தொழில் நுட்ப வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி ஒன்பது தமிழ்நாட்டுப் படைக்கலன்கள் சாத்தன்குளம் அ. இராகவன் சிதைந்து போகும் நிலையில் இருந்த கையெழுத்துப்படியினைப் பெற்று இந்த நூலை முதன்முதலாக வெளியிடுகின்றோம். அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி ஒன்பது தமிழ்நாட்டுப் gil¡fy‹fŸ| சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி முதல் பதிப்பு : 2007 | தாள் : 16 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 8 + 208 = 216 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 200 | படிகள் : 1000 | நூலாக்கம் : வ.மலர், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல்களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன் குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் தமிழ்நாட்டுப் படைக் கலன்கள் எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளி வருகின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள்ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல் களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங் களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதி களாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவிய தோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், திருமதி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன், இல.தருமராசு, ரெ. விஜயகுமார் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v 1. தோற்றுவாய் 3 2. படையும் நடையும் 16 3. தமிழர்களின் போர் முறை 44 4. இலக்கியச் சான்றுகள் 64 5. சிற்ப நூற் சான்றுகள் 74 6. புதை பொருள் சான்றுகள் 84 7. பண்டைக் காலப் பாரதப் படை 89 8. திராவிடப் பழங்குடி மக்களின் படைக்கலன்கள் 108 9. வரலாறு படைத்த பாரதப் படை 114 10. இந்தியப் படையின் ஏற்றம் 135 11. கருவிகளின் பரிணாம வளர்ச்சி 159 12. படைக்கலன்களின் விளக்கம். 174 தமிழ்நாட்டுப் படைக்கலன்கள் 1. தோற்றுவாய் பழமையின் பண்பு தமிழர்கள் பழமையான இனத்தவர்கள்; வளமையான நாட்ட வர்கள். அவர்கள் ஒழு கும் நெறி, வழிபடும் தெய்வம், பயிலும் மொழி, பழகிய பண்பு, வாழும் முறை அனைத்தும் நன்மையானவை, தொன்மையானவை. அவர்களின் உடையும் நடையும், உணவும், உறையுளும், இசையும் நசையும், இசைக்கருவிகளும் படைக்கருவி களும், மொழியும் எழுத்தும், தட்டு முட்டுப் பொருள்களும் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றியவை. இதனால் தமிழர்கள் பழமையில் பற்றுக் கொண்டவர்கள், பழமையைப் பேணி அதைப் பாதுகாத்துப் போற்றுபவர்கள் என்று எண்ணப்படுகிறது. இது தவறு. இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேனாட்டினர் புதுமையை விரும்புபவர்கள் பழமையை வெறுப்பவர்கள் என்று எண்ணப்படுகிறது. அது தவறு. மேனாட்டினர் புதுமையைப் போற்றுபவர்கள்தான். ஆனால், புதுமை தீமை தருவ தாயின் அதனை அரை நொடிக்குள் அகற்றி விடுவர். அதோடு பழமை அனைத்தையும் பழிப்பவர் அன்று. மேலும் பழமையைப் பாங்குடன் பாதுகாத்தும் வருபவர்கள். பழமையை ஆய்ந்து அது நலந்தருமாயின் அதைப் பேணிப் போற்றி வருகின்றார்கள். பழமையை ஆய்ந்து அதிலுள்ள தீமையை அகற்றி அதனுள் புதுமையைப் புகுத்திப் பயன்படுத்தி வருகின்றார்கள். பழமையானவைகளில், நலந்தருவன அனைத்தையும் நன்கு பயன்படுத்தி வருகிறார்கள். பழமையான வற்றை மறுமலர்ச்சி பெறச் செய்து எழிலாக்கி இனிதாக்கி நனிதுறப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பயன்படாதவைகளை அகற்றி விடுகின்றார்கள். மேனாட்டினர் தங்களின் மூதாதையர் பயன்படுத்திய சட்டி, பெட்டி, பட்டு, துட்டு, தட்டு, கொட்டு, வட்டில், கட்டில், வீடு, ஏடு, கூடை, ஆடை, அணி, மணி, முக்காலி, நாற்காலி, சட்டை, பட்டை, படம், கடம், கரண்டி, சுரண்டி, வேல்கம்பு, வில்கம்பு, வாள், யாழ் இன்னோரன்ன எண்ணிலாப் பழம் பொருள்களை பல்லாண்டாய்த் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்துப் பேணி, கண்ணாடிப் பேழைகளில் வைத்துத் தம்மக்களுக்கும் பேரர்களுக்கும் விருந்தினர் களுக்கும் காட்டி மகிழ்கின்றார்கள். இது என் தந்தை அணிந்த செருப்பு, அன்னை அணிந்த அணி, அக்கை அணிந்த ஆடை, பாட்டன் பயன்படுத்திய எழுதுகோல், பாட்டி அமர்ந்த நாற்காலி, பூட்டன் உண்ட கோப்பை, பூட்டி எழுதிய படம், பாட்டி ஆட்டிய தொட்டில், அறிவர் பிறந்த கொட்டில் என்று கூறி மகிழ்கிறார்கள். பலர் தங்கள் முன்னோர் பயன்படுத்திய கந்தைத் துணிகளை பொற்றகட்டினால் செய்த பெட்டிக்குள் பட்டுத்துணி மீது பாங்காக வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். இவைகள் பல்லாயிரம் பெருமதியுள்ள பண்டம் போல் பாதுகாத்து வருகின்றனர். அவற்றை ஆய்ந்து வருகின்றனர். அவற்றினின்று பல உண்மைகளைக் காண் கின்றனர். வரலாற்றை உருவாக்குகின்றனர். பழம் பொருள்களுக்கு ஆயிரம் வெண் பொற்காசுகள் கொடுத்து வாங்குகின்றனர். பழமையில் பற்றுக் கொண்டவர்கள் என்று கூறப்படும் தமிழ் மக்கள் தங்கள் முன்னோர்கள் உருவாக்கிய கலைக் கருவூலத்தை அன்னிய நாட்டினர்க்குச் சில வெண் காசுகளுக்கு விற்று வருகிறார் கள். சில கலை அறிவிலாக் கயவர்கள் விலை மதிக்க முடியாத சிலை களையும் வெண்கலப் படிமங்களையும் களவு செய்து சில வெள்ளிக் காசுகளுக்கு விற்று வயிறு வளர்த்து வருகிறார்கள். நமது நாட்டு கலைக் கருவூலங்களான தெய்வத்திரு உருவங்களும் கலைநயம் ஒளிரும் தேர்ப்பகுதிகளும், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, செர்மனி, பிரான்சு முதலான நாடுகளிலுள்ள நாத்திகர்கள், கிறித்தவர்கள் போன்றவர்கள் இல்லத்தில் அழகுப் பொருள்களாய் இடம் பெற்று வருகின்றன. நமது நாட்டில் பல பழம் பொருள்கள் கவனிப்பாரற்று அழிந்து போகின்றன. இதனை அறிந்து நமது மக்களோ, நமது தலைவர்களோ, நமது சன்னியதானங்களோ, உலக குருக்கள் என்பவர் களோ ஒரு சிறிதும் வருந்தவோ, வெட்கப்படவோ இல்லை. நமது நாட்டை ஆள வந்தவர்களோ இதைப் பற்றிக் கடுகளவும் கவலைப் படவில்லை. இதன் மூலம் எவராவது நமக்குதமிழர்களுக்கு - ஏன்? இந்தியர்களுக்கு எள்ளளவும் கலை அறிவு, கலை நுட்பம் - பழமை யைப் பேணும் பண்பு இல்லை என்று கூறினால் அது தவறாகுமா? ஐரோப்பியர்களைப் போல், நாம் பழம் பொருள்களை, அதன் மதிப்பறிந்து பேணி, போற்றி பாதுகாப்பதில்லை. தமிழ் மக்களுக்கு நமது பழங்காலக் கோயில், சிலை, வெண்கலப் படிமம், கல்வெட்டு, செப்பேடு, பழங்காசு, பழங்கால அணிகள், பாத்திரங்கள், படைக் கலன்கள், இசைக் கருவிகள், ஏடு, எழுத்தாணி, கொடி, முத்திரை, மகுடம், அரச கட்டில் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆங்கிலேயர்களின் விரும்பத்தகாத பழக்க வழக்கங்களை ஒன்று விடாது பின்பற்ற நாடும் நம் மக்கள், அவர்களின் பழம் பொருள்களைச் சேகரித்துப் பாதுகாத்து ஓம்பும் பயன்தரும் பண்பை அவர்களிடமிருந்து பெறத் தவறி விட்டோம். நமது அரசோ, அரசியல் மேதைகளோ அறிவியல் மேதைகளோ சமயச் சான்றோர்களோ பழம் பொருள்களை-ஏன் சமய குரவர்களின், தெய்வப் புலவர்களின், மாமன்னர்களின் எழுத்துக்களையோ, எழுத்தாணிகளையோ படைக்கலன் களையோ, ஆடை அணிகளையோ சேகரித்து ஆய்ந்து அறிவு நூல் யாத்து, வரலாற்று ஏடு எழுதி நம்நாட்டு இளந்தளிர்களுக்கு வாழ்வளிக்க இதுவரை முன் வரவில்லை. இனியாவது முன் வர வேண்டும் என்பது எனது பணிவான கோரிக்கையாகும். தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றியதாம் எனும் எவையும் தீதா என்ற சான்றோர் வாக்கை எண்ணி பழமை யெல்லாம் தீதானதும் அல்ல புதுமை எல்லாம் நலமானதும் அல்ல. பழமை யிலும் நல்லது உண்டு. புதுமையிலும் தீயதுண்டு என்று தேறி நலமானதைப் பேணி முன்னேற்றம் பெற வேண்டும். தமிழர்களின் போர்முறைகளைப் பற்றியோ போர்க்கருவி களைப் பற்றியோ இதுவரை நாம் ஆய்வு செய்யவில்லை. ஆய்வு நூல் ஒன்று கூட இன்று வரை தமிழில் கிடைக்கவில்லை. நான் 1950-ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்த பொழுது இந்திய, கீழ் நாட்டுப் படைக் கலன்களின் வரலாறு. பழங்காலப் படைக் கலங்கள் இந்திய இராணுவ வரலாறு. இந்தியப் போர்க் கருவிகள் போன்ற ஆங்கில நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதன்பின்னர் நமது கோயில் சிற்பங்களிலும் தொல் பொருள் காட்சி சாலைகளிலும் போர்க் கருவிகளின் உருவங்களைக் கண்டேன். அதன் மூலம் நமது படைக் கலன்களைச் சேகரிக்க வேண்டும். தமிழில் படைக்கலன்களைப் பற்றி ஒரு நல்ல நூலை எழுத வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. பழைய படைக் கலன்களைச் சேகரிப்பதும் அதைப் பற்றி ஆய்வதும் ஒரு இன்றியமையாத கலைத் தொண்டு, வரலாற்றுப் பணி, நாட்டுச் சேவை, தமிழ்த் தொண்டு என்றெல்லாம் முடிவுகட்டிக் கொண்டேன். அப்பால் படைக்கலன்களை சேகரிக்க முற்பட்டேன். அதில் நான் முழு வெற்றி பெறவில்லை. எனவே 1960 முதல் பண்டைத் தமிழர்களின் வரலாற்றில் காணும் போர்க் கருவிகளையும் போர் முறைகளையும் பற்றி இலக்கியம் வழியாக ஆராய முற்பட்டேன். பல ஆங்கில இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் படிக்க தொடங்கினேன். ஆங்கில இலக்கியங்கள் எனக்கு நல்ல வழிகாட்டி களாய் அமைந்துள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த பழங்கால மன்னர்கள், போர் மறவர்கள் வழி வந்த சிலரிடம் பல ஆயுதங்களைக் காணமுடியும். ஆனால் அவர்கள் என் போன்றவர் களுக்கு எப்படிக் கொடுத்து உதவுவர்? நான் அரசு அதிகாரி யாகவோ, வெள்ளைக்காரனாகவோ இருந்தால் விரும்பியவைகளை அவர்கள் பாதங்களில் வைத்து வணங்கிக் கொடுப்பது இந்தியப் பண்பாய் விட்டது. என்றாலும் எனது முயற்சி வீண் போகவில்லை. பல போர்க்கருவிகளின் படங்களை அடைய முடிந்தது. வரலாற்றில் காணும் தமிழர்களின் போர் முறைகளையும் போர்க் கருவிகளையும் பற்றிய செய்திகள் என் உள்ளத்தை ஈர்த்து விட்டன. இந்த ஆய்வு எனது முயற்சிக்குப் புதிய தெம்பை ஊட்டியது. தமிழர் வரலாற்றை மட்டுமல்ல ஆரியர், சுமேரியர், எகிப்தியர், சிங்களவர், பர்மியர், மலேசியர், கம்போடியர், தாய்லாந்தினர், சாவகத்தினர் போன்றவர்களின் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உள்ளத்தில் உந்தி எழச் செய்து விட்டது. திராவிடர் கள், திராவிடர்களின் முன்னோர்கள், திராவிடர் களின் ஆதி இனத்தைச் சேர்ந்தவர்கள் (Dravidians, Pre - Dravidians, Proto- Dravidians) என்பவர்களைப் பற்றியெல்லாம் அறிய முடிந்தது. உயிர்களின் உற்பத்தி, மக்களின் பரிணாம வளர்ச்சி, தொல் பழங்கல் ஊழிமக்கள், பழங்கல் ஊழிமக்கள், இடைக்கல் ஊழிமக்கள், புதுக்கல் ஊழி மக்கள், பெருங்கல்லறைப் பண்பாட்டு மக்கள், உலோக கால மக்கள், வரலாற்றுக் கால மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை, கற்காலக் கருவிகள், உலோக காலக் கருவிகள், தட்டு முட்டுப் பொருள்கள், எழுத்தமைப்புகள் நாடோடி வாழ்க்கைகள், நகர் அமைப்புத் திறன், தெய்வங்கள், வழிபாட்டு மரபு, உணவு சேகரிக்கும் கலை, போர் முறைகள், போர்க் கருவிகள் முதலியவைகளை யெல்லாம் நுணுகி ஆராய முற்பட்டேன். தமிழர் கண்ட சங்கம் மருவிய தங்க காலத்தில் (Goldenage) துளிர்த்த இலக்கியங்களில் படைக்கலன்களின் பெயர்களும், போர் முறைகளும் காணப்பட்டன. நிகண்டுகளிலும் அகராதிகளிலும் பல படைக்கலன்களின் பெயர்களும் அதன் பரியாயப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. சிற்ப நூற்களிலும் ஓவிய நூற்களிலும் சில போர்க்கருவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது கோயில்களில் உள்ள சிலைகளிலும் வெண்கலப் படிமங்களிலும் பண்டையப் படைக்கலன்கள் வடிவங்கள் பல காணப்பெற்றன. அரப்பன் பண்பாட்டில் சிறப்பான வெண்கலக் கருவிகள் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்டதை அறிந்தேன். ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கண்ட இரும்புக் கருவிகளையும் கண்டு ஆய்ந்தேன். திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், செங்கற்பட்டு முதலிய மாவட்டங்களில் அகழ்ந்து கண்ட முதிராப் பண்புடைய முது மக்களின் கற்காலக் கருவிகளையும் அறிந்தேன். இன்னும், புகார், உறந்தை, கொற்கை, வஞ்சி முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்ந்தால் பழைய தமிழக மன்னர்களின் படைக்கலன்களைக் காண முடியும் என்று உணர்ந்தேன். மொகலாய அரசர் அக்பர் காலத்தில் உள்ள அயின். இ. அக்பரி என்னும் அரிய நூல் வெளி வந்த பின்னர்தான் இந்தியப் படைக்கலங்களைப் பற்றி எவரும் ஒரு தெளிவான விளக்கம் பெற முடிந்தது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள போர்க்கருவிகளைப் பற்றி பல நல்ல நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் ஏராளமான படைக்கலன்களின் படங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. அறிஞர் மெய்ரிக் போன்ற மேனாட்டறிஞர்கள் தங்கள் நாட்டுப் படைக் கலங்களைப் பற்றி அறிவியல் முறையில் ஆய்ந்தும் வரலாற்றுக் கண்ணோடு நோக்கியும் பல உயர்ந்த நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் அந் நூற்களில் இந்தியப் படைக்கலன்களை மட்டுமல்ல கீழ் நாடுகளின் படைக்கலன்களைப் பற்றியும் நன்கு ஆய்ந்து விரிவாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆனால் இவைகளில் பல பிழை களும் குறைபாடுகளும் உண்டு. இவைகள் அறிஞர்களால் மன்னிக்கத் தக்கனவேயாகும். ஆனால் இந்த நூல்களில் இடைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்திய படைக்கலங்களின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. அவை சங்கிலித் தொடர் போல் வளர்ச்சி பெற்ற போர்க்கவசங்கள் அல்லது எஃகு அரிவாள்கள் போன்ற ஆயுதங்களாகத்தான் காணப்படுகின்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன்தான் இங்கிலாந்தில் உள்ளவர்கள் இந்தியாவின் பழம் பெரும் படைக்கலங்கள் அடங்கிய தனிப்பட்ட தேசிய ஆயுதச் சேகரிப்புகளை ஆய்வதற்குரிய அனுகூலமான சூழ்நிலை தோன்றியது. ஆனால் அவர்களுக்கு இந்தியாவில் புதிதாகத் தோன்றிய ஆயுதங் களைச் சேகரிக்கவோ, பார்த்து ஆராயவோ முடியவில்லை. பல படைக் கலங்கள் மேனாட்டிலுள்ள இளந்தலைமுறையாளர்கள் காண முடியாமல் வழக்கற்றுப் போய் விட்டன. அதை அறிந்த மேனாட் டறிஞர்கள் மிக வருந்தியுள்ளனர். ஆனால் தமிழ் நாட்டு அறிஞர்கள் இதைப் பற்றிக் கடுகளவும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவில் எழுந்த இராணுவக் கொடுங் கோன்மைகள் நமது படைக்கலன்கள் பலவற்றைத் துகள் துகளாகச் செய்து விட்டன. எஞ்சி இருந்தவைகள் படிப்படியாக ஐரோப்பிய ஆயுதங்களின் தழுவுதலாக மாற்றம் பெற்று எழுந்துள்ளன. மேலும் அவைகள் அமைதியையும் உடன்பாட்டையும் படைக்கலங்களைத் தாங்கிச் செல்லும் அவசியத்தையும் படிப்படியாய் மறையும்படிச் செய்துவிட்டன. இந்தியர்களால், இந்தியாவில் எழுந்த முதலாவது இரண்டாவது படையெழுச்சியும் 1857 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொங்கி எழுந்த முதலாவது இந்திய நாட்டு உரிமைப் போர் என்று கூறும் சிப்பாய்க் கலகமும் ஆங்கில ஆட்சியைக் கலகலக்கச் செய்தது. அதனால் ஆங்கில ஆட்சியாளர் இந்திய இராணுவங்களின் படைக்கலங்களையும் மக்களின் ஆயுதங்களையும் அமைதியான சூழ்நிலை, படை வலிமைக் குறைப்பு என்ற பெயரால் பறித்து விட்டனர். பல பழைய படைக்கலக் கொட்டில்கள் உடைக்கப் பட்டன. பல பழைய அரிய ஆயுதங்கள் மக்களிடமிருந்து பறிக்கப் பட்டு உடைத்து வீசப் பட்டன. மக்கள், தற்பாதுகாப்புக்கும் கூட நீண்ட கத்தி, பெரிய வாள், நெடிய வேல்கள் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசாங்க விதிகளை மீறி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கொடுந்தண்டனைகளுக்கு ஆளா யினர். அவசியமானவர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று சில ஆயுதங்களை வைத்திருந்தனர். பத்தொன்பதாம் ஆண்டின் பிற்பகுதி யில் ஆங்கில ஆட்சியின் ஆதிக்க வெறிக்குப் பயந்து, மக்கள் படைக் கலங்களை பழைய வெண்கல பாத்திர வணிகர்களிடம் பேரீத்தம் பழத்திற்காக விற்று விட்டனர். அவைகளை அவர்கள் வாங்கி உடைத்து உருக்கிப் பானைசட்டிகள், மண்வெட்டி, கோடரிகள் முதலியவைகளைச் செய்து விற்று வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் கீழ் நாட்டுப் படைக்கலன்களின் சேகரிப்புகள் சில நடைபெற்று வந்ததாக எ. தாம்சன் போன்ற படைக்கல ஆராய்ச்சி விற்பன்னர்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். கீழ்நாட்டுப் படைக்கலன்களின் சேகரிப்புகள் இங்கிலாந்தைப் போல் உலகில் வேறு எந்த நாட்டிலும் எவரும் காண முடியாது. ஆனால் அவைகளை முற்காலத்தில் எந்தக் காட்சியிலும் வைக்க மாட்டார்கள். அவைகளில் சில வெற்றி பெற்ற ஆங்கிலப் படைத் தலைவர்கள் அல்லது படை வீரர்கள் பெற்ற வெற்றிகளின் சின்னங்களாக இருந்தன; சில, அரசப் பிரதிநிதிகள் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்தவைகளாயும் சில, தனிப்பட்ட குடிமக்களுக்கும் சில கிழக் கிந்தியக் கும்பினியார்களுக்கும் முடி மன்னர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பரிசுப் பொருள் களாகவும் இருந்தன. இங்கிலாந்தில் உள்ளவர்களுக்குக் கூட பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பாரத நாட்டுப் படைக்கலங்களைப் பற்றி, இங்கிலாந்து அரசரின் அனுமதியின்றி நூல்கள் எழுதி வெளியிட முடியாதிருந்தது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டன் மாநகரில் உள்ள இந்திய அலுவலகத்தின் (India Office) சேகரிப்பிலும், இங்கிலாந்து நாட்டின் அரச பெரு மாட்டியின் சேகரிப்பிலும் உள்ள படைக் கலங்களை, வின்சுட்டரி லும், பாரீசிலும் வேறு சில இடங்களிலும் நடைபெற்ற கண்காட்சி களுக்கு வேல்சு நாட்டு இளவரசர் எட்வர்ட் (விக்டோரியா அரசியின் மகன்), பெருமனத்துடன் அனுப்பி வைத்தார். அக்காட்சியில் வைக்கப்பட்ட படைக்கலங்களை அரசாங்க அனுமதி பெற்று படம் எடுத்து ஆய்ந்து நூல் எழுதியதாக இங்கிலாந்திலுள்ள சில எழுத்தாளர்கள் தங்கள் நூற்களில் குறிப் பிட்டுள்ளனர். அறிஞர் எண்டர்சன் (Henderson) அவர்கள் இங்கிலாந்தி லுள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் உள்ள படைக்கலன் களை ஆய்ந்து தொகுக்கப்பட்ட தொகுப்பு மிகச் சிறப்புள்ளதாகும். அறிஞர் மெய்ரிக், அறிஞர் கிறிடி ஆகியவர்களின் சேகரிப்புகள் சிலவும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவைகள் தவறி விட்டன. அறிஞர் டெய்லரின் (Daylor) சேகரிப்புகள் கென்சிங்டன் பொருட்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலு முள்ள அரசாங்கப் பொருள்காட்சி சாலைகள் பெரும் பொருளைச் செலவிட்டு பாரத நாட்டுப் படைக்கலங்களை இடம் பெறச் செய்துள்ளன. பாரத நாட்டுப் பழம் பெரும் படைக்கலங்கள் பல பாரீசு, இலெய்டன், கோபன்ஹேகன், டாக்கோம், வியன்னா, இலண்டன் போன்ற இடங்களிலுள்ள பொருட்காட்சி சாலையில் இன்று இடம் பெற்றிருக்கின்றன. என்றாலும் பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலை யில் காணப்படும் அரிய பெரிய சேகரிப்பிற்கு நிகரான சேகரிப்பைப் போல் உலகில் வேறு எங்கும் காண்பதரிது. ஆனால் பழைய உருசிய நாட்டு அரசருக்குச் சொந்தமான சார்க்கோ செலோ (Zarkoe Selo) வில் உள்ள படைக்கலங்களின் சேகரிப்புகள் மட்டும் பிரிட்டிஷ் பொருட் காட்சி சாலையில் காணப்படும் சேகரிப்புகளோடு போட்டியிடத் தக்கன என்று இன்று எண்ணப்படுகிறது. இதில் 1841-ஆம் ஆண்டின் இறுதியில் சேகரிக்கப்பட்ட சோல்டிகோவ் (Soltikoff) சேகரிப்பும் இணைந்துள்ளது. இஃதன்றி இதில் இன்னும் பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட படைக்கலங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாப் பொருட்காட்சி சாலைகளிலும் பாரத நாட்டுப் படைக்கலங்கள் பங்கம் அற்றதாய் பசுமை நிறைந்ததாய் கலையழகும் கவினுறு வேலைப்பாடும் நிறைந்து தனிச் சிறப்புடன் தக தகவென மிளிர் கின்றன. பிரான்சு நாட்டுக் காட்சிசாலையினர் தங்கள் காட்சி சாலையின் படைக்கலங்களை ஆய்ந்து நல்ல பட்டியல் வரைந்து மிக அழகாக எண்ணிலா வண்ணப் படங்கள் தீட்டி மூன்று தொகுதி களாக வகுத்துத் தொகுத்து அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து தமிழர்கள், உயர்ந்த ஒப்பற்ற படைக்கலங்களைப் பண்டு பாரதநாடு படைத்திருந்தது என்று பெருமைப்படலாம். ஆனால் பாரதநாடு தம் படைக்கலங்களைச் சேகரித்து அவைகள் அனைத்தையும் நன்கு தொகுத்து வகுத்து வண்ணப்படங்களுடன் நூல் வெளியிடாமல் போனதற்கு நாம் நாணுற்றுத் தலை குனியாமல் இருக்க முடியாது. நமது பழங்காலப் படைக்கலங்களின் ஆய்வு இன்றியமையாதது என்று ஒருவர் கூறினால், இந்த அணுகுண்டு ஊழியில், பழைய பத்தாம்பசலி படைக்கலன்களின் ஆய்வு எதற்கு? அதனால் என்ன பயன்? என்று பேசும் நம்நாட்டு அறிஞர்கள், அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும், உலாந்தாக்காரர்களும் உருசியர்களும் ஏன் பல்லாயிரம் பவுண்களைச் செலவிட்டு பாரத நாட்டுப் பழம்பெரும் படைக்கலன்களைச் சேகரித்துப் பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்? ஏன் - பட்டியல் எழுதி படம் போட்டு வெளியிடுகின்றார்கள். நூல் எழுதுகின்றார்கள்? அவர்கள் பித்தர் களா? எத்தர்களா? முட்டாள்களா? என்று நாம் சிந்திக்க வேண்டும். மேலும் அவர்கள் பாரதநாட்டுப் பழைய படைக்கலங்களை ஆய்ந்து பிற நாட்டுப் படைக்கலங்களைப் பார்த்து, பாரில் உயர்ந்த படைக் கலங்களைப் படைத்துள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பண்டைக்கால வரலாற்றை நுணுகி ஆராய பழங்கால ஆயுதங்களின் சேகரிப்பு நல்லது. தமிழ் நாட்டுப் படைக் கலங்களை கற்காலக் கருவிகள், மரக்காலக் கருவிகள் உலோக காலக் கருவிகள் என்று முதலாவதாக பிரித்து ஆய்ந்தனர். அப்பால் வந்த அறிஞர்கள் வில், அம்பு, கதை, தடி, உலக்கை போன்றவைகள் மரக்கால ஆயுதங்கள் என்றும் கத்தி, வாள், வேல், ஈட்டி, கோடரி, அங்குசம், கேடயம் போன்றவைகள் உலோக கால ஆயுதம் என்றும் பிரித்து ஆராய்ந் துள்ளார்கள். பின்னர் ஆயுதங்கள் ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி கத்தி இனம், வேல் இனம், கேடய இனம் என்று பிரித்து ஒவ்வொரு ஆயுதத்திலும் பல உட்பிரிவுகளைக் கண்டு ஆய்ந்துள்ளார்கள். மேலை நாட்டில் உள்ள பொருட்காட்சி சாலைகள் பாரத நாட்டுப் படைக்கலங்களை ஒரு தெளிவான திட்டத்தின் மீது தொகுத்து வகுத்து ஒழுங்குபடுத்தி வைக்கவில்லை. படைக்கலங் களைக் கேவலம்! கலைக் கண்ணோட்டத்தோடுதான் காட்சி சாலை களில் பரப்பிவைத்துள்ளனர். அங்கு அவைகள் ஒரு பொதுவான காட்சி சாலையில் சாதாரண முறைப்படி அழகுபடுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஆனால் டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன் ஹேகன் பட்டினத்திலுள்ள காட்சி சாலையின் நமது படைக்கலன் களை ஒழுங்குற வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாரத நாட்டுப் படைக் கலன்கள் மனிதப் பண்பாண்மை ஆக்கம் பற்றிய ஆய்வு நூலின் கால வெளியீட்டுத் தொகுப்பு முறைப்படி வகைப் படுத்தி வைக்கப் பெற்றுள்ளது என்று அறிஞர்கள் புகழ்ந்துரைக் கின்றனர். பின்லாந்து பொருட்காட்சி சாலையினரின் சிறப்பான வழிமுறையில் இந்தியாவும் - ஏன்? தமிழகமும், தம் படைக்கலங் களைத் தொகுத்து வைக்கலாம் என்பது எனது எண்ணம். தமிழ் நாட்டுப் பழைய படைக்கலங்கள் அனைத்தையும் நாம் சேகரிக்க முயன்றால் 100-க்கு மேற்பட்டவைகள் இன்று கிடைக்க லாம். இவைகளை கற்காலத்தில் எழுந்தவைகள், மரக் காலத்தில் தோன்றி யவைகள், உலோககாலத்தில் உதித்தவைகள் என்று வகுக்க லாம். உலோக காலத்தில் உதித்தவைகளை, எஃகுக் காலத்தில் எழுந்த வைகள் வெண்கலக் காலத்தில் உதித்தவைகள் என்றும் பகுத்து வைக்கலாம். அப்பால் ஆயுதங்களை, கலை நிலையின் அடிப்படை யிலும் வரலாற்றுப் பாங்கின் அடிப்படையிலும் மனிதப் பண்பாண்மை ஆக்கம் பற்றிய ஆய்வு இயல் வெளியீட்டுத் தொகுப்பு முறையின் அடிப்படையிலும் (Ethnological basis) பகுத்து ஆராயலாம். படைக் கலங்கள் எந்த மொழியினருக்கு அல்லது நெறியினருக்கு உரிய குறியீடாய் எந்த மனித இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் படைத்ததாய், முற்றொருமை பெற்றிருக்கிறது என்று ஆய்வதைவிட மிகப் பெரிய அளவில், படைக்கலங்களின் குறியீடுகள் உயர்ந்த பண்பில் அமைந் திருக்கின்றன என்று ஆய்வது சிறப்பானது என்று பல அறிஞர்கள் கூறிவருகின்றார்கள். அழகு தரும் அரிய வேலைப்பாடுகள் அதைப் படைத்த இனங்களின் அறிவு நுட்பத்தையும், கலைத் திறனையும் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுகிறது. அதோடு அதில் அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் மொழியில் அமைந்துள்ள அடிச் சுவடுகள் எல்லாவற்றையும் நன்கு காணமுடிகிறது. எனவே இங்கு படைக்கலங்களை ஐரோப்பிய அறிஞர்களின் நலந்தரும் அறிவியல் பாங்கான ஆய்வு முறைகளை அனுசரித்து மக்கள் இனப் பண்பினை யொட்டி தமிழ் மரபினை அனுசரித்து படைக்கலங்களின் சேகரிப்பைத் தொகுத்துப் பகுத்து ஒழுங்குபடுத் துவது உயர்வானது; ஒப்பற்றது; சிறப்பு மிக்கது. ஆங்கிலேயர் ஆட்சியில் அடங்கிய பாரத நாட்டின் பல்வேறு மக்களின் குணாதிசயங்கள், அறிவு, வீரம், பலம், போர் நுட்பம், காலம், வரலாறு, படைக்கல அறிவியல் போன்றவைகளை, இந்தப் பகுப்பு முறைகளையொட்டி ஆய்பவர்கள் எளிதில் உணர்வர். இஃதன்றி இவைகள் ஐரோப்பிய நாகரிகம் ஐரோப்பியப் பாங்கு ஆகியவைகளின் முற்போக்கான எழுச்சியின் முன்னர் இந்தப் பழம் பெருமைகளும் உயரிய தன்மைகளும் வீழ்ந்து பட்டன என்பது வரலாற்று உண்மை. அதற்குக் காரணம் என்ன என்பதை ஆய்வது சுவை தருவனவாகும். நாம் பழைய படைக்கலன்களைச் சேகரிப் பதற்கு முக்கிய காரணம் இதுவும் ஒன்று. ஐரோப்பிய அறிஞர்கள் படைக்கலங்களை எப்படிச் சேகரித் துள்ளார்கள்? அவர்கள் அவைகளை எவ்வாறு வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். அவர்கள் எவ்வாறு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் இனப் பண்பாண்மை அடிப்படையிலும் ஆயுதச் சேகரிப் புகளை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்? என்பவைகளை அறிந்து நாமும் அவ்வழியில் செயல்பட வேண்டும். படைக்கலங்களின் மாதிரி உருவங்களை வைத்து காலத்தைக் கணிப்பது கடின மான காரியமேயாகும். இத்துறையில் ஐரோப்பியர்கள் பெற்றிருக்கும் அரிய அனுபவங்களும் ஆழ்ந்த ஆய்வும் நுணுகிய அறிவும் நாம் இன்னும் பெறவில்லை. நான் முயன்று பார்த்துள்ளேன் இத்துறையில் நல்ல சிறப்பமைந்த சீரிய இந்திய அறிஞர்களைக் கண்டு பேசவோ அவர்களின் ஆலோசனைகளைப் பெறவோ என்னால் முடிய வில்லை. இந்த ஆய்வுத் துறையில் ஈடுபடுபவர்கள் நம் நாட்டில் திருந்தாத நாகரிகமற்ற மக்களும் நனி சிறந்த நாகரிகத்தை நடத்திய உயர்ந்த மக்களும் அருகருகே இருந்து வருகிறார்கள் என்பதை உணர வேண்டும். அதோடு நமது பழம் பெரும் கலைகளின் பண்பு மாற்றமில்லாத சிறப்புஇயல்புகளையும் இங்கு காண முடியும். தமிழகம் பல்லாயிரம் ஆண்டுகளாக அரும்பாடுபட்டுப் பெற்ற அரிய நாகரிகங்களையும் அறிவு நுணுக்கங்களையும், மாற்றங்களையும் சிறப்புகளையும் ஐரோப்பா சில தலைமுறைகளுக்குள் பெற்றுள்ளது. பெற்றுள்ளவைகளைப் பேணிப் பெரிதும் வளர்த்துள்ளது. இவை களை நாம் நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலும் நாம் இவைகளையெல்லாம் விரிவாக ஆய்ந்து படைக்கலன்களின் சேகரிப்பை ஒழுங்குபடுத்தியும் உயர்வுபடுத்தியும் மனித இனப் பிரிவின் பண்பு அடிப்படையைக் கடைப்பிடித்து இங்கு ஆராய முயன்றுள்ளோம். பாரதப் படைக்கலன்களின் வரலாற்றின் சுருக்கமான குறிப்புப் பட்டியல் விளக்கத்தை அனு சரித்து நமது நாட்டுப் பழங்காலப் படைக்கலன்கள் சேகரிப்பில் காணும் பல்வேறு இனத்தவர்களின் தொடர்பையும் பெற முயன்றுள் ளேன். மேனாட்டு ஆய்வாளர்கள் எவ்வாறு இத்துறையைப் பயின்றும் படைக்கலங் களைச் சேகரித்தும் ஆய்ந்தும் விளக்கியும் உள்ளனர் என்பதை அறிந்தும் அதை அனுசரித்தும் ஒரு நல்ல ஆய்வு நூலைப் படைப்பது ஓரு சிறந்த ஆய்வுப் பணியாகும். படைக்கலங்களைச் சேகரிப்போர், படைக்கலங்களை, கலை வரலாற்றைப் போல் நிலை குலையாது நின்று ஆய்ந்து தோய்ந்து தொகுத்துப் பகுத்து வைக்க வேண்டும். அதோடு அவர்கள் ஆரிய துரானியா திராவிட மங்கோலிய மொகலாய ஐரோப்பிய நாகரிகங்க ளுக்கு இடையேயுள்ள வேற்றுமைகளை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். மேலும் இன்றைய பண்பாட்டுச் சார்பான மனித இன நூல் கலைப் பாங்காகத் தீட்டிக்காட்டும் பொருள் முறையில் கேட்கப்படும் வினாக்களுக்கு மேற்கோள்கள் காட்டி விடை யிறுப்பது நன்று. பழம் பெரும் திராவிட மக்களின் பண்டைக் காலப் படைக்கலன்களின் தொகுதி ஆரிய இனத்தவர்களிடம் எப்படிச் சென்று அபிவிருத்தி அடைந்துள்ளது என்ற ஆய்வு இன்றியமையாததாகும். கலை வளர்ச்சியும் நாகரிக முதிர்ச்சியும் கரடு முரடான ஆயுதங்களை மிக நுண்ணயம் வாய்ந்த உயரிய ஆயுதங்களாக உருவாக்கிவிட்டன என்பது இங்கு ஆயப் பெற் றுள்ளது. ஒவ்வொரு இனத்தவர்களிடமும் காணப்படும் ஆயுதங்கள் புனிதத் தன்மைகளை ஆய்ந்து தனித்தனி அத்தியாயங்கள் வகுத்து ஆராயப் பெற்றுள்ளன. உலகில் பல செய்வினைப் பொருள்களும் அதனுடைய அழகிற்காகப் படைக்கலங்களைப் போல் பயன் படுத்தப் படுவதில்லை. மேலும் படைக்கலங்களின் பண்புகள் ஒரு தனிச் சிறப்புடன் நோக்கப்படுவது உலக இயல்பாக இருக்கிறது. தமிழர்களின் படைக்கலங்களில் சுமேரியா, ஆசீரியா எகிப்து முதலிய நாடுகளின் பண்புகள் ஒளிர்கின்றன. முன்னர் சுமேரியாவி னின்று தமிழர் நாகரிகம் வந்தது என்று எண்ணப்பட்டது. இன்று திராவிட இந்திய நாகரிகம் சுமேரியாவிற்குப் போய் சிறப்புற் றிருக்கலாம் என்று கூட எண்ணப்படுகிறது. வட இந்தியப் படைக் கலங்களில் திராவிட நாடு, கிரேக்க நாடு, பாபிலோன நாடு, சீன நாடு போன்ற பல நாடுகளிலுள்ள ஆயுதங்களின் வேலைப் பாடுகள் ஒளிர்கின்றன என்று கூறப்படுகின்றன. பௌத்த நெறியி னால் உந்தப் பெற்ற சீன சப்பானியக்கலை உலகில் உயர் நிலை பெற்றது. இது முதல் நிலையில், சீன சப்பானியக் கலையாகவும் பின்னர் இரண்டாவது நிலையில் இந்தியாவின் தொடர்பால் எழுந்த கலை என்றும் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது. நமது படைக்கலன்களைப் பற்றி நிறைவான ஒரு நல்ல நூலை எழுதிப் படைக்கத் தமிழ்நாட்டு பழம் பொருள் காட்சி சாலையில் படைக்கலங்கள் நிரல் செய்து வைக்கப் பெற்றிருக்கவில்லை. நூலகங்களில் தமிழில் படைக்கலங்களைப் பற்றிய ஒரு நூல்கூட இல்லை. ஆங்கிலத்தில் கூட அதிகமான நூற்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசின் பழம் பொருள் காட்சி சாலையில் இருக்கும் படைக்கலங்களுக்கு ஒரு விளக்கமான பட்டியல் கூட இல்லை. இந்திய அரசாங்கத்தின் தில்லிப் பழம் பொருள் காட்சி சாலை படைக்கலங்களின் பட்டியல் வெளியிட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட எமக்கு இல்லை. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சி நடத்திய காலத்திலே இந்தியப் பழம் பொருள் காட்சி சாலையில் இந்தியப் படைக்கலங்கள் போதிய அளவு சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அக்காலத்திலே அரசாங்கம் பாரத நாட்டுப் படைக்கலங்களைத் தற்காலிகமாகக் காட்சிக்கு வைக்க அனுமதி அளித்திருந்தது. பாரத நாட்டில் சேகரித்து வைக்கப் பெற்ற படைக் கலங்களை ஆழ்ந்து ஆய்ந்து, பாங்குடன் படிகள் எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்தால் படைக்கலங்களின் சேகரிப்பு கால நிரலில் அல்லது வளர்ச்சி முறையில் இடைவெளிகள் இன்றி நிறைவுடைய தாய் இருக்கும். இதைப் பல்லாண்டுகளுக்கு முன்பே இத்துறையில் பழுத்த அனுபவமும் ஆழ்ந்த அறிவும் வாய்ந்த மேனாட்டு நிபுணர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். நமது படைக்கலன்கள், எண்ணிக்கையில், நுண்ணிய வேலைப் பாடுகளில், தரத்தில், உயர்ந்தன என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால் இந்திய ஆளவந்தார்கள் திராவிட நாட்டைப் புறக்கணித்து வந்தது போல் படைக்கலன்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதிலும் அக்கறை காட்டாது இருந்து விட்டனர்.1 எனவே தமிழ் நாட்டுப் போர்க்கருவிகள் பல உடைந்தும் துருவேறியும் அழிந்தொழிந்தன. பல பழைய உலோகப் பொருள்கள் வாங்கும் வணிகர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எண்ணற்ற அரிய பழைய போர்க்கருவிகள் பயனறியா மூட வணிகர்கள் கையில் சேர்ந்து உலை முகத்தினை அடைந்து உருக்கப்பட்டு உருக்குலைந்து அழிந்து ஒழிந்து போயின. இந்நூலை பல இன்னல்களுக்கிடையே ஒருவாறு எழுதி முடித் துள்ளேன். இதனை எழுதியதின் நோக்கம் படைக்கலன்களை மட்டுமல்ல நாட்டிற்கு நலன்தரும் எல்லாப் பழம் பொருள்களையும் மக்கள் - சிறப்பாக மாணவர்கள் சேகரித்து ஆய்ந்து நூல் ஆக்கஞ் செய்யத் தூண்ட வேண்டும். நாம் நாட்டைக் காக்க புதிய ஆயுதங் கள் செய்ய வேண்டும் என்பதேயாகும். இத்துறை ஆய்வில், பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெற விழைய வேண்டும் என்பதும் எனது குறிக்கோளில் ஒன்றாகும். இந்தச் சிறு நூலை எழுதி முடித்ததும், நான் நாட்டிற்கு ஒரு நற்பணியைச் செய்து விட்டதாக என் உள்ளத்தில் உணர்ச்சி உந்துகிறது; உவகை எழுகிறது. எனது நாட்டு மக்கள் இன்றில்லா விடினும் ஒரு சில ஆண்டுகளிலாவது நமது நாட்டு பழங்கலைகளை ஆய்ந்து, பிற நாட்டுப் புதுக்கலைகளைக் கற்று நமது நாட்டில் நற்கலைகளை உருவாக்க முன்வருவார்கள்; ஏன்? - நல்ல போர்க் கருவிகளை உருவாக்கி நாடு காக்க முன் வருவார்கள் என்று நம்புகிறேன். இந்நூலின் பயனை விரைவில் எனது நாட்டு இளந் தலை முறையாளர்கள் உணர்வார்கள் என்று நினைக்கின்றேன். தமிழக வரலாற்றில் காணும் போர்முறைகளையும் போர்க் கருவிகளையும் பற்றிக் கூறும் இந்நூலை எழுதத் தொடங்கும் பொழுது, இதற்கு முன் கலை நூற்களை எழுதும் பொழுது நான் பெற்றிருந்த அறிவும் ஆற்றலும் ஆக்கமும் ஊக்கமும் இந்நூல் எழுதத் தொடங்கும் பொழுது அரும்பவில்லை. காரணம் எனக்கு தமிழக வரலாற்றைப் பற்றியோ போர்க்கருவிகளைப் பற்றியோ உள்ள எனது அறிவு அற்பமானது. தமிழில் இத்துறைகளைப் பற்றிய நூற்கள் எதுவும் இல்லை. தமிழ் நாட்டு போர்க்காவியங்கள் எதையும் நான் காணவில்லை. படைக்கலன்களை ஆய்ந்த அறிஞர் களைக் கூட நான் சந்தித்தது இல்லை; உரையாடியதும் இல்லை. இந்நூலை எழுதுவதற்குரிய நல்ல நூற்கள் எதுவும் தமிழில் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை என்றாலும் மிகுந்த சிரமப்பட்டு இந்நூலை முடிக்கும் தருவாயில் சில ஆங்கில நூற்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். எனவே அவைகளை நன்கு ஆய்ந்து அவை களிலுள்ள அரிய கருத்துகள் பலவற்றை மேற்கோளாக எடுத்து இந் நூலில் பெரிதும் ஆண்டுள்ளேன். இந்நூலில் பல தவறுகளும் விடுபாடுகளும் காணலாம். அவை அனைத்தும் தவிர்க்க முடியாத தவறுகளாக அமைந்துள்ளன. இத்துறை எனக்குப் பயிற்சியில்லாத பழந்துறை. தமிழ் எழுத்தாளர் உலகுக்குப் புதியதுறை. எனது நாடு மறந்து விட்ட மாபெருந்துறை. தமிழ்க் கலைகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இச்சீரிய நூலை விரைவில் எழுதி முடித்து விட்டேன். தமிழுலகம் குற்றங் களைந்து நல்லவைகளை ஏற்று நலம்பெறும் என்று நம்புகிறேன். 2. படையும் நடையும் ஆதிகாலத்தில் மக்கள் அனைத்தையும் சமூக உடைமையாகக் கொண்டு வாழ்க்கை நடத்திவந்தனர். காலப் போக்கில் சமூக வளர்ச்சியில் தனி உடைமை ஆதிக்கம் வந்து புகுந்து கொண்டது. தனி உடைமைச் சமூக அமைப்பைப் பாதுகாக்க அரசனும் அரசும் படையும் பிறவும் எழுந்தன. தனி உடைமைச் சமுகத்தில் தொடக்க காலந்தொட்டு உடையவர்களும் இல்லாதவர்களும் உழைப்பாளி களும் முதலாளிகளும் எழுந்து விட்டதால் பெருமையும் சிறுமையும் போரும் பொறாமையும் பேராசையும் தோன்றிவிட்டன. ஆள்பவனும் ஆளப்படுபவனும் எழுந்து விட்டனர். தனி உடைமை எழுச்சி மக்கள் உள்ளத்தில் உழையாது பிறர் உழைப்பில் வாழ வேண்டும் என்ற தன்னல வெறியை எழுப்பி விட்டது. அத்தன்னலப் பேயே, மக்கள் உலகில் போருக்கு அடிப்படையிட்டு விட்டது. தமிழகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசர்களும் படைகளும் படைக்கலன்களும் போர்களும் எழுந்து விட்டன என்று தமிழில் உள்ள திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழம் பெரும் நூற்கள் சான்று தருகின்றன. தொல்காப்பியத்தில், படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய - (தொ.பொ.மர.87) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்குப் படை, கொடி, குடை, முரசு, குதிரை, யானை, தேர், தார், முடி முதலிய பிற பொருள்களும் உண்டு என்று தெரிகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அரசனும், குடிகளும், தொழிலாளியும் முதலாளிகளும் தோன்றிவிட்டனர். உடைமையைக் காக்க படைகளும் படைக்கலன்களும் அரும்பி விட்டன என்று தெரிகிறது. ஆனாலும் பழங்காலத் தமிழ் மக்கள் போரை ஒரு வெறியாட் டாகக் கருதவில்லை. அதை ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி இருந்தனர். இன்றியமையாத அவசியத்திற்காக மட்டும் போரை மேற்கொண்டனர். போர் தொடங்கு முன், பகைவர்களுக்கு உங்கள் மீது போர் தொடங்கப் போகிறோம் தயாராக இருங்கள் என்று முன் அறிவிப்புச் செய்வர். போரில் ஆன்றோர், சான்றோர், மகளிர், பொது மக்கள், படைக் கலன்களைத் தாங்க முடியாதிருப்போர் முதலியவர்கள் பாது காப்பான இடங்களுக்குச் சென்று விடுமாறு எச்சரிக்கை செய்வர். பகைவர்கள் போருக்குத் தயாராய் இல்லா விட்டால் அவர்கள் மீது போர் தொடுப்பது அறநெறிக்குகந்தது அல்ல என்பது பண்டையத் தமிழர் கண்ட பண்பு. போரில் வலியிழந்தோர், அங்கம் இழந்தோர், ஆயுதம் இழந்தோர் ஆகியவர்கள் மீது போர் தொடுப்பது பழந்தமிழர் இலக்கிய மரபிற்கு மாறானது. மேலும் அவர்கள் படைகளையும், படை அமைப்புகளையும், படைக்கலங்களையும் போரிடும் முறை களையும் அறிவியல் முறையில் அமைத்து அவைகளை நன்கு வகுத்தும் தொகுத்தும் செம்மைபெறச் செய்துமுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் போரை ஒரு கலையாக வளர்த் துள்ளனர். பாதுகாப்பு பண்டைத் தமிழ் மன்னர்கள் போரைப் பெரிதும் விரும்ப வில்லை. தற்காப்பைப் பெரிதும் விரும்பினர். போருக்குச் செலவிடு வதை விடத் தற்பாதுகாப்பிற்கு அதிகமாக செலவிட்டு வந்தனர். மன்னர்க்கும் மக்களுக்கும் பாதுகாப்பாகவே அரண்களும், அகழி களும், பொறிகளும், தானைப்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்னும் ஐந்து விதப் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழர்கள் தாக்குதற் போரைவிட தற்பாது காப்புப் போரில் நல்ல பயிற்சியும் ஆற்றலும் கருவிகளும் பிற சாதனங்களும் பெற்றிருந்தனர். பகைவர்கள் நகருக்குள் அடி யெடுத்து வைக்க முடியாதவாறு அகழிகளும், அடுக்கடுக்காய் அரண்களும், பொறிகளும் படைகளும், காவல்களும் உருவாக்கப் பட்டிருந்தன. உயர்ந்த மாமதில்களின் மீது பெரிய காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அவைகளின் மீது காவல் வீரர்கள் அமர்ந்து நாலாபக்கங்களிலும் கண்காணித்து வந்தனர். தொலைவிலே கள்ளர்களோ, பகைவர்களின் படைகளோ வந்தால் அவர்கள் உடனே மன்னனுக்கு அறிவிப்பர். மன்னன் ஆவன செய்வான். இக்காவல் வீரர்கள் கோபுரங்கள் மீது இருந்து இரவும் பகலும் இமைகொட்டாது கண்காணித்து வருவார்கள். பகைவர்கள் தம்மைவிட ஆற்றலும் பெரும்படையும் உடையவன் என்பதை உணர்ந்தால் அரண் உள் இருக்கும் அரசன் தனது அமைச்சர்கள் படைத்தலைவர்கள் முதலியோர்களுடன் கலந்து பேசுவான். பகைவர்கள் கோ நகரை முற்றுகை இடும் பொழுது நொச்சிப் போர் ஆற்ற முடியாமற் போனால் அரசனும், அமைச்சரும் படைத் தலைவர்களும் கரந்து வெளிச் செல்வதற்குரிய சுரங்கப் பாதைகள் இருந்தன. அதன் வழியாகப் பல கல் தொலை வுள்ள நீண்ட சுரங்கப் பாதைகளின் வழியாக வெளிப் போந்து தனது நாட்டிலுள்ள பிற படைகளைத் திரட்டியோ குறு நில மன்னர்களின் ஆதரவைப் பெற்றோ, பிற முடி மன்னர் துணை கொண்டோ படை நடத்தி வருவர். இதில் பகைவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதும் உண்டு. தோல்வியுறுவதும் முண்டு. சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பல சுரங்கப் பாதைகள் உண்டு. ஆனால் ஆங்கிலேயர் களுக்கு, சுமார் 100-ஆண்டுகளுக்கு முன் வரை சுரங்கப் பாதைகள் அமைக்கவோ, கீழ் வீடுகள் கட்டவோ தெரியாது. தமிழர்கள் நகரின் நடுவிலுள்ள அரசனின் அரண்மனையிலிருந்து நிலத்தை நெடுந்தூரம் குடைந்து நாற்புறமும் செங்கல் சுண்ணாம்பு முதலியவைகளால் கட்டப்பட்ட சுருங்கை எனும் சுரங்கப் பாதை வழியாக தொலை விலுள்ள காட்டிற்குள்ளிருக்கும் ஒரு மடத்திற்கோ அல்லது ஒரு கோயிலுக்கோ அல்லது குடிசைக்கோ செல்லும் விசாலமான வழிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. பாண்டியர்கள் ஆண்ட மதுரையிலும் திருநெல்வேலியிலும் நிலத்தைத் தோண்டும் பொழுது இத்தகைய சுருங்கை வழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அரசனுக்குப் பல காவலர்கள் இருந்து வந்தனர். அவர்கள் மெய்க்காவலர், வேளைகாரர் என இருவகைப்படுவர். இவர்களில் மெய்க்காவலர்கள் (Body guards) அணுக்கர், வாயில் மெய்க் காப்போர், பரிவார மெய்க்காப்போர் என்று மூன்று பிரிவினராகப் பிரிக்கப் பட்டிருந்தனர். அரசன் அருகே இமை துஞ்சாது அரிய ஆயுதங்களைத் தாங்கி நின்று பாதுகாத்து வரும் மெய்க்காப்பாளர் சிலர் இருந்தனர். அரண்மனை வாயிலில் காலனும் அஞ்ச இமை கொட்டாது காவல் செய்யும் போர் மறவர்கள் இருந்தனர். அரசன் அரண்மனைக்கு அப்பால் செல்லும் போது அவனைத் தொடர்ந்து செல்லும் வீரர்களும் உண்டு. பாண்டிய மன்னர்களின் போர்ப் படையிலும், அரண்களைக் காவல் புரிவதிலும் பல யவன வீரர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அரசனுடைய அந்தப்புரத்தில் மெய்க் காப்பாளர் களாகப் பல யவனப் பெண்களும் இருந்து வந்தனர். வாயில் மெய்க் காப்பாளர் தவிர, வாயில் காப்போர் என்று சிலரும் இருந்தனர். வாயில்களில் இடை வாயில் புற வாயில் அணுக்க வாயில் என்று பல வாயில்கள் இருந்தன. இவ்வாயில்கள் அனைத்திலும் காவல் வீரர்கள் எப்பொழுதும் உளம் அஞ்சாது கண்துஞ்சாது காவல் காத்து நின்றனர். வாயில் காப்போர்களில் அணுக்க வாயில் காப்போர், கேரளாந்தக வாயில்காப்போர் எனப் பலபிரிவினர் இருந்தனர். நடைப் பெரும் வாயில் என்று நவிலப் பெறும் அரண்மனையின் தலைவாயிலில் ஒரு படைத் தலைவன் பல்வேறு போர்க்கருவிகள் பூண்டவனாய் எப்பொழுதும் நின்று கொண்டே இருப்பான். பரிவார மெய்க்காப்போரின்றி பரிவாரத்தார் என்ற படைப்பிரிவும் இருந்தது. கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார், நிகரிலிச் சோழத் தெரிந்து உடனிலைக் குதிரைச் சேவகர் என்ற பிரிவுகளும் உண்டு. பரிவாரத்தாரில் காலாள் மறவரும், குதிரை மறவரும் ஆக இரு பிரிவினர் இருந்தனர். தொல் படை (மூலப்படை) யைச் சேர்ந்த பரிவாரத்தார் மூலப்பரிவாரம் என்று அழைக்கப் பெற்றது. மூலப் பரிவார விட்டேறு என்ற பெயர் மூலப் பரிவாரத் துள் கருவிகள் பற்றிய பல பிரிவுகள் இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இஃதன்றி அரசனையும் நாட்டையும் காக்க அரசனிடம் அளவு கடந்த அன்பும் தேசப் பற்றும் வாய்ந்த மறவர்களும் குறு நில மன்னர்களும் படைத்தலைவருமாக பலர் இருந்து வந்தனர். அரசனுக்கு ஆபத்து அரும்பும் பொழுது அணுவளவும் அஞ்சாது அரை நொடியும் அஞ்சாது ஆருயிரை அளித்து துறக்கம் பெற விளைந்து நிற்கும் வீரர் பலர் இருந்தனர். சில சமயம் வேந்தன் உயிருக்கு ஊறு விளையும் பொழுது காவல் மறவர்கள் அரசனுடன் தாங்களும் உயிர் நீப்பதும் உண்டு. வேளையில் வந்து உதவும் வீரர்களைக் கொண்ட படைக்கு வேளைக்காரப் படை எனப் பட்டது. இப்படையில் வலங்கை இடங்கை என இருபிரிவுகளும், சிறுதனம், பெருந்தனம் என்ற பிரிவுகளும் இருந்தன. பாண்டிய மன்னர்களின் பழம் பெருபடையில் பண்டு தொட்டு வேளைக்காரப் படைக்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்ற சிறப்புப் பெயர் சூட்ட பெற்றிருந்தது. அரண்மனையில் அந்தப்புறங்களில் அரசர்களின் மனைவி களும், மகள்களும், பிற உறவினர்களான பெண்களும் வதிந்து வந்தனர். இங்கு எப்பொழுதும் சோகை பேடியர்கள் வாளேந்தி இமை கொட்டாது காவல் காத்து நின்றனர். பகைவர்களின் படைகள், சில வேளைகளில் பட்டினத்தை முற்றுகையிடும். அப்பொழுது அரண்களுக்குள் இருப்போர்கள் முற்றுகையின் போது வெளி உலகத் தொடர்பு அற்று இருப்பார்கள். அரண்களுக்கு வெளியேயிருந்து உணவோ, உடையோ, படையோ எதுவும் உட்புகமுடியாது. முற்றுகையால் அரசர் கூட பல நாள் உணவின்றி இருந்து சரண் அடைவதும் உண்டு. சரண் அடையு மாறு முற்றுகையிட்ட மன்னன் நிர்ப்பந்திப்பன். மண்டியிட்டு கெஞ்சுங்கள்; அல்லது போருக்கு வெளியே வாருங்கள் என்று அரைகூவி அழைப்பர். சில மன்னர் போர் செய்ய முடியாது சரணுற்று திரை கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுவர். சிலர் அரணிற்குள்ளிருந்தே போர் தொடுத்து முற்றுகையிட்ட படையை அடித்து விரட்டி வெற்றி பெறுவதும் உண்டு. பாதுகாப்பும் படையும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் சமூகம் வளர்ச்சி அடைந்து விட்டது. தமிழகத்தில் குடும்பத் தலைவர்கள் ஆட்சி மாறி வேந்தன் ஆட்சி எழுந்து விட்டது. வேந்தன் ஆட்சியில் மக்களுடைய அமைதியான வாழ்க்கைக்குப் படையும் பாதுகாப்பும் இன்றியமையாததாய் எழுந்து விட்டது. சங்க நூற்களிலே போரும் போர் முறைகளும் பேசப்படுகின்றன. படையானது மன்னர்களுக்கு இன்றியமையாத உறுப்பாக எழுந்தது என்று தெரிகிறது. படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி இன்னோரன்ன ஒன்பதும் அரசர்கட்கு உரிய பொரு ளாகத் தொல்காப்பியம் கூறுகிறது.1 இந்த ஒன்பது பொருள் களிலும் படை மன்னர்களுக்கு இன்றியமையாத பொருளாக இருத்தலால் அது முதலில் வைக்கப்பட்டுள்ளது. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறும் ஆறு அங்கங்களை உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்று திருக்குறள் கூறுகிறது.2 திருக்குறளிலும் படை முதலில் வைத்ததுடன் அமையாது அரசர்க் குரிய பொருட்கள் ஆறில் தலையாயது படை எனவும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் தங்கள் நாட்டைக் காப்பதில் கண்ணும் கருத்து மாக இருந்தனர். போரை ஓர் அரிய கலையாகத் தமிழர்கள் கண்டனர்; போருக்கெனத் தனி இலக்கணம் வகுத்தனர்; அவர்களது போர் இலக்கணத்தில், படைகளும், அரண்களும், போர் செய்யும் முறைகளும் பிறவும் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. படைகள்: படைகள் பொதுவாக இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. படைகள் போரிடும் இடம் பற்றி அதாவது நிலம், நீர் என்னும் இடம் பற்றி இருவகையாகப் பிரிக்கப்பட்டன. அதாவது: 1. நிலப் படை 2. கடற் படை இவ்விருவகைப் படைகளில் நிலப்படையில் அவை பயன் படுத்தும் ஊர்திகளும் உள்ளன. அவை கூட நான்கு வகை யாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை அடியில் வருமாறு: 1. தானை (காலாள் படை) 2. யானை (யானைப் படை) 3. புரவி ( குதிரைப் படை) 4. தேர் (தேர்ப் படை) இந்த நால்வகைப் படையில் தானைப் படை அது பயன் படுத்தும் போர்க்கருவிகளை வைத்து மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அது அடியில் வருமாறு: 1. வில் படை 2. வாள் படை 3. வேல் படை போரில் படைகள் காலாள் படை, வில் படை, வாள் படை, வேல் படை எனப் பிரித்திருந்தாலும் படை வீரர்கள் இம்மூன்று ஆயுதங்களை மட்டும் கொண்டிருந்தார்கள் என்று எண்ணக் கூடாது. தானைப் படையோ எண்ணற்ற போர்க்கருவிகளை பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக வில் வீரர்கள் பெரிய கேடயங்களையும் கவசங் களையும் குத்துவாள்களையும் வைத்திருந்தனர். அதே போன்று யானைப் படையினர் அங்குசத்தையும் நீண்ட வேல்களையும் எறிவேல் களையும் வாள்களையும் வைத்திருந்தனர். அவசியத்திற்கேற்ப அவை களைப் பயன்படுத்தி வந்தனர். அதே போல் குதிரைப் படை வீரர்கள் நீண்ட வேல்களுடன் குதிரைப் படைக்கென்று தனித்த முறையில் செய்யப்பட்ட கேடயங்களையும் குத்துவாள்களையும் உடைவாள் களையும் பெற்றிருந்தனர். தேர்ப் படை வீரர்கள் பல்வேறு விதமான வில்களையும், அம்புகளையும் பெற்றிருந்ததோடு நீண்ட வேல்களையும் எறி வேல்களையும் குத்துவாள்களையும் தானைப் படையினர் வைத்திருப்பது போன்ற கவசங்களையும் கேடயங் களையும் வைத் திருந்தனர். ஆனால் தமிழகத்தில் நீண்ட காலம் வரைக்கும் வில் படையும் வாள் படையும் வேல் படையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தானைப் படைப் பிரிவாக விளங்கியது. தானைப்படை தமிழர்களிடமிருந்த படைகள் அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த படை, காலாட் படை (தானைப்படை) யேயாகும். இப்படைதான் தமிழகத்தில் மட்டுமல்ல பிற நாடுகளுக்கும் சென்று வெற்றியீட்டிய படையேயாகும். இப்படையில்தான் வில் படை, வேற்படை, வாள்படை என்னும் முப்பிரிவுகள் எழுந்தன. தானைப் படை முதன் முதலில் எழுந்த படையாகும். இப்படை எந்த வாகனமும் இன்றி நிலத்தினின்று போரிடுவதால் நிலப்படை என்றும் காலால் நடந்து சென்று போரிடுவதால் காலாட் படை என்றும் அழைப்பார்கள். தமிழகப் படைகள் அது புரியும் ஊழியக் கால அளவு பற்றி மூலப்படை கூலிப்படை எனப் பிரிக்கப்பட்டன. படையின் இடம் பற்றி நாட்டுப் படை, காட்டுப் படை என்றும் பிரிக்கப்பட்டன. சேர்ந்துள்ள பக்கம் பற்றி துணைப்படை, பகைபடை எனவும் பிரிக்கப்பட்டன. பயன்படுத்தும் கருவிகளின் தன்மை பற்றி கைவிடும் படை, கைவிடாப் படை என்றும் பிரிக்கப்பட்டன. இஃதன்றி படை கள் உண்டை, ஒட்டு, அணி, தானை, நெற்றியூகம், அக்கம், கூழை, நிரை எனப் பலப் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டன. முன்னணிப் படை அக்கம் எனப்படும். கொடிப்படை, தார், தூசி, நிறை என்றும் பின்னணிப்படை கூழை என்றும் அழைக்கப்படும். படை வீரர்கள், அபயர், ஏறுழவர் கலவர், கலியர், கூளியர், சூரர், செருநர், தருகண்ணாளர், படர், பொருநர், மள்ளர், மறவர், மானவர், வயவர், வாளுழவர், விருதர், வில்லேர் உழவர், வீரர் எனப்படுவர். படைத் தலைவன், சேனாபதி, பொருநன், படைநாயகன் எனப்படுவன். படைத் தொகை தேர் ஒன்று, களிறு ஒன்று, குதிரை மூன்று, கால் ஆள் ஐந்து கொண்டது பத்தி என்று அழைக்கப்படும். பத்தி, மும்முடி கொண்டது படை முகம் (சேனாமுகம்). படைமுகம் மும்முடி கொண்டது குலுமம்; குலுமம், மும்முடி கொண்டது கணம்; கணம் மும்முடி கொண்டது வாகினி; வாகினி மும்முடி கொண்டது பிரதணை; பிரதணை மும்முடி கொண்டது சமு; சமு மும்முடி கொண்டது அனீகம்; அனீகம் பத்துக் கொண்டது அக்குரோணி; அக்கோரணி எனப்படுவது தேர் 20870, யானை 20870, குதிரை 67610, காலாள் 109350 ஆக மொத்தம் 218700 உறுப்புகளையுடையது ஆகும். படை, அதிகம், அனீகம், ககனம், கவனம், களம், சேனை, ஞாட்பு, தண்டம், தண்டு, தந்திரம், தார், தானை, பகுதி பதாகினி, பலம், பாடி, யூகம், வாகினி, வாளி என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மிகத் தொன்மையான காலத்தில் தமிழகத்தில் பலவகைப் படைகள் இருந்து வந்தன என்பதற்குச் சான்றுகள் உள. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தங்கள் படையை அறு வகையாகப் பிரித்திருந்தனர். அதாவது (1) மூலப்படை, (2) கூலிப்படை (3) நாட்டுப் படை, (4) காட்டுப்படை, (5) துணைப்படை, (6) பகைப்படை என அழைக்கப்பட்டது. 1. மூலப்படை தொல் படை என்று அழைக்கப்படும். இப்படை எதற்கும் அஞ்சாது போரில் முன் நிற்கும். பகைவர்கள் எவ்வளவு வலுவான படைக்கலன்களை ஏந்தி அலை போல் திரண்டு ஓய்வு ஒழிவின்றி மோதிக் கொண்டிருந்தாலும் அஞ்சாது போர் முனையில் எஃகுச் சுவர் போல் நிற்கும். இறப்பிற்கு அஞ்சாது போரை நாடி அரசனுக் காக உயிரை உவந்து அளிக்கத் தயாராய் நிற்கும். இஃது முன் வைத்த காலைப் பின் வையாது முனைந்து நிற்கும் வீரப் படையாகும். இப்படை வீரர் வாழையடி வாழையாக, மன்னர்க்குப் படைத் தொழில் புரியும் மறக்குல மக்களாய் இருப்பர். இவர்கள் பரம்பரை பரம்பரையாக பாங்குடன் பெற்ற ஆண்மையும் ஆற்றலும் உறுதியும் உடையவர்கள். பகைவர்களது எண்ணிக்கையையும் படைக்கலப் பெருக்கையும் வெம்மையையும் கண்டு கலங்காதவர்கள். பகைவர் களின் கொடிய தாக்குதல்களுக்கெல்லாம் அஞ்சாது, துஞ்சாது நிலைகுலையாது நின்று உலைவுறாது என்றும் போராடும் நெஞ்சுரம் வாய்க்கப் பெற்றவர்கள். இம்மூலப்படை, தம் அரசர்க்கு போரின் கண் எவ்வித உலைவு வந்தாலும், வெற்றி பெறுவதற்கு அஞ்சாது நின்று எதையும் தாங்கும் வன்கண்மை தொல் படைக்கு உண்டு. இதனால் வள்ளுவர், உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது (குறள் 762) என்றார். மூலப்படை என்றும் இருந்து வரும். ஏனைய படைகள் போர் இல்லாத காலத்தில் கலைக்கப்படும். மூலப்படை அரசனின் உயிர் போன்றது. அவை கோ நகரிலும் எல்லைப் புறங்களிலும், துறைமுகப் பட்டினங்களிலும், புதிதாக வென்ற நாடுகளிலும் நிறுத்தப்படும். இப்படை தம் நாட்டு அரசனைக் காக்க உயிரை உவந்து அளிக்கும். தொல் படை என்றும் முன் வைத்த காலைப் பின் வையாது. வெற்றி அல்லது வீர மரணம் என்பதே அதன் மூல மந்திரம் ஆக இருக்கும். உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாதலிற் சாவோம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப (புறம் 68) என்று கோவூர்கிழார் பண்டையத் தமிழர் தொல்படைக்கு புகழ் மாலை சூட்டியுள்ளார். 2. கூலிப்படை கூலிப்படை விலைப்படை என்றும் கூறப்படும். பொன்னின் ஆகும் பொருபடை என்று விலைப் படையின் உயர்வை உணர்த் தினார் நந்தாப் பெருமை வாய்ந்த சிந்தாமணி ஆசிரியர். கூலிப்படை புதிதாகப் பணம் அளித்து அமர்த்தப்படும் படையாகும். இப்படை வீரர்கள் போருக்கு அஞ்சாது இறுதிவரைப் போராடும் பெற்றி வாய்ந்தவர்கள். அவர்கள் போரில், முன் வைத்த காலை பின் வையாத வீர மறவர் வழிவந்தவர்கள் என்று வீரம் பேசி வீறு கொண்டு போரிடுவர். பண்டையத் தமிழகத்தில் விலைப் போர் வீரராக விளங்கியவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் வேளிர் குலத் தலைவர் ஒருவராகும்.. அவர் பேராண்மை வாய்ந்த பெரியார் ஆவர். அவர் மாற்றார் படை மறவர்க்குக் கூற்றுவராக இருந்தார். அவர் சென்ற விடமெல்லாம் செரு வென்று திகழ்ந்தமையால் முனையடுவார் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். போரில் தோல்வியுற்றோர் எல்லாம் அவர் உதவியை நாடுவர். அவருக்கு அவர்கள் கை மாறாகக் களிறும் பொன்னும் பொருளும் மணிகளும் பிற பண்டங்களும் கொடுக்க இசைவர். முனையடுவார் போரில் புகுந்து மாற்றாரை விரட்டி வெற்றி பெறுவார். பேசிய பொருளைப் பெற்று மீளுவார். அவர் பெற்ற பொருளிற் பெரும்பாகத்தை அற வழியில் செலவிட்டு ஆண்டவன் அருளைப் பெற்றார். திருத் தொண்டர் புராணம் போற்றும் 63-அடியார்களில் ஒருவராக விளங்கினார். அறை கொண்ட வேல் நம்பி முனையடுவார் கடியேன் என்று திருத்தொண்டர்த் தொகைப் பதிகத்தில் பாடினார் சுந்தரர். 3. நாட்டுப் படை மருத நில மக்களால் நிறுவப்பட்ட படை நாட்டுப்படை எனப்படும். இப்படை அறிவும் ஆற்றலும் மிக்கது. மன்னனின் உறவினர்களைக் கொண்டது. இப்படை அரசனுக்கு அதிக விசுவாச முள்ள அரிய படையாகும். 4. காட்டுப் படை இப்படை இறப்பை சிறப்பாகக் கருதும் பாலை நில மக்களைக் கொண்டது. போரே எங்கள் குலத் தொழில் என்று வீரம்பேசிப் போரிடும் படை. மார்பில் பாய்ந்த வேலைப் பிடுங்கி களிற்றின் மீது வீசிக் கொன்று களிப்புடன் வீழ்ந்திறக்கும் படை வீரர்களைக் கொண்ட படை. சாவிற்கஞ்சாதது. இறுதி மூச்சுள்ள வரை பகைவர் களை முன்னேற விடாத மறப்படை. இப்படையில் குறிஞ்சி நில மக்களும் இருப்பர். 5.குடிப்படை நாட்டுப்பற்றாலும் அரச பக்தியாலும் கூலிக்கன்றி தொண்டின் ஆர்வத்தால் போர்க்காலத்தே தாமாக வந்து உதவும் ஊர்மக்களின் உயர் படை குடிப்படை என்று கூறப்படும். இந்தக் குடிப்படைக்கு மன்னரும் பிற படை வீரர்களும் அதிக மதிப்பு அளிப்பர். 6.நிலைப்படை போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படும். ஆனால் மூலப் படை மட்டும் கலைக்கப்படுவதில்லை. இது தொன்று தொட்டு வரும் படை மரபு. மூலப்படையின் பிரிவுகள் கோநகரிலும், துறைமுக நகரிலும் புதிதாக வெல்லப்பட்ட நகரிலும், எல்லைப் புறங்களிலும் நிறுத்தப்படும். இது நிலைப்படை எனப்படும். குலோத்துங்கன் வெற்றி கொண்ட கோட்டாற்றில் ஒரு படையை நிறுத்தியிருந்தான் என்று அவனது வரலாறு கூறுகிறது. நிலைப் படை, நிறுத்தப் பெற்ற நகர்ப் பகுதி வீடு என்று பகரப் பெறும். அது நிற்கும் நில பகுதி படைப்பற்று என்று அழைக்கப் பெறும். நிலப்படை குடியிருக்கும் வீட்டுத் தொகுதி படை நிலை என்று வழங்கப்படும். பயிற்சி அரசர்கள் மற்போர் படைக்கலபோர் முதலிய அறிவுமிக்க ஆசானிடம் கற்று வந்தனர். பண்டையத் தமிழ் அரசர்கள் அனை வரும் சிறந்த படைப் பயிற்சி பெற்றவர்களாய் இருந்தனர். தளபதிகளிடமும் பிற போர்ப்பயிற்சி பெற்றவர்களிடமும் படை மறவர்கள் பயிற்சி பெற்றுவந்தனர். பயிற்சி பெறுவதற்கு போரவைகள் (முரண்களரிகள்) இருந்தன. பிரிவுகள் படைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. இவை கருவிகளைக் கொண்டும் ஊர்திகளைக் கொண்டும், முதுமை வகை களைக் கொண்டும் இன்னும் பலவற்றைக் கொண்டும் பிரிக்கப் பட்டிருந்தன. அவைகள் ஒவ்வொன்றிற்கும் பெயர்களும் இடப்பட் டிருந்தன. அவைகள் பெரிதும் அரசனுடைய கொற்றப் பெயர்களைக் கொண்டு பிரிக்கப் பட்டிருக்கும். சிறுதனம், பெருந்தனம், இடங்கை வலங்கை என்று பல உட்பிரிவுகளும் இருந்தன. வில்லிகள் வாள் பெற்ற கைக்கோளர், பராந்தகக்கொங்கவாளர், பண்டிதச் சோழத் தெரிந்த வில்கள் சிறுதனத்து வடுகக் காவலர், வலங்கைப் பழ படைகளிலார், சிங்களாந்தகந் தெரிந்த குதிரைச் சேவகர் மும்முடிச் சோழத் தெரிந்த யானைப்பாகர், பெருந்தனத்து ஆனையாட்கள் என்ற பெயர்கள் கொண்ட பலப் பல பிரிவுகள் இருந்தன. தலைவர் படைத் தலைவர்க்கு, படை முதலி, தண்ட நாயகன், சேனை முதலி, சேனாபதி, சாமந்தன் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன. பெரும்படைத் தலைவனுக்கு, பெரும்படை முதலி, சேனா வரையன், சேனாதிராயன், மாதண்டநாயகன், மகாசாமந்தன் ஆகிய பெயர்கள் இருந்து வந்தன. நாயகன் என்னும் பெயர் சேர நாட்டில் நாயன் அல்லது நாயர் என்றும் அழைக்கப்பட்டது. முதலி, நாயன் என்பன முதலியார், நாயர் என்று உயர்வுப் பன்மையாக எழுந்தன. படைத் தலைமைக்குப் படை மறவருள் திறமை மிக்கவரும் பெரும்படைத் தலைமைக்கு அரச குடும்பத்தினரும் குறு நில மன்னர்களும் உழுவித்துண்ணும் வேளாண் குடித் தலைவரான வேளிருமே நியமிக்கப் பெற்றனர். படைகளை மேற்பார்வை செய்ய படை காண்பார் என்ற அதிகாரிகள் இருந்தனர். அக்காலத் தமிழ் அரசர்கள் இருக்கும் பொழுது செல்லும் பொழுது இடக் கையில் இருப்பதற்கும் செல்லும் பொழுது நிற்பதற்கும் இன்னின்ன குலத்தவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அமர்ந்திருக்கும் பொழுது வலக்கையில் இருப்பதற்கும் செல்லும் பொழுது வலப்பக்கம் நிற்பதற்கும் இன்னின்ன குலத்தார்க்கு உரிமை உண்டு என்றும் இரு வேறு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இடங்கை, வலங்கை என்று கூறப்பட்டனர். படைக்கலக் கொட்டில் படைகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் படைக்கலன்கள் தவிர மற்ற போர்க்கருவிகள் அனைத்தும் படைக்கலக் கொட்டிலில் வைத்துப் போற்றப் பெறும். படைக்கலன்கள் துருப்பிடியாமல் இருக்க அதற்கு நெய்பூசப்படும். அரசனுடைய படைக்கலங்களை வைப்பதற்குத் தனியான ஒரு கட்டில் உண்டு. அது படைக்கலக் கட்டில் எனப்படும். ஆயுதங்களுக்கு நெய் பூசிப் பீலியணிந்து மாலை சூட்டப் பெறுவது பழங்காலத் தமிழர் வழக்கம். அரசர்களிடம் பொதுவாக ஆதிகாலத்தில் நான்கு வகைப் படைகள் இருந்தன. அவை, கரிப்படை, பரிப்படை, தேர்ப்படை, தானைப்படை எனப்படும். பிற்காலத்தில் கப்பற்படையும் எழுந்தது. கரிப்படை பண்டையத் தமிழர் கண்ட படைகளில் தானைப்படையை விட யானைப்படை(கரிப்படை) வலிது. ஆனால் யானையைப் பிடிப்பதும், பழக்குவதும், அதைப் போரில் பயன்படுத்துவதும் மிகவும் சிரமமான வேலை. உலகிலே தமிழ் நாட்டு யானை சிறந்தது; பழக்குவதற்கு ஏற்றது. ஆப்பிரிக்க யானை தமிழ் நாட்டு யானையை விடப் பெரியது. உயர்ந்த கரிய கல்மலை போல் திகழும். ஆனால் அதைப் பிடித்துப் பழக்க முடியாது. அதனால் அதை எவரும் பிடித்துப் பயன்படுத்துவதில்லை. அதன் பெரிய கொம்புகளுக்காக அதை வேட்டையாடிக் கொன்று கொம்புகளை எடுக்கிறார்கள். தமிழக நிலத்தின் நல்ல தன்மை, பாங்கான பண்பு அதன் மக்களிடத்தில் மட்டுமின்றி அதன் விலங்குகளிடம் காணப்படுவது வியத்தற்குரியது. தமிழ் நாட்டு யானை ஆப்பிரிக்க நாட்டு யானைகளை விட உருவத்தில் சிறியது குறைவாகக் காணப்படினும் அதைப் பழக்குவது எளிது. எனவே அதைப் பிடித்து வேலை வாங்கப்படு கிறது. போரில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 3000 -ம் ஆண்டுகளுக்கு முன்பே யானைப்படை எழுந்து விட்டது. தமிழர் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் கரிக்கலை (கஜபரீட்சை) யும் ஒன்று. சங்ககாலத்தில் தமிழகத்தில் முடியுடைய மூவேந்தரினும் பொதிகை மலைச் சாரலில் வாழ்ந்த குறுநில மன்னன் ஆய் அண்டிரன் யானைப் படையால் சிறப்புற்றிருந்தான் என்று இன்றும் புறநானூறு சான்று தருகிறது. இவனிடம் யானை மிகுதியாய் இருந்ததால் தன்னை வந்தடைந்த புலவர்களுக்கு யானையைப் பரிசளித்து வந்தான். இவனை ஏணிச்சேரி முடமோசியார் என்னும் சங்ககாலப்புலவர், ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல் இரவலர்க் கீந்த யானையிற் கரவின்று புறம் 129; 5-6 என்று பாடியுள்ளார். ஆதிகாலத்தில் பெரிய யானைப் படையை வைத்திருப்பவர்களுக்கே வெற்றி எளிதாகக் கிட்டியது. பண்டையத் தமிழர்கள் யானைப் போரில் வல்லவர்களாக இருந்தனர். யானைப் போரில் அங்குசமும் வேலும் வாளும் கேடயமும் பெரிதும் உபயோகிக் கப்பட்டு வந்தன. முத்தமிழ் அரசர் மூவர்களிடமும் பெரிய முப் படைகள் (தானைப்படை, தேர்ப்படை, யானைப்படை) இருந்து வந்தன. சங்ககாலத்தில் சோழ மன்னனிடம் மட்டும் அறுபதினாயிரம் யானைகளைக் கொண்ட ஒரு பெரிய கரிப்படை இருந்து வந்தது. இதனை நமது நாடு போந்த ஒரு சீன வழிப் போக்கன் கூறியுள்ளான். இதனை சோழர் வரலாற்றில் திரு. கே. ஏ. நீலகண்ட சாத்திரியும் எடுத்துக் காட்டியுள்ளார்.1 மலை வளம் பெறாத சோழர் படையில் அறுபதினாயிரம் யானைகள் இருந்தால் மலை வளம் பெரிது வாய்க்கப் பெற்ற சேரர்களிடமும் பாண்டியர்களிடமும் இலட்சக் கணக்கான யானைகள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவது வியப்பாகுமா? எனவே பூதஞ் சேந்தனார் என்ற சங்ககாலப்புலவர். யானையுடைய படைகாண்டல் மிக வினிதே என்று கூறியுள்ளார்.2 பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டுப் போர் மறவர்கள் தம் கைகளில் உள்ள வேலை, யானை மீது எறிந்து அதை எளிதில் கொன்று வந்தனர். யானையைக் கொன்று வெற்றியீட்டும் வீரனே சிறப்பானவனாக அன்று மதிக்கப்பட்டான். தமிழ் வீரர்கள் தன் கையில் உள்ள வேலை யானையின் மீது எறிந்து அதை விரட்டி விட்டு வேறு வேல் இல்லாமையால் தன் மார்பின் மீது பகைவர்கள் வீசிய வேல் பாய்ந்து குத்தப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதைப் பிடுங்கி, பகைவர்கள் மீது சாட நிற்பார்களாம். அதை வள்ளுவர், கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (திருக்குறள் 774) என்று குறளில் குறிப்பிட்டிருப்பது ஆராயத்தக்கதாகும். படுகளத்தில் பகைவர்களை ஆண்மையோடு எதிர்த்து நின்று யானையைக் கொன்று கல்லாயின வீரர்களைத் தெய்வமாகக் கருதித் தமிழ் மக்கள் வழிபட்டுவந்தனர். மக்கள் இத்தகைய வீரத்தமிழ் மகனை யன்றி எவரையும் வழிபடுவதில்லை என்று புறநானூறு கூறுகிறது. ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலகி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெகை கல்லே பரவி னல்லது நெல்லுகுத்துப் பரவுங் கடவுளுமிலவே (புறம் 335) எனச் சங்ககாலப் புலவர் மாங்குடி மருதனார் கூறுவது சிந்திக்கத் தக்கது. பண்டைத் தமிழர் வீரமே குறிக்கோளாகக் கொண்டு பீடுற வாழ்ந்தார்கள் என்பதற்கு இது போன்று புற நானூற்றில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள. கரிநூல் கரிநூல் (கஜபரீட்சை) என்பது தமிழர் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று. இக்கலை நூல் தமிழில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் உள்ள இக்கலை நூலை திரு. உ.வே. சாமிநாதையர் அவர்கள் கண்டதாகக் கூறியுள்ளார். இன்று வட மொழியில் இந்நூல் காணப்படுகின்றது. யானைகள், ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் வம்சத்திலிருந்து புண்டரீகம், புட்பதந்தம், வாமனம், சுப்பிரதீகம், அஞ்சனம், சார்வபௌமம், குமுதம் என்ற ஏழுவகையான யானை இனங்கள் எழுந்தன. ஐராவதத்திற்குக் காது, தந்தம், வால் போன்ற உறுப்புகள் வெண்மையாகவும் துதிக்கை நீளமாகவும் இருக்கும். 1. புண்டரீகத்தின் இனங்கள் வளைந்த மயிர், பருத்த கும்பம் அன்னம் போன்ற கண்கள், மடிப்பு, சுருக்கமற்ற நீண்ட துதிக்கை முதலியவைகளையுடையன. 2. புட்ப தந்தத்தின் இனங்கள் பெரிய புள்ளிகள், வளைந்த முதுகு, எலும்பு, கருத்த முடிகள், ஒட்டிய வயிறு பருத்த தோள், திரண்ட துதிக்கை ஆகியவைகளைப் பெற்றிருக்கும். 3. வாமனத்தின் இனங்கள் நீல நிறம், நல்ல வேகம், நீர் விளையாட்டில் ஆவல், நீண்ட துதிக்கை, சிவந்த கண்கள், நீண்டு பருத்த உடல் ஆகிய இலட்சணங்கள் அமைந்தன. 4. சுப்பிரதீகம், மாடப்புறாவின் கண்களையும் நீண்டு பருத்த பயங்கரமான துதிக்கை, உயர்ந்த உடல், மெல்லிய மயிர்கள், ஆம்பல் நிறம் ஆகியவைகளை உடையன. நல்ல வலிமை யுடையனவாய்த் திகழும். 5. அஞ்சனம் எனும் யானையின் மரபு வால், தந்தம், உதடு, துதிக்கை ஆகியவைகள் அழகாக அமையப் பெற்றதாய் இருக்கும். மயிர் வெண்மை வாய்ந்தன. 6. சார்வபௌம எனும் இனம் காதுகள் கண்கள் சிறிதாயும் தாடைபருத்தும், துதிக்கையும் மத்தகமும் எடுப்பாகவும், பாதிரிப் பூவை யொத்தும் இருக்கும். 7. குமுதத்தின் இனம் சிவந்த கண்கள், உயர்ந்த தந்தம், கறுத்து விரிந்த துதிக்கை, ஆம்பல் நிறம் ஆகியவைகளைப் பெற்றவைகளாய் விளங்கும். அரசனுக்கு யானைப்படை அத்தியாவசியமானது. யானைப் படையே அரசனின் வாழ்வை நிர்ணயிக்கும். அது அரசனின் வெற்றி யின் சின்னம். அது பகைவர்களின் அரண்களையும் வாயில்களையும் மலை போல் மோதி இடியொலி போன்ற சப்தத்துடன் வீழ்த்தும். யானையினும் மேலான வாகனமில்லை; யானையற்ற சேனை அரசனற்ற நாடு போன்றது. என்பன நமது நாட்டுப் பழமொழிகள். மனிதன், குதிரை, எருது முதலியவை ஒரே ஆயுதத்தால் உயிர் இழக்கும். யானை ஆயிரக்கணக்கான ஆயுதங் களையும் பொருள் செய்யாது கன மலை போன்று அசையாது நிற்க வல்லது. யானை தன் படையைக் காத்து பகைவர்களின் பலத்தை அழிக்கும். ஒரு யானை அறுபதினாயிரம் அசுவங்களை வெல்லும்; யானையால் உயிர் இழந்த வீரர்கள், வீர சுவர்க்கம் அடைவார்கள் என்று தமிழ் மக்கள் நம்பினர். எனவே அங்க இலட்சணமுள்ள அழகிய யானைகளைப் பிடித்துப் பழக்கி படையில் சேர்த்தனர். யானையைப் பிடித்து அதைப் பழக்கி, அதற்கு நமது மொழி கற்பித்து மாவுத்தன் சொற்படி நடக்கச் செய்கிறவன் நல்ல யானைப் பாகன் ஆவான். யானை மீது ஏறுபவர் உத்தமன், மத்திபன், அதமன் எனப் படுவர். இவர்கள் பலயுதன், யுக்தியுதன், இரேகாயுதன் என அழைக் கப்படுவார்கள். தனது அறிவாற்றலினால் யானையை வயப்படுத்துகிறவன் பலயுதன் ஆவன். அவன் தன் திறமைக்கும் அறிவிற்கும் ஏற்ப யானையை அனுசரிப்பவன் யுக்தியுதன் ஆவான். முற்றிலும் யானையின் போக்கை அனுசரித்து நடப்பவன் இரேகாயுதனாவான். யானை ஏறுவது எட்டுவிதம். இறங்குவது பத்து விதம். முன்னே இருபக்கங்கள்; பின்னே இருபக்கங்கள்; இவைகளில் கயிற்றின் பிடிப்பு, என்று ஏறும் வகை எட்டு. யானைகளின் துதிக்கை வழியாக ஏறுவதும் இறங்குவதும் உண்டு. (1) உத்கிருட்டம், (2) மத்திமம், (3) அபகிருட்டம் என யானை மீது உட்காருதல்(ஆசனம்) மூன்று விதம் ஆகும். கழுத்து, கொண்டைகளின் இடையில் உட்காருவது உத்கிருட்டாசனம். மண்டைக்கு மேலே உட்காருவது மத்திம ஆசனம். தோளுக்குக் கீழ் அமர்வது அபருஷ்ட ஆசனம். யானையின் இருபக்கங்களிலும் இரு கால்களை நீட்டி இருப்பது உத்கிருட்டம். நடுத்தரமாகப் பற்றிக் கொள்வது, மத்திமம். இலேசாகப் பற்றிக் கொள்வது, அபகிருட்டாசனம். போருக்கும் மந்த சாதி யானைக்கும் உத்கிருட்டாசனம் சிறந்தது. யானைகளுக்குக் காரியங்களை அறிவிப்பதற்கு பிரணிதி என்று பெயர். இது (1) பாதப்பிரணிதி (2) வாக் பிரணிதி (3) அங்குசப் பிரணிதி என மூவகைப்படும். யானையை அங்குசத்தின் படங்கால் அடிப்பதற்கு தாடிதம் என்று பெயர். வேகமாக அடிப்பதற்கு தோதம் என்றும், இருகைக ளாலும் ஓங்கி அடிப்பதற்கு உத்சிப்தம் என்றும் பெயர். கும்பங்களின் மத்தியம் (1) முன் வாட்டம் (2) பக்க வாட்டம் (3) கும்பங்களை ஒட்டிய நெற்றி மோடு (1) காதுகள் இவைகளின் சந்திகள் (2) காதுகளின் முன்பக்கம் சந்திகள் (2) பின் சந்திகள் (2). ஆகப் பன்னிரண்டு இடங்கள் அங்குசங்களுக்காகாத இடங்களாகும். யானையை முன்னே செலுத்த அங்குச முனையால் அடிக் காதில் குத்த வேண்டும். பின்னே செலுத்த கும்பங்களின் முன் வாட்டம், நெற்றி மேட்டில் அங்குசத்தை மாட்டிப் பின் இழுக்க வேண்டும். இதற்கு அபகர்சம் என்று பெயர். பலம் வாய்ந்த வீரனை யானை தள்ளி விடும், ஆனால் வீரன் யானையைத் தள்ளி விடுவான். திறமை வாய்ந்தவன் தண்டத்தால் யானையை வசப்படுத்துவான். திறமையற்றவன் தோல்வி அடைவான். யானைப் போரில் யானைகள் 14 வகையாகப் போரிடப் பழக்கப்பட்டிருக்கும். (1) யானை ஒன்றோடொன்று முகங்களால் உராய்ந்து கொள்ளும். இதற்குச் சங்காதம், எனப்படும் (2) முகத்தில் தந்தங்களால் இடித்துத் தடுப்பதற்கு உல்லோகம்என்றும் (3) தந்தத்தைக் குறுக்காகக் கொடுத்துத் தூக்கிக் குத்துவதற்குப் பரிலேகம் என்றும் (4) இருபக்கங்களிலும் இரு தந்தங்களாலும் குத்துவதற்கு கர்தரீ என்றும் (5) தந்த வட்டம் உதடுகள் ஆகிய குத்துவதற்கு தலகாத என்றும் (6) பக்கவாட்டில் சாய்த்துக் குத்துவதற்கு பார்சுவகாதம் என்றும் (7) பக்கங்களில் நேராகத் தந்தங்களால் குத்துவதற்கு ஆராகாதம் என்றும் (8) துதிக்கை நடுவில் குத்துவதற்கு சூசிகாதம் என்றும் (9) தலையைக் குறுக்கே பிடித்து இழுத்து ஒரு தந்தத்தால் குத்துவதற்கு தோடகம் என்றும் (10) கோபங் கொண்டு திட்டாணியி லேறிச் சிங்கம் போல் பாய்வதற்கு சந்தகம் என்றும் (11) முகத்தைச் சாய்த்துத் தூக்கி அடிப்பதற்கு கசாகாதம் என்றும் (12) இருதந்த மத்தியிலும் தந்தங்களைப் பதிய வைத்தடிப்பதற்கு விருட்சகாதம் என்றும் (13) உடலைப் பின் சுருக்கி முன் பாய்ந்து அடிப்பதற்கு நிற்க என்றும் (14) இவையாவும் கலந்திருப்பதற்கு மிச்ரகம் என்றும் பெயர். 1 யானைப் பாகர், ஆதோரணர், பண்ணுவர், வதுவர், வாதுவர் என்றும், யானை மறவர், யானையாட்கள், ,யானைப் பாகர், அத்திமல்லர், குஞ்சரமல்லர், மறமலி மல்லர், மாதங்கமல்லர் என்றும் அழைக்கப்பட்டனர். அரசன், அடிக்கடி யானைப் படையை அணி வகுப்பித்துச் செல்வதைக் கண்டு களிப்பான். யானைப்படை நால்வகைப் படையினும் நனி சிறந்த நற்படையாக நவிலப்பட்டது; யானைத் தோட்டி அங்குசம், குடாரி, கோணம், இதன் பிடர், இபாதம் எனக் கூறப்பட்டது. சோழர்களின் பிற்காலப் படையில் (கி.பி. 1178-இல்) ஆயிரக் கணக்கான யானைகள் பயன்படுத்தப்பட்டன.2 பகைவர்களுடைய உறுதிமிக்க அரண்களின் வாயிற் கதவுகளை, ஈட்டிக்கும் எரி வேலுக்கும், பொறிகளுக்கும் அஞ்சாது கொம்பால் குத்தியும் மண்டையால் முட்டி மோதியும் உடைத்துத் தம்படை வீரர்கள் அரணிற்குள் புக யானைப் படை வழி செய்து வந்தது.3 சங்க நூற் களில், நாட்டில் யானைகள் மலை போன்றும் பாசறைகளில் இடி முழக்கம் போன்றும், போர்க்களத்தில் கடலில் கடும்புயல் எழுந்து கப்பலைக் குலுக்கி வீழ்த்துவது போன்று பெரும் சேதம் விளைவித்து வந்தன என்று கூறப்பட்டுள்ளன. பரிப்படை (குதிரைப்படை) குதிரைப் படை தமிழ் நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படைகளில் ஒன்று: என்றாலும் குதிரை தமிழ் நாட்டு விலங்கல்ல. இது வெளி நாட்டிலிருந்து அங்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள அரப்பா அழிபாடுகளில் அசுவம் இந்தியாவில் இருந்தது என்பதற்குரிய அரிய அகச்சான்றுகள் அகப்பட்டுள்ளன. அறிஞர் களிற் சிலர் அரப்பா நாகரிகத்தை அழித்த ஆரியர்கள் முற்காலத்தில் அசுவங்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் இற்றைக்கு 2500-ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன் படுத்தி இருக்கலாம் என்று கூற முடியும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர்; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும். தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப ( தொல் பொ.புற. 12) தானை யானை குதிரை என்ற கோனார் உட்கும் மூவகை நிலையும் (தொ. பொ. புற. 14) என்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் குதிரை ஊர்தியும் குதிரைப் படையும், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது நன்கு தெரிகிறது. குதிரை தமிழ் நாட்டு விலங்கல்ல; அதனால் தமிழர்களுக்குக் குதிரைகளை வளர்க்கவும் அதைப் பயன்படுத்தவும், அதற்குறு பிணிகளை அகற்றவும் தெரியாது என்று சிலர் கூறுகின்றார்கள். அது தவறாகும். தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். குதிரைகளுக்கு இலக்கணங் கண்டுள்ளார்கள். குதிரைகளை வளர்க்கும் முறைகளையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் நன்கு தெரிந்துள்ளார்கள் என்பது அவர்கள் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் அசுவ சாத்திரம் ஒன்றெனப்படுவதேயாகும். அது தமிழர்கள் குதிரை களைப் பற்றி நன்கறிந்திருந்தனர் என்பதை மெய்ப்பிக்கும். மேலும் கூடலில் இறைவன் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலும் ஒன்றாக இருப்பது இதை உறுதிப்படுத்தும். திருவிளையாடற் புராணத்திற்கு உரை கண்ட உரையாசிரியர்களின் விளக்கம், தமிழர்கள் வேறு எந்த இனத்தவரையும் விட குதிரைகளைப் பற்றி தெளிந்த அறிவு படைத் தவர்களாய் இருந்தனர் என்பதை மெய்ப்பிக்கும். குதிரைகள் பரி நூலில் எட்டு வகையாகப் பிரிக்கப்பட் டுள்ளன. அவைகள் முறையே (1) பாடலம் (2) கோடகம் (3) இவுளி (4) வன்னி (5) குதிரை (6) பரி (7) கந்துகம் (8) புரவி எனப்படும். (1) பாடலம்: பாடலம் என்பது மாந்தளிர் போன்ற நிறமான நாவும், உயர்ந்து நீண்ட குளம்புகளும், சரியொத்த பற்களும், பாம்பின் படம் போன்று பரந்த கழுத்தும் மார்பும் உடைய குதிரை. (2) கோடகம்: கோடகம் விசாலமான நெற்றியும் நீண்ட தலை மயிர் போன்ற ஓர் அழகிய வண்ணம் வாய்ந்த புறமயிரும் மூன்று கோணமாய் காணப்படும் அழகிய கழுத்தும் உடையதாக இருக்கும் அசுவமாகும். (3) இவுளி: இவுளி எனப்படுவது போரில், பகைவர்கள் கத்தி கொண்டு வெட்டினும் அஞ்சாது எதிர்த்துச் சண்டை செய்ய வல்லதாய், குரங்கு, வேங்கை, யானை, நரி, சரபம், முயல் போலும் கதியுடைய பரியாக விளங்கும். (4) வன்னி: வன்னி உன்னதமான அழகிய சங்கு கற்கண்டு போன்ற வெண்மையுடையதாய் நுரையுடையதாய்ப் பின்னமான ஒரு வண்ணமும் மைநிறமும் உள்ள குதிரை. (5) குதிரை: குதிரை என்பது கழுத்தில் தெய்வ மணியும் அட்ட மங்கலமும் பஞ்சகல்யாணம் என்ற இலட்சணங்களையும் உடைய குதிரையாகும். (6) பரி: பரி எனப்படுவது குங்குமம், கற்பூரம், அகில் முதலியவைகளின் மணம் உள்ளதாய் சங்கு, மேகம், சரபம், சிங்கம் இவைகளைப் போன்று கெம்பீரமான தோற்றம் உள்ளதாய் விளங்கும் குதிரையாகும். (7) கந்துகம்: கந்துகம் நான்கு கால்களும் கடைந்தெடுத்து நாட்டியது போல் கொள்ளிவட்டமிட்டுச் சுழல்வதாய் மேலே ஏறியிருக்கும் வீரன் காலுக்கு அடங்கியதாய் இருக்கும் பரியாகும். (8) புரவி: புரவி, அரண்களையும் மலை மீதுள்ள உயர்ந்த கோட்டைகளையும், ஆறு அகழி முதலியவைகளை எளிதில் தாண்டும் வலிமையுள்ளதாய் மேற்கூறிய இலக்கணங்கள் எல்லாம் நிறைந்ததாய் விளங்கும் பரியாகும். நிறங்கள் (1) வெள்ளி, முத்து, பால், திங்கள், சங்கு, வெண்பனி போன்ற நிறங்கள் உடையதாய் இருப்பது வெள்ளைக் குதிரை (2) மாதுளம் பூ, செம்பஞ்சுக் குழம்பு போன்ற நிறங்களையுடையது சிவப்புக் குதிரை (3) குயில், வண்டு, கார்மேகம் போன்ற நிறம் வாய்ந்தது கருப்புக் குதிரை. (4) கோரோசனை நிறம் உள்ளது பொன்னிறக் குதிரை. இந்த நான்கு நிறமும் கலந்திருப்பது மிசிரக் குதிரை. முகம், மார்பு, உச்சி, வால், நான்கு கால்கள் வெண்மையாய் இருப்பது அட்ட மங்கலக் குதிரையாகும். முகமும் நான்குகால் வெண்மை நிறமாய் இருப்பது பஞ்சகல்யாணி எனப்படும். எந்த நிறபேதங்கள் மிகுந்து இருந்தாலும் வெண்மை கலந்திருப்பது நன்றாகும். கருத்த குதிரைக்கு வயிறாயினும் மார்பாயினும் சிவந்திருந்தால் வெற்றியைத் தரும். வயிறும் மார்பும் வெண்மையாய் இருப்பின் அதற்கு வாருணம் எனப் பெயர். அந்தக் குதிரைப் போருக்கு ஏற்றது. அது வெற்றியை நல்கும். பிடரி வெளுத்திருந்தால் உடையவனுக்கு மக்கள் பெருக்கம் உண்டு. மார்பு வெளுத்திருந்தால் மகிழ்ச்சியை உண்டாக்கும். மணிக் காலும் கண்டமும் வெளுத்திருந்தால் பொருள் சேரும். முகம் வெளுத்திருந்தால் வெற்றியைத் தரும். பின்பக்கம் வெளுத்திருந்தால் நலம் பல பெருகும். இடுப்பு வெளுத்திருந்தால் மக்கட் பேறு உண்டாகும். வலப்புறம் வெளுத் திருந்தால் தானியம் பெருகும். முதுகு, வால், முகம் வெளுத்திருந்தால் வெற்றியுண்டாகும். உந்தி முதல் முன்புறமெல்லாம் சிவந்தும் பின்புறமெல்லாம் வெளுத்து முள்ள குதிரை பகலில் வெற்றி தரும். முன்புறம் வெளுத்தும், பின்புறமெல்லாம் செந்நிறமும் வாய்ந் திருந்தால் இரவில் வெற்றி தரும். மூன்று கால்கள் வெளுத்தும் ஒருகால் கருத்தும் வெள்ளையான கண்களும் பெருந்திண்டியும் நிலை கண்டமும் பீஜ மில்லாதது ஏறக்குறைவான பெரிய பீஜமும் அசைவு இல்லாதது மான குதிரை தீது. முகம், வால், நான்கு கால்கள் ஆகியவைகளில் சுழி இலாமை குற்றமாம். குதிரைகள் நரி, பூனை, காக்கை, பேய், நாய், பன்றி, முதலிய வைகளின் ஓசைகளைப் பெறாமல், கடல், மேகம், சங்கம், எருது, பேரிகை போன்ற ஓசையுடையனவாய் புலி, கரடி, கழுதை, செந்நாய், பூனை, நரி, காகம், தீ, புகை போன்றவைகளின் நிறங்கள் வாய்ந்தவை களாய் வாயு வேகத்துடன் இயைந்து, வெண்முத்து, திங்கள், நீலமணி, தாமரையின் மகரந்தம், பொன், காயாம்பூ, செவ்வரலிப்பூ, நல்ல பச்சைக் கிளி போன்ற நிறம் வாய்ந்ததாய் நெற்றி பரந்தும், உயர்ந்த மேல் உதட்டைப் பெற்றும் வெண்ணிறம் நிறைந்தும் வரிசையான பற்களையுடையதாய் நன்மணம் வீசும் நாக்கும், மாந்தளிர் போன்று சிவந்தும் இமையின் மயிர்கள் திரண்டும் கண்கள் அமர்ந்த பார்வை யுடையனவாயும் உடம்பில் அதிக ஊன் இன்றி உள்ளே வளைந்து முக்கோணமுள்ள முகத்தையுடையனவாயும் வலிமை கொண்ட குளம்புகள் உள்ளனவாயும், நரம்புகள் வெளியே தோன்றாத தசையுடையன வாயும் முழங்கால் நெறித்தல் இல்லாமல், வளைந்த முதுகின்றி தொடைகள் பருத்துத் திரண்டும் கால்கள் நீண்டு சிவந்து உறுதியாயும் இருப்பன நன்று. இன்னும் இக்குதிரைகள் மங்காளன், சாரங்கன், கங்கா நீலன், மௌவழகன், கொங்காளன், சன்னசம்பான், குங்குமச் சோரன், கரியான், நீலன், சாரன், மள்ளான், உரஞ்சி வந்தான், நல்லான், பொல்லான், கருங்காற் சாம்பான் எனப் பலம் நிறம் கொண் டிருக்கும். இக்குதிரைகள் காலை ஊன்றி வைக்கின் பந்து வைத்தது போலவும், நின்றால் மலைபோலவும் அனுமானக்கின் யானை போலவும், சிங்கம் போலவும் குலமகளிர் போலவும் கவிழ்ந்த முகமும், கரு நெய்தல் போல் மணமும் கண்ணும், மேக நிறமும், மலராலும் மனத்தாலும் அலங்கரிக்கின், நீங்காத மகிழ்ச்சியும் தரும் உத்தமக் குதிரைகள் ஆகும். உத்தமக் குதிரைக்கு உயரம் 100 விரல் அளவு. மத்திமக் குதிரைக்கு அளவு 84 விரல். அதமக்குதிரைக்கு அளவு 61 விரல். காது கொம்பு போல் நீண்டிருப்பதும் காது முருகி இருப்பதும் நல்ல குதிரைகளின் இலட்சணங்கள் ஆகாது. குதிரை ஓட்டம் நாகபந்தம், விருத்தம், நெடு வீதி எனப்படும். இவற்றின் சுழிகளின் இலக்கணங் களும் பலவுள. தண்டை அடியில் இருக்கும் அண்டவர்த்தம், உடலின் ஒருபுறத்தில் இருக்கும் கௌவகம், காகவர்த்தம், முன்வளைச் சுழி, கோதரிச் சுழி, கோதாரிச் சுழி, காலில் இருக்கும் கேசாவர்த்தம், கச்சை நிலையில் இருக்கும் பட்டடையாகச் சொல்லப்பட்ட சுழியும் ஆகாயம் கழுத்தில் அடியில் மார்க்கம் இரட்டையிராமல் சிரசில் 2 சுழிகளும், நாபியில் 4 சுழிகளும், மார்பில் 2 சுழிகளும் நெற்றியில் 1 சுழியும் ஆகப் பத்து சுழிகள் ஒரு நல்ல குதிரைக்கு இருந்தால் நலம் தரும். கழுத்தில் வலம் சுழித்திருந்தால் அதைத் தெய்வமணி என்பர். முகம், தலை, மார்பு, நாசி இந்த நான்கு இடங்களிலும் இரண்டு சுழிகளும் நடு நெற்றி, பின்பக்கம் ஆகிய இரு இடத்தும் ஒவ்வொரு சுழியும் பெற்ற குதிரை உத்தமமானது. வெவ்வேறாக மார்பில் 5 சுழிகள் இருந்தால் அக்குதிரை கிரீ வத்சம் எனப்படும். நெற்றியில் 2 அல்லது 3 சுழிகள் இருந்தால் நல்லது. அஃதன்றி நெருக்கமாக 4 சுழிகள் வலம் சுழித்து இருக்கின் நன்மை தரும். 2 சுழிகள் முன்னங் காலிலும் காலின் மூலத்தினும் இருந்தால் நலம். கண்டத்தின் நடுவே இரட்டைச் சுழி பெற்ற குதிரை, தலைவனுக்கு வறுமை, துன்பம், மரணம் ஆகியவைகளைத் தரும். இரட்டைச் சுழிகளைக் காலில் இருந்தால் அக்குதிரையுடையவர்களுக்குப் பயமும் துன்பமும் விலங்கும் கிடைக்கும். மேலுதடு, முன் காலடி, கபோலம், முழங்கால் இந்நான்கு இடங்களிலும் சுழிகள் இருந்தால் தலைவனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். இக்குதிரையைப் பயன்படுத்தாதிருந்தாலும் உடையவர் களுக்குத் தீமையே விளையும். இக்குதிரைகளுக்கு வயது 32. குதிரையின் மெல்லிய நடை சுவரிதகம். விரைவான நடை ஆக்ரந்திகம். இருகால் தூக்கி ஆடிவரும் நடை வல்கிதம். சுற்றி யோடல் இரேசிதம். முழுவோட்டம் புரிதம் எனப்படும்.1 அரசர்கள் அசுவலட்சணம் அணுவளவும் குறையாத நல்ல குதிரையைப் பட்டத்துக் குதிரையாகத் தேர்ந்தெடுத்து வைத்திருப் பார்கள். அதைப் பேணி வளர்த்து ஆடைகளும் அணிகளும் அணி வித்து அதன் மீது அரசர்கள் பவனி வருவர். தமிழ் நாட்டு மூவேந்தர்களும் அரபு நாட்டிலிருந்து ஏராள மான குதிரைகளை வாங்கி வந்தனர். அதனால் அரபிகள் இந்த நாட்டில் குடியேறும் வாய்ப்பும் இருந்தது. அவர்கள் தங்கள் கப்பலில் குதிரைகளை ஏற்றிக் கொண்டு வந்து தமிழ் அரசர்களிடம் விலைக்கு விற்று அதன் விலையாகப் பொற்பாளங்களையும் பொற் காசுகளையும் பெற்று வந்தனர். கொற்கை, தொண்டி, புகார் முதலான கடற்றுறைப்பட்டினங்களில் ஆண்டுதோறும் 10,000 குதிரைகள் வந்திறங்கின என்று அப்துல் வாசப் என்ற முசுலிம் வரலாற்றாசிரியர் கூறுகிறார் என்றும் அவற்றின் விலை 2,200,000 டினார்1 என்றும் மார்க்க போலோ என்னும் இத்தாலிய வழிப்போக்கன் தமிழ் நாட்டுக்கு வந்த போது இங்குள்ள நிலைமை களைப் பற்றி தனது நாட் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். 2 அதில் பாண்டிய மன்னர்கள் குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருள்களைச் செலவிட்டு வந்தனர் என்பதையும் குறிப்பிட் டுள்ளார். 14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தில்லி மொகலாய மன்னன் தன் படை வீரன் மாலிக்க பூரை அனுப்பி பாண்டிய நாட்டைச் சூரையாடியதைப் பற்றி ஜியாவுத்தின் பார்னி என்ற மற்றொரு முசுலிம் வரலாற்றாசிரியன் குறிப்பிட்டுள்ளான். அதில் 20,000 குதிரைகளும் 612 யானைகளும் 96,000 மணங்கு பொன்னும் மணிகளும் அணிகளும் அடங்கிய பல பெட்டிகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். அரசனுடைய ஊருங் குதிரை, பட்டத்துக் குதிரை என்று அழைக்கப்படும். அதற்கு என்று தனியாக ஆட்கள் வைத்து உணவு குளிப்பு, நோய் முதலியவைகள் கவனித்து வரப்பட்டது. நல்ல மணமும் வாழைப்பூ மடல் போன்ற அழகிய காதும் கால், மார்பு, கழுத்து, முதுகு ஆகிய ஐந்து உறுப்புகளில் வெள்ளையும் 82 விரல் (அங்குலம்) உயரமும் உள்ள செங்குதிரை அரச குதிரையா வதற்குத்தக்கது. இதனைப் பஞ்சகல்யாணி என்று கூறுவர். குதிரைகளின் உடற் கூறும் நடையும் குரலும் நிறமும் திறமும், இயல்பும் சுழிகளும் பற்றிப் பரிநூல் (அசுவசாதிரம்) கூறும். பாடலம் சேரன் குதிரைக்கும் கோரம் சோழன் குதிரைக்கும் கன வட்டம் பாண்டியன் குதிரைக்கும் கந்துகம் சிற்றரசர் குதிரைக்கும் பெயராம். குதிரைப் பாகர், பண்ணுவர், பரிமா வடிப்போர், மாவலர், வதுவர், வாதுவர் எனப்படுவர். குதிரை மறவர்கள் இவுளி மறவர் குதிரைச் சேவகர் என்று அழைக்கப்பட்டு வந்தனர். தமிழ் நாட்டுக் குதிரைப் படைக்கு எல்லா இலட்சணங்களும் பொருந்திய சேங்குதிரைகளும், யானைப்படைக்கு அவ்வாறே நல்ல இலக்கணம் பொருந்திய களிற்றியானைகளும் தேர்ந் தெடுக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டுக் குதிரைப்படையும் யானைப்படையும் இந்தியாவிலே இணையற்றன; ஒப்பற்றன. சிறந்த குதிரைகளுக்கும் யானைகளுக்கும் சிறப்புப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. முற்காலத்தில் தேர்ப்படைக்கு எருதுகள் பூட்டப்பட்டு இருந்தன. பிற்காலத்தில் தேர்ப்படைக்கு தேர்களை வேகமாக இழுத்துச் செல்லவல்ல நல்ல குதிரைகள் பூட்டப்பட்டு வந்தன. தமிழ் நாட்டு மன்னர்கள் மூவரும் தனித்தனியாக அரேபிய நாட்டிலிருந்து ஏராளமான குதிரைகளை வாங்கி வந்தனர். பாண்டிய மன்னர்களுக்கு ஆண்டு தோறும் பதினாயிரக்கணக்கான குதிரைகள் அரேபியாவிலிருந்து கொற்கைத்துறைமுகத்திற்கு பாய்க்கப்பலில் வந்து இறங்கின; இதற்காகப் பாண்டிய மன்னர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பொன்னைச் செலவிட்டு வந்தனர். இதன் மூலம் ஏராளமான தமிழ் நாட்டுச் செல்வங்கள் அரேபிய நாட்டிற்குப் போயின. குதிரை வணிகத்தின் பொருட்டு இங்கு போந்த அரேபிய வணிகர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். அவர்களில் எவரும் தம்மோடு பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் தமிழகத்தின் கடற்கரைப்பட்டினங்களில் தங்கி அங்குள்ள நெய்தல் நிலப் பெண்களை மண முடித்து இந்நாட்டில் தம் சமயத்தையும் தம் சமூகத்தையும் நிலை நாட்டிக் கொண்டனர். முற்காலத்தில் தமிழ் மன்னர்களிடம் பல விதச் சலுகைகளையும் பெற்று வந்தனர். குதிரைகளுக்கு இரும்புக் கவசங்கள் அணியப்பட்டன. குதிரைப் படையினர் வில்லும் வாளும் வேலும் ஈட்டியும் பயன்படுத்தினர். தேர்ப்படை தமிழர்கள் ஆதியில் கண்ட நாற்படைகளில் தேர்ப் படையும் ஒன்று. தேர்ப்படை மிகத் தொன்மையான காலத்திலே தோன்றியது என்பதற்குத் தொல்காப்பியம் போன்ற பழம் பெரும் நூற்களே சான்று தருகின்றன. தேர்ப்படை சங்க காலத்திற்குப் பின் வழக்கி னின்று மறைந்தது. தேர் ஆதிகாலத்தில் நல்ல எருதுகள் பூட்டப்பட்டதாக இருந்தது. அப்பால் நல்ல குதிரைகள் பூட்டப் பெற்று வந்தது. அரசன் ஊருந்தேர் ஏனைய தேர்களிலும் ஏற்ற முற்றதாய் இருந்தது. நல்ல வேலைப்பாடுகள் அமைந்ததாய் அணிகலன்கள் நிறைந்ததாய் எழில் மிக்கதாய் இருந்தது. அரசன் போருக்குமட்டுமின்றி வேட்டைக்கும் தேர் மீது ஊர்ந்து செல்வான். நகர்வலம் செல்ல அரசர்கள் தேர் மீது இவர்ந்து செல்வ துண்டு. தேர் இன்றேல் யானை அல்லது குதிரை மீதேறி நகர்வலம் வருவதும் உண்டு. தேர் மீது மன்னரின் கொடிகட்டப் பெற்றிருக்கும். தேர்ப்பாகன், சாரதி, சூதன், வலவன், தேரோட்டி என்றெல் லாம் அழைக்கப்படுவான். தேர், அரி, இயந்திரம், இரதம், எந்திரம், கவரி, குயவு, கூவிரம், கூவிரி, கொடிஞ்சி, சயந்தனம், திகிரி, விமானம், வையம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுவந்தன. தேர் மிக விரைவாகச் செல்லத்தக்கதாயும் அதிகக் கனமில் லாமல் ஆனால் உறுதியுடையதாயும் எழில் மிக்கதாயும் செய்யப் பெற்றிருந்தது. தேர் ஓட்டுவதற்குத் திறமையான சாரதி இருப்பான். பாரதப் போரில் அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் தேரோட்டியாய் இருந்தது கவனிக்கத் தக்கது. பிற்காலத்தில் தேர்ப்படையும் யானைப்படையும் வழக்கற்றுப் போயிற்று. போரில் அவைகளை நடத்துவது மிகச் சிரமமாக இருந்தது. விரைந்து பகைவர்களைத் தாக்கி முன்னேறிச் செல்வதில் அதிகக் கஷ்டமிருந்தது. எனவே அவைகள் தவிர்க்கப்பட்டன. முற்காலத்தில் யானையேற்றம் குதிரையேற்றம், தேர் ஏற்றம் முதலிய வைகளுக்கும் போரிடுவதற்கு வில்,வேல், வாள் பயன் படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. கப்பற் படை தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலவிதக் கலங்களும், கலப்படைகளும் உருவாகிவிட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பாண்டிய மன்னன் வடிவம்பலம் நின்ற பாண்டியன் ஓர் ஒப்பற்ற கலப்படையை நிறுவி இருந்தான். வலிமை வாய்ந்த தன் கடற்படையை ஏவி ஆழ்கடல் கடந்து சாவகம் போன்ற தீவகங்களையெல்லாம் வென்று வரச் செய்தான். வானியைந்த இரு முந்நீர்ப் பேஎநிலைஇய இரும் பௌவத்துக் கொடும் புணரி விலங்கு போழக் கடுங்கா லொடு கரை சேர நெடுங் கொடிமிசை இதை யெடுத்து இன்னிசைய முரசு முழங்கப் பொன் மலிந்த விழுப் பண்டம் நாடார நன் கிழி தரும் ஆடியற் பெருநாவாய் மழை முற்றிய துளங்கிருக்கைத் தென்கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ (மது. காஞ்சி. 75-88) என்ற மதுரைக் காஞ்சியின் பாடல்கள் பாண்டிய நாட்டு மரக் கலங்கள் இரட்டை மீன் பொறித்த எழிற் கொடி இலங்க, முரசு முழங்க ஆழ்கடல்கள் எல்லாம் சென்று வணிகம் நடத்தி வந்ததையும் போர்க்கலங்கள் நெல்லூர் (சாவகம்) சென்று வெற்றி பெற்று மீண்டதையும் எடுத்துக் காட்டுகிறது. நெல்லூர் என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் சாலியூர் என்று பொருள் கூறினார். சாலியூர் சாவகத்தீவகத்தின் பெயர் என்று பல உரை ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வஞ்சியில் செங்கோல் ஓச்சியவன் சேரமான், கடலோட்டிய வேல் கெழு குட்டுவன் என்பான் ஆகும். அவன் ஆற்றிய கடற்போர் சங்க மருவிய தங்க ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சேரர்களின் வங்கம், கடலில் செல்லுமாயின் ஏனைய நாட்டவர் வங்கம், தத்தம் நாட்டுக் கரை களிலே நின்று கொள்ளும். கடலில் இறங்கத் துணியா என்று புற நானூறு புகழ்ந்து பாடுகிறது. சினமிகு தானை வானவன் குடகடற் பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப் பிறர் கலம் செல்கலா தனையேம் - (புறம் 126) என்ற புறநானூற்றுச் செய்யுள் சேரர்களின் கலத்திறனை நன்கு விளக்குகிறது. அவர் கலம் ஆழ்கடல் கடந்து பல தீவகங்களை வென்று வெற்றிக் கொடி நாட்டியது நன்கு புலனாகிறது. நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனிடம் பெரிய கடற் படை இருந்தது. அக்கடற் படை வலிமை மிக்கது. கடற்போரில் நல்ல அனுபவம் பெற்றது. கடற்போருக்கு வேண்டிய எல்லா ஆயுதங் களும் குறைவறப் பெற்றிருந்தது. இவனது கடற் போர்த் திறனை புற நானூறு போற்றிப் புகழ்கிறது. (புறம்: 396) இவனது கடற் போர்த் திறனைப் பதிற்றுப்பத்து வியந்து பாராட்டுகிறது. அது அடியில் வருமாறு: வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு. (பதிற்றுப் பத்து II : 1-6) சேரன் செங்குட்டுவன் சிறந்த கடற் படையையுடையவன் அவன் தனது ஆற்றல் மிக்க கடற்படையைப் பகைவர்கள் மீது ஏவி வெற்றி பெற்று வந்தான். அவன் கடல் வெற்றியையுள்ளி அவனுக்கு பரதவன் என்ற சிறந்த பட்டம் அளிக்கப் பெற்றது. ............................................ நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ (பதிற்றுப்பத்து 8: 3-4) என்று பதிற்றுப் பத்து சிறப்பித்துக் கூறுவது ஆராயத்தக்கது. செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதன், குட்டுவன் போன்றவர்கள் மட்டுமல்ல சேரர்களே கடற்போரில் வல்லவர்களாக இருந்தனர். அவர்கள் வல்லவர்கள் மட்டுமல்ல வில்லவர்களாகவும் இருந்து வந்தனர். அதனை இரு முந்நீர்த் துருத்தியுள் முரணி யோர்த் தலைச் சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரன் - (பதிற்றுப்பத்து. II 10: 2-4) என்று கூறுவதும் சிந்திக்கத் தக்கது. கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்பே சோழர்கள் வலிமை வாய்ந்த கடற்படையை உருவாக்கி விட்டனர். காவிரிப் பூம் பட்டினத்திலிருந்து ஆட்சி நடத்திய கரிகாற் சோழன் தம் அடலேறு போன்ற கடற்படையினின்று ஈழநாட்டை வென்று வாகை சூடினான். பெரும் கடற் படையைக் கொண்ட சேனையைக், கரிகாலன் வென்றதைப் புகழ்ந்து வெண்ணிக் குயத்தியார் பாடுவது சோழர்களின் கடற்படைச் சிறப்பை அறியத் தக்கச் சான்றாகும். நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்த நின் னாற்ற றோன்ற வென்றோய் நின்னினு நல்லவனன்றே (புறம் 66) கி.பி.11 -ஆம் நூற்றாண்டில் முதலாம் இராசராசன் ஈழத்தையும் முல்லைத் தீவுகள் பலவற்றையும் சேர நாட்டையும் தன் கடற்படை கொண்டு வென்றதையும் இராசேந்திர சோழன் அந்தமான், நக்கவாரம் காழகம், சாவகம் முதலிய பல்வேறு கிழக்காசிய நாடுகளையும் தன் கடற்படை கொண்டு மாபெரும் கடற்படை வெற்றியையீட்டி உலகப் புகழ் பெற்றதை யாரே மறுக்க வல்லார்? முதலாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் ஆகியவர்கள் கிழக்காசியாவில் பெற்ற கடற்படை வெற்றி வரலாற்றுப் புகழ் பெற்றதாகும்1. சடையவர்மன் பராந்தக பாண்டியன் சிறந்த கடற்படையை நிறுவியிருந்தான். கி.பி.835-இல் சீமாறன் சீவல்லவனிடம் சிறந்த கடற்படை இருந்தது. முதல் வாரமன் குலசேகர பாண்டியன் (கி.பி268-1311) தன் கடற்படையின் வலிமையால் மூன்றாம் பராக்கிரம பாகுவை வென்று மீனக் கொடியை திருக்கோணமலையிற் பொறித்துள்ளான். தளபதிகள் தமிழர்கள், தங்கள் படைகளை தானைப்படை, யானைப்படை, தேர்ப்படை, பரிப்படை, கடற்படை என்று பிரித்து ஒவ் வொரு படைக்கும் தளபதிகள் நியமித்திருந்தனர். ஒவ்வொரு படையிலும் உள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் தலைவன் நியமிக்கப் பட்டிருந்தான். அரசனே எல்லாப் படைகளுக்கும் மேலான தளபதி யாக (Supreme commander) ஆக இருந்து வந்தான். போரை அரசனே முன்னின்று நடத்துவான். சிலசமயம் தளபதிகள் போரை முன்னின்று நடத்துவர். அரசன் அக்காலத்தில் பாசறையில் போர் வெற்றி பெறுவதற்குரிய வழிகளை ஆய்ந்து ஆவன செய்து கொண்டிருப்பான். அவசியம் எழுந்தால் அரசன் போர்முனைக்குவந்து தம் படைகளை வழி நடத்துவான். தளபதிகள் பெரும்பாலும் இளவரசன் அல்லது அரசனுடைய உறவினர்களாகவே இருப்பர். அரசன் இறந்துவிட்டால் அவன் மகன் சிறுவனாக இருந்தாலும் முடி புனைந்துகொண்டு அரச கட்டிலை அடைவான். அவசியம் எழுந்தால் அவன் சிறுவன் என்றெண்ணாது போர்முனைக்குப் போந்து படைகளை நடத் துவதும் உண்டு. இளம் மன்னர்களைப் போருக்குப் போக வேண்டாம் என்று அன்னை, அமைச்சர், அரசகுருக்கள் ஆகிய வர்கள் தடுப்பதுமுண்டு. ஆனால் அவர்களுக்குத் தக்க சமாதானம் கூறி போர்முனைக்கு அரசன்மகன் செல்வான். அவன் போரில் உயிர் துறப்பதும் உண்டு. வெற்றி பெறுவதும் உண்டு. அரசிகளும், அமைச்சர் மனைவிகளும், பிற குடிப்பெண்டிர் களும் தங்களுக்கு ஒரேயொரு மகன் இருந்தாலும் அஞ்சாது மகனைப் போருக்குச் செல்லத் தூண்டி வாழ்த்தி வாளும் வில்லும் அம்பும் அளித்து விடை கொடுத்து அனுப்புவர். போரில் தந்தை கணவன் உடன் பிறந்தார்கள் ஆகிய அனைவரும் உயிர் துறந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் குலக் கொழுந்தாக இருக்கும் 16-வயதடைந்த ஒரே மகனையும் தமிழ் அன்னை தயங்காது போருக்கு அனுப்பினாள். மகன் இருந்தால் வீரமகன் என்ற பெயருடன் இருக்கவேண்டும். அது பெருமை. கோழை மகன் என்று இருப்பது தனக்குச் சிறுமை, குடும்பத்திற்கு இழிவு என்று எண்ணினாள். போரில் தன் மகன் புறமுதுகு காட்டி ஓடி வீழ்ந்தான் என்றால் வீட்டில் உள்ள அவனது அன்னை அதைக் கேட்கச் சகியாது சாய்வாள்; வடக்கிருந்து சாவாள். படைத் தலைவர்கள் தமிழ் நாட்டிலுள்ள ஐந்து வகைப் படைக்கும் தனித்தனியே படைத்தலைவர்களும் எல்லாப் படைக்கும் பெரிய தளபதியும் இருந்து வந்தனர். சேர நாட்டில் மன்னர்களின் உறவினர்கள் படைத்தலைவர்களாய் இருந்தனர். அவர்கள் நாயன் என அழைக்கப் பட்டனர். இன்று அவர்கள் நாயர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் பள்ளர்கள் தங்கள் குலத்தலைவர்களை நாயன் என்றும் நயினார் என்றும் நைந்தே என்றும் இன்றும் அழைப்பர். பெண்களை நாச்சியார் என்றும் நவில்வார்கள். ஆனால் பிற இனத்தவர்கள் எவ்வளவு செல்வம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களை நாயன் என்று பண்டைக் காலப் பள்ளர்கள் கூறார். பட்டங்கள் படைவீரர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அரசர்கள் பல பட்டங்கள் அளித்து வந்தனர். அவற்றில் ஏனாதி என்பதும் ஒன்று. அப்பட்டத்திற்குரிய மோதிரம் ஏனாதி மோதிரம் எனப்படும். கலித் தொகையில் இப்பட்டம் கூறப்படுகிறது.1 அரசன் தளபதியாய் இருபுரவிகள் பூட்டப் பெற்ற தேர் மீது இவர்ந்து செல்வான். போர்க்களம் புகுமுன் குளித்து ஆடை அணிகள் பூண்டு மலர் சூடித் தன் தாயிடம் அனுமதி பெற்று அவள் வாழ்த்துதலைப் பெற்று போர்க் கோலம் பூண்டு வாளும் வில்லும் ஏந்தி தம் குலதெய்வத்தை வழிபட்டு நால்வகைப் படைகளும் சூழப் போர்க்களம் புகுவான். தேர்மீது வெள்ளைக் குடைகளும் பன்னிறக் கொடிகளும் பறக்கும். எல்லாவற்றிற்கும் மேலே நாட்டுக் கொடி பறக்கும். கைதேர்ந்த தேர்ப்பாகன் தேரைச் செலுத்துவான். அவன் கவசம் அணிந்து கையில் வில்லேந்தி வீராப்புடன் செல்வான். போர்முரசு, எக்காளம், வெற்றிச் சங்கு போன்றவைகளை இசைக்கும் இசைவாணர் கூட்டம் பின் தொடரும். சில சமயம் தளபதி யானைமீது அமர்ந்து பகைவர்கள் மீது பாய்வதும் உண்டு. அறுபது வயதுள்ள முதிர்ந்த உறுதி வாய்ந்த கொம்புகளையுடைய சிறந்த யானை மீதே அரசன் ஏறிச் செல்வான். யானை மீதுள்ள இருக்கை அம்பாரி என்று அழைக்கப்படும். அரசன் ஆணையிட்டால் யானை அஞ்சாது எதையும் செய்யும். முற்றுகையிடப்பட்ட, கோட்டைக் கதவுகளை யானை முட்டி மோதி உடைத்து படை வீரர்கள் உட்புக வழி செய்யும். யானைப்பாகன் கையில் குத்துக் கோலும் தோட்டியும் வைத்திருப்பான். போர் மறவர்கள் கொடிகளை வீசிக் கொண்டு அருகில் அணியணியாய் நிற்பர். அரசன் தன் மார்பின் மீது பகைவர்களின் கொடிய கூரிய அம்புகள் துளைக்க முடியாதவாறு புலித் தோலால் செய்யப் பெற்ற கவசம் அணிந்திருப்பான். யானை மீது அமர்ந்து செல்லும் அரசன் மார்பில் பகைவர்களின் அம்போ வேலோ பாய்ந்து விட்டால் அரசன் அஞ்சாது அவைகளைத் தன் மார்பினின்று பிடுங்கி, தன் உடம்பினின்று உதிரம் பொங்கிப் பெருகுவதை பொருட்படுத்தாது பகைவர்கள் மீது மார்பிலிருந்து பிடுங்கிய அம்பைப் பாய்ச்சுவான். பகைவர் அம்பு அரசனின் முதுகின் பக்கம் பாய்ந்து விட்டால் அரசன் போருக்குப் பயந்து புறமுதுகுகாட்டி ஓடும் பொழுது பட்டதாக எண்ணப்படும். எனவே தமிழக மன்னர்கள் முதுகுப் பக்கமல்ல விலாப்புறம் பகைவர்களின் பாணங்கள் பாய்ந்து விட்டாலும் பின் ஒரு நொடியும் உயிர்தரி யார்கள். மார்பில் பகைவர்கள் பாணம் பாய்வது மன்னர்களுக்கும் பிற வீரர்களுக்கும் மாண்பைத் தருவதாக எண்ணப்பட்டது. 3. தமிழர்களின் போர் முறை தமிழர்கள் தொன்மையான இனத்தவர்கள். அவர்கள் பண்பு மிக்கவர்கள் அவர்கள் பண்டு தொட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தாக்குவதற்கும் தற்காப் பிற்கும் படைகளும் அரண்களும் படைக்கருவிகளும் அமைத் திருந்தனர். தற்பாதுகாப்புக் கென்று நகரைச் சுற்றி அணி அணியாய் அரண்கள் அமைத்திருந்தனர். அரண்கள் மீது பொறிகள் வைத்திருந் தனர். அரண்களைச் சூழ்ந்து அகழிகள் வெட்டி அதில் முதலைகளை விட்டிருந்தனர். படைகளும் படைக்கருவிகளும் உருவாக்கி இருந் தனர். ஆரியர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே இங்கு கோட்டைகளும் கொத்தளங்களும் இருந்தன. இருக்கு வேதத்தில் பகைவர்களின் (தாசர்களின்) செம்புக் கோட்டைகள் இரும்புக் கோட்டைகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழர்கள் கிறித்தவ ஊழிக்கு முன்பே பல அரண்களை அமைத் திருந்தனர் என்று தமிழில் உள்ள பழம் பெரும் நூற்களான தொல் காப்பியம், திருக்குறள் போன்றவைகளின் மூலம் தெளிகின்றோம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் தமிழ் நாட்டு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்ந்த புருசுபுட், பி.டி. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடிமக்கள் கல்லில் பல்வேறு வகையான ஆயுதங்களைச் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். அவ்வாயுதங்கள் அவர்கள் விலங்குப் போர்களில் கையாண்டு வெற்றி யீட்டியவைகள் என்று தெரிகின்றன. அவை கோடரி, வாச்சி, உளி, கத்தி, சுரண்டி, ஈட்டிமுனை, வில், தடி, உலக்கை போன்றவைகள் என்று தெரிகின்றன. அவர்கள் வட இந்தியாவில் புதிய கற்காலத்தைக் கடந்து உலோக காலத்தை அடைந்த பொழுது வெண்கலத்திலான மீன் எறிவேல், குத்துவாள், கத்தி, வாச்சி, உளி, தமர்ஊசி, மூவிலைவேல் (திரிசூலம்), தடி, உலக்கை போன்ற பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்திவந்தனர் என்று தெரிகிறது. அரப்பன் பண்பாட்டில் அவர் கள் பயன்படுத்திய வெண்கலத்திலான ஈட்டி, கோடரி, கண்ட கோடரி, கத்தி, உளி, சுரண்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் ஆதித்த நல்லூர் பண்பாட்டில் கிறித்தவ ஊழிக்கு முன் மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான வேல், கம்பு (spear - ஈட்டி) மூவிலை வேல், கண்ட கோடரி, பல்வேறு வகையான ஈட்டி முனைகள் (Spear heads) வாள் (Sword) இருபுறமும் வாயுள்ள வாள் (Double edged sword) சிறிய குத்துவாள் (Small dagger) மீனெறி வேல் (Lance) அம்பு முனை போன்ற கூரிய நுனியுடைய எறிவேல் (Barbed Javelin) ஒரு அரிய ஆயுதம் (A curious weapon) சிறிய ஈட்டிகள் (Small Rances) குத்துவாள் (Dagger - cilthŸ) உளி, கைக் கோடரி (Hatchet), பல்வேறு வகையான கத்திகள், கோடரி, தடிகள் வளைந்த கத்திகள் (Curved Knives) போன்ற பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்கள் முன்னூற்றிற்கு மேற்பட்டவைகள் அகழ்ந்து கண்டு அவைகளைத் தொல் பொருள் காட்சி சாலையில் இடம் பெறச் செய்யப் பட்டுள்ளன. அவைகளைப் பற்றி நூல் எழுதி ஆயுதங்களின் புகைப் படங்களை இணைத்து விளக்கம் தரப்பட்டுள்ளன.1 தமிழில் இராமாயணம், பாரதம் போல் இதிகாசங்களோ, போர்க்காவியங்களோ தமிழர்களால் எழுதப்படவில்லை. இன்றுள்ள பழந்தமிழ் இலக்கியங்களில் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஆயுதங்களைப் பற்றிய விவரங்கள் பெரிதும் காணப்படவில்லை. சிற்பங்களிலும் நிகண்டுகளிலும் அகராதிகளிலும் காணப்படும் போர்க்கருவிகளுக்குக் கூட இலக்கியங்களின் மூலம் விளக்கம் பெற முடியவில்லை. தமிழ் நாட்டு வரலாறு சிறப்பாக இந்த இருபதாம் நூற் றாண்டின் இறுதியில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் என்ற பெயர்களால் சிலரால் சில வரலாற்று நூல்கள் வரையப் பெற் றுள்ளன. அவைகளில் தமிழக மன்னர்கள் ஆற்றிய போர்களைப் பற்றி விளக்கந்தரப்பட்டுள்ளன. முற்கால, பிற்காலத் தமிழ் மன்னர்கள் குமரி தொட்டு இமயம்வரை போரிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். ஆழ்கடல் கடந்து சிங்களம், புட்பகம், சாவகம், காழகம் போன்ற பல நாடுகளுக்குத் தம் கப்பற்படை மூலம் படையெடுத்துச் சென்று வென்று வில், மீன், புலி, சிங்கம், எருது போன்ற உருவங்கள் பொறித்த கொடிகளை விண்முட்ட பட்டொளி வீசிப் பறக்கும்படி செய்தனர். இமயமலையில் தமிழர் கொடி ஏற்றப்பட்டது. குடை நிலை நாட்டப்பட்டது. திருக்கோணமலையில் தமிழர் கொடி பறக்க விடப்பட்டது என்றெல்லாம் பலப்பல செய்திகள் சொல்லப்படு கின்றன. ஆனால் எந்த வரலாற்றாசிரியர்களும் தமிழர்கள் எய்திய இந்த வெற்றிகள் எந்தெந்தப் போர்க்கருவிகளால் பெறப்பட்டன என்று விளக்கந்தரவில்லை. இவர்களுக்கு தகவல்களே கிடைக்க வில்லையா? அல்லது மறந்து விட்டார்களா? அல்லது மந்திரத்தால் இம் மாபெரும் வெற்றிகளை ஈட்டினார்கள் என்று கருதினார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் எப்படிக் கருதினாலும் கருதட்டும். அவர்கள் எப்படிக் கருதுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அவர்கள் கருத்தைத் தம் வரலாற்று நூற்களில் குறிப் பிட்டிருக்க வேண்டும் என்பதே எம் பணிவான கருத்தாகும். வரலாற்றின் முக்கியமான அம்சம் போர்கள். போருக்கு இன்றிமையாத கருவி போர்க்கருவிகள். போரோ சிறிய போர் அல்ல. குறுநில மன்னர்களோடு நடத்திய சண்டை, சச்சரவு போன்ற தல்ல. அக்காலத்தில் நடந்த பாரதப் போரைவிட, இராமாயணப் போரை விட மிக மிகப் பெரிய போர். எடுத்துக் காட்டாக கி.பி 10-ஆம் நூற்றாண்டில் இராச ராச சோழன் காலத்தில் இராசேந்திர சோழன் தலைமையில் சோழர்களின் தரைப்படையும், குதிரைப் படையும், யானைப்படையும், ஈட்டிப் படையும், கப்பற்படையும் இந்தியாவி லும் இலங்கையிலும் மட்டுமல்ல அந்தமான், நிக்கோபார், இலக்கத்தீவுகள், காழகம் (கடாரம்), மலையம், சிங்கபுரம், தாய்லாந்து, கம்போசகம், சிங்கபுரம், சாவகம், சிரிவிசயம், மாயிருடிங்கம், மாப்பாளம், வளைபந்துரு, தலைத்தக்கோலம், இலாமூரி, இலாமூரி தேசம் போன்ற பல நாடுகளை வென்று புலிக் கொடியை நாட்டி னான். இந்த மாபெரும் போரில் வெற்றியீட்டிய சோழர் பெரும் படை என்னென்ன போர்க்கருவிகளைப் பயன் படுத்தின என்று இதுவரை எந்த வரலாற்றாசிரியர்களும் எடுத்துக் காட்டியதாக நமக்குத் தெரியவில்லை. சோழர் வரலாற்றை விரிவாக எழுதிய திரு. கே. நீலகண்ட சாத்திரி கூட தம் நூலில் போர்க் கருவிகளைப் பற்றி விளக்கம் கூறவில்லை. பாண்டியர் வரலாற்றில் கூட படைக் கலன்கள் விசயத்தில் அவர் பாராமுகமாய் இருந்து விட்டார். இஃதன்றி சோழர் வரலாற்றைப் பற்றி எழுதிய டாக்டர் இராச மாணிக்கம், திரு. சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர் போர்க் கருவிகளைக் காணத் தம் கண்களை இறுக மூடிக் கொண்டார்கள் என்றே தெரிகிறது. சேரர் வரலாற்றை வரைந்தவர்களும், பல்லவர் கள் வரலாற்றை வரைந்தவர்கள் நீலகண்ட சாத்திரியார் வழியில் மன்னர்களின் சமயம், அவர்கள் கட்டிய கோயில்கள் பழுதுபார்த்த கோயில்கள், அவர்களின் மனைவியர், மக்கள், ஏற்படுத்திய நிபந்தங்கள் முதலியவற்றையே மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டி யுள்ளார்களே யொழிய சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் ஆற்றிய போர் முறைகள் அவர்கள் பயன்படுத்தியப் போர்க்கருவிகள் முதலியவை களை எழுத அவர்களின் எழுதுகோல் இடம் அளிக்கா திருந்ததை எண்ணி இக்கால மாணவர்கள்- ஏன்? வருங்கால மாணவர் களும் வருந்தாதிருக்க முடியாது. அரண்கள் அரண்கள் மக்களின் தற்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட் டிருந்தன. அரண்கள் அரசன் வாழும் கோநகரங்களிலும் பிற முக்கிய மான நகரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அரண் என்பது நகரைச் சுற்றி உயரமாக எழுப்பப்பட்ட மதிலேயாகும். இதனை மதிலரண் என்று கூறுவர். இவ்வரண் செங்கல்லால் கட்டப்பட்டு மேலே சுதையால் பூசப்பட்டிருக்கும். பிற்காலத்தில் கற்களாலும் அமைக்கப்பட்டிருந்தது. கல்லால் கட்டப்பட்ட அரண்களுக்குச் சாந்தாக செம்பை உருக்கி வார்த்து உறுதியானதாகச் செய்யப்பட் டிருந்தது என்று கூறப்படுகிறது. பகைவர்கள் ஏறுதற்கரிய உயர்ந்த மதில்களாக அரண்கள் இருக்கும். பகைவர்கள் தொலைவில் வரும் பொழுதே காண்பதற் குரிய உயர்ந்த கோபுரங்கள் மதில் மேல் அமைக்கப் பெற்றிருந்தன. பகைவன் தலைநகரை முற்றுகையிடும் பொழுது நொச்சிப் போர் இயற்ற முடியாதாயின் பகைவர்கள் அறியாது தலைநகரிலிருந்து வெளியே கரந்து செல்வதற்குரிய வழிகள் சுருங்கைகள் (சுரங்கப் பாதைகள்) இருந்தன. அரண்களுக்கு வாயில்கள் இருக்கும். சில அரண்களுக்கு இரண்டு வாயில்கள் உண்டு. சில அரண்களுக்கு நான்கு வாயில்களும் உண்டு. இதனைக் கோட்டை வாயில்கள் என்று கூறுவர். இந்த வாயில்கள் உறுதியான மரக் கதவுகளாலானது. கதவுகளின் மீது எஃகுத் தகடுகள் வைத்து நன்றாகத் அறையப்பட்டிருக்கும். இரவில் இந்த வாயில்கள் பூட்டப்படுவதும் உண்டு. கோட்டை வாயில்களை வீரர்கள் இமை கொட்டாது நின்று பாதுகாத்து வருவார்கள். அரணைச் சுற்றி அகழி வெட்டப்பட்டிருக்கும். அந்த அகழி யில் நீர் பாய்ச்சி அதில் முதலை, சுறாமீன் போன்றவைகள் விடப் பட்டிருக்கும். கோட்டை வாயில்களில் மட்டும் மரப் பலகை யினாலான பாலங்கள் போடப்பட்டிருக்கும். அந்தப் பாலங்களின் வழியாகவே மக்கள் நகருக்குள் போய் வருவர். போர்க்காலங்களில் இப்பாலங்களை உள்ளே இழுத்துக் கொள்ளுவார்கள். பகைவர்கள் அகழியில் இறங்கியே அரணை அணுக வேண்டியதாயிருக்கும். பகைவர்கள் அகழியைக் கடந்து நூலேணி வழியாக மதில் மீது ஏறுவர். அரண் வகைகள் நகரைப் பாதுகாக்க அரண்கள் பலவகைப்பட்டதாக இருந்தன. தலைநகர்ப் பாதுகாப்பிற்கு அரண்கள் 5 வகையாகப் பிரிக்கப் பட்டிருந்தது (1) மதிலரண் (2) நிலவரண் (3) காட்டரண் (4) நீர் அரண் (5) மலையரண் எனப்படும். மதில் அரண் வகைகள் எல்லா அரண்களிலும் மதிலரண்களே நல்ல பாதுகாப் புடையன. இந்த மதிலரண் 4 வகைப்பட்டதாய் இருந்தது. (1) மதில் (2) எயில் (3) இஞ்சி (4) சோ எனப்படும். மதிலரணை பொதுவாகக் கோட்டை என்றும் புரிசை என்றும் அழைப்பர். புரிசை என்பது புரிந்திருப்பது என்று பொருள்படும். புரிதல் வளைதல் அல்லது சூழ்தல் எனப்படும். அரண்கள் அரசன் வாழும் அகநகரைச் சூழ்ந்திருப்பதால் புரிசை எனப்பட்டது. நால்வகையான அரண்களுள் உயரத்தால் பெரியது மதிலரண் எனப்படும். உயரமும் அகலமும் வாய்ந்த அரண் எயில் எனப்படும். உயரம், அகலம், திண்மை வாய்ந்தது இஞ்சி எனப்படும். இம்மூன்று தன்மையோடு மிகவும் அருமையான தன்மைகள் பலவும் சேர்ந்தது சோ எனப்படும். அரண்களில் சோ அரணே தலைசிறந்ததாகும். அரணின் இலக்கணம் கூறவந்த வள்ளுவர் உயரம், அகலம், உறுதி, பகைவர்களால் அழிக்க முடியாத அருள் ஆகிய நான்கு தன்மைகள் வாய்ந்ததாக அரண்கள் இருக்கும் என்று நூலோர் கூறுவர் என்றார்.1 செம்பையுருக்கி சாந்தாகக் கொண்டு கருங்கல் வைத்துக் கட்டப் பட்ட மதிலரணையுடையது இஞ்சி என்று கூறப்பட்டது.2 இந்த இஞ்சியரண் இலங்கையில் இருந்தது. துவாரகா சமுத்திரம் (துவரை நகரில்) இஞ்சியரண் இருந்தது. செம்பு அரண் இராவணனுக்குச் சொந்தமானது. இது இலங்கையில் இருந்தது என்று தெரிகிறது. இஃதன்றி சிலப்பதிகாரத்தில் சுழலழலுள் வைகின்று (Match locko)nrh” என்று கூறப்படுவதால் மதுரையில் சோவரண் என்ற அரண் இருந்ததாக எண்ண இடமுண்டு. மக்களின் பாதுகாப்பிற்காக அரண்கள் எழுப்பப் பட்டிருந்தது. அரண்களின் பாதுகாப்பிற்காக அகழ்களும் அரண்கள் மீது பல அரிய பொறிகளும் (இயந்திரங்களும்) அமைக்கப்பட் டிருந்தன. அரண்கள் மீது பல வில் வீரர்கள் இரவும் பகலும் இமைகொட்டாது எதிரிகளை வீழ்த்தி எமனுலகம் அனுப்பத் தயாராய் நின்றனர். அரண் மீது எழுப்பப் பெற்ற காவல் கோபுரங்களின் மீது காவல் வீரர்கள் பகைவர்கள் தொலைவில் வரும் பொழுதே அறிந்து தங்கள் படைத் தலைவனுக்கு முன்னறிவிப்புச் செய்ய எப்பொழுதும் கண்காணித்து வந்தனர். மதில்களின் மீது அரிய பொறிகள் வைக்கப்பட்டிருந்தன. மதுரை மாநகரில் புற மதிலில் இருந்த பொறிகளும் கருவி களும் உறுப்புகளும் பற்றி சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் கூறப் பட் டுள்ளது. இந்தப் பொறிகளில் பல தமிழ் நாட்டிலே செய்யப்பட்டன. சில யவனர்களிடமிருந்து வாங்கப்பட்டன என்று கூட எண்ணப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரங்களைச் சுற்றி ஒன்றினை அடுத்து ஒன்றாக அடுக்கடுக்காக பல கோட்டைகள் கற்களால் கட்டப் பெற்றிருந்தன. வெளிப்பகுதியில் எழுப்பப் பெற்ற அரண்கள் புற மதில்கள் என்றும் உட்புறத்தில் உயர்த்தப் பெற்ற அரண்கள் அக மதில்கள் என்றும் அழைக்கப்பட்டன. அக மதில்களை விட புற மதில்கள் செய்முறையில் சிறப்புற்றிலங்கும். புறமதில்களிற்றான் பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். அகழும், புற மதிலும் அகமதிலும் எவ்வாறு இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டாக இன்றைய தஞ்சை பெருவுடையார் கோயில் அமைப்பும் அகமும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகிறது. அரணை யொட்டி உட்புறத்தில் உள்ள மேடைக்கு அகப்பா என்று பெயர். மதிலுள்ள நகர்கள், பெரும்பாலும் கோட்டை, புரி, புரிசை, எயில், கடகம் என்னும் பதங்களுள் ஒன்றைத் தன்பெயரோடு இணைத்து விளங்கும். எடுத்துக்காட்டாக பாளையங்கோட்டை , செங்கோட்டை விசயாபுரி, அழகாபுரி, மருங்காபுரி போன்றதாக இருக்கும். அரண்களின் வாயில்கள் அகன்றும் உயர்ந்தும் இருக்கும். வாயில் கதவுகள் உறுதியான கனத்த பலகையால் அமைக்கப்பட்டு மேலே கனத்த இரும்புத் தகடுகள் இணைக்கப் பெற்றிருக்கும். வாயில்கள், திறமை மிக்க காவல் வீரர்களால் எப்பொழுதும் காக்கப் பெற்று வந்தது. பகைவர்களின் ஒற்றர்களும் வீரர்களும் உருக்கரந்து உட் புகுந்து உள்ளருப்பு வேலை செய்ய விடாது காவல் வீரர்கள் காத்து நிற்பர். அரணைக் கடந்து நகருக்குள் புகும் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு பொருள்களையும் காவலர்கள் ஐயமறச் சோதித்து அறிந்த பிறகே உட்புக அனுமதி அளிப்பர். வாயில்களில் மேலை நாட்டு யவன வீரர்கள் காவல் வீரர்களாக நின்று தமிழ் நாட்டு அரண்களைக் காத்து வந்துள்ளனர் என்று சிலப்பதிகாரம், முல்லைப் பாட்டு கூறுகின்றன.1 இடைச்சங்க காலத்தில் இருந்த பாண்டியர்களின் கோ நகரான கபாடபுரம் உயரிய அரண்களையுடையதாக இருந்தது. இதன் வாயிலின் கதவுகள் பொன்னாலானது. அதன் கதவுகள் முத்தாலும் மணியாலும் பிற அரிய பொருள்களாலும் அணி செய்யப்பெற்று விளங்கியதாக வான்மீகியின் வட மொழி இராமாயணம் கூறுகிறது.1 அரண்களின் வாயில்களில், பகைவர்கள் அரணை அணுக முடியாது என்பதை சுட்டிக்காட்ட, காற்சிலம்பு, தழையாடை, பந்து, பாவை, இன்னோரன்ன பெண்களுக்குரிய ஆடை, அணி முதலிய பொருள்களைத் தொங்க விட்டிருப்பர். அமர் ஆற்றி அரணை அடைய இயலாது. அதை மறந்து திரும்பிச் செல்லுங்கள். ஆசை கொண்டு வந்தால் ஆவி துறப்பீர்கள் அல்லது அடிபட்டு தோற்று ஓடுவீர்கள். உங்கள் வீரக்கழலைக் களைந்து காற்சிலம்பை அணியச் செய்வோம். மார்புக் கவசத்தைப் பறித்து தழையுடை பூணச் செய் வோம். உங்கள் கையில் உள்ள வாளையும் வேலையும் அகற்றி ஆடி மகிழுங்கள் எனப் பந்தும் பாவையும் தந்து மகளிர்களாக்கி மானத்தை இழக்கச் செய்வோம் என அறிவிப்பது போல் இருக்கும். இது அரணில் உள்ளே வாழ்பவர்களின் ஆண்மையைக் காட்டும்.2 வாயில் கதவுகள் துருவேறாது நெய்பூசப் பெற்றிருக்கும். கதவுகளில் மான், அன்னம் போன்ற உருவங்கள் தீட்டப் பெற்று மக்களின் கலைச் சிறப்பை விளக்கிக் காட்டா நிற்கும். சேர அரசனின், தொண்டி நகரக் கோட்டை வாயிலில் உள்ள கதவுகளில் மூவன் என்ற பகைவனுடைய பற்களும் மத்திய என்பானுடைய பற்களும் வெண்மணி வாயில் என்னும் சோழ நாட்டு நகர வாயிற் கதவில் அவனுடைய பகைவன் எழினியின் பற்களும் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் தொலைவில் வருவதை அறியுமாறு அரண்கள் மீது நாற்றிசையிலும் மிக உயர்ந்த அட்டாலை என்னும் கோபுரங்கள் பல எழுப்பப் பெற்றிருந்தன. அவற்றில் காவல் வீரர்கள் இருந்து கொண்டு இரவு பகல் இமை கொட்டாது காத்து வருவார்கள். இவர்கள் அட்டாலைச் சேவகர் எனப்படுவர். அவர்கள் இருக்கும் உயர்ந்த இடம் பார்வல் இருக்கை எனப்படும்.3 பாசறைகள் தலைநகரினின்று அதிகத் தொலைவில் போர் நடந்தால் பாசறை அமைத்துப் போர் நடத்தப்படும். பாசறையைச் சுற்றி முள்வேலி கோலப் பெற்றிருக்கும். அவை வேனிற்காலத்தில் அமைக் கப்பட்டால் வேனிற் பாசறை என்றும் குளிர்காலத்தில் அமைக்கப் பெற்றால் கூதற் பாசறை என்றும் கூறப்பட்டன. மற்றக் காலங்களில் நீண்ட நாள் போர் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போர், கார் காலம் ஆரம்பம் ஆகுமுன் அல்லது ஆரம்பம் ஆனவுடன் முடிக்கப் படும். அரசன் வீரருடன் பாசறையில் தங்கி இருப்பான். பகை அரசன் மீது படையெடுத்துச் சென்ற அரசன் தனக்கும் தம்படை வீரர்க்கும் பாதுகாவலாக போர் முகத்திற்குப் பின் பாசறைகள் அமைப்பான். அங்கு காடுகளை வெட்டி படைகள் தங்கும் இடம் அமைப்பான். அதனைப் பாடிவீடு என்று கூறுவர். தெருக்கள் ஒழுங் காக அமைந்திருக்கின்ற பாசறையின் வீடுகள் தழையால் வேயப் பட்டிருக்கும். யானைப் படையும், விற்படையும் பாசறையைக் காவல் செய்து நிற்கும். கோட்டைகளை விடப் பாதுகாவல் உள்ள கூடாரங்களில் நடுவில் அரசன் அமர்ந்திருக்கும் கோயில் உண்டு. இங்கு மகளிர்கள், இடையில் வாள் அணிந்து இரவும் பகலும் விளக்குகள் அவிந்து விடாதபடி நெய்யும் திரியும் ஏந்தித் திரிவர். இங்கு யவன வீரர்கள் காவல் காப்பதும் உண்டு. பாசறையைச் சுற்றிப் பலமான காவல் இடப் பெற்றிருக்கும். பொழுதை நாழிகை வட்டிலிற்கண்டு உடனுக்குடன் அறிவிக்கும் அலுவலர்களும் இருப்பர். முந்திய நாள் போரினை நினைத்து துயில் கொளாது இருக்கும் போர் வீரர்களும் தளபதிகளும் இருப்பர், யானைகளும் குதிரைகளும் போரினை நினைந்து நித்திரையின்றி நிற்கும். அரசன் நள்ளிரவில் மெய்க்காவலரோடு புண்பட்ட வீரர் களைப் பார்த்து ஆறுதல் கூறுவான். மருந்துகள் கட்டுவான். படை வீரர்கள் காயமுற்றால் மருந்துகள் அளிக்க மருத்துவர்களும் அவர்களுக்கு உதவி செய்யத் தாதிகளும் இருப்பர். இவைகளை யெல்லாம் விளக்கமாக நெடுநல்வாடை எனும் சங்க நூலிலும் பிற சங்க நூல்களிலும் காணலாம். நாள் பார்த்தல் போரிடுவதற்கு மன்னன் நாளும் கோளும் நிமித்தமும் பார்ப்பான். மறவர்கள் குறிபார்ப்பர் - அரசன் வான நூற் புலவர்களை அழைத்து நல்ல நாள் குறித்து அந்த நாளில் படைகளோடு போருக்குப் போவான். அந்நாள் அவனுக்கு வசதி இல்லாவிடில் அந்நாளில் கோட்டை வாயிலுக்கு வெளியே தன் குடையையும் வாளையும் அனுப்பி வைப்பான். இது குடை நாள் என்று குறிப்பிடப்படும். வாள் நாள் கோள் என்றும் கூறப்படும். சில சமயம் அரணிற்கு அப்பால் முரசையும் அனுப்பும் வழக்கம் உண்டு. பொதுவாகப் போருக்குப் பரணி நட்சத்திரம் ஏற்றதாக எண்ணப்படும். மறவர்கள், போருக்குப் புறப்பட நால்வகை நிமித்தம் பார்ப்பர். அதாவது, (1) வாய்ப்புள் (2) உன்னம் (3) புள் (4) விரிச்சி எனப்படும். (1) வாய்ப்புள் எனப்படுவது தற்செயலாகப் பிறர் வாயினின்று கேட்கப் படும் மங்கல மொழி. இதனை இன்று மக்கள் அசரீர் வாக்கு என்கிறார்கள். (2) உன்னம் என்பது ஒரு குறிப்பிட்ட உன்னமரம் தழைத்துவரின் அரசனுக்கு வெற்றி என்றும் அது பட்டுப் போயின் அரசனுக்குத் தோல்வி என்றும் எண்ணிக் கொள்வர் (3) புள் எனப்படுவது ஆந்தை, கூகை முதலிய பறவைகள் ஒலிக்கும் தரமும், காகம், வல்லூறு முதலிய புள்ளினம் பறக்கும் திக்கும் பற்றிக் குறித்துக் கொள்ளும் குறி (4) விரிச்சி எனப்படுவது போர்வீரர்கள் போருக்குப் புறப்பட்டுப் போய் ஓரிடத்தில் தங்கி இருக்கும் பொழுது நள்ளிரவில் ஓர்த்துக் கேட்கும் வானச் சொல். இஃதன்றி அரசர்களின் மனைவிமார்கள் மகப்பேறு பெறும் காலங்களில் போர் செய்தல் தமிழர் கண்ட மரபன்று. போருக்குப் போவதற்கு இரண்டொரு நாள்களுக்கு முன்பு அரசன் போருக்குப் படை திரட்டுவான். வள்ளுவன் யானை மீதேறி முரசறைந்து தலைநகரிலுள்ள மக்களை போருக்கு வருமாறு அறிவிப்பான். போர் புகுமுன் மன்னன் மறவர்களுக்கு ஊக்கம் ஊட்டும் பொருட்டு ஒரு விருந்தளிப்பான். அது பெருஞ் சோற்று நிலை எனப்படும். அப்பால் அரசன் போர் வீரர்களுக்கு அடையாளப் பூக்களும் போர்ப் பூவும் படைக்கலங்களும் வழங்குவான். சிறந்த படைத்தலைவர்களுக்குப் பட்டங்களும், வீரமிக்க போர் மறவர் களுக்குப் பொன் மலரும் அளிப்பான். போரில் தனக்கு வெற்றி நிச்சயம் என்று கண்டால் பகைவர் நாட்டைக் கைப்பற்றும் முன்பே அதைத் தன் இரவலர்க்கும் படைத்தலைவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பதும் உண்டு. போருக்குப் புறப்படும் நாள் வந்து விட்டால் தலை நகரின் அகமும் முகமும் புதுப் பொலிவுடன் தோன்றும். எங்கும் கோலா கலமாக இருக்கும். வெற்றிச் சங்கு ஒலிக்கும்; போர் முரசுகள் முழங்கும்; போர் முரசன்றி பல்வேறு முரசங்களும் செவிடுபட ஓசை எழுப்பும்; எக்காளம், கொம்பு போன்ற குழல் ஒலிகள் எங்கும் கேட்கும். போர் வீரர்கள் நீரில் மூழ்கி, வட்டுடை உடுத்தி, படைக்கலந் தாங்கி, தலையில் நெய்யிட்டு நீவி மலர் சூடி, அணிவகுத்து கொற்றவைக்குப் பலியிட்டு வழிபட்டு வஞ்சினம் கூறி நெடு மொழி பகர்ந்து ஆரவாரித்து நகருக்கு வலமாகப் புறப்பட்டுச் செல்வர். துறக்க வாழ்வை நாடும் வீர மறவர்கள் பொற்றகட்டை வாயில் இட்டுக் கொண்டு போர் முனைக்குப் போவதும் உண்டு. போர் வீரர்கள் பகைவர்களின் நாடு, நகர், ஊர் முதலியவைகளில் உள்ள நல்ல பொருள்களைச் சூறையாடுவர். மாட மாளிகை, மண்டபம் முதலியவைகளை இடித்துத் தகர்ப்பர். (இது பிற்காலத் தில் எழுந்த வன்முறை. இது தமிழர் பண்பன்று). அக்காலத்துப் போர்க் கருவிகளைப் பற்றிப் படைகளை எய்படை, எறிபடை, குத்துப்படை, வெட்டுப்படை, அடிபடை, தடுபடை என ஆறுவகையாகப் பிரித்துள்ளனர். (1) வில்லினால் அம்பை எய்பவர்கள் கொண்டபடை எய்படை எனப்படும். (2)வேல் கொண்டு பகைவர்கள் மீது எறியும் படை விட்டேறு எரிபடை எனப்படும். (3) ஈட்டி, குந்தம் முதலிய கருவிகள் கொண்டு பகைவர் களைத் தாக்கும் படை குத்துப் படை எனப்படும். (4) கைகளில் வாள் ஏந்தி பகைவர்களைத் துண்டித்தும் வெட்டியும் போர்புரியும் படை வெட்டுப்படை (5) மழு, தண்டு முதலிய கருவிகள் கொண்டு பகைவர்கள் மீதுபாய்ந்து தாக்கும் படைக்கு அடிபடை எனப்படும். (6) கவசம் கேடகம் முதலியவைகளால் பகைவர்களின் தாக்குதல் களைத்தாங்கிக் கொண்டு அஞ்சாது பகைவர்கள் மீது சாடி அவர்களை முறியடிக்கும் படை தடுபடை எனப்படும். அதோடு தமிழர் படையில் எரிமருந்துகள் இருந்ததற்குச் சான்று களும் உண்டு. இப்பொழுது பயன்படுத்தப்படும் வாணம் தமிழ் நாட்டில் உழிஞைப் போரில் உபயோகித்தியிருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. போர் அரும்பி விட்டால் முன்னணியில் தானைப்படை (காலாட்படை) அணிவகுத்துச் செல்லும், அவைகளை அடுத்து குதிரைப்படையும் அதற்குப் பின் தேர்ப்படையும் இறுதியில் யானைப்படையும் அணிவகுத்து அணி அணியாய்ச் சாரை சாரை யாய்ச் செல்லும். ஒவ்வொரு படையிலும் கணியன் இருப்பான். இவனை சேணிக் கணிமகன் என்பர். பொதுவாகக் கணியனை சேனைப் பெருங்கணி என்பர். போர் தனது நாட்டில் நடந்தாலும் பிற நாட்டில் நடந்தாலும் அரசன் புறப்படும் பொழுது அவனோடு அறிவர்கள், புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள் போன்றோர் உடன் செல்வது வழக்கம். சேரன் செங்குட்டுவன் வட நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது அவனுடன் நூற்றிரண்டு நாடக மகளிரும் இருநூற்றெட்டு குயிலுவர்களும் (வாத்தியக்காரர்களும்) நூறு நகை வேழம்பர்களும் சென்றனர் என்று தெரிகிறது. போர்க்களம் போர்க்களத்திற்கு களம், களறி, முது நிலம், பறந்தலை என்றெல் லாம் கூறப்படும். போர் ஆரம்பம் ஆகும் முன்னர் போர்க்களத்திற்கு அண்மையில் உள்ள ஊரிலுள்ள அந்தணர்கள், ஆநிறைகள், பெண்கள், சிறுவர்கள், முதியோர், பிணியாளர் முதலிய வர்கள் அங்கிருந்து அகன்று பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விடுமாறு எச்சரிக்கை செய்யப்படும். போர் தொடங்கினால் அரசர்கள் யானைப் படை கொண்டு பகைவர்களின் அணிகளைப் பிளந்து பகைவர்களைக் கீழே தள்ளி மிதித்துத் துவைப்பர். அரசன் தன் படைகளை அணிவகுத்து சதுரம், நீள்சதுரம், வில், வளையம், வட்டம், அரைவட்டம், சக்கரம், சிறைவிரி பறவை முதலிய பல்வேறு வடிவில் நிறுவி போரில் பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படிச் செய்ய முயல்வர். போர் நடக்கும் பொழுது போர் முரசு ஒலிக்கும். பகைவர் களின் படைத் தலைவன், பகைவர்களின் அரசன் போன்றவர்களின் தலைகளைக் கொய்து கொண்டு வரும் வீரனுக்கு மன்னன் மதிப்பிடற் கரிய பரிசுகள் வழங்குவான். இது தலை மாராயம் என்று கூறப்படும். பல நாள் போராயின் பகலில் போர் நடக்கும். பகலவன் மறைந்ததும் படைகள் போரை நிறுத்திவிட்டுத் தத்தம் பாசறை செல்லும். போர் நியதி தானைப்படை பகைவர்களின் தானைப்படையொடு போரிடும். அவ்வாறே கரி, பரி, தேர் எனும் படைகளும் எதிரிகளின் கரி, பரி, தேர்ப் படைகளோடே போராற்றும் படை மறவர்கள் முன்னர் செல்வர். அவர்களை நடத்தும் படைத்தலைவர் பின் செல்வர். அரசன் இறுதியில் செல்வான். இதுவே நியதியும் போர் மரபும் ஆகும். சில சமயம் இது மாறி இருப்பதும் உண்டு. போரில் தோல்வியுறும் நிலை எழுந்தால் அரசன் படைக் களத்தினின்றும் பாசறையினின்றும் பகைவர்களுக்குத் தூது அனுப்புவதும் அதை மாற்றரசன் ஏற்று உடன் படிக்கைகள் செய்து கொள்வதும் உண்டு. ஓரோர் சமயம் தூதனைச் சிறைப்படுத்துவதும், பெண்வேடம் பூணச் செய்து திருப்பியனுப்பு வதும் உண்டு. இவை வரம்பு கடந்த செயலாகும். அதாவது இலட்சியப் போர் ஒழுக்கத்திற்கு முரண்பட்டவையாகும். போரில் வெற்றி பெற்ற அரசன் தோல்வியுற்ற அரசனையும் அவனது மகனையும் விலங்குமாட்டித் தன் முன் கொண்டுவரச் செய்து அவர்கள் இருவர் தலை மயிர்களையும் சிறைக்கச் செய்து இருவர் தலைகளிலும் வட்ட வடிவமாகச் சாணியை வைத்து நடுவில் எண்ணெய் வார்த்து திரியிட்டு விளக்கேற்றி நடைவிளக்காக அரண்மனையின் வாயிலின் இருபுறமும், நிற்கச் செய்வதுண்டு. இவ்வாறு சோழன் ஒருவன் பாண்டியனையும் அவன் மகனையும் செய்ததாகக் கூறப்படுவதுண்டு. போர் மனிதனை விலங்குத்தன்மை பெறச் செய்கிறது என்பதற்கு இவை சான்றுகள். தமிழர்களின் நீதி நூல் கொள்கைகளுக்கு மாறாகவும் போர் ஒழுக்கத்திற்கு மாறாகவும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் நடந்து கொண்டதின் பலனாக தமிழ் நாடு பலங்குன்றி அடிமையாயிற்று. மொகலாயர் ஆட்சிக்கும் நாயக்கர் ஆட்சிக்கும் மராட்டியர் ஆட்சிக்கும் ஆங்கிலேயர் பிரஞ்சுக்காரர் ஆட்சிக்கும் ஆட்பட்டு தாழ்ச்சியுற்றது. வெற்றி பெற்ற வேந்தன் தோல்வியுற்ற அரசன் அரண் மனையில் வீராபிசேகம் செய்து கொள்வதுண்டு. தோல்வியுற்ற நாட்டில் வெற்றித் தூண் நாட்டுவான். மலை இருந்தால் அதன் மீது குடையை நாட்டுவான். கொடியைப் பொறிப்பான். தன் ஆணைப் படி நடக்கும் வரை அந்த நாட்டில் தங்கி இருப்பதுமுண்டு. போர் முடிந்ததும் போர் வீரர்களுக்குப் பரிசளிப்பான். காயமுற்றவர்களுக்கு உதவி நல்குவான். இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உதவுவான். வீரர்களுக்கு விருந்தளிப்பான். புலவர் களுக்கும் பாணர்களுக்கும், விரலியர்களுக்கும் பரிசளிப்பான். போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கும் படைத்தலைவர்களுக்கும் அவர்களின் ஊர், பெயர், போர், சீர் இன்னோரன்ன காரியங்களைப் பொறித்து கல் நடுவதுண்டு. இது நடுகல் எனப்படும். நட்ட கல்லிற்கு நீர்வார்த்து, நெய்வார்த்து, பூச்சூடி கோயில் எடுத்து விழாக் கொண்டாடப்படுவதுண்டு. மக்களுக்காக, நாட்டிற்காகப் போரில் உயிர் துறந்த வீரனுக்கு நடுகல் நாட்டி அவனைத் தெய்வமாக எண்ணி மக்கள் வழிபட்டு வந்தனர். போரில் உயிர் நீத்த வீரனுக்கு நடுகல் நாட்டி கோயில் எடுப்பித்து அவ்வீரனை வழிபட்டு வருவது தமிழ் மரபு. வள்ளுவர், தம் பொது மறையில், என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ முன்நின்று கல் நின்றவர் (குறள். 