்பட்டன அடியோடு மாறிவிடுகின்றன. தமிழின் தோற்றத்தைக் கூறவந்த எல்லோரும் அது சாதியையன்றி மொழி யையே குறித்ததெனக் கொண்டனர். உண்மை இதற்கு எதிர்மறை. இச் சொல்லின் தோற்றம் குலத்தொடர்பாகவன்றி மொழித்தொடர்பாக இருத்தல் முடியாது. அநேக சாதிகளின் பெயர்களைப்போலக் குலத்துக்குரிய இப் பெயரும் விளக்கப்படுத்தக்கூடாமல் இருக்கின்றது. இச் சொல்லின் தோற்றத் திற்குரிய காலம் எல்லா வரலாற்றுக் காலத்தையும் துளைத்துச் சென்று, நம்மை இவ் வுலகம் முழுமையிலும் வாழும் மக்கட்குலங்கள் எல்லாவற்றின் பிறப்பையும், அவை பரவுவதையுங் கண்ட ஓர் உலகத்துக்குக் கொண்டு செல்கின்றது. அது எல்லா வரலாற்றையுங் கடந்து சென்று மனிதப்பழமை யின் ஆழத்திலுள்ள வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம் ஒன்றைக் காட்டுகின்றது. அக் காலத்தைப்பற்றி மக்கட்குல ஆராய்ச்சி, கனவு காண் கின்றதேயன்றி அதைப்பற்றிய முடிவு ஒன்றும் கூறவில்லை. அவ் வகை யான திரையின் பின் இச் சொல்லும் இருக்கின்றது. இம் மொழி உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் பழமையுடையது.”1 தமிழ் தமிழ் என்னும் சொல் மொழிக்குப் பெயர் மட்டுமல்லாமல் இனிமை நீர்மை என்னும் பொருள்களையும் உணர்த்தும்.2 இலக்கியங்களில் ‘தேனுறை தமிழ்’ (கல்லாடம்), “தமிழ் தழீஇய சாயல்” (சிந்தாமணி) எனத் தமிழ் இனிமை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இச் சொல் இனிமையை உணர்த் தற்குரிய காரணம், அதன் மூலம் முதலியன அறிய முடியாதன. சிவன், ஞாயிறு, முருகன் முதலிய கடவுளர்களோடும் தமிழர் மதத்தோடும் தமிழ் தொடர்புடையதென்பது தமிழ் நாட்டில் வழங்கும் பழைய ஐதீகம். இவ் வைதீகம்பற்றியே, “தென் மொழியை உலகமெலாந்தொழுதேத்தும் குட முனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்.” “செந்தமிழ்ப் பரமாசிரி யனாகிய முருகக் கடவுள் அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தினார்” என்பன போன்ற வாக்கியங்கள் எழுந்தன. “சந்தனமும் புழுகுந் தண்பனி நீருடனே கொந்தலர் சண்பகமுங் கொண்டு வணங்கினேன் வந்திடும் வல்வினைநோய் மாற்றுவ துன்பதமே செந்தமி ழாகரனே சிவசிவ சூரியனே.” (பழைய பாடல்) “அசலே சுரர்பத் திரனே குணதிக் கருணோ தயமுத் தமிழோனே.” (திருப்புகழ்) “சுள்ளென் றெறிக்குஞ் சுடரோன்பால் தோன்றியுயிர் உள்ளம் துலக்கி யுலாவலின்-தெள்ளுபுகழ்ப் பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ் ஒண்டமி ழென்மனார் போந்து”1 இச் செய்யுட்கள் ஞாயிற்றினின்றும் தமிழ் பிறந்ததென்னும் வழக் குண்மையை விளக்குவன. சிவன், முருகன் என்னும் பெயர்கள் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கின. ஆகவே தமிழ் என்னும் பெயர் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய யாதோ பழைய சொல் ஒன்றினின்றும் பிறந்ததென ஊகித்தல் பிழையாகாது. இது ஒருபோது எல் என்னும் சொல்லினின்றும் பிறந்திருக்கலாமென்பதைப் பண்டைத் தமிழர் என்னும் எமது நூலிற் காட்டியுள்ளேம். தெலுங்கு மொழியை ஞாயிற்றுக் கடவுள் அருளிச் செய்தார் என்னும் ஐதீகம் ஆந்திரர்களிடையே உண்டு. “தமிழ்ப்” பெயர்க்காரணம் தமிழ் என்னும் சொற்பிறப்பைப்பற்றி யாம் எமது கருத்தை வெளி யிடுகின்றேம். இது முடிவானதன்று; ஏனையோர் கூறியவைகளோடு ஒப் பிட்டு ஆராயத்தக்கது. இவ் வுலக மத்தியில் பெரிய பூகண்டம் (நாவலந்தீவு) ஒன்று இருந்ததென்றும் அதன் மத்தியில் மேருவும் அதனைச் சூழ்ந்து இளாவிருதமும் உள்ளதென்றும், இலங்கைத் தீவு மேருமலையின் ஒரு கொடுமுடி என்றும் புராணங்கள் கூறுகின்றன. இளாவிருதம் என்பதில் விருதம் நாட்டைக் குறிக்கும். இளா என்பது எல் என்பதன் திரிபு. இளாவிருதத்தின் பகுதியாகிய இலங்கை ஈழமென வழங்குகின்றது. ஈழம் என்பதன் அடி எல் என்றே தமிழ் ஒப்பியல் அகராதியில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் காட்டியுள்ளார்கள். எல்லம் என்பது இலங்கையின் பழைய பெயர். இலங்கை என்னும் சொல்லின் அடியும் எல். இலங்கை மக்களின் பழைய மொழி எலு என வழங்கிற்று. இதனாலும் இலங்கையின் பழைய பெயர் எல் அல்லது எல்லம் என நன்கு துணிதும். இலங்கையை ஆண்ட முதல் அரசன் சிங்கமரபினன். ஆகவே எல்லம் சிங்க எல்லம் எனப் பெயர் பெற்றது. மக்கள் சிங்க எல்லர் என்று அறியப்பட்டனர். எல்லம் ஈழமான போது சிங்கஎல்லம் சிங்களமாயிற்று. ழகரம் ளகரமாதலன்றி ளகரம் ழகரமாத லில்லை எனச் சிலர் கூறுவர். சோளர் என்றிருக்க வேண்டியது சோழர் என வழங்குவதை நோக்குக. ளகரம் ழகரமாக உச்சரிக்கப்படும் சொற்கள் பல மொழியாராய்ச்சியால் அறியப்படுகின்றன. மெகஸ்தினஸ் காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒரு சிறிய ஆறுபோன்ற கடல் பிரித்தது. ஆகவே ஒருகாலத்தில் தென்னிந்தியா வும் இலங்கையும் ஒன்றுபட்டு இருந்தன எனக்கொள்ளுதல் பிழையாகாது. ஒரு காலத்தில் தாமிரவர்ணி ஆறு இலங்கைவரையிற் சென்றதெனக் கருதப் படுகின்றது. தாபிரபேன் என்னும் இலங்கையின் பெயர் தாமிரவர்ணி என்பதன் திரிபு என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் எழுதியுள்ளார்கள். இவை போன்ற சான்றுகளால் இந்தியா இலங்கை என்னும் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்திருந்தனவென்று துணிதும். தென் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நாவலந்தீவின் பகுதி; முன்பு எல்லம் என்றே வழங்கியிருத்தல் கூடும். சுமேரிய மக்கள் தென்னிந்தியா அல்லது இலங்கையிலிருந்து சென்றவர்கள் என்பது துணிவு.1 தமிழ்நாட்டினின்றும் சென்ற சுமேரியர் தமது நாட்டிலுள்ள இடம் ஒன்றுக்கும் மலை ஒன்றுக்கும் எல்லம் என்னும் பெயர் கொடுத்துள்ளார்கள். ஒரு நாட்டினின்றும் சென்று இன்னொரு நாட்டிற் குடியேறும் மக்கள் தம் நாட்டு இடப்பெயர்கள் சிலவற்றைத் தாம் குடியேறிய நாட்டின் இடங் களுக்கும் இட்டு வழங்குதல் இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டா. இதனாலும் கிழக்கில் ஓர் எல்லம் இருந்ததென்பது தெற்றெனப் புலப்படும். முற்காலத்து இடப்பெயர்கள் பெரும்பாலும் வழிபடு கடவுளர் தொடர்பாக உண்டாயின என்பது முன் காட்டப்பட்டது. மேற்கு ஆசியாவில் எல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பெயர்களைக் காணலாம். சுமேரியாவிற் போலவே கிழக்கிலும் எல்லம் மாத்திரமன்று, எல்லம் மலையும் இருந்தது. அதற்குச் சிவனொளிமலை என்பதும் பழைய பெயர். இப்பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. மனுவின் பேழை தங்கியதாகப் புராணங் கூறும் வடமலை இதுவே யாதல் கூடும். சுமேரியர் வழிபட்ட ஞாயிற்றுக்கடவுள் தாமுஸ்2 அல்லது தாம்சி எனப்பட்டார். இப் பெயருடன் இக் கடவுள் பொனீசியாவிலும் மற்றும் நாடு களிலும் வழிபடப்பட்டார். தமிழ் என்னும் சொல் இரு சொற்களின் மரூஉ என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. அதன் இறுதி, எல் என்பதன் திரிபாகிய இல். இல்லே பின் இழ் ஆயிற்று. தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்ததென்னும் வழக்குண்மையும், எல்லம் என்பது ஞாயிற்றுக் கடவுளை வழிபட்ட மக்களின் நாட்டைக் குறித்தலும், மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ் ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சொல்லி னின்றும் பிறந்ததெனக் கூறுதலும் மிக ஒத்துள்ளன. உண்மை இவைகளுக்கு அண்மையில் கிடக்கின்றது. கார்த்திகேய முதலியார், தமிழ், தாமம் என்னும் சொல்லினின்றும் பிறந்ததென்கிறார். இதிலும் பெரிய உண்மையிருக்கின்றது. தாமம் என்னும் சொல் மலையையும் ஞாயிற்றையும் இன்னும் பல பொருள் களையும் குறிக்கும். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டாயின் அது மிகப் பழையசொல் எனக் கொள்ளுதல் வேண்டும். வெவ்வேறு அடியாகப் பிறந்து வெவ்வேறு பொருள்களை உணர்த்திய சொற்கள் பல, காலத்தில் திரிந்து மருவி உச்சரிப்பில் ஒரு சொல்லாக வருதலுண்டு. இவ் வுண்மை மொழியாராய்ச்சியால் நன்கு அறியப்படும். தாமம் என்னும் சொல் மிகப் பழையதாயிருத்தலாலும், தமிழ் நாட்டினின்றும் சென்ற சுமேரியர் ஞாயிற்றுக் கடவுளைத் தாமுஸ் என வழங்கியமையாலும் இலங்கையிலுள்ள ஞாயிற்று மலை ‘தாமம்’ எனவும், அம் மலையையுடைய நாடு தாமம் எல்லம் எனவும் வழங்கியிருக்கலாமோ என்பன சிந்திக்கத்தக்கன. அவ்வா றாயின், தாமம் தாம் என மருவித் தா மெல்லமாகி, எல்லம் ஈழமானபோது தாமீழமாய்ப் பின் தமிழம், தமிழாயிற்றெனக் கொள்ளலாம். சிவன் என்பது ஞாயிற்றின் பழைய பெயரென்பது முன் விளக்கப்பட்டது. இவ்வாறு கொள்ளின், தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்தது; அது சிவன் முருகன் முதலிய கடவுளர்களோடும் சைவசித்தாந்தத்தோடும் தொடர்புடையது என்று வரும் பழைய வழக்குண்மைகளுக்கு ஒருவாறு விளக்கம் உண்டா கின்றது. இவ்வாறு கூறுதல் தமிழை இலங்கையோடு தொடர்புபடுத்துதற் குரிய சூழ்ச்சி எனச் சிலர் கருதலாம். ஒரு காலத்தில் தமிழரின் இருப்பிடம் 1தெற்கிலேயே இருந்ததென்றும், இலங்கையும் தென்னிந்தியாவும் அக் காலத்து வெவ்வேறாக இருக்கவில்லையென்றும் இன்னும் ஒருமுறை நினைவுறுத்துகின்றேம். வடக்கே வழங்கிய மொழியின் வரலாறு ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்தியா முழுமையும் தமிழ் வழங்கிற்று. ஆரியர்களுடைய வேத பாடல்கள் பிராகிருத மொழியில் செய்யப்பட்டன. பிராகிருதம் இலக்கண வரம்பில்லாத மொழி. பிராகிருதத் தின் திருத்தமே சமற்கிருதம் எனப் பெயர்பெற்றது. ஆரிய மக்கள் பிராகிருத மொழியைப் பேசினார்கள். வேத பாடல்களில் பல திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. அவர்கள் பிராகிருதத்தோடு திராவிடச் சொற் களையும் கலந்து பேசினார்கள். உற்பத்தியில் வடமொழியைச் சார்ந்தன எனப்படும் வடஇந்திய மொழிகளின் அமைப்புத் தமிழை ஒத்திருத்தலின் நாளடைவில் அவ்வாரிய மக்கள் தமிழையே பேசத் தொடங்கினார்கள் என்றும், அவர்கள் வழங்கிய தமிழில் ஆரியச் சொற்கள் பெரிதும் காணப் பட்டன என்றும் கொள்ளுதல் அமையும். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் விளங்கிய கௌதமபுத்தர் தம் அருள்மொழிகளை மகத மொழியில் (பாளியில்) செய்தார்.1 வடமொழியிலில்லாத எ.ஒ. முதலிய குறில்கள் பாளியிற் காணப்படுகின்றமையால் பாளி மொழி வழங்கிய நாட்டில் முன்பு தமிழ் வழங்கியதென்பதும் பாளிமொழிக்குரியோர் தமிழரென்பதும் முன் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ளன. புத்தருடைய மதக்கொள்கைகள் சாங்கிய மதத்தைத் தழுவியவை.2 சாங்கியமதம் வேதமதத்துக்கு மாறுபட்டது. கி. மு. 5ஆம், 4ஆம் நூற்றாண்டுகளில் பௌத்த நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப் பட்டன. மரப்பட்டையை வார்ந்து எடுத்த மிருதுவான அதன் உட்பகுதியும் ஓலைகளும் எழுதப் பயன்படுத்தப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பௌத்தப் பட்டையங்களில் மசி என்னும் சொல் காணப் படுகின்றது. ஆகவே, அக்காலத்து எழுதுவதற்கு மசியும் பயன்படுத்தப் பட்டதெனத் தெரிகின்றது. அசோகர் காலத்தில் பாளி மொழி வழங்கிற்று. பாணினியின் இலக்கணம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது. அசோகரின் பட்டையங்கள் பிராகிருதத்தில் எழுதப்பட்டன. பௌத்தரும் சைனரும் சமற்கிருதத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பிற்காலத்திலேயே சமற்கிருதம் பயின் றனர். அப்பொழுது பிராகிருதம் பாளிக்கும் சமற்கிருதத்துக்கும் இடையி லுள்ள ஒருநிலையை அடைந்திருந்தது. அம்மொழி புத்தரின் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரா என்னும் பாடலில் காணப்படுகின்றது. இது கதா மொழி எனவும்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் வடக்கே உள்ள மதுரை யில் பொறிக்கப்பட்ட சைன பட்டையங்களில் பிராகிருதம் காணப்படு கின்றது. இதற்குப் பின் சமற்கிருதம் வழக்கில் இருந்தது. சமற்கிருதப் பட்டையங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சமற்கிருதம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சைனர் இதனைப் பயன்படுத்தவில்லை. ஆறாம் நூற்றாண்டில் புத்த நூல்கள் சமற்கிருதத்தில் எழுதப்பட்டன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த தியான்சியாங் என்னும் சீனப் பிரயாணி புத்த சன்னி யாசிகள் சாதாரண பேச்சிலும் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினர் என எழுதி யுள்ளான். மகமதியர் காலம் வரையில் சமற்கிருதம் எழுத்து மொழியாக விருந்தது. பஞ்சாபி, இந்தி, குசராத்தி, மராட்டி முதலியன பிராகிருதத்தி னின்றும் பிறந்தனவாயினும் அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்தன. சமற்கிருத நூல்கள் தேவநாகரியில் எழுதப்பட்டன. இந்தி, மராட்டிப் புத்தகங்கள் இவ் வெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவ் வெழுத்தில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழய பட்டையங் களும், கி.பி. 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய கையெழுத்து நூல்களும் காணப்படுகின்றன. ஆரிய வர்த்தம் அல்லது இந்துஸ்தானம் எனப்பட்ட விந்தத்துக்கும் இமயத்துக்கும் இடைப்பட்ட நாட்டில் கி.மு. 200 வரையில் ஆரியம் வழங்கியதெனக் கூறலாம். சமற்கிருத நாடகங்களில் அரசரும் இருடிகளும் சமக்கிருதத்திலும், பெண்களும் பொதுமக்களும் பிராகிருதத் திலும் பேசுவதாக எழுதப்பட்டிருத்தல் காணப்படுகின்றது. ஆகவே, பிராகிருதமே மக்கள் மொழியாயிருந்ததெனத் தெரிகின்றது. சமற்கிருதம் இலக்கிய மொழியாயிருந்ததன்றி ஒருபோதும் பேசப்படவில்லை. வடக்கே காணப்படும் மொழிகளுள் முக்கியமுடையன பின் வருவன: (1) மேற்கு இந்தி, (2) கிழக்கு இந்தி, (3) இராசஸ்தானி, (4) குசராத்தி, (5) பஞ்சாபி, (6) காஸ்மீரி, (7) லாகின்டா (Lahinda), (8) சிந்தி, (9) மராட்டி, (10) பீகாரி, (11) ஒரியா (Orya), (12) வங்காளி, (13) அசாமி, (14) இந்துசீனம்.1 (இந்தியாவின் தொலைவில் (Further India) வழங்குவது.) தமிழ்ச் சங்கம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் நிருவினார் பாண்டியர்கள். இவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுமென இத் தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம். இனி இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனா ரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும் கீரந்தையு மென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழ மாலையும், வியாழமாலை யகவலுமென இத் தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமுமென இவையென்ப. அவர் மூவாயிரத்தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத் திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 1கபாடபுரத் தென்ப. அக் காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது. “இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடை யரனாரும். பெருங்குன்றூர் கிழாரும், இளந் திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத் தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன, நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகையும், நற்றிணையும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றியாண்டு என்ப. அவர் களைச் சங்க மிரீஇயினார், கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப” (இறையனார் களவியல் உரை.) இதன் சுருக்கம்:- தலைச்சங்கம் கடல்கொண்ட தென் மதுரையிற் கூடிற்று. இக் கழகத்துக்கு வரையறுக்கப்பட்ட உறுப்பினர் 549 பேர். இச் சங்கம் 89 பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் 4,440 ஆண்டு நடைபெற்றது. இச் சங்கத்தில் நூல்களையோ தனிப்பாடல்களையோ பாடிக்கொண்டு வந்து அரங்கேற்றிய புலவர் 4,449 பேர். இடைச்சங்கம், தென் மதுரையின் அழிவுக் குப்பின் கபாடபுரத்தில் நடைபெற்றது. இச் சங்க உறுப்பினர் 59 பேர். இச் சங்கம் 59 பாண்டியர் ஆட்சியில் 3,780 ஆண்டு நடைபெற்றது. இச் சபையில் பாடல்களை அரங்கேற்றிய புலவர் 3,700 பேர். இவர்களுள் ஐவர் பாண்டிய மன்னர். கபாடபுரத்தைக் கடல் கொண்டபின் சங்கம் மதுரையிற் கூடிற்று. இச் சங்கம் 49 அரசர் காலத்தில் 1800 ஆண்டு நடைபெற்றது. இச் சங்கத்துப், புலமையில் அரங்கேறிய புலவரின் எண் 449. இவருள் மூவர் பாண்டியர். இச் சங்க உறுப்பினர் 49 பேர். தமிழ்ச்சங்கம் 197 அரசர் காலத்தில் 9,990 ஆண்டுகள் நடைபெற் றிருக்கின்றது. சங்க ஆராய்ச்சி இறையனார் களவிய லுரைகாரர் இச் சங்க வரலாற்றை அக் கால நூல்களில் கண்டவற்றை ஆதாரமாகக்கொண்டே எழுதியுள்ளார் என உய்த்துணர்தல் வேண்டும். இவ் வகை வரலாறுகள் பல, ஆங்காங்கு அக் கால நூல்களிற் காணப்பட்டன என்பதற்கு, “சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கலகத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னும்” என்று பேராசிரியரும், கடல்கொண்ட ஆறும் மலையும் நாடும் ஆகியவற்றை அடியார்க்கு நல்லாரும், “வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று இளங்கோவடிகளும், “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினால் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்” என நல்லந்துவனாரும் கூறுமாற்றான் நன்கு துணியப்படும். தமிழ் மக்கள் தம் வரலாறுகளை எழுதிவைப்பதில் கருத்துச் செலுத்திற்றிலர் எனக் கூறுவது தவறு தமிழர் தம் பண்டை வரலாறுகளையும் அரசர்களையும் பற்றி எழுதி வைத்திருந்தார்கள் என்பது மகஸ்தீனஸ், பக்கஸ் முதல் அலக்சாந்தரின் படையெடுப்பு வரையில் 154 பாண்டியர் ஆண்டார்கள் என்றும், அவர்களின் ஆட்சிக்காலம் 6,431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறியுள்ளமையால்1 நன்கு துணிதலாகும். மேற்கு ஆசிய நாடுகளிலும் கோயிற் குருமாரே அரசர்களையும் அவர் காலத்து நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதிவைத்தார்கள். அக் காலங்களின் இன்ன அரசனின் ஆட்சியின் இத்தனையாவது ஆண்டு எனக் காலம் குறிக் கப்பட்டு வந்தமையின் அரசரைப் பற்றிய வரலாறுகள் எழுதப்படாமல் இருந்தன என்று கூறுதல் அமையாது. மேற்கு ஆசிய நாடுகளில் நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிச் சூளையிலிட்டுக் காப்பாற்றப்பட்டன. ஆகவே, அவை மண் செல் முதலியவைகளால் அழிக்கப்படாது பிழைத்தன; அவை களால் அந் நாடுகளின் வரலாறுகள் ஓரளவு அறியக்கிடக்கின்றன. எகிப்தி யரின் வரலாறுகள் பெரும்பாலும் சமாதிச் சுவர்களிலும் சமாதிகளுள் வைக் கப்பட்ட பைபிரஸ் நூல்களிலும் காணப்படுகின்றன. தமிழர் எழுதப் பயன் படுத்திய ஓலை சிறிது காலத்தில் ஒடிந்தும், செல், மண் முதலியவைகளால் உண்ணப்பட்டும், இராமபாணத்தால் துளைக்கப்பட்டும் அழிந்துபோகத் தக்கன. மேற்கு ஆசியாவில் கி. மு. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பெரிய நூல் நிலையங்கள் இருந்தன.1 மொகஞ்சொதரோத் தமிழர் நாகரிகம் மேற்கு ஆசியமக்கள் நாகரிகத்தைவிட மேலானது என்று கருதப்படுகின்றது. உலக மக்களுக்கே நாகரிகத்தை நல்கியவர்கள் என்று சொல்லப்படும் மக்கள் தமது வரலாற்றை எழுதி வையாதிருந்தனர் எனக் கூறமுடியாது. நூல்களை எழுதிப் பாதுகாத்து வைக்கும் முறையும் ஒரு நடு இடத்தினின்றும் பரந்து சென்ற வழக்கமே யாதல் வேண்டும். வரலாறுகளை எழுதிக் காப்பாற்றும் பழைய வழக்கைப் பின்பற்றியே இலங்கைப் பௌத்த குருமாரும் புத்தர் காலம் முதல் வரலாறுகளை எழுதிக் காப்பாற்றினர். அவைகளை ஆதார மாகக்கொண்டே தீபவமிசம், மகாவமிசம் முதலிய வரலாறுகள் விரித்து எழுதப்பட்டன.2 புராணங்களில் உண்மை அணுவளவும், பொய் மலையளவும் காணப்படுவதை நோக்கிய சில ஆராய்ச்சியாளர் தமிழ்ப்புலவர்கள் கூறி யுள்ள வரலாற்றுண்மைகளிலும் ஐயம் உறுகின்றனர். புராணங்களிலுள்ள கற்பனைக் கதைகளுக்குப் பொறுப்புப் பிராமணரேயன்றித் தமிழ்ப் புலவர் களல்லர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், இம் மயக்கம் எழ வழியில்லை. தமிழ்ப் புலவர்கள் உள்ளவற்றை உள்ளவாறே கூறும் இயல் பினரென்பது சங்கச் செய்யுட்களாற் றெளிதும். ‘இராமர் 11 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தார், தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தான்’ என இயற்கைக்கு மாறான எதையும் இறையனார் களவியலுரை கூறாமை கருத்திற் பதிக்கத்தக்கது. கெரதோதசு ஆசிரியர் ஓர் அரசனுக்குள்ள சராசரி காலம் 33 ஆண்டுகள் எனக் கணக்குச் செய்துள்ளார். மூன்று சங்கங்களும் நடைபெற்ற காலத்தில் இருந்த அரசரின் எண் 197. இவ் வரசர் ஒவ்வொரு வருக்கும் முப்பது ஆண்டுகள் ஈந்தால் 5970 ஆண்டுகளாகும். இவ் வாண்டுகள் சந்திர அளவின்படி கணக்குச்செய்து சூரிய ஆண்டாக்கின் 5470 வரையிலாகும். இறையனார் களவியலுரையில் மூன்று சங்கங்களும் 9990 ஆண்டுகள் நடைபெற்றனவாகக் கூறப்பட்டுள்ளது. பழைய காலக் கணக்கு களில் இவ்வாறு சில பிழைகள் நேர்தல் இயல்பு. கெரதோதசு மூன்று எகிப்திய அரசர் தனித்தனி 300 ஆண்டுகள் ஆண்டனர் எனக் கூறியுள்ளார். இடையே சில அரசரின் எண் விடப்படுமாயின் அவர்களின் ஆட்சிக்காலம் நீண்டதெனக் கணக்கிடப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் இவ் வகைப் பிழை நேர்ந்தமையால் சில அரசர் நீண்ட காலம் ஆட்சிபுரிந்தனர் எனக் கருதப்பட்டுப் பின்பு திருத்தப்பட்டது . கிறித்தவ மறையின் பழைய ஏற்பாடு மறைந்துபோகப் பின்பு அது கி. மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்குமிடையில் எழுதப்பட்டது. அதில் சில அரசர் 800 அல்லது 900 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். அதனை நம்ப முடியாவிடினும் அதில் கூறப்படுவன வரலாற்று நூலாரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவைகளை எல்லாம் வைத்துநோக்கி இறையனார் களவியலிற் கூறப்பட்ட காலக்கணக்கை ஆராய்தல் வேண்டும். காலக்கணக்கு மிகுதியாயிருப்பதால் சங்கம் நடைபெறவில்லையெனக் கொள்ளுதல் ஆகாது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்களைப் பாடிய புலவர்கள் தமிழ்நாட்டின் பல கோணங்களில் பல்வேறு காலங்களில் வாழ்ந்தோர். அப் பாடல்கள், தொகுக்கப்படுவதற்கு ஓரிடத்தில் எவ்வாறு கிடைத்தன என்பது ஆராயப்படுதல் வேண்டும். சங்கத் தே அரங்கேற்றப்பட்ட பாடல்கள் அங்கு படியெடுக்கப்பட்டுக் கிடந்தமையாலே அவைகள் ஓரிடத்திற் கிடைத்தன வென்பது நன்கு விளங்கும். சங்க வரலாறு கி. பி. 7ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் பழைய வரலாறாக விருந்ததென்பது1 “கூடலிலாய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என்னும் மாணிக்கவாசகரின் திருவாக்கானும் “நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினான்காண்” என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தானும் நன்கு விளங்கும். சங்கத்தின் இறுதிக் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் எனப் பெரும்பாலுங் கொள்ளப்படுகின்றது.1 இடைச்சங்கம் கபாடபுரத்திலிருந்ததெனப்படுகின்றது. இது தாமிர பரணி ஆற்று முகத்துவாரத்திலுள்ளதென இராமாயணங் கூறுகின்றது. கபாட புரத்தின் அழிவுக்குப் பின் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்தது. இது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்ததெனக் கருதப்படுகின்றது. மாபாரதம் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்ததாகவே கூறுகின்றது. அதன் பின்பே இப்பொழுதுள்ள மதுரை பாண்டியரின் தலைநகராயிற்று. இப்போதைய மதுரை முன் கடம்பவனமாயிருந்ததெனத் திருவிளையாடற் புராணங் கூறும். “கின்னரம்பயில் கடம்பவானத்தின் கீழ்சார்த், தென்னன் சேகரன் என்னுங் குலசேகரனாக, மன்னர் சேகர னரசு செய்திருப்பது மண வூர்” என்பது திருவிளையாடல். மெகஸ்தினசும் கௌடலியரும் மதுரையைக் குறிப்பிட்டுள்ளார்கள். கடைச்சங்க காலத்தில் இருந்த அரசர் 49 பேர் என்று கூறப்படுகின்றனர். தற்கால முறையின்படி ஓர் அரசனுக்கு 20 ஆண்டு ஈயின் அவர்களின் மொத்த ஆட்சிக் காலம் 980 ஆண்டுகளாகும். ஆகவே, கடைச்சங்கம் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று எனக் கூறுதல் தவ றாகாது. முறைக்குமுறை நேர்ந்த கடல்கோட் குழப்பங்களால் அரசரால் திரட்டி வைக்கப்பட்ட தமிழ்நூல்கள் அழிவெய்தினவென்று உய்த்துணர்தல்கூடும். தலமிசோத்தர் என்பவரால் அலக்சாந்திரியாவில் தொகுத்து வைக்கப்பட்ட 700,000 நூல்கள் அழிந்து போனமை இதனோடு ஒப்புநோக்கத்தக்கது. கடைச் சங்கம் குலைந்தபின் கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பவரின் தலைமையில் திகம்பரசைனரால் தமிழ்ச்சங்கம் தொடங்கி நடத்தப்பட்டது. அகத்தியர் அகத்தியர் தலைச்சங்கத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் என இறையனார் களவியல்உரை கூறுகின்றது. அகத்தியர் என்னும் விண்மீன் ஒன்றைப் பரிபாடல் கூறுகின்றது. மணிமேகலையில் (கி. பி. 200) அகத்தியர் அமரமுனிவர் எனச் சுட்டப்படுகின்றார். “கஞ்ச வேட்கையிற் ககந்தன் வேண்ட, அமர முனிவ னகத்தியன் றனாது, கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை.” “கடவுட் கணிகை காதலஞ் சிறுவன், அந்தண ரிருவரும்” என வரும் மணிமேகலை அடிகளுக்கு “திலோத்தமை பிள்ளைகளாகிய வதிஷ்டர் அகத்தியர்” எனப் பொருள்கூறி “வசிஷ்டனும் அகஸ்தியனும் பிரஹ்மா திலோத்தமை யென்னும் அப்ஸரஸைக் கண்ட காலத்து ஜனித் தனர்.” (நீல-சமயம்) என்னும் மேற்கோளையும் எடுத்துக் காட்டியுள்ளார் டாக்டர் சாமிநாத ஐயரவர்கள். புராணங்கள் வதிஷ்டர், அகத்தியர், விசுவா மித்திரர் முதலியோரின் தந்தை மித்திரவருணன் என்றும் கூறுகின்றன.1 மித்திரவருணன் தமிழ் மரபினரே என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. திருமந்திரம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு அளவிற் செய்யப்பட்டது. அதனகத்தே அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. “நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே.” (திருமந்திரம்) புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தில், “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்.” என வரும் அடிகளும் மேற்கூறியபடி கருத்தைத் தழுவிச் செய்யப்பட்ட தாகும். இவ் வரலாறுகளால் கிறித்துவ ஆண்டின் தொடக்கத்துக்கு முன்னர் அகத்தியர் வரலாறு கற்பனைக் கதைகள் பலவற்றுடன் கலந்த பழங்கதை யாக மாறியுள்ளதென்று விளங்குகின்றது. வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தவரும் உலோபா முத்திரையை மனைவியாகப் பெற்றவருமாகிய அகத்தியர் ஒருவர் வேதகாலத்தில் விளங்கினார். இராமாயணத்தில் அகத்தியர் ஆச்சிரமம் கோதாவரியாற்றுக்கு வடக்கே உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.2 தென்னாட்டில் அகத் தீச்சுரம் அகத்தியான் பள்ளி முதலிய ஆலயங்கள் இருக்கின்றன. அகத்தியர் தமிழுக்கு ஆதி3 இலக்கணஞ் செய்தாரென்றும், அவரிடத் தில் அதங்கோட்டாசிரியன், தொல்காப்பியர், பனம்பாரனார், செம்பூட்சேய், வையாபிகர், அவிநயர், காக்கை பாடினியர், துராலிங்கர், வாய்ப்பியர், கழாரம்பர், நற்றத்தர், வாமனர் என்னும் பன்னிருவர் கல்வி பயின்றார்க ளென்றும் வரலாறுகள் வழங்குகின்றன. இவைகளுக்கு, “வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்.” என்னத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பன்னிரு படலப் பாயிரம் என்னும் மேற்கோளையும், “தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த.” என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிர அடிகளையுமன்றி வேறு மேற்கோள்கள் காண்பதரிது. “தமிழ் நாட்டில் அகத்தியர்கள்” என்னும் ஆராய்ச்சி நூல் எழுதிய கே. என். சிவராசபிள்ளை அவர்கள், அகத்தியரைப் பற்றிய கதைகள் கற்பனை எனக் கருதினார்கள். முற் காலங்களில் ஒவ்வொரு குடும்பத்தின ரும் அவ்வக்குடும்பங்களின் ஆதி முதல்வர்கள் பெயர்களால் அறியப்பட் டார்கள். விசுவாமித்திரர், வதிட்டர், அகத்தியர் என்னும் பெயர்களும் அம் முறையில் வழங்கின. இவ்வாறு பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல அகத் தியர்களின் கதைகள் எல்லாம் ஒருங்கு திரண்டு பல கட்டுக்கதைகளோடு பின்னி இன்றைய அகத்தியர் வரலாறாக வழங்குகின்றதென்பது இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளரது துணிபாகும். இஞ்ஞான்று அகத்தியர் பெய ருடன் வழங்கும் வைத்திய நூல்கள் போன்றனவே முற்கால அகத்தியங்களு மாயிருத்தல் கூடும். செங்கோன் தரைச்செலவில் ஏழ்தெங்கநாட்டு முத்தூர் அகத்தியன் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவரின் பெயர் காணப்படுகின்றது. சுமத்திரா யாவா முதலிய நாடுகளில் அகத்தியர் விக்கிரகங்கள் மக்க ளால் வழிபடப்பட்டன. வாயுபுராணம், அகத்தியர் போணியோ, குசத்தீபம், வராகதீபம், மலையத் தீபங்களுக்குச் சென்றாரென்று கூறுகின்றது. அவர் சுமத்திராவிலே உள்ள மலாயு என்னும் மலையில் இருந்தார் என்னும் வரலாறு அங்கு வழங்குகின்றது. ஆதியில் சந்தன மரத்தினாற் செய்யப்பட்ட அகத்தியர் விக்கிரகம் மலாயரால் வழிபடப்பட்டது. கி.பி. 7ஆம் நூற் றாண்டில் கல்லாற் செய்யப்பட்ட அகத்தியர் உருவம் வழிபடப்பட்டது. அகத்தியர் சிலை சடாமுடி கவசம் உருத்திராக்கம் முதலியவைகளுடன் காணப்படுகின்றது.1 அகத்தியர் மரபிலுள்ளோர் பலர் அரசராயிருந்தார் களெனத் தெரிகின்றது. மத்திய யாவாவிலே சாண்டிபான் (Chandi Bann) என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலில் அழகிய அகத்திய விஷ்ணு விக்கிரகங்கள் காணப்படுகின்றன. சித்திய (Scythians) மக்களிடையே அகத்திரிசிகள் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் எனக் கெரதோதசு என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். பாதி பாம்பும் பாதி மனித வடிவுமுடையதாயுள்ள, கெக்குலிஸ் என்னும் தந்தை அகத்திரிசிகளின் ஆதி முதல்வர் என அவர் குறிப்பிட் டுள்ளார். அகத்திரிசிகளிடையே காணப்பட்ட பல ஆடவர் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம்போன்றது, மலையாளக் கரைகளிற் காணப்படுகின்றது.2 மலையாளம் முற்காலத்தில் நாகநாடு எனப்பட்டது. சேர என்பதற்கு நாகம் என்றே சாயணர் பொருள் கூறியுள்ளார்.3 ஒரு காலத்தில் மலையாளக் கரைகளினின்றும் வெளிப்போந்த அகத்தியர் மரபினரே அகத்திரிசிகள் எனச் சித்திய மக்களிடையும் காணப்பட்டார்களாம். சித்திய மக்களும் தமிழரை ஒப்பத் துரானியமக்களாவர் என மக்கட்குல நூலார் கூறுவர். தொல்காப்பியர் தொல்காப்பியர் என்பது தொல்காப்பியம் என்னும் நூலைச் செய்த ஆசிரியருக்கு அந்நூல் செய்தமை காரணமாக வழங்கப்பட்ட ஒரு காரணப்பெயர். இது நன்னூல் செய்தாரை நன்னூலார் எனக் கூறுதல் போன்றதொரு வழக்கு. இவரது இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவர் இயற்பெயர் திரண தூமாக்கினி என ஓரிடத்துக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியரின் இயற்பெயர் புலத்தியன் (புலம்-அறிவு) என்றும், அப்பெயரை வடமொழிப்படுத்தியவர்கள் அதனைப் புல்+அகம்+தீயன் எனப் பிரித்துத் (திரணம்+தூமம்+அக்கினி) திரண தூமாக்கினி என மாற்றினரென்றும் அறிஞர் சிலர் கூறுவர். இது இக் காலம் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தி வழங்குவதுபோன்றதோர் முற்கால வழக்கு. சூரியநாராயண சாத்திரி என்பதைப் பரிதிமால் கலைஞன் என்று வழங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வடமொழியினைத் தெய்வ மொழி என மக்கள் நம்பத் தலைப்பட்ட ஒரு காலத்தில் தென்னாட்டுத் திருக்கோயிற் பெயர்களும் மக்கட் பெயர்களும் வடமொழியிற் றிருப்பப் பட்டு வழங்கலாயின. திருவிளையாடற் புராணத்திற் காணப்படும் பாண்டிய அரசர்கள் பெயர்களும் இவ்வாறு மாற்றப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது. தொல்காப்பியம் செய்யப்பட்டகாலத்தில் திரணதூமாக்கினி போன்ற பெயர் தோன்றியிருத்தல் சாலாதென்பது வரலாற்றாசிரியர்களுக்கு நன்கு தெளிவாகும். தொல்காப்பியம் என்னும் நூலை நுணுகி ஆராயுமிடத்து அது பண்டைத் தமிழ் மரபுகளைப் பாதுகாத்தற்கு எழுந்த நூலென்பது தெள்ளி திற் புலப்படும். இக் காரணம் பற்றியே தொல்காப்பியம் (தொல் + காப்பு + இயம் = பழமையைக் காப்பதாகிய நூல்) என்னும் பெயர் அந் நூலுக்கு இடப் பட்டது. காப்பியம் என்பது காவியம் என்பதன் திரிபு எனச் சிலர் வழக்கிடுவர். தொல்காப்பியத்தில் காவியத்துக்குரிய பொருள்கள் அமைந்திராமையின் அன்னோர் கூற்றுப் பொருளன்றென விடுக. தொல்காப்பியம் கி. மு. 350க்குப் பிற்பட்ட நூலன்றென்பது வரலாற் றாசிரியர்கள் துணிபு, தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ள ஓரை என்னும் சொல் கிரேக்கரின் “ஹோரா” என்னும் சொல்லின் திரிபென்றும், வராக மிகிரர் (கி. பி. 550) காலத்துக்குப் பின்பே இந்திய மக்கள் ஹோரா என்னுஞ் சொல்லை வழங்கினார்களென்றும் ஆகவே, தொல்காப்பியம் கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதென்றும் சிலர் கூறுவர். தொல்காப்பியத்திற் கூறப் படும் இலக்கண விதிகளால் அது சிலப்பதிகாரத்துக்கு முற்பட்ட நூல் என நன்கு விளங்குகின்றது. கிரேக்கர் கி. மு. 5ஆம் நூற்றாண்டுக்குமுன் வான நூலைப்பற்றி அறிந்திலர். அதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே மேற்கு ஆசியமக்களும் தமிழரும் வானநூல், சோதிடநூல் என்பவைகளில் திறமை பெற்று விளங்கினர். ஆகவே, கிரேக்க மக்கள் வான ஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளுக்குரிய சொற்களைப் பிற மக்களிடமிருந்து பெற்றிருப்பார் களேயன்றி அக் கலைகளைப் பழமையே அறிந்திருந்த பிறர் கிரேக்கரிட மிருந்து பெற்றிருக்கமாட்டார்கள். உலக மொழிகளில் தமிழ்ச்சொல் மூலங்கள் சென்று வழங்குவதை மொழி ஆராய்ச்சியாளர் கண்டு கூறுகின்றனர். கற்களை எண்ணிக் கணக்கிடுதல் என்னும் பொருளில், இலத்தீன் மொழியில் வழங்கும் கல்குலஸ் (calcules) ஆங்கில மொழியில் வழங்கும் கல்குலேட் (Calculate) முதலிய சொற்கள் கல் என்னும் தமிழ்ச் சொல்லினின்று பிறந் தனவாதலை நோக்குவார்க்கு ஓரை என்னும் சொல்லே கிரேக்க மொழியில் சென்று ஹோரா என்று வழங்கிற்றெனக் கொள்ளுதல் இயைபுடையதெனத் தோன்றும். தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்படுதலின் அவர் ஐந்திர மென்னும் வடமொழி இலக்கணத்தைக் கற்றிருந்தார் எனச் சிலர் கருதுவர். ஐந்திரம் என்னும் இலக்கணநூல் இப் பொழுது காணப்படவில்லை. பாணினிக்கு முன் ஐந்திரமென்னும் வடமொழி இலக்கணமொன்று இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாணினிக்குப்பின் ஐந்திரமென்னும் இலக்கணநூல் வழங்கவில்லை. பாயிரத்திற் கூறப்பட்ட ஐந்திரம் வடமொழி நூலாயின் தொல்காப்பியர் பாணினி முனிவருக்கு (கி.மு. 400) முந்தியராவர். ஒரு மொழிக்கு இலக்கணம் செய்யுமிடத்து மற்றொரு மொழிக்குரிய இலக்கணத்தையும் கற்று ஒப்புநோக்கி ஒற்றுமை வேற்றுமை காணுதல் சிறந்த முறையாகும். இன்னொருசாரார், ஐந்திரமென்பது சைனநூல்; ஆகவே, தொல்காப் பியர் சைனர் எனக் கூறுவர். சிலப்பதிகாரத்தில், 1“கப்பத் திந்திரன் காட்டிய நூலின், மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணா”, “விண்ணவர் கோமான் விழுநூல்” என இந்திரனால் செய்யப்பட்ட ஒரு நூல் சுட்டப்படுகின்றது. அது மிகப் பழைய காலத்து (கற்ப காலத்தில்) இந்திரனாற் செய்யப்பட்ட தெனப்படுகின்றது. இந்திரனது தலைநகராகிய அமராபதி கிருஷ்ணாநதி முகத்துவாரத்திலுள்ளமையும், இந்திரன் தென்னாட்டிலே சிவலிங்கம் வைத்துப் பூசித்தமையுமாகிய வரலாறுகள் ஆராயப்படல் வேண்டும். தொல்காப்பியத்திற் காணப்படும் சில அகச்சான்றுகளாலும்,2 அதன் பாயிரத்தாலும் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமென விளங்குகின்றது. அகநானூற்றில் வரும் மாமூலனார் பாடல்களின், “பனிபடு சோலை, வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயத்தர் என்ப” “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிற் குழீஇக் கங்கை முந்நீர் கரந்த நிதியங் கொல்லோ” “கனைகுர லிசைக்கும் விரைசெலற் கடுங்கண் முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு” எனவரும் அடிகளால் மாமூலனார் காலத்துக்குமுன் வேங்கடத்துக்கு வடக்கே பிறமொழி வழங்கிற்றென்றும் மாமூலனார் கி. மு. 300 வரையில் வாழ்ந்தவராவர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள் ளார்கள். ஆகவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குமுன் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை வேங்கடமாக விருந்திருந்தது எனத் துணிதல் கூடும். கலிங்க இளவரசனாகிய விசயன் காலம் முதல் (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) தோன்றி வளர ஆரம்பித்த சிங்கள மொழியில் இலக்கியம் முதன் முதல் கி. பி. 10ஆம் நூற்றாண்டில் எழுந்தது. ஆந்திர மொழியிலும் இலக்கியங்கள் கி. பி. 9ஆம் நூற்றாண்டு முதல் எழ ஆரம்பித்தன. ஆகவே இரு மொழிகளின் காலமும் ஒன்று என (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) உத்தேசமாகக் கூறலாம். அக் காலத் திலோ அதன் சிறிது பிந்தியோ தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமாயிற்று. “பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராண மென்பன, சில் வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின் தொகுத்துச் செய்யப்பட்ட வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றென்க. கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும் (பேராசிரியர் உரை. மர. 649). “தொல்காப் பியம்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்வகுத்துப் பன்னினார்-நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலிற் றொகுத்து.” என வருவனவற்றால் தொல்காப்பியர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் எல்லாம் முன் விரிந்து கிடந்த நூல்களைச் சுருக்கி நூல்கள் செய்தார்கள் என விளங்குகின்றது. தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் செய்த சிறப்புப்பாயிர மொன்று காணப்படுகின்றது. இப் பாயிரம் ஆராய்ச்சிக்குரியது. தொல்காப் பியத்தில் நூல்களுக்குப் பாயிரம் செய்தற்கு விதிகாணப்படவில்லை. சங்க நூல்களுக்கும் இறையனார் களவியலுக்கும் பாயிரம் இல்லாமை கருத் திற்கொள்ளத்தக்கது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்களுக்குப் பொருளடக்கமே பாயிரமாக எழுதப்பட்டுள்ளது. வான்மீகர் இராமாயணத் தில் காணப்படும் பாயிரமும் இவ் வகையினதே. இதனால் சிலப்பதிகார காலத்தும் பிற்காலத்தும் வடமொழி நூல்களின் முறையைப் பின்பற்றிப் பாயிரஞ் செய்யப்படலாயிற்று எனக் கருத இடமுண்டு. பாயிரம் நூலுக்கு இன்றியமையாததென இறையனார் களவியல் உரை முதல் முதல் வலியுறுத்துகின்றது. இறையனார் களவியலுரை நக்கீரனாராற் செய்யப்பட்டு நீண்டகாலம் செவி வழக்கில் வந்து கி. பி. 7ஆம் நூற்றாண்டளவில் எழுதி வைக்கப்பட்டது. இதனால் கி. பி. 7ஆம் நூற் றாண்டில் அல்லது அதற்குச் சிறிதுமுன் நூலுக்குப் பாயிரம் இன்றியமை யாதது என்னும் கொள்கை வலுவடைந்திருத்தல் வேண்டும்.1 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்குள்ள பாயிரம் போலல்லாது, நூல், நுவல்வோன், நுவலுந் திறன் முதலியவற்றைக் கூறுவனவாயுமுள்ளது. இவைகளை எல்லாம் ஒருங்குவைத்து ஆராயுமிடத்துத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், கி.பி. 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த பனம்பாரனார் என்னும் புலவர் ஒருவரால், அக் காலம் தொல்காப்பியத்தைப் பற்றி வழங்கிய கன்ன பரம்பரை வரலாறுகள் எல்லாவற்றையும் திரட்டிச் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. பாயிரத்தில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரெனக் கூறப்படாமை நோக்கத்தக்கது. இலக்கணக் குறிப்புகள் சில தொல்காப்பியர் வியங்கோள் வினை, தன்மை முன்னிலை என்னும் ஈரிடத்தும் வராதெனக் கூறுவர். “அவற்றுள்-முன்னிலை தன்மை யாயீ ரிடத்தோடு, மன்னாதாகும் வியங்கோட் கிளவி” (தொல்.சொல்.வினை.) புற நானூற்றின் இரண்டாம் பாட்டைச் செய்த முரஞ்சியூர் முடிநாகராயர், “வான வரம்பனை நீயோ பெரும” “நடுக்கின்றி நிலியரோ” என முன்னிலை யிடத்து வியங்கோள் வினையைப் பயன்படுத்தி யிருக்கின்றார். இதனால் முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவரென உய்த்தறியலாம். தொல்காப்பியர் காலத்தில் வியங்கோள்வினை படர்க்கை இடத்துமட்டும் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் அது முன்னிலையிடத் தும் வழங்கிற்று. நன்னூலார் அதனை மூவிடத்தும் பயன்படுத்தினார். “கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப” (நன்-338). இச் சூத்திரத்தினால் நன்னூலாருக்கு முன்னும் வியங்கோள் தன்மையிடத்தும் வழங்கிற்று எனத் தெரிகின்றது. எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் கள் விகுதி ஏற்கவில்லை. மணிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் கள் விகுதி ஏற்கும் வழக்குக் காணப் படுகின்றது. ‘யாங்களும் நீணெறிப்படருதும்’ (சிலப்.) எனவும், “நோன்பிகள் விழுமங் கொள்ளவும்” (மணி.) எனவும் வருதல் காண்க. பிற்காலங்களில் கள் விகுதி உயர்திணை அஃறிணைப் பெயர்களுடனும் இருதிணை வினை முற்றுக்களுடனும் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியர் உயர்திணை என்று கொண்ட தன்மைப் பெயர்கள் நன்னூலார் காலம் முதல் விரவுதிணை (உயர்திணையும் அஃறிணையும்) எனக் கொள்ளப்பட்டன. “தன்மை நான்கும் முன்னிலை யைந்தும்........பொதுப்பெயர்” (நன். 282) செய்யும் என்னும் முற்று நிகழ்காலத்துக்கு மாத்திரம் உரியதெனத் தொல்காப்பியங் கூறுகின்றது. “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்து, செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா” (தொல். சொல். வினை.) நன்னூலாரின்படி அது வருங்காலத் துக்கு முரியதாகும். “செய்யு நிகழ் பெதிர்வும்” (நன். 145) நன்னூலார் நிகழ்கால வினைமுற்று செய்கிறேன், செய்கின்றேன், செய்யாநின்றேன் என வரும் எனக் கொள்வர். தேவாரத்துக்கும் நாலாயிரப் பிரபந்தத்துக்கும் முன் மேற்குறித்தவைகளில் ஒன்றேனும் ஆளப்பட வில்லை. வீரசோழிய ஆசிரியர் செய்யாநின்றேன் என்பதைச் செய்யா-நின் றேன் என இரு சொற்களாகப் பிரிப்பர். ஆனால், நன்னூலார் இருசொற்களை யும் ஒன்றாகக்கொண்டு ஆநின்று நிகழ்காலத்தினை உணர்த்துமென்றார். இவ் வாராய்ச்சியினால் தொல்காப்பியம் எல்லாத் தமிழ் இலக்கண நூல்களுக்கும் பார்க்க முற்பட்டதென்பதும், அது சிலப்பதிகார காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் மற்பட்டதென்பதும் நன்கு விளங்குகின்றன. உரைநடை வரலாறு மொழி, வழக்கு செய்யுள், என இருதிறப்படும். மக்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுங்கால் ஆளும் நடை வழக்கெனப்படும். வழக்கெனினும், வசன நடை உரைநடை எனினும் ஒக்கும். உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்ப மக்களாற்றோற்றுவிக்கப்படும் ஓசைகளின் வளர்ச்சியே பாடலின் தொடக்கமாகும். அவ் வோசை, அளந்து செய்யப்பட்டமையின் செய்யுள் எனப்பட்டது. செய்யுள் என்பதற்குச் செய் யப்பட்ட தென்பது பொருள்; தூக்கு என்பது செய்யுளுக்கு மற்றொரு பெயர். தூக்கு என்பது அளவு என்னும் பொருட்டு. ஆகவே, தூக்கு, செய்யுள் என்னுஞ் சொற்கள் ஒரே பொருளனவாதல் காண்க. பா என்பதும் செய்யுளை உணர்த்தும். ஓசை தொடர்பாகச் செய்யுட்குப் ‘பா’ என்று பெயர் இடப்பட் டுள்ளது. “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோரோசை” எனப் பேராசிரியர் பாவென்பதற்குப் பொருள் விரித் துரைத்தார். முற்கால மக்கள் உரையாடும்போதும் எழுதும் போதும் ஆண்ட நடைகள் வெவ்வேறு வகையின. பேச்சுநடை எப்பொழுதும் வசன நடை யாக அமைவுற்றது. எழுதுங்கால் எப்பொழுதும் செய்யுள் நடையே கை யாளப்பட்டது. இதற்குக் காரணம் பல ஆகலாம். செய்யுள் நடைமிகச் சுருக்கமானது; வசன நடையில் அதிகம் கூறவேண்டியவற்றைச் செய்யுள் முறையிற் சில வரிகளிற் கூறிவிடலாம். ஓலையில் எழுத்தாணியால் எழுதவேண்டியிருந்தகாலத்தில் இச்சுருக்கு முறையை மக்கள் விரும்புதல் இயல்பாகும். அச்சுச்சாதனமில்லாத முற்காலத்தில் நூல்கள் எழுதப்படற்கும், படிஎடுத்தற்கும் செய்யுள் முறை வாய்ப்பளித்தது. இக் காரணங்களினாலேயே முற்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிற் காணப்படுகின்றன. காலத்துக்குக்காலம் மக்கள் ஆளும் சொற்கள் மாறுபடுகின்றன. ஒரு காலத்திற் பெரு வழக்கிலிருந்த சொற்கள் மறைந்துபோகப் புதிய சொற்கள் வழக்கில் வருகின்றன. புதிய சொற்கள் வழக்கில் வந்தகாலத்தில் எழுதப் படும் நூல்களில் பழைய சொற்களின் வழக்குப் பெரும்பாலும் நின்றுவிடு கின்றது. பிற்காலத்தவர்களுக்கு முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பயின்று பொருள் விளங்குவது கடுமையாகின்றது. இக் காரணத்தால் முற்கால நூல்களுக்கு வழக்கு (வசன) முறையில் பொருள் எழுதப்படு கின்றது. இவ்வாறு எழுதப்படும் பொருட்பகுதிகள் உரை என வழங்கும். உரை எழுதும் இம் முறையிலிருந்தே பிற்காலத்தில் வசன நூல்கள் எழுதப்படலாயின. உரைநடைக்கு அடிவரையறை முதலியன இல்லை. முற்கால உரையாசிரியர்களின் உரைநடைகளின் பல பகுதிகள் செய்யுட்கள் போலவே செல்கின்றன. அக் கால மக்களின் வழக்கு எனப்பட்ட பேச்சு நடை, அவ்வாறு இருந்ததெனக் கூறுதல் அமையாது. அவ் வுரையைப் பார்த்து அக் கால உரைநடை எவ் வகையினதென ஒருவாறு சிந்தனை செய்து அறிந்துகொள்ளலாம். தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் கி. மு. 350-வரையிற் செய்யப்பட்டது. அந் நூல் உரை நூல்களைப் பற்றிச் சிறிது கூறுகின்றது (சூ. 485.) அவை பாட்டுக்களின் இடையிடையே உரைநடையி னியன்ற பகுதிகள் வைத்துச் செய்யப்படுவன; சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவன போல்வன; ஒழிந்துபோன பாடல்களுக்குப் பொருள் எழுதுதல் போல்வன; செவி வழக்கில்வரும் கற்பனைக் கதைகள் போல்வன; பொய் எனப்படாது உலகியலோடியன்று நகை விளைக்கக்கூடிய கதைகள் போல்வன. இவ் வகைய நூல்கள் ஒன்றேனும் இன்று காணப்படவில்லை. பற்பல காரணச் செறிவால் மாண்ட தமிழ் நூல்களோடு அவையுங்கூட மடிந்தன வாகலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் என்னும் அரசப் புலவர் பாடிய சிலப்பதிகாரத்தில் உரைப் பாட்டுக்கள் சில காணப்படு கின்றன. அவை அடிவரையறையின்றிப் பாட்டுநடையில் அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் ஆசிரியத்தை ஒத்துள்ளன. கி.பி. 1ஆம் நூற்றாண் டளவில் செய்யப்பட்ட இறையனார் களவியல் உரை கி.பி. 7ஆம் நூற்றாண் டளவில் எழுதி வைக்கப்பட்டது. அவ் வுரைநடையின் சில பகுதிகள் செய்யுள்நடை போற்றோன்றினும் பெரும்பகுதி சிறுசிறு வசனங்களாக அமைந்துள்ளது. பெருந்தேவனார் பாரதத்தின் இடையிடையே, மணிப்பிர வாள நடையில் எழுதப்பட்ட வசன நடை இதன்பின் எழுந்தது. இவ்வசன நடை, பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் (கி. பி. 9ஆம் நூற்றாண்டு) செய்ததாகாது. கி. பி. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டு அடியார்க்கு நல்லார், பேராசிரியர், இளம்பூரணர், நச்சி னார்க்கினியர், பரிமேலழகர் முதலானோர் உரைகளாகும். பிற்கால உரை நடைக்கு எடுத்துக்காட்டு மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோத மாபாடியமாகும். தமிழ் உணர்ச்சிக்கு எதிர் உணர்ச்சி வேதகாலத்தில் தாசுக்களுக்கும் ஆரியர் களுக்கும் மிகுந்த வயிரம் உண்டாயிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழை ஆரியத்திலும் தாழ்த்திக் கூறும் கட்சியொன்றும் தமிழ்நாட்டில் நீண்டநாள் தொடர்ந்து வராநின்றது. சமய குரவர் காலத்தும் இவ் வகை உணர்ச்சியிருந் தமையினாலேயே “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” எனத் தேவாரத்துட் கூறப்படலாயிற்று. இவ்வாறு கூறப் பட்டது இரு கட்சிகளையும் சந்து செய்தல் பொருட்டேயாகும். தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்குநாள் வளர்வதாயிற்று. அதிற்பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமை யாமையையும் உணராது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே ‘தேவபாடையி னிக்கதை செய்தவர்’ என மொழிந்து வட மொழிக்குப் பணிவு காட்டுகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் குமரகுருபரர் முதலாயினோர் அம் மக்களின் பேரறியாமைக் கிரங்கி அவர்கள் மனங்கொண்டு தமிழிற் பற்றடையுமாறு தமிழின் பெரு மையைப் பல அரிய இனிய தெள்ளிய பாடல்களால் விளக்கிப் போந்தனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்திற் கூறிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல்களால் அக் காலத்துத் தமிழுக்கு எதிரான உணர்ச்சி எவ்வளவு முனைத்து நின்றதென்பது தெள்ளிதில் விளங்கும். இன்றும் அவ் வுணர்ச்சி சாம்பர் பூத்த நெருப்புப் போல, பலர் உள்ளத்தே கரந்து கிடவாமல் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (பொருள். 490) ஆரிய நன்று தமிழ் தீ தெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய, அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால், செந்தமிழே தீர்க்க சுவா கா” எனக் காட்டப்பட்டுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ் வகை உணர்ச்சி தமிழ் நாட்டில் நீண்டகாலம் உள்ளதென்பதை நன்கு அறிக. தமிழின் பெருமையை விளக்கும் சில பாடல்கள் தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும், எலும்புபெண் ணுருவாக் கண்ட தும், மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலய மாமுனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. - திருவிளையாடற் புராணம். வடமொழியைப்1 பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார். இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்இவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ. - காஞ்சிப் புராணம். பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள். - வில்லிபாரதம். மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ(டு) உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் - சீகாளத்திப் புராணம். தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவுங் குமரவேள் வழுதி உக்கிர னெனப்பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங் கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக் கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார். -குமரகுருபரர். வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ் சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வையை யாறுஞ் சோலையாண் பனையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி..... - குற்றாலத் தலபுராணம். நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே. - மனோன்மணீயம். 1முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும் துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு-முன்னரே பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி மண்டலத்தி லேபேர் வளநாட்டின்-மண்டுநீர்ப் பேராற் றருகிற் பிறங்கு மணிமலையிற் சீராற்றுஞ் செங்கோற்றிறற்செங்கோல்-நேராற்றும் பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்ததமிழ்ப் பைந்தேவி. - தமிழ்விடு தூது. பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே. -மீ. பிள்ளைத்தமிழ். சங்ககாலத்துத் தமிழகம் கிருஷ்ணா நதிக்குக்கீழ் உள்ள நாடுகள் மூன்று இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் மூவேந்தருடையவும் குறுநிலமன்னர் எழுவருடையவும் இராச்சியங்கள் அடங்கும். இவர்களை அன்றிச் சிறிய செல்வாக்குடைய தலைவர்கள் பலரும் விளங்கினார்கள். கடற்கரைப் பகுதிகள் மூவேந்தருக்குரியவாயிருந்தன. நடுப்பகுதிகளும் மலைகளும் குறுநில மன்னர் வசம் இருந்தன. கிழக்குக் கரையில் கிருஷ்ணாநதிமுதல் தெற்கில் இராமநாதபுரப் பகுதியிலுள்ள தொண்டிவரையில் சோழ இராச்சியம் இருந்தது. இவ் விராச்சியத்தின் நடுவே காஞ்சிக்கு வடக்கிலுள்ள திருக்கோவலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமான் என்னும் சிற்றரசனின் கீழ் இருந்தது. சோழ நாட்டுக்குத் தெற்கில் பாண்டிய இராச்சியம் இருந்தது. இது கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையும் அகன் றிருந்தது. மதுரை, திருநெல்வேலி, திருவிதாங்கூர், கோயமுத்தூரின் பகுதி, கொச்சி என்பன இதில் அடங்கும். இவ் விராச்சியத்துக்குட்பட்டிருந்த பொதிய மலையை ஆயும் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள கொற்கைத் துறை முகத்தைச் சூழ்ந்த இடங்களை எவ்வியும் ஆண்டனர். பழனிமலையையும் அதைச்சூழ்ந்த நாடுகளையும் பேகன் ஆண்டான். இவனுடைய நாடு களுக்கு வடக்கே மேற்குத் தொடர்ச்சிமலை ஓரமாகச் சேரநாடு இருந்தது. இது பாலைக்காட்டு வெளி (Palghat gap) வழியாகக் கோயமுத் தூர்வரையுஞ் சென்றது. இதற்குச் சரிநேரே (Parallel) தென் மைசூரில் பல சிற்றரசர்களின் நாடுகள் இருந்தன. அவர்களில் அரயம் நாட்டை இருங்கோவேளும், பறம்பு மலையைப் பாரியும், தகடூரை (தருமபுரி) அதியமானும், கொல்லி மலையை ஓரியும் ஆண்டனர். இருங்கோவேளின் நாட்டுக்கு வடக்கே கங்கர் நாடுகளும், தெற்கில் கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட்டின் வடக்கே (மேற்குக் கரையில்) உள்ள துளுநாடு நன்னன் ஆணைக்குட் பட்டிருந்தது; கிழக்கில் புல்லியின் நாடும், வடக்கில் வடுகர் நாடும் இருந்தன. முண்டர் இந்தியாவிலே சூடியநாகபுரியில் முண்டர் (Mundar) என்னும் ஒரு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பேசும் மொழி தமிழுக்கு உறவுடையது. குலமுறையில் அவர்கள் திராவிடக் கூட்டத்தைச் சேர்ந்தோர். வரலாற்றாசிரியர்கள் சிலர், அவர்களே ஆரியருக்கும் தமிழ ருக்கும் முற்பட்ட இந்திய மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் அவர்கள் தமிழ்க் கூட்டத்தினரின் ஒரு பிரிவினரே யென்றும், அவர்கள் நீண்ட காலம் தமிழ்ப்பெருங்கூட்டத்தினின்றும் பிரிந்து தனித்து வாழ்ந் தமையின் அவர்கள் மொழி பழக்க வழக்கங்கள் ஆகியன மாறுபடாது வந்துள்ளனவென்றும், அவர்களின் மொழி மிகப் பழைய தமிழாகுமென் றும், இற்றை ஞான்றை ஆராய்ச்சி வல்லுநர் புகல்வர்.1 2“முண்டா மொழி (கொல்) மொன் கிமெர் (Mon Khmer) என வழங்கும். இஃது இந்து சீனமொழிக் கூட்டத்தைச் சார்ந்தது. இது மகாதோக் குன்றுகளி லும் (Mahadao Hills) இமயமலையிலும் வாழும் மக்களாற் பேசப்படுகின்றது. சூடிய நாகபுரியிலேயே இது பெரிதும் வழங்குகின்றது. இம் மொழியைப் பேசுவோரின் எண் 300,000. இம் மொழிக்குரிய மக்கள் அங்கும் இங்கும் சிதறிக் காணப்படுதலின் அவர்கள் முற்காலத்தில் மிகப் பரந்து வாழ்ந்தார் களென உய்த்துணரலாம். சிமிட் என்னும் பாதிரியார் (Fr. Schimidt) அவர்களை ஆஸ்திரேலிய தொடர்புடைய மொழிகளை வழங்கும் மக்களோடு இணைத்து, இவர்கள் ஆசிய மக்களையும் ஆஸ்திரேலிய மக்களையும் இணைக்கும் சங்கிலிபோன்றவர்கள் எனக் கூறியுள்ளார். உண்மையில் அவர்கள் அவ்வாறே உளர். பிறிஸ்லுஸ்கி என்பார். (J. Przyluski) முண்டா மொழி தொன்மையுள்ளதென்றும், பழைய மொழிகளின் அடிப்படையில் அஃது உள்ளதென்றும், அஃது இன்றும் மலாய ஆசியாவிற் காணப்படு கின்ற தென்றும் கூறுவர். முண்டா மொழிகளை வழங்குவோர் பொதுநிறமுடைய கொல்லியர் (Kols); இவர்கள் நெளிந்த (சுருண்டதல்லாத) தலைமயிருடையர்; பழைய பர்மிய அசாம் இந்து சீன ஆஸ்திரேலிய மக்களுக்கும் இலங்கை வேடருக் கும் இனமுடையோர். சந்தாத்தீவின் பந்தின் (Bantin) என்னும் சாதியினரும் செலிபிசிமக்களும் இவ் வினத்தைச் சார்ந்தோர் என வெக்ஸ்பொன்ட் (Wxbonds) என்பார் காட்டியுள்ளார். இம் மக்கள் இருண்ட நிறமுடைய திராவிட வெள்ளத்திற் புகுந்து மறைந்தனர். திராவிடரின் உற்பத்தியை அறிய முடியாமையினால், ஆராய்ச்சியாளர் அவர்களை ஆஸ்திரேலியர், எதுருஸ்கானியர் (பழைய இத்தாலிய மக்கள்) பின்னிய உக்கிரியர் (Finno-ugrians)களோடு இணைத்தனர். திராவிடமென்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு.” சூடியநாகபுரியில் முண்டா மொழியை வழங்கும் ஓரியர் என்னும் மக்களுக்கு குரங்குக்கொடியும், அதே குலக்குறியும் (Totem) உள்ளன என்றும், அவைபற்றி இவர்கள் குரங்கர் அல்லது குரங்குகள் என இராமா யணத்திற் கூறப்பட்டனர் என்றும் ‘முண்டரும் அவர் நாடும்’1 என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. சில முக்கியமான காலக் குறிப்புக்கள் இந்தியாவில் பழைய கற்காலம் கி.மு. 400,000 வரையில் மொகஞ்சொதரோ காலம் கி.மு. 3500 வரையில் இந்தியாவுக்கு ஆரியரின் வருகை கி. மு. 2000 வரையில் வேதகாலம் கி.மு. 2000-1400 பாரதப்போர் கி.மு. 1300 பிராமணங்கள் கி.மு. 1200 உபநிடதங்கள் கி.மு. 1000-600 கபிலர் (சாங்கியம்) கி.மு. 700-600 வான்மீகர் கி.மு. 600 மகாவீரர் கி.மு. 527 (இறப்பு) புத்தர் கி.மு. 557-477 போதாயனர் கி.மு. 500 யாஸ்கர் கி.மு. 500 அபஸ்தம்பர் கி.மு. 400 பாணினி கி.மு. 400 மயூர சந்திரகுப்தன் கி.மு. 327-296 மெகஸ்தீனர் கி.மு. 305 அசோகர் கி.மு. 268-266 பதஞ்சலி கி.மு. 150 கார்த்தியாயனர் கி.மு. 150 விக்கிரமாதித்த ஆண்டுத் தொடக்கம் கி.மு. 57 சாலிவாகன ஆண்டுத் தொடக்கம் கி.பி. 78 கரிகாற் சோழன் கி.பி. 50 இலங்கைக் கயவாகு கி.பி. 173-195 சேரன் செங்குட்டுவன் கி.பி. மேற்கூறியபடி கமுரபி கி.மு. 2000 சாலமன் கி.மு. 900 கோமர் கி.மு. 700 பதகோரஸ் கி.மு. 570 கெரதோதஸ் கி.மு. 480 கெசியற்ஸ் கி.மு. 416 பிளாற்றோ கி.மு. 328 அலக்சாந்தர் கி.மு. 327 அகஸ்தஸ்சீசர் கி.மு. 26 ஸ்ராபோ கி.பி. 20 பிளினி கி.பி. 79 மரணம் பெரிபுளுஸ் கி.பி. 80 தாலமி கி.பி. 130 பெதுருங்கேரியர் அட்டவணை கி.பி. 222 சில குறிப்புகள் 1. The Indian God Shiva or Shiba father of Sebo appears in the Ural Altaic astronomy of the Akkadians the third star of their seven parent stars. - History and Chronology of theWith making age - P. 85-J.F. Hewitt. The name Sin was given first to the land of the Sumerians, the Euphratian Delta. This is called Shinar in the Bible, Singara by Greeks, Sindjar by the Arabian Geographers and was that ruled by the three eyed and two horned wild pull God. This was the three eyed Shiva of the Hindus, whose wife was the weaving Uma, the flax (Uma) Goddess, the Goddess mother of the flax weavers of Asia Minor who become the Egyptian Goddess Neith - Ibid - P. 250. 2. சிலப்பதிகாரத்தில், “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமென முரையு முண்டே.” என வரும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி. 202 என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரும், கி.பி. 171 என K.G. சேஷ ஐயரும் முறையே குறிப்பிட் டுள்ளார்கள். 3. 11ஆம் பரிபாடலிற் காணப்படும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி. 196 ஜூன் மாதம் 28ஆம் தேதி (28th June 196 A.C.) என மு. ழு. சங்கர் என்பார் குறிப்பிட்டிருக்கின்றார்.-ஹ ஏடிடரஅந டிக ளவரனநைள in ஐனேடிடடிபல.-ஞ. ஏ. முயநே. 1 2 15 1. Deccan Itself one of the most ancient geological formations in the world has since the dawn of history the home of the Dravidians, the oldest of the Indian races-The people of India-P, 2, -S.H. Risely. 2. People want to know something about Dravidian Culture. South India is a land of wonders; but the wonder of wonders is that the history of South India has not yet come out-Bhandarkar, Hindu-March. 1-1939. 1. Fossil remains. 2. Tethys. 3. Hindu Civilization P. 7, Radha Kumud Mookerji. 1. Outlines of Science P. 641 - Prof. Arthur Thompson. 2. Prof wegener. 3. Tertiary epoch. 1. The Pandaeon nation is said to have been governed by females and their first queen is said to have been the daughter of Hercules. The city nysa is assigned to this reign as is also the mountain sacred to Jupiter. meros by name. In a cave on which the ancient Indians affirm Father Baccus was nourlshed-Ancient India as described by Megasthenes and Arrian - P. 156. “இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை” “மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரு மிமவா னிலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தண்மா மலையத்தூ டேறுஞ் சுழுனை யிவைசிவ பூமியே” என்னும் திருமந்திர அடிகளும் ஆராயத்தக்கன. The Greek writers identified the gods of the country with their own. They supposed Siva to be Bacchus and believed Krishna to be Herackles - The Muhammadans-P. 13J.D. Rees. C.I.E., I.C.S. 1. The formation of Malaidives P. 23, - J.S. Gardiner. 2. காவதம் நான்கு முதல் 10 கல் தூரம். 3. When the ancestors of Indians, the Persieans. The Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together whithin the same enclosures. Nay under the same roof, Lectures on the Science of Language.-1864 Maxmuller. 1. In the 4th century (A.D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written Collected works of R.G. Bhandarkar Vol. 11, P. 444. 1. India and the Pacific world P. 63; Victor christian. 2. Ibid P. 63. 3. Origin and antiquity of man pp. 131, 148, 81 84. G. Federick Wright. 1. Bel marduk. 2. Ishtar. 3. Links with past ages pp. 215. 222 - E.F. Orlon. 4. Mittani (Kharian) 5. Hindu civilization p. 38. R.K. Mukerjee. 6. The gate ways of India P. 53, Colonel Sir Thomas Holdich. 7. The couch shell used in Minoan cult for summoning the devinity. Conch shells are themselves of frequent occurance in Minoan shrines - The Palace of Minos at Knossos-vol. IV, p. 344. 1. The Ancient Egyption Culture pp. 22, 23 G. Elliot Smith. 2. Introducion by Prof. S. Langdon to the script of Harappa and Mohenjodaro and its connection with other scripts - G.R. Hunter. 3. Mohenjodaro and the Indus Civilization, vol. I, P. 44 - Sir John Marshall. 1. India and the Pacific world - p. 22, Kalidas Nag. 2. Ibid P. 63. 3. Book of beginings-Gerald Massey. 1. The most ancient East - p. 210, - Childe. 2. The Ancient History of the near East. p. 173 - H.R. Hall. 1. India and the Pacific World. P. 19. * Krakatoa; 2. After inspecting this evidence Keith wrote. ‘It is hard to resist the notion that in course of about one million years the descendants of this ape browed Pithecanthropus had been converted into aborigines of the continent of Australia” - Out Posts of science P. 76. - Bernard Jaffee. 3. India was an amazing breeding ground for the evolution of life forms. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India-The world we live in Vol. 1-104. Graeme Williams. “But was Jave therefore the region of the human origin; may this not more probably have occured in India where we know there were postanthropoid apes once existing that seem to have been the common stock from which gorilla chimpanzi and Orang utan were derived” - Ibid. P. 134 4. சங்க நூல்களில் தமிழ்நாடு ‘நாவலந்தீவு’, ‘நாவலந் தண்பொழில்’ என வழங்கப் பட்டுள்ளது. 1. J.C. Brown, quoted in stone age in India. P.T.S. Aiyengar. 2. Dr. De’Jerra.....tries to fix an approximate date of the early ‘Indian Palaeolithic Culture’ assigning to Jave man and to Pokin man 5,00,000 to 4,00,000 B.C. He places the Indian early Palaeolithic Culture in the second interglacial (3,00,000-2,00,000 B.C.) and solo man in circa 1,00,000 B.C. - India and the Pacific world, P. 280. 1. The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into Central India where in the Narbada Valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right up to Himalayan Hills-India and the Pacific World P. 279. 1. God Varuna was himself an Asura. Mr. Banerji believes that the Asuras were different from Dasus but identical with Dravidians. The Dasus he points out were black, while Asuras were brown or rather golden. This synthesis he points out in the adoption of the Cult of Siva which was the Asura Cult; as a part of Vedic System of worship Varuna and other Asura gods were incorporated into the Vedic Pantheon. The gods of the Asuras and the gods of the Trtsus become one. A social amalgamation came into existence with fruitful results. The Asuras and the Devas were made sons of the same Father God. Many Vedic Kings and Rishis came to have Asura Blood in them as is indicated by the colour. Sages like Vasishta, Agastya and Visvamitra were given the same Father Mitra-varuna. Asura in Aryan means Supreme God - Pre-musalman India....P.P. 172, 174, ஏ. சுயபேயஉhயசலய, ஆ.ஹ. 2. Life in ancient India P. 16. P.T.S. Iyengar. 3. உயிர்ப்பலியிடும் வழக்கம் பிற்காலத்தில் காய் கனிகளையும் பிற உணவுகளையும் படைக்கும் வழக்கமாக மாறிற்று. உயிர்ப் பலிக்குப் பதில் இன்றும் பூசனிக்காய்களை வெட்டி நடுவே குங்குமம் பூசப்படுகின்றது. பலியிட்ட மிருகங்களைத் தீயில் இட்டுப் பொரித்து உண்பதற்குப் பதில், பிற்காலத்தில் உணவு ஓமத்தில் இடப்படுகின்றது. ஓமத்தீயில் உணவை இடுவதற்குப் பதிலாக மேற்கு ஆசிய நாடுகளில் தூபம் காட்டப்பட்டதென வரலாற்று நூலார் கூறுகின்றனர். 1. சற்லி ஆற்றைக் கடக்க முன் உள்ள சமயக்கொள்கைகளில் இந்திய பூர்வ மக்களுக்கு ஆரியர் கடமைப்படவில்லை என்பது உண்மையே. சற்லி ஆற்றைக் கடந்தபின் எழுதப்பட்ட சம்கிதைகளையும் பிராமணங்களையும் பற்றி அவ்வாறு கூறுதல் இயலாது. - சி.ஆர். ஹன்ரர். -New Review-1936. சனகன் யாக்ஞவல்கியரையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி, ‘நீங்கள் அக்கினிகோத்திரம் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டபோது அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. ஆகவே தீயில் பலியிடுதல் (ஓமம்) முதலியன தமிழரின் கிரியை முறையே யென்று கருத இடமுண்டு. இன்று ஆலயங்களில் நடக்கும் கிரியைகளை ஒத்த பழைய தமிழர்களின் கிரியைமுறைகளைப் பின்பற்றியே பிராமணங்கள் செய்யப்பட்டிருத்தலும் கூடும். பிராமணங்கள் கி. மு. 800க்குச் சிறிது முன் செய்யப்பட்டனவென்றும், ஆகவே மிகப்பழைய வேத பாடங்கள் கி. மு. 1200க்கு முன் தோன்றியிருக்க முடியாதென்றும் பனேஜி என்பார் கூறுவர்.-வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்து இந்தியா. பக்கம். 44. 1. யாகங்களில் பாடல்கள் பாடுவதும் இவ் வகையினதே. 2. Krishna represented in the Maha-Bharata as black and so is Arjuna-so also is Vyasa who has related the story. And so is Drappathi the wife of pandavas. ‘Here is then Draupathi apuroaching.....with eyes like a lotus petal and with a lusterous dark complexion resembling the colour of a black lotus. By her side is Subathirai who is fair as gold. Here is another wife of Arjuna being the daughter of Naga king fair as pure as gold. Here is also Chitrangada daughter of the Pandya king whose complexion is like the colour of a madhuka flower. Here is the chief wife of Bhima.....with complexion as dark as a garland of blue lotus. By her side is the wife of Nagula as dark as a blue lotus’ (Asramavasi Parva -Epic India-C.V. Vaidya, M.A., LL.B 3. பலதேவன் ஓர் புறனடை. மகா பத்மநந்தனுக்கு 1050 ஆண்டுகளின் முன் குரு வமிசத்திலுள்ள பரிச்சித்து பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சந்திரகுப்தன் ஆளுகை தொடங்குவதற்கு நாற்பது ஆண்டுகளின் முன் மகா பத்மநந்தனின் ஆட்சி ஆரம்பித்ததென வாயுபுராணங் கூறுகின்றது. சந்திரகுப்தன் கி.மு. 322இல் ஆட்சி ஆரம்பித்தனெனக் கொண்டால் பரிச்சித்து கி.மு. 1412இல் இருந்தவனாவன் - வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்து இந்திய - ஆர். தி. பானெர்ஜி. 4. இராசாவலி என்னும் இலங்கைப் பௌத்த நூல் புத்தர் காலத்துக்கு 1844ஆம் ஆண்டு களின் முன் (கி. மு. 2370) இராமாயண நிகழ்ச்சி நடைபெற்றதெனக் கூறும். 1. சாதகக் கதைகளில் இராவணன் சீதையைக் கவர்ந்ததும் இராம இராவண யுத்தம் நிகழ்ந்ததுமாகிய வரலாறுகள் காணப்படாமையின் இராமரைப்பற்றியும் இராவணனைப் பற்றியும் அந் நாட்களில் தனித்தனி வழங்கிய கதைகளை வால்மீகர் இணைத்து இராமாயண மென்னும் ஒரு புதிய கதையைச் செய்தார் என்று சிலர் கருதுவர். பாணினியும் பதஞ்சலியும் வாசுதேவன் அருச்சுனன் உதிட்டிரன் முதலியோர் பெயர்களைத் தம் நூல்களில் எடுத்தாண்டிருப்பதுபோல இராமருடைய பெயரை எடுத்தாளவில்லை. பிற்காலத்து எழுதப்பட்ட அமர சிம்ஹத்திலும் விஷ்ணுவின் பெயர்களுள் இராமரின் பெயர் கூறப்படவில்லை.”- Early History of the Dekkan R. G. Bhandakar, P. 17. 2. Practically no traces of it (Rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero like the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the protoman, and returns no more to earth,-India and Western world H.G. Rawlison. The doctrine of Transmigration is entirley absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryas borrowed the idea from the aboriginies.-Cambridge History of India Vol. I.P. 108 -P. of - Macdonald. No trace of the doctrine of Transmigration is found in the Rig Veda and yet no other doctrine is so peculiarly Indian. It may have had its origin in non-aryan animism quite early-Origin and development of Bengali, Vol. I. P. 42 S. K. Chatterji. 1. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருப்பது என்பது பொருள். இஞ் ஞானங்கள் குருசீட பரம்பரை முறையில் எழுதாக்கிளவியாக வந்தன. இவைகளே தமிழர்களது மறை. அவை நூல்களல்ல. இறைவன் கல்லாலின்கீழ் தக்கணாமூர்த்தியாக விருந்து வேதப்பொருளைச் சனகாதி நால்வருக்கு உபதேசித்தார் என வரும் ஐதீகமும் இவ் வகையினதே. இவை மறைத்துக் கூறப்படுதலின் மறை, வேதம் என்னும் பெயர் பெற்றன. வேதம் என்பது மூடு என்னும் பொருள் தரும் வே என்னும் அடியாகப் பிறந்தது. ஆரிய வேதங்கள் இவ்வாறு மறைத்துக் கூறப்படுவனவல்ல. தமிழர்களின் மறை (இரகசியம்) க்கு வழங்கிய பெயர் களைப் பிற்கால ஆரியர் தம் பாடல்களுக்கு இட்டு வழங்குவாராயினர். எழுதாக் கிளவி, வேதம், மறை முதலிய சொல்லொற்றுமை பற்றிப் பிற்காலத்துப் பெரும் மயக்கம் நேர்ந்தது. The upanishads are philosophical doctrines which were to be kept very secret and to be imparted to students in secrecy. Pre-Historic Ancient India P-42. R.D. Banerji. 1. Man and thought in ancient India-Raddakumud Mookerji PP. 6, 7, 24. 2. And this will confirm the conclusion that the Dravidian tongue prevailed in North India before the Aryans came and occupied it. The same conclusion is forced upon us by an examination of the vernaculars of North India.......that even the vernacular, Bengalee which bristles with sansckrit and derivative words, is indebted to Dravidian languages for pretty large portion of the vocabulary and structural peculiarities. What is strange in even in Hindi Speech Dravidian words can be traced. No reasonable doubt can therefore be entertained as to the Dravidian speech once being spoken in North India.-Lecture on the Ancient History of India - D.R. Bhandarkar. 1. ஆரிய மக்கள் வழங்கிய ஆரியம் உள்நாட்டு மொழிகளோடு கலந்த முதுமொழிகள் பேச்சு மொழிகளாக விருந்தன. அம் மொழிகள் பிராகிருதம் எனப்படும். 2. A Short History of Sanskrit Literature. P. 24 - A. Macdonell. 1. The Dravidian dialects affected profoundly by sounds the structure, the idiom and the vocobulary of the former in the course of its growth in India on account of the constant influence of the Dravidian tongue. This language lost the subjunctive mood, many infinitive forms and several noun declentions, forgot its richly varied system of real verb tenses and adopted terms of expressions peculiar to the Dravidian idiom...The Dravidian names of things and operations connected with these arts of peace are native and not foreign (i.e. borrowed from Sanskrit) the question has not yet been investigated but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these were borrowed from the Dravidian. -The age of the mantras-P. T. S. Ayengar. 2. மந்திர காலம். பி.தி.சீ. ஐயங்கார் 3. புத்தர் கபிலர் வழியிற்றோன்றி நாககுலத்தவரென்று ஓல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். - சூரியனும் பாம்பும் - பக்கம் 66. 1. பாளி மொழியில் ஆரியத்துக்கில்லாத எகர ஒகரம் (குறில்கள்) இருப்பதாலும், மொழி தொடர்பான பிற ஏதுக்களாலும் மகதநாட்டில் தமிழ்மொழி வழங்கியதென்றும் புத்தர்திராவிட வகுப்பைச் சேர்ந்தவரென்றும் பந்தர்க்கர் கூறியுள்ளார்-Wilson’s Philological lectures-Dr. R.G. Bhandarkar. Collected works Vol. IV. P. 295. 2. Singhalese is essentially a Dravidian language. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that, while in regard to its word development, Singhalese is the child of Pali and Sanskrit; it is with regard to its phyiscal features and structure essentially the Daughter of Tamil...with regard to the laws governing the relation of words in sentences Viz: the laws of syntax, including idioms we find great many laws which cannot be explained except in the principle of Tamil Grammar-Mudaliar W.E. Gundavardhana. Journal of the Royal Asiatic Society Ceylon Branch. 1. இந்தியாவென்பது அலக்சாந்தரின் படையெடுப்புக்குப் பின் மேற்கு நாட்டவர்கள் நாவலந்தீவு என வழங்கிய நமது நாட்டுக்குக் கொடுத்த பெயர். இந்தியாவென்பது சிந்து என்பதன் திரிபு. சிந்து என்பதைக் கிரேக்கர் ஹிந்து என வழங்கினர். 1. பெருங்கதை 1. பெரும்பாண். 1. அகம். 2. வளை என்னும் சொல் சங்கை உணர்த்தும். சங்கை அறுத்துச் செய்யப்பட்ட வளையமும் வளை எனப்பட்டது. இதனை ஆதிகால மக்கள் கையில் அணிந்தார்கள். இவ்வளை பேய் பிசாசுகளினின்றும் மக்களைக் காக்கின்றது என்னும் நம்பிக்கை முற்காலத்தில் உண்டாயிற்று. ஆகவே வளைக்குக் காப்பு என்னும் இன்னொரு பெயர் உண்டாயிற்று. இன்றும் நாட்டுப்புறங்களில் குழந்தைகளின் கைகளில் காப்பாகச் சங்கு வளைகள் இடப்படுகின்றன; இன்றேல் சங்குமோதிரங்கள் கட்டப்படுகின்றன. பொன்னாலும் உலோகங்களாலும் செய்த வளைகள் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அவையும் வளை காப்பு என்னும் பெயரால் வழங்கும். தோடு காதோலை, சரடு போன்ற அணி வகைள் ஒவ்வொன்றும் ஆதி கால மக்களின் வரலாற்றை உணர்த்துவன. 1. உலகின் எல்லாப் பக்கங்களிலும் பழங்காலத்தே அரசர் கடவுளராக வழிபடப்பட்டனர். மேற்கு ஆசிய எகிப்திய வரலாறுகளில் இதனை நன்கு காணலாம். இலங்கையிலே குளங்களை வெட்டிப் பயிர்த் தொழிலை வளம்படுத்திய அரசர் தெய்வமாக வழிபடப் பட்டனர். இது மின்னேரி என்னும் குளத்தை வெட்டியவன் மின்னேரிக் கடவுள் என வழிபடப்பட்டமையால் அறியலாகும். இன்று ஆலயங்களில் நடக்கும் விழாக்கள் பூசைகள் என்பன அக் கால அரசன் ஒருவன் தனது கோயிலில் (அரண்மனையில்) இருக்கும் போதும், வீதி வலம் வரும்போதும் செய்யப்பட்ட மரியாதைகளே. இந்திரவழிபாடு பௌத்த மதத்தினர் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. பௌத்தர் இந்திரனைச் சக்கரக் கடவுளென வழிபட்டனர். பிற்காலத்தில் வேந்தன் வழிபாடும் இந்திரன் வழிபாடும் ஒன்றுபட்டன. 1. The Baveru Jalaka which relates the adventures of Indian merchants taking to Babylon by sea the first peacock for sale indicate according to Prof. Buhler that, “the Banis of Western India undertook trading voyages to the shores of persian gulf or of its rivers in the 5th perhaps in the 6th century B. C. ”- Studies in Indian History and Culture, - p. 14-Dr. Narendranath law. இந்தியாவின் மேற்குக்கரை உரோமையோடு பெரிய வாணிகம் புரிகின்றது. சில இந்தியர் இந்துசீனம் வரையும் சென்று வாணிகஞ் செய்கின்றனர். அவர்கள் பவளத்தையும் இளக்க முத்து மாலைகளையும் கொண்டு சென்று விற்கின்றனர். இவர்கள் கணக்குகளைப் புத்தகங்களில் எழுதிவைப்பதில்லை. இவர்கள் யானைத்தந்தம் அல்லது காண்டா மிருகக்கொம்பைத் தமது பொருள்களுக்கு விலையாகப் பெறுகின்றனர். இவர்களுள் மந்திர வித்தையிற் றேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஒரு மனைவி கணவனுக்குக் காட்டக்கூடிய உயர்ந்த மரியாதை அவர் அவனுடைய பாதங்களை முத்தமிட்டு முழங்காலைத் தழுவிக்கொள்வதாகும். அவர்களின் வீடுகளில் பாடவும் ஆடவும் கூடிய இளமகளிர் இருக்கின்றனர். அரசனிடமும் மந்திரிமாரிடமும் அநேக பட்டுக்கம்பளி உடைகள் உண்டு. அரசன் தனது தலைமயிரை சீனப்பெண்கள் போல உச்சியில் முடிகிறான். விவாகமானவர்களும் இப்படியே முடிகின்றனர். விவாகமாகாதவர்களும் இவ்வாறு முடிந்து காதைத் துளையிட்டு விலையுயர்ந்த வளையங்களை அணிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளை உடுக்கின்றனர். அவர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அவர்களுக்கு எழுத்தும் இலக்கியங்களும் உண்டு. வான சாத்திரத்தையும் சோதிடத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். எல்லோரும் பனை ஓலையில் எழுதிய சமயநூல்களைப் படிக்கின்றனர். இது மா துவான் என்னும் சீனனால் எழுதப்பட்ட குறிப்பு-Ma. Twan lin (550 - 60 A.D.) 1. சின்ன ஆசியாவிலே கித்தைதி என்னும் நாட்டிலும் வருணன் என்னும் கடவுள் வழிபடப்பட்டார். 1. Ptolemy - (B.C. 283 - died) 1. கிழிந்த சிதாஅ ருடுத்து மிழந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடினரு மறையர் நீடின் உருவந் தமக்குத் தாமாய இருபிறப் பாளர்க் கொரூஉமா தீதே. (தகடூர் யாத்திரை) 1. “ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக அரசனது கட்டளைகளை எதிர்பார்த்து நாட்டைக் காத்து வந்தனர். சிற்றரசர்கள் எல்லோரும் கப்பங்கட்டி வந்ததோடு வேண்டியபொழுது துணைப்படையு முதவக் கடமைப்பட்டிருந்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப்பட்டிருந்தது. யானைகள் முன்வரிசையிலும், குதிரைகள் இருபுறங்களிலும், காலாள் பின்வரிசையிலுமாகச் சண்டையில் அணிவகுக்கப்பட்டு நின்றன. அவை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒரு மகா சாமந்தன் அதிகாரத்தின்கீழ் இருந்தன. அம்மகாசாமந்தரும் ஒரு மகா சாமந்தாதிபதியின் கட்டளைக்குட்பட்டிருந்தனர். சகல போர் விஷயங்களையும் கவனிப்பதற்குச் சந்தி விக்கிரகி என்னும் மேலான அதிகாரி ஒருவன் இருந்தான். சண்டையில் ஈட்டி, கத்தி, வேல், வில், அம்பு முதலிய பல ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன. போர் தொடங்குமுன் வீரர், வீரபானஞ் செய்வது வழக்கம். அதனால் வீரனொருவனே ஆயிரம் பகைவரை எதிர்க்க வல்லவனாவான். யானைகளுக்கும் மதுவுண்பித்தலுண்டு. அவையும் வெறிகொண்டு மிதித்தும் துவைத்தும் எதிரிகளைச் சின்னபின்னஞ் செய்யும். போர்வீரர் மனைவியர் கணவரோடு போர்க்களத்துக்குச் செல்வது வழக்கம். சேனாபதி ஒருவன் சண்டையில் முதுகிட்டுப்போனால் அதற்குத் தண்டனையாகப் பெண்வேடந்தரிப்பித்து அவனை அவமானப்படுத்துவர்-(சாளுக்கிய) விக்கிரமாதித்தன்-பக். 50-அ. வா. வெங்கட்டராம ஐயர். 1. வாள்: உவணி, ஏதி, கடுத்தலை, துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், வாள்; குறுவாள்: குறும்பிடி, சுரிகை, கத்தி; வளைந்த வாள்: கோணம், ஈட்டி, இட்டி, கழுக்கடை; வேல்வகை: எயில், அரணம், எஃகம், எஃகு, குந்தம்; ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு; சூலப்படை: கழு, காழ்; கண்டகோடரிவகை: மழு, கணிச்சி, குந்தாலி, குளிர், தண்ணம்; அம்புவகை: அம்பு, கணை, கதிரம், கதிர், கோ, கோல், தொடை, தோணி, பகழி, பள்ளம், புடை, வண்டு, வாளி; நாணி வகை: நாணி, பூரம், ஆவல், கொடை, நாரி, நரம்பு, பூட்டு. 1. முரசு, பேரிகை, ஆகுளி, சல்லரி, சல்லிகை, கிணை. 1. நூல், இழை, சரடு, தொடர், நுவணம், பனுவல், பிசின், பன்னாடை, நெய்யுரி, மரவுரி, ஆசினி, இலக்கர், சீரம், சீரை, துகில், அறுவை, துணி, துண்டு, ஆசாரம், ஆசிடை, ஆடை, இடைதல், கலிங்கம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியல், கந்தை, கத்தியம், கப்படம், கலை, கடாகம், காழகம், கூறை, கோடி, சம்பரம், சாடி, சிற்றில், சூடி, சேலை, தானை, தூசு, தூட்டி, தூரியம், கோடிகம், மிடியல், புடைவை, படாம், பட்டம். 1. கொடி பல வெழுதிய கோலத் தோளினர்-பெருங்கதை. 1. பிண்டிக்-கட்புடைக் கவிசினை நற்புடை நான்ற-தாழைக் கயிற்றூசல் விருப்புற் றூக்கியும். (பெருங்கதை.) 1. வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளில் வரும் வெள்ளாளரில் வெள் வெள்ளத்தைக் குறிக்கும். 1. Sanskrit scholors suffer from a form of superiority complex and believe that Sanskrit, the language of the gods being a perfect language, could not stoop so low as to borrow words from the languages of men. Hence they are fond of inventing derivations, ingenious and plansible but absurd from a historical point of view. - Pre - aryan Tamil culture.-P.T.S. Iyengar. 1. Pre Buddhist India - Ratilal - N. Mehita. 1. அரசன் அரையில் வெள்ளையாடை யுடுத்துத் தலையில் தலைப்பாகை வைத்திருக் கின்றான். இவன் யானையிற் செல்லும் போது முத்தும் இரத்தினமும் பதித்த பொன் தொப்பியைத் தரிக்கின்றான்; கையில் பொன் நாடாக் கட்டுகிறான்; காலிற் பொற்சங்கிலி அணிகிறான். சிவந்த கம்பில் மயிலிறகு கட்டிய ஆலவட்டங்களைப் பலர் கொண்டு செல்கின்றனர். தெரிந்தெடுக்கப்பட்ட 500 பிறநாட்டுப் பெண்கள் அரசனைச் சுற்றி நின்று காவல் காக்கின்றனர். இவர்கள் நடனமாடிக்கொண்டு முன்னே செல்கின்றனர். இவர்கள் காலில் செருப்புத் தரித்திருக்கவில்லை. அரையில் ஆடை உடுத்திருக்கின்றனர்; முத்து மாலை பொன்வளைகளை அணிந்திருக்கின்றனர். அவர்களின் உடம்பு கற்பூரம் கஸ்தூரி முதலியவைகள் பூசி நறுமணமூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் வெயில் படாதபடி மயிலிறகுக் குடை பிடிக்கின்றனர். நாட்டிய மாதருக்கு முன்னால் அரசனது கருமகாரர் பல்லக்குகளில் செல்கின்றனர். பல்லக்கின் காம்பு பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீதிகள் புழுதியாயிருப்பதால் அரசன் 100 போர் வீரர்களை ஏவி வீதிகளுக்குத் தண்ணீர் தெளிக்கச் செய்கின்றான். Ad Chau Jukua (1225 A.D) - A Chinese Traveller. 1. In their left hand they carry bucklers made of undressed oxhide, which are not so broad as those who carry them, but are about as long. Some are equipped in the javelins instead of bows, but all were a sword, which is broad in the blade, but is not larger than three cubits; and this when they engage in close fight (which they do with reluctance) they weild with both hands to fetch down a lustier blow. The horsemen are equipped with two lances called Saunia and with a shorter buckler than that carried by foot soldiers - Arrian. 2. Physicians with surgical instruments, Medicines remedical oils and cloth in their hands; and women wish prepared food and beverage should stand behind uttering encouraging words to fighting men says Kaudalia - International law and customs in ancient India - Paramathanath Bandyopathyyaya. 1. துறவியர், வணிகர், ஊமர், செவிடர், குருடர், இடங்கள் தோறும் திரிந்து கல்வி பயிலும் மாணாக்கர் முதலிய பல வேடம் பூண்டு சென்று பகைவரின் மறைவுகளை அறியும் ஒற்றர் பலர். பெண் ஒற்றர்கள் பரத்தையராகச் சென்று பகைவர் நாட்டிற்றங்கி அரசகுமாரரையும் பிற பெருமக்களையும் வசப்படுத்தி அவர்களை இறுதியிற் கொல்வர்; வணிகராகச் சென்றோர் பகைவரின் படை வீரருக்கு நஞ்சுகலந்த மதுவகைகளை விற்பர்; வேலை யாட்களாகச் சென்றோர் பகைவரின் ஆடுமாடுகளுக்கு நஞ்சு கலந்த தண்ணீரும் புல்லும் கொடுப்பர். இவ்வாறு ஒற்றாடும் முறைகளைக் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார்.-மேற்கூறியபடி. 1. துரானியர் எனப்படும் எல்லா மக்களிடையும் திங்களில் முயல் இருக்கிறதென்னும் நம்பிக்கையிருந்ததென உலக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 1. 665 தானிய எடை. 1. அரசன் படுக்கையினின்று எழுந்ததும் வில்லுத்தாங்கிய பெண் கூட்டத்தினர் அரசனை எதிர்கொண்டார்கள். இவர்கள் அரசனது நெருங்கிய மெய்க்காப்பாளராவர். பெண் அடிமைகள் அவனது உடம்பைப் பிடித்து (massaged) குளிப்பாட்டி ஆடைகளை ஒலித்து, அவனைப் பூமாலைகளால் அலங்காரஞ் செய்தார்கள். அரண்மனையில் மூன்று தரத்தின ராகிய மகளிர் இருந்தனர். தாழ்ந்த படியிலுள்ள கணிகையர் அரசனுக்குக் குடைபிடிக்கவும் பொற்குடத்தை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டனர். அடுத்தபடியிலுள்ள பெண்கள் விசிறியைக் கொண்டு சென்றனர். இவர்கள் அரசனுக்குப் பக்கத்தே கொலுவிருக்கை மண்டபத்தே இருந்து சேவித்தனர். இவர்களிலும் உயர்ந்த பெண்கள் அரசன் தேரிற் செல்லும்போது அல்லது சிங்காசனத்தில் இருக்கும்போது சேவித்தனர். இவர்களில் வயது சென்றவர்கள் சமயலறையில் சேவிக்கும்படி அனுப்பப்பட்டனர். இக்கணிகைப் பெண்கள் 24,000 பணங்கள் கொடுத்து விடுதலை பெற்றுத் தாம் விரும்பியவாறு வாழ்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். எட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசனின்முன் பாடவும் ஆடவும் அமர்த்தப்பட்டார்கள். இவை கௌடலியர் கூறியவற்றால் விளங்குகின்றன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டைய பர்குத் (Bharhut sculputre) சிற்பத்தில் முற்றாக ஆயுதந் தரித்த பெண் குதிரைமீது இருந்து கொடியைப் பிடிக்கும் உருவம் காணப்படுகின்றது. - Chandragupa Mauurya and his times-Radha Kumud Mookerji-P. 97. 