பொது நூற்களஞ்சியம் - தொகுதி பதினைந்து ஆய்வுக் கட்டுரைகள் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி பதினைந்து ஆய்வுக் f£LiufŸ| சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2007 | தாள் : 16 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 8 + 152 = 160 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 150 | படிகள் : 1000 | நூலாக்கம் : மலர், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல்களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளிவரு கின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள்ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல் களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங் களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதிகளாக உங்கள் கைகளில் தவழ விட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்துவிட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவரு வதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், திருமதி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் 1. தமிழ்நாட்டு ஆடைகள் 3 2. திருவிளக்குகளின் சிறப்பு 10 3. மே - தினம் 19 4. கல்வெட்டுக் கருத்தரங்கு - 1966 57 5. பொன்விழா எடுப்பிக்கும் பொற்புறு கழகம் 67 6. சர்வதேச வாலிபர்களின் எழுச்சி 77 7. சுதந்திரம் பெற்ற சோவியத் பெண்கள் 85 8. சோவியத் இளந்தளிர்கள் 103 9. பிரடரிக் ஏங்கல் 115 10. எனது இலங்கைப் பிரயாணம் 130 தமிழ்நாட்டு ஆடைகள் தமிழ்நாட்டு ஆடைகள் கையேடு (Hand Book) கலைக்காட்சிக் குழு 2வது உலகத்தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, சென்னை - 1968. உலகில் மிக நாகரிகமுள்ளவர்களாய் இன்று கூறிக் கொள்ளும் ஆங்கிலேயர், ஆடை கட்டத்தெரியாது, அரை நிர்வாணிகளாய் - இல்லை - முழு நிர்வாணிகளாய்த் திரிந்தலைந்த காலத்திலே தமிழர்கள் பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் பொற்சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். நவமணிகள் இழைத்த பொன் அணிகளைப் பூண்டு வந்தனர். சுருங்கக் கூறின், நானிலம் புகழ நனிசிறந்த நாகரிக மக்களாய் சீரும் சிறப்பும் பெற்று விளங்கினர் என்று சொல்லலாம். தமிழர்கள் மிகத் தொன்மையான காலத்திலேயே ஆடைகளை அணிந்து வந்தனர் என்று நமது தமிழ் அறிஞர்கள் கூறுகின்றார்களே யொழிய, கி.மு. 3000 ஆண்டிற்கு முன்னர் தமிழர்கள் பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் அணிந்து வந்தனர் என்று, தக்க சான்றுகாட்டி எவரும் எழுதியதே இல்லை. காரணம், தொன்று தொட்டுத் தமிழர்கள் தொன்மையான பொருள்களைப் பாதுகாத்து வைக்கத் தவறியுள்ளனர் என்று இங்கு வருத்தத்தோடு கூறிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்திய அரசாங்கப் புதைப்பொருள் ஆராய்ச்சித் துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர்.சாண்மார்சல், இந்திய வரலாற்றுத்துறை அறிஞர் இராசு அடிகள் போன்றவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடப் பெருங்குடி மக்கள் கிரேக்கர், உரோமர் போன்ற நாகரிக மக்களின் பொற் காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் கட்டிடங்களையும் முத்திரை களையும் ஆயுதங்களையும் அணிகலன்களையும் பண்ட பாத்திரங்களையும் ஆடைகளையும் செய்து நனி சிறந்த நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப் பிடித்த மக்களாய் வாழ்ந்தனர் என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில் வணிக அமைச்சரால் நிறுவப்பெற்ற அகில இந்திய கைப்பணிக் கழகம் வெளியிட்ட, இந்திய அச்சுப்புடவைகள், என்ற சீரிய நூலில்,1 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத் தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது என்று திட்டவட்டமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. பண்டைக்காலத்தில் பாரதநாட்டில் உயிர் ஊட்டும் உழவுத் தொழிலை விட உயர்ந்து நின்ற தொழில் நெசவுத் தொழிலேயாகும். செய்யுந் தொழிலெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று தமிழகத்தின் அறவோர்கள் இத்தொழிலை உயர்ந்த அறத் தொழிலாக ஏற்றுப் போற்றி வந்தனர். உழவுத்தொழில் உயிர் ஊட்டுந்தொழில். நெசவுத் தொழில் மானங்காக்கும் தொழில். ஆடை மக்களின் மானத்தைக் காத்து வந்ததோடு மதிப்பையும் உயர்த்தி வந்தது. தட்பவெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காவண்ணம் பாதுகாத்து வந்தது. நமது கலைச்சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ஆடையுடையான் அவைக் கஞ்சான் ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில் மக்களின் ஆடை, அதை அணியும் முறை இவைகளை வைத்து அவர்களின் அந்தது நிர்ணயிக்கப்பட்டது. ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் மிகத் தொன்மை யான காலத்திலிருந்து இடம்பெற்று வந்தது. 2000 ஆண்டு களுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு வண்ண ஆடைகள் இருந்து வந்தன. மகளிர்கள் பட்டிலும் பஞ்சிலும் நெய்த பூந்துகில்கள் பல புனைந்து வந்தனர். இவைகளுக்கு எண்ணற்ற சான்றுகள் நமது சங்க இலக்கியங்களிலிருந்தே காட்ட முடியும். நமது சிற்ப நூல்களை ஆராய்ந்தால் முற்காலத்திய நமது மக்கள் நாற்பதிற்கு மேற்பட்ட வண்ணங்கள் அறிந்திருந்தனர் என்றும் அவைகளின் பெயரும் அந்த வண்ணம் எந்தப் பூவைப்போல் அல்லது எந்தப் பண்டத்தைப் போல் இருந்தது என்றும் கூறப் பட்டுள்ளது. இந்த வண்ணங்கள் அனைத்தும் நமது நாட்டிலுள்ள மூலிகைகளிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் செய்யப்பட்டனவாகும். அவைகள் 1000, 1000 ஆண்டுகளுக்கும் நிலைத்து நிற்கும். அதன் வண்ணம் சிறிதும் மங்காது. இன்று நமது சிற்றண்ண வாயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சுமார் 1000 ஆண்டு களுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல் களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது, புத்தம் புதிய வண்ணம் போல ஒளிர்விட்டுக் கொண்டு இருப்பதே ஏற்ற எடுத்துக்காட்டாகும். முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அதன் உடலும் விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் தரப்பட்டுள்ளன. அவை அடியில் வருமாறு. 1. கோசிகம் 2. பீதகம் 3. பச்சிலை 4. அர்த்தம் 5. நுண்துசில் 6. சுண்ணம் 7. வடகம் 8. பஞ்சு 9. இரட்டு 10. பாடகம் 11. கோங்கலர் 12. கோபடம் 13. சித்திரக்கம்மி 14. குருதி 15. கரியல் 16. பேடகம் 17. புரியட்டக்காசு 18. வேதங்கம் 19. புங்கர்க்கழகம் 20. சில்லிகை 21. தூரியம் 22. பங்கம் 23. தந்தியம் 24. வண்டை 25. கவற்றுமடி 26. நூல்யாப்பு 27. திருக்கு 28. தேவாங்கு 29. பொன்னைமுத்து 30. குச்சரி 31. தேவகிரி 32. காத்தூலம் 33. கிறைஞ்சி 34. செம்பொத்தி 35. வெண்பொத்தி 36. பணீர்பொத்தி இஃதன்றி, ஆடையின் தன்மைக் கேற்பதுகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் அளவிலாதிருந்தன. துகில், வெண்மை நிறம் உடையதாயும், சிவப்புநிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில், தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் பொலிவதாய் இருக்கும்.1 நமது பழம்பெரும் இலக்கியங்களில் இவ்வாடைகளைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. அவைகளில் சில அடியில் வருமாறு: 1. துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று - பரிபாடல். 2. மீப்பால் வெண்துகில் போர்க்குநர் பூப்பால் வெண் துகில் துழ்ப்பக குழல் முறுக்குநர் - பரிபாடல் 3. புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் - பரிபாடல் 4. நீலக்கச்சைப் பூராடை - புறம் 5. பாம்பு பயந்தன்ன விடிவின் காம்பின் கழைபடு சொலியின் இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம் - புறம் 6. கோபத்தன்ன தோயாப் பூந்துகில் - பொரும்பாண் 7. நோக்கு நுழை கல்லா நுண்மை யழக்கனிந்து அரவுரி அன்னஅறுவை - பெரும்பாண் 8. ஆவியன்ன அறிநூற் கலிங்கம் 9. புகைவிரித்தன்ன பொங்குறுதி துடிஇ - புறம் மேற்கூறிய சங்கநூற் பாடல்களினின்றும் முற்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு விளிம்புகளும் முன்றானைகளும் உடலும் உள்ள அழகிய ஆடைகள் இருந்தன என்பது நன்கு பெறப்படுகின்றன. விளிம்பிலோ முன்றானையிலோ உடலிலோ, ஆடைகள் அழகுற்று விளங்க, தாமரை மலர், அல்லி மலர், மல்லிகை மலர், பிச்சிப் பூ, மல்லிகைஅரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்கள் எழில் பெற்றிலங்குமாறு நெய்யப்பெற்றன. இம்மலர்களும் அரும்பும், பிஞ்சும், சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற நிறங்களில் மட்டுமின்றி வெள்ளிச்சரிகை, பொற்சரிகை போன்றவைகளை இணைத்து தகதகவென்ன ஒளிர்விட்டு மின்ன பட்டுநூலிலும், பஞ்சுநூலிலும் ஆடைகள் நெய்யப் பெற்றன. அவைகள் எழில் மிக்கனவாய் கண்ணைக் கவர்வனவாய் விளங்கின. பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால்காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால்நுரை போலவும் தெளிந்த வெண்ணிறமான அருவிநீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர் கள் நுண்ணிய எண்ணிலா மெல்லிய ஆடைகளை நெய்தனர். மசூலிப்பட்டினத்திலும் கலிங்கத்திலும் மெல்லிய ஆடைகள் நெய்யப்பெற்றன. அதைப்பார்த்ததும் அத்தகைய மெல்லிய ஆடைகள் - இல்லை - அதைவிட மெல்லிய ஆடைகள் மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் நெய்யப்பெற்று வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பெற்றன. உரோமர்களும் எகிப்தியர்களும் தமிழக ஆடைகளைக் கண்டு வியப்பெய்தினர். அரசர்களும், அரசிகளும் ஆடைகளின் எடைக்குப் பொன்கொடுத்து விலைக்கு வாங்கினர். ஆடைகளின் விளிம்பு பல்வேறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாய் விளங்கின. விளிம்பில் கொற்கை முத்துகள் இணைக்கப்பட்ட ஆடைகளும், விளிம்பில் தமிழ்நாட்டு பொன்வண்டுகளின் மஞ்சள், நீலம், பச்சை வண்ண இறக்கைகள் இணைக்கப் பெற்றுள்ள ஆடை களும் வெளிநாட்டவர் விரும்பி வாங்கினர். எகிப்திய அரசி களும், உரோமநாட்டு அரசிகளும் உரோமர் நாட்டு பிரபுக்களின் மனைவிகளும் பொற்காசுகளைக் கொடுத்து வாங்கினர். எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்தப் பிரேதங்கள் இந்திய மசுலின்துணிகளால் பொதியப் பெற்றுள்ளது என்பது இன்று மேனாட்டு அறிஞர்களால் கண்டுபிடிக்கப் பெற் றுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் இந்தியப் பட்டின் சாயல் என்னும் பொருள் பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1938இல் ஒரு சொற் பெருக்காற்றினார். அதில், பண்டு தொட்டு பாரதநாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆர் பில்ட்டர் என்ற பிரஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத்தொழிலின் செய்முறை களையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார். முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப்பெற்ற பங்கய மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோமம், கிரீ, எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போசகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து - 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம்பெற்றுள்ளது. இன்று இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியறையில் இந்தியநாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது. நமது தமிழகத்தில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமது ஆடைகள் மென்மையிலும் இதர தன்மையிலும் வண்ணத்திலும் சிறப்புற்று அபிவிருத்தி அடைந்துள்ளன. அச்சிறப்புக்கள் பாண்டிய நாட்டில் ஒரு விதமாகவும் சோழநாட்டில் மற்றொரு விதமாகவும் தொண்டை நாட்டில் இன்னொரு விதமாகவும் உள்ளன. இவைகள் அனைத்தையும் தேடிக்கண்டுபிடித்து காட்சிக்கு வைப்பது பயனுடைய பணியாகும். திருவிளக்குகளின் சிறப்பு உலகமெங்கும் விளக்குகள் உண்டு. அனைத்துலக மக்களும் விளக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்கள் விளக்கை, இருளையகற்றி மக்களுக்கு இன்பமூட்டும் ஒரு சாதாரணக்கருவியாகவே கருதுகின்றார்கள். உலகில், தமிழர்கள் மட்டும் இதனின்று மாறுபட்ட வர்களாய்க் காணப்படுகின்றார்கள். அவர்கள் விளக்கைத் திருவிளக்கு என்று கூறுவதே நல்ல சான்றாகும். உலகில் எவரும் தமிழர்களைப்போல் திரு என்னும் அடைமொழி கொடுத்து விளக்கை அழைப்பதே இல்லை. விளக்கு, திருவிளக்கு என்று அழைக்கப்படுவதன் மூலம் முதன்முதலாக அது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும். இரண்டாவதாக, அது கலை சம்பந்ப்பட்டிருக்கிறது என்பது நன்கு உணர்த்துவது தெரியவரும். திருவிளக்கைத் தமிழர்கள் தெய்வமாகவே எண்ணு கிறார்கள். அஃதின்றித் திருவிளக்கில் அரும்பெரும் சமய தத்துவங்கள் அடங்கியிருப்பதாகப் பழம்பெரும் சமயச் சான்றோர்கள் கண்டார்கள். சென்ற நூற்றாண்டில் தோன்றிய இராமலிங்க அடிகள் போன்றோர்கள் விளக்கிலே தெய்வத் தன்மையைக் கண்டார்கள். விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக் குடையார்கள் விளக்கின் விளக்கும் விளக்கவர் தாமே என்று சைவசமயநெறி வளர்த்த சம்பந்தர் பாடியுள்ளார். கருமைவாய்ந்த கடலினின்று பொங்கி எழும் பொன் னிறமான ஒளிப்பந்தையொப்பத் தகதகவெனக் கீழ்த்திசையில் ஒளிவீசி எழும் கதிரவன், மாபெரும் விளக்கைப் போல் ஒளிவிட்டோங்கித் திகழ்கிறான். இது ஒரு தீப உச்சிபோல் திகழ்கிறது. இம் மாபெரும் திருவிளக்கிற்கு கடல், நெய்போல் விளங்குகிறது. இதைப் பொய்கையாழ்வார் பார்க்கிறார். உடனே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி எழுகிறது. நாவில் கவிதை ஊற்றுப் பொங்கி எழுகிறது. அது அடியில் வருமாறாகும். வையம் தகழியாய் வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்கவே யென்று இதற்கு உரைகண்ட அறிஞர்கள், நிலம், நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாக நிற்கும் தகழியாகவும் (அகலாகவும்), கடலை எண்ணெய் ஆகவும், ஒளிக்கதிர்களையுடைய ஞாயிறை விளக்காகவும் வைத்துத் திருமாலின் பாதாரவிந்தத்தில் உலகில் மிக நாகரிகமுற்றவர்களாய் இன்று கூறிக்கொள்ளும் எனது பாமாலையைச் சூட்டினேன் என்று கூறியுள்ளார். இஃதன்றி கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்பெறும் தீபத்திருநாளே திருவிளக்கின் சமயத் தொடர்பை விளக்கும். நாடோறும் தமிழ்நாட்டு மகளிர் விளக்கை நன்றாக விளக்கி, எண்ணெய் வார்த்து, திரியிட்டு, பூமாலை சூட்டி, ஒளியூட்டி, தேவாரம் அல்லது திருவாய்மொழி கூறி வழிபடுவது திருவிளக்கிற்கு செய்ய முடிந்தது. திருவிளக்குகள் பல வகைகளாகச் செய்யப் பட்டன. பல்வேறு உபயோகத்திற்கும் பலவகையான திருவிளக்குகள் செய்யப்பட்டன. அவைகள் அனைத்திலும் அரும்பெரு கலையம்சங்கள் ஒளிருமாறு செய்யப்பட்டன. திருவிளக்கில் கைவிளக்கு, தூக்கு விளக்கு, குத்துவிளக்கு, தூண்விளக்கு, கலங்கரைவிளக்கு எனப் பலவகை விளக்குகள் தமிழகத்தில் துளிர்த்தன. பிற்காலத்தில் பாவை விளக்கும் தோன்றியது. கை விளக்குகள் கைவிளக்கு பெரும்பாலும் வீடுகளிலே உபயோகிக்கப் படும். இது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்வதற்கேற்றதாய் செய்யப்பட்ட சிறு விளக்காகும். இது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதி அரசிலைபோல் அமைந்திருக்கும். முன்பக்கம் சிறுத்து முனையாகவும், பின்பக்கம் அகன்றும் சுற்றிலும் எண்ணெய் நிற்பதற்கு ¼ (அ) ¾ அங்குல உயரமுள்ள தடுப்பும் அமைக்கப் பெற்றிருக்கும். பின்புறம் 3, 4 அங்குல உயரத்தில் பிறைவடிவ மான அமைப்பு இருக்கும். இது கையினால் விளக்கைத்தூக்கிச் செல்வதற்கும் விளக்கில் சமயச் சின்னங்கள் பொறிப்பதற்கும் உரிய இடமாகச் செய்யப்பட்டுள்ளது. இது கோயில் திரு வுருவங்களைச் சுற்றி நிற்கும் திருவாசிபோல் திகழும். விளக்கின் பின்புறம் காணப்படும் கைப்பிடியில் - அதாவது திருவாசி போன்ற அமைப்பின் நடுவில் கணபதி, திருமால், திருமகள், நாகர், சிலுவை, முலிம்களின் இளம்பிறை உருவங் களும் அமைக்கப்பெற்றுள்ளன. இஃதன்றி இதைச்சுற்றிப் பல கொடி செடி மலர்கள்அழகுற அமைக்கப்பட்டுமிருக்கும். இத் திருவிளக்கில் பலப்பல தெய்வ உருவங்களும் சமயச் சின்னங்களும் தாராளமாகக் காணலாம். இஃதன்றிக் கைவிளக்கு பாண்டிய நாட்டில் ஒருவிதமாகவும் சோழநாட்டில் மற்றொரு விதமாகவும் சேரநாட்டில் பிறிதோர் விதமாகவும் இருக்கும். ஏன்? ஊருக்கு ஊர் மாறுபட்டும் இருக்கலாம் என்பது எனது எண்ணம். ஒன்றிற்கொன்று சிற்சில வேற்றுமைகள் உடையதாக வாவது இருக்கும். குத்துவிளக்குகள் முற்காலத்தில் நீண்ட விளக்குகள் கல்லிலும் இரும்பிலும் மரத்தண்டின்மீது அகல் பொருத்தியோ செய்யப்பட்டன. அவைகளுக்குப் பாதங்கள் இல்லாதிருந்தன. அடிப்பகுதி கூரியதாக இருந்ததால் மண்ணில் குத்தி நாட்டினர். குத்தும் விளக்காதலால் குத்துவிளக்கு எனப்பட்டது. திருவிளக்குகளில் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது இந்தக் குத்துவிளக்கேயாகும். இந்தக் குத்து விளக்கு பாதம், தண்டு, அகல், உச்சி என நான்கு பகுதி யாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பல விளக்குகள், இவ்வுறுப்புகள் தனித்தனியாகச் செய்யப்பட்டு இணைக்கப்பட்டவைகளாய் இருக்கின்றன. இது மக்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. இந்த இணைப்புப் பகுதிகள் இரண்டாகவோ மூன்றாகவோ நாலாகவோ இருக்கின்றன. விளக்கை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு போகவும் எளிதாக இவைகளைப் பிரித்துச் சுத்தம் செய்யவும் முடிகிறது. மின்விளக்குகள் வந்தபின் கைவிளக்கு, தூக்கு விளக்குப் போன்றவைகள் முற்றிலும் மறைந்து போய்விட்டன. என்றாலும், குத்துவிளக்குகள் மங்காது தமிழர்களின் ஒவ்வொரு வீட்டிலும் சுடர்விட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. இவ்விளக்கை விளக்கு நாச்சியாராக - தீபலட்சுமியாக - ஒவ்வொரு பெண் மகளும் போற்றி வருவதால் இவ்விளக்கு தமிழர்கள் வீட்டில் நிலையான இடத்தைப் பெற்றுக்கொண்டது. குத்துவிளக்குகள் பல பெயர்களால் உச்சியில் பலவித உருவங்கள் வைத்துச் செய்யப்பட்டுள்ளன. அவைகளின் பெயர்கள் அடியில் வருமாறு: 1. சந்திரகாந்த விளக்கு 2. அன்ன விளக்கு (ஓதிம விளக்கு) 3. கிள்ளை விளக்கு 4. மயில் விளக்கு 5. குயில் விளக்கு 6. நாகர் விளக்கு 7. கிளை விளக்கு 8. கம்பி விளக்கு 9. காய் விளக்கு 10. தண்டு விளக்கு 11. சிலை விளக்கு 12. குருவி விளக்கு 13. அகல் விளக்கு 14. நிலை விளக்கு 15. புருஷாமிருக விளக்கு 16. ஓதிமக்கிளை விளக்கு 17. முக்கிளை விளக்கு 18. காமாட்சி விளக்கு 19. மணி விளக்கு 20. மாயோன் விளக்கு 21. ஏழுதலை நாக விளக்கு 22. காமதேனு விளக்கு 23. சரோருக விளக்கு 24. மங்கல விளக்கு 25. பத்மாசன முருகன் விளக்கு 26. பதும விளக்கு 27. கஜலட்சுமி விளக்கு 28. சந்நிதி விளக்கு 29. கின்னரி விளக்கு 30. கிண்கிணி விளக்கு 31. கன்னி விளக்கு 32. காமன் விளக்கு 33. திருமண விளக்கு 34. தாரா விளக்கு 35. ஈழச்சியல் விளக்கு 36. மலையாண்சியல் விளக்கு 37. அரைதலை விளக்கு 38. சோழியச்சியல் விளக்கு 39. ஆரக்குட விளக்கு 41. அனந்தலை விளக்கு 41. எரிக்கடை விளக்கு 42. பகாவோர் விளக்கு 43. கைகவினை விளக்கு 44. ஊழ்உறு விளக்கு 45. குடக்கால் விளக்கு 46. கடைக்கெழு விளக்கு 47. மீன்திமில் விளக்கு 48. ஒழியா விளக்கு 49. காவலர் விளக்கு 50. மான விளக்கு இவ்விளக்குகளிற் சில வீடுகளில் உபயோகிக்கப்படு கின்றன. பெரும்பாலான கோயில்களில் உபயோகிக்கப் படுகின்றன. நமது பழம்பெரும் சாசனங்களிலெல்லாம் இப் பெயர்கள் காணப்படுகின்றன. இந்தக் குத்துவிளக்குள் கோயில் விளக்கென்றும், இல் விளக்கென்றும் பிரித்துக் கூறப்படும். கோயில் விளக்குகள் பெரும்பாலும் மேலே அன்னம், மயில், கிளி, புருஷாமிருகம் போன்ற உருவங்களையுடையதாகவும் பெரிதாயும் இருக்கின்றன. பாதம், தண்டு, அகல் உச்சி முதலிய பகுதிகள் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளை உடையதாய் விளங்குகின்றன. இவைகளில் அன்னவிளக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உரோம் நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பெற்று அப்பால் அது தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு எண்ணற்ற சங்க இலக்கியச் சான்றுகள் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். குத்துவிளக்குகளின் அகல் கீழே இறக்கவும் அவசிய மானால் மேலே ஏற்றவும் கூடியதாய் உள்ளன. தமிழகத்தில் 1000 விதமான குத்து விளக்குகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிளை விளக்குகள் குத்துவிளக்குள் பலகிளைகள் உள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளன. திருமண விளக்கு என்னும் கிளைவிளக்கு 5 அடி உயரமுள்ளது. நடுத்தண்டிலிருந்து கிளை ஒன்றரை அடி நீண்டிருக்கும். கிளைகள் மூன்று 4 அடுக்குகளாக பல அகல்கள் சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டுள்ளன. இவ்விளக்கிற்கு 300க்கு மேற்பட்ட திரிகள் தேவைப்படுகின்றன. இதில் 70க்கு மேற்பட்ட அகல்கள் உள்ள பல அகல்கள் சங்கிலி கோத்து தொங்கவிடப்பட்டுள்ளன. இதில் உச்சியில் அன்னம், மயில், கிளி, புருஷாமிருகம் போன்ற உருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பாவை விளக்குகள் நமது நாட்டு விளக்குகளில் பாவை விளக்குதான் அழகு மிகுந்தவை. கலைச்சிறப்பு ஒளிர்பவை. இப்பாவை விளக்கு தான் தீபலட்சுமி விளக்கு என்றும் திருவிளக்கு நாச்சியார் என்றும் கூறப்படும். இது பொருத்தமான பெயரேயாகும். இந்தப் பாவைவிளக்கு கிறிதவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் உரோம நாட்டினின்று இங்கு கொண்டுவரப்பட்டது என்று கூறப்படு கிறது. இதற்குச் சங்க இலக்கியச் சான்றுகளும் தரப்பட்டுள்ளன. K‰fhy¤âš cnuh« eh£oÅ‹W bfh©Ltu¥g£l ghitÉs¡FfŸ K‹ it¤J m¥gona ï§F th®¤J ÉlhJ, K‰¿Y« kh‰w« brŒJ jÄH® g©gh£o‰ nf‰g th®¡f¥bg‰WŸsJ.* (South Indian Iamps (article) - O.C. Gangaly 1916) பாவை விளக்குகள் யவனநாட்டில் அழகுக்காக வீடுகளில் வைக்கப்படும் விளக்காக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் இவ் விளக்குகள் அழகுக்காகவும், வெளிச்சத்திற்காகவும், புண்ணியம் பெறுவதற்காகவும் திருக்கோயில்களில் திருவுண்ணாழிகையில் அமர்ந்திருக்கும் இறைவனுடைய அருகில் இடம் பெற்றுள்ளன. இது பாவை விளக்கைச் செய்துவைக்கும் செல்வர்களின் உருவ அமைப்பைப் பெற்றிருக்கும். பண்டைக் காலத்தில் இவைகள் பெண் உருவில் அமைக்கப்பட்டன. அப்பால் ஆண் உருவிலும் அமைக்கப்பட்டன. இவைகளில் காணப்படும் அணிகளும், ஆடைகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழ்நாட்டின் நாகரீக வர லாற்றைப் புலப்படுத்துவதாக மிளிர்கின்றன. அதில் ஒளிரும் அமைப்பும் அழகும் பண்பும் பொலிவும் நமது சிற்பக்கலையின் சிறப்பிற்குச் சீரிய எடுத்துக்காட்டாகும். யவன ரியற்றிய வினைமாண்பாவை நெய்சொரிந்து பரூஉத் திரிகொள் இய குருஉத்தலை நிமிரெரி - - நெடுநல்வாடை பாவை விளக்கிற் பரூஉச் சுடர் அழகு - முல்லைப்பாட்டு யவன நாட்டுப்பாவை விளக்கிற்கும் தமிழ்நாட்டுத் தீப லட்சுமி விளக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் கூறமுடியாது. இரு விளக்குகளையும் அருகருகே வைத்துப் பார்த்தால் - ஆராய்ந் துணர்ந்தால் எனது முடிவு சரியெனப் புலப்படும் என்று விளக்கு ஆராய்ச்சி அறிஞர் ஓ.சி.கங்குலி கூறியுள்ளார். பாவை விளக்குகளை இந்தியாவில் எங்கும் பார்க்கலாம். ஆனால் அனைத்தையும் விடத் தமிழக விளக்குகள் சிறப்புடையவை. தூக்கு விளக்குகள் தூக்கு விளக்கு, குத்துவிளக்கின் மேற்பகுதி போல் காணப் படும்; ஆனால் தூக்குவிளக்கின் உச்சியில் சங்கிலி ஒன்று புதிதாக மாட்டப்பட்டிருக்கும். தூக்குவிளக்கின் இனத்தைச் சேர்ந்ததே தூண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு (நொந்தா) ஆகியவை களாகும். சில விளக்குகளின் உச்சியில் அன்னம் வைத்து அன்னத்தின் முதுகில் சங்கிலி பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சங்கிலியின் நுனியில் கூரையில் மாட்டுவதற்கு என்று ஒரு கொக்கி மாட்டப் பட்டிருக்கும். தூக்கு விளக்குகளை பெரும்பாலும் வீடுகளிலும் கடை களிலும் பயன்படுத்துகிறார்கள். ஒருசில இடங்களில் கோயில் களிலும் பயன்படுத்துகிறார்கள். நந்தாவிளக்கு - அதாவது சாசனங்களில் காணப்படும் நொந்தாவிளக்கு கோயில்களிலும் - ஏன்? வீடுகளிலும் - தெய்வ உருவங்களின் அருகில் இரவும் பகலும் எரிந்து கொண்டிருக்கும். நந்தா விளக்கிற்கு அடியில் எண்ணெய் நிற்கும் கிண்ணமும் நாக்கும் இருக்கும். மேலே எண்ணெய் இருக்கும் கலயம் (Tank) இருக்கும். இந்தப்பெரும் கலயத்திலுள்ள சிறு துவாரத்தின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் அகலுக்கு வரும். கலயத்திற்கு மேலே சங்கிலியும் அதன்மீது அன்னம் அல்லது கிளி போன்ற உருவமும் அதன்மீது சங்கிலியும் நுனியில் கொக்கியும் இருக்கும். இஃதன்றி, கலயத்தின் மீது அன்னமும் இடம்பெறச் செய்து, அதன்மேல் சங்கிலி இணைக்கப்பட்டும் இருக்கும். அன்னம் கீழ் கோழி போன்ற உருவங்கள் வைக்கப்படாத நந்தா விளக்கும் உண்டு. சாவகத்தில் நந்தாவிளக்கில் கின்னறி இடம் பெற்றுள்ளது. உண்ணாழிகையின் வாயிலில் தூக்குவிளக்கு வகையைச் சார்ந்த சரவிளக்கும் உண்டு. தூக்கு விளக்கிலும் நந்தாவிளக்கிலும் பலவகைகள் உள்ளன. தூண் விளக்குகள் குத்துவிளக்கின் வளர்ச்சியே தூண்விளக்காகும். குத்து விளக்குகள் வீடுகளில் சாதாரணமாக மூன்றடி வரை இருக்கும். கோயில்களில் ஐந்தடிக்கும் மேலும் இருப்பதுண்டு. மலைப் பிரதேசங்களில் உள்ள கோயில்களில் 20 அடி உயரமுள்ளதாய் அடுக்கடுக்காய் பாதத்திற்கு மேலே 12 பெரிய அகல்கள் உள்ள விளக்குகள் உண்டு. எண்ணெய் வார்க்கவும் திரியிடவும் விளக்கேற்றவும் தூண்விளக்கருகே அமைந்திருக்கும் முக்கோண வடிவான சட்டத்தில் ஏணி போன்ற உருவம் ஒன்று இருக்கிறது. முற்காலக் கலங்கரை விளக்கும் தூண்விளக்கு இனத்தைச் சேர்ந்ததேயாகும். தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் 7 தட்டுகள் உள்ள சுமார் 8 அடி உயரமான தூண்விளக்குகளும் உள்ளன. தீபச்சட்ட விளக்கு கேரளாவில் கோயில்களைச் சுற்றி வரிசையாக மரச் சட்டம் அடிக்கப்பட்டு இடையே ஒரு அடி இடம்விட்டு, குறுக்காக ஒரு சட்டமும் அடித்து இடையே இரும்பால் செய்த விளக்குகள் மாட்டப்படும். இதில் சுமார் இலட்சம் விளக்குகள் இருக்கும். இதனைக் கேரளாவில் பெரிதும் காணலாம். இலட்ச தீபத்தின்போது இந்தத் தீபச்சட்ட விளைக்குகள் அனைத்தும் ஏற்றப்படும். இது கண்கொள்ளாக் காட்சியாய்க் கவின் பெற்றிலங்கும். கோயிலில் தூண்விளக்கு ஏற்றப்பட்டதும் அதன் வெளிச்சத்தைச் சுற்றிலும் வாழும் மக்கள் தெரிந்து கோயிலை நோக்கிவர எளிதாக இருக்கிறது. கொடிமரம் போல் நிற்கும் தூண்விளக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தையன்றி தமிழகத்தில் எங்கும் காணமுடியாது. கலங்கரை விளக்கும் தூண்விளக்கும் ஒருவகையாகக் கருதமுடியும். முடிவுரை: தமிழகத்தில் மின்விளக்குகள் எழுந்ததும் - திருவிளக்குகள் குறைந்து வருகின்றன. ஆனால் கைவிளக்குத்தான் குறைந்து வருகின்றனவேயொழிய குத்துவிளக்குகளோ, தூக்கு விளக்குகளோ, நந்தா விளக்குகளோ, சரவிளக்குகளோ, தூண் விளக்குகளோ குறைந்துவிடவுமில்லை. மறைந்துவிடவும் இல்லை. ஆனால் பெருகி வருகிறது. திருவிளக்குகளின் எண்ணிக்கைகள் நாட்டில் வந்தாலும் அதை உருவாக்கும் தொழிலாளர்களின் தொகை குன்றி வருகிறது. அரசாங்கம் ஆதரவளித்தால், தொழிலாளர்கள் பெருகுவர்; திருவிளக்கின் எண்ணிக்கை பெருகும். அழகு மிக்க அரிய விளக்குகள் பல தோன்றும். முன்னுரை மே - தினம் சர்வதேசப் பாட்டாளி மக்களின் தினம். பல்லாண்டு பல்லாண்டாய்ப் பாட்டாளி மக்களைச் சுரண்டி வந்த பரசிவம ஜீவிதக் கொள்கைகளைச் சுக்கல் சுக்கலாய் உடைத்தெறிய உழைப்பாளர் அனைவரும் செங்கொடியின் கீழ் திரண்டுவரும் நாள் இந்த மே - தினம் ஆகும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சட்டை செய்யாமல், துப்பாக்கிக் குண்டுகளைத் தூசிபோல் துடைத்துக் கொண்டு கோடானுகோடிப் பாட்டாளிமக்கள், தேச, நிற, ஜாதி, மத பேதமின்றி 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேரக்களியாடல், 8 மணி நேரம் ஓய்வு என்ற தவிர்க்க முடியாத தம் கோரிக்கைகளை வற்புறுத்தும் தினம், மே - தினம் ஆகும். பாஸிஸத்தின் பரம விரோதியான, மார்க், எங்கல், லெனின் வழிவந்த டாலினுக்கும், நாஜிக் கொடுமையி னின்று உலகை விடுவித்த செஞ்சேனைக்கும் வாழ்த்துக் கூறும் நாள் மே - தினம் ஆகும். உழைப்பாளர் உரிமைக்காக உயிர் நீத்த உத்தமர்கள், சிறைவாசம், வனவாசம் செய்யும் தலைவர்கள், அடி தடி கஷ்ட நஷ்டமுற்ற தோழர்கள், இன்னோரன்ன சர்வசங்கப் பரித்யாகி களுக்கு தொழிலாளர் தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் தினம், மே - தினம் ஆகும். உழைப்பாளர் தங்கள் கோரிக்கைகளையும் குறைபாடு களையும் முதலாளிமார்களுக்கு எடுத்துக்காட்டி அவைகளுக்கு நிவர்த்தி தேட வழிகாணும் நாள் இந்த மே - தினம் ஆகும். அரசியல் முட்டுக் கட்டைகளை உடைத்து, அரசியல் தம்பிப்புக்களைத் தவிர்த்து, நாட்டில் ஒற்றுமையை தாபித்து, சுதந்திரப் போராட்டத்திற்கு தொழிலாளர் வழிகாட்டும் நாள் இந்த மே - தினம் ஆகும். ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், பாஸிஸத்தை, ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து முறியடிக்கவும் பாட்டாளி மக்கள் சபதம் எடுத்துக்கொள்ளும் நாள் இந்த மே - தினம் ஆகும். உழவர்களும், உழைப்பாளர்களும் செங்கொடியின் கீழ் திரண்டு, சென்ற ஆண்டு மே - தினத்தில் செய்த தீர்மானங்கள் என்ன? அவைகளை நடைமுறையில் எவ்வளவு நிறைவேற்றி யிருக்கின்றோம்? இவ்வாண்டு என்ன செய்ய வேண்டும் என்று வரவு செலவுக் கணக்குகள் பார்த்து, புதிய ஆண்டிற்குத் திட்டம் தயாரிக்கும் நாள் மே - தினம் ஆகும். பாட்டாளி மக்களின் இன்றியமையாத தேவையாகிய உணவு, ஓய்வு, ஊதியம், உரிமை ஆகியவைகளைப் பெறுவதற்கு உழைப்பாளிகளை ஒன்று திரட்டும் தினமாகிய மே - தினத்தின் தோற்றத்தையும், மே - தினக் கொண்டாட்டத்தை ஒழிக்க முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் பாஸிட் கோரரூபத்துடன் பாட்டாளி மக்களுக்கு விளைவித்த கொடுமை களையும், கொலைகளையும் இந்நூலில் விளக்கப் பட்டிருக்கின்றன. அதோடு இவைகள் அத்தனையும் தாண்டி, மே - தினம் உலகமெங்கும் - குறிப்பாக இந்தியாவில் அது பெற்றிருக்கும் வளர்ச்சியும் அது ஆற்ற வேண்டிய கடமைகளும் இந்நூலில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. சென்னை 15, மார்ச் 1945. அ. இராகவன் கல்வெட்டுக் கருத்தரங்கு - 1966 கல்வெட்டுக் கருத்தரங்கு - 1966 தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு நூலகம் Book No.2857” தமிழ் பிராமி வரிவடிவம் - தமிழ்மொழியும் தமிழ் வரிவடிவங்களும் மிகத் தொன்மை யானவை என்று நீண்ட காலமாக எண்ணப்பெற்று வருகிறது. ஆனால் அவைகள் அன்று எவ்வாறு தோன்றின என்று நன்கு ஆராயப்படவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பி யர்கள் தமிழ் வரிவடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலே அரசாங்கம் தமிழகத்தில் கல்வெட்டு ஆராய்ச்சித் துறைக்கு (Epigraphic Dept) அடிகோலியது. அதன் பயனாக கல்வெட்டு, செப்பேடு முதலியவைகளில் பொறிக்கப்பெற்ற வரிவடிவங்களை வாசிக்கும் எழுத்தியல் ஆராய்ச்சித்துறை (Palaeography) என்ற புதிய படிப்பு முறை எழுந்தது. ஆரம்ப காலத்தில் பிராமி வரிவடிவங்கள் மிகத் தொன்மை வாய்ந்தவைகள் என்று எண்ணப்பட்டது. இதனின்றே தமிழ் வரிவடிவங்கள் பிறந்தன என்று முடிவு கட்டப்பெற்றது. இற்றைக்கு 44 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் உள்ள சிந்து சமவெளியில் உள்ள அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய இடங்களில் அகழ்ந்து கண்ட முத்திரைகளில் திகழும் சித்திர எழுத்துக்களே மிகமிகத் தொன்மையானவை என்று காணப் பெற்றது. இந்தச் சித்திரக் குறியீடுகள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டன என்று முடிவு கட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தில் கண்ட சித்திர எழுத்துக்களே பாரத நாட்டிலுள்ள எழுத்துகளில் மிகப் பழமையானவை. இந்தியாவில் உள்ள எல்லா வரிவடிவங்களுக்கும் அடிப்படையான, தாய் உருவம் ஆகும். நாட்டில் வரலாற்றுணர்வு அரும்பிய காலத்தில் பிராமி நெடுங்கணக்கு நிலையை எய்தி இருக்கலாம் என்று அறிஞர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அது அந் நிலையை எப்பொழுது எய்தியது என்று எவரும் திட்டவட்டமாக இதுவரை கூறவில்லை. சில அறிஞர்கள் பிராமியின் தென்னாட்டு அமைப்பைத் திராவிடி என்று கூறி வருவது நாம் சிந்திக்கத் தக்கது. சிந்துவெளி நாகரிகம் உலகில் உந்துவதற்கு முன் அசோக னுடைய கல்வெட்டுகளில் காணப்பெற்ற பிராமி வரிவடிவம் மிகப் பழமையானது; இந்திய வரிவடிவங்களின் தாய் என்று எண்ணப்பட்டது. பல்வேறு பிராகிருத வடிவங்களில் வரையப் பட்ட அசோகனுடைய கல்வெட்டுகள் இன்று இந்தியாவில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இந்த வரிவடிவங்கள் நாளடைவில் நமது நாட்டில் பல்வேறு நிலைகளில் வளர்ந்தும், கிளர்ந்தும் திரிபுற்றும் திகழ்கின்றன. முன்னர் அசோகனுடைய பிராமி வடிவங்களுக்கு முன் னுள்ள - அதாவது கி.பி 3 நூற்றாண்டிற்கு முன்னுள்ள - எழுத்துகள் கண்டுபிடிக்கப்படாது இருந்தன. ஆனால் தமிழ் நாட்டுக் கல்லறைகளில் கண்டெக்கப்பட்ட ஓடுகளில் சில 3-ம் நூற்றாண்டுக்கு முன் உள்ளதாகக் கருதப்படுகின்றன. அதோடு சில குகை எழுத்துகளும் 3-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று முடிவு கட்டப்பட்டு உள்ளன.1 ஆனால் அவை எல்லாம் இதுவரை நன்கு ஆராயப்படவில்லை. அதில் காணப்படும் குறியீடுகள் பழங்காலக் காசுகளில் கூடக் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது. அசோகனுடைய பிராமி வரிவடிவங்களுக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக்கும் மேற்போக்காகப் பல ஒற்றுமைகள் உள்ளன. சிந்துவெளியின் முத்திரைகளில் உள்ள குறியீடுகளில் சில, பிராமி வரிவடிவங்களைப் போலவே காணப்படுகின்றன. ஆனாலும் இவைகளைப் பற்றி இன்னும் நன்றாக ஆராய வேண்டியது இருக்கிறது. இதில் பல சிக்கல்களும் சிரமங்களும் உள்ளன. பிராமி வரிவடிவங்கள் சிந்துவெளி எழுத்துக்களின் இன்று பிறந்து ஒரே நிலையில் நில்லாது பல்வேறு வகையாகத் திரிபுற்றுக் கிளைத்து நாளடைவில் பெரும் மாற்றம் பெற்றுள்ளன. அசோகன் கண்ட பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமி என்ற நிலையில் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பீடுற்றுப் பல்வேறு சாசனங்களைப் பெற்றுச் சிறப்பெய்தியது. கி.மு. 1ஆம் நூற்றாண்டில் பிராமி, குசான் பிராமியாகத் திரிபுற்று எழுந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் குப்த பிராமியாய்க் கிளைத்தது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் சித்த மாத்ரிகா பிராமியாக மாறுதல் உற்றது. இறுதியாக கி.பி.10ஆம் நூற்றாண்டில் நாகரி வரி வடிவமாகவும் குடிலா வரிவடிவமாகவும் மலர்ந்தது. இதுவே வங்காளி, அசாம், மைதிலி, நெவாரி, ஒரியா, காஷ்மீரி முதலிய மொழிகளில் வரிவடிவங்களுக்குத் தாயாக இருந்தது. மேலும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியுற்ற பல்லவர்களின் வரி வடிவமாகவும் பரிணமித்தது. பிராமியே தமிழ், மலையாளம், சிங்களம், ஆந்திரம், கன்னடம், கிரந்தம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்களுக்கு மூலக்கருவாக இருக்கிறது. டாக்டர் புஹ்லர் என்னும் அறிஞர் வட்டெழுத்து பிராமியினின்று பிறந்தது என்றும் இதையொரு தனிவகையாகக் கருதாது தமிழின் திரிபே என்றும் கருதுகின்றார்.1 இதனால் வட்டெழுத்து, திட்டவட்டமாக தனியே வளர்ச்சி பெறாது தமிழின் திரிபாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. சிலர் இவ்விருவகை எழுத்துக்களும் தனித்தனியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். இன்றைக்கு 1700 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளோ, செப்பேடு களோ அதிகமாகத் தமிழ் வளர்த்த பழம் பாண்டிய நாட்டிற் கூடக் கிடைக்கவில்லை. சோழர்கள் ஆதிக்கம் பரவாத மலை நாட்டில்கூட வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் வட்டெழுத்து பிராமியினின்று தனியாகத் தளிர்த்து பாண்டிய நாட்டிலும் மலைநாட்டிலும் வழங்கிய வரிவடிவமாகக் காணப்படு கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பிராமி, வடபிராமி, தென்பிராமி என்று இருவகைப்படும். தென்பிராமி சிந்துவெளியில் கண்ட குறியீடுகளினின்று பரிணமித்துத் திராவிட மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாயாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. இதைத் திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்த மட்பாண்டங்கள் மீது பொறிக்கப்பட்ட வரிவடிவங்களும் நீலகிரியில் கிடைத்த கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன.1 வடபிராமி ஆரியர் மொழிகளின் வரிவடிவங்களுக்கு அன்னையாக அமைந் திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அசோகன் கண்ட பிராமி வடபிராமியின் மூலத்தையுடையது என்று எண்ணப்படுகிறது. வடபிராமியும், தென்பிராமியும் சிந்துவெளி எழுத்துக்களி னின்று பெரும் மாறுதலையுடையதாய்த் திகழ்கின்றது. சில அறிஞர்கள் சிந்துவெளி எழுத்துகளுக்கும் (குறியீடுகளுக்கும்) பிராமிக்கும் சங்கிலித் தொடர் போன்ற இணைப்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இவை இரண்டிற்கும் மத்திய நிலையில் உள்ள சாசனம் ஒன்று விக்கிரம கோல் என்னும் இடத்தில் (மத்திய இந்தியாவில்) கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. எனவே சிந்துவெளிக் குறியீடுகளே பிராமியின் மூல வடிவம் என்று உறுதியாக எண்ணப்படுகிறது.2 சிந்துவெளியின் சித்திர எழுத்துக்களே தமிழ்மக்களின் முன்னோர்களான திராவிடப் பெருங்குடி மக்கள் கண்ட எழுத்துக்களின் மூலவரி வடிவங்கள் என்று இன்று முடிவு கட்டப்பட்டுள்ளன. அவை திராவிட மொழிகளுக்கு எல்லாம் அமைக்கப்பட்ட பழைய எழுத்துக் குறியீடுகளாக இருக்கின்றன என்று வரலாற்றுப் பேரறிஞர் ஹிரா அடிகள் உறுதியாகக் கூறுகிறார்.3 கிறிதவ சகாப்தம் அரும்புவதற்கு 1200 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பீனிசிய வரிவடிவங்களினின்று பிராமி பிறந் திருக்கலாம் என்று சிலர் கூறினர். பாபிலோன் வழியாக பீனிசியனில் இருந்து பிராமி தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் எழுதியுள்ளனர். கி.மு.2000ஆம் ஆண்டுகளுக்கு முன் பைபிளில் கூறப்படும் சாலமோன்ஞானி காலத்தில்4 பீனிசியர்கள் தமிழ்நாட்டோடு (நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் பட்டினத்தோடு) தொடர்புகொண்டு வணிகம் புரிந்துவந்தனர். கி.மு.10ஆம் நூற்றாண்டின் மத்தியில் (அ) அதற்குச் சற்றுமுன் கடல்வழி யாகப் பாபிலோனுக்குச் சென்றுவந்த பாரதநாட்டு வணிகர்கள் அங்கே எழுத்து எழுதும் வழக்கம் இருப்பதைக் கண்டு அதைத் தமது நாட்டிற்குக் கொண்டுவந்தனர். எளிய பீனிசிய எழுத்துக் களைத் தங்களின் வலிய பிராகிருதத்திற்கு ஏற்ற எழுத்துக்களாக மாற்றி அமைத்துக் கொண்டனர். இவ்வாறு பிராமி வெளி நாட்டினின்று இந்தியநாட்டிற்குக் குடிபுகுந்த வரிவடிவம் என்று சிலர் கூறுகின்றனர். இஃதன்றிப் பீனிசிய மொழியில் தென் அராபிய மொழியின் வரிவடிவினின்று பிராமி பிறந்திருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப் படுகின்றனர். கி.மு. 9ஆம் நூற்றாண்டிற்கு முன் பிராமி உளதென்றும், இவ்வகை எழுத்துக்கள் பீனிசியாவிலே உள்ள மோப் நகரில் இருந்து ஆட்சிபுரிந்த அரசனுடைய கி.மு.850ஆம் ஆண்டின் பட்டயத்தில் காணப்படு கின்றன என்றும் பீனிசிய வணிகர்களிடம் இருந்து இந்திய மக்கள் எழுத்து அமைக்கும் முறையை அறிந்தார்கள் என்றும் வரலாற்றறிஞர்கள் சிலர் வரைந்துள்ளனர்.1 ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் சிந்துவெளியில் கிடைத்த சீரிய சான்றுகள் மாற்றி அமைத்துவிட்டன. பிராமி இந்தியாவிலே பிறந்தது; சிந்துவெளிக் குறியீடுகளைத் தாயாகக் கொண்டது என்று பேரறிஞர்கள் பலர் ஆணித்தரமாகத் தக்க ஆதாரங் களுடன் முடிவு கட்டியுள்ளனர்.2 பிராமி வரிவடிவங்களினின்று பீனிசிய வரிவடிவங்களும் பீனிசிய வரிவடிவங்களினின்று கிரேக்க, உரோம வடிவங்களும் இவைகளினின்று பல ஐரோப்பிய வரிவடிவங்களும் பிறந்தன. பிராமியினின்று வட்டெழுத்தும் அதினின்று இன்றையத் தமிழ் வரிவடிவங்களும் வளர்ச்சி பெற்றன. வட்டெழுத்து, கேரளத்தில் கோலெழுத்தாக மாறியது. டாக்டர் பர்னல் வட்டெழுத்து பிராமியினின்று தோன்றிய வரிவடிவம் என்று கூறுவதற்கில்லை. பிராமிக்கு மூலாதாரமாக விளங்கிய பீனிசிய எழுத்தினின்று நேராகத் தமிழர்கள் தங்களின் வரிவடிவங்களை அமைத்துள்ளார்கள் என்று எழுதி உள்ளார்.1 இவர் பிராமிக்கும் வட்டெழுத்துக்கும் இடையே யுள்ள நெருங்கிய ஒற்றுமைகளை நன்குணர்ந்தவர். இவர், ஆரியர்கள் பாரதநாட்டில் அடியெடுத்து வைப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தமிழர்கள் தங்கள் மொழிக்கு வரிவடிவத்தை உருவாக்கிவிட்டனர். எனவே அது பிராமியின் வழிவந்த வரிவடிவ மாக இருக்கமுடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். பல்வேறு வரிவடிவங்களையும் படித்து ஆராய்ந்த பேரறிஞர்கள் சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமிக்கும் உள்ள ஒற்றுமைகளை நன்கு ஆராய்ந்து சிந்துவெளி எழுத்துக்களின் இன்றே பிராமி பிறந்து, கி.மு.300ஆம் ஆண்டையொட்டி சீருற்று இருக்கலாம் என்று கருதுகின்றனர். கி.மு.10ஆம் நூற்றாண்டில் பாபிலோனிலிருந்து பாரதநாடு போந்த பீனிசிய வரிவடிவங்கள் 5ஆம் நூற்றாண்டில் பாரதநாட்டில் சீர்திருத்தப் பெற்றுச் சிறப்புற்று எழுந்தது என்று பல ஐரோப்பிய அறிஞர்கள் கருதுகின்றனர் என்று வங்கநாட்டு வரலாற்றறிஞர் டாக்டர் சுநீத்குமார் சட்டர்ஜி கூறியுள்ளார்.2 இன்றையத் தமிழ் வரிவடிவங்கள் சிந்துவெளி சித்திர எழுத்தை மூலக் கருவாகக் கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளின் இன்று பிராமி பிறந்தது. பிராமியினின்று வட்டெழுத்தும், இன்றையத் தமிழ் வரிவடிவங்களும் பரிணமித்து உள்ளன என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை என்று அறிஞர் சண்முகநாதன் கூறியுள்ளார். சங்காலத்திலே தமிழர்கள் எழுதக் கற்றிருந்தனர். எழுத்து என்னும் தமிழ்ப்பதம் எழுது என்ற வினையின் அடியாகப் பிறந்தது. எழுது என்றால் வரை எனப் பொருள்படும். நிகண்டில் எழுத்து என்பதற்கு படம், உருவம் என்றே பொருள் தரப்படுகிறது. ஆதியில் தமிழர்கள் தங்கள் மொழிக்கேற்ப வரிவடிவங்களைச் சித்திரக் குறியீடுகளினின்று கண்டு அதற்கு எழுத்து என்ற பெயரைக் சூட்டினர். காணப்பட்ட வுருவ மெல்லாம் மானக் காட்டும் வகைமை நாடி வழுவி லோவியன் கைவினை போல எழுதப்படுவது உருவெழுத்தாகும் (யாப்பருங்கலவிருத்தி மேற்கோள்) உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய (இலக். கொத்து மேற்கோள்) என்னும் செய்யுட்கள் மூலம் தமிழர் கண்ட எழுத்துக்கள் ஓவியம் போன்ற உருவெழுத்து என்பது நன்கு தெரிகிறது. இஃது அன்றிச் சிலப்பதிகாரத்தில், வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி இரு பதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனைச் சகடமும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவைகளை ஆராய்ந்தால் கடைச் சங்க காலத்தில் - அதாவது கி.மு.300 - கி.பி.200 வரை கண்ணெழுத்து என்ற சித்திர எழுத்து தமிழகத்தில் வழங்கப்பட் டிருந்தது என்று தெரிகிறது. கிறிதவ சகாப்தம் எழுமுன்பே தமிழர்கள் சித்திர சங்கேத எழுத்துகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.1 இதனைத் தமிழ் அன்பர்களான மு. இராகவ ஐயங்கார், பி.என். சுப்பிரமணிய ஐயர் போன்ற அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்2. இன்றுள்ள தமிழ் நூற்களில் தொன்மையானது தொல் காப்பியம். அந்நூலில் அக்காலத்தில் வழங்கிவந்த வரி வடிவங்கள் எப்படிப்பட்டன என்று குறிப்பிடவில்லை. ஆனால் சில எழுத்துக்கள் புள்ளி பெற்று நிற்பதைக் குறிப்பிட்டுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்திலே இன்றையத் தமிழ் வரிவடிவம் உருப்பெற ஆரம்பித்துவிட்டது என்று யூகிக்க இடமுண்டு. ஆனால் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சித் துறை நிபுணர் தி.நா. சுப்பிரமணியம் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது பிராமியாக இருக்கலாம் என்று ஊகிக்கின்றார்3. இதன்மூலம், சிந்துவெளியின் சித்திர எழுத்துக்களி னின்று பிராமி பிறந்து, அது அதற்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்களை ஒதுக்கித் தள்ளியோ (அ) இணைந்தோ வட்டெழுத்தாகப் பரிணமித்து அப்பால் சில ஐரோப்பிய அறிஞர்களின் துணையால் இன்றையத் தமிழ் வரிவடிவமாக மலர்ந்தது என்றே நான் கருதுகின்றேன். பொன்விழாஎடுப்பிக்கும் பொற்புறு கழகம் பொன்விழா எடுப்பிக்கும் பொற்புறு கழகம் அருங்கலைகள் பலவற்றில் வல்லவரான இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சாத்தன் குளத்தில் தோன்றியவர். 22.4.1902ஆம் நாளில் இவர் தோன்றினார். இளமையிலேயே சீர்திருத்த மனப்பான்மை கொண்டு விளங்கியதால் பள்ளிப் படிப்பிற்குப் பின் சீர்திருத்தச் செம்மல் ஈரோட்டுப் பெரியாரின் பாசறையில் சிறிது காலம் உறைந்தவர். இவர் இலங்கையில் அச்சுக்கூடம் ஒன்று நடத்தினார். ஓவியக்கலை, சிற்பக்கலை, காசுகள் பற்றிய கலையறிவு முதலிய பல கலைகளிலும் பேரீடுபாடு கொண்டு இவற்றைப் பற்றி ஆராய்ந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு இதழில் மாதக்கணக்கில் தொடர்ந்து எழுதியவர். தமிழ் நாட்டுத் திருவிளக்குகள், தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், நம் நாட்டுக் கப்பல் கலை போன்ற சிறந்த நூல்களை வெளியிட்டவர். இவர்தம் கலையறிவைப் பாராட்டிக் கழகம் நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தைத் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் வழி இவருக்கு வழங்கியது. பாளையங்கோட்டை பெருமாள் வடக்குத்தேர்த் தெருவில் எனது இல்லம் கலைக் கூடம் என்னும் பெயருடன் இன்று இருந்து வருகிறது. கலைக்கூடத்தின் எதிர்ப்புறத்தில் கழக நிறுவிய அண்ணல் உயர்திரு. திருவரங்கனார் இல்லம் இருக்கிறது. அங்கு ஐம்பது ஆண்டுகளுக்குமுன் திருசங்கர் கம்பெனி என்ற ஒரு நூல் வெளியீட்டுக் கழகம் அரும்பியது. அதுவே திருநெல்வேலித் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் ஆக 1920ஆம் ஆண்டில் மலர்ந்தது. நமது கழகம் பாளையங்கோட்டையில் கருவுற்று நெல்லையிற் பிறந்து சென்னையில் வளர்ந்து சிறப்புற்று விளங்குகிறது. கழகம் கருவுற்ற காலம் முதல் இன்றுவரை அதனோடு தொடர்பு கொண்டவன் என்று நான் இன்று பெருமையோடு பேசமுடியும். எனது கழகத் தொடர்பு 1922ஆம் ஆண்டு சூன் மாதம் நெல்லையில் உள்ள கழகத்தின் உட்புகுந்தேன். எம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் திருவரங்கம்பிள்ளை அவர்கள், அவர்களுக்கு இயற்கையாய் அமைந்த புன்முறுவல் திகழும் முகத்துடனும் இனிய மொழியோடும் என்னை வரவேற்றார்கள். அன்று அவர்கள் கையால் மூன்று புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினேன். அவை களாவன : திருவாளர்கள் (1) பரிதிமால் கலைஞன் எழுதிய மதிவாணன் என்னும் நூல், (2) மறைமலை அடிகள் எழுதிய பட்டினப்பாலை என்னும் ஆராய்ச்சி நூல், (3) திரு. கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் எழுதிய இந்து சமயங்களில் சுருக்க வரலாறும் சிவாலயங்களில் சுமார்த்த மதக் கலப்பும் ஆகும். அந்நூல்களை நன்கு பயில முற்பட்டேன். அஃது என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கிவிட்டது. எனக்கு நாடகத் தமிழ் மீதும் சங்க இலக்கியங்கள் மீதும் சைவ சமயத்தின் மீதும் மிகுந்த பற்றையும் மதிப்பையும் உண்டுபண்ணிவிட்டது. அப்பால் அண்ணல் திருவரங்கனார் தூண்டுதலால் சிவதீக்கையும் பெற்றேன்; திருவாளர் கா. சுப்பிரமணியபிள்ளை, வாலையானந்த சுவாமிகள், திரு.வி. கலியாணசுந்தரமுதலியார், தாசில்தார் நெல்லையப்பபிள்ளை, மணம் பூண்டி குமாரசுவாமிப்பிள்ளை, நாகர்கோயில் பி. சிதம்பரம் பிள்ளை, ஈ.வே. இராமசாமிப் பெரியார் போன்ற அறிஞர்களுக்கு அறிமுகமும் செய்து வைக்கப் பெற்று அவர்களின் அன்பிற்கும் நட்பிற்கும் மதிப்பிற்கும் உரியவனானேன். 1923ஆம் ஆண்டு நெல்லையில் சுயமரியாதைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத் தொடக்க விழாவைத் திருவரங்கனார் அவர்களே முன்னின்று நடத்தி வைத்தார். அவ்வியக்கப் பத்திரிகையைத் திருவாரூர் ஞானியார் சுவாமிகள் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கம் சைவசமயத்தைத் தாக்கியது. திருவரங்கனார் அவர்கள் அவ்வியக்கத் தொடர்பை அறுத்துக் கொண்டார். சைவ அன்பர்கள் பலரையும் அதில் பங்கு கொள்ளாது தடுத்தார். ஆனால் நானும் நாகர்கோயில் சிதம்பரம்பிள்ளை, கடையம் பெருமாள் ராயர் போன்றவர்கள் அண்ணல் திருவரங்கனார் அவர்களின் சொல்லைக் கேளாது சுயமரியாதை இயக்கத்தில் முழுப் பங்குகொண்டோம். நான் அவ்வியக்கப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியும் அவ்வியக்கக் கூட்டங்களில் பேசியும் நூல்கள் எழுதியும் அவ்வியக்க நூற்பதிப்புக் கழக அமைச்சராயும் தொண்டாற்றும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்தேன். திருவரங்கனார் அவர்கள் 1935ஆம் ஆண்டு நாகர்கோயில் பி. சிதம்பரம்பிள்ளை அவர்களைக் கண்டுபேசி சுயமரியாதை இயக்கத்தினின்று மீட்டுக் கழகத்தின் தலைவராக ஆக்கிக் கொண்டார்கள். 1966ஆம் ஆண்டு இன்றைய கழக ஆட்சிப் பொறுப்பாளரும் திருவரங்கனாரின் இளவலுமாகிய உயர் திரு. தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் என் இல்லத்திற்கு வந்து என்னை அழைத்துக் கழகத்தொண்டனாகவும் செந்தமிழ்ச்செல்வியின் கட்டுரையாளனாகவும் கழக நூலாசிரியனாகவும் திகழுமாறு கழகத்தின் பக்கம் என்னை ஈர்த்துக் கொண்டார்கள். நான் முன்னர், கழகத்தின் தொடர்பால் 1932ஆம் ஆண்டில் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் என்ற நூல் வெளியீட்டுக் கழகத்தின் அமைச்சரானேன். பகுத்தறிவு என்ற திங்கள் இதழின் வெளியீட்டாளராகவும் அறிவு என்ற திங்கள் இதழின்ஆசிரியராகவும் உயர்த்தப்பெற்றேன். அப்பால் 1966ஆம் ஆண்டில் கழகத்தின் ஆதரவில் நடைபெறும் தென்னிந்திய தமிழ்ச்சங்கத்தால் பொன்னாடை போர்த்தப் பெற்று நுண்கலைச் செல்வர் என்ற பட்டமும் பெற்றேன். கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ.சு. அவர்கள் எனது கலை ஆய்விற்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டித் தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள் என்ற நூலை வெளியிட்டுக் கழகத்தின் நூலாசிரியர்களில் ஒருவராக ஆக்கினார்கள். நான் பலகலை நூல்களை எழுதவும் வெளியிடவும் கலைப்பொருள்களைத் தொகுக்கவும் ஊக்கம் அளித்து வந்தார்கள். கழகத்தோடுள்ள எனது நட்பு மிக நெருக்கமானதாகச் செய்துள்ளார்கள். கழகம் கழகம் என்ற பெயரை 19ஆம் நூற்றாண்டுத் தமிழர்களிற் பலர் கேட்டும் படித்தும் அறியார்கள். சங்கம் என்ற பதம் வடமொழி என்று கூறியபொழுது அதற்கு ஈடான தமிழ்ச் சொல், கழகம் என்று கூறத் தமிழ் அறிஞரில் பலர் அறியாது விழித்ததுண்டு. ஆனால் இன்று கழகம் என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சீரிய சொல்லாகத் திகழ்கிறது. தமிழ் ஒரு சக்திவாய்ந்த மொழியாகத் தமிழக மெங்கம் ஏன்? - இந்தியாவிலும், பிறநாடுகளிலும் எண்ணப் படுகிறது. தமிழர்களின் அறிவை வளர்க்கும் கருவூலமாகவும் அரசியல் மேம்பாட்டை வளர்க்கும் படைக்கலனாகவும் அரணாகவும் மிளிர்கிறது. இக்கழகம் என்ற சொல்லை 62 ஆண்டுகளுக்கு முன் நெல்லை இந்துக்கல்லூரியில் பேராசிரியராயிருந்த மனோன் மணீயம் ஆசிரியர் நெல்லையில் ஒலிக்கச் செய்தார். மனோன் மணீயத்தில் கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடமர்ந்து என்று குறிப்பிட்டார். 1908ஆம் ஆண்டில் விருதை சிவஞான யோகிகள் நெல்லை மாவட்டத்தில் கோயில்பட்டியில் திருவிடர்க் கழகம் கண்டார். 1920ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிப் பலவகை நூல்களை வெளியிட்டு இந்தியாவிலும், இலங்கையிலும், மலேசியாவிலும், போர்னியோவிலும், மொரேசியசிலும் பிற இடங்களிலும் - ஏன்? தமிழர்களின் வீடுகளில் எல்லாம் கழகம் என்னும் சொல் ஒலிக்குமாறு செய்யப்பட்டது. இத்தமிழ் உணர்வு தமிழும் சைவமும் எங்கும் பரவத் துணையாய் இருந்தது. 1932ஆம் ஆண்டு ஈரோட்டில் எனது முயற்சியால் பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் லிமிட்டெட் உருப்பெற்றது. அப்பால் திராவிடக் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் தோன்றின. ஆனால், தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமே தமிழ் அறிஞர்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் செல்வாக்குப் பெற்றுத் தமிழன் என்ற உணர்ச்சியையும் தமிழ்ப் பற்றையும் வளர்த்தது. 1400 நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு மேற்பட்ட படிகளையும் அச்சிட்டுத் தமிழர்களுக்கு, தாங்கள் தமிழர்கள் என்னும் உணர்ச்சி உந்தியெழும்படி செய்தது. விளக்கமாகச் சொன்னால் தமிழகத்தில் தமிழர் ஆட்சி நிலவ அடிப்படையிட்டது என்றுகூட உறுதியாகக் கூறலாம். கழகம் ஐம்பது ஆண்டுகள் ஆற்றிய அளப்பறிய அருந் தொண்டினால் தமிழ் மக்கள், நமது நாடு, நமது இனம், நமது மொழி, நமது பண்பாடு என்னும் உணர்வைப் பெற்றனர். பிறமொழி கலவாது தனித்தமிழில் பேச முன்வந்தனர். தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகவும், போதனா மொழியாகவும் விளங்க மாணவர்கள் விழைந்தனர். தமிழகம் தமிழர்களின் தாயகம்; அங்கு தமிழர்தான் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று மக்களிடையே ஒரு சீரிய எண்ணம் பரவியது. 