771) என்றார். இதன் பொருள் பகைவரே! என்னுடைய தலைவன் முன் எதிர்த்து நிற்காதீர். என்னுடைய தலைவன் முன் எதிர்த்து நின்று மடிந்து கல் வடிவாய் நின்றவர் பலர் என்பதாகும். இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தம் வீரரை நினைப்பூட்டுமாறு கல் நாட்டிப் பெயர் பொறித்து வைத்தது உலகம் போற்றும் செயலாகும். இன்று நமது நாட்டு அரசாங்கப் புதைப் பொருள் ஆராய்ச்சித் துறையின் இத்தகைய நடுகற்கள் பலவற்றைக் கண்டெடுத்துள்ள னர். அவைகள் நமது தொல் பொருள் காட்சி சாலையில் இடம் பெற்றுள்ளன. நடுகல் நாட்டும் வழக்கம் தொல்காப்பியர் காலத் திலே இருந்து வரும் ஒரு தமிழ் மரபாகும். காட்சி கல் கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தரு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிரு மூன்று வகையிற் கல்லொடு (தொல். பொருள் 60 : 19-21) போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. நினைவுக் கற்கள் அருகில் வீரர்களின் ஆயுதங்களை வைத்து தெய்வமாகப் போற்றப் பட்டு வந்ததை சங்க நூற்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.1 போர்க்கொடுமை போர் கொடியதே; என்றாலும் பிற பண்டை நாட்டு மக்களைப் போலவே தமிழர்களின் முன்னோர்கள் அதற்குச் சில கட்டுப் பாடு களை விதித்தனர். அக்கட்டுப்பாட்டோடு நடத்தும் போர் அறப்போர் எனப்பட்டது. பண்டு தொட்டு பகை அரசனைப் பிடித்து வருவதும் அவனது மனைவி மக்களைச் சிறைபிடிப்பதும் பகை அரசர்களது அரண்மனைகளை அழித்து அதைக் கழுதை பூட்டிய ஏறினைக் கொண்டு உழுது எள்ளும் கொள்ளும் எருக்கும் கருக்கும் விதைப்பதும் பகைவர்கள் நாட்டில் உள்ள மக்களின் இல்லங்களை யெல்லாம் இடித்துத் தகர்த்து அவர்களின் பொருள்களை யெல்லாம் சூறையாடுவதும் அவர்களைச் சித்திரவதை செய்வதும் அவர்களின் பயிர் பச்சைகளை யெல்லாம் தீயிட்டுப் பொசுக்குவதும் அறப்போர் ஆகாது. ஆயினும் அவை நடை பெற்று வந்தன என்பதற்கையமில்லை. தோல்வியுற்ற மன்னனை முடிதரிக்கச் செய்து தன் முன் கொண்டு வந்து மண்டியிட்டு நிற்கச் செய்து அவனது மணி முடியைக் கால் கொண்டு இடறுவதும், அவனது மனைவி மக்களின் மார்புகளை அறுப்பதும், பகைவர்களின் கண்களைப் பிடுங்குவதும் பல்லைப் பிடுங்கி கோட்டை வாயிலிற் பதித்து வைப்பதும் தலை களை வெட்டி மக்கள் அனைவரும் காணுமாறு தொங்க விடுவதும் தோல்வியுற்ற அரசனையும் அவனது புதல்வனாகிய பட்டத் திளவரசனையும் மொட்டையடித்துத் தலையின் மீது வட்டமாகச் சாணியை வைத்து நெய்வார்த்து திரியிட்டு நெருப் பேற்றி நடை விளக்காக வெற்றி பெற்ற அரசன் அரண்மனையின் வாயிலில் இருபுறமும் நிற்கச் செய்வதும் கொடுஞ் செயல்களாகும். இவை அறப்போர் ஆகா. நாகரிக மக்கள் செய்யும் போராகவும் கருதப்பட மாட்டாது. தமிழ் நாட்டில் வாழ்ந்த மூன்று அரசர்களில் சோழன் வெற்றி பெறும் பொழுது பாண்டிய நாட்டைத் தீயிட்டுப் பொசுக்கி, அரண்மனை வீடுகள் அனைத்தையும் இடித்துத் தகர்ப்பான். சில ஆண்டுகள் கழித்து தோல்வியுற்ற பாண்டியன் பலமுற்றுப் பதில் சோழ நாட்டை அழிப்பான். இரண்டு ஆண்டு சென்று சோழன் பலம் பெற்று பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் அழிப்பது போன்ற கொடுஞ்செயலால் தமிழகம் பலமிழந்தது பாழ்பட்டது. மொகலாயர்களும், நாயக்கர்களும் மராட்டியர்களும், ஆங்கிலேயர் களும் தமிழகத்தை ஆள நேர்ந்தது. தமிழ் நாட்டு மூவேந்தர்களும் போரிடாது ஒன்று பட்டு இருந்தால் ஆங்கில ஏகாதிபத்தியத்தை விட ஒரு பெரும் தமிழர் ஏகாதிபத்தி யத்தை வரலாறு கண்டிருக்கும். போர்ப்பயிற்சி தமிழர்கள் இராணுவக் கல்லூரிகளும் ஆயுதக் கிடங்களும் பண்டு தொட்டு அமைத்து வந்தனர். படைப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் இருந்தனர். வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் இளவரசர் களுக்கும் அரசர்களுக்கும் நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொருவரும் மற்போரும் படைக்கலப் போரும் பயின்று வந்தனர். மற்போர் பயில்வதற்கு ஆங்காங்கே பல பேரவைகளும் முரண் களரிகள் எனும் பயிற்சிக் கூடங்களும் இருந்தன. (கேரளம் - களரி) முருக்கமரத்தின் பருத்த அடிமரத்தை நிலத்தில் நட்டு அதன் மேல் படைக்கலன்களை எறிந்து பொருநர் எறிபடைப் போர் பயின்றனர். அரண்மனையை அடுத்த செண்டு வெளி, வையாளி வீதி என்று அழைக்கப்படும். அந்த வெளி நிலத்தில் வாசி வாரியர் என்போர் குதிரைகளுக்கு இரு சாரிகளும் ஐங்கதிகளும் பதினெண் மண்டிலங்களும் பயிற்றி வந்தனர். அவர்களுள் தலைவர் அரச வாரியார் என்று அழைக்கப்படுவார். காழோர் வாதுவர் என்போர் யானைகளைப் போர்த்துறையில் பயிற்றுவோர் ஆவர். தமிழர்கள் யானைப் போர்க்கு நன்கு பயில வேண்டும். அதுவும் பல ஆண்டு நல்ல ஆசிரியர்களிடம் பயில வேண்டும். யானைப் போரை நடத்த கரிசாத்திரமும் குதிரைப் போரில் ஈடுபட அசுவ சாத்திரமும் பயின்றனர். அதே போல கப்பற் போருக்கும் நல்ல பயிற்சி பெற வேண்டிய துண்டு. கப்பல் போருக்கு நீரியல், வானியல், வளி இயல், இயந்திர நுட்பம் முதலியவைகளையெல்லாம் பயில வேண்டியதிருந்தது. போர்க்களை கப்பல் கட்டுவதற்கு ஒரு தனிப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடற்போரில் பெரிதும் நெய்தல் நிலப் பரதவர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் ஆயுதங்கள் செய்வதற்குக் கொல்லர்கள் இருந்தனர். ஆயுதங்கள் நல்ல பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் வைக்க ஆயுதச் சாலைகள் இருந்தன. அரசனது படைக்கலங்களை வைப்பதற்கு தனி இடம் இருந்தது. அது படைக்கலக் கொட்டில் எனப்படும். அங்கு போர்க்கருவிகளுக்கு நெய்பூசி பீலியணிந்து மாலை சூட்டுவது வழக்கம். போர்க்கருவிகள் ஆதிகாலத்தில் தமிழகத்தில் போர்க்கருவிகள் எதுவும் தோன்ற வில்லை. ஆதியில் தமிழகத்தில் எழுந்த கற்காலமக்கள் தங்களின் இன்றியமையாத தேவைகளுக்காகக் கல்லைப் பயன் படுத்தி வந்தனர். அந்தக் கற்கால மக்கள் நாகரிகம் இன்ன தென்பதை அறியார்கள். அவர்களின் தேவையோ மிகக் குறைவு. அவர்களுக்கு இன்றியமையாத பொருள் உணவு. எனவே உணவைப் பெருவதற் குரிய கற்கருவிகளே அவர்களுக்குத் தேவையாய் இருந்தது. எனவே கல், கத்தி, கல்வாள், கல் உளி, கல் கோடாரி, சிக்கி முக்கிக்கல் (நெருப்பையுண்டாக்கும் கல்) ஆகியவைகளே அவர்களுக்கு அவசிய மான பொருளாக இருந்தன. இவைகளைக் கொண்டே அவர்கள் மரங்களை வெட்டி தடி, கம்பு, கட்டுமரம், ஓடம், மரவாடை, கல்விளக்கு முதலியவைகளைச் செய்து கொண்டனர். அவர்கள் கம்பால் வில்லைச் செய்து அதன் நாணில் கல்லை வைத்து பறவை களையும், சிறிய விலங்குகளையும் காய்கனிகளையும் வீழ்த்தினர். இசைக் கருவிகளை உருவாக்கினர். அப்பால் உலோக காலத்திலே மக்கள் உயர்ந்தனர் - மாக்களி னின்று உயர்ந்து மக்கள் நிலையை அடைந்தனர். உலோக காலம் இடத்திற்கு இடம் வேறுபட்டதாய் எழுந்தது. தமிழகத்தில் ஆதி காலத்திலே இரும்புக் காலம் அரும்பியதாக எண்ணப்படுகிறது. சிந்து வெளியில் ஆரம்ப காலத்திலே வெண்கலக் காலம் எழுந்திருக்க லாம் என்று எண்ணப்படுகிறது. இந்த உலோக காலத்தில் தமிழர்கள் கத்தி, அரிவாள், அரிவாள் மணை, கோடரி, வேல், உலோகத்தலைப் புள்ளி அம்புகள், வில்கள், தோட்டி, கேடயங்கள் போன்ற கருவி களை உருவாக்கினர். இந்த உலோக காலத்திலே மக்கள் நனி சிறந்த நாகரிகங்களைக் கண்டனர். வாளில் பல வகைகளையும் வேலிற் பலவகைகளையும், கத்தியில் பல வகைகளையும் தடிகளில் பலவகை களையும் கேடயங்களில் பலவகைகளையும் உருவாக்கினர். இக் காலத்திலே தனியுடைமை எழுந்தது. உழுதல் தொழில் வளர்ந்தது. கைத்தொழில் மலிந்தது. இதன் பயனாய் போர்கள் தோன்றின. மக்கள் ஒருவரை யொருவர் வென்று கொன்று உடைமைகளைப் பெருக்க நினைந்தனர். எனவே அவர்கள் வகைவகையான போர்க் கருவிகளைச் செய்து குவிக்க முற்பட்டனர். கொடிகள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டதாக, தொன்மையான காலந்தொட்டு தமிழ் நாட்டில் கொடிகள் இருந்து வருகின்றன. போர் வீரர்களுக்கு போரில் உள்ளுயிர்ப்பும், உணர்ச்சிக் கனிவும் ஊட்டுவது கொடியே யாகும். கொடி, ஒற்றுமை, நாட்டுப்பற்று, மானம், மரியாதை ஆகிய வைகளின் சின்னமாக மதிக்கப்படும். கொடியின் பண்புத் திறங் களின் செயலாட்சி, போர் வீரர்கள் மீது ஒரு மூலாதாரமான ஆற்றல் கூறாக அமைந்திருக்கிறது. பகைவர்களால் கொடி கைப் பற்றிக் கொள்ளப்படுவது நாட்டின் அல்லது நாட்டு மக்களின் சாவு மணியாகக் கருதப்படும். பொதுவாகக் கொடி, துவஜம், பதாகை, கேதனா, வைஜயந்தி என்றெல்லாம் அழைக்கப்படும். சுமார் 2500-ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மன்னர்கள் கொடியைப் பயன் படுத்தி வந்துள்ளனர். தொல்காப்பியம் என்னும் பழம் பெரும் நூலில் அரசர்க்குரிய இன்றியமையாத பொருள்கள் படை, கொடி, குடி, முரசு, குதிரை, யானை, தேர், தார், முடி ஆகியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. படையும் கொடியும் குடியும் முரசும் நடைநவில் புரவியும் களிருந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய (தொல். பொருள் 1563) என்று கூறப்படுவது சிந்திக்கத்தக்கது. தமிழ் நாட்டு வரலாறு பாண்டியர்களுக்கு மீன் கொடியும் சோழர்க்குப் புலிக் கொடியும் சேரர்க்கு வில் கொடியும் பல்லவர்க்குச் சிங்கம், எருது முதலிய கொடிகளும் சாளுக்கியர்களுக்குப் பன்றிக் கொடியும் இருந்தன என்பதை மெய்ப்படுத்துகிறது. இஃதன்றி இராவணன் இசைக் கருவியாகிய யாழைத் தன் கொடியில் பொறித்திருத்தான் என்றும் அறிகின்றோம். பண்டையத் தமிழகத்தில் பலவிதக் கொடிகள் இருந்ததற்குச் சிலப்பதிகாரத்திலும், கலிங்கத்துப்பரணியிலும் பல சங்க நூற்களிலும் சான்றுகள் உண்டு. கொடி மக்களுக்கு உணர்ச்சியை யூட்டி புதிய ஊக்கம் எழப், புதிய நல்ல உயிர்க் காற்றை நுகரச் செய்தது. தமிழ் மன்னர்கள் ஈழத்தை வென்று திருக்கோண மலை மீது தங்கள் கொடிகளைப் பொறிதற்கும், வட இந்தியாவை வென்று இமயமலை மீது தங்கள் குடையை நாட்டியதற்கும் சாவகம் புட்பகம் ஆகிய நாடுகளை வென்று அங்கெல்லாம் தங்கள் வெற்றிக் கொடியைப் பறக்க செய்ததற்கும் பல சான்றுகள் உண்டு. தமிழ் நாட்டு அரசர்கள் தங்கள் கொடியை தங்கள் உயிராக மதித்தனர். குமரி முதல் இமயம் வரை வெற்றி பெற்ற தமிழ் நாட்டு மூவேந்தர்களும் இமயத்தின் மீது தங்கள் கொடியை பொறித்ததும் குடையை நாட்டியது உண்டு. பாண்டியன் ஒருவன் ஈழத்தை வென்று திருக்கோணமலையில் தனது இரட்டை மீன் பொறித்த அரச கொடியைப் பொறித்தான். அது இன்றும் அழியாது காட்சி அளிக்கிறது. இலங்கை வரலாற்றில் அழியாச் சின்னமாக இடம் பெற்று இலங்குகிறது. கலிங்கத்துப் பரணியில் சோழர்களது வெற்றியைக் குறிப்பிடும் பொழுது பலவிதக் கொடிகள் குறிப்பிடப் படுகின்றன. பன்றி, மேழி, கலை, சிங்கம், யாழ், வில், நண்டு முதலியவைகள் கீழே இறக்கப்பட்டு சோழர்களின் புலிக் கொடி உயர்த்தப் பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.1 போர் முரசு அரச சின்னங்களாகிய குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை, கொடி, முத்திரம், கடிமரம், குதிரை, யானை, தேர், மனை, முரசு ஆகிய பதினைந்தில் முரசு போர்க்கருவிகளில் முக்கிய மானது. அரச கட்டளையொன்றை அறிவித்தற்கு அடிக்கப்படும் பெரும்பறை முரசு எனப்படும். முரசில் மூன்று வகை உண்டு. (1) கொடை முரசு (2) முறை (நியாய) முரசு (3) போர் முரசு எனப்படும். இவற்றுள் போர் முரசு சிறந்தது. இதற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது முரசு கட்டில் என்று கூறப்படும். போர் முரசு போருக்கு மக்களைத் திரட்ட நகரில் பயன் படுத்தப்படும். போரில் பொருநரை ஊக்குவிப்பதற்குப் போர்க் களத்தில் அடிக்கப்படும். வெற்றி பெற்ற போதும் இது இடியோசை யென ஒலிக்கப்படும். இந்த வீர முரசிற்குப் புலியை வென்ற காளையின் சீவாத்தோலே போர்த்தப் பெறும். புனைமருப் பழுத்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த துனை குரல் முரசம் என்று சிந்தாமணி கூறுவது காண்க. போர் முரசு தெய்வத் தன்மை யுள்ளதாகவும் வெற்றியைத் தருவதாகவும் கருதப்பட்டதால் அதற்கு மாலையும் பீலியும் அணியப்படும். பலியிடப்படும் அதை நீராட்டி வழிபடுவதும் உண்டு. அரச கோட்டங்களில் போர் முரசு அரச கட்டிலில் வைக்கப் பட்டிருக்கும். போர் முரசினை எப்பொழுதும் வீரர்கள் காவல் காத்து நிற்பர். போர் முரசை பிறர் தொட்டால் அவர் உயிர் உடனே பறிக்கப்படும். போர் முரசு வைக்க எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டில் இருந்தது. போர் ஆரம்பிக்கு முன் மயில் பீலியும் நீல நிறத்தையுடைய மாலையும் பொற்றளியையுடைய மாலையும் சூட்டப் பெற்று குருதிப்பலி கொள்ளும் விருப்பத்தையுடைய வீரமுரசு நீராடி வரும். மன்னரும் மாவீரரும் முரசை வழிபட்டு போர்க்களம் கொண்டு செல்வர். போர் முரசைப் பகைவர்கள் கைப்பற்ற வீரர்கள் எளிதில் இடம் அளியார். போர் முரசைப் பகைவர்கள் கைப்பற்றி விட்டால் படைகள் அழிந்தது என்று பொருள் கொள்ளப்படும். ஒரு வீரன் உயிருள்ளவரை போர் முரசு காப்பாற்றப்படும். போர் ஒழுக்கம் பண்டையத் தமிழர்கள் போரிலும் சில பண்புவாய்ந்தவர்க ளாய்த் திகழ்ந்தனர். போரில் வீரர்கள் விலங்குகள் போல் நடவாது ஒழுக்கமுடையோர்களாய் விளங்கும்படி அவர்களுக்குச் சில போர் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டிருந்தன. நடைமுறையில் அவ்வாறே இருந்தன என்று கொள்ளுதல் வரலாற்றுப் பிழையாகும். போர்க் களத்தில் தமிழ் வீரர்கள் தம் முதுகில் பகைவர்களின் தாக்குதலால் புண்படச் சகியார். அது ஒரு வீரன் போரில் புறமுதுகிட் டோடி யதைக் குறிக்கும் என்றும் அது வீரனுடைய இலக்கணத் திற்கும் ஒழுக்கத்திற்கும் இழிவு தருவதாகவும் எண்ணப்பட்டது. அகமாத் தாக விலாப்புறத்தில் பகைவர்களின் பாணங்கள் வந்து தாக்கினும் அது முதுகில் தாக்கியதாகவே கருதப்படும். தமிழ் வீரன் முதுகில் அடிபட்டாலோ அல்லது முதுகில் அடிபட்டிருப்பதாகப் பிறர் கருதினாலோ அதற்குப் பின் ஒரு நொடிப் பொழுதும் உயர் வாழ ஒருப்படான். தமிழ் மறவர்கள் தம் முகத்தினும் மார்பினும் கொள்ளும் புண்களை விழுப்புண் என்று சிறப்பித்து கூறுவர். அவ்வாறு விழுப்புண் படாத நாளைப் பிறவாத நாளாகக் கொண்டு தமிழ் மறவர்கள் பேதுறுவர். பண்டைய நாகரிக மக்கள் அனை வருமே இவ்வாறு கருதினர் என்பதற்குக் கிரேக்க ரோம வீர காவியங்கள் சான்றாகும். வேந்தன் தம் வீரர்களை போருக்குத் தூண்டாது காலம் எழ வில்லை என்று வாளா இருப்பின் வீரர்கள் போர்த் தினவு கொண்டு தம்மிற் பொறுதாயினும் இறக்கலாம் என்று ஆர்ப்பரித்து தம் தோள்களைத் தட்டிக் கொக்கரித்து நிற்பர். தோயன்மாறன் என்னும் சிற்றரசன் ஈர்ந்தூரை ஆண்டு வந்தான். அவன் பல போர்களில் ஈடுபட்டு அவன் உடம்பெல்லாம் பல தழும்புகள் நிறைந்திருந்தன. அவ்வடுக்கள் அவன் உடம்பிற்கு அழகு செய்வனவாகக் கருதப்பட்டன. அவ்வழகு குற்றமற்ற ஆண்மை நிறைந்த வீரனுக்குரிய அழகு. முற்காலத் தமிழ் மக்கள் விழுப்புண் படா உடம்பை அழகற்ற உடம்பாகக் கருதினர். அதை குற்றமுடைய உடலாகக் கூடக் கருதினர்.1 இக்கருத்துக்கள் போரில் வீரவுணர்வு தோன்ற மிகைப் படுத்திப் பரப்பப்பட்டன. போர்க்களத்தில் முன் வைத்த காலைப் பின் வையாத மாவீரன் பகைவர்களின் அம்புகளுக்கும் வேல்களுக்கும் அஞ்சாது அவை களை மார்பில் ஏற்று விழுப்புண்படாது மறக்குடி வீரன் மரணம் அடைந்தால் அவர் உயிர் துறக்கம் அடைவதில்லை என்ற நம்பிக்கையைப் பழங்காலத் தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். இது போலவே கிரேக்கர்கள் போரில் உயிர் நீத்தவர்கள் மட்டும் எலிஸியம் என்ற உலகில் பெருவாழ்வு வாழ்வார்கள் என்று நம்பினர். விழுப்புண் படாது வேந்தன் இறந்து பட்டால் அவன் மேனி தழும்புபடாத குற்றம் உடையது என்ற இழுக்கை அடையாது இருக்க அவன் உடலைத் தருப்பைப் புல்லிற்கிடத்தி அந்தணர் கூடி நின்று போரில் உயிர் துறந்தார் சேரவேண்டிய வீர துறக்கத்தில் இவனும் புகுக என்று வாளால் அவன் மேனியில் வடுச் செய்து அப்பால் அவ்வுடலை அடக்கம் செய்வார்கள். ஒடல் மரீஇய பீடில் மன்னர் நோய்ப்பால் மலிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்தவர் தீது மருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பின் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாழ் போழ்ந் தடங்கலு முய்ந்தனர் மாதே - புறம் 93 இந்தப் பாட்டினின்று போர்க்களத்தில் பொருது மடியாது அரண்மனையில் இருந்து பிணிவாய்ப்பட்டு இறப்பது கூட மன்னர்க்கு இழிவு என்று முற்காலத்தில் தமிழர்கள் கருதினர் என்று தெரிகிறது. போருக்குத் தூண்டுவதற்காக இந்த நம்பிக்கைகள் ஊக்குவிக்கப் பட்டன. போர் ஆரம்பிக்கு முன் பகைவர் நாட்டிலுள்ள அந்தணர்கள், அறவோர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், ஈமக் கடன் கழிக்க மக்களைப் பெறாதோர் முதலியவர்களை அந்நாட்டை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் படி முன்னெச்சரிக்கை செய்தனர். போருக்கு அஞ்சி வெளிவராது பதுங்கும் மன்னருடன் போர் இடுவது வீரத்திற்கு இழுக்கென்று தமிழர்கள் கருதினர். இவை அற நூற்களில் கூறப்பெற்ற இலட்சியப் போர் முறையாகும். 4. இலக்கியச் சான்றுகள் இலக்கியம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் இன்று கிடைத்திருக்கும் பேரும் பெருமையும் சீரும் சிறப்பும், அதன் இலக்கியங்களைப் பொருத்ததே யாகும். நாட்டு வரலாற்றிற்கும், கலைவரலாற்றிற்கும் மொழி வரலாற்றிற்கும் எழுத்து வரலாற்றிற்கும் அடிப்படையாய் இருப்பது நமது இலக்கியங்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. நமது இலக்கியங்கள் பெரும்பாலும், இலக்கணங்களாகவும் அற நூற்களாகவும் காப்பியங்களாகவும் பக்தி நூற்களாகவும் அமைந்துள்ளன. பெரும்பாலான பழைய இலக்கியங்கள் அக வாழ்க்கையைச் சிறப்பித்துக் கூறும் நூற்களாகக் காணப்படுகின்றன. போர், போர்முறைகள், போர்க்கருவிகள் போன்றவைகளைப் பற்றிய விவரங்கள் பெரிதும் காணப்படவில்லை என்று அயல் நாட்ட றிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். அது தவறு என்றோ பொய் என்றோ மிகைபடக் கூறிய கூற்றென்றோ நாம் எளிதில் புறக்கணித்து விடுவதற் கில்லை. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் ஆங்காங்குக் காணப் படும் போர்கள், வீரச் செயல்கள், அரசர்களின் தீரச் செயல்கள், போர் முறைகள், அறப்போர்கள் முதலியவைகளைச் சில அறிஞர்கள் எடுத்துக்காட்டுகின்றார்கள். ஆனால் அவைகளை எந்த அறிஞர்களும் போர் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வட மொழியில் உள்ள மகாபாரதம் இராமாயணம் போன்ற இதி காசங் களோ, போர் இலக்கியங்களோ, போர் வரலாறுகளோ போர்க் காப்பியங்களோ தமிழில் இல்லை என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். இப்பெருங்குறையை நீக்குவதற்கென்றே கம்பனும் வில்லியும் வட மொழியினின்று இராம காதையையும் வில்லி பாரதத்தையும் தமிழ் ஆக்கம் செய்தனர் என்று சில தமிழறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழில் உள்ள இலக்கியங்களில் போர் இலக்கியமாக சில அறிஞர்கள் கூறும் ஒரேயொரு நூல் கலிங்கத்துப் பரணியாகும்.1 அது சங்ககால இலக்கியம் அல்ல. மிகப் பிற்கால நூல். அது கி.பி.1070 - இல் முடிபுனைந்த முதற்குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி ஈட்டியதைப் புகழ்ந்து அவனது அவைப் புலவராகிய சயங் கொண்டான் பாடிய ஒரு நூலாகும். இதனைப் பிற்காலத்தில் தோன்றிய போர் இலக்கியமாகக் கருதலாம். இந்த நூலில் கூட தமிழர்களின் போர் முறைகளையும் போர்க்கருவிக ளையும் பற்றி விளக்கமான செய்திகளைக் காண முடியவில்லை. நாம் இன்று நமது நாட்டுப் போர்க் கருவிகளைப் பற்றி ஆராய நமது தொல்காப்பியம் திருக்குறள் நிகண்டுகள் கலிங்கத்துப் பரணி அகநானூறு புறநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி பத்துப் பாட்டு முதலிய நூற்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த நூற்கள் போர்க்காவியங்களாக இல்லா விட்டாலும் பழம் பெரும் இச்சங்ககால நூற்களிலும் அதற்குப் பின் எழுந்த நூற்களிலும் சில படைக்கலன்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. சில நூற்களில் சங்க கால மன்னர்கள் பயன்படுத்திய ஒரு சில போர்க்கருவிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் மகளிர்களின் கண்களும் நுதல்களும் புருவங்களும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த போர்க்கருவிகளுக்கு ஒப்பாக இருந்தன என்று உபமானமாக எடுத்தாளப்படுகின்றன. இவைகளைக் கொண்டு அந்தக் காப்பியம் அல்லது தோத்திரப் பாடல்கள் எழுதப்பட்ட காலத்தில் அதில் குறிப்பிட்ட ஆயுதங்கள் இருந்தனவாகக் கருதலாம். ஆனால் மகாபாரதக் கதைகளை வைத்து வட இந்தியாவில் அக்காலத்தில் அதில் குறிப்பிடும் ஆயுதங்கள் இருந்ததாகக் கருத முடியும். அது தமிழில் ஆக்கப்பட்டதைக் கொண்டு தமிழகத்தில் இருந்த ஆயுதமாக எண்ண எள்ளளவும் இடமில்லை. ஆனால் வான்மீகி எழுதிய வடமொழி இராமாயணத்தை எடுத்துக் கொண்டாலும் கம்பன் எழுதிய வான்மீகியைத் தழுவி எழுதிய இராம காதை எடுத்துக் கொண்டாலும் அதில் காணப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் தமிழர்கள் ஆயுதங்கள் என்று தைரியமாகக் கூறமுடியும். அதே போல் பெருங்கதை தமிழில் ஆக்கப்பட்டிருந்தாலும், அதில் கூறப்படும் ஆயுதங்கள் தமிழ்நாட்டு ஆயுதங்கள் என்று எண்ணமுடியும். தொல்காப்பியம் தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எழுந்த பழம் பெரும் இலக்கண நூல் என்று கூறப்படு கிறது. இது இலக்கண நூல் என்றாலும் பொருள் அதிகாரத்தில் அக்காலத்தில் தமிழ் மக்களிடையே நிலவிய தெய்வ வழிபாடுகள், மக்கள் வாழ்ந்த நிலங்கள், அவர்களின் வாழ்க்கை முறை, நாடு, அரசு, வணிகம், நாட்டுக் காவல், ஒழுக்கம், கடல் வணிகம், தலைவன் வணிகத்தின் பொருட்டு தலைவியைவிட்டுப் பிரிந்து கடல் கடந்து கப்பலேறி பிற நாடு சென்று மீண்டும் தலைவியிடம் வந்து சேர்வது போன்ற செய்திகளையெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளது. ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலே தமிழகத்தில் சமூக நிலை பெரும் மாற்றத்திற்குள்ளாகி விட்டது. தமிழகத்தில் தாய் ஆட்சி மாறி தந்தை ஆட்சி எழுந்து அப்பால் அதுவும் மாறி மன்னன் ஆட்சி எழுந்து விட்டது. மன்னர்கள் பலர் தோன்றி ஒருவருக்கொருவர் போரிட்டும் வந்தனர். முடி மன்னர்களும் குறு நில மன்னர்களும் நிலக்கிழார்களும் தோன்றிவிட்டனர். மன்னர்கள் ஒருவரோடொருவர் பல்வேறு காரியங்களுக்காகப் போரிட்டு வந்தனர். அக்காலத்தே தமிழ் அரசர்கள் தானைப் படை (காலாட் படை) யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை எனும் நால் வகைப் படைகளையும் அமைத்து அதன் மூலம் போரிட்டு வந்தனர் என்று தெரிகிறது.1 தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் தமிழர்கள் கிறித்தவ ஊழி பிறப்பதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கரிப்படை, பரிப் படை, தேர்ப்படை, காலாட்படை போன்ற நால்வகைப் படைகளை யும் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. தேரிலே ஏறி வந்த பொருநர் முதலியோர் வெற்றி ஈட்டிய வேல் வேந்தர்களைப் புகழ்ந்து கூறிய செய்திகள் காணக் கிடக்கின்றன. தேரேறிப் போர் செய்ய வந்த வேந்தர்களை வெற்றி ஈட்டிய வேந்தன், தன் வெற்றிக் களிப்பால் தேர்த்தட்டிலே நின்று களிகொண்டு குரவைக் கூத்து ஆடியதும் அதைக்கண்டு அவனது போர் வீரர்கள் களிநடனம் ஆடுவதும் காணக்கிடக்கின்றது. தேர்ப்படைகளின் சிறப்பு பெரிதும் போற்றப் படுகிறது. ஆனால் தொல்காப்பியர் எழுதிய தொன்மையான இலக்கியமாகிய தொல்காப்பியம் முழுவதும் துருவித் துருவிப் பார்த்தும் அக்கால மக்கள் கடற்போர் ஆற்றிய செய்தி துளி கூடக் காண முடியவில்லை. கல்வெட்டுச் சான்றுகளும் கிட்டவில்லை. தொல்காப்பியர் காலத்தில் போர் நடந்தது என்று தெரிகிறது. போர் முறைகள் வகுக்கப்பட்டிருந்தது. நான்கு ஏன்? ஐந்து விதமான படைகளும், படைத்தலைவர்களும் இருந்தனர் என்றும் நன்கு தெரிகிறது. தமிழர் கண்ட போர் முறைகள் தொல்காப்பியப் புறத்திணை இயலிலே நன்கு தெரிகிறது. போரில் வில், அம்பு, வேல், வாள், கிடுகு, கேடயம் போன்ற தாதுப் பொருள்களினாலான போர்க்கருவிகள் பல இருந்தன என்றும் தெரிகிறது.2 திருக்குறள் திருக்குறள் நீதி நூல் என்றாலும் அதில் உள்ள முப்பாலில் ஒன்றான பொருட்பாலில் படை குடி, கூழ், அமைச்சு, அரண் என்ற ஆறு அங்கங்கள் விளக்கப்படுகின்றது. செங்கோன்மை, கொடுங் கோன்மை, ஒற்றாடல், தூது, நாடு, படைமாட்சி, படைச் செருக்கு முதலியவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதோடு பல இடங்களில் அக்காலத்தில் இருந்த ஆயுதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. போர் முறைகளும் போர்த் தந்திரங்களும் எடுத்துக் காட்டப் படுகின்றன. திருவள்ளுவர் காலம் கிறித்தவ ஊழியை ஒட்டி எழுந்த காலம். அதாவது இற்றைக்கு பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள காலம். குறளில் கூறப்படும் ஆயுதங்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பயன்படுத்திவந்த ஆயுதம் என்று தைரியமாகக் கூற முடியும். வள்ளுவர் முற்காலத்தில் தமிழகத்தில் இருந்த அரண்களைப் பற்றிக் கூறும் பொழுது உயரம் அகலம் உறுதி பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திருந்ததை தம் குறளில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் - திருக்குறள் 743 இஃதன்றி அக்காலத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் வில்1, கணை2, வேல்3, வாள்4 முதலிய கருவிகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பதை நன்கறிகின்றோம். இந்த ஆயுதங்களைப் பலவிடங்களில் உவமானமாக எடுத்துக்காட்டுகிறார். பல விடங்களில் போர் நிலையிலும் எடுத்துக்காட்டுகிறார். மற்றிரு இடங்களில் கைவேல்5 அங்குசம்6 ஆகிய கருவிகள் கூறப்படுகின்றன. மேலும் வள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் தானை, யானை, குதிரை, தேர் ஆகிய நால்வகைப் படைகள் மட்டுமின்றி பெரிய நாவாய்களும்1 இருந்தன என்று தெரிகிறது. வள்ளுவர் காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறியிருந்தது. நால்வகைப் படையுடன் கடற்படையும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. தோணி, புனை, நாவாய், வங்கம், கப்பல், போர்க்கப்பல்கள் போன்றன உருவாக்கப்பட்டிருந்தன. நாட்டில் பல்வேறு அரண்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியர் காலத்திலே அரண்களும் முற்றுகையிட்டுப் போர்புரியும் முறையும் தோன்றியுள்ளன. எனவே வள்ளுவர் காலத்தில் வில், வேல், வாள், கிடுகு, கேடயம் மட்டுமின்றி பல்வேறு விதமான வில்களும் அம்பு களும் வாள் வகைகளும் வேல் வகைகளும் ஈட்டி வகைகளும் மழுவகை களும் தோன்றியிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமுண்டு. வள்ளுவர் காலத்திற்கு முன்பே கதை, தண்டம், சக்கரம், (திகரி) வேக பாசம் திரிசூலம், மழு, பரசு, குத்துவாள், கைகள் எறிவேல், பூமராங், கூன்வாள் கொடுவாள், அரிவாள், கோடரி, (நவிர்) ஈர்வாள் உடைவாள், நாகபாசம் குந்தம் கூந்தாலம், வச்சிரம், சம்மட்டி உலக்கை முதலிய எண்ணற்ற ஆயுதங்கள் தோன்றியிருக்கலாம். சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் இற்றைக்கு 18- நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த நூல் என்று கூறப்படுகிறது. இந்நூல் எழுந்த காலத்தில் தமிழர்கள் அளப்பெரும் அரிய நாகரிகத்தைப் படைத்த இனத்தவர்களாய் வாழ முற்பட்டு விட்டார்கள். சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் கண்ட ஆடற்கலையையும் அணிகலன்களையும், இசைக் கருவிகளையும் ஆடை வகைகளையும் ஆய்ந்து பார்க்கும் பொழுது தமிழர்கள் ஐந்து விதமான படைகளை அமைத்து எல்லா விதமான போர்க் கருவி களையும் பெற்று குமரி முதல் இமயம் வரை சென்று வென்று வெற்றிக் கொடியை இமயத்தின் மீது பட்டொளி வீசிப் பறக்கும் படி செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஈழம், காழகம், சாவகம், புட்பகம் முதலிய கடல் கடந்துள்ள நாடுகளையெல்லாம் வென்று எங்கும் தங்கள் கயல், புலி, வில், நந்தி முதலிய சின்னங்கள் பொறித்த கொடியை நிலை நாட்டியுள்ளார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் காட்ட முடியும். தமிழகத்தில், பண்டு எழுந்த கடற் கோளைக் குறிப்பிடும் பொழுது, வடிவேல் எறிந்த வான் பகை பொறாது- சிலப். மதுரை 11. 18 என்று குறிப்பிடுவதிலிருந்து முற்காலத்திலே தமிழர்கள் வேல் என்பதை அறிந்திருந்தார்கள் என்று தெரிகிறது. வழங்கு வில் தடக்கை மறக்குடித் தாயத்து - சில. வேட்டு 12:6 என்னும் சிலப்பதிகாரச் செய்யுள், வில் என்னும் பழம் பெரும் தமிழர் ஆயுதத்தை எடுத்துக் காட்டுகிறது. கொற்றவையைப் பற்றிக் கூறும் பொழுது அவள் அணிந்துள்ள சூலம், வாள் மூங்கிலால் செய்த வில், சக்கரம் முதலிய கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வளையுடைக் கையிற் சூலம் ஏந்தி - சிலப். வேட்டு. 12:60 ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கை - சிலப். வேட்டு 12:69 வேய்வில் எயினர் குலனே குலனும் சங்கமும் சக்கரம் - சிலப். வேட்டு. 12:19 சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் ஊர்காண்காதையில் மதுரைக் கடை வீதியில் உள்ள சில பொருள்களைக் கூறு மிடத்து மெய்புகு கவசம், மணிகள் பதித்த தோட்டியும் அங்குசமும், தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும், அரைப்பட்டிகையும், வளை தடியும், பன்றி முகக் கடகமும், கிடுகின் படமும், குத்துக் கோல்களும் ஈர்வாள் முதலிய உலோகத்தாற் செய்த கருவிகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும் அதள் புனை அரணமும் அரியா யோகமும் வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் ஏனப்படமும் கிடுகின் படமும் கானப்படமும் காமூன்று கடிகையும் செம்பிற் செய்தவும் கஞ்சத் தொழிலவும் - சிலப். மதுரை ஊர் 14: 169-470 சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் அடைக்கலக் காதை யின் இறுதியில் மதுரை மாநகரின் நில வரணில் பொறிகள் அமைக்கப் பெற்றிருந்தது. அவைகளாவன: (1) வளைவிற் பொறி (2) கருவிரலூகம் (3) கல்லுமிழ் கவண் (4) பரிவுறு வெந் நெய் (5) பாகடு குழிசி (6) காய பொன்னுலை (7)கல்லிடு கூடை (8) தூண்டில் (9) தொடக்கு (10) ஆண்டலையடுப்பு (11) கவை (12) கழு (13)புதை (14) புழை (15) ஐயவித்துலாம் (16) கைபெயரூசி (17) சென்றரி சிரல் (18) பன்றி (19) பணை (20) எழுவுஞ்சீப்பு (21) கணையம் (22) கோல் (23) முந்தம் (24) வேல் (25) ஞாயில் (26) நூற்றவரைக் கொல்லி (27) தள்ளி வெட்டி (28) களிற்றுப் பொறி (29) விழுங்கும் பாம்பு (30) கழுகுப் பொறி (31) புலிப் பொறி (32) குடப் பாம்பு (33) சகடப் பொறி (34) தகர்ப் பொறி (35) அறிநூற்பொறி போன்றவைகளாகும். ............................ வளைவிற் பொறியும் கருவிரலூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித்துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையமும் எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிறும் சிறந்து நாட்கொடி நுடங்கும் - சிலப். மது. அடை 153: 207 - 217 இன்னும், சிலப்பதிகாரத்தில் பல விடங்களில் கோடரி (நவியம்) ஈட்டி (வேல்) போன்ற சில ஆயுதங்களின் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. ஆனால், அவிநயங்கள், முரசுகள், அணிகலன் கள் போன்றவைகள் விரிவாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. அவைகளைப் போல் போர்க்கருவிகள் இங்கு விரிவாகக் கூறப்பட வில்லை. காரணம் இது போர்க்காவியம் அல்ல. அதோடு இங்கு போர் நிலைகளை எடுத்துக் காட்டும் சம்பவங்களும் இங்கு இடம் பெறவில்லை. உரையாசிரியர்களுக்குக் கூட இந்தச் சந்தர்ப்பம் கிடையாமற் போனது நமது துரதிர்ட்டம் என்றுதான் கூற வேண்டும். இலக்கியம் போர் இலக்கியமாக மட்டும் அமைந்து விட்டால் போதாது. நூல் ஆசிரியன் அரசனாகவோ அல்லது படைத் தலை வனாக இருந்தால் தான் போர் முறைகளும், போர்க் கருவிகளின் பெயர்களும் அதைப் பயன்படுத்தும் முறைகளும் தெளிவாய் நூலில் இடம் பெறும். போர் இலக்கியம் ஒன்று தமிழ்க் கருவூலம் போன்று எழுந் துள்ளது. அந்த அரிய போர் இலக்கியமாகிய கலிங்கத்துப் பரணியைப் பார்த்து நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். கலிங்கத்துப்பரணி போர் இலக்கியமாக மட்டுமின்றி 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த பிற்கால இலக்கியமாகவும் இருக்கிறது. அதோடு சோழப் பேரரசு நல்ல பொருளாதார வளமும், நாகரிகமும், அறிவும், ஆற்றலும் பெற்று இந்தியத் துணைக் கண்டத்தையே தன் படை வலியினால் வென்று ஆழ்கடல் கடந்து ஆயிரம் கல் தொலைவிற்கு அப்பால் உள்ள பல கிழக்காசிய நாடுகளை யெல்லாம் அடிபணிய வைத்து வெற்றி கொண்ட காலத்தில் எண்ணற்ற போர்க் கருவிகளை யெல்லாம் படைத்து அவனி மெச்ச வீற்றிருந்த காலத்தில் எழுதப் பெற்ற இலக்கியமாகும். இந்த நூலின் உரையாசிரிகள் கூட அக்காலத்துப் போர்க்கருவிகளை எடுத்துக்காட்டவில்லை. கலிங்கத்துப்பரணி கலிங்கத்துப்பரணி என்னும் நூல் முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி யீட்டியதைச் சிறப்பித்து பாடிய நூலாகும். இந்நூலில் பல போர்க் கருவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் போரில் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் அனைத்தும் தமிழர்களால் கி.பி 12-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் (கி.பி. 1112-இல்) பயன்படுத்தப் பட்டதாகும். கலிங்கத்துப் பரணியில் 12-ஆம் அத்தியாயம் போர் பாடியது என்பதாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள் அடியில் வருமாறு: அடு சிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளிவினி லயமெதிர் விட்டவர் வெட்டின - கலிங் 421 என்னும் செய்யுளில் சிலை (வில்) பகழி (கணை) ஆகியவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இட்ட வட்டணங்கள் மேலெறிந்த வேல் - கலிங் 426 என்னும் செய்யுளில் (வட்டணங்கள்) கேடயங்கள், வேல் என்ற இரு கருவிகள் போரில் பயன்படுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. உலக்கை யுச்சி தைத்தபோது முங்கலப்பை யொக்குமே - கலிங் 427 களித்த வீரர் விட்ட நேமி கண்டு விசு தண்டிசை - கலிங் 432 என்னும் செய்யுட்களில் உலக்கை, நேமி (சக்கராயுதங்கள்) தண்டாயு தங்கள் (தண்டு) பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. வாளில் வெட்டி வாரணத்தை தோளிலிட்ட மைந்தர்கள் - கலிங் 435 அசையவுரத் தழுத்திய யிவுளியை அடுசவளத்து எடுத்த பொழுதவை - கலிங் 437 குருதிக் குட்ட மித்தனையுங் கோலும், வேலும், குந்தமுமே - கலிங் 508 என்னும் செய்யுட்களில் வாள், ஈட்டி, வில், வேல், குந்தமும் (ஒருவகை ஈட்டியும்) குறிப்பிடப்பட்டுள்ளன. உருவிய சுரிகையொடு உயர்கணை விருபடை - கலிங் 589 என்னும் செய்யுளில் உடைவாள் (சுரிகை) என்ற போர்க்கருவி கூறப் படுகிறது. இஃதன்றி இந்நூலில் அதிகமான போர்க்கருவிகளின் பெயர்கள் எதுவும் காணப்படவில்லை. இந்நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த சோழர் பெரும்படை நடத்திய மாபெரும் போர் ஆனதினால் இங்கு அதிகமான போர்க் கருவிகளின் பெயர்கள் எதிர்ப்பார்க்கக் கூடியதேயாகும். உரை யாசிரியர்கள் கூட அதிக மான போர் கருவிகளை எடுத்துக் காட்டத் தவறிவிட்டார்கள். புறப்பொருள் வெண்பாமாலை புறப்பொருள் வெண்பாமாலை புறப்பொருளையே பொருளாக உடையது. இதிலுள்ள பாக்கள் பல இளம்பூரணர், பரிமேலழகர் அடியார்க்கு நல்லார் நச்சினார்க்கினியர் முதலிய ஆசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இந்நூலில் பண்டைக்கால மன்னர்களின் போர் முறையும், வீரர்களின் திறனும், ஆயுதங்களின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர் வேல் றண்ணளியான் கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் - நள்ளாதார் அஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி மஞ்சிவரு ஞாயின் மதில் (பு.வெ.மா.99) என்னும் பாட்டிற்கு, ஒளி பரந்த வாளினையும் வலிய வீரக் கழலாற் சிறந்த காலினையும் வெய்ய சோதியாற் பொலிந்த வேலினையும் தண்ணளியையும் உடையவன் கைப்பற்றிக் கொள்வானாகக் கொடியையுடைய படையை ஒன்றுபடக் கொண்டெழுந்தான். பொருந்தாதார் வெருவரு வாயினையும் புகுதற்கரிய குறுங்காட்டி னையும் ஆழ்ந்த கிடங்கினையும் (அகழியையும்) மேகம் நிலவும் ஏவல் அறையினையுடைய கோட்டையை என்று பொருள் கூறப்பட் டுள்ளது. இதில் வாள், வேல் ஆகிய ஆயுதங்களும் அரணும் குறிப் பிடப்பட்டுள்ளன. வில் முன் கணை தெரியும் வேட்டைச்சிறார் - (பு.வெ.மா.177) என்ற செய்யுளில் வில்லும் கணையும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயும் தோணியு மேல் கொண்டு நள்ளாதார் ஓவார் விலங்கி யுடலவும் - (பு.வெ. மா 181) என்ற செய்யுளில் நாவாய் தோணி போன்ற கலன்கள் கூறப் பட்டுள்ளன. இயவர் புகழ வெறிமுர சார்ப்பக் குயவரி வேங்கை யனை - வயவர் என்னும் பாட்டில் வளைவான அரிவாளான குயவரி கூறப்பட் டுள்ளது. அதைப் பயன்படுத்தும் முறைகளும் அவைகளின் வலிவும் பகைவர்கள் அந்தக் கருவிகளின் தாக்குதல்களை எப்படி சமாளித் தார்கள் என்பவைப் பற்றியும் விளக்கம் காணப்படும். இன்று கிடைக்கும் தமிழ் நூற்களில் அத்தகைய விவரங்கள் எதுவும் காண முடியவில்லை. பொதுவாக எல்லா நூற்களிலும், பெரிய பாறைகள் கூர்மையான கற்கள், கதை, தடி, உலக்கை, கத்தி, வேல், ஈட்டி, வாள், கோடரி, பாசம், வில், அம்பு, பொறிகள் முதலியவைகளே காணப் படுகின்றன. இராமாயணம் வான்மீகியின் வடமொழி இராமாயணத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகள் உலக்கைகள், இரும்புலக்கைகள், தடிகள் கதைகள், உழலைத்தடிகள், இரும்புத்தடிகள், இரும்புப் பூண் கட்டிய தடிகள், கத்திகள், பட்டாக்கத்திகள், அரிவாள், வேல் வகைகள் தோமரங்கள் பலவகை ஈட்டிகள், பேரீட்டிகள், பலவகைக் கோடரிகள், வச்சிரங் கள் (சக்திகள்), கூரான கோடாரி, பலவகைச் சூலங்கள், பாசக் கயிறுகள், நாகபாசம், பெரிய சம்மட்டிகள் - கொழுக்கள் பட்டசங்கள், மின்னுஞ் சக்கரங்கள், சிறிய சக்கரங்கள், பெரிய சக்கரங்கள், வேலாயுதங்கள், பிண்டிபாலங்கள், சதகினிகள், பிராசம், முத்கரம், பலவகையான வில்கள், பிராமாதிரம், அக்நேயாதிரம், ஜஷிகஅதிரம், ஐந்திராதிரம், கர்ணியாதிரம் அஷ்டி அம்புகள், கத்திப்பாணம், அர்த்த சந்திர பாணம், சூரிய முகப்பாணம், சர்ப்பமுகப் பாணம், முதலைமுகப் பாணம், ஐந்துதலை நாகப் பாணம், கழுதை முகப்பாணம் போன்ற எண்ணிலாப் பாண வகைகளும் அதிரம் சதிரம் என்னும் பேரால் கொடுக்கப் பட்டுள்ளன. இவைகள் வெவ்வேறு நாளில் வெவ்வேறு ஆட்களால் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஒருவன் நாகாதிரத்தை விடுத்தால் மற்றவன் அதைத் தடுக்க கருடாதிரத்தை விடுத்து அதைத் தடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது. 5. சிற்ப நூற் சான்றுகள் திருப்பம் ஆதிகாலத்தில் நமது முன்னோர்கள் உணவைப் பெறுவதற்கு அலைந்து திரிந்து வந்தனர். அப்பால் உணவை உற்பத்தி செய்ய முற்பட்டனர்; உணவை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற நிலத்தைக் கண்டனர்; உழுகருவிகளை உருவாக்கினர். உணவுப் பொருள்களை விலங்குகளும் பறவைகளும் அழித்து விடாமல் தடுப்பதற்கு வில்லையும் வேலையும், வாளையும் செய்தனர். பின்னர் வில், வேல், வாள், முதலிய கருவிகளை அபிவிருத்தி செய்தும் அழகுபடுத்தியும் கூரியதாக்கியும் வந்தனர். அயலவர்கள் உணவுப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு போய்விடாது தடுத்து வந்தனர். உழுகருவிகளே பிற்காலத்தில் படைக்கலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கும்பினி யார் ஆட்சி தோன்றும்வரை பழைய படைக்கலன்களே பயன் படுத்தப்பட்டு வந்தன. இறுதியாகத் தமிழகமும் இந்தியாவும் ஆங்கில ஆட்சியினரால் அடிமைப்படுத்தப்பட்டது. அடிமை வாழ்க்கையில் மக்களுக்குச் சுவை ஊட்டப் பெற்றது. மக்களின் கலையும் கல்வியும் கருவறுக்கப்பட்டது. மக்களின் போர்க் குணமும் வீரமும் குன்றியது. ஆட்சியாளர்களின் ஆங்கிலக் கல்வி முறை அடிமை வாழ்க்கை எழும் படியாய்ச் செய்து விட்டது. அவர்கள் முதலில் நமது படைக்கலன்களை அழித்தனர். அவைகளைக் காண்பதற்கே அரிதாகச் செய்து விட்டனர். ஆங்கில ஆட்சியின் போது எழுந்த இலக்கியங்கள் எல்லாம் காதல் இலக்கியங் களாக இருந்தனவே யொழிய போர் இலக்கியங்களாக எதுவும் இல்லை. குறிப்பாகத் தமிழ் மக்களிடம் போர்க்குணம் பொன்றும் படி செய்து விட்டனர். தாய்த் தெய்வம் நமது ஆதித் தெய்வம் காளி. அவள் பழையோள், கருப்பி, மாயோள், பத்திர காளி, கொற்றவை என்றெல்லாம் அழைக்கப் பட்டார். அவளின் 5000 -ம் ஆண்டிற்கு முன்னுள்ள உருவம் அரப்பாவில் கண்டெடுக்கப் பெற்றுள்ளது. ஆதியில் அவள் இருகைகளுடன் காணப்பெற்றாலும் பின் பத்திர காளியாய் பதினாறு கைகள் பெற்று பல ஆயுதங்களுடன் காணப்படுகிறாள். அவள் நிர்வாணியாய் காணப்படுவது அவள் பழம் பெரும் தெய்வம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவளது கணவனாகிய சிவ பெருமான் தோலாடை அணிந்திருப்பதினால் அவளுக்கு பின் - தமிழர்கள் பஞ்சாடையை அறியுமுன் எழுந்த தெய்வமாகத் திகழ்கிறார். ஆதியில் உருவங்கள் செய்யுமுன் தமிழர்கள் கல் வில் வேல், சூலம் கதை முதலியவைகளை வைத்தே தெய்வ வழிபாடு செய்து வந்தனர்.1 தமிழர்கள் வாழ்ந்த ஐந்து நிலங்களிலும் காளியே தெய்வமாக வழிபடப்பட்டாள். அன்று ஐந்து நிலங்களிலும் தாய் ஆட்சியே நிலவியது. தாய் ஆட்சி மாறியதும் தாய்த் தெய்வ வழிபாடும் குன்றியது. ஆனால் நீண்டகாலம் பாலை நிலத்தில் கொற்றவையே வழிபடு தெய்வமாக மதிக்கப்பட்டாள். இன்றும் பாலை நில மக்கள் காளி வழிபாடு நடத்தி வருகிறார்கள். தாய் வீரத்தின் சின்னமாக அன்று இருந்தாள். வீரமிக்க மறவர்கள் பாலை நிலத்தில் கொற்ற வையை விடாது போற்றி வந்தனர். முல்லை நிலத்திலும் ஆதியில் கருமை நிறம் வாய்ந்த மாயோள் வழிபடப்பட்டு வந்தாள். உருவம் ஆக்கும் கலையை மக்கள் அறிவதற்கு முன் அவளது கையிலிருந்த கதையை வைத்து நீர்வார்த்து மலர் சூட்டி வழிபட்டனர். அப்பால் அம்மை ஆட்சி அகன்று அண்ணன் ஆட்சி அரும்பும் பொழுது மாயோள் என்னும் பதம் மாயோன் ஆகத் திரிபுற்று முல்லை நிலத்தில் அண்ணன் (தம்பி) ஆட்சியும் மாயோன் ஆகிய ஆண் தெய்வ வழிபாடும் எழுந்தது. இதை சைவ சமய அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.2 மாயோள் சக்கராயுதள் ஆகவும் கதையைக் கையில் ஏந்தியவ ளாகவும் போற்றப்பட்டாள். கதையும், பின்னர் சக்கரமும் அண்ணன் தெய்வத்தின் சின்னமாக வழிபடப்பட்டு வந்தது. குறிஞ்சி நிலத்தில் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் நிலவிய பொழுது தாயின் கையிலிருந்த வேலைத் தாய்த் தெய்வமாக எண்ணி நீர்வார்த்து மலர் புனைந்து வழிபடப்பட்டது. அப்பால் தாய் ஆட்சி அகற்றப்பட்டுத் தனயன் ஆட்சி எழுந்ததும் அவன் தாயின் கையி லிருந்த வேலைத் தன் உரிமைப் பொருளாகக் கொண்டான். மேலும் அவன் வேட்டையாடித் தன் தாய், தங்கை, அக்கை, அண்ணன், தம்பி ஆகிய உறவினர்களைக் காப்பாற்றவும் பகைவர் களைக் கொன்று அழித்து தன்னையும் தன் உறவினர்களையும் பாதுகாக்கும் ஆயுத மாக வேல் பயன்படுத்தப்பட்டது. மக்கள் வேலைத் தாங்கிய மகன் தெய்வத்தின் சின்னமாக அவன் கையில் உள்ள வேலை வழி பட்டதுடன் அவனை வேலன் என்று கூறி வணங்கி வந்தனர். அன்று தந்தையும் தந்தைத் தெய்வமும் தோன்ற வில்லை. மேலும் தந்தை யின் உடைமை தனயனுக்கு உரித்து என்ற சமூக அமைப்பும் எழவில்லை. எனவே வேலன் தந்தையின் பெயரால் அழைக்கப் பெறாது அதாவது சிவனார் மகன் என்று அழைக்கப் பெறாது கொற்றவை மகன் என்றும் பழையோஅள் குழவி என்றும் அழைக்கப் பட்டான்.1 அப்பால் வேலை உடையவனாதலால் வேலன் என்றும் பின்னர் முருகன் என்றும் அழைக்கப்பட்டான். இதே போன்று ஆதியில் மருத நிலத்திலும் கொற்றவையே வழிபடு தெய்வமாக எண்ணி வணங்கப்பட்டாள். உருவம் செய்யும் கலை எழுமுன் அவளது மூவிலை வேலைக் கொற்றவையாக எண்ணி வழிபடப்பட்டு வந்தது. அவளுக்கு மூவிலை வேற்குமரி என்று பெயர்(நிகண்டு). அன்று மருத நிலத்தில் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் இருந்து வந்தது. அப்பால் தாய் ஆட்சி மாறி வேந்தன் ஆட்சி எழுந்தது. தாய்த் தெய்வத்திற்குப் பதிலாகத் தந்தைத் தெய்வம் எழுந்தது. சமூகத்தில் கணவன் மனைவியாக வாழும் சமூக முறையும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் பிறந்தன. கொற்றவைக்கு, சூலிக்குப் பதிலாக அவளது கணவனாகிய சூலபாணியாகிய சிவ பெருமான் வழிபாடு எழுந்தது. சிவன் உருவம் செய்யும் சிற்பக் கலை தோன்றாத தால் சிவனுடைய சின்னமாகிய திரிசூலம் வைத்து வழிபடப்பட்டது. சிவபெருமான் ஆதியில் தன் மனைவியாகிய கொற்றவையிடத்தி னின்று பெற்ற முக்கண்ணையும் சூலத்தையும் பெற்ற தெய்வமாகவும் பரசு, மூவிலை வேல், வில் போன்ற ஆயுதங்களைத் தாங்கிப் பகைவர்களை அழித்தும் காடுகளை வெட்டியும் நிலத்தை உழுதும் மாடுகளைப் பயன்படுத்தி வந்த வேந்தன் நிலையில் எழுந்த தெய்வ மாகவும் எண்ணி வழிபடப்பட்டார். இவன் முக்கண்ணன் சூலபாணி. இவன் புலித்தோலை ஆடையாக உடுத்தி யானைத் தோலை போர்வையாக அணிந்திருப்பது ஒன்றே இவன் கற்காலத் தெய்வம் என்பதைப் புலப்படுத்தும். முன்னைய நானிலங்களிலும் நிகழ்ந்ததைப் போல் நெய்தல் நிலத்திலும் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் அவளது ஆயுதமாகிய சுறாமீன் கொம்பும் வழிபடப்பட்டு வந்து பின் தாய் ஆட்சி மாறி ஆண் ஆட்சி அரும்பும் பொழுது வாரணன் என்னும் ஆண் தெய்வ வழிபாடும் அவனது ஆயுதமாகிய சுறாமீன் கொம்பை நாட்டி வழிபடும் வழக்கமும் எழுந்தது. பொதுவாக, சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் எல்லாப் பகுதிகளிலும் குடும்பத்தலைவி அல்லது குடும்பத்தலைவன் ஆட்சி யும் தாய்த் தெய்வம் (மாயோள்) வணக்கமும் நிலவி அப்பால் மாயோன் (அண்ணன்) வழிபாடும் வேலன் வழிபாடும், முக்கண்ணன் வழிபாடும் வாரணன் (வருணன்) வழிபாடும் நிலவியது. இந்த ஐந்து நிலங்களுக்குரிய பெரிய தெய்வங்கள் அனைத்தும் போர்த் தெய் வங்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு நான்கு, ஆறு, எட்டு பதினாறு போன்றவைகளையுடையவர்களாய் ஒவ்வொரு கையிலும் வெவ்வேறு ஆயுதங்களைத் தாங்கியவர் களாய்க் காணப்படுகின்றனர். இவர்களது கைகளில் உள்ள ஆயுதங்களே தமிழகத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஆயுதங்களாக எண்ணலாம். தமிழர் கண்ட ஐந்து நிலத்திலும் ஐந்து போர்க் கருவிகள் தெய்வமாக வைத்து வழிபடப்பட்டு வந்தன. நமது நாட்டில் உள்ள பெருந் தெய்வங்களைத் தவிர சிறு தெய்வங்களும் பல உள. அவர்கள் கைகளிலும் பல்வேறு விதமான ஆயுதங்கள் உள. சிறு தெய்வங்களும் பெருந் தெய்வங்களும் தங்களுக் கும் தங்கள் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் விரோதமாக இருப் பவர்களுடன் தங்களின் ஆயுதங்களைக் கொண்டு போராடிய செய்தி கள் புராணங்களில் விளக்கப்பட்டுள்ளன. இத் தெய்வங்கள் சமூக வளர்ச்சியில் அதிகமான ஆயுதங்களையும் அதிகமான கைகளை யும் பெற்றும் இருக்கின்றன. பக்தர்களும் சிறு தெய்வங்களும் பெரிய தெய்வங்களைப் பல ஆண்டுகள் வழிபட்டு அவர்களிடமிருந்து பல அரிய ஆயுதங்களைப் பெற்ற கதைகளுமுண்டு. மக்களின் சமூக வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் இத் தெய்வங்களின் கைகளில் ஆயுதங்களாய்ப் பரிணமித்திருந்ததைப் புராணங்கள் எடுத்துக்காட்டு கின்றன. மக்கள் நுண்ணிய அறிவுகளைப் பெற்ற காலத்தில் தெய்வங் கள் ஆயுதங்களைப் பெறாமல் பகைவர்களை வாயால் சபிக்கின்றனர். நெற்றிக் கண்ணால் எரிக்கின்றனர். புன் சிரிப்பால் அழித்துவிடும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். எனவே புராணங்களையும், சிற்ப நூல்களையும் ஆராய்ந்து பார்த்தால் தெய்வங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை யென்று கண்டுபிடித்து விடலாம். அவை பழங்கற்காலத்திலிருந்து கி.பி.1500-வரை இருந்த நமது நாட்டு ஆயுதங்களாகக் கருதலாம். அதற்குப் பின் நமது நாட்டில் புதுத் தெய்வங்கள் எழுந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை சேர்மன் சாமி, சிங்களத்தி அம்மான், பட்டாணி, கருப்பன் மாடன், முண்டன் முதலிய சில தெய்வங்கள் எழுந்தாலும் அவர்களுக்குப் பழைய தெய்வங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கொடுக்கப்படவே இல்லை. காளியின் ஆயுதம் வட இந்தியாவில் உள்ள துர்க்கை அல்லது சண்டி பத்து முதல் பதினாறு கைகளையுடையவளாய் இருக்கின்றாள்.1 நமது நாட்டு பத்திரகாளி 16 கைகளையுடையவளாய்த் திகழ்கின்றாள். எனவே அவள் போர்த் தெய்வமாகவும் காக்கும் தெய்வமாகவும் இருப்பதால் அவள் பதினாறு ஆயுதங்களுக்குக் குறையாது பெற்றிருக்கலாம். காளி என்ற பெயருடைய தெய்வம் இருகைகளையும் பலகைகளை யும் மகாகாளி 4 கைகளையும் பிற காளிகள் பல கைகளையும் பெற் றிருக்கலாம். காளியின் ஆயுதங்கள்; 1 கேடயம், 2 பரசு, 3 கதை, 4 பாசம், 5 வில், 6 சக்கரம், 7 சக்தி, 8 அம்பு, 9 உலக்கை, 10 சூலம், 11 கத்தி, 12 நாகபாசம், 13 வாள், 14 சக்தி (வேல்), 15 அங்குசம், 16 வச்சிரம், 17 கேடயம், 18 கலப்பை, 19 திரிசூலம் போன்ற ஆயுதங்களாகும். சிவபெருமானின் ஆயுதம் இவளது கணவனான சிவபெருமான் இன்னும் அதிகமான ஆயுதங்களை உடையவராகத் திகழ்கிறார். காரணம் அவரது சொந்த ஆயுதங்களோடு தனது மனைவியாகிய கொற்றவையின் ஆயுதம் சேர்ந்ததேயாகும். 1. பரசு (மழு), 2. சூலம், 3. திரிசூலம், 4. சங்கு, 5. அங்குசம், 6. வில், 7. பாசம் (கயிறு), 8. கேடயம், 9. கதை, 10. யானைக் கொம்பு, 11. கத்தி, 12.வச்சிரம், 13. கட்வாங்கம், 14.. அம்பு, 15. கலப்பை, 16. வாள், 17. ஈட்டி, 18. உலக்கை, 19. நாகபாசம், 20. எறியும் கத்தி, 21. தண்டம், 22. தீ, 23. கூந்தாலி. மாயோன் ஆயுதம் மாயோளின் (காளியின்) தமையனாகிய மாயோன் தங்கை பெற்றிருந்த ஆயுதங்களைவிடச் சிறிது குறைவாகப் பெற்றிருக்கிறார். அதன் விவரமாவது. 1. சங்கு, 2. சக்கரம், 3. வாள், 4. கதை, 5. உலக்கை, 6. பாசம், 7. கேடயம், 8. கலப்பை, 9. வச்சிரம், 10. மழு, 11. வில், 12. அம்பு, 13. ஈட்டி, 14. சூலம் (வேல்) ஆகியவைகளேயாகும். முல்லை நிலத் தெய்வமாகிய மாயோன், மாயோளின் அண்ணன் ஆகையால் இவர் கொற்றவையின் ஆயுதங்களையே பெரிதும் தாங்கி இருக்கிறார்.1 வேலன் ஆயுதம் வேலன் அல்லது முருகன் கொற்றவையின் மகன் ஆவன். பிற தெய்வங்களைவிடக் குறைவான ஆயுதங்களையே பெற்றிருக்கிறான். அது அடியில் வருமாறு: (1) வேல் (2) அம்பு(பாணம்) (3) வில் (4) வச்சிரம் (5) கத்தி (6) சக்கரம் (7) தடி (8) கத்தி வாரணன் ஆயுதம் வாரணன் அல்லது வருணன் என்று கூறப்படும் தெய்வம் பிற எல்லாத் தெய்வங்களையும் விட மிகக் குறைவான ஆயுதங்களைப் பெற்றிருக்கிறான். அது அடியில் வருமாறாகும்: 1. பாசம், 2. எறி ஈட்டி, 3. கத்தி போன்றவைகள். இத்தெய்வங்களில் காளி (மாயோள்) முதலில் குறிஞ்சி நிலத் தெய்வமாக இரு கைகளையுடையவளாக காளியாக இருந்தாள். அப்பொழுது அவளிடம் கொம்பு, வில், அம்பு, கல்வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களே இருந்தன. அப்பால் குறிஞ்சி மக்கள் உணவு தேடி முல்லை நிலத்தில் குடியேறிய பொழுது, அந்நிலத்திற்கும் தெய்வமாக இருந்த மாயோள் 6 கைகளையுடையவளாக வில் அம்பு கத்தி முதலியவைகளோடு கதை பாசம் போன்ற ஆயுதங்களைப் பெற்றாள். அப்பால் மக்கள் உணவு தேடி மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் குடியேறினர். மருத நிலத்தில் தொழில் பெருகியது. எனவே அங்கு பதினாறு கைகளையுடைய பத்திர காளியாய் மாகாளியாய்க் கலப்பை, பரசு, சூலம், திரிசூலம், ஈட்டி, கைவாள், வச்சிரம், கேடயம், அங்குசம், கட்வாங்கம் முதலிய எண்ணற்ற ஆயுதங்களைத் தாங்கி மருதம் நெய்தல் மட்டுமல்ல எல்லா நிலத்திற்கும் தெய்வமானாள். அப்பால் அவளை மணந்த சிவ பெருமான் தொழில் நிறைந்த மருத நிலத்திற்குத் தெய்வமாகி அவளது ஆயுதங்களைப் பெற்றதோடு தொழில்களுக்குரிய பல புதிய ஆயுதங்களைப் பெற்று உலோககாலத் தெய்வமாக எழுந்தார். போர்முறை போரில் வீரர்கள் வில், வேல், ஈட்டி, கத்தி, எறுழ், தண்டு, கொக்கரை, சிலை, தடி, தவர், குணில், முனி போன்ற நூற்றுக் கணக்கான ஆயுதங்கள் பயன்படுத்தி வந்தனர். அவைகளில் கைவிடும் படை கைவிடாப்படை என இருவகை உண்டு. வில் நாணில் அம்பு வைத்து எய்யும் இடம் உடு என்று கூறப்பட்டது. தற்காப்பிற்கு உரிய ஆயுதம் கேடயம் ஆகும். அது கிடுகு, கடகம், தட்டு, பரிசை, பலகை, பறை, வட்டணை, பட்டம், தோல், தோல் பாரம் எனப் பல வகைப் படும். பகைவர்களின் ஈட்டி அல்லது கணை, கத்தி முதலியன உடம்பைத்தாக்கா வண்ணம் அணியும் கவசம் மெய் காக்கும் சட்டை, மேலகம், அரணி, ஆசு எனவும், கைக்கவசம் கைப்புடை எனவும் அழைக்கப்பட்டது. நகரின் அதிகாரிகள் படையை நடத்துவர். அப்பொழுது நம் நாட்டுப் படைகள் ஐந்து உறுப்பினர் அடங்கிய ஐந்து விதப் படைகள் ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒன்று கடற்படையோடு ஒத்துழைத்தது. மற்றது போருக்குரிய இயந்திரங்களையும் போர் வீரரின் உணவையும் பிற பொருள்களையும் கொண்டு செல்லும் வண்டிகளையும் எருதுகளையும் கவனிப்பது. இது வேலையாட் களையும் பறை கொட்டுவோர், சல்லரி போடுவோர் குதிரைப் பாகர், இயந்திரம் பழுது பார்ப்போர் அவர்களின் உதவியாளர் ஆகியவர் களை அளிக்கிறது. சல்லரி ஓசையை அறிந்து குதிரைக்குப் புல் கொண்டு செல்வர். மூன்றாவது பிரிவு தானைப் படைக்கும், நான் காவது பிரிவு குதிரைப்படைக்கும் ஐந்தாவது பிரிவு தேர்ப் படைக்கும் பொறுப்பாக இருந்தது. அரசர்கள் ஆயுதச் சாலையை அமைத் திருந்தனர். ஆயுதங்களை ஆயுதச் சாலையிலும் குதிரையை அல்லது யானையைப் பந்தியிலும் விட்டுச் செல்வர். யானைக்குக் கடிவாளம் இடுவதில்லை. தேர்களைக் காளைகள் இழுத்துச் செல்லும். தேரை இழுத்துச் செல்வதில் களைப்பு எழாத வண்ணம் குதிரைகள் பக்கத்தே நடத்திச் செல்லப்பட்டன. தேர்ப்பாகனின் இருபுறமும் இரு வீரர்கள் இருப்பர். போர் யானை நான்கு வீரர்களை- அதாவது மூன்று போர் வீரனையும் ஒருபாகனையும் கொண்டு செல்லும். பண்டைக்காலத் தமிழர்களின் போர் நடவடிக்கையில் பகைவர் களை எதிர்த்துத் தாக்கும் போர்க்கருவிகளைப் போலவே தற்பாது காப்பு ஆயுதங்களும் மிக முக்கியமானவைகளாய்க் கருதப்பட்டன. போரில் ஈடுபட்ட படைவீரன் ஒருவனுடைய உடம்பின் பாதுகாப்பு அடிப்படையான உட்கருத்தாகும். எனவே அவன் உடலுக்கு ஊறு விளையும் எல்லாக் கொடுமையினின்று தப்புவித்துக் கொள்ள எல்லாவிதமான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே தற்பாதுகாப்புப் படைக் கலங்களாக ஈட்டிகள் துளைக்க முடியாத மேலங்கி, தலைக் கவசம் காப்புக் கருவிகள் அணிந்திருந்தனர். இது தவிர கவசம் அல்லது போர்க்கவசம் முதலியவைகளை அணிந்து வந்தனர். இதிகாசப் போர் வீரர்கள் தோல் கேடயங்களையும், விரற்காப்புக் கருவிகளை யும் பூண்டிருந்ததாக அறிகிறோம். இவைகளுக்கு நமது சிற்ப நூற் களிலிருந்து நல்ல சான்றுகள் காட்ட முடியும். ஆரியர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் திராவிடர்கள் ஆரியர்களிடம் தோல்வியுற்ற வரலாற்றுச் செய்தியை அறிந்து வியப்புறுகின்றார்கள். ஆனால் சில வட நாட்டு அறிஞர்கள் பண்பாடும் கலைநயமும் அறிவாற்றலும் மிக்க திரா விடர்கள் ஆரியர்களிடம் தோல்வியுற்றதற்குரிய காரணங்களை நன்கு ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். ஆரியர்களாகிய நம்மைப் பார்க்கிலும் அவர்கள் (அசுரர்கள்) கெட்டிக்காரர்கள். அவர்களுடைய நகரங்களைப் போல் நகரங்கள் அமைப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும். அவர்க ளுடைய கடைவீதி, தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் தடாகங்கள், அதன் உயர்ந்த படிக்கட்டுகள் அகன்ற இராச வீதிகள் போன்ற அமைப்புகளை நம் ஆரிய பூமியில் காணவே முடியாது. நாம் அசுரர்க ளுடைய புராதன நகரங்களையும் பார்த்திருக்கிறோம். அசுரர்கள் விட்டுச் சென்ற அழிந்து போன பழைய நகரங்களை ஆரியர்கள் பழுது பார்த்துத் திரும்ப அமைத்திருக்கிறார்கள். ஆயினும் அவற்றிலே பழைய அமைப்பைக் காண முடியவில்லை. ஆனால் இந்தப் புதிய நகரத்தை அரசன் சம்பான் நேரே இருந்து கட்டினானாம். இது தேவலோகம் போல் இருக்கிறது - (வால்காவிலிருந்து கங்கைவரை. பக் 122) எல்லையற்ற சமுத்திரத்திலே அசுரர்கள் தங்கள் பெரிய படகுகளை நிர்ப்பயமாகச் செலுத்துகிறார்கள். மாதக் கணக்கிலும் வருடக் கணக்கிலும் பிரயாணம் செய்து கடலிலிருந்து வித விதமான இரத்தினங்களைக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய தைரியத்திற்கும் திறமைக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. இன்னொரு அற்புதம் நீ கேள்விப்பட்டிருக்கமாட்டாய். அசுரர்கள் வாய்திறந்து பேசாமலே சம்பாசிக்கிறார்கள். (எழுத்துக்கலை அறிவை ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார்). (வால்காவிலிருந்து கங்கை வரை. பக் 123.) நாம் இரண்டுமணிநேரம் பேசியும் விளங்க வைக்க முடியாத ஒரு விசயத்தை (அவன் (அசுரன்) இரண்டு மூன்று கோடுகளை இழுத்து விளங்கவைத்து வருகிறான். இந்த விசயத்தை ஆரியர் களாகிய நாம் இது வரை அறியமாட்டோம். இப்பொழுது தான் நம்முடைய ஆரியர்கள் இந்தக் கோடுகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள் இன்னும் பூரணமாகக் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் கொல்லர், தச்சர், தட்டார், கருமார், தந்தவேலை செய்வோர், நெய்வோர், சிற்பிகள் முதலிய ஒவ்வொரு தொழி லாளியினுடைய திறமையையும் பார்த்து நாம் அப்படியே அயர்ந்து விடுகிறோம். அப்படிப்பட்ட திறமைசாலிகளை நம்மைப் பார்க் கிலும் கெட்டிக்காரர்கள் என்று ஒப்புக் கொள்வதில் ஆட்சேபணை என்ன? - (வால்காவிலிருந்து கங்கை வரை. பக் 124) அசுரர்கள் நிலங்களின் செழுமைக்கு நல்ல ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அவர்கள் மலை ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி நிலங்களில் நீர்பாய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாம் காந்தாரத்தில் இவ்வழியைக் கடைப்பிடித்தோம். அவர்க ளுடைய நகர் நிர்மாணம் மருத்துவம் முதலியவைகள் உயர்ந்த முறையில் இருந்தன. சுவாத நதிக் கரையில் ஆரியர்களும் அவர்களுடைய முன் னோர்களும் பஞ்சாடையின் பெயரைக் கூடக் கேட்டிருக்க மாட் டார்கள். ஆனால் நாம் (ஆரியர்கள்) இப்பொழுது அந்த ஆடை களை அணிந்து கொண்டிருக்கிறோம். வெய்யிற்காலத்தில் அது மிகவும் உபயோகப்படுகிறது - (வால்காவிலிருந்து கங்கை வரை. பக் 134.) அசுரர்களுடைய அந்த நகரம் மிக்க அழகுவாய்ந்தது. சுட்ட செங்கலினால் கட்டப்பட்டிருக்கும் அரண்கள், வீடுகள், வீதி அமைப்பு, சாக்கடை வசதி, சிறிய பெரிய குளங்கள், தடாகங்கள் முதலிய எல்லா வசதிகளும் அந்நகரிலே அழகாகச் செய்யப்பட் டிருந்தன. புட்பகலாவதி நகரிலிருந்து (அசுரர்கள் நகரிலிருந்து) பலவித மான ஆபரணங்கள், பஞ்சாடைகள், போர்க்கருவிகள் முதலிய எத்தனையோ பொருள்கள் சுவாதநதிப் பிரதேசத்தில் மட்டுமென்ன; அதற்கு மேலும் மலைப்பிரதேசங்களிலுள்ள குடிசைகளுக்குங் கூடச் சென்று பரவின. சுவாதநதிப் பிரதேசத்தின் பொன்னிறக் கூந்தலை யுடைய ஆரிய அழகிகள் அசுர சிற்பிகள் செய்யும் அணிகலன்களிலே மயங்கிக் கிடந்தனர். இந்த மயக்கம் ஆண்டுதோறும் அதிகமான எண்ணிக்கையில் ஆரிய அழகிகளை புட்கலாவதி நகரத்திற்கு இழுத்துச் சென்றது - (வால்காவிலிருந்து கங்கை வரை. பக் 113) அசுரர்களிடம் செம்பு முதலிய உலோகங்கள் அதிகமுண்டு. ஆனால் உலோகக் கோட்டை கட்டுவதற்குரிய செம்புகள் அவர்க ளிடம் இருக்க முடியாது........ செங்கற்களைக் கொண்டே அவர்கள் நகரத்தைச் சுற்றியும் கனத்த சுவர் எழுப்பிக் கோட்டை கட்டியிருக் கிறார்கள். அந்தச் செங்கற்களும் சிவப்பு நிறத்தவைதான். MÆD« jh«ãu¤â‰F« mj‰F« Ãw¤âš mâf ɤâahr« ïU¡»wJ.”- (வால்காவிலிருந்து கங்கை வரை. பக் 118) இதோடு வால்காவிலிருந்து கங்கை வரை என்ற அரிய நூலை யாத்த பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயன் ஆரியர்களை விடத் திராவிடர்களிடம் நல்ல அரண்கள், ஆயுதங்கள், கலைகள் பண்புகள் எல்லாம் நிறைந்திருந்தது என்பதையும் அவர்களிடம் இல்லாதவாறு ஆரியர்களிடம் ஒற்றுமை முரட்டுத்தனம், ஜன நாயகப் பண்பு, எல்லாவற்றையும் விட விரைவாக ஓடத்தக்க வலிமைவாய்ந்த குதிரைப்படைகளும் இருந்தன. குதிரைகளை ஓட்ட நல்ல பயிற்சி பெற்றிருந்தனர். மேலும் திராவிடர்களின் போர்த்தந்திரங்களையும் ஆயுதங்களையும் விரைவில் அறிந்து அதைத் திறமாகத் திராவிடர் கள் மீது பயன்படுத்தி வெற்றி கண்டார்கள் என்பதை அழகாக விளக்கியுள்ளார். அதோடு திராவிடர்கள் பயிர்த் தொழில் செய்பவர் களாய் போரைப் பற்றி எண்ணாதவர்களாய் வாழ்ந்து வந்தனர். காவிய காலத்தின் இறுதியில் வில்லை எப்படிப் பயன் படுத்துவது என்பதை ஆரியர்கள் நன்கு அறிந்து கொண்டனர். அர்ச்சுனனும் கர்ணனும் சிறந்த வில் வீரர்களாக விளங்கியது நாடறிந்த உண்மையாகும். ஆரியர்களின் வீழ்ச்சிக் காலத்தில் கூட கிரேக்கர்கள் ஆரியர்களிடமிருந்த வில் இயக்கும் திறனை வியந்து பாராட்டியுள்ளனர். வில்லின் சக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இந்தியர்களின் அம்புகள் மிகப் பெரிய உலோகத்தகடுகளைக் கூடத் துளைத்து விடுவதை கிரேக்க எழுத்தாளர்கள் பரிசோதித்து பார்த்து மகிழ்ந்தனர். பழங்காலப் பாரத நாட்டின் சக்தி வாய்ந்த இறுதி வில் வீரனாக விளங்கிய பிருதிவிராஜ் உண்மையிலேயே உலகிலே ஒப்பற்ற வில் வேந்தனாக உலகப் புகழ் பெற்றான். அவனது ஆற்றலும் வில் திறனும் கண்டு உலகிலுள்ள மக்கள் அனைவரும் பாராட்டினர் என்று கூறப்படுகிறது. நாளடைவில் திராவிடர்களுடைய சீரிய ஆயுதங்கள் அனைத்தையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கறிந்து அதைத் திறம்பட உருவாக்கியும் அபிவிருத்தி செய்தும் வந்தனர். 6. புதை பொருள் சான்றுகள் பண்டையப் புராணகாலம் மறைந்து விட்டது. இன்று நிகழ்வது அறிவியல் காலம். இன்று புராணக் கதைகளை வைத்து வரலாறு வரையும் காலம் மறைந்து விட்டது. மக்கள் எதையும் நம்புங்காலம் ஒழிந்து விட்டது. எதற்கும் ஏன்? எப்படி? எப்பொழுது? என்று கேட்கும் காலம் எழுந்து விட்டது. எதற்கும் அகச் சான்று புறச்சான்று கேட்கும் காலமாய் விட்டது. விளக்க மாகக் கூறினால் இக்காலத்தை ஆராய்ச்சிக் காலம் என்று கூறலாம். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் தமிழர்கள் போரைக் கண்டு பன்னூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. போரும் போர்க் கருவிகளும் மறைந்து பல்லாண்டாய் விட்டன. தமிழர்கள் பன்னூறு ஆண்டுக ளாய் நவாபுகள், நாயக்கர், ஆங்கிலேயர் போன்றவர்களிடம் மாறி மாறி அடிமைப்பட்டு உரிமையுணர்ச்சியை இழந்துவிட்டனர். அவர்களின் குருதி குளிர்ந்துவிட்டது. வறுமையில் வாடி வதங்கி நொந்து போயினர். குமரி தொட்டு இமயம்வரை ஏன் ஈழம்வரை வென்று இமயத்தில் குடையையும் திருகோண மலையில் (ஈழத்தில்) கொடி யையும் பறக்க விட்டவர்கள், கடாரம் கொண்டவர்கள் கம்போசகம், சாவகம், புட்பகம், மலையகம் முதலிய நாடுகளை வென்று தங்கள் மீன்கொடி, புலிக்கொடி, வில்கொடி முதலியவைகளை பறக்க விட்டவர்கள் என்று இலக்கியத்தில் கூறுவதை எண்ணி வீட்டிற்குள் இருந்து எண்ணிப் பெருமை பெறுபவர்களாய் இருக்கிறார்கள். ஏட்டில் எழுதினால் பாட்டில் பாடினால் நீங்கள் கூறும் கூற்றிற்கு வட இந்திய வரலாற்றில் இடம் இல்லை. இலங்கை வரலாற்றில் கிழக்காசிய வரலாற்றில் சான்றுகள் இல்லையே என்று நமது மக்கள் கேட்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. தமிழர்கள் வெற்றி யீட்டியது உண்மை; ஆனால் சான்று காட்டி வரலாற்றை நிலை நாட்ட நம்மால் முடியவில்லை. சில நாடுகளில் அவர்களின் முன்னோர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகளைப் பன்னூறு ஆண்டுகள் சென்றும் இன்றுவரைப் பயன்படுத்தி வருகிறார்கள். தொல் பொருள் காட்சி சாலைகளில் சேகரித்து வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகளைப் பாதுகாத்து வைக்கவும் இல்லை. தங்கள் இலக்கியங்களில் இடம் பெறச் செய்யவும் இல்லை. இப்பொழுதுதான் நமது பழைய வரலாறுகளை அறிய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. நமது புதை பொருள் ஆராய்ச்சித்துறையினர் பல இடங்களை அகழ்ந்து சில கருவிகளைக் கண்டெடுத்து வருகின்றார்கள். உலோக காலம் தென் இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் அரும்பி விட்டது. தகரமும் செம்பும் கலந்து வெண்கலம் செய்யப் பெற்றது. தமிழகத்திலும் அதை அடுத்த ஆந்திரம், கேரளம், கன்னடம் முதலிய திராவிட நாட்டிலும் கற்காலத்தை யொட்டி வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் எழுந்தன. கி.மு. 5000க்கு பிற்பட்ட காலம் உலோக காலமாகும். இங்குள்ள சமாதிகள் சிலவற்றில் தொன்மையான அழகிய வெண்கலப் பொருள்கள் காணப்பட்டன. மத்திய இந்தியாவில் உள்ள கங்கேரியா என்னும் இடத்தில் 424 செம்பு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவைகள் கி.மு.2000-ஆம் ஆண்டுகள்வரை பயன்படுத்தப்பட்ட வையாக எண்ணப்படுகின்றன. அங்கு 102 வெள்ளித் தகடுகளும் காணப்பட்டன. சில தகடுகளில் கொம்புள்ள மாட்டுத்தலைகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. வெள்ளி, வெளி நாடுகளினின்று கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செம்பு, பொன் பண்டு தொட்டு இந்தியாவில் கிடைக்கும் பொருள் களாகும். வெள்ளி அதிகமாக இந்தியாவில் கிடைக்கவில்லை. இவைகளையன்றி செம்பினால் உருவாக்கப் பெற்ற உளி, எறிஉளி, வாள், ஈட்டித் தலை முதலிய ஆயுதங்களும் அங்கு கிடைத்தன. இவை கள் கோன்பூர், வாட்டல்கார், மணிபுரி, முத்தா என்னும் இடங் களிலும் வட இந்தியாவில் பல்வேறிடங்களிலும் காணப்பட்டன.1 புதைபொருள்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள ஆதித்த நல்லூர் பரப்பில் 114 ஏக்கர் நிலப்பரப்புள்ள இடத்தில் 1,000 தாழிகள் அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியினின்று 11-கல் தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் கருங்குளத்திற்கும், புதுக்குடிக்கும் இடையே தாம்பிரபரணி ஆற்றின் தென் கரையில் இருக்கிறது. இங்கு அகழ்ந்து பல இரும்பு, வெண்கலப் பொருள் களும் குறிப் பாகப் பல ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகளின் காலம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டு வரை கூறக் கூடிய பழமை வாய்ந்ததாயும் அரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தோடு தொடர் புடையதாயும் இருக்கிறது. இங்கு இரும்பில் செய்யப்பட்ட பல்வேறு அமைப்புள்ள தலைகளையுடைய ஈட்டிகள், உளிகள், முத்தலை வேல் (திரிசூலம்), இருபுறமும் கூரான வாள்கள், அம்பு முனை போன்ற கூரிய எறிவேல் (Barbed Javelines), மீனெறி வேல் போன்ற அரிய ஆயுதங்கள், பல வகையான ஈட்டிகள், சிறிய குத்துவாள்கள் (Dagger), கைக் கோடரிகள், நீண்ட முக்கோணக் கைப்பிடியுள்ள உளிகள், இருபக்கமும் கூறான பெரிய வாள்கள் பல்வேறு வகையான கத்திகள், பலியிடும் வாள்கள், பல்வேறு வகையான வளைந்த கத்திகள், மண் வெட்டிகள், சூலாயுதங்கள், கூரிய இரும்பு முனைகளையுடைய வேற்கம்புகள், அம்பு முகப்புப் போன்ற கூரிய ஈட்டிகள் போன்ற நூற்றுக்கணக்கான போர்க் கருவிகள் கிடைத்துள்ளன. தென் இந்தியாவில் உள்ள ஆதிச்சநல்லுர், செங்கற்பட்டு பல்லாவரம், ஆர்க்காடு முதலிய இடங்களில் காணப்படும் ஆயுதங் கள் போன்று இந்தியாவிலும் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. எனவே பழைய கற்காலத்தில் வாழ்ந்த திராவிடமக்கள் மத்திய இந்தியாவிலும் கங்கை யமுனை வெளிகள் வடமேற்கு இந்தியா ஏன்? இமயமலை வரை சென்று குடியேறியுள்ளார்கள். கி. மு. 4000 ஆண்டுவரை அவர்கள் மத்திய இந்தியா வடமேற்கு இந்தியா வடஇந்தியா பாரசீகம், எகிப்து, கிரீட்தீவு, சைப்பிரசு வரை குடியேறியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இங்கெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.1 எல்லாவற்றிற்கும் மேலாக சிந்து வெளியில் அரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தை இந்தியப் புதை பொருள் ஆராய்ச்சி யாளர்கள் அகழ்ந்து கண்டனர். இது கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதுமக்கள் நாகரிகமாகும்.2 இங்கு பெரிய நகரங்களும் பல்வேறு மாடிகளையுடைய பல மாளிகைகளையும் வீடுகளையும் தெருக்களையும் அணிகலன்களையும், முத்திரை களையும், பானை சட்டிகள் போன்ற வீட்டுக்குரிய பொருள்களும் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு, வெள்ளீயம், காரியம் போன்ற பொருள்களி னால் செய்யப்பெற்ற அணிகலன்களும் ஆயுதங்களும் கண் டெடுக்கப் பெற்றுள்ளன. வெண்கலத்தில் செய்யப் பெற்ற கோடரி, ஈட்டி, வாள், கண்ட கோடரி (மழு), உளி, செம்புக் கத்தி, கல்ஊசி, கற்கோடரி, செம்பு அரிவாள், அம்பு போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஈட்டிகள் நீண்டு அகன்று இலை வடிவில் உள்ளன. கூரிய நுனி களையுடையன. இருபக்கமும் கூராக்கப்பட்டுள்ளன. மரப் பிடி களையுடையன. இவைகளின் மென்மையைப் பார்த்து இவைகள் போர்க்கருவிகளல்ல, வேட்டைக் கருவிகள் என்று கூறுகின்றனர். உடைவாள்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை மரத்தினா லான கைப்பிடிகளைப் பெற்று உள்ளன. இவைகளும் போருக்கு ஏற்றதல்ல. இஃதன்றி இடுப்பில் சொருகி வைக்கத்தக்க இடைவாள்கள் (உடைவாள்) பலவும் கிடைத்துள்ளன. இவற்றுள் சில நீண்டவைகள், சில குட்டையானவைகள். சில இலை போன்ற உருவம் உள்ளவைகள். சில ஒருபுறம் கூராகவும் சில இருபுறமும் கூராகவும் உள்ளன. சில கல் கத்திகளும் வெண்கல வேல்களும் உள்ளன. கூரிய முனையுடன் பாய்ந்தோடக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரியவை 15 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் பல்வேறு வடிவங் களும் பெற்றுள்ளன. வாய்ச்சி களும் உழுகருவிகளும் கிடைத்துள்ளன. சிந்து வெளி - சுமேரிய நாகரிகம். இந்தச் சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது. ஏன்? ஆரிய நாகரிகத்தை விட உயர்ந்தது. இதுவே இந்தியாவின் முதல் நாகரிகமா என்பதில் ஐயம் இருந்து கொண்டு வருகிறது. இது சுமேரிய நாகரிகத்தினின்று பிறந்தது என்றும் இந்திய-சுமேரிய நாகரிகம் என்றும் சிலர் கூறி வந்தனர். இது தவறு; இது இந்தியாவிற்கே ஏற்பட்ட நாகரிகம் என்றும் இது சிந்து வெளியில் மட்டும் காணக்கிடக்கும் நாகரிகம் என்பதை வரையறுத்துக் கூறும் வரை இதைச் சிந்து வெளி நாகரிகம் என்று அழைப்பதே சரி என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். இத்துறையில் நன்கு ஆய்ந்த வரலாற்று நிபுணர் திரு. இராசு அடிகள் (Hr. Heras) இது திராவிட நாகரிகத்திற்கும் முற்பட்டதும் ஆனால் திராவிட நாகரிகத் துடன் தொடர்புடையதுமான ஒரு நாகரிகம் (Proto - Dravidian Civilization) என்றார்.1 வரலாற்றறிஞர் எய்ச். ஆர். ஆல் சுமேரிய நாட்டிற்கும் சிந்து வெளிக்கும் தென் இந்தியாவிற்கும் பழங்காலந் தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்ததென்று தனது நூலில் கூறியுள்ளார்.2 சுமேரிய நாட்டின் தலைநகராகிய ஊரில் அவழ்ந்து ஆராய்ந்த பொழுது 4000 ஆம் ஆண்டிற்கு முந்திய கேரள தேக்கு மரக் கட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இஃதன்றி ஆந்திராவில் உள்ள மசுலிப் பட்டினத்தில் நெய்யப்பெற்ற மசுலின் துணி சுமேரிய மக்கள் அணிந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் சமய நூற்கள், பிற தமிழ் இலக்கியங்கள் இந்தியாவிற்கு வந்து சென்ற வெளிநாட்டார் எழுதிய குறிப்புகள் முதலியவைகளை ஆராய்ந்தால் கி.மு. 1000-ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறந்த நாகரிகம் படைத்த இனத்தவர்களாய் இருக்கலாம் என்று தீர்மானிக்க முடியும். பிரம கிரியில் காணப்படும் பிரேதக் குழிக் கற்கட்டுகள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்புற்றதாகக் கூறப்படுகிறது. இது கி.மு. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சிலர் உறுதியாகக் கூறுகிறார்கள். கி.மு.3500 க்கும் 3000 க்கும் இடையேயுள்ள காலத்தில் திராவிடர்கள் மேற்கு ஆசியாவினின்று இந்தியா போந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் எண்ணு கின்றனர். அவர்கள் வந்த பின் இந்தியாவில் பித்தளை, வெண்கலம், இரும்புக் காலம் அரும்பி இருக்கலாம். மேற்கு ஆசியாவில் கி.மு.2500ஆம் ஆண்டின் அண்மையில்தான் வெண்கலக்காலம் தோன்றியது. கி.மு.3500 முதல் 3000 வரையுள்ள காலத்தை வெண் கலக்காலம் என்று கூறலாம். ஈட்டி, கோடரி, வேல், மண் வெட்டி முதலிய இரும்புச் சாமான்களும் தங்கவாய் மூடிகளும் பாலதீனம் சைப்பிர ஆகிய இடங்களில் காணப்படுவது போல் ஆதித்த நல்லூரிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆந்திர நாட்டிலும் காணக்கிடப்பது இந்த முடிபை உறுதிப்படுத்தும். சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சர் சாண் மார்சல் அவர்கள் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. 7. பண்டைக் காலப் பாரதப் படை எந்த நாட்டிற்கும் இராணுவம் இன்றியமையாதது. வரலாற்றில், படையும், போர் முறைகளும், போர்க் கருவிகளும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பதை யாவரும் அறிவர். இந்தியப்படையின் வரலாறு ஐயாயிரம் ஆண்டு தொன்மை படைத்தது. அது பல்வேறு இனத்தவர்களின் போர் முறையையும், போர்த் தந்திரங்களையும், போர்க்கருவிகளையும், தாக்குதல்களையும் உணர்ந்துள்ளது. பண்டு தொட்டு இன்று வரை இந்தியா எந்த நாட்டினையும் கைப்பற்றி அந்நாட்டை அடிமைப்படுத்தியது இல்லை. சுரண்டி வாழ்ந்ததும் இல்லை. பல நாடுகளோடு போரிட்டதுண்டு; வெற்றி பெற்றதுண்டு. ஆனால் தோல்வியுற்ற நாட்டின் சுதந்திரத்தைப் பறித்து மக்களை அடிமைப்படுத்தியதில்லை. ஆனால் ஆரியர், இந்த நாட்டை வென்று இங்கு குடியேறி விட்டனர். அப்பால் மொகலாயர்கள் வந்து ஆரியரையும் திராவிட ரையும் வென்று இந்நாட்டை அடிமைப்படுத்தி இங்கு குடியேறி ஆட்சி நடத்தி வந்தனர். அப்பால் வந்த ஆங்கிலேயர் இந்நாட்டினை வென்று மக்களை அடிமைப்படுத்தி இங்கிலாந்து நாட்டுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டி தின்று கொழுத்து வந்தனர். 1948-இல் ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவினின்று அடியோடு அகன்றது. இந்தியா இன்று சுதந்திர நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய நாடு, நிலப் பரப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா இன்று தரைப்படை, பீரங்கிப்படை, டாங்கிப்படை, கடற்படை, விமானப்படை முதலியவைகளை நிறுவி அவற்றிற்கு எல்லா விதமான அறிவியல் பாங்கான போர்க்கருவிகளையும் அளித்துள்ளது. இன்று விண்ணை ஆள முயன்று வரும் சோவியத் யூனியன் அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல் 1975-இல் ஆரியப்பட்டாஎன்ற விண்கூண்டை ஆகாயத்திற்கு அனுப்பி உலகப் புகழையீட்டியுள்ளது. இன்று உலக வல்லரசு என்ற பெயரில் வாழும் அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்று உலக வல்லரசாக எழும் வாய்ப்பு இந்தியாவிற்கு உண்டு. சீனா, அமெரிக்கா நாடுகளின் துணையோடும் போர்க்கருவிகளும் மேற்கு வங்க மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அந்நாட்டு மக்களை அடிமைப்படுத்திக் கொன்றுகுவித்து வந்த பாக்கிதான் இராணுவத்திற்கு நல்ல அடிகொடுத்து வீழ்த்தி வங்க நாட்டை சுதந்திர நாடாக மலரச் செய்தது. இந்தியாவின் படைகளையும், படைக்கருவிகளையும் படை முறைகளையும் படைக்கருவிகளைப் பயன்படுத்தும் முறை களையும் உலகம் கண்டு வியப்புற்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் இந்தியா போந்து மிக உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் பெற்று விளங்கிய திராவிட மக்களை வென்று ஒரு அடிமை சகாப்தத்தை உருவாக்கி விட்டனர். மூவாயிரம் ஆண்டுகளாக எத்துணையோ முயன்றும் தன் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிய முடியவில்லை. இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் நடுவில்தான் இந்தியா தன் அடிமை வாழ்விற்கு முடிபுகட்டி ஒரு நிறைவான சுதந்திர நாடாக உலக வல்லரசுகள் அணியில் நிற்க முன் வந்துள்ளது. இனி உலகில் எந்த நாட்டையும் எந்த அயல் நாடும் அடிமைப்படுத்தி வாழ முடியாது என்ற புதிய சுதந்திர உலகில் நாம் வாழ்வதால் இனி இந்தியாவிற்கு அடிமை வாழ்க்கை இல்லை. ஏகாதிபத்தியங்கள் அடியுடன் வீழ்ந்து சரிந்து விட்டது. உலகிலுள்ள சிறு சிறு நாடுகளெல்லாம் சுதந்திரம் பெற்று உலக நாடுகளின் மன்றத்தில், உறுப்பினராய்ச் சேர்ந்து தங்கள் நாடுகளின் விவசாயத்தையும் கைத்தொழிலையும் வளர்த்து அறிவியல் முறையில் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்து வர முனைந்துள்ளார்கள். பழங்காலப் படை இந்தியாவின் பழைய இராணுவ அமைப்பையும் போர் முறைகளையும் போர்க்கருவிகளின் தன்மையையும் படைகளின் வெற்றி தோல்விகளையும் நமது நாட்டு வரலாற்றுச் சான்றுகளி லிருந்தும், கல்வெட்டுகளிலிருந்தும் நினைவுச் சின்னங்களிலிருந்தும் புராணக் கதைகளிலிருந்தும், இலக்கியங்களிலிருந்தும் இந்நாட் டிற்கு வந்து சென்ற வழிப்போக்கர்களின் நாட் குறிப்புகளிலிருந்தும் ஓரளவு அறியலாம். பிற்காலப் படைகளின் வரலாற்றை அரபி நாட்டு அறிஞர்கள், மொகலாய எழுத்தாளர்களும், ஐரோப்பிய அறிஞர்களும் எழுதியுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த முதுமக்களின் வரலாற்றினைத் தொல் பொருள் ஆராய்ச்சி அறிஞர்கள் ஒருவாறு தொகுத்து எழுதியுள்ளனர். பண்டைக் கால வரலாற்றை நன்கு துருவி நுணுக்கமாக ஆய விரும்பும் இளம் சந்ததியார்களுக்கு இன்று நன்கு வழி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் அவர்களுக்கு ஒளி விளக்காக இலங்குகிறது.1 வட இந்தியாவின் நிலமும் நீரும் மலையும் ஆறும் காடும் அப்பகுதியை வளமுடையதாய்ச் செய்துள்ளன. அயல் நாட்டு மக்களைக் கவர்ந்தன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னிருந்து வட இந்தியாவிற்கு வெளி நாட்டு மக்கள் வருவதற்கு முக்கிய காரணம் அதன் வளமும் செல்வமுமேயாகும். முதன் முதலாக கி.மு.4500 ஆண்டுகளுக்கு முன் அண்டை நாட்டுக்காரர்களின் மரபு வழக்கிற்கு இந்தியா பலியாயிற்று அசிரிய அரசியான அழகி செமிராமிசு (Semiramis) கங்கை, சிந்து ஆற்றின் விளைபொருள்களைக் கண்டு அதைக் கவரக் கனவு கண்டாள். அவளது கனவு விரைவில் நனவாயிற்று. அவர்கள் இதை ஆக்கிரமிப்பு என்று எண்ணவில்லை. தங்களின் முன்னோர்களின் தாயகம் என்று எண்ணிக் கொண்டனர். சுமேரியர்களும் அசிரியர்களும் சிந்து வெளியில் குடியேறி அரப்பா, மொகஞ்சதாரோ, சங்குதாரோ, லொகுஞ்சுதாரோ போன்ற நகரங் களைக் கட்டி எழுப்பினர். ஆற்றங்கரைகளில் உள்ள சமபூமி யையும், வண்டல் நிலங்களையும் வெட்டித் திருத்திப் பயிர் செய்தனர். புனல் நாடு, கோதுமை வயல் நிறைந்த நஞ்செய் நாடாக மாறியது. காய்கனிகள் பயிரிடப்பட்டன. மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எழுந்தன. ஓடம், தோணி, கப்பல் முதலிய நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்களும், வண்டி பொதி மாடு போன்ற நிலவழிப் போக்குவரத்துச் சாதனங்களும் செய்தனர். சிந்து வெளி மக்கள் தென் இந்தியாவோடும் ஆப்கானிதான், சுமேரியா, அசிரியா, சால்டியா, எகிப்து முதலிய நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டனர். சிந்து வெளி உலகிலே செல்வச் செழிப் புள்ள நன்னாடாக மலர்ந்தது. உலகிலே ஒப்பற்ற நாகரிக நாடாகத் திகழ்ந்தது. இந்தச் சிந்து வெளி மக்கள்தான் முதன் முதலாகத் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்டனர். இவர்களிடம் சக்தி வழிபாடும் ஆட வல்லான் வழிபாடும் காளை (நந்தி வழிபாடும்) பல சிறு தெய்வ வழிபாடும் உண்டு. அசிரிய அரசி செமிராமிசை அவளது பகைவனான இஷ்டிப்ரோ பேட்சு அவளை தாபர் பதியோடு ஒப்பிட்டான். அதாவது செமிராமிசு மாபெரும் மலை களும், பேராறுகளும் நெடிய மரங்களும், பெரிய காடுகளும் நிறைந்த மாபெரும் வெளியின் இறைவி என்று குறிப்பிட்டான். இந்தியாவின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளி லும், கவிதை களிலும் குறிப்பிடும் சிவபெருமானின் தேவியாகிய மலைமகளாம் உமா அம்மையோடு ஒப்புடையவள் என்று கூறலாம் என்பதே இதன் பொருளாகும். மற்றொரு கதை, இந்தியாவில் எகிப்தியர் குடியேறியதாகக் கூறுகிறது. எகிப்தியர் பல்வேறு தலைவர்களின் தலைமையில் இந்தியாவிற்கு வந்து குடியேறினர் என்று கூறப்படுகிறது. இந்தத் தலைவர்களின் பெயர்கள் பாச்சு, செசோடிரி அல்லது பரசுராம் என்று தெரிகிறது. பரசுராமன் பரசு என்னும் படைக் கலத்தை உடையவன் என்று பொருள்படும்.1 முதல் ஆக்கிரமிப்பு சுமேரியா, அசிரியா, எகிப்து முதலிய நாடுகளினின்று சிந்து வெளியில் குடியேறி ஆற்றங்கரை நாகரிகத்தை எழுப்பிய பண்புமிக்க மக்களை அயல் நாடுகளினின்று ஆடுமாடுகளை மேய்த்து வந்த நாடோடிகளான ஆரிய மக்கள் கி.மு.3000ஆம் ஆண்டுகளுக்கு முன் வென்று அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பாலோரை தென்னிந்தியா விற்குள் தள்ளினர். சிலர் பலுச்சிதானத்திலும் சிலர் வட இந்தியா வின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சம்பவம். இதனை வரலாற்று அண்மைக் காலத்தில் (Proto Historic Period) நிகழ்ந்த நிகழ்ச்சி என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. சிந்து வெளி நாகரிகம் ஆரியர்களால் அழிக்கப் பட்டது என்ற உண்மையை உலகம் அறியாதிருந்தது. இந்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் அகழ்ந்து 1930ஆம் ஆண்டில், சிந்து வெளியில் திராவிட மக்கள் குடியிருந்து வந்தனர். ஆரியர்கள் படை யெடுத்து அவர்களை வென்று அவர்களின் நாடு நகரங்களை அழித்தனர். உலகிற்கு உணர்த்தினர். உலகம் மூவாயிரம் ஆண்டுகளாக அறியாத ஒரு பெரிய வரலாற்று நிகழ்ச்சியை சர். சாண்மார்சல் என்னும் இந்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் தளபதி (Director General) உலகிற்கு அறிவித்தார்.1 இந்த வரலாற்று உண்மையை உலகிற்கு உணர்த்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்கை அன்னை தன் அடிவயிற்றில் அடக்கி வைத்திருந்த அரிய கருவூலத்தை அறிஞர்கள் கண்களில் படும்படி செய்தார் என்று அறிஞர்கள் புகழ்ந்தனர்.2 சிந்து வெளியில் நாகரிகம் வாய்ந்த நனி சிறந்த மக்கள், நாடோடி மக்களாய் வந்த ஆரியர்களிடம் தோல்வியுற்றனர் என்பது வியத்தகு செய்தியேயாகும். சிந்து வெளியில் வாழ்ந்த திராவிட மக்கள் போரை விரும்பாதவர்கள். போருக்கு அவர்கள் தயாராக இருக்க வில்லை. அவர்களிடம் செம்பு, வெங்கல ஆயுதங்களே இருந்தன. அவர்களிடம் மெதுவாகச் செல்லக் கூடிய எருதுகள்தான் இருந்தன. அவைகள் தான் தேர்களை இழுத்துச் சென்றன. உலக மெங்கும் உள்ள விவசாயிகளைப் போல் சிந்து வெளியில் வாழ்ந்த விவசாயி மக்களும் போர்க் குணம் பெறாதவர்கள். அறிவர்கள்; அறவழியில் நிற்பவர்கள். அறப்போர் நடத்துபவர்கள் ஆனால் அவர்கள் தற்பாதுகாப்பிற்காக தங்கள் நகரங்களைச் சுற்றிப் பெரிய அரண்களை அமைத்திருந்தனர். அவர்களிடம் வேலும் வாளும் கோடரியும் (பரசும்) கத்தியும், அரிவாளும், உலக்கையும் இருந்தன. அவர்களிடம் பயிற்சி பெற்ற படைகள் இருந்ததா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் ஆரியர்கள் போர்க்குணம் வாய்ந்தவர்கள். போர்ப் பயிற்சி பெற்றவர்கள். அவர்களிடம் குதிரைகள் இருந்தன. வேகமாக இழுத்துச் செல்லக் கூடிய தேர்ப்படையும், காலாட்படையும் இருந்தன. வில், வேல், வாள், கத்தி, கிரீ வேல்கம்பு போன்ற எஃகு ஆயுதங்கள் இருந்தன. ஆறுகளைக் கடந்து செல்லத்தக்க ஓடங்களும், படகுகளும், இருந்தன.3 ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் கடலைக் கண்டதே இல்லை. அவர்களுக்குக் கப்பல் கட்டவே தெரியாது. சிந்து வெளி மக்கள் கபில நிறம் வாய்ந்தவர்கள். ஆரியர் களைப் போன்று நீண்ட மூக்கு உடையவர்களாக இருந்தனர். எகிப்தியர், சுமேரியர், அசீரியர் முக அமைப்பை உடையவர்களாக இருந்தனர். அவர்கள் வாள் எளிதில் உடையக் கூடியதாக இருந்தது. அவர்களது கைக்கோடரிகள் மிக உயர்ந்தது. அவர்களது வேல் மிகச் சிறந்தது என்று ஐரோப்பிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.1 சிந்து வெளித் திராவிட மக்களிடம் தற்காப்புக்குரிய சாதனங்கள் இருந்தது. அவர்களது செங்கற்கோட்டையைச் செம்புக் கோட்டை என்றும் கருங்கல் கோட்டையை இரும்புக் கோட்டை என்றும் அவர்களது வெள்ளைக்கற் கோட்டையை வெள்ளிக் கோட்டை என்றும் அறியாமையால் கூறி வந்தனர். திராவிட மக்களின் வீரத்தையும் போர்த்திறனையும் ஆரியர்கள் கண்டு அஞ்சி அவர்களை அரக்கர், இராட்சதர் என்றும் கூறி வந்தனர். அவர்களின் தெய்வ வழிபாடாகிய இலிங்க வழிபாட்டை சிசின தேவர் வணக்கம் என்று இழித்துக் கூறிவந்தனர். ஆரியர்களின் எஃகு ஆயுதமும் குதிரைப்படையுமே அவர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தது ஏறத்தாழ கி.மு.3000-ஆக இருக்கலாம். அவர்களது வேதகாலம் கி.மு. 3000-க்கும் 1500க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று என். தத்தர் கூறியுள்ளார்.2 இராமாயணப் போர் (கி.மு.1500-1000) இராமாயணம் வட இந்தியர்களுக்கும் - தென் இந்தியர் களுக்கும் இடையே நடந்த போராகும். இதைத் தேவர் - அசுரர் யுத்தம் என்றும் இராமனுக்கு உதவி செய்த தென்னிந்தியர்களைக் குரங்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அறிஞர்களால் கருதப் படுகிறது. பண்டித நேரு அவர்கள் மகளுக்கு எழுதிய கடிதம் என்னும் நூலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் போரை சில அறிஞர்கள் சைவத்திற்கும் வைணவத் திற்கும் நடந்த போர் என்று காண்கின்றனர். சிலர் ஆரியர் திராவிடப் போர் என்கின்றனர். எக்கர்டன் என்ற ஆங்கில அறிஞர் பிரா மணியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே எழுந்த போர் என்று புகல்கின்றார்.3 சிலர் இந்தக் காப்பியம் வெறும் கட்டுக்கதை என்று கூறுகின்றனர். இந்த நூலில் வழக்கம் போல் வில், அம்பு, வாள், வேல், கதை போன்ற கருவிகள்தான் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதன் சக்தி விரித்துரைக்கப்பட்டுள்ளன. இப்போரில் இராவணன் இறந்தான். போர் ஆடியில் முடிவுற்றது. எனவே தமிழர்கள் ஆடியில் இன்று வரை துக்கம் கொண்டாடுகிறார்கள். ஆடியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யார்கள். பாரதப் போர் (கி.பி 1400-1000) பாரதப் போர் ஆரிய மன்னர்களின் குடும்பத்திற்குள் எழுந்த ஒரு சிறு போராகும். இது 14 நாள் நடைபெற்றது. இதில் இருபுறமும் பெரிய அளவு ஆள் நட்டம் அடைந்துள்ளனர். இப்போரில் திராவிட அரசனான கிருஷ்ணன் கலந்து கொண்டான். பாரதப் போரில் தமிழகம் கலந்து கொள்ளாவிட்டாலும் போரில் ஈடுபட்ட மக்களுக்கு உணவு அளித்து உதவியதாகத் தெரிகிறது. உதியம் சேரலாதன் உணவு அளித்தான் என்று சங்க நூல் சான்று தருகிறது. பாரதப் போர் பங்குனித் திங்களில் முடிவுற்றது. பங்குனி மாதத்தில் பல்லாயிரம் மக்கள் உயிர் துறந்ததால் அத்திங்கள் முழுவதையும் தமிழர்கள் துக்க நாளாகக் கொண்டாடினர். அத் திங்களில் தமிழர்கள் திருமணம், வீடுகுடிபுகுதல் போன்ற நல்ல காரியங்களை இன்றுவரைச் செய்வதில்லை. பாரதப் போரில் முக்கிய பங்கு வகிக்கும் அருச்சுனன் திராவிடத் தொடர்பு உடையவன். அவன் திராவிட அரசனான கிருஷ்ணன் (கருப்பன்) தங்கை சுபத்திரையை மணந்தவன். அதோடு பாண்டிய அரசன் மகள் அல்லியை மணந்தவன் என்றும் கூறப்படுகிறது. இவன் வில் வித்தையில் இணையற்றவன். இவன் ஒரு எருமை மாட்டின் கொம்புகளினூடே 21அம்புகளை விடுத்தானாம். இவனது தேர் ஓடிக்கொண்டிருக்கும் போதே தன் எறிவட்டை (சக்கரத்தை)ச் சரியாக குறி தவறாது விடுத்துப் பரிசு பெற்றவன் ஆவன். நீரில் நடுவில் நிற்கும் கம்பத்தின் மீதுள்ள ஒரு மீனை, மேலே பார்க்காது கீழே நீரில் காணப்படும் மீன் உருவின் நிழலைப் பார்த்துக் கொண்டு வில்லைக் கையிலேந்தி அம்பை மீன் உருவின் மீது குறி தவறாது எய்யும் வில் போட்டியில் வெற்றி பெற்று துரோபதையை மணந்து அவளைத் தானும் தனது உடன் பிறந்தார் நால்வரும் மனை மனைவியாக பொது உடைமையாக அனுபவிக்க உலகிற்கு வழிகாட்டியவன். இதனால் தமிழ் நாட்டில் ஐவருக்கும் தேவி - அழியாத பத்தினியாம் என்ற ஒரு பழமொழி எழுந்தது. அர்ச்சுனன் இந்தியாவின் பழைய குடிமக்களை வென்று கொன்று அவர்கள் குடும்பப் பெண்கள் பலரை மணந்து ஆரிய இனம் எண்ணிக்கையில் பெருக வழிவகுத்தவன். ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம், அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாது என்ற பழமொழி தமிழகத்தில் எழுந்தது. பஞ்சாப்பில் ஆரிய சமூகத்தில் பல சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து கூட்டுக் குடும்பம் நடத்தும்முறை இன்றும் உள்ளது. பெண்கள் பற்றாக் குறைவினால் எழுந்த பழைய சமூக அமைப்பு இன்றும் நிலவி வருகிறது. அர்ச்சுனன் வில் காண்டீபம் என்று கூறப் பெற்றுள்ளது. இந்தியாவில் எழுந்த இதிகாசப் போர்களில் பலவகையான படைக்கலன்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப் பெற்றுள்ளன. இன்று அதன் பெயர்களைக் கொண்டு அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது அவை எங்கும் உபயோகத்தில் இல்லை. அகழ் ஆய்விலும் காண முடியவில்லை. பிண்டி என்பது கையினால் எறியும் ஒரு குட்டையான குழாய் வடிவான படைக்கலம் என்று கருதப்படுகிறது. குறுந்தடி என்று கூறப்படுவது குட்டையான வாளாக இருக்கலாம் அல்லது கைத்தடி போன்ற வாளாகவும் இருக்கலாம் என்று விளக்கந்தரப்படுகிறது. குண்டாந்தடி அல்லது கைத்தடி என்ற கருவி இடுப்பில் இணைக்கப் பட்ட உலக்கை வடிவான ஒரு போர்க் கருவி என்று கூறப்படுகிறது. இராமாயணத்தில் இது சிறு தெய்வங்களின் (Demon) போர்க் கருவியாக இருந்தது. மேலும் தோமரம், புசண்டி, தண்டகாந்தகா, சாவாலா, பரசு (பிறை வடிவான கைவாள்), முனைப் பகுதி அகன்ற கொடுவாள் (Seimitar) கொட்டாப் புளி போன்ற பல கருவிகளும் பயன்படுத்தப் பெற்றுள்ளன என்று தெரிகின்றன. கத்தி வகைகளில் கட்டாரி, அசிப்புத்திரி, சூரிகை, அசிதனுகா போன்றவைக ளெல்லாம் ஏறக்குறைய அதே காலத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் சிற் சில வேற்றுமைகள் உள்ள கருவிகளாகும். பகைவர்களை வலிந்து தாக்கும் போரில் பழங்கால ஆரிய மக்கள் பயன்படுத்திய கெட்ட நாற்றமுள்ள நச்சுக் காற்று, கொதி எண்ணெய் முதலியவைகளைப் பற்றியும் நாம் அறிந்திருக்கின்றோம். பகைவர்களின் போர் அணியில் பேரழிவை உருவாக்குவதற்கு எறியும் அருவருக்கத்தக்க கயிறு போன்ற பிசுக்குப் பொருள்களால் முடை நாற்றத்தை உண்டு பண்ணி அழிப்பது, கொதி எண்ணெயை, சூடாக்கப்பெற்ற மணலை, அனல் வீசும் இரும்புப் பந்தை பகைவர்கள் மீது பயன்படுத்தி பகைவர்களை அழித்துள்ளனர். நச்சுப் பண்டங் களை யானைகளின் முதுகு பக்கத்திலிருந்து பகைவர்கள் மீது வீசுதல் போன்ற மறப்போரை ஆரியர்கள் செய்து வந்தனர். சிந்து வெளியிலும் ஆரியர்கள், இந்தக் கொடிய போர் முறைகளைக் கையாண்டு திராவிட மக்களை அழித்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பிற்காலத்தில் திராவிடர்களும் இந்த முறைகளைப் பின்பற்றியிருக்கலாம். ஆரியர்கள் இந்தியாவில் குடியேறி நிலையான ஆட்சி அமைத்த பின் அவர்களின் இராணுவம் புதிய முறையில் உருப்பெற்றெழுந்தது. அவர்கள் படை, தேர்ப்படை, குதிரைப் படை, யானைப்படை, காலாள் படை என நாலுவகையாகப் பிரிக்கப்பட்டன. தேர்ப்படையில் பல பெரிய தேர்கள் இடம் பெற்றன. தேரில் பலமணிகள் தொங்க விடப்பட்டன. படையில் முக்கியமானவர் களை யானை ஏற்றிச் சென்றது. காலாட்படை ஈட்டி, வாள், வில் முதலியவைகளைப் பெற்றிருந்தது. போர் மறவர்கள் தலையில் தலைப்பாகையும், இடுப்பில் அரைக்கச்சையும் குறுங்கால் சட்டையும் அணிந்திருந்தனர். இடுப்பைச் சுற்றி ஒரு சிறிய தோல் வாரில் பல மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அவர்களிடம் அதிகமான குதிரைகள் இல்லை. குதிரைப் படையை அவர்களால் பெருக்க முடியவில்லை. போர்த்திட்டங்கள் எளிதாக ஆரியர்க்குப் பிராமணர்களே வரைந்து வந்தனர். இளவேனிற்காலம் எழுந்ததும் அல்லது கூதிர் பருவத்திற்குரிய பயிர்கள் விளைந்ததும் அரசன் நேராகத் தலைநகரை நோக்கிப் படைகளை நடத்திச் செல்ல வேண்டும். படைகள் அணிவகுத்து முன்னேறிச் செல்லும் பொழுது அரசனும் படை வீரர்களைப் போல முன்னணிப் படையோடு சென்றான். பெரும்பாலும் சாய்சதுரத்தில் முன்னணிப் படையோடு அரசன் செல்வது முறையென எண்ணப்பட்டது. கூழைப்படை (பின்னணிப்படை) குறுகியதாயும் அதன் நடுப்பகுதி அகன்றும் ஒரு மகரம் போல் (ஒரு கடல் விலங்கு போல்) இரட்டை முக்கோணத்தில் மேல் நுனியோடு இணைந்து ஊசி போல் அல்லது நீள்வரிசையில் விஷ்ணுவின் மலர் மொக்குப்போல் - அதாவது செவ்விணைவகமாய் இருபுறங்களும் பெரிதும் விரிந்து இருக்கும். தலைவனுடைய விருப்பம் போல் மிக நெருக்கமான காலாட்படையில் ஒரு சில வீரரை ஈடுபடும்படி ஆணையிடலாம். அல்லது உதிரியான ஒரு அணியினின்று அதிகமான வீரர்களை ஈடுபடும்படி ஆணை பிறப்பிக்கலாம். இப்படையை நீண்ட அணியாக அமைக்கலாம். அல்லது இடியேறு போன்ற மூன்று படைப்பிரிவுகளைப் போருக்குச் செல்ல ஆணையிடலாம். எல்லா விதமான படைக்கலன்களோடு அரசன் தேர் மீதேறி அல்லது குதிரை மீதமர்ந்து போருக்குப் போவான். ஆறு கால்வாய் முதலிய நீர் நிலை களைக் கடப்பதற்கு அரசன் தோணி அல்லது யானை மீது அமர்ந்து செல்வான். காடடர்ந்த பகுதிகளில் செல்லும் பொழுது வில்லோடும் சமவெளிகளில் வாளோடும், குறிவட்டத்தில் மற்ற ஆயுதங்களோடும் வீரர்கள் செல்வர். 10,000 பகைவர்களுக்கு ஒரு அரணில் உள்ள 100 வில்லாளிகள் சமமாக இருப்பர் என்று போர் விதிகள் இருந்தன. எனவே அரண் களின் பாதுகாப்பிற்கு வில் ஏற்ற கருவியாக இருந்து வந்தது. காப்பரண் செங்குத்தான குன்று அல்லது பாறை மீது கட்டப் பெற்றிருந்தது. அதில் போரிடும் இயந்திரம் போன்றவற்றை வைத் திருந்தால் அதை எளிதில் அசைக்க முடியாது. போர் விதிகள் மிக நுணுக்கமான நுண்ணறிவின் மீது செய்யப் பெற்றிருந்தன. அது நச்சுடையதும் தீங்கான விளைவுகளை ஏற் படுத்தும் எஃகு முனைகளைப் பெற்ற மரக்கணைகளும், நெருப்புக் கணைகளும் விலக்கப்பட வேண்டும் என்று போர் விதிகளில் கூறப் பெற்றிருந்தன. ஆயுதம் அற்றவர்கள், காயம் உற்றவர்கள், ஆயுதங்கள் உடைந்து நிற்பவர்கள், தானாகச் சரண் அடைந்தவர்கள், தன் உயிருக்காகக் கெஞ்சுபவர்கள் இன்னோரன்ன பகைவர்களின் படை வீரர்களைத் தாக்குதல் போர் மரபன்று என்று விதிகள் விதிக்கப்பட்டன. பல புராணங்களில் போர்க்கலையின் விளக்கந்தரப் பெற் றுள்ளன. அதில் வில் மறை (தனுர் வேதம்)அல்லது வில்களின் அறிவியல் என்பதைப் பற்றி விளக்கம் கூறப்படுகிறது. ஆனால் இந்த மறை நூல் இதுவரை எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்கினி புராணத்தின் மூலம் வில்லானது போரில் ஒரு முக்கியமான ஆயுதமாக இருந்தது என்று மட்டும் அறிய முடிகிறது. அபே டூபாய் (Abbe Dubois) என்னும் அறிஞர் இந்தியாவில் இந்துக்களிடம் முற்காலத்தில் முப்பத்திரண்டு விதமான படைக் கலன்கள் இருந்தன என்றும், இந்துக்களின் முப்பத்திரண்டு தெய்வங் களில் ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு சிறப்பான ஆயுதத்தை வைத்திருந்தது என்றும் கூறியுள்ளார். கிருஷ்ணணும் இராமனும் போர்க் கோடரி, வில் போன்ற சிறப்பான ஆயுதங்களை உடையவர்க ளாய் விளங்கினர். விஷ்ணு திகரியைப் பெற்றிருந்தார் (Steel quoit - வைத்திருந்தார்) போர்க் கடவுளான கார்த்திகேயன் வேலைத் தாங்கி இருந்தார். இயக்கர் தலைவனான இராவணன் நூற்றுக் கணக்கான அரிய போர்க் கருவிகளை வைத்திருந்தான். இராணுவத் தாக்குதலுக்குப் போர்க்கருவிகளை வகை வகையாகப் பகுத்து ஒழுங்குபடுத்தி வைத் திருந்தான். ஆரியர்களின் அரச தெய்வமான இந்திரன் யானை மீது ஏறி வருபவனாய் வச்சிரம் தாங்கியவனாய் இருந்தான். அவன் வாள், கோடரி, திகிரி போன்ற கருவிகளையும் பயன்படுத்தினான் என்று ஆரியர்களின் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆரியர்கள் வெடி மருந்துகளைப் பயன்படுத்தினர். இதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் சர். எய்ச். எலியட் நன்கு ஆய்ந்து வெடி மருந்துகளை முற்காலத்தில் இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.1 மேலும் உந்து குண்டு வாணம் (Rocket) அல்லது நெருப்பு ஆயுதம், தீ அம்பு (அக்கினி அதிரம்) முதலியவைகளை மிகத் தொன்மையான காலத்திலே இந்தியர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும். மூங்கில் குழாயில் வெடி மருந்தை அடைத்து ஒரு வித நெருப்பு மூடியிடப் பட்ட ஏவுகணை செங்குத்தாகச் செல்லுமாறு ஏவப்பட்டு வந்தது. இது குதிரைப் படையினை எதிர்த்து விடப்பட்ட போர்க்கருவி யாகும். புராணங்களில் இது விளக்கிக் கூறப் பெற்றுள்ளது. விசுவகர்மாவை அவருடைய இரும்பு வேலைக்காரன் தீயைக் கக்கும் ஏவுகணைகளைச் செய்து போரில் பயன்படுத்துமாறு தூண்டினான் என்று தெரிகிறது. படிப்படியாக நூறு ஆண்டுகள் இந்த ஏவு கணைகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த அறிவே துப்பாக்கி மருந்து போன்றவற்றைச் செய்யும் அளவிற்குத் துணையாக இருந்தது என்று கருதலாம். கந்தகத்தாலும் வெடியுப்பினாலும் இணைந்த பொருள்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. இந்த எறிபடை முற்காலத்திலே மறைந்து போய் விட்டது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் இரச கற்பூரப் பந்து, மேலை நாட்டினின்று வந்த வெடிக்கும் போர்க்கருவிகளின் மறு மலர்ச்சி வரை உபயோகிக்கப்பட்டிருக்கலாம். தொன்மையான காலந்தொட்டு கி.மு.6000-ஆம் ஆண்டுகட்கு முன்பே மெசபொத்தாமியாவின் உனபதியா நாட்டுடன் இந்தியா தொடர்பு கொண்டிருந்தது. தென் இந்தியர் அங்கு குடியேறியுள்ளனர். கி.மு.4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்க ளுக்கும், மைய நடு நிலக் கடற் பகுதிகளிலுள்ள கடலையடுத்த நாடுகளோடு - சிறப்பாகப் பொனிசியர்களுக்கும் இடையே வணிகத் தொடர்பு வளர்ந்திருந்தது. பைபிளில் கூறும் நோவாவின் வெள்ளப் பெருக் கிற்குப் பின் இந்தியர்கள் எகிப்திற்குச் சென்று அங்கு குடியேறி காடுகழனிகளைத் திருத்தி நாடு நகரங்களை அமைத்து இந்து நெறியை நிலை நாட்டியுள்ளார். உலக வரலாற்றை எழுத முனைந்த முதல் வரலாற்றாசிரியன் தனது நூலில், தாமரை மலர் இந்தியாவி லிருந்து பெற்ற மலரல்ல, எகிப்தில் இந்தியர் குடியேறி இந்து சமயத்தை நிலை நிறுத்துவதற்கு முன்பே தாமரை எகிப்து நாட்டின் தனிச்சிறப்பிற்குரிய மாமலராக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது ஆராயத்தக்கது.1 கிறித்தவ மறையின் பழைய ஏற்பாடு கூறும் சாலமோன் ஞானி நிறுவிய எகிப்திய பேரும் பெருமையும் பெற்ற திருக்கோயிலுக்குத் தென் இந்தியாவிலுள்ள உவரி என்னும் கடற்றுறைமுகத்தினின்று பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயிலிறகு, அகிற்கட்டை, ஆட்டு முடி முதலியவைகளை பொனிசியர்கள் கப்பல்கள் மூலம் ஏற்றிச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. பைபிளில் உவரியின் பெயர் ஒபிர் (Ophir) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபீர் ஆப்பிரிக்காவில் இருப்பதாக எண்ணப்பட்டது. இப்பொழுது அறிஞர்கள் ஆய்ந்து பொனிஷியர் கப்பலில் ஏற்றிச் சென்ற மயில் இறகும் அகில் இறகும் ஆப்பிரிக்காவில் கிடையாது. இந்தியாவின் தென் பகுதியிலுள்ள நாடுகளில் தான் கிடைக்கும். எனவே ஓபிர் தென் இந்தியாவில் உவரிப்பட்டினமே என்று உறுதிப்படுத்தி பல அறிஞர்கள் எழுதி யுள்ளனர். கிறித்தவர்களின் முதல் இந்தியக் கண்காணியார் (நல்லாயர்) என்று போற்றும் பிசப் அசரியாஅவர்களும் அவரது தம்பி தாம M.A. அவர்களும் பிசப் கால்டுவெல் அவர்களும் இதனை வலியுறுத்தி எடுத்துக் காட்டியுள்ளனர்.1 சிந்து வெளியில் செப்பும், வெண்கலமுமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. சிந்து வெளியின் சீரிய நாகரிகம் கி.மு.3000-ஆம் ஆண்டில் எழுந்த செம்புக் காலத்தில் நிலவியது. ஆனால் அதே காலத்தில் தென் இந்தியாவில் இரும்புக் காலம் நிலவியது. கி.மு 2000-ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் செய்ய இரும்பு வாள் இரும்புக் கத்தி, இரும்பு வேல், இரும்பு கோடரி முதலியவைகள் திருநெல்வேலி ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. தென் இந்தியாவின் இரும்புப் பண்டங்கள் அபிசீனிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அபிசீனிய நாட்டுத் துறைமுகங்களில் இந்திய இரும்புப் பண்டங்கள் காணப்பட்டதாக பெரிப்புள என்ற வரலாற்று நூலின் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கண்ட எஃகு ஆயுதங்களும் எஃகுப் பொருள்களும் சென்னைத் தொல் பொருள்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ளன. பாரசீகர், கிரேக்கர் படை எழுச்சி வட இந்தியா மீது பாரசீக மன்னன், ஆரிய மன்னன் சைரசு (Cyrus) பெரும்படையோடு வந்து சிந்து வெளியை வெற்றி கொண்டான். இந்தப் படை எடுப்பைப் பற்றிக் கிரேக்க எழுத்தாளர் கள் தம் ஏட்டில் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு எல்லை வரை சைரசு ஆட்சி நிலவியது என்று கிரேக்க எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஆரிய வீரன் சைரசு ஆட்சி இந்தியா வின் மையப் பகுதி வரை ஊடுருவி இருந்தது என்று பாரசீக எழுத்தாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். கி.மு.521-க்கும் 486-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் எல்லைப்புறத்தில் மா மன்னன் முதலாம் தாரியசு (Darius I) புகுந்து வெற்றியீட்டி சிந்து ஆற்றைக் கடந்தான். டான்யூர் ஆறு வரை அவன் படை சென்றது. ஆப்கானிதான் பலுச்சுத்தான் மேற்குப் பஞ்சாப் கிழக்குச் சிந்து முதலிய பகுதிகளை வென்று தன் ஆட்சியை விரிவாக்கினான். ஆனால் அடிமைப்படுத்தப்பட்ட குறு நில மன்னர்கள் தாரீயசுக்கு புகழ் மாலை பாடி வந்தனர். படைத் தலைவன் சிசிலாசுக்கு அடிபணிந்து நடக்குமாறு ஆரிய மக்களின் தலைவர்கள் ஆணை யிட்டனர். கி.மு.326ஆம் ஆண்டு கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர் வட இந்தியா மீது படையெடுத்து வந்து சிந்து வெளியில் புகுந்தான். திராவிட மக்கள் போர தலைமையில் ஒன்று திரண்டு எதிர்த்து நின்றனர். இந்தப் போரைப் பற்றிய விளக்கமான விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கியூண்ட கர்ட்டியசு (Quentus curtius) என்பவரின் விவரமான அறிக்கையினின்று, இந்தியப்படைகளின் தன்மையும் திண்மையும் ஓரளவு அறிய முடிகிறது. இந்தியப் படை, தற்பாதுகாப்புக்காக எவ்வளவு காலாட்படை, எவ்வளவு யானைப் படை, எவ்வளவு தேர்ப்படை வைத்திருந்தனர். அவர்களின் போர் ஒழுக்கம் எவ்வாறிருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியர் கிரேக்கர்களின் கொடிய எதிர்ப்பை, அரிய போர்த் தந்திரங்களை எவ்வாறு சமாளித்தனர்? சீலம் ஆற்றை அலெக்சாந்தர் எப்படிக் கடந்தான்? என்பன ஆராயத்தக்கன. அலெக்சாந்தரை எதிர்த்து நின்ற இந்திய மாவீரன் போரசின் படையில் 85 யானைகளும், 300 தேர்களும் இருந்தன. ஒவ்வொரு தேரிலும் 6போர் வீரர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் கேடயந் தாங்கி இருந்தனர். இருவர் வில்லேந்தி நின்றனர். இருவர் தேரோட்டிகளாய் அமைந்துள்ளனர். அவர்கள் கை வேல்களைப் பெற்றிருந்தனர். முப்பதாயிரம் அடிகள் நிலப்பரப்பில் நாலாயிரம் குதிரைகள் மீது வில் வீரர்கள் அணி வகுத்துச் சென்றனர். அவர்கள் தம் கூரிய நுனியையுடைய அம்பு களைப் பாய்ச்சுவதை எதிரிகள் கண்டு பிடிப்பது அரிதாக இருந்தது. அலெக்சாந்தர் தேர்களோடு போந்து முதல் தாக்குதலை நடத்தினான். நிலத்தின் இயற்கையான வழுக்கும் நிலையினின்று கிரேக்கப் படை விடுபட முடியாதிருந்தது; கிரேக்கப் படை இதனால் குழப்பமுற்றது. மாசிடோனிய மாபெரும் தரைப்படை தம் உறுதியான தாக்கு தலினால் பல நஷ்டங்களையும் கஷ்டங்களை யும் பெற்றது. அவர்களின் யானைகள் இரண்டாவது அணியில் நின்றன. அதற்குப் பின் காலாட் படை நின்றது. போர் நிகழும் பொழுது வில் வீரர்கள் முரசு முழக்கினர். அவர்களின் காலாட்படை அணி முன்புறம் தள்ளிக் கொண்டு நின்றது. குதிரைப் படை பக்க அணியாய் நின்றது. அவர்கள் பிற படைகளை விட யானைகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் கிரேக்கர்களின் வாள் களும், கோடரிகளும் குறைவுடையதாய் இருந்தன. இவை அவர்களின் பேராசைக்கும், போர் வெறிக்கும் காரணமாக இருந்தன. ஆனால் இவை, போரில் முடிபு காண்பதற்குத் துணையாக இருந்தன. மகா அலெக்சாந்தரின் அடுத்த ஆவல் மாபெரும் கங்கைக் கருகிலுள்ள சட்லஜ் ஆற்றுக்கு அப்பாலுள்ள மகத ஆட்சியைத் தாக்குவதேயாகும். மகத அரசன் 30,000 குதிரைகளையும் 90,000 யானைகளையும் 600,000 தானைகளையும் போர் முனைக்குக் கொண்டு வரக்கூடியவனாய் இருந்தான்.1 அலெக்சாந்தரின் வீரப் படைகள் சட்லஜ் ஆற்றைக் கடக்க மறுத்தன.2 அவரது மரணத்திற்குப்பின் இந்தியாவில் என்ன நிகழ்ந்தது என்பதை ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் கூறாது என்ன நடந்தது என்று தெரியாது என்கின்றனர். அவருக்குப் பின் வந்த செலுக்க சிந்து ஆற்றைக் கடந்ததும் சந்திர குப்தனால் தோல்வி யுற்றதும், மகத ஆட்சியின் முழுப் பலமும் தெரியாது என்றும் கூறுகின்றனர். இந்தப் படை எழுச்சியின் பயனாய் கிரேக்கர்கள் சந்திரகுப்தன் பேரவைக்கு அரச தூதுவனாக மெகதனீசை அனுப்பியதன் மூலம் யார் தோல்வியுற்றனர் என்பதையும் அக்காலத்திய இந்திய படைகளின் அளவையும் ஆற்றலையும் நமக்கு ஒருவாறு யூகிக்க முடியும். கிரேக்கர்களின் பிரதிநிதியான செலுக்க சந்திர குப்தனின் ஆற்றலைக் கண்டு அவனுடன் சமாதானத்திற்கு வந்தான். தனது புதல்வியான கிரேக்க இளவரசியைச் சந்திர குப்தனுக்கு மகட் கொடையாக அளித்து தனது அரச தூதுவனை மகத நாட்டு அரசப் பேரவையில் இடம் பெறச் செய்தான். செலுக்க - சந்திர குப்தன் சமாதான ஒப்பந்தத்தினால் கிரேக்க இந்திய நட்பு வளர்ந்தது. கிரேக்க இந்தியக் கலப்புப் பண்பாடு துளிர்த்தது. படை பலமும் வளர்ந்தது. ஆனால் குறு நில மன்னர் கள் தலை தூக்கி நின்றதனால் இராணுவம் முன்போல் பெருக்கமும் உறுதியும் பெறாதிருந்தது. முன்னர் கிரேக்கர்களினால் இந்தியா விற்கு வெளியே உதைப்பட்ட மொகலாயர் படை இந்தியாவில் புகுந்து வெற்றி பெற்றது. கிரேக்க வரலாற்றாசிரியர்கள், நில நூல் வல்லுநர்களின் அறிக்கைகளின் மூலம், நாட்டின் ஆரம்ப கால நிலை நன்கு தெரிகிறது. ஆனால் ».K.மூன்whtJ நூற்றாண்டிலிருந்து கி.பி.15-வது நூற்றாண்டுவரை நிலவிய புடைப்புச் சிற்பங்களிலும் வரலாற் றினை விளக்கும் காசுகளின் வடிவங்களிலும் உள்ள நல்ல சான்று கள் இன்னும் நமக்குப் போதிய அளவு கிடைக்கவில்லை. வட இந்தியாவில் காசுகள் வெளியிடும் கலையைப் பாக்டிரிய கிரேக்கர்கள் அறிமுகப்படுத்தினர். பாக்டிரியர்களும் ஏனைய வட இந்திய அரசர்களும் பல அழகிய காசுகளை அடிக்கடி வெளி யிட்டனர். அக்காலத்திலுள்ள கருவிகளின் உருவங்கள் பல காசு களில் தீட்டப்பட்டுள்ளது மிகவும் சுவையான செய்தியாகும். இந்தோ-சீய்த்திய அரசர்கள், பாக்டிரிய அரசர்களுக்குப் பின் வந்து காசுகள் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் ஆடைகள் அணிந்தும் அழகான வாட்களும் கவசங்களும் எறிவேலும் திரிசூல மும் பூண்டவர்கள் போல் உருவம் தீட்டப் பெற்று விளங்குகிறார் கள். கானர்கி குட்டையான வளைந்த வாளும், மற்றவர்கள் குண்டாந் தடியும் குறுவாளும், குத்துவாளும் அணிந்துள்ளார்கள். சாஞ்சியின் படிமங்களினின்று பல பழங்கால இந்தியப் போர்க்கருவிகளின் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை களைப் பற்றி மேனாட்டு அறிஞர்களான கன்னிங்காம் அவர்களும் பெர்கூசன் அவர்களும் நன்காராய்ந்து தமது நூற்களில் வெளி யிட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரான கன்னிங்காம் சில சமயச் சின்னங்களினின்று அரிய ஆயுதங்களின் உருவங்களை ஆய்ந்து படம் எழுதி நமக்கு அளித்துள்ளார். போர் வீரர்கள் இறுக்கமான உடை அணிந்தும் குறும்பாவாடை போன்ற ஆடை அணிந்தும் உள்ளனர். அவர்கள் ஆயுதங்கள் வாள்களும் அம்புகளும் வில்களும் ஆகும். வாள்கள் குட்டையாயும் அகன்றும் உள்ளன. மெகதனி என்ற சந்திரகுப்தன் அரசவையிலிருந்த கிரேக்க தூதுவரின் விளக்கத் திற்கு ஒத்ததாய் உள்ளன. எல்லோரும் அகன்ற வாள்களை அணிந்திருந்தனர். அவைகள் நீளத்தில் மூன்று முழத்திற்கு (3 Cubits) மேல் இல்லை. அவர்கள் மற்போரில் நெருங்கிச் சண்டையிடும் பொழுது அவர்கள் இருகைகளினாலும் பிடித்துத் தள்ளி பலத்த அடி கொடுப்பர். அதே பொழுது காலாட் படை வழக்கம் போல் அதே அளவுள்ள வில்லை ஏந்தி நிற்பர். காயமுற்றோர்களுக்கு அளிக்கும் மருந்துகளையும் வைத்திருப்பர். இதனை எல்லாம் வட இந்தியாவில் உள்ள புடை சிற்பங்களிலும் காணலாம். பெரும் பாலும் காலாட் படையினர் வில்லர்களாகவும் இருப்பர். ஆனால் குறைவான பழங்கால வில்கள், அவைகளை ஏந்தி இருக்கும் வீரர்களை விடச் சிறிதாக இருக்கும். ஆனால் எந்த வில்லும் 4 அடிக்கு மேல் இராது. பெரும்பாலான வில்கள் மூங்கிற் கழியால் நேராகச் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் ஒரு சில விற்கள் இரு வளைவுகளோடு நடுவில் நேரான கைப்பிடியும் உடையதாக இருக்கும். அவர்களுடைய அம்புகளைப் பற்றி அரியன்னர் என்பவர் குறிப்பிடும் பொழுது மூன்று முழ நீளத்திற்கு (3 Cubits)¡ கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால் மிக வேகமாக இதினின்று அம்புகள் பாயும். கேடயமாவது நெஞ்சுக்கவசமாவது அல்லது வேறு எந்தக் கருவியாவது தாங்கிக் கொள்வது அரிதாக இருக்கும் என்று கூறி யுள்ளார். புடை சிற்பங்களில் உள்ள அம்புகள் 3 அடி நீளம் உடையதாக இருந்தது. மேலும் அவர் சில விபரங்களைக் குறிப்பிடும் பொழுது அம்புகளுக்குப் பதிலாக கைவேலை உபயோகிக்கும் பொழுது குதிரைப் படை வீரர்கள் இருபக்கங்களும் கூரான ஈட்டி யாகிய போர்க்கருவிகளை அணிந்தனர். ஈட்டிகள் போன்றவைகள் சாவுனியா (Saunia) என்று அழைக்கப்படும். ஒரு புடை சிற்பத்தில் ஒரு போர் வீரன் ஒரு கேடயத்தினால் மூடப் பெற்றிருக்கிறான். அவன் ஒரு கைவேலை (Dart) நேராகப் பிடித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லத் தயாராய் நிற்கின்றான். அவனுடைய இடது புயத்தின் மீது தோல்வார் போன்ற ஒன்றை அணிந்துள்ளான். அது முரட்டுத் தோலால் செய்யப்பட்டது. உடலை விட நீளமாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் வழக்கமான கேடயம் புடை சிற்பத்தில் நீளமாகவும் சுருங்கி யதாகவும் உச்சியில் வட்டமாயும் இருக்கிறது. அது வீரனின் தலையிலிருந்து முழந்தாள் வரை மூடப்பட்டதாய் இருக்கிறது. எனவே அது 3 1/2 அடி உயரமும் 1 1/2 அடி அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். மெகதனி காலத்தில் அது 5 அடி நீளமாக இருந்தது. காலாட் படையினரின் கேடயத்தை விட குதிரைப் படை வீரன் கேடயம் சிறிதாக இருந்தது. அந்தப் புடை சிற்பத்தில் குதிரை வீரன் கேடயம் 5 அடி நீளம் உடையதாய் மணி போன்ற வடிவில் அடிப் பக்கம் மிகவும் வட்டமாய் இருந்தது. வழக்கமான அணி குதிரைக்கும் பாதத்தில் பூட்டப் பெற்று இரு சிலுவை போல் குறுக்காக செய்ண்ட் அந்தோணியாரும் செய்ண்ட் ஆண்டிரூ போன்றிருந்தது. ஆனால் குதிரைப் படையின் கேடயம் மேற்கு மலைத் தொடரில் இரு நட்சத்திரங்களும் இளம்பிறையும் மட்டும் பெற்றிருந்தது. இந்தப் படிமங்கள் அறிஞர் கன்னிங்காம் அவர்களால் கி.பி.17-க்கும் 39-க்கும் இடைப்பட் டிருக்கலாம் என்று எண்ணப்பட்டது. பெர்கூசன் கி.பி. 64க்கும் 120-ஆம் ஆண்டுகளுக்கும் நடுவில் உதயகிரியில் உள்ள தாகவும்; கி.பி. 401-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் என்றும் கருதினார். சாஞ்சியிலுள்ள புடை சிற்பங்கள் ஒன்றின் மீது இளவரசர் சித்தார்த்தனரின் சாசனம் ஒன்று உளது. அதனை அறிஞர் பெர்கூசன் அவர்கள் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார். இளவரசர் 16 வயதை அடைந்த பொழுது அவரது தகப்பனார், அவருக்கு ஒரு மனைவியைத் தேடினார். தனது நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசர்களின் அழகிய பெண்களைப் பற்றியெல்லாம் விசாரித்தார். எல்லோரும் பெண்கொடுக்க மறுத்து விட்டனர். ஏனென்றால் இளவரசர் அழகாய் இருந்தாலும், அவருக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதற்கேயாம். எனவே அவருக்குப் பெண்களை அடக்கியாள முடியாது என்று கூறினார்கள். இந்த முறையில் அவரது சக்தியை மெய்ப்பிப்பதற்கு அவர் வில்லில் நாணேற்றித் தம் ஆற்றலைக் காட்டினார். அதைப் போல் எவராலும் நாணேற்ற முடியாது. அவர் நாணேற்றிய வில்லினின்று பாயும் அம்பு ஒரு போர் வீரனை விட கனத்த இரும்புக் குறி இலக்கைத் துளைத்து விடும். அல்லது கிரேக்க புராணக் கதை கூறும் அரைக்கு மேல் மனிதனாகவும் அரைக்குக் கீழே காளையாகவும் உள்ள அஞ்சுவருவ வடிவத்தைக் கூடத் துளைத்து விடும். அது எவ்வளவு தொலை விற்கும் செல்லும் வல்லமையுள்ளது. இறுதியாக அவர் ஒரு அம்பை விடுத்தார். அது நினைக்க முடியாத தொலை விற்கு அப்பாற் சென்று அங்கு அது ஒரு நீர் ஊற்றை தோற்றுவித்து பொங்கி எழும்படி செய்தது. அது பின்னர் பிரயாணிகளின் தாகத்தைத் தணிவிக்கும் பேர் ஊற்றாக அமைக்கப்பட்டது. படத்தின் முன்னுள்ள நிலத்தில் மூன்று போர் வீரர்கள் பார்த்தியர்க ளோடு போர்க் கோலம் பூண்டு நிற்கின்றனர். வில்லையும் குட்டையானதும் நேரானதுமான ஒரு உரோம வீரன் வைத்திருப்பது போன்ற வாளை வலது தோள் மீது வைத்துக் கொண்டு அவர்கள் அவர்களுடைய அம்பராத் தூணியைத் தாங்குவதற்காக ஒரு குறுக்கு வாரினையும் அணிந்திருக்கின்றனர். அவர்களோடு முரசும் படைத் துறை இசைக்குழல்களும் பின் தொடர்ந்தன. சாஞ்சிக்கு 300 ஆண்டுகளுக்குப் பின் அமராவதியில் அரும்பிய பௌத்த வழிபாடுகளில் ஒரு தூணில் காணப்படும் காட்சி நமக்குப் பின் வருவனவற்றை அறிவுறுத்துகிறது. அரசன் அவனது அரியா சனத்தில் அமர்ந்து இருக்கின்றான். அவனிடம் ஒரு தூதுவன் கைகளைத் தட்டி படைத்துறை வேவுச் செய்தியைக் கொண்டுவா என்கிறான். அவனுக்கு முன்பாக படையின் ஒருபகுதி அரணின் சுவர்களைப் பாதுகாத்து நிற்பது போல் காணப்படுகிறது. வாள் களும், நீண்ட ஈட்டிகளும், நீளமான வில்களும் இயங்கத் தயாராய் இருக்கின்றனர். முன்னர் காலாட்படை முன்னேறிச் செல்லுகிறது. முன்னணியில் குதிரை வீரர்களும் யானைகளும் கொண்டு வரப்படு கிறார்கள். சாஞ்சியில் தேர்கள் காணப்பட வில்லை. அது சில இடங்களில் நாட்டின் தன்மைக்கேற்ப தவிர்க்கப் பட்டும் இருக்கலாம். அதே சிற்பத்தில் சிலர் நீண்ட சதுரமான கேடயத்தையும் தாங்கி நிற்கின்றனர். இது போன்று கி.மு.200-லிருந்து கி.பி.474 வரை கால நிர்ணயம் செய்யப்பட்ட ஒரிசாவில் உள்ள குன்றுகளில் உள்ள குகைகள் முக்கிய மானவை களாகும். இவைகளில் பிந்தியது ஒன்று போரினைப் பிரதிபலிப்பதாகும். இதில் நீண்ட வாளும் நீள் வட்டக் கேடயமும் வில்லும் அந்த மனிதனில் மூன்றில் இரண்டு பங்கு உயரம் உள்ளதாய் இருக்கின்றனர். ஆங்கில வேடர்களைப் போல செங்குத்தாய் நிற்பதோடு வாள்களும் ஏறத்தாழ நேராக இருக்கிறது. வாள் நடுத்தரமானது. உலகப் புகழ் வாய்ந்த இந்திய ஓவியங்களில் தலை சிறந்தது ஆந்திர மாநிலத்தில் உள்ள அசந்தாக் குகை ஓவியங்களாகும். இதில் 16 எண்ணுள்ள குகை, கி.பி.400-இல் தீட்டப்பட்டது. இந்த எழில் ஓவியங்களில் ஒன்று போர் வீரர்கள் போர்க்கலன்களைப் பூண் டிருப்பதோடு வாளும் குக்கிரியும் அணி செய்யப்பட்ட கேடயங் களையும் அணிந்திருக்கிறார்கள்.1 ஒரிசாவிலுள்ள புவனேசுவரர் கோயிலில், கி.பி 650இல் தீட்டப்பட்டதாகக் கருதப்படும் ஓவியங்களில் வாள் வீரர்கள், வில் வீரர்கள், தானைப்படை, பரிப்படை, கரிப்படை முதலியவைகளும் காணப்படுகின்றன. சமணச் சிற்பங்கள் சில இராச புதனத்தில் உள்ள சய்த் திரான் (Saitron) என்னும் இடத்தில் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களில் சில தென் கென் சிங்க்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன. இதில் வாள்கள் நேராகவும், குட்டையாகவும், நுனியில் முன்னோக்கி வளைந்தும், சிறிய நேரான குத்து வாள்களும் காணப்படுகின்றன. இரண்டு ஆயுதங்களும் கைப்பிடிக் குமிழ் உள்ளதாயும் பாதுகாப்பான கைப்பிடிகள் இல்லாத தாயும் இருக்கின்றன. கோனார்க்கில் உள்ள ஞாயிறு தெய்வத்தின் திருக்கோயில் கி.