1. அக் கால வீரர் பயன்படுத்திய படைக்கலங்களுள் வளைதடி ஒன்று. இது ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பயன்படுத்தும் பூமறாங் என்னும் தடியே என ஆராய்ச்சியால் தெரிகின்றது. அதனை ஓர் இலக்கை நோக்கி எறியின் அஃது இலக்கிற்பட்டு மீண்டும் திரும்பி வரும். டாக்டர் ஒப்பேட் என்பார் இதைக்குறித்து எழுதியிருப்பது பின்வருமாறு: Dr. Oppert says, “this general belief that the bumerang is a weapon peculiar to Australians, but this is by no means the case. It is well known in many parts of India specially in its Southern peninsula. The Tamilian Maravar and Kallar employ it when hunting and throw it after deer. In the Madras Government Museum are shown three boomerangs two ivory ones which came from the armoury of the late Rajah of Tanjore, and a common one which came from Pudukota. The wood of which the bumerang is made is very dark. I possess a fair black wooden and one iron bumerang, which I received from Pudukota. In the arsenal of the Pudukota Rajah is always kept a stock of these sticks. Their name in Tamil is Valai Tadi, ‘bent stick’ as the stick is bent and flat. When thrown a whirling motion is imparted to the weapon which causes it to return to the place it was thrown. The natives are well acquainted with the peculiar fact - Indo - Aryans - Vol. 2-R. Mitra. 1. Sarmanes. சார்மேனியர் என்போர் பௌத்த குருமார். இவர்கள் எல்லாக் குலங்களினின்றும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். பிராமணர் ஒரே கூட்டத்தினின்றும் தலைமுறை தலைமுறையாக வருகின்றனர் - Hiuen Tsiang. 1. 606 அடி 9 அங்குலமுள்ள ஒரு கிரேக்க அளவை. 1. பழைய பாபிலோனிய நகரங்களும் இந்திய நகரங்களும் வீடு வாயில்களும் ஒரே வகையினவென்று வரலாற்று நூலார் காட்டியிருக்கின்றனர். அக் காலப் பாபிலோன் பட்டினத்தைப் பற்றிக் கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது பின்வருமாறு:- “பட்டினம் நாற்சதுரமுடையது. அதன் ஒவ்வொரு பக்கமும் 120 ஸ்ரீடியா நீளமுடையது. நகரைச்சுற்றி ஆழமும் நீர் நிறைவுமுள்ள ஓர் அகழி செல்கின்றது. அதனை அடித்து ஐம்பது அரசினர் முழம் அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருக்கின்றது. சாதாரண முழத்திலும் அரசினர் முழம் மூன்று அங்குலம் அதிகம். அதன் உயரம் இருநூறு முழம். அகழியிலிருந்து எடுத்த மண்ணால் கல் அரிந்து சூளைவைத்து மதிற்சுவர்கள் கட்டப்பட்டன. மதிலின் உச்சியில் ஒன்றையொன்று பார்த்து நிற்கும் ஒரு மாடியுடைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் நடுவில் வெளியிருக்கின்றது. இவ்வெளி ஒரு தேர் திரும்பக்கூடிய அகலமுடையது. மதிலைச்சுற்றி நூறு வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலுக்கும் வெண்கலக் கதவிடப்பட்டிருக்கின்றது. அரண்மனை அகன்ற மதிலினாற் சூழப்பட்டிருக்கின்றது. அம் மதிலின் கதவுகளும் வெண்கலத்தாற் செய்யப்பட்டுள்ளவை.” 2. அக் காலப் பாபிலோனிலும் இவ்வகை ஒழுங்கே இருந்தது. இது கெரதோதசு கூறுவதால் விளங்கும். அவர் கூறியிருப்பது-அரசன் ஆளும் தேசம் பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. அப் பிரிவுகள் அரசனுக்கும் அவனது பட்டாளத்துக்கும் தேவையான பண்டங்களை அளித்தன. இவைகளையன்றி அவை வழக்கமான திறையையும் இறுத்துவந்தன. பாபிலோன் தேசத்திலுள்ள நாடுகள் ஆண்டின் நாலுதிங்கள்களுக்குப் போதுமானவற்றை உதவின. ஏனைய மாதங்களுக்கு வேண்டியவற்றை ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகள் அளித்தன. அரசனிடம் 8000 ஆண்குதிரைகளும் 16,000 பெண் குதிரைகளும் இதே எண்ணுள்ள நாய்களும் இருந்தன. அச் சமவெளிகளிலுள்ள நான்கு பட்டினங்கள் இவைகளுக்கு உணவளித்தன. அந் நாடுகளுக்கு மற்றைய வரிகள் நீக்கப்பட்டிருந்தன. 1. The Greek girls we know frequently imported at Barygaza (Brooch) and a guard of Javana women is a stock feature of the Rajah’s court in the Indian Dramas - The presence of Greek girls as royal attendance shows that they were commonly found in Rajah’s harems - India and the Western World - H.G. Raw-linson - pp. 47. 170. It is probable that when the importation of Greek women, (who were often employed in the households of Indian chiefs and nobles at a time when Greek ladies married Indian princes) language ceased to exist also - The Gates of India - p. 22-Colonel - Sir Thomas Holdich. 1. It was apparently by way of Euphrates valley that the Indian Village Committees made their way into Europe. It was the descendants of the Latin races who founded the village committees of Italy on the pattern of those of Southern India. In passing from the Hindu to the Assyrian mythology we find another development from the original type of the Dravidian Village committee. The Ruling races of Pre - Historic Times pp 1, 39, 90 - H. E. Hewitt. 2. ஒவ்வொரு குடும்புத் தெரிவுக்கும் நிற்பவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதப்பட்டன. மரத்தடியில் அல்லது கோயில் மண்டபத்தே சபை கூடியது. அப்பொழுது கோயிற் குருமாரும் அங்கு வந்திருந்தார்கள். குருமாருள் வயதின் மூத்தவர் குடம் ஒன்றை எடுத்து அதனைக் கவிழ்த்து எல்லோருக்கும் காண்பித்தார். விவரம் அறியாத சிறுவன் ஒருவன் குடும்பினின்றும் வந்த ஓலை நறுக்குக்கட்டு ஒன்றை அவரிடம் கொடுத்தான். அவ் வோலை நறுக்குகள் குடத்திலிட்டு நன்றாகக் குலுக்கப்பட்டன. பின்பு அந் நறுக்குகளில் ஒன்றை அச் சிறுவன் எடுத்து ஐயரிடம் கொடுத்தான். அவர் தம் ஐந்து விரல்களையும் நீட்டினபடி அதனைத் தமது உள்ளங்கையில் வாங்கி அதிலுள்ள பெயரை வாசித்தார். பின்பு அங்குள்ள மற்ற ஐயர்மாரும் அப் பெயரை வாசித்தனர். இவ்வாறு ஒவ்வொரு குடும்புக்குமுள்ள உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். 3. சபைகளுக்கு ஊர் என்னும் பெயரும் இருந்தது. ஊர் என்பதே மிகப் பழைய நாட்டு அல்லது கிராம ஆட்சி நிலையமாயிருந்தது. பிற்காலத்தில் ஊர், சபை எனப்பட்டது. The suggestion may be made that, ur represents in every case the more premitive local organization indigenous to the Tamil country a lineal decendent of the ancient Mantram; and the Sabah was generally a later superimposition-Studies in Chola History and Administration P. 103. 1. இவர்கள் இலங்கையினின்றும் வந்து இந்தியாவிற் குடியேறினோர்; மலையாளத்திற் பெரிதும் காணப்படுவர். 1. We know that among many early tribes the wives, slaves, horses etc., of chiefs were slain at the tomb that their ghosts might accompany the spirit of the master and this is the true origin of satte - Syrian stone lore. 2. இலங்கையிற் கூலியின்றி அரசினர்பொருட்டுச் செய்யப்பட்ட கட்டாயவேலை இராச காரியம் என்று வழங்கிற்று. 1. The Hindu Temples were fortresses, treasures, courthouses, parks, fairs, exhibition sheds, halls of learning and pleasure all in one - Studies in Chola History and Administration-p. 115. 1. The kitchen is carefully guarded and is constructed in a secret place. The food for the king is tested by a multitude of testers. Examination is made of any traces of poison found in the viands and the demeanor of the tasters; medicines to the king must pass similar tests. Servants in Charge of the king’s dresses and toilets must appear bathed and in washed clothing to receive the toilet requisites daily sealed from the body in charge of the same, before applying them on the king - Chandrgupta Maurya and his time -R. K. Mookerji. 2. Robert Knox’s Ceylon, ஸ்ரீ விக்கிரமராச சிங்கா (சிங்களம்) இந் நூல்களால் மேற்குறித்த பொருள்கள் விளங்குகின்றன. 1. Dravidian tribal names are still to be found among the Bataks - India and the Pacific world; Kern recognised long ago that the earliest Indian colonists of Sumatra were of Dravidian origin. Before the spread of Malays in different parts of the archopaelago, the Dravidian element was supreme. The Austric people of Combodia mixed with the Dravidians and founded a powerful kingdom long ago - Pre-historic Ancient and Hindu India - p.30 R.D. Banerji. 1. Ancient Indian Colonies in the Far East - Dr. R. C. Mazumdar. 1. British Malaya-an account of the origin P. 13. F. Sweetenham. 2. Tamasak or Tamasha. 3. Sumatra a name of Indian origin (Somatra) excellent matter or substance - Ibid. 4. The Brahman Kaundinya who married a native princes called Nagini Soma and became lord of the country on the 1st century A. D. This was the beginning of the Cambodian dynasties ruling Cambodia for over 1,000 years, sharing the peninsula with the Indo China rulers of Cambodia (ultimately of Indian origin) -India and the pacific world - P. 117. 5. Epigraphical evidence of Vocan points to South India as the home of the Indian colonists - Indian colonists in Funan and Cambodia P.12. C. S. Srinivasachari. 1. Hindu Colony of Cambodia - Prof. Phanindranath. 2. Short Studies in the Science of Comparative religions - ஆயதடிச ழுநநேசயட - T.G.R. Forlong. 3. Indian Cultural Influence in Cambodia - B.R. Chatterji. 1. Tamilian Antiquary. 1. After the rise of Buddhism we find Balis flying seawards to “Little Java” or Baly and the Sunda group; and there they are still with that marked Dravidian characteristics - Rivers of Life, Vol, 2, P. 486. 2. Indeed the Asur or Asuras were gods or angels in high Asian or Prevedic and early Vedic days; But in all sub Vedic literature they are A - suras or great giants - Ibid-P. 485. 1. The fatherhood is not taken into account when the sexual bond is a loose one, and under such circumstances the descent can only be reckoned in the mother’s side....The sense of fatherhood was of later development and that in premitive times the child was held to be allied by blood with the mother and not with the father - Premitive family - C. N. Starcke. 2. மலையாளத்திலுள்ள நாயர் வகுப்பினரிடையில் காணப்படும் விவாகத்தொடர்பு ‘சம்பந்தம்’ எனப்படும். பெண், தான் விரும்பிய எந்த நேரமும் இத் தொடர்பை வெட்டிவிடலாம். பின்பு அவள் இன்னொரு ஆடவனோடு சம்பந்தம் வைத்திருக்கலாம். அவனுக்கும் ஒருவகைக் கட்டுப்பாடும் இல்லை. மலையாளத்தில் பெண் தனது ‘தார்வாட்’டில் இருக்கிறாள். அவள் இருக்கும் இடத்துக்குக் காதலன் செல்கின்றான். சிலவேளை காதலன் அவளிடம் செல்லாமலே நழுவிவிடுகிறான்; அல்லது அவள் அவனுக்கு அங்கு வருதல் கூடாதென அறிவிக்கின்றாள். இவ்வாறு ‘சம்பந்தங்’ குலைந்து போகின்றது. பிள்ளைகள் தாய்க்குச் சொந்தமானவை. தந்தைக்கு அவர்களைப் பராமரிக்க வேண்டிய கடமை இல்லை. அவனுக்குத் தனது குடும்பத்திலுள்ள சகோதரியின் பிள்கைளைப் பராமரிப்பதே கடமை-Dravidian Elements in Indian Culture - G. Slater. இலங்கையிலும் சிங்கள மக்களிடையே இவ்வகை மணங்கள் பின்னி (Bini) மணம் என்னும் பெயருடன் நடைபெற்றன. 1. The Ammachi is not a member of the Royal household and is associated with the royal court. She has neither official nor social position at court, and cannot even be seen in public with the ruler whose wife she is. Her issues occupy the same position as herself and the law of Malabar exclude them from all claims to public recognition......The nieces, who like nephews have the title of Highness and Rani.....Native life in Travancore - Rev. samuel Mateer. 2. ஆண் விலங்குகளுக்கும், மக்களுள் ஆண் பாலினருக்கும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் உறுப்புகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பெண் இனங்கள் அதிகக் குட்டிகளை ஈனுகின்ற காலத்தில் ஆண் இனங்களும் குட்டிகளுக்குப் பால் கொடுத்தனவென்றும், அக்காலத்தில் அவ்வுறுப்புக்கள் வளர்ச்சியடைந்திருந்தன வென்றும், அவற்றின் பயன்பாடு குறைந்த பிற்காலத்தில் அவை வளர்ச்சிகுன்றி அடை யாளமளவில் இருக்கின்றனவென்றும் அவர் கூறுவர். 1. India’s past - A.A. Macdonell - P. P. 84-5. 1. “The lioness or panther on which she sits (the great Asiatic Mother Goddess) remind us of the - lion drawn car of Cybele who was worshipped in the nieghbouring land of Phrygia across the Halys. So Adargate the great Syrian Goddess of Herapolis Bambyce, was potrayed sitting on a lioness...At Babylon image of a Goddess whom the Greeks called Rheu had the figures of two lions standing on her knees. On Egyptian monuments the Semitic God Kadesh represented standing on a lion-Golden Bough. Among the Babylonian and northern Semites she was called Istar (ஈசுவரி) the Astoreth of Bible and Astorate of Phoenicia-The Hittite Empire, P. 204. 1. There is on the left hand of the image of the bull God and on the right that of the Mother Goddess both deities are enshrined representing the mated pair of the established Hittitee devinities. But that which arrests the attention and may throw light upon the broader question of the Hittitee origins is the obivious parallelism of Siva.... This God is seated on the bull throne and the Goddess wearing the mural crown sits on a lion throne with staff and mace forming a pair - The Hittitee Empire - John Garstang pp. 204, 304. It (Jupiter Delichenus) seems more the less to represent the chief deity of the place. He stands on a bull holding the emblem of lightning and a double axe. His consort was a lion Goddess described on inscriptions as Hera Sancta-Ibid p. 307. 2. The humped Indian bull (Bos Indicus) all of which are freely figured in Sumerian, Hitto, Phoenecian and Kassi seals as, sacred animal of the East - The Indo-Sumerian seals deciphered - p. 20, L.A. Waddell. 1. Of, Ra, Il, El, Helos., Bil, Baal, Al, Allah, Elohim‘I cannot get any further information but that they were names given to the sun as the representative of the Creator, who was spoken of reverentally as my lord. The lord & c.-The king & c, as this organ represented the creator and the sun all were typified under such characters as Bacchus, Dionysus, Hercules, Hermes, Mahadeva, Siva, Osiris, Jupiter, Molech Baal, Assur and Innumerable others - Ancient Faiths pp. 70. 476, Thomas Innman. Sans - Devas; Lat - Deus; Lith - Diewas; Old Irish - Dia; Old Norse - Tivar; Iran - Diaeva - Prehistoric Antiquities of Aryan peoples, p. 45, Dr. 6, Schrader. 2. பெலுஸ் அல்லது பேபெலின் கோபுரம்: சாலடியாவிலுள்ள பெரிய கோபுரம் பகற் கடவுளின் (Bel) ஆலயம். பகல் என்பது (Ba.el,Ba-al or ’p’al) பிற்காலத்தில் பலுஸ் என வழங்கிற்று. இது 200 அடிச் சதுரமும் 480 அடி உயரமும் உடையதாயிருந்தது. இது வெயிலிற் காய்ந்த களிமண் கற்களாலும் செங்கல்லினாலும் கட்டப்பட்டது. இதன் படிக்கட்டுகள் செல்லச் செல்ல ஒடுங்கிச் செல்கின்றன. இதன் ஒவ்வொரு படியின் உயரமும் 60 அடி. இதன் உச்சியிலிருந்த மேடை ஆதிகால ஞாயிற்றுக் கோவில் எனத் தெரிகின்றது. இதன் உயரம் 606 அடி என்று ஸ்ராபோ கூறியிருக்கின்றார். அவர் இதனை பெலுஸின் சமாதி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் உச்சிக்கு ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டு உண்டு. இடையிடையே தங்கியிருந்து செல்வதற்கு இடங்கள் இருந்தன. ஒவ்வொரு படியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. அடிப்படி சனிக்கு உரியது. இது கறுப்புநிறம் பூசப்பட்டிருந்தது. இரண்டாவது படி வியாழனுக்குரியது. இது தோடம்பழ நிறம் பூசப்பட்டிருந்தது. மூன்றாவது செவ்வாய்க்குரியது. இது சிவப்புநிறம் பூசப்பட்டிருந்தது. நான்காவது வெள்ளிக்கு; இதன் நிறம் மஞ்சள். ஆறாவது புதனுக்கு; இதன் நிறம் நீலம். ஏழாவது சந்திரனுக்கு; எட்டாவது சூரியனுடையது. தயதோரஸ் (Diodorus) என்பார் இதன் உச்சியிலுள்ள மேடையில் பெல்டிஸ், றீயா, பெல் (Beltis, Rhea, Bel) என்னும் கடவு ளருக்குக் கோயில்கள் இருந்தனவென்று கூறியுள்ளார். பகல் (Bel) கடவுளுக்கு முன்னால் இரண்டு பொன் சிங்காசனங்கள் இருந்தன. பெல்டிஸ் என்பன வெள்ளியாற் செய்யப்பட்ட பெரிய பாம்புகள். இவை 30 தலன்ட் (Talent) (ஒரு தலன்ட் 200 தங்க நாணய நிறைவரையில்) நிறையுள்ள வெள்ளியாற் செய்யப்பட்டுள்ளன. இம்மூன்று உருவங்களின்முன் 40x15 அடி பொன் மேசையும் மேசைக்குமேல் 3 குடிக்கும் கிண்ணங்களுமிருந்தன. ஆண்டில் 1000 தலன்ட் நிறையுள்ள சாம்பிராணி இங்கு எரிக்கப்பட்டதெனக் கெரதோதசு (Heradotus) ஆசிரியர் கூறியுள்ளார். அவர் காலத்தில் இதன் அடியில் தங்கத்தாற் செய்த பகல் உருவமும், அதன் முன் தங்கமேசை ஒன்றும் இருந்தன. உச்சியிலுள்ள மேடையில் ஒரு மேசையும், அழகிய கட்டிலும் இருந்தன. பிள்ளை இல்லாத பெண்கள் பிள்ளைவரம் வேண்டி அங்குச் சென்றார்கள்.-Rivors of life Part2. 1. The gates which lead to the sanctuary ought to be turned to the east in such a manner, that it often happens that the Sun, in rising on certain days in the year, throws its light on the lingam which is in the sanctury - Dravidian architecture: G. Jouveal Dubreuil. 1. “கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பர் சேக்கும் கல்லடைப் பொதியில்” (பட்டினப்பாலை) (கொண்டி மகளிர் - சிறை பிடிக்கப்பட்ட மகளிர்; பொதியில் - மன்றம்.) 2. Under the village tree or sacred oak,. all very solemn vows must be made; here the young plighted their troths and elders ratified tribal and national offices and offered all the sacrifices of the gods. The sacred groves resounded with music chanting wailings, with music litanies and prayers....and the wide spreading oak was thought a more devine than these like the ancient ark it was often the alter ego of the heaven father-The short studies in the science of comparative religions - p 376. 1. Indian Civilization and its Antiquiry: B. Mukerjee. 2. Ganesha Siva - Linga and Yama (the God of death and justice) and numerous serpent Gods were worshipped in some areas on the whole continent - Hindu America: P. 60 Chamanlal. 1. Bacchus wore tiger skin - Early faiths of Western Asia. P. 36. 1. They (arks) seem to have developed from the old arrangement of the trilithon, enclosing a menhir or a cone. The deities seem to show that they belong to the people of Egyptian influence in Phoenicia - Syrian Stone Lore - P. 100. 2. The practice of (linga worship) was so general as to have spread itself over a large part of the habitable globe, for it flourished for many ages in Egypt, and Syria, Persia, Asia minior, Greece and Italy; it still is in vigour in India and many parts of Africa and was even found in America on its discovery by the Spaniards. “being regarded as the most sacred objects of worship and consecrated by religion, the cultus was associated with very idea and sentiment which was regarded as ennobling to man....In Egypt the phallus is frequently represented by a symbol of generation. The Jews did not escape this worship; we see their women manufacturing Phalli of gold and silver as we find in Ezakijel.” XVI 17 - Westroppe. 3. Out what concerns us as civilized christians, is to inquire how it comes to pass that devices which tell solely of the adoration of the sexual organs of the male and female are still represented in our churches as if they were holy emblems......; Rimmon - the emblem of the prolific womb the celestial mother. Rimmon figures in many christian churches are கடிரனே யள வை னனை in ளுலசயைn கூநஅயீடநள - Ancient faiths embodied in ancient names; vol. 2. p. 650. 1. That shameful thing which Jermiah reproachfully said had alters in every street of Jeruslem and which no doubt was the symbol of Jacob’s ali - im -; Short Studies in the Science of Comparative religions - P. 352. 2. The fire worship was borrowed from the Turanians - Short Studies in the Science of Comparative religions; துரானியர் - ஆரியரல்லாதார். 1. While the stone pillar also was primitive alter - Theism - E - Britannica. 2. The Arab sailors who saw the Phallie cone of Ceylon calling al maka and ‘the Adam’ an Indo-moslam name for euphamism for the lingam - Short Studies in the Science of Comparative religions; p. 340. 3. God was supposed to be the king of the country. The king was only an administrator on behalf of God - Fr. Heras, The Journal of the University of Bombay - 1936. 4. எகிப்திய அரசர் ஞாயிற்றிலிருந்து தமது பரம்பரையைக் கூறினர். அரசன் ஞாயிற்றின் பிறப்பு என்று கருதப்பட்டான். அவனுக்குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் நடைபெற்றன. மரணத்துக்குப்பின் ஒவ்வொரு அரசனும் ஞாயிற்றுக் கடவுளாக வழிபடப்பட்டான். சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான்.-Sun and the Serpent - Oldham. யப்பானிய அரச பரம்பரை ஞாயிற்றினின்றும் உண்டான தென்பது யப்பானியரின் நம்பிக்கை. இவ் ஐதீகத்தைப் பின்பற்றியே யப்பானிய அரசன் சூரியனுக்குரிய வெள்ளைக் குதிரையிற் சவாரி செய்கிறான். 1. In the later periods of Jewish history, the worship of the golden calf was held in such honour, even contrivance was adopted to keep it out of sight. The name Eglah (Calf) was borne by one of David’s wives - Ancient Faiths: p. 471. 2. Osris apis (Bull) under the name of Sarapis was worshipped far and wide throughout the countries bordering Mediteranean during the Hellenic age, till Letullian exclaimed indignantly it is not Egypt now-a-days so no Greece but the whole world swares by this African-as in Egypt, so in Crete the fertilising bull was on the long run identified with the sun - Zeus p, 49 - Arthur Bernard Cook. 3. Ishtar, Isiris and Ashtoreth and the present Mary were virgin Goddesses - Short Studies in the Science of Comparative Religions. 4. The expression munkan ‘three eyed’ and munminkan “three fish eyed” referring to Siva are frequently found in the inscriptions. Two inscriptions speak of the God of the City of Natur under the name of Vidukan (open eye); this very ancient idea agrees with the modern cannon belief of Hinduism that the Gods have no eyelids. Thus unable to close their eyes, they see everything. - Fr. Heras, J.O.T.U.O, Bombay. 5. Sumerian Triad An, Ama and Enlil - Father mother and son. Amman is called Minkanni in inscriptions “Uyarelter or Amman” -i.e. One Amman of the chariot of the Suris. This deity half man (Proper left) and half woman (Proper right) which is also found in Sumer with the name of Amma, - seems to be original idea of the Hindu Image Arthanareswara and which has the two parts put in relative position - Journal of the University of Bombay - Fr. Heras. 1. Rivers in Life. 1. Another emblem of God only once referred to is the snake. The snake one of the most common symbols of Shiva in modern Hinduism. Thus on inscription (of Mohenjo - Doro) informas us that mina meditates on the snake of the three eyed one, - Fr. Heras. 2. The pea-cock in the banners of so many Asiatic kings and princes in generally a symbol of past or present faith of the sun - Faiths of man in all lands - Vol. 1.P. 28. குறிப்பு: சிவனைக் குறிக்க ஒரு முக்கோணமும், துர்க்கையைக் குறிக்க ஒரு முக்கோணமும் வழங்கினவென்றும், சிவனைக் குறிக்கும் முக்கோணம் நிமிர்ந்தும் துர்க்கையைக் குறிக்கும் முக்கோணம் கவிழ்ந்தும் இருந்தனவென்றும், இவ் விரண்டையும் அவ்வாறு சேர்த்து வைக்குமிடத்து அறுகோணம் உண்டாகின்றதென்றும், இவ்வறுகோணமாகிய வடிவு பிற்காலத்தில் கொற்றவையும் சிவனும் சேர்வதால் தோன்றிய அறுமுகக் கடவுளாகக் கொள்ளப்பட்டதென்றும் சிலர் கருதினர். மேற்கு ஆசியாவில் பகல், அசெறெத் என்னும் அம்மை அப்பரைக் குறிக்க நிமிர்ந்த கவிழ்ந்த முக்கோணங்கள் பயன்படுத்தப்பட்டன. இஃது ஆராயத்தக்கது. 1. எல் என்பது அல், அல்லா, அலி முதலிய சொற்களாகத் திரிவதைக் காணலாம். மால் என்பதிலுள்ள அல் எல்லின் வேறுபாடே. 2. It may be noted at the outset that the sun was identified with Siva (perhaps also with Vishnu) and the Suriasevana really means the worship of Siva in the form of the sun. “It is interesting as showing the identity of Siva and Surya and there by explaining the inner significance of the Surya worship.” Ancient Indian Colonies in the far East. Vol. 2, pp. 1067. 3. The Assyrians had twelve great gods clearly corresponding to the twelve houses or months of fertility Rivers in life - p. 2. Now the sun in the course of the year travels through the constellations of the zodiac, which were called houses accordingly each month of the sun being in a different house was supposed to take a different form and since the constellation of the Proto-Indians as said above were eight (அட்டமூர்த்தம்)......Images of the Supreme being under these forms were worshipped in different parts of the country - Fr. Heras. எகிப்தில் ஆண்டின் ஒவ்வொரு திங்களும், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்குப் பரிசுத்தமானவை - ஹெரதோதசு. Heradotus. 1. Calandar - En. Britannica. 2. The civilization of Babylon and Assyria-pp. 484, 512. 3. Samash is represented upon the bas - relief as seated upon a throne with his feet resting upon the rows of cones which in Babylonian art represent rocks or mountains; and one of the names of sun God was El - shaddai or God of mountains which has been compared with the Habrew El-shaddai - Hammaurabic code-p. 83-Chilporic Edwards. 4. Old testament was written between 450 and 285 B.C. Moses was said to have written inspired records for his tribes, but wich have unfortunately all perished, so at least we gather from Ezra who with his scribes endeavoured to reproduce them and result is our old testament - Rivers in life p. 11. 1. Another Bibilical analogy has received attention. But ye have borne the tiber nacle of your moloch your Cheun, your images the star of your God which ye made for yourselves (Amos V. 26).......Scholars saw at once that the chiune was Siva. His tibernacle is the pavilion carriage of Siva. His star, the six rayed star of Siva made of the two equilatral triangles Siva’s own and the same upside down for Durga - Rama and Homer pp. 196, 218, 220. 2. Accordingly to Hebrew scholars the name Jehovah is to be derived from the stem Havah and this we take for the modified form Chava. - க்ஷடிடிம டிக வாந க்ஷநபinniபே. 3. Wife of Chosroroes II - Twin Rivers p, 129 - Seton Lloyds. 1. Jupiter traced fervo. The direct Assyrian denomination however of the planet is lost in the gulf of time from the Chaldie Sevah - History of Hindustan p. 239 - Author of Indian antiquities. 2. Ugro - Finnic and other Tunarnian dialects Zivo or Sivo - and Siva is protecting deity among the Lapps. The Turkish sev king, Akkadion Se - favour, sub - heart - Faiths of man - p. 308. Forlong. 3. The place Sivapura connected with Panini might have been named after them. Mr. A.C. Das suggests that they might have been worshippers of Siva or Phallus - History of Pre-Musalman India p. 185. 4. Africa is full of tree worship, ‘because Bruce found trees adorned with streamers flags or tags and with altars at their base, where meats, grain, wine and oil were offered. - Rivers in Life, Vol. 2p. 456. 5. Trees were worshipped by the ancient Celts, and Brosses even derives the word kirk now softened into church, from quercus, an oak the species being peculiarly sacred - The Origin of Civilization and the Primitive condition of man, Lubbock p. 213. 1. மொகஞ்சொதரோவில் “தாண்டவன் இர்நால் மரம்” என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. நாலு மரங்களுக்கிடையில் தாண்டவமாடும் கடவுள் இருக்கிறார் என்பது இதன் பொருள். “Thandavan is among the four trees I.E. this shows that the idea of God, dancing as the source of all the movement of the universe is a very old one. - The Journal of the University of Bombay-Fr. Heras. 2. The Temple was the house of the Gods copied from a human house; - Translations of the 3rd International Congress of the History of Religions.-vol 1.P. 187-Flinders Petrie. 3. The recent excavations in Punjab and Sind show that the temple was a familiar institution in the 3rd millennium before Christ. “The temples” says Sir John Marshall, stand on elevated ground and are distinguished by the relative smallness of their Chambers and the exceptional thickness of their walls, a feature, which suggests that they were several storeys in hieght-Anessay on the origin of the South Indian Temples - N. Venkata Ramanayya, M.A., Ph.D 1. First and prominently comes the tree; then the grove and the well, then the little column or phallus; then the altar of unhewn stone and an oak or adytum, steamers or serpents & c. “The early Gods liked not walls” sain Pliny very truly and the Jews well know this - Rivers of life. The grove was undoubtedly man’s first temple but became a sanctuary, asylum, or place of refuge and as time passed temples became to be built in the sacred groves. There is no doubt but that where the holy al kaaba of Meka stood was but a grove and a well and round all the holy circles of England stood sacred woods - Ibid p. 70. 2. சீரியாவிலுள்ள மாபெரும் ஞாயிற்றுக்கோயில். 3. The original temple in which the cone and its shrine or the altar were placed was but a cromlech or enclosure squire or round, made by setting up stones. The remains of such enclosures with a dolmen on one side are found.....in Phoenicia. It was with this sacred ideas of sacred enclosure or gilgal, with its pillar or Metzebah that Hypaethral temples of Byblus and Baalbek developed. The original temple at Kaaba at Mecca with sacred stone to Hobal was another such temple - Syrian stone lore. 1. கொறமாங்கன் என்னும் மனிதன் இன்றைய மனிதனுக்கு ஒருபடி முன் வாழ்ந்தான். இவ் வினத்தைச் சேர்ந்த மக்கள் ஆசியாவிலோ ஐரோப்பாவிலோ தோன்றி 25,000 ஆண்டுகள் வரையில் ஐரோப்பாவில் பரம்பினார்கள். இம் மக்களின் எலும்புகள் பிரான்சிலுள்ள கொறமாங்கன் என்னும் மலைக்குகையிற் காணப்பட்டது. ஆகவே அவர்கள் குறோமங்கன் மக்கள் என மாந்தர் நூலாரால் வழங்கப்படுவர். 2. Fergussion first called attention to the striking similarity in general arrangements and conception between the great South Indian temples and that of an-cient Egypt. The gopurams or gate-towers which in the later more ornate exa-mples are decorated from the base to the summit with sculpture of Hindu Pan-theon increase in size of the walled quadrangles., the outer once becoming im-posing land marks, which are vissible for miles around and are strikingly similar to Egyptian Temples - Migrations of Early Culture -G. Elliot Smith. - P. 79. 1. Thus in the matter of its early buildings India has clearly been influenced by Egypt Phoenecia and Chaldia - Thurstorn. 2. (In China) The idol of the chief deity of the temple commonly, a seated human figure with distinctive atributes occupies a wooden shrine or tebernacle facing the main entrance often Gods, his associates “ministers” have their places near him or inside chapels - History of Religions - G.F. Moore. 3. In the year festival of the Assyrians the bare Pole itself was the object of ritual practices,......just as was the case in Syria and Palastine. There is considerable reason for believing that this ritual importance of a tree or three trunk was a feature of the religion of all the peoples in the Eastern Mediterranean.....for in Crete, in Asia Minor and in Egypt similar ceremonies may be observed....At the top (of the pole) there are four or more spreading lines which seem to intend to represent branches. Below these branches there are generally represented bands - Early History of Assyria - P. 113. 1. முல்லைப் பாட்டு. 2. In the Hindu temple of today and the tebernacle of the Jews so in Assyrian temple a veil existed - Ancient Faiths Vol. 1. P. 614. The Jerusalem temple was not only one which had sacred veil before the entrance, we have found such a veil mentioned in connection with the temples of the sun in Suppra 880 B.C. together with ceremonial vestments proper for various feasts. The temple at Olympia was famous for the Assyrian veil described by Josephus as symbolizing the heaven is like the veil of gabala in phoenecia., which sybolizes the cosmos. The Jerusalem veil is said to have renewed every year - Syrian stonelore - P. 189. To which (Arabian venus at Mecca) a veil was presented by Hymyaritt king (about 1688 - 1629 B. C.) - Ibid. 3. So the king or priest carried out the daily routine of a servent in a house - Flinders Petrie. 4. தொல்காப்பியத்தில்; “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனக் கூறப்படுவதன் பொருள் இதுவே. ஓதல், ஓதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் என்னும் அறுதொழில்களை அறுவகை எனக் கூறுதல் ஏற்றதன்று. இந்திய பழைய வரலாற்றுக் கதைகளை ஆராய்ந்த பகிதர் என்பார் பிராமணரில் மூன்று வகையினரைக் குறிப்பிட்டுள்ளார். There have been three classes among Brahmans throughout Indian history namely (1) The ascetic devotee and teacher, the Rishie or Muni (2) The priest and spiritual guide of kings, nobles and people (3) The Minister of state, royal officer and those who followed secular employments - Ancient Indian Historical traditions P. 62. F.E. Pargiter. 1. The Arab still calls the Babylonian plain-Shin Iaa; that is sun god. For in the oldest Keltic as well as in Modern Dravidan. Tamil Iar is God; even in Ze-piter of the groves-Early Faiths in Western Asia - Forlong. 2. Aiyer is the term employed and it is either a corruption of Aryar or is a derivative form ஐ meaning வியப்பு (Tholkappyam) and denotes men who ovoke admiration - Sera Kings of Sangam Period - P. 148. K.G. Sesha Aiyar. ஐயா என்னும் சொல் மொகஞ்சொதரோ முத்திரைகளிலும் காணப்படுகின்றது. அங்கு அது கோயிற் குருவைக் குறிக்கின்றது. ஹெரஸ் பாதிரியார், “மீனனிர்மாறு அடுஇர் ஐயன்செறி தல்தல்வ” என மொகஞ்சொதரோ முத்திரையில் பொறிக்கப்பட்டிருத்தலைக் காட்டி அதற்கு “மீனவரின் பகைவர் மறியற்படுத்தப்பட்ட அரசகுரு” என்று பொருள் எழுதியுள்ளார். “Minanir maru adirayyan sere taltalva”-(the object of) the hostility of Minnas is the imprisoned illustrious ruler who is a Priest” -The Journal of the University of Bombay-July 1936 - Fr. Heras. 3. ஒவ்வொரு மூன்றாம் நாளும் (எகிப்திய) குருமார் பேன் முதலிய அழுக்குகள் இராதபடி உடல் முழுவதையும் மழித்துக் கொள்கின்றனர். அவர்கள் சணல் ஆடையை உடுப்பார்கள்; காலில் மிதியடியைத் தரிப்பார்கள். மிதியடி பைபிலஸ் (Byblus) என்னும் மரத்தினாற் செய்யப்பட்டது. அவர்கள் வேறுவகையான ஆடையும் மிதியடியும் பயன்படுத்துதல் கூடாது. அவர்கள் பகலில் இருமுறையும் இரவில் இருமுறையும் நீராடுவார்கள். சுருங்கக் கூறுமிடத்து அவர்கள் பல கிரியைகள் புரிகின்றனர். அவர்கள் தமது சொந்தப் பொருளைச் செலவிடுவதில்லை. அவர்களுக்காகப் புனித உணவு ஆக்கப்படுகின்றது. குருமார் பலர் கடவுளுக்குப் பணிவிடை செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவாய் இருப்பார். குரு ஒருவர் மரணமானால் அவர் புதல்வன் அவ் விடத்துக்கு வருகின்றான். எகிப்தியர், பருகும் கிண்ணங்களைத் தினம் சுத்தஞ் செய்கின்றனர். இதனைச் சிலர் செய்தும், சிலர் செய்யாதும் விடுகின்றார்களல்லர். அவர்கள் எப்பொழுதும் தோய்த்துலர்ந்த சணல் ஆடையை உடுக்கின்றனர். விரதமிருந்த பின்பே எல்லோரும் பலி செலுத்துகின்றனர் - ஹெரதோதஸ். அறுவகைப் பார்ப்பனப் பக்கம் என்பதற்கு உதாரணம் இன்றைய உரோமன் கத்தோலிக்கக் குருமார்களிடையே காணப்படுகின்றது. 1. There appear to have been a general permit for a learned Brahman to speak his mind in any durbar; and these Brahmans often gave out their opinions most fearlessly. This privilege was similarly accorded also to men of learning - Beginnings of South Indian History, P. 139 - S.K. Aiyengar. 2. First thing in the morning, fire must be lit, a lamp carried round to the master, as they usually rose before the sunrise, then some incense burnt to give divine nourishment of perfume, incense being literally, ‘divine food’ like cooking the morning meal. The master’s door was then opened, obeisance was made to him, with protestations of fidelity, he was anointed, and the divine food of incense put before him. The servant then returned with assurances that he was ready to his master. After the breakfast the servant comes forward again, goes through the same obeisance and calls on him to wake up in peace, declaring that his word is law, and that he will destroy his enemies. Then the master is washed perfumed, and dressed in various cloths, anointed and decorated. The ground is sanded for him to walk on when he comes forth. Several offerings of incense and another washing represent the meals and cleaning during the day and the service is over. - Flinders Petrie. இங்குக் கூறப்பட்டது எகிப்திய ஆலயங்களில் நடைபெறும் கிரியை. 1. The discovery of Zimbawe of soap stone clyinder of quern shape with rings of rosettes on the top and sides, which rosettes are believed to represent the sun and are common in phallic decorations. This cylinder which is considered as undoubtedly Phoenician is similar to the one found at the temple of Paphos in Cyprus which was once a leading colony. The rosettes are also similar to those on the sacred cone of the great Phoenician temple of the sun in Emesu in Syria and also to the the rosettes on the Phoenician sepulchral setele in the British museum. The ancient Ruins of Rhodesea P. 38 - R.N. Hall and W.G. Neal. 2. The Jupiter of Syria is represented as a bearded God with phrygian cap....at his side hangs his sword in its scabboard. His right hand brandishes a double axe; his left gashes a thunderbolt consisting of six spirally twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between the eyes-Zeus-P. 637, Arthur Bernard Cook. 3. The custom of using lamps and candles in worship is very ancient having prevailed in Babylon (Baruch VI. 14) in Pagan Rome in Egypt.....The lights are typical to sun - Ancient Faiths Vol. 1. P. 444 - T. Inman. 1. We have interesting evidences of the sacred dancing which we know to have found part of the ritual of the Hebrews and Phoenicians. Indeed they still survive not only in Asia-Minor but in Palastine at Adh Dhaheryth (Debir). In 1874 I saw the village elders dancing solemnly before the shrine of their Noby. David it will be remembered danced with almost the fury of a Bacchic right before the ark. The Derwish dances also must not be forgotten and the dancing of the Jerusalam people at the feast of tabernacles mentioned in the Misbnah - Syrian Stone lore P. 100. 2. The religious prostitutes mentioned by Heradotus, who were certainly a prominent feature in Babylonean religion. They were women who took vows of celebacy though usually dwelling together in special convents could neverthless live in this world and were often normally married. If married (and to possess votaress wife was probably regarded as destinction) a concubine was provided to bear children to the husbands, but had no legal wifely rights, which belonged to the votaresses. -The Ancient History of the Near East - R.H. Hall. The Syrian emperors brought with them to the Capital of the world (Rome) the Phoenician calus of conical stone and the troops of temple women. -The Syrian stone lore - P. 228. The woman attached to the Hindu temple exactly reproduce the Kadesh or other town sacred to the great mother Goddess. The menhir, or conical stone was the emblem throughout Syria of the Gods presiding over fertility - Ibid P. 47. All alike had women allotted to their service, but the Hebrew God went beyond the Hindu, for he was cheered with wine and for long periods the male Kadashism thronged in the santuary - Judges IX 13; Dent XIX 26; Jer. XXXV - Short Studies in the Science of comparative Religions. 1. Ancient Egyptian Civilization - G. Elliot Smith P. 32. 2. .......Should here be certainly regarded as the couch shell used Minoan cult for summoning divinity. Such trumpet shells are themselves of frequent occurance in Minoan shrines...The special object of cult in this case is the group of Cyprus like trees shown behind the altar, and in front of which are set the sacred horns and altars while a votary brings down the divinity by blowing blasts - The Palace of Minos at Knossos, Vo. IV - P. 244. The earliest use of the couch shell trumpet was in the Minoan worship in Crete. Thence it spread for and wide until it came to play apart in religious services of Christian, an Jehovah, Brahman, an Buddhist Shinto, and Shamanislic in widely different parts of the world - In Mediterranean, in India, in central Asia in Indo-nesia and Japan in Ocenia and America. In many of these places it was supposed to have the definite ritual object summoning the Deity - Shells as evidence of the Migration of Early Culture P. XXIV - J. Wilfred Jackson. (கிரேத்தா மக்கள் இந்தியாவினின்றும் சென்ற தமிழர்களே என்பது வரலாற்று நூலார் துணிவு. ஆகவே, கிரேத்தா மக்கள் இந்தியாவினின்றுமே இவ் வழக்கைக் கொண்டுசென்று பரப்பினர்.) 1. In view testament the sound of the trumpet was the signal for resurrection - Ibid. 2. Ibid P. XXV. 3. 1. In Phoenician, Greek and later times these couch shell trumpets were essentially used in the Mediterranean. European travellers have found them in actual use in East Indies, Japan, and by Alfurs in Ceram; the Paupuans of New Guienea, as well as in South Sea Islands as far as New Zealand and in many places in America. In the old and new world a like one find, in the same close Association the Purple industry - Migrations of Early Culture - G. Elliot Smith. 1. Tyrian purple and purple stuff were essentially articles of luxury varying in price according to times and quality. They were always costly and vied in value even with gold itself. Consequently we find them reserved for the hanging of temples or employed for the robes of priests and kings. The Babylonians are said to have devoted purple to the dress of their idols - Shells as Evidence of the Migrations of Early Culture - P.7. In the Romish Church the prevalent colours for sacred dresses etc. Are purple or Scarlet - Ancient Faith - P. 470. 1. Foot found near the French rocks near Mysore, “part of a large chatty with two ornaments coniform in shape, with a small pap in each re-entering angle and a raised garland like ring round each cross”. This is evidently a Swastika, and it bears a strong resemblance to a Trojen Type of Swastika - Stone age in India, P. 43. 2. Baal was represented by an altar, by a bull, by the cross sign of the sun + (sun and its rays) or by linga stone, or a stone pillar - Links with past ages - P. 22 - E.P. Orton. The sacred symbol of the Hittites also, including the True Cross or the Sun-Cross or the Red-Cross of St. George of Cappadocia and England and St. Andrews Cross are identified with the Sun-Cross of Sumerian, Trojans, ancient Britons as displayed in my comparative plates of these crosses - The Makers of Civilization - P. 16. Waddell. We do not know where the Swastika first appeared. It may have appeared in India or some near part of Asia, long before the time of Budda and spread from there to all over the world. The symbol is universal. Anthropoligists draw maps showing the distribution and migration of the Swastika. There are the maps of the whole world spotted with Swastika from New Zealand, Australia and Japan, through Asia, Africa and Europe to North and South America. “This odd little Symbol spins gaily round the world” say H.G. Wells in his out line of History - The Swastika - P. 14 Well Hayes. 3. ஐனேயை, வாந நுஅயீசைந டிக ளுறயளவமைய - ஊடிசடியேவiடிn ளுடிரஎநnசை - க்ஷடிஅயெல, 1937 - Fr. Heras. 1. வழிபாட்டு முறையில் மேலோர் (ஆப்தர்) காட்டிய வழி என்பதை ஆகமம் என்னும் சொல் குறிக்கும் எனப் பேராசிரியர் எஸ். கே. கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார். சிவ ஆகமங்கள்; 28; வைணவம் 108. Agama is the Synonym of what logicians call Apta Vakyam...This would correspond to what is generally called..., the practice of the disciplined.......We may define Agama generally as that which is the accepted practices of the deciplined in respect of worship. - Paramasamhita - Translation by Dr. S.K. Aiyengar. 2. The ancient as well as modern worship of Siva and Vishnu and Amba, are.....described in the three sets of books called Agamas. They are utterly different from and opposed to the Vedic Fire Cult. - Stone age in India P. 52. The worship of Siva or Vishnu or Sakti in temples or houses was considered a heresy by the Vedantis, till in the tenth century Yamunacharya wrote the Agama Pramanya and Ramanujacharya in the next century blended the Vaishnava rites and concepts and the Vedic practices and Vedanta tents into one whole - Ibid. 1. South Indian Bronzes - G.O. Gangoly. 2. “அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின்.....நூல்களாற் கூறப்படுவன ஏனைய மூன்றுமேயாம்.” (பரிமேலழகர்.) “அகத்தியனாரும் தொல்காப்பி யனாரும் வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி.....வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறினார்.” (நச்சினார்க்கினியர்.) 1. The Puranas naturally lent themselves to augmentations, and the Puranic Brahmans used their opportunities to the full, partly with further genuine traditions, but mostly with additions of Brahmanical stories and fables and doctrine and ritual matter. Brahmanic tradition speaks from the Brahmanical stand-point, describes events and expresses feelings as they would appear to Brahmans, illustrates Brahma-nical ideas, maintains and inculcates the degnity., sanctity, suprimacy and even superhuman character of Brahmans, enunciates. Brahmanical doctrines whatever subserved the interest of the Brahmans often enforcing the moral by means of marvellous incidents that not seldom are made up of absurd and utterly impossible details. It often introduces kings, because kings were their patrons, yet even so the Brahman’s dignity is never forgotten. It is mainly Brahmanical mistakes and absurdities that have discredited Puranas. - Ancient Indian Historical Traditions - P.P. 37 39 - F, E. Pargiter. 1. Brahman tales generally untrustworthy for traditional history. The Ramayana is highly Bramanical and its stories are fanciful and often absurd - Ibid. 2. After the study of the above one-thousand and eight hundred inscriptions which up to now have been deciphered by the present writer, it is easy to realize that the wave of migrations of the Mediterranean race which as supposed to have been from West to East must now be finally settled as having taken place in the opposite direction, i.e., East to West. The development of Mohenjo-Daro script, the religion of these two countries and that of Egypt, the titles of kings, the number of Zodiacal constellations among the Proto Indian people and the relative position of these constellations, the changing of the Proto Indian constellation of the harp (Yal) for Turus (the bull) which might have taken place in Sumer, the tradition of ancient people of Mesopotamia recorded by Berosus, the parallel by Bibilical account in Gen. ii, 1.5 all point to the same conclusion, that the migration of the Mediterranean race commenced from India and extended through South Mesopotamia and Northern Africa; spread through Crete, Cyprus, Greece, Italy and Spain and across the Pyrenees reached Central Europe and the British Isles. This route starting from Ceylon to Ireland is marked by uninterrupted chain of Dolmens and other megaliths that seem to be the relics of the enterprising and highly civilized race which is termed the Mediterranean by the anthropologists and which in India has been quite unreasonably despised under the name Dravidian. - Journal of Indian History, Vol. XVI - Part 1- Fr. Heras. Judaism is an improved form of Chaladian, Phoenecian, Greecian and possibly Egyptian worship. - Ancient Faiths, P. 2, P. 294. 1. Colonel Tod believes that the religion of Siva was spread abroad at a very early age, before the Phoenecians came in with their Baal worship. Recent discoveries have confirmed Colonel Tod. It has been discovered that Indian teak was used for building purposes in Babylon, and Indian Muslin was known there and called Sindu, the early name for India. Another singularly able orientalists Mr. Paterson wrote that in the Asiatic researches, “the doctrine of Siva’s seem to have extended themselves over the greatest portion of Mankind. They spread amongst remote nationas who were ignorant of the origin and meaning of the rites they adopted, and the ignorance may be considered as the cause of the mixure and confusion of images and ideas which characterised the Mythology of ancient Greeks and Romans.” Siva in his creative power became Zeus triopthalmos the three eyed (a special characteristic of Siva) Jupiter and Osiris.....Prof Maspero shows a curious point of conduct between the worshippers of Baal in Syria and the worshipper of Siva....when Saivaism went abroad on its strange missionary career, this bull worship was very prominent. We must all differ to an Indian authority as shrewed as Colenel Tod. He hold that this bull worship was the strongest evidence in Palastine, Egypt etc. of Sivan Derivation - Indian Primitive Christianity - Arthur Lillie. 1. தமிழர் சரித்திரம் பக்கம் 19. 2. A nude three face God seated in a sort of Yoga pose wearing crescentlike head gear. Round this figure several figures are placed. It has been said this is a figure of Pasupathi. - Fr. Heras. 3. Though the people were divided into castes, there was no restriction with regard to marriage, “when a woman has had ten former husbands, not Brahmans, if a Brahman takes her hand it is he alone who is her husband (A.V.Y. 17, 18). Brahmana women were not regarded as secrosant but could be restored to their husbands after being seduced (R.V.X. 109-6) curses are levelled against people who shut up Brahmana’s wife (A.V. 17, 12-18) thereby proving that it was not uncommon - Life in ancient India P. 42 - P.T.S. Iyengar. 1. சிறந்தது பயிற்றல் - தவஞ்செய்தல். 2. A History of Indian literature - M. Winternitz. 3. The Arya Veda is too pure to be touched by a Sudra or a women. A person of a Sudras or a woman of any Cast is not entitled either to learn or hear his Veda. Thus all women as well as Sudras are not previleged to obtain salvation. The Tamil religion on the other hand is the common property of all either Men or Women. Its essence is love of god and neighbour. - Sidhanta Depika Vol. IV. P. 269. In the Upanishads however we find not only Kings but also women and even people of dubios discent taking active part in the literary and philosophical aspirations of the highest knowledge. - The History of the Indian Literature P. 220. யாக்ஞவல்கியுடன் வாதம்புரிந்தவர்களுள் ஒருவர் வச்சக்னு என்பவரின் புதல்வியாகிய கார்கி என்னும் பெண்பாலினர். In a word we may say that as we pass from the Vedas to Upanishads, we pass from prayer to philosophy from hymnology to reflections, from polytheism to monotheistic mysticiom - Constructive survey of Upanishadic Philosophy P. 3 - R.D. Ranade. 1. Upanishadic age to have been placed Rome where between 1200 B.C. and 600 B.C. - Constructive History of Upanishadic Philosophy P. 13. - R.E. Ranade. 2. During the Brahmana period we notice the beginning of the regular worship of Siva....in this perioud Sivan or Rudra gradually became to be one of the most important figures of the reformed Indo - Aryan Pantheon - Pre-historic ancient and Hindu India P. 43 - R.D. Banerji. The worship of Siva or Mahadeva towards the close of this period....the new deity being identified with Rudra of the Vedic poets, the howling God of tempests, the father of the Maruts - The Philosophy of the Upanishads - P. 18. A. Edward Gough. 1. The Upanishads as a world scripture, that is to say, a scripture appealing to the lovers of religion and truth in all races and at all times without distinction. -Thirteen principal Upanishads translated. - Robert Ernest Home. 2. The Upanishad may bea regarded as a work of thought and reason, Upanishads which stained first the knowledge as against the Brahmanical philosophy of works. Critical Survey of Upanishadic Philosophy, PP. 4, 7. 3. பதகோரஸ் சாமோஸ் (Samos) என்னும் இடத்தில் கி. மு. 570இல் பிறந்தார். இவர் பல புதுமைகளைச் செய்து எகிப்துக்குப் பிரயாணஞ் செய்தார். கோல்புரூக் என்பார் (Colebrooke) அவர் இந்தியாவுக்குச் சென்று கபிலரின் தத்துவக் கொள்கைகளைப் பயின்று அவைகளைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார் என்றும் கூறுவர் - Rama and Homer - P. 220 Arthur Lillie. 4. In Patala reigned the Royal Rishi kapila Vasudeva or Kapila Naga who destroyed the sons of Sagara. Ikshvahu, too, from so many solar Dynasties claim desent was a Rajah of Patala. - The sun and the serpent - P. 56 - C.F. Oldham. 1. So even Bhagavata says (XI. 2-3) Satyavirata, king of Dravida become Vaivasvats’s son Manu and his sons were Ikshvahu and other kings. Ancient Indian Historical tradition F.E. Pargiter. (Sakya Buddha was a Solor race, and descended from Ikshvahu-Sun and the serpent) Kapilavastu was an Oxford of learned Dravidians several centuries before Aryans settled in Mid-gangetic states before the Rishi Kapila about 700-600 B. C. -Short Studies on the Science of Comparative - Religions, P. 12. 2. From the cradle of Goutama about Kapilavastu the early literary centre of India came most of the scriptures of Indo-Aryans which if prior to Sakya Muni must, like the philosophic schools founded by the sage Kapila have had their origin in the brain of Dravidians or Dramilian Pandits like learned Dramila Chanakya to whom was dedicated 350 years after his death, the beautiful sacred cave temple of Kanchery. -Short Studies in the Science of Comparative Religions P. 12. (Chanakya the Dramila of Jurashtra, who is described in the Mahavanso as a Malabari. His name appears in two inscriptions of the fourth century B.C. in the Kancheri caves to which he retired in old age - Ibid P. 10.) 3. Oldenburgh has indeed fairly worked out both in his earliest volumes on Buddha how the Upanishads prepared the way for Buddhistic thought and derives precise for having attempted a hitherto unattempted word. - Constructive Survey of Upanishadic Philosophy, P.4. 4. The yoga therefore under that name was recognised anticidentally to Pathanjali and is not to be regarded as the invention of his. -The uphoisms of the Yoga Philosophy of Pathanjali with illustrative extracts form the Commentary by Boja Rajah. 1. In admitting the existence of a divine being in which the good qualities belonging to man reach their limit, the yoga hence named the Seswara Sankya differs from the Sankya of Kapila what is known as niriswara - Ibid. 2. The change of the mind into the likeness of what is pondered.- Ibid - “யாதொன்று பற்றி னதனியல் பாய்நின்று பாசமறும் பளிங்கனையத்து நீ.” 3. Perfection of meditation Comes from possessing devotion to the lord. - Ibid. 4. Where Sankya argues the objections that is souls well but one, then all will would be happy when one is happy, all would die when one died, and so on, which is contrary to experience. - Ibid. P. 63. 1. “......நின் றொண்டரொடு பயிறலிற் பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும் நின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப் பன்னாள் நோக்கின ராதலி னன்னவர் பாவனை முற்றிய பாவகப் பயனின்யான் மேவரப் பெற்றனன்.......” எனக் குமரகுருபர அடிகள் கூறுதல் காண்க. 1. The Saiva Siddhanta System is the most elaborate, influential and most intrinsically valuable of all religions of India. It is peculiarly The South Indian and Tamil religion and must be studied by every one who hopes to understand the influence of the great South Indian people. Saivaism is the old prehistorical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds Sway over the hearts of Tamil people. But this great attempt to solve the problems of god, and soul, humanity nature, evil suffering, and the unseen world, has never been exponnded in English. Its text books exists in Tamil only.-Translation of Thiruvasagam - Dr. Pope. 1. Among the many revelations that Mohenjo - Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivaism has a history going back to the chalolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world - Sir John Marshall in his preface to Mohenjo - Daro and the Indus Civilization - Vol. I, P. VII. 2. Clay figures and images and phallic (Bactylic) stores suggest the Durga and Siva worship was of very much greater antiquity in India than has hitherto been supposed. Prehistoric Ancient Hindu India - R.D. Banerji. 1. கவு, துகிம், ஒறிசா, இஞ்சிபெர், கபிறொன், இபிம், பிப்பிலி, சிந்து. 2. There are in all Indo-aryan languages, a considerable number of words which cannot apparently be identified in other; Indo-European languages. This is specially the case in modern vernaculars and the old opinion was that such words had, generally speaking been borrowed from the language of the tribes which inhabited India before the Aryan invation. The steady progress of philological studies in later years has enabled us to trace an overincreasing portion of such words to Sanskrit, and many scholars now hold that there have hardly been any loan at all. It has however been overlooked that it is sufficient to show that a word is found in Sanskrit or in vedic dialects, in order to prove that it belonged to the original language of the Aryan. The foreign element must reach into the oldest times, and it would be necessary to trace dubeous words not only in Sanskrit, but also in other languages of the Indo-European family. That is exactly what philology has, in many Cases failed to do. There are i.g. a number of verbal roots in Sanskrit which do not occur in other Indo-European forms of speech. The same is the case with a considerable portion of vocabulary. There is how-ever every possibility for the supposition that at least a considerable portion of such words and bases has been borrowed from the Dravidian - Linguistic Survey of India - Vol. IV. pp. 278-9 Grierson. 1. At a time when characteristic Hindu idea did not develop among them, the Dravidian cults and Dravidian language began to influence their religion and that speech The Origin and Development of the Bengali language. -P. 42 - S.K. Chatterji. 1. The living Hindu religions of to-day from Cape Comorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the few genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e.g. Samdhya, have been modified by the addition of Tantric practices - Outline of Indian Philosophy - P. 130. P.T.S. Aiyengar. We might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders. For the great deities of Hinduism Siva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines such a metempsychosis and divine incarnation are either totally unknown to the Veda or obscurely adumbrated in it. The chief characteristics of mature Indian religion are characteristics of an area not of a race, and they are not the characteristics of religion of Persia, Greece or other Aryan lands - Hinduism and Buddhism - P. XV-Sir Charles Elliot. 2. The antiquity of the Agamas goes back to the period of Aranyaka based on the earliest references to the Agamic literature on the Maitre Upanishad - History and the Philosophy of Lingayat Religion. P. 303 - M.R. Sakhare. M.A., T.D. 3. The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (i.e., borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from the Dravidian - Life in Ancient India - P.T.S. Iyengar. The language of the Rig Veda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit, but its phonetics is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and Kol. Among words of probable Dravida origin in the Rig Veda, the following may be noted-anu - particle; arani - rubbing wood for fire; Kapi - monkey; Karmara - smith; Kala-time, Kunda-Hole; Gana-Band; nana-several; nila-blue; Puspa - flower; Pujana-worship; Phala-fruit; Bija-seed; Mayura-peafowl; ratri-night; rupa-form-Ibid P. 42. 1. Never for a moment, it was supposed that five thousand years ago, before ever the Aryans were heard of, the Punjab and Sind, if not other parts of India as well were, enjoying and advanced and singularly uniform civilization of their own, clearly akin, but in some respects even superior to that of contemporary Mesopotamia and Egypt. - Sir John Marshall. 2. The Aryan population of north India is not there fore a pure race, but contains among others a strong Dravidian element. -Linguistic Survey of India Vol. IV, P. 278. “As for the causes of the changes that may be styled Prekritie economy of effort, progressive refinement., specially in courts and cities, softening influence of a semitropical climate, influence of speech and habits of Non-Aryan peoples who adopted the Aryan speech all these have been at work. - Introduction to Prakrit: Prof. Woolner. 1. The Egyptian word eb for the elephant must however, also be compared with the Hebrew Habim. It is curious that the ape is called Kafi in Egyptian Kapi in Sanskrit, Kuf in Hebrew and Cepus in Latin the Greek Kepos. - The Egyptians seem in these cases to have used Aryan names for both apes and Elephants. -Syrian Stone Lore. P. 180. The trade terms such as the names used in the time of Solomon for ivory apes and peacocks are Tamil; in other words they come from the Dravidian not a Sanskrit tongue - Natives of Northern India p. 29. W. Crooke. 1. Prof. A.H. Sayce in his Hibbert lectures (1887 pp. 137-138) observes that in an ancient list of Babylonian clothing sindu is mentioned as a name of muslin, or woven cloth and that it corresponds Sadin of the Old testament and the...of Greeks. The learned Prof. has further stated that this muslin or woven cloth must have been called sindhu by the Accadians (Chaldians) because it was exported from the banks of Indus (sindhu) to Chaldia in those days (e.g. the word calico from Calicut). He has further noted that this intercourse between the two countries must have been by sea, for the word has passed by land i.e., through Persia the initial of the word would have become he in Persian mouths. - Commemorative essays presented to Sir R.G. Bhandarkar, 1917. 1. Dravidian speaking races of India traded with the ancient Chaldians before the Vedic language found its way into India. Indian teak was found in the ruins of Ur (now Mugheir) and must have reached from India in the 4th millennium B.C. when it was the Seapor of Babylon and the Capital of Sumerian kings (Sayce Hib. Lect. P. 137). The gold and spices mentioned in Assyrian inscriptions of the XIV Cen. B.C. were probably exported from India, the only Country so far as we know they were produced. - Life in Ancient India - P.T.S. Aiyengar. With regard to trade of these times it must be noted that the early children inscriptions speak of ships of Ur, the capital city; and that from at least the 14th century B.C. Gold, Silks, Pearls etc. had been passing from India to Assyrian monarchy carried on both by caravans on land and by the coasting trade by sea. There was also active trade with China, on the obelisk of Salamanezar are represented Indian Elephants and apes. - Historical Inscriptions of South India, Madras University. 1. இதைக் குறித்துக் கெரதோதசு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் ஒருமுறை பாபிலோனியாவில் விவாகச்சந்தை கூடும். இங்கு மணப்பருவம் அடைந்த பெண்கள் எல்லோரும் வந்து கூடுவார்கள். மணம்முடிக்க விரும்பிய இளைஞரும் திரளுவார்கள். அப்பொழுது விலை கூறுவோன் மிகவும் அழகுள்ள பெண்ணிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக விலை கூறுவான். கூடிய தொகை அளிப்பவன், கூறப்படும் பெண்ணை வாங்கி மணம் முடித்துக்கொள்கிறான். இறுதியில் அழகில்லாதவர்களும் அங்கப் பழுதுடையவர்களுமாகிய பெண்கள் விலை கூறப்படுவார்கள். இவர்களை வாங்குபவர் களுக்கு அழகிய பெண்களின் விலையாகக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதி கொடுக்கப்படுகின்றது. பெண்களை வாங்குபவர்கள் அவர்களைச் சட்டப்படி மணந்து கொள்ளுதல் வேண்டுமெனத் தக்க உறுதி அளித்துச் செல்லுதல் வேண்டும். 1. Pliny published his geography in A.D. 7. Periplus of Erythean sea was written in the 1st century A.D. probably A.D. 60 but not later than 80 A.D. Ptolemy wrote his geography about A.D. 150. The Peutingerian Tables were composed in A.D. 222. - Beginnings of South Indian History. 1. The following accounts from Marco Polo of this coast is worth noticing! “There go forth every year more than a hundred corsair vessels and cruise. These pirates take with them their wives and children and stay out the whole summer. Their method is to go in fleets of twenty or thirty of these pirate vessels together, and then they form what they call a sea cordon, that is that they drop off till there is an interval of five to six miles between ship and ship, so that they cover something like a hundred miles of sea and no merchant ship can escape them. For when any one corsair sights a vessel a signal is made by fire or smoke, and then the whole of them make for this and scize merchants and plunder them.....But now the merchants are aware of this and go so well manned and armed, and with such great ships and they do not fear the corsairs. Still mishaps do befall them at times - The Beginnings of South Indian History. 1. The greatest achievement of Dravidians was the art of navigation. The Indian ship was very like Egyptian as we see in a fifth dynasty painting, a long and wall sided vessel with the stem and stern highly raised, and had oars arranged in hanks. The Dravidian paddle was round not spade-like in form as in ancient China, or very long as in ancient Egypt. There are native words in the Dravidian languages for the oar, sail, mast and anchor - ஐனேயைn ஊரடவரசந வாசடிரபா ஹபநள - ளு.ஏ. Venkateswara. 1. Pliny says our ladies glory in hanging pearls suspended from their fingers, two or three of them dangling from their ears, delighted even with the rattling of the pearls as they knock against each other; and now at the present time the poor classes are even affecting them. They put them on their feet and that not only on the laces of their sandals but all over the shoes. -Beginnings of South Indian History. 1. Apart from the complaints of Petronius that fashionable Roman ladies exposed their charms much too immodestly by clothing in the “web of woven wind,” as he called the muslins imported from India. Pliny says that India drained the Roman empire annually to the extent of 55,000,000 Sesterces, equal to L 486, 979 sending in return goods which sold at hundred times their value in India. He also says in another place, “This is the price we pay for our luxuries and our Woman” Ibid. 2. Disquisition concerning the knowledge which the ancients had of India. - William Robertson. 1. மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றோ. தொல்.உரி. 96. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. தொல் பெயர். 1. The copious-literature is written in some-what artificial dialect distinguished by the term perfect (sen) from the colloqual called rude, much in the same way as in Aryan India Sanskrit (the purified) is contrasted with prakrit (the vulgur). India’s past. p. 214 A.A. Macdonell. 1. புறநானூற்றின் பழமை - K.N. சிவராசபிள்ளை. 2. The languages of the highly civilised nations on the contrary become more and more stationary and sometimes seem almost to loose the power of change. -Science of Language - 1864. 3. The people of Indian - S.H. Risely. 1. The use of the knots in code for the purpose of reckoning and recording numbers seems to have been as universal as the figures of the cat’s cradle in the practices of the premitive peoples. Both may be said to be indigenous to all lands in which the arts of spinning, weaving and dyeing have been cultivated. In two note-worthy cases tradition makes the knotted Kude serve as letters. In China knot records are said to have preceded the knowledge of writing. -The Ancient Quipu. L. Leland Locke. 1. Brahmi has been traced back to the Phoenician type of writing represented in the inscription of Meshu king of moab. (850 B.C). Dr. Scoff however in his remarkable commentary to the Pereplus of the Erthrean sea, claims a Phoenician origin for the Dravidian alphabet (P. 229) - G. Elliot Smith. 2. It is also shown that those scholars were not mistaken who connected Brahmi with the South Semitic and Phoenician scripts. For there is much evidence to show that they were also derived from the script of Harappa and Mohenjo Daro.- G.R. Hunter. The two Brahmi Scripts one of Northern and the other of Southern India are developments of Mohenjo-Daro script, that of South India is the direct continuation and development of Mohenjo-Daro script by Dravidian people of South India. Several signs of the Mohenjo-Daro script are found in the prehistoric pottery of Tinnevelly District in rock inscriptions of Nilgiris and tombs of Hyderabad States.- Rev. Fr. Heras. 3. It is clearly the long headed Mediterranean who have the strongest claim to a connection by blood with the Dravidians and are most likely to have used a Dravidic speech. May it be that these same Mediterranean-who are traceable across the whole south of the Africian belt-spoke agglutinative languages and that they, perhaps more than any others, were the race of the back of this far flund civilization of the chalcolithic age? - Mohenjo-Daro and Indus Civilization, P. 42. Sir John Evans in his Presidential Address to the British Association says: “Southern India was probably the cradle of human race”. Investigation to relation to race show it to be possible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they inhabit. - Cultural Heritage of India, Vol. III, P. 677. 1. Light of Mohenjo-Daro. - Fr. Heras-New Review - 1936. “Their underlying principles are the same, and there is very likelyhood that they all derived from one common origin went back to neolithic times.- Mohenjo-Daro and Indus Civilization-p. 41, Sir John Marshall. 2. Riddles of Mohenjo-Daro.-G.R. Hunter-New Review Vol. 3-p. 314. There can be no doubt concerning the identity of the Indus and the Easter Island scripts. -This same script has been found in seals precisely similar to Indian seals in various parts of ancient Sumer, at Susa and the border islands east of Tigris - Prof. S. Langdon. 2. காக்கேசியம், திராவிடம், சுமேரியம், எல்லம் முதலிய மொழிக்குலங்கள். 1. Outline of History, p. 85. H.G. Wells. They (philologists) find Basque more akin to certain similarly stranded vestiges of speech found in Caucasian mountains and they are disposed to regard it as a last surviving member, much checked and specialized, of a race very widely extended group of Pre-Hamitic languages, otherwise extinct spoken chiefly by peoples of that brunet Mediterranean race which once occupied most of western and southern Europe and western Asia. They think it may have, been closely related to the Dravidian of India and the peoples of the heliolithic culture who spread eastward through East Indies to Polynesia and beyond.-Ibid P. 88. 1. இச் செய்யுளிலுள்ள சொற்கள் சில நமக்கு விளங்கக்கூட வில்லையாயினும், அவற்றுட் பல விளங்கக்கூடியனவாயிருக்கின்றன. 2. H.B. Halbert has issued a comparative grammar of Korian and certain of Dravidian languages of India to demonstrate the close affinity he finds between them. -Ibid - p. 45. 1. The names of towns have continually been derived from those of Gods there worshipped as has been pointed not by several archaeologists. - The Syrian stone lore, p. 18. 2. We read in Mahabharata, that through the grace of Deerghatamuni, Sudeshna wife of Bali bore him five sons, Anga, Vanga, Kalinga, Pundra and Sumha respectively, and the provinces ruled over by them were called after them. We find this story narrated also in the Brahmapurana. Kalinga is mentioned in the sutras of Panini. -Orissa and her remains - Ancient and Modern. p. 7.-Mana Mohan Ganguly. கந்தபுராணத்திலே அண்டகோசப்படலத்தில் நவகண்டங்களுக்குப் பெயர் வந்தது அந் நாடுகளை ஆண்ட அரசர்களின் பெயரால் எனக் கூறப்பட்டுள்ளதும் ஈண்டு கருத்திற் கொள்ளத் தக்கது. 1. Dr. Krishnaswamy Iyengar’s commemoration volume p. 346 - The derivation of the word. Tamil - K.N. Sivaraja Pillai. 2. “இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்” (பிங்கலம்) 1. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழிநூலிற் கண்டது. இவர் தாமம் என்னும் ஞாயிற்றைக் குறிக்கும் சொல்லினின்றும் தமிழ் தோன்றிற்றென்பர். 1. The accounts given by Berosus in the 3rd or 4th century B.C. appears to suggest that the early settlers of Sumer arrived by sea bringing with them a fully developed civilization. This civilization may possibly have arisen in the submerged Tamil lands that extended to the south of Kumari. - Cultural Heritage of India Vol. III, p. 677. 2. இலங்கையில் தாமு தாமன் என்னும் பெயர்கள் மக்கட்கு வழங்கப்படுகின்றன. 1. Hence we shall not be far wrong if we infer that South India gave a refuge to the surrivors of the deluge., that the culture developed in Lemuria was carried in South India after this submergence and that South India after its submergence was probably the cradle of the post deluvian human race. As the centre of gravity of the Dravidian people as determined by the density of population lies somewhere about Mysore, south of India must be considered as the home of the people, where they might have spread to the north. - Indian Antiquary 1911. p. 118. 1. The existence of the short e and o in the Pali and the predilection the people showed for them as well as the change of dentals to cerebrals without any influencing cause are to be attributed to the natural vocal tendencies of the people. These sounds must have existed and played an important part in the original language of the people...If the original Pali speakers belonged to the same race as Dravidians of South India of present day, we have a reason to believe that their native tongue continued them; for they exist in the Dravidian language and are characteristic of them - Willson’ள யீhடைடிடடிபiஉயட டநஉவரசநள: - Dr. R.G. Bhandarkar-Collected works Vol. IV, p. 293. 2. It cannot be doubted that Buddha grew up in the atmosphere of sankya thought for it is the essential basis of his world view. -India’s Past p. 151-A.A. Macdonell. 1. இப் பகுதி எ.எ. மாக்டனல் என்பவரின் சமற்கிருத இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலிற் காணப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டது. * “கவாடபுரம் இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது. கௌடலியர் தாம்பிரபரணி ஆற்று முகத்துவாரத்திற் பாண்டியருக்குரியதாகிய கபாடம் என்னும் ஓர் இடத்தைக் குறித்துள்ளார். இது ஒருபோது முன் கடல்வாய்ப்பட்ட கபாடபுரத்தை அடுத்த இடமோ, இன்றேல் அதன் பகுதியோ என்று கருத இடமுண்டு.” Kautalia speaks of pearls being found in the river Tambraparni river, on Pandian kavataka and near the Mahendra mountains. - Lectures on the Ancient History of India-R.G. Bhandarkar. 