1967இல் தமிழகத்தில் தமிழினை வளர்க்கும் நல்லவர்களை, வல்லவர் களை அரச கட்டிலில் அமர்த்தியது. கழகம் ஆதியில் சைவநெறியைப் பேணுவதற்கு என்றே தோற்றுவிக்கப்பட்டது. அப்பால் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடப்பதை அறிந்து சைவ சமய நூல்களனைத்தையும் சங்க மருவிய நூல்கள் எல்லா வற்றையும் பிழையின்றிக் கண்கவர் வனப்புடன் வெளியிட்டுப் பீடும் பெருமையும் பெற்றது. இன்று இந்தியாவிலே ஏற்றம் பெற்ற வெளியீட்டுக் கழகமாய் ஒளிர்கிறது. இந்திய அரசிட மிருந்தும் அனைத்திந்திய அச்சகக் கழகத்திடமிருந்தும் நமது கழகம் ஒப்பற்றது என்று பரிசும் பாராட்டும் பெற்றது. கழகம் கவிஞர்களுக்கு ஒரு கருவூலம்; அறிஞர்களுக்கு ஓர் அரிய அரண்; மாணவர்களுக்கு வற்றாத சுனை; மக்களுக்கு ஒரு பெரிய ஆயுதம். 1936ஆம் ஆண்டிலே கழகம் இந்தி எதிர்ப்பிற்குக் கால் கோலியது. நமது மாநிலத்தில் தமிழக அரசு அரும்பத் தோன்றாத் துணையாக இருந்தது என்பவை ஒரு சிறிதும் மிகையாகா. நமது கழகம் பல்வேறு இன்னல்களுக்கு இடையே பெரியார் வ.சு. அவர்களின் தளர்வுறா முயற்சியால், அரிய உழைப்பால் வளர்ச்சியுற்று 1400 உயரிய நூல்களை வெளியிட்டுள்ளது. கழகம் ஐம்பது வயதைப் பெற்றுப் பொன் விழாக் கொண்டாடும் பேற்றைப் பெற்றுள்ளது. 44 ஆண்டுகளாகச் செந்தமிழ்ச் செல்வி என்னும் அரிய திங்கள் வெளியீட்டை வெளியிட்டுப் பெருமை பெற்றுள்ளது. சென்னையில் தலைமை நிலையமும் நெல்லை, மதுரை, கோவை ஆகியவிடங்களில் கிளை நிலையங்களும் நெல்லை, சென்னை, பல்லாவரம் ஆகியவிடங்களில் சிறந்த நூலகங்களையும் அமைத்துள்ளது. பாட நூல்களை வெளியிட்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்து அவர்களிடம் தமிழ் மணங் கமழச் செய்துள்ளது. கழகம் ஆற்றிவரும் தொண்டு ஒப்புவமையற்றது; சீரியது; சிறப்பு மிக்கது. இதுவரை எங்கும் எவரும் ஆற்றியிராத தமிழ்ப் பெரும் பணியை, சைவ சமயத்தொண்டைத் தமிழர்கள் என்றும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாததாகும். இன்று கழகத்தின் நோக்கம் வெற்றியீட்டி வருகிறது. கழகத்தை நிறுவிய அண்ணல் திருவரங்கனார் அதைக் கன்மலைமீது அடிப்படையிட்டது போல் உறுதியாக அமைத்துச் சிறப்புற்று வளரும்படி செய்தார். அது குன்றின் மேலிட்ட பொன்றா விளக்கென ஒளி விட்டோங்கியது. பிழைகளின்றிக் கண்ணைக் கவரும் கட்டோடு நூல்கள் சில வெளியிடச் செய்தார்கள். அவர்களுக்குப் பின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த தமிழ்ச் செம்மல் சிவநெறிச் செல்வர் உயர்திரு வ. சுப்பையாபிள்ளை அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளியீடுகளையும் நூறாயிரக் கணக்கான ஏடுகளையும் (சுமார் 2,00,000க்கு மேற்பட்ட படி களையும்) பதிப்பித்துத் தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் பரப்பிக் கழகம் வளமுற்றுப் பொருளாதாரச் செழிப் புற்றோங்குமாறு செய்தமைக்குத் தமிழர்கள் அவர்களின் அரிய பணியைத் தெய்வத் திருப்பணியாக எண்ணிப் பொன் னெழுத்தால் பொறித்துப் போற்றத்தக்கது என்று இந்தப் பொன் விழாவில் தமிழர்களின் பிரதிநிதியாக எண்ணிக் கூறிக் கொள் கின்றேன். கழகம் ஆற்றிய பணிகள் பல; இன்னும் ஆற்றவேண்டிய தொண்டுகள் சில. அவைகளைக் கழகத்தார்க்கும் தமிழ் மக்களுக்கும் இந்த விழாவின்போது சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அவை அடியில் வருவனவாகும் : 1. கழகம் தமிழ்க் கலைகளை வளர்க்கவும் கலை நூல்களை அதிகம் வெளியிடவும் முன்வரவேண்டும். 2. சமய நூல்கள் இலக்கியங்கள் இலக்கணங்கள் கலை நூல்கள் போன்றவைகளை ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு முதலிய பிற மொழிகளில் வெளியிடவேண்டும். செந்தமிழ்ச் செல்வி போன்று ஆங்கிலத்தில் ஒரு திங்கள் வெளியீடோ, அல்லது, முத்திங்கள் வெளியீடோ வெளிவரச் செய்யவேண்டும். 3. கழகத்தின் கிளைகளும் பொருளாதார மேலாள்களும் (Agents) தில்லி, பம்பாய், கல்கத்தா, திருவனந்தபுரம், மைசூர், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், நியூயார்க் போன்ற இடங்களில் ஏற்படவேண்டும். 4. கழகத்தின் அறநிதியினின்று நமது பல்கலைக் கழகத்தில் முதல் தரமாகத் தேர்ச்சி பெறும் பட்டதாரி மாணவர்களுக்குப் பரிசும், பண உதவியும் அளிக்கவேண்டும். அவர்கள் மேனாடு களுக்குச் சென்று ஆய்வு நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். 5. கழகத்தின் அறநிதியிலிருந்து கல்வி நிலையங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர் மாணவியர்களுக்கு இயன்ற அளவு உணவு, உடை, சம்பளம், நூல்கள் அளித்து உதவ வேண்டும். 6. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சைவசமயம், சைவசமய தத்துவம், இசை, நாட்டியம் முதலியவைகளைப் பயிற்றுவிக்கக் கழகச் செலவில் தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 7. கழகம் ஆரம்பப் பாடசாலைகள், கல்லூரிகள், மட்டு மின்றித் தமிழ்ப் பல்கலைக் கழகமும் நிறுவ முன்வரவேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பது கழகத்தின் தொடக்க கால எண்ணமாகும். 8. கழகத்தின் அறநிதியினின்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரிலும், நம் இளைஞர்களும் மாணவர்களும் தங்குவதற்கும் உண்பதற்கும் ஏற்ற ஒய்.எம்.சி.எ. (Y.M.C.A), ஒய். டபிள்யூ. சி.ஏ. (Y.W.C.A) போன்ற சைவ இளைஞர் தங்கும் நிலையங்கள் நிறுவ வேண்டும். இவைகளுக்கு அரசினர் உதவியும் பெறலாம். இத்தகைய பணிகளால் கழகம் வளரும். அதன் நோக்கம் ஈடேறும். தமிழகத்தில் தமிழர் ஆட்சி நிலைத்து நிற்கும். பொன்விழா எடுப்பிக்கும் நமது கழகம் அதன் வலுவும், வாழ்வும், எழிலும், ஏற்றமும், வாணாளும் பெருகி உலகிற்கொரு பேரொளி நல்கும் ஞாயிறே போன்று அறிவொளியூட்டிப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!! என வாழ்த்துகின்றேன். கழகத்தின் உயிர்நாடியாய்த் திகழும் அதன் ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு வ. சுப்பையாபிள்ளை அவர்கள் கழகத்தின் பொன்விழா எடுப்பித்தது மட்டுமன்றி அதன் வைர விழாவும் பிற விழாவும் நடத்துவதற்கு ஏற்ற அறிவும், ஆண்மையும், நீண்ட வாணாளும், நோயற்ற யாக்கையும் பெறுமாறு இறைஞ்சுகின் றேன். கழகத் தக் கண்போற் காத்துவரும் பொது மேலாளர் திரு.இரா. கலியாணசுந்தரம் அவர்களும், கழகப் புலவர்களும் பிற ஊழியர்களும் வாழ்க! வாழ்க!! என வாழ்த்துகின்றேன். சர்வதேச வாலிபர்களின் எழுச்சி பாசிஸத்தையும் யுத்தத்தையும் எதிர்க்கும் போராட்டம் மனித வர்க்கத்தை அட்டை போல் உறிஞ்சி நடைப் பிணங்களாக்கி வரும் கொடிய கன்னெஞ்சம் பூண்ட ஏகாதிபத்ய அரக்கனையும், ஓநாய்களைப் போல் போர் வெறிகொண்டு குற்றமற்ற கோடிக் கணக்கான மக்கள் மீது அகாரணமாய்ப் பாய்ந்து அவர்களைச் சுட்டு வீழ்த்தி - சித்ரவதை செய்து அடிமைப்படுத்தி அதன் பயனாய் வாழ நினைக்கும் கோர ரூபம் கொண்ட கொடிய பாஸிஸப் பைசாசங்களையும் வெட்டி வீழ்த்தி, அவைகள் என்றும் எழா வண்ணம் ஆழக்குழி தோண்டிப் புதைத்து உலகமெங்கும் சாந்தியும் சமாதானமும் பெருகி ஜாதி, மத, தேச, நிற பேதங்களின்றி எல்லோர்க்கும் போதிய சௌகரியமான உணவும், உடையும், இடமும் பெற்று சுபிட்சமான வாழ்வைப் பெற, மனித சமூகத்தை ஒன்றுபடுத்தி உலகிலே ஓர் மகத்தான மனித சமாஜத்தை நிறுவி, அதை வளர்த்து வரும் ஓர் அரிய சக்தி சில்லாண்டுகளுக்கு முன் அரும்பியுள்ளது. அப்பெரும் சக்திதான் எதேச்சாதிகார - ஆணவத் திமிர்கொண்ட - வன்னெஞ்சம் பூண்ட ஏகாதிபத்ய ஸார் அரக்கனை வெட்டி வீழ்த்தி அவன் வமிசங்களோடு நிர்மூலஞ் செய்து ரஷ்யாவில் தனது சுத்தியலும், அரிவாளும் பொரித்த தம் செங்கொடி ஜயநிலை காட்டியது. அப்பெரும் சக்தி தான் சோஷியலிஸமாகும். அப்பெரும் சக்திதான் இன்று உலகிலுள்ள எல்லா ஏகாதிபத்ய அரக்கர்களையும் பாஸிஸப் பேய்களையும் வெட்டி வீழ்த்திவிடத்தக்க ஆற்றல் வாய்ந்த முப்பெரும் சக்திகளை ஒன்று திரட்டி வருகின்றது. அம்முப் பெரும் சக்திதான் சர்வதேசத் தொழிலாளர் சங்கம், சர்வதேசப் பெண்கள் சங்கம், சர்வதேச வாலிபர் சங்கம் ஆகியவைகளே யாகும். முப்பெரும் சக்தியின் முகங்களே இன்று மேதினம் (May day) ஆகவும் சர்வதேசப் பெண்கள் தினம் (International Women’s day) ஆகவும் சர்வதேச வாலிபர்கள் தினம் (International Youth day) ஆகவும் விளங்கி வருகிறது. உலக முழுதும் வாழ விரும்பும் வாலிபர்கள் சென்ற செப்டெம்பர் மாதம் 1ஆம் தேதி சர்வதேச வாலிபர்களின் தினத்தை (International Youth day) மிகச் சிறப்பாகக் கொண்டாடி னார்கள். உலக முழுதும் சாந்தியும் சமாதானமும் நிலவச் செய்யவும், ஏகாதிபத்ய யுத்தங்களுக்கு விரோதமாய் போராட வும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வாலிபர்கள் தினத்தை உலகமுழுதும் கொண்டாட வேண்டுமென்று... நகரில் நடைபெற்ற சோஷியலிட் வாலிபர்களின் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியினால் முதலாளித்வ தேசங்கள் செய்வதின்னவென அறியாது பிற நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் செல்வங்களைக் கொள்ளை அடித்து அந்நாட்டின் விவசாயம், கைத்தொழில், கலைகளையும் பாழாக்கி, தேசத்தைச் சுட்டு சாம்பலாக்கி எங்கும் பிணக்காடாக்க போதிய ஆயுத பலத்தைச் சேகரித்து போர் வெறியால் மனித வர்க்கத்தை மேலும் மேலும் பயமுறுத்தி வரும் யுத்த மேகங்கள் - சென்ற ஆண்டில் நிகழ்ந்த சர்வதேச தினத்தில் வாலிபர்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பாஸிஸத்தின் கீழ் வாலிபர்கள் பாஸிஸத்தின் கோரவரூபம் பொருந்திய கொடிய மிருகத்தனமான ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த சம்பள மீய்ந்து கடின வேலையைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், அறிவு வளர்ச்சிக்கு சந்தர்ப்பமின்மை, பயனற்ற கல்வி, கால்பட்டினி - அரைப்பட்டினி, சுதந்தர எண்ண முள்ள வாலிபர்களுக்கு கீழ்ப்படியும் சுபாவத்தை யுண்டாக்கி அழிக்கும் மிலிட்டரி கவாத்து (Military drill) பீரங்கியும் வெடிமருந்தும் காட்டிப் பயமுறுத்தல் முதலிய இராட்சச ஆட்சியிலே இளம் வாலிபர்கள் - சுதந்திர எண்ணத்தையுடைய யௌவனர்கள் - அகப்பட்டுக் கொண்டு விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனியிலே சர்வ வல்லமை பொருந்திய ஹிட்லர் பெருமான் ஆட்சியிலே 1936-1937ஆம் ஆண்டுகளில் உயர்தரப்பட்டம் பெற்று பாடசாலை யிலிருந்து வெளிவந்த 1,184,000 பேர்களுக்கு 448,000 பேர்களுக்குத்தான் வேலை கொடுக்க முடிந்தது. வேலை பெற்ற இந்த அதிர்ஷ்டசாலிகள் சராசரி நாள் ஒன்றிற்கு குறைந்தது 11 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும் பாடசாலையில் மட்டுமல்ல மில்களிலும், பேக்டரிகளிலும் தொழிலாளிகள் தேக தண்டனைஅனுபவிக்க வேண்டியிருந்தது. ஹிட்லர் பெருமானின் விசேஷ அதிகாரத்தில் இப் பொழுது வயதுவந்த வாலிபர்களுக்கு நூற்றுக்கு 25ம் 30 மாகக் கூலி குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கார் கணக்குப்படி சென்ற ஆண்டில் இத்தாலியில் 386,000 வாலிபர்கள் வேலையின்றித் திண்டாடுகின்றார்கள். வேலை செய்யும் இளம் தொழிலாளிகளும், பயிற்சி பெறும் தொழிலாளிகளும் ஒரு சில பிச்சைக் காசுகளுக்காக நாள் தோறும் 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இத்தாலி முதலாளிகளால் கொடுக்கப்படும் சம்பளம் சம்பளமன்று; தொழிலாளிகள் பட்டினியால் இறந்துவிடாமல் உயிர் உடலில் ஊசலாடிக் கொண்டு தங்கள் வேலை குறையாது செய்துவர வேண்டுமென்ற பெருங் கருணையால் தான். ஜர்மனியில் மாணவர்கள் ஜர்மனியில் 1932ஆம் ஆண்டு உயர்தரக் கல்வி கற்ற மாணவர்கள் தொகை 116,000. ஆனால், 1937இல் 77,000 மாணவர்கள் தான் உயர்தரக் கல்வி கற்றவர்கள். 1938ஆம் ஆண்டிலோ 14,000 பேர்களை சேர்ப்பதாகத் திட்டம் போட்டனர். ஆனால் 7,000 பேர்கள்தான் உயர்தரக் கல்விச் சாலையில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஜர்மனியின் சகோதர நாடான ஜப்பானில் வாலிபப் பெண்கள் ஆயிரம் ஆயிரமாய் தொழிற்சாலைகளுக்கும், விபசாரத் திற்கும் விற்கப்பட்டு வருகின்றனர். சிறையில் வாடி வதங்கும் மக்களின் நிலையைவிட ஜப்பானில் வாழ்பவர்களின் நிலை எவ்வழியிலும் சிறந்ததாகக் காண முடியாது. ஜப்பானில் சென்ற ஆண்டு ஏராளமான தற்கொலைகள் வளர்ந்துவிட்டன. சர்க்கார் கணக்குப்படி தற்கொலை செய்யப்பட்டவர்கள் தொகை 30,000. இவர்களில் பாதிப் பேர் வாலிபப் பெண்களே யாவர். ஜப்பான் சர்க்காரின் வரவு செலவுத் திட்டத்தைப் (Budget) பார்த்தால் கல்விக்காக நூற்றுக்கு 1-8 வீதந்தான் செலவு செய்யப்படுகிறது என்பது நன்கு புலனாகும். பொதுவாக ஜப்பான் தேசத்தில் சுத்தமான -சத்துள்ள ஆகாரமின்றி ஜப்பான் வாலிபர்கள் உடல்நிலை நாளடைவில் சீர்குலைந்து வருகிறது. சென்ற ஆண்டு ஜப்பானிய சைன்யத்திற்கு மனுக் கொடுத்த நூற்றுக்கு 45 பேர் தகுதியான தேக அமைப்பு இன்மையால் சேர்க்க முடியாமற் போய்விட்டனர். எனவே வெவ்வேறு விதமான அபிப்பிராயம் கொண்ட வாலிபர்களாயிருப்பினும் - பல லட்சியங்களைக் கொண்டயுவர் சங்கமாயிருந்தாலும் எல்லாவற்றையும் சீர்திருத்தி ஒற்றுமைப் படுத்தி பாஸிட் மிலேச்சர்களுக்கு விரோதமான போராட் டத்திற்கு மட்டுமல்ல உலகமெங்கும் சமாதானம் நிலவவும் வாலிபர்கள் இடைவிடாது வேலை செய்யவேண்டும். சமாதானத்திற்காக தீவிரமாகப் பாடுபடுங்கள் நாளுக்குநாள் வெகு தீவிரமாய் வளர்ந்துவரும் புதிய உலகத்தின் கொலைக்களத்தின் அருகில் வாலிபர்கள் கவலை யற்றவர்களாய் நிற்க விரும்பவில்லை. சமாதானத்தை நிலவச் செய்வதற்காகத் தீவிரமாய் போராடும் வீரர்களாய் நிற்க விரும்புகிறார்கள். எல்லா நாட்டையும் இன்று பீடித்த யுத்த பயத்தையும் பாஸிஸத்தையும் எதிர்த்து ஒழிக்க வாலிபர்கள் இயக்கம் வளர்ந்து வருகிறது. வாலிபர்களின் இந்த உணர்ச்சிப் பெருக்கால்தான் லட்சோபலட்சம் வாலிபர்களும், இளம் பெண்களும், பிரான், பிரிட்டன், அமெரிக்கா, காண்டி நேவியா, செக்கோ முதலிய நாடுகளிலிருந்து பெயினுக்கும், சீனாவிற்கும் உதவி புரியச் சென்றுள்ளார்கள். பிரஞ்சு தேசத்து வாலிபர்கள் இயக்கங்களினால் நடத்தப் பட்ட பந்தய தினத்தில் பத்து லட்சம் பிராங்குகளும் (Francs) அநேகம் டன் ஆகாரங்களும் பெயின் சர்க்காருக்காகச் சேர்த்து அனுப்பப்பட்டிருக்கின்றன. பிரஞ்சுக்கும் பெயின் குடிஅரசுக்குமுள்ள எல்லைப்புறங்களைத் திறந்துவிடும்படி பிரஞ்சு வாலிபர்கள் சர்க்காரிடம் மிகத் தீவிரமாய்ப் போராடி வருகின்றார்கள். பாஸிட் வெறியர்களால் அனியாயமாய் ஹிம்சிக்கப்படும் ஸபெயின் குடிஅரசிற்கு உதவிபுரிய பிரஞ்சு வாலிபர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் வாலிபர்களின் சமாதான சங்கங்கள் (British Youth Peace League) 10 லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ந்திருக்கின்றன. பெயின் குடிஅரசு சர்க்காருக்கு உதவி தேட மிகப்பெரிய கல்வி தாபனங்கள் மூலமாய்க் கூட இளைஞர்கள் முயன்று வருகிறார்கள். பிரிட்டனிலுள்ள பத்தாயிரக்கணக்கான வாலிபர்கள் இத்தாலியின் நடு நிலைமை நாடகத்தையும் ஜெர்மனியின் ஏராளமாய் கடன் கொடுத்து உதவி புரிந்து தாளம் போடும் கபட நாடகங்களையும் உலகமெங்கும் பறைசாற்றி பெயினிலிருந்து இத்தாலி-ஜெர்மன் துருப்புகளை உடனே வாப ஆகும்படியும் பெயின் குடியரசிற்கு ஆயுதம் வாங்கும் உரிமையை அளிக்கும் படியும் அரும்பிரயாசைப்பட்டு வருகின்றனர். 24செக் வாலிபர்கள் சங்கங்கள் தங்கள் நாட்டின் கவலைக்குரிய நிலையோடு பெயின் சர்க்காருக்கு பணமும் ஆகாரமும் சேர்த்து உதவி புரிந்து வருகின்றார்கள். உலக வாலிபர் காங்கிர (World Youth Congress) அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் சமீபத்தில் உலக வாலிபர்கள் 2வது காங்கிர நடைபெற்றது. உலக சமா தானத்தை நிலை நாட்ட வாலிபர்களின் மிக சக்தி வாய்ந்த ஓர் பெரும் தாபனம் வளர ஆரம்பித்து விட்டது. இந்த மாபெருங் கூட்டத்திற்கு சகல மததர்களும், சகல கட்சிக்காரர்களும் விஜயஞ்செய்திருந்தனர். இக்காங்கிரஸிலிருந்து வாலிபர்கள் பாஸிடின் பகைவர்களாய் மட்டுமல்ல - சமூக முற்போக்கு சக்தியின் தீவிர வீரர்களாயும் நிற்கின்றார்கள் என்று உலகம் அறிந்தது. இக்காங்கிர அகில தேசியபொது உடமைக் காங்கிர என்றும் இதைக் கூட விடாமல் சர்க்காரின் மூலம் தடுத்து விடலாம் என்றும் சில முதலாளித்துவ வெறியர்கள் முயன்றும் பலனின்றிப் போயிற்று. இக்காங்கிரஸிலிருந்து 4 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பிரதிநிதிகளும் லட்சக்கணக்கான பார்வையாளர்களும் (Visitors) வந்திருந்தனர். இதில் கம்யூனிட்கள் முதல் கிறிதவர்கள் வரை இந்தியர், சீனர், ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆப்பிரிக்கர், பிரஞ்சுக்காரர், நீக்ரோவர், துருக்கியர் முதலிய பல நாட்டு யுவர்களும் ஜாதி, மத, தேச, நிற பேதமின்றி விஜயஞ் செய்திருந்தனர். நமது இந்தியாவின் பிரதிநிதிகளாய், அகில இந்திய சோஷலிட் கட்சியின் பிரபல ஊழியரும், இந்தியாவிலுள்ள ஒப்பற்ற பிரசங்கிகளில் ஒருவரான பம்பாய்த் தோழர் யூசப் மேஹாலியின் தலைமையின் கீழ் எட்டுப் பேர்கள் விஜயஞ் செய்திருந்தினர். இந்தியாவைப் பற்றி இந்தியப் பிரதிநிதிகளின் - தன் கண்களில் நெருப்புப்பொறி பறக்க தூய ஆங்கில பாஷையில் இந்திய மக்களை உபத்திரவித்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின்மீது மறுக்கமுடியாத குற்றப் பத்திரிக்கையைப் படித்தார். அவரது சொற்பொழிவில் 180 ஆண்டுகளாய் அன்னிய ஏகாதிபத்திய ஆட்சியின் கொடுமையால் செல்வத்திற் சிறந்த இந்தியா அடைந்துள்ள தரித்திரம், அறியாமை, நோய், மரணம் முதலியவற்றைத் தக்க புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டார் என்று பிரபல அமெரிக்கப் பத்திரிகை கூறியது. மேலும் பிரிட்டிஷ் நிபுணர்களின் கணக்குப்படி நூற்றிற்கு 78 பேர்கள் கல்வி அறிவில்லாதவர்களாயும், சராசரி இந்திய னுடைய வயது 26ஆகக் குறைந்து வருவதையும், ஆங்கிலேய னுடைய சராசரி வயது 56 ஆக உயர்ந்து வருவதையும் இந்தியக் குழந்தைகள் 8 வயதிற்கு முன் 1000க்கு 400 வீதம் இறந்து போவதையும் எடுத்துக்காட்டி சர்வதேச வாலிபர்கள் அனு தாபத்தை இந்தியா பெறும்படி செய்தனர். நமது மாபெருந் தலைவர் பண்டித நேரு அக்காங்கிரஸிற்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அக்காங்கிரஸில் எல்லா நாட்டிலுமுள்ள வாலிபர்களுக் கிடையே சகோதரத்தன்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தி பாஸிஸத்தையும், யுத்தத்தையும் எதிர்த்துப் போராட கூட்டுறவு முறையில் எதிர்ப்பு சக்தி வளர்க்கும் வழிகள் ஆராயப்பட்டது. சுதந்திரம் பெற்ற சோவியத் பெண்கள் மத்ய ஆசியாவில் புதிய சர்க்கார் திரமாய் நிலை பெற்றபின், ஆண்கள் ஆதிக்கம் பெரும்பாலும் அடக்கப்பட்டு அறிவிச்சுடர் கொழுத்தி பெண்களுக்கு கைத்தொழில், கல்வி முதலியவைகளைக்கற்பித்து அவர்கள் பரிபூரண சுதந்திரம் பெற்று வாழ சர்க்கார் இயன்ற அளவு உதவி புரிந்தது. பெண் களின் விடுதலைக்காக பலியான அந்த மாணவியின் ஒவ்வொரு துளி ரத்தமும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டிவிட்டது. மத்ய ஆசியாப் பிரதேசங்களில் அறியாமையென்னும் அந்தகாரத்தினுள் ஆழ்ந்துகிடந்த ஆயிரக்கணக்கான ஆரணங்குகள் சுதந்திர ஜோதியின் ஒளி கண்டு வீறுடன் எழுந்து புரட்சிகோஷம் புரிந்துகொண்டு, வைதீக வெறி கொண்டகொலைகார - சதிகார ஆண்பித்தர்களின் அடாத செயலை அடக்க ஆண்மையுடன் முன் வந்தனர். ஐம்பதினாயிரம் பெண்மணிகளின் கண்களில் நெருப்பு பொறிபறக்க பட்டாளத்திலே பழக்கப்பட்ட சிப்பாய்கள் புறப்பட்டாற் போன்று அணியணியாய் வந்து தசகண்டு மாணவியின் பிரேத ஊர்வலத்தில் கலந்து ஆண்களின் ஆணவத்தை - அட்டகாசத்தை - அடாத செயலை அடக்குவதற்கு அறிகுறியாக தங்களின் ஒற்றுமையையும் சுதந்திர ஆர்வத்தையும் முதன் முதலாக உலகிற்கெடுத்துக் காட்டினர். முலிம் வைதீர்களான முல்லாக்களின் கோட்டையாகிய பொகரா என்னும் புண்ணிய நகரில் 1928ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேசப் பெண்கள் தினம் (International Women’s day) மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில் வைதீக முல்லாக்கள் எதிர்பாரா வண்ணம் லட்சோபலட்சம் முலிம் பெண்மணிகள் தங்கள் முகமூடிகளான மாய்கையை கிழித்தெறிந்துவிட்டு தம் சுந்தர வதனங்களில் சுதந்திர ஜோதி ஜொலிக்க கூட்டம் கூட்டமாய் வந்து குழுமி ஓர் பெரும் ஊர்வலம் நடத்தினர். அவர்களது புரட்சி கோஷம் வானைப் பிளந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பல பெண்கள் பேசினார்கள். உணர்ச்சியை ஊட்டும் சுதந்திர அக்கினியைக் கிளப்பும் ஆவேசமான - ஆக்ரோஷமான பிரசங்கங்களை செவிமடுத்த ஆயிரக்கணக்கான பெண்மணிகள் தங்கறிற் சிலர் அணிந்திருந்த முகமூடியைக் கடைக்கண்ணால் பார்த்தனர். அவ்வளவுதான் தாமதம் - முகமூடி அணிந்திருந்த பெண்கள் தம் முகமூடிகளை அந்த க்ஷணமே கழற்றி பெரும் பெரும் மூட்டைகளாகக் கட்டி வைதீகர்களின் தெருக்களிலே இன்றோடு வைதீகம் மாய்ந்தது என்று கூவிக்கொண்டு நெருப்பிட்டுப் பொசுக்கி விட்டனர். ஒரு பெண் முகமூடியை அகற்றியதற்காகக் கொலை புரிந்த அவளது புருஷனையும், சகோதரனையும் தண்டிக்க ஒரு பெரும் பொது ஜனக்கூட்டத்தைக்கூட்டி அவர்களிருவர்களையும் பகிரங்க விசாரணைக்குக் கொண்டு வந்து அக் கொலைகாரர்களின் மிருகச்செயலை - மடமைத்தனத்தை அவர்கள் மட்டுமின்றி பிற வைதீகப் புருஷர்களும் உணரும்படி செய்து, பகிரங்கமாகத் தூக்கி லிட்டு விட்டனர். அன்று முதல் பரிசுத்த பொகாரா பட்டினத்தில் பெண்கள் தாராளமாய் - அஞ்சா நெஞ்சத்துடன் முகமூடியின்றி நடமாட ஆரம்பித்தனர். பழைய ஸார் ரஷ்யாவில் தகப்பன் தான் கொண்ட கடனுக்காக 12 வயதுள்ள அபிடோவா (Abidova) என்ற தன் புதல்வியை 15 ரூபிள் கடனுக்காக கடன் கொடுத்தவனுக்கு மனைவியாகும்படி விற்றுவிட்டான். அந்த அபிடோவா என்ற பெண் அரசிதான் இன்றைய சோவியத் ரஷ்யாவின் சம்பூரணமான விடுதலை பெய்கி உபக் (Uzbeck) மகாண சோவியத் குடி அரசின் உப தலைவராகவும் ஐக்கிய சோவியத் சோஷியலிட் குடிஅரசிற்கு உபெக் மாகாணத்தின் திரமான பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதாரண விவசாயியாயிருந்த தர்மார் சுக்கின டவுட் என்ற ஓர் ரஷ்யப் பெண் இன்று மிகத் திறமை வாய்ந்த ரஷ்ய செம்படையின் தளகர்த்தரில் ஒருவராய் விளங்குகிறார். ராணுவ ஆலோசனைக் கமிட்டியில் இவ்வம்மையாரும் ஒருவரே . இவர் செம்படையில் சாதாரண சோல்ஜராக டிராட்கியால் சேர்க்கப்பட்டு பல சண்டைகளில் தன் அபூர்வத் திறமையால் வெற்றிக்கொடி நாட்டி, படிப்படியாய் இந்த உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். புதிய உணர்ச்சி கீழ்நாட்டு ரஷ்யப் பெண்மணிகள் தங்களின் புதிய சுதந்திர உணர்ச்சியினால் விழிப்புற்று புத்தம் புதிய ஆவேசத்துடன் சமூக உரிமையுள்ள உற்பத்தி சக்திகளை தேசத்தில் வளர்க்க வேண்டு மென்று கருதி, பெரும் பெரும் தொழிற்துறைகளில் பெண்கள் பெரிதும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆலையின் ஆரவாரம் என்னிடத்திருந்தே எழுகிறது அதுதான் எனக்கு இனிமையான சந்தத்தை அளிக்கிறது அதுதான் எனக்குப் புத்தம் புதிய சக்தியை ஊட்டுகிறது. என்று முக்காடிற்று மூலையிற்பதுக்கிடக்கிடந்த உபெக் மாகாணப் பெண்கள் தங்கள் பட்டு நெசவாலையிலிருந்து விடுதலை கோஷத்துடன் இனிமையுடன் பாடிக்கொண்டு வருகின்றார்கள். கீழ்நாட்டு அரும்புகளே! நீங்கள் புஷ்பிக்கும்காலம் வந்து விட்டது கோஷா முறையும், முகமூடியும் உதிரும் காலம் நெருங்கி விட்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அந்தகார இருளில் தூங்கி அவதிப்பட்டீர்கள் ஆழ்ந்த துயிலினின்று எப்பொழுது விழிக்கப் போகிறீர்கள்? எப்பொழுது எழுந்து நிற்கப் போகிறீர்கள்? உலகத்திலுள்ள உழைப்பாளி மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்ற கருத்துக் கொண்ட ரஷ்ய கீதனங் களை வீராவேசமாய் பெண்கள் ஆலைகளினின்று வெளிவரும் போதும் உட்புகும்போதும் பாடிக்கொண்டு, செல்வதைக் காணலாம். இன்று கல்வியிலும், கைத்தொழிலிலும் மட்டு மின்றி பொது வாழ்விலும் சோவியத் பெண்கள் தீவிரமாய்ப் பங்கு கொண்டு உலகிற் பெரும் உன்னத தானத்தை எய்தியுள்ளார்கள். ஆண்டுதோறும் ஐந்தாண்டு திட்டத்தால் கைத்தொழிலில் பெண்கள் நூற்றுக்கு 3 பேர் வீதம் அதிகரித்துக் கொண்டுவந்தனர். 1935 ஆம் ஆண்டில், ஆலைகளிலும் கைத் தொழிற் சாலைகளிலும் நூற்றிற்கு 42 பேர்கள் பெண்களாக வேலை பார்த்துவந்தார்கள். உயர்தரமான தொழிற் கல்விச் சாலைகளில் நூற்றுக்கு 45 பேர்களும், வைத்தியக் கல்லூரியில் நூற்றுக்கு 80 பேர்களும் பெண்களாகவே படித்துள்ளனர். எந்தக் கல்லூரியிலும் பெண்கள் பயில்வதில் எவ்வித இடையூறோ வித்தியாசமோ கிடையாது. 