வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 30 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 30 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+120= 136 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 85/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரிய ராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. 'பிளாட்டோவின் அரசியல்', 'ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்', 'ரூஸ்ஸோவின்', 'சமுதாய ஒப்பந்தம்', 'மாஜினியின் மனிதன் கடமை', ’இ,ங்கர்சாலின் மானிட சாதியின் சுதந்திரம்’ 'சன்யாட்சென்னின் சுதந்திரத்தின் தேவைகள் யாவை?' முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர் களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்கு வதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் கட்டுரை இலக்கிய நூல்கள் 11. இந்நூல்களை 3 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவி களாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v சர்மாவின் பொன்னுரைகள் ix பதிப்புரை xi ehlh©l நங்கையர் 1. மகா காதரைன் 3 2. சீனத்து அரசி யெஹோனலா 9 3. ஆளப் பிறந்த அழகி 14 4. ராணி மங்கம்மா 20 5. ராணி லஷ்மிபாய் 25 6. விக்டோரியா மகாராணியார் 32 7 சுல்தானா ரஜியா 37 8 ஆண் கோலத்தில் ஆண்ட அரசி 41 9 மேரியா தெரீஸா 45 உலகக் கண்ணாடி உலகக் கண்ணாடி 53 கட்டுரைக் களஞ்சியம் 1. பாரதி தர்சனம் 87 2. கார்ல் மார்க் 93 3. தலைமையுரை 98 சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம் பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன், நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு வ.மலர் மேலட்டை வடிவமைப்பு வ. மலர் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய இராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . நாடாண்ட நங்கையர் 1. மகா காதரைன் எனக்கிருந்த துணிச்சல் தான் என்னைக் கைலாகு கொடுத்து அழைத்துப் போய் அரசபீடத்தில் அமர்த்தியது என்று கூறினாள் நாடாண்ட ஒரு நங்கை. இந்தத் துணிச்சலோடு, அழகு, தேக பலம், விடாமுயற்சி, அயராது உழைக்கும் சக்தி ஆகிய பலவும் இவளிடம் இருந்தன. ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் இவளுக்குக் கொள்ளை ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க இவளுக்கு அதிருஷ்டம் துணை செய்தது. இவளைப் போன்ற அதிஷ்டக்காரியை ஐரோப்பிய சரித்திரத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது என்கிறான் ஒரு சரித்திராசிரியன். இவள் தான் மகா காதரைன்; கி.பி 1762 முதல் 1799ம் வருஷம் வரையில் ருஷ்யாவை ஆண்டவள்; ஆட்டி வைத்தவள் என்று கூடச் சொல்லலாம். காதரைன், ஜெர்மானிய அரச குடும்பமொன்றில் 1729 - ம் வருஷம் பிறந்தாள். பதினைந்தாவது வயதில் ருஷ்ய அரச பீடத்துக்குரியவனா யிருந்த பீட்டர் என்பவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். இந்தப் பீட்டர் ஒரு கிறுக்கன்; கோழை; குடிகாரன்; குரூபி இருவரும் பெயரளவுக்குக் கணவனும் மனைவியுமாக இருந்தார்கள். காதரைனுக்கு விவாகமான பத்து வருஷம்வரை குழந்தை பிறக்கவில்லை. தனக்கு வாரிசு இல்லாமற் போகுமோ என்று சிறிது கவலைப்பட்டாள். பிறகு 1754ம் வருஷம் ஓர் ஆண் மகன் பிறந்தான். இவன்தான் பிற்காலத்தில் முதலாவது பால் என்ற பெயரால் 1796 முதல் 1801 ம் வருஷம் வரை அரச பீடத்தில் அமர்ந்திருந்தவன். இந்தப் பால், தனக்கும் பீட்டருக்கும் பிறந்தவன் என்று காதரைன் சொல்லிக் கொண்டாள். இதற்குஒரே ஆதாரம் இந்தப் பால்பீட்டரைப் போல் கோணல் புத்தியுடையவனாக இருந்ததுதான். இவன் காதரைன் மரணமடைந்த செய்தியைக் கேட்டுச் சந்தோஷப்பட்டவர்களில் முக்கியமானவன். எலிசபெத் என்பவள் 1741 முதல் 1762 ம் வருஷம் வரை ருஷ்ய அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். இவள் 1682 முதல் 1725 - ம் வருஷம் வரை ஆண்ட மகா பீட்டர் என்பவனின் மகள்; நெஞ்சுறுதி கொண்டவள். தனக்குப் பிறகு பீட்டர் பட்டமேற்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து வைத்துப் போயிருந்தாள். அதன்படி பீட்டர் மூன்றாவது பீட்டர் என்ற பட்டப் பெயருடன் அரசுக் கட்டிலில் அமர்ந்தான். ஆனால் இவனை நீண்ட நாட்கள் உயிரோடு விட்டு வைக்க விரும்பவில்லை காதரைன் தன் கணவனாயிற்றே என்று இவன் மீது சிறிதும் இரக்கம் காட்டவில்லை. இவன் அரசபீடத்தில் அமர்ந்த சில நாட்களுக்குள் இவனை ஒரு சிறு படையின் துணைகொண்டு சிறைப்படுத்தி விட்டாள். சிறைப்பட்ட பத்தாவது நாள் இவன் இறந்தும் போனான். இவனுக்குப் பிறகு காதரைன், இரண்டாவது காதரைன் என்ற பட்டப் பெயருடன் 1762ம் வருஷம் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது இவளுக்கு வயது முப்பத்து மூன்று. முப்பத்து நான்கு வருஷம் தன்னிச்சையாக ஆண்டுவிட்டு 1796ம் வருஷம் அறுபத்தேழாவது வயதில் கண்மூடிக் கொண்டாள். இவளுடைய வாழ்க்கையின் சுருக்கம் இது. காதரைன் தன் ஆட்சி காலத்தில் ருஷ்யாவைப் பல துறைகளிலும் முன்னேறச் செய்ய வேண்டுமென்பதற்காக அரசாங்க நிருவாகத்தில் அநேக சீர்திருத்தங்களைச் செய்தாள். தல தாபனங்களை நிறுவினாள். நீதி தலங்களில் ஒழுங்காக நீதி கிடைக்குமாறு சில திட்டங்களை வகுத்தாள். பள்ளிக்கூடங்கள் பல திறந்தாள். ஆற்பத்திரிகள் ஏற்படுத்தினாள். ருஷ்யாவில் எப்போதுமே நிலச்சுவான்தார் விவசாயி தகராறு உண்டு. இதனை ஒழுங்குபடுத்தி வைக்கிற முறையில் இவள் சில திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்தாள். ஆனால் இவை நிலச் சுவான்தார்களுக்கே அதிக அனுகூலத்தைக் தருவனவாயிருந்தன. இதனால் விவசாயிகள் வெகுண்டடெழுந்தார்கள். ஆங்காங்கு கலகங்கள் கிளம்பின. இவற்றுள் முக்கியமானது ருஷ்யாவின் தென் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற கலகமாகும். சுமார் இரண்டு வருஷ காலம் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கலகத்துக்குப் புகாசேவ் என்ற ஒரு வீரன் தலைமை வகித்தான். இவனை வேட்டையாடினாள் காதரைன் இவன் தலைமையக் கொண்டு வருகிறவர்களுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டாள். கடைசியில் இவன் தன்னைச் சேர்ந்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டான். இவனை ஒர் இரும்புக் கூண்டிலே அடைத்து அழைத்து வரச் செய்தாள் காதரைன். விசாரணை கூட நடத்தினாள். மரண தண்டனை கொடுத்தாள். அது எப்படி நிறைவேற்றப்பட்டது தெரியுமா? முதலில் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன. இப்படிச் சில காலம் சிறையிலே வைத்திருந்து பிறகு இவன் தலையைத் துண்டிக்கச் செய்தாள். இவன் வசித்திருந்த வீட்டைத் தரையோடு தரையாக்கிவிடச் செய்தாள். அரசாங்க நிருவாகத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்தா ளெனினும் இவள் முற்போக்கான அரசியல் கருத்துக்குப் பரம விரோதி. இந்தக் கருத்துக்கள் எங்கே தன் அரசபீடத்தை அசைத்துக் கொடுக்குமோ என்ற அச்சம் இவளுக்கு. புரட்சி என்றால் புற்று நோய் கண்டவள். மாதிரி அலறுவாள். துரதிர்ஷ்டவசமாக இவள் ஆட்சிக் காலத்தில் 1780 ம் வருஷம் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. இதன் எதிரொலி ருஷ்யாவில் கேட்டது. இளைஞர்கள் சுதந்திரம், சமத்துவம் என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இதைக் கேட்டுச் சீறி எழுந்தாள் காதரைன். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையிலே தள்ளப்பட்டார்கள். கொலைக் கூடத்துக்குச் சென்றவரும் பலர். முற்போக்கான கருத்துக்களடக்கிய நூல்களைக்கூட இவள் வெறுத்தாள். அவற்றின் ஆசிரியர்களைச் சிறையிலடைத்தாள். காதரைன் ராணுவத் தந்திரங்கள் நன்கு அறிந்தவள்; போர்த் திறம் மிக்கவள். இவளே சில போர்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறாள். இவள் காலத்தில் போலந்தின் பெரும் பகுதி. கிரிமியா தீபகற்பம். கருங்கடலின் வடக்குப் பக்கத்திலிருந்து காக்கல மலை வரையிலுள்ள பிரதேசம் ஆகிய பலவற்றின் மீது ருஷ்யக் கொடி பறந்து, மொத்தம் சுமார் மூன்று லட்சம் சதுர மைல் நிலப்பரப்பு ருஷ்யாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. இவ்வளவென்ன, இவள் தன் கடைசிக் காலத்தில் பாரசீகத்தின் வழியாக இந்தியா மீது படையெடுத்துச் செல்ல வேண்டுமென்று கூடத்திட்டமிட்டாள். ஆனால் அதற்குள் காலதேவன் இவள் மீது கண்வைத்து விட்டான். காதரைனுக்குப் பிரெஞ்சுப் புரட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்த தாயினும் பிரெஞ்சு நாகரித்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் அதிக மோகம் ஏற்பட்டிருந்தது. இவள் விருப்பத்திற்கிசைய ருஷ்ய அரசவையிலும் சரி. ருஷ்ய சமுதாயத்திலும் சரி. பிரெஞ்சுப் பழக்க வழக்கங்கள் பல புகுந்தன. பிரெஞ்சு மொழியை இவள் நன்கு கற்றிருந்தாள். பிரெஞ்சுப் புலவர்களான வால்டேர், டிடெரோ,டி அலெம்பார்ட் முதலியவர்களுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தாள். நல்ல இலக்கியங்களைப் படித்து ரசிப்பதில் இவளுக்குத் தனியாற்றல் இருந்தது. பிளேட்டோவினுடைய நூல்களையும். டாஸிட என்ற ரோமசரித்திராசிரியனுடைய நூல்களையும் திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்தாள் என்று சொல்வதுண்டு. மற்றும் இவள் சில நாடகங்களையும் கதைகளையும் எழுதியிருக்கிறாள். என்ன காரணத்தினாலோ இவை சீக்கிரத்தில் மறைந்து போயின. நல்ல இலக்கியங்களைச் சுவைக்கும் சக்தி பெற்றிருந்தபடியால் இவள் தனது அரசைவயில் ருஷிய அறிஞர்கள் பலரை அமர்த்திக் கொண்டு அவர்களைப் பல வகையிலும் ஆதரித்து வந்தாள். காதரைன் தன்னுடைய முப்பத்து நான்கு வருஷகாலத்தில் ஓய்வென்று சொல்லிச் சும்மாயிருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உழைப்பிலே இன்பம் நுகர்ந்தவள் இவள். தினம் பதினாறு மணி நேரத்துக்குக் குறையாமல் வேலை செய்வாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள். இவளுக்கு எப்பொழுதும் வேட்டைநாய்களின் மீது அதிகப் பிரியம். இரவில் இவள் படுக்கைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அகன்றதொரு கூடையில் குறைந்த பட்சம் ஆறு நாய்களாவது படுத்துறங்கிக் கொண்டிருக்கும். இவற்றின் தேவைகளை இவளே கவனித்துக் கொள்வாள். காலையில் எழுந்தவுடன் இந்த நாய்களைத் தட்டி எழுப்பி, இவைகளுடன் சிறிது நேரம் கொஞ்சுவாள். பிறகு வெந்நீரில் பல் துலக்கிவிட்டு பனிக்கட்டியினால் முகத்தைத் தேய்த்துத் துடைத்துக் கொள்வாள். உடனே தனது அலுவல் அறைக்குச் செல்வாள். அங்கு காப்பி தயாராயிருக்கும். குறைந்த பட்சம் ஐந்து கப் காப்பியாவது குடிப்பாள். இந்தக் காப்பி தயாரிப்புக்குத் தினசரிச் செலவு ஒரு பவுன். காப்பி குடித்ததும் வேலையில் இறங்கிவிடுவாள். ஒன்பது பத்து மணி வரையில், வந்த கடிதங்களைப் படிப்பது; அவைகளுக்குப் பதில் எழுதுவது அரசாங்க சம்பந்தமான உத்தரவுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, இப்படிப்பல காரியங்களையும் தனியாகவே இருந்து செய்வாள். இடையிடையே சுறுசுறுப்புப் பெறும் பொருட்டு சிறிது மூக்குப்பொடி போட்டுக் கொள்வாள். ஒன்பது மணி அடித்ததும் தன்பிரத்தியேக அறைக்குள் திரும்பிச் சென்று முன்னேற்பாட்டின் படி தன்னைக் காண வந்திருக்கும் அரசாங்க உத்தியோகதர்கள். படைத் தலைவர்கள். ராஜ தந்திரிகள் ஆகியோருக்குப் பேட்டி கொடுப்பாள். ஏறக்குறைய பகல் ஒரு மணிக்கு இந்தப் பேட்டி முடியும். பிறகு தலைமயிரை ஒழுங்கு செய்து முடிப்பதற்கும். ஆடை அலங்காரங்களைச் செய்து கொள்வதற்கும் ஒரு மணி நேரம் ஆகிவிடும். இரண்டு மணிக்குச் சாப்பிடத் தொடங்குவாள். சாதாரணமாக ஒவ்வொரு நாளும் இவள் அழைப்பின் பேரில் பத்துப் பன்னிரண்டு பேராவது இவளுடன் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சாப்பாடு முடிந்ததும் அரசவையைச் சேர்ந்த ஒருவன் பிரசன்னமாகி, அன்று கிடைத்த செய்தித் தாள்களில் முக்கியமான பகுதிகள், மற்ற நாட்டு அரசாங்கங்களிலிருந்து வந்த கடிதங்கள் ஆகியவற்றைப் படித்துக் காட்டுவான். அதைக் கேட்டுக் கொண்டே இவள் துணியில் பூவேலை செய்து கொண்டிருப்பாள். இதற்குப் பிறகு அந்தரங்கக் காரியதரிசிகள், அரசாங்கக் காரியதரிசிகள் வந்து தங்களுடைய அலுவல்களைப் பற்றித் தெரிவித்து இவளுடைய உத்தரவுகளைப் பெற்றுப் போவார்கள். பிறகு ஓர் அரை மணிநேரம், தன் பேரன், பேத்திகளோடு தமாஷாகப் பொழுது போக்குவாள். அநேக நாட்களில் இந்தப் பொழுது போக்குக்கூட அவகாசம் இராது. இவையெல்லாம் முடிய ஏறக்குறைய மணி நான்காகிவிடும். பிறகுதான் அவ்வப்பொழுது சேகரித்துக் கொண்டு வந்திருக்கும் விநோதமான பொருள்கள் அருமையான சில கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி அழகு பார்ப்பதில் செலவழிப்பாள். இதில் சுமார் இரண்டு மணி நேரம் போய்விடும். இந்தச் சந்தர்பத்தில் தான் இவளுடைய அபிமானத்துக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிற கலைஞர்கள், பண்டிதர்கள் ஆகியோர் இவள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பெறுவார்கள். அவர்களுடன் உரையாடித் தனது பலதுறைப் புலமையினை அவர்கள் உணரும்படி செய்து அதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவாள். இவை போக அவகாசம் இருந்தால் சிறிது நேரம் பில்லியார்ட் என்ற மேஜைப் பந்தாட்டம் ஆடுவாள். இதற்குள் ஆறு மணியாகி விடும். உடனே சீட்டாட உட்கார்ந்து விடுவாள். பணம் வைத்துத்தான் ஆடுவாள். பிறகு இராச்சாப்பாடு. அநேகமாக இதை இருந்த இடத்திலேயே முடித்துக் கொண்டு விடுவாள். சரியாகப் பத்து மணிக்குப் படுக்கப் போய் விடுவாள். படுக்கையறைக்குள் செல்லும் போது கூடவே ஒரு ஆடவன் பின்தொடர வேண்டும். அநேகமாக, இவன் இவளுடைய மகனோ என்று சொல்லக் கூடிய மாதிரி வாலிபப் பருவத்தினனா யிருப்பான். தனது கடைசிக் காலம் வரை இந்த அன்றாட வேலைக் கிரமத்தை அனுசரித்து வந்தாள். இப்படி இவள், கடைசிக்காலம் வரை ஓயாமல் உழைத்து வந்ததைப் போல் ஓயாமல் சிற்றின்பக் கடலில் நீராடி வந்தாள். இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று இவளுக்கிருந்த அழகு, மற்றொன்று இவளுக்கிருந்த தேக பலம், இவ்விரண்டும் சேர்ந்ததிருந்தது அவள் அதிருஷ்டம். இவள் அழகைப் பற்றி இவள் சம காலத்தவர் பல விதமாக வருணித்திருக்கிறார்கள். இவளுடைய கழுத்து அழகே அழகு என்கிறான். ஒருவன். இவள் தலைமைய அசைத்துக் கொடுத்தாலே போதும், பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிறான் இன்னொருவன். இவளை ஒரு தரமாவது பார்த்துவிட வேண்டு மென்பதற்காக இவள் மிதித்த மிதியடியின் மீது நின்று காத்துக் கிடந்தவர்கள் அநேகர். இவள் தனது பதினைந்தாவது வயதில் பீட்டரை விவாகம் செய்து கொண்டதிலிருந்து முப்பத்து மூன்றாவது வயதில் சுயேச்சையாக ஆளத் தொடங்கியவரை இவளோடு சேர்ந்து காதல் நாடகம் ஆடிய ஆடவர் எத்தனைபேர் என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் இவளுடைய முப்பத்து நான்கு வருட ஆட்சிக் காலத்தில் இவளுக்கு ஒருவர் பின் ஒருவராகப் பதினைந்து காதலர்கள் இருந்தார்களாம். இவள் தன்னுடைய அறுபத்தாறாவது வயதில் இருபத்திரண்டே வயதான ஜௌபாவ் (Zoubof) என் இளைஞனைக் காதலனாக வரித்து அவனிடம் இன்பம் நுகர்ந்தாளெனின் இவளுரடைய காம வெறிக்கு எப்படி எல்லை வகுப்பது? இந்த வயதில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று இவளுடன் நெருங்கிப் பழகி வந்த ஆதானிகன் ஒருவன் இவளைக் கேட்டபோது, திறமைசாலி களான வாலிபர்களை வசியப்படுத்துவதன் மூலம் நான் ருஷ்ய ஏகாதி பத்தியத்துக்குச் சேவை செய்தவளாகிறேன் என்றாள். இதில் உண்மை இல்லாமலும் போகவில்லை. தன் காதலர்களில் பலரை ருஷ்ய தேசத்தின் மேன்மைக்காகப் பல மகத்தான காரியங்களைச் சாதிக்க வைத்தாள். முப்பத்து நான்கு வருஷ ஆட்சிக்காலத்தில் இவள் நடத்திய காதல் வாழ்க்கைக்காக மட்டும் அரசாங்கப் பொக்கிஷயத்திலிருந்து நூற்றறுபது லட்சம் பவுன் செலவழிக்கப்பட்டது; உண்மையில் இவள் காலத்தில் ருஷ்யாவை ஆண்டது இவளுடைய காதலர்களே. அவர்களை இவள் ஆண்டு வந்தாள். இப்படித்தான் சரித்திராசிரியர்கள் தீர்ப்பளித்திருக் கிறார்கள். 2. சீனத்து அரசி யெஹோனலா சீனாவை ஆண்ட ஒரு சக்கரவர்த்தினிக்கு முதியபுத்தர் என்ற பெயர் வழங்கப்பட்டு வந்ததென்ற உங்களுக்கு வியப்பாக இருக்கும். சீனர்கள் இந்தப் பெயரிட்டுத்தான் இவளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் இவள் முதுமையடையாத ஆசையுள்ளவள்; புத்தருக்கு நேர்மாறான குணங்கள் உள்ளவள். புதிர் போல இருக்கிறதல்லவா இவள் பெயர்? சீனாவில் ஆதி காலத்திலிருந்து எத்தனையோ அரச வமிசங்கள் வரிசைக்கிரமமாக ஆண்டன. கடைசியாக ஆண்டது மஞ்சூ வம்சம். இந்த வமிசத்தோடு சீனாவில் சுமார் நாலாயிரம் வருஷங்காளகத் தொடர்ந்து நடைபெற்று வந்து முடியாட்சி முடிந்தது; 1912ம் ஆண்டிலிருந்து குடியாட்சி தொடங்கியது. மஞ்சூக்கள், சீனாவுக்கு அந்நியர்கள். சீனாவுக்கு வடக்கேயுள்ள மஞ்சூரியாவிலிருந்து வந்தவர்களான படியால் மஞ்சூக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள், சீனர்களுக்குள்ளேயே ஏற்பட்ட பரபர பகைமையின் விளைவாகச் சீனாவுக்குள் புகுந்து ஆளும் அதிகாரத்தைத் கைப்பற்றிக் கொண்டனர். கைப்பற்றிக் கொண்டதும், சீனர்களைக் கொடுமைப்படுத்த முற்பட்டார்கள். சீன ஆண்பிள்ளைகள் தலையின் முன்பக்கம் முடி வளரச் செய்து கொண்டு, பின் பக்கம் தலைமயிரை ஒற்றைப் பின்னலாகப் பின்னி நீளமாகத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இதற்கு இணங்காதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள் என்று இந்த உத்தரவு கூறியது. சீனர்கள் இந்த உத்தரவுக்கு எளிதில் பணிய வில்லை; எதிர்த்துப் போராடினார்கள். பயனில்லை. லட்சக்கணக்கான பேர் உயிர் இழந்தது தான் மிச்சம். இந்த மஞ்சூ வமிச ஆட்சியின் முடிவு காலத்தில் ஆண்டவள்தான் இந்த முதிய புத்தர் இவளுடைய இயற்பெயர் யெஹோலா; பட்டப் பெயர் த்ஸுஹ்ஸி, இந்தப்பட்டப் பெயருக்குக் கருணை உள்ளவள் தாய்மைப் பண்பு நிறைந்தவன் என்று அர்த்தம். உண்மையில் இவ்விரண்டும் இல்லாதவளாகவே இருந்தாள் இவள். உலகத்துப் பேரதியங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய சின் ஷி ஹுவாங் தீ என்ற அரசன் (கி.மு.221-210) தன் தலைநகரத்தை சுற்றி இருநூற்றெழுபது அரண்மனைகளைக் கட்டினான்; இவை ஒன்வொன்றி லும் வைப்பாட்டிகள் இவனுக்கு இருந்தனர். இந்த வைப்பாட்டிகளைத் தெரிந்தெடுப்பது ஒரு சடங்காகவே நடைபெறும். பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசனுடைய தாயார் தன் மகனுடைய சுகபோக வாழ்க்கைக்காக, ராஜ்யத்திலுள்ள அழகான இளமங்கையர்களை வரவழைக்கச் செய்து, அவர்களில் மிக அழகான சிலரைத் தெரிந்தெடுத்து இளவரசனுடைய அரண்மனைக்கு அனுப்புவாள். டாவோ குவாங் என்ற சக்கரவர்த்தி 1850 ஆம் வருஷம் இறந்து விட்டான். இவனுடைய மகன் ஷீன் பெங் என்பவன் பிறகு பட்டத்துக்கு வந்தான். இவனுக்கு அப்பொழுது இருபது வயது. இவனுடைய வைப்பாட்டிகளாக இருபத்தெட்டுப் பேர் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் ஒருத்திதான் யெஹோனலா. இவள் மஞ்சூ இனத்தைச் சேர்ந்தவள். ஒரு சாதாரண அரசாங்க உத்தியோகதனுடைய மகள். 1835 ம் வருஷம் பிறந்தவள். தன்னுடைய அழகினாலும், அபார சூழ்ச்சித் திறனாலும், வைப்பாட்டிகளுக்குள்ளே முதல் தானத்தைச் சில ஆண்டுகளுக்குள் கைப்பற்றிக் கொண்டு விட்டாள். இந்த முதல் தானம், சட்ட ரீதியாக மணந்து கொள்ளப்பட்ட பட்டத்தரசிக்கு அடுத்தது. இவளுக்குப் பிள்ளை பிறக்காவிட்டால், இந்த முதல் வைப்பாட்டிக்குப் பிறக்கும் பிள்ளைக்குத்தான் இளவரசுப் பட்டம் கிடைக்கும். இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருந்தாள் யெஹோனலா. ஷீன்பெங் மன்னனுக்குப் பட்டமேறிய சுமார் ஆறு வருஷங்கள் வரையில் பட்டத்தரசியிடம் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. ஆனால் யெஹோனலாவுக்கு, அந்த மன்னனிடமிருந்து 1856 ம் வருஷம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. உண்மையில் இவளுக்குக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்றும், யாரோ ஒரு குடியானவப் பெண்ணுக்குப் பிறந்திருந்த ஆண் குழந்தையை எப்படியோ அரண்மனைக்குள் கொண்ட வரச் செய்து அதை, தனக்கும் மன்னனுக்கும் பிறந்த குழந்தை என்று சொல்லி எல்லோரையும் நம்பும்படி செய்து விட்டாள் என்றும் அப்பொழுது அரண்மனைப் பரிவாரத்தினர் சொல்லிக் கொண்டனர். ஷீன் பெங் மன்னன், 1861-ம் வருஷம் இறந்து போனான். யெஹோனலாதான் அவனை விஷம் வைத்துக் கொன்றுவிட்டாள் என்று வதந்தி எழுந்தது. உடனே இவள், ஆறு வயது அடைந்திருந்த தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினாள். அவன் யுத்த வயது அடையும் வரை, பட்டத்தரசியும் தானும் சேர்ந்து கூட்டாட்சி நடத்தி வருவது என்று ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் பட்டத்தரசிக்கு அதிகாரம் செலுத்த இவள் இடம் கொடுக்கவில்லை. தானே சர்வஅதிகாரங்களையும் மேற்கொண்டாள். இதற்குப் பிறகு த்ஸுஹ்ஸி என்ற பட்டப் பெயருடன் ஆண்டு வந்தாள். இளவரசனாகிய தன் மகள் யுத்த வயது அடைந்ததும், அவனுக்கு 1875 - ம் வருஷம் ஒரு பெண்ணை விவாகம் செய்வித்தாள் த்ஸுஹ்ஸி; கூடவே டுங் சீ என்ற பட்டப்பெயர் கொடுத்து அவனை அரசுக் கட்டிலில் அமர்த்தினாள். ஆனால் அவன் இரண்டு வருஷங்கள் கழித்து அம்மை போட்டு இறந்து போனான். சிறிது காலத்துக்குள் அவன் மனைவியும் இறந்து போனாள். த்ஸுஹ்ஸி தான் அவளை இறந்து போகும்படி செய்தாள் என்ற வதந்தி பரவியது. அடுத்தாற்போல் பட்டத்துக்கு வருவது யார்? இதற்காக த்ஸுஹ்ஸி யோசித்துக் கொண்டிருக்க வில்லை. தன் ஒன்று விட்ட சகோதரி ஒருத்தியின் நான்கு வயதான ஆண் குழந்தைக்கு இளவரசுப் பட்டம் சூட்டினாள். பின்னால் குவாங் ஷு அரச பீடத்தில் அமர்ந்த போதிலும் அதிகாரக் கடிவாளம் தன் கை நழுவிப் போகாதபடி பார்த்துக் கொண்டாள். இது இப்படியிருக்க, பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே, சீனா மேலை நாட்டு வல்லரசுகளின் பலதிறச் சூழ்ச்சிகளுக்கு மெல்ல மெல்ல இரையாகிக் கொண்டு வந்தது. இதைத் தடுக்க வேண்டுமானால் ராஜ்ய நிர்வாகத்தில் முன்னேற்றகரமான அநேக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி அநேக திட்டங்களை வகுத்துச் செயலில் கொண்டு வர வேண்டுமென்றும் மேனாட்டுக் கல்வி பயின்ற இளைஞர்கள் கிளாச்சி செய்யத் தொடங்கினார்கள். இவர்களில் சிலர் குவாங்ஷு மன்னனை அணுகி, தங்கள் முன்னேற்றகரமான திட்டங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவனும் இவர்களுக்குச் செவி கொடுத்தான். சீர்திருத்த உத்தரவுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பிறப்பித்து வந்தான். இவைகளைக் கண்டு மருண்ட விட்டாள் த்ஸுஹ்ஸி. இந்த உத்தரவுகள் அனைத்தையும் நூறு நாட்களுக்குள் வாப பெறும்படி செய்தாள்! அவனுக்கு உடல் நலம் இல்லை யென்றும், அதனால் தானே ரீஜண்டாக இருந்து நிருவாகத்தை நடத்தி வர வேண்டியிருக்கிறதென்றும் சொல்லி ஒரு பிரகடனத்தை வெளியிடச் செய்துவிட்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டாள். குவாங்ஷு மன்னனும், தனியாக ஓரிடத்தில் காவல் கைதி மாதிரி வைக்கப்பட்டு விட்டான். இப்படிச் சீர்திருத்த உத்தரவுகளை இவள் ரத்து செய்துவிட்டதால், முற்போக்கான இளைஞர்கள் புரட்சி செய்தனர். ஆயிரக்கணக்கில் சிறை சென்றனர். நூற்றுக்கணக்கில் தூக்கு மேடையில் ஏறினர். இந்தப் புரட்சிக் கருத்துக்கு வித்தூன்றித் தலைமை தாங்கி நடத்தியவன் ஸன் யாட்ஸென். இவன் தான் 1912 ம் வருஷத் தொடக்கத்தில் சீனாவில் குடியரசு ஏற்படுவதற்கு மூல புருஷனா யிருந்தவன்; சீனக் குடியரசின், தந்தை யாகச் சீனர்களின் நினைவில் என்றும் இருந்து கொண்டிருக்கிறவன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாட்டு வல்லரசுகள், மஞ்சூ அரசாங்கத்தைப் பயமுறுத்திப் பயமுறுத்தி அநேக சலுகைகளைப் பெற்று வந்தன. இதனால் ஜனங்களுடைய பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. மஞ்சூ அரசாங்கத்தின் பலவீனத்தை நன்கு உணர்ந்திருந்த ஜனங்கள் மேனாட்டார் மீது துவேஷம் கொள்ளத் தலைப்பட்டனர். இந்த துவேஷம் முதிர்ந்து 1900 ம் வருஷம் பெரிய கலகமாக வெடித்தது. இதுவே சரித்திரப் பிரசித்தி பெற்ற பாக்ஸர் கலகம். இந்தக் கலகத்துக்கு உடந்தையாயிருந்தாள் த்ஸுஹ்ஸி. மஞ்சு அரசாங்கத்தின் மீது ஜனங்களுக்கிருந்த அதிருப்தியை இப்படி அந்நியத் துவேஷமாக திருப்பிவிட்டால், தன் பதவி இன்னும் சிறிது காலம் ஆட்டம் கொடாமல் இருக்கும் என்று இவள் நினைத்தாள். ஆனால் இவள் நினைத்தபடி நடக்கவில்லை. மேலை நாட்டு வல்லரசுகள் ஒன்று சேர்ந்து தங்கள் படைபலத்துடன், இவள் வசித்துக் கொண்டிருந்த பீகிங் தலைநகரைக் கைப்பற்றி கொண்டு உயிரழிவையும் பொருட் சேதத்தையும் உண்டு பண்ணின. த்ஸுஹ்ஸி பயந்து போய் மாறு வேஷத்துடன் பீகிங் நகரத்தினின்று தப்பிச் சென்று விட்டாள். இரண்டு வருஷங்கள் கழிந்த பிறகுதான் திரும்பி வந்தாள். இந்தக் கலகத்தின் விளைவாக மஞ்சூ அரசாங்கம் மேலை நாட்டு வல்லரசுகளுக்கு மொத்தமாக நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு செலுத்தியது. வேறு சில நிர்பந்தங்களுக்கும் உட்பட்டது. இதற்குப் பிறகு த்ஸுஸியின் அதிகார பலம் வேகமாகக் குன்றி வர ஆரம்பித்தது. இதற்குத் தகுந்தாற் போல் இவளால் காவல் கைதிமாதிரி வைக்கப்பட்டிருந்த குவாங்ஷு இறந்து போனான். எப்படி இறந்து போனான் என்பது த்ஸுஹ்ஸிக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் தன் வினை தன்னைச் சுடும் என்கிற மாதிரி இவளும் மறு நாளே தன்னந்த தனிமையில் இறந்து கிடந்தாள். த்ஸுஹ்ஸி முற்போக்குக் சக்திகளுக்கு எதிரி; பிடிவாதக்காரி; தன் எண்ணம் நிறைவேற எத்தனை கொலைகளையும் செய்யத் தயங்காதவன். கெஞ்சினால் மிஞ்சுதல்; மிஞ்சினால் கெஞ்சுதல் என்பது இவள் கையாண்ட அரச தந்திரம். ஆனால் தன் உயிருக்கு ஆபத்து என்று காற்று வாக்கில் கேள்விப்பட்டால் கூடப் போதும்; அஞ்சி அஞ்சிச் சாவாள். அந்த ஆபத்து விலகிவிட்டது என்று தெரிந்ததும், தனக்கு மிஞ்சினவர் யாருமில்லை என்கிற தோரணையில் பேசுவாள். காலையில் இவளைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்கு இவளுடைய சேடிகளே அஞ்சுவார்கள். இவளுக்குக் கோபம் வந்து விட்டால் கண் மண்தெரியாது. வாய்க்கு வந்தபடி வசைபாடி விடுவாள்; சில சமயங்களில் கைகளையும் ஓங்கிவிடுவாள். சிலருக்குக் கசையடி கொடுக்கவும் செய்வாள். இவளுடைய கசையடி உத்தரவை நிறை வேற்றச் சிலர் கூடவே இருப்பார்கள். ஒரு சமயம் ஒரு சேடி இவளுக்குத் தலைமயிர் சீவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது சீப்பில் கொஞ்சம் மயிர் சிக்கிச் கொண்டு வெளி வந்துவிட்டது. இதைப் பார்த்து விட்டாள். சக்ரவார்த்தினி அம்மாள். கோபம் பொங்கி எழுந்தது. என் தலைமயிரை இப்படிப் பிய்த்தெடுக்கலாமா? என்று சொல்லி அந்தச் சேடியைக் கைகொண்ட மட்டும் அடிக்க, அவளும் பாவம் இறந்துவிட்டாள். இப்படிச் சிறிய விஷயங்களுக்கெல்லாம் இவளுக்குக் கடுங்கோபம் வந்துவிடும். அச்சத்துடன் இச்சகம் பாடி நிற்போருக்கு இவள் தர்மதேவதை. அச்சமின்றி உள்ளதைச் சொல்லி நாட்டை நல்வழியில் திருப்ப முயலுவோருக்கு இவள் நச்சரவம். 3. ஆளப் பிறந்த அழகி அவளுக்கு நீளமான மூக்கு. அந்த மூக்கு அவ்வளவு நீளமான தாயில்லாமலிருந்தால் உலக சரித்திரத்தின் போக்கு வேறு விதமாகத் திரும்பியிருக்கும் என்று ஓர் அறிஞன் கூறுகிறான். எந்தக் கருத்தில் இப்படிச் சொன்னானோ நமக்குத் தெரியாது. எந்தக் கருத்தில் வேண்டு மானாலும் சொல்லியிருக்கட்டும். அவள் என்னவோ அழகு மிக்கவள். அந்த அழகு பார்ப்பவர் கண்ணைப் பறிக்கக் கூடிய அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும், பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடக்கூடிய அழகு என்று நிச்சயமாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பிற்காலத்தில், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், அரச குடும்பங்களைச் சேர்ந்த அநேக திரீகள், அழகில், அவளுடைய வாரிசுகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு பெருமையும் திருப்தியும் அடைந்திருப்பார்களா? அழகுக்கு ஈடான அறிவுடையவள் அவள். அந்த அறிவுக்குத் தகுந்த பன்மொழிப்புலமை, சுமார் பத்து விதமான மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவள், பேசினால் வீணையின் நாதம் போலிருக்கும் இனிமையான குரல், சரளமான சுபாவம், எடுப்பான தோற்றம். இப்படி எல்லாம் அவளிடம் ஒன்று கூடியிருந்தன. அவள் அரசியாயிருந்து ஆள வேண்டும் என்பதற் காகவே, பெண்ணாயிருந்து காதல் வாழ்க்கையை மேற்கொண்டாள்! அவளுடைய வீரத்துக்குத்தான் என்ன குறைச்சல்? ஒரு கடற்போரில், எகிப்தியக் கப்பற்படைக்கு தலைமை வகித்திருக்கிறாள். ஒரு தரைப்போரில் ஊக்கமிழந்து நின்ற எகிப்தியப் போர் வீரர்களுக்கு ஊக்க மூட்டி வழிகாட்டியிருக்கிறாள். இப்படிப்பட்டவள் யார்? கிளியோபாட்ரா! சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்டவள்! மகா அலெக்ஸாந்தர் கி.மு. 323ம் ஆண்டில் இறந்துபோன பிறகு, அவனுடைய ஏகாதிபத்தியத்துக்குட்படுத்தப் பெற்றிருந்த எகிப்து, அவனுடைய படைத்தலைவர்களில் ஒருவனான டாலமி என்பவனுடைய ஆளுகைக்குட்பட்டது. இவனை முதலாவது டாலமி என்பர் இவனுக்குப் பிறகு இவனுடைய சந்ததியினர் வரிசைக்கிரமமாகச் சுமார் முந்நூறு ஆண்டுகள் வரைஆண்டு வந்தனர். இவர்களில் பதினோராவது டாலமியின் மகள் தான் கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு இதே பெயருடன் இந்தச் சந்ததியில் வேறு சிலர் இருந்ததனால் இவளை ஏழாவது கிளியோபாட்ரா என்று சரித்திராசிரியர்கள் கூறுவர். இவள் கி.