1. பாண்டியர்கள் தமது பரம்பரை சிவனினின்று தோன்றியதெனக் கொண்டார்களெனத் தெரிகின்றது. கிரேக்கர் சிவனையே பக்கஸ் எனக் கூறியுள்ளார்கள் எனச் சில வரலாற்றுக்காரர் கூறியுள்ளார்கள். எகிப்தியரும் தமது நாட்டை மிக முற்காலத்து ஆண்டவர்கள் கடவுளர் என நம்பினர். திருவிளையாடல் கூறும் பாண்டிய அரச பரம்பரையும் ஈண்டு நோக்கத்தக்கது. 1. ...(Asur Banipal 673 B.C.) adding more to the royal library than all the kings who had gone before him. His agents sought everywhere for inscribed tablets ransacking the library treasures of Babylone, Borsipa, Akad, Ur, Erek, Larsa, Nipur and various other cities. - Early faiths of Western Asia. - p. 42. Berosus tells us, as a priest of the first temple of Kaldia, he should know that in Babylonia, there were records kept with the greatest care, comprehending a period of fifteen myraids of years, containing the histories of the heaven and of the sea, of birth of mankind, of kings and their memorable actions. Berosus is made to say that before the deluge, there were ten Chaldian monarchies perhaps meaning dynasties - which lasted 432,000 years and which Turanian measures of moon’s would be 33,212 years, a not un-reasonable period for the creation of man. - Ibid 43. 2. The Attakatha which had been handed down by word of mouth to almost the end of the first century B.C. was set down in writing about 20 B.C. This and its continuation to about the middle of the third century A.D. formed basis of the Dipavamsa. The same matter received further and somewhat further treatment in Budhagosa’s instruction to the Samantapasadika in the 5th century, and the epic elaboration Mahavamsa in the sixth century. -Ancient India and South Indian History and culture Vol. 1, P. 449 - S.K. Aiyengar. 1. ...............பாண்டியர் பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாஅது (ஆசிரியமாலை-புறத்திரட்டு) 1. We may for the present hold as a safe hypothesis that the Sangam epoch covered the three centuries of the Christian era. - Chera kings of sangam Period-P. 121 - K.G. Sasha Aiyer. 1. God Varuna himself was an Asura (Dravidian)...Vedic kings and Rishis came to have Asura blood in them, as is indicated by the colour. Sages like Vashistha, Agastya and Visvamitra were given the same father Mitra - Varuna. - History of Pre-Musalman India - P. 172. 2. Agastya asrama: Twenty four miles to the south east of Nasik now called Agastepuri; It was the hermitage of Rishi Agastya. - Geographical Dictionary of Ancient and mediaeval India - Nundo Ladley. 3. கானார்மலயந் தருந்தவன் சொன்ன கன்னித்தமிழ் - யாப்பருங்கலம்காரிகை. 1. சிதம்பர ஆலயத்தின் மேற்கக் கோபுரத்திலுள்ள அகத்தியர் வடிவம் “Cultural Heritage of India” என்னும் நூலில் காட்டப்பட்டுள்ளது. அவ் வடிவமும் இவ் வகையினதே. அகத்தியர் குடகு மலையிலிருந்து பொதியமலைக்கு வந்தமையின் அவர் குடகுமுனி எனப்பட்டாரென்றும், பின் குடகு குடமாகி குடகு முனிவர் குடமுனிவரானாரென்றும் பண்டிதர் சவரிராயனவர்கள் கூறுவர். குறுமுனி என்பது குறுக்கு மொழி தொடர்பு பெற்றிருக்கலாமென்பதும் அவர் கருத்து. 2. Sayana takes cera to mean snake - Sera kings of the Sangam Period - P. 132, K.G. Sesha Aiyer. 3. Agathirishis are a luxurious people and wear profusion of gold. They have promisecous intercourse with women to the end that they may be brotheren one of another, and being all of one family may not entertain hatred towards each other - Herodotus 9, 10. 1. கப்பம் என்பது கற்பம் என்பதன் திரிபு. 2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயரெல்லை அகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மனார் புலவர் -தொல் செ. 79. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும், தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி-தொல். எ.4. (செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நாடுகளும் சங்க காலச் சேர சோழ பாண்டியர் நாடுகளின் எல்லைக்குட்பட்டனவாதலின் தொல்காப்பியர் காலத்து வேங்கடம் தமிழ்நாட்டு வடக்கெல்லை எனத் துணிதும்.) 1. திருக்குறள் சங்க நூலாதலின் அதற்குப் பாயிரம் தோன்றியிருக்கமுடியாது. நூலுக்குப் பாயிரம் இன்றியமையாததென்னும் கொள்கை வலுப்பட்ட ஒரு காலத்தில் பிற்காலத்தார் ஒருவர் முன் நான்கு அதிகாரங்களையும் பாயிரவியல் என எழுதி வைத்தாராகலாம் உண்மையில் அவ் வதிகாரங்கள் பாயிரமாயின் அவை திருவள்ளுவர் செய்தனவாகா. 1. வரலாறு அறியப்படாத அக் காலத்தே புலவர்கள் தமிழ்மொழி வடமொழிக்கு இணையானது, அதனை ஒத்த பெருமையுடையது என நாட்டுவதற்குச் சில தெய்வீக நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கையாண்டனர். வரலாற்றளவில் வடமொழி தமிழுக்கு அண்மையிலும் நிற்க முடியவில்லை. 1. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழி நூலிற் கண்டது. 1. Dr. Grierson has recently proved that these languages belong to the same family. The Munda language of the Bengal hills is of a more archaic type than those of Madras and the linguistic evidence leads to the conclusion that both races came from the south and that they must have remained apart for a period sufficiently long to admit of the development of those peculiarities which differenciate the languages so called Kolarian or Munda Group from those of the other Dravidians. - Natives of Northern India. - P. 29-W. Crooke B.A. The proto-Austroloids are responsible for the introduction of neolithic culture and pottery in India but their linguistic legacy is more enduring and important. They are known as the speakers of Austro-Asiatic languages distributed over the widest area from the Punjab to New Zealand and from Madagascar to Easter Island. The Indian variety of the languages is known as the Munda, which accordingly is to be considered the earliest language spoken in India. A consideration of the Munda linguistic areas in India thrown light on the course of proto-Austroloid migrations. These may have been from East to West or from West to East. Munda survives now on the inner Himalayan ranges between Ladukh Sikkim in the west of the Central Provinces and southwards among the Ganjam and Vizagapatam hills but not beyond the Godawari. Munda shows affinity not merely with the languages of south east Asia and the Pacific but also with the agglutinative Sumerian languages. This is considered that the various branches of the Austro-Asiatic family of languages originated at some common centre in central or south East Asia from which it spread in a more or less southerly direction. The Munda speaking peoples are called by the General names, Mundas, Kolarians, Kols and number of six million comprising Santals, Bhils, Kurumbas, Mundas, Savaras and other minor tribes like the Kuravas of Sirguja and Mirzapur. - Hindu civilization P. 34 - R.K. Mookerjee. 2. Ancient India and Indian Civilization P. 11, Paul Masson Oursel. 1. The Mundas and their country - Sarat Chandra Roy. 14 3 4 13 12 5 வளைவுள்ள கோட்டின்கீழ் இருக்கும் பகுதி கடுந்தரையாகவும், அதற்கு மேலுள்ள பகுதி கடலாகவும் இருந்தன. தரைப்பகுதி நாவலந் தீவு எனப் பெயர்பெற்றிருந்தது. அம்புக் குறிகள், தமிழ்நாட்டினின்றும் மக்கள் சென்ற வழிகளையும், அவர்கள் தங்கி வாழ்ந்த இடங்களையும் காட்டுவன. 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 தென்னிந்திய கடவுளர் கையில் இருக்கும் வீணைகளE html> 16 தமிழ் இந்தியா தோற்றுவாய் தென்னிந்தியாவின் நில அமைப்பு உலகிற் பழமையுடையது.1 அதன் வரலாறும் அவ் வகையினதே. அதன் ஆராய்ச்சி கல்லில் நார் உரித்தல் போன்ற கடுமையுடையதாதலின் அதனை ஆதிமுதல் ஒழுங்குபடுத்தி எழுதினார் யாருமில்லை.2 வரலாற்று ஆசிரியர்கள் இதுவரையில் தென் னிந்தியாவின் பழைய வரலாற்றினை எழுத முயன்றிருக்கிறார்கள் என்று மாத்திரம் கூறலாம். உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியில் தென்னிந்திய பூர்வ வரலாற்றினை விளக்கும் பகுதிகள் இடையிடையே காணப்படுகின்றன. அவ் வகை ஆதாரங்களையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆங்காங்குக் காட்டியுள்ள குறிப்புகளையும் துணைக்கொண்டு இந் நூல் வரையப்படலாயிற்று. வரலாறு கற்பனைக் கதைபோலக் கூறத்தக்கதன்றாக லின் இன்றியமையாத இடங்களில் ஏற்ற மேற்கோள்கள் காட்டப்பட் டுள்ளன. இயல் - 1 தொன்மைக் காலம் தமிழ் இந்தியாவின் பழைய நில அமைப்பு நில நூலார் பழையகாலத்து இப் பூமியிற்றோன்றியிருந்த கண்டங் களையும் கடல்களையும்பற்றிக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றபடி, கிழக்குத் தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆப்பிரிக்கா முதலிய தேசங்கள் ஒரு பெரும் நிலப்பரப்பாக விளங்கின. அப் பெரிய நிலப்பரப்பிற்கு அவர்கள் கொந்வானா (Gondwana) எனப் பெயர் வழங்கியிருக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரித்தது. அராவலி மலைகளுக்கு வடக்கே கடல் இருந்தது. கொந்வானாக் கண்டத்தின் பெரும்பாகம் சிறிது சிறிதாகக் கடலுள் மறைந்தபோது இந்தியா ஆப்பிரிக்கா கிழக்கிந்தியத் தீவுகள் என்பன கடலாற் பிரிக்கப்பட்டன. இராத குமுத்முக்கேசி என்பவர் தென்னிந்தியாவின் பழைய நில அமைப்பைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். அது வருமாறு: கொந்வானா அல்லது லெமூரியா “நில நூலார் கொந்வானா எனப் பெயரிட்டுள்ள பெரிய பூகண்டத்தின் மிச்சமாக உள்ளது இந்திய நாடு. அப் பூகண்டம் தென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா வரையில் பரந்து கிடந்தது. இஃது அப் பகுதிகளில் கல்லாகச் சமைந்து கிடக்கும் பிராணிகள் தாவரங்களின் சின்னங்களைக்1 கொண்டு அறியப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரிக்கும் முகடுபோலமைந் திருந்தது. ஆதலினாலேயே இந்தியாவின் ஆறுகள் அராபிக்கடலை நோக்கி உற்பத்தியாகி வங்காளக் குடாக்கடலுள் வீழ்கின்றன. வடக்கே இரெதேக்2 கடல் மத்திய ஐரோப்பா சின்ன ஆசியா முதலிய நாடுகளை மூடிப் பரந்து கிடந்தது. இந்தியாவிலே அராவலி மலைகள் மாத்திரம் கடலைப் பார்த்து நின்றன. நீண்ட காலத்தின்பின் மலை (இமயம்) எழ ஆரம்பித்தது. இரெதேக் கடல் மேற்கு நோக்கிப் பின்வாங்கிற்று3.” விஞ்ஞானத்தின் சுருக்கம் என்னும் நூலில் கொந்வானாக் கண்டத்தைப்பற்றி அதிசயப்படத் தக்க நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: “ஐரோப்பாவில் நிலக்கரி உண்டாயிருக்கின்ற காலத்தில் ஆஸ்திரேலியா தென்னமெரிக்கா இந்தியா முதலிய இடங்களில் ஒரே வகைத் தாவரங்கள் வளர்ந்தன; ஆதலினால் இந் நிலங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொந்வானாக் கண்ட மாக விளங்கின” என்று முடிவு செய்யப்படுகின்றது.1 பேராசிரியர் வெசினர்2 புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: அவர் கூறுவது, “இக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று அண்மையில் இருந்தன. அண்டார் டிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெ ரிக்கா, இந்தியா முதலிய நாடு களைத் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிப் பொருத்தி வைக்கலாம். கடலின் அடியிலுள்ள கருங்கற் பாறை வெடித்தமையால் இக் கண்டங்கள் விடுபட்டுப் பனிக்கட்டி தண்ணீரில் மிதந்து செல்வதுபோல அகன்று சென்றுள்ளன. இது நில நூலார் கூறும் 3ஐந்தாவது உலகத்தில் நிகழ்ந்தது.” என்பதாகும். தாவர உயிர் நூலார் கொந்வானா என்னும் கண்டத்தை லெமூரியா என வழங்குவர். பழைய பூமி சாத்திரம் இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் பூமியின் நடுவே பெரிய பூகண்டமொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற் காட்டியுள்ள பகுதிகள் சில அப் பெரிய பூகண்டத்தைப்பற்றி ஓரளவு விளக்குவனவாகும். அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப் பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உந்தித் தானமாயுள்ள நாவலந் தீவு........இந் நாவலத்தீவின் நடுவே மேருவரை........மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்.........இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில் வாழ்வோர்..........இவற்றுட்1 பாரதவருடமும் ஒன்பது கண்டமாய் இந்திரத்தீவும், கசேருத்தீவும், தாமிரபர்ணித் தீவும், கபதித்தீவும், நாகத்தீவும், சாந்திரமத்தீவும், காந்தருவத்தீவும், வாருணத்தீவும், குமரித்தீவு மெனப் பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பலவேறு வகைப்பட்ட சாதிகளுமுடைத்தாய் வயங்கும். இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்டமொன்றே வேதாகமவழக்கும், சாதிவரம்பும், கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், காசி முதலிய புண்ணிய தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர் வாழிடங்களாம். “பூமியின் மேற்பரப்பு ஏழு கடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந் தீவினடுவே மேருவரை நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்....” இது மிருகேந்திரத்திற் கண்டது. மேரு உலகுக்கு நடு புராணங்களும் இதிகாசங்களும் பழைய கடல் நிலங்களைப்பற்றிப் பிறழக் கூறுமாயினும் மேரு உலகுக்கு மத்தியில் உள்ளது என்பதை எல்லாம் ஒருதலையாக ஏற்றுக் கொள்ளும். புத்த சைன நூல்கள் மேருவை மந்தரம் எனக் கூறும். பாகவத புராணமும் கந்தபுராணமும் ஒரு காலத்தில் காற்றுக் கடவுளுக்கும் மேருமலைக்கும் நேர்ந்தபோரில் காற்றுக் கடவுளால் முறித்துக் கடலுள் வீசப்பட்ட மேருவின் சிகரமொன்றே இலங்கை எனக் கூறுகின்றன. இது வெப்ப நாடுகளில் அடிக்கடி நேரும் காற்றுக்குழப்பம் ஒன்றையும் அக் காலத்தில் மேருவின் ஒரு பகுதி கடலுள் மறைந்த வரலாற் றினையும் குறிக்குமெனக் கருதப்படுகின்றது. ஆகவே இம் மலை பூமத்திய இரேகையை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததெனத் தெரிகின்றது. பிற்காலத்தில் இம் மலை இமயமலையை அடுத்தோ அதற்கு வடக்கிலோ இருந்ததெனக் கருதப்பட்டது. கி. மு. 4ஆம் நூற்றாண்டில் விளங்கிய மெகஸ் தீனஸ் என்னும் கிரேக்கர் மேருமலை பாண்டி நாட்டில் உள்ளதெனக் கூறியுள்ளார்.1 பாஸ்கராச்சாரியர் எழுதிய வானநூற் குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமத்திய இரேகை சுமத்திராவுக்கு ஊடாகச் செல்கின்றது. இலங்கைப் புத்த நூல்கள் இப்பொழுதுள்ள இலங்கை, முன்னைய இலங்கையில் பன்னிரண் டில் ஒரு பகுதி எனக் கூறுகின்றன. இப்பொழுது இலங்கைக்கு 400 கல் தூரத்திலுள்ள மாலைத்தீவு எனப்படும் தீவுக்கூட்டங்கள் இலங்கையின் பகுதியாக இருந்தன என்று நிலநூலார் கூறுவர். அத் தீவுகளில் வாழும் மக்கள் ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவிற் காணப்படும் சில மக்கட் கூட்டத்தினருக்கும் இனமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.1 செங் கோன்றரைச் செலவு என்னும் நூலில் கடல் கொண்ட நாட்டின் சில மலை, ஆற்று இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இறையனாரகப் பொருளுரை தலைச்சங்கமிருந்த மதுரையைக் கடல் கொண்டதெனக் கூறுகின்றது. இளங்கோவடிகள் பஃறுளியாறு, குமரியாறு முதலியவைகளைக் கடல் கொண்டதெனக் குறிப்பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் குமரிமுனைக்குத் தெற்கே கிடந்து கடல் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளைக் குறிப் பிட்டதோடு அந் நிலப்பரப்பு 700 காவத2 முடையதெனவுங் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தியக் குடாநாட்டின் அமைப்பு வேறு வகையில் இருந்ததென்பதை நன்கு விளக்குவன. கடல் கோள் இவ் வுலக மக்கள் எல்லோரும் ஒரு பெரிய கடல் கோளைப்பற்றிக் கூறுகின்றனர். ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரும் அது தத்தம் நாட்டில் நிகழ்ந்ததென்பர். இக் கதை சிறிய சிறிய வேறுபாடுகளுடன் ஒரே வகையாக எல்லோராலும் கூறப்படுகின்றது. ஆகவே உலக மக்கள் மத்திய இட மொன்றிலிருந்து பிரிந்து செல்வதன் முன் இக் கடல்கோள் நிகழ்ந்ததெனக் கருதப்படுகின்றது.3 இந்திய மக்கள் கடல்கோளைப் பற்றிக் கூறும் வரலாறு சதபதப் பிராமணத்தில் (கி. மு. 1300) முதன்முதற் காணப்படுகின்றது. வடமொழி நூலிற் றனித்து நிற்கும் கதையாயிருப்பதால் இது அக்கேடியரிடமிருந்தோ தமிழரிடமிருந்தோ ஆரியருக்குக் கிடைத்ததென வரலாற்று நூலார் கூறு கின்றனர். சதபதப் பிராமணத்திலும் புராணங்களிலும் கூறப்படும் வெள்ளப் பெருக்கின் வரலாறு வருமாறு: மனு தனது காலை வழிபாட்டைச் செய்து கொண்டிருக்கும்போது ஒரு மீன் அவரது கையில் வந்தது. அம் மீன் மனுவை நோக்கி, “என்னைக் காப்பாற்று நான் உன்னைக் காப்பேன்; ஒரு வெள்ளப் பெருக்கு எல்லா வுயிர்களையும் அழித்துவிடும்” என்றது. அவர் மீனை ஒரு முட்டியுள் விட்டார். அது பெரிதாக வளர்ந்தபோது அவர் அதனை ஒரு குளத்தில் விட்டார். அது இன்னும் பெரிதானபோது அவர் அதைக் கடலுள் விட்டார். பின்பு மீன் அவரை ஒரு தோணி செய்யும்படி வேண்டிற்று. மனு அப்படியே செய்தார். வெள்ளப் பெருக்கு நேர்ந்தது. மீன் தலையில் ஒற்றைக் கொம்புடன் வந்தது. மனு கொம்பில் ஒரு கயிற்றைக் கட்டினார். மீன் அவரை வடமலைக்குக் கொண்டு போய்விட்டது. மீன், “யான் உன்னைக் காப்பாற்றி விட்டேன், தோணியை மரத்திற் கட்டு,” என்று மனுவிடங் கூறிற்று. மாபாரதத்தில் இவ் வரலாறு வேறு வகையிற் கூறப்படுகின்றது. வைவ சுதமனு வைசாலவனத்தில் தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மீன் ஆற்றங்கரையில் வந்து மற்ற மீன்களைப் பார்த்துத் தன்னைக் காக்கும்படி கேட்டது. மனு அம் மீனை எடுத்துச் சாடியில் விட்டார். பின் மேற்கூறியவாறு சொல்லப்படுகின்றது. மனு ஏழு இருடிகளுடனும் பலவகை விதைகளுடனும் தோணியில் ஏறினார். மீன் தோணியை இமயமலைக்குக் கொண்டு போயிற்று. அத் தோணி ஒரு மரத்திற் கட்டப்பட்டது. பின்பு அம் மீன் இருடிகளை நோக்கி, “யானே பிரமா; யான் மீன் வடிவெடுத்து உங்கள் எல்லோரையும் காத்தேன்,” எனக் கூறிற்று. பாகவத புராணத்தில் இவ் விடம் தென்னிந்தியாவென்று கூறப்பட் டுள்ளது. அதில் மனு அல்லது சத்தியவிரதன் திராவிட வேந்தன் எனக் கூறப்படுகின்றான். அங்கு மனு மலைய மலையில் ஊற்றெடுத்து வருகின்ற கிருதமாலையில் (வையையில்) பலி செலுத்தும்போது மீன் அவருடைய கையில் வருகின்றது. புராணங்கள் பழைய ஞாபகங்களை ஓரளவிற் கூறியுள்ளன. இவ் வரலாற்றுள் சில உண்மைகள் இருக்கின்றன என்பது மறுத்தற்கில்லை. புராணங்கள் பிற்காலங்களில் கூட்டியும் திருத்தியும் குறைத்தும் எழுதப் பட்டுள்ளன.1 உலகமக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள் கி.மு. 4000 வரையில் உலகமக்களை எல்லாம் ஒரு கூட்டத்தில் இணைப்பதற்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்குரிய இரண்டு ஆதாரங்கள் மொழியும், வழிபாடுமாகும். கி.மு. 4000 வரையில் கிழக்குத் தீவுகள் சீனா அமெரிக்கா சுமேரியா பபிலோன் கிரேத்தா சைபிரஸ் முதலிய தேசங்களில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப் பட்டது. இவ் விடங்களிலெல்லாம் பாம்பும் இடபமும் பரிசுத்தமுடையன வாகக் கருதப்பட்டன. இவ் விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரி யர்கள் ஆராய்ந்து கூறியுள்ளவை சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். “செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரே வகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார்.”1 “நீலாறு, தைகிரஸ், சிந்து, கங்கை, இந்து ஆசியா, ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன.”2 (இவை ஒரேவகை அமைப்புடையன.) “அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கியோராயிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்.” “அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்க, அமெரிக்க,. பசிபிக்கிய, யப்பானிய, கோறிய, திராவிட, தாத்தாரிய, பின்னிய, துருக்கிய, பாஸ்க் மொழிகள் சேர்ந்தன.” “ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது.”3 “பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர் திராவிட (துரூயிதிய - Druid)க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல் மார்துக்1 எனப்பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார்.2 அவ் வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்கு, திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக் கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது.” “பகற் (Baal) கடவுளும், பலிபீடமும், இடபமும் (சூரியனைக் குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000க்கும் கி. மு. 5000க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (Drauvada) திராபட (Drapada) என்னும் பெயர்கள் பெரிதும் காணப் படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்.”3 “திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியா, ஈரான் முதலிய தேசங் களில் காணப்படுகின்றன. மித்தனி,4 என்னுமிடத்தில் பேசப்பட்ட மொழி இக் காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது”5 “சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தி யருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப் பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:” “தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்.”6 “தென்னிந்திய ஆலயங்களும், சீனா யப்பான் (Torii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (Figians) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டா மையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்.” “கிரேத்தா (Crete) பபிலோன் கிழக்கிந்தியத் தீவுகளில் 7சங்கு வாத்தி யங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத்தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிடமிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்துசீனா, சீனா, யப்பான் வரையும் கொண்டுசென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டுபோகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன.”1 “சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப் பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச் சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக்கட்டை களில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்பட வில்லை. அவர்களின் எழுத்து முழுவதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியா, சூசா, தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அறியப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது.” “சுமேரியர், இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவை களுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப்படுகின்றபோதும் எழுதப்படு கின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்.” “பிராமி எழுத்துக்கள் எல்லாம் அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக் களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஓரளவில் சரியாகவே கூறி யுள்ளார்கள். இவைகளும் அரப்பா மெகாஞ்சதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.”2 “சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசிய, கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரிய, எல்லம், மினோவ, கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுடையன என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்.”3 எச்சி வெல்ஸ் (H. G. Wells) என்னும் ஆசிரியர் உலகில் இன்று காணப் படுகின்ற மக்கள் எல்லோரும் தோன்றுவதற்கு அடிப்படையிலுள்ளோர் மத்தியதரைக்கும் கிழக்குத் தீவுகளுக்கும் இடையே கிடந்த பெரிய பூகண்டத்திலே தோன்றிப் பெருகிய கபிலநிற மக்களென்றும், மத்தியதரை நாடுகளில் ஆதியில் வழங்கியது பாஸ்க்கு (Basqu) மொழி என்றும், பாஸ்க் மொழியும் திராவிடமும் நெருங்கிய உறவுடையனவென்றும் கூறுவர். டாக்டர் பாஸ்டவ் (Dr. Basedow) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவது, “உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென் றும், நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்ட மிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேட வேண்டும்,” என்பதாகும்.1 இரிவெட் (Revert) என்னும் ஆசிரியர், சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா, யப்பான், தஸ்மேனியா வரையும் சென்று இந் நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார்.2 ஆரம்பகாலப் பொத்தகம்3 என்னும் நூலில், எகிப்திய மொழிச் சொற் களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (Tailor) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார். சுமேரியரும் தமிழரும் “சேர்யோன் மார்சலும் டாக்டர் ஹாலும் சுமேரிய மக்கள் திராவிட மக்களைத் தோற்றத்தில் ஒத்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். இது சுமேரி யரும் இந்தியரும் ஒரு தொடர்பிலுள்ளவர்களென்பதை வலியுறுத்துகின் றது. இருமக்களின் தோற்றப்பொலிவும், தலையை அலங்காரம் செய்யும் முறையும் ஒரேவகையின. அரப்பாவிற் கிடைத்த குத்துவாள்கள் சுமேரி யரின் அவ்வகை வாளை ஒத்திருக்கின்றன. சுமேரியர் சிந்து மக்களின் நீரருந்தும் கிண்ணங்கள் ஒரே வகையின. சிந்து மக்களின் உருளை வடி வான வெள்ளிப் பாத்திரங்கள் சுமேரியரின் கல்நார்ப் பாத்திரங்கள் போன் றன. இருமக்களும் வாசனைப்பொடி முதலிய மேனியலங்காரப் பொருள் களை வைக்கப் பயன்படுத்திய சிமிழ்கள் ஒரேவகையின. பூச்செண்டுகள் பூமாலைகளைப் பயன்படுத்தும் வகையும், வழிபாட்டில் மிருகங்களைத் தொடர்புபடுத்தும் முறையும் இரு நாடுகளுக்கு மொத்தன. இரு நாட்டவர் களும் வண்டி செய்யும் முறையைத் தனித்தனி கண்டுபிடித்தார்களெனக் கூற முடியாது. இரு நாடுகளின் வீட்டு அமைப்புக்களையும், முத்திரை வெட்டும் முறையையும், மட்பாண்டங்களின் செம்மையையும் நோக்கு மிடத்து மூவாயிரமாண்டுகளின் முன் சிந்துமக்கள் பாபிலோனியரை விட உயர்நிலை அடைந்திருந்தார்கள் என்பது புலப்படும். இது இந்திய நாகரிக காலத்தின் கீழ் எல்லையாகும். அதற்கு முற்பட்ட இந்திய நாகரிக காலத்தின் வீற்றினால் பபிலோனிய நாகரிகம் தோற்றியிருத்தல்கூடாதா? அப்படி யாயின் சுமேரிய மக்கள் சிந்து நாட்டினின்று அல்லது அதன் நாகரிக வாடை யைப்பெற்ற இன்னொரு இடத்தினின்று சென்றவர்களாகமாட்டார்களா? இங்குக் காட்டப்பட்ட இரு மக்களுக்கு மிடையிலுள்ள ஒற்றுமைகள் குல ஒற்றுமையைக் காட்டுவன. சிந்துவில் உள்ள சிலர் அல்லது அவர்கள் எண்ணங்களிற் பழகிய சிலர், சில்லுள்ள வண்டுகளையும் கிளிஞ்சல்களை யும் மற்றும் சுமேரியரது அழகிய பொருள்களையும் தெற்குப் பாபிலோ னுக்குக் கொண்டுபோயிருத்தல் கூடும்.”1 “இன்று காணப்படும் இந்தியன் ஒருவனுடைய முகவெட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்த சுமேரிய மக்களின் வடிவம் போன்றது. இக்கால இந்தியர் கிரேக்கர் இத்தாலியர்களிடையே ஆரிய ரல்லாத மக்களின் சாயல் காணப்படுகின்றது. உருவச் சிலைகளிலிருந்து அறியுமளவில் பழைய சுமேரியர் இந்தியாவிலுள்ள திராவிட மக்களை உடலமைப்பில் ஒத்திருந்தனர். அக் காலச் சுமேரியன் தமிழை அல்லது அது தொடர்பான மொழிகளை வழங்கும் இன்றைய ஒரு திராவிடனை மிக ஒத்திருந்தான். சுமேரியர் கடல் வழியாலும் தரைவழியாலும் தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத்தாக்குகளை அடைந்த இந்திய மக்கள் என்பது இருக்கக் கூடாததன்று. இவர்களின் நாகரிகம் இந்தியாவிலே சிந்துநதிப் பள்ளத்தாக்கு களில் வளர்ச்சியடைந்திருக்கலாமென்று யான் எண்ணுகின்றேன்.”2 உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியாளர் உலகின் ஆங் காங்கு வதியும் மக்களின் உடற்கூறு, மொழி, வழிபாடு ஆகியன ஒத்திருத் தலை இவ்வாறு ஆங்காங்குக் காட்டியிருக்கின்றனர். இவை மக்களின் ஒரு பொது உற்பத்தியையும் சிறப்பாகத் தமிழரின் பழமையை யும் நன்கு விளக்குவன. மனித இயலார் (Anthropologists) ஓர் ஆதித் தாய் தந்தையரி னின்றே உலகமக்கள் பெருகினார்கள் என வலியுறுத்துவர். உலகிலே மிகப் பழைய மனித எலும்பு யாவாதேசத்திற் கிடைத்தது. இதன் காலம் ஐந்துலட்சம் ஆண்டுகள் எனப்படுகின்றது. ஆகவே விஞ் ஞானிகள், பூமியின் மத்தியிற்கிடந்த பெரிய கண்டத்திலேயே மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனத் துணிகின்றனர். அவ்வாறாயின் பெரிய வெள்ளப்பெருக்கு, பூமத்தியில் விளங்கிய கண்டத்தில் நிகழ்ந்ததாகலாம் எனக் கூறுதல் பிழையாகாது. பெரிய கடல்கோளுக்குப் பின் சிறிய கடல் கோள்கள் பல நிகழ்ந்தனவாகலாம். பஃறுளியாறு குமரிக்கோடு முதலியவை களைக் கடல்கொண்ட வரலாறுகள் இவ்வகையினவே. மத்திய இரேகையை அடுத்த நாடுகளில் அடிக்கடி எரிமலைக் குழப்பங்கள் நேர்தலும் அதனால் தரை கடலுள் மறைந்துபோதலும் இயல்பு. 1883இல் 1கரக்கற்றோவாவில் நேர்ந்த பெரிய எரிமலைக் குழப்பமே இதற்குச் சான்று. மக்களின் தொட்டில் கீன் (Keane) என்னும் ஆசிரியர், மனித குடும்பத்தின் தொட்டில் மலாய ஆசியா (யாவா மனிதன்) வாகவிருக்கலாம் என்றும் இங்கிருந்து மக்கள் வடக்கு ஆசியா மேற்கு ஆப்பிரிக்கா கிழக்கு மேற்கு ஒசேனிய உலகம் என்பவைகளுக்குச் சென்று பரவினார்களென்றும் அக் காலத்தில் தரைத் தொடர்பு இருந்ததென்றும் பிற்காலங்களில் நிலங்கள் கடலுள் மறைந்து சுருங்கி விட்டனவென்றும் கூறுவர். கீத் (Keith) என்னும் ஆசிரியர், பத்துலட்சம் ஆண்டுகளின் முன் தோன்றிய யாவா மனிதனினின்றும் வளர்ந்து திருந்தியவர்களே ஆஸ்தி ரேலிய மக்களென்றும் அக் கூட்டத்தினின்றும் பெருகியவர்களே உலக மக்களென்றும் மக்களின் உற்பத்தித் தானத்தைக் குறித்த தமது ஆராய்ச்சி யிற் குறிப்பிட்டுள்ளார்.2 கிராம் வில்லியம் என்பார், இந்திய நாட்டிலே தொல்லுயிர்கள் வளர்ச்சியடைந்து பெருகினவென்றும் மனிதனும் அங்குத் தோன்றித் தத்தளித்து மேல் நோக்கி வந்திருத்தல் கூடும் என்றும் புகல்வர்.3 தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பிற நாடுகளிலிருந்து வந்து இந்தியாவிற் குடியேறினார் களா, அல்லது இந்தியாவின் பூர்வகுடிகளா என்பன வரலாற்றாசிரியர்களால் ஆராயப்பட்டுள்ளன. ஆதி மக்களின் கிளையினராய் அக் காலப்போக்கு களிலும் கொள்கையிலும் மாறுபடாதோராய்த் தொன்றுதொட்டு 4இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்போரே தமிழ் மக்களென்பது இற்றை ஞான்றை வரலாற்று ஆசிரியர் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இந்தியாவிற் கற்காலம் உலக மக்கள் பழைய கற்காலத்திலிருந்து படிப்படியான முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களென மக்கள் நூலார் கூறுகின்றனர். இந்திய நாட்டில் பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரையில் மக்கள் கையினாற்செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் மட்பாண்டங்களும் காணப்படுகின்றன. நருமதைப் பள்ளத்தாக்கில் அடி அழிந்த விலங்கின் என்புகளோடு கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதத்தின் காலம் 400,000 ஆண்டு வரையில் எனக் கருதப்படுகின்றது.1 டாக்டர் டி. தெரா (Dr. De. Terra) என்பவர் இந்திய மக்களின் பழைய கற்காலம் கி. மு. 30,000-க்கும் கி. மு. 20,000-க்கும் இடையில் எனக் கணக்கிட்டுள்ளார்.2 ‘விந்திய மலையில் பழைய கற்கால மக்கள் தீட்டிய சித்திரங்கள் காணப்படுகின்றன. அங்கு வேடர் ஈட்டிகளால் காண்டாமிருகத்தைத் தாக்கும் சித்திரம் ஒன்று காணப்படுகின்றது. அவ் வகையான காண்டா மிருகம் இப்பொழுது காணப்படவில்லை. காய்மூர் (Kaimur) மலையில் மானை வேட்டையாடும் சித்திரங்களும், கொஸ்லங்கபாத்தில் ஒட்டைச் சிவிங்கிகளின் சித்திரங்களும், சிங்கன்பூரில் கங்காரு மான் குதிரை முதலிய விலங்குகளின் சித்திரங்களும் காணப்படுகின்றன. இச் சித்திரங்கள் வரையப் பட்ட இடங்களில் புதிய கற்கால ஆயுதங்களும் கிடைத்தன. பழைய காலத்தவர்கள் பிணங்களைக் காட்டில் எறிந்தார்கள்.’ புதிய கற்கால மக்கள் பிணங்களைப் புதைத்தார்கள். புதிய கற்காலமக்களின் எலும்புகள் மிஸ்ரப்பூரில் (Mirazapur) மினுக்கமான மட்பாண்டங்களுடன் காணப்பட்டன. கோலாப்பூர் என்னும் இடத்தில் 54 புதிய கற்காலச் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுள் மட்பாண் டங்கள் காணப்பட்டன. பல்லாவரத்திற் காணப்பட்ட ஈமத்தாழிகளைப் போலச் செங்கற்பட்டு, நெல்லூர், ஆற்காடு முதலிய இடங்களிற் காணப் பட்டன. பலவகைக் கற்சமாதிகள் சென்னை, பம்பாய், மைசூர், நிசாம் இராச்சி யங்களிற் காணப்பட்டன. இவைகளுள் இரும்பு ஆயுதங்களும் கிடைத்தன. அக் காலத்திற் பிணங்களைச் சுடுதலும் உண்டு. தாழிகளில் சாம்பல் காணப் படவில்லை; உடலை வெட்டிச் சில துண்டுகள் தாழியில் இடப்பட்ட புதிய கற்காலத்தில் ஈமத்தாழிகள் பயன்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூரில் 114 ‘ஏக்கர்’ நிலத்தில் 1,000 தாழிகள் கிளறி எடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் திரு நெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோரத்திலுள்ளது. சில உலோகப் பொருள்கள் இல்லாவிடில் அவை புதிய கற்காலத்தனவாகலாம். அவைகளுள் இரும்பாயுதங்களும் வெண்கல ஆபரணங்களும் காணப் பட்டன. பிராமணபாத்து, சிந்து முதலிய இடங்களிலும் தாழிப் புதையல்கள் காணப்படுகின்றன. தக்கணத்திலும், தென்னிந்தியாவிலும் பழைய கற்காலப் பொருள்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை பூகோளக் குறுக்கு இரேகைக்கு இருபத் தைந்து பாகையின் கீழ்க் கிடைக்கின்றன. அக்கால மக்கள் ஒருவகைப் பளிங்குக் கல்லால் (Quartzite) ஆயுதஞ் செய்தார்கள். இவ்வகை ஆயுதங்கள் குண்டூர், கடப்பா என்னுமிடங்களில் அதிகம் காணப்பட்டன. இன்னும் பல இடங்களிலும் பழைய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொழுது அடி அழிந்துபோன காண்டாமிருக எலும்போடு ‘குவார்ட் சைட்’ (Quartizite) என்னும் பளிங்குக் கல்லாற் செய்யப்பட்ட ஆயுத மொன்று கண்டெடுக்கப்பட்டது. மிர்சாப்பூரில் புதிய கற்கால ஆயுதங்கள் பல கிடைத்தன. கங்கைப் பள்ளத்தாக்கில் குன்சிப்பூர் மாகாணத்தில் மீன் முள்ளாற் செய்த தூண்டிலொன்று ஆறிடு மணல்மேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. பழைய கற்கால மக்கள் கடப்பா, சென்னைக் கரைகளில் மாத்திரம் வாழ்ந்தார்கள். புதிய கற்காலத்தில் அவர்கள் இந்தியா முழுமையிலும் பரந்து வாழ ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆயுதங்கள் சிறிய தீத்தட்டிக் கற்கள், அவை அரை அங்குலம் முதல் ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளம் வரையில் உள்ளன. அம்புத்தலை, வில்லுப்பிறை இவை இரண்டும் கலந்த வடிவமுள்ள கல்லாயுதங்கள் பிடியில் இறுக்கிப் பயன்படுத்தப் பட்டன. இவை அதிகமாக விந்தியமலை பாகெல் கண்ட் (Boghel Kand), ரேவா (Rewah), மிர்சாப்பூர் மலைத் தாழ்வாரங்களிற் காணப்படுகின்றன. மக்கள் வாழ்ந்த ஒதுக்கிடங்களில் அடுப்புகரி, எலும்புகள், மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. உளி போன்ற ஒருவகை ஆயுதங்கள் சூடிய நாகபுரி அசாம் பர்மா இந்துச் சீனம் மலாயா முதலிய இடங்களிற் காணப்பட்டன. பழைய கற்கால ஆயுதங்கள் செய்யப்பட்ட இடங்கள் தென்னிந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் பாறைகளில் தீட்டிக் கூராக்கப் பட்டன. 10 அல்லது 14 அங்குலம் நீளமுள்ள குடையப்பட்ட பொருள்கள் காணப்பட்டன. இவைகளோடு உயர்தர மட்பாண்ட உடைவுகளும் செங்கற் களும் காணப்பட்டன. இந்தியாவிலே கற்சமாதிகளில் கோப்பை அடை யாளங்கள் காணப்படுகின்றன. வெண்கலக் காலம் தென்னிந்தியாவில் கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் இருந்தன. தகரத்தையும் செம்பையுங் கலந்து வெண் கலஞ் செய்யப்பட்டது. தென்னிந்திய சமாதிகளில் அழகிய வெண்கலப் பொருள்கள் காணப்பட்டன. மிக முக்கியமான செம்புப் பொருள்கள் மத்திய இந்தியாவில் கங்கேரியா (Gungeria) என்னுமிடத்திற் காணப் பட்டன. இங்கு 424 செம்பு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 2000 வரையில் பயன்படுத்தப்பட்டனவாகலாம் எனக் கருதப்படுகின்றன. அங்கு 102 வெள்ளித் தகடுகளும் காணப்பட்டன. அவைகளில் சில வட்டவடிவாயுள்ளன. சில தகடுகளின்மீது கொம்புள்ள மாட்டுத் தலைகள் வரையப்பட்டிருந்தன. வெள்ளி இந்தியாவில் அதிகம் கிடையாமையால் அது பிற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். செம்பு இந்தியாவிற் கிடைக்கக் கூடியது. இவையல்லாமல், செம்பினாற் செய்யப்பட்ட உளி, எறிஉளி, வாள், ஈட்டித்தலை முதலியனவும் கிடைத்தன. இவை கோன்பூர் வாதெல்கார் (Fatelgarh) மணிபுரி முத்தா என்னுமிடங்களிலும் வட இந்தியா முழுமை யிலும் காணப்பட்டன. தெற்கில் வாழ்ந்த மக்களே வடக்கிற் சென்று குடியேறினர் ஆராய்ச்சியாளர், தென்னிந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய கற்கால மக்களே மத்திய இந்தியா கங்கை யமுனை வெளிகள் வட மேற்கு இந்தியா முதல் இமயமலை வரையில் சென்று குடியேறினார்கள் எனக் கூறுகின்றனர். கி. மு. 4,000 வரையில் இந்தியா முதல் பாரசீகம் எகிப்து கிரேத்தா சைபிரஸ் வரையில் ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள்.1 அரப்பா, மகஞ்சொதரோ அரப்பா மொகஞ்சொதரோ காலம் இந்தியாவின் வெண்கலக் கால நாகரிகத்தை வெளியிடுகின்றது. இந் நகரங்களின் நாகரிகம் கி. மு. 3500 வரையில் என்று கருதப்படுகின்றது. நாகரிகம் வளர்வதற்கு இனி இடம் இல்லை என்னும்படி அக்கால நாகரிகம் உயர்நிலை அடைந்திருந்தது. நகரங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. மாடியுடைய வீடுகள் கிணறு களோடு கூடியனவாகவும், நீர் ஓடும் கால்கள் உடையனவாகவும் வீதிகளின் இரு மருங்குகளிலும் கட்டப்பட்டிருந்தன. மக்கள் பயிர்ச்செய்கை வாணிகம் என்பவைகளால் பொருளீட்டினர். வாணிகம் மெசபெதேமியா வரையில் நடைபெற்றது. யானை ஒட்டகம் நாய் ஆடு மாடு முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டன. வில்லு, அம்புகள், செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்த கோடரிகள், ஈட்டிகள், மயிர் மழிக்குங்கத்திகள், கத்திகள் முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், யானைத்தந்தம், கண்ணாடி ஓடுகள் முதலியவைகளால் ஆபரணங்கள் செய்யப்பட்டன. பஞ்சினால் ஆடை நெய்யப்பட்டது. மட்பாண்டங்கள் அழகாகவும் நிறங் கொடுத்தும் வனையப்பட்டன. ஓவிய எழுத்துப் போன்ற ஒருவகை எழுத்து முத்திரைகளிற் காணப்படுகின்றது. தாய்க்கடவுள், சூரியன், பசுபதி, இடபம், மரம் முதலியன வணங்கப்பட்டன. ஆரியர் வருகை தெற்கு இந்தியாவிலே மேற்கில் தான்யூப் நதிக்கும், கிழக்கில் காஸ்பியன் கடலுக்குமிடையே வாழ்ந்த வெண்ணிறமக்கள் ஆரியர் எனப்படுவர். இவர்கள் மந்தை மேய்க்கும் வாழ்க்கைப்படியை அடைந் திருந்தனர். இவர்கள் தம் மந்தைகளுடனும் பெண்டு பிள்ளைகளுடனும் கூடாரங்களைப் பெயர்த்துக்கொண்டு இடமிடமாகத் திரிவர். இவ்வாறு திரியும் மார்க்கத்தில் இவர்களில் ஒரு பிரிவினர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது கி.மு. 2000 வரையில் என்று சொல்லப்படு கின்றது. இவர்கள் இந்தியாவின் வடமேற்கு மூலைகளில் தங்கிச் சிறிது சிறிதாக ஏழு நதிகள் பாய்கின்ற பஞ்சாப் தேசம் முழுவதையும் கைப்பற்றி னர். ஆரியர் வருங்கால் அங்கு உன்னத நாகரிகத்தினராய் வாழ்ந்துகொண் டிருந்த தமிழ் மக்களைப்பற்றி ஆரியமக்கள் தங் கடவுளரை வழுத்திப் பாடிய பாடல்களில் காணப்படுகின்றது. முற்காலங்களில் சீர்திருந்திய சாதி யினரை முரட்டுச் சாதியினர் படையெடுத்து வென்றார்கள். இது கிரேக்கரை உரோமர் வென்றதும், ஹன்ஸ் (Huns) என்னும் முரட்டுச் சாதியினர் ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளைக் கலங்கச் செய்ததும் போன்ற நிகழ்ச்சிகளி னால் நன்கு அறியலாகும். ஆரிய மக்கள் தம்மை எதிர்த்த தமிழரை அசுரர், தைத்தியர், தாசர், நாகர் என வழங்கினர். வேத பாடல்களால் தாசுக்களைப்பற்றி அறியக் கிடப்பன வருமாறு: தாசுக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். அந் நகரங்களில் அரசர் வாழ்ந் தனர். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. அச் செல்வம் பசு தேர் குதிரை முதலியன. இவை நூறு கதவுகளுள்ள கோட்டைகளுள் வைத்துக் காக்கப்பட்டன. தாசுக்கள் மைதானங்களிலும் மலைகளிலும் சொத்துக்களை வைத்திருந்த செல்வப் பெருமக்கள். அவர்கள் பொன்னாபரணங்களை அணிந்தார்கள். தாசுக்கள் பொன் வெள்ளி இரும்புக் கோட்டைகளில் வாழ்ந்தனர். இந்திரன் தன்னை வணங்கும் தேவோதாசர்களின் பொருட்டு நூறு கற்கோட்டைகளிலிருந்த தாசர்களை வெற்றிகொண்டான். தாசுக்கள் ஆரியரின் கடவுளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மிகச் சீர் திருத்தம் பெற்று விளங்கினார்கள். கிருட்டிணன் என்னும் தாசன் தன் பதினா யிரம் வீரர்களுடன் இந்திரனை எதிர்த்தான். தாசுக்களில் பாணியர் என்னும் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள். கடல்வழியாகவும் தரைவழியாகவும் வாணிபஞ் செய்த தமிழ்நாட்டு வணிகர். கி. மு. 2000க்கும் கி. மு. 1400க்கு மிடையில் ஆரிய மக்கள் பஞ்சாப் முழுமையும் கைப்பற்றினர். இந்தியாவை அடைந்த ஆரியமக்களை விட அங்கு வாழ்ந்த திராவிட மக்கள் கூடிய தொகையினராயிருந்தனர். ஆரிய மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் விவாகக் கலப்புகள் நேர்ந்தன. வேதபாடல்களைச் செய்த முனிவர்கள் பலர்-வசிட்டர், அகத்தியர், விசுவா மித்திரர் முதலியோர்-தமிழ் மரபினர் என்பது அவர்கள் நிறம்பற்றித் தெரிய வருகின்றது. வருணன் என்னும் கடவுளே அசுரன் எனப்படுகின்றான்.1 பி.தி. சீனிவாச ஐயங்கார் ‘மந்திர காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை’ என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: படை எடுத்துவந்த ஒருசிறு கூட்டத்தினரால் பெரிய சாதிமாற்றம் ஏற்பட்டிருக்க இடமில்லை. திராவிட மொழியைப் பேசிய மக்கள் வேண்டிய அளவு சீர்திருத்தமுள்ளவர்களாகவும் புதியவர்களை விழுங்கிவிடக்கூடிய தொகையினராகவும் இருந்தார்கள். இவர்கள். தமது தொழில் வளர்ச்சி களுக்கேற்பச் செழிப்படைந்து கிடந்த தம் சொற்களை அவர்களுக்கு உதவினார்கள்.2 மொழியளவில் தமிழர்கள் எவ்வளவுக்கு ஆரியர்களானார்களோ, அவ்வளவுக்கு ஆரியர் கொள்கைகளில் தமிழர்களானார்கள் எனச் சிலாற்றர் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். இந்திய மக்களின் அரசியல் வாழ்க்கை வரலாறுகள் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. வேள்விகள் பழைய உலகமக்கள் எல்லோரும் உயிர்ப்பலியிட்டுக் கடவுளரை வழிபட்டனர்.3 ஆரியமக்கள் அலைந்து திரியும் வாழ்க்கைப்படியில் இருந் தமையின் அவர்கள் தங் கடவுளருக்கு நிலையான கோயில்கள் அமைத்துப் பலியிட்டு வழிபடவில்லை. சென்ற சென்ற இடங்களில் கடவுளைக் குறித்துப் பலியிட்டனர். இதுவே மற்றைய மக்களின் வேள்விகளுக்கும் ஆரிய மக்களின் வேள்விகளுக்கும் வேற்றுமை. பிற்கால மக்கள், வேள்விகள் அல்லது யாகங்கள் எனப்படுவன ஆரியமக்களுக்கு மாத்திரம் உரியன வென்று தடுமாறுவாராயினர். ஆரியர் பெரிய இராச்சியங்களைக் கோலிய பின் இவ் வேள்விகள் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டன. அக் காலங் களில் வேள்விகள் புரியும் கிரியை முறைகள் (பிராமணங்கள்) வரையப் பட்டன. இக்கிரியை முறைகளைப் பயின்று அவற்றில் வல்லுநரானோர் பிராமணர் எனப்பட்டனர். பிற்காலங்களில் இப் பெயர், கோயிற் குருக்கள் புரோகிதரையும் குறிக்க வழங்குவதாயிற்று. இதனால் பிராமணர் என்போர் ஆரியமக்கள் என்னும் எண்ணம் பலர் கருத்தில் பதிந்துள்ளது. இன்று தென்னாட்டிற் காணும் கோயிற் குருக்களும் புரோகிதரும் முற்காலத்தில் எகிப்திய பாபிலோனிய நாடுகளிற் காணப்பட்ட குருமார் போன்றவர்களே. பிராமண காலம் கி.மு. 1400க்குப் பின் ஆரியர் (கலப்பு ஆரியர்) கிழக்கு நோக்கிச் சென்று அங்குள்ள தமிழர் இராச்சியங்களை வெற்றி கொண்டனர். அக் காலங்களில் அவர்கள் யாகங்களை ஆடம்பரமாகச் செய்ய ஆரம்பித்தனர். அதன் பொருட்டு யாகக்கிரியை முறைகள் எழுதப்பட்டன.1 கங்கை ஆற்று வெளிகளிலுள்ள மக்களும் ஆரிய மக்களும் விவாகக் கலப்பால் ஒற்றுமை யடைந்து வலுவடைந்தனர். பிராமணங்களுக்குப்பின் ஆரணியங்கள் எழுதப்பட்டன. ஆரணியங்கள் என்பன காட்டில் வாசஞ் செய்யும்போது படித்தற்குரிய பாடல்கள். வேத பாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் காட்டிற்போய்த் தவஞ்செய்யும் வழக்குக் கூறப்படவில்லை என்றும், இவ் வழக்குப் பூர்வ குடிகளின் முறையைப் பின்பற்றி ஆரிய மக்களாற் கைக் கொள்ளப்பட்டனவென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 பாரதம் ஆரியர் கங்கைச் சமவெளிகளில் இராச்சியங்களைத் தாபித்த காலத்திலேயே பாரதப்போர் நிகழ்ந்தது. இது கி. மு. 1300 வரையில் நிகழ்ந்ததெனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பாரதப் போரில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களே. புறநானூற்றில் தருமனைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று காணப்படுகின்றது. வியாசர், அருச்சுனன், துரௌபதி, கிருட்டிணன் முதலானோர் கரிய நிறத்தினராகக் கூறப்படுகின்றனர். சில பெண்கள் பொன்னிற முடையவர்களாகச் சொல்லப்படுகின்றனர்.2 வெண் ணிறமுடையவராக யாரும் கூறப்படவில்லை.3 பாரதம் காலத்துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்ட பல பாடல் களுடையது. இது யவனர் பல்லவர்களைப் பற்றியும் கூறுகின்றது. அலக் சாந்தரின் படையெடுப்புக்குப் பின்னரே இந்தியர் யவனரைப்பற்றி அறிந் தார்கள். இதில் கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரையில் சேர்க்கப்பட்ட பாடல்கள் உண்டு என்பது வரலாற்று ஆசிரியர்களது கூற்று. இராமாயணம் ஆரியர் கங்கைச் சமவெளிகளை அடைந்தபின்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வரலாறே இராமாயணம்.4 இது கி. மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் விளங்கிய வான்மீகராற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. இராமாயணக் கதை1 சாதகக்கதைகளில் வேறு வகையாகக் கூறப்பட் டுள்ளது. வான்மீகி இராமாயணத்தில் இராமர் இராமேசுவரத்தில் இலிங்கம் வைத்துப் பூசித்த வரலாறு காணப்படவில்லை. இராமர் கரிய நிறத்தினராகக் கூறப்படுகின்றார். தென்னாட்டு வரலாறொன்றினை எடுத்துச் சோடித்து வான்மீகர் இராமாயணமாக எழுதினாரோ என்று சிலர் கருதுகின்றனர். சீதை யின் பிதாவாகக் கூறப்படும் சனகன் கி. மு. 1000 வரையில் விளங்கினான். இச் சனகனே யாக்ஞவல்கியருக்கு உண்மை ஞானத்தை உபதேசித்தவன். இவன் அக் காலத்தில் கல்வியிற் சிறந்து விளங்கினான். இந் நூலில் பல காலங்களிற் பாடிய பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வான்மீகி இராமாயணத் தில் இராமர் விஷ்ணுவின் அவதாரமாகக் கொள்ளப்பட்டிலர். உபநிடத காலம் ஆரிய மக்களின் வழிபாடு கடவுளுக்கு ஒன்றைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய ஒன்றைப்பெறும் கொள்கையளவில் இருந்தது. அவர்கள் உலகம் உயிர் கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளைப்பற்றி அறியாதிருந் தனர்.2 மறுபிறப்பைப்பற்றி அவர்கள் வேதங்களிற் கூறப்படவில்லை. இறந்த பின் உயிர்கள் நேரே கூற்றுவனுலகுக்குச் சென்று அங்கு நெடுக வாழ்ந் திருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஆரியர் இந்திய நாட்டை அடைவ தன் முன்னரே தமிழ் மக்கள் முப்பொருள் உண்மைகளை நன்கு ஆராய்ந்து அறிந்திருந்தார்கள். அவ் வுண்மை ஞானங்களின் வெளியீடாகிய உபநிட தங்களே தமிழர்களது ஞானமாகும். இதனை ஆராய்ச்சியாளர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். உபநிடதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படும் யாக்ஞவல்கியர் இந்தியாவின் கிழக்குப்பாகங்களில் வாழ்ந்தவராகலாம். இவர் எழுதியுள்ள நூல்கள் குரு பாஞ்சாலம் கோசலம் விதேகம் என்னும் இடங்களைப்பற்றிக் கூறுகின்றன. யாக்ஞவல்கியர் வாழ்ந்த இடம் அக் காலத்தில் கல்வித் துறையில் உயர்ந்து விளங்கிற்று. அறிவுப் பொருளைத் தேடி அங்குப் பலர் வந்தார்கள். யாக்ஞவல்கியர் கல்வி கற்றபின் உண்மை ஞானத்தைத் தேடி இடங்கள்தோறும் அலைந்து திரிந்தார். இவர்களுடன்கூடத் திரிந்தவர்கள் சுவேதகேது அருணேயன் சோமசுஸ்ம சத்தியஞானி என்போர். இவர்கள் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனைக் கண்டார்கள். அவன் வினாவிய கேள்விகளுக்கு யாக்ஞவல்கியர் ஏற்ற விடையளித்தார். சனகன் அவருக்கு நூறு பசுக்களைத் தானம் வழங்கினான். சனகன், தேரில் ஏறிச் செல்வதன் முன் தனக்கும் அவர்களுக்கும் உண்மைஞான அறிவில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதென்பதை விளக்கினான். இது பிராமணர் களாகிய அவர்களுக்கு அவமானமாக விருந்தது. யாக்ஞவல்கியர் சனக னுடன் சென்று அவனிடம் அரிய ஞானங்களைப் பயின்றார். அவர் காலத் தில் அவரே பெரிய ஞானியாக விளங்கினார். யாக்ஞவல்கி செய்த1 உபநிட தமே ஞான நூல்களுட் சிறந்தது. யாக்ஞவல்கியர் காலத்தில் பிராமணர் சத்திரியரிடத்தில் மாணாக்கராக அமர்ந்து ஞானம் கற்றனர். சனகனைப் போலவே காசி அரசனான அசந்தகேது, யைவாலி அரசன் பிரவாகனன் முதலியோர் விளங்கினார்கள்.2 யாக்ஞவல்கியர் காலம் கி. மு. 1000 வரையில் எனப்படுகின்றது. கி.மு. 1000 வரையில் விந்தமலைக்கு வடக்கே தமிழ் மொழி வேறு மொழிகளாகத் திரிந்து வழங்கிற்று.3 ஆகவே, அக் காலம் தமிழ் உலகத்தின் வடக்கெல்லை விந்திய மலையாயிருந்தது. விந்திய மலைக்கு வடக்கு ஆரியவர்த்த மெனப்பட்டது. பேச்சு வேறுபடுவதன் காரணம் வீட்டிற் பேசுவது போல நாம் சபைகளிற் பேசுவதில்லை. இவ் வகை யான பேச்சுகளும் ஒரு கூட்டத்தினரின் பேச்சை உண்டாக்கும் (மாக்ஸ் மூலர்). வேற்றுமொழிச் சொற்கள் வந்து ஒரு மொழியுடன் கலப்பதாலும் இரு வேறுமொழிக்குரியவர்களுக்கிடையில் விவாகக்கலப்பு உண்டாகிச் சந்ததி பெருகுவதாலும் மொழிகள் மாறுபடும். மொழிகளை இலக்கண அமைப்புக்கொண்டு அறியலாம். மொழிகள் மாறிவிடினும் இலக்கணம் இலகுவில் மாறுபடாது. இலக்கணம் ஆற்றின் இருமருங்குமுள்ள அணையும், சொற்கள் அவைகளினிடையே ஓடும் நீரும் போன்றன. தமிழின் வழிமொழிகள் தமிழைச் சேர்ந்தன என்று காட்டு வதற்கு அம் மொழிகளில் வழங்கும் சொற்களைவிட இலக்கணம் உதவிபுரி கின்றது. ஒரு மொழியைத் தாங்கி நிற்பது இலக்கணம். இப்பொழுது வழங்கும் வட இந்திய மொழிகள் அமைப்பில் தமிழை ஒத்துள்ளன என்று மொழியாராய்ச்சியாளர் நுவல்கின்றனர். ஆகவே அக் காலத்தில் வடமொழி இக் காலம் எவ்வாறு வழக்கிலிருக்கின்றதோ அவ்வாறு இலக்கிய மொழியாக வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்; பேச்சுமொழி வேறாக இருந்திருக்க வேண்டுமென யூகிக்க வேண்டியிருக்கின்றது. பிராகிருதம் தமிழ் மயமாக்கப்பட்டது ஆரியர் இந்தியாவை அடைந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மொழி பழைய பாரசீகம் போன்ற ஆரியம். இதற்கு இலக்கண வரம்பு இல்லை. இம் மொழியிலேயே வேத பாடல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. “வேத பாடல் செய்யப்படுகின்ற காலத்தில் அங்கு எல்லோராலும் வழங்கப்பட்ட ஒரு வீறுடைய மொழி இருந்திருத்தல் வேண்டும். அம் மொழி1 பிராகிருதத்தினின்றும் உச்சரிப்பு முறையில் வேறுபட்டது. வேத பாடல்களில் பிராகிருத உச்சரிப்பினின்றும் வேறுபட்ட பல சொற்கள் ஆளப்பட்டிருக்கின்றன. இச் சொற்கள் மற்ற மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டன என்பதைவிட வேறு வகையாகக் கூறமுடியாது”2 “மந்திர காலத்தில் மூன்று இனமொழிகள் இந்தியாவில் வழங்கின. இவற்றுள் வேதமொழியாகிய இந்து செர்மனிய மொழி ஒன்று. இரண்டாவது, வேதமொழியோடு அமைப்பில் மாறுபட்ட திராவிட மொழி. இது, முன்னதின் அமைப்பு, சொற்கள் என்பவற்றைப் பெரிதும் வேறுபடுத்திற்று. ஆரியமொழி, இந்தியாவில் வளர்ச்சி யடைந்தபோது திராவிட மொழியின் வலிமையால் பல மாறுதல்களடைந்து திராவிட முறைகளைத் தழுவிற்று.” “திராவிட மக்கள் பொருள்களுக்கும் கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச்சொற்களல்ல. இக் கருத்து இன்னும் நன்கு ஆராயப்படவில்லை. ஆராய்ச்சியில் சமக்கிருத மொழியிற் காணப்படும் கலைச்சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப் பட்டன என்று புலப்படுதல் கூடும். இந்து செர்மனிய மொழியாகிய பிரா கிருதம் இந்தியாவில் வழங்க ஆரம்பித்தபோது அதன் அ, எ, ஒ என்னும் எழுத்துக்கள் எல்லாம் அ போலாயின; அதன் இலக்கணங்களும் சிறிது சிறிதாகத் தணிவுபட்டன.”1 மந்திர காலத்தில் ஆரியர் விந்தியத்துக்குத் தெற்கே குடியேறவில்லை மந்திரகால நூல்கள் அக் காலத்தில் விளங்கிய நாற்பது கூட்டத் தினரைப்பற்றி மாத்திரம் கூறுகின்றன. அவை விந்தியமலைக்குத் தெற்கே உள்ளவர்களைப்பற்றிக் கூறவில்லை. அக் காலத்தில் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் போக்குவரத்திருந்தமை மந்திரங்களில் முத்தைப் பற்றிக் கூறப்படுதலால் அறியலாம்.2 புத்தர் காலம் (கி. மு. 557-477) உபநிடத ஞானம் வளர்ச்சியுற்ற காலத்தில் புத்தர் தோன்றினார். இவர் திராவிட மரபினர்.3 இவரது ஞானமும் உபநிடத ஞானங்களை அடிப்படை யாகக் கொண்டது. இவர் வேதமதத்துக்கு மாறான புரட்சியைக் கொண்டு வந்தார். இவர் தம் உபதேசங்களை மகத மொழியிற்1 (பாளி) செய்தார். ஆகவே, புத்தர் காலத்தில் பாளிமொழி மக்களின் பேச்சுமொழியாக இருந் திருத்தல்வேண்டும். பாளி புத்தர் காலத்துக்கு இரண்டு மூன்று நூற்றாண்டு களின் முன் தோன்றியிருத்தல் கூடும். பௌத்தமதம் கலிங்கநாட்டில் மிகவும் வேகமாகப் பரவிற்று. ஆகவே, அங்குப் பாளிமொழி அதிகம் பயிலப் பட்டது. அதனால் அங்கு வழங்கிய தமிழ் சிதைந்து வடுகு அல்லது தெலுங்கு ஆயிற்று. இலங்கைப் பௌத்தமக்கள் கலிங்க தேசக் கலைகளைப் பின்பற்றினர். அங்கு வழங்கிய தமிழும் பாளி மொழிக் கலப்பினால் சிங்கள மாக மாறிற்று.2 மக்கள் எம்மொழியைச் சமய மொழியாகக் கொள்ளுகிறார் களோ, அம் மொழிச் சொற்கள் அவர்களின் மொழியிற் கலந்து மொழியை வேறுபடுத்தி விடுகின்றது. பெருந்தேவனார் பாரதத்திற் காணப்படும் மணிப்பிரவாள நடையும் இதற்கு உதாரணமாகும். தமிழ்மக்கள் தமிழ் உணர்ச்சியினால் ஆரியத்தை எதிர்த்துப் போராடிவந்தமையின், தமிழ் வேறு மொழியாகச் சிதைந்து விடாமல் பிழைத்தது ஆயினும், அதன் ஓரங்கள் கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் என மாறுபட்டன. இன்றைய தமிழ் மொழியில் வடமொழிக் கறை அதிகம் ஏறியிருத்தலை நாம் அறியலாம். புத்தர் காலத்திற்குப் பின் கலிங்க நாடு வடுகு நாடாக மாறியிருத்தல் வேண்டும். இது கி. மு. நாலாம் நூற்றாண்டு வரையில் என உத்தேசமாகக் கூறலாம். தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வடக் கெல்லை வடவேங்கடம் எனப்படுகின்றது. இது “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனப்படுகின்றமையானும் அப் பன்னிரு நாடுகளும் சேர சோழ பாண்டிய நாடுகளுக்குட்பட விருந்தமையானும் அறியப்படும். ஆகவே தொல்காப்பியம் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குச் சிறிது முன்பின் செய்யப்பட்டிருத்தல் கூடும். “மலை தேய்ந்து மண்ணாங்கட்டியானது” என்பது நாட்டுப் பழமொழி. அதை ஒப்பக் குமரி முதல் இமயம் வரையில் பரந்து கிடந்த தமிழ் நாட்டைப் பிறமொழிகள் கவர்ந்து கொள்ள இன்று தமிழ் இந்தியக் குடாநாட்டின் சிறியவெல்லையுள் மாத்திரம் வழங்குகின்றது. அதன் ஓரங்களையும் அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு கன்னடம் ஹிந்தி முதலிய மொழிகள் சிறிது சிறிதாகக் கவர்ந்து வருகின்றன. இன்று திராவிட மொழிகளை வழங்கும் மக்களின் எண் 63,000,000 எனக் கணக் கிடப்பட்டுள்ளது. தமிழ் வழங்குவோரின் எண் 19,000,000.  இயல் - 2 ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம் இன்று இந்திய மக்களிடையே காணப்படும் பழக்க வழக்கங்களும் பிறவும் பழைய தமிழர் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டனவென்று கருதப்படுகின்றன. சங்க காலத் தமிழர் நாகரிகம் கலப்பில்லாத பழந்தமிழ் நாகரிகமேயாகும். ஒரு மொழியிலுள்ள பழைய சொற்கள் அம் மொழிக் குரிய மக்களின் பழைய நாகரிகத்தை நன்கு விளக்குவன. அரப்பா மொகஞ் சொதரோ என்னுமிடங்களிற் காணப்பட்ட பழம் பொருள்களைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு பழைய சொல்லும் ஒவ் வொரு பழம்பொருளுக்கு நேர். பாரை என்னும் சொல் கல்லால் செய்யப் பட்ட கிண்டும் கருவியைக் குறித்தது. அப் பெயரே இன்று இரும்பு முதலிய உலோகங்களாற் செய்யப்பட்ட அவ்வகைக் கருவியைக் குறிக்க வழங்கு கின்றது. உலோகத்தைப்பற்றி அறிய முன்மக்கள் கல்லாற் செய்த பாரையைப் பயன்படுத்தினார்கள் எனப் பாரை என்னும் சொல் அறிவிக்கின்றது. இவ்வாறு பண்டையோர் தாமறிந்த பொருள்களுக்கும், செயல்களுக்கும் இட்டு வழங்கிய சொற்கள் அவர்களது வரலாற்றினைக் கூறுவனவாகின்றன. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் நாகரிகம் எவ்வாறிருந்ததென்பது இம் முறையில் அறிந்து கூறுதல் இயன்றது. நிலப்பிரிவும் மக்கட் பிரிவும் இவ்வுலகம் மலையும் காடும் வயலும் கடற்கரையும் பாலைநிலமு மெனப் பலவகை இயற்கைப் பிரிவுகளுடையது. இவ்வகைப் பிரிவுகள் தமிழர் வாழ்ந்த 1இந்திய நாட்டிலும் உண்டு. ஒவ்வொரு நிலத்தில் வாழ்ந்த மக்களும் வெவ்வேறு வகை வாழ்க்கை நடத்தினர். மலை காடு வயல் கடல் என்பனவும், அவை சார்ந்த நிலங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் பெயர்கள் பெற்றன. மணல்வெளி பாலை எனப்பட்டது. அந் நிலங்களில் வாழ்ந்தோர் முறையே குறவர் இடையர் உழவர் பரதவர் மறவர் எனப்பெயர் பெற்றனர். நிலம் பற்றிய இப் பிரிவையன்றி அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அடியோர் எனத் தொழிற் பாகுபாடு பற்றிய பிரிவினரும் வாழ்ந்தார்கள். வினைவலர் பல தொழில் புரிவோரா யும், அடியோர் கால்வழியாகத் தொண்டு புரிவோராயு மிருந்தனர். அடிமை களை விற்று வாங்கும் வழக்குப் பண்டை நாட்களில் எல்லா நாடுகளிலும் காணப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறும் அரிச்சந்திரன் கதையும் இதற்குச் சான்றுகளாகும். வினைவலர் அடியோர் என்னும் இரு பிரிவினரும் கீழோரெனவும் ஏனையோர் மேலோரெனவும் அறியப்பட்டனர். மறவர் இவர்கள் எயினர் வேடர் புளிஞர் எனவும் கூறப்படுவர். இவர்கள் அலைந்து திரியும் திருந்தாத வாழ்க்கையர்; மணல் வெளிகளின் இடை யிடையே கிடக்கும் பற்றைகளில் தங்கி வேட்டையாடியும், வழிச்செல் வோரை வழிபறித்தும், முல்லை நிலத்தே சென்று பசுக்களைக் கொள்ளை யடித்தும் வாழுநர். தமிழ் இலக்கியங்களில் இப் பாலைநில மக்களின் கொடிய செயல்கள் பலவாறு வருணிக்கப்பட்டுள்ளன. அவைகளிற் கூறப் பட்டவைகளின் சுருக்கம் வருமாறு: மறவர் செம்மறிக்கடாவின் கொம்பு போன்று முறுக்கிய மீசையும் புலியின் மீசை போன்ற தாடியுமுடையர்; நெருப்பில் நீர் விட்டாற்போன்ற நிறத்தினர்; செருப்புத் தொட்ட காலினர்; இப்பியும் சோகியும் கலந்து கோத்து அணிந்த கழுத்தினர்; முறுகிய சடை யினர்; வில்லும் அம்பும் கொண்ட கையினர்; வழிப்போக்கரை எதிர்ப்பார்த் திருக்கும் இயல்பினர்; தறுகண்மையே உருக்கொண்டாலன்ன கொடுமையர்; இவர்கள் வழிச்செல்லும் வணிகர் கூட்டத்தவரின் தலைகளைக் கொய்து அவர்களின் விலையுயர்ந்த பண்டங்களைக் கொள்ளையிடுவர்; அப் பண்டங்களைச் சிறு விலைக்கு விற்பர்; வழிபோக்கரின் கட்டுச் சோற்றைப் பறித்துச் சீலை உறியிற் பத்திரப்படுத்துவர்; வணிகரிடம் கொள்ளை கொண்ட பெண்களணியும் மேகலாபரணங்களையும் அசோகந் தழையையும் உடுப்பர். கையிற்பட்ட வழிப்போக்கரை ஆடென நினைந்து காளிக்கு வெட்டிப் பலியிடுவர். அரம்போன்ற கற்களுடைய பாலை நிலத்தே இறந்தவர்களை இட்டு மூடிய கற்கும்பங்கள் பல கிடக்கும். தட்பக் காலத்தும் வெம்மை தோன்றும் அவ்விடத்து வறந்த சுனைகளும் ஆறுகளும் கூவல்களும் காணப்படும்.1 மறவரின் குடில் வீடுகள் எலியும் அணிலும் நுழையாதபடி ஈந்தின் ஓலைகளால் வேயப்பட்டிருக்கும். மறப்பெண்கள் பாரையைக்கொண்டு எறும்புப் புற்றுகளைக் கிண்டிப் பெற்ற புல்லரிசியை முற்றத்தே கிடக்கும் நில உரலிற் றீட்டி, கிணற்று நீரை மொண்டு பானையில் உலைவார்த்து ஆக்கிய சோற்றை உப்புக்கண்டத்தோடு தேக்கிலையில் உண்பர். மறவர் கூட்டமாக வாழும் இடங்கள் பறந்தலை எனப்படும். இக் குடியிருப்பு ஊகம்புல்லால் வேய்ந்த மதிலாற் சூழப்பட்டிருக்கும். தலை வாயிலில் அம்புக் கட்டும் பறையும் தூங்கும்; வாயிலிடத்தே சங்கிலியிற் கட்டிய, நாய் நிற்கும். இந் நிலத்துக்குத் தெய்வம் காளி. கொற்றவை விந்தை, காடுகிழாள் என்பவையும் காளியின் மறுபெயர்கள். காளி என்பது கறுப்பி என்னும் பொருள் தரும் பெயர். காளிக்கு நரபலியும் பிற உயிர்ப்பலியு மிடப்படும்.1 குறவர் மலையில் வாழும் குறவர் அலைவதும் அலையாதிருப்பதுமாகிய வாழ்க்கையினர். அவர்கள் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடினர்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோலை உடுத்தினர். அவர் மகளிர் மரவுரி தழை உடைகளை அணிந்தனர். ஆகவே, மன்றற்காலங்களில் மண மகன் மணமகளுக்குத் தழைகளாலும் பூக்களாலும் கட்டிய உடைகளைக் கொடுக்கும் வழக்கு உண்டாயிற்று. இது மலையாளத்தில் முண்டு கொடுக்கும் வழக்கமாக இன்றும் நிலவுகின்றது; மற்றைய நாடுகளில் கூறை கொடுக்கும் வழக்கமாக நிலைபெறுகின்றது. மகளிர் மூங்கிலை வார்ந்து கூடை முடைந்த னர். இத் தொழில் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றது. அவர் களின் குலதெய்வம் முருகன். முருகக்கடவுள் ஆதிகாலம் முதல் மலை உச்சிகளில் வைத்து வணங்கப்பட்டார். முருக வழிபாட்டிற்குரிய ஆடல் வேலன் ஆடல் அல்லது வெறியாட்டு எனப்படும். முருக வழிபாட்டிற்குரிய இவ்வாடல் முருகபூசை செய்வோனால் ஆடப்பட்டது. முருகக்கடவுளைப் போல வேலைக் கையில் வைத்திருத்தலால் அவனும் வேலன் எனப்பட் டான். திருமுருகாற்றுப்படை என்னும் சங்க நூலில் குறமாது முருக வழிபாடு செய்யும் முறை நன்கு கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: மலையிடத்துள்ள அகன்ற நகரிடத்தே குறமாது கோழிக்கொடியை நட்டு அதற்கு நெய்யும் வெண் சிறு கடுகும் அப்புவாள்; வழிபாட்டிற்குரிய மந்திரங்களை உச்சரித்து அழகிய மலர்களைத் தூவுவாள்; மாறுபட்ட இரண்டு நிறமுடைய பட்டாடைகளை உள்ளொன்றும் புற மொன்றுமாக உடுப்பாள்; சிவந்த நூலைக் காப்பாகக் கையிற் கட்டுவாள்; வெண்பொரி களைத் தூவுவாள்; இரத்தத்தோடு கலந்த வெள்ளரிசியைப் பலியாக இடுவாள்; செவ்வலரி மாலைகளையும் பிற மாலைகளையும் ஒரே அளவாக நறுக்கி அசையும்படி தூக்குவாள்; மலைப்பக்கத்தே உள்ள ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் வருத்தாதொழிக என வாழ்த்தி நறிய தூபங் காட்டுவாள்; மலையிடத்து வீழ்கின்ற அருவியோடு வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கச் சிவந்த மலர்மாலைகளைத் தூவி உதிரமளைந்த தினையைப் பரப்பி முருகக்கடவுள் மகிழும்படி வழிபாடு செய்வாள். முருகனாற் குறைநேர்ந்த பெண்களுக்கு முருக பூசை செய்யும் வேலன் வெறியாடி ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அவ் விரத்தத்தைத் தொட்டு அவன் நெற்றியிற் றடவுவதும் வழக்கு. குறிஞ்சி நிலத்தைப்பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் சங்கநூல் களிற் காணப்படுவன சில வருமாறு:- 1மலையிடத்தே பலாவும் வாழையும் செழித்து வளரும். குறவரின் வீடுகள் புல்லால் வேய்ந்த சிறு குடிசைகள். வீட்டின் முற்றத்தே வேங்கை மரமும் பலாவும் நிற்கும். குறவர் அம்மரங்களின் கீழ் இருந்து தேட்கடுப்புப் போன்ற நாட்பட்ட கள்ளைக் குடித்து, சந்தனக்கட்டை விறகாற் சுட்ட இறைச்சியை யுண்டு மகளிரோடு குரவையாடுவர். மலை முகடுகளிலே தேன்கூடுகள் தொங்கும். குறவர் உயர்ந்த மூங்கில் ஏணிகளைச் சார்த்தி ஏறி அத் தேன் கூடுகளை அழித்துத் தேன் கொள்வர். இராக்காலத்தே வேட்டை யாடச் சென்ற குறவன் பகற்காலத்திற் புலித்தோல் மீது படுத்து உறங்குவான். கள்ளை உண்ட குறவன் இராக்காலத்தே பரண்மீதிருந்து தினைப்புனத்தைக் காவல் காக்கக், குறத்தி சந்தனம்பூசிய தனது கூந்தலைத் துளர்ந்து ஆற்றிக் குறிஞ்சிப் பண்பாடுவாள். தினைப்புனத்தை மேயவந்த யானை அவ் வோசையைக் கேட்டு மெய்மறந்து தூங்கும். தினைப்புனத்தை மேயவரும் பன்றி, குறவன் பரண்மீது மாட்டிய கொள்ளியைக் கண்டுநிற்கும். குறச் சிறுமியர் கையிற் சங்குவளையணிந்து2 முதுகிற் றூங்கும்படி கூந்தலைப் பின்னி விடுவர்; தினைமீது விழும் கிளிகளைத் தட்டை குளிரி முதலிய கருவிகளைத் தட்டியும், அசோகந் தளிரை ஓச்சியும், ஆயோ எனச் சத்த மிட்டும் ஓட்டுவர்; அசோகிலும் தாழையிலும் கட்டிய ஊசல்களில் ஏறியாடு வர்; வேங்கைப் பூவைக் கொய்து புலிபுலியெனச் சத்தமிடுவர். சிறுமிக்குத் தெய்வத்தால் நேர்ந்த குறையைப் போக்க அன்னை பூக்களைப் பலியாகத் தூவி வீட்டைக் காவல் செய்து வெறியாடும் பொருட்டு முருக பூசை செய்வோனை வீட்டுக்கு அழைப்பாள். பலாப் பழத்தாற் சமைத்த கள்ளைக் குறத்தியர் வார்க்க வார்க்கக் குறவர் வாங்கி உண்டு மகிழ்வர். யானைகளின் கொம்பைப் பெறுதற்குக் குறவர் யானைகளை வேட்டையாடுவர். மின்மினி மொய்த்திருக்கும் கறையான் புற்றைக் கரடி இராக்காலத்தே இருந்து தோண்டும்; அக்காட்சி கொல்லன் இரும்பில் வேலை செய்வது போன்றது. யானையை வேட்டையாடப் புலி பதுங்கியிருக்கும். பிறைபோன்ற கொம் புடைய பன்றி பறைக்கண் போன்று நிறைந்த சுனையிடத்தே நீரைப் பருகிச் சேம்பின் கிழங்கை உண்ணும். சிவந்த ஆரமுடைய கிளி, பறித்துத் தூக்க மாட்டாது போட்டுச் சென்ற சாமைக் கதிரைக் கோழிகள் நின்று உண்ணும். முற்றி விளையும்படி கள் மூங்கிற் குழாய்களில் வைக்கப்பட்டிருக்கும். குறவர் கடப்ப மரத்திற் கொடிகட்டி மாலை தூக்கிப் பலவகை வாத்தியங் களை ஒலித்துக் கூத்தாடி முருகனை வழிபடுவர். வேளாளர் ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம் கபிலை பிழா இடா முதலியவைகளால் இறைத்துச் சாமை அவரை துவரை முதலிய தானிய வகைகளையும் விளைவித்தனர். அதற்கு அப்பால் பருத்தி விளைந்தது. கற்காலத்திலேயே இந்திய மக்கள் பருத்தி ஆடை உடுத்தார்கள். அக் காலத்தில் மற்றைய நாடுகளில் மக்கள் தோல் கம்பளி சணல் ஆடைகளை உடுத்தினர்; அல்லது ஆடையின்றி யிருந்தனர். ஆற்றுச் சமவெளிகளில் ஆடை நெய்தற்கு வேண்டிய கற்காலப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. இதனால் அக்கால மக்கள் ஆடை நெய்வதில் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்று விளங்குகின்றது. அவர்கள் மரத்தினால் வீடுகட்டி வாழ்ந்தார்கள்; நெற்களஞ்சியங்கள் மரத்தினாற் செய்யப்பட்டன. வண்டியும் மரத்தினாற் செய்யப்பட்டது. வண்டி உரல் உலக்கை தொட்டில் முதலியன இக் காலத்திற் போலவே இருந்தன. இக் காலத் தச்சர் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்று கல்லாற் செய்யப்பட்டவை புதிய கற்காலக் குடியிருப்புகளிற் கண்டெடுக் கப்பட்டன. இந் நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக் கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள்.1 பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான். இது தமிழர் ஆரியர் கலப்பு நேர்ந்த பிற்கால வழக்கு. ஆரியர், இந்திரன் தேவர்களுக்கு அரசன் எனக் கருதினர். வேளாண் மக்கள் இந்திரனுக்கு விழாக்கள் சிறப்பாக எடுத்தனர். இவ்வகை விழாக்களைப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் அழகுறக் கூறுகின் றன. வேளாண் மக்கள் உழுதுண்போர் உழுவித்துண்போர் என இருவகை யினர். இவருள் உழுவித்துண்போர் வேள் எனப்பட்டுக் குறுநில மன்ன ராகவும் ஆட்சிபுரிந்தனர். இவ் வகுப்பினர் அரசனால் கணிக்கப்பட்ட பெரு மக்களாவர். மாடு ஒருகாலத்திற் செல்வமாக மதிக்கப்பட்டது. பின்பு தானியம் போன்ற உணவுவகைகள் செல்வமாக மதிக்கப்பட்டன. அதிக உணவுப் பொருள்களை வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான். வேளாண் மக்கள் அதிக தானியங்களை விளைவித்துச் செல்வராய் வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுவாயில்களையும் அமைத்தனர். அவர்களுக்கு வேண்டிய மட்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள் ஏர்த்தொழிலுக்கு வேண்டிய கலப்பை நுகம், கொழு முதலியன, அவர் மகளிர் அணியும் ஆபரணவகை, உடுக்கும் ஆடைகள் இவையும் இவை போன்றவைகளும் செய்துதவும் தொழிலாளர் மருதநிலத்தே வந்து தங்கினர். பிற நிலங்களில் வாழ்வோர் தம் நாடுகளிற் கிடைக்கும் பண்டங்களைத் தானியங்களுக்குப் பண்டமாற்றுச் செய்ய வந்தனர். இவ்வாறு மருதநிலம், மக்கள் போக்குவரத் தும் ஆரவாரமுமுடைய நகரமாக மாறிற்று: இங்குப் பொழுது போக்குக் குரிய ஆடல், பாடல், விழா முதலியன நிகழ்ந்தன, இன்பக்கலைகள் வளர்ச்சி யுற்றன. ஒவ்வொரு தொழிலாளரும் வாழும் வீதிகளுடைய நகரங்கள் இங்கே தான் தோன்றின. தமிழ் இலக்கியங்கள் மருதநில மக்களின் உண்டாட்டுக் களியாட்டு நீராட்டு விளையாட்டுகளையெல்லாம் அழகாகக் கூறுகின்றன. பரதவர் கடற்கரை மக்கள் மீன் பிடித்தும் உப்பு விளைத்தும் வாழ்ந்தனர். அவர்கள் உப்புக் கண்டத்தையும் உப்பையும் தமக்கு வேண்டிய நெல்லுக் கும் பிறபொருள்களுக்கும் பண்டமாற்றுச் செய்தனர். அவர்கள் மரத்தைக் குடைந்து குடைவு தோணிகளையும் பெருங்கடலிற் செல்லத்தகுந்த நாவாய் களையுஞ் செய்தனர். முன்னர் அவர்கள் கரையை அடுத்துத் தோணிகளிற் சென்றனர்; பின்பு கருங்கடல் வழியாகத் தூரதேசங்களுக்குச் சென்று தென்னிந்திய ஆடைகளையும் மரங்களையும் பிறநாட்டுப் பொருள்களுக்கு மாற்றினர்.1 மகளிர் தழையுடை யுடுத்தனர். தந்தையர் கணவர் கொணர்ந்த மீன் இறால் என்பவைகளைக் காயவிட்டுப் புன்னை நிழல்களிலிருந்து புட்கள் ஒப்பிக் காவல் காத்தனர். நெய்தல் நிலமக்கள் பனைச் செறிவுகளில் சிறு குடில்களமைத்து வாழ்ந்தனர். அவை புல்லு அல்லது பனையோலை யால் வேயப்பட்டன. அவர்கள் பூரணைக் காலங்களில் சுறாக்கோடு நட்டுப் பூமாலை அணிந்து கூத்தாடி வருணனை வழிபட்டனர்; தலையில் தழை களை அணிந்தனர். வருணன் தமிழர் கடவுளென்றும் இக் கடவுள் ஆரிய மக்களால் வழிபடப்பட்டதென்றும் முன் காட்டப்பட்டது.1 கடற்கரைத் துறைமுகங்களில் பெரிய பண்டசாலைகள் இருந்தன. இவைகளில் அரேபியா, யவன தேசம் முதலியவைகளிலிருந்து வந்த பண்டங்கள் சுங்கங்கொள்ளும் பொருட்டு அடுக்கிக் கிடந்தன. பிற நாடு களுக்கு அனுப்பும் பொருட்டு வண்டிகளிலும் கழுதைகளிலும் பொதிமாடு களிலும் கொண்டுவரப்பட்ட மூடைகள் அரசமுத்திரை குத்தப்பட்டுப் பண்டசாலையின் இன்னோரிடத்து அடுக்கப்பட்டுக் கிடந்தன. பண்டசாலை யில் அரச ஊழியம் புரியும் கணக்கரும் சேவகரும் பலர் கடமை புரிந்தனர். கடற்கரைத் துறைமுகங்களில் வாணிகம் வளர்ச்சியடைந்தது. அங்கு வணிகர் கூடினர். பெரிய மாளிகைகள் எழுந்தன. வண்டிகள் செல்வதற்கு நல்ல வீதிகள் அமைக்கப்பட்டன. மாளிகைகள் குன்று நிமிர்ந்தது போன்ற உயரமுடையனவாகவும் பல சாளரங்களோடு கூடிய மாடிகளும் ஓடு கற்றை முதலியவற்றால் வேயப்படாது மூடு சாந்திட்டு நிலாமுற்றங்கள் விடப் பட்டனவாயுமிருந்தன. அவை ‘வேயா மாடம்’ எனப்பட்டன. சாளரங்கள் மானின் கண்போன்றனவாகச் செய்யப்பட்டிருந்தன. கடலிற் செல்லும் மரக்கலங்கள் திசையை அறியும்பொருட்டு உயர்ந்த கட்டிடங்களில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் கலங்கரை விளக்கங்கள் எனப்பட்டன. இக் கலங்கரை விளக்கங்கள் அலக்சாந்திரியாவில் தாலமி சோதர்1 அமைத்த வெளிச்ச வீட்டுக்குப் பன்னெடுங்காலம் முற்பட்டது. கப்பலோட்டும் மாலுமி மீகான் எனப்பட்டான். மீகான் என்பதே மீகாமன் எனத் திரிந்து வழங்கும். சங்க நூல்களில் நெய்தல் நிலத்தைப் பற்றியும் அந் நிலமக்களைப் பற்றியும் காணப்படுவன சில வருமாறு: குறச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து கருவாட்டைக் காவல் காத்துப் புள்ளோப்புவர். உமணர் எருதுகள் பூட்டிய வண்டிகளில் உப்பை யேற்றிச் சென்று விற்பர். பனைமரங்களில் இராக்காலத்தே அன்றிற் பறவைகள் தங்கும். இரவில் மீன்பிடிக்கும் பரதவரின் திமில் விளக்குப் பாசறையில் உறையும் அரசரது யானைமுகத்து நெற்றிப்பட்டம்போல் விளங்கித் தோன்றும். நாவாய்களின்மீது பெரிய கொடிகள் அசையும். கழியிடத்தே விளைந்த உப்பை உமணப் பெண்கள் எடுத்து நெல்லுக்கு உப்பு என விலை கூறி விற்பர். பரதவர் சிறுமியர் உப்புக் குப்பங்களில் ஏறி நின்று கடலில் வரும் திமில்களை எண்ணுவர். பெண்கள் மாந்தழை நெய்தல் இலை முதலியவற்றை உடுப்பர். உப்பு வாணிகரோடு அவர்கள் வளர்க்கும் மந்தியும் கூடச் செல்லும். பரத்தியர் மீன்களை விலைபகர்ந்து செல்வர். சிறுமியர் கடற்கரையில் வண்டற் பாவை செய்தும், சிற்றில் புனைந்தும் சிறுசோறட்டும் விளையாடுவர். பரதவர் முற்றத்தே சுறாக் கிழித்த வலை தூங்கும். கோன் அரசியல் தமிழரிடையே மிகப் பழமைபெற்றது. கோன், ஏந்தல், வேந்தன், மன்னன், குரிசில், இறைவன், வள்ளல், அண்ணல், குறுநிலமன்னர் முதலிய பழந்தமிழ்ச் சொற்களே இதற்குச் சான்று. அரசன் குடிகளை ஆள்வது ஆட்சியெனப்பட்டது. ஆள் என்பது மக்கள் ஒருமை. ஆட்சி என்பது இடையன் மந்தைகளைக் காப்பதுபோல மக்களைப் பகைவரினின்றும் காப்பது எனப்பொருள்பட்டது. ஏந்தல் என்பது போலவே வேந்தன் என்ப தும். ஏந்து என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். அரசனுக்குப் பழைய பெயர் கோ அல்லது கோன். இதற்குப் பசுக்களை மேய்ப்பவன் என்பது பொருள். இது, ஆட்சி முதலில் முல்லை நிலத்தில் ஆரம்பித்து வளர்ச்சி யடைந்ததென்பதை விளக்கும். இந் நிலைமையிலேயே மக்கள் மாடு பசு எனப்படும் செல்வத்தைத் தேட ஆரம்பித்தார்கள். ஆயர் தமது செல்வ மாகிய மந்தைகளுடன் புற்றரைகளிற் றங்கி வாழவேண்டியவர்களாயினர். மற்றச் செல்வங்கள்போலல்லாமல் ஆடுமாடுகள் கன்றுகளை ஈன்று பெருகும் இயல்பின. ஆயரின் புதல்வர் தங்குடும்பத்துக்குரிய மந்தை களைப் பிரித்துக்கொள்ளலாம். மேய்ச்சல் நிலங்களைப் பிரித்தல் முடியாது. மேய்ச்சல் நிலங்கள் ஓரளவுக்குமேற் சிறியவையாக்கப்பட்டால் அவை ஆடு மாடுகள் மேய்வதற்குப் பயன்படா. ஆகவே குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழும் முறை உண்டாயிற்று. குடும்பத்தின் தலைவன் அதிகார முடையவனானான். பின் பல குடும்பங்களுக்கு அதிகாரமுடைய ஒருவன் தலைவனானான். அவன் சிறப்பாகக் கோன் எனப்பட்டான். இவ்வாறு அரசன் உண்டாயினான். அரசன் வாழும் மனை கோட்டை எனப்பட்டது. அரசனது அதிகாரம் உயர உயரப் போரும் வளர்ச்சியடைந்தது. கோட்டையைச் சூழ்ந்து மதில் அரண் செய்தது. ஆகவே, கோட்டை, அரண்மனை எனப்பட்டது. மதில் மண்ணோடு கேப்பைக் கழி கலந்து கட்டப்பட்டது. இது செங்கல் மதிலினும் வலிவுடையது. கோட்டையைச் சூழ்ந்து அகழ், அகப்பா, அல்லது அகழி இருந்தது. இச் சொற்கள் அகழ் என்னும் அடியாகப் பிறந்தன. உடு, ஓடை, கயம், பரிகம், பரிகை, பாம்புரி என்பனவும் அகழின் மறுபெயர்கள். பாம்பின் உரி பாம்பை நெருங்கி மூடியிருப்பதுபோல் இருத்தலின் அகழ் பாம்புரியெனப் பெயர் பெற்றிருத்தல் கூடும். கோட்டையின் வாயில் கொட்டி எனப்பட்டது. மதிலின் பின்புறத்தே நிலத்திலிருந்து மேலே யெழுந்து மேடைபோலிருப்பது கொத்தளம் எனப்பட்டது. மதிலின் மீது வீரர் மறைந்திருந்து அம்பு எய்தற்கு அமைக்கப்பட்டுள்ள மறைவிடம் ஞாயில் ஏவறை எனப்பட்டது. அரண்மனையிற் பல அறைகள் இருந்தன. தானியக்களஞ்சியம் கொத்தறை எனவும், அரசன் வீற்றிருக்கும் மண்டபம் கொலுவிருக்கை எனவும், ஆயுதங்கள் வைக்கும் அறை ஆயுதக் கொட்டில் எனவும் கூறப்பட்டன. கொலுவிருக்கை கொடி துகில் தோகை பூ இலைகளால் அலங்கரிக்கப்பட்டது. அரசன் வட்டித்த கூர்நுதி முடி யணிந்தான். அரசரும் வள்ளல்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அரசன் அரையில் தங்கப் பட்டிகையும், கையிற் கடகமும், கமக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையில் சதங்கைகளையுடைய கழலும், கழுத்தில் பவள முத்து மாலைகளும், காலில் வீரச்செயல் பொறித்த வீர தண்டையும், காதிற் குண்டலங்களும் அணிந்திருந்தான். அவன் கொலுவிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அரசன் சாய்வதற்கு அரியணையிருந்தது. அவனைச் சூழ்ந்து அடியார், உழையர், புகழ் கூறும் அகவர், கட்டளைகளை வெளிப் படுத்தும் வள்ளுவர், அரசனது வீரம் கொடை ஆகியவற்றைப் பாடும் புலவர், அண்ணல், வள்ளல் முதலிய பெருமக்கள் இருந்தனர். அரசன் குடிமக்களின் குறைகளை நேரிற் கேட்டு முறை செய்தான். அவன் பரிசனர் புடைசூழ வீற்றிருந்தான். அரி, கவரி, குயவு, கூவிரம், திகிரி, வையம் என்பன தேரின் பெயர்கள். ஆகவே, அக் காலத்துப் பலவகைத் தேர்கள் இருந்தனவென்று தெரிகிறது. தேர்கள் யானை அல்லது எருதுகளால் இழுக்கப்பட்டன. தேரின் நடுப்பாகம் தட்டு அல்லது நாப்பண் என்றும், அதன் தட்டுப் பார் என்றும், தேரைச் சுற்றியுள்ள பலகைகள் கிடுகு என்றும், சக்கரம் ஆர் என்றும், தேரின்மீது ஏறுதற்கு அமைக்கப்பட்ட படிகளோடு கூடிய மேடை, முட்டி அல்லது பிரம்பு என்றும் வழங்கின. தேர் ஆடை களால் அலங்கரிக்கப்பட்டது. அரச வருவாய் அரசனுக்குரிய நிலங்களால் மாத்திரமன்று. வரி, சுங்கம், திறை, கப்பம் முதலியவைகளாலும் வந்தன. ஆட்சி முல்லை நிலத்திற்றோன்றி மருதநிலத்தில் வளர்ச்சியுற்றது. ஆகவே, அரசனது நகர் பெரும்பாலும் மருத நிலத்திலேயே இருந்தது. பார்ப்பார் எல்லாத் தேசங்களிலும் ஆலயங்களில் கடவுளுக்குப் பலிசெலுத் தும் குருமார் இருந்தனர். அவ்வகையினர் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இவர்கள் பார்ப்பார் எனப்பட்டனர். கோயில் தொடர்பான கருமங்களைப் பார்த்தலின் இப்பெயர் அவர்களுக்கு இடப்பட்டிருக்கலாம். கடவுள் வழி பாட்டினும் பிறவகையினும் இவர்கள் பொதுமக்களுக்கு அறிவு கொளுத்தி வந்தனர். இம் முறையில் இவர்கள் மக்களின் புரோகிதருமானார்கள். புரோகிதம் என்பது புர என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். புரோகிதனாகிய பார்ப்பானே அகப்பொருட்டுறையில் வரும் பார்ப்பனப் பாங்கனாவன். புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவனாகவும் இருந்தான். தொல்காப்பியத்தில், “நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய,” எனக்கூறப்படும் அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை. இது: 1“பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் மானுரி மடியு மந்திரக் கலப்பையும் கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த கூறை வெள்ளுரிக் குண்டிகைக் காவினர்” (உதயணன் கதை) என்பதால் நனி விளங்கும். காதல் முற்காலப் புலவோர் காதல், போர் என்னும் இரு துறைகளிலும் பாடல்கள் புனைந்தனர். இப் பாடல்களிற் காணப்படும் ஒழுக்கங்கள் வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டு வருவன. மகளிரும் மைந்தரும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்துக் கிழவன் கிழத்தியராதலே பண்டை நாள் மன்றல். பிறரறியாவகை சிலநாட் கரந்தொழுகும் காதலொழுக்கம் கள வெனவும், பலரறிய மணந்து கிழவன் கிழத்தியராய் இல்லிருந்து நல்லறம் நடத்தும் ஒழுக்கம் கற்பெனவும்படும். கூடிய காதலர் பிரிந்தவிடத்து இரங்கல், பிரிந்தவர் வருவாரென்று அவரை எதிர்நோக்கி ஆற்றியிருத்தல், ஒருவரோடு ஒருவர் பிணங்கி ஊடுதல் என்பன போன்ற பொருள்களைப் பலவாறு கற்பித்துப் பண்டைப் புலவோர் பாடல் புனைந்தனர். மலைநாட்டு மகளிரும் மைந்தரும் ஆதிகாலத்திற் களவிற்கூடிப் பின் மணந்து கொண் டனராதலின் புணர்தலும் அது காரணமாயுள்ள பொருள்களும் குறிஞ்சிக்கு உரித்தாக்கப்பட்டன. முல்லை நிலத்தில் மணங்கள் முதியவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டன. முல்லைநிலமகளிர் காலையில் மந்தைகளுடன் சென்ற காதலர் மாலையில் மீளும் வரையும் அவரை எதிர்பார்த்திருத்தலின் முல்லைக்கு இருத்தல் உரித்தாக்கப்பட்டது. கடற்கரை மகளிர் மரக்கலங் களிற் றொலைவிடஞ் சென்ற கணவரை நினைந்து இரங்கியிருத்தலின், இரங்கல் நெய்தற்கு உரித்தாக்கப்பட்டது. பொருள் தேடுதல் அரசர் ஏவலை நிறைவேற்றுதல் முதலிய ஏதுக்களை முன்னிட்டுக் காதலர் பாலைநில வழியே செல்லுதலின், பாலை பிரிதலுக்கு உரித்தாக்கப்பட்டது. இவ் வொழுக்கங்கள் எல்லாம் எல்லா நிலங்களிலும் நிகழத்தக்கன. மன்றல் அக் கால மன்றல் புரோகிதர் இன்றி நடந்தன. கணி எனப்பட்ட சோதிடர் கலியாணத்துக்கேற்ற நல்ல நாளை ஆராய்ந்து கூறினர். சங்க நூல் களிற் காணப்படும் மன்றல் முறை வருமாறு: உரோகிணி சந்திரனோடு கூடும் பூரணை நாளில் கலியாண முகூர்த்தம் வைக்கப்பட்டது. வீட்டின் முற்றத்தே கால்கள் நட்டு அழகிய பந்தல் இடப்பட்டது; தரையில் ஆற்றின் வெண்மணல் பரப்பப்பட்டது. அழகிய பூமாலைகளையும் இலைகளையும் தூக்கிப் பந்தல் அலங்கரிக்கப் பட்டது. பருப்பு இட்டு ஆக்கிய சோற்றுக்குவியல் பலர் கூடியிருந்து உண்ட பின்னும் மிகுந்து கிடந்தது. பெரிய மேளங்களும் மணவாத்தியங்களும் ஒலித்தன. அறுகங்கிழங்கை நூலாற் சுற்றிச் செய்த தெய்வ உருவம் வாழை யிலையின் மீது வைத்துப் பூவால் அலங்கரிக்கப்பட்டது. விளக்குகள் கொளுத்தப்பட்டன. கலியாணத்தைப் பார்ப்பதற்குப் பூப்போன்று அழகிய கண்களையுடைய பெண்கள் வந்து கூடினார்கள். புதிய நீர்க்குடங்களைத் தலையிலும், கையில் புதிய வாயகன்ற பாலிகைச் சட்டிகளையுமுடைய பெண்கள் வந்தார்கள். அப்பொழுது பெண்கள் ஆரவாரஞ் செய்தனர். அவர்கள் அப் பாத்திரங்களை ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றினர். புதல்வரைப் பெற்றோரும் தாலிதரித்தோருமாகிய அழகிய நான்கு முதுபெண்கள் அந் நீர்க் குடங்களை வாங்கி மணமகளை முழுக் காட்டினர். மணமகளின் கரியகூந்தல் நீருடன் வந்த நெல்லாலும் மலராலும் மறைந்தது. அம் முதுபெண்டிர் “நீ கொண்டானுக்கினியளாய் அவனைப் பேணி இனிது வாழுதி” என வாழ்த்தினர். மணமகளுக்கு ஆபரணங்கள் நிறையப் பூட்டப்பட்டன. அவ்வாபரணப் பொறையைப் பொறுக்கமாட்டா மையால் அவளுக்கு வியர்வை தோன்றிற்று. அழகியபெண்கள் விசிறி கொண்டு வீசினர். குற்றமில்லாத முகூர்த்தம் வந்தது. தமர் விரைவில் வந்து கிழத்தியைக் கிழவனுக்கு அளித்தார்கள். மருதநிலத்தே ஆடல் பாடல்களிற்றேர்ந்த கூத்தியர் விறலியர் முதலியோர் வாழ்ந்தனர். இவர்கள் பரத்தைமையினர். இவர்கள் நிமித்தம் மருதநிலத் தலைவன், தலைவியர்களுக்கிடையில் ஊடல், புலவி முதலிய பிணக்கங்கள் நேர்வதுண்டு. கைக்கிளை, பெருந்திணை என்னும் இரு வகைக் காதல்களும் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. கைக்கிளை என்பது தம்மாற் காதலிக்கப்பட்ட மகளிர் தம்மைக் காதலியாதவிடத்து மைந்தர் தம் காதலை வெளிப்படுத்திப் பலகூறுதல். பெருந்திணையாவது ஆடவன் காதலியாதவிடத்து அவனைக் காதலிக்கும் ஒருத்தி காதல் மிகுதி யால் பல மொழிந்து கரைதல். தாம் காதலித்த மகளிர் தம்மைக் காதலித்து மணக்க உடன்படாதவிடத்து மைந்தர், பனங்கருக்கினாற் செய்த மணி கட்டிய குதிரை மீது ஏறி ஆவிரம்பூ, எருக்கம்பூ, எலும்பு மாலைகளைச் சூடிப், பெண்ணின் வடிவை ஓலையில் எழுதிக், கையிற்பிடித்து (சிறுவர் இழுக்க) வீதியில் ஊர்தலும் பெருந்திணை எனப்படும். இது நல்லது இனியது எனப் புலவர் நாட்டிய புலநெறி வழக்கென்ப. போர் தமிழ்நாட்டு மன்னர் பிற அரசரைக் கீழ்ப்படுத்தித் தம்மாணையை மேம்படுத்தற் பொருட்டுச் செருக்கள் பல மலைந்தனர். ஒவ்வோர் அரச னுக்கும் வெவ்வேறு கொடியும் மாலையும் இருந்தன. போருக்குச் செல்லும் போது வீரர் தத்தம் வேந்தர்க்குரிய மாலைகளையணிவர். மாற்றரசரின் நிரைகளைக் கவர்தலே முற்கால அரசர் போர் தொடங்கும் முறையாகும். துரியோதனன் விராடனின் நிரையைக் கவர்ந்தது பாரதத்திற் கூறப்படு கின்றது. மாற்றரசர் நிரையினைக் கவரச்செல்லும் வீரர் தம் முடியிடத்தே வெட்சிப் பூவைச் சூடுவர். ஆகவே, நிரை கவர்தல் வெட்சியெனப்பட்டது. நிரை கவர்தலன்றிப் பகையரசனின் நிலத்தைக் கவர்தற் பொருட்டுப் படை யெடுத்துச் செல்லுதல் வஞ்சியென்றும், கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞை என்றும், எதிர்த்துப் பொருதல் தும்பை என்றும், வெற்றிபெறுதல் வாகை என்றுங் கூறப்பட்டன. அவ்வப்போது வீரர் அவ்வப் பூக்களைச் சூடிய காரணத்தால் அவ் வொழுக்கங்களுக்கு இப் பெயர்கள் இடப்பட்டன. புலவோர் அரசனின் புகழைப்பாடுதல் பாடாண் எனவும், உலக நிலையாமையை உணரும் பகுதி காஞ்சி எனவும்பட்டன. போர் செய்யும் நிலம், களரி, பறந்தலை, முதுநிலம், களம் எனப்பட்டது. படைகள் உண்டை, ஓட்டு, அணி, தானை எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. முன்னணிப்படை அக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரை என்றும்; பின்னணிப்படை கூழை என்றும் வழங்கின. பிற்காலங்களில் தேர், யானை, குதிரை, காலாளெனப் படைகள் நான்காகப் பிரிக்கப்பட்டன.1 குதிரைப் படை ஆரியர் வருகைக்குப்பின் தோன்றியிருத்தல் கூடும். மொகஞ்சதரோ மக்கள் குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யானைவீரன் அம்பு துளைக்கமுடியாத புலித்தோற் கவசம் பூண்டு யானைமீது வீற்றிருந்தான். யானை கருங்கடலிற் செல்லும் நாவாய்போல வும், உடுக்கூட்டத்தின் நடுவே செல்லும் திங்களைப்போலவும் சென்றது. அதனைச் சூழ்ந்து போர்மறவர் சுறாக்கூட்டங்கள் போன்று சென்றனர். யானைகள் நன்றாகப் பழக்கப்பட்டுக் கந்துகளிலும், தறிகளிலும் ஆலை யிடத்தே கட்டப்பட்டன. அவைகளுக்கு வெல்லத்தோடு கலந்த அரிசி ஊட்டப்பட்டது. யானைகளும், குதிரைகளும் பழக்கப்படுமிடம் செண்டு வெளி எனப்பட்டது. குளங்களிற் குளிப்பாட்டியபின் அவைகளின் முகம் நிறப்பொடிகளால் அலங்கரிக்கப்பட்டபின் நெற்றி, ஓடை என்னும் நெற்றிப் பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டது. தேரில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் பூட்டப்பட்டன. தேரோட்டுவோன் வலவன் அல்லது பாகன் எனப்பட்டான். தேரில் பலவகை உருவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அது பலவகை நிறம்பூசிய தடிகளாலும் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதன்மீது துகிற்கொடிகள் அசைந்தன. வீரர் பலவகை ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுட்பல கற்காலந்தொட்டு மாறுபடாமல் வந்தன. அவை எறுழ், தண்டு, வில், கொக்கரை, சிலை, தடி, தவர், குணில் முனி முதலியன. நூற்றுக்கணக்கான ஆயுதங்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.1 அவை கைவிடும்படை, கைவிடாப்படை என இருவகையின. வில் நாணில் அம்பு வைத்தெய்யுமிடம் உடுவெனப்பட்டது. தற்காப்புக்குரிய ஆயுதம் கேடகம்; அது கிடுகு கடகம் தட்டு பரிசை பலகை பறை வட்டணை பட்டம் தோல் தோற்பாரம் எனப் பலவகையினது. மெய் காக்கும் சட்டை மேலகம் அரணி ஆசு எனவும், கைக்கவசம் கைப்புடை எனவும் அறியப்பட்டன. இசைக் கருவிகள் போரிலே யானை குதிரை காலாள் முதலிய படைகளை ஊக்க மூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. இயம் வாத்தியம் வாச்சியம் என்பன இசைக்கருவிகளைக் குறிக்க வழங்கும் பொதுப்பெயர்கள். அவை தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி மிடற்றுக்கருவி என நால்வகைப்படும். குரல், துத்தம், கைக்கிளை உளை இளி விளரி தாரம் என்பன பாடுமிடத்துப் பிறப்பிக்கப்படும் ஏழு தமிழ் இசைகளாகும். ஊதப்படுவனவற்றுள் குழல் முதன்மையுடையது. பனை ஆம்பல் கொன்றை முல்லை முதலிய பலவகைக் குழல்களும் இயங்களும் வழங்கின. ஊதப்படும் பெரிய வாத்தியங்கள் காகளம், அம்மியம், சின்னம், கொம்பு, கோடு, இரலை, வயிர் என்பன. நரம்புக் கருவிகளில் முதன்மையுடையது யாழ். ஒவ்வொரு நிலத்தும் ஒவ்வொரு வகை யாழ் வழங்கிற்று. நாலு முதல் பதினான்கு பதினேழு இருபத்தொரு நரம்புகளையுடைய யாழ்கள் வழக்கில் இருந்தன. இவை கைவிரல்களினால் தடவியும் தெறித்தும் வாசிக்கப்பட்டன. பழைய யாழ்கள் உருத்திர வீணை போன்ற வடிவினவாய் மேல் நாடுகளில் வழங்கிய ‘காப்’ (Harp) என்னும் யாழ் போன்று நரம்பு கட்டப்பட்டன என்று கருதலாம். இவ்வகை யாழ்கள் பழைய எகிப்தில் வழக்கிலிருந்தன. ‘காப்’ போன்ற யாழ்கள் பழைய சுமேரியராலும் பயன்படுத்தப்பட்டன. பறைகள் பலவகையின.1 தடாரி, உடுக்கை முதலியன பாணர் கையில் இருந்தன. தட்டை, கரடிகை என்னும் பறைகள் கரடி கத்தும் ஓசையைப் பிறப்பித்தன. பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன அக் காலத்து வழங்கிய பண்கள். இசை நுணுக்கம் பேரிசை சிற்றிசை முதலிய நூல்கள் தமிழிசையிலக்கணங்கூற எழுந்தன என்று பழைய உரைகள் கூறுகின்றன. அந் நூல்கள் இஞ்ஞான்று இறந்துபட்டன. அரசரும் பெருமக்களும் வேட்டையாடுமிடத்து மேற்கூறிய பறைகளைப் பயன்படுத்தினர். நாடு நகரங்களும் மக்கள் குடியிருப்புகளும் அரசன் வாழும் கோட்டையைச் சுற்றிப் பேட்டைகள் இருந்தன. ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு தொழில் புரிவோர் வாழ்ந்தனர். இவ்வாறு பல குடியிருப்புகள் நகரைச் சூழ்ந்திருந்தன. பேட்டைகளைச் சுற்றி நெல் வயல்கள் இருந்தன. செல்வப்பெருமக்கள் வீடுகள் மாடங்கள் அல்லது மாளிகைகள் எனப்பட்டன. இவை மாடிகளுடையனவாய்ச் செங்கல்லினா லும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இறப்பு, இறை, தாழ்வாரம், முன்றில், முற்றம், நிலாமுற்றம், உத்திரம், தூலம், சுற்றுவாரி, தாழ், துடை, முகடு, விடங்கம், திண்ணை, குறடு, ஒட்டுத்திண்ணை முதலியன வீட்டின் உறுப்பு களிற் சில. வீட்டின் முன்னே திண்ணையிருந்தது. திண்ணைக்கு முன்னாற் குறடிருந்தது. திண்ணைகள் மண் கரி சாணி என்பவை கலந்து மெழுகி அழுத்தஞ் செய்யும் கருவியால் மினுக்கப்பட்டன. வீடுகளுக்குக் கதவுக ளும் நிலைகளும் சாளரங்களும் இருந்தன. வீடுகளின் கழிவுநீர் வெளியே செல்லச் சாக்கடை அல்லது சாலகங்களிருந்தன. வீட்டுச் சுவர்களில் முக் கோண வடிவான மாடாக் குழிகள் இருந்தன. இவைகளில் மண்ணினால் அல்லது உலோகத்தினாற் செய்த கைவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. வீட்டிற்குப் பின்னால் கிணறு இருந்தது. கிணற்றுக்கு அப்பால் கொல்லையும், கொல்லையில் ஆடு மாடு நிற்கும் கொட்டிலும், அப்பால் வயலுமிருந்தன. உரல், உலக்கை, அம்மி, திரிகை, குழவி, ஆட்டுக்கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மனை, கட்டுப்பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல் (வீசுபலகை), உறி (சுமைதூக்கு), காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி), பரண், ஞெலிகோல் (நெருப்புண்டாக்குந் தடி), நிறைகோல், கவண், பாய் முதலியன வீட்டுப்பொருள்களிற் சில. வறியோர் குடிசைகளிலும் குடில்களிலும் வாழ்ந்தனர். சுவர்கள் தடிகளை நட்டு மண்ணை எறிந்து எடுக்கப்பட்டன. அவை பெரும்பாலும் வட்டமானவை. கூரையின் முகட்டில் கலசம் வைக்கப்பட்டது. இம் முறையைப் பின்பற்றியே ஆலயங்களும் கட்டப்பட்டன. மன்றம் என்னும் பெருந்தெருக்களும், கோணம் என்னும் குறுந்தெருக்களும் இருந்தன. குறிஞ்சிநிலக் கிராமம் சிறுகுடி என்றும், முல்லை நிலக் கிராமம் பாடி, சேரி என்றும், மருத நிலக் கிராமம் ஊர் என்றும், நெய்தல் நிலக் கிராமம் பாக்கம் என்றும், பாலைநிலக் கிராமம் பறந்தலை என்றும் வழங்கப்பட்டன. அவை களில் கீழோரும் மேலோரும் வாழ்ந்தனர். உடை பருத்தி இந்தியாவில் விளைவது. பஞ்சிலிருந்து நூலும் நூலி லிருந்து ஆடையும் நெய்யப்பட்டன. நீளமாக நெய்யப்பட்ட ஆடைகள் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே அறுவை, துண்டு, துணி என்பன ஆடையின் பெயர்களாக வழங்கின. பட்டு, மயிர் என்பவைகளாலும் ஆடை நெய்யப்பட்டது. நூலிழைகள் சென்ற இடமே தெரியாத மெல்லிய ஆடைகள் அக்கால மக்களால் அணியப்பட்டன. பலவகை ஆடைகளும் உடைகளும் அக்காலத்து வழங்கின என்பதற்கு அவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்களே போதிய சான்று.1 புடைவைகளுக்குப் பலவகைச் சாயங்கள் தோய்க்கப்பட்டன. கரம்பு, பணி, பரணம், பாளிதம் என்பன பட் டாடைகள் சிலவற்றின் பெயர்கள். கம்பளியினாற் செய்யப்பட்ட ஆடைகள் மயிரகம், உயிரகம் எனப்பட்டன. ஆடைகள் அழகிய கரைகளும், பூ வேலைப்பாடுகளும், கண்கவர் வனப்பும் உடையனவாயிருந்தன. ஆட வரும் மகளிரும் கிழித்துத் தைக்கப்படாத உடைகளையே பயன்படுத்தினர். ஊசி, இழை, வங்கி, சன்னல், தையல் முதலிய சொற்களால் அக் காலத்தவர் தையற்றொழிலை அறியார் என்று கூறமுடியாது. இறவுக்கை என்பது இரண் டாயிரம் ஆண்டுகளின்முன் தமிழ் அரசருக்கு மெய்காப்பாளராக அமர்ந் திருந்த கிரேக்க உரோமன் அணங்குகளால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டது. ஏவலாட்களும் வீரரும் சட்டை இட்டனர். குப்பாயம் தைப்பை மெய்ப்பை என்பன சட்டையின் பெயர்கள். மக்கள் (தலைப்) பாகை, குடை, செருப்பு, மிதியடி முதலியவைகளைப் பயன்படுத்தினர். ஆடை ஆபரண அலங்காரம் தமிழ் மக்கள் உடைகளாலும் ஆபரணங்களாலும் தம்மை நன்கு அலங்கரித்தனர். வீட்டுச்சுவர்களில் அழகிய சித்திரங்கள் வரையப்பட்டன. வீட்டு வாயில்களில் இன்றும் பெண்கள் கோலமிடுவது முற்கால வழக்குப் பற்றியது. செல்வப் பெருமக்கள் இல்லங்களில் வண்ணமகளிர் என வீட்டை யும் பெண்களையும் அலங்கரிக்கும் பெண்கள் இருந்தார்கள். வீட்டிற் பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் வேலைப்பாடுடையதாகச் செய்யப்பட்டது. வீட்டுக் கதவு நிலை கைமரங்களின் அந்தலை தூண் என்பனவெல்லாம் அழகிய வேலைப்பாடுகளால் அழகு செய்யப்பட்டன. சுருங்கக் கூறுமிடத்து மக்கள் பயன்படுத்திய எந்தப் பொருளும் அழகிய வேலைப்பாடின்றிச் செய்யப்படவில்லை. தமிழ் நாட்டுச் சிற்பிகள் அழகிய சிற்பங்கள் அமைக்குந் திறமைகளையெல்லாம் கோவில்களிற் காட்டியுள்ளார்கள். மகளிர் கூந்தலைப் பலவாறு கோதியும் பின்னியும் முடிந்து பல வகைத் தலை அணிகளை அணிந்து பூக்களால் வேய்ந்தனர். மேனியைச் சந்தனக்குழம்பு குங்குமம் முதலியவைகளால் அலங்கரித்தனர்;1 மான்மதம் முதலிய வாசனைப் பொருள்களைப் பூசினர்; காதிற்றுளையிட்டுப் பொன் னோலையணிந்தனர். மணம் முடித்த பெண்கள் தாலி அணிந்தனர். முத்து மாலை, பவளமாலை, பொற்சங்கிலி, பாதசரம், சரப்பளி, நெற்றிச்சுட்டி, சங்கு வளை, பொன்வளை, மோதிரம் முதலிய பல அணிகலன்கள் அணியப்பட் டன. யானை குதிரை எருது முதலியவற்றிற்கும் அணிகள் அணியப்பட்டன. பொழுதுபோக்கு விழாக்காலங்களில் ஆடல் பாடல் உண்டாட்டுக் களியாட்டு முதலிய கொண்டாட்டங்கள் நடந்தன. வேட்டையாட்டம், மற்போர், வாட்போர், சிலம்பம், தேர், யானை, மாட்டுப் பந்தயங்கள், அம்மானை, பந்து, 1ஊஞ்சல் விளையாட்டுகள், காடைப்போர், கௌதாரிப்போர், ஆட்டுப்போர் முதலி யன அக்கால மக்கள் பொழுது போக்குகள். இசைபாடுதலும் பொழுது போக்குகளில் ஒன்று. பழைய குறிஞ்சிப்பண் இன்று குறிஞ்சி இராகமாகவும், மருதம் கேதார இராகமாகவும், நெய்தல் புன்னாகவராளியாகவும் வழங்கு கின்றன. ஒவ்வொரு கருமங்களுக்கும் ஏற்ற வெவ்வேறு பறைகள் முழக்கப் பட்டன. மாடு கவரச் செல்வோர் ஏறுகோட் பறையும், வெறியாடுவோர் முருகியமும், திருமணம் கொண்டாடுவோர் மணமுரசும், வேளாண்மை யறுப்போர் நெல்லரிகிணையும், தேரிழுப்போர் தேரோட்டுப் பறையும், அரசனது அல்லது தெய்வத்தின் ஊர்வலத்தை அறிவிப்போர் புறப்பாட்டுப் பறையும், மீன் பிடிக்கச் செல்வோர் மீன் கோட் பறையும், சூறை அடிப்போர் சூறைகோட் பறையும் கொட்டினர். ஒவ்வொரு வாத்தியமும் வெவ்வேறு ஓசையை எழுப்பின. கூத்துகள் பல வகையின. களிகுனிப்பு எனப்பட்ட கூத்து, ஒரு பாட்டிலுள்ள பொருளை ஆட்டத்தாலும் சைகைகளாலும் காட்டுதல். இவ் வழக்குப் பற்றிய கோவிற்கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. பரத நாட்டியம் என வழங்குவதும் இதுவே. கூத்த மகளிர், கூத்தியர் எனப்பட்ட னர். இப்பெயர் பரத்தையரைக் குறிப்பதாயிருக்கின்றது. சிறுமியர், கும்மி, தெள்ளேணம், சாழல், ஓரை முதலிய ஆடல்கள் புரிந்து களித்தனர். சிறுவர் கிட்டிப்புள் விளையாடினர். இது மேல்நாட்டவரின் சாட்டைப் பந்தடி (Cricket) விளையாட்டுப் போன்றது. பாணர் யாழ் மத்தளம் முதலியவைகளுடன் அலைந்து திரிந்து அரசர், பெருமக்கள் வாயில்களில் பாடினர். வேடர் வலையேற்றி மான் பன்றி முதலிய விலங்குகளைப் பிடித்துப் பொழுது போக்கினர். மற்போர் பொது வான பொழுதுபோக்குகளில் ஒன்று. போக்கு வரவு அக்கால மக்கள் பலவகை வண்டிகளைப் பயன்படுத்தினர். வண்டி, ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலிய பெயர்களால் இது அறியப் படும். வளையம், வட்டில், வட்டம், வட்டணை, வட்டு, வணங்கு, வணர், வளி, வள்ளம், வள்ளி, அச்சு, ஆணி முதலிய வண்டியின் உறுப்புகளை உணர்த் தும் பெயர்களால் அவர்கள் வண்டியின் பயனை நன்கு அறிந்திருந்தார் களென விளங்குகின்றது. வண்டி பெரும்பாலும் வாணிகத்தின் பொருட்டே பயன்படுத்தப்பட்டது. அரசரும் பெரு மக்களும் தேர்களிலும் பல்லக்கு களிலும் சென்றனர்; நீரிலாயின் ஓடங்களில் சென்றனர்; தோணிகளின் முகப்பு யானை குதிரை சிங்கம் முதலியவைகளின் தலைகள்போலச் செதுக்கப்பட்டிருந்தது. அக் காலம் பலவகைத் தோணிகள் வழங்கின வென்பதற்குக் கப்பல், ஓடம், அம்பி, தோணி, தெப்பம், பரிசில், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பட்டி, படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலிய பெயர்களே சான்று. உணவு தமிழ் மக்கள் ஊனைக் கறியாகவும் தாவர வகைகளையும் தானியங் களையும் முக்கிய உணவாகவுங் கொண்டனர். அவர்கள் இறைச்சியை மிளகு தூள் இட்டு ஆக்கிக் கறியாகப் பயன்படுத்தினர். மிளகாய் பிற்காலத்தில் இந்தியாவோடு வாணிகம் செய்த ஐரோப்பிய மக்களாற் கொண்டுவரப்பட்டது. இது தென்னமெரிக்கப் பயிர். ஆகவே, அதற்கு இடுகுறிப்பெயர் இல்லை. மிரியல், கறி, கலினை, காயம், திரங்கம் முதலிய பெயர்கள் மிளகைக் குறிக்கும். கிரேக்கரும் உரோமரும் இந்தியாவினின்றும் அதிக மிளகைக் கொண்டு சென்றனர் அவர்கள் மிளகைப் பிப்பிலி என வழங்கினர். தமிழ்மக்கள், தாளிதக்கறி (குய்), பொரிக்கறி, வறை, துவட்டல், துவை, புளிங்கறி, காடி, ஊறுகாய் முதலிய பலவகைக் கறிகளை உண்டனர். தமிழ் மக்களின் முக்கிய உணவு நெல். நெல் புழுக்கி உலர்த்திக் குத்தி அரிசியாக் கப்பட்டது. அவ்வாறு குத்தப்பட்ட அரிசி புழுங்கலரிசி எனப்பட்டது. அரிசி சோறாக அட்டு உண்ணப்பட்டது. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழுப்பு, உணா, ஊண், உண்கூழ், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர், புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி என்பன சோற்றின் பெயர்கள். ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட சோற்றை உணர்த்தலாம். பருப்போடு சேர்த்துப் பொங்கப்பட்ட சோறு பொங்கல் எனப்பட்டது. களி, கூழ், துழவை, கஞ்சி, நீராரம், தோசை, அடை முதலியன வெவ்வேறு வகையாகச் சமைக்கப்பட்ட உணவுகளாகும். அப்பம், பிட்டு, அஃகுல்லி, இலையடை, நொலை, மெல்வடை, பொல்லல், இடி, சஃகுல்லி, நுவணை, ஒச்சை, துவை, சீடை, வடை முதலியன பணியார வகையுட் சில. மக்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப உண்ணப்படும் தானியங்கள் வேறு பட்டன. முல்லை நிலமக்கள் வரகு, சாமை, முதிரை முதலிய தானியங்களை யும், குறிஞ்சிநில மக்கள் ஐவனம், தினை, மூங்கிலரிசி முதலியவைகளையும், மருதநில மக்கள் செந்நெல், வெண்ணெல் முதலியவைகளையும், நெய்தல் நிலமக்கள் மீனுக்கும் கருவாட்டுக்கும் மாற்றிய தானியங்களையும் உண வாகக் கொண்டனர். தேனுந் தினைமாவும் சுவையுள்ள உணவாகும். மருத நில மக்கள் தேனுக்குப் பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் கருப்பஞ்சாற்றைக் காய்ச் சிச் சர்க்கரை கற்கண்டு முதலியவைகளைச் செய்தனர். பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்பன மக்களால் விரும்பி உண்ணப்பட்டன. பலவகைப் பழங்கள் புசிக்கப்பட்டன. பழந்தமிழர் பல வகை மதுவை அருந்தினர். உப்பு அதிகம் விளைவிக்கப்பட்டது. உப்பு விளையும் வயல்கள் உப்பளம், அளக்கர், உவர்க்களம், கழி எனப்பட்டன. நிலங்கள் நன்செய் புன்செய் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. திருத்தி விளை விக்கப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. நன்செய் புன்செய் நிலங்கள் செய் எனப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பணை, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேள் ஆண்மை எனப்பட்டது.1 வேள் - நிலம்; ஆண்மை - அரசு அல்லது ஆளுந்தன்மை. வேளாண்மை எல்லாத் தொழில்களிலும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. பெரிய நிலத்தையுடையோர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநில மன்னர்களாகவும் இருந்தனர். வேளாண்மை என்பது தமிழில் கொடை, ஈகை என்பவைகளைக் குறிக்க வும் வழங்கும். வேளாண் மாந்தர் இயல்புகள் பத்து. அவை, ஆணைவழி நிற்றல் (சத்தியம் கடைப்பிடித்தல்), அழிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல் (மற்றவர்களைக் கடமைப்படுத்தல்), கசிவு அகத்துண்மை, ஒக்கல் போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறை கருதல் (அரசனுக்குச் செல்ல வேண்டிய கடமையைச் செலுத்தல்) ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய ஒழுக்கம் என்பன. வயல் வேலைக்குரிய ஒவ்வொரு தொழிலுக்கும் தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. தொத்தல், உழக்கல், மிதித்தல், உழுதல் முதலியன நிலத்தைப் பண்படுத்தும் வினைகளின் பெயர்கள். வேளாளனது முக்கிய தொழிற்கருவி கலப்பை. இதை உழுபடை, கலனை, நாஞ்சில், தொடுப்பு, படை, படைவாள் என்பன கலப்பையின் பெயர்கள். வயல்களுக்கு நீர் ஆற்றிலிருந்து பாய்ச்சப்பட்டது. ஆறுகளுக்கு அணைக்கட்டுகள் இருந்தன. ஆற்றுநீர் கால்வாய் அல்லது கால்வழியே சென்றது. கிணறு குளங்களிலிருந்து நீர் ஏத்தம், கபிலை அல்லது இறை கூடையினால் இறைக்கப்பட்டது. கைத்தொழில் உலோகங்களில் வேலை செய்வோர், கம்மாளர், அக்கசாலையர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் எனப்பட்டனர். இவர்கள் இரும்பு, உருக்கு, செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலியவற்றில் வேலை செய்தனர். பழைய சமாதிக் குழிகளில் காணப்பட்ட நகைகள் ஏனங்கள் முதலியன அக் காலத்தில் உலோகங்களில் வேலை செய்வோரின் திறமையைக் காட்டுகின்றன. பெரிய உலோகத் துண்டுகளை அடித்துத் தகடாக்கிப் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. உலோகத் தகடுகள் அடர் எனப்பட்டன. தையலர், அணிகலன்களை மிக விரும்பினர். ஆகவே அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மலை, மிலை, மிளை, வேய், எய், வெய் எனப் பல சொற்கள் காணப்படு கின்றன. கடைநர் என்போர் சங்கை அறுத்து அழகிய வளைகளைச் செய்தனர். குயினர் இரத்தினக் கற்களிற் றுளையிட்டனர். ஆடை நெய்வோர் கம்மியர், சேணியர், காருகர் எனப்பட்டனர். நெசவுத் தொழில் மிக வளர்ச்சியுற்றிருந்தது. வாணிகம் தமிழிலே வாணிகத் தொடர்பான சொற்கள் பல உண்டு. நிறைகோல், ஞெமன்கோல், தராசு, வட்டி, முதல், வாசி, கடை, அங்காடி, சந்தை என்பன அவற்றுட் சில. நெய்தல் மருத நிலங்களில் வாணிகம் தொடங்கி யிருக்கலாம். உமணர் வயல்களில் பாத்தி கட்டி விளைவித்த உப்பைப் பொதிமாடுகளிலும் கழுதைகளிலும் கொண்டு சென்று இடங்கள்தோறும் விற்றனர். வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வண்டிகள் பயன்படுத்தப் பட்டன. உருளை, சூட்டு, ஆர், குறடு முதலியன வண்டியின் உறுப்புகளை உணர்த்தும் சில பெயர்கள். வாணிகம் செய்யும் செட்டிகள் பலர் இருந்தனர். வணிகருக்குச் சாத்தர் என்பதும் சங்க காலத்து வழங்கிய இன்னொரு பெயர். செட்டி என்னும் சொல் வடமொழியில் சிறெஸ்தி சிறஸ்தா எனத் திரிந்து வழங்கிற்று. வேதகாலத்தில், முத்து, பவளம், சந்தனக்கட்டை, மிளகு முதலியவைகளை வடநாட்டுக்குக் கொண்டு சென்று வியாபாரஞ் செய்தோர் பாணியர் எனப்பட்டனர். பாணியர் என்பது வணிகர் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். சமக்கிருத பண்டிதர்கள் சமக்கிருதம் கடவுள் மொழியாயிருத்தலின் அது மனித மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற்றிருக்கமாட்டாது என்னும் குருட்டு நம்பிக்கை யால் பிற மொழிகளினின்று சமக்கிருதத்துக்குச் சென்றுள்ள சொற்களுக்கு ஒவ்வாத சமக்கிருத உற்பத்தியைக் கற்பித்துக் கூறுவர்.1  இயல் - 3 புத்தருக்கு முற்பட்ட இந்தியா மெகிதா1 என்பவர் சாதகக் கதைகளில் காணப்படுகின்றபடி அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் நிரைப் படுத்தி எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் பழைய தமிழ் இலங்கை மக்க ளிடையே காணப்பட்டன போலவே உள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங் களால் அறியக்கூடாத பல செய்திகள் அதனகத்தே காணப்படுதலின், அதன் சில பகுதிகளைச் சுருக்கி ஈண்டுத் தமிழில் தருகின்றோம். அரசன் அரசன் எல்லா அதிகாரமும் உடையவனாயிருந்தான். அவனைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள் எதுவும் இருக்கவில்லை. அரசரின் குழந்தைகளைக் கைத் தாயர் பாலூட்டி வளர்த்தனர்; வளர்ந்தபின் அவர்கள் தனி ஆசிரியர்களிடம் கல்விகற்க விடப்பட்டனர். (பாண்டவர் துரியோத னாதியோர் துரோணரிடம் கல்வி பயின்றமை மாபாரதத்திற் கூறப்படுகின் றது.) கல்வி பயின்ற பின் அவர்கள் நாட்டின் ஒவ்வோரு பகுதிக்கு உவ அரசர்களானார்கள். அரசனுக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் பட்டத்தரசியின் மூத்த புதல்வனே பட்டமெய்தினான். அரசாட்சி, தந்தையி லிருந்து மகனுக்கு வழிவழியே சென்றது. அரசனுக்குப் பிள்ளைகள் இல்லாதவிடத்து அவன் உடன் பிறந்தோனும், உடன் பிறந்தான் இல்லாத விடத்து மருமகனும் ஆட்சி ஏற்றனர். இளவரசுப் பட்டம் கட்டும் போது புரோகிதர் வலம்புரிச் சங்கிலும் பொற்குடத்திலுமிருந்து இளவரசன்மீது நீர் தெளித்தனர். அக் காலத்தில் அவன் மனைவியும் உடனிருத்திப் பட்டத்துத் தேவியாக்கப்பட்டாள். பின்பு வெண்கொற்றக் குடை விரிக்கும் கிரியை நடத்தப்பட்டது. நகர மாந்தர் நகரை அணி செய்தார்கள். இளவரசன் பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தான். அரசனது மனை நகரின் நடுவிலிருந்தது. அது ஏழு மாடிகள் அல்லது பல மாடிகளுடையது. தானியக்களஞ்சியமும் நிதியும் அரண்மனையி லிருந்தன. அரண்மனையின் பொது மண்டபம் மிகவும் விசாலமானது. வழக்குகளின் தீர்ப்பைப் பெறுவதற்கு அல்லது அங்கு நடக்கும் கொண் டாட்டங்களைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டமாகச் சென்றார்கள். நகரத்தில் நடக்கும் எல்லாவகைக் களியாட்டங்களையும் அரசன் பார்வையிட்டான். அரசன் தனது சுற்றத்தாரோடு மகிழ்ந்திருக்கும் மண்டபம் சந்தனம் பன்னீர் முதலியன தெளிக்கப்பெற்று நறுமணங் கமழ்ந்தது. அது பலவாறு அழகு செய்யப்பட்டிருந்தது. அரசிருக்கை மண்டபத்தில் அரசன் அமைச்சர்களா லும் நடன மாதராலும் சூழப்பட்டிருந்தான். அரசனது பள்ளியறை மாடி மீது இருந்தது. அதனிடத்தே அழகிய கட்டிலும் அதன் மீது அணைகளும் இடப்பட்டிருந்தன. அதன் அயலே சூதாடும் மண்டபம். அங்கு வெள்ளி நாற்காலிகளும் பொன் சூதாடு காய்களுமிருந்தன. அரசன் பொதுமண்ட பத்தே இருந்து மக்களின் வழக்குகளை உசாவித் தீர்ப்பு அளித்தான். அரண் மனையைப் பெரிய மதில் சூழ்ந்திருந்தது. அங்கு 16,000 நடனமாதர் இருந் தனர். இளவரசரும் இளவரசியரும் உறைவதற்கு வெவ்வேறு மாளிகை களிருந்தன. அட்டிற்சாலையில் மீன் இறைச்சி, சோறு, கஞ்சி முதலியன ஆக்கப்பட்டன. அரசன் உண்பதற்குச் செய்யப்படும் சமையல் நூறு வகையினது. அரசனது நாவிதன் பொன் கத்தியினால் அரசனின் மயிரைக் களைந்து, அவனை முழுக்காட்டி நறுமணம் பூசினான். நாவிதன், அரண் மனையில் கவனத்துக்குரியவனாகவிருந்தான். அரசன், அணி செய்யப் பட்ட தலைப்பாகை அணிந்து பட்டாடை உடுத்துப் பொன் செருப்புத் தரித்தான். அவன் செல்லும் தேரில் வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டன.1 விழாக் காலங்களில் அவன் யானைமீது சென்றான். யானை பொன்னாலும் ஆடையாலும் அணி செய்யப்பட்டது. அரசனுக்குப் பெரிய மாளிகைகள், பல மனைவியர், விலை உயர்ந்த உடைகள், மணப்பண்டங்கள், பொன், வெள்ளி, முத்து, இரத்தினம், செம்பு, இரும்பு, தந்தம், சந்தனமரம், மான்தோல் முதலிய பல செல்வங்கள் உண்டு. அவன் வேட்டை நாய்களோடு வேட்டையாடச் சென்றான்; மது அருந்தி னான்; பெண்களும் (பெரும்பாலும் நடனமாதர்) மதுவருந்தினர். அரசனது பூங்காவனம் பதினெட்டு முழம் உயர்ந்த மதிலாற் சூழப்பட்டது. அதன் ஒருபக்கத்தே பெரியகதவுகள் இருந்தன. அங்கு அரசனும் தேவியரும் நீராடிக் களிக்கும் கேணியிருந்தது. அங்கு அவனுக்கென அமைக்கப்பட்ட இருக்கையில் அரசன் இருந்தான் அப்பொழுது அவனெதிரே நடனமாதர் நாட்டியம் ஆடினர். சிலர் இனிய வாத்தியங்களை ஒலித்தனர். வாத்தியங் களை இயக்கிப் பாடுதல் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது. நால்வகைப் படைகள் அரசனிடத்தில் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகள் இருந்தன. தேர்களிற் பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவை மீது வெள்ளைக் குடைகளும் பலநிறக் கொடிகளும் நாட்டப்பட்டிருந்தன. கைதேர்ந்த பாகன் தேரை யோட்டினான். அவன் கவச மணிந்து கையில் வில்லைப் பிடித்திருந்தான். சில நேரங்களில் அரசனே படையை நடத்திச் சென்றான். அக் காலங் களில் அவன் யானை மீதிருந்து பகைவரைத் தாக்கினான். யானைகள் பெரும்பாலும் மதிற் கதவுகளைத் திறப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. அறுபது வயது வந்ததும் உறுதியான கொம்புடையதுமாகிய யானை போருக்குச் சிறந்ததெனக் கருதப்பட்டது. பாகர் குத்துக் கோலும் தோட்டி யும் வைத்திருந்தார்கள். விளங்குகின்ற அணிகலன்களணிந்து வாளைக் கையிற்பிடித்த அரசர் யானை மீதிருந்தார்கள். வலிய மறவர் கொடிகளை வீசிக் கொண்டு பக்கத்தே இருந்தனர். யானைகளைப் பழக்குவதற்கெனத் தனி ஆட்கள் அரசனிடமிருந்தார்கள். குதிரைகளுக்கு இரும்புக் கவசங்கள் இடப்பட்டன. குதிரை வீரர் வில்லும் வாளும் வைத்திருந்தார்கள்.1 காலாட்கள் வில், வாள், வேல், கேடகம் முதலியன கொண்டு சென்றனர்; அவர்கள் கவசம் அணிந்திருந்தனர். படையின் பின்னே தச்சர் ஆயுதங்களுடன் சென்றார்கள்.2 சங்கு மேளம் முதலியவைகளை ஒலிக்கும் வாத்தியக்காரரும் சென்றனர். படை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எல்லாப் படைக்கும் தலைவனாக ஒரு சேனாபதியிருந்தான். அவன் பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டான். அமைதியான காலங்களில் அவன் நீதிபதியாகக் கடமை பார்த்தான். பெரும்பாலும், போர், தலைநகரைச் சுற்றி நடந்தது. படைகள் கூடாரங்களிற்றங்கின. அவை நிரை நிரையாகவும் ஒழுங்காகவும் சென்றன. போர் தொடங்குவதன் முன் அரசன் அல்லது அரசனோடு சென்ற புலவன் படைக்கு ஊக்கம் எழக்கூடிய சொற்பொழிவு செய்தான். சென்ற படை, நகரை முற்றுகையிட்டு மாற்றரசனைப் பணியும்படி அல்லது போர் தொடுக்கும்படி தூண்டும். பணிதற்கு ஒருப்படாத மாற்றரசன் போர் தொடுப்பான். இக் காரணம் பற்றிக் கோட்டை மிகவும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. கோட்டை யின் இடையிடையே கோபுரங்களும் கதவுகளும் இருந்தன. மதிலைச் சுற்றி அகழ் இருந்தது. அது பகைவரை அணுகாதபடி தடுத்தது. மதில்மீது பகைவர் காணாது நின்று பார்க்கக்கூடிய கோபுரங்களிருந்தன. முற்றுகையிடுவோர் அகழியைத் தூர்த்து அல்லது அதனை நீந்திக் கடக்க முயன்றனர். அகழி ஆழமுடையதாயும் பாம்பு முதலைகள் உறைவதாயும் இருந்தது. அதனைக் கடப்பது எளிதன்று. கோட்டை மதில் மீது நிற்பவர்கள் உருக்கிய உலோகங் களையும், கொதிக்கும் எண்ணெயையும், சூடான கல் சேறு என்பவை களையும் பகைவர் மீது வீசி எறிந்தார்கள். அகழை நீந்திக் கடக்க முயன்ற போது மதிலின் மீதுள்ளோர் அம்பு, ஈட்டி, வேல் முதலியவைகளைப் பகை வர்மீது சொரிந்தனர். கோட்டையுள் இருப்போர், தம் முயற்சி பயனளியா விடில் பணிந்தார்கள். முற்றுகைக் காலங்களில் உணவுக்குறைவு நேராதபடி வேண்டிய உணவுவகைகள் உள்ளே சேமித்து வைக்கப்பட்டன. இருகட்சி1 ஒற்றர்களும் எதிரியின் மறைவுகளை அறிய முயன்றார்கள். செய்திகள் ஓலை நறுக்குகளில் எழுதி அம்பிற் கட்டி எய்து அறிவிக்கப்பட்டன. செய்தி கொண்டு வருபவனை அல்லது தூதனைக் கொல்லுதல் கூடாதென்பது நீண்ட நாள் வழக்கு. போரிற் காயப்பட்டவர்கள் பலகைகள் மீது வைத்து எடுத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை செய்யப்பட்டனர். வெற்றிபெற்ற அரசன் தனது நகரத்துக்கு ஆடம்பரத்தோடு சென்றான். வீரர் விருந்து கொண்டாடி னர். இராக் காலங்களில் நகர்க் கதவுகள் அடைக்கப்பட்டன. நகர் காவலர் நகரைப் பறைகொட்டிக் காவல் செய்தனர். அவர்கள் சிவந்த பூமாலைகளை அணிந்திருந்தனர். பலவகைத் தொழில் புரிவோர் மக்கள் பெரும்பாலும் வேட்டையாடினார்கள். ஊன் பெரிதும் விரும்பப்பட்டது. சுவையுள்ள இறைச்சியைப் பெறும்பொருட்டும் அரசன் வேட்டையாடச் சென்றான். வேட்டையாடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட கூட்டத்தினரும் பலர் இருந்தனர். அவர்கள் வில், அம்பு, வலை களுடன் விலங்குகளைத் தேடி மலைகளில் அலைந்தார்கள்; தோலாற் பின்னிய வலைகளை ஏற்றி மான்களைப் பிடித்தார்கள்; தோலுக்காகப் புலியும், தந்தத்துக்காக யானையும் வேட்டையாடப்பட்டன. வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காகவும் குருவிகள் பிடித்து விற்கப் பட்டன. சில கிராமங்களில் எல்லோரும் குருவிகள் பிடிப்போராகவேயிருந் தார்கள். அவை வலையேற்றியும் பொறிவைத்தும் பிடிக்கப்பட்டன. வலை குதிரைவால்மயிராற் பின்னித் தடியிற் கட்டி நிலத்தில் வைக்கப்பட்டது. சிலர் பழக்கப்பட்ட பட்சிகளின் உதவியால் அவைகளைப் பிடித்தார்கள். பழக் கப்பட்ட குருவிகளின் குரலைக் கேட்டு அவ்வினப்பட்சிகள் வந்து கூடின. அப்பொழுது அவைகள் வலையில் அகப்படுத்தப்பட்டன. ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் வாழ்ந்தோர் மீன்களை மிகுதியும் உண்டார்கள். மீன்களைப் பிடிப்பதற்கு வலை, தூண்டில், கூடு என்பன பயன்படுத்தப்பட்டன. அழகிய பட்டாடைகள் நெய்யப்பட்டன. அரசன் சரிகைத் தலைப் பாகை தரித்தான். பட்டத்து யானை சரிகைத் துணிகளால் அலங்கரிக்கப் பட்டது. மக்கள் பெரும்பாலும் பஞ்சு ஆடை உடுத்தார்கள். பெண்கள் பஞ்சு ஆட்டி நூல் நூற்றனர். சீலை நெய்வோரும் சீலைகளுக்குச் சாயந்தோய்ப் போரும் இருந்தனர். பொன் வெள்ளி இரத்தினக்கல் முத்து முதலியவைகளால் அழகிய நகைகள் செய்யப்பட்டன. பொன் நகைகளுக்கு இரத்தினக்கல் பதிக்கப்பட்டது. வளையல், மோதிரம், மாலை, குண்டலம், மேகலை, தண்டை, கொண்டை யூசி முதலிய பலவகை அணிகள் வழக்கிலிருந்தன. அரசன் அரண்மனை யில் வெள்ளி தங்கக் கலங்களைப் பயன்படுத்தினான். நாற்காலிகள், படுக்கைகள், சிங்காசனங்கள் பொன்னழுத்தி நன்கு அழகு செய்யப்பட்டன. அழுத்தஞ் செய்யப்பட்ட உலோகத் தகடுகள் முகம் பார்க்கும் கண்ணாடி களாகப் பயன்படுத்தப்பட்டன. உணவருந்தும் கலங்கள் வெள்ளியாற் செய்யப்பட்டன. பானை, தட்டு, சட்டி முதலியன செம்பு பித்தளை வெண்கலம் என்பவைகளாலானவை. இரும்பு உருக்கு ஆக்கப்பட்டு, அதனால் அரிவாள், உளி, நாவிதன் கத்தி, சுத்தியல், போர்க்கருவிகள், கவசம், ஊசி, இசைக்கருவிகளின் நரம்புகள் என்பன செய்யப்பட்டன. தந்தத்திலும் அரிய வேலைகள் செய்யப்பட்டன. குயவர் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள். இவர்கள் அழகிய சட்டி பானை சாடி முதலியன செய்தனர். கொத்தர் செங்கல்லினால் அழகிய வீடு களைக் கட்டினார்கள். வீடுகளுக்குக் கைமரங்கள் தூண்கள் கதவுகள் சாள ரங்கள் முதலியவைகளை மரத்தினாற் செய்துதவும் தச்சர்களிருந்தார்கள். இவர்களால் அழகிய நாற்காலி, முக்காலி, கட்டில், ஏணி, பேழை முதலிய வீட்டுப் பொருள்கள் செய்யப்பட்டன. கயிறு, செருப்பு, பை, கேடகம் முதலியவற்றைத் தோலினாற் செய்யும் தொழிலாளர் பலர் இருந்தனர். மூலிகைகளைப் பையிலிட்டுக்கொண்டு திரியும் மருத்துவர், மூக் கில்லாதோர்க்குப் பொய்மூக்கு வைப்போர், மனைக்கு இடங்குறிப்போர், உறுப்புகளை நோக்கி மக்களின் நன்மை தீமைகளைக் கூறுவோர், வாய்ப்புக் கூறுவோர், கோள்நிலையறிந்து பயன்கூறுவோர், பேயோட்டுவோர், காணாது ஓடியவர்களின் அடியைத் தொடர்ந்து அவர்களைக் கண்டுபிடிப்போர், பாட்டுக்கள் பாடி மிகுந்த பொருளீட்டும் புலவர், குரங்கைப் பழக்கி அத னுதவியால் பாம்பைப் பிடிப்போர், கீரியைப் பழக்குவோர், வாத்தியகாரர், முரசறைவோர், கூத்தர், நடிகர், மாயவித்தை காட்டுவோர், கம்பங்கூத்தர், பாவையாட்டுவோர் முதலிய பல தொழிலாளரும் வாழ்ந்தனர். தகப்பன் செய்த தொழிலையே மகனும் செய்தான். இதனால் ஒவ் வொரு கூட்டத்தினரும் அவரவர் செய்யும் தொழிலால் அறியப்பட்டனர். வேடர், மீன் பிடிப்போர், தச்சர், குயவர், நாவிதர், தெருக்கூட்டுவோர் கீழ் மக்கள் எனப்பட்டனர். கூலி வேலை செய்வோரும் அடிமைகளும் இருந்த னர். வறியவர்களின் வீடுகள் நகர்ப்புறத்தே இருந்தன. அடிமைகள் வீட்டி லேயே இருந்து வீட்டுவேலைகளைச் செய்தனர். உணவு சமைத்தல், தண்ணீ ரெடுத்தல், மாவரைத்தல், வயலைக் காவல்காத்தல், வயலுக்கு உணவு எடுத்துப்போதல், பிச்சை கொடுத்தல், வீட்டுத் தலைவனுக்குப் புத்திகூறுதல், உண்ணும் தட்டுகளைக் கழுவுதல், வீட்டிலுள்ளோர் உணவருந்தும்போது விசிறியால் விசிறுதல் போன்றன அவர்கள் புரியும் வேலைகளாகும். சேமிப்பு மாசா என்னும் பொன் நாணயங்களும் செம்பு நாணயங்களும் வழங்கின. செல்வர் தமது பணத்தைப் பொன்னாக மாற்றி உறுதியான பெட்டி களிலும் பாதுகாப்பான அறைகளிலும் பூட்டிவைத்தனர். அணிகளும் பண மும் பெரும்பாலும் தலையணைகளுக்குள் வைத்துக் காக்கப்பட்டன. உணவு பொதுமக்கள் உயர்ந்த உணவைக் கொள்ளவில்லை. கஞ்சி, பணியாரம், கீரைவகை, காய்கறிகள், பால் முதலியன பொதுமக்களின் உணவுகள். செல்வர் வெல்லம், தேன், நெய், பால் முதலியன பெய்து சமைத்த கஞ்சியை உண்டனர். காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக இரு உணவுகள் கொள்ளப்பட்டன. உடை பஞ்சு ஆடைகள் பெரும்பாலும் உடுக்கப்பட்டன. ஆடவர் அரை யில் ஒன்றும் தோளில் ஒன்றும் தலையிலொன்றுமாக மூன்று துணிகளைப் பயன்படுத்தினர். அவர்கள் அரையில் பைகளைக்கட்டி அவைகளில் விலையுயர்ந்த பொருள்களை வைத்திருந்தனர். வீடுகள் பொதுமக்கள், வீடுகளைச் செங்கல்லாற் கட்டினார்கள். வீட்டின் முன்னும் பின்னும் கதவுகள் இருந்தன. சாளரங்கள் வீதியை நோக்கி யிருந்தன. கதவுகள் தாழிடப்பட்டன. பெரிய வீடுகள் சாந்துபூசி வெள்ளை யடிக்கப்பட்டன. உல்லாச வாழ்க்கை மக்கள் உல்லாச வாழ்க்கையை விரும்பினர். ஆடவர் மயிரையும் தாடியையும் கத்தரித்து மட்டஞ் செய்தார்கள். பெண்கள் அழகிய நகை களை அணிந்தனர்; மணப்பொருள்களையும் பூக்களையும் பெரிதும் பயன் படுத்தினர். பிராமணர் ஒழுக்கமுடைய பிராமணர் பெரிதும் மதிப்புப் பெற்றனர். உணவு அருந்தும்படி அவர்கள் வீடுகளுக்கு அழைக்கப்பட்டார்கள். நீராடிய பின் அவர்கள் வீட்டுக்கு வந்து வீட்டுத் தலைவன் செம்பிற்கொடுக்கும் நீரை வாங்கி முகத்தைக் கழுவிய பின் இருந்து உண்டார்கள். உண்டு முடிந்ததும் வீட்டுத் தலைவன் கொடுக்கும் தக்கணையைப் பெற்று மங்கலங் கூறிச் சென்றனர். உலகப்பிராமணர் என இன்னொரு வகையினர் இருந்தனர். இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் நில்லாதவர்கள். இவர்களுட் சிலர், மருத்துவராகவும், தூது போவோராகவும், வேளாண்மை செய்வோராகவும், ஆடு வளர்ப்போராகவும், வாய்ப்புக் கூறுவோராகவும், வாள், கோடரி, கேடகம், கண்டகோடரிகளைத் தாங்கி வியாபாரக் கூட்டங்களுக்கு முன் செல்வோராகவும் இருந்தனர். இவர்கள் தம் மகளிரைப் பொன்னுக்கு விற்பர்; தாம் விரும்பிய எத்தொழிலையும் புரிவர். சண்டாளர் முதலியோர் கூத்தாடிகளும் வாத்தியக்காரரும் கிராமங்கள்தோறும் சென்று கம்பங்கூத்து மாயவித்தை புரிந்தும், பாவை யாட்டியும் பொருள் பெற்றனர். பாம்பாட்டிகளும் இவ்வாறே ஊர் ஊராகத் திரிந்தனர். சண்டாளர் நகர்ப் புறத்தே வாழ்ந்தனர். இவர்கள் தீண்டப்படாதவராவர். இவர்கள் தமக்குள் ஒருவகைக் குழூஉக்குறியைப் பேசினர். பிணஞ் சுடுதல் வீதிகளைப் பெருக்குதல் முதலிய வேலைகளை இவர்கள் புரிந்தனர். மகளிர் இசையும் நடனமும் மகளிர்க்குச் சிறந்த கல்விகளாகக் கருதப் பட்டன. சுயம்வரம், காந்தருவம், பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படுவது என மணம் மூவகைப்பட்டது. நல்ல முகூர்த்த வேளையில் மணமகன் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணை மணந்தான். அரசியர் அரசகுமாரியர் பிரபுக்களின் மகளிர் என்போர் மட்டும் மூடப்பட்ட வண்டிகளிற் சென்றார்கள். மகளிர் பட்டு, பஞ்சு, சணல் ஆடைகளை உடுத்தார்கள். மாலை, குண்டலம், காதோலை, மேகலை, கைவளை, கால்வளை, கடயம் போன்ற நகைகள் அணிந்து கொள்ளப்பட்டன. கூந்தல் பலவாறு வகிர்ந்து பின்னி முடிக்கப்பட்டது. நகங்கள் சிவப்பூட்டப்பட்டன. உயர் குடும்ப மகளிர் யானைத் தந்தக் கைப்பிடியுடைய முகம் பார்க்கும் கண்ணாடிகளையும், செருப்பையும் பயன்படுத்தினர். மேல்வகுப்புப் பெண்களைத் தவிர மற்றவர்கள் தமது வாழ்க்கையின் பொருட்டுப் பலவகை வேலைகளைச் செய்தனர். கிராமப் பெண் வயலைக் காவல் காத்தல், நெசவு தொடர்பான வேலைகள் போன்றவைகளைப் புரிந்தாள். சிலர் பூ விற்றனர். வறிய பெண்கள் வீடுகளில் வேலைக்காரியராகவும் தாதியராகவும் அமர்ந்தனர். நடன மாதர் பரத்தையர்களாக வாழ்ந்தனர். பிச்சை எடுத்து உண்ணும் பெண் துறவிகளும் இருந்தார்கள். வான ஆராய்ச்சி வானநூல் சோதிடம் என்பன வளர்ச்சியடைந்திருந்தன. கோள்களின் செலவுகள் முன்னமே அறிந்து கூறப்பட்டன. திங்களில் முயல் இருப்பது திங்களை இராகு விழுங்குவது முதலிய நம்பிக்கை இருந்தது.1 இசை இசைக்கருவிகளுள் வீணை மிகவும் முக்கியமுடையது. ஆடவரும் மகளிரும் விரும்பி அதிற் பயின்றனர். அது தனியே அல்லது பாட்டு களுடன் வாசிக்கப்பட்டது. இது கைவிரலின் நுனிகளால் நரம்புகளைத் தடவியும் தெறித்தும் மீட்டப்படும். மயிற்பெடைகளும் சேவல்களும் கைகொட்டும் தாளத்துக்கு ஆடும்படி பயிற்றப்பட்டன. ஓவியமும், சிற்பமும் சுவர்களிலும் பலகைகள் மீதும் ஓவியங்கள் வரையப்பட்டன. அசந்தாக் குகை ஓவியங்களே அக் காலச் சித்திரங்களுக்கு எடுத்துக்காட்டு. சிறுவர் விளையாடும் அழகிய பாவைகளும், மற்றும் பிற விளையாட்டுப் பொருள்களும் செய்யப்பட்டன. சில அரண்மனைகள் ஒற்றைத் தூணுடையன வாகவும், சில எட்டுச் சதுரமுடைய ஆயிரந்தூணுடையனவாகவும் கூறப்பட் டுள்ளன. பெரிய நிலவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து அவை மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அங்குப் பூமாலைகள் தூக்கி நறும்புகை காட்டப்பட்டது. சில நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் மதியம், அமாவாசைக் காலங்களில் மக்கள் விரதமிருந்தார்கள். ஒருவன் தும்மினால் ‘சாவில்லை’ அல்லது ‘நீடு வாழ்க’ என்று சொல்லப் பட்டது. ஒருவரை நிறைவாக ஒரு கருமத்தைச் செய்தால் அவன் முதுகிற் றட்டி அதன் மகிழ்ச்சி அறிவிக்கப்பட்டது. பெண்ணின் வலக்கண் துடிப்பது தீமை நேர்வதற்கு அறிகுறி எனக் கருதப்பட்டது. பெண்கள் தமக்குத் துன்பம் இழைத்தவர்களைத் திட்டினார்கள். குருவின் பெயரைச் சொல்வது பாவம் எனக் கருதப்பட்டது. குருவை மூன்று முறை வலம் வந்து விழுந்து கும்பிடுவது பொதுவழக்கு. மனிதன் நூறு அல்லது நூற்றிருபது ஆண்டு வாழ்வான் என நம்பப்பட்டது. வாயிலிற் கதவிடப்பட்ட சுடலைகள் இருந்தன. பந்து விளையாட்டுச் சிறுவரால் மிகவும் விரும்பப்பட்டது. ஊஞ்சலில் ஆடுவதை அரசரும் விரும்பினார்கள். அரசரும் பெரு மக்களும் ஆறுகளிலும் குளங்களிலும் நீந்திக் களித்தனர். விழாக்கள் பறை யறைந்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. விழாக் காலங்களில் வறியவர் களும் புது ஆடை உடுத்துப் பூமாலையணிந்து நறுமணம் பூசி மனைவிய ருடன் மதுவருந்திக் களித்தனர். கார்த்திகைத் திங்களின் மத்தியில் வரும் விழா மிகச் சிறப்புடையது. அன்று அரசன் நகரைச் சுற்றி உலாவருவான். வழக்கமான மதுக்கடைகளைத் தவிர விழாக்காலங்களில் புதிய மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மகளிர் மைந்தர் சிறுவர் என்போர் திரண்டு நின்று கூத்து, வாத்தியம், பாட்டு, யானைப்போர், ஆட்டுப்போர், மற்போர் முதலிய வைகளைப் பார்த்து ஆரவாரஞ் செய்தனர். மரவணக்கம் மக்கள் மரங்களைத் தெய்வமாக வணங்கவில்லை; ஆனால் மரங்களிலுறையும் தெய்வங்களை வணங்கினார்கள். இத் தெய்வங்களுக்குச் சிலவேளை நரபலிகள் கொடுக்கப்பட்டன. மரத்தில் மாலையும் கொம்பு களில் விளக்குகளும் தூக்கப்பட்டன. மரத்தின் அடியில் ஆடு கோழி பன்றி முதலியன பலியிடப்பட்டன. உயிர்ப் பலிகள் நிறுத்தப்பட்டபின் இரத்தத் திற்குப் பதில் மரத்தில் குங்குமம் பூசப்படுகின்றதாயிருத்தல் கூடும். தண்டனை அக் காலத் தண்டனை, தண்டம், சிறை, உறுப்புகளைக் களைதல், சிரத்தைக் கோடரியாற் பட்டடையில் வைத்துத் தறித்தல் போன்றன.  இயல் - 4 புத்தருக்குப் பிற்பட்ட இந்தியா மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுப்த மயூரனின் அரண்மனை யில் கி. மு. 302 முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன: இந்திய மக்களின் ஏழு பிரிவுகள் இந்தியர் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவ சாத்திரத் திற்றேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங் குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ் வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர். பொதுமக்கள் இவர்களால் பெரிய நன்மை களை அடைந்தனர். ஆண்டின் ஆரம்பகாலத்தில் மக்கள் கூட்டங்கூடி இருப்பார்கள். அப்பொழுது இவர்கள் அவ் வாண்டில் நிகழவிருக்கும் பிணி, பஞ்சம், காற்று, மழை ஆகியவற்றை அறிவிப்பார்கள். இவற்றை அறிந்துகொண்ட மக்களும், அரசனும் நிகழ விருக்கும் துன்பங்களுக்கு ஆயத்தமாகவிருந்தனர். தாம் கூறிய வருங்காலப் பலன்களிற் பொய்த்த தத்துவ சாத்திரிகள் தமது ஆயுளின் மீதிக்காலத்தை நிகழ்கால வருங்கால பலன்களைக் கூறாது மௌனமாகக் கழித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளோர் உழுதூண் வாழ்க்கையர். இவர்கள் மற்றவர்களிலும் கூடிய தொகையினர். இவர்கள் போர் முதலிய பொதுக் கருமங்களுக்குரிய காலத்தைத் தவிர மீதி நேரம் முழுவதையும் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடுவதிற் செலவிடுகின்றனர். நாட்டின்மீது படை எடுத்து வருவோர் இவர்களைத் துன்புறுத்துவதில்லை. பொது நன்மைக் குரியோர் என்னும் எண்ணத்தினால் இவர்கள் எல்லா ஆபத்துக்களி னின்றும் காக்கப்படுகின்றனர். பகைவரால் அழிக்கப்படாதனவும், மிகுந்த விளைவைக் கொடுப்பனவுமாகிய நிலங்களின் பயன் நாட்டு மக்களின் உணவுக்குப் போதுமானதாயிருந்தது. இவர்கள் குடும்பங்களோடு நாட்டை உறைவிடமாகக் கொண்டனர். நகர வாழ்க்கையை இவர்கள் விரும்பினார்க ளல்லர். இந்திய நாடு முழுமையிலுமுள்ள நாடு அரசனுக்குச் சொந்தமானது. எவரேனும் சொந்தமான நிலம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நில வரியைத் தவிர விளைவில் நாலில் ஒன்றும் அரசனுக்கு உரியதாயிருந்தது. மூன்றாவது படியிலுள்ளோர் இடையர். இவர்கள் பெரும்பாலும் ஆடு மாடுகளை மேய்ப்பர். இவர்கள் நாட்டிலாவது நகரங்களிலாவது நிலையாக வாழாது கூடாரங்களின் கீழ்த் தங்கினர்; வேட்டையாடியும் பொறி வைத்தும் துட்ட விலங்குகளைப் பிடித்தனர். நான்காவது படியிலுள்ளோர் சிற்பிகள். இவர்களிற் சிலர் ஆயுதங் களைச் செய்தனர். சிலர் பயிரிடுவோருக்கும் பிறருக்கும் வேண்டிய கருவி களைச் செய்துகொடுத்து அவர்களுக்குத் துணை புரிந்தனர். ஐந்தாவது படியிலுள்ளோர் படையாச்சிகள். இவர்கள் போர் செய்யும் முறையிற் பயின்றிருந்தனர். தொகையளவில் இவர்கள் இரண்டாவ தாக விருப்பர். போர் இல்லாத காலங்களில் இவர்கள் பொழுது போக்கு களிலும் சோம்புத்தனத்திலும் காலத்தைப் போக்கினர். ஆறாவது படியிலுள்ளோர் கண்காணிமார். நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து சொல்வது இவர்களுக்கு வேலையாயிருந்தது; அரசன் இல்லாத விடங்களில் அவர்கள் தாம் அறிந்தவற்றை நியாயம் வழங்கும் அதிகாரிகளிடம் கூறினர். ஏழாவது படியிலுள்ளோர் பொதுக் கருமங்களில் ஆலோசனை கூறும் கூட்டத்தினர். மற்றவர்கள் எல்லோரையும்விட இவர்கள் சிறு கூட்டத் தினர். உயர்ந்த ஒழுக்கத்துக்கும் அறிவுக்குமாக இவர்கள் மதிக்கப்படுகி றார்கள். அரசனது கருவூலத்துக்கும், அரசனுக்கு ஆலோசனை கூறுதற்கும் இக் கூட்டத்தினின்றுதான் சிலர் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். படைத்தலை வனும் தலைமை நீதிபதியும் இவ் வகுப்பைச் சேர்ந்தவர்களே. இந்திய அரசாங்கம் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றது. தத்தம் கூட்டத்தைக் கடந்து மணம் முடிக்க எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தமது வகுப்புக்குரியதல்லாத தொழில் புரிவதற்கும் ஒருவரும் அனுமதிக்கப் படவில்லை. உதாரணமாகப் போர்வீரன் ஒருபோதும் பயிரிடுவோனாக வரமுடியாது; சிற்பி அறிவனாய் (தத்துவ சாத்திரி) வரமுடியாது. மக்களின் பழக்க வழக்கம் இந்திய மக்கள் எல்லோரும் செட்டான வாழ்க்கையுடையவர். சிறப்பாக, கூடாரங்களில் தங்கும்போது இவர்கள் இவ்வாறிருக்கின்றனர். ஒழுங்கற்ற கூட்டத்தினரை அவர்கள் வெறுத்தனர். ஆகவே அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டனர். களவு சிறிதாக இருந்தது. சந்திரகுப்தனின் கூடாரத்தில் 400,000 வீரர் தங்கினார்கள். எப்பொழுதாவது 200 திறாமச்1 பொன்னுக்கு அதிகமாகக் களவு நடந்ததாகக் கூறப்படவில்லை. அவர் களுக்கு எழுத்து மூலம் பிரமாணங்கள் கிடையா. அவர்கள் எழுத்தைப்பற்றி அறியார். கொடுக்கல் வாங்கல்கள் ஞாப கத்தைப் பொறுத்திருந்தன. ஆடம்பரமல்லாத வாழ்க்கை நடத்தியபோதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். வேள்விகளிலன்றி அவர்கள் மது அருந்தவில்லை. மது நெல்லிலிருந்து வடிக்கப்பட்டது. அரிசியாற் சமைத்த கஞ்சி அவர்களின் பிரதான உணவு. அவர்களின் சட்டங்களைக் கவனிக்கும் போது அவர்கள், அருமையாக வழக்குக்குச் சென்றார்கள். கொடுக்கல் வாங் கல்கள் ஒருவர் மற்றவரிடத்திற் கொண்ட நம்பிக்கையைக் கொண்டு நடை பெற்றமையால் பத்திரங்கள் எழுதப்படவில்லை. அவர்கள் வெளியே சென்றபோது வீட்டையும் வீட்டிலுள்ள பொருள்களையும் காப்பதற்கு எவரையும் நிறுத்தவில்லை. அவர்கள் எப்பொழுதும் தனிமையாகவே உண வருந்தினார்கள். இன்ன நேரத்தில் உணவருந்த வேண்டும் என்னும் நியதி இருக்கவில்லை; பசி கொண்ட நேரங்களில் ஒவ்வொருவரும் உண்டனர். உடம்பை உரைஞ்சுவதையே அவர்கள் சிறந்த உடற் பயிற்சியாகக் கருதினர். அதற்காகப் பலமுறைகள் கையாளப்பட்டன. அழுத்தமான கருங் காலி உருளைகளை உடம்பில் அழுத்தி உருட்டுவதே அவற்றுட் சிறந்தது. அவர்களின் சமாதிகள் ஆடம்பரமின்றி எளியவகையில் இருந்தன. சமாதிக்குமேல் மண்கொட்டி மேடு செய்யப்பட்டது. அவர்கள் அழகையும் அணிகலன்களையும் விரும்பினர். உடைகள் பொன்னினால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஆபரணங்களில் வயிரங்களும் விலையுயர்ந்த கற்களும் அழுத்தப்பட்டிருந்தன. பூவேலை செய்த மசிலின் (சல்லா) துணிகளை அவர்கள் உடுத்தனர். பரிவாரங்கள் அவர்களின் பின்னாற் குடை பிடித்துச் சென்றன. உண்மையும் புகழும் போற்றப்பட்டன. அறிவுத் திறமில்லாத முதியவர்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பல பெண்களை மணந்தனர். அவர்கள் ஒரு சோடி எருதைப் பெண்களுக்கு விலையாகக் கொடுத்து அவர்களைப் பெற்றோர் களிடமிருந்து வாங்கினர். சிலர் தமக்கு வாழ்க்கைத் துணை வேண்டுமென்று மணஞ் செய்கின்றனர். பலர் இன்பத்திற்காவும் வீடுகளைப் பல குழந்தை களால் நிரப்புவதற்கும் மணஞ் செய்கின்றனர். வேள்விச் சாலைகளிலும் கடவுட் பூசைகளிலும் ஒருவரும் முடி அணியவில்லை. பலியிடும் விலங் குகள் வெட்டிக் கொல்லப்படவில்லை; மூச்சைப் பிடித்துத் திருகிக்கொல் லப்பட்டன. பொய்ச்சாட்சி சொல்வோனுக்குக் கடுந்தண்டம் விதிக்கப்பட்டது. ஒருவனது உறுப்புக்குப் பங்கம் விளைத்தவனது அதே உறுப்பு வெட்டப் பட்டது; கையும் வெட்டப்பட்டது. சிற்பிகளின் கண்ணுக்கு அல்லது கைக்கு ஊறு விளைத்தவன் கொலை செய்யப்பட்டான். அரசனுடைய உயிர் பெண்களின் கையில் இருந்தது. அப் பெண்கள் தாய் தந்தையரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள். வாயிலுக்கு வெளியே காவலாளரும் போர் வீரரும் காவல் புரிந்தனர். அரசன் மது வுண்ட மயக்கத்திலிருக்கும்போது அவனைக் கொன்றவள் இனிவரும் அரசனுக்கு மனைவியாகின்றாள். அரசன் பகலில் துயில் கொள்ளான். தனக்கு மாறாக நடக்கக்கூடிய சதிகளுக்குப் பயந்து அவன் அடிக்கடி தனது படுக்கையை மாற்றுவதுண்டு. போர்க்காலங்களில் மட்டுமல்லாமல் வழக்குத் தீர்ப்பளித்தற்கும் அவன் வெளியே செல்கின்றான். நீதி செலுத்தும் மண்ட பத்தில் அவன் முழு நேரத்தையும் செலவிடுகிறான். அந் நேரத்தில் நான்கு வேலையாட்கள் அவனது உடம்பை மர உருளைகளால் உரைஞ்சுகின்றனர். உருளைகளால் உரைஞ்சும்போதே அவன் வழக்குகளை விசாரணை செய் கின்றான். வேட்டையாடுதற்கும், வேள்விச் சாலைகளிற் பலி செலுத்து தற்கும் அவன் வெளியே செல்கின்றான். வேட்டைக்குச் செல்லும்போது பெண்கள் பலர் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர்.1 இவர்களுக்குப் புறத்தே ஈட்டி தரித்த வீரர் சூழ்ந்து நிற்கின்றனர். வீதிகளிற் கயிறுகள் கட்டப்பட்டிருக் கின்றன. கயிற்றைக் கடந்து செல்லும் ஆண் அல்லது பெண்ணுக்கு மரண தண்டணை விதிக்கப்படுகின்றது. மேளம், சல்லரி முதலிய வாத்தியங்க ளோடு பரிவாரங்கள் செல்கின்றன. அரசன் வளைத்தடைக்கப்பட்ட இடத்தே உயரமான இடத்தில் நின்று அம்புகளை எய்கிறான். அவனுக்குப் பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று ஆயுதந்தரித்த பெண்கள் நிற்கின்றனர். வெளி யிடங்களில் வேட்டையாடும்போது அரசன் யானையின் அம்பாரிமீதிருந்து அம்புகளை எய்கிறான். பெண்கள் சிலர் தேர்மீதும் சிலர் யானை மீதும் செல்கின்றனர். போருக்குச் செல்வதை ஒப்ப அவர்கள் பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்கின்றனர். அரசாங்க அமைப்பு அரசாங்க உத்தியோகத்தரிற் சிலர் சந்தைகளையும், சிலர் இராணு வத்தையும், சிலர் நகரத்தையும் மேற்பார்க்கின்றனர். சிலர் ஆறுவழியாக நிலங்களுக்கு நீர்பாய்ச்சுவதையும், சிலர் நில அளவைகளையும், சிலர் ஆற்றின் சிறிய கால்வாய்களால் நீர்செல்லும் மடைகளையும் கவனிக்கின் றனர். சிலர் விறகு வெட்டுவோர், தச்சுவேலை, கொல் வேலை, சுரங்கவேலை முதலியன புரிவோரை மேற்பார்த்து வரி அற விடுகின்றனர். இவர்கள் வீதி களையும் அமைக்கின்றனர். தூரத்தையும் கிளைப்பாதைகளையும் அறிவிக் கும் கற்கள் ‘மைலுக்கு’ ஒன்று நடப்பட்டுள்ளன. நகர ஆட்சி ஆறு சபையினரால் நடத்தப்படுகின்றனது. முதற்பிரி வினர் கைத்தொழில் தொடர்பான எல்லாவற்றையும் கவனிப்பர். இரண்டா வது பிரிவினர் பிற நாடுகளினின்றும் வருவோரைக் கவனித்து அவர்கள் தங்குவதற்கேற்ற வசதிகளைப் புரிவர். அப் புதியவர்களுக்குத் துணையாக விருப்போர் அவர்களின் போக்கைக் கவனித்து அதிகாரிகளுக்கு அறிவிக் கின்றனர். பிற நாட்டவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களின் உடைகள் உறவி னரிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன. மூன்றாவது பிரிவினர் நாட்டில் ஏற்படும் இறப்புப் பிறப்புகளைக் கவனிக்கின்றனர். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கிடையிலும் நேரும் இறப்புப் பிறப்புக்கள் தவறாமல் பதிவு செய்யப்படுகின்றன. நான்காவது பிரிவினர் சந்தைகளைக் கவனிக்கின்றனர். இவர்களே நிறைகளுக்கும் அளவுகளுக்கும் பொறுப்பா யுள்ளோர். மக்களுக்கு விளம்பரஞ் செய்தபின் காலத்திற் கிடைக்கும் விளைபொருள்கள் பகிரங்கத்தில் விற்கப்படுகின்றன. ஒன்றுக்கு அதிகமான பண்டங்களில் வாணிகம் புரிய எவரும் அனுமதிக்கப்பட்டிலர். ஐந்தாவது பிரிவினர் கைத்தொழிற் பொருள்களைக் கவனிக்கின்றனர். புதிய பொருள் களும் பழைய பொருள்களும் வெவ்வேறாக வைத்து விற்கப்படுகின்றன. புதியவற்றையும், பழையவற்றையும் கலந்து விற்போருக்குத் தண்டம் விதிக் கப்படுகின்றது. ஆறாவது பிரிவினர் வாணிபப் பொருள்களின் விலையிற் பத்திலொன்றை அறவிடுகின்றனர். இவ்வாறு ஆறு பிரிவினர்களும் கடமை யாற்றுகின்றனர். இவர்கள் ஒன்றுசேர்ந்து பொதுக்கட்டிடங்களின் புழக்கம், அவற்றின் பழுதுபார்ப்பு, பண்டங்களின் விலை, சந்தை, துறை முகம், கோயில்கள் முதலியவற்றிற்குப் பொறுப்பாயிருக்கின்றனர். நகரின் நியாய அதிகாரிகள் இராணுவத்தை நடத்துவிக்கின்றனர். இவர்கள் ஐந்து உறுப்பினர் அடங்கிய ஆறு சபைகளாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றனர். ஒன்று, கடற்படை அதிகாரியோடு ஒத்துழைக்கின்றது. இரண் டாவது போருக்குரிய இயந்திரங்களையும், போர்வீரரின் உணவையும் பிற பொருள்களையும் கொண்டு செல்லும் எருதுகளையும் வண்டிகளையும் கவனிக்கின்றது. இது, வேலையாட்களையும், பறை கொட்டுவோரையும், சல்லரி போடுவோரையும், குதிரைப் பாகரையும், இயந்திரம் பழுது பார்ப் போரையும் அவர்களின் உதவியாளரையும் அளிக்கின்றது. சல்லரிகளாற் செய்யப்படும் ஓசையை அறிந்து வேலையாட்கள் குதிரைகளுக்குப் புல் கொண்டு வருகின்றனர். மூன்றாவது பிரிவு காலாட்படைக்குப் பொறுப்பா யிருக்கின்றது. நாலாவது குதிரைப்படைக்கும், ஐந்தாவது தேர்களுக்கும், ஆறாவது யானைப் படைக்கும் பொறுப்பாயிருக்கின்றன. அரசனின் ஆயுதச்சாலை உண்டு. ஒவ்வொரு போர் வீரனும் 1ஆயுதங்களை ஆயுதச் சாலையிலும், குதிரையை அல்லது யானையைப் பந்தியிலும் விட்டுச் செல் கின்றான். அவர்கள் யானைக்குக் கடிவாளமிடுவதில்லை. தேர்களை எருதுகள் இழுத்துச் செல்கின்றன. தேரை இழுத்துக் களைப்படையாதபடி குதிரைகள் பக்கத்தே நடத்திச் செல்லப்படுகின்றன. தேர்ப்பாகனின் இரண்டு பக்கங்களி லும் ஒவ்வொரு வீரர் இருக்கின்றனர். போர் யானை நான்கு வீரரைக் கொண்டு செல்கின்றது. ஒருவன் பாகனும் மூவர் போர் செய்வோருமாவர். தத்துவ சாத்திரிகள் தத்துவ சாத்திரிகளின் ஒரு பிரிவினர் பிராச்மேன் (பிராமணர்) என்றும், மற்றப் பிரிவினர் சார்மேன்1 எனவும் அழைக்கப்படுவர். பிராச் மேனின் கொள்கைகள் உண்மையாகவிருக்கின்றன. ஆகவே, அவர்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். கருப்பத்தில் இருப்பது முதல் அவர்கள் அறி வாளிகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர். தாயினதும் குழந்தையினதும் நலத்துக்காகச் சில கிரியைகளைச் செய்வதாகப் பாசாங்கு செய்து அறிவாளிகள் அவளுக்குப் பல புத்திமதிகளைக் கூறுகின்றனர். அவர்களின் புத்திமதிகளை ஆவலோடு கேட்கின்றவள் மிகவும் புண்ணியசாலி என்று கருதப்படுகின் றாள். பிறந்த பின் குழந்தை, ஒருவரின்பின் ஒருவராக அறிவில் உயர்ந்த பலரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. தத்துவ சாத்திரிகள், வளைத்தடைத்த சோலைகளின் மத்தியில் வாழ் கின்றனர். அவர்களின் வாழ்க்கை எளிதானது; புல், மான்தோல் முதலியவற் றின்மீது அவர்கள் படுக்கின்றனர். அவர்கள் விலங்குகளின் இறைச்சியைப் புசிப்பதில்லை; பெண்போகத்தை அவர்கள் வெறுப்பர். அவர்கள் பேசு வதைக் கேட்போர் மௌனமாகவும் அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இப் பிராமணத்தைத் தாண்டும் எவரும் இரக்கமின்றி அக் கூட்டத்தினின்றும் விலக்கப்படுகின்றனர். இவ்வாறு வாழும் ஒவ்வொருவரும் முப்பத்தேழு ஆண்டுகளின்பின் தத்தம் இல்லங்களுக்குச் செல்கின்றனர். அப்பொழுது அவர்கள் அழகிய மசிலின் (சல்லா) ஆடைகளை உடுக்கின்றனர்; விரல் களில் ஆழிகளும், காதிற் குண்டலங்களும் அணிகின்றனர்; தொழில் செய் கின்ற விலங்குகளல்லாத பிறவற்றின் ஊனைப் புசிக்கின்றனர். காரமுள்ளதும் தாளிதஞ் செய்ததுமாகிய உணவை அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மனைவியரையும் அவர்கள் மணந்துகொள்ளலாம். அடிமைகளின்மையின் கூடிய தொகை மனைவியர்களையும், பிள்ளைகளையும் உடையராயிருத் தல் தமது வாழ்க்கைக்கு வசதியாகுமென அவர்கள் எண்ணுகின்றனர். பிராச்மேனியர் சாத்திர உண்மைகளைத் தம் மனைவியருக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. பிறருக்கு மறைக்கப்பட்ட அவ்வுண்மைகளை வெளிப்படுத்தி அவற்றின் தூய்மையைக் கெடுத்துவிடுவார்கள், அல்லது உண்மை அறிவு மிகுந்து தம்மை விட்டுப் பிரிந்துவிடுவர் என அவர்கள் அஞ்சுகின்றனர். நல்ல மனைவியரும், கணவனும் இன்பதுன்பங்களைச் சமமாகப் பாவித்து வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் அடிக்கடி பேசும் பொருள்களுள் மரணம் ஒன்றாகும். பிறப்பைப்போல இறப்பும் வரும் என்று அவர்கள் சாத்திரங் கூறுகின்றது. மனிதனுக்கு நேரும் இன்பதுன்பங்க ளெல்லாம் கனவு போன்ற மாயை என்றும், இல்லாவிடின் ஒரு பொருள் சிலருக்குத் துன்பத்தையும் வேறு சிலருக்கு இன்பத்தையும் கொடுக்கமுடியா தென்றும், ஒரே பொருள் வெவ்வேறு காலங்களில் நேர்மாறான நுகர்வு களைக் கொடுக்கக் காரணமென்னவென்றுங் கூறுகின்றனர். இயற்கை நிகழ்ச்சியைக் குறித்த அளவில் அவர்கள் குறைவான விளக்கமுடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் கட்டுக்கதைகளை நம்புகின்றனர்; ஊகை ஆராய்விலும் பார்க்கச் சாதனையில் திறமையுடைய வர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் கொள்கைகள் பலவகையில் கிரேக்கர் கொள்கைகளோடு ஒற்றுமையுடையனவாய்க் காணப்படுகின்றன. கிரேக்கரைப்போலவே அவர்களும் உலகம் ஒரு காலத்தில் உற்பத்தியான தென்றும், அது உருண்டை வடிவினதென்றும், அதனை உண்டாக்கிய கடவுள் அதன் எல்லாப் பாகங்களிலும் செறிந்திருக்கிறாரென்றும் கூறுகின்றனர். இவ் வுலகின் உற்பத்திக்கு முதற் காரணமுண்டென்றும், அது நீரினின்று உண்டா யிற்றென்றும், நிலம், தீ, நீர், காற்று என்னும் நாலு பூதங்களைவிட ஐந்தாவது பூதம் ஒன்று உண்டென்றும், அதினின்றும் வானமும் நட்சத்திரங்களும் உண்டாயினவென்றும் அவர்கள் நம்புகின்றனர். பூமி உலகின் மத்தியில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. சிருட்டி உயிரின் இலக்கணம் இவை போன்ற பல பொருள்கள் கிரேக்கர் கொள்கைகளோடு ஒத்திருக்கின்றன. சார்மேன்களின் ஹைலேபியோய் என்னும் பிரிவினர் மிகவும் மரியாதை காட்டப்படுகின்றனர். அவர்கள் காட்டில் வசித்து அங்குக் கிடைக்கும் இலை களையும், பழங்களையும் புசிக்கின்றனர்: மரப்பட்டையால் தைத்த உடையை உடுக்கின்றனர். பெண் போகமும், மதுவும், ஊனும் அவர்களுக்கு விலக்கு. அரசன் தூதுவர் மூலம் இவர்களிடம் தனக்கு வேண்டிய ஆலோசனை களைக் கேட்கிறான்; இவர்கள் மூலம் கடவுளுக்கு வழிபாடு செய்விக்கிறான். இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளோர் மருத்துவர். இவர்கள் மனிதனின் இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சி செய்கின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் எளியவை. அவர்கள் வயல்களில் வசிப்பதில்லை. அவர்களின் உணவு அரிசியும் பிறவும். இவற்றை அவர்கள் எவரிடமேனும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகின்றனர்; அல்லது விருந்தாளிகளாகத் தங்கு மிடங்களிற் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் கலைகளின் சிறப்பினால் மகிழ்ச்சிக்குரிய மணங்களை ஒழுங்குபடுத்துவர்; பிறக்கும் குழந்தைகள் ஆண் அல்லது பெண் என்று முன் அறிந்து கூறுவர். அவர்கள் உணவு முறை களால் நோயை மாற்றுகின்றனர். மருந்தை அருமையாகப் பயன்படுத்து கின்றனர்; மற்றைய முறைகள் இயற்கைக்கு மாறுபட்டன என்று கூறுகின் றனர். இவர்களும் வேறு சில வகுப்பினரும் நாள்முற்றும் அசையாது ஓரிடத்தில் நிற்றல்போன்ற பழக்கங்களைச் செய்கின்றனர். இவர்களையன்றி மந்திர வித்தைக்காரரும் வேடம் பூண்டோரு மிருக்கின்றனர். இவர்கள் தாமும் உயர்ந்த திருத்தமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். மறு உலகத்தைப்பற்றிய நினைவு அன்பையும் தூய்மையையுமுண்டாக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் சிலரிடமிருந்து பெண்கள் சமய சாத்திரங் கற்கின்றனர். பாடலிபுத்ரா கங்கையாற்றின் அகலம் 100 ஸ்ரேடியா.1 அதன் குறைந்த ஆழம் 120 அடி. கங்காநதியும் இன்னொரு ஆறும் கூடும் இடத்தில் ‘பலிபோத்திரா’ என்னும் ஒரு நகர் இருக்கிறது. இதன் நீளம் எண்பது ஸ்ரேடியா; அகலம் பதினைந்து ஸ்ரேடியா. அது நீண்ட சதுர வடிவமானது. அதைச் சுற்றி மரத்தி னால் இடப்பட்ட அரண் உண்டு. அம்புகள் எய்யக்கூடியதாகச் சுவரின் இடையிடையே சந்துகள் செய்யப்பட்டன. சுவரின் முன்னே அகழி ஒன்று இருக்கின்றது. நகரின் கழிவு நீர் இதனுள் விழுகின்றது. இங்கு வாழ்வோர் இந்தியா முழுமையிலும் வாழ்வோரினும் சிறந்தோர். அரசன் தனது குடும்பப் பெயரோடு ‘பலிபோத்திரா’ அல்லது ‘சந்திர கோத்திரா’ என்னும் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அகழிகள் 600 அடி அகலமும், 30 முழ ஆழமுமுடையன. மதில் 570 கோபுரங்களும் அறுபத்து நான்கு வாயில்களும் உடையதாயிருந்தது.1 இந்திய மக்கள் சுதந்திர வாழ்க்கையினர். அடிமைகள் ஒருவரும் காணப்பட வில்லை. பாண்டிய சாதியினர் பெண்களால் ஆளப்படுகின்றனர். அவர்களின் முதல் அரசி கெகுலிசின் புதல்வி எனப்படுகின்றாள். இந் நாட்டிலுள்ள நிசா (Nysa) என்னும் பட்டினமும் மேற்கூறியப்படி பெயருடைய மலையும் யூபிதர் கடவுளின் பரிசுத்த இடங்கள், இம்மலையிலுள்ள குகையில் பக்கஸ் கடவுள் வளர்ந்தார் என்று இந்தியர் உறுதியாகக் கூறுகின்றனர். எகுலிஸ், தனது புதல்விக்குக் கொடுத்த நாட்டை 365 கிராமங் களாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்தையும் முறையே வருடத்தின் 365 நாளும் திறை கொடுக்கும்படி விதித்தார்.2 பக்கஸ் (Father Bacchus) காலம் முதல் அலக்சாந்தர் காலம் வரையில் பாண்டிநாட்டை ஆண்ட அரசர் 154 பேர். இவர்களின் ஆட்சி 6431 ஆண்டு 3 திங்கள் நடைபெற்றது. தபிரபேன் என்னும் தீவு இந்தியாவினின்றும் ஒரு சிறிய ஆற்றினாற் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இந்தியாவிற் கிடைப்பதிலும் அதிக பொன்னும் முத்தும் கிடைக்கின்றன. அங்குள்ள யானைகள் இந்திய யானை களிலும் பெரியன. தபிரபேன் 7000 ஸ்ரேடியா நீளமும், 5000 ஸ்ரேடியா அகலமுமுள்ளது. அங்கு 700 கிராமங்கள் உண்டு. கடல் ஓரங்களில் ஆமைகள் அதிகம். அவைகளின் ஓடு 15 முழ நீளம். தாம்பிரபர்ணி என்னும் கடலுள் இருக்கும் இத் தீவில் தென்னைகள் நிரையாக நடப்பட்டிருக்கின்றன. இங்கு யானைகளும் அதிகம். அத் தீவின் மக்கள் அவைகளைப் பிடித்துக் கலிங்க தேசத்துக்கு அனுப்புகின்றனர். கரை ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்து வாழ்வர். அக் கடல்களில் சிங்கத்தலை விலங்குத் தலைகளுள்ள மீன்கள் உலாவுகின்றன. பெண்களின் தலையுடைய மீன்களும் அங்கு உண்டு; அவைகளுக்கு மயிருக்குப் பதில் முட்கள் காணப்படுகின்றன.  இயல் - 5 தமிழ் வேந்தரும் அவர் ஆட்சியும் பிற்காலத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளாலும் பட்டயங்களாலும் தமிழிலக்கியங்களிற் காண முடியாத பல அரிய செய்திகள் கிடைக்கின்றன. அரசியல் தொடர்பான தனித்தமிழ்ச் சொற்கள் காணப்படுதலின் அவ்வாட்சி முறை மிகப் பழைமை தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்ற தெனத் துணியலாம். தமிழ்நாட்டிலே மூவேந்தரது ஆட்சி முறையும் ஒரே வகையாக நடை பெற்றது. எல்லா அதிகாரமும் அரசனுக்கு இருந்தது. அவனுக்கு உறுதிகூறும் அமைச்சர் நகரப் பெருமக்கள் முதலிய சுற்றத்தினர் இருந்தனர். அரண் மனையில் ஏவல் புரிவோர் பல கூட்டத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சமையல் அறை குளிக்கும் அறைகளிற் பெரும்பாலும் ஆடவரே வேலை புரிந்தனர். வேலையாட்கள் வேளம் என்னும் கூட்டத்தினின்றும் தெரிந் தெடுக்கப்பட்டார்கள். அவர்கள், போரிற் சிறை பிடிக்கப்பட்டவர்களாவர். சோயுகுவா என்னும் சீனன், சோழர் ஆட்சியைப் பற்றி எழுது மிடத்துக் குறிப்பிட்டிருப்பது வருமாறு: அரண்மனை விருந்துக் காலங் களில் அரசனும் நான்கு அமைச்சர்களும் சிங்காசனத்தின் அடியை வணங்கு கிறார்கள்; உடனே அங்குக் குழுமியிருப்போர் வாத்தியங்களை ஒலித்து ஆடல் பாடல்களைத் தொடங்குகின்றனர். அரசன் மது அருந்தமாட்டான்; ஊன் அருந்துவான். நாட்டு வழக்கப்படி அவன் பஞ்சு ஆடையை அணிந்து கொண்டு தானிய மாவினாற் செய்த பணியாரங்களை உண்கிறான். உண வருந்தும் அறையிற் சேவிப்பதற்கும் தன்னைச் சூழ்ந்து திரிவதற்கும் அவன் திரளான நடன மாதரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். நாள் ஒன்றுக்கு முறை முறையாக அவனைச் சேவிக்கும் பேர் மூவாயிரம் மாதர்.1 அரசனுக்கும் தேவிக்கும் தனிச் சேவகம் புரியும் பணியாளருமிருந்தனர். படையில் யானை குதிரை வீரர், காலாள், தேர்வீரர் என்போர் இருந்த னர். யானைவீரர் யானையாட்கள் குஞ்சரமள்ளர் எனவும், குதிரை வீரர் குதிரைச் சேவகர் எனவும், காலாட்படையினர் கைகோளப் பெரும் படை யினர் எனவும், வில்லாளர் வில்லிகள் எனவும், வாட் படையினர் வாட்பெற்ற கைக்கோளர் எனவும் பட்டனர். யுத்த காலத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் வீரர் அரசனின் வலங்கை எனப்பட்டனர். நகரங்களில் படை தங்குமிடங்கள் கடகங்கள் எனப்பட்டன. படைகளின் தலைவன் படைத்தலைவன் சேனாபதி அல்லது படைமுதலி எனப்பட்டான். வரி தண்டும் கருமி (மேல் உத்தியோகத்தன்) நாடுவாகை எனப்பட்டான். வரி தண்டும் வேலையில் போர் வீரர்களும் பயன்படுத்தப்பட்டனர். கால்வழியாக வரும் படை மூலப்படை எனப்பட்டது. மேற்கூறியபடி சீன ஆசிரியன் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதியிருப்பது வருமாறு: இவ் விராச்சியத்தில் (சோழ நாட்டில்) பதினாயிரம் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டு முழம் உயர முடையது. போர் புரியும்போது அவை முதுகின்மீது வீடுகளைக்கொண்டு திரிகின்றன. வீடுகள் நிரம்ப வீரர்கள் இருந்து அம்புகளை எய்கின்றனர். வெற்றியடைந்தபின் யானைகளுக்குக் கௌரவப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. நாளும் அவை அரசனுக்குமுன் கொண்டுவரப்படுகின்றன. போரில் கொள்ளையடிக்கப்படும் பொருள் அரசனுக்குச் சொந்த மானது. அரசனது வாய் உத்தரவு ‘திருவாய்க் கேள்வி’ எனப்பட்டது. அதனைக் கேட்டு எழுதும் கருமிகள் பலர் அவனுடன் இருந்தனர். எழுதுவோன் ‘தீட்டுக்காரன்’ எனப்பட்டான். அரசன் வழக்குகளை நேரிற் கேட்டு நாட்டு வழக்கப்படி தீர்ப்பளித்தான். பெரிய கருமிகளுக்கு ஏனாதி, மாராயன் என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. மாராயன் என்பதன் பெண் பால் மாராசி. உயர்ந்த கருமிகள் அதிகாரிகள் எனப்பட்டனர். மேல் கீழ் அதிகாரிகளைக் குறிக்கப் ‘பெருந்தரம்’ ‘சிறுதரம்’ என்னும் பெயர்கள் வழங் கின. உத்தியோகத்தர் ‘கருமிகள்’ எனவும், வேலையாட்கள் ‘பணி மக்கள்’ எனவும் கூறப்பட்டனர். நியாயாதிபதிகள் ‘நியாயத்தார்’ எனப்பட்டனர். ஒரு கிராமத்தின் அல்லது அதன் பகுதியின் கடமைகளைப் பார்க்கும் கருமிகள் ‘உடையார்’ அல்லது ‘கிழார்’ எனப்பட்டனர். ஒவ்வொரு கிராமமும் பெரு மக்கள் கூட்டங்களால் ஆளப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், நாடு அல்லது கோட்டம் எனப்பட்டது. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வள நாடு. வள நாட்டிலும் பெரியது மண்டலம். 1நாட்டு ஆட்சி மாசனங்களும் சனங்களும் கூட்டங்களும் அரசியற் கருமங்களை நடத்தின. ஒவ்வொரு கூட்டமும் தனித்தனி ஒவ்வொர் கருமத்தைக் கவனித் தது. கிராமங்கள், சேரிகள், தெருக்கள் என்னும் வகையாகப் பிரிவுகள் செய் யப்பட்டன. ஒவ்வொரு தெருவிலுள்ளோரும் தனித்தனிக் கூட்டங்களாகச் சேர்ந்து ஒவ்வொரு கருமத்தைக் கவனித்தார்கள். அறச் சொத்துகளை மேற்பார்வை செய்தோர் ‘தானத்தார்’ எனப்பட்டனர். திருக்கோயில்களுக் குள்ள நிலங்களுக்கு வரிகள் நீக்கப்பட்டிருந்தன. கிராமம் அல்லது பட்டினம், ஊர் எனப்பட்டது. ஊர், ஆளன்கணம் என்னும் கணத்தால் ஆளப்பட்டது. ஊர் ஆள்வார் என்பதும் அக் கூட்டத்தின் பெயர். இக் கூட்டத்தின் கீழ் ஊர்வாரியம் என்னும் கூட்டங்கள் இருந்தன. இச் சொல் வாரி (இனம்) என்னும் அடியாகப் பிறந்தது. தனிப்பட்ட கடமைகளைப் பார்க்க இக் கூட்டத்தாரால் அமைக்கப்பட்டோர் வாரியர் எனப்பட்டனர். கூட்டங்களின் காரியக்கூட்ட உறுப்பினர் ‘வாரியப் பெருமக்கள்’ எனப்பட்டனர். ஊரின் ஒவ்வொரு பிரிவும் ‘குடும்பு’ (Ward) எனப்பட்டது. ஒவ்வொரு குடும்பிலும் உள்ள உறுப்பினர் ‘குடஓலை’ வாயிலாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர்.2 பெரிய குற்றம் ‘மேற்படு குற்றம்’ எனப்பட்டது. வினைக்கேடு (கெட்ட நடத்தை) உள்ளவர்களும் கைக்கூலி வாங்குவோரும் தண்டிக்கப்பட்டனர். ஊரவர் களிடம் உள்வரி (மறைவாக வாங்கும் வரி) வாங்குதல் ஊர்க்குக்கரவு (துரோகம்) செய்தலாகக் கருதப்பட்டது.3 சபை மாசபை என்பன முறையே குறி, பெருங்குறி என வழங்கின. உறுப்பினர் பெருமக்கள் எனப்பட்டனர். சபைகள் பெரும்பாலும் கோயில் மண்டபங்களிற் கூடின. சபை பறை சாற்றிக் கூட்டப்பட்டது. சபை கூட்டுவது (சேமக்) கலம் அல்லது இரட்டைக் கலம் தட்டி அறிவிக்கப்பட்டது. அரசனது வாய்க்கட்டளை (திருமுகம்) திருமந்திர ஓலை என்னும் கருமியால் எழுதப்பட்டுப் பொத்தகத்திற் புகுத்துமுன் ‘திருமந்திர ஓலை நாயகம்’ என்பவனால் ஒப்பு நோக்கப்பட்டது. பின்பு ஓலை நாயகம் வரியிழுத்துக் கொள்க எனக் கருமி ஒருவனுக்குக் கட்டளையிட, அது பொத்தகத்திற் புகுத்தப்பட்டுத் தீட்டு (Document) ஆனது. ஏற்பாடுகள் (ஆவணங்கள்) தொடர்பாகப் புரவு வரி, வரிப் பொத்தகம், முகவெட்டி, வரிப் பொத்தகக் கணக்கு, வரியிழுத்து, கண்காணி, பட்டோலை, நடுவிருக்கை முதலிய கருமிகள் இருந்தனர். நாட்டிலுள்ள சபைகளுக்கு அனுப்பப்படும் செய்தி ஓலைகள் ‘திருமுகம்’ எனப்பட்டன. ‘நடுவிருக்கை’ என்பவன் மனுச் செய்பவனுக்கும் கருமிக்கும் இடையில் நின்று செய்திகளை அறிவிப்பவன். ஆவணத்தி என்பவன் காரிய (Executive) உத்தியோகத்தன். வரிப் பொத்தகம் நாட்டு வரி தொடர்பான கணக்குகள் தீட்டப்படும் பொத்தகம். அதற்குப் பொறுப்பா யுள்ள கருமியும் அப் பெயரால் அறியப்பட்டான். புரவுவரி என்பது நிலவரி. புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரிப் பகுதி (Land Tax Department). வழக்காளியின் வாக்கு மூலம் முறைப்பாடு எனப்பட்டது. நிலம் தொடர்பான வழக்குகள் ஆட்சி ஆவணம் முதலியவைகளை நோக்கி முடிவு செய்யப் பட்டன. மக்கட் பிரிவு மக்கள் தொழிற் பிரிவுகள் பற்றிக் கூட்டங் கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்தபோதும் பொதுக் கருமங்களில் ஒத்துழைத்தார்கள். 1ஈழவர் அக் காலத்தில் பனை தென்னைகளில் ஏறி மது இறக்கவில்லை. வருணம் என்பது தென்னிந்திய மக்களாற் கைக்கொள்ளப்படவில்லை. சில பிரிவினர் சிற்சிலவற்றைச் செய்தல் கூடாதென்னும் வழக்கு இருந்தது. இது கம்மா ளருக்குச் சோழ அரசன் எழுதியளித்த பட்டயமொன்றால் விளங்குகிறது. வீட்டில் நடக்கும் நன்மை தீமைகளில் இரண்டு சங்கு ஒலித்தல், மேளமடித் தல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மிதியடிதரித்தல், வீட்டுக்கு வெள்ளையடித்தல் இரண்டு மாடி வீடு கட்டுதல் வீட்டின் முன்புறத்தைத் தாமரை ஆம்பல் முதலிய பூமாலைகளால் அலங்கரித்தல் போன்ற சகா யங்கள் அப்பட்டயத்தில் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களிடையே ‘வலங்கை’ ‘இடங்கை’ என்னும் கட்சிகள் இருந்தன. இடங்கையினர் பிராம ணர்களின் மிதியடிகளையும் குடைகளையும் தூக்கிச் சென்றனர். அரசரும் பெருமக்களும் பல மனைவியருடையராயிருந்தனர். மனைவியர் 1உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. வரலாற்றுக் காலத் துக்கு முன்தொட்டு ஆடல் பாடல் மாதர் மிகவும் கவர்ச்சிக்குரியவர்களா யிருந்தார்கள். விழாக் காலங்களில் அவர்கள் வரவு மிகவும் வரவேற்புக் குரியதாயிருந்தது. அவர்கள் ஆடவர்களுடன் தாராளமாகப் பழகினார்கள். அம்பலங்களில் (Rest Houses) தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. வரியும் வருவாயும் அரசனது நிதி நிலையம் தலம் எனப்பட்டது. நிதியிற் பெரும்பாலன, நகைகளாகவும் விலையுயர்ந்த மணிகளாகவும் இருந்தன. அபுசா செட் (Apuza Zed) என்பவன் பத்தாம் நூற்றாண்டில் எழுதியிருப்பது வருமாறு: தங்கத்தில் இரத்தினக்கற்கள் பதித்த குழைகளை இந்திய அரசர் அணி கிறார்கள். அவர்கள் கழுத்தில் இரத்தினம் வைடூரியம் முதலியவைகளாற் செய்த மாலைகள் இலங்குகின்றன. ஆனால், முத்துக்கள் மிகவும் விலை யேறப்பெற்றவை. அரசரின் நிதிச் சேமிப்புப் பெரும்பாலும் முத்துக்களா யிருக்கின்றது. அதிகாரிகளும் உயர்ந்த கருமிகளும் அரசன் அணிவது போன்ற விலையுயர்ந்த முத்து மாலைகளை அணிகிறார்கள். வரி பெரும்பாலும் இறை எனப்பட்டது. பணம் இறுக்கும்படி விதிக் கப்படும் தண்டனை தண்டம் எனப்பட்டது. ஆயம் என்னும் சொல்லும் இறை என்னும் பொருளில் வழங்கிற்று. அரசனது வாயில் ‘திருக்கொற்ற வாயில்’ எனப்பட்டது. மத்திய அரசைச் சேரவேண்டிய நிலவரிக்குக் கிராம சபைகள் பொறுப்பாயிருந்தன. வரிகள் நில விளைவுகளிலிருந்தும் பிற வகைகளி லிருந்தும் வாங்கப்பட்டன. 2வெட்டி என்பது கூலி இல்லாத கட்டாய வேலை. நகரவரி (ஊரிடுவரி), ஏரிவரி, வேதனைவரி (அணைகட்டும் கட்டாய வேலை), சிலவரி, மகன்மைவரி, பேர்வரி (Poll Tax), கார்த்திகை யரிசி, கார்த்திகைப் பச்சை (காசு ஆயம்), கடை இறை, படிகாவல், நகர்காவல் எனப் பல வரிகள் இருந்தன. சில நேரங்களில் வரி கொடாதாரைத் தண்ணீரிலிட்டும் வெயிலில் நிறுத்தியும் வேதனை கொடுத்தும் வரி வாங்கப்பட்டது. வாணிகம் வியாபாரத்தின் பொருட்டு மக்கள் இடங்கள்தோறும் சென்றார்கள். பெரிய தெருக்கள் ‘பெருவழி’ எனப்பட்டன. பண்டங்கள் கழுதை, பொதி மாடு, எருமைகளில் கொண்டு போகப்பட்டன. பணம் கடன் கொடுத்தவர், வாங்கியவரிடத்திற் பெறும் சீட்டு (Pronote) ‘கையெழுத்தோலை’ எனப் பட்டது. தமிழ் வியாபாரிகள் மலாயத் தீபகற்பம். இந்து சீனம், சீனா முதலிய நாடுகளுக்குச் சென்றனர். மாவலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், சாலியூர், கொற்கை முதலியன கிழக்கிலும், கொல்லம் மேற்கிலும் பெரிய வியாபாரப் பதிகளாயிருந்தன. இலங்கை நிக்கவாரம் (Nicobars) இலக்க தீவு, மாலை தீவுகள் மேற்கிலும், கப்பல்கள் தங்குதற்கு ஏற்ற இடங்களாயிருந்தன. சீன நாவாய்கள் மலையாளக்கரையிலுள்ள கொல்லம்வரையிற் சென்றன. அராபியாவிலிருந்து குதிரை வியாபாரிகள் குதிரைகளைக்கொண்டு வந்தனர். அடிமைகள் அக் காலத்தில் பணத்துக்கு விற்று வாங்கப்படும் அடிமைகள் இருந் தார்கள். உயர்குலத்தவர்களும் சில சமயங்களில் அடிமைகளாக வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் தம்மைக் கோயில்களுக்கு விற்றார்கள். அடிமை களை விற்று வாங்குவதற்கு அரசியல் ஆவணங்கள் எழுதப்பட்டன. கோயில்களுக்கு விற்கப்படும் பெண்கள் ‘தேவராட்டியர்’ எனப்பட்டனர். வேலையாட்களுக்குக் கூலி தானியங்களாகவே கொடுக்கப்பட்டது. கிராமம் கிராமங்களில் மக்கள் எளியவாழ்க்கை நடத்தினர். பண்ணைக்காரன் அல்லது நிலம் வைத்திருப்போன் மேலான நிலைமையில் இருந்தான். கிராம சபைகள் பெரும்பாலும் நிலம் வைத்திருக்கும் பெருமக்களின் கூட்டமா யிருந்தது. கிராமங்களைச் சுற்றிச் சில பகுதிகள் ஊர்ப் பொதுவாகவிருந்தன. வரி யிறுக்கும் மக்கள் கிராம ஆட்சியில் பெரும் பங்கு பற்றினர். ஒவ்வொரு கிராமத்திலும் கால்வழியாகவரும் வேலையாட்கள் இருந்தனர். சேக்கிழார், பெரிய புராணத்தில் நந்தனாரைப்பற்றிக் கூறும் பகுதி, அக்காலக் கிராம வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். தானியம் சேர்த்து வைக்கப்படும் இடம் ‘கொட்டகாரம்’ எனப்பட்டது. நிலம் செய்வோன் காணியாளனுக்குக் கொடுக்கும் பாகம் மேல்வாரம் எனப்பட்டது. அளவைகள் நிலங்கள் கோலால் அளக்கப்பட்டன. ஒரு கோல் 16 சாண்; 18 கோல் கொண்டது ஒரு குழி; 256 குழி கொண்டது ஒரு மா; 20 மா கொண்டது ஒரு வேலி. இடங்கள்தோறும் குழி அளவு மாறுபட்டது. ஆண்டு 360 நாட்களாகவும், சில காலங்களில் 365 நாட்களாகவும் கணக்குச் செய்யப்பட்டது. தானிய அளவை 2 செவிடு ஒருபிடி; 5 செவிடு ஓர் ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி ஒரு நாழி; 8 நாழி ஒரு குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 2 பதக்கு 1 தூணி அல்லது காடி; 3 தூணி ஒரு கலம். பொன் அளவை ஒரு மஞ்சாடி 2 குன்றி; 1 குன்றி 5 மா; 1 மா 4 காணி; (ஒரு மஞ்சாடி=2 குறுணி=10 மா=40 காணி) 20 மஞ்சாடி ஒரு கழஞ்சு (68 முதல் 72 தானிய எடை;) மா 1\20-யும் காணி 1\80-யும் குறிக்கும். பண எடை என்பது 1\10 கழஞ்சு. நீட்டலளவை 8 தோரை (தானியம்) ஒரு விரல்; 12 விரல் ஒரு சாண்; 2 சாண் ஒரு முழம். பள்ளிக்கூடங்கள் முற்காலம் பள்ளிக்கூடங்கள் மரத்தடி, 1கோயிற்சாலை அல்லது மடங்கள் அல்லது உவாத்தியாயர் வீட்டுத் திண்ணையிற் கூடின. பேர் பெரிய திண்ணைச்சட்டம்பியார் என்பது இன்றும் வழக்கு. ஆசிரியனுக்கு மாணவர் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயின்றனர். ஏட்டில் எழுதப்பட்ட புத்தகங்கள் வழங்கின. ஏடும் எழுத்தாணியும் கணக் காயராற் பயன்படுத்தப்பட்டன. சிறுவர் மணலில் எழுதிப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் அவனுக்கு உதவியாளனாயிருந்தான்; அவன் சட்டாம்பிள்ளை எனப்பட்டான். மாணவர் அவனுக்கு அடங்கி நடந் தார்கள். காலையில் மாணவர் மரத்தடியிலோ திண்ணையிலோ கூடினார்கள். ஆசிரியன் வந்ததும் அவர்கள் எல்லோரும் எழுந்து இருவென இருந்து அவன் கூறுவதைக் கருத்தாகக் கேட்டுப் பயின்றனர். தொல்காப்பியர் காலத்தில் இவ் வகைப் பள்ளிக்கூடங்களே இருந்தன. மாணாக்கர் ஆண் டில் ஒரு முறையோ இரு முறையோ உவாத்தியாயருக்கு வேண்டியவற்றை (பெரும்பாலும் தம் வயல்களிலும் கொல்லைகளிலும் கிடைப்பவைகளை) கையுறையாகக் கொடுத்தனர். மாணாக்கன் கல்வியை நிறுத்துங்கால் பெரிய கூட்டங்கூடி அவன் பயின்ற நூலைச் சபையோருக்குப் பிரசங்கிப்பித்து அவன் திறமையைக் காண்பிப்பதும் மரபாயிருந்தது. இலங்கை அரசர் வரலாற்றால் அறியப்படுவன சில இலங்கை அரசர் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது தமிழ் இரத்தக் கலப்புடையவர்களாக இருந்தனர். இவர்களின் அரண்மனைப் பழக்க வழக்கங்கள் தமிழ் அரசருடையனபோலவே இருந்தன. அரசனுக்குப் பக்கத்தில் ‘வலங்கை’ ‘இடங்கை’ என்னும் பெருமக்கள் இருந்தனர். சேனாபதி அரசனுக்கு அடுத்தபடியில் அதிகார முடையவனாயிருந்தான். அரண்மனைச் சமையலறையில் ஆடவரே வேலை செய்தனர். சமையலறை யில் புழங்கும் தட்டுக்களும் பாத்திரங்களும் வெள்ளி தங்கம் என்பவை களாற் செய்யப்பட்டவை. நாடோறும் காலையில் மருத்துவன் அரசனது உடல் நிலையைச் சோதித்து அதற்கேற்ற உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிச் சமையலறைத் தலைவனிடம் கொடுத்தான். உணவு சமைத்ததும் அரசன் உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சமைய லறைத் தலைவனுக்குச், சமைத்த எல்லாவகை உணவிலும் சிறிது சிறிது எடுத்துக் கொடுக்கப்பட்டன. அவன் உண்டு ஒரு மணி நேரத்துக்குப்பின் அரசன் உணவு அருந்தினான். அக்கால அரசர் உணவில் நஞ்சு இடப்படு வதைக் குறித்துப் பெரிதும் அஞ்சினர்.1 அரசனுக்குச் சோறும், நூறு (பல) வகையான கறிகளும் சமைக்கப்பட்டன. அரசன் அவைகளுட் சிலவற்றை மட்டும் கொண்டு வரும்படி செய்து உண்டான். அவனுக்குச் சமயலறையில் சேவிப்போரெல்லோரும் வாயைத் துணியாற் கட்டியிருந்தனர். பெரியோர்க்கு முன் கைகட்டி வாய் புதைத்து நிற்றல் என்பன பழைய மரபுகள். இன்றும் கதிர்காமத் திருகோயிலிற் பூசை செய்யும் சிங்கள குருமார் பூசை நேரத்தில் தமது வாயைத் துணியாற் கட்டிக்கொள்வர். புரோகிதன், அரசன் வெளியே செல்வதற்கும் பிற கருமங்களைச் செய்வதற்கும் நல்ல நேரம் அறிந்து கூறினான். அரசனைக் காணச் செல்வோர் அவனைப் பார்த்தபின் சிறிது தூரம் பின் நோக்கி நடந்து சென்று அப்பால் திரும்பிச் செல்வர். அரச னுக்குப் பின்காட்டிச் செல்வது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது. மக்கள் அரசனுடன் பேசும்போது தம்மை அடிமைகள் (அடியேன்) நாய்கள் (நாயேன்) என்று குறிப்பிட்டுப் பேசுவார்கள்.2  இயல் - 6 கிழக்கே தமிழரின் குடியேற்ற நாடுகள் கிறித்தவ ஆண்டுகளின் முன்னர் தமிழ்மக்கள் சுமத்திரா, யாவா, பாலி முதலிய தீவுகளிலும், பர்மா, சீயம், இந்துச் சீனம், மலாய், குடாநாடு முதலிய நாடுகளிலும் குடியேறி இராச்சியங்களைக் கோலி ஆட்சிபுரிந்தனர். அக் காலத்தில் அக் குடியேற்ற நாடுகளில் சைவமதம் பரவியிருந்தது. அந் நாடுகளிற் காணப்படுகின்ற பழைய அழிபாடுகளும் கல்வெட்டுகளும் பழங்கதைகளும் நன்கு ஆராயப்பட்டுள்ளன. அவைகளை ஆதாரமாகக் கொண்டு அந்நாட்டு வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவ் வரலாறு களால் அக் காலத்துக் கடல் கடந்து சென்ற தமிழரைப்பற்றி யாம் நன்கு அறிதல் கூடும். மணிமேகலை என்னும் தமிழ்நூல் (கி.பி. 200) சாவகத் தீவிலே நாகபுரத்திலிருந்து அரசாண்ட பூமிசந்திரன், புண்ணியராசன் என்னும் அரசர் இருவரைக் குறிப்பிடுவதோடு தமிழ்வணிகர் மரக்கலங்களில் சரக்குகளை ஏற்றித் தொலைவிடங்களிற் கொண்டு சென்று விற்றுப் பெரும் பொருளீட்டினார்கள் என்றும் கூறுகின்றது. திரிதிரயதா என்னும் பிராமணன் கம்போதியாவினின்றும் எண்ணூறு கிளிங்குக் (Kling) குடும்பங்களோடு சென்று பிரமாரி காளி என்னும் யாவக மாதை மணந்து அந் நாட்டுக்கு அரசனானான் என அந் நாட்டுப் பழங் கதைகள் கூறுகின்றன. யாவகத்தின் முதல் அரசனுக்கு ஸ்ரீமாறன் என்று பெயர். இப் பெயர் சாவக நாட்டின் அரச பரம்பரை தமிழ் உற்பத்தியுடைய தென்பதை நன்கு விளக்கும். யாவாவிலுள்ள பெரொக் என்னும் மக்களிடையே இன்றும் திராவிடக் குடும்பப் பெயர்கள் வழங்குகின்றன.1 யாவாவிலே மிகப் பெரிய சில ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. பழைய புராணங்களில் யாவகத் தீவு, சுவர்ண பூமி எனக் கூறப்பட்டுள்ளது. யாவகத் தீவிலும் அதனை அடுத்துள்ள தீவுகளிலும் காணப்படும் அழிபாடுகளாலும், கிடைத்துள்ள பழம்பொருள்களாலும் பிறவற்றாலும் அறியக்கிடப்பன பின்வருமாறு: 1யாவாத் தீவிற் காணப்படும் திருக்கோயில்களுட் பல சிவனுக்கு உரியன. யாவக மக்களின் அமரமாலை என்னும் நூல் பழமை யுடையது. அஃது அம் மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறுகின் றது. அந் நூலினால் அந் நாட்டினர் சிவனையே தலைமையாகக்கொண்டு வழிபட்டார்களெனத் தெரிகின்றது. சிவன், குரு, ஈஸ்வரன் என்னும் பெயர் களால் வழிபடப்பட்டார். சுமத்தியாவிலே லாரா யொங்றாங் (Lara Yongrang) என்னுமிடத்தில் ஆலயக் கூட்டங்களின் பெரிய அழிபாடு உள்ளது. இதன் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இருமருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங்களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி உமையுமாகவுள்ள அர்த்தநாரீசுவரத் திருவடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல இங்குள்ளன. இவை இந்திய ஆலயங்களிற் காணப்படும் திருவுருவங்களைச் சாலவும் ஒத்தன. போர்க் கடவுளாகிய கார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் யாவாவிற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில்மீது ஏறிச்செல்வது போன்ற உருவங்களே பெரும்பாலும் உள்ளன. ஆறு தலையும் பன்னி ரண்டு கையுமுள்ள திருவுருவங்கள் சிலவும் காணப்படுகின்றன. சிவன் இலிங்க வடிவிலும் வழிபடப்பட்டார். சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்திருக்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவுருவங்களும் கிடைத்துள்ளன. பாம்பின்மீது படுத்துத் துயில் கொள்ளும் திருவுருவங்கள் சிலவும் இங்குக் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இரு பக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலித் தீவிற் கண்டுபிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை தாமரை கரகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகமுடைய பிரமாவின் விக்கிரகம் யாவாவிற் காணப்படுகின்றது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் மும்மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற் செய்யப்பட்ட சிவன் திருவுருவம் ஒன்றுங் கிடைத்தது. செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந் நாட்டு மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபாட் (Crawfurd) என்பார் நியுகினியிற் காணப் படும் சமயக்கிரியைகள் சிவவழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட் டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுடன் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது. 1மலாய்க் குடா நாட்டிலுள்ள தீவுக்குச் சிங்கபுரம் என்னும் பெயர் அந் நாட்டு மக்களாற் கொடுக்கப்பட்டதன்று; யாவாத் தீவிற் குடியேறி அங்கு நின்றும் வெளிப்போந்த தென்னிந்திய மக்களால் இடப்பட்டது. அதற்குத் தமசக் அல்லது தமசா2 என்னும் பெயர் இருந்ததெனக் கொள்ளி னும், அதுவும் இந்திய உற்பத்திக்கு உடையதாகும். சுமத்திரா என்பதும் இந்திய மக்களாற் கொடுக்கப்பட்ட பெயரே. சுமத்திரா என்பதற்கு நல்ல பொருள் என்ற கருத்து.3 கி.பி. 1601 முதல் சிங்கபுரம் சிங்கப்பூர் என வழங்கப்படுகின்றது மலாய்க் குடா நாட்டிலே கொபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அழகிய நடராசத் திருவுருவ மொன்றும் காணப்பட்டது. இன்று மலாய்க் குடா நாட்டிற் காணப்படும் மக்கள் தமிழரினின்றும் தோன்றியவர்களாவர் எனச் சுவற்றின்காம் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். கம்போதிய மக்களின் பழங்கதைகளில் கம்புசுவாயம் பவ என்பவருக்குச் சிவன் அளித்த மேரா அல்லது பேரா என்பவளிடம் பிறந்து பெருகியவர்களே அந் நாட்டு மக்கள் எனக் கூறப்படுகின்றது. கம்போதியா கொச்சின் சீனா தெற்குச் சீயம் முதலியன அடங்கிய பகுதியைச் சீனர் பூனான் (Funan) என வழங்கினர். கவுண்டினியா என்னும் பிராமணன் நாகினி சோமா என்னும் அரசகுலப் பெண்ணை மணந்து கம்போதியாவுக்கு அரசனானான் என அந் நாட்டுப் பழங்கதையுள்ளது.4 இலங்கை தென்னிந்திய கிழக்குக் கரையோரங்களில் வாழ்ந்த மக்களே கம்போதியாவில் குடியேறி னார்கள்.5 கம்போதிய அரசர், வர்மன் என்னும் பட்டப்பெயர் புனைந்து முடிசூட்டப்பெற்றனர். தென்னிந்திய பல்லவ அரசர்களும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சந்திரவர்மன் என்னும் கம்போதிய அரசன் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அங்கோர்வாட் (Ankor-Vat) என்னுமிடத்திற் காணப்படும் கோவிற் கோபுரங்கள் தென்னிந்திய கோயிற் கோபுரங்களை ஒத்துள்ளன. இங்குக் காணப்படும் நடராசத் திருவுரு வங்களும் பிறசான்றுகளும் இங்குக் குடியேறினோர் தென்னிந்திய மக்களே என்பதை விளக்குகின்றன.1 கம்போதிய அரசருள் பாவவர்மன் என்போன் சிறந்த சிவபத்தன். இவன் கி. பி. 616இல் கம்பீரவாணர் என்னும் ஒரு சிவலிங்கத்தை நாட்டி வழிபட்டு வந்தான். கம்போதியர் கடவுளருள் சிவனே தலைமைபெற்றிருந்தார். பிரசார், சினெங், கறாபி முதலிய இடங்களிற் சிவன் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப்படு கின்றன. இடபத்தின்மீது வீற்றிருக்கும் வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பல கம்போதி யாவிற் கிடைத்துள்ளன. சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன.2 இவை களின் முன்னே பொதுமக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவலிங்கமொன்று உள்ளது. பெண்கள் இதனைச் சுற்றிவந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மலாயர் யாவகர் மகமதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வது போலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ் வாலயத்தில் வழிபடுகின் றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயங்கட்டி அங்குச் சிவலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டிற் காணப்படு கின்றது. கம்போதியாவிலே சிவன் கோயில் ஒன்றிற் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டிற் காணும் விபரம் பின்வருமாறு: யோகவர்மன்,3 ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காசு, குதிரை, எருமை, யானை, ஆடவர், மகளிர், பூமாலை முதலிய வற்றை அரசர் எவரும் கவர்ந்துகொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசனின் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளே செல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொதுமக்க ளும் ஆடம்பரமில்லாத உடையுடன் உள்ளே செல்லாம்; அவர்கள் நந்தி யாவர்த்த மாலையையன்றி வேறு மாலைகளை அணிந்துகொண்டு செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் இருந்து எவரேனும் வெற்றிலை போட்டுக்கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர்களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம். அரசனையன்றி வேறெவராவது ஆலயத்துக்கு முன்னால் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட்டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள், திருமாலை வழிபடும் குருமார், பொதுமக்களுள் சிறந்தோர் முதலியவர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலைமைக் குரு இவர் களை வரவேற்றுச் சொன்ன முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண்டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக்கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவும் நரகத்தைச் சேர்வார்கள்; இக் கட்டளை களுக்குட்பட்டு அவைகளை வலுப்படுத்துகின்றவர்கள் இத் தருமத்தை உண்டாக்கியவர் பெறும் பலனிற் பாதியைப் பெறுவர். கலிங்க நாட்டினின்றும் எழுநூறு தோழரோடு சென்ற விசயனென் னும் இராசகுமாரனே இலங்கையின் முதல் அரசன் எனப்படுகின்றான். கலிங்கர் தமிழர்களே என்பது எவருமறிந்த உண்மை. முன் ‘எல்லம்’ என வழங்கிய இலங்கைத்தீவு சிங்க வமிசத்தவனாகிய கலிங்க அரசன் ஆண்ட மையின் சிங்கலம் (சிங்களம்) எனப் பெயர் பெற்றது. இன்னும் சிங்கள மக்கள் தாம் விசயனதும் அவன் 700 தோழர்களதும் வழித்தோன்றல்கள் என நம்பி வருகின்றனர். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம், மலாயா, இலங்கை முதலிய நாடுகளி லெல்லாம் நாகவழிபாடு காணப்பட்டது. இது காரணமாக அந் நாடுகளின் மக்கள் நாகர் எனவும் அறியப்பட்டனர். யாவாத் தீவிலே அரசனும் அவனைச் சூழ்ந்து திரியும் பெருமக்களும் பொன் பாம்பு, பொன் யானை, பொன் மான், பொன் கோழி, அர்ச்சுனனின் அனுமக்கொடி என்பவைகளைக் கையில் வைத்திருந்தார்கள். இங்குக் கி. பி. 11ஆம் நூற்றாண்டிற் றமிழிற் பொறிக்கப்பட்ட பட்டையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.1 இதனால் ஒரு காலத்தில் தமிழ் யாவாத்தீவில் அரசினர் மொழியாக இருந்ததென நன்கு அறியலாம். அருச்சுனன் நாகர் குலக் கொடியாகிய யாவகமாதை மணந்து அரவானைப் பெற்றானென்று யாவக மக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலே பௌத்த சமயம் தலையெடுத்தபின் பலி மரபினர் கடல் வழியாகச் சென்று பாலித்தீவிலும் அயலேயுள்ள தீவுகளிலும் குடி யேறினர். இத் தீவுகளில் வாழும் மக்கள் திராவிட மக்களை ஒத்த ஒழுக்க முடையவர்களாகக் காணப்படுகின்றனர் என அகரம் என்பவர் குறிப்பிட் டுள்ளார்.1 மாபலி அசுரன் எனப்படுகின்றான். அசுரர்கள் வேதகாலத்துக்கு முன்பும் அதன் முற்பகுதியிலும் தேவர்கள் எனப்பட்டனர். பிற்காலத்தில் அவர்கள் இராக்கதர் அல்லது தேவர்களின் பகைவர் எனப்பட்டனர்.2 இராமாயணத்திற் கூறப்படும் வாலியும் சிவலிங்க வழிபாட்டினன். வாலியின் மரபும் பலியின் மரபும் ஒன்றோவென்பது ஆராயத்தக்கது.  