பி.1237இல் கட்டப் பெற்றது. இங்கு நிரம்ப சிற்பங்கள் நிறைந் துள்ளன. தெற்குப் பக்கத்தில் முன்புறம் இரண்டு பேருருவம் படைத்த குதிரை வீரர்கள் காவல் வீரர்களாய் நிற்பது போல் உருவாக்கப் பெற்றுள்ளது. அவைகளில் ஒன்று கனத்த சங்கிலிக் கவசத்தால் மூடப்பட்டிருக்கிறது. அதோடு கழுத்தில் தொங்கற் குஞ்சம் என்னும் கழுத்து மாலை அணி செய்கிறது. நான்கு கால்களிலும் மணிக்கற்கள் இழைத்த வளைகளும், குஞ்சங்கள் தொங்கு மார்புக் கச்சையும் சேணத்தில் இருக்கையில் பொருத்தப் பட்டுள்ளது. இடப் பக்கம் குட்டையான இறுதிவரைப் போராடுவ தற்குரிய வாளுறையுள்ள உரோமர் வாள் கீழே தொங்குகிறது. வலப் பக்கம் அம்பறாத் தூணி நிரம்ப, பறவைகளின் இறக்கைகள் அடியில் கட்டிய அம்புகள் உள்ளன. போர்க்குதிரை இரு அரக்கர்களைக் கீழே தள்ளியுள்ளது. அவர்கள் கூர்க்கர்களின் குக்கிரி போன்று வளைந்த குட்டையான வாளை அணிந்திருக்கின்றனர். அவர்கள் பாதிப் புல்லரி வாளும் பாதிக் கொடுவாளும் போன்ற ஆயுதங்களை யும் கனத்த காப்பு வளைகளையும் பூண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் போர்க்கவசம் இல்லை. அவர்கள் பல்வேறு உலோகத் தால் நல்ல வேலைப்பாடுள்ள வட்டமான கேடயத்தை தாங்கி இருக்கின்றனர். கேடயத்தின் நடுவில் குஞ்சமும் முடிகளும் தொங்கு கின்றன. கேடயங்கள் கட்டியம் சார்ந்த கருவி போலக் காணப்படு கின்றன. அவைகளில் ஒன்றில் இரண்டு பல்லிகள் யாதேனு ஒரு பக்கம் குமிழை நோக்கி ஏறுவது போல செய்யப்பட்டுள்ளன. பழைய மார்வாரின் தலைநகரான மாண்டோரில் 15-வது நூற்றாண்டிற்கு முன்னர் பாறையில் பல அழகிய சிற்பங்கள் தீட்டப் பெற்றுள்ளன. மாண்டோர் மன்னனின் மகளை மணப்பதற்கு, இலங்கையிலிருந்து வந்த இராவணேசுவரனின் பணியாட்களில் ஒன்பது தலைமக்கள் காட்சி தருவது போல் உருவாக்கப்பட் டிருந்தது. அவர்கள் ஈட்டி, வாள், சிறு கேடயம், வில், அம்பு, கவசம் போன்ற படைக்கலன்களைத் தாங்கி இருப்பதோடு இடுப்புப் பட்டியில் ஒரு ஆயுதமும் அணிந்துள்ளனர். ஒவ்வொருவரும் அவர்களுடைய தலைமைப் பிரிவினர் கட்டளைப்படி நடந்து வருபவர்களாக இருந்தனர். திராவிட இந்தியாவில் திராவிட மக்களால் உருவாக்கப்பட்ட படைக்கலன்களை விட புதிய படைக்கலன்களை ஆரியர்களோ, கிரேக்கர்களோ, மொகலாயர்களோ பெற்றிருக்கவில்லை. ஆனால் அவைகள் புதிய பெயர்களைப் பெற்றிருந்தன; உறுதியான உலோ கங்களால் செய்யப் பெற்றிருந்தன. திராவிடர்களிடம் இல்லாத குதிரைப் படைகளை ஆக்கிரமிப்பாளர் அனைவரும் பெற்றிருந் தனர். இவைகள் ஆக்கிரமிப்பாளர் வெற்றிக்குப் பெருங்காரணமாக இருந்தன. இந்தியர்கள் நாட்டைக் காப்பதற்காகப் போரிட்டனர். பகை வர்கள் இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கும் அதை அடிமைப் படுத்துவதற்கும், சுரண்டுவதற்கும் வெறி கொண்டு போராடினர். அவர்கள் பேராசையினால் ஊக்கங் கொண்டு போராடினர். மேலும் அவர்கள் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போரிட் டனர். அறப்போர், மனிதத் தன்மை, பண்பு, நீதி, முதலியவைகளைப் பற்றிச் சிறிதும் சிந்தியாது மக்களைக் கொன்று நாடு நகரங்களை அழித்து வெற்றி அடைந்தனர். ஆனால் வரலாறு, இந்தியாவை என்றும் அன்னியர் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்க முடியாது; ஒரு நாள் தன் மூட்டை முடிச்சுகளோடு வெளியே போய்த் தீர வேண்டும் என்பதை மெய்ப்பித்து வருகிறது. 8. திராவிடப் பழங்குடி மக்களின் படைக்கலன்கள் திராவிடப் பழங்குடிமக்கள் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே இமயந் தொட்டு குமரி வரை பரவி இருந்தார்கள். ஏன்? - குமரி முனைக்குத் தெற்கே - பூமியின் நடுக்கோடுவரை பரவியிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்றும் அப்பால் அந்த நிலப்பரப்பைக் கடல் விழுங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது. திராவிட மக்களில் சிறப்பாகக் கருதப்படுபவர்களாகத் தமிழர், கேரளர், ஆந்திரர், கன்னடர், துளுவர் போன்றவர்களைக் குறிப்பிட லாம். கி.மு. 1600 ஆம் ஆண்டிற்கு முன் தமிழகத்தில் திராவிட ஆட்சி தென்னிந்தியாவில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. சேரர், பாண்டியர், சோழர் என்ற மூன்று அரசுகள் தங்களுக்குள் போட்டிக் கொண்டு வட இந்தியா முழுமையும் வென்று இமயமலை மீது தங்கள் கொடிகளைப் பொறித்த செய்திகள் தமிழ் ஏடுகளில் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன. சோழ அரசன் மாவேந்தன் இராசராசன் (Raja Raja the Great) வட இந்தியா முழுமையும் வென்ற தோடு, ஈழம், அந்தமான், நிக்கோபார், கடாரம் (Kedah), மலையம் (Malay), சிங்கபுரம் (Singapore), சாவகம் (Java) போன்ற மேற்காசிய நாடுகள் அனைத்தையும் தன் கடற்படையினைக் கொண்டு போரிட்டு வெற்றி பெற்று வந்தான். இது வரலாறு கண்ட உண்மை. தமிழர் படையில் வேளிரும், மறவர்களும், பரவர்களும், ஆயர்களும் சேர்ந்து திறம்படப் போரிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். தமிழ் நாட்டுப் போர் வீரர்கள், வாள், குத்து வாள், எறி வேல், வேலாயுதம், கண்ட கோடரி (பரசு), சுருள் வாள், கோதண்டம் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். சுக்கிர நீதி என்னும் நூலின் மூலம் தமிழர்கள் போரில் வெடி மருந்துகளையும் பயன்படுத்தி யுள்ளார்கள் என்று தெரிகிறது. கேரள நாட்டில் நாயர்கள் நல்ல போர் வீரர்களாய் விளங்கி னர். கன்னடர்களும், கூர்க்கர்களும் போரில் தமிழ் நாட்டு மறவர் களைப் போல், நாயர்களைப் போல் நல்ல போர்த்திறமையுள்ளவர் களாய் விளங்கினர். கூர்க்கர்கள் நாயர்களைப் போல மலைகளில் வாழும் இனத்தவர்களேயாவர். அவர்கள் நாயர்களைப்போல் நல்ல உடற் கட்டு வாய்ந்தவர்களே. எப்பொழுதும் உடற்பயிற்சி செய்பவர்களாய் இருந்து வந்தனர். கூர்க்கர்களின் ஆயுதங்களும் நாயர்களின் ஆயுதங் களும் ஒன்று போலவே இருந்தன. பல ஆயுதங்களின் அமைப்பும் அதன் தோல் உறைகளும், ஆயுதம் அணியும் முறைகளும், உடலில் ஆயுதங்கள் அணியும் இடங்களும் ஒருமைப் பாடுடையதாய் இருந்தன. இவர்கள் இருவர்களுக்கும் இயற்கையான சூழ்நிலை ஒன்று போல இருந்தாலும் முகத் தோற்றத்திலும் உடல் அமைப்பிலும் பெரிதும் வேறுபாடுகள் உண்டு. கூர்க்கர்களிடம் சிறிது மங்கோலிய அம்சம் உண்டு. நாயர்களிடம் பெரிதும் திராவிட அம்சம் உண்டு. ஆனால் உணவு இருவருக்கும் பொதுவானதாகவே இருந்து வந்துள்ளது. பன்றி ஊண் தின்னும் மங்கோலியர்கள் நாயர்கள், கூர்க்கர்கள், மறவர்களை விடப் போர் வலிமை வாய்ந்தவர்கள் இல்லை. கேரள நாயர்களும், கூர்க்கர்களும் நீல நிற மேற்சட்டை அணிந்து, முழுங்காலுக்கும் மார்புக்கும் ஊடே கீழ்ப்பக்கம் அரைப் பகுதியை ஒட்டியும் தோளின் நடுப்பகுதியின் மீது இடப் புறமாக ஒருமடிப்பு இருக்கும். ஓர் அழகிய சிவப்புப் பட்டியை இடுப்பு வரைச் சுற்றி வளைந்து கட்டியிருப்பர். இதில் ஒரு குட்டையான எதையும் ஊடுறுவிச் செல்லும் உடைவாளின் கைப்பிடி எழிலுறத் திகழும். அதில் இந்த உடைவாள் செருகுவதற்குரிய ஒரு பாகம் வெள்ளித் தகட்டால் மூடப் பெற்றிருக்கும். அதோடு ஒரு வெள்ளிச் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும். காடுகளைக் கடந்து செல்லும் பொழுது தலை மீது ஒரு கனத்த வெள்ளைத் தலைப்பாகையை அணிந்து கொண்டு கூர்க்கர்கள் தமது முதுகின் மீது அவர்களின் உடைவாளைவிட இருமடங்கு பெரிதான ஒரு உறுதியான மரக் கத்தியைத் தாங்கிச் செல்லுவார்கள். அதன் கைப்பிடி அவர்களின் அரைக்கச்சைக்குள் புகுந்து ஊடுறுவி நிற்கும். அப்பொழுது வாளின் அகன்ற வாய்ப்பகுதி அவர்களின் முதுகின் மீது உறையின்றி இருக்கும். பெரிதும் இந்த முறையிலே துப்பாக்கியும் விற்களும், அம்புகளும் தொங்கும். பல உரிமையாளர்கள் குறைந்தது இருபது போர் வீரர்களாக கூட்டாக அணிவகுத்துச் செல்லக் கூடும். மைசூர் மாநிலத்தில் உள்ள முன்சராபாத் அருகில் உள்ள குடியானவர்களைப் பற்றி அறிஞர் எலியட் என்பார் தனது நூலில் விவரிக்கும் பொழுது ஓர் ஒற்றைக் கருப்புக் கம்பளியை ஆடையாக அணிந்த குடியானவன் இப்பொழுது காட்சி அளிப்பது போல் முற்காலத்திலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முழங்கால் வரை தொங்கும் உடையலங்காரத்தோடு இடுப்பைச் சுற்றி ஒருவாரினால் வரிந்து கட்டி முதுகுப்புறம் ஓர் இரும்புப் பிடிப்பில் ஒரு பெரிய பக்க ஆதரவான கத்தி இணைக்கப் பெற்றிருக்கும். அதுவும் ஈட்டி யாகவும், பழங்காலத் துப்பாக்கி வகைகளைக் கூடப் பயன்படுத்த உதவும் என்று எழுதியுள்ளார். கத்தி அல்லது புல்லரிவாள் இதன் சுருக்கத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. மைசூர் காடுகளில் காணப்படும் இத்தகைய அடர்ந்த புதர்களை வெட்டி வசதியாக்குவதற்காகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. கூர்க்கர்கள் மூங்கில் காடுகளை வெட்டுவதற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் - கேரள நாட்டில் சமயம் வளர்க்க வந்த ஆரியர்களும் (நம்பூதிரிகளும்), அடைக்கலம் புகுந்த யூதர்களும், வணிகத்திற்காக வந்த அரேபியர்களும் நாட்டைக் கவர வந்த போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களும், சுமார்த்தம், எகோ வாயிசம், கிறித்தவம் ஆகிய சமயத்தையும் சமகிருதம், அரபி, ஹீபுரு, போர்ச்சுகீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பரப்பியும், பண்பாடுகளை, கலைகளைப் புகுத்தியும் கேரளத்தின் திராவிட உணர்ச்சியை துடைத்தழிக்க முடியவில்லை. கேரளத்தில் மாப் பிள்ளை என்ற ஒரு புதிய இனத்தை உருவாக்கி விட்டாலும் திராவிடப் பண்பாட்டை மாற்றமுடியவில்லை. மாப்பிள்ளை என்னும் முலிம்கள் கத்தி, அல்லது வாளையே பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வாள் நாயர்களின் வாளைப் போன்றே இருக்கிறது. ஆனால் அதன் உருவம் சற்றுப் பெரிது. நாயர்கள் மலபார் கடற்கரை நெடுகிலும் வாழ்ந்து வருகி றார்கள். இவர்கள் முற்காலத்தில் சேர நாட்டின் போர் வீரர்களாய் இருந்தார்கள். ஆட்சி மாறிய பின் அவர்கள் நீண்ட நாளாக போர்த் தொழிலில் ஈடுபட வில்லை. திருவாங்கூர் மன்னர், 1400 பேர்களைக் கொண்ட ஒரு படையை நிர்மாணித்தார். அதில் பல அதிகாரிகள் ஐரோப்பியர். முற்காலத்தில் நாயர்கள் வாளை உறையினின்று உருவி அதை ஒரு கைத்தடிபோல் பயன்படுத்தி வந்தனர். அதை முன்னும் பின்னும் இலாவகமாக சுழற்றி வீசுவர். அவைகள் அவர்களது தோள்களுக்கிடையே ஒளி வீசி மின்னும். நாயர், திருவாங்கூர் மன்னர் மரபினர். எனவே இராணுவத்தில் நாயர்களுக்கு உயர்ந்த பதவிகள் எல்லாம் வழங்கப்பட்டு வந்தது. அறிஞர் பார்போஸா என்பவர் நாயர்களைப் பற்றி எழுதிய தமது நூலில் அவர்களைப் பற்றி சிறப்பித்துக் கூறியுள்ளார். மலபாரிலுள்ள நாயர் இனத்தவர்கள் உயர்குலத்தில் உதித்த பண்பார்ந்த மக்கள். அவர்கள் நற்பணிக்காக மன்னரால் படைத் துறை நிலைக்கு உயர்த்தப்பட்டும் படைக்கலம் அளிக்கப்பட்ட உயர் குடிப் பிறப்பாளர் மன்னரால் ஆயுதங்கள் அளிக்கப் பெறாதவர்களாக இருந்தனர். அவர்கள் தங்களை நாயர்கள் என்று கூறிக் கொண்டு அந்நாட்டில் அக்காலத்தில் வாழ முடியாத நிலை இருந்தது. பொதுவாக நாயர்களின் சந்ததிகள் கல்லூரிகளுக்கு இளமையிலே அனுப்பப்படுவர். அதாவது பிறந்து ஏழு ஆண்டுகள் கல்லூரிக்குக் கல்வி பயில செல்லவேண்டும். அங்கு அவர்கள் ஏழு வயதிலே எல்லா விதமான உடற்பயிற்சியையும் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறை களையும் பிறர் தாக்கும் பொழுது தப்புவிக்கும் முறையையும் பயில வேண்டும். அவர்களின் இராணுவக் கல்லூரியில் வில்கள், குண்டாந் தடிகள், எறிவேல், வாள் முதலியன பயன்படுத்தல், குதிரையேற்றம் முதலியவைகள் படித்துக் கொடுக்கப்படும். இந்தக் கலையைக் கற்பிக்கத் திறமைவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்கள் பணிக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களே போரில் தளபதி என்ற பட்டத்துடன் படை நடத்தி வந்தனர். இவர்களே மன்னர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் பாதுகாப்பாளர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மன்னரை எவராவது கொல்ல எத்தனித்தால் இமை கொட்டும் நேரத்தில் தமது மார்பைக் காட்டுவர்- மன்னரைக் கொல்ல முயல்பவர்கள் கையால் சாகவேண்டும் அல்லது மன்னர் கையால் சாகவேண்டும் என்பதே இவர்கள் இலட்சியம். மன்னர் போரில் மாண்டால் இவர்கள் படையின் முன்னணிக்குச் சென்று பகைவர்களால் உயிர் துறப்பர். ஆனால் அவர் வீழுமுன் அவரால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வர். அதன் பின் ஒருவர் இறந்ததும் அவரது இடத்திற்கு மற்றொருவர் சென்று போரிட்டு மாள்வர். இவ்வாறு அவர்களது அரசர்க்காக சில சமயங்களில் 10, 12 நாயர்கள் உயிர் துறப்பதும் உண்டு. கி.பி.1514-ஆம் ஆண்டில் கேபார் கொரியா (Gaspar correa) என்பவர் இந்தியா போந்தார். அவர் கள்ளிக் கோட்டையில் உள்ள நாயரைப் பற்றி சில விசயங்கள் குறிப்பிட்டுள்ளார். அவைகள், மிகச் சுவையான சம்பவங்கள் ஆகும். அவைகள் அடியில் வருமாறாகும்: மன்னருக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். பிறப்பால் ஒரு கனவான் அவர் தன்னை நாயர் என்று கூறிக் கொள்வார். அவன் ஒரு பலகை மீது நடந்து வந்தான்.......................... அவர் கையில் ஒரு மிக மெல்லிய கயிறு தொங்கும் பலகையாலான கேடயத்தை வைத் திருந்தார். அதில் செந்நிறக் கனிப் பொருள் மிகவும் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அவரிடம் உறையினின்று உருவப் பெற்ற பளபளப்பான கூரிய எஃகாலான கைப்பிடியுள்ள வாள் 27-அங்குல நீளமுள்ள குறுவாளாகவும், நுனியில் அகன்றும் இருந்தது. கள்ளிக் கோட்டையிலுள்ள சாமொரின் அரசனை வாகோடகாமா பேட்டி காணும் பொழுது ஏராளமான எண்ணிக்கை யுள்ள மூர்கள் வாளோடும் கேடயங்களோடும் நாயர்களின் பண்பாளர் குளத்திற்குப் பின் நின்றனர். அரசனுக்கு மிக அண்மையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் பக்கம்..................... அவன் ஒரு சிவப்புக் கேடயத்தைத் தாங்கிக் கொண்டு நின்றான். அக்கேடயம் தங்கத் தாலான விளிம்புகளையும் மணிக்கற்கள் பதிக்கப் பெற்றிருந்தது. ஒரு வில்லும் அதே போன்று நடுவே வில் விட்டம் அகன்று அணி செய்யப் பெற்றிருந்தது. உள்ளே இருக்கும் வளையமும் கைப்பிடியும் பொன்னால் ஆனதாக இருந்தது. அதோடு குறுகிய உறையினின்று உருவிய வாள் ஏறத்தாழ 15 அங்குல நீளம் வட்டமாக நுனிவரை பொன் பொதியப் பெற்று மணிகள் பதிக்கப் பெற்றிருந்ததோடு முத்தாலான பதக்கமும் உடையதாக இருந்தது. இந்த விளக்கங்கள் உள்ள வாளை ஒத்த வாள் ஒன்று அறிஞர் லார்ட் எக்கர்டன் எம்.ஏ. அவர்கள் சேகரிப்பில் உள்ளது. (உருவம் 3). அது 27 அங்குல நீளம் வாய்ந்தது. அந்த வாளின் அலகுகள் வளைந்து அதன் கூரிய விளிம்புகள் உள் புறமாகவும் இருக்கிறது. அது இருபுறமும் கூரிய விளிம்பு உள்ளதாக முடிவுற்றிருக்கிறது. வாளின் கைபிடிக் குமிழை யொட்டி இரண்டு வளையங்களின் முறுக்குப்புரி எஃகுவினால் ஆனது. இதைப் பழங்கால எழுத் தாளர்கள் இந்த வாள்களுக்கு உள்ள தனிச்சிறப்பாகக் குறிப் பிட்டுள்ளார்கள்.1 நீலகிரி மலைகளில் வாழும் திராவிடப் பெருங்குடியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் தோடர்களை இன்று சித்திக் (Scythic) குடி இனத்தைச் சார்ந்த தொடக்ககாலந் தொட்டுள்ள பழங்குடி வழியில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஆயுதங்களை ஏந்திச் செல்வதில்லை. இவர்கள் தங்களுடைய பிணத்தைப் புதைத்த சவக்குழி விருந்துக்காக எடுத்துச் செல்லும் கூரிய குண்டாந்தடியை எடுத்துச் செல்வதைத் தவிர வேறு எப்பொழுதும் ஆயுதம் ஏந்துவ தில்லை. ஆனால் இவர்கள் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நில வாழ்க் கையைப் பெரிதும் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த இனத்தவர்களைத் தவிர பிற கலப்புள்ள இனங்களும் இருக்கிறார்கள். செஞ்சுவா என்ற கிழக்கு மலைத் தொடர்களில் வாழும் திருந்தாத நாகரிக மற்ற மக்களுமுளர். இவர்கள் மலாய் தீபகற்பத்தில் உள்ள முல்லை வாழ்வு நடத்தும் காட்டு மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் கலந்து உருவான ஒரு புதிய இனமாக பெரிதும் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இவர்களைப் பற்றி அடியில் வருமாறு சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பெரியவர்கள் வழக்கமாக ஈட்டி, கைக் கோடரி, அல்லது பழங் காலத் துப்பாக்கி முதலியவைகளை தங்களுடைய அதிர்ஷ்டம் வாய்ந்த செல்வப் பொருளாகத் தாங்கித் திரிகின்றார்கள். இஃதன்றி அவர்களின் முன்னோர்களின் பரம்பரைச் சொத்தாக கரடு முரடான மூங்கிலால் செய்யப்பட்ட வில்லையும் இரும்புத் தலையுள்ள கணைகளையும் எடுத்துச் செல்லுகிறார்கள். இவர்கள் வில் வித்தையில் குறிப்பிடத்தக்க திறமை பெற்றவர்கள் என்று கூறுவதற் கில்லை. இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்காக நடத்திய ஒரு காட்சியிலிருந்து இவர்களின் ஆயுதங்களையும் அதனைப் பயன்படுத்தும் திறனையும் அறிய முடிந்தது. இந்த வர்க்கத்தினர் இலங்கை, திருவாங்கூர் ஆகிய இடங் களின் மலைச் சாதி வர்க்கத்தினர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை போன்ற ஆயுதங்களையே வைத்திருக்கின்றனர். இவர்களுடைய விசித்திரமான பொன், வெள்ளி செதுக்கும் வேலைப்பாடுகள் அல்லது ஆமை ஓட்டில் செதுக்கும் வேலைப்பாட்டின் பொதுத் தோற்றம் தமிழ் நாட்டுக் கோயில் சிற்பங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. சிங்களவர்களின் வாள்கள் (Swords) சிறுவர்களின் ஆயுதங் களைப் போல் ஒரு வலியற்றதாயும் சிறிதாகவும் இருக்கின்றன. அவர்களுடைய ஆமை ஓடுகளில் செய்யப்பட்ட கை வாள்களும் (Hilts and Scalebards) வாள் உறைகளும், மிகப் பெரிய நுண்ணயம் வாய்ந்ததாய் செய்து முடிக்கப் பெற்றுள்ளன. அவைகளில் காணப் படும் செதுக்கு வேலைப்பாடுகளில் அவர்களின் பாம்பு வழிபாட்டு முறைகள் பிரதிபலிக்கின்றன. புத்தர் தியான நிலையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். கீழே இருந்து ஐந்து தலை நாகம் அவர் மீது குடை விரித்தாற் போன்று படத்தை விரித்து நிற்கிறது. அவர் களுடைய துப்பாக்கிகள் நன்றாக அழகு திகழச் செதுக்கப் பட்டு இருக்கின்றன. குத்துவாட்கள் சிறிதாக இருக்கின்றன. கத்திகள் செதுக்கப் பெற்ற மரக் கைப்பிடியோடு வெள்ளியினாலும் பித்தளை யினாலும் வேலைப்பாடு செய்யப்பெற்றதாய் விளங்கு கின்றன. வாள் உறை வழக்கம்போல் தேக்கு மரத்தால் மூடப்பெற்று வெள்ளிப் பித்தளைத் தகடுகள் பொதியப் பெற்றதாய் விளங்கு கின்றன. வேடர்கள் அல்லது இலங்கையில் நாகரிகப் பண்பில்லாத மலைவாசிகள் வைத்திருக்கும் ஆயுதங்களையும் எவரும் சேகரித்த தாகக் காணப்படவில்லை. அவர்களிடம் கரடு முரடான வில் தான் உண்டு. அவர்கள் காட்டு யானைகள் மீது இதைப் பயன்படுத்திப் பலன் பெறுகிறார்கள். 9. வரலாறு படைத்த பாரதப் படை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அரப்பாவைத் தலை நகராகக் கொண்டு சிந்து வெளியினைத் திராவிடர்கள் ஆண்டு வந்தார்கள். சிந்து வெளியை ஆண்டவர்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். அவர்கள் ஏராளமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து வந்தனர். நிலவழியாகவும், நீர்வழியாகவும், தென் இந்தியா, ஆப்கானிதானம், சுமேரியா, அசீரியா, எகிப்து முதலிய நாடு களுடன் வணிகம் நடத்திப் பெரும் பொருள் ஈட்டி வந்தனர். அவர்களுக்கு அயலவர் நாட்டைக் கவர்ந்து ஆள வேண்டும் என்று எண்ணமே எழவில்லை. பிற நாட்டின் மீது படையெடுக்க வேண்டிய அவசியமே எழவில்லை. அதனால் பிற நாட்டின் மீது படையெடுத்துத் தாக்குவதற்குரிய படைகளையோ ஆயுதங் களையோ நாட்டில் நிறுவவில்லை. ஆனால் தற்பாதுகாப்புக்காக அரண்களையும் ஓரளவு ஆயுதங்களையும் உருவாக்கி இருந்தனர். அவர்களின் போர்க்கருவிகள் செம்பினாலும், வெங்கலத்தினாலும் செய்யப் பெற்றவைகள். அவர்கள் நாகரிகம் மிக்கவர்கள்; பண்பு தெரிந்தவர்கள். அறப்போர்க்கு இலக்கணம் வகுத்தவர்கள். அவர்களின் தேர்கள் எருதுகள் பூட்டப் பெற்றவைகளாய் இருந்தன. நாடு நகரங்கள் அமைத்து உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அயல் நாட்டினின்று குதிரை, ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த வெள்ளை நிற நாடோடி மக்கள், சிந்து கங்கைச் சமவெளியில் தங்களின் கால் நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் தரை யான இடங்கள் இருப்பதை அறிந்தார்கள். முதலில் ஒரு சிறு கூட்டம் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகுந்தனர். அப்பால் அலை அலையாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்தனர். சிந்து வெளியில் திகழ்ந்த கோதுமைக் களஞ்சியங்களைக் கண்டு நாவூரின. நாளடைவில் திருடவும், கொள்ளையடிக்கவும் முற்பட்டனர். ஆரியர்களுக்கும் - சிந்துவெளித் திராவிடர்களுக்கும் கி.மு. 1500-க்கு முன் போர் மூண்டது. ஆரியர்கள் வென்றனர். திராவிடர்கள் தோற்றனர். திராவிடர் களின் நாடு நகரம் ஆகியவை அழிக்கப்பட்டன. இருக்கு வேதத்தில் தயுக்கள், தாசர்கள் போன்ற திராவிட மக்கள் அழிக்கப்பட்டதும் அவர்களின் தலைவர்களான கிருஷ்ணர்கள் கொல்லப்பட்டதும், கோட்டைகள் வீழ்த்தப்பட்டதும், நகரங்கள் சூறையாடப் பட்டதும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாடோடி மக்களான ஆரியர்களின் இரும்பு ஆயுதங் களுக்கும், குதிரைகள் பூட்டிய தேர்களுக்கும் முன் திராவிடர்களின் எருது பூட்டிய தேர்களும் வெண்கல ஆயுதங்களும் நிற்க முடியவில்லை. திராவிடர்களை நாளடைவில் தென்னிந்தியாவிற்கு தள்ளினர். தென்னிந்தியாவிற்குள் புகுந்தும் ஆரியர்கள் போரிட்ட துண்டு. ஒரு சில திராவிட மக்கள் பலுச்சிதானத்திலும் ஆரியா வர்த்தத்தினைச் சுற்றியும் வாழ்ந்து வந்தனர். அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகும் பண்புடைய மக்கள், காட்டு மிராண்டிகளான முரட்டு மாந்தர்களிடம் தோல்வியுற்றது. இது முதல் தடவையாக இந்தியாவில் நேர்ந்ததாகக் கூறலாம். ஆனால் வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல காணக் கிடக் கின்றன. ஆக்கிரமிப்பாளர்களான ஆரியர்கள் தங்கள் தீவினை யின் பயனை, கிரேக்கர்கள், தார்த்தாரியர்கள், மொகலாயர்களிடம் நன்கு அனுபவித்துள்ளார்கள். ஆரியர்களும், மொகலாயர்களிடம் தங்கள் ஆக்கிரமிப்பின் பயனை அனுபவித்துள்ளார்கள் என்பது இதன் கீழ் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவின் மீது மொகலாயர் களின் முதற்படையெடுப்பு எழுந்தது. வட இந்தியாவை ஆண்டு வந்த ஆரியப் படை எதிர்த்து வந்த பகைவர்கள் முன் நிற்க முடியாது அடிபட்டு வீழ்ந்தது. இந்தியாவில் இறுதியாக மொகலாயர் ஆட்சி பாபர் என்ற மன்னர் தலைமையில் கி.பி. 1524-இல் நிறுவப்பெற்றது. இந்தியாவில் மொகலாயர் காலம் என்று கூறப்படும் பகுதி இவர் களின் அட்டூழியத்தை நன்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் ஆரியர் ஆட்சிக்கு ஆதரவு காட்டுவதற்குத் திராவிடர்களிடம் ஆரியமதம் பரப்பப்பட்டது. அதே போல் இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக்குத் தாளம் போட இலாம் மதம் பரப்பப்பட்டது. ஆரியர்கள் திராவிடர்களைத் தாக்கியதை விட மொகலாயர் ஆரியர்களைத் தாக்கி அடித்து வீழ்த்தினர். ஆரியர்களை, மொகலாயர்கள் தம் உலக்கைகளால் மண்டை சிதறுண்டு போகும் படி புடைத்தனர். அவர்களின் வில்லும், ஈட்டியும் வாளும், குத்து களும் ஆரிய மக்களின் மார்பில் புகுந்தது; ஈரலைப் பதம் பார்த்தன. ஆரிய இனத்தவர்களின் இளங்குமரிகள் மொகலாய முரட்டு மாந்தரின் இன்பந்துய்க்கும் இரட்டை கருவிகள் போல் பயன் படுத்தப்பட்டனர். ஆரியர்களின் தெய்வ உருவங்கள் மூக் குடைக்கப் பட்டன. மார்புகள் தகர்க்கப்பட்டன; கோர வடிவம் பெற்றன. பல அழிக்க பெற்றன. சில பொன் வெள்ளிப் படிமங்கள் மொகலாய மன்னர்களின் பெண் மக்கள் விளையாடும் பொம்மைகளாயின. கி.பி.1711-ஆம் ஆண்டு கலிப் வாலித் என்பவன் தலைமையில் ஒரு படை எடுப்பு நிகழ்ந்தது. சிந்து மாநிலத்தின் கடற்றுறையான திவால் (Dewal) தாக்கப்பட்டது. இளந்தளபதி முகம்மது காசிம், 6000 படை வீரர்களைக் கொண்டு ஒரு சிறு படையினைக் கொண்ட திவால் பட்டினத்தை முற்றுகையிட்டு கவணெறிப் படையும், வாள்படையும் கொண்டு தாக்கினான். அவன் அரசன் தாகீரை (Dahir) வென்று பட்டினத்தைக் கைப்பற்றினான். சிந்து நாட்டைக் கைப்பற்றினான். ஆனால் 36 ஆண்டுகளுக்கு மேல் சிந்து நாட்டை அவன் வைத்திருக்க முடியவில்லை. அவர்களின் வெற்றி முகம் மாறி தோல்வி முகமாக தோன்றியது. இரண்டாவது தாக்குதல் ஆப்கானிதானத்தினின்று வந்தது. கஜினி என்பவன் தன்னைத் தானே அரசனாக்கிக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் சபாக்திஜின் (Sabaktigin) என்பவனும் கி.பி. 980-ஆம் ஆண்டில் ஜெயபாலன் என்னும் இலாகூர் அரசனைத் தாக்கினார்கள். அவர்களது தாக்குதல் வெற்றி பெறாமல் போகவே சிந்து வெளி பக்கம் திரும்பினர். அப்பால் ஆரிய மன்னர்களான தில்லி, அஜ்மீர் கலிஞ்சார் கனோஜ் ஆகியவர்கள் ஜெலால்பாத்திற்கு அருகில் 100,000 குதிரைப்படைகளையும் எண்ணற்ற தானைப்படை களையும் கொண்டு முன்னேறிச் சென்றனர். சபாக்திஜின் இதைக் கண்டு சினமுற்று எழுந்தான். சமவெளியில் பகைவர்களின் படைகளைச் சந்தித்து எதிரிகள் மீது சிங்கம் போல பாய்ந்தான். அவனது குதிரைப்படைகளின் அரிய சாமர்த்தியத் தினால் பகைவர்களின் அணிகளைப் பிளந்து ஆரியர்களின் தெய்வப் படை களையும் மந்திர தந்திர, மாய்மாலங்களையும் மண் கௌவச் செய்து மலை போல் கொன்று குவித்து ஆரியப்படைகளை சிரசை அறுத்தும் காலை வெட்டியும் குடலைப் பிடுங்கியும் பிணக்கா டாக்கினான். கி.பி. 1101 -ஆம் ஆண்டு முகமத் என்பவன் ஜெயபால் அரசனை பெசவார் அருகில் சிறை செய்தான். அப்பால் அவனை அவனது தலைநகருக்குக் கொண்டு வரும் பொழுது அவன் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு செத்தான். இருமுறை முசுலிம் போர் வீரர்களுக்குத் தோல்வியுற்றால் அவ்வரசன் ஒரு நொடியும் ஆட்சி பீடத்தில் இருக்க யோக்கியதையற்றவன் என்ற அக்கால சம்பிரத்தாயத் திற்கேற்ப அவன் தன்னை தீயிட்டு எரிந்து சாம்பலாக்கிக் கொண்டான். அவனது ஐந்தாவது படை எழுச்சியில் - அதாவது கி.பி 1008-ஆம் ஆண்டில் மகம்மத், வட இந்திய ஆரிய மன்னர்களும் படைகள் ஜெயபால் அரசன் மகன் ஆனந்த பால் தலைமையில் பெசவார் அருகில் உள்ள சமவெளியில் சந்தித்தன. சுல்தான் தான் மட்டும் 6,000 வில் வீரர்களைப் போர் முனைக்கு அனுப்பினார். அவைகள் அந்த ஆரியர்களின் 30,000 படை வீரர்களைச் சந்தித்தனர். ஆரியர் படைகளின் தாள்களும் தலைகளும் பாதரட்சைகளோ தலை இல்லாமல் வெறுமனே போர் முனைக்கு வந்தனர். ஆனால் கைகளில் ஈட்டியும் வாளும் பிற போர்க்கருவிகளும் ஏந்தி இருந்தனர். ஆரியப் படை மொகலாயர்களின் குதிரைப்படையோடு மோதின. தோல்வி பெற்றன. மன்னனின் யானைகள் அம்புகளின் பாய்ச்சலைக் கண்டு கலங்கின. எறிபடைகளின் (இரசகற்பூர உருண்டைகளின்) தாக்கு தலினால் இந்துக்கள் திகில் அடைந்தனர். மூல்டானை வென்ற பின் மொகலாயர் படை கனோஜ் வரை ஊடுறுவ ஆரம்பித்தது. குவாலியர் கலிஞ்சார் முதலியவைகளைக் கைப்பற்றியது. 1022-ஆம் ஆண்டில் அவன் 54,000 குதிரைகளை அணிவகுத்துப் போருக்குப் புறப்படச் செய்தான். இஃதன்றி, நாட்டில் பல்வேறு இடங்களிலும் இருக்கும் 1300 யானைகளையும் ஒன்று திரட்டினான். அவனது பதினாறாவது படையெடுப்பில் சோமநாதபுரத்தில் உள்ள ஆரியர்களின் வாயுலிங்கம் என்னும் சோம நாதர் இலிங்கத்தை உடைத்து அதனுள் இருந்த விலையுயர்ந்த மணிகளையெல்லாம் சூறையாடிச் சென்றான். ஆரியர்கள் தங்களின் போர்த் தெய்வமாகிய இந்திரனையும், உருத்திரனையும் விஷ்ணு வையும் பிரமனையும் பிரார்த்தனை செய்தனர். மந்திரங்களை உச்சாடனம் செய்தனர். யாகங்கள் செய்தனர். ஒன்றும் பயன் தர வில்லை. இறுதியாக அந்த முசுலிம் அரசனை வணங்கித் தங்கள் தெய்வ உருவத்தை உடையாதிருக்கும்படி மண்டியிட்டுக் கெஞ்சினர். தங்களின் திரு உருவத்தைத் தொடாமல் விட்டால் பெரும் செல்வத்தைக் கொடுப்பதாக மன்றாடினர். அவன் எதற்கும் மசியாது அந்த விக்கிரகத்தை உடைத்து அதனுள் இருக்கும் பலவகை மணி களையும் கொண்டேகினான். இறுதியாய் அவன் நடத்திய படை எடுப்பில் சாட்களைத் தண்டிக்கும் பொருட்டு மூல்டான் அருகில் உள்ள சிந்துக் கரையில் அவர்களைத் தாக்கினான். இவர்கள் அவன் சோமநாத புரத்தினின்று திரும்பும் பொழுது வழியில் அவனுக்குப் பெரும் தொல்லை அளித்தவர்கள். அவன் அந்தச் சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு 1400 படகுகளையும் அவைகள் ஒவ்வொன்றிலும் ஆறு இரும்பு கூர்முனைகள் உள்ளதாய் பகைவர்கள் அதிலிருந்து உணவு வசதிகள் பெறுவதைத் தடுப்ப தற்கும் 20 வில் வீரர்களையும் ஐந்து தார் எண்ணை மனிதர்களையும் உபயோகித்தார். ஜாட்டுகள் அவனை எதிர்த்து 4,000 படகுகளை உபயோகித்தனர். அவைகள் முழுவதும் தோல்வியுற்றன. அவர் களின் படகுகள் பல தீக்கிரை யாகின. தார் எண்ணை மனிதர் தீயிட்டுப் பொசுக்கப்பட்ட ஆரியர் களின் கொடிய பகைவனான முசுலிம் மன்னன் கி.பி. 1030-இல் உயிர் துறந்தான். அவனது மகன் மசூத் (Masaud) எந்த மனிதனும் தன்னுடைய தண்டாயுதத்தை நிலத்தினின்று நிமிர்த்த முடியாது. தன்னுடைய அம்பை எந்த இரும்புக் குமிழ் வடக் கேடயமும் தடுத்து நிறுத்த முடியாது என்று பெருமை கூறினான். வரலாற்றின் இந்தக் காலம் முழுவதும் முசுலிம் எழுத்தாளர் களின் முரண்பாடான மதிப்பிலிருந்து நல்ல விளக்கம் காணமுடியா திருக்கிறது. கஜினியின் இல்லம் வீழ்ந்தது. குத்புடீன் அய்பேக் என்ற துருக்கிய அடிமை கஜினியின் முய் சுத்தீன் முகமத் என்பவனுடைய ஆற்றல் எழுந்தது. அவன் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அச்மீர் அரசன் பிருதிவிராச் சாந்தராய், அவனது தம்பி, தில்லி வைசிராய் ஆகியவர்கள் அவனை முன்கூட்டிச் சந்திக்கச் சென்றனர். அவன் மிகத் துணிகரமானவனாய் மற்போரிலே தனேசுவரத்திற்கும் கர்னாலுக்கு மிடையில் நரயன் என்னும் இடத்தில் நிறைவாக நிலைகுலையச் செய்தான் (கி. பி. 1191). பின்னர் வரும் ஆண்டுகளில் 1,20,000 காலாட் படை வீரர்களைக் கொண்ட பெரும் படையோடு இந்துதான் அரசர்களோடு கூடி 150க்கு மேற்பட்ட மன்னர்கள் மொகலாய ஆட்சியை பாரத நாட்டினின்று அடியோடு துடைத்து ஒழிக்க ஒன்று திரண்டெழுந்தனர். இந்த ஆரியப்படைகளில் ஒரு நிதான மதிப்பின் படி 300,000 குதிரைகளும், 3,000 யானைகளும் மாபெரும் காலாட்படைகளும் வெள்ளம் போல் பொங்கி எழுந்தன. ஆரியப்படை குடித்து வெறித்துக் களியாட்டில் மூழ்கி இரவைக் கழித்து நிற்கும் பொழுது, பட்டாணிப் படை ஆற்றைக் கடந்து ஆரிய இந்துப்படை மீது திடீரென்று சாடி, அவர்கள் தங்கள் தூக்கத்தையும் மயக்கத்தைவிட்டு எழுந்து அணிவகுக்க ஆரம்பிக்கு முன்பே பகைவர்களை அடித்து நிலைகுலையச் செய்து விட்டன. சுல்தான் தனது படையை அணிவகுத்து முன்னேறச் செய்தார். அவரது மூலப்படை முன்வரிசையில் போர் வெறி கொண்டு சென்றது. அவர்களுடன் கொடிகளும், மேற்கவிகைகளும் யானை களும் சென்றன. ஆயுத பாணிகளாக இல்லாத குதிரை வீரர்கள் 4 பகுதி களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 10,000 பேர் இருந்தனர். பகைவர்களோடு போராடி பொழுது அடையுமுன் அவர்கள் மீது பாணங்களைப் பொழிந்து 1200 உயர்ந்த குதிரைப்படை வீரர்களும் தங்களின் எஃகுக் கவசங்களோடும் கேடயங்களோடும் போராடி பகைவர்களை அன்றே அழித்து விடுவதில் கவலை கொண்டிருந் தனர். சாந்த ராய் தனது யானையை விட்டு விட்டு பகைவர்கள் எளிதில் வெற்றி பெறும் படி வீழ்ந்தான். குத்புட்டின் அய்பேக் வெற்றி வீரனாகத் தில்லி போந்து அடிமைகள் ஆட்சியை நிறுவி இந்துதானத்தின் பெரும்பகுதி யிலும் இலாமிய ஆட்சியை விரிவுபடுத்தினான். அவனது வெற்றியின் சின்னமாக தில்லியில் குதுப்மினார் என்ற 242 அடி உயர்ந்த கோபுரம் கட்டப்பட்டது. இன்று அது கெம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. அவனுக்குப் பின் வந்தவர்கள் பலர் இரசபுத்திரர் இனத்தவர் களின் ஒற்றுமையைக் குறைத்தார்கள்; பலத்தை அழித்தார்கள். மொகலாயர்களின் வெற்றிகரமான படை எடுப்புகள் தடுத்து நிறுத்தப் பட்டது. நசிருத்தின் காலத்தில் உலுக்கான், பல ஆரிய இந்து மன்னர் களை (ராணாக்களை) அடக்கி ஒடுக்கினான். அவனுடைய, ஹீலாகு அரச தூதுவரின் ஆலோசனை படி செங்கிஸின் பேரன் பெரும் புகழ் ஈட்டினான் (கி.பி.1259) மொகலாயர் உள்ளத்தில் பதிய வைக்குமாறு அவர் தனது தலைவனுடைய இராணுவ சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டிக் காட்டத் தீர்மானித்தார். அவரது எண்ணப்படி 2,00,000 காலாட்படை வீரர்கள் 20 அணிகளாகத் தோளோடு தோள் சேர்ந்து சாரை சாரையாய்ச் சென்றனர். அதோடு 3,000 ஆயுதம் அணிந்த தேர்களும் 2,000 போர் யானைகளும் இடை இடையே சென்றன. தெக்காணத்தின் வரலாறு இப்பொழுது முடிவுற்றது. கி.பி. 1294ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ச்சியினால் நர்மதா ஆற்றைக் கடந்து முதன் முதலாக முசுலிம்களின் ஆயுதங்கள் செல்வதைக் காண்கின்றோம். 1329ஆம் ஆண்டில் கியாஸீத்தின் துக்ளக் சா ஆரிய இந்துக்களிடமிருந்து வாராங்கலைப் பறித்துக் கொண்டான். மாக்ரி அல்லது மேற்கு மங்கோனல்களிடமிருந்து கற்களையும் நாவாக்கு களிடமிருந்து வில்களையும் சில நாட்கள் போராடிப் பிடுங்கிக் கொண்டான். அவன் அதனுடைய பெயரைச் சுல்தான்பூர் என்று மாற்றினான். அவனுடைய மகன் முகம்மத் ஆட்சியில் தில்லியிலிருந்த அரசிருக்கையை டியோக்கிரிக்கு மாற்றினான். அப்பால் அதை தௌலதாபாத் என்று பெயர் சூட்டினான். தெக்காணம் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தது. பல முசுலிம் அரசுகள் தலை தூக்க ஆரம்பித்தன. தெக்காணத்தின் சுல்தான் பாமினி ஆட்சியின் நிறுவியார் ஆகி (1347) இராணுவத்தில் உயர்ந்த பதவிகள் வகித்துள்ளவர்களுக்கு ஏராளமான நிலங்களை பகிர்ந்தளித்து அவர்கள் ஒவ்வொருவரும் குதிரைப் படைகளின் ஒரு பகுதியைப் பராமரிப்பற்காக ஜாகிரில் உள்ள நிலங்களை உரிமைப்படுத்தினான்.1 தென் இந்தியாவில், சுயேச்சை யான தலைவர்கள், நிலச்சுவான்தார்களாய்ப் புதிதாய் வந்த முசுலிம் ஆட்சியாளர்களிடம் சரண் அடைந்து அவர்களோடு ஒத்துழைத்து ஊதியம் பெற்றனர். இந்த ஆட்சி 150 ஆண்டுகள் நிலவி அப்பால் ஐந்து சுயேச்சையான அரசுகளாகப் பிரிந்தது. தெக்காணத்து முசுலிம் சுல்தானைப் பற்றி நிகிட்டின் என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் விளக்கந் தரும் பொழுது அவர் ஒரு வலிமை வாய்ந்த முடிமன்னராயிருக்கிறார். அதோடு அவரது படைக்கு 4 ஆரிய இந்துக்கள் தலைமையாளர்களாய் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் 40,000 ஆயுதந்தாங்கிய போர் வீரர்களும், 100,000 காலாட்களும் இருக்கின்றனர். பெடார் (Beder) சுல்தான், சொந்தப்படை வீரர்கள் 300,000 பேர்களுடன் சரண் அடைந்தார். அவர்களில் பலர் கான்கள் (Khans) என்று கூறும் தலைவர்கள். அவர்கள் 10,000 ஆயுதந்தாங்கிய வீரர்களை வைத்திருந்தனர். பெய்ராமில் அவர், பல பொன் கலந்து செய்த வைடூரியம் பதிக்கப் பெற்ற போர்க்கருவிகளை வைத் திருந்தார். மூன்று வாள்கள் பொற்றகடுகள் பொதியப் பட்டிருந்தன. அவர் வேட்டையாடச் செல்லும் பொழுது அவரைத் தொடர்ந்து 10,000 பேர் குதிரை மீது ஏறியும், 50,000 பேர் காலால் நடந்தும் 200 பேர் யானைகளோடு பொன் மெருகு பூசி ஆயுதங்களைத் தாங்கியும் செல்வர். தமிழ் நாட்டை விட இந்தியா அடிக்கடி அயல் நாட்டுக் கொள்ளைக்காரர்களின் உள்ளத்தைக் கவர்ந்து வந்தது. எனவே மீண்டும் 1397-இல் தாத்தாரியர்களின் ஆக்கிரமிப்புக்குப் பலியாயிற்று. தைமூர் (Taimur) சிந்து ஆற்றை கடந்து 10,000 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த போர் வீரர்களோடும் பாட்னிரின் (Bhatnir) அரண்களை நோக்கி ஏறு நடை போட்டது. இராவ் துல் செய்ன், இராச புத்திரர்களோடு போராடுவதோடு கோட்டைவாயில் வரை இழுத்துச் சென்றது. போரை விட்டார். ஆனால் மொகல் குதிரைப்படை அவர்கள் மீது சாடி அழித்தது. அப்பால் அவர் களைப் பின் தொடர்ந்து நகரை அடைந்து நாட்டின் எசமானர்களாகினர். அவரது 500க்கு மேற் பட்ட சிறைக் கைதிகளை தண்டித்து முரட்டுத்தனமாக வீரர்களை விரட்டியடித்தார். அவர்களது மனைவிகளையும் மக்களையும் அவர்களது வீட்டிலே அடைத்து வைத்துத் தீயிட்டுப் பொசுக் கினார். அவர்களின் மனைவிமார்கள் பலரை விற்றார். இஃதன்றி இயன்ற எல்லாக் கொடுமைகளையும் இழைத்துத் தனது ஆவலைத் தீர்த்துக் கொண்டார். சுல்தான் முகம்மத் தில்லியைப் பாதுகாப் பதற்குத் தனது படைகளைத் திரட்டினார். தைமூர் 100,000 பேர் களைச் சிறைபிடித்து படு கொலை செய்தான். அவனை விரைவில் சந்திக்கும்படி அவனுடைய வலிதான பாசையில் கூறிவிட்டுச் சென்றான். மகம்மதின் படை 40,000 காலாட்களும், 10,000 குதிரை களும் 125 யானைகளும் அடங்கியது. எல்லா விதமான ஆயுதங் களையும் பெற்று அம்பாரியின் மீது இருந்து எறிகுண்டுகள் (Riad - and az) வாணங்கள் (atash baz) உந்து கூண்டு வாணம் (Takhshandaz) பகைவர்கள் மீது பாய்ச்சினர். தைமூரின் வலது பக்கத்துப் படை பகைவர்கள் மீது சாடி அவர்களைத் தூள்தூளாக்கியது. அம்பு மாரி பெய்தது. இடது பக்கத்துப்படை பதுங்கி இருந்து கையில் வாளையேந்தி சுல்தானின் வலது பக்கத்து முன் அணியின் மீது பாய்ந்தடித்தது. ஒரு சிறிய போராட்டத்திலே ஆரிய இந்துப்படை யின் முக்கிய பகுதியை அடித்துப் பின் தள்ளியது. அவர்களை விரைந்து செல்லுமாறு அடித்து நகரைக் கைப்பற்றியது. அப்பால் நகரை, வீரர்கள் கொள்ளையடித்துக் கொள்ளுமாறு விட்டுவிட்டது. மக்களைப் படுகொலை செய்து நகரை நரகமாக்கியது (1398). தைமூர் கங்கையாற்றின் மேற்பகுதிப் பக்கத்தில் வளமான பகுதி களையெல்லாம் மிகக் கொடூரமாய்ச் சூரையாடி னான். மேற் கொண்டு அவன் வென்று நிலத்தைக் கவரவில்லை. இந்தியாவினின்று அவன் புறப்படுவதற்குப் பல்லாண்டாயின. தில்லியின் சக்கரவர்த்தி யின் சாதாரண ஆட்சி நிலவ பல ஆண்டாகின. இந்தியாவிற்கு வந்த வழிப்போக்கர்களும் பழங்கால அராபியர் களும் அன்றைய இந்தியாவின் நிலையைப் பற்றி ஒரு நல்ல விளக்கம் தந்துள்ளார்கள். அதோடு ஆரம்ப கால முசுலிம்களின் போர்க்கலை களையும், போர்க்கலன்களையும் பற்றி விளக்கந் தந்துள்ளார்கள். அதிலிருந்து அவர்கள் ஆதிகாலத்தில் வைத்திருந்த ஆயுதங்களை யன்றி வேறு புதிய முக்கியமான மாற்றங்கள் பெற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. புதிதாக நிலை நாட்டப் பெற்ற முசுலிம் ஆட்சிகளின்று எஞ்சிய ஆரிய இந்து ஆட்சி எவ்விதமான வேற்றுமையும் பெற்றிருக்க வில்லை. அல் இதிரிலய் என்ற அரேபிய நில நூல் வல்லுநர் 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர். அவர் இந்தியாவின் இளவரசர் களில் ஒருவரைப் பற்றி அடியில் வருமாறு விளக்கம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது; நகர்வாரா (Nahrwara) ஒரு பெரிய இளவரசனால் ஆளப்பட்டு வந்தது. அவருக்கு மன்னர் மன்னன் (Balhara) என்ற பட்டம் உண்டு. அவரிடம் பல போர் வீரர்களும் யானைகளும் உண்டு. அவர் புத்தரை வழிபட்டு வந்தார். அவரது தலை மீது பொன் முடி வைக்கப்பட்டி ருந்தது. அவரது ஆடைகள் அனைத்தும் விலை யேறப் பெற்றவைகள். அவர் குதிரை மீது சவாரி செய்வார். ஆனால் சிறப்பாக வாரத்திற்கு ஒரு முறை அவர்கள் வெளியே புறப்படும் பொழுது 100 இளம் மகளிர்கள் உயர்ந்த ஆடை அணிகள் அணிந்து பொன் மோதிரங்கள் பூண்டு கைகளிலும் கால்களிலும் வெள்ளி அணிகலன்கள் அணிந்து இருப்பர். அவரது தலை முடிகள் அழகாய் சுருண்டும் நெளிந்தும் எழில் பெற்று விளங்கும். அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவர். விளையாட்டுச் சண்டை யில் அவர்களது தலையில் அவர்களது அரசர் நடந்து செல்வார். அரசனோடு அமைச்சர் படை களின் தளபதிகளோ செல்வதில்லை. அரசன் புரட்சிக்காரர்களை அடக்கச் செல்லும் காலத்திலன்றி வேறு எக்காலத்திலும் மன்னர்களோடு மற்றவர்கள் செல்லார்- அவனது எல்லைக்குள் பக்கத்திலுள்ள நாட்டு மன்னர்கள் கால் வைத்தாலும் அரசர் ஏனையரோடு போந்து அவர்களை விரட்டுவான். அரசனோடு எண்ணற்ற யானைகள் இருந்தன. அவனது படைகளுக்கு முக்கிய பலம் யானைகளே. முற்காலத்தில் இந்தியாவிற்கு வந்து சென்ற வழிப் போக்கர் களில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த மார்கோ போலோ என்பவர் ஒரு முக்கியமானவராகும். அவர் பர்மா அரசருக்கும் குப்லாய் சக்கரவர்த்தியின் துருப்புகளுக்கும் இடையே நடந்த போரைப்பற்றி ஒரு நல்ல விளக்கம் எழுதி வைத்துள்ளார். அது அடியில் வருமாறு: பர்மா அரசரும் வங்காள வேந்தனும் 2,000 பெரிய யானை களை வைத்திருந்தனர். அவைகள் 12 முதல் 16 போர் வீரர்கள் சுமக்க முடியாத பலமான மரக்கட்டைகளையெல்லாம் ஒரு யானை சிறு குச்சுகளைத் தூக்கிச் செல்வது போல் எடுத்துச் செல்லுகின்றது. இஃதன்றி அவர்களிடம் 60,000 குதிரை வீரர்களும், காலாட் படையினரும் இருந்தனர். தார் தாரியார்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இல்லை. குதிரை மீது ஏறிவந்து போர் இயற்றினர். யானைகளிடம் அவர்கள் பயங் கொண்டனர். ஆனால் யானையைக் கண்டால் உடனடியாய் அவர்கள் குதிரையை விட்டிறங்கி குதிரைகளைக் காடுகளில் உள்மரங்களில் கட்டிப்போட்டுவிட்டு தங்களுடைய வில்களை எடுத்துக் கொண்டு யானைகளை நோக்கி முன்னேறி குறுகிய இடத்தில் யானைகளைக் கொன்றனர் அல்லது காயப்படுத்தினர் அல்லது பின் நோக்கி ஓடும்படியாகச் செய்தனர். தார்த்தாரியர்கள் யானைகள் போர் முகத்திற்கு மீண்டும் கொண்டு வர முடியாது செய்தனர். அவர்கள் குதிரைகளை உடனே கொண்டு வந்து பகைவர்கள் மீது போரை மிகக் கடுமையாக ஆரம்பித்து வாளையும் தண்டாயுதங்களையும் உபயோகித்தனர். ஆனால் தார்த்தாரியர்கள் இதில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார். 1 இபின் பட்டுடா கி.பி.1333-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அராபிய வழிப் போக்கர்களில் ஒருவர். அவர் மூல்டான் அமீரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின் வருமாறு கூறுகிறார். அமீர் எப்பொழுதும் தன்முன் பல்வேறு அளவில் எண்ணற்ற வில்களை வைத்திருந்தார். யாராவது ஒருவர் அவரது வில் படையில் சேர விரும்பினால், அமீர் அவரிடம் ஒரு வில்லைக் கொடுப்பார். அவன் அந்த வில்லை தன் பலங் கொண்ட மட்டும் இழுத்துக் காட்ட வேண்டும். அவனது ஆற்றலை அறிந்து அவனுக்கு அவர் படையில் இடம் அளிப்பார். அதே போல் எவரும் அவரது குதிரைப் படையில் சேர விரும்பினால் ஒரு முரசு கொடுக்கப்படும். குதிரைப் படையில் சேர விரும்புவன் குதிரை மீதேறிக் கொண்டு குதிரையை முழு வேகத்தில் செலுத்த வேண்டும்; அப்பொழுது அவனுடைய ஈட்டி யினால் முரசை முழக்க வேண்டும். அப்பால் அவனது அடியின் தன்மைக் கேற்ப அவனது இடம் தீர்மானிக்கப்படும். அக்காலத்தில் இந்திய மக்கள் தொன்மைதொட்டு நெருப்பு உந்து கூண்டுவாணத் (Fire Rocket) தைப் பற்றி அறிந்திருந்தனர் என்று அவர் சான்று அளித்துள்ளார். பழங்காலத் துப்பாக்கி வகைகள் அல்லது வாணங்கள் சர்வ சாதாரணமானதல்ல. ஒருவேளை அவை களைப் பற்றி மக்கள் அறிந்திருக்க முடியும் என்பதில் கூட சந்தேகம் இருந்து வருகிறது. ஆனால் உறுதியாக வெளிநாட்டு வழிப் போக்கர்கள் அவர்கள் சுற்றுலாவில் இதைக் கண்டதாக எழுதி இருப்பதை நாம் அலட்சிமாய் விட்டு விடுவதற்கு இல்லை. தைமூர் கி.பி. 1405-இல் இறந்தார். அவரது படை வீரர்களுக்கு அவரைப் போல் பழங்காலத் துப்பாக்கி வகைகள் அளிக்கப் பின் வந்தவர்களால் முடியவில்லை.1 சாதாரணமான போர் வீரர்கள் வில், அம்பு, வாள் முதலியவைகள் தான் பெற்றிருந்தனர். தேர்ந்தெடுக்கப் பட்ட காவல் வீரர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆயுதங்க ளோடு தலைக்கவசம் மார்புத் தகடு ஆகியவைகள் கொடுக்கப்பட் டிருந்தனர். சிறிய இராணுவ அதிகாரிகள் உடலின் மேற்பாகத்துக் கான போர்க்கவசம் தண்டாயுதம், கதை, தலைக்கவசம் போன்றவைகள் அளிக்கப்பட்டிருந்தனர். உடம்பில் இரும்பு கம்பியால் வலை போன்று பின்னப்பட்ட பனியன்களும் அளிக்கப்பட்டிருந்தது. 15-ஆம் நூற்றாண்டில் இந்தியா போந்த வழிப் போக்கர்களான நிக்கோலா கோண்டியும், நிகிட்டினும் பழைய காலத் துப்பாக்கி வகைகளை பற்றி குறிப்பிடவே இல்லை. இந்து ஆரியர்களின் போர்க்கருவிகளைப் பற்றி விளக்கி விட்டு இறுதியாகக் கூறுவதாவது; யானைகள் படிப்படியாகப் படைகளில் பயன்படுத்தப் பட்டன. தானைப்படை (காலாட்படை) முதலில் அனுப்பப் பட்டது. அரசர்கள் அல்லது நாட்டின் தலைவர்கள் முழு ஆயுதபாணி களாக இருந்தனர். யானையின் தந்தங்களும் துதிக்கை களும் பெரிய புல்லரிவாளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யானைகள் மீது அரண் போன்ற ஒன்று (அம்பாரி) ஏற்றப்பட் டிருந்தது. ஒரு அம்பாரியில் 12 வீரர்கள் அம்புகள் வில்கள் போன்ற ஆயுதங்களுடன் இருப் பார்கள். சிறிய யானைகள் 6 மனிதர்களைச் சுமந்து செல்லும். சகாபுத்தின் என்பவர் தன்னுடைய அறிக்கையில் முகம்மத் துக்ளக் படைகளைப் பற்றி விளக்கிக் கூறியுள்ளார். அது அடியில் வருமாறு: அவரது படை 900,000 குதிரை வீரர்களையுடையது. அவர்கள் இளவரசர் அருகிலே இருப்பர். ஏனைய படைகள் அரசின் பல்வேறு மாநிலங்களில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும். அந்தப்படையில் துருக்கியர் காதே (Cathay), பாரசீக இந்தியர் போன்றவர்கள் அடங்கி இருந்தனர். மொகலாயர்கள் இராசபுத்திரர்களின் பெண்களை மணந்தும் அப்பெண்களின் அண்ணன் தம்பி போன்ற உறவினர்களை அமைச்சர்களாய் நியமித்தும் ஆரிய இந்துக்களின் சமயத்திற்கு உதவியும் அவர்களின் கலைகளை ஆதரித்தும் தங்களின் ஆட்சியை வலுப்படுத்தி வந்தனர். ஆலங்கீர் என்னும் ஔரங்கசீப் (1658 - 1707) போன்ற சில முலிம் மன்னர்கள் வைதீக முலிமாக இந்துக் களையும் இந்து சமயத்தையும் புறக்கணித்து வந்ததால் இந்துக்களின் ஆதரவை இழந்தனர். அதன் பலனாக மாவீரன் சிவாஜி போன்ற மகாராட்டிர வீரர்கள் தோன்றி மொகலாயர்களை எதிர்த்து வந்தனர். அதனால் அவர்கள் பலங்குன்றினர். ஔரங்சீப் காலத்திற்குப் பின் மொகலாயப் பேரரசர்கள் எவரும் எழவில்லை. பேரளவில் இரண்டாவது பகதூர் சா (1837-1888) போன்ற சிறு முலிம் மன்னர்கள் ஆட்சி நிலவியது. ஐரோப்பியர்களால் நிலை குலையப் பெற்றன. அக்பர்கால ஆயுதங்களின் விளக்கம் மொகலாயர்களின் போர்க்கருவிகள் 1. கேடயம் (Dhal) 2. கேடயம் - வேறொரு வகை (Sipar) 3. கார்டனி (Gardani) குதிரையின் பாதுகாப்பணி 4. கவச அணி (Ghughwah) தலையையும் உடம்பையும் பாதுகாக்கும் ஒரு கவச அணி 5. உடானா (Udanah) 6. பிரம்புக் கேடயம் (Phari) 7. கழுத்துப் பட்டை (Khant Hah Sobha) 8. போர்க்கவசத்தின் மீது பூணும் சட்டை (Angirk Hah) 9. எஃகுச் சட்டை (Bhanju) 10. உடலின் மீது பூணும் போர்க்கவசம் (zirith) 11. குதிரை வீரனின் தலைக்கவசம் (Gashquah) 12. படை வீரனின் எறி வேல் (Ischehouta) - Spear 13. ஈட்டி (பழுக்குறைந்த வேல்) Javelin 14. நீண்ட ஈட்டி (அடியும் நுனியும் கூரியது) Bavehha - lance 15. அம்பறாத் தூணி (Tarkash) Quiver 16. வில் (Maktah - Bow) 17. மற்றொரு வகை வில் (Kaman) 18. நுனிவளைந்த குத்துவாள் (Seymitar) 19. உடைவாள் (Baneh) - Sword. 20. அகலம் குறைந்த உடைவாள் (Bhelhetah) 21. கட்டாரி (Katarah) 22. மழு (Iarawgalah) 23. செருகும் கத்தி (Chaqu) 24. கத்தி (Heail) 25. நீண்ட உடைவாள் (Gupte Card) 26. இருபுறமும் கூரிய குத்து வாள் (Jandhar doulicaneh) 27. அகன்ற நுனி வளைந்த குத்துவாள் (Jamdhar) 28. கூரிய வளைந்த குத்துவாள் (Khapwah) 29. கூரிய வளைந்த குத்துவாள் (Jambiyah) 30. நரசிம்மவாள் (Narasimgmobh) 31. வளைந்த வாள் (Bank) 32. மூன்று முனையுள்ள குத்துவாள் (Jandhar Sehlicanch) 33. போர்க் கோடரி (Zaghnol) Pointed axe - Crowbill 34. இரட்டைக் கோடரி (Tabar - zaghnol) 35. கதை (Shashbur - Globular maee) ஐரோப்பிய - இந்தியப் போர். (கி.பி. 1498-1947) ஒரு நாட்டைக் கவர வேண்டுமென்று பிற நாட்டார் நினைத்தால் உடனே படையெடுத்துச் செல்வது போர்த்தந்திரம் ஆகாது. அதில் வெற்றி கிட்டுவதும் அரிது. வெற்றிகிட்டினால் அது நிலையான வெற்றியாய் இராது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் முதன் முதலாகத் தாங்கள் ஆக்கிரமிக்கக் கருதும் நாட்டிற்கு ஒற்றர்களையும் போர் வீரர்களையும் ஆடுமாடு மேய்ப்பவர்களை யும், வணிகர்களையும் அறம் கூறும் புரோகிதர்களையும், அழகிய பெண்களையும் அனுப்புவது வழக்கம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் சமயத்தை, புரோகிதர்களையும் அனுப்புவர். அப்பால் தங்கள் ஒற்றர்கள் நல்ல சூழ்நிலை எழுந்து விட்டது என்பதை அறிந்ததும் ஏதாவது போலிக் காரணங் காட்டிப் போருக்கு எழுவது வழக்கம். இந்த அடிப்படையிலே பவித்திரமான பாரத நாட்டிற்கு முதலில் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்ப்பவர்களாக வந்தனர். அப்பால் அவர்களின் படைகள் வந்தன. பிற்காலத்தில் கூட தென் இந்தியாவில் ஆரிய ஒற்றர்கள் முனிவர்கள் போல் குன்றுகளிலும், குகைகளிலும் ஒற்றாடல் செய்து வந்தனர். இந்த முனிவர்கள் தசரதனிடம் போய் இளமையிலே தமிழகம் போந்து, தங்களின் யாகங்களை அழிக்கும் திராவிடர்களையும் தசுயுக்களையும் இயக்கர் களையும் ஒழிக்க இராமனை அனுப்ப வேண்டும் என்று அழைத்தனர். அப்பால் தசரதன் தன் மகனை வனவாசம் செய்யும் படி கூறியதாகவும் அந்தத் தந்தையின் ஆணைப்படி தென் இந்தியா போந்ததாகவும் சூர்ப்பநகைத் தன்னை மணந்து கொள்ள வற்புறுத் தியதற்காக அவளை மானபங்கம் செய்து அவள் அண்ணன் இராவணனை வலிந்து போருக்கு இழுத்தனர். தென் இந்தியாவில் வந்து வாலியைக் கொன்று அவன் தம்பியாகிய சுக்கரீவனையும், மற்றொரு தலைவனாகிய அனுமானையும் பிற குறுநில மன்னர் களையும் இராவணன் தம்பியாகிய விபிசணனையும் ஆசை வார்த்தை காட்டி ஐந்தாம்படையாக்கி இராவணனை வென்று கொன்று ஆரிய ஆதிக்கத்தைப் பரப்பினர். ஆரியர்களைப் போல் அரபியர்களும் முதலில் பாரத நாட்டிற்குக் குதிரை விற்பவர்களாக வந்து இந்நாட்டில் கவைக்குத வாத குதிரைகளை விற்று பொற்கட்டிகளைக் கவர்ந்து சென்றனர். அப்பால் சமயப் பிரச்சாரரர்களை அனுப்பி எங்கும் இலாமிய நெறியைப் பரப்பினர். நாடெங்கும் ஐந்தாம் படைகளை உருவாக்கி அப்பால் அலை அலையாய் இந்திய நாட்டின் மீது படையெடுத்து எளிதில் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களை அடித்து வீழ்த்தியதோடு திராவிட இந்தியாவை ஆரிய நாடாக்கிய ஆரியர்களை அடிமைப் படுத்தி ஆரிய நாட்டை இந்துதானம் ஆக்கினர். அப்பால் ஆங்கிலேயர் போந்து திராவிடர், ஆரியர், மொகலாயர் முதலிய அனைவரையும் அடித்து வீழ்த்தி அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் இந்தியாவாக்கினர். 1947-ஆம் ஆண்டு ஆகட் மாதம் 15-ஆம் நாள் ஆங்கில ஆட்சி அடியோடு அகற்றப்பட்டது. புனிதமான திராவிட இந்தியாவைப் பங்கிட்டனர். இந்தியாவின் வட மேற்கில் பாக்கிதான் என்னும் முலிம் ஆட்சி எழுந்தது. ஏனைய பகுதியில் பெரும் பான்மை ஆரியர்களின் பாரத நாடு தலை தூக்கியது. அறிந்தோ அறியாமலோ, இந்தியா முலிம் ஆட்சியில் எப்படி சிக்கியது என்று அறிஞர் தாராசந்தர் அவர்கள் இந்திய மக்களின் சுருக்கமான வரலாறு என்ற நூலில் மேற்கூறிய நம் கருத்தை ஆதரித்து ஒரு உண்மையை மறைக்காது வெளியிட்டுள்ளார்.1 இந்தியாவில் ஆங்கிலேயர். முதன் முதலாக மொகல் மன்னன் சிகாங்கீர் 11-1-1613 -இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினியார் சூரத்தில் ஓர் ஆலையை அமைக்க இடம் அளித்தான். அப்பால் 1640 -ஆம் ஆண்டில் சாசகான் ஆட்சிக் காலத்தில் அவரது அனுமதி பெற்று சென்னையில் வணிகம் நடத்த கும்பினியர் இடம் பெற்றனர். ஏற்கெனவே வங்கத்தில் வணிகம் நடத்த அனுமதி பெற்றிருந்தனர். கிழக்கிந்தியக் கும்பினி 31-12-1600இல் முதலாம் எலிசபெத் அரசி கிழக்கிந்திய நாடு களில் வணிகம் புரிய இலண்டனிலுள்ள கூட்டு வணிகர்க ளுக்கு அனுமதி நல்கினார். மொகல் ஆட்சியில் இந்தக் கும்பினியார் முதலாவதாக சூரத், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் நடத்த அனுமதி பெற்றனர். அப்பால் தற்பாதுகாப்புக்கு என்று கோட்டையும் கட்டிக் கொண்டனர். 1640-இல் கல்கத்தாவில் செண் சார்ச் கோட்டையும் 1696-இல் சென்னையில் உல்லியம் கோட்டையும் கட்டினர். 1668-இல் சூரத் வணிகம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. இதனிடையே பிரஞ்சுக்காரர்களும் இந்தியாவில் வணிகம் நடத்த முன் வந்தனர். வணிகப் பாதுகாப்பிற்கென்று கிழக்கிந்திய கும்பினியும் பிரஞ்சுக் கம்பெனியும், உலாந்தாக் கும்பினியும் படை பலன்களைப் பெருக்கி வந்தனர். இவர்கள் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் தங்கள் தங்கள் நாடுகளிலிருந்து கொண்டு வந்தனர். இவர்கள் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டதுடன் முலிம் சிற்றரசர்களுக் கிடையில் நடைபெற்ற போரிலும் கும்பினியார்கள் தலையிட்டு தங்கள் நிலபலத்தை விரிவு படுத்தி வந்தனர். 1750-இல் மூன்று மாகாணங்களில் ஆங்கிலக் கும்பினி ஆட்சி எழுந்து பின் பிரிட்டிஷ் மன்னர் ஆட்சியாய் வலுப் பெற்றெழுந்தது. பிரஞ்சு, உலாந்தா, போர்ச்சுகி ஆட்சி பலம் குன்றின.1 பாரத நாட்டிற்கு, சுமார், 800 ஆண்டுகளுக்கு முன்னரே சீரியன் கிறிதவர்களும் யூதர்களும் அடைக்கலமாகவும் சமயப் பிரசாரத்திற்காகவும் வந்தனர். அப்பால் போர்ச்சுக்கீசியர் (1498 - 1660) இந்தியாவிற்கு வந்தனர். கி.பி. 1498இல் வாகோடா காமா கேரள நாட்டிலுள்ள கோழிக் கோட்டை (கள்ளிக் கோட்டையை) அடைந்தான். அக்பரின் ஆதரவுடன் 16-ஆம் நூற்றாண்டில் ஏசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரிகள் சமயப் பிரசாரத்தை ஆரம்பித்தனர். படிப்படியாக தென் இந்தியாவின் மேற்குக் கரை யோரத்தில் போர்ச்சுக்கீசியர் ஒரு கிறித்தவ ஆட்சியை நிறுவினர். அவர்கள் வணிகத்தின் பொருட்டே இந்தியாவிற்கு வந்ததாகக் கூறிக் கொண்டனர். அதை சாமொரின் நம்பவில்லை. அதனால் பல சண்டைகள் எழுந்தன. சண்டையில் கிறித்தவ சமயத்தைச் சார்ந்த நாயர்களும், ஈழவர்களும் அவர்களோடு சேர்ந்து போராடினர். காலப்போக்கில் போர்ச்சுக்கீசியர் கலப்பு மணங்களும் புரிந்தனர். கி.பி. 1595 -இல் உலாந்தாக்காரர்கள் இந்தியா போந்தனர். போர்ச்சுக் கீசியரை மராட்டியர்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பால் இந்தியா போந்த ஆங்கிலேயர்களும் மொகலாயர்களும் போர்ச்சுக்கீசியர் களைத் தோற்கடித்தனர் (கி.பி. 1615). அடுத்த படியாய் வந்தவர்கள் உலாந்தாக்காரர்கள். இவர்கள் முதலில் வணிகத்திற்காக வந்தார்கள். (கி.பி.1605-1700) இவர்கள் 1605இல் இந்தியாவில் இறங்கி மசூலிப்பட்டணத்தில் ஓர் அலுவலகத்தை ஆரம்பித்தனர். அப்பால் சூரத், தரங்கம்பாடி, தூத்துக்குடி, நாகப் பட்டினம், கொல்லம், கிராங்கனூர், கொச்சி, கண்ணனூர் ஆகிய இடங்களில் வாணிப அலுவலகங்களைத் தோற்றுவித்தனர். ஐரோப்பாவில் உலாந்தாக் காரர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் முதலியவர்களுடன் நடத்திய போரின் வீழ்ச்சி இந்தியாவில் அவர்களின் வணிகம் வளரவில்லை. ஆனால் ஓரளவு கத்தோலிக்க மதம் வளர்ந்தது. தமிழர்களில் மிகத் தொன்மையான குடியில் தோன்றிய பரதவர்கள் கத்தோலிக் மதத்தைத் தழுவலாயினர். கி.பி.1670-இல் உலாந்தாக்காரர் ஆட்சி சரிந்தது. கி.பி. 1609-இல் கேப்டன் ஆக்கின் என்ற ஆங்கிலேயன் காலடி வைத்தான். கி.பி. 1615-ஆம் ஆண்டில் சர்தாம ரோ என்ற ஆங்கிலேயன் இந்தியா போந்து மொகல் அரசன் ஐஹாங்கீரைக் கண்டு வணிகம் புரிய அனுமதி பெற்றான். சூரத்தில் ஒரு வணிக நிலையத்தை உருவாக்கினான். அப்பால் பல ஆங்கில வணிகர்கள் அரசர் அனுமதியுடன் அகமதாபாத், ஆக்ரா, பம்பாய், சென்னை முதலிய இடங்களில் வணிகம் ஆரம்பித்தனர். வணிகப் பொருள் களைக் கள்ளர் சூரையாடாமல் பாதுகாக்கப் படைகளையும், அரண்களையும் உருவாக்கினர். அப்பால் அரசியலில் கலக்க ஆரம்பித்தனர். போர்ச்சுக்கீசியரை முறியடித்தனர். அப்பால் மொகலாயர்களுடனும் பிரஞ்சுக்காரர்களுடனும் போராடினர். வணிகத்திற்காக மொகலாயர் அனுமதி பெற்று சில இடங்களைச் சொந்தப்படுத்தினர். சில இடங்களை விலைக்கும் வாங்கினர். இறுதியாக, பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தம் ஆட்சியை நிலை நாட்ட வந்தனர். (கி.பி.1664 - 1712) மசூலிப்பட்டினம், புதுச்சேரி, சந்திர நாகூர் போன்ற இடங்களில் வணிக நிலையங்களை ஆரம்பித்துப் படிப்படியாய்ப் படைகளை அமைத்து ஆட்சியை நிலை நாட்டினர். ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர். அதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். இருவர்களும் கூடி பல இந்து முலிம் அரசர்களை வீழ்த்தினர். இந்தியாவில் இருந்த நவாப்களுக்கு இடையே எழுந்த சண்டைகளில் ஆங்கிலேயர் ஒருவருக்கு உதவி செய்து தோல்வியுற்றவர்கள் நாட்டையும் செல்வத் தையும் பிற பொருள்களையும் பெற்று நாளடைவில் வளர்ந்து வந்தனர். இவர்கள் கிழக்கிந்திய கும்பினி என்னும் பெயரிலே இங்கு வந்து வணிகம் புரிந்து வணிகப் பாதுகாப்பு என்னும் பெயரால் அரண்களை ஆங்காங்கே அமைத்ததோடு இராணுவங்களையும் அமைத்துப் பின் அரசியலிலும் பங்கு கொண்டு இந்தியாவில் பல இடங்களைச் சொந்தப்படுத்திக் கொண்டனர். ஆட்சியைக் கைப்பற்றிய மொகலாயர்கள் சிறு சிறு குறு நில மன்னர்களாய் ஒற்றுமையின்றி ஒருவரோடு ஒருவர் மோதி பலங்குன்றி நின்றனர். இந்துக்களும் இந்துக் குறு நில மன்னர்களும் ஆங்காங்கே ஆங்கிலேயர் களையும் பிரஞ்சுக்காரர்களையும் எதிர்த்தாலும் நாட்டுப்பற்றோடு போர் செய்யவில்லை. ஏனெனில் நாடு மொகலாயரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. மொகலாய மன்னர்கள் பெண்களின் இன்பத் திலும் அபினிமயக்கத்திலும் சொக்கிக் கிடந்தனர். போர் புரிவதிலும் அன்னியரை விரட்டுவ திலும் அக்கறை கொள்ளவில்லை. திராவிட மன்னர்களும் பிரிந்தும் வலியிழந்தும் ஒற்றுமை குன்றியும் இருந்தனர். அதோடு அவர் களுக்கு ஆங்கிலேயர், மொகலாயர், ஆரியர் ஆகிய மூன்று இனத்தவர்களையும் விரட்டி அடிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட் டிருந்தது. ஆங்கிலேயருடன் போராடி தமது இளம் வாலிபர் களைப் பலியிட்டு வென்று நாட்டை மொகலாயர்களிடமோ அல்லது ஆரியர்களிடமோ கொடுக்க உள்ளம் ஒருப்படவில்லை. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மொகலாய ஆட்சியை மகாராட் டிரர் நிலை குலையச் செய்தனர். ஆங்கிலேயர்கள் முதன் முதலாக தம்மோடு ஆதிக்கப் போட்டிக்கு வந்த பிரஞ்சுக்காரர்களை வீழ்த்தினர். அப்பால் தஞ்சையில் தலை தூக்கிய மராட்டிரர்களையும் மைசூரில் எழுந்த ஐதர் அலி, திப்பு போன்ற முலிம் வீரர்களையும் ஐதராபாத் நவாப்பையும் வென்று கி.பி. 1772-இல் ஊசலாடிக் கொண்டிருந்த கிழக்கிந்திய ஆங்கிலக் கும்பினி ஆட்சி ஒரு நிலையான அரசாக அமர்ந்தது. கி.பி. 1780-ஆம் ஆண்டில் ஐதர் அலி ஆங்கிலக் கும்பினி ஆட்சியை அடியோடு வீழ்த்த 90,000 வீரர்களுடன் எழுந்தான். ஆங்கிலேயர் அஞ்சிக் கிடந்தனர். ஆனால் ஆங்கிலேயர் சூழ்ச்சியால் ஐதரை வென்றனர். ஐதருக்குப் பின் எழுந்த திப்புவும் இறுதியில் வீழ்த்தப் பெற்றான். 1784இல் வாரன் ஏடிங் ஆங்கில ஆட்சியைப் பலப்படுத்தி இந்தியக் கலையை உயர்த்த நாடினார். கல்கத்தாவில் ஒரு கல்லூரியை நிறுவினர். பாரசீக மொழியை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் இடம் பெறச் செய்தார். கி.பி. 1784இல் இராயல் ஆசியக் கழகத்தை இந்தியாவில் தோற்றுவித்தார். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி இந்திய நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலமாகும். ஆங்கிலக் கும்பினி ஆட்சி சேலத்தில் தொடங்கி இறுதியாக இராமநாத புரத்தில் உச்ச நிலை எய்தியது. தென் இந்தியாவில் ஒண்ட வந்த அயலகர்களால் வீரன் கட்டப் பொம்மன் ஆட்சியும் நாட்டிற்குரிய புலித்தேவன் ஆதிக்கமும் அழிக்கப்பட்டன. துரோகிகள் பலருக்கு சமீன்தார் பட்டமும் இராசா பட்டமும் நவாப் பட்டமும் அளிக்கப் பட்டது. கோழைகள் பலரிடம் திரை பெற்று பொம்மை மன்னராக கொலு வீற்றிருக்கும் படி செய்யப்பட்டது. 1801 -ஆம் ஆண்டு மே, ஜுன் திங்களில் இறுதியாக ஆங்கிலேயர் நெல்லை மாவட்டத்தில் தங்களின் படுகொலையை ஆரம்பித்தனர். தென்பாண்டிய நாட்டை ஆங்கிலேயர் அங்குலம் அங்குலமாகப் பிடித்தனர். கட்டபொம்மு, சிவத்தையா, தானாதிபதி, சிவசுப்பிரமணிய பிள்ளை, அவர் தம்பி வீரபத்திர பிள்ளை, பொன்னப்ப பிள்ளை, வெள்ளையத்தேவன் (பாதர் வெள்ளை) முதலியவர்கள் தங்கள் இறுதி மூச்சுள்ளவரைப் போராடி சொட்டுச் சொட்டாகத் தங்கள் உடம்பில் உள்ள உதிரம் அனைத் தையும் தமிழகத்திற்காகச் சிந்தி இன்னுயிர் நீத்தனர். இது போல் சிறிய மருது பெரிய மருது போன்றவர்களும் நாட்டிற்காகப் போராடி உயிர் நீத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்காரக்கும்பினி ஆட்சி சுதந்திரப் போர் வீரர்களின் உயிரைக் குடித்து எட்டயபுரத்தார், புதுக்கோட்டையார் துணை கொண்டு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 1857-இல் எழுந்த சிப்பாய்க் கலகத்தை அடக்கியது. இது முதலாவது இந்திய உரிமைப் புரட்சியாகும். 1849 -இல் எழுந்த உழவர் புரட்சியாகிய மாப்பிள்ளைக் கலகமும் அடக்கப்பட்டது. சிப்பாய்க் கலகத்தின் பயனாக கிழக்கிந்தியக் கும்பினி இந்திய ஆட்சியை இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணியிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஓரு அறிக்கை வெளியிட்டு கலகத்தை அடக்கினார். 1880-இல் இந்தியாவில் ஆங்கில ஆட்சி பலங்கொண்டு எழுந்தது. ஆங்கிலேயர் வெற்றி ஆங்கிலேயரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்களின் உடற்பலமும் வீரமும் என்று எவரும் கூறார்கள்; ஆனால் அவர் களின் அரச தந்திரம் என்றால் ஓரளவு ஒப்புக் கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் இந்தியா மீது படை எடுத்து வரவில்லை. படையெடுத்து வர வேண்டும் என்றால் இங்கிலாந்தினின்று இலட்சக்கணக்கான படைகளைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் இங்கிலாந்திலிருந்து கொண்டு வர வேண்டும். அப்படியே பெரும் படைகளைக் கொண்டு வந்தாலும் இந்தியா ஒருமித்து எதிர்த்தால், வெற்றி பெறுவது முடியாத காரியமாகும். எனவே கிழக்கிந்தியக் கும்பினி என்னும் பெயரால் இந்தியா போந்து தற்பாதுகாப்பு என்னும் பெயரால் அரண்களையும் சிறிய படை களையும் வைத்துக் கொண்டு பெரிய இந்தியாவில் உள்ள சிறு சிறு மன்னர்களுக்குள் எழுந்த பகைமைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு போர் மூட்டி போரில் ஒருவருக்கு உதவி வீழ்ச்சி பெற்ற நாட்டையும் அங்குள்ள செல்வத்தையும் அபகரித்துக் கொண்டனர். சில குறு நில மன்னர்களையும் பாளையப்பட்டுக்காரர்களையும் படையெடுத்துச் சென்று அவர்கள் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளைத் தமதாக்கிக் கொண்டனர். இவ்வாறு இந்தியா முழுவதையும் தமதாக்கி படை களைப் பெருக்கி அரசாங்கத்தை நன்கு நிறுவி மக்களை இரும்புப் பிடிக்குள் அகப்படும்படி செய்து கொண்டனர். மேலும் ஆங்கிலேயர் எழுச்சி பெற்றது எஃகுக் காலத்தில். அவர்கள் துப்பாக்கிகள், பீரங்கிகள் முதலிய புதிய கருவிகள் அவர்களுக்குப் பெருந்துணையாய் இருந்தன. மேலும் அவர்களிடமிருந்த வாள்களும், ஈட்டிகளும், கேடயங்களும் இந்தியர்களிடமிருந்தவைகளைவிடச் சிறப்புடைய தல்ல. சின்னஞ் சிறு பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரருடன் போரிட்டு வெற்றி பெற நாய் படாத பாடுபட்ட வெள்ளையர் ஆட்சி இந்தியா ஏகோபித்து எழுந்திருந்தால் சில மணி நேரம் கூட எதிர்த்து நிற்க முடியாது என்பது வெள்ளிடை மலையாகும். இந்தியாவில் 1825-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி வலுப் பெற்ற பின் இந்தியப்படை மறுமலர்ச்சியடைந்தது. ஆங்கிலேயர் களன்றி இந்தியர்களும் படையில் இடம் பெற்றனர். ஆனால் பெரிய தளபதிகள் ஆங்கிலேயர்களாக இருந்து வந்தனர். 