மு.69ம் வருஷம் பிறந்தாள். இவள் பிறந்த காலத்தில், எகிப்தின் செல்வச் செழுமையும், பொருள் வளமும் ரோமபுரியின் ஏகாதிபத்தியப் பசியைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. எகிப்தின் மத்திய பகுதி தவிர, மற்றப் பகுதிகள் ரோமாபுரியின் ஆதிக்கத்துக் குட்பட்டு விட்டிருந்தன. எஞ்சிய பகுதியும் விழுங்கப்பட்டு விடுமோ என்று எகிப்தியர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு டாலமி அரச குடுத்பத்தினருக்குள்ளேயே போட்டியும் பொறாமையும் நிறைந்திருந்தன. இந்த மாதிரியான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த கிளியோபாட்ரா, தன் தந்தை செய்து வைத்துப் போயிருந்த ஏற்பாட்டின்படி கி.மு.51ம் ஆண்டு தனக்கு அடுத்த சகோதரன் பன்னிரண்டாவது டாலமியுடன் சேர்ந்து ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் அப்பொழுது இவளுக்குப் பதினெட்டு வயது. அவனுக்குப் பத்து வயது. சிறிது காலத்துக்குள் எகிப்திய வழக்கப்படி. இருவரும் கணவனும் மணைவியுமானார்கள். தன்னைக் காட்டிலும் எட்டு வயதுச் சிறுவனான தன் கணவனிடத் தில் கிளியோபாட்ராவினால் எந்த விதமான சுகத்தையும் அடைய முடியவில்லை. இதனால் அவனை ஓரளவுக்கு அலட்சிய மாகவே நடத்தி வந்தாள். இவளுடைய கை, நாளுக்கு நாள் மேலோங்கிக் கொண்டு வந்தது. தன்னுடைய சகோதரனை அரசபீடத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டு, தானே சுயமாக ஆள, இவள் ரகசிய முயற்சிகள் செய்து வந்தாள். அப்படிச் செய்து வந்தாளோ இல்லையோ, இவளுடைய நடவடிக்கைக்கள், இவளைப் பற்றிச் சந்தேகிக்கும் படி செய்தன. இப்படிச் சுமார் மூன்று வருஷகாலம் கழிந்தது. இளைஞனாகிய டாலமிக்கு இந்த நிலையை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அரசவையைச் சேர்ந்த சிலருடைய தூண்டுதலினாலும் ஆதரவினாலும் இவளை நாட்டைவிட்டு விரட்டிவிடத்திட்டமிட்டான். திட்டம் வெற்றி பெற்றது. இவளும் நாட்டைவிட்டு வெளியேறி, எகிப்து நாட்டின் எல்லையும் சிரியா நாட்டின் எல்லையும் சந்திக்கின்ற இடத்தில் உள்ள ஓர் ஊருக்கு வந்து சேர்ந்தாள். அங்கிருந்து கொண்டு தன் சகோதரன் மீது படையெடுத்துச் சென்று, இழந்து விட்ட அரசுரிமையைத் திரும்பப் பெற ஆயத்தங்கள் செய்து கொண்டு வந்தாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ரோமாபுரியின், அரசியலில் முக்கிய பங்கு பெற்றிருந்த ஜூலிய சீஸர் என்பவன் ஒரு படையுடன் எகிப்தை நோக்கி வந்து அலெக்ஸாந்திரியாவென்னும் துறைமுகப் பட்டணத்தில் முகாம் போட்டான். இவன் ஒரு சிறந்த வீரன்; பெண்கள் விரும்பக் கூடிய வண்ணம் சம்பாஷிப்பதில் வல்லவன். இவனைப்பற்றி நிறைய கேள்விப் பட்டிருந்தாள் கிளியோபாட்ரா. தனக்குரித்தான அரச பதவியை மீண்டும் அடைய இவனுடைய உதவியை நாடுவது என்று தீர்மானித்தாள். ஆனால் தன் சகோதரனுக்கும் இவனுக்கும் தொடர்பு ஏற்படும் போல் தெரிந்தது. அதற்கு முந்தி தான் இவனுடன் தொடர்பு கொண்டு விட வேண்டுமென்று நிச்சயித்தாள். இதற்காக துணிச்சலான ஒரு யுக்தியைக் கையாண்டாள். ஒரு நாள் எல்லைப்புறத்தில் தான் தங்கியிருந்த ஊரிலிருந்து ஒரே ஒரு வேலைக்காரனுடன் புறப்பட்டு ஒரு படகிலேறி வந்து இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அலெக்ஸாந்திரியா துறைமுகத்தை அடைந்தாள். அங்கிருந்து, சீஸர் தங்கியிருந்த மாளிகையின் முன் வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தாள். வேலைக்காரனிடம் எல்லாம் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தாள். அதன்படி அவன், இவள் மீது ஒரு கம்பளிப் போர்வை யைச் சுற்றி ஒரு மூட்டை போலாக்கினான். இந்த மூட்டையை எடுத்துக் கொண்டு காவற்காரர்கள் சிறிது அசந்து உறக்கத்திலிருக்கையில் மாளிகைக்குள் புகுந்தான். புகுந்து சீஸர் தங்கியிருந்த அறையை அடைந்து அங்கு அவன் முன்னிலையில் இந்த மூட்டையை இறக்கி வைத்துவிட்டு வெளியேறி விட்டான். அவன் சென்றதும், கிளியோபாட்ரா மூட்டையி லிருந்து விடுபட்டு அரைகுறையான ஆடையுடன் சீஸரின் முன்பு நின்றாள். திடீரென்று இப்படி ஒரு பெண் தன்முன் வந்து நிற்பதைக் கண்டு அவன் பிரமித்துப் போனான். அழகுத் தெய்வமே இப்படித் தன் முன் வந்து நிற்பதாக அவனுக்குத் தோன்றியது. அவள் அவனை உற்றுப் பார்த்தாள். இந்தப் பார்வை அவனுடைய கருணை உணர்வைத் தூண்டியது. அது மட்டுமன்று; அவனுடைய உள்ளத்தில் காதலென்றும் மதுவைக் கொண்டு வந்து நிரப்பியது. எல்லாம் ஒரு கண நேரந்தான். இந்த நேரத்திலிருந்து அழகியான கிளியோபாட்ராவும் வீரனான சீஸரும், காதலன் காதலி களானார்கள். சீஸருடைய ஆதரவு, தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை யும் கிளியோபாட்ராவுக்கு உண்டாயிற்று. இதற்குப் பிறகு, சீஸர், இவளுடைய அரசுரிமையைத் திருப்பி இவளுக்கு வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்து, இவளை விரட்டி விட்ட இவள் சகோதரன் பன்னிரண்டாவது டாலமி மீது போர் தொடுத்து வெற்றி கண்டான். இந்தப் போரில் டாலமி தப்பிச் செல்ல முயலுகையில் நைல் நதியில் மூழ்கி இறந்து போனான். இவனுக்குப் பிறகு, இவனுடைய அடுத்த சகோதரனான பதின் மூன்றாவது டாலமியை அரச பீடத்தில் அமர்த்தி, கிளியோபாட்ரா அவனுடன் சேர்ந்து அரசாட்சி நடத்துவதென்று ஏற்பாடு செய்தான் சீஸர். கிளியோபாட்ராவும், எகிப்திய வழக்கப்படி, தன் கடைசிச் சகோதரனான இந்தப் பதின்மூன்றாவது டாலமியை மறுமுறை மணந்து கொண்டாள். பெயரளவுக்குத்தான் அவள் அவனுடைய மனைவி! சீஸர், கிளியோபோட்ராவை விட்டுப் பிரிய மனமில்லாமல் எகிப்திலேயே அப்படியும் இப்படியுமாகச் சுமார் ஆறு மாதத்துக்கு மேல் காலங் கடத்தினான். இதற்குள், ரோமாபுரியில் அமைதி குலைந் திருப்பதாகக் கேள்வியுற்று. அங்கு செல்ல வேண்டிய அவசியத்துக் குட்பட்டான். கிளியோபாட்ராவும். அவனை விட்டு பிரிந்திருக்க மனமில்லாதவளாய், ஆட்சிப் பொறுப்பை தன் புதிய கணவனான பதின்மூன்றாவது டாலமி வசம் ஒப்படைத்து விட்டு அவனுடன் ரோமாபுரிக்குச் சென்றாள். அங்கு பகிரங்கமாகவே அவனுடைய ஆசை நாயகியாகச் சுமார் இரண்டு வருஷ காலம் தங்கிச் சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தாள். சீஸர் எகிப்திலிருந்து திரும்பிச் சென்ற பிறகு அதிகாரச் செருக்கு மிக்கவனானான். தவிர இவன் கிளியோபாட்ராவுடன் உல்லாச வாழ்க்கை நடத்துவது ரோமாபுரி வாசிகளுக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. இவன் மீது அதிருப்தி அதிகரித்து. கடைசியில் கி.மு.44ம் வருஷம் சீஸர் கொலையுண்டான். கிளியோபாட்ரா இனி ரோமாபுரியில் தங்கியிருத்தல் ஆபத் தென்று உணர்ந்து சீஸரிடம் தனக்குப் பிறந்திருந்த சுமார் மூன்று வயது மகனுடன் எகிப்துக்குத் திரும்பினாள். வந்ததும், தன் மகனுக்கு அரச பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன் கணவனான பதின் மூன்றவாது டாலிமியை விஷம் வைத்துக் கொன்று விட்டாள். உடனே தன் மகனை அரச பீடத்தில் அமர்த்தி, அவனும் தானும் சேர்ந்து ஆட்சி நடத்துவதாகக் காட்டிக் கொண்டாள். உண்மையில் ஆண்டது இவள்தான். இந்த மூன்று வயது மகன்தான் பின்னர் பதினான்காவது டாலமியென்று அழைக்கப்பட்டான். இந்த நிலையில் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை மூவர் பங்கு போட்டுக் கொண்டனர். இவர்களில் மார்க்ஆண்டோனி என்பவனுக்கு, எகிப்து முதலிய கிழக்குப் பகுதி நாடுகளின் ஆதிக்கம் கிடைத்தது. இந்த ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவன், ஒரு படையுடன் சின்ன ஆசியா பக்கம் வந்தான். வழியெல்லாம் அவனுக்கு ராஜோப சாரங்கள் நடந்தன. கிளியோபாட்ராவும், சின்ன ஆசியாவிலுள்ள டார்ஸன் என்ற ஊரில் இவனை ஆடம்பரமாக வரவேற்று உபசரித்தாள். ஆண்ட்டோனி, இவள் செய்த உபசாரத்தில் மட்டுமல்ல, இவளுடைய அழகிலும் எடுப்பான தோற்றத்திலும் மயங்கி விட்டான். அவ்வளவுதான்; இருவரும் காதல் வாழ்க்கையை மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது ஆண்டோனிக்கு நாற்பத்தேழு வயது ;- கிளியோபாட்ராவுக்கு இருபத் தெட்டு வயது. கிளியோபாட்ரா - ஆண்ட்டோனி உறவை ரோமாபுரி வாசிகள் விரும்பவில்லை. ஆண்ட்டோனியின் மீது அதிருப்தி வளர்ந்தது. இதன் விளைவாக ஆக்டேவியன் என்பவன் இவன் மீது படையெடுத்து வந்தான். இருவருக்கும் கி.மு.31ம் வருஷம் ஆக்டியம் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் கிளியோபாட்ரா, ஆண்ட்டோனிக்கு மிகவும் உதவியாயிருந்தாள். ஆயினும் என்ன? ஆக்டேவியன் வெற்றி பெற்றான். உடனே, தன்னிச்சையாகப் பணிந்து விடுமாறு கிளியோபாட் ராவுக்கு சொல்லி அனுப்பினான். இவளுடைய அழகில் அவன் மயங்கவில்லை. ஆனால் இவள் பணிய மறுத்து விட்டாள். பணிந்தால் தன்னை ரோமாபுரிக்கு அழைத்துப் போய் அங்கு பகிரங்கமாக அவமானப் படுத்தக்கூடும் என்று அஞ்சினாள். எனவே, அரேபியாவின் வழியாக இந்தியாவுக்குத் தப்பியோட முயன்றாள்; முடியவில்லை கடைசியில், தனக்கென்று கட்டி வைத்துக் கொண்டிருந்த கல்லறைக்குச் சில சேடியருடன் சென்று அங்கு அடைக்கலம் புகுந்தாள். ஆண்ட்டோனியா, போர் நடுவில், கிளியோபாட்ரா தன்னைக் கைவிட்டு விட்டு எங்கோ ஓடிப் போய் விட்டாள் என்று கருதினான். அப்படியில்லா விட்டால் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடுமென்று நினைத்தான். இனி உயிர் வாழ்தல் கூடாதென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றான். இந்த முயற்சி பலிக்கவில்லை. கிளியோபாட் ராவுக்கு இது தெரிந்தது. அவனை அழைத்து வரச் செய்து வேண்டிய உபசரணைகள் செய்தாள். இவள் காட்டிய அன்பு, அவன் மனத்தை உருக்கியது. அநாவசியமாக இவளைச் சந்தேகித்தற்காக வருந்தினான். இவள் அணைப்பில் உயிர் துறந்தான். ஆண்ட்டோனி மரித்த பிறகு கிளியோபாட்ராவின் நிலை பரிதபிக்கத் தக்கதாகிவிட்டது. வாடிவதங்கிய சருகு போலாகிவிட்டாள். ஆக்டே வியனோ, இவள் கல்லறையில் அடைக்கலம் புகுந்திருக்கிறாள். என்று தெரிந்ததும், அதைச் சுற்றிக் காவல் போட்டுவிட்டான். காவலர்களிலே ஒருவன், இவளுடைய பதிதாபனூநிலைக்கு இரங்கி, ஒருநாள் இவளிடம் வந்து உன்னை இன்னும் மூன்று நாட்களில் ரோமாபுரிக்கு அனுப்ப ஆக்டோவியன் திட்டமிட்டிருக்கிறான். என்று எச்சரிக்கை கொடுத்து விட்டுப் போனான். இதைக் கேட்டதும் தன் உயிரைக் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தாள் கிளியோபாட்ரா. இவள் செய்து வைத்திருந்த முன்னேற்பாட்டின் படி, கி.மு.30ம் வருஷம் ஆகட் மாதம் இருபத்தென்பதாந் தேதி ஒரு குடியானவன், அத்திப் பழங்கள் நிறைந்த ஒரு கூடையை மூடி போட்டுக் கொண்டு வந்து இவள் முன்பு வைத்து விட்டுப் போனான். இந்த கூடை வந்து சேர்ந்ததும், கிளியோபாட்ரா, கடைசித் தடவையாக நீராடி உணவு உட்கொண்டாள். பிறகு அங்கிருந்த சேடியர்களை அப்புறம் போகச் சென்னாள். தனியாக இருக்கையில் அத்திப் பழக் கூடையயைத் திறந்தாள். அதிலிருந்து புஸென்று ஒரு பாம்பு வெளிப்பட்டு இவளைத் கடித்துவிட்டு, கூடைக்குள் திரும்பிப் போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் விஷமேறி இறந்துவிட்டாள். இவளோடு எகிப்தின் சுதந்திர வாழ்வு முற்றுப் பெற்று விட்டது. அது ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாகி விட்டது. கிளியோபாட்ரா நிகரமாக ஆண்டதெல்லாம் இருபது வருஷங் களுக்கு மேல் இல்லை. இந்தக் காலத்தில் அவள் எத்தனையோ விதமான சச்சரவுகளில் ஈடுபட்டாள் - எத்தனையோ விதமான சுற்றுச் சார்புகளின் மத்தியில் சொற்ப சொற்ப காலமேனும் வாழ்ந்து வரவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் ஒரு கணம்கூட அவள் நெஞ்சுறுதி குலைய வில்லை; தான் ஓர் அரசி, ஆளப்பிறந்தவள் என்பதை மறக்கவில்லை. உண்மையில் அவள் தன்னை, அரசர்களுக்கு அரசி என்றே அழைத்துக் கொண்டாள். அப்படியே தன் காலத்தில் வெளியான பிரகடனங்கள், சாஸனங்கள் நாணயங்கள் முதலியவற்றில் பொறித்து வெளியிடச் செய்தாள். இவற்றுள் பல இன்றளவும் அவளை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. மற்றும், பல உலகத்துப் பல்வேறு மொழிகளில் தோன்றிய பல துறை இலக்கியங்களிலிலும் கிளியோபாட்ரா இடம் பெற்றிருக்கிறாள். ஆங்கில மொழியில் மட்டும், கொந்தளிப்பு நிறைந்த அவள் வாழ்ககையைப் பல கோணங்களில் வைத்துக் காட்டுகிற முறையில் 1540 முதல் 1905 வருஷம் வரை நூற்றிருபத்தேழு நாடகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிமேதை களான ஷேக்பியரும், பெர்னார்டுஷாவும் தங்கள் படைப்புகளில் அவளுக்கு இடங்கொடுக்க மறுந்துவிடவில்லை அல்லவா? 4. ராணி மங்கம்மா மதுரை மாநகரத்துக்குச் செல்கின்ற யாரும், மீனாட்சியம்மன் கோயிலையும், திருமலை நாயக்கர் மகாலையும் பார்க்காமல் இருக்க முடியாது. ரயில் நிலையத்தை எதிர்நோக்கி நிற்பது மங்கம்மாள் சத்திரந்தானல்லவா? இந்த மங்கம்மாள் கி.பி. பதினாறாவது நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்து பதினெட்டாவது நூற்றாண்டின் முற்பகுதி வரை சுமார் இருநூறு வருஷ காலம் மதுரையம்பதியில் தனியரசு செலுத்திய நாயக்க வமிசத்தினரின் வழி வந்த ஒரு பேரரசி: தனது அறச் செயல் களினாலும், நீதி வழுவா ஆட்சியாலும் தமிழகத்து வரலாற்றில் நிலையான இடம் பெற்றுக் கொண்டு விட்டவள். விஜயநகரப் பேரரசுக்குப் பெருவாழ்வு அளித்த கிருஷ்ண தேவராயருடைய ஆட்சியின் கடைசிக் காலத்தில், அதாவது 1529 வருஷம், அவருடைய விருப்பப்படி விசுவாநாத நாயக்கர் என்பவர் மதுரைப் பகுதிக்குப் போந்து, அங்கு நடைபெற்று வந்த பாண்டியர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தாமே விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியா யிருந்து ஆளத் தொடங்கினார். இவருக்குப் பின் வந்தவர்கள். அந்த விஜயநகரப் பேரரசு, 1565 ம் வருஷம் தலைக்கோட்டையில் நடைபெற்ற யுத்தத்துக்குப் பிறகு அதமித்து வந்த காலத்தில் கூட அதன் பிரதிநிதிகள் என்று பெயரளவுக்கேனும் சொல்லிக் கொண்டு ஆண்டார்கள். இவர்களில் சொக்கநாத நாயக்கர் என்பவர் (1659-1582) தமது பதினாறாவது வயதில் பட்டத்துக்கு வந்தார். தலைக்கோட்டை யுத்தத்துக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் படிப்படியாக மங்கிக் கொண்டு வந்ததல்லவா? இந்தக் காலத்தில் அந்த விஜயநகர மன்னர்களிடம் சேனைத் தலைவராகவும் அமைச்ச ராகவும் பணியாற்றி வந்த லிங்கம் நாயக்கர் என்பவர், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகிரியில் குடியேறி வசித்துக் கொண்டிருந் தார். இவருக்கு ஒரே பெண் குழந்தை. மங்கம்மாள் என்று பெயர். அரசியாயிருந்து ஆளக்கூடிய எல்லாத் தகுதிகளும் இளமையிலேயே இவளிடம் குடிகொண்டிருந்தன. இவளுக்கும் சொக்க நாதருக்கும் 1674 - ம் வருஷம் திருமணம் நடைபெற்றது. இதற்கு ஒரு வருஷத்துக்கு முன்னால் சொக்க நாதர் தஞ்சை விஜயநகர நாயக்கரை வெற்றி கொண்டு அங்கு தம் பிரதிநிதியாக இருந்து ஆளும்படி அளகிரி நாயக்கர் என்பவரை நியமித்திருந்தார். ஆனால் அவரைத் தன் ஆதிக்கத்துக்குட்பட்டவராக வைத்துக் கொள்ளவில்லை. அவர் விருப்பத்துக்கே ஆளும்படிவிட்டார். தவிர மகாராஷ்ரர்கள் தஞ்சையின் மீது படையெடுத்து வந்தபோது அளகிரி நாயக்கருக்கு உதவியாக ஒரு படையையும் அனுப்பவில்லை. இதன் விளைவாக தஞ்சைப் பகுதி மகாராஷ்டிரர்கள் வசம் போய்விட்டது. இதே பிரகாரம், இவருடைய ஆளுகைக்குட்பட்டிருந்த வேறோரு பகுதி மைசூர் ராஜ்யத்துக்குப் போய்ச் சேர்ந்தது. இவையெல்லாம் போக இவருடைய இளைய சகோதரர் முத்துலிங்க நாயக்கர் என்பவர் 1678-ம் வருஷம் இவரை சொக்கநாதரை அரச பீடத்தினின்றும் அப்புறப்படுத்திவிட்டு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார். ஆனால் சில நாட்களுக்குள் ரடம் காண் என்ற ஒருவன், முத்துலிங்க நாயக்கரை அபப்புறப்படுத்திவிட்டுச் சொக்கநாதரை மீண்டும் அரச பீடத்தில் அமர்த்தினான். ஆனால் எல்லா அதிகாரங்களையும் தானே செலுத்தி வந்தான். சொக்கநாதரும் சுமார் இரண்டு வருஷகாலம் அவன் ஆட்டுவித்தபடி ஆடிவந்தார். வேறு ஒன்றையும் செய்ய இவரால் இயலவில்லை. ரடம்கான் நிருவாகம் செய்து வந்த காலத்தில் ஜனங்கள் பல கொடுமைகளுக்குட்பட்டனர். நாட்டில் குழப்பம் ஏற்படும் போல் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சேதுபதி மன்னரும் வேறு சில பாளையக்ரர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் படைபலத்தால் ரடம் கானையும் அவன் கூட்டத்த வரையும் இவ்வுலகத்தினின்றே அப்புறப்படுத்திவிட்டனர். சொக்கநாதர் பழையபடி அரசபீடத்தில் அமர்ந்தார். ஆயினும் என்ன? இவருடைய ஆட்சியின் பலவீனத்தைக் கண்ட மைசூர் மன்னர், ஒரு படை அனுப்பித் திருச்சியை முற்றுகையிட்டார். இதனை எதிர்த்து நிற்கும் பொருட்டு, சொக்கநாதருக்கு உதவியாகத் தஞ்சைச் சிற்றரசரும், செஞ்சி மலைச் சிற்றரசரும், சேதுபதி மன்னரும் ஒரு கூட்டுச் சேர்ந்து கொண்டு மைசூர் படையைத் தாக்கித் திருச்சி முற்றுகையை விடுவித்தனர். இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் செஞ்சிப் படைப்பகுதியின் தலைவராயிருந்த அரசுமலை என்பவர். தாம் கண்ட வெற்றியினால் கர்வம் கொண்டு விட்ட இவர் திருச்சிக் கோட்டையைத் தம் வசப்படுத்திக் கொள்ள முனைந்தார். இந்தத் துரோகச் செயலைச் சொக்கநாதர் எதிர்பார்க்கவில்லை. பெரிய அதிர்ச்சியே அடைந்தார். இதன் விளைவாக 1682ம் வருஷம் இறைவன் திருவடியைச் சேர்ந்தார். மங்கம்மமாள் அடைந்த துக்கத்துக்கு எல்லை சொல்ல வேண்டுமோ? சொக்கநாதருக்குப் பிறகு ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்தார். (1682-1689) இளமையில் பட்டம் ஏற்றாலும் மங்கம்மாளின் உதவி பெற்றுத் திறமையாக அரசு செலுத்தினார். சொக்கநாதர் காலத்தில் இடிந்து போன தம் ராஜ்யத்தின் அநேக பகுதிகளை மீண்டும் பெற்றார். ஆனால் 1689 ம் ஆண்டு அம்மை வார்த்து இறந்து போனார். ரங்ககிருஷ்ண முத்துவீரப்பர் இறந்த பொழுது அவர் மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். சில மாதங்கள் கழித்து ஓர் ஆண் மகவு பிறந்தது. இது பிறந்தவுடன் முத்தம்மாள் இதனை மங்கம்மாள் வசம் ஒப்புவித்து விட்டு உடன்கட்டை ஏறுதல் என்ற சம்பிரதாயப் படி உயிரை மாய்த்துக் கொண்டாள். முத்தம்மாளின் வயிற்றிலே பிறந்த இந்தக் குழந்தைக்கு விஜயரங்க சொக்கநாதர் என்று பெயர் சூட்டினாள் மங்கம்மாள். இது பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இதற்குப் பட்டமும் சூட்டி வைத்தாள் . இது யுத்த வயது அமையும் வரையில் தானே ரீஜண்டாயிருந்து ஆண்டு வந்தாள். இவள் ஆண்டது 1689 முதல் 1706ம் வருஷம் வரையில். மங்கம்மாள் ஆளத்தொடங்கிய காலத்தில் நாயக்க அரசருக்கு விரோதமான சூழ்நிலையே இருந்தது. அப்போது ஏறக்குறைய தக்காணம் முழுவதும் மொகலாய சக்கரவர்த்தியான அவுரங்க சீப்பின் (1658-1707) ஆதிக்கத்துக்கு ஒருவாறு உட்பட்டிருந்தது. இதனை நிலைப்படுத்திக் கொள்ள அவர் அவ்வப்பொழுது ஒரு சிறு படையைத் தெற்குச் சீமைக்கு அனுப்பி நிறைய பணம் வசூலித்து வரும்படி செய்தார். மொகலாய அரசின் படை பலத்தை நன்கு அறிந்திருந்த தஞ்சை, திருச்சி, மைசூர் ராஜ்யங்கள் மொகலாய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்ற முறையில் கப்பம் செலுத்த உடன்பட்டன. தானும் அப்படியே இசைந்து போவது நல்லது என்று கருதினாள் மங்கம்மாள். மொகலாயப் படைத் தலைவனான ஜுல்பீகர் கான் என்பவன் 1693ம் வருஷம் செஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டு வந்தான். இது தெரிந்த மங்கம்மாள் முன்கூட்டியே அவனுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை வழங்கி அவனைத் தன் ராஜ்ய எல்லைக்குள் வராதபடி தடுத்து விட்டாள். மீண்டும் ஜுல்பிகர் கான் 1697 ம் வருஷம் ஒரு படையுடன் தெற்கு நோக்கி வந்தான். முன்பு போலவே மங்கம்மாளிடம் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு திரும்பிவிட்டான். மறுபடியும் 1702ம் வருஷம் தாவுத்கான் என்ற மற்றொரு படைத்தலைவன் வந்தபோது ஓளரங்சீப் சக்கவரத்தியிடம் சேர்க்கும்படி அவனிடம் மொத்தமாக இருபதினாயிரம் போயும் ஓர் அளவு நவரத்தினங்களும் கொடுத்துவிட்டு அவனுக்குச் சொந்தமாக உப யோகித்துக் கொள்ளும்படி பெருவாரிப் பொருள்களை அளித்துத் தன் ராஜ்ய எல்லைக்குள் வராதபடி செய்து விட்டாள் மங்கம்மாள். இங்ஙனமே மகாராஷ்டிரர்களுக்கும் ஏராளமான பொருள்களைக் கொடுத்து அவர்களுடைய படைபெயடுப்பினின்று தன் ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொண்டாள். இங்ஙனம் தன் வலியையும் மாற்றான் வலியையும் நன்கு தெரிந்து கொண்டு அரச தந்திரத்துடன் மங்கம்மாள் நடந்து கொண் டாளாயினும் இவளுக்குச் சத்துருக்கள் இல்லாமற் போகவில்லை. அவர்களை அடக்கி ஒடுக்கவே முனைந்தாள். மொகலாய அரசுக்குக் பணிந்து போன மைசூர் மன்னர் நாயக்க அரசுக்கு உட்பட்ட சேலம், கோயம்புத்தூர் வட்டங்களின் மீது படையெடுத்து வந்ததனால் அவர் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாமற் திரும்பி விட்டார். இதையடுத்துத் தஞ்சை மன்னர் மதுரை அரசுக்கு உட்பட்ட சில பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார். மங்கம்மாள் அவர் மீது ஒரு படையனுப்பி வெற்றி கண்டாள். திருவாங்கூர் அரசு நாயக்க அரசுக்கு வெகுகாலமாகக் கப்பஞ் செலுத்தி வந்த ஒரு சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால் சொக்கநாதர் காலத்திலிருந்து அது கப்பம் செலுத்தவில்லை. பல தடவைகள் சொல்லி அனுப்பியும் அது வாளாவிருந்து விட்டது. அது மட்டு மன்று, தான் சுய அரசு என்று பிரகடனமும் செய்து கொண்டது. இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று கருதி மங்கம்மாள் அஞ்சா நெஞ்சம் படைத்த தன் தளவாய் நரசப்பையா என்பவரை ஒரு படையுடன் அனுப்பிப் பழைய பாக்கியோடு கப்பத் தொகை முழுவதையும் வசூலிக்கச் செய்தாள். திருவாங்கூர் மன்னரைப் போலவே ராமநாதபுரம் சேதுபதிகளும், மதுரை அரசுக்கு நீண்ட காலமாகக் கப்பம் செலுத்தி வந்தார்கள். ஆனால் மங்கம்மாள் காலத்தில் ஆண்டு வந்த கிழவன் சேதுபதி என்பவர் கப்பம் செலுத்த மறுத்து விட்டார். தாம், சுதந்திர மன்னர் என்று பிரகடனம் செய்து விட்டு தன் ராஜ்யத்துக் கோட்டை கொத்தளங்களையெல்லாம் வலுப் படுத்தி வந்தார். பார்த்தாள் மங்கம்மாள். தளவாய் நரசப்பையாவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினாள். ராமநாதபுரத்துப் படைகளும் எதிர்த்து நின்றன. கடும் போர் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் போரில் நரசப்பையா கொல்லப்பட்டுவிட்டார். மதுரைப் படை பலத்த சேதத்துடன் பின்வாங்கிக் கொண்டது. கிழவன் சேதுபதி தாம் சுதந்திர மன்னர் என்று பிரகடனம் செய்து கொண்டார். நரசப்பையா மரித்தது. மங்கம்மாளுக்கு ஒரு கை ஒடிந்து விட்டது போல் ஆயிற்று. பொதுவாகவே மங்கம்மாள் தன் ராஜ்யத்தின் கட்டுக் கோப்புக்குக் கூடிய மட்டில் பங்கம் ஏற்படாத வகையில் பணிய வேண்டிய இடத்தில் பணிந்தும் எதிர்த்து நிற்கவேண்டிய இடத்தில் எதிர்த்தும் நின்று, மிகுந்த அரச தந்திரத்துடன் நடந்து கொண்டதனால் தான் அவளுக்குப் பிறகு சிறிது காலமேனும் நாயக்க அரசு உயிர் வைத்துக் கொண்டிருந்தது. மங்கம்மாள் போர்கள் பல நடத்த வேண்டிய அவசியத்துக்குட் பட்டாளெனினும் சமாதானத்திலேயே நாட்டமுடையவளாயிருந்தாள். இதனால் தன் பிரஜைகளின் பூரண விசுவாசத்தையும் பெறுவது இவளுக்குச் சுலபமாக இருந்தது. இவள் செய்த நற்பணிகள் பல. போக்குவரத்துக்கு வசதியான நெடுஞ்சாலைகள் பல அமைத்து அவற்றின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் வளர்வதற்கு ஏற்பாடு செய்ததோடு, ஆங்க்ங்கு சத்திரம் சாவடிகளையும் நீர் நிலைகளையும் அமைத்துக் கொடுத்தாள். விவசாயிகளுக்கு மிகவும் தேவையான பாசன வசதிகளைச் செய்து கொடுத்து உணவுப் பொருள்களின் விளைவை அதிகரிக்கச் செய்தாள். இதன் விளைவாக வியாபார விருத்தியும் ஏற்பட்டது. அறிஞர் கள் பலரை வெளி இடங்களிலிருந்து வரவழைத்து அவர்களுக்கு வீடுகள் முதலியன கட்டிக் கொடுத்து அவர்களுடைய அறிவு சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் அவர்களை ஆதரித்தாள். கோயில் திருப்பணிகள் பல செய்தாள். பெரிய கட்டங்களை எழுப்பினாள். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் உள்ள கட்டடம் கோடைக்கால வாசதலமாக இவளால் கட்டப் பட்டதென்று சொல்லப்படுகிறது. மங்கம்மாள் கிறிதுவப் பாதிரிமார்களுக்கு அவர்கள் மதத்தைப் பிரசாரம் செய்யும் விஷயத்தில் அதிக சலுகை காட்டினாள். இங்ஙனமே மற்ற மதத்தினருக்கும் எல்லா உரிமைகளையும், சலுகைகளையும் அளித்து வந்தாள். மங்கம்மாள் காலத்தில் அரசாங்க நிருவாகம் தளவாய், பிரதானி, ராயசம், கணக்கன், தானாதிபதி ஆகிய ஐவர் மூலமாகவே நடைபெற்று வந்தது. தளவாய் என்பவர், பிரதம மந்திரியாகவும் பிரதம படைத் தலை வராகவும் இருந்தார். பிரதானி என்பவர் நிதி மந்திரி. அரசங்கத்தின் வரவு செலவுகளுக்கு இவரே பொறுப்பாளி. ராயசம் என்பவர் அரசாங்கத்தின் பிரதம காரியதரிசி. கணக்கன் என்பவர் தற்காலத்து அக்கௌண்டெண்ட் ஜெனரல் என் சொல்லலாம். தானாதிபதி என்பவர் அயல் நாட்டு மந்திரி. இந்த ஐவரின் கீழ் ஏராளமான உத்தியோகதர்கள் இருந்து அரசாங்க அலுவல்களைக் கவனித்து வந்தனர். மங்கம்மாள் 1689ம் ஆண்டில் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். சுமார் பதினேழு வருஷகாலம் திறமைன ஆட்சி செய்தாள். தன் பேரன் விசயரங்க சொக்கநாதர் யுத்த வயதடைந்ததும் அவரிடம் சம்பிரதாயமாக ஆளும் பொறுப்பை ஒப்புவித்தாள். ஏறக்குறைய ஐம்பத்தைந்தாவது வயதில் 1706ஆம் வருஷம் இறைவன் திருவடிகளைச் சேர்ந்தாள். கடைசி மூச்ச இருக்கிற வரையில் ஆண்டவன் நினைவாகவே இருந்தாள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 5. ராணி லஷ்மிபாய் இந்தியாவின் நிருவாகத்தைக் கிழக்கிந்திய கம்பெனியார் மேற்கொண்டிருந்த கடைசிக் காலத்தில், அதாவது 1857ம் வருஷம், சிப்பாய் கலகம் என்று சொல்லப்படுகிற சுதந்திரப் புரட்சி நடை பெற்றது. இந்தப் புரட்சியின் விளைவாகவே பிரிட்டிஷ் அரசாங்கத் தார், இந்தியாவின் நிருவாகத்தை, தாங்களே நேரடியாகக் மேற் கொண்டனர். கம்பெனியார் கடைப்பிடித்த நாடு பறிக்கும் கொள்கைதான் இந்தச் சுதந்திரப் புரட்சிக்கு மூலகாரணமாய் அமைந்தது. நேர்வாரிசு இல்லாமல் இறந்துவிட்ட மன்னர்களின் ராஜ்யங்கள் என்றும், சரியாக ஆளப்படாத ராஜ்யங்கள் என்றும் இப்படி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஒன்றன்பின் ஒன்றாக அநேக ராஜ்யங்களைக் கம்பெனியார் தங்கள் ஆதிக்கத்துக்குட்படுத்திக் கொண்டு வந்தனர். கம்பெனியாரின் சார்பாக, இந்தப் புனிதமான கைங்கரியத்தில் தீவிரமாக ஈடுபட்டவன் - லார்டு டல்ஹவுஸி. சிவாஜி மன்னன் நிறுவிய மகாராஷ்டிர சாம்ராஜ்யம், வரிசையாக வந்த பேஷ்வாக்களின், அதாவது பிரதம மந்திரிகளின் திறமையான நிருவாகத்தினால் உச்ச நிலையடைந்து, கடைசியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீர் குலைந்து விட்டது. கடைசி பேஷ்வா இரண்டாவது பாஜிராவ் என்பவன், 1818 ம் வருஷம் தன் நிருவாகத்துக் குட்பட்டிருந்த பிரதேசங்களைக் கம்பெனியார் வசம் ஒப்புவித்து விட்டு, கான்பூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரத் தொங்கினான். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதேசங்களுக்குப் பிரதியாக, கம்பெனியார், இவனுக்கு வருஷந்தோறும் எட்டு லட்சம் ரூபாய் விகிதம் பென்ஷன் கொடுத்து வரச் சம்மதித்தனர். இவனும் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு தான தருமங்களெல்லாம் செய்தும், ஏழை எளியவர்களை ஆதரித்தும் வந்தான். மாதவராவ் என்ற ஒருவர். தமது மனைவியுடனும், சுமார் இரண்டு வயது நிரம்பியிருந்த ஒரேஆண் குழந்தையுடனும் பாஜிராவின் ஆதாவை நாடி 1827ம் வருஷம் மேற்படி கிராமத்துக்கு வந்தது சேர்த்ர். வந்த குழந்தையின் எடுப்பான தோற்றம் பாஜிராவைப் பெரிதும் கவர்ந்தது. அவனை முறையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் சுதந்திரப் புரட்சியின் போது வீறு கொண்டெழுந்த நானா சாஹேப், குண்டு பந்த் என்றும் இவனை அழைத்தனர். மாதவராவ் தம்பதிகள் வந்த சுமார் பத்து வருஷங்களுக்குப் பிறகு காசி மாநகரிலிருந்து மோரோ பந்தத் என்று ஒருவர், தமது மனைவி பாகீரதிபாய என்பவளுடனும், ஒரே பெண் குழந்தையுடனும் பாஜிராவின் ஆதரவு நிழலில் வந்து தங்கினார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் மனுபாய்; பிறந்தது 18.11.1835ல். மனுபாயின் முகத்தில் அந்தச் சிறு வயதிலேயே அழகும் வீரமும் கலந்து ஒளி வீசின. பாஜிராவின் பரிவாரத்தினர் அனைவரும் அவளிடத்தில் தனியன்பு செலுத்தினர். அவளைச் சபிலி என்று பரிவோடு அழைத்து மகிழ்ந்தனர். அதாவது பேரழகி என்று அர்த்தம். நானாவும் மனுவும் சகோதர உறவு பூண்டு நெருங்கிக் பழகி வந்தனர். பாஜிராவினுடைய ஏற்பாட்டின் பேரில், வில் வித்தை, வாட்போர், குதிரையேற்றம் முதலிய வீரர்களுக்குரிய பயிற்சிகளையெல்லாம் பெற்று வந்தனர். இந்தக் காலத்தில் தாந்தியா தோபி என்ற ஓர் இளைஞன் இவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். இவனும் சுதந்திரப் புரட்சியில் பங்கு கொண்டவனே. மனுபாய், சிறுவயதிலேயே, ஜான்ஸி நாட்டு அரசனாகிய கங்காதரராவ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். மணமானதும், இவள், ஜான்ஸியை அடைந்து, அரச காரியங்களைக் கவனிப்பதில் தன் கணவனுக்கு உதவியாக இருந்தாள். அப்பொழுது இவளுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்தான் லட்சுமிபாய் என்பது. துரதிர்ஷ்டவசமாக, கங்காதரராவ் 1853 வருஷம் சந்ததியில் லாமல் இறந்து போனான். லட்சுமிபாய் சுவீகாரம் எடுத்துக்கொள்ள விரும்பினாள். ஆனால் டல்ஹவுஸி இதற்கு இடம் கொடுக்கவில்லை. ஜான்ஸி ராஜ்யம் நேர் வாரிசு இல்லாத காரணத்தினால், கம்பெனியாரின் ஆதிக்கத்துக்குட்படுத்தப்படும் என்றும் லட்சுமிபாய்க்கு மாதம் ஐயாயிரம் ரூபாய் வீதம் பென்ஷன் கொடுக்கப்பட்டு வருமென்று தெரித்து விட்டான். லட்சுமிபாய் இந்த முடிவை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள கம்பெனியின் டைரக்டர்களுக்கு அப்பீல் செய்து கொண்டாள். இதற்காக, ஜான்லாங் என்ற ஒர் ஆங்கிலேயனை வக்கீலாக அமர்த்தி, தன்கட்சி நியாயத்தை எடுத்துச் சொல்லச் செய்தாள், ஆனாலும் என்ன? டல்ஹவுசி செய்த முடிவே சரியென்று சொல்லி விட்டார்கள் கம்பெனி டைரக்டர்கள். லட்சுமிபாய்க்கு இது பெரிய ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. ஆயினும், தனது கடமை இன்னதென்பதைத் தீர்மானித்துக் கொள்ள அவள் சிறிதும் தயங்கவில்லை. தன் அன்பிலே வளர்ந்து வந்த தாமோதரராவ் என்ற பச்சிளம் பாலகனை முறைப்படி சுவீகாரம் செய்து கொண்டாள். அதே சமயத்தில், என்ன வந்தாலும் சரி; என்னுடைய ஜான்ஸியை நான் கைவிடப் போவதில்லை, என்று சபதமும் செய்து கொண்டாள். இதை நிறைவேற்ற, தக்க தருணமும் 1857ம் வருஷத்துச் சுதந்திரப் புரட்சியின்போது அவளுக்குக் கிடைத்தது. மேற்படி வருஷம் ஜூன் மாதம் ஜந்தாந் தேதி, ஜான்ஸியலிருந்த சிப்பாய்களும் மற்றவர்களும், கம்பெனியாரின் ஆதிக்கம் இனி செல்லுபடியாகாது என்று சொல்லிப் புரட்சிக்கொடி தூக்கி விட்டனர் இதற்கு நான்காவது நாள், அதாவது ஜூன் மாதம் ஒன்பதாந் தேதி, லட்சுமிபாயே இனி அரசி. அவள் அதிகாரமே இனி ஜான்ஸி முழுவதிலும் செல்லுபடியாகும் என்று பிரகடனம் செய்து விட்டார்கள், இவளை, எங்கள் ராணி என்று அழைத்து மகிழ்ந்தார்கள். நாமும் இனி அவளை ராணியென்று இங்கே அழைத்துக் கொண்டு போவோம். ஜான்ஸியைப் போல் வட இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலேல்லாம் ஆங்கிலேயர்களுக்கு விரோதமான புரட்சிகள் கிளம்பின. இவைகளை அடக்கி ஒடுக்க ஆங்கிலேயர்கள் வெகு பாடுபட்டனர். ஜான்ஸியை நோக்கி, ஸர் ஹ்யூ ரோ என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை புறப்பட்டது. ராணிக்கு இது தெரிந்ததும், ஜான்ஸியைச் சுற்றியுள்ள பயிர்ப் பச்சைகளையெல்லாம் அழிக்கச் செய்து விட்டாள்; நிழல் தரும் மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தச் செய்தாள். சுருக்கமாக, ஆங்கிலப் படைகளுக்கு எவ்வித வசதிகளும் கிடைக்காதபடி செய்து விட்டாள்; தவிர ஜான்ஸிக் கோட்டையைப் பலமாகப் பந்தோபது செய்தாள். இவகைளை யெல்லாம் அவ்வப்போது ஒற்றார்கள் மூலம் கேள்வியுற்று வந்த ரோ, கதிகலங்கிப் போய்விட்டான். ஆயினும் துரோகிகளான சில சிற்றரசர்கள் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தனர். இந்தத் தைரியத்தில் அவன் முன்னேறி வந்து ஜான்ஸிக் கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். ராணி போர்த் தந்திரங்களை நன்கு அறிந்தவள் ஆதலின், முற்றுகையைச் சமாளிப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் வகுத்ததோடு தானே நேரில் கோட்டையின் பல பகுதிகளுக்கும் சென்று படைவீரர்களுக்கு உற்சாக மூட்டி வந்தாள். இரு தரப்புப் படைகளும் சளைக்காமல் இரவு பகலாகக் குண்டுகளைப் பொழிந்தவண்ணம் இருந்தன. இரண்டுவார காலம் 21.3.1858 முதல் 4.4.1858 வரை தொடர்ந்து முற்றுகை நடைபெற்றது. கடைசி நாள் கோட்டையின் பெரும் பகுதியும், ராணி வசித்துக் கொண்டிருந்த அரண்மனையும் ஆங்கிலேயர் வசப்பட்டு விட்டன. இனி சமாளிக்க முடியாது என்று தெரிந்ததும், ராணி, நகரைத் துறந்து வெளியே செல்வது என்றும், சென்று வேறு துணை சேர்த்துக் கொண்டு, ஆங்கிலேயர்களைத் திரும்பத் தாக்குவது என்றும் தீர்மானித்தாள். அப்படியே ஆண் உடை தரித்துக் கொண்டாள். இடையில் உடைவாள்; தனது சுவீகாரப் புதல்வனான தாமோதர ராவை முதுகிலே பட்டுத் தணியால் கட்டிக் கொண்டாள்; தனது பட்டத்துக் குதிரை மீது ஏறி அமர்ந்து அன்று 4.4.1858 இல் இரவோடு இரவாக ஜான்ஸியை விட்டுப் புறப்பட்டாள். இவளுடைய உயிருக்கு உயிரான தோழியர் சிலரும் இவளைப் போலவே போருடை தரித்துக் கொண்டு புறப்பட்டனர்; படைவீரர்கள் சிலரும் தொடர்ந்தனர். செல்லும்போது, இவளையும் இவள் பரிவாரத்தினரையும் ஆங்கிப் படைவீர்கள் மூன்று இடங்களில் வழிமறித்தனர். அப்படி மறித்தவர்களில் பலரை, ராணிதன் உடைவாளுக்கு இரையாக்கி விட்டு முன்னேறிச் சென்றாள். இவளுடைய பரிவாரத்தினர் சிலர் உயிரிழந்தனர். இவளை ஏற்றி வந்த பட்டத்துக் குதிரை உடலிலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆயினும் எஜமான் விசுவாசம் உள்ள அந்தக்குதிரை அவளை நூற்றி இருபது மைல் தொலைவில் உள்ள கல்பி என்ற நகரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது. முந்திய நாள் இரவு புறப்பட்டவர்கள் மறுநாள் மாலை மேற்படி நகரத்தை யடைந்தார்கள் என்றால், குதிரையும் பரிவாரத்தினரும் எவ்வளவு வேகமாக வந்திருக்க வேண்டும் என்பதனை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். அங்கு சென்ற அந்தக்குதிரை, ராணி, தன் முதுகிலிருந்து இறங்கிவிட்டாள் என்று தெரிந்ததும், கிழே விழுந்து இறந்துவிட்டது. தன் எஜமானியிடத்தில் அது கொண்டிருந்த மெய்யன்பை என்ன வென்று சொல்வது? ராணி, கல்பி நகரம் போய்ச் சேர்ந்து விட்டாள் என்று தெரிந்து, ரோ தன் படையுடன் அங்கு நோக்கிச் சென்றாள். இவனை எதிர்த்துக் கடும் போர் நடத்தினாள் ராணி. இடையில் தாந்தியாதோபியும் ஒரு படையுடன் இவள் உதவிக்கு வந்தான். வந்து என்ன? 23.5.1858ல் ஆங்கிலப் படைகளுக்கு வெற்றி கிடைத்தது. ராணியும் தாந்தியாதோபியும் கல்பியை விட்ட கன்று குவாலியர் ராஜ்யத்தை யடைந்தனர். ஆங்கியேர்களிடத்தில் விசுவாசம் காட்டி வந்த அந்த ராஜ்யத்துச் சிற்றரசனை விரட்டி விட்டு, கோட்டை யையும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான யுத்த தளவாடங் களையும் கைப்பற்றிக் கொண்டனர். அந்தச் சிற்றரசனுடைய படையின் பெரும்பகுதி இவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது. இது கண்டு ராணி உற்சாகம் கொண்டாள்; ஆங்கிலப் படைகளை எதிர்க்க ஆயத்தமானாள். ரோ இவளை விடவில்லை. தன் படையுடன் 16.6.1858 குவாலியரை அடைந்து முகாம் போட்டான். அப்பொழுது நல்ல கோடை காலம். ஆங்கிலத் துருப்புகள் வெயிலின் கடுமை தாங்கமாட்டாமல் தத்தளித்தன. இதைத் தெரிந்து கொண்ட ராணி, அன்று நல்ல உச்சி வேளையில் ஆங்கிலப் படைகளைத் தாக்கத் தொடங்கினாள். ஒரு குதிரையின் மீது அமர்ந்து, போர்க்களத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தன் படைவீரர்களை ஊக்கி வந்தாள். இவளே, தன்னுடைய வாளாயுதம் கொண்டு நூற்றுக் கணக்கான ஆங்கிலப் படைவீரர்களை மீளாத உலகத்துக்கு அனுப்பி வந்தாள். ஆங்கிலப் படைகள் இவளுடைய போர்த்திறத்தையும் அஞ் சாமையையும் கண்டு நிலை கலங்கிவிட்டன. இவளை வெற்றி கொள்ள முனைந்து நின்ற ரோ கூட புரட்சித்தலைவர்களுக்குள் ஜான்ஸி ராணி ஒருத்திதான். மிகச்சிறந்த மிக்க வீரம் உள்ள ராணுவத் தந்திரங்களை நன்கு அறிந்தவளாயிருந்தாள் என்று இவளைப் புகழ்ந்து கூறினான். ராணியின் படைகளை நேர்முகமாகத் தாக்கி வெற்றிகாண முடியாது என்று தெரிந்துகொண்ட ரோ, தன் யுத்த தந்திரத்தைச் சிறிது மாற்றிக் கொண்டான், தன் படையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ராணியின் படைக்கு முன் பக்கம் நிறுத்திப் போர் நடத்தும்படி செய்து விட்டு, மற்றொரு பகுதியைப் பின்புறமாக வந்து தாக்குமாறு சுற்றி வளைத்து அனுப்பினான். ராணியின் படைகள் முன்னும் பின்னுமாக நெருக்கப் பட்டன. சளைக்காமல் போராடியும் பலனில்லை. ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மடிந்தனர். ராணியின் குதிரையும் இறந்தது. கடைசியில் ராணிக்குத் துணையாகச் சுமார் பதினைந்து பேர்களே எஞ்சி நின்றனர். இனிப் போரிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று தீர்மானித்தாள். இந்தப் பதினைந்து பேருடனும், தன் அருமருந்தன்ன இரண்டு தோழியருடனும், குழந்தை தாமோதரராவுடனும், போர்க் களத்தினின்று வெளியேறி விட முயன்ற போது, ஆங்கிலப் படைவீரர்கள் குண்டுகளைப் பொழிந்தவண்ணம் இவளைத் துரத்திக் கொண்டு வந்தனர்; முன்பக்கமாகவும் சிலர் வந்து தாக்கினர். அவர்களைத் தன் வாளுக்கும் இரையாக்கி விட்டு முன்னே சென்று கொண்டிக்கையில், கூட வந்த ஒரு தோழியை, ஓர் ஆங்கிலேயன் சுட்டு வீர்த்தி விட்டான். இதற்காக ராணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கவில்லை. அந்த ஆங்கிலேயனை வெட்டி வீழ்த்திப் பழி தீர்த்துக் கொண்டு மன்னே வேகமாகச் சென்று கொண்டி ருக்கையில், பின்பக்கத்திலிருந்து ஒரு குண்டு வந்து இவள் முதுகில் பாய்ந்தது. இனி தப்பிச் சென்று, உயிர் பிழைந்திருகக்க முடியாது என்று தெரிந்து கொண்டாள். அப்பொழுதும் பதற்றமில்லாமல், அருகில் இருந் தவர்களைப் பார்த்து, நான் இறந்துவிட்டால் என் உடலை அந்நிய ஆங்கிலேயர்கள் தீண்டவிடாமல் பார்த்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை; இந்த உதவியைத்தான் கடைசியாக உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். என்று கூறினாள். அவர்களும் அப்படியே செய்வதாக அவளுக்கு உறுதி கூறினார்கள். ராணி தன் முதுகில் குண்டு பாய்ந்ததைப் பொருட்படுத்தமால் மேலே சென்று கொண்டிருந்தாள். வழியில் ஒரு கால்வாய் குறுக்கிட்டது. மிகவும் குறுகிய கால்வாய்தான். ஆயினும் அதைத் தாண்ட மறுத்து விட்டது அவள் ஏறி வந்த குதிரை; அங்கேயே தடுமாறி நின்றது. அந்தச் சமயம் பார்த்து ஒர் ஆங்கிலேயன் கத்தியால் வெட்ட, அவளது வலது தோள் பட்டை சேதமடைந்தது; அவளது ஒரு பக்கத்துக் கண் அதிர்ச்சியால் தெறித்துக் கீழே விழுந்தது. இது தருணம் பார்த்து மற்றோர் ஆங்கிலேயன் அவளது தலை மீது வாளை வீசினான். அப்பொழுதும் அவள் நிலை கலங்க வில்லை. அந்த இரண்டு ஆங்கிலேயர்களையும் வெட்டி வீழ்த்தி விட்டு, தானும் குதிரை மீது சாய்ந்த விட்டாள். இப்படிச் சாய்ந்தவள் ராணி என்று அறியாமல் இவளைத் துரத்தி வந்தவர்கள், வேறு பக்கத்திலிருந்து தங்களைத் தாக்க வந்தர்களைத் தாக்கச் சென்று விட்டார்கள். இச்சமயத்தில் ராணியின் கூட இருந்தவர்கள். மூர்ச்சை யாகிக் கிடந்த அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய், சமீபத்தி லிருந்த ஒரு குடியானவனுடைய குடிசையில் விட்டனர்; அவளுக்குச் சிறிது தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தனர். உடனே அவள் கண்கள் மலர்ந்தன. தன்னை அந்நியன் யாரும் தீண்டவில்லை என்று தெரிந்து அவள் முகத்தில் இலேசாகப் புன்முறுவல் பூத்தது. பக்கத்திலிருந்து தன்சுவீகாரப் புதல்வனை நோக்கினாள். இவனை கவனித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் தொனிக்க அருகில் இருந்தவர்களுக்குச் சமிக்ஞை காட்டினாள். அவள் உதடுகள், கடவுளின் திரு நாமத்தைச் சொல்கின்ற முறையில் அசைந்து கொடுத்தன. அவ்வளவுதான்; பாரத நாட்டு வீரர்கனைகளின் வரிசையில் நிலையான இடம்பெறத் சென்று விட்டாள் அவளுடைய உடலை வைக்கோல் போரில் வைத்துக் தகனம் செய்தனர். ராணி லட்சுமிபாய் சுயமாக ஆண்டதெல்லாம், நிகரமாக முந்நூறு நாட்கள்தான்; ஆண்ட நிலப்பரப்போ ஒரு சில நூறு சதுர மைல்களுக்கு மேல்இல்லை. ஆங்கிலேயர்களுடைய தாக்குதலை எந்த கணத்திலும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு சூழ்நிலையிலேயே அவள் ஆட்சி நடத்த வேண்டியிருந்தது. அரசியலில் முதிர்ந்த அனுபவம் பெறக்கூடிய வயதையும் அவள் அடையவில்லை. இப்படி இருந்தும் அவள் அரச கடமைகளை நன்கு உணர்ந்து ஆட்சி புரிந்து வந்தாள். தினந்தோறும் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து வாசனைப் பொருள்கள கலந்த தண்ணீரில் நீராடி விட்டுத் தூய வெள்ளைச் சேலையுடுத்தித் தெய்வ வழிபாடு செய்வாள். சுதேசி உடையவகை களையே அணிந்து கொள்ள வேண்டுமென்பதில் மிகவும் கண்டிப்பா யிருந்தாள். தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு துளசி மாடத்துக்குப் பூஜை செய்வாள். இந்த நித்தியகடமைகளை முடித்துக் கொண்டு அரசவைக்கு வந்து அரியாசனத்தில் அமர்வாள். அப்பொழுது ஆதான வித்துவான்கள் கோஷ்டி கானம் செய்வார்கள். பண்டிதர்கள் வேதமோதுவார்கள். பிறகு இவர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் ஏதேனும் ஒரு புராணக் கதையைக் சொல்லி அதற்குச் சுருக்கமாக விளக்கம் தருவார். பின்னர் ஆஜராயிருக்கும் அரசாங்க உயர்தர உத்தியோகதர்கள். படைத் தலைவர்கள் ராஜ்யத்துப் பிரமுகர்கள் இப்படிப் பலர் முன்வந்து மரியாதை செய்வார்கள்; தினசரி சுமார் எழுநூற்றைம்பது பேருக்குக் குறையாமல் இப்படி ஆஜர் கொடுத்துவிட்டுப் போவார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ராணி ஞாபகம் வைத்துக் கொண்டிருபப்ள். ஒருநாள் வராமல் நின்றவர்களை மறுநாள் நேற்று தென்படவில்லையே என்று இங்கிதமாக விசாரிப்பாள். பிற்பகல் தர்பாரின் போது ராணி பெரும்பாலும் ஆணுடையிலே பிரசன்னமாயிருப்பாள். அதாவது உடலை நீண்ட அங்கி மூடிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு குல்லாய். அதன் மீது தலைப்பாகை; இடுப்பில் ரத்தினங்கள் பதித்த உடைவாள் தொடங்கிக் கொண்டிருக்கும். ராணியிடம் முதன்மந்திரியாகச் சேவை செய்தவர் லட்சுண ராவ் என்பவர். இவர் அறையின் முன் பக்கம் ஒரமாக நின்று கொண்டு அரசாங்க நிருவாக சம்பந்தமான அலுவல்களை வரிசைக் கிராமமாகத் தெரிவிப்பார். ராணியும் உடனுக்குடன் உத்தரவுகளைப் பிறப்பிப்பாள். முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும். ஒரு தரப்பு விவாதங்களையும் கூர்ந்து கேட்டு நேர்மையுடன் தீர்ப்புக் கூறுவாள். ஒருமுறைநகரத்தில் உள்ள தையற்காரர்கள் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்துக் கம்பளிச் சட்டைகளும் குல்லாய்களும் தயாரிக்கச் செய்தாள். நான்கு நாட்களில் ஆயிரக் கணக்கில் தயாராயின ஒருநாள் பிச்சைக்காரர்களையும் குளிரால் வாடும் மற்ற ஜனங் களையும் மகாலட்சுமு கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டாள். அனைவருக்கும் தன் கையாலேயே மேற்படி உடைகளை வழங்கினாள். அழகும் இனிமையும் கலந்து தோற்றம்! கற்பின் அணிகலன்; வீரத்தின் விளைநிலம்! கருணையின் நிறைவு; இவள் தான் ஜான்ஸி ராணி லட்சுமிபாய். 6. விக்டோரியா மகாராணியார் லண்டன் மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள கென்ஸிங்டன் அரண்மனைக்கு 1837 ம் வருஷம் ஜூன் மாதம் இருபதாம் தேதி விடியற்காலை ஐந்து மணி சுமாருக்கு, இரண்டு பேர் வேகமாக வந்து, அரண்மனையின் முன் வாயிற் கதவை இலோசகத் தட்டினர். கதவு திறந்தது. என்ன விசேஷம்? பட்டத்து இளவரசியைப் பார்க்க வேண்டும் முடியாது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். இல்லை, அவசியம் பார்க்க வேண்டும். ராஜகாரியமாக வந்திருக் கிறோம். அவசரம். இளவரசி எழுப்பப்பட்டதும், உடனே எழுந்து வெளியே வந்தாள். இரவு நேரங்களில் அணிந்து கொள்கிற ஒரு கவுனின் மேலே ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாள். தலைமயிர் களைந்து இரண்டு தோள்களின் மீதும் விழுந்திருந்தது. இவளைப் பார்த்ததும் வந்திருந்த இரண்டு பேரும் மண்டியிட்டு வணக்கம் செலுத்தினர்; மகாராணியே என்று அழைத்து இவள் கையை முத்தமிட்டனர். இவள் ஒரு கணம் திகைத்தாள். நான்காவது வில்லியம் மன்னர் சற்று முன்பு இறந்து விட்டார். தாங்கள் தான் இனி மகாராணி இதைக் கேட்டதும் இவள் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின. அவ்வளவுதான் சுயநினைவு இழக்க வில்லை. வந்திருந்த இருவரில் ஒருவர் காண்டர்பரி பிரதம பாதிரி; மற்றொருவர் அரண்மனைப் பிரதம நிருவாக அதிகாரி. உடனே பிரிவுக்கவுன்சில் கூடியது. இளவரசி, வழக்கமான விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டாள். அப்பொழுது இவள் நடந்து கொண்ட தோரணை, கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது; இவளிடம் பெருமதிப்புக் கொள்ளத் தொடங்கினார்கள். இவள் தான் விக்டோரியா மகாராணி. விக்டோரியாவுக்கு முன்பு 1830 முதல் 1837 வருஷம் வரை ஆண்ட நான்காவது வில்லியம் மன்னனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் இளமையிலேயே இறந்து விட்டன. இதனால் அவனுக்குப் பிறகு அவன் சகோதரன் கெண்ட் பிரபு பட்டத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் 1820ம் வருஷம் இறந்து விட்டான். எனவே அவனுடைய ஒரே மகளான விக்டோரியா பட்டத்துக்குரியவளானாள். குழந்தைப் பருவத்தில் பெர்டி என்ற செல்லப்பெயரிட்டு அழைக்கப் பட்ட விக்டோரியா பிறந்த எட்டாவது மாதத்திலிலேயே தந்தையை இழந்து விட்டாள். தன் தாயின் போஷணையிலும் அம்மான் லியோபால்ட் என்பவனுடைய பாதுகாப்பிலும் வளர்ந்து வந்தாள். இந்த லியோபால்ட் தான் ஹாலந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர பெல்ஜிய நாட்டின் முதல் அரசன். இவளுக்கு ஐந்தாவது வயது நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு ஜெர்மானிய உயர் குடும்பத்தைச் சேர்ந்த லெஷென் என்பவள் செவிலித் தாயாக நியமிக்கப்பட்டாள். இந்த லெஷென் மகா கண்டிப்புக்காரி. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை ஒரு காரியக்கிரமத்தை வகுத்துக் கொடுத்து அதன் பிரகாரம் இவளை நடந்து வரும்படி செய்தாள். பதினெட்டாவது வயதில் பட்டமேற்கிற வரை விக்டோரியா இந்த லெஷென் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்தே நடந்து வந்தாள். தாயாருடைய செல்வாக்கைக் காட்டிலும் இந்த லெஷென்னு டைய செல்வாக்குத்தான் விக்டோரியாமீது அதிகமாகப் படிந்திருந்தது. லியோபால்ட் அம்மான் பெல்ஜியம் அரச பீடத்தை ஏற்றதிலிருந்து அவனுடைய கடைசிக் காலம் வரை சுமார் முப்பத்து நான்கு வருஷகாலம் அவனுக்கும் விக்டோரியாவுக்கும் இடைவிடாத கடிதப்போக்கு வரத்து இருந்து வந்தது. இந்தக் கடிதங்களின் முலம் லியோபால்ட், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்திய நாட்டுக்கொள்கையை, தன் போக்குக்குத் திருப்பிவிட முயன்றாள். ஆனால் விக்டோரியா இதற்கு இடம் கொடுக்க வில்லை. தலையிட வேண்டாமென்று நாசூக்காகவும் மரியாதையாகவும் தெரிவித்துவிட்டாள். விக்டோரியா பட்டமேற்றபோது லார்ட் மெல்போர்ன் என்பவன் பிரதம மந்திரியாயிருந்தான். இவன் விக் கட்சியைச் சேர்ந்தவன். இதனை தாராளக் கட்சி என்று ஒருவாறு சொல்லலாம். இப்பொழுது இது லிபரல் கட்சி என்று அழைக்கக்படுகிறது. இந்த மெல்போர்ன்தான், விக்டோரி யாவுக்கு அரச கடமைகள் பலவற்றை அவ்வப்பொழுது தெரிவித்து இவளுக்கு ஆளும் வழிணைத் தீட்டிக் கொடுத்தவன். இவன் தன்னுடைய விக் கட்சி யினிடத்தில் விசவாசமுள்ள திரீகளையே விக்டோரியாவுடன் நெருங்கிப் பழகக் கூடிய சேடிகளாகவும் மற்ற அரண்மனைச் சிப்பந்தி களாகவும் நியமனம் செய்வித்தான். தன் கட்சியின் செல்வாக்குக்கு விக்டோரியா உட்பட வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால் பிறர் தலையீட்டை விரும்பாதவளாகவே கடைசி காலம் வரை இருந்து வந்தாள் விக்டோரியா. விக்டோரியாவுக்கும் ஒரு ஜெர்மானிய பிரபு குடும்பத்தைச் சேர்நத் ஆல்பர்ட் என்பவனுக்கும் 1840 வருஷம் பிப்ரவரி மாதம் பத்தாந்தேதி லண்டனில் திருமணம் நடந்தேறியது. தனது திருமணத்து உடைகள் யாவும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டவையாயிருக்க வேண்டும் என்று விக்டோரியா வற்புறுத்தி அப்படித் தயாரிக்கப்பட்ட உடைகளையே அணிந்து கொண்டாள். சுதேசியத்தில் அவ்வளவு பற்று இவளுக்கு இருந்தது. விக்டோரியாவும், ஆல்பர்ட்டும் கணவனும் மனைவியுமாக வாழத் தலைப்பட்டு விட்டபோதிலும் ஒருவரை யொருவர் அறிந்து கொள் வதற்குச் சிறிது காலம் பிடித்தது. அறிந்து கொண்ட பிறகு இருவரும் ஈருடலும் ஓருயிருமாகவே வாழ்ந்தார்கள். குடும்ப விவகாரங்களிலா கட்டும், அரச காரியங்களிலாகட்டும், ஆல்பர்ட் சொன்னபடியே விக்டோரியா நடந்து வந்தாள். இதனால் மந்திரி சபைக்கும் இவளுக்கும் சில சமயங்களில் சிறு பிணக்குகள் ஏற்படுவதுண்டு. அவைகளை இவள் வெகுசாமாத்தியமாகச் சமாளித்து வந்தாள். தன் சொல்லுக்கு மதிப்பு இருக்கும்படியாகவே பார்த்துக் கொண்டாள். விக்டோரியாவின் ஆட்சி மேன்மையும், பிரகாசமும் பெற்றுக் கொண்டு வருகிற தருணத்தில் ஆல்பர்ட் 1861 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினான்காம் தேதி டைபாயிட் ஜுரத்தால் இறந்துவிட்டான். அப்பொழுது இவளுக்கு நாற்பத்திரண்டு வயது. இவளுக்கு இந்தப் பிரிவு துக்கத்தின் சிகரமாயிருந்தது. இவளுடைய வாழ்க்கைப் போக்கையே அது மாற்றி விட்டது. அரசு போகங்களி லிருந்து ஒதுங்கி நின்றாள். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாசம் இவளுக்குப் கசப்பாயிருந்தது. இதனால் தன் கடைசி காலம் வரையில் லண்டனுக்குப் புறம்பான ஓர் அரண்மனையில்தான் வசித்து வந்தாள். கணவன் மரணத்துக்குப் பிறகு இவள் ஏழு தடவைதான் பார்லிமெண்ட் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டாள். அதுவும் மந்திரி சபையின் வற்புறுத்தலுக்கிணங்கி, நெடுங்காலத்திய சாம் பிரதாயத்தை முன்னிட்டு. இங்ஙனம் துக்கத்திலேயே ஆழ்ந்து விட்டவளாயிருந்தாலும் விக்டோரியா ஒரு கணங்கூடத் தன் அரசகடமைகளை மறக்க வில்லை; துறக்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் கணவன் இருந்த காலத்தில் அரச கடமைகளை எவ்வளவு கண்ணுங் கருத்த மாக நிறைவேற்றி வந்தாளோ, அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தீவிரத்துடனேயே நிறைவேற்றி வந்தாள். மற்றும் மந்திரி சபையினர் எந்த ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத்துக் கொண்டாலும் தன்னை முன் கூட்டிக் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அப்படிக் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தத் தனக்கு உரிமை உண்டென்றும் சொல்லி அதை நடைமுறையிலும் கொண்டுவரச் செய்தாள் விக்டோரியா. ஆனாலும் தன்னுடைய பொறுப்போ அதிகாரமோ சட்ட வரம்புக்குட்பட்டது என்பதை இவள் மறந்துவிடவில்லை. ருஷ்யாவுக்குத் தெற்கில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் வசிக்கும் கிறிதுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உரிமை பற்றின துருக்கிக்கும் ருஷ்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இது 1853ம் வருஷம் பெரும் போராக மூண்டது. இதற்கு கிரிமியாப் போர் என்று பெயர். இதில் ருஷ்யாவுக்கு விரோதமாகத் துருக்கி, இங்கிலாந்து, பிரான், ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து கொண்டன. போரின் இறுதியில் ருஷ்யா தோல்வியுற்றது. ஆனால் இரு தரப்புப் படைகளுக்கும் பலத்த தேசம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் போது தான் பிளாரென் நைட்டிங்கெல் என்ற அம்மையார் காயமடைந்த படைவீரர்களுக்கு அற்புதமான சேவை செய்தாள். காயமடைந்தவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் அவ்வப்போது உதவி கிடைப்பதற்காக இங்கிலாந்தில் பெண் மக்கள் அடங்கிய கஷ்ட நிவாரணக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் வேலைகளை விக்டோரியாவே நேரில் மேற்பார்வை செய்து வந்தாள். இவளுடைய ஏற்பாட்டின் பேரில் தான் போரில் அதிகப்படியான வீரங்காட்டுபவர் களுக்கு, விக்டோயா கிரா என்ற வீரச் சின்னம் வழங்கும் வழக்கம் நடைமுறையில் வந்தது. அடுத்தபடி நமது பாரத நாட்டில் 1857 ம் வருஷம் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று தவறாக அழைக்கப்படுகிற சுதந்திரப் போராட்டத்தைச் சொல்ல வேண்டும். இந்த காலம் விக்டோரியாவுக்குப் பெரிய மன வேதனையை அளித்ததாகச் சொல்ப்படுகிறது. அதுகாறும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிருவாகத்துக்கு உட்பட்டிருந்த நமது நாடு 1858 ஆம் வருஷத்திலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடியான நிருவாகத்துக்குட்படுத்தப்பட்டது. இந்த நிருவாக மாற்றத்தை யொட்டி விக்டோரியா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரகடனத்தை வெளியிடச் செய்தாள். இதில் இந்தியப் பிரஜைகள் எந்த விதமான வேற்று மைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்களென்றும், எல்லோருக்கும் சட்டப்படி ஒரே மாதிரியான நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்று திறமையான இந்தியர்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படுமென்றும் இப்படிச் சில கருத்துக்கள் காணப்பட்டன. இந்தப் பிரகடனம் விக்டோரியாவின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. பிற்காலத்தில் இந்திய தேசிய காங்கிரஷ் கூட்டங்களில் இந்தியர்களுக்கு அரசாங்க நிருவாகத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பும் உரிமையும் அதிகரிக்கப்பட வேண்டு மென்று கொண்டு வரப்ட்ட தீர்மானங்களின்பேரில் பேசியவர்கள் இந்தப் பிரகடனத்தை தங்கள் கோரிக்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டினர். விக்டோரியாவைப் போல் நீண்ட காலம் அரசாண்ட ஒரு சிலரையே உலகு சரித்திரத்தில் காண முடிகிறது. இவள் மொத்தம் அறுபத்து மூன்று வருஷ காலம் ஆண்டாள். இவள் ஆட்சியின் வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா ஆகிய எல்லாம் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டன. விக்டோரியா சகாப்தம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இவளுடைய ஆட்சி சிறப்புடையதாயிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சூரியன் அதமிப்பதில்லை என்ற வாசகம் எழுத்துக்கு எழுத்து உண்மையாக இருந்தது. மற்றும் இவளுடைய ஆட்சி காலத்தில் தான் பாமர்ட்டன், டிரேலி, கிளாட்டன் போன்ற அரச தந்திரிகள் பொறுப்பான பதவிகளில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குப் பெயரும் புகழும் ஏற்படும் படி செய்தனர். ஆங்கில மொழி உலகத்தின் மூலை மூடுக்குகளுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. டென்னிஸன், வொர்ட்வொர்த், தாக்கரே போன்ற மகா மேதைகள் மூலம் ஆங்கில இலக்கியம் வலியும், பொலிவும் பெற்றது. பிரிட்டிஷ் மக்களுடைய நடை உடை பாவனைகளில் கண்ணியமும் நிதானமும்நிரவியிருந்தன. விக்டோரியா ஒரு பெரிய சாம்ராஜ்யத்துக்குத் தலைவியா யிருந்தது போல் ஒரு பெரிய குடும்பத்துக்கும் தலைவியாயிருந்தாள். இவளுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். இவளுடைய நான்காவது தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதாவது இவளுடைய பேரன் பேத்திகளுக்குப் பிறந்தவர்கள் மட்டும் மொத்தம் முப்பதேழுபேர். இவளுடைய பெண் வயிற்றுப் பேரன்மார்களில் ஒருவன்தான் முதல் உலக மாகயுத்தத்தின் போது ஜெர்மனியை ஆண்டவில்லியம் கெய்ஸர். விக்டோரியா 1901 ம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி எண்பத்திரண்டாவது வயதில் தனது இறுதி யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டாள். இந்த யாத்திரையைத் தொடர்ந்து சென்ற ஊர்வலத்தில் ஐரோப்பாவை ஆண்டு வந்த அரச வமிசத்தினர் பலரும் காணப்பட்டனர். இவர்கள் அத்தனை பேரும் இவளுடைய சந்ததியினேரே. விக்டோரியாவின் ஆட்சியை, கருணையும் கண்டிப்பும் கலந்த ஆட்சி என்று சுருக்கமாகச் சொல்லலாம். 7. சுல்தானா ரஜியா இந்தியாவின் மீது பல தடவைபடையெடுத்து வந்த வெற்றி கண்டு முலீம் ஆட்சிக்கு அடிகோலிவிட்டு 1206 ம் வருஷம் இறந்து போன முகம்மது கோரிக்குப் பிறகு டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கிய அடிமை அரசர்கள் முதல் மொகலாயர் ஆட்சி முடியும்வரை மொத்தமாகப் பார்த்தோமானால், ஒரே ஒரு பெண்ணரசி தான் தென்படுகிறாள். அவள்தான் சுல்தானா ரஜியா, ரஜீயாவுத்தீன் என்றும் அழைப்பர் இவளை, இவள் அடிமை அரசர்களின் வரிசையில் நான்காமவள், இவள் ஆண்டது 1236 முதல் 1240 ம் வருஷம் வரையில் இங்கே ஒரு வார்த்தை, அடிமை அரசர்கள் என்று சரித்திர நூல்கள் சம்பிரதாயமாக அழைத்து வருகின்றனவாயினும் உண்மையில் இது சரியில்லை. அடிமைத்தனமும் அரசத்தன்மையும் எப்படி ஒன்றுசேர முடியும்? உண்மைக் கருத்து என்னவென்றால், ஒரு காலத்தில் அடிமைகளாயிருந்து, பிறகு தங்கள் திறமையைக்காட்டி, விடுதலை பெற்று அரச பீடத்தை அடைந்தவர்கள் என்பதுதான். இதைச்சிறிது விரித்துக் கூறுவது அவசியம் யுத்தத்தில் பிடிபட்டவர்களையும், வறுமை காரணமாகப் பெற்றோர்களால் காப்பாற்ற முடியாத நிலையிலுள்ள இளைஞர்களையும் அடிமை கொள்ளும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்து வந்தது. இங்ஙனம் அடிமை கொள்ளப்பட்டவர்களில் அநேகர், தங் களுடைய அறிவினாலும், உழைப்பினாலும் அடிமை கொண்ட எஜமானர் களின் விசுவாசத்தைப் பெற்று விடுதலையடைந்து மேலான பதவியை அடைச்தார்கள். ஒருசிலர் இந்த எஜமான்களுடைய குடும்பத்துப் பெண்களை மணந்து கொண்டும் இருக்கிறார்கள். இப்படி முன்னுக்கு வந்தவன்தான் அடிமை அரசர்களில் முதல்வனான குத்புத்தீன் ஐபெக். இவனையும் இவனுக்குப் பின்னால் இவன் வழி வந்தர்களையும் அடிமை அரசர்கள் என்று அழைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. குத்புத்தீன் ஐபெக், தில்லி சிங்காதனத்தில் நான்கு வருஷகாலம் (1206 முதல் 1210 ம் வருஷம் வரை) வீற்றிருந்தான். ஒருநாள் குதிரை மீதேறிப் பந்தாடிக் கொண்டிருக்கையில் - இந்த விளையாட்டை போலோ என்று ஆங்கிலத்தில அழைப்பர் - குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்து போனான். இவனுக்குப் பிறகு இல்டுட் மிஷ் என்பவன் பட்டத்துக்கு வந்தான். இவனை அல்டாமிஷ் என்றும் சிலர் அழைப்பவர். இவனும் ஓர் அடிமையாயிருந்தவனே. இவனுடைய அழகையும், சாதுரியத்தையும் பார்ததுக் குத்புத்தீன் இவனை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கித் தன் ஆதரவில் வைத்துக் கொண்டான். இவனும் படிப்படியாக, தன் சாமர்த்தியத்தினால் குத்புத்தீன் மதிப்பிலே வளர்ந்து வந்து கடைசியில் அவனுடைய மகளை மணந்து கொண்டான். அவனுக்குப் பிறகு ஆளும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். இவன் 1211 முதல் 1236 வருஷம் வரை சுமார் இருபத்தாறு வருஷ காலம் ஆண்டான். இவன் பல போர்கள் நடத்தி, தன் அதிகார எல்லையை விதரித்துக் கொண்டான்; கலைஞர்களையும், புலவர்களையும் வெகுவாக ஆதரித்தான். இவன்தான் டில்லியைச் சேர்ந்தாற் போல், இருக்கும் குதுப்மினார் என்ற தூபியையும், சுற்றியுள்ள கட்டடங்களையும் விரிவுபடுத்தி 1230 ம் வருஷத்துக்குப் பிறகு பூர்த்தி செய்தான். இல்டுட்மிஷ் மன்னன் 1236ம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இறந்து போனான். இவன் மரணப் படுக்கையில் இருந்த பொழுது சுற்றியிருந்த ஆதானிகர்கள், தங்களுக்குப் பிறகு அரச பதவியில் யார் அமர வேண்டும் தங்கள் உத்தேசம் என்ன? என்று கேட்டார்கள். என்னுடைய பிள்கைளில் யாருக்கும் அரச பதவியை வகிக்கும் தகுதியில்லை. ஆகையால், என்னுடைய மகள் ரஜியாவை அரச பதவிக்கு நியமிக்கிறேன். என்று கூறினான். இதைக் கேட்ட ஆதானிகர்கள். ஒரு பெண் அரசபீட பதவியை வகிப்பதாவது என்று முணுமுணுத்தாக்ள். இதைக் அகட்ட இல்டுட் மிஷ். உங்களுக்குத் தெரியாது அவளுடைய திறமை. என் ஆண் பிள்ளை இருந்து அவள் அரசு நடத்துவாள் என்று சொல்லி விட்டுக் கண்மூடிக் கொண்டான். ஆனால் ஆதானிகர்கள் அவனுடைய விருப்பத்தை நிறை வேற்ற தயாராக இல்லை; ஒரு பெண் பிள்ளைக்குத் தலை வணங்கு வதாவது என்று சொல்லி இல்டுட்மிஷனுடைய மூத்த மகன் ருக்னுத்தீன் பிரு என்பவனை அரச பீடத்தில் அமர்த்தினார்கள். அவன் சுகபோக வாழ்க்கைக்கு மட்டுமே தகுதியுடைவனாக இருந்தான். தன் பதவிக்குக் தகுந்தபடி நடந்து கொள்ளவும் அவனுக்குத் தெரியவில்லை. சுமார் ஆறுமாத ஆளுகையோடு இவன் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. பிறகு ரஜியா அரச பீடத்தல் அமர்ந்தாள். இவள் அரச பதவியை ஏற்கக்கூடாது என்று முதலில் ஆட்சேபித்தவர்களே, இப்பொழுது இவளுக்கு ஆதரவு தந்தார்கள். ரஜியா சிறுவயதிலேயே குர் ஆணை நன்றாக மனப்பாடம் பண்ணியிருந்தாள். இவளுடைய ஞாபக சக்தியைக் கண்டு இல்டுட் மிஷுக்கு ஒரே ஆச்சரியம். வேறு பல துறைகளிலும் இவள் பயிற்சி பெற ஏற்பாடு செய்தான். அவற்றில் இவள் நல்ல தேர்ச்சி பெற்றாள். இவள் பட்டமேற்றவுடன், பீரூ ஆண்டபோது கலகத்துக்குக் கிளம்பியவர்கள் மீது படையெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இவளுக்கு ஏற்பட்டது. அப்படியே சென்று கலகம் செய்தவர்களில் முக்கியமானவர்களைத் தலைதூக்க முடியாதபடி செய்தாள். இங்ஙனம் தனக்கு எதிர்ப்பு இல்லாமற் செய்து கொண்டு, ராஜ்ய நிர்வாகத்தின் மீது கவனம்செலுத்தினாள். சிங்காதனத்தில் அமர்ந்து அரச காரியங்களைக் கவனிக்கிற போதும் சரி, வெளியில் போர்க் களங்களுக்கோ அல்து வேறு இடங்களுக்கோ செல்ல நேர்கிற போதும் சரி, முகமூடி இல்லாமலும் ஆண் உடையிலுமே இருப்பாள் இவள் சுருசுருப் பாக அலுவல்களைக் கவனித்து வருவதைப் பார்த்து ஆதானிகர்கள் பிரமித்துப் போனார்கள். ஆனால் இவர்களில் ஒரு சிலருக்கு இவள் ஒரு பெண்தானே என்ற அலட்சியம் இருந்தது; உள்ளூற இவள்மீது பொறாமை யும் கொண்டிருந்தார்கள். அரசவையில் இப்படிப் பட்டவர்களுடைய செல்வாக்கு வரவர வளர்ந்து வந்தது. ரஜியாவுக்கு இது தெரியாமல் இல்லை. இவர்களுடைய செல்வாக்கை மேலும் வளர விடாதபடி செய்ய, இவர்களுக்குப் போட்டி யாக அபிசீனிய நாட்டினனான ஜலாலுதீன் யாகூப் என்ற ஓர் அடிமையை மேலான ஒரு பதவியில் வைத்து, அவனுக்கு எல்லா ஆதரவுகளையும் காட்டி வந்தாள். இவள் குதிரை மீது ஏறிக் கொண்டு வெளியே புறப்பட முற்படுகிறபோது, அவன் இவளைக் குதிரை மீது ஏற்றி விடுவான். இவள் கூடவே எப்பொழுதும் இருப்பான். ஓர் அந்நியனுக்கு இவள் இப்படிப் பரிவு காட்டி வருவது இவளிடத்தில் விசுவாசம் காட்டி வந்த ஆதானிகர்களுக்குக் கூடப் பிடிக்கவில்லை. இவர்களும், ஏற்கனவே இவள் மீது பொறாமை கொண்டிருந்தவர்களும் சேர்ந்து இவளைச் சிங்காதனத்திலிருந்து அப்புறப்படுத்த முனைந்தார்கள். முதலில், பஞ்சாப் மாகாணத்தை இவளுடைய பிரநிநிதியா யிருந்து ஆண்டு வந்த அயா என்பவன் ரஜியாவுக்கு விரோதமாகக் கிளம்பினான். அவன் மீது இவள் படையெடுத்துச் சென்று அடக்கினாள். இதற்குப் பிறகு பாட்டிண்டா என்ற ஒரு பிரதேசத்தின் தலைவனாகிய அல்ட்டூனியா என்பவன், ரஜியாவுக்கு விரோதமாகக் கிளம்பினான். இவனை அடக்க ரஜியா யாகூப்பின் துணைகொண்டு பெரும் படையுடன் சென்றாள். ஆனால் முற்பட்ட சமயத்தில் இவளுடைய ஆதானிகர்களில் சிலர் எப்படியோ சுபட நாடகம் நடித்து யாகூப்பைக் கொலை செய்து விட்டனர். அது மட்டுமன்று; ரஜியாவையும் சிறைப்படுத்தி, அல்ட்டூனியா வின் வசம் ஒப்புவித்து விட்டு இவளுடைய சகோதரன் பஹ்ராம் என்பவனைச் சுல்தானாகப் பிரகடன் செய்தனர். ஆனால் ரஜியா சிறைப்பட்டிருந்த நிலையிலும் மனத் தளர்ச்சி யடையவில்லை. இதிலிருந்து விடுதலை பெறச் சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியில் தன்னுடைய சாமர்த்தியத்தினாலும், இனிய சுபாவத்தினாலும் அல்ட்டூனியாவைத் தன் வசமாக்கிக் கொண்டு அவனை விவாகம் செய்து கொண்ட விட்டாள். பிறகு இவளும், அல்ட்டூனியாவும் சேர்ந்து ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு டில்லி சிங்காதனத்தைக் கைப்பற்ற பஹ்ராம் மீது படையெடுத்துச் சென்றார்கள். இவர்களுடைய படையைக் காட்டிலும் பஹ்ராமின் படை மிகப் பலமுடையதாயிருந்தது. எனவே, அந்தப்படையை இவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை; தங்கள் படையுடன் பின்வாங்கி வருகையில், பஹ்ராமின் ஆட்கள் வசம் அகப்பட்டுக் கொண்டார்கள். 1240ம் வருஷம் அக்டோபர் மாதம் பதின்மூன்றாம் தேதி இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். இதனோடு ரஜியாவின் ஆட்சி முற்றப்பெற்றுவிட்டது. பார்க்கப் போனால் ரஜியா ஆண்டதெல்லாம் சுமார் மூன்றரை வருஷ காலம்தான், இந்தச் சொற்பகாலத்துக்குள், நாட்டில் தன்னால் இயன்ற வரையில் அதைதியை நிலைநாட்ட முயன்றாள், இவளுடைய ஆளும் திறனைப் பற்றி ஒரு சரித்திராசிரியன் பின்வருமாறு வியந்து பாராட்டு கிறான்; இவள் ஒரு சிறந்த அரசி; நிதானமும் நேர்மையும் படைத்தவள், எல்லோருடைய நன்மைக்காகவும் பாடுபட்டாள்; அறிஞர்களை ஆதாரித்தாள்; எல்லாருக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்கும்படி செய்தாள்; குடிமக்களின் நலன் ஒன்றையே தன் சிந்தனையில் கொண்டிருந்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக இவளுடைய போர்த்திறம் வியக்கத்தக்கதாயிருந்தது. ஆண் மகனாயுள்ள ஓர் அரசனுக்கு என் னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ, அவையாவும் இவளிடம் குடி கொண்டிருந்தன. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒர் அரசனைப் போலவே நடந்து கொண்டாள் ஆனால் துரதிருஷ்டவசாக இவள் ஒரு பெண்ணாக இருந்து விட்டபடியால் இவளுடைய ஆட்சி சீக்கிரத்தில் முடிவு பெற்றுவிட்டது. 8. ஆண் கோலத்தில் ஆண்ட அரசி உலகத்திலேயே முதன்முதலாக நாடாண்ட ஒரு நங்கையை எகிப்து தேச சரித்தரித்தில் சந்திக்கிறோம். இவள் பெயர் ஹாஷெப்ஸுட். ஹடாஸு என்றும் சுருக்கமாக அழைப்பார்கள். இவள் பெண்ணாகப் பிறந்த விட்ட போதிலும் ஆண்போல் இருந்து அரசாட்சி நடத்தினாள். எப்படி யென்று பார்ப்போம். கிறிது, பிறப்பதற்குச் சுமார் முப்பத்தைந்து நூற்றாண்டு களுக்கு முன், எகிப்து ராஜ்யம், செல்வச் செழுமையிலும், பொருள் பெருக்கத்திலும், கலை வளத்திலும், உலக்கதார் வியக்கும் வண்ணம் மேலோங்கி நின்றது. இந்தக் காலத்தில் தூட்மோஸே என்ற ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவனை முதலாவது தூட்மோஸே என்று சரித்திரம் அழைக்கிறது. ஏனென்றால், இவனுக்குப் பிறகு, இதே பெயரைத் தாங்கிக் கொண்டு மூன்று நான்கு அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்களுக்கு இரண்டாவது மூன்றாவது முறையே எண்ணிக்கை கொடுத்து அழைப்பது சரித்திர சம்பிரதாயம். இந்த முதலாவது தூட்மோஸே, சிறந்த ராஜதந்திரி; நாடு பெருக்க வேண்டும் என்பதில் ஆசை கொண்டவன்; ஆசியா கண்டத்தின் கிழக்குப் பக்ககத்திலுள்ள சில நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, வெற்றி கண்டு, அந்த நாடுகளை எகிப்பது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டான். இவனுக்குச் சொந்த மனைவியின் மூலம் ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தார்கள்; வைப்பாட்டியின் மூலம் ஒரு மகன் பிறந்தான். ஆகமொத்தம் மூன்றுபேர். மூத்த பெண்தான் ஹடாஸு. வைப்பாட்டிக்குப் பிறந்த மகனும் பிற்காலத்தில் ஆளும் உரிமை பெற்றான். எகிப்தில் அதிசயமான வழக்கம் ஒன்று உண்டு, அதாவது தந்தை மகளை மணந்து கொள்வான்; சகோதரன் சகோதரியை மணந்து கொள்வான். இந்த வழக்கம் பெரும்பாலும் அரச வம்சத்திலேயே நிலவி வந்தது. காரணம், அரச வம்சத்தின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான். அந்நியர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டால் நாளாவட்டத்தில் அந்தத் தூய்மை மங்கி மாண்டுபோகுமென்று கருதப்பட்டது. முதலாவது தூட்மோஸே, கி.மு.1545 முதல் 1514-ம் வருஷம் வரை, சுமார் முப்பது வருஷ காலம் ஆண்டான். இவன் தன் கடைசி நாட்களில், தன் மகள் ஹடாஸுவை மணந்து கொண்டான்; தன்னோடு சேர்ந்து ஆளும் உரிமையை இவளுக்கு அளித்தான். அந்த காலத்தில் எகிப்தில், பெண்களுக்குச் சொத்துரிமை உள்படச் சகல உரிமைகளும் அளிக்கப்பட்டிருந்தன. விவசாயம், தொழில், அரசியல் இப்படிப் பல துறைகளிலும் ஆண்களும் பெண்களும் சம பங்கெடுத்துக் கொண்டார்கள். நைல் நதி பாயும் எகிப்தில் பெண்களுக்குச் சட்ட ரீதியாக உயர்ந்த தானம் அளிக்கப்பட்டிருந்தைப் போல், முற்காலத்திலோ தற் காலத்திலோ உலத்தில் வேறெந்த நாட்டிலும் அளிக்கப் பட்டிருக்க வில்லை என்று மாக் முல்லர் என்ற அறிஞன் கூறியிருக்கிறான். இருந்தாலும், பெண்கள் தனியாக அரச பதவியில் அமர்ந்து ஆட்சி செலுத்தக்கூடாது, அப்படி ஆட்சி செலுத்த வேண்டும் என்று அவள் விரும்பினாலும் சரி, அல்லது அவள் ஒருத்திக்கே ஆளும் தகுதி யிருந்தாலும் சரி, அவள் பெயரளவுக்காவது ஓர் ஆண்மகனைக் கூட்டாக வைத்துக் கொண்டுதான் ஆள வேண்டும். என்ற கருத்தைப் பொதுமக்கள் கொண்டிருந்தார்கள். இந்தக் கருத்து, நடைமுறையில் கண்டிப்பாக இருந்து வரவேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். ஜனங்களின் இந்த மனப்போக்கை, ஹடாஸு தான் முதலாவது தூட்மேஸேயுடன் சேர்ந்து ஆளும் உரிமையைப் பெற்ற சிறிது காலத்துக் குள்ளே தெரிந்து கொண்டாள். அவர்களுடைய மனப்போக்கை அநுசரித்தே நடந்து கொள்ளத் தீர்மானித்தாள். ஹடாஸு ஆளும் உரிமை பெற்ற சொற்ப காலத்துக்குள் தத்தையும் கணவனுமான முதலாவது தூட்மோஸே இறந்துவிட்டான். அவனுக்குப் பிறது ஹடாஸு, தன் அடுத்த சகோதரனான இரண்டாவது தூட்மோ ஸேயை மணந்து கொண்டு அவனுடன் நேர்ந்து ராஜ்யபாரம் நடத்தினாள். ஆனால் அவன் இவளுடைய கணவனாக இருக்கக் தகுதி யற்றவனாக இருந்தான். அவனிடத்தில் இவளால் இன்பம் நுகர முடிய வில்லை. அவனும் மூன்று வருஷங்களுக்குப் பிறகு இறந்து விட்டான். இவளே அவனை இறக்குமாறு செய்து விட்டாள் என்று வரலாறு கூறுகிறது. பிறகு அவனுக்கு அடுத்த சகோதரனான மூன்றவது தூட்மோஸே என்பவனை மணந்து கொண்டு அவனோடு சேர்ந்து ஆளத் தொடங்கினாள். அந்த மூன்றாவது தூட்மோஸே வயதில் இவளுக்கு மிகவும் இளையவனாக இருந்தான். பெயரளவுக்கு அவனைக் கணவனாக வைத்துக் கொண்டு, தானே சுயமாக ஆளத்தொடங்கினாள். அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வந்த எந்த ஒரு பிரகடத்திலும் தனக்கு முதல் தானம் இருக்கும்படி செய்து கொண்டாள். இப்படித் தன்னிச்சையாக ஹடாஸு நடந்து கொள்வதை மூன்றாவது தூட்மேஸேயினால் சகித்துக் கொண்டிருக்க முடிய வில்லை. இருவருக்கும் அடிக்கடி மனதாபங்கள் ஏற்பட்டு வந்தன. கடைசியில் இருவரும் பிரிந்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அப்படியே தூட்மோஸே பிரிந்து சென்று ஒரு கோயிலில் பூசாரி யாகப் பணியாற்றி வந்தான். மீண்டும் தனக்கு அரச பதவி கிட்டும் என்ற நம்பிக்கையில்தான் ஆண்டவன் தொண்டில் ஈடுபட்டுக் காலத்தைக் கழித்து வந்தான். இப்படி அவன் தன்னைவிட்டு அகன்ற போனது ஹடாஸுவுக்கு மிகவும் நல்லதாகப் போயிற்று உண்மையில் இவள்தான் அவனை விரட்டி விட்டாள் என்று சொல்ல வேண்டும். அரச பீடத்தில் அமரும் ஒவ்வோர் அரசனும், சூரியக்கடவுளின் மகன் என்ற நம்பிக்கை எகிப்தியார்களிடத்தில் வேரூன்றியிருந்தது. இந்த நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கின்ற முறையில், ஹடாஸு தன்னைப் பற்றி ஒரு கதை கட்டி விடும்படி செய்தாள்; தன்னுடைய வாழ்க்கை வரலாறாக ஒரு நூலையும் எழுதச் செய்தாள். கதை என்னவென்றால், ஹாஸுவின் தாயார் ஆஹ்மாஸி என்பவளுடைய கனவில் ஒரு நாள் சூரியக் கடவுள் தோன்றி, அம்மே, உனக்குச் சீக்கிரத்தில் ஒரு பெண் மகவு பிறக்கப் போகிறது; அந்தப் பெண் தெய்வ சக்தி பெற்றவளாக விளங்கப் போகிறாள் என்று கூறவிட்டுப் போனாராம். இப்படிக் கதைகட்டி விட்டு, தான் ஆளப்பிறந்தவள் என்பதை மக்கள் நம்பும்படி செய்து கொண்டாள். தவிர, ஆண்கள் தான் அரச பதவியில் அமர்வதற்குத் தகுதி படைத்தவர்கள் என்ற நம்பிக்கை அனுசரித்து, தன்னை ஓர் ஆண் மகனாகவே காட்டிக் கொண்டாள். அதாவது ஆண் மகனைப் போல் உடையணிந்து கொண்டும், மார்பை மறைத்துக் கொள்ளும்படி நீண்டதொரு பொய்த்தாடியும் அதற்கேற்ற மீசையும் வைத்து கொண்டு அரசபீடத்தில் அமர்ந்து அன்றாட அலுவல்களை நடத்தி வந்தாள். அரச காரியமாக வெளியில் எங்கு செல்ல நேரிட்டாலும் இந்த கோலத்துடனேயே செல்வாள். அப்பொழுது இவளைப் பார்த்தால், அசல் ஒரு போர்வீரனைப் போலவே தோன்றும். இவற்றோடு திருப்தியடையாம்ல், இவள் தன்னுடைய உருவத்தை இந்த ஆண்கோலத்திலேயே தான் எழுப்பிய மண்டபங்கள், தூபிகள் முதலியவற்றில் பொறிக்கச் செய்தாள். இவள் காலத்தில் வெளியான சாஸனங்கள் பிரகடனங்கள் முதலியவை இவளை, சூரியக் கடவுனின் மகன் என்றும் நாட்டுக்கு அரசன் என்றும் அழைக்கின்றன. ஹடாஸு, சமாதானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினாள். இவள் ஆட்சியின் கீழ், ஜனங்கள் மன நிம்மதியும், வாழ்க்கை யில் நிறைவும் பெற்று வாழ்ந்தார்கள். மற்றும் இவள், வெளி நாடுகளுடன் நல்லுறவு கொள்ள, அநேக கப்பல்களைக் கட்டச் செய்து, அவற்றில் எகிப்தில் விளையும் பலவிதப் பொருக்களை ஏற்றி அனுப்பச் செய்தாள். மத்தியதரைக் கடலோராமாக உள்ள சில நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள சில நாடுகளுக்கும் வியாபார கோஷ்டிகளையும் அனுப்பினாள். மற்றும் இவள் காலத்தில், இந்தியாவுக்கும் எகிப்துக்கும் வியாபாரப் போக்குவரத்து இருந்ததாகத் தெரிகிறது. வெளிநாடு களிலிருந்து, சிறப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதியான பலவகை மரங்கள், மிருகங்கள் வாசனைப்பொருள்கள், தந்தம் முதலியவை எகிப்தின் மார்க்கெட்டுகளை நிரப்பின என்றும், இவை ஜனங்களின் சுகபோக வாழ்க்கைக்குப் பெரிகும் உதவின என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. மற்றும் ஹடாஸு, எகிப்தின் முக்கியமான நகரங்களில் அழகான கோயில்களையும் சதுரவடிவான தூபிகளையும் கட்டச் செய்தாள். அவற்றில் எகிப்தின் பெருமைகளை விளக்கும் அநேக சிற்பங்களைப் பொறிக்கச் செய்தாள். இப்படிப் புதிய கட்டடங்கள் கட்டியதோடு, சிதிலமாகிப் போன அநேக பழைய கட்டங்களையும் புதுப்பித்தாள். சுருக்கமாக, எகிப்பதை ஒரு சிற்பக் களஞ்சியமாக்கி விட வேண்டும் என்பதே இவள் நோக்கமாக இருந்தது. ஹடாஸு, இப்படி எல்லா வகையிலும் ஓர் ஆண் மகனைப் போலவே நடந்து வந்தாளாயினும், இவள் மனம் என்னவோ அடிக்கடி காதல் சோலைக்குள் சென்று வந்தது. தான் கட்டுவித்த கோயில் ஒன்றில் சிற்பியாக வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் மீது காதல் கொண்டாள். இப்படி இவள் ஒரு சிற்பியின் மீது காதல் கொண்டு வாழ்ந்து வந்தது, பூசாரிப் பணியாற்றி வந்த இவளுடைய சகோதரனும் முன்னாள் கணவனுமாயிருந்தவனுமான மூன்றாவது தூட்மோஸேயிக்குத் தெரிந்தது. அந்தச் சிற்பியைக் கொலைசெய்து விட்டான். இதனோடு ஹடாஸுவின் காதல் நாடகம் முடிந்து விட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு இறந்து போனாள். ஹடாஸு ஆண்டது கி.மு.1501 முதல் 1479ம் வருஷம் வரை, இருபத்திரண்டு வருஷகாலம். இந்தக் காலத்தை எகிப்தின் பொன்னான காலம் என்று சொல்ல வேண்டும். 9. மேரியா தெரீஸா ஹாப்பர்க் வமிசத்தினர் என்பவர்கள் ஒரு ஜெர்மானியப் பிரபு குடும்பத்தின் வழித் தோன்றல்கள். இவர்கள் பல கிளையினராகப் பிரிந்து, ஜெர்மனி, ஆதிரியா, ஹங்கேரி, பெயின் முதலிய நாடுகளில் பல காலங்களில் அரசு செலுத்தி வந்தார்கள். இவர்களில் சிலர் ,புனித ரோம் ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்திகள் என்ற பெருமையான ஒரு பட்டத்தைப் பெயரளவுக்கு வகித்து வந்தார்கள். இந்த வமிசத்தைச் சேர்ந்த ஆறாவது சார்ல என்ற மன்னன், ஆதிரியா, ஹங்கேரி, பொஹிமியா, சிலீஷியா முதலிய நாடுகளைக் கொண்ட ஆதிரிய ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தை 1711 ம் ஆண்டிலிருந்து 1740 ம் ஆண்டு வரை ஆண்டு வந்தான். இவனுக்கு ஆண் சந்ததிகள் இல்லை; இரண்டே பெண்கள்தான். மூத்தவள் பெயர் மேரியாதேரீஸா. இவள், சிறு வயதிலிருந்தே மிகவும் சூடிகையாக இருந்தாள். இவளுடைய நுண்ணறிவையும் திண்ணிய உள்ளத்தையும் கண்டு சார்ல மன்னன் பெருமிதம் கொண்டிருந்தான். தெரீஸாவுக்குப் பதினெட்டாவது வயது நடந்து கொண்டிருந்தது. சார்ல மன்னன் இவளை, பிரான்சி டீபன் என்ற ஒரு பிரபு குமாரனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். இதற்குத் தகுந்தாற் போல் தெரீஸாவும் பிரான்சி மீது காதல் கொண்டவளாய், அவனையே விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தாள். அவனும் இவள் மீது காதல் கொண்டிருந்தான். இருவரும் காதல் கடிதங்கள் பரிமாறிக் கொண்டு வந்தனர். தெரீஸாவின் அப்போதைய மனநிலை எப்படியிருந்தது பாருங்கள்; அவள் இரவு முழுவதும் பிரான்சிஸை நினைத்துப் பெருமூச்சு விடு கிறாள் அவள் தூங்கப் போகிறாள் என்றால், அவனைப் பற்றிக் கனவு காண்பதற்குத்தான். தூக்கம் கலைந்து எழுந்து விட்டால் அவனைப் பற்றித்தான் பேசுகிறாள் தனக்காகவே அவன் பிறந்திருப்பதாக அவள் நம்புகிறாள். அவனைச் சிறிது நேரமாவது பிரிந்திருக்க அவள் தயாராக இல்லை. கடைசியில் 1736 ம் வருஷம் பிப்ரவரி மாதம் பன்னிரண்டாம் தேதி, பிரான்சி டீபனுக்கும் தெரீஸாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்கள், கருத்தொருமித்த கணவனும் மனைவியுமானார்கள். இந்த விவாகம் நடைபெற்ற நான்காவது வருஷம், அதாவது 1740ம் வருஷம் நவம்பர் மாதம் இருபதாம் தேதி சார்ல மன்னன் தன்னுடைய ஐம்பத்தாறாவது வயதில் கண்மூடிக் கொண்டான். அதற்குச் சிறிது காலம் முன்பு, தனக்குப் பின்னால் தெரீஸாவேபட்டத்துக்கு வரவேண்டுமென்று அதிகார பூர்வமான ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருந்தான். இதை அனுசரித்து, அவன் இறந்த அன்றைய தினமே தெரீஸா, சக்கரவர்த்தினி யாகப் பட்டமேற்றுக் கொண்டாள்; அன்றைய தினமே மந்திரி சபையைக் கூட்டி அரச காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினாள்; அடுத்த மாதமே, தன் கணவனைத் தன்னோடு சேர்ந்து ஆட்சி நடத்துகின்ற கூட்டு ரீஜெண்டாக நியமித்தாள். கணவனிடத்தில் தனக்குள்ள மதிப்பைக் காட்டிக் கொள்ளும் பொருட்டு இப்படிச் செய்தாளே தவிர, உண்மையில் அரச காரியங்கள் அனைத்தையும் தானே முன்னின்று நடத்தி வந்தாள். ஆள்வதற்கான எல்லாத் தகுதிகளும் இவளுக்குப் பிறவியோடு ஒட்டி வந்தன. உலகத்தில் உள்ள எல்லாப் பெண்மணிகளையும் ஒன்று சேர்த்து வைத்து, இவர்களில் யாரை ஆதிரிய சிங்காதனத்தின் வாரிசாகத் தெரிந்தெடுக்கலாம் என்று கேட்டால், நிச்சயமாகத் தெரீஸாவின் மீதுதான் எல்லார் பார்வையும் விழும் என்று ஒரு சரித்திராசிரியன் கூறுகிறான். இவள் நல்ல அழகி; முகத்தில் ராஜ களை தாண்டவமாடியது. நன்றாகப் பாடுவாள்; நாட்டியமாடுவாள்; வாத்தியங்கள் வாசிப்பாள்; லத்தீன், பிரெஞ்சு, இத்தாலிய பானிஷ், ஜெர்மன் மொழிகளில் சர்வ சரளமாகப் பேசுவதோடு ஓரளவு புலமையும் பெற்றிருந்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருந்தகைமையும் ஆண்தகைமையும்சேர்ந்து இவளிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் தெரிந்துதான் சார்ல மன்னன், தனக்குப் பின் பட்டமேற்கவல்ல வாரிசாக இவளை நியமித்தாள். தெரீஸா, ஆளத் தொடங்கிய சொற்ப காலத்துக்குள்ளாகவே, ஜனங்களுடைய விசுவாசத்தையும் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டு விட்டாள். அவர்களுடைய குறைநிறைகளை அவ்வப்பொழுது கவனித்து ஆவன செய்த வந்தாள். இவள் முதல் ஆண் குழந்தைக்கு தாயாயிருந்த சமயம், ஒரு வீதியில் வறுமையினால் உடல் மெலிந்து கிடந்த ஒரு பெண் மணியைக் கண்டாள். அப்பொழுது அவளுடைய குழந்தை, போதிய தாய்ப்பால் பெற முடியாமல் அழுது கொண்டிருந்தது. இந்தக் காட்சி, தெரீஸாவின் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. உடனே ஒரு தங்க நாணயத்தை அந்தப் பெண்மணிக்குக் கொடுக்கச் செய்தாள். ஆனால் அவள் அதைப் பெற்றுக் கொள்ள மனமில்லாமல், என் குழந்தைக்குப் பால் கொடுக்கச் சக்தியில்லாமல் இருக்கும் எனக்கு இந்தக் காசு எதற்குப் பிரயோசனம்? என்று மூணுமுணுத்தாள். இது தெரீஸாவின் காதில் விழுந்தது. உடனே அந்தக் குழந்தையைத் தன்னிடம் எடுத்து வரச் செய்தாள்; சாவதானமாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்கு, தானே பால் கொடுத்தாள் இப்படித் தாய்மைக்குரிய பண்புகள் இவளிடம் நிறைந் திருந்ததன் காரணமாக, ஜனங்கள இவளை, தங்களுடைய தாயாகக் கருதிப் போற்றினார்கள்; இவள் சென்றிவிடமெல்லாம், எங்கள் தாய் வாழ்க! என்று வாழ்த்தினார்கள். தெரீஸா ஜனங்களுக்கு அரசியாக மட்டுமில்லாமல் அரசனாகவும் இருந்தாள். இவளிடம் நிறைந்திருந்த ஆண்தகைமைதான் இதற்குக் காரணம். இவளுக்கு முடிசூட்டுவிழா நடைபெற்று முடிந்த பிறகு ஒருநாள், இவள் தலைமீது மகுடம் தரித்துக் கொண்டு குதிரைமீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தன்கையில் இருந்த உடைவாளை, திசைக் கொருதரமாக நீட்டி நீட்டிக் காட்டி வந்தாள். இவள் இப்படிச் செய்தது, இந்த வாளாயுதம் என் கையில் இருக்கிற வரையில் எந்தத் திசையிலிருந்து சத்துருக்கள் வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன். என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போலிருந்தது. அப்பொழுது ஜனங்கள், எங்கள் அரசி வாழ்க என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்ளாமல், எங்கள் அரசன் வாழ்க என்றும் சேர்த்துச் சொல்லி வாழ்த்தினார்கள் இங்ஙனம் தெரீஸா ஜனங்களுடைய அபிமானத்தைப் பெற்று வந்த போதிலும் ஒருசிலர், இவள் பட்டமேற்றத்ற்கு எதிர்ப்புக் காட்டி வந்தனர். இவளைத் தன் வாரிசாகக் சார்ல நியமித்துப் பிரகடனம் வெளியிட்டுப் போயிருந்தால் என்ன? பவேரியாவின் இரண்டு லட்சம் துருப்புகளுக்கு முன்னர், இதைப் போல் உலக்தில் இன்னும் எத்தனை பிரகடனங்கள் வெளிவந்தாலும் எல்லாம் காற்றிலே பறந்து போகும் என்று மிடுக்காகக் கூறினர் சிலர். இவர்கள் இப்படிச் சொல்லி வந்ததற்கேற்றால் போல், தெரீஸா பட்டமேற்ற சிறிது காலத்துக்குள், ஜெர்மனியைச் சேர்ந்த சிற்றரசர்கள் சிலர், இவளுக்கு ஆளும் உரிமை கிடையாது என்று சொல்லிக் கண்டனம் தெரிவித்தார்கள். ப்ரஷ்யா நாட்டு மன்னனாகிய மகாபிரடெரிக் என்பவன், ஆதிரியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சிலீஷியாவின் சில பகுதிகள் மீது தனக்குப் பாத்தியதை உண்டென்று சொல்லி, இவள் மீது போர் தொடுக்கவே துணிந்து விட்டான். இதற்கு முன்னர், தன்கோரிக்கைக்கு இணங்கி விட்டால், தெரீஸாவை, ஆதிரியாவின் அரசியாக நிலைத்திருக்கும்படி செய்ய, தான் வழிதேடிக் கொடுப்பதாக, இவளிடம் கருணை காட்டுகிறவன் போல் ஒரு செய்தி விடுத்தான். இவள் அதற்கு, ஆதிரியாவின் ஒரு சிறு பகுதியைக் கூட விட்டுக் கொடுக்க முடியாது. இதற்காக உன்னை எதிர்த்துப் போராடி அழிந்துபடுவோமே தவிர, உன்னோடு வாதிட்டுப பொழுது போக்கிக் கொண்டிருக்க மாட்டோம். என்று மிடுக்காகப் பதில் விடுத்தாள். ஆதிக்க வெறி பிடித்த பிரடெரிக் மன்னன் இனிச்சும்மா இருப்பானா? 1741ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி போர் தொடுத்து விட்டான். இந்தச் செய்தியைத் தெரீஸா, ஹங்கோரியப் பிரபுக்கள் சபைக்குத் தெரிவித்தாள். கைக்குழந்தையாயிருந்த ஜோஸப்பைத் தன்கைகளில் வைத்துக் கொண்டு வந்து நின்று, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தை உணர்த்தி உருக்கமாகப் பேசினாள். பிரதிநிதிகள் அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் எங்கள் அரசிக்காகவும் அவள் குடும்பத்துக்காகவும் உயிர் கொடுப்போம்; எங்கள் அரசன் மேரியா தெரீஸாவுக்காக உயிர் கொடுப்போம் என்று ஒரு முறைக்கு இருமுறையாக ஒரே குரலில் கூறினார்கள். இங்ஙனம் ஜனங்களுடைய பூரண விசுவாசத்தையும் வீரத்தையும் துணையாகக் கொண்டு தெரீஸா, பிரடெரிக் மன்னனை எதிர்க்கத் தயாரானாள். ஆனால் இதற்குள் பவேரியா நாட்டுச் சிற்றரசன், பிரான்ஸோடு சேர்ந்துகொண்டு, இவள்மீது போர் தொடுத்தான்; இது தெரிந்த பிரடெரிக் மன்னன், பவேரியாவின் கை ஓங்கி விடப் போகிறதே என்பதற்காக, சிலீஷாவில் ஒரு பகுதியையேனும் விட்டுக் கொடுப்பதாக இருந்தால், தான் போர் தொடுக்காமல் நிறுத்திக் கொண்டு விடுவதாகவும், இவளுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தான். தன் வலிமையையும் மாற்றான் வலிமையையும் நன்குணர்ந்த தெரீஸா இதற்கு இணங்கினாள். 1724ம் வருஷம் பெர்லின் சமரஸ ஒப்பந்தம் ஏற்பட்டது. சீலிஷாவின் ஒரு பகுதி, பிரடெரிக் மன்னனுடைய ஆதிக்கத்துக்குட்பட்டது. ஆனால் இவன் இதனோடு திருப்தியடையவில்லை. மீண்டும் இவள் மீது போர் தொடுத்தான். இவளும் விடாது போர் நடத்தினாள். பயனில்லை 1748 வருஷம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டாள். இதனால் ப்ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரித்தது. ப்ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரிப்பதை மற்ற ஐரோப்பிய வல்லரசுகள் அவ்வளவாக விரும்பவில்லை. எனவே ப்ரஷ்யாவுக்கு விரோத மாக, பிரான், ருஷ்யா, வீடன் முதலிய நாடுகள் ஆதிரியா வுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டன. ப்ரஷ்யாவுக்கு இங்கிலாந்து துணையாக நின்றது. இதன் விளைவாக, 1756ம் வருஷத்திலிருந்து 1763-ம் வருடம் வரை ஏழு வருட காலம் இந்த இரண்டு கூட்டுகளுக்கும் விட்டு விட்டுப் போர் நடைபெற்றது. இதுவே ஐரோப்பிய சரித்திரத்தில். முக்கிய இடம் பெற்றுள்ள ஏழு வருஷ யுத்ததம் எனப்படுவது. இந்த யுத்தத்தில் ஏராளமான உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்படுவது கண்டு தெரீஸா பெரிதும் வருந்தினாள். ப்ரஷ்யாவுடன் சமாதானம் செய்து கொள்வதே நல்லதென்று கருதினாள். அப்படியே 1763 ம் வருஷம் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தப்படி சிலீஷியா முழுவதும் பிரடெரிக் மன்னனுடைய ஆதிக்கத்துக்குட்பட்டது. இதற்குப் பிறகு தெரீஸா, தன் ஆயுள் உள்ள வரையில் சமாதானத்துக்காகவே உழைத்து வந்தாள். தான் பட்டமேற்ற பிறகு நடை பெற்ற யுத்தங்களில், உயிரையும் பொருளையும் இழந்து விட்ட குடும்பங்களுக்கு உதவி கிடைக்கச் செய்தாள். இங்ஙனம் தான் ஆளப் பிறந்த அரசி என்பதை உணர்த் திருந்தாலும் தெரீஸா, தன் கணவனிடம் அதிக பக்தி கொண்டிருந் தாள். தன் பட்டமேற்ற அடுத்த மாதம் அவனைத் தன்னோடு சேர்ந்து ஆளக் கூடிய கூட்டு ரீஜெண்டாக நியமித்ததொடு திருப்தியடையாமல், ஐந்து வருஷங்கள் கழித்து, 1745 - ம் வருஷம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி, முதலாவது பிரான்சி என்ற பட்டப் பெயருடன் முடிசூடச் செய்தாள். அவனும் புனித ரோம் ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தியாகக் கௌரவிக்கப்பட்டான். 1765ம் வருஷம் ஐம்பத்தேழாவது வயதில் தெரீஸாவின் கணவன் ஜன்னி கண்டு இறந்த போனான். இதற்குப் பிறகு தெரீஸா அதிகமாக வெளியே வரவில்லை. ஆயுள் முழுவதும் துக்கம் கொண்டாடினாள். தன் கணவன் அடக்கம் செய்த இடத்துக்கு அடிக்கடி சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தாள். கணவன் இறந்த மறு வருஷம், தன் மகன் ஜோஸப்புக்கு முதலாவது ஜோஸப் என்ற பட்டப் பெயர் கொடுத்து முடிசூட்டு விழா நடத்தினாள்; இந்த விழாவில் மட்டும் உற்சாகத்தோடு கலந்து கொண்டாள், இப்படிக் கலந்து கொண்டாளே தவிர, அவனிடம் அரச அதிகாரங்கள் அனைத்தை யும் ஒப்புவிக்கவில்லை; தானே எல்லாவற்றையும் மேற்போட்டுக் கொண்டு நடத்தி வந்தாள். இப்படி ஓயாது உழைத்து வந்ததனால் இவள் தேகம் நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. கடைசியில் 1780 வருஷம் நவம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி. அறுபத்து நான்காவது வயதில் இறந்து போனாள். இவள் ஆண்டது மொத்தம் நாற்பது வருஷங்கள். தெரீஸா பெற்றது மொத்தம் பதினாறு. ஐந்து ஆண்கள்; பதினோரு பெண்கள். இவள் இறந்து போன போது, ஒன்பது பேர்கள் மட்டுமே உயிரோடு இருந்தனர். தெரீஸா, தன் சொந்தக் குடும்ப நலனைக் காட்டிலும், நாட்டு நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தாள். பிரான்சின் நல்லுறவு ஆதிரியாவுக்கு நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகத் தன் மகள் அன்டாய் நெட் என்பவளை, பிரரெஞ்சு மன்னன் பதினாறாவது லூயிக்கு, அவன் இளவரசனாக இருந்தபோது, விவாகம் செய்து கொடுத்தாள். பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், ஐரோப்பிய அரசவைகளில் அதிகமாகப் பிரதாபிக்கப்பட்டு வந்தவர்களில் தெரீஸா முக்கியமானவள். உலகக் கண்ணாடி உலகக் கண்ணாடி ஆண்டவனுடைய அற்புத சக்தியை என்னென்று வியந்து பாராட்டுவது. இந்தப் பூமியைப் போன்ற எத்தனையோ அண்டங்களை ஒன்றுக்கொன்று மோதவிடாமல் ஆட்டியும் அசைத்தும் வருகிறான் அவன். ஆகாயத்தில் சூரியன், சந்திரன் முதலிய பல பெரிய கிரகங் களும் கோடிக் கணக்கான நட்சத்திரங்களும் தங்கள் தங்கள் வேலையைச் செய்த வண்ணமிருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று முட்டிக்கொள் வதில்லை. ஆனால் உராய்வனபோல் இருந்து இயங்குகின்றன. இதை நினைக்கிறபோது, காற்றடைக்கப்பெற்ற சிறிதும் பெரிதுமான பல ரப்பர் பலூன்களை ஒன்று சேர்த்துக் கட்டி, சூத்திரக் கயிறு போட்டு இழுத்து இழுத்து விளையாடும் ஒரு சிறுவனுடைய உருவம் நமது கண் முன்னர்த் தோன்றுகிற தல்லவா? இத்தகைய அண்டங்கள் பலவற்றை ஆட்டி வைக்கும் சூத்திரதாரியாக மட்டும ஆண்டவன் இல்லை. அவற்றில் வசிக்கும் உயிர்களினுள்ளே இயங்கும் ஆன்மாவாகவும், அந்த உயிர்களின் ஆதியாகவும் அந்தமாகவும் அவன் இருக்கிறான். இந்தப்பூமி நாம் பார்க்கிறபடி தட்டையாக இல்லை; முட்டை வடிவமாக இருக்கிறது. அது மட்டுமா? பூமி அசையாப் பொருள் போலவும் நாம் இருக்கிற இடத்திலேயே நாம் திரமாக இருப்பதாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் பூமிசுழன்று கொண்டுதானிருக் கிறது. அது, தனக்குத் தானே சுற்றிக் கொள்வதோடு நில்லாமல், சூரியனையும் வலம் வருகிறது. அப்படி சூரியனை ஒரு முறை வலம் வருவதற்கு 365 நாள், 5 மணி, 48 நிமிஷம், 46 வினாடியாகிறது. இதுவே ஒரு வருஷ காலம், பூமி தனக்குத்தானே சுற்று கொள்வதற்கு 23மணி 56 நிமிஷ நேரமாகிறது. இஃது நேரமாகிறது. இஃது ஒரு நாள் கணக்கு. அப்படியானால் இவ்வளவு பெரிய பூமி இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தனக்குத்தானே சுழல வேண்டுமானால் எவ்வளவு வேகமாகச் சுற்ற வேண்டும் ஆனால் நமது கண்ணுக்கு ஒன்றுமே தெரிவதில்லை இது தான் ஆண்டவனின் அற்புத சக்தி! நம் தலை மீது காயும் சூரியன் எத்தனை மைல் தொலைவில் இருக்கிறான் தெரியுமா? 93,000,000 மைல் தூரத்தில். பூமியைவிட பத்து லட்சம் மடங்கு பெரியவன் இவன். எனவே இந்த பூமியைப் போல் இன்னும் பல பூமிகளுக்கு வெளிச்சம் கொடுத்து வளர்ச்சியையும் அளிக்க வல்லான் இந்தச் சூரியன். சூரியன் தவிர, சந்திரன், செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற பெரிய கிரகங்கள் இருக்கின்றன. இவற்றில் சந்திரன் ஒன்றுதான் பூமிக்குச் சமீபத்தில் இருக்கிறது. அடுத்த படியான தூரத்தில் சூரியன். மற்றவையெல்லாம் சூரியனைவிட இன்னும் அதிகமான தொலைவில் இருக்கின்றன. இவை தவிர, நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனிக் கோளங்களென்று அறிஞர் கூறுகின்றனர். இவை வெகு தொலைவில் இருக்கின்றமையினாலேயே நமக்குச் சிறுவடிவங்கள் போல் தோன்றுகின்றன. இவை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைச் சில கணக்குள் மூலமாகப் பார்ப்போம். நாம் இரவில் ஆகயாத்தில் பார்க்கும் நட்சத்திரங்கள், பளிச் பளிச் சென்று ஒளி வீசுகின்றன அல்லவா? அவை ஒளி வீசுவதும் நாம் பார்ப்பதும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன வென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்ல. ஒளியானது ஒரு விநாடியில் ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் தூரம் செல்கிறது. இந்தக் கணக்குப்படி பார்ததால் சூரியனிடமிருந்து பூமிக்கு வெளிச்சம் வர எட்டு நிமிஷங்கள் ஆகின்றன. இதே மாதிரி மிகச் சமீபமாயுள்ள நட்சத்திரத்திடமிருந்து பூமிக்கு வெளிச்சம் வர சுமார் நான்குவருஷம் பிடிக்கிறது. இன்னும் சில நட்சத்திரங்களிடமிருந்து வெளிச்சம் வர இரண்டு லட்சத்து இருபதினாயிர வருஷங்களாகின்றன. அப்படியானால் இவை எவ்வளவு தொலைவிலிருக்கின்றன வென்பதை ஊகித்துக் கொள்ள வேண்டியது தானே. சுமார் முப்பதினாயிரம் நட்சத்திரங்கள் ஆகாய மார்க்கததில் சஞ்சரித்திடுகின்றன என்று வான சாதிரிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கடவுள் ஏன் படைத்தான்? யாருடைய நன்மை இதிலே சம்பந்தப்பட்டிருக்கிறது? இவை பெரிய கேள்விகள். பின்னர் இவற்றிற்கு விடைபகர்வோம். இந்தப் பூவுலகில், நம் கண் முன்னரேயே எத்தனையோ ஆச்சரிய கரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக நமக்கு நல்ல பகல் வேளையென்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது தென் அமெரிக்கா வின் வட பாகத்தில் உள்ளவர்களுக்கு நடுநிசி; குறட்டை விட்டுத் தூங்குவார்கள். இது போகட்டும், தெய்வத்தின் திருக்கருணையினாலே நமக்கு ஆள்வோராக ஏற்பட்ட பிரிட்டிஷாருடைய ராஜ்யயத்தில் - அதாவது இங்கிலாந்தில் - சூரியன் எப்போது உதயமாகிறான்? எப்போது அதனமாகிறான்? சில மாதங்களில் காலை ஒன்பது மணிக்கு உதயமாகி, மாலை நான்கு மணிக்கே அதமனமாகிறான். சில மாதங்களில் விடியற் காலை நான்கு மணிக்கு உதயமாகி இரவு எட்டு மணிக்குத்தான் அதமனமாகிறான். இது போன்ற மாற்றங்கள் பல இடங்களிலும் நிகழ்கின்றன. வடக்கும் தெற்கும் பூமி சந்திக்கிற இடத்துக்கு துருவம் என்று பெயர். இந்தத்துருவப் பிரதேசங்களிலும் இதற்குச் சமீபமாயுள்ள நாடுகளிலும் சூரியன் வருஷத்தில் சில மாதகாலம் தோன்றுவதே கிடையாது. இதற்காக அங்கு வசிக்கும் ஜனங்கள் இருட்டிலேயே தடவிக்கொண்டிருப்பார் களென்றோ நினைக்கவேண்டாம். சூரியன் தோன்றாத காலங்களில் அங்கு ஒருவித இயற்கை வெளிச்சம் தோன்றுகிறது. அஃது இடைவிடாமல் சில மாதகாலம் பிரகாசித்துக கொண்டிருக்கிறது. இதற்கு அரோரா பொரியாலி என்று பெயர். இந்த வெளிச்சத்தின் துணைகொண்டு அங்குள்ளவர்கள் காரியங்களை நடத்திக் கொள்கிறார்கள். நார்வே, வீடன் முதலிய தேசங் களுக்கு யாத்திரை போய் வந்தவர்கள் இந்த அநுபவத்தைப்பற்றி நன்கு கூறுவார்கள். நாம் வசிக்கிற இந்த உலகத்தை எடை போட்டுப பார்த்திருக் கிறார்கள் என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உலகத்தின் மொத்த நிறை 6,000,000,000,000,000,000,000 டன் என்று பூமி நூலாராய்ச்சிக்காரர்கள் கணக்குப் போடியிருக்கிறார்களென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களல்லவா? நாம் காணும் இந்த உலகம், நமது பார்வைக்குத் தட்டையாகத் தோன்றும் இந்த உலகம், இப்பொழுதுள்ளதைப் போலவே எப்பொழுதும் இருந்ததா? அல்லது முதலில் பனித்திரள் மாதிரி இருந்து பின்னர் கனபதார்த்தமாக இறுகிப் பல பிண்டங்களாகத் தெறித்துக் கிடந்து கடைசியில் ஓர் அண்டமாக உருக்கொண்டதா? ஆதியிலிருந்தே பிரபஞ்சத்தில் ஜனங்கள் வசித்துக் கொண்டிருந்தார்களா? அல்லது புல்லாகிப் பூடாகிப் புழுவாகி என்கிற மாதிரி, பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டித்தான் நாம் மனிதர்களாக வந்ததோமா? இவையெல்லாம் நீண்ட ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். மின்னொளியில் இவை பின்னர்த் தோன்றும்போது நாம் மனத்தகத்தே பதித்துக் கொள்வோம். பொதுவாக இந்தப் பிரபஞ்சமானது, தற்போது அமைந்திருக்கிற நிலையில் சுமார் முந்நூறு கோடி வருஷங்களுக்கு முன்னர் அமைந்திருக்க வேண்டு மென்று பூமி சாதிரிகள் கருதுகிறார்கள் என்பதையும், மனிதன், கிறிது பிறப்பதற்குக் சுமார் இருபதினாயிரம் வருஷங்களுக்கு முன்னர் தற்போதைய நிலையில் தோன்றினாள் என்று மானிட உற்பத்தி நூலாராய்ச்சிக்காரர் ஊகிக்கின்றனர் என்பதையும் இப்பொழுது தற்காலிகமாகத் தெரிந்து கொள்வாம். இந்த ஊகங்களும் காலவரை யறைகளும் இந்தியர்களின் புராதன நம்பிக்கைகளுக்கு முரண்பட்டிருக் கின்றனவென்பதை மட்டும் இங்குக் குறிப்படுதல் அவசியமாகும். இனி, இந்த உலகத்தைச் சில புள்ளி விவரங்களின் மூலமாகப் பரிசீலனை செய்து பார்ப்போமா? மற்ற அண்டங்களின் அளவையும் தன்மையையும் நோக்குகிற போது, நாம் வசிக்கிற இந்தப்பூமியானது முட்டை வடிவமானது ஒரு சிறு கூழாங்கல் தான். இதன் குறுக்களவு - 7927 மைல்; சுற்றளவு 24,902 மைல். பூமியை, குணகோளார்த்த மென்றும், குடகோளார்த்த மென்றும் இரு கூறாகப் பிரித்திருக்கிறார்கள் பூகோள சாதிரிகள். (குணம் - கிழக்கு; குடம் -மேற்கு). கிழக்குப் பாதியில் ஆசியா, ஆதிரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களும், மேற்குப் பாதியில் அமெரிக்கா கண்டமும் அடங்கியிருக்கின்றன. மொத்தம் பூமியில், நிலபாகத்தை விட நீர்ப்பாகந்தான் அதிகம். நிலப்பரப்பின் விதீரணம் 55,500,000 சதுர மைல், நீர்ப்பரப்பின் விதீரணம் 142,132,980 சதுர மைல். முதலில் நீர்ப்பரப்பை எடுத்துக் கொள்வோம் மஹா சமுத்திரங்கள் ஐந்து. மகா சமுத்திரம் பெயர் விதீரணம் ஆழம் சதுரமைல் அடி பசிபிக் மகா சமுத்திரம் 67,699,630 32,090 அத்லாந்திக் சமுத்திரம் 34,301,400 27,960 இந்து சமுத்திரம் 28,615,600 22,970 வட சமுத்திரம் 5,785,000 13,200 தென் சமுத்திரம் 5,731,350 18,850 மொத்தம் 142,132,980 பெரிய கடல்கள் மத்தியதரைக்கடல் 1,145,000 12,275 கிழக்கு சைனாக்கடல் 480,000 10,500 வட கடல் 221,000 1,998 செங்கடல் 178,000 7,250 பால்டிக் கடல் 166,397 1,200 காபியன் கடல் 165,520 3,930 பெரிய ஏரிகள் சுபீரியர் (வடஅமெரிக்கா) 31,200 விக்டோரியாநையான்ஸா (ஆப்பிரிக்கா) 26,200 மிசிகன் (வடஅமெரிக்கா) 22,450 பைகல் (சைபீரியா) 11,680 லடோகா (ருஷ்யா) 7,000 ஊர்மியா (பர்ஷியா) 1,750 கப்பல்கள் செல்லக்கூடிய முக்கிய கால்வாய்கள் பெயர் தோண்டிய நீளம் அகலம் ஆழம் வருஷம் மைல் அடி அடி கோடா (வீடன்) 1832 115 47 10 சூய (எகிப்து) 1869 100 147 30 மான்செடர்(இங்கிலாந்து) 1894 35 1/2 120 26 கீல் (ஜெர்மனி) 1895 61 150 45 எல்பே (ஜெர்மனி) 1900 41 72 10 பனாமா (அமெரிக்கா) 1914 50 1/2 300 45 விரிகுடா - பூப்பிரசேதசத்தின் பக்கம் குறுகி சமுத்திரத்தின் பக்கம் விரிந்து மூன்று பக்கங்களிலும் தரையினால் சூழப்பெற்ற நீர்ப்பரப்புக்கு விரிகுடா என்று பெயர். உதாரணம் - வங்களா விரிகுடா. வளைகுடா - மூன்று பக்கங்களிலும் தரையினால் சூழப்பெற்று சமுத்திரத்தின் பக்கம் குறுகிய வாயுள்ள ஜல பாகத்திற்கு வளைகுடா என்று பெயர். உதாரணம் - பாரசீக வளைகுடா. ஜலசந்தி - இரண்டு பூபாகங்களைப் பிரித்து இரண்டு ஜலபாகங்களை ஒன்று சேர்க்கும் நீர்ப்பாகத்திற்கு ஜல சந்தி என்று பெயர். உதாரணம் - இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் ஜலசந்தி. பூசந்தி - இரண்டு ஜல பாகங்களைப் பிரித்து இரண்டு பூ பாகங்களை ஒன்று சேர்க்கும் நிலத் தொடர்புக்கு பூசந்தி என்று பெயர். உதாரணம் வட அமெரிக்காவையும் தென்னமெரிக்காவையும் ஒன்று சேர்க்கும் பனாமா பூசந்தி. முக்கிய நீர் வீழ்ச்சிகள் பெயர் எத்தனை அடி உயரத்திலிருந்து சதர்லாண்ட் (நியுஜீலந்து) 1,904 ரிப்பன் (அமெரிக்கா) 1,612 கலம்போ (ஆப்ரிக்கா) 1,400 கெரொஸப்பா (மைசூர்) 380 விக்டோரியா (ஆப்ரிக்கா) 400 சிவ சமுத்திரம் (மைசூர்) 380 நையாகரா (அமெரிக்கா) 167 நீண்ட ஆறுகள் பெயர் நீளம் மைல் ஆசியாவில் யெனெலி 2,950 ஆமூர் 2,950 யாங்க்ட்ஸீகியாங் 2,850 ஒப் 2,700 ஹோயாங்கோ 2,580 சிந்து 1,975 பிரமபுத்திரா 1,680 யூபரெடி 1,620 கங்கை 1,500 அமெரிக்காவில் மிஸிஸிபி - மிஸௌரி 4,502 அமேஸான் 3,550 லாரென் 2,370 லாப்லாடா 2,230 மெக்கன்ஸி 2,200 க்ராண்டி 1,740 கொலம்பியா 1,240 பெயர் நீளம் மைல் ஐரோப்பாவில் வாகா 2,300 டான்யூப் 1,720 நீபர் 1,120 டான் 1,120 பெசோரா 1,090 ட்வீனா 1,010 ரைன் 805 விடுலா 650 தேம் 215 ஆப்பிரிக்காவில் நைல் 3,680 காங்கோ 2,880 நைகர் 2,585 ஜரம்பெஸி 1,650 ஆரஞ்சு 1,155 ஆதிரேலியாவில் முர்றே 1,550 இனி நிலப்பரப்பைப்பற்றிச் சிறிது கவனிப்போம். பல தேசங்கள் சேர்ந்தது ஒரு கண்டம். இங்ஙனம் உலகத்தை ஐந்து கண்டங் களாகவும் துருவப் பிரதேசங்களாகவும் பிரித்திருக்கின்றனர் பெரியோர். அவை வருமாறு:- பெயர் வீதீரணம் சுமார் சதுரமைல் ஜனத்தொகை ஆசியா 17,000,000 1,044,000,000 அமெரிக்கா (வட- தென்) 14,800,000 244,000,000 ஆப்ரிக்கா 11,500,000 150,000,000 ஐரோப்பா 3,750,000 550,000,000 ஆதிரேலியா 3,450,000 9,000,000 வடதுருவ தென் துருவபிரதேசங்கள் 5,000,000 - மொத்தம் 55,500,000 1,997,000,000 எனவே உலகத்திலுள்ள மொத்த ஜனங்களின் உத்தேச எண்ணிக்கை- 1,997,000,000. தீபகற்பம் - மூன்று பக்கங்களிலும் ஜலத்தினால் சூழப்பெற்று, ஒரு பக்கம் மட்டும்நில பாகத்தோடு சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு தீபகற்பம் என்று பெயர். உதாரணமாக, இந்தியா, அரேபியா, மலேயா, இத்தலி, பெயின் முதலியன தீபகற்பங்களாகும். இவற்றின் விதீரணம், ஜனத்தொகை முதலியவற்றை அந்தந்த நாட்டு வரிசையில் கண்டுகொள்க. முக்கிய தீவுகள் - நான்கு பக்கங்களிலும் ஜல பாகத்தினால் சூழப்பெற்ற பூப்பிரதேசத்திற்குத் தீவு என்று பெயர். பெயர் விதீரணம் ஜனத்தொகை சதுரமைல் க்ரீன்லாந்த் (வடமகா சமுத்திரம்) 839,781 14,804 பொர்னியோ (வடமகா சமுத்திரம்) 284,000 1,846,000 மடகாகர் (இந்து ,, ) 228,707 3,694,007 சுமத்ரா (இந்து ,, ) 163,138 8,238,490 நியுகினியா (பசிபிக் ,, ) 160,692 195,460 கிரேட்பிரிட்டன்(அத்லாந்திக் ,, ) 88,745 45,266,000 ஜாவா (இந்து ,, ) 50,745 43,521,670 ஐர்லாந்து (அத்லாந்திக் ,, ) 31,829 4,123,561 முக்கிய எரிமலைகள் பெயர் உயரம் அடி சிம்பாராஸோ (தென்னமெரிக்கா) 20,700 ப்யூஜியாமா (ஜப்பான்) 12,366 எட்னா (இத்தாலி) 11,000 எக்மாண்ட் (நியூஜீலந்து) 8,270 சிஸிலி (இத்தாலி) 4,160 உயர்ந்த மலைகள் உயரம் அடி ஆசியாவில் எவரெட் 29,140 காட்வின் ஆடின் 28,250 கஞ்சின்ஜின்கா 28,145 நங்கபர்வதம் 26,630 காமட் 25,430 டீன்ஷான் 22,000 காக்கஸ 18,530 எல்பூர் 18,500 சுமத்ரா 12,260 ஆப்ரிக்காவில் கிளிமான்ஜாரோ 19,720 கென்யா 17,040 அட்லா 14,760 ரூவென்ஜோரி 16,794 ராதஷன் 15,153 ஐரோப்பாவில் ஆல்ப 15,780 சீராநிவாடா 11,420 பிரன்னீ 11,127 அப்பிளைன் 9,508 பால்கன் 8,850 ஊரல் 5,430 ஹெக்லா 5,095 அமெரிக்காவில் ஆண்டி 23,081 ராக்கி 19,540 ஒரிஸாபா 18,204 காகாடா 14,531 சாரநிவாடா 14,500 ஆதிரேலியாவில் மவுனாகீ 13,953 ஓவன் டான்ஸி 13,120 மவுண்ட் குக் 9,175 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மொத்த விதீரணம் 13,281,621 சதுரமைல் மொத்த ஜனத்தொகை 490,365,000 இவற்றில் சதுரமைல் ஐனத்தொகை ஐரோப்பாவில் 121,757 49,597,000 ஆசியாவில் 1,954,770 360,930,000 ஆப்ரிக்காவில் 3,837,857 573,395,000 அமெரிக்காவில் 4,088,320 13,096,000 ஆதிரேலியாவில் 3,278,917 9,347,000 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மொத்த ஜனத்தொகையில் சுமார் லட்சம்பேர் இந்தியர்கள் 3,650 வெள்ளையர் 700 கருப்பர் 420 அராபியர் 70 மலேயர் 70 சீனர் 10 பாலினீஷியர் 10 மற்றவர் 20 உலகத்துப் பெரிய நகரங்கள் பெயர் ஐனத்தொகை லண்டன் - இங்கிலாந்து 8,202,818 நியுயார்க் - அமெரிக்கா 6,930,446 டோக்கியோ - ஜப்பான் 5,312,000 பெர்லின் - ஜெர்மனி 4,000,000 பாரி - பிரான் 2,871,040 மாகோ - ருஷ்யா 2,800,000 வியன்னா - ஆதிரியா 1,874,680 கல்கத்தா - இந்தியா 1,486,000 நான்கிங் - சைனா 1,300,680 சிட்னி - ஆதிரேலியா 1,235,000 பம்பாய் -இந்தியா 1,161,000 கெய்ரோ -எகிப்து 1,060,000 ரோம் - இத்தாலி 1,045,000 மாட்ரிட் - பெயின் 1,000,000 ப்ருஸெல் - பெல்ஜியம் 886,000 மதரா - இந்தியா 647,000 ஜினோவா - இத்தாலி 620,000 பாங்காக்- சையரம் 550,000 உலகத்துச் சில அதியங்கள் இந்தப்பிரபஞ்சத்தில் பலநூற்றாண்டுக் கணக்காக எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்து வந்தன; வருகின்றன. இவைகளிற் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வோமானால், மனிதனுடைய அறிவானது எவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ள முடியும். தாஜ்மகால் : இது படி இந்தியாவில் ஆக்ராநகரத்திலுள்ளது. மொகலாய மன்னர்களில் ஒருவனான ஷாஜஹான் என்பவன், தன் மனைவியான மும்தாஜ்பீகம் என்பவளுடைய நினைவுக்குறியாக கி.பி. 1630 ம் வருஷம்கட்டிய கட்டிடம். இதனைக் கட்டிமுடிக்க இருபத் திரண்டு வருஷகாலம் பிடித்ததாம். இதற்குச் செலவழிக்கப் பெற்ற தொகை 31,748,026 ரூபாய் என்று சிலர் மதிப்பிடுகின்றனர். இந்தத் தாஜ்மகால் கட்டிடம் இப்பொழுது பார்த்த போதிலும் சமீப காலத்திலேயே கட்டப் பெற்றதாகத் தோன்றும். இதனைப் பார்வையிட்ட ஒர் ஐரோப்பிய மாது என் மீது இத்தகைய கட்டிடம் ஒன்று எழுப்பப் படுமானால் நான் இப்பொழுதே இறக்கச் சித்தமாயிருக்கிறேன். என்று கூறினாள்.! சினச்சுவர் :- தார்த்தாரியர்களுடைய படையெடுப்பினின்று தங்களைப்பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சினாவின் மேற்குப் பாகத்தில் சுமார் கி.மு. 200 - வது வருஷத்தில் - அதாவது சுமார் இரண்டா யிரம் வருஷங்களுக்கு முன்னர், சீன மன்னர்களால் கட்டப்பெற்றசுவர். பல மலைகள், ஆறுகள் இவற்றை யெல்லாம்கடந்து சுமார் 1,400 மைல் தூரம் இது கட்டப்பெற்றிருக்கிறது. இதன் அடிப்பாகம் 25 அடிக்கு அதிகமான அகலமுடையதாக இருக்கிறது, இப்பொழுது இந்தச் சுவர் முன்மாதிரி ஒரே தொடர்ச்சியாக இல்லா மற்போன போதிலும் இன்னும் பல இடங்களில்அப்படியேகெட்டியாக இருக்கிறது. சீன அகராதி : பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீன பாஷையில் சீன பண்டிதர்களால் தயாரிக்கப்பட்ட ஒர்அகராதி. இது பின்னர் அச்சாகவேயில்லை. இரண்டாயிரம் பண்டிதர்கள் மூன்ற வருஷ காலம் இடைவிடாது உழைத்து இந்த அகராதியைத் தயாரித்தார்களாம். இதன் சில பாகங்கள் இப்பொழுது அமெரிக்காவிலுள்ள வாஷிங்க்டன் புத்தகசாலையில் இருக்கின்றன. பிரமிட் கோபுரங்கள் : இவை எகிப்திலுள்ளன. கோபுரம் போல் கட்டப்பட்டிருக்கின்றன. முற்காலத்தில் இவை, எகிப்தியர்களால் மதச் சடங்குகள் செய்வதற்காகக் கட்டப்பட்டவை. எகிப்தின் தலை நகரான கெய்ரோவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள கிஸே என்ற இடத்தில் ஒன்பது பிரமிட்கள் இருக்கின்றன. இவை தான் முக்கிய மானவை. இவற்றில் பெரிய பிரமிட்டின் அடிவாரம் 13 ஏக்கரா விதீரண முடையது. இதன் உயரம் 400 அடி. இந்த ஒவ்வொரு பிரமிட்டுக் குள்ளும் பல விசாலாமான அறைகள் இருக்கின்றன. தொங்கும் தோட்டங்கள் : 2500 வருஷங்களுக்கு முன்னர் பாபிலோனை ஆண்டு வந்த நெபுசட் நெஸார் என்பவன், புதியதொரு நகரத்தை நிர்மாணம் செய்தான். அதில் பல தோட்டங்கள், கட்டிடங்கள் முதலியனவற்றை அமைத்தான். அவற்றுள் இந்தத் தொங்கும் தோட்டங்களும் சேர்ந்தவை, மாடி மாதிரி அமைத்து அதன்மீது, மண்ணைநிரப்பி அதில் பல வகை உயர்ந்த மரங்கள் வளர்க்கப் பட்டிருக்கின்றன, இஃது இன்னும் அழியாத காட்சியாக இருக்கிறது. மெளஸோலியம்: தற்போது ஆசியாமைனர் என்று அழைக்கப் படும் பிரதேசம் முற்காலத்தில் காரியா என்று அழைக்கப்பட்டது. இதனை ஒரு காலத்தில் மெளஸோல என்ற அரசன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் இறந்து போன பிறகு அவன் மனைவியான அர்டெமீஷ்யா என்பவள். கி.மு. 353ம் வருஷத்தில் ஒரு பெரிய தூபி கட்டினாள். இதன் சின்னங்கள்இப்பொழுதும் பிரிட்டிஷ் பொருட்காட்சியில் வைக்கப் பட்டிருக்கின்றன. டியானா கோயில் : கீரீஸிலுள்ள எபெல என்ற ஊரில் இந்தக் கோயில் இருக்கிறது. டியானா என்பது ரோமர்களாலும் கிரேக்கர் களாலும் வணங்கப்பட்டு வந்த ஒரு தெய்வம். இந்தத் தெய்வத் திற்காகக் கட்டப்பட்டகோயில் இது. சிற்ப வேலைப்பாடுநிரம்பியது. கோலோஸ : பெரிய உருவங்களாகச் சமைக்கப்படும் சிலை களுக்குப் பொதுவாகவே இந்தப் பெயர் வழங்கப்படுகிறது, முற் காலத்தில் எகிப்தியர், கிரேக்கர் முதலியோர் இத்தகைய உருவச் சிலை களைநிர்மணம் செய்தார்கள். அவற்றுள் முக்கியமானதும் பெரியதுமான ரோடெ சிலையையே, உலக அதிசயங்களில்ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர் பலர். இது சுமார் 2,100 வருஷங்களுக்கு முன்னர்க் கட்டப்பட்டது. இது பின்னர் ஒரு பூகம்பத்தினால் வீழ்ந்துவிட்டது. இதே மாதிரிதற்காலத்தில் பல பெரிய உருவச் சிலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா ஐக்கியமாகாணத்திலுள்ள சுதந்திர தேவியின் உருவச்சிலை 138 அடி உயரமுடையது. பாரோ கலங்கரை விளக்கம் - அலெக்ஸாண்ட்ரியா துறை முகத்திற்கருகாமையில் பாரோ என்ற ஒரு தீவு இருக்கிறது. இதில் 2,220 வருஷங்களுக்கு முன் கட்டப்பெற்ற ஒரு கலங்கரை விளக்கம் (லைட்ஹவு) இருக்கிறது, அஃது இப்பொழுதும் பலருடைய ஆச்சரியத்தையும் கவனத்தையும் இழுக்கக் கூடியதாக இருக்கிறது. உலகத்துநாணயங்கள் எதியோப்பியா : இத்தாலிய நாணயம் (1937 லிருந்து) ஆதிரியா - ஹங்கேரி 100 ஹெல்லெர்- 1க்ரோஷன் - 10 அ பெல்ஜியம் : 100 செண்டிமெ - 1 பிராங்க் - 91/2 அணா கிரேட் பிரிட்டன்- 12 பென் - 1 ஷில்லிங்க் - 12 அணா ஆதிரேலியா-கிரேட் பிரிட்டணைப்போலவே. கானடா-100 செண்ட்-1 டாலர் 3 1/2 ரூபாய் மலேயா தீபகற்பம் : 100 காசு 1- வெள்ளி ரூ 1-9-0 பல்கேரியா : 100 டோடிங்கி - 1 லேவ்- 9 1/2 அணா சைனா - 1 ஹைக்வான்தேல் - 2 1/4 ரூபாய் டென்மார்க் : 100 ஒரே - 1 க்ரோன் - 13 1/2 அணா எகிப்து -100 பியாத்தே - 1 பவுன்- ரூ.15-6-0 பிரான்- 100 செண்டிமே - 1 பிராங்க் - 9 1/2 அணா ஜெர்மனி -100 பென்னிக்கே - 1-மார்க் 11 3/4 அணா க்ரீ- 100 லேப்டா - 1ட்ராஷ்மா - 9 1/2 அணா. இத்தலி: 100 சென்டிமி - 1 லைரா - 9 1/2 அணா ஜப்பான்-100 ஸென் - 1 யென் - 1 1/2 ரூபாய். நார்வே வீடன் -100 ஒரே - 1 க்ரோன் 13 1/2 அணா பர்ஷியா (ஈரான்): 20 ஷாஹி - 1 க்ரான் - 4 1/3 அணா போர்த்துகல் : 100 ரெய் - 1 மில்ரெய் - ரூ 3-5-0 ருஷ்யா-100 கோபெக் -1 ரவுபிள் - ரூ 1-9-6 ருமேனியா - 100 பனி - 1 லேவ் - 9 1/2 அணா பெயின் - 100 செண்டிமோ - 1 பிராங்க் - 9 1/2 அணா. விட்ஜர்லாந்து : 100 செண்டிமோ - 1 பெஸாடா - 9 1/2 துருக்கி - 100 பியாத்ரே - 1 லைரா - 13 1/4 ரூபாய் அமெரிக்கா (ஐ.மா) :100 செண்ட் - 1 டாலர் - 3 1/2 ரூ. உலகத்துப் பெரிய பத்திரிகைகள். இது பத்திரிகை யுகம். முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் பல வற்றிலும் நூற்றுக் கணக்கான பத்திரிகைகள் வெளியாகின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான பத்திரிகை. உதாரணமாக அமெரிக்காவில், உடற்பயிற்சி சம்பந்தமாக வெளியாகும் பத்திரிகைகள் மட்டும் 150 க்கு மேலிருக்கின்றன. இந்த ஒவ்வொரு பத்திரிகையும் லட்சக் கணக்கான பிரதிகள் செலவழிகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை தினசரிப் பத்திரிகைகள். இவை ஒவ்வொன்றும் சராசரி பத்து லட்சம் பிரதிகளுக்குக் குறையாமல் செலவழிகின்றன. லண்டனின் வெளியாகும் டெய்லி எக்பிர என்ற தினசரிப் பத்திரிகை 20 3/4 லட்சம் பிரதிகளை தினம்வெளியிடுகிறது. அமெரிக்காவில் பத்திரிகை வளர்ச்சி மிக அதிகம். டைம் லண்டன் டெய்லி எக்பிர லண்டன் டெய்லி ஹெரால்ட் லண்டன் டெய்லி மெயில் லண்டன் டெய்லி மிர்ரர் லண்டன் டெய்லி டெலிகிராப் லண்டன் மார்னிங் போட் லண்டன் மான்செடர் கார்டியன் லண்டன் நியுயார்க் டைம, நியுயார்க், அமெரிக்கா, நியுர்க் ஹெரால்ட் அமெரிக்கா, அஸாஹி டோக்கியோ, ஜப்பான் இஸவெடா மாகே, ருஷ்யா வால்கிஷர் பியோ பாட்சர் பெர்லின், ஜர்மனி. பொபோலே - டி -இத்தாலியா ரோம், இத்தலி. நேடால் மெர்க்குரி நேடால், தென்னாப்பிரிக்கா. உலகத்திலுள்ள பல மதத்தினர் பெயர் எண்ணிக்கை கிறிதவர் 692,400,000 யூதர் 16,140,000 முகமத்தியர் 209,020,000 பௌத்தர் 150,180,000 ஹிந்துக்கள் 230,150,000 கன்பூஷியர் 350,600,000 ஷிண்டோயிகள் 25,000,000 மற்றவர் 186,520,000 உலகத்தில் பேசப்பெறும் முக்கிய பாஷைகள் பெயர் பேசுவோர் தொகை சுமார் சீனம் 40 கோடி இங்கீலீஷ் 20 கோடி ருஷ்யா 14 கோடி ஹிந்தி 11 கோடி ஜெர்மன் 8 கோடி பிரெஞ்சு 7 கோடி பானிஷ் 7 கோடி ஜப்பானியம் 6 1/2 கோடி போர்த்துகீ 6 கோடி இத்தாலியம் 5 கோடி வங்காளி 5 கோடி தமிழ் 204 லட்சம் தெலுங்கு 263 லட்சம் கன்னடம் 112 கோடி மலையாளம் 91 கோடி மஹாராஷ்டிரம் 208 கோடி குஜராத்தி 108 கோடி பெரிய பாங்கிகள் ஒவ்வொரு நாட்டிலும் அநேக பாங்கிகள் இருக்கின்றன. இவை அந்தந்த நாட்டு ஜனங்களுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதோடு வெளி நாட்டாருக்கும் பலவித நன்மைகளைச் செய்து கொடுக்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் ஐந்து பெரிய பாங்கிகள் இருக்கின்றன. இவற்றிற்கு பெரிய ஐந்து என்று பெயர் இவ்வைந்தும் லண்டனிலேயே தலைமைக் காரியாலயங்களையுடையவை. இவற்றின் விவரங்களும், மற்ற வெளி நாட்டு முக்கிய பாங்கிகளின் விவரமும் பின்வருமாறு: பெயர் தாபன கிளை மூலதனம் வருஷம் தாபனங்கள் நேஷனல்ப்ரொவி, பாங்கி, லண்டன் 1833 1370 43, 617,080 பவுன் மிட்லண்ட் பாங்கி, 1836 2120 41,504,262 பவுன் வெட்மினிடர் பாங்கி, 1836 1074 33,000,000 பவுன் லாயிட் பாங்கி, 1865 1900 73,302,076 பவுன் பார்க்ளே பாங்கி, 1896 2070 15,858,217 பவுன் பாங்க் ஆப் இங்கிலாந்து, 1694 9 14,553,000 பவுன் சார்டர்ட்பாங்கி, 1853 43 3,000,000 பவுன் தாம குக் அண்ட எல்லா சன், லண்டன் 1841 இடங்களிலும் 250,000 பவுன் மெர்க்கண்டைல் பாங்கி, 1892 22 1,05,000 பவுன் நேஷனல் பாங்கி ஆப் இந்தியா 1863 30 400,00 பவுன் பாங்க் ஆப் ஐர்லாந்து, டப்ளின்,ஜர்லாந்து 1783, 160 2,769,230 பவுன் பாங்க் ஆப் அடிலேடி, ஆரேலியா 1865 112 பாங்க் ஆப் நியு சௌத்வேல், 1817 723 8,780,000 பவுன் பாங்கா டி ரோமா, ரோம். 1880........... 200,00150,000 டாலர் பாங்க் ஆப்பெயின்,மாட்ரிட் 1856 73 17,700,000பெn[h பாங்கே டி பிரான், பாரி 1800 661 182,500,000 பிராங்க் பாங்க் ஆப் ஏதன். கீரீ 1893 114 100,800,000 lலர்gh§¡ ஆப் மாண்டரீல், கானடா 1817 575 36,000,000 டாலர் நேஷனல் சிடி பாங்கி, நியுயார்க்........ .165,518,665 டாலர் பாங்க் ஆப் அமெரிக்கா, சான்பிரான்சிகோ 417 54,006,000 டாலர் செண்ட்ரல் பாங்கி, பம்பாய் 1911 59 16,800,000 ரூபாய் இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா 1921 133 112,500,000 ரூபாய் ரெயில்வேக்கள் உலகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சி அதிமாக ஆக போக்குவரவு சாதனங்களும் அதிகப் படுவருகின்றன. ஆகாயவிமானங்கள் இன்னும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமானாலும் ரயில்வக்களுக்கு நிரந்தரமான ஒருதனம் உண்டு உலகத்துப் பல நாடுகளிலும் உள்ள முக்கியமான ரெயில்வே தொடர்களின் நீளத்தைக் கீழே குறிப்பிடுகிறோம். எந்த நாட்டில் எத்தனை மைல் நீளம் இந்தியா 20,251 பர்மா 42,961 கானடா 2,055 நியுபௌண்லாண்ட் 42,961 ஆதிரேலியா 808 நியூஜீலந்து 27,952 தென்னாப்ரிக்கா 3,488 இலங்கை 951 கோல்ட் கோட் (ஆப்ரிக்கா) 590 கென்யா (ஆப்ரிக்கா) 1,625 மலேயாதீபகற்பம் 1,067 மொரீஷ 176 பாலதீனம் 615 ரொடீஷியா (ஆப்ரிக்கா) 2,708 சூடான் (ஆப்ரிக்கா) 500 அமெரிக்கா (ஐ.மா) 258,465 அர்ஜண்டைன் (தெ.அமெரிக்கா) 25,128 ஆதிரியா 4,410 பெல்ஜியம் 3,215 பொலிவியா (தெ.அமெரிக்கா) 1,314 ப்ரேஜில் 20,300 பல்கேரியா 1,665 சிலி (தெ.அமெரிக்கா) 5,542 சைனா 12,400 க்யூபா 3,800 டென்மார்க் 3,200 எகிப்து 3,374 எதியோப்பியா 486 பிரான் 26,113 ஜெர்மனி 36,400 க்ரீ 1,993 ஈராக் 2,100 இத்தலி 14,100 ஜப்பான் 13,726 நார்வே -வீடன் 12,853 போலந்து 12,500 போர்த்துகல் 2,106 சையாம் 1,880 பெயின் 10,197 விட்ஜர்லாந்து 3,650 துருக்கி 2,525 ருஷ்யா 52,130 யூகோலாவியா 6,473 நீண்ட ரெயில்வே பாலங்கள் லோயர் ஜாம்பெஸி (ஆப்ரிக்கா) 11,650 அடி அப்பர் டோன் (இந்தியா) 11,052 அடி கோதாவரி(இந்தியா) 9,396 அடி போர்த் (காத்லாந்து) 8,300 அடி மஹாநதி (இந்தியா) 6,912 அடி ரையோ சாலடோ (தென்அமெரிக்கா) 6,703 அடி நீண்ட ரெயில்வே பாலங்கள் சான் பிரான்சிகோ (அமெரிக்கா) 7 மைல் டாக (போர்த்துகல்) 6 1/2 மைல் டே (காத்லாந்து) 2 மைல் சகாயிங் (பர்மா) 3/4 மைல் உலகத்திலுள்ள மிகச் சிறிய ரெயில்வே ரோமா புரியிலுள்ள போப்பரசரின் நகரத்தில் இருக்கிறது. இதன் நீளம் சுமார்2 1/2 பர்லாங்கு. மிக உயர்ந்த பிரதேசத்தல் செல்லும் ரெயில்வே தென்னாப் பிரிக்காவில் இருக்கிறது. கென்யா - உகாந்தா ரெயில்வே தொடரைச் சேர்ந்த டிம்போரா என்ற இடத்தில் 9130 அடி உயரத்தில் ரெயில்வே செல்கிறது. கடல் மார்க்காமாகப் போக்கு வரவு தொலைவுகள் சென்னையிலிருந்து ஏடன் 2,641 மைல் ஆண்ட்வர்ப் 7,291 மைல் பம்பாய் 1,453 ,, பாடன் 8,953 ,, கல்கத்தா 759 ,, கேப்வுடன் 4,829 ,, கொழும்பு 580 ,, ஜீனிவா 5,464 ,, ஜிப்ரால்டர் 5,944 ,, ஹாங்காங் 3,031 ,, லண்டன் 7,251 ,, மால்டா 4,974 ,, மார்சேல் 5,544 ,, மெல்போர்ன் 4,961 ,, நேபிள் 5,151 ,, நியுயார்க் 9,144 ,, போர்ட்செட் 4,038 ,, ரங்கூன் 997 ,, சான் பிரான்சிகோ 8,921 ,, ஷாங்காப் 3,774 ,, சிங்கப்பூர் 1,591 ,, சிட்னி 5,444 ,, வான்கோவர் 9,721 ,, யோகஹாமா 4,493 ,, ஜான்ஸிபார் 3,112 ,, ஆகாய விமானங்களின் மூலம் தொலைவுகள் லண்டனிலிருந்து பாக்டாட் 3,028 மைல் கராச்சி 4,812 ,, டெல்லி 5,492 ,, கல்கத்தா 6,332 ,, ரங்கூன் 7,091 ,, சிங்கப்பூர் 8,432 ,, சிட்னி 13,166 ,, பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய ஆகாய விமானங்கள் உலகமனைத்தினும் தற்போது சுமார் 2,000 இருக்கின்றன, சுமார் 3,000 ஆகாய விமான நிலையங்கள் உலகத்தின் பல இடங்களிலும் இருக்கின்றன. பல தேசங்களின் சட்ட சபைகள் தேசத்தின் பெயர் கட்ட சபைகளின் அங்கத்தினர் பெயர் தொகை பிரிட்டன் ஹவுஆப் காமன் 615 ஹவு ஆப் லார்ட் சுமார் 680 ஜர்லாந்து டேல் ஏர்ன் 153 செனெட் ஏர்ன் 60 இந்தியா ஹவு ஆப் அஸெம்ப்ளி 375 கவுன்சில் ஆப் டேட் 260 கானடா ஹவு ஆப் காமன் 245 செனெட் 96 ஆதிரேலியா ஹவு ஆப் ரெப்ரெஸெண்டேடிவ் 70 செனெட் 36 நியூஜீலந்து ஹவு ஆப் ரெப்ரெஸெண்டேடிவ் 80 லெஜி லெடிவ் கவுன்சில் 37 தென்னாப்பிரிக்கா ஹவு ஆப் அஸெம்ப்ளி 150 செனெட் 40 அமெரிக்கா ஐ.மா ஹவு ஆப்ரெப்ரெஸெண்டேடிவ் 435 செனெட் 96 பெல்ஜியம் சேம்பர் ஆப்ரெப்ரெஸெண்டேடிவ் 187 செனெட் 154 ஆதியா பூந்தே ராட் நேஷனல் ரட்... பல்கேரியா ஸோப்ரான்யேஇருபதினாயிரம் பேருக்கு ஒரு பிரதிநிதி சைனா சுங் யி யுவான் 596 ஸான் யி யுவான் 150 தேசத்தின் பெயர் கட்ட சபைகளின் அங்கத்தினர் பெயர் தொகை ஜெக்கோ- லேவேகியா நேஷனல் அஸெம்ப்ளி 264 டென்மார்க் போல்கேடிங் (கீழ்ச்சபை) .......... லாண்ட்டிங் (மேற்சபை) .......... எகிப்து சேம்பர் ஆப் டெபுடீ 150 செனெட் 100 எதோனியா ரீஜிகோகு 100 பிரான் சேம்பர் ஆப் டெபுடீ 612 செனெட் 314 ஜெர்மனி ரய்ஹ்டாக்....uŒàÞuh£ .......... க்ரீ பவுலே 250 செனெட் 120 ஈராக் செம்பர் ஆப் டெபுடீ 80 செனெட் 20 இத்தாலி சேம்பர் அப் டெபுடீ 536 செனெட் 385 ஜப்பான் இம்பீரியல் டயட் .......... லாட்வியா ஸாயிமா 100 லிதூனியா ஸீம் .......... நார்வே டோர்டிங் 150 பர்ஷியா (ஈரான்) மஜ்லி .......... போலந்து ஸெஜம்..செனெட்.....ருமேனியா சேம்பர் ஆப் டெபூடீ 361 செனெட் 56 சையாம் பீபில் அஸெம்ப்ளி 156 பெயின் கோர்டெ 473 விட்ஜர்லாந்து நேஷனல் கவுன்சில் 187 கவுன்சில் ஆப் டேட் 44 துருக்கி கிராண்ட் அஸெம்ப்ளி .......... ருஷ்யா ஸீக் (கவுன்சில் ஆப் தி யூனியன்) 371 ஆப்கனிதான் நேஷனல் அஸெம்பளி செனெட் .......... வருஷம் விஞ்ஞானம் ரசாயணம் 1901 W.C. ராண்ட்ஜன் J.H. வாண்ட்ஷாப் 1902 H.A. லோரேண்ட் E. பிஷ்ஷர் P. ஜீமான் 1903 H.A. பெக்வுர S.A. அர்ஹேனன் கூரி தம்பதிகள் 1904 லார்ட் ராலே ஸர்ராம்ஸே 1905 B. லெனார்ட் A. வான்பேயர் 1906 J.J. தாம்ஸன் H. மாய்ஸன் 1907 அறிஞர் மைக்கல்ஸன் E.புஷ்னெர் 1908 G. லிப்மான் E. ருதர்போர்ட் 1909 SGR. மார்கோனி W. ஆட்வால்ட் F. ப்ரௌன் 1910 J.D. வாண்டெர்வால் O. வால 1911 W. வீன் ஸ்ரீமதி கூரி 1912 G. டாலன் V. க்ரிக்னார்ட் B. சபாடீர் 1913 H.K. ஒன்னெ A. வெர்னெர் 1914 M. வான் லௌ D. ரிச்சர்ட் 1915 H. ப்ராக் R. வில்டாடர் L. ப்ராக் 1916 பரிசு இல்லை பரிசு இல்லை 1917 C.G. பார்க்ளா பரிசு இல்லை 1918 M. ப்ளான் F. ஹாபர் 1919 J. டார்க் பரிசு இல்லை 1920 C.E. கில்லவுமே W. நெர்ன்ட் வைத்தியம் இலக்கியம் உலகசமாதானம் E.A.V. பேரிங் R.F.A. ப்ருதோம் H. டூனண்ட், E. பாஸி ஸர் R. பின்ஸன் P. ஜோர்ன்ஸென் ந. டூம்முன் ஸர். கரெமர் I. பாவ்லோவ் எப்.மிஸட்ரால் சர்வதேச சட்ட ஜே. எச்சிகாரே சங்கம் R. கோச் H.J. சீங்கோவிக் சான் ஸட்னர் R.Y. கஜால் அறிஞர் கோல்கி G. கார்டூஷி T. ரூவெல்ட் A. லாவெரான் R. கிப்ளிங் E.D. மொனேடா L. ரெனால்ட் B.v®È¢ R. யூகென் K.P. ஆர்னால்ட்வன் E. மெட்சினிகாப் F. பாஜர் T. கோஷர் A.S. லாகர்லாப் P.D. கான்டன்ட் M. பீக்னார்ட் பெர்லினிலுள்ள சர்வ A. கோல P. ஹெஸே T.M.C ஆஸர் A.H. ப்ரீட் A. கார்ரெல் G. ஹப்ட்மான் எவிஹுரூட் C. ரிச்செட் ரவிந்த்ரநாத்டாகூர் H. லாபண்டேன் R. பரானி பரிசு இல்லை பரிசு இல்லை பரிசு இல்லை ரோமெயின் ரோலாண்ட் பரிசு இல்லை பரிசு இல்லை வான்ஹைடன்டாம் பரிசு இல்லை பரிசு இல்லை K. ஜெல்லரூப் சர்வதேச சிலுவை H. பாண்டாப் சங்கம் பரிசு இல்லை பரிசுஇல்லை பரிசு இல்லை J. போர்டெட் C.Þã£bly® உட்ரோ வில்ஸன் A. க்ரோக் துட்ஹாம்ஸென் லியோன் , பர்ஜியோ வருஷம் விஞ்ஞானம் ரசாயணம் 1921 ஆல்பர்ட் இன்டீன் F. ஸாட்டீ 1922 நீல்பேரர் F.W. ஆடன் 1923 R.A. மில்லிகன் F. ப்ரெகிள் 1924 K.M.G. சீஜ்பான் பரிசு இல்லை 1925 J. பிராங், G. ஹெர்ட்ள R. சிக்மண்டி 1926 ஜீன் பெர்ரின் வெட்பெர்க் 1927 A.H. காம்ப்டன் C.T.R வில்ஸன் H. வீலண்ட் 1928 O. ரிச்சர்ட்ஸன் A. விண்டவு 1929 T.T. ப்ராக்லி A. ஹார்டன் வான் மூலர் 1930 ஸர் C.V. ராமன் H. பீஷர் 1931 பரிசு இல்லை அறிஞர் பாஷ் அறிஞர் பர்கிய 1932 ஹைஸன் பெர்க் இர்விங் பர்கிய 1933 P.H.M. டிராக் எர்வின் ஷ்ரோடிங்கர் பரிசு இல்லை 1934 G. மினாட் P. மர்பி H.C. ஊரே H. விப்ன் 1935 F. சாட்விக் .............................. 1936 ........................................................ வைத்தியம் இலக்கியம் உலகசமாதானம் பரிசு இல்லை அனடோல் ப்ரான் K.H. ப்ராண்டிங் C.L. லாங்கே A.V. ஹில், O. மேயர் ஹாப் J. பெனாவெண்டே F. நான்ஸன் F.G. பாண்டிங் J.J.R மாக்லியாட் W.B.<£Þ பரிசு இல்லை W. ஈந்தோவன் W. ரெய்மோண்ட் பரிசு இல்லை பரிசு இல்லை பெர்னாட் ஷா ஆடின்சேப்பர்லேன் G. டா J. பிபிகெர் க்ரேஸியாடெலெட்டா A. ப்ரையந்து G. ட்ரெமான் வாக்னர்ஜவுரென் ஹென்ரிபெர்க்ஸென் F. பைஸன் லட்விக்குவிட்டே C.J.H நிகோல்லே சிக்ரிட்உண்ட்செட் பரிசு இல்லை F.G. ஹாப்கின் தாமஸ மான் F.P. கெல்லாக் C.I. ஜக்மான் க.லாண்டைனர் சிங்க்ளேர்லூயி N. சோல்டர்ப்ளாம் ஆட்டோவார்புக்க் கார்ல்பேல்ட் ஜேன்.ஆட்டம் N.M. பட்ஸர் சார்லஷெரிங்க்டன் J. கால்வொர்த்தி பரிசுஇல்லை T.H. மார்கன் ஐவன் பூனின் நார்மன்ஏஞ்சல் L. பிரண்டெல்லோ A. ஹெண்டர்ன் ஜோலியோட்...... ஆஸியெட்ஸ்கி தம்பதிகள் E. ஒநீல்..................... உலகத்தில் கல்வியற்றவர் நாடு ஜனத்தொகையில் 100க்கு இத்தலி 24 பேர் போலந்து 32 பேர் ருஷ்யா 40 பேர் க்ரீ 43 பேர் பெயின் 43 பேர் துருக்கி 55 பேர் எகிப்து 85 பேர் இந்தியா 90 பேர் உலகத்தில் குருடர்கள் நாடு ஐனத்தொகையில் லட்சத்திற்கு எத்தனை இந்தியா 150 கிரேட் பிரிட்டன் 125 ஜப்பான் 105 ஐரிஷ் ப்ரீடேட் 103 இத்தலி 81 பிரான் 73 ஆதிரேலியா 58 ஜெர்மனி 58 டென்மார்க் 53 கானடா 49 அமெரிக்க (ஐ.மா) 49 நியுஜீலந்து 48 நோபல் பரிசு வீடன் தேசத்தில் ஆப்ரெட் நோபல் என்ற ஒர் இஞ்சீனீர் இருந்தான். இவன் காலம் 1833-1896 இவன் வெடி மருந்து சம்பந்த மான பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் செய்து அவற்றில் வெற்றியும் கண்டவன். இவன் தான் சம்பாதித்தபணத்தில் பெரும்பாகத்தைச் சாசவத நீதியாக ஏற்படுத்தி, அதற்குப் பரம்பரையாக டிரடிகள் நியமித்து, தக்க சாஸனங்கள் எழுதி வைத்துப் போனான். இந்த சாசுவத நிதியின் தொகை 1,750,000 பவுன். இதிலிருந்து கிடைக்கிற வருமானத்தை கொண்டு ஒவ்வொரு வருஷமும் ஐந்து விதமான பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. இவற்றிற்கே நோபல் பரிசு என்ற பெயர். 1.பிசிக் (விஞ்ஞானம்) 2. கெமிட்ரி (ரசாயணம்) 3. வைத்திய சாதிரம் 4. இலக்கியம் 5.உலக சமாதானம் ஆகிய இந்த ஐந்துத் துறைகளில் ஒவ்வொன்றிலும் பிரதி வருஷத்திலும் சிறப்பான ஆராய்ச்சி செய்தவர் களுக்கோ, ஊழியம் புரிந்தவர்களுக்கோ, நூல்கள் எழுதினவர்களுக்கோ பரிசுகள் வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு பரிசின் மதிப்பு சுமார்6,500 பவுன். இவை எவ்வித நிற, சமூக, நாட்டு வேற்றுமையின்றி அளிக்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து விதமான துறைகளில் ஏதேனுமொன்றில் நோபல் வெகுமதிபெற்றவர்கள் என்றால் அவர்களுக்குப் பொதுவாகவே அதிக கௌரவம் இருக்கிறது. இந்தப் பரிசுகள் ஆப்ரெட் நேபால் இறந்த ஐந்தாவது வருஷத்தி லிருந்து அதாவது1901 ம் வருஷத்திலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. பரிசு பெற்றவர்களின் விவரம் வருமாறு:- உலகத்துப் பெரிய பணக்காரர்கள் ஐன் டி. ராக்பெல்லர் - அமெரிக்கவிலுள்ளவர். பல மண்ணெண் ணெய்க் கிணறுகளின் சொந்தக்காரர். 1839 ம் வருஷம் பிறந்தவர். 23.5.37 ல் மரண மடைந்து விட்டார். இவருடைய ஆதிமதிப்பு இவ்வளவென்று நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை தருமத்திற்காக இரண்டு கோடி பவுன் கொடுத்திருக்கிறார். ஹென்ரி போர்ட் - போர்ட் மோட்டார் தாபனத்தின் அதிபர். பிறந்தது 1864 சாதாரண ஒரு கணக்குப் பிள்யைக வாழ்க்கையைத் தொடங்கி இப்பொழுது உலகத்தில் மிகப்பெரிய பணக்காரராயிருக்கிறார் இவ்விரு வரும் உலகத்திலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களாகச் சொல்லப்படு கிறார்கள். கட்டுரைக் களஞ்சியம் 1. பாரதி தர்சனம் சுங்கு விட்ட தலைப்பாகை; அதன் கீழ் அகன்ற நெற்றி; அதில் சிவந்த குங்குமப்பொட்டு, குழி விழுந்த இரண்டு கண்கள்; அவற்றிலிருந்து கூர்மையான பார்வை. ஒட்டிய தாடைகள். நறுக்கு மீசை, உரத்த சிரிப்பு, ஆனால், அந்தச் சிரிப்பிலே ஆழ்ந்த கருத்து. ஒடுங்கிய மார்பு. வளைந்த மூக்கு. அகன்று அகன்று கால்களை எடுத்து வைக்கும் நடை. காலில் கிறுக்குச் சடாய். இந்தக் கோலத்துடன் தான், முதன் முதலில் பாரதியாரைநான் பார்த்தேன். அது 1918 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கடைசியிலேயோ, எப்போது என்று எனக்கு இப்போது சரியாக ஞாபகம் இல்லை. நான் அப்பொழுது தேசபக்தன் பத்திரிகையில் ஒர் உதவி ஆசிசரியனாயிருந்தேன். ஒரு நாள் காலை சுமார் பத்தரை அல்லது பதினோரு மணியிருக்கும். மேற்கண்ட கோலத்துடன் பாரதியார், எங்கள் காரியாலத்துக்கு வந்தார். தேசபக்தன் காரியாலயத்தில் உதவி ஆசிரியர்கள் இருந்த இடம் கட்டிடத்தின் பின்பக்கம். காரியாலயத்தின் நுழைவாயிலிலிருந்து, உதவி ஆசிரியர்கள் இருந்த இடத்துக்கு வரவேண்டுமானால், இரண்டு தாழ்வாரங்களையும் மூன்று முற்றங் களையும் கடக்க வேண்டும். சுமார் நூற்றைம்பது கஜ தூரமாவது இருக்கும். எனவே, பாரதியாரை, காரியாலயத்தில் நுழையும் போதிலிருந்து எங்கள் அருகாமையில் வருகிறவரையில், நாங்கள் கூர்ந்து கவனிக்க முடிந்தது. அப்பொழுதுதான், மேலே சொன்ன திருவுருவத்தை என் மனத்திரையில் வரைந்து கொண்டேன். பாரதியார் ஷர்ட் இல்லாமல் கறுப்பு ஓப்பன் கோட் மட்டும் அணிந்திருந்தார். அது கசங்கியும், ஒரு மாதிரி சாம்பல் பூத்தும் இருந்தது. ஷர்ட் இல்லாத குறையை நிவர்த்தித்துக் கொள்ளும் பொருட்டுத் தமது கழுத்தின் மீது கைக் குட்டையைச் சுற்றி வைத்திருந்தார். அவருடைய போட்டோக்களில் காணப்படுகறி மாதிரி, அவர் அப்பொழுது கையில் தடியொன்றும் வைத்திருக்கவில்லை. வாயில் நீண்டதொரு சுருட்டுப் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த காரமான புகை, உதவி ஆசிரியர்களாகிய எங்களில் பலருக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. தேசபக்தன் காரியாலயத்தில் உதவி ஆசிரியர்கள் அமர்ந்திருந்த இடம் ஒரு கூடம். அதில் ஒவ்வொர் உதவி ஆசிரியருக்கும் ஒவ்வொரு சிறு மேஜையும் நாற்காலியும் போடப்பட்டிருக்கும். மேஜையும் நாற்காலியும் நிரம்பப் பழைய காலத்து மோதர். எங்களுக்குக் கிடைத்த ஊதியம் எவ்வளவு அளிக்கப்பட்ட மேஜை நாற்காலி வரைகயராக்களும், மற்ற டேஷனரி சாமான்களும் மிகவும் சுருக்கமாகவே இருந்தன. எழுதுகிற பேனா நன்றாயிருந்தால், மசிக் கூட்டில் நிறைய இங்கியிராது; மசிக்கூட்டில் நிறைய இங்கியிருந்தால்; உடைந்த பேனாக்கட்டை, அல்லது நிரப்பு இல்லாத பேனா, எங்களுடைய மேஜையின் மீது சாவதானமாக அமர்ந்து காலையில் எங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இவையெல்லாம் அப்பொது எங்களுக்க ஒரு சங்கடமாகத் தோன்றவில்லை. ஏனென்றால், எங்கள் இதயத்திலே உற்சாகம் என்பது ஊற்றெடுத்து ஓடீக் கொண்டிருந்தது. அப்பொழுது அன்னி பெசண்டம்மையாரின் ஹோம் ரூல் கிளர்க்சிக் காலம். சொற் போரும் எழுத்துப்போரும் வெகு மும்முரமாக நடைபெற்றன. சுயராஜ்யப் பழம் வாயில் வந்து விழுந்து கொண்டிருப்பதாக எங்களுக்கு எண்ணம்! புதுவையில் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த பாரதியார் கூட வெளிய வந்து விட்டாரென்று சொன்னால், கேட்பானேன்? சுயராஜ்யம் வெகு தூரத்திலில்லையல்லவா? இந்த மாதிரியன மனக் கோட்டைகள் கட்டிக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வந்த காலத்தில்தான் பாரதியார் எங்களுக்குத் தரிசனம் கொடுத்தார். உதவி ஆசிரியர்களாக அப்பொழுது நாங்கள் ஏழுபேர் இருந்ததாக எனக்கு ஞாபகம். எங்கள் மத்தியில் வந்து நின்ற பாதியார், ஒரு சிம்மம் பார்ப்பது போல் எங்களைப் பார்த்துவிட்டு, ஆசிரிய பீடத்தில் அமர்ந்திருந்தவர் ஸ்ரீ.திரு.வி.கலியாணசுந்தர முதலியார். இருவரும் சிறிது நேரம் அறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஸ்ரீ முதலியார், பாரதியாரைக் கூடத்துக்கு அழைத்து வந்து, உதவி ஆசிரியர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிமுகப்படுத்துகிற சடங்கு நடை பெறுகிறபோது, பாரதியாரின் வாயில் சுருட்டு எரிந்து கொண்டிருந்தது. என்னிடம் பாரதியாரை அழைத்துக்கொண்டு வந்து இவர்தான் சாமிநாத சர்மா என்றார் ஸ்ரீ முதலியார். உடனே பாரதியார், வாயிலிருந்து சுருட்டை எடுத்து விட்டுப் புகையை என் முகத்தின் மீது ஊதினாற்போல் பற்ற விட்டு விட்டு, இவர்தான் போர்வீரரோ என்று சொல்லி, உரக்கச் சிரித்தார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஒன்றும் புரியவில்லை. அவருடைய சிரிப்பிலே பரிகாசம் இருப்பதாக மட்டும், நான் உணர்ந்தேன். பாரதியார் எல்லோருடனும் சிறிது நேரம் அளவளாகி விட்டுச் சென்றுவிட்டார். பிறகு, என் சக உதவி ஆசிரியராயிருந்த ஸ்ரீ பரலி சு.நெல்லையப் பிள்ளை, பாரதியாரின் சிரிப்புக்கு அர்த்தம் இன்னதென்று எனக்கு விளக்கிக் கூறினார். அப்பொழுது, தேசபக்தன் பத்திரிகையின் முதற்பக்கமானது, ஹோம் ரூல்பிரசாரத்துக்கென்றே தனியாக ஒதுக்கி விடப்பட்டிருந்தது. அதில், ஆங்காங்கு நடைபெறுகிற கூட்டங்களின் விவரங்கள், சுயராஜ்யம் சம்பந்த மாகத் தலைவர்கள் கூறும் அரிய கருத்துகள் முதலியன வெளிவரும். இவை தவிர, என்னுடைய கட்டுரையொன்று ஏறக் குறைய தினந்தோறும் இந்தப் பக்கத்தில் வெளியாக வேண்டுமென்று ஸ்ரீ முதலியார் உத்திரவு போட்டிருந்தார். வாசகர்களுக்கு உற்சாக மூட்டுகிற வகையில், நகைச் சுவையோடு, போர்க்களத்திலிருந்து ஒரு யுத்த நிருபர் எழுதுகிற தோரணையில், இந்தக் கட்டுரைகளை, நான் எழுதி வந்தேன். இந்தக் கட்டுரைகளின் அடிப்படையான நோக்கம் சுயராஜ்யப் பிரசாரத்தைத் தவிர, வேறொன்று மில்லை. சுயராஜ்யப் போர் முனையிலிருந்து - ஒரு போர் வீரன் எழுதுவது என்ற தலைப்புக் கொடுத்து, நான் இந்தக் கட்டுரைகளை எழுதி வந்தேன். இந்த மாதிரி எழுதுவது யார் என்று, பாரதியார் ஸ்ரீ நெல்லையப்ப பள்ளி மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தார். அந்தக் கட்டுரைகளைப் படித்து, பாரதியார், என்னை எந்த விதமாக உருவகப்படுத்தி, வைத்திருந்தாரோ, எனக்குத் தெரியாது. முரட்டுத்தனமாக எழுதுகிறவன் முண்டாசு கட்டி வீரனாக இருப்பான் என்று கருதினார் போலும்! அவர் நினைத்திருந்தற்கு நேர்மாறாக, என் ஒல்லியான வடிவம் காணப்பட்டதும், அவர், போர்வீரனுடைய லட்சணம் கொஞ்சங்கூட இல்லாத இவன் போர்வீரன் என்று புனை, பெயரிட்டுக் கொண்டு எழுதுகிறானே; என்ன துணிச்சல்! என்று கருதியேஅப்படி உரக்கச் சித்தார். அதாவது அட, சோப்பளாங்கி! உன் பவிஷுக்குப் போர் வீரன் என்ற பெயர் வைத்துக் கொள்ளலாமா? என்று அந்தச் சிரிப்பு என்னைக் கேட்டது போலிருந்தது. இந்த மாதிரி விதரித்துச் சொல்லி, என் மனதைக் சாந்தப் படுத்தினார். என் நண்பர் ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளை, ஸ்ரீ பிள்ளை, பாரதியாருடன் புதுவையில் சிறிது காலம் வசித்தவர். பாரதியாருக்கும் அவருக்கும் கடிதப் போக்கு வரத்து நடைபெறும். இந்தக் கடிதங்களொன்றில் என்ப் பற்றிக பாரதியாருக்கு எழுதியிருந்த தாகவும், அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டுதான் என்பைப் பார்த்ததும் இவர் தான் போர்வீரரோ என்று அவர் கேட்டதாகவும், ஸ்ரீ நெல்லையப்பர் கூறினார். பிறகுதான், எனக்கு ஒரு சிறிதளவு மனச்சாந்தி ஏற்பட்டது. பாரதியார் என் உருவத்தைப் பற்றி எந்த விதமாக வேண்டுமானாலும் பரிகாசம் செய்யட்டும். என் எழுத்துக்களைப் படிக்கிறாரே; அவர் படிப்பதற்குத் தகுதியுடையனவாயிருக் கின்றனவே என்ற சுய திருப்பிதான் இந்த மனச் சாந்திக்கு காரணமாயிருந்தது. பாரதியார், வெட்டொன்று துண்டிரண்டாகந்தான் பேசுவார். அந்தது விசேஷத்துக்கு அவர் மதிப்பே கொடுப்பதில்லை. மற்றும், சில சமயங்களில் அவர் இரண்டு அர்த்தங் கொடுக்குமாறு பேசுவார். ஒரு சமயம் சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிலாபத் கிளர்ச்சியின் மும்முரமான காலம் அது. பாரதியார் அப்பொழுது சுதேசமித்திரன் பத்திரிகையில் ஓர் உதவி ஆசிரியராயிருந்தார். காரியாலய வேலையை முடித்து கொண்டு, மரீனா ரோட் வழியாகக் கூட்டத்துக்கு வந்தார். அப்பொழுது கூட்டம் தொடங்கப் பட்டு யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள். சாதாரணமாகக் கூட்டத்துக்குச் சிறிது நேரங்கழித்து வரும் தலைவர்கள், பின்புறமாகச் சுற்றி வந்து மேடையின் மீதோ அல்லது மேடைக்கப் பக்கத்திலோ உட்காருவார்கள். ஆனால், பாரதியார் அப்படிச் செய்யாமல் கூட்டத்தின் நடுவே, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, மேடைக் கருகாமையில் வந்தார். அப்படி அவர் கூட்டத்தின் குறுக்கே வந்த காட்சி இப்பொழுதும் என் முன் வந்து தோன்றுகிறது. காரியாலயத்திலிருந்து வருகிற வழியில் பாரதியார் பூக்கடைக்குச் சென்று மல்லியைச் செண்டொன்றை வாங்கி, அதனைச் சரம் சரமாகத் துண்டு பண்ணினார். இரண்டு துண்டுகளை இரண்டு காதுகளிலும் சொருகிக் கொண்டார். மற்றொன்றைக் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார். வாயில் தாம்பூலச் சிவப்பு. மற்றபடி முதலில் சொன்ன சுங்கு விட்ட தலைப்பாகை வகையராக்கள். இந்தக் கோலத்துடன், கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு மேடைக் கருகாமையில் வந்தார் பாரதியார். நான் மேடையை மேஜையாக வைத்துக்கொண்டு, பத்திரிகை நிருபன் என்ற ஹோதாவில் நோட்-புக்கும் பென்சிலுமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந் தேன். பாரதியாரைப் பார்த்தும், வாருங்கள், நமகாரம் என்றேன். ஆவர் என்ன ரிப்போர்ட்டர் வேலையா? என்று சொல்லிக் கொண்டே, என் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தார். அருகாமையில் மற்றொரு பத்திரிகை நிருபரும் இருந்தார். நான் சும்மா இருக்கக் கூடாதா? பாரதியாருடன் ஏதோ சாமர்த்தியமாக்ப் பேசுகிறவன் மாதிரி பாவனை செய்து கொண்டு, அவரைப் பார்த்து, பின் புறமாகச் சுற்றிக் கொண்டு வரக்கூடாதா? ஏன் இப்படிக் கூட்டத்துக்குக் குறுக்கே வரவேண்டும்? என்றேன். நான் சொன்ன தென்னவோ சாந்தமான தொனியில்தான். ஆனாலும், பாரதியாருக்குக் கோபம் வந்து விட்டது. நாம் சுற்றி வளைத்துச் செல்வது வழக்கமில்லை. எப்பொழுதும் நேரடியாகத்தான் சொல்வோம். ஐயா என்றார். இது எவ்வளவு அர்த்த புஷ்டியுடைய வாக்கியம் என்பதைப் பின்னாடி தான் நான் தெரிந்து கொள்ள முடிந்தது. பாரதியார், தாம் இயற்றிய பாடல்களை மெய்மறந்து பாடுவதை, நான் கேட்டிருக்கிறேன். சாரீரம் கட்டையென்று தான் சொல்ல வேண்டும். ஆனால், பாவம் நிறைந்திருக்கும். ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மௌபரீ ரோட்டிலுள்ள குகானந்த நிலையம் என்று ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை மண்டபத்தில், மாலைவேளையில் பாரதியாரும் சில நண்பர்களுமாகப் பேசிக் கொண்டிருந்தோம். மண்டபத்துக்குள்ளே பால ஷண்முகனின் திருவுருவப் படமொன்று இருந்தது. மிகப்பெரிய படம். அதைப் பார்த்தால், குமரக் கடவுளை நேரில் காண்பது போலவே இருக்கும். மாலை நேரமல்லவா? மஞ்சள் வெளில், படத்தின்மீது விழுந்து கொண்டிருந்தது. சிறந்த ஷண்முகப்பிரியரான பாரதியாரின் வருகையை முன்னிட்டோ என்னவோ, அன்று அந்தப் படம், என்றுமில்லாத ஒரு சோபையுடன் பிரகாசித்தது. முருகக் கடவுள் மீது ஏதேனும் ஒரு பாடல் பாடுமாறு, பாரதியாரை அங்குள்ள நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர் அப்பொழுது முருகா, முருகா என்ற பாடலை மனமுருகிப் பாடினார். குமரக்கடவுள், மெல்லநடந்து வருவது போலவே இருந்தது. எங்களையறிமாமலே எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தோம். சுமார் இருபது வருஷங்களுக்கப் பிறகு, இப்பொழுது இதைப் பற்றி எழுதுகிற போதுகூட, எனக்கு மயிர்க் கூச்செறிகிறது. எத்தனையோ எழுத்தாளர்களைப் போல், எதுகை மோனை வைத்துப் பாடும் எத்தனையோ புலவர்களைப் போல், பாரதியாரும் ஒருவர் என்றுதான் அந்தக் காலத்தில் என் போன்ற இளைஞர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில், அவருடைய பெருமை, அவருடைய ஜீவிய காலத்திலே எனக்குத் தெரிய வில்லை யென்பதை நான் இப்பொழுது பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விடுகிறேன். இந்த அபசாரத்துக்குப் பிராயச் சித்தம் செய்து கொள்வது போல, அவருடைய பிற்காலத்தில் அவருடைய காவிய ரசனையிலே, நான் அதிகமாக ஈடுபட்டுவிட்டேன். அவருடைய பாடல்களில் எதை, யார், எப்படிச் சொன்னாலும், அதில் ஓர் இன்பம் இருப்பதாக, நான் உணர்க்கிறேன். பிரதி வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி, பாரதி யாரின் திருநாள் தமிழ் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பொழுது பிரசங்கம் செய்கிறவர்கள், பாரதியார் உயிரோடு வாழ்ந்த போது அவரைத் தமிழர்கள் புறக்கணித்து விட்டார்கள் என்றும், அவர் தரித்திரத்திலே உழன்று இறந்து போகும்படி செய்துவிட்டார்கள் என்றும், சம்பிரதாயமான ஓர் அழுகை அழுகுவார்கள். இந்தப் புலம்பல் கூட்டத்திலே, நான் ஒருவனாக இருக்க விரும்பவில்லை. ஒரு மகானாகிய கவிக்கு என்ன லட்சணங்கள் உண்டோ அந்த லட்சணங்களோடு தான் அவருடைய முப்பத்தொன்பது வருஷ வாழ்க்கை இருந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம். எவனுடைய இதயத்தில் உண்மையானது பிரகாசிக்கிறதோ அவன்தான் மகான் என்கிறான் கார்லைல் என்ற பிரெஞ்சு அறிஞன். ஆபத்திலே வாழக்கூடிய மனோ உறுதி எவனிடத்தில் இருக்கிறதோ, அவனே மகான் என்கிறான் நீட்ஷே என்ற ஜெர்மானிய அறிஞன் இந்த இரண்டு லட்சணங்களையும் பாரதியாருடைய வாழ்க்கையில் பொருத்தி வைத்துப் பாருங்கள். அவர் ஒரு மகான் என்ற முடிவுக்கு, நீங்கள் கட்டாயம் வருவீர்கள். பாரதியார் ஒரு கவி. இந்தக் கவி என்ற வார்த்தையோடு நான் வேறெந்த அடைமொழியையும் சேர்க்க விரும்பவில்லை. ஏனென்றால், புற உதவிகள் எதனையும் நாடாமல், எதுகை, மோனை முதலியன எவ்வித பந்தங்களுக்கும் உட்படாமல்; காட்டிலே திரியும் காளைபோல் சுதந்திர மாகச் சஞ்சரிக்கறிவன் எவனோ அவன்தான் கவி. அவன் இயற்கையின் பிரதிநிதி. அழகை நாடி அவன் செல்வதில்லை. ஏனென்றால், அவனே அழகு மயமாய் விளங்குகிறான். அழகுக்கு செய்வோர் யாரேனு முண்டோ? அதைப் போல், கவி என்ற உயர் மொழிக்கு, அடைமொழி தேவையோ? எண்ணங்களைத் தூண்டிவிடுகிறவன் கவியே தவிர, எண்ணங் களைப் பின் துரத்திக் கொண்டு செல்கிறவன் கவியல்ல என்கிறான் ஓர் ஆங்கிலப் புலவ்ன. வாதவம்; பாரதியார், தம் எளிய, இனிய பாக்களின் மூலம், நம் எண்ணங்களைத் தூண்டிவிடுகிறார். ஏனென்றால், அவர் எண்ணத்தின் ஊற்று. விளக்கைக் கொண்டுதான் விளக்கை ஏற்ற முடியும் என்பது போல், எண்ண ஊற்றுப் பெருக்கத்தோடும் இதயமுடைய கவிகள்தான், மற்றவர்களுடைய இதயத்தின் எண்ண ஊற்றைத் தோண்ட முடியும். இதனால்தான், பாரதியாரின் பாடல்களை நாம் படிக்கிறபோது, நம் உள்ளத்திலே புதிய புதிய உணர்ச்சிகள் உண்டாகின்றன. கண்ணினாலே பார்க்கப்படுவதுதான் கவி என்ற கவிதையின் லட்சணத்தை வரை யறுத்துக் கூறுகிறான் ஒரு ம்னாட்டுக் கவிஞன். இயற்கை அன்னையின் மடிமீது தலைவணங்கிப் படுத்து, அவளிடத்தில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்ட வொர்ட் வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞன், அறிவின் உயிர் எதுவோ, அறிவின் அழகு எதுவோ அதுதான் கவிதை என்கிறான். அன்பர்களே! இந்தக் கண்கொண்டு பாரதியாரின் பாடல்களைப் படியுங்கள். அவருடைய பெருமை உங்களுக்கு நன்றாக விளங்கும். 2. கார்ல் மார்க் மார்க் இறந்து சரியாக 60 வருஷங்களாகின்றன. இதே மார்ச் மாதந்தான். 1883ஆம் வருஷம் மார்ச் மாதம் 14-ஆம் தேதி லண்டனில் இவன் கடைசி நித்திரைக்குப் போனான். இதனால் சிந்தனை உலகத்துக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், அந்த நஷ்டத்துக்கு ஈடாக உலகத்து ஏழை மக்கள் கண்விழித்துக் கொண்டார்கள். இவனுடைய அடுத்த தலைமுறைக் காலத்திலேயே இவன் வகுத்த தத்துவம் நடைமுறைத் தராசில் நிறுக்கப்பட்டது. அப்பொழுதுதான் உலகத்து அறிஞர்கள், சமதர்ம சித்தாந்தம் என்பது, உலர்ந்து போன ஒரு சருகு அல்ல; அனைவருக்கும் ஒரே மாதிரியான நிழல் கொடுத்துக் காப்பாற்றும் சக்தி வாய்ந்த விருட்சம் என்று தெரிந்து கொண்டு, இவனிடம் மதிப்புக் காட்டத் தொடங்கினார்கள். 1917-ஆம் வருஷம், ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சி, மார்க் பிறந்த நூறாவது வருஷத்தைக் கொண்டாடுவது போல இருந்தது. இவன் பிறந்தது 1818-ஆம் வருஷம் மே மாதம் 5-ஆம் தேதி. இடம், ஜெர்மனியின் மேற்கெல்லையிலுள்ள ரைன்லர்ந்து மாகாணத்திலிருக்கும் ட்ரையர் ( Trier ) என்னும் கிராமம். மார்க்ஸின் முன்னோர்கள் யூதர்கள்; பணப்பித்துக்குச் சமமாக மதப்பற்றும் உடையவர்கள்; புரோகிதத் தொழிலைப் பரம்பரையாக அநுசரித்து வந்தவர்கள். ஆனால், மார்க், தன் நூல்களில் யூதர்களையும் மதத்தையும் அதிகமாகத் தாக்கியிருக்கிறான்! மார்க் ஆறு வயதுச் சிறுவனாகயிருந்தபோது, இவனுடைய தந்தை - ஹென்ரிக் மார்க்- தன் குடும்ப சகிதம் புராடெடெண்ட் கிறிதுவ மதத்தைத் தழுவிக் கொண்டான். கிறிதவ மதத்தின் மீது அபார பக்தி ஏற்பட்டு இப்படிச் செய்தான் என்று சொல்ல முடியாது. ஒரு யூதனாயிருந்துகொண்டு உலக மார்க்கத்தில் வெற்றி பெறுவதென்பது அப்பொழுது சிறிது கடினமாயிருந்தது. இதற்காகவே ஹென்ரிக் மார்க், தனது மத பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டு விட்டான். ஹென்ரிக் மார்க் ஒரு வக்கீல். நன்றாகச் சம்பாதித்து நான்கு பேர் மத்தியில் கௌரவமாக வாழ வேண்டுமென்ற ஆசையுடையவன். அப்படியே வாழ்ந்தான். அவனுடைய மனைவி சர்வ சாதாரணமான ஒரு குடும்ப திரீ. இவர்களுக்கு எட்டுக் குழந்தைகள். மூன்றாவது மகன் கார்ல் மார்க். இவனுடைய எதிர்கால வாழ்வைப் பற்றிப் பெற்றோர்கள் அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தகப்பன், தன்னைப் போல் மகனும் ஒரு வக்கீலாகி, பெயரும் புகழுமாக வாழ்வான் என்று எதிர்பார்த்தான். ஆனால், மார்க் தனது வாழ்க்கையைச் சிந்தனை உலகத்திலேயே கழித்து விட்டான். தாயார், தன் மகன் நிறையப் பணம் சம்பாதிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால், மார்க், பணத்தைப் பற்றி ஒரு நூலெழுதி விட்டான். இவன் சிறுவயதிலேயே பெற்றோர்களின் அதிருப்திக்கு ஆளானான். உலக மகா ஜனங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தோன்றிய பெரும்பாலான அறிஞர்களுடைய பாலிய வாழ்க்கை ஏறக்குறைய இப்படித்தானே இருக்கிறது? மார்க், சிறுவயதில், ட்ரையிரிலுள்ள பள்ளிக் கூடத்திலேயே படித்தான். அப்பொழுது இவனிடத்தில் விசேஷ சக்தி காணப்பட்டதாகத் தெரிவில்லை. பின்னர், பான் (Bonn) என்னும் நகரத்திலிருந்து சர்வ கலாசாலையிலும் ஒரு வருஷம் படித்தான். வீண் பொழுது போக்கிலேயே இந்த ஒரு வருஷம் கழிந்தது. பிறகு, தந்தையின் விருப்பத்துக்கிணங்க, பெர்லின் சர்வ கலாசாலைக்குச் சென்று சுமார் ஐந்து வருஷ காலம் படித்தான். சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், தத்துவ சாதிரம், சட்டம் முதலிய பல துறைகளிலும் பயின்றான். இடையிடையே கவிதைகள் புனைந்தான். இந்தக் காலத்தில் ஹெகல் (Hegel 1770-1831) என்ற ஓர் அறிஞனுடைய சித்தாந்தத்துக்கு ஜெர்மனியில் அதினமான செல்வாக்கு இருந்தது. இந்தச் சித்தாந்தம் என்ன? உலகம் என்றும் ஒரே மாதியாக இருந்ததில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றாக அது மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இந்த மாற்றமே அதனுடைய வளர்ச்சி. இந்த வளர்ச்சியானது முரண்பட்ட பல சக்திகளுடைய போராட்டத்தின் பரிணாமம். இந்தப் போராட்ட மில்லா விட்டால் வளர்ச்சியில்லை. எனவே, மேல் பார்வைக்க முரண்பட்டவை யாகத் தோன்றும் எண்ணங்கள், சக்திகள் முதலிய யாவும் உண்மையில் ஒன்றுக்கொன்று துணை செய்வனவேயாகும். இந்த மாதிரியன சில கருத்துக்கள் அடங்கியதே ஹெகலின் சித்தாந்தம். இதனுடைய தர்க்க நியாயத்தில் ஈடுபட்டான் மார்க். மானிட ஜாதியின் சரித்திரங்கூட இந்த மாதிரியான பலவகைப் போராட்டங்களின் பரிணாமதே என்று முவு கட்டினான். இதனுடைய விரிவே மார்க்ஸீயம். மார்க், பர்லின் படிபப்பை முடித்துக்கொண்டு, பான் சர்வ கலாசாலையிலேயே ஒரு தத்துவசாதிர போதகாசிரியனாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்று ஆசைக்கொண்டான். ஆனால் அப்பொழுதைய ஜெர்மானிய அரசாங்கத்தின் அதிகார ஆமல் அதற்கு இடங்கொடுக்வில்லை. எனவே, ஒரு பத்திரிகாசிரியனாக வாழ்க்கையை ஆரம்பித்தான். அப்டித் தொடங்குவதற்கு முன், தன்னால் ஏற்கனவே காதலிக்கப்பட்ட ஜென்னி வெட்பாலன் என்பவளை விவாகம் செய்து கொண்டான். அவள் பணக்காரப் பிரபு வமிசத்தைச் சேர்ந்தவள். நல்ல அழகி. குணவதி. புருஷனின் லட்சியப் பார்வையோடு தனது சர்வத்தையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டாள். ரைன்லாந்து மாகாணத்தில் வசித்துக் கொண்டிருந்த சில தீவிர அரசியல்வாதிகள் சேர்ந்து, ரைன்லாந்து கெஜட் என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள். இதற்கு மார்க், முதலில் கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்தான். பிறகு, இதன் ஆசிரியனானான். இதில் ஜெர்மன் அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தைப் பலமாக கண்டித்து வந்தான். இதனால் பத்திரிகையின் மீது அடக்குமுறை பாணம் விழுந்தது. இவன் ராஜீநாமாச் செய்தான். பத்ரிகையும் நின்று விட்டது. இதன் பிறகு, மார்க் பாரி நகரம் சென்றான். அங்கு சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த பிரெஞ்சு - ஜெர்மன் மலர் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியனானான். ஆனால், இது ஒரே இதழுடன் நின்றுவிட்டது. இந்த ஓர் இதழில் வெளியான விஷயங்கள்கூட ஜெர்மன் அரசாங்கத்துக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. எனவே, பிரெஞ்சு அரசாங்கத்தைத் தூண்டி, மார்க்ஸை பிரான்சின் எல்லையை விட்டு அப்புறப்படுத்தி விடும்படி செய்தது. பாரி வாசம் மார்க்ஸின் வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம். ஏனென்றால், இந்த வாசத்தின்போது, இவனுக்கு ப்ரெடெரிக் எஞ்ஜெலிஸின் (Frederick Engels; 1820-1895) நட்பு ஏற்பட்டது. சமதர்ம சித்தாந்தத்துக்கு இருவரும் தாயும் தந்தையுமாவர். மார்கஸுக்கு எல்லா வகையிலும் ஊன்றுகோல் போலிருந்தவள் எஞ்ஜெல் மார்க்ஸுக்காக எஞ்ஜெல் அநேகம் கஷ்டங்கள் பட்டிருக்கிறான். எஞ்ஜெல் இல்லாவிட்டால் மார்க் இல்லை; மார்க் இல்லா விட்டால் சம தர்மம் இல்லை. பாரிஸிலிருந்து வெளியேற்றப்பட்ட மார்க், பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸல்ஸுக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே இவனும் எந்செல்ஸும் சேர்ந்து, பொதுவுடைமைச் சங்கம் என்ற பெயரால் ஒரு ரகசியச் சங்கத்தை தாபித்து, அதன் மூலமாகப் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பிரசாரம் செய்து வந்தார்கள். இந்தச் சங்கத்தின் இரண்டாவது மகாநாடு 1847 ஆம் வருஷம் லண்டனில் கூடியது. மகா நாட்டின் விருப்பத்துக் கிணங்க, மார்க்ஸும் எஞ்ஜெல்ஸூம் சேர்ந்து மிகப் பிரபலமான கம்யூனிட் அறிக்கையைத் தயாரித்தனர். அது 1848 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் வெளியாயிற்று. மானிட ஜாதியானது எப்படி ஆரம்ப காலத்திலிருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறதென்பதைப் பற்றியும், இனி எல்லா மக்களும் சம அந்ததும் சம உரிமையும் பெற்று வாழ்வதற்கான வழி என்ன என்பதைப் பற்றியும், இந்த அறிக்கை சுருக்கமாகவும், ஆனால் தெளிவாகவும் ஆணித்தர மாகவும் எடுத்துக்காட்டுகிறது. சமதர்ம வாதிகளின் வேதப் புத்தகம் மாதிரி இந்த அறிக்கை. 1848 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பாரி நகரத்தில் எதேச் சாதிகாரத்துக்கு விரோதமாக ஒரு புரட்சி ஏற்பட்டது. பெல்ஜிய அரசாங்கத்தார், தங்கள் நாட்டுக்குள்ளும் எங்கே புரட்சிதீ பரவி விடப்போகிறதோ என்று அஞ்சி, முன்னெச்சரிக்கயைக மார்க்ஸை, தேசப் பிரஷ்டம் செய்துவிட்டனர். மறுபடியும் பாரி வந்தடைந்தான் மார்க். இங்கே சில நாட்களே இருக்க முடிந்தது. பின்னர் ஜெர்மனியிலுள்ளகோலோன் நகரத்தில் வெளியான புதிய ரைன்லாந்து கெஜட் என்னும் பத்திரிகைக்குச் சுமார் வரு வருஷகாலம் ஆசிரியனாயிருந்தான். அப்பொழுது கருத்துக்கள் ஜெர்மன் அரசாங்கத்துக்கு அச்சத்தை உண்டு பண்ணின. விளைவு என்ன? ஜெர்மனியிலிருந்து தேசப் பிரஷ்டம்! மறுபடியும் பாரிஸுக்கு வந்தான். ஆனால் அங்கிருந்தும் விரட்டப்பட்டுவிட்டான். கடைசியில் லண்டன் அடைந்தான். இதன் பின் இவனுடைய வாழ்நாள் முழுவதும் லண்டனிலேயே கழிந்தது. இந்தக் காலம் - சுமார் முப்பது வருஷம் - மார்க்ஸுக்கு மிகவும் சங்கடமான காலம். குடும்பம் பெருகியது; வறுமை வாட்டியது; பிணிகள் சுற்றிக்கொண்டன. ஆனால், இந்தக் காலத்தில்தான், இவன், தன்னுடைய பெயர் என்றும் நிலைத்திருக்கக் கூடிய மாதிரி அநேகம் காரியங்களைச் செய்தான். காபிடல் என்ற பிரசித்தமான நூலைத் தயாரித்தான். சர்வதேசத் தொழிலாளர் தாபனத்தை நிறுவினான்; சமதர்மம் என்பது வெறும் வறட்டுத் தத்துவமல்ல என்பதைப் பல வகையிலும் நிரூபித்துக் காட்டினான். இந்தமுப்பது வருஷகாலம் அவனுடைய சிருஷ்டிகாலம்; சங்கடப்பட்டகாலமும் கூட. இரண்டிலும்- சிருஷ்டியிலும் சங்கடத்திலும் - இவனுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள். நண்பனான் எஞ்ஜெல்ஸும் மனைவியான ஜென்னியுந்தான். மார்க் காபிடல் என்ற நூலை எழுதுவதற்காகச் சுமார் ஆயிரத்தைந்நூறு நூல்கள் வரை ஆராய்ச்சி செய்தான். பகலெல்லாம் படிப்பதும், இரவெல்ம் படித்தவற்றிற்குக் குறிப்புகள் எடுத்துக் கொள்வதும் இவன் வேளை. தினம் பதினாறு மணி நேரத்துக்கு மேல் உழைத்து வந்தான். இதனால் இவனுடைய தேகபலம் குன்றிவிட்டது. கடைசியில் (1883 - ஆம் வருஷம்) தனது அறுபத்தைந்தா வது வயதில் உயிர்நீத்தான். மார்க், பரநலத்துக்காகத் தன்னலத்தை மனமறிந்து தியாகம் செய்தவன்; இதனால் அலை போல் அடுக்கடுக்காக வந்த துன்பங்களை மலைபோல் உறுதியாக எதிர்த்துநின்றான். மேற்பார்வைக்கு இவன் கரடுமுரடாகக் காணப்பட்டான். உருவத்திலும் சுபாவத்திலும் இவன் ஒரு பலாப்பழம் மாதிரி. ஆனால், இவனைப்போல் ஏழை மக்களுக்கு இரங்கினவர் யாரும் கிடையாது. குழந்தைகளிடத்தில் இவன் பரம விசுவாசமுடையவன். தனக்கு மாறுபட்ட அபிப்பிராயமுடையவர் களை நிர்த்தாட்சண்யமாகத் தாக்குவான். இதனால் அநேகருடைய துவேஷத்துக்கு ஆளானான். ஆனால், இவன் அதை லட்சியம் செய்யவில்லை. தனது லட்சியம் ஒன்றிலேயே குறியாயிருந்தான். மானிட சமுதாயமனைத்தும் ஒரே மாதிரியான நல்வாழ்வு நடத்த வேண்டுமென்பதுதான் அந்த லட்சியம். 3. தலைமையுரை ஆறாவது தமிழ் எழுத்தாளர் மகாநாடு நாகர்கோவில் மே 31 - 1958 நல்லன்பர்களே! தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்திலிருந்து அதற்கு முறையாகத் தலைமை தாங்கித் திறம்பட நடத்தி வந்த அறிஞர் ஐவருக்கும் முதலில் என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். எழுதுகோலின் தரத்திலும் திறத்திலும் நம்பிக்கை வைத்து அஃதொன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு சிறு குடிலில் அமைதியாக இருந்து வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக் கொண்டிருக்கிறவன் நான்; அதில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறவன் நான். ஆனால் இப்போது என்னைப் பலரறிய மேடைமீது கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் நல்லன்பர்கள். இப்படிப் பலரறிய மேடைமீது வந்து நிற்பதற்கு எந்தவித தகுதியும் எனக்குக் கிடையாது.ஆனால் ஒரு தகுதி மட்டும் இருப்பதாக நான் உணர்கிறேன். அஃதென்னவென்றால், தமிழ்முனிவராக வாழ்ந்த திரு.வி.கலியாணசுந்தரமுதலியார் என்ன, அந்தண்மையின் அணி கலனாகத் திகழ்ந்த வ.வே.ஸு. ஐயர் என்ன, தியாக சீலரான சுப்பிரமணிய சிவனார் என்ன, கவிகுலக்கோமான் சுப்பிரமணிய பாரதியார் என்ன, இந் நால்வருடைய நல்லாசியின் நிழலிலே வளர்ந்தவன் நான். எனது எழுதுகோலை உறுதியாகப் பிடித்துக் கொள்ளவும், நேர்மையாக ஓட்டவும் கற்றுக்கொடுத்த அவர்களுடைய நல்லாசி என்னை எப்பொழுதும் அரவணைத்துக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையுடையவன் நான். இந்த நம்பிக்கைதான் உங்கள் முன்னிலையில் வந்து நிற்கும் துணிவை எனக்குக் கொடுத்திருக்கிறது. தவிர, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு நூலின் முகவுரையில் குறிப்பிட்ட வண்ணம் அகிலத்தை யெல்லாம் கட்டியாளவேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால் அகிலத்தையெல்லாம் என் இனிய தமிழில் கொண்டுவந்து காட்ட வேண்டுமென்ற ஆசை நிரம்ப இருக்கிறது. இந்த ஆசை, எனது பதினேழாவது வயதில் என்னைப் பற்றிக் கொண்டது; என்னை எரித்துக்கொண்டுதானிருக்கிறது; ஆனால் என்னை வாழவும் வைத் திருக்கிறது. இந்த ஆசைதான் என்னை இங்கே வந்து நிற்பதற்கான தகுதியை அளித்திருக்கிறதென்று கொள்கிறேன். முந்திய தலைவர்கள் ஐவரின் அன்பும், மேலே சொன்ன நால்வருடைய நல்லாசியும், உங்களுடைய ஒத்துழைப்பும் சேர்ந்து இம் மகாநாட்டை வெற்றி பெறச் செய்யும் என்று நான் நம்புகிறேன். தமிழகத்தின் வடகோடியெனத்தகும் சென்னை மாவட்டத்தில் சென்ற ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தமிழ் எழுத்தாளர் மகாநாடு இவ்வாண்டு தமிழகத்தின் தென்கோடியெனத் தகும் குமரி மாவட்டத்தில் நடைபெறுவது எத்தனையோ விதங்களில் பொருத்தமாக இருக்கிறது. தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் இயங்கிக் கொண்டு வந்தபோதிலும், அது தமிழகம் முழுமைக்கும் பொதுவானது, தமிழகம் முழுதும் அதன் கர்மக்ஷேத்திரம், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருடைய நல்லெண்ணத் திலும், நல்லாசியிலும் வளர்ந்து வரவேண்டிய ஒரு தாபனம் என்ற அடிப்படை உண்மைகளைச் சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போல் இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மகாநாடு இங்கே கூடுகிறது என்று நான் கொள்கிறேன். சாதாரணமாக ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆறாவது பிராயம் ஒரு திருப்பம் என்று சொல்லுவார்கள். அதுபோல், ஆறாவது பிராயத் திலிருக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது ஆறாவது மகாநாட்டை இந்தக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்துவது அதன் வளர்ச்சியில் ஒரு நல்ல திருப்பமாக அமையும் என்று நம்புகிறேன். ஏதோ சில காரணங்களினால் வேற்றகத்தில் இதுகாறும் எப்படியோ இருந்துகொண்டிருந்த இந்தக் குமரி மாவட்டம், இப்போது தன் தாயக மாகிய தமிழகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. இப்படிச் சேர்ந்த ஆரம்பகாலத்திலேயே எழுத்தாளர் மகாநாடு இங்குக் கூடுவது எழுத்தாளர் பரம்பரைக்கு ஏற்றதேயாகும். பண்டைக்காலந்தொட்டு இக் குமரிப் பகுதியன்றோ எழுதுகோலை இயக்குகின்ற அத்தனை பேருடைய இதயத்திலும் புனிதமான தானத்தைப் பெற்று வந்திருக்கிறது? குடமுனி முதல் கவிமணி வரை எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ புலவர்கள், எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் தோன்றி, தமிழை மிகுதியாக வளர்த்திருப்பது இப்பகுதியிலேயே யன்றோ? மற்றும், இயற்கை அன்னையின் அருளாட்சி நடைபெற்று வரும் இந்தப் பகுதியில் எழுத்தாளர் ஒன்று கூடிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அவர்கள் தங்களுடைய எழுத்துக்கள் இயற்கையான ஓட்டமுடையனவாகவும், கருத்துச் செறிவுடையனவாகவும் இருப்பதற்கான உற்சாகத்தை மேன்மேலும் பெறுவார்கள் என்பது திண்ணம். தவிர, தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு முதன் முதலாக இணைத்துக் கொண்டது இந்தக் குமரி மாவட்டத்து எழுத்தாளர் சங்கம். எனவே, சென்னைக்கு வெளியே முதன் முதலாக நடைபெறும் எழுத்தாளர் மகாநாடு, இந்தக் குமரி மாவட்டத்துத் தலைநகரில் கூடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இங்ஙனம் பலவித பொருத்தங்களுக்கிடையில் கூடியுள்ள இந்த மகாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என்பதிலோ, நல்ல முடிவு களைச் செய்து எழுத்துலகத்திற்கு நல்ல வழிகாட்டும் என்பதிலோ எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. இந்த மகாநாட்டுக்கு வந்திருக்கும் அனைவரையும் இனிய முகம் கொடுத்து, வரவேற்று, கனிந்த உள்ளத்தோடு உபசரித்து, வேண்டு வார்க்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுத்திருக்கும் வரவேற்புக் குழுவினருக்கும், அவர்களுடன் ஒத்துழைத்து வரும் பிற அன்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதியோர் ஆண்டும், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்த்தாய்க்கு நற்றொண்டு புரிந்து வந்திருக்கும் இரு பேரறிஞர்களுக்குக் கேடயங்கள் வழங்கி, கௌரவித்து வந்திருக்கிறதென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஆண்டில் கோவை திரு.சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்களுக்கும், திரு.பி.எ.இராமானுஜாசாரியார் அவர் களுக்கும் கேடயங்கள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விரு பேரறிஞர்களுடைய நற்றமிழ்ப் பணிகளைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்த் தாயின் திருவடிகளுடன் நெருங்கிய சம்பந்தம் பெற்று, அத்திருவடிகளையே தம்முடைய சரணாலயமாகக் கருதிப் பல்லாண்டுகளாக தமிழ்ப் பணி புரிந்துவரும் திரு.சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள் பெற்றுள்ள புலமைக்கும், அடைந்துள்ள ஞான பரிபக்குவத்திற்கும் எடுத்துக் காட்டாக அவர்களுடைய பெரிய புராண ஆராய்ச்சி நூல் ஒன்றே போதும். இராமனுக்கு அனுஜனான இலட்சுமணன், எப்படி இராமனுடன் கூடவே இருந்து சேவையின் இலக்கணமாக வாழ்ந்தானோ அதுபோல மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களோடு கூட இருந்து அவருடைய அன்பையும் மதிப்பையும் பெற்றவர் திரு.இராமானுஜாசாரியார் அவர்கள். வடமொழி தென்மொழிகளில் இவருக்குள்ள புலமைக்குச் சான்றாக தமிழ் உடை தாங்கி வெளிவந்திருக்கும் கௌடில்யனுடைய அர்த்த சாதிரம் ஒன்றே போதும். முதுகுரவர்களாகக் காட்சியளிக்கும் இவ்விரு பெரும் புலவர்களையும் நாம் பெருமைப்படுத்துவது, புலமையும் பண்பாடும் சேர்ந்து குடி கொண்டுள்ள நடமாடும் இரு கோயில்கள் முன்னர் வணக்கஞ் செலுத்துவதேயாகும். தமிழ் வாழ இவர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். தமிழிலுள்ள இலக்கியச் செல்வங்களைப் பிற மொழியினர் அறிந்து அனுபவிக்கவேண்டு மென்ற பெரு நோக்கம்கொண்டு அரும் பணியாற்றி வரும் அறிஞர்களை நமது சங்கம் கௌரவித்து வருவதை யொட்டி, இந்த ஆண்டில், திருக்குறளைப் பரிமேலழகர் உரையுடன் கன்னட மொழியில் தந்திருக்கிற திரு. எல். குண்டப்பா அவர்களுக்கும், கம்ப இராமாயணத்தின் நயங்களையும், திருக்குறளையும், ஹிந்தி மொழியில் தந்திருக்கிற திரு. எ. சங்கரராஜு நாயுடு அவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்க நமது சங்கம் முன் வந்திருக்கிறது. இவ்விரு பேரறிஞர்களுக்கு, கன்னட மொழியினர் மட்டுமல்ல, ஹிந்தி மொழியினர் மட்டுமல்ல, தமிழ் மொழியினரும் நன்றி செலுத்தக்கடமைப் பட்டிருக்கிறார்கள். பொதுவாக, தமிழ் மக்களின் சார்பாகவும், சிறப்பாகத் தமிழ் எழுத்தாளர்களின் சார்பாகவும், இவர்களை மனப்பூர்வமாகப் பாராட்டுவதுடன் இவர் களுடைய இத்தகைய நற்பணி மேன்மேலும் சிறக்கவேண்டும், அதற்கான ஆற்றலையும் ஆயுளையும் இவர்கள் நிறையப் பெறவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். நமது சங்கம், சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரளவு செல்வாக்குப் பெற்று வளர்ச்சி யடைந்திருக்கிறதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அங்கத்தினர் எண்ணிக்கையும், சங்கத்தின் அலுவல்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஆனால் இந்த அதிகரிப்பைக் கொண்டு நாம் திருப்தியடைய முடியாது; திருப்தியடை யவும் கூடாது. ஏனென்றால், சங்கம் சாதிக்கவேண்டிய காரியங்களை நோக்கும் போது, சாதித்திருக்கும் காரியங்கள் மிகமிகச் சொற்பம் என்றே சொல்லவேண்டும். முதலாவது, சங்கத்தின் அங்கத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவேண்டும். நூற்றுக்கணக்கிலேயேயுள்ள அங்கத்தினர் எண்ணிக் கையைக் கொண்டு நாம் எப்படித் திருப்தியடைய முடியும்? தமிழ்நாட்டிலே மட்டும் நூற்றுக்கணகான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, வட இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், தமிழகத்துடன் நெடுங்காலமாகத் தொடர்பு கொண்டு வந்திருக்கும் இலங்கை, பர்மா, மலேயா முதலிய நாடுகளிலும், தென் ஆப்ரிக்காவிலும், ஏன், இங்கிலாந்து, ருஷியா போன்ற மேலை நாடுகளிலும், உலகத்தின் வேறு பல பிராந்தியங்களிலும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எழுதும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறவர் களென்றும், பொழுதுபோக்குக்காக எழுதுகிறவர்களென்றும், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்களென்றும், இப்படிப் பலதரத்தினர் இருக்கலாம். இவர்கள் அடைகிற பயனும் வெவ்வேறு அளவுடையதாக இருக்கலாம். ஆனால் எல்லாரும் எழுத்தாளர்களே; தமிழ்த் தாயின் திருவடித் தொண்டர்களே. இவர்கள் அனைவருடைய பிரதிநிதிதாபனமாக, இவர்களுடைய எண்ணங்களையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக் கின்ற கண்ணாடிக் கோயிலாக, இவர்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் உந்து கருவியாக நமது சங்கம் இருக்க வேண்டும்; உலக அறிஞர்களுடைய கவனத்தை ஈர்க்கக் கூடிய, அந்த அறிஞர்களுடைய நன்மதிப்பைப் பெறக்கூடிய ஒரு தாபனமாக நமது சங்கம் திகழ வேண்டும். இதுவே என் கோரிக்கை. ஐரோப்பாவிலுள்ள ஜெகோலோவேகியா என்ற சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் விதீரணம் சுமார் 54,000 சதுரமைல்; உத்தேச ஜனத்தொகை ஒன்றரைக் கோடி. இங்கே ஓர் எழுத்தாளர் சங்கம் இருக்கிறது. இதில் ஏழாயிரம் அங்கத்தினர்களுக்கு மேல் இருக்கிறார்கள் என்றும், எழுத்தாளர்கள் சகல வசதிகளும் பெற்று நன்மதிப்புடன் வாழ்கிறார்களென்றும் அறிகிறபோது நமது எழுத்தாளர் சங்கத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது அங்கத்தினர்களாக இருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுவது நியாயமான ஆசையில்லையா? நமது சங்கத்தில், தமிழ எழுத்தாளர்கள் மட்டுமல்ல, தமிழ்மொழிக்கு உரிய மதிப்புக் கொடுக்கின்ற பிற மொழி எழுத்தாளர்களும், தமிழில் எழுதும் ஆற்றல் பெறாவிட்டாலும், தமிழ்மொழி பல துறைகளிலும் வளம் பெறவேண்டுமென்ற ஆர்வமுடையவர்களும், தமிழ் எழுத்தாள ர்களுக்கு ஆதரவு தருகிறவர்களும் இப்படிப் பல வகையினரும், துணை அங்கத்தினர்களாகச் சேர்ந்துகொள்ளலாம். இதற்குச் சங்க விதிகள் இடங்கொடுக்கின்றன. நமது சங்கம் அவசியமான சில தேவைகளையும், வசதிகளையும் பெற்று இயங்கிக்கொண்டு வருவதற்கோ, எழுத்தாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து காண்பதற்கோ, இந்தத் துணை அங்கத்தினர்களுடைய ஆதரவு மிகமிகத் தேவை. இத்தகைய பெருமனம் படைத்தவர்களுடைய உதவியையும் ஒத்துழைப்பையும் நாம் ஒரளவு பெற்றிராவிட்டால் இந்த மகாநாட்டை இங்கே நாம் நடத்த முடியுமா? இவர்களத்தனை பேருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். சங்கம் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டு மானால், இந்தத் துணை அங்கத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். மனமும், தனமும் பெற்றுள்ள கனவான்களே! சேர வாரும் நமது சங்கத்திலே என்று கைகூப்பி, வாய்திறந்து கேட்கிறேன். நமது சங்கத்தின் தலைமை தானத்தில், சங்கத்திற்கென்று சொந்தமான ஒரு கட்டிடம் தேவை. சங்கம் தோன்றிய காலத்தி லிருந்து இந்த ஆசை இருந்துகொண்டே வருகிறது; முற்றிக் கொண்டும் வருகிறது. ஆனால் செயலளவில் நிறைவேற இன்னமும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த மகாநாடு ஒரு சிறிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமானால் நான் எவ்வளவோ மகிழ்ச்சியடைவேன். இப்போது நான் கற்பனைக் கண்கொண்டு காணும் நமது சங்கக் கட்டிடம் சங்கத்தின் வெறும் அலுவலகமாக மட்டும் இல்லை; எழுத்தாளர்கள் ஒன்று கூடிப் பேசுவதற்கு வசதியுள்ள ஒரு மண்டபமாக மட்டுமில்லை; பத்திரிகை களையோ, நூல் ஏடுகளையோ பொழுது போக்குவதற்காகப் புரட்டிப் பார்க்க வரும் அன்பர்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு வாசக சாலை யாகவோ, நூல்நிலையமாகவோ மட்டுமில்லை. இவையெல்லாம் தேவைதான். இவை எல்லாம் அங்கே இருக்கின்றனதான். ஆனால் இவைகளுக்கெல்லாம் மேலாக அந்தக் கட்டிடம் என் அகக்கண் முன் காட்சியளிக்கிறது. அது, வெளியிடங்களிலிருந்து வரும் அன்பர்களின் உடலுக்கு உரம் தருகின்ற, மனதுக்குச் சாந்தியளிக்கின்ற ஆராம மந்திரம்; வறுமையோடு உறவாடிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வேண்டிய அளவுக்கு வழங்குகின்ற கருவூலம்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நூல்களென்று அங்கீகார முத்திரை தரும் யோக்கியதைகள் பல நிறைந்த ஒரு முத்திராலயம்; ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாரங்கள் பல நல்குகின்ற, வசதிகள் பல அளிக்கின்ற பட்டிமண்டபம்; புதிய புதிய எழுத்தாளர் களைப் படைத்துக் கொடுக்கும் பட்டறை. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு பட்டிமண்டபம்; தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில். அந்தத் திருக்கோயிலில், பண்டுதொட்டுத் தமிழைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்த புலவர்களும், புரவலர்களும், ஓவியர் தீட்டிய வண்ண உருவங்களில் கொலுவமர்ந்து எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டி ருக்கிறார்கள். இவையெல்லாம் பகற்கன வென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது இயற்றுபவர் என்று கூறியவனும் ஒரு தமிழ்மகன்தான்; திருவள்ளுவன்தான். சென்னைக்கு வெளியே அனேக ஊர்களில் தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் ஏற்பட்டு நல்ல வேலை செய்து வருகின்றன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு இஃதொரு நல்ல அறிகுறி. இச் சங்கங்கள் பலவும் சென்னையிலுள்ள தாய்ச் சங்கத்தோடு இணைந்து கொள்வது நல்லது. நல்லது மட்டுமல்ல, அவசியமும் ஆகும். சென்னைச் சங்கத்தை தாய்ச் சங்கம் என்று சொன்னதனால் அதற்குத் தனியான அந்தது இருப்பதாக யாரும் கருதவேண்டாம். தமிழ்நாட்டின் தலைநகரத்திலே இருப்பதனால் தான் தாய்ச் சங்கம் என்று சொல்கிறேன். தலைநகரில் உள்ள எந்த ஒரு தாபனத்தையும் தலையாய தாபனம் என்று சொல்வது சம்பிரதாயம். அதையொட்டியே சென்னைச் சங்கத்தைத் தாய்ச் சங்கமென்று சொல்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் ஒரு குடும்பமாக வாழவேண்டுமானால், அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகள் யஅவ்வப்போது கவனிக்கப்படவேண்டுமானால், சமுதாயத்திலோ, அரசாங்கத்தின் முன்னிலையிலோ, அவர்கள் தங்களுக்குரிய மதிப்பைப் பெற வேண்டு மானால், அவர்கள் ஒரே குரலால்தான் பேசவேண்டும். அப்போதுதான் செவிசாய்க்க வேண்டியவர்கள் செவிசாய்ப்பார்கள்; அந்தக் குரலுக்குக் கொடுக்கவேண்டிய மதிப்பையும் கொடுப்பார்கள்; பலனும் உண்டாகும். ஆகவே, வெவ்வேறு இடங்களில் அமைந்து தனித்தனியாக இயங்கிவரும் எழுத்தாளர் சங்கங்கள் பலவும் தாய்ச் சங்கத்தோடு இணைத்துக் கொண்டு பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால், எந்த ஒரு சங்கத்தின் சுய நிர்ணய உரிமையும் பாதிக்கப் படாது; மதிப்பும் குறையாது. உண்மையில் சேர்ந்து பணியாற்றுவதில்தான் சிறப்பு இருக்கிறது. இன்னும் தமிழ்மொழி வளர்ச்சிக்கென்று பல பல சங்கங்கள் தோன்றி நடைபெற்று வருகின்றன. இவையும் நமது எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்துகொண்டு பணி புரியுமாறு அழைக்கின்றேன். எல்லோருடைய குறிக்கோளும் தமிழ் வளர்ச்சிதானே? இதையும் தமிழ் அன்பர்கள் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படி இணைத்துக்கொண்டு பணியாற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்ள இந்த மகாநாடு பயன்படுமானால், அஃது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும். தமிழ் மொழியின் வருங்காலத்தில் நம்பிக்கைகொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையில் இந்த மாநாடு கூடுகிறதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நமது ராஜ்யத்தின் ஆட்சி மொழி தமிழாகிவிட்டது. இதற்காக நமது அரசாங்கத்தை நாம் பாராட்டவேண்டும். ஆனால், இதில் விசேஷம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மக்களாட்சி பெற்ற எந்த ஒரு நாட்டிலும், எந்தக் காலத்திலும் அந்நாட்டு மக்கள் பேசும் மொழிதான் ஆட்சி மொழியாக இருந்து வந்திருக்கிறது. நமது நாட்டில் அன்னிய ஆதிக்கத்தின் விளைவாக, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. இப்போது அந்த நிலை மாறி சுய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது நமது தாய் மொழி எந்த தானத்தில் இருக்கவேண்டுமோ அந்த தானத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சென்ற சில நூற்றாண்டுகளாக ஆங்கிலத்தில் நடைபெற்று வந்த அரசாங்க அலுவல்களைத் தமிழ் மொழிக்குத் திருப்புவதில் நமது ராஜ்ய அரசாங்கத்தார் சிறிது நிதானத்தைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அரசாங்க உத்தியோகதர்கள் இந்த மாற்றத்திற்குத் தங்களைச் சரிப்படுத்திக் கொள்ள அவகாசம் பெற வேண்டு மல்லவா? இதனாலேயே ஆரம்ப தசையில் சுமார் ஆயிரத்தைந்நூறு வகைக் காரியாலயங்களில் மட்டும் தமிழிலேயே எல்லா விவகாரங்களும் நடைபெறவேண்டும் என்று உத்திரவிட்டிருக்கின்றனர். இனிப் படிப்படியாக எல்லாக் காரியாலயங் களுக்கும் இந்த உத்தரவு அமுலுக்குக் கொண்டுவரப்படும் என்பது உறுதி. இதற்கு முன்னேற்பாடாக எத்தனையோ காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. இதுகாறும் ஆங்கிலத்திலிருந்த அரசாங்கச் சட்டங்கள், நிரந்தர விதிகள், நடைமுறை சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முதலிய பலவும் தமிழாக்கம் பெறுதல் வேண்டும். இதற்குச் சிறிது காலம் பிடிக்கத் தான் செய்யும். ஆனால் இந்தத் தமிழாக்கம் மக்களுக்குப் புரியும் வண்ணம் சுலபமாகவும், சீக்கிரமாகவும் நிறைவேற வேண்டுமானால், நமது ராஜ்ய அரசாங்கத்தார், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது நல்லது. நமது ராஜ்ய அரசாங்கத்தார், அரசாங்க அலுவல்களின் உபயோகத் திற்கென்று கலைச் சொல்லகராதி யொன்றைத் தயாரித்து வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.மக்களுக்குப் புரிகின்ற, மக்களினுடைய அன்றாடப் புழக்கத்தில் பல காலமாக இருந்து வருகின்ற அனேக சொற்களும், சொற்றொடர்களும் இதில் எவ்வளவு தூரம் இடம் பெற்றிருக்கின்றன என்பதைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. இதைப் பூரணமாக அமுலுக்குக் கொண்டுவருவதன் முன்னர் பல துறைகளிலும் அனுபவமுள்ள அறிஞர் சிலரைக் கலந்தாலோசித்து ஆவன செய்யுமாறு அரசாங்கத்தினரைக் கேட்டுக் கொள்ளுகிறேன். தமிழை ஆட்சி மொழியாக ஆக்கிவிட்டதோடு அரசாங்கம் திருப்தியடைந்து விடக்கூடாது. இனித்தான் அதன் பொறுப்பு அதிகமாகிறதென்று சொல்வேன். தமிழில் புதுப்புது இலக்கியங்கள் தோன்றவும், உலகத்துப் பலதுறை அறிவினையும் தமிழில் கொண்டு வரவும், அவ்வாறே தமிழில் செறிந்து கிடக்கும் சிறந்த கருத்துக் களையும், அதன் இனிமையையும் நயத்தையும் பிற மொழியினர் நுகரவும் செய்யப்படும் எல்லா முயற்சிகளுக்கும் அரசாங்கம் ஆதரவு தரவேண்டும். பாரதத்தின் பல்வேறு மொழிகளிலுமுள்ள நல்ல நூல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை முழுவதுமாகவோ, சில நல்ல பகுதிகளையோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதென்று இந்திய அரசாங்கம் வகுத்துள்ள ஒரு திட்டத்தை அனுசரித்து, நமது சென்னை அரசாங்கம் தமிழ் மொழிக் கென்று ஒரு குழுவை நியமித் திருக்கிறது. இந்தக் குழுவிலுள்ளவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்கள், ஆங்கில மொழி பெயர்ப்புப் பணிக்கு மிகவும் பொருத்தமானவர்கள். இவர்களையும் இவர்களை நியமித்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுகிறோம். ஆனால், இந்தக் குழுவில் நமது எழுத்தாளர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்கனவே நாம் அரசாங்கத்திற்குச் சுட்டிக் காட்டி இருக்கிறோம். தமிழாக்கப் படுத்தப்படும் பணி தொடங்கப்படுவதற்கு முன் நமது சங்கம் அந்தக் குழுவில் இடம் பெறும் என்று நம்புகிறோம். இந்தியாவில் வழங்கப் பெறும் முக்கியமான மொழிகள் வளம் பெறுவதற்காகவும், அவற்றில் நல்ல இலக்கியங்கள் தோன்றுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் 1954-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நிறுவப்பட்ட சாகித்திய அகாடெமி, ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் வெளியாகும் சிறந்த நூலுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசளித்து வருவது யாவரும் அறிந்ததே. இதுவரை தமிழுக்கு இரண்டு ஆண்டுகளே பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு வழங்கப்படவில்லை. தமிழில் பரிசு பெறுவதற்குத் தகுதியுடைய நூல் எதுவும் வெளிவரவில்லை யென்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இஃதுண்மையானால், எழுத்தாளர்கள் ஆச்சரியமே அடையவேண்டியிருக்கிறது. அப்படியானால் தமிழில் இலக்கிய வறட்சி ஏற்பட்டு விட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. வருந்தத் தக்க இத்தகைய நிலை ஏதும் ஏற்பட்டு விடவில்லை யென்பது உறுதி. சாகித்திய அகாடெமியாரும் இதை ஒப்புக் கொள்வார்கள். தவிர, சாகித்திய அகாடெமியார் பரிசுக்குரிய நூலென்று மதிப்பிடுவதற்கு எந்தக் கோலை உபயோகித்தார்கள் என்பதை அறிந்துகொள்ள எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள். இந்த விருப்பம் நியாயமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. பொதுவாக, இம்மாதிரியான விஷயங்களில் சாகித்திய அகாடெமியார் நமது எழுத்தாளர் சங்கத்தைக் கலந்து கொள்ளுதல் நல்லது. இது சம்பந்தமாக நமது சங்கம் சாகித்திய அகாடெமியுடன் கடிதப் போக்குவரத்து நடத்திக் கொண்டிருக்கிறதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மற்றும் சாகித்திய அகாடெமியார், தமிழிலுள்ள சில பழைய படைப்புக்களையும், புதிய சிருஷ்டிகளையும் திரட்டித் தொகுத்தும், வேறு மொழிகளில் மொழி பெயர்த்தும் வெளியிட திட்டமிட்டிருக் கிறார்கள். இது போற்றத்தக்கதே. ஆனால், தொகுப்பு நூல்களும், மொழி பெயர்ப்பு நூல்களும், தமிழரும் பிறமொழியினரும் சுலபமாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அமையவேண்டும். தமிழர் களுடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவனவாகவும், தமிழ் மரபை ஒட்டியனவாகவும் இருக்கவேண்டும். அதே பிரகாரம், தொகுப்பு முறையிலும் தமிழரும் பிறரும் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய குறிப்புக்கள் முதலியன இடம் பெறுதல் வேண்டும். இந்த விஷயங் களிலும் சாகித்திய அகாடெமியார் கவனம் செலுத்த வேண்டும் என்று நம்புகிறோம். இனி, எழுத்தாளர்களின் படைப்புச் சக்தி அதிகரிக்க வேண்டு மானால், அவர்களுடைய படைப்புக்கள் நிலைத்து நிற்கக் கூடியவை களாகவும், மக்களுக்குப் பயன் விளைவிக்கக் கூடியவைகளாகவும் அமையவேண்டுமானால் அவர்கள் பலதுறை அனுபவங்களைப் பெறுதல் வேண்டும். இவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் தங்கள் மனத்துக்குகந்த சிற்சில இடங்களில் சிற்சில காலம் தங்கி, தங்கள் சிந்தனை ஊற்றுக்களை ஆழமாக்கிக்கொள்ள விரும்பலாம்; அல்லது ஆராய்ச்சி செய்து சில உண்மைகளைக் காண விழையலாம்; அல்லது பற்பல இடங்களுக்குச் சென்று பார்த்து, கண்டவற்றை மக்களுக்கு அறிவிக்க ஆசைப்படலாம். இம்மாதிரியான விஷயங்களில் எழுத்தாளர் களுக்கு உள்ள ஆசை அளவு கடந்தது. ஆனால் இந்த ஆசைக்குத் தகுந்த பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை யென்பது யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. எழுத்தாளர்கள் தனித்தனியாகவோ, குழுவினராகவோ, நிலத்திலோ, நீரிலோ, ஆகாயத்திலோ எந்த மார்க்கத்தில் செல்ல விரும்பினாலும் அவர்களுக்குக் கட்டணச் சலுகை காட்டவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகிறது. அரசாங்கத்தின் ஐந்தாண்டு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் தொழில் முயற்சிகள், ஆராய்ச்சி நிலையங்கள் முதலியனவற்றை எழுத்தாளர்களைக் கொண்டு பார்க்கச் செய்தும், அவர்கள் பார்த்தவைகளை மக்களுக்கு அறிவிக்கச் செய்தும், மக்களுடைய நல்லெண்ணத்தையும், ஒத்துழைப்பையும் பெற அரசாங்கம் முற்பட வேண்டும். சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசாங்கம் அவ்வப்போது வெளியிட்டு வரும் தபால் முத்திரைகளில் வட நாட்டில் தோன்றிய சான்றோர் சிலர் இடம் பெற்று வருகின்றனர். இது நமக்கு மகிழ்ச்சியே, ஆனால் இதுபோல், தமிழ் நாட்டிலேயே தோன்றிய சான்றோர்களும் இடம் பெறுதல் வேண்டும். இடம் பெறவில்லை என்ற குறை தமிழர்களிடையே சிறிது காலமாக இருந்து வருகிறது. துளசி, மீரா, ஜான்சி முதலியவர்களைப் போல் கம்பன், வள்ளுவன், பாரதி போன்றவர்களும் தபால் முத்திரைகளில் இடம் பெறத் தகுதியுடையவர்களில்லையா என்று தமிழர்கள் கேட்கிறார்கள். இவர்களுடைய சரியான உருவங்கள் கிடைக்கவில்லை யென்று அரசாங்கம் சொல்ல முடியாது. மனமிருந்தால் வழிபிறக்கும். இந்திய அரசாங்கம் இது விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தித் தமிழர்களுடைய குறையைத் தீர்க்க வேண்டுகிறேன். தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் இப்பொழுது ஒரு நவயுகம் பிறந்திருக்கிறதென்று சொல்லவேண்டும். முந்திய தலை முறையில் வாழ்ந்த எழுத்தாளர்களைக் காட்டிலும், இந்தத் தலை முறையில் வாழும் எழுத்தாளர்கள் அநேக அமிசங்களில் அதிருஷ்ட சாலிகள். தங்கள் சிருஷ்டி சக்தியை அதிகரித்துக்கொள்ள அநேக வாய்ப்பு களைப் பெற்றிருக்கிறார்கள். முந்திய தலைமுறை எழுத்தாளர்களின் அறிவுத் திறனையும், புதிய புதிய சிருஷ்டிகள் செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தையும் நாம் எவ்வளவு போற்றினாலும் தகும். ஆனால், அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை நினைத்தால், அவர்கள் வாழ்ந்த விதத்தை எண்ணினால், ஐயோ என்று உள்ளம் ஏங்குகிறது. இந்தக் காலத்தில் சர்வ சாதாரண மென்று கருதப்படுகின்ற மிக மிகச் சாதாரணமான வசதிகள் கூட அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஓர் ஊற்றுப்பேனா உண்டா? மின்சார விசிறி உண்டா? விளக்கு உண்டா? எழுதுவதற்குத் தான் நல்ல தாள் அகப்படுமா? உழைப்பு அதிகம்; ஊதியம் குறைவு. அந்த ஊதியமும் சரிவரக் கிடைக்காது. 'தேசபக்தன்' ஆசிரிய பீடத்தமர்ந்திருந்த திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள். மாதச் சம்பளமாகப் பெற்ற தெல்லாம் தொண்ணுறு ரூபாய்தான்; அதே ஆசிரிய பீடத்தில் பின்னர் அமர்ந்த வ.வே. ஸு. ஐயர் அவர்கள் பெற்றது மாதம் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் போகவில்லை. வ.உ.சி., பாரதி, ஐயர் போன்ற மேதைகள், தமிழில் புதுப் புது நூல் களைப் படைத்துக் கொடுக்க வேண்டுமென்றும், தமிழுக்கும் ஆங்கிலத் திற்கும் பரபர பரிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டு மென்றும் எவ்வளவோ துடித்தார்கள்; என்னென்னவோ திட்டங்கள் போட்டார்கள். பாரதி, தமது நூல்களை நாற்பது பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டு, மண்ணெண்ணெய், தீப்பெட்டி மாதிரி எல்லோருக்கும் மலிவாகக் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று ஆவல் கொண்டு நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். இதற்காக, அவர் நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் நூறு ரூபாய் விகிதந்தான்; நன்கொடையாக அல்ல; கடனாக! புரோநோட்டின் பேரில்! வட்டி கொடுப்பதாகக் கூறினார்! யாரும் கைநீட்டவில்லை. வ.வே. ஸு. ஐயர், குறுந்தொகை, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவும், இந்தியாவின் சரித்திரத்தை தேசீயக் கண்கொண்டு எழுதவும், இன்னும் பல நூல்களை வெளியிடவும் திட்டங்கள் வகுத்து நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். தமிழில் சிறந்த மாதப் பத்திரிகையொன்று வெளியிட விரும்பி, இதற்கு மூலதனமாக மூவாயிரம் ரூபாய் இருந்தால் போதுமென்றும், ஆளுக்கு நூறு ரூபாய்விகிதம் முப்பதுபேர் பங்கெடுத்துக் கொண்டால், இந்தத் தொகை சேர்ந்து விடுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு என்ன பதில் கிடைத்தது தெரியுமா? நான்குபேர் - நாலே பேர்தான் - இதைப் பற்றி யோசித்துப் பதில் எழுதுவதாகச் சொன்னார்கள்! இந்த அறிஞர் களுடைய நூல்களை வெளியிட்டு விநியோகிக்க அப்பொழுது ஒரு பிரசுரகர்த்தர் கூட முன்வரவில்லை; நல்ல பிரசுரகர்த்தர்களும் அப்பொழுது இல்லை. இங்ஙனம் இவர்களுக்கு எத்தனையோ விதமான ஆசாபங் கங்கள் ஏற்பட்டு வந்தபோதிலும், இவர்கள் சிறிதும் மனச்சோர்வு கொள்ளவில்லை. இவர்களுடைய அன்றாட வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்திருந்த போதிலும், மனிதத் தரத்தில் இவர்கள் உயர்ந்தே நின்றார்கள். இவர்களுடைய வாழ்க்கை, மானிட சமூகத்திற்கு, சிறப்பாகத் தமிழர் சமுதாயத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகஅமைந்து நின்றது. இவர்களுடைய மங்காத புகழுடம்பின் சாயலில்தான், இன்றைய தலைமுறை எழுத்தாளர் சமுதாயம் தவழ்ந்து செல்கிற தென்பதை, நம்மில் யாரும் மறந்துவிட வேண்டாம். எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் இன்றைய நிலைமை எத்தனையோ விதங்களில் மாறியிருக்கிறது. முன்னேற்றத்தைக் காட்டும் மாறுதல் என்பதில் ஐயமேயில்லை. நமது நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது; நமது தாய்மொழி ஆட்சிபீடத்தில் அமர்ந்துவிட்டது. இதன் அர்த்தமென்ன? நாடும் மொழியும் சுய நிலைக்கு, அதாவது சுதந்திர நிலைக்கு வந்துவிட்டன. எந்த ஒன்றும், சுதந்திர நிலையில்தான் பூரண விகாசத்தை யடைகிறது. அதனிடத்தில் அடங்கியிருக்கும் சக்திகளெல்லாம் வெளிப் படுகின்றன. நமது தாய்மொழி இப்பொழுது சுதந்திர நிலை எய்திவிட்டது. இனிஅது பூரண விகாசம் பெறவேண்டும். விகாசம் பெறச் செய்ய வேண்டியவர்கள் யார்? நாம்தான்; தமிழ் எழுத்தாளர்களாகிய நாம்தான். நம் பொறுப்பு இனி அதிகமாகிறது. நமது எழுதுகோலை இனி அதிக திறம்பட செலுத்த வேண்டும். நமது எழுதுகோல், உலக எழுத்தாளர்களின் எழுதுகோல்களைக் காட்டிலும், எந்தவிதத்திலும் வலிமை குன்றியதன்று, எந்தத் துறையிலும் அது செல்லவல்லது என்பதை நாம் நிரூபித்துக் காட்டவேண்டும். உலகனைத்தையும் நம் தமிழ் மொழியில் கொண்டு வந்து காட்டுவேண்டும்; அது போலவே, நம் தமிழ் மொழியின் வளமை யையும், இனிமையையும், அழகையும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்கான வாய்ப்புக்களை, முந்தின தலைமுறையினரைப் போலல்லாமல் இப்பொழுது நாம் அதிகமாகப் பெற்றிருக்கிறோம். நமது எழுத்துக்களைப் படிக்கவேண்டுமென்று ஆர்வங்காட்டும்வாசகர்கள் ஆயிரக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள்; நமது நூல்களை வெளியிட முன்வந்திருக்கும் பிரசுரகர்த்தர்களும் அதிகப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து சிந்தித்து, ஆர அமர்ந்து எழுதுவதற்கான வசதிகளுக்குக் குறைவில்லை; உழைப்புக்குத் தகுந்த ஊதியம் ஒருவாறு கிடைக்கிறது. தகுந்த அளவுகிடைக்கிறதென்று சொல்லமுடியாவிட்டாலும், நிரம்பக் குறை வாகக் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது. ஆனால், கிடைக்கிற ஊதியத்திற்கேற்றாற்போல் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருக் கின்றன வென்பதை நான் மறந்து விடவில்லை. தமிழ் எழுத்தாளன், தன் எழுதுகோல் ஒன்றைக் கொண்டே ஜீவிக்க முடியும் என்ற நிலைமை இன்னும் உண்டாகவில்லை. ஆனால் அந்த நிலைமை உருவாகிக் கொண்டு வருகிறதென்று மட்டும் நான் உணர்கிறேன். நமது ராஜ்ய அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் நல்ல தமிழ் நூல்களுக்குப் பரிசளித்து வருகின்றன. பத்திரிகை அதிபர்கள் சிலர், நல்ல எழுத்துக்களுக்கு நல்ல சன்மானம் அளித்து வருவதோடு, போட்டி நடத்தி நல்ல நூல்களைத் தெரிந்தெடுக்கச் செய்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பரிசளிக்க முன்வந்திருக்கின்றனர். இவர்களனைவரையும் நாம் மனமார வாழ்த்துவோமாக! தவிர, மூப்பினாலோ, வறுமையினாலோ, சிருஷ்டி சக்தி குன்றிப் போயிருக்கும் எழுத்தாளர்களுக்கும், பிற கலைஞர்களுக்கும், அவரவர்களுடைய நிலைமைக்கும் அவசியத்திற்கும் தகுந்தவாறு ஒரு தொகையை இந்திய அரசாங்கம் அளித்து வருகின்றது. இந்த வகையில் உதவிபெற்றவர்கள், 1955-56ல் 95 பேரென்றும், 56-57ல் 102 பேரென்றும், 57-58ல் 112 பேரென்றும், சமீபத்தில் வெளியான ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. உதவிபெற்றவர்களில் தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் எத்தனைபேரென்பது தெரியவில்லை. ஆனால் ஒரு சிலர் பெற்று வருகிறார்களென்பது மட்டும் தெரியவருகிறது. இந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டியது நமது கடமையல்லவா? ஆகவே, சகோதர எழுத்தாளர்களே! இப்பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல சந்தர்ப்பங்களை நல்ல முறையில் நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டியது எவ்வளவு அவசியமென்று உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழில் சிறுகதை இலக்கியம் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. சிறுகதைகளில் சில, பிறமொழிகளில் பெயர்க்கப்பட்டு நல்ல மதிப்பைப் பெற்று வருகின்றன. இது பெருமை கொள்ளத் தக்க விஷயந்தான். ஆனால் இதைக் கொண்டு திருப்தியடைந்துவிட வேண்டாமென்று சிறுகதை எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சிலராவது அவர்களில் புதிய பாதைகளில் செல்ல முற்பட வேண்டும். நமது புராதனக் கிரந்தங் களில் எத்தனையோ சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. மகாபாரதத்தை ஒரு சிறுகதைக் களஞ்சியமென்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் அகழ்ந்தெடுத்து, புதிய மெருகு கொடுத்து வெளியிட வேண்டும். இன்னும் நம் நாட்டுச் சரித்திரத்தில், நம் உள்ளத்தைத் தொடக்கூடிய எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இவை ஒவ்வொன்றையும் தெரிந்தெடுத்து, சிறுகதையாக உருவாக்கி வெளியிட்டால், இன்றைய இளைஞர் சமுதாயம் நன்மையடையும்; வருங்கால சந்ததிகளின் நன்றியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். நாவல் இலக்கியமும், நாடக இலக்கியமும், சிறுகதையைப் போல் வேகமாக வளரவில்லையென்றாலும், ஓரளவு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை யாருமே ஒப்புக்கொள்ள வேண்டும். சரித்திரப் பின்னணியைக் கொண்ட நாவல்களுக்கு இப்பொழுது ஒரு மவுசு இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சில நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. இந்த மாதிரியான நாவல்கள் எழுதும் விஷயத்தில் எழுத்தாளர்கள், சர்வ ஜாக்கிரதையுடன் தங்கள் எழுதுகோலை ஓட்ட வேண்டும். சரித்திர உண்மைகளை முதலில் தெரிந்து தெளியவேண்டும். இதற்கு ஓரளவு ஆராய்ச்சி மனப்பான்மை தேவை. அந்த உண்மைகளைத் தொட்டுக் கொண்டேதான் எழுதுகோல் செல்ல வேண்டும்; அந்த உண்மைகளுடன் கற்பனைச் சரக்கை அதிகமாகக் கலந்துவிடக் கூடாது. உண்மையை அழகாகவும் தெளிவாகவும், இனிமையாகவும் சொல்லத் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கிய உலகத்தில் நிலைத்து நிற்கக் கூடிய நாடகங்கள் வெளிவரவில்லை யென்றே சொல்லவேண்டும்; ஆனால் நடிப்பதற் கேற்ற சில நல்ல நாடகங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நடிப்பு நாடகங்கள் சிலவற்றில் இலக்கிய மணம் வீசுகிற தென்பதை நாம் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்ளவேண்டும். இலக்கியப் பற்றுள்ளங் கொண்ட நடிக அன்பர்கள் சிலர், இது விஷயத்தில் அதிக கவனஞ் செலுத்தி வருவது பாராட்டத்தக்கது. படித்து இன்புறக் கூடிய ஓரங்க நாடகங்களும் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம், நமது சகோதர எழுத்தாளர்களிற் சிலர், மனிதர்களுடைய அகவாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் ஏற்படும் அதிர்ச்சிகள், உணர்ச்சிகள் முதலியவைகளை நாசூக்காக எடுத்துக் காட்டி நம்மை வியப்புறச் செய்திருக்கிறார்கள். இவர்கள் நமது பாராட்டுதலுக்குரியவர்கள். இந்த நாடகத் துறையில் எழுத்தாளர்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று கோருகிறேன். அறிவுக்கு உரமிடக் கூடிய கட்டுரைகள் மிகக் குறைவாகவே வெளிவருகின்றன. இதில் ஏன் எழுத்தாளர்கள் அதிக கவனஞ் செலுத்த வில்லையோ தெரியவில்லை. நமது சமுதாயம் பண்பட்ட நிலையில் இயங்கி வரவேண்டு மென்பதில் எழுத்தாளர்களாகிய நமக்கு உண்மையிலேயே சிரத்தை இருக்குமானால், கட்டுரை இலக்கிய மென்னும் கருவியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். கட்டுரைகள் எழுதுவோர்க்கும் படிப்போர்க்கும் அதிக பொறுமை வேண்டுந்தான்; அதிகமாகச் சிந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆனால் விளைகிற பயனை உத்தேசித்து, இந்தச் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் கட்டுரை இலக்கியத்தின் மீது கவனஞ் செலுத்துமாறு சகோதர எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கடித இலக்கியத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அப்படி ஓர் இலக்கியம் இருக்கிறதா என்று கூடச் சிலர் கேட்கக்கூடும். வ.வே.சு.ஐயர், பால பாரதி பத்திரிகையில் எழுதிவந்த ராஜகோபாலன் கடிதங்களுக்குப் பிறகும், மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதங்களுக்குப் பிறகும், இலக்கிய மதிப்பு வாய்ந்த கடிதங்கள் வெளிவரவேயில்லை யென்று சொல்லலாம். ஒருவர் உள்ளத்தைத் திறந்து காட்டுவதும் மற்றொருவர் உள்ளத்தைத் தொடுவதும் கடித மூலந்தான் சாத்தியம். பிறமொழிகளில், கடித இலக்கியம் வெகுவாக வளர்ந்திருக்கிறது. முகம் பார்த்துப் பேச முடியாத நிலையில், அகம் பார்த்துப் பேச, அகத்திலுள்ளதை அறிவிக்க, கடிதங்களையே கருவியாகக் கையாண்டிருக்கிறார்கள் அறிஞர் பலர். காந்தியடிகளும் டால்டாயும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டது கடிதங்கள் மூலமாக வல்லவா? இதுபோல் இன்னும் பல உதாரணங் களைச் சொல்லலாம். ஆகவே, தமிழ் எழுத்தாளர்கள், கடித இலக்கியத்தின் மீது கவனஞ் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முதலில், பிற மொழிகளில் வெளி வந்திருக்கும் முக்கியமான கடிதங்களைத் தெரிந் தெடுத்து, தமிழாக்கிக் கொடுக்கலாம். தேசீயக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இந்திய வரலாற்று நூல் இனித்தான் வெளிவரவேண்டும் போலும். பொதுவாக, பாரதநாட்டு வரலாற்றை எழுதியிருக்கிற சரித்திராசிரியர்கள், தமிழ்நாட்டைப் புறக்கணித்து வந்திருக்கிறார்கள்; அல்லது லேசாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார்கள். இப்பொழுதுதான் சில சில அறிஞர்கள், இந்தக் குறையை உணர்ந்து பரிகாரம் தேட முன் வந்திருக்கிறார்கள். இவர்களும் ஆங்கில மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழில் எழுதப்பட்ட சரித்திர நூல்கள் விரல்விட்டு எண்ணக் கூடியனவாகவே இருக்கின்றன. இவற்றைக் கண்டு நாம் திருப்தியடைந்து விடலாமா? தமிழ்நாட்டைப் பற்றி எழுத முன்வரும் வரலாற்றாசிரியர்களுக்கு உதவி செய்ய, பண்டைய இலக்கியங்களென்ன, கோயிற் சாசனங்களென்ன, தாமிரப் பட்டயங்களென்ன, இவை பலவும் காத்துக் கிடக்கின்றன. இவைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? நல்ல வரலாற்று நூல்களை எழுத முன்வரவேண்டாமா? சகோதர எழுத்தாளர்ளே! இந்தத் துறை நோக்கி நமது எழுதுகோலைச் செலுத்த வேண்டும்; ஆம்; சீக்கிரமாகவும் வேகமாகவும் செலுத்த வேண்டும். இன்னும் பிற நாட்டுச் சரித்திரங்கள், சான்றோர் வரலாறுகள், சுய சரித்திரங்கள் இவற்றின் மீதும் நம் கவனம் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஆங்காங்குக் கவி அரங்கங்கள் நடைபெறுகின்றன; வெளிவரும் கவிதைகளுக்கும் குறைவில்லை. ஆனால் எல்லாம் உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கின்றன என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இவை வரவேற்கத் தக்கனவே, ஏனென்றால், இந்தப் பலவகை சிருஷ்டி களிலிருந்து ஒரு சில நல்ல கவிதைகள், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் நிச்சயமாக உதயமாகும். கவிதைக்கும் கவிஞனுக்கும் எத்தனையோ லட்சணங்கள் கூறுகிறார்கள். அவற்றைப் பற்றி யெல்லாம் இங்கே நான் விதரித்துக் கொண்டு போக விரும்பவில்லை. பொதுவாக, அமர முத்திரை பெற்று வாழக்கூடிய நல்ல கவிதைகளை நமது எழுத்தாளர்கள் படைத்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழில் விமர்சனக் கலை வளரவில்லையென்று அறிஞர்கள் அடிக்கடி பேசி வருகிறார்கள். இஃது ஓரளவுக்குச் சரியே தவிர, முழுவதும் சரியல்ல. சென்ற சில ஆண்டுகளில், விமர்சனக் கலையைப் பற்றிய சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும், சில நல்ல தரமான விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.இவற்றையெல்லாங் கண்டு நாம் பெருமிதங் கொள்ள முடியாவிட்டாலும், அதிருப்தி கொள்வதற்கில்லை; மேலும் மேலும் வளரும் என்ற நம்பிக்கை கொள்ள இடமிருக்கிறது. வ.வே.சு.ஐயர், தமிழ் எழுத்தாளர்களுக்கு எத்தனையோ விஷயங்களில் வழி காட்டியிருப்பதுபோல் இந்த விமர்சனக் கலைக்கும் வழிகாட்டியிருக்கிறார். அவருடைய எழுத்துக்களின் மீது நமது பார்வையைச் சிறிது செலுத்துவோமாக! குழந்தை இலக்கியத்தின் மீது இப்பொழுது கவனஞ் செலுத்தப் பட்டு வருகின்றது; குழந்தைகளுக்கென்று சில பத்திரிகைகளும் வெளி வருகின்றன. மற்றப் பத்திரிகைகளிலும், குழந்தைகளுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கிவிடப்பட்டு வருகிறது. இவையெல்லாம் வரவேற்கத் தக்கனவே. குழந்தைகளுக்கென்று எழுதுகின்றவர்கள், மனோதத்துவ சாதிரத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். குழந்தைகளோடு நெருங்கிப் பழகுகின்ற அனுபவமும் அவர்களுக்குத் தேவை. தவிர, அவர்கள், இந்தியப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எழுதவேண்டும். கீழான உணர்ச்சிகளைக் கிளறிவிடக் கூடிய எழுத்துக்களைக் குழந்தைகளின் முன்னிலையில் வைக்கலாகாது. இந்தப் பொது நியதிகளை அடித்தளமாக வைத்துக்கொண்டு குழந்தைகளுக்காக எழுதப்பெறும் எந்த நூலும் வரவேற்கத்தக்கதே. குழந்தை மனம் படைத்த ஒரு சில தமிழ் எழுத்தாளர் கள், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கென்றே, தங்கள் அறிவையும் ஆற்றலையும், நேரத்தையும் பொருளையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு நம் வாழ்த்து. தமிழில், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய சாதிரங்களைப் பற்றிச் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தச் சாதிரங்களின் அகன்ற பரப்பை உத்தேசிக்கையில், இப்பொழுது வெளிவந்திருப்பது ஓர் அணு மாத்திரமே யென்று சொல்ல வேண்டும். இந்தச் சாதிரங்களைப் பற்றி மேலை நாட்டு மொழிகளில் ஆயிரக் கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. நமது தமிழ் மொழியில் பத்துக் கணக்கிலென்றாவது சொல்லிக் கொள்ள முடியுமா? சிறப்பாக சுதந்திர நிலையிலே இருக்கின்ற நமக்கு, குடியரசுப் பிரஜைகளாக வாழ்கின்ற நமக்கு, அரசியலைப் பற்றியும் பொருளாதாரத்தைப் பற்றியும் அதிகம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை யிரண்டும், இப்பொழுது, நமது அன்றாட வாழ்க்கையோடு கலந்திருக் கின்றன. அன்றாட வாழ்க்கையில் எழும் ஒவ்வொரு பிரச்னையின் போது, இந்த இரண்டில் ஏதோ ஒன்றையாவது சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் இவைகளைப் பற்றி அறிவதும், அறிவிப்பதும் எவ்வளவு அவசியமென்பதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டுமா? விஞ்ஞான சாதிரி, கனவேகத்தில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். அவன் ஆக்கத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக் கிறானா, அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறானா என்பது வேறு கேள்வி. வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் உண்மை. நேற்றுப் புதுமையாக இருந்தது, இன்று பழமையாகிவிடுகிறது. இந்த நிலையில் இந்தச் சாதிரத்தைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டியது எழுத்தாளர்களுடைய கடமை யல்லவா? சென்ற சில ஆண்டுகளாக சில பத்திரிகைகள், விஞ்ஞான சாதிர சம்பந்தமான கட்டுரைகளுக்கு இடங் கொடுத்து வருகின்றன. மக்களும் இவற்றை விரும்பிப் படிக்கிறார்கள். விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகப்பட்டு வருகிறது. ஆகவே, எழுத்தாளர்கள், விஞ்ஞான சாதிரத்தின் மீது அதிக கவனஞ் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சமூக சாதிரம், மனோதத்துவ சாதிரம், தாவர வர்க்க சாதிரம், பிராணி வர்க்க சாதிரம், உடற்கூறு சாதிரம், வான சாதிரம் இப்படிப் பலவகை சாதிரங்களைப் பற்றித் தமிழில் சரியான நூல்களே வரவில்லை யென்று வருத்தத்துடன் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டில் ஆங்காங்குத் தொழில் முயற்சிகள் பல நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழில் நுட்பங்களைத் தெரிந்துகொண்டு சுயமாகத் தொழில் செய்ய விரும்புவோர் ஆங்கிலத்தின் உதவியைத் தான் நாட வேண்டியிருக் கிறது. தமிழில் சரியான நூல்களில்லை. இதைப் பற்றி எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டாமா? இந்தச் சாதிரங்கள் முதலியவை பற்றிய முதனூல்களை நாம் இப்பொழுது உடனடியாக எழுத முடியாவிட்டாலும், மேலை நாட்டு மொழிகளில் வெளிவந்திருக்கும் நல்ல நூல்களைத் தெரிந் தெடுத்து அவற்றைத் தமிழ்ப்படுத்திக் கொடுக்கலாம். இன்னும், நமது நாட்டிலேயே புராதன காலத்தில், ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. கப்பல் சாதிரம், விமான சாதிரம், அசுவ சாதிரம், நவரத்தினங்களைப் பற்றிய சாதிரம், வைத்திய சாதிரம் இப்படிப் பல துறைகளில் நமது முன்னோர்கள் ஆழ்ந்து சென்று அநேக உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றில் பல இன்னும் ஓலைச்சுவடிகளிலேயே இருக்கின்றன. இவற்றை யெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்; முக்கியமானவற்றைத் தொகுத்துப் பதிப்பித்து வெளியிடலாம்; அல்லது தமிழில் மொழிபெயர்த்து, தற்காலத்தவர் எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய விளக்கங்களுடன் வெளியிடலாம். இந்த இடத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். மொழி பெயர்ப்பு நூல்களை இரண்டாந் தரத்தில் வைத்துப் பேசுகிறார்கள் சிலர். மொழிபெயர்த்தலென்பது சுலபமான காரியமென்று நினைக்கிறார்கள் சிலர். உண்மையில், மொழி பெயர்த்தலைப் போன்ற கடினமான காரியமெதுவுமில்லை; மொழி பெயர்ப்பு நூல்களுக்கு முதல் தரத்து மதிப்பே கொடுக்கப் பட வேண்டும். மொழிபெயர்ப்பாசிரியன், எந்த மொழியிலிருந்து பெயர்க்கிறானோ அந்த மொழியிலும், எந்த மொழிக்குப் பெயர்க் கிறானோ அந்த மொழியிலும் நல்ல புலமை பெற்றிருக்கவேண்டும். நூற்புலமை மட்டும் போதாது; இரண்டு மொழிகளின் இலக்கிய மரபு,இவை வழங்கும் நாடுகளின் வரலாறு, இவை பேசும் மக்களின் நாகரிகம், கலாசாரம், பழக்க வழக்கங்கள் ஆகிய பலவற்றையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால், மொழிபெயர்ப்பு, ஜீவனில்லாத உடல் போல இருக்கும். எனவே, மொழி பெயர்க்கும் துறையில் பணியாற்ற விரும்பும் எழுத்தாளர்கள், குறைந்தபட்சம் இரண்டு மூன்று மொழிகளில் நல்ல புலமை பெற முயலவேண்டும். தமிழன் பரம்பரையாகவே எப்பொழுதுமே, பிற மொழித்து வேஷியல்ல; பிற இனத் துவேஷியல்ல. எந்த மொழியையும் அவன் விரும்பிக் கற்றான்; அதில் ஆழ்ந்த புலமையும் பெற்றான். பரம்பரையாக அவன் பெற்ற சக்தி இது. இப்பொழுது கூட, தொழில் நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ வெளி இடங்களுக்குச் செல்லுகிற தமிழர்கள், அந்த இடத்து மொழியைச் சுலபமாகக் கற்றுக்கொண்டு, அந்த மொழி பேசுவோரைப்போல் லாகவமாகப் பேசி அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற்று வருவதைப் பார்க்கலாம். இன்னும், தமிழன் நல்லது எங்கேயிருக்கிறதென்று தேடிச் சென்று அதை முயன்று பெற்றான்; அப்படியே, தன்னிடம் நல்லதைத் தேடி வருகின்றவர்களைக் கைகொடுத்து வரவேற்று அவர்களுக்கு அதை மனமுவந்து அளித்தான். இதனால் அவனுக்கு யாதும் ஊராயிருந்தது. யாவரும் கேளிராயிருந்தனர். நம்முடைய இந்தப் பரம்பரையை தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் மறந்துவிடக் கூடாது; அது மட்டுமல்ல, நம்முடைய எழுத்துக்களில் இதை அடிக்கடி நினைவுபடுத்திக் காட்டவேண்டும். தமிழ் எழுத்தாளர்களாகிய நமக்கு எந்த மொழியும் புறம்பான தல்ல; எந்த மொழியையும் நாம் புறக்கணிக்கவேண்டாம். நம்மால் முடிந்தவரையில் எத்தனை மொழிகளைக் கற்க முடியுமோ அவற்றைக் கற்போம்; கற்று நல்ல புலமை பெறுவோம். அது முடியாவிட்டால், கூடிய மட்டில்அதிகமான மொழிகளில் அதிகமான பரிச்சயத்தையாவது பெறுவோம். இப்படிப் பரிச்சயம் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டு மென்ற நோக்கத்துடன், நமது சங்கம், பிற மொழிகளைப் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. ஒவ்வொரு மொழியும் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிறந்த இலக்கியப் படைப்புக்கள் யாவை, அவற்றிலுள்ள நயங்கள் யாவை, இவை போன்ற பல விஷயங்களைப் பற்றி, அந்தந்த மொழி வல்லுநர்கள் பேசி வருகிறார்கள். இந்தச் சொற்பொழிவுகள் நல்ல பலனைத் தந்து வருகின்றன. பிற மொழிகளைப் பற்றி நாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான பரிச்சயத்தைப் பெற்றுக் கொள்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக நமது தாய்மொழிக்கு உரங்கொடுக்க முடியும். நமது தாய்மொழியை வளமுறச் செய்ய, இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சகோதர எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மனிதனோ, சமுதாயமோ தனித்து வாழ முடியாது. இந்த நியதி, மொழிக்கும் ஓரளவு பொருந்தும், எந்த மொழியும், தனது தனித்துவத்தை விட்டுக்கொடாமல் பாதுகாத்துக்கொண்டு வருவதோடு, மற்ற மொழி களுடன் தொடர்புகொண்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதன் இலக்கியத்தில் பசுமையும், வளர்ச்சியில் செழுமையும் காணப்படும். இந்த உண்மையைச் சகோதர எழுத்தாளர்கள் மறக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். பழமையின்றிப் புதுமையில்லை. பழமையைப் புறக்கணித்து விட்ட புதுமைக்கு வலிமை இராது; வாழ்வு எப்படி யிருக்கும்? ஆகவே, தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் நமது பழைய இலக்கியங்கள் மீது அதிக கண்ணோட்டம் செலுத்திக்கொண்டு வரவேண்டும்; அவற்றை அறிந்து அனுபவிக்கவேண்டும். அனுபவிக்க அனுபவிக்க, நம்முடைய புதிய சிருஷ்டிகளுக்குப் புதுமெருகும் புது மணமும் கொடுக்கவல்ல ஆற்றலைப் பெறுவோம். தவிர, தமிழ் எழுத்தாளர்களாகிய நாம், இன்றைய தமிழ்ப் படைப்புக்களையும் படிக்கவேண்டும். எந்த எழுத்தாளனையும், எந்த ஓர் எழுத்தாளனுடைய படைப்பையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. எதிலும் ஏதாவதொரு நல்லது இருக்கும். அதை நாம் எடுத்துக் கொள்ளலாமல்லவா? சகோதர எழுத்தாளர்களே! நாம் இப்பொழுது சுதந்திர யுகத்தில் வாழ்கிறோம்; சுதந்திர அரசின் குடிமக்களாக வாழ்கிறோம். இதை அடிக்கடி நாம் நினைவுபடுத்திக்கொண்டு நமது எழுதுகோலைச் செலுத்தவேண்டும். சுதந்திர அரசின்கீழ் வாழும் பிரஜைகள், உரிமைகளைக் காட்டிலும் கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவர்கள்; ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் வாழ்க்கையின் இரண்டு பற்றுக் கோடுகளாகக் கொள்ளவேண்டியவர்கள்; சமுதாயத்தின் கட்டுக்கோப்பு குலையாமல் பாதுகாத்து வரவேண்டியவர்கள். இவற்றையெல்லாம் நமது எழுத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தி வரவேண்டியது நமது கடமை. இந்தக் கடமையைச் செய்துவர, தமிழ்த் தாயின் திருவருளை வேண்டுவோமாக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் எழுத்தாளர் சங்கம்! ËËË