இயல்-7 தமிழர் சமய வரலாறு இன்று இவ் வுலகில் பல்வேறு நிறத்தினரும் மொழியினருமாகிய மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். மனிதவரலாற்று, மொழி வரலாற்று ஆராய்ச்சியாளர், இவர்கள் எல்லோரும் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்களேயென ஆராய்ந்து அறுதியிட்டுள்ளார்கள். இதனை ஒப்பவே மக்களின் சமயமும் ஒன்றாயிருந்து வளர்ச்சியுற்றுப் பின் பலவேறு கிளைகளாகப் பிரிந்ததென்பது உய்த்தறியப்படும். அம்மை வழிபாடு மக்களிடையே ஆதியிற்றோன்றியது தாய் வழிபாடு. வீரம் செல்வம் கல்வி போன்றவைகளுக்கெல்லாம் தலைமை பெற்றிருக்கும் கடவுளர் பெண்பாலினரே. உலகில் ஆதியிற்றோன்றியது பெண் ஆட்சி. அக் காலத்தில் மணத் தொடர்புகள் இறுக்கம் அடையவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமானவை; தந்தைக்கு அவைகளிடம் உரிமை உண்டாகவில்லை.1 இன்றும் இவ் வழக்குத் திருந்தாத மக்களிடை யும் திருந்திய மக்கள் சிலர் இடையும் காணப்படுகின்றது. மலையாள நாட்டில் மருமக்கட்டாயம் என்னும் வழக்குண்டு. இதன்படி தந்தையின் சொத்துப் பிள்ளைகளைச் சேராது அவன் சகோதரியின் பிள்ளைகளை அடைகின்றது.2 திருவிதாங்கூர் அரசுரிமையும் பெண்வழியையே சேர்கின் றது. அரசனின் மருமகனும் மருமகளுமே இளைய இராசர், இளைய இராணி என்னும் பட்டம் பெறுகின்றனர். அரசனின் பிள்ளைகளுக்கு இராச்சியத்தில் ஒருவகை உரிமையும் இல்லை.1 இவ் வழக்குகளெல்லாம் பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்தின் எதிரொலிகளே. சகோதரியின் மகன் மகளை மணம் முடித்தலினாலேயே பெண்ணின் தந்தையின் சொத்து மருமகனைச் சீதனமாக அடைகிறதெனத் தேயிலர் என்னும் மனிதவியலார் குறிப்பிட் டுள்ளார். ‘தாயம்’ என்பது பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்துத் தோன்றிய சொல். இது, சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளை அடைந்தது என்பதை நன்கு விளக்குவது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில் பிள்ளைகள் தாயைச் சூழ்ந்திருந்தார்கள். தாயிடத்தில் எல்லா அதிகாரமும் இருந்தன. எல்லா அதிகாரமுடைய தாய் தெய்வமாக வணங்கப்பட்டாள். ‘தாயிற் சிறந் தொரு கோயிலில்லை’ அல்லவா? இவ் வழிபாடு மக்கள் வாழ்க்கைப் பருவத்தின் மிக முற்காலத்திலேயே தோன்றியிருந்தது. இன்று தாய்க்கடவுளின் சிலைகள், வளர்ந்த கடைவாய்ப் பற்களுடையனவாகக் காணப்படுகின்றன. தென்னிந்திய மக்களின் நாகரிகம் படைப்புக்காலம் முதல் படிப்படியே வளர்ந்துவந்துள்ளதென்பது முன்னமே காட்டப்பட்டுள்ளது. இத் தாய்க்கடவுளின் வடிவமும் ஆதிகாலத்தில் மக்கள் கொண்டு வழிபட்ட வடிவைப் பின்பற்றியே வெட்டப்பட்டும் எழுதப்பட்டும் வரு கின்றதெனக்கொள்ளுதல் தவறாகாது. தார்வின் (Darwin) என்பார் எல்லா ராலும் உச்சிமேல் வைத்துப் புகழப்படும் உயிர்நூற் புலவர். இவர் ஆதிகால மக்களுக்கு வளர்ந்த கடைவாய்ப்பற்கள் இருந்தனவென்றும், அவை பச்சை இறைச்சியைக் கிழிப்பதற்குப் பயன்பட்டன வென்றும், அவைகளின் பயன் குறைந்தகாலத்தில் அவை வளர்ச்சிக் குன்றி வேட்டைப் பல் (Canine teeth) அளவில் இருக்கின்றனவென்றும் கூறியுள்ளார்.2 ஆகவே, தாய்க்கடவுள் வழிபாடு மக்களுக்குக் கடைவாய்ப் பற்கள் வளர்ச்சியடைந்திருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்ததெனக் கொள்ளலாம். தாய்க்கடவுளின் வாகனம் சிங்கம். அவள் கையிலிருக்கும் ஆயு தங்கள் தண்டும் கேடகமும். கடவுளருக்கு நான்கு கைகளும் பல கைகளும் கொடுக்கும் வழக்கம் கிறித்தவ ஆண்டுக்குப் பின்னையது என 1மாக்டனல் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர் கூறுவது: “இந்துக் கடவுளரின் வடிவங்களை அமைக்கும் முறையில் கிறித்தவ ஆண்டின் ஆரம்பத்தில் சில மாற்றங்கள் உண்டாயின. அதற்கு முன் இக் கடவுட்சிலைகள் மனிதனைப்போல இரண்டு கைகளுடையனவாயிருந்தன. இவ்வகை வடிவங்களே பௌத்த சிற்பங்களிற் காணப்பட்டன. இரண்டாம் கற்பீஸ் (Kadphis II; 50. A.D.) என்னும் கிரேக்க இந்திய அரசனின் நாணயத்தில் சிவன் இரண்டு கைகளுடையவ ராகவே காணப்படுகிறார்.” மொகஞ் சொதரோவிற் காணப்பட்ட சிவன்வடிவுக்கு இரண்டு கைகள் இருப்பதும் மேற்படி கூற்றை வலியுறுத்துகின்றது. சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் நாடு ஒன்று உள்ளது. இம் மக்களின் வழிபாடு நாகரிகம் முதலியன தமிழ் மக்களுடையன போன்றன. இங்குக் காணப்பட்ட பழைய நாணயமொன்றில் ஒரு கையிற் றண்டும் மற்றக் கையிற் கேடகமும் பிடித்துச் சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தாய்க் கடவுளின் உருவம் பொறிக்கப்பட் டிருக்கின்றது. இதனால் பண்டைய தாய்க்கடவுளின் வடிவம் இரண்டு கைக ளுடையதாகவே இருந்ததெனத் துணியப்படும். பெண் சிங்கத்தின் மீதிருக்கும் குடைசு என்னும் தாய்க்கடவுளே எகிப்தியரது போர்த் தெய்வமாகும். தாய்க்கடவுள் மேற்கு ஆசிய மக்களால் அஸ்ரெறெத் ஹெரா, றியா முதலிய பல பெயர்களால் வழிபடப்பட்டது. மக்கள் மிகத் தாழ்நிலை அடைந்திருந்த காலத்தே தாய்க் கடவுள் வழிபாடு ஆரம்பித்ததென்பது அதன் வழிபாட்டு முறைகளால் நன்கு அறிதும். தமிழ் மக்கள், காடுகிழாள், கொற்றவை, விந்தை, காளி முதலிய பெயரால் தாய்க்கடவுளை வழிபட் டார்கள். தாய்க் கடவுளுக்கு நரபலியும், எருமை ஆடு முதலிய பிற பலிகளும் இடப்பட்டன என்று பழந்தமிழ் நூல்களால் அறிகின்றோம். காளி பாலை நிலத்தெய்வம். பாலைநில மக்கள், வேடர், இடையர், உழவர் என்னும் மக்க ளின் வாழ்க்கைப் படிகளில் ஆரம்பப் படியிலுள்ளோர். ஆகவே, தாய்க் கடவுள் வழிபாடு, மக்கள் பயிரிடாதும், மிருகங் களைப் பிடித்துப் பழக்கி வளர்க்க அறியா தும் இருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்த தாகும். தாய்க் கடவுள் வழிபாட்டின்போது பாம்பு வழிபாடு ஆரம்பிக்க வில்லை போலும். நாணயத்தில் இடபத்தின் மீது இருக்கும் அப்பரும், அருகில் சிங்க வாக னத்தின் மீதிருக்கும் அம்மையும் காணப் படுகின்றனர். சிரியா, பாபிலோன், எகிப்திய நாடுகளிலும் சிங்க வாகனமுடைய தாய்க் கடவுளே மேலான தெய்வமாக வழிபடப்பட்டது1. அப்பர் வழிபாடு தாய்க்கடவுள் வழிபாடு இவ்வாறு தோன்றி நடைபெற்று வரும்போது திரு மணக் கட்டுப்பாடு இறுக்கமடைந்தது; தந்தை ஆட்சி உண்டாயிற்று. தந்தையே எல்லா அதிகாரமும் உடையவனானான். ஆகவே, தந்தை வழிபாடு உண்டாயிற்று. ஒளவைப்பிராட்டியர். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என அருளிச்செய்திருக்கின்றமையும் அம்மை அப்பர் வழிபாட்டை ஓரளவு விளக்குவதாகும். தந்தை வழிபாடு, காலத்தில் வேந்தன் வழிபாடாக மாறிற்று. தாய்க்கடவுளை ஒப்பப் பழைய மக்கள் வழிபட்ட தந்தை வடிவம் இன்றைய சிவன் வடிவமே எனத் தெரிகின்றது. கித்தைதி நாட்டிலே காணப்பட்ட பழைய நாணயத்தில் தாய்க் கடவுளுக்கு வலப்பக்கத்தே, முத்தலைவேலும் கண்டகோடரியும் கையிற் றாங்கிய அப்பர் வடிவம் ஒன்று இடபத்தின்மீது நிற்கின்றது.1 இதே வடிவின தாகக் கல்லாற் செதுக்கப்பட்ட சிலைகளையும் அந்நாட்டு மக்கள் வழி பட்டார்கள். சிவனுக்குரியனவாகச் சொல்லப்படும் எலும்பு, ஊமத்தை மாலை, சங்க வெண்குழை, புலித்தோலுடை முதலியவைகளால் மக்கள், தோலை உடையாகவும், எலும்பு இப்பி முதலிய வைகளை அணிகளாகவும் கொண்ட ஒரு காலத் தில் இவ் வழிபாடு தோன்றிற்று என்று நன்கு சிந்தித் தறியலாகும். முற் காலத்தில் இந்திய மக்களுக்கு வாகனமாகப் எருதுகளே பயன்பட்டன. இன்றும் ஆலயங்களில் எருதுகளின்மீது வாத்தியக்காரர் ஏறியிருந்து பேரிகை கொட்டிச்செல்வதை நாம் பார்க்கலாம். ஆகவே, அக் காலத் தந்தைக்கட வுளுக்கு இடபம் சிறந்த ஊர்தி ஆக்கப்பட்டது. கிதைதி, சீரியா, கிரேத்தா, சுமேரியா முதலிய நாடுகளின்2 நாணயங்களில் இமில் உள்ள இந்திய இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இடபத்தை ஊர்தியாகவுடைய தந்தை வழிபாடு இந்திய நாட்டிலேயே ஆரம்பித்திருத்தல் வேண்டும். கிதைதி நாட்டு அரசனுக்கும் இரண்டாம் இரம்செ என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கை ஒன்று சூளையிட்ட களிமண் தகடுகளுட் கண்டெடுக்கப்பட்டது. அவ் வுடன் படிக்கை கி. மு. 1290இல் எழுதப்பட்டுள்ளது. அதில் இடியேற்றைக் கையிற் பிடித்திருக்கும் தந்தைக் கடவுளே எல்லாக் கடவுளரிலும் மேலானவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. Golden Bough-IV, P. 137. “His hands are raised, in his right he holds a single headed axe or hammer, in the left a trident of wavy lines, which is thought to stand for forked lightning or a bundle of thunderbolts...... The combination of the bull with the thunderbolt as emblems of deity suggests that the animal may have been chosen to represent the sky God not merely of its virility but of its voice; for in the peal of thunder premitive man may well have heard the bellowing of a cellestial bull.-Ibid. It is from the Indian mythology that we get our nearest insight into the character of these deities and the meanings of those sculptures. For the bull represents Siva whose emblem was a trident and also an exe-The Hittite empire-John Garstang. கித்தைதி நாட்டில் காணப்பட்ட வேறு சில சிற்பங்களில் அக் கடவுள் முக்கோண வடிவான வில்லும் சூலமும் பிடித்து இடபத்தின்மீது நிற்கின்றார். இடபத்தின் கொம்புகள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. “In his right hand which is drawn pack there is a triangular bow. The horns of the bull are wreathed with garlands-Ibid P. 202. சிரியா மக்கள் வழிபட்ட அடாட் என்னும் சிவன் கடவுளின் திருவடிவம் ஒன்று அவ் விடத்திற் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத் தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அக் கடவுள் ஒரு கையில் இரண்டு அலகுள்ள கோடரியையும் (மழு) மற்றக் கையில் கீழும் மேலும் முத்தலைகளுடைய வேலை யும் பிடித்திருக்கின்றார். மேற்கு ஆசிய மக்கள் முத் தலை வேல் அல்லது சூலத்தை இடியேறு என வழங் கினார்கள். “At his(The Jupiter of Syria) side hangs his sword in its scabbard. His right hand brandishes a double axe; his left grasps a thunderbolt consisting of six spirally-twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between eyes-Zeus P. 619. இடபத்தின் நெற்றியில் பூமாலை கட்டப்பட் டுள்ளது. “....for in the Roman art he reappears under the title of Jupiter Dolichenus, wearing a phrygian cap, standing on a bull, and weilding a double axe in one hand and a thunderbolt on the other. In this form his worship was transported from the native home by soldiers and slaves till it had spread over a large part of the Roman empire, specially on the frontiers where it flourished in the camps of the legions”-The golden bough-a study of art and religion-part IV, P. 134-J.G. Fracer. அம்மை அப்பர் வழிபாடு இவ்வாறு அம்மை அப்பர் வழிபாடுகள் ஆதியிற் றனித்தனியே தோன்றின. பின்பு மக்கள் இவர்களை மனைவி கணவன் என்னும் முறையின ராகக் கொண்டு வழிபடலாயினர். கிதைதி நாட்டில் நாணயத்திற் காணப் பட்ட வடிவங்களும் இதனையே குறிப்பிடுகின்றன. மேற்கு ஆசிய நாடு களில் அம்மை அப்பர் வழிபாடு இன்னொரு வகையிலும் ஆரம்பித்தது. ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகள் அவர்களிடையே தோன்றிய காலத்தில் அவர்கள் திங்களைத் தாய்க்கடவுளாகவும் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாக வும் கொண்டு வழிபட்டனர். ஆகவே, பழைய அம்மை அப்பர் வழிபாடுகள் மேற்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகளுள் நுழைந் துள்ளன. ஞாயிற்று வழிபாடு இதன்மேல் இவ்வுலகில் இருளைப்போக்கி ஒளியைக் கொடுக்கும் ஞாயிறே முழுமுதற் கடவுள் என்று மக்கள் உணர ஆரம்பித்தனர். அவர்கள் சிவந்தவன் அல்லது சிவந்த ஒளியுடையவன் என்னும் பொருளில் ஞாயிற்றுக்குச் சிவன் என்னும் பெயர் கொடுத்து வழிபடுவாராயினர். இப் பெயரே ஆதியில் ஞாயிற்றுக்குப் பெயராக வழங்கிற்று என்பதைச் சிவன் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சிவன் என்பதற்கு அடுத்தபடியில் எல் என்னும் பெயர் கதிரவனின் பெயராக வழங்கிற்று. மேற்கு ஆசியாவில் எல்லின் திரிபாகிய பெயர்களே ஞாயிற்றைக் குறிக்கப் பெரிதும் வழங்கின. உலக மக்கள் எல்லோரும் கடவுளின் பெயராக ஆண்ட பெயர்களை ஆராயு மிடத்து அவை ஒளி அல்லது ஒளியுடையவன் என்னும் பொருளையே கொடுக்கின்றன.1 எல் என்பது ஞாயிற்றையும் ஒளியையும் குறிக்கத் தமிழில் வழங்கிய சாலப் பழைய பெயர். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப் பியம். ஞாயிற்றுக் கடவுளை மக்கள் மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டனர். ஆகவே உலகம் முழுமையிலும் இக் கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என்று கொள்ளப்பட்டது. இன்றும் சிவன் கைலாய மலையில் இருக்கிறார் எனப் பொதுமக்களும் பிறரும் நம்பி வருகின்றனர். மலைகள் இல்லாத நாடுகளில் ஞாயிற்றுக் கடவுள் செய்குன்றுகள் மீது வழிபடப்பட்டார். இவ் வகைச் செய்குன்றுகளி லொன்றே பேபெல் என்னும் கோபுரம்2 இவ்வகைச் செய்குன்றுகள் மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா என்னும் நாடு களிற் பல உள்ளன. உலக வியப்புக்கள் எனப்படும் எகிப்திய கூர்நுதிக் கோபுரங்களும் இவ் வகையினவே. இவை ஞாயிறு நடு உச்சிக்கு வரும் நாளில் அது எழும் திசையைப் பார்க்கும்படி கட்டப்பட்டுள்ளன.1 தென்னிந் திய ஆலயங்களும் கிறித்தவர்களின் ஆலயங்களும் இவ்வாறே கட்டப் படுகின்றன. சலமனின் ஆலயமும் கிழக்குத் திக்கை நோக்கியே நின்றது. இலிங்க வழிபாட்டின் தொடக்கம் அடுத்தபடியில் மக்கள் செய்குன்றுகளுக்குப் பதில்அடி நிமிர்ந்து தலைகுவிந்த கற்களைச் சோலைகளிலும் வெளிகளிலும் நட்டு வழிபடுவா ராயினர். திருவானைக்கா, தில்லையம்பலம், திருவாலங்காடு முதலிய தென்னிந்திய ஆலயங்களின் பெயர்களால் இதன் உண்மை நன்கு தெளிதும். முன் இலிங்கங்கள் நிறுத்தி வழிபடப்பட்ட இடங்களிலேயே பின்பு ஆலயங்கள் எழுந்தன. உலகம் முழுமையிலும் இவ்வகை வழிபாடு ஒரு காலத்திற் காணப்பட்டது. ஆலமர் கடவுள் ஒவ்வொரு கிராமங்களிலும் மன்றங்கள் உண்டு. மன்றமென்பது ஊருக்கு நடுவே மக்கள் கூடும் மரத்தடி. மரத்தைச் சுற்றித் திண்ணையிருந்தது. ஞாயத் தீர்ப்பு, பள்ளிக்கூடம், ஆடல் பாடல் முதலிய பொழுது போக்குகள் இன்னும் கிராம மக்களின் எல்லாக் கிளர்ச்சி, நிகழ்ச்சி என்பவைகளுக்கு இடம் இதுவே. மன்றத்தே பெரும்பாலும் ஆலமரம் நின்றது. நிழல் மரங்களில் ஆல் தலைமையுடையது. மன்றத்து மரங்களின்கீழ் இலிங்கம் நிறுத்தப் பட்டிருந்தது. இதனைச் சுற்றித் தினமும் அலகும் மெழுக்குமிடப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது.1 ஆலின் கீழ் இருந்தமையின் கடவுளுக்கு ‘ஆலமர் கடவுள்’ ‘ஆலமர் செல்வன்’ என்னும் பெயர்கள் உண்டாயின. பழந்தமிழ் நூல்களில் இப் பெயர்களே சிவனைக் குறிக்கப் பெரிதும் காணப்படுகின்றன. ஆல் ஐயன் இடம் ‘ஆலயம்’ எனப்பட்டது. மேற்கு ஆசிய நாடுகளிலும் அருட்குறிகள் கருவாலி மரங்களின்கீழ் வைத்து வழிபடப்பட்டன;2 கிரேத்தாவில் யூகாவிப்ரஸ் மரங்களின்கீழ் கற்றூண்கள் நிறுத்தி வழிபடப்பட்டன. எகிப்தியரும் கிரேக்கரும் ஆலி னத்தைச் சேர்ந்த அத்தி மரத்தைப் பரிசுத்தமுடையதாகக் கொண்டு, அதனால் இலிங்கங்கள் செய்தனர். திங்கள் வழிபாடு ஞாயிற்று வழிபாட்டுக்குப் பின் திங்கள் வழிபாடு தோன்றிற்று. இந்திய நாட்டில் சந்திரன் ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. மேற்கு ஆசிய நாட்டவர் இதனைப் பெண் தெய்வமாகக் கொண்டனர். அன்னோர் மரத்தின்கீழ் நிறுத்தப்பட்ட கற்றூணை ஞாயிறாகவும் மரத்தைத் திங்க ளாகவும் கொள்வாராயினர். பின்பு திங்கட் கடவுள் ஞாயிற்றுக் கடவுளின் மனைவியாக்கப்பட்டது. மரங்களும் சோலைகளும் திங்கட்கடவுளாக வழி படப்பட்டன. மரத்துக்குப் பதில் மரத்தூண்களும் நிறுத்தி வழிபடப்பட்டன. இவ்வாறு மேற்கு ஆசிய நாடுகளில் ஆண் கடவுள் பெண் கடவுளரைக் குறிக்க இலிங்கங்கள் நிறுத்தப்படலாயின. தமிழ் நாட்டில் இவ்வாறு நிகழ வில்லை. இலிங்க வணக்கம் உலகம் முழுமையும் காணப்பட்டது எச். சி. வெல்ஸ் என்னும் ஆசிரியர் இலிங்க வழிபாடு இங்கிலாந்து முதல் கிழக்கே யப்பான் வரையும் காணப்பட்டதெனக் காட்டியுள்ளார். அமெரிக்காவின் சில பாகங்களில் இன்றும் இவ் வணக்கம் காணப்படுவதை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். முக்கேர்சி என்பவர் இந்திய நாகரிகமும் அதன் பழமையும் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ள வற்றின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். 1“இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத்தைத் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ் வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத் துள்ளன. சீனா, யப்பான், இந்துக் கடல், பசிபிக்கடற் றீவுகள் முதலிய இடங் களில் இவ் வழிபாடு முற்றாகத் தூர்ந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க2 மக்களிடையும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பபிலோனிய மக்களிடையும் இவ் வணக்கம் காணப்பட்ட தென்பதைக் கிறித்தவ மறை வாயிலாக அறிகின்றோம். சின்னாட்களின்முன் பபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோறஸ், இஸ்றஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக் கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங் கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ் வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஓட்டுவதற்குக் கிறித்தவ குருமார் மிக ஊக்கம் எடுத்தார்கள். கிரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கத் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள், பல கிறித்தவ ஆலயங்களுட் காணப்படுகின்றன. அவை ‘சீலநாகிக்’ (Sheila-na-gig) என்று வழங்குகின்றன. இஃது ஒருபோது சிவ லிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கி லாந்திலும் இஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தனர். இவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளை யும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இவ் வணக்கத்தை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல்கூடும். செர்மனியிலும் பிரான்சியிலும் இவ் வணக்கம் மிக்கு வழங்கியிருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. லிதுவேனிய மக்கள் (Lithuanians) 14ஆம் நூற்றாண்டு வரையில் இவ் வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, புத்தான் (Bhutan) என்னு மிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசிம் (Shin-toism) என்னும் யப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெச்சிக்கோ, பேரு, கைதி தீவு (Hyti)களில் சிவலிங்கம் வழிபடப்பட்டது. ஸ்பானியர் முதல் முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டதைக் கண்டார்கள். ஆப்பிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது. “இலிங்க வணக்கம் அசீரியாவிற்றோன்றி அயல் நாடுகளிற் பரவிற்று என்று சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ் (Bacchus) தயோனிசஸ் (Dionysus) வழிபாடுகள் தொடர்பாகச் சிவலிங்கம் வழிபடப் பட்டது. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிகள் வழியே உலாக் கொண்டு வரப்பட்டது. எகிப்தியரின் ஓஸ்றிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்பதன் இன்னொரு வேறுபாடே. பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரந்திருந்தது. பக்கஸ் கெபன் (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் கெபி (Hebe - கௌரி) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் 1புலித்தோலை யுடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். ஆதலால் கெபன் சிவன் என்றும், கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின்தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் அருந்தும் மண்டையும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக்கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch) மெரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சபாசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பாகேஓஸ் (Bagaios) என்னும் பெயர்களுடன் வழிபடப்பட்டார். வெஸ் தொப் (Westropp) என்பவர் அதோனிசஸ் என்பது அர்த்தநாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின்முன் எகிப்திலே ‘துர்க்கம்மா’ என அடியில் எழுதிய ஒரு துர்க்கை உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.” றொடேசியாவில் (ஆப்பிரிக்கா) காணப்பட்ட இலிங்கங்களிலும் சிரியாவிற் காணப்பட்ட இலிங்கங்களிலும் பூமாலைகள் வெட்டப்பட் டிருந்தன. பொனீசிய மக்கள் தயர் நகரிலே பகலவன் ஆலயத்தில் மரகதத் தினாலும் பொன்னினாலும் செய்த இலிங்கங்களை வைத்து வழிபட்டார்கள். இவ்வகை இலிங்கங்களை அவர்கள் சிபிறால்டரில் நாட்டியிருந்தமையின் அவ்விடம் இன்றும் “கெக்குவிசின் தூண்கள்” என வழங்குகின்றது. மேற்கு ஆசிய நாடுகளிற்1 பேழைகள் (பெட்டி) வழிபடப்பட்டன. இன்று இலங்கையிலுள்ள கதிர்காமம் என்னும் ஆலயத்தில் வழிபடப்படு வதும் பேழையே. மேற்கு ஆசிய நாட்டுப் பேழைகளுள் சிறிய இலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. நிலைபோல இரண்டு கற்களை நிறுத்தி மேல் ஒரு பாவு கல்லை வைத்து மூடிய கட்டிடங்களின்கீழ் (Dolmen) வைத்து இலிங்கங்கள் வணங்கப்பட்டன. இதிலிருந்தே பேழையில் இலிங்கத்தை வைத்து வழிபடும் முறை ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. விவிலிய மறையில் பேழையில் வைக்கப்பட்ட சாட்சிப் பத்திரம் என்பது நம்மவரின் “இயந்திரத் தகடு” என்பதை ஒத்ததே. இலிங்க வழிபாட்டின் வளர்ச்சி கடவுள் ஒருவரே உளர் என உணர்ந்த மக்கள் அம்மை அப்பர்களின் அருட்குறிகளே இறைவனின் ஆண் தன்மை பெண் தன்மை என்பவை களை உணர்த்தும் எனக் கொண்டனர். ஆண் தன்மை பெண் தன்மைகளை விளக்கும் அறிகுறியாக அவர்கள் ஆண்குறி பெண்குறி வடிவான அடை யாளங்களையும் வைத்து வழிபடுவாராயினர். பின்பு இவ் விரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுக் கடவுள் ஆண் பெண் இயல்பினர் என்னும் இலப்பினும் வழிபடப்பட்டன. இவ் வடிவங்கள் எலோகிம் எனப்பட்டன. மொகெஞ் சொதரோவிலும் ஆண் கடவுளைக் குறிக்க ஆண்குறியும், பெண் கடவுளைக் குறிக்கப் பெண் குறியும் வழங்கின.2 எலோகிம் வழிபாடே இந்தியாவில் ஆவுடையார் வழிபாடாகும். பண்டைய இலிங்கங்கள் தூண் வடிவின. ஆண் பெண்குறி வடிவுகள் ஐரோப்பாவிலே கிறித்தவ ஆலயங் களில் இன்றும் காணப்படுகின்றன.3 எருசலேமிலே ஒரு காலத்தில் ஒவ் வொரு வீதியிலும் இலிங்கங்கள் வைத்து வணங்கப்பட்டன.1 ஞாயிற்றையும் திங்களையும் ஒப்பத் தீயும் வழிபடப்பட்டது. இலிங்கம் தீயின் வடிவாகவும் கொண்டு வழிபடப்பட்டது. தீ வழிபாடு ஞாயிற்றையும் திங்களையும் ஒப்ப ஒளியுடைப் பொருளாகிய தீயும் மக்களால் வழிபடப்பட்டது. விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டில் நிம் றொட் என்னும் அரசன் தீவழிபாட்டைப் பலஸ்தீன் நாட்டில் ஆரம்பித்தான் எனக் கூறப்படுகின்றது. இவ் வழிபாடு இன்னும் பாரசீகரிடையே சொராஸ்ரிய மதக் கொள்கையாக நிலவுகின்றது. தீயும் இலிங்க வடிவில் வழிபடப்பட்டது. பீடத்தோடு கூடிய இலிங்கத்துக்குத் தீக்கடை கோலை ஒப்பிட்டுத், தீக் கடைகோலையே இலிங்க வடிவமாக அமைத்து மக்கள் வழிபட்டார்கள் எனச் சில ஆராய்ச்சியாளர் கருதினர். தமிழ் மக்களிடையே முச்சுடர் வழி பாடுகளும் இருந்தன. தீயை எந்த நேரமும் உண்டாக்கி வழிபடுதல் கூடும். ஞாயிற்றையும் திங்களையும் எந்த நேரத்திலும் கண்டு வழிபடுதல் அரிது. ஆகவே அவர்கள் ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களின் வடிவைக் குறிக்கும் வட்டம், வில் அல்லது பிறை, முக்கோணம் வடிவான குண்டங் களை அமைத்து அவைகளில் தீ வளர்த்துக் கடவுளை வழிபடுவாராயினர். இதுவே முத்தீ வேட்டல் என்னும் வழக்கு. ஆரிய மக்களின் தீ வழிபாடு இவ் வுண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததன்று. அவர்கள் காலையில் எழுந்து தோய்ந்து, தீமூட்டி எரித்துக் குளிர் காய்ந்து அதன் பக்கத்தே நின்று கடவுளைத் துதித்தனர். இவ் வழக்கிலிருந்தே அவர்களது அக்கினிகோத்திரம் எனப்படும் தீ வழிபாடு எழுந்தது. சனகன் யாக்ஞவல் கியையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி நீவிர் அக்கினிகோத் திரம் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சரியான விடை அளிக்கவில்லை. இதற்குக் காரணம் ஆரியரது தீ வழிபாடும் தமிழரது தீ வழிபாடும் வெவ்வேறு வகையினவாதலே. ஆகமங்களும் வேதங்களும் நேர்மாறானவை என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. தீ வழிபாடு துரானிய மக்களுக்குரியதென்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.2 “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். புற. 33) என்னும் தொல்காப்பியத்திற் கூறப்படும் வழிபாடுகள் முறையே ஞாயிறு தீ, திங்கள்களின் வழிபாடுகளே. பழங்காலப் பலிபீடங்களும் பிற்காலம் இலிங்கமாக வழிபடப்பட்டன.1 திருவண்ணாமலையில் இறைவன் சோதி வடிவாய் நின்றானென்பது இலிங்கவழிபாடு தீ வழிபாட்டினின்று தோன்றி யது என்னும் ஐதீகத்தைக் குறிப்பது. முற்காலத்து ஒடுங்கிய கொடுமுடி களுடன் நிமிர்ந்து வளர்ந்த மலைகள் இலிங்கங்களாக வழிபடப்பட்டன.2 வேந்தன் மக்கள் ஞாயிற்றைத் தனிப்பெருங் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசன் ஞாயிற்றின் 3புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் மக்கள் நம்பினார்கள்.4 ஆகவே அரசனின் சாமாதியின்மீது ஞாயிற்றுக் கடவுளின் அருட்குறியாக இலிங்கம் நடப் பட்டது. அவ் விடங்கள் வழிபாட்டுக்குரிய ஆலயங்களாகவும் இருந்தன. இவ் வகை ஆலயங்கள் பல எகிப்தில் காணப்படுகின்றன. ஞாயிற்றுக் கடவு ளாக மாறிய அரசர்கள் எகிப்தில் இறா (இரவி) என்னும் பெயர் பெற்றனர். றா என்பதிலிருந்து இராசன் என்னும் சொல் பிறந்ததெனச் சிலர் கூறுவர். நந்திவழிபாடு அப்பன் என்னும் தந்தைக் கடவுளின் ஊர்தியாகிய நந்தி மேற்கு ஆசிய நாடுகளில் வழிபாட்டிற்குரியதாயிருந்தது. பலஸ்தீன் நாட்டில் ஆன்கன்று அல்லது நந்தி வழிபடப்பட்டமை கிறித்தவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படுகின்றது. தாவீதின் (David) மனைவிக்கே ஆன்கன்று என்று பெயர்.1 கிதைதி நாட்டிலே எயுக் (Eyuk) என்னுமிடத்திலே நந்திச் சிலை கருங்கற் பீடத்தில் வைத்து மக்கள் எல்லோராலும் வழிபடப்பட்டது. இவ் விடபக் கடவுளைச் சேவிக்கத் தனிக்குரு இருந்தார். எகிப்திய மக்கள் ஓசிறிஸ் கடவுளின் வாகனமாகய அபிஸ் என்னும் இடபத்தை வழிபட் டார்கள். எல்லா மத்தியதரை நாடுகளாலும் இடபம் வழிபடப்பட்டது. இடபத் தின்மீது சத்தியஞ் செய்வதை மக்கள் பெரிதும் அஞ்சினார்கள்.2 முக்கட் செய்லவர் மக்கள், ஞாயிறு திங்கள் தீ என்பவைகளுக்கு மேலான தனிப் பெரும்பொருள் ஒன்று உண்டு என்று கொண்ட காலத்தில் அவர்கள் பழைய அப்பன் வடிவத்துக்கு முச்சுடர்களைக் கண்கள் எனக் கொண்டனர். ஆங்காங்கு மக்கள் வழிபட்ட பேய்கள் அவரின் பரிவாரங்களாயின. உலக மக்களெல்லாராலும் வழிபடப்பட்ட பாம்பு அவரின் ஆபரணங்களாயின; பயங்கரமான தாய்க் கடவுள் இப்பொழுது சாந்த வடிவினளாய் அவரின் பாரியாயினள். உமை, எஞ்ஞான்றும் கன்னி எனப்பட்டார்.3 மொகஞ்சொத ரோவிற் காணப்பட்ட சிவன் திருவுருவத்துக்கு மூன்று கண்கள் உள்ளன.4 மாதொருபாதி இறைவன் அம்மை அப்பர்க் கடவுளர், பாதி ஆண், பாதி பெண் வடிவிலும் வைத்து வணங்கப்பட்டனர். இவ் வடிவு “அர்த்த நாரீசுரர்” வடிவம் எனப் படும். அர்த்தநாரீசுர வடிவமே ஆதோனிஸ் என மேற்குத்திசை நாடுகளில் வழங்கிற்று என முன் கூறப்பட்டது. இவ் வடிவம் பழைய சுமேரிய மக்க ளாலும் வணங்கப்பட்டது.5 மொகஞ்சொதரோ மக்கள் அப்பரை ஆண் என்றும் அம்மையை அம்மை என்றுமே வழிபட்டனர். சுமேரியா நாட்டி லும் இதே பெயர்கள் வழங்கின. அம்மை அப்பரின் புதல்வர் சுமேரியரால் என்லில் எனப்பட்டார். மொகஞ்சொதரோவில் அம்மை மீன்கண்ணி எனப்பட்டார். இப்பெயரே மீனாட்சி என வழங்குகின்றது. பாம்பு வணக்கம் இவ் வுலகின் எல்லாப் பாகங்களிலும் பாம்பு வணங்கப்பட்டது. மொசே வெண்கலத்தினாற் செய்த பாம்பை இஸ்ரவேலர் வணங்கி வந்த வரலாறு, கிறித்துவ மறையிற் காணப்படுகின்றது. கிறித்துவ மறையிற் காணப்படும் படைப்பு வரலாறு முதலியன சாலடிய மக்களிடமிருந்து கிடைத்தன என்று கருதப்படுகின்றன. சாலடிய மக்கள் திராவிடர்களே என்பது வரலாற்று ஆசிரியர்களது முடிவு. பாம்பு வணக்கம் இல்லாத நாடு இவ் வுலகில் இல்லை. இதனை ஆராய்ந்து விளக்கும் தனி நூல்கள் பல ஆங்கில மொழியில் எழுதப் பட்டுள்ளன. இன்றும் சில நாடுகளில் உயிர்ப் பாம்புகள் வணங்கப்படு கின்றன; சில நாடுகளில் பாம்பின் சிலைகள் வணங்கப்படுகின்றன. “ஆப்பிரிக்க மக்களின் முக்கிய தெய்வம் பாம்பு. மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபடு கின்றனர். இவ் வகையாக உரோமரும் ஒருகாலத்திற் செய்தனர். ஒரு நிகிரோ வனாவது வேண்டுமென்று பாம்புக்கு ஒருவகையான தீமையுஞ் செய்யமாட் டான். தற்செயலாய்ப் பாம்பு ஒன்றைக் காயப்படுத்துகிறவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். ஒருமுறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர் தாங்கள் தங்கிய விட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக்கொன்றார்கள். அதற்காக இவர்கள் அங்குள்ள மக்களால் கொடுமையாகத் தாக்கிக் கொல்லப்பட் டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள் நாடு எங்கும் காணப்படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக்கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின் றன. ஒவ்வொரு வகைப் பாம்பைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வேலைக் காரன் இருக்கிறான்.” “நியுகினியில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக் கின்றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக்கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன”1 இது பாம்பு வணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வணக்கம் எவ்வாறு உண்டானதென்று வரலாற்று ஆசிரியர் களால் நன்கு அறிந்து கூற முடியவில்லை. இதன் தொடக்கம் மறைவாக இருக்கின்றது. உலகில் காணப்படும் மக்கட் கூட்டத்தினர் தத்தம் குலக்குறி களாக (Totem) மயில், ஆடு, முயல், ஆமை போன்ற யாதேனும் ஒன்றைக் கொண்டிருந்தனர்; இன்றும் கொண்டிருக்கின்றனர். இக் குலக்குறிகள் பிற்பாடு வழிபடவும்பட்டன. இவ் வகைக் காரணத்தைப் பாம்பு வணக்கத் திற்கும் கொள்ளலாமோ என்பது ஆராயத்தக்கது. இந்திய நாட்டில் பாம்பு வழிபாடு நடைபெற்று வருவதைக் கூறவேண்டியதில்லை. பாம்புச் சிலைகள் இல்லாத ஆலயங்களே இல்லை எனக் கூறலாம்.1 முருக வழிபாடு முருக வழிபாடு ஞாயிற்று வணக்கத்தின் இன்னொரு வகை. கடல்மீதெழும் உதயகால ஞாயிறு,2 மயில்மீதெழுந்தருளும் முருகனாக உருவகப்படுத்தப்பட்டடுள்ளது. முருகன் என்பதற்கு இளையவன் என்று பொருள். யூதமக்களும் பகற் கடவுளை முதியபகல், இளம்பகல் (Ba-al) என இருவகையாக வழிபட்டனர். முதிய பகல் தாடியுடைய முதிய வடிவுடனும், இளம்பகல் குழந்தை வடிவுடனும் வழிபடப்பட்டன. யூத மக்களுக்குச் சமய அறிவு கொளுத்தியவர்கள் தமிழ் மரபைச் சேர்ந்தோர் எனப்படுகின்றமையின் அவர்களிடையே தமிழர்களுட் காணப்படும் பல கொள்கைகள் நிலவின. இளம் கடவுள் யூதரால் போர்க் கடவுளாகவும் கொள்ளப்பட்டது. இளம்பகலே பின் உரோமரின் மார்ஸ் என்னும் போர்க் கடவுளாகவும் மாறிற்று. முருகக்கடவுளுக்கும் அசுரர் எனப்பட்ட மக்க ளுக்கும் இடையில் நிகழ்ந்த போர்கள் என்பன முருக வழிபாட்டினருக்கும் சிவவழிபாட்டினருக்கும் நிகழ்ந்த போர்களாகும். அசுரர் சிவவழிபாட்டினர் என்பது முன்னமே கூறப்பட்டது. யெகோவா என்பது எல் கடவுளையே குறிக்கும் பெயரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். யெகோவா வழிபாட் டினர் எல்லின் வேறுவகை வழிபாடுகளாகிய பகல் (Ba-al) மொலொச் முதலிய வழிபாடுகளை அழிக்க முனைந்து நின்ற வரலாற்றுடன் இதனை ஒப்பு நோக்குக. மக்களிடையே நிகழ்ந்த போர்கள் மக்கள் வழிபட்ட தெய் வங்கள்மீது ஏற்றிக் கூறப்பட்டன. வேத பாடல்கள், இந்திரன் தாசுக்களின் செல்வங்களைக் கொள்ளைகொண்டு அவர்களை அழித்தானென்று கூறு கின்றன. ஆரிய மக்கள் தாம் பெற்ற வெற்றிகளைத் தாம் வழிபட்ட கடவுள் மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு கூறுதல் அக்கால மரபுபோலும். மால் வணக்கம் மால் (மா+1எல்) வணக்கமும் ஞாயிற்று வணக்கத்தின் இன்னொரு வகை. திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் ஞாயிற்றையே குறிக்கின்றது. “அரியல்லாற் றேவியில்லை ஐயனையாறனார்க்கே”. பெருமாள் (பெரு மானின் பெண்பாஃ) என வருவன ஆராயத்தக்கன. ஒருபோது கரிய தாய்க் கடவுள் மாஎல் என வழிபடப்பட்டதோ என்பது சிந்திக்கத்தக்கது. பாரத காலத்துக்குப் பின் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியுள்ளது. திருமால் மூவுலகை அளந்தாரென வரும் புராணக்கதை ஞாயிறு காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களில் செல்லும் செலவினை உணர்த்துமெனக் கூறப்படுகின்றது. சிவன் ஞாயிறே சிவன் என்னும் பெயரால் ஆதியில் வழிபடப்பட்ட தென்பது உலகமக்களின் பழைய வரலாறுகளை நோக்குமிடத்து நன்கு புலனாகும்.2 “அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்-அருக்கனாவான் அரனுருவல்லனோ” (திருநா-தே) என்பதும் இதனையே உணர்த்தும். ஞாயிறு, ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வீட்டில் தங்கும். ஒவ்வொரு வீட்டில் நிற்கும்போதும் அது வெவ்வேறு வடிவில் வழிபடப் பட்டது.3 ஆகவே, ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு உரித்தாக்கப்பட்டிருந்தது. இவ் வழக்கு மேற்கு ஆசிய எகிப்திய இந்திய நாடுகளுக்கெல்லாம் பொது. எபிரேய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் என அறியப்பட்டது.1 ஆசியாவிலும், பாபிலோனிலும் ஆண் டின் மூன்றாம் மாதம் சிவன் அல்லது சிமானு எனப்பட்டது. பாபிலோனில் இதே பெயருடைய இடம் ஒன்றும் இருந்தது. இஃது அங்கே களிமண் ஏடுகளில் எழுதிவைக்கப்பட்ட உறுதி (Documents) களிற் காணப்படுகின்றது.2 இதனால் பாபிலோன் ஆசியா பாலஸ்தீன நாடுகளில் சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்ட கடவுள் ஒன்று இருந்ததென்பது தெள்ளிதிற் புலப்படும். அரேபியரும் யூதரும் சாலதியாவி லுள்ள ஊர் என்னும் நகரினின்றும் சென்று கானான் தேசத்திற் குடியேறிய ஆபிரகாமின் (கி. மு. 2153) சந்ததியினர் என்று கூறப்படுகின்றனர். ஆகவே யூத மக்கள் சாலதியரைப் பின்பற்றியே திங்கள் பெயர்களையும் வழங்கி னார்களாதல் வேண்டும். சாலதியாவில் இப் பெயர் சாலப் பழையதாய் வழங்கினமையினாலேயே அது திங்களுக்குப் பெயராக்கப்பட்டது. பாபிலோன் மக்களும் பாலஸ்தீனரும் எல்சடை என வழங்கிய கடவுள், சிவனைப் போலவே மலைமுகடுகளிலிருப்பவராகக் காணப்படுகின்றனர்.3 கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும், கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டது.4 இதில், மொசே என்பவர், யெகோவா அருளிய பத்துக் கட்டளைகளைச் சினாய் மலைமீது நின்று சிவன் மாதத்தின் ஆறாவதுநாள் மக்களுக்கு வெளியிட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் சிவன் என்னும் பெயர் திங்களின் பெயராகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும் வழங்கிற்று என்பது ஊகித்தறியப்படும். கிறித்துவ மறையிலே சியன் எனக் கூறப்படும் கடவுள் சிவனே என்பதை மேல் நாட்டறிஞர்களே ஆராய்ந்து கூறுகின்றனர்.1 ஆதர்லில்லி என்பார் கூறுவது பின்வருமாறு: “சிவன் என்னும் சொல் வலித்தும் மெலித்தும் இந்தியாவின் பல பகுதிகளில் உச்சரிக்கப்படுகின்றது. பிரான்சு மக்கள் ‘ச்சிவன்’ என உச்சரிப்பர். கிறித்துவ மறையிலே (Amos. V. 26) வரும் சியன் என்பது சிவனே என ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்கள்”. எபிரே யரின் யெகோவா என்னும் சொல் சிவா என்பது போன்ற ஹெவா, செவா என்னும் சொற்களினின்றும் பிறந்ததென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.2 எகிப்திலே சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உண்டு. இங்குப் பழைய அமன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அமன் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுள். அமன் வழிபாடு பண்டு நாட்டினின்றும் சென்றதாக அவர்கள் வரலாறுகளிற் காணப்படுகின்றது. அமன் வழிபாடு சியஸ் (Zeus) யூபிதர் வழிபாடுகளாகக் கிரேக்க உரோமை நாடுகளில் வழங்கிற்று. சியஸ் யூபிதர் வழிபாடுகளும் ஞாயிற்று வழிபாடுகளே. இப் பாலைவனப் பசுந் தரையில், ஞாயிற்றுக் கடவுள், சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்டமை யினாலேயே அதற்குச் சிவன் என்னும் பெயர் உண்டாயிற்று என எளிதில் ஊகித்தறியலாம். சிவன் என்பதே அமன் எனப் பிற்காலந் திரிந்து வழங் குதல்கூடும். அமன் (Amon) என்பதே கிறித்தவர்கள் வழிபாட்டு முடிவில் கூறும் ஆமென் எனத் திரிந்து வழங்குகின்றதென்பது வரலாற்று ஆசிரி யர்கள் சிலரது கருத்து. மேற்கு ஆசியாவில் இடங்களுக்கும் மாதத்துக்கும் மாத்திரமன்று; மக்களுக்கும் சிவன் என்னும் பெயர் இட்டு வழங்கப்பட்டது. 3சொய்றோ ரோயிஸ் என்னும் சுமேரிய அரசனது மனைவியின் பெயர் சிவன். இவளுக்கு மாத்திரம் சிவன் என்னும் பெயர் இடப்பட்டதெனக் கருதுதல் கூடாது. அக் கால மக்கள் பலருக்கு இப் பெயர் இட்டு வழங்கப் பட்டதென்றும் அம் மரபுபற்றி இவளுக்கும் இப் பெயர் கொடுக்கப்பட்ட தென்றும் நன்கு உய்த்தறியலாகும். அமெரிக்காவிலே கொலறடோப் பள்ளத்தாக்கிலுள்ள பீடபூமியில் பத்தாயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்கரின் சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. இது, சியஸ் மலையில் இருப்பவராயும் மூன்று கண்களுடையராயும் கூறப்படுதலால் நன்கு அறிதும். யூபிதர் என்னும் பெயரும் செவா என்னும் அடியாகப் பிறந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 உக்கிரோ பின்னிய துரானிய மொழிகளில் சிவன் சிவோ என வழங்கும். இலாப்பியரின் காத்தற் கடவுள் சிவன். துருக்கி மொழியில் செவ் என்பது அன்பை உணர்த்தும். அக்கேடிய மொழியில் செ கருணையையும், செப் உள்ளத்தையும் உணர்த்தும்.2 ஆரிய மக்களிடையே வேதகாலத்தில் சிவாக்கள் (Sivas) என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தனர். பாணினியின் இலக்கணத்திற் கூறப்பட்ட சிவபுரம் 3, இவர்களின் நகரமாகலாமெனக் கருதப் படுகின்றது. மெசபெதேமியாவிலே பழைய பாபிலோன் மக்களின் மரபின ராகிய சிறுகூட்டத்தினர் சிலர் காணப்படுகின்றனர். இவர்கள் கபில் சிவா, றபில் சிவா என்னும் கடவுளரை வணங்கினர். பழைய இலங்கை அரசர் பலர் சிவன் என்னும் பெயரைத் தமது பெயரின் இறுதியிற் சேர்த்துவழங் கினர். அரசரல்லாத சிலருக்குச் சிவனென்றும் பெயரிருந்தமை மகாவமிச மென்னும் பௌத்த நூலாலறியப்படுகின்றது. சிவன் ஒளிமலை என்னும் பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. கிரேத்தா(Crete)விலுள்ள ஓர் இடத்துக்கும் சிவன் என்று பெயர். மரவணக்கம் மரங்களின்கீழ் கடவுள் வடிவங்கள் வைத்து வழிபடப்பட்டமையின், மக்கள் மரங்களிலும் கடவுள் உறைவதாக நினைந்து அவைகளை வழிபடலாயினர். இவ் வணக்கமும் உலகம் முழுமையிலும் காணப்பட்டது; இன்றும் காணப்படுகின்றது.4 இன்று கிறித்தவரின் தேவாலயத்துக்கும் பெயராக வழங்கும் ‘சேட்ச்’ என்னும் பெயர், கருவாலி மரத்தைக்குறிக்கும் ‘கேர்க்’ என்னும் சொல்லினின்றும் பிறந்ததென ஆராய்ச்சியாளர் காட்டி யுள்ளார்கள்.5 மரவணக்கத்தில் மரங்களின் உச்சிக்கிளைகள்மீது ஆடைத் துண்டுகளைக் கொடிபோலக் கட்டிப் பறக்கவிடுவது வழக்கு. நடராச வணக்கம் நடராச வடிவில் இறைவனை வழிபடும் வழக்கு மொகஞ்சொதரோ காலத்திலேயே காணப்பட்டது.1 அங்குள்ள முத்திரைகளில் இறைவனைக் குறிக்கத் தாண்டவன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; அரசன் ஒருவன் தானே ஒப்பற்றவன் என்னும் பெருமிதத்தினால் ஆடும் ஆடலை இவ் வடிவம் குறிக்கின்றது. காலின் கீழ் ஒருவனை மிதித்து நிற்றல் ‘ஒன்னார்த்தெறல்’ என்பதையும், அமர்த்தி நிற்கும் கரம் அடைந்தாரை ஆதரித்து அடைக்கலம் காத்தலையும் குறிக்கின்றன. தம்மைப் பணியும் சிற்றரசர்கள் முடிமீது தமது காலைத்தூக்கி வைத்து அருள்வது அக் காலப் பெருமன்னர் மரபு. அவ் வழக்கே ‘திருவடித் தீக்கை’யுமாம். கோயில் மரங்களின்கீழ் இருந்த அருட்குறிகளைச் சுற்றிக் கற்களை அடுக்கி மதில் அல்லது வேலி செய்வதிலிருந்து கோயில் ஆரம்பமாயிற்று. மனித னின் வீடு ஒன்றைப் பார்த்து அமைக்கப்பட்டதே கோயில்.2 கோயில் என்பது அரசனின் வீடு எனப் பொருள்படும். ஆலயம் கோயில் எனப்பட்டது போலவே அரசனது இல்லம் கோயில் எனப்பட்டது.3 மொகஞ்சொதரோ வில், சிறிது அறைகளும் தடித்த சுவர்களுமுடையதாகக் காணப்பட்ட கட்டிடம் அக் கால ஆலயம் எனக் கருதப்படுகின்றது. அதன் அமைப்பைக் கொண்டு அது பல மாடியுடையதாயிருந்ததெனக் கருதப்பட்டது. மாடிகளே இன்று கோபுரங்களளவில் சுருங்கிவிட்டன போலும். மேற்கு உலகத்திலும் ஆதியில் ஆலயங்கள் மரமும் இலிங்கமும் கிணறும் பலிபீடமும் அளவில் இருந்தன. பலிபீடமென்பது மேலே சிறிய தீ மூட்டக்கூடிய ஒரு கல். “ஆரம்பத்தில் மரமும், பின் சோலையும் கிணறும், பின் இலிங்கமும், பின் செதுக்கி மட்டஞ் செய்யப்படாத கல்லாகிய பலி பீடமும், பின் கொடிகள் அல்லது பாம்புகளும் முறையே ஓரிடத்தில் கூடி ஆலயங்களாயின. மெக்காவில் உள்ள காபா, மரமும் இலிங்கமும் கிணறுமாகிய இவ்வளவில் உள்ள கோயிலாக இருந்தது. இங்கிலாந்திலுள்ள கல் வட்டங்களுக்கு அயலில் தோப்புக்களும், கிணறுகளும் இருந்தன.”1 என்று பர்லாங் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். “ஆதியில், சதுரமான அல்லது வட்டமான கல் வேலிகளின் நடுவே இலிங்கமும் அதன் முன்னால் பலிபீடமும் வைத்து வழிபடப்பட்டன. இவ்வகைக் கல்வேலி யின் ஒருபுறத்தே மூன்று கல்லினால் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் (கவிழ்ந்த ‘ப’ போன்றன) பொனிசியாவிற் காணப்படுகின்றன. இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பாபிலஸ் (Babel) பால்பெக்2 ஆலயங்கள் எழுந்தன. மெக்காவில் உள்ள காபா ஆலயம் முற்கூறிய வகை ஆலயத் துக்கு உதாரணமாகும்” என ‘சீரியாவில் கற்களிற் காணப்படும் வரலாறு’ என்னும் நூல் கூறுகின்றது.3 தென்னிந்தியாவில் மிகப் பழைய ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படவில்லை. தென்னிந்தியாவில் ஆலயங்கள் மரத்தினாற் கட்டப் பட்டனவென்றும், பின்பு அம் மரக்கோயில்களின் அமைப்பைப் பின் பற்றிக் கல்லினால் ஆலயங்கள் எடுக்கப்பட்டனவென்றும், அதனாலேயே மிகப் பழைய ஆலயங்களும் அவைகளின் அழிபாடுகளும் தென்னிந்தியா விற் கிடைக்கவில்லையென்றும் பழைய கட்டிடக் கலை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தென்னிந்திய கட்டிடக்கலை ஆராய்ச்சியாளருள் சிறந்த யோவு தெபுருஇல் (Jouveau Dubreuil) என்பார் தென்னிந்திய கட்டிடக் கலையைப்பற்றிக் கூறியிருப்பன சில பின்வருவன: “திராவிடரின் கட்டிடக் கலை 1500 ஆண்டுகள் வரையில் மற்றைய நாட்டு அவ் வகைக்கலை யினால் பாதிக்கப்படாது தனிமையாக நின்றது. இது மற்றைய நாட்டவரின் கட்டிடக் கலைகளினின்றும் எதையும் கடன்பெறவில்லை. இது படிப்படியே வளர்ச்சியடைந்திருக்கின்றது. திராவிட நாட்டின் ஒவ்வொரு காலத்துக் கட்டிடங்களையும் நோக்கும்போது அவைகளின் அமைப்பு மெதுவாக வளர்ச்சியடைந்துள்ளதென்று விளங்குகின்றது. இது மனித நூலார் குரங்கு போன்ற மனிதனுடைய மண்டை முதல் இன்றைய மனிதனின் மண்டை வரையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமையைக் காட்டுதல் போன்றது. மாமல்லபுரத்தில் காணப்படும் தேர்களுக்கும் திருப்பாப்புலி யூரிற் காணப்படும் தேர்களுக்கும் மாதிரியில் வேறுபாடு உண்டு. இது கொரமாங்கன்1 மனிதன் மண்டைக்கும் இன்றைய மனிதன் மண்டைக்கு முள்ள வேறுபாடு போன்றது.” “கற்சிப்பிகள் தம் முன்னோர் தமக்குக் கற்பித்த பரம்பரை முறைப் படியே கட்டிடங்களை அமைத்தார்கள். தமிழிலே வழங்குகின்ற எழுத்துக் களின் வடிவுகள் காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளன. இது போலவே மொழியும், மொழி வழக்குகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் மாறு பட்டு வந்துள்ளன; சமயமும் கிரியை முறைகளும் சமயக் கோட்பாடுகளும் தணிவு பெற்று வந்துள்ளன. மிகப் பழைய உருவச் சிலைகளுக்கும் இன்றைய அவ்வகைச் சிலைகளுக்கும் வேற்றுமை காணலாம். நில நூலார் நிலத்தில் அடுக்கு அடுக்காகக் காணப்படும் பாறைகளைப் பார்த்து அவற் றின் வயதைக் கூறுகின்றார்கள். இதுபோலவே கட்டிடக்கலையில் தேர்ந்த ஒருவனுக்குக் கட்டிடங்களிற் காணப்படும் கூடு, அல்லது போதிகையின் வடிவங்கள் ஆராய்ச்சிக்குப் போதுமானவை. இது பாறைகளிற் காணப்படும் தொல்லுயிர்களின் என்புக் கூடுகள் (Fossils) அப் பாறைகளை இன்ன இன்ன பாறை என்று கூறுவதற்கு நிலவியலாருக்குப் பயன்படுவதுபோலாகும்.” வெர்கூசன் (Fergussion) என்பார் தென்னிந்திய ஆலய அமைப்புகள் எகிப்திய கோயில்களை ஒத்தனவென்று காட்டியுள்ளார்.2 தேஸ்ரன் என்பார் இந்தியாவின் பழைய கட்டிடங்களில் எகிப்திய சாலடிய பொனீசிய அமைப்பு முறைகள் கலந்துள்ளன எனக் கூறியுள்ளார்.1 மலையாளத்தில் சில ஆலயங்கள் குடில்போல வட்டவடிவாக அமைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவிலிருந்தே பின் சதுர வடிவு ஆரம்பித்திருத்தல் வேண்டும். மக்கள் ஆதியில் கட்டி வாழ்ந்த வீடுகள் வட்டவடிவினவே. கருவுக்கு (கர்ப்பக் கிருகம்) மேல் உள்ள பாகம் இன்றும் வட்டவடிவாகவே அமைக்கப்படுகின்றது. முடி என்பது குடில் வீடுகளுக்கு உச்சியில் வைக்கப்பட்ட பானையே யாகும். அரசன் இல்லத்தைச் சுற்றி அவனுடைய சுற்றத்தினர் சேனாபதியர் இருப்பதுபோலக் கோயிலின் உள் வீதியைச் சுற்றிப் பரிவார தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டன.2 ஆதியில் மரமும் இலிங்கமுங் கிணறுமாகவிருந்த ஆலயம் இவ்வாறு வளர்ச்சியுற்றது. தலவிருட்சம் இலிங்கத்தைச் சுற்றிக் கட்டிடமெழுந்தது. அப்பொழுது மரம் இடம் பெறவில்லை. எந்த மரத்தின்கீழ் இலிங்கம் ஆதியில் வைத்து வழிபடப் பட்டதோ அம் மரம் அவ் வாலயத்தின் தலவிருட்சம் எனப்பட்டது. மேற்கு ஆசிய நாடுகளிலும் எகிப்திலும் கிரேத்தாவிலும் தென்னிந்திய ஆலயங் களிற் காணப்படும் கொடிமரம் போன்ற மரத்தூண்கள் ஆலயங்களில் நிறுத் தப்பட்டு ஆண்டுவிழாக் காலங்களில் கிரியைகளுடன் வழிபடப்பட்டன. கொடி மரத்தின் நுனியில் மூன்று கிளைகள் காணப்படுதல்போல அம் மரங்களுக்கும் கிளைகள் இருந்தன. தலவிருட்சமே, காலத்தில் கொடிமரமாக மாறியுள்ளதோ வென்பது ஆராயத்தக்கது.3 இலிங்கம் வைக்கப்பட்டுள்ள மரங்களின் கிளைகளில், ஆண்டில் ஒருமுறை சிறப்பாக நடைபெறும் பொங்கி மடையிடுதல் போன்ற வழிபாட்டை அறிவிக்க ஆடைத் துணியைக் கட்டி விடுதல் இந்திய நாட்டிலும் பிறவிடங்களிலும் உள்ள வழக்கு. திரை அரசன் உறையும் உள் மண்டபத்தின் எதிரே திரை இடப்பட்டிருக் கும்.1 அதனை ஒப்ப ஆலயங்களிலும் உள்மண்டபத்தின் எதிரிலும் திரைச் சீலை இடப்பட்டிருந்தன. ஆலயங்களில் இன்றும் திரைச் சீலையிட்டிருப் பதை நாம் காணலாம். மேற்கு ஆசிய நாடுகளிலும் ஆலயங்களுக்குத் திரைச்சீலையிடப்பட்டிருந்தது.2 ஐயர் அரண்மனையில் அரசனைச் சேவிக்கும் பணியாளர் பலர் இருந்த னர். அவர்கள் பலதரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள், அவருள் ஒருவன் தலைவனாகவிருந்தான். இதனை ஒப்பவே ஆலயங்களிலும் ஐயனைச் சேவிக்கும் அடியவர்கள் பலர் இருந்தனர். அரசன் துயில்விட்டு எழுந்தது முதல் அவன் துயில்கொள்ளப் போகும் வரையில் அவன் அடியோர் என்ன என்ன பணிகளைச் செய்கின்றார்களோ அவ் வேலைகளையெல்லாம் ஐயனது அடியாரும் செய்தனர்.3 ஐயனைச் சேவித்தலின் இவர்கள் ஐயரென் றும், கோயிற் கருமங்களைப் பார்த்தலிற் பார்ப்பார் என்றும் பெயர் பெற்ற னர். அன்னோர் பழைய நாளில் ஆறு தரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.4 கிறித்துவ மறையில் சேர்மையா, நேசையா என ஐயாவில் முடியும் பல பெயர்களைக் காணலாம். தமிழ்மொழியில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய மொழிகளிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது. அராபி மக்கள் பாபிலோன் நாட்டைச் சின்-ஐயர் என வழங்கினர். சின்-ஐயா என்பதற்கு ஞாயிற்றுக் கடவுள் என்று பொருள். பழைய கெல்திய மொழியிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது.1 ஐயர் என்பது ஆரியர் என்பதன் திரிபு எனச் சிலர் கருதலாயினர். இது சிறிதும் பொருந்துவதன்று. தொல்காப்பியத்தில் “ஐயர் யாத்தனர் கரணமென்ப” என ஐயர் என்னும் பெயர் வந்துள்ளது. ஆராய்ச்சியாளர் ஐயர் என்பது தூய தமிழ்ச்சொல் என்றே அறுதியிட்டுக் கூறியுள்ளார்.2 வடமொழிப் பிரளயம் தென் தேசத்தே படை எடுத்து வந்த ஒரு காலத்தில், தமிழ்ப்பெயர்களின் இடத்தை வடமொழிப் பெயர்கள் எடுத்தன. அவ்வாறு வந்த பெயர்களுள் பிராமணர் என்பதும் ஒன்று. இன்றும் கோயிற்றொண்டு செய்யும் குலத்தவர் ஐயர், ஐயங்கார், நம்பி, பட்டர் முதலிய தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்படுகின்றனர். தமிழ் நாட்டுக் குருமாரை மேற்கு ஆசிய நாட்டுக் குருமாரோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பல உண்மைகள் வெளியாகின்றன. எகிப்திய குருமாரின் ஒழுக்கங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுக் குருமாரின் ஒழுக்கங்களை ஒத்தனவென்பது கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளவைகளால் விளங்கும்.3 புரோகிதர் ஐயர், மக்களுக்கு சமயப் பொருளில் வழிகாட்டியாக விருந்தார். அவர் இறந்தவர், இருப்பவர்களுடைய நன்மையை முன்னிட்டுப் பல கிரியைகளைச் செய்ய ஆரம்பித்தனர். மக்கள் அவர் புரியும் கிரியைகளில் அளவு கடந்த நம்பிக்கை வைத்தனர். மக்களை எல்லாத் தீமைகளினின்றும் காப்பவர் என்னும் பொருளில் அவர் புரோகிதர் எனப்பட்டார். சோதிடம், வான ஆராய்ச்சி, மந்திர வித்தை முதலியவைகள் எல்லாம் முற்காலத்திற் குருமார்களிடத்திலேயே இருந்தன. இதனால் பொது மக்கள் குருமாருக்குப் பெரிதும் அடங்கி நடந்தார்கள். இது உலக வரலாற்றில் எல்லா நாடுகளிலும் காணப்பட்ட உண்மை. புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவ னாகவும் இருந்தான். அரசர் அவைகளில் ஐயருக்குத் தனிப்பட்ட மதிப்புக் கொடுக்கப்பட்டது. அரச சபைகளில் ஐயருக்குத் தனது கருத்துக்களை எடுத்துக்கூறும் அதிகாரம் இருந்தது.1 ஐயரும் புரோகிதனும் ஆரியன் என்று நினைப்பது தவறுடைத்து. கோயிற் கிரியைகள் ஓர் அரசனுக்கு அவன் வேலைக்காரன் நித்திரை விட்டெழுந்தது முதல் நித்திரைக்குச் செல்லும்வரையில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ, அவ் வகை வேலைகளை எல்லாம் கடவுளுக்குச் செய்வதே ஆலயக் கிரியைகளாகும்.2 விழாக்கள் என்பன அரசன் உலாவரும் காலத் தில் நடைபெறுவதுபோல நடத்திக் கண்டு மகிழ்தல், விழாக்களையும் நித்திய கிரியைகளையும் கொண்டு பண்டை அரசரின் வாழ்க்கையை இனிது அறிந்து கொள்ளுதல் கூடும். அவ்வத்தேச வழக்குகளுக்கேற்ப இக் கிரியைகள் சிறிது வேறுபடும். திருவுருவத்துக்கு நறுமணத்தைலம் தேய்த்தல், திருமுழுக் காட்டுதல், ஆடை உடுத்தல், நறும் புகையும் தீபமும் (ஆலத்தி) காட்டுதல், உணவு படைத்தல் போன்ற கிரியைகள் எல்லா நாடுகளுக்கும் பொது வானவை. கிறித்துவ ஆலயங்களில் நடைபெறுவன போன்றவே. சாலமன் கட்டிய ஆலயத்தில் நடைபெற்ற கிரியைகளும் இவ் வகையின. சீரியா, றொடேசியா முதலிய இடங்களிற் காணப்பட்ட இலிங்கங்களில் பூமாலைகள் வெட்டப்பட்டிருந்தன.1 சீரியாவிலே கடாட் (Hadad) என்னும் சிவன் கடவுளுடைய இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.2 இதனால் பொனீசியா சீரியா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் வழிபாட்டில் பூமாலைகள் பயன்படுத்தப்பட்டன வென்பது தெரிகின்றது. யூதர் வழிபாடு பழைய அக்கேடிய பொனீசிய வழிபாடுகளை ஒத்தது. ஆதலின் அக் காலத்து அந் நாடுகளிலும் இவ் வகைக் கிரியைகளே நடைபெற்றன வென்பது தெற்றெனப் புலப்படும். ஆலத்தி காட்டுதல் தென்னாட்டுப் பழைய வழக்கு. அரசருக்கு முன்னாலும் இது காட்டப்பட்டது. தீபம் ஞாயிற்றைக் குறிக்குமெனச் சிலர் கூறுகின்றனர்.3 மக்களின் வழிபாடு அரசனைக் காணுவதற்கு மக்கள் எப்படிச் செல்லுகிறார்களோ அப்படியே ஆலயத்துக்கும் சென்றனர். பெருமக்களைக் காணச் செல்லு மிடத்து வெறுங்கையோடு செல்வது தமிழர் மரபன்று. “போனவன் வெறுங் கையோடே போகாவண்ணஞ் சென்று ஞான சற்குருவை நன்றாய் வணங்கி நின்று” (கைவல்யம்); ஆகவே, அவர்கள் செல்லுமிடத்துக் கையுறையுடன் சென்றனர். நடுவிருக்கை என்னும் கருமிமூலம் அரசனுக்குத் தமது செய்தி களை அறிவித்தல்போல அவர்கள் தமது கையுறையை நடுவிருக்கைகளாகிய குருமார் (ஐயர்) மூலம் கடவுளிடத்தில் சேர்ப்பித்துத் தம்குறைகளையும் அவர் மூலம் உணர்த்தினர். இதற்குக் கைமாறாகக் குருமார் கூலியும் பெற்றனர். பத்தர்கள் கடவுளின் எதிரே நின்று அவன் புகழ்பாடிக் கும்பிட்டுக் கூத்துமாடினர்.1 மேற்கு ஆசிய நாடுகளில் இவ் வகைக் கூத்து இன்றும் நடைபெறுவதை வரலாறுகளிற் காண்கின்றோம். சாலமன் அரசனின் தந்தை யாகிய தாவீது (David) பேழைக்கு முன்னால் துள்ளி ஆடின வரலாறு கிறித்தவ மறையில் (2. Sam VI, 14, 15) கூறப்படுகின்றது. தேவதாசிகள் அரசரின் அரண்மனைகளில் அரசனைப் பாட்டாலும் கூத்தாலும் மகிழ்விக்கும் மகளிர் பலர் இருந்தனர். அவ்வாறே ஆலயங்களிலும் அவ் வகை மகளிர் பலர் இருந்தனர். இந்திய நாட்டில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய நாடுகளிலும் உரோமிலும் இவ் வகை மகளிர் இருந்தனர். இவர் களின் ஒழுக்கம் இன்று இந்திய நாட்டுத் தேவதாசிகளின் ஒழுக்கத்தைப் பெரிதும் ஒத்தது.2 பாலஸ்தீன் ஆலயங்களிலும் தேவதாசிகள் இருந்தார்கள். இதற்கு ஆதாரம் கிறித்துவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படு கின்றது. இராசராசன் கட்டிய தஞ்சாவூர் ஆலயத்தில் நானூறு தேவதாசிகள் இருந்தார்கள் என்று ஒரு கல்வெட்டிற் காணப்படுகின்றது. மகமத் கசனி காலத்தில் சோமநாத ஆலயத்தில் 300 தேவதாசிகள் இருந்தனர். சங்கு வாத்தியம் தென்னிந்திய ஆலயங்களில் சங்கு வாத்தியம் ஒரு சிறப்பு. சிவன், காதில் அணிந்திருப்பது “சங்க வெண்குழை”; திருமால் கையில் வைத்திருப் பது சங்கு. “சங்காபிடேகம்” என்னும் பெயருடன் இன்றும் ஆலயங்களில் மாபெரும் கிரியைகள் செய்யப்படுகின்றன. இந்திய மக்கள் பரிசுத்தமாகக் கொள்ளும் பொருள்களுள் சங்கும் ஒன்று. சங்கு இந்தியநாட்டில் மாத்திர மன்று; இவ் வுலகம் முழுமையிலும் தூய்மையுடையதாகக் கருதப்பட்டு ஆலயங்களில் வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எலியட் சிமித் என்னும் ஆசிரியர், சங்கை வாத்தியமாகக்கொள்ளும் வழக்கம் தென்னிந்தி யாவில் ஆரம்பித்துக் கிழக்கு நோக்கிச் சீனா யப்பான் கீழைத்தீவுகள் பசுபிக் கடற்றீவுகளுக்கு ஊடாகச் சென்று அமெரிக்காவையும் அடைந்ததெனக் கருதினார்.1 கிரேத்தாத் தீவின் பழைய மக்கள், ஆலயங்களில் கடவுளை வீதி வழியே அழைத்து வரும்போது சங்கு வாத்தியம் ஊதினார்கள்.2 இன்றும் கிறித்துவ ஆலயங்கள் சிலவற்றில் சங்கு வாத்தியம் ஊதப்படுவதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றும் சீனாவிலே பௌத்த ஆலயங்களில் சங்கு ஊதப்படுகின்றது. கிறித்துவமறையின் புதிய ஏற்பாட்டில் சங்கு ஒலி, உயிர்த்தெழுவதின் அடையாளமாகக் கருதப் பட்டது.1 மெக்சிக்கோவில் பழைய கையெழுத்துச் சுவடி ஒன்றில், இரண்டு குருமார் தங்கள் காதுகளைத் துளைத்து ஞாயிற்றுக் கடவுளுக்குப் பலி செலுத்துவதுபோலவும், இரண்டு குருமார் சாம்பிராணிப் புகை இடுவது போலவும், இன்னும் இரண்டு குருமார் சங்கு ஊதுவதுபோலவும் உள்ள படம் காணப்படுகின்றது. இக் கையெழுத்துச் சுவடி இப்பொழுது புளோ றன்ஸ் (Florance) என்னுமிடத்தில் உள்ளது.2 ஞாயிற்று வணக்கம் எங்கெங்கு காணப்பட்டதோ அங்கு எல்லாம் சங்கு வாத்தியமும் பயன்படுத்தப்பட்டது. கடல் உயிர்களின் ஓடுகள் மிக முற்பட்ட கால மக்களால் புனிதமாகக் கருதப்பட்டனவென்றும், அவற்றுள் கவடி (சோகி) போன்றவை வழிபடப் பட்டனவென்றும், கடவுள் தன்மையுடையனவாதலின் கவடிகள் மக்களால் அணியப்பட்டனவென்றும், பிற்காலங்களில் அவைகளுக்குப்பதில் அவை (சங்கு) கொடுக்கும் முத்து சீவ ஒளி அளிப்பன எனக்கருதி அணியப்பட லாயின என்றும் கூறுகின்றனர். முத்துக்களை அணியும் வழக்கிலிருந்தே பிற்காலத்தில் சீவசத்து உடையதாகிய உருத்திராக்கம் அணியும் வழக்கு உண்டாயிற்று எனக் கருதப்படுகின்றது. முத்து நகை, முத்துப் பல்லக்கு, முத்து ஆபரணம் என்பன அரசர், கடவுளர்களுக்குச் சிறந்தனவாகக் கொள்ளப்படலாயின. துவராடை சிவன், திருமால் அடியவர்கள் துவராடை உடுக்கின்றனர். துவராடை உடுத்தற்கும் பழைய வரலாறு உண்டு. இவ் வழக்குப் பண்டை மக்கள் பல ரிடையே காணப்பட்டது. சங்கு வாத்தியம் எங்கெங்குப் பயன்படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் ஒருவகைச் சிவப்புச் சாயம் உற்பத்தியாக்கப் பட்டது.3 பொனீசிய மக்கள் சிவப்புச் சாயம் ஊட்டிய ஆடைகளை உலகின் பல பாகங்களுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். பொனீசியாவிற் செய்யப்பட்ட சிவந்த ஆடைகள் அக் காலத்து உயர்ந்த வாழ்க்கைப் பொருள் களுள் ஒன்றாக விருந்தன. சில சமயங்களில் அதன் விலை பொன்னுக்குச் சமனாகவிருந்தது.1 அக் கால அரசரும் பெருமக்களும் குருமாரும் இவ் வாடைகளையே உடுத்தனர். கோயில்களிலும் இவ் வாடைகள் அலங் காரத்தின் பொருட்டுத் தூக்கப்பட்டன. மோசே, யெகோவாவின் கூட்டுக்கு (விமானம்) சிவப்பு ஆடையையே பயன்படுத்தினர். குருமாரும் அந்நிற உடையை அணிந்தனர். பாபிலோனிய தெய்வங்களுக்குச் சிவப்பு ஆடை களே உடுக்கப்பட்டன. எகிப்திய பாபிலோனிய அரசரும் இந்நிற உடை களையே உடுத்தினர். கிரீசிலும் உரோமிலும் அரசரும் பெருமக்களும் குரு மாரும் உயர்ந்த கருமிகளும் மாத்திரம் சிவப்பு உடை அணிந்தனர். ஏனைய மக்களுக்கு இவ் வுரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக் கட்டுப்பாட்டை மீறிச் சிவப்பு ஆடை அணியும் பொதுமக்கள் கடுந்தண்டனை அடைந்தார்கள்; சில சமயங்களில் கொலைத் தண்டனையும் பெற்றனர். பப்புறா (PauPra) என்னும் சொல்லே சிவப்பை உணர்த்தும் பேப்பிள் (Purple) என்னும் சொல்லாக மாறிற்று. பொனீசிய மக்கள் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து விற்ற சிவப்பு ஆடை பச்சைவடம் எனப் பெயர் பெற்றது. பச்சை என்பது பப்புறா என்பதன் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருதப்படுகின்றது. இந்திய நாட்டிலும் சிவப்பு உடை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. தெய்வங்களுக்குச் சிவந்த ஆடைகளே உடுக்கப்பட்டன. திருமுருகாற்றுப் படையில் தெய்வ மகளிர் தம்பலப்பூச்சி போன்ற நிற ஆடை உடுப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல், திருமால் சிவந்த பட்டாடை உடுத்தி யிருப்பவராகக் கூறுகின்றது. முருகக் கடவுள் உடுத்தியிருப்பது சிவந்த ஆடை (முருகு). மற்றும் கடவுளரும் சிவந்த ஆடையையே உடுத்தியிருப் பதாகப் படங்கள் வரையப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை யில் தீக்கை பெற்றபோது அணிந்திருந்தது சிவப்பு ஆடை (திருவா. பு). இதனால் கடவுளர் பெருமக்கள் குருமாரின் உடைகள் சிவப்பு நிறமா யிருந்தன வென்றும், அம்மரபைப் பின்பற்றியே கடவுள் அடியார் துவர் ஆடை அணியும் வழக்கு ஏற்பட்டதென்றும் நன்கு துணியப்படுகின்றது. சுவத்திகம் சுவத்திக அடையாளம் புத்தர் காலத்துக்குப் பின்பே வழங்குகின்ற தெனப் பலர் கருதலாம். ஞாயிற்று வழிபாடு, சங்கு வாத்தியம் என்பவை களைப்போலவே இக் குறியும் மிகப் பழமையுடையது. வரலாற்றுக் காலத் துக்கு முற்பட்ட சுவத்திகம் பொறித்த பழம்பொருள்கள் தென் இந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 ஆதிகால மக்கள் ஞாயிற்றைக் குறிக்கப் புள்ளடியை (X) அல்லது புள்ளடியைச்சுற்றி வட்டமிட்ட குறியை வழங் கினர்.2 இப்புள்ளடி குரிசு (Cross) என ஆங்கில மொழியில் வழங்கும். புள் ளடியிலுள்ள கோடுகளின் வளைவே சுவத்திகக் குறியாகும். இதனால் புள்ளடி சுவத்திகமாக வளர்ச்சியுற்றதென அறியலாம். சுவத்திகம் என்பது வடமொழிப்பெயர். ஆங்கிலோ சாக்சனியர் இதனை ‘வவர்வொற்’ (Fowerfot) என்றும், பிரான்சியர் குறோயிக்ஸ்கிறாமி (Croix Grammee) என்றும், ஸ்காந்தினேவியர் தோர்க்கடவுளின் சுத்தி (Thor’s Hammer) என்றும் வழங்கினர். சுவத்திகம் என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். பதஞ் சலியின் யோக சூத்திரத்தில் யோகாசனத்தில் ஒன்று சுவத்திகம் எனப்படு கின்றது. இது இந்தியாவிலோ கிழக்குத் தேசங்கள் ஒன்றிலோ தோன்றி இவ் வுலகம் முற்றிலும் பரவியிருத்தல் வேண்டுமென ஆராய்ச்சியாளர் துணிகின் றனர். மாந்தர் நூலார் உலகில் எல்லாப் பாகங்களினும் இவ் வடையாளம் சமயக்குறியாக வழங்கியதெனக் கூறி உலகப்படத்தின் எல்லாப் பாகங்களி லும் புள்ளியிட்டுக் காட்டியிருக்கின்றனர்.3 சிவன் என்னும் பெயர் ஞாயிற் றுக்குச் சாலப் பழைய பெயர் என்று முன் விளக்கப்பட்டது. சுவ என்பதே சிவ என வந்ததென மொழியாராய்ச்சியாளர் கூறுவர். சிவன் சம்பந்தமான குறி என்னுங் கருத்துப்பற்றியே ஞாயிற்றுக்குறிக்கு சுவத்திகம் எனப் பெயர் இடப்பட்டது என நாம் நன்கு உய்த்துணரலாம். சுவத்திகக்குறி ஆரியரின் இந்திய வருகைக்கு முற்பட்டது. ஹெரஸ் பாதிரியார் கூறுவது: மொகஞ்சொதரோவில் வாழ்ந்த திராவிடமக்கள் சிறிய சதுரமான நகைகளைப் பயன்படுத்தினர். அவைகளில் சுவத்திகம் பொறிக்கப்பட்டிருந்தது. அங்குக் கிடைத்த பட்டையங்களிலும் இக் குறி காணப்படுகின்றது. இவ் வடையாளம் திராவிட மக்களுடையது. புதிதாக இந்தியாவை அடைந்த ஆரியர்தாம் புதிதாகக் கைக்கொண்ட பலவற்றோடு இவ் வடையாளத்தையும் பயன்படுத்தினர். இச் சுவத்திக அடையாளம் தமிழருடன்கூட மேற்கே கிரேத்தா (crete), கிரீஸ், ஏற்றூனா (Etruna), ஐபீரியா (ஸ்பெயின்) முதலியவும் பிறவுமாகிய நாடுகளுக்குச் சென்றது. மொகஞ்சொதரோவிலும், இலங்கையிலும் வழங்கியதுபோல அது அந் நாடுகளிலும் சுகம் என்னும் பொருளைக் குறித்தது. குடிக்கும் கிண்ணத் தில் இவ் வடையாளம் இருக்குமாயின் அது குடிப்பவனுக்குச் சுகம் தருவ தாக என்னும் பொருளைக் குறித்தது. இவ் வடையாளம் எற்றுஸ்கிய (Etrus-cian) சமாதித் தூண்களிலும், கிறித்தவரின் கல்லறைகளிலும் பொறிக்கப் பட்டன. இது, இவ் வடையாளத்தின் கீழ் அடக்கஞ்செய்யப்பட்டவர் மறு உலகில் சுகமாக இருக்கட்டும் என்னும் பொருளைக் குறித்தது. ஆகமங்கள்1 ஆலயம் அமைக்கும் முறைகளையும், அங்கு நடக்கவேண்டிய கிரியை வகைகளையும், மக்கள் ஆலயங்களில் கடவுள் வழிபாடு செய்ய வேண்டிய முறைகளையும் கூறும் நூல்கள் ஆகமங்கள் எனப்படும். வேதங் களும் ஆகமங்களும் நேர்விரோதமுடையன.2 வேதங்களிற் கூறப்படும் தெய்வங்களும் ஆகமங்களிற் கிளக்கப்படும் தெய்வங்களும் வேறு. வேதங்கள் வருணாச்சிரம தருமங்களை வலியுறுத்துகின்றன. ஆகமங்கள் சரியை கிரியை முதலியவைகளைக் கூறுகின்றன. ஆலய வழிபாடு வேதங் களுக்கு அன்னியமானது. ஆகமங்கள் வடமொழியில் எழுதப்பட்டிருத் தலின் அவை தமிழருடையனவாகா எனச் சிலர் கருதுதல்கூடும். எம் மொழி யில் ஆகமங்கள் எழுதப்பட்டுள்ளனவேனும் அவைகளிற் பொதிந்துள்ள பொருள்களைக்கொண்டு அவை எவருக்குச் சொந்தம் என அறிதல் எளிது. ஆகமங்கள் தமிழருடையனவே என்பது வரலாற்று நூலார் நன்கு ஆராய்ந்து அறுதியிட்ட முடிவு. உபநிடதங்கள் பாரசீக மொழியிலும் இலத்தீன் மொழி யிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரசீகரும், இத்தாலியரும் அந் நூல்கள் தங்களுடையனவென்று வாதாடமாட்டார்கள். ஆலயம் கட்டும் சிற்பக்கலை, திருவுருவங்களைச் செய்யும்முறை முதலியனவும் இவை போன்றனவும் பெரும்பாலும் அவ்வத் தொழில்களுக்குரிய கூட்டத்தின ரிடையே ஏட்டிலெழுதப்படாது பரம்பரையாகத் தொடர்ந்து வந்துள்ளன. இவ் வகை வழக்குகள் எல்லாவற்றையும் திரட்டிப் பிற்காலத்தில் ஐயர்மார் எழுதிவைத்தனர். திருவுருவங்கள் உலோகங்களில் அமைக்கும் முறைகள் நீண்டகாலம் எழுதப்படாது பரம்பரையாக வந்ததென்பதைக் கன்கூலி என்பார் தென்னிந்திய வெண்கலத் திருவுருவங்கள் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.1 ஆகமங்களில் கூறப்படும் யோகம், ஞானம் முதலிய பகுதிகள் பிற் காலத்து எழுதப்பட்டனவாதல் வேண்டும். தமிழில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாக நூல் செய்தலே வழக்கு. வீடுபற்றி நூல் செய்தல் வழக் கின்று.2 “அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப” (தொல். செ. 106) இவ் வழக்குப்பற்றியே திருவள்ளுவரும் முப்பாலாக நூல் செய்தார். ஆரிய ரின் முறையைப் பின்பற்றியே தமிழில் நூல்கள் செய்யப்பட்டன என்று சிலர் வாதிப்பர். இது தந்தைக்கு மகன் முப்பாட்டன் என்பது போன்ற தோர் கொள்கை. நாற்பாலாக நூல் செய்தலே ஆரியர் மரபு. புராணங்கள் புராணங்கள் என்பன பழைய வரலாறுகள். புராணங்களில் பழைய அரசர் வரலாறுகளும் அவர்கள் காலங்களில் நிகழ்ந்த பெரிய செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசர்களது சபைகளிலே புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசனது பரம்பரையிலுள்ள வரலாறுகளை எல்லாம் திரட்டிப் பெருநாட்களில் அரச சபைகளில் கூறுவது வழக்கம். இவ்வாறு வடநாட்டு அரசர் சபைகளில் இருந்த புலவர்கள் சூதர் எனப்பட்டனர். இதனாலேயே புராணங்கள் சூத முனிவராற் சொல்லப்பட்டன என்று வழங்குகின்றன. இவ்வாறு கன்ன பரம்பரையில் வந்த வரலாறுகள் பிற்காலத்துத் திரட்டி எழுதப்படலாயின. இவைகளே பழைய இந்திய மக்களின் வரலாறுகளாகும். மற்றைய நாடுகளிற் காணப்படும் பழைய வரலாறுகள் புராண வரலாறுகளை விடச் சிறந்தன என்று கூறமுடியாது. அபஸ்தம்பர் (கி. மு. 400), கௌடலியர் முதலானோர் புராணங்களைக் குறிப்பிட்டுள்ளமையின் அக் காலத்திலேயே புராணங்கள் தோன்றியிருந்தனவென பார்கித்தர் (Pargiter) என்னும் ஆரியர் கூறுவர். புராணங்களை நன்கு ஆராய்ந்து, இந்திய மக்களின் வரலாற்றுக் கதைகள் என நூல் எழுதிய பார்கித்தர் என்பார் கூறியிருப்பதின் சுருக்கம் பின் வருமாறு: புராணக்கதைகள் எனப்படும் பழைய வரலாறுகளில் பிராமணர் கை யிட்டு அவைகளை வேண்டியளவு பெருக்கியும், பிராமணக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் சேர்த்தும், தங்கள் சாத்திரக் கொள்கைகளையும் கிரியைகளையும் புகுத்தியும் இருக்கின்றனர். பிராமணரின் கதைகள் பிராமணருக்கு எப்படிப் புலப்படுமோ அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. அக் கதைகளில் பிராமணரின் கருத்துக்களும், பிராமணரின் உயர்வும், அவர் களின் புனிதத் தன்மைகளும், அவர்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட நிலை யில் இருப்பதும், இவைபோன்றனவுமாகிய அவர்க்கு மாத்திரம் வாய்ப் புடைய கொள்கைகள் கூறப்படுகின்றன. அக் கதைகள் சிறிதும் பொருத்த மற்றன. பிராமணர்களின் பிழையினால் புராணங்கள் மதிப்பை இழந்து விட்டன.1 வரலாற்று நூல்களாகிய புராணங்கள் பிராமணரின் கையீட்டினால் சமய நூல்களாக மாறியுள்ளன. சிறுவன் ஒருவன் சிறிதாயுள்ள இரப்பர்ப் பையை (Baloon) எப்படி ஊதிப் பெருக்கச் செய்கிறானோ அவ்வாறு சிறிய அளவில் இருந்த பண்டை மக்கள் வரலாற்றை அதனினும் பன்மடங்கு பெரிதாகப் பிராமணர் தம் சொந்த நலம் கருதிப் பெருக்கியுள்ளனர். இதிகாசங்கள் இதிகாசம் என்னும் பெயருடன் வழங்குவனவும் புராணங்கள் போன்ற பழைய வரலாறுகளே. இவ்வரலாறுகளிலும் பல கட்டுக்கதைகள் நுழைந்துள்ளன. புராணங்களில் கையிட்டதுபோலவே இதிகாசங்களிலும் பிராமணர் கையிட்டு அவைகளின் பெருமையைக் குறைத்துவிட்டனர். பார்கித்தர் கூறுவது: “பிராமணரின் கதைகள் பொதுவில் நம்பத்தக்கன வல்ல. இராமாயணத்தில் பிராமணக் கொள்கைகள் பெரிதும் காணப்படு கின்றன. கதையும் புதுமுறையாகவும் நம்பக்கூடாததாகவும் இருக்கின்றது.”1 மத்தியதரை மக்கள் எல்லோருக்கும் ஆகமம் ஒன்றே மேல் நாட்டு மக்கட்குல நூலார் மத்தியதரைச் சாதியினர் எனப்பிரிக் கும் பெருங்கூட்டத்தில் பொலிநீசியர், தமிழர், எகிப்தியர், பாபிலோனியர், கிரேத்தா மக்கள் பழைய இத்தாலியர் முதலியோரும், இன்னும் மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளில் வாழும் மக்களும் அடங்குவர். இம் மக்கள் எல்லோரும் ஒருகாலத்து ஒரு கூட்டமாக வாழ்ந்து பின்பு பிரிந்து சென்றோர். மத்தியதரை நாடுகளிலுள்ள மக்களே ஒருகாலத்தில் இந்தியாவை யடைந்து தமிழர் என்னும் சாதியினராகப் பெருகினார்கள் எனக் கருதப் பட்டது. பழைய மக்கள் வரலாறுகள் ஓரளவு வெளிச்சம் அடைந்துள்ள இக் காலத்து, தமிழ் மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என்னுங் கொள்கை வலுத்துள்ளது. ஹெரஸ் பாதிரியார் ஆரம்பத்தில் முன்னைய கொள்கையுடையவராகவே இருந்தார். மொகஞ்சொதரோ, அரப்பாவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு எழுத்துப்பொறித்த முத்திரை களை வாசித்தபின் அவர் தமிழர்களே மத்தியதரை நாடுகளிற்சென்று குடி யேறினார்கள் எனப் பலவகையில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.2 விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில், மத்தியதரை மக்கள் எல்லோருடைய வழிபாடுகளும் ஒருவகையின என்பதற்குரிய ஆதாரங்கள் நிறையக் கிடைக்கின்றன. அவற்றுட் சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். அவற்றை இன்றும் இந்தியநாட்டிற் காணப்படும் வழக்குகளோடு ஒப்பு நோக்கி உண்மை ஓர்க. “யெகோவா மொசேயை நோக்கி அதிஉத்தம சுகந்த திரவியங் களாகிய சித்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்நானத்திற்குச் சேக்கலின்படி 5000 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற் பாதியாகிய 2500 சேக்கலும் சுகந்த வசம்பு 2500 சேக்கலும், இலவங்கப்பட்டையில் 500 சேக்க லும், சீதவிருட்சத்தெண்ணெயில் ஒரு கின்னும் எடுத்து, பரிமள தைலக் காரனுடைய செய்கையாகச் செய்யப்பட்ட பரிமள தைலத்தைப்போல, அவை களினாற் சுத்த தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாக இருக்கவேண்டும். அதனாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப் பெட் டிக்கும், பீடத்துக்கும் கிளை விளக்குக்கும் தூபவேதிகைகளுக்கும், தகன பலிவேதிகைக்கும் அபிஷேகம் பண்ணக்கடவாயாக. ஆரோனும் அவன் புத்திரரும் எனக்கு ஆசாரியத்தொண்டு புரியும்படி நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாய். (யாத்: 30. 22-33) (யாத்: 25. 30) என் சந்நிதியில் எப்பொழுதும் பீடத்தின்மீது அப்பம் வைக்கவேண்டும். நைவேத்தியத்துக்கு ஒரு கூடையில் எண்ணெயிற் பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினாற் செய்த அதிரசங்களையும் எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் கொண்டுவரக் கடவன். அவைகளை ஆசாரியன் கொண்டுவந்து யெகோவாவின் சந்நதி யில்... பலியாக இடக்கடவன். நைவேத்தியமாகும் பொருட்டு அடுக்குந் தோறும் சுத்தகுந்துருவை இடக்கடவாய்.......நித்தியமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுள் அவை மிகவும் பரிசுத்தமான வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திரர்களுக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்திற் புசிக்கக்கடவர்கள். (லேவி. 16 12-13.) யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தகனதூப கலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூப வர்க்கத்தில் தன் கை நிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டு வந்து சாட்சிப் பத்திரத்தின் மேலிருக்கும் கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூப வர்க்கத்தைப் போடக் கடவன். (லேவி. 24. 1-4) யெகோவா மொசேயை நோக்கி நித்தமும் விளக் கேற்றும்படிக்கு இஸ்ரவேலர் இடித்துப்பிழிந்த சீதவிருட்சத்தின் சுத்தமான எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளை யிடு. ஆரோனானவன் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலம் தொடக்கம் விடியற்கால பரியந்தம் யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் விளக்கு ஏற்றக்கடவன்; (எண் 8. 1-4) யெகோவா மொசேயை நோக்கி ஆரோனுக்கு நீ விளக்கேற்றும்போது ஏழு தீபமும், கிளைவிளக்குத் தண்டுகளுக்கு நேரே ஒளிகொடுக்க வேண்டுமென்று சொல் என்றார். (நாளா 15. 15-16) யெகோவாவின் வாக்கின்படி, மொசே கட்டளை யிட்ட பிரகாரம் தேவனுடைய பெட்டியைத் தண்டோடும் தங்கள் தோளின் மேல் எடுத்துக்கொண்டு வந்தார்கள்; தங்கள் சகோதரரைத் தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க ஆனந்தக் கூத்துடன் உரத்த சத்தமாய்ப் பாடும்படி ஏற்படுத்தும்படி தாவீது கட்டளை யிட்டான் (மேற்கூறியபடி அதி. 2.). ஊது கொம்போடும், பூரிகைகளோடும், கைத்தாளத்தோடும், தம்புருவும், கின்னரமும் முழங்க இஸ்ரவேலரனை வரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். (எண். 8-10) உங்கள் ஆனந்த தினத்திலும், உற்சவ நாளிலும் மாசாரம் பங்களிலும் உங்கள் தகன பலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தும்போது எக்காளங்களை ஊதவேண்டும். (சங். 18-5) கின்னரத்தி னாலும் கின்னரத்தோடு, கீதத்தினோசையினாலும் யெகோவாவைப் பாடுங்கள். (2. சாமு 6.5) தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் சமஸ்தரும் யெகோ வாவின் சமுகத்தில் தேவதாருவினாற் செய்த கின்னரமும், தம்புருவும், மிரு தங்கமும், வீணையும், கைத்தாளமுமாகிய நானாவித வாத்தியங்களையும் முழக்கினார்கள். (லேவி. 2-3) ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும், பூரணை யும், உற்சவ நாள்களும் புண்ணிய காலங்கள். அந்தக் காலங்களிலே நித்தி யாக்கினியிலே இறைச்சி முதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல் வேண்டும். தங்கள் சங்கற்பத்தின்படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரதமனுட்டித்தல் வேண்டுமென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. (லேவி. 12. 1-5) ஒரு ஸ்திரி கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றால் அசுசியின் நிமித்தம் ருதுமதியைப்போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். பின் அவள் உதிரசுசி நிமித்தம் முப்பத்து மூன்றுநாள் வரையும் அசுசியாயிருப் பாளாக. சுசிக்கேற்ற தினங்கள் நிறைவேறுமளவும் எந்தப் பரிசுத்த வஸ்து வையும் பரிசிக்கவும் பரிசுத்த ஸ்தானத்திற் பிரவேசிக்கவும் கூடாது. (நாளா. 15. 19-24) ருதுமதியான ஸ்திரி தன் சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழு நாள ளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனொருவனோ அவன் சாயங்கால பரியந்தம் அசுசியாகவிருப்பான். அவள் அசுசியாயிருக் கையில் அவள் படுத்த எந்தப் படுக்கையும் அவளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும்.” 1ஆசாரியபிடேகம், விரதம் அனுட்டித்தல், மரண, செனன தீட்டுக் காத்தல், ஆலயங்களில் கிரியைபுரிதல், தீயில் பலியை இடுதல், இவையும் இவை போன்றனவும் தமிழர் ஆரிய மக்களிடமிருந்து கற்றுக்கொண்டன வல்ல வென்பதற்கு மேற்காட்டியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பழைய தமிழ்நாட்டு வழக்குகளையே நம்மவர் தவறாக ஆரியக் கொள்கை களெனக் கருதி வருகின்றனர். சமயத்தின் அகவளர்ச்சி இதுகாறும் கூறியன சமயத்தின் புறவளர்ச்சி முறைகள். சமயம் இன்னொரு வகையிலும் வளர்ச்சியடைவதாயிற்று. அதனை அகவளர்ச்சி எனக் கூறலாம். மக்கள் இவ் வுலகத்தையும், தம்மையும் ஒருங்கே இயக்கும் மேலான ஒரு பொருளையும்பற்றி ஆராயத் தலைப்பட்டனர். அவர்கள் அம் மேலான பொருள் தமது சிந்தைக்கு வராததென்றும் அதுவே எல்லாப் பொருள்களையும் இயக்குகின்றதென்றும் கண்டார்கள். ஆகவே அவர்கள் அப்பெரும் பொருளுக்கு ‘உள்ளத்தைக் கடந்தது’ என்னும் பொருளில் கடவுள் என்றும், எல்லாவற்றையும் இயக்குவது என்னும் பொருளில் இயவுள் என்றும் பெயர்களை இட்டு வழங்கினர். இப் பெயர்கள். தமிழில் மிகப் பழமையுடையன. மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள் என்னும் பெயர் இருத்தலை ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார்.1 மொகஞ்சொத ரோவிற் காணப்பட்ட திருவுருவம் ஒன்று, கடவுள், பசுபதி என்னும் கருத்தை விளக்கா நிற்கின்றது. அவ்வுருவம் யோகத்திலமர்ந்திருக்கும் திருக்கோலத் துடனுமுள்ளது.2 இதனால் அக் கால மக்கள் முப்பொருள் உண்மைகளை யும், சிந்தையையடக்கிச் சும்மாவிருக்கின்ற யோகமுறைகளையும் நன்கு அறிந்திருந்தார்களென்பன தெற்றெனப் புலப்படும். மற்றைய நாடுகளில் இவ் வுண்மைகள் அறியப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் காணப்பட வில்லை. தமிழ் மக்களின் சமய அகவளர்ச்சி மிக உயர்நிலை பெற்றிருந்தமை யினாலேயே அவர்கள் புதிதாக வந்த ஆரிய மக்களின் சமயக்கொள்கை களுக்கு உடம்படாராயினர். ஆரியருக்கும், தாசுக்கள் என அவர்களால் இழித்துக் கூறப்பட்ட தமிழர்களுக்குமிடையில் நேர்ந்த போர்களுக்கு முக்கிய காரணம், தாசுக்கள் ஆரியர் தெய்வங்களை வழிபட மறுத்ததோடு அவர்கள் வேள்விகளையும் வெறுத்தமையேயாகும். இராவணன் ஆதியோர் வட நாட்டு முனிவர்கள் உஞற்றும் வேள்விகளுக்கு இடையூறாய் நின்று அவை களை அழித்து வந்த வரலாறும் இராமாயணத்திற் கூறப்படுகின்றது. ஆரியர், இந்தியாவை அடைந்தபோது உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்திருக்கவில்லை. மறுபிறப்பைப் பற்றியே வேதங்கள் அறியா என்று முன் காட்டப்பட்டது. வேதமதம் தத்துவக் கொள்கை (Philosophy) இல்லாத மதம். ஆரியமக்கள் இந்திய நாட்டிற் குடியேறிய காலத்தில் ஆரியர் தமிழர் என்னும் இரு கூட்டத்தின ரும் கலந்து ஒன்றுபட்டனர். அக் காலத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் ஆரியர் ஆரியரல்லாதார்களின் கலப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் உண்டாயிருக்கவில்லை.3 அக் காலத்தில் தமிழ் மக்களின் கொள்கைகள் பலவற்றை ஆரியமக்கள் பின்பற்றலாயினர். அவற்றுள் காட்டிற் சென்று தவஞ்செய்தலாகிய வழக்கு ஒன்று. காட்டிற் சென்று தவஞ்செய்தலைப்பற்றி இருக்குவேதத்திற் காணப்படவில்லை என ஆர். சி. தத்தர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ் வழக்குத் தமிழர்களுடையதே என்று நன்கு துணிதும். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் 1சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” (தொல். கற்-51) என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் இதனை வலியுறுத்தும். உபநிடதங்கள் உபநிடதங்களே தமிழர்களின் பண்டைமறைகள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட்டது. ஆரியப் பிராமணர்களுட் சிலர் உண்மைஞானங் களை அறியும் தாகம் உடையவர்களாய் இடங்கள்தோறும் அலைந்து திரிந்தனர். இவ்வாறு திரிந்த யாக்ஞவல்கியும் அவருடன் சென்ற மற்றைய பிராமணர்களும் விதேக நாட்டரசனாகிய சனகனைக் கண்டார்கள். யாக்ஞ வல்கி சனகனிடத்தில் மாணாக்கனாக அமர்ந்து உண்மை ஞானத்தைப் பயின்றார். இதன்பின் பிராமணர், தாம் முன்னொருபோதும் அறிந்திராத உண்மைஞானங்களை அரசமரபினரின் பாதங்களின்கீழ் மாணாக்கராயிருந்து பயின்றனர். அதன்பின்பே ஆரியருடைய மதம் தத்துவக் கொள்கையுடைய தாக மாறிற்று. வின்ரணிச்2 என்னும் அறிஞர் உபநிடதங்களைப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பதின் சுருக்கம் பின்வருமாறு: “உபநிடதஞானம் அரசர்களிடம் மாத்திரமன்று, பெண்களிடமும் ஐயமான குலத்தவர்களிடையும் இருந்தது. பிராமணன் மாத்திரம் ஆசிரிய னாக அமர்ந்து மூவருக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என வற்புறுத்தி ஆரியர்களுடைய நீதி நூல்கள் கூறுகின்றன.3 ஆனால் அரசரும் அரசர் குலத்தவர்களுமே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தனர் என்றும், அவர்க ளிடமிருந்தே பிராமணர் அவ்வறிவைப் பயின்றனரென்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. அரசர் அவ்வாறு அளித்த ஞானம் மறுபிறப்புத் தொடர்புடை யது என்று கூறப்படுகின்றது. இஞ்ஞானம் பிராமணர் சிறிதும் அறியாதது. உபநிடத மென்பதற்குக் கிட்ட இருப்பது என்று பொருள். ஆசிரியன் ஒருவ னிடத்தில் சில மறைவான உண்மைகளைப் படித்தற்கு மாணாக்கனாயிருத் தல் என இது பொருள்படும். அவ்வாறு கொடுக்கப்படும் ஞானம் மறை (இரகசியம்) எனப்பட்டது. உபநிடதங்கள், அம்மறையைத் தகுதியில்லாதவர் களுக்கு அளித்தல் கூடாதென வற்புறுத்துகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, இம் மறையைத் தந்தை தன் மூத்த புதல்வனுக்கு அல்லது உண்மையான மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ் வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந் தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக் கனாக அமர்ந்து பலமுறை வருந்திக் கேட்டபோது இஞ்ஞானம் வெளி யிடப்பட்டதென உபநிடதங்கூறுகின்றது.” உபநிடத காலத்தை ஆராய்ச்சி யாளர் பலவாறு கூறுவர். 1றனேட் என்பார் உபநிடத காலம் கி.மு. 1200க்கும் கி.மு. 600க்கும் இடையில் எனக் கூறுவர். இது காறும் மறைவாக மறை என்னும் பெயருடன் நிலவிய தமிழர்களின் உண்மைஞானங்கள் அவ் வாரிய மக்கள் வாயிலாக உபநிடதம் என்னும் பெயருடன் வெளிவரலாயின. அக் காலத்திலேயே சிவவழிபாடு ஆரியருக்குள் தலைமை பெற்றிருந்தது. ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுளும் சிவனும் ஒருவராகக் கருதப் பட்டனர்.2 உபநிடதங்கள் உயிர், உலகம், இறைவன் என்னும் முப்பொருள் களின் உண்மைகளை ஆராய்கின்றன; யோகத்தைப்பற்றிக் கூறுகின்றன; ஓங்காரத்தை உச்சரிக்கும்படி வலியுறுத்துகின்றன; மாயை உள்பொருள் எனக் கொள்கின்றன. இவைகளிற் கூறப்படும் உண்மைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாமக்களுக்கும் பொதுவானவை.1 உபநிடதஞானம் ஞாயத்துக்கு உட்பட்டது; வேதங்களுக்கு மாறானது.2 உபநிடதங்களில் கூறப்படும் பிரணவம் தமிழுக்கே உரியது. வட மொழியில் எ, ஒ என்னும் குறில்கள் இல்லை. எந்த மொழியில் எ, ஒ என்னும் குறில்கள் காணப்படுகின்றனவோ அம் மொழிக்கே ஓ, ஏ என்னும் நெடில்களும் உரியன. இம் முறையைக்கொண்டு, பந்தாக்கர், பாலிமொழி யில் எ, ஓ என்னும் குறில்கள் காணப்படுகின்றமையின் மகதநாட்டில் தமிழ் வழங்கியதென்றும், எகர ஒகரங்கள் தமிழுக்கே உரியனவென்றும் காட்டி யுள்ளார். சாங்கியம் உபநிடதங்களுக்குப்பின் தோன்றியது கபிலரின் சாங்கிய நூல். சாங்கிய மதக்கொள்கை ‘சத்காரியவாதம்’ எனவும் வழங்கும். இது மாயை உள் பொருளெனக் கூறுகின்றது; வினை, வினைப்பயன்களை வலியுறுத்து கின்றது. இது கடவுளைப்பற்றி யாதும் பேசவில்லை. ஆகவே, இது நீரீச்சுர சாங்கியம் எனவும்படும். கபிலரின் நூற்கொள்கைகளுக்கு அடிப்படை உபநிடதங்கள். சாங்கிய நூல் கி. மு. 760 வரையிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. கிரேக்க தத்துவசாத்திரியாகிய பதகோரஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து கபிலரின் சாங்கியநூற் கருத்துக்களைப் பயின்று அவற்றைக் கிரீசில் வெளியிட்டார் எனக் கருதப்படுகின்றது.3 புராணங் களிலே கபிலரின் வேள்விக் குதிரையைப் பிடித்துக்கட்டிய கபிலர் ஒருவர் காணப்படுகின்றார். அவர் தமிழ்மரபினர் என ஒல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார்.4 கௌதமபுத்தர் கபிலர்மரபில் வந்தவரென்றும், அவர் தமிழ்மரபினரென்றும் கருதப்படுகின்றனர்.1 சாங்கியநூல் ஒவ்வொன் றையும் நியாயவாயிலாக ஆராய்கின்றது. சாங்கியம் வேதமார்க்கத்துக்கு முற்றும் முரண்பட்டது. பௌத்தம் கபிலருக்குப்பின் தோன்றியது புத்தமதக்கொள்கை. இம் மதக்கொள் கைக்கு அடிப்படை உபநிடதங்களும் சாங்கியநூலும். புத்தமதம் மாயையை இல்பொருளெனக் கூறும். ஆகவே, அம் மதக் கொள்கை சூனியவாதம் எனப்படும். சாங்கியம், புத்தம் முதலிய மதங்கள், உபநிடதக் கொள்கைகள் எவ்வாறு சிறிது சிறிதாக மாறுபட்டு வெவ்வேறு மதக் கொள்கைகளாக மாறியுள்ளன என்று காண்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். புத்தமதம் வேத மதத்துக்கு மாறானது. புத்தரின்ஞானம் தமிழர் ஞானத்தை அடிப்படை யாகக் கொண்டதென மேல்நாட்டு ஆசிரியர் தாமும் எளிதிலறிந்து கூறியுள் ளார்.2 ஆல்டன்பேக் என்னும் ஆசிரியர் உபநிடதங்கள் புத்தருக்கு எவ்வாறு வழிகாட்டிகளாயிருந்தனவென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்.3 யோகம் குரு மாணாக்க முறையில் நெடுங்காலம் வந்தனவும் உபநிடதங் களிற் கூறப்பட்டனவுமாகிய யோகநூற் பொருள்களைப் பதஞ்சலி முனிவர் திரட்டி (கி.மு. 150) யோக சூத்திரங்களாகச் செய்தார்.4 யோகம் என்பது மனத்தை ஓரிடத்தில் நிறுத்திச் செய்யப்படும் தியானம். யோகநூலில் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதற்குரிய பயிற்சிகளும் யோகத்தினால் அடையும்பேறும் நன்கு விளக்கப்படுகின்றன. யோகநூலும் நியாய முறையாக உண்மைகளை ஆராய்ந்து. யோகத்தின் முடிவு, பிறப்பை ஒழித்தல். கடவுளை அடைதல் எனக் கூறுகின்றது. ஆதலின் இது, ‘ஈசுவர சாங்கியம்’ எனப்படும்.1 யோக நூல் பிரணவத்தை உச்சரிக்கவேண்டும் என வற்புறுத்துகின்றது. மனம் சார்ந்ததன் தன்மையை அடைகின்றதென்று கூறுகின்றது;2 பற்றை அறுக்க வேண்டுமென மொழிகின்றது; அப் பற்றை அறுப்பதற்கு ஈசுவரனைப்பற்ற வேண்டுமென நவில்கின்றது. கடவுள் பத்தி, யோகங்களிற் சிறந்ததென அறைகின்றது.3 அகத்தூய்மை புறத்தூய்மைகளைப் பற்றிப் பேசுகின்றது. நல்லவர் இணக்கத்தைப்பற்றிச் சாற்றுகின்றது; மனம் உயிரின் அகக் கருவி யாதலைப்பற்றிப் புகல்கின்றது. சாங்கியநூலும் யோகநூலும் உயிர்கள் பல எனக் கொள்கின்றன.4 இவ் வகை யோகவழிகளை எல்லாம் தமிழ்மக்கள் மிகமிக முற்பட்ட காலத்திலேயே அறிந்திருந்தார்கள் என்பது மொகஞ் சொதரோவிற் காணப்பட்ட திருவுருவங்களால் நன்கு தெளிவுறுகின்ற தென்பது முன்னோரிடத்திற் கூறப்பட்டது. யோகமும் ஆலய வழிபாடும் யோகப் பழக்கத்துக்கு ஒரு வடிவை மனத்தில் நிறுத்துதல்வேண்டும். அல்லாவிடின் மனம் ஓர் இடத்தில் நில்லாது. ஆகவே, குணங்குறியில்லாத கடவுளை ஒரு வடிவம் கொடுத்து நினைக்க வேண்டியதாயிற்று. அதற்கு ஆலயங்களிலுள்ள திருவுருவங்கள் பயனளித்தன. சமய தீக்கை, மந்திரங் களை நூற்றெட்டு ஆயிரத்தெட்டு என்று உச்சரித்தல் முதலியன. அவ்வாறு செய்யுமிடத்து மணிகளை எண்ணுதல் மூச்சுப்பயிற்சி புரிதல் போல்வன யோகப் பயிற்சியின் முதற்படிகளாகும். இப்பொழுது, ஆலய பூசை அரசனுக்குச் செய்யும் வழிபாடுபோல் கருதப்படாது, யோகநிலையிற் கை வந்தார் ஒருவர் இவ் வுலக மக்கள் எல்லோரும் தீவினைகளினின்றும் நீங்கி நல்வழிப்படவேண்டுமென நினைந்து கடவுளை நினைப்பது எனக் கருதப் படுவதாயிற்று. இது பரார்த்த பூசை (பிறர்பொருட்டுச்செய்யும் பூசை) எனப்படலாயிற்று. “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.” என்றவாறு வேண்டுதல் பரார்த்த பூசைக்கு எடுத்துக்காட்டாகும். யோக நிலை கைவரப்பெறாத பார்ப்பானையே திருமூலர் “பேர்கொண்ட பார்ப்பான்” எனக் கூறினார் ஆதல்காண்க. யோகம் கைவந்த பெரியோர் நினைப்பன நினைத்தபடி ஆகும். என மக்கள் நம்பினார்கள்.1 சித்தர்கள் எனப்பட்டோர் யோகத்தின் மகிமையி னால் பல புதுமைகளைச் செய்தோர்களேயாவர். எல்லாச் சமயத்தவர்களும் தத்தம் சமய முதல்வர்கள் புதுமைகளை விளைத்தார்களெனக் கூறுகின்றனர். இறைவனிடத்தே, உள்ளம் படிந்து நிற்கும் உயிர்களிடத்து இறைவனின் இறைமைக் குணங்கள் சில உண்டாவது இயல்பு எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறும். மருத்துவம் சோதிடம் போன்ற பெரிய உண்மைகள் யோகி களால் தமது தெளிந்த உள்ளக்காட்சியிற் கண்டு கூறப்பட்டனவென்று நம்பப்படுகின்றன. திருமந்திரம் தமிழ்மக்களிடையே வழங்கிய உண்மை அறிவுகள் எல்லாவற்றின் திரட்டாக வெளிவந்துள்ளது திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூல். இந் நூலிற் காணப்படும் அகச்சான்றுகளால் இதிற் கூறப்படும் பொருள்கள் தமிழ்மக்களிடையே வழங்கியவை என்பது தெளிவாகின்றது. பற்றறுத்தல், அன்பு கனிந்து இளகிய உள்ளத்தர் ஆதல், கடவுளிடத்தில் பத்தி செய்தல் போன்றனவே முத்திக்கு வழி என இவர் கூறுவர். எல்லா ஞானங்களும் பத்தியில் அடக்கம். “என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை எய்தவொண் ணாதே” “அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பம் ஆசை விடவிட ஆனந்த மாமே” (திருமந்திரம்) “பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (குறள். 350) திருமந்திரம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. சித்தர் நூல்களிலும் திருமந்திரத்திற் கூறப்படும் உண்மைகள் காணப்படுகின்றன. திருமுறைகள் தமிழ்மக்களின் சமயக் கருத்துக்கள் திருமுறைகளிலும் ஆழ்வார் பாடல்களிலும் ததும்பிக்கிடக்கின்றன. தோத்திரங்களுடன் அவை மிடைந்து கிடத்தலின் அவை சாத்திரமாகப் பயன்படா. ஆயினும் சாத்திரங் களுக்கு மேற்கோள் அத் தோத்திரங்களே. சித்தாந்த நூல்கள் பண்டுதொட்டுத் தமிழ்மக்களிடையே ‘மறை’ எனப்பெயர் பெற்று வந்த சமய தத்துவக்கொள்கைகள் எல்லாவற்றையும் தொகுத்து முறைப் படுத்திச் செய்யப்பட்டனவே சைவசித்தாந்த நூல்கள் பதினான்கும்.1 “ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த-சாரங் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது” (குமரகுருபரர்) வேதாந்தம் - உபநிடதம். வீடு தமிழ்மக்கள் வீடு எனக்கொண்டது மெய்யுணர்வினாற் பற்றற்றுத் திருவருட் பண்புறுதலேயாகும். “பரனைநினைந்திம்மூன்றும் விட்டது பேரின்பவீடு” (ஒளவையார்). தொல்காப்பியத்திலும் வீடுபெற நிற்றல் துறவு எனக் கூறப்பட்டது. திருக்குறளில் நீத்தார் பெருமையும் இதனையே குறிக் கின்றது. சைவசமயத்தின் முடிவு, “அவனருளாலே அவன்றாள் வணங்கி” அவனை அடைதல். “காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம் போற் காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா வன்பின் அரன்கழல் செலுமே” (சி. போ. -10சூ.) சிவ வழிபாட்டின் தொன்மை சிவ வழிபாடு அறிய முடியாத பழைமையுடையது. சிந்துவெளிப் புதைப்பொருள் ஆராய்ச்சி நிகழ்த்திய சேர்யோன்மார்சல் என்பார் சிவ மதத்தின் பழைமை கற்காலத்துக்கும் அப்பாற் செல்கின்றதென்றும், இப் பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்ட தென்றும் கூறியுள்ளார்.1 பனேசி என்பார், “மொகஞ்சொதரோ அரப்பா என்னுமிடங்களிற் கிடைத்த, களிமண்ணாற் செய்யப்பட்ட உருவங்களும், கடவுள் வடிவங்களும் இலிங்கங்களும் நாம் இதுகாறும் எண்ணியதை விடத் துர்க்கை சிவ வழிபாடுகள் மிகப் பழைமையுடையனவென்று அறி விக்கின்றன” எனக் குறிப்பிட்டனர்.2 பழைய சமயநூல்கள் வடமொழியில் எழுதப்பட்டமைக்குக் காரணம் முன்னோரிடத்திற் கூறியாங்குத் தமிழ்மக்கள் வீட்டு நெறிக்குரிய உண்மை ஞானங்களைக் குருமாணாக்கர் முறையிற் பயின்றுவந்தனர். இவ் வுண்மைகளைத் தமிழர்வாயிலாக அறிந்த ஆரியமக்கள் சிலர் அவற்றை மற்றைய தம் குழுவினர்களுக்கு முணர்த்துவான் விழைந்து, அவைகளை அவர்கள் படித்து விளங்கக்கூடிய மொழியில் வெளியிட்டனர். வடக்கி லுள்ளவர்களின் மொழியைத் தெற்கிலுள்ளவர்களும் அறிந்திருந்தனர். தெற்கிலுள்ளவர்கள் தம்மிடத்திலுள்ளனவும் வடக்கிலுள்ளவர்கள் நன்கு அறியாதனவுமாகிய உண்மைப் பொருள்களை அவர்கள் கண்டு வியக்கு மாறும் நூல்கள் இயற்றினர். இது, இக் காலம் திருக்குறள், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகம் போன்ற பொருள்களைத், தமிழ் அறியாத மேல்நாட்டு அறிஞரும் வடநாட்டு அறிஞரும் கண்டு வியக்குமாறு தமிழ் அறிஞர் ஆங்கிலமொழியில் வெளியிட்டு வருதல் போன்றதோர் வழக்கு. ஆங்கில மொழியில் எழுதப்படும் நூல்கள் எல்லாம் ஆங்கிலமக்கள் எழுதியனவாகா தனபோல வடமொழியில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் வடவர் எழுதியன வாகா. வடமொழி வடக்கே உள்ளவர்களது என்று கருதப்படினும் தெற்கே உள்ளவர்களே அதனையும் நன்கு கற்று அம் மொழியில் அரிய நூல்கள் இயற்றி அதனையும் வளம்படுத்தினர். போதாயனர், காத்தியாயனர், சாணக்கியர், இராமானுசர், சங்கரர், நீலகண்டர் போன்று வடமொழியிற் சிறந்த நூல்கள் செய்து அம் மொழியை வளம்படுத்தியவர்கள் யாரு மில்லை. கபிலரும் அவர்மரபில் வந்த சித்தார்த்த புத்தரும் தமிழர்களே என்பது முன்பு விளக்கப்பட்டது. பழைய கட்டிடக்கலை இருக்கின்றது; எந்தத் தேசத்திற் காணப்படும் பழைய கட்டிடங்களையும் நோக்கி, அவை இன்ன நாட்டுக் கட்டிடக்கலை அமைப்புள்ளன என, அந் நூல் அறிஞர் எளிதில் அறிந்துகூற வல்லுநராவர். அதனை ஒப்பவே எம்மொழியில் எழுதப்பட்டிருப்பினும் நூல்களில் பொருளையும் போக்கையும்கொண்டு அவை எவருக்குரியன என எளிதில் நிச்சயம் செய்யலாம். தமிழ்த்தெய்வங் களுக்கு ஐயர்மார் வடமொழியைச் சாற்றியே பூசை செய்கின்றார்கள் எனின், இது வடமொழியில் நம்பிக்கை வைத்த பிற்கால அரசர்களின் ஆணையால் உண்டான வழக்கு. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” அரசினர் தலையீட்டி னால் பெரிய மாற்றங்கள் எளிதில் உண்டாகும். இதற்குச் சான்று தாழ்ந் தோரும் தாழ்த்தப்பட்டோரும் ஆலயங்களிற் புகுத்தப்படுவது ஒன்று; இந்தி கட்டாயக் கல்வியாக வந்தது மற்றொன்று. சமயச் சொற்கள் சமயத் தொடர்பாகத் தமிழில் வழங்கும், ஆணவம், கன்மம், மாயை, பதி, பசு, பாசம் போன்ற சொற்களும் பிறவும் வடமொழிச் சொற்க ளெனப் பெரும்பாலும் கருதப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களில் ஒருசாரார் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பட்டுள்ள சொற்களை மாத்திரம் தூய தனித் தமிழ்ச் சொற்களாகக்கொண்டு ஏனையவைகளைப் பிறமொழிச் சொற்க ளென ஒதுக்கிவருகின்றனர். மேல்நாட்டு மொழிகளில் எழுதப்படும் நூல் களில் ஒவ்வொரு கலைக்கும் உரிய தனிச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப் பட்டுள்ளன. இம் முறை எல்லாமொழியினருக்கும் பொது. யாப்பருங்கல விருத்தியில், ஆடை நூல் அணிகலநூல் என, எத்தனையோ துறைகளைத் தனித்தனி விரித்துக்கூறும் பலநூல்கள் தமிழில் நிலவின என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளையும் விளக்க எழுந்த தனிநூல் களில் அவ்வத்துறைகளுக்குரிய தமிழ்ச்சொற்கள் (கலைச்சொற்கள்) ஆளப் பட்டன என்று கூறுதல் கற்பனை எனல் சாலாது. பற்பல காரணச்செறிவால் பழந்தமிழ் இலக்கியங்கள் சில நீங்கலாக ஏனைய மாண்டொழிந்தனவென்ப தும் கற்பனையன்று. இப்பொழுது பழந்தமிழ் நூல்களிற் காணப்படுவன பெரும்பாலன இலக்கியச் சொற்களே. இவ் விலக்கியச் சொற்களை மாத்திரம் பழந்தமிழ்ச் சொற்கள் எனக்கொண்டு அவையல்லாத பிறவற்றைப் பிற மொழிச் சொற்கள் என ஒதுக்கிவிடுதல் நியாயமன்று. இன்றும், ஓடஞ்செய் வோர், ஆடைநெய்வோர், சிற்பவேலைபுரிவோர், பானைசட்டிவனைவோர் போன்று ஒவ்வொரு தொழில்புரிபவர்களிடையே அவ்வத்தொழில்களுக் குரியனவும் யாம் அறியாதனவுமாகிய பல தமிழ்ச் சொற்கள் வழங்குதலைக் காணலாம். யோவுடுபிறியில் (Jouveau Dubreuil) என்னும் பிரான்சியர் எழுதிய தென்னிந்தியக் கட்டிடக்கலை என்னும் நூலில் கட்டிட உறுப்புகளை உணர்த்தும் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. அவை நமக்குப் புதியனவாகத் தோன்றுகின்றன. ஒரு கலை எந்த மக்களிடத்தில், ஆதியிற் றோன்றி வளர்ச்சியடைகின்றதோ, அம் மக்களின் மொழியில் அதற்குரிய கலைச்சொற்கள் பல தோன்றிவழங்கும். அக்கலை இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு அது அங்கு வளர்ச்சியடையுங்கால் அக் கலைச் சொற்கள் அயல் மொழிகளில் கருத்திற்கேற்ப மொழிபெயர்த்து அல்லது, அம் மொழிகளுக்கேற்ற உச்சரிப்பு முறையில் திரித்து வழங்கப்படுதல் இயல்பு. முற்காலத்து இந்தியாவினின்றும் எகிப்து, கிரீசு, பாபிலோன், பாலஸ்தின் முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட குரங்கு, மயில், அரிசி, இஞ்சி, கருவா, தந்தம், திப்பிலி, ஆடை முதலியவைகளின் பெயர்கள் அந் நாட்டு மொழிகளில் திரித்து வழங்கப்பட்டமையே1 இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஆரியமக்கள் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளினின்றும் வந்தோர். இவர்களது மொழியும் பழக்கவழக்கங்களும் கிரேக்க, உரோம, தியுதோனிய, சிலாவிய மக்களின் மொழிக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இனமுடையன. மக்கள் தம்மைச் சூழ்ந்துள்ள பிறமக்களின் சேர்க்கைக் கேற்பப் பழக்கவழக்கம், மொழி, குணம் ஆகியவற்றால் மாறுபடும் இயல் பினர்; “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு-இனத்தியல்ப தாகு மறிவு” (குறள். 452). இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொதுவாகிய சொற்களும் பழக்க வழக்கங்களும் பலவுண்டு. புதிதாக வந்த ஆரியமக்கள் புதிதாகக் கை யாண்ட பழக்கவழக்கங்களையும் புதிய சொற்களையும் அறிந்துகொள்ள வேண்டுமானால் இந்து ஐரோப்பிய மக்களுக்குமாத்திரம் பொதுவாயுள்ள அவைகளை இந்து ஆரிய மக்களிடையே காணப்படுவனவற்றிலிருந்து கழித்துப் பார்த்தல்வேண்டும். இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொது அல்லாதனவெல்லாம் இந்திய ஆரிய மக்களுக்கு, இந்திய பூர்வமக்களிட மிருந்து கிடைத்தனவே. ஆரிய மக்களுக்குள்ளவற்றை ஆரியருக்கு இல்லாதவற்றினின்று பிரித்தறிய வேண்டுமாயின் இம் முறையைக் கையாள வேண்டுமென ஆராய்ச்சி நுண்ணுணர்வு படைத்தார் நுவல்கின்றனர்.2 ஆரியர் முன் வாழ்ந்த நாடு மிக்க குளிர் உடையது. அவர்கள் புதிதாக வந்தடைந்த மத்திய வெப்பதட்ப நிலையுடைய நாட்டில் தாம் முன் அறிந்திருந்த குளிர்தேசத் தாவரங்களையும் பறவைகளையும் விலங்கு களையும் பிறவற்றையும் காணமுடியாது. அவர்கள் இந்தியநாட்டை அடைந்தபின் தாம் புதிதாக அறிந்த பொருள்களுக்கு, ஆதி மக்களின் மொழிகளில் வழங்கிய பெயர்களையே இட்டு வழங்கினார்கள் என்பதில் ஒரு புதுமையும் இல்லை. இவ்வாறு கொல் (Kol) மொழியினின்றும் வேத மொழியிற் சென்று ஏறியுள்ள பல சொற்களை பிறிஸ்லுஸ்கி என்பார், ‘ஆரியருக்கும் தமிழருக்கும் முற்பட்ட இந்தியா’ என்னும் நூலில் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். கொண்டர், முண்டர், சாந்தால், எனப்படும் மக்கள் தமிழரின் பிரிவினரே யென்றும், அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் வழக்கு நின்றுபோன பழந்தமிழ்ச் சொற்களென்றும் ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். இதனை முண்டர் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சத்தேசி என்பார் இருக்கு வேதத்திற் காணப்படும் அணு, அரணி, கபி, கருமாரா, காலம், கானம், நானா (பல) நீலம், புட்பம், பூசான பல (பழம்), பீசம், மயூரம், இராத்திரி, உருவம் முதலிய பல தமிழ்ச்சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார்.1 தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் சென்றபோது, முத்தா (முத்தா) மீனா (மீன்) என்பனபோலச் சிறிது வேறுபாடுகளை அடைந்தன. இவ்வாறு கலந்த பல சொற்கள் மேலும் மேலும் திரிந்து உருத்தெரியாவகை கரந்தனவாயினும், மொழி ஆராய்ச்சியில் அச் சொல் மூலங்கள் தமிழே என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் வகைச் சொன்மூலங்கள் பலவற்றை யாழ்ப்பாணம், வண. சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டுள்ள தமிழ் ஒப்பியல் அகராதியிற் காணலாகும். ஐரோப்பிய ஆரியர் இந்து ஆரியர்களின் சமயங்கள் ஒரே வகை யினவல்ல. இப்போதைய அல்லது வேதகால ஆரியமதத்திலிருந்து இந்து ஐரோப்பியருக்குப் பொதுவான சமயக் கொள்கைகளை கழித்துப் பார்ப்பின் எஞ்சி நிற்பன தமிழர்களுடையனவே. இம் முறையைக்கொண்டு வேத காலத்திலேயே தமிழர் சமயக்கொள்கைகள் ஆரிய மதத்தைத் தன் வண்ண மாகத் திரிக்கத்தலைப்பட்டுவிட்டன வென்பது தெளிதல்கூடும். மொகஞ் சொதரோ காலத்தில் தமிழருக்கு ஆலயங்களும் ஆலயக் கிரியைகளும் இருந்தன. ஆலயங்கட்டும் விதிகளையும் ஆலய வழிபாட்டையும் பற்றிக் (கிரியைகள்) கூறும் நூல்கள் ஆகமம் எனப்பட்டன. வேதங்களுள் ஆகமக் கொள்கைகள் (கிரியைமுறைகள்) கலந்துள்ளனவென்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். ஆகமக் கொள்கைகள் வேதங்களில் முகிழ்த்து ஆரணி யகங்கள் காலத்தில் அரும்பி மொட்டாகிப் பிராமண காலத்தில் முறுக்கவிழ லாயின.1 பிராமணக் கிரியைகள் ஆகமங்களைப் பின்பற்றினவையே. ஆரணியகங்கள் காலத்து ஆகமங்களைப்பற்றிய புகழ் இருந்தது.2 தமிழர் உள்ளத்திற்றோன்றி மலர்ந்த ஆகமக் கொள்கைகள், உபநிடத ஞானங்கள் என்பனவற்றோடு தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் இருந்தனவென்பது நன்கு உய்த்தறிதும். ‘பண்டை இந்தியாவில் மக்கள் வாழ்க்கை’ என்னும் நூல் எழுதிய பி. தி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், “தமிழர்களின் தொழில், கலைத் தொடர்பாக வழங்கும் சொற்கள் எல்லாம், தமிழ் சமக்கிருதத்தி னின்று இரவல் பெற்றனவல்ல இவ் வாராய்ச்சி நன்றாக ஆராயப்பட்டு முடிவு பெறவில்லை; ஆராய்ச்சியில் இது உண்மையாக முடிதல் கூடுமானது. கலைத் தொடர்பாக வடமொழியில் வழங்கும் சொற்கள் திராவிட மொழியி னின்று கடன்பெற்றவை என்று திரும்பலாம்”3 எனக் கூறியுள்ளார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சமயத்தொடர்பான சொற்கள் நிரம்பக் காணப்படுகின்றன. தாம் கூறும் ஞானங்கள் இத் தமிழ் உலகில் முன்னமே உள்ளன என்பதைத் “தமிழ்மண் டலமைந்தும் தாவிய ஞானம்” “செந்தமி ழாதி தெளிந்து வழிபடு - நந்தி யிதனை நவமுரைத்தானே” எனப் பலவிடங்களிற் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் நூலில் வேதமென வருவது ஆரியமக்களின் பாடல்களெனத் தெரியவில்லை. வேதம் சனகாதி முனிவருக்கு இறைவனாற் கல்லால நீழலின்கீழிருந்து அறிவுறுத்தப்பட்ட தென்பது, பண்டு தொட்டுள்ள தமிழ்மக்களின் ஐதீகம். இறைவன் மௌனமா யிருந்தே வேதத்தை அறிவுறுத்தார் என்பதனால் தமிழர் கூறும் மறை, பாடல் களும் பாடற் றொகுப்புகளுமன்று; தாயுமான அடிகளுக்கு மௌனதேசிகர் அருளியதுபோன்ற உபதேசம். தமிழரின் பண்டைச் சமய ஞானங்களைக் கூறும் திருமந்திரத்தில் வந்துள்ள சமயச்சொற்கள் தமிழ் எனக் கொள்ளலா மெனத் தெரிகின்றது. சைவசித்தாந்தமென்பது தமிழரின் சொந்த உடைமை. சித்தாந்தப்பொருள்களை உணர்த்த வழங்கும் சொற்கள் ஆராய்ச்சியின்றிப் பிறமொழிச் சொற்களென விலக்கற்பாலனவல்ல. தமிழ்ச்சொற்கள் வட மொழியிற்றிரிந்து வழங்கப்பட்டு, அவை மறுபடியும் தமிழில் வேறு உருவத் துடன் புகுந்திருத்தல் கூடும். இதற்கு உதாரணம் சென்னையிலுள்ள அம்பட்டன் பாலமே. ஆதியில் ஹாமில்டன் பாலமெனப்பட்ட இப் பாலம் உச்சரிப்போரது சோர்வினால் அம்பட்டன் பாலமாக நிலவுகின்றது. ஆங்கில மொழியில் அது “பார்பர்ஸ் பிரிட்ஜ்” என வழங்கும். “ஹாமில்டன்” “பார்பர்” (அம்பட்டன்) ஆனதுபோலப் பல தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் புகுந்து தமது உருவத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக் கின்றன என்று யாம் கருதுகின்றோம். “ஆரியமக்கள் இந்தியநாட்டை அடைவதன்முன் தமிழருக்கு, நாகரிகமில்லை; சமயமில்லை; கலைகளில்லை. ஆரியர் வந்த பின்புதான் தமிழர் ஆரியரைப் பார்த்து மெல்லமெல்ல நாகரிகமடைந்து மிருக நிலையி னின்று மேல்நோக்கி வந்தார்கள்” என்னும் பொல்லாத கொள்கை பழைய வரலாற்றாசிரியரிடத்திற் குடிகொண்டிருந்தமையால் அவர்கள் தமிழர் களிடத்துக் காணப்படும் உயர்வுகளெல்லாம் ஆரியமக்களின் சேர்க்கை யால் நேர்ந்தனவென்று குருட்டுத்தனமாகக் குறிப்பிட்டனர். சேர்யோன் மார்சல் என்பவரே (மொகஞ்சொதரோ அழிபாட்டு ஆராய்ச்சிக்கு) ஒரு கணத்துக்குமுன் “தமிழர்கள் ஒரு காலத்தில் நாகரிகமடைந்திருந்தார்க ளென்று இவ்வுலகம் அறியவில்லை” என வியப்புற்றுக் கூறியுள்ளார்.1 வட இந்திய மக்கள் தனி ஆரியரே என்று கருதிவிடுதல் கூடாது. அவர்களிடையே நெருங்கிய திராவிடக் கலப்பு உண்டு. இதனால் அவர் களின் மொழியும் பழக்க வழக்கங்களும் மாறுபட்டன.2 மொகஞ்சொதரோத் தமிழரின் சமயம் ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட ஆயிரத் தெண்ணூறு பட்டையங்களை நன்கு ஆராய்ந்தும், அவைகளில் எழுதப் பட்டவற்றை ஒலிமுறையில் வாசித்தும் அறிந்த உண்மைகள் சிலவற்றை மாதவெளியீடுகள் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார். அவற்றின் சுருக்கமோ விரிவோ இதுகாறும் தமிழில் வெளிவந்தில. பம்பாய்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் (யூலாய்-1936) அவர் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றைச் சுருக்கி ஈண்டுத் தருகின்றோம். ஒரு பட்டையத்தில் “இறுவன் கொம்மின்னிர்” எனப் பொறிக்கப்பட் டிருக்கின்றது. (கடவுளின்) கொம்பு வாத்தியமூதும் மீனவர் என்பது இதன் பொருள். இன்னொரு பட்டையத்தில் “கோயில் எல்லாக் கடவுள் ஆண்” எனக் காணப்படுகின்றது. ஆலயத்திலுள்ள எல்லாக் கடவுளுக்கும் தலைவர் என்பது இதன் பொருள். இன்னொரு பட்டையத்தில் நாலூரியிருக்கும் கடவுள் “விடுகண்” எனக் காணப்படுகின்றது. விடுகண் என்பது திறந்த கண். கடவுள் இமையா தவர் (“இமையா நாட்டம்” உடையவர்) இக் காலத் தமிழர் ஐதீகத்தோடு இது ஒத்துள்ளது. கடவுள் மக்களுக்கு எல்லா உதவியும் அளிப்பவர் எனவும் அக் காலத்தவர் நம்பினர். இது, “இது உதவு மின் அடு ஆண்” எனப் பொறிக் கப்பட்ட பட்டையத்தால் விளங்குகின்றது. (கடவுள்) உதவி செய்கின்ற மீனவரின் கடவுள் என்பது இதன் பொருள். ஒரு முத்திரையில் மூன்று முகமும் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுமுடைய ஒரு வடிவம் காணப்படுகின்றது. இவ் வடிவைச் சுற்றிப் பல விலங்குகள் இருக்கின்றன. இது, கடவுள் பசுபதி என்னும் கருத்தை விளக்க அமைக்கப்பட்ட வடிவம் எனக் கருதப்படுகின்றது. பல குலக் குறி களை (Totem) யுடைய நாட்டு மக்கள் எல்லாரும் வழிபடும் கடவுள் என்பதை விளக்க இது கற் சிற்பியால் வெட்டப்பட்டதாகலான். ஓரிடத்தில் கடவுளின் பெயராக எண்மை என்னும் சொல் காணப்படு கின்றது. இன்னொரு முத்திரை கடவுள் எட்டாக இருக்கிறார் எனக் கூறு கின்றது. கடவுள் மீன் வடிவில் நாட்டில் பல பகுதிகளில் வழிபடப்பட்டார். தலையிலே சூலம் உடைய கடவுள் வடிவங்கள் முத்திரைகளிற் காணப்படு கின்றன. கடவுள் மூன்று கண்ணுடையவரென்று முத்திரைகள் தெளிவாகக் கூறுகின்றன. ஒவ்வொரு கண்ணும் தனித்தனி வழிபடப்பட்டது. பட்டை யங்களில் மூன்று கண் என்பது “மூன்கண்” எனக் கூறப்பட்டுள்ளது. மூன்று கண்ணுடைய பெரிய மீன் என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. தாய்க்கடவுள் மீன் கண்ணி எனப்படுகின்றார். மீன் கண்ணியே மீனாட்சி என இக் காலத்து மருவி வழங்குகின்றது போலும். மேற்கு ஆசியா நாடுகளிலும் கடவுளரின் தலையில் இரண்டு கொம் புகள் காணப்படுகின்றன. அரசரும் கொம்புகளை அணிந்தனர். கொம்புகள் மேலான அதிகாரத்தைக் குறிப்பன வென்றும் அவை ஞாயிற்றின் கதிர் களின் குறிகளென்றும் கருதப்படு கின்றன. “The husband God like Baal of Tarsus was identified by the Greeks with Zeus and Lucian tells us that the resemblance of his image to the images of Zeus was in all respects unmistakable. But his image unlike those of Zeus was seated upon bulls. A similar God of thunder and lightning was worshipped from early times by the Babylonians and Assyrians. His image is represented.........wearing a cap with two horns - Golden Bough. விடுகண், எண்மை, ஆண், கடவுள், பேர்ஆண், தாண்டவன் என்பன கடவுளின் பெயர்களாக மொகஞ்சொதரோ மக்களால் ஆளப்பட்டன. நாலு மரங்களின் இடையிலுள்ள தாண்டவன் என ஒரு பட்டையங் கூறுகின்றது. மொகஞ்சொதரோ மக்கள் இலிங்கத்தை வழிபட்டார்கள் என்பது ஐயமின்றி விளங்குகின்றது. மொகஞ்சொதரோ அரப்பா என்னுமிடங்களில் இவ் வகைக் கற்கள் பல கண்டெடுக்கப்பட்டன. மீனவர் இவ் வழிபாட்டை ஆரம்பத்தில் எதிர்த்தார்களெனத் தெரிகின்றது. மீனவர் பிற்காலத்தில் மச்சயர் எனப்பட்டனர். இலிங்கங்களாகிய கடவுளருக்கு வீடுகள் முதலிய மானியங்கள் விடப்பட்டிருந்தன. சுமேரிய மக்களின் மும்மூர்த்திகள் ஆண், அம்மா, என்லில் என்பன. தமிழரின் மும்மூர்த்திகள் ஆண், அம்மன், முருகன். அம்மன் மீன்கண்ணி எனப் பட்டையங்களிற் கூறப்பட்டுள்ளார். பாகம் பெண்ணாயுள்ள வடிவம் (அர்த்தநாரீசுர வடிவம்) காணப்படுகின்றது. இவ் வடிவம் சுமேரியாவிலு முண்டு. கழனிகளின் கடவுள், இடிக்கடவுள், சாக்கடவுள் (யமன்), மீன் கடவுள் என்பன அக்கால மக்களால் வழிபடப்பட்டன. சூலங்கள் ஆலயங் களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடப்பட்டன. ஒரு பட்டையத்தில் பாம்பு மூன்று கண்ணுடையதாகக் கூறப்படுகிறது. சூலத்துக்குப் பதில் கோடரியும் நட்டு வழிபடப்பட்டது. சில பட்டையங்களில் மக்கள் கடவுளின் மூன்று கண்களையும் தியா னித்தார்கள் எனக் கூறப்படுகின்றது. புனிதமுடைய கடவுள் திரு உருவங் கள்மீது தண்ணீர் அல்லது பால் தெளிக்கப்பட்டது. (அவ் வழக்கு இன்றும் காணப்படுகிறது). துதி பாடுதல், கடவுளின் பெயரை உச்சரித்தல், (செபித்தல்) நேர்த்திக்கடன் செய்தல்போன்ற வணக்கங்களும் இருந்தன. அரசன் உழவன் எனப்பட்டான். அரசனே ஆலயங்களில் ஐயராகவிருந்தான். விருந்தே அக் கால விழாவாகத் தெரிகிறது. (பொங்கல், குருபூசை, சங்காபிடேகம், விழாக்கள் என்பவைகளில் இன்றும் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது.) ஒவ்வொரு கிராமத்திலும் வைத்து வழிபடப்பட்ட சூலம் அல்லது சூலத்தைத் தலையிலுடைய கடவுள் அடுத்த கிராமத்துக்குக் கொண்டுப்போகப்பட்டது. அக்காலம் பெரிய விழாக்கள் கொண்டாடப் பட்டன. நகரத்தில் வீதிகள் சந்திக்குமிடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டன. தென்னந்தோப்புகளின் மத்தியில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. வீடுகளிலும் சிறிய கோயில்கள் இருந்தன. இறந்தவர்களைச் சுடுதலும் புதைத்தலும் அக்கால வழக்கு. இறந்தபின் நியாயத் தீர்ப்பு நடப்பதாக மக்கள் நம்பினார்கள். ஞாயத்தீர்ப்பு என்பதற்குத் “தீர்ப்பு” என்னும் சொல் முத்திரைகளில் ஆளப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது.  இயல் - 8 இந்தியாவும் மேற்கு உலகமும் நோவா பேழை கட்டுதற்கு முன்பு எகிப்தியர் தமிழ் நாட்டுக்கு மரக்கலங்களிற் பயணஞ்செய்த வரலாறு அவர்களின் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. பண்டு நாட்டுக்குப் பயணஞ்செய்த கன்னு என்னும் மாலுமி கூறியிருப்பதன் விபரம் வருமாறு: “நான் சேபா என்னும் துறைமுகத்தை அடைந்தேன். யான் கொண்டுவரவேண்டிய பண்டங்கள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டன. யான் எருதுகளையும் பசுக்களையும் ஆடு களையும் பலி கொடுத்தேன். யான் பண்டு என்னும் பரிசுத்த நாட்டிலிருந்து அரசனுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொண்டுவந்தேன்.” கி. மு. 1600இல் பண்டு தேசத்துக்குச் சென்ற இன்னொரு பயணத்தின் முழு விபரமும் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. அப்பொழுது இஸ்ரவேலர் எகிப்தில் மறியற்படுத்தப்பட்டிருந்தார்கள். அதன் விபரம் வரு மாறு: “பதினொரு கப்பல்களில் பண்டுதேசத்தின் வியப்பு மிக்க பொருள்கள் ஏற்றப்பட்டன. அவை விலை உயர்ந்த மரங்கள் குங்குலியம்போன்ற மணப்பொருள்கள், மணமரங்கள், அமு என்னும் நாட்டிற் கிடைக்கும் பொன்னழுத்திய யானைத்தந்தம், கண்ணுக்குத் தீட்டும் மை, நாய்த்தலைக் குரங்கு, வேட்டைநாய், புலித்தோல், அந் நாட்டு மக்கள் குழந்தைகள் என்பன.” எகிப்திய மொழியில் குரங்கையும் யானைத் தந்தத்தையும் குறிக்க கவு, எப் என்னும் சொற்கள் வழங்கின. இவை முறையே கவி இபம் என்னும் சொற்களின் திரிபு.1 வரலாற்றுக் காலத்திற்கு முன் தொட்டு இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்குமிடையில் மூன்று வணிகப் பெரும்பாதைகள் இருந்தன. இவற்றுள் மிக இலகுவானது சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து அராபியக் குடாக்கடல் வழியாக யூபிராதஸ் முகத்துவாரத்தை அடையும் கடற்பாதை. இன்னொன்று பாரசீகத்தினூடாகத் தரைவழியே செல்வது. செங்கடல் வழியாகச் செல்வது மற்றொன்று. சிந்துநதி முகத்துவாரத்துக்கும் யூபிராதஸ் பள்ளத்தாக்குகளுக்கும் இடையிலுள்ள வாணிகம் மிகத்தொன்மையுடையது. இவ் வாணிகத்தைக் குறித்த செய்தி மித்தனி (Mitanni) நாட்டையாண்ட கிதைதி அரசனின் பட்டயங்களிற் காணப்படுகின்றது. இப் பட்டையங்கள் கி.மு. 14ஆம் நூற் றாண்டிற் பொறிக்கப்பட்டவை. அசுர்பாணிப் பாலின் (Assurbanipal) புத்தக நிலையத்தில் (கி. மு. 668-626) காணப்பட்ட சிந்து1 என்னுஞ்சொல் இந்தியப் பஞ்சு என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இச் சொல் மிகப் பழமை யுடையது. இச் சொல் அக்கேடிய மொழியில் தாவர ஆடை என்னும் பொருளில் வழங்கிற்று. அசுர்பாணிப்பால் என்னும் அரசன் பெரும்பயிர்த் தொழில் புரிவோனாயிருந்தான். அவன் இந்தியாவினின்றும் ‘கம்பளி காய்க்கும் மரங்களை’ப் பெற்றான். மேற்கு ஆசியாவில் நடைபெற்ற பஞ்சு வியாபாரம் மிகப் பழமையுடையது. கிரேக்கர் முதல் முதல் இந்தியரைப் பற்றி அறியவந்தபோது அவர்கள் ‘மரத்திற் காய்க்கும் கம்பளியை’ உடுத்திருந்தார்கள். இருக்கு வேதத்தில் இரவும் பகலும் இரண்டு நெசவு செய்யும் பெண்களாக உவமிக்கப்பட்டுள்ளன.1 முகயரிலே (Mugheir-ur of Chaldees) திங்கட் கடவுளின் ஆலயத்திலும் நேபுசண் நிசரின் (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) அரண்மனையிலும் இந்தியத் தேக்கமரத் துண்டுகள் கண்டு எடுக்கப்பட்டன. தேக்கு, கருங்காலி, சந்தனம் முதலிய மரங்கள் பர்காசா (Bargaza) புறூச் எனப்பட்ட இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள துறை முகத்திலிருந்து தைகிரசுக்கு அனுப்பப்பட்டன. இவ் வாணிகம் கி. பி. 2ஆம் நூற்றாண்டு வரையில் நடைபெற்றது. சாலமன் நேசரின் (Salamanesar III கி. மு. 860) தூணில் குரங்கு, இந்திய யானை, பக்தீரிய (பரசீக) ஒட்டகம் முதலிய விலங்குகளின் உருவங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பவேரு சாதகம் (கி. மு. 500) இந்திய வணிகர் பவேருக்கு (பாபிலோன்) கடல்வழியாகச் சென்ற வரலாற்றைக் கூறுகின்றது. அங்குப் பறவைகள் அருமை. இந்திய வணிகர் முதன்முறை ஒரு காகத்தை அங்குக் கொண்டுசென்றனர். அந் நாட்டு மக்கள் அதன் அழகைப் பார்த்து அதிகம் வியந்தார்கள். அடுத்த பயணத்தில் அவ் வணிகர் நன்றாக ஆடும் மயில் ஒன்றைக்கொண்டு சென்றனர். மயிலின் அழகாற் கவரப்பட்ட அந் நாட்டுமக்கள் காக்கையின் அழகைக் கொண்டாடினார்களல்லர். பண்டைக் காலத்தில் இந்தியர் அனுபவம் வாய்ந்த கடலோடிகளாக விருந்தனர். பழைய இந்திய இலக்கியங்கள் இந்தியரின் துணிகரமான கப்பற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. பிற்காலங்களில் மத்திய தரைகளில் ஓடிய கப்பல்களைவிடப் பெரிய கப்பல்களை இந்தியர் கட்டினர். கி. மு. 6ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டினின்றும் இலங்கைக்குச் சென்ற விசய இராசனின் கப்பல் 700 மக்களை ஏற்றிச்சென்றது. சாதகக் கதைகள் முந்நூறு முதல் எழுநூறு பேரை ஏற்றிச்செல்லக்கூடிய மரக்கலங்களைப் பற்றிக் கூறுகின்றன. கிழக்குக் கரையிலுள்ள பெரிய துறைமுகங்கள் சம்பா, தாமிரலிப்தி என்பன; மேற்கிலுள்ள பறுகாசா சுப்பிரா என்பன. விநோத மான பறவைகள், சிந்துக்குதிரைகள், தந்தம், ஆடைகள், அணிகலன்கள், பொன், வெள்ளி முதலியன இத் துறைமுகங்களினின்றும் வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டன. அக் கால மக்கள் கடல்வழியாக அயல்நாடு களுக்குச் செல்வது சாதாரண நிகழ்ச்சி. கெவெட்டுசூத்த (Keveddhusutta) என்னும் நூலில் கரைதெரியாத கடலில் கரையைக் காட்டும் பறவைகளுடன் வணிகர் பயணம்செய்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பறவைகள் எப்பொழு தும் கரையிருக்கும் திசையை நோக்கிப் பறக்கும் இயல்புடையன. கரையை அறிவதற்கு நோவா பறவைகளைத் திறந்துவிட்ட வரலாறு கிறித்துவமறை யிற் காணப்படுகின்றது. பிளினி, கொஸ்மஸ் என்போர் கரையை அறி வதற்குக் குருவிகளைப் பயன்படுத்தும் வழக்கம் சிங்கள மக்களிடையே உண்டு என எழுதியுள்ளார்கள். பாரசீகக் குடாக்கடல் வியாபாரம் ஆரம்பத்தில் சாலடியர்வசம் இருந்தது. இவர்கள் கடற்கொள்ளைக்காரராகவிருந்தனர். கி. மு. 694இல் இக் கடற்கொள்ளைக்காரர் சென்னாசெரிப் (Sennacherib) என்னும் சாலடிய அரசனால் ஒழிக்கப்பட்டார்கள். இவ் வாணிகம் பின்பு பொனீசியர் கைக்கு மாறிற்று. பாரசீகக் குடாவிலுள்ள பகேரின் (Bharein) தீவுகளில் இவர்கள் வாணிகம் நடத்தியதைக் குறிப்பிடும் பழைய புதைபொருள்கள் கிடைத் துள்ளன. கி. மு. 606இல் பாபிலோனியர் அசீரியரை வென்றனர். அப்பொழுது நினேவா கிழக்குத்தேசங்களின் பெரிய சந்தையாக விளங்கிற்று. அங்கு, பொனீசியர், யூத அடிமைகள், அயோனியர், இந்தியர் முதலியோர் தமது வியாபாரப் பண்டங்களை விற்கும் பொருட்டுக் கூடினார்கள். அக் காலத்தில் பாபிலோனியர் இந்தியக்கரைகளிற் குடியேறியிருந்திருந்தார் களாதல் கூடும். அலெக்சாந்தர் இந்தியாவை அடைந்தபோது பாபிலோனில் நடத்தப்படுவது போன்ற விவாகச்சந்தைகள்1 அங்கு நடத்தப்பட்டன என்று ஸ்ராபோ கூறியுள்ளார். இந்தியாவுக்கும் செமத்திய மக்களுக்குமிடையிலுள்ள வணிகம் பெரும்பாலும் கடல்வழியாக நடைபெற்றது. பழைய ஆசிய நாகரிகம் இந்தியா, சீனா, இலங்கை, மத்தியதரை நாடுகள் வரையில் பரந்து காணப்பட்டது. இவ் விடங்களிற் கிடைத்த பழையமண்டபங்கள், உலோகப் பொருள்கள், நெசவுப்பொருள்கள் என்பன ஒரேவகையின. கிழக்கு மத்தியதரை, நாகரிக உலகின் மேற்கு எல்லையாக ஒருபோது இருந்தது. கழுதை ஒட்டகம் பொதிமாடு என்பவைகளில் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வணிகர் கூட்டத்தினர், மிக முற்காலந்தொட்டு இந்தியா, சீனா, மேற்கு ஆசியா என்பவைகளைத் தொடுத்திருந்த பெரும்பாதையாற் பிர யாணஞ் செய்தனர். ஒக்சஸ் (Oxus) ஆற்றிலிருந்து கஸ்பியன் கடல்வரை யில் பண்டங்கள் கட்டுமரங்கள் வாயிலாகக் கொண்டுபோகப்பட்டன. இந்தியத் துறைமுகங்களினின்றும் சரக்குகள் ஏடின் துறைமுகத் துக்குச் சென்றன. சலமன் அரசன் பொனீசிய அரசனின் நட்பைப்பெற்றுப் பொனீசிய மாலுமிகளின் உதவியால் பொன், வெள்ளி, யானைத்தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில், அகில், இரத்தினக்கற்கள் முதலியவைகளை இந்தியாவினின்றும் பெற்றான். ஒபிர் பொன்னுக்குப் பேர்போனது; ஆகவே, எபிரேயத்தில் ‘ஒபிர்ப் பொன்’ என்னும் முதுமொழி உண்டாயிற்று. ஒபிர் என்பது இந்தியாவிலுள்ளதென்பது உடனே தெளிவாகின்றது. யூதர் நூல் களில் இந்தியமொழிச் சொற்கள் பல காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்கப் புலவராகிய ஹோமர் ஆப்பிரிக்க எதியோப் பியர், கிழக்கு எதியோப்பியர் என்னும் இரு மக்களைப்பற்றிக் குறிப்பிட் டுள்ளார். அவர் கூறிய கிழக்கு எதியோப்பியர் என்பது திராவிடரைக் குறிக்கும். ஹோமர் காலத்தில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனவென்றும், இந்துமாக்கடல், மத்தியதரைக்கடல் இருப்பதுபோல முன்பு இடையில் இருந்ததென்றும் நம்பப்பட்டது. எபி ரேயத்திலும் சமக்கிருதத்திலும் கிரேக்கரைக் குறிக்க வழங்கிய சொல் யவன என்பது. கெரதோதசு கி. மு. 484இல் பிறந்தார். இவர் தமது நூலில் இந்தியரைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறுவது: “இந்திய மக்கள் வெவ்வேறு மொழி களை வழங்கும் பல சாதியினராக வாழ்கின்றனர். தெற்கேயிருப்போர் எதியோப்பியரைப் போன்றோர். அங்கு ஓர் உயிரையுங் கொல்லாத ஒரு கூட்டத்தினரும் காணப்படுகின்றனர். அவர்கள் தானியங்களையும் தாவரங் களையும் உணவாகக் கொள்வர்.” “இந்தியாவில் ஒருவகை எறும்புகள் உண்டு. இவை புற்றெடுக்கும் போது வெளியே தள்ளும் மணலொடு பொன்தூளும் வெளியே வருகின் றது. அவ் வெறும்புகள் நாயிற் சிறியனவும் நரியிற் பெரியனவுமாய் இருக் கும். அவை பொன்னைக் காவல் காத்துக்கொண்டிருக்கின்றன. நடுப்பகலில் அவை புற்றுக்குள் இறங்கிச்சென்று நித்திரை கொள்ளுகின்றன. இந்தியர் பெண் ஒட்டகங்களில் சென்று பொன்தூள்களைச் சாக்குகளில் கட்டிக் கொண்டு விரைந்து செல்கின்றனர். அவ் வெறும்புகளிற் சிலவற்றைப் பாரசீக அரசன் பிடித்து வைத்திருக்கின்றான். இக் கதை, சமக்கிருதத்திலுள்ள பப்புலிக்கா (Paippilika) என்னும் எறும்புத் தங்கம் என்னும் பொருள் தரும் சொல்லினின்றும் முளைத்ததா யிருக்கலாம். அக் காலத்தில் ததிஸ்தான் (Dardistan) என்னுமிடத்தில் தங்கம் அரிக்கப்பட்டது. கெரதோதசு இந்தியப் பஞ்சு கம்பளியிலும் நயமானது என்றும், இந்திய மக்கள் அதனால் ஆடை நெய்தார்கள் என்றும் கூறி யுள்ளார். கெரதோதசுவுக்குப்பின் இந்தியாவைப்பற்றிக் கூறியவர் கெற்சியஸ் (Ktesias) என்னும் கிரேக்கர் (கி. மு. 416) இவர் இந்தியாவைப்பற்றிப் பிறர் வாயிலாக அறிந்தவைகளைத் திரட்டி இந்திக்கா (Indika) என்னும் நூல் செய்துள்ளார். இவர் கூறியிருப்பன பெரும்பாலும் கட்டுக்கதைபோல்வன. இவர் கருவாப்பட்டையைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் அதனைக் ‘காருப்பு’ (Karuppu) எனக் கூறியுள்ளார். இந்தியாவில் நஞ்சை அறியும் புறாவும் காயத்தை ஆற்றும் கல்லும் இருந்தனவென்றும், அங்கு ஒற்றைக் கொம்பு முளைத்த கழுதைகளும் குதிரைகளும் உண்டு என்றும், அக் கொம்புகளிற் செய்த சிமிழ்களிற் பானஞ்செய்யின் விடத்தின்வலிமை தலை காட்ட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (காக்கை நஞ்சை அறியும் இயல்பினதென்றும், காண்டாமிருகத்தின் கொம்பில் ஊற்றி உண்ணும் பானங்களில் நஞ்சு கலந்திருப்பினும் தீமை நேராதென்றும் இன்றும் இந்தியமக்கள் நம்பி வருகின்றனர்.)பாணினி முனிவர் பெண்பால் போன்ற யவனி என்னும் சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உரையெழுதிய கார்த்தியாயனர் அது யவன இலிபியைக் குறிக்குமென வரைந்துள்ளார். அலக்சாந்தர் கி. மு. 329இல் இந்தியாமீது படை எடுத்துவந்தார். கி.மு. 315இல் பஞ்சாப்பில் கிரேக்கர் ஆட்சி ஒழிந்தது. அதன்மேலும் கிரேக்க இந்தியர் கலப்பிற்றோன்றிய மக்கள் பலர் பஞ்சாப்பிற் காணப்பட்டார்கள். இவர்கள் காலத்தில் அங்குள்ள மக்களோடு கலந்து மறைந்துவிட்டனர். சந்திரகுப்த அரசனே கிரேக்கப் பெண்ணை மணந்திருந்தான். வட இந்தியா வில் சகர் எனப்படும் ஸ்கித்தியர் ஆட்சி கி. மு. 93இல் தொடங்கியது. 1தாலமி பிளாப்பிஸ் (கி. மு. 321) காலத்தில் இந்திய வேட்டை நாய் களும், இந்தியப் பசுமாடுகளும் எகிப்தில் காணப்பட்டன. இந்தியப் பெண் களும் அங்குக் காணப்பட்டனர். இந்திய மணப்பண்டங்கள் ஒட்டகங்களி லேற்றிக்கொண்டு போகப்பட்டன. பெரிபுளூஸ் என்னும் நூல் (கி. மு. 60) இந்தியாவுக்கும் எகிப்துக்கும் வாணிகம் நேராக நடக்கவில்லையென்றும், அக்கால வணிகர் இந்தியா வுக்கு நேரே பயணஞ் செய்யத் துணியாமையால் எயுடாமன் (Eudaemon) என்னுமிடத்திற் சந்தித்தார்களென்றும், அலக்சாந்திரியாவைப்போல எயு டாமன் அக் கால வாணிப நடு இடமாயிருந்ததென்றும் கூறியுள்ளார். சீனாவிலிருந்து பட்டும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நல்ல மசிலின் ஆடையும், அணிகலன்களும், மரகதம், முத்து, மணச்சரக்கு முதலி யனவும் உரோமுக்குச் சென்றன. மருந்துச்சரக்கும் மணப்பொருள்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. மிளகுக்கு மானம் இருந்தது. பிளினி காலத்தில் உரோமில் ஒரு இராத்தல் மிளகின் விலை 15 டனாரி (Denari). நடுக்காலம் வரையில் மிளகு மேல் நாடுகளில் உயர்ந்த வாழ்க்கைப் பொருள் களில் ஒன்றாக இருந்து வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஒரு இராத்தல் மிளகின் விலை இரண்டு ‘சிலின்’. அலாரிக் (Alaric) என்னும் கிரேக்கன் உரோம் நகர்மீது தான் இட்ட முற்றுகையை எடுப்பதற்குக் கேட்ட பொருள்களுள் 3000 இராத்தல் மிளகும் ஒன்று எனக் கிபன் (Gibbon) என்பார் கூறியுள்ளார். பிளினி என்பார் உரோமரின் ஆடம்பர வாழ்க்கையால் இந்தியா வுக்கு மிகுதியாகப் பணம் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா வில் நாணயப் புழக்கம் குறைவு. முதல் ஐந்து ‘உரோமைச் சக்கரவர்த்திகள்’ கால நாணயங்கள் ஏராளமாக இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. நிரோ (Niro) காலத்தில் இந்தியாவினின்றும் உரோமுக்குச் சென்ற உயர்தர வாழ்க்கைப் பொருள்களின் அளவு உச்சநிலை அடைந்தது. இதற்குப்பின் அங்கு நேர்ந்த உள் நாட்டுக் குழப்பங்களால் அவ் வாணிகம் குறைந்து விட்டது. உரோமை அரசனின் 612 பொன் நாணயங்களும் 1187 வெள்ளி நாணயங்களும் இந்தியாவில் நிலத்தின்கீழ் இருந்து கிண்டி எடுக்கப்பட்டன. இவை பானை நிரம்பிய, ஆட்சுமையுள்ள என்று குறிக்கப்பட்ட நாணயங் களைவிட வேறானவை. இவைகளுட் பெரும்பாலன ஆகஸ்தஸ் காலத்தன. திபேரியஸ் பிளினி (Tiberious-Pliny) என்பார், இந்தியா, சீனா, அராபியா முதலிய நாடுகள் ஓர் ஆண்டில் நூறுகோடி ‘செஸ்ரர்செஸ்’ தங்கத்தைக் கவர்ந்துகொள்கின்றன எனக் கூறியுள்ளார். இத் தொகை 11,00,000 தங்க நாண யங்களுக்குச் சரி எனக் கணக்கிடப்படுகின்றது. இதிற் பாதி இந்தியாவை அடைந்தது. அக் கால உரோமர் இறந்தவரின் உடல்மீது ஏராளமான மணச் சரக்குகளைக் கொட்டி எரித்தார்கள். நிரோ அரசன் (கி. பி. 66) பொபோகா (Popoka)வின் உடல்மீது கொட்டி எரித்த மணச் சரக்கு அராபியாவிற் கிடைக்கும் ஓராண்டு விளைவுக்கு நேர் என்று கணக்கிடப்பட்டது. இவ்வீண் ஆடம்பரம் இந்தியா அராபியா ஏடின் முதலிய நாடுகளுக்கு அதிக வருவாயைக் கொடுத்தது. ஸ்ராபோ என்பவர் ஆகஸ்தஸ் காலத்தவர். இவர் ஆசிய கிரேக்கர். “மெஓஸ் கோமாஸ்” (Myos Homas) என்னும் மத்தியதரைத் தீவுகளுக்கு அருகாமையில் இந்தியாவுக்குப் பயணப்பட்டுச் செல்லும் 120 கப்பல்களை யான் பார்த்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். குளோடியஸ் அரசன் காலத்தில் இலங்கைக்கு அருகே குதிரை முனைக்கு அணித்தில் கிரேக்க கப்பல் ஒன்று உடைந்துபோயிற்று. அதி னின்று தப்பி மீண்டவர்களிடம் கேட்டறிந்தவற்றை ஆதாரமாகக்கொண்டு பிளினி இலங்கைப்படம் வரைந்தார். அவர் இந்தியநாட்டின் படமொன்றும் வரைந்துள்ளார். அவர் கி. பி. 150 வரையில் வாழ்ந்தார். பாண்டிய அரசன் ஒருவன் ஆகஸ்தஸ் அரசனிடம் தூதனுப்பினான்; (கி. மு. 21) இலங்கை அரசனும் தூதனுப்பியிருந்தான். கிப்பாலுஸ் (Hippalus) என்பார் கப்பல்கள் இந்தியாவுக்குப் பாயெடுத்துச் செல்வதற்கேற்ற பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். முசிறியில் கடற் கொள்ளைக்காரர்1 மிகுதியாக இருந்தமையின், ‘முசிறியில் இறங்குவதிலும் பறக்கை (Barake)யில் இறங்கு வதை வணிகர் விரும்பினார்கள்’ எனப் பிளினி கூறியுள்ளார். பறக்கை மிளகு வர்த்தகத்திற்குப் பேர்போனது. மிளகு விளையும் நாடுகளின் நடுவி லுள்ளது தெல்லிச்சேரி. பரகாசாவிலிருந்து சந்தனக்கட்டை தேக்கு கருங்காலி முதலிய இந்திய மரங்கள் அனுப்பப்பட்டன என்று பெரிபுளுஸ் என்னும் நூல் கூறுகின்றது. சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து இலைசியம் என்னும் ஒருவகை வாசனைச் சரக்கு, இரத்தினக்கல், நீலக்கல், தோல், சீனப்பட்டு முதலியன ஏற்றுமதியாயின. பிற்காலங்களில் பட்டு தரை வழியாக உரோ முக்குக் கொண்டுபோகப்பட்டது. உரோமர் ஆரம்பத்தில் பட்டு எப்படியுண் டாகிறதென்று அறியாதிருந்தார்கள். அவர்கள் அது மரத்தில் காய்ப்பது என நம்பிவந்தனர். பர்காசா என்பது இக் காலம் புறூச் (Brooch) என அறியப் படும். தமிழகம் உரோமை ஆசிரியர்களால் தமிறிகே (Damirike) என வழங்கப்பட்டது. தென்னிந்தியத் துறைமுகங்களுட் சிறந்தது முசிறி. இது இப்பொழுது கரங்கனூர் என வழங்கும். முசிறியில் அகஸ்தஸ் அரசனுக்கு ஆலயம் ஒன்று இருந்ததெனப் பெதுருங்கேரியர் அட்டவணை (கி. பி. 222) கூறுகின்றது. யவனவணிகர் ஆடிமாதத்தில் வந்து மார்கழி மாதத்திற் புறப் பட்டார்கள். குமரி முனையில் குமரித் தெய்வத்தின் ஆலயம் இருந் தமையைப் பெதுருங்கேரியரின் அட்டவணை குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்ரோஸ்ரம் (Dio-Chrisrostam கி.பி. 117) என்பார் இந்திய வணிகரைத் தாம் அலக்சாந்திரியாவிற் சந்தித்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.1 பரகாசாத் துறைமுகத்திலே (புறூச்) அடிக்கடி கிரேக்கப்பெண்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்திய அரசரின் அரண்மனைகளில் யவனப்பெண்கள் இருந்தார்கள்; சகுந்தலை நாடகத்தில் இவ்வாறு காணப் படுகின்றது. தென்னிந்தியாவிலே அரசனின் மெய்காப்பாளர் ஊமராகிய மிலேச்சராயிருந்தனர். பரதர் செய்த நாட்டிய சாத்திரத்தில் அரங்கில் ஒரே முறையில் தோற்றக்கூடிய நடிகரின் கூடிய எண் ஐந்து என வரையறுக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாடகங்களிற் போல இந்திய நாடகங்களிலும் பயங்கரமான அல்லது பார்ப்பதற்கு இன்பம் அளியாத காட்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்திய நாடகங்களில் யவனிகா என்னும் திரைச்சீலை பயன்படுத்தப் பட்டது. யவனி என்னும் கிரேக்கப் பெண்கள் அரசர் அல்லது அரச குடும்பத்தினரின் பரிவாரங்களாகவிருந்தனர். திரைச்சீலை கிரேக்கரைப் பார்த்துச் செய்யப்பட்டதன்று. கிரேக்கர் திரைச் சீலையைப் பயன்படுத்த வில்லை. சாதகக் கதைகள் எழுதப்பட்ட காலம் முதல் இந்திய நாட்டுக் கதைகள் மேல்நாடுகளுக்குச் சென்று வழங்கியமைக்குச் சான்றுகளுண்டு. உரோமன் வர்த்தகப் பாதுகாப்பின் பொருட்டு இரண்டு உரோமைப் பட்டாளங்கள் முசிறியில் நிறுத்தப்பட்டிருந்தனவென்று பெதுருங்கேரி யரின் அட்டவணை என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. பிளினி என்பவர் உரோமை அணங்குகளின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி எழுதி யிருப்பது பின்வருமாறு: 1எங்கள் நாட்டுப் பெண்கள் கைவிரல்களில் அல்லது காதில் இரண்டு அல்லது மூன்று முத்துக்களை கட்டித் தொங்கவிடுகிறார்கள். அவை ஒன் றோடு ஒன்று முட்டி அசைவதைக் கண்டு அவர்கள் மகிழ்கின்றனர். வறிய வர்கள் தாமும் முத்துக்களை அணிகின்றனர்! செருப்புகளும் அதன்வார் களும் முத்துக்களால் அலங்கரிக்கப்படுகின்றன. முத்தை அணிவது மாத்திர மல்லாமல் அவர்கள் முத்தின் மீது மிதித்தும் நடக்கிறார்கள். ஒருபோது யான் கயஸ் (Caius) சக்கரவர்த்தியின் மனைவியைப் பார்த்தேன். யான் பார்த்த நேரம் விழாக்காலம் அல்லது பரிசுத்தமான கிரியைகளைப் புரியும் நேரமன்று. அவள் அணிந்திருந்த முத்துக்களும் இரத்தினக் கற்களும் அவள் தலைமீது பந்தி பந்தியாகக் கிடந்து ஒளிவிட்டன. கூந்தல்மீதும், சூடி யிருந்த பூமாலைகளிலும், காதுகளிலும், கழுத்திலும், கழுத்து மாலைகளி லும் கைவிரல்களிலும் அவள் அணிந்திருந்த முத்து பவளம் என்பவை களின் பெறுமதி 40,000,000 செஸ்ரர்செஸ் (Sesterces). அவைகளின் பெறுமதி அத் தொகை என்று உறுதிப்படுத்துவதற்குள்ள பத்திரங்கள் அவளிடம் இருந்தன. அவை பிறரால் வெகுமதி அளிக்கப்பட்டனவல்ல; ஆனால் நாட்டு மக்களின் பணத்தைக்கொண்டு வாங்கித் தலைமுறை தலைமுறையாக அணியப்பட்டு வருவன. மக்களைக் கொள்ளையிடும் முறை இவ்வாறிருக் கின்றது. லலியாபோலினா என்பவளை மூடியிருந்த நான்கு கோடி செஸ்ரர் செஸ் பெறுமதியுள்ள அணிகலன்களின் வெளிச்சத்தில் அவள் பேர்த் தியைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆண்டில் 55,000,000 செஸ்ரர்செஸ்சை (486,979 தங்க நாணயம்) இந்தியா கவர்ந்து கொள்ளுகிறதென்றும் இந்தியாவினின்றும் வாங்கப்பட்ட பொருள்கள் உரோமில் நூறு மடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டனவென் றும் அவர் கூறியுள்ளார். யூலியர் சீசர், புறுத்தசின் (Brutus) தாயாகிய சேவிலியா (Servilia) என்பவளுக்கு ஒரு முத்தை வெகுமதியாக அளித்தார். அதன் பெறுமதி 47,457 தங்க நாணயம் (பவுன்). கிளியபத்திரா என்னும் எகிப்திய இராணி காதில் அணிந்திருந்த முத்துக் கடுக்கன்களின் விலை 151,450 தங்க நாணயம். பெரிப்புளுஸ் என்னும் நூல் இந்திய மேல்நாட்டு வாணிகத்தைப் பற்றிக் கூறுவது பின்வருமாறு: இந்தியாவில் மிளகும் முத்தும் அதிகம் வாங்கப்படுகின்றன. தந்தமும், ‘சிலந்திவலை’1 என உரோமரால் வாங்கப்பட்ட பட்டும், ஸ்பைக் நாட் (Spikenard) எனப்பட்ட மணப்பொருளும், கங்கை முகத்துவாரத்தில் விலைக்குக் கிடைத்தன. மலைப்பாத்திரம் (Malabothram) இதற்குக் கிழக்கே யுள்ள நாடுகளிற் கிடைத்தது. எல்லாவகைப் பளிங்குக் கற்களும், இரத்தினக் கற்களும், பவளங்களும் ஆமையோடும் தமிழகத்துக்கு அப்பாலுள்ள இலங்கைத் தீவினின்றும் வாங்கப்பட்டன. முசிறித் துறைமுகத்தில் மலைப்பாத்திரம், மிளகு என்பவைகளை வாங்கி அனுப்புவதற்கேற்ற வசதிகள் உண்டு. வணிகர் இவைகளையும் பிற மணப்பொருள்களையும் இங்குக் கொண்டுவருகின்றனர். இன்னும் இங்கு இறக்குமதியாகும் பொருள்கள் நிறக்கற்கள், பவளம், படிகம், பித்தளை, ஈயம், மது (Wine), சாதிலிங்கம், ஆடை, பாஷாணம் (Arsenic) முதலியன. முத்துக் குளிப்பைப் பற்றிக் கூறுமிடத்துக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டவர் களே முத்துக் குளிப்பிற் பயன்படுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட் டுள்ளார். அக் காலத்தே வியாபாரத்தின் பொருட்டு வந்த கிரேக்கரும் பிறநாட்டு மக்களும் மதுரை, புகார் போன்ற நகர்களிற்றங்கி வாழ்ந்தார்கள். இவர்கள் வாழும் வீதிகளைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. 2“இந்தியாவுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் அலக்சாந்திரியாவி லிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள யூலியோபொலிஸ் (Juliopolis) என்னும் இடத்தில் இறக்கப்பட்டன. பின்பு அவை நீலநதி வழியாக கொப்தஸ் (Coptus) என்னும் பட்டினத்துக்குக் கொண்டுபோகப்பட்டன. யூலியோபொலிசுக்கும் கொப்தசுக்கும் இடையே உள்ள தூரம் 303 மைல். இத்தூரம் 12 நாட்களில் கடக்கப்பட்டது. கொப்தசிலிருந்து பெர்னிஸ் (Ber-nes) என்னும் அராபியக் குடாக்கடலிலுள்ள பட்டினத்துக்கு மறுபடியும் அச் சரக்குகள் கொண்டுபோகப்பட்டன. இவ் விரண்டு பட்டினங்களுக்கு மிடை யிலுள்ள தூரம் 258 மைல். சூடு மிகுதியால் வணிகர் கூட்டங்கள் இரவில் மாத்திரம் பயணஞ் செய்தன. இத் தூரத்தைக் கடக்க 12 நாட்கள் பிடித்தன. பெர்ணிஸ் என்னும் துறைமுகத்திலிருந்து மறுபடியும் சரக்குகள் அராபியக் குடாக்கடலிலுள்ள கேனி (Cane) என்னும் துறைமுகத்துக்குக் கொண்டு போகப்பட்டன. அங்கு நின்றும் கப்பல்கள் முசிறித் துறைமுகத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. பின்பு மார்கழி மாதத்திற் கப்பல்கள் திரும்பின. இவ்வாறு கப்பல்கள் போய்த் திரும்ப ஒரு வருடம் பிடித்தது. அக் காலத்தில் உரோமாபுரி ஆலயங்களில் அதிக சாம்பிராணி எரிக்கப்பட்டது. உரோமர் விலை உயர்ந்த வாசனைப் பொருள்களால் இறந்தவர்களை மூடி எரித்தார்கள். சிசிலியா என்பவளின் சவத்தின் மீது 210 மூடை மணப் பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. நிரோ (மரணம் கி. பி. 68) என்பவர் பப்போயி (Pappoe) என்பவரின் சவத்தின்மீது ஒரு நாட்டில் ஓராண்டில் விளைவாகும் மணப்பொருள் அவ்வளவு கொட்டி எரித்தார். இறந்தவர்கள் மீது கொட்டி எரிக்கப்படும் மணப்பொருள்களையும், தெய் வங்களுக்கு எரிக்கப்படும் அவ் வகைப் பொருள்களையும் ஒப்பிடுமிடத்துத் தெய்வங்களுக்கு எரிக்கப்படுவது தானிய நிறைதானும் இல்லை எனப் பிளினி என்பவர் கூறியுள்ளார். அயுரேலியன் (Aurelian) காலம்முதல் பட்டாடைகள் உரோமில் பொன்னுக்குச் சரியாக நிறுத்து விற்கப்பட்டன. இந்திய மிளகு வாணிகம் தொன்மைதொட்டு இந்தியாவினின்றும் மிளகு வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கி. பி. 47 வரையில் இவ் வாணிகம் மும்மரமாக நடை பெற்றது. அக் காலத்துச் செங்கடல் வழியாக இந்தியாவுக்கும் அலக்சாந்திரி யாவுக்கு மிடையில் மரக்கலப் போக்குவரத்து இருந்தது. இந்திய அராபிய வியாபாரிகள் பருவக்காற்றுக் காலங்களை நன்கு அறிந்து கப்பற்பயணஞ் செய்தனர். செங்கடல் முகத்துவாரத்திலுள்ள ஓசிலிஸ் (Ocelis) என்னும் பட்டினத்திலிருந்து பாயெடுத்த கப்பல்கள் துடுப்புகளால் ஓட்டப்பட்டு முசிறிப் பட்டினத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. இவ்வாறு அலக்சாந் திரியா வழியாக இந்தியாவுக்கும் உரோமைக்குமிடையில் கி. பி. 215 வரை யும் இவ் வாணிகம் மும்முரமாக நடைபெற்றது. கிழக்கிலிருந்து உரோ முக்குச் சென்ற பொருள்களுள் முக்காற்பகுதி மிளகு. அக் கால வாணிபத் திற்குத் தேவைப்பட்ட மிளகு முழுமையும் மலையாளக் கரையிலிருந்து சென்றது. மிகப் பழங்காலந்தொட்டு மிளகு ஐரோப்பிய நாடுகளில் இறைச் சியைப் பழுதுபடாமற் பாதுகாக்கவும், உணவுகளுக்குச் சேர்க்கவும் பயன் படுத்தப்பட்டது. கிரேக்கர் மருந்து முறையில் இதனை மிகுதியாகப் பயன் படுத்தினர். கிப்போக்கிறேற்சு (Hippocrates) என்பவர் இதனை இந்திய மருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்தஸ் காலத்தில் மிளகு உரோமில் மிக மதிப்புள்ள சரக்காகக் கருதப்பட்டது. அக் காலத்து ஓர் இராத்தல் மிளகின் விலை ஏழு ரூபாய்; இந்தியாவில் அதன் விலை இதன் பாதி அளவு தானும் இல்லை. பருவகாலத்தை அறிந்து கப்பல்கள் மிகுதியாக இந்தியா வுக்கு ஓடத்தொடங்கிய காலத்தில் மிளகின் விலை குறைந்துவிட்டது. அது மாவாக இடித்துப் பொட்டணங்களாக விற்கப்பட்டது. அலாறிக் என்னும் கொதியன் உரோமை முற்றுகை இட்டபோது, முற்றுகையை விடுவதற்கு, அவன் ஏனைய பொருள்களோடு 3,000 இராத்தல் மிளகையும் கேட்டான். உரோமிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் மிகக்குறைவு. ஆகவே, உரோமிலிருந்து ஏராளமான செல்வம் இந்தியாவை அடைந்தது. உரோமிலிருந்து ஏராளமான தங்க, வெள்ளி நாணயங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவிற் காணப்பட்ட பல்லாயிரக்கணக்கான உரோமன் நாணயங்களுட் பெரும்பாலன மலையாளக்கரையிலும் அதனை யடுத்த கோயமுத்தூர்க் கோட்டம், மதுரை என்னும் இடங்களிலும் காணப் பட்டன. இந் நாணயங்களிற் பெரும்பாலன திபேரியஸ் குளோடியஸ் கேயஸ் (Tiberius, Gaius and Claudius) காலத்தன. “யவனர்தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என அகநானூற்றிற் கூறப்பட்டுள்ளது. முசிறி மலையாளக்கரையிலே பேர் ஆற்று முகத்துவாரத்திலுள்ளது. தமிழ் நூல்கள் இதனைப் பெரிய துறைமுகப்பட்டினமாகக் கூறுகின்றன. பொனீசியாரும் அராபியரும் இத் துறைமுகத்தில் வியாபாரம் நடத்தினர். உரோமிலிருந்து பாவை, அன்ன விளக்குகள், நகைப்பேழைகள், மண முள்ள மது என்பன இறக்குமதியாயின. அரசரும் செல்வரும் இம் மது வினை உண்டனர். பெதுருங்கேரியரின் அட்டவணையின்படி முசிறியில் ஆகஸ்தஸின் கோயில் ஒன்றிருந்தது. தமிழ் அரசரின் பண்டசாலைகளை யவன வீரர் காவல் புரிந்தனர். முசிறியில் யூதர் அராபியர் பாரசீகர் குடியேறி யிருந்தனர். அவர்கள் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தனர். தோமஸ் ஞானி யார் (Apostle Thomas) முசிறிக்கு அயலிலுள்ள மல்லன்காராவில் கி. பி. 50இல் வந்து இறங்கினாரெனச் சீரிய கிறித்தவர்கள் நம்பி வருகின்றனர். கி.பி. 215க்குப்பின் இவ் வாணிகம் விழுந்துவிட்டது; பாரசீகக் குடாக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் ஓரளவு நடைபெற்றது. சீனர் தம் மரக்கலங்களில் சீனாவுக்கு மிளகு கொண்டு சென்றனர். இடைக்காலத்தில் கோயில்களுக்கு மிளகு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. அக் காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை நாலு சிவின். அது தச்சு வேலை செய்பவன் ஒருவனின் நாலு நாட்கூலி. இவ் வாணிகம் வெனிஸ், செனோவா (Genoa) வியாபாரிகளின் கையில் இருந் தது. அவர்கள் இதனை அராபியரிடமிருந்து வாங்கினர். இவ் வியாபாரிகள் பணஞ் சம்பாதிப்பதை அறிந்த மேற்கு ஐரோப்பிய மக்கள் கிளர்ச்சி கொண் டனர். அதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் கிட்டிய பாதையை அறிய முயன்றனர். இதனால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித் தான். வாஸ்கோடகாமா என்னும் போர்த்துக்கேயர் கள்ளிக்கோட்டையை 1498ஆம் ஆண்டு அடைந்தார். 16ஆம் நூற்றாண்டளவில் டச்சுக்காரர் ஐரோப்பாவில் மிளகு வியாபாரத்தைக் கைப்பற்றினர். அக் காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை மூன்று ‘சிவின்’; முன் ‘ஆறுசிவின்’ வரையி லிருந்தது. இதனால் இலண்டன் வியாபாரிகள் கிளர்ச்சி கொண்டார்கள். சிலர் எலிசபெத் இராணியிடம் உத்தரவுபெற்றுக் கிழக்கு நாடுகளுடன் வியா பாரஞ் செய்யப் புறப்பட்டனர். அவர்கள் கிழக்கே அரசுகளைக் கோலினர்.  இயல் - 9 மொழி அவர்கள் தம் எண்ணங்களைப் பிறர்க்குணர்த்த விழைகின்றனர். அப்பொழுது மொழி உண்டாகின்றது. ஆதியில் மக்கள் ஊமரும் செவிட ரும் பேசுவதுபோலச் சாடைகளாலும் சைகைகளாலும் முகக்குறிகளாலும் பேசினர். இது நடிப்பு முறையில் உள்ள பேச்சு. இம் முறையிலிருந்தே நாடகத் தமிழ் வளர்ச்சியுற்றது. மக்களைச் சூழ்ந்து பலவகை இயற்கைப் பொருள்களும் குருவிகள் விலங்குகளும் இருந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒலியை எழுப்பின. இது ஆதிமக்களின் கவனத்துக்கு வந்தது. அவர்கள் இவ்வொலிகளை உற்றுக்கேட்டு அவ் வொலிக் குறிகளை அவ்வப் பொருள்களைக் குறிக்க வழங்கினர். ‘கா கா’ எனக் கத்தும் பறவையைக் காகம் என்றும், ‘கூ கூ’ எனக் கூவும் குருவியைக் குயிலென் றும், ‘மா’ என்று அழும் விலங்கை மாடு என்றும் வழங்குதல் இதற்கு எடுத்துக்காட்டு. இப்பொழுது நடிப்போடு ஒலிக்குறிகளும் கலந்து மொழி உண்டாயிற்று. அதன் பின்பு அவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பொருள்களையும், குணங்களையும், செயல்களையும் குறிக்க ஒவ்வோர் ஒலிக்குறிகளை அமைத்து ஒலிமுறையான மொழியை ஆக்கிக்கொண்ட னர். இன்றும் பேச்சாளர் மேடைகளில் நின்று பேசும் போதும் பேச்சுக்கேற்ற பல அவிநயங்களைக் காட்டுகின்றனர். இவை பழைய பேச்சு வழக்கின் தேய்வுகளே. ஆதி மக்கள் சொற்களை ஆக்குவதற்குக் கைக்கொண்ட 1காரணங்கள் (மொழிப் பொருட்காரணம்) பெரும்பாலும் இன்று நம்மால் அறிந்து கூறமுடியாமல் இருக்கின்றன. சொற்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் தொடர்ந்து வருகின்றன. காலந்தோறும் புதிதாக அறியப்படும் பொருள்களையும் செயல்ளையும் குறிக்கப் புதிய சொற்கள் தோன்றும். இவ்வாறு ஒருவகையில் மொழி வளர்ந்துகொண்டு செல்லும்போது பழைய சொற்கள் சில வழக் கொழியும்; அவற்றின் இடத்தைப் புதிய சொற்கள் சில ஏற்கும். இதனால் மக்கள் வழங்கும் மொழியில் காலந்தோறும் வேறுபாடுகள் காணப்படும். முன்னோர் எவ்வாறு சொற்களை உச்சரித்தார்களோ அவ்வாறு அவைகளை உச்சரிக்க அறிதலும், அவைகளை அவர்கள் பயன்படுத்திய மரபில் பயன்படுத்துதலுமே திருந்திய மொழிப்பயிற்சியாகும். பரதநாட்டியம் போன்று நடிப்பு மாத்திரத்திலுள்ள கூத்தைத் தமிழர் நாடகத்தமிழ் என வழங்கினர். மக்களின் அக உணர்ச்சிகளுக்கேற்ப எழும் இயற்கை ஒலி களைப் பின்பற்றி, மகிழ்ச்சி, வீரம், சோகம் போன்ற உணர்ச்சிகளை எழுப்புந் தொனியிற் பாடப்படும் பாடல்கள் இசைத்தமிழ் எனப்பட்டன. இவை போலல்லாத பாடல்களும், இலக்கணங்களும் இயற்றமிழ் எனப்பட்டன. ஆதிகாலத் தமிழுக்கும் பிற்காலத் தமிழுக்கும் சிறிது வேறுபாடு உண்டு. “மொழிகள் தற்காலம் தாங்கி நிற்கும் விகுதி, வேற்றுமை யுருபு முதலிய குறியீடுகள் யாவும், நாளடைவில் வந்து புகுந்தன. இது மொழியாராய்ச்சி யாளர் கண்டு அறுதியிட்ட முடிவு. தனியே நின்று பொருள் பயவாக் குறியீடு களாகிய இவ் வுருபுகள் யாவும் தனியே நின்று பொருள் தந்து உதவிய மொழிகளின் சிதைவில் வந்த மிச்சமெனவும் அவர்கள் துணிந்துள்ளார்கள். ஒரு காலத்தில் திணை பால் இடம் சுட்டா வினைமுற்று ஆட்சி நடைபெற் றிருக்கலாம் என்றும் துணியலாம். மலையாளத்தில் திணைபால் இடம் சுட்டாது காலம் ஒன்றனையே சுட்டும் வினை முற்று ஆட்சி காணப்படு கின்றது.” மொழி, எழுத்துநிலை இலக்கியநிலை இலக்கணநிலை என்னும் நிலைகளை முறையே எய்துகிறது. உலகியல் மொழியின் தெளிவே செந்தமிழ். பேச்சுமொழி, எழுத்துநிலை அடையும்போது ஒரு சீர்திருத்தமும், எழுத்துநிலை கடந்து இலக்கியநிலை பெறும் போது ஒரு திருத்தமும், இலக்கிய நிலையில் நின்று இலக்கணநிலை அடையுமிடத்து இன்னொரு திருத்தமும் அடைகின்றது. 1கொடுந்தமிழென்பது மக்களிடையே எளிய வழக்கிலுள்ள தமிழ். கொடுமை - வளைவு. “இயற்கைக் கலையின் திட்டத்தையும் மொழிவரலாற் றுண்மையையும் கைக்கொண்டு அவற்றின்வழி நோக்கின் திணை பால் இடம் விகுதிக் குறியீடனைத்தும் வினைமுற்றுச் சொற்களுக்குப் பிற்காலத்துத் தான் வந்தடைந்தனவென்பது போதரும். பன்னெறிப்பட்டு வரம்பு உணர்த்தற்கின்றிப் பேச்சுநிலையில் மாத்திரமிருந்த மொழியை இலக்கண வரம்பு கொடுத்துச் செந்தமிழாக்கின காலத்துக்குச் சிறிது முன்னர் இவை வழக்கிற் புகுந்திருக்கலாம். “இலக்கண நூல்கள் இயற்றப்பெற்ற காலத்தில் அந் நூல்கள் விதித்த வரம்புக்கு உட்படாது நின்ற இயற்கை மொழி ஒன்று இருந்திருக்க வேண்டு மெனப் போதிய நியாயங்களால் ஊகிக்கலாம். அவ்வியற்கை மொழியில் திணை பால் இடஞ்சுட்டா வினைமுற்று வழக்குப் பிரயோகம் நடைபெற் றிருக்க வேண்டுமெனவுந் துணியலாம். “மொழியுற்பத்திக் காலத்தில் முதற்றோன்றியனவாகிய பொருட்குறிப் பும், இயக்கப்பண்புக்குறிப்பும், நிலைப்பண்புக் குறிப்பும் பற்றிய பெயர்ச் சொல் வினைச்சொல் உரிச்சொல் என்னும் மூன்றையும் நீக்கிய பிறசொற்க ளெல்லாம் இடைச்சொல் என்னும் ஒரு பெயருள் அடக்கப்பட்டுள்ளன.”1 அரப்பா மொகஞ்சொதரோப் புதைபொருள் ஆராய்ச்சியிற் கிடைத்த பட்டையங்கள் சிலவற்றை ஹெரஸ் பாதிரியார் வாசித்துள்ளார். இப் பட்டையங்களை ஒலிமுறையில் வாசிப்பதற்குக் கருவியாயிருந்தவை பழைய சுமேரிய எழுத்துக்களேயாகும். மொழிகளின் இயற்கை என்னும் நூலில் மாக்ஸ்மூலர் என்னும் பண்டிதர் சீர்திருந்திய மக்களின் மொழிகள் மாற்றமெய்தும் இயல்பையே இழந்துவிடுகின்றன எனப் புகன்றுள்ளார். இதற்குத் தமிழ்மொழி சிறந்த எடுத்துக்காட்டு.2 இந்திய நாட்டுள் ஆரியர், பாரசீகர் ஐரோப்பிய கிரேக்கர், ஸ்கீதியர், கன்ஸ் (Huns), அப்கானியர், தாத்தாரியர், மங்கோலியர், அராபியர் முதலிய பல இனமக்கள் புகுந்து இந்தியமக்களுடன் கலந்துள்ளார்கள். அதனால் புதிய மக்கட் கூட்டங்களும் புதிய மொழிகளும் எழுந்தன. 3இறைஸ்லி என்னும் ஆசிரியர் இந்திய மக்கள் என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு: மேற்கு இந்தியாவில் வாழ்வோர் சித்திய திராவிடர். இப் பிரிவில் மராட்டியப் பிராமணர் குன்பியர் (Kunbis) குறுக்கர் முதலியோரடங்குவர். இவர்கள் சித்தியர் திராவிடர் கலப்பிற்றோன்றினோர். பஞ்சாப், சிந்து, கூர்ச்சரம், இராசபுத்தான, மத்திய இந்தியா முதலிய இடங்களில் ஸ்கிதியர் ஒருபோது காணப்பட்டனர். ஆரியத் திராவிடர் ஐக்கிய மாகாணத்திலுள்ள அக்ரா, அயோத்தி, இராசபுத்தானா, பிகார் முதலிய இடங்களில் காணப்படு கின்றனர். மங்கோலிய திராவிடர் வங்காளத்தின் தென்பாகத்திலும், ஒரிசாவி லும் காணப்படுகின்றனர். நேபாளம், அசாம், பர்மா, இமயமலைப் பக்கங்களி லுள்ள தமிழ் மக்களின் கண்கள் மங்கோலிய மக்களின் கண்கள் போன்றன. பர்மியர், மங்கோலியருடன் கலந்த தமிழர். துருக்கிய இரானிய தமிழர் பலுச்சிஸ்தானத்திலும் மேற்கு எல்லைப் புறங்களிலும் காணப்படுகின்றனர். அராபிய அல்லது அப்கானிய கலப்புடைய தமிழர் தோற்றத்தில் ஸ்கிதியர் அல்லது துருக்கியரைப் போன்றோர். இவர்கள் பல இன மக்களின் கலப்பி னால் தோன்றியவர்கள் ஆகலாம். திராவிடர் இலங்கை முதல் கங்கைவெளி வரையிற் காணப்படுகின்றனர். எழுத்து மக்கள் பேச்சினால் தம் எண்ணங்களை அண்மையிலுள்ளவர் களுக்கு விளக்கினார்கள். சேய்மையிலுள்ளவர்களுக்குத் தம் எண்ணங் களை விளக்குவதற்கு அது பயன் அளிக்கவில்லை. ஆகவே சேய்மைக் கண் உள்ளவர்களுக்குத் தம் கருத்துக்களை உணர்த்தும் முகத்தான் எழுத் துக்கள் தோன்றின. ஆதியில் மக்கள் தங்கருத்துக்களைச் சித்திரங்கள் வாயி லாக விளக்கினர். ஒருவன் மற்றொருவனை வாளினாற் கொன்றான் என்னும் கருத்தை வெளியிட வேண்டுமாயின், கீழே ஒருவன் உதிரம் நாற்புறமும் பரவும்படி படுத்துக்கிடப்பது போலவும், மற்றொருவன் கையில் வாளை வைத்துக்கொண்டு ஓங்கி வெட்டுவதுபோலவும் எழுதிக்காட்டுவது வழக்கம். இவ் வகைச் சித்திரங்களும், உருவக் காட்சிகளும் மனிதருடைய புறத் துறுப்பைப் பற்றிய செயல்களைக் காட்டுவதற்காக மாத்திரம் பயன்பட்டு வந்தனவேயன்றி, மனத்தின் நிகழ்ச்சிகளாகிய கோபம், பொறாமை, துக்கம், மகிழ்வு, செருக்கு, வீரம், பயம் முதலிய தோற்றங்களைக் காட்டுவதற்குப் பயன்படவில்லை. ஆகவே மக்கள் இவ் வகை மனத்தோற்றங்களையும் மேற்படி உருவங்கள் மூலமாகத் தெரிவிக்கவெண்ணிப் பாடுபட்டு வந்தமை யால், அவர்கள், சித்திரவேலையிலும் கல், மரம் முதலியவற்றால் உருவங் களைச் செதுக்குவதைப் பற்றிய வேலைகளிலும் திறமையடைந்தனர். எழுத் துக்கள் உண்டாயிராத காரணத்தினாலேயே ஆதியில் சித்திர வேலைகளும் உருவம் செதுக்கும் வேலைகளும் வளர்ச்சியடைந்திருந்தனவென்று கூறலாம். சித்திரங்கள் பெரும்பாலும் கட்புலனாகும் பொருள்களை யன்றிக் கட்புலனாகாத மனவுணர்ச்சிகளையும் பிற பண்புகளையும் விளக்குவ தற்குப் பயன்படாமலிருந்தன. ஆகவே மன உணர்ச்சிகளையும் பண்பு களையும் உணர்த்தும் சில குறியீடுகள் சித்திரங்களுடன் கலந்து எழுதப்பட் டன. இது அறிவைக் குறிக்கக் கண்ணையும், காலத்தைக் குறிக்க வட்டத்தை யும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பையும், விடாமுயற்சிக்குத் தேனீயை யும், வெற்றிக்குக் கருடனையும் எழுதிக் காட்டுதல் போன்றது. பேரு (தென் அமெரிக்கா) தேசமக்கள் எழுத்துக்குப் பதில் கயிறுகளில் பலவாறு முடிச்சு களிட்டு வழங்கினர்.1 இவ்வாறு எழுதுவதாலும் மக்கள் உச்சரிப்பு முறையான மொழியில் தம் எண்ணங்களைப் பிறர்க்கு உணர்த்த மாட்டாதவர்கள் ஆயினர். ஆகவே, அவர்கள் சில சித்திரங்களை எழுதி அச் சித்திரங்கள் குறிக்கும் பொருள் களுக்குரிய பெயர்களின் முதல் அசைகளைச் சேர்த்து, வாசிக்கக் கருதிய சொற்களின் உச்சரிப்பு வரும் முறையில் எழுத ஆரம்பித்தார்கள். இது கத்தரிக்காயையும் அதன் பக்கத்தே ஒரு கோலையும் எழுதிக் கத்தரிக்கோல் என வாசித்தல் போன்றது. இம் முறையில் எழுதுவதும் மிகக் கடினம் அளித்தமையின் ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்புக்கும் ஒவ்வொரு குறியீடு அமைக்கப்பட்டது. இந் நிலைமையிலுள்ளனவே சீன எழுத்துக் களும், மொகஞ்சொதரோ எழுத்துக்களுமாகும். பின்பு மொழியில் எத்தனை ஒலிகள் இருக்கின்றன என்று உச்சரித்து அறிந்து ஒவ்வொரு ஒலியையும் குறிக்க ஒவ்வோர் குறியீடு அமைக்கப்பட்டது. அக் குறியீடுகளாகிய எழுத் துக்களைச் சேர்த்துச் சொல்லை உச்சரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்திய மொழியில் சித்திர எழுத்துக்கள் அடைந்த பலவகை மாற்றங்கள் அறியப்படுகின்றன. சித்திர எழுத்துக்கள் மண் தகடுகளில் சதுரமான நாணற் குச்சிகளால் எழுதப்பட்டபோது கீறுகளாக அமைந்தன. அவ்வகை எழுத்துக்கள் ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன. தமிழ் எழுத்துக்கள் சித்திர எழுத்தில் ஆரம்பித்துப் படிப்படியான பல மாற்றங்கள் அடைந்துள்ளன. தமிழர் பயன்படுத்திய அவ் வகை எழுத்துக்கள் என்றேனும் நமக்குக் கிடைத்தில; சீன எழுத்துக்கள் போன்ற அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்களே கிடைத்துள்ளன. சித்திர எழுத் துக்கள் தமிழில் வழங்கின என்பதற்குரிய பிராமணங்கள் யாப்பருங்கல விருத்தி மேற்கோள், திவாகரம் முதலிய நூல்களிற் காணப்படுகின்றன. “காணப் பட்ட வுருவ மெல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவி லோவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்.” (யாப்பருங்கலவிருத்தி. மேற்கோள்) “உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய.” (இலக்கணக் கொத்து. மேற்கோள்) மொகஞ்சொதரோ எழுத்தினின்றும் பிராமி எழுத்துத் தோன்றிற்று. இது அசோகன் காலத்தும் அதற்கு முன்பும் வடபிராமி, தென்பிராமி என இரு வகையாக நடைபெற்றது. பிராமி எழுத்துக்கள் கி. மு. 9ஆம் நூற்றாண்டுக்கு முன்பு உள்ளதென்பதற்கு ஆதாரமுண்டு. இவ் வகை எழுத்துப் பொனிசியா விலே மோப்நகரின் (Moab) அரசனது (கி.மு. 850) பட்டையத்திற் காணப்படு கின்றது. இக் காரணத்தினால் பொனீசிய வியாபாரிகளிடமிருந்து இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள் என்று வரலாற்று நூலார் எல்லோருந் துணியலாயினர்.1 ஆனால், மொகஞ்சொதரோ எழுத்துக்கள் ஆராயப்பட்டபின் இம் முடிவு நேர்மாறாக மாறியுள்ளது.2 பிராமி எழுத்துக் களினின்று பொனீசிய எழுத்துக்களும், பொனீசிய எழுத்துக்களினின்று கிரேக்க, உரோமை எழுத்துக்களும், இவைகளினின்றும் ஏனைய ஐரோப்பிய எழுத்துக்களும் தோன்றின. பிராமி எழுத்துக்களினின்றும் தமிழ் வட்டெழுத் துக்களும், வட்டெழுத்துக்களிலிருந்து இக் காலத் தமிழெழுத்துக்களும் வளர்ச்சியடைந்தன. வட்டெழுத்து அண்மைக்காலம் வரையில் மலை யாளத்திலே கோலெழுத்து என்னும் பெயருடன் வழங்கிற்று. மத்தியதரைமக்கள் இனத்தினர் எல்லோருக்கும் மொழியும் எழுத்தும் ஒன்றே உலகில் மக்கட்குலம் எப்படி ஒன்றாயிருந்ததோ அப்படியே மொழி யும் ஒன்றாயிருந்ததென்பது மொழிநூலார் நன்கு ஆராய்ந்து காட்டிய உண்மை. உலகில் மிகப் பழைய மக்கள் மத்தியதரை முதல் கிழக்கிந்தியத் தீவுகள்வரையில் வாழ்ந்தோராவர்.3 இந் நாடுகளில் வழங்கிய முதியமொழிகள் ஓர் அடிமரத்தினின்றும் கவர்விட்ட கொம்பர்கள் போன்றன என்று ஆராய்ச்சி வீரர் நிலைநாட்டியுள்ளனர். இதனால், தமிழ், ஆதிமொழிக்கு மிக அண்மையில் உள்ளது எனத் தோன்றுகின்றது. சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் கிடைத்த முத்திரைகளிற் காணப்பட்ட எழுத்துக்களோடு உலகின் பல பாகங் களில் வழங்கிய எழுத்துக்களையும் ஒப்புநோக்கிய கெரஸ் பாதிரியார் கூறி யிருப்பது வருமாறு: “மொகஞ்சொதரோ எழுத்துக்களைப் போன்றன இலிபிய வனாந் தரத்தை அடுத்த செலிமா என்னுமிடத்திற் காணப்படுகின்றன. இதனைப் பேராசிரியர் இலாங்டன் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். “மொகஞ்சொதரோ எழுத்துக்குறிகள் போன்ற (ஸ்பானிய எழுத்துக் குறிகளையும் அவைபோன்ற உச்சரிப்பு ஒலிகளையும் ஐபீரிய மொழியிற் காணலாம். (இம் மொழி பாஸ்கு எனவும் வழங்கும்.) “எதிரூஸ்கிய (பழைய இத்தாலிய) மொழி எழுத்துக்கள் இலிபிய மொழி இனத்தைச் சார்ந்தன. இம் மொழியில் மொகஞ்சொதரோ எழுத்துக் குறியீடுகளையும் உச்சரிப்பு ஒலிகளையும் காண்பது கடினமன்று. “பிந்திய இலிபிய மொழி எழுத்துக்களும் நுமிதிய பேபெரிய (Numidic and Berberic) எழுத்துக்களும் முன் குறிப்பிட்ட இயல்பினவே. “மினோவ (Crete) எழுத்துக்கள் மிகப் பழையன. இவை மொகஞ் சொதரோ எழுத்துக்களோடு கிட்டிய ஒற்றுமையுடையன. சைபிரஸ் எழுத்து மினோவ எழுத்தின் ஒரு பிரிவினதே. “சில மொழிகள் எழுத்துக்கள் இல்லாமல் இருந்தன. அம் மொழி களுக்குரியோர் திராவிட மக்களோடு ஊடாடிய பின் மொகஞ்சொதரோ எழுத்துக்களைக் கையாண்டனர். பின்பு அவர்கள் அவ் வெழுத்துக்களைத் தாமே வளர்ச்சி செய்தனர்.” “சுமேரிய மொழிக்கும் மொகஞ்சொதரோ மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இக் கொள்கையைப் பேராசிரியர் இலாங்டன் தம் விரிவுரை களில் நன்கு வலியுறுத்தியுள்ளார். “ஆப்பெழுத்துக்கள் சுமேரிய எழுத்துக்களினின்றும் பிற்காலங் களில் வளர்ச்சியடைந்தன.” “பழைய எல்லம் மொழி எழுத்துக்கள் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன.” “பழைய சீன எழுத்துக்கும் மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது இவ்வளவு காலமும் ஒருவர் கருத்திலும் படவில்லை. மொகஞ்சொதரோ எழுத்துக்களும் பழைய சீன எழுத்துக் களும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த இரண்டு பிள்ளைகள் என்று கூறலாம். கோயங் (Hoang கி. மு. 2500) கூற்றால் இது வலியுறுகின்றது. “சாபிய அல்லது தென் அராபிய எழுத்துக்கள், இன்னும் மொகஞ் சொதரோ எழுத்துக்குறிகள் சிலவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன. கிழக்குத் தீவுகளில் எழுத்துக்கள் பெரும்பாலும் மொகஞ்சொதரோ எழுத் துக்களைப்போலவேயிருக்கின்றன: சில ஒன்றாகவே காணப்படுகின்றன.”1 பேராசிரியர் சி.ஆர். கன்றர் கூறியிருப்பது வருமாறு: “துளையிட்ட பழைய இந்திய நாணயங்களிற் காணப்படும் அடை யாளங்களும் மொகஞ்சொதரோ எழுத்துக்களைப் பின்பற்றியனவே. மொகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்து மாத்திரமன்று; தென் அரேபிய, மினோவ, எழுத்துக்களும் பிறந்தன. மொகஞ்சொதரோ எழுத்துக்கள் தெற்கு ஆசியா வழியாக வந்து பொனீசிய கிரேக்க உரோமை எழுத்துக்களைப் பிறப்பித்திருக்கின்றன.”2 “சுமேரியம் எல்லம் முதலிய மொழிகள் திராவிட மொழிகளோடு ஒலி முறையில் ஒற்றுமையுடையன. ஆகவே டாக்டர் சர்தேசி என்பவர் கிரேத்தா, இலிசிய, சுமேரிய, எல்லம் மொழிகள் ஒரே தொடர்புடையன வென்றும், ஐசியன் தீவுகள் சின்ன ஆசியா, மெசபெதேமியா முதலிய நாடுகள் ஒரே நாகரிக இணைப்புடையனவாயிருந்தனவென்றுங் கூறுவர்.” (“திராவிட இந்தியா” பக்கம் 41-42) எப்படி மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரே இனத்தவர் களாகக் காணப்படுகின்றார்களோ, அப்படியே அவர்கள் மொழிகளும் ஒரே இனத்தைச் சார்ந்தன என இக் கால மொழி நூலார் ஆராய்ந்து கூறியுள்ளனர். மொழி நூலார் கூறிய முடிவுகளை எல்லாம் ஒருங்கு வைத்து ஒப்புநோக்கிய வெல்சு என்னும் ஆசிரியர் மத்தியதரை நாடுகளில் ஆதியில் வழங்கிய ஆரியமல்லாததும் கமத்தியம் அல்லாததுமாகிய மொழி, பாஸ்க்கு (Basque) எனப்படும் என்றும், அது திராவிட மொழிக்கு நெருங்கிய உறவுள்ளதென் றும் குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு: “பாஸ்க்குமொழி, காக்கேசிய மலைப்பக்கங்களிற் பேசப்படும் மொழிக்கு இனமுடையது; ஒருகாலத்து அது மிகவும் பரவலை அடைந் திருந்தது; முந்திய கமத்திய மொழிக் கூட்டங்களாகப் பரந்து மத்தியதரை மக்களாற் பேசப்பட்டது; தெற்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வழங்கியது; இந்தியாவிலுள்ள திராவிட மொழிக்கு நெருங்கிய தொடர் புடையது. மேற்குத், தெற்கு ஐரோப்பாவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் மொழிக்கூட்டங்கள் தோன்றியிருந்தன. ஆரியம் வருதலும், அவை மறைந் தன. பழைய மொழியைச் சார்ந்தவை கிரேத்தா (Crete) இலிதிய மொழிகள், இவை 1பாஸ்க்கு மொழியைச் சேர்ந்தவை ஆகலாம். மங்கோலியம், பாஸ்க்கு, காக்கேசியம் முதலிய மொழிகளை இணைக்கும் மொழி சுமேரியமாக விருக்கலாம். இது மெய்யாகவிருந்தால், பாஸ்க்கு, காக்கேசியம், திராவிடம், மங்கோலியம் முதலிய மொழிகள் இன்னும் மிகப் பழைய மொழிகளாகும். ஆரியம் செமித்தியம் கமித்தியம் முதலிய மொழிகளைத் தொடுக்கும் மொழி ஒன்று கண்டுபிடிக்கப்படாம லிருக்கலாம். குட்டியீனும் விலங்குகள் எப்படிப் பல்லி முன்னவையிலிருந்து (ancestors) வளர்ச்சியடைந்து பல்லிக்கு இனமாயிருக்கின்றனவோ அது போன்ற இனமே அம் மொழிகளுக்கும் இம் மொழிக்கும் இருக்கலாம்.”2 மொகஞ்சொதரோ எழுத்துக்கள் இவ் வெழுத்துக்களைப் பற்றிக் கெரஸ் பாதிரியார் வெளியிட்டுள்ள சில உண்மைகளை ஈண்டுத் தருதும். “இவ் வெழுத்துக்கள் ஓவிய எழுத் துக்கள் தொடர்பானவை. இவை கிழக்குத் தீவுகள் முதல் இஸ்பெயின் தேசம் வரையில் வழங்கின. இவை ஓவிய எழுத்துக்களுக்கும் ஒலிமுறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்கும் இடைப்பட்டன; இந்திய நாட்டுக்கு அயலில் வழங்கிய எழுத்துக்களுக்கும் சீன சுமேரிய எகிப்திய எழுத்துக்களுக்கும் இனமுடையன. மனிதன், மீன், பறவை, மரம், நாற்காலி, மேல், கீழ் என்ப வற்றை அடையாளங்களாற் குறிப்பிட்டுக் காட்டுவது எளிது. மொகஞ்சொதரோவில் வழங்கிய சொற்களில் பல திராவிட மொழி களிற் காணப்படுகின்றன. ஆகவே திராவிட மொழிகளுக்குத் தாய் மொகஞ் சொதரோ மொழி எனக் கூறலாம். திராவிட மொழிகளிற் காணப்படும் மொகஞ் சொதரோ மொழிச்சொற்களில் பல தமிழிற் காணப்படுகின்றன. ஆகவே தமிழ் மற்றைய திராவிட மொழிகளிலும் மூப்பு உடையது என்று கருதப்படு கின்றது. மற்றைய திராவிட மொழிகளில் சில சொற்கள் காணப்படுகின்றன. துன்பத்தில் ஆழ்ந்திருத்தல் என்னும் பொருள் தரும் பகில் (Pagil) என்னும் சொல் கன்னடத்தில் உள்ளது. முதலிலும் கடையிலும் என்பதைக் குறிக்கும் கடிதல, கொடிதல என்னும் சொற்கள் துளு மொழியில் காணப்படுகின்றன. பழைய திராவிடச் சொற்கள் பிராகூய் மொழியிற் காணப்படலாம். கண் கல் என்னும் சொற்கள் க்கண் (Khan) க்கல் (Khal) என அம் மொழியில் வழங்குகின்றன. “யான் மொகஞ்சொதரோப் பட்டையங்களிற் காணப்பட்டவற்றை ஒலிமுறையில் எழுதி வைத்திருந்து அவைகளை யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் அவைகளின் இடையே இருபத்தைந்து செய்யுட்களின் பகுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்தார். அப் பாட்டுக்கள் பலவகைப் பா இனங்களில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்து, குறள் வெண்பாக்கள். படிப்பவர்கள் அதில் ஒன்றைக் கேட்க விரும்பலாம். ஆகவே அவற்றுள் ஒன்றை ஈண்டுத் தருகின்றேன். நண்றுறுறு தூக்குஅடு கார்முகில்ஊர் வேலிஒரூர் எடுஎட்டு றுஉயர்எல் இர்ஆர்இரி பேர்கடவுள் ஓர் ஊர் என்னும் ஆண்டை அடைகின்ற சத்தமிடும் உயரச் செல்லும் ஞாயிற்றின் இரண்டு வழிகளையுடைய பச்சைக் (பயிர்?) கடவுள் மலைமுகில்களும் இடியுமுடைய நாட்டுக்கு வெளியே உள்ளது.1 இன்னொரு பட்டையத்திற் காண்பது, “கல்லர் மீனவர் கான் கடஎர் வல்விடடு கல்குறவ வல் குரங்கர் நால்” என்பது. கலந்த (உறவுகொண்ட) நாடுகளின் மக்களிடையே நாலு வலிய குரங்கர் தோன்றும் (அம்மக்களின்) கோட்டை வலிய காலுள்ள மீனவராற் பிடிக்கப்பட்டது என்பது இதன் பொருள். தல் தா விட்டில் என்பதற்கு விளங்குகின்ற வீடு என்று பொருள். தல் விளங்குதலைக் குறிக்கும். முகில் என்பது மழையில்லாத முகிலையும், கருமுகில் என்பது மழை முகிலையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளன. கல்பேட் என்னும் ஆசிரியர் கோரியா மொழி இலக்கணம் திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒத்திருப்பதை ஆராய்ந்து காட்டியுள்ளார்.2 இடப்பெயரும் மக்கட்பெயரும் முற்காலத்தே ஊர்கள் பெரும்பாலும் கோயிலைச் சுற்றி எழுந்தன. அவ்வாறு எழுந்த இடங்கள் கோயிலின் பெயர்களால் அறியப்பட்டன.1 மேற்கு ஆசியாவிலே அசுர் என்னும் கடவுளின் கோயில் எழுந்த இடம் அசிரியா எனவும், பேபெல் என்னும் கோயில் தோன்றிய இடம் பாபிலோன் எனவும், நினேவ் என்னும் ஆற்றுத் தெய்வம் கோயில் கொண்ட இடம் நினோவா எனவும் பெயர் பெற்றன. சிறிய ஊர்கள் பல சேர்ந்தது ஒரு நாடாகும். சிறிய ஊர்களில் வாழும் மக்கள் சிறப்பாக நாட்டின் பெயரால் அறியப்பட்டனர். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிற் சென்று குடியேறி னால் அந் நாடு குடியேறிய மக்களின் பெயரை ஏற்றலும் இயல்பு. இது பிரித் தனில் அங்கிளர் குடியேறினமையின் அது அங்கிள்லாந்து (இங்கிலாந்து) எனப்பட்டது போன்ற வழக்கு. ஆதியில் ஆண்ட அரசனின் பெயர்களைக் கொண்டு இடங்களுக்குப் பெயர் உண்டாவதுமுண்டு.2 மக்கட் பெயரிலிருந்து மொழிப்பெயர் மக்கள் எப்பெயரால் அறியப்படுகிறார்களோ அப் பெயரிலிருந்தே மொழிப்பெயர் தோன்றுதல் இயல்பு. சேர்மனி, சேர்மனியர், சேர்மனியம்; கிரீஸ், கிரேக்கர், கிரேக்கம்; மலையாளம், மலையாளர், மலையாளம்; தெலுங்கானம், தெலுங்கர், தெலுங்கு போன்றன இதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்ச்சொல் தோற்றமும் இவ் வகையினதே தமிழ் ஆதியில் மொழிக்கு உண்டான பெயரென்றும், அப் பெயரி னின்றும் மக்களுக்கும் நாட்டுக்கும் பெயருண்டாயிற்றென்றும், அண்மைக் காலத்து ஆசிரியர்கள் பிறழ உணர்ந்தமையால் தமிழின் தோற்றத்தைப் பற்றிப் பலவாறு கூறியிருக்கின்றனர். மக்கட் பெயரிலிருந்தே மொழிப் பெயர் உண்டாதல் விதி என்பதை விளக்கி ஆசிரியர் சிவராசபிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் பகுதி வருமாறு: “அதனைப் (மொழியைப்) பேசும் மக்களிலிருந்து மொழி பெயர் பெற்றதெனக் கொள்வதே தகுதி. மொழிப்பெயரிலிருந்து மக்களின்பெயர் தோன்றிற்றென்பது ஏற்புடைத்தன்று. சங்ககாலப் புலவர்களின் சொல்லாட்சி யிலிருந்து தமிழ் என்பது மொழிப் பெயரிலும் பார்க்கச் சாதிப்பெயரளவில் மிகப் பழமையுடையதெனத் தெரிகின்றது. இது உலகின் மற்றப் பாகங்களி லுள்ள மக்கள் வரலாற்றோடும் ஒத்திருக்கின்றது. ஆகவே இதுகாறும் தமிழ்ச் சொல் தோற்றத்தைப்பற்றிக் கூறப்பட்டன அடியோடு மாறிவிடுகின்றன. தமிழின் தோற்றத்தைக் கூறவந்த எல்லோரும் அது சாதியையன்றி மொழி யையே குறித்ததெனக் கொண்டனர். உண்மை இதற்கு எதிர்மறை. இச் சொல்லின் தோற்றம் குலத்தொடர்பாகவன்றி மொழித்தொடர்பாக இருத்தல் முடியாது. அநேக சாதிகளின் பெயர்களைப்போலக் குலத்துக்குரிய இப் பெயரும் விளக்கப்படுத்தக்கூடாமல் இருக்கின்றது. இச் சொல்லின் தோற்றத் திற்குரிய காலம் எல்லா வரலாற்றுக் காலத்தையும் துளைத்துச் சென்று, நம்மை இவ் வுலகம் முழுமையிலும் வாழும் மக்கட்குலங்கள் எல்லாவற்றின் பிறப்பையும், அவை பரவுவதையுங் கண்ட ஓர் உலகத்துக்குக் கொண்டு செல்கின்றது. அது எல்லா வரலாற்றையுங் கடந்து சென்று மனிதப்பழமை யின் ஆழத்திலுள்ள வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம் ஒன்றைக் காட்டுகின்றது. அக் காலத்தைப்பற்றி மக்கட்குல ஆராய்ச்சி, கனவு காண் கின்றதேயன்றி அதைப்பற்றிய முடிவு ஒன்றும் கூறவில்லை. அவ் வகை யான திரையின் பின் இச் சொல்லும் இருக்கின்றது. இம் மொழி உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் பழமையுடையது.”1 தமிழ் தமிழ் என்னும் சொல் மொழிக்குப் பெயர் மட்டுமல்லாமல் இனிமை நீர்மை என்னும் பொருள்களையும் உணர்த்தும்.2 இலக்கியங்களில் ‘தேனுறை தமிழ்’ (கல்லாடம்), “தமிழ் தழீஇய சாயல்” (சிந்தாமணி) எனத் தமிழ் இனிமை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இச் சொல் இனிமையை உணர்த் தற்குரிய காரணம், அதன் மூலம் முதலியன அறிய முடியாதன. சிவன், ஞாயிறு, முருகன் முதலிய கடவுளர்களோடும் தமிழர் மதத்தோடும் தமிழ் தொடர்புடையதென்பது தமிழ் நாட்டில் வழங்கும் பழைய ஐதீகம். இவ் வைதீகம்பற்றியே, “தென் மொழியை உலகமெலாந்தொழுதேத்தும் குட முனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்.” “செந்தமிழ்ப் பரமாசிரி யனாகிய முருகக் கடவுள் அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தினார்” என்பன போன்ற வாக்கியங்கள் எழுந்தன. “சந்தனமும் புழுகுந் தண்பனி நீருடனே கொந்தலர் சண்பகமுங் கொண்டு வணங்கினேன் வந்திடும் வல்வினைநோய் மாற்றுவ துன்பதமே செந்தமி ழாகரனே சிவசிவ சூரியனே.” (பழைய பாடல்) “அசலே சுரர்பத் திரனே குணதிக் கருணோ தயமுத் தமிழோனே.” (திருப்புகழ்) “சுள்ளென் றெறிக்குஞ் சுடரோன்பால் தோன்றியுயிர் உள்ளம் துலக்கி யுலாவலின்-தெள்ளுபுகழ்ப் பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ் ஒண்டமி ழென்மனார் போந்து”1 இச் செய்யுட்கள் ஞாயிற்றினின்றும் தமிழ் பிறந்ததென்னும் வழக் குண்மையை விளக்குவன. சிவன், முருகன் என்னும் பெயர்கள் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கின. ஆகவே தமிழ் என்னும் பெயர் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய யாதோ பழைய சொல் ஒன்றினின்றும் பிறந்ததென ஊகித்தல் பிழையாகாது. இது ஒருபோது எல் என்னும் சொல்லினின்றும் பிறந்திருக்கலாமென்பதைப் பண்டைத் தமிழர் என்னும் எமது நூலிற் காட்டியுள்ளேம். தெலுங்கு மொழியை ஞாயிற்றுக் கடவுள் அருளிச் செய்தார் என்னும் ஐதீகம் ஆந்திரர்களிடையே உண்டு. “தமிழ்ப்” பெயர்க்காரணம் தமிழ் என்னும் சொற்பிறப்பைப்பற்றி யாம் எமது கருத்தை வெளி யிடுகின்றேம். இது முடிவானதன்று; ஏனையோர் கூறியவைகளோடு ஒப் பிட்டு ஆராயத்தக்கது. இவ் வுலக மத்தியில் பெரிய பூகண்டம் (நாவலந்தீவு) ஒன்று இருந்ததென்றும் அதன் மத்தியில் மேருவும் அதனைச் சூழ்ந்து இளாவிருதமும் உள்ளதென்றும், இலங்கைத் தீவு மேருமலையின் ஒரு கொடுமுடி என்றும் புராணங்கள் கூறுகின்றன. இளாவிருதம் என்பதில் விருதம் நாட்டைக் குறிக்கும். இளா என்பது எல் என்பதன் திரிபு. இளாவிருதத்தின் பகுதியாகிய இலங்கை ஈழமென வழங்குகின்றது. ஈழம் என்பதன் அடி எல் என்றே தமிழ் ஒப்பியல் அகராதியில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் காட்டியுள்ளார்கள். எல்லம் என்பது இலங்கையின் பழைய பெயர். இலங்கை என்னும் சொல்லின் அடியும் எல். இலங்கை மக்களின் பழைய மொழி எலு என வழங்கிற்று. இதனாலும் இலங்கையின் பழைய பெயர் எல் அல்லது எல்லம் என நன்கு துணிதும். இலங்கையை ஆண்ட முதல் அரசன் சிங்கமரபினன். ஆகவே எல்லம் சிங்க எல்லம் எனப் பெயர் பெற்றது. மக்கள் சிங்க எல்லர் என்று அறியப்பட்டனர். எல்லம் ஈழமான போது சிங்கஎல்லம் சிங்களமாயிற்று. ழகரம் ளகரமாதலன்றி ளகரம் ழகரமாத லில்லை எனச் சிலர் கூறுவர். சோளர் என்றிருக்க வேண்டியது சோழர் என வழங்குவதை நோக்குக. ளகரம் ழகரமாக உச்சரிக்கப்படும் சொற்கள் பல மொழியாராய்ச்சியால் அறியப்படுகின்றன. மெகஸ்தினஸ் காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒரு சிறிய ஆறுபோன்ற கடல் பிரித்தது. ஆகவே ஒருகாலத்தில் தென்னிந்தியா வும் இலங்கையும் ஒன்றுபட்டு இருந்தன எனக்கொள்ளுதல் பிழையாகாது. ஒரு காலத்தில் தாமிரவர்ணி ஆறு இலங்கைவரையிற் சென்றதெனக் கருதப் படுகின்றது. தாபிரபேன் என்னும் இலங்கையின் பெயர் தாமிரவர்ணி என்பதன் திரிபு என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் எழுதியுள்ளார்கள். இவை போன்ற சான்றுகளால் இந்தியா இலங்கை என்னும் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்திருந்தனவென்று துணிதும். தென் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நாவலந்தீவின் பகுதி; முன்பு எல்லம் என்றே வழங்கியிருத்தல் கூடும். சுமேரிய மக்கள் தென்னிந்தியா அல்லது இலங்கையிலிருந்து சென்றவர்கள் என்பது துணிவு.1 தமிழ்நாட்டினின்றும் சென்ற சுமேரியர் தமது நாட்டிலுள்ள இடம் ஒன்றுக்கும் மலை ஒன்றுக்கும் எல்லம் என்னும் பெயர் கொடுத்துள்ளார்கள். ஒரு நாட்டினின்றும் சென்று இன்னொரு நாட்டிற் குடியேறும் மக்கள் தம் நாட்டு இடப்பெயர்கள் சிலவற்றைத் தாம் குடியேறிய நாட்டின் இடங் களுக்கும் இட்டு வழங்குதல் இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டா. இதனாலும் கிழக்கில் ஓர் எல்லம் இருந்ததென்பது தெற்றெனப் புலப்படும். முற்காலத்து இடப்பெயர்கள் பெரும்பாலும் வழிபடு கடவுளர் தொடர்பாக உண்டாயின என்பது முன் காட்டப்பட்டது. மேற்கு ஆசியாவில் எல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பெயர்களைக் காணலாம். சுமேரியாவிற் போலவே கிழக்கிலும் எல்லம் மாத்திரமன்று, எல்லம் மலையும் இருந்தது. அதற்குச் சிவனொளிமலை என்பதும் பழைய பெயர். இப்பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. மனுவின் பேழை தங்கியதாகப் புராணங் கூறும் வடமலை இதுவே யாதல் கூடும். சுமேரியர் வழிபட்ட ஞாயிற்றுக்கடவுள் தாமுஸ்2 அல்லது தாம்சி எனப்பட்டார். இப் பெயருடன் இக் கடவுள் பொனீசியாவிலும் மற்றும் நாடு களிலும் வழிபடப்பட்டார். தமிழ் என்னும் சொல் இரு சொற்களின் மரூஉ என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. அதன் இறுதி, எல் என்பதன் திரிபாகிய இல். இல்லே பின் இழ் ஆயிற்று. தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்ததென்னும் வழக்குண்மையும், எல்லம் என்பது ஞாயிற்றுக் கடவுளை வழிபட்ட மக்களின் நாட்டைக் குறித்தலும், மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ் ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சொல்லி னின்றும் பிறந்ததெனக் கூறுதலும் மிக ஒத்துள்ளன. உண்மை இவைகளுக்கு அண்மையில் கிடக்கின்றது. கார்த்திகேய முதலியார், தமிழ், தாமம் என்னும் சொல்லினின்றும் பிறந்ததென்கிறார். இதிலும் பெரிய உண்மையிருக்கின்றது. தாமம் என்னும் சொல் மலையையும் ஞாயிற்றையும் இன்னும் பல பொருள் களையும் குறிக்கும். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டாயின் அது மிகப் பழையசொல் எனக் கொள்ளுதல் வேண்டும். வெவ்வேறு அடியாகப் பிறந்து வெவ்வேறு பொருள்களை உணர்த்திய சொற்கள் பல, காலத்தில் திரிந்து மருவி உச்சரிப்பில் ஒரு சொல்லாக வருதலுண்டு. இவ் வுண்மை மொழியாராய்ச்சியால் நன்கு அறியப்படும். தாமம் என்னும் சொல் மிகப் பழையதாயிருத்தலாலும், தமிழ் நாட்டினின்றும் சென்ற சுமேரியர் ஞாயிற்றுக் கடவுளைத் தாமுஸ் என வழங்கியமையாலும் இலங்கையிலுள்ள ஞாயிற்று மலை ‘தாமம்’ எனவும், அம் மலையையுடைய நாடு தாமம் எல்லம் எனவும் வழங்கியிருக்கலாமோ என்பன சிந்திக்கத்தக்கன. அவ்வா றாயின், தாமம் தாம் என மருவித் தா மெல்லமாகி, எல்லம் ஈழமானபோது தாமீழமாய்ப் பின் தமிழம், தமிழாயிற்றெனக் கொள்ளலாம். சிவன் என்பது ஞாயிற்றின் பழைய பெயரென்பது முன் விளக்கப்பட்டது. இவ்வாறு கொள்ளின், தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்தது; அது சிவன் முருகன் முதலிய கடவுளர்களோடும் சைவசித்தாந்தத்தோடும் தொடர்புடையது என்று வரும் பழைய வழக்குண்மைகளுக்கு ஒருவாறு விளக்கம் உண்டா கின்றது. இவ்வாறு கூறுதல் தமிழை இலங்கையோடு தொடர்புபடுத்துதற் குரிய சூழ்ச்சி எனச் சிலர் கருதலாம். ஒரு காலத்தில் தமிழரின் இருப்பிடம் 1தெற்கிலேயே இருந்ததென்றும், இலங்கையும் தென்னிந்தியாவும் அக் காலத்து வெவ்வேறாக இருக்கவில்லையென்றும் இன்னும் ஒருமுறை நினைவுறுத்துகின்றேம். வடக்கே வழங்கிய மொழியின் வரலாறு ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்தியா முழுமையும் தமிழ் வழங்கிற்று. ஆரியர்களுடைய வேத பாடல்கள் பிராகிருத மொழியில் செய்யப்பட்டன. பிராகிருதம் இலக்கண வரம்பில்லாத மொழி. பிராகிருதத் தின் திருத்தமே சமற்கிருதம் எனப் பெயர்பெற்றது. ஆரிய மக்கள் பிராகிருத மொழியைப் பேசினார்கள். வேத பாடல்களில் பல திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. அவர்கள் பிராகிருதத்தோடு திராவிடச் சொற் களையும் கலந்து பேசினார்கள். உற்பத்தியில் வடமொழியைச் சார்ந்தன எனப்படும் வடஇந்திய மொழிகளின் அமைப்புத் தமிழை ஒத்திருத்தலின் நாளடைவில் அவ்வாரிய மக்கள் தமிழையே பேசத் தொடங்கினார்கள் என்றும், அவர்கள் வழங்கிய தமிழில் ஆரியச் சொற்கள் பெரிதும் காணப் பட்டன என்றும் கொள்ளுதல் அமையும். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் விளங்கிய கௌதமபுத்தர் தம் அருள்மொழிகளை மகத மொழியில் (பாளியில்) செய்தார்.1 வடமொழியிலில்லாத எ.ஒ. முதலிய குறில்கள் பாளியிற் காணப்படுகின்றமையால் பாளி மொழி வழங்கிய நாட்டில் முன்பு தமிழ் வழங்கியதென்பதும் பாளிமொழிக்குரியோர் தமிழரென்பதும் முன் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ளன. புத்தருடைய மதக்கொள்கைகள் சாங்கிய மதத்தைத் தழுவியவை.2 சாங்கியமதம் வேதமதத்துக்கு மாறுபட்டது. கி. மு. 5ஆம், 4ஆம் நூற்றாண்டுகளில் பௌத்த நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப் பட்டன. மரப்பட்டையை வார்ந்து எடுத்த மிருதுவான அதன் உட்பகுதியும் ஓலைகளும் எழுதப் பயன்படுத்தப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பௌத்தப் பட்டையங்களில் மசி என்னும் சொல் காணப் படுகின்றது. ஆகவே, அக்காலத்து எழுதுவதற்கு மசியும் பயன்படுத்தப் பட்டதெனத் தெரிகின்றது. அசோகர் காலத்தில் பாளி மொழி வழங்கிற்று. பாணினியின் இலக்கணம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது. அசோகரின் பட்டையங்கள் பிராகிருதத்தில் எழுதப்பட்டன. பௌத்தரும் சைனரும் சமற்கிருதத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பிற்காலத்திலேயே சமற்கிருதம் பயின் றனர். அப்பொழுது பிராகிருதம் பாளிக்கும் சமற்கிருதத்துக்கும் இடையி லுள்ள ஒருநிலையை அடைந்திருந்தது. அம்மொழி புத்தரின் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரா என்னும் பாடலில் காணப்படுகின்றது. இது கதா மொழி எனவும்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் வடக்கே உள்ள மதுரை யில் பொறிக்கப்பட்ட சைன பட்டையங்களில் பிராகிருதம் காணப்படு கின்றது. இதற்குப் பின் சமற்கிருதம் வழக்கில் இருந்தது. சமற்கிருதப் பட்டையங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சமற்கிருதம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சைனர் இதனைப் பயன்படுத்தவில்லை. ஆறாம் நூற்றாண்டில் புத்த நூல்கள் சமற்கிருதத்தில் எழுதப்பட்டன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த தியான்சியாங் என்னும் சீனப் பிரயாணி புத்த சன்னி யாசிகள் சாதாரண பேச்சிலும் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினர் என எழுதி யுள்ளான். மகமதியர் காலம் வரையில் சமற்கிருதம் எழுத்து மொழியாக விருந்தது. பஞ்சாபி, இந்தி, குசராத்தி, மராட்டி முதலியன பிராகிருதத்தி னின்றும் பிறந்தனவாயினும் அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்தன. சமற்கிருத நூல்கள் தேவநாகரியில் எழுதப்பட்டன. இந்தி, மராட்டிப் புத்தகங்கள் இவ் வெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவ் வெழுத்தில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழய பட்டையங் களும், கி.பி. 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய கையெழுத்து நூல்களும் காணப்படுகின்றன. ஆரிய வர்த்தம் அல்லது இந்துஸ்தானம் எனப்பட்ட விந்தத்துக்கும் இமயத்துக்கும் இடைப்பட்ட நாட்டில் கி.மு. 200 வரையில் ஆரியம் வழங்கியதெனக் கூறலாம். சமற்கிருத நாடகங்களில் அரசரும் இருடிகளும் சமக்கிருதத்திலும், பெண்களும் பொதுமக்களும் பிராகிருதத் திலும் பேசுவதாக எழுதப்பட்டிருத்தல் காணப்படுகின்றது. ஆகவே, பிராகிருதமே மக்கள் மொழியாயிருந்ததெனத் தெரிகின்றது. சமற்கிருதம் இலக்கிய மொழியாயிருந்ததன்றி ஒருபோதும் பேசப்படவில்லை. வடக்கே காணப்படும் மொழிகளுள் முக்கியமுடையன பின் வருவன: (1) மேற்கு இந்தி, (2) கிழக்கு இந்தி, (3) இராசஸ்தானி, (4) குசராத்தி, (5) பஞ்சாபி, (6) காஸ்மீரி, (7) லாகின்டா (Lahinda), (8) சிந்தி, (9) மராட்டி, (10) பீகாரி, (11) ஒரியா (Orya), (12) வங்காளி, (13) அசாமி, (14) இந்துசீனம்.1 (இந்தியாவின் தொலைவில் (Further India) வழங்குவது.) தமிழ்ச் சங்கம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் நிருவினார் பாண்டியர்கள். இவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுமென இத் தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம். இனி இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனா ரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும் கீரந்தையு மென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழ மாலையும், வியாழமாலை யகவலுமென இத் தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமுமென இவையென்ப. அவர் மூவாயிரத்தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத் திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 1கபாடபுரத் தென்ப. அக் காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது. “இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடை யரனாரும். பெருங்குன்றூர் கிழாரும், இளந் திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத் தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன, நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகையும், நற்றிணையும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றியாண்டு என்ப. அவர் களைச் சங்க மிரீஇயினார், கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப” (இறையனார் களவியல் உரை.) இதன் சுருக்கம்:- தலைச்சங்கம் கடல்கொண்ட தென் மதுரையிற் கூடிற்று. இக் கழகத்துக்கு வரையறுக்கப்பட்ட உறுப்பினர் 549 பேர். இச் சங்கம் 89 பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் 4,440 ஆண்டு நடைபெற்றது. இச் சங்கத்தில் நூல்களையோ தனிப்பாடல்களையோ பாடிக்கொண்டு வந்து அரங்கேற்றிய புலவர் 4,449 பேர். இடைச்சங்கம், தென் மதுரையின் அழிவுக் குப்பின் கபாடபுரத்தில் நடைபெற்றது. இச் சங்க உறுப்பினர் 59 பேர். இச் சங்கம் 59 பாண்டியர் ஆட்சியில் 3,780 ஆண்டு நடைபெற்றது. இச் சபையில் பாடல்களை அரங்கேற்றிய புலவர் 3,700 பேர். இவர்களுள் ஐவர் பாண்டிய மன்னர். கபாடபுரத்தைக் கடல் கொண்டபின் சங்கம் மதுரையிற் கூடிற்று. இச் சங்கம் 49 அரசர் காலத்தில் 1800 ஆண்டு நடைபெற்றது. இச் சங்கத்துப், புலமையில் அரங்கேறிய புலவரின் எண் 449. இவருள் மூவர் பாண்டியர். இச் சங்க உறுப்பினர் 49 பேர். தமிழ்ச்சங்கம் 197 அரசர் காலத்தில் 9,990 ஆண்டுகள் நடைபெற் றிருக்கின்றது. சங்க ஆராய்ச்சி இறையனார் களவிய லுரைகாரர் இச் சங்க வரலாற்றை அக் கால நூல்களில் கண்டவற்றை ஆதாரமாகக்கொண்டே எழுதியுள்ளார் என உய்த்துணர்தல் வேண்டும். இவ் வகை வரலாறுகள் பல, ஆங்காங்கு அக் கால நூல்களிற் காணப்பட்டன என்பதற்கு, “சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கலகத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னும்” என்று பேராசிரியரும், கடல்கொண்ட ஆறும் மலையும் நாடும் ஆகியவற்றை அடியார்க்கு நல்லாரும், “வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று இளங்கோவடிகளும், “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினால் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்” என நல்லந்துவனாரும் கூறுமாற்றான் நன்கு துணியப்படும். தமிழ் மக்கள் தம் வரலாறுகளை எழுதிவைப்பதில் கருத்துச் செலுத்திற்றிலர் எனக் கூறுவது தவறு தமிழர் தம் பண்டை வரலாறுகளையும் அரசர்களையும் பற்றி எழுதி வைத்திருந்தார்கள் என்பது மகஸ்தீனஸ், பக்கஸ் முதல் அலக்சாந்தரின் படையெடுப்பு வரையில் 154 பாண்டியர் ஆண்டார்கள் என்றும், அவர்களின் ஆட்சிக்காலம் 6,431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறியுள்ளமையால்1 நன்கு துணிதலாகும். மேற்கு ஆசிய நாடுகளிலும் கோயிற் குருமாரே அரசர்களையும் அவர் காலத்து நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதிவைத்தார்கள். அக் காலங்களின் இன்ன அரசனின் ஆட்சியின் இத்தனையாவது ஆண்டு எனக் காலம் குறிக் கப்பட்டு வந்தமையின் அரசரைப் பற்றிய வரலாறுகள் எழுதப்படாமல் இருந்தன என்று கூறுதல் அமையாது. மேற்கு ஆசிய நாடுகளில் நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிச் சூளையிலிட்டுக் காப்பாற்றப்பட்டன. ஆகவே, அவை மண் செல் முதலியவைகளால் அழிக்கப்படாது பிழைத்தன; அவை களால் அந் நாடுகளின் வரலாறுகள் ஓரளவு அறியக்கிடக்கின்றன. எகிப்தி யரின் வரலாறுகள் பெரும்பாலும் சமாதிச் சுவர்களிலும் சமாதிகளுள் வைக் கப்பட்ட பைபிரஸ் நூல்களிலும் காணப்படுகின்றன. தமிழர் எழுதப் பயன் படுத்திய ஓலை சிறிது காலத்தில் ஒடிந்தும், செல், மண் முதலியவைகளால் உண்ணப்பட்டும், இராமபாணத்தால் துளைக்கப்பட்டும் அழிந்துபோகத் தக்கன. மேற்கு ஆசியாவில் கி. மு. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பெரிய நூல் நிலையங்கள் இருந்தன.1 மொகஞ்சொதரோத் தமிழர் நாகரிகம் மேற்கு ஆசியமக்கள் நாகரிகத்தைவிட மேலானது என்று கருதப்படுகின்றது. உலக மக்களுக்கே நாகரிகத்தை நல்கியவர்கள் என்று சொல்லப்படும் மக்கள் தமது வரலாற்றை எழுதி வையாதிருந்தனர் எனக் கூறமுடியாது. நூல்களை எழுதிப் பாதுகாத்து வைக்கும் முறையும் ஒரு நடு இடத்தினின்றும் பரந்து சென்ற வழக்கமே யாதல் வேண்டும். வரலாறுகளை எழுதிக் காப்பாற்றும் பழைய வழக்கைப் பின்பற்றியே இலங்கைப் பௌத்த குருமாரும் புத்தர் காலம் முதல் வரலாறுகளை எழுதிக் காப்பாற்றினர். அவைகளை ஆதார மாகக்கொண்டே தீபவமிசம், மகாவமிசம் முதலிய வரலாறுகள் விரித்து எழுதப்பட்டன.2 புராணங்களில் உண்மை அணுவளவும், பொய் மலையளவும் காணப்படுவதை நோக்கிய சில ஆராய்ச்சியாளர் தமிழ்ப்புலவர்கள் கூறி யுள்ள வரலாற்றுண்மைகளிலும் ஐயம் உறுகின்றனர். புராணங்களிலுள்ள கற்பனைக் கதைகளுக்குப் பொறுப்புப் பிராமணரேயன்றித் தமிழ்ப் புலவர் களல்லர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், இம் மயக்கம் எழ வழியில்லை. தமிழ்ப் புலவர்கள் உள்ளவற்றை உள்ளவாறே கூறும் இயல் பினரென்பது சங்கச் செய்யுட்களாற் றெளிதும். ‘இராமர் 11 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தார், தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தான்’ என இயற்கைக்கு மாறான எதையும் இறையனார் களவியலுரை கூறாமை கருத்திற் பதிக்கத்தக்கது. கெரதோதசு ஆசிரியர் ஓர் அரசனுக்குள்ள சராசரி காலம் 33 ஆண்டுகள் எனக் கணக்குச் செய்துள்ளார். மூன்று சங்கங்களும் நடைபெற்ற காலத்தில் இருந்த அரசரின் எண் 197. இவ் வரசர் ஒவ்வொரு வருக்கும் முப்பது ஆண்டுகள் ஈந்தால் 5970 ஆண்டுகளாகும். இவ் வாண்டுகள் சந்திர அளவின்படி கணக்குச்செய்து சூரிய ஆண்டாக்கின் 5470 வரையிலாகும். இறையனார் களவியலுரையில் மூன்று சங்கங்களும் 9990 ஆண்டுகள் நடைபெற்றனவாகக் கூறப்பட்டுள்ளது. பழைய காலக் கணக்கு களில் இவ்வாறு சில பிழைகள் நேர்தல் இயல்பு. கெரதோதசு மூன்று எகிப்திய அரசர் தனித்தனி 300 ஆண்டுகள் ஆண்டனர் எனக் கூறியுள்ளார். இடையே சில அரசரின் எண் விடப்படுமாயின் அவர்களின் ஆட்சிக்காலம் நீண்டதெனக் கணக்கிடப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் இவ் வகைப் பிழை நேர்ந்தமையால் சில அரசர் நீண்ட காலம் ஆட்சிபுரிந்தனர் எனக் கருதப்பட்டுப் பின்பு திருத்தப்பட்டது . கிறித்தவ மறையின் பழைய ஏற்பாடு மறைந்துபோகப் பின்பு அது கி. மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்குமிடையில் எழுதப்பட்டது. அதில் சில அரசர் 800 அல்லது 900 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். அதனை நம்ப முடியாவிடினும் அதில் கூறப்படுவன வரலாற்று நூலாரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவைகளை எல்லாம் வைத்துநோக்கி இறையனார் களவியலிற் கூறப்பட்ட காலக்கணக்கை ஆராய்தல் வேண்டும். காலக்கணக்கு மிகுதியாயிருப்பதால் சங்கம் நடைபெறவில்லையெனக் கொள்ளுதல் ஆகாது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்களைப் பாடிய புலவர்கள் தமிழ்நாட்டின் பல கோணங்களில் பல்வேறு காலங்களில் வாழ்ந்தோர். அப் பாடல்கள், தொகுக்கப்படுவதற்கு ஓரிடத்தில் எவ்வாறு கிடைத்தன என்பது ஆராயப்படுதல் வேண்டும். சங்கத் தே அரங்கேற்றப்பட்ட பாடல்கள் அங்கு படியெடுக்கப்பட்டுக் கிடந்தமையாலே அவைகள் ஓரிடத்திற் கிடைத்தன வென்பது நன்கு விளங்கும். சங்க வரலாறு கி. பி. 7ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் பழைய வரலாறாக விருந்ததென்பது1 “கூடலிலாய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என்னும் மாணிக்கவாசகரின் திருவாக்கானும் “நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினான்காண்” என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தானும் நன்கு விளங்கும். சங்கத்தின் இறுதிக் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் எனப் பெரும்பாலுங் கொள்ளப்படுகின்றது.1 இடைச்சங்கம் கபாடபுரத்திலிருந்ததெனப்படுகின்றது. இது தாமிர பரணி ஆற்று முகத்துவாரத்திலுள்ளதென இராமாயணங் கூறுகின்றது. கபாட புரத்தின் அழிவுக்குப் பின் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்தது. இது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்ததெனக் கருதப்படுகின்றது. மாபாரதம் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்ததாகவே கூறுகின்றது. அதன் பின்பே இப்பொழுதுள்ள மதுரை பாண்டியரின் தலைநகராயிற்று. இப்போதைய மதுரை முன் கடம்பவனமாயிருந்ததெனத் திருவிளையாடற் புராணங் கூறும். “கின்னரம்பயில் கடம்பவானத்தின் கீழ்சார்த், தென்னன் சேகரன் என்னுங் குலசேகரனாக, மன்னர் சேகர னரசு செய்திருப்பது மண வூர்” என்பது திருவிளையாடல். மெகஸ்தினசும் கௌடலியரும் மதுரையைக் குறிப்பிட்டுள்ளார்கள். கடைச்சங்க காலத்தில் இருந்த அரசர் 49 பேர் என்று கூறப்படுகின்றனர். தற்கால முறையின்படி ஓர் அரசனுக்கு 20 ஆண்டு ஈயின் அவர்களின் மொத்த ஆட்சிக் காலம் 980 ஆண்டுகளாகும். ஆகவே, கடைச்சங்கம் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று எனக் கூறுதல் தவ றாகாது. முறைக்குமுறை நேர்ந்த கடல்கோட் குழப்பங்களால் அரசரால் திரட்டி வைக்கப்பட்ட தமிழ்நூல்கள் அழிவெய்தினவென்று உய்த்துணர்தல்கூடும். தலமிசோத்தர் என்பவரால் அலக்சாந்திரியாவில் தொகுத்து வைக்கப்பட்ட 700,000 நூல்கள் அழிந்து போனமை இதனோடு ஒப்புநோக்கத்தக்கது. கடைச் சங்கம் குலைந்தபின் கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பவரின் தலைமையில் திகம்பரசைனரால் தமிழ்ச்சங்கம் தொடங்கி நடத்தப்பட்டது. அகத்தியர் அகத்தியர் தலைச்சங்கத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் என இறையனார் களவியல்உரை கூறுகின்றது. அகத்தியர் என்னும் விண்மீன் ஒன்றைப் பரிபாடல் கூறுகின்றது. மணிமேகலையில் (கி. பி. 200) அகத்தியர் அமரமுனிவர் எனச் சுட்டப்படுகின்றார். “கஞ்ச வேட்கையிற் ககந்தன் வேண்ட, அமர முனிவ னகத்தியன் றனாது, கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை.” “கடவுட் கணிகை காதலஞ் சிறுவன், அந்தண ரிருவரும்” என வரும் மணிமேகலை அடிகளுக்கு “திலோத்தமை பிள்ளைகளாகிய வதிஷ்டர் அகத்தியர்” எனப் பொருள்கூறி “வசிஷ்டனும் அகஸ்தியனும் பிரஹ்மா திலோத்தமை யென்னும் அப்ஸரஸைக் கண்ட காலத்து ஜனித் தனர்.” (நீல-சமயம்) என்னும் மேற்கோளையும் எடுத்துக் காட்டியுள்ளார் டாக்டர் சாமிநாத ஐயரவர்கள். புராணங்கள் வதிஷ்டர், அகத்தியர், விசுவா மித்திரர் முதலியோரின் தந்தை மித்திரவருணன் என்றும் கூறுகின்றன.1 மித்திரவருணன் தமிழ் மரபினரே என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. திருமந்திரம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு அளவிற் செய்யப்பட்டது. அதனகத்தே அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. “நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே.” (திருமந்திரம்) புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தில், “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்.” என வரும் அடிகளும் மேற்கூறியபடி கருத்தைத் தழுவிச் செய்யப்பட்ட தாகும். இவ் வரலாறுகளால் கிறித்துவ ஆண்டின் தொடக்கத்துக்கு முன்னர் அகத்தியர் வரலாறு கற்பனைக் கதைகள் பலவற்றுடன் கலந்த பழங்கதை யாக மாறியுள்ளதென்று விளங்குகின்றது. வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தவரும் உலோபா முத்திரையை மனைவியாகப் பெற்றவருமாகிய அகத்தியர் ஒருவர் வேதகாலத்தில் விளங்கினார். இராமாயணத்தில் அகத்தியர் ஆச்சிரமம் கோதாவரியாற்றுக்கு வடக்கே உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.2 தென்னாட்டில் அகத் தீச்சுரம் அகத்தியான் பள்ளி முதலிய ஆலயங்கள் இருக்கின்றன. அகத்தியர் தமிழுக்கு ஆதி3 இலக்கணஞ் செய்தாரென்றும், அவரிடத் தில் அதங்கோட்டாசிரியன், தொல்காப்பியர், பனம்பாரனார், செம்பூட்சேய், வையாபிகர், அவிநயர், காக்கை பாடினியர், துராலிங்கர், வாய்ப்பியர், கழாரம்பர், நற்றத்தர், வாமனர் என்னும் பன்னிருவர் கல்வி பயின்றார்க ளென்றும் வரலாறுகள் வழங்குகின்றன. இவைகளுக்கு, “வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்.” என்னத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பன்னிரு படலப் பாயிரம் என்னும் மேற்கோளையும், “தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த.” என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிர அடிகளையுமன்றி வேறு மேற்கோள்கள் காண்பதரிது. “தமிழ் நாட்டில் அகத்தியர்கள்” என்னும் ஆராய்ச்சி நூல் எழுதிய கே. என். சிவராசபிள்ளை அவர்கள், அகத்தியரைப் பற்றிய கதைகள் கற்பனை எனக் கருதினார்கள். முற் காலங்களில் ஒவ்வொரு குடும்பத்தின ரும் அவ்வக்குடும்பங்களின் ஆதி முதல்வர்கள் பெயர்களால் அறியப்பட் டார்கள். விசுவாமித்திரர், வதிட்டர், அகத்தியர் என்னும் பெயர்களும் அம் முறையில் வழங்கின. இவ்வாறு பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல அகத் தியர்களின் கதைகள் எல்லாம் ஒருங்கு திரண்டு பல கட்டுக்கதைகளோடு பின்னி இன்றைய அகத்தியர் வரலாறாக வழங்குகின்றதென்பது இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளரது துணிபாகும். இஞ்ஞான்று அகத்தியர் பெய ருடன் வழங்கும் வைத்திய நூல்கள் போன்றனவே முற்கால அகத்தியங்களு மாயிருத்தல் கூடும். செங்கோன் தரைச்செலவில் ஏழ்தெங்கநாட்டு முத்தூர் அகத்தியன் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவரின் பெயர் காணப்படுகின்றது. சுமத்திரா யாவா முதலிய நாடுகளில் அகத்தியர் விக்கிரகங்கள் மக்க ளால் வழிபடப்பட்டன. வாயுபுராணம், அகத்தியர் போணியோ, குசத்தீபம், வராகதீபம், மலையத் தீபங்களுக்குச் சென்றாரென்று கூறுகின்றது. அவர் சுமத்திராவிலே உள்ள மலாயு என்னும் மலையில் இருந்தார் என்னும் வரலாறு அங்கு வழங்குகின்றது. ஆதியில் சந்தன மரத்தினாற் செய்யப்பட்ட அகத்தியர் விக்கிரகம் மலாயரால் வழிபடப்பட்டது. கி.பி. 7ஆம் நூற் றாண்டில் கல்லாற் செய்யப்பட்ட அகத்தியர் உருவம் வழிபடப்பட்டது. அகத்தியர் சிலை சடாமுடி கவசம் உருத்திராக்கம் முதலியவைகளுடன் காணப்படுகின்றது.1 அகத்தியர் மரபிலுள்ளோர் பலர் அரசராயிருந்தார் களெனத் தெரிகின்றது. மத்திய யாவாவிலே சாண்டிபான் (Chandi Bann) என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலில் அழகிய அகத்திய விஷ்ணு விக்கிரகங்கள் காணப்படுகின்றன. சித்திய (Scythians) மக்களிடையே அகத்திரிசிகள் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் எனக் கெரதோதசு என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். பாதி பாம்பும் பாதி மனித வடிவுமுடையதாயுள்ள, கெக்குலிஸ் என்னும் தந்தை அகத்திரிசிகளின் ஆதி முதல்வர் என அவர் குறிப்பிட் டுள்ளார். அகத்திரிசிகளிடையே காணப்பட்ட பல ஆடவர் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம்போன்றது, மலையாளக் கரைகளிற் காணப்படுகின்றது.2 மலையாளம் முற்காலத்தில் நாகநாடு எனப்பட்டது. சேர என்பதற்கு நாகம் என்றே சாயணர் பொருள் கூறியுள்ளார்.3 ஒரு காலத்தில் மலையாளக் கரைகளினின்றும் வெளிப்போந்த அகத்தியர் மரபினரே அகத்திரிசிகள் எனச் சித்திய மக்களிடையும் காணப்பட்டார்களாம். சித்திய மக்களும் தமிழரை ஒப்பத் துரானியமக்களாவர் என மக்கட்குல நூலார் கூறுவர். தொல்காப்பியர் தொல்காப்பியர் என்பது தொல்காப்பியம் என்னும் நூலைச் செய்த ஆசிரியருக்கு அந்நூல் செய்தமை காரணமாக வழங்கப்பட்ட ஒரு காரணப்பெயர். இது நன்னூல் செய்தாரை நன்னூலார் எனக் கூறுதல் போன்றதொரு வழக்கு. இவரது இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவர் இயற்பெயர் திரண தூமாக்கினி என ஓரிடத்துக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியரின் இயற்பெயர் புலத்தியன் (புலம்-அறிவு) என்றும், அப்பெயரை வடமொழிப்படுத்தியவர்கள் அதனைப் புல்+அகம்+தீயன் எனப் பிரித்துத் (திரணம்+தூமம்+அக்கினி) திரண தூமாக்கினி என மாற்றினரென்றும் அறிஞர் சிலர் கூறுவர். இது இக் காலம் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தி வழங்குவதுபோன்றதோர் முற்கால வழக்கு. சூரியநாராயண சாத்திரி என்பதைப் பரிதிமால் கலைஞன் என்று வழங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வடமொழியினைத் தெய்வ மொழி என மக்கள் நம்பத் தலைப்பட்ட ஒரு காலத்தில் தென்னாட்டுத் திருக்கோயிற் பெயர்களும் மக்கட் பெயர்களும் வடமொழியிற் றிருப்பப் பட்டு வழங்கலாயின. திருவிளையாடற் புராணத்திற் காணப்படும் பாண்டிய அரசர்கள் பெயர்களும் இவ்வாறு மாற்றப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது. தொல்காப்பியம் செய்யப்பட்டகாலத்தில் திரணதூமாக்கினி போன்ற பெயர் தோன்றியிருத்தல் சாலாதென்பது வரலாற்றாசிரியர்களுக்கு நன்கு தெளிவாகும். தொல்காப்பியம் என்னும் நூலை நுணுகி ஆராயுமிடத்து அது பண்டைத் தமிழ் மரபுகளைப் பாதுகாத்தற்கு எழுந்த நூலென்பது தெள்ளி திற் புலப்படும். இக் காரணம் பற்றியே தொல்காப்பியம் (தொல் + காப்பு + இயம் = பழமையைக் காப்பதாகிய நூல்) என்னும் பெயர் அந் நூலுக்கு இடப் பட்டது. காப்பியம் என்பது காவியம் என்பதன் திரிபு எனச் சிலர் வழக்கிடுவர். தொல்காப்பியத்தில் காவியத்துக்குரிய பொருள்கள் அமைந்திராமையின் அன்னோர் கூற்றுப் பொருளன்றென விடுக. தொல்காப்பியம் கி. மு. 350க்குப் பிற்பட்ட நூலன்றென்பது வரலாற் றாசிரியர்கள் துணிபு, தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ள ஓரை என்னும் சொல் கிரேக்கரின் “ஹோரா” என்னும் சொல்லின் திரிபென்றும், வராக மிகிரர் (கி. பி. 550) காலத்துக்குப் பின்பே இந்திய மக்கள் ஹோரா என்னுஞ் சொல்லை வழங்கினார்களென்றும் ஆகவே, தொல்காப்பியம் கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதென்றும் சிலர் கூறுவர். தொல்காப்பியத்திற் கூறப் படும் இலக்கண விதிகளால் அது சிலப்பதிகாரத்துக்கு முற்பட்ட நூல் என நன்கு விளங்குகின்றது. கிரேக்கர் கி. மு. 5ஆம் நூற்றாண்டுக்குமுன் வான நூலைப்பற்றி அறிந்திலர். அதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே மேற்கு ஆசியமக்களும் தமிழரும் வானநூல், சோதிடநூல் என்பவைகளில் திறமை பெற்று விளங்கினர். ஆகவே, கிரேக்க மக்கள் வான ஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளுக்குரிய சொற்களைப் பிற மக்களிடமிருந்து பெற்றிருப்பார் களேயன்றி அக் கலைகளைப் பழமையே அறிந்திருந்த பிறர் கிரேக்கரிட மிருந்து பெற்றிருக்கமாட்டார்கள். உலக மொழிகளில் தமிழ்ச்சொல் மூலங்கள் சென்று வழங்குவதை மொழி ஆராய்ச்சியாளர் கண்டு கூறுகின்றனர். கற்களை எண்ணிக் கணக்கிடுதல் என்னும் பொருளில், இலத்தீன் மொழியில் வழங்கும் கல்குலஸ் (calcules) ஆங்கில மொழியில் வழங்கும் கல்குலேட் (Calculate) முதலிய சொற்கள் கல் என்னும் தமிழ்ச் சொல்லினின்று பிறந் தனவாதலை நோக்குவார்க்கு ஓரை என்னும் சொல்லே கிரேக்க மொழியில் சென்று ஹோரா என்று வழங்கிற்றெனக் கொள்ளுதல் இயைபுடையதெனத் தோன்றும். தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்படுதலின் அவர் ஐந்திர மென்னும் வடமொழி இலக்கணத்தைக் கற்றிருந்தார் எனச் சிலர் கருதுவர். ஐந்திரம் என்னும் இலக்கணநூல் இப் பொழுது காணப்படவில்லை. பாணினிக்கு முன் ஐந்திரமென்னும் வடமொழி இலக்கணமொன்று இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாணினிக்குப்பின் ஐந்திரமென்னும் இலக்கணநூல் வழங்கவில்லை. பாயிரத்திற் கூறப்பட்ட ஐந்திரம் வடமொழி நூலாயின் தொல்காப்பியர் பாணினி முனிவருக்கு (கி.மு. 400) முந்தியராவர். ஒரு மொழிக்கு இலக்கணம் செய்யுமிடத்து மற்றொரு மொழிக்குரிய இலக்கணத்தையும் கற்று ஒப்புநோக்கி ஒற்றுமை வேற்றுமை காணுதல் சிறந்த முறையாகும். இன்னொருசாரார், ஐந்திரமென்பது சைனநூல்; ஆகவே, தொல்காப் பியர் சைனர் எனக் கூறுவர். சிலப்பதிகாரத்தில், 1“கப்பத் திந்திரன் காட்டிய நூலின், மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணா”, “விண்ணவர் கோமான் விழுநூல்” என இந்திரனால் செய்யப்பட்ட ஒரு நூல் சுட்டப்படுகின்றது. அது மிகப் பழைய காலத்து (கற்ப காலத்தில்) இந்திரனாற் செய்யப்பட்ட தெனப்படுகின்றது. இந்திரனது தலைநகராகிய அமராபதி கிருஷ்ணாநதி முகத்துவாரத்திலுள்ளமையும், இந்திரன் தென்னாட்டிலே சிவலிங்கம் வைத்துப் பூசித்தமையுமாகிய வரலாறுகள் ஆராயப்படல் வேண்டும். தொல்காப்பியத்திற் காணப்படும் சில அகச்சான்றுகளாலும்,2 அதன் பாயிரத்தாலும் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமென விளங்குகின்றது. அகநானூற்றில் வரும் மாமூலனார் பாடல்களின், “பனிபடு சோலை, வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயத்தர் என்ப” “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிற் குழீஇக் கங்கை முந்நீர் கரந்த நிதியங் கொல்லோ” “கனைகுர லிசைக்கும் விரைசெலற் கடுங்கண் முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு” எனவரும் அடிகளால் மாமூலனார் காலத்துக்குமுன் வேங்கடத்துக்கு வடக்கே பிறமொழி வழங்கிற்றென்றும் மாமூலனார் கி. மு. 300 வரையில் வாழ்ந்தவராவர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள் ளார்கள். ஆகவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குமுன் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை வேங்கடமாக விருந்திருந்தது எனத் துணிதல் கூடும். கலிங்க இளவரசனாகிய விசயன் காலம் முதல் (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) தோன்றி வளர ஆரம்பித்த சிங்கள மொழியில் இலக்கியம் முதன் முதல் கி. பி. 10ஆம் நூற்றாண்டில் எழுந்தது. ஆந்திர மொழியிலும் இலக்கியங்கள் கி. பி. 9ஆம் நூற்றாண்டு முதல் எழ ஆரம்பித்தன. ஆகவே இரு மொழிகளின் காலமும் ஒன்று என (கி. மு. 6ஆம் நூற்றாண்டு) உத்தேசமாகக் கூறலாம். அக் காலத் திலோ அதன் சிறிது பிந்தியோ தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமாயிற்று. “பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராண மென்பன, சில் வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின் தொகுத்துச் செய்யப்பட்ட வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றென்க. கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும் (பேராசிரியர் உரை. மர. 649). “தொல்காப் பியம்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்வகுத்துப் பன்னினார்-நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலிற் றொகுத்து.” என வருவனவற்றால் தொல்காப்பியர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் எல்லாம் முன் விரிந்து கிடந்த நூல்களைச் சுருக்கி நூல்கள் செய்தார்கள் என விளங்குகின்றது. தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் செய்த சிறப்புப்பாயிர மொன்று காணப்படுகின்றது. இப் பாயிரம் ஆராய்ச்சிக்குரியது. தொல்காப் பியத்தில் நூல்களுக்குப் பாயிரம் செய்தற்கு விதிகாணப்படவில்லை. சங்க நூல்களுக்கும் இறையனார் களவியலுக்கும் பாயிரம் இல்லாமை கருத் திற்கொள்ளத்தக்கது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்களுக்குப் பொருளடக்கமே பாயிரமாக எழுதப்பட்டுள்ளது. வான்மீகர் இராமாயணத் தில் காணப்படும் பாயிரமும் இவ் வகையினதே. இதனால் சிலப்பதிகார காலத்தும் பிற்காலத்தும் வடமொழி நூல்களின் முறையைப் பின்பற்றிப் பாயிரஞ் செய்யப்படலாயிற்று எனக் கருத இடமுண்டு. பாயிரம் நூலுக்கு இன்றியமையாததென இறையனார் களவியல் உரை முதல் முதல் வலியுறுத்துகின்றது. இறையனார் களவியலுரை நக்கீரனாராற் செய்யப்பட்டு நீண்டகாலம் செவி வழக்கில் வந்து கி. பி. 7ஆம் நூற்றாண்டளவில் எழுதி வைக்கப்பட்டது. இதனால் கி. பி. 7ஆம் நூற் றாண்டில் அல்லது அதற்குச் சிறிதுமுன் நூலுக்குப் பாயிரம் இன்றியமை யாதது என்னும் கொள்கை வலுவடைந்திருத்தல் வேண்டும்.1 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்குள்ள பாயிரம் போலல்லாது, நூல், நுவல்வோன், நுவலுந் திறன் முதலியவற்றைக் கூறுவனவாயுமுள்ளது. இவைகளை எல்லாம் ஒருங்குவைத்து ஆராயுமிடத்துத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், கி.பி. 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த பனம்பாரனார் என்னும் புலவர் ஒருவரால், அக் காலம் தொல்காப்பியத்தைப் பற்றி வழங்கிய கன்ன பரம்பரை வரலாறுகள் எல்லாவற்றையும் திரட்டிச் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. பாயிரத்தில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரெனக் கூறப்படாமை நோக்கத்தக்கது. இலக்கணக் குறிப்புகள் சில தொல்காப்பியர் வியங்கோள் வினை, தன்மை முன்னிலை என்னும் ஈரிடத்தும் வராதெனக் கூறுவர். “அவற்றுள்-முன்னிலை தன்மை யாயீ ரிடத்தோடு, மன்னாதாகும் வியங்கோட் கிளவி” (தொல்.சொல்.வினை.) புற நானூற்றின் இரண்டாம் பாட்டைச் செய்த முரஞ்சியூர் முடிநாகராயர், “வான வரம்பனை நீயோ பெரும” “நடுக்கின்றி நிலியரோ” என முன்னிலை யிடத்து வியங்கோள் வினையைப் பயன்படுத்தி யிருக்கின்றார். இதனால் முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவரென உய்த்தறியலாம். தொல்காப்பியர் காலத்தில் வியங்கோள்வினை படர்க்கை இடத்துமட்டும் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் அது முன்னிலையிடத் தும் வழங்கிற்று. நன்னூலார் அதனை மூவிடத்தும் பயன்படுத்தினார். “கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப” (நன்-338). இச் சூத்திரத்தினால் நன்னூலாருக்கு முன்னும் வியங்கோள் தன்மையிடத்தும் வழங்கிற்று எனத் தெரிகின்றது. எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் கள் விகுதி ஏற்கவில்லை. மணிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் கள் விகுதி ஏற்கும் வழக்குக் காணப் படுகின்றது. ‘யாங்களும் நீணெறிப்படருதும்’ (சிலப்.) எனவும், “நோன்பிகள் விழுமங் கொள்ளவும்” (மணி.) எனவும் வருதல் காண்க. பிற்காலங்களில் கள் விகுதி உயர்திணை அஃறிணைப் பெயர்களுடனும் இருதிணை வினை முற்றுக்களுடனும் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியர் உயர்திணை என்று கொண்ட தன்மைப் பெயர்கள் நன்னூலார் காலம் முதல் விரவுதிணை (உயர்திணையும் அஃறிணையும்) எனக் கொள்ளப்பட்டன. “தன்மை நான்கும் முன்னிலை யைந்தும்........பொதுப்பெயர்” (நன். 282) செய்யும் என்னும் முற்று நிகழ்காலத்துக்கு மாத்திரம் உரியதெனத் தொல்காப்பியங் கூறுகின்றது. “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்து, செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா” (தொல். சொல். வினை.) நன்னூலாரின்படி அது வருங்காலத் துக்கு முரியதாகும். “செய்யு நிகழ் பெதிர்வும்” (நன். 145) நன்னூலார் நிகழ்கால வினைமுற்று செய்கிறேன், செய்கின்றேன், செய்யாநின்றேன் என வரும் எனக் கொள்வர். தேவாரத்துக்கும் நாலாயிரப் பிரபந்தத்துக்கும் முன் மேற்குறித்தவைகளில் ஒன்றேனும் ஆளப்பட வில்லை. வீரசோழிய ஆசிரியர் செய்யாநின்றேன் என்பதைச் செய்யா-நின் றேன் என இரு சொற்களாகப் பிரிப்பர். ஆனால், நன்னூலார் இருசொற்களை யும் ஒன்றாகக்கொண்டு ஆநின்று நிகழ்காலத்தினை உணர்த்துமென்றார். இவ் வாராய்ச்சியினால் தொல்காப்பியம் எல்லாத் தமிழ் இலக்கண நூல்களுக்கும் பார்க்க முற்பட்டதென்பதும், அது சிலப்பதிகார காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் மற்பட்டதென்பதும் நன்கு விளங்குகின்றன. உரைநடை வரலாறு மொழி, வழக்கு செய்யுள், என இருதிறப்படும். மக்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுங்கால் ஆளும் நடை வழக்கெனப்படும். வழக்கெனினும், வசன நடை உரைநடை எனினும் ஒக்கும். உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்ப மக்களாற்றோற்றுவிக்கப்படும் ஓசைகளின் வளர்ச்சியே பாடலின் தொடக்கமாகும். அவ் வோசை, அளந்து செய்யப்பட்டமையின் செய்யுள் எனப்பட்டது. செய்யுள் என்பதற்குச் செய் யப்பட்ட தென்பது பொருள்; தூக்கு என்பது செய்யுளுக்கு மற்றொரு பெயர். தூக்கு என்பது அளவு என்னும் பொருட்டு. ஆகவே, தூக்கு, செய்யுள் என்னுஞ் சொற்கள் ஒரே பொருளனவாதல் காண்க. பா என்பதும் செய்யுளை உணர்த்தும். ஓசை தொடர்பாகச் செய்யுட்குப் ‘பா’ என்று பெயர் இடப்பட் டுள்ளது. “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோரோசை” எனப் பேராசிரியர் பாவென்பதற்குப் பொருள் விரித் துரைத்தார். முற்கால மக்கள் உரையாடும்போதும் எழுதும் போதும் ஆண்ட நடைகள் வெவ்வேறு வகையின. பேச்சுநடை எப்பொழுதும் வசன நடை யாக அமைவுற்றது. எழுதுங்கால் எப்பொழுதும் செய்யுள் நடையே கை யாளப்பட்டது. இதற்குக் காரணம் பல ஆகலாம். செய்யுள் நடைமிகச் சுருக்கமானது; வசன நடையில் அதிகம் கூறவேண்டியவற்றைச் செய்யுள் முறையிற் சில வரிகளிற் கூறிவிடலாம். ஓலையில் எழுத்தாணியால் எழுதவேண்டியிருந்தகாலத்தில் இச்சுருக்கு முறையை மக்கள் விரும்புதல் இயல்பாகும். அச்சுச்சாதனமில்லாத முற்காலத்தில் நூல்கள் எழுதப்படற்கும், படிஎடுத்தற்கும் செய்யுள் முறை வாய்ப்பளித்தது. இக் காரணங்களினாலேயே முற்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிற் காணப்படுகின்றன. காலத்துக்குக்காலம் மக்கள் ஆளும் சொற்கள் மாறுபடுகின்றன. ஒரு காலத்திற் பெரு வழக்கிலிருந்த சொற்கள் மறைந்துபோகப் புதிய சொற்கள் வழக்கில் வருகின்றன. புதிய சொற்கள் வழக்கில் வந்தகாலத்தில் எழுதப் படும் நூல்களில் பழைய சொற்களின் வழக்குப் பெரும்பாலும் நின்றுவிடு கின்றது. பிற்காலத்தவர்களுக்கு முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பயின்று பொருள் விளங்குவது கடுமையாகின்றது. இக் காரணத்தால் முற்கால நூல்களுக்கு வழக்கு (வசன) முறையில் பொருள் எழுதப்படு கின்றது. இவ்வாறு எழுதப்படும் பொருட்பகுதிகள் உரை என வழங்கும். உரை எழுதும் இம் முறையிலிருந்தே பிற்காலத்தில் வசன நூல்கள் எழுதப்படலாயின. உரைநடைக்கு அடிவரையறை முதலியன இல்லை. முற்கால உரையாசிரியர்களின் உரைநடைகளின் பல பகுதிகள் செய்யுட்கள் போலவே செல்கின்றன. அக் கால மக்களின் வழக்கு எனப்பட்ட பேச்சு நடை, அவ்வாறு இருந்ததெனக் கூறுதல் அமையாது. அவ் வுரையைப் பார்த்து அக் கால உரைநடை எவ் வகையினதென ஒருவாறு சிந்தனை செய்து அறிந்துகொள்ளலாம். தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் கி. மு. 350-வரையிற் செய்யப்பட்டது. அந் நூல் உரை நூல்களைப் பற்றிச் சிறிது கூறுகின்றது (சூ. 485.) அவை பாட்டுக்களின் இடையிடையே உரைநடையி னியன்ற பகுதிகள் வைத்துச் செய்யப்படுவன; சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவன போல்வன; ஒழிந்துபோன பாடல்களுக்குப் பொருள் எழுதுதல் போல்வன; செவி வழக்கில்வரும் கற்பனைக் கதைகள் போல்வன; பொய் எனப்படாது உலகியலோடியன்று நகை விளைக்கக்கூடிய கதைகள் போல்வன. இவ் வகைய நூல்கள் ஒன்றேனும் இன்று காணப்படவில்லை. பற்பல காரணச் செறிவால் மாண்ட தமிழ் நூல்களோடு அவையுங்கூட மடிந்தன வாகலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் என்னும் அரசப் புலவர் பாடிய சிலப்பதிகாரத்தில் உரைப் பாட்டுக்கள் சில காணப்படு கின்றன. அவை அடிவரையறையின்றிப் பாட்டுநடையில் அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் ஆசிரியத்தை ஒத்துள்ளன. கி.பி. 1ஆம் நூற்றாண் டளவில் செய்யப்பட்ட இறையனார் களவியல் உரை கி.பி. 7ஆம் நூற்றாண் டளவில் எழுதி வைக்கப்பட்டது. அவ் வுரைநடையின் சில பகுதிகள் செய்யுள்நடை போற்றோன்றினும் பெரும்பகுதி சிறுசிறு வசனங்களாக அமைந்துள்ளது. பெருந்தேவனார் பாரதத்தின் இடையிடையே, மணிப்பிர வாள நடையில் எழுதப்பட்ட வசன நடை இதன்பின் எழுந்தது. இவ்வசன நடை, பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் (கி. பி. 9ஆம் நூற்றாண்டு) செய்ததாகாது. கி. பி. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டு அடியார்க்கு நல்லார், பேராசிரியர், இளம்பூரணர், நச்சி னார்க்கினியர், பரிமேலழகர் முதலானோர் உரைகளாகும். பிற்கால உரை நடைக்கு எடுத்துக்காட்டு மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோத மாபாடியமாகும். தமிழ் உணர்ச்சிக்கு எதிர் உணர்ச்சி வேதகாலத்தில் தாசுக்களுக்கும் ஆரியர் களுக்கும் மிகுந்த வயிரம் உண்டாயிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழை ஆரியத்திலும் தாழ்த்திக் கூறும் கட்சியொன்றும் தமிழ்நாட்டில் நீண்டநாள் தொடர்ந்து வராநின்றது. சமய குரவர் காலத்தும் இவ் வகை உணர்ச்சியிருந் தமையினாலேயே “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” எனத் தேவாரத்துட் கூறப்படலாயிற்று. இவ்வாறு கூறப் பட்டது இரு கட்சிகளையும் சந்து செய்தல் பொருட்டேயாகும். தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்குநாள் வளர்வதாயிற்று. அதிற்பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமை யாமையையும் உணராது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே ‘தேவபாடையி னிக்கதை செய்தவர்’ என மொழிந்து வட மொழிக்குப் பணிவு காட்டுகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் குமரகுருபரர் முதலாயினோர் அம் மக்களின் பேரறியாமைக் கிரங்கி அவர்கள் மனங்கொண்டு தமிழிற் பற்றடையுமாறு தமிழின் பெரு மையைப் பல அரிய இனிய தெள்ளிய பாடல்களால் விளக்கிப் போந்தனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்திற் கூறிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல்களால் அக் காலத்துத் தமிழுக்கு எதிரான உணர்ச்சி எவ்வளவு முனைத்து நின்றதென்பது தெள்ளிதில் விளங்கும். இன்றும் அவ் வுணர்ச்சி சாம்பர் பூத்த நெருப்புப் போல, பலர் உள்ளத்தே கரந்து கிடவாமல் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (பொருள். 490) ஆரிய நன்று தமிழ் தீ தெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய, அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால், செந்தமிழே தீர்க்க சுவா கா” எனக் காட்டப்பட்டுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ் வகை உணர்ச்சி தமிழ் நாட்டில் நீண்டகாலம் உள்ளதென்பதை நன்கு அறிக. தமிழின் பெருமையை விளக்கும் சில பாடல்கள் தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும், எலும்புபெண் ணுருவாக் கண்ட தும், மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலய மாமுனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. - திருவிளையாடற் புராணம். வடமொழியைப்1 பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார். இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்இவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ. - காஞ்சிப் புராணம். பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள். - வில்லிபாரதம். மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ(டு) உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் - சீகாளத்திப் புராணம். தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவுங் குமரவேள் வழுதி உக்கிர னெனப்பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங் கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக் கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார். -குமரகுருபரர். வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ் சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வையை யாறுஞ் சோலையாண் பனையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி..... - குற்றாலத் தலபுராணம். நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே. - மனோன்மணீயம். 1முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும் துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு-முன்னரே பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி மண்டலத்தி லேபேர் வளநாட்டின்-மண்டுநீர்ப் பேராற் றருகிற் பிறங்கு மணிமலையிற் சீராற்றுஞ் செங்கோற்றிறற்செங்கோல்-நேராற்றும் பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்ததமிழ்ப் பைந்தேவி. - தமிழ்விடு தூது. பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே. -மீ. பிள்ளைத்தமிழ். சங்ககாலத்துத் தமிழகம் கிருஷ்ணா நதிக்குக்கீழ் உள்ள நாடுகள் மூன்று இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் மூவேந்தருடையவும் குறுநிலமன்னர் எழுவருடையவும் இராச்சியங்கள் அடங்கும். இவர்களை அன்றிச் சிறிய செல்வாக்குடைய தலைவர்கள் பலரும் விளங்கினார்கள். கடற்கரைப் பகுதிகள் மூவேந்தருக்குரியவாயிருந்தன. நடுப்பகுதிகளும் மலைகளும் குறுநில மன்னர் வசம் இருந்தன. கிழக்குக் கரையில் கிருஷ்ணாநதிமுதல் தெற்கில் இராமநாதபுரப் பகுதியிலுள்ள தொண்டிவரையில் சோழ இராச்சியம் இருந்தது. இவ் விராச்சியத்தின் நடுவே காஞ்சிக்கு வடக்கிலுள்ள திருக்கோவலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமான் என்னும் சிற்றரசனின் கீழ் இருந்தது. சோழ நாட்டுக்குத் தெற்கில் பாண்டிய இராச்சியம் இருந்தது. இது கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையும் அகன் றிருந்தது. மதுரை, திருநெல்வேலி, திருவிதாங்கூர், கோயமுத்தூரின் பகுதி, கொச்சி என்பன இதில் அடங்கும். இவ் விராச்சியத்துக்குட்பட்டிருந்த பொதிய மலையை ஆயும் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள கொற்கைத் துறை முகத்தைச் சூழ்ந்த இடங்களை எவ்வியும் ஆண்டனர். பழனிமலையையும் அதைச்சூழ்ந்த நாடுகளையும் பேகன் ஆண்டான். இவனுடைய நாடு களுக்கு வடக்கே மேற்குத் தொடர்ச்சிமலை ஓரமாகச் சேரநாடு இருந்தது. இது பாலைக்காட்டு வெளி (Palghat gap) வழியாகக் கோயமுத் தூர்வரையுஞ் சென்றது. இதற்குச் சரிநேரே (Parallel) தென் மைசூரில் பல சிற்றரசர்களின் நாடுகள் இருந்தன. அவர்களில் அரயம் நாட்டை இருங்கோவேளும், பறம்பு மலையைப் பாரியும், தகடூரை (தருமபுரி) அதியமானும், கொல்லி மலையை ஓரியும் ஆண்டனர். இருங்கோவேளின் நாட்டுக்கு வடக்கே கங்கர் நாடுகளும், தெற்கில் கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட்டின் வடக்கே (மேற்குக் கரையில்) உள்ள துளுநாடு நன்னன் ஆணைக்குட் பட்டிருந்தது; கிழக்கில் புல்லியின் நாடும், வடக்கில் வடுகர் நாடும் இருந்தன. முண்டர் இந்தியாவிலே சூடியநாகபுரியில் முண்டர் (Mundar) என்னும் ஒரு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பேசும் மொழி தமிழுக்கு உறவுடையது. குலமுறையில் அவர்கள் திராவிடக் கூட்டத்தைச் சேர்ந்தோர். வரலாற்றாசிரியர்கள் சிலர், அவர்களே ஆரியருக்கும் தமிழ ருக்கும் முற்பட்ட இந்திய மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் அவர்கள் தமிழ்க் கூட்டத்தினரின் ஒரு பிரிவினரே யென்றும், அவர்கள் நீண்ட காலம் தமிழ்ப்பெருங்கூட்டத்தினின்றும் பிரிந்து தனித்து வாழ்ந் தமையின் அவர்கள் மொழி பழக்க வழக்கங்கள் ஆகியன மாறுபடாது வந்துள்ளனவென்றும், அவர்களின் மொழி மிகப் பழைய தமிழாகுமென் றும், இற்றை ஞான்றை ஆராய்ச்சி வல்லுநர் புகல்வர்.1 2“முண்டா மொழி (கொல்) மொன் கிமெர் (Mon Khmer) என வழங்கும். இஃது இந்து சீனமொழிக் கூட்டத்தைச் சார்ந்தது. இது மகாதோக் குன்றுகளி லும் (Mahadao Hills) இமயமலையிலும் வாழும் மக்களாற் பேசப்படுகின்றது. சூடிய நாகபுரியிலேயே இது பெரிதும் வழங்குகின்றது. இம் மொழியைப் பேசுவோரின் எண் 300,000. இம் மொழிக்குரிய மக்கள் அங்கும் இங்கும் சிதறிக் காணப்படுதலின் அவர்கள் முற்காலத்தில் மிகப் பரந்து வாழ்ந்தார் களென உய்த்துணரலாம். சிமிட் என்னும் பாதிரியார் (Fr. Schimidt) அவர்களை ஆஸ்திரேலிய தொடர்புடைய மொழிகளை வழங்கும் மக்களோடு இணைத்து, இவர்கள் ஆசிய மக்களையும் ஆஸ்திரேலிய மக்களையும் இணைக்கும் சங்கிலிபோன்றவர்கள் எனக் கூறியுள்ளார். உண்மையில் அவர்கள் அவ்வாறே உளர். பிறிஸ்லுஸ்கி என்பார். (J. Przyluski) முண்டா மொழி தொன்மையுள்ளதென்றும், பழைய மொழிகளின் அடிப்படையில் அஃது உள்ளதென்றும், அஃது இன்றும் மலாய ஆசியாவிற் காணப்படு கின்ற தென்றும் கூறுவர். முண்டா மொழிகளை வழங்குவோர் பொதுநிறமுடைய கொல்லியர் (Kols); இவர்கள் நெளிந்த (சுருண்டதல்லாத) தலைமயிருடையர்; பழைய பர்மிய அசாம் இந்து சீன ஆஸ்திரேலிய மக்களுக்கும் இலங்கை வேடருக் கும் இனமுடையோர். சந்தாத்தீவின் பந்தின் (Bantin) என்னும் சாதியினரும் செலிபிசிமக்களும் இவ் வினத்தைச் சார்ந்தோர் என வெக்ஸ்பொன்ட் (Wxbonds) என்பார் காட்டியுள்ளார். இம் மக்கள் இருண்ட நிறமுடைய திராவிட வெள்ளத்திற் புகுந்து மறைந்தனர். திராவிடரின் உற்பத்தியை அறிய முடியாமையினால், ஆராய்ச்சியாளர் அவர்களை ஆஸ்திரேலியர், எதுருஸ்கானியர் (பழைய இத்தாலிய மக்கள்) பின்னிய உக்கிரியர் (Finno-ugrians)களோடு இணைத்தனர். திராவிடமென்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு.” சூடியநாகபுரியில் முண்டா மொழியை வழங்கும் ஓரியர் என்னும் மக்களுக்கு குரங்குக்கொடியும், அதே குலக்குறியும் (Totem) உள்ளன என்றும், அவைபற்றி இவர்கள் குரங்கர் அல்லது குரங்குகள் என இராமா யணத்திற் கூறப்பட்டனர் என்றும் ‘முண்டரும் அவர் நாடும்’1 என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. சில முக்கியமான காலக் குறிப்புக்கள் இந்தியாவில் பழைய கற்காலம் கி.மு. 400,000 வரையில் மொகஞ்சொதரோ காலம் கி.மு. 3500 வரையில் இந்தியாவுக்கு ஆரியரின் வருகை கி. மு. 2000 வரையில் வேதகாலம் கி.மு. 2000-1400 பாரதப்போர் கி.மு. 1300 பிராமணங்கள் கி.மு. 1200 உபநிடதங்கள் கி.மு. 1000-600 கபிலர் (சாங்கியம்) கி.மு. 700-600 வான்மீகர் கி.மு. 600 மகாவீரர் கி.மு. 527 (இறப்பு) புத்தர் கி.மு. 557-477 போதாயனர் கி.மு. 500 யாஸ்கர் கி.மு. 500 அபஸ்தம்பர் கி.மு. 400 பாணினி கி.மு. 400 மயூர சந்திரகுப்தன் கி.மு. 327-296 மெகஸ்தீனர் கி.மு. 305 அசோகர் கி.மு. 268-266 பதஞ்சலி கி.மு. 150 கார்த்தியாயனர் கி.மு. 150 விக்கிரமாதித்த ஆண்டுத் தொடக்கம் கி.மு. 57 சாலிவாகன ஆண்டுத் தொடக்கம் கி.பி. 78 கரிகாற் சோழன் கி.பி. 50 இலங்கைக் கயவாகு கி.பி. 173-195 சேரன் செங்குட்டுவன் கி.பி. மேற்கூறியபடி கமுரபி கி.மு. 2000 சாலமன் கி.மு. 900 கோமர் கி.மு. 700 பதகோரஸ் கி.மு. 570 கெரதோதஸ் கி.மு. 480 கெசியற்ஸ் கி.மு. 416 பிளாற்றோ கி.மு. 328 அலக்சாந்தர் கி.மு. 327 அகஸ்தஸ்சீசர் கி.மு. 26 ஸ்ராபோ கி.பி. 20 பிளினி கி.பி. 79 மரணம் பெரிபுளுஸ் கி.பி. 80 தாலமி கி.பி. 130 பெதுருங்கேரியர் அட்டவணை கி.பி. 222 சில குறிப்புகள் 1. The Indian God Shiva or Shiba father of Sebo appears in the Ural Altaic astronomy of the Akkadians the third star of their seven parent stars. - History and Chronology of theWith making age - P. 85-J.F. Hewitt. The name Sin was given first to the land of the Sumerians, the Euphratian Delta. This is called Shinar in the Bible, Singara by Greeks, Sindjar by the Arabian Geographers and was that ruled by the three eyed and two horned wild pull God. This was the three eyed Shiva of the Hindus, whose wife was the weaving Uma, the flax (Uma) Goddess, the Goddess mother of the flax weavers of Asia Minor who become the Egyptian Goddess Neith - Ibid - P. 250. 2. சிலப்பதிகாரத்தில், “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமென முரையு முண்டே.” என வரும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி. 202 என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரும், கி.பி. 171 என K.G. சேஷ ஐயரும் முறையே குறிப்பிட் டுள்ளார்கள். 3. 11ஆம் பரிபாடலிற் காணப்படும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி. 196 ஜூன் மாதம் 28ஆம் தேதி (28th June 196 A.C.) என மு. ழு. சங்கர் என்பார் குறிப்பிட்டிருக்கின்றார்.-ஹ ஏடிடரஅந டிக ளவரனநைள in ஐனேடிடடிபல.-ஞ. ஏ. முயநே. 1 2 15 1. Deccan Itself one of the most ancient geological formations in the world has since the dawn of history the home of the Dravidians, the oldest of the Indian races-The people of India-P, 2, -S.H. Risely. 2. People want to know something about Dravidian Culture. South India is a land of wonders; but the wonder of wonders is that the history of South India has not yet come out-Bhandarkar, Hindu-March. 1-1939. 1. Fossil remains. 2. Tethys. 3. Hindu Civilization P. 7, Radha Kumud Mookerji. 1. Outlines of Science P. 641 - Prof. Arthur Thompson. 2. Prof wegener. 3. Tertiary epoch. 1. The Pandaeon nation is said to have been governed by females and their first queen is said to have been the daughter of Hercules. The city nysa is assigned to this reign as is also the mountain sacred to Jupiter. meros by name. In a cave on which the ancient Indians affirm Father Baccus was nourlshed-Ancient India as described by Megasthenes and Arrian - P. 156. “இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை” “மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரு மிமவா னிலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தண்மா மலையத்தூ டேறுஞ் சுழுனை யிவைசிவ பூமியே” என்னும் திருமந்திர அடிகளும் ஆராயத்தக்கன. The Greek writers identified the gods of the country with their own. They supposed Siva to be Bacchus and believed Krishna to be Herackles - The Muhammadans-P. 13J.D. Rees. C.I.E., I.C.S. 1. The formation of Malaidives P. 23, - J.S. Gardiner. 2. காவதம் நான்கு முதல் 10 கல் தூரம். 3. When the ancestors of Indians, the Persieans. The Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together whithin the same enclosures. Nay under the same roof, Lectures on the Science of Language.-1864 Maxmuller. 1. In the 4th century (A.D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written Collected works of R.G. Bhandarkar Vol. 11, P. 444. 1. India and the Pacific world P. 63; Victor christian. 2. Ibid P. 63. 3. Origin and antiquity of man pp. 131, 148, 81 84. G. Federick Wright. 1. Bel marduk. 2. Ishtar. 3. Links with past ages pp. 215. 222 - E.F. Orlon. 4. Mittani (Kharian) 5. Hindu civilization p. 38. R.K. Mukerjee. 6. The gate ways of India P. 53, Colonel Sir Thomas Holdich. 7. The couch shell used in Minoan cult for summoning the devinity. Conch shells are themselves of frequent occurance in Minoan shrines - The Palace of Minos at Knossos-vol. IV, p. 344. 1. The Ancient Egyption Culture pp. 22, 23 G. Elliot Smith. 2. Introducion by Prof. S. Langdon to the script of Harappa and Mohenjodaro and its connection with other scripts - G.R. Hunter. 3. Mohenjodaro and the Indus Civilization, vol. I, P. 44 - Sir John Marshall. 1. India and the Pacific world - p. 22, Kalidas Nag. 2. Ibid P. 63. 3. Book of beginings-Gerald Massey. 1. The most ancient East - p. 210, - Childe. 2. The Ancient History of the near East. p. 173 - H.R. Hall. 1. India and the Pacific World. P. 19. * Krakatoa; 2. After inspecting this evidence Keith wrote. ‘It is hard to resist the notion that in course of about one million years the descendants of this ape browed Pithecanthropus had been converted into aborigines of the continent of Australia” - Out Posts of science P. 76. - Bernard Jaffee. 3. India was an amazing breeding ground for the evolution of life forms. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India-The world we live in Vol. 1-104. Graeme Williams. “But was Jave therefore the region of the human origin; may this not more probably have occured in India where we know there were postanthropoid apes once existing that seem to have been the common stock from which gorilla chimpanzi and Orang utan were derived” - Ibid. P. 134 4. சங்க நூல்களில் தமிழ்நாடு ‘நாவலந்தீவு’, ‘நாவலந் தண்பொழில்’ என வழங்கப் பட்டுள்ளது. 1. J.C. Brown, quoted in stone age in India. P.T.S. Aiyengar. 2. Dr. De’Jerra.....tries to fix an approximate date of the early ‘Indian Palaeolithic Culture’ assigning to Jave man and to Pokin man 5,00,000 to 4,00,000 B.C. He places the Indian early Palaeolithic Culture in the second interglacial (3,00,000-2,00,000 B.C.) and solo man in circa 1,00,000 B.C. - India and the Pacific world, P. 280. 1. The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into Central India where in the Narbada Valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right up to Himalayan Hills-India and the Pacific World P. 279. 1. God Varuna was himself an Asura. Mr. Banerji believes that the Asuras were different from Dasus but identical with Dravidians. The Dasus he points out were black, while Asuras were brown or rather golden. This synthesis he points out in the adoption of the Cult of Siva which was the Asura Cult; as a part of Vedic System of worship Varuna and other Asura gods were incorporated into the Vedic Pantheon. The gods of the Asuras and the gods of the Trtsus become one. A social amalgamation came into existence with fruitful results. The Asuras and the Devas were made sons of the same Father God. Many Vedic Kings and Rishis came to have Asura Blood in them as is indicated by the colour. Sages like Vasishta, Agastya and Visvamitra were given the same Father Mitra-varuna. Asura in Aryan means Supreme God - Pre-musalman India....P.P. 172, 174, ஏ. சுயபேயஉhயசலய, ஆ.ஹ. 2. Life in ancient India P. 16. P.T.S. Iyengar. 3. உயிர்ப்பலியிடும் வழக்கம் பிற்காலத்தில் காய் கனிகளையும் பிற உணவுகளையும் படைக்கும் வழக்கமாக மாறிற்று. உயிர்ப் பலிக்குப் பதில் இன்றும் பூசனிக்காய்களை வெட்டி நடுவே குங்குமம் பூசப்படுகின்றது. பலியிட்ட மிருகங்களைத் தீயில் இட்டுப் பொரித்து உண்பதற்குப் பதில், பிற்காலத்தில் உணவு ஓமத்தில் இடப்படுகின்றது. ஓமத்தீயில் உணவை இடுவதற்குப் பதிலாக மேற்கு ஆசிய நாடுகளில் தூபம் காட்டப்பட்டதென வரலாற்று நூலார் கூறுகின்றனர். 1. சற்லி ஆற்றைக் கடக்க முன் உள்ள சமயக்கொள்கைகளில் இந்திய பூர்வ மக்களுக்கு ஆரியர் கடமைப்படவில்லை என்பது உண்மையே. சற்லி ஆற்றைக் கடந்தபின் எழுதப்பட்ட சம்கிதைகளையும் பிராமணங்களையும் பற்றி அவ்வாறு கூறுதல் இயலாது. - சி.ஆர். ஹன்ரர். -New Review-1936. சனகன் யாக்ஞவல்கியரையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி, ‘நீங்கள் அக்கினிகோத்திரம் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டபோது அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. ஆகவே தீயில் பலியிடுதல் (ஓமம்) முதலியன தமிழரின் கிரியை முறையே யென்று கருத இடமுண்டு. இன்று ஆலயங்களில் நடக்கும் கிரியைகளை ஒத்த பழைய தமிழர்களின் கிரியைமுறைகளைப் பின்பற்றியே பிராமணங்கள் செய்யப்பட்டிருத்தலும் கூடும். பிராமணங்கள் கி. மு. 800க்குச் சிறிது முன் செய்யப்பட்டனவென்றும், ஆகவே மிகப்பழைய வேத பாடங்கள் கி. மு. 1200க்கு முன் தோன்றியிருக்க முடியாதென்றும் பனேஜி என்பார் கூறுவர்.-வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்து இந்தியா. பக்கம். 44. 1. யாகங்களில் பாடல்கள் பாடுவதும் இவ் வகையினதே. 2. Krishna represented in the Maha-Bharata as black and so is Arjuna-so also is Vyasa who has related the story. And so is Drappathi the wife of pandavas. ‘Here is then Draupathi apuroaching.....with eyes like a lotus petal and with a lusterous dark complexion resembling the colour of a black lotus. By her side is Subathirai who is fair as gold. Here is another wife of Arjuna being the daughter of Naga king fair as pure as gold. Here is also Chitrangada daughter of the Pandya king whose complexion is like the colour of a madhuka flower. Here is the chief wife of Bhima.....with complexion as dark as a garland of blue lotus. By her side is the wife of Nagula as dark as a blue lotus’ (Asramavasi Parva -Epic India-C.V. Vaidya, M.A., LL.B 3. பலதேவன் ஓர் புறனடை. மகா பத்மநந்தனுக்கு 1050 ஆண்டுகளின் முன் குரு வமிசத்திலுள்ள பரிச்சித்து பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சந்திரகுப்தன் ஆளுகை தொடங்குவதற்கு நாற்பது ஆண்டுகளின் முன் மகா பத்மநந்தனின் ஆட்சி ஆரம்பித்ததென வாயுபுராணங் கூறுகின்றது. சந்திரகுப்தன் கி.மு. 322இல் ஆட்சி ஆரம்பித்தனெனக் கொண்டால் பரிச்சித்து கி.மு. 1412இல் இருந்தவனாவன் - வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்து இந்திய - ஆர். தி. பானெர்ஜி. 4. இராசாவலி என்னும் இலங்கைப் பௌத்த நூல் புத்தர் காலத்துக்கு 1844ஆம் ஆண்டு களின் முன் (கி. மு. 2370) இராமாயண நிகழ்ச்சி நடைபெற்றதெனக் கூறும். 1. சாதகக் கதைகளில் இராவணன் சீதையைக் கவர்ந்ததும் இராம இராவண யுத்தம் நிகழ்ந்ததுமாகிய வரலாறுகள் காணப்படாமையின் இராமரைப்பற்றியும் இராவணனைப் பற்றியும் அந் நாட்களில் தனித்தனி வழங்கிய கதைகளை வால்மீகர் இணைத்து இராமாயண மென்னும் ஒரு புதிய கதையைச் செய்தார் என்று சிலர் கருதுவர். பாணினியும் பதஞ்சலியும் வாசுதேவன் அருச்சுனன் உதிட்டிரன் முதலியோர் பெயர்களைத் தம் நூல்களில் எடுத்தாண்டிருப்பதுபோல இராமருடைய பெயரை எடுத்தாளவில்லை. பிற்காலத்து எழுதப்பட்ட அமர சிம்ஹத்திலும் விஷ்ணுவின் பெயர்களுள் இராமரின் பெயர் கூறப்படவில்லை.”- Early History of the Dekkan R. G. Bhandakar, P. 17. 2. Practically no traces of it (Rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero like the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the protoman, and returns no more to earth,-India and Western world H.G. Rawlison. The doctrine of Transmigration is entirley absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryas borrowed the idea from the aboriginies.-Cambridge History of India Vol. I.P. 108 -P. of - Macdonald. No trace of the doctrine of Transmigration is found in the Rig Veda and yet no other doctrine is so peculiarly Indian. It may have had its origin in non-aryan animism quite early-Origin and development of Bengali, Vol. I. P. 42 S. K. Chatterji. 1. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருப்பது என்பது பொருள். இஞ் ஞானங்கள் குருசீட பரம்பரை முறையில் எழுதாக்கிளவியாக வந்தன. இவைகளே தமிழர்களது மறை. அவை நூல்களல்ல. இறைவன் கல்லாலின்கீழ் தக்கணாமூர்த்தியாக விருந்து வேதப்பொருளைச் சனகாதி நால்வருக்கு உபதேசித்தார் என வரும் ஐதீகமும் இவ் வகையினதே. இவை மறைத்துக் கூறப்படுதலின் மறை, வேதம் என்னும் பெயர் பெற்றன. வேதம் என்பது மூடு என்னும் பொருள் தரும் வே என்னும் அடியாகப் பிறந்தது. ஆரிய வேதங்கள் இவ்வாறு மறைத்துக் கூறப்படுவனவல்ல. தமிழர்களின் மறை (இரகசியம்) க்கு வழங்கிய பெயர் களைப் பிற்கால ஆரியர் தம் பாடல்களுக்கு இட்டு வழங்குவாராயினர். எழுதாக் கிளவி, வேதம், மறை முதலிய சொல்லொற்றுமை பற்றிப் பிற்காலத்துப் பெரும் மயக்கம் நேர்ந்தது. The upanishads are philosophical doctrines which were to be kept very secret and to be imparted to students in secrecy. Pre-Historic Ancient India P-42. R.D. Banerji. 1. Man and thought in ancient India-Raddakumud Mookerji PP. 6, 7, 24. 2. And this will confirm the conclusion that the Dravidian tongue prevailed in North India before the Aryans came and occupied it. The same conclusion is forced upon us by an examination of the vernaculars of North India.......that even the vernacular, Bengalee which bristles with sansckrit and derivative words, is indebted to Dravidian languages for pretty large portion of the vocabulary and structural peculiarities. What is strange in even in Hindi Speech Dravidian words can be traced. No reasonable doubt can therefore be entertained as to the Dravidian speech once being spoken in North India.-Lecture on the Ancient History of India - D.R. Bhandarkar. 1. ஆரிய மக்கள் வழங்கிய ஆரியம் உள்நாட்டு மொழிகளோடு கலந்த முதுமொழிகள் பேச்சு மொழிகளாக விருந்தன. அம் மொழிகள் பிராகிருதம் எனப்படும். 2. A Short History of Sanskrit Literature. P. 24 - A. Macdonell. 1. The Dravidian dialects affected profoundly by sounds the structure, the idiom and the vocobulary of the former in the course of its growth in India on account of the constant influence of the Dravidian tongue. This language lost the subjunctive mood, many infinitive forms and several noun declentions, forgot its richly varied system of real verb tenses and adopted terms of expressions peculiar to the Dravidian idiom...The Dravidian names of things and operations connected with these arts of peace are native and not foreign (i.e. borrowed from Sanskrit) the question has not yet been investigated but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these were borrowed from the Dravidian. -The age of the mantras-P. T. S. Ayengar. 2. மந்திர காலம். பி.தி.சீ. ஐயங்கார் 3. புத்தர் கபிலர் வழியிற்றோன்றி நாககுலத்தவரென்று ஓல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். - சூரியனும் பாம்பும் - பக்கம் 66. 1. பாளி மொழியில் ஆரியத்துக்கில்லாத எகர ஒகரம் (குறில்கள்) இருப்பதாலும், மொழி தொடர்பான பிற ஏதுக்களாலும் மகதநாட்டில் தமிழ்மொழி வழங்கியதென்றும் புத்தர்திராவிட வகுப்பைச் சேர்ந்தவரென்றும் பந்தர்க்கர் கூறியுள்ளார்-Wilson’s Philological lectures-Dr. R.G. Bhandarkar. Collected works Vol. IV. P. 295. 2. Singhalese is essentially a Dravidian language. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that, while in regard to its word development, Singhalese is the child of Pali and Sanskrit; it is with regard to its phyiscal features and structure essentially the Daughter of Tamil...with regard to the laws governing the relation of words in sentences Viz: the laws of syntax, including idioms we find great many laws which cannot be explained except in the principle of Tamil Grammar-Mudaliar W.E. Gundavardhana. Journal of the Royal Asiatic Society Ceylon Branch. 1. இந்தியாவென்பது அலக்சாந்தரின் படையெடுப்புக்குப் பின் மேற்கு நாட்டவர்கள் நாவலந்தீவு என வழங்கிய நமது நாட்டுக்குக் கொடுத்த பெயர். இந்தியாவென்பது சிந்து என்பதன் திரிபு. சிந்து என்பதைக் கிரேக்கர் ஹிந்து என வழங்கினர். 1. பெருங்கதை 1. பெரும்பாண். 1. அகம். 2. வளை என்னும் சொல் சங்கை உணர்த்தும். சங்கை அறுத்துச் செய்யப்பட்ட வளையமும் வளை எனப்பட்டது. இதனை ஆதிகால மக்கள் கையில் அணிந்தார்கள். இவ்வளை பேய் பிசாசுகளினின்றும் மக்களைக் காக்கின்றது என்னும் நம்பிக்கை முற்காலத்தில் உண்டாயிற்று. ஆகவே வளைக்குக் காப்பு என்னும் இன்னொரு பெயர் உண்டாயிற்று. இன்றும் நாட்டுப்புறங்களில் குழந்தைகளின் கைகளில் காப்பாகச் சங்கு வளைகள் இடப்படுகின்றன; இன்றேல் சங்குமோதிரங்கள் கட்டப்படுகின்றன. பொன்னாலும் உலோகங்களாலும் செய்த வளைகள் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அவையும் வளை காப்பு என்னும் பெயரால் வழங்கும். தோடு காதோலை, சரடு போன்ற அணி வகைள் ஒவ்வொன்றும் ஆதி கால மக்களின் வரலாற்றை உணர்த்துவன. 1. உலகின் எல்லாப் பக்கங்களிலும் பழங்காலத்தே அரசர் கடவுளராக வழிபடப்பட்டனர். மேற்கு ஆசிய எகிப்திய வரலாறுகளில் இதனை நன்கு காணலாம். இலங்கையிலே குளங்களை வெட்டிப் பயிர்த் தொழிலை வளம்படுத்திய அரசர் தெய்வமாக வழிபடப் பட்டனர். இது மின்னேரி என்னும் குளத்தை வெட்டியவன் மின்னேரிக் கடவுள் என வழிபடப்பட்டமையால் அறியலாகும். இன்று ஆலயங்களில் நடக்கும் விழாக்கள் பூசைகள் என்பன அக் கால அரசன் ஒருவன் தனது கோயிலில் (அரண்மனையில்) இருக்கும் போதும், வீதி வலம் வரும்போதும் செய்யப்பட்ட மரியாதைகளே. இந்திரவழிபாடு பௌத்த மதத்தினர் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. பௌத்தர் இந்திரனைச் சக்கரக் கடவுளென வழிபட்டனர். பிற்காலத்தில் வேந்தன் வழிபாடும் இந்திரன் வழிபாடும் ஒன்றுபட்டன. 1. The Baveru Jalaka which relates the adventures of Indian merchants taking to Babylon by sea the first peacock for sale indicate according to Prof. Buhler that, “the Banis of Western India undertook trading voyages to the shores of persian gulf or of its rivers in the 5th perhaps in the 6th century B. C. ”- Studies in Indian History and Culture, - p. 14-Dr. Narendranath law. இந்தியாவின் மேற்குக்கரை உரோமையோடு பெரிய வாணிகம் புரிகின்றது. சில இந்தியர் இந்துசீனம் வரையும் சென்று வாணிகஞ் செய்கின்றனர். அவர்கள் பவளத்தையும் இளக்க முத்து மாலைகளையும் கொண்டு சென்று விற்கின்றனர். இவர்கள் கணக்குகளைப் புத்தகங்களில் எழுதிவைப்பதில்லை. இவர்கள் யானைத்தந்தம் அல்லது காண்டா மிருகக்கொம்பைத் தமது பொருள்களுக்கு விலையாகப் பெறுகின்றனர். இவர்களுள் மந்திர வித்தையிற் றேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஒரு மனைவி கணவனுக்குக் காட்டக்கூடிய உயர்ந்த மரியாதை அவர் அவனுடைய பாதங்களை முத்தமிட்டு முழங்காலைத் தழுவிக்கொள்வதாகும். அவர்களின் வீடுகளில் பாடவும் ஆடவும் கூடிய இளமகளிர் இருக்கின்றனர். அரசனிடமும் மந்திரிமாரிடமும் அநேக பட்டுக்கம்பளி உடைகள் உண்டு. அரசன் தனது தலைமயிரை சீனப்பெண்கள் போல உச்சியில் முடிகிறான். விவாகமானவர்களும் இப்படியே முடிகின்றனர். விவாகமாகாதவர்களும் இவ்வாறு முடிந்து காதைத் துளையிட்டு விலையுயர்ந்த வளையங்களை அணிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளை உடுக்கின்றனர். அவர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அவர்களுக்கு எழுத்தும் இலக்கியங்களும் உண்டு. வான சாத்திரத்தையும் சோதிடத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். எல்லோரும் பனை ஓலையில் எழுதிய சமயநூல்களைப் படிக்கின்றனர். இது மா துவான் என்னும் சீனனால் எழுதப்பட்ட குறிப்பு-Ma. Twan lin (550 - 60 A.D.) 1. சின்ன ஆசியாவிலே கித்தைதி என்னும் நாட்டிலும் வருணன் என்னும் கடவுள் வழிபடப்பட்டார். 1. Ptolemy - (B.C. 283 - died) 1. கிழிந்த சிதாஅ ருடுத்து மிழந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடினரு மறையர் நீடின் உருவந் தமக்குத் தாமாய இருபிறப் பாளர்க் கொரூஉமா தீதே. (தகடூர் யாத்திரை) 1. “ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக அரசனது கட்டளைகளை எதிர்பார்த்து நாட்டைக் காத்து வந்தனர். சிற்றரசர்கள் எல்லோரும் கப்பங்கட்டி வந்ததோடு வேண்டியபொழுது துணைப்படையு முதவக் கடமைப்பட்டிருந்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப்பட்டிருந்தது. யானைகள் முன்வரிசையிலும், குதிரைகள் இருபுறங்களிலும், காலாள் பின்வரிசையிலுமாகச் சண்டையில் அணிவகுக்கப்பட்டு நின்றன. அவை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒரு மகா சாமந்தன் அதிகாரத்தின்கீழ் இருந்தன. அம்மகாசாமந்தரும் ஒரு மகா சாமந்தாதிபதியின் கட்டளைக்குட்பட்டிருந்தனர். சகல போர் விஷயங்களையும் கவனிப்பதற்குச் சந்தி விக்கிரகி என்னும் மேலான அதிகாரி ஒருவன் இருந்தான். சண்டையில் ஈட்டி, கத்தி, வேல், வில், அம்பு முதலிய பல ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன. போர் தொடங்குமுன் வீரர், வீரபானஞ் செய்வது வழக்கம். அதனால் வீரனொருவனே ஆயிரம் பகைவரை எதிர்க்க வல்லவனாவான். யானைகளுக்கும் மதுவுண்பித்தலுண்டு. அவையும் வெறிகொண்டு மிதித்தும் துவைத்தும் எதிரிகளைச் சின்னபின்னஞ் செய்யும். போர்வீரர் மனைவியர் கணவரோடு போர்க்களத்துக்குச் செல்வது வழக்கம். சேனாபதி ஒருவன் சண்டையில் முதுகிட்டுப்போனால் அதற்குத் தண்டனையாகப் பெண்வேடந்தரிப்பித்து அவனை அவமானப்படுத்துவர்-(சாளுக்கிய) விக்கிரமாதித்தன்-பக். 50-அ. வா. வெங்கட்டராம ஐயர். 1. வாள்: உவணி, ஏதி, கடுத்தலை, துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், வாள்; குறுவாள்: குறும்பிடி, சுரிகை, கத்தி; வளைந்த வாள்: கோணம், ஈட்டி, இட்டி, கழுக்கடை; வேல்வகை: எயில், அரணம், எஃகம், எஃகு, குந்தம்; ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு; சூலப்படை: கழு, காழ்; கண்டகோடரிவகை: மழு, கணிச்சி, குந்தாலி, குளிர், தண்ணம்; அம்புவகை: அம்பு, கணை, கதிரம், கதிர், கோ, கோல், தொடை, தோணி, பகழி, பள்ளம், புடை, வண்டு, வாளி; நாணி வகை: நாணி, பூரம், ஆவல், கொடை, நாரி, நரம்பு, பூட்டு. 1. முரசு, பேரிகை, ஆகுளி, சல்லரி, சல்லிகை, கிணை. 1. நூல், இழை, சரடு, தொடர், நுவணம், பனுவல், பிசின், பன்னாடை, நெய்யுரி, மரவுரி, ஆசினி, இலக்கர், சீரம், சீரை, துகில், அறுவை, துணி, துண்டு, ஆசாரம், ஆசிடை, ஆடை, இடைதல், கலிங்கம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியல், கந்தை, கத்தியம், கப்படம், கலை, கடாகம், காழகம், கூறை, கோடி, சம்பரம், சாடி, சிற்றில், சூடி, சேலை, தானை, தூசு, தூட்டி, தூரியம், கோடிகம், மிடியல், புடைவை, படாம், பட்டம். 1. கொடி பல வெழுதிய கோலத் தோளினர்-பெருங்கதை. 1. பிண்டிக்-கட்புடைக் கவிசினை நற்புடை நான்ற-தாழைக் கயிற்றூசல் விருப்புற் றூக்கியும். (பெருங்கதை.) 1. வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளில் வரும் வெள்ளாளரில் வெள் வெள்ளத்தைக் குறிக்கும். 1. Sanskrit scholors suffer from a form of superiority complex and believe that Sanskrit, the language of the gods being a perfect language, could not stoop so low as to borrow words from the languages of men. Hence they are fond of inventing derivations, ingenious and plansible but absurd from a historical point of view. - Pre - aryan Tamil culture.-P.T.S. Iyengar. 1. Pre Buddhist India - Ratilal - N. Mehita. 1. அரசன் அரையில் வெள்ளையாடை யுடுத்துத் தலையில் தலைப்பாகை வைத்திருக் கின்றான். இவன் யானையிற் செல்லும் போது முத்தும் இரத்தினமும் பதித்த பொன் தொப்பியைத் தரிக்கின்றான்; கையில் பொன் நாடாக் கட்டுகிறான்; காலிற் பொற்சங்கிலி அணிகிறான். சிவந்த கம்பில் மயிலிறகு கட்டிய ஆலவட்டங்களைப் பலர் கொண்டு செல்கின்றனர். தெரிந்தெடுக்கப்பட்ட 500 பிறநாட்டுப் பெண்கள் அரசனைச் சுற்றி நின்று காவல் காக்கின்றனர். இவர்கள் நடனமாடிக்கொண்டு முன்னே செல்கின்றனர். இவர்கள் காலில் செருப்புத் தரித்திருக்கவில்லை. அரையில் ஆடை உடுத்திருக்கின்றனர்; முத்து மாலை பொன்வளைகளை அணிந்திருக்கின்றனர். அவர்களின் உடம்பு கற்பூரம் கஸ்தூரி முதலியவைகள் பூசி நறுமணமூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் வெயில் படாதபடி மயிலிறகுக் குடை பிடிக்கின்றனர். நாட்டிய மாதருக்கு முன்னால் அரசனது கருமகாரர் பல்லக்குகளில் செல்கின்றனர். பல்லக்கின் காம்பு பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீதிகள் புழுதியாயிருப்பதால் அரசன் 100 போர் வீரர்களை ஏவி வீதிகளுக்குத் தண்ணீர் தெளிக்கச் செய்கின்றான். Ad Chau Jukua (1225 A.D) - A Chinese Traveller. 1. In their left hand they carry bucklers made of undressed oxhide, which are not so broad as those who carry them, but are about as long. Some are equipped in the javelins instead of bows, but all were a sword, which is broad in the blade, but is not larger than three cubits; and this when they engage in close fight (which they do with reluctance) they weild with both hands to fetch down a lustier blow. The horsemen are equipped with two lances called Saunia and with a shorter buckler than that carried by foot soldiers - Arrian. 2. Physicians with surgical instruments, Medicines remedical oils and cloth in their hands; and women wish prepared food and beverage should stand behind uttering encouraging words to fighting men says Kaudalia - International law and customs in ancient India - Paramathanath Bandyopathyyaya. 1. துறவியர், வணிகர், ஊமர், செவிடர், குருடர், இடங்கள் தோறும் திரிந்து கல்வி பயிலும் மாணாக்கர் முதலிய பல வேடம் பூண்டு சென்று பகைவரின் மறைவுகளை அறியும் ஒற்றர் பலர். பெண் ஒற்றர்கள் பரத்தையராகச் சென்று பகைவர் நாட்டிற்றங்கி அரசகுமாரரையும் பிற பெருமக்களையும் வசப்படுத்தி அவர்களை இறுதியிற் கொல்வர்; வணிகராகச் சென்றோர் பகைவரின் படை வீரருக்கு நஞ்சுகலந்த மதுவகைகளை விற்பர்; வேலை யாட்களாகச் சென்றோர் பகைவரின் ஆடுமாடுகளுக்கு நஞ்சு கலந்த தண்ணீரும் புல்லும் கொடுப்பர். இவ்வாறு ஒற்றாடும் முறைகளைக் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார்.-மேற்கூறியபடி. 1. துரானியர் எனப்படும் எல்லா மக்களிடையும் திங்களில் முயல் இருக்கிறதென்னும் நம்பிக்கையிருந்ததென உலக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 1. 665 தானிய எடை. 1. அரசன் படுக்கையினின்று எழுந்ததும் வில்லுத்தாங்கிய பெண் கூட்டத்தினர் அரசனை எதிர்கொண்டார்கள். இவர்கள் அரசனது நெருங்கிய மெய்க்காப்பாளராவர். பெண் அடிமைகள் அவனது உடம்பைப் பிடித்து (massaged) குளிப்பாட்டி ஆடைகளை ஒலித்து, அவனைப் பூமாலைகளால் அலங்காரஞ் செய்தார்கள். அரண்மனையில் மூன்று தரத்தின ராகிய மகளிர் இருந்தனர். தாழ்ந்த படியிலுள்ள கணிகையர் அரசனுக்குக் குடைபிடிக்கவும் பொற்குடத்தை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டனர். அடுத்தபடியிலுள்ள பெண்கள் விசிறியைக் கொண்டு சென்றனர். இவர்கள் அரசனுக்குப் பக்கத்தே கொலுவிருக்கை மண்டபத்தே இருந்து சேவித்தனர். இவர்களிலும் உயர்ந்த பெண்கள் அரசன் தேரிற் செல்லும்போது அல்லது சிங்காசனத்தில் இருக்கும்போது சேவித்தனர். இவர்களில் வயது சென்றவர்கள் சமயலறையில் சேவிக்கும்படி அனுப்பப்பட்டனர். இக்கணிகைப் பெண்கள் 24,000 பணங்கள் கொடுத்து விடுதலை பெற்றுத் தாம் விரும்பியவாறு வாழ்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். எட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசனின்முன் பாடவும் ஆடவும் அமர்த்தப்பட்டார்கள். இவை கௌடலியர் கூறியவற்றால் விளங்குகின்றன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டைய பர்குத் (Bharhut sculputre) சிற்பத்தில் முற்றாக ஆயுதந் தரித்த பெண் குதிரைமீது இருந்து கொடியைப் பிடிக்கும் உருவம் காணப்படுகின்றது. - Chandragupa Mauurya and his times-Radha Kumud Mookerji-P. 97. 1. அக் கால வீரர் பயன்படுத்திய படைக்கலங்களுள் வளைதடி ஒன்று. இது ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பயன்படுத்தும் பூமறாங் என்னும் தடியே என ஆராய்ச்சியால் தெரிகின்றது. அதனை ஓர் இலக்கை நோக்கி எறியின் அஃது இலக்கிற்பட்டு மீண்டும் திரும்பி வரும். டாக்டர் ஒப்பேட் என்பார் இதைக்குறித்து எழுதியிருப்பது பின்வருமாறு: Dr. Oppert says, “this general belief that the bumerang is a weapon peculiar to Australians, but this is by no means the case. It is well known in many parts of India specially in its Southern peninsula. The Tamilian Maravar and Kallar employ it when hunting and throw it after deer. In the Madras Government Museum are shown three boomerangs two ivory ones which came from the armoury of the late Rajah of Tanjore, and a common one which came from Pudukota. The wood of which the bumerang is made is very dark. I possess a fair black wooden and one iron bumerang, which I received from Pudukota. In the arsenal of the Pudukota Rajah is always kept a stock of these sticks. Their name in Tamil is Valai Tadi, ‘bent stick’ as the stick is bent and flat. When thrown a whirling motion is imparted to the weapon which causes it to return to the place it was thrown. The natives are well acquainted with the peculiar fact - Indo - Aryans - Vol. 2-R. Mitra. 1. Sarmanes. சார்மேனியர் என்போர் பௌத்த குருமார். இவர்கள் எல்லாக் குலங்களினின்றும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். பிராமணர் ஒரே கூட்டத்தினின்றும் தலைமுறை தலைமுறையாக வருகின்றனர் - Hiuen Tsiang. 1. 606 அடி 9 அங்குலமுள்ள ஒரு கிரேக்க அளவை. 1. பழைய பாபிலோனிய நகரங்களும் இந்திய நகரங்களும் வீடு வாயில்களும் ஒரே வகையினவென்று வரலாற்று நூலார் காட்டியிருக்கின்றனர். அக் காலப் பாபிலோன் பட்டினத்தைப் பற்றிக் கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது பின்வருமாறு:- “பட்டினம் நாற்சதுரமுடையது. அதன் ஒவ்வொரு பக்கமும் 120 ஸ்ரீடியா நீளமுடையது. நகரைச்சுற்றி ஆழமும் நீர் நிறைவுமுள்ள ஓர் அகழி செல்கின்றது. அதனை அடித்து ஐம்பது அரசினர் முழம் அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருக்கின்றது. சாதாரண முழத்திலும் அரசினர் முழம் மூன்று அங்குலம் அதிகம். அதன் உயரம் இருநூறு முழம். அகழியிலிருந்து எடுத்த மண்ணால் கல் அரிந்து சூளைவைத்து மதிற்சுவர்கள் கட்டப்பட்டன. மதிலின் உச்சியில் ஒன்றையொன்று பார்த்து நிற்கும் ஒரு மாடியுடைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் நடுவில் வெளியிருக்கின்றது. இவ்வெளி ஒரு தேர் திரும்பக்கூடிய அகலமுடையது. மதிலைச்சுற்றி நூறு வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலுக்கும் வெண்கலக் கதவிடப்பட்டிருக்கின்றது. அரண்மனை அகன்ற மதிலினாற் சூழப்பட்டிருக்கின்றது. அம் மதிலின் கதவுகளும் வெண்கலத்தாற் செய்யப்பட்டுள்ளவை.” 2. அக் காலப் பாபிலோனிலும் இவ்வகை ஒழுங்கே இருந்தது. இது கெரதோதசு கூறுவதால் விளங்கும். அவர் கூறியிருப்பது-அரசன் ஆளும் தேசம் பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. அப் பிரிவுகள் அரசனுக்கும் அவனது பட்டாளத்துக்கும் தேவையான பண்டங்களை அளித்தன. இவைகளையன்றி அவை வழக்கமான திறையையும் இறுத்துவந்தன. பாபிலோன் தேசத்திலுள்ள நாடுகள் ஆண்டின் நாலுதிங்கள்களுக்குப் போதுமானவற்றை உதவின. ஏனைய மாதங்களுக்கு வேண்டியவற்றை ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகள் அளித்தன. அரசனிடம் 8000 ஆண்குதிரைகளும் 16,000 பெண் குதிரைகளும் இதே எண்ணுள்ள நாய்களும் இருந்தன. அச் சமவெளிகளிலுள்ள நான்கு பட்டினங்கள் இவைகளுக்கு உணவளித்தன. அந் நாடுகளுக்கு மற்றைய வரிகள் நீக்கப்பட்டிருந்தன. 1. The Greek girls we know frequently imported at Barygaza (Brooch) and a guard of Javana women is a stock feature of the Rajah’s court in the Indian Dramas - The presence of Greek girls as royal attendance shows that they were commonly found in Rajah’s harems - India and the Western World - H.G. Raw-linson - pp. 47. 170. It is probable that when the importation of Greek women, (who were often employed in the households of Indian chiefs and nobles at a time when Greek ladies married Indian princes) language ceased to exist also - The Gates of India - p. 22-Colonel - Sir Thomas Holdich. 1. It was apparently by way of Euphrates valley that the Indian Village Committees made their way into Europe. It was the descendants of the Latin races who founded the village committees of Italy on the pattern of those of Southern India. In passing from the Hindu to the Assyrian mythology we find another development from the original type of the Dravidian Village committee. The Ruling races of Pre - Historic Times pp 1, 39, 90 - H. E. Hewitt. 2. ஒவ்வொரு குடும்புத் தெரிவுக்கும் நிற்பவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதப்பட்டன. மரத்தடியில் அல்லது கோயில் மண்டபத்தே சபை கூடியது. அப்பொழுது கோயிற் குருமாரும் அங்கு வந்திருந்தார்கள். குருமாருள் வயதின் மூத்தவர் குடம் ஒன்றை எடுத்து அதனைக் கவிழ்த்து எல்லோருக்கும் காண்பித்தார். விவரம் அறியாத சிறுவன் ஒருவன் குடும்பினின்றும் வந்த ஓலை நறுக்குக்கட்டு ஒன்றை அவரிடம் கொடுத்தான். அவ் வோலை நறுக்குகள் குடத்திலிட்டு நன்றாகக் குலுக்கப்பட்டன. பின்பு அந் நறுக்குகளில் ஒன்றை அச் சிறுவன் எடுத்து ஐயரிடம் கொடுத்தான். அவர் தம் ஐந்து விரல்களையும் நீட்டினபடி அதனைத் தமது உள்ளங்கையில் வாங்கி அதிலுள்ள பெயரை வாசித்தார். பின்பு அங்குள்ள மற்ற ஐயர்மாரும் அப் பெயரை வாசித்தனர். இவ்வாறு ஒவ்வொரு குடும்புக்குமுள்ள உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். 3. சபைகளுக்கு ஊர் என்னும் பெயரும் இருந்தது. ஊர் என்பதே மிகப் பழைய நாட்டு அல்லது கிராம ஆட்சி நிலையமாயிருந்தது. பிற்காலத்தில் ஊர், சபை எனப்பட்டது. The suggestion may be made that, ur represents in every case the more premitive local organization indigenous to the Tamil country a lineal decendent of the ancient Mantram; and the Sabah was generally a later superimposition-Studies in Chola History and Administration P. 103. 1. இவர்கள் இலங்கையினின்றும் வந்து இந்தியாவிற் குடியேறினோர்; மலையாளத்திற் பெரிதும் காணப்படுவர். 1. We know that among many early tribes the wives, slaves, horses etc., of chiefs were slain at the tomb that their ghosts might accompany the spirit of the master and this is the true origin of satte - Syrian stone lore. 2. இலங்கையிற் கூலியின்றி அரசினர்பொருட்டுச் செய்யப்பட்ட கட்டாயவேலை இராச காரியம் என்று வழங்கிற்று. 1. The Hindu Temples were fortresses, treasures, courthouses, parks, fairs, exhibition sheds, halls of learning and pleasure all in one - Studies in Chola History and Administration-p. 115. 1. The kitchen is carefully guarded and is constructed in a secret place. The food for the king is tested by a multitude of testers. Examination is made of any traces of poison found in the viands and the demeanor of the tasters; medicines to the king must pass similar tests. Servants in Charge of the king’s dresses and toilets must appear bathed and in washed clothing to receive the toilet requisites daily sealed from the body in charge of the same, before applying them on the king - Chandrgupta Maurya and his time -R. K. Mookerji. 2. Robert Knox’s Ceylon, ஸ்ரீ விக்கிரமராச சிங்கா (சிங்களம்) இந் நூல்களால் மேற்குறித்த பொருள்கள் விளங்குகின்றன. 1. Dravidian tribal names are still to be found among the Bataks - India and the Pacific world; Kern recognised long ago that the earliest Indian colonists of Sumatra were of Dravidian origin. Before the spread of Malays in different parts of the archopaelago, the Dravidian element was supreme. The Austric people of Combodia mixed with the Dravidians and founded a powerful kingdom long ago - Pre-historic Ancient and Hindu India - p.30 R.D. Banerji. 1. Ancient Indian Colonies in the Far East - Dr. R. C. Mazumdar. 1. British Malaya-an account of the origin P. 13. F. Sweetenham. 2. Tamasak or Tamasha. 3. Sumatra a name of Indian origin (Somatra) excellent matter or substance - Ibid. 4. The Brahman Kaundinya who married a native princes called Nagini Soma and became lord of the country on the 1st century A. D. This was the beginning of the Cambodian dynasties ruling Cambodia for over 1,000 years, sharing the peninsula with the Indo China rulers of Cambodia (ultimately of Indian origin) -India and the pacific world - P. 117. 5. Epigraphical evidence of Vocan points to South India as the home of the Indian colonists - Indian colonists in Funan and Cambodia P.12. C. S. Srinivasachari. 1. Hindu Colony of Cambodia - Prof. Phanindranath. 2. Short Studies in the Science of Comparative religions - ஆயதடிச ழுநநேசயட - T.G.R. Forlong. 3. Indian Cultural Influence in Cambodia - B.R. Chatterji. 1. Tamilian Antiquary. 1. After the rise of Buddhism we find Balis flying seawards to “Little Java” or Baly and the Sunda group; and there they are still with that marked Dravidian characteristics - Rivers of Life, Vol, 2, P. 486. 2. Indeed the Asur or Asuras were gods or angels in high Asian or Prevedic and early Vedic days; But in all sub Vedic literature they are A - suras or great giants - Ibid-P. 485. 1. The fatherhood is not taken into account when the sexual bond is a loose one, and under such circumstances the descent can only be reckoned in the mother’s side....The sense of fatherhood was of later development and that in premitive times the child was held to be allied by blood with the mother and not with the father - Premitive family - C. N. Starcke. 2. மலையாளத்திலுள்ள நாயர் வகுப்பினரிடையில் காணப்படும் விவாகத்தொடர்பு ‘சம்பந்தம்’ எனப்படும். பெண், தான் விரும்பிய எந்த நேரமும் இத் தொடர்பை வெட்டிவிடலாம். பின்பு அவள் இன்னொரு ஆடவனோடு சம்பந்தம் வைத்திருக்கலாம். அவனுக்கும் ஒருவகைக் கட்டுப்பாடும் இல்லை. மலையாளத்தில் பெண் தனது ‘தார்வாட்’டில் இருக்கிறாள். அவள் இருக்கும் இடத்துக்குக் காதலன் செல்கின்றான். சிலவேளை காதலன் அவளிடம் செல்லாமலே நழுவிவிடுகிறான்; அல்லது அவள் அவனுக்கு அங்கு வருதல் கூடாதென அறிவிக்கின்றாள். இவ்வாறு ‘சம்பந்தங்’ குலைந்து போகின்றது. பிள்ளைகள் தாய்க்குச் சொந்தமானவை. தந்தைக்கு அவர்களைப் பராமரிக்க வேண்டிய கடமை இல்லை. அவனுக்குத் தனது குடும்பத்திலுள்ள சகோதரியின் பிள்கைளைப் பராமரிப்பதே கடமை-Dravidian Elements in Indian Culture - G. Slater. இலங்கையிலும் சிங்கள மக்களிடையே இவ்வகை மணங்கள் பின்னி (Bini) மணம் என்னும் பெயருடன் நடைபெற்றன. 1. The Ammachi is not a member of the Royal household and is associated with the royal court. She has neither official nor social position at court, and cannot even be seen in public with the ruler whose wife she is. Her issues occupy the same position as herself and the law of Malabar exclude them from all claims to public recognition......The nieces, who like nephews have the title of Highness and Rani.....Native life in Travancore - Rev. samuel Mateer. 2. ஆண் விலங்குகளுக்கும், மக்களுள் ஆண் பாலினருக்கும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் உறுப்புகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பெண் இனங்கள் அதிகக் குட்டிகளை ஈனுகின்ற காலத்தில் ஆண் இனங்களும் குட்டிகளுக்குப் பால் கொடுத்தனவென்றும், அக்காலத்தில் அவ்வுறுப்புக்கள் வளர்ச்சியடைந்திருந்தன வென்றும், அவற்றின் பயன்பாடு குறைந்த பிற்காலத்தில் அவை வளர்ச்சிகுன்றி அடை யாளமளவில் இருக்கின்றனவென்றும் அவர் கூறுவர். 1. India’s past - A.A. Macdonell - P. P. 84-5. 1. “The lioness or panther on which she sits (the great Asiatic Mother Goddess) remind us of the - lion drawn car of Cybele who was worshipped in the nieghbouring land of Phrygia across the Halys. So Adargate the great Syrian Goddess of Herapolis Bambyce, was potrayed sitting on a lioness...At Babylon image of a Goddess whom the Greeks called Rheu had the figures of two lions standing on her knees. On Egyptian monuments the Semitic God Kadesh represented standing on a lion-Golden Bough. Among the Babylonian and northern Semites she was called Istar (ஈசுவரி) the Astoreth of Bible and Astorate of Phoenicia-The Hittite Empire, P. 204. 1. There is on the left hand of the image of the bull God and on the right that of the Mother Goddess both deities are enshrined representing the mated pair of the established Hittitee devinities. But that which arrests the attention and may throw light upon the broader question of the Hittitee origins is the obivious parallelism of Siva.... This God is seated on the bull throne and the Goddess wearing the mural crown sits on a lion throne with staff and mace forming a pair - The Hittitee Empire - John Garstang pp. 204, 304. It (Jupiter Delichenus) seems more the less to represent the chief deity of the place. He stands on a bull holding the emblem of lightning and a double axe. His consort was a lion Goddess described on inscriptions as Hera Sancta-Ibid p. 307. 2. The humped Indian bull (Bos Indicus) all of which are freely figured in Sumerian, Hitto, Phoenecian and Kassi seals as, sacred animal of the East - The Indo-Sumerian seals deciphered - p. 20, L.A. Waddell. 1. Of, Ra, Il, El, Helos., Bil, Baal, Al, Allah, Elohim‘I cannot get any further information but that they were names given to the sun as the representative of the Creator, who was spoken of reverentally as my lord. The lord & c.-The king & c, as this organ represented the creator and the sun all were typified under such characters as Bacchus, Dionysus, Hercules, Hermes, Mahadeva, Siva, Osiris, Jupiter, Molech Baal, Assur and Innumerable others - Ancient Faiths pp. 70. 476, Thomas Innman. Sans - Devas; Lat - Deus; Lith - Diewas; Old Irish - Dia; Old Norse - Tivar; Iran - Diaeva - Prehistoric Antiquities of Aryan peoples, p. 45, Dr. 6, Schrader. 2. பெலுஸ் அல்லது பேபெலின் கோபுரம்: சாலடியாவிலுள்ள பெரிய கோபுரம் பகற் கடவுளின் (Bel) ஆலயம். பகல் என்பது (Ba.el,Ba-al or ’p’al) பிற்காலத்தில் பலுஸ் என வழங்கிற்று. இது 200 அடிச் சதுரமும் 480 அடி உயரமும் உடையதாயிருந்தது. இது வெயிலிற் காய்ந்த களிமண் கற்களாலும் செங்கல்லினாலும் கட்டப்பட்டது. இதன் படிக்கட்டுகள் செல்லச் செல்ல ஒடுங்கிச் செல்கின்றன. இதன் ஒவ்வொரு படியின் உயரமும் 60 அடி. இதன் உச்சியிலிருந்த மேடை ஆதிகால ஞாயிற்றுக் கோவில் எனத் தெரிகின்றது. இதன் உயரம் 606 அடி என்று ஸ்ராபோ கூறியிருக்கின்றார். அவர் இதனை பெலுஸின் சமாதி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் உச்சிக்கு ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டு உண்டு. இடையிடையே தங்கியிருந்து செல்வதற்கு இடங்கள் இருந்தன. ஒவ்வொரு படியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. அடிப்படி சனிக்கு உரியது. இது கறுப்புநிறம் பூசப்பட்டிருந்தது. இரண்டாவது படி வியாழனுக்குரியது. இது தோடம்பழ நிறம் பூசப்பட்டிருந்தது. மூன்றாவது செவ்வாய்க்குரியது. இது சிவப்புநிறம் பூசப்பட்டிருந்தது. நான்காவது வெள்ளிக்கு; இதன் நிறம் மஞ்சள். ஆறாவது புதனுக்கு; இதன் நிறம் நீலம். ஏழாவது சந்திரனுக்கு; எட்டாவது சூரியனுடையது. தயதோரஸ் (Diodorus) என்பார் இதன் உச்சியிலுள்ள மேடையில் பெல்டிஸ், றீயா, பெல் (Beltis, Rhea, Bel) என்னும் கடவு ளருக்குக் கோயில்கள் இருந்தனவென்று கூறியுள்ளார். பகல் (Bel) கடவுளுக்கு முன்னால் இரண்டு பொன் சிங்காசனங்கள் இருந்தன. பெல்டிஸ் என்பன வெள்ளியாற் செய்யப்பட்ட பெரிய பாம்புகள். இவை 30 தலன்ட் (Talent) (ஒரு தலன்ட் 200 தங்க நாணய நிறைவரையில்) நிறையுள்ள வெள்ளியாற் செய்யப்பட்டுள்ளன. இம்மூன்று உருவங்களின்முன் 40x15 அடி பொன் மேசையும் மேசைக்குமேல் 3 குடிக்கும் கிண்ணங்களுமிருந்தன. ஆண்டில் 1000 தலன்ட் நிறையுள்ள சாம்பிராணி இங்கு எரிக்கப்பட்டதெனக் கெரதோதசு (Heradotus) ஆசிரியர் கூறியுள்ளார். அவர் காலத்தில் இதன் அடியில் தங்கத்தாற் செய்த பகல் உருவமும், அதன் முன் தங்கமேசை ஒன்றும் இருந்தன. உச்சியிலுள்ள மேடையில் ஒரு மேசையும், அழகிய கட்டிலும் இருந்தன. பிள்ளை இல்லாத பெண்கள் பிள்ளைவரம் வேண்டி அங்குச் சென்றார்கள்.-Rivors of life Part2. 1. The gates which lead to the sanctuary ought to be turned to the east in such a manner, that it often happens that the Sun, in rising on certain days in the year, throws its light on the lingam which is in the sanctury - Dravidian architecture: G. Jouveal Dubreuil. 1. “கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பர் சேக்கும் கல்லடைப் பொதியில்” (பட்டினப்பாலை) (கொண்டி மகளிர் - சிறை பிடிக்கப்பட்ட மகளிர்; பொதியில் - மன்றம்.) 2. Under the village tree or sacred oak,. all very solemn vows must be made; here the young plighted their troths and elders ratified tribal and national offices and offered all the sacrifices of the gods. The sacred groves resounded with music chanting wailings, with music litanies and prayers....and the wide spreading oak was thought a more devine than these like the ancient ark it was often the alter ego of the heaven father-The short studies in the science of comparative religions - p 376. 1. Indian Civilization and its Antiquiry: B. Mukerjee. 2. Ganesha Siva - Linga and Yama (the God of death and justice) and numerous serpent Gods were worshipped in some areas on the whole continent - Hindu America: P. 60 Chamanlal. 1. Bacchus wore tiger skin - Early faiths of Western Asia. P. 36. 1. They (arks) seem to have developed from the old arrangement of the trilithon, enclosing a menhir or a cone. The deities seem to show that they belong to the people of Egyptian influence in Phoenicia - Syrian Stone Lore - P. 100. 2. The practice of (linga worship) was so general as to have spread itself over a large part of the habitable globe, for it flourished for many ages in Egypt, and Syria, Persia, Asia minior, Greece and Italy; it still is in vigour in India and many parts of Africa and was even found in America on its discovery by the Spaniards. “being regarded as the most sacred objects of worship and consecrated by religion, the cultus was associated with very idea and sentiment which was regarded as ennobling to man....In Egypt the phallus is frequently represented by a symbol of generation. The Jews did not escape this worship; we see their women manufacturing Phalli of gold and silver as we find in Ezakijel.” XVI 17 - Westroppe. 3. Out what concerns us as civilized christians, is to inquire how it comes to pass that devices which tell solely of the adoration of the sexual organs of the male and female are still represented in our churches as if they were holy emblems......; Rimmon - the emblem of the prolific womb the celestial mother. Rimmon figures in many christian churches are கடிரனே யள வை னனை in ளுலசயைn கூநஅயீடநள - Ancient faiths embodied in ancient names; vol. 2. p. 650. 1. That shameful thing which Jermiah reproachfully said had alters in every street of Jeruslem and which no doubt was the symbol of Jacob’s ali - im -; Short Studies in the Science of Comparative religions - P. 352. 2. The fire worship was borrowed from the Turanians - Short Studies in the Science of Comparative religions; துரானியர் - ஆரியரல்லாதார். 1. While the stone pillar also was primitive alter - Theism - E - Britannica. 2. The Arab sailors who saw the Phallie cone of Ceylon calling al maka and ‘the Adam’ an Indo-moslam name for euphamism for the lingam - Short Studies in the Science of Comparative religions; p. 340. 3. God was supposed to be the king of the country. The king was only an administrator on behalf of God - Fr. Heras, The Journal of the University of Bombay - 1936. 4. எகிப்திய அரசர் ஞாயிற்றிலிருந்து தமது பரம்பரையைக் கூறினர். அரசன் ஞாயிற்றின் பிறப்பு என்று கருதப்பட்டான். அவனுக்குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் நடைபெற்றன. மரணத்துக்குப்பின் ஒவ்வொரு அரசனும் ஞாயிற்றுக் கடவுளாக வழிபடப்பட்டான். சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான்.-Sun and the Serpent - Oldham. யப்பானிய அரச பரம்பரை ஞாயிற்றினின்றும் உண்டான தென்பது யப்பானியரின் நம்பிக்கை. இவ் ஐதீகத்தைப் பின்பற்றியே யப்பானிய அரசன் சூரியனுக்குரிய வெள்ளைக் குதிரையிற் சவாரி செய்கிறான். 1. In the later periods of Jewish history, the worship of the golden calf was held in such honour, even contrivance was adopted to keep it out of sight. The name Eglah (Calf) was borne by one of David’s wives - Ancient Faiths: p. 471. 2. Osris apis (Bull) under the name of Sarapis was worshipped far and wide throughout the countries bordering Mediteranean during the Hellenic age, till Letullian exclaimed indignantly it is not Egypt now-a-days so no Greece but the whole world swares by this African-as in Egypt, so in Crete the fertilising bull was on the long run identified with the sun - Zeus p, 49 - Arthur Bernard Cook. 3. Ishtar, Isiris and Ashtoreth and the present Mary were virgin Goddesses - Short Studies in the Science of Comparative Religions. 4. The expression munkan ‘three eyed’ and munminkan “three fish eyed” referring to Siva are frequently found in the inscriptions. Two inscriptions speak of the God of the City of Natur under the name of Vidukan (open eye); this very ancient idea agrees with the modern cannon belief of Hinduism that the Gods have no eyelids. Thus unable to close their eyes, they see everything. - Fr. Heras, J.O.T.U.O, Bombay. 5. Sumerian Triad An, Ama and Enlil - Father mother and son. Amman is called Minkanni in inscriptions “Uyarelter or Amman” -i.e. One Amman of the chariot of the Suris. This deity half man (Proper left) and half woman (Proper right) which is also found in Sumer with the name of Amma, - seems to be original idea of the Hindu Image Arthanareswara and which has the two parts put in relative position - Journal of the University of Bombay - Fr. Heras. 1. Rivers in Life. 1. Another emblem of God only once referred to is the snake. The snake one of the most common symbols of Shiva in modern Hinduism. Thus on inscription (of Mohenjo - Doro) informas us that mina meditates on the snake of the three eyed one, - Fr. Heras. 2. The pea-cock in the banners of so many Asiatic kings and princes in generally a symbol of past or present faith of the sun - Faiths of man in all lands - Vol. 1.P. 28. குறிப்பு: சிவனைக் குறிக்க ஒரு முக்கோணமும், துர்க்கையைக் குறிக்க ஒரு முக்கோணமும் வழங்கினவென்றும், சிவனைக் குறிக்கும் முக்கோணம் நிமிர்ந்தும் துர்க்கையைக் குறிக்கும் முக்கோணம் கவிழ்ந்தும் இருந்தனவென்றும், இவ் விரண்டையும் அவ்வாறு சேர்த்து வைக்குமிடத்து அறுகோணம் உண்டாகின்றதென்றும், இவ்வறுகோணமாகிய வடிவு பிற்காலத்தில் கொற்றவையும் சிவனும் சேர்வதால் தோன்றிய அறுமுகக் கடவுளாகக் கொள்ளப்பட்டதென்றும் சிலர் கருதினர். மேற்கு ஆசியாவில் பகல், அசெறெத் என்னும் அம்மை அப்பரைக் குறிக்க நிமிர்ந்த கவிழ்ந்த முக்கோணங்கள் பயன்படுத்தப்பட்டன. இஃது ஆராயத்தக்கது. 1. எல் என்பது அல், அல்லா, அலி முதலிய சொற்களாகத் திரிவதைக் காணலாம். மால் என்பதிலுள்ள அல் எல்லின் வேறுபாடே. 2. It may be noted at the outset that the sun was identified with Siva (perhaps also with Vishnu) and the Suriasevana really means the worship of Siva in the form of the sun. “It is interesting as showing the identity of Siva and Surya and there by explaining the inner significance of the Surya worship.” Ancient Indian Colonies in the far East. Vol. 2, pp. 1067. 3. The Assyrians had twelve great gods clearly corresponding to the twelve houses or months of fertility Rivers in life - p. 2. Now the sun in the course of the year travels through the constellations of the zodiac, which were called houses accordingly each month of the sun being in a different house was supposed to take a different form and since the constellation of the Proto-Indians as said above were eight (அட்டமூர்த்தம்)......Images of the Supreme being under these forms were worshipped in different parts of the country - Fr. Heras. எகிப்தில் ஆண்டின் ஒவ்வொரு திங்களும், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்குப் பரிசுத்தமானவை - ஹெரதோதசு. Heradotus. 1. Calandar - En. Britannica. 2. The civilization of Babylon and Assyria-pp. 484, 512. 3. Samash is represented upon the bas - relief as seated upon a throne with his feet resting upon the rows of cones which in Babylonian art represent rocks or mountains; and one of the names of sun God was El - shaddai or God of mountains which has been compared with the Habrew El-shaddai - Hammaurabic code-p. 83-Chilporic Edwards. 4. Old testament was written between 450 and 285 B.C. Moses was said to have written inspired records for his tribes, but wich have unfortunately all perished, so at least we gather from Ezra who with his scribes endeavoured to reproduce them and result is our old testament - Rivers in life p. 11. 1. Another Bibilical analogy has received attention. But ye have borne the tiber nacle of your moloch your Cheun, your images the star of your God which ye made for yourselves (Amos V. 26).......Scholars saw at once that the chiune was Siva. His tibernacle is the pavilion carriage of Siva. His star, the six rayed star of Siva made of the two equilatral triangles Siva’s own and the same upside down for Durga - Rama and Homer pp. 196, 218, 220. 2. Accordingly to Hebrew scholars the name Jehovah is to be derived from the stem Havah and this we take for the modified form Chava. - க்ஷடிடிம டிக வாந க்ஷநபinniபே. 3. Wife of Chosroroes II - Twin Rivers p, 129 - Seton Lloyds. 1. Jupiter traced fervo. The direct Assyrian denomination however of the planet is lost in the gulf of time from the Chaldie Sevah - History of Hindustan p. 239 - Author of Indian antiquities. 2. Ugro - Finnic and other Tunarnian dialects Zivo or Sivo - and Siva is protecting deity among the Lapps. The Turkish sev king, Akkadion Se - favour, sub - heart - Faiths of man - p. 308. Forlong. 3. The place Sivapura connected with Panini might have been named after them. Mr. A.C. Das suggests that they might have been worshippers of Siva or Phallus - History of Pre-Musalman India p. 185. 4. Africa is full of tree worship, ‘because Bruce found trees adorned with streamers flags or tags and with altars at their base, where meats, grain, wine and oil were offered. - Rivers in Life, Vol. 2p. 456. 5. Trees were worshipped by the ancient Celts, and Brosses even derives the word kirk now softened into church, from quercus, an oak the species being peculiarly sacred - The Origin of Civilization and the Primitive condition of man, Lubbock p. 213. 1. மொகஞ்சொதரோவில் “தாண்டவன் இர்நால் மரம்” என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. நாலு மரங்களுக்கிடையில் தாண்டவமாடும் கடவுள் இருக்கிறார் என்பது இதன் பொருள். “Thandavan is among the four trees I.E. this shows that the idea of God, dancing as the source of all the movement of the universe is a very old one. - The Journal of the University of Bombay-Fr. Heras. 2. The Temple was the house of the Gods copied from a human house; - Translations of the 3rd International Congress of the History of Religions.-vol 1.P. 187-Flinders Petrie. 3. The recent excavations in Punjab and Sind show that the temple was a familiar institution in the 3rd millennium before Christ. “The temples” says Sir John Marshall, stand on elevated ground and are distinguished by the relative smallness of their Chambers and the exceptional thickness of their walls, a feature, which suggests that they were several storeys in hieght-Anessay on the origin of the South Indian Temples - N. Venkata Ramanayya, M.A., Ph.D 1. First and prominently comes the tree; then the grove and the well, then the little column or phallus; then the altar of unhewn stone and an oak or adytum, steamers or serpents & c. “The early Gods liked not walls” sain Pliny very truly and the Jews well know this - Rivers of life. The grove was undoubtedly man’s first temple but became a sanctuary, asylum, or place of refuge and as time passed temples became to be built in the sacred groves. There is no doubt but that where the holy al kaaba of Meka stood was but a grove and a well and round all the holy circles of England stood sacred woods - Ibid p. 70. 2. சீரியாவிலுள்ள மாபெரும் ஞாயிற்றுக்கோயில். 3. The original temple in which the cone and its shrine or the altar were placed was but a cromlech or enclosure squire or round, made by setting up stones. The remains of such enclosures with a dolmen on one side are found.....in Phoenicia. It was with this sacred ideas of sacred enclosure or gilgal, with its pillar or Metzebah that Hypaethral temples of Byblus and Baalbek developed. The original temple at Kaaba at Mecca with sacred stone to Hobal was another such temple - Syrian stone lore. 1. கொறமாங்கன் என்னும் மனிதன் இன்றைய மனிதனுக்கு ஒருபடி முன் வாழ்ந்தான். இவ் வினத்தைச் சேர்ந்த மக்கள் ஆசியாவிலோ ஐரோப்பாவிலோ தோன்றி 25,000 ஆண்டுகள் வரையில் ஐரோப்பாவில் பரம்பினார்கள். இம் மக்களின் எலும்புகள் பிரான்சிலுள்ள கொறமாங்கன் என்னும் மலைக்குகையிற் காணப்பட்டது. ஆகவே அவர்கள் குறோமங்கன் மக்கள் என மாந்தர் நூலாரால் வழங்கப்படுவர். 2. Fergussion first called attention to the striking similarity in general arrangements and conception between the great South Indian temples and that of an-cient Egypt. The gopurams or gate-towers which in the later more ornate exa-mples are decorated from the base to the summit with sculpture of Hindu Pan-theon increase in size of the walled quadrangles., the outer once becoming im-posing land marks, which are vissible for miles around and are strikingly similar to Egyptian Temples - Migrations of Early Culture -G. Elliot Smith. - P. 79. 1. Thus in the matter of its early buildings India has clearly been influenced by Egypt Phoenecia and Chaldia - Thurstorn. 2. (In China) The idol of the chief deity of the temple commonly, a seated human figure with distinctive atributes occupies a wooden shrine or tebernacle facing the main entrance often Gods, his associates “ministers” have their places near him or inside chapels - History of Religions - G.F. Moore. 3. In the year festival of the Assyrians the bare Pole itself was the object of ritual practices,......just as was the case in Syria and Palastine. There is considerable reason for believing that this ritual importance of a tree or three trunk was a feature of the religion of all the peoples in the Eastern Mediterranean.....for in Crete, in Asia Minor and in Egypt similar ceremonies may be observed....At the top (of the pole) there are four or more spreading lines which seem to intend to represent branches. Below these branches there are generally represented bands - Early History of Assyria - P. 113. 1. முல்லைப் பாட்டு. 2. In the Hindu temple of today and the tebernacle of the Jews so in Assyrian temple a veil existed - Ancient Faiths Vol. 1. P. 614. The Jerusalem temple was not only one which had sacred veil before the entrance, we have found such a veil mentioned in connection with the temples of the sun in Suppra 880 B.C. together with ceremonial vestments proper for various feasts. The temple at Olympia was famous for the Assyrian veil described by Josephus as symbolizing the heaven is like the veil of gabala in phoenecia., which sybolizes the cosmos. The Jerusalem veil is said to have renewed every year - Syrian stonelore - P. 189. To which (Arabian venus at Mecca) a veil was presented by Hymyaritt king (about 1688 - 1629 B. C.) - Ibid. 3. So the king or priest carried out the daily routine of a servent in a house - Flinders Petrie. 4. தொல்காப்பியத்தில்; “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனக் கூறப்படுவதன் பொருள் இதுவே. ஓதல், ஓதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் என்னும் அறுதொழில்களை அறுவகை எனக் கூறுதல் ஏற்றதன்று. இந்திய பழைய வரலாற்றுக் கதைகளை ஆராய்ந்த பகிதர் என்பார் பிராமணரில் மூன்று வகையினரைக் குறிப்பிட்டுள்ளார். There have been three classes among Brahmans throughout Indian history namely (1) The ascetic devotee and teacher, the Rishie or Muni (2) The priest and spiritual guide of kings, nobles and people (3) The Minister of state, royal officer and those who followed secular employments - Ancient Indian Historical traditions P. 62. F.E. Pargiter. 1. The Arab still calls the Babylonian plain-Shin Iaa; that is sun god. For in the oldest Keltic as well as in Modern Dravidan. Tamil Iar is God; even in Ze-piter of the groves-Early Faiths in Western Asia - Forlong. 2. Aiyer is the term employed and it is either a corruption of Aryar or is a derivative form ஐ meaning வியப்பு (Tholkappyam) and denotes men who ovoke admiration - Sera Kings of Sangam Period - P. 148. K.G. Sesha Aiyar. ஐயா என்னும் சொல் மொகஞ்சொதரோ முத்திரைகளிலும் காணப்படுகின்றது. அங்கு அது கோயிற் குருவைக் குறிக்கின்றது. ஹெரஸ் பாதிரியார், “மீனனிர்மாறு அடுஇர் ஐயன்செறி தல்தல்வ” என மொகஞ்சொதரோ முத்திரையில் பொறிக்கப்பட்டிருத்தலைக் காட்டி அதற்கு “மீனவரின் பகைவர் மறியற்படுத்தப்பட்ட அரசகுரு” என்று பொருள் எழுதியுள்ளார். “Minanir maru adirayyan sere taltalva”-(the object of) the hostility of Minnas is the imprisoned illustrious ruler who is a Priest” -The Journal of the University of Bombay-July 1936 - Fr. Heras. 3. ஒவ்வொரு மூன்றாம் நாளும் (எகிப்திய) குருமார் பேன் முதலிய அழுக்குகள் இராதபடி உடல் முழுவதையும் மழித்துக் கொள்கின்றனர். அவர்கள் சணல் ஆடையை உடுப்பார்கள்; காலில் மிதியடியைத் தரிப்பார்கள். மிதியடி பைபிலஸ் (Byblus) என்னும் மரத்தினாற் செய்யப்பட்டது. அவர்கள் வேறுவகையான ஆடையும் மிதியடியும் பயன்படுத்துதல் கூடாது. அவர்கள் பகலில் இருமுறையும் இரவில் இருமுறையும் நீராடுவார்கள். சுருங்கக் கூறுமிடத்து அவர்கள் பல கிரியைகள் புரிகின்றனர். அவர்கள் தமது சொந்தப் பொருளைச் செலவிடுவதில்லை. அவர்களுக்காகப் புனித உணவு ஆக்கப்படுகின்றது. குருமார் பலர் கடவுளுக்குப் பணிவிடை செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவாய் இருப்பார். குரு ஒருவர் மரணமானால் அவர் புதல்வன் அவ் விடத்துக்கு வருகின்றான். எகிப்தியர், பருகும் கிண்ணங்களைத் தினம் சுத்தஞ் செய்கின்றனர். இதனைச் சிலர் செய்தும், சிலர் செய்யாதும் விடுகின்றார்களல்லர். அவர்கள் எப்பொழுதும் தோய்த்துலர்ந்த சணல் ஆடையை உடுக்கின்றனர். விரதமிருந்த பின்பே எல்லோரும் பலி செலுத்துகின்றனர் - ஹெரதோதஸ். அறுவகைப் பார்ப்பனப் பக்கம் என்பதற்கு உதாரணம் இன்றைய உரோமன் கத்தோலிக்கக் குருமார்களிடையே காணப்படுகின்றது. 1. There appear to have been a general permit for a learned Brahman to speak his mind in any durbar; and these Brahmans often gave out their opinions most fearlessly. This privilege was similarly accorded also to men of learning - Beginnings of South Indian History, P. 139 - S.K. Aiyengar. 2. First thing in the morning, fire must be lit, a lamp carried round to the master, as they usually rose before the sunrise, then some incense burnt to give divine nourishment of perfume, incense being literally, ‘divine food’ like cooking the morning meal. The master’s door was then opened, obeisance was made to him, with protestations of fidelity, he was anointed, and the divine food of incense put before him. The servant then returned with assurances that he was ready to his master. After the breakfast the servant comes forward again, goes through the same obeisance and calls on him to wake up in peace, declaring that his word is law, and that he will destroy his enemies. Then the master is washed perfumed, and dressed in various cloths, anointed and decorated. The ground is sanded for him to walk on when he comes forth. Several offerings of incense and another washing represent the meals and cleaning during the day and the service is over. - Flinders Petrie. இங்குக் கூறப்பட்டது எகிப்திய ஆலயங்களில் நடைபெறும் கிரியை. 1. The discovery of Zimbawe of soap stone clyinder of quern shape with rings of rosettes on the top and sides, which rosettes are believed to represent the sun and are common in phallic decorations. This cylinder which is considered as undoubtedly Phoenician is similar to the one found at the temple of Paphos in Cyprus which was once a leading colony. The rosettes are also similar to those on the sacred cone of the great Phoenician temple of the sun in Emesu in Syria and also to the the rosettes on the Phoenician sepulchral setele in the British museum. The ancient Ruins of Rhodesea P. 38 - R.N. Hall and W.G. Neal. 2. The Jupiter of Syria is represented as a bearded God with phrygian cap....at his side hangs his sword in its scabboard. His right hand brandishes a double axe; his left gashes a thunderbolt consisting of six spirally twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between the eyes-Zeus-P. 637, Arthur Bernard Cook. 3. The custom of using lamps and candles in worship is very ancient having prevailed in Babylon (Baruch VI. 14) in Pagan Rome in Egypt.....The lights are typical to sun - Ancient Faiths Vol. 1. P. 444 - T. Inman. 1. We have interesting evidences of the sacred dancing which we know to have found part of the ritual of the Hebrews and Phoenicians. Indeed they still survive not only in Asia-Minor but in Palastine at Adh Dhaheryth (Debir). In 1874 I saw the village elders dancing solemnly before the shrine of their Noby. David it will be remembered danced with almost the fury of a Bacchic right before the ark. The Derwish dances also must not be forgotten and the dancing of the Jerusalam people at the feast of tabernacles mentioned in the Misbnah - Syrian Stone lore P. 100. 2. The religious prostitutes mentioned by Heradotus, who were certainly a prominent feature in Babylonean religion. They were women who took vows of celebacy though usually dwelling together in special convents could neverthless live in this world and were often normally married. If married (and to possess votaress wife was probably regarded as destinction) a concubine was provided to bear children to the husbands, but had no legal wifely rights, which belonged to the votaresses. -The Ancient History of the Near East - R.H. Hall. The Syrian emperors brought with them to the Capital of the world (Rome) the Phoenician calus of conical stone and the troops of temple women. -The Syrian stone lore - P. 228. The woman attached to the Hindu temple exactly reproduce the Kadesh or other town sacred to the great mother Goddess. The menhir, or conical stone was the emblem throughout Syria of the Gods presiding over fertility - Ibid P. 47. All alike had women allotted to their service, but the Hebrew God went beyond the Hindu, for he was cheered with wine and for long periods the male Kadashism thronged in the santuary - Judges IX 13; Dent XIX 26; Jer. XXXV - Short Studies in the Science of comparative Religions. 1. Ancient Egyptian Civilization - G. Elliot Smith P. 32. 2. .......Should here be certainly regarded as the couch shell used Minoan cult for summoning divinity. Such trumpet shells are themselves of frequent occurance in Minoan shrines...The special object of cult in this case is the group of Cyprus like trees shown behind the altar, and in front of which are set the sacred horns and altars while a votary brings down the divinity by blowing blasts - The Palace of Minos at Knossos, Vo. IV - P. 244. The earliest use of the couch shell trumpet was in the Minoan worship in Crete. Thence it spread for and wide until it came to play apart in religious services of Christian, an Jehovah, Brahman, an Buddhist Shinto, and Shamanislic in widely different parts of the world - In Mediterranean, in India, in central Asia in Indo-nesia and Japan in Ocenia and America. In many of these places it was supposed to have the definite ritual object summoning the Deity - Shells as evidence of the Migration of Early Culture P. XXIV - J. Wilfred Jackson. (கிரேத்தா மக்கள் இந்தியாவினின்றும் சென்ற தமிழர்களே என்பது வரலாற்று நூலார் துணிவு. ஆகவே, கிரேத்தா மக்கள் இந்தியாவினின்றுமே இவ் வழக்கைக் கொண்டுசென்று பரப்பினர்.) 1. In view testament the sound of the trumpet was the signal for resurrection - Ibid. 2. Ibid P. XXV. 3. 1. In Phoenician, Greek and later times these couch shell trumpets were essentially used in the Mediterranean. European travellers have found them in actual use in East Indies, Japan, and by Alfurs in Ceram; the Paupuans of New Guienea, as well as in South Sea Islands as far as New Zealand and in many places in America. In the old and new world a like one find, in the same close Association the Purple industry - Migrations of Early Culture - G. Elliot Smith. 1. Tyrian purple and purple stuff were essentially articles of luxury varying in price according to times and quality. They were always costly and vied in value even with gold itself. Consequently we find them reserved for the hanging of temples or employed for the robes of priests and kings. The Babylonians are said to have devoted purple to the dress of their idols - Shells as Evidence of the Migrations of Early Culture - P.7. In the Romish Church the prevalent colours for sacred dresses etc. Are purple or Scarlet - Ancient Faith - P. 470. 1. Foot found near the French rocks near Mysore, “part of a large chatty with two ornaments coniform in shape, with a small pap in each re-entering angle and a raised garland like ring round each cross”. This is evidently a Swastika, and it bears a strong resemblance to a Trojen Type of Swastika - Stone age in India, P. 43. 2. Baal was represented by an altar, by a bull, by the cross sign of the sun + (sun and its rays) or by linga stone, or a stone pillar - Links with past ages - P. 22 - E.P. Orton. The sacred symbol of the Hittites also, including the True Cross or the Sun-Cross or the Red-Cross of St. George of Cappadocia and England and St. Andrews Cross are identified with the Sun-Cross of Sumerian, Trojans, ancient Britons as displayed in my comparative plates of these crosses - The Makers of Civilization - P. 16. Waddell. We do not know where the Swastika first appeared. It may have appeared in India or some near part of Asia, long before the time of Budda and spread from there to all over the world. The symbol is universal. Anthropoligists draw maps showing the distribution and migration of the Swastika. There are the maps of the whole world spotted with Swastika from New Zealand, Australia and Japan, through Asia, Africa and Europe to North and South America. “This odd little Symbol spins gaily round the world” say H.G. Wells in his out line of History - The Swastika - P. 14 Well Hayes. 3. ஐனேயை, வாந நுஅயீசைந டிக ளுறயளவமைய - ஊடிசடியேவiடிn ளுடிரஎநnசை - க்ஷடிஅயெல, 1937 - Fr. Heras. 1. வழிபாட்டு முறையில் மேலோர் (ஆப்தர்) காட்டிய வழி என்பதை ஆகமம் என்னும் சொல் குறிக்கும் எனப் பேராசிரியர் எஸ். கே. கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார். சிவ ஆகமங்கள்; 28; வைணவம் 108. Agama is the Synonym of what logicians call Apta Vakyam...This would correspond to what is generally called..., the practice of the disciplined.......We may define Agama generally as that which is the accepted practices of the deciplined in respect of worship. - Paramasamhita - Translation by Dr. S.K. Aiyengar. 2. The ancient as well as modern worship of Siva and Vishnu and Amba, are.....described in the three sets of books called Agamas. They are utterly different from and opposed to the Vedic Fire Cult. - Stone age in India P. 52. The worship of Siva or Vishnu or Sakti in temples or houses was considered a heresy by the Vedantis, till in the tenth century Yamunacharya wrote the Agama Pramanya and Ramanujacharya in the next century blended the Vaishnava rites and concepts and the Vedic practices and Vedanta tents into one whole - Ibid. 1. South Indian Bronzes - G.O. Gangoly. 2. “அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின்.....நூல்களாற் கூறப்படுவன ஏனைய மூன்றுமேயாம்.” (பரிமேலழகர்.) “அகத்தியனாரும் தொல்காப்பி யனாரும் வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி.....வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறினார்.” (நச்சினார்க்கினியர்.) 1. The Puranas naturally lent themselves to augmentations, and the Puranic Brahmans used their opportunities to the full, partly with further genuine traditions, but mostly with additions of Brahmanical stories and fables and doctrine and ritual matter. Brahmanic tradition speaks from the Brahmanical stand-point, describes events and expresses feelings as they would appear to Brahmans, illustrates Brahma-nical ideas, maintains and inculcates the degnity., sanctity, suprimacy and even superhuman character of Brahmans, enunciates. Brahmanical doctrines whatever subserved the interest of the Brahmans often enforcing the moral by means of marvellous incidents that not seldom are made up of absurd and utterly impossible details. It often introduces kings, because kings were their patrons, yet even so the Brahman’s dignity is never forgotten. It is mainly Brahmanical mistakes and absurdities that have discredited Puranas. - Ancient Indian Historical Traditions - P.P. 37 39 - F, E. Pargiter. 1. Brahman tales generally untrustworthy for traditional history. The Ramayana is highly Bramanical and its stories are fanciful and often absurd - Ibid. 2. After the study of the above one-thousand and eight hundred inscriptions which up to now have been deciphered by the present writer, it is easy to realize that the wave of migrations of the Mediterranean race which as supposed to have been from West to East must now be finally settled as having taken place in the opposite direction, i.e., East to West. The development of Mohenjo-Daro script, the religion of these two countries and that of Egypt, the titles of kings, the number of Zodiacal constellations among the Proto Indian people and the relative position of these constellations, the changing of the Proto Indian constellation of the harp (Yal) for Turus (the bull) which might have taken place in Sumer, the tradition of ancient people of Mesopotamia recorded by Berosus, the parallel by Bibilical account in Gen. ii, 1.5 all point to the same conclusion, that the migration of the Mediterranean race commenced from India and extended through South Mesopotamia and Northern Africa; spread through Crete, Cyprus, Greece, Italy and Spain and across the Pyrenees reached Central Europe and the British Isles. This route starting from Ceylon to Ireland is marked by uninterrupted chain of Dolmens and other megaliths that seem to be the relics of the enterprising and highly civilized race which is termed the Mediterranean by the anthropologists and which in India has been quite unreasonably despised under the name Dravidian. - Journal of Indian History, Vol. XVI - Part 1- Fr. Heras. Judaism is an improved form of Chaladian, Phoenecian, Greecian and possibly Egyptian worship. - Ancient Faiths, P. 2, P. 294. 1. Colonel Tod believes that the religion of Siva was spread abroad at a very early age, before the Phoenecians came in with their Baal worship. Recent discoveries have confirmed Colonel Tod. It has been discovered that Indian teak was used for building purposes in Babylon, and Indian Muslin was known there and called Sindu, the early name for India. Another singularly able orientalists Mr. Paterson wrote that in the Asiatic researches, “the doctrine of Siva’s seem to have extended themselves over the greatest portion of Mankind. They spread amongst remote nationas who were ignorant of the origin and meaning of the rites they adopted, and the ignorance may be considered as the cause of the mixure and confusion of images and ideas which characterised the Mythology of ancient Greeks and Romans.” Siva in his creative power became Zeus triopthalmos the three eyed (a special characteristic of Siva) Jupiter and Osiris.....Prof Maspero shows a curious point of conduct between the worshippers of Baal in Syria and the worshipper of Siva....when Saivaism went abroad on its strange missionary career, this bull worship was very prominent. We must all differ to an Indian authority as shrewed as Colenel Tod. He hold that this bull worship was the strongest evidence in Palastine, Egypt etc. of Sivan Derivation - Indian Primitive Christianity - Arthur Lillie. 1. தமிழர் சரித்திரம் பக்கம் 19. 2. A nude three face God seated in a sort of Yoga pose wearing crescentlike head gear. Round this figure several figures are placed. It has been said this is a figure of Pasupathi. - Fr. Heras. 3. Though the people were divided into castes, there was no restriction with regard to marriage, “when a woman has had ten former husbands, not Brahmans, if a Brahman takes her hand it is he alone who is her husband (A.V.Y. 17, 18). Brahmana women were not regarded as secrosant but could be restored to their husbands after being seduced (R.V.X. 109-6) curses are levelled against people who shut up Brahmana’s wife (A.V. 17, 12-18) thereby proving that it was not uncommon - Life in ancient India P. 42 - P.T.S. Iyengar. 1. சிறந்தது பயிற்றல் - தவஞ்செய்தல். 2. A History of Indian literature - M. Winternitz. 3. The Arya Veda is too pure to be touched by a Sudra or a women. A person of a Sudras or a woman of any Cast is not entitled either to learn or hear his Veda. Thus all women as well as Sudras are not previleged to obtain salvation. The Tamil religion on the other hand is the common property of all either Men or Women. Its essence is love of god and neighbour. - Sidhanta Depika Vol. IV. P. 269. In the Upanishads however we find not only Kings but also women and even people of dubios discent taking active part in the literary and philosophical aspirations of the highest knowledge. - The History of the Indian Literature P. 220. யாக்ஞவல்கியுடன் வாதம்புரிந்தவர்களுள் ஒருவர் வச்சக்னு என்பவரின் புதல்வியாகிய கார்கி என்னும் பெண்பாலினர். In a word we may say that as we pass from the Vedas to Upanishads, we pass from prayer to philosophy from hymnology to reflections, from polytheism to monotheistic mysticiom - Constructive survey of Upanishadic Philosophy P. 3 - R.D. Ranade. 1. Upanishadic age to have been placed Rome where between 1200 B.C. and 600 B.C. - Constructive History of Upanishadic Philosophy P. 13. - R.E. Ranade. 2. During the Brahmana period we notice the beginning of the regular worship of Siva....in this perioud Sivan or Rudra gradually became to be one of the most important figures of the reformed Indo - Aryan Pantheon - Pre-historic ancient and Hindu India P. 43 - R.D. Banerji. The worship of Siva or Mahadeva towards the close of this period....the new deity being identified with Rudra of the Vedic poets, the howling God of tempests, the father of the Maruts - The Philosophy of the Upanishads - P. 18. A. Edward Gough. 1. The Upanishads as a world scripture, that is to say, a scripture appealing to the lovers of religion and truth in all races and at all times without distinction. -Thirteen principal Upanishads translated. - Robert Ernest Home. 2. The Upanishad may bea regarded as a work of thought and reason, Upanishads which stained first the knowledge as against the Brahmanical philosophy of works. Critical Survey of Upanishadic Philosophy, PP. 4, 7. 3. பதகோரஸ் சாமோஸ் (Samos) என்னும் இடத்தில் கி. மு. 570இல் பிறந்தார். இவர் பல புதுமைகளைச் செய்து எகிப்துக்குப் பிரயாணஞ் செய்தார். கோல்புரூக் என்பார் (Colebrooke) அவர் இந்தியாவுக்குச் சென்று கபிலரின் தத்துவக் கொள்கைகளைப் பயின்று அவைகளைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார் என்றும் கூறுவர் - Rama and Homer - P. 220 Arthur Lillie. 4. In Patala reigned the Royal Rishi kapila Vasudeva or Kapila Naga who destroyed the sons of Sagara. Ikshvahu, too, from so many solar Dynasties claim desent was a Rajah of Patala. - The sun and the serpent - P. 56 - C.F. Oldham. 1. So even Bhagavata says (XI. 2-3) Satyavirata, king of Dravida become Vaivasvats’s son Manu and his sons were Ikshvahu and other kings. Ancient Indian Historical tradition F.E. Pargiter. (Sakya Buddha was a Solor race, and descended from Ikshvahu-Sun and the serpent) Kapilavastu was an Oxford of learned Dravidians several centuries before Aryans settled in Mid-gangetic states before the Rishi Kapila about 700-600 B. C. -Short Studies on the Science of Comparative - Religions, P. 12. 2. From the cradle of Goutama about Kapilavastu the early literary centre of India came most of the scriptures of Indo-Aryans which if prior to Sakya Muni must, like the philosophic schools founded by the sage Kapila have had their origin in the brain of Dravidians or Dramilian Pandits like learned Dramila Chanakya to whom was dedicated 350 years after his death, the beautiful sacred cave temple of Kanchery. -Short Studies in the Science of Comparative Religions P. 12. (Chanakya the Dramila of Jurashtra, who is described in the Mahavanso as a Malabari. His name appears in two inscriptions of the fourth century B.C. in the Kancheri caves to which he retired in old age - Ibid P. 10.) 3. Oldenburgh has indeed fairly worked out both in his earliest volumes on Buddha how the Upanishads prepared the way for Buddhistic thought and derives precise for having attempted a hitherto unattempted word. - Constructive Survey of Upanishadic Philosophy, P.4. 4. The yoga therefore under that name was recognised anticidentally to Pathanjali and is not to be regarded as the invention of his. -The uphoisms of the Yoga Philosophy of Pathanjali with illustrative extracts form the Commentary by Boja Rajah. 1. In admitting the existence of a divine being in which the good qualities belonging to man reach their limit, the yoga hence named the Seswara Sankya differs from the Sankya of Kapila what is known as niriswara - Ibid. 2. The change of the mind into the likeness of what is pondered.- Ibid - “யாதொன்று பற்றி னதனியல் பாய்நின்று பாசமறும் பளிங்கனையத்து நீ.” 3. Perfection of meditation Comes from possessing devotion to the lord. - Ibid. 4. Where Sankya argues the objections that is souls well but one, then all will would be happy when one is happy, all would die when one died, and so on, which is contrary to experience. - Ibid. P. 63. 1. “......நின் றொண்டரொடு பயிறலிற் பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும் நின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப் பன்னாள் நோக்கின ராதலி னன்னவர் பாவனை முற்றிய பாவகப் பயனின்யான் மேவரப் பெற்றனன்.......” எனக் குமரகுருபர அடிகள் கூறுதல் காண்க. 1. The Saiva Siddhanta System is the most elaborate, influential and most intrinsically valuable of all religions of India. It is peculiarly The South Indian and Tamil religion and must be studied by every one who hopes to understand the influence of the great South Indian people. Saivaism is the old prehistorical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds Sway over the hearts of Tamil people. But this great attempt to solve the problems of god, and soul, humanity nature, evil suffering, and the unseen world, has never been exponnded in English. Its text books exists in Tamil only.-Translation of Thiruvasagam - Dr. Pope. 1. Among the many revelations that Mohenjo - Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivaism has a history going back to the chalolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world - Sir John Marshall in his preface to Mohenjo - Daro and the Indus Civilization - Vol. I, P. VII. 2. Clay figures and images and phallic (Bactylic) stores suggest the Durga and Siva worship was of very much greater antiquity in India than has hitherto been supposed. Prehistoric Ancient Hindu India - R.D. Banerji. 1. கவு, துகிம், ஒறிசா, இஞ்சிபெர், கபிறொன், இபிம், பிப்பிலி, சிந்து. 2. There are in all Indo-aryan languages, a considerable number of words which cannot apparently be identified in other; Indo-European languages. This is specially the case in modern vernaculars and the old opinion was that such words had, generally speaking been borrowed from the language of the tribes which inhabited India before the Aryan invation. The steady progress of philological studies in later years has enabled us to trace an overincreasing portion of such words to Sanskrit, and many scholars now hold that there have hardly been any loan at all. It has however been overlooked that it is sufficient to show that a word is found in Sanskrit or in vedic dialects, in order to prove that it belonged to the original language of the Aryan. The foreign element must reach into the oldest times, and it would be necessary to trace dubeous words not only in Sanskrit, but also in other languages of the Indo-European family. That is exactly what philology has, in many Cases failed to do. There are i.g. a number of verbal roots in Sanskrit which do not occur in other Indo-European forms of speech. The same is the case with a considerable portion of vocabulary. There is how-ever every possibility for the supposition that at least a considerable portion of such words and bases has been borrowed from the Dravidian - Linguistic Survey of India - Vol. IV. pp. 278-9 Grierson. 1. At a time when characteristic Hindu idea did not develop among them, the Dravidian cults and Dravidian language began to influence their religion and that speech The Origin and Development of the Bengali language. -P. 42 - S.K. Chatterji. 1. The living Hindu religions of to-day from Cape Comorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the few genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e.g. Samdhya, have been modified by the addition of Tantric practices - Outline of Indian Philosophy - P. 130. P.T.S. Aiyengar. We might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders. For the great deities of Hinduism Siva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines such a metempsychosis and divine incarnation are either totally unknown to the Veda or obscurely adumbrated in it. The chief characteristics of mature Indian religion are characteristics of an area not of a race, and they are not the characteristics of religion of Persia, Greece or other Aryan lands - Hinduism and Buddhism - P. XV-Sir Charles Elliot. 2. The antiquity of the Agamas goes back to the period of Aranyaka based on the earliest references to the Agamic literature on the Maitre Upanishad - History and the Philosophy of Lingayat Religion. P. 303 - M.R. Sakhare. M.A., T.D. 3. The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (i.e., borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from the Dravidian - Life in Ancient India - P.T.S. Iyengar. The language of the Rig Veda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit, but its phonetics is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and Kol. Among words of probable Dravida origin in the Rig Veda, the following may be noted-anu - particle; arani - rubbing wood for fire; Kapi - monkey; Karmara - smith; Kala-time, Kunda-Hole; Gana-Band; nana-several; nila-blue; Puspa - flower; Pujana-worship; Phala-fruit; Bija-seed; Mayura-peafowl; ratri-night; rupa-form-Ibid P. 42. 1. Never for a moment, it was supposed that five thousand years ago, before ever the Aryans were heard of, the Punjab and Sind, if not other parts of India as well were, enjoying and advanced and singularly uniform civilization of their own, clearly akin, but in some respects even superior to that of contemporary Mesopotamia and Egypt. - Sir John Marshall. 2. The Aryan population of north India is not there fore a pure race, but contains among others a strong Dravidian element. -Linguistic Survey of India Vol. IV, P. 278. “As for the causes of the changes that may be styled Prekritie economy of effort, progressive refinement., specially in courts and cities, softening influence of a semitropical climate, influence of speech and habits of Non-Aryan peoples who adopted the Aryan speech all these have been at work. - Introduction to Prakrit: Prof. Woolner. 1. The Egyptian word eb for the elephant must however, also be compared with the Hebrew Habim. It is curious that the ape is called Kafi in Egyptian Kapi in Sanskrit, Kuf in Hebrew and Cepus in Latin the Greek Kepos. - The Egyptians seem in these cases to have used Aryan names for both apes and Elephants. -Syrian Stone Lore. P. 180. The trade terms such as the names used in the time of Solomon for ivory apes and peacocks are Tamil; in other words they come from the Dravidian not a Sanskrit tongue - Natives of Northern India p. 29. W. Crooke. 1. Prof. A.H. Sayce in his Hibbert lectures (1887 pp. 137-138) observes that in an ancient list of Babylonian clothing sindu is mentioned as a name of muslin, or woven cloth and that it corresponds Sadin of the Old testament and the...of Greeks. The learned Prof. has further stated that this muslin or woven cloth must have been called sindhu by the Accadians (Chaldians) because it was exported from the banks of Indus (sindhu) to Chaldia in those days (e.g. the word calico from Calicut). He has further noted that this intercourse between the two countries must have been by sea, for the word has passed by land i.e., through Persia the initial of the word would have become he in Persian mouths. - Commemorative essays presented to Sir R.G. Bhandarkar, 1917. 1. Dravidian speaking races of India traded with the ancient Chaldians before the Vedic language found its way into India. Indian teak was found in the ruins of Ur (now Mugheir) and must have reached from India in the 4th millennium B.C. when it was the Seapor of Babylon and the Capital of Sumerian kings (Sayce Hib. Lect. P. 137). The gold and spices mentioned in Assyrian inscriptions of the XIV Cen. B.C. were probably exported from India, the only Country so far as we know they were produced. - Life in Ancient India - P.T.S. Aiyengar. With regard to trade of these times it must be noted that the early children inscriptions speak of ships of Ur, the capital city; and that from at least the 14th century B.C. Gold, Silks, Pearls etc. had been passing from India to Assyrian monarchy carried on both by caravans on land and by the coasting trade by sea. There was also active trade with China, on the obelisk of Salamanezar are represented Indian Elephants and apes. - Historical Inscriptions of South India, Madras University. 1. இதைக் குறித்துக் கெரதோதசு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் ஒருமுறை பாபிலோனியாவில் விவாகச்சந்தை கூடும். இங்கு மணப்பருவம் அடைந்த பெண்கள் எல்லோரும் வந்து கூடுவார்கள். மணம்முடிக்க விரும்பிய இளைஞரும் திரளுவார்கள். அப்பொழுது விலை கூறுவோன் மிகவும் அழகுள்ள பெண்ணிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக விலை கூறுவான். கூடிய தொகை அளிப்பவன், கூறப்படும் பெண்ணை வாங்கி மணம் முடித்துக்கொள்கிறான். இறுதியில் அழகில்லாதவர்களும் அங்கப் பழுதுடையவர்களுமாகிய பெண்கள் விலை கூறப்படுவார்கள். இவர்களை வாங்குபவர் களுக்கு அழகிய பெண்களின் விலையாகக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதி கொடுக்கப்படுகின்றது. பெண்களை வாங்குபவர்கள் அவர்களைச் சட்டப்படி மணந்து கொள்ளுதல் வேண்டுமெனத் தக்க உறுதி அளித்துச் செல்லுதல் வேண்டும். 1. Pliny published his geography in A.D. 7. Periplus of Erythean sea was written in the 1st century A.D. probably A.D. 60 but not later than 80 A.D. Ptolemy wrote his geography about A.D. 150. The Peutingerian Tables were composed in A.D. 222. - Beginnings of South Indian History. 1. The following accounts from Marco Polo of this coast is worth noticing! “There go forth every year more than a hundred corsair vessels and cruise. These pirates take with them their wives and children and stay out the whole summer. Their method is to go in fleets of twenty or thirty of these pirate vessels together, and then they form what they call a sea cordon, that is that they drop off till there is an interval of five to six miles between ship and ship, so that they cover something like a hundred miles of sea and no merchant ship can escape them. For when any one corsair sights a vessel a signal is made by fire or smoke, and then the whole of them make for this and scize merchants and plunder them.....But now the merchants are aware of this and go so well manned and armed, and with such great ships and they do not fear the corsairs. Still mishaps do befall them at times - The Beginnings of South Indian History. 1. The greatest achievement of Dravidians was the art of navigation. The Indian ship was very like Egyptian as we see in a fifth dynasty painting, a long and wall sided vessel with the stem and stern highly raised, and had oars arranged in hanks. The Dravidian paddle was round not spade-like in form as in ancient China, or very long as in ancient Egypt. There are native words in the Dravidian languages for the oar, sail, mast and anchor - ஐனேயைn ஊரடவரசந வாசடிரபா ஹபநள - ளு.ஏ. Venkateswara. 1. Pliny says our ladies glory in hanging pearls suspended from their fingers, two or three of them dangling from their ears, delighted even with the rattling of the pearls as they knock against each other; and now at the present time the poor classes are even affecting them. They put them on their feet and that not only on the laces of their sandals but all over the shoes. -Beginnings of South Indian History. 1. Apart from the complaints of Petronius that fashionable Roman ladies exposed their charms much too immodestly by clothing in the “web of woven wind,” as he called the muslins imported from India. Pliny says that India drained the Roman empire annually to the extent of 55,000,000 Sesterces, equal to L 486, 979 sending in return goods which sold at hundred times their value in India. He also says in another place, “This is the price we pay for our luxuries and our Woman” Ibid. 2. Disquisition concerning the knowledge which the ancients had of India. - William Robertson. 1. மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றோ. தொல்.உரி. 96. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. தொல் பெயர். 1. The copious-literature is written in some-what artificial dialect distinguished by the term perfect (sen) from the colloqual called rude, much in the same way as in Aryan India Sanskrit (the purified) is contrasted with prakrit (the vulgur). India’s past. p. 214 A.A. Macdonell. 1. புறநானூற்றின் பழமை - K.N. சிவராசபிள்ளை. 2. The languages of the highly civilised nations on the contrary become more and more stationary and sometimes seem almost to loose the power of change. -Science of Language - 1864. 3. The people of Indian - S.H. Risely. 1. The use of the knots in code for the purpose of reckoning and recording numbers seems to have been as universal as the figures of the cat’s cradle in the practices of the premitive peoples. Both may be said to be indigenous to all lands in which the arts of spinning, weaving and dyeing have been cultivated. In two note-worthy cases tradition makes the knotted Kude serve as letters. In China knot records are said to have preceded the knowledge of writing. -The Ancient Quipu. L. Leland Locke. 1. Brahmi has been traced back to the Phoenician type of writing represented in the inscription of Meshu king of moab. (850 B.C). Dr. Scoff however in his remarkable commentary to the Pereplus of the Erthrean sea, claims a Phoenician origin for the Dravidian alphabet (P. 229) - G. Elliot Smith. 2. It is also shown that those scholars were not mistaken who connected Brahmi with the South Semitic and Phoenician scripts. For there is much evidence to show that they were also derived from the script of Harappa and Mohenjo Daro.- G.R. Hunter. The two Brahmi Scripts one of Northern and the other of Southern India are developments of Mohenjo-Daro script, that of South India is the direct continuation and development of Mohenjo-Daro script by Dravidian people of South India. Several signs of the Mohenjo-Daro script are found in the prehistoric pottery of Tinnevelly District in rock inscriptions of Nilgiris and tombs of Hyderabad States.- Rev. Fr. Heras. 3. It is clearly the long headed Mediterranean who have the strongest claim to a connection by blood with the Dravidians and are most likely to have used a Dravidic speech. May it be that these same Mediterranean-who are traceable across the whole south of the Africian belt-spoke agglutinative languages and that they, perhaps more than any others, were the race of the back of this far flund civilization of the chalcolithic age? - Mohenjo-Daro and Indus Civilization, P. 42. Sir John Evans in his Presidential Address to the British Association says: “Southern India was probably the cradle of human race”. Investigation to relation to race show it to be possible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they inhabit. - Cultural Heritage of India, Vol. III, P. 677. 1. Light of Mohenjo-Daro. - Fr. Heras-New Review - 1936. “Their underlying principles are the same, and there is very likelyhood that they all derived from one common origin went back to neolithic times.- Mohenjo-Daro and Indus Civilization-p. 41, Sir John Marshall. 2. Riddles of Mohenjo-Daro.-G.R. Hunter-New Review Vol. 3-p. 314. There can be no doubt concerning the identity of the Indus and the Easter Island scripts. -This same script has been found in seals precisely similar to Indian seals in various parts of ancient Sumer, at Susa and the border islands east of Tigris - Prof. S. Langdon. 2. காக்கேசியம், திராவிடம், சுமேரியம், எல்லம் முதலிய மொழிக்குலங்கள். 1. Outline of History, p. 85. H.G. Wells. They (philologists) find Basque more akin to certain similarly stranded vestiges of speech found in Caucasian mountains and they are disposed to regard it as a last surviving member, much checked and specialized, of a race very widely extended group of Pre-Hamitic languages, otherwise extinct spoken chiefly by peoples of that brunet Mediterranean race which once occupied most of western and southern Europe and western Asia. They think it may have, been closely related to the Dravidian of India and the peoples of the heliolithic culture who spread eastward through East Indies to Polynesia and beyond.-Ibid P. 88. 1. இச் செய்யுளிலுள்ள சொற்கள் சில நமக்கு விளங்கக்கூட வில்லையாயினும், அவற்றுட் பல விளங்கக்கூடியனவாயிருக்கின்றன. 2. H.B. Halbert has issued a comparative grammar of Korian and certain of Dravidian languages of India to demonstrate the close affinity he finds between them. -Ibid - p. 45. 1. The names of towns have continually been derived from those of Gods there worshipped as has been pointed not by several archaeologists. - The Syrian stone lore, p. 18. 2. We read in Mahabharata, that through the grace of Deerghatamuni, Sudeshna wife of Bali bore him five sons, Anga, Vanga, Kalinga, Pundra and Sumha respectively, and the provinces ruled over by them were called after them. We find this story narrated also in the Brahmapurana. Kalinga is mentioned in the sutras of Panini. -Orissa and her remains - Ancient and Modern. p. 7.-Mana Mohan Ganguly. கந்தபுராணத்திலே அண்டகோசப்படலத்தில் நவகண்டங்களுக்குப் பெயர் வந்தது அந் நாடுகளை ஆண்ட அரசர்களின் பெயரால் எனக் கூறப்பட்டுள்ளதும் ஈண்டு கருத்திற் கொள்ளத் தக்கது. 1. Dr. Krishnaswamy Iyengar’s commemoration volume p. 346 - The derivation of the word. Tamil - K.N. Sivaraja Pillai. 2. “இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்” (பிங்கலம்) 1. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழிநூலிற் கண்டது. இவர் தாமம் என்னும் ஞாயிற்றைக் குறிக்கும் சொல்லினின்றும் தமிழ் தோன்றிற்றென்பர். 1. The accounts given by Berosus in the 3rd or 4th century B.C. appears to suggest that the early settlers of Sumer arrived by sea bringing with them a fully developed civilization. This civilization may possibly have arisen in the submerged Tamil lands that extended to the south of Kumari. - Cultural Heritage of India Vol. III, p. 677. 2. இலங்கையில் தாமு தாமன் என்னும் பெயர்கள் மக்கட்கு வழங்கப்படுகின்றன. 1. Hence we shall not be far wrong if we infer that South India gave a refuge to the surrivors of the deluge., that the culture developed in Lemuria was carried in South India after this submergence and that South India after its submergence was probably the cradle of the post deluvian human race. As the centre of gravity of the Dravidian people as determined by the density of population lies somewhere about Mysore, south of India must be considered as the home of the people, where they might have spread to the north. - Indian Antiquary 1911. p. 118. 1. The existence of the short e and o in the Pali and the predilection the people showed for them as well as the change of dentals to cerebrals without any influencing cause are to be attributed to the natural vocal tendencies of the people. These sounds must have existed and played an important part in the original language of the people...If the original Pali speakers belonged to the same race as Dravidians of South India of present day, we have a reason to believe that their native tongue continued them; for they exist in the Dravidian language and are characteristic of them - Willson’ள யீhடைடிடடிபiஉயட டநஉவரசநள: - Dr. R.G. Bhandarkar-Collected works Vol. IV, p. 293. 2. It cannot be doubted that Buddha grew up in the atmosphere of sankya thought for it is the essential basis of his world view. -India’s Past p. 151-A.A. Macdonell. 1. இப் பகுதி எ.எ. மாக்டனல் என்பவரின் சமற்கிருத இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலிற் காணப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டது. * “கவாடபுரம் இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது. கௌடலியர் தாம்பிரபரணி ஆற்று முகத்துவாரத்திற் பாண்டியருக்குரியதாகிய கபாடம் என்னும் ஓர் இடத்தைக் குறித்துள்ளார். இது ஒருபோது முன் கடல்வாய்ப்பட்ட கபாடபுரத்தை அடுத்த இடமோ, இன்றேல் அதன் பகுதியோ என்று கருத இடமுண்டு.” Kautalia speaks of pearls being found in the river Tambraparni river, on Pandian kavataka and near the Mahendra mountains. - Lectures on the Ancient History of India-R.G. Bhandarkar. 1. பாண்டியர்கள் தமது பரம்பரை சிவனினின்று தோன்றியதெனக் கொண்டார்களெனத் தெரிகின்றது. கிரேக்கர் சிவனையே பக்கஸ் எனக் கூறியுள்ளார்கள் எனச் சில வரலாற்றுக்காரர் கூறியுள்ளார்கள். எகிப்தியரும் தமது நாட்டை மிக முற்காலத்து ஆண்டவர்கள் கடவுளர் என நம்பினர். திருவிளையாடல் கூறும் பாண்டிய அரச பரம்பரையும் ஈண்டு நோக்கத்தக்கது. 1. ...(Asur Banipal 673 B.C.) adding more to the royal library than all the kings who had gone before him. His agents sought everywhere for inscribed tablets ransacking the library treasures of Babylone, Borsipa, Akad, Ur, Erek, Larsa, Nipur and various other cities. - Early faiths of Western Asia. - p. 42. Berosus tells us, as a priest of the first temple of Kaldia, he should know that in Babylonia, there were records kept with the greatest care, comprehending a period of fifteen myraids of years, containing the histories of the heaven and of the sea, of birth of mankind, of kings and their memorable actions. Berosus is made to say that before the deluge, there were ten Chaldian monarchies perhaps meaning dynasties - which lasted 432,000 years and which Turanian measures of moon’s would be 33,212 years, a not un-reasonable period for the creation of man. - Ibid 43. 2. The Attakatha which had been handed down by word of mouth to almost the end of the first century B.C. was set down in writing about 20 B.C. This and its continuation to about the middle of the third century A.D. formed basis of the Dipavamsa. The same matter received further and somewhat further treatment in Budhagosa’s instruction to the Samantapasadika in the 5th century, and the epic elaboration Mahavamsa in the sixth century. -Ancient India and South Indian History and culture Vol. 1, P. 449 - S.K. Aiyengar. 1. ...............பாண்டியர் பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாஅது (ஆசிரியமாலை-புறத்திரட்டு) 1. We may for the present hold as a safe hypothesis that the Sangam epoch covered the three centuries of the Christian era. - Chera kings of sangam Period-P. 121 - K.G. Sasha Aiyer. 1. God Varuna himself was an Asura (Dravidian)...Vedic kings and Rishis came to have Asura blood in them, as is indicated by the colour. Sages like Vashistha, Agastya and Visvamitra were given the same father Mitra - Varuna. - History of Pre-Musalman India - P. 172. 2. Agastya asrama: Twenty four miles to the south east of Nasik now called Agastepuri; It was the hermitage of Rishi Agastya. - Geographical Dictionary of Ancient and mediaeval India - Nundo Ladley. 3. கானார்மலயந் தருந்தவன் சொன்ன கன்னித்தமிழ் - யாப்பருங்கலம்காரிகை. 1. சிதம்பர ஆலயத்தின் மேற்கக் கோபுரத்திலுள்ள அகத்தியர் வடிவம் “Cultural Heritage of India” என்னும் நூலில் காட்டப்பட்டுள்ளது. அவ் வடிவமும் இவ் வகையினதே. அகத்தியர் குடகு மலையிலிருந்து பொதியமலைக்கு வந்தமையின் அவர் குடகுமுனி எனப்பட்டாரென்றும், பின் குடகு குடமாகி குடகு முனிவர் குடமுனிவரானாரென்றும் பண்டிதர் சவரிராயனவர்கள் கூறுவர். குறுமுனி என்பது குறுக்கு மொழி தொடர்பு பெற்றிருக்கலாமென்பதும் அவர் கருத்து. 2. Sayana takes cera to mean snake - Sera kings of the Sangam Period - P. 132, K.G. Sesha Aiyer. 3. Agathirishis are a luxurious people and wear profusion of gold. They have promisecous intercourse with women to the end that they may be brotheren one of another, and being all of one family may not entertain hatred towards each other - Herodotus 9, 10. 1. கப்பம் என்பது கற்பம் என்பதன் திரிபு. 2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயரெல்லை அகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மனார் புலவர் -தொல் செ. 79. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும், தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி-தொல். எ.4. (செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நாடுகளும் சங்க காலச் சேர சோழ பாண்டியர் நாடுகளின் எல்லைக்குட்பட்டனவாதலின் தொல்காப்பியர் காலத்து வேங்கடம் தமிழ்நாட்டு வடக்கெல்லை எனத் துணிதும்.) 1. திருக்குறள் சங்க நூலாதலின் அதற்குப் பாயிரம் தோன்றியிருக்கமுடியாது. நூலுக்குப் பாயிரம் இன்றியமையாததென்னும் கொள்கை வலுப்பட்ட ஒரு காலத்தில் பிற்காலத்தார் ஒருவர் முன் நான்கு அதிகாரங்களையும் பாயிரவியல் என எழுதி வைத்தாராகலாம் உண்மையில் அவ் வதிகாரங்கள் பாயிரமாயின் அவை திருவள்ளுவர் செய்தனவாகா. 1. வரலாறு அறியப்படாத அக் காலத்தே புலவர்கள் தமிழ்மொழி வடமொழிக்கு இணையானது, அதனை ஒத்த பெருமையுடையது என நாட்டுவதற்குச் சில தெய்வீக நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கையாண்டனர். வரலாற்றளவில் வடமொழி தமிழுக்கு அண்மையிலும் நிற்க முடியவில்லை. 1. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழி நூலிற் கண்டது. 1. Dr. Grierson has recently proved that these languages belong to the same family. The Munda language of the Bengal hills is of a more archaic type than those of Madras and the linguistic evidence leads to the conclusion that both races came from the south and that they must have remained apart for a period sufficiently long to admit of the development of those peculiarities which differenciate the languages so called Kolarian or Munda Group from those of the other Dravidians. - Natives of Northern India. - P. 29-W. Crooke B.A. The proto-Austroloids are responsible for the introduction of neolithic culture and pottery in India but their linguistic legacy is more enduring and important. They are known as the speakers of Austro-Asiatic languages distributed over the widest area from the Punjab to New Zealand and from Madagascar to Easter Island. The Indian variety of the languages is known as the Munda, which accordingly is to be considered the earliest language spoken in India. A consideration of the Munda linguistic areas in India thrown light on the course of proto-Austroloid migrations. These may have been from East to West or from West to East. Munda survives now on the inner Himalayan ranges between Ladukh Sikkim in the west of the Central Provinces and southwards among the Ganjam and Vizagapatam hills but not beyond the Godawari. Munda shows affinity not merely with the languages of south east Asia and the Pacific but also with the agglutinative Sumerian languages. This is considered that the various branches of the Austro-Asiatic family of languages originated at some common centre in central or south East Asia from which it spread in a more or less southerly direction. The Munda speaking peoples are called by the General names, Mundas, Kolarians, Kols and number of six million comprising Santals, Bhils, Kurumbas, Mundas, Savaras and other minor tribes like the Kuravas of Sirguja and Mirzapur. - Hindu civilization P. 34 - R.K. Mookerjee. 2. Ancient India and Indian Civilization P. 11, Paul Masson Oursel. 1. The Mundas and their country - Sarat Chandra Roy. 14 3 4 13 12 5 வளைவுள்ள கோட்டின்கீழ் இருக்கும் பகுதி கடுந்தரையாகவும், அதற்கு மேலுள்ள பகுதி கடலாகவும் இருந்தன. தரைப்பகுதி நாவலந் தீவு எனப் பெயர்பெற்றிருந்தது. அம்புக் குறிகள், தமிழ்நாட்டினின்றும் மக்கள் சென்ற வழிகளையும், அவர்கள் தங்கி வாழ்ந்த இடங்களையும் காட்டுவன. 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 தென்னிந்திய கடவுளர் கையில் இருக்கும் வீணைகள் உருத்திர வீணை இப்படங்கள் வீணை எவ்வாறு வளர்ச்சி யடைந்துள்ளதென்பதைக் காட்டுவன. ‘வயலின்’ (Violin) என்னும் வீணை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளதென்பதை அமராவதிச் சிற்பத்திலுள்ள வீணையின் வடிவவைக் கொண்டு நன்கு உய்த்தறியலாகும். பழந்தமிழரின் குடியேற்ற நாடாகிய கிரேத்தாவில் (Crete) ‘வயலினை’ப் போன்று வில்லின் உதவியால் ஒலிக்கப்படும் வீணைகள் இருந்தன. அவ் வீணைகளின் வடிவும் இன்றைய ‘வயலினின்’ வடிவு போன்றதே. ‘Place of Minos’ என்னும் நூலில் பழைய கிரேத்தா மக்களுடைய வீணையின் படம் காணப்படுகின்றது. “விண்” என ஒலிக்கு நரம்பின் ஓசை பற்றி வீணை என்னும் பெயர் உண்டாயிருக்கலாம். சாஞ்சி, அமராவதிச் சிற்பங்களில் காணப்படும் வீணை. 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 மொகஞ்சதரோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் 93 92 கிதைதியிற் காணப்பட்ட அம்மை அப்பர்க் கடவுளர் பொறித்த நாணயம் இரண்டாம் கட்பிஸ் என்னும் கிரேக்க இந்திய அரசனின் (கி.பி. 530) தங்கநாணயம் 85 86 சின்ன ஆசியாவிலுள்ள கிதைதி (Hittie) நாட்டு மக்கள் வழிபட்ட சிவன் கடவுள் 91 90 பழைய சிரியா (மேற்கு ஆசிய) மக்கள் வழிபட்ட அடாட் என்னும் கடவுளின் வடிவம் 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 143 142 131 132 பாலத்தில் தொடங்கி மெம்பிஸில் முடிவடையுங் கோடு மொகஞ்சொதரோ காலத்துக்கு முன் தொடங்கி இருந்த வாணிகப் பெருந்தரைப்பாதையைக் குறிப்பது. முசிரியில் தொடங்கி உரோமையில் முடிவடையும் பாதை உரோமர் காலத்திய வணிகக் கடல் வழி. 141 140 133 134 139 138 மொகஞ்சொதரோ முத்திரை ஒன்றிற் பொறிக்கப்பட்டுள்ள பசுபதி (சிவன்) வடிவம். 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 176 161 162 175 174 163 164 173 172 165 166 171 170 167 168 169 192 புத்த காலத்துக்கு முற்பட்ட யாழ் (வட இந்தியாவில் வழங்கியது; சாதகக் கதைகளில் கூறப்படுவது இவ்வகை யாழே.)  எகிப்தில் வழங்கிய யாழ் (என்சைகிளோபீடியா பிரித்தானிக்காவிற் காணப்பட்டது) நரம்பை வில் நாண் போன்று வளைந்த தடியில் பூட்டி ஒலிக்கும் முறையிலிருந்து யாழ் உண்டாயிற்று. பழைய சுமேரியா, அயர்லாந்து, கிரீஸ், உரோம், எகிப்து, தமிழகம் முதலிய நாடுகளில் வழங்கிய யாழ்களை ஒப்பிட்டு நோக்குமிடத்து ஒரே அடிப்படைக் கருத்தினின்றே யாழ் செய்யும் முறை எழுந்ததென்று நன்கு விளங்கும். இசை நூல் வல்ல எம். ஆபிரகாம் பண்டிதரவர்கள், இசையும் இசைக் கருவிகளும் தமிழகத்தினின்றே மேற்குத் தேசங்களுக்குச் சென்றனவென்று ஆராய்ந்து விளக்கியுள்ளார். 177 178 191 190 179 180 189 188 181 182 187 186 183 184 அரப்பாவிற் கண்டுபிடிக்கப்பட்ட இதய வடிவமுள் பெண்கள் கைவளை 185 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் திருக்குறள் அகராதி . . . 1 திருக்குறள் அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : திருக்குறள் அகராதி ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 128 = 144 படிகள் : 1000 விலை : உரு. 65 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix