பதினெண்கீழ்க்கணக்கு 2 11. திருக்குறள் 12. திரிகடுகம் 13. ஆசாரக்கோவை மாணவர் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 2 ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள் பதிப்பாளர் : இ. தமிழமுது முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 408 = 432 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 270/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 வெளியீடு மாணவர் பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள பல நூல்கள் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த காலத்தில் எழுதியவை என்று தமிழ்ச்சான்றோர் குறிப்பிடுவர். கணக்கு என்ற சொல்லுக்கு நூல் என்று பொருள். கீழ் என்பது பாடலின் குறுகிய அளவைக் குறிப்ப தாகும். நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்பது பழம்பாடல். பதினெட்டு நூல்களின் பெயர்கள் 1. நாலடி - நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது 7. திணைமொழி ஐம்பது 8. ஐந்திணை எழுபது, 9. ஐந்திணை ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது iஎ பதினெண்கீழ்க்கணக்கு - 1 11. முப்பால் - திருக்குறள் 12. கடுகம் - திரிகடுகம் 13. கோவை - ஆசாரக் கோவை 14. பழமொழி - பழமொழி நானூறு 15. மாமூலம் - சிறுபஞ்ச மூலம் 16. காஞ்சி - முதுமொழிக் காஞ்சி 17. ஏலாதி - ஏலாதி 18. கைந்நிலை - கைந்நிலை ஆகிய பதினெட்டு நூல்களாம். திருக்குறள், நாலடியார் இரண்டும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கூறும் அறநூல்களாகும். நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியன ஒன்பதும் நீதி நூல்களாகும். கார் நாற்பது, திணைமொழிஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலைநூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறும் அகப்பொருள் நூல்களாகும். களவழி நாற்பது ஒன்று மட்டும் போர்க்களக் காட்சியைக் கூறும் புறப்பொருள் நூலாகும். பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மக்கள் வாழ்வை வளப்படுத்துவன. இளமையும் - அழகும், செல்வமும் - செல்வாக்கும் பொன்னும் - பொருளும் நிலையற்றது. கல்வி ஒன்றே நிலையானது என்பது இந்நூல்கள் வலியுறுத்திக் கூறும் அரும்பெரும் செய்திகளாகும். தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்து உலகத் தமிழினத்திற்கு வாரி வழங்கும் முதுபெரும் தமிழாசான். சங்கச் சான்றோர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சொல்லாக்கச் செல்வர், குறளாய அறிஞர். முதுமுனைவர் வணக்கத்துக்குரிய ஐயா இளங்குமரனார் அவர்கள் இவ்வருந்தமிழ்க் மீட்புப் கருவூலத்திற்கு மிகச் சிறந்த நூலாய்வுரை எழுதி எம் தமிழ் பணிக்கு வலிமைச் சேர்த்துள்ளார். இப்பெருந்தகையின் உதவிக்கு என்றும் நன்றியுடையேன். புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடி யெடுத்து வெளியிட்டுத் தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்பகம் தனி முத்திரைப் பதித்து வருவதை தமிழுலகம் நன்கு அறியும் தமிழர் இல்லந் தொறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க அருந்தமிழ்ப் பெட்டக மாம். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைத் தமிழ் உலகிற்கு பிழை யற்ற செம்பதிப்பாக வழங்கி யுள்ளோம். முன்னோர்கள் வைப்பாக விட்டுச் சென்ற செந்தமிழ்ச் செல்வங்களையெல்லாம் தமிழ்க் காப்புப் பணிக்கு மறுபதிப்பாக வெளியிட்டு வருகிறோம். தமிழுலகம் கை கொடுத்து உதவும் என்று நம்புகிறோம். “ கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக்கிறாச்சி செய்க” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில்கொள்வோம். -பதிப்பாசிரியர் மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் பாட்டியல் நூல்களில் பழமையானது பன்னிரு பாட்டியல், அப்பாட்டியலில், “ அகவலும் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறாக மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் , வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே” என்பதொரு நூற்பா. “ மேற்கணக்கு நூல்களின் யாப்பு, அகவல் கலி பரிபா என்பன” என்றும், “ அப்பாடல்கள் எண்ணிக்கை ஐம்பது தொட்டு ஐந்நூறு வரை யுடையன” என்றும், இந்நூற்பா மேற்கணக்கு நூல்களைப் பற்றி உரைக்கின்றது. மேலும், “ வெண்பாக்கள் ஐம்பது முதல் ஐந்நூறு வரை கொண்டது எனின் அது கீழ்க் கணக்கு ஆகும்” என்கிறது. கீழ்க்கணக்கிற்கு அமையும் மற்றோர் இலக்கணம். “ அடிநிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி” என்கிறது. பஃறொடை வெண்பா, கலிவெண்பா என்பவை அடி நிமிர்வுடையவை. அத்தகைய அடிப்பெருக்கம் இல்லா வெண்பாவே கீழ்க்கணக்குக்கு உரியது என்கிறது. மேலும் ஓர் இலக்கணமாக, “ அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்” என்கிறது. பன்னிரு பாட்டியல் சொல்லும் இவ் இலக்கணம் கொண்டு மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் தொகுக்கப்பட்டவை அல்ல. மேற்கணக்கு கீழ்க்கணக்கு என வகுக்கப்பட்ட பின்னர், அத் தொகைகளைக் கொண்டு நூற்பா ஆக்கப்பட்டதே பாட்டியலாம். என்னை எனின், ”எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல இலக்கியத்தில் இருந்து எடுக்கப்படுவது இலக்கணம்” ஆதலால் என்க. ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்கள் என்னும் வரையறைக்குள் மேற்கணக்கு அடங்குவது இல்லை. ஐம்பது பாடல் நூல் எதுவும் அதில் இல்லை. பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களே; பத்தும் தனித்தனி நூல்களே. ஆதலால், அத்தொகை நூல் ‘தொகை’யே யாம். ஐந்நூறு பாடல் என்பதற்கு ஐங்குறுநூறு சான்றாகும். கீழ்க்கணக்கில் ஐம்பது பாடல்களுக்குக் குறைந்தவை கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பனவாம். இனிமேல் எல்லை, கீழ்க்கணக்கில் ஒன்றாக அமைக்கப்பட்ட திருக்குறளொடு பொருந்தாது. ஆயிரமும் தாண்டிய மூன்று நூற்று மூன்று பத்துக் குறள் களையுடையது. ஆதலால், இத்தொகைப் படுத்தினார் கருத்தும் அப்பாட்டியலார் கருத்தும் ஒத்துச் செல்லவில்லை. “பாட்டியலார் கண்ட தொகை நூல் வேறு” எனவும் சான்றில்லை. ஆனால், அகவல், கலி, பரிபா, வெண்பா என்னும் யாப்பிலோ, அடி நிமிர்ந்தது. அடிநிமிர் வல்லது என்னும் அடி அளவிலோ வேறுபாடு இல்லை. தொல்காப்பியம், “சின்மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தானே அடிநிமிர் பின்றே” என, வனப்புகளுள் ஒன்றாய் ‘அம்மை’ இலக்கணமாகக் கூறுகிறது. அம்மை எனும் வனப்பு (நூலழகு) சில சொற்களால், அச்சொற்களும் மெல்லிய இனிய சொற்களால் நடையிடுவதாய் அடிப்பெருக்கம் இல்லாததாய் அமையும் என்கிறார். பன்னிரு பாட்டியலார், ‘அடிநிமிர் பின்றே’ என்பதை, ‘ அடி நிமிர்பில்லாச் செய்யுள்’ என்று அமைத்துக் கொண்டார். ‘சின்மென் மொழி’ என்பதை எடுத்துக் கொண்டார் அல்லர். ‘கணக்கு’ என்பது ‘நூல்’ என்னும் பொருளது ஆதல், “ கணக்கினை, முற்றப் பகலும் முனியாதினி தோதிக் கற்றலிற் கேட்டலே நன்று” என்னும் பழமொழியால் அறியலாம்(5). “ கணக்காயர் இல்லாத ஊர்” ஊரன்று என்பர். கணக்காயர் நூலாய்வார், நூல் கற்பிப்பார். ‘கணக்காயனார்’ என்பார் மதுரையில் இருந்த ஓர் ஆசிரியர். அவர் மகனார் நக்கீரனார். அதனால், “ கணக்காயனார் மகனார் நக்கீரனார்“ எனப்பட்டார். கணக்கு, நூற்பொருள் தருதலால், காலப் பழமை, காலப் பின்மை, நூலளவு, அடியளவு என்பவை கொண்டு மேற்கணக்கு,கீழ்க் கணக்கு எனப்பகுக்கப்பட்டன. பாட்டு தொகையின் காலப் பழமை “இத்தொகை செய்தான் பூரிக்கோ” (குறுந்.) இத்தொகை செய்தான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (ஐங்குறு.) என்பவற்றால் புலப்படும். ‘பாட்டு தொகை’ என்று வழங்கப்பட்டு, பின்னர்ப், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்று சொல்லப்பட்டு, அதன் பின்னர் ‘மேற்கணக்கு’ என்றாயது. அத்தொகை நூல்களில் சிக்கலோ,மயக்கமோ இல்லை. கீழ்க்கணக்கு நூல்களில், “இன்னிலையா, கைந்நிலையா” “எந்த நூல் கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டது,” என்னும் மயக்கமும் தருக்கமும் உண்டாயின. அந்நூல் ‘கைந்நிலை’ என்பதேயாம். கீழ்க்கணக்கு நூல்கள்: “ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைகுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவும் கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு” எனக் கூறப்பட்டன. நாலடி ஒருவர் ஆக்கிய நூலன்று; பலர் பாடிய பாடல் தொகுதி. மற்றவை, நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது (நானாற்பது), ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது (நாலைந்திணை), திருக்குறள் (முப்பால்), திரிகடுகம் (கடுகம்), ஆசாரக்கோவை (கோவை), பழமொழி, சிறுபஞ்ச மூலம் (மாமூலம்), முதுமொழிக்காஞ்சி (காஞ்சி), ஏலாதி, கைந்நிலை என்பன. கீழ்க்கணக்கு நூல்களின் தொகையாக்க அடிப்படை இரண்டு: ஒன்று, வெண்பா யாப்பு; மற்றொன்று, அடிச்சிறுமை. வெண்பா யாப்பு இல்லாத ஒரு நூல், முதுமொழிக் காஞ்சி. அஃது ஈரடியாய் அமைந்து, ஓரடியாய் நடையிடுவது. “ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” என்பது முதற்பாடல். பின்னர் வரும 99 பாடல்களும் அவ்வோரடியை முன்வைத்து நடையிடுகின்றன. ஆதலால் ஓரடியாய் நடையிடுவதைப் பாடல் எனலாமோ எனின், எனலாம் என்பது தொல்காப்பியம். அது, “ அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (1293) என்பது. முதுமொழிக் காஞ்சி நீங்கிய மற்றைப் பதினேழு நூல்களும் வெண்பா யாப்பினவேயாம். இரா. இளங்குமரன் உலகுக்காக ஒரு நூல் - முப்பால் உலகளாவிய அளவில் தமிழருக்கு ஒரு பெருமை உண்டென்றால் அப்பெருமை திருக்குறளைப் பெற்றமையால் பெற்ற பெருமையே ஆம். இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து, “ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடி நமக்கு அறிவித்தார் பாரதியார். உலகுக்காக உலகில் வாய்த்த ஒரு நூல் திருக்குறளேயாம். வள்ளுவர் தம் நூலின் தொடக்கம் முதல் இறுதிவரை உலகை நோக்கியே கூறுகிறார். அவர் காணும் உலகில் சாதி, சமயம், கட்சி, அரசியல், பணம், நிறம், தொழில், தொண்டு என எந்தப் பாகுபாட்டுக்கும் பிரிவுக்கும் பிளவுக்கும் இடமில்லை. உலகம் ஒரு குடும்பம் என்னும் ஒப்புரவுப் பார்வையில் அமைந்தமையே திருக்குறளை உலகுக்கு ஒரு நூலாக ஆக்கியதாம். வாழ்வின் எப்பகுதியையும் வள்ளுவர் தொடாமல் விட்டது இல்லை. எத்துறையையும் துலக்காமல் விட்டதும் இல்லை. எச்சிக்கலுக்கும் தீர்வு காணாமல் தள்ளியதும் இல்லை. ஆதலால் உலகில் வாழ்வார் எவர்க்கும் எந்நிலைக்கும் வேண்டும் அறநெறி களை உள்ளங்கைக் கனிபோலக் காட்டி நிற்கும் நூல் திருக்குறள் ஆயிற்று. ஓத எளிய நூல்; உணர அரிய நூல்; பற்றி நடக்க முற்றும் உதவும் நூல்; ஓர் அறத்தைப் பற்றிக் கொண்டால் அதனை அடுத்தும் தொடுத்தும் ஒன்பது அறங்கள் பற்றிக் கொண்டு வரும் நூல் திருக்குறள்! மனத்தில் மாசில்லாமை அறம்; தத்தம் கடமையைச் செய்வது தவம்; அறிதோறும் அறியாமை காண்பது அறிவு; ஈத்துவக்கும் இன்பமே இன்பம்; அரசு முறைமையைக் காத்தால் அம்முறைமையே அரசைக் காக்கும். இன்னவை வாழ்வொடு பின்னிப் பிணைந்தவை இல்லையா! அறத்தால் பொருள் தேடுக; அப்பொருளால் இன்புறுக; எவ்வளவு எளிமையாய் அரியதும் பெரியதுமாம் வாழ்வியல் வகுக்கப்படுகிறது! ஊழ் என்பது உலகத்து இயற்கை; ஊக்கமாக நிற்க! உறுதியாக நிற்க! நீ ஊழையும் வெல்வாய்! நீ போய்த் தெய்வத்தைத் தேட வேண்டியதில்லை; உன்னை அத் தெய்வமே தேடிக் கொண்டு வந்து உன் கையைப் பிடித்துக் கொண்டு வழி நடத்தும்! எவ்வளவு அரிய நம்பிக்கை! “தீமைக்குத் தீமை செய்யாதே! தீமைக்கு நன்மை செய்! தீமை திருந்துவது காண்பாய்!” “துன்பம் கண்டு துவளாதே! துன்பத்திற்குத் துன்பம் செய்! துன்பம் உன்முன் இன்பமாக வந்து நின்று உன் ஏவல் கேட்கும்!” “உலகியலைப் பார்! மழை வெயில் காற்று நிலம் எல்லாம் எல்லாம் பொதுமை இயங்கியல். இப் பொதுமை இயலைப் புரிந்து கொண்டு நட! உன் பிறவிப் பேற்றைப் பெற்ற ஒப்புரவாளனாய் - வாழ்வாங்கு வாழும் தெய்வமாய் - நீ திகழ்வாய்!” எனத் தட்டிக் கொடுத்து விண்ணில் தாவிப் பறக்கும் விழுமியங்களை வைக்கிறார் வள்ளுவர். திருக்குறள் படிக்க - ஒப்பிக்க - பேச - எழுத - பட்டம் பெற - கவனகம் செய்ய - கைதட்டுப பெற மட்டும் வந்த நூல் அன்று. நடக்க வந்த நூல்! வாழ்வியல் நடை நூல்! திருக்குறளின் படி நடந்தால் மாந்தர் ஆகலாம்; அம்மாந்தர் சான்றோர் ஆகலாம்; அச் சான்றோர் வாழும் தெய்வமாகலாம்; வழிபடும் தெய்வமும் ஆகலாம்! ஒவ்வொரு வரையும் தெய்வமாக்க வந்த நூல் திருக்குறள்! தெய்வப் புலவரால் அருளப்பட்ட நூல்! திருக்குறளைப் படிப்போம்; பேசுவோம்; கேட்போம்; ஓதுவோம்; சிந்திப்போம்; சீர்த்தி பெறுவோம்; பிறவிப் பயனை எய்துவோம்! “ ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்பது வள்ளுவம். உயிர்க்கு ஊதியம் தேடுவார் உலகுக்கு ஒரு நூலாம் திருக்குறளைப் போற்றி அதன் வழியில் நடப்பாராக! திருக்குறள், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக் களையுடையது. அறம் பொருள் காமம் என்னும் முப்பால்களை யுடையது. முப்பால் வழி நடந்தால் அப்பால் கொள்ள வேண்டும் அறம் இல்லை என அறுதியிட்டுக் கூறும் நூல். திருக்குறள் தொல்காப்பிய நெறியைப் பற்றிக் கொண்டு எழுந்த நூல்; அதில் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளிய தகவு நூல். மெய்ப்பொருள் காண்க! பயனில சொல்லாதே! செயற்கரிய செய்க! வாழ்வாங்கு வாழ்க! பொன்றாப் புகழ் உறுக! பேரா இயற்கை பெறுக! எனத்தாம் வாழ்ந்தும் ஆய்ந்தும் கண்ட நெறிமுறைகளை எடுத்தோதி உலகம் உள்ள வாய்த்த ஒரு மாமணி நூல்! திருக்குறளே திருவள்ளுவர்; திருவள்ளுவரே திருக்குறள் எனத் திகழும் நூல்! தொல்பழங்குமரிக் கண்டத் தமிழர் கண்டும் கொண்டும் வைத்த தேட்டெல்லாம் ஒரு மொத்தமாகக் கூட்டுண்ண வைத்த நூல்! அடியளவுச் சுருக்கத்தால் கீழ்க்கணக்கில் வைக்கப்பட்ட இந்நூல் மேற்கணக்கில் மேற்கணக்கு நூலாம் என்பது, மேற்கணக்கு நூல்களில் வள்ளுவம் மேற்கொள்ளப்பட்டு ஆளுகை புரிதலாலே தெளிவுற விளங்கும்! வள்ளுவத்தைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளுவார் வள்ளுவத்தில் எவ்வளவு ஆழங்கால் பட்டவராயினும் அவர், வள்ளுவரைப் பின்னுக்குத் தள்ளலே பெருமை எனக் கொண்டார் கூட்டில் திளைப்பவரே ஆவர் என்பது தெளிவாம்! வாழிய வள்ளுவம்! வாழிய வாழ்வியல்! வாழிய வையகம்! திரிகடுகம் கடுகம் என்பது காரமான மருந்து என்னும் பொருளது. திரியாவது மூன்று. திரி என்பது திரிக்கும் கயிறு போல்வது; அது முப்பிரியாம். எ-டு: வரி என்பது வரிப்பாடல்; அணில் வரி போன்ற, முத்தாழிசை களையுடைய பாடல்வகை. ஊசல்வரி, அம்மானை வரி போல்வன. சுக்கு மிளகு, திப்பிலி என்பவை காரமான மருந்துப் பொருள்கள், நோய் நீக்கிகள். திரிகடுகம் கூறும் இம்மூன்று அறங்களும் உயிர்நலம் பேணுவனவாம். திரிகடுகம் - மூன்று அறங்கள்; நான்மணிக் கடிகை - நான்கு அறங்கள் சிறுபஞ்சமூலம் - ஐந்து அறங்கள் ஏலாதி - ஆறு அறங்கள் என அடுக்கிக் கூறப்படும் அறநூல்களில் முன்னிற்பது திரிகடுகமாம். மூன்று சிறப்புக் கருத்துகள்; மூன்றற்கும் ஏற்ற முடிநிலை என நான்கடிகளும் சிறப்பும் பொதுவுமாய் நடையிடும் சீர்மையுடைய வெண்பாக்கள் நூற்று ஒன்றைக் கொண்டது இந்நூல். “திரிகடுகம் போலும் மருந்து” என்று நூன்முகத்தே சுட்டுவது அதன் அகம் காட்டுவதாம் (1) இந்நூலினை இயற்றியவர் நல்லாதனார் என்பார். ஆதன் பூதன் என்பன பழநாளில் பயிலவழங்கிய பெயர்களாம். நல் என்னும் அடையோ மிகப் பயில வழங்கிய பெருமையதாம். நக்கீரன், நல்லந்துவன், நச்செள்ளை என இருபால் பொதுமை அடையாய் விளங்குவது. பழமொழிகள் அறமாதல் வழக்கு. “உமிக்குற்றுக் கைவருந்துவார்“(28) “துஞ்சூமன் கண்ட கனா” (7) அன்னவை நாடறி பழமொழிகள். நூலறி செய்திகளையும் இவர் எடுத்து வழங்குகிறார். மர்ரே பதித்த பதிப்பில் சிறப்புப் பாயிரப் பாடல்கள் இரண்டு கிடைத்துள. அதில் ஒன்று, “தமிழ்ச்சங்கம் மருவு நல்லாத;ன” என ஆசிரியரைச் சுட்டுகிறது. மற்றொன்று “செல்வத் திருத்துளார் செம்மல்” என்பது, நல்லாதனார் ஊர் திருத்து என்றும், அது நெல்லை வட்டம் சார்ந்தது என்றும் உள்ளது. சங்க நூல் அன்று; சங்க மருவிய நூல் என்பது செவ்விதேயாம். “ கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்தல் இல” (10) கணக்கு - நூல். கணக்கு ஆய்பவரும் கற்பிப்பவரும் கணக்காயராம். கணக்காயனார் மகனார் நக்கீரனார் பழம்புலவர். பாத்துண்ணும் - பகுத்துண்ணும். ‘பாத்தூண்’ என்பது திருக்குறள். அதற்குப் பொருள் போல் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்பதும் திருக்குறள். இச்சொல்லின் ஆளுமை இந்நாளில் ஓர் இயற்கை ஆர்வலரைக் கவர்ந்து தம் உழவடைப் பண்ணைக்குப் ‘பாத்தூணகம்’ எனப் பெயரிட ஏவியுள்ளது! இவை நன்மை பயவாதவை எனின், இழிமைப் படுத்துதலா? வழிமைப்படுத்துதல்; கணக்காயா உள்ள ஊராய், மூத்தோரை உள்ள அவையாய், பாத்துண்பார் உள்ள அயலிருப்பாய் அமைக! அமைக்க என்பதாம்! ஏனெனின் நல்லாதன் அல்லரோ அவர்! ஆதனாவான் தன்னை உணர்ந்த அறிவன்! “ தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது” (12) இப்பாட்டின்படி மூவரும் ஒருவனாம் மூர்த்தியாக ஒவ்வொருவனும் அமையலாமே! தாளாளனாய் வேளாளனாய் கோளாளனாய் ஒருவன் இருக்கமுடியாதது இல்லையே! மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னார் (16) ஒவ்வொருவர்க்கும் உடல்கள் இரண்டாம். ஒன்று பூதஉடல்; மற்றொன்று புகழ் உடல். புகழுடல் பெற்றார் இறவார் அல்லரோ! “ ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்” என்பது பொய்யாமொழி அல்லவா! ஒளியுலகத்தில் இடம் பெற வேண்டுமா? வழிகாட்டுகிறார் நல்லாதனார்: “ ஈதற்குச் செய்க பொருளை; அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை; யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லை இம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு” என்பது அது (90) ‘உள்ளான்’ என்னும் பறவையை ‘உள்ளல்’ என்றும் (7), ‘மூடரை’, ‘முழுமக்கள்’ என்றும் (9, 87) பொய்யனைப் ‘பொறியறை’ (பொறி அற்றுப் போனவன்) என்றும் (15), ‘அறச்சாலை’யை ‘அறப்புறம்’ என்றும் (25) இவர் வழங்குதல் எண்ணுவார்க்கு இன்பம் பயப்பதாம் புறத்திரட்டில் வரும் கரப்பவர் என்னும் பாடல் (1222) இந்நூலொடு இணைக்கத்தக்க தாகலாம். ஆசாரக்கோவை ஆசாரம் என்பது ஒழுக்கம், நடத்தை. இதனை இயற்றியவர் முள்ளியார். இவர் ஊர் ‘பெருவாயில்’ என்பதால் முள்ளியார் எனப்பட்டார். வாயில் பெயர்கள், தலைவாயில், நெடுவாயில் புனல்வாயில் எனப்பல. வாயில் வாசல் என வழக்குண்டது. ஊர் நுழைவாயில் பெருவாயில்; ஊரோ வண்கயத்தூர்; வளமிக்க ஏரியூர்! ‘வாய் மாண்ட ஏரி’ என்பது பெருவல்லம் பற்றிய பழம் பாடல். ‘தெண்ணீர்க் கயம்’ என்பது வெற்றிவேற்கை. தமிழ் முதல் நூலன்று இக் கோவை. ஆரிடம் என்னும் வடமொழி நூலில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பது தற்சிறப்புப் பாயிரம். ஆதலால் முற்றிலும் தமிழ் நெறிப்பட்ட நூல் அன்று இது. வள்ளுவர் “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பதை ஒழுக்கமாகக் கொண்டனர் உரைகாரர்கள். ஆனால் ஆசு ஆரம் என்னும் கூட்டுச் சொல் அது. பற்றுக்கோடு என்னும் பொருளது. ‘பற்றாசு’ என்பதும், ஆசிடை எதுகை என்பதும் எண்ணத்தக்கவை. ஆசாரக்கோவை நூறு வெண்பாக்களையுடையது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐவகை வெண்பாக்களும் உள. தாம் கூறும் ஆசாரங்களின் வித்து என எட்டுத் தன்மைகளை நூல் முதற்பாடலில் சுட்டுகிறார் முள்ளியார். நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. என்பது அது. ஆசாரம் உடையவரையும், ஆசாரத்தையும், ஒழுக்கம் பிழை யாதவர் (2) என்றும் ‘முந்தையோர் கண்ட முறை”(4) என்றும் கூறுகிறார். நல்லறிவாளர் துணிவு (17) பேரறிவாளர் துணிவு (19) ஒழுக்கம் பிழையாதவர் (21) உணர்வுடையார் (31) தந்திரத்து வாழ்தும் என்பார் (34) தந்திரம் - நூல் கடனறி காட்சியவர் (36) நுண்ணிய நூலறிவினார் (41) பேரறிவாளர் துணிவு (42) நல்ல துறல் வேண்டுவார் (46) தாங்கருங் கேள்வியவர் (50) அசையாத உள்ளத் தவர் (52) நெறிப்பட்டவர் (53) நோயிர்மைவேண்டு பவர் (57) நூன்முறையாளர் துணிவு (61) திறங்கண்டார் கண்ட நெறி (63) கடைபோக வாழ்து மென்பார் (66) திறப்பட்டார் (79) நன்கறிவார் (80) திறந்துளி வாழ்து மென்பார் (88) மெய்யாய காட்சி யவர் (89) ஐயமில் காட்சியவர் (94) ஒழுக்க நெறியரைச் சுட்டும் இதுவே ஒழுக்க நெறியறிவிப்பாகி விடுகின்றதல்லவோ! ஒழுக்க நெறியை, முந்தையோர் கண்ட முறை (10) யாவரும் கண்ட நெறி (16) மிக்கவர் கண்ட நெறி (27) திறங்கண்டார் கண்ட நெறி (63) என்கிறார். பிறர் உடுத்த அழுக்குடை, பிறர் பயன்படுத்திய செருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது (12) வாயிலுக்குமுன் கட்டில் போட்டுப் படுக்கலாகாது (22) ஒருகையால் கொடுத்தலும் வாங்கலும் கூடா (28) - என்கிறார். கிடந்தும் நின்றும் திறந்த வெளியிலும் கட்டில் மேலிருந்தும் உண்ணலாகாது என்று சீரிய ஊண் எனினும் அளவோடு உண்க என்றும் கூறுகிறார். (23) மேலும் இனிப்புணவை முன்னும் கசப்புணவைப் பின்னும் பிறவற்றை இடையிலும் உண்க என்கிறார். (25) நிறை உவா நாளில் (வெள்ளுவா) பல் துலக்கலும் ஆகாது என்கிறார் (17) ஒழுக்கம் சடங்காய வகை இது. சொல்லக் கூடாச் சொல் எனப் படிறு, பயனில, பட்டியுரை, வசை, புறன் என அருமையாக அடுக்குகிறார்.(52) விலக்கு நாள் மூன்று கழிந்த பன்னிரு நாளும் கருவுறும் காலம் எனத் தொல்காப்பியம் கூறினார். இவரும் கூறுகிறார். (42) ‘உடம்பு நன்றாயிருக்கிறது’ என்று கூறக் கூடாது என்பது நல்லதா? (59) பிள்ளையே ஆயினும் இழித்துரைக்கக் கூடாது என்பது நல்லதே (68) நாடுதோறும் பழக்க வழக்கம் வேறாகலின் அறியாத தேயத்தாரிடம் ஆசாரம் பார்க்கக் கூடாது என்பது நல்ல பட்டறிவே (100) அறம் பொருள் இன்ப ஒழுக்கத்தை முப்பால் ஒழுக்கம் என்பது நல்ல இரட்டுறலாம். (3) ‘சிறை’ என்று பறவையை வழங்குகிறார். (21) உறுதிமொழியைக் கட்டுரை என்கிறார். (66) நாளந்தி என்று ‘விடிகாலை’ எனக் குறிக்கிறார். (9) சொல்லாய்வுக்கு வாய்க்கும் குறிப்புகள் இவை. இரா. இளங்குமரன் நூலாசிரியர்கள் 1. திருக்குறள் - திருவள்ளுவர் 2. நாலடியார் - சமணமுனிவர்கள் 3. நாண்மணிக்கடிகை - விளம்பிநாகனார் 4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் 5. இன்னா நாற்பது - கபிலர் 6. கார் நாற்பது - மதுரை - கண்ணங்கூத்தனார் 7. களவழி நாற்பது - பொய்கையார் 8. திரிகடுகம் - நல்லாதனார் 9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் 10. பழமொழிநானூறு - முன்றுறையரையனார் 11. சிறுபஞ்சமூலம் - காரியாசான் 12. முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார் 13. ஏலாதி - கணிமேதையார் 14. திணைமொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார் 15. ஐந்தினை ஐம்பது - பொறையனார் 16. ஐந்திணை எழுபது - மூவாதியார் 17. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதையார் 18. கைந்நிலை – புல்லங்காடனார் பொருளடக்கம் 1. பதிப்புரை ------------------------------------------------------ 2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் --------------------------- 3. நூலாசிரியர்கள் ----------------------------------------------- நூல் 16. திருக்குறள் ------------------------------------------------------ 17. திரிகடுகம் ------------------------------------------------------ 18. ஆசாரக்கோவை --------------------------------------------- திருக்குறள் ஆசிரியர் : திருவள்ளுவர் உரையாசிரியர் : மணக்குடவர் திருக்குறள் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள் மூலமும், தேவருரை அல்லது மணக்குடவருரையும். 1. அறத்துப்பால் (38) 1. பாயிரம் (4) 1. கடவுள் வாழ்த்து கடவுள் வாழ்த்தாவது கடவுளை வாழ்த்துதல்., 1. அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (இதன் பொருள்.) எழுத்துக்க ளெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன; அவ்வண்ணமே, உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து, (என்றவாறு) 2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின். (இ-ள்.) மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடைய வன் திருவடியைத் தொழாராயின், (எ-று). சொல்லினானே பொரு ளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும், மீண்டும் வணக்கம் கூறி யது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. “கற்பக் கழிமட மஃகும்” என்றாரு முளர். 3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (இ-ள்.) மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே நிலத்தின் மேல் நெடுங்காலம் வாழ்வார், (எ-று). ‘நிலம்’ என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணு மென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடு பெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர். 4. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது. (இ-ள்.) தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது, (எ-று). வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னு மிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலு மில்லாததொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார்; அதனால், எல்லாத் துன்பமும் வருமாதலின். 5. அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. (இ-ள்.) அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்த வர்க்கல்லது ஒழிந்தபேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது; அது பெறுதலரிது, (எ-று). இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடு மென்றது. 6. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார் யாண்டு மிடும்பை யிலர். (இ-ள்.) இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர், (எ-று). பொருளுங் காமமு மாகாவென்றற்கு ‘வேண்டுதல் வேண்டா மை யிலான்’ என்று பெயரிட்டார். 7. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (இ-ள்.) மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு (எ-று). 8. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். (இ-ள்.) மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிக ளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின் கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார், (எ-று). இது சாவில்லை யென்றது. 9. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா ரிறைவனடி சேரா தவர். (இ-ள்.) பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்; இறைவனது அடியைச் சேர்ந்தவர், சேராதவ ரதனு ளழுந்துவார், )எ-று). 10. கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை. (இ-ள்.) அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள்போல, ஒரு குணமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள், (எ-று). உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார். 2. வான்சிறப்பு வான்சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப் படுகின்ற இல்லறமுந் துறவறமு மினிது நடப்பது மழையுண்டாயி னென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும். 11. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. (இ-ள்.) சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது; வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின் கண், (எ-று). மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்கு வகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார். 12. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். (இ-ள்.) தானமுந் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத் துக்கண் மழை பெய்யாதாயின், (எ-று). இது தானமுந் தவமுங் கெடுமென்றது. 13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (இ-ள்.) நீரையின்றி யுலகம் அமையாதாயின், யாவர்க்கும் மழை யை யின்றி ஒழுக்கம் உண்டாகாது, (எ-று). ஒழுக்கம் - விரதம், இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றி னானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார். 14. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. (இ-ள்.) வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருந்தா நிற்கும்; எல்லாவுயிர் களையும், (எ-று). பொய்த்தல் - தன்றொழில் மறுத்தல். இது ‘பசி’ என்று பொதுப் படக் கூறியவதனான் மக்களும் விலங்கும், பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்பமுறுமென்று கூறிற்று. 15. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. (இ-ள்.) வானின்று துளிவீழினல்லது அவ் விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது, (எ-று). ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவு யிருங் கெடுமென்றது. 16. நெடுஞ்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். (இ-ள்.) நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும்; மின்னி மழையானது பெய்யாவிடின், (எ-று). தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட் கேடு கூறினார்; பொருள்கெட இன்பங் கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர். 17. ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். (இ-ள்.) ஏரினுழுதலைத் தவிர்வாருழவர்; புயலாகிய வாரியினு டைய வளங் குறைந்தகாலத்து, (எ-று). இஃது உழவ ரில்லை யென்றது. 18. கெடுப்பதூஉங் கெட்டபார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை. (இ-ள்.) பெய்யாது நின்று எல்லாப்பொருளையுங் கெடுப்பதும், அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்க ளெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும், மழை, (எ-று). இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு. 19. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை. (இ-ள்.) பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவு களையு முண்டாக்கித், தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே, (எ-று). இது பசியைக் கெடுக்கு மென்றது. 20. வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று. (இ-ள்.) மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம் மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது, (எ-று). இஃது அறம் பொரு ளின்பங்களையுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும், இம் மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று. 3. நீத்தார் பெருமை நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்க வேண்டுமென்பதனானும் அவர் அதை யடக்கத்தக்க வரென்ற கருத்தினானும் அவையிற்றின்பிற் கூறப்பட்டது. 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. (இ-ள்.) ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந் தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும், (எ-று). யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல் லாருங் கொண்டாடுதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும்; அதனானேயானுஞ் சொல்லுகின்றே னென்பது. 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. (இ-ள்.) காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின், உலகத் துப்பிறந்திறந்தாரை இத் துணையரென்று எண்ணி யறியலுற் றாற் போலும், (எ-று) இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று. 23. உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து. (இ-ள்.) அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகியவிடத்தே யாதற்கு இவ்விடத்தே யிருப்பதொரு வித்து, (எ-று). பெருமை சொல்லுவார் முற்பட மக்கள் தன்மையனாய் இவ்வு லகின்கண் வாழ்பவனல்லன்; தேவருளொருவனென்று கூறினார். 24. சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. (இ-ள்.) சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய் வான்கண்ணதே யுலகம், (எ-று). எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே; அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாத லால், காரியமான வுலகம் அறிவான்கண்ணதா மென்றவா றாயிற்று. 25. ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. (இ-ள்.) நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று, (எ-று). இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ்செய் வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாத லான். இது தேவரினும் வலியனென்றது. 26. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. (இ-ள்.) பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெரு மை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது. 27. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (இ-ள்.) நிரம்பிய கல்வியையுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும் (எ-று). இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று. 28. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. (இ-ள்.) குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழு தாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினான். இது வெகுளி பொறுத்தலரி தென்றது. 29. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (இ-ள்.) செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர்; அவற்றைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர், (எ-று). செயற்கரியன - இமய நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமை யென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார்; செயற்கரியன செய்வாரே பெரிய ரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று. 30. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (இ-ள்.) எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற் கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர், (எ-று). மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார்; இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது. 4. அறன்வலியுறுத்தல் அறன்வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத் தென்பதனை யறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்கூறுதற்குக் காரணஞ் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவராற் கொண்டுய்க்கப் படுதலின், பிற்கூறப்பட்டது. 31. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு. (இ-ள்.) முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை, (எ-று). இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலியுடைத்தென்று கூறிற்று. 32. ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். (இ-ள்.) தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க, (எ-று). இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும், செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாக்கிய பல விடங்களும், ஒழியாதென்றது நாடோறு மென்றது, இஃது அறம் வலிதென் றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது. 33. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. (இ-ள்.) பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க, அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்குமிடத் திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்ய வேண்டுமென் பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. 34. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. (இ-ள்.) நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென்றறிய வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம், (எ-று). இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணை யாயினவாறு காட்டிற்று. 35. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் பறத்த புகழு மில. (இ-ள்.) அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமில வாம், (எ-று). இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. 36. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். (இ-ள்.) ஒருவன் ஒருநா ளிடைவிடாமல் நன்மையைச் செய்வா னாயின், அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம், (எ-று). இது வீடு தருமென்றது. 37. செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. (இ-ள்.) ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; தப்பும் பகுதி யது பழியே, (எ-று). மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார்; அதனோடு பாவ முஞ் செய்யின் அறாதென்றாற்கு இது கூறினார். 38. அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலினூங் கில்லையாங் கேடு. (இ-ள்.) ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில் லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை, (எ-று). இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று. 39. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா லியன்ற தறம். (இ-ள்.) மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ் சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று; அஃது அறமென்று சொல்லப்படும், (எ-று). பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கி னுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத்தென்றற்கு இது கூறப்பட்டது. 40. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. (இ-ள்.) ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லவற முமாம்; அதில் அழுக்குண்டாயின், மேற்செய்வனவெல்லாம் ஆர வார நீர்மைய, (எ-று). பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று, மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார். அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார். 2. இல்லறவியல் (20) இல்லறமாவது இவ்வின்கணிருந்து தான முதலாயின செய்தல். அது கூறிய அதிகார மிருபதினும் இல்வாழ்வான் வாழுந்திற மோரதிகாரத்தானும் அதற்குத் துணையான மனைவி யிலக்கணம் ஓரதிகாரத்தானும் கூறி, அதன் பின் இல்லறப் பகுதியான பிரமசரியங் காருகத்தமென்னு மிரண்டனுள்ளும் பிரமசரியத்திற்கு ஆதார மாகிய புதல்வரைப் பெறுதல் ஓரதிகாரத்தாற் கூறிக், காருகத்த விலக் கணங் கூறுவார் நல்கூர்ந்தார், நல்குரவினீங்கினார், செல்வர், வள்ளியோ ரென்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்க முடைமை யீறாக நல்கூர்ந்தாராற் செய்யப்படுவன வேழும், பிறனில் விழையாமை முதலாகத் தீவினையச்சமீறாக இவராற் றவிரப்படுவன வேழும் பதினான்கதிகாரத்தாற் கூறி, இவற்றோடுங்கூட ஒப்புர வறிதல் நல்குரவினீங்கினாராற் செய்யப்படுமென்று கூறி, இவற் றோடுங் கூட ஈதல் செல்வராற் செய்யப்படுமாறு கூறி, இவற்றோடுங் கூடப் புகழ் வள்ளியோராற் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும். இவ்வறம் முற்படக் கூறியது; துறவறத்தினின் றாரையும் ஓம்புதல் இல்வாழ்வான் கண்ணாதலான். 1. இல்வாழ்க்கை அவற்றுள், இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன் கூறுதல், மேல் அறஞ் செய்கவென்றார் இது முதலாக அறஞ் செய்யுமாறு கூறுகின்றாராதலின், இது பிற்கூறப்பட் டது. 41. இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை. (இ-ள்.) இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்பு டைய மூவர்க்கும் நல்ல வழியின் கண்ணே நின்றவொருதுணை, (எ-று). என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின் பாற்பட்ட விரதங் கொண் டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண் டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் சந்நியாசி களுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத் தலின், அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணை யென்றது இடையூறு வாராம லுய்த்து விடுவாரை. 42. துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை. (இ-ள்.) வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணையா வான், (எ-று). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையா லீண்டுத் துறந்தாரென்று கூறினார், செத்தார்க் கிவன் செய்ய வேண் டியன புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கே யன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று. 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை. (இ-ள்.) பிதிரர், தேவர் புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் நிலையான வில்வாழ்க்கை, (எ-று). தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென் றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று; என்னை? இவையெல்லா மொருங்கு செய் யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர். 44. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். (இ-ள்.) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையுமஞ்சிப் பகுத் துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக் காலத்தினுமில்லை, (எ-று). மேல் பகுக்குமாறு கூறினார், பகுக்குங்காற் பழியொடு வாராத பொருளைப் பகுக்கவேண்டுமென்று கூறினார். 45. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது. (இ-ள்.) இல்வாழ்க்கையாகியநிலை யாவர்மாட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே, (எ-று). பயன் வேறு வேண்டாம்; தனக்கும் பிறர்க்கும் உண்டான முக மலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியொடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்ய வேண்டு மென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று. 46. அறத்தாற்றி னில் வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (இ-ள்.) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்த வல்லவனாயின், புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ? (எ-று). மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய் யின் தவப்பயனும் இது தானே தருமென்றார். 47. ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து. (இ-ள்.) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியு டைத்து, (எ-று). ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது. 48. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. (இ-ள்.) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான், (எ-று). முயறல்பொருட்கு முயறல். 49. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும். (இ-ள்.) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத் திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன், (எ-று). இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. 50. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. (இ-ள்.) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல் வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவ தொன்றை யுடைத்தல்லவாயின், (எ-று). பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை, இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட் டது. 2. வாழ்க்கைத் துணை நலம் வாழ்க்கைத் துணைநலமாவது வாழ்க்கைக்குத் துணை யாகிய மனையாளது பெண்மையிலக்கணங் கூறுதல். 51. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (இ-ள்.) தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையா ளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல் வாழ்க்கைக்குத் துணையாவாள், (எ-று). 52. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். (இ-ள்.) குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லை யாகில், அவ் வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத் தாயினும் ஒரு நன்மையும் இன்றாம், (எ-று). 53. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. (இ-ள்.) மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல், (எ-று). 54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (இ-ள்.) பெண் பிறப்புப்போல மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின், (எ-று). 55. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை. (இ-ள்.) புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்; தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை, (எ-று). ஏறு நடை - அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை. 56. இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ னில்லவண் மாணாக் கடை. (இ-ள்.) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளா னால், எல்லா மிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லானானால், எல்லா முடையானாயினும் உண் டானது யாது? (எ-று). 57. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (இ-ள்.) தன்னையுங் காத்துத், தன்னைக் கொண்ட கணவ னையும் பேணி, நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர் வின்மையுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள், (எ-று). 58. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (இ-ள்.) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி அவனை நாடோறுந் தொழு தெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும், (எ-று). எழுதல் - உறங்கி எழுதல். 59. பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. (இ-ள்.) பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்ற வரையே தமக்குத் தலைவராகப் பெறின், தேவர் வாழும் பெரிய சிறப் பினையுடைய உலகத்தைப் பெறுவர், (எ-று). 60. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு. (இ-ள்.) ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்க முடையாளாதலை; அவ் வழகின்மேலே நல்ல அணிகல னென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை, (எ-று). 3. புதல்வரைப் பெறுதல் புதல்வரைப் பெறுதலானது புதல்வரைப் பெற்றதனாலாய பயன் கூறுதல். 61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (இ-ள்.) ஒருவன் பெறும் பொருள்கள் அறிவுடைய மக்களைப் பெறுதல். பயன்படுவது ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை, (எ-று). 62. எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (இ-ள்.) எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா; ஒருபிறப்பிலே பழியின் கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவா ராயின், (எ-று). 63. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும். (இ-ள்.) தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை; அம் மக்களுடைய பொருள் தத்தம்முடைய வினை யோடே கூடவருதலான், (எ-று) 64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ். (இ-ள்.) இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது; தம்மு டைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ், (எ-று). 65. மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (இ-ள்.) தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம். அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம், (எ-று). 66. குழலினி தியாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர். (இ-ள்.) குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லு வர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார், (எ-று). 67. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. (இ-ள்.) தம்மக்க ளறிவுடையரானால் அது தம்மினும் உலகத் துயிர்கட்கெல்லாம் இனிதாம், (எ-று). 68. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய். (இ-ள்.) தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர்சொல்லக் கேட்ட காலத்துத் தாய், (எ-று). 69. தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். (இ-ள்.) தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல், (எ-று). 70. மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (இ-ள்.) மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்னதவஞ் செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல், (எ-று). இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது. 4. அன்புடைமை அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவனாதல். 71. என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம். (இ-ள்.) என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்; அன்பிலாத வுயிரினை அறம், (எ-று). 72. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று. (இ-ள்.) தன்னிடத்து அன்பில்லாத வுயிரினது வாழ்க்கை, வலியபாரிடத்து உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும், (எ-று) தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு. 73. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு. (இ-ள்.) உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப், புறத்துறுப்புக்களெல்லாம் யாதினைச் செய்யும்? (எ-று). 74. அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. (இ-ள்.) உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும்; ஆதலால், அவ் வன்பிலாதார்க்கு உளதாவது என்பின்மேற் றோலினாற் போர்க்கப்பட்ட வுடம்பு, (எ-று). இது வீடு பெறாரென்றது. 75. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு. (இ-ள்.) அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையராக வுடையர்; அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக் கங்க மாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர், (எ-று). அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று. 76. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. (இ-ள்.) முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செல வென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப் பிறப்பின்கண் உடம்போடு இடை விடாத நட்பினை, (எ-று). 77. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (இ-ள்.) முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செல வென்று சொல்லுவர்; இப் பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை, (எ-று). இது போகந் துய்ப்பரென்றது. 78. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு. (இ-ள்.) அன்பு தரும் ஆர்வமுடைமையை; அவ்வார்வமுடைமை தரும், நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப் பினை, (எ-று). 79. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. (இ-ள்.) அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார்; அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம், (எ-று). 80. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூச றரும். (இ-ள்.) அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும், (எ-று). 5 . விருந்தோம்பல். விரும்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டுமென்பது கூறல். 81. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (இ-ள்.) இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கையெல்லாம், வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபசரித்தற்காக, (எ-று). 82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (இ-ள்.) விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதியுடைத் தன்று, (எ-று). 83. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. (இ-ள்.) நாடோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை, (எ-று). 84. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்லிருந் தோம்புவா னில். (இ-ள்.) திருவினாள் மனம்பொருந்தி உறையும்; நல்ல விருந்தி னரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண், (எ-று). இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது. 85. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம். (இ-ள்.) விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படு மென்ற வாறு. 86. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு. (இ-ள்.) வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன், (எ-று). வரவுபார்த்தல் - விருந்தின்றி யுண்ணாமை. 87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன். (இ-ள்.) விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை; அவ்விருந்தினரின் தன்மை யாதோரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன், (எ-று). 88. பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். (இ-ள்.) விருந்தினரைப் போற்றி யுபசரிக்க மாட்டாதார், வருந்தி யுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிருப்பர், (எ-று). 89. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு. (இ-ள்.) உடைமையின்கண்ணே யில்லாமைபோல, விருந்தி னர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட் டே யுளதாம், (எ-று). 90. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (இ-ள்.) எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தா லல்லது வாடாது; விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர், (எ-று). இது முகநோக்கி யினிமை கூறவேண்டுமென்றது. 6. இனியவை கூறல் இனியவை கூறலாவது கேட்டார்க்கு மனமகிழுஞ் சொற்களைக் கூறுதல். 91. அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (இ-ள்.) மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று; முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின், (எ-று). 92. முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொ லினதே யறம். (இ-ள்.) கண்ணாலே பொருந்தி இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின், அதுதானே யறமாம், (எ-று). 93. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின். (இ-ள்.) நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின், அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும், (எ-று). 94. பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற. (இ-ள்.) ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்; பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா, (எ-று). இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று. 95. சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பந் தரும். (இ-ள்.) புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள், இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் இன்பத்தைத் தரும், (எ-று). 96. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறூஉ மின்சொ லவர்க்கு. (இ-ள்.) துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்; யாவர்மாட்டுங் கூறு மின்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு, (எ-று). 97. நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல். (இ-ள்.) பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல், (எ-று). 98. இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (இ-ள்.) இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலா தலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம், (எ-று). இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது. 99. இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (இ-ள்.) ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத் தைப் பயத்தலைக் காண்பான், அதற்கு மறுதலையாகிய வன் சொல் லை வழங்குவது எப் பயனை நோக்கியோ? (எ-று). 100. இனிய வுளவாக வின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (இ-ள்.) பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்களின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக்கூடிய சொற் களைக் கூறுதல்; பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன் பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து, (எ-று). 7. செய்ந்நன்றி யறிதல். செய்ந்நன்றி யறிதலாவது பிறர் செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை. 101. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு. (இ-ள்.) தனக்குத் துன்பம் வந்த காலத்து வலியாயினார் நட்பை விடாதொழிக; எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவா தொழிக, (எ-று). 102. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. (இ-ள்.) பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல; பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம், (எ-று). இது தீமையை மறக்கவேண்டு மென்று கூறிற்று. 103. செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது. (இ-ள்.) முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது, (எ-று). 104. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது. (இ-ள்.) தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தா லுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது, (எ-று). 105. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது. (இ-ள்.) உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான் சிறிதா யிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது, (எ-று). இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது. 106. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். (இ-ள்.) தினையளவு நன்றி செய்தாராயினும் அதனை யவ் வளவிற்றென்று நினையாது பனையளவாகக் கொள்வார், அதன் பயனை யறிபவர், (எ-று). பனையளவு - அதனுயர்ச்சி. 107. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. (இ-ள்.) தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப் பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர், (எ-று). 108. உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (இ-ள்.) முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி; அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி, (எ-று). இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது. 109. கொன்றன்ன லின்னா செயினு மவர்செய்த வொன்றுநன் றுள்ளக் கெடும். (இ-ள்.) தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றா லொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும், அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமையெல் லாங் கெடும், (எ-று). 110. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (இ-ள்.) எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தே யாயினும் உய்வுண்டாம்; ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒருகாலத்தினும் உய்தலில்லை, (எ-று). 8. நடுவு நிலைமை நடுவுநிலைமையாவது நட்டார்மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. 111. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. (இ-ள்.) சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது, (எ-று). இது நடுவுநிலைமை வேண்டுமென்றது. 112. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வட்கோட்ட மின்மை பெறின். (இ-ள்.) நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்; உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின், (எ-று). இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இரு பொருட் பொதுமொழி கூறுதலன்றென்பதூஉம் கூறிற்று. 113. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். (இ-ள்.) நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே; அவரவர் நிலைமைப்பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின், (எ-று). 114. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின். (இ-ள்.) வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம்; பிறர் பொரு ளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வா ராயின், (எ-று). வாணிகம் - இலாபம். 115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. (இ-ள்.) கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல; அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன் னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம், (எ-று). 116. கெடுவாக வையா துலக நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு. (இ-ள்.) நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின், அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார், ஆக்கத்தோடே யெண்ணுவர், (எ-று). 117. நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல். (இ-ள்.) பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீக்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக, (எ-று). 118. கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின். (இ-ள்.) தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாத வற்றைச் செய்யுமாயின், அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே! யறிக, (எ-று). 119. தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும். (இ-ள்.) செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத் தொழிலினானே காணப்படும், (எ-று). இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடா தென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.) 120. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து. (இ-ள்.) நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாத லையுடைத்து, (எ-று). நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு. 9. அடக்கமுடைமை அடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல். 121. காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினூங் கில்லை யுயிர்க்கு. (இ-ள்.) ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை, (எ-று). 122. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின். (இ-ள்.) அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின், அவ்வடக்கம் நன்மை பயக் கும், (எ-று). அறியப்படுவன - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்; அடக்கப் படுவன - மெய் வாய் கண் மூக்குச் செவி. 123. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து. (இ-ள்.) ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து. 124. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது. (இ-ள்.) தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது, (எ-று). நிலை - வன்னாச்சிரம தன்மம். 125. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (இ-ள்.) எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றி னையும் அடக்குக; அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான், (எ-று). இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்றது. 126. தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு. (இ-ள்.) தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்; நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது, (எ-று). 127. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும். (இ-ள்.) ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும், (எ-று). இது சால மொழி கூறினாலுந் தீதாமென்றது. 128. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து. (இ-ள்.) அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்; அவ ரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மையுடைத் தாம், (எ-று). செல்வம்-மிகுதி. 129. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து. (இ-ள்.) வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன் மாட்டு, அறமானது நெறி யானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும், (எ-று). இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது. 130. அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும். (இ-ள்.) மன மொழி மெய்களை யடக்கி யொழுக. அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்; அவற்றை யடக்காதொழிய அவ் வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும், (எ-று). மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத் திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார். 10. ஒழுக்கமுடைமை ஒழுக்கமுடைமையாவது தத்தங் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுடையாராதல். 131. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை. (இ-ள்.) வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க; எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பா மலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால், (எ-று). இஃது ஒழுக்கங் காக்க வேண்டுமென்றது. 132. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். (இ-ள்.) அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும், உயர்ந்தா ரோடு பொருந்த ஒழுகுதலை அறியார், (எ-று). இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுத லென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத் தென்பதூ உம் கூறிற்று. 133. மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (இ-ள்.) பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும், பின்னும் ஓதிக் கொள்ளலாம்; ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும், (எ-று). இஃது ஒழுக்கம் கல்வியினும் வலிதானவாறு கூறிற்று. 134. ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து. (இ-ள்.) ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்; அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து, (எ-று). இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும். 135. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும். (இ-ள்.) ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடைய வனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவனாயின், உயர்குலத் தனாயினும் இழிகுலத்தானாயே விடும், (எ-று) இது குலங்கெடுமென்றது. 136. அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க ணுயர்வு. (இ-ள்.) மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான்மாட்டு மிகுதியில்லையாம், (எ-று). இஃது உயர்ச்சியில்லையா மென்றது. 137. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி. (இ-ள்.) ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர், (எ-று). 138. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க மென்று மிடும்பை தரும். (இ-ள்.) முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்; தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும், (எ-று). தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்ற வாறு. என்றும் - இருமையின்கண்ணுமென்றவாறு. 139. ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய வழுக்கியும் வாயாற் சொலல். (இ-ள்.) தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல், ஒழுக்க முடையார்க்கு இயலாது, (எ-று). 140. ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும். (இ-ள்.) ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொ ழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்கவேண்டும், (எ-று). இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று. 1 . பிறனில் விழையாமை. பிறனில் விழையாமையாவது பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை. 141. அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். (இ-ள்.) அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான், பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன், (எ-று). இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது. 142. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில். (இ-ள்.) பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பியொழுகு கின்ற அறியாமை, உலகத்து அறமும் பொருளும் அறிந்தார்மாட்டு இல்லையாம், (எ-று). 143. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில். (இ-ள்.) காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப்போல் அறியாதாரில்லை, (எ-று). 144. எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல். (இ-ள்.) எல்லாவமைதியினையும் உடையராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ? (எ-று). பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார். 145. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் றீமை புரிந்தொழுகு வார். (இ-ள்.) தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாக, செத்தாரின் வேறல்லர், (எ-று) இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின், பிணத்தோ டொப் பரென்றது. 146. எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. (இ-ள்.) தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான், (எ-று) இது பழியுண்டா மென்றது. 147. பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண். (இ-ள்.) பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்; பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு, (எ-று). 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு. (இ-ள்.) பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மை தானே, சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம், (எ-று). இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமு மென்றது. 149. நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார். (இ-ள்.) நலத்துக்கு உரியார் யாரெனின், நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டா தார், (எ-று). நலக்குரியார் - விரும்புதற்குரியார். 150. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. (இ-ள்.) அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும், பிறனி டத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று, (எ-று). இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது. 12. பொறையுடைமை பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய்தாரை தாமுந் துன்பஞ் செய்யாது அவர்மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல். 151. பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினு நன்று. (இ-ள்.) பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப் பொறையினும் நன்று, (எ-று). 152. திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. (இ-ள்.) தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தா ராயினும், அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று, (எ-று). 153. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். (இ-ள்.) தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனா யின் பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும், (எ-று). நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். 154. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை. (இ-ள்.) தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத், தம்மை யிகழுமவர்களைப் பொறுத்தல் தலைமையாம், (எ-று). இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமை யாகக் கொள்வார் உலகத்தாரென்றது. 155. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல். (இ-ள்.) தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக, (எ-று). இது பொறுத்தானென்பது தோல்வியாகாது; அதுதானே வெற்றியா மென்றது. 156. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. (இ-ள்.) வலியின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை; வலியுடைமையுள் வைத்து வலிவுடைமை யாவது அறியாதாரைப் பொறுத்தல், (எ-று). புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை - பொறுமை. 157. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (இ-ள்.) தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்; பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார், (எ-று). 158. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் போன்றுந் துணையும் புகழ். (இ-ள்.) ஒறுத்தவர்க்கு அற்றைநாள் யின்பமே உண்டாம்; பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம், (எ-று) இது புகழுண்டா மென்றது. 159. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னாச்சொ னோற்பாரிற் பின். (இ-ள்.) உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், (எ-று). இது தவம் பண்ணுவாரினும் பெரியரென்றது. 160. துறந்தாரிற் றூய்மை யுடையா ரிறந்தார்வா யின்னாச்சோ னோக்கிற் பவர். (இ-ள்.) மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக் குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மையுடையார், (எ-று). இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது. 13. அழுக்காறாமை அழுக்காறாமையாவது பிறராக்க முதலாயின கண்டு பொறா மையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. 161. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. (இ-ள்.) ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாதவியல் பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க, (எ-று). இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது. 162. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின். (இ-ள்.) விழுமிய பேறுகளுள், யார்மாட்டும் அழுக்காறு செய் யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில் லை, (எ-று) இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்க தென்றது. 163. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து. (இ-ள்.) அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்; நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து, (எ-று). 164. அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும். (இ-ள்.) அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும், (எ-று). 165. அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். * இது பரிமேலழகருரை (இ-ள்.) அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அச் செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை, (எ-று). 166. அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான். (இ-ள்.) தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான்; பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான், (எ-று). இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையா மென்று கூறிற்று. 167. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும். (இ-ள்.) பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும், (எ-று). இது நல்குரவு தருமென்றது. 168. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ டவ்வையைக் காட்டி விடும். (இ-ள்.) அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி, இவன்பாற் செல்லென்று போம், (எ-று). இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று. 169. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். (இ-ள்.) அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்து தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும், (எ-று). ஒரு பாவி - நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது. 170. அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. (இ-ள்.) அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்; பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, (எ-று). இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று. 14. வெஃகாமை வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை. 171. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். (இ-ள்.) பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டா தொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன் றாத லில்லையாதலான். 172. அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். (இ-ள்.) நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார்மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின். இஃது அறிவுடையார் செய்யாரென்றது. 173. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். (இ-ள்.) வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்; ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார், (எ-று). இது தெளிவுடையார் செய்யா ரென்றது. 174. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். (இ-ள்.) சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாத வற்றைச் செய்யார்; பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர், (எ-று). இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது. 175. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். (இ-ள்.) தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடு படுவன செய்யார்; நடுவன்மைக்கு நாணுபவர், (எ-று). இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது. 176. அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். (இ-ள்.) அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும், பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், (எ-று). இஃது அருளுடையானுங் கெடுவனென்றது. 177. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும். (இ-ள்.) நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானா யின், அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம், (எ-று). இது சந்தான நாச முண்டாமென்றது. 178. இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு. (இ-ள்.) விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின், அது கேட்டைத் தரும்; அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத் தைத் தரும், (எ-று). இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது. 179. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (இ-ள்.) செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, (எ-று). இது செல்வ மழியாதென்றது. 180. அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு. (இ-ள்.) அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவு டையாரைத் திருமகன் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், (எ-று). அறனறிதல் - விரும்பாமை யென்றறிதல். இது செல்வ முண்டா மென்றது. 15. புறங் கூறாமை புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியான வற்றைப் புறத்துரையாமை. 181. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். (இ-ள்.) ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வெண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, (எ-று). இது புறங் கூறுதல் தவிர்க வென்றது; இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது. 182. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறங்கூறு மாக்கந் தரும். (இ-ள்.) காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின், புறங்கூறாதிருந்து நல்குரவி னாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும், (எ-று). 183. அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. (இ-ள்.) ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யா னாய்ப் பாவஞ் செய்யினும், பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், (எ-று). இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது. 184. அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். (இ-ள்.) ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல் லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும், (எ-று). இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது. 185. அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே புறனழீஇப் பொய்த்து நகை. (இ-ள்.) அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய் வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத் துப் பொய் செய்து நகுதல், (எ-று). இது பாவத்தினும் மிகப் பாவமென்றது. 186. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாட றேற்றா தவர். (இ-ள்.) நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்; மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வு பண்ண மாட்டாதார், (எ-று). இது நட்டவரை யிழப்பர் என்றது. 187. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா ரென்னைகொ லேதிலார் மாட்டு. (இ-ள்.) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக் கின்ற சேதியை யுடையார், செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனஞ் செய்வரோ? (எ-று). இது யாவரோடும் பற்றிலரென்றது. 188. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. (இ-ள்.) பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற் பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்; அல்லது போக்கும், (எ-று). இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது. 189. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறன்றெரிந்து கூறப் படும். (இ-ள்.) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன், (எ-று). 190. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு. (இ-ள்.) அயலார் குற்றம்போலத் தமது குற்றத்தையுங் காண வல்லாராயின், நிலைபெற்ற வுயிர்க்கு வருந் தீமை யுண்டோ? (எ-று). இது காண்பாராயின் சொல்லாரென்று புறஞ் சொல்லாமைக் குக் காரணங் கூறிற்று. 16. பயனில சொல்லாமை பயனில சொல்லாமையாவது கேட்டார்க்குந் தனக்கும் நற் பயன்படாத சொற்களைக் கூறாமை. 191. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (இ-ள்.) சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல் லுக; சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக, (எ-று). இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது. 192. பயனில பல்லார்முற் சொல்ல னயனில நட்டார்கட் செய்தலிற் றீது. (இ-ள்.) பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்ப மில்லாதவற்றை நட்டார்மாட்டுச் செய்தலினுந் தீதே, (எ-று). இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது. 193. நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை. (இ-ள்.) நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும்; பயனில் லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், (எ-று). இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறராலியம் பப்படாரென்றது. 194. நயன்சாரா நன்மையி னீங்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து. (இ-ள்.) ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின், அவன் நடு சாராது நன்மையி னீங்கும், (எ-று). இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது. 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். (இ-ள்.) பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம், (எ-று). இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது. 196. பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும். (இ-ள்.) பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லா ரானும் இகழப்படுவன், (எ-று). 197. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனன் மக்கட் பதடி யெனல். (இ-ள்.) பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னா தொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, (எ-று). இது மக்கட் பண்பிலனென்றது. 198. அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல். (இ-ள்.) அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, (எ-று). இது மேற் கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனை யறிவு டையார் கூறாரென்றது. 199. பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (இ-ள்.) பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், (எ-று). இது தெளிவுடையார் கூறாரென்றது. 200. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. (இ-ள்.) சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று, (எ-று). இது சான்றோர்க்கு ஆகாதென்றது. 17. தீவினையச்சம் தீவினையச்சமாவது தீவினைகளைப் பிறர்க்குச் செய்யாமை. 201. தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால். (இ-ள்.) தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக, (எ-று). இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது. 202. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். (இ-ள்.) எல்லாப் பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும், (எ-று). அஃதாமாறு பின் கூறப்படும். 203. தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியுறைந் தற்று. (இ-ள்.) தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும், (எ-று). மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார். 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. (இ-ள்.) பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக; சூழ்வனாயின், அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும், (எ-று). இது தீமை நினையினுங் கேடு தருமென்றது. 205. இலமென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகு மற்றும் பெயர்த்து. (இ-ள்.) நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதித் தீவினையைச் செய்யாதொழிக; செய்வனாயின், பின்பும் நல்குரவி னனாவன்; அது செல்லும் பயவாது, (எ-று). இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகு மென்றது. 206. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை மடல்வேண்டா தான். (இ-ள்.) தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யா தொழிக, (எ-று). இது நோயுண்டாமென்றது. 207. தீயவை தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும். (இ-ள்.) தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே அத் தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப் படும், (எ-று). 208. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. (இ-ள்.) என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்; சீரியரஞ்சுவர்; தீவினையாகிய களிப்பை, (எ-று). இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது. 209. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின். (இ-ள்.) ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யா னாயின், தனக்குக் கேடுவருவ தில்லை யென்று தானே யறிக, (எ-று). இது கேடில்லை யென்றது. 210. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல். (இ-ள்.) எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லா வற்றுள் ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வோர்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை, (எ-று). இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது. 18. ஒப்புரவறிதல். ஒப்புரவறிதலாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்குமாற்றல் இலரெனினும் தம்மளவிற்கும் தம் வருவா யளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கனவறிந்து கொடுத்தல். 211. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (இ-ள்.) ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதியுடை யார்க்கு உபசரித்தற்காகவாம், (எ-று). இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது. 212. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (இ-ள்.) ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச்செய்ய வேண்டா; எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம் மாறு செய்தலுண்டோ? கடப்பாடு-ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண் டாத கொடையென்று கூறிற்று. 213. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (இ-ள்.) செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்; ஒப்புரவை யறியும் அறிவுடையார், (எ-று). இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது. 214. நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயனீர்மை செய்யா தமைகலா வாறு. (இ-ள்.) நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண் டுவன செய்யாதே யமைய மாட்டாத வியல்பாம், (எ-று). இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது. 215. ஒப்புரவி னான்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (இ-ள்.) ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வரு மென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது; அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளு கின்ற வாணிக மாகக் கொள்ளுந் தகுதியுடைத்து, (எ-று). கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்; பிற்பயப்பன நன்மையாதலான். 216. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு. (இ-ள்.) ஊர் உண்கின்ற கேணி நீர் நிறையப் புகுந்தா லொக்கும்; உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம், (எ-று). இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச் சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது. 217. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடை யான்கட் படின். (இ-ள்.) பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்; பிறரால் விரும்பப் படுவான் மாட்டுச் செல்வ முண்டாயின், (எ-று). இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது. 218. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். (இ-ள்.) பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும்; செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின், (எ-று). தப்புதலென்றது ஒளித்தலை. 219. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். (இ-ள்.) ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப் படுவன்; அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன், (எ-று). இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது. 220. புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே யொப்புரவி னல்ல பிற. (இ-ள்.) ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம், (எ-று). 19. ஈகை ஈகையாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல். 221. நல்லா றெனினுங் கொளறீது மேலுலக மில்லெனினு மீதலே நன்று. (இ-ள்.) ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறி யெனினும் கோடல் தீது; ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவமுண் டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும், இது வரையாது கொடுத்தலாதலால், யாதொருவாற்றானுங் கொடை நன் றென்பது கூறிற்று. 222. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (இ-ள்.) ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து, (எ-று). இது கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக்கவேண்டு மென்றது. 223. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. (இ-ள்.) இரந்துவந்தார்க்கு இல னென்னாநின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம், (எ-று). இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது. 224. இன்னா திரக்கப் படுத லிரந்தவ னின்முகங் காணு மளவு. (இ-ள்.) பிறன்ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது; எவ்வ ளவுமெனின், இரந்துவந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும், (எ-று). இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டுமென்றது. 225. சாதலி னின்னாத தில்லை யினிததூஉ மீத லியையாக் கடை. (இ-ள்.) சாதலின் மிக்க துன்பமில்லை, அதுவும் இனிதாம்; இரந்து வந்தார்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து, (எ-று). இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது. 226. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (இ-ள்.) கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முக மலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர், (எ-று). இஃது இடார் இழப்பரென்றது. 227. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். (இ-ள்.) இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்; தேடின வுணவைத் தாமே தமியராயிருந் துண்டல், (எ-று). தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது. 228. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. (இ-ள்.) பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுதலில்லை, (எ-று). இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தாற் பொருள் குறையும்; அதனாலே பசியுண்டாமென்றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா; பகுத்துண்ணப் பசி வாராதென்று கூறிற்று. 229. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (இ-ள்.) பொருளற்றாரது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக; அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம், (எ-று). இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது. 230. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். (இ-ள்.) பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்; அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு, (எ-று). இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது. 20. புகழ் புகழாவது புகழ்பட வாழ்தல். 231. தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று. (இ-ள்.) பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று, (எ-று). இது புகழ்பட வாழவேண்டு மென்றது. 232. ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. (இ-ள்.) புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்; அக்கொடை யானல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை, (எ-று). இது புகழுண்டாமாறு கூறிற்று. 233. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ். (இ-ள்.) சொல்லுவார் சொல்லுவனவெல்லாம், இரந்து வந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லா நின்ற புகழாம், (எ-று). 234. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். (இ-ள்.) உயர்ந்தபுகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை, (எ-று). இது புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது. 235. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. (இ-ள்.) ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின், தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும், (எ-று). புலவரென்றார் தேவரை; அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது. 236. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன். (இ-ள்.) புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? (எ-று). இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது. 237. வசையென்ப வைத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின். (இ-ள்.) உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர், (எ-று). மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு, வேறு குற்றம் வேண்டா; புகழின்மைதானே யமையு மென்றார். 238. வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர். (இ-ள்.) வசையொழிய வாழுபவர்களே உயிர் வாழ் வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார், (எ-று). இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது. 239. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம். (இ-ள்.) புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும், (எ-று). இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது. 240. நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகற் கல்லா லரிது. (இ-ள்.) ஆக்கம் போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது, (எ-று). இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது. இல்லறவியல் முற்றிற்று. துறவறவியல். (13) மேல் துறவறம் பதின்மூன்றதிகாரங்களால் கூறுவார். 1. அருளுடைமை அருளுடைமையாவது யாதானுமோருயிர் இடர்ப் படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரமுடைமை. 241. நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற் றேறினு மஃதே துணை. (இ-ள்.) நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக; பலவழி யினும் ஓடியாராயினும், தமக்கு அவ்வருளே துணையாம், (எ-று). ‘நல்லாற்றானாடியருளாள்க’ என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது. 242. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. (இ-ள்.) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடை மையாகிய செல்வமாம்; பொருட் செல்வமானது கீழாயினோர் மாட்டும் உளவாதலால், (எ-று). இஃது அருள்நிலை கூறிற்று. 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த வின்னா வுலகம் புகல். (இ-ள்.) அருளைப் பொருந்தின நெஞ்சினையுடையவர்க்கு இருளைப் பொருந்தின நரக லோகம் புகுதலில்லை, (எ-று). இது நரகம் புகாரென்றது. 244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. (இ-ள்.) நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்சவரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார், (எ-று). இது தீமை வாராதென்றது. 245. அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி. (இ-ள்.) அருளுடையார்க்கு அல்லலில்லை; அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம், (எ-று). இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படுமென்றது. 246. அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. (இ-ள்.) அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சி யில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங் காட்சி யில்லையானாற்போல, (எ-று). இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது. 247. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி னருளாதான் செய்யு மறம். (இ-ள்.) தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும்; ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும், (எ-று). இஃது அறஞ்செய்யவும் மாட்டாரென்றது. 248. பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி யல்லவை செய்தொழுகு வார். (இ-ள்.) முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாத வற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியு முடையவரென்று சொல்லுவர், (எ-று). இது பொருளில்லையாமென்றது. 249. பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா ரற்றார்மற் றாத லரிது. (இ-ள்.) பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடை யராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்க முண்டா காது, (எ-று). இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டா மென்றது. 250. வலியார்முற் றம்மை நினைக்கத்தாந் தம்மின் மெலியார்மேற் செல்லு மிடத்து. (இ-ள்.) தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்து, தம்மின் வலியார்முன் தாம் நிற்குநிலையை நினைக்க, (எ-று). 2. புலான் மறுத்தல் புலான் மறுத்தலாவது புலால்தின்றால் அருளில்லையா மென்பதனாற் புலாலை விடுகை. 251. உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின் புண்ண துணர்வார்ப் பெறின். (இ-ள்.) புலாலை யுண்ணாமை வேண்டும்; அது பிறிதொன்றின் புண்; ஆதலால், அதனை அவ்வாறு காண்பாருண்டாயின், (எ-று). இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதா மென்பதூஉங் கூறிற்று. 252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (இ-ள்.) பொருளிதனை யாளுதல் அதனைக் காக்கமாட்டா தார்க்கு இல்லை; அதுபோல, அருளினை யாளுதல் ஊன் தின்ப வர்க்கு இல்லை, (எ-று). இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது. 253. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள். (இ-ள்.) தன்னுடம்பை வளர்த்தற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன், அருளுடையவனாவது மற்றியா தானோ? (எ-று). ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு, இது கூறப்பட்டது. 254. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி னுடல்சுவை யுண்டார் மனம். (இ-ள்.) ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல், நன்மையை நினையாது; ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம், (எ-று). 255. தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (இ-ள்.) தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக் காக ஊன் விற்பார் யாரும் இல்லை, (எ-று). இது கொன்று தின்னாது விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னையென்றார்க்கு, அதனாலுங் கொலைப்பாவம் வரு மென்று கூறிற்று. 256. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல். (இ-ள்.) அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத் தல்; பொருளல்லது யாதெனின், அவ்வூனைத் தின்றல், (எ-று). இஃது அதனை யுண்டதனால் அருள் கெடுதலேயன்றி, பெறுவ தொரு பயனுமில்லை என்றது. 257. செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (இ-ள்.) குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை, (எ-று). இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது. 258. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (இ-ள்.) நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று, (எ-று). 259. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும். (இ-ள்.) கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்த வனை, கை குவித்து எல்லாவுயிருந் தொழும், (எ-று). மேல் எல்லாப் புண்ணியத்திலும் இது நன்றென்றார் அது யாதினைத் தருமென்றார்க்கு, கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவ னென்று கூறினார். 260. உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு. (இ-ள்.) உயிர் நிலையைப் பெறுதல் ஊனையுண்ணாமை யினால் உள்ளது; ஊனையுண்ண, உண்டாரை எல்லா வுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது, (எ-று). அங்காவாமை - புறப்பட விடாமை. 3. தவம். தவமாவது ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும், தேவர்வழிபாடு முதலாயினவும் மேற்கொண்டு முயறல். 261. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையிற் பட்டு. (இ-ள்.) தங்கருமஞ் செய்வார் தவஞ் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே யகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார், (எ-று). இது தவம்பண்ண வேண்டுமென்றது. 262. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம். (இ-ள்.) துறந்தவர்களுக்கு உணவுகொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை, (எ-று). இது தானத்தினும் தவம் மிகுதியுடைத்தென்றது. 263. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை யஃதிலார் மேற்கொள் வது. (இ-ள்.) தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந் நல் வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை, (எ-று). இது தவமிலார்க்குத் தவம் வாராது; வரினுந் தப்புமென்றது. 264. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. (இ-ள்.) தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய்செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம், (எ-று). 265. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாம் தொழும். (இ-ள்.) தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப் பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும், (எ-று). உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல். 266. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (இ-ள்.) நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப் போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும், (எ-று). இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது. 267. கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட்ட வர்க்கு. (இ-ள்.) கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு, (எ-று). இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது. 268. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு மெண்ணிற் றவத்தான் வரும். (இ-ள்.) இவ்விடத்துப் பகைவரைத் தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின், முன்செய்த தவத்தினாலே வரும், (எ-று). இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது. 269. இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (இ-ள்.) பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம், தவஞ் செய்வார் சிலராதல்; அது செய்யாதார் பலராதல், (எ-று). 270. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும். (இ-ள்.) விரும்பியன விரும்பினபடியே வருதலால், தவஞ் செய்தலை யிவ்விடத்தே முயல வேண்டும், (எ-று). இது போகநுகர்ச்சியும் இதனானே வருமென்றது. 4. கூடாவொழுக்கம் கூடாவொழுக்கமாவது மேற்கூறிய தவத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம். 271. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். (இ-ள்.) மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து, மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந் தொழுகு மாந்தர் பலர், (எ-று). இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது. 272. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. (இ-ள்.) புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தரா யிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம். இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படா ரென்றது. 273. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (இ-ள்.) வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகியதவ வுருவங்கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து, (எ-று). 274. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (இ-ள்.) தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல், வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும், (எ-று). அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான். 275. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றம் படின். (இ-ள்.) வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியா தினைச் செய்யவற்று: தன் னெஞ் சறியக் குற்ற முண்டாயின், (எ-று). தான் - அசை இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரழிந்து இகழாராயினும், அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது. 276. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும். (இ-ள்.) கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங் களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும், (எ-று). பூதங்களென்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை. 277. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். (இ-ள்.) நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப்போலக் கொடியா ரில்லை யுலகத்து, (எ-று). 278. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும். (இ-ள்.) பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற்றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும், (எ-று). எற்றென்பது திசைச்சொல்; இது தீமை பயக்கு மென்றது. 279. மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். (இ-ள்.) தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவா ராயின், (எ-று). இது வேடத்தாற் பயனில்லை; நல்லொழுக்கமே வேண்டு மென்றது. 280. கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். (இ-ள்.) செவ்விய கணை கொடுமையைச்செய்யும், கோடிய யாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல, யாவரையும் வடிவு கண்ட றியாது, அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க, (எ-று). 5. கள்ளாமை கள்ளாமையாவது யாதொரு பொருளையும் களவிற் கொள்ளா ராதல். 281. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கத்தன் னெஞ்சு. (இ-ள்.) பிறரா லிகழப்படாமையை வேண்டுவானிவனென்று சொல்லப்படுமவன், யாதொரு பொருளையும் களவிற் கொள் ளாமல் தன்னெஞ்சைக் காக்க, (எ-று). இது களவு ஆகாதென்றது. 282. உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல். (இ-ள்.) பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால், அதனை மறைவினாலே கள்வேமென்று முயலா தொழிக, (எ-று). இது களவு தீதென்றது. 283. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. (இ-ள்.) பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்; கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது, (எ-று). இது கள்வார் முத்தி பெறுதலுமிலர்; கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமில ரென்றது. 284. களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும். (இ-ள்.) களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும், (எ-று). இது பொருள் நிலையாதென்றது. 285. களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும். (இ-ள்.) களவின்கண்ணே மிக்க ஆசை பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும், (எ-று). இது நரகம் புகுத்தும் என்றது. 286. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். (இ-ள்.) நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர், (எ-று). இது கள்வாரை அரசர் கொல்வரென்றது. 287. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். (இ-ள்.) அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளைக் குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார்மாட்டு இல்லை, (எ-று). இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது. 288. அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர். (இ-ள்.) களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின் கணின்று ஒழுகுதலைச் செய்ய மாட்டார், (எ-று). இது நேர் செய்ய மாட்டாரென்றது. 289. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில். (இ-ள்.) களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை, (எ-று). இது நேரறிந்தவர் களவு காணாரென்றது. 290. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (இ-ள்.) நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல, நிற்கும்; களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும், (எ-று). இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது. 6. வாய்மை. வாய்மையாவது பொய் சொல்லாமை. 291. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் றன்னெஞ்சே தன்னைச் சுடும். (இ-ள்.) தன்னெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்ப்பனாயின், தன்னெஞ்சு தானே தன்னை யொறுக்கும், (எ-று). சுடுதலானது அதனாற் பிறர்க்கு உளதாகுந் தீமையைக் கண்டு ஏன் செய்தோம் யாமென்று வருந்துவித்தல். இது பொய்யாமை வேண்டு மென்றது. 292. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற. (இ-ள்.) யாம் மெய்யாகக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல் போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை, (எ-று). இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று. 293. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல். (இ-ள்.) பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், (எ-று). வாய்மை யாது என்றார்க்கு, இது கூறப்பட்டது. 294. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். (இ-ள்.) பொய்யும் மெய்யோ டொக்கும்; குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், (எ-று). 295. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன். (இ-ள்.) தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகு வனாயின், உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவன், (எ-று). இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்று வரென் றது. 296. மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை. (இ-ள்.) மனத்தோடே கூட மெய் சொல்லுவனாயின், தவத் தோடே கூடத் தானஞ் செய்வாரில் தலையாவான், (எ-று). இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது. 297. பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை யெல்லா வறமுந் தரும். (இ-ள்.) பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையும் கொடுக்குமாதலான், (எ-று). 298. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (இ-ள்.) பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்து வனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம், (எ-று). 299. புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். (இ-ள்.) உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்; மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும், (எ-று). 300. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (இ-ள்.) சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல; பொய்யாமையா லுண்டான ஒளியே ஒளியாகும், (எ-று). இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையா தென்று கூறிற்று. 7. வெகுளாமை. வெகுளாமையாவது வெகுளுதற்குக் காரணமுள்ள விடத்தும் வெகுளாராதல். 301. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்த லதனான் வரும். (இ-ள்.) வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ் வெகுளியானே வருமாதலான், (எ-று). இது வெகுளாமை வேண்டுமென்றது. 302. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கிலென் காவாக்கா லென். (இ-ள்.) தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை; தவிராததனாலும் பயனில்லை, (எ-று). இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமையென்றது. 303. இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (இ-ள்.) தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற் போல, ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் கூடுமாயின், வெகுளாதொழிதல் நன்று, (எ-று). மேல் வலியவன் பொறுக்கவேண்டுமென்றார் அவன் பொறுக் குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார். 304. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து மில்லதனிற் றீய பிற. (இ-ள்.) இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்தினும் அதிற் றீதா யிருப்பன பிறவில்லை, (எ-று). 305. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம். (இ-ள்.) ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந் தோற்றாமற் காக்க; காவானாயின், சினம் தன்னையே கொல்லும், (எ-று). இஃது உயிர்க்கேடு வருமென்றது. 306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு மேமப் புணையைச் சுடும். (இ-ள்.) சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக் கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும், (எ-று). சேர்ந்தாரைக் கொல்லி - நெருப்பு; இது காரணக்குறி. இது சினம் தன்னையடுத்தாரைக் கொல்லு மென்றது. 307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறை கைபிழையா தற்று. (இ-ள்.) சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத் தெறிந்த வன்கை தப்பாமற் பட்டதுபோலும், (எ-று). இது பொருட்கேடு வருமென்றது. 308. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற. (இ-ள்.) நகுதலையும் மகிழ்தலையும் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? (எ-று). இஃது இன்பக்கேடு வருமென்றது. 309. உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா னுள்ளான் வெகுளி யெனின். (இ-ள்.) தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில், தானி னைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன், (எ-று). 310. இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (இ-ள்.) சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர்; அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், (எ-று). இது வெகுளாதார் பெரியரென்றது. 8. இன்னா செய்யாமை. இன்னாசெய்யாமையாவது தமக்கு இன்னாதவற்றைப் பிறர்க்கு செய்யாமை. இது வெகுளி மறந்து நிகழ்வதொன்றா தலின், அதன் பின் கூறப்பட்டது. 311. இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல். (இ-ள்.) தான் இன்னாதனஇவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும், (எ-று). இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது. 312. கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். (இ-ள்.) தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு இன்னாத வற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும், தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு, (எ-று). 313. செய்யாமை செற்றார்க்கு மின்னாத செய்தபி னுய்யா விழுமந் தரும். (இ-ள்.) தானொரு குற்றஞ் செய்யாதிருக்க, தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின், அஃது உய்வில்லாத நோயைத் தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது. 314. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். (இ-ள்.) மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும், பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு, (எ-று). இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டு மென்றது. 315. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு மாணாசெய் யாமை தலை. (இ-ள்.) யாதொன்றாயினும் எல்லாநாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று, (எ-று). 316. அறிவினா னாகுவ துண்டோ பிறிதின்நோய் தன்னோய்போற் போற்றாக் கடை. (இ-ள்.) பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய் போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது, (எ-று). இஃது அறிவுடையார் செய்யார் என்றது. 317. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல். (இ-ள்.) தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ? (எ-று). 318. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். (இ-ள்.) பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்; மற்றொருவன் செய்யாமல், (எ-று). இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு, இது கூறப்பட்டது. 319. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (இ-ள்.) இக் காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்; ஆதலால், இக் காலத்துப் பிறர்க்குத் துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர், (எ-று). 320. இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல். (இ-ள்.) இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னை யெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக, (எ-று). இஃது ஒறுக்கும் நெறி கூறியது. 9. கொல்லாமை கொல்லாமையாவது யாதோருயிரையுங் கொல்லாமை. இது வெகுளி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப் பட்டது. 321. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை. (இ-ள்.) தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக; தான் பிறிதொன் றினுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை, (எ-று). உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல் லுதல் குற்றமன்று என்பார்க்கு, இது கூறப்பட்டது. 322. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி. (இ-ள்.) நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதோருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி, (எ-று). இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது. 323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. (இ-ள்.) இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன் பின்பே யணைய, பொய்யாமையும் நன்று, (எ-று). இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று; அதினும் நன்று கொல்லாமை யென்றது. 324. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும். (இ-ள்.) நல்வினை யாதெனின், கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப்பயனையுந் தருமாதலால், (எ-று). இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. 325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை. (இ-ள்.) மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவ ரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமை யுடையவன்; இல் வாழ்க்கையில் நிற்பினும், (எ-று). இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது. 326. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாது காத்தல் நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம், (எ-று). இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது. 327. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று. (இ-ள்.) கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது, (எ-று). பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச்செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று. 328. உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர். (இ-ள்.) முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை, (எ-று). இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று. 329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. (இ-ள்.) கொலைத்தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல் லாமையை யாராய்வாரிடத்து, தொழிற்புலையராகுவர், (எ-று). இவரை உலகத்தார் கன்மசண்டாளரென்று சொல்லுவார். 330. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை. (இ-ள்.) நன்மையாகும் ஆக்கம் பெரிதேயாயினும், ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது, (எ-று). இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால், வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது. 10. நிலையாமை. நிலையாமையாவது மயக்கத்தினால் தானென்று நினைத் திருக்கின்ற யாக்கையும் தனதென்று நினைத் திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறல். 331. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை. (இ-ள்.) நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக் கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது, (எ-று). எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத் தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று. 332. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா லற்குப வாங்கே செயல். (இ-ள்.) நில்லா வியல்பை யுடைத்துச் செல்வம், அதனைப் பெற்றால், அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க, (எ-று). நிலையாமை மூன்று வகைப்படும்; செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என. 333. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று. (இ-ள்.) கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும், (எ-று). 334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். (இ-ள்.) நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரை யீர்வதொரு வாளாம்; அதனை யறிவாரைப் பெறின், (எ-று). இஃது உயிரீரும் என்றமையால், இளமை நிலையாமை கூறிற்று. 335. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை மேற்சென்று செய்யப் படும். (இ-ள்.) நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும், (எ-று). இஃது உயிரானது கழிவதன் முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது. 336. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு. (இ-ள்.) ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து (எ-று). இது யாக்கை நிலையாமை கூறிற்று. 337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல. (இ-ள்.) ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும், தமது வாழ்நாளைக் கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார், (எ-று). மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென் றார் ஈண்டு ஒரு பொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார். 338. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்போ டுயிருடை நட்பு. (இ-ள்.) கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும்; உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு, (எ-று). மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைத்த பொழுது போமென்றார். 339. உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (இ-ள்.) உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு; உறங்கி விழிப்பத னோடு ஒக்கும் பிறப்பு, (எ-று). இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று. 340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு. (இ-ள்.) தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்த தாயின், இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம். இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று. 11. துறவு துறவாவது ஒருவன் தவம்பண்ணா நின்றகாலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும், அதனைப்பற்றறத் துறத்தல், இது மயக்கமற்றார்க்கு வருவதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. 341. அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு. (இ-ள்.) துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்; அதற்காகத் தாம் விரும்பின வெல்லாவற்றையும் ஒருகாலத்திலே விடுதல் வேண்டும், (எ-று). 342. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து. (இ-ள்.) யாதொருபொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்; பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும், (எ-று). 343. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை. (இ-ள்.) பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ, (எ-று). 344. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. (இ-ள்.) பொருள்களைப்பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும், (எ-று). இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது. 345. யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன். (இ-ள்.) எவன் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன், (எ-று). 346. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று நிலையாமை காணப் படும். (இ-ள்.) ஒருவன் யாதொரு பொருளோடும், பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்; அதனை விடாதபோது நிலையாமை காணப்படும், (எ-று). இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது. 347. வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி னீண்டியற் பால பல. (இ-ள்.) தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னு டைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யிய லும்பகுதியன பல. (எ-று). இஃது இம்மைப் பயன் கூறிற்று. 348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (இ-ள்.) பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்; அல்லா தார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார், (எ-று). இது மறுமைப் பயன் கூறிற்று. 349. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். (இ-ள்.) யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை யறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின்கண்ணே செல்லும், (எ-று). 350. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (இ-ள்.) பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால், பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக, (எ-று). பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. 12. மெய்யுணர்தல். மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்தினும் அழியாது நிற்கும் பொருள் இதுவென வுணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், அதன்பின் கூறப்பட்டது. 351. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (இ-ள்.) மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படு வனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபய னுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு, (எ-று). 352. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு. (இ-ள்.) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு, (எ-று). இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பனாயின், பிறப்புண் டாமென்றது. 353. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (இ-ள்.) யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம், (எ-று). மெய்யென்பதூஉம் அறிவென்பதூஉம் ஒன்று; என்னை? எக் காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின், மெய்யாயிற்று; எல்லாப் பொருளையுங் காண்டலால், அறிவாயிற்று. 354. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. (இ-ள்.) பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப், பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம், (எ-று). பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு எனப்பட்டது. தான் பிறந்தா னாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத், தனக்குச் சாவில்லையாகவும், பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று. 355. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு. (இ-ள்.) உள்ளமானது உள்ளபொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக, (எ-று). மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென் றவாறு. 356. ஐயத்தி னீங்கித் துணிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து. (இ-ள்.) மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்த வர்க்கு, இவ்வுலகத்தினும் மேலுலகம் நாணித்தாம் தன்மை யுடைத்து (எ-று). துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின், அவ்வறிவு டையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின், நணித்தாமென்றவாறு, இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது. 357. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (இ-ள்.) மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம், (எ-று). இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது. 358. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (இ-ள்.) இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்து தெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை, (எ-று). கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு. 359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். (இ-ள்.) தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவனாயின், அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா; சாரக்கடவனவாய துன்பங்கள், (எ-று). சார்பு-வினைச்சார்பு; கெட ஒழுகல்-காம வெகுளி மயக்கமின்றி மெய்யுணர்ச்சியானொழுகுதல், இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப்போமென்றது. 360. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி னாமங் கெடக்கெடு நோய். (இ-ள்.) ஆசையும் வெகுளியும் மயக்க முமென்னும் இவை மூன்றினது நாமம்போக, வினைபோம், (எ-று). வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான், இது மெய்யுணர்தலாயிற்று. 13. அவாவறுத்தல் அவாவறுத்தலாவது பொய்ப்பொருள்கள்மேற் செல்லும் ஆசையைத்தவிர்த்தல். முத்திக்குக்காரணமாக மெய்யுணர்தலே யமையுமாயினும், பின்னும் உடம்போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள்மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம்; ஆதலான், இதனைத் தவிரவேண்டுமென்று எல்லாவற்றினும் பின் இது கூறப்பட்டது. 361. அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா. (இ-ள்.) ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை; ஆதலால், அதனை அஞ்சுவதே அறம், (எ-று). வஞ்சனை செய்தல் - நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல், இஃது ஆசையின்மை வேண்டு மென்றது. 362. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற் றவாஅது மேன்மேல் வரும். (இ-ள்.) ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும், (எ-று). 363. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. (இ-ள்.) எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர், (எ-று). இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென் றது. 364. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ரற்றாக வற்ற திலர். (இ-ள்.) பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினை யறுத்தாராயினும், ஆசையற்றாரைப் போலப் பற்றறு தலிலர், (எ-று). 365. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (இ-ள்.) ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும், (எ-று). இது பொருள்மே லாசையில்லாதார் பொய் கூறாராதலின், மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. 366. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். (இ-ள்.) ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினை தான் வேண்டின நெறியாலே வரும், (எ-று). 367. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில். (இ-ள்.) அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை; அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை, (எ-று). இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது. 368. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (இ-ள்.) அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின், இன்பமானது இடையறாமல் வந்து மிகும், (எ-று). இஃது இன்பமும் இதனாலே வருமென்றது. 369. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். (இ-ள்.) வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்; அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும், (எ-று). இது பிறவாமையும் இதனாலே வருமென்றது. 370. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். (இ-ள்.) நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவனாயின், அது விட்ட அப்பொழுதே அழியாத இயல்பினைத் தரும், (எ-று). இயல்பாவது என்று மொருபடிப்பட்டது, இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது. சந்நியாசமாகிய துறவறவியல் முற்றிற்று. 1. ஊழ். ஊழாவது முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை, மேற்கூறிய அறப்பகுதியும் இனிக் கூறுகின்ற பொருட் பகுதியும் இன்பப் பகுதியும் முன்செய்த நல் வினையால் வருதலையும், இவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே அவை உலகத்தில் மக்கள்பலர் தமது முயற்சியால் வந்தனவென்பரன்றே? அதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்ததால் அறத்தி னாகுமாதலான், இஃது அறத்தினிறுதிக்கண் கூறப்பட்டது. 371. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி. (இ-ள்.) ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடிதோன்றும், (எ-று). இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழலால் வருமென்றது. 372. பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று மாகலூ ழுற்றக் கடை. (இ-ள்.) கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும், (எ-று). இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது. 373. நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும். (இ-ள்.) நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும், (எ-று). மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு, ஈண்டு கல்வியுண்டாயினும் ஊழானாயவறிவு வலியுடைத்தென்றார். 374. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (இ-ள்.) ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும், தான் முற்பட அவ்வாராய்ச் சிக்கு உடன்பட்டு நிற்கும், (எ-று). 375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (இ-ள்.) செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தன வெல்லாம் நன்றாம்; அச்செல்வத்தை யில்லையாக் குவதற்கு முன்பு நன்றா யிருந்தன வெல்லாம் தீதாம், (எ-று). 376. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம. (இ-ள்.) தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக்காப்பினும் அவை தமக்கு ஆகா; தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவைபோகா, (எ-று). இது முன்புள்ள செல்வம் காவற்படுத்தலும் களவுபோதலும் ஊழினாலேயாமென்றது. 377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (இ-ள்.) விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லாது, கோடிபொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து, (எ-று). இது பொருள்பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது. 378. இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. (இ-ள்.) செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்; ஆதலால், இரண்டு வகையாதல் உலகத்தி யல்பு, (எ-று). 379. துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால வூட்டா கழியு மெனின். (இ-ள்.) நுகரும்பொரு ளில்லாதார் துறக்கவமைவர்; தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின், (எ-று). இது துறவறமானது ஊழினால் வருமென்றது. 380. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன். (இ-ள்.) நன்மைவருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமைவருங் காலத்து அல்லற்படுவது யாதினுக்கு? (எ-று). இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ள வேண்டுமென்றது. அறத்துப்பால் முற்றிற்று. பொருட்பால். (70) 1. அரசியல். (25) இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கணழியாமை யீறாகக் கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியலென்றும் அமைச்சுமுதலாக அவையஞ் சாமை யீறாகக்கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மையும் அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சிய லென்றும், நாடுமுதலாகப் படைச்செருக்கீறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதி யாதலின் பொருளிய லென்றும், நட்பு முதலாகக் கூடாநட்பீறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின் நட்பியலென்றும், பேதைமை முதலாக மருந்தீறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டுங் கேட்டுக்குக்காரணமாதலின் துன்பவிய லென்றும், குடிமுதலாகக் கயமையீறாகக் கூறிய அதிகாரம் பதிமூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியலென்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபது பகுதியாயிற்று. 1. இறைமாட்சி இதனுள், இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல், இவ் வதிகாரத்துள் உரைக்கின்றபொருள் அரசரை நோக்கிற்றா தலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகாரங் கூறப்பட்டது. 381. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு. (இ-ள்.) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணு மென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வான், (எ-று). ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாகுவன கூறிற்று. 382. அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (இ-ள்.) அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்க முடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக் கியல்பு, (எ-று). 383. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று நீங்கா நிலனாள் பவற்கு. (இ-ள்.) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல்வேண்டும், (எ-று). 384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு. (இ-ள்.) அறத்திற் றப்பாமலொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன், (எ-று). 385. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம். (இ-ள்.) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர், (எ-று). இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று. 386. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு. (இ-ள்.) பொருள் வரும்வழியி யற்றலும், அதனை அழியாம லீட்டலும், அதனைச் சோர்வுபடாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான், (எ-று). பகுத்தல் - யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றையுண்டாக்குதல், இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று. 387. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி. (இ-ள்.) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன் மையும், குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம், (எ-று). கொடுத்தல் - தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்; அளித்தல் - அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்; செங்கோன்மை - கொள்ளும் முறையைக் குறையக்கொள்ளாமை; குடியோம்பல் - தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று. 388. இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு. (இ-ள்.) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும், (எ-று). 389. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். (இ-ள்.) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பா மற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான், (எ-று). 390. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு. (இ-ள்.) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமு டைய வேந்தனது குடைக்கீழே உலகு தங்கும், (எ-று). சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர். 2. கல்வி கல்வியாவது கல்வியாமாறும் அதனானாகிய பயனுங் கூறுதல், இது முதலாகப் பொருள் வரவு இயற்றுந் திறங் கூறுகின்றா ராதலின், அஃதியற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும்; அதனால், இது முன் கூறப்பட்டது. 391. கற்க கசடற கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக. (இ-ள்.) கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க; கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுகு, (எ-று). இது கற்கவும் வேண்டும்; அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது. 392. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. (இ-ள்.) எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர், (எ-று). 393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (இ-ள்.) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர், (எ-று). அறிவு கல்வியின்கண்ணதாகலான், அக்கல்வியல்லாதார் கண் புண்ணாயிற்று. 394. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. (இ-ள்.) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்; அது போல, மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம், (எ-று). இஃது அறிவுண்டாமென்றது. 395. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. (இ-ள்.) ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழு பிறப்பினும் ஏமமாதலை யுடைத்து, (எ-று). கற்ற கல்வி தானென்று கூட்டுக, இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது. 396. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (இ-ள்.) ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி; மற்றவையெல்லாம் பொருளல்ல, (எ-று). இது கல்வி அழியாத செல்வமென்றது. 397. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (இ-ள்.) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால், ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி? இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது. 398. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில் (இ-ள்.) மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும்; கற்றோர் செய்யுந்தொழில், (எ-று). இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது. 399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (இ-ள்.) தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால், அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர், (எ-று). இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின், அது கல்வியானே வருமென்றது. 400. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். (இ-ள்.) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார், (எ-று). இது கற்றார் எல்லாரினும் தலையாவாரென்றது. 3. கல்லாமை கல்லாமையாவது கல்வியில்லாமையால் உளதாகுங் குற்றங் கூறுதல். மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலா தார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்குக் கூறியதாத லான், அதன்பின் இது கூறப்பட்டது. 401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (இ-ள்.) கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல், (எ-று). அரங்கு - சூது; வட்டாடுதல் - உண்டை யுருட்டல்; கோட்டி கொளல் - “புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி” என்றாற் போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின், அது தப்பு மென்றது. 402. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று. (இ-ள்.) கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டுமுலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற் போலும், (எ-று). இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது. 403. கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். (இ-ள்.) கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லராவர்; கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின், (எ-று). சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது வென்றது. 404. கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார். (இ-ள்.) கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும், அதனை ஒண்மையாக் கொள்ளார் அறிவுடையார், (எ-று). ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லா தார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது. 405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். (இ-ள்.) கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி யுரையாட மறையும், (எ-று). இது பெருமையுடையாராயினும் மதிக்கப் படாரென்றது. 406. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. (இ-ள்.) கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர், (எ-று). இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. 407. நுண்மா ணுழைபுல மில்லா னெழினல மண்மாண் புனைபாவை யற்று. (இ-ள்.) நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியை யுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும், (எ-று). இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது. 408. உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர். (இ-ள்.) உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன் படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர், (எ-று). இது பிறர்க்குப் பயன்படாரென்றது. 409. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. (இ-ள்.) நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப், பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல் வம், (எ-று). இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது. 410. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். (இ-ள்.) விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடு டையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், (எ-று). இது கல்லாதார் விலங்கென்றது. 4. கேள்வி கேள்வியாவது கேள்வியாமாறும் அதனானாகிய பயனும் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார் மாட்டுக் கேட்டலும் அறிவுக்குக் காரணமாமென்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது. 411. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவன் ஒற்கத்துக் கூற்றாந் துணை. (இ-ள்.) கற்கமாட்டானாயினுங் கேட்க; அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்குவதொரு துணையாம், (எ-று). இது கேள்வி வேண்டுமென்றது. 412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். (இ-ள்.) செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற் றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும், (எ-று). பெருக வுண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது. 413. எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு மான்ற பெருமை தரும். (இ-ள்.) எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும், நிரம்பின பெருமையைத் தரும், (எ-று). இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்லது கேட்க வேண்டு மென்றது. 414. இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல். (இ-ள்.) வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்; ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள், (எ-று). இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று. 415. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயி னராத லரிது. (இ-ள்.) நுண்ணிதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற் கூறும் நாவுடையாராதல் இல்லை, (எ-று). இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது. 416. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். (இ-ள்.) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின் சொல்லார்; ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார், (எ-று). இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது. 417. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னான்றாரோ டொப்பர் நிலத்து. (இ-ள்.) செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும், அவியை யுணவாக வுடைய தேவ ரொடு ஒப்பர், (எ-று). 418. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை. * (இ-ள்.) ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வருஞ் செல்வம்; அச்செல்வம் பிறசெல்வங் ளெல்லாவற்றினும் தலையாகலான், (எ-று). 419. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென். (இ-ள்.) செவியால் நுகரும் இன்பத்தை யறியாத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு, (எ-று). இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது. 420. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி. (இ-ள்.) ஓசை மாத்திரம் கேட்டனவாயினும், அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி, (எ-று). இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது. 5. அறிவுடைமை அறிவுடைமையாவது அறிவாவது இன்னதென்பதும் அதனா லாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியு முடையாராயினும் கேட்ட பொருளை யுள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டு மாதலான், அதன்பின் கூறப்பட்டது. 421. அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர். (இ-ள்.) அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும், எல்லாமுடையர்; அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயி னும் ஒரு பொருளும் இலர், (எ-று). இஃது அறிவுடைமை வேண்டு மென்றது. 422. எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. (இ-ள்.) யாதொருவாற்றா லொழுகுவது உலகம், அதனோடு கூடத் தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது, (எ-று). அறிவாவது எத்தன்மைத்து என்றார்க்கு, முற்பட உயர்ந்தா ரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார். 423. உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு. (இ-ள்.) ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந் தினது; அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு, (எ-று). இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது. 424. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (இ-ள்.) யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும், அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது, (எ-று). இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றிற் றெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது. 425. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. (இ-ள்.) அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லி, பிறர் சொல்லுஞ் சொற் களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது, (எ-று). இது சொற்பொருள் காண்ட லறிவென்றது. 426. சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. (இ-ள்.) உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி, நன்மைப்பகுதியிலே செலுத்துவது அறிவாவது, (எ-று). இது காமநுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது. 427. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில். (இ-ள்.) அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாதல்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில், (எ-று). மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும், ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார். 428. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர். (இ-ள்.) பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்; அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர், (எ-று). இது மேற் சொல்லுவன வெல்லாம் தொகுத்துக் கூறிற்று. 429. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண். (இ-ள்.) ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு; பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே, (எ-று). இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும், பிறரால் வருந் தீமையைக் காக்குமென்றும், அறிவினாலாம் பயன் கூறிற்று. 430. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை யதிர வருவதோர் நோய். (இ-ள்.) துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை, (எ-று). இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின், கடிதாக வாராதென்றது. 6. குற்றங்கடிதல் குற்றங்கடிதலாவது காமக் குரோத லோப மோக மத மாற்சரிய மென்னும் ஆறு குற்றமுங் கடிந்து ஒழுகுதல். இஃது அறிவுடையா ராயினும் குற்றங் கடிதல் வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. 431. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தருஉம் பகை. (இ-ள்.) தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க; அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான், (எ-று). இது குற்றங் கடிய வேண்டு மென்றது. 432. செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. (இ-ள்.) பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மை யுடைத்து, (எ-று). பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின், செருக்கு என்றார். 433. இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு. (இ-ள்.) உலோபமும், நன்மையைக் கடந்த மானமும், நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய விம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம், (எ-று). இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால், பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று. 434. செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும். *(இ-ள்.) பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம், பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும், (எ-று). 435. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று. இது பரிமேலழகருரை (இ-ள்.) கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று, (எ-று). இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது. 436. வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. (இ-ள்.) எல்லா நாளுந் தன்னைப் பொய்யனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும், அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யா தொழிக, (எ-று). செய்யிற் கெடு மென்றவாறாயிற்று. 437. காதல காத லறியாமை யுய்க்கிற்பி னேதில வேதிலார் நூல். (இ-ள்.) காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காத லைப் பிறரறியாமற் செலுத்துவனாயின், பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது அயலாம், (எ-று). நூலென்பது அவர்கற்ற கல்வி. 438. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (இ-ள்.) துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம், எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும், (எ-று). இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது. 439. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு. (இ-ள்.) தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின், அரசனுக்கு என்ன குற்ற முளதாம்? (எ-று). இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது. 440. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். (இ-ள்.) தினையளவு குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வள விற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவர், (எ-று). 7. பெரியாரைத் துணைக்கோடல். பெரியாரைத் துணைக்கோடலாவது தம்மின் முதிர்ந்த அறிவு டையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற்ற மற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணை யாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது. 441. அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (இ-ள்.) செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே, தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல், (எ-று). பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை. 442. உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (இ-ள்.) அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்ப முறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க, (எ-று). பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று. 443. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (இ-ள்.) அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க, (எ-று). இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. 444. சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (இ-ள்.) அரசன் தன்னைச் சூழ்ச்சியாற்கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல்; காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான், (எ-று). 445. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. (இ-ள்.) தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்; வலியானவை யெல்லாவற்றினும் தலையானவலி, (எ-று). 446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். (இ-ள்.) தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோடொக்க ஒழுக வல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை, (எ-று). இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது. 447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். (இ-ள்.) குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர், (எ-று). இது கேடில்லை யென்றது. 448. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடின். (இ-ள்.) பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும் அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின், (எ-று). 449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. (இ-ள்.) முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல, தாங்குதலாகிய சார்பு இல்லாதார்க்கு அரசுநிலை நிற்றல் இல்லை, (எ-று). 450. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். (இ-ள்.) கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும், தான் வேண்டியவா றொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது. 8. சிற்றினஞ் சேராமை. சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும் சூதாடிகளையும் பெண்டிர் முதலாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங் குற்றமும் சேராமையால் வரும் நன்மையும் கூறுதல். பெரியார் துணை யாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின், அது தீமை பயக்கு மென்று அதன்பின் இது கூறப்பட்டது. 451. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (இ-ள்.) சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்ற மாகக் கொண்டு விடுவர், (எ-று). இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது. 452. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில். (இ-ள்.) நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை; தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை, (எ-று). இது சேராமைக்குக் காரணங் கூறிற்று. 453. மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல். (இ-ள்.) மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம்; ஆயினும், தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப் படுஞ் சொல் உண்டாம். (எ-று). இது பிறரால் பழிக்கபடுமென்றது. 454. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு. (இ-ள்.) நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந் நிலத்தின் தன்மைத்தாவதுபோல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும், (எ-று). 455. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு. (இ-ள்.) ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப், பின்பு தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவா கும், (எ-று). 456. மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும். (இ-ள்.) மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய விரண்டும், இனம் நன்றாதலைப் பற்றி வரும், (எ-று). இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார். 457. மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாக வினை. (இ-ள்.) மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காண முதலான பொருள்கள் நல்லவாம்; இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை, (எ-று). இது மேலதற்குப் பயன் கூறிற்று. 458. மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து. (இ-ள்.) மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்; அம்ம னத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது. 459. மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து. (இ-ள்.) மன நன்மை மிக வுடையராயினும், இன நன்மையு டைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து, (எ-று). இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படு வராதலான், இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது. 460. மனநல மன்னுயிர்க் காக்க மினநல மெல்லாப் புகழுந் தரும். (இ-ள்.) மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவது போல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும், (எ-று). இஃது எல்லாப் புகழுந் தருமென்றது. 9. தெரிந்து செயல்வகை தெரிந்து செயல் வகையாவது வினை செய்யுங்கால் அதனை எண்ணிச் செய்யவேண்டுமென்று கூறுதல். அறிவுடையவனாய்க், குற்றங் கடிந்து, மந்திரி புரோகிதரைத் துணையாகக் கொண்டு, சிற்றினஞ் சேராதொழுகும் அரசனும் வினை செய்யுங்காலத்து முன்பே எண்ணிச் செய்யவேண்டுதலின், அவையிற்றின் பின் இது கூறப்பட்டது. 461. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில். (இ-ள்.) அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக் கொள்ளப் பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து, அதனை செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை, (எ-று). 462. தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். (இ-ள்.) ஆராய்ந்தறிவில்லாத வினையைச் செய்யத்தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர், (எ-று). 463. எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு. (இ-ள்.) ஒருவினை செய்யத் துணிவதன்முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக; துணிந்தபின் எண்ணு வோமென்றல் தப்பாமாதலான், (எ-று). 464. அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல். (இ-ள்.) வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும், அது செய்து முடித்தாலுளதாகும் பொருளும், ஆய்நின்று அப்பொருளி னாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும், (எ-று). 465. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார். (இ-ள்.) தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி, முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடை யார், (எ-று). இது பிற்பயவாதவினை செய்யலாகாதென்றது. 466. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு. (இ-ள்.) முடியுமாயினும், பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளா ராதலான், (எ-று) இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது. 467. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. (இ-ள்.) நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து, (எ-று). இதுவுமோரெண்ணம். 468. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். (இ-ள்.) செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும், (எ-று). இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று. 469. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். (இ-ள்.) மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும், (எ-று). இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது. 470. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. (இ-ள்.) மேற்சொன்னவகையில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல், பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி, (எ-று). இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது. 10. வலியறிதல் வலியறிதலாவது தனக்கு உள்ள வலியும் பிறர்க்கு உள்ள வலியும் அறிதல். செய்யத்தக்க வினையை யெண்ணினாலும் அதனைச் செய்து முடிக்குங்கால் வலியறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 471. வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல். (இ-ள்.) செய்யும் வினையினது வலியும், தனக்கு உண்டான வலியும், பகைவனது வலியும், தனக்கும் பகைவர்க்கும் துணையா யினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க, (எ-று). இது வலியறியும் இடம் கூறிற்று. 472. உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர். (இ-ள்.) தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி, அது முடிவதன்முன்னே கெட்டார் பலர், (எ-று). இது வலியறியாதார் கெடுவரென்றது. 473. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். (இ-ள்.) தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து, அதன் பின்பு அவ்வளவிலே நின்று, ஒழுகுவராயின், அவர்க்கு இயலாதது இல்லை, (எ-று). இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டு மென்றது. 474. அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும். (இ-ள்.) அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலியளவும் அறியாதே, தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன், (எ-று). இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது. 475. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும். (இ-ள்.) ஒருமரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின், அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும், (எ-று). இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவு சென்றால், பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல். 476. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். (இ-ள்.) பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின், (எ-று). இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று. 477. ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கு நெறி. (இ-ள்.) பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அது வாதலால், (எ-று). இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவு செய்ய வேண்டுமென்று கூறிற்று. 478. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்றாக் கெடும். (இ-ள்.) தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி, அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும், (எ-று). பின்பு ஆக்கம்தோன்றாதென்றவாறு, இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது. 479. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. (இ-ள்.) பொருள் வரும் வழியளவு சிறிதாயினும் கேடில் லையாம்; அது போம்வழி போகாதாயின், (எ-று). இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது. 480. உளவரை தூக்காத வொப்புர வாளன் வளவரை வல்லைக் கெடும். (இ-ள்.) தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும், (எ-று). மேல்., முதலுக்குச் செலவு குறையவேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு, இது கூறினார். 11. காலமறிதல் காலமறிதலாவது வினைசெய்தற்கு ஆங்காலமறிதல், வலியறிந்தாலும் வினை செய்யுங்காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (இ-ள்.) இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்; ஆதலான், மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும், (எ-று). இது காலமறிதல் வேண்டு மென்றது. 482. காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். (இ-ள்.) செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்; ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர், (எ-று). 483. ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (இ-ள்.) மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர்வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந் தாற்போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது. 484. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வொப்ப ரொள்ளி யவர். (இ-ள்.) கதுமென அவ்விடத்தே யுடம்புவேரார்; தமக்குச் செய்யலாங் காலம் வரவு பார்த்து மனமொப்பர் ஒள்ளியர், (எ-று). ஒப்புப் பொறாமையால் வருவதொன்று, இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது. 485. செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை. (இ-ள்.) பகைவரைக் கண்டானாயின், தலையினாற் சுமக்க; இறுமளவாகின், தலை கீழாய் விடலாம், (எ-று). 486. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. (இ-ள்.) காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்தகாலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செல்க, (எ-று). இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம், காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று. 487. எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். (இ-ள்.) பெறுதற்கு அரிய காலம் வந்தால், அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்துமுடிக்க, (எ-று). இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்ய வேண்டு மென்றது. 488. பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. (இ-ள்.) காலத்தோடு பொருந்த ஒழுகுதல், செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம், (எ-று). இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார். 489. அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின். (இ-ள்.) அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லா ராயின், (எறு). 490. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின். (இ-ள்.) உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்; காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின், (எ-று). இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது. 12. இடனறிதல். இடனறிதலாவது வினைசெய்யும் இடமறிதல், காலமறிந் தாலும் இடனறிந்து வினைசெய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 491. தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது. (இ-ள்.) முடியுமிடங் கண்டாலல்லது, யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக, (எ-று). இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று. 492. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா னூக்க மழிந்து விடும். (இ-ள்.) சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும் படையை யுடையவன் பொருந்துவனாயின், மன மிகுதி கெடும், (எ-று). இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது. 493. காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு. (இ-ள்.) கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்ல வற்றாம், (எ-று). இது மேலதற்கு காரணங் கூறிற்று. 494. சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது. (இ-ள்.) அரசன் பதியும் பெருமையும் இலராயினும், மாந்தர் உறைநிலத்தின் கண் பொருந்துத லரிது (எ-று). இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால், அறிந்து செல்லவேண்டுமென்றது. 495. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலு ணீங்கி னதனைப் பிற. (இ-ள்.) நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந் நீரினின்று நீங்குமாயின், அதனைப் பிறவெல்லாம் வெல் லும், (எ-று). இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறிய வேண்டு மென்பது கூறின. 496. அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின். (இ-ள்.) தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல், வேறு துணை யாவாரைத் தேட வேண்டுவதில்லை, (எ-று). இஃது இடனறிந்தால், துணையின்றியும் வெல்வரென்றது. 497. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின். (இ-ள்.) வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்; பகை வர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய் வாராயின், (எ-று). 498. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும் (இ-ள்.) பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம், பலபயனையுந் தரும், (எ-று). இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது. 499. கடலோடாக் கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து. (இ-ள்.) கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது; கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது, (எ-று). இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது. 500. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். (இ-ள்.) தம்மைக் கெடுத்தற்கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது. 13. தெரிந்து தெளிதல் தெரிந்து தெளிதலாவது ஆராய்ந்து தெளிதல், காரியந் தப்பாம லெண்ணி, அதற்காங்காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரையும் எண்ணிக் கொள்ள வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 501. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு. (இ-ள்.) கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார் மாட்டும், ஆராயுங் கால் குற்றமின்மை இல்லை, (எ-று). 502. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. (இ-ள்.) ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையரும் அல்லர்; பழிக்கும் நாணாராதலான், (எ-று). 503. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும். (இ-ள்.) அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல், எல்லா அறியாமையும் தரும், (எ-று). அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது. 504. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும். (இ-ள்.) பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவ னுக்கு அத்தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும், (எ-று). இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது. 505. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல். (இ-ள்.) ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக் குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம், (எ-று). இஃது ஒருவனை ஒருகாரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு, பின்னைப்பெரியனாக்க அமையு மென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும். 506. குடிப்பிறந்து குற்றத்து ணீங்கி வடுப்பரியு நாணுடையான் கட்டே தெளிவு. (இ-ள்.) உயர்குடியிற் பிறந்து, காமம் வெகுளி முதலான குற்றத்தினின்று நீங்கி, தனக்குவரும்பழியை அறுக்கவல்ல நாணமு டையவன்கண்ணதே அரசனது தெளிவு, (எ-று). இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு. 507. குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல். (இ-ள்.) ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து, அவற்றுள்ளும் தலைமை யாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க, (எ-று). 508. அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும். (இ-ள்.) அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான், (எ-று). முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். 509. தேறற்க யாவரையுந் தேராது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள். (இ-ள்.) யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுகு, (எ-று). இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொரு ளினுந் தெளிக வென்றது. 510. தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும், (இ-ள்.) ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண் டும் நீங்காத துன்பத்தைத் தரும். 14. தெரிந்து வினையாடல். தெரிந்து வினையாடலாவது வினை செய்வாரால் செய்யப் படும் வினையும் பலவாதலின், அவரால் செய்யப்படும் வினைகளை யறிந்து அவரை விட்டுச் செய்வித்தல். 511. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. * (இ-ள்.) செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூ றுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து, முடிவு செய்ய வல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடைய னென்று பிறனொருவனை யேவும் இயல்புடைத்தன்று. 512. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல். (இ-ள்.) வினை செய்வானையும் ஆராய்ந்து, அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து, அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும், (எ-று). 514. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு. (இ-ள்.) அன்புடைமையும், அறிவுடைமையும், ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும், அவாவின்மையுமென்னும் இந் நான்கு குணங்களையும் நிலைபெற வுடையான்மேலதே வினையை விட்டிருக்குந் தெளிவு, (எ-று). 515. வாரிப் பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை. (இ-ள்.) பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்றநிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவு களை ஆராயவல்லவன் வினை செய்வானாக, (எ-று). பொருள் வருதற்கிடமாவது நில முதலான விடம்; அதனைப் பெருக்குதல் - பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல். 516. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல். (இ-ள்.) இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக, (எ-று). இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது கூறிற்று. 517. இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல் (இ-ள்.) இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து, பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக, (எ-று). இது பெரும்பான்மையுஞ் சேனாபதியை நோக்கிக் கூறிற்று. 518. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு. (இ-ள்.) வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறு பாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள், (எ-று). 519. எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர். (இ-ள்.) எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்த விடத்திலும், அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர், (எ-று). இது தெளிந்தேமென்று இகழலாகாதென்றது. 520. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. (இ-ள்.) வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும்; ஆதலான், அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராயவேண்டும், (எ-று). இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது. 15. சுற்றந்தழால். சுற்றந்தழாலாவது அரசன் தன்கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல். மேல் அமாத்தியர்மாட்டு அரசன் ஒழுகுந் திறங் கூறினாராதலின், அதன் பின் இது கூறப்பட்டது. 521. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். (இ-ள்.) சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன், (எ-று). இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுகவேண்டுமென்றது. 522. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும். (இ-ள்.) வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின், தனக்கு முன்னாகியும், பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுபவன், (எ-று). இஃது ஒழுகுந் திறங் கூறிற்று. 523. பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில். (இ-ள்.) மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை, (எ-று). இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின், துணையுடையானாமென்றது. 524. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. (இ-ள்.) பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல், சுற்றத்தார்மாட்டே யுளவாம், (எ-று). இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது. 525. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (இ-ள்.) கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும், (எ-று). இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று. 526. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும். (இ-ள்.) அன்பறா சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும், (எ-று). 527. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர். (இ-ள்.) அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின், அப்பார்வை நோக்கி, அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர், (எ-று). இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது. 528. காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்னநீ ரார்க்கே யுள. (இ-ள்.) காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும்; அதுபோல், செல்வம்பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது, (எ-று). இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறங் கூறின. 529. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும். (இ-ள்.) முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல், அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும், (எ-று). இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று. 530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல். (இ-ள்.) தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து, பின்பு காரியமானபடி யெண்ணி, அதற்குத் தக்கபடி கூட்டிக்கொள்ளுக, (எ-று). 16. பொச்சாவாமை. பொச்சாவாமையாவது மறவீயின்றி யொழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப்பிறர் வஞ்சகஞ் செய்யுமிடங்களினும், அறம்பொ ருளின்பங்கள் செய்ய வேண்டுமிடங்களினும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும். 531. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு. (இ-ள்.) பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில் லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு, (எ-று). இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது. 532. இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (இ-ள்.) அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது, (எ-று). இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது. 533. அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. (இ-ள்.) அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை; அதுபோல, பொச்சாப்புடையார்க்கு வருவதொருநன்மை இல்லை, (எ-று). இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது. 534. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில். (இ-ள்.) உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்; இவையிற்றைச் செய்யாது இகழ்ந்வர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான், (எ-று). இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று. 535. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின். (இ-ள்.) தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும், அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின், (எ-று). இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்த தனை மறவாமை வேண்டுமென்றார். 536. அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின். (இ-ள்.) செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வனாயின், (எ-று). இது வினைசெய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது. 537. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (இ-ள்.) மறவியாகின்றது புகழைக்கொல்லும்; நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லு மாறுபோல, (எ-று). இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார். 538. இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னஃதொப்ப தில். (இ-ள்.) யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின், அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை, (எ-று). இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்ய வேண்டு மென்றது. 539. முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும். * (இ-ள்.) தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின், அப் பிழைப்பினை நினைந்திரங்கிவிடும், (எ-று). 540. இறந்த வெகுளியிற் றீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (இ-ள்.) மிகுத்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு,(எ-று). தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம். 17. செங்கோன்மை செங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்த லுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலாற்கோல் என்றார்; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர்மாட்டுஞ் சுற்றத்தார் மாட்டுந் தன்மாட்டுஞ் செய்யுந் திறங் கூறினார். உலகத்தார்மாட்டுஞ் செய்யுந்திறங் கூறுகின்றாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. 541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் குவதே முறை. (இ-ள்.) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, நட்டோரென்று கண்ணோடாது, தலைமையைப் பொருந்தி, யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து, அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும், (எ-று). யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது. 542. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். (இ-ள்.) குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காக, குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில், (எ-று). 543. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர். (இ-ள்.) கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்த தனோடு ஒக்கும், (எ-று). கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார். 544. வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (இ-ள்.) உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறா நிற்பர்; அது போல, குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கி யின் புறாநிற்பர், (எ-று). 545. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழீஇ நிற்கு முலகு. (இ-ள்.) குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு, (எ-று). இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது. 546. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு. (இ-ள்.) மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்தவல்ல அரசனது நாட்டகத் தினவாம், (எ-று). இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டா மென்றது. 547. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல். (இ-ள்.) அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றதுஅரசன் செய்யும் முறைமை, (எ-று). 548. வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது கோடா னெனின். (இ-ள்.) அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யா னாயின், (எ-று). இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது. 549. இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கு முட்டாச் செயின். (இ-ள்.) வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும், அவ்வரசனை அவன்றான்செய்யும் முறை காக்கும்; அதனைத் தப்பாமற் செய்யின், (எ-று). இது தனக்குக் காவலாம் என்றது. 550. எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றானே கெடும். (இ-ள்.) எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய் யாத அரசன், தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும், (எ-று). எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங் காலம். 18. கொடுங்கோன்மை. கொடுங்கோன்மையானது கொடுங்கோன்மையால் வரும் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும், அருள் செய்யாமையும், பிறர் நலியாமற்காவாமையும், முறைகெடச் செய்தலும், குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும், அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலு மெனப் பலவகைப்படும். இது கூறிய செங்கோன்மையின் மாறுபட்டுவருதலின், அதன்பின் கூறப்பட்டது. 551. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன் மன்னாவா மன்னர்க் கொளி. (இ-ள்.) அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லையாயின், அரசர்க்கு ஒளி நிலையாதாம், (எ-று). முறை செய்யாமை அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார். 552. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ னாடொறு நாடு கெடும். (இ-ள்.) குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத்தக முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும், (எ-று). இது நாடுகெடுமென்றது. 553. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். (இ-ள்.) நல்குரவினும் செல்வம் துன்பமாகும்; முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின்கீழே குடியிருக்கின், (எ-று). இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது, இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின. 554. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு. (இ-ள்.) உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது அத்தன்மைத்து; அரசன் அருளிலனாதல் அவன் கீழ் வாழும் மக்கட்கு, (எ-று). இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று. 555. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின். (இ-ள்.) பசுக்கள் பால் குறையும்; அந்தணர் வேதம் ஓதார்; அரசன் காவானாயின், (எ-று). இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று. 556. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல். (இ-ள்.) முறைமைகோட மன்னவன் செய்வானாயின், மழை துளிவிடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும், (எ-று). 557. கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு. (இ-ள்.) பொருளையும் பொருள் தரும் குடியையும் கூட இழப்பன், முறைகோடி ஆராயாது செய்யும் அரசன், (எ-று). இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று. 558. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யிலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (இ-ள்.) கொலைத் தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று). 559. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (இ-ள்.) நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு, அதற்கு ஆற்றாது, அழுத கண்ணீரன்றோ? செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம், (எ-று). இஃது அவ்வரசன் கெடுமென்றது. 560. வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு. (இ-ள்.) தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தாவென்றல்போலும்; முறைசெய்தலை மேற்கொண்டுநின்றவன் குடிகள்மாட்டு இரத்தல், (எ-று). கோலொடு நிற்றல்--செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல், நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும், அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு. 19. வெருவந்த செய்யாமை வெருவந்த செய்யாமையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல், தான் முறைசெய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவுங் கொடுங்கோலோடு ஒக்கு மென்று அதன்பின் இது கூறப்பட்டது. 561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது வேந்து. (இ-ள்.) குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமைக் காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன், (எ-று). 562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர். (இ-ள்.) கடிதாச் செய்வாரைப்போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார், (எ-று). இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்ய வேண்டு மென்றது. 563. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை. (இ-ள்.) கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும், அவ்வரசன் அல்லது நிலத்துக் குப் பாரம் வேறொன்றும் இல்லை, (எ-று). 564. இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும். (இ-ள்.) தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப் பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன், தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும், (எ-று). இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவ னென்றது. 565. இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு. (இ-ள்.) பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடியசொல்லனுமாய்க் கண்ணோட்ட மும் இலனாயின், அவனது செல்வம் நாடோறும் சுருங்கும், (எ-று). ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின், அவன் செல்வம் குறையுமென்றாவது, இனம்-மந்திரி புரோகிதர். 566. கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும். (இ-ள்.) அரசன் கடியசொல்லை யுடையவனுமாய்க், கண்ணோட்டமும் இலனாயின், அவனது தொன்று தொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும், (எ-று). இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது. 567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னடுமுரண் டேய்க்கு மரம். (இ-ள்.) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம், (எ-று). இது வலியைக் கெடுக்கும் என்றது. 568. அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேய்கண்ட தன்ன துடைத்து. (இ-ள்.) காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து, (எ-று). இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது. 569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். (இ-ள்.) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும், (எ-று). இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது. 570. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி னொருவந்த மொல்லைக் கேடும். (இ-ள்.) அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின், அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும், (எ-று). 20 . கண்ணோட்டம் கண்ணோட்டமாவது கண்ணாற் காணப்பட்டாரை யருள் செய்தல். குற்றஞ்செய்தாரை ஒறுக்குங்கால் உலகத் தாரிசைய ஒறுக்கவேண்டு மென்றாராயினும் அவ்வாறு செய்தவரைத் தமது கண் முன்னாகக் கண்டால் அதனைப் பொறுத்தலும் வேண்டு மென்று அதன்பின் இது கூறப்பட்டது. இது பெரும்பான்மையும் முன்புகண்டு பழகினார் மேற்று. 571. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு. (இ-ள்.) கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது, (எ-று). இஃது அஃதில்லையாயின், உலகங்கெடும்; ஆதலால், கண்ணோடவேண்டுமென்றது. 572. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (இ-ள்.) தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார் மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச்செய்யும் குணமே தலையான குணம், (எ-று). 573. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (இ-ள்.) நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புவார், (எ-று). நாகரிகம்-அறம் பொருள் இன்பத்தின்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. 574. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு. (இ-ள்.) தங்கருமத்திற்கு அழிவு வராமற் கண்ணோட வல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமையாதலை உடையது, (எ-று). இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று கூறிற்று. 575. கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை. (இ-ள்.) உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது; ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம், (எ-று). இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது. 576. கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில். (இ-ள்.) கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே; கண்ணுடை யார் கண்ணோட்டமிலராதலும் இல்லை, (எ-று). 577. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண். (இ-ள்.) பண் என்ன பயனுடைத்தாம்; பாடலோடு பொருந் தாதாயின் அதுபோல, கண் என்ன பயனுடைத்தாம்; கண்ணோட் டமில்லாத காலத்து, (எ-று). இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது. 578. உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண். (இ-ள்.) அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடு தலைச்செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? (எ-று). அளவென்றது தகுதியை, இது தனக்கும் பயன்படாதென்றது. 579. கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல் புண்ணென் றுணரப் படும். (இ-ள்.) கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை; அஃதில்லையாயின், அவை புண்ணென் றறியப்படும், (எ-று). இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று. 580. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். (இ-ள்.) சுதைமண்ணோடுகூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்; ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட் டத்தைச் செய்யாதவர், (எ-று). இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது. 21. ஒற்றாடல். ஒற்றாடலாவது ஒற்றரையாளவேண்டு மென்பதும், அவ்வொற்றர் திறனும் கூறுதல், பெரியாரைத் துணைக்கோடல் முதலாகக் கண்ணோட்டம் ஈறாகத் தன் வாசலிருந்து செய்ய வேண்டுவன கூறினார். அது செய்யுங்கால் அவரவர் செய்தியை ஒற்றரான் ஒற்றியறிய வேண்டுதலானும், இனிப் பிறர்நாடு கொள்ளுங்கால் செய்ய வேண்டுவன கூறுகின்றாராதலின் அந்நாட்டியல்பறிந்து வினை செய்யவேண்டுதலானும், இவ்வதி காரம் வேண்டப்பட்டது. 581. ஒற்று முறைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண். (இ-ள்.) ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக, (எ-று). அரசர்க்கு கல்வி இன்றியமையாததுபோல ஒற்றும் இன்றி யமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது. 582. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று. (இ-ள்.) வினாவப்படாத வடிவோடேகூடி, கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்க வல்லவன் ஒற்றனாவன், (எ-று). 583. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று. (இ-ள்.) தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ளசெய்தியை ஆராய்ந்து, அவ்விடத்து அகப்பட்டால் அவ்விடத்துள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன்னுளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்ற னாவன், (எ-று). 584. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று. (இ-ள்.) பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்ல னாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான், (எ-று). இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின. 585. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில். (இ-ள்.) பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதா சீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர்சுற்றத்திற்கும், தஞ்சுற்றத் திற்கும், அறம் பொருள் இன்பங்களைப்பற்றி நிகழ்பவையெல்லா வற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்தறிதல் வேந்தனது தொழில், (எ-று). 586. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று. (இ-ள்.) தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச்செய்வாரும், தமக்குச் சுற்றமாயிருப்பாரும், தம்மைவேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன், (எ-று). இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின. 587. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல். (இ-ள்.) ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க, (எ-று). 588. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். (இ-ள்.) ஒற்றரை விடுங்கால், ஒருவரையொருவர் அறியாமல் விடுக; மூவர் சொல் உடன்கூடின், அது தெளியப்படுமாதலால், (எ-று). இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின. 589. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை. (இ-ள்.) ஒற்றர்க்குச் சிறப்பு செய்யுங்கால், பிறரறியாமற் செய்க; பிறரறியச் செய்வனாயின், அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்து விட்டானாம், (எ-று). இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது. 590. ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். (இ-ள்.) ஒற்றாலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொருவெற்றி இல்லை, (எ-று). இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று. 22. ஊக்கமுடைமை ஊக்கமுடைமையாவது அதனைச் செய்யுமிடத்துக் காலத்து அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத்துடைமை, பிறர்நாடு கொள்ளுங்காலத்து அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனையேஅறிந்து கொள்ளக் கடவேனென்று நினைக்குங்கருத்து வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 591. உடைமை யெனப்படுவ தூக்கமஃ தில்லா ருடைய துடையரோ மற்று. (இ-ள்.) ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்க முடைமை; அஃதிலார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார், (எ-று). 592. ஊக்க முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். (இ-ள்.) உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும், (எ-று). பொருள் உடையார்க்கு எல்லா முண்டா மென்பார்க்கு இது கூறப்பட்டது. 593. வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் முள்ளத் தனைய துயர்வு. (இ-ள்.) புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல, மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம், (எ-று). இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது. 594. ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை. (இ-ள்.) அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழிகேட்டுச் செல்லும், (எ-று). நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ என்றார்க்கு இது கூறப்பட்டது. 595. உள்ளுவ தெல்லா முயர்வுள்ள மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (இ-ள்.) நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க; அந்நினைவு முடியாமல் தப்பினும், முயன்று பெற்றதனோடு ஒக்கும், (எ-று). இது தப்பினும் பழிக்கப்படா தென்றது. 596. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. (இ-ள்.) ஒருவனுக்கு அறிவாவது உள்ளமிகுதியுடைமை; அஃதில்லா தார் மரமென்று சொல்லப்படுவர்; மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகின்றது, (எ-று). இஃது அறிவும் இதுதானே யென்றது. 597. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. (இ-ள்.) தளர்ச்சிவந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்; மெய்புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல, (எ-று). இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது. 598. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க மொருவந்தங் கைத்துடை யார். (இ-ள்.) செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒருதலையாகத் தம்மாட்டுடையார், (எ-று). இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது. 599. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு. (இ-ள்.) உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையு டைமை யென்னுங் களிப்பினைப் பெறார், (எ-று). இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லை யாம்; ஆதலான், அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது. 600. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (இ-ள்.) யானை பெரிய உடம்பினதாய், கூரியகோட்டையும் உடைத்தாயினும், புலி பொருமாயின் அஞ்சும், (எ-று). இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது. 23. மடியின்மை மடியின்மையாவது சோம்பலில்லாது செய்யுங்காரியம். உயர்வு நினைத்தாலும் அதனைச்செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. 601. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். (இ-ள்.) மடிசெய்தலை மடித்து ஒழுகுக; தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர், (எ-று). இது சோம்பாமை வேண்டுமென்றது. 602. மடிமடிடக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து. (இ-ள்.) நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்த லைச்செய்து, ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும், (எ-று). சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது. 603. குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும். (இ-ள்.) குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடி யென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும், (எ-று). முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு. 604. குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து மாண்ட வஞற்றி லவர்க்கு. (இ-ள்.) குடியுங் கெட்டு குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு, (எ-று). இது பிறரால் இகழப்படுவ ரென்றது. 605. மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும். (இ-ள்.) குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின், அது தன் பகைவர்க்கு அடிமையாக்கிவிடும், (எ-று). இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது. 606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த லரிது. (இ-ள்.) பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை, (எ-று). அது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது. 607. நெடுநீர் மறவி மடிதுயி னான்குங் கெடுநீரார் காமக் கலன். (இ-ள்.) விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைத்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவைநான்கும் கெடுந்தன்மை யுடையார் காதலித்தேறும் மாக்கலம், (எ-று). காமக்கல னென்றது தன்னைக்காதலித்தேறினாரை நடுக்கட லுள் தள்ளும் மாக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமை யினால் வருங் குற்றங் கூறினார். 608. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும். (இ-ள்.) குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும், (எ-று). குற்றம் - குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங் குற்றம். 609. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு. (இ-ள்.) மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே, (எ-று). இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று. 610. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். (இ-ள்.) கழறுதலைச்செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச்செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார், (எ-று). 24 . ஆள்வினையுடைமை ஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யுங் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இல்லா திருந்தாலும் அது முடியுமாறு முயலவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 611. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண். (இ-ள்.) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன்கேளிர்க்கு உற்றதுன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம், (எ-று). ஆதலால், வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது. 612. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (இ-ள்.) ஒரு விiiயைச்செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்; முயற்சி தனக்குப் பெருமை யைத் தருமாதலால், (எ-று). இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகா தென்றது. 613. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. (இ-ள்.) வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க; வினைக் குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று, (எ-று). இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது. 614. மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் றாளுளா டாமரையி னாள். (இ-ள்.) வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பி யிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின் கண்ணே திருமகள் உறைவ ளென்று சொல்லுவர், (எ-று). 615. தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு. (இ-ள்.) முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது; பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம், (எ-று). இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது. 616. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். (இ-ள்.) முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டா லஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும், (எ-று). இஃது அறம் செய்யமாட்டானென்றது. 617. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும். (இ-ள்.) முயற்சி செல்வத்தை உண்டாக்கும்; முயலாமை வறுமையை உண்டாக்கும், (எ-று). இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது. 618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி. (இ-ள்.) யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது; அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது, (எ-று). அறிவு - காரிய அறிவு, புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்கு, இது கூறப்பட்டது. 619. தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (இ-ள்.) புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லை யாயினும், ஒருவினையின் கண்ணே முயல்வனாயின், முயற்சி தன்னுடம் பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும், (எ-று). இது புண்ணியமில்லையாயினும்., பயன் கொடுக்கும் என்றது. 620. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர். (இ-ள்.) ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர் பயன் படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர், (எ-று). இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது. 25. இடுக்கணழியாமை. இடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங் காலத்தினை முடிவு செய்தவன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயலவேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. 621. இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில். (இ-ள்.) தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக; அத்துன்பத்தை மேன்மேலும் அடக்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை, (எ-று). இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது. 622. இன்பம் விழையா திடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத லிலன். (இ-ள்.) இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன், துன்ப முறுதல் இல்லை, (எ-று). இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டுமென்றது. 623. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர். (இ-ள்.) துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத் திற்குத் துன்பமுறாதவர், (எ-று). இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன. 624. மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க ணிடர்ப்பா டுடைத்து. (இ-ள்.) இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடு போலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து, (எ-று). இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடு மென்றது. 625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும். (இ-ள்.) மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில் லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும், (எ-று). இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது. 626. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும். (இ-ள்.) வெள்ளம் போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சி னாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும், (எ-று). இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக் கண் கெடுமென்றது. 627. இலக்க முடம்பிடுபைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல். (இ-ள்.) உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினார், (எ-று). இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று. 628. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர். (இ-ள்.) பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்; அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளி யாதவர், (எ-று). இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று. 629. இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன். (இ-ள்.) இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந் துன்பம் நுகரு மிடத்து வருத்த முறுத லிலன், (எ-று). இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று. 630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் னொன்னார் விழையுஞ் சிறப்பு. (இ-ள்.) இன்னாமையை இன்பம்போலக் கொள்வனாயின், அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம், (எ-று). மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்ப மாகக் கொள்வனாயின், அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு. அரசியல் முற்றிற்று 2. அமைச்சியல். 1. அமைச்சு அமைச்சாவது அமைச்சர் செய்யுந் திறங்கூறுதல். அஃதாவது அது கூறிய அதிகாரம் பத்தினும் முற்பட அமைச்சர்க்கு இன்றியமையாக் குணங்களெல்லாம் ஓரதிகாரத்தானும், வாத மண்டலத்திலிருந்து செய்யவேண்டுவன நான்கதிகாரத்தானும், மறு மண்டலத் திற்குப் போம் தூதர் இலக்கணம் ஓரதிகாரத்தானும், அவர் செய்யுந் திறன் நான்கதிகாரத்தானுங் கூறினாரென்று சொல்லப்படும். மேல் அரசர் செய்யுந் திறன் நான்கினுள் ஒருவினை செய்து முடிக்குங்கால் அமைச்சு வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 631. வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. (இ-ள்.) அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்துங் கூட, மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான், (எ-று). இவை அமைச்சனாவதன்முன்னே வேண்டுமாதலின், இது முதற்கூறப்பட்டது. 632. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதினுட்பம் யாவுள முன்னிற் பவை. (இ-ள்.) மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணிதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாரா லெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? (எ-று). இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது. 633. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை, (இ-ள்.) அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல் வினையும் உடையனாய், எல்லாக்காலத்தினும் செய்யுந்திறன் களையும் அறியவல்லவன் அரசர்க்குச் சூழ்ச்சித்துணையாய அமைச் சனாவான், (எ-று). 634. தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு. (இ-ள்.) ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான், (எ-று). 635. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு. (இ-ள்.) செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலு மாகிய இந்நான்கு மாட்சியைப் பட்டவன் அமைச்சனாவான், (எ-று). செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை-குதிரை முதலிய படை; காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். 636. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. (இ-ள்.) மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத்தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக்கொளலும் வல்லவன் அமைச்சனாவான், (எ-று). 637. செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல். (இ-ள்.) செயத்தகுவன அறிந்த விடத்தும், அது செய்யுங் கால் உலக நடை அறிந்து செய்க, (எ-று). உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமா மென்றவாறு. 638. அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன். (இ-ள்.) அரசன் அமைச்சன் கூறிய பொருளை யறிக; அவன் ஒன்றறியானாயினும், அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன், (எ-று). இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகா தென்று கூறிற்று. 639. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர். (இ-ள்.) அடைவுபட எண்ணியும், தம்மால் முடிவது இல்லாத வற்றையே செய்யாநிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார், (எ-று). இஃது எண்ணவல்லராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று. 640. பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வ ரெழுபது கோடி தலை. (இ-ள்.) குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர், (எ-று). இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின. 2 . சொல்வன்மை சொல்வன்மையாவது வார்த்தைசொல்ல வல்லவ னாதல். அரசர்க்குக் கல்வி இன்றியமையாததுபோல அமைச்சர்க்கு இஃது இன்றியமையாதது ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 641. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (இ-ள்.) சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச் சொல்லைப் பிறிதொரு சொல்லால் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து, (எ-று). 642. விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (இ-ள்.) இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின், உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர், (எ-று). இது சொற்களைச் சொல்லின், இனிதாகச் சொல்ல வேண்டு மென்றது. 643. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள். (இ-ள்.) தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்துகொள்ளுதல், மாட்சிமையிற் குற்றமற்றாரது கோட்பாடு, (எ-று) இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது. 644. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். (இ-ள்.) வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது, (எ-று). இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது. 645. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (இ-ள்.) ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால், சொல்லின் கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும், (எ-று). இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது. 646. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்ல றேற்றா தவர். (இ-ள்.) பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார், (எ-று). மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது. 647. இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார். (இ-ள்.) இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார், (எ-று). இது சுருங்கச்சொல்லுதலே யன்றி, வேண்டுமிடத்து விரித்துஞ் சொல்லல் வேண்டு மென்றது. 648. சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (இ-ள்.) ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவ னாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது, (எ-று). 649. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினூஉங் கில். (இ-ள்.) சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம் பட்ட அறனும் பொருளும் இல்லை, (எ-று). தாமறியவே, புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்; ஆதலான், அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மாட்டும் தகுதியறிந்து சொல்லுதலான், பொரு ளாயிற்று. 650. நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று. (இ-ள்.) நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிககது, (எ-று). எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால், இன்பம் பயக்குமென்பதாயிற்று. 3. வினைத்தூய்மை வினைத்தூய்மையாவது செய்யும் வினையைக் குற்றம் பயவா மற்செய்தல். மேற் சொல்லுங்கால் சொல்வதையும் பிறர் விரும்புமாறு சொல்லல் வேண்டு மென்றார், செய்வினையும் அவ்வாறு செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 651. துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும். (இ-ள்.) துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி, வேண்டிய வெல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும், (எ-று). துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப்படு தலின், ஈண்டு எதுவாக வந்தது. 652. என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. (இ-ள்.) எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்; புகழோடு நன்மை பயவாத வினையை, (எ-று). என்று மென்றது செயலற்ற காலமுமென்றது. 653. ஓஓதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர். (இ-ள்.) தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவர் தவிர்க, (எ-று). இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்கஎன்றது. 654. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று. (இ-ள்.) துயப்பட்டதென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யாதொழிக; வினை செய்வானாயின், அவைபோல்வனவுஞ் செய்யாமையே நல்லது. இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது. 655. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (இ-ள்.) தன்னைப் பயந்தாள் பசிகண்டாளாயினும், சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக, (எ-று). இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது. 656. இடுக்கண் வரினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். (இ-ள்.) துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார், துளக்கமற்ற தெளிவுடையார், (எ-று). இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டுமென்பது கூறப்பட்டது. 657. கடிந்த கடிந்தொரார் செய்வார்க் கவைதா முடிந்தாலும் பீழை தரும். (இ-ள்.) நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு, அவ்வினைகள் தாம்கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும், (எ-று). இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும். 658. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு நற்பா லவை. (இ-ள்.) பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்; அவ்வாறன்றி அறப்பகுதியால் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும், பின்பு பயன்படும், (எ-று). இது தேடினபொருள் போமென்றது. 659. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (இ-ள்.) வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட் கலத்தில் நீரை முகந்துவைத்த தன்மைத்து, (எ-று). இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது. 660. பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. (இ-ள்.) பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து, (எ-று). மேற் கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு, இது கூறப்பட்டது. 4. வினைத்திட்பம். வினைத்திட்பமாவது வினையின்கண் திண்ணியராதல், மேல் நல்வினையைச் செய்யவேண்டு மென்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 661. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (இ-ள்.) தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்; அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக் குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின், (எ-று). இது வினையின்கண் திண்மை வேண்டுமென்றது. 662. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. (இ-ள்.) கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்ற விடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார், (எ-று). பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்ப மின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு, இது கூறப்பட்டது. 663. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப மற்றவை யெல்லாம் பிற. (இ-ள்.) வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனை யொழிய, மற்றவை யெல்லாம் திண்மையென்று சொல்லப்படா, (எ-று). மற்றவையென்றது கருவியும் உபாயமும். 664. ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி னாறென்ப ராய்ந்தவர் கோள். (இ-ள்.) வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும், அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார், நீதி நெறியை ஆராய்ந்தவர், (எ-று). 665. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல். (இ-ள்.) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்; அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம், (எ-று). 666. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது தூக்கங் கடிந்து செயல். (இ-ள்.) கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத்துளக்கமின்றி, அதனை நீட்டியாது செய்க, (எ-று). இது விரைந்து செய்யவேண்டு மென்றது. 667. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை. (இ-ள்.) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை, (எ-று). 668. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி னெற்றா விழுமந் தரும். (இ-ள்.) ஒரு வினையைத்தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும், (எ-று). சென்றுமீளல் சுழல்தல் ஆயிற்று, இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது. 669. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து. (இ-ள்.) யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண் டும்; உருளாநின்ற பெரியதேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து; ஆதலால், (எ-று). 670. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும். (இ-ள்.) மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத்திட்ப மானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாரானும் நினைக் கப்படும், (எ-று). இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவ ரென்றது. 5. வினைசெயல்வகை வினைசெயல்வகையாவது வினைசெய்யுமாறு கூறுதல், மேல் வினை செய்யுங்கால் திண்ணியராக வேண்டு மென்று கூறினார் திண்ணியார் வினைசெய்யும் வண்ணம் கூறுகின்றா ராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 671. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல். (இ-ள்.) பொருளும், கருவியும். காலமும், வினையும், வினை செய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணி, பின்பு வினைசெயத் தொடங்குக, (எ-று). இவற்றுள், ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:- (1) பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும்; (2) கருவி யாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும்; (3) காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க்காங்காலமும்; (4) வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும்; (5) இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்படவேண்டுதலின், முற்கூறப் பட்டன. 672. முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். (இ-ள்.) வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும், அதற்குவரும் இடையூறும், முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு, பின்பு வினைசெய்க, (எ-று). 673. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவா னுள்ளங் கொளல். (இ-ள்.) செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக்கோடல். 674. வினையால் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று. (இ-ள்.) ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும், (எ-று). இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையா யினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார்பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது. 675. சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியிற் றங்குத றீது. (இ-ள்.) சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்; அவ்வாறு துணிந்த வினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின், அது தீதாம், (எ-று). இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின், அதனையறிந்து பகைவர் தம்மைக் காப்பார்; ஆதலால், நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டு மென்றது. 676. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (இ-ள்.) தாழ்த்துச் செய்யவேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க; தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க, (எ-று). 677. வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். (இ-ள்.) வினையும் பகையுமென்னும் இரண்டினது ஒழிபு, விசாரிக்குங்காலத்து, தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும், (ஏ-று). எச்சம் - சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறி தொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது. 678. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற் செல்லும்வாய் நோக்கிச் செயல். (இ-ள்.) இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று; இயலாத காலத்து அதனை நினைத்திருந்து, இயலும் இடம் பார்த் துச் செய்க, (எ-று). இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது. 679. உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து. (இ-ள்.) உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின், தம்மின் பெரியாரைத்தாழ்ந்து, நட்பாகக் கொள்வர், (எ-று). இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது. 680. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே யொட்டாரை யொட்டிக் கொளல். (இ-ள்.) தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும், (எ-று). இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும், அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது. 6. தூது. தூதாவது மாற்றரசர்மாட்டுச் சந்து செய்யும் அமாத்திய ரிலக்கணங் கூறுதல், இனிப் பகைவர்மாட்டு அமாத்தியர் செய்யுந் திறங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 681. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (இ-ள்.) அரசன் மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின் கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும், தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம், (எ-று). வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை. 682. தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. (இ-ள்.) தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொரு ளையாராய்ந்து துணிதலுடைமையும், இம் மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம், (எ-று). தூய்மை - மெய்யும் மனமும் தூயனாதல். 683. நூலார்மு னூல்வல்லா னாகுதல் வேலார்முன் வென்றி வினையுரைப்பான் பண்பு. (இ-ள்.) எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம், (எ-று). 684. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின் செறிவுடையான் செல்க வினைக்கு. (இ-ள்.) அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றி னது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க, (எ-று). அறிவு - இயற்கையறிவு 685. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பாற் கின்றி யமையாத மூன்று. (இ-ள்.) அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல் வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம், (எ-று). இத்துணையும் தூத ரிலக்கணம் கூறியவாறு. 686. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். (இ-ள்.) தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகையரசர்க்குச் சொல்லுமவன், தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையுடைய தூதனாவான், (எ-று). 687. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. (இ-ள்.) சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லி, தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூத னாவான், (எ-று). இது சொல்லுமாறு கூறிற்று. 688. கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது. (இ-ள்.) தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி, மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி, நாளோடே கூடச்செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான், (எ-று). 689. கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரைப்பான் றலை. (இ-ள்.) காரியம் நின்ற முறைமையை யறிந்து, காலத்தையும் நினைத்து, இடமும் அறிந்து, தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான், (எ-று). இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று. 690. இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது. (இ-ள்.) தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது, (எ-று). 7. மன்னரைச்சேர்ந்தொழுகல். மன்னரைச் சேர்ந்தொழுகலாவது அரசர்மாட்டு அமாத்தியர் ஒழுகுந்திறங் கூறுதல். இது முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறுகின்றவை தம்மரசர் மாட்டு வேண்டுமாயினும், மாற்றரசர் மாட்டும் வேண்டுதல் இன்றியமையாத சிறப்புடைத்தாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. 691. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். (இ-ள்.) அரசன் குறிப்பறிந்து, காலம் பார்த்து, வெறுப்பில் லாதனவாய், சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க, (எ-று). இது சொல்லுந் திறம் கூறிற்று. 692. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங் கேட்பினுஞ் சொல்லா விடல். (இ-ள்.) எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி, தமக்குப் பயன்படாதனவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக, (எ-று). சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப்படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினாவினால், நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை. 693. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக வான்ற பெரியா ரகத்து. (இ-ள்.) அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லு தலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும். தவிர்ந்தொழுகல் வேண்டும், (எ-று). இது கூற்றும் நகையும் ஆகாவென்றது. 694. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை. (இ-ள்.) யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால் பின்பு கேட்க, (எ-று). இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது. 695. மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய வாக்கந் தரும். (இ-ள்.) எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி, மன்னரால் விரும்பப்பட்டவையிற்றை விரும்பாதொழிக; அவ் விரும்பாமை, அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாத லான், (எ-று). அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம், இஃது அவற்றைத் தவிர்தல் வேண்டுமென்றது. 696. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது. (இ-ள்.) காப்பின். காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக; ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது, (எ-று). இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டு மென்றது. 697. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (இ-ள்.) மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர், அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க, (எ-று). இது சேர்ந்தொழுகுந் திறங் கூறிற்று. 698. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். (இ-ள்.) யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோ மென்று நினைத்து, அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார், (எ-று). இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டு மென்றது, 699. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். (இ-ள்.) யாம் பழமையுடையோ மென்றுகருதி, இயல்பல் லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை, தமக்குக் கேட்டைத்தரும், (எ-று). இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டு மென்றது. 700. இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற வொளியோ டொழுகப் படும். (இ-ள்.) இவர் நமக்கு இளையரென்றும் இத் தன்மையாகிய முறையரென்றும் இகழாது, அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும், (எ-று). 8. குறிப்பறிதல். குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறிய தென்னை யெனின், குறிப்பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், இறந்தது காத்தலென்னுந் தந்திரயுத்தியாற் கூறப்பட்டதென்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது. 701. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் காயினுந் தான்முந் துறும். (இ-ள்.) முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும், (எ-று). குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்கு மென்றது. 702. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம். (இ-ள்.) தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப் போல, நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும், (எ-று). இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும், மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும், காட்டுமென்றது. 703. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற. (இ-ள்.) யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து, அவர் கண்ணல்லது பிற இல்லை, (எ-று). 704. பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின். (இ-ள்.) ஒருவனோடுள்ள பகையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டை யறிவாரைப் பெறின், (எ-று). இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரி தென்றது. 705. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு ளென்ன பயத்தவோ கண். (இ-ள்.) ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக்குறிப்பை யறிய மாட்டாவாயின், தன்னுறுப்புக்களுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ?(எ-று). இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது. 706. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை யுறுப்போ ரனையரால் வேறு. (இ-ள்.) நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையார் உறுப்பால் ஒரு தன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையர், (எ-று). இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது. 707. கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி. (இ-ள்.) அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லாநாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவன். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது. 708. ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். (இ-ள்.) பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரை, தேவரோடு ஒப்பக் கொள்க, (எ-று). 709. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி யுற்ற துணர்வார்ப் பெறின். (இ-ள்.) முகத்தை நோக்கி நிற்க, அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின், (எ-று). இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது. 710. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாதுங் கொடுத்துக் கொளல். (இ-ள்.) முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க, (எ-று). உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும். 9 . அவையறிதல். அவையறிதலாவது இருந்த அவை யறிந்து அதற்குத் தக்க சொல்லுதல். அரசன் குறிப்பறிந்தாலும் அவையறிந்து சொல்ல வேண்டு மாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. 711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (இ-ள்.) இருந்த அவை யறிந்தாரை யறிந்து, அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து, சொல்லுக; சொல்லின் தொகுதியை யறிந்த தூய்மையை யுடையவர், (எ-று). தொகையறிதல் - திறனறிதல், இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது. 712. ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். (இ-ள்.) ஒள்ளிய அறிவுடையார் முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும், வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலிய சுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும், அவை யறிதலாவது, (எ-று). 713. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். (இ-ள்.) சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து, நன்மையானவற்றை யறிந்து, சொல்லுக; சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார், (எ-று). இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று. 714. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (இ-ள்.) ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந் தாற்போல இகழப்படும், அகன்றகல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல், (எ-று). இது தப்புதல் வராமற் சொல்லல்வேண்டுமென்றது. 715. நன்றென் றெவற்றுள்ளு நன்றே முதுவருண் முந்து கிளவாச் செறிவு. (இ-ள்.) நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம், (எ-று). முதுவர் - தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது. 716. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிய வல்லா ரகத்து. (இ-ள்.) நூல்களைக்கற்று, அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல் லார்முன்னர்ச் சொல்லின், (எ-று). இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது. 717. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று. (இ-ள்.) யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால், அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும், (எ-று). 718. புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு ணன்கு செலச்சொல்லு வார். (இ-ள்.) புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக; நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார், (எ-று). 719. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல். (இ-ள்.) அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவா ராயின், (எ-று). கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்ற மென்னை யென்றார்க்கு, இது இகழப்படுவரென்று கூறிற்று. 720. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில். (இ-ள்.) அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லு தலை மேற்கொள்பவர் சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார், (எ-று). 10. அவையஞ்சாமை. அவையஞ்சாமையாவது அவையின்கண் அஞ்சாமற் சொல்லுதல். அஞ்சாது சொல்லுதல்வேண்டுமாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. 721. பகையகத்துச் சாவா ரெளிய ரரிய ரவையகத் தஞ்சா தவர். (இ-ள்.) பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர், (எ-று). இஃது அவையஞ்சாமை அரிதென்றது. 722. கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருண் மிக்க கொளல். (இ-ள்.) தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லி, தாம் கற்றதினும் மிகக்கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக்கொள்ளுதல் அவையஞ்சாமையாவது, (எ-று). 723. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் கற்ற செலச்சொல்லு வார். (இ-ள்.) கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்; தாம் கற்றதனைக் கற்றார்முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார், (எ-று). இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று. 724. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு ணன்கு செலச்சொல்லா தார். (இ-ள்.) பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே; நல்லவையின் கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார், (எ-று). இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படா தென்றது. 725. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (இ-ள்.) வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? (எ-று). இது பிறர்க்குப் பயன் படாமையேயன்றித் தமக்கும் பயன்படா ரென்றது. 726. பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். (இ-ள்.) பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும்; அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும், (எ-று). மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார். 727. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து நல்லா ரவையஞ்சு வார். (இ-ள்.) கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும், நல்லாரிருந்த அவையின்கண் சொல் லுதலஞ்சுவார், (எ-று). இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது. 728. உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (இ-ள்.) உளராயினும் செத்தாரோடு ஒப்பார்; அவைக்களத்தை யஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார், (எ-று). இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ் சுதலான் வருங்குற்றம் கூறின. 729. ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா மாற்றங் கெடுத்தற் பொருட்டு. (இ-ள்.) அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக, நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும், (எ-று). நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக் கற்றலும், (2) வேதமும் ஆகமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவழங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்கு வகைப் படும். 730. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (இ-ள்.) தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து, கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர், (எ-று). இது மேற்கூறிய வாற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன் கூறிற்று. அமைச்சியல் முற்றிற்று. 3. பொருளியல் 1. நாடு. பொருளின்பகுதி: அது கூறிய அதிகாரம் ஐந்தினும் முற்படப் பொருளாக்குதற்கு இடமாகிய நாட்டியல்பு ஓரதிகாரத்தானும், அந்நாட்டிற்கு ஏமமாகிய அரணியல்பு ஓரதிகாரத்தானும், அவ்விடத் திலாக்கும் பொருள் ஓரதிகாரத்தானும், அப்பொருளினா லாக்கும் படையின் நன்மை ஓரதிகாரத்தானும் அப்படையின் நன்மையா லாக்கும் படைச்செருக்கு ஓரதிகாரத்தானும் கூறப்படும். இஃது அமைச்சராற் செய்யப்படுதலின், அதன்பின் கூறப்பட்டது. அவற்றுள், நாடாவது நாட்டிலக்கணங்கூறுதல். 731. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு. (இ-ள்.) மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொ ழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு, அவ்விடத்தை நாடாக்குக; அவை நாட்டிற்கு உறுப்பாதலால், (எ-று). இஃது இவை ஐந்துங் குறையாமல் வேண்டுமென்றது. 732. பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (இ-ள்.) நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடை மையும், இன்பமுடைமையும், காவலுடைமையு மென்று சொல்லப் பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர், (எ-று). 733. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. (இ-ள்.) தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்; தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர். 734. தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. (இ-ள்.) தப்பாமல் விளையும் நிலங்களும், தகுதி யுடையாரும், தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு, (எ-று). தள்ளா விளையுள் - மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம். 735. உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. (இ-ள்.) மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு, (எ-று). இது சேர்த லாகாதன கூறிற்று. 736. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு. (இ-ள்.) பலபலவாய்த் திரளுந் திரட்சியும், பாழ்செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினை யுடைய குறும்பரும், இல்லாதது நாடு, (எ-று). 737. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா லாற்ற விளைவது நாடு. (இ-ள்.) பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகி, கேடரிதாத லோடே மிகவும் விளைவது நாடு, (எ-று). பெரும்பொருள் - நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும் நட்டம். 738. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை. (இ-ள்.) கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவர், (எ-று). இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயி னும், பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று. 739. பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. (இ-ள்.) குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்கவல்லது நாடு, (எ-று). குடிமையாவது கடமையொழிய வருவது. 740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. (இ-ள்.) மேற்கூறியவாற்றால் எல்லாம் அமைந்ததாயினும், பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு, (எ-று). இது நாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டு மென்றது. 2. அரண். அரணாவது அரணிலக்கணங் கூறுதல். மேல் நாட்டிலக் கணங்கூறினார் நகர் இலக்கணங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 741. ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். (இ-ள்.) வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளா வதாம்; ஆதலால், அதனைச் செய்யவேண்டும், (எ-று). 742. மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண். (இ-ள்.) தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறு நிலமா யினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம், (எ-று). தெளிந்தநீர் - பெருநீர்; இது கலங்காதாதலின், அணி நிழற்காடு என்றதனாலே, செறிவுடைய காடென்று கொள்ளப்படும். 743. உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி னமைவரணா மென்றுரைக்கு நூல். (இ-ள்.) உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலா மென்று சொல்லுவர் நூலோர், (எ-று). திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல். 744. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். (இ-ள்.) முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப் பட்டது அரணாவது, (எ-று). அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல். 745. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண். (இ-ள்.) காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகலம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப் பது அரணாவது, (எ-று). சிறுகாவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல். 746. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண். (இ-ள்.) பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய், தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய், அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது, (எ-று). எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம். 747. எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண். (இ-ள்.) எல்லாப்பொருள்களையும் உடைத்தாய், உற்ற விடத்து உதவவல்ல வீரரையுடையது அரண், (எ-று). எல்லாப்பொருளுமான - நுகரவேண்டுவனவும் படைக் கலங்களும். 748. முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். (இ-ள்.) சூழலிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது, (எ-று). 749. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்லை யரண். (இ-ள்.) சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும், வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை, (எ-று). இது வினைவல்லாரும் வேண்டு மென்றது. 750. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். (இ-ள்.) சூழவல்லாரைச் சூழ்ந்து, நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது, (எ-று). பற்றாற்றுதல் - தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல். 3. பொருள் செயல்வகை. பொருள் செயல் வகையாவது பொருள் தேடுமாறும் அதனாற்பயன்கொள்ளுமாறும் கூறுதல். இது மேற்கூறிய நாடும் நகரமுமுடையார்க்கு உளதாவதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. 751. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு மெஃகதனிற் கூரிய தில். (இ-ள்.) பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி, அப்பொருள்போலக் கூரியது பிறிதுஇல்லை, (எ-று). இது பொருளீட்டல் வேண்டுமென்றது. 752. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். (இ-ள்.) அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக, (எ-று). இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும், பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும், பொருள் தேடுதலைத் தவிர்கவென்றது. 753. அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். (இ-ள்.) அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்; பொருள் வருந் திறமறிந்து, பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள், (எ-று). இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே; அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது. 754. உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (இ-ள்.) தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும், அரச னுக்குப் பொருளாம், (எ-று). உறுபொருள் - காவற் பொருள். 755. குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. (இ-ள்.) குன்றின்மேல் ஏறியிருந்து, யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும், தன் கையகத்து எய்தியபொரு ளுண் டாக ஒரு வினையை யெடுத்துக்கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை, (எ-று). இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினை செய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது. 756. ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டு மொருங்கு. (இ-ள்.) ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளிய பொரு ளாக வெய்தலாம், (எ-று). 757. அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு. (இ-ள்.) அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலித் தாய் வளர்த்தலாலே உண்டாம், (எ-று). இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று. 758. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (இ-ள்.) ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடை யாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது. 759. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று. (இ-ள்.) பொருளென்னும் மெய்யாகிய ஒளி, எண்ணப்பட்ட தேச மெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும்இருளை அறுக்கும், (எ-று). இது பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால், தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது. 760. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (இ-ள்.) பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர், (எ-று). இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது. 4. படைமாட்சி. படைமாட்சியாவது படையினது நன்மை கூறுதல். படை மேற் கூறிய பொருளினால் உண்டாமாதலானும், அதனை ஈட்டுதற்கும் நுகர்தற்கும் படை வேண்டுமாதலானும், அதன்பின் இது கூறப்பட்டது. 761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (இ-ள்.) யானை-குதிரை-தேர்-கருவி-காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால், படை வேண்டும். 762. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. (இ-ள்.) கெடுதலின்றி, கீழறுக்கப்படாததாகி, குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது, (எ-று). வழிவருதல் - வீரன்மகன் வீரனாகுதல், இது படையினது நன்மை கூறிற்று. 763. மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற மெனநான்கே யேமம் படைக்கு. (இ-ள்.) மறமும். மானமும், நல்வழிச்சேறலும், தெளிவுடை மையுமென இந்நான்குமே படைக்கு அரணாம், (எ-று). நல்வழிச்சேறலாவது மறஞ்செய்யுங் காலத்து கலக்கமின்மை. 764. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து. (இ-ள்.) உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து, மேற்செல்லவல்லது படையாவது, (எ-று). இது முந்திச்செய்யவேண்டுமென்பதூஉம், செல்லுங்கால் இட மறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம், கூறிற்று. 765. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு மாற்ற லதுவே படை. (இ-ள்.) கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதலின் றியே எதிர்நிற்கவல்ல வலியுடையதே படையாவது, (எ-று). இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது. 766. உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது. (இ-ள்.) அரசர் கெடுமிடத்து, வழிவந்த படைக்கு அல்லது பிற படைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை, (எ-று). வழிவந்த படை - வீரன் மகன் வீரன். 767. அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும். (இ-ள்.) பகைவரைக்கொல்லுந் தகுதியும், அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும், சேனையானது படை யழகினால் பெருமைபெறும். படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல். இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது. 768. ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும். (இ-ள்.) கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த வளவிலே கெடும், (எ-று). இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந்தாளல் வேண்டு மென்றது. 769. நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில். (இ-ள்.) படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத் தாயினும், தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றி யில்லையாம், (எ-று). இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டு மென்றது. 770. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை. * (இ-ள்.) தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கில்லை யாயின், படை பகையை வெல்லும், (எ-று). 5. படைச்செருக்கு. படைச்செருக்காவது படையினது வீரியங் கூறுதல், இது படைக்கு இன்றியமையாமையின், அதன்பின் கூறப்பட்டது. 771. உறினு யி ரஞ்சா மறவ ரிறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். (இ-ள்.) ஒன்றுஉற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும், தமது தன்மை குன்றுதல் இலர், (எ-று). இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது. 772. பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு. (இ-ள்.) ஒன்றுஉற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்; உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர், (எ-று). உலகியலறிவது - தான் உலகியலை வெளியார் சொல்லாமை யறிதல். 773. கான முயலெய்த வம்பினின் யானை பிழைத்தவே லேந்த லினிது. (இ-ள்.) வீரர்க்குக் காட்டகத்து முயலைப்பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது, (எ-று). இது மேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. 774. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர். (இ-ள்.) என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லா தொழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே யெழுதப் பட்டுநிற்கின்றார் பலராதலால், (எ-று). இஃது எளியாரைப் போகச்சொல்லி எதிர்ப்பாரோடு பெயரவேண்டு மென்றது. 775. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (இ-ள்.) தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச்செல்பவன், தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும், (எ-று). இது வீரர் செயல் இத்தன்மையதாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும் என்றது. 776. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி னோட்டன்றோ வன்க ணவர்க்கு. (இ-ள்.) மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின், அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும், (எ-று). விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும். 777, விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து. (இ-ள்.) தனது வாழ்நாளாகியநாளை யெண்ணி, அவற்றுள் விழுமிய புண் படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன், (எ-று). இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகு புறங் கொடாமையும் வேண்டு மென்றது. 778. சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (இ-ள்.) பரவும் புகழை விரும்பி உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து, (எ-று). இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது. 779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். (இ-ள்.) முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பி யதுசொல்லிப் பழிக்கவல்லவர் யாவர், (எ-று). இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது. 780. புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. (இ-ள்.) தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின், அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து, (எ-று). இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது. பொருளியல் முற்றிற்று. 4. நட்பியல். 1. நட்பு நட்பாவது நட்பாமாறு கூறுதல். அமைச்சு, நாடு, அரண், பொருள் படை ஐந்துங்கூறினார் இனி நட்பாமாறு கூறுகின்றார். மன்னருள் படையும் பொருளும் உள்ளிட்டன நிலைநின்று வளர்வதும் இனநலன் அழிவு பெறாத நட்பையுடையவனுக்கு அல்லது கூடாதாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 781. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (இ-ள்.) நட்புப்போல் உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போல, பிறர் நல் வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? (எ-று). இது நட்புத் தேடவரிது என்றது. 782. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பதே நட்பு. (இ-ள்.) முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது, (எ-று). 783. நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. (இ-ள்.) ஒருவனோடு ஒருவன் நட்புப்பண்ணுதல் நகுதற் பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு, (எ-று). இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும் வேண்டுமென்றது. 784. உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே யிடுக்கண் களைவதா நட்பு. (இ-ள்.) உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடை சோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது, (எ-று). 785. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை. (இ-ள்.) நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின், மனத்தின்கண் ஐயுறவின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை, (எ-று). வீற்றிருத்தல் - தலைப்பட இருத்தல். 786. இனைய ரிவர்நமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்னு நட்பு. (இ-ள்.) இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன் மையோமென்றுபேணிச் சொல்லினும், நட்புவாடும்; ஆதலால், நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க, (எ-று). 787. நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு. (இ-ள்.) படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு, (எ-று). இது குணவானோடு நட்புக்கொள்ளின், அறிவுண்டா மென்றது. 788. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும். (இ-ள்.) நட்பாராய்தற்குப் பலநாள்பழகுதல் வேண்டா; ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர் வுடைமைதானே, நட்பாகும் உரிமையைத் தரும், (எ-று). அவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு. 789. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. (இ-ள்.) பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மைபோல ஒருநாளைக் கொரு நாள் தேயும் பேதையார் கொண்ட நட்பு, (எ-று). இஃது அறிவுடையார் நட்பு வளருமென்றும் அறிவில்லாதார் நட்புத் தேயுமென்றுங் கூறிற்று. 790. அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு. (இ-ள்.) நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து, அவர் துன்பத்தை நீக்கி, நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கி, தன்னால் செயலற்ற விடத்து அவரோடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு, (எ-று). 2. நட்பாராய்தல். நட்பாராய்தலாவது நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறுதல், நட்குங்கால் ஆராய்ந்து நடக்கவேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. (இ-ள்.) நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை; நட்டபின், அவனை விடுதலில்லை யாயின், (எ-று). இது நட்பாராய்தல் வேண்டு மென்றது. 792. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு. (இ-ள்.) ஒருவனுடைய குணமும்-குடிப்பிறப்பும்-குற்றமும்-குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க, (எ-று). இவையெல்லாம் ஒத்தனவாயின், உறவு நீளச்செல்லுமென் றவாறாம். 793. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (இ-ள்.) மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து, தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை, அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொளல்வேண்டும், (எ-று). 794. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். (இ-ள்.) குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியல்லாத னவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரதுநட்பை ஆராய்ந்து கொள்க, (எ-று). இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று. 795. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து மொருவுக வொப்பிலார் நட்பு. (இ-ள்.) குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும், தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக, (எ-று). 796. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். (இ-ள்.) ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாடுதலை நீங்கி விடுதல், (எ-று). இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது. 797. உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (இ-ள்.) தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக, (எ-று). இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்கவென்றது. 798. கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும். (இ-ள்.) கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்; அவர் கொல்லுமதனினும், (எ-று). இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது. 799. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். (இ-ள்.) கேடுவந்தவிடத்தும் ஒருபயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி யளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால், (எ-று). மேல் கெடுங்காலைக்கைவிடுவாரை விடவேண்டுமென்றார் அவரை அறியுமாறென்னையென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார். 800. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும். (இ-ள்.) குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும், (எ-று). இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று. 3. பழைமை. பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவருரிமையால் செய்தனவற்றிற்குப் பொறுக்க வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. 801. பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (இ-ள்.) பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு, (எ-று). இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது. 802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். (இ-ள்.) நட்பிற்கு அங்கமாவது உரிமை; அவ் வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு, (எ-று). இது பேய்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமையுண்டாகாது போல, உடன்படாராயின் இனிமை உண்டா காதாதலான் உடன்படல் வேண்டு மென்றது. 803. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். (இ-ள்.) நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாத வற்றைச் செய்வாராயின், அதற்கு முனியாது அதனையுந் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார், (எ-று). இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது. 804. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. (இ-ள்.) ஒருவன் தனது உரிமையாலே இசைவில்லாதவற்றைச் செய்த விடத்து, தான் அமையானாயின் பின் அவனோடு பழகிய நட்பு யாதினைச் செய்யும்? இது மறுமையிற் பயன் படானென்றது. 805. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின். (இ-ள்.) நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம், (எ-று). இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. 806. அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். (இ-ள்.) தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும், அவரோடு உள்ள அன்புவிடார்; முற்காலத்து அன்பின் வழியாகவந்த நட்பையுடையவர், (எ-று). இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது. 807. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். (இ-ள்.) தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின், அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க; ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க, (எ-று) 808. எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந் தொல்லைக்க ணின்றார் தொடர்பு. (இ-ள்.) ஒழுக்கத்தின் கண்ணே நின்றார் பழைமையின் கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார், (எ-று). எல்லை - வரம்பு. 809. கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு. (இ-ள்.) குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின் வழி வந்த நட்புடையாரது நட்பை விடுத லின்றி உலகத்தார் விரும்புவர், (எ-று). 810. விழையார் விழையப் படுவர் பழையார்கட் பண்பிற் றலைப்பிரியா தார். (இ-ள்.) பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார் விரும்பாதாராலும் விரும்பப்படுவர், (எ-று). இது பகைவரும் விரும்புவாரென்றது. 4. தீ நட்பு. தீநட்பாவது தீயகுணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வரும் குற்றங் கூறுதல். 811. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை. (இ-ள்.) தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப் படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று, (எ-று). இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது. 812. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை யெய்தலி னெய்தாமை நன்று. (இ-ள்.) நட்புச்செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும், பெறாமை நன்று, (எ-று). இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார் - சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார். 813. பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா ரேதின்மை கோடி யுறும். (இ-ள்.) அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக் கும், (எ-று). இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது. 814. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது. (இ-ள்.) கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடை யராயிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று, (எ-று). இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது. 815. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும். (இ-ள்.) நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக் கோடி மடங்கு நன்மை மிகும், (எ-று). நகைவகையர்-காமுகர்-வேழம்பர்முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது. 816. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். (இ-ள்.) தம்மாலியலும் கருமத்தை முடியாது வருந்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக, (எ-று). இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது. 817. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. (இ-ள்.) மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றங் கூறுவாரது நட்பைச், சிறிதும் செறிதலைத் தவிர்க, (எ-று). இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது. 818. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (இ-ள்.) செய்யுந்தொழில் வேறாக, சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின் கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது, (எ-று). இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது. 819. உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென். (இ-ள்.) செல்வம் மிக்க காலத்து நட்புக்கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது? (எ-று). மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான், ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது. 820. உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர். (இ-ள்.) நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார். 5. கூடாநட்பு. கூடா நட்பானது சுற்றத்தாராயினும் பிறராயினும் மனத்தின் நள்ளாது நட்டாரைப் போல ஒழுகுவாரது இயல்பும் அவர்மாட்டு ஒழுகுந்திறமும் கூறுதல். தமக்கு இனமின்றிக் கருமங் காரணமாக நட்பாரும், பகைவராய் நட்பாருமென அவ்விருவகையாரையும் தீநட்புப்போலக் கடியவேண்டுமாதலின், அதன்பின் இது கூறப் பட்டது. 821. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். (இ-ள்.) நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க, (எ-று). இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது. 822. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும். (இ-ள்.) முகத்தால் இனியவாக நட்புக்கு மனத்தால் இன்னாத வாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும், (எ-று). 823. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று. (இ-ள்.) மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தெளிதற்பாலதன்று, (எ-று). இது சொல்லினால் அறிதலரிதென்றது. 824. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல ராகுதன் மாணார்க் கரிது. (இ-ள்.) நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனநல்லா ராகுதல் மாட்சிமையில்லார்க்கு அரிது, (எ-று). இது கல்வியால் அறிதல் அரிதென்றது. 825. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ லொல்லை யுணரப் படும். (இ-ள்.) உற்றாரைப் போல நல்லவானவை சொன்னாராயினும், பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும், (எ-று). 826. சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந் தீங்கு குறித்தமை யான். (இ-ள்.) வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாக, தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவர்மாட்டு நன்றுசொன்னா ரென்று கொள்ளா தொழிக, (எ-று). இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது. 827. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரழுதகண் ணீரு மனைத்து. (இ-ள்.) தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்; பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க, (எ-று). மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடாநட்பினர் வேறு காலத்திலும் அழுதகாலத்தினும் தேறப்படா ரென்க. 828. தீர்விடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (இ-ள்.) முடியுமிடங்காணின், மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு, (எ-று). இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவதுபோல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது. 829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. *(இ-ள்.) பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச் செய்து, அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரை, தாமும் அந்நட் பின்கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி, (எ-று). 830. பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட் டகநட் பொரீஇ விடல். (இ-ள்.) பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக, (எ-று). நட்பியல் முற்றிற்று. 5. துன்பவியல். (12) 1. பேதைமை. பேதைமையாவது கேட்டிற்குக் காரணமாகிய வற்றை அறியா தாரியல்பு கூறுதல். இறைமாட்சி முதலாகக் கூடாநட்பு ஈறாகப் பொருட்பகுதியாகிய அமைச்சும், நாடும், அரணும், பொருளும், படையும் நட்பும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புங் கூறினார். இனி அவ்வரசர்க்கும் அவராலாக்கப்பட்ட பொருட்கும் கேடுவரும் நெறியையறிந்து காக்குமாறு வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 831. பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் டூதியம் போக விடல். (இ-ள்.) அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று. 832. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். (இ-ள்.) அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவாராத பொருளின்கண் காதன்மை செய்தல், (எ-று). இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதை மையென்றது. 833. ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையா ரில். (இ-ள்.) நூல்களைக்கற்றறிந்தும், அவற்றைப்பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை, (எ-று). 834. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். (இ-ள்.) நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின் மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில், (எ-று). இது பேதையார்செயல் கூறிற்று. 835. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு. (இ-ள்.) பேதை ஒருபிறப்பின்கண் செய்யும்செயலாலே செய்ய வல்லன், ஏழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை, (எ-று). புக்கழுந்தல் - ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல். 836. போய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின், (இ-ள்.) ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும்பட்டு, பிறர்க்குப் புனைபூணும், (எ-று). புனைபூணல் - சிறைப்படுதல். 837. எதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை. (இ-ள்.) அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதை யானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து, (எ-று). இது பேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று. 838. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில். (இ-ள்.) மகளிர்க்குப் பேதையாரதுநட்பு மிகவும் இனிது; பிரிந்தவிடத்து, தருவதொரு துன்பம் இல்லையாதலான், (எ-று). இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று. 839. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் சூழாஅத்துப் பேதை புகல். (இ-ள்.) கழுவாதகாலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும்; சான்றோர் அவையின்கண் பேதைபுகுந்து கூடியிருத்தல், (எ-று). இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது. 840. மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். (இ-ள்.) முன்னே பித்தாய்மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற்போலாவதொன்று; பேதை தன்கையின் கண் ஒன்றுடையனானவிடத்து. 2. புல்லறிவாண்மை. புல்லறிவாண்மையாவது சிற்றறிவின் இயல்பும் அதனால் வருங் குற்றமும் கூறுதல். இதுவும் பேதைமையோடொத்த இயல்பிற்றாத லான். அதன்பின் கூறப்பட்டது. 841. வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு. (இ-ள்.) புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு, (எ-று). 842. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும். (இ-ள்.) தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற் கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும், (எ-று). இது கல்லாததனை மேற் கொள்ளுதல் புல்லறிவென்றது. 843. உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். (இ-ள்.) உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன், (எ-று). இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறி வென்றது. 844. காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு. (இ-ள்.) அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்; அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானா யிருக்கு மாதலான், (எ-று). இது கொண்டது விடாமை புல்லறி வென்றது. 845. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குற்ற மறையா வழி. (இ-ள்.) தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்து, பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு, (எ-று). எனவே, அதுவும் மறையானாயின், குற்றநாடுவாரில்லை யென்றவாறாயிற்று, இது குற்றமறையாமை புல்லறி வென்றது. 846. ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய். (இ-ள்.) அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒருநோய் போல்வன், (எ-று). இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய் யாமை புல்லறி வென்றது. 847. அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது மில்லை பெறுவான் றவம். (இ-ள்.) அறிவில்லாதான் மனங்குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன், (எ-று). இது கொடுத்தானாயினும் வரிசையறியாது கொடுக்குமாத லின், அது புல்லறிவென்றது. 848. அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு. (இ-ள்.) நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை; பொருளின் மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்; அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான், (எ-று). 849. அருமறை சோரு மறிவிலான் செய்யும் பெருமறை தானே தனக்கு. (இ-ள்.) அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றி, தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன், (எ-று). சோரவிடுதல் - பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க் கேடும் தானே செய்யுமென்றது. 850. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது. (இ-ள்.) அறிவில்லாதார் தாமே தம்மையிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது, (எ-று). இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று. 3. இகல். இகலாவது பிறரோடு மாறுகொண்டால்வரும் குற்றங் கூறுதல். இஃது அறியாதார்க்கு உளதாமாதலான், அதன்பின் கூறப்பட்டது. 851. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய். (இ-ள்.) எல்லா வுயிர்க்கும் வேறுபடுத லாகிய குணமின்மை யைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர், (எ-று). இஃது இகலாவது இதுவென்று கூறிற்று. 852. இகல்காணா னாக்கம் வருங்கா லதனை மிகல்காணுங் கேடு தரற்கு. (இ-ள்.) மாறுபடுதற்குக் காரண முண்டாயினும், ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்; கேடு வருங்காலத்து, அதனை மிகுதலைக் காணும், (எ-று). இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றா தென்றவாறு. 853. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்குந் தன்மை யவர். (இ-ள்.) இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான், (எ-று). சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு, அவரை வெல்வாரில்லை யென்றார். 854. இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலூக்கி னூக்குமாங் கேடு. (இ-ள்.) மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்; அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும், (எ-று). இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது. 855. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து. (இ-ள்.) பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும், சாதலும் கெடுதலும் கணித்து, (எ-று). நிரனிறை, இது சாயானாயின், உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது. 856. இகலானா மின்னாத வெல்லா நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு. (இ-ள்.) மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்; உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய வுள்ளக்களிப்பு உண்டாம், (எ-று). 857. மிகன்மேவு மெய்ப்பொருள் காணா ரிகன்மேவு மின்னா வறிவி னவர். (இ-ள்.) மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப்பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவு டையார், (எ-று). இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது. 858. இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும். (இ-ள்.) மாறுபடுதலாகிய இன்னாதநோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும், (எ-று). இது தோற்றமுண்டா மென்றது. 859. இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (இ-ள்.) இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்; மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின், (எ-று). எல்லா இன்பத்தின் மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு. 860. பகல்கருதிப் பற்றார் செயினு மிகல்கருதி யின்னாசெய் யாமை தலை. (இ-ள்.) தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி, இன்னாதவற்றைச் செய்தாராயினும், அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று, (எ-று). இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின், மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது. 4. பகைமாட்சி. பகைமாட்சியாவது பகைகொள்ளுங்கால் தனக்கு நன்மை பயக்குமாறு கொள்ளுதல், மேல் பகைகொள்ளலாகாதென்றார் பகைகொள்ளுங்கால் நன்மை பயக்குமாயின் கொள்கவென்ற மையால், அதன் பின் இது கூறப்பட்டது. 861. வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேன் மேக பகை. (இ-ள்.) தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக, (எ-று). இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது. 862. கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று மொல்லானை யொல்லா தொளி. (இ-ள்.) கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய், சிறுபொரு ளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது, (எ-று). 863. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின். (இ-ள்.) அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப்பெறின், அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும், (எ-று). அறிவு - காரியவறிவு. 864. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். (இ-ள்.) மீண்டும்பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகிய வன் பகை, விரும்பப்படும், (எ-று). இஃது இவையுடையார் நட்டோரிலராதலால், இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது. 865. கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து மாணாத செய்வான் பகை. (இ-ள்.) பகையை உற்றிருந்தும் மாட்சிமையில்லாதன செய்யு மவன் பகையினை, துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும், (எ-று). மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்ய மாட்டானாதலால், அப்பகை கோடலா மென்றது. 866. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து. (இ-ள்.) குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடைய னாயின், அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம், (எ-று). 867. அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா னென்பரியு மேதிலான் றுப்பு. (இ-ள்.) சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன், வேற்றரசாகிய வலிய துணையும் இலன்; ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப் பட்டவன் மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்? (எ-று). 868. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது. (இ-ள்.) வெகுளியின் நின்று நீங்கானாய், நிறையுடைமை யிலனா யினவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது, (எ-று). இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது. 869. அஞ்சு மறியா னமைவில னீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு. (இ-ள்.) அஞ்சவேண்டாதவற்றுக்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்; இப்பெற்றிப்பட் டவன் பகைவர்க்கு மிகவும் எளியன், (எ-று). இஃது இவன் நான்கு முடையவன் தோற்கும் மென்றது. 870. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றர்க் கினிது. (இ-ள்.) ஒருவினை செய்யத் தொடங்குங்கால் பின்வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழி யைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது, (எ-று). இஃது இவன் பகைமையால், பகைவர்க்கு இனிமை உண்டா மென்றது. 5. பகைத்திறந் தெரிதல். பகைத்திறந் தெரிதலாவது பகையின்கண் செய்யுந் திறமா ராய்தல். மேல் பகைகொண்டால் வெல்வாரையுந் தோற்பாரையுங் கூறினார். இனி அப்பகைவர்மாட்டுச் செய்யுந்திற மெண்ணிச் செய்ய வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 871. உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். (இ-ள்.) பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கு மாத்திரத்திலே அறுதியாகச் சாவர், (எ-று). இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது. 872. பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று. (இ-ள்.) பகையென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று, (எ-று). இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது. 873. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. (இ-ள்.) வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும், சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளதொழிக, (எ-று). இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகா தென்றது 874. தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. (இ-ள்.) பகையிரண்டாய், தான் ஒருவனாய், தனக்குத் துணையும் இலனாயின், அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்துகொள்க, (எ-று), இஃது இருவரொடு பகைகொள்ளலாகா தென்றது. 875. ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். (இ-ள்.) பித்து உற்றவரினும் அறிவிலன்; தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன், (எ-று). இது பலரோடும் பகைகொள்ளலாகா தென்றது. 876. தேறினுந் தேறா விடினு மழிவின்கட் டேறான் பகாஅன் விடல். (இ-ள்.) பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்து, தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக, (எ-று). இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்தோரியல்பு கூறிற்று. 877. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கு முலகு. (இ-ள்.) பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும், (எ-று). இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று. 878. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. (இ-ள்.) தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக, (எ-று). இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது. 879. இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. (இ-ள்.) முள்மரத்தை இளைதாகவே களைக; முற்றினவிடத்து, தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால், (எ-று). இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டு மென்றது. 880. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. (இ-ள்.) வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கி, தான் தன்னைக்காக்க, பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும், (எ-று). இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று. 6. உட்பகை. உட்பகையாவது உடனே வாழும் பகைவர் செய்யுந்திறங் கூறுதல். அஃதாவது புறம்பு நட்டார் போன்றும் சுற்றத்தாராயும் ஒழுகி மனத்தினாற் பகைத்திருப்பார் செய்யுந் திறங்கூறுதல். இதுவும் ஆராய்ந்து காக்கவேண்டுமாதலின், அதன்பின் கூறப்பட்டது. 881. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. (இ-ள்.) வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத் திருப்பார் தொடர்பை அஞ்சுக. இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது. 882. உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். (இ-ள்.) உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க; அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்து, குயவன் கலத்தை அறுக்குங் கருவி போலத் தப்பாமல் கொல்லுவர், (எ-று). மட்பகை தான் அறுக்குங்கால் பிறரறியாமல் நின்று அறுக்கும். 883. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாங் கேடு. (இ-ள்.) எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும், உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம், (எ-று). இது பகை சிறிதென் றிகழற்க வென்றது. 884. நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின். (இ-ள்.) நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும்; அதுபோல, சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின், அஃது இன்னாதாயே விடும், (எ-று). இது சுற்றமென் றிகழற்க என்றது. 885. அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி. (இ-ள்.) உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலிதேயும், (எ-று). இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்கு மென்றது. 886. செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி. (இ-ள்.) உட்பகையும் அஃது உற்ற குடியும் செப்பும் மூடியும் பொருந்தினாற்போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்ல வாம், (எ-று). உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து, செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு. 887. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று. (இ-ள்.) மனத்தினால் பொருத்தமில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும், (எ-று). இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அது போல, உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது. 888. மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா வேதம் பலவுந் தரும். (இ-ள்.) மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின், தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம், (எ-று). இஃது இனம் பொருந்தாமல் கூட நின்று பகைப்பிக்கு மென்றது. 889. உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா னேதம் பலவுந் தரும். (இ-ள்.) உறவு முறையோடே உட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும், (எ-று). 890. ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது. (இ-ள்.) தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது, (எ-று). இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று. 7. பெரியாரைப் பிழையாமை. பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும், முனிவரையும், அறிஞரையும் பிழைத்தொழுகாமை. மேல் பகையும் பகையின்கண் செய்யும் திறமும் கூறினார். தம்மிற் பெரியார் தம்மைப் பகையாகக் கொள்ளாராயினும், தமது இகழ்ச்சி அவரால் தீமை பயக்குமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. 891. கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி னாற்று பவர்க ணிழுக்கு. (இ-ள்.) தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க; தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புசெய்க, (எ-று). 892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும். (இ-ள்.) பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின், அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும், (எ-று). இது முனிவரைப் போற்றா தொழியின், அது குற்றம் பயக்கு மென்றது. 893. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். (இ-ள்.) வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும், (எ-று). 894. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந் தகைமாண்ட தக்கார் செறின். (இ-ள்.) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்; பெருமையால் மிக்க தகுதி யுடையார் செறுவாராயின், (எ-று). எல்லாவகையுமாவன - சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின. 895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். (இ-ள்.) எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்; வெற்றி வலியையுடைய வேந்தனால் செறப்பட்டார், (எ-று). இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது. 896. எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (இ-ள்.) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரி யாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார், (எ-று). இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார். 897. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். (இ-ள்.) மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்; மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின், (எ-று). இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது. 898. ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். (இ-ள்.) உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெருள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும், (எ-று). இது பொருட்கேடு வருமென்று கூறிற்று. 899. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. (இ-ள்.) மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடி யோடே கூட மாய்வர், (எ-று). குன்ற மதித்தல் - அவமதித்தல். 900. ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை. (இ-ள்.) தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று. 8. பெண்வழிச் சேறல் பெண்வழிச் சேறலாவது இன்பங் காரணமாக மனையாள்வழி ஒழுகுதலும், கணிகையரோடு கூடி ஒழுகுதலும், நறவுண்டு களித்தலும், சூதாடலும், தீயளவன்றி மிக உண்டலுமென ஐந்து வகைப்படும்; அவற்றுள், பெண்வழிச் சேறலாவது மனைவியர் வழியொழுகுதலினால் வரும் குற்றங் கூறுதல். 901. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர். (இ-ள்.) தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்,(எ-று). இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது. 902. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல். (இ-ள்.) மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும், (எ-று). இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது. 903. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. (இ-ள்.) மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய் தாதவன், ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை யெய்துதல் இல்லை, (எ-று). இரு பொருள் செய்ய மாட்டாரென்றது. 904. இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாரு ணாணுத் தரும். (இ-ள்.) மனையாள்மாட்டுத் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு, எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும், (எ-று). 905. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து. (இ-ள்.) பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே, தலைமை உடைத்தாம், (எ-று). இது பிறரால் மதிக்கப்படாரென்றது. 906. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர். (இ-ள்.) நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார் குறைதீர்க்கவுமாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவுமாட்டார். குறைதீர்த்தல் - உற்ற துயரம் தீர்த்தல். 907. அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க் கணில். (இ-ள்.) அறஞ்செய்தலும், அமைந்த பொருள் செய்தலும், ஒழிந்த காம நுகர்தலும், பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம், (எ-று). இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின், இம்மூன்று பொருளும் எய்தார் என்றது. 908. மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது. (இ-ள்.) மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒரு வினையைச் செய்து முடிக்க வேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை, (எ-று). இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி, அவர் தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது. 909. பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். (இ-ள்.) அறத்தினையும் பொருளினையும் பேணாது மனை யாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாக, தனக்கு நாணினைத் தரும், (எ-று). 910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (இ-ள்.) எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லை யாம், (எ-று). எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்து ணர்தல். 9. வரைவின் மகளிர் வரைவின்மகளிராவது கணிகையரோடு கலந்தொழுகினால் வரும் குற்றங் கூறுதல். முயக்கத்தில் வரைவின்மையால், வரைவின் மகளிரென்று கூறப்பட்டது. 911. பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றூக்கி நள்ளா விடல். (இ-ள்.) தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து, அவரைச் சாராதொழிக, (எ-று). இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறினார். 912. அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்கந் தரும். (இ-ள்.) அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும், (எ-று). 913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ யற்று. (இ-ள்.) பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுமைப் பிணத்தைக் கூலிக்குக் தழுவியதுபோலும், (எ-று). இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது. 914. பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர். (இ-ள்.) பொருளைப் பொருளாகக் கொள்வாரது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார், (எ-று). 915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர். (இ-ள்.) மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார், (எ-று). இது புத்திமான் சேரானென்றது. 916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். (இ-ள்.) தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்; வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை, (எ-று). 917. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு. (இ-ள்.) யாதானும் ஒருபொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு, வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை, (எ-று). இஃது இவரை அறிவில்லாதார் சேர்வரென்றது. 918. நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். (இ-ள்.) நிறையுடைய நெஞ்சில்லாதவர் தோய்வர்; இன்பமல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பி வைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை, (எ-று). இது நிறையில்லாதார் சேர்வரென்றது. 919. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர் களாழு மளறு. (இ-ள்.) முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம், (எ-று). இஃது இழிந்தார் சார்வரென்றது. 920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (இ-ள்.) கவர்ந்தமனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும், திருமகளால் கடியப்பட்டாரது நட்பு, (எ-று). இது நல்குரவாவார் சார்வரென்றது. 10. கள்ளுண்ணாமை கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத் தவிரவேண்டு மென்று கூறுதல். இது கணிகையர் கூட்டத்தினால் வருதலின், அதன் பின் கூறப்பட்டது. 921. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார். (இ-ள்.) கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின், சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க, (எ-று). 922. ஈன்றான் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. (இ-ள்.) தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; அங்ஙனமாக, சான்றோர் முன்பு களித்தல் மற்றி யாதாகும்? (எ-று). எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று. 923. நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (இ-ள்.) நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு, (எ-று). இது நாணம் போமென்றது. 924. உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார். (இ-ள்.) பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல் கொண்டு ஒழுகுவார், (எ-று). இது மதிக்கவும் படார், புகழும் இலராவரென்றது. 925. துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (இ-ள்.) உறங்கினார் செத்தாரோடு ஒப்பர்; அறிவிழத்தலான், அது போல, எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர்; மயங்குதலான், (எ-று). இஃது அறிவிழப்பரென்றது. 926. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (இ-ள்.) தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்து, தான் கள்ளுண்டபோழ்து தனக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான் போலும்; நினைப்பனாயின், தவிரும், (எ-று). 927. களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (இ-ள்.) கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளி வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும், (எ-று). இது பிறர்சொல்லவும் கேளாரென்றது. 928. உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர். (இ-ள்.) தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதின் கண்ணே தாழ்வார், (எ-று). 929. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (இ-ள்.) கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக; மனத்தின் கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சோர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு, (எ-று). உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது. 930. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். (இ-ள்.) பயன் அறியாமை யுடைத்து; பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல், (எ-று). இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யாரென்றது. 11. சூது. சூதாவது சூதாடினால் வரும் குற்றங்கூறுதல். இது மேற்கூறியவற்றோடொத்தவியல்பிற்றாதலின், அதன்பின் கூறப் பட்டது. 931. வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. (இ-ள்.) வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும், தூண்டிலின் கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற் போலும், (எ-று). இது பின் கேடுபயக்கு மென்றது. 932. அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு முகடியான் மூடப்பட்டார். (இ-ள்.) தமக்கு உள்ளாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி, அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார், (எ-று). மறைத்தல்-நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல். 933. உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின். (இ-ள்.) உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியு மென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின், சாராவாம், (எ-று). செல்வம் - பொன்னும், மனையும், பூமியும், அடிமையு முதலாயின. 934. உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். (இ-ள்.) புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவ னாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல் லும், (எ-று). 935. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங் கழகத்துக் காலை புகின். (இ-ள்.) சூதுகழகத்தின் கண்ணே காலைப்பொழுது புகுவா னாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும், (எ-று). 936. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது. (இ-ள்.) சூது, முற்படப் பொருளைக் கெடுத்து, அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி, அருளுடைமையைக் கெடுத்து, அல்லற்படுத்துவிக்கும். 937. ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ னன்றெய்தி வாழ்வதோ ராறு. (இ-ள்.) முன்பு ஒருபொருளைப் பெற்று, அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ? (எ-று). 938. இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர். (இ-ள்.) பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூது போல. துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலு டைத்து உயிர்; இவை இரண்டினுக்கும் அஃதியல்பு, (எ-று). 939. சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில். (இ-ள்.) துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல, வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை, (எ-று). 940. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி யிவறியா ரில்லாகி யார். (இ-ள்.) கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார், (எ-று), கவறு - நெத்தம்; கழகம் - உண்டையுருட்டு மிடம்; கைத்தொழில் - கவடி பிடித்தல். 12. மருந்து மருந்தாவது யாக்கை நோயுறாமற் செய்யுந் திறங்கூறுதல், மேல் கடியப்படுவன கூறினார், இனிக்கடியப்படாத உணவும் தன்னளவில் மிகுமாயின் துன்பம் பயக்கு மாதலான், அதுவும் அளவு அறிந்துண் ணவேண்டு மென்று அதன்பின் இது கூறப்பட்டது. 941. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின் (இ-ள்.) யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா; குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்ப னாயின், (எ-று). இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது. 942. அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு. (இ-ள்.) முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க; அஃது உடம்பு பெற்ற வன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரியவழி, (எ-று). 943. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. (இ-ள்.) முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து, பின்பு அறுமளவும் கடைப்பிடித்து, உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறு கொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க, (எ-று). மாறு கோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம் இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலே யன்றி மாறல்லவும் உண்ண வேண்டு மென்றது. 944. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு. (இ-ள்.) சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பனாயின், தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை, (எ-று). மாறுபாடு - பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல். 945. இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய். (இ-ள்.) அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம்; மிக உண்பான்கண் நோய், (எ-று). 946. மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று. (இ-ள்.) உணவும் உறக்கமும் இணைவிழைச்சம் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும், (எ-று). 947. நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (இ-ள்.) நோயினையும் ஆராய்ந்து, நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து, அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து, அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க, (எ-று). இது நோய் தீர்க்குமாறு கூறிற்று. 948. உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் கற்றான் கருதிச் செயல். (இ-ள்.) நோயுற்றவனது அளவும், நோயினது அளவும், அதுபற்றிய காலமும் அறிந்து, அதற்குத்தக்கவாறு மருந்து செய்க; ஆயுள் வேதம் வல்லவன். 949. உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. (இ-ள்.) நோயுற்றவனும், நோய்தீர்க்கு மவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து, (எ-று). 950. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி னோயள வின்றிப் படும். (இ-ள்.) பசியின் அளவன்றி ஆராயாதே மிகவுண்பானாயின், மிகநோய் உண்டாம், (எ-று). இது நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின், மீண்டும் நோயா மாதலான், அளவறிந்து உண்ணல் வேண்டு மென்றது. துன்பவியல் முற்றிற்று. 6. குடியியல். (13) 1. குடி குடியியலாவது அரசரும், அமைச்சரும், வீரருமல்லாத மக்கள் தமது இயல்பு கூறுதல். கூறிய அம்மூன்றினும் முற்படக் குடிப்பிறந் தார் இலக்கணங் கூறுவர். 951. நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. (இ-ள்.) முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர், (எ-று). 952. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு. (இ-ள்.) உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டா கா, (எ-று). இஃது இற்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடைய ரென்றது. 953. ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று மிழுக்கார் குடிப்பிறந் தார். (இ-ள்.) ஒழுக்க முடைமையும், மெய்ம்மை கூறுதலும், அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார். 954. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (இ-ள்.) வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும், அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்; அதுபோல, உயர் குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும், (எ-று). 955. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர். (இ-ள்.) பல கோடிப் பொருளைப் பெறினும், உயர் குடிப்பிறந்தார் தங் குடிக்குத் தாழ்வாயின செய்யார், (எ-று). இது சான்றாண்மை விடாரென்றது. 956. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. (இ-ள்.) வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கிய விடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பி னின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது. 957. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார். (இ-ள்.) பொய்யைச் சார்ந்து, அமைவில்லாதன செய்யார்; குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார், (எ-று). இது சான்றாண்மை விடார் என்றது. 958. நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. (இ-ள்.) ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின், நாணுடை மையை விரும்புக; அவ்வண்ணமே, குலத்தை விரும்புவாராயின், யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக, (எ-று). இது பணிந்தொழுக வேண்டு மென்றது. 959. குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (இ-ள்.) உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும்; ஆதலால், குற்றப்பட ஒழுகற்க, (எ-று). இது குற்றஞ் செய்தலைத் தவிரவேண்டுமென்றது. 960. நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ணையப் படும். (இ-ள்.) ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின், அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக, (எ-று). 2. மானம் மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது குடிப்பிறந்தார்க்கு இன்றியமையாமையின் அதன்பின் கூறப் பட்டது. இது மூன்று வகைப்படும்; தமது தன்மை குன்றுவன செய்யாமையும், இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவு பொறாமையுமென. 961. இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல். (இ-ள்.) இன்றியமையாத சிறப்புடையனவாயினும், தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக, (எ-று). இது பொருளும் இன்பமும் மிகினும், தன்மை குறைவன செய்யற்க வென்றது. 962. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு. (இ-ள்.) செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணி தல்வேண்டும்; செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும், (எ-று). 963. சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரோடு பேராண்மை வேண்டு பவர். (இ-ள்.) தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும், நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார், (எ-று). 964. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (இ-ள்.) தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப் படுவர்; மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து, (எ-று). 965. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின். (இ-ள்.) மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்; ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின், (எ-று). இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது. 966. புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. (இ-ள்.) இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதவில்லை; ஆயின், தன்னை இகழ்ந்து ரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்னபயனைக் கருதி? (எ-று). இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது. 967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று. (இ-ள்.) ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று, (எ-று). 968. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (இ-ள்.) தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து, சாவாதே இருந்து உயிரினையோம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ, (எ-று). பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக. 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின். (இ-ள்.) ஒருமயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமானைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர், (எ-று). 970. இளிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முலகு. (இ-ள்.) இளிவரவு உண்டானால், உயிர் வாழாத மானமு டையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு, (எ-று). 3. பெருமை. பெருமையாவது சிறியார் செயல் செய்யாமை. அது பின்பு காணப்படும். 971. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (இ-ள்.) எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தான் செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது, (எ-று). எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று. 972. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல்ல வர். (இ-ள்.) மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்; கீழான இடத்திருந்தாலும், கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார், (எ-று). இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம். 973. இறப்போரிருந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின். (இ-ள்.) செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம், (எ-று). சீரல்லவர் - பெரியரல்லர். 974. பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடும். (இ-ள்.) பெருமையாவது செருக்கின்மை; சிறுமை செருக்கினை மேற் கொண்டொழுகுமாதலான், (எ-று). மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச் செருக்கின்மை பெருமையென்று கூறினார். 975. பணியுமா மென்றும் பெருமை சிறுமை யணியுமாந் தன்னை வியந்து. (இ-ள்.) பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்; சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும், (எ-று). இரு பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று. 976. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். (இ-ள்.) பெருமை பிறருடைய குறையை மறைத்துச் சொல்லும்; சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத் தையே சொல்லி விடும், (எ-று). இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று. 977. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் கஃதிறந்து வாழு மெனல். (இ-ள்.) ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்; அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான், (எ-று). இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று. 978. ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. * (இ-ள்.) கவரா மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக் கொண்டொழுகுமாறுபோல, பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத் தான் காத்துக் கொண்டோழுகுவானாயின், அவன்கண் உண்டாம், (எ-று). 979. சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு. (இ-ள்.) சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து, (எ-று). இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று. 980. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி னருமை யுடைய செயல். (இ-ள்.) பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்; செய்தற்கு அருமையுடைய செயல்களை, (எ-று). இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது. 4. சான்றாண்மை சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றாலும் அமைந் தார் இலக்கணங் கூறுதல். இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளி செய்தொழுகுவாரை நோக்கிற்று. 981. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (இ-ள்.) ஒருவனுக்குச் சால்பாகியநிலை உண்டாகப் பெறின், பொருளின்மைஇளிவாகாது, (எ-று). இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது. 982. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (இ-ள்.) தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்; அதுபோல, சான்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும், பிறர் பழியைச் சொல் லாத நலத்தையுடையது சால்பு. 983. அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண். (இ-ள்.) அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடை மையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். (எ-று). இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது. 984. குணநலஞ் சான்றோர் நலனே பிறநல மெந்நலத் துள்ளதூஉ மன்று. (இ-ள்.) சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்; குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்திலும் உள்ளதொரு நலமன்று, (எ-று). இது குணநலம் சால்பிற்கு அழகென்றது. 985. ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. (இ-ள்.) பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந் தொழுகுதல்; சான்றோர் தாம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே, (எ-று). 986. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. * (இ-ள்.) நமக்குத் தருவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற் கொண்டொழுகுவார்க்கு, நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர், (எ-று). 987. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல். * (இ-ள்.) சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல், (எ-று). 988. இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு. * (இ-ள்.) தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைத் செய்யாராயின். அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து, (எ-று). 989. ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். * (இ-ள்.) சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப் படுவார். ஏனைக் கடலுங் கரையுணில்லாமற் காலந் திரிந்தாலும் தாந்திரியார், (எ-று). 990. சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான் றாங்காது மன்னோ பொறை. * (இ-ள்.) பலகுணங்களானு நிறைந்தவர் தந்தன்மை குன்று வராயின், மற்றை விருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும், (எ0று). 5. பண்புடைமை 991. எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. * (இ-ள்.) யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடைமையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர். 992. அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. * (இ-ள்.) பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின்கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்பு டைமையென்று உலகத்தார் சொல்லும் நன்னெறி, (எ-று). 993. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு. * (இ-ள்.) செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின், அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய வொப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல், (எ-று). 994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு. * (இ-ள்.) நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர், (எ-று). 995. நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. * (இ-ள்.) தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னாது; ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார் மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன, (எ-று). 996. பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன். * (இ-ள்.) பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ் ஞான்று முண்டாய் வாராநின்றது; ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம், (எ-று). 997. அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். * (இ-ள்.) நன்மக்கட்கேயுரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலுங் கூர்மையுடையரே யாயினும், ஓரறிவிற்றாய மரத்தினை யொப்பர், (எ-று). 998. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை. * (இ-ள்.) தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையரா யொழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம். 999. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். * (இ-ள்.) பண்பின்மையான் ஒருவரோடுங் கலந்து உண்டு மகிழ்தன் மாட்டாதார்க்கு மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற் பொழுதினும் இருளின்கட் கிடந்ததாம், (எ-று). 1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று. * (இ-ள்.) பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்லவான்பால் ஏற்றகலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும், (எ-று). 6. நன்றியில் செல்வம் நன்றியில் செல்வமாவது அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தினியல்பு கூறுதல். இது பண்பிலாதார்க் குளதாவதொன் றாதலின், அதன் பின் கூறப்பட்டது. 1001. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர். (இ-ள்.) பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி, அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர், (எ-று). 1002. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை. (இ-ள்.) பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர், (எ-று). இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது. 1003. வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். (இ-ள்.) இடம் நிறைந்த பெரும்பொருளை யீட்டிவைத்தா னொருவன் அதனை நுகரானாயின், செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது. 1004. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியண்மூத் தற்று. (இ-ள்.) பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாத வனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தனிய ளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது. 1005. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம்பழுத் தற்று. (இ-ள்.) பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்ததன்மைத்து, (எ-று). இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின், அவரைக் கொல்லுமென்றது. 1006. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன். (இ-ள்.) ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ? (எ-று). இது புகழில்லையா மென்றது. 1007. பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு. (இ-ள்.) பொருளினாலே யெல்லாச் சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத் தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம், (எ-று). இது தீக்கதியுள் உய்க்குமென்றது. 1008. கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில். (இ-ள்.) பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லா தார்க்குப் பலகோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும், (எ-று). 1009. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. (இ-ள்.) சீருடைய செல்வர் சிறு துனியால் ஈயாதொழிதல், மாரி பெய்யாமை மிக்காற் போலும், (எ-று). மேற்கூறிய நன்றியில்செல்வ முடையாரன்றி நற்செல்வமுடை யாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவரென்றவாறு. 1010. ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் றீத லியல்பிலா தான். (இ-ள்.) தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து, (எ-று). 7. நாணுடைமை. நாணுடைமையாவது அறம் பொருள் இன்பங்களிற் பிறர் பழியாம லொழுகுதல். 1011. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. (இ-ள்.) உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல் லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை, (எ-று). இது நாணம் வேண்டுமென்றது. 1012. ஊணைக் குறித்த துயிரெல்லா நாணென்னு நன்மை குறித்தது சால்பு. (இ-ள்.) பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று; அதுபோல, சால்பு நாணமாகிய நன்மையைக் கருதிற்று, (எ-று). இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது. 1013. நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா னாண்டுறவார் நாணாள் பவர். (இ-ள்.) நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்; உயிர்ப்பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர், (எ-று). இது நாண் உயிரினும் சிறந்ததென்றது. 1014. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை. (இ-ள்.) சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின், பெரிய நடை நோயன்றோ? (எ-று). இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது. 1015. பிறர்நாணத் தக்கது தானாணா னாயி னறநாணத் தக்க துடைத்து. (இ-ள்.) உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் காணாது செய்வனாயின், அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம், (எ-று). இது நாணமில்லாதாரை அறம் சாராதென்றது. 1016. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை. (இ-ள்.) ஒழுக்கம் தப்புமாயின். அத் தப்புதல் குலத்தினைச் சுடும்; அது போல, நாணின்மை நிற்குமாயின், தமது நலத்தினைச் சுடும், (எ-று). இது நலமில்லையா மென்றது. 1017. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று. (இ-ள்.) மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல். மரப் பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும், (எ-று). இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது. 1018. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். * (இ-ள்.) உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக்கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார், (எ-று). 1019. கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற. (இ-ள்.) தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம்; அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு, இது கூறப்பட்டது. 1020. பிறர்பழியுந் தம்பழிபோ னாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு. (இ-ள்.) பிறர்க்குவரும் பழியையும் தமக்குவரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார், (எ-று). இது தம்பழிக்கு அஞ்சிக் காணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சிக் காண வேண்டுமென்றது. 8. குடிசெயல்வகை குடிசெயல்வகையாவது குடியோம்புதல் வேண்டு மென்று கூறுதல். இது நாணமுடையார் செயலாதலின், அதன்பின் கூறப்பட்டது. 1021. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த வில்லாண்மை யாக்கிக் கொளல். (இ-ள்.) ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப் படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக் கிக்கோடல், (எ-று). ஆளுதலுடைமை - குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது. 1022. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை. (இ-ள்.) போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர் தாங்கல் வன் கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒரு குடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல், (எ-று). 1023. ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி னீள்வினையா னீளுங் குடி. (இ-ள்.) முயற்சியும் நிரப்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும், (எ-று). 1024. கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில். (இ-ள்.) ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்றுசொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை, (எ-று). 1025. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு. (இ-ள்.) சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு, துன்பத்திற்குக் கொள்கலமாம், (எ-று). 1026. குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து மானங் கருதக் கெடும். (இ-ள்.) குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தங் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான், (எ-று). இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது. 1027. சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. (இ-ள்.) தங்குடியைத் தாழச்செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவு பெறும், (எ-று). கருதினவளவிலே அவரது நல்வினைதானே முடிக்கும்; இவர் தம்கண் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு. 1028. குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும். (இ-ள்.) குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும், (எ-று). படிதற்றல் -தொழில் செய்வார் ஆடையை யிறுக உடுத்தல். 1029. குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு. (இ-ள்.) குற்றப்பட ஒழுகுத லிலனாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை, உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவருவர். 1030. இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று நல்லா ளிலாத குடி. (இ-ள்.) இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்; பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக் கோல்போலத் தாங்க வல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம், (எ-று). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று. 9. உழவு உழவாவது உழவின்திறனும் அதனால் வரும் பயனும் கூறுதல். 1031. சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழன்று முழவே தலை. (இ-ள்.) உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந் தாலும், ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்; ஆதலான், வருந்தியும் உழுதலே தலைமையுடையது, (எ-று). இஃது உழவு வேண்டுமென்றது. 1032. தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாமற் சான்று படும். (இ-ள்.) ஒரு பலப்புழுதியை கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும், (எ-று). மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதி யுணக்க வேண்டுமென்றார். 1033. ஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி னீரினு நன்றதன் காப்பு. (இ-ள்.) உழுகின்றதிலும் நன்றாம் எருவிடுதல்; களை கட்ட பின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல், (எ-று). இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம், எருவிட வேண்டு மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம், பசுப்புகுதாமற் காக்கவேண்டுமென்பதூஉம் கூறிற்று. 1034. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் தில்லாளி னூடி விடும். (இ-ள்.) நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பனாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும், (எ-று). இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது. 1035. இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (இ-ள்.) பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார், (எ-று). 1036. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை. (இ-ள்.) உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்குவராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவத னையும் விட்டே மென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை, (எ-று). எனவே, துறவறத்தின்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு. 1037. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர். (இ-ள்.) உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமாவது உழவினால் வருஞ் செல்வமென்றது. 1038. பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர். (இ-ள்.) பல அரசர் குடைநிழலும் தம்மரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர், (எ-று). குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல், இது தாம் வாழ்தலே யன்றித் தம்மரசனையும் வாழ்விப்பரென்றது. (அலகுடைய நிழல் - கதிர்களையுடைய நெற்பயிரின் நிழல்.) 1039. உழுவா ருலகத்தார்க் காணியஃதாற்றார் தொழுவாரே யெல்லாம் பொறுத்து. (இ-ள்.) உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே; அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வன வெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார், (எ-று). இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று. 1040. இலமென் றசைஇ யிரப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும். (இ-ள்.) பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால், நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும், (எ-று). இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்கு மென்றது. 10. நல்குரவு நல்குரவாவது பொருளில்லாதார்க்கு உளதாகுங் குற்றங் கூறுதல். இஃது உழவில்லாதார்க்கு உளதாவ தொன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது. 1041. இன்மை யின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது. (இ-ள்.) நல்குரவுபோல இன்னாதது யாதெனின், நல்குரவுபோல இன்னாதது தானே, (தானே-நல்குரவே), (எ-று). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது. 1042. இன்மை யெனவொரு பாவி மறுமையு மிம்மையு மின்றி விடும். (இ-ள்.) நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன், இம்மையின்கண்ணும் மறுமையின் கண்ணும் நுகர்ச்சி யின்றி விடும், (எ-று). தன்மம் பண்ணாமையால், மறுமையின்கண்ணும், நுகர்ச்சியில் லாமையாயிற்று, இது நல்குரவு துன்பமாக்கு மென்றது. 1043. தொல்வரவுந் தோலுங் கெடுக்குங் தொகையாக நல்குர வென்னு நசை. (இ-ள்.) தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு, (எ-று). நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால், ஆசையாயிற்று, தொல்-ஆகுபெயர், இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது. 1044. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். (இ-ள்.) நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும், (எ-று). ஏற்றுக்கொள்வாரில்லை யென்றவாறாயிற்று, இது கல்வி கெடும்; கற்றத்தாரும் கைவிடுவ ரென்றது. 1045. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (இ-ள்.) வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மை யுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும், (எ-று). இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம் - இரப்பார்க்கு உரைக்கத் துன்பம். 1046. நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது. (இ-ள்.) நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப் பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினானும் அரிது, (எ-று). இஃது உறங்கவொட்டா தென்றது. 1047. இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலு நிரப்பு. (இ-ள்.) இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றதுபோலுற்ற நிரப்பிடும்பை, (எ-று). இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று. 1048. இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (இ-ள்.) நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும், (எ-று). 1049. துப்புர வில்லார் துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குங் கூற்று. (இ-ள்.) நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம், (எ-று). துறப்பாராயின், நன்றென்றவாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்ப முறுதலன்றி, இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா தென்று கூறிற்று. 1050. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். * (இ-ள்.) அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான் தன்னை யீன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக் கப்படும், (எ-று). 11. இரவு இரவாவது பிறர்மாட்டுச்சென் றிரந்து கோடல். இது நல்கூர்ந்தார் செயலாதலின், அதன்பின் கூறப்பட்டது. 1051. இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி னவர்பழி தம்பழி யன்று. (இ-ள்.) தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின், இரந்து கொள்க; அவர் இல்லை யென்பாராயின், அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது, (எ-று). இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகாதென் பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று. 1052. ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண் மேவாரில் லாத கடை. (இ-ள்.) இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக் கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம், (எ-று). இஃது இரப்பாரில்லாராயின், புகழுடையார் இலராவர்; ஆதலால், இரவு பழிக்கப்படா தென்றது. 1053. இன்ப மொருவர்க் கிரத்த லிரந்தவை துன்ப முறாஅ வரின். (இ-ள்.) இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்; இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின், (எ-று). இது வேண்டிய பொருள் பெறின், துன்பமாகா தென்றது. 1054. இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால மரப்பாவை சென்றுவந் தற்று. (இ-ள்.) குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர் களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும், (எ-று). இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான், இரத்தல் இழி வென்று கொள்ளப்படா தென்றது. 1055. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து. (இ-ள்.) இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி, அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது, வேண்டப் பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்துநின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து, (எ-று). 1056. இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றதார் மாட்டு, (இ-ள்.) கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு, இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும், (எ-று). ஈதலேபோலும் என்பதற்கு ‘காத்தல் கனவிலுந் தேற்றாதார்’ என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும். 1057. கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். (இ-ள்.) கரப்பிடும்பை இல்லாதாரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும், (எ-று). கரப்பிடும்பை யில்லார் என்றமையால், இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது. 1058. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து. (இ-ள்.) கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து, (எ-று). இஃது ஒப்புர வறிவார்மாட்டு இரத்தலா மென்றது. 1059. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. (இ-ள்.) ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற் கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே, மற்றொன் றாலன்று, (எ-று). மேல் கரவாதார்மாட் டிரக்கவென்றார் உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு, இது கூறினார். 1060. இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி. (இ-ள்.) ஒருவனை யிரந்தான் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும்; பொருளரிதென்பதற்குத் தன்னு டைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று, (எ-று). இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று. 12. இரவச்சம் இரவச்சமாவது இரத்தலைத் தவிரவேண்டுமென்று கூறுதல். மேல் நல்கூர்ந்தார் இவர்மாட்டே இரத்த லமையுமென்று பொதுப் படக் கூறினாராயினும், மேலாயினார்க்கு அது தகுதியன்றென்பது குறித்து இவ்வதிகாரம் கூறப்பட்டது. இது மேலதனோடியையும். 1061. இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று. (இ-ள்.) பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்; இரக்குமிடத்து, இல்லையென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி, (எ-று). இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலா கா தென்றது. 1062. ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவி னிளிவந்த தில். (இ-ள்.) இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும், நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை, (எ-று). இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது. 1063. இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். (இ-ள்.) வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்போமென்று கருதுகின்ற வன்மை போல, வன்பாயிருப்பது பிறிது இல்லை, (எ-று). இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது. 1064. இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். (இ-ள்.) ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப் பட்டார்மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும், (எ-று). இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று. 1065. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதூஉ மின்றிக் கெடும். (இ-ள்.) இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்; இரக்கப் பட்டவர் கரக்கு மதனை நினைக்க, கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும், (எ-று). இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது. 1066. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பார்க்குச் சொல்லாடப் போஒ முயிர். (இ-ள்.) எமக்கு யாதும் இல்லை; சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்கு, குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்; பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ, (எ-று). இது பிணத்தை யொப்பரென்றது. 1067. கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும். * (இ-ள்.) தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் இரந்து செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று, (எ-று). 1068. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான். (இ-ள்.) துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே. பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும், (எ-று). இஃது இரக்கு மதனின், இறத்தல் அமையு மென்றது. 1069. தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த துண்ணலி னூங்கினிய தில். (இ-ள்.) மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்டபுற்கையாயினும், தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிகஇனிதாயிருப்பது பிறிது இல்லை, (எ-று). 1070. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடனில்லாக் காலு மிரவெல்லாச் சால்பு. (இ-ள்.) தஞ்சுற்றளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும், பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற வுலகமெல்லாம் கொள் ளாத பெருமையே யுடைத்து, (எ-று). இஃது இரவாதார் பெரிய ரென்றது. 13. கயமை. கயமையாவது இழிகுணத்தாராகிய மாந்தரியல்பு கூறுதல். இவர் மேற் கூறப்பட்ட எல்லாரினும் இழிந்தாராதலின், இது பின் கூறப் பட்டது. 1071. மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில். (இ-ள்.) மக்களை யொப்பவர் கயவர், அம்மக்களை யொக்கு மாறுபோல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படு மவற்றில் யாங்கண்டறிவது இல்லை, (எ-று). உறுப்பொத்துக் குணமொவ்வாமையால், கயவர் மக்களல்ல ராயினார். 1072. தேவ ரனையர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான். (இ-ள்.) கயவர் தேவரை யொப்பவர்; அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவாராதலான், (எ-று). இது கயவர் வேண்டியன செய்வாரென்றது. 1073. நன்றறி வாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர். (இ-ள்.) நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்; இம்மை மறுமைக்கு உறுதியாயின செய்யப்பெறுகிலோ மென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான், (எ-று). இது தாமறியா ரென்பது. 1074. அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. (இ-ள்.) கயவர் ஆசாரமுடைய ராதற்குக் காரணம் அச்சமே; அஃதொழிய, ஒருபொருள்மேல் ஆசையுடையராயின், அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம், (எ-று). இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது. 1075. அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (இ-ள்.) மனையகத்திருந்து பொற்புடையாராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப்பொற்புடையாராய் அதனைப்பெற்றே மென்று இறுமாப்பர் கயவர், (எ-று). இது நிறையிலரென்றது. 1076. அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைத்த லான். (இ-ள்.) கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறை களைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான், (எ-று). இஃது அடக்கமில ரென்றது. 1077. உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ். (இ-ள்.) பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர், (எ-று). இஃது அழுக்காறுடையா ரென்றது. 1078. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கைய ரல்லா தவர்க்கு. (இ-ள்.) தங்கதுப்பினை ஒடிக்கும் வளைந்தகையினை உடைய ரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர், (எ-று). ஈரக்கை - கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது. 1079. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ். (இ-ள்.) பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன் படுவர் மேன் மக்கள்; அவ்வாறன்றி, கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள், (எ-று). இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது. 1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து. (இ-ள்.) கயவர் யாதினுக்குவல்லரெனின், தமக்கு ஒருதுன்ப முற்றால் விரைந்து தம்மை விற்க வல்லர், (எ-று). இது நிலையில ரென்றது. குடியியல் முற்றிற்று. பொருட்பால் முற்றிற்று. 3. காமத்துப் பால். (25). இதனுள் தகையணங்குறுத்தல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தலீ றாக அருமையிற்கூடலும் அதற்கு நிமித்தமு மாகிய அதிகாரம் மூன்றும் நலம்புனைந் துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விரும்பலீறாகப் பிரிந்துகூடலும் அதற்கு நிமித்தமுமாகிய அதிகாரம் பதினெட்டும், நெஞ்சொடுகிளத்தல் முதலாக ஊடலுவகை யீறாக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமுமாகிய அதிகார நான்கும், ஆக இருபத்தைந் ததிகாரம் கூறப்பட்டது. 1. களவியல். (7) 1. தகையணங்குறுத்தல். தகையணங்குறுத்தலாவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கலவி யினானாகிய இன்பப்பகுதி கூறுதல். அஃதெங்ஙனங் கூறினாரெனின் ஒருவனுக்கு இன்பங் கலத்தற்கிடம் கன்னியரும் கணிகையரும், பிறர்தாரமுமென மூவகையல்லதில்லை; அவற்றுள், பிறர்மனைக் கூட்டம் பாவந்தருமென்று அறத்துப்பாலுட் கூறிக் கணிகையர் கூட் டம் பொருட்கேடு தருமென்று பொருட்பாலிற் கூறினாராதலின், அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்டமென்றாரென்பது. 1081. நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. (இ-ள்.) இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானை யைக் கொண்டுவந்தது போலும், (எ-று). தானைக்குஉவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது. 1082. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (இ-ள்.) பண்டு கூற்றின் வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்; இப்பொழுது அறிந்தேன்; அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து, (எ-று). இது நம்மை வருத்துதற்குத் தக்காளென்னுங் குறிப்பு. 1083. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். (இ-ள்.) தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத் தாலே, பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள், (எ-று). அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது. 1084. கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். (இ-ள்.) வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின், இவள் கண்கள் அவற்றைக்கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா, (எ-று). இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி, கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது. 1085. ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு. (இ-ள்.) இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி, (எ-று). இது மேற்கூறிய தலைமகன் மிகவும் கவிழ்ந்து நிலநோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது. 1086. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து. (இ-ள்.) கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினதுநோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து, (எ-று). இக்கொடியபுருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக்கோடி மறைத்ததாயினும், அஃது அதனைக் கடத் தலும் உடையது; அதனால், அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பதற்பொருட்டுத் தலைமகன் கூறியது. 1087. பிணையேர் மடநோக்கு நாணு முடையாட் கணியெவனோ வேதில தந்து. (இ-ள்.) பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கி னையும் நாணினையும் உடையவட்குப் பிறிது கொணர்ந்து அணி வது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாமே அமை யும், (எ-று). இது தான் அவளைக் கொடுமை கூறுவான்போல நலம் பாராட்டியது. 1088. கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில். (இ-ள்.) மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும்; மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில், (எ-று). 1089. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (இ-ள்.) இக் கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ? (எ-று) 1090. உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று. (இ-ள்.) அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று, (எ-று). இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது. 2. குறிப்பறிதல் குறிப்பறிதலாவது தலைமகளுள்ளக் குறிப்பினைத் தலை மகனறிதல். 1091. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (இ-ள்.) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இரண்டுவகைத்து; அவ்விரு வகையினும் ஒருநோக்கு நோய்செய்யும்; ஒருநோக்கு அதற்கு மருந்தாம், (எ-று). நோய்நோக்கென்பது முதல்நோக்கின் நோக்கம்; மருந்து நோக் கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங் கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம், இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது. 1092. நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர். (இ-ள்.) முற்படநோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள், அஃது அவள் நட்புப் பயிர்வளர அதன்கண் வார்த்த நீர், (எ-று). தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம். 1093. யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். (இ-ள்.) யான் தன்னைப்பார்க்குங்கால், தான் நிலத்தைப் பார்க் கும், யான் பாராத விடத்து, தான்பார்த்துத் தோன்றாமை நகும், (எ-று). மெல்ல நகுதல் - முகிழமுகிழ்த்தல். 1094. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது. (இ-ள்.) என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்கு கின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது, (எ-று). தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின், அது களவா யிற்று. 1095. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. (இ-ள்.) அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல், காதலித்தார் மாட்டே யுளதாம், (எ-று). இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது. 1096. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும். (இ-ள்.) குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள், (எ-று). அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப் பட நில்லாமையின், போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது. 1097. அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும். (இ-ள்.) அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான்நோக்க, நெகிழ்ந்து மெல்ல நகாநின்றான், (எ-று). அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்கஇடம்; அழகு - தன்வடிவினுள் மிக்க குணம்; பைய நகுதல் - ஓசைப்படாமல் நகுதல். 1098. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ லொல்லை யுணரப் படும். (இ-ள்.) கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந் தறிதல் வேண்டும், (எ-று). இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது. 1099. செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (இ-ள்.) செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்கு தலும், அன்புறாதார்போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும், (எ-று). இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின், உடன்பாடென்று தேறியது. 1100. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில. (இ-ள்.) கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின், வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒருபயனு முடையவல்ல, (எ-று). இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. 3. புணர்ச்சி மகிழ்தல். புணர்ச்சி மகிழ்தலாவது தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் புணர்ச்சியினை மகிழ்ந்து கூறுதல். 1101. பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து. (இ-ள்.) நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று; இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம், (எ-று). இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று. 1102. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள. (இ-ள்.) கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும், இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள, (எ-று). இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்த தென்று புணர்ச்சியை வியந்து கூறியது. 1103. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு. (இ-ள்.) தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்; அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம், (எ-று). 1104. தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ றாமரைக் கண்ணா னுலகு. (இ-ள்.) தம்மால் விரும்பப்படுவாரது மெல்லியதோளின் கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம், (எ-று). இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது. 1105. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டாழ் கதுப்பினா டோள். (இ-ள்.) காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள் களைப் போலும்; தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள், (எ-று). தோட்டாழ்கதுப்பு - புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல். 1106. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (இ-ள்.) யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற் போலும்: இச் சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை, (எ-று). காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று. 1107. நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள். (இ-ள்.) தன்னை நீங்கினவிடத்துச் சுடும், குறுகினலிடத்துக் குளிரும்; இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள்இவள், (எ-று). இது புணர்ச்சி உவமையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்த லாயிற்று. 1108. உறுதோ றுயிர்தளிர்ப்பத் துண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள். (இ-ள்.) சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால், பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும், (எ-று). சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான், அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது. 1109. வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. (இ-ள்.) ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், (எ-று). இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால், புணர்ச்சி மகிழ்த லாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது. 1110. ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன். (இ-ள்.) ஊடுதலும், ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலு மென்னு மிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன், (எ-று). காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்புத்தோன்ற நின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது. 4. நலம்புனைந்துரைத்தல் நலம்புனைந்துரைத்தலாவது தலைமகளது நலத்தினை அலங் காரவகையாய்க் கூறுதல். புனைந்துரை எனினும், பாராட்டெனினும், கொண்டாட்டெனினும், மகிழ்ச்சியெனினும் ஒக்கும். 1111. மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன். (இ-ள்.) மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு, இவ்விரண்டினையும் அறியாது, தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள், (எ-று). மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இது மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது. 1112. அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. (இ-ள்.) குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப் போல, இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ? (எ-று). இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான், அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது. 1113. மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி. (இ-ள்.) மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிடவல்லை யாயின், நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி, (எ-று). வாழி - அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப் பட்டது. 1114. மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி. (இ-ள்.) மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத் தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக, (எ-று). இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும், குணத்தினாலே ஒவ்வாதென்றது. 1115. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று. (இ-ள்.) நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய், (எ-று). இது கண் பூவினது நிறமொக்குமாயினும், குணமொவ்வா தென்று கூறிற்று. 1116. காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கு மாணிழை கண்ணொவ்வே மென்று. (இ-ள்.) குவளைமலர் காணவற்றாயின், மாட்சிமைப்பட்ட இழையினையுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது. 1117. நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள். (இ-ள்.) அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையன்; காண், (எ-று). இஃது உடம்பினது மென்மை கூறிற்று. 1118. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. (இ-ள்.) அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்; இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை, (எ-று). இஃது இடையினது நுண்மை கூறிற்று. 1119. முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (இ-ள்.) தளிர்போலும் மேனி; முத்துப்போலும் முறுவல்; நறுநாற்றம் போலும் நாற்றம்; வேல்போலும் உண்கண்; வேயொத்த தோளினை யுடையாளுக்கு, (எ-று). இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின்வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று. 1120. அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம். (இ-ள்.) அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும், (எ-று). இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று. 5. காதற்சிறப்புரைத்தல் காதற்சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறுதலும் தலைமகள் காதல் மிகுதி கூறுதலுமாம். இது நலம்புனைந்துரைத் தலின் பின் நிகழ்வதொன்றாகலின், அதன்பின் கூறப்பட்டது. 1121. உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. (இ-ள்.) உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து; மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு, (எ-று). நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது. 1122. கருமணியுட் பாவாய்நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம். (இ-ள்.) என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையு டையாட்கு இருத்தற்கிடம் போதாது, (எ-று). 1123. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்ன ணீங்கு மிடத்து. (இ-ள்.) கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்; நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள், (எ-று). இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. 1124. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர். (இ-ள்.) பாலொடுகூடத் தேனைக்கலந்தாற்போலும்; மிகவும் இனிமை தரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர், (எ-று). இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது. 1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம். (இ-ள்.) மறந்தேனாயின், நினைப்பேன் யான்; மறத்தலறி யேன்; ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை, (எ-று). தோழியிற்கூடி நீங்குந் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று. 1126. உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிதந்துறைவ ரேதில ரென்னுமிவ் வூர். (இ-ள்.) அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையா நிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர், (எ-று). தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்கா ரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது. 1127. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர். (இ-ள்.) என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்; ஆதலான், எம்மாற் காதலிக்கப்பட்டார், துண்ணியவறிவை யுடையார், (எ-று). 1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து. (இ-ள்.) எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்தி லிருக் கின்றார்; ஆதலானே, வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றேம்; அவர்க் குச் சுடுமென்பதனையறிந்து, (எ-று). இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலை மகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது காரணத்து உறவு உரைத்தல். 1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே யேதில ரென்னுமிவ் வூர். (இ-ள்.) கண்ணிமைக்குமாயின், அவரொளிக்குமது யானறி வேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன், (எ-று). இது கண் துயிலமறுத்தலென்னும் மெய்ப்பாடு. 1130. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து. (இ-ள்.) எங்காதலவர் கண்ணுள்ளார்; ஆதலானே, கண்ணும் மையெழுதேம்; அவர் ஒளித்தலை யறிந்து, (எ-று). எப்பொழுதும் நோக்கியிருத்தலால், கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று. 6. நாணுத் துறவுரைத்தல் நாணுத்துறவுரைத்தலாவது தலைமகன் தனது நாணின் மையைத் தோழிக்குக் கூறுதலும் தலைமகளது நாணம் நீங்கினமையைத் தோழி தலைமகற்குக் கூறுதலுமாம். காதல் மிக்கார்க்கு நாணமில்லை யென்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது. 1131. காம முழந்து வருந்தினார்க் கேம மடவல்ல தில்லை வலி. (இ-ள்.) காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை, (எ-று). இது தலைமகனைத் தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்னு தலைமகன் கூறியது. 1132. நோனா வுடம்பு முயிரு மடலேறு நாணினை நீக்கி நிறுத்து. (இ-ள்.) பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்; நாணினை நீக்கி நின்று, (எ-று). இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது. 1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றா ரேறு மடல். (இ-ள்.) நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையே னானேன், (எ-று). 1134. அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகு மருண்டு. (இ-ள்.) என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி, என் காமமானது தலைமயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது, (எ-று). சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல். 1135. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண். (இ-ள்.) பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது; ஆதலானே, மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன், (எ-று). இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்து விடுகின்றீர் என்ற தோழிக்கு, என் கண் உறங்காது; ஆதலான், மறவே னென்று தலைமகன் கூறியது. 1136. தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர். (இ-ள்.) மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினையுடை யாள் மடலோடே கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள், (எ-று). தொடலை யென்பதற்குச் சோர்ந்தவளை யெனினும் அமையும். குறுந்தொடி - பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று. 1137. கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். (இ-ள்.) கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப் போல மேம்பட்டது இல்லை, (எ-று). இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்; பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது. 1138. நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம மறையிறந்து மன்று படும். (இ-ள்.) நிறையிலர்; மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காம மானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது, (எ-று). இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது. 1139. காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புணை. * (இ-ள்.) யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது, (எ-று). 1140. யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. * (இ-ள்.) யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார்; அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான், (எ-று). 7. அலரறிவுறுத்தல் அலரறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினால் வந்த அலரைத் தலைமகள் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலைமகட்கும் தலைமகற்கும் அறிவித்தலுமாம். நாணுத் துறவுரைத்து இரவுக் குறி யொழுகாநின்ற தலைமகனுக்குத் தோழி அம்பலும் அலரும் ஆகாநின்றனவென் றறிவித்தலான், அதன் பின் இது கூறப்பட்டது. 1141. கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்பு கொண் டற்று. (இ-ள்.) யான் கண்ணுற்றது, ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது, (எ-று). 1142. ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந் நோய். (இ-ள்.) ஊரார் எடுத்த அலர் எருவாக, அன்னை சொல்லும் சொற்கள் நீராக, இந்நோய் வளராநின்றது, (எ-று). இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டடிக்கும் வரைவானாதல் பயன். 1143. அலர்நாண லொல்வதோ வஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை. (இ-ள்.) அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கின விடத்து, (எ-று). பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை. 1144. தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற் கௌவை யெடுத்ததிவ் வூர். (இ-ள்.) யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார்; ஆதலான், இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலர்க்கு, (எ-று). 1145. மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர். (இ-ள்.) பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார், (எ-று). எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்ற வாறு. 1146. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது. (இ-ள்.) மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும் அலராகுந்தோறும் இனிதாகும், (எ-று). இஃது அலரறிவுறுத்த தோழியைநோக்கி, நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது. 1147. உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (இ-ள்.) ஊரறிந்த அலர் உருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத் தாகக் கொள்ளல் வேண்டும், (எ-று). இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது. 1148. கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற் றவ்வென்னுந் தன்மை யிழந்து. (இ-ள்.) அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வல ரில்லையாயின், தனது தன்மையிழந்து பொலிவழியும், (எ-று). செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போல, கவ்வை யுடையதனைக் கவ்விது என்றார். 1149. நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காம நுதுப்பே மெனல். (இ-ள்.) எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போ மென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல், (எ-று). இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது. 1150. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால். (இ-ள்.) நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்; அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத் தாலே பலரறியா ராயினார்; அறிவராயின், எமக்கு ஏதிலராய் அலர் தூற்றுவார் இவள் இறந்துபடவேண்டுமென்று தூற்றார், (எ-று). களவியல் முற்றிற்று. 2. கற்பியல். (18) 1. பிரிவாற்றாமை பிரிவாற்றாமையாவது அலரறிவுறுத்தல் படத் தலைமகன் தலைமகளை வரைந்துகொண்டு இன்புறுமாயினும், பிரியுங் காலத்து ஆற்றாமை கூறுதல். மேலதனோடியையும் இது. இதுமுத லாகக் கற்பென்று கொள்ளப்படும். 1151. இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புண்க ணுடைத்தாற் புணர்வு. (இ-ள்.) நங்காதலரை வரவு பார்த்திருக்குமது, இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு, பிரிவாரோ வென்று அஞ்சப்படுந் துன்பத்தை யுடைத்து, (எ-று). 1152. துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை யிறையிறவா நின்ற வளை. (இ-ள்.) இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள், (எ-று). முன்பே அறிதலான் உடம்பு மெலிந்து என்றவாறாயிற்று. 1153. இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு மின்னா தினியார்ப் பிரிவு. (இ-ள்.) தமக்கு இன்பமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது; இனியாரைப் பிரிதல், அதனினும் இன்னாது, (எ-று). இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவா மென்று பிரிவுடன்படாது தோழி கூறியது. 1154. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு. (இ-ள்.) நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன், நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப்போவாராயின், அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? (எ-று). தன்மையைப் படர்க்கைபோற் கூறினார். 1155. ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு. (இ-ள்.) காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின், பின்பு கூடுதல் அரிது, (எ-று). மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1156. செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. (இ-ள்.) காதலர் போகாமையுண்டாயின், எனக்குக்கூறு; பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு, (எ-று). இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை யாற் கூறியது. 1157. அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். (இ-ள்.) பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கி, பிரிவையும் பொறுத்து, காதலரை நீங்கியபின் தமியரா யிருந்து வாழ்வார் பலர், (எ-று). அல்லல்நோய் - காமவேதனை. பிரிவாற்றுதல் - புணர்ச்சி யின்மையைப் பொறுத்தல். 1158. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னு நசை. (இ-ள்.) பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின், அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை, (எ-று). இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது. 1159. தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுட லாற்றுமோ தீ. (இ-ள்.) தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ, (எ-று). தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது. 1160. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். * (இ-ள்.) பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும், ஒரோவழிப் பிரிவு நிகழ்த லான், அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்பு டையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது. 2. படர்மெலிந்திரங்கல் படர்மெலிந்திரங்கலாவது தலைமகள் தலைமகன் பிரிந்துழிக் கதுமென உற்ற துன்பத்தினால் மெலிந்திரங்குதல். பிரிந்துழியுற்ற துன்பமாவது போனானென்று கேட்ட காலத்து வருவதோர் மன நிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற்பாடு தோன்றுமாதலான், அதன்பின் கூறப்பட்டது. 1161. துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு நட்பினு ளாற்று பவர். (இ-ள்.) மென்மை செய்யவேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகைதணி வினையின் கண் பிரிந்து தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 1162. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும். (இ-ள்.) இந் நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும், இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது, (எ-று). தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1163. கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும். (இ-ள்.) இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்; இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது, (எ-று). இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 1164. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணைமன்னு மில். (இ-ள்.) காமக்கடல் நிலையாக உண்டே, அது கடக்கும் ஏமமா கிய புணை நிலையாக இல்லையே, (எ-று). இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லை யெனத் தலை மகள் கூறியது. 1165. இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது. (இ-ள்.) காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான், அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. (எ-று). இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்று வித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது. 1166. காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன். (இ-ள்.) காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றி லேன்; அறையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன், மற்று உறங்காதாரில்லை. இது காதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது. 1167. மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை. (இ-ள்.) இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி, என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது, (எ-று). இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது. 1168. கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா ணெடிய கழியு மிரா. (இ-ள்.) கொடியவர்செய்த கொடுமையினும் தாம் கொடிய னவாய் நின்றன; இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப் பொழுதுகள், (எ-று). இது பொழுது விடிகின்றதில்லையென்று தலைமகள் தோழிக் குச் சொல்லியது. 1169. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண். (இ-ள்.) அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லன வாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா, (எ-று). இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது. 1170. காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் னோனா வுடம்பி னகத்து. (இ-ள்.) வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன; பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று, (எ-று). இது தலைமகள் மனநிகழ்ச்சி யிதுவென்று கூறியது. 3. கண்விதுப்பழிதல் கண்விதுப்பழிதலாவது கண் தனது விரைவினால் அழிந்தமை. தலைமகள் தோழிக்குக் கூறுதல். பிரிவின் கண் துன்பமுற்றார்க்குக் கண்ணீர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்றாமையை ஒன்றன் மேலிட்டுக் கூறுவாள். அதனை முற்பாடு கண்ணின்மேலிட்டுக் கூறுதலால், அதன்பின் இது கூறப்பட்டது. 1171. பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். (இ-ள்.) விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக்காண்டல் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்; இதனை யொழியப்பிறவுமுளவோ? (எ-று). 1172. கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது. (இ-ள்.) அமையாத நோயை யாங்கண்டது, அந்நோய் செய் தாரைத் தாங் காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? (எ-று). இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்வியது. 1173. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன். (இ-ள்.) முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுழ வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? (எ-று). இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது. 1174. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு மிகநகத் தக்க துடைத்து. (இ-ள்.) இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி, இன்று தாமே கலுழாநின்ற இது சிரிக்கத்தக்க துடைத்து, (எ-று). இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவியதோழிக்கு அவள் கூறியது. 1175. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து. (இ-ள்.) எம்மைப் போல அறைபறையாகிய கண்களையுடை யார்மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது, (எ-று). 1176. ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிதற்பட் டது. (இ-ள்.) எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோய கத்துப் பட்டது மிகவும் இனிது, (எ-று). இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது. 1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். (இ-ள்.) அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக, தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள், (எ-று). இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1178. பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா வுய்வினோ யென்க ணிறுத்து. (இ-ள்.) உயல் ஆர்றாத வென்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித், தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன, (எ-று). கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு. 1179. வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றன கண். (இ-ள்.) அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா; அவ்விரண் டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள், (எ-று). இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத், தலைமகள் இன்றே யல்ல, எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது. 1180. படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண். (இ-ள்.) கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்து தலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறா நின்றன, (எ-று). இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்த தென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. 4. பசப்புறுதல். பசப்புறுதலாவது பசப்புறுதலால் வந்த வருத்தத்தைத் தோழிக்குத் தலைமகள் கூறுதல். காதலித்தார்க்குக் காதலிக்கப் படும்பொரு ளெய்தாக்கால் அவர் நிறம் வேறுபடுமாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. 1181. பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின். (இ-ள்.) பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று; நம்மைக் காதலிப் பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின், (எ-று). இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது. 1182. விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (இ-ள்.) விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல, கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு, (எ-று). இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1183. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (இ-ள்.) முயங்கிக் கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே, அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை, (எ-று). இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 1184. உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் மேனி பசப்பூர் வது. (இ-ள்.) எங்காதலராகச் செல்கின்றாரை உங்கேபாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய், (எ-று). இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்க, பசலை பரவா நின்றது; அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது. 1185. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற் கள்ளம் பிறவோ பசப்பு. (இ-ள்.) யான் எக்காலமும் நினைப்பேன்; சொல்லுவதும் அவர் திறமே; இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது; இதற்குநிலை யான் அறிகிலேன், (எ-று). இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது. 1186. அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு. (இ-ள்.) காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம் பின்மேலே பரந்து ஊரும், (எ-று). இஃது இப்பசலையை நீக்க வேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல; நீக்கவேண்டுவாயாயின், அவர்க்குச் சொல்லென்று கூறியது. 1187. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில். (இ-ள்.) இவள் பசந்தாளென்று எனக்குக்குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லு வார் இல்லை, (எ-று). இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1188. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற. (இ-ள்.) காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்றியாவர்க்குச் சொல்லுவேன், (எ-று). இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது. 1189. சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையுந் தந்து. (இ-ள்.) மேன்மையும் நாணமும் அவர் கொண்டுபோனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து, (எ-று). மேன்மை - பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையாற் கூறியது. 1190. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நந்நிலைய ராவ ரெனின். (இ-ள்.) என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக; நம்மைக் காதலித்த வரும் நம்மைப்போலத் துன்பமுறுவராயின், (எ-று). இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது. 5.தனிப்படர்மிகுதி தனிப்படர்மிகுதியாவது தனிமையால் வந்த துன்ப மிகுதி கூறுதல். யாம் பசப்பால் வருந்துகின்றமைபோல அவரும் வருந்துவா ரென்றும் புணர்ச்சியிடையறாமல் இனிது நடக்குமென்றும் நினைத்துத் தலைமகள் தனது துன்பத்தினைக் கூறுதலான், அதன்பின் இது கூறப்பட்டது. 1191. பருவரலும் பைதலுங் காணான்கொல் காம னொருவர்க ணின்றொழுகு வான். (இ-ள்.) தான் ஒருவர் பக்கமாகநின்று ஓழுகித் துன்பஞ் செய்கின்ற காம தேவன், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்ப மும் காணானோ? காண்பானாயின், நம்மை வருத்தானே; தெய்வ மாகலான், (எ-று). 1192. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. (இ-ள்.) தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பாலில்லாததோர் பழத்தைப் பெற்றாராவர், (எ-று). இது தடையின்றி நுகரலாமென்றது. 1193. உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. (இ-ள்.) நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லையென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின், அஃது அதனினும் நன்று, (எ-று). இது தூதுவிடக்கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில் லையென்று தலைமகள் கூறியது. 1194. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை. (இ-ள்.) நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்; தாம் காதலியாதவிடத்து, (எ-று). 1195. ஒருதலையா னின்னாது காமங்காப் போல லிருதலை யானு மினிது. (இ-ள்.) ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது; காவினது பாரம்போல, இரண்டு தலையும் ஒத்த அன்பினாலுண் டாகிய காமமே இனிதாவது, (எ-று). இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வா ரென்றும், தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது. 1196. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கு மளி. (இ-ள்.) காதலித்தார்க்குத் காதலிக்கப்பட்டார் அருளும் அருள் உயிர் வாழ்வார்க்கு மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது, (எ-று). இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது. 1197. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு. (இ-ள்.) தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின் கண் இருந்து உயிர்வாழ்வோமென்னுங் களிப்பு அமையும், (எ-று). இது தலைமகள் இருந்தாலும் பயனில்லை; அதிற்காதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது. 1198. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின். (இ-ள்.) நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப் பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக் கப்படாராயின், விருப்பமில்லாராவர், (எ-று). இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின், நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிகவாழ்வார் யாரென்றதோழிக்கு அவள் கூறியது, கொண்டான் காயிற் கண் டான் காயுமென்பது பழமொழி. 1199. வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில். (இ-ள்.) தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப் போல, வன்கண்மையுடையார் இவ்வு லகத்து இல்லை, (எ-று). 1200. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு. (இ-ள்.) எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும், அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம், (எ-று). 6. நினைந்தவர் புலம்பல் நினைந்தவர் புலம்பலாவது சேய்மைக்கண்ணாயினும் அண்மைக் கண்ணாயினும் பிரிந்த தலைமகனை ஒழிவின்றி நினைந்த தலைமகளிர் துன்பமுறுதல். நினைத்தவர் புலம்பலென்று பாடமாயின், அதற்கு அவரை நினைத்துப் புலம்பலென்று பொருளுரைத்துக் கொள்க. 1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது. (இ-ள்.) தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத்தரும்; ஆதலால், கள்ளினும் காமம் இனிது, (எ-று). 1202. யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யவர். (இ-ள்.) அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ; எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார், (எ-று). ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொ ழுதும் என்னும் பொருளதாயிற்று. 1203. நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும். (இ-ள்.) அவர் நம்மை நினைப்பவர்போன்று நியiனார் கொல்லோ; தும்மல் தோன்றுவது போன்று கெடாநின்றது, (எ-று). தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள். 1204. தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொ லெந்நெஞ்சத் தோவா வரல். (இ-ள்.) தமது நெஞ்சின்கண் எம்மை யாம் செல்லாமல் காவல் கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ, (எ-று). இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலை மகள் நினையாரென்று தெளிந்து கூறியது. 1205. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைந்து. (இ-ள்.) நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின் மையை மிகவும் நினைந்து எனது இனிய உயிர் அழியாநின்றது, (எ-று). இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது. 1206. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே னுள்ளினு முள்ளஞ் சுடும். (இ-ள்.) அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ; மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடா நின்றது, (எ-று). இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1207. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். (இ-ள்.) காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின், (எ-று). இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது. 1208. மற்றியா னென்னுளேள் மன்னோ வவரோடியா னுற்றநா ளுள்ள வுளேன். (இ-ள்.) யான் அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்த லானே உயிர் வாழ்கின்றேன்; அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன். இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதி யாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது, (எ-று). 1209. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு. (இ-ள்.) யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள், (எ-று). அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை. 1210. விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி. (இ-ள்.) என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி, (எ-று). பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால், அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம். 7. கனவுநிலை யுரைத்தல் கனவுநிலையுரைத்தலாவது கனவினது நிலையைச் சொல்லுதல். காதலரை யொழிவின்றி நினைப்பார்க்கு உறக்கமில் லையாகும்; அவர் உறங்கினாராயின், அவரது சேதியை மறவாது நினைப்பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. தலைமகன் நினைத்தல் தலைமகள் நினைத்தல் என்னும் இரண்டனுள்ளும் இவட்காயின், உறக்கமில்லை யென்று கொள்க. 1211. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். (இ-ள்.) என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின், நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண் மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே, (எ-று). மன் - ஒழியிசையின்கண் வந்தது கயலுண்கண் - பிறழ்ச்சி யுடைய கண். 1212. நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி னுண்டென் னுயிர். (இ-ள்.) நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது; இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டோ? (எ-று). இஃது உறங்கினால் காணலாமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1213. கனவினா லுண்டாகுங் காம நனவினா னல்காரை நாடித் தரற்கு. (இ-ள்.) நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருத லால், அக்கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும், (எ-று). இது கண்டாற் பயனென்னை? காமநுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1214. நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது. (இ-ள்.) நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழு தைக்கு இன்பமாம்; அதுபோல, கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்ப மும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம், (எ-று). இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1215. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா னெஞ்சத்த ராவர் விரைந்து. (இ-ள்.) காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி, விழித்த காலத்து விரைந்து மனத்தின் கண்ணே புகுவர், (எ-று). இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 1216. நனவினா னல்காக் கொடியார் கனவினா னென்னெம்மைப் பீழிப் பது. (இ-ள்.) நனவின்கண் அருளாத கொடுமையுடையார் கனவின் கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு? (எ-று). இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. 1217. நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர். (இ-ள்.) நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவாநிற்பர், கன வின் கண் அவரைக் காணாதவர்; காண்பாராயின், நோவார், (எ-று). இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனையியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது. 1218. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர். (இ-ள்.) இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்; அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ! (எ-று). இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1219. காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. (இ-ள்.) நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்? (எ-று). இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாரா நின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல் லியது. 1220. நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் காதலர் நீங்கலர் மன். * (இ-ள்.) நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையா யின், கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார், (எ-று). 8. பொழுதுகண்டிரங்கல் பொழுதுகண்டிரங்கலாவது மாலைப்பொழுது கண்டு தலை மகள் வருந்துதல். ஏனைப்பொழுதில் வருத்தமிலரோவெனின், பிரியப் பட்டார்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண்பகலும் போலாது மாலைப்பொழுது வருத்த மிகுதலால், இது கூறப்பட்டது. 1221. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. (இ-ள்.) பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான், மாலையோ எனின், அல்லை; முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகிய வொரு வேலாயிருந்தாய், (எ-று). இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. 1222. மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத கால மறிந்த திலேன். (இ-ள்.) மாலைப்பொழுது நோய் செய்தலை, என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்; அறிந்தே னாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன், (எ-று). இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது. 1223. அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை. (இ-ள்.) நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங் குழலோ? (எ-று). இப்பொழுது வருத்துதலின், படை என்றாள். 1224. காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. (இ-ள்.) காதலர் பிரிவதன் முன்னம் பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருந்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்ப நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப் பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ? (எ-று). இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது. 1225. பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வுயிர். (இ-ள்.) பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து, மயங்கின மாலைப்பொழுதிலே, எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது, (எ-று). இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்னு நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது. 1226. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை. (இ-ள்.) மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையையுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையையுடைத்தோ நின்துணையும், (எ-று). இது தன்னுட்கையாறெய்திடு கிளவி. 1227. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். (இ-ள்.) இக்காம நோயாகியபூ விடியற்காலத்தே அரும்பி, பகற் பொழுதெல்லாம் முகிழ்முகிழ்த்து, மாலைக் காலத்தே மலராநின்றது, (எ-று). 1228. காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். (இ-ள்.) காதலரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும், (எ-று). இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னையென்ற தோழிக்கு தலைமகள் காரணங்கூறியது. 1229. பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. (இ-ள்.) என்மதி நிலைகலங்க, மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும் பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும், (எ-று). மதி - மானம். 1230. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். (இ-ள்.) நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது, இன்றும் எனக்கு வெறுப்புத் தோன்றி வருத்தம் மிகும் படியாக வாரா நின்றது, (எ-று). இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது. 9. உறுப்புநலனழிதல் உறுப்புநலனழிதலாவது தலைமகளது உறுப்புக்கள் நலனழிந்தமை கூறுதல். காதன்மிக்கு இரங்குவார் அக்காதலை அயலாரறியாமல் அடக்கினகாலத்து வெம்மையுற்ற கொடிபோல, அனைத்துறுப்பும் வாடுதலான், இது பொழுதுகண்டிரங்கலின்பின் கூறப்பட்டது. 1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண். (இ-ள்.) நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி, நெடுநெறிக்கண் சென் றாரை நினைத்து, கண்கள் நறுவியபூக்களைக் கண்டு நாணாநின்றன, (எ-று). பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றவா றாயிற்று. 1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண். (இ-ள்.) முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன; பசப்புற்று நீர்சொரி கின்ற கண்கள், (எ-று). இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலரா காநின்ற தென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறி யது. 1233. தணந்தமை சால வறிவிப்ப போலு மணந்தநாள் வீங்கிய தோள். (இ-ள்.) காதலர் கூடின நாட்களிற் பூரித்ததோள்கள், அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பனபோ லாகாநின்றன, (எ-று). கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது. 1234. பணைநீங்கப் பைந்தொடி சோருந் துணைநீங்கத் தொல்கவின் வாடிய தோள். (இ-ள்.) துணைவர் நீங்குதலானே பழையஅழகு அழிந்ததோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது, (எ-று). பசுத்த வளை-மரகதத்தினாற் செய்த வளை, தோள் அழகழிதலே யன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1235. கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியோடு தொல்கவின் வாடிய தோள். (இ-ள்.) கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன, வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும், (எ-று). இது தலைமகளாற்று தற்பொருட்டுத் தலைமகனை யியற்பழித்துத் தோழி கூறியது. 1236. தொடியோடு தோணெகிழ நோவ லவரைக் கொடிய ரெனக்கூற னொந்து. (இ-ள்.) வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்; நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து, (எ-று). இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பது படத் தலைமகள் சொல்லியது. 1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து. (இ-ள்.) நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்றுசொல்லி, நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ? (எ-று). இது நீ அவர்பாற்போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. 1238. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். (இ-ள்.) யான் பிரிவதாக நினைத்து, முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறுகாற்று ஊடறுத் தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன, (எ-று). இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன. 1239. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். (இ-ள்.) யான் பிரிவதாக நினைத்து, அவள் முயங்கியகைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து, பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது, (எ-று). 1240. கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே யொண்ணுதல் செய்தது கண்டு. (இ-ள்.) ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு, கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று, (எ-று). 10. நெஞ்சொடுகிளத்தல். நெஞ்சொடுகிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலை மகள் சொல்லுதல், காதலடக்க லாற்றாதார் பிறர்க்குச் சொல்லுதற்கு நாணித் தன்னெஞ்சிற்குச் சொல்லி யாற்றுதலான், அதன்பின் இது கூறப்பட்டது. 1241. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. (இ-ள்.) எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்; ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்; யான் இவ்விரண் டினையுங்கூடப் பொறுத்தலரிது, (எ-று). இது பிரிவிடையாற்றாளாய் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணந்தடுத்தமைகண்டு கூறியது. 1242. துன்னார் துறந்தாரை நெஞ்சத் துடையேமா வின்னு மிழத்துங் கவின். (இ-ள்.) மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின், முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம், (எ-று). ஈண்டு நெஞ்சென்றது மனத்துடையதானத்தை, இது நினைக் கின்றதனால் பயனில்லை யென்று கூறியது. 1243. காத லவரில ராகநீ நோவது பேதைமை வாழியென் னெஞ்சு. (இ-ள்.) அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத் தைக் கருதி வருந்துகின்றது பேதைமை, (எ-று). இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது. 1244. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனோய் செய்தார்க ணில். (இ-ள்.) நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து, அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக் குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின், (எ-று). இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது. 1245. கலந்துணர்ந்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. (இ-ள்.) என்னெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும், அவரைக்கண்டால் புலந்து கலக்க மாட்டாது முன்பே கலப்பை; இப்பொழுது பொய்க்காய்வு காயா நின்றாய், (எ-று). 1246. செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர். (இ-ள்.) நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தா ரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ? (எ-று). உறுதல்-விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது. 1247. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் னெஞ்சு. (இ-ள்.) என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றில ரென்று இரங்கி நம்மை விட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது. 1248. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று. (இ-ள்.) நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின், இக்கண் களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக; அவரைக் காணலுற்ற இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன, (எ-று). கொள - பார்க்க 1249. உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் னெஞ்சு. (இ-ள்.) என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின் றாய், (எ-று). இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது. 1250. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று மெவ்வநோய் தீர்க்கு மருந்து. (இ-ள்.) நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய், (எ-று). இஃது ஆற்றுதலரிதென்று கூறியது. இவையெல்லாம் தனித் தனி சிலகூற்றென்று கொள்ளப்படும். 11. நிறையழிதல். நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலையழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படுமாதலான், அதன் பின் இது கூறப்பட்டது. 1251. காம மெனவொன்று கண்ணின்றென் னெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில். (இ-ள்.) காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று; என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில் கொள்ளாநின்றது, (எ-று). தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல், இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றா மையால் தலைமகள் தோழிக்குக் கூறியது. 1252. மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும். (இ-ள்.) காமத்தை யான் அடக்கக்கருதுவேன்; அவ்வாறு செய்யவும், அது தும்மல்தோன்றுமாறுபோல, என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது, (எ-று). இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது. 1253. நிறையுடையே னென்பேன்மன் யானேயென் காம மறையிறந்து மன்று படும். (இ-ள்.) யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி யிருக் கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப் படாநின்றது, (எ-று). இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையு டையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. 1254. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (இ-ள்.) காமமாகியமழு உடையாநின்றது; நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை, (எ-று). இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று. (இ-ள்.) தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரியதகைமை, காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று, (எ-று). இது தம்மையிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ வெற்றென்னை யுற்ற துயர். (இ-ள்.) செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால், என்னை யடைந்ததுயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது, (எ-று). இது தனித்திருந்து துயருறுதல்காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி, இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது. 1257. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை. (இ-ள்.) பல பொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ? நமது பெண்மையை அழிக்குங் கருவி, (எ-று). இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள்காண் பெண்மையைக் கெடுக் கின்றது; அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது. 1258. நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்போ மெனல். (இ-ள்.) தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினையுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ, (எ-று). 1259. புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு. (இ-ள்.) புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன், நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு, (எ-று). இஃது ஊடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது. 1260. நாணென வொன்றோ வறியலர் காமத்தாற் பேணியார் பெட்பச் செயின். (இ-ள்.) நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக, விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின், (எ-று). அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகாதென்றவாறு. 12. அவர்வயின்விதும்பல் அவர்வயின்விதும்பலாவது அவர் வரவின்கண்ணே விரைதல்; காதலர் வரவு கேட்டிருத்தலென்றவாறு. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப் படும். நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. 1261. வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாங் கெட. (இ-ள்.) கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்; வந்தானாகில், என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன், (எ-று). இது வரவு வேட்கையாற் கூறியது. 1262. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து. (இ-ள்.) தம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வா னாக; யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப் பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக, (எ-று). வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள், மனை - அட்டில். 1263. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி னீங்குமென் மென்றோட் பசப்பு. (இ-ள்.) என் கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளினுண்டான பசலை நீங்கும், (எ-று). இது காண்டல் வேட்கையால் கூறியது. 1264. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். (இ-ள்.) கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன; விரல்களும் அவர்போன நாட்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன, (எ-று). இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது. 1265. ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (இ-ள்.) நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக் குறித்து இரங்கு மவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே எழுநாளைப் போலச் செல்கின்றது, (எ-று). 1266. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு. (இ-ள்.) கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின் மேலேறிப் பாராநின்றது, (எ-று). உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள். 1267. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன். (இ-ள்.) இன்பத்தை நச்சாது வலிமையையேநச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டி னால் இன்னும் உளேனானேன், (எ-று). இஃது அவர் வாராரென்று கூறியது. 1268. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். * (இ-ள்.) கண்போற் சிறந்தகேளிர் வருவராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ; அன்றி என்னாற் றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; அவ்விரண்டும் வேண்டுத லான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ; யாதுசெய்யக் கடவேன்? (எ-று). 1269. பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால். (இ-ள்.) எனது உள்ளம் உடைந்து போயின், பின்பு அவரைப் பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்? (எ-று). இது வருவா ரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1270. இலங்கிழா யின்று மறப்பினென் மென்றோள் கலங்கழியுங் காரிகை நீத்து. (இ-ள்.) இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின், பண்டைமெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும், (எ-று). இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும். 13. குறிப்பறிவுறுத்தல். குறிப்பறிவுறுத்தலாவது குறிப்பினை யறிவுறுத்தல். 1271. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. (இ-ள்.) மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல, பேதையுடைய நகைமுழப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு, (எ-று). இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. 1272. செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் தீர்க்கு மருந்தொன் றுடைத்து. (இ-ள்.) செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்றகளவு, நீ யுற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொருமருந்தாதலை உடைத்து, (எ-று). தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப் போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல்லென்று தோழி கூறியது. 1273. மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (இ-ள்.) கோவைப்பட்ட நீலமணியின்கண் தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற் றுகின்றதொரு துன்பம் உண்டு, (எ-று). அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு. 1274. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (இ-ள்.) காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பை யொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது, (எ-று). 1275. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து. (இ-ள்.) ஊடினகாலத்து அதன் அளவன்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண் ணுவதொரு புரிவுடைத்து, (எ-று). இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 1276. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை. (இ-ள்.) குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை, நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன, (எ-று). 1277. பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு. (இ-ள்.) வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர், (எ-று). இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது. 1278. தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள்செய் தது. (இ-ள்.) தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச்சென்ற குறிப்பு, அதுவா யிருந்தது, (எ-று). அது - உடன்போக்கு. 1279. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து. (இ-ள்.) எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்; யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம், (எ-று). இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி, இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது. 1280. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு. * (இ-ள்.) நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம் படாதே நின்னைக் கைகடந்து நின் னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது; இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக, (எ-று). 14. புணர்ச்சிவிதும்பல் புணர்ச்சிவிதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும் தலை மகளும் புணர்தல் வேண்டி ஒருவரினொருவர் முந்துமுந்து விரைதல். 1281. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார். (இ-ள்.) எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லி தாயிருக்கும் காமம்; அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர், (எ-று). இது தலைமகன் புணர்ச்சி குறிப்புக் கண்டு பின்பு ஊடிக் கொள்ளலாம்; இப்பொழுது ஊடுவாயாயின், இக்காமஞ் செவ்விதப்பு மென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சோடு கூறியது. 1282. உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. (இ-ள்.) காதலரை நினைத்த அளவிலே களிப்புப்பெறுதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாக வுடைய கள்ளிற்கு இல்லை; காமத்திற்கு உண்டு, (எ-று). கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு; காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு. 1283. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் காம நிறைய வரின். (இ-ள்.) நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்; பனையளவினும் மிக காமநுகர்ச்சி வருமாயின், (எ-று). இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது. 1284. உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் பொய்த்த லறிந்தென் புலந்து. (இ-ள்.) தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய் பவரைப் போல, நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும், புலக்கின் றது ஏதுக்கு? (எ-று). இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது. 1285. கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத லென்னினுந் தான்விதுப் புற்று. (இ-ள்.) கண்ணாலே புலந்தும், அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும்மிகத் தான் விரைதலானே, (எ-று). இது தலைமகளுடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 1286. இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. (இ-ள்.) பிறர் இகழக்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும், மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக் கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட் கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு, (எ-று). இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது. 1287. ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (இ-ள்.) தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன்; அவனைக் கண்ட பொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று, என்னெஞ்சு, (எ-று). இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகன் கூறியது. 1288. எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. (இ-ள்.) கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப்போல, கொண்கனது குற்றத்தினை யும் அவனைக்கண்ட விடத்து கண்டிலேன், (எ-று). இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்ற மெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 1289. காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல்ல வை. (இ-ள்.) அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்; அவளைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன், (எ-று). 1290. பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் காணா தமையல கண். (இ-ள்.) தம்மை விரும்பாது தம்மனம் விரும்புவனவே செய்தா னாயினும், கொண்களைக் காணாது என்கண்கள் அமைய மாட்டா, (எ-று). இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறு புணர்ச் சியின்மையும் ஆமாறு கண்டுகொள்க. 15. நெஞ்சொடுபுலத்தல் நெஞ்சொடுபுலத்தலாவது தலைமகன் பரத்தையிற் பிரிந்துழி அவனோடு புலக்கக் கருதிய தலைமகள் முற்பட அவனோடு கூட வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறுதல். இனி ஊடிக்கூடல் கூறுகின்றாராகலின், அவ்வூடுதலின் முற்பட இது தோற்றுமாதலின், முற்கூறப்பட்டது. 1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. (இ-ள்.) அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும், நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ? (எ-று). இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது. 1292. தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய நெஞ்சந் தமரல் வழி. (இ-ள்.) தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங் காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ? (எ-று). 1293. எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற முள்ளு முயிர்க்காத னெஞ்சு. (இ-ள்.) அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளி வரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு, (எ-று). இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலா யிருக்க, இகழா நின்றதுமில்லை; அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது. 1294. நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. (இ-ள்.) என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித் திலேன்; அவரை மறக்கமாட்டாத என் நன்மையில் லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலே யென்று அதனோடு புலந்து கூறியது. 1295. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (இ-ள்.) நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து, பின்னை நுகர மாட்டாய்; ஆதலான், இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை, (எ-று). 1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் னெஞ்சு. (இ-ள்.) என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது, (எ-று). இது தலைமகள் நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான் தனிப்பட்டால் நலிவதாக இருந்தது; நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது. 1297. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு. (இ-ள்.) காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின், பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால், இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு, (எ-று). இது தலைமகள் ஆற்றாமைகண்டு, தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனோடு புலந்து கூறியது. 1298. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் (இ-ள்.) நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண் ணமே அவர்பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லை யென்பதனானேயோ? 1299. துன்பத்திற் கியாரே துணையாவர் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. (இ-ள்.) துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து, (எ-று). இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது. 1300. உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச் செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. (இ-ள்.) என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய், (எ-று). இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சொடு புலந்து கூறியது. 16. புலவி புலவியாவது தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுதல். இது வெளிப்பட்டுநிகழ்தலின், அதன்பின் கூறப்பட்டது. 1301. புல்லா திராஅப் புலத்தை யவருறு மல்லல்யாங் காண்கஞ் சிறிது. (இ-ள்.) நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்; அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக, (எ-று). இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப்பொருட்டு இனிமை கூறியது. 1302. நலத்தகை நல்லவர்க் கோரம் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து. (இ-ள்.) நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம்; பூவன்னகண்ணார்மாட்டுப்புலத்தல், (எ-று). நமக்கு ஆகாமாட்டுப் புலத்தல் தீதென்றவாறு, இது பரத்தை யரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது. 1303. உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல். (இ-ள்.) நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி; அதனை நீளவிடல் அவ்வுப்புச் சிறிது மிக்காற் போல இன்னாதாம், (எ-று). இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது. 1304. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று. (இ-ள்.) ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு; புணருங்கால் அது நீட்டிக்குங் கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால், (எ-று). இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்க, தலைமகன் அது கண்டு சொல்லியது. 1305. நீரு நிழல தினிதே புலவியும் விழுநர் கண்ணே யினிது. (இ-ள்.) குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக வுடையநீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்; அதுபோல, புலவியும் அன்புடையார் மாட்டேயாயின், இனிதாம், (எ-று). 1306. துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று. (இ-ள்.) உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவி யும் இல்லையாயின், காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்; காய் போலத் துவர்க்கும் ஆதலால், (எ-று). இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது. 1307. ஊடி யவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. (இ-ள்.) நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை; நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும், (எ-று). இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப்போ மென்று தலைமகள் கூறியது. 1308. நோதலெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் காதல ரில்லா வழி. (இ-ள்.) யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தா ரென்று நினைத்து, அதனை யறிந்துதீர்க்கும் காதலர் மனமிலாராகிய விடத்து, (எ-று). இஃது உணர்ப்புவயின் வாராவூடற்கண் தலைமகன் புலந்துழி, அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது. 1309. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்ப தவா. (இ-ள்.) என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என் னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப் பாட்டால், (எ-று). இது புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது. 1310. அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். * (இ-ள்.) தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கல வாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும், (எ-று). 17. புலவி நுணுக்கம் புலவி நுணுக்கமாவது தலைமகன்மாட்டுத் தவறில வாயினும், தன்காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினானும் குறிப்பெச்சத்தி னானும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். இது செவ்வியிற்றோன்று மாதலின் நுணுக்கமாயிற்று. 1311. யாரினுங் காதல மென்றேனா வூடினாள் யாரினும் யாரினு மென்று. (இ-ள்.) ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந் தார்யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள், (எ-று). 1312. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். (இ-ள்.) இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக; அதனால், மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள், (எ-று). 1313. வழுத்தினா டும்மினே மாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. (இ-ள்.) யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள், (எ-று). இது தும்மினும் குற்றமென்று கூறியது. 1314. தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று. (இ-ள்.) தும்மல் தோற்ற, அதனை யடக்கினேன்; அதற்காக, நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள், (எ-று). இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது. 1315. நினைத்திருந்து நோக்கினும் காயு மனைத்துநீர் யாருள்ளி நோக்கினீ ரென்று. (இ-ள்.) தனது உறுப்புக்களோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும், (எ-று). இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது 1316. கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று. (இ-ள்.) பக்கப்பூச் குடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும், (எ-று). பக்கப்பூ-ஒப்பனைப்பூ. கோட்டுப்பூச் சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது. 1317. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ரிந்நீர ராகுதி ரென்று. (இ-ள்.) தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும், (எ-று). இது தன்னைப்போற்றினும் குற்றமென்று கூறியது. 1318. உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப் புல்லாள் புலத்தக் கனள். (இ-ள்.) அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்; மறந்தாரன் றே நினைப்பார்; ஆதலான், எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள், (எ-று). இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது. 1319. பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. (இ-ள்.) பாத்தமையை யுடையாய்! நின்மார்பைப் பெண்மை யுடையா ரெல்லாரும் தமக்குப்பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அதனால், யான் அதனைத் தீண்டேன், (எ-று). இது தலைமகள் புலவிகண்டு என்மாட்டுக் குற்றமியாதோ வென்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது. 1320. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்ப தறிந்து. (இ-ள்.) தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக; அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது. 18. ஊடலுவகை. ஊடலுவகையாவது தலைமகன் மற்றுள்ள நாள்கள் போலன்றி அன்றையிற் புணர்ச்சி பெரியதோ ரின்பமுடைத்தென்று அதற்குக் காரணமாய ஊடலை வியந்து கூறுதலும் அவ்வண்ணமே தலைமகள் கூறுதலுமாம். இது மேலதனோடியையும். 1321. ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா. (இ-ள்.) விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடு வாளாகவேண்டும்; யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும், (எ-று). இது மனவூக்கத்தின்கண் வந்தது. 1322. ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங் கூடலிற் காணப் படும். (இ-ள்.) ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்; அவ் வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும், (எ-று). 1323. உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது. (இ-ள்.) உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்; அது போல, காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம், (எ-று). பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல, ஊடலினால் கூடல் இன்பந்தரும் என்றவாறு. 1324. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். (இ-ள்.) காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்; அதன்பின் கூடிக் கலக்கப் பெற்றால், அதற்கு இன்பமாம், (எ-று). இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது. 1325. ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். (இ-ள்.) ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்கஅருள் பெறா தொழியினும் அழகு உடைத்து, (எ-று). புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு. 1326. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலிற் றோன்றிய வுப்பு. (இ-ள்.) நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை, இன்னும் ஒருகால் ஊடிப்பெறுவோமோ? (எ-று). ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால், பொதுப்படக் கூறினார், இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரி தென்றது. 1327. தவறில ராயினுந் தாம் வீழ்வார் மென்றோ ளகறலி னாங்கொன் றுடைத்து. (இ-ள்.) தாம் தவறிலராயினும், தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள் களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து, (எ-று). இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும், ஊடலிற்கூடல் நன்றென்றது. 1328. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை. (இ-ள்.) என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும், (எ-று). அது புணர்ந்த பின்பு தோன்றாமையால், அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை-பணிமொழி, இவை யெட்டும் தலைமகன் கூற்று. 1329. இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு. (இ-ள்.) அவர்மாட்டுத் தவறில்லையானாலும், அவர் செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று, (எ-று). இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக் கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 1330. புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. (இ-ள்.) நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? (எ-று). நிலத்தொடு நீரியைதலால் அவை வெப்பமுந்தட்பமுங் கூடியிருக்குமாறு போல, இன்பமுந்துன்பமுங்கூட அனுபவிப்பார் மாட் டென்றவாறு. கற்பியல் முற்றிற்று. காமத்துப்பால் முற்றிற்று. திருக்குறள் மூலமும் உரையும் முற்றுப்பெற்றன. திரிகடுகம் ஆசிரியர் : நல்லாதனார் உரையாசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார் முகவுரை திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலானார் சங்கத்துச் சான்றோரென நன்கறியப்படுதலின், அவற்றுட் பலவும் அக்காலத்தினவெனக் கருதுவதில் இழுக்கொன்றுமின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியிற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியப்படுவது. அவை, அம்மையென்னும் வனப்புடைய வென்பதும் அவ்வுரையாற் றெளியப்படும். அம்மை யெனவே, அவையெல்லாம் சிலவாகிய மெல்லிய சொற்களா லமைந்தனவென்பதும், அடிநிமிராதன வென்பதும் பெரும்பாலும் அறம் பொருளின்பங்களைப் பற்றியன வென்பதும் போதரும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினர். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும். என்பது பன்னிருபாட்டியல். நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொற் காஞ்சியோ டேலா தியென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. என்பதோர் வெண்பா. கீழ்க்கணக்கு நூல்கள் இவை யென்பதனை அறிவித்தற் கெழுந்தது. எனக் கொள்ள வேண்டும். இதனால் அறிவிக்கப்படும் நூல்களாவன: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, *இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இவற்றுள் இன்னிலை என்பதனை விடுத்துக் கைந்நிலை யென்பதொன்றைச் சேர்த்துக் கூறுவாருமுளர்; அவர் இன்னிலை யென்பது ஓர் பழம் பனுவலன்றெனவும், கைந்நிலையே பழமையாய தெனவும் கூறுவர். “நாலடி நான்மணி என்னும் வெண்பா”வானது, “ஐந்தொகை”, ‘இன்னிலைய’, ‘மெய்ந்நிலைய’, ‘கைந்நிலையோடாம்’, ‘நன்னிலையவாம்’ என்னும் பல பாடவேற்றுமைகளையுடையது; ஆகலின் அது கொண்டு இன்னிலை யென்றோ கைந்நிலை யென்றோ துணிதல் அரிதாகும். இப்பொழுது இன்னிலை யென்பதோர் நூலும் கைந்நிலை யென்பதோர் நூலும் வெளி வந்துள்ளன. இரண்டும் கீழ்க்கணக்கின் இலக்கணம் அமைந்தனவே. அவற்றுள், பதினெட்டென்னும் தொகையுட்பட்டது யாதாயினும் ஆக. இனி, திரிகடுகம் என்னும் இந்நூலை இயற்றினவர் நல்லாதனார் என்பவர். நல்லந்துவனார், நன்முல்லையார், நல்வேட்டனார் என்றிங்ஙனம் நல் என்னும் அடையடுத்த பெயர்களையுடைய சங்கப் புலவர் பலராவர். ஆதன் என்னும் பெயர் நல் என்னும் சிறப்புப் பற்றிய அடையை முன்னும் ஆர் என்னும் உயர்வு பற்றிய விகுதியைப் பின்னும் பெற்று நல்லாதனார் என்றாயிற்று. இவர் திருமால் பத்தியுடைய ரென்பது ‘கண்ணகன் ஞால மளந்ததூஉம்’ என்னும் இந்நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் அறியப்படும். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக் களையுடையது; ஒவ்வொரு வெண்பாவும் மும்மூன்று பொருள் களைக் கூறுவதனாலும், ‘அருந்ததிக் கற்பினார் தோளும்’ என்னும் முதற் செய்யுளில் ‘இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து என இவரே உவமை கூறினமையாலும் இது திரிகடுகம் என்னும் பெயரினதாயிற்று. திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் மூன்று கார்ப்புடைய மருந்துப்பொருள்கள். அவை உடற் பிணியை அகற்றி இன்பஞ் செய்தல் போல் இந்நூற் செய்யுட்கள் கூறும் மும்மூன்று பொருள்களும் உயிர்ப் பிணியாகிய அறியாமையைக் கெடுத்து இன்பஞ் செய்வனவாம் என்க. இந் நூலிலுள்ள வெண்பாக்களிற் பாதியின் மிக்கன இன்னிசை வெண்பா; ஏனையன நேரிசை வெண்பா.’ திரிகடுகம் கடவுள் வாழ்த்து கண்ணகன் ஞாலமளந் ததூஉங் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம்- நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி. (பதவுரை) கண்அகல் - இடம்பரந்த, ஞாலம் - உலகத்தை, அளந்ததூஉம்- அளந்ததுவும், காம சீர் - அழகிய புகழையுடைய, தண் - குளிர்ந்த, நறும்பூ குருந்தம் - நல்ல (மணமுடைய) நீல மலர் களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் - வீழ்த்தியதுவும், நண்ணிய - (கஞ்சனால் விடப்பட்டுத்) தன்னைக்கிட்டிய, மாயச் சகடம் - வஞ்சனைச் சகடத்தை, உதைத்ததூஉம் - உதைத்து வீழ்த்தி யதுவும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செய்கையும், பூவைப்பூவண்ணன் - காயாமலர் போலும் நிறத்தை யுடைய திருமாலின், அடி - அடிகளின் செய்கைகளாம் என்றவாறு. ஞாலம் ஈண்டு உலகம் என்னும் பொருட்டு. “ஞால மூன்றடித் தாய முதல்வற்கு” (கலி - 1 - 124) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஞாலமளந்தது முதலியன “ மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி.” “ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்.” “ நின் மாமன் செய்வஞ்ச உருளுஞ் சகடமுதைத் தருள் செய்குவாய்” எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டன. “ பூவைப் புதுமல ரொக்கு நிறம்”. என்பது நான்மணிக்கடிகை. காமரு, உ- சாரியை; காமம் மரு என்பது விகாரமாயிற்றெனக் கொண்டு, விருப்பம் மருவிய என்றுரைத்தலுமாம். அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. இம்மூன்றும் செய்தவை அடிகள் என்றுமாம். இம்மூன்று அரிய செயல்களும் செய்தன திருமாலின் அடி களாதலின் அவ்வடிகளை நினைந்து வாழ்த்தி வணங்கின் எல்லா நலமும் எய்தலாம் என்பது கருத்து. இது பொருளியல்புரைக்கு முறையில் உலகிற்குப் பயனுண்டாகக் கூறிய வாழ்த்தாகும். 1. அருந்ததிக் கற்பினார் தோளுந் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் - சொல்லின் அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுந் திரிகடுகம் போலு மருந்து. (ப-ரை): அருந்ததி கற்பினார்- அருந்ததி போலும் கற்பினை யுடைய மகளிரது, தோளும் - தோளின் சேர்க்கையும், திருந்திய - குற்றமற்ற, தொல்குடியின் - பழைமையாகிய குடிப்பிறப்பின் கண், மாண்டார் - மாட்சிமையுற்றாரது, தொடர்ச்சியும் - தொடர்பும், சொல்லின் - சொல்லின்கண், அரில் அகற்றும் - பிணக்கை நீக்கும், கேள்வியார் - நூற்கேள்வியுடை யாரிடத்துக் கொண்ட, நட்பும் - நட்பும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், திரிகடுகம் போலும் மருந்து - (ஒருவர்க்கு) திரிகடுகையொக்கும் மருந்துகளாம். எ-று. அருந்ததி - வசிட்டன் மனைவி; கற்பிற்கு எடுத்துக் காட்டாயவள். “ தீதிலா வடமீனின் றிறமிவள் திறம்” என்று சிலப்பதிகாரத்தும், “ அருந்ததிக் கற்பினாளை யடிபணிந் தவனுங் கண்டான்” என்று சிந்தாமணியிலும், “சீலமின்ன தொன்ற ருந்ததிக் கருளிய திருவே.” என்று கம்பராமாயணத்திலுங் கூறப்பெற்றமை காண்க. அரில் - மாறுபாடு, குற்றம். திரிகடுகம் - மூன்று கார்ப்புடைய மருந்துப் பொருள்கள், சுக்கு, திப்பிலி, மிளகு என்பன; திரிகடுகம் உடலின் பிணி நீக்கி இன்பம் பயத்தல் போல இம்மூன்றும் உடல் உயிர்களின் பிணிகளை நீக்கி இன்பம் விளைப்பனவாகுமென்க. சொல்லின் இம்மூன்றும் மருந்து எனக் கூட்டியுரைத்தலுமாம். மாண்டார் - மாண் பகுதி. 2. தங்குணங் குன்றாத் தகைமையுந் தாவில்சீர் இன்குணத்தா ரேவின செய்தலும் - நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவு மிம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (ப-ரை): தம்குணம் குன்றா - தமது குடிமைக்கும் நிலைமைக்கு மேற்ற பண்பினின்றும் வழுவாத, தகைமையும் - தன்மையும், தாஇல்- கேடில்லாத, சீர் - புகழையுடைய, இன்குணத்தார் - இனிய குணத்தினை யுடையவர், ஏவின - பிறர் ஏவினவற்றை, செய்தலும்- செய்வதும், நன்கு உணர்வின் - நன்றாகிய உணர்வினையுடைய, நான்மறையாளர் - நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் கூறிய நெறியில், செலவும் - ஒழுகுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், மேன்முறையாளர் - மேலாகிய முறையினையுடையாரின், தொழில் - செயல்களாம். எ-று. தகைமை - பெருமையுமாம். ஏவின - வினையாலணையும் பெயர். மேன்முறையாளர் - மேலோரின் ஒழுக்கமாகிய முறையைக் கையாளுபவர். 3. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும் அறியா மையான்வருங் கேடு. (ப-ரை): கல்லார்க்கு - (நூல்களைக்) கற்றறியாதார்க்கு, இனன் ஆய் - இனமாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - வயிரங்கொண்ட, இல்லாளை - மனையாளை, கோலால் புடைத்தலும் - கோல் கொண்டு அடித்தலும், இல்லம் - (தம்) மனையின்கண், சிறியாரை - சிறுமைக் குணமுடைய காமுகரை, கொண்டு புகலும் - உடன் கொண்டு செல்லுதலும் , இம்மூன்றும் - (ஆகிய) இந்தமூன்றும், அறியாமையான் வருங்கேடு - பேதமை காரணமாக வருங்கேடுகளாம். எ-று. இனன் - சுற்றம், காழ்கொண்ட - செற்றங்கொண்ட “ காழ்த்த பகைவர் வணக்கமும்”. (திரிகடுகம் - 24) என்புழிக் காழ்த்தல் இப்பொருட்டாதல் காண்க. காழ்கொண்டவள் எறியென்று எதிர்நிற்பாளாவள். காழ்கொண்ட என்பதற்குக் கற்பின் உறுதியைக் கொண்ட என்றுரைப்பாருமுளர். சிறியார் காமுகராதலை “செருக்குஞ் சினமுஞ் சிறுமையுமில்லார்”. என்னுங் குறளுரை நோக்கியுணர்க. கேடு பயப்பனவற்றைக் கேடு என உபசரித்தார். 4. பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்மூன்றுஞ் சாவ வுறுவான் றொழில். (ப-ரை): பகைமுன்னர் - தன்பகைவரிடத்துக்கு அணிமையில், வாழ்க்கை செயலும் - (குடியிருந்து) வாழ்க்கை நடத்துதலும், தொகைநின்ற - கூட்டமாக நின்ற, பெற்றத்துள் - எருதுகளின் நடுவில், கோல் இன்றிச் சேறலும் - கோல் இல்லாமல் செல்லுதலும், முன் தன்னைக் காய்வானை - காலம் நேர்ந்துழித் தன்னை வருத்தும் உட்பகையுடையவனை, கைவாங்கிக் கோடலும் - (பகையிலனென்று) தழுவிக் கொள்ளுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், சாவ உறுவான் தொழில் - சாதற்கு அமைந்தவனுடைய செயல்களாம். எ-று. வாழ்க்கை செயல் என்பதற்குச் செல்வத்துடன் வாழ்தல் என்று கூறுதலுமாம். முன் என்பது எதிர்வையுணர்த்திற்று. கைவாங்கி என்பதற்கு நீங்கி எனப் பொருள் கொண்டு, தன்னைப் பகைக்குமியல்புடையவனை முன்னே கைவிட்டு நீங்கிப் பின் நட்புக் கொள்ளுதலும் என்று உரைப்பாருமுளர். இவை சாதலை விளக்குமென்பார், ‘இம்மூன்றும் சாவவுறுவான்றொழில்’ என்றார். 5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப விழைவிலாப் பெண்டிர்தோட் சேர்வும் - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரங் காட்டு நெறி. (ப-ரை): வழங்கா - (பலரும் இறங்கிச்) செல்லப் பெறாத, துறைஇழிந்து - துறையின்கண் இறங்கி, நீர்ப்போக்கும் - நீரில் நடந்து செல்லுதலும், ஒப்ப - தன்னையொப்ப, விழைவு இலா - விருப்பமில்லாத, பெண்டிர்தோள் - மகளிரின் தோள்களை, சேர்வும் - அணைதலும், உழந்து - வருந்தி, விருந்தினனாய் - விருந்தினனாகி, வேற்றூர் - அயலூரில், புகலும் - செல்லுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், அருந்துயரம் - அரிய துன்பத்தைக், காட்டும் நெறி - உண்டாக்கும் வழிகளாம். எ-று. ஒப்ப விழைதல் - ஒத்த அன்புடைத்தாதல்; விழைவு என்பதற்கு விரும்பப்படும் அழகும் குணனும் என்றுரைத்தலுமாம். உழந்து என்பதற்குச் செல்வத்தையிழந்து வருந்தி என்று பொருள் கொள்க. அருந்துயரம் - சாக்காடு முதலியன; துயர் என்பது சாதலையும் சாதல் என்பது வருந்துதலையும் உணர்த்துதலை, “ காதலனுற்ற கடுந்துயர் பொறாள்” என மணிமேகலையும், “ சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம்.” என நான்மணிக்கடிகையும் கூறுவனவற்றால் முறையே அறிக. 6. பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக் காராண்மை போல வொழுகலு மிம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. (ப-ரை): தன்னை - தன்னை, பிறர் பேணுங்கால் - பிறர் நன்கு மதிக்குமிடத்து, நாணலும் - தான் அதற்கு நாணுதலும், பேணார் - மதியாராய், திறன் - தன்றகுதியை, வேறுகூறில் - வேறுபட இழித்துக் கூறில், பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறம் வினையை - அறமாகிய நற்செய்கையை, கார் - மழையானது, ஆண்மை போல - (கைம்மாறு கருதாது) ஆளுந் தன்மைபோல, ஒழுகலும்- வளர்த்து ஒழுகலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், ஊர் ஆண்மை என்னும் - ஊரை ஆளுந்தன்மை என்று சொல்லுகின்ற, செருக்கு - செல்வங்களாம். எ-று. பேணுதல் - மதித்துப் புகழ்தலும் உபசரித்தலும். பேணார், முற்றெச்சம்; பெயராக்கிப் பகைவர் என்றுரைப்பாருமுளர். வேறுதிறன் என மாறுதலுமாம். காராண்மை என்பதற்குப் பயிர்த் தொழில் என்றுரைத்தலும் பொருந்தும். இன்சொல் விளைநிலனா வீதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர் பாய்ச்சி பறக்கதி ரீனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். என்றார் முனைப்பாடியார். ஊராண்மையாவது ஊரிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல்; பிறரின் மேம்படும் ஆண்மை எனலுமாம். இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். செருக்கு, செல்வத்திற்கு ஆகுபெயர். “வேண்டாமை யென்னுஞ் செருக்கு.” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. 7. வாளைமீ னுள்ள றலைப்படலு மாளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள் அஞ்சுவான் கற்ற வருநூலு மிம்மூன்றுந் துஞ்சூமன் கண்ட கனா. (ப-ரை): வாளைமீன் - வாளைமீனை, உள்ளல் - உள்ளான் என்னும் பறவை, தலைப்படலும் - வெளவுதற்கு முயறலும், ஆள் அல்லான் - ஆளுந்திற மில்லாதவன், செல்வக் குடியுள் - செல்வ முடைய குடும்பத்தில், பிறத்தலும் - பிறப்பதும், பல் அவையுள் - பல அவையின் கண்ணும், அஞ்சுவான் - (எடுத்துச் சொல்லுதற்கு) அஞ்சுபவன், கற்ற - கற்றறிந்த. அருநூலும் - அரிய நூற்கல்வியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், துஞ்சுஊமன் - தூங்கிய ஊமையன், கண்ட கனா - கண்ட கனவினை யொக்கும்; எ-று. உள்ளல் என்பது உள்ளு எனவும் உள்ளான் எனவும் வழங்கும். சிறுபறவையாகிய உள்ளல் பெருமீனாகிய வாளையை அடைய வொண்ணாதென்றபடி. வாளை மீனுள்ளல் தலைப்படல் என்னுந் தொடரை எழுவாயும் இரண்டாம் வேற்றுமையும் மயங்கி வந்ததற்கு உதாரணமாகக் காட்டினர் மயிலைநாதர் முதலாயினார். பல்அவை - செல்லும் அவையின்கண்ணெல்லாம்; அறிஞர்பலர் கூடிய அவை என்றுமாம்; “ பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்.” என்னுந் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. பயனிலதென்பார் ஊமன் கண்ட கனா, என்றார். ஊமன் கனவினைப் பிறர்பாற் கூறி உசாவலாமையின், அதன் பயனை அறியமாட்டு வானல்லன் ஆகலின் கனவு பயனிலதாகும் என்க. 8. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுந் தாந்தம்மைக் கூறாப் பொருள். (ப-ரை): தொல் அவையுள் - பழைமையாகிய அவையின் கண், தோன்றும் - விளங்கித் தோன்றும், குடிமையும் - உயர் குடிப்பிறப்பும், தொக்குஇருந்த - கூடியிருந்த, நல்அவையுள் - நல்லோர் அவையின்கண், மேம்பட்ட கல்வியும் - மேன்மையுற்ற புலமையும், வெல்சமத்து - வெல்லும் போரின்கண், வேந்து உவப்ப - (தம்) அரசன் மகிழுமாறு, அட்டு - (பகைவரைக்) கொன்று, ஆர்த்த வென்றியும் - ஆரவாரித்த வெற்றியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், தாம் - (அவற்றை உடையராகிய) தாம், தம்மைக் கூறா - தம்மைப் புகழ்ந்து கூறாத, பொருள் - பொருள்களாம். எ-று. தொல் அவை - தொல்லோர் அவை. தொல்லோர் - தொல்குடியில் வந்தோர். நல் அவை - நல்லார் அவை, “நல்லவை” எனவும் “நல்லாரவை” எனவும் வள்ளுவனார் கூறுதல் காண்க. ஆர்த்தவென்றி - ஆர்த்தற்குக் காரணமாகிய வென்றி. “ தேன்வாயுமிழ்ந்த வமிர்து”. (சிந்தாமணி) என்புழிப்போல, கூறாப்பொருள் என்றது. இவைதாமே விளங்கித் தோன்றுமாகலின் கூறவேண்டா என்றபடி; கூறின் பெருமை குன்றுமாகலின் கூறலாகாதன என்றுமாம். கற்றனவுங் கண்ணகன்ற சாயலுமிற் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும். என்பதும் காண்க. 9. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (ப-ரை): பெருமை உடையார் - பெருமைக் குணமுடையாரது, இனத்தின் அகறல் - கூட்டத்தினின்றும் நீங்குதலும், உரிமை இல் பெண்டிரை - மனைவியாகாத பிற மகளிரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு கூடி ஒழுகுதலும், விழுமிய அல்ல - சிறந்தவையல்லாத வினைகளை, துணிதல் - துணிந்து செய்தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செயல்களும், முழுமக்கள் - அறிவில்லாதார், காதலவை - விரும்புவனவாம். எ- று. உரிமை - மனைவியென்னும் பொருட்டாதலை, “ உரிமை முன்போக்கியல்லா லொளியுடை மன்னர்போகார்” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலறிக. விழுமிய வல்ல - சிறந்த பயனில்லனவும் இழிதக்கனவுமாய செயல்கள். முழுமக்கள் - அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர். “ முழுப்பதகர் தாடுரந்து.” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் முழு என்பதற்கு அறிவு நுழைதற்கு வழியிலராய் என நச்சினார்க்கினியர் பொருள் கூறினமை காண்க. “ முழுமகன் சிதடனிழுதை மூடன்” என்பது திவாகரம். “ நடலை யிலராகி நன்றுணராராய முடலை முழுமக்கள்.” என்பது பழமொழி. 10. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - பாத்துண்ணுந் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): கணக்காயர் இல்லாத - ஓதுவிப்பாரைப் பெறாத, ஊரும் - ஊரும், பிணக்கு அறுக்கும் - மாறுபாட்டினை நீக்கும், மூத்தோரை இல்லா - முதியோரைப் பெறாத, அவைக்களனும் - அவையும், பாத்து உண்ணும் - பகுத்து உண்ணும் , தன்மை இலாளர்- தன்மையில்லாதவரது, அயல் இருப்பும் - பக்கத்திற் குடியிருத்தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மை தருதல் உடையனவல்ல. எ-று. கணக்காயர் - நூல் கற்பிக்கும் ஆசிரியர், “கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்” என்பது நாலடியார். பிணக்கு - மாறுபாடு; ஐயம், திரிபுகள். மூத்தோர் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்ந்தவர். இதனை “அறனறிந்து மூத்தவறிவுடையார்” என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையானறிக. “அவைக்குப்பாழ் மூத்தோரையின்மை” என்பது நான்மணிக் கடிகை. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்துண்ணல் - வறியர் முதலாயினார்க்குப் பகுத்தளித்துப் பின்பு தான் உண்ணுதல். “பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின்” என்னுங் குறளுரை நோக்குக. ஊர்கல்வி விருப்பினர்க்கும் அவைக்களன் முறை கூறுவார்க்கும், அயலிருப்பு வறியராதியோர்க்கும் நன்மைபயவா என்க. 11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுந் - தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்றும் ஊரெல்லா நோவ துடைத்து. (ப-ரை): விளியாதான் - பாடுந்திறமில்லாதவனது,கூத்தாட்டு -கூத்தாட்டத்தினை, காண்டலும் - பார்த்தலும், வீழ களியாதான் - (மயக்கத்தால்) வீழுமாறு கள்ளுண்ணாதவன், காவாது உரையும் - போற்றாது சொல்லும் சொல்லும், தெளியாதான்கூரையுள் - (குற்றமிலனென்று) தன்னைத் தேறாதவனுடைய வீட்டின்கண், பல்காலும் - பலமுறையும், சேறலும் - செல்லுதலும், இம்மூன்றும்- (ஆகிய) இந்தமூன்றும், ஊரெல்லாம் - ஊரெல்லாரும், நோவது- வருந்துங் குற்றத்தை, உடைத்து - உடையன. எ-று. விளி - இசைப்பாட்டு. “ இளிவாய்ப் பிரசம் யாழாக” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில், விளியாக் கொண்டு, என்பதற்குப் ‘பாட்டாகக் கொண்டு’, என்று பொருள் கூறி, விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், என்றார் பிறரும், என இதனையே மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். விளியாதான் - என்பதனை எழுவாயாக்கி உரைப்பாருமுளர். காவாது - நாவைப் பாதுகாவாமல், கூரை - மனை. - நோவது, வினையாலணையும் பெயர். உடைத்து, பன்மையிலொருமை. 12. தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர் கேளாக வாழ்த லினிது. (ப-ரை): தாளாளன் என்பான் - முயற்சியுடையானென்று சொல்லப்படுவானாகிய, கடன்படா வாழ்பவன் - கடன் கொள்ளாமல் வாழ்பவனும், வேளாளன் என்பான் - ஒப்புரவு செய்வான் என்று சொல்லப்படுவானாகிய, விருந்து இருக்க - தன்னைத் தேடி வந்த விருந்தினர் இல்லின் புறத்திருக்க, உண்ணாதான் - தனித்து உண்ணுதலைச் செய்யாதவனும், கோளாளள் என்பான் - ஆசிரியன் கற்பித்தவற்றை உள்ளத்திற் கொள்ள வல்லன் என்று சொல்லப் படுவானாகிய, மறவாதான் - கற்றவற்றை மறவாதவனும், இம்மூவர் - (ஆகிய) இந்த மூவரையும், கேள் ஆக - நட்டாராகப் பெற்று, வாழ்தல் - வாழுதல், இனிது - (ஒருவர்க்கு) இன்பத்தைத் தருவதாம். எ-று. தாள், தாளாண்மை -முயற்சி, வேளாண்மை - உபகாரம், முயற்சியுடையானென்று சொல்லப்படுவோன் கடன்படாமல் வாழ்பவனாவன்; என்றிங்ஙனம் தனித்தனி முடித்துரைத்தலுமாம். படா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். “கடமுண்டு வாழாமை காண்டலினிதே” என இனியவை நாற்பதிலும், “வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருக்குறளிலும், “வேளாணெதிரும் விருந்தின் கண்ணும்” எனத் தொல் காப்பியத்திலும் போந்த தொடர்கள் இங்கு நோக்கற்பாலன கோளாளன் - கொள்ளுதல் வல்ல மாணவன். 13. சீல மறிவா னிளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லா னரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் றவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். சீலம் அறிவான் - ஆசிரியன் கற்பித்த நிலையை அறிவானாகிய, இளங்கிளை - மாணவனும், குடி - தளர்ந்த குடிகளை, சால - ஓம்பல்வல்லான் - மிகவுங் காத்தல் வல்லானாய, அரசன் - வேந்தனும், வடுஇன்றி - குற்றமில்லாமல், மாண்ட குணத்தான் - மாட்சிமையுற்ற குணத்தினனாகிய, தவசி - துறவியும், என்று இம்மூவர் - என்று இந்த மூவரும், யாண்டும் - எக்காலத்தும், பெறற்கு அரியார் - பெறுதற்கு அரியவர். எ-று. சீலம் - கற்பித்த நிலையாதலைச் “சீலக் கஞ்சி நற்போதகஞ் செல்வன” என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக, இளங்கிளை என்பது, தம்பி, தங்கை, மைந்தன், மைத்துனன் முதலிய இளஞ் சுற்றங்களையும் குறிக்கும். “மாலவற் கிளங்கிளை” எனச் சிலப்பதிகாரத்திலே தங்கை என்னும் பொருளிலும், “எழுமையும் பெறுக வின்ன விளங்கிளைச் சுற்றமென்றாள்” எனச் சிந்தாமணியில் மைத்துனன் என்ற பொருளிலும் இச்சொல் வந்துள்ளமை காண்க. “இளங்கிளையாரூரன்” என நம்பியாரூரர் தேவாரத் திருப்பாட்டிற் கூறிக் கொள்ளுதலின் தோழன், தொண்டன் என்னுஞ் சுற்றங்களையும் இது குறிக்குமென்க. இங்கே தம்பி என்றும், புதல்வன் என்றும் உரைத்தலுமாம். சீலம் அறிவான் இளங்கிளையாவன் என்றிங்ஙனம் தனித்தனி முடித்தலும் அமையும். தளர்ந்த குடியை ஓம்பலாவது “ஆறி லொன்றாய பொருடன்னையும் வறுமை நீங்கிய வழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும்” என்பர் பரிமேலழகர். வடு - காமவெகுளி மயக்கங்கள். 14. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றுங் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): இளமை - இளமைப் பருவமுடையவர், இழுக்கல் இயல்பிற்று - தவறுபுரிதலாகிய இயற்கையை உடையார், பேதைமை - அறியாமையுடையவர், பழித்தவை - பெரியார் விலக்கிய சொற்களையே, சொல்லுதல் வற்று ஆகும் - சொல்லுதலில் வல்லவராவார், சிறுமை - கீழ்மையுடையவர், யாண்டும் - எப்பொழுதும், செறுவொடு நிற்கும் - கறுவுதலுடையராய் நிற்பர், (ஆதலால்) இம்மூன்றும் - இந்த மூவரையும், அறிவுடையார் – அறிவினையுடையோர், குறுகார் - அணுகார். எ-று. பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. “ பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து”. என்புழிப்போல. இளையர், பேதையர், கீழோர் என்று இவர்களை அறிவுடையோர் நெருங்காரென். 15. பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர் நட்கப் படாஅ தவர். (ப-ரை): பொய்வழங்கி - பொய்ச் சொற்களைக் கூறி, வாழும் - உயிர்வாழ்கின்ற, பொறிஅறையும் - திருவற்றானும், ஊழினால் - விதியினால், தாழ்விடத்து - மேலோர் தாழ்வெய்திய காலத்து, கைதிரிந்து - ஒழுக்கம் வேறுபட்டு, நேர்கருதும் - அவரைத் தனக்கு ஒப்பாக எண்ணும், தட்டையும் - மூங்கில் போல்வோனும், ஒட்டி - பிறரோடு நட்புக் கொண்டு, வினைநலம் பார்ப்பானும் - தன் கருமத்தின் நன்மையையே நோக்குவோனும், இம்மூவர் - (ஆகிய) இந்தமூவரும், நட்கப்படாஅதவர் - நட்புக் கொள்ளப்படாதவர். எ-று. இந்நூலிலே பின் “நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும்” என்றும், நான்மணிக்கடிகையில் “பொய்த்தலிறு வாயநட்புக்கள்” என்றும் கூறியிருப்பன இங்கு நோக்கற் பாலன. பொறி - அறிவுமாம், பொறியறை - பொறியிலி, கண்ணறை போல. தட்டை - மூங்கில்; உள்ளே புரையுடைத்தாதல் பற்றித் தட்டை என்றார்; வணங்காமை குறித்துமாம். ஒட்டி வினை நலம் பார்ப்பான் என்றது. “உறுவது சீர்தூக்கும் நட்பினை.” 16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானு மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார். (ப-ரை): மண்ணின் மேல் - புவியின் மீது, வான்புகழ் - சிறந்த புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல்சீர் - குற்றமில்லாத சிறப்பினையுடைய, கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பெற்றானும் - பெற்றவனும், உண்ணும் நீர் - உண்ணுதற்குரிய நீரையுடை, கூவல் - கிணற்றினை, குறைவு இன்றி - குறைவில்லாமல், தொட்டானும் - தோண்டின வனும், இம்மூவர் - (ஆகிய) இந்த மூவரும், சாவா உடம்பு - அழியாத உடம்பினை, எய்தினார் - பெற்றவராவர். எ-று. “ இந்நிலத்து மன்னுதல் வேண்டினிசை நடுக.” என்று நான்மணிக்கடிகையும், “ பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்.” என்று திருக்குறளும் கூறுவன இங்கே கருதற்பாலன. உண்டல் பொதுவினையுமாகலின், உண்ணுநீர் என்றார். “உண்ணுநீர் விக்கினா னென்றேனா” என்பது கலித்தொகை. சாவா உடம்பு - புகழுடம்பு; தேவயாக்கையுமாம். தெளிவு பற்றி எய்தினார் என இறந்த காலத்தாற் கூறினார். 17. மூப்பின்க ணன்மைக் ககன்றானுங் கற்புடையாட் பூப்பின்கட் சாராத் தலைமகனும் - வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்மூவர் கல்விப் புணைகை விட்டார். (ப-ரை): மூப்பின்கண் - மூப்பு வந்தவிடத்தும், நன்மைக்கு அகன்றானும் - துறவறத்தை அடைதற்கு அஞ்சி நீங்கினவனும், கற்புடையாள் - கற்புடைய தன் மனைவியை, பூப்பின்கண் - பூப் பெய்திய காலத்தே, சாராத்தலைமகனும் - அடையாத கணவனும், வாய்ப்பகையுள் - சொற்போரின் கண், சொல்வென்றி - சொல் வெற்றியை, வேண்டும் - விரும்பும், இலிங்கியும் - துறவியும், இம்மூவர் - இந்த மூவரும், கல்விப் புi™கைவிட்டார் - கல்வியாகிய தெப்பத்தைக் கைக்கணின்றும் தவறவிட்டு அழுந்துவார். எ-று. மூப்பின் கண்ணும் என உம்மை விரிக்க. நன்மை துறவின் மேற்று: “ வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல”. (திருக்குறள்) “ நரைவருமென் றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்”. (நாலடியார்) என்பனவாகலின், இளமைக் கண்ணே துறத்தல் கடவதாகவும் முதுமையிலும் துறத்தற்கஞ்சி யொழிந்தான் என இழித்துக் கூறியவாறு. அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண்டான பின் என்னும் கம்பராமாயணச் செய்யுளும் ஈண்டுக் கருதற்பாற்று. பூப்பு- மாதவிடாய். பூத்தபின் மூன்றுநாள் சொற்கேட்கும் வழியுறைதலும், பன்னிருநாள் கூடியுறைதலும் வேண்டும் என்பர். பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலையான. என்பது தொல்காப்பியம். இலிங்கி - துறவி; தவக்கோலந் தாங்கியவன் என்றும், தார்க்கிகன் என்றும் உரைத்தலுமாம். துன்பக் கடலினின்றும் கரையேறுதற்குப் புணையாகிய கல்வி இவர்கட்கு அப்பயன் விளைத்திலாமையின் கல்விப்புணை கைவிட்டார் என்றார். 18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றும் கள்ளரி னஞ்சப் படும். (ப-ரை): ஒருதலையான் - உறுதியாக, வந்துறூஉம் மூப்பும் - வந்து பொருந்தும் முதுமைப் பருவம், புணர்ந்தார்க்கு - நட்டவர்க்கு, இருதலையும் - இருவர்மாட்டும், இன்னாபிரிவும் - துன்பத்தைப் பயக்கும் பிரிவும், உருவினை - உடலை, உள்உருக்கி - உள்ளேயுள்ள எலும்பு முதலியவற்றை யுருக்கி, தின்னும் - வருத்தும், பெரும்பிணியும் - பெரிய நோயும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கள்ளரின் அஞ்சப்படும் - திருடர்க்கு அஞ்சுதல்போல அஞ்சப்படும். எ-று. ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி யென்னும் இருவருள் ஒருவரிடத்து என்றுருரைப்பாருமுளர். அளபெடை இன்னிசை நிறைத்தற் பொருட்டு. தின்னல் - நலிதல்; “பிணிதன்னைத் தின்னுங்கால்” எனப் பின்னுங் கூறுவர். படும் - தகும் என்னும் பொருட்டு. 19. கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானும் - அறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (ப-ரை): கொல்யானைக்கு ஓடும் - கொல்கின்ற யானையின் முன் ஓடுகின்ற, குணம்இலியும் - குணமில்லாதவனும், எல்லில் - இரவில், பிறன்கடை நின்று - (பிறன் இல்லாளைக் காதலித்து) அவன் வாயிலின்கட் சென்று நின்று, ஒழுகுவானும் - ஒழுகுபவனும், ஆடும் பாம்பு - படமெடுத்தாடும் பாம்பினை, அறம்தெரியாது - அறத்தை ஆராய்ந்து தெளியாது, ஆட்டும் - ஆட்டுகின்ற, அறிவிலியும் - அறிவில்லாதவனும், இம்மூவர் - இம்மூவரும், நாடுங்கால் - ஆராயுமிடத்து, தூங்குபவர் - இறப்பவராவர். எ-று. கொல்யானைக் கோடுங்குணமிலி என்பதற்குக் கொல்லுந் தொழிற்குரிய யானைக்கு அஞ்சிப் போர்க் களத்தினின்றோடுகின்ற வீரத்தன்மை யில்லாதவன் என்றுரைப்பாருமுளர். அறந்தெரியாது பிறன்கடை நின்றொழுகுவானும் என மாறுதலுமாம். “ அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்.” என்னுந் திருக்குறளை நோக்குக. மறந்தெரியாது எனப் பிரித்து நன்றி செய்தார்க்கும் தீங்கினைச் செய்கின்ற (பாம்பின்) கொடுமையை உணராமல் என்றுரைத்தலுமாம்; ஆடும்பாம்பு - பெயர் மாத்திரை; அடும் என்பது நீண்டதாகக் கொண்டு கொல்லும் பாம்பு என்றுரைத் தலும் பொருந்தும். தூங்கல் - துஞ்சல்; மடிதல். 20. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (ப-ரை): பிறன் - பிறன்பொருண்மேல், ஆசைப்படுதலும் - விரும்புதலும், பாசம் பசிப்ப - சுற்றத்தார் பசித்திருக்குமாறு, மடியைக் கொளலும் - சோம்பலைக் கோடலும், கதித்து - வெகுண்டு, ஒருவன் - ஒருவனால், கல்லான்என்று - கல்லாதவன் என்று, எள்ளப்படுதலும் - இகழப்படுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எல்லார்க்கும் - (அறிவுடையோர்) எல்லோருக்கும், இன்னாதன - துன்பம் பயப்பனவாம். எ-று. பிறன் என்றது பிறன்பொருளை யுணர்த்திற்று. ஆசை என்பதற்குப் பொன் என்று பொருள் கொண்டு அறிவில்லாத பிறனிடத்துச் செல்வமுண்டாதலும் என்றுரைத்தலுமாம், பாசம் - அன்பு, அன்பு செய்யும் சுற்றத்தின்மேல் நின்றது. கதித்து - கதங் கொண்டு, பருத்துவளர்ந்து என்றுரைத்தலும் பொருந்தும். 21. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (ப-ரை): வருவாயுள் - வரும்பொருளில், கால்வழங்கி வாழ்தல் - காற்பகுதியை ஈந்து வாழுதலும், செரு - போரின்கண், வாய்ப்பச் செய்தவை - வெற்றி பொருந்தச் செய்த வீரச் செயல்களை, நாடா - நினைந்து தம்மை நன்குமதியாத, சிறப்புடைமை - மேன்மைக் குண முடைய ராதலும், பலநாடி - பலநூல்களையும் ஆய்ந்து, நல்லவை - அவற்றுள் நல்ல நூல்களை, எய்தக் கற்றல் - பொருந்தக் கற்றலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நலமாட்சி - நன்மையாகிய குணங் களையுடைய, நல்லவர்கோள் - நல்லோரின் கொள்கையாம். எ-று. கால் என்பது அவ்வளவிற்றாய பொருளுக்கு ஆகுபெயர். வருவாயறிந்து வழங்கலினிதே என்பது இனியவை நாற்பது. “ ஆற்றின ளவறிந் தீகவது பொருள் போற்றி வழங்கு நெறி.” என்னுங் குறளுரையில், பிறரும் வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் என்றார் எனப் பரிமேலழகர் இதனை எடுத்துக் காட்டினமை காண்க. நல்லவை பலவும் நாடிக் கற்றல் என்றும், பல அவையினுஞ் சென்று நல்லவைகற்றல் என்றும் உரைத்தலுமாம். பின்னும் பல்லவையுள் நல்லவை கற்றலும் என்பர். 22. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடு மவாத்தேருந் - தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (ப-ரை): பற்று என்னும் - பற்று என்று கூறப்படும், பாசத்தளையும் - அன்பாகிய கட்டும், பலவழியும் - பலபொருள் களிடத்தும், பற்று அறாது - விருப்பம் நீங்காது, ஓடும் - செல்லும், அவாத்தேரும் - அவாவாகிய தேரும், தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பொய்த்துச் சொல்லுதல் என்னும், பகைஇருளும் - பகைமையுடைய இருளும், இம்மூன்றும் - இவை மூன்றும், வித்து - பிறவிக்கு மூலமாம், அற - இவை கெடுதலால், பிறப்புவீடும் - பிறவியொழியும். எ-று. சிலப்பதிகாரத்தில் வரும், “ பிணிப்பறுத்தோர்தம் பெற்றி யெய்தவும்.” என்னுந் தொடர்க்கு உரையெழுதுமிடத்தில், “பிணிப்பு - பற்று; ஆவது - அன்பாகிய ஒருதளை; அதனை அறுத்தோர் அருளுடையோர்” என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது ஈண்டு அறியற் பாலது. தளை - கட்டு, பந்தம். அவா - எனக்கிது வேண்டுமென்னும் உணர்வு, வித்தற என்பதற்கு அடியுடன் கெட என்றுரைத்தலுமாம். அறுதல் என்பது அற எனத் திரிந்து நின்றது. “ பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்.” “ அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து”. என்னும் குறள்கள் இங்கே சிந்திக்கற்பாலன. பொய்த்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதியுமாம். அறியாமையைச் செய்தலின் பொய்யுரையை இருள் என்றார். “ எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.” என்னுங் குறளுரையில், “உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாதவிருள் போகலின், பொய்யா விளக்கே விளக்கென்றார். அவ்விருளாவது அறியாமை,” எனப் பரிமேலழகர் கூறியிருப்பது அறியற்பாலது. 23. தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று நல்வினை யார்க்குங் கயிறு. (ப-ரை): தானம் கொடுக்கும் - தானமாகப் பொருளைக் கொடுக்கும், தகைமையும் - பெருந்தன்மையும், மானத்தார் - மானமுடையாரது, குற்றம் கடிந்த ஒழுக்கமும் - குற்றங்களை நீக்கிய நல்லொழுக்கமும், தெற்றென - தெளிய பல்பொருள் நீங்கிய - பல பொருளினின்றும் நீங்கிய, சிந்தையும் - எண்ணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்வினை - நல்வினையை, ஆர்க்கும் கயிறு - பிணிக்கும் கயிறாம். எ-று. தானங் கொடுத்தலாவது அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடளிப்பது. மானம் - பெருமை, மானத்தார் ஒழுக்கம் என இயையும், தெற்றென - தெளிவாக; எச்சத் திரிபாகக் கொண்டு, உண்மை தெளிந்து என்றுரைத்தலுமாம். யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன். என்பவாகலின், பல்பொருள் நீங்கிய என்றார். நீங்குதல் – பற்று விடுதல், ஆர்க்குங்கயிறு - நீங்காமற் பிணிக்கும் கயிறு. “ திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு”. என்று முப்பால் கூறுதல் காண்க. 24. காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லும் தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கு மளறு. (ப-ரை): காண்தகு - காணத்தகுந்த, மெல்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - பரத்தையினது, வாய் இன் சொல்லும் - வாயாற் சொல்லும் இனிமையுடைய சொல்லும், தூண்டிலினுள் - தூண்டிலின்கண்ணே, பொதிந்த - இரும்பை மூடிய, தேரையும் - தவளையும், காழ்த்த பகைவர் - வயிரம் பற்றிய பகையை யுடையாரது. மாண்டசீர் - மாட்சிமைப்பட்ட சிறப்பையுடைய, வணக்கமும் - பணிவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் அளறு- (அறியாதிறங்கினாரை) அழுந்துவிக்கும் சேறு போலாம். எ-று. உளத்தோடு சொல்லாமை தோன்ற ‘வாய்இன் சொல்லும்’ என்றார். தேரை மீனுக்கு இரையாகத் தூண்டிலிற் கோத்தது, அளறு- நிரயமுமாம். கணிகை வாயின் சொல்லும் பகைவர் வணக்கமும் துன்பம் விளைத்தலை “ அன்பின் விழையார் பொருள்விழையுமாய் தொடியார் இன்சொ லிழுக்குத் தரும்.” “ தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார் அழுத கண்ணீரு மனைத்து.” என்னும் வாயுறை வாழ்த்தாலறிக. மூன்று பொருள் கூறும் நியதி பற்றித் தேரையும் என எண்ணினாரேனும் அதனை உவமமாகவே கொள்க. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். 25. செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரு மாய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானு மிம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (ப-ரை): செருக்கினால் வாழுஞ் - தருக்கோடு வாழும், சிறியவனும் - கீழ்மகனும், பைத்து அகன்ற - (நாக) படத்தின் தன்மை யுடைத் தாய்ப் பரந்த, அல்குல் - அல்குலை, விலைபகரும் – விலை கூறி விற்கும், ஆய்தொடியும் - ஆராய்ந்த வளையலணிந்த கணிகையும், நல்லவர்க்கு வைத்த - துறவிகட்கமைத்த, அறப்புறம் - அறச்சாலையை, கொன்றானும் - கெடுத்தவனும், இம்மூவர் - இந்த மூவருடைய, கைத்து - பொருளை, கற்று அறிந்தார் - நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், உண்ணார் – உண்ண மாட்டார். எ-று. “ அல்குனலம் வரைவின்றி விற்கும்.” என்றார் திருத்தக்கதேவரும். ஆய்தொடி, அன்மொழித் தொகை, நல்லவர் என்றது ஈண்டுத் துறவறத்தினரை, ” அடிசில் வைகலாயிரம் அறப்புறமு மாயிரம்” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர், அறப்புறம் என்பதற்கு அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்கள் என்று பொருள் கூறி, ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று என்றுரைத்தனர். ஆகலின் ஈண்டு நல்லவர் என்பதற்கு மாணாக்கர் என்றும், அறப்புறம் என்பதற்குக் கல்விச்சாலை என்றும் உரைத் தலுமாம். கொல்லுதல் - கெடுத்தல். “ பொச்சாப்புக் கொல்லும் புகழை.” என்புழிப்போல. 26. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார். (ப-ரை): ஒல்வது - தான் சென்ற வீட்டின்கட் பொருந்திய, அறியும் - அறிந்து ஒழுகும், விருந்தினனும் - விருந்தினனும் , ஆர்உயிரை - அரிய உயிரை, கொல்வதிடை - கொல்லுதற்கண், நீக்கி - அதனை விலக்கி, வாழ்வானும் - வாழ்பவனும், வல்லிதின் - மனவுறுதியால், சீலம் இனிது உடைய - ஒழுக்கம் நன்கு உடைய, ஆசானும் - ஆசிரியனும், இம்மூவரும் - இந்த மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று எல்லாரானும் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று. ஒல்வது அறிதலாவது இல்வாழ்வார் அளிக்கும் உணவு நொய்தாயினும் அவர்க்கியல்வது அஃதென விருப்புடன் ஏற்றுக் கோடல். கொல்வது இடை நீக்கி என்பதற்குக் கொல்லுந் தொழில் தன்கண் நிகழாமற் போக்கி என்றுரைத்தலுமாம். சீலம் - வாய்மை, தூய்மை, அழுக்காறின்மை, அவாவின்மை முதலியன. ஞாலம் என்பது உயர்ந்தோர் என்னும் பொருட்டு. “ உலகம் எனப்படுவார் ” எனப் பின்னுங் கூறுவர். 27. உண்பொழுது நீராடி யுண்ணுத லென்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதறம் - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றும் தூஉய மென்பார் தொழில். (ப-ரை): உண்பொழுது- உண்ணுதற்குரிய பொழுதில், நீராடி உண்ணுதல் - நீரின்மூழ்கிப் பின் உண்ணுதலும், என் பெறினும் - எத்துணைப் பொருள் பெறுவதாய் இருப்பினும், பால்பற்றி - ஒரு பக்கம் சார்ந்து, சொல்லாவிடுதல் - நடுநிலை பிறழக் கூறாமலொழிதலும், தம் தோல்வற்றி - தம் உடல் மெலிந்து, சாயினும் - அழிவதாயினும், சான்றாண்மை - சான்றாண்மையானது, குன்றாமை – குன்றா திருத்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தூஉயம் - யாம் தூய்மை யுடையேம், என்பார் - என்பவருடைய, தொழில் - தொழில்களாம். எ-று. “ நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவார்.” என ஆசாரக்கோவை கூறுவது இங்கு நோக்கற்பாலது. பால்பற்றி என்பதற்குப் பகை நொதுமல் நண்பு என்னும் முறைமை பற்றி என்றுரைத்தலுமாம். “ பகுதியாற், பாற்பட்டொழுகப் பெறின்” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. சொல்லா- ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தோல் - உடம்பு; சான்று ஆண்மை - பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுதற்றன்மை. பா - ம். உண்டலும், விடுதலும். 28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர் உமிக்குற்றிக் கைவருந்து வார். (ப-ரை): வெல்வது வேண்டி - வெற்றியுறுதலை விரும்பி, வெகுண்டு உரைக்கும் - சினந்து கூறும், நோன்பு இலியும் - பொறுமை இல்லாதவனும், இல்லது - தன்கண்இல்லாத தொன்றை, காமுற்று - (நுகர) விரும்பி, இருப்பானும் - வருந்தியிருப்பவனும், கல்வி - பிறர்கல்விக்கண், செவிக்குற்றம் - செவிப்புலனாகிய சொற் குற்றத்தை, பார்த்திருப்பானும் - நோக்கியிருப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், உமிகுற்றி - உமியைக் குற்றி, கைவருந்துவார் - அதனால் கைவருந்துபவரை ஒப்பர். எ-று. வெல்வது - சொல்லில் வெற்றி கொள்ளுதல், நோன்பு பொறுமையாதலை “உற்ற நோய் நோன்றல்” என்பதனால் அறிக. சொற்குற்றத்தையே ஆராய்ந்து பிறர் சொல்லின் பயன்கொள்ளா திருப்பவன்” என்பார். ‘செவிக்குற்றம் பார்த்திருப்பானும்’ என்றார். கைவருந்துவார், சினைவினை முதலோடு முடிந்தது. “ வெல்வது வேண்டின் வெகுளி விடல்” என நான்மணிக்கடிகையும், “ வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே” என இனியவை நாற்பதும், “ உமிக்குற்றிக் கைவருந்துமாறு” எனப் பழமொழியும் கூறுந் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன. 29. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (ப-ரை): பெண் - மகளிர், விழைந்து - விரும்பி, பின்செலினும்- தன்பின்றொடரினும், தன் செலவில் - தனக்குரிய ஒழுக்கத்தி னின்றும், குன்றாமை - குறையாமையும், விழைந்து - தன்னை விரும்பி, கைக் கண் உறினும் - தன்கைக்கண் உற்றாலும், பொருட்கு - பொருளின்கண், காதல் இன்மை - விருப்பமின்மையும், மண் விழைந்து - (மனை படப்பை முதலிய) மண்ணை விரும்பி, வாழ்நாள் - வாழும் நாளினை, மதியாமை - உயர்வாக மதித்தல் செய்யாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நுண்நூலவர் - நுண்ணிய பொருள்களையுடைய நூற்களை யுணர்ந்தவர், விழைந்த - விரும்பிய, நோக்கு - நோக்கமாம். எ-று. கண்விழைந்துதன் செலவிற் குன்றாமை என இயைதலும் பொருந்தும். கண்அசையுமாம். பொருட்கு, வேற்றுமை மயக்கம். நுண்நூல் விழைந்தவர் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். நூலவர் தன்செலவு எனப் பன்மையொருமை மயங்கின. பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை யென்னும் மூவாசைகளையும் ஒழித்தல் கூறியவாறு. 30. தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் நின்ற புகழுடை யார். (ப-ரை): தன்நச்சி - தன்னை விரும்பி, சென்றாரை - அடைந்தவரை, எள்ளா ஒருவனும் - இகழாத ஒருவனும், மன்னிய செல்வத்து - மிக்க செல்வமுடைய காலத்து, பொச்சாப்பு நீத்தானும் - மறத்தலை நீக்கியவனும், என்றும் - எக்காலத்தும், அழுக்காறு - பொறாமையை, இகந்தானும் - நீங்கினவனும், இம்மூவர் - இந்த மூவரும், நின்ற புகழ் உடையார் - நிலைபெற்ற புகழுடையார். எறு. மன்னிய - மிக்க என்னும் பொருட்டு. செல்வக்களிப்பாலே செய்வதும் தவிர்வதும் மறந்திருத்த லில்லாதவன் என்க. செல்வம் வந்துற்ற காலைப் பழைய சுற்றமும் துணையும் முதலியவற்றை மறத்தல் இல்லாதவன் என்றுமாம். நின்றபுகழ் - நிற்றற்குக் காரணமாகிய புகழுமாம். 31. பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): பல்லவையுள் - பல நூல்களுள்ளும், நல்லவை கற்றலும் - நல்ல நூல்களைக் கற்றலும், பாத்து - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து, உண்டு - தானும் உண்டு, ஆங்கு - அவ்வாற்றால், இல்அறம் - மனையறத்தை, முட்டாது - குறைவுபடாமல், இயற்றலும் - நடத்தலும், வல்லிதின் - விரைவின், தாளின் - முயற்சியால், ஒரு பொருள் - ஒருபொருளை, ஆக்கலும் - செய்து கோடலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் அறங்கள் எல்லாவற்றுள்ளும், தலை - சிறந்த அறமாம். எ-று. பல்லவையுள் என்பதற்குப் பல அவையின் கண்ணும் என்றுரைத்தலுமாம். முன் பலநாடி நல்லவை கற்றல் என்பதற் குரைத்தமையுங் காண்க. பாத்து, பகுத்து என்பதன் மரூஉ. ஏனை மூவகை நிலையினர்க்கும், வறியர் முதலாயினார்க்கும் பகுத்தளித்தல் இல்வாழ்வார் கடனாகுமென்க. வல்லிதின் என்பதற்குத் திட்பமுடன் என்றுரைத்தலுமாம். ஒருபொருள், ஒப்பற்ற பொருள்; மெய்யுணர்வு கேள்வியுள் எல்லாம் இதில் உள் என்பது மாறிநின்றது, கேள்வியெல்லா வற்றுள்ளும் என்க. 32. நுண்மொழி நோக்கிப் பொருள்கோட னூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லுத லிம்மூன்றுங் கற்றறிந்தார் பூண்ட கடன். (ப-ரை): மொழிநோக்கி - சொற்களை ஆராய்ந்து, நுண்பொருள் - (அவற்றின் கண்ணுள்ள) நுட்பமாகிய பயனை, கோடல் - கொள்ளுதலும், நூற்கு ஏலா - அறநூலுடன் பொருந்தாத, வெண்மொழி - பயனில் சொற்களை, வேண்டினும் - பிறர்கேட்க விரும்பினும், சொல்லாமை - கூறாமையும், நன்மொழியை - (உயிர்க்கு உறுதி பயக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் அல்லார்கண் - சிறிய வினத்தார் அல்லாரிடத்து, சொல்லுதல் - சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கற்று அறிந்தார் - நூல்களைக்கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், பூண்ட - மேற்கொண்ட, கடன் - கடனாம். எ-று. நுண்ணிய பொருளுள்ள மொழிகளை ஆராய்ந்து என்றுமாம். வெண்மொழி - வெளிற்றுரை, பயனில்சொல் - சிறிய இனமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. “ பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு. பிறர்சொற் பயன் கோடல். “ புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்.” என்னும் வள்ளுவர் வாய்மொழிகள் இங்கே சிந்திக்கற்பாலன. பா - ம்: பொருள்கொளலும், சொல்லலும். 33. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (ப-ரை): கோல் அஞ்சி - செங்கோலை அஞ்சி, வாழும் - தனக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற, குடியும் - குடிகளும், குடிதழீஇ - அக்குடிகளைத் தழுவுதலுடனே, ஆலம்வீழ் போலும் - (தன் பாரத்தைச் சுமத்தலால்) ஆலமரத்தின் விழுதினை ஒக்கும், அமைச்சனும் - மந்திரியும், வேலின்- வேலிடத்துள்ள, கடைமணி போல் – பூணினைப் போல, காப்பு - காத்தலையுடைய, திண்ணியான்- உறுதியுடைய படைத்தலைவனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், படை வேந்தன் - தானையையுடைய அரசன், பற்றுவிடல் - அன்பைப் பொருந்த விடும் இடங்கள். எ-று. வீழ் - விழுது “ மதலையாய் மற்றதன் வீழூன்றியாங்கு.” என்பது நாலடி. வேலின் கடைமணி - வேலினது காம்பின் அடியிலுள்ள பூண், இஃது இப்பொருட்டாதலை, “ இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்காழ் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோன்றி - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லாம்.” என்னும் களவழிச் செய்யுளானறிக. திண்ணியானும் என உம்மையை மாறுக. விடல் - விடுமிடம் என்னும் பொருட்டு; இம்மூன்றிடத்தும் வேந்தன் விடுக என வியங்கோளாக்கி யுரைத்தலுமாம். 34. மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து முறைநிலை கோடா வரசுஞ் - சிறைநின் றலவலை யில்லாக் குடியுமிம் மூவர் உலக மெனப்படு வார். (ப-ரை): மூன்று கடன் - மூவர்க்குச் செய்யும் மூன்று கடன் களையும், கழித்த - செய்து கழித்த, பார்ப்பானும் - மறையோனும், முறைஓர்ந்து - அறநூல்களை உணர்ந்து, நிலைகோடா - அவை கூறியவற்றில் நிற்றலினின்றும் கோணுதல் செய்யாத, அரசும் - அரசனும், சிறைநின்று - அரசனது ஆணைவழி நின்று, அலவலை இல்லா - வீணாரவாரம் செய்தலில்லாத, குடியும் - குடிமக்களும், இம்மூவர் - இந்த மூவரும், உலகம் எனப்படுவார்- உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். எ-று. மூன்றுகடன் - தேவர்கடன், முனிவர்கடன், தென்புலத்தார் கடன் என்பன. ஓர்ந்து என்பதற்குக் குற்றத்தை நாடி என்றும், முறை என்பதற்கு நீதி என்றும் பொருள் கூறுதலுமாம். அலவலை - ஆரவாரம்; ஆராயாது செய்தலுமாம். இச்சொல் கீழ்மகன் என்னும் பொருளிலும் வரும்; மேலும் “அல்லவை செய்யும் அலவலையும்” என்பர். 35. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். (ப-ரை): முந்நீர்த்திரையின் - கடலின்கண் (ஓயாது எழுந்து இயங்கும்) அலையைப் போல, எழுந்து இயங்கா - மனம் எழுந்து அலைதல் இல்லாத, மேதையும் - அறிவுடையவனும், நுண்நூல் பெருங்கேள்வி - நுண்ணிய நூல்களின் மிக்க கேள்வியால், நூல்கரை கண்டானும் - கல்விக் கடலின் எல்லை கண்டவனும், மைநீர்மை இன்றி - குற்றத்தன்மை இன்றி, மயல் அறுப்பான் - மருட்சியை அறுப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய் நீர்மை - மெய்ம்மைத் தன்மையுடைய, மேல் - வீட்டுலகத்தில், நிற்பவர் - அழிவின்றி நிலைத்து வாழ்பவர். எ-று. முந்நீர் - கீழதாகிய ஊற்று நீரும் மேலதாகிய மழைநீரும் நடுவணதாகிய ஆற்று நீரும் உடையது; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையுடையது என்றும் உரைப்ப. “ திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.” என்னும் திருமந்திரம் இங்கே சிந்திக்கற்பாலது. பின்னுள்ள நூல் என்பது கல்வி என்னும் பொருட்டு. மை - களங்கம், மயல் - அவிச்சை, மெய்ந்நீர்மைமேல் என்பதற்கு மெய்யாகிய வீட்டு நெறியில் என்றுரைத்தலுமாம். 36. “ ஊனுண் டுயிர்கட் கருளுடைய மென்பானும் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானும் காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு.” (ப-ரை): ஊன்உண்டு - புலாலுண்டு வைத்து, உயிர்கட்கு - உயிர்களிடத்து, அருள் உடையேம் என்பானும் - அருள் உடையேம் என்று கூறுபவனும், தான் - தான், உடன்பாடு இன்றி - முயறற்கு உடன்படுதல் இல்லாமல், வினை - ஊழானது, ஆக்கும் என்பானும் - செய்யும் என்று கருதி மடிந்திருப்பானும், காமுறு - பயனை விரும்பிச் செய்யும், வேள்வியில் - யாகத்தின்கண், கொல்வானும் - ஓருயிரைக் கொல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், தாம் கண்டவாறு - (தம்புல்லறிவால்) தாம் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாம் அறிந்தவராவர். எ-று. ஊனுண்பான் அருளுடையனாகான் என்பதும், வேள்வியிற் கொல்வது நன்றன் றென்பதும், “ தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள். “ அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.” என்னும் திருக்குறள்களால் முறையே அறிவுறுத்தப்படுதல் காண்க. வேள்வியால் வரும் பயன் அநித்தமும், கொல்லாமை யானெய்தும் பயன் நித்தமும் ஆகலின் வேள்வியிற் கோறலும் இகழன் மாலைத்தென்க. இம்மூவரும் புல்லறிவாளரென்பார் தாமறிவர் தாங்கண்டவாறு என்றார். “ காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு.” என்னும் குறள் நோக்கற்பாலது. 37. குறளையு ணட்பளவு தோன்று முறலினிய சால்பினிற் றோன்றுந்1 தவக்குடிமை -பால்போலும் தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. (ப-ரை): குறளையுள் - புறங்கூறுதலின்கண், நட்பு அளவு - கொண்ட நட்பினது அளவு, தோன்றும் - விளங்கும், உறல்இனிய - பொருந்துதல் இனிமையுடைய, சால்பினில் - நற்குணங்களின் நிறைவினால், தவக்குடிமை - உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் - விளங்கும், பால்போலும் - பாலினது வெண்மையை ஒக்கும், தூய்மையுள் - தூயதன்மையின்கண், பிரமாணம் - நூல்வழி ஒழுகல், தோன்றும் - விளங்கும், இம்மூன்றும் - இந்தமூன்றும், வாய்மை உடையார் - உண்மையுடையவர் மேற்கொண்ட, வழக்கு - முறைமை. எ-று. நண்பர் இருவருள் ஒருவன் மற்றொருவனைப் புறம் பழிப்பனேல் பொய்த்தலிறுவாய நட்புக்கள் என்றபடி அந்நட்புச் சுருங்கியொழிதலும், அங்ஙனமில்லாவிடத்து அது பெருகி விளங்குதலும் உண்மையின் ‘குறளையுள் நட்பளவு தோன்றும்’ என்றார்; இதற்கு, நட்பினரிருவரைப் பிரிக்கக் கருதிக் குறளை கூறுவானொருவன் இடைப்புகுந்து ஒருவர் பால் இழுக்கமுளதாக மற்றொருவருழைச் சொல்லியவழி ‘எம் நண்பர் அது செய்யார்’ எனக் கொண்டு, அவன் கூற்றை ஏற்றுக் கொள்ளாத உரிமைக் கேற்ப நட்பு விளங்கித் தோன்றும் என்றும் குறளை என்பதற்கு வறுமை எனப் பொருள் கொண்டு, செல்வக் காலத்து நட்பினராய்ப் போந்தார் வறுமையுற்றுழிச் செயல் வேறுபடாமையும், வேறு படுதலுங் கொண்டு நட்பின் அளவு அறியப்படும் என்றும் உரைத்தலுமாம். கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார் வாய்மைக் குடி என்பதுபோல தவக்குடிமை என்றார். பிரமாண வழியொழு குதலைப் பிரமாணம் என்றார். “ கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.” என்னும் வள்ளுவர்வாய்மொழிகள் சிந்திக்கற்பாலன. “ பால்போ லொழுக்கத் தவரே பரிவில்லா மேலுலக மெய்து பவர்.” என அறநெறிச்சாரம் கூறுதல் காண்க. 38. தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றும் செல்வ முடைக்கும் படை. (ப-ரை): தன்னை வியந்து - தன்னைத்தானே நன்கு மதித்து, தருக்கலும் - செருக்குதலும், கொன்னே - பயனின்றி, வெகுளி - கோபத்தை, தாழ்வுஇன்றி - தணிதல் இல்லையாக, பெருக்கலும் - பெருகச் செய்தலும், முன்னிய - நினைத்த, பல்பொருள் - பலபொருள்களையும், வெஃகும் சிறுமையும் - விரும்பும் சிறுமைக் குணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், செல்வம் உடைக்கும் - செல்வத்தை அழித்தற்கு வல்ல, படை - படைக்கலங்களாம். எ-று. தாழ்வு இன்றி என்பதற்கு அடக்கமில்லாமல் என்றுரைத்தலு மாம். தாழ்வின்றி வியந்து தருக்கல் என்று கூட்டுதலும் பொருந்தும். அகப்பகை ஆறனுள் மதம் குரோதம் காமம் என்பன இங்கு விலக்கப்பட்டன. இச்செய்யுளின் பொருள். “ செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.” என்னும் குறளில் அடங்கியிருத்தல் காண்க. மேலும் நல்வினை நீக்கும் படை என்பர்; தெய்வப் புலவரும் ‘செல்வத்தைத் தேய்க்கும் படை’ எனச் செல்வத்தை யழிப்பதனைப் படையாக்கிக் கூறினர். 39. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல் கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்ம்மயக்கஞ் சூதின்கட் டங்க லிவைமூன்றும் நன்மை யிலாளர் தொழில். (ப-ரை): பொருட்பெண்டிர் - விலைமாதரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - முயங்குதல், புலைமயக்கம் - புலைத்தன்மை (புன்மை) யுடன் கலத்தலாகும், கள் உண்டுவாழ்தல் - கள்ளினை உண்டு செல்லுதல், கலம் மயக்கம் - (எச்சிற்) கலத்துடன் கலத்தலாகும், சொலை முனிந்து - (ஆன்றோர்)சொல்லை வெறுத்து, சூதின்கண் தங்கல் - சூதாட்டத்தில் அடிப்படுதல், பொய் மயக்கம் - பொய்யுடன் கலத்தலாகும், இவை மூன்றும் - இந்த மூன்றும், நன்மை இலாளர் தொழில் - குடிப்பிறப்பு முதலிய நன்மை இல்லாதவரின் தொழில் களாம். எ-று. புலைமயக்கமாவது தோய்தல் என்றிங்ஙனம் இயைத் துரைத்தலுமாம். வாழ்தல் - வாழ்நாள் கழித்தல்; கெடுதல் என்ற குறிப்புமாம். சொலை முனிந்து என்பதற்கு மெய்ச்சொல்லை வெறுத்து என்றுரைத்தலுமாம். தங்கல் - அடிப்படல்; இடையறாது நிற்றல். 40. வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றும் தொல்லறி வாளர் தொழில். (ப-ரை): வெகுளி - சினத்தை, நுணுக்கும் - கெடுக்கும், விறலும்- வெற்றியும், மகளிர்கட்கு - பெண்டிர்கட்கு, ஒத்த - பொருந்திய, ஒழுக்கம் உடைமையும் - ஒழுக்கத்தையுடைய தன்மையும், பாத்து உண்ணும் - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்ணும், நல் அறிவு ஆண்மை - நல்ல அறிவினைஆளுந் தன்மையை, தலைப் படலும் - பொருந்துதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தொல் அறிவாளர் - முதிர்ந்த அறிவுடையாரது, தொழில் - தொழில்களாம். எ று. உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினமாகிய உட்பகையைக் கெடுத்தால் பெரியதோர் வெற்றியாகுமென்பார். வெகுளி நுணுக்கும் விறலும் என்றார். மகளிர்க்கு ஒத்த வொழுக்கமாவது மென்மை யுடைமை; இதனை “ மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து.” எனக் கோப்பெருஞ்சோழனைப் பொத்தியார் பாடிய புறப் பாட்டடியானறிக. தொல் அறிவாளர் என்பதற்குப் பழைய நூலறிவினை ஆளுபவர் என்றுரைத்தலுமாம். 41. அலந்தார்க் கொன்றீந்த புகழுந் துளங்கினும் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாணாளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): அலந்தார்க்கு - (வறுமையால்) மெலிந்தவர்க்கு, ஒன்று - ஒருபொருளை, ஈந்தபுகழும் - அளித்தமையால் உளதாகிய புகழும், துளங்கினும் - தளர்ந்தவிடத்தும், தன்குடிமை - தனது குடிப் பிறப்பிற்குரிய பண்பு, குன்றா - குன்றலில்லாத, தகைமையும்- பெருமையும், அன்புஓடி - அன்புமிக்கு, நாள்நாளும் - நாள்தோறும், நட்டார் - நட்பினரை, பெருக்கலும் - பெருகச் செய்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் நன்மை எல்லாவற்றுள்ளும், தலை - சிறப்புடையன. எ-று. வறுமையான் மெலிந்தார்க்கு ஈவதே ஈகையாமென்ப தனையும், அதனாற் புகழுண்டாமென்பதனையும், குடிப்பிறந்தார் பொருள் சுருங்கிய வழியும் பண்பு குன்றாரென்பதனையும், அன்பு மிகுதலால் நண்பர் பெருகுவரென்பதனையும் “ வறியார்க் கொன்றீவதே யீகை” “ ஈத லிசைபட வாழ்தல்” ” வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று.” ” அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு.” என்னும் திருக்குறட்பாக்களான் முறையே அறிக. ஈந்த என்னும் பெயரெச்சமும், ஓடி என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. முன்னும் ‘கேள்வியுளெல்லாந் தலை’ என்றமை காண்க. 42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (ப-ரை): கழகத்தால் - சூதாட்டத்தால், வந்தபொருள் - வரும் பொருளை, காமுறாமை - விரும்பாமையும், பழகினும் - (பலநாள்) பழகினராயினும், பார்ப்பாரை - (மறையுணர்ந்த) அந்தணரை, தீப்போல் ஒழுகல் - தீயைப் போற்கருதி நடத்தலும், உழவின் கண் - உழுதொழிலின்கண், காமுற்று வாழ்தல் - விருப்பம் வைத்து வாழுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வேளாண்குடிக்கு - வேளாண்மை செய்யும் குடியிலுள்ளார்க்கு, அழகு என்ப - அழகைத் தருவன வென்று சொல்லுவர் (பெரியோர்). எ-று. கழகம் - சூதாடுமிடம், “ பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்” எனத் திருக்குறளும், “ சூதர் கழகம் அரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும்” என ஆசாரக் கோவையும் கூறுதல் காண்க. ஈண்டுக் கழகம் என்றது சூதாட்டத்திற்கு ஆகுபெயர். “வென்றதூஉம் தூண்டிற்பொன்மீன் விழுங்கியற்று” ஆகலின் வந்த பொருள்காமுறாமை என்றார். குடி என்பதும் அதிற் பிறந்தார்க்கு ஆகுபெயர். உழவின்கண் என்பதனை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு, உழவினை என்றுரைத்தலுமாம். 43. வாயி னடங்குத றுப்புரவா மாசற்ற செய்கை யடங்குதறிப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். (ப-ரை): வாயின் அடங்குதல் - சொல்லடங்குதல், துப்புரவுஆம் - தூய்மையாகும், செய்கை அடங்குதல் (மெய்யின்) செய்கை அடங்குதல், திப்பியம் ஆம் - தெய்வத் தன்மையாகும், நெஞ்சம் அடங்குதல் - மனம் அடங்குதல், பொய்இன்றி - மெய்ம்மையாக, வீடு ஆகும் - முத்தியாகும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - பொய்யின் நீங்கிய பொருள்களாம். எ-று. வாயின் -இன்சாரியை; வாயின்கண் அடங்குதல் என்றுமாம். வாயடக்கம் முதலிய காரணங்கள் துப்புரவு முதலிய காரியங்களாக உபசரிக்கப்பட்டன; அடங்குதலால் என உருபு விரித்து, ஆம் என்பதற்கு உண்டாகும் என்றுரைத்தலுமாம். துப்புரவு என்பதற்கு இம்மைக்கண் நுகர்பொருள் எனவும், திப்பியம் என்பதற்கு மறுமைக்கண் தெய்வப்பிறப்பு எனவும் பொருள் கூறி, மும்மைப் பயனும் உரைத்தவாறாக்கலுமாம். மெய்யாக மனம் அடங்குதல் என்றுரைத்தலும் பொருந்தும். மூன்றும் - மூவகை யடக்கமும். “ பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல்.” என்னும் நீதிநெறி விளக்கச் செய்யுள் இங்கே அறியற்பாலது. 44. விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. (ப-ரை): விருந்து இன்றி - விருந்தினரைப் பெறாமல், உண்ட- தமியராய் உண்ட, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார்- அழகிய அணிகளையுடைய மகளிர், புல்ல - தழுவ, புடைபெயரா- நீங்காத, கங்குலும் - இராப்பொழுதும், இல்லார்க்கு - நல்கூர்ந் தார்க்கு, ஒன்று - ஒருபொருள், ஈயாது - கொடாமல், ஒழிந்து அகன்ற - வறிதேநீங்கிய, காலையும் - காலைப்பொழுதும், இம்மூன்றும் - இந்த மூன்று காலங்களும், உரன்உடையார்க்கு - திண்ணிய அறிவுடையார்க்கு, நோய் - துன்பத்தைத் தருவனவாம். எ-று. புல்ல என்னும் வினையெச்சம் பெயரா என்பதன் முதனிலை கொண்டது. கற்புடை மகளிரை நீங்காது மருவியொழுக வேண்டுமென்றபடி, ஒன்று - அவர் வேண்டிய தொருபொருள், காலையில் ஈதல் மரபு. பெயரெச்சங்கள் காலப் பெயர் கொண்டன. உரன் அறிவின் மேற்றாதலை. “ உரனென்னுந் தோட்டியான்.” என்பதற்குப் பரிமேழகர் உரைத்த உரையாலறிக. 45. ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்பின்றி ஏற்றார்க் கியைவ கரப்பானுங் - கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (ப-ரை): ஆற்றானை - செய்யும் வலிமையில்லாதவனை, ஆற்று என்று - செய்யென்றுகூறி, அலைப்பானும் - வருத்துபவனும், ஏற்றார்க்கு - இரந்தவர்க்கு, அன்பு இன்றி - இரக்கம் இல்லாமல், இயைவ - ஈதற்கிசையும் பொருளை, கரப்பானும் - ஈயாமலொளிப் பவனும், கூற்றம் - கூற்றுவன், வரவுஉண்மை - என்றும் வருதலுண்மையை, சிந்தியாதானும் - மறப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், நிரயத்து - நரகத்தின்கண், சென்று வீழ்வார் - சென்று விழுந்து அழுந்துவார். எ-று. ஆற்றான் - ஆற்றலில்லாதவன், இதனை, “ ஆற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்” என்னும் திருக்குறளானறிக. ஒரு தொழில் செய்ய வலிமையில்லாத ஏவலாளனை அதனைச் செய்யுமாறு தூண்டி வருத்தவொண்ணா தென்றபடி. அன்பின்றி அலைப்பானும் என இயைத்தலுமாம். கூற்றம் வரவுண்மை சிந்தியாதான் நல்லன செய்தற் கொருப் படாமையோடு தீயன செய்தற்கும்அஞ்சா னென்க. “ இறப்பெனு மெய்ம்மையை யிம்மை யாவர்க்கும் மறப்பெனு மதனின் மேற் கட்டுமற்றுண்டோ.” என்னும் கம்பராமாயணச் செய்யுள் இங்குநோக்கற்பாலது. 46. காறூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேறூய்மை யில்லாத வெல்களிறும் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றும் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): கால் - காலினது நடை, தூய்மையில்லா - குற்ற முடைய, கலிமாவும் - மனஞ்செருக்கிய குதிரையும், காழ்கடிந்து - குத்துக் கோற்காரரைச் சினந்து, மேல் - மேலுள்ளோராய், தூய்மை இல்லாத - அடங்குதலைப் பெறாத, வெல்களிறும் - வெல்லும் யானையும், கறுவி - உள்வைரமுடையனாய், சீறி - சீற்றங் கொண்டு, வெகுண்டு உரைப்பான் - சினந்து பாடங் கூறுவானது, பள்ளியும் - கல்விபயிலிடமும், இம்மூன்றும் - இந்த மூன்றினையும், அறிவுடையார் - அறிவுடையவர்கள், குறுகார் - அணுகார். எ-று. கால், நடைக்கு ஆயிற்று. காழ் - குத்துக்கோல்; குத்துக் கோற்காரருக்கு ஆயிற்று. மேல் என்பதும் ஆகுபெயர். “ காழோர் கையற மேலோரின்றி.” என்னும் மணிமேகலையடியுங் காண்க. காழ் என்பதற்குக் கட்டுத்தறி என்றும், வயிரிகள் என்றும் உரைப்பாருமுளர். பா - ம். பள்ளியும் மூன்றும். 47. சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையும் தாளினாற் றந்த விழுநிதியும் -நாடோறும் நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் காப்பிகழ லாகாப் பொருள். (ப-ரை): சில்சொல் - சிலவாகிய சொற்களையும், பெருந்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும், பல்வகையும் - பலமுறையிலும், தாளினால் தந்த - முயற்சியாலீட்டிய, விழுநிதியும் - சிறப்புடைய செல்வப் பொருளும், நாத்தளிர்ப்ப - நாவின்கண் நீரரும்ப, ஆக்கிய உண்டியும் - சமைத்த உணவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், காப்பு இகழலாகா- காத்தலைப் புறக்கணித்தலாகாத, பொருள் - பொருள்களாம். எறு. சில்சொல் - மென்மொழியுமாம். தாள் - முயற்சி. “ தாளாற்றித் தந்த பொருளெல்லாம்” என்பது திருக்குறள். பின்நினைக்கும் நாளிலெல்லாம் நா நீரரும்ப என்றுரைப்பாருமுளர். 48. வைததனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (ப-ரை): வைததனை - பிறர் வைத வசைமொழியை இன்சொல்லா - இனிமை பயக்கும் சொல்லாக, கொள்வானும் - உள்ளத்துக் கொள்வானும், கூழை - புல்லரிசிக்கூழை, நெய்பெய்த சோறு என்று - நெய்வார்த்த சோறு என்று, மதிப்பானும் - கருதியுண்பவனும், ஊறிய கைப்பதனை - மிக்க கைப்புடைய பொருளை, கட்டி என்று - இனிப்புடைய வெல்லக்கட்டி என்று கருதி, உண்பானும் - உண்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய்ப்பொருள் - உண்மைப் பொருளை, கண்டுவாழ்வார் - உணர்ந்து வாழ்பவராவர். ஊறிய கைப்பு - மிக்க கைப்பு; ஊறிய என்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாக்கி, வாயில் ஊறும்படி உண்பவனும் என்றுரைப்பாருமுளர். கற்பனைகளைக் கழித்து உண்மை காண்டலின் ‘மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்’ என்றார். 49. ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (ப-ரை): ஏவாது - ஏவப்படாமல், மாற்றும் - மறுத்துவிடுகின்ற, இளங்கிளையும் - புதல்வனும், காவாது - மனைவியைப் பாதுகாவாமல்வைத்து, எள்ளிவைது சொல்லும் - இகழ்ந்து வைதுரைக்கும், தலைமகனும் - தலைவனும், பொய்தெள்ளி - பொய்யையே ஆராய்ந்து கூறி, அம்மனை தேய்க்கும் - அழகிய மனையறத்தைக் கெடுக்கும், மனையாளும் - மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், இம்மைக்கு உறுதியில்லார் - இம்மைக்கு உறுதியாய பயனளிப்பவர் அல்லர். எ-று. ஏவுஆதும் எனப் பிரித்து ஏவிய எதனையும் என்றுரைத் தலுமாம்; இதற்கு ஆதும் என்பது யாது மென்பதன் மரூஉ; “ ஆதுமில் காலத் தெந்தை யச்சுத னமலனையே” என்னும் ஆன்றோர் வாக்குங் காண்க. இளங்கிளை என்பதற்கு மேல் ‘சீலமறிவா னிளங்கிளை’ என்புழி உரைத்தமை காண்க. 50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (ப-ரை): கொள்பொருள் - கொள்ளும் இறைப் பொருளையே, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்தும், வேந்தனும் - அரசனும், உள்பொருள் - உண்மைப் பொருளை, சொல்லா - சொல்லாமல், சலம்மொழி - பொய்ம்மை கூறும், மாந்தரும் - மக்களும், இல்இருந்து - மனையிலிருந்து, எல்லை கடப்பாளும் - தனக்குக்கூறிய ஒழுக்கத்தின் எல்லையைக் கடந்து ஒழுகும் மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், வல்லே - கடுக, மழை அருக்கும் - மழையைக்குறைக்கும், கோள் - கோள்கள். எ-று. குடிகளின் நலங் கருதாது பொருள்கோடலே கருதுவா னென்பார் கொள் பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் என்றார். பொருள் கொள்ளுதலை விரும்பி என மாறியுரைத் தலுமாம். மாந்தர் - முறை புரிமன்றத்தார் முதலாயினர். சொல்லா, பெயரெச்ச மறையுமாம். அருக்கும் - அருகச் செய்யும், அரசனது கொடுங்கோலால் மழை குன்றுமென்பது. “ முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி யொல்லாது வானம் பெயல்.” எனத் திருக்குறளிலும், “ கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரியின் மாரிவறங் கூரும்.” என மணிமேகலையிலும், கோணிலை திரிந்து நாழிகுறைபடப் பகல்கண்மிஞ்சி நீணில மாரியின்றி வினைவஃகிப் பசியுநீடிப் பூண்முலை மகளிர்பொற்பிற் கற்பழிந் தறங்கண்மாறி ஆணையிவ் வுலக. . . கோல் கோடினென்றான். எனச் சிந்தாமணியிலும் கூறப் பெற்றுள்ளமை காண்க. வானிலே சூழ் வரும் கோட்களின் நிலைமாறுதலால் மழை குன்றுவ துண்டாகலின் மழையருக்குங் கோள் என்றார். 51. தூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைக டுணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரே ஈர்ந்தகல் லின்னாக் கயவ ரிவர்மூவர் தேர்ந்தக்காற் றோன்றும் பொருள். (ப-ரை): தூர்ந்து - வருவாய் அடைபட்டு, ஒழுகிக் கண்ணும் - வாழ்ந்த காலத்தும், துணைகள் - துணையாந் தன்மையுடையார், துணைகளே - துணைவரேயாவர், சார்ந்து - தம் கருத்தொடு பொருந்தி, ஒழுகிக் கண்ணும் - நடந்தகாலத்தும், சலவர் - பகையாந் தன்மையுடையார், சலவரே - பகைவரே யாவர், இன்னா - துன்பத்தைச் செய்யும், கயவர் - கீழ்மக்கள், ஈர்ந்தகல் - பிளக்கப்பட்ட கல்லையே ஒப்பாவார், இவர்மூவர் - ஆகிய இவர் மூவரையும், தேர்ந்தக்கால்- ஆராயுமிடத்து, பொருள்தோன்றும் - அவரிடத்துள்ள மெய்ம்மை காணப்படும். எ-று. ஒழுகியக் கண்ணும் என்பது விகாரமாயிற்று. ஈர்ந்தகல் - பிளவுண்டகல்; கூர்ங்கல்லுமாம். துன்புறுத்த லொப்புமையால் ‘ஈர்ந்தகல்’ என்றார். இவர் மூவரும் ஆராயுமிடத்து வெளிப்படும் பொருள்களாவர் என்றுரைத்தலுமாம். 52. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகல நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள. (ப-ரை): கண்ணுக்கு அணிகலம் - கண்ணுக்கு அணியும் அணியாவது, கண் ஓட்டம் - கண்ணோடுதல், காமுற்ற - கணவனால் விரும்பப்பட்ட, பெண்ணுக்கு - பெண்ணுக்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நாண் உடைமை - நாணமுடைமை, மறுமைக்கு - மறுபிறப்பிற்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நண்ணும் கல்வி - உயிரோடு பொருந்தி வரும் கல்வி, இம்மூன்றும் - இந்த மூன்றும், குறிஉடையார்கண்ணே - நுண்ணறிவுடை யாரிடத்தில் மாத்திரமே, உள - உண்டு. எ-று. கண்ணோட்டமாவது தம்மொடுபயின்றார் எதிர்ப்பட்ட விடத்து அவர் கூறியன மறுக்க மாட்டாமை; இஃது அவர் மேற்கண் சென்றவழி நிகழ்வதாகலின் கண்ணோட்டம் எனப்பட்டது. கண்ணோட்டம் முதலியவற்றால் கண் முதலியன அழகுபெறும் என்க. வருகின்ற மறுமைக்கு அணிகலம் கல்வி என்றுரைத்தலுமாம். குறி - சிந்தனையுமாம். “ கண்ணுக் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்.” “ ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.” என்னும் திருக்குறட்பாக்களும், “உயிரினுஞ் சிறந்தன்று நாணே.” என்னும் தொல்காப்பியத் தொடரும் இங்கே கருதற் பாலன. 53. குருடன் மனையா ளழகு மிருடீரக் கற்றறி வில்லான் கதழ்ந்துரையும் - பற்றிய பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்பு மிம்மூன்றும் எண்ணிற் றெரியாப் பொருள். (ப-ரை): குருடன் மனையாள் - கண்ணில்லாதவன் மனைவி யினது, அழகும் - அழகும், இருள் தீர - அறியாமை நீங்க, கற்று - நூல்களைக் கற்று, அறிவுஇல்லான் - அவற்றின் பொருளை அறிதல் இல்லாதவன், கதழ்ந்து உரையும் - விரைந்து கூறும் சொல்லும், பற்றிய பண்ணின் - பொருந்திய இசைத்திறங்களை, தெரியாதான்- அறியாதவன், யாழ்கேட்பும் - யாழிசையைக் கேட்பதுவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எண்ணில் - ஆராயுமிடத்து, தெரியாப் பொருள் - விளங்காப் பொருள்கள். எ-று. அழகு முதலிய மூன்றும் குருடன் முதலிய மூவர்க்கும் முறையே விளங்காத பொருள்கள் என்க. பண்ணின் என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது. யாழ், ஆகுபெயர். 54. தன்பயந் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயங் காய்வின்கட் கூறலும் - பின்பயவாக் குற்றம் பிறர்மே லுரைத்தலு மிம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (ப-ரை): தன்பயம் - தனது பயனை, தூக்காரை - எண்ணாதவரை, சார்தலும் - அடைதலும், நன்பயம் - நல்ல பயனுடைய சொற்களை, தாம் பயவாக் காய்வின்கண் - பயனையளிக்காத சினத்தின்கண், கூறலும் - சொல்லுதலும், பிறர்மேல் - அயலார் மீது, பின்பயவா குற்றம் - பிறகு தனக்கு நன்மை பயவாத அவர் குற்றங்களை, உரைத்தலும் - பாரித்துச் சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தெற்றெனவு - பின் வருதலைத் தெளிதல், இல்லார் தொழில் - இல்லாதவருடைய செய்கை. எ-று. தன் பயம்தூக்கார் - தமக்கு வரும் பயனையே அன்றித் தம்மையடைந்தார் பயனைச் சிந்தியாதவர். கூறலும் என்றமையால் நன்பயம் என்றது சொல்லாயிற்று. சினத்தால் உள்ளம் மாறு பட்டிருப்பாரிடத்தில் உறுதியுள்ள சொற்களைக் கூறின் அவர் ஏற்றுக் கொள்ளாரென்க. பிறர் குற்றமுரைப்பது அப்பொழுது நலம் பயப்பதுபோற் றோன்றினும் பின்பு தீமை பயக்கு மென்றவாறா யிற்று. தெற்றெனவு - தெளிவு; தெற்றென் பகுதி; “ தெற்றென்க மன்னவன் காண்” என்னும் திருக்குறள் காண்க. பயவா என்னும் பெயரெச்ச மறை குற்றமுரைத்தல் என்னும் பெயர் கொண்டது. தன்பயம், இல்லார் தொழில், பன்மை யொருமை மயக்கம். 55. அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர் ஒற்றா ளெனப்படு வார். (ப-ரை): அருமறை - வெளிப்படுத்தலாகாத மறையினை, காவாத - உள்ளத்தடக்காத, நட்பும் - நண்பனும், பெருமையை - மனையறத்திற்குத் தக்க மாண்பினை, வேண்டாது - விரும்பாமல், விட்டு ஒழிந்த - விட்டு நீங்கிய, பெண்பாலும் - மனைவியும், யாண்டானும் - எவ்விடத்திலும், செற்றம் கொண்டு - கறுவுதலை மேற்கொண்டு, ஆடும் - உரையாடும், சிறுதொழும்பும் - குற்றேவ லாளனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர் என்று சொல்லப்படுவர். எ-று. நட்பு, தொழும்பு என்பன அவற்றை உடையார்க்கு ஆயின. இழிவுபற்றி மனையாளைப் பெண்பால் என்றார். யாண்டானும்- யாண்டும்; யாண்டாயினும் என்னலுமாம். ஒற்றாள் - ஒற்றாகிய ஆள். “ அறிவார் யார் நல்லாள் பிறக்குங் குடி” என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுளிலும் ஆள் என்பது ஆடவன் என்னும் பொருளில் வந்துளது. ஆள், பன்மையில் ஒருமை. (55) 56. முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையுந் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): முந்தை - இளமைப் பருவத்தில், எழுத்தின்வரவு - கல்வியின் வரவும், உணர்ந்து - அதனை அறிந்து, பிற்பாடு - பின்பு, தந்தையும் தாயும் - தந்தையையும் தாயையும், வழிபட்டு வந்த - வழிபட்டு ஒழுகிய, ஒழுக்கம் - ஒழுக்கமும், பெருநெறி - பெரியோர் வழியை, சேர்தல் - அடைதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், விழுப்பம்நெறி - வீட்டு நெறியை, தூராஆறு - அடைக்காத வழிகளாம். எ-று. முந்தை என்பது இளமையையும், எழுத்து என்பது கல்வியையும் உணர்த்தின. வழிபட்டு வந்த ஒழுக்கம் - வழிபாட்டுடன் கூடிய ஒழுக்கம். பெருநெறி - துறவறமுமாம். விழுப்பம் - சிறப்பு; வீடு. ‘எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடுசிறப்பெனப்பட்டது’ என்றார் பரிமேலழகரும். 57. கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலு மிம்மூன்றும் கேள்வியு ளின்னா தன. (ப-ரை): கொட்டி - தாளத்தால், அளந்து - அளக்கப்பட்டு, அமையாப் பாடலும் - பொருந்துதல் இல்லாத இசையும், தட்டித்து - கொட்டிக் கொண்டு, பிச்சைபுக்கு - பிச்சைக்குச் சென்று, உண்பான் - உண்ணுபவன், பிளிற்றலும் - வெகுண்டுரைத்தலும், துச்சுஇருந்தான் - ஒதுக்குக் குடியிருந்தவன், ஆளும் கலம் - தான் இருந்த இல்லுக் குரியன் ஆளும் பண்டங்களை, காமுறுதலும் - விரும்புதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் - கேட்கப் படுவனவற்றுள், இன்னாதன - துன்பம் பயப்பன. எ-று. கொட்டி - கொட்டுவது, தாளம்; பாடல் - பாட்டு, தட்டித்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதி; துப்பிச்சை எனப் பிரித்தியைத்துச் சோற்றுப் பிச்சை என்றுரைப்பாரும் உளர். “ பிச்சைபுக் குண்பான் பிளிற்றாமை முன்னினிதே” என்பது இனியவை நாற்பது. கலம் - கட்டில் முதலியன. 58. பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற் கேளி ருவப்பத் தழுவுதல் - கேளிராய்த் துன்னிய சொல்லா லினந்திரட்ட லிம்மூன்றும் மன்னற் கிளையான் றொழில். (ப-ரை): பழமையை நோக்கி - நண்பரது பழையராந் தன்மையைக் கருதி, அளித்தல் - அவர்க்கு வேண்டுவ தருதலும், கேளிர் - உறவினர், உவப்ப - மகிழுமாறு, கிழமையால் – உரிமை யால், தழுவுதல் - தழுவுதலும், கேளிராய் துன்னிய - தமராகிச் சூழுமாறு, சொல்லால் - இன்சொற் கூறுதலால், இனம் திரட்டல் - பெரியோர் இனத்தைக் கூட்டுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னற்கு இளையான் - மன்னவன் மைந்தற்குரிய, தொழில் - தொழில்களாம். எ-று. அளித்தல் - பிழை பொறுத்தலுமாம். துன்னிய-செய்யிய வென்னும் வினையெச்சம். பழமை பாராட்டுதல், சுற்றந் தழுவுதல், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் இவை அரசற் குரியன. ஈண்டு அரசகுமாரன் மேல்வைத்துக் கூறப்பட்டன. மன்னற் குழையான் என்பது பாடமாயின் அமைச்சன் என்பது பொருளாம். 59. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் உள்ளன போலக் கெடும். (ப-ரை): கிளைஞர்க்கு - உறவினர்க்கு, உதவாதான் - உதவி புரியாதவ னுடைய, செல்வமும் - செல்வமும், பைங்கூழ் - பயிரை, விளைவின்கண் - விளையும் பருவத்தில், போற்றான் - காவாதவ னுடைய, உழவும் - உழுதொழிலும், இளையனாய் - அறிவிலானாகி, கள்உண்டு வாழ்வான் - கள்ளைக் குடித்து ஒழுகுபவனுடைய, குடிமையும் - குடிவாழ்க்கையும், இம்மூன்றும் - இந்தமூன்றும், உள்ளனபோல - உள்ளன போலப் புறத்தே தோன்றி, கெடும் - கெட்டுவிடும். எ-று. உழவு என்றது ஏர் வளத்தை. இளையன் - அறிவு முதிராதவன்; அறிவால் மெல்லியன். இளையனாய் என்பதற்கு இளமை தொடங்கி என்றும், குடிமை என்பதற்கு நற்குடிப்பிறப்பு என்றும் கூறுதலுமாம். 60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும். (ப-ரை): பேஎய் பிறப்பில் - பேய்ப்பிறப்பின்கண், பெரும் பசியும் - மிக்க பசியாகிய துன்பமுடன், பாஅய் - பாயுமியல் புடைய, விலங்கின் பிறப்பின் - விலங்காகிய பிறப்பின்கண், வெருவும் - அச்சமாகிய துன்பமும், மக்கள் பிறப்பின் - மனிதப் பிறப்பின்கண், புலம்தெரியா - அறிவு விளங்காமைக் கேதுவாகிய, நிரப்புஇடும்பை - வறுமையாகிய துன்பமும் (உள்ளன; ஆதலால்), இம்மூன்றும் - இந்த மூன்றும், துக்கப் பிறப்பாய் விடும் - துக்கத்தைத் தரும் பிறவியாய் முடியும். எ-று. இடும்பை என்பதனைப் பசி, வெருவு என்பவற்றோடும், எண்ணும்மையை நிரப்பிடும்பை என்பதனோடும் கூட்டியும் உள்ளன, ஆதலால் என்னுஞ் சொற்கள் விரித்துமுரைக்கப் பட்டன. ‘நிரப்பிடும்பை’ என்றார் வள்ளுவனாரும். எப்பிறப்பும் இன்னாதன வாகலின் பிறப்பினை யொழிக்க முயறல் வேண்டும் என்றபடி. புலந்தெரியா மக்கட் பிறப்பு எனக் கொண்டு, மெய்யுணர்வு பெறாத மக்கட்பிறப்பு என்றுரைத்தலுமாம். 61. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (ப-ரை): ஐ அறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய - தமக்கு வயமாக, ஒழுகல் - ஒழுகுதலும், எய்துவது - தம் அரசர்க்கு மேல் வரக்கடவ துன்பத்தை, முன் - முன்னரறிந்து, எய்தாமை காத்தல் - வாராமற் காத்தலும், மாறுஏற்கும் - பகைமையை ஏற்கும், மன்னர்நிலை - அரசரது நிலைமையை, வைகலும் அறிதல் - நாடோறும் தெரிந்தொழுகலும், இம் மூன்றும் - இந்த மூன்றும், சீர் ஏற்ற - புகழினைக் கொண்ட; பேர் அமைச்சர் - பெருமையுடைய மந்திரிகளின், கோள் – துணிவு களாம். எ-று. மன்னர் விழைப விழையாமையும், உற்றநோய் நீக்கி உறாமை முற்காத்தலும், இகல் வேந்தரைத் தீயைப் போற்கருதியொழுகுதலும் ஆகிய மன்னரைச் சேர்ந்தொழுகும் முறைமைகள் கூறப்பட்டன. மாறேற்கும் மன்னர்நிலையறிதல் என்பதற்குப் பகை மன்னர் இருப்பை ஒற்றரால் அறிந்து அதற்கேற்பச் செய்தல் என்றுரைப் பாருமுளர். 62. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வார். (ப-ரை): நன்றிப்பயன் - பிறர்செய்த நன்றியின் பயனை, தூக்கா - ஆராயாது மறந்த, நாண்இலியும் - நாணமற்றவனும், சான்றோர் மன்றின் முன் - அறிவால் நிறைந்தாரது அவைக்களத்தின் கண், கொடும்பாடு உரைப்பானும் - கொடிய சொற்களைக் கூறுவானும், வைத்த அடைக்கலம் - ஒருவர் தன்னிடத்துவைத்த அடைக்கலப் பொருளை, நன்று இன்றி- அறத்தொடு பொருந்துதல் இன்றி, கொள்வானும் - வெளவிக் கொள்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், எச்சம் இழந்து வாழ்வார் - மக்களையிழந்து வருந்தி வாழ்பவர் ஆவர். எ-று. நாண் - பழி பாவங்களுக்கு அஞ்சுமியல்பு. கொடும்பாடு என்பதற்குப் பொய் என்று பொருள்கொண்டு முறை மன்றத்தில் சான்றோர் முன் பொய் கூறுபவனும் என்றுரைத்தலுமாம். நன்று - அறம். அடைக்கலப் பொருளை உரியவர் கேட்ட பொழுதே கொடுக்க வேண்டும் என்பதனை, “ உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தகாற் கொள்ளும் பொழுதே கொடுத்ததாம் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி.” என்று பழமொழி வலியுறுத்துரைத்தலுங் காண்க. (62) 63. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மை யிலாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): நோ - தாம் உறுந் துன்பத்தைக் கண்டவழி, அஞ்சாதாரோடு நட்பும் - அஞ்சாதாரிடத்துக் கொண்ட நட்பும், விருந்து அஞ்சும் - விருந்தினர் அஞ்சும், ஈர்வளையை - மனைவியை, இல்லத்து இருத்தலும் - மனையின் கண் வைத்திருத்தலும், சீர்பயவா - சிறப்பைத் தராத, தன்மையிலாளர் - தன்மையுடையவர்க்கு, அயல் இருப்பும் - பக்கத்தில் குடியிருத்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மையைத் தருவன அல்ல. எ-று. அஞ்சும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பெயர் கொண்டது. விருந்தினரைக் கண்டு அஞ்சும் என்றுமாம்; அஞ்சுதல் - உணவளிக்க மறுத்தல். ஈர்வளை - அறுத்தியற்றப்பட்ட வளையினை அணிந்தவள்; மனைவி. தன்மையிலாளர், இல்சாரியை; தவமிலார், அரசிலார் என நான்மணிக்கடிகையில் இச்சாரியை வருதல் காண்க. புகழ்பயவாத பண்பில்லாதவர் என்றுரைத்தலும் பொருந்தும்; இதற்குப் பயவா என்னும் பெயரெச்சம் இல்லாளர் என்பதன் விகுதியோடியையும், இல்லாளர் என்பதற்கு இல்வாழ்வார் என்றுரைப்பாருமுளர். 64. நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (ப-ரை): நல்விருந்து - தக்க விருந்தினரை, ஓம்பலின் - பேணுதலால், நட்டாள் ஆம் - நட்பினளாவள், இல்புறஞ் செய்தலின் - இல்லறத்தைக் காத்தலினால், ஈன்றதாய் - பெற்றதாயாவள், தொல்குடியின் - பழமையாகிய குடிக்குரிய, மக்கட் பெறலின் - பிள்ளைகளைப் பெறுதலினால், மனைக்கிழத்தி - மனையவளாவள், இம்மூன்றும் - இந்த மூன்றும், கற்புடையாள் - கற்புடையவள், பூண்ட கடன் - மேற்கொண்ட கடமைகள். எ-று. நல்விருந்து - தக்கவிருந்து, தகுதி - ஞானவொழுக்கங்களா னுயர்தல்; “நல்விருந் தோம்புவான்” என்புழிப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக. ஆம் என்பதனைத் தாய், கிழத்தி என்பவற்றோடும் ஒட்டுக. மனைக்கிழத்தி - மனைக்கு உரியவள்; மனையாள். இம்மூன்றும் - இம்மூன்றியல்பும் உடையளாதல். 65. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றும் தந்நெய்யிற் றாம்பொரியு மாறு. (ப-ரை): அலைகடலின் - அலைகின்ற கடலைப்போல, அச்சம் தோன்றலும் - உளத்தின்கண் அச்சமுண்டாதலும், ஆர்வுஉற்ற - நுகரப்பட்டனவற்றை, விட்டு அகலகில்லாத - பற்றி நீங்குந்திற மில்லாத, வேட்கையும் - அவாவும், கட்டிய - உயர்ந்தோர் யாப்புறுத்த, மெய்ந்நிலை - உண்மை நிலைமையை, காணா வெகுளியும் - அறியாமைக் கேதுவாய சினமும், இம்மூன்றும் - இந்த மூன்றாலும் இவற்றையுடையார் கெடுதல், தம் நெய்யில் - (ஆடு முதலியன) தம்மிடத்துத் தோன்றிய நெய்யால், தாம் பொரியுமாறு - தாம் பொரிதல் போலவாம். எ-று. கடலின் அலை மாறிமாறித் தோன்றுதல் போல அச்சம் மாறி மாறித் தோன்றுதல் என்க. ஆர்தல் - நுகர்தல், ஆர்வுற்ற, வினைப் பெயர், கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இசையெச்சமாக வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. அச்சம், அவா, வெகுளி என்பன அவையுடையாரை அழிக்கும் என்றபடி. 66. கொழுநனை யில்லா ணலமும் வழிநிற்கும் சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றும் சால்போடு பட்ட தில. (ப-ரை): கொழுநனை இல்லாள் - கணவனை இல்லா தவளுடைய, நலனும் - அழகும், வழிநிற்கும் - தான்கூறிய வழியில் நின்று ஒழுகும், சிறுஆள் இல்லாதான் - ஏவலாள் இல்லாதவன், கை மோதிரம் - கை விரலில் அமைந்த மோதிரமும், பற்றிய - கைக் கொண்ட, கோல் - செங்கோல், கோடி வாழும் - கோணுமாறு ஒழுகும், அரசனும்- வேந்தனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், சால்போடு பட்டது இல - நன்மையோடு பொருந்தியனவல்ல. எ-று. கறை என்ற பாடத்திற்குப் பூப்பு என்பது பொருளாம். கலன் என்று பாடங் கொள்வாருமுளர். கோடி என்பதனைக் கோட வெனத் திரிக்கப்பட்டது, து சாரியை. திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 67. எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி றொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி - மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். (ப-ரை): எதிர்நிற்கும் - மாறுபட்டொழுகும், பொண்ணும் - மனையாளும், இயல்புஇல் - அடங்கி நடக்குந் தன்மையில்லாத, தொழும்பும் - ஏவலாளும், செயிர் நிற்கும் - சென்று நிலைபெற்ற, சுற்றமும் - உறவினரும், ஆகி - ஆகிநின்று, முந்தை - முற்பிறப்பிற் செய்த, பழவினையாய் - பழவினைபோல, மயிர்நரைப்ப - மயிர் வெளிறிவந்த முதுமைப் பருவங்காறும், தின்னும் - வருத்தும், இவைமூன்றும் - இவைமூன்றாலும், நொந்தார் - துன்பமுற்றவர், செயக்கிடந்தது இல் - செய்யக் கிடந்ததோர்கழுவாய் இல்லை.எ-று. எதிர் நிற்றல் - மாறுபட்டு நிற்றல். “எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்” என்பது நாலடி. பழவினை, வினையென்னுந் துணையாய் நின்றது. தின்னுதல் - வருத்துதல் மயிர் நரைப்ப என்பதற்கு யாண்டு பலவாகா முன்னும் நரையுண்டாகுமாறு என்றுரைத்தலுமாம், கேட்குங் காலம் பலவாலோ நரை நுமக்கில்லையாலோ என வினவிய சான்றோர்க்குப் பிசிராந்iதார் கூறிய புறப்பாட்டு ஈண்டு அறியற் பாலது. பழவினையாய் என்பதற்குப் பழவினை யனையவாகி என்றுரைக்க. 68. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறி மாந்தர்க் குள. இல்லார்க்கு - நல்கூர்ந்தவர்க்கு, ஒன்றுஈயும் - அவர் விரும்பிய பொருளொன்றைக் கொடுக்கும், உடைமையும் -செல்வமுடைமையும், இவ் உலகில் - இந்த உலகத்தில், நில்லாமை - பொருளும், யாக்கையும் முதலியன நிலையின்றி அழிதலுண்மையை, உள்ளும் - நினைக்கும், நெறிப்பாடும் - முறைமையும், எவ்வுயிர்க்கும் - எல்லாவுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பமுறுதற்கேதுவாய செயல்களே, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நன்று அறியும் - நன்மையை யறிந்தொழுகும், மாந்தர்க்கு உள - மக்களிடத்து உள்ளன. இல்லார் என்பது உலக வழக்கு. “உடையார் முன் இல்லார் போல்” என்னுங் குறளுரையிற் பரிமேலழகர் கூறினமைகாண்க. நெறிப்பாடு என்பதற்குத் துறவற நெறியிற் படுதல் என்றுரைத் தலுமாம். “இன்னா செய்யாமை மாசற்றார் கோள்” என்பவாகலின் அதனைத் தூய்மை என்றார். மாந்தர் - ஆடூஉப் பன்மை. 69. அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். (ப-ரை): அருந்தொழில் - .....அரிய தொழில்களை, ஆற்றும் பகடும் - செய்யவல்ல எருதுவும், திருந்திய - குற்றமற்ற, மெய்ந்நிறைந்து - வடிவழகு..., நிறையபெற்று, நீடு இருந்த - நெடுநாள் மணமின்றி யிருந்த, கன்னியும் - குமரியும், நெறிமாறி - வழிதவறி, நொந்துவந்த - வருந்தியடைந்த, விருந்தும் - விருந்தினரும், இம்மூன்றும் - இந்த மூன்றும், பெறுமாறு அரிய பொருள் - கிடைத்தற்கரிய பொருள்கள். எ-று. அருந்தொழிலாவன - அளற்று நிலம் முதலியவற்றிற் பண்டியீர்த்தல் முதலியன. “மடுத்தவாயெல்லாம் பகடன்னான்” என்னுங் குறளும், அதனுரையும் நோக்குக. பகடு - கடாவுமாம். நீடிருந்த என்றது நெடுநாள் மணமின்றியிருத்தல் அரிதென்னுங் குறிப்பிற்று. பெறுமாறு - பெற. பலரும் விரும்புவராகலின் பெறற்கரிய பொருள் என்றார். ஈண்டும் திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 70. காவோ டறக்குளந் தொட்டானு நாவினால் வேதங் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து ஒல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர் செல்வ ரெனப்படு வார். (ப-ரை): காவோடு - சோலையை உண்டாக்குதலோடு, அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டியவனும் நாவினால் - நாவினால் ஓதி, வேதம் கரைகண்ட - வேதத்தை முடிவுகண்ட, பார்ப்பானும் - பார்ப்பனனும், தீது இகந்து - தீமைபயக்கு நெறியினீங்கி, ஒல்வது இசையும் பொருளை, பாத்து உண்ணும் - வறியர் முதலாயினார்க்குப் பகுத்து உண்ணும், ஒருவனும் - ஒப்பற்ற இல்லறத்தானும், இம்மூவர் - இந்த மூவரும், செல்வர் - செல்வமுடையார், எனப்படுவார் - என்று பெரியோராற் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று. அறத்திற்குச் சோலை வைத்து வளர்த்தவனும், குளம் தோண்டியவனும் என்க. காவோடு என்பதில் ஓடுவேறுவினை யுடனிகழ்ச்சி. தொட்டான், ஏவும் வினை முதல். கரைகண்ட என்பது ஒரு சொல். வேதமாகிய கடலின் கரையைக் கண்ட என்னின் வேதங்கரை என்பது மெலித்தல் விகாரமாம். “ காவோ டறக்குளந் தொட்டல் மிகவினிதே” என்பது இனியவை நாற்பது. 71. உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவு மிம்மூன்றும் காண வரியவென் கண். (ப-ரை): உடுத்து ஆடை இல்லாதார் - உடுத்திட ஆடை யில்லாதவர், நீராட்டும் - நீராடுதலும், பெண்டிர் - மகளிர், போர் தொடுத்து - வழக்கிட்டு, ஆண்டு அவை - அவ்விடத்துள்ள சபையின் கண், புகலும் - புகுதலும், கொடுத்து அளிக்கும் - நல்கூர்ந்தார்க்குப் பொருள் கொடுத்துப் புரக்கும், ஆண்மை உடையவர் – ஆண்டன்மை யுடையவரது, நல்குரவும் - வறுமையும், இம்மூன்றும் - இந்த மூன்றையும், காண - காண்டற்கு, என்கண் அரிய - எனது கண்கள் இல்லையாகுக. எ-று. “ உடுத்தலால் நீராடார்” என்பது ஆசாரக்கோவை. கொடுத்தளித்தல் ஆண்மையாம் என்பதனை, “ ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் என்னும் நாலடியாராலும் அறிக. என் கண்கள் காணத்தகாதன என்றுமாம். 72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றும் திறவதிற் றீர்ந்த பொருள். (ப-ரை): நிறைநெஞ்சுடையானை - நிறைந்த வுள்ள முடை யானை, நல்குரவு அஞ்சும் - வறுமை அஞ்சும், அறனை நினைப்பானை - அறத்தை மறவாதவனை, அல்பொருள் அஞ்சும்- பாவம் அஞ்சும், மறவனை - வன்கண்மை யுடைய வீரனை, எவ்வுயிரும் அஞ்சும் - போர்க்களத்துற்ற யாவரும் அஞ்சுவர், இம்மூன்றும் - இந்த மூன்றும், திறவதில் - உறுதியுடைமையில், தீர்ந்த பொருள் - தெளிந்த பொருள்களாம். எ-று. “ செல்வமென்பது சிந்தையின் நிறைவு” என்பவாகலின், அஃதுடையானை நல்குரவு அஞ்சும் என்றார். அல்பொருள் - அறனல்லாதது; பாவம். எவ்வுயிரும் என்றது போர்க்களத்துற்ற படைஞர்களை, நிறைநெஞ்சு முதலிய மூன்றும் தீர்ந்த பொருள் என்க. அஞ்சுதல் மூன்றும் நன்கு தெளியப்பட்டவை என்னலுமாம். 73. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். (ப-ரை): இரந்து கொண்டு - பிறரிடம் இரந்துபெற்று, ஒண்பொருள் செய்வல் - ஒள்ளிய பொருளைத் தேடுவேன், என்பானும் - என்று கருதுபவனும், பரந்து ஒழுகும் - ஒருமைப் பாடின்றி உள்ளம் திரிய ஒழுகும், பெண்பாலை - விலைமகளை, பாசம் என்பானும், - அன்புடையாள் என்று கருதுபவனும் விரிகடலூடு - அகன்ற மாகடலினூடே, செல்வானும் – பொருள் தேடச் செல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், அரிய துணிந்து - அரியனவற்றைத் துணிந்து, வாழ்வார் - ஒழுகுபவராவர். எ-று. அரியன - இயலாததும், இல்லாததும், அஞ்சத் தகுவதும் ஆம். பாசம் என்னும் பண்புப்பெயர் பண்பியின்மேல் நின்றது. இழித்தற் குறிப்பால் ‘பெண்பால்’ என்றார். முன்னர் ‘பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பால்’ என்றமையுங் காண்க. 74. கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். (ப-ரை): கொலை நின்று - கொலைத் தொழிலில் நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் - அதனால் வந்த ஊனைத் தின்று வளர்பவனும், பெரியவர் - பெரியோர்கள், புல்லுங்கால் - தன்னைத் தழுவுமிடத்து, தான் புல்லும் - தானும் அவரைத் தழுவும், பேதையும் - அறிவிலாதவனும், இல் எனக்கு - எனக்கு இல்லை, ஒன்று ஈக - ஒரு பொருளை ஈவாயாக, என்பவனை - என்றிரப்பவனை, நகுவானும் - இகழ்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், யாதும் - ஓரறத்தையும், கடைப்பிடியாதார் - உறுதியாகக் கைக்கொள்ளாதவராவர். எ-று. வணங்குதற்குரிய பெரியாரை எதிர்புல்லுபவன் உலகநடை அறியாதவனாகலின் ‘பேதை’ என்றார். இல் எனக்கு - பொருளில்லா எனக்கு என்றுரைத்தலுமாம். ஈக என்பதன் அகரம் தொக்கது. 75. வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனு மிம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (ப-ரை): வள்ளன்மை -வரையாது கொடுத்தலை, பூண்டான் கண் - கடனாகக் கொண்டவனிடத்துள்ள, செல்வமும் - பொருளும், உள்ளத்து - மனத்தினாற் சிந்தித்தறியும், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூலும் - கற்ற நூலும், புணர்வின்கண் - பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து. தக்கது அறியும் - அவர்க்குச் செய்யத் தகுவதனை அறியவல்ல, தலைமகனும் - தலைவனும், இம்மூவர் - இந்த மூவரும், பொத்து இன்றி - பொந்து இல்லாமல், காழ்த்த - வயிரம் பற்றிய, மரம் - மரம்போல் உறுதியுடையராவர். எ-று. நூல் - கல்வியுமாம், தலைவியுடன் கூடிய காலத்து நலம் பாராட்டுதல் முதலிய தகுதியினை அறியும் தலைவன் என்றுரைத் தலுமாம். செல்வம், நூல் தலைமகன் என்பன. திணைவிரவி, என உயர்திணை முடிபேற்றன. இவற்றுள் முன்னைய இரண்டும், “ உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் என நாலடியாரில் உவமையும் பொருளுமாக வந்திருத்தல் அறியற் பாலது. பொத்து - பொந்து; வலித்தல் விகாரம். 76. மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற் கரியார் புரிந்து. (ப-ரை): மாரிநாள் - மழைக் காலத்தில், வந்த விருந்தும் - வந்த விருந்தினரும், மனம் பிறிது ஆய் - உளம் மாறுபட்டு, காரியத்தில் - தனது கருமத்தில் நின்றும், குன்றாக் கணிகையும் - குன்றாதொழுகும் வேசைமகளும், வீரியத்து - போரிடத்து, மாற்றம் - தலைவனது சொல்லை, மறுத்து உரைக்கும் - மறுத்துக் கூறும், சேவகனும் - வீரனும், இம்மூவர் - இந்த மூவரும், புரிந்து - விரும்பி, போற்றற்கு - பேணுதற்கு, அரியார் - அரியவர். எ-று. மழைக்காலத்தில் வந்த விருந்தினரை அவர் ஏகுங்காறும் உண்டியும் உடையும் கொடுத்துப் பாதுகாத்தல் யாவர்க்கும் எளிதன்றென்பதும், கவர்த்த மனமுடையளாய்ப் பொருள் வெளவுதலாகிய தன் இயல்பினின்றும் மாறாதிருக்கும் கணிகையை ஒரோவழி அவள் எய்திய எளிமை நோக்கி இரங்கிப் பாதுகாக்கப் புகின் பொருளையிழந்து துன்புற நேரும் என்பதும், தலைவன் ஆணைக்குக் கீழ்ப்படியாத போர்வீரனை வைத்திருத்தலால் பகையை வெல்லுதல் அரிதென்பதும் தோன்ற ‘இம்மூவர் போற்றற்கரியார்’ என்றார். “வீரியத்து . . . . . சேவகனும்” என்பதற்குத் ‘தலைவன் பகைவர்மேற் கருணையாற் சொல்லுஞ் சொல்லை மறுத்துப் போருக்குச் செல்லும் வீரன்’ என்று பொருள் கொண்டு இம்மூவரும் போற்றுதற்கு அருமையானவர் என்றுரைப்பாருமுளர்; இப்பொருள் பொருந்துமேற் கொள்க. 77. கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றும் குடிமா சிலார்க்கே யுள. (ப-ரை): கள்வரை - கீழ்மக்களை, கையிகந்து - விட்டுநீங்கி, வாழ்தல் - ஒழுகுதலும், நயவரை - நல்லவரை, நள்இருளும் கைவிடா - பாதியிரவிலும் கைவிடாமல், நட்டு - அவருடன் நட்புப் பூண்டு, ஒழுகல் - ஒழுகுதலும், வடுவான - குற்றம் பயக்கும் செயல்கள்; வாராமல் காத்தல் - தங்கண் உண்டாகாமல் தடுத்தலும், இம்மூன்றும்- இந்த மூன்றும், குடி - குடிப்பிறப்பில், மாசுஇலார்க்கே - குற்றம் இல்லாதவர்க்கே, உள - உண்டாகும். எ-று. கையிகத்தல், கைவிடாமை என்பவற்றில் கை என்பன வேறு பொருளின்றி, வினையுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றன. நயவர் - நற்குணமுடையார்; நீதியுடையார் என்றுமாம். விடா - ஈறுகெட்டது. வடு - குற்றம்; பழியுமாம். குடிமாசிலார் - நற்குடிப் பிறந்தார். 78. தூய்மை யுடைமை துணிவாத் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்திற் றருக்கினார் கோள். (ப-ரை): தூய்மை உடைமை - தூய தன்மையுடைமை, துணிவுஆம் - துணிவுடைமைக்கேதாகும். வாய்மையுடைமை - உண்மை யுடைமை, வனப்பு ஆகும் - அழகிற் கேதுவாகும், தீமை - தீமை யுடையவற்றை, மனத்தினும் வாயினும் சொல்லாமை - உள்ளத்தால் உள்ளுதலும் வாயாற் சொல்லுதலும் இன்மை, தொழில் அகற்றும் - தீய தொழில்களின்றும் நீக்கும், மூன்றும் - இந்த மூன்றும், தவத்தில் தருக்கினார் - தவத்தினால் மிக்காரது, கோள் - கொள்கைகள் எ - று. மனந்தூயார்க்கு அச்சமின்றாகலின் ‘தூய்மையுடைமை துணிவாம்’ என்றும், ‘பொய் சிதைக்கும் பொன்போலு மேனியை’ என்பவாகலின் ‘வாய்மையுடைமை வனப்பாகும்’ என்றும், தீமையை மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் இல்லார்க்கு அவற்றின் வழிப்பட்ட தீத்தொழில் நிகழ்தலின்மையின், அவை ‘தொழிலகற்றும்’ என்றும் கூறினார். தொழிலகற்றும் என்பதனைச் சொல்லாமை என்பதன்பின் மாட்டேற்றியுரைக்க. தொழில் என்றது ஈண்டுத் தீத்தொழிலை. மனத்திற்கேற்ப நினையாமை என்பது விரித்துரைக்க. இனி, துணிவாந் தொழிலகற்றும் வாய்மையுடைமை என்றும், வனப்பாகுந் தீமை என்றும் இயைத்து. நலிந்து பொருள் கொண்டு, தூய்மை யுடைமையும் வாய்மையுடைமையும் சொல்லாமையும் என எண்ணி முடிப்பாருமுளர். துணிவாந் துணிவகற்றும் என்பதற்கு மெய்ந்நூல்களாலே ‘துணியப் பட்ட தாகிய நற்செய்கையை விரிக்கும் என்பதும் வனப்பாகுந் தீமை’ என்பதற்கு மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவது என்பதும் அவர் கொண்ட பொருள்களாம். 79. பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் - கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட னெஞ்சிற்கோர் நோய். (ப-ரை): பழி அஞ்சான் - பழிக்கு அஞ்சாதவனாகி, வாழும் - ஒழுகும், பசுவும் - ஆவினை யொத்தவனும், கொண்ட அரும் தவம் - மேற்கொண்ட அரிய தவவொழுக்கத்தை, அழிவினால் - மனவுறுதியின்மையால், விட்டானும் - கைவிட்டவனும், கொண்டிருந்து - மணஞ்செய்து வைத்து, இல் - மனைவிக்கு, அஞ்சி வாழும் - அஞ்சியொழுகும், எருதும் - எருதைப் போல்வானும், இவர் மூவர் - இவர் மூவரும், நெல் உண்டல் - உணவினை உண்டிருத்தல், நெஞ்சிற்கு - அறிவுடையோர் நெஞ்சிற்கு, ஓர் நோய் - ஒரு நோயாகும் எ - று. மக்கட்குரிய சிறப்பறிவின்மையின் பசு என்றும், எருது என்றும் கூறினார். இச்செய்யுளைத் திணை விரவிய உயர்திணை முடிபு பெற்றதற்கு உதாரணமாகக் கூட்டினார் சங்கர நமச்சிவாயப் புலவர் முதலாயினார். அதற்கேற்பப் ‘பழியஞ்சா வாழும்’ எனப் பாடங்கொள்வது சிறப்பு. அழிவு - வறுமையும் ...... நெல் - உணவிற்காயிற்று. உணவினையுண்டு புவிக்குப் பொறையாக - இருந்தல் என்றபடி. ‘நெல்லுண்ட நெஞ்சு’ என்ற பாடத்துடன் பழைய வுரைகளிற் காணப்படுகின்றது. 80. முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும் தூற்றின்கட் டூவிய வித்து. (ப-ரை): முறை செய்யான் - நீதி நூல்வழி முறைசெய்யுந் திறமில்லாதவன், பெற்ற தலைமையும் - பெற்ற அவைத் தலைமையும், நெஞ்சில் நிறையிலான் - உள்ளத்தின்கண் அவாவுடையான், கொண்ட தவமும் - மேற்கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் - நிறைந்த நல்லொழுக்கத்தை, தேற்றாதான் - அறிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற வழகும், இவை மூன்றும் - இவை மூன்றும், தூற்றின்கண் - புதலிடத்து, தூவிய வித்து - விதைத்த விதையை யொக்கும் எ. று. தலைமை - முறை செய்யும் மன்றின் றலைமை, நிறை - சிந்தையின் நிறைவாகிய செல்வம்; நிறையின்மை - அச்செல்வ மின்மையாகிய நல்குரவு.; புலன்களிற் செல்லாது நிறுத்துந் தன்மையைப் பேணலும்.... பாதுகாத்தலும் நிறையொழுக்கம் - சால்பும் ஒழுக்கமும், இந்த மூன்றும் பயனில வென்பதாம். 81. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (ப-ரை): துறைபோல் - தன் கட் செல்வார்க்கெல்லாம் பொதுவாய் நீர்த்துறைபோல, தோள்வழங்கி வாழும் கணிகையும் - பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள் களை விற்று வாழும் வேசையும், வாழும் - வாழும், நாள் - நாடோறும், கழகம் பார்க்கும் - சூதாடுமிடத்தையே நோக்கிச் செல்லும், நயம் இலா - நன்மை பயத்தல் இல்லாத, சூதனும் - சூதினையாடு வோனும், வாசிகொண்டு - மிகு வட்டி கொண்டு, ஒண் பொருள் செய்வானும் - ஒள்ளிய பொருளீட்டுவானும், இம்மூவர் - இந்த மூவரும், ஆசைக்கடலுள் - ஆசையாகிய கடலினுள்ளே, ஆழ்வார் - முழுகி யழுந்துவார் எ - று. நாளும் என்னும் உம்மைதொக்கது. நயமிலா என்னும் பெயரெச்சம் சூதர் என்பதன் முதனிலை கொண்டு முடியும். “ பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் என்னும் வாயுறை வாழ்த்து ஈண்டு அறியற் பாலது. நயம் - நீதி யென்றுமாம் இவர்களுடைய ஆசைகளுக்கு அளவில்லை யென்றவாறு. 82. சான்றாருட் சான்றா னெனப்படுத லெஞ்ஞான்றும் தோய்ந்தாருட் டோய்ந்தா னெனப்படுதல் - பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும் நல்லாள் வழங்கு நெறி. (ப-ரை): சான்றாருள் - குணங்களானிறைந்தவர் அவைக்கண், சான்றான் எனப்படுதல் - சால்புடையான் என்று சொல்லப்படுதலும், எஞ்ஞான்றும் - எக்காலத்தும், தோய்ந்தாருள் - நெஞ்சுகலந்து நட்டார் குழாத்தின்கண், தோய்ந்தான் எனப்படுதல் - உள்ளங் கலந்த நண்பன் என்று சொல்லப்படுதலும், பாய்ந்து எழுந்து - தம் மீது பாய்ந் தெழுந்து, கொள்ளாருள் - தாம் கூறியவற்றை ஏற்றுக்கொள்ளா தாரவைக்கண், கொள்ளாத கூறாமை - அவனாற்கொள்ளப்படாத நற்சொற்களைச் சொல்லாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்ஆள் - வழங்கும் நெறி - நற்பண்புடையவன் செல்லும் வழிகள் எ - று. எனப்படுதல் ..... தோய்தல் - கலத்தல், நற்பண்புடையவன் நட்டவர், பாய்ந்தெழுதல் - தோட்புடையார் ....வெகுளுதல். 83. உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும் செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): உப்பின் பெருங்குப்பை - உப்பினது பெரிய குவியல், நீர் படியின் - நீர்கலந்தால், இல்லாகும் - இல்லையாகும், நட்பின் கொழுமுளை - நட்பின் செழிய முளை, பொய் வழங்கின் இல்லாகும் - பொய்கூறின் இல்லையாகும், செப்பம் உடையார் - நடுநிலையுடையார், மழையனையர் - மழையை யொப்பர். இம்மூன்றும் - இந்த மூன்றும், செப்ப நெறி தூராத ஆறு - நல்நெறி அடையாமைக்கு ஏதுவாவன எ. று. முளையாவது ஆரம்பம். மழையனையர் - மேகம் போற் கைம்மாறு கருதாது யாவர்க்கும் நலம் புரிந்து வாழ்பவர். செய்யுள் தோறும் மூன்று பொருள் கூறும் முறைமைக்கேற்ப ஈண்டு இம் மூன்றும் என்றாராயினும், உப்பின் பெருங் குப்பை நீர் படியினில் லாகும் என்பதனை, அடுத்து வரும் நட்பின் கொழுமுளை பொய் வழங்கினில்லாகும் என்பதற்கு உவமை மாத்திரமாகக் கொண்டு, பொய் வழங்காமையும் மழையனைய ராதலும் என்னு மிரண்டும் செப்ப நெறி தூராதவை என்பது கருத்தாகக் கொள்க. 84. வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியுஞ் - சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (ப-ரை): வாய் நன்கு அமையா - நீர் வரும் வழி நன்கு பொருந்தப் பெறாத, குளனும் - குளமும், வயிறு ஆர - வயிறு நிறைய, தாய் முலை உண்ணாக் குழவியும் - தாயின் முலைப்பால் உண்ணாத குழவியும், சேய் மரபின் – தொன்றுதொட்ட முறைப்படி, கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் - கல்வி மாட்சியைப் பெறாத மக்களும், இம்மூவர் - இந்த மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் அடையப்பட்டவர் எ - று. வாய் - வழி; மதகு. சேய் என்பதற்கு மாணாக்கர் எனப் பொருள் கொண்டு, மாணாக்கர் கல்வி கற்கும் வழிபாட்டு முறைப்படிக் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைத்தலுமாம். இளம் பருவத்திற் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைப் பாருமுளர். துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார். திணை விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபு பெற்றது. 85. எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் ஒள்ளிய வொற்றாள் குணம். (ப-ரை): எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் வடிவு) கண்டோரால், இகழப்படும் முறைமையையுடையதாகலும் - உள்பொருளை - உண்மைப்பொருளை, கேட்டு - தானே கேட்டு, மறவாத கூர்மையும் - அதனை மறத்தல் இல்லாக் கூரியவறி வுடைமையும், முட்டு இன்றி - குறைவில்லாமல், உள்பொருள் - முன்கேட்ட உண்மைப் பொருளை, சொல்லும் உணர்ச்சியும் - தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஒள்ளிய - ஒண்மையுடைய, ஒற்றாள் குணம் - ஒற்றனின் பண்புகளாம் எ - று. வடிவு என்பது வருவித்துரைக்க. “கடாஅவுருவோடு” என்பவாகலின், நன்கு மதிக்கப்படாத வடிவு வேண்டியதாயிற்று. செய்கை எள்ளப்படு மரபிற் செலும் என்றுரைத்தலுமாம். நிகழ்ந்த காரியத்தை ஐயந் திரிபின்றி அறியல் வேண்டுமென்பார் உள் பொருளைக் கேட்டு என்றார். ஒண்மை - அறிவு. ஒற்று ஆள் - ஒற்றாகிய ஆள். ஒற்றாள் குணம் என இயல்பாகலுமாம். 86. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல் நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும் குற்றந் தரூஉம் பகை. (ப-ரை): அற்புப் பெருந்தளை - உயிர்கண் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை, யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - கட்டுந் தளர்ந்து நீங்குதலும், கற்புப் பெரும்புணை - கல்வியாகிய பெரிய தெப்பத்தை, காதலின் கைவிடுதல் - பொருள் மீதுண்டாய வாசையாற் கைவிடுதலும், நட்பின் - நட்புப்பூண்டொழுகுங்கால், நயம் நீர்மை - அதற்குரிய நல்ல தன்மையினின்றும், நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - இவை மூன்றும்; குற்றம் தரூஉம் பகை - தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள் எ - று. அற்பு - அன்பு. கற்பு - கல்வி. “கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும், மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்” என்பவாகலின், கற்புப் பெரும்புணை என்றார். ஒருவரிடத்துள்ள நட்பினால் நீதித் தன்மையினின்று நீங்கல் எனலுமாம். 87. கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக் ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர் முழுமக்க ளாகற்பா லார். (ப-ரை): கொல்வது - கொல்லுந் தொழிலை, அஞ்சான் - அஞ்சாதவனாகி, வேண்டலும் - அதனை விரும்புபவனும், கல்விக்கு அகன்ற - கல்விக்குச் சேய்மையான, இனம் புகுவானும் - தீய கூட்டத்திலே சேர்பவனும், இருந்து - ஒரு முயற்சியுஞ் செய்யா திருந்து, விழுநிதி - முன்னுள்ள சிறந்த பொருளை, குன்றுவிப்பானும் - குறையச் செய்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், முழு மக்கள் ஆகற்பாலார் - அறிவிலார் ஆகும்பான்மை யையுடையார் எ - று. தான், அசை. வேண்டலும் என்பதற்கு வேண்டுபவனும் என்று பொருள் கொள்க. தொழிற்பெயர், இம்மூவர் என்பதனோடு இயையாமையின், முழுமக்கள் என்பதற்கு, முன் ‘பெருமையுடையார்’ என்னுஞ் செய்யுளுரையில் உரைத்தமை காண்க. கொல்வது தானஞ்சான் வேண்டலும் என்பதற்குத் தன்னை வருத்துவதனைத் தான் அஞ்சாதவனாகி அடைய விரும்புபவனும் என்று ரைப்பாருமுளர். 88. பிணிதன்னைத் தின்னுங்காற் றான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலுமிம் மூன்றும் புணையி னிலைகலக்கு மாறு. (ப-ரை): பிணி - நோய், தன்னைத் தின்னுங்கால் - தன்னை வருத்துங் காலத்து, தான் வருந்துமாறும் - தான் வருந்து மியல்பும், தணிவு இல் - தாழ்தல் இல்லாத, பெருங் கூற்று - பெரிய கூற்றுவன், உயிர் உண்ணுமாறும் - உயிரைக்கவரவருமியல்பும், பிணை செல்வம் - பிணைந்த செல்வம், மாண்பு இன்று இயங்கலும் - நன்னெறியின்றிச் செலவிடப் படுமியல்பும், இம்மூன்றும் - இந்த மூன்றும் புணையின் நிலை - பற்றுக் கோடாவாரினது நிலைமையை, கலக்குமாறு - கலக்குந் தன்மையையுடையன எ. று. தின்னுதல் - வருத்துதல்; “உருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும் பிணி” என்றார் முன்னும். பிணைசெல்வம் என்பதற்கு விரும்பப்படும் செல்வம் எனப் பொருளுரைப்பின் பிணைச் செல்வம் என்பது தொக்கதாகக் கொள்க. சுற்றத்தார் முதலியோர் வந்து சேர்தற்குக் காரணமாகிய செல்வம் என்றுரைப்பாருமுளர். மாண்பின்றியங்கல் என்பதற்கு நிலையின்றி யொழிதல் என்றுரைத்தலுமாம். புணையின் நிலை - மரக்கலம் போலும் மனத்தின் நிலை யெனலுமாம். 89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (ப-ரை): அருளினை - அருளை, நெஞ்சத்து - உள்ளத்தின் கண், அடை கொடாதானும் - அடையச் செய்யாதவனும், பொருளினைத் துவ்வான் - பொருளைநுகராதவனாகி, புதைத்து வைப்பானும் - மண்ணிற்புதைத்து வைப்பவனும், இறந்து - நெறிகடந்து, இன்னா, சொற்களை, சொல்ல கிற்பானும் - சொல்லும் வன்கண்மையுடை யவனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகத்து மக்களாய்ப் பிறந்தும், பிறந்திலாதார் - பிறவாதவராவர் எ-று. அடைகொடாதான் - அடைவியாதவன், துவ்வான் - முற்றெச்சம், இனம் பற்றிப், பிறர்க்கு வழங்காதவனாகியென்றும் உரைத்துக் கொள்க. இறத்தல் - நெறிகடத்தல்; “இறந்தார்வாய், இன்னாச் சொல் நோற் கிற்பவர்” என்புழி இறந்தார் என்பதற்கு, நெறியைக் கடந்தார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பது காண்க. சொல்லகிற்பான் என்பதில் கில் வன்கண்மையை உணர்த்துகின்றது. மக்கட் பிறப்பின் பயனை அடையாமையின் பிறந்திலாதார் என்றார். பின்னரும் இவ்வாசிரியர் “பிறந்தும் பிறவாதவர்என்பர்”. 90. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகம் சேராத வாறு. (ப-ரை): ஈதற்கு - பிறர்க்கு ஈதற்பொருட்டு, பொருளைச் செய்க - பொருளை ஈட்டுக, அறநெறி சேர்தற்கு - அற வழியையடைதற் பொருட்டுப், பெருநூலைச் செய்க - பெரிய நூற் பொருள்களைக் கற்க, யாதும் - எத்துணையும், அருள்புரிந்து - அருளை விரும்பி, சொல்லைச் சொல்லுக - நல்ல சொற்களைக் கூறுக, இம்மூன்றும்- இந்த மூன்றும், இருள் உலகம் இருளையுடைய நரகவுலகத்தின்கண், சேராத ஆறு - அடையாத வழிகள் எ - று. செய்க பெருநூலை என்புழிச் செய்க என்பதற்குத் தகுதி பற்றிக் கற்க வென்றுரைக்கப்பட்டது. யாது சொல்லையும் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைத்தலுமாம். புரிதல் - விரும்புதல், இருள் - நரக வகையுளொன்று. “அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லையிருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்” என்னும் குறளும், ‘இருள் செறிந்த துன்பவுலக மென்றது திணிந்த விருளையுடைத்தாய் தன்கட் புக்கார்க்குத் துன்பஞ் செய்வதோர் நரகத்தை ; அது கீழ்உலகத்தோரிட மாகலின் உலகமெனப்பட்டது’ என்னும் அதன் உரைக்குறிப்பும் ஈண்டு அறியற்பாலன. 91. பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை இறுதிக்கண் யாமிழந்தே மென்றன் - மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கானா ணுதல் லிம்மூன்றும் மன்னா வுடம்பின் குறி. (ப-ரை): பெறுதிக் கண் - செல்வம் பெற்றகாலை, பொச்சாந்து - தெய்வத்தை மறந்து, உரைத்தல் - கூறத் தகாதவற்றைக் கூறலும், இறுதிக்கண் - வாழ்நாளின் முடிவு நெருங்கியகாலை, யாம் - நாம், உயிரை - பெறுதற்கரிய இவ்வுயிரினை, இழந்தேம் என்றல் - அவமே இழந்தோம் என்று இரங்கலும், தன் உடம்பு - தன்னுடைய உடல், கன்றுங்கால் - நோயினால் வருந்துமிடத்து, மறுவந்து - உள்ளம் மறுகி, நாணுதல் - முன் செய்த தீவினையை நினைந்து நாணுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னா உடம்பின் குறி - அறிவு பொருந்தாத உடம்பின் செய்கைகளாம் எ - று. ‘செல்வம் வந்துற்றகாலைத் தெய்வமும் சிறிது பேணார், சொல்வன அறிந்து சொல்லார்’ என்பதனால்; கீழோர் செல்வமுற்ற காலத்துத் தெய்வத்தை மறத்தலும் மிகுதிச் சொல் சொல்லலுங் காண்க. துன்புற்ற காலத்துப் பிறர் செய்த யுதவியைச் செல்வமுற்ற காலத்து மறந்து ரைத்தல் என்றுமாம்; “கெட்டிடத் துவந்த வுதவி கட்டில்”, வீறு பெற்று மறந்த மன்னன்போல” (குறுந்தொகை - 225) என்னும் சான்றோருரையும் நோக்குக. இதற்கு எடுத்துக்காட்டா வான் பாஞ்சால மன்னன் துருபதன் என்க. 92.“ விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை ஒன்று முணராத வேழையும் - என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர்” (ப-ரை): விழுத்திணை - (ஒழுக்கத்தால் உயர்ந்த) சிறந்த குடியில், தோன்றாதவனும் - பிறவாதவனும், எழுத்தினை - கல்வியை, ஒன்றும் உணராத - சிறிதும் அறியாத, ஏழையும் - அறிவில்லாதவனும், என்றும் - எப்பொழுதும், இறந்து உரை - நெறி கடந்து பேசுதலை, காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் - தோன்றாதவரேயாவர். எ- று. ஒழுக்கம், வாய்மை, நாண் முதலிய பண்புகள் உயர் குடிப்பிறந்தார் மாட்டு இயல்பினைமையுமென்னுங் கருத்தால் அக்குடியிற் பிறவாமையைப் பயனிலதாகக் கூறினாரேனும், உயர்குடிக்குரிய ஒழுக்கம் முதலியன இல்லாதவன், பயனிலி யாவன் என்பது கருத்தாகக் கொள்க. ஈண்டு எழுத்து என்றது கல்வியை. உரை - முதனிலைத் தொழிற்பெயர். இறந்துரைக்கும் உரை என விரித்துரைத்தலுமாம். காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் - தோன்றாதவரேயாவர் எ - று. 93. இருளாய்க் கழியு முலகமும் யாதுந் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு. (ப-ரை): இருளாய்க் கழியும் - எப்பொழுதும் இருள் போன்று கழியும், உலகமும் - உலக வாழ்க்கையும், யாதும் - (நன்மை தீமைகளில்) ஒன்றும் தெரியாது) உரைக்கும் - உணராது சொல்லுகின்ற, வெகுள்வும் - சினமும், பொருள் அல்ல - நற்பொருள்களல்லா தவற்றை, காதற்படுக்கும் - விரும்பும், விழைவும் - விருப்பமும், இவை மூன்றும் - இம்மூன்றும், வாழும் உயிர்க்கு - இவ்வுலகில் வாழ்ந்து வரும். மக்கள் உயிர்க்கு, பேதைமை - அறியாமையை விளைப் பனவாம் எ - று. உலகம் - உலக வாழ்க்கை. மக்கட் பண்பின்மையால் யாவ ரோடும் கலந்து அறியப் பெறாதார்க்கு உலகிய லொன்றும் தெரியாதாகலின் அவர்கள் வாழ்க்கையை இருளாய்க் கழியும் உலக வாழ்க்கை யென்றார். “ நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற்பட்டன் றிருள்” என்னும் திருக்குறள் ஈண்டு அறியற்பாலது உரைக்கும் - உரைத்தற் கேதுவாகிய. 94. நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடி யாதார். (ப-ரை): நண்பு இலார் மாட்டு - நட்புக் குணம் இல்லாதவ ரிடத்து, நசைக் கிழமை, செய்வானும் - நட்புரிமை செய் கின்றவனும், பெண்பாலை - தன் மனைவியை, காப்பு இகழும் - காத்தலை இகழு கின்ற, பேதையும் - அறிவிலியும், பண்பும் இல் - குணமில்லாத, இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குற்றமாகிய சொல்லைச் சொல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒழுக்கம் - தாம் ஒழுகுந்திறத்தினை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளா தவராவர் எ- று. நண்பிலார் மாட்டு, நசைக்கிழமை செய்தல் - நட்கத் தகாதவரிடத்து நட்புச் செய்தல் என்றபடி, அன்றி, பழகிய நண்பரல்லாரை நண்பராகக் கருதி அவர் மாட்டு நட்புரிமை செய்தல் என்றுமாம். உரிமை செய்தல் - அவர் வினையைக் கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், பெண்பால் என்றது ஈண்டு மனைவியை. சொல்லுக்குப் பண்பாவன இனிமை, வாய்மை, பயனுடைத்தாதல் முதலியன. (94) 95. அறிவழுங்கத் தின்னும் பசிநோயு மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ் - செறுநரின் வெவ்வுரை நோனா வெகுள்வு மிவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (ப-ரை): அறிவு அழுங்க - அறிவு கெடும் வண்ணம், தின்னும்- வருத்துகின்ற, பசி நோயும் - பசிப் பிணியும், மாந்தர் - மக்களது, செறிவு அழுங்க - அடக்கம் கெடும்படி, தோன்றும் - தோன்றுகின்ற, விழைவும் - விருப்பமும், செறுநரின் - பகைவர் களுடைய, வெவ்வுரை - கொடுஞ்சொற்களை, நோனா - பொறுக்காமைக்குக் காரணமாகிய, வெகுள்வும் - சினமும், இவை மூன்றும் - இம் மூன்று குணங்களும், நல்வினை - அறவினையை, நீக்கும் - அழிக்கின்ற, படை - படைக்கலங்களாம். எ - று. அழுங்கல் - கெடுதல், செறிவு - அடக்கம்; “செறிவறிந்து சீர்மை பயக்கும்” என்பது காண்க. ஈண்டு அடக்கமாவது புலன டக்கம். நோனா - பொறுக்காத; நோன்றல் - பொறுத்தல். நல்வினை என்பதற்கு மேற்கொண்ட நல்ல கருமம் என்றுரைத்தலுமாம். 96. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் றவசி கொடிதொரீஇ நல்லவை செய்வா னரசனிவர் மூவர் பெய்யெனப் பெய்யு மழை. (ப-ரை): கொண்டான் - கணவனுடைய, குறிப்பு அறிவாள் - உள்ளக் குறிப்பினை யுணர்ந்து நடப்பவளாகிய, பெண்டாட்டி - மனைவியும், கொண்டன - தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை - செய்யும் முறைப்படி, செய்வான் - செய்பவனாகிய, தவசி - தவமுடையோனும், கொடிது - தீமையை, ஒரீஇ - விலக்கி, நல்லவை - குடிகளுக்கு நன்மையானவற்றை, செய்வான் - செய்வபனாகிய, அரசன் - அரசனும் (ஆகிய), இம்மூவர் - இம்மூவரும் - பெய்என - பெய்யென்று சொல்ல, மழை பெய்யும் - மழையானது பெய்யும் எ- று. பெண்டு - பெண்மை; பெண்டாட்டி - பெண்மையை ஆளுபவள்; ஈண்டு மனைவியென்னும் பொருட்டு, குறிப்பறிவாள் பெண்டாட்டி யாவள், செய்வகை செய்வான் தவசியாவான், நல்லவை செய்வான் அரசனாவன் எனத் தனித்தனி முடித்து இவர் மூவரும் பெய்யென மழை பெய்யும் என்றுரைத்தலுமாம். உலகம் நலம் பெறுதற்குக் கற்புடை மாதரும், தவஞ் செய்வாரும், நீதிமன்னரும் இன்றியமை யாதவ ரென்பது பெற்றாம். 97. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடை யிலாளர் தொழில். (ப-ரை): ஐங்குரவர் - . . . . , ஆணை - ஏவலை, மறுத்தலும் - மறுத்து நடத்தலும், ஆர்வு உற்ற - விருப்பம் மிக்க, எஞ்சாத - குறைவில்லாத, நட்பினுள் - நண்பரிடத்து, பொய் வழக்கும் - பொய்கூறுதலும், நெஞ்சு அமர்ந்த - உள்ளம் விரும்பிய, கற்பு உடையாளை - கற்புடைய மனைவியை, துறத்தலும் - நீக்கிவிடலும், இம்மூன்றும் - இம்மூன்றும், நற்புடை இலாளர் - நற்சார்வு இல்லாதவருடைய, தொழில் - செய்கைகளாம் எ - று. ஐங்குரவராவார் ஐந்து பெரியவர்களுடைய உவாத்தியான், தாய், தந்தை தமையன் என்போர். ஆர்வுற்ற நட்பு, எஞ்சாத நட்பு எனப் பெயரெச் சங்களைத் தனித்தனிக் கூட்டுக. நற்புடை - நற்சார்வு; நல்லினம். இனி நற்புடை - தருமசிந்தை என்றலுமாம். 98. செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந் திங்கண் மும்மாரிக்கு வித்து. (ப-ரை): செந்தீ - சிவந்த முத்தீ வேள்விக்கும், முதல்வர் - முதன்மையான அந்தணர், அறம் நினைந்து வாழ்தலும் - தமக்குரிய அறங்களை மறவாது செய்து - வாழ்ந்துவரலும், வெஞ்சின வேந்தன் - கொடிய கோபத்தினையுடைய அரசன், முறைநெறியில்- நீதி நெறிக்கண், சேர்தலும் - செல்லுதலும், பெண்பால் - ஒருபெண், கொழுநன்வழி - கணவனுடைய குறிப்பின்வழியே, செலவும் - செல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்று செயல்களும், வித்து - திங்கள் மும்மாரிக்கு - மாதந் தோறும் பெய்ய வேண்டிய மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம் எ - று. அந்தணர் அறத்தாலும் அரசனது நீதியாலும் மகளிர் கற்பாலும் திங்கள் மும்மாரி பெய்யும் என்றபடி. 99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர் நல்லுலகஞ் சேரா தவர். (ப-ரை): கற்றாரை - கற்றறிந்த அறிஞர்களை, கைவிட்டு - விட்டு நீங்கி, வாழ்தலும் - (கீழாரொடு கூடி) வாழ்பவனும், காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - தான் விரும்பிய வாறே, செய்து - புரிந்து, ஒழுகும் - நடக்கின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், முட்டு இன்றி - யாதொரு தடையுமில்லாது, அல்லவை - தீமை யானவற்றை, செய்யும் - செய்கின்ற, அலவலையும் - கீழ்மகனும், இம்மூவர் - இந்த மூவரும், நல் உலகம் - நன்மை அமைந்த மேலுலகத்தை, சேராதவர் - அடையாதவராவர் எ - று. அலவலை - வீண் ஆரவாரஞ் செய்பவன் என்றுமாம். 100. பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் எத்துணையு மஞ்சா வெயிலானும் - வைத்தமைந்த எண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (ப-ரை): பத்திமை சான்ற - (தம் மீது) அன்பு நிறைந்த, படையும் - சேனையும், பலர் தொகினும் - பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும், எத்துணையும் - எவ்வளவும், அஞ்சா - அச்சமுறாமைக்குக் காரணமாகிய, வைத்து அமைந்த - உணவு முதலிய எல்லாப் பொருளும் வைக்கப் பெற்று அமைந்த, எயில் அரணும் - மதிலையுடைய அரணும், எண்ணின் - அளவிடின், விழுநிதியும் - சிறந்த செல்வமும், இம்மூன்றும் - இந்த மூன்று பொருள்களும், மண்ஆளும் வேந்தர்க்கு - இவ்வுலகத்தினை ஆளுகின்ற வேந்தர்க்கு, உறுப்பு - உறுப்புக்களாம். எ - று. பத்திமை சான்ற படை - இறைவன் செறினும் சீர் குன்ற லில்லாத சேனை. எயில் என்றது உபலக்கணத்தால் அகழி, காடு முதலியவற்றையுங் குறிக்கும். அமைந்த - இலக்கணத்தால் அமைந்த வென்க; தொகுத்து வைக்கப்பட்டு நிறைந்த நிதியென்னலுமாம். அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறங்கங்களுள் வினை செய்தற்கண் இன்றியமையாத மூன்றினை இதனுட் சிறந்தெடுத் தோதினார். திரிகடுகம் மூலமும் உரையும் முற்றிற்று. ஆசாரக்கோவை ஆசிரியர் : பெருவாயின் முள்ளியார் உரை : பழைய பொழிப்புரை ஆசாரக் கோவை மூலமும் - விருத்தியுரையும் நல்லொழுக்கங்கட்குக் காரணம் 1. நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. (பழைய பொழிப்புரை.) தனக்குப் பிறர்செய்த நன்றி யறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும் ஒப்புரவை மிக வறிதலும், அறிவு டைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ் வெட்டுவகையும் நல்லாராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம். (1) ஒழுக்கம் பிழையாதவரடையும் உறுதி 2. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டு மெய்துப என்றும் ஒழுக்கம் பிழையா தவர். (ப-பொ-ரை.) நற்குடிப்பிறப்பு, நெடியவாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டி னையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஒழுகுவார். (2) தக்கணை முதலிய தவறாது நடத்தல் 3. தக்கணை முதலிய தவறாது நடத்தல் தக்கணை வேள்வி தவங்கல்வி யிந்நான்கும் முப்பா லொழுக்கினாற் காத்துய்க்க - உய்க்காக்கால் எப்பாலு மாகா கெடும். (ப-பொ-ரை.) குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந் நான்கினையும் மூன்றுவகைப்பட்ட விதியாலே பாதுகாத்து நடாத்துக. நடாத்தாக்கால் எவ்வுலகத்தின் கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும். (3) வைகறையிற் செய்யவேண்டியவை 4. வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில் தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. (ப-பொ-ரை.) வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை. (4) எச்சிலுடன் தீண்டலாகாதவை 5. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோ டிவையென்ப யாவருந் திட்பத்தால் தீண்டாப் பொருள். (ப-பொ-ரை.) பசு பார்ப்பார் தீ தேவர் உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லாரும் யாப்புற எச்சிலோடு தீண்டப் படாத பொருளும் இவை. (5) எச்சிலுடனே காணலாகாதவை 6. எச்சிலார் நோக்கார் புலைதிங்க ணாயிறுநாய் தக்கவீழ் மீனோடே யிவ்வைந்துந் தெற்றென நன்கறிவார் நாளும் விரைந்து. (ப-பொ-ரை.) புலையும் திங்களும் ஞாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும் எச்சிலையுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார். (6) நால்வகை எச்சில் 7. எச்சில் பலவு முளமற் றவற்றுள் இயக்க மிரண்டு மிணைவிழைச்சு வாயில் விழைச்சிவை எச்சிலிந் நான்கு. (ப-பொ-ரை.)எச்சில்கள் பல எச்சில்கள் உள. அவற்றுள் மலமூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடுகூட இணை விழைச்சும், வாயினால் வழங்கிய விழைச்சும் என இவை எச்சிலாவன. இவ்வெச்சில் நான்கினையும் பாதுகாக்க. (7) எச்சிலுடன் செய்யத்தகாதவை 8. நால்வகை யெச்சிலும் நன்கு கடைபிடித் தோதா ருரையார் வளராரே யெஞ்ஞான்றும் மேதைக ளாகுறு வார். (ப-பொ-ரை.) கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும் மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார், வாயாலொன்றனைச் சொல்லார், கண்துயிலார் எஞ்ஞான்றும் மதியுடையராக வேண்டுவோர். (8) காலைமாலைக் கடவுள் வணக்கம் 9. நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத் தானறியு மாற்றாற் றொழுதெழுக; அல்கந்தி நின்று தொழுதல் பழி. (ப-பொ-ரை.) சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக் கண்கழுவித் தான் வணங்குந் தெய்வத்தைத் தானறியும் நெறியால் தொழுக. மாலைப் பொழுதின்கண் தான் வணங்குந் தெய்வத்தை நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக. (9) இன்றியமையாது நீராடுதல் 10. தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள் மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுறா தாடுக நீர். (ப-பொ-ரை.) தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற் கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மை யுண் டான விடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும், மயிர் களைந் தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், இணை விழைச்சு உண்டாயின விடத்தும், கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திர புரீடம் கால்வான் உறைவிடத்தும் என இப்பத்திடத்தும் ஐயுறாதே நீராடுக. (10) ஆடை யணிதல் 11. உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார் உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார் ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே முந்தையோர் கண்ட முறை. (ப-பொ-ரை.) ஒன்றனை உடுத்தல்லது நீராடார், இரண்டு டுத்தன்றி ஒன்றுடுத்துண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண் பிழியார், சீர்மைதக்கார் ஓராடையையுடுத்து அவையின்கண் செல்லார் என்று சொல்லப்படுவது பழையார் கண்ட முறைமை. (11) தவிர்க்க வேண்டுவன 12. தலையுரைத்த எண்ணெயா லெவ்வுறுப்புந் தீண்டார் பிறருடுத்த மாசுணியுந் தீண்டார் செருப்புக் குறையெனினுங் கொள்ளா ரிரந்து. (ப-பொ-ரை.) தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும் பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக்கொள்ளினுங் கொள்ளார். (12) செய்யத்தகாதன 13. நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக் கீறார் இராமரமுஞ் சேரார் இடரெனினும் நீர்தொடா தெண்ணெ யுரையார் உரைத்தபின் நீர்தொடார் நோக்கார் புலை. (ப-பொ-ரை.) நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார், நிலத்தை இருந்துகீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண் ணெயைத் தேய்த்த பின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார். (13) நீராட்டியல்பு 14. நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும் நீந்தா ருமியார் திளையார் விளையாடார் காய்ந்த தெனினுந் தலையொழிந் தாடாரே ஆய்ந்த அறிவி னவர். (ப-பொ-ரை.) ஒருமுறைப்பட்டார் நீராடும்போழ் தின்கண் ஒருநாளும் நீந்தார், நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார், எண்ணெய் பெறாது தலைகாய்ந்த தெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார். (14) தன்னுடல்போற் போற்றத்தக்கவை 15. ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் நாயிறு தன்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூத மன்றே கெடும். (ப-பொ-ரை.) நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையுமுடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்று போம். (15) ஐம்பெருங்குரவர் வழிபாடு 16. அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவர் இவ்வைவர் இவரிவரைத் தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி. (ப-பொ-ரை.) அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவராவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுகெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி. (16) நல்லறிவாளர் செயல் 17. குரவ ருரையிகந்து செய்யார் விரதங் குறையுடையார் தீர மறவார் நிறையுவா மேற்கோலுந் தின்னார் மரங்குறையார் என்பதே நல்லறி வாளர் துணிவு. (ப-பொ-ரை.) முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக்கடந்து ஒன்றனையுஞ் செய்யார் முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில். (17) உணவுகொள் முறைமை 18. நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவா ரல்லாதார் உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெடுத்துக் கொண்டா ரரக்கர் குறித்து. (ப-பொ-ரை.) குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணு மிடம் மண்டலஞ்செய்து உண்டார்; உண்டாராவர். இப்படி யொழிய உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவா ரூணை அரக்கர் எடுத்துக்கொண்டார். (18) கால்கழுவியபின் செய்ய வேண்டியவை 19. காலினீர் நீங்காமை யுண்டிடுக பள்ளியும் ஈரம் புலராமை யேறற்க வென்பதே பேரறி வாளர் துணிவு. (ப-பொ-ரை.) கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக. பாயலின்கண்ணும் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாவன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறி வாளர் துணிவு. (19) உணவுகொள்ளு முறைமை 20. உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து தூங்கான் றுளங்காமை நன்கிரீஇ யாண்டும் பிறிதியாது நோக்கா னுரையான் றொழுதுகொண்டு உண்க வுகாமை நன்கு. (ப-பொ-ரை.) உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த் திசையாங்கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க. (20) உணவு கொடுத்துண்டல் 21. விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும் ஒழுக்கம் பிழையா தவர். (ப-பொ-ரை.) விருந்தினரும், மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார். (21) உண்ணுந் திசை 22. ஒழிந்த திசையும் வழிமுறையா னல்ல முகட்டு வழியூண் புகழ்ந்தா ரிகழ்ந்தார் முகட்டு வழிகட்டிற் பாடு. (ப-பொ-ரை.) முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத் திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத் திசைகளும் நல்லவாம். வாயினேரிருந் துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிவிட்டுக் கிடக்க லாகாதென்று பழித்தார்கள் நல்லார். (22) நின்றுகிடந் துண்ணாமை 23. கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையு முண்ணார் சிறந்து மிகவுண்ணார் கட்டின்மே லுண்ணார் இறந்தொன்றுந் தின்னற்க நின்று. (ப-பொ-ரை.) கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின்கண் ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து மிக யாதொன்றும் நின்று தின்னல் ஆகாது. (23) பெரியோர்பா லிருந்தருந்துவது 24. முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண் என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற் பெரியார்தம் பாலிருந்தக் கால். (ப-பொ-ரை.) தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து உண்ணுமிடத்து, அப்பெரியார் உண்பதற்கு முன்னே நாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக யாதாயினும் பெறினும் வலமிருந்து உண்ணற்க. (24) சுவைப்பொருள் நுகர்முறை 25. கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப மெச்சும் வகையா லொழிந்த விடையாகத் துய்க்க முறைவகையா லூண். (ப-பொ-ரை.) கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும் தித்திக்கும் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான். (25) உண்கலம் 26. முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையா லுண்பவற்று ளெல்லாஞ் சிறிய கடைப்பிடித் தன்பிற் றிரியாமை யாசார நீங்காமை பண்பினா னீக்கல் கலம். (ப-பொ-ரை.) தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம் மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங்கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப் பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதற் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரை வோடுகூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக. (26) வாய் துப்புரவு செய்வகை 27. இழியாமை நன் குமிழ்ந் தெச்சி லறவாய் அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப் பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல் மிக்கவர் கண்ட நெறி. (ப-பொ-ரை.) வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புகளை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி. (27) நீர் பருகு முறை 28. இருகையாற் றண்ணீர் பருகா ரொருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க் கிருகை சொறியா ருடம்பு மடுத்து. (ப-பொ-ரை.) இருகையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார். (28) அந்திப்பொழுது செய்வன தவிர்வன 29. அந்திப் பொழுது கிடவார் நடவாரே உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி அல்குண் டடங்கல் வழி. (ப-பொ-ரை.) மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப் பொழுதின் கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம் போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி. (29) தூங்கு முறை 30. கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி. (ப-பொ-ரை.) கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கை கூப்பித் தொழுது வடதிசையின்கண்ணும் கோணத் திசையின் கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம் பின்கண் கொடுத்துக் கிடத்தல் நெறி. (30) ஊடறுத்துச் செல்லாமை 31. இருதேவர் பார்ப்பா ரிடைபோகார் தும்மினும் மிக்கார் வழுத்திற் றொழுதெழுக ஒப்பார்க் குடன்செல்ல லுள்ள முவந்து. (ப-பொ-ரை.) இருதேவர் நடுவும் பார்ப்hர் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தி னால் தொழுதெழுக; நம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர்செல்க, தம்முள்ளம் உவந்து. (31) இருபுலனுஞ்சோரா இடம் 32. புற்பைங்கூ ழாப்பி சுடலைவழி தீர்த்தந் தேவ குலநிழ லானிலை வெண்பலியென் றீரைந்தின் கண்ணு முமிழ்வோ டிருபுலனுஞ் சோரா ருணர்வுடை யார். (ப-பொ-ரை.) புல்லின் கண்ணும், விளைநிலத்தின் கண்ணும், ஆப்பியின் கண்ணும், சுடலையின் கண்ணும், வழியின் கண்ணும், தீர்த்தத்தின் கண்ணும், தேவர் கோட் டத்தின் கண்ணும், நிழலின் கண்ணும், ஆநிரை நிற்கும் இடத்தின் கண்ணும், சாம்பலின் கண்ணும் என ஈரைந்தின் கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார். (32) இருபுலன் கழிக்குந் திசை 33. பகற்றெற்கு நோக்கா ரிராவடக்கு நோக்கார் பகற்பெய்யார் தீயினு ணீர். (ப-பொ-ரை.) பகல் தெற்கு நோக்கியும் இரா வடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சோரார். பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார். (33) இதுவுமது 34. பத்துத் திசையு மனத்தான் மறைத்தபின் அந்தரத் தல்லா லுமிவோ டிருபுலனும் இந்திர தானம் பெறினு மிகழாரே தந்திரத்து வாழ்துமென் பார். (ப-பொ-ரை.) திசைபத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின்கண்ணும் அன்றியிலே வேறோரிடத் தின் கண்ணே சோர்கின்றாராக கருதியல்லது உமிழ்நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திரன் உறையுமிடம் பெற்றா ராயினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார். (34) வாய்பூசலாகா இடங்கள் 35. நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார் வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால் வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினாற் பெய்பூச்சுச் சீரா தெனின். (ப-பொ-ரை.) நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப்பூசார். ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப் பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போதும் பூசும்போதும் மனத் தான் வரையறுத்துக் கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின். (35) காட்சியவர் நற்செயல் 36. சுடரிடைப் போகார் சுவர்மே லுமியார் இடரெனினு மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார் படைவரினு மாடை வளியுரைப்பப் போகார் பலரிடை யாடை யுதிராரே யென்றுங் கடனறி காட்சி யவர். (ப-பொ-ரை.) ஒருவர்க்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர்வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்து கொள்ளார். படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்று பிறர்மேல் உரைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார். (36) நாரஞ் செலுத்துவன 37. பிறர்மனை கட்களவு சூது கொலையோ டறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் - திறனிலரென் றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச் செல்வழி யுய்த்திடுத லால். (ப-பொ-ரை.) பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ்வைந்தினையும், அறனறிந்தார் செய்வே மென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இகழப்படுதலு மன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான். (37) சிந்திக்கலாகாதவை 38. பொய்குறளை வெளவ லழுக்கா றிவைநான்கு மையந்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பி னையம் புகுவித் தருநிரயத் துய்த்திடுந் தெய்வமுஞ் செற்று விடும். (ப-பொ-ரை.) பொய்யும் குறளையும் பிறர் பொருளைத் தாம் வெளவவேண்டுங் காதலும் பிறராக்கத்தின்கண் பொறா மையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினை யுடையார் நினையார். நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத் தின் கண்ணேயும் புகுவிக்கும் தெய்வமும் கெடுத்துவிடும். (38) மனைப் பலியூட்டல் 39. தமக்கென் றுலையேற்றார் தம்பொருட்டூன் கொள்ளார் அடுக்களை யெச்சிற் படாஅர் மனைப்பலி யூட்டினமை கண்டுண்க வூண். (ப-பொ-ரை.) தமக்கென் றுலை யேற்றார், தெய்வப் பொருட்டன்றித் தங்காரணத்தால் கொன்று ஊனைக் கொள்ளார், அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங் கட்குப் பலியூட்டினமை அறிந்தபின்னைத் தாம் உண்க. (39) இளங்கிளைஞர் உணவு 40. உயர்ந்ததின் மேலிரா ருள்ளழிவு செய்யார் இறந்தின்னா செய்தக் கடைத்துங் குரவர் இளங்கிளைஞ ருண்ணு மிடத்து. (ப-பொ-ரை.) தமக்கிளைய சுற்றத்தார் உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததின் மேலிரார், இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார். முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைகள் இன்னாத செய்த காலத்தும். (40) நுண்ணிய நூலறிவினார் செயல் 41. கண்ணெச்சில் கண்ணூட்டார் காலோடு கால்தேயார் புண்ணிய மாய தலையோ டுறுப்புறுத்த நுண்ணிய நூலறிவி னார். (ப-பொ-ரை.) ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் சுழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார். தங்காலோடு கால் தேயார். புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின்கண்ணும் மற்றையுறுப்பின் கண்ணும் உறுத்துக, நுண்ணிய நூலை யுணர்வார். (41) மனைவியை நீங்கியிருக்குங்காலமும் நீங்காதுறையுங் காலமும் 42. தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின் ஈராறு நாளு மிகவற்க என்பதே பேரறி வாளர் துணிவு. (ப-பொ-ரை.) தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின்கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு. (42) உடனுறைவுக்காகாக் காலம் 43. உச்சியம் போழ்தோ டிடையாம மீரந்தி மிக்க விருதேவர் நாளோ டுவாத்திதிநாள் அட்டமியு மேனைப் பிறந்தநா ளிவ்வெட்டும் ஒட்டா ருடனுறைவின் கண். (ப-பொ-ரை.) உச்சியம்பொழுதும் நடுக்கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும், என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லார் உடன்படார். (43) மணை முதலியவை 44. நாழி மணைமே லிரியார் மணைகவிழார் கோடி கடையுள் விரியார் கடைத்தலை ஓராது கட்டிற் படாஅர் அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல். (ப-பொ-ரை.) நாழியை மணைமேல் இருத்தார், மணையைக் கவிழ்த்துவையார், புத்தாடையைத் தலைக்கடை யின்கண் விரியார், பலரும் புகுதுங் கடைத்தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக. (44) பந்தலிற் பரப்பத்தகாதவை 45. துடைப்பந் துகட்காடு புல்லிதழ்ச் செத்தல் கருங்கலங் கட்டில் கிழிந்ததனோ டைந்தும் பரப்பற்க பந்த ரகத்து. (ப-பொ-ரை.) துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப் பரப்பாதொழிக. (45) இல்லம் பேணு முறை 46. காட்டுக் களைந்து கலங்கழீஇ யில்லத்தை ஆப்பிநீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்(து) இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க நல்ல துறல்வேண்டு வார். (ப-பொ-ரை.) சிறு காலையே துயிலெழுந்து, இல்லத் துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர். (46) ஓதற்குதவாத காலம் 47. அட்டமியு மேனை உவாவும் பதினான்கும் அப்பூமி காப்பார்க் குறுகண்ணு மிக்க நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார் இலங்குநூ லோதாத நாள். (ப-பொ-ரை.) அட்டமிநாளும், உவாநாளும், பதினான்கா நாளும், தாமுறையும் பூமிகாக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேத மோதாத நாட்கள். (47) பெருஞ்சோ றளிக்குங் காலம் 48. கல்லியாணந் தேவர் பிதிர்விழா வேள்வியென்(று) ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க பெய்க விருந்திற்குங் கூழ். (ப-பொ-ரை.) தான் செய்யும் கலியாண நாளின் கண்ணும், தேவர்க்குச் சிறப்புநாளின் கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச் செய்யும் நாளின்கண்ணும், விழாநாளின்கண்ணும் யாகம் செய்யும் நாளின்கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக. (48) குடிமை முதலியவற்றிற்குத் தக்க செயல். 49. உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும் நிலைமைக்குங் கல்விக்கும் ஆண்மைக்குந் தத்தங் குடிமைக்குந் தக்க செயல். (ப-பொ-ரை.) உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புறப் பெற்ற மைக்கும், தம் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்க தகுதியாகச் செய்க. (49) கேள்வியுடையார் செயல். 50. பழியா ரிழியார் பலருள் ளுறங்கார் இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி இல்லாரை யெள்ளி இகழ்ந்துரையார் தள்ளியுந் தாங்கருங் கேள்வி யவர். (ப-பொ-ரை.) பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்து ரையார், இழித்துரையார், பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோ மென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் மாறுபடற்கரிய கேள்வியார் இறந்தும். (50) தம்மொளி வேண்டுவார் செய்யத்தக்கன. 51. மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமுந் தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன் முன்னொளியும் பின்னொளியு மற்று. (ப-பொ-ரை.) மின்னொளியையும், வீழ்மீனையும், வேசை யர்கள் கோலத்தையும் தமது விளக்கத்தை வேண்டுவார் நோக் கார், பகற்கிழவோனுடைய காலை யொளியையும் மாலை யொ ளியையும் அப்பெற்றியே நோக்கார். (51) அசையாத உள்ளத்தவ ரொழுக்கம். 52. படிறும் பயனிலவும் பட்டி யுரையும் வசையும் புறனு முரையாரே யென்றும் அசையாத வுள்ளத் தவர். (ப-பொ-ரை.) வஞ்சனையுரையும், பயன்படாத உரையும், வாய் காவாது வேண்டிய உரைக்கும் உரையும் பிறரைப் பழியு ரைக்கும் உரையும், இவை யாவும் சொல்லார், என்றுந்தளராத உள்ளத்தவர். (52) நெறிப்பட்டார் பயிலாதன. 53. தெறியொடு கல்லேறு வீளை விளியே விகிர்தங் கதங்கரத்தல் கைபுடை தோன்ற உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம் பயிற்றார் நெறிப்பட் டவர். (ப-பொ-ரை.) நெறித்தலும் கல்லெறிதலும், வீளை செய்தலும், தூரப்போகின்றா னொருவனை அழைத்தலும், ஒருவன் செய்கையும் சொல்லும் முதலாயினவற்றைத் தானும் அவ்வகை இகழ்ந்து செய்து காட்டலும், வேகமுடையனாத லும், ஒளித்தலும், கையொடு கை புடைத்தலும், பிறர்க்கு வெளிப்படக் கண்ணிடுதல் முதலாயின செய்து தன்னுறுப்பைச் செகுத்தலும், இப்பெற்றிப் பட்டவையெல்லாம் பயின்று செய்யார் வழிப்பட்டார். (53) விருந்தினர்க்கு ஊணொடு செய்யுஞ் சிறப்பு. 54. முறுவ லினிதுரை கால்நீர் மணைபாய் கிடைக்கையோ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க் கூணொடு செய்யுஞ் சிறப்பு. (ப-பொ-ரை.) முறுவலோடுகூடிய இனி துரையும், கால் கழுவ நீரும், இருக்க மணையும், கிடக்கப் பாயும், கிடக்கும் இடமும் என இவ்வைந்தும் என்று சொல்லுப, தம்மிடத்துச் சென்றார்க்கு உணவுடனே செய்யும் சிறப்புக்கள். (54) அறிவினார் விரும்பாத இடங்கள். 55. கறுத்த பகைமுனையுங் கள்ளாட்டுக் கண்ணும் நிறுத்த மனமில்லார் சேரி யகத்தும் குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும் நிகரில் லறிவினார் வேண்டார் பலர்தொகு நீர்க்கரையும் நீடு நிலை. (ப-பொ-ரை.) வெகுண்ட பகைமுனையின்கண்ணும், கள்ளால் களித்தாடுமிடத்தும், பொது மகளிர் சேரிக்கண்ணும், தங்குணங் களை யாராய்ந்து தம்மை விரும்பிக் கொண்டார் கோட்பாடு விட்டவிடத்தும், பலர் தொகும் நீர்க்கரை யிடத்தும் நெடிதாக நிற்கையை ஒப்பில்லாத அறிவினை யுடையார் விரும்பார். (55) தொல்வரவிற் றீர்ந்த தொழில். 56. முளிபுல்லுங் கானமுஞ் சேரார்தீக் கூட்டார் துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக் கானந் தமியர் இயங்கார் துளியஃகி நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவிற் றீர்ந்த தொழில். (ப-பொ-ரை.) முற்றிய புல்லின்கண்ணும், முற்றிய காட்டின் கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப் பரப்பி ஓடார்; தேற முடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய் யாதொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார். (56) நோய் வேண்டாதார் செய்யலாகாதவை. 57. பாழ்மனையுந் தேவ குலனுஞ் சுடுகாடும் ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந் தாமே தமியர் புகாஅர் பகல்வளரார் நோயின்மை வேண்டு பவர். (ப-பொ-ரை.) குடியில்லாத மனையகத்தும், தேவாலயங் களுக்குள்ளும், சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உள தாயின தனி முதுமரத்தின் கண்ணும், அறிவின்றித் துணை யோடல்லது தாமே போகார், பகலுறங்கார், நோயின்மை வேண்டுவோர். (57) பிறர் ஓரிடம் புறப்படுகையிற் செய்யலாகாதவை. 58. எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும் எங்குற்றுச் சேறீரோ வென்னாரே முன்புக்(கு) எதிர்முகமா நின்று முரையா ரிருசார்வுங் கொள்வர் குரவர் வலம். (ப-பொ-ரை.) பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னேநின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஓன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கு நின்று சொல்லார். தம் குரவர் போம் பொழுது வலங் கொண்டு போக. (58) தீயவொழுக்கங்கள் சில. 59. உடம்புநன் றென்றுரையார் ஊதார் விளக்கும் அடுப்பினுள் தீநந்தக் கொள்ளா ரதனைப் படக்காயார் தம்மேற் குறித்து. (ப-பொ-ரை.) பிறரைப் பார்த்து உடம்பு நன்றாயி ருக்கிறது என்று சொல்லார், விளக்கினையும் வாயால் ஊதி யவியார், அட்டி லடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார். (59) பெரியோருடன் செல்லும்பொழுது செய்யத்தகாதன. 60. யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்மோடங்(கு) ஓராறு செல்லு மிடத்து. (ப-பொ-ரை.) யாதொன்றும் ஏறிப்போகார், செருப்புத் தொடார், ஒன்றனால் பிறர் தம்மேல் வெயில் மறைக்கப் போகார், ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன் கூடவழி போமிடத்து. (60) நூன்முறையாளர் துணிவு. 61. வான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தங் குரவரைப் போலொழுகல் நூன்முறை யாளர் துணிவு. (ப-பொ-ரை.) வாலிய முறையான் வந்த நான்மறை யாளரை மேலாகிய முறைத் தன்மையையுடைய தங் குரவரைப் போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு. (61) குரவர்க்குச் செய்யும் ஒழுக்கம். 62. கால்வாய்த் தொழுவு சமய மெழுந்திருப்பு ஆசார மென்பர் குரவர்க் கிவையிவை சாரத்தாற் சொல்லிய மூன்று. (ப-பொ-ரை.) காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார், குரவர்க்குச்செய்யும் ஆசாரங்கள் பலவற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்ட இம் மூன்று மேயாம். (62) திறங்கண்டார் கண்ட நெறி. 63. துறந்தாரைப் பேணலும் நாணலுந் தாங்கற்ற மறந்துங் குரவர்முற் சொல்லாமை மூன்றுந் திறங்கண்டார் கண்ட நெறி. (ப-பொ-ரை.) அருந்தவரைப் பாதுகாத்தலும், பழி நாணலும், தான் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறம்பட வறிந்தார் அறிந்த நெறி. (63) பிறப்பினுட் போற்றியெனப்படுவார். 64. பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தா ரிளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட் காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார். (ப-பொ-ரை.) பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப் பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலங்கிப் போயினாரே; தாம் பிறந்த பிறப்புதோறும் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார். (64) இன்னவருடன் தனித்திருத்தலாகாதெனல் 65. ஈன்றாள் மகள்தன் உடன்பிறந்தா ளாயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந் தாங்கற் கரிதாக லான் (ப-பொ-ரை.) தாயுடனாயினும், மகளுடனாயினும், தன் உடன்பிறந்தாளுடனாயினும் தனித்தாக உறையார், ஐம்புலன் களையும் தடுக்கல் அரிதாகலான். (65) அரசருடன் பழகுமளவு 66. கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார் கொடையளிக்கட் பொச்சாவார் கோலநேர் செய்யார் இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார் கடைபோக வாழ்துமென் பார். (ப-பொ-ரை.) அரசர் வாயிலின்கண் தடையுண்டா னால் வெகுண்டு பாயார், அரசரோடு மிகக் கிழமையை அவர் பொறாத வகை செய்யார், தமக்கு ஒன்று உதவுமிடத்தும், அவர் தம்மைத் தலையளிக்கு மிடத்தும், தமக்கு அவை அமையா என்றிகழார், அரச ரொக்கக் கோலஞ் செய்யார், அரசர் இருந்த அவையின்கண் ஊடறுத்துப் போகார், பிறனொருவனைச் சேர்ந்திரார்; முன்பு போலப் பின் கடை போக வாழ்தும் என்று கருதுவார். (66) சொல்லுமிடத்துக் குற்றமாவன 67. தமக்குற்ற கட்டுரையுந் தம்மிற் பெரியார் உரைத்ததற் குற்ற உரையு மஃதன்றிப் பிறர்க்குற்ற கட்டுரையுஞ் சொல்லற்க சொல்லின் வடுக்குற்ற மாகி விடும். (ப-பொ-ரை.) தமக்குற்ற கட்டுரைகளும், தம்மிற் பெரியராக அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டார் உரைத்த உரைகளும், அஃதன்றியே பிறர்க் குறுதியாகிய கட்டுரைகளும், அரசற்குச் சொல்வற்க. சொல்லுவராயின் தமக்கு வடுப்படுங் குற்றமாம். (67) நன்னெறி 68. பெரியா ருவப்பன தாமுவவா ரில்லஞ் சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப் பிள்ளையே யாயினும் இழித்துரையார் தம்மோ டளவளா வில்லா விடத்து. (ப-பொ-ரை.) பெரியராயுள்ளார் உவந்தவனவற்றைத் தாம் உவவார்; தம்மில்லத்தின்கண் கீழ்மக்களைக் கொண்டு புகார்; அறிவினையறியாத பிள்ளையேயாயினும், உயர்த்தன்றி இழித்துச் சொல்லார், தம்மோடு அளவளாவு இல்லாத விடத்து. (68) அரசன் செயலில் வெறுப்படையாமை முதலியன 69. முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார் தனிமை யிடத்துக்கண் தங்கருமஞ் சொல்லார் இனியவை யாமறிது மென்னார் கரிதன்று காக்கைவெள் ளென்னு மெனின். (ப-பொ-ரை.) அரசன் செய்வனவற்றை வெறார், அவனோடு கலாயார், விலங்கவன்றி நேர்முகத் தெதிர்நில்லார், அரசன் தனியே நின்ற இடத்தின்கண் தம் கருமம் சொல்லார், இனிய வான பொருள்களை யாங்கள் நுகர்ந்தறிவேம் என்று அரசர்க் குச் சொல்லார், காக்கை வெள்ளென்றிருக்கு மென்று அரசன் சொல்லினானாயினும் அவன்மேல் அன்பின்றி வெறார். (69) அரசர் முன்னர்ச் செய்யத்தகாதவை 70. உமிவு முயர்ந்துழி யேறலும் பாக்கும் வகையி லுரையும் வளர்ச்சியும் ஐந்தும் புணரார் பெரியா ரகத்து (ப-பொ-ரை.) உமிதலும், உயர்ந்தவிடத் தேயிருத்தலும், பாக்குத் தின்னலும், கூறுபாடில்லாத வுரையும், உறங்குதலும், இவ்வைந்தும் அரசர் முன்பு செய்யார். (70) அரசர்முன் பல்காற் பயின்றுரையாதன 71. இறைவர்முன் செல்வமுங் கல்வியுந் தேசுங் குணனுங் குலமுடையார் கூறார் பகைவர்போற் பாரித்துப் பல்காற் பயின்று. (ப-பொ-ரை.) அரசர் முன்பு தம் செல்வமும், கல்வியும் தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர் போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார்.(71) அரண்மனை ஆலய முதலிய இடங்களிற் பெரியாரை வணங்காதிருத்தல் 72. பெரியார் மனையகத்துந் தேவ குலத்தும் வணங்கார் குரவரையுங் கண்டா லணங்கொடு நேர்பெரியார் செல்லு மிடத்து. (ப-பொ-ரை.) அரசர் மனையகத்தும் தேவராலயங் களுள்ளும், குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம்போந் தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத் தும் கண்டாலும் வணங்கார். (72) பெரியார் முன் செய்யின் பழியாவன 73. நiயொடு கொட்டாவி காறிப்புத் தும்மல் இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின் அசையாது நிற்கும் பழி. (ப-பொ-ரை.) சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வா ராயின் நிற்கும் பழி; குறையாது. (73) நன்மாணாக்கர் செய்கை 74. நின்றக்கால் நிற்க அடக்கத்தா லென்றும் இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும் வினாவற்க சொல்லொழிந்தக் கால் (ப-பொ-ரை.) நன் மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர். அவர்முன் இருந்தபோது அவர் எழுந்துபோ என ஏவுவதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் தாமும் வினவாதிருக்கக் கடவர். (74) பெரியாரவையிற் செய்யத்தகான 75. உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைமேல் எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லுங் கொள்ளார் பெரியா ரகத்து. (ப-பொ-ரை.) பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார், மாதர்களை நோக்கார், பிறர் தம் செவியிற் சொல்லுஞ் சொல் லையுங் கேளார். (75) ஒருவரிடத்தி லொன்றைச் சொல்லுமுறை 76. விரைந்துரையார் மேன்மே லுரையார்பொய் யாய பரந்துரையார் பாரித் துரையார் ஒருங்கெனைத்தும் சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தாற் சொல்லுக செவ்வி யறிந்து (ப-பொ-ரை.) கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத் தினையும் ஒரு மிக்கச் சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத் தவன்செவ்வியறிந்து சொல்லுக. (76) குலமாதர் செய்கை 77. தம்மேனி நோக்கார் தலையுள ரார் கைந்நொடியார் எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன் தன்மேனி யல்லாற் பிற. (ப-பொ-ரை.) நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடைய வேனும் பாரார். தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார். (77) அரசவையிற் செய்யலாகாதவை 78. பிறரொடு மந்திரங் கொள்ளார் இறைவனைச் சாரார் செவியோரார் சாரிற் பிறிதொன்று தேர்வார்போல் நிற்க திரிந்து. (ப-பொ-ரை.) பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார், அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியால் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகாநின்றா ரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க. (78) திறப்பட்டார் முச்செயல் 79., துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள் இன்ப வகையா னொழுகலும்-அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமையும் மூன்றுந் திறப்பட்டார் கண்ணே யுள. (ப-பொ-ரை.) துன்பக்காலத்தில் அத்துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப் பட்டார் கண்ணே உளவாம். (79) குரவர் பெயர் முதலியன கூறாமை 80. தெறுவந்துந் தங்குரவர்பேருரையா ரில்லத்(து) உறுமி நெடிது மிராஅர்-பெரியாரை என்று முறைகொடு கூறார் புலையரையும் நன்கறிவார் கூறார் முறை. (ப-பொ-ரை.) நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச் சொல்லார்; தம்மில்லத்தின்கண் தன் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரி யாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார். (80) ஆன்றோர் செயலாகாதன 81. புழைக்கடைப்பு காரரசன் கோட்டி யுரிமை இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே யவ்வத் தொழிற்குரிய ரல்லா தவர். (ப-பொ-ரை.) பிறர் மனையின் கண் புழைக்கடை வாயி லால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறா நின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற் குரிய ரல்லாதார். (81) மனைவி மனம் மாறுபடுதல் 82. வண்ண மகளி ரிடத்தொடு தம்மிடம் ஒள்ளிய மென்பார் இடங்கொள்ளார் தெள்ளி மிகக்கிழமை யுண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க் குவப்பன வேறாய் விடும். (ப-பொ-ரை.) அறிவுடையோர் என்று சொல்லப் படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத் தைச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுள தாயினும் விரும்பப்படு வனவல்ல. தம் மனைவி யர்க்கு விரும்பப் படுவன வேறுபடும் ஆதலால். (82) இறுதிவரை யொரு தன்மையான வாழ்வுடையார் 83. நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார் உரையிடை யாய்ந்துரையார் ஊர்முனிவ செய்யார் அரசர் படையளவுஞ் சொல்லாரே யென்றும் புரைதீர்ந்த காட்சி யவர். (ப-பொ-ரை.) ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார், ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முன்னர் ஆராய்ந் தன்றிப் பேசும்போது ஆராய்ச்சி செய்து பேசார், ஊரிலுள் ளோர் வெறுக்கத்தக்கவைகளைச் செய்யார், அரசரது படை யளவைப் பகைவர்க்குச் சொல்லார்; எப்போதும் ஒரு தன்மை யராய் வாழ்தும் என்பார். (83) பயின்றனவென் றிகழத்தகாதன 84. அளையுறை பாம்பு மரசும் நெருப்பும் முழையுறை சீயமு மென்றிவை நான்கும் இளைய எளிய பயின்றனவென் றெண்ணி இகழின் இழுக்கந் தரும். (ப-பொ-ரை.) புற்றில் வாழ் அரவும், அரசனும், தீயும், குகையில் வாழ் சிங்கமும், என்கின்ற இந்நான்கினையும் இளைய வென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணி யிகழின், துன்பந் தருவனவாம். (84) மன்னரின் மேம்பட்ட செய்யாமை 85. அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை இறப்பப் பெருகியக் கண்ணுந்-திறப்பட்டார் மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யவேல் மன்னிய செல்வங் கெடும். (ப-பொ-ரை.) அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகியவிடத்தும், அறத்தினையுங் கலியாணத் தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம் படச் செய்யாதொழிக. செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். (85) பெரியோரை உண்டது கேளாமை 86. உண்டது கேளார் குரவரை மிக்காரைக் கண்டுழிக் கண்டால் மனந்திரியார் புல்லரையும் உண்டது கேளார் விடல். (ப-பொ-ரை.) ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி ‘நீவிர் உண்டது யாது’ என வினவார். ஆதலால் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது’ என்று வினவா தொழிக. (86) கட்டிலிற் கிடந்தாருக்குச் செய்யத்தகாதன 87. கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும் மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் நில்லார்தாங் கட்டின் மிசை. (ப-பொ-ரை.) எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப் பவரது காலைக்கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனம் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார். (87) உதவிப் பயனுரையாமை முதலியன 88. உதவிப் பயனுரையார் உண்டி பழியார் அறத்தொடு தானோற்ற நோன்பு வியவார் திறத்துளி வாழ்துமென் பார். (ப-பொ-ரை.) தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ் வாறு வாழ்துமென்றெண்ணுவோர். (88) கிட்டாதவற்றை விரும்பாமை முதலியன 89. எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக் கைவாரா வந்த இடுக்கண் மனமழுங்கார் மெய்யாய காட்சி யவர். (ப-பொ-ரை.) தமக்குக் கிடைத்தற்கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழி அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர். (89) தலைப்பூ மோத்தல் முதலியன 90. தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார் பசுக்கொடுப்பிற் பார்ப்பார்கைக் கொள்ளாரே யென்றும் புலைக்கெச்சில் நீட்டார் விடல் (ப-பொ-ரை.) எப்போதும் ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தாம் முடியார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தால் அதனை வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக. (90) காட்டுள் நடந்து கொள்ளு முறை 91. மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்துந் தாளிசைப்புங் காட்டுளே யானும் பழித்தார மாந்தம்மின் மூத்த வுளவாக லான் (ப-பொ-ரை.) காட்டினிடத்திலேனும் தம் மூத்தோர் உளரா யிருப்பராயின் அவர்முன் உடலின் மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இருதாளையுஞ் சேர்த்து இணைத்தி ருத்தலும் பழியின் எல்லையாம். (91) அந்தணர் வாய்ச்சொல் கேட்டல் 92. தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும் புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார்-தொலைவில்லா அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல் என்றும் பிழைப்ப தில. (ப-பொ-ரை.) அறிவுடையோர் மேலான நற்கருமங் களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட் கேட்டுச் செய்யார். கேடில்லாத அந்தணரிடத்து நாட் கேட்டே நற் கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல் என்றும் பிழைபடுவன வல்லவாம் ஆதலால். (92) மன்றத்து நின்றுஞற்றல் முதலியவாகாச் செயல் 93. மன்றத்து நின்றுஞற்றார் மாசு திமிர்ந்தியங்கார் என்றுங் கடுஞ்சொ லுரையார், இருவராய் நின்றுழியுஞ் செல்லார் விடல் (ப-பொ-ரை.) அறிஞர் சான்றோர் அவைக்களத்து யாதொரு அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக. (93) ஐயமில் காட்சியார் செயல் 94. கைசுட்டிக் கட்டுரையார் கான்மே லெழுத்திடார் மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோ டொப்புரையார் கையிற் குரவர் கொடுப்ப இருந்தேலார் ஐயமில் காட்சி யவர். (ப-பொ-ரை.) ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர்முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார். (94) பொன்போற் போற்றத்தக்கவை 95. தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்(று) உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும் பொன்னினைப்போல் போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால் மன்னிய வேதந் தரும். (ப-பொ-ரை.) தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்துவைத்த பொருளும், ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும். (95) எறும்பு முதலியபோற் கருமஞ்செய்தல் 96. நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல் தங்கரும நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம் அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம் எப்பெற்றி யானும் படும். (ப-பொ-ரை.) ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக் கிடைத்த காலத்தில் உணவிற் குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலிய வற்றால் இடையூறு உறாத வகையாக இல்லம் இயற்றிக் கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல் வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும். (96) பெரியோர்முன் ஒன்றைச் சொல்லு முறை 97. தொழுதானும் வாய்புதைத் தானுமஃ தன்றிப் பெரியார்முன் யாது முரையார் பழியவர் கண்ணுளே நோக்கி யுரை. (ப-பொ-ரை.) அறிஞர், பெரியார்முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக. (97) புகத்தகா இடங்கள் 98. சூதர் கழகம் அரவம் அறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும் (ப-பொ-ரை.) சூதாடுமிடத்தும், ஆரவாரம் நீங்காத இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம். (98) நடுக்கற்ற காட்சியார் செய்யாதன 99. உரற்களத்து மட்டிலும் பெண்டிர்கண் மேலும் நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார் இல்லம் புகாஅர் விடல். (ப-பொ-ரை.) சோர்வற்ற அறிவையுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையி டத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட் புகார்; ஆதலால் நீ விடுக. (99) ஆசாரத்தினின்றும் விலகியவர் 100. அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான் இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான் அரசன் தொழில்தலை வைத்தான் மணாளனென்(று) ஒன்பதின்மர் கண்டீ ருரைக்குங்கான் மெய்யான ஆசாரம் வீடுபெற் றார். (ப-பொ-ரை.) அறியாத தேசத்தான், வறியோன், மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையாயுரைக்கு மிடத்து ஆசாரமி லிகளாவர். (100)