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ரஷ்ய சோவியத் பார்லிமெண்டில் 184 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மாகாண சோவியத் குடி ஆட்சியில் அதிகமான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். கிராம சோவியத் குடி ஆட்சியில் சபைகளில் சில இடங்களில் 50 சதவிகிதமும், சில இடங்களில் 40 விகிதமுமா யிருக்கின்றார் கள். பல கிராம சோவியத் சபைகளிலோ ஆண்களைவிட பெண்களே அதிக பிரதிநிதித்துவம் உடையவர் களாயிருக்கிறார்கள். பல சோவியத் சபைகளில் தலைவராயும், உபதலைவராயும் மந்திரியாயும் பெண்கள் இருந்து வருகிறார்கள். நீதி நிர்வாக இலாகாக்களிலும் சேனைகளிலும் பெண்கள் கிட்டத்தட்ட சரிபாதிப் பேர்கள் இருந்து வருகின்றார்கள். எனவேதான், சோவியத் ரஷ்ய சர்வாதிகாரி டாலின் பயிற்சி யளித்தால் பெண்கள் எவ்வகையிலும் எவராலும் அசைக்கமுடியாத சக்தி வாய்ந்தவர்களாக விளங்குவார்கள் என்று அடிக்கடி கூறி வருகின்றார். உத்தியோகம், படிப்பு, விவாகம், குழந்தைகளுக்குப் பயிற்சி முதலியவைகளில் சோவியத்மாதர்கள் பூரண சுதந்தரமும், சமத்துவமும் பெற்றிருக்கிறார்கள். சிறுவர்களைப்போல், சிறுமி களும் தாராளமாய் தங்களின் வருங்காலத் தொழிலைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுகிறார்கள். முதலாளித்துவ நுகத்தின்கீழ் தங்களின் உரிமைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு அவதிப் படுகிறார்கள். என்பதை நன்றாய் ஆராய்ந்து சோவியத் ரஷ்யாவில் மண விஷயத்தில் ஆண்களுக்குள்ள சகல உரிமைகளும் தங்களுக்கும் வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள். வயது முதிர்ந்த பெண்ணும் இன்று தனித்து வாழ விரும்பு வதில்லை. புருஷன் தன் உழைப்பிலும் மனைவி அவளுடைய உழைப்பிலும் வாழ்ந்து வருகின்றார்கள். பிள்ளைகளையோ சர்க்கார் தம் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வளர்த்து கல்வி, கைத்தொழில் விஞ்ஞானம் முதலிய எல்லாப் படிப்பையும் கற்பித்து அவர்களின் விருப்பத்திற்கிசைந்த வேலையைக் கொடுத்து வருகின்றார்கள். எனவே இன்றைய ரஷ்யாவில் சம்சாரம் ஓர் சாகரமாய் காண்பதில்லை. இவ்வுலகத்தை அவர்கள் துன்பம் நிறைந்ததாகக் காண்பதில்லை. கலியுகமாய்க் கருதுவதில்லை. இல்லறமும் இன்பமும் இயற்கையும் மலிந்து இவ்வுலகை சுவர்க்க லோகமாய் ரஷ்யர்கள் கருதி வருகிறார்கள். கிரேதாயுகம் அங்கு அரும்பியுள்ளதாக வைதீகர்களும் கூறி வருகிறார்கள். சோவியத் ரஷ்யர்கள் எதற்கும் சர்க்கார்தான் சவாப்தாரி என்று கருது கிறார்கள். அவர்கள் கர்மத்தின்மீதும் கடவுள்மீதும் பழியைச் சுமத்துவதில்லை. தங்களுக்கு வேண்டிய எந்தக் காரியங்களுக்கும் கடவுளிடம் பிரார்த்திப்பதில்லை. எல்லா விஷயங்களுக்கும் சர்க்கார் உதவியைத்தான் நாடுகிறார்கள். அதனாலே அவர்கள் சுபீட்சம் அடைந்துள்ளார்கள். பிரசவத் திற்கும் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சி அளிப்பதற்கும், தாங்கள் நல்ல பாலாஷ்டியமுள்ள குழந்தைகளை பெறுவதற்கும், தமக்குப் பிறக்கும் குழந்தைகள் இறந்து போவதற்கும் சர்க்காரின் குறைபாடுகள்தான் காரணம் என்று கருதுகிறார்கள். எனவே அரைக்குறைகளை நீக்க சர்க்காரின் உதவியை நாடுகிறார்கள். சோவியத் மக்களின் உற்றாரும், உறவினர்களும் - ஏன் கடவுளும் சோவியத் சர்க்கார்தான். பெண்களின் வேலைகள் ஸார் காலத்திய டூவர் (Tver) என்கிற தொழில் நகரமானது பிரபல கம்யூனிடு தலைவரும் சோவியத் பார்லிமெண்டு தலைவருமான கலினின் (Kalenin) என்பவருடைய பெயரால் இன்று அழைக்கப்பட்டு வருகிறது. சோவியத் மாதர்கள் இன்று என்னென்ன தொழில்களிலெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட அந்நகரே போதிய சான்றாய் விளங்கு கிறது. அந்த டுவர் நகரில், இரண்டு பிரபல பெண்மணிகளிருக்கி றார்கள். அப்பெண்களில் அண்ணா கலீனா (Anna Kalina) என்பவர் அந்நகரத்தின் கம்யூனிட் கட்சிக் காரியதரிசி. அந்நகரில் அதைவிட பொதுஜனங்களால் கௌரவமாய் மதிக்கப்படும் பதவி எதுவுமில்லை. இன்னொருவர் சோவியத் ரஷ்யாவிலே நடந்த நெசவுப் போட்டியல் உயர்ந்த நெசவுக்காரர் என்று பரிசுபெற்ற பியூடோர்வா (Fevdorva) என்ற பெண்மணியாவார். இவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான பெண்மணிகள் முன்னேற்றத்தின் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக் கிறார்கள். லில்லி (Lily) என்ற பெண் உயர்தர போலி அதிகாரியாய் அஞ்சா நெஞ்சத்தோடு கார் இருளிலும், கடும் வனாந்திரங் களிலும் தன்னந் தனியே சுற்றித் திரிந்து குற்ற பரம்பரைக் கூட்டத்தினர்களைப் பிடித்து வருகிறார். ஒரு சமயம் குதிரைப் பந்தய மைதானத்தில் தீக் கொழுத்திய மூன்று பேர்களை வெகு சாமர்த்தியமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத் துள்ளார். அதே இரவு அவர் அந்நகர டிராமா கிளப்பில் ஒரு தளகர்த்தவீரராக வெகுதிறமையாக நடித்தார். அப்பகுதியில் அவர் வெகு திறமையான நடிகர் என்று பெரும் புகழ்பெற்றிருந் தார். டுவர் பட்டிணத்திலுள்ள தெருக்களில் செல்லும் கார் கண்டக்டர்களான 27 பெண்களில் கருங்கண்ணி கதியா (Black eyed Katya) மிகத் திறமைசாலியென்று பெரும் புகழ் படைத் திருக்கிறார். அம் மாது தன் தொழிலோடு இரண்டு ஆண்டு களாக தொழிற் கல்லூரியில் படித்து வருகின்றார். அதோடு க்ஷேத்திரக் கணிதமும், மோட்டார் தொழில் சம்பந்தமான உயர்தரக் கல்வியும் கற்று வருகிறார். வாரத்தின் மூன்றுநாள்ஆகாயவிமானத்தில் ரஷ்யாவில் வெகு கம்பீரமாய் பறந்து திரியும் ரயில்வே தொழிலாளியாகிய 18 வயது சிறுமி நையனா என்ற பெண் விமானியைப்பற்றி எல்லா இளைஞர்களும் முதியோர்களும் பெரும் வியப்படைகிறார்கள். கருங்கடலிருந்து வெண்கடல் வரை 1500 மைல்கள் எங்கும் இறங்காது ஒரே பாய்ச்சலில் கடல் விமானத்தில் (Seaplane) 10 மணி 33 நிமிஷங்களில் பறந்து சென்று ரஷ்ய பெண் விமானிகளில் சிறந்த புகழ்படைத்த பாலினா ஓஸிபென்கோ (Paulina Osi Penko), விராலாமேகோ (Vera Lamako), மரினா ரகோவா (Marina Raskova) என்ற பெண்மணிகளைப் பற்றி ரஷ்ய மக்களும் ரஷ்யப் பத்தரிகைகளும் மிகமிகப் புகழ்ந்து வருகின்றனர். மோட்டார் இயந்திரக் கலையில் பேர்பெற்ற ஸோயா (Zoya) என்ற பெண் பஞ்சாலையில் அமர்ந்து வேலை பார்த்து வருவதோடு, 560 பெண்களை அங்கத்தினராகக் கொண்ட அவ்வாலையின் வர்த்தக சங்கத்திலும் தலைவராக இருந்து வருகிறார். தன் ஓய்வு நேரங்களில் நெய்தல் தொழில் பயிற்சி பெற்று சோவியத் ரஷ்யாவிலுள்ள 5குடி அரசிற்குள் நடந்த நெசவுப் போட்டியில் 2வது பரிசு பெற்றுள்ளார். மரூஸியா (Marusia) உயர்தர வைத்தியத் தொழிலுக்குப் படித்து வருகிறார். டோனியா (Tonia) என்ற நெசவுக்காரப் பெண் சுவரொட்டிப் பத்திரிகை ஆபிசில் பெரும்பணி ஆற்றி வருகிறார். அவர் இப்பொழுது தன் முழுக் கவனத்தையும் பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவதிலே செலவிட்டு வருகிறார். ஒரு காலத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் பெண் மோட்டார் ஓட்டி என்று தெருக்களில் கண்டல் போகுமிட மெல்லாம் பின் தொடர்ந்து கேலி செய்யப்பட்ட முதல் பெண் மோட்டார் டிரைவராகிய டூசிக் (Dusix) என்ற பெண், இன்று ரஷ்யாவிலேயே சிறந்த மோட்டார் ஓட்டியாக விளங்குகிறார். அவரது முயற்சியினால் டுவர் பட்டினத்திலுள்ள எல்லா வர்த்தக சாலைகளிலும் பெண்களை கைப்பற்றும்படி செய்திருக்கிறது. இவ்வாறு ரஷ்யாவில் பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்துள்ளார்கள். 1937 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் உலகிலே அதிக வாக்காளர்களைக் கொண்ட(9 கோடி ஓட்டர்கள்) சோவியத் பார்லிமெண்டு எலக்ஷனில் ஒரு பிரபலமான ஆணுடன் போட்டியிட்டு ஜெயக்கொடியை நாட்டி இன்று மெம்பராய் இருக்கும் 22 வயதினையுடைய டானியா பெடோர்வா (Tanya Fedorva) என்ற இளம் பெண்மணி ஆராய்ச்சி வீர கர்ஜனை சோவியத் பாராளுமன்றத்தின் அறிஞர் களையெல்லாம் பிரமிக்கும்படி செய்துவிட்டது. பெண் விஞ்ஞானிகள் மாகோவிலுள்ள உடற்கூறு சாதிர ஆராய்ச்சிக் கழகத்தில் உலகப் பிரசித்திபெற்ற பேராசிரியை லீனா டெர்ண் (Prof. Lena Stern) என்பவர் தலைவராயிருந்து வருகிறார். மாகோ சர்வகலா சாலையின் பிராணி வர்க்க சாதிரக் கல்லூரிக்கு A.M. புக்கோவ்யா (A.M.Bukovshaya) என்றமாது டைரெக்டராகவும், வானோவ்யா (Vanovshaya) என்னும் மாது கணித இயந்திர ஆராய்ச்சி சாலைக்குத் தலைவராயும் இருந்து வருகிறார். 64 வயதான ஈகினியா அலெக்சாண் டிரோவ்னா டால்மச்சேவா (Eugenia Alexandrovna Tolmacheva) என்னும் பெண் பூதத்வ-ரசாயன மண் ஆராய்ச்சியில் உலகிலுள்ள சிறந்த நிபுணர்களில் ஒருவர். இவரை விஞ்ஞானத் தாய் என்று ரஷ்யாவில் அழைக்கிறார்கள். இவ்வம்மையார் விஞ்ஞான நிபுணரான A.P. கார்பின்னகி என்பவரின் புதல்வி. இவரதுஇரு புதல்விகளும், பேரர்களும், பேத்திகளும், இவரது காலத்திலே ரஷ்யாவில் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளாய் விளங்கு கிறார்கள். இவ்வம்மையார் 16 பாஷைகளில் பாண்டித்யம் பெற்றுள்ளார். 80 அரிய விஞ்ஞான நூற்களை எழுதியிருக்கிறார். வான சாதிர ஆராய்ச்சிக் கூட்டத்திலே உலகம் போற்றும் உன்னத தானத்தை - நாதலியா செர்கீய்வ்னா (nathalia Sergeyevana) N.F. போயிவா (N.F. Boeva) என்பவர்களை ரஷ்ய சர்வாதிகாரி டாலின் வரை போற்றி வருகின்றார். சோவியத் யூனியனிலுள்ள முதலாவது கப்பல் என்ஜினியரான சோபியா கிரீன்டீன் (Sophia Greenstein) என்னும் பெண்ணின் தலைமையின் கீழ், சோவியத் யூனியன் பல பெரிய கப்பல்களைக் கட்டி வருகிறது. ஆகாயக் கப்பல் கட்டுவதில் நிபுணத்வம் பெற்ற பெண் என்ஜினீரான பிளாட்டினிக் கோவாவா (Plotnikova) என்பவர் மேற்பார்வையிலே லெனின் கிராடிலுள்ள பெரிய விமான உற்பத்திசாலை நடைபெற்று வருகிறது. சோவியத் யூனியனில் பூமியின் உட்புற சம்பந்தமான ஆராய்ச்சிக் கழகத்தை முதன் முதலில் தாபித்தவர் வெயி ஸெக்ஸன் போண்டவா (Weisskene fontova) என்னும் பெண் விஞ்ஞானியேயாவர். அவர்கிவா (Averkieva), எர்கினா (Ershkhina), பால்எட் (Polvadre) என்னும் பெண்மணிகள் உலகின் உயிர்வர்க்க சாதிர ஆராய்ச்சிக் கழகத்தில் பிரபலதர்களாய் விளங்குகிறார்கள். நதேலியா உஸெக்கோவா (nathalia ushakova) என்னும் மாது சிரோன்மணி மட்வி தீவிலுள்ள சோவியத் வான சாதிர ஆராய்ச்சிசாலையின் தலைவராய் இருக்கிறார். குஷினோவா (Kuzinova), லென்ட்டினா (Luvtina) என்ற இரு பெண் விஞ்ஞானி களும் ஆகாய சம்பந்தமாய்அரும்பெரும் ஆராய்ச்சிகள் செய்து தாம்கண்ட நுட்பங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். சோவியத் இலக்கியத் துறையிலும் பெண்கள் முதன்மை தானத்தைப் பெற்றுள்ளார்கள். பெண் எழுத்தாளர்களில் லிதியாசெயில்புல்லினா (Lydia Seilfullina), மரியட்டசாகினியன் (Marietta Shagenian), அன்னாகாராவாயிவா (Anna Karavayeva) விரா இன்பர் (VeraInber), சினைதா ரிச்டர் (zunaida Richer), இன்னோரன்ன மாது சிரோன்மணிகளால் சோவியத் இலக்கியத் திற்கு புத்துயிரும் புது வாழ்வும் அளிக்கப்பட்டு வருகிறது. வீர தீரச் செயல்கள் இவாடாகிமோவ் என்ற சோவியத் பெண் ஆகாய விமானத்திற் பறந்து 8,100 மீட்டர் உயரத்தினின்று அதாவது கிட்டத்தட்ட 5 மைல் உயரத்தினின்று பேரச்சூட் (Parachut) என்னும் குடையுடன் பூமியிற் குதித்தார். கே. கமினீலா என்னும் பெண் 3,000 மீட்டர் உயரத்தினின்று பேரச்சூட் மூலம் பூமியிற் குதித்துள்ளார். 1936-ஆம் ஆண்டு மாகோ (Mascow) விற்கு அருகேயுள்ள கிஸம்கி (khismki) என்னும் நகரில் 25 வயதிற்குட் பட்ட 6 சோவியத் இனப் பெண்கள் பேரச்சூட்டும், பிராண வாயுக் கருவியுமின்றி 2,000 அடி உயரத்தினின்று பூமியிற் குதித்துள்ளார்கள். சோவியத் ரஷ்யாவிலே பல ஆண்களோடு விளையாடி முதற் பரிசு பெற்று சோவியத் ரஷ்யாவிலேயே பிரபலமான விளையாட்டுக்காரராய் விளங்குபவர் முப்பது வயதுள்ள மேரி சேமனோவா (Marie Shamanova) என்பவராகும். அவருக்கு ஒரு இளம் குழந்தையும் இருக்கிறது. அவர் போட்டி விளையாட்டுகளில் கலந்து கொள்ளுமிடங்களுக்கெல்லாம் தம் புதல்வனைத் தூக்கிக் கொண்டே போகிறார். சோவியத் விளையாட்டுப் பந்தயங்களில் ரஷ்யாவின் ஒப்பற்ற ஓட்டக்காரர் என்று பிரக்யாதி பெற்ற இவ்டாக்யா வாஸிலெவா (Evdokya Vasileva) என்னும் மாதை 1000 மீட்டர் அல்லது 2000 மீட்டர் ஓடும் பந்தயங்களில் இதுவரை எந்த ஆணும் ஜெயித்ததில்லை. இரினா விளாடிமிறோவா (IrinaViladimirova) மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து ஒரு மணிக்கு சாதாரணமாக 108 கிலோ மீட்டர் (கிட்டத்தட்ட மணிக்கு 72 மைல்) வேகத்தில் ஓட்டி முதல் பரிசு பெற்றார். எம்.ஏ. சாப்ரூவா (M.A. Saburova) தொழில் செய் பெண் (Rabotnitza) என்னும் ரஷ்ய பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். சமீபத்தில் நடந்த சோவியத் பார்லிமெண்டு எலக்ஷனில் சோவியத் குடியரசுகளில் மிக முக்கியமான R.S. S.R. (Russian Socialist toleration of Soviet Union) சோவியத் சுப்ரீம் பிரதிநிதிகளில் ஒருவராய் விளங்குகிறார். இவர் இதன் முன் சோஷியல் இன்சூரன் (Social Insurace) மந்திரியாயிருந்தார். இவர் ரஷ்ய மக்களுள் சிறந்த கௌரவமாய் அழைக்கப்படும் ஆர்டர் ஆப் ரெட் பேனர் ஆப் லேபர் (Order of Red Banner of Labour) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். ஜிம் நா அப்துல் அலி கிஸிஅலாநோவா (chinnaz abdul ali kizi aslanova) முன்னர் 19 வயது வரை முகமூடி அணிந்து மூலையிற் பதுங்கிக் கிடந்த ஓர் முலீம் ஏழைப் பெண். இன்று சோவியத் குடி அரசின் பால்லிமெண்டிற்கு உபதலைவரா யிருந்து வருகிறார். சோவியத் பெரும்புரட்சி முக்காட்டுக்குள் பதுங்கி நின்ற இம்மாதிற்கு விடுதலையளித்து உயர் தரக் கல்வி கற்பித்து உபாத்திமைத் தொழிலுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு நல்ல திறமையான உபாத்தியாயனி என்ற பெரும் புகழ் பெற்றார். ரஷ்யாவில் நடந்த சரித்திர ஆராய்ச்சியின் எட்டாவது காங்கிரஸிற்கு சோவியத் யூனியனின் பிரதிநிதியாய்ச் சென்று அங்கு டாலின் தலைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கமிஷனில் திறமையாய் வேலை செய்து வந்தார். துர்க்கமான் (Turkman) குடி அரசில் நீதி மந்திரி (Commissar of Justice) ஆக இருக்கும் ஓர் இளம் பெண் நூரி காராஜா ஈவா (Nuri Karayaeva) ஒரு பெரும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அவர் தந்தையால் சிறு வயதில் ஒரு 60 வயது கிழவனுக்கு 17 ஒட்டகத்திற்காக விற்கப்பட்டு விட்டார். புரட்சிக்குப் பின் விடுதலை பெற்று கல்வி கற்று தற்போதைய உயர்ந்த பதவியைப் பெற்றார். எத்தொழிலுக்கும் தயார் ரஷ்யாவிற்குச் சென்ற அந்நிய நாட்டார்கள் விவசாயம், வீதி சுத்தம் செய்தல், ரயில்-மோட்டார் ஓட்டல், விமானம் ஓட்டல், கப்பலோட்டல் முதலிய வலிமையும், அசம்பா விதமுமான தொழில்களையெல்லாம் பெண்கள் தாராளமாகச் செய்வதைக் கண்டு பேராச்சரியமுறுகின்றார்கள். சோவியத் மாதர்கள் வயற்புறங்களில் பண்டு முதல் வேலை செய்த விவசாயப் பரம்பரையில் உதித்தவர்களே. ஸார் ஆட்சியில் அவர்கள் திறமையான வேலைகளுக்கு ஈடுபடுவதினின்று தடுக்கப் பட்டிருந்தார்கள். இன்று அவர்கள் தொழில் துறைகளிலும், அரசியல் துறைகளிலும் தீவிரமாய்ப் பங்கெடுத்து வருகிறார்கள். வாலிபப் பெண்கள் சுரங்க அதிகாரிகளுடன் சுரங்கத் தொழிலிலும். ரயில்வே வேலைகளிலும் தங்களுக்கு சம உரிமை வேண்டுமென்று போராடி தம் உரிமையைப் பெற்றுள்ளார்கள். கஷ்டமான தொழில்களையெல்லாம் மிகத் தைரியமாய் தாங்கள் செய்ய வேண்டுமென்ற அவாவுடன் முன் வருகின்றனர். முழங்காலளவு சேற்றிலும் பெண்கள் ஆண்களோடு போட்டியிட்டு வேலை செய்து, ஆண்களைத் தோல்வியுறும்படி செய்கின்றார்கள். பாதாளத்தில் வேலை செய்வது எனது முழுத் திறமை என்று பரிசு பெற்ற ஒரு பெண் கூறுவதுண்டு. அபாயகரமான தொழில்களில் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாதென்று சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. விஷத்தன்மை யுள்ள பொருள்கள் வியாபாரம் செய்யுமிடங்களிலும், பழுவான சாமான்களைத் தூக்க வேண்டிய வேலைகளிலும் பெண்கள் தலையிடுவதில்லை. கர்ப்ப தீரிகள் குழந்தையைப் பெறுவதற்கு ஏழு, எட்டு வாரங்களுக்கு முன்பே வேலை செய்யக் கூடா தென்று டாக்டர்களால் பிரத்யேகச் சட்டங்கள் ஏற்பட்டது. தொழில் வல்லுனர்கள் எந்தெந்தத் தொழில்கள் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து அத்தொழிலிலிருந்து பெண்களை விலக்குகிறார்கள். இவைகள் ஆண்களைவிட பெண்கள் குறைந்தவர்கள் என்ற நோக்கத்தோடு செய்வதன்று. பொது சுகாதார வசதிகளையும், இயற்கை அமைப்பையும் அனுசரித்தே அவ்வாறு சட்டம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வெடி மருந்து சாலையில் பெண்கள் வேலை செய்வது தடுக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர, எவ்வகையான தொழிலிலும் பெண்கள் புகுந்து வேலை செய்கிறார்கள். சட்டங்களும் அதைத் தடுக்கவில்லை. வட துருவ யாத்திரை சோவியத் யூனியனில் பெண்கள் வலிமையான தொழில் களில் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமின்றி, மற்ற நாட்டுப் பெண்களையும் விட மிகமிக நுண்ணிய கலைகளிலெல்லாம் சிறந்து விளங்குகிறார்கள். அன்னாகோவானோவா (Anna Kofanova) என்ற திரீ 1,500 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து, - நிபுணர் என்ற பட்டமும் பெற்றுள்ளார். 1500 ஏக்கர் கொண்ட 32 களங்களுக்குமுரிய இயந்திரத்தை நடத்து கிறவராய் நதாலியா மிக்கேய்லவா (Natalia Mikailova) என்ற மாது பெரும் புகழ் பெற்றுள்ளார். A.I. ஷெடினினா (A.I. Shehetinina) என்ற பெண் தம் 24ஆம் வயதிலே உலகிலே முதலாவது கப்பல் கப்பித்தானாய் அலைகடல்களைக் கடந்து கப்பலோட்டி வருவது சோவியத் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, பெண்ணுலகிற்கே பெரும் மாட்சிமையை அளிக்கிறது. இரீன் ருசினோவா (Irene Rousenova) என்ற பெண்ணும் நைனா டெம்மே (Nina Demme) என்ற பெண்ணும் மற்றும் பல பெண்களும் பேராசிரியர் brÄ£(Prof. Shmidt) டின் வடதுருவ ஆராய்ச்சிக் கோஷ்டியில் சேர்ந்து அநேக வருஷங்கள் வட கடலில் கழித்து இறுதியில் வடதுருவ விஞ்ஞான நிலையத்தைக் கண்டனர். கலினா மெடானிக் (Galina Medovnik) என்ற காரிகை ஸார் ஆட்சியைக் கவிழ்க்க வேலை செய்தார். அதற்காக அப்பெண்ணுக்கு ஸார் மரணதண்டனை விதித்தான். அப்பெண் அம்மரண தண்டனைக்கெல்லாம் தப்பி ஸாருக்கு மரண தண்டனை விதித்து சோவியத் ஆட்சியில் மாகோ நகரில் குடும்பப் பெண்களின் பிரதிநிதியாயும், தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் கட்டிடங்களில் மேற்பார்வையாளராயும் விளங்குகிறார். இம்மாதிரி அமெரிக்காவில் பெண்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபடவில்லை என்று ஒரு அமெரிக்க என்ஜினியர் கூறுகின்றார். அமெரிக்காவில் ஆண்கள் இத்தகைய கொடுமை களைச் சகிக்க மாட்டார்கள் என்றார். ரஷ்யாவில் கூட முதலில் பெண்கள் புதிய தொழில்களில் புகுவதை ஆண்கள் எதிர்த்தே வந்தனர். ஆனால் பொருளாதார நிலை - சம்பளக் குறைவு - வேலைக்குப் போட்டி முதலியவைகளில் ஒருவாறு மாறுதல்கள் ஏற்பட்டது. இதனால் பழமைப்பற்றுக் கொண்ட ஆண்களின் தளரா ஊக்கத்தினால் முறியடிக்கப்பட்டது. வாலிபத் தொழிலாளராய பெண்கள் தொழில் துறையில் புகுந்து ஆண்களைவிடச் சிறந்தவர்கள் என்று பெரும்பிரக்யாதி தோன்றவே எதிர்ப்புகள் இருந்தவிடம் தெரியாது மறைந்து போயின. வாழ்நாளில் கல்வி, கைத் தொழில், அரசியல், மணவியல், சமூக இயல் முதலிய எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளன. வாலிபத் தம்பதிகள் தங்கள் இல் வாழ்க்கை ஒப்பந்தங்களைப் பதிவு செய்யும்போது, அங்குள்ள உத்யோகதரால் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்படுவார்கள். மற்ற நாடுகளில் பெண்கள் புருஷன் பெயரைச் சூட்டிக் கொள்வார்கள். சோவியத் ரஷ்யாவில் மணமக்கள் பரபரம் ஒருவர் எவ்வித உயர்வு தாழ்வும் பாராது ஒருவர் ஒருவர்க்கு பெயருடன் மற்றவர் பெயரைச் சேர்த்துக் கொள்வர். சமுதாயமோ, அரசாங்கமோ இதைத் தடுக்க முடியாது. ஆண் பெண் கூட்டுறவில் ஒருவருக்கொருவர் பிடித்தமில்லாதிருந்தால் சுலபமான விவாகரத்துச் செய்து கொள்ளலாம். இவ்விஷயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரேவிதமான சட்டந்தான். இருபாலரில் எவரேனும் ஒருவரையொருவர் துன்புறுத்தினால் சோவியத் சட்டமும் அவர்களுக்குத் தண்டனை விதிக்கும். ஆனால் பழைய காலத்தில் ஆண்கள் பெண்களை தங்கள் காம இச்சையைத் தீர்க்கும் கருவியாகவும், தங்கள் கஷ்ட காலங்களில் தங்களுக்கு ஊழியஞ்செய்யும் அடிமையாகவும் இருக்கவே மணஞ்செய்து கொண்டார்கள். பல இடங்களில் பெண்களின் இளமை மறைந்தாலும், குழந்தை பெற்று விட்டாலும் விவாகரத்துச் செய்து விடுவர். இவ்வழக்கத்தை ஒழிக்கக் கட்டாயப்படுத்தியோ, சட்டத்தை மீறியோ பெண்களைக் கற்பழிப்பதை சோவியத் ஆட்சி கடுமையான தண்டனைக் குட்படுத்தியது. பெண்ணின் அந்ததை அவர்களுக்குத் தெரியப் படுத்த ஒரே ஒரு உதாரணம் பத்திரிகையில் பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது ஒரு மனிதன் ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ள வேண்டவே, அவள் மறுத்ததினால் அவளை அவள் அறையினின்று துரத்தினான். அதனால் அவன் கற்பழித்த குற்றத்திற்கு மேலான சிறைத் தண்டனையைப் பெற்றான். இவ்வாறே விவசாயிகள் தம் விவசாய வேலைக்குத் துணையாக மணஞ்செய்வதும் வேலை முடிந்ததும் விவாஹரத்து செய்வதையும் சோவியத் சட்டம் கண்டித்துள்ளது. இருவருடைய உத்தியோகங்களையும் பொருத்த ஆண்-பெண் வாழ்க்கையில் சோவியத் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல சிக்கல்கள் கிளம்பின. ஆனால் ஓர் விமானம் ஓட்டும் பெண் ஓர் ஆண் விமானியை மணந்தாள் என்று கேட்டு நான் உள்ளம் பூரித்தேன் என்று டாலின் அடிக்கடி கூறுவது வழக்கம். மேற்கூறிய இருவரும் வெவ்வேறு இடங்களில் தொழில் நடத்தி வந்தார்கள் என்றாலும் வாழ்க்கையில் எவ்விதக் கசப்புமின்றி இனிது வாழ்ந்தனர். ஒரு பெண்ணுக்கும் அரசாங்கத்திற்குமுள்ள சம்பந்தம் புருஷர்களோடு சேர்ந்தது அன்று: தனிப்பட்டதே. ரஷ்யாவிலுள்ள பிரபலதர்களின் துணைவிகளும் வெவ்வேறு துறைகளில் புகுந்து பெருங் கீர்த்தியை அடைந்திருக்கிறார்கள். டாலின் துணைவி இறந்தபொழுது பத்திரிகைகள் அவளது தொழிலாகிய பட்டுநூற் தொழிலில் ஒரு பெரும் நிபுணர் மறைந்தார் என்று குறிப்பிட்டிருந்தன. பின்னர்தான் பொது மக்கள் அப் பெண்ணிற்கும் டாலினுக்குமுள்ள தொடர்பை அறிந்தார்கள். இப்பொழுது ரஷ்யப் பார்லிமெண்டில் தலைவராக இருக்கும் கலினின் (Kalinin) துணைவியார் அல்டாய் (Altai) மலையில் அரசாங்க விவசாயப் பண்ணையை நிறுவி விவசாயக் கலையில் சிறந்து விளங்குகிறார். அங்குள்ள தொழிலாளர்கள் அந்த மாது சிரோன்மணியை தங்களைப் போன்ற சாதாரண தொழிலாளியைப் போல் அவளது சொந்தப் பெயராலே அழைத்து வருகின்றார்கள். முதல் மனைவியின்........ அன்பு என்னும் சீரிய தன்மை பெண்கள் பால் பெரிதும் சிறந்து விளங்குகிறது. தம்பதிகளின் வாழ்க்கையில் அன்பு காதலாய்ப் பரிணமித்து ஈருடலை ஓருடலாய் பிணித்து நிற்கின்றது. சலிமா (Salima) முலிம் மாது சோவியத் சர்க்காரின் உதவியின் மீது உயர்தரக் கல்வி கற்க தசகண்டு நகருக்குச் சென்றாள். அவளது வைதீக முலீம் கணவன் அவளது செய்கையைக் கண்டு சினந்து தடுத்தான். அவள் மீறி கல்வி கற்கச் செல்லவே அவளை விவாஹரத்து செய்து தனது கொள்கைக்கு ஏற்ற - கல்வி அறிவற்ற - தன் உத்தரவிற்கு சிரஞ் சாய்க்கும் ஒரு வைதீக முலீம் மாதை மணந்து தன் மாஜி மனைவிக்கு அறிமுகப்படுத் தினான். அவனது மாஜி மனைவி ஸலீமா மனஞ் சலியாது கணவனுக்கு பின்வருமாறு பதில் தெரிவித்தாள். அன்பரே! தாங்கள் மறுமணம் புரிந்து கொண்டதாய் எழுதிய கடிதம் கிடைத்தது. இதற்குப் பதில் எவ்வாறாவது நான் நிச்சயமாய்ச் செய்வேன். என்னுடைய படிப்பு முடிந்ததும் நான் ஊருக்கு வந்து உங்களின் இரண்டாவது மனைவிக்குக் கல்வி கற்பிப்பேன். என்று எழுதி யிருந்தாள். பழங்கால மக்கள் சலீமாவின் பதிலை வெறுப்பர். ஆனால் சோவியத் நவயுகப் பெண்கள் இதைப் போற்றினர். தொழில் துறைகளிலும், மண விஷயத்திலும் மட்டுமின்றி நல்ல சரீரமும், திடகாத்திரமுமான மக்களைப் பெறுவதிலும் சோவியத் பெண்கள் அக்கறை காட்டி வந்தனர். பிரசவ காலத்தில் சம்பளத்தோடு போதிய விடுமுறையும், குழந்தைகளின் போஷணைக்குப் போதிய பணமும், தொழிலில் பிரவேசித்த பின் குழந்தைகளைப் பரிபாலிக்க தாதி வசதி முதலிய சகல சௌகரியங்களையும் சர்க்கார் செய்து கொடுத்தது. சட்ட பூர்வமாய் தந்தையில்லாத குழந்தைகள் என்று - சமூகாசாரக் கேள்விகள் - எங்கும் பிறப்பது கிடையாது. அம்மாதிரிக் குழந்தைகள் எதுவும் ரஷ்யாவில் காண முடியாது. எல்லாக் குழந்தைகளும் சர்க்காரின் சொத்தாய்க் கருதப்படுகிறது. எனவே எல்லோருக்கும் ஒரே விதமான உணவு, ஒரே விதமான உடை, ஒரே விதமான கல்வி அளிக்கப்படுகிறது. ஒரு பெண் தன் பலவீனத்தாலோ போது மான குழந்தைகள் பெற்றதாலோ சர்க்காரின் சம்மதத்தின் மீது கர்ப்பத்தடையோ, கர்ப்பச் சிதைவோ செய்து கொள்ள சர்க்கார் தாராளமாய் இடமளிக்கிறது. குழந்தைப் பேறு சோவியத் ரஷ்யாவில் பெண்களுக்குப் பரிபூரண சுதந்திர முண்டு. மணஞ் செய்துகொள்வதும், கொள்ளா மலிருப்பதும், குழந்தை பெறுவதும், பெறாமலிருப்பதும் பெண்களின் இஷ்டத்தைப் பொறுத்தது. இவ்வழக்கத்தைச் சோவியத் அரசாங்கம் சட்டப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டிருக்கிறது. டாலின் ஆட்டோ தொழிலில் (Stalin Auto Works) வேலை செய்து வந்த 30,000 பெண்களுக்கு 300 டாக்டர்கள் தேவையாயிருந்தது. அந்த டாக்டர்களுக்குத் தலைவராகிய டாக்டர் எம். (Dr. M.) என்னும் மாது பெண்களுக்கு ஏற்படும் நோய்களை நீக்குவதில் பெரும் நிபுணர். இதனால் அப்பெண் தொழிலாளிகள் தேகாரோக்கியத்தைப் பரிசோதிப்பதும், அவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் கூறுவதும் தங்களுடைய வேலையாகக் கருதி நடந்து வந்தார். மணமான பெண்களிடம் டாக்டர் எம். உங்களுக்கு குழந்தைகள் வேண்டுமா? என்று கேட்பது வழக்கம். அதன் பிறகு அவர்கள் விருப்பப்படி மருத்துவ ஆலோசனை கூறுவார். பெண் தொழிலாளிகள் குழந்தை பெற விரும்பாவிடில் அதன்படி கர்ப்பத்தடை முறைகளைக் கற்பிப்பார். இத்தடை முறைகளால் ஜனத் தொகை குறைந்தபாடில்லை. மற்றெத் தேசங்களையும் விட ஜனத் தொகை கூடியே வருகிறது. ஆண்டு தோறும் 30 லட்சம் ஜனத் தொகை கூடி வருகிறது. ஆண்டு தோறும் சோவியத் யூனியன் தம் நாட்டில் புதிய வீரர்களைப் பெருக்கி வருகிறது. அவ்வீரர்கள் மாகோ (Mascow) நகரத்திற்கு அழைத்து வந்து மரியாதை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது வீரச் செயல்களை நாட்டு மக்களிடையே பரப்பி வருகின்றார்கள். 1935ஆம் ஆண்டு டாக்னோவ் (Stakhanov) என்ற சுரங்கத் தொழிலாளியும், மேரி டெம்ஸென்கோ (Marie Demchenkov) என்ற கரும்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் பெண்மணியுமே சிறந்து விளங்கினார்கள். விவசாய சீர்திருத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து டெம் சென்கோவின் கீர்த்தி பரவியது. அதற்கு முன்பு அப்பெண் படிப்பு வாசனையே இல்லாத ஓர் நிர்மூடமாயிருந்தாள். விவசாய சீர்திருத்தம் ஆரம்பித்த பின்னரே அவள் கல்வி பயின்று கரும்புப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டு அதைச் சிறக்கச் செய்தாள். 5 அல்லது 6 டன் கரும்பே ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து பெற்ற அந்த உக்ரேன் காட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தினாள். 1935ஆம் ஆண்டு அப்பெண் மாகோவிற்குப் போய் டாலினை நேரில் சந்தித்து ஒரு ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 20 டன் கரும்பு பயிராக்க முடியும் என்பதை நிரூபித்தார். அம்மாது ரஷ்யாவின் மற்ற பாகத்திலுள்ள கரும்புத் தொழில்களையும் அபிவிருத்தி செய்து நம் தேசத்தைக் கரும்பு மயமாக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. மேரி (Marie) யின்அதிசயச் செயல் கரும்புப் பயிர் இடுவோருக்குள் ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. நூற்றுக் கணக்கானவர்கள் அம்மாதின் முறைகளைக் கண்டு புகழ்ந்துள்ளனர். ஒன்பது தடவை களை பறிப்பார். கரும்பிற்கு வியாதி உண்டாக்கும் கிருமிகளை 8 தடவை நெருப்பு வைத்து நாசஞ் செய்தார். மழையில்லாத ஆகட் மாதத்தில் 20,000 கலன் தண்ணீர் இறைத்திருக்கிறார். இவ்வாறு செய்ததினால் அன்னாஸிவிடா (Anna Shvida) என்ற பெண் ஒரு ஏக்கருக்கு 23 டன் கரும்பும் மேரி 21 டன் கரும்பும் அறுவடை செய்தார்கள். டாலின் பேராச்சரியத் தோடு நான் இம்மாதிரிப் பெண்களை எங்கும் எப்பொழுதும் பார்த்ததில்லை என்று புகழ்ந்து கூறினார். மேலும், பழைய காலங்களில் இம்மாதிரிப் பெண்களைப் பெற்றோருமில்லை என்று கூறி 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற புரட்சி விழாவில் ஆர்டர் ஆப் லெனின் (Order of Lenin) என்ற பெரும் கௌரவமான பட்டத்தை வழங்கினார். விவசாயம் மேரியின் கீர்த்தி சோவியத் ரஷ்யாவில் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி பலகோடிப் பெண் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியது. கொடிய கிருமிகள் உள்ள சேற்றின் நடுவிலும் புரண்டு கரும்புப் பயிரை விருத்தி செய்ய முயற்சித்து வெற்றிக் கொடி நாட்டிய சோவியத் பெண்ணின் கீர்த்தி பெண் உலகின் கீர்த்தியாய்க் கொள்ளப்படுகிறது. அப்பெண்களின் புகழே பல்லாயிரம் பெண்களை, அருமையான பகற்காலங்களை கரும்புத் தோட்டங்களில் போக்கியும், இராக்காலங்களில் கரும்புத் தோட்டங்கள் குளிர் பனியில் அனலின் அருகில் அமர்ந்து கொண்டும், கரும்புப் பயிரைப் பாதுகாக்க முன் வந்துள்ளார்கள். அவர்கள் முன் எழுதப்படிக்கத் தெரியாதவர் களாயிருந்தார்கள். இன்று கல்வி கற்று, தொழில் முறைகளில் தேர்ந்து பேரும், புகழும், ஊதியமும் பெற்றதோடு ஒரு நாட்டிற்கு வேண்டிய சர்க்கரையையும் அளித்துள்ளார்கள். இன்று அப்பெண்மணிகள் விவசாயத் தொழிலுக்குத் தலைவிகளாய் விளங்குகிறார்கள். இவர்களை ஆண்கள் லக்ஷியஞ் செய்யாமல் விடப்படலாம். உலகிலுள்ள விஞ்ஞான விற்பன்னர்களாலும், ஓவியக்காரர்களாலும் செய்ய முடியாத பெருமையுள்ள வீரச் செய்கையாகும் என்று பெண்ணுலகால் கருதப்பட்டு வருகிறது. புதிய சகாப்தம் ஆணும்-பெண்ணும் எல்லாத் துறையிலும் சமத்வம் பெற்று இன்று பெண் பேதைகள் மெல்லியலார், அடிமைகள், பாவிகள் என்ற பழம் புலவர் பாக்கள் மறைந்து போர் வீரர்களாய், தளகர்த்தர்களாய், விஞ்ஞானிகளாய், டாக்டர்களாய், கப்பலோட்டிகளாய், ஆகாய விமானவோட்டிகளாய், மந்திரிகள், தலைவர்களாய் அறிவிலும் ஆற்றலிலும் ஆணுக்கு எத்துனையும் பின்வாங்காத ஆரணங்குகளாய் அரசியலிலும் பொருளாதாரத் திலும் சரி பங்கு பெற்று இன்ப வாழ்வு வாழ்கின்றார்கள் சோவியத் ரஷ்யாவில். சோவியத் இளந்தளிர்கள் ஸோவியத் ரஷ்யா, சென்ற நவம்பர் மாதம் 7ஆம்தேதி சோஷியலிட் ஆட்சியின் இருபத்தொன்றாவது ஆண்டு நிறைவு விழாவை மிகச் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடியது. இந்த மகோன்னதமான மாபெரும் கொண்டாட்டத்தைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் ரஷ்யாவில் ஓர் பெரும் விழா நடைபெறும். அதுதான் இளங் கம்யூனிட் சபை (Young Communist League) அல்லது கம்ஸொமால் (Komsomal) என்று அழைக்கப்பெறும் ஸோவியத் இளங்காளைகளின், உணர்ச்சியும், உத்வேகமும் கொண்ட ஒப்பற்ற மாகாசபையின் ஆண்டு நிறைவு விழாவாகும். ஸோவியத் ரஷ்யாவெங்கும் இவ்விழா வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. ஏனெனில் கம்யூனிட்கட்சி (Communist Party) யின் தலைமையின் கீழ் வேலை செய்துவந்த இளம் கம்யூனிட் சபை தனது தியாகத்தினாலும், கட்டுப் பாட்டினாலும், ஸோஷியலிட் சமூக நிர்மாணிப்பில் எடுத்துக் கொண்ட உயரிய பங்கினாலும் உலகின் அளவற்ற அபிமானத்தையும், அன்பையும் ஆதரவையும் கவர்ந்து கொண்டது. கம்ஸொமால் கட்சி, ரஷ்யக் கம்யூனிட் கட்சியைப் பின்பற்றி வர்க்க உணர்ச்சி கொண்ட பாட்டாளி மக்களையும், தீவிர அரசியலுணர்ச்சி கொண்ட வாலிபர்களையும் உறுப் பினர்களாய் கொண்டு ஸோவியத் ரஷ்யாவின் ஜனநாயக சர்வாதிகாரி டாலினுடைய ஹிருதயம் போன்று திகழ்கின்றது. இவ்வரிய தாபனத்தின் அங்கத்தினர்கள் கிராமங்களிலும் - நகரங்களிலும் - ஏன்? நாடு முழுவதும் பரவி நிற்கின்றனர். கம்யூனிட் கட்சிக்கு உதவி புரிவதும், ரஷ்ய வாலிபர்களுக்கும் குழந்தைகளுக்கும், கல்வி ஞானத்தையும், அரசியல் அறிவையும், புரட்சி யுணர்ச்சியையும் ஊட்டுவது தான் கம்ஸொமால் கட்சியின் முதல் வேலையாகும். இதன் பலனாய் ஸோவியத் ரஷ்யாவின் பகைவர்கள் கண்டு மனம் பதைபதைக்கும் வண்ணம் இரும்பினையொத்த தசைநார்கள், எஃகினைப் போன்ற வலியுள்ள ஹிருதயம் பெற்று ஸோவியத் இளங்காளைகள் இன்று மதர்ந்து கிளர்ந்து நிற்கின்றனர். இவ்விளம் கம்யூனிட் சபை தன் ஆரம்ப காலத்தி லிருந்தே உலகப் பிரசித்திபெற்ற அரிய பெரிய காரியங்களை யெல்லாம் சாதித்து வந்திருக்கிறது. ரஷ்யாவின் உள்நாட்டுக் குழப்பத்தின்போது பதினான்கு நாட்டுப் பகைவர் படைகள் படையெடுத்து வந்தன. ரஷ்ய அரசனாகிய ஸார் கூட்டத்தினர் களும் மற்றும் பிரபுக்களும் வெளிநாட்டுப் பகைவர்களை எதிர்ப்பதை விட்டு விட்டு உள்நாட்டுப் பகைவர்களாகிய கம்யூனிட்களை அடக்கி புரட்சியை ஒழிப்பதிலே தம் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தனர். தேசத்தின் மிக நெருக்கடியான கொந்தளிப்பான அக்காலத்தில் கம்ஸொமால் கட்சியின் வாழைக்குறுத்துப் போன்ற வாலிபர்கள் - ஸோவியத் இளந்தளிர்கள் நாட்டின் மானத்தைப் பெரிதெனக்கருதி, தம் ஆருயிரை அற்பமாய்க் கருதி ஆயிரம் ஆயிரமாய்க் கூடி பிறநாட்டுப் படைகளையும் உள்நாட்டுப் பகைவர்களையும் ஒருங்கே எதிர்த்து நிர்த்துள்ள பண்ண ஸோவியத் செம் படையில் (Soviet Red Army) சேர்ந்து போர் முரசு ஒலித்தனர். அக்காலத்தில் கம்ஸொமால் கட்சியின் கிளைக் காரியாலயங் களெல்லாம் மூடப்பட்டு அதன் முன்னர் கீழ்க்கண்ட விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. கம்ஸொமால் கட்சி அங்கத்தினர்களெல்லாம் புரட்சிக் காக செம்படையில் சேர்ந்துவிட்டதால் இக்காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எண்ணற்ற ஸோவியத் இளந்தளிர்கள் உள்நாட்டு புரட்சி வெந்தீயில் தங்களின் புனிதமான ஆருயிரை அர்ப்பணம் செய்து விட்டனர். பல்லாயிரம் ஸோவியத் இளங்காளைகள் நாட்டின் சுதந்திரத்திற்காக சுரண்டப்பட்ட நசுக்கப்பட்ட கோடானு கோடிப் பாமரமக்களின் விடுதலைக்காகப் பிறநாட்டுப் பகைவர்களுடன் அறப்போர் புரிந்து வீர மரணமடைந்தனர். அவர்களில் பலர் எதிரிகளின் சேனையினால் சித்திரவதைக் குள்ளாயினர். பலர் அவமானப்படுத்தப்பட்டுக் கொல்லப் பட்டனர். போர்க்களத்தில் அவ்விள மலர்கள் புரிந்த தியாகம், வீரம் முதலியவைகளால் அக்கட்சிக்கு பிற்காலத்தில் ஸோவியத் சர்க்காரால் உயர்ந்த பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. புரட்சிப் போராட்டம் முடிந்தது. பொருளாதாரப் போராட்டம் எழுந்தது. வறுமை, பசி, பிணி, அஞ்ஞானம் தேசமெங்கும் பெருகின. இவைகளுக்கெதிராய் போல்ஷ்விக் மகத்தான பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நாட்டைச் செழிக்கச் செய்ய முயன்றது. இவ்வேலையில் இளம் கம்யூனிட் கட்சி அபரீமிதமான பங்கெடுத்துக்கொண்டது. அப்பொழுது கட்சியின் வேலைத் திட்டங்களைப் பற்றி லெனின் ஆற்றிய சொற்பொழிவு சரித்திரப் பிரசித்தி பெற்றது. லெனின் மரணமடைந்தபின் கம்ஸொமால் கட்சி புரட்சியின் மூளை யென்று பெயர் பெற்றது. லெனினும், டாலினும் கம்ஸொமால் கட்சிக்கு வழிகாட்டி வந்தனர். ஏன் சுருங்கக் கூறின் அவர்கள் அக்கட்சியை வெற்றிக்குரிய பாதையில் செலுத்தி வந்தனர் என்று கூறலாம். டாலின் தலைமையின் கீழ் போல்ஷ்விக் கட்சி ஐந்தாண்டு திட்டங்களைக் கையாண்டு ரஷ்யாவில் உடனடியாக பல மாறுதல் களைச் செய்ய ஆரம்பித்தது. கைத்தொழில்கள் அமோகமான வளர்ச்சியுற்றது. விவசாயத் துறையில் ஐரோப்பாவில் முதல் தானத்தையும் உலகில் இரண்டாவது தானத்தையும் அடைந்தது. இவ்வரிய வேலைகளில் போல்ஷ்விக் கட்சி இளம் கம்யூனிட் கட்சியின் உதவியை நாடிற்று. தேசமெங்கும் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் நிர்மான வேலையில் ஈடுபட ஆயிரக்கணக்கான இளம் கம்யூனிட்களின் மத்திய சபையினால் தேசமெங்கும் தங்கள் அங்கத்தினர்கள் அனுப்பப்பட்டனர். இரும்புத் தொழிற் சாலைகள், பஞ்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், பாதாள ரயில்வேக்கள் முதலிய பல கஷ்டமான எண்ணத் தொலையாத வேலைகளுக்கெல்லாம் கம்ஸொமால் களே அனுப்பட்டனர். கீழ்த்திசையில், முழுவதும் இளைஞர் களடங்கிய (கம்ஸொமால் களடங்கிய) ஓர் பெரிய நகர மொன்று கம்ஸொமால்க்யா (Komomalshkoya) என்ற பெயரால் இளைஞர்களைக் கொண்டே நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. இம்மகத்தான வேலையைப் பூர்த்தி செய்ததற்காக சர்க்கார் கம்ஸொமால் கட்சிக்கு ரெட் பேனர் ஆப் லேபர் (Red Banner of Labour) என்றொரு பட்டம் வழங்கியுள்ளனர். சோஷியலிட் கைத்தொழில்களில் சுமார் 70 லட்சம் கம்யூனிட்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் யாவரும் 21வயதிற்குட்பட்டவர்களேயாவர். டாலினோகோர்க் (Stalinogorks) இரஸாயனத் தொழிற்சாலை போன்ற மிகப் பெரிய தொழிற்சாலைகளில் நூற்றுக்கு அறுபதுபேர் வாலிபர்கள்தான். ஜெயா பின்க் டிராக்டர் பிளாண்ட் (Cheyabinsk Tractor plant) தொழில் நிலையத்தில் அவர்கள் 47 சத விகிதம் உளர். வாலிபனடாக்னோவிட் (Stakhanovite) இயக்கத் தினர் இளம் கம்யூனிட் கட்சியின் ஓர் பிரிவினரே யாவர். அவர்களில் பலர் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர். சோக்ஷியலிட் நாட்டின் இராணுவத்திலும் இவர்கள் போற்றற்குரிய தானங்களை எய்தியுள்ளனர். 1922இல் செம்படையிலும் 1931 இல் ஆகாயப்படையிலும் இளம் கம்யூனிட் கட்சி மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. வீரம், தன்னல மறுப்பு, விடா முயற்சி, லட்சிய நம்பிக்கை, வாழ்வில் பிரேமை முதலிய அரியகுணங்கள் அவர்களை பாட்டாளி மக்களுக்காகவும், தாய் நாட்டிற்காகவும் நடந்த பெரும் போராட்டங்களில் தியாகஞ் செய்யத் தூண்டின வென்பது மிகையன்று. இருபது ஆண்டுகளாய் அது சிறந்த லட்சியத்தை நாடி செம்மையான பாதையில் செல்லுகிறது என்று அவ்விளம் கம்யூனிட் கட்சி இப்பொழுது பெருமைகொண்டு நிற்கின்றது. ரஷ்ய வாலிபத் தலைமுறையானது ரஷ்ய மஹா ஜனங்களோடு ஒரு இன்பகரமான நாகரிகமான நல் வாழ்க்கையைப் பெற்று விட்டது. நமது வாழ்க்கை முன்னேற்ற மடைந்துள்ளது தோழர்களே! அது எத்தனை இன்பமான வாழ்வு என்று சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரியாகிய டாலின் கூறிய உண்மையை ஸோவியத் வாலிபர்கள் நண்குணர்ந்துவிட்டனர். டாலின் அரசியலமைப்பு ஸோவியத் வாலிபர்களுக்கு வேலை, கல்வி, ஓய்வு இம்மூன்றிக்கும் உரிமையளித்தது. ரஷ்யப் புரட்சி (1914-15)க்கு முன் 1,24,000 மாணவர்கள் உயர்தரப் பாடசாலைகளில் கல்வி பயின்றனர்.இவர்களில் பெரும்பாலும் பிரபுக்கள், பெரும் வியாபாரிகள், உத்யோகத்தர்கள் முதலியவர்களின் குழந்தைகளே. ஸார் காலத்திய கல்வி மந்திரியால் சமையல்காரர்களின் குழந்தைகள் என ஏளனமாகக் கூறப்பட்ட தொழிலாளர் வகுப்பின் குழந்தைகள் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயில மறுக்கப்பட்டிருந்தனர். இன்று 5,50,000 தொழிலாளர், விவசாயிகள் குழந்தைகள் எந்தவிதத் தடையுமின்றி சம்பூரணமாகக் கல்வி கற்று வருகின்றனர். ஸார் காலத்தில் 99 உயர்தரப் பாட சாலைகள்தான் ரஷ்யாவிலிருந்தன. இன்றோ, 700 உயர்தரப் பாடசாலைகளிருக்கின்றன. ஆண்டு தோறும் ஒன்று பத்தாய் வளர்ந்து கொண்டே போகின்றன. மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமாக 8 கோடி ரூபிள்கள் மான்யமளிக்கப்பட்டு வருகிறது. ஸோவியத் இளைஞன் ஒரு நாகரிகமான - இன்பமான வாழ்க்கையை அடைவதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ அவ்வளவையும் பெற்றிருக்கின்றான். ரஷ்யாவில் 650 விளையாட்டு நிலையங்களும் (Stadiums), 7,200 விளையாட்டு மைதானங்களும், 2,600 பனிக்கட்டியில் சறுக்கி விளையாடும் சங்கங்களும் எண்ணற்ற சுகாதார தலங்களும், பல்லாயிரம் சுகவாச நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. ரஷ்யா முழுவதிலும் ஒரு கோடி விளையாட்டுக்காரர்கள் இருக்கின்றனர். இவர்களில் அனேகர் சர்க்காரால் நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றவர்கள். பாரச்சூட் என்னும் குடையின் மூலம் ஆகாயத்தினின்று குதிக்கும் விளையாட்டு சர்வ சாதாரணமாய் மக்களிடையேயும் பரவிவிட்டது. பல நகரங்களில் ஏற்பட்டிருக்கும் விளையாட்டு நிலையங்களினின்று பாண்டித்யம் பெற்றுள்ள வாலிபர்கள் கிராமங்களிலுள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்குமாறு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஸோவியத் ரஷ்யாவில் இவையாவும் நடப்பது இயற்கையே. புரட்சியானது நமது மக்களுக்குள் விடுதலையை மட்டுமல்ல இன்பகரமான - நாகரிகமான வளர்ச்சியுறும் வாழ்வைப் பெறுவதற்குரிய எல்லா வசதிகளும் அடைய ஒவ்வொருவருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது என்று டாலின் கம்பீரமாய்க் கூறுகிறார். 1936இல் இளம் கம்யூனிட் கட்சி உறுப்பினர் 40 இலட்சம் பேர் இருந்தனர். சென்ற ஆண்டில் 75 லட்சமாகப் பெருகி விட்டது. கம்ஸொமால்க்யா ãu›lh”(Komsomalskaya Pravda) என்னும் அக்கட்சி தினசரிப் பத்திரிகைக்கு சந்தாதாரர் கள் தினம் தினம் பெருகி வருகின்றனர். இப்பொழுது 6 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இது தவிர கம்ஸொமால் கட்சிக்கு 93 இதர பத்திரிகைகளும் குழந்தைகளுக் கென்று 55 பத்திரிகைகளும் ரஷ்யாவில் பிரசுரிக்கப்படுகிறது. கம்ஸொமால் கட்சிக்கு தனியாக ஒரு பிரசுராலயம் இருக்கிறது. அப்பிரசுராலயம் வருங்காலப் பிரஜைகளுக்கென்று லட்சோப லட்சம் நூல்களைப் பிரசுரித்து வருகின்றது. சோவியத் யூனியனின் (தனித் தனி மாகாணங்கள்) சட்ட சபைகளுக்கும், மத்திய சட்டசபைகளுக்கும் நடந்த பொதுத் தேர்தல்களில் கம்ஸொமால் கட்சி பெரும் பங்கெடுத்துக் கொண்டது. கம்ஸொமால்கள், வாலிபத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலிய எல்லோரும் தேசத்தை ஆட்சி புரியும் வேலையில் முக்கியமான பொறுப்பேற்றுக் கொண்டனர். சுருங்கக்கூறின் 50 வாலிபப் பெண்களுள்பட 284 வாலிபர்கள் ரஷ்ய உயர்தர சட்ட சபைக்கு பிரதிநிதிகளாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ரஷ்யாவைத் தவிர உலகில் வேறெந்த பார்லிமெண்டிலும் 19 வயதுப் பிரதிநிதிகள் - இளம் தொழிலாளிகள் - பால் பண்ணைத் தொழிலாளிகள் பிரதிநிதிகளாய் வீற்றிருப்பதைக் காண முடியாது. கம்ஸொமால் கட்சி அங்கத்தினர்கள் பலர் தொழில் தாபனங்களில் மிக உன்னத தானத்தை வகித்து வருகின்றனர். ரயில்வே என்ஜினீர்கள், கூட்டுப் பண்ணைத் தலைவர்கள் முதலிய பல தாபனங்களில் மட்டுமின்றி இதர நாடுகளிலும் போய் பிரசித்தி பெற்று விளங்குகின்றனர். சர்வதேச பியானோ வாத்தியம் வாசிக்கும் போட்டியில் இரு கம்ஸொமால்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். சோவியத் யூனியனில் சாதாரணத் தொழிலாளர்களெல்லாம் முன்னேற்ற மடைவதற்குரிய சௌகரியங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது போதிய சான்றாகும். தீவிர சர்வதேசீயக் குணம் படைத்த சோவியத் இளைஞர் கள் முதலாளித்வ நாடுகளில் தங்கள் வர்க்கத்தார் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை நன்குணர்வர். சீனாவிலும், பெயினிலும் வாலிபர்கள் நடத்தும் போராட்டங்களில் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபமும் அக்கரையுமுண்டு. பாஸிட் நாடுகளில் வாலிபர்கள் யுத்தம் ஒரு கலையென்று போதிக்கப்பட்டு பீரங்கிகளுக்கு உணவாகத் தயார் செய்யப் படுகின்றனர் என்பதை கம்ஸொமால் இயக்கம் அறிந்துள்ளது. பாஸிட் நாடுகளிலும் வாலிபர்கள் சிறுவயதிலிருந்தே இவ்வித நோக்கத்துடன் கல்வி அளிக்கப்படுகின்றனர். ஸோவியத் வாலிபர்கள் மிக நுண்ணிய ஆராய்ச்சிகளி லெல்லாம் முன்னனியில் நிற்கின்றனர். பிளிட்மான் (Blid man) என்னும் ஒரு தொழிலாளி முன்னால் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர். அவரது அரிய முயற்சியினால் ஒருமணி நேரத்தில் 630 டன் எடையுள்ள சாமான்களை தொழிற் சாலைகளில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு போகும் திட்டமொன்றைக் கண்டுபிடித்தார். இதற்குமுன் மணி ஒன்றுக்கு 32 டன் சாமான்கள்தான் மாற்ற முடியும். இத்திட்டம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அவரை உலகமுழுவதும் போற்ற ஆரம்பித்தது. இதன் பயனாய் அவருக்கு பெரும் பேரும் புகழும் கிடைத்தது. உடனே அவர் ஸோவியத் ஆட்சியில் உள்நாட்டு மந்திரியாகவும் நீர்க்கட்டுப்பாட்டு மந்திரியாகவும் நியமிக்கப் பட்டார். அவர் கண்டுபிடித்த அப்புதிய திட்டம் ரஷ்யா வெங்கும் புகுத்தப்பட்டது. வாலிப சித்திரக்காரர்கள் தாங்கள் கம்ஸொமால் இயக்கத்துடன்பிரிக்கமுடியாதவாறுபிணைக்கப்பட்டிருப்பதாய்க் கருதுகின்றனர். எமி ஹில்ல, ஜேக்கப் பிளையர் என்னும் இரு சித்திரக்காரர்கள் பின் வருமாறு கூறுகின்றனர். பிரசல் நகர மக்கள் எங்களை கரகோஷங்களுடன் வரவேற்றார்கள். எங்கள் மனதில் அப்பொழுதுண்டான முதல் எண்ணமாவது எங்களுக்குண்டான சந்தோஷத்தை எங்களை வளர்த்து போஷித்த எங்கள் அருமைத் தாய் நாட்டிற்கும் லெனின்ட் கம்ஸொமால் இயக்கத்திற்கும் பங்கிட வேண்டும் என்று மனப்பூர்வமாய் உள்ளக் கிளர்ச்சியோடு கருதினோம். இன்றும் அவ்வாறே கருதிக் கொண்டிருக்கிறோம். 18 வயதுள்ள நடிகை ஸலீமா ஸாட்ரோவா (Salima Satarova) என்னும் பெண்மணி இளமை முதல் கம்ஸொமால் இயக்கத் தோடு இரண்டறக் கலந்து வளர்ந்த ஓர் நுண்ணறிவுடைய புரட்சியுணர்ச்சி மிகுந்த எழிலரசி. 16வது வயதில் காஸாக் குடியரசால் ஹானர்ட் ஆக்ட்ர (Honoured Actress) என்ற உயரிய பட்டத்தைப் பெற்றவர். இவருடைய தந்தை ஒரு சிறிய தொழிலாளி. புரட்சிக்கு முன்னர் இத்தகைய தொழிலாளியின் புதல்வி இவ்வித உன்னத பதவியை அடைய முடியாது. இன்று கம்ஸொமால் யுவதி ஓர் உயர்ந்த நடிகையாய் கௌரவிக்கப் படுகிறார். சமீபத்தில் காஸாக் (Kazakh) குடி அரசின் பார்லி மெண்டிற்கு ஒரு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். ஜியார்ஜி உஸாலென்கோ (George Usaslenco) ரஷ்ய எல்லைப்புறத்தைக் காத்து நிற்கும் காவல் வீரன். கம்ஸொமால் இயக்கத்தில் ஓர் முக்கிய உறுப்பினன். கொடிய பனிக்கட்டி களின் மீது நின்றுகொண்டு அந்நியர்கள் எவராவது எல்லைப் புறத்திற்கு இப்பால் காலில் வைக்கிறார்களா என்று விழித்த கண் இமையாது தேசாபிமானம் கொண்டு நிற்கும் ஓர் அரிய வீரன். ஒரு தடவை கால் பூட் இன்றி இரத்தத்தை உறையச் செய்யும் பனிக் கட்டியின் மீது அங்கும் இங்கும் நடந்து கொண்டே நின்று எல்லைப்புறச் சட்டத்தை மீறி வரும் 30 பேர்களைப் பிடித்து கைது செய்திருக்கின்றார். இதனால் சர்க்கார் அவருக்கு ஓர் கௌரவப் பட்டத்தை வழங்கியுள்ளது. பைலோ ரஷ்யன் (Byelo Russian) சோவியத் குடியரசிற்கு இவர் ஓர் மெம்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கீவ் (Keev) நகரிலுள்ள 6 தொழிற்சாலைகளில் 11 சாதாரணத் தொழிலாளிகள் போர்மென்களாகவும், 64 பேர் மேற்பார்வையாளர்களாகவும், என்ஜினீர்களாகவும் உயர்த்தப் பட்டுள்ளார்கள். ரயில்வே மந்திரி காக்னோவிச் (Kaganovich) என்பார் சாதாரண ரயில்வே என்ஜினீர் ஒருவருடைய பொறுப்பில் ஒரு ரயில்வே பாதை முழுவதையுமே விட்டு விட்டார். ஸோவியத் ரஷ்யாவின் மிகச் செழிப்பான உக்ரைன் மாகாணத்திலுள்ள சட்ட சபைக்குப் பிரதிநிதிகளில் 33 கம்ஸொமால் இயக்க அங்கத்தினரும் 75 இதர வாலிபர்களும் உளர். ஆர். எ. எப். எ. (R.S.F.S) குடியரசிலுள்ள சட்ட சபைக்கு 20 வயதிற்குட்பட்ட 10 வாலிபரும், 21 முதல் 25 வயது வரையுள்ள 57 இளைஞரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அலெக்சாண்டர் டீபனன்கோ (Alexander Stephanenko) ஒரு வாலிபர். திறமை மிகுந்த ஓர் சுரங்கத் தொழிலாளி. உக்ரைன் மாகாண சட்டசபைக்குப் பிரதிநிதியாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 1929இல் சுரங்கத் தொழிலை மேற்கொண்டவர் வெகு சீக்கிரத்தில் அத்தொழிற்சாலையின் தலைவராகி விட்டார். 1934இல் அவருக்கு கடற்படையில் வேலைசெய்யுமாறு அழைப்பு வந்தது. அவ்வழைப்பை ஏற்று சில காலம் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்தாலும் அவருடைய மனம் சுரங்க வேலையிலேயே பெரிதும் சென்று கொண்டிருந்தது. எனவே விசேஷ அனுமதி பெற்று மீண்டும் சுரங்க வேலைக்குத் திரும்பிவிட்டார். அவ்வேலையிற் தேர்ச்சிபெற்று முன் 6 மணி நேரத்தில் 7 டன் நிலக்கரி வெட்ட முடியும். ஆனால் அவர் கண்டுபிடித்த புதிய முறையினால் 52 டன் வெட்டியெடுக்கப் படுகிறது. ஸினைதா பயோடோர்வா (zinaida Fyodarva) ஒரு பெண் தொழிலாளி. அவர் டாலின் ஆட்டோ பிளேண்ட் (Stalin Autoplant) தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ஆர். எ. எப். எ. ஆர். (R.S.F.S.R) ன் உயர்தர சட்ட சபைக்கு (Supreme Soviet)ãuâÃâahŒ¤ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருடைய தகப்பனார் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். தாய் வீட்டு வேலைக்காரி. என்னுடைய வாழ்க்கை எனது பெற்றோர்களின் வாழ்க்கையைவிட முற்றிலும் வேறுபட்டது. என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கை முதல் இன்றையதினம் வரை கூட்டுறவு முறையிலேயே காலம் கழித்து வருகிறேன் எனக் கூறுகிறார். 1936இல் சாதாரணத் தொழிலாளியாய் வேலையிற் புகுந்து பின் தலைமைத் தொழிலாளியானார். 1938இல் சட்டசபை மெம்பராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது ஆலையில் வேலை செய்யும் 25 ஆயிரம் தோழர்களிடையே என்னுடைய பெயரை ஒலி பெருக்கும் கருவிகள் அடிக்கடி பரப்பி வருகின்றன. இதைக் கேட்டுக் களிப்பின் மிகுதியால் உள்ளம் பூரித்துக் கோஷிக்கின்றனர் எனது பெண் தோழர்கள் ஸினோ! ஸினோ! (zino! zino!) என்று கூறி ஆடிப்பாடிக் குதிக்கின்றனர். என்னைச் சுற்றிலும் என் தோழர்களின் பழகிய முகங்கள் காணப்படுகின்றன. என்றாலும் இது எனக்கு ஓர் கற்பனையாகவே தோன்றுகிறது. எனது தேச மக்கள் வருங்காலத்திய சந்ததிகளின் பேரில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்களென்றே உணர்கிறேன் எனக் கூறுகிறார். செம்படை (Red Army) பிரதிநிதிகளில் கம்ஸொமால் இயக்கத்தைச் சேர்ந்த அளவற்ற இளைஞருளர். இவர்களில் பாவல் டூடின் (Pavel Dudin) ஒருவர். இவர் ரஷ்யாவில் மிகக் கௌரவமாய் மதிக்கும் ஆர்டர் ஆப் லெனின் (Order of Lenin) என்ற உயரிய பட்டத்தைப் பெற்றிருக்கிறார். 1936இல் இரு ஜப்பானியப் படைகள் சோவியத் எல்லையைக் கடந்து உள்ளே கால் வைத்தன. உடனே சோவியத் செம்படைக்கும், ஜப்பானியப் படைகளுக்கும் போராட்டம் மூண்டது. அப்போராட்டத்தில் டூடின் மூன்று முறை காயப்படுத்தப்பட்டும் சளைக்காது சண்டையிட்டார். ஐக்கிய சோவியத் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைகளுக்கும் இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெண் பிரதிநிதிகளின் வாழ்க்கைச் சரித்திரங்கள் மிக ருசிகரமாயிருக்கும். அவர்களுடைய தேர்தலை அறிந்துகொள்ள வேண்டுமாயின் ரஷ்ய சமூகத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பங்களிலும் அப்பெண்மணிகள் வாழ்ந்து வந்த அடிமைத் தனத்தைப் பற்றியும், இடுக்கண்களைப் பற்றியும் முதலில் நன்கு அறிந்து கொள்ளலாம். ஆசார் ஹூசைன் சாடிக்கோவ் என்பவர் ஒரு கப்பலில் வேலை செய்பவர். இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் அவர் ஓர் பெண் குழந்தை பெற்றார். பின் மீண்டும் மீண்டும் பெண் குழந்தையாகப் பெற்றுக் கொண்டே வந்தார். அதனால் அவரும் அவர் குடும்பத்தாரும் அளவற்ற வருத்தமுற்றனர். இன்றோ அவர் மட்டுமல்ல - அவரது குடும்பம் மட்டுமல்ல அஸெர்ப்யான் (Azerbyan) மாகாணத்தைச் சேர்ந்த மக்களனை வரும் எத்தனை பெண் மகவு பெற்றாலும் துயர் கொள்ளாது கவலையின்றி வாழ்ந்து வருகின்றனர். துரதிர்ஷ்டம் வாய்ந்த தாகக் கருதப்பட்ட கம்ஸொமால் ஸாடிக்கோ என்னும் இள நங்கை சோவியத் ஆட்சியின் கீழ் சர்வகலாசாலைப் படிப்பில் தேர்ச்சி பெற்று (Baku) பிரதேசத்தில் எண்ணெய்ச் சுரங்கங்களில் வேலை பார்த்து வருகிறார். அஸர்பியான் மாகாணத்தில் இருக்கும் பெண் என்ஜினீர்களில் ஸாடிக்கோவ்தான் முதன் முதலில் வந்த என்ஜினியராகும். அம்மாகாண மக்கள் அவரை இப்பொழுது சோவியத் உயர்தர சட்டசபைக்கு தம் பிரதிநிதியாய்த் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நினோ அகாஸனாவிலி (Nino Agashenashvili) டிப்ளி (Tiflis) பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இடைப்பெண். அவருக்கு வயது 18. அவர் ஓர் ஆலையில் நெசவுக்காரியாய் வேலை பார்த்து வருகையில், தம் திறமையால் தலைமைத் தொழிலாளியாய் உயர்த்தப்பட்டார். அவர் கட்டுப்பாட்டுடன் வேலை செய்யும் சக்தி மிகுதியும் பெற்றவர். அதனால் அவ்வாலைத் தொழிலாளி கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தனர். ஜியர்ஜியா மாகாண சட்டசபைக்கு இப்பொழுது ஓர் உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் யுவர்களும், யுவதிகளும் வெற்றிச் சங்கு ஊதி நிற்கும் சோவியத் நாட்டின் சரியான-தகுதியான பிரதிநிதிகள் என்பதில் எவரும் மறுத்துக்கூற முடியாது. வாழ்க்கையில் மனோகரமான யௌவனப் பருவம், கவிகள், எழுத்தாளர்கள் ஆகியவர்களின் உள்ளத்தை எப்பொழுதும் கவர்ந்து வருகின்றது. காட்டுமிராண்டித் தனமான - அநாகரிகத் தனமான சட்டம் பரவியுள்ள முதலாளித்வ நாடுகளில் வாலிபம் என்பதின் தாத்பர்யம் கெட்டுவிட்டது. ஆனால் மனித சேவைக் கென்றே எழுந்த சோவியத் நன்னாட்டில் வாலிபப் பருவம் என்பது ஒரு சந்தோஷகரமான-இன்பம் நிறைந்த-புத்தம் புதிய வாழ்க்கை யென்ற உண்மைப் பொருள் கொள்ளப் படுகிறது. சோவியத் வாலிபர்கள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு தாங்கள் பெற்றுள்ள அரிய சந்தர்ப்பங்களை அளித்தகட்சிக்கும், சர்க்காருக்கும் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள். தங்களுடைய ஆசிரியர், தோழர் என்ற முறையில் டாலினிடம் தங்களின் முடிவற்ற தோழமையையும், சக்தியையும் காட்டுகிறார்கள். அவரின் உணர்ச்சி மிகுந்த நம் எதிர்காலமும் நம்பிக்கையும் நமது வாலிபர்களே யாவர் என்ற வார்த்தைகளை ரஷ்யயுவர்கள் தங்கள் உள்ளத்தில் என்றும் மறவாது வைத்திருக்கின்றனர். சோவியத் ஆட்சியில் பரம விரோதியான, பாஸிட் களின் நண்பர்களான டிராட்கி, புகாரின் கூட்டத்தார்கள் கம்ஸொமால் கட்சியின் கட்டுப்பாட்டை, ஒழுங்கை, உணர்ச்சியை, பொய் லஞ்சம் ஆகியவற்றை தங்களின் அகட விகட சாமர்த்தியங்களினால் உருக்குலைத்துவிட முயன்றனர். ஆனால் அம்முயற்சிகள் வெகு சீக்கிரத்திலே தோற்கடிக்கப் பட்டுவிட்டன. சோவியத் மக்களோடு சேர்ந்து கம்யூனிட் கட்சியின் தலைமையின் கீழ் இளங் கம்யூனிட் கட்சி (Young Communist League)ahdJ ட்ராட்கிட் (Trotskiest) என்னும் கொலைகார-சதிகார-கொள்ளைக் கூட்டத்தினர்களுக்கு எதிராய் நடந்த போராட்டத்தில் பெரும்பங்கெடுத்துக் கொண்டனர். தேசத்திலுள்ள எல்லா யுவர்களும் லெனின்-டாலின் இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அவ்விளைஞர் களின் பேரியக்கத்தில் பெரிதும் பங்கெடுத்துக் கொண்டதோடு இப்பொழுது என்றுமில்லா முறையில் தீவிரமாய் உழைக்க முயன்றுள்ளனர். தேசாபிமான உணர்ச்சியில் சோவியத் வாலிபர்களின் பங்கு மிக முக்கியமானது. இளங் கம்யூனிட் கட்சி (Y.C.L.) யின் 20ஆவது ஆண்டு விழா சென்ற ஆண்டு நடைபெற்றது. அவ்விழாவை அக்கட்சியினர் கொண்டாடியதில் ஒரு தனி மாட்சியுண்டு. தாய் நாட்டிற்கு வெகுமதிகள் தயாரியுங்கள் என்று டாக்னோவிட் (Stakhanovite) இயக்கத்தாரால் ஒரு வேண்டுகோள் வெளியிடப்பட்டது. அதில் ஒவ்வொரு வாலிப சோவியத் பிரஜையும் இளங்கம்யூனிட் கட்சியின் 20ஆவது ஆண்டு விழாவின் ஞாபகார்த்தமாக தாய் நாட்டிற்கு ஏதாவது வெகுமதியொன்றை அளியுங்கள். புதிய உற்பத்தி முறைகள், அபிவிருத்தியடைந்த இயந்திரங்கள் கண்டுபிடித்தல், புதிய சோவியத் கலைகளை உற்பத்தி செய்தல், ஆராய்ச்சி செய்தல் அதிகப்படியாய் அறுவடை செய்தல், விளையாட்டுக்களில் முதன்மை தானம் பெறல், ராணுவ ஞானமெய்தல் முதலியவை கள்தான் அவ்வெகுமதிகள் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வேண்டுகோள் தேசமெங்கும் வெகு குதூகலமாய் வரவேற்கப்பட்டது. யுவர்களின் உணர்ச்சி காட்டுத் தீப்போல் எங்கும் விரைவில் பரவின. மாகோ நகரிலுள்ள அரிவாள் சம்மட்டி தொழிற்சாலை (Hamer and Sickle Works) என்ற பெயருள்ள ஓர் தொழிற்சாலையிலுள்ள வாலிபத் தொழிலாளர்கள் தங்கள் வருட வேலைகளைக் குறித்த தினங்களுக்கு முன்னரே முடித்து விட்டனர். க்ராமா டார்க் (Kramatorsk) இரும்புத் தொழிற் சாலையிலுள்ள யௌவன தொழிலாளி ஒருவர் தான் உற்பத்தி செய்ய வேண்டியவைகளை விட 1,500 சதவிகிதம் அதிகமாய் உற்பத்தி செய்து தாய் நாட்டிற்கு ஒரு பெரும் வெகுமதியை நல்கினார். இத்தகைய ஆயிரக்கணக்கான உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். அனேக குடும்பங்களில் அக்குடும்பத் தினர்கள் அனைவரும் தாய் நாட்டிற்கு சேவை புரிவதில் ஈடுபட்டுள்ளனர். சோவியத் மகா ஜனங்களுக்கு வாலிபச் சந்ததியார் உயிர் நாடி போன்றவர்கள். சக்தி நிறைந்தவர்கள், ஊக்கங் குன்றாதவர் கள், சர்வ சங்கப் பரித்தியாகிகள். அவ்வாலிபர்களுக்குப் போதிய ஆற்றலும் அறிவும் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவர் களிடம் ஏராளமாய் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஏராளமான காரியங்களைச் செய்து முடித்திருக்கிறார்கள். அவைகளை விட அதிகமாய் இன்னும் முடிக்கப்பட வேண்டியவை பல அவர்கள் முன்னிற்கின்றன. இத்தன்மை நிறைந்த வாலிபர்களைப் படைத்த ஸோவியத் நாடானது ஓர் பெரும் புண்ய நாடேயாகும். இதே போன்று ஒவ்வொரு நாட்டு இளைஞர்களுக்கும் ஓர் சக்தியுமுண்டு-புத்தியுமுண்டு. ஆனால் முதலாளித்துவ நாட்டில் அவை மங்கி மறைந்து நிற்கின்றன. புரட்சி சக்தி துள்ளும் வாலிப உலகத்தைத் தம் பக்கம் திருப்பி தக்க காலத்தில் பகைவர்கள் மீது சாடும் தலைவர்களே உலகில் ஜெயக் கொடியை நாட்டியுள்ளனர். நம் நாட்டுத் தேசியத் தலைவர்கள் இவ்வரிய வரலாறுகளை அறியாமலோ அல்லது அறிந்தும் அக்கறையின்றியோ இருக்கலாம். ஆனால் உலகம் முழுதும் பரந்து நிற்கும் அரசியல் ஞானியாகிய லெனினுடைய சந்ததியார்களாகிய கம்யூனிட்களும், ஸோஷியலிட்களும் இப்புரட்சி சக்தியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாய்த் திருப்பி வெற்றியின் பாதையில் செல்லாதிருக்க முடியுமா? வாழ்க்கை வரலாறு: பிரடரிக் ஏங்கல் (அ. இராகவன்) (இக்கட்டுரையில் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தாபகரும், விஞ்ஞான சோஷியலிட் இயக்கத்தின் ஆரம்ப கர்த்தரும், ஒப்பற்ற பொருளாதார நிபுணருமான காரல் மார்க்ஸின் நிழல் போன்றிருந்த பிரடரிக் எங்கல்ஸின் வாழ்க்கையைத் தோழர் அ. இராகவன் தெளிவாக எழுதியிருக்கின்றார். இங்கு எங்கல் மறைந்த 44வது ஆண்டு நிறைவு விழாவாகிய ஆகட் 5ன் நினைவுக்குறியாக அவரது வாழ்நாட்களில் நடந்த சில்லரைச் சம்பவங்களை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டாது அவரது வாழ்க்கைக்கும், அவரது அரசியல் அபிப்பிராயத்திற்குமுள்ள சம்பந்தங்களையே பெரிதும் எடுத்துக் காட்டி இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. -g.ர்.) பிரடரிக் ஏங்கல் (Frederick Engels) என்னும் மகான் இந்த நவீன நாகரிக உலகத்திலே, சுயசிரம ஜீவிகளுக்காக உழைத்த மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய பொருளாதார விஞ்ஞானியாகும். ஏங்கல்ஸும் மார்க்ஸும் (Engels & Marx) மனித வர்க்கத்தின் சரித்திரத்திலே ஓர் ஒப்பற்ற புரட்சிகரமான சிந்தனையாளரும், சர்வ தேச சுய சிரம ஜீவிகளின் (Proletariat) மாபெரும் இயக்கத்தின் தாபகரும், தலைவரும் விஞ்ஞான சோவியத்தின் பெற்றோரும் சர்வதேச கம்யூனிட் கட்சியின் தாபகரும் ஆவார்கள். காரல் மார்க்ஸும், பிரடரிக் ஏங்கல்ஸும் நெருங்கிய நண்பர்கள் ஆனது முதல், தங்கள் வாழ்நாள் முழுதும் ஒரே உயரிய லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்து வந்தனர். எனவே சரித்திரங்களில் எங்கெங்கு ஏங்கல்ஸின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அங்கெல்லாம் மார்க்ஸின் பெயரும் குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஏங்கல் சுயசிரம ஜீவிகளுக்காக என்ன பணி புரிந்திருக்கிறார் என்பதை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால் மார்க்ஸின் தொண்டையும், உபதேசங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். எனவே மார்க் அப்பொழுதிருந்த பாட்டாளி மக்களின் இயக்க வளர்ச்சிக்காக என்ன பணி புரிந்தார் என்பதை இங்கு ஆராய வேண்டியது மிக முக்கியமானது. முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தினரும் அவர்களின் கட்டாய வேண்டு கோள்களும் இந்நவீன பொருளாதார நிலமையில் இருந்து தான் உண்டானது என்று உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள் மார்க்-ஏங்கல் என்னும் இரு பெரும் அறிஞர்கள்தான். தொழிலாளி வர்க்கம் ஒழுங்குபட வளர்வதற்கு முக்கிய காரணம்: இந் நவீன பொருளாதார நிலையும், முதலாளி வர்க்கமும் தான் என்பது அவர்களின் தேர்ந்த முடிவு. மேலும் சில உதார குணமுடைய தனிப்பட்ட மனிதர்களின் முயற்சியாலோ மகாத்மாக்களுக்குத் தோன்றும் அந்தராத்மாவின் அருள் ஒளியாலோ இந்த மனித சமூகத்தை நசுக்கி வரும் பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, அடிமைத்தனம் முதலிய கொடூர சுபாவமுடைய -கோர ரூபமுடைய வன்னெஞ்சப் பிசாசுகளை சுட்டுப் பொசுக்கி விட முடியாதென்றும், அவைகளைப் பூண்டோடு அறவே ஒழிக்க வேண்டுமென்றால், ஒழுங்குபட்ட சுய சிரம ஜீவிகளின் வர்க்கப் போராட்டத்தால்தான் முடியும் என்று தெளிவாய் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள். மார்க்ஸும் ஏங்கல்ஸும் தான் முதன் முதலாகத் தங்கள் நூற்களில் கம்யூனிசம் என்பது சோம்பேறிகளின் கனவல்ல என்பதையும் அது நவீன சமூகத்தில் உள்ள உற்பத்தி சாதனங் களின் வளர்ச்சியால் ஏற்படும் தடுக்க முடியாத மாபெரும் சக்தி என்பதையும் உலகிற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டினர். அவர்கள் எழுதுங் காலத்தில் எழுதப் பட்டிருந்த தேச சரித்திரங்களைப் பார்ப்போமானால் அவை யெல்லாம் வர்க்கப் போர்கள், அதாவது ஒரு வர்க்கத்தார் மற்றொரு வர்க்கத்தார் மேல் கொண்ட வெற்றி, பின் அதன் பேரில் கொண்ட ஆதிக்கம் இன்னோரன்ன பல கதைகளாகவே காணப்படுகின்றன. இந்த வர்க்கத் துவேஷத்திற்கு அடிப் படையான தனி உடைமை இருக்கும் வரை இதே போன்று ஒரு வர்க்கத்தார் மற்றொரு வர்க்கத்தாரை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்தும் அநாகரிகக் கதைகள் தான் சரித்திரத்தில் காணப்படும். பாட்டாளி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டு மானால் வர்க்கப் போராட்டத்திற்கு அடிப்படையான தனி உடைமையையும், தனி உற்பத்தியையும் தகர்த்துத் தரை மட்ட மாக்க வேண்டும். ஆகையால் ஒழுங்குபட்ட தொழிலாளிகளின் முயற்சிகளெல்லாம் மேற்கூறிய அடிப்படையைத் தகர்த் தெறிவதிலே கண்ணுங் கருத்துமாய் இருந்து வேலை செய்ய வேண்டுமென்றும், வர்க்கப் போராட்டந்தான் அரசியல் போராட்டம் என்றும் முதன் முதலாகத் தொழிலாளிகளுக்கு எடுத்துக் கூறியவர்கள் ஏங்கல்ஸும்-மார்க்ஸும் தான். இவ்விரு உயரிய அறிஞர்களில் அபிப்பிராயங்களே இன்று உணர்ச்சி பெற்ற உலகத் தொழிலாளிகளுடைய அபிப்பிராயம். 1840ஆம் வருஷவாக்கில் இவ்விரு பெரியார் களின் அபிப்பிராயங்கள் கம்யூனிட் இலக்கியங்களில் வெளிவரும் போது வெகு நூதனமாய் இருந்தன. அக்காலத்திற் பலர் அரசியல் விடுதலைக்காகவும், அரசர்கள் , போலீகாரர்கள், பாதிரிமார்களுடைய எதேச்சதிகாரத்தை எதிர்ப்பதற் கான போராட்டத்தை நடத்துவதிலும் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தனர். அவர்கள், முதலாளிகளுக்கும் - தொழிலாளி களுக்கும் இடையில் தங்கள் தங்கள் நலத்தை அடைய முயற்சிப்பதில் விரோதம் ஏற்படும் என்பதையே ஒப்புக் கொள்ளவில்லை. தொழிலாளி வர்க்கம் ஒரு தனி சக்தியாக முன்னுக்கு வரலாம் என்பதைக் கூட அவர்கள் மறுத்தார்கள். இதே சமயத்தில் பகற்கனவு காணும் சிலர் இச்சமூக அநியாயத்தை ஒழிப்பதற்கு அரசர்களிடமும், பதவியில் இருக்கும் வர்க்கத் தாரிடமும் இச் சமூகக் கொடுமையைப் பற்றி அவர்கள் உணரும்படி விவரித்தாலே போதும் என்றும், அவர்கள் மனமாற்றம் அடைய நமது உடலை வாட்டிக் கொள்வதிலே அவர்கள் மனமிளகி தங்கள் ஆதிக்கத்தை விட்டுக் கொடுத்து விடுவார்கள் - அதனால் இவ்வுலகில் எல்லோரும் சுபீட்சமாய் இருக்கக்கூடிய வழியை அடைந்துவிடலாம் என்றும் நினைத் தார்கள். எவ்விதப் போராட்டமுமின்றி கம்யூனிஸத்தை அடைந்து விடலாம் என்பது அவர்கள் மனோராஜ்யம். ஆகவே எத்தனையோ சோஷலிடுகளும், தொழிலாளிகளின் தோழர் களும் இந்தத் தொழிலாளிகளை சமூகத்தின் புண் எனவே கருதி வந்தனர். கைத்தொழில் விருத்தியாக இப்புண்ணும் பெரிதாவதைக் கண்டு அவர்கள் பயங்கொள்ள ஆரம்பித்தனர். எனவே இம்மாதிரி கைத்தொழிலும் அத்துடன் இந்தத் தொழிலாளி களும் வளராதிருக்க வழி தேட ஆரம்பித்தனர். இம்மாதிரி எல்லோரும் தொழிலாளிகளின் வளர்ச்சியைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் பொழுது, மார்க்ஸும்-ஏங்கல்ஸும் மாத்திரம் அவைகளின் வளர்ச்சியில்தான் தங்கள் நம்பிக்கை முழுவதையும் வைத்தார்கள். எவ்வளவுக் கெவ்வளவு பாட்டாளி மக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கின்றதோ அவ்வளவுக் கவ்வளவு நிச்சயமாய் அவர்கள் கம்யூனிசத்தை சீக்கிரம் உண்டாக்க சக்தியுடைய புரட்சிகரமான சிறந்த வர்க்கமாக மாற முடியு மென்பது அவர்களது முடிவு. சுருக்கமாகக் கூறின் ஏங்கல்ஸும்- மார்க்ஸும் தொழிலாளி மக்களுக்கு செய்தவை என்ன வென்றால் தங்களின் சக்தியை யறியாது ஒற்றுமை குன்றி வீழ்ந்து கிடந்த பாட்டாளி சமூகத்திற்கு விழிப்பையுண்டாக்கி, தொழிலாளிகளுக்கு தங்கள் வர்க்க உணர்ச்சியையும் தங்களின் நிலைமை அறிந்து ஒற்றுமையாய் எழுந்து நிற்கும் சக்தியையும் கொடுத்தார்கள். இம்மாபெரும் மகான்களின் இடைவிடாத உழைப்பால் எழுச்சி தரும் பணியால்தான் பாட்டாளி மக்கள் பகற் கனவு காண்பதை விட்டு விஞ்ஞான ரீதியான வழிகளில் தங்கள் சங்கங்களை அமைத்து வர்க்க உணர்ச்சியை யூட்டியும், கிளர்ச்சிகள் பல புரிந்து இன்று வலுப்பெற்று தங்களின் பரிபூரண உரிமையைப் பெறத் தயாராகி வருகின்றனர். பிறப்பு இந்த இணைபிரியா மனித மாமேதாவியான மார்க்ஸின் தோழர் ஏங்கல், ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த பிரஷ்யா (Prussia) நாட்டிலுள்ள பார்மன் (Barmen) என்ற இடத்தில் 1820ஆம் ஆண்டு பிறந்தார். 1838ஆம் ஆண்டில், குடும்பத்தில் நேரிட்ட பொருளாதார கஷ்டத்தால் தன் படிப்பை ஜிம்னேஷியம் (Gymnasium) என்ற ஜெர்மன் கலாசாலையில் அரைகுறையாய் நிறுத்திவிட்டு பிரமன் (Bremen) என்ற ஊரிலுள்ள வியாபார தலத்தில ஒரு வியாபாரியாகத் தொழில் புரிந்து வந்தார். ஆனால் அவ்வுத்தியோகத்தில் இருக்கும் பொழுதே தம் கருத்தை அரசியல் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் அதிகம் செலுத்தி தம் அறிவை வளர்த்து வந்தார். அவர் மாணவரா யிருக்கும் பொழுதே எதேச்சதிகாரத்தையும், தான்றோன்றித் தனத்தையும் வெறுத்து வந்தார். இவ்வெறுப்பை அவருடைய தத்துவ சாதிரஆராய்ச்சி இன்னும் அதிகமாக்கிற்று. இவர் காலத்தில் ஜெர்மனியில் ஹெகல் (Hegel) என்னும் பேராசிரியரின் கருத்துக்கள்தான் தத்துவ சாதிரங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தன. ஹெகல், பிரஷ்ய ராஜாங்கம் (Prussian State) நடத்தும் எதேச்சதிகாரத்தைப் புகழ்பவராயிருந்தாலும், அவரது உபதேசத்தில் சிறந்த குணம் ஒன்று இருந்தது. இப் பிரபஞ்சத்தில் எப்பொழுதும் மாறுதலும், வளர்ச்சியும் முரண்பாடுகளினால் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது என்பது அவருடைய அபிப்பிராயம். மார்க்ஸும் ஏங்கல்ஸும், ஹெகலின், பிரபஞ்சம் மாறுபட்டுக் கொண்டே வருகிறது என்னும் சித்தாந்தத்தை ஒத்துக் கொண்ட போதிலும், அம்மாறுபாட்டின் காரணத்தை இயற்கைப் பொருள்களிலும் அவற்றின் அமைப்பிலும்தான் உண்டென்று கூறி தலை கீழாக நின்ற தத்துவத்தைச் சரிவர நிறுத்தினர். இவர்கள்தான் லோகாயதவாதிகள் (Materialists). . ஆகவே இவர்கள் இயற்கையில் உண்டாகும் விசித்திரங்களை யெல்லாம் பௌதீக காரணங்களைக் கொண்டே தெளிவுபடுத் தினார்கள். அதே போன்று சமூகத்தில் வளர்ச்சியும் பௌதீகமான உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியைப் பொருத்தேயிருக்கிறது என்பது அவர்கள் துணிவு. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் தங்களுடைய அவசியமான பொருள்களை உற்பத்தி செய்வதில் உள்ள சம்பந்தம் உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியைத் தான் பொருத்திருக்கிறது. ஆகையால் இந்த சம்பந்தங்களைக் கொண்டே சமூக வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களுக்கும் மனிதனுடைய உயர்ந்த நோக்கங்களுக்கும் அவனுடைய எண்ணங்கள், சட்டங்கள் இவைகளுக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். புரட்சி சக்திகள் உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சிதான் தனி உடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக சம்பந்தங்களை உண்டாக்கு கின்றது. ஆனால் அதே வளர்ச்சிதான் பெரும்பான்மை யானோரின் உடைமையையும் ஒழித்து ஒரு சிலர் கையில் மட்டும் முதலைக் (Capital) கொடுக்கிறது. கடைசியாக சொந்த முதல் என்பதையே ஒழித்து இந்த நவீன சமூக நிலையையும் அழித்து விடுகிறது. இந்த வளர்ச்சிதான் கம்யூனிடுகளை அவர்களது இலட்சியத்திற்கு இட்டுச் செல்கிறது. கம்யூனிடு கள் அறியவேண்டுவது என்னவென்றால், எந்த சமூக சக்திகள் உண்மையில் கம்யூனிஸத்தை வேண்டுகின்றது என்பதை உணர்ந்து, அந்த சக்திக்கு கம்யூனிஸத்தின் அவசியங்களையும், அதைப் பெற அவைகள் செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துக்காட்டி அவைகளுக்கு நிலை கலங்கா உணர்ச்சியையும் உறுதியையும் உண்டாக்க வேண்டும். கம்யூனிஸத்தை நிர்பந்தமாய் வேண்டி நிற்கும் சக்தி தொழிலாளிகளின் புரட்சிகரமான பெருஞ்சக்தியே யாகும். இம்மாபெரும் சக்தியின் வலிமையையும், பெருமையையும் நன்குணர்ந்த பெரியார்களில் காரல் மார்க் -ஏங்கல்ஸைவிட சிறந்தவர்கள் யாருமில்லை. அவர்களது நூற்களிலெல்லாம் இச்சக்திகளை ஒன்று திரட்டி, வலுப்படுத்தி இவ்வுலகில் பொன்றா இன்பத்தை நல்கும் ஓர் புதிய சமுதாயத்தை நிர்மாணிக்கும் வழிகளைத்தான் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளார்கள். ஏங்கல்ஸும் மார்க்ஸும் 1843இல் மார்க்ஸும் அவரது நண்பன் அர்னால்டு ரூஜ் (Arnold Ruge) என்பவரும் சேர்ந்து பாரீஸிலிருந்து வெளியிட்ட பிராங்கோ ஜெர்மன் வருட அனுபந்தம் (Deutsch Franzoesisch Jahrbucher) என்னும் சீரிய பத்திரிகையில் மான்செடரிலிருந்து ஏங்கல் ஓர் கட்டுரை எழுதினார். அக்கட்டுரை எழுது முன்னர் ஏங்கல் பத்திரிகாலயத்தில் ஒருமுறை மார்க்ஸை சந்தித்துப் பேசினார். அப்பொழுது மார்க் அவரை ஒரு சிறிதும் பொருட்படுத்திப் பேசவில்லை. அவரை ஓர் மனோராஜ்யக் காரராக எண்ணினார். பின்னர் ஏங்கல்ஸின் கட்டுரையைப் படித்த பின்னரே அவரிடத்தில் நன்மதிப்பும் நல் அபிப்பிராயமும் கொண்டார். திரும்பவும் அவரை நேரில் கண்டு பேச எண்ணி அவருக்கு ஓர் கடிதம் எழுதினார். மார்க்ஸின் கடிதத்தைக் கண்டதும் ஏங்கல் விரைந்து 1848ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக மார்க்ஸை சந்தித்தார். புணர்ச்சி பழகுதல் வேண்டாம் உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்னும் வள்ளுவர் மொழிக்கேற்ப ஒத்த உணர்ச்சியும், ஒத்த கொள்கையுமுடைய இரு பெரும் மேதாவிகளையும் இந்த இரண்டாவது சந்திப்பு இணைபிரியாத நண்பர்களாக்கி விட்டது. ஒருவர் உள்ளத்தை ஒருவர் நன்குணர்ந்து கொண்டனர். அன்று முதல் அவர்களின் இறுதிச் சுவாசம் விடும் வரை பூவும் மணமும் போல பிரிக்க முடியாத பெரும் நட்பினர்களாய் வாழ்ந்தனர். ஏங்கல் மார்க்ஸைப் போல் மாபெரும் படிப்பாளியல்ல வாயினும், தெளிந்த அனுபவ ஞானமும், அறிவுமுடையவர். அவரது அபிப்பிராயங்கள் தெள்ளத் தெளிய பளிங்குபோல் காணப்படும்: நன்றாகப் பரிசீலனை செய்து முடிவு கட்டப் பட்டதாக இருக்கும்: செயலில் செய்து காட்டக் கூடியதாக எளிதாக இருக்கும். ஏங்கல்ஸும் மார்க்சும் சோஷியலிஸத்திற்கு உடலும் உயிரும் போல் விளங்கினர். எங்கெங்கு எவ்வெவரால் சோஷியலிஸத்திற்கு எதிர்ப்பு எழுந்தாலும் உடனுக்குடன் அவைகளை அலசி ஆராய்ந்து அவர்களின் வாதங்களை நிர்மூலஞ் செய்து வந்தனர். எத்தனையோ இவர்களது பழைய நண்பர்கள் இவர்களது புதிய சித்தாந்தங்களை எதிர்த்தனர். என்றாலும் தயவு தாட்சண்யமின்றி பத்திரிகைகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள் மூலமாகவும் கண்டித்து அவர்கள் வாதங்களை யெல்லாம் நிர்மூலஞ் செய்து ஸோஷியலிட் சித்தாந்தங்களுக்கு ஒரு பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் நிலை நாட்டியுள்ளனர். ஏங்கல்ஸும் பாட்டாளி மக்களும் ஏங்கல்ஸின் தந்தையால் இங்கிலாந்தின் கைத்தொழில் களுக்கு ஹிருதயம் போன்று விளங்கும் மான்செடர் நகரில் எர்மன் அண்டு ஏங்கல் (Ermen and Engels) என்னும் பெயரால் நடத்தப்பட்டு வரும் தொழிற்சாலையில் 1842ஆம் ஆண்டில் ஓர் மானேஜராக அமர்ந்தார். அன்று முதல்தான் அவருக்கு சுயசிரம ஜீவிகளின் தொடர்பு உண்டாயிற்று. அவர் ஏனைய மானேஜர் போன்று கம்பெனியின் ஊதியத்திலோ அன்றித் தனது சம்பளத்திலோ கண்ணும் கருத்துமாய் இருப்பவராக இல்லை. தொழிலாளிகளின் குள்ளக் குடிசைகளுக்கு நேரில் சென்று அவர்களது பரிதாபகரமான வாழ்க்கையைப் பார்த்து பரிதாபங் கொண்டார். அவர்களது சுகாதாரமற்ற உடைகளையும், சுற்றுப்புறங்களையும் பார்த்துப் பெருமூச்சு விட்டார். சாரமற்ற அவர்களது சாப்பாட்டைக் கண்டு கண்ணீர் விட்டார். அழுக்குப் படிந்த உடையும், ஒட்டிய வயிறும், குழி விழுந்த கண்களையுமுடைய அவர்களது செல்வச் சிறுவர்களைப் பார்த்து மனம் நொந்தார். தொழிலாளிகளின் கஷ்டங்களையும் முதலாளிகளின் மனோபாவங்களையும் உள்ளதை உள்ளவாறே உணர்ந்தார். இதன் முன்னர் தொழிலாளர்களின் கஷ்டங் களையும், அவர்களது தேவைகளையும் பற்றி எழுதப் பெற்ற பல நூற்களையும் படித்துணர்ந்தார். இந்த ஆராய்ச்சியின் பயனாக 1845ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமை (The condition of Working-class in England) என்னும் சிறந்த நூலை எழுதி வெளியிட்டார். ஏங்கல்ஸுக்கு முன்பாக சுயசிரமஜீவிகளின் (Proletariats) கஷ்டங்களைப் பற்றி பல அறிஞர்கள் படித்து வர்ணித் துள்ளார்கள். ஆனால் முதன்முதலாக சுயசிரமஜீவிகள் தாங்க முடியாத் துயரத்தால் தவிக்கும் ஒரு பெரும் வர்க்கமென்றும், அவர்கள் படும் துயரத்திற்கு வெட்கப்படத் தகுந்த அவர்களது பொருளாதார நிலையே அவர்கள் தம் கஷ்டங்களையுணர்ந்து இறுதியாக தம் விடுதலைக்குப் போராடும்படித் தூண்டும் என்றும், உலகிற்கு வெகு பஷ்ட்மாய் எடுத்துக் காட்டியது ஏங்கல்தான். போராடும் சுயசிரமஜீவிகளுக்கு உதவியாக இருப்பவைகள் அவர்களது தளராத முயற்சியும் பிரியா ஒற்றுமையுமேயாகும்: சுயசிரம ஜீவிகளின் அரசியல் இயக்கமானது பாட்டாளி மக்களுக்கு சோஷியலிசத்தைத் தவிர தங்கட்கு வேறு கதியில்லை யென்ற முடிவை இறுதியாக புரட்சி 1848ஆம் ஆண்டில் பிரான்சு (France) தேசத்தில் ஏற்பட்ட பெரும் புரட்சி ஐரோப்பா முழுதும் காட்டுத் தீப்போல் பரவிற்று. இதனால் மார்க்ஸும் ஏங்கல்ஸும் தங்கள் தாய் நாடாகிய ஜெர்மனுக்குப் போய்ச் சேரவேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார்கள். எனவே அங்கு சென்று பிரஷியாவிலுள்ள கொலன் என்னும் நகரில் வாசஞ் செய்து கொண்டு 11-6-1848இல் நியூ-ரினிஷ்-சிட்டங் (New Rheinische zeitung) என்ற ஓர் ஜனநாயகப் பத்திரிகையைப் பிரசுரித்து வந்தனர். இவ்விரு நண்பர்களுந்தான் பிரஷியாவில் வளர்ந்த புரட்சிகரமான ஜனநாயக லட்சியங் களுக்குக் காரண பூதர்களாய் இருந்தார்கள். அங்கு இரவு பகல் இடைவிடாது ஏழை-எளிய பாட்டாளி மக்களின் பரிபூரண உரிமைக்காகப் பாடுபட்டு வந்தனர். எனவே இவர்களும் இவர்களது பத்திரிகையும் சர்க்காரின் கோபத்திற்கு இலக்காகி, அவர்களது பத்திரிகைக்கு 19-5-1849இல் தடை விதிக்கப்பட்டது. 1849ஆம் ஆண்டு ஜூலை மாதம் மார்க் நாடு கடத்தப்பட்டு லண்டன் வந்து சேர்ந்தார். எங்கல் பிரஜைகளின் ஆயுதந் தாங்கிய கிளர்ச்சியில் பங்கு எடுத்துக் கொண்டார். அந்நாட்டின் சுதந்திரத்திற்காக நடந்த மூன்று யுத்தங்களிலும் பிரஜைகள் தோல்வியுற்றனர். எனவே ஏங்கல் அங்கிருந்து விட்ஜர்லாந்து (Switzerland) தேசத்தின் வழியாக சர்க்கார் கண்ணிற்குத் தென்படாமல் தப்பித்துக் கொண்டு லண்டன் வந்து சேர்ந்தார். ஆராய்ச்சி மார்க் லண்டனில் நீண்ட நாள் வசித்து வந்தார். அங்கு உலகில் ஒப்பற்ற, உழைப்பாளர் வேதம் என்று கூறப்படும் மூலதனம் (Capital) என்னும் மாபெரும் நூலை முடிப்பதற்கும், சர்வதேச தொழிலாளர் தாபனத்தை நிர்மாணிப்பதற்கும், அவர் ஆற்றும் சிறந்த பணியை நிறைவேறவொட்டாது, வறுமைப் பேய் மார்க்ஸோடும், அவரது தோழர் ஏங்கல் ஸோடும் இடைவிடாது போர் புரிந்து வந்தது. தம் நண்பர்கள் எழுதிய கடிதங்களுக்கு பதில் எழுத டாம்பிற்கும், புத்தகங்கள் எழுத தாளுக்கும், கையில் காசின்றி தன் உடைகளையும், வீட்டிலுள்ள பாத்திர பண்டங்களையும் விற்று டாம்பு, தாள், மை (Ink) முதலியவைகளை வாங்க வேண்டிய நிலைமையிலே காலங் கழித்து வந்தார். அவரது அருமைக் குழந்தைகள் வறுமையால் வாடி எலும்பும் தோலுமாய் பல்வேறு நோய்களுக் காட்பட்டு பெரும் கஷ்டங்கள் விளைந்தன. அவரது செல்வச் சிறுமி பிரான்ஸிகா இறந்தபொழுது சாவு கிரியைகளை நடத்த மார்க் 2 பவுனுக்கு பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மனைவியோ கட்டிய ஆடையைத் தவிர வேறு மாற்று ஆடையின்றி கண்ணீரும் கம்பலையுமாய் வாடி நின்றாள். உலகில் இதுவரை தோன்றிய மகான்களுக்கெல்லாம் மகானாய் விளங்கும் மார்க், வறுமை தாங்கமாட்டாது லண்டனிலுள்ள காட்சி சாலையில் நின்று கொண்டு வருவோர் போவோருக்கு காட்சி சாலையைப் பற்றிய விவரங்களை எடுத்துரைத்து, அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு காசுகளைப் பெற்று, அக்காசும் தம் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கால் வயிற்றுக் கஞ்சிக்கும் ஆற்றாது இருக்கும் இவ்வேழ்மை நிலையில் தாமும் தம் அருமை மனைவியும் தம் வயிற்றுக்குள் கையை வைத்து படுத்துக் கொள்ளும் பரிதாபக் காட்சியைக் கண்டு மனம் கலங்கி ஏங்கல் இதற்கு என்ன செய்வது என பலநாள் எண்ணி உள்ளம் நொந்தார். ஏங்கல்ஸிடம் கையில் காசில்லை. அவரது தந்தையோ புரட்சி இயக்கத்தை விட்டு நீங்கினாலன்றி தன்னால் பணம் கொடுக்க முடியா தென்கிறார். இந்நிலையில் ஏங்கல் ஆழ்ந்து சிந்தித்து தன் தந்தையிடம் சென்று தான் இனி புரட்சி இயக்கத்தில் ஈடுபடுவதில்லை என்று உறுதி கூறி தன் தந்தை யோடு சேர்ந்து மிகச் சௌகரியமான வாழ்க்கையை நடத்தி வந்தார். முன்போல் தன் தந்தையின் தொழிற்சாலையில் உத்தியோகம் பெற்று அவர் அளித்த வாக்குறுதிப்படி இருபது ஆண்டுகளைக் கழித்து விட்டார். இதனிடையே அவர் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மனித சிரேஷ்டர் மார்க்ஸை சந்திக்கவோ, புரட்சி இயக்கத்தில் ஈடுபடவோ செய்யாது தம் தொழிலில் கவனஞ் செலுத்தி வந்தார். ஆனால் இடை இடையே மார்க்ஸிற்கு கடிதம் எழுதி வந்ததோடு, கொஞ்சம் காலத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக அவருக்கு பணமும் அனுப்பி வந்தார். மார்க்ஸின் வறுமைப்பிணி முற்றாய் ஒழிய வில்லை என்றாலும் ஓரளவு அவரது கஷ்டங்கள் குறைந்தது என்றே கூறலாம். 1860ஆம் ஆண்டில் ஏங்கல்ஸின் தந்தை இறந்து விட்டார். அது முதல் மார்க்ஸிற்கு தாராளமாய் பண உதவி கிடைத்தது. தந்தையின் மரணத்திற்குப் பின் ஏங்கல் தனது தொழிற்சாலையை பெருந்தொகைக்கு விற்று விட்டார். அதனால் ஏராளமான செல்வத்தைப் பெற்ற ஏங்கல் மார்க்ஸிற்கு மிகத் தாராளமாய் ஆண்டொன்றிற்கு 350 பவுன் கொடுத்துதவினார். மார்க்ஸின் வறுமைப் பிணியும் ஒருவாறு ஒழிந்தது. ஏங்கல்ஸின் தாராளமான பொருளுதவியின் மீது உலகிற் சிறந்த விஞ்ஞான- பொருளாதார சாதிரமாகிய மூலதனத்தின் (Capital) முதற் பாகத்தை 1867ஆம் ஆண்டில் மார்க் பூர்த்தி செய்தார். 1870ஆம் ஆண்டு ஏங்கல் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் 1883ஆம் ஆண்டு வரை மார்க்ஸின் அருகிலே இருந்து கொண்டு விஞ்ஞான ரீதியாக சோஷியலிட் தத்துவங்களை தெளிவாக விவரிப்பதிலே தங்களது காலத்தைச் செலவிட்டு வந்தனர். 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மார்க் தம் இல்லத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே உயிர்துறந்தார். அப்பொழுது ஏங்கல் அவர் அருகில் இல்லை. ஏங்கல் மார்க் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது, அவரது ஆருயிர்த் தோழரும், அரசியல் குருவும், மாபெரும் தீர்க்கதரிசியுமான மார்க் தன் இறுதி சுவாசத்தை விட்டு விட்டார் என்பதைக் கேட்டு ஆற்றொணாத் துயருற்றார். ஏங்கல் மிகக் கண்யமான முறையில் அவரது பிரேத அடக்கத்தை முடித்து, லண்டனிலுள்ள ஹைக்கேட் கல்லறையில் அவர் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவு அங்கு விஜயஞ் செய்தவர்களின் உள்ளத்தைப் பெரிதும் உருக்கி விட்டது. மார்க் மறைந்த பின்னர், ஏங்கல் சிறிதும் பெரிதுமான பல நூற்களை வெளியிட்டார். மார்க் எழுதிய நூற்களில் முதலாளித்வம், பொருளாதாரம் என்ற சிக்கலான விஷயங்களை நன்றாய்ப் பிரித்து ஆராய்ந்திருக்கிறார். ஏங்கல்ஸோ மார்க்ஸின் தேச சரித்திரம், பொருளாதாரத்துவம் இவைகளின் லோகாயதத் தன்மையையும், விஞ்ஞானத்தைப் பற்றிய எத்தனையோ பிரச்னைகளையும் தன் நூற்களில் எளிய நடையில், தெள்ளத் தெளிய எவரும் அறிந்து கொள்ளும் முறையில் தெளிவு படுத்தியிருக்கின்றார். இத்தகைய நூற்களில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது ட்யூரிங்கிற்கு (Deuring) எதிராக எழுதப்பட்ட ஆண்டி டியூரிங் (Anti-Deuring) என்ற தத்துவ நூலும்: குடும்பம், தனி உடைமை, அரசாங்கம் இவற்றின் ஆரம்பம் (The origin of the family, private property and the State) என்ற மற்றொரு நூலும், லுட்விக் பியூர்பர்க் (Ludwig Feuerbach) என்ற நூலும் ஆகும். மார்க் ஆரம்பித்த மூலதனம் என்பது முதலாளித்வ சமூகத்தின் பொருளாதார அமைப்பை அதிநுட்பமாய் அறிந்து விளக்கும் அரியநூலென்றே கூறவேண்டும். இப்புத்தகத்தின் மூன்றாம் பாகத்தைப் பற்றி சில குறிப்புகளே மார்க் எழுதியிருந்தார். அவற்றை விளக்கி, முதலாளித்வ வளர்ச்சியைப் பற்றிய பாகங்களை எங்கெல் எழுதி முடித்தார். எங்கெல் பூர்த்தி செய்ததால் மூலதனம் மாறிவிடவில்லை. உண்மையில் இவ்விரு பாகங்களும் இவ்விரு மகான் களாலும் எழுதப் பட்டவைகள் என்றுதான் கூற வேண்டும். நாம் கதைகளில் எத்தனைதரம் நட்பின் பெருமையைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஆனால் ஐரோப்பிய சுயசிரம ஜீவிகளுக்கு எல்லாக் கதைகளிலும் காணப்படும் சினேகிதத்தைவிட மிகவும் போற்றக்கூடிய நட்பையுடைய இந்த இரு தோழர்களால் தங்களுக்காக பல சாதிரங்கள் எழுதப்பட்டன என்பதை யாவரும் அறிவர். எங்கல் எப்பொழுதும் தன்னை மார்க்க்கு பின்னணியிலேயே வைத்துக் கொண்டார். அவர் தன் சினேகிதர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கூட நான் எப்பொழுதும் மார்ஸுக்கு ஒத்துப் பாடுகிறவன் என்று குறிப்பிட்டுள்ளார். மார்க் உயிருடன் இருக்கும் வரை அவர் பேரில் எங்கல்க்கு இருந்த அன்பும் அவர் இறந்தபின் அவரிடத்திலுள்ள மரியாதையும் எவராலும் அளவிட்டுரைக்க முடியாது. திட சித்தமும், அஞ்சா நெஞ்சமும், அபார ஞானமும் பெற்ற எங்கல் ஒரு அன்பு நிறைந்த இளகிய ஹிருதயத்தைப் பெற்றிருந்தார். 1848 முதல் 1849ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சியிலும், ஜெர்மன் புரட்சியிலும் படு தோல்வியடைந்து நாடு கடத்தப்பட்ட மார்க்ஸும், எங்கல்ஸும் விஞ்ஞான ஆராய்ச்சியில் மட்டும் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. 1864ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்திலும் தம் கவனத்தைச் செலுத்தி முதலாவது இண்டர் நேஷனல் என்னும் (First International) மாபெரும் தொழிலாளர் தாபனத்தை நிறுவினர். அதை பத்தாண்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். எங்கல் இதில் போதிய பங்கெடுத்து மார்க்ஸின் வலதுகரம் போல் உழைத்து வந்தார். இந்த முதலாவது இண்டர் நேஷனல் செய்யும் தொண்டால் சர்வதேச சுயசிரமஜீவிகளும் ஒன்று சேர்வார்கள் என்று மார்க்ஸும் எங்கல்ஸும் எதிர் பார்த்தனர். தொழிலாளர் இயக்கத்திற்கு அம் மாபெரும் தாபனம் மிகவும் சாதகமாய் இருந்தது. 1870-ம் வருஷத்திற்கு பின் அந்த தாபனம் சின்னாபின்னப் பட்டுப் போன பின்னரும் மார்க்ஸும் எங்கல்ஸும் தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டும் வேலையில் தளராது பணிபுரிந்து வந்தனர். தொழிலாளர் இயக்கம் வளர வளர அவ்வியக்கத்தின் வழிகாட்டிகள் என்ற நிலையில் மார்க்ஸூக்கும் எங்கல்ஸுக்கும் பெரும் கீர்த்தியும் மதிப்பும் வளர்ந்து வந்தன. மார்க்ஸிற்குப் பின் எங்கல் மட்டுமே ஒப்பற்ற தனிப்பெரும் தலைவராய் ஐரோப்பிய சோஷியலிட்களுக்கெல்லாம் வழிகாட்டியாயும் தலைவராயும் விளங்கினார். ஜெர்மன் சோஷியலிட்கள் மற்றும் பின்னணியில் நிற்கும் தேசங்களான பெயின் (Spain) ருமேனியா (Rumania) ரஷ்யா (Russia) முதலிய நாடுகளிலிருந்த சோஷியலிடுகளும், இவரது ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் உபதேசங்களையும் பெற விரும்பினார்கள். ஆழ்ந்த அறிவும் தேர்ந்த அனுபவமுமுடைய எங்கல்ஸினிடமிருந்து பெறற்கரிய நன்மைகளை யெல்லாம் பெற்றனர். ரஷியாவும் இந்தியாவும் மார்க்ஸும் எங்கல்ஸும் ரஷிய பாஷையையும் நன்குணர்ந் திருந்தனர். ரஷ்ய நாட்டின் மீது அவர்களுக்கு ஓர் அன்பும் அனுதாபமும் இருந்து வந்தன. ஆகையால் ரஷ்யாவில் புரட்சி இயக்கத்தின் வளர்ச்சியை அவர்கள் நன்றாய்க் கவனித்து வந்தனர். அதுவுமன்னில் ரஷியப் புரட்சிக்காரர்களுடன் அவர்கள் அதிக சம்பந்தமும் வைத்திருந்தார்கள். இருவரும் கம்யூனிட்களாக ஆவதற்கு முன் ஜனநாயக வாதிகளாய் இருந்தார்கள். ஆகையால் கொடுங்கோன்மையை அடியுடன் வெறுத்தல் என்பது அவர்களுடைய உள்ளத்தில் ஊறி உறைந்து போயிருந்தது. இம்மாதிரியான அரசியல் உணர்ச்சியும், கொடுங்கோன்மைக்கும் பொருளாதார அடக்குமுறைக்கும் உள்ள சம்பந்தங்களைப்பற்றி அவர்களுக்கு இருந்த அறிவும், அவர்களது உலக அனுபவமும் அவர்களை மிகத் தீவிரமாய் அரசியலில் தலையிடும்படி செய்துவிட்டது. ஆகையால் சில புரட்சிக்காரர்கள் மகத்தான ஸாரின் அரசாங்கத்தை எதிர்த்த பொழுது மார்க்ஸிற்கும், எங்கல்ஸிற்கும் அப்புரட்சிக்காரர் கள்மீது பூரண அனுதாபமும் அன்பும் வளர்த்தன. ஆனால் முக்கிய பிரச்னையான அரசியல் விடுதலையை விட்டுவிட்டு ஏதோ கிடைக்கும் சில பொருளாதார நலங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தியபோது அவர்கள் சோஷியலிட்டுகள் அல்லவென்று எங்கல்ஸூம் அவரது நண்பரும் நன்கு விளக்கி, சோஷலிஸத்தையே வளர்த்தனர். சமூகப் புரட்சியின் பெரும் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறதுதான் சீர்திருத்த வாதிகள் கூற்று என்று அவர்கள் கருதுகிறார்கள். சுயசிரம ஜீவிகளின் விடுதலை அவர்களின் உழைப்பினாலேதான் கிடைக்கும் என்ற உயரிய தத்துவத்தைத்தான் இருவர்களும் அடிக்கடி உபதேசித்து வந்தனர். ஆனால் பாட்டாளி வர்க்கத்தினர் பொருளாதார விடுதலை அடைவதற்கு அரசியல் சுயேச்சை முதன்மை என்னும் அவசியத்தை விளக்கினர். மேலும் ரஷியாவில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டால் அது மேற்கு ஐரோப்பாவில் உள்ள தொழிலாளி இயக்கத்திற்கு சாதகமாய் இருக்கும் என்று எண்ணினர். ஏன் எனில் பிற்போக்கிற்கே ஓர் பெரும் கோட்டையாக ரஷியா விளங்கியது. 1870ஆம் ஆண்டில் ஜெர்மனியும் பிரான்சும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்ததால் ரஷ்யாவில் பிற்போக்குத்தன்மை வளர்ந்துவர வெகுசாதகமாய் இருந்தது. சுதந்திர ரஷியாதான், ஐரோப்பாவிலேயே அதிகமான ராணுவ சுமையைக் குறைக்க முடியும் என்று நம்பினர். எளிதில் அங்குள்ள தொழிலாளிகளின் சக்தியை விருத்தி செய்து பிற்போக்குத் தன்மையையும், எதேச்சாதிகாரத் திமிரையும் இருந்த இடம் தெரியாது தகர்த்தெறிய முடியும் என்று கருதினர். ஆகையால்தான் மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்களின் நலனுக்காக ரஷியாவில் கண்டிப்பாக அரசியல் சுதந்திரத்தை தாபித்துவிட வேண்டுமென்ற திடமான முடிவிற்கு வந்தனர். அம்மகத்தான ஆசை 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பூர்த்தி செய்யப்பட்டு, பொருளாதார அரசியல் சுதந்திரம் பெற்று மார்க் -எங்கல்ஸின் தத்துவங்கள் நடைமுறையில் சாத்யமா என்பதை 21 ஆண்டுகளாய் பரீட்சை செய்யப்பட்டு ஸோவியத் ரஷியாவில் ஜெயக்கொடி நாட்டப்பட்டிருக்கிறது. எங்கல்ஸும் மார்க்ஸும் இங்கிலாந்து, பிரான்சு, பெல்ஜியம், ஜர்மனி, ரஷ்யா, அமெரிக்கா முதலிய நாடுகளின் சமூக, அரசியல் பொருளாதார நிலைகளைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தார்கள் என்றும், அந்த நாடுகளின் சுயசிரம ஜீவி களுக்காகவே பாடுபட்டு வந்தார்கள் என்றும் ஒரு சிலர் அறியாமையால் கூறி வருகின்றனர். அவர்கள் சர்வதேச சமூக அரசியல், பொருளாதார நிலமைகளைப் பற்றியும் சர்வதேசத் தொழிலாளர் விடுதலையைப் பற்றியுமே சதா ஆராய்ந்து கொண்டும், எழுதிக் கொண்டும், சங்கங்கள் அமைத்துக் கொண்டும் வந்தார்கள். நமது பாரத நாட்டைப் பற்றியும் அதில் கிழக்கிந்திய கம்பெனியார் எப்படி கால் வைத்தார்கள் என்றும் எவ்விதமாய் இந்நாட்டைக் கைப்பற்றி இந்நாட்டின் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையடித்து இத்தேசத்தின் மகத்தான கைத்தொழில்களை நசுக்கி நாளடைவில் எவ்வாறு இந்நாட்டை சுரண்டி வருகிறார்கள் என்றும் மிகுந்த புள்ளி விபரங்களோடு ஆராய்ந்துள்ளார்கள். அவ்வித ஆராய்ச்சிகளை சிறு சிறு கட்டுரையாக அமெரிக்க மக்களுக்காக நியூயார்க் நகரிலுள்ள டெய்லி டிரிபியூனில் (Daily Tribune) 1853ஆம் ஆண்டில் எங்கல்ஸின் இணை பிரியாத் தோழர் கார்ல் மார்க்ஸினால் பல கட்டுரைகள் எழுதப்பட்டன. அவைகளின் சிலவைகளைத் திரட்டி இந்தியாவைப் பற்றிய கடிதங்கள் (Letters on India) என்று பெடி (Bedi) தம்பதியினர் ஆங்கிலத்தில் ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கின்றனர். அதைப் படித்தால் சோஷியலிட் தலைவர்களுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது; எங்கள் நாட்டு மனிதர் வேறு, மேனாட்டு மனிதர் வேறு; எங்கள் நாட்டு பசி வேறு, மேனாட்டுப் பசி வேறு; எங்கள் நாட்டுத் தரித்திரம் வேறு, மேனாட்டுப் தரித்திரம் வேறு; எங்கள் நாட்டு மக்களின் தன்மைக்கும், அவர்களுடைய பசிக்கும், வறுமைக்கும் எங்கள் நாட்டுப் பழம்பெரும் ஏடுகளிலே தக்க நிவர்த்தி மார்க்கம் கூறப்பட்டிருக்கிறது; அவைகளை எங்கள் நாட்டு கிணற்றுக் கிழத்தவளை ராஜ தந்திரிகளுக்கு எங்கள் அந்தராத்மா விளக்கிக் கூறும் என்று வறட்டு ஞானம் பேசும் முரட்டு தேசிய வாதிகளுக்கும் 80 ஆண்டுகட்கு முன்னரே விஞ்ஞான சோஷிய லிஷம் கருவாகு முன்பே, இந்தியாவின் நிலைமையையும், இது நாடுகளின் நிலைமையையும் நண்குணர்ந்தே எல்லா நாட்டு மக்களுக்கும், சோஷியலிஸம் ஏற்றதாக இருக்கும் வண்ணம் ஒழுங்குபட அதை உலகிற்களித்தனர் என்பதைத் தெளிவாய் உணரலாம். சோஷியலிஸம் ஏதோ ஒரு சில தலைவர்களின் முயற்சியினாலும், பிரசாரத்தினாலும் எழுவதன்று. அவைகள் மனித சமூகத்தின் தேவைகளை யொட்டி யெழும் ஓர் சமூக - பொருளாதார - அரசியல் புரட்சியாகும். அந்த மனித சமூகத்தின் தேவைகள் பூர்த்தியாகும் வரை அந்த இயக்கத்தை எவரும் தடுத்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது. அதையெதிர்த்து ஆயிரக்கணக்கான பத்திரிகைகள், லட்சக்கணக்கான தலைவர்கள் எதிர்த்து நின்றாலும் அவைகளையெல்லாம் மீறி சொஷியலிஸம் பொங்கிக் குமுறி எதிர் நிற்பவைகளை வாரி அடித்துக்கொண்டு செல்லும் என்னும் உண்மைகளை எங்கல் உலகிற்கு எடுத்துக் காட்டினார். மறைவு இத்தகைய மாபெரும் மகான், சர்வதேசப் பாட்டாளி மக்கள் கண்ணீர் - இந்த அகில உலக கம்யூனிட்கள் உள்ளம் கொதிக்க 1895ஆம் ஆண்டு ஆகடு மாதம் 5ஆம் தேதி தமது கண்களை மூடினார். அன்று மூடிய கண்கள் என்றும் திறக்கா திருந்து விட்டது. எனது இலங்கைப் பிரயாணம் இயற்கை வளமும், செயற்கை நலமும் செழித்து ஒளிரும் எழின்மிகும் இலங்கைத் தீவிற்கு எமது ஊர்வாசிகளில் பெரும் பாலோர் சென்று வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வருகின்றனர். எம் உற்றாரும் நண்பருமான பல்லோர் ஆண்டு வசித்து வருகின்றனர். அன்னோர் இணையிலா இந்தியா நன்னாட்டினருகில் இலங்கும் இலங்கைமாநாட்டிற்கு ஒரு முறையாவது போந்து ஆண்டு உள இயற்கைக் காட்சிகளையும், மக்களின் நாகரிகங்களையும், பழக்க வழக்கங்களையும் கண்டுவருவதுடன் தங்களுடன் சிறிது நாட்கள் வதிந்து வரும்படி வேண்டிக்கொண்டனர். அவர்களின் விருப்பப்படி கிறிதும விடுமுறை நாட்களை ஆண்டு கழித்துவிட்டு வரலா மென்று 18.12.31இல் தூத்துக்குடி மூலமாய் கப்பலேறிச் சென்றேன். கப்பலிலே 3வது வகுப்புப் பிரயாணிகள் படும் கஷ்டங்கள் அளவிட்டு உரைக்க முடியா. பொதுவாக முதல், 2வது வகுப்புகளில் பிரயாணஞ் செய்வோர் நோயற்ற யாக்கை யுடையவர்கள் என்று இலங்கை அரசாங்கத்தார் எண்ணி 3வது வகுப்பிலும், டெக்கிலும் பிரயாணஞ் செய்வோருடைய உடைகள் மருந்து கலந்த தண்ணீரில் அவிக்கப் படுவது உடன் அவர்களும் அங்குள்ள தண்ணீரில் குளிக்கப்பட வேண்டும் எனச்செய்து இருக்கின்றனர். முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புப் பிரயாணிகளுக்கு இத்தகைய தொல்லையில்லை. தூத்துக்குடி இலங்கை சுங்கவரி இலாகா (கடம் ஆபீ)வில் கைக் கூலிக்காரர் களின் தொல்லையும், கூலிகளின் தொந்தரவும் அதிகம். கப்பல் பிரயாணத்தினால் எனக்கு ஒரு சிறிதும் மயக்கமோ, கிறுகிறுப்போ உண்டாகவில்லை. பெரிதும் உற்சாகமும் ஊக்கமுங் கொண்டே சென்றேன். இந்துமஹா சமுத்திரத்தின் தண்காற்று உடலிற்கு இன்ப மூட்டியது. பொதுவாக நம் தமிழ் மக்கள் பண்டைக்கால முதலே பார்ப்பன இந்துமதக் கொள்கையாகிய கடல் கடத்தல் கூடாது! என்ற முட்டாள் சட்டத்தைப் புறக்கணித்து திரைகடலோடியும் திரவியந்தேடு என்ற தமிழ்க்கிழவியின் அமிர்தமொழியைக் கடை பிடித்து நீண்ட தூரம் கப்பல் பிரயாணஞ் செய்ய அஞ்சினாலும் இவ்விலங்கைத் தீவிற்காவது வந்திருக்கின்றார்களே என்று தமிழர் களின் இந்நல்ல கொள்கையை எண்ணி எண்ணி இறும்புதெய்தி னேன். தூத்துக்குடியில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட கப்பல் மறுநாள் காலை 9-மணிக்கு கொழும்பின் அழகிய துறைமுகத்தை அடைந்தது. அங்கு எமது நண்பர்கள் பலரும் கப்பலுக்கே நேராக வந்து என்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இத் துறைமுகத்திற்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் ஈஜிப்ட் தேசத்தில் கண்ட எம்பிர ஆப் பிரிட்டன் என்னும் உலகத்தின் பெரிய கப்பல் வந்தது யானும் பார்த்து களிக்கும் சந்தர்ப்பம் பெற்றேன். கொழும்பின் காட்சி இலங்கை தேசத்தின் தலைநகர் கொழும்பே ஆகும். இஃது ஒரு சிறந்த துறைமுகப்பட்டினம். இந் நகரத்தின் கடற்கரை மிகப் பிரசித்தி பெற்றது. இங்கிலாந்து தேசத்தின் மாஜி பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ் கனவான் கூட இக்கடற்கரையின் அழகை வியந்து பாராட்டி இருக்கிறார். உலகத்திலுள்ள அழகிய கடற்கரையில் இது ஒன்றாம். இவ்வூர் நகராட்சி கழகத்தை (கார்பரேஷனை) எவரும் போற்றாதிருக்க முடியாது. நகரத்தின் எல்லாப் பக்கத்திலும் தார் பூசிய அழகிய ரோடுகள் மிகச் சுத்தமாய் வைக்கப்பட்டு இருக்கிறது. நகரத்தின் பற்பல பாகத்திலும் புற்கள் நிறைந்த மைதானங்களும் சிறுவர்களும் பெரியவர்களும் தேகாப்பியாசங்கள் செய்து கொள்ளக் கூடிய வசதியான விளையாட்டு தலங்களும் நகராட்சிக் கழகத்தின் செலவிலேயே செய்யப்பட்டிருக்கிறது. இங்குள்ள போலீகாரர்கள் எல்லாம் ஆங்கிலம் படித்தவர்களாக இருக்கிறார்கள். நான் பார்த்த அளவில் அவர்கள் கண்ணியமாக நடந்து கொள்பவராகக் காணப்படுகிறார்கள். இவ்வூர் சென்னையைப் போன்ற பெரிய நகரமில்லாததாய் இருப்பினும் பெரிய குதிரைப்பந்தயம் என்னும் சூதாடும் இடமும், சுமார் 15க்கு மேற்பட்ட சினிமாக்களும் நகரத்திற்குள் பிரதானமான ரோடுகளிலே கள்ளுக்கடைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. இஃது இந்த நகருக்குப் பெரும் இழிவைத் தருவன வாகும். இங்கு பம்பாய் சென்னை முதலிய இடங்களைப் போல் பெரிய கட்டிடங்கள் அதிகமில்லை. உயர்தரக் கலாசாலைகளும் மிகச்சிறிய கட்டிட மாகத்தான் இருக்கிறது. சிறியதாய் இருப்பினும் ஐரோப்பிய முறையில் வீடுகள் பலவும் நாகரிகமாயும் சுத்தமாயும் நன்கு அலங் கரிக்கப்பட்டிருக்கிறது. மேல்மாடிகள் இல்லாத பங்களாக்களே அதிகம். இந்நகரத்தின் மத்திய பாகம் அதிக ஜனநெருக்கும், வியாபாரப் பழக்கமும் அதிகமான இடமாக இருந்தாலும், கொள், பிட்டி, வெள்ளவத்தை, பொறளை முதலிய இடங்கள் கிராமாந்திரங்கள் போன்று யாண்டும் மரஞ்செடிகொடிகளும் அழகிய பூஞ் செடிகளும் நிறைந்து, கண்ணிற்கு இனிய காட்சியாக விளங்குகின்றதோடு வீடுகள் அதிக நெருக்கமில்லாததாய் இருக்கின்றன. ஐரோப்பிய நாகரீகம் நேராக இலங்கைக்குத் தான் வந்து இறக்குமதி யாகிறது என்று கூறலாம். இங்குள்ள மக்கள் யாவரும் நடையுடை பாவனை முதலிய எல்லா வற்றிலும் ஐரோப்பியர்களையே பின்பற்றுகின்றனர். கூலிகளும், ரிக்ஷா வண்டி இழுப்பவர்களும் காற்சட்டை, பூட் ஐரோப்பிய தொப்பி யாகிய ஹேட்டும் அணிந்தும் விலையுயர்ந்த நேவிகட் சிகரட்டும் குடித்து - ஆங்கிலம் பேசி வருகின்றார்கள். நமது நாட்டில் நம் வீட்டிற்கு வரும் நண்பர்களை உபசரிப்பதற்கு முதலாவதாக வெத்திலை பாக்குக் கொடுப்பது போல் நாம் எந்த சினேகிதர்கள் வீட்டிற்குப் போனாலும் முதலாவது தேநீரும் ஒரு சிகரெட்டும் தான் முதலில் வரும். கொழும்பு செல்வங் கொழிக்கும் ஒரு நகரமாயினும் அத்தீவின் முக்கிய விளைபொருள்களாகிய தேயிலை, ரப்பர், கொக்கோ, கொப்பரா முதலியவைகளின் விலையிறக்கத்தினாலும் உலகம் எங்கும் தோன்றிய வியாபார மந்தத்தினாலும் ஜனங்கள் பெரும் அல்லல் பட்டுக் கொண்டும், வேலையில்லார் தொகை அதிகப் பட்டுக் கொண்டும் வரும் பொழுது இலங்கை அரசாங்கத்தார் ஜீவகாருண்யமும் முன் யோசனையும் இன்றி முட்டாள்தனமாய்ப் புதிதாய் வருமானவரி (இன்கம் டாக்) ஏற்படுத்தியது இலங்கை மக்களை என்று மில்லாத துக்கத்துக்குள்ளாக்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போல் கட்டுப்பாடும், சுயராஜிய அபிமானமும், ஆங்கிலக் கல்வியில் அதிக முன்னேற்றம் அடைந்து அரசாங்க உத்தியோகம் முழுவதையும் பேங்குகள், பாடசாலைகள் முதலியவைகளில் உள்ள உத்தியோகங்களையும் கைப்பற்றிக் கொண்டு, பிறஜாதியார்கள் அங்கு நுழைய விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் யாழ்பாணத் தமிழர் பண நெருக்கடி உள்ள இச் சந்தர்ப்பத்தை சமாளித்துக் கொள்ளக் கருதி தேசீய இயக்கம் ஒன்று கண்டு அதன் மூலமாய் ஐரோப்பிய உடைகளை வெறுத்து தேசீய உடையணிந்து வருகின்றார்கள் (கதர் உடையல்ல) தேசீய உடை என்பது அரையில் வேஷ்டியும் ஒரு ஆபாரமும் நீண்ட அங்க வதிரமும், எந்நாட்டுத் துணியை அணிந்திருந்தாலும் அது தேசீய உடையாகவே கொள்ளப்படுகிறது. இத்தேசத்தின் வியாபாரங்கள் பெரும்பாலும் முலிம்கள் இடத்திலே இருக்கிறது. சிங்களவர்கள் வியாபாரத் துறையிலோ, உத்தியோகத் துறையிலோ அதிக முன்னேற்றமடையாது இருப்பினும் தற்சமயம் இத் துறைகளில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற உணர்ச்சியுடன் இந்தியர் களுக்கு விரோதமான கிளர்ச்சியும் நாளடைவில் கைக் கொண்டு வருகின்றனர். அது விருத்தியாகிக் கொண்டு வருகிறது. இங்கு தொழிலாளர் இயக்கம் அதிக முன்னேற்றமடைந்து வருகின்றது. தொழிலாளர்களுக்குத் தலைவராய் குணசிங்கம் என்னும் சிங்களவர் வாய்த்தது தொழிலாளர்களின் பாக்கியம் என்றே கருதவேண்டியது. இவர் சாதாரண மனிதராகவே இருந்து வந்தார். பணக்காரரும் அல்ல, ஆங்கில பட்டதாரியுமல்ல என்றாலும், தொழிலாளர் களுக்குத் தலைவராய் வந்ததும் தம் செல்வாக்கைப் பெரிதும் உயர்த்திக் கொண்டு இலங்கை சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் போட்டி போட்டு வெற்றிபெற்று இப்பொழுது ஓர் அங்கத்தினராய் இருந்து வருகிறார். இவருக்கு சமயோசித புத்தியும், எதிரியைத் தம் வசமாக்கிக் கொள்ளத்தக்க பேச்சுவன்மையும் பெரிது முண்டாம். இவரை இலங்கைத் தொழிலாளிகள் இலங்கை முஸேரனி என்று கூறி வருகின்றார்கள். இவருக்கு இந்திய காங்கிரசிடத்திலும், தோழர் காந்தியிடத்திலும் விசேஷஅன்புண்டு. கல்வி கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலையைச் சேர்ந்த பற்பல கல்லூரிகள் காலேஜ்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் தாராளமாய் கல்வி பயின்று வருகின்றார்கள். பாடசாலைகளில் பெரும்பாலும் ஆங்கிலத்திலே கல்வி போதிக்கப்படுகிறது. பாட சாலைகளில் மாண வர்கள் ஆங்கிலத்தைத் தவிரவேறு பாஷை களில் சம்பாஷணை செய்யக் கூடாதென்று கட்டுப்பாடும் உண்டு. எனவே 3வது, 4வது வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகின் றார்கள். ஆங்கிலம் பயில செலவு அதிகமாய் இருக்கிறது. 3வது பாரத்தில் படிக்கும் ஒரு மாணாக்கனுக்கு மாதம் 60 ரூபாய் செல வாகிறது. இப்பொழுது தான் தாய்பாஷையாகிய தமிழுக்கு விசேஷ மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற உணர்ச்சி தோன்றி தமிழ் நாட்டுக் கலாசாலை களைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனங்கள் உள்ளத்தில் தோன்றிவருகிறது. அங்கு கேம்பிரிட்ஜ் பி.ஏ. பட்டதாரிகளுக்கு மதிப்பு சென்னை சர்வகலாசாலை - இல் எம். ஏ. பட்டம் பெற்று எல்.டி பா பண்ணியவருக்கு கிடையாது என்பது ஒரு சிறிதும் மிகையாகா. கலாசாலைகள் எல்லாவற்றிலும் கணித சாதிரம் மிகக்குறைவாகவே கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் நன்றாகவும், விரைவாகவும் ஆங்கிலம் பேசினாலும், எழுதுவதிலும் பேசுவதிலும் பெரிதும் இலக்கண தப்பு போட்டுவிடுகின்றார்கள். பெண் கல்விக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இந்நாட்டில் அதிக மில்லை என்றே கூறலாம். இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கு பெரும்பாலும் கிருதவர்களே காரணம் என்று கூறலாம். கிறிதவ கலா சாலைகள் பல இருக்கின்றன. இரட்சண்ய சேனை கிறிதவக் கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் இங்கு அதிகம். பெண் கல்லூரிகளில் இந்தியாவைப் போன்று உத்தியோகக் கல்வி கற்பிக்கப்படுகிறதே தவிர, பெண்கள் இல்லறத்தை செம்மையாக நடத்தத் தக்ககல்வி போதிக்கப்படுவதாகக் காணோம். ஆண் பிள்ளைகள் கல்வி பயிலும் பல கல்லூரிகளில் பெண்மக்கள் பலர் ஆசிரியராய் அமைந்து இருக்கின்றனர். பத்திரிகைகள் இங்கு ஜனத்தொகை மிகச் சுருக்கமாய் இருப்பினும் மக்களின் கல்வி அபிவிருத்தியால் பத்திரிகை அதிகமாகத் தோன்றி வருகின்றன. சிலோன் டெயிலி நியூ, மார்ணிங் லீடர், அப்ஸெர்வர், இண்டிபெண்டன்ட், டைம் ஆப் சிலோன் முதலிய ஆங்கில தினசரிகளும், சிலுமினா, டினமினா முதலிய சிங்கள தினசரிகளும் வீரகேசரி என்னும் தமிழ் பத்திரிகையும் வெளியாகிவருகிறது. சமீபத்தில் தினவர்த்தமானி என்ற தமிழ் தினசரியும் வெளியாகப் போகிறதாய் வதந்தி மலையாளம் டெயிலி நியூ, மலையாளி, மனோகரா முதலிய மலையாள தினசரிகளும் இன்னும் கணக்கற்ற வாரப்பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் வெளிவருவதுடன் மேனாட்டில்வெளியிடப்படும் பல பத்திரிகைகளும் இங்கு விற்கப் படுகிறது. இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாடு, குடியரசு, புதுவைமுரசு, தமிழன் இந்தியா முதலியவைகளை விசேஷமாய் படித்து வருகின் றார்கள். குடியரசைப் பரப்ப இங்குள்ள சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் விசேஷ முயற்சி எடுத்து வருகின்றார்கள். விசேஷ மான அபிவிருத்தியும் அடைந்து வருகின்றது. இதற்கு தோழர்களான ஈ.வெ.ரா, ராமநாதன் முதலியவர்களின் விஜயமே பெரிதும் காரண மாய் மிளிர்கின்றன. இங்கு வெளியிடப்படும் வீரகேசரி என்னும் தமிழ் வெளியீடு தோழர் சுப்பிரமணியஞ் செட்டியார் எனும் ஒருவ ரால் வெளியிடப்பட்டது. அவர் சமூக சீர்திருத்த விருப்பம் கொண்டவர் என்பதாயும், பத்திரிகைஆரம்பகாலத்தில் அக்கொள்கைகள் பெரிதும் காணக்கிடந்தது என்றும் நம் நண்பர் மூலமாயும் அறிந்தேன். பின்னர் அப்பத்திரிகைக்கு ஆசிரியராய் பார்ப்பனர்கள் நுழைந்ததும் சமூக சீர்திருத்தத்தைப் புறக்கணித்து தேசீயப் பத்திரிகை போல் நடித்து வருகிறது. அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை என்றாலும் தம் கொள்கைக்கு விரோதமாய் நடை பெறும் எந்த இயக்கத்தைப் பற்றியும் தம் பத்திரிக்கையில் வெளி யிடுவதில்லை என்று ஒரு தீர்மானஞ் செய்து கொண்டிருப்பதாயும் யான் இலங்கை சென்றதும் அறிந்தேன். பல அன்பர்களிடத்திலும் அதைப்பற்றி விசாரித்தேன். சுயமரியாதை இயக்க சம்பந்தமாயும், ஆதிதிராவிடர்கள் சங்கவிஷயமாயும் சிறிதும் அப்பத்திரிகை பிரசுரிப்பதில்லை என்றும் அதுவிஷயமாய் பல அன்பர்கள் கடிதம் எழுதியும் வீரகேசரி ஆசிரியர் எவ்விதப்பதிலும் எழுதினார் இல்லை என்றும் அறிந்தேன். இதுபற்றிய விஷயங்கள் சுயமரியாதைத் தொண்டர்களும் இதர சமூக சீர்திருத்த தொண்டர்களும் அறிந்து வேறு ஒரு தமிழ் தினசரி தோன்றச் செய்ய வேண்டுமென்று முனைந்து வேலை செய்வதோடு வீரகேசரியைப் பகிஷ்காரஞ் செய்யவும் வேண்டும் முயற்சியும் எடுத்து வந்தனர். இதனிடையே இலங்கையில் செல்வாக்குள்ள ஆங்கில தினசரியாகிய டெயிலி நியூ, அப்ஸெர்வர் பத்திரிகைகளையும் தினமினா என்னும் சிங்களதினசரியையும் வெளியிடும் ஒரு கம்பெனியார் தீனவர்த்தமானி என்னும் தமிழ் தினசரிவெளியிடப் போவதால் அதை ஆதரிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தனர். இதனிடையே இலங்கை இந்தியர் சுயமரியாதைச் சங்கத்தின் 11வது மாதாந்தர கூட்டத்தில் வீரகேசரி ஆசிரியர் தோழர் பி.பி.ஆர் சுப்பிரமணியன் செட்டியார் தலைமை வகிக்கப் போவதாக அழைப்பிதழ் ஒன்றும் எனக்கு வந்தது. எனவே இனியாவது வீரகேசரி ஆசிரியர் தம் கடமை உணர்ந்து நடப்பா ரென நம்புகிறேன். பெண்மணிகள் சிங்களப் பெண்மணிகளே இந்நாட்டில் விசேஷித்தவர் களாய்த் தோன்றுகின்றார்கள். சுயமரியாதைக் கொள்கை இன்னது என்பதை இவர்கள் அறியாவிடினும் இவர்களிடத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் பூரணமாய்க் குடிகொண்டு இருக்கின்றது என்று கூறலாம். தமிழ்நாட்டுப் பெண்களைப் போல் உடையணிவார்கள் .ஆனால், எவரும் அவர்களைத் தமிழ்ப்பெண் என்றே மொழிவர். பெண்கள் செவ்விய நிறமும் நீண்டு அடர்ந்த கருத்த கூந்தலும், நல்ல தேகக்கட்டும் உடையவர் களாய் இருக்கின்றார்கள். அதிகக் குள்ள மாகவோ, நெட்டை யாகவோ இராது சமமான வளர்த்தியை உடைய வர்கள். அவர்கள் நடையுடை பாவனை முதலியவைகளில்ஆண்மை பொலிந்து விளங்கும். அவர்களின் கம்பீரமான பார்வையும், பிடி நடையும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் தன்மையன. சிங்கள ஆண்களைப் பார்க்கிலும் பெண்கள் அதிகமாய் வியாபாரத் துறையிலும் ஏனைய தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஒரு சிங்களப் பெண்மணியே இப்பொழுது சட்டசபை உறுப்பினராய்த் தேர்ந்துஎடுக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலான பெண்மணிகள் கல்வியிலும் தையல் வேலையிலும் விசேஷ முற்போக்கு அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் அரையில் சுமார் நாலுமுழ நீளத்தில் இரு பக்கங்களும் மூடப்பட்ட கைலியும் மேலே ஒரு சிறிய ரவிக்கையும் பெரும்பாலோர் அணிந்து இருக்கிறார்கள். சில கல்விகற்ற பெண்கள் ஐரோப்பியப் பெண்கள் போன்று கவுனும் சில பெண்கள் இந்தியப் பெண்கள் போன்று சேலை அணிந்து இருந்தாலும் சுமார் 8 முழ நீளமுள்ளதாகவே இருக்கிறது. பெண்கள் விசேஷமாய் நகை அணிந்து கொள்வது கிடையாது. பெண்களுக்குச் சொத்துரிமை, விஹாகரத்து, விதவை மணம் முதலிய உரிமைகள் இருக்கிறது. இளமை மஞ்செய்யும் வழக்கம் கிடையாது. தாலி கட்டும் வழக்கம் இவர்களுக்குள் அறவே கிடையாது. ஆண்களிலும் பெண்களே அதிக மத பக்தி உடையவர்களாகத் தோன்றுகிறார்கள். புத்த மதக் கோவில் களிலும் விழாக்களிலும் பெரும்பாலும் பெண்களே விசேஷ மாகக் கலந்து கொள்ளுகின்றார்கள். புருஷர்கள் பெண் களுக்கு விசேஷ மரியாதை காட்டுவதோடு சிறிது அச்சமும் கொள்கி றார்கள். சமயம் வாய்ப்பின் ஆண்மக்களுடன் போரிட அவர்கள் (பெண்கள்) அஞ்சுவதே கிடையாது. பெண்கள் கல்வி கற்கக் கூடா தென்று சட்டமின்மையால் பெரும்பாலோர் தாய்ப் பாஷையிலும் சிலர் ஆங்கிலக் கல்வியும் கற்றிருக்கிறார்கள். பெண்களுக்கு விசேஷ மான சங்கங்களும் கிளப்களும் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் பெண் மக்கள் இவ்வளவு நாகரீகமுடையவர்களாய் இல்லை. அங்கு நமது நாட்டுத் தாழ்த்தப்பட்ட பெண்மணிகள் போன்ற சில ஜாதியார்கள் காணப்படுகின்றார்கள் அவர்கள் நடையுடை பாவனை நிறம் முதலியவற்றில் இந்நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றே இருக்கின்றார்கள் என்றாலும் நமது நாட்டைப்போன்று பிற ஜாதியார்களால் அவர்களுக்கு எவ்விதத் துன்பமும் உண்டாக்கப் படுவதாய்க் காணோம். இங்குள்ள முலீம் பெண்களும் உடை, நடை, கல்வி, நகை, முதலியவைகளில் நாகரீகம் பெற்று வருகி றார்கள். என்றாலும் வெளியில் செல்லும்போது ஒரு வெள்ளைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தாராளமாய் எங்குஞ் சென்று வருகின்றார்கள். ஆனால் முலீம் பெண்களில் மலேயா முலீம் பெண்கள் விசேஷ முன்னேற்றம் அடைந்து இருக்கின்றார்கள். பலர் ஆங்கில கல்விகற்று கவுன் அணிந்து இருக்கின்றார்கள். பலர் பார்சி உடை அணிந்து இருக்கின்றார்கள். அவர்கள் தாராளமாய்க் கடற் கரைக்கும் வேறு இடங்களுக்கும் செல்ல பூரண உரிமை பெற்று இருக்கின்றார்கள். ஆண்கள் பெண்மக்களையும் நீங்கள் என்று மரியதையாகவே பேசு கின்றார்கள். பெண்களுக்கு அவர்கள் உரிமை களை எல்லாம் வழங்கும் தாராளமான மனத்தை மலேய முலீம் ஆண்கள் பெற்றுள்ளார்கள். தென் இந்தியாவில் இருந்து குடியேறி இருக்கும் முலீம் பெண்கள் பழய கருப்பனே கருப்பன் என்றபடி இன்னும் அலுக்குத்து என்னும் காதணியையும் குன்னி முத்து சேலையையும், தங்கள் கை யால் தைத்துப்போடும் பெரிய சட்டையையும் நெல்லிக்காய்மணி, ஆலங்காய் மணி, கடுகுமணி முதலிய ஆபாசமான நகைகளையும் மாற்றிக் கொண்டதாகவோ கல்வி அபிவிருத்தி அடைந்ததாகவோ காணோம். பொதுவாக இந்தியாவைப் போன்று கொடிய கோஷா முறை அங்கு அனுஷ்டிக்கப்படுவதாகக் காணோம். யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் மக்கள் எல்லா விசயத்திலும் மிகுவிரைவான முன் னேற்றம் அடைந்து வருகின்றார்கள். அங்குள்ள பெண் மக்களில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? என்பதை எவராவது அறிந் திருப்பார்களா என்பது சந்தேகம். அங்குள்ள பெண் களிடையே சுயமரியாதை இயக்கத் தொண்டர்களான பெண்மணிகள் கொஞ்சம் வேலை செய்வார்களானால் அதிகமான பலனை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம். சமூகசீர்திருத்த கழகங்கள் ஓராண்டிற்குள் பலப்பல சமூக சீர்திருத்த கழகங்கள் தோன்றி வந்திருக்கின்றது. அக்கழகங்களின் நிர்வாகிகள் கழக முன்னேற்றம் கருதி அதிக ஊக்கத்துடன் உழைத்து வருகின்றார்கள். யான் அங்கு விஜயஞ்செய்து இருந்த காலத்தில் இந்தியர் சுயமரியாதை சங்கம், வாலிப சுயமரியாதை சங்கம், மலையாளி சுயமரியாதை சங்கம், இராமநாதபுரம் ஜில்லா ஆதிதிராவிட சங்கம், மருத்துவர் கல்விச் சங்கம் முதலியவற்றில் சொற்பொழிவாற்றும் பாக்கியம் பெற்றேன். அங்கு இவர் களுக்குள்ள சுயமரியாதை உணர்ச்சியும் சமூக சீர்திருத்த வேட்கையும் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆதி திராவிடதோழர்கள்ஒவ்வொருகூட்டத்திற்கும்,ஏராளமாய் விஜயஞ்செய்ததுடன் உடையிலும் ஒழுக்கத்திலும் சுத்தத்திலும் பேச்சிலும் விசேஷ முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள். பலர் சொற் பொழிவாற்றும் திறனும் பெற்று இருக்கின்றார்கள். குலாபி விருத்தி யில் பிற எந்த ஜாதியாருக்குமில்லாத ஊக்கங் கொண்டவர்கள் ஆயிருக்கிறார்கள். எக்காலத்திலும்ஆதித்திராவிட தோழர்கள் சுய மரியாதைக் கொள்கையும் வேட்கையும் உடையவர்களாய் விளங்கி வருகின்றார்கள் என்பதற்கும் சுயமரியதை இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களால் உண்டாக்கப் பட்ட ஒரு நவீன இயக்கம் அன்றென்றும், அது 1000-கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி தோழர் ஈ.வெ.ரா அவர்களால் 7 ஆண்டிற்கு முன் புத்துயிர் அளிக்கப்பெற்ற ஒரு பெரும் நல்லியக்கம் என்றும் யான் பலமுறை எழுதியும் பேசியும் வந்ததற்கு கொழும்பில் ஓர் ஆதாரம் கண்டு உள்ளேன். அதாவது குடியரசு தோன்று வதற்கு 4, 5 ஆண்டிற்கு முன்னர் ஆதிதிராவிடன் என்றொரு மாதப் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளியாயிற்று. 1921 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பத்திரிகையில் தோழர் வீரநாமனார் என்பவர் சுயமரியாதை என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதை அதிலுள்ள படியே வெளியிடு கின்றேன். அன்பர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக. சுயமரியாதை (வீரநாமனார் வரைகின்றார்) ஒருவன் தன்னைத்தானே கௌரவித்துக் கொள்ளுதலையே சுயமரியாதை என்கிறோம். தன்னைப் பற்றி ஒருவன் கேவலமாய் நினைத்துக் கொண்டு அப்படியே நடந்துவருவானாயினால் அவனை மற்றவர்கள் மதியார் என்பது நிச்சயம். அதனால்தான் மணம்போல் வாழ்வு என்று சொல்லுகிறார்கள். இவ்விதமே ஒரு வகுப்பாரைப் பற்றியும் சொல்லலாம். பிற்போக்கான நிலைமையி லிருக்கும் ஒரு வகுப்பார் முன்னேற்றமடைய வேண்டுமானால் முதன்முதலாக அவ்வகுப்பாருக்குஉள் சுயமரியாதை உதிக்க வேண்டும். வர்ணாசிரமதர்மம் என்கிற மிலேச்சக் கட்டுப்பாட்டி னால் இந்தியதேசத்தில் சுயமரியாதை குன்றி அடிமைப்புத்தி பெருகிக் கிடக்கிறது. பார்ப்பன வகுப்பார் தவிர மற்ற வகுப்பாரெல்லாம் அதிகமாகவோ, (அல்லது) சொற்பமாகவோ இந்த அடிமைத் தனத்தில் ஆழ்ந்து தான் கிடக்கின்றனர். அநேகர் இதை உணர வில்லை - சிலர் இப்படிப் பட்ட அடிமைத்தனம் தான் எங்களுக்குப் பொருந்தும் என்று கொஞ்சமேனும் நாணமில்லாமல் சொல்லிக் கொள்ளு கிறார்கள். காரணம் என்ன? அவர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதுதான் காரணம். ஆதிராவிடர் என்னும் பழங்குடிகள் இந்த மிலேச்சக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பே இருக்கிறார்கள். ஆயினும் வர்ணாசிரம கட்டுப்பாட்டை அநுசரிக்கிறவர்களின் கொடுமையினால் தங்கள் பண்டைப் பெருமையையும் சுய மரியதையையும் இழந்து மிகவும் கேவல நிலையில் இருக் கிறார்கள். இவர்கள் தான் தற்சமயம் இந்திய ஜனசமூகத்தின் அடிப்படையாக இருப்பதால் இவர்கள் சீரும் சிறப்பும் பெற்றால் அன்றி இந்தியா பெருமையடைவது முடியாத காரியம். இதை எல்லாவகுப்பாரும் நன்குணர வேண்டும். சுயராஜ்யம் என்று கூச்சலிட்டுக் கொண்டு பொது ஜனங்களை மருட்டித்திரியும் போலிக்கட்சியார் இவ்வித மாய் கவனஞ் செலுத்துவார் களானால் தேசத்துக்கு நன்மை செய்த வர்களாவர். தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் என்று பத்திரிகை களில் எழுதுவதும் பிரசங்க மேடைகளில் சொல்வதும் போதா. செய்கையில் காட்ட வேண்டும். ஆலயங்களில் பிரவேசித்து பூஜை காண ஆதிதிராவிட வகுப்பார்களுக்கு இடங்கொடுக்கப் பட வேண்டும். இல்லையேல் தீண்டாமை ஒழிய மாட்டாது. இனி ஆதிதிராவிட சகோதரருக்கு ஒருவார்த்தை உங்கள் மீட்சி (அல்லது) தாழ்ச்சி உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் மனம் போலவே உங்கள் அந்ததும் இருக்கும். உயர்ந்த எண்ணமும் பெரிய மனமும் கௌரவ நடத்தையும் வீரகுணமும் உள்ளவர் களாக முயலுவீர்களா னால் அதற்கேற்ப உங்கள் நிலைமையும் மேன்மையடையும். அதற்கு மாறாக மனோபயம் தன்னையே கேவலமாய் நினைத்தல், சொந்த வகுப்பாரை பிறர் முன்னிலையில் இகழ்தல் அற்ப நினைவு பொறாமை, கோழைத்தனம் முதலிய சிறுமைக்குணங்களை வளர்ப்பீர்களாயின் உங்களின் வருங்கால நிலைமை தற்கால நிலைமையிலும் அதிக கேவலமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பட்டணத்தில் நீக்ரோவர்கள் ஒரு மகாநாடு கூட்டினார்கள் அப்பொழுது, அந்த நிக்ரோவரின் தலைவ னான மார்க் கார்வே என்பவர் பின் வருமாறு கூறினார்:- இரு நூற்று 50 வருடங்களாக அடிமைப் பூச்சிகளாக இருந்து வந்திருக் கிறோம். இப்பொழுது இந்த அடிமைத் தனத்தை எல்லாம் ஒழித்து விடநாம் முயற்சிக்கிறோம். இனி நமக்கு பயமே இல்லை. நாம் இனி மேல் ஒருங்கிப் பதறுவதில்லை. இச்சகம் கூறி இரப்பதுமில்லை. பரிந்து வேண்டிக் கொள்வதுமில்லை. ஆண்மைத் தனத்தில் சுதந்திரங் களுக்காகவும் பூரண சுயாதீனத்துக்காகவும் நிக்ரோவரே! நீங்கள் திரைதோள் நிமிர்த்துச் செயல் செய்தல் வேண்டும். நீங்கள் உங்களுக் காக செய்யுமளவு வேறெவரும் உங்களுக்கு செய்ய முடியாது. உங்கள் உரிமைக்காக நீங்கள் பாடுபட முடியாதாயின் நீங்கள் அழிந்து போவதே மேல். ஏனெனில் நம்பிக்கையற்ற ஒரு ஜாதி, மானம் மரியாதைகளை காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒரு ஜாதி, தன்னம்பிக்கையற்ற ஒரு ஜாதி இந்த காலத்தில் நிலை நிற்க முடியாது. அவரது வீரமொழி களை ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டு களாக நீங்கள் அடிமைத் தனத்திலே ஆழ்த்தப்பட்டுக் கிடக்கிறீர்கள். நம் முன்னோர் பூர்ண சுதந்திரர்களாக ஜீவித்திருந்த இம்மகாநாடு இன்று நம் முன்னோருக்கு அடிமைத்தன தேசமாகிவிட்டதே! எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தன. எத்தனை இராஜியப் புரட்சிகள் நடந்தன. எத்தனை இராஜ்யங்கள் எழுந்தன. எத்தனை வீழ்ந்தன? பழந்தமிழ் மக்களே! உங்களுக்குள் இன்னும் பலத்த உணர்ச்சி தோன்றவில்லையா? அருணோதயம் ஆகிவிட்டது. விழித் தெழும் புங்கள். சுயமரியாதையை வளருங்கள். என வரையப்பட்டிருக்கும் கட்டுரைகளுடன் இந்துமத ஆபாசங்களையும் காந்தியின் தவறான கொள்கைகளையும் விளக்கி வர்ணாசிரம அதர்மக் கொடுமைகளைக் கண்டித்தும் வேதப் புரட்டு களையும் புராணப் புரட்டுகளையும் வெளிப் படுத்திய பல கட்டுரைகள் மிளிர்கின்றன. தோழர்களான சனகசங்கரகண்ணப்பர், சாமவேத னார், தாமபாலையா, வாமி அத்வைதாநந்தா முதலிய அறிஞர்கள் பலரின் கட்டுரை ஆதித்திராவிடனில் இடம்பெற்று விளங்குகிறது. அப்பத்திரிக்கைகள் ஒன்றில் தமிழ்நாடு வாரப்பத்திரிக்கையின் விளம்பரமொன்று காணப்படுகிறது. அதில் டாக்டர் வரதராஜீலு நாயுடு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது ஈ.வெ. ராம சுவாமி நாயக்கர் அவர்களால் பிரசுரிக்கப்பட்டு வரும் தமிழ்நாடு என்று விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது. துரதிஷ்ட வசமாய் நம் குடியரசு தோன்றுவதற்கு முன்னரே ஆதித் திராவிடன் ஆதரிப்பாரின்றி நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. யான் கொழும்பில் பற்பல கழகங்களின் ஆதரவில் பேசினேன். மலையாளி சுயமரியாதைச் சங்கத்தில் கண்ட காட்சி என்றும் மறக்கத் தக்கனவல்ல. அக்கூட்டம் செனட் ஆண்டர்சன் கலாசாலை யில் நடைபெற்றது. தலைவர் லாரென் கலாசாலை ஆசிரியர் தோழர் குஞ்சிராமன் பி.ஏ. என்பர் ஆவர். அவருடைய முன்னுரை ஆங்கிலத்தில் தெள்ளத் தெளிய சுயமரியாதை இயக்கம் கொள்கை களை விளக்கிக் கூறியதும் யானும் தோழர்களான குமாரன், வேலாயி, தர்மகந்தபிக்ஷீ (புத்த மதசந்நியாசி) முதலியோர்களால் சொற் பொழிவாற்றப்பட்டது. எல்லா மலையாளி யுவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் நுண்ணிய கொள்கைகளை எல்லாம் நன்றாகவும், ஹாயமாகவும் பேசினார்கள். கனிந்த மொழியும், கவினுறு தோற்றமும், கூறிய அறிவும், நேரிய உடையும் உடைய அன்பர்களான குஞ்சிராமன், குமாரன், வேலாயி முதலியோர் ஈழுவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தெருவில் நடக்கவும், ஆலயத்திற் குள் செல்லவும் அனுமதிக்கப்படாத மதத்தையும் அரசாட்சியையும் நினைந்து நினைந்து கண்ணீர் பொங்கிற்று. ஆ! இக்கொடுமைகளை ஒழிக்க இதுவரை நம் நாட்டிலொரு பகத்சிங்கும் தோன்றவில்லையே என்ற ஏக்கமுடனிருந்த என் நிலை என்றும் என் வாழ்நாளில் மறத் தற்கு உரியதன்று. நம் இயக்க முன்னேற்றத்திற்காக இலங்கையில் அரும்பாடு பட்டு வரும் தோழர்களான குஞ்சிராமன் பி.ஏ. குமாரன், எ.ஆர். முத்தையா, கனகசபை அருமைநாயகம், பரமசிவம், ஆறுமுகம், விவநாதன், ஓ.கே. முஹியிதீன், அளகே, சதாசிவம், முத்துசாமி (ஹட்டன்) முதலிய அன்பர்களின் ஊக்கமும் எமக்குச் செய்த உபசாரமும் என்றும் யான் மறக்கத் தக்கன அல்ல. இந்தியர் சுயமரியாதைச் சங்கம் ஆரம்பித்து ஓராண்டு முடியப் போகிறது. அதன் நிறைவு விழாவும் அகில இந்திய சுயமரியாதை மஹாநாடு ஒன்று தோழர்களான ஈ.வெ.ரா, இராமநாதன் இவர்கள் தலைமை யில் நடத்தவேண்டும். அவர்கள் சமீபத்தில் வராவிடில் இந்தியாவி லிருந்து தக்க கனவான்களை அழைத்து இருகூட்டங்களும் செம்மை பெற நடத்தவேண்டும் என்று பலரும் விரும்புகின்றார்கள். ஐரோப்பாவில் பிரயாணஞ் செய்து கொண்டிருக்கும் நம் தோழர்கள் சமீபத்தில் இங்கு வரமுடியா தென்று தெரிவதால் வேறு தக்கோர்கள் தலைமையில் மகாநாட்டை நடத்த அன்பர்கள் தளர்வுறா ஊக்கத் துடன் வேண்டும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். இலங்கையில் யாண்டும் நாளடைவில் நம்மியக்க அன்பர்களின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இவ்வமயம் மகாநாடும் நடைபெற்றால் தக்கோர் பலர் ஆதரவும் ஏற்படும் என்பதையும் உணர்ந்து இலங்கையின் நாட்டுப்புறங் களிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள சுயமரியாதை இயக்கம் அன்பர்களும் கொழும் பிலுள்ள தோழர்களும் கொழும்பு இந்தியர் சுயமரியாதைச் சங்கத் துடன் ஒத்துழைத்து ஒரு சரியான வரவேற்புக் கழகம் ஒன்று ஏற் படுத்தி இயற்கையிலேயே தன் மதிப்புத் தாண்டவமாடும் இலங்கை யில் எங்கும் சுயமரியாதை ஜோதி நிலவச் செய்வார்களாக. யான் கொழும்பில் கிறிதவர்கள் நிறைந்த கூட்டங்கள் சிலவற்றில்பேசியஅனுபவத்திலிருந்துபலகிறிதவஅன்பர்கள் சுயமரியாதை இயக்கம் இந்துக்களுக்காகவே தோன்றிய ஓர் இயக்கம் என்றும் அது ஹிந்துமதத்தையே கண்டிக்கிறது என்றும் கிறிதவ மதத்தைப் போற்றுகிறது என்றும் கிறிதுமதம் பரிசுத்தமான மதம் என்றும் அதை எவரும் குறை கூற முடியாது என்றும் கனவு காண் கின்றனர் என்பதையும் அறிகின்றேன். எனவே நம்மியக்கத்தைச் சேர்ந்த அன்பர்களான பல கிறிதுவர் களின் விருப்பப்படி கிறிது மார்க்கத்தைப் பற்றித் தொடர்ச்சியாக இனிப்பல கட்டுரைகள் வரையத் தவறேன் என்று சுயமரியாதை இயக்கம் மக்கள் முன்னேற் றத்திற்கு இடையூறாக இருக்கும் மதமோ, வேதமோ, கடவுளோ, புராணங்களோ, அரசாங்கமோ, பழக்க வழக்கங்களோ எல்லா வற்றையும் நிர்மூலமாக்கவே தோன்றியிருக்கிறது என்று பல முறை யும் கூறப்பட்டு வருவதை இப்பொழுதும் கிறிதவத் தோழர் களுக்கு ஞாபகமூட்டு கின்றேன். அங்கு நானிருந்த பொழுது மிரபோஜன் பிரசரண சங்கத்தார், அருந்ததியார் மகாசபை, கண்டி மருத்துவர் சங்கம், ஹட்டன் சுயமரியாதை சங்கம் முதலிய பல சங்கத்தினர் அழைப்பை ஏற்று சொற்பொழிவற்ற முடியாமல் போனதற்கு மிக வருந்துகின்றேன். அவர்களழைப்பிற்கு நன்றி செலுத்து வதுடன் இன்னும் இலங்கை செல்ல நேர்ந்தால் அவர்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்யத் தவறமாட்டேன். கொழும்பில் சிலநாள் தங்கிவிட்டுப் பின்னர் எம் நண்பர்கள் சிலருடன் இலங்கையிலுள்ள பலபாகங்களைச் சுற்றிப் பார்க்க புறப் பட்டோம். புறப்பட்டு நீர்க்கொழும்பு, சிலாவை, புத்தளம், அநுராகபுரம், கக்கோரியா, திருக்கோணமலை, ஹப்புத்தலை, கண்டி, ஹட்டன் முதலிய ஊர்களைப் போய்பார்வை இட்டோம். சுமார் 500 மைல்களுக்கு மேல் சுற்றியிருப்போம். மலைகளினூடே செல்லும் சிறிய ரோடுகளும் தார்பூசிமிக அழகாக வைக்கப் பட்டிருந்தது. பாதைகளின் இருபுறமும் மிக உயர்ந்த மரங்களும், கான்யாறுகளும், பார்ப்பதற்கு மிக ரம்மியமான காட்சியாக இருந்தது. இடையிடையே யானைகளும் மான்களும் புலிகளும் மயில்களும் ஏனைய பறவைகளும் மிருகங்களும் எங்கள்முன் தோன்றி மறையுங்காட்சி பயங்கரமும் வேடிக்கையும் கலந்த காட்சியாகத் தோன்றிற்று. யாங்கள் போகும் வழியில் புத்தளத் திற்கு சமீபத்தில் நம் நாட்டின் எருமைக் கடாவைப்பூட்டி ஓட்டும் வண்டிகளைப் போல் 2 யானைகள் கட்டிய வண்டியைப் பார்த்துப் பெரும் வியப்புற்றோம். அநுராச புரத்திலே யுள்ள அழிந்துபோன பல சிங்கள அரசர்களின் மாளிகைகளையும் தேசவிசாரணை புரியும் நியாய மன்றங்களையும் அந்தப் புரங்களின் அமைப்பையும் கண்டு ஆச்சரியமுற்றோம். அங்கு கல்லினால் செய்யப்பட்டு அழகிய சித்திரவேலைகளில் சிறப்புற்றவர்கள் தாம் என்று தற்பெருமை கொள்ளும் தமிழர்களைத் தோற்கடிக்கக் கூடியதான பல சிற்பவேலைகள் இருக்கிறது. அதன் வேலைப்பாடு களைக் கண்டு பல ஐரோப்பிய சித்திர விற்பனர்கள் கூட ஆச்சரியப் படுகின்றனர். அங்குள்ள பெரிய புத்தமத தூபியையும் பெரிய புத்த விக்கிரகத்தையும் அக்கோயிலினுள்ளே வைக்கப்பட்ட சிங்கள அரசர்களை வென்ற தமிழ் அரசர்களின் உருவங்களையும் மற்றோ ரிடத்தில் மலையின் மேலுள்ள புத்தர் உருவங்களையும் கண்டோம். புத்தர் உருவங்கள் கத்தோலிக்கர் கோவிலினுள் வைத்திருக்கும் அழகிய பொம்மைகள் போன்று மிக அழகாய்ச் செய்யப்பட் டிருக்கிறது. புத்தமதக்கோயிலுள்ளே எம்மததரும் தாராளமாய் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர். பின்னர் யாங்கள் திருக்கோணமலைக்குப் போனதில் அது ஓர் இயற்கை துறைமுகத்தை போன்றும் அங்குமிகப் பழய டச்சுகோட்டையும் கப்பற்படையும் இருக்கிறது. முற்காலத்தில் இவ்வூர் பிரபல்ய நகர மாய் இருந்ததாயினும் தற்சமயம் அவ்வளவு சிறப்பில்லை. இவ் வூருக்கு இப்பால் சுமார் 7,8 மைல் தூரத்தில் ஒரு பாழுங்கட்டிடம் இருக்கிறது. அங்குதான் வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றது. வெந்நீர் ஊற்றில் நானம் செய்கிறது உடம்பிற்கு மிக நல்லது என்று ஐரோப்பியர் பலரும் ஆங்கு போந்து குளித்துவிட்டுச் செல்லு கிறார்கள். முலீம்களும் இந்துக்களும் தங்கள் புராணக் கதை களுடன் இதைச்சேர்த்துக் கதைகளுண்டாக்கிக் கொண்டு இதில் குளித்தால் மோட்சம் உண்டென்றும் சிலர் எண்ணிக் கொள்கின் றனர். இங்குள்ள ஒரு ஊற்றில் தண்ணீர் அதிக உஷ்ணமுடையது. மற்றைய ஊற்றுக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்த உஷ்ணத்தை உடையதான 5,6 ஊற்றுக்கள் இருக்கின்றன. யான் அங்கு போய் நானஞ் செய்துவிட்டு கண்டிவந்து சேர்ந்தேன். கண்டி ஒரு அழகிய நகரம். இங்கு சிறந்த கல்லூரிகளும், உலகத்திலுள்ள பற்பல விநோதச் செடிகள் பல அடங்கியதுமான ஒரு விநோதமான பூங்காவும் இருக்கிறது. இங்கு புத்தர்பல் ஒன்றை வைத்து இருக்கும் ஒரு புத்தர்கோயிலும் புத்தமதப்புத்தகங்கள் பல நிறைந்த ஒரு விசேஷித்த நூல் நிலையம் ஒன்றும் இருக்கிறது. அவைகளை எல்லாம் பார்த்துவிட்டு கடல் மட்டத்திற்கு 7000 அடி உயரமுள்ள இலங்கையிலேயே அதிக குளிர்ச்சியுள்ளது மான நூரெலுயாஎன்னுமிடத்தையும், சிவனடிபாதம் (அல்லது) ஆதம்மலை என்று கூறுமிடத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டு மன்று ஹட்டன் என்ற ஊரையடைந்தோம். அன்று மாலை எனது உடம்பிற்கு சுரம் அடித்ததால் மறுநாள் போகலாம் என்றிருந்தோம். மறுநாள் யான் அங்கு இருப்பதை எவ்வாறோ அறிந்து நம் சுயமரியாதைத் தோழர்கள் பலரும் வந்து தமதில்லத்திற்கு அழைத்துச் சென்று எனக்குத்தக்க ஔடதம் கொடுத்து வேண்டிய உபசாரமும் செய்தனர். அவர்கள் விருப்பப்படி அங்கு சொற்பொழிவு ஆற்ற என் உடல் நிலை இடங் கொடாததால் பின்னர் ஒரு முறை வருவதாய்க் கூறிவிட்டு நேராக இலங்கை வந்துவிட்டேன். புத்தமதம் புத்தமதம் அசோகர் என்னும் சீரிய அரசர்காலத்தில் உலகம் எங்கும் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப வேண்டு மென்று புத்தர் மஹாசபையின் தீர்மானிக்கப்பெற்று அசோகரின் பேருதவியின் மேல் ஜப்பான், சீனா, ஆப்கானிதானம், பெலுசிதானம், இலங்கை முதலிய பல நாடுகளுக்கும் புத்த மதப் பிரசாரர்கள் அனுப்புவிக்கப்பட்டனர். அவ்வாறே இலங்கை அரசர்புதல்வராகிய மகேந்திரன் என்பாரும் புதல்வியாகிய சங்கமித்திரை என்னும் பெண்மணியும் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தனர். அப்பொழுது அரியாசன மேறிய இலங்கை அரசன் தேவனாம்பியதிஷ்யன் என்னும் இலங்கை யரசனும் அவன் குடும்பத்தாரும் புத்தமதத்தை தழுவ நாளடைவில் பிரஜைகளும் புத்தமதத்தை ஒப்புக்கொண்டனர் என்று பல சரித்திராசிரியர் கூறி வருகின்றனர். ஆனால் எல்.சி.பிளேசி பி.ஏ என்னும் அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய இலங்கை வரலாறு என்னும் நூலில் புத்தர் தம் ஜீவிய காலத்தில் மும்முறை இலங்கைக்கு வந்திருப்பதாயும் அப்பொழுது அவர் அனுராதபுரத்திற்கும் ஆதம் மலைக்கும் போனார் என்றும் எழுதியிருக்கிறார். ஜீவகாருண்யத்தை யும் புரோகிதர் ஆட்சி யையும் பெண் அடிமைத்தனத்தையும் கடவு ளுணர்ச்சியால் மக்களடையும் அல்லலையும் ஒழித்து யாண்டும் இலங்கையில் வீரத்தையும் சுதந்தரத்தையும் சகோதரத்துவத்தையும் பகுத்தறிவையும் ஜொலிக்கப் புத்த மதம் வெகு சீக்கிரத்தில் செய்து விட்டது. பார்ப்பனீய சூட்சி அங்கு செல்ல இந்தியாவிற்கும் இலங் கைக்கும் இடையில் கடலிருந்ததால் பிராமணீயம் கடல் கடப்பதைத் தடுத்துக் கொண்டிருப்பதால் அங்கு சென்று புத்த மதத்தை இந்தியா விற் செய்ததுபோல் ஒழித்துவிட முடியாமல் போய்விட்டது. என்றாலும் இலங்கை மக்களின் துரதிஷ்ட வசமாய் மூட நம்பிக்கை நாளடைவில் மல்கி புத்தமதத்தின் உன்னதக் கொள்கைகள் மறைந்து விட்டது. புத்த மதத்தைப் பற்றியான் கொண்ட உயர்ந்த எண்ணங்கள் எல்லாம் இலங்கையிலுள்ள புத்த சமயிகளின் நடவடிக்கைகளைப் பார்த்ததில் இருந்து என் உள்ளத்தினின்று பறந்தோடிவிட்டது. கடவுளுணர்ச்சி, கடவுள் நம்பிக்கை முதலியவற்றினால் மக்களுல கிற்கு பெரியகேடுகள் விழைகின்றன என்றும் கடவுள் நம்பிக்கை யினாலே புரோகிதக் குழாங்கள் பெருகி மக்களின் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டு போவதையும் முன்னி இவ்விரண் டையும் கண்டிப்பாய் விலக்கியும் பிற்கால புத்தசமயிகள் புத்தரைக் கடவுளாக எண்ண ஆரம்பித்து விட்டனர். புத்தமதப் பிரசங்கம் புரிந்து வந்த துறவிகள் புரோகிதராய் மாறிவிட்டார்கள். இன்று மஞ்சயக் காயாசம் பூண்டு இத்துறவிகள் புத்த மதக் கோவில் களிலும் ஏனைய இடங்களிலும் புரிந்து வரும் திருவிளையாடல் களைச் சொல்லி முடியா. நாடொறும் இலங்கையில் இப்பொல்லாத் துறவிகளின் திருவிளையாடல்களைப் பற்றிப் பத்திரிகைகளிலும் கோர்ட்டுகளிலும் விசேஷமாகப் பார்க்கலாம். ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்டுபுத்தமததர்கள்இந்தியாவிலுள்ள சைவர்கள் போன்று கொடிய பாம்பையும் தேளையும் கூட எவரும் கொல்லச் சம்மதியார். இத்தகைய அன்புருவம் கொண்ட மக்கள் தான் அற்ப விஷயத்திற்கும் தம் போன்ற மனிதர்களை திடீரெனக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவர். பௌத்த மததனின் கடமை களில் மிக முக்கிய 8 கடமைகளில் திருட்டு, பொய், குடி, விபசாரம் முதலியவற்றை நீக்கல் என்று கூறப்பட்டிருந்தும் இன்று அவைகள் புத்த மததர்களிடம் பெருகி இருக்கக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் புத்த மதக்கொள்கை களை அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர் காண்பதும் அறிது. புத்தமதக் கோயில்களுக்கு விசேஷமாய் பெண்மக்களே போய்வருகின்றனர். கண்டி புத்தகோயிலில் யாம் கண்ட காட்சி வியக்கத்தக்கன. கண்டியில்தான் புத்தருடைய பல் ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்பல் மனிதர்களுக்குரிய இயற்கையான பல்லைவிட மிகப் பெரியதாய் இருக்கிறது. ஐரோப்பிய துரைமகள் ஒருவள் இது யானை தந்தத்தினால் செய்யப்பட்டது என்று தம் நூலென்றில் எழுதியிருக்கிறாள். யான் இப்பல்லிருக்கும் இடத்திற்குப் போனதும் அங்குள்ள புரோகிதர் காணிக்கை போடும் படி கூறினார். யாங்கள் காணிக்கைப் போட மறுத்துவிட்டோம். அங்கு பல பெண்மணிகளும் சில ஆண்களும் அப்பல்லின் மேல் போட புஷ்பங்களும் காணிக்கையும் கொண்டுவந்து கொடுத்து விட்டுப் பின்னர் அப்பூவில் சிறிது பாகமும் பெற்றுக்கொண்டு சிறிது நேரம் முழங்கால் படியிட்டு பூஜிக்கின்றனர். இப்பல்லை மட்டுந்தான் பூஜிக்கின்றாரோ? இல்லை! இல்லை! அக்கோயிலில் பூஜை செய்து இறந்து புதைக்கப்பட்ட ஒரு புரோகிதரின் சமாதியையும் புத்த மதக் கிரந்தங்கள் வைக்கப் பட்டிருக்கும் புத்தக நிலையத்தையும் மிகப் பக்தியுடன் வணங்கி வருகின்றனர். ஆங்காங்கே புரோகிதர்கள் நின்றுகொண்டு காணிக்கையாகப் பணம் பறித்துக் கொள்கின்றனர். அப்புத்த மதக் கோவிலில் அருமையான சித்திர வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. இன்னும் இலங்கையின் பல்வேறிடங்களில் உள்ள புத்தமதக் கோயில்களைக் கண்டேன். அங்கே சுமார் 4 அடிக்கு மேற்பட்ட புத்தர் உருவமும் இன்னும் எண் ணிறந்த சிறிய விக்கிரகங்களும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருக் கின்றன. இலங்கையில் எங்கு பார்த்தாலும் மஞ்சக்காயாசம்தரித்த புத்த சந்நியாசிகளே காணப்படுகின்றனர். அவர்களில் பலருக்கு புத்தமதத்தின் உண்மைகள் தெரியவில்லை. ஆங்கிலங் கற்ற சில நண்பர்கள் வெள்ளைக்காரர்கள் எழுதிய நூலுதவி கொண்டே சிறிது புத்த சமயத்தை உணர்ந்து இருக்கின்றார்கள். உண்மை யான புத்தமதம் ஆங்கு நிலவியிருந்தால் பெரும் நன்மை விளைந்திருக்கும். துரதிஷ்டவசமாய் இலங்கை புத்த மக்களைப் பற்றியமூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை முதலியவைகளைப் போக்கி சுயமரியாதை ஒளிவீச நம் சுயமரியாதைத் தொண்டர் களாய் இந்தியாவிலிருக்கும் அன்பர்கள் மறவாதிருப்பார்களாக. அங்கு நாம் தொண்டாற்றினால் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட அதிகப் பலன் எளிதில் கிடைக்கும். புத்த மதக் குருவாகிய தோழர் தர்மகந்தபிஷீ போன்ற அன்பர்கள் நம்மை வரவேற்கின்றார்கள். எனவே வேலைகள் முடிந்ததும் நான் சுகமே புறப்பட்டு எனது ஊர் வந்துசேர்ந்தேன். யான் அங்கு தங்கி யிருந்த காலத்தில் எனக்குப் பேருதவிபுரிந்த சுயமரியாதைத் தொண் டர்கள் அனைவருக்கும் மறுமுறையும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - (FoauR 27.3.1932, 10.4.1932, 17.4.1932) 1. ( Indian printed Textiles.) (“ The art of using pigments to ornament fabrics has an ancient origin. The discovery of a fragment of a madder - dyed fabirc at Mohenjo-Daro sticking to a silver vage, would led us to believe that the mardens process of dyeing cloth was known in india five thousands years ago” - Indian printed textiles. published by All India Handicrafts Board, Ministry of Commerce and Industry, Government Of India (Delhi) 1950. ) 1. ( சிலப்பதிகார உரை) (தமிழர் பண்பாட்டில் தாமரை) 11. மொகஞ்சதாரோ (அ) சிந்து வெளி நாகரிகம் - னுச. மா. இராசமாணிக்கம் பிள்ளை ப. 233 12. இலக்கிய சாசன வழக்கானுகள் - இராகவ ஐயங்கார் (கலைமகள்) 13. பண்டைய தமிழ் எழுத்துக்கள் - தி. நா. சுப்பிரமணியம் ப. 87, 1938. 1. “When these inscriptions are compared with the Asokan edicts (Though Asoka in the 3rd century B.C. adapted pali language) the script employed by Asoka seems to be but a sophisticated variety of the “Tamilnad Cave Script” - script in and around India. - by V.Kannaiyan, B.A., (Introduction)P.3 (Madras 1960). 1. India palleography - Dr. Buhaer (English edition published as Appondix to Indian Antiquary. Vol.XXXIII.) 1. Jbid, PP103,101. 2. Inida Antiquary Vol.62. 3. Rev. Fr.H.Heras’s articles in the New Review Vol.11 P.1-16-1936. 4. Bible - 1 King Chapter 10.VII 11-122. 1. Brahmi has been traced back to the phoenician type of writting represented in the inscripting of Meshu king of Moab (850.c) Dr. Scaff however in his remarkable commentary to the periplus of Erthrean sea claims a phoneician origin for the Dravidian alphapet (P.229) g.Elliat smith. 2. “It is also shown that the these schalars were not mistaken who commenced Brahmi with the south semitic and phoneician script. For there is much evidence to show that they were also derived from the script of “Harapa and Mohenjo-Daro” - R.G. Hunter. The two Brahmi scripts, one of Northern and the other of Southern India are developments of Mohonjodaro script that of South India is the direct continuation and development of Mohonjodaro script by Dravidian people of South India. Several signs of Mohonjodaro scripts are found in the pre historic pottery of tinnevelly Dt., in rock inscriptions of Nilgiris and tombs of Hyderabad states - by Rev. H. Hears M.A., light in Mohonjodaro (New Reveiw July 1936). 1. Elements of South Indian palaeography by Dr.A.C. Burnell P.49. 2. டாக்டர். சுநீதிகுமார் சாட்டர்ஜி, இந்திய எழுத்து முறை என்று டில்லி வானொலியில் நிகழ்த்திய கருத்துரை. தமிழ்முரசு (நாளிதழ்) சிங்கப்பூர் 10.12.65.