1838இல் முதலாவது முதல் ஆப்கான் போரும் 1840-இல் சீனப் போரும் 1842இல் இரண்டாவது ஆப்கன் போரும் 1852இல் எழுந்த ஆப்கன் போரும் பிற போர்களும் பிரிட்டிஷ் ஆட்சியை வலு வடையச் செய்தன. 1857இல் முதலாவது இந்திய இராணுவப் புரட்சி எழுந்தது. அது சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர் உலகை ஏமாற்றினர். இராணுவத்தில் இந்தியர்களுக்கு உயர்ந்த பதவிகள் கேட்கப்பட்டன. 1-11-1858-இல் இங்கிலாந்து அரசி விக்டோரியாவி னால் ஓர் அறிக்கை வெளியானது. அதன் மூலம் கும்பெனி யாரிடமிருந்து இந்திய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சியாக மாற்றப் பட்டது. இந்தியர்களின் சமயத் துறைகளில் ஆட்சி தலையிடாது என்று உறுதி வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டது. அப்பால் 1885இல் இராணுவத்தில் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டன. 1914ஆம் ஆண்டு முதலாவது உலக யுத்தம் எழுந்தது. அதில் இந்தியப் படைகளுக்கு உயர்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இராணுவத்தில் உயர்ந்த பதவிகள் வழங்கப்பட்டன. 1939இல் இரண்டாவது உலகப் போர் மூண்டது. அதில் இந்தியப் படைகள் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆங்கில ஆட்சி இந்தியர்களுக்குப் படைகளில் நல்ல பயிற்சியும் தலைமைப் பதவியும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டது. எனவே இந்தியர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய அனைத் திலும் பங்கு பெற்றுச் சிறந்து விளங்கினர். இந்தியாவின் சுதந்திரத்தை ஆதரித்து இந்தியக் கடற்படை வீரர்கள் பம்பாயில் ஒரு போர்க் கொடியை உயர்த்தினர். அது இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு இறுதி மணியாக அடித்தது என்று ஆங்கில அரசியல் நிபுணர்கள் கண்டனர். இந்திய விடுதலைப் போர் ஆங்கில ஆட்சியை அகற்றி இந்தியாவில் சுதந்திர ஆட்சியை எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 1880-இல் காங்கிரசு மகா சபை தோன்றியது. இந்தியாவில் உள்ள படித்த வகுப்பினர்க்கு வெள்ளைக்காரருக்கு உரிய பதவிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சி எழுந்தது. அக்காலத்தில் சென்னையில் வி. கிருஷ்ணசாமி ஐயர், நீதிபதி மணி ஐயர், கோபால கிருஷ்ண கோகலே, திலகர் போன்றவர்கள் முன்னணியில் நின்று கிளர்ச்சி செய்தனர். அதனால் வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகள் கொடுத்தனர். அரசாங்கம் பார்ப்பன மயமாய் மாறியது. பாலகங்காதர திலகர் (1856 - 1919) சுயராச்சியம் எனது பிறப்புரிமை என்ற மந்திரத்தை முதலில் மக்களுக்குக் கூறினார். 1914-இல் உலகப் போர் மூண்டது. இந்தியர்களுக்கு அதிக உரிமை வேட்கை எழுந்தது. 1919 -இல் காந்தி அடிகள் அரசியலில் புகுந்து ஒத்துழையாமை என்ற பிரிட்டிஷ் ஆதிக்க எதிப்பைக் கொண்டு வந்தார். பிரிட்டன் உலகில் ஒரு பெரிய வல்லரசு. அதனிடம் தரைப் படை, பீரங்கிப்படை, துப்பாக்கிப்படை, மோட்டார் படை, கப்பற் படை, விமானப்படை போன்றவைகள் எல்லாம் இருந்தன: அதை எதிர்க்க இந்தியர்களிடம் போதிய ஆயுதம் இல்லை என்பதை அறிந்த காந்தி அடிகள் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு சத்தியாக் கிரகம், சாத்வீகம் போன்ற ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்து வந்தார். இந்தியாவை ஒற்றுமைப்படுத்தினார். உணர்ச்சி யூட்டினார். இந்தியா வீறு கொண்டெழுந்தது. வெள்ளைக்காரன் அஞ்ச வில்லை. அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். சாத்வீகப் படையை சுட்டுப் பொசுக்கினான். தலைவர்களைச் சிறை யிட்டான். தூக்கி லிட்டான்; நாடு கடத்தினான். என்றாலும் சுதந்திர உணர்ச்சி குன்ற வில்லை. 1939-இல் இரண்டாம் உலகப் போர் கொதித்து எழுந்தது. காந்தி அடிகளின் உரிமைப் போராட்டத்தில் இந்திய முசுலிம்கள் அக்கறை காட்டவில்லை. எனவே காந்தி அடிகள் முசுலிம்களை கிலாபத் கிளர்ச்சி என்னும் சமய உணர்வூட்டி தேசியப் போராட்டத்தில் இழுத்தார். ஆனால் அந்தச் சமய உணர்வு ஆக்கிரமிப்பாளர்களாக வந்த முலிம்கள், காந்தி அடிகளாகிய ஒரு இந்துவின் தலைமையை விரும்பாமல் முலிம் லீக் தலைமையில் கூடி புனித இந்தியாவை பிரித்து பாக்கிதான் என்று பங்கு போடும் படி செய்தது. இதற்கு இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயன் கொழு கொம்பாக இருந்தான். ஆனால் இந்திய நாட்டிற்கே உரித்தானவர்க ளான திராவிடப் பெருங்குடி மக்கள் ஆரியர்களை விட அதிக அளவில் இந்தியாவின் விடுதலைக்குப் போராடினாலும் காங்கிர இயக்கம் ஆரியர் தலைமையில் இருப்பதை அறிந்த பொழுதும், வெள்ளைக்காரன் திராவிட இயக்கத்திற்கு ஊக்கமூட்டிய போதிலும் திராவிடதான் வேண்டும் என்று கூறி சுதந்திரப் போராட்டத்திற்கு முட்டுக் கட்டை போட வில்லை. காந்தி அடிகள் தலைமையில் இந்தியா சத்தியாக்கிரகப் போர் நடத்தி வந்தாலும் உலகப் போர் இந்தியப் படை வீரர்களுக்கு நாட்டு உணர்ச்சியை எழுப்பியது. இந்தியக் கப்பல் படை வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க் கொடி உயர்த்தினர். இந்தியத் தரைப்படை வீரர்களும் விமானப்படை வீரர்களும் அதற்கு ஆதரவு காட்டினர். இந்தியப் போலீசு உள்பட அனைவரும் பக்கபலமாக நின்றனர். உலகப் போரில் இட்லர் வீழ்ந்தான். உலகத் தொழிலாளர் கள் கட்சி வலுப்பெற்றது. உலகில் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் செங்கொடி பறந்தது. இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முன் வந்தது. உலகிலே உள்ள அரசியல் நிலை முற்றும் மாறியது. காந்தியடிகள் ஆரம்பித்த ஆயுதமில்லாத புதுமைப்புரட்சி இரத்தமின்றி கத்தியின்றி வெற்றி பெற்றது. ஆனால் இந்தியா தன் உரிமையை பிரிட்டனிடமிருந்து பறித்துக் கொள்ளவில்லை. வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு, சுதந்தரம் அளித்தான் என்று வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் இந்திய சுதந்திரப் போர் இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை, இந்தோனேசியா, இந்தோ சீனா, பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் போன்ற எண்ணற்ற நாடுகளுக்கு சுதந்தரம் அளிக்கும் படிசெய்தது. ஆனால் இன்றைய இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறக் காந்தி அடிகள் வழியில் சென்றது. ஆனால் அந்த முறையை இன்று கைவிட்டு விட்டு இந்திய சுதந்திரத்தைத் தன் ஆயுத பலத்தை வளர்த்துக் காத்து வருகிறது. தனது சகோதர நாடான பாக்கிதான் 100 இந்து வீரனுக்கு ஒரு முசுலிம் வீரன் நிகர் என்றும் தில்லியில் என்றாவது ஒரு நாள் பாக்கிதான் கொடி பறக்கும் என்றும் கனவு கண்டு கொண்டு வந்தது. பேசியும் எழுதியும் வந்தது. அதோடு தனக்கு ஆண்டவன் அருளும் பலமும் அளித்திருப்பதாக எண்ணிக் கொண்டது. உலக முசுலிம்கள் அனைவரும் தன்பக்கம் நிற்பார்கள் என்றும் நம்பி வந்தது. ஆனால் இந்தியா அவர்கள் ஜம்பப் பேச்சைப் பொய்யாக்கி அவர்கள் எண்ணத்தில் இடி விழச் செய்து அதன் இறக்கைகளை பிய்த்து எறிந்தது. இன்று பாக்கிதான் அதன் கூட்டாளி நாடுகளும் தங்கள் பலயீனத்தை அறிந்து பெட்டிப் பாம்பு போல் அடங்கும் படியாய் விட்டது. இந்தியா தொழில் வளர்ச்சியிலும் ஆயுதப் பெருக்கத்திலும் படைப் பெருக்கத்திலும் அணு ஆராய்ச்சியிலும் முன்னேறி உலகிலுள்ள வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அது ஒரு நிலையான அரசைப் பெற்றுள்ளது. அதன் மக்கள் சனநாயகப் பண்பை நன்கு தெரிந்த மக்களாய்த் திகழ்கின்றார்கள். ஜன நாயக முறையில் திராவிட மக்கள் தமது உரிமையை நிலை நாட்ட முன் வந்துள்ளதே இந்திய அரசியலுக்கு ஓர் ஏற்றமாகும். 10. இந்தியப் படையின் ஏற்றம் 1947ஆம் ஆண்டு ஆகட்டுத் திங்களில் ஆங்கில ஆட்சியி னின்று இந்தியா விடுதலை பெற்று எழுந்தது. சுமார் 150-ஆண்டு களாய் ஆங்கில ஆட்சியிலும் அதற்குமுன் 250 ஆண்டு களுக்கு மேலாக நாயக்கர், முலிம் ஆட்சியிலும் அடிமைப் படுத்தப்பட்டு வீழ்ச்சியுற்று தாழ்ச்சி பெற்றுக் கிடந்த தமிழகமும் - ஏன்? - இந்தியாவும் உரிமை பெற்று 27 ஆண்டுகளுக்குள் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய நிலவளமும், நீர்வளமும், மக்கள் வளமும் உள்ள நாடு. இது விவசாய நாடு என்று பெயர் பெற்றது; இன்று இது மிகத் தீவிரமாகக் கைத்தொழிலை வளர்த்து வருகிறது. இயந்திரத் தொழிலைப் பெருக்கி வருகிறது. இந்நாடு எதற்கும் பிறநாட்டைச் சுரண்டி வாழ வேண்டி அவசியத்தில் இல்லை. அன்னிய நாட்டின் மீது போர்தொடுத்து அதன் வளத்தைப் பயன்படுத்த வேண்டி நிலையே இதற்கு இல்லை. என்றாலும் இந்தியா 50 - கோடிமக்களைக் கொண்ட பெரும் நாடு. அது தற்பாதுகாப்பிற்காகத் தன்படைகளைப் பெருக்கி வருகிறது. இன்று, இந்தியா உலகில் உள்ள வல்லரசுகளில் ஒன்றாகத் திகழத்திட்டமிட்டு முன்னேறி வருகிறது. அது நிலப்படை, நீர்ப்படை, விண்படை ஆகிய முப்படைகளையும் பெருக்கி வருகிறது. தம் படைகளுக்கு வேண்டிய கருவிகள் பலவற்றையும் செய்து குவித்து வருகிறது. அணு ஆய்வில் முன்னேறி வருகிறது. விண்ணில் இராக் கெட்டுகளைப் பாய்ச்சுவதில் உலகிலே 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. பாரத நாட்டுப் படைக்கலன்கள் இன்று பாரத நாடு என்று அழைக்கப்படுவது திராவிட இந்தியாவை அல்ல ஆரிய இந்தியாவையே யாகும். தமிழ்மொழிப் பற்றும் தமிழ்ப் பண்பாட்டில் பெரும் மதிப்பும் கொண்ட உரிமைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் கூட இந்தியாவை - பாரத நாட்டை ஆரிய நாடு என்றே குறிப்பிட்டுள்ளார். அவர், வந்தே மாதரம் எனும் பாட்டில் ஆரிய பூமியில் நாரியரும் நரசூரியரும் சொலும் வீரிய வாசகம் என்றார். எங்கள் நாடு என்ற செய்யுளில் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்றார். பாரத மாதா என்ற பாட்டில் பாரதமாதாவை ஆரியர் தேவி என்று கூறியுள்ளார். இதேபோல் ஆரிய நாகரிகத்தையும் பலர் பாரத நாகரிகம் என்பர். உண்மையில் இந்தியாவில் - தெளிவாகக் கூறுவதானால் திராவிட இந்தியாவில், திராவிட மொழியும் திராவிடப் பண்பாடும் திராவிட மொழியும் திராவிட நாகரிகமுமே இருந்தன. அவைகளின்றே இன்று இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும், பண்பாடுகளும் நாகரிகமும், மொழியும் நெறியும் போர் முறைகளும், படைக்கலன்களும் துளிர்த்துள்ளன. அவைகள் அனைத்திலும் திராவிடத்தின் சாயல் இன்றும் தெளிவாகத் தோன்றுவதை நன்கு காண முடியும். ஆரியர்கள், திராவிடர்களைப் போரில் வென்றனர் என்பது வரலாற்று உண்மையாகும். ஆகையால் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும்பொழுது உயர்ந்த அறிவும் உயரிய படைக்கலன்களும் கொண்டு வந்து திராவிடர்களை வென்றுவிட்டனர் என்று கூறு வதற்கு இல்லை. பண்பும் அறமும் நாகரிகமும் உள்ள திராவிடத் தொல்குடி மக்களை - விவசாயி மக்களை - நாகரிகமில்லாக் காட்டு மிராண்டிகளாக வந்த மிலேச்சத் தன்மை முரட்டு ஆரிய மாந்தர்கள் அறநெறிகளுக்கு மாறான போராற்றி வெற்றி பெற்று விட்டார்கள் என்று கூறலாம். ஆடு மாடு மேய்ப்பவர்களாய் வந்த நாடோடிக ளான ஆரியர்கள் இந்தியாவில் திராவிடர்கள் எழுப்பிய அரண் களையும் பல்வகைப் படைகளையும் எண்ணற்ற படைக்கலன் களையும் கண்டு அஞ்சினார்கள். என்றாலும் திராவிடர்களின் பண்பையும் அறப்போர் முறைகளையும், சாதமாகக் கொண்டு அவர்களின் படைக்கலன்களை நாளடைவில் தெரிந்து கொண்டு அவர்களின் போர்த் தந்திரங்களை உணர்ந்து கொண்டு பல துரோகிகளின் துணை கொண்டு போர் ஒழுங்கை மீறி, வஞ்சக வழியால் வெற்றி கொண்டுவிட்டனர். அஃதின்றி திராவிட மக்களிடம் இல்லாத போர்க்கருவிகள் ஆரியர்களிடம் ஒன்று கூட இல்லை. திராவிடர்களிடமிருந்த சிறந்த ஐவகைப் படைகளை ஆரியர்கள் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. ஆனால் அவைகளை யெல்லாம் இங்கு விளக்குவது அவசியம் இல்லை. ஆரியர்களின் ஆயுதங்கள் அல்லது பாரத நாட்டுப் படைக்கலங்கள் என்று பகர்வதெல்லாம் திராவிடர்கள் படைக்கலன்கள் என்று கூறிக் கொண்டு வடஇந்தியாவில் நடைபெற்ற போர்களையும் அவைகளில் பயன்படுத்திய ஆயுதங்களையும் இங்கு ஆராய்வோமாக: பாரத நாட்டுப் போர்க்கருவிகள் என்று கூறப்படுபவைகள் அனைத்தும் திராவிட மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வைத்திருந்த கத்தி, வாள், வேல், பரசு, மழு, ஈட்டி, உளி, சம்மட்டி, மூவிலைவேல், தடி, திகிரி, (சக்கரம்) முதுகெலும்பு (வச்சிரம்) வில், அம்பு போன்றவைகளையும் இதன் அடிப்படையாய் எழுந்த நுற்றுக்கணக்காக ஆயுதங்களையும் தவிர வேறு புதிதாக ஒன்றையும் காண முடியவில்லை. ஆனால் முதுகெலும்பு வச்சிரம் என்றும் வில் தனு என்றும் அம்பு பாணம் என்றும் மூவிலைவேல் திரிசூலம் என்றும் வடமொழிப் பெயர் தாங்கி இருக்குமே யொழிய திராவிடர்கள் காணா ஆயுதமே இல்லை. வாள், வேல், ஈட்டி போன்றவைகள் வேறு உருவம் பெற்றதாகக் கூடக் காணப்பட இல்லை. ஆரியர்கள் இந்திய நாட்டிற்குள் அடியெடுத்துவைக்கும் பொழுது பெரும் படைகளோடு வரவில்லை. அக்காலத்தில் அவர்களிடம் அதிகமான ஆயுதங்களும் இல்லை. அவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் தரை இருப்பதைக் கண்டு அவர்கள் இந்தியாவிற்கு நாடு பிடிக்கும் ஆசையோடு வரவில்லை உணவு ஆசையால் இந்தியாவிற்குள் புகுந்தார்கள். ஆடுமாடு மேய்த்து வாழும் நாடோடி இனத்தவர்களிடம் யானைப்படை குதிரைப்படை, தேர்ப்படை, காலாட் படை இருந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? தங்கள் ஆடுமாடுகளை விலங்குகளினின்று பாதுகாக்கவும், பிற இனத்தவர்கள் அவைகளைக் கவர்ந்து கொண்டு போய்விடாது காக்கவும் ஒரு சில ஆயுதங்கள் அவர்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் இந்தியாவிற்குள் புகுந்ததும் இங்கு வாழும் திராவிடர்கள் நனிசிறந்த நாகரிகமும் பாரிய பண்பும் சீரிய அறமும் வாய்ந்தவர்களாய் நாடு நகரங்களை அமைத்துப் பயிர்த் தொழில் செய்து வந்ததைக் கண்டனர். இந்தியாவில் வாழ்ந்த பழங்குடிமக்களிடம் பகைமை கொண்டு திடீரென்று அறப்போரை அறியா ஆரியர்கள் அவர்கள் மீது பாய்ந்து வெற்றி பெற்றிருக்கலாம். நாளடைவில் அவர்களின் அரண்கள் படைகள் படைக்கலன்களை அறிந்து தாங்களும் அவைகளை உருவாக்கி வளர்த்திருக்கலாம். இருக்கு வேதமாகிய அவர்களின் பழைய நூல் இதை நன்கு விளக்கு வதாய் இருக்கிறது. திராவிடப் பெருங்குடி மக்களிடம் காண முடியாத குதிரைகள் ஆரியர்களிடம் இருந்தது, அவர்களின் வெற்றிக்கு ஒருபெரும் காரணம் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். இருக்கு வேதத்தில் ஆரியர்களின் தெய்வப்பிரார்த்தனையில் தங்கள் தெய்வங்களை பகைவர்களாகிய தாசர்கள், தயூக்களின் வலிமை வாய்ந்த செம்பு, எஃகு அரண்களை அழிக்கும்படி வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகள் உள்ளன. அதோடு அவர் களின் தெய்வமாகிய இந்திரனின் சிறந்த ஆயுதம் முதுகெலும்பு (வச்சிரம்) என்று கூறப்படுவதைக் கொண்டும் மகா விஷ்ணுவின் ஆயுதம் கதை என்பதைக் கொண்டும் அவர்களிடம் திராவிடர் களைப்போல் வெண்கலத்தினால் ஆன எண்ணிக்கையில் அதிக மான பலவித ஆயுதங்கள் ஆரம்ப காலத்தில் இல்லை என்று தெரிகிறது. முற்கால வடஇந்திய இந்து மன்னர்கள் பெரிய தேர்களில் ஏறிப் போருக்குப் போவார்கள். தேரில் வட்டமான மணிகட்டி தொங்க விடப்பட்டிருக்கும். அதோடு படையின் தளபதிகளை யானை தன் முதுகின் மீது ஏற்றிச் செல்லும். காலாட் படை பெரும்பாலும் நீண்ட ஈட்டி, குட்டையான அகன்ற வாள்கள் வில்கள், அம்புகள் முதலிய ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும். வீரர்கள் தலையில் தலைப்பாகை, அரையில் கச்சை, குறுங்கால் சட்டையோடு இடுப்பில் ஒரு தோல் வாரும் அதில் சிறு சிறு மணிகளும் கோத்து அணிந்திருப்பர். பிற்காலத்தில் இருந்ததுபோல் முற்காலத்தில் அதிகமான குதிரை களும் குதிரைப்படை வீரர்களும் இருக்கவில்லை. போர்வினையில் ஈடுபடும் திட்டம் எளிதாக இருந்தது. அது அந்நாட்டு ஆரியர் களால் தயாரிக்கப்பட்டு வந்தது. இளவேனிற் காலம் எழும் பொழுது மன்னன் படைகளை அணிவகுத்து நடத்திச் செல்வான் அல்லது இலையுதிர் காலத்திற்குரிய பயிர்கள் நிலத்தின் மீது துளிர்த்து எழும்பொழுது நேராகத் தலைநகருக்குச் செல்வான். அரசன் செல்லும் பொழுது அவன் தனது படைப்பிரிவுகளை ஒழுங்குபெற அமைத்து ஒரு படைத் தொகுதி அல்லது படையின் நீளணியாகக் கூட அமைப்பான். அதை ஓர் ஆப்பு வடிவப்படை யணியில் ஒரு ஆண்பன்றி போன்று எல்லாவற்றிற்கும் முற்பட்ட முதல் நுனிபோல அமைப் பான். முன்னணிப் படை ஒரு செவ்வகம் போல் திகழும் முன்னணி ஒடுக்கமாகவும் மையம் அகன்றும் மகரம் அல்லது கடல் விலங்கு போல் அதாவது இரட்டை முக்கோண வடிவில் உச்சிமுகடு இணைந்தும் ஒரு ஊசி போன்றும், அல்லது நீண்ட படையாளி நிரையில் அல்லது திருமாலின் மலர் மொக்குப் போன்றும் ஒரு செவ்வினைவகம் இருபுறமும் பெரிய அளவில் நீண்டு இருக்கும். அவர்கள் சிலர் தங்கள் விருப்பம் போல் கிரேக்கர் களினிடையே மாசிடோனியர்களின் செறிவுமிக்க காலாட்படையை நெருங்கி போரில் ஈடுபடுத்தும் பொருட்டு விடப்படுவது போல. விடப்படுவர் அல்லது ஏராளமான கட்டுப்பாடற்ற அணியினர் ஊசி போன்ற நீண்ட அணியில் தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு செயலாற்றுவர். மூன்று படைப் பிரிவுகள் ஓர் இடியேறு போன்று போருக்கு அனுமதிக்கப் படுவர். ஒரு சமவெளியில் அவர்கள் தங்களின் ஆயுதங்கள் நிறைந்த தேர்களோடும் குதிரைகளோடும் போராட விடப்படுவார்கள். நீர் நிறைந்த இடங்களில் படகுகளோடும் யானை களோடும் புதர்களும் மரங்கள் அடர்ந்த நிலத்தில் வில்களோடும் மறை திரையற்ற நிலத்தில் வாள்களோடும் சிறுவட்டக் கேடயம் மற்றும் ஆயுதங்களுடனும் பகைவர்களோடு போராடிப் பணிய வைக்க முயல்வர்.1 ஒரு கோட்டையில் உள்ள நூறு வில் வீரர்கள் 10,000 பகைவர் களுக்கு ஈடு சோடானவர்கள். எனவே போரில் பகைவர் களைத் தாக்கும் கலை பின்னால் இருக்கும் பாதுகாப்பைப் பொருத் திருக்கிறது என்று கூறப்படும். அவர்களது காப்பரண்கள், செங்குத்தான பாறைகள் மீது கட்டப்பட்டிருந்தன. அவைகள் பகைவருடைய தாக்குதலுக்கு அசையாத எஃகு கோட்டை போலத் திகழ்ந்தன. அவர்களுக்குப் பெரிய சிறப்பான போர்க்கருவிகள் எதுவும் வேண்டும் என்பதில்லை. பண்டைக் காலத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் போர் விதிகள், மதிப்பிற்குரியதாகவும் பண்பு நயம் உடையதாயும் இருந்தன. நச்சூட்டப் பெற்றதும் நச்சரிப்பு விளைவிப்பதும் கூரிய முனையை யுடையதுமான அம்புகளும் நெருப்புக் கணைகளும் போரில் உபயோகிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தன. போரில் புறமுதுகிட்டோடியவர்கள், காயமுற்றோர்கள், ஆயுதம் அற்றவர்கள், ஆயதங்கள் பழுதுற்றவர்கள் அல்லது சரண் அடைந்தவர்கள் தங்களுடைய உயிருக்காகக் கெஞ்சுகிறவர்கள் மீது போர்தொடுக்கக் கூடாது என்ற அறப்போர் விதி அனைவராலும் கைக் கொள்ளப் பெற்றன என்று கூறப்படுகிறது. ஆனால், பிற்காலத்தில் அவர்கள் உருவாக்கிய புராணங்களில் போர்க்கலையைப் பற்றிய உயரிய கருத்துக்கள் காணப்படவில்லை போலிக் கருத்துக்கள் காணப்படுகின்றன. வில்வித்தையை விளக்கும் தனுர்வேதம் அல்லது வில்கருவிகளின் விஞ்ஞானம் மிகைபடுத்திக் கூறப்பட்டுள்ளது. அந்த நூற்கள் இன்று இல்லை; பாதுகாத்து வைக்கப்படவில்லை. அக்கினி புராணத்தில் ஆரியர்களின் முக்கிய மான போர்க்கலன் வில்லாகக் காணப்படுகிறது. அபே தூபாய் (Abbe Dubois) என்ற மேனாட்டறிஞர், இந்துக் களிடம் 32 விதமான ஆயுதங்கள் இருந்தன என்றும் 32 வகையான ஆயுதங்களையும் முப்பத்திரண்டு தெய்வங்கள் தங்களின் மிகச் சிறப்பான ஆயுதங்களாக வைத்திருந்தனவென்றும் கிருட்டிண னும் இராமனும் போர்க் கோடரியையும் வில்லையும் அம்பையும் வைத்திருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஷ்ணு சக்கரத்தையும் (எஃகு எறிவட்டத்தையும்) கார்த்திகேயனாகிய போர்க் கடவுளும், அரக்கனாகக் கூறப்படும் இராவணனும் பகைவர் களைத் தாக்கிய போர்களில் நூறு விதமான ஆயுதங்களைத் தாங்கி இருந்தார்கள் என்று தெரிகிறது. தேவர் அரசனும் தெய்வமுமாகிய இந்திரன் வெள்ளை யானை மீதேறி வந்தவன் வாள், சக்கரம், போர்க்கோடரி, வச்சிரம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி இருந்தான் என்று தெரிகிறது. (வீலர் தொகுதி. 111. பக். 21) இந்தக் காலத்தில் அவர்களுக்கு வெடிமருந்துகளைப் பற்றித் தெரியும் என்பதில் அறிஞர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள. சர். எய்ச். எலியட் என்ற அறிஞர் பழைய நூற்களை ஆய்ந்து அவர்களிடம் உந்து கூண்டுவாணம் (Rock) நெருப்பு ஆயுதம் அல்லது அக்கினி திரம் ஆகியவைகள் ஆரம்ப காலத்திலே இருந்தது என்றும் அவர்கள் அதைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். அவர்களிடம் குதிரை படைகளை எதிர்த்து மூங்கில் குழாயினின்று செங்குத்தாக பாயும் ஒருவகை எறிபடை இருந்தது. இந்த வெடிமருந்தினால் செய்யப்பட்ட கொடிய ஆயுதம் புராணங்களில் விவகர்மாவிற்கு அவர்களின் தெய்வங்களால் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடி மருந்து களைச் செய்யும் இந்த அறிவு அல்லது கந்தகம், வெடியுப்பு ஆகிய பொருட்களைக் கலந்து செய்யப்பட்ட கருமருந்துகள் வரலாற்றுக் காலங்களுக்கு முன்னர் பெரும்பாலும் அழிவுற்றுப் போன ஏவு கணையின் உபயோகமாகும். எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய ஓர் எறிபடை மட்டும் இருந்தது என்று கூறலாம். மேற்கினின்று வெடிக்கும் படைக்கருவிகளின் மறு மலர்ச்சி வரும் வரை இரசகற்பூர உருண்டைகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன என்று கூறலாம். இந்தியாவின் வீரப்பண்புகளையுடைய காலமும், வெடிக்கும் பல கருவிகளைப் பயன்படுத்திய காலமும் புராணக்கதைகளைப் போல் சிறப்பித்து விளக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே அந்தப் பழங்காலத்திலே நடுநிலக் கடற்பகுதிகளிலுள்ள நாடுகளுக்கும் சிறப்பாக பொனிசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிலவியதாகக் காணப்படுகிறது. கிறித்தவ மறையில் கூறப்படும் சாலமோன் ஞானியின் காலத்திலே தென் இந்தியாவில் உள்ள உவரி (Cefohir) என்னும் துறைமுகத்தினின்று மயில் இறகு களும் குரங்குகளும் பொன்னும் வெள்ளியும் ஏற்றுமதி செய்யப் பட்டன.1 இந்தியாவில் செய்யப்பட்ட பொருள்களில் பெரும் பாலும் இரும்பு எஃகு ஆகியவைகள் மிக முக்கியமானவைக ளாகும். இவைகள் கிறித்தவ சகாப்தத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதுடன் எண்ணற்ற பொருள்களும் செய்யப்பட்டன. பிற்காலத்தில் அபிசினியன் துறைமுகங்களில் இந்தியாவினின்று பலபண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக பெரிப்ளு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதன்றி வேறு பல ஐரோப்பியர் எழுதிய ஏடுகளிலும் இச்செய்திகள் காணப்படுகின்றன. ஆனால், கிரேக்கர்களின் இந்தியத் தோற்றத்தின் மூலந்தான் பாரத நாட்டு வரலாற்றுக் காலம் ஆரம்பமாகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஏற்கெனவே ஹெரடோட்டம் செசியாசும் (Herodotus and cfescas) தாங்கள், கிரீசினின்று செர்சிவரை இந்தியர்கள் சென்று வந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பஞ்சாப்பிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அவர்கள் பஞ்சாடைகளை அணிந்து இரும்புத் தலைகளையுடைய அம்புகளைக் கொண்ட விற்களை ஏந்தியவர்களாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. கிழக்கிந்திய ஏத்தோப்பியர்கள் பலுச்சிசுத்தானத்தினின்று வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் குசியட் (Cushite) இனத்த வர்களாக இருக்கலாம். அவர்கள் இந்தியர்களோடு இணைவு பெற்றவர்கள் ஆவர். அவர்களுடைய ஆயுதங்கள் இந்தியர்களின் ஆயுதங்களைப் போல் கூரிய நுனிகளையுடையன. ஆனால் அவர்கள் அவர்களுடைய தலைகள் மீது குதிரைகளின் உச்சி வட்டக்குடுமித் தோற்களும் குதிரையின் காதுகளும் பிடரி மயிர்களும் பிணைத்திருப் பார்கள். காதுகள் நேராக நிமிர்ந்து நிற்குமாறு செய்யப்பட்டிருக்கும். பிடரிமயிர் ஒரு கவசம் போல் உதவும். அவர்கள் கேடயமாக நாரைகளின் தோலைப் பயன்படுத்தினர். குதிரைப்படை வீரர்கள் கலைப்பாணியில் ஆடை அணிந்திருப்பர். அவர்கள் குதிரைகளும் காட்டுக் கழுதைகளும் பூட்டிய தேர்களை செலுத்தினர். ஹெரடோட்ட இந்தியர்களைப் பற்றிக் கூறும்பொழுது (பெரும்பாலும் சிந்தில் உள்ளவர்களைப் பற்றிக் கூறும்பொழுது, நாணலால் செய்யப்பட்ட மேலங்கிகளை அணிந்திருந்தனர். அவை கள் ஒன்றோடொன்று இணைத்துப் பின்னப்பட்ட மார்புக் கவசம் போல் அமைந்திருந்தன. அவைகள் மேலும், கிரேக்கர்களால் பயன்படுத்தப்படும் வாட்கர் போல் தங்கமாக இருந்தது. அதாவது பொன்னால் பொதியப் பெற்றிருந்தது. கிரேக்க ஆசிரியர்கள், பாரசீகர்கள் இந்தியாவில் நடத்திய இரு படையெடுப்புகளைப் பற்றி எழுதிய கதைகளை நாம் பார்க்கிறோம். முதல் படையெடுப்பு சைர என்பவனால் நடத்தப்பட்டது. அவர் சென்போன் (Xenophone) கருத்துப்படி தன் ஆட்சியின் கிழக்கு எல்லைப்புறத்தை அமைத்து தளபதி இரட்டம் இந்தியாவின் இருதயத் துள்ளே ஊடுறுவினார் என்று பாரசீக எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். பிற்காலங்களில் டாரிய செய்லாக் தலைமை யின் கீழ் ஒரு படையெடுப்பு நடைபெற்றது. சிந்து ஆற்று முகத்துவாரத் தில் அப்படை வெற்றியீட்டி சிந்து ஆற்றின் கரைகளிலுள்ள பல மாநிலங் களைத் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டது. அது அவரை மண்டல ஆட்சியாளராகவும் அவருக்கு அப்பால் வந்தவர்களை கோட்ட ஆட்சியாளர்களாயும் புகழ் அளித்தது. ஆனால் கி.மு. 327-ஆம் ஆண்டில் அலெக்சாந்தர் என்னும் கிரேக்க மாவீரனால் இந்தியா படை எடுக்கப் பெற்றது. அதை ஐரோப்பிய எழுத்தாளர்கள் குறிப்பாக ஆங்கில எழுத்தாளர்கள் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, சூறையாடல், பிறர் உரிமையைக் கைப்பற்றுதல் என்று கூறாது, இந்தியா பண்டையக் கிரேக்க நாகரிகப் பண்பாடுடைய உலகத்தோடு நேரடியான தொடர்பைப் பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் பல நூற்றாண்டு களுக்கு அந்த உயர்ந்த தொடர்பு நிலை நாட்டப் பெற்றிருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த பழைய நாகரிகப் பண்பாடு மிக்க ஆசியர் களில் இந்தியா கண்ட முழு நாகரிக விளக்கங்களை நாம் மறவாது மனத்தில் வைத்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர். திரு கியூன்ட கர்ட்டிய விளக்கப்படி அக்காலத்தில் இந்தியப் படைகளின் நிலையையும் சிறப்பியல்பையும் ஓரளவு அறிந்துள் ளோம். அவர் களுடைய பாதுகாப்பு, நடை நயம் எவ்வாறு இருந்தது ஆனால் கிரேக்கர்களின் உயர்தரமான போர்த் தந்திரங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் எவ்வளவு குறைந்த திறமையுடையவர்களாய் இருந்தனர் என்றெல்லாம் அறிந்துள்ளோம். அலெக்சாந்தர் ஒரு மரங்கள் அடர்ந்த தீவை இயற்கை அளிக்கப்பட்டதை கவசம் போல் பயன்படுத்திக் கொண்டு சீலம் ஆற்றைக் கடந்தான். அலெக்சாந்தரை எதிர்த்து நின்ற போரசு என்ற அரசனின் இந்தியப் படையில் 85 யானைகளும் 300 தேர்களும் இருந்தன. ஒவ்வொரு யானையும் தேரும் ஆறு வீரர்களை பெற்றிருந்தது. இரண்டு கேடயங்களையும் இரண்டு வில் வீரர்களையும் இரண்டு குதிரைகளையும் எறியும் கைவேல்களையும் பெற்றிருந்தது. 30,000 அடிகளில் வில் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கூரிய முனைகளையுடைய குறிவைத்த அம்புகளைப் பாய்ச்சுவதற்கு மிக்க கஷ்டப்பட்டனர். அதோடு 4000 குதிரைகளும் இருந்தன. அலெக்சாந்தரின் முதல் தாக்குதல் தேர்களின் மீது தொடங் கியது. அது நிலத்தின் இயற்கையான வழுக்கும் தன்மையினால் குழப்பம் அடைந்திருந்தது. இந்தியர்களின் வேகமான வலிமை வாய்ந்த தாக்குதலினால் மாசிடோனியர்களின் காலாட்படையில் ஓரளவு சேதம் ஏற்பட்டது. ஆனால் அவர்களின் தேர் ஓட்டிகளை இழக்க நேர்ந்தது. யானைகள் இரண்டாவது அணியில் இருக்கும்படி செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் காலாட்படையும் வில்படை யும் இருந்தன. போரின்போது அவர்கள் முரசுகளை முழக்கிக் கொண் டிருந்தனர். மாசிடோனியரின் செறிவு மிக்க காலாட்படை முன்னணியில் அவர்களை நெருக்கிக் கொண்டு நின்றது. குதிரைப்படை, படை வகுப்பின் பக்க அணியில் இடம் பெற்றன. யானைகள் மீது அவர்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். கிரேக்கர்களின் வாட்களும் கோடரிகளும் அவைகளைப் பழுதாக்கின. இறுதியாக அவர்கள் தோல்வியுற்று போர பிடிபட்டார். போர் இறுதி நிலை அடைந்தது. அலெக்சாந்தரின் அடுத்த இலட்சியம் சட்லஜ் ஆற்றிற்கு அப்பால் உள்ள மாபெரும் ஆறான கங்கையை அடுத்துள்ள மகத சாம்ராஜ் சகியத்தைத் தாக்குவதேயாகும். மகத மன்னன் 30,000 குதிரைகளையும் 600,000 காலாட்படை வீரர்களையும் 9,000 யானை களையும் போரில் ஈடுபடுத்த முடியக் கூடியவனாய் இருந்தான். அலெக்சாந்தரின் படை வீரர்கள் சட்லெச் ஆற்றைக் கடந்து செல்ல மறுத்து விட்டனர். அலெக்சாந்தர் அதோடு தனது போரை நிறுத்திக் கொண்டு நாடு திரும்பினான். அப்பால் அவன் உயிர் துறந்தான். அவனது மரணத்திற்குப் பின் இந்தியாவில் கிரேக்கப்படை ஓர் அடி கூட தன் காலை முன் எடுத்து வைக்க வில்லை. அவனுக்குப் பின் செலுக்க என்பவன் தலைமை பெற்றான். அவன் இந்த ஆற்றைக் கடந்து முழுப்பலத்தையும் திரட்டி சந்திரகுப்தனால் தோல்வியுற்றான். அந்தப் படையெடுப்பால் இந்தியப் படையின் போர்த்திறன் உலகறியப்பட்டது. கிரேக்கர்கள் சந்திரகுப்தனோடு சமாதானம் செய்து கொண்டு அவனது பேரவையில் மெகதனி என்ற கிரேக்கர் அரச தூதவனை இடம் பெறச் செய்து கொண்டனர். அந்தக் காலத்தில் உள்ள இந்தியப் படைக்கலன்களைப்பற்றி ஓரளவு அறியமுடிகிறது.1 மேலே குறிப்பிட்ட காலத்திற்குப்பின் இந்தியாவிற்கும் பழைய நாகரிகமும் பண்பாடும் நிறைந்த உலகத்திற்கும் இடையே தொடர்பு எழுந்தது. கிரேக்க அரசிற்குட்பட்ட பேக்டிரியர்களால் அது பாது காத்து வளர்க்கப்பட்டு வந்தது. பேக்டிரியர்களும் (Bactrians) அவர் களுக்குப்பின் அவர்களிடத்திற்கு வந்த இந்தோ - சீத்தியன் அரசர் களும் மேற்கு இந்தியாவில் போதிய அளவு தங்கள் செல்வாக்கை வளர்த்து வந்தனர். அங்கு கிரேக்கர்களின் செல்வாக்குப் பெரிதும் பரவி ஒரிசாவரையும் ஓங்கியது. விக்கிரமாதித்தன் சீத்தியர்களைப் போரில் புறமுதுகு காட்டி அடிக்க எழுந்த பெரும் போரில் பல இந்து மன்னர்கள் பங்கு எடுத்துக் கொண்டனர். அப்போர் சீத்தியர்களுக்கும் இந்துதானத்திற்கும் இடையே எழுந்த போராக மலர்ந்தது. இந்தக் காலத்தில் எழுந்த இராணுவ நடவடிக்கைகளைப் பற்றிய நமது அறிவு பெரிதும் குறைவுடையதாக இருக்கிறது. இந்து இந்தியா மொகலாயர்களால் வெற்றி பெறும் காலம் வரை இந்நிலை தொடர்ந்து காணப்படுகிறது. அதாவது இந்தியாவின் இராணுவங் களைப் பற்றியும் அவர்களின் படைக்கலன்களைப் பற்றியும் அதிக மான தகவல்கள் எவருக்கும் தெரியவில்லை. கிரேக்க வரலாற்றாசிரியர்கள் நிலநூற் புலவர்கள் ஆகியவர் களின் கணிப்பில் இந்தியாவின் ஆரம்ப கால நிலை மட்டுந்தான் காணப்படுகிறது. கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 15-வது ஆண்டு வரை நிலவிய புடை சிற்பங்களிலும் காசுகளின் வடிவத்திலும் வரலாற்றை ஆதரிக்கும் விலை மதிப்புள்ள சமகாலத்திய சான்றுகளாக இணைந்து நிறைவூட்டுவனவாகத் திகழலாம். கி.மு. நான்காம் நூற்றாண்டிலே உரோமர்கள் பாண்டிய மன்னர்களுக்குக் காசுகள் அச்சடிக்கும் கலையை அறிமுகப்படுத்தி யிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறினர். இப்பொழுது சிந்து வெளியில் கிடைத்துள்ள முத்திரைகளை ஆய்ந்துள்ளோர் அந்த முடிவுகள் தவறானவைகள் என்றும் திராவிட இந்தியா கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே கிரேக்கர்களின் உரோமர் களின் பொற்காலத்தையும் தாண்டி உலக நாகரிகங்களுக்கும் பண்பாட்டிற்கும் ஒரு பெரும் மையமாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அங்குள்ள முத்திரைகள் என்று கூறப்படுபவைகள் காசாக இருக்கலாம் என்று கருதுகின்றார்கள். அதோடு இமயந் தொட்டு குமரி முனைவரை கிடைக்கும் புராணா என்ற வெள்ளிக் காசுகள் கி.மு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடஇந்தியாவில் இன்று கிடைக்கும் பலவித மான பாக்டிரியர்களின் காசுகளும் மற்றும் பல வட இந்திய மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அந்தக் காலத்திலுள்ள ஆயுதங்களை அறிய அரும்பெருஞ்சான்றாகத் திகழ்கின்றன. பேக்டிரிய ஆட்சிக்குப் பின் எழுந்த இந்தோ - சீத்திய மன்னர் களின் உருவம் அவர்கள் வெளியிட்ட காசுகளில் பிரதிபலிக் கிறது. அக்காசுகளில் அரசர்கள் போர்ப் பாதுகாப்பான இரும்புச் சட்டையும் அணிந்துள்ளனர். சங்கிலியோடு தொங்கும் உறையுள் அடங்கிய ஒரு குட்டையான வாள் ஒரு பக்கமும் ஈட்டி ஒரு பக்கமும் காணப்படுகின்றன. கானர்சி (Kanerki) ஒரு சிறு வாளை அணிந்திருக் கிறார். ஏனையோர் ஒரு செண்டையும் (குண்டாந்தடியையும்) ஒரு குட்டையான வாளையும், உடைவாளையும் அணிந்திருக்கிறார்கள் (படம் 1-ஐ பார்க்க) சாஞ்சியில் உள்ள பௌத்தர்களின் பழம்பெரும் சிற்ப உருவங் களில் இந்தியாவில் கிறித்தவ ஊழிக்கு முன் பயன் படுத்தப்பட்ட ஆயுதங்களின் உருவங்கள் கிடைக்கின்றன. அவைகள் மிகவும் திட்டவட்டமான அழகிய அமைப்புடையதாகத் திகழ் கின்றன. (படம் 2 - ஐப் பார்க்க) ஏனைய தூபங்களும் அதிலுள்ள ஆயுதங் களும் அறிஞர்கள் கன்னிங்காம், பெர்கூசன் போன்றவர் களினால் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்றில் அறிஞர் கன்னிங்காம் அவர்கள் அடியில் வருமாறு கூறுவதை அறிக. ஒரு முற்றுகையைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது. சில தூய்மை யான சின்னங்களைத் திரும்பப் பெறுவதற்காக நடைபெற்ற முற்றுகையாக இருக்கலாம். போர்வீரர்கள் நல்ல இறுக்கமான ஆடைகளையும், முட்டளவில் கணியும் குறும்பாவாடை போன்ற ஆடையும் அணிந்திருக்கின்றார்கள். அவர்களின் ஆயுதங்கள் வாளும், வில்களும், அம்புகளும் ஆகும்.1 வாள்கள் குட்டையாயும் அகன்றும் உள்ளன. அவைகள் சந்திரகுப்தன் அரசவையில் கிரேக்க நாட்டுத் தூதுவனாக இருந்த மெகதனி விளக்கத்தை ஒத்து இருக்கின்றது.2 எல்லோரும் அணிந்திருக்கும் வாளிளும் அகன்றும் நீளத்தில் 3 முழத்திற்கு (Cubets) மேற்படாமல் இருந்தன. அவர்கள் நெருங்கிப் போராடும் பொழுது அவர்கள் இருகைகளாலும் பற்றிப் பிடித்து கீழே விழும்படி வீசுவார்கள். அதே சமயத்தில் காலாட் படை வழக்கமாக உள்ள அதே நீளமுள்ள வில்லை ஏந்தி நிற்பார்கள். இவைகள் புடை சிற்பத்தோடு ஒத்திருக்கிறது. இந்தச் சிற்பம் எல்லா விதமான காலாட்படையையும் வில் படையையும் கிட்டத்தட்ட பிரதி பலிப்பதாக இருக்கிறது. ஆனால் போர்க்களத்தில் பங்கு கொண்டவர்கள் வில்லை விடப் பழங்கால வில்கள் மிகச் சிறியதாய் இருக்கின்றன. அவைகள் எதுவும் 4 அடி நீளத்திற்கு மேல் காணப் படவில்லை. பெரும்பாலான வில்கள் நேரான ஒரு மூங்கில் துண்டாகவே இருக்கின்றன. ஆனால் ஒரு சில இருவளைவு உள்ள தாக நடுவில் ஒரு நேராக கை பிடித்திருப்பதாக உள்ளது. அவர் களுடைய அம்புகள் மூன்று முழ நீளத்திற்குக் குறைவாய் விரைந்து வேகமுடன் பறந்து கேடயமோ, அல்லது மார்புக் கவசமோ அல்லது வேறு எந்த ஆயுதமோ எதிர்த்து நின்று தாக்க முடியாது பலம் வாய்ந்ததாய் இருக்கிறது. புடைச் சிற்பத்தில் அம்புகள் 3லிருந்து 5 அடி நீளம் உள்ளதாகக் காணப்படுகின்றனர் மேலும் அவர், அவைகளில் சில அம்புகளுக்குப் பதிலாகக் கைவேல்களைப் பயன்படுத்தினர் என்றும் அவைகள் குதிரைப்படை வீரர்கள் சௌனியா (Saunnia) என்று அழைக்கப்படும் இரு ஈட்டிகளைப் பயன்படுத்தியது போல் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு புடைச் சிற்பத்தில் படை வீரர்கள் கேடயந்தாங்கி கைவேலைச் செங்குத்தாய்ப் பிடித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லத் தயாராய் நிற்கின்றது போல் தெரிகிறது. அவர்களின் இடது கைகளின் மீது தோலால் செய்யப்பட்ட பழுதற்ற கேடயங்களை அணிந்திருப்பது போல் காணப்படுகிறது. அது அவர்களின் உடம்புகளைவிடச் சிறிது ஒடுங்கியதாகக் காணப்படு கிறது. ஆனால் கிட்டத்தட்ட போதிய அளவு நீளமாக இருக்கிறது. எனவே பெரிதும் வழக்கில் உள்ள கேடயம் புடை சிற்பங்களில் நீண்டும் ஒடுங்கியும் உச்சியில் வட்டமாகவும் உள்ளது. அது அணிந்திருப்பவர்களின் உடம்பில் மேலுறைபோல் தலையினின்று முழங்கால் வரை மறைத்திருக்கிறது. எனவே நீளத்தில் 3 1/2 அடியும் அகலத்தில் 1 1/2 அடியும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. காலாட் படையினரின் கேடயங்களை விட குதிரைப்படை வீரர்களின் கேடயம் மிகச்சிறியன. புடைச் சிற்பம் முழுவதும் குதிரைப்படை வீரனுடைய கேடயங்கள் மணிவடிவில் 2 அடிநீளம் உள்ளதாய் இருந்திருக்கலாம். அடியில் மிகவும் வட்டமாகக் காணப்படுகிறது. வழக்கமான அணிகலன்கள் குதிரைப்படை வீரர்கள் காலாட்படை வீரர் ஆகிய இருவர் களுக்கும் செய்ண்ட் ஜியார்ஜ், செயண்ட் ஆண்டிருசுவின் இரட்டைச் சிலுவையாக இருந்தன. ஆனால் மேற்கு வாயிலில் உள்ள குதிரைப் படை வீரன் கேடயம் இளம்பிறையும் இரு வெள்ளிகளுமாக இருந்தன. இந்தச் சிற்ப வடிவங்கள் கன்னிங்ஹாம் அவர்கள் கி.பி. 17-39 ஆகவும் பெர்கூசன் அவர்கள் கி.பி. 64க்கும் 120க்கும் இடை யிலும் உதைய கிரிய கி.பி. 401 ஆம் உறுதி செய்யப்பட்டுள்ளன. சாஞ்சியில்உள்ள இளவரசர் சித்தார்த்தர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் புடை சிற்பம் ஒன்றை பெர்கூசன் அவர்கள் அடியில் வருமாறு விவரித்துள்ளார். இளவரசர் தன்னுடைய 16 வது வயதை அடைந்தபொழுது அவரது தந்தை அவருக்கு பக்கத்து நாடுகளில் உள்ள அரசர்களின் மகள்களில் ஒரு அழகிய இளம் பெண்களை மனைவியாககத் தேர்தெடுத்தார். ஆனால், அனைவரும் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். ஏனெனில் இளவரசர் அழகானவராய் இருந்தாலும் போதிய படைப்பயிற்சி இல்லாமல் இருப்பதால் பெண்களை அடக்கியாள முடியாமல் இருக்கலாம் என்று கருதினார். அதனால் அவரது போர் ஆற்றலை மெய்பிக்க அவர் எவராலும் வளைத்து அம்பைப் பாய்ச்ச முடியாத ஒரு வில்லை எடுத்து வளைத்து அம்பைப்பாய்ச்ச வேண்டும். அவரது (கிரோக்க புராணத்தில் கரைக்குமேல் மனிதவடிவாயும் கரைக்குக்கிழ் காளை வடிவாகவும் உள்ள படை வீரன் என்றஅஞ்சுவரு வடிவத்தை விடகளத்தை இரும்புக்குறிகலக்கை ஆடையச் செய்வதுபோல் குறிப்பிட்ட ஒரு தொலைவினை அடைதல் வேண்டும். என்று கூறப்பட்டது. இறுதியில் வில்லில் கணைளை ஏற்றி பாய்ச்சப் பெற்றது. அது நினைக்க முடியாத அளவு நீண்டதூரம் சென்று இறுதியில் இது ஆங்கு ஒர் நீர்ஊற்றை பொங்கி எழுமாறு செய்தது அப்பால் இந்திய போந்த சீனா வழிப்போக்கன் பா இயான். அந்த இடத்தை வழிப்போக்கரிகள் தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் குளிர்ந்த சுணையாக அமைக்கப்பட்டது. என்று கூறி யுள்ளார், படத்தின் முன்புறத் தோற்றத்தில் மூன்று படை வீரர்கள் பார்த்தியன் வில்லையும் உரோமறிய வடிவில் உள்ள குட்டையான வளைவில்லாத நேராவைவாயையும் வலது தோன் மீது தாங்கியுள்ளனர். அவர்கள் தங்களுடைய அம்பருந்தூணியை சுமந்து செல்வதற்காக கதைக்கு மேலே குறுக்காக ஒரு பட்டையை அறிந்திருக்கின்றார், அவர்களிடமிருந்து முரசுகளும் குழல்களும் தொடர்ந்து சென்றன. சாஞ்சிக்கு 300-ஆண்டுகளுக்குப் பின்னால் எழுந்த அமராவதித் தூபியின் ஒரு தூணில் ஒரு உருவப்படக் காட்சி பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.1 அரசன் அவனது அரச கட்டிலின் மீது அழகாக அமர்ந்திருக்கின்றான். அவனிடம் ஒரு தூதுவன் தன் கைகளைக் கட்டி படைத்துறையின் வேவுச் செய்தியை அறிவிக்க முன்வந்தார். அவனுக்கு முன்னே படையின் ஒரு பகுதி அரணின் மதிலைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாகக் காணப் பட்டது. அவைகள் நீண்ட ஈட்டியையும் நேரான வாளையும், நீண்ட வில்லையும் தாங்கி இருந்தனர் முன்னே காலாட்படை முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. முன்னணியில் குதிரைப்படை வீரர்களும் யானைகளும் சென்றன. சாஞ்சி சிற்பத்தில் தேர்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் இது பெரும்பாலும் அந்த இடத்திற்கு ஏற்ற தனிச் சிறப்பாக இருக்கிறது. அதே இடத்தில் சில மனிதர்கள் நீண்டு சுருங்கிய கேடயங்கம் வெளிப்படையான பிரம்பு வேலைப் பாடாக இருந்தனர். ஒரிசாவில் உள்ள குன்றுகளில் உள்ள குகைகளில் கிட்டத் தட்ட இதே போன்ற சிற்பங்கள் உள்ளன. அவைகள் காலம் கி.மு. 200 முதல் கி.பி. 274-ஆம் ஆண்டுவரை கூறலாம். ஆனால் பிற் காலத்தில் எழுந்த ஒரு சிற்பத்தில் போரைச் சித்தரிக்கும் சிற்பத்தில் வாளும் நீண்ட கேடயமும் மனிதனுடைய உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் ஒரு வில்லும் செங்குத்தாக நிற்கிறது. வாள்கள் கிட்டத்தட்ட நேராகவும் நடுத்தரமாகவும் காணப்படுகின்றது. ஆந்திர நாட்டிலுள்ள அசந்தாவின் அரிய குகை ஓவியம் 16 எண்ணுள்ளது. கி.பி. 400-ஆம் ஆண்டில் எழுதப் பெற்றதாகும். அதில் போர்வீரர்கள் குட்டையான இருமுனைகளிலும் அகன்று வளைந்த கூர்க்கர்களின் குக்ரி போன்ற வாளையும் அணி செய்யப் பெற்ற கேடயத்தையும் அணிந்திருப்பது போல் காணப்படுகிறது.2 கி.பி. 650-ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற புவனேசுவரர் கோயில் சிற்பங்களில் வாள்வீரர்களும் வில் வீரர்களும் காலாட் படையும், குதிரைப்படையும் யானைகளும் காணப்படுகின்றன.1 இராசபுதனத்தில் உள்ள செய்திரோன் என்னும் இடத்தில் கி.பி. 1100-ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற சமணர்களின் சிற்பங்களில் வாள்களும் முன்னால் வளைந்த கூர்மையான ஈட்டிகளும் காணப் படுகின்றன. கோனார்க் என்னும் இடத்தில் எழுப்பப் பெற்ற ஞாயிறு என்னும் தெய்வத்தின் திருக்கோயில் கி.பி. 1237-ஆம் ஆண்டு கட்டப் பெற்றது. இங்கு எண்ணற்ற எழில் மிக்க சிற்ப வடிவங்கள் உள்ளன. இக்கோயிலின் தெற்கு வாயிலை இரண்டு பேருருவக் குதிரைச் சிலைகள் காவல் காத்து நிற்கும் நிலையில் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று கனத்த சங்கிலியால் மூடப்பட்டு காப்புக் கவசமிட்டும் நாலு கால்களிலும் மணிகள்பதித்த கால்வளைகள் இட்டும் குஞ்சங்கள் அமைத்த கழுத்தணிகள் பூட்டியும், மணிகள் பதித்த மார்புக் கச்சை சேணத்தைச் செம்மையான நிலையில் இருக்கச் செய்வது போல் காணப்படுகிறது. அம்பறாத்தூணி இடது பக்கம் கீழே குட்டையான உரோம உறையிட்ட வாள் தொங்கிச் கொண்டிருக்கிறது. கூர்க்கரின் வாளைப் போன்ற குட்டையான வளைந்த வாள்களை இரு இராட்சதர்கள் அணிந்துள்ளார்கள். அரை - புல்லரிவாள், அரை-குத்துவாள், கனத்த காப்பு வளை முதலியவை களை அணிந்துள்ளார்கள். ஆனால் போர்க்கவசம் அவர்களிடம் காணப்பட்டது இல்லை. அவர்கள் வட்டமான கேடயத்தைத் தாங்கி இருக்கிறார்கள். அது திண்மையான உலோகத்தால் அழகாக செதுக்கப் பெற்றுள்ளது. மையத்தில் குமிழ் போன்ற அணியும் ஒப்பனைக் குஞ்சமும் அல்லது அதிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும் மயிர்க் குச்சமும் காணப்படுகிறது. மார்வாரின் பழம்பெரும் தலைநகரான மாண்டோரில் பல சிற்பங்கள் உள்ளன. இவை கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பெற்றன. அதில் மாண்டோரின் மன்னரின் மகளை மணப்பதற்கு இலங்கையிலிருந்து வந்த இராவணனுக்குப் பணிவிடை செய்யும் ஆற்றல்மிக்க ஒன்பது படைவீரர்கள் காணப்படுகிறார்கள். அவர் கள் ஈட்டி, வாள், சிறுகேடயம், வில் அம்பு, அம்பறாத் தூணி அரைக்கச்சையில் ஒரு கூரிய குத்துவாள் ஒவ்வொருவரையும் அவரது பந்து அல்லது வழித்துணைவர்கள் வழிகாட்டிச் செல்கின்றனர். இந்த அற்புதமான சிற்பப் படைப்பு இந்திய வரலாற்றில் மொகலாயரின் ஆரம்ப காலம் என்று கூறப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் அரும்பியது. இந்தக் காலம் பேபர் தலைமையில் முகலாயர்கள் இறுதியாக நிலைநாட்டிய எட்டாவது நூற்றாண்டின் அரபியர்களால் நடத்தப் பெற்ற முதலாவது படையெடுப்பிலிருந்து விரிவுற்றிருக்கிறது. கி.பி. 711-ஆம் ஆண்டில் கலிபா வாலித் என்பவரின் தலைமையின் கீழ் முதலாவது முலிம் படையெடுப்பு நடந்தது அவரது இளம் படைத்தலைவர் முகம்மத் காசிம் 6000 வீரர்களைக் கொண்ட ஒரு படையோடு சிந்துவின் ஒரு கடல் துறைமுகமான திவால் என்னும் இடத்தைத் தாக்கினார். நகரை முற்றுகையிட அவருக்குக் கவண் களும், ஏனைய போர்க்கருவிகளும் அளிக்கப் பட்டிருந்தன. ஆனால் அவர் எளிதில் பட்டினத்தைப் பிடித்துப் பணிய வைத்துப் போர்க்களத்தில் தாகிர் அரசனைத் தோல்வியுறச் செய்து சிந்துவைத் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார். ஆனால் அந்த அரபியர்கள் 36 ஆண்டுகளுக்கு மேல் தங்களின் வெற்றியைத் தாங்கி நிற்க முடிய வில்லை. அடுத்த தாக்குதல் ஆப்கானிதானத்திலிருந்து வந்தது. அல்ப்திஜின் (Alptigin), தன்னைக் கஜினி (Ghazni) அரசனாக செய்து கொண்டார். அவருக்குப்பின் அவரது இடத்திற்கு வந்த சபாக்திஜின் (Sabaktigin) கி.பி. 980-ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள ஜெய்பால் அரசரால் தாக்கப்பட்டார். சிந்துவெளிப்பகுதிகளில் உள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தைப் பரப்ப சபாக்திசினோடு ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்குச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அச்மீர்கலின் சார், கானோச், தில்லி முதலிய இடங்களில் உள்ள இந்து மன்னர்கள் செல்லாலாபாத் அருகில் உள்ள இலாம்கானை நோக்கி முன்னேற 100,000 குதிரைகளைக் கொண்ட ஒரு பெரும் படையுடன் எண்ணற்ற காலாட்படைகளோடும் வந்தனர். சபாக்திஜின் தன் உயர்ந்த நிலையினின்று கீழே இறங்கி தன்னுடைய பகைவனைச் சமவெளியில் சந்தித்துத் தன்னுடைய நல்ல குதிரைப் படைகளைக் கொண்டு வெற்றிகரமாகத் தாக்கினான். அந்த அரச நிலைகள் தடுமாறிப் பின் வாங்க ஆரம்பித்தபொழுது அவன் பகைவர்களின் எல்லா அணிகளையும் பின்தள்ளி தொடர்ந்து வேட்டையாடி சிந்து வெளியில் மாபெரும் மனித வேட்டையை நடத்தினான். பாரசீகத்தை முலீம் மன்னர்கள் வெற்றிபெற்றதற்குப் பின் மூன்றரை நூற்றாண்டிற்குள் சபாக்திஜின் மகன் கஜினி முகம்மத் முதன்முதலாக இந்தியாவின் மீது படையெடுத்து தன் முழு சக்தியையும் அதில் ஈடுபடுத்தினான். கி.பி. 1001-ஆம் ஆண்டில் முகம்மத் செய்பால் தோல்வியுறச் செய்து பெசவார் அருகில் சிறை செய்தான். அப்பால் அவன் அழிவெய்திய தனது தலை நகருக்குத் திரும்பினான். அவன் தலைநகருக்குப் போந்ததும் தோல்வியைத் தாங்கமுடியாது தன்மீது எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டு கருகி உயிர்துறந்தான். முலிம்களின் ஆயுதங் களில் இருமுறைதோல்வியுற்ற ஓர் இளவரசன் ஆட்சி நடத்து வதற்குத் தகுதியற்றவன் என்ற அந்த நாட்டு வழக்கிற்கேற்ப அவன் உயிர்நீத்தான். கி.பி. 1008-ஆம் ஆண்டு முகம்மதின் ஐந்தாவது படையெடுப்பு நடைபெற்றது. பெசவாரின் அருகிலுள்ள பெரிய சமவெளியில் செயபாலின் மகன் ஆனந்த பாலின் தலைமையின் கீழ் வட இந்திய மன்னர்களின் படைகள் அனைத்தும் கூட்டாளியாய்த் திரண் டெழுந்தன. சுல்தான் போர்முனைக்கு 6000 வில் வீரர்களை அனுப்பி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு 30,000 காகார், (Gakkhars) படைகளைச் சந்திக்கும்படி அனுப்பினார். காகார் படைகள் தலையிலும் காலிலும் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. ஆனால் கைகளில் ஈட்டியும் ஏனைய ஆயுதங்களும் தாங்கி இருந்தன. அவர்கள் தங்களது பாதையில் முலிம்களின் குதிரைப்படையை சந்தித்தது. அதனால் கிட்டதட்ட தோல்வியுறும் நிலையை அடைந்தனர். வில் வீரர்கள் மழைபோல யானைகளின் மீது அம்பு களைப் பொழிந்ததால் மன்னனின் யானைகள் திகில் அடைந்தன. முலிம்களின் இரச கற்பூர உருண்டைகள் (Naphtha balls) எறி படையால் இந்துப்படைகள் திகிலுற்றுக் குளம்பியது. படைகள் தலையிலும் காலிலும் ஒன்றும் அணிந்திருக்க வில்லை. ஆனால் கைகளில் ஈட்டியும் ஏனைய ஆயுதங்களும் தாங்கி இருந்தன. அவர்கள் தங்களது பாதையில் முலிம்களின் குதிரைப் படையை சந்தித்தது. அதனால் கிட்டத்தட்ட தோல்வியுறும் நிலையை அடைந்தனர். வில்வீரர்கள் மழைபோல யானையின்மீது அம்புகளைப் பொழிந்ததால் மன்னனின் யானைகள் திகில் அடைந்தது. முலிம்களின் இரசகற்பூர உருண்டைகளால் (Najrhtha balls)v¿gilahš இந்துப்படைகள் திகிலுற்றுக் குளம்பியது. கஜினி மூல்டானை வெற்றிகொண்டபின் கானோசை ஊடுறுவிச் சென்று குவாலியரையும் கலிஞ்சாதிரையும் கவர்ந்து கொண்டான். கி. பி. 1022- ம் ஆண்டில் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள 54, 000 குதிரைகளையும் திரட்டினான். இஃதன்றி பல இடங்களிலுமிருந்து 1300 யானைகளையும் திரட்டி அணிவகுத்து வரச் செய்தான். அவனது ஆறாவது படையெடுப்பில் சோம நாதபுரத்தில் உள்ள இந்துக்களின் திருக்கோயிலில் வைத்து வழிப்பட்ட வாயு இலிங்கத்தைக் கைப்பற்றினான். இந்துக்கள் அனைவரும்கூடி தங்கள் தெய்வத்தை தொடக்கூடாது என்று கஜினிமுகமதிடம் கெஞ்சினர். அப்பால் அவன் அடியோடு அழிந்து ஒழிந்து போகுமாறு பிரார்த்தித்தனர். மந்திரங்கள், தந்திரங்கள், யாகங்கள், பில்லிசூனியங்கள் எல்லாம் செய்து பார்த்தனர். அனைத்தும் வீணாயின. அப்பால் அவர்கள் முலிம் மதத்தைத் தழுவத் தயாராய் இருந்தனர். அவனது கடைசிப் படையெடுப்பில் ஜாட்களைத் தண்டிக்கும் பொருட்டு சோமநாதபுரத்தினின்று திரும்பி வரும் பொழுது அவன் சில தொல்லைகள் கொடுத்தான். முல்டானின் அருகில் அவர்களைத் தாக்கினான். அவன் அந்த நிகழ்ச்சிக்காக 1400 படகுகளைக் கட்டினான். ஒவ்வொரு படகிலும் எதிரிகள் உணவு வசதி பெறாது தடுப்பதற்கு ஆறு இரும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகளினால் குத்தும் குழாய்களைப் பொருத்தி இருந்தான். ஒவ்வொரு படகிலும் 20 வில் வீரர்களையும், ஐந்து எறிபடை வீரர்களையும் இருக்கச் செய்தான். ஜாட் இனத்தவர்கள் 4000 ம் படகுகளைக் கொண்டு எதிர்த்தனர். ஆனால் அவர்கள் முற்றிலும் தோல்வியுற்றனர். பெரும்பாலான அவர்களின் படகுகள் எறி படையால், தீயிட்டுப் பொசுக்கப்பட்டு ஒழிந்தன. கஜினி முகமது கி. பி. 1030-ல் உயிர் துறந்தான். அவன்காலத்தில் அவனுடைய மசூத் எனும் தன் தண்டாயுதத்தை நிலத்திலிருந்த நிமிர்த்தக் கூடியவர்கள் உலகில் எவரும் இல்லை; அவனுடைய அம்புகளை தடுத்து நிறுத்தும் இரும்புக் குறி இலக்கு உலகில் எதுவும் இல்லை என்று எடுத்து வைத்து அமர்ந்துள்ளான். வரலாற்றின் இந்தக் காலம் முழுவதும், முலிம் எழுத்தாளர்களால் தரப்பட்ட முன்னுக்குப்பின் முரணான தகவலால் இருள் அடைந்ததாய் காணப்படுகிறது. அவைகளில் பல வரலாற்று ரீதியான மருட்கை வாய்ந்த அரிய நிகழ்ச்சிகளால் அடிப்பபடையிடப்பட்டிருக்கிறது. ஆனால் சாரமபற்ற மெய் நிகழ்வின் ஆதாரம் உடையதாக இருக்கிறது. கஜினியின் இல்லம் வீழந்தது. கஜினியின் முய்கடின் முகம்மத் என்ற துருக்கியின் அடிமை அரசன் தனது ஆற்றலைப் பெருக்கி இந்தியாவின்மீது படையெடுத்தான். அச்மீர் அரசன் பிரதிவிராய், அவனது தம்பி சாண்டராய் தில்லியின் அரசப்பிருதிநிதி ஆகியோர்கள் அவனை சந்திக்கும் பொருட்டு முன்னேறிச் சென்றனர். துணிகரமான கை கலப்புப் போரில் கி. பி. 1191ஆம் ஆண்டில் தனேசுவரத்திற்கும் கர்னாலுக்கும் இடையேயுள்ள கலகக்கூட்டம் என்னும் இடத்தில் முழுவதும் நிலைகுலைந்தது.1 கீழ்க்கண்ட ஆண்டுகளில் 120, 000 மக்களையுடைய பெரும்படை வட இந்துதானத்தின் அரசர்கள் பலரும் கூட்டணி அமைத்து - அதாவது 150க்குக் குறையாத மன்னர்கள் கூடி பெரும்படை அமைத்தனர். அவர்களது படையில் 3,00,000 குதிரைகளும், 3000 யானைகளும் காலாட்படை கணக்கற்றும் இருந்தன. இந்துக்கள் படை திரட்டி இரவில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாணியர்கள் திடீரென்று ஆற்றைக் கடந்து இந்துப்படைமீது வீழந்து அடித்து அவர்கள் தங்களின் படையின் ஒரு பகுதியை அணிவகுத்து நிலை நிறுத்துவதற்கு முன் தாக்கிவிட்டனர். சுல்தான் தனது போரை ஆரம்பித்து படைகள் சீராக அணிவகுத்து முன்னணியில் முக்கியமான உறுப்புகள் நிற்கும்படி செய்தான். அவர்களின் யானையும் அம்பாரிகளுக்கும் கொடிகளும் எஃகு அரண்போல் முன் அணிவகுத்து நின்றன. அவர்களின் போர்க்க வசமற்ற குதிரைப்படைவீரர்களை நாலு பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் 10,000 பகைவர்களை வெற்றிகரமாகத் தாக்கி அவர்களை வலிவிழக்கும்படி ஞாயிறு மறையும் வரை விற்களில் பானங்களை ஏற்றி மழைபோல் பொழிந்தனர். அப்பால் 1200 குதிரைப்படைவீரர்கள் எஃகு கவசம்பூண்டு பகைவர்களைப் பூண்டோடு அழித்து முடித்தனர். சாண்ட்ராய் தனது யானைகளை, பகைவர்களுக்குப் படுதோல்வி ஏற்படும்படி முன்னணியில் நிற்கும் படி விட்டுவிட்டனர். குத்புத்தின் அய்பேக் தில்லியைக் கைப்பற்றி அடிமை அரசர்களின் ஆட்சியை நிறுவி, இந்துதானத்தின் பெரும்பகுதியில் தங்களின் ஆட்சி நிலவச் செய்தான். திராவிடர் களின் துப்புரவான தூய தாயகத்தை ஆரியர்கள் பறித்துக்கொண்டு அவர்களை கொடிய பாலைவனமாக விளங்கிய தென் இந்தியாவிற்கு விரட்டினார். ஆனால் ஆரியர்களிடமிருந்து முலிம்கள் திராவிட இந்தியாவை அடித்துப்பறித்து அவர்களை அடிமையாக்கியும், பெரும்பாலாரை முலிம்களாக்கியும், அழகிய ஆரியப் பெண்களை சிறைபிடித்தும், மணந்தும் அவர்களைத் தம் காலின் கீழ்ப் போட்டு மிதித்துத் துவைத்து வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்களுக்கு செய்த கொடுமையின் பயனை ஒன்றுக்குப் பத்தாக அனுபவித்தனர். ஆரியவர்த்தத்தின்மீது முலிம்கள் கொண்ட வெற்றியின் நினைவாக 242 அடி உயரத்தில் தில்லியின் அருகில் குத்துப்மினார் என்னும் கோபுரம் கட்டி எழுப்பப்பெற்றது. குத்புத்தீன் அய்பேக்கிற்குப் பின்வந்த அடிமை அரசர்கள் பல இராச புத்திரர்களை வீழ்த்தி மொகலாயர்களின் வெற்றிகரமான படையெடுப்பை நிலைநாட்டினர். நசுருத்தீன் காலத்தில் உலுக்கான் எண்ணற்ற இந்து இராஜாக்களை தோல்வியுறும்படி செய்து அவர்களிடமிருந்து ஏராளமாகத் திரை பெற்றனர். ஹுலாகு (Hulagu)Éš உள்ள அரச தூதர் ஆலோசனைப்படி செங்கி என்பவன் பேரன் கி.பி. 1259-ம் ஆண்டில் மிகவும் சிறப்புடன் பெருந்திரையினைப் பெற்றான். தம் மொகலாய எஜமானர்களின் இராணுவ வளத்தை யாவர்க்கும் எடுத்துக்காட்டத் தீர்மானித்து, அவனது அரச தூதரை கொடிகளுடன் 50,000 குதிரைகள் போர்க்கோலம் பூண்டும், 2,00,000 காலாட்படையினர் தோளோடு தோள் உரச இருபது அணிகளாக முன்னேறிச் சென்றனர். அதோடு 3,000 ஆயுதங்கள் பூண்ட தேர்களும் இடையே, 2,000 போர் யானைகளும் எஃகு கோட்டைகள் என விளங்கும்படி செய்து போர்முனையில் சந்தித்தான். கி. பி. 1294-ஆம் ஆண்டில் அலாவுத்தின் கில்ஜியால் முகம்மதியப் படைகள் முதன்முதலாக நர்மதை ஆற்றைத் தாண்டி வெற்றிநடை போட்டுச் சென்றதைத் தெக்கணாத்தின் வரலாற்றில் நாம் படிக்கின்றோம். கி.பி. 1323 - ஆம் கியாசுத்தீன் துக்ளக் சா ஆரிய இந்துக்களிடமிருந்து வராங்கலை பறித்துக்கொண்டான். அவன் சில நாட்கள் மேக்ரிபி (Maghribis)mšyJ மேற்கத்திய மங்கோனாலை (Mangonls)ïlÄUªj கற்களையும் நாவாக் (Nawaks)ïlÄUªJ அம்புகளையும் பெற்று சில நாட்கள் போராடி வெற்றியீட்டினான். அவன் அதன் பெயரை சுல்தான்பூர் என்று மாற்றினான். இவனுடைய மகன் முகம்மதின் ஆட்சிக்காலத்தில் தில்லியிலிருந்த அரசாங்க பீடத்தை ânah»Ç¡F(Deogiri) மாற்றி தௌலதாபாத் என்ற முலிம் பெயரை அந்நகருக்கு பெயர் சூட்டினார். தெக்காணம் அதனுடைய கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழந்தது. இங்கு பல முலிம் மன்னர்களின் வழிமரபுகள் அமைந் துள்ளன. தெக்காணத்தின் சுல்தான் பாமினி அரச மரபினை நிறுவியவர் ஆவார். (கி. பி. 1347). ஒரு சில படைத்தலைவர்களுக்கு ஏராளமான நிலங்களைக் கொடுத்தும் ஜாகிரில் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலங்களை சில குதிரைகளைப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தென் இந்தியாவில் சில சுயேச்சையான தளபதிகள் அல்லது #Û‹jh®fŸ(Polygars) புதிய முலிம் ஆட்சியாளர்களிடம் சரண் அடைந்து அவர்களோடு பணிந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தனர். இந்த மன்னர்களின் மரபு 150 ஆண்டுகள் நீடித்திருந்தது. அப்பால் ஐந்து சுயேச்சையான அரசாகப் பிரிந்தன. நிகிட்டின் என்பவர், 15 ஆம் நூற்றாண்டில் உள்ள தெக்கான முலிம் சுல்தான் ஆட்சியை விளக்கிக் கூறும்பொழுது, தெக்காணம் ஒரு ஆற்றல் மிக்க முடிமன்னர் ஆட்சியில் இருந்தது. அவரது சொந்த படைகளைத்தவிர நான்கு பெரிய இந்து தலைமை அமைச்சர்களும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் 40,000 ஆயுதங்கள் தரித்த வீரர்களும், 100,000 காலாட் படைவீரர்களும் இருந்து வந்தனர் என்றார். பீதர் (Bedar)Ršjh‹ சொந்தமாக 3, 00, 000 படை வீரர்களை உடையவராக இருந்தார். gyfh‹fŸ(Khans) 8,000 போர்க்கலங்கள் பெற்ற வீரர்களை வைத்திருந்தனர். பைராமில் (Bairamil)Ršjh‹ நீலமணிக்கற்கள் பதித்த பொன்னாலான போர்க்கவசங்களைப் பூண்டிருந்தார். மூன்று வாள்கள் பொன்னால் பொதியப் பெற்றிருந்தன. அவன் வேட்டையாடச் சென்றால் அவரைத் தொடர்ந்து 10,000 வீரர்கள் குதிரைமீதேறிச் செல்வர். 50,000 மக்கள் நடந்து செல்வர். 200 யானைகள் பொன்னால் பொதியப் பெற்ற போர்க்கவசம் பூண்டு செல்லும். பழைய ஆசையில் 1397 - ஆம் ஆண்டு தார்த்தாரியர்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். தைமூர் என்னும் தலைவன் தலைமையில் தார்த்தாரியப்படைகள் சிந்து ஆற்றைக் கடந்து வீரநடை போட்டு வந்தது. தைமரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10, 000 வீரர்கள் அவரது படையில் இருந்தனர். அந்த வீரப்படை பாட்னிர் (Bhatnir) அரணை எதிர்க்க வீர வேசமுடன் சென்றது. இராவ் துல் brŒ‹(Rao Dul Chain) தனது இரஜபுத்திர வீரர்களுடன் கோட்டை வாயிலில் திரண்டு நின்று தைமூரை எதிர்த்து போராடினார். ஆனால் மொகலாய குதிரைப்படை அவர்கள்மீது சாடி அடித்துத் தள்ளி நகரத்திற்குள் விரட்டி பின் தொடர்ந்து சென்றது. எதிரிகளை வீழ்த்தி அவர்கள் நகரின் எஜமானர்களாயினர். அவர்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்கள் 500 பேர்களை தூக்குத்தண்டனை நிறைவேற்றும் பொழுது ஆரிய இந்துக்களை மூர்க்கத்தனமாக விரட்டினான். அதனால் அவர்கள் தாங்களின் அருமைக்குரிய மனைவியும், குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்குள் வைத்துப்பூட்டி நெருப்பூட்டி தியாகக்னியில் மூழ்கும் படி செய்தனர். சுல்தான் முகம்மது தன்படைகளைத் திரட்டி தில்லியைக் காத்து நின்றார். தைமர் தன்னிடம் பிடிபட்ட 1,00, 000 கைதிகளை படுகொலை செய்தான். அவன் தன்னுடைய வலிய காலாட்படைத்தினின்று வெளியே போந்து அவனைச் சந்திக்க வந்தார்கள். முகம்மதின் படை 40,000 காலாள்களையும், 10,000 குதிரைகளையும் 125 யானைகளையும் உடையதாய் எல்லாவிதமான ஆயுதங்களையும், அம்பாரிகளையும், அதில் v¿F©Lfis(rad-antaz) வீசும் வீரர்களையும், th‹btofisí«(atash baz) உந்து குண்டுவாணங் களையும் (takhsh - andz)it¤âUªjh‹. தைமரின் வலது சிறகிலுள்ள படை பகைவர்கள்மீது பாய்ந்தது. அதன்மீது தங்கள் ஆயுதங்களை சோனாமாரியாக பொழிந்தது.m«òfŸ புற்றில் இருந்து எழும் ஈசல் என புறப்பட்டுக் கொண்டே இருந்தன. அதே பொழுது இடது புறம் அவர்களது படைகளைத் தாக்கு வதற்காப் பதுங்கி இருக்கும் ஒரு படை கைகளில் வாட்களைத் தாங்கிக்கொண்டு சுல்தானுடைய வலது சிறகின் முன்னணிமீது சாடியது. ஒரு சிறிய போராட்டத்திற்குப்பின், தார்த்தாரியப் படை இந்துக்களின் முக்கிய படையை விட்டுப் பின் வாங்கியது. அவர் களைக் கலைந்து பின் செல்லவிட்டு நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. படைகள் தங்கள் விருப்பம்போல் கொள்ளையடித்துக் கொள்ளவும், பாகுபாடற்று படுகொலை புரியவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. (1398) தைமர் அப்பால் கங்கையாற்றின் மேற் பாகத்தின் அண்மையில் உள்ள நாட்டில் சுருங்கிய கால அளவு தன் படைகளுக்கு சூறையாட அனுமதி நல்கினான். அப்பால் அவன் தன் வெற்றியை மேற்கொண்டு வளர்த்துக் கொண்டு செல்லாது அந்த நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றான். தில்லிச் சக்கரவர்த்தியின் பெயர் அளவிலான விதிப்படி இந்துக்களின் பலவீனமான மன்னர்கள் மரபுரிமை வழக்கப்படி ஆட்சி நடத்தி ஓரளவு சுயேச்சையாக மீண்டும் ஆள இடம் அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கு ஆரம்பகால அராபிய வழிபோக்கர்களாலும் ஏனைய வழிபோக்கர்களாலும் ஆரிய இந்தியப்படைக்கலன்களில் பொதுவான தன்மையையும் ஆரம்பகால முலிம்களின் போர்க் கலைகளையும் முற்காலத்தினின்று முக்கியமான மாறுதல்கள் எதையும் பெறவில்லை என்று கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் பல தகவல்கள் தரப்பட்டிருக்கிறது. புதிதாக நிறுவப்பட்ட முலிம் ஆட்சிக்கும் அழிந்து போனது போக எஞ்சி நிற்கும் ஆரிய இந்து ஆட்சிக்கும் இடையே முந்தியகாலத்தினின்று எவ்விதமான முக்கியமான மாறுதல்களும் உள்ளன என்பதற்கு சான்றுகளே இல்லை என்று நன்கு தெரிகிறது. அல் இதிரி (Al Idrish)v‹w அராபிய நில நூல் ஆய்வாளர் 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். அவர் இந்தியாவின் இளவரசர் ஒருவரைப்பற்றிப் பின்வரும் சொல்லாற் குறிப்பிட்டு விவரித்து கூறியுள்ளார். நகர்வாரா (Nahrwara)v‹D« நன்னாடு ஒரு பெரிய இளவரசனால் ஆளப்படுகிறது. அவருக்கு மன்னர் மன்னர் (Bahara)v‹w பெரிய பட்டம் உண்டு. அவரது படைகளையும், யானைகளையும் பெற்றிருந்தததோடு பெருமாளின் திரு உருவத்தையும் வழிபட்டு வந்தார். அவர் தன் தலைமீது பொன்னாலான மணிமுடியைத் தாங்கி இருந்தார். அவரது ஆடைகள் விலைமதிக்க எண்ணாதவை. அவர் வாரம் ஒரு முறை குதிரைமீது பவனி வருவார். அவர் அரண்மனையைவிட்டு வெளியே செல்லும்பொழுது அவருக்குப் பணிவிடை செய்ய 100 பெண்கள் செல்வர். அவர்கள் விலையுயர்ந்த ஆடைகளையும் பொன், வெள்ளி அணிகலன்களையும் தங்கள் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அணிந்திருப்பர். அவர்கள் பல வகையான விளையாட்டுகளில் ஈடுபடுவர். ஒரு போலிச் சண்டையின் போது அவர்களின் அரசர் அவர்களது தலைமீது நடந்து செல்வார். அமைச்சர்களும் படைகளின் தலைவர்களும் மன்னர்களைத் தொடர்ந்து செல்வதில்லை. ஆனால் மன்னர் பக்கத்து மன்னர்கள் தன் நாட்டை கவர்ந்திருந்தால் அதை மீட்கச் செல்லும்பொழுதும் புரட்சிக்காரர் களை அடக்கச் செல்லும்பொழுதும் அமைச்சர் களும், தளபதிகளும் அரசரோடு செல்வர். அவரிடம் பல யானைகள் இருந்தன. அது அவரது படையின் பலத்தைக் காட்டுவதாகும்.1 இந்தியாவிற்கு இத்தாலி நாட்டிலுள்ள வழிப்போக்கனான மார்க்கபோலோ, பர்மா அரசனுக்கும் குபளேயசான் சக்கரவர்த்திக் கும் இடையே எழுந்த போரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது அடியில் வருமாறாகும்: மியன், பங்காள நாடுகளின் மன்னன் (King of Burma & Bengal) 2000-ம் பெரிய யானைகளை வைத்திருந்தான் என்று சொல்லப் படுகிறது. அதில் ஒவ்வொன்றின் மீதும் மரக்கோபுரம் போன்று விளங்கும் அம்பாரியின் மீது நன்றாக வளர்ந்த உறுதிவாய்ந்த உடலும் உறுதியும் வாய்ந்த வீரர்கள் 12 முதல் 16 பேர் வரை எல்லாவிதமான ஆயுதங்களும் பூண்டிருப்பார்கள். இஃதன்றி அவன் 60,000 நல்ல காலாள்படை வீரர்களையும், குதிரைப் படைவீரர் களையும் வைத்திருந்தான். தார்த்தாரியர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக வரவில்லை. அவர்கள் குதிரைமீது ஏறித்தான் வருவார்கள். அவர்களைக் கண்டு யானைகளும் அஞ்சும்படி செய்தனர். யானைகளை கண்டதும் தார்த்தாரியர்கள் உடனடியாகக் குதிரையை விட்டிறங்கி அதை அருகில் உள்ள காடுகளில் நிற்கும் மரத்தில் கட்டிவிட்டுத் தாங்களின் விற்களை எடுத்து பாணத்தை வைத்து வில்லை வளைத்து அஞ்சாது யானையை நோக்கி முன்னேறிச் செல்வர். அருகில் நின்று யானையோடு போராடி அதைக் கொல்வர் அல்லது காயமுற்றோ புறமுதுகு காட்டியோ ஓடும்படிசெய்வர். தார்த்தாரியர்கள் அந்த யானை தன்னை நோக்கி வந்து போராட முடியாதென்பதைக் கண்ட பிறகே தங்கள் குதிரையை அவிழ்த்து அதன் மீதேறிச் சென்று பகைவர்கள்மீது பாய்வர். அதன் பிறகே வாளோடும் தண்டாயுதத்தோடும் போரில் ஈடுபடுவர். ஆனால் தார்த்தாரியர்கள் உயர்ந்த குதிரைகளை வைத்திருந்தனர். இபின்பத்தாது என்ற அராபிய வழிப்போக்கன் கி. பி. 1333 - ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தின்போது அவரது நாள்குறிப்பில் முல்டான்அமீரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது முன்னிலையில் எப்பொழுதும் எண்ணற்ற விற்கள் ஒவ்வொரு தரங்களில் இருந்தன. எவராவது ஒருவன் தன்னை வில் வீரனாகப் பார்க்க செய்ய விரும்புகிறேன் என்று கூறினால் அமீர் அவனிடம் தன்னிடமுள்ள விற்களில் ஒன்றைக் கொடுத்து அவனுடைய பலத்தையும் காட்டி அதை வளைத்து அம்பைப் பாய்ச்ச சொல்வான். அவனது வில்லை வளைத்து நானேற்றி குறிதவறாது அம்பை விடுத்து அவன் வில் வீரனாகச் சேர்த்துக்கொள்ளப்படுவான். யாராவது ஒருவன் குதிரைவீரனாக நியமனம் பெறவிரும்பினால் ஒரு முரசு நிலை கட்டப்பட்டிருக்கும். வீரனாக விளைபவன் குதிரைமீதேறி முழுவேகத்துடன் பாய்ந்து1 சென்று தனது ஈட்டியினால் முரசை முழக்கி விட்டு செல்லவேண்டும் என்பார். அவன் முரசை அடித்த விளைவினுக்குகேற்ப அவனது பதவி தீர்மானிக்கப்படும். அந்தக் காலத்தில் நெருப்பு உந்து கூண்டு இருந்தது என்பது ஐயமற்றது. என்றாலும் அதைப்பற்றிய அறிவுமிகத் தொன்மை யானது. பழங்காலத்துப்பாக்கி tiffS«(Match locko) அவ்வெடிக்கும் போர்க்கருவிகளும் அக்காலத்தில் சர்வ சாதரணமான தன்று. எழுத்தாளர் தன்னுடைய படைப்பில் அதைத் நிச்சயமாகக் குறிப்பிடாதிருந்தால் ஒருவரும் அவரை அறியாதிருக்கக் கூடும் என்று சொல்லலாம். தைமர் (கி.பி. 1405-ஆம் ஆண்டில் உயிர்துறந்தான். நிறுவனங்கள் போன்றவைகள் அந்த ஆயுதத்தை அணிந்திருந்தனர். படை தன்னுடைய படைவீரர்கள் படைக்கலன்களின் பழங்காலத்துப்பாக்கி வகைக்கு மறைகுறிப்பு செய்யப்படவில்லை. சாதாரணப் போர்வீரர்கள் வில், அம்பு ஆகியவைகளோடு வாளையும் உபயோகித்து வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் வீரர்கள் தலைக்கவசம், மார்புப் பட்டையும், சிறிய அதிகாரிகள் உடலின் பாத்திற்கான போர்க்கவசம், குண்டாந்தடியும் அல்லது தண்டாயுதமும் தலைக்கவசம் போன்றவைகளைப் பூண்டிருந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்திய நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளின் வேவுகாரராக அல்லது உண்மையான வழிப்போக்கரராக வந்த நிக்கோலோ கோண்டி பழங்காலத் துப்பாக்கி வகைகளைப் பற்றி எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.2 ஆரிய இந்துக்களின் ஆயுதங்களை விளக்கிக் கூறிய பின்னர் இறுதியில் குறிப்பிடுவது: யானைகள் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. காலாட்படைவீரர்கள்தான் முதலில் அனுப்பப்படுகின்றனர். நாடாளும் வேந்தர்கள் எல்லாவிதமான ஆயுதங்களும் பூண்டவர் களாகக் காணப்படுகின்றனர். அரசர்கள் மட்டுமல்ல அவர்களின் அசுரர்களும், ஆயுதங்களும், அணிகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய ஆரிவாள்கள் யானைகளின் கொம்புகளிலும், துதிக்கைகளிலும் பிணைக்கப் பட்டுள்ளன. அந்த யானைகளின் முதுகின்மீது அரணைப் போன்ற அம்பாரியைத் தாங்கிச் செல்கின்றன. அவைகளில் ஒவ்வொன்றின்மீதும் 12 ஆயுதங்கள் அணிந்த வீரர்கள் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தி நிற்கின்றனர். சிறிய கரிகள் ஆறு மனிதர்களைச் சுமந்து செல்லும். சகாப் - உத் தீன், முகம்மத் துக்ளக் என்னும் அரசனின் ஆயுத பலத்தைப் பற்றி விளக்கிக் கூறுகிறதாவது: அவனது அரிய அசுவப்படையில் 900,000 குதிரைவீரர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் இளவரசன் அருகில் தங்கி இருந்தனர். எஞ்சிய வீரர்கள் அவனது பேரரசுக்கு உட்பட்ட மாநிலங்களில் பிரித்துப் பிரித்து அனுப்பப்பட்டிருந்தனர். அவனது படையில் பல நாட்டிலும் உள்ள பல்வேறு இனத்தைச் சேர்ந்த வீரர்கள் இருந்தனர். துருக்கியர்கள், கதே நாட்டின் குடிமக்கள், பாரசீகர்கள், அராபியர்கள், இந்தியர்கள் போன்றவர்கள் காலாட்படையிலும், குதிரைப்படையிலும், யானைப்படையிலும், வில்படையிலும் இருந்து வந்தனர். 11. கருவிகளின் பரிணாம வளர்ச்சி பழங்கால மக்கள், ஆதியில் மலைகளிலே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உணவு இன்றியமையாத தேவையாக இருந்தது. அவர்கள் மலையில் உள்ள புலி, கரடி, ஓநாய், யானை, காண்டா மிருகம் போன்ற கொடிய, பயங்கரமான விலங்குகளின் தாக்கு தலினின்று தப்புவது மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இயற்கை அன்னையின் அருட்கொடையால் உணவுப் பொருள் களைப் பெறவும், விலங்குகளோடு போரிடவும் அவர்கள் பெற்ற ஒரு கருவி கல்லாக இருந்தது. அவர்கள் கல்லால் வீசி உயர்ந்த மரங்களில் உள்ள காய் கனிகளை கீழே விழும்படி செய்து அதை எடுத்துப் புசித்தனர். கூரியகற்களால் நிலத்தைத் தோண்டிக் கிழங்குகளை எடுத்து உண்டனர். நீண்ட கூரிய கற்களால் தமது கொடிய பகைவர் களாகிய விலங்குகளைத் தாக்கி அவற்றை வெற்றி கொள்ளவும் முற்பட்டனர். அவர்கள் உறுதியான கூரிய கற்களைப் பெற நாலா திசைகளிலும் அலைந்து திரிந்தனர். நல்ல உறுதியான பளிங்குக் கற்கள் அவர்களுக்குச் சிறந்த ஆயுதமாக அன்றிருந்தது. கற்கருவி களால் மரங்களை வெட்டி கல்அரிவாள் கல் கோடரி போன்றவை களுக்குக் கைப்பிடிகள் செய்தனர். தடிகளை உருவாக்கி பகைவர் களாகிய விலங்குகளை அடித்து விரட்டினர். பெரிய குண்டாந் தடிகளை உருவாக்கி அதை விலங்குகளின் மீது பயன் படுத்தி வெற்றி கண்டனர். மக்கள் இனம் எண்ணிக்கையில் அதிகப்பட்டனர். அறிவிலும் அபிவிருத்தியுற்றனர். மலைகளிலும் காடுகளிலும் வேட்டையாடி அதில் கிடைக்கும் பறவைகள் விலங்குகள் போன்றவைகளைத் தின்று வயிறு வளர்த்து வந்த மக்கள் இனம் அதிகமாக காய் கனி இலை, கிழங்கு முதலியவைகளைத் தின்ன முற்பட்டனர். அப்பால், அவர்கள் அறிவு வளர வளர அவர்கள் செயலும் மாற ஆரம்பித்தது. காய், கனி, கொட்டை, கிழங்கு ஆகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்டு உயிர் வாழ்ந்த மக்கள் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய முற்பட்டனர். முதன் முதலாக முல்லை நிலத்தில் புஞ்சைத்தானியங்களை உற்பத்தி செய்தனர். அவர்கள் கற்கருவிகளைக் கொண்டு நிலத்தைக் கிள்ளி விதைகளை விதைத்தனர். மழையின் உதவியால் புஞ்சைப் பயிர்கள் முளைத்துக் கிளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்து நல்ல விளைச்சலைத் தந்தன. பின்னர் மருத நிலத்தில் குடியேறி நிலத்தை கல்லால் மட்டுமின்றி கம்பாலும் தோண்டி அப்பால் மண்ணைச் சமப்படுத்திப்பண் படுத்தி வித்திட்டு நீர் பாய்ச்சி பயிர்த் தொழிலைச் செய்ய முன் வந்தனர். மக்கள் இனம் நிலத்தைக் கிள்ள ஆம்பித்த நாள்முதல் அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆரம்பித்தது. அறிவு பெருக ஆரம்பித்தது. நிலத்தின் அடியில் கிடந்த செம்பு, பித்தளை, பொன், இரும்பு முதலிய தாதுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. நீர் ஊற்றுக்கள் காணப்பெற்றன. உலோகப் பொருள்களைக் கொண்டு வலிமை வாய்ந்த அம்புத்தலைகளை உருவாக்கினர். உழும் கலப்பைக் கொழு, கத்தி, அரிவாள், வாள், மண்வெட்டி, சம்மட்டி, குந்தாலம், கோடரி, உளி, வாச்சி, தமரூசி, உலக்கைப் பூண் போன்ற உழு கருவி களையும் வேட்டைக்குரிய பொருள்களையும் உணவு தயாரிக்கும் பொருள்களையும் உருவாக்கினர். உணவு உற்பத்தி பெருகிய புராதனப் பொது உடைமைச் சமூகம் எழுந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் மக்களின் தன்னல ஆசையால் புராதனப் பொது உடைமைச் சமூகம் மாற்றப்பட்டு தனி உடைமைச் சமூகம் தழைத்தெழ ஆரம்பித்தது. அதன் பலனாக நிலப்பிரபுத்துவ முறையும் மன்னர் ஆட்சியும் மலர்ந்தது. இந்தத் தனி உடைமை ஆட்சி முறையால் சமூகத்தில் உள்ளவன் இல்லாதவன் என்ற வேற்றுமைகள் எழுந்தன. உள்ளவனிடம் இல்லாதவன் அடித்துப் பறிக்கும் உணர்வு உந்தியது. இந்த எண்ணத் தையும் அதன் விளைவால் எழும் சண்டைச் சச்சரவுகளையும் ஒழிக்க அரசனும் அரசாங்கமும் எழுந்தன. என்றாலும் கொள்ளையும் சண்டை களும் போர்களும் மலிந்தன. சமூக வேற்றுமைகள் விரிந்து கொண்டே போயின. உணவு உற்பத்திக்காக உருவாக்கப் பெற்ற கருவிகள் பல போர்க்கருவிகளாக மாற்றப் பெற்றன. பண்டு, விலங்குகளின்று மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள உருவாக்கிய ஆயுதங்கள் அனைத்தும் இன்று மக்கள் ஒருவரை யொருவர் கொன்று அவர் களால் உழைத்து உருவாக்கப் பெற்ற உணவுப் பொருள்களையும் ஆயுதங்களையும், ஆடுமாடு போன்ற செல்வங்களையும் கைத்தொழிற் பண்டங்களையும் சூறையாடுவதற்கு உரிய பொருளாக உபயோகப் படுத்தப் பெற்றன. இன்றுள்ள பெரும்பாலான போர்க்கருவிகள் பழங் கற்காலக் கருவிகளாகிய கத்தி, வாள், ஈட்டி, சம்மட்டி, உளி, தமரூசி போன்றவைகளின் மறுமலர்ச்சியாகவே காணப்படுகின்றன. இஃதன்றி புதிய கருவிகள் அதிகமாகக் காணப்படவில்லை. காலமும் கோலமும் மக்கள் கூடி வாழும் ஓர் உயிரினம். மக்கள் ஒரு கட்டுப் பாட்டுக்குள் அமைந்து சமாதானமாக வாழ்வதே அவர்கள் விருப்பம். அவர்கள் ஆதி முதல் விலங்குகளோடு போராடுவதையும் அதில் உயிர் துறப்பதையும் அங்கங்களை இழப்பதையும் விரும்பவில்லை. விலங்குகளையும் பறவைகளையும் கொன்று தின்று உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப்படவு மில்லை. மக்களின் உடல் அமைப்பும் பற்கள் அமைப்பும் அதற்கேற்றதாக இல்லை. அவர்களின் பசிப் பிணியை காய்கனி, கிழங்கு, கொட்டை, பருப்பு முதலியவைகளைக் கொண்டு தணித்துக் கொள்ள முடியும். அவர்கள் நிர்ப்பந்தமாக எழுந்த இயற்கைநிலையைச் சமாளிக்கவே விலங்குகளோடு போரிடவும் ஊனைத் தின்னவும் முற்பட்டனர். பல்லாலே பதம் பார்க்க முடியாத எலும்பில் ஒட்டியுள்ள ஊன் பொருள்களைக் கல்லாலே பதம் பண்ணி உண்ண ஆரம்பித்தனர். எட்டிப் பிடித்து மல்லாட முடியாத பொல்லா விலங்குகளையும், கொல்ல முடியாமல் விண்ணில் பறக்கும் எல்லாப் பறவைகளையும் மறைவிடத்தில் நின்று அவைகளைக் குறிபார்த்து கல்லால் அடித்து வீழ்த்த வழிகண்டனர். கல், மனிதன் கண்ட கருவிகளில் முதலாவது இடத்தைப் பெற்றது. கல்லை ஆதிமக்கள் கண்டதோடமையாது அதைப் பறவைகள் விலங்குகள் காய்கனிகள் மீது குறி வைத்து அடித்து வீழ்த்தவும் அதன் உறுப்புகளைப் பதப் படுத்தி அதைப் பற்றவும் முயன்றனர். மக்கள் கல்லைக் கையால் எடுத்து வீசக் கற்றதே அவர்களை விலங்குகளினின்று வேறாக்கிய, முதல் நிலையாகும். கல், மனித வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை அளித்ததால் அவர்கள் மொழியைப் பயின்று அதைத் திறம்பட அமைக்கும் பொழுது கல்லை ஒரு உயர் நிலையில் வைத்தனர். கல் எனும் தமிழ்ச் சொல் படி, அறி, மலை என்ற பொருளில் பயன்படுத்தப் பெற்றது. மேலும் கல், கலை என்ற சொல்லுக்கு அடிப்படையாய் அமைந்தது. கல்வி என்பதே கல் என்ற பதத்தினின்று எழுந்தது என்று அறிஞர்கள் கூறகிறார்கள். கல் என்றால் படி என்றும் வி என்றால் மேலானது என்றும், மேலானதை அறிவது கல்வி என்றும் கூறப்படுகிறது. மக்கள் வாழ்ந்த ஆதிக் காலம் கற்காலம் ஆகும். அவர்கள் கண்ட முதலாவது கருவி கற்கருவி ஆகும். மக்கள் கல்லில் இருந்தே முதன் முதலாக நெருப்பை உண்டுபண்ணக் கற்றனர். மக்கள் முதலில் கண்ட ஆயுதத்திற்குக் கத்தி என்று பெயர் கொடுத்தனர். கல் + தீ = கல்தி என்பது கத்தி என்று மருவியிருக்கலாம் என்று சிலர் கூறுவது பொருத்த முடையதேயாகும். மக்கள் மறைந்து போன தம் முன் னோர்களின் நினைவுக் குறியாகக் கல்லை நிலை நாட்டினார். கல்லில் ஒரு பெரும் சக்தி இருப்பதாக மக்கள் கருதினர். கல்லிற்குப் பின் மனிதன் மரத்திலே பல கருவிகளை உருவாக்கினான். தடியால் விலங்கை அடித்துக் கொன்றான். கல்லைப் போலத் தடியிலும் ஒரு பெரும் சக்தி இருப்பதாக எண்ணினான். தடியைப் பயன்படுத்தத் தெரிந்து பல நாட்கள் சென்றதும் தடியின் நுனியில் கல்லை வைத்துக் கட்டியும் கல்லின் நடுவில் உள்ள துளையில் தடியைப் புகுத்தியும் ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கினார். அது அன்று சம்மட்டிபோல் பயன்பட்டது. பின் தடியில் கூரிய கல்லைப் பிணைத்து கோடரியாக்கி விலங்குகளை வெட்டினான். கோடரியால் மரங்களை வெட்டி துண்டு துண் டாக்கினான். மரப்பிடியுள்ள கத்திகளையும் உருவாக்கினான். மக்கள் ஆதியில் நெருப்பைக் கண்டஞ்சினர். அப்பால் சக்கி முக்கிக் கற்களைக் கண்டு ஒன்றோடொன்றை உரசி நெருப்பை உண்டாக்கினார். சக்கி முக்கிக் கற்களை உரசியும் தட்டியும் உண்டாகும் நெருப்புப் பக்கத்தில் சேர்த்து வைத்திருக்கும் உலர்ந்த சருகுகள் மீது வீழ்ந்து பற்றும்படி செய்தனர். இதனால் மனிதன் நெருப்பு உண்டாக்கும் கலையை முதன்முதலாக உணர்ந்தான். அவன் முதன் முதலாகக் கண்ட கல்லாயுதம், மரக்கைப் பிடியுள்ள கற்கோடரி ஆகியவைகளுடன் நெருப்பையும் ஒரு பெரும் ஆயுத மாகக் கண்டான். தன்னைச் சுற்றி நெருப்பை உண்டாக்கிக் கொடிய விலங்குகளினின்று தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். கொள்ளிக் கட்டைகளைக் கொண்டு விலங்குகளைச் சுட்டு வீழ்த்தினான்; அவற்றை விரட்டியடித்தான். விலங்குகளை நெருப்பில் விழும்படி செய்து கொன்றான். விலங்கின் ஊனை நெருப்பில் வாட்டி அதைச் சுவைத்துத் தின்றான். அவன் நெருப்பை ஆயுதமாகக் கொண்டான். நெருப்பினால் பல சுவையுள்ள பண்டங் களைச் சமைக்கத் தெரிந்தான். சிந்தனை வளர்ச்சி மக்களின் இன்றியமையாத தேவையினால் சிந்திக்க முற்பட்டனர். அவர்களின் சிந்தனை வளர்ச்சியிலே பல புதிய கருவிகளைக் கண்டனர். அவர்கள் ஆயுதங்களை, விலங்குகளின்று தன்னைப் பாதுகாக்கவும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவுமே கண்டனர். அன்று தனி உடைமை இல்லை. மக்களின் தேவை குறைவாக இருந்தது. உணவு உற்பத்தி பெருகியது. எங்கும் கூலப்பொருள்கள் விளைந்துகிடந்தன. பசி பட்டினி இல்லை. போர் என்ற உணர்ச்சியே தோன்றவில்லை. போர்க்கருவிகள் தமிழர்கள் ஆதியில் கூரிய கற்களைக் கொண்டே விலங்குக ளோடும் ஏனைய தம் பகைவர்களோடும் போரிட்டு வந்தனர். அப்பால் வில், அம்பு, தடி, உலக்கை, கதை, சக்கரம் ஆகிய மரத்தாலானான ஆயுதங்களைக் கொண்டு போரிட்டனர். பின்னர் தாதுப் பொருள்களைக் கண்ட பின் செம்பு, வெண்கலம், இரும்பு முதலியவைகளைக் கொண்டு வேல், மூவிலை வேல், கத்தி, வாள் முதலியவைகளைக் கொண்டு போரிட்டனர். தமிழ் மக்கள் நல்ல நாகரிகம் பெற்ற காலத்தும் அவர்கள் வில், வேல், வாள், கோடரி, இரும்புப் பிடிக் கட்டிய உலக்கை ஆகியவை களைக் கொண்டே போரிட்டனர். இந்தப் பழப் பெரும் ஆயுதங் களின் அடிப்படையிலே போர் நிலைக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் சிறிதும் பெரிதுமாகச் செய்து கொண்டனர். வில்கள் கூட உலோகத் தால் செய்து கொண்டனர். அம்பு நுனிகள் உலோகத்தால் கூரிய தாகச் செய்து உலோகத் தகடுகளைக் கூடத் துளையிடத் தக்கதாகச் செய்தனர். கூரிய கைக் கத்தியையும், இடுப்பில் செருகிக் கொள் வதற்கேற்ற வளைவான கத்தியையும் செய்தனர். இருபுறமும் கூரான வளைந்த வாளைச் செய்து தோலுறையில் மாட்டி அரையில் உள்ள வாரில் செருகிக் கொண்டனர். நீண்ட வாளைச் செய்து தோல் உரையில் செருகி உடைவாள் என்று இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டனர். எறிவேலையும், நீண்ட வேலையும், வேல் போன்ற உலோக முகப்பினைக் கொண்ட கூரிய வேல் கம்புகளையும் செய்து கொண்டனர். எறி வேலைக் கொண்டு பகைவர்கள் மீது வீசுவர். நீண்ட கைப்பிடி வேல் (சூலம்) கொண்டு பகைவர்கள் மார்பிற் குத்துவர். கோடரியைக் கொண்டு பகைவர்களின் கழுத்தைக் கையைத் துண்டிப்பார்கள். மார்பைப் பிளப்பர். இந்தக் கோடரி களிலும் வாள், சூலம் போன்றவைகளிலும் பல வகைகள் இருந்தன போல் இவைகளிலும் பலவகைப்பட்டவைகள் இருந்தன. இதே போன்று பல வகை விற்களும் பலவகை அம்புகளும் பல வகைத் தண்டங்களும் தோன்றின. அவைகள் அடியில் வருமாறாகும். கயானா இந்தியர்கள் நீண்ட குழாயினுள்ளே நச்சுத் தோய்ந்த அம்புகளை வைத்துப் பகைவர்கள் மீது பாய்ந்து வீழ்த்துமாறு அதை வாயால் ஊதி நீண்ட தூரம் செல்லுமாறு செய்தனர். இது, ஊதுங்குழல் துப்பாக்கி என்று அழைக்கப்பட்டது. இந்தக் கருவி கயானா இந்தியர் கள் தனி உரிமை கொண்டாடும் அதிசயப் போர்க்கருவி. பாத்த கோனிய இந்தியர்கள் நீண்ட தோல்வாரின் நுனியில் கல்லை வைத்துக் கட்டி பகைவர்கள் மீது எறியும் போலாசு என்னும் ஒரு விதப் புதிய போர்க்கருவியைக் கண்டனர். இந்தக் கருவியைச் சுழற்றி வீசினால் இது பகைவரின் கால்களை ஒரு வினாடியில் சுற்றி வரிந்து கட்டி இழுத்து வீழ்த்தி விடும். இது தொலைவில் உள்ள பகைவர்களை எளிதில் வீழ்த்திக் கொல்லும் ஓர் ஒப்பற்ற போர்க்கருவி யாகும். இது பாத்த கோனிய இந்தியப் பழங்குடிமக்களின் தனி யுடைமை. இந்தக் கருவி வேறு எங்கும் கிடையாது. உலகிலே மக்கள் தங்கள் பகைவர்களை வெல்லப் புதிய புதிய போர்க்கருவிகளை உருவாக்கி வந்தனர். எனவே மக்கள் புதிய கருவி களின் தாக்குதல்களைச் சமாளிக்கப் பல தற்காப்புக் கருவிகளும் கண்டனர். பகைவர்களின் ஈட்டிகளையும் அம்புகளையும் வேல் களையும் தடுத்து நிறுத்த கேடயங்களையும் இரும்புச் சங்கிலிகளால் பின்னப்பட்ட சட்டைகளையும் எஃகினால் செய்த மார்புக் கவசங் களையும் தலைக்கவசங்களையும் உருவாக்கினர். போர் வீரர்கள் இடது கையில் கேடயத்தையும் வலது கையில் வாள் ஈட்டி, வேல் முதலியவைகளையுந் தாங்கி எப்பொழுதும் போருக்குத் தயாராய் நின்றனர். கேடயங்கள், மரம், தோல், பிரம்பு, எஃகு, வெண்கலம் முதலியவைகளால் பல்வேறு வடிவங்களில் செய்யப் பட்டன. பஞ்சடைத்துச் செய்த கேடயங்களும் இருந்தன. போரில் பெற்ற புத்துணர்வு தனி உடைமை ஆட்சியில் தனக்குத் தனக்கு என்று வாழ முற்பட்ட மனிதன் தன் மனைவி மக்கள் தன் உடைமை ஆகியவை களைக் காப்பதற்காக தன் அக்கம் பக்கத்திலுள்ளவர்களோடு கொண்ட போட்டி, பொறாமை சண்டை முதலியவைகளை மறந்து போராட ஒருமைப்பாட்டை கற்றுக் கொண்டான். போரைத் திறம்பட நடத்தி எளிதில் வெற்றி பெறத் தகுதியான தலைவனை ஏற்படுத்திக் கொண்டான். தலைவன் ஆணையை தலைமேற் கொண்டு நடக்கப் பயின்று கொண்டான். போர் ஒழுக்கங்களை உயிர் போகும் நிலையிலும் மறவாது கடைப்பிடித்து வந்தான். பாசறை போர்க்களத்தில் படைகள் தங்கி இருப்பதற்காக, பரந்த வெளியில் பாசறை அமைக்கப் பெற்றது. இது பாடி வீடு அல்லது பாடி நகர் என்று அழைக்கப்படும். இங்கு அரசர், அமைச்சர், படைத்தலைவர் முதலியோரும் தங்கி இருப்பர். படை வீரர்கள் போர் புரியாத போழ்து இங்கு தங்கி இருப்பர். பகைவர்கள் பாசறை அருகே நெருங்க முடியாதவாறு பலமான காவல் போடப் பட்டிருக்கும். பாசறையில் இருக்கும் அரசனைப் புலவர்களும், அரச குருவும், மன்னனின் நண்பர்களும் சென்று காண்பதுண்டு. புலவர்கள் தூது செல்வதும் போரைச் சமாதானம் செய்வதும் உண்டு. போர் கொடியது. குருதி ஆறு பெருகி ஓடும். எண்ணற்ற மக்கள் உயிர் துறப்பர். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், மரம், செடி, கொடிகள், பயிர்கள், நெல் வயல்கள் போன்றவைகள் அழிக்கப்படும். நாடு சுடுகாடாய் விடும். ஆனால் போரில் மக்கள் அறிவு திறம்படச் செயல்படுகிறது. அதில் பெற்ற பட்டறிவு பெரும் பலனை விளைவிக்கிறது. மனித அறிவு ஆயிரம் ஆயிரம் வழிகளில் ஓடி ஆயிரம் ஆயிரம் துறைகளில் நுழைந்து புதிய, நுணுக்கமான பொருள்களை ஆய்ந்து அரும்பெரும் விளைவுகளைச் சாதித் துள்ளது. மக்களின் தோள் வலிமை வளர்கிறது; வாள் வலிமை வளர்கிறது. மக்கள் போரில் தான் பெற்ற பொருள்களையெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி காண வழி காண்கின் றான். அவன் அணுவைக் கொண்டு மலைகளைப் பிளந்தான்; நீரிற்குள் மூழ்கி உலகைச் சில மணி நேரத்தில் வலம் வந்தான். விண்ணிற் பறந்து திங்கள், செவ்வாய், வெள்ளி முதலிய கோள்களில் குடியேறவும் அதன் செல்வங்களைத் தோண்டி எடுக்கவும் வழி கண்டான். மண்ணை ஆண்ட மனிதன் நீரையும் விண்ணையும் அங்குள்ள எண்ணிலாக் கோளங்களையும் ஆண்டு அவனது வெற்றிக் கொடியை அங்கும் பறக்கச் செய்து விட்டான். ஆதியில் மக்கள் காலாட்படையைத் தான் கண்டனர். அப்பால் கீழே நிற்கும் காலாட் படையை எளிதில் தாக்கவும் பகைவர்களின் தாக்குதல்களுக்கு சுலபமாக ஆளாகாமல் இருக்கவும் விரைந்து செல்லவும் யானைப் படையையும், அப்பால் மாடுகள் பூட்டிய தேர்ப்படையையும் உருவாக்கினர். அதன் பின்னர் தாக்குதல் போரில் விரைவும் வேகமும் அவசியம் தேவையெனக் கண்டனர். சாதாரண காலத்தில் வாகனமாக உபயோகித்த குதிரைகளை அப்பால் போருக்கும் பயன்படுத்தினர். அணிவகுப்பு இயக்கங்களுக்கும் இடது சாரி, வலது சாரி நெடுஞ்சளியாகத் திரிவதற்கும் குதிரைப் படைப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. சென்ற இரண்டாவது உலகப் போர் பண்டைக்காலப் போரினின்று முற்றிலும் மாற்றம் பெற்றதாய் இருந்தது. போரின் அகமும் முகமும் மாறி இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த விஞ்ஞானப் போரில் கூட குதிரைப் படை பயன்படுத்தப்பட்டது. சோவியத் யூனியனின் தலைநகராகிய மாசுக்கோவை இரத்த வெறி கொண்ட இட்லர் தாக்கி வீழ்த்த எழுந்த அவனுடைய இறுதி முயற்சியில் இடி விழச் செய்து மாசுக்கோவின் தலையெழுத்தை வேறு விதமாக மாற்றி அமைக்கு மாறு செய்தது சோவியத் கோசக் குதிரைப்படையின் அஞ்சாத அபூர்வச் சாகசச் செயலேயாகும். போர்க்கலையில் நிபுணத்துவம் பெற்ற படைத்தலைவருக்கு குதிரைகளின் மீது அளவு கடந்த நம்பிக்கையுண்டு. இந்திய வீரப் பெண்மணி சான்சிபாய் அரசி யினுடைய குதிரையின் மகத்தான செயல்கள் இந்திய நாடு உள்ளளவும் மறக்க முடியா தன்றோ? இன்றைய இயந்திரப் போரிலும் குதிரைப் படைகளின் நினைவு மாறாது அதன் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது. குதிரைகள் பூட்டிய இரதப்படை ஏனைய முப்படை களையும் எதிர்த்துத் தாக்க வசதியாக இருந்து வந்தது. முற்காலத்திலே இருந்த போர்க்கருவிகளுக்கு ஏற்ற முறையிலே போராடும் முறைகளும் அணி வகுப்புகளும் போர்த்தந்திரங்களும் இருந்தன. இன்று அவைகள் முற்றிலும் வேறு விதமாக மாறி விட்டன. அன்று போர் வீரரின் உடற்பலமும் எண்ணிக்கையும் போர்க்கருவிகளின் அளவும் முக்கியமானதாக இருந்தது. இன்று போர் முழுவதும் மனிதனின் நுண் அறிவின் பலத்தாலே நடைபெறுகிறது. இன்று உடற்பலம் முக்கியமல்ல மூளைப்பலம் முக்கியமாக இருக்கிறது. இன்று அணுக்குண்டு, நீர்வாயுக் குண்டு காமிக் கிரகணம் போன்றவைகளை இராக்கெட்டு மூலம் ஏவி ஒரு தள்ளாத பருவமுடைய கிழவி பதினாயிரம் கல் தொலைவிலுள்ள இந்திய நாட்டை சில மணி நேரங்களில் சுட்டுச் சாம்பலாக்கி விட முடியும். இன்று நமது புராணங்களில் பழையோள் என்று கூறும் கொற்றவை மாகாளி பராசக்தி நெற்றிக் கண் பெற்றிருக்கிறாள். அவள் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தால் இவ்வுலகமே எரிந்து சாம்பலாய் விடும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று அந்த மாகாளிகள் அமெரிக்காவிலும் சோவியத் யூனியனிலும் குடியேறியுள்ளார்கள் என்று கூறும் நிலையில் உள்ளது. முன்னாளில் நமது போர்கள் எல்லாம் மூன்று நாள்களில் முடிந்தன. பாரதப் போர் பதினெட்டு நாள்கள் நடந்தன. உலகின் முதல் போரும் இரண்டாம் போரும் சில ஆண்டுகள் நடை பெற்றன. ஆனால் இனி இவ்வுலகில் போர் எதுவும் எழுந்தால் சில நாழிகைக்குள் முடிந்து விடும். இப்போரில் மக்கள் குலமே மாண்டு மடிந்து மண்ணோடு மண்ணாய்ப் போய் விடும். இன்றைய மனிதன் மக்கள் குலத்தை மட்டுமல்ல தான் வாழும் இந்த உலகத்தையே சுட்டுப் பொசுக்கித் தானும் அழிவான். அல்லது தானும் தன் நாட்டாரும் இவ்வுலகை அழித்து விட்டு சந்திரன் செவ்வாய் முதலிய கோள்களுக்குப் போய்க் குடியேறிக் கொள்வான். ஆகவேதான் உலகில் உள்ள அறவோர்கள் நல்லறிவு படைத்தவர்கள் எல்லாம் போர் வேண்டாம். போர்க்கருவிகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப் பட வேண்டும். உலகமெங்கும் சமாதானமும் சாந்தியும் நல்வாழ்வும் பெருக வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் தான் உலக மெங்கும் உலக சமாதான இயக்கம் தோன்றி வளர்ந்து வருகிறது. உலக சமாதானத்திற்குப் பாடுபட்ட நமது மாபெருந் தலைவர் டாக்டர் சைபுடனே கிச்சிலு அவர்களுக்குச் சோவியத் யூனியன் உலக சமாதானத்திற்குப் பாடுபடும் சமாதான வீரர் என்று பாராட்டி உலக சமாதானப் பரிசும் வழங்கியதை நாம் மறத்தற்கில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகில் மக்களின் எண்ணம் என்றும் இல்லாவண்ணம் 200 கோடிக்கும் அதிகப்பட்டு விட்டது. மக்கள் எண்ணம் பெருகியதோடு அவர்கள் அறிவிலும் நாகரிகத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். மக்கள் தொகை பெருகிய தோடு மட்டுமன்றி அவர்களின் தேவைகளும் ஒன்றுக்கு பத்தாக நூறாக வளர்ந்து விட்டன. மக்களின் தேவைகளுக்கேற்ப உற்பத்தி கள் அதிகரிக்கவில்லை. vdnt czÉš, cilÆš, ciwÉl§ fËš - V‹?- எண்ணற்ற மக்களின் இன்றியமையாத தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் பலனாக எங்கும் போர் உணர்ச்சி ஒருவரையொருவர் பறித்துக் கொன்று தான் மட்டும் வாழ வேண்டும் என்ற தன்னல வெறியும் எழுந்து தலைவிரித்தாடி வருகின்றன. இந்த வெறிக் கூட்டத்திற்கு முதலாளித்துவப் பெரும்பூதம் தலைமை தாங்கி நிற்கின்றது. புதுப்புது விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடித்து மக்களைக் கொன்று குவிக்கத் திட்டமிட்டுப் போர்க் கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நூற்றாண்டின் நடுவில் போர் முறைகளும் போர்க் கருவிகளும் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளன. பழைய கல்லாயுதங் களும் வில்லாயுதங்களும் உலோகாயுதங்களும் எஃகு, வெண்கலம் முதலியவைகளால் செய்யப்பட்ட வாள், கத்தி, ஈட்டி, வேல் போன்ற வைகள் பயனற்றவைகளாய் போய்விட்டன. இன்று அவைகள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலுமுள்ள கண்காட்சி சாலைகளில் இடம் பெற்றுள்ளன. இன்று போரின் அகமும் முகம் மாறிவிட்டது. முற்காலத்தில் போர் நிலத்திலே நடைபெற்றது. அப்பால் நீரிலும் நிலத்திலும் நடைபெற்றது. இன்றோ நிலத்திலும் நீரிலும் நீள்விசும்பிலும் நடைபெறுவதாக உள்ளன. பழைய வாள்களும் வேல்களும் மட்டுமல்ல துப்பாக்கிகளும் பீரங்கிகளுமே இன்று பயனற்றவைகளாய்ப் போய் விட்டன. இன்று அணுகுண்டுகளும், நீர்வாயுவுக் குண்டுகளும் காமிக் கிரகணங்களும் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்டுள்ளன. மனிதன் நினைத்தால் அடுத்த வினாடியில் ஆயிரக்கணக்கான கல் தொலைவில் உள்ள நாட்டைச் சுட்டெரித்து விட முடியும். இராக் கெட்டுகள் மூலம் அணு ஆயுதங்களை ஏவி, பதினாயிரக்கணக்கான கல் தொலைவில் உள்ள நாட்டைச் சுட்டு எரித்து சாம்பலாக்கி விட முடியும். மனிதன் நினைத்தால் நாம் வாழும் இந்த நில உலகையே அழித்து விட்டு வேறு உலகில் வாழ முடியும். இந்தக் கொடிய மிருக வாழ்க்கைக்கு மக்கள் ஆளாகாமல் தடுக்க உலகில் அறிஞர்கள் உலக சமாதான இயக்கம் நிறுவி அணு ஆயுதங்களை அழித்து எங்கும் சாந்தியும் சமாதானமும் இன்பமும் நிலவப்பாடுபட்டு வருகிறார்கள். உலக சமாதானம் ஓங்குக! வில் வில், மக்கள் வேட்டுவ வாழ்க்கை நடத்திய பழங்காலத்தில் குறிஞ்சி நிலத்திலே பிறந்தது என்றாலும் பாலை நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் ஆகியவைகளுக்கும் பரவியது. ஆதியில் விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்திய வில், பின் போர்க்கருவியாக இற்றைக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழ் நாட்டுப் பழம் பெருந் தெய்வமாகிய பழையோள் (கொற்றவை) வில்லைத் தனது முக்கிய ஆயுதமாகத் தாங்கி இருப்பது ஒன்றே இது பழைய காலத்துக் கருவி என்பதை உறுதிப்படுத்தும். இது கற்கால மக்கள் கண்ட கருவி யாகும். இது கற்காலத்தில் கண்ட கருவியேயாயினும் அதிக மாற்றம் பெறவில்லை. இது ஆதியில் கல்லை வைத்து அடிக்கும் கருவியாகத் துளிர்த்தது. அப்பால் கம்புகளைக் கூரிய அம்புகளாகச் செய்து வில்லில் ஏற்றி விலங்குகள், பறவைகள் இறுதியாக பகைவர்கள் மீதும் பாய்ச்சப்பட்டது. அம்புகள் உலோகத் தலை பெற்று - அதாவது அம்பின் நுனி கூரிய செம்பு, வெண்கல, இரும்பு உலோகங்கள் பொதியப் பெற்றது அதன் வலிமை பெருகியது. புலி, யானை, கரடி, காட்டு மாடு, காண்டாமிருகம் போன்ற விலங்குகளின் உடல்களை யெல்லாம் துளைத்தது; கொன்று வீழ்த்தியது. அம்பு நுனியில் நெருப்பும் பொருத்தப்பெற்றது. நுனியில் நச்சும் ஊட்டப்பெற்றது. அதோடு வில் பெரிதாகவும் உருவாக்கப் பெற்றது. பனை மட்டை, மூங்கில், குமிளங் கொம்பு, உலோகம் முதலியவைகளால் செய்யப் பெற்றது. முற்காலத்தில் வில் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது. பனை மட்டையால் செய்யப் பெற்ற கார்முகம் என்றும், மூங்கிலால் செய்யப்பட்டது கோதண்டம் என்றும், குமிளங் கொம்பினால் செய்யப் பெற்றது துரோணா என்றும், உலோகத்தால் செய்யப் பெற்றது சராசனம் என்றும் வட மொழிப் புலவர்களால் அழைக்கப்பட்டு வந்தது. வில் கொக்கரை, கொடுமரம், சாபம், சானகம், சிந்துவாரம், சிலை, தடி, தவர், தனு, தனுசு முனி, வேணு என்றெல்லாம் அழைக்கப் படும். இஃதன்றி சிவபெருமான் வில் பினாகம் என்றும், திருமால் வில் சாரங்கம் என்றும், அர்ச்சுனன் வில் காண்டீபம் என்றும் சிறப்புப் பெயர் பெற்றனவாகும். வில்லின் குதை, குலைசாறு என்று அழைக்கப்படும். அம்பு, அத்திரம், ஆசுகம், ஆவரி, ககம், கங்கபத்திரம், காண்டம், கணை, கதிரம், கோகோல், சரம், சாய்கம், சிலிமுகம், தொடை, தோணி, பகழி, பத்திரம், பத்திரி, பல்லம் பாணம், பிரதரம், புங்கம், புதை, மார்க்கணம், வாண்டு, வாளி, விசிகம், வேத்திரம், மொட்டம்பு, உதணம் முன்விடும் அம்பின் பெயர் - அத்திரம். அம்புக்கட்டுப் புதை என்றும் அம்புக் குதை - குலை பகழி, புங்கம் என்றும் அம்புக்குப்பி- புழுது என்றும் அம்புக் கூடு - ஆவ நாழிகை, ஆவம், தூணி (அம்பறாத் தூணி) என்றும் அம்புத் தலை - உடு, சுரை என்றும் அம்புத் திரள் கட்டுங் கயிறு - பற்றாக்கை என்றும் அழைக்கப்படும். வில் பல்வேறு மரங்களால் செய்யப்பட்டது. அதன் நாணும் மரத்தின் நார், விலங்கின் நரம்பு முதலியவற்றால் செய்யப்பட்டு வந்தன. வில்லில் பட்டுக் குஞ்சம் கட்டி அணி பெறச் செய்யப் பட்டது. வில்லின் நுனி கூர்மையாக இருக்கும். அது ஆறு அங்குல நீளம் விரிவாக முக்கோண வடிவில் இருக்கும். வில் உலகில் பல்வேறு இனத்தவர்களிடமும் இருந்துள்ளது என்றாலும் தமிழ் மக்களிடம் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றி விட்டது. அதோடு தமிழர்களும், அவர்களின் முன்னோர்களான திராவிடர்களும் வில்லை ஒரு கலையாக வளர்த்தனர். அவர்கள் கண்ட அறுபத்து நாலு கலைகளில் அத்திர பரீட்சை ஒன்றாகும். வில் கலையைத் திராவிடர்களிடமிருந்தே ஆரியர்கள் அறிந்து அதை அபிவிருத்தி செய்து கொண்டனர். இதை இன்று ஆரியர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் ஆதரிக்கின்றனர். 1 வில்லைத்தவிரப் பழங்காலப் பாரத நாட்டிற்குரிய திராவிடப் பெருங்குடி மக்கள் போரில் பகைவர்களைத் தாக்கி வீழ்த்தும் பல ஆயுதங்களையும் வைத்திருந்தனர். எனவே ஆரியர்கள் திராவிடர் களிடமிருந்து பெற்ற தனுர் வித்தையை அபிவிருத்தி செய்து அதைத் திராவிடர்களிடம் உபயோகித்து வெற்றியீட்டினர். திராவிடர்கள் போரை அறப்போர் என்று கூறி நச்சு அம்பு, நெருப்பு அம்பு, வெடி அம்பு முதலியவைகளைக் கொடிய பகைவர்களிடமும் பயன்படுத் துவது கூடாது என்றிருந்தனர். ஆனால் ஆரியர்கள் பண்பு, அறம் என்ற உயர் நெறிகளை அவமதித்து கொடிய பாணங்களைத் திராவிடர்கள் மீது பயன்படுத்தி வெற்றி கண்டனர். அவர்கள் பயன்படுத்திய கொடிய அம்புகள் அக்கினி அதிரம், நாகாதிரம், கருடாதிரம், பிரமாதிரம், அர்த்த சந்திர பாணம், சூரிய முகப்பாணம் போன்ற கொடி அம்புகள் பலவற்றைப் பயன்படுத்தி திராவிடர்களை அழித்து வெற்றியீட்டினர். இன்று அற நெறி பேசும் அமெரிக்கர்கள் ஆரியரல்லாத சப்பானிய மங்கோலியர்கள் மீது கொடிய அணு குண்டை வீசி அழித்து விட்டு இன்று கொடிய அணு குண்டுகள், நீர் வாயுக் குண்டுகள், காமிக் கிரணங்கள் போன்ற வைகளை வைத்திருக்கும் சோவியத் யூனியனிடம் அக்கொடிய ஆயுதங்களை மக்களிடம் பயன்படுத்தக் கூடாது. மக்கள் குலம் அழிந்துவிடும். அணுகுண்டு நீர்வாயுவுக் குண்டுகளை ஒழித்து விட வேண்டும். அதற்குத் தன்னோடு ஓர் ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என்று கூறுவதைப் போல் ஆரியர்களும் திராவிடர்களைக் கொடிய நச்சுப் பாணங்களால் அழித்து விட்டு அப்பால் திராவிடர்கள் அந்த ஆயுதங்களைத் தங்களிடம் உபயோகிக்க வரும் பொழுது அது அதர்மம், அறப்போருக்கு அது அடாது என்ற பண்பும் ஒழுக்கமும், நேர்மையும் ஆரியர்கள் கூறினர்; எழுதினர். சமாதானம், ஒருமைப்பாடு முதலியவைகள் பேசினர். சமய ஒருமைப்பாடு என்று கூறி தங்கள் ஆக்கிரமிப்பு நிலைக்கவும், தங்கள் அநீதிகள் நிலைக்கவும் தங்கள் கொடுமைகள் மறக்கவும் பல்வேறு நீதிகள் கண்டனர் என்று தெரிகிறது. உலோக காலத்தின் ஆரம்பத்தில் கூட வில்லுக்கு மதிப்புக் குன்றவில்லை; மதிப்பு ஏறியது. உலோகத்தினால் வில் உருவாக்கப் பட்டது. உலோகத்தினால் அம்புத்தலைகள் உருவாக்கப்பட்டது. உலோக அம்புத் தலைகள் போர் வீரர்கள் மார்பில் அணிந்திருந்த எஃகுக் கேடயத்தைத் துளைத்தது. தலையில் அணிந்திருந்த கவசத்தைக் கிழித்தது. மரங்களைத் துளைத்தது. அரண்களைப் பிளந்தது. என்றாலும் தமிழர்கள் ஆதியில் அமைத்த காலாட்படை வில்லோடு கத்தி வாள் முதலிய ஆயுதங்களை உபயோகித்து வந்தது. அப்பால் எழுந்த தேர்ப்படையிலும் வில் எறிவேல் முதலியவைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் எழுந்த கரிப்படையில் (யானைப்படையில்) அங்குசமும் நீண்ட வேல்களும், ஈட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தேரின் மேற்பாகம் போல் யானை மீது அம்பாரி அமைக்கப்பட்டு அதன் மீதிருந்தே வீரர்கள் போர் புரிந்து வந்தனர். போர்ப் படைகளும் போர் முறைகளும் போர்க்களங் களின் இடமும் மாறவே அதற்கேற்ப பல்வேறு ஆயுதங்களும் சிறிதும் பெரிதுமாய் மாறின. எல்லா ஆயுதங்களும் திராவிடர்களின் முன்னோர்களான பழங்கற்கால மக்கள் கண்ட கல்லாயுதங்களின் அடிப்படையிலே எழுந்தன. கத்தி, வாள், வேல், கோடரி, வாச்சி, உளி, தமரூசிகள் முதலிய ஆயுதங்களே நீண்டும், வளைந்தும், கூரிய நுனிகளும் அகன்ற நுனிகளும் இருபுறமும் கூரிய வாய்களுமாகப் பரிணமித் தெழுந்தன. சில வாள்கள் நடுவில் வளைந்தும் சில வாள்கள் நுனியில் வளைந்தும் சில கோடரிகள் பிறை வடிவிலும் வெவ்வேறு பெயர்கள் தாங்கி வெளி வந்தன. இவைகள் செம்பிலும், வெண்கலத்திலும் இறுதியாக எஃகிலும் வெளி வந்தன. பல வித வடிவத்தில் 100க்கு மேற்பட்ட வகையில் ஆயுதங்கள் எழுந்த காலத்தும் தொலைவில் உள்ளவர்களைத் தாக்குவதற்கு வில்லே பயன்படுத்தப்பட்டது. எறிவேலை விட எய்யும் அம்பே அதிகத் தொலைவிற்குப் பாய வல்லதாக இருந்தது. அதோடு அதற்கு வேகமும் அதிகம் இருந்தது. எனவே நீண்டகாலமாக - அதாவது கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை வில்லுக்கு ஏற்றம் இருந்தது. மேனாட்டினரிடமிருந்து அதிகமான துப்பாக்கிகள் வந்த பின்னரே வில்லின் ஏற்றம் வீழ்ந்தது. பகைவர்களைத் தாக்கி விரட்டியடிக்கத் தக்க ஆயுதங்க ளிடையே வாள், வேல், ஈட்டி உயர்நிலை பெற்றன. இந்திய நாட்டின் மீது ஆரியர்களும், கிரேக்கர்களும், அரபியர்களும் தார்த்தாரியர் களும், மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஆக்கிரமிப்புப் போர் நடத்திய காலத்தில் வாளும், வேலும், ஈட்டியும் முக்கிய பங்கு பெற்றது. பலன் தரும் ஆயுதங்களாக மிளிர்ந்தன. முற்காலத்தில் திராவிடர்களால் நான்கு விதமான வாள்கள் பயன்படுத்தப்பட்டன. வாள் கூட கத்தியின் அடிப்படையில் எழுந்த ஆயுதமேயாகும். வாள் வகைகளில் நீண்ட உடைவாள், குத்துவாள், கொடுவாள், கூன் வாள் முதலியவைகள் நான்கும் முக்கியமானவைக ளாகும். அதே போல் கோடரி வகைகளில் கண்ட கோடரி, பரசு, மழு போன்றவைகளும் வேல் வகைகளில் கைவேல், எறிவேல், ஈட்டி, வேல், கம்பு முதலியவைகள் சிறப்பானவைகள். உடைவாள், குத்து வாள் போன்றவைகளை நல்ல தோல் உறையிலிட்டு இடுப்பில் வீரர்கள் அணிந்திருப்பர். பகைவர்கள் அருகில் நின்று போரிடும் பொழுது கைவேல்களையும் கை வாள்களையும் பயன்படுத்துவர். சற்று விலகி நின்று போரிடும் பொழுது நீண்ட உடைவாள்களையும் நீண்ட ஈட்டி களையும் பயன்படுத்துவர். பகைவர்கள் எதிரே நின்று போரிடும் பொழுது ஈட்டிகளையும் மூவிலை வேல்களையும் வேல் கம்புகளையும் எடுத்து பகைவர்களை மார்பில் குத்தி இருதயத்தை ஊடுறுவிச் செல்லுமாறுச் செய்வர். கை வேலால் பகைவர்களின் வயிற்றில் குத்தி அவர்கள் குடல் சரியுமாறு செய்வர். மழு என்ற கைக் கோடரியால் கழுத்தை வெட்டி பகைவர்களை முண்டமாக்கி துண்டாடுவார். பரசு என்ற கோடரியால் மண்டையைப் பிளந்து பகைவர்களின் மூளையைக் கழுகுக்கு விருந்தளிப்பர். கையில் உள்ள கூரிய கத்தியால் எதிரியின் மார்பில் குத்தி ஈரலை எடுத்து மாலையாக அணிவார்கள். குடலை எடுத்து மாலையாக அணிவதும் உண்டு. இந்த ஆயுதங்கள் மிகப் பழமையானது என்பதற்கு அவைகள் அனைத்தும் நமது தெய்வங்களின் திருக்கரத்தில் காணப்படுவதே நல்ல சான்றாகும். ஆரியர்கள் கண்ட போர்க்கருவிகளில் பெரும்பாலன திராவிடர் களிடத்திலிருந்து கண்டு அபிவிருத்தி செய்யப்பட்டவைகளேயாகும். ஆதிகாலத்தில் அவர்கள் ஆடுமாடுகளை மேய்ப்பவர்களாய் இந்நாடு போந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களின் மொழியோ கலையோ, பண்பாடோ வளர்ச்சி பெற்றிருக்க வில்லை. அவர்களுக்கு அரண்களை அமைக்கத் தெரியாது. ஏழு நிலை மாடங்களைக் கண்டும் கேட்டும் அறியார்கள். நவ மணிகள் வைத்து இழைக்கப்பட்டப் பொன் அணிகலன்களைப் பற்றி அணுவளவும் அறியார்கள். போர்முறைகளையும், எண்ணற்ற பல போர்க்கருவி களையும் அவர்கள் கண்டதே இல்லை. கங்கைச் சமவெளிகளிலும் சிந்துப் பள்ளத்தாக்குகளிலும் விளையும் உணவுப் பொருள்களும் பசும்புல்லும் அவர்கள் உள்ளத்தை வசீகரித்தன. அவைகளை அடைய எத்தகையப் பெருந்தியாகமும் செய்யத் தயாராய்ப் பாரத நாட்டிற்குள் புகுந்தார்கள். ஆனால் அவர்கள் வெண்மை நிறம் உடையவர்களாய் கூரிய மூக்கும் அகன்ற கண்களும் உடையவர் களால் நல்ல உயரமும் பரந்த மார்பும் விரிந்த தோள்களும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் பண்பு அறியாக் காட்டு மிராண்டிகளாயும் முரடர்களாயும் இருந்தனர். அவர்களிடம் அறமும் ஆன்ற அறிவும் நெறியும் எழவில்லை. கலை அறிவும், பண்பும், நாகரிகமும் வாய்ந்தவர்களாய் சிந்து நதிப் பக்கம் நாடு நகரங்களை அமைத்து நல்வாழ்க்கை நடத்திய திராவிடப் பெருங்குடி மக்களிடம் ஏராளமான போர்க்கருவிகள் இருந்தன. போர்க்கலையை நன்கு அறிந்திருந்தனர். ஏழு நிலை மாடங்களை அமைத்து நல்ல விசாலமான தெருக்களையுடைய நாடு நகரங்களையும் நஞ்சை புஞ்சை நிலங்களைப் பண்படுத்தி வேண்டிய தானிய மணிகளைப் பெற்றிருந்தனர். எழுத்துக் கலையை அறிந்தனர். மொழியை வளர்த்திருந்தனர். தெய்வ உருவங்களைச் சமைத்திருந்தனர். சமய அறிவை வளர்த்திருந்தனர். எண்ணற்ற அணிகலன்களையும் ஆடைகளையும், செய்யக் கற்றிருந்தனர். ஆனால் அவர்கள் போருக்குத் தயாராக இல்லை. அவர்களிடம் ஆக்கிரமிப்பு எண்ணம் இல்லை. எனவே அதிமாகப் போர்ப் பயிற்சியைப் பெற வில்லை. போர்க் கருவிகளை நன்கு பயன்படுத்தும் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே பண்பாடு மிக்க திராவிட மக்கள் முரட்டுத்தனம் வாய்ந்த ஆடுமாடுகளை மேய்த்துத் திரிந்த நாடோடிகளான ஆரிய மக்களிடம் போரில் தோற்றுவிட்டனர். மக்களின் சாதாரண சக்தியினாலும் தேர்ச்சித்திறனாலும் வில்லும் அம்பும் இயக்கப்பட்டு வந்தது. அதிரங்களும், சத்திரங் களும் தெய்வீக சக்தியால் ஏவுகணையாகத் தங்களின் மந்திரங்களால் தெய்வ வழிபாட்டினால் இயங்குவதாக ஆரியர்கள் நம்பினர். அவர்கள் நெருப்பு, மழை அல்லது காற்று முதலியவைகளைப் பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்து பகைவர்கள் மீது தாக்கி அழிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணினர். மேலும் பிரமாதிரம், அக்னியதிரம், வருணாதிரம், நாகாதிரம், கருடாதிரம் போன்றவைகள் தங்களிடம் தனிச் சிறப்பு வாய்ந்த வைகளாய் உள்ளன என்று நம்பினர். இன்னும் வில்லும் அம்பும் தவிர பல தாக்குதலுக்குரிய ஆரிய ஆயுதங்களும் இருந்தன. ஆனால் அவைகள் வேதகாலத்தில் பொதுவான உபயோகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆயுதங்கள் பிற்காலத்தில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவைகள் எதைக் காட்டுகிறது என்றால் ஆரியர்கள் ஆரம்பகாலத்தில் அதிகமான ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆரியர்களும், மொகலாயர்களும் ஆங்கி லேயர்களும் பாரத மண்ணில் கால் வைத்து இந்தப் பரிசுத்தமான நீரைக் குடித்து இந்த நாட்டின் உப்பைத் தின்ற பின்னரே அறிவும் ஆண்மையும் ஆயுதங்களும் பெற்றார்கள் என்பதை அவர்களின் வரலாறு இன்றும் நன்றாக எடுத்துக்காட்டி நிற்கின்றது. பண்டைக்காலப் பாரத பூமியில் இரண்டு விதமான வாள்கள் இருந்தன. ஒன்று நீண்ட உடைவாள் மற்றொன்று குட்டையான கூரிய குத்துவாள் (Dagger - Sword - பட்டாக்கத்தி). உடைவாள் அசி என்றும், குத்துவாள் கிருத்தி என்றும் அழைக்கப்பட்டது. கோசா (கவச உறை)யில் வாள் செருகப்பட்டு போர் வீரனின் இடுப்பில் உள்ள வாரில் ஒருபுறம் தொங்கவிடப் பட்டிருக்கும். வாளின் உறை தோலால் தைக்கப் பெற்று அதனுள் வாள் தலை கீழாக செருகப் பட்டிருக்கும். அதன் கைப்பிடி இடுப்பில் உள்ள வார் அல்லது சங்கிலியின் மேல் நீண்டிருக்கும். வாளை எளிதாக நினைத்த பொழுது உறையினின்று உருவி எடுத்துப் பயன்படுத்த முடியும். வாள், பகைவர்களை நெருங்கி மல்லாடிப் போர் புரியும் பொழுது பயன் தரும் கருவியாக இருக்கும். பகைவர் மீது எறிவதற்குரிய பழுக்குறைந்த எறிவேலும் (Javelin), ஈட்டி (Spear) அல்லது வேல் கம்பும் அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமாகும். இந்த ஆயுதங்கள் வேதகால ஆரியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றாலும் இந்த ஆயுதங்கள் அவர்களுக்கு முன்னர் தெரியாதிருந்தன. மகா பாரதப் போரில் எறிவேலும், ஈட்டியும் முக்கியத்துவம் வாய்ந்த போர்க் கருவிகளாய்ப் புகழ் பெற்றன. அவைகள் அக்காலத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. சக்தி குண்டா, குணபா சாலியம், சங்கு போன்று பல பெயர்கள் உண்டு. திரிசூலம், தென் இந்தியாவில் மூவிலை வேல் அல்லது முத்தலை வேல் என்னும் பெயரால் மிகப் பிரசித்தி பெற்று விளங்கிய ஒருவகை ஈட்டியாக இருந்தது. இது சிவ பெருமானு டைய அரிய ஆயுதமாகத் தமிழர்க ளால் எண்ணப்பட்டு வந்தது. சிவபெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் களை நடத்தும் நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்தி களுக்கும் மேம்பட்ட தெய்வம் என்று தமிழர்களின் மறை நூற்கள் கூறுகின்றன. ஆனால் ஆரியர்கள் மும்மூர்த்திகளில் ஒருவரான உருத்திரனே சிவன் என்று கூறினர். தமிழர்கள் கண்ட உலகப் பொது மறையான திருக்குறளில் பலவிடங்களில் இந்த வேல் குறிப்பிடப் பட்டுள்ளன.1 12. படைக்கலன்களின் விளக்கம். பண்டைக்கால மக்கள் ஒரு பண்பிற்கு உட்பட்டவர்களாய் இருந்தனர். அவர்கள் அறப்போர் நடத்துவது நேர்மை என்று எண்ணினர். பகைவனை எதிர்ப்பதும் அவனை அழிப்பதும் அறம் என்று கண்டனர். பகைவர்கள் நாட்டில் வாழும் அந்தணர், பிணியாளர், பெண்கள், படைக்கலன்கள் பெறாதார்களை அழிப்பது மற நெறி என்று எண்ணினர். அவர்கள் பெற்ற படைக் கலன்களும் அதற்கேற்ற வாறு இருந்தன. அவர்கள் பெற்ற படைக்கலன்கள் அவர்கள் சக்திக்கு உட்பட்டதாய், அவர்கள் நினைத்த பகைவனை மட்டும் அழிக்கக் கூடியதாய் இருந்தது. ஆனால் இன்றையப் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் விமானக் குண்டு களும் பகைவர்களை மட்டுமல்ல பக்கத்தில் உள்ள மக்களையும் வீட்டில் தூங்குகிறவர்களையும் மருத்துவமனையில் நோயால் அவதிப்படுபவர்களையும் எதிர்பாரா வண்ணம் அழிப்பதாய் எழுந்தன. இன்று கண்ட அணு ஆயுதங்களும் நீர்வாயுக் குண்டு களும், காமிக் கிரணங்களும், இராக்கட்டுகளும் பதினாயிரக் கணக்கான கல் தொலைவில் உள்ள ஒரு மனிதனை அழிக்குமாறு ஏவினால் அது அந்த ஊரில் உள்ள மக்களை மட்டுமல்ல அந்த நாட்டையும் அக்கம் பக்கத்திலுள்ள நாடுகள் பலவற்றையும் அழிக்கக் கூடியதாய் அமைந்துள்ளன. இந்தக் கருவிகள் போருக்கு ஏற்றதல்ல. பழங்காலக் கருவிகள் போருக்கு ஏற்றன என்று எண்ணப்படுகின்றன. வில் வில் மிகத் தொன்மையான காலத்தில் அதாவது கற்காலத் திற்குப் பின்னர் மக்கள் பயன்படுத்திய சீரிய, தாக்கும் ஆயுதம் ஆகும். எனவே வரலாற்று அறிஞர்கள் வில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம் பெரும் கருவி என்று கூறுகிறார்கள். உலகில் உதித்த முது பெரும் நாகரிகமாகிய சிந்து வெளி நாகரிகத்தில் அதாவது கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன்பே வில் தோன்றிவிட்டது என்று உறுதியாக உரைக்க முடியும். அரப்பாவிலும் மொகஞ்சதாரோ விலும் அறிஞர்கள் அகழ்ந்து கண்ட ஆய்வில் எண்ணற்ற பித்தளை, வெண்கல அம்புகளின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளியில் வாழ்ந்த முது பெரும் திராவிடப் பெருங்குடி மக்கள் தாதுப் பொருள்களாலான கூரிய அம்புத் தலைகளையுடைய கணைகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பதை இந்த சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஆனால் உலகில் பல்வேறு இனத்தவர்களும் பண்டைக் காலத்தில் வில்களையும் அம்புகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு அவர்களின் இலக்கியங்களும் மொழிகளும் சான்று அளிக்கின்றன. தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கை நடத்திய இருள் சூழ்ந்த பண்டையக் காலத்தில் வில் தொடர்ந்து தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. இது பண்டு தொட்டு 9-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இந்திய வரலாற்றில் ஒளி வீசி இருந்தது. தமிழர்களின் தொன்மை வாய்ந்த முதுபெரும் தெய்வமாகிய பழையோள் என்னும் காளி தம் கையில் வில்லைத் தாங்கி இருப்பதொன்றே தமிழர்கள் கற்காலத்திலே வில்லைக் கண்டு விட்டார்கள் என்பது நன்கு புலனாகும். இக்கருவி தமிழர்களின் காப்பியங்களிலெல்லாம் இடம் பெற்றுள்ளது. கையால் பயன்படுத்தப்பட்ட நெருப்புக் கருவிகள் தோன்றிய காலம் வரை - ஏன் அது பெருகி சிறப்புறும் வரை வில் நாட்டில் ஒரு உயர்ந்த படைக்கலனாக எண்ணப்பட்டு வந்தது. வில் பண்டைக் காலத் திராவிட மக்களின் தலை சிறந்த படைக்கருவியாகத் திகழ்ந்தது. இராணுவ விஞ்ஞானத்தில் வில் கலை (தனுர் வேதம்) என்பது ஒரு பெயரைப் பெற்றது. முற்காலத்தில் வில்லை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வில் வீரர் என்ற பெயரைப் பெற்றார் கள். ஒரு காலத்தில் விலங்குகளோடு கைகலந்து போரிட்ட மனிதன் அப்பால் தன் அறிவாற்றலின் மூலம் வில்லைக் கொண்டு தொலை தூரத்தில் மறைவிலிருந்து தம் கொடிய பகைவர்களையும் விலங்கு களையும் எளிதில் மார்பைப் பிளந்து கொன்றான். பழங்காலத்தில் வில் மிக எளிதாக மக்கள் பயன்படுத்தும் படைக்கலனாக விளங்கியது. இது அன்று மூங்கில், பிரம்பு, மட்டை, மரம், தாதுப் பொருள் ஆகியவற்றால் செய்யப்பட்டு வந்தது. வில் நாண் நரம்பினாலும் மரத்தின் நாரினாலும் சணல் அல்லது பசுவின் வால் முடியினாலும் முறுக்கப்பட்டு நாண் என்னும் பெயரின் பயன்படுத்தப்பட்டு வந்தது. பௌத்தர்களின் சாதகக் கதைகளில் ஆண்டுக் கொம்பினால் வில் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கில், மரக்கட்டை போன்றவைகளால் செய்யப்பட்ட வில்களும் உண்டு. பனை மட்டைகளாலும் வில் செய்யப்படுவதுண்டு. தமிழகத்தில் பெரிதும் பனை மட்டைகளால் செய்யப்பட்ட விற்கள் அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளன. பண்டைக் காலத்தில் சொல்லற்கரிய சக்தி வாய்ந்த வில் என்னும் படைக்கலன் நான்கு வகைப் பொருள்களால் செய்யப் பட்டு நாலு பெயர்களைப் பெற்றது. அது முறையே (1) கார்முகம் (2) கோதண்டம் (3) துருணா தனு அல்லது சராசனம் என்று அழைக்கப்பட்டது. பனை மட்டையால் செய்யப்பட்ட வில் கார்முகம். கோதண்டம் மூங்கிலால் செய்யப்பட்ட வில். துருணா கொம்பினால் (மரத்தால்) செய்யப்பட்ட வில். தனு (சராசனம்) தாதுப் பொருள்களால் செய்யப் பெற்ற வில். சிவபெருமானுடைய வில் ஆதியில் மூங்கிலால் செய்யப்பட்ட தாய் இருந்தது. அப்பால் அது மரத்தால் செய்யப்பட்டது. அவர் இருவகை வில்லையும் பயன்படுத்தினார். பழையோள் (கொற்றவை) மூங்கிலால் செய்யப் பெற்ற வில்லையே பயன்படுத்தினார். மூங்கி லால் செய்யப்பட்ட வில் அடியில் 3,5,7,9 முடிச்சுகள் உள்ளதாய் இருந்தது. 4,5 அல்லது 8 முடிச்சுகள் உள்ள விற்களை பெரும்பாலார் விரும்புவதில்லை. தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி அரும்பிய காலத்தில் வில் நாண் பட்டு நூலால் செய்யப்பட்டது. பட்டு நூல் நன்றாக முறுக்கேறியதாக இருந்தது. அந்தப் பட்டு நூல் நாண் மூன்று பிரிவுள்ளதாய்ச் சிறு விரல் பருமன் முறுக்கப்பட்டு இருந்தது. பட்டுக் கிடைக்காவிடில் மான்முடி, எருமை முடி, ஆட்டு முடி முதலியவைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நல்ல உறுதியான நாண், மூங்கிலின் மேற்புறமுள்ள நாரினால் செய்யப் பட்டு சுற்றிலும் பட்டு நூல் சுற்றப்பட்டிருந்தது. கற்றாழை நார், தேங்காய்த் தும்பினால் நல்ல கயிறு திரிக்கப்பட்டு முறுக்கேறி இருந்தால் அதுவும் நாணாகப் பயன்படுத்துவது உண்டு. ஆதிகாலத்தில் வில்கள் பல முக்கிய பொருள்களால் செய்யப் பட்டன. அதாவது உலோகங்கள், கொம்புகள், மரங்கள், மட்டைகள் ஆகியவைகளாகும். வில் நாணும் சணல் தோல், பிரம்பு நார் முதலியவை களால் செய்யப்பட்டன. நல்ல வில் நாலு முழம் (4 Cubits) நீளம் இருக்க வேண்டும் என்றும் நடுத்தர வில் மூன்றரை முழம் இருக்க வேண்டும் என்றும் கடைத்தர வில் மூன்று முழம் இருக்க வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. வில்லின் கம்பை அதனுடைய மையத்தினின்று நுனி வரை கரடு முரடு சூன் இல்லாது ஒரே சீராக இருக்கும்படி பார்த்து அமைக்க வேண்டும். வில்லின் கம்பு நடு மையத்தில் ஒரு தனித் துண்டுக் கட்டை பொறுத்தப் பட்டதாய் இருக்க வேண்டும். வில் உறுதியாக இருக்கவும், நாண் ஏற்றும் பொழுது நொடிந்து விடாமல் இருக்கவும் இந்தக் கட்டை பொறுத்தப்படுகிறது. வில்லின் இரு நுனிகளும் சிறிதாக நாண் கட்டுவதற்கு ஏற்றவாறு ஒரு சிறு பள்ளம் உள்ளதாக இருக்கும். வில்லின் நுனி கவின் பெறும் காரிகையின் கண்மேல் இருக்கும் புருவம் போல் காணப்பட வேண்டும். உலோக வில்லும், கொம்பு வில்லும், இரும்பு அல்லது கொம்பினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது மர வில்லில் இரும்பு அல்லது கொம்பு இணைத்தோ அல்லது தனியாகவோ செய்வதும் உண்டு. கொம்பு வில் நல்ல எழில் வாய்ந்ததாய்ச் செய்யப்படும். அது பொன் தகடு பொதியப் பெற்று மணிகள் பதிக்கப்படுவதும் இரு நுனிகளிலும் பட்டுக் குஞ்சம் தொங்குவதாய்த் திகழ்வதும் உண்டு. வில்கள் எப்பொழுதும் வளைந்ததாகவே இருக்கும். இதில் உடைவோ, தொளைகளோ இருக்கக் கூடாது. உலோக வில், பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய பொருள்களால் செய்யப் பட்டதாக இருக்கும். கொம்பு வில் விலையேறப் பெற்ற எருதுகள், எருமைகள் ஆகியவை களின் கொம்பினால் ஆக்கப் பெற்றதாய் இருக்கும். மர வில்களைச் சந்தனக் கட்டை, பிரம்பு, ஆச்சாமரம், பனை மட்டை, மூங்கில் போன்றவற்றால் செய்யலாம். மூங்கில் வில், நல்ல இலையுதிர் காலத்தில் வளர்ந்த மூங்கிலைக் கண்டு பிடித்து அதனால் செய்யப்படும். அவைகள் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட விதிப்படி வெட்டப் பட்டு வில்லாகச் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். தமிழர்கள் தொடக்கக் காலத்தில் விற்களை மூங்கிலாலும், மரங்களாலும் செய்தனர். கொம்பு வில் பிற்காலத்தில் எழுந்தது. வில்லின் ஆற்றலைப் பெரிதாக்க ஆதிகால மக்கள் தங்கள் அறிவை அதிகமாகச் செலுத்தி பல பொருள்களைத் தேடிப் பிடித்து வில் கோலோடு இணைத்தனர். வில் எவ்வளவு வளைத்தாலும் ஒடிந்து விடாமல் வளைந்து, தொய்ந்து தரத்தக்கதான கொம்புகளைச் சீவி வில் கோலோடு இணைத்து வந்தனர். இரு வளைவுள்ள வில்கள் சாஞ்சிச் சிற்பங்களிலும் குப்தர் காசுகளிலும் காணப்படுகின்றன. மூங்கில் வில்லில் அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மை உண்டு. பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள், வில்லின் நீளம் அதன் பருமன் நாணின் தன்மை அதன் முறுக்கேற்றம் முதலியவைகளை ஆராய்ந்து அதற்கு இலக்கணம் வகுத்திருந் தார்கள். வட மொழியில் வில் மறை (தனுர் வேதம்) என்றொரு ஏடும் இருந்தது. புராணங்களில் ஆறு முழ நீளம் உள்ள வில்லின் ஆற்றல் அதிகமாகச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. கி.மு. 4-வது நூற்றாண்டில் உள்ள பாரதப் போர் வீரர்கள் ஆறு அடி நீளமுள்ள வில்களை ஏந்தி அவைகளை வளைத்துப் பகைவர்கள் மீது பாணம் தொடுத்து நாட்டின் பெருமையை நிலை நாட்டியுள்ளனர். சாஞ்சி அழிபாடு களில் காணப்படும் வில் சிறிது குறைந்த அளவுடையதாய்க் காணப் படுகிறது. சிவ வில் நமது புராணங்களில் மிகச் சிறப்பித்துக் கூறப் படுவதாகும். அது அடியிற் கண்டவாறு இருந்ததாகக் கூறப் படுகிறது. ஒரு நல்ல வில் அதை வைத்திருக்கும் வீரனை விட ஒரு சிறிது பலம் குறைந்ததாக இருக்கும். ஆனால் அதை ஏந்தி நிற்கும் வீரன், வில்லை விடப் பெரிதும் மதிக்கப்படுபவன் ஆவான். ஆனால் வில் நல்லதாக இல்லாவிட்டால் வில் வீரன் எளிதில் அம்பை விடுக்க முடியாது (சரியாகக் குறிபார்த்து பாணந் தொடுக்க இயலாது). எனவே வில், அதை வைத்திருப்பவன் திறமைக்கும் அறிவிற்கும் ஏற்றதாய் அமைந்திருக்க வேண்டும். பொதுவாக, வில் ஐந்தரை முழம் உள்ளதாய் இருப்பது நல்லது என்று முற்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நீளம் வாய்ந்த வில் தெய்வ வில்லாக மதிக்கப்பட்டது. இத்தகைய வில்லைத்தான் சிவ பெருமான் பயன்படுத்தி பகைவர்களை யெல்லாம் வெற்றி கொண்டார் என்று எண்ணப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள ஆரியர்கள் சிவன் வில்லை மிகச் சக்தி வாய்ந்ததாகக் கூறுகின்றார்கள். இது திராவிடர் களின் விற்கலை ஏற்றத்தைக் குறிப்பதாகக் கருதலாம். சிவ வில் நாலு முழம் நீளமுடைய வில்லாகும் என்று எண்ணப்படுகிறது. இந்தத் தெய்வத் தன்மை வாய்ந்த நீளமான வில்லைப் பயன்படுத்தினால் அது மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப் பட்டது. வில் கலையை நன்கு பயின்ற அறிஞர்கள் வில் நாலரை முழம் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த அறிஞர்களிற் சிலர் மேற்கொண்டும் சில அறிவுரைகள் தந்துள்ளார்கள். திருமாலுடைய வில்லின் கோல்(கம்பு) மிகச் சிறப்புடையது. அது கொம்பால் ஆனது. அது விசுவகர்மாவினால் செய்யப்பட்டது. மூன்றரை முழம் நீளம் உள்ளதாக இருந்தது. மக்களால் பயன் படுத்தப்பட்ட கொம்பு விற்கள் பல்லாண்டுகளாக மூன்றரை முழத்திற்கு மேல் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் நம் நாட்டில் அதுவும் சிறப்பாகத் திராவிட நாட்டில் விற்கள் மூன்றரை முழம் முதல் நாலு முழம் வரை நீளம் உள்ளதாக இருந்தன வென்று தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் கொம்பு வில்லும், மரவில்லும், மட்டை வில்லும் மூங்கில் வில்லை விடச் சிறிதாய் இருந்தன. சிவ வில் நாலு முழம் இருக்கலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை ஆராய்ந்த வில்கலை அறிஞர்கள் வில் என்னும் வார்த்தையின் பொருள் நாலு முழம் அளவுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் இன்றும் நமது கோயில்களில் நவராத்திரிக்குப் பின் இறைவன் வன்னி மரத்தின் மீது அம்பு விடும் விழா ஒன்று நடை பெற்று வருகின்றன. திருவாங்கூரில் பூசை அடுப்பு என்ற நவராத்திரி விழாவில் இறைவன் பிரதிநிதியாய் திருவாங்கூர் மன்னரே வன்னி மரத்தின் மீது அம்பை விடுகிறார். அது அங்கு நடைபெறும் ஒரு பெரிய திருவிழாவாகும். தமிழ் நாட்டு விழாக்களில் கோயில் பூசாரிகளே இறைவன் பிரதிநிதிகளாய் அம்பை வன்னியின் மீது பாய்ச்சு கின்றார்கள். வில் கார்முகம், கொக்கரை, கொடுமரம், கோதண்டம், சரசானம், சபம், சானகம், சிந்துவாரம், சிலை, தடி, தவர், தனு, தனுசு, முனி, வேணு என்றெல்லாம் அழைக்கப்படும். இஃதன்றி சிவபெருமானுடைய வில் பினாகம் என்றும், திருமால் வில் சாரங்கம் என்றும், அர்ச்சுனன் வில் காண்டீபம் என்றும் அழைக்கப்படும். அர்ச்சுனன் ஆரிய வீரன். பாரதப் போரில் அவன் பங்கு சிறப்பு மிக்கது. அவன் திராவிட நாட்டிற்கு வந்தான் என்றும் பாண்டிய அரச குமாரி, சித்தராங் கதை என்பவளை மணந்தான் என்றும் ஒரு கதையுண்டு. பாரதம் தமிழ் மொழியில் மொழி ஆக்கம் செய்யப் பட்டுள்ளது. அதனால் தமிழ் மக்கள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. வில்லுக்கு விசயன்; கொடைக்குக் கர்ணன் என்ற தமிழ் பழமொழி ஒன்று கூடப் பிறந்துள்ளது. பண்டைக் காலத்தில் வில்லினின்று வில் யாழ் என்றொரு இசைக் கருவி பிறந்துள்ளது. இன்றும் தமிழக மெங்கும் வில்லை வைத்து அடித்துப் பாடும் வில்லடிப் பாட்டு நடைபெற்று வருகிறது. இது பாமர மக்களின் பாட்டு என்று இன்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அம்பும் அம்பறாத் தூணியும் ஆதிகாலத்தில் அம்புகள் கம்புகளாலும் மூங்கிலாலும் செய்யப்பட்டு வந்தன. நீண்ட காலத்திற்குப் பின் அம்பின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்கு அம்பின் நுனியில் கொம்பு, செம்பு இரும்பு வெண்கலம் முதலிய பொருள்களால் ஆன அம்புத்தலை பொருத்தப் பட்டன. அம்பின் தலை கூர்மையானதாக ஆறு அங்குல நீளம் - முக்கோண வடிவில் செய்யப்பட்டது. போர்களுக்குப் பயன் படுத்தப்படும் அம்புத் தலையில் நச்சுப் பொருள் தடவப்பட் டிருக்கும். அதைப் பகைவர்கள் மீது பாச்சினால் அவர்கள் உடலில் நஞ்சேறி விரைவில் கொல்லும். அம்புகள் அதிக வேகமாகப் பாய்ந்து செல்வதற்காக அம்பின் அடிப்பக்கத்தில் இறகுகள் வைத்துக் கட்டப்படும். உலகில் இந்தக் கருவிகளைப் பல்வேறு இனத்தவர்கள் வைத்திருந்தாலும் இந்தியாவில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே திராவிடர்கள் வில்லை வைத்திருந்தனர் என்று தெரிகிறது. அவர் களின் அரிய ஆயுதம் வில்லேயாகும். அவர்களின் வில் விடுக்கும் திறனை அறிந்து படிப்படியாய் ஆரியர்களும் படித்து இந்தக் கருவியைப் பயன்படுத்த முற்பட்டனர். இதை வட இந்தியர்கள் கூட மறுத்துரைப்பதில்லை. பம்பாயில் இருந்து வெளிவரும் அரிய ஆங்கிலத் திங்கள் இதழில் திரு. சந்திர சேகரன் அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். அது நமது கருத்தை நன்கு அரண் செய்வதாக இருக்கிறது.1 அம்புகளின் அடியில் வைப்பதற்கு வாத்து இறகு, அன்ன இறகு, கொக்கு இறகு, பருந்து இறகு, மயில் இறகு, காட்டுக் கோழிஇறகு, வல்லூறு இறகு, கழுகு இறகு போன்றவைகள் ஏற்றது. அம்புக்கு இறக்கைகள் வைத்துக் கட்டுவது தொன்று தொட்டு மரபாக வந்துள்ளது. பொதுவாக இந்த இறக்கைகள் 6 அங்குலம் இருப்பது வழக்கம். அம்பின் நுனியிலிருந்து இறகு 10-அங்குல அளவிற்குக் கீழே வைக்கப்படுவது நல்லது. அம்பின் நுனி கூரியதாக அதன் இருபுறமும் அகன்று வாள் போல் இருந்தால் அம்பு பாயும் பொருள்களை வெட்டிப் பிளக்கவோ துண்டு துண்டாக்கவோ முடியும். இந்த அம்புத் தலைக்கு குரங்கு எலும்பு, பசு எலும்பு, யானை எலும்பு ஆகியவைகள் ஏற்றதல்ல; அவைகள் நூற்களில் விலக்கப்பட்டுள்ளன. வில் இலக்கண நூற்களில் பல்வேறு நுனிகளையுடைய அம்புகள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பல் வேறு உருவ அமைப்பில் பல்வேறு பகுதிகளில் - அதாவது ஆந்தை போன்ற தலை, பசு வாலை யொத்ததலை, பிறைத்தலை, ஊசி முகம் போன்ற தலை, விசாலமான தலை, கன்றுப் பல் போன்ற தலை காது வடிவான தலை அமைப்பு உடையதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் சில போர்களில் அக்கினி அத்திரம் உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. பல புராணக் கதைகளில் நச்சு அதிரமும் எரிபொருள் அதிரமும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் நெருப்பு அம்புகள் யானைச் சண்டையில் பயன் படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இராச தரங்கிணி என்ற வட மொழி இலக்கியத்தில், போரில் மர எண்ணெய் மேலே பூசப்பட்ட எரி அம்புகள் பாய்ச்சப் பெற்று பகைவர்கள் படுகளத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்புகளின் தலை இரும்பினால் செய்யப்பட்டு அம்பின் நுனியில் சொருகப்பட் டிருந்ததாகக் கூறப்படுகிறது. அது நரசா என்று நவிலப்படுகிறது. சிவ தனுர்வேதம் என்ற வட மொழி நூலில் நரசா முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டிருந்த தாகக் கூறுகிறது. அதில் 5 பெரிய இறகுகள் இணைக்கப்பட்டு இருந்ததாம். இதைப் பெரிய வில் வீரன்தான் பயன்படுத்த முடியும். இது பெரிதும் யானைப் போரில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில போரில் வில்லின் அம்புக் காம்பில் வில் வீரனின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. அம்பின் நீளமும் பருமனும் நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கும். ஒரே நாட்டில் ஒவ்வொரு வீரனுக்கும் அவர்களின் சக்திக்கேற்ப அம்பு வேறு பட்டிருக்கும். ஒரு சாதாரண அம்பு மூன்று அடி நீளம் இருக்கும். மாபாரதத்தில் ஒரு அம்பு ஒரு போர்த் தேரின் சக்கர நீளத்திற்குச் சமமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் தோன்றி உலகப் பெரும் வரலாற்றை எழுதிய டிரர் போன் என்ற வரலாற்றாசிரியர் கூற்றுப்படி, பாரத நாட்டு அம்புகள் மௌரிய மன்னர்கள் காலத்தில் கிட்டத்தட்ட 3 முழம் இருந்ததாகத் தெரிகிறது. சிவதனுர் மறை என்ற நூல் அம்பின் நீளம் 3 முழம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் கனம் சிறு விரல் அளவாக இருக்கலாம் என்று தெரிகிறது. உயர்ந்த அம்பு பன்னிரண்டு கைப்பிடி நீளம் இருக்க வேண்டும் என்று அக்கினி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அம்புகளின் நீளம் 2 முழம் முதல் 3 முழம் வரை இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அக்காலத்தில் அம்பின் நீளத்தையும் வில்லின் சக்தியையும் வைத்தும் அம்பு பாயும் நீளம் அளவிடப்பட்டிருந்தது. அம்பு செலுத்தப் பழகும் பொழுது செல்லும் தொலைவு 240 முழம் இருக்க வேண்டும். நடுத்தரமானவர்கள் 160 முழமும் கடைத்தரமானவர்கள் 80 முழமும் அம்பைச் செலுத்துவர். இதை விட அதிக தொலைவு அம்பைச் செலுத்துவது அவரவர்கள் திறமையைப் பொறுத்ததாகும். 660 அடி தொலைவிற்கு அம்பைப் பாய்ச்சுவது வில் கலையை நன்றாய்க் கற்றவன் திறமையைப் பொறுத்ததாகும். எஃகு நுனி புகுத்தப்பட்ட கனத்த அம்பை வீரன் 270 அடி செலுத்த முடியும். வில் வீரன் போருக்கோ, வேட்டைக்கோ போகும் பொழுது வழக்கமாகத் தனது அம்புகளை ஒன்று அல்லது இரண்டு அம்பறாத் தூணிகளில் போட்டு அதைத் தோளின் மீது கட்டிக் கொள்வான். அம்பறாத் தூணி - அதாவது அம்புக் கூடு முதுகின் வலப் பக்கத்தில் தொங்க விடப்பட்டிருக்கும். அதனுள் 10 - அல்லது 20 அம்புகள் வரை இருக்கும். அம்பறாத் தூணில் பறவை அல்லது விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அம்பு, அத்திரம், அசுகம், ஆவரி, சுகம், கங்கபத்திரம், காண்டம், கணை கதிரம், கோ, கோல், சரம், சாய்கம், சிலீமுகம், தொடை, தோணி, பகழி, பத்திரம், பத்திரி, பல்லம் பாணம், பிரதரம், புங்கம், புதை, மார்க்கணம், வாண்டு, வாளி, விசிகம், வேத்திரம், மொட்டம்பு, உதணம் முன்விடும் அம்பின் பெயர் - அத்திரம், அம்புக்குப்பி -புழுது என்றும் அம்புக்கூடு - ஆவ நாழிகை, ஆவம், தூணி) என்றும் அம்புத் தலை - உடு, சுரை என்றும் அம்புத் திரள் கட்டுங் கயிறு - பற்றாக்கை என்றும் அழைக்கப்படும். 2. தண்டாயுதம் (Mace) தண்டாயுதம் (செண்டு) அல்லது கதை (Club) என்ற ஆயுதத்தை தடி, கைத்தண்டு, குண்டாந்தடி, குறுந்தடி எனப்படும். இது தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த ஆயுதம். இந்த ஆயுதத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரப்பா மக்களும் நன்கு அறிந்திருந்தனர். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிறந்த நாகரிகத்தைப் படைத்த ஆதித்த நல்லூர் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஆயுதம். தெளிவாகக் கூறுவதானால் திராவிடப் பெருங்குடி மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று ஐயமறக் கூறலாம். தொல்லூழியில் இந்த ஆயுதம் வாள்களை விடப் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கருவி தமிழகத்தில் பண்டைக் காலத்தில் எழுந்த நானிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் அரும்பிய ஆயுதமாகவும். முல்லை நிலத் தெய்வமாகிய திருமாலின் திருக்கரத்தில் திகழும் ஆயுதமாகவும் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியங்களில் இந்தக் கருவிக்கு எண்ணற்ற சான்றுகள் காட்ட முடியும்.1 கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் சிறந்த ஆயுதமாக விளங்கியது கதை என்று அலெக்சாந்தர் என்னும் வரலாற்றாசிரியர் வரைந்துள்ளார்.2 மகா அலெக்சாந்தர் என்னும் கிரேக்க மன்னர் இந்தியக் கதையினால் கழுத்தில் அடிபட்டுள்ளார். அந்த அடி அவர் மேற்கொண்டு இந்தியாவில் அடி எடுத்து வைக்க விடாமல் தடுத்தது. அதுவே அவர் புறமுதுகிட்டோடும் படி செய்தது. செண்டு கொண்டு அடிக்கும் தண்டடி மகாவீரனின் உறுதியான உள்ளத்தையும் சீரிய அறிவையும் கல கலக்க வைக்கும் வன்மை வாய்ந்தது என்று வரலாறு நமக்கு அறிவுறுத்துகிறது. அதன் அமைப்புக் காலத்திற்குக் காலம் மாறுபட்டது. மாறு பட வேண்டியதாய் இருந்தது. நமது காலத்தின் கதை (தண்டம்) மரத்தாலும் இரும்பாலும் ஆக்கப்பட்டுள்ளது. வட மொழியாளர் முசலம், யாடி, கதை எனும் மூன்று விதமான தடிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். முசலாவும் யாதியும் கூர்மையான தடிகளாகும். இது கருங்காலி போன்ற கனத்த மரத்தால் செய்யப்பட்டது. கதை, நீளமானதும் பழுவானதுமான ஒரு கைத்தடி. மகா பாரத வீரர்களால் பயன்படுத்தப்பட்ட தடி எஃகுவினால் செய்யப் பட்டது. கோப்கின் என்ற அறிஞர், அதன் பொது அமைப்பு நுனி சுருங்கிய ஒரு கம்பு போல் இருக்கும்; சுற்றிலும் பொன் தகட்டினால் பொதியப் பெற்றும் அல்லது கூர் நுனியும் அப்பால் பழுவாயும் கூர்மையானதாயும் இருக்கும். கவிஞர்கள் கதையைப் பற்றிப் பாடும் பொழுது கவின் பெறுகதை என்றும் பொற்றகட்டால் பொதிந்து மணிகள் இழைத்து அணி பெற்றிலங்குகிறது என்றும் பாடுவார்கள். இது 4 முழ நீளம் எட்டு அல்லது ஆறுபட்டமான வடிவில் இருக்கும் பொன் கம்பிகள் சுற்றப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார். இன்றைய இலக்கியங்களிலும் கதை இந்த வடிவிலே சித்தரிக் கப்பட்டு வருகின்றது. இது நாலு முழ நீளத்தில் அதனுடைய விசாலமான தலையில் நூற்றுக்கணக்கான இரும்பாணிகள் அடிக்கப் பட்டதாய்ப் பக்கங்களிலும் இரும்பு முட்கள் இணைக்கப் பட்ட தாயும் இருக்கும். இன்னும் எட்டுப்பட்டை வடிவில் பெரிய நடுப்பகுதியும் சிறிய பலமான கைப்பிடியும் உள்ளதாய் இருக்கும். உயர்ந்த கதை ஐம்பது அங்குலம் நீளம் உள்ளதாய் இருக்கும். நடுத்தரமான கதை நாற்பது அங்குலமும் கடைத்தரமான கதை முப்பது அங்குல நீளம் உள்ளதாயும் இருக்கும். கதை தூலகாரா (பேரியினக்காய் வடிவம்) சதுரசா (நாற்கோண வரை வடிவம்) தலமுல கிருதி (பனைவேர் போன்ற வடிவம்) போன்றவைகளாக இருக்கும் என்று வட மொழி இலக்கியங்கள் கூறுகின்றன. வில்லையும் வாளையும் விட கதைகள் பழைய தமிழகச் சிலைகளிலும் சிறப்பாகச் சிற்றூர்த் தெய்வங்களின் திண்ணிய கைகளிலும் பெரிதும் காணப்படுகின்றன. சாஞ்சி சிற்பங்களில் இரு கைகளாலும் பிடிக்கும் கதை உள்ளது. கனிஷ்கன் என்னும் காவலன் கையில் ஒரு சிறந்த கதை உள்ளது. இது வட இந்தியாவில் உள்ள மதுரா பொருட்காட்சி சாலையில் உள்ளது. இது ஒரு நீண்ட கதை. அது நுனியை விட அடி பெருத்தும் பெரும்பாலும் உலோகத் தகடுகளால் ஐந்து இணைப்புத் தகடு பொருத்தப்பட்டும் இருக்கும். முதல் இரண்டு பட்டைத் தகடுகளுக்கும் இடையேயுள்ள பகுதியில் கைப்பிடி வட்டமாகவும் மூன்று நான்கு பட்டைகளுக்கு இடையே யுள்ள நடுப்பகுதித் தகடு 16 பட்டையுள்ளதாயும் இருக்கிறது. அதில் நடு மேலுறையினின்று, முன்னே துருத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எஞ்சியபகுதி எட்டுப்பட்டம் உள்ளது. முன்னே மூன்று பகுதி காட்டப்பட்டிருக்கும். அதில் இருபகுதிகள் பக்கங்களில் உள்ளன. ஐந்தாம் பகுதியும் கீழேயுள்ள பட்டையும் மகரமீன் தலைவடிவம் உள்ளதாய்த் திகழ்கிறது. அது உலோகத்தாலானது. வில்லையும் வாளையும் போல் கதையும் ஓர் அரிய போர்க் கருவியேயாகும். கதையினால் செய்யப்படும் போரை நமது முன்னோர்கள் நான்கு விதமாகப் பிரித்துள்ளனர். இது பிராக்பா, விக்பா, பாரிக்ஸகபா, கெப்சா எனப்படும். இது முறையே பகைவர்களுக்குத் தொலைவில் நின்று செய்யும் போர், பகைவர் களின் பக்கத்தினின்று ஆற்றும் போர், பகைவர்களின் நடுவே நின்று செய்யும் போர், பகைவர்கள் முன்னின்று ஆற்றும் போர் என நாலு வகைப்படும். கதைகள் கரங்களில் தாங்கி இடும் போர்களில் பன்னிரண்டு வகைகள் உண்டு. தண்டாயுதம், எறுழ் கதை, சீர் செண்டு, முனைவயிரம், தடி என்றெல்லாம் அழைக்கப்படும். 3. பாசம் பாசம் போரில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கயிறு. இது நமது சமய இலக்கியங்களில் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாசம் பல தெய்வங்களின் கரத்தில் எல்லாம் காணப்படுகின்றது. இந்தக் கருவி, பிள்ளையார், எமன், வருணன், சோமன் போன்ற தெய்வங்களின் கைகளில் எல்லாம் காணப்படும். பாசம் பத்து முழம் நீளம் உள்ளது. இது தெய்வங்களின் கையில் மடித்து வைக்கப்பட்டிருப்பது போல காணப்படுகிறது. எமன், வயது முடிந்த உயிர்களை பாசக் கயிற்றால் வீசிப் பிடித்து மறு உலகத்திற்குக் கொண்டு செல்வதாகப் புராணங்கள் கூறு கின்றன. பாசக் கயிற்றின் நுனியில் உள்ள கண்ணியிலும் அதனுடைய முகத்திலும் கை நெகிழாது பிடித்திருக்க வேண்டும். இந்தப் பாசக் கயிறு முஞ்சாப்புல் அல்லது நன்றாக நெகிழக் கூடிய நார் அல்லது நூல் அல்லது விலங்குகளில் தோல் வாரினால் செய்யப்பட்டதாக இருக்கும். உறுதியான பாசக் கயிறு 30 சிறிய நூல் துண்டுகளை ஒன்றாக இணைத்துத் திரித்துச் செய்யப்பட்டதாக இருக்கும். பாசக் கயிற்றில் ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகள் இருக்க வேண்டும். அதனுடைய ஒரு நுனியை இடக் கையால் பிடித்துக் கொண்டு வலப் பக்கமாக சுற்றித் திரித்து நல்ல முறுக்கேற்ற வேண்டும். பாசக் கயிற்றை வைத்திருப்பவர்கள் அதைத் தங்கள் தலைக்கு மேல் வைத்திருக்க வேண்டும். இந்தப் பாசக் கயிற்றைப் பகைவர்களின் தொண்டையை நோக்கி வீச வேண்டும். இந்தப் பாசக் கயிற்றால் விரைந்து செல்லும் விலங்குகளின் கழுத்தின் மீதும் வீசி அதைப்பிடித்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள். இந்தக் கயிற்றைப் பயன்படுத்துவதற்கு நல்ல பயிற்சியும் திறமையும் வேண்டும். இந்தக் கயிற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் செயல்களையும் முற்காலத்தில் ஆசிரியர்கள் மூலம் மக்கள் கற்றுணர்ந்தனர். இந்தக் கயிற்றைப் பயன்படுத்தும் முறைகள் பதினொன்று பண்டைக்காலத்தில் இருந்தன என்று பழைய நூற்களில் காணப்படுகின்றன. 4. சக்கரம் முற்காலத்தில் சக்கரம் ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப் பட்டது. ஏன்? இது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகவும் கூறப்பட் டுள்ளது. இஃதன்றி சக்கரத்தைப் பற்றி நமக்கு எதுவும் அதிகமாகத் தெரியாது. என்றாலும் சக்கரம் திருமாலின் கையில் உள்ள ஒரு வலிமை வாய்ந்த ஆயுதம் என்று பலருக்குத் தெரியும். சக்கரம் நமது தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.1 ஆனால் இதற்கு எக்காலத்திலும் ஒரு தேசியச் சிறப்பு இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இலக்கியங்களை ஆய்ந்தால் இது கையினால் இயக்கி விடக் கூடிய ஒரு வட்ட வடிவமான இயந்திரமாகத் தெரிகிறது. சிலர் இது சுழலும் இரும்பு அல்லது எஃகினால் செய்யப்பட்ட கூர்மையான விளிம்புடைய ஆயுதம் என்று கூறுகிறார்கள். போரில் இதைக் கையில் வைத்துச் சுழற்றி வீசினால் அது விரைந்து பகைவர் அணியில் பாய்ந்து பகைவர்களின் உறுப்புகளை அறுத்து விடும். பெரும்பாலும் இந்தச் சக்கரத்தின் நடுவில் வட்ட வடிவமான தொளை இருக்கும். சில சக்கரங்களின் நடுவில் முக்கோண வடிவில் தொளை இருக்கும். போரில் பயன்படுத்தப்படும் சக்கரத்திற்கு நடுவே எட்டு ஆரைக்கால்கள் (சக்கரத்தில் குறுக்குக்கைகள்) உண்டு என்றும் எண்ணெய் பூசப்பட்டிருக்கும் என்றும் சில வட மொழி நூற்கள் கூறுகின்றன. எண்ணெய் பூசப்படுவது, சக்கரம் எளிதில் சுழல்வதற் கென்றே தெரிகிறது. இவைகளை யெல்லாம் ஆராய்ந்தால் திருமால் கையில் உள்ள இந்தச் சக்கரம் நமது வண்டிச் சக்கரம் போன்ற சிறிய அளவில் உள்ள ஒரு இயந்திரம் என்று தெரிகிறது. வட மொழியில் உள்ள மத்சய புராணத்தில் சக்கரத்திற்கு விளக்கந் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சக்கரம், திகரி, வட்டு, உருளை, அரி, ஆழி, எஃகம், நேமி, வட்டம், வளை என்றெல்லாம் அழைக்கப்படும். 5. வேல் வேல் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் எழுந்த ஒரு சீரிய ஆயுதம். இது ஆதியில் கல்லாலான கருவியாக இருந்தது. அப்பால் இது மரத்தினாலான ஓர் ஆயுதமாக இருந்தது. உலோகக் காலத்தில் இது தாதுப் பொருளால் செய்யப்பட்டு பகைவர்களை நடுங்க வைக்கும் ஒரு அரிய ஆயுதமாக எண்ணப்பட்டு வந்தது. இதன் நுனி மிகக் கூரியதாய் எல்லாப் பக்கங்களும் கத்தி போல் கூர்மையாய்த் தகட்டு வடிவம் பெற்றிருக்கும். இதன் தண்டு ஒரு கைவிரல் பருமன் உள்ளதாய் நீண்டு கம்பு போல் இருக்கும். இது தமிழ் நாட்டுப் பழம் பெரும் தெய்வமாகிய கொற்றவை மைந்தன் முருகனின் ஆயுதம். முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம். இவன் வேலைத் தாங்கி இருப்பதால் வேலன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான்.1 சங்ககாலத்துப் புலவர் நக்கீரர் முருகனை வேலன் என்றே குறிப்பிடுகின்றார். பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் - திருமுரு. 5-190 வேலன் தைஇய வெறியயர் களனும் - திரு.முரு. 6:222 என்று குறிப்பிடுவது உற்று நோக்கற்குரியது. அதோடு முற்காலத்தில் சிற்பக்கலை சிறப்புறுமுன் முருகனுக்கு உருவம் வைத்து வழிபட வில்லை. அவனுடைய ஆயுதமாகிய வேலை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். அது போல் பிற தெய்வங்களையும் அவர்கள் ஆயுதங்களை வைத்தே வழிபட்டு வந்தனர். சங்க காலத்தில் வேல் சிறந்த போர்க் கருவியாக இருந்தது. எனவே, அக்காலப் புலவர்கள் கொல்லர்கள் கடமையையும் தந்தையர் கடமையையும் எடுத்துக்காட்டும் பொழுது கொல்லன் கடமை வேல் செய்து கொடுப்பது. தந்தையின் கடமை தனயனைச் சான்றோன் ஆக்குதல். தாயின் கடமை மக்களைப் பெற்று வளர்த்தல் என்று குறிப்பிட்டுள்ளனர். ஈன்று புறந் தருத லென்றலைக் கடனே சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறம் 312: 1-6 என்று புலவர் பொன் முடியார் குறிப்பிட்டுள்ளார். இதில் வேலின் முக்கியத்துவமும் யானைப் போரில் இளைஞர்கள் ஈடுபட்டு வெற்றி பெறுவதின் சிறப்பும் எடுத்தோதப்பட்டுள்ளது. பண்டைக் காலத் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கள் மக்கள் கையில் வேலை எடுத்துக் கொடுத்து, மகனே! வெற்றியோடு திரும்பி வா என்று வாழ்த்தி வழி அனுப்பினர்.2 இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எழுந்த வள்ளுவர் பெருமான் தம் குறளில் வேலின் சிறப்பையும், யானைப் போரில் எறி வேல் கொண்டு எறிந்து அதை வீழ்த்தும் ஏற்றத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.1 முற்காலத்தில் வேல் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டது. அப்பால் இது போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. யானைப் போரில் எறிவேல் மிக இன்றியமையாத ஆயுதம். தமிழ் நாட்டுப் போர் மறவர்கள் தங்கள் மார்பில் புகுந்த வேலைப் பிடுங்கி யானைகள் மீது எறிந்து அதை வீழ்த்தி வெற்றி கண்ட வரலாறுகள் தமிழர் வீரத்திற்கு நல்ல சான்றாகும். இந்த வேல் தொன்மையான ஆயுதம். இதனின்றே முத்தலை வேல் என்றும் அல்லது மூவிலை வேல் என்றும் ஆயுதம் எழுந்தது. இதனைத் திரிசூலம் என்றும் கூறுவர். கொற்றவையின் கையில் சூலம் இருந்தது. அதனால் அவள் சூலி என அழைக்கப்பட்டாள். இறுதியாக சிவ பெருமானும் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார். அதனால் அவரும் சூலபாணி என்று அழைக்கப்பட்டார். வேலினின்றே, ஈட்டி மீனெறிவேல் முதலிய ஆயுதங்கள் தோன்றின. தமிழர்கள் தங்கள் படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்று அறுவகையாகப் பிரித்துள்ளனர். இவைகளில் மூலப்படைச் சாலச் சிறந்தது. வள்ளுவர் இந்த மூலப்படையைத் தொல்படை என்றார், மேலும் வேந்தர்க்குரிய படைகளில் விலைப்படையும் ஒன்று. இஃதன்றி படைகள் தாங்கி நிற்கும் படைக்கலன்களின் பகுப்பை வைத்து (1) விற்படை, (2) வேற்படை (3) மற்படை, (4) வாள்படை எனப் பிரித்தலும் உண்டு. இந்த நாற்படைகளில் வேற்படை சிறந்தது. ஏனெனில் வேற்படை கரிப்படையோடு போராடி வெற்றி பெறுவதற்குரியது. ஒரு முறை பண்டைத் தமிழகத்தில் ஓர் அரிய சம்பவம் நடைபெற்றது. அது என்ன எனில், ஒரு நாள் போரில் தந்தை தன் ஆற்றலைக் காட்டி ஆருயிர் துறந்தான். அவனுக்கு அவன் மகளால் நடு கல் நாட்டப் பெற்றது. பின் அவளது கணவன் போர்க் கோலம் பூண்டு போர்க்களத்தில் தன் ஆற்றல் காட்டி அருஞ்சமம் ஆற்றி பகைவர் பாணத்திற்கு இலக்காகி ஆவி நீத்தான். பின்னொரு முறை எழுந்த போரில் அவளது அண்ணனும் தம்பியும் ஆருயிர் துறந்தனர். அப்பால் அவளது இல்லத்தில் அவள் பெற்ற ஒரு சிறுவனே எஞ்சி இருந்தான். அந்த இளஞ் சிறுவனை, அவனது வீரத்தாய்த் தன் மறக்குடிப் பண்பு விளங்க போர்க் கோலம் பூணச் செய்து அவன் கையில் வேல் கொடுத்து வாழ்த்திப் போர்க்களத்திற்கு அனுப்பி னாள். இதனை ஓங்கூர் மாசாத்தியார் என்னும் புலவர் உள்ளம் உருக வீரம் பொங்க புறநானூற்றில் எடுத்துக் கூறியுள்ளார்.1 வேல், அயில், அரணம், உடம்பிடி, எஃகம், குந்தம், சக்தி, ஞாங்கா விட்டேறு என்று அழைக்கப்படும். கைவேல், கப்பணம், சத்திரம், தோமரம் என்று கூறப்படும். 6. வாள் வேலுக்குப் பின் தமிழகத்தில் எழுந்த சீரிய ஆயுதம் வாளே யாகும். வில் மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் - அதாவது கற்காலத்தை யொட்டி எழுந்த ஆயுதம். கற்காலத்தில் வேல், வாள் போன்ற பேராயுதம் எழுந்து விட்டது. என்றாலும் அது சிறப்புடையதாக இருக்கவில்லை. உலோக காலத்திலே இவைகள் உயர்வடைந்தன. சிந்து வெளி நாகரிகத்திலே பித்தளை வெண்கலம் ஆகிய உலோகங் களினாலான கோடரி, வாள், வேல் போன்ற கருவிகள் கிடைத்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதித்த நல்லூரில் இரும்பினாலான வாளும் வேலும் கோடரியும் பிறவும் கிடைத்துள்ளன. கத்தியினின்று வாள் எழுந்தது என்பது அறிஞர்கள் முடிவு. தமிழகத்தில் பண்டெழுந்த பாட்டிலும் ஏட்டிலும் வாள் காணப்படுகின்றது. வள்ளுவர்பல இடங்களில் வாளைக் குறிப்பிட் டுள்ளார்.2 பாரதப் போரில் பல விதமான படைக்கலன்களின் பெயர்கள் காணப்படுகின்றன. முற்காலத்தில் எழுந்த சிறப்பான ஆயுதங்களில் வாளும் ஒன்று. இது பழந்தமிழர் கண்ட, தாய்த் தெய்வமாகிய கொற்றவை கையில் உள்ளது. வாள் வீட்டு உபயோகத் திற்கும் போருக்கும் பயன்படும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். முற்காலத்தில் உள்ள அரபி நாட்டு ஆயுதங்கள் பல அரபிய மொழி இலக்கியங்களில் உள்ளன. அவைகளில் இந்திய வாளோடு எழுந்த ஏற்றமுள்ள பல ஆயுதங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. புகழ் பெற்ற அரபி நாட்டுப் புலவர் சுகர்யா மகன் காப் என்பவர் பெரியார் முகம்மத் நபி அவர்களைப் பற்றி பல பாக்கள்யாத் துள்ளார். அதில் ஆண்டவனின் வாள் சிறப்பு கூறப்பட்டுள்ளது. அது மிக அழகாக இருக்கிறது. இதனை விளக்கி ஒரு 40 ஆண்டு களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு ஹிலால் ஹெமியாரைட என்பவரும் வாளைத் தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். அது அடியில் வருமாறு; அவர், அதனுடைய அடியில் மேகங்களில் இருந்து விழும் சிறிய கல் மழை பெய்வது போல் அம்புகளை விரைவாகப் பொழிந்தார் - அப்பொழுது உறுதிவாய்ந்த இந்திய வாளானது அவர்களின் உடலில் ஊடுறுவியது. அதனால் அவன் உயிர்துறந்தான். நாங்கள் ஆயிரம் மரபுரிமை யாளனாக அடைந்தோம். அவர் பழைய பரந்தும் ஒளி வீசும் கண்களையுடைய இந்தியன் ஆவார்(அவரிடம் ஒருவாளும் ஒரு நீண்ட தோள்வாரும் இருந்தன). அவரது ஈடு எடுப்பற்ற வாளின் படைப் பாக்கத்திற்காக சிறப்பான புகழை அடைந்தார் என்று அறிகிறோம். மகாபாரதத்தில் விராட பருவத்தில் நிடத நாட்டில் அரிய வாள்கள் செய்யப்பட்டதாக புகழ் உரைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. சபா பர்வத்திலும் அபராந்த நாடு வாள்களும் ஏனைய உருக்குக் கருவிகளும் செய்வதில் ஒரு சிறந்த மைய நாடாகத் திகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கினி புராணத்திலும் வாள்களின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பல்வேறு வகையான கூரிய வாள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்க நாட்டில் உருவாக்கப்பட்ட வாள் கூர்மையானது. வங்க நாட்டில் செய்யப் பட்ட வாள் கூரியது மட்டுமல்ல பலம் வாய்ந்ததும் ஆகும். சேர நாட்டு வில்லும் பாண்டிய நாட்டு வேலும் சோழ நாட்டு வாளும் ஒப்புயர்வற்றது என்பது தமிழ் நாட்டில் பண்டு தொட்டுக் கூறப் படும் பழமொழியாகும். வாள்கள் பலவகைப்பட்டதாய் அவைகள் பயன்படும் பண் பிற்கேற்ப அமைக்கப்பட்டன. வாள், குத்துவாள், கொடுக்குவாள், மரவாள், அரிவாள், பன்னரிவாள் என்று பலவகைப்பட்ட வாள்கள் இருந்தன. 4-வது நூற்றாண்டில் வாள்களின் தண்டு குட்டையாயும் இருந்தன. இவைகள் சிற்பத்தில் காணும் வாட்களை ஒத்திருந்தன. அதசாத்திரத்தில் கௌடில்லியர் மூன்று முக்கிய வாள்களை குறிப்பிட்டுள்ளார். அதவாது மிடிரிம் சா, அசியா, மண்டலக்கரா எனப்படும். முதலாவது குறிப்பிடப்பட்ட வாள் குக்குரி போல் நுனியில் வளைந்திருக்கும். இரண்டாவது குறிப்பிடப்பட்டது ஒரு நெடுங்கழி போன்ற உருவம் உடையதாய் தமிழ் நாட்டு வாள் போல இருக்கும். மூன்றாவது குறிப்பிடப்பட்டது வட்டமான தலையை யுடையதாக இருக்கும். இது பட்டிசா போன்ற இலை வடிவமான உருப்பெற்றதாய் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்த மூன்று வகை வாள்களும் திராவிட நாட்டு ஓவியக் கருவூலமாகப் புகழ்பெற்ற அசந்தாக் குகையில் உள்ள சுவர் ஓவியங்களிலும் சிற்பங் களிலும் காணப்படும் வாள்களைப் போன்றதாய்க் காணப்படு கின்றன. கிரீச்சும் பட்டிசாவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட வாள்களை ஒத்துள்ளன.1 அக்கினி புராணம், பிருகத் சம்கிதை மகாபாரதம் போன்ற வட மொழி நூற்களில் வாள், ஈட்டி போன்ற படைக்கலன் களைப் பற்றியும் அவைகளின் அமைப்பு அளவு ஆற்றல் ஆகியவை கள் அனைத்தும் அளவிட்டுக் கூறப்பட்டுள்ளன. நல்ல வாள் 25 விரல் அளவிற்குக் குறையாமல் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் உயர்ந்த வாளின் நீண்டும், கூரியதாயும் பழுவற்றதாயும் இருக்க வேண்டும். மட்டமான வாள் பழுவாயும் குட்டையாயும், விறைப்பானதாயும் மெல்லியதாயும் இருக்கும். வாளின் ஆக்கக் கூறுகள், வெட்டு வாய்ப் பகுதியின் அமைப்பையும் பொருத்ததாய் இருக்கிறது. கைப்பிடிகள் சாதாரணமாக, மரக்கட்டையால் செய்யப்படும். உயர்ந்த வாள்களின் கைப்பிடிகள் எருமைக் கடாக் கொம்பு, தந்தம், காண்டா மிருகத்தின் கொம்பு ஆகியவைகளால் செய்யப்பட்டு வந்தன. இதிகாசங்களில் வாள்களின் கைப்பிடிகள் யானைத் தந்தத்தாலும் பொன்னாலும் செய்யப்பட்டிருந்ததாகவும் விலை யுயர்ந்த மணிகள் பதிக்கப்பட்டதாயும் இருந்தன என்று தெரிகின்றது. ஹர்சா மா மன்னனின் வாள், கொற்கை முத்துகள் பதிப் பிக்கப் பெற்று அழகான வாளாக இருந்தது. கைப்பிடிகள் வாளைப் பயன்படுத்தும் தொழிலுக்கும் அதைக் கைப் பிடித்துள்ளவர்களின் திறமைக்கும் தரத்திற்கும் ஏற்ப அமைக்கப்படும். பார் வேந்தர்களும் படைத் தலைவர்களும் பயன்படுத்தும் வாள்கள் உயர்ந்தவைகளாய் இருக்கும். அசந்தா ஓவியத்திலும் சிற்பத்திலும் காணப்படும் வாள்கள், ஒரு கோண வடிவில் (V - வடிவில்) இருக்கும். கைப்பிடி உறுதியாகப் பிடிப்பதற்கு ஏற்றதாய் இருக்கும். நுனி கூர்மையானதாய் இருக்கும். வாள் உரைகள் எப்பொழுதும் எங்கும் கனத்த தோலால் செய்யப்பட்டதாக இருக்கும். இது பெரிதும் பசு, புலி, ஆடு ஆகியவைகளின் தோலால் செய்யப்படும். சில இடங்களில் மரத்தாலும் உரை செய்து உபயோகிப்பதுண்டு. தோல் உறையில் இடப் பட்டவாள் இடப் பக்கம் இடுப்பில் தொங்க விடப்படும். சோழர்களின் காசுகளில் வாள் இடுப்பு வாரில் தொங்கவிடப்பட் டுள்ளது போல் காணப்படுகிறது. இது தான் போரில் ஈடுபடுவதற்கு ஏற்றது என்று சிலர் கூறுகிறார்கள். வாள் வெட்டுவதற்கும் குத்திக் கொல்வதற்கும் பயன்படுத்தப் பட்டு வந்தன. வாள் போரில் அது பகைவர்கள் மீது எறிந்து தாக்கப் பயன்பட்டது. வில் போரினும் வாள் போர் கொடியது. பகைவர்கள் பக்கதே அருகருகே நின்று போரிடுவர். பண்டையத் தமிழகத்தில் பகைவர் கையில் உள்ள வாள்களை விட்டால் அவனைத் தாக் கார்கள். தம் இடையில் சொருகி இருக்கும் மற்றோர்வாளை அவன் கையில் கொடுத்தே அவனைப் போருக்கு அழைப்பர். அதில் இவர்கள் வெற்றி பெறுவதும் உண்டு. பகைவர்கள் வெற்றி பெறு வதும் உண்டு. வாள், அசி, உவணி, ஏதி, கடுத்தலை, கடகம், கரவாளம், கரவாள் கண்டகம், கண்டம், சரயகம், தூவத்தி, நவிரம், நாட்டம், நாக்தகம், புட்கரம், மட்டாயுதம், வசி வஞ்சம், வள், வேணு என்று அழைக்கப்படும். வளைந்த வாள் கோணம் எனப்படும். சிறு வாளின் பெயர் கண்டம், குறும் பிடி சுரிகை, பத்திரம் எனப்படும். ஈட்டிகளும் எறிவேலும் முற்காலத்தில் தமிழ்மக்கள் வேட்டைக் காலத்தில் இருக்கும் பொழுதே ஈட்டிகளைக் கண்டு விட்டனர். அவர்கள் கூரிய தலைப் புள்ள நீண்ட ஈட்டிகளைக் கொண்டிருந்தனர். பின்னர்தான் குண்டு போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முருகன் தமிழ் நாட்டின் பழைய தெய்வங்களில் ஒருவன். திருமாலும் பழைய தெய்வங் களில் ஒருவனேயாகும். இருவரும் முறையே வேலையும், கதையையும் கையில் வைத்திருக்கிறார்கள். இவ்விரு ஆயுதங்களும் பழங்காலத்தில் தமிழ் மக்கள் கண்ட ஆயுதம் என்பதை உறுதிப் படுத்தும். ஆதித்த நல்லூரில் இரும்பினால் செய்யப்பட்ட ஈட்டிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.1 அரப்பாவிலும் ஈட்டித் தலைப்பு போன்றுள்ள கருவிகள் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 ஆனால் இவைகள் தொன்மையான அமைப்பில் மெல்லியதாயும் அகன்ற தகடுள்ளதாயும் ஒரு குதை குழிக்குப் பதிலாக முனையுடன், இக்கருவிக்குப் பலந்தரும் நடுநரம்பு இல்லாமலும் இருக்கிறது. ஈட்டி பழந்தமிழர்களுக்கும் அவர்களின் முன்னோர்களான திரா விடர்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆதித்த நல்லூரில் அறிஞர் அவர்கள் அகழ்ந்து கண்ட அரிய எஃகு ஆயுதங்கள் இதை மெய்ப் பிக்கின்றன. ஈட்டி1 வேல் வகையைச் சார்ந்ததாகும். இதன் அமைப்பையும் சிறப்பையும் சங்க நூற்களிலும் தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் நன்கு காணலாம். ஈட்டிகளும் வேல்களும் பொன்னாலும் வெள்ளி யாலும், செம்பாலும், வெண்கலத்தாலும் எஃகினாலும் செய்யப் பட்டிருந்தன. பொன் ஈட்டியில் மணிகள் பல பதிக்கப் பெற் றிருந்தன. ஈட்டியில் மணிகள் தொங்குகின்றன. முற்காலத்தில் ஈட்டிகளன்றி வேறு பலவிதமான ஆயுதங்களும் இருந்து வந்ததாகத் தெரிகிறது. முற்காலத்தில் இருந்த ஆயுதங்கள் பல எறிவேல் போன்ற கருவிகள் தங்களின் அமைப்பில் எழுந்தன வாக எண்ணப்படுகின்றன. கௌடில்லியர் கொழு (உழுமுனை) போன்ற விழிப்புள்ள ஆயுதமாக சக்தி போன்ற ஆயுதங்களுக்கு விளக்கந்தருகிறார். உரை ஆசிரியர்கள் நல்ல குண்டாந்தடி ஏழு முழநீளத்தில் இருந்ததாகக் கூறுகிறார்கள். இவைகள் நடுத்தர மானவைகளாகும். குட்டையானவைகள் 5-முழம் நீளம் உள்ள வைகள். இதன் விளிம்பு கூர்மையான தகட்டு வடிவில் உள்ளது. சில பழைய நூற்களில் மீனெறிவேல் (Lance) 6 - முழ நீளம் இருந்தது என்றும் இரும்பு உடலோடு ஆறு முனைகள் உள்ளதாயும் இருந்தது என்றும் தெரிகிறது. தோமரம் பெரும்பாலும் மீனெறிவேலாக இருந்திருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இதற்கும் கூரிய நுனி உண்டு. மகாபாரதத்தில் உள்ள கர்ண பர்வத்தில் எஃகு வாய் உள்ள நேராகத் தாக்கும் எமதண்டம் போரில் பயன்படுத்தப்படும் கொடிய ஆயுதங் களில் ஒன்றாக விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கௌடில்லியரின் அர்த்த சாதிர நூலில் சக்தியும் குண்டமும் கொழு போன்ற நுனி வாய்ந்த ஆயுதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூலுக்கு உரைகண்ட அறிஞர்கள் இது அம்பு போன்ற கூரிய நுனியுள்ள சீரிய தடியாக இருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இதன் நீளம் ஐந்து முழமும் இடைத்தரமானது நாலரைமுழமும் கடைத்தரமானது நாலு முழமும் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். சில ஆசிரியர்கள் தோமரம் என்பது கையால் எறியும் கருவி என்று கூறுகிறார்கள். மற்றுஞ் சிலர் தோமரம் உலோகத் தாலான நுனியும் மரத்தாலான உடலும் உள்ள ஒரு ஆயுதம் என்று கூறுகிறார்கள். பரசு என்ற ஆயுதம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த ஆயுதத்தைப் பற்றி வடஇந்தியர்களுக்கு அதிகம் தெரியாது. இது சிவபெருமான் கையில் உள்ளது. கைக் கோடரி வகையைச் சேர்ந்தது. இதன் வாய் அகன்று கூரியதாக இருக்கும். மீனெறிவேல் ஏழு முழம் நீளம் உள்ளது. கைப்பிடி மரத்தால் அல்லது மூங்கிலால் செய்யப் பட்டனவாய் இருக்கும். பிண்டிபாலா என்னும் கருவி மீனெறி வேலின் இனத்தைச் சேர்ந்தது. ஆயுதங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இதை சக்தியோடும் பரசோடும் தோமரத்தோடும் ஒப்பிடுகின்றார்கள். இது கொழு நுனி போன்ற வடிவம் உள்ளது. இது தோமரம் போன்று கையால் எறியும் ஆயுதம் என்று சிலர் கூறுகிறார்கள். இதன் நுனி கூரியதாக இருக்கும். பயிற்சி பெற்ற ஒரு மாவீரன் இதைப் பகைவர் கள் மீது வீசினால் இது 100 வில் நீளம் செல்லும் கன்யா என்பது ஒரு உலோகத்தடி. அதன் இரு நுனிகளும் முக்கோண வடிவில் இருக்கும். இதன் நடுப்பகுதி 20, 22 அல்லது 24 அங்குலம் இருக்கும். ஈட்டி (Spear) மீனெறிவேல் (Javeline) உருவங்கள் பல சிற்பங் களில் உள்ளன. சில காசுகளில் கூடக் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பழம்பெரும் இந்தியக் காசு ஆய்வாளர் களில் முதல்வராகக் கூறப்படும் கன்னிங்காம் என்பவர் தனது நூலில் இந்தக் கருவிகளை எடுத்துக்காட்டி இருக்கின்றார்.1 சாஞ்சி சிற்பங்களில் ஈட்டிகளும், மீனெறி வேல்களும் மிகத் தெளிவாகச் சித்தரிக் கப்பட்டுள்ளன. கி.பி. 2 - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 - ஆம் நூற்றாண்டு வரை வெளிவந்த வடஇந்தியக் காசுகளில் ஈட்டி மீனெறி வேல் வடிவங்கள் தீட்டப்பட்டுள்ளன.2 அசந்தா அரிய ஓவியங்கள் சிலவற்றில் இந்த ஆயுதங்கள் அணி பெற்றிலங்குகின்றன. அதில் இவைகள் குட்டையாயும் முக்கோணத் தகடுள்ளதாயும் கம்புப் பிடியுள்ளதாயும் காணப்படுகின்றன. தமிழர்களுக்கு இந்த ஆயுதம் புதிதல்ல. தங்கள் தெய்வங்களில் திருக்கரங்களில் அடிக்கடி காணப்படும் ஆயுதமாகும். ஈட்டி, இட்டி, கழுக்கடை, கழுமுள், சலாகை, சவளம் எனப்படும். ஈட்டி வகையைச் சேர்ந்த வேல், அயில், அரணம், உடம்பிடி, எஃகம், குந்தம் கத்தி, ஞாங்கா விட்டேறு எனப்படும். கைவேல் மீனெறிவேல் சத்தரம், தோமரம் எனப்படும். போர்க்கோடரி போர்க்கோடரி கண்டகோடரி என்றும் அழைக்கப்படும். சிவபெருமான் கையில் இருக்கும் பரசு (மழு) இந்தப் போர்க் கோடரி இனத்தைச் சேர்ந்த ஆயுதமே.1 யாகும். முற்காலத்தில் பரசு, கண்ட கோடரி, பரசுவதம் குலிசா, குதரா போன்ற போர்க் கோடரிகள் போரில் பயன்படுத்தப்பட்டன. அர்த்த நூலில் பரசு, குதரா ஆகிய இரு ஆயுதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. போர்க் கோடாரியின் காம்பு இரண்டு அடி நீளம் இருக்கும். மேலே உள்ள கோடரி உலோகத்தால் 9 அங்குல நீளமும் 3 அங்குல அகலமுள்ள தகட்டாலான ஆயுதம். இது பிறைவடிவில் இருக்கும். காம்பு கையால் உறுதியாகப் பிடிப்பதற்கு ஏற்றதாய் சிறிதாக இருக்கும். கோடரியின் உடல் அழகற்றிருந்தாலும் அதன் முகம் பிறை போல் ஒளிவீசும். அடியில் நுனியும் கைப்பிடியுமுண்டு. இது வெட்டு வதற்கும் பிளப்பதற்கும் பயன்படும். போர்க் கோடரி தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் காணப்படும் சிறு தெய்வங்களின் கரங்களில் எல்லாம் திகழும். கொற்கைப் பாண்டியன் காசுகளில் இந்தப் போர்க் கோடரியைத் தாங்கிய உருவங்கள் தீட்டப் பட்டுள்ளன. கன்னிங்காம் எழுதிய பழைய இந்தியக் காசுகள் என்ற நூலில் பல காசுகளில் இந்தக் கோடரி தாங்கிய உருவங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அறிஞர் உலோவந்தால் எழுதிய திருநெல்வேலிக் காசுகள் என்ற நூலிலும் எடுத்துக்காட்டி யுள்ளார். கண்டகோடரி, போர்க் கோடரி, பரசு, குடாரம் மழு, எறியிரும்பு தாத்திரம், நவியம் எனப்பெறும். பொறி பண்டைக் காலத்தில் மன்னர்கள் வாழும் கோ நகரங்களும், ஏனைய கேந்திர நிலைகளும் அரண்களை எழுப்பி பகைவர்கள் எளிதில் தாக்காவண்ணம் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் தங்கள் தலைநகரங்களைச் சுற்றி அரண்கள் எழுப்பி அதைச் சுற்றி அகழிகள் தோண்டி பாதுகாப்புடன் இருந்து வந்தனர். இந்த நாட்டில் ஆரியர்கள் அடியெடுத்து வைப்பதற்கு ஆயிரம் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே அரக்கர்கள் (திராவிடர்கள்) செம்பு, இரும்பு, வெள்ளிக் கோட்டைகளை அமைத்து தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) இடர் விளைத்து வந்தனர் என்றும் அவர்கள் அதை அழிக்க முடியாது அரனாரை வேண்டினர் என்றும் அரனார் தோன்றி முப்புரங் களையும் மூன்று அரண்களையும் அழித்தார் என்றும் புராணக் கதைகள் மூலம் நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த திருக்குறளில் வள்ளுவர் வலிமை மிக்க சிறந்த மன்னர்களுக்கு ஆறு அவசியமான அங்கங்கள் உண்டு என்றும் அந்த ஆறில் அரண் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். அது அடியில் வருமாறு: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள் 381) மேலும் வள்ளுவர் தம் திருமறையில் பொருட் பாலில் அரண் என்னும் ஒரு அத்தியாயத்தையே அமைத்து அரணின் அமைப் பையும் சிறப்பையும் அதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறார். அது பின்வருமாறாகும்: உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்று உரைக்கும் நூல் (குறள் 743) மேலும் முற்காலத் தமிழ் அரசர்கள் நீர் அரண், நிலவரண், காட்டரண், மலையரண் போன்ற ஐந்து வகை அரண்கள் அமைத்து நாட்டைக் காத்து வந்தனர் என்று தெரிகிறது. காட்டரண்களில் முட்களையும் இரும்பு முள்களையும், கண்ணிகளையும் அமைத்துப் பகைவர்கள் நிலவரண்களை நெருங்கவிடாது செய்து வந்தனர். நிலவரண்களைச் சுற்றி அகழிகள் அமைத்தும் அதில் முதலை, சுறாமீன் போன்ற கொடிய உயிரினங்களை விட்டும் பகைவர்கள் அரண்களை அணுக முடியாமற் செய்து வந்தனர். மேலும் அரண் களில் மிகப் பயங்கரமான பொறிகளை அமைத்தும் அரண்களைத் தொட்டால் அவர்களை அழித்துவிடும் இயந்திரப் பொறிகளை அரண்களின் உள்ளே அமைத்தும் அரண்கள் மீது வில், வாள் ஏந்தி நிற்கும் வீரர்களை நிறுத்தியும் நாட்டை அரண் செய்து வந்தனர். தமிழகத்தில் அரண்களைத் தாக்கி அதை உடைத்து உட்புகுந்து வெற்றி பெறுவதற்குப் படை வீரர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அரண்களின் மீது பொறிகள் அமைக்கப் பட்டிருந்ததால் அரண்கள் மீது ஏறி உட்புகவும் அரண்களை அழிப்பதும் அரிதாக இருந்தது. எனவே யானைப்படைகளைக் கொண்டு அரண்களின் வாயிற் கதவுகளைத் தாக்கி உட்புகுவது எளிதாக எண்ணப்பட்டது. அதோடு பொறிகளின் தாக்குதல்களையும் யானைகள் எளிதாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. இந்தப் பொறிகள் பண்டைக் காலத் தமிழகத்தில் இருந்து வந்தன என்பதற்கு நாம் பல இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். ஆனால் சிலர் இந்தப் பொறிகள் யவனர்களிடமிருந்து வாங்கப் பெற்றவைகள் என்பதற்குச் சில சான்றுகள் காட்டுகின்றனர். ஆனால் நாம் தமிழர்களிடம் பொறிகள் இருந்தது உண்மை. அதன் பெயர்கள் அனைத்தும் தமிழாக இருப்பதே நமது கருத்தை அது அரண் செய்வதாகும் என்று கூறுகிறோம். ஒரு சில பொறிகள் யவனர்களிடமிருந்து வாங்கியதால் தமிழர்களுக்குப் பொறிகளே செய்யத் தெரியாது. எல்லாம் யவனர்களிடமிருந்து வாங்கப் பட்டவை என்று கூறுவது தவறு. தமிழர்கள் பொறிகள் செய்து அரண்கள் மீது அவைகளை ஏற்றி வைத்திருந்தனர். யவனர்களிட மிருந்து சில பொறிகளை வாங்கினர் என்பதே நமது முடிவான எண்ணம். இதே போல் வடஇந்தியாவிலும் அவர்களால் செய்யப் பெற்ற பொறிகள் இருந்தன என்று பல அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். தமிழகப் பொறிகளும் கருவிகளும் அரண்களில் நல்ல பாதுகாப்பிற்காக மிக அரிய பொறிகளும் கருவிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை மாநகரின் புறமதிலில் இருந்த பொறிகளும் கருவிகளும் உறுப்புகளும் பற்றி சிலப்பதிகாரத் தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது அது அடியில் வருமாறு:- (1) வளைவிற் பொறி - வளைந்து தானே எய்யும் எந்திரம் (2) கருவிரலூகம் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து அருகே சென்றாரைக் கடிக்கும் பொறி (3) கல்லுமிழ் கவண் - கல்லை எறியும் இருப்புக் கவண் (இடங்கள்) (4) பரிவுறு வெந்நெய் - காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய் (5) பாகடு குழிசி - செம்புருக்கும் மிடா (6) காய் பொன்னுலை - உருகக் காய்ச்சி எறியும் எஃகு உலை. (7) கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை (8) தூண்டில் - அகழியைக் கடந்து அரணைப் பற்றுவாரை மாட்டி இழுக்கும் தூண்டில் வடிவானது. (9) தொடக்கு - கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி (10) ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப் புள் வடிவிலான பொறி (11) கவை - அகழியினின்று ஏறின் அதற்குள் வீழ்த்தும் இரும்புக் கூடு (12) கழு - கழுக் கோல் (13) புதை - அம்புக் கட்டு (14) புழை - ஏவறைகள் (15) ஐய வித்துலாம் - அம்புத்திரள் தொங்கவிட்டவர். (16) கைபெயர் ஊசி - மதிற்றலையைப் பற்றுவாரின் கையை பொதுக்கும் ஊசி. (17) சென்றெறி சிரல் - பகைவர் மேற் சென்று கண்ணைக் குத்தும் சிச்சிலிக் குருவி வடிவம் (18) பன்றி - மதில் மேல் ஏறினவர்களின் உடலைக் கொம்பு கிளிக்கும். (19) பணை - அடிக்கும் மூங்கில் தடி வடிவமானது. (20) எழுவுஞ்சீப்பு - கதவிற்கு வலியாக உள்வாயில் படியில் கீழேவிடும் மரங்கள் (21) கணையம் - அரண் கதவிற்குத் தடையாகக் குறுக்காக உள்ளது. (22) கோல் - விட்டேறு (23) குந்தம் - சிறு சவளம் (24) வேல் - வேல் போல் அரணைத் தொட்டாரைத் தைக்கும் பொறி (25) ஞாயில் - குருவித்தலை என்னும் மதில் உறுப்புக்கள் (26) நூற்றுவரைக் கொல்லி - நூறு பெயர்களைக் கொல்லவல்ல பொறி (27) தள்ளி வெட்டி - பின்புறம் தள்ளி வெட்டும் எந்திரம் (28) களிற்றுப் பொறி - யானை வடிவமான பொறி (29) விழுங்கும் பாம்பு - மலைப்பாம்பு போன்று அணுகிய வர்களை விழுங்கும் பொறி. (30) கழுகுப் பொறி - கழுகு போன்ற அரண் அருகில் போந்தார்கள் மீது பாயும் பொறி (31) புலிப் பொறி - புலி போற் பகைவர்கள் மீது பாயும் எந்திரம். (32) குடப் பாம்பு - குடத்திலுள்ள பாம்பு சீறியெழுவது போல பகைவர்கள் மீது பாயும் (33) சகடப் பொறி - சக்கரம் போல் சுழலும் பொறி மேற்கூறிய பொறிகளின் பெயர்கள் ஒன்று முதல் இருபத் தைந்து வரை சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் இளங்கோவடிகளால் எடுத்துக் காட்டப்பட்டவைகளாகும்.1 இளங்கோவடிகள் கீழ்க் கண்ட செய்யுளில் காணும், பிற, என்னும் சொல்லுக்கு உரை யாசிரியர் அடியார்க்கு நல்லார் 26 முதல் உள்ள பெயர்களைச் சேர்த்துள்ளார்கள். நகர்களில் மதில் அரண்கள் ஒன்றினை அடுத்து ஒரு பல அரண்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. இவைகளில் வெளிப் புறத்தில் உள்ளன புறமதில்கள் என்றும் உட்புறத்தில் உள்ளன அகமதில் என்றும் அழைக்கப்படும். பொறிகள் கூட போர்க்கருவிகளாகக் கருதப்படுகின்றது. பொறிகள் இருவகைப்படும் ஒன்று நிலையானது (திரம்) மற்றொன்று அசையக் கூடியது (சலம்) இவைகள் இரண்டும் படைக்கலன்கள் வகுப்பில் சேர்க்கக் கூடியதே. இவைகள் போரில் அடிக்கடி சுவர்களோடும் அரண்களோடும் அரண்களின் வாயில்க ளோடும் அரண்களால் அணிசெய்யப்பட்ட நகரங்களோடும் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் அடிக்கடி பொறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அரசனை நோக்கி முனிவர் உனது அரணிற்குள் உணவும் கருவூலமும் தண்ணீரும் படைக் கலங்களும் பொறிகளும் இயந்திரங்களும் பொறிகளை இயக்குபவர் களும் வில்லர்களும் நிரம்பி இருக்கிறார்களா என்று கேட்கிறார். மற்றோரிடத்தில் சாந்திபர்வத்தில் வீமன் கோட்டை வாயில்களின் மீது கன இயந்திரங்கள் வைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். நமது நாட்டில் உள்ள பழைய இலக்கியங்களில் அரண் செய்வது என்பது ஒரு பகுதியில் இயந்திரங்களை அமைப்பதும் மதில்களிலும் அரண்களிலும் பொறிகளை அமைப்பதும் நகரங்களுக்கு உரிய அணியாகக் கருதப்பட்டது. அக்கினி புராணத்தில் அரண் அமைத்து அதன் மீது பொறிகள் ஏற்றப்பட்டிருக்க நாடும் நகரமும் மக்களும் மன்னர்களும் காக்கப்படவேண்டும் என்று கூறப் பட் டுள்ளது. பண்டைக்கால கிரேக்கர்களும் எபிரேயர்களும் உரோமர் களும் கல்லெறி கவண்களும், எறிபடைப் பொறிகளும் படைக் கலன் களாகவே பயன்படுத்தப்பட்டன. அவர்களைப் போலவே நமது நாட்டிலும் பொறிகள் பகைவர்களைத் தாக்கும் படைக் கலன் களாகக் கருதப்பட்டன. அர்த்த சாத்திரத்தில் அசையும் போர்க் கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகள் அடியில் வருமாறாகும் (1) சர்வதோபத்திரா (2) சாமடாக்னியா, (3) பகுமுகா (4) விசுவகதி (5) சமகதி (6) யானகா (7) பர்ச்சனியகா (8) அர்த்த பாகு (9) ஊர்த்தவபாகு எனப்படும். (1) சர்வதோபத்திரா என்பது சக்கரங்கள் உள்ள ஒரு வண்டியில் ஏற்றிச் செல்லப்படும் ஒரு இயந்திரப் பொறி. இதனை இயக்கினால் அது சுழன்று நாலு திசைகளிலும் கல்லை உமிழும் (2) சமடக்கினியா என்பது பகைவர்கள் மீது சில வினாடியில் பகைவர்கள் மீது பல்லாயிரம் அம்புகளை எய்தக் கூடிய ஒரு பொறி (3) பகுமுகா என்பது அரண்கள் மீது அமைக்கப்பட்ட கோபுரத்தில் ஏற்றப் பட்டிருக்கும் ஓர் இயந்திரப் பொறி. இதற்குத் தோல் மூடி போடப்பட்டிருக்கும். இதில் பல வில்லாளிகள் மறைந்திருந்து எல்லாத் திக்கிலும் உள்ள எதிரிகள் மீது கணைகளைத் தொடுக்க முடியும் (4) விசுவகதி நகரத்தின் வாயில் மீது ஏற்றப்பட்டிருக்கும் ஒரு பொறி. இது ஒரு குறுக்கு உத்தரம் போல் இருக்கும் இதனை எதிரிகள் அணுகும் பொழுது திடீரென்று அவர்கள் தலை மீது வீழ்ந்து அவர்களை நசுக்கும் (5) சமகதி இது ஒரு நீண்ட தண்டு. இது பகைவர்கள் மீது நெருப்பை உமிழவல்ல ஒரு இயந்திரப் பொறி (6) யானகா என்பது ஒருதடி இதில் சக்கரம் பூட்டப்பெற்றிருக்கும் பகைவர்கள் மீது இதை எறிந்தால் அவர்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது. (7) பர்ச்சனியாகா என்பதும் ஒருவகைப் பொறி இதில் எண்ணெய் அல்லது நீரை ஊற்றினால் அது விரைவில் அதைக் கொதிக்கச் செய்து பகைவர்கள் மீது உமிழும். (8) அர்த்தபாகும் பகைவர்கள் பக்கத்தில் சென்றதும் பல கூரிய ஈட்டிகளால் குத்த வல்லது (9) ஊர்த்தவபாகும் பகைவர்கள் மீது பாய்ந்து அவர்களை அழிக்கும் ஆற்றல் மிக்க ஒரு பொறியேயாகும். இவைகள் அக்காலத்தில் ஐரோப்பாவில் உபயோகப்படுத்தப் பட்ட பொறிகளைவிட மிகச் சிறந்தவை. இராமாயணத்தில் இராவணன் பல அரிய இயந்திரப் பொறிகளைப் பயன்படுத்தினான் என்று கூறப்படுகிறது. அவைகள் பல கல்லுகளை உமிழவல்லன. பல அம்புகளைப் பாய்ச்ச வல்லன என்று அறிகிறோம். இயந்திரங்கள் அம்புகளைப் பாய்ச்சி பகைவர்கள் நகர் அருகே செல்லவிடாது தடுத்தன என்று கூறப்படுகிறது. நகரவாயில்களில் அகன்ற பாலங்கள் அமைத்து அதில் இயந்திரப் பொறிகள் இணைக்கப் பட்டிருந்தன. பகைவர்கள் அதனைத் தொட்டதும் அது அவர்கள் அனைவரையும் அடியில் உள்ள அகழிக்குள் அமிழ்த் தியும் கொன்றும் வந்தன. பூமராங் பூமராங் (Boomerang) என்ற ஒரு கருவி பண்டைக் காலத்தில் தமிழ்மக்கள் பயன்படுத்திய ஒரு கருவி. இதை ஒருவர் மீது வீசினால் அது அவர்களைத் தாக்கி விட்டு மீண்டு எறிந்தவன் கைக்கு வந்து சேரும். இந்தக் கருவி நமது இராமநாதபுரம் அரசரிடமும் புதுக்கோட்டை மன்னரிடமும் இருந்தது என்று தெரிகிறது. இன்று இக்கருவிகள் இரண்டு தமிழக அரசின் சென்னைத் தொல்பொருள் காட்சி சாலையில் உள்ளது. இந்தக் கருவி தமிழர் கண்ட கருவி அன்று என்று கூறப்படு கிறது. ஆதிரேலிய நாட்டில் உள்ள வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள் கண்டுபிடித்த ஒரு கருவியாகும். இக்கருவி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் காணப்படுவதனால் ஆதிரேலியாவிற்கும் - தமிழகத்திற்கும் கிறித்தவ ஊழிக்கு முன்பே தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது. ஆதித்த நல்லூரில் அகழ்ந்து காணப்பட்ட மக்களின் மண்டை ஓடுகள் இரண்டில் ஒன்று திராவிட மண்டை ஓடு என்றும் மற்றொன்று ஆதிரேலிய பழங்குடி மக்களான நீக்கிரோவர்களின் மண்டையோடு என்றும் ஜெர்மனிய நாட்டு அறிஞர்களும், இங்கிலாந்து நாட்டு அறிஞர்களும் ஆய்ந்து முடிபு கட்டியுள்ளார்கள். இந்த வளைவுள்ள சுழன்று சென்று மீளும் பூமராங் என்னும் கருவி கற்காலத்தில் வாழ்ந்த மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு அறிஞர்கள் வியப்படைகின்றார்கள். வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த தொல்குடிமக்களான அறிஞர்கள் விண்ணில் விரைந்து பாயும் விரைகுண்டின் (aeodynomic) உயர்ந்த அறிவினைப் பெற்றிருப் பதைக் கண்டு இன்றைய மேனாட்டு அறிவர்கள் வியப்புறு கின்றார்கள். அதனுடைய மூலத் தோற்றம் இடைக் காலத்தில் மறைந்து போயிருந்தது. முதன்முதலாக அது எப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டது என்று பழங்குடி மக்களுக்குக்கூட தெரியாமற் போய்விட்டது. பூமராங் செய்யப்படும் மரம் மெதுவானதாகவும் இயக்குவ தற்கு எளிதாகவும் இருக்கவேண்டும். ஆனால் உருக்கினைப் போல் பலமுடையதாகவும் இருக்க வேண்டும். ஆதிரேலியப் பழங்குடி மக்கள் கிட்ச்சி (an acacia) ஜராஹ் (aeucalypt) அல்லது மைர்ட்டல் மரத்தினால் செய்து வருகின்றார்கள். வளைவான இந்தக் கருவியை குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட அமைப்பில் கவனமாகச் செய்து முடிக்கின்றார்கள். இக்கருவியைச் செய்து முடித்த பின்னர் இறுதி யாகச் சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு சுட்டு முடிவான தெளிந்த அமைப்பில் உருவாக்குகிறார்கள். பூமராங் இரண்டு சிறந்த அமைப்புகளையுடையதாய்க் காணப்படுகின்றது. எறிந்ததும் திரும்பி வரும் பூமராங், எறிந்ததும் திரும்பி வராத தடி - என பூமராங் இருவகைப்படும். இதை எறிவது இன்று ஒரு கலையாக எண்ணப்படுகிறது. இது இன்று காட்சியாக வைத்துக் காண்பிப்பதற்கு ஒதுக்கி வைக்கப் பெற்றுள்ளது. பயண வழிகாட்டிகளுக்கு இது அபூர்வமான கைச்சரக்காக இருக்கிறது. ஆதிரேலியாவின் வடபகுதியிலும் மத்திய பகுதியிலும் வாழும் பழங்குடி மக்களின் இனத்தவர்கள் திரும்பி வராத கருவியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கங்காரு, மான் முதலிய விலங்கு வேட்டையிலும் பகைவர்களிடமும் இதைப் பயன் படுத்துகிறார்கள். திரும்பிவரும் பூமராங் மேற்கு ஆதி ரேலியாவின் வடபகுதியில் உள்ள கிம்பர்லி மாவட்டத்தின் தொலை வான பகுதியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பண்டைக் காலப் பழங்குடிமக்கள் பூமராங் என்னும் இந்த அரிய கருவியைப் பயன்படுத்துவதில் இணையிலாதவர்களாய் விளங்கினர். தமிழகத்தில் இன்று எவரும் இதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. இன்று இதைச் செய்து பயன்படுத்துவதற்குப் பல பெரிய வணிகர்கள் முன்வந்துள்ளார்கள். சென்ற ஆண்டு 200,000 பூமராங் செய்யப்பெற்று பாதிக்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றுள்ளது.1 பீரங்கிகள் மேனாட்டார் இந்தியாவிற்கு வருமுன்னரே நமது நாட்டில் பீரங்கியும் துப்பாக்கியும் வெடிமருந்துகளும் இருந்தன என்று நாம் பெருமையோடு எடுத்துக்காட்ட முடியும். இந்தியப் போர்வீரர்கள் பீரங்கிகளும் துப்பாக்கியும் பெற்றிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேலும் இந்த இயந்திரங்களை அவர்கள் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அரண்களை முற்றுகையிடும் பொழுது ஆதிகாலத்தில் அரண் வாயிலில் பலகைகளை இட்டு யானைகளைக் கொண்டு கோட்டை வாயிலை முட்டி மோதி உடைத்து வந்தனர். பெரிய பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்டு கோட்டை வாயிலை உடைத்து விட முடியும். இந்த வெடி ஆயுதங்கள் rj¡Å(Satagni) இயந்திரம் என்று அழைக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் மேனாட்டார்கள் இப்பொழுது கண்ட பீரங்கியினின்று வேறுபட்டதல்ல. நமது நாட்டு சிற்ப நூற்களில் ஒன்றான சுக்கிர நீதியில் பீரங்கிகள் செய்யும் வழிகளையும் அதைப் பயன்படுத்தும் வழிகளும் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூல் சமீபத்தில் நமது அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் மகிபாலன் பட்டி கதிரேசன் செட்டியார் அவர்களால் வடமொழியினின்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றாலும் நமது இந்தியர்கள் அதிகமான அழிவை உண்டாக்கும் இக்கொடிய ஆயுதங்களைப் பகைவர்கள் மீது பயன்படுத்தி இந்தியர்கள் அறப்போர் ஆற்றும் வீரர்கள் என்பதற்கு இழுக்கு ஏற்படுத்தாது இருந்தது கண்டு உலகில் உள்ள சான்றோர்கள் போற்றுகிறார்கள். மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நல்ல ஒழுக்கம், அறம், துறக்க வாழ்வு முதலியவைகளைப்பற்றிய எண்ணங்கள் எழுந்துவிட்டது எனவே அக்காலத்தில் வெடி மருந்துகள் கொடிய நச்சு ஆயுதமாகக் கருதப்பட்டது. இன்றையக் கொடிய அணுகுண்டு நீர் வாயுக் குண்டுகளை விடத் தீயதாக எண்ணப்பட்டது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. போர் இசை பண்டையத் தமிழர் போர்க் கருவிகளாக இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர். இசைக் கருவிகள் போர் வீரர்களின் நரம்புகளை எஃகுக் கம்பி போல் பலம் பெற்று எழச் செய்துள்ளன. அவர்கள் உதிரத்திற்குச் சூடேற்றியது. உடலுக்கு ஊக்கம் ஊட்டியது. தமிழ் அரசர்கள் மூன்று முரசங்கள் வைத்திருந்தனர். ஒன்று நீதி முரசு மற்றொன்று கொடை முரசு. மற்றொன்று வீரமுரசு. இது படை முரசு, போர் முரசு, பண்டைய மக்கள் நீதி முரசம் செம்மையின் சின்னம், கொடை முரசு வண்மையின் சின்னம், போர் முரசு ஆண்மையின் சின்னம் என்றும் அறைவர். வெம்மை வாய்ந்த புலியை வீறுடன் தாக்கிக் கொம்பினால் பீறிக்கொன்ற பெருங்காளையின் தோலைப் பதனிட்டு வீரப் போர் முரசம் செய்வர். போர் ஓய்ந்த காலத்தில் அரண்மனையில் ஒரு அழகிய மாமணி மஞ்சத்தில் வைக்கப் பெற்றிருக்கும். இந்த முரசத்திற்கருகே ஆயுதங்கள் தாங்கிய போர் வீரர்கள் எப்பொழுதும் இமை கொட்டாது பாதுகாத்து நிற்பர். பார்வேந்தன் படை எடுக்கும் பொழுது தாம் போர் முரசம் மாளிகையை விட்டெழுந்து முன்னே செல்லும். போர் முரசு உருவத்தாற் பெரியது. இந்த முரசின் மேல் கொல்லும் தொழிலையுடைய காளையின் தோலை மயிர் சீவாது போர்த்தி இருப்பர். கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மர்க்கண் முரசம் (மதுரை 732-33) என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இந்த முரசு போருக்குப் புறப்படும் பொழுது முழுக்காட்டுவர்; மாலையிடுவர். வாசனைப் புகையூட்டுவர். இதற்குப் பலியும் இடுவர் அரசனும் போர் வீரர் களும் படைத் தலைவர்களும் வணங்குவர். போர் முரசம் யானை மீதேற்றி ஒலிக்கப்படும் முரசின் முழக்கம் இடியோசை போன்று ஒலிக்கும். இதைக் கடல் ஒலிக்கும் அருவி ஒலிக்கும் உவமிப்பர். முரசம் கறங்க வீரர் போர்க்களம் புகுந்து போர் புரிவர். அரசர் பகைவரை வென்றதன் அறிகுறியாக முரசத்தை முழக்குவர். வெற்றிக் களிப்புத் தோன்ற முரசம் முழங்கும் பாசறையை முல்லைப் பாட்டுக் குறிப்பிடுகின்றது. போரில் பகைவர்கள் போர் முரசைக் கைப் பற்றுவது ஒரு சிறந்த வெற்றியாகும். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவர் நாட்டை வென்று படைத் தலைவர்களைக் கொன்று அவர்களின் போர்முரசங்களைக் கைப்பற்றினான். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். அரைசுபட வமருழக்கி உரை சொல் முரசு வௌவி (புறம் 26: 6-7) என்று புறநானூற்றில் முரசத்தின் பக்கம் கருமாத்தாற் செய்யப் பட்டிருந்தது. இருட்சி பொருந்தி இருந்தது. மயிலினது நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட நீலமணி போல் விளங்கிய அழகிய வண்ணம் வாய்ந்த மலர் மாலைகளையும் பொற்றளிரையுடைய உழிஞையும் சூடப்பெற்று குருதிப் பலி கொள்ளும் விருப்பத்தையுடைய பயங்கரமான நீராடி வரும் என்று புறநானூறு கூறும்; பிற சங்க நூற்களும்; சான்று தரும்.1 முரசத்தின் கண்கள் பேயின்கண்கள் போன்றன. முரச முழக்கம் பாசறையைக் கலங்கச் செய்யும். மக்களைத் துயில் எழுப்பவும் உணர்வூட்டவும் முரசம் பயன்பட்டது. முரசம் காலையில் இயம்புதலைப் பல சங்க நூற்கள் காட்டும். போரில் பயன்படுத்தும் இசைக் கருவிகள் படைக்களத்தில் வீரர்களுக்கு வெறியூட்டும் இசைக் கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும் முழவும், முருடும், உறுதியும் உடுக்கையும், திண்டியும் போர் இசைக் கருவி களாகக் கொள்ளப்பட்டன. இவற்றின் பெயர்கள் அவைகளின் ஒலிக் குறிப்பை வைத்தே கொடுக்கப்பட்டனவாகும். பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர்முர் என்று ஒலிப்பது முரு. கரடிபோல் ஒலிப்பது கரடிகை (உறுமி). போரில் இசைக் கருவிகள் முழங்கியதும் போர்வீரர்கள் தலை கிறங்கி ஆடுவர்; போர்வெறி பொங்கும்; வீரம் சிறக்கும்.!  சாத்தான்குளம் அ.இராகவனாரின் வாழ்க்கைச் சுவடுகள் நெல்லையின் எல்லையில் ஏலே! அண்ணாட்சி வந்தாகளா? என்ன சொன்னாக? எனக்குத் தான் அயித்துப் போச்சு? - எங்காவது இந்தத் தமிழைக் கேட்டால் அது நெல்லை மாவட்டத்தார் குரல் என்று தெரிய வேண்டும். இந்த மாவட்டத்தில்தான் குற்றால அருவியின் கொஞ்சும் இசை! கிருட்டினாபுரத்து சிலைகளின் பேரழகு! ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்! தன் பொருநையே நாகரிகத்தின் தலைவாயில் என்று போற்றப்படும் ஆதித்தநல்லூர்! சிவஞான முனிவர், குமரகுருபரர், திருமங்கையாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், அதிவீரராமபாண்டியர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், என்றி ஆல்பர்ட்டு கிருட்டினார், திருகூடராசப்பக் கவிராயர் .. இன்னும் இன்னும்.. புதுமைப்பித்தன், மாதவையா, கா.சுப்பிரமணியனார், வையாபுரியார், பூரணலிங்கனார், சோமசுந்தர பாரதியார், பாரதியார், உமறுப்புலவர்.. இன்னும் இன்னும் தமிழ் மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- போன்ற அறிஞர்களின் அணிவகுப்பு இம்மாவட்டத்தின் சிறப்பேயாகும். ஓ! நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவனாரும் பிறந்து பெருமை சேர்த்தது இம்மாவட்டமே! நாகசுரமும், வில்லுப்பாட்டும் இங்கு புகழ் சேர்க்கும் கலைகளாகும். சாத்தான்குளம் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஊராகும். வடிவேற்கவிராயர், கனகசபாபதிக் கவிராயர், குழந்தை வேல்சாமி போன்ற கவிஞர்கள் பிறந்து புகழ்பெற்ற ஊராகும். நுண்கலைச் செல்வர் அ.இராகவனார் அவர்கள் 22.04.1902 ஆம் ஆண்டு தோன்றினார். இவர்தம் பெற்றோர் திருவாளர் அருணாசலக் கவிராயர், திருவாட்டி ஆவுடையம்மாள் ஆவர். இவரது பாட்டனார் வடிவேற்கவிராயர் சிறந்த முத்தமிழ்ப்புலவர். இவரது முப்பாட்டனார் வீரபாகு ஓதுவார் மிகச்சிறந்த கவிஞர்; அதோடு வழக்கறிஞரும் கூட! இவரது முப்பாட்டனாரின் தம்பி அருணாசலக் கவிராயர் திருவனந்தபுரம் அரண்மனைப் புலவராக ஒளி வீசினார் என்பது மட்டுமின்றி குட்டிக் கவிராயர் என்ற அடைமொழியோடும் வாழ்ந்தவர். நுண்கலைச் செல்வரின் பிள்ளைத் திருப்பெயர் இரத்ன இராகவ உதய மார்த்தாண்டன் கவிராயர் என்பதாகும். பின்னர்தான் இராகவன் என்று மட்டுமே அழைக்கப்பட்டார். இளந்தைப் பருவத்தில் பிறந்த சாத்தான்குளத்திலேயே தொடக்கக்கல்வி பயின்றார். நெல்லை அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியம் பயின்று ஆசிரியரானார். சுப்பிரமணியக் கவிராயரிடம் தமிழ் முடுதறக் கற்றும், தொண்டைமான் பிரம்ம முத்தையனிடம் ஓவியமும் கற்று சிறந்த ஓவியராக விளங்கினார். ஆசிரியத்தின் செழுமையில் 1924-1930 முடிய சமாலியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றினார். ஆழ்வார் அம்மாள் பெண்கள் பள்ளி, இபுராகிம் முசுலீம் பெண்கள் பள்ளி, சமாலியா முசுலீம் பள்ளி, திருநாவுக்கரசு படிப்பகம், புலமாடன் செட்டியார் மேனிலைப்பள்ளி போன்ற பல்வேறு நிறுவனங் களைச் சொந்த ஊரிலேயே தொடங்கிப் பெருமை சேர்த்தார். இயக்கங்களின் வளமையில் சுயமரியாதை இயக்கம் நிகரமைய (சோசலிச) இயக்கம் பேராய இயக்கம் (காங்கிரசு) ஆகிய இயக்கங்களில் பொறுப்பு வகித்தார். நெல்லை மாவட்டப் பேராய உறுப்பினர், திருச்செந்தூர் வட்டப் பேராயச் செயலாளர், தமிழ்நாடு பேராயக் கட்சி உறுப்பினர் என இவர் அரசியலிலும் காலுன்றியிருந்தார்.பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நட்பு கிடைத்த பின்னர் ஈரோடு பகுத்தறிவுக் கழக அமைச்சரானார். ஏராளமான பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார். இவரெழுதிய, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? “bg©QÇikí« kjK«” v‹w üšfŸ gšyhÆu« gofŸ ɉW ‘ïuhft‹ ah®? என்பதைத் தமிழுலகம் அறியச் செய்தது. குடும்பத்தின் விளைவில் சாத்தான்குளம் அருணாசலக்கவிராயருக்கும் ஆவுடையம்மாளுக்கும் மக்கள் அறுவர். இவரே முதல் மகன். குடும்பத்திற்கும் .. கொஞ்சு தமிழுக்கும் இவரே முதல்வர். 2. குமார வடிவம்மாள் 3. வடிவேல் (இளந்தையிலே மறைந்தார்) 4. குமாரசாமி 5. காந்திமதி ம.பரமசிவன் .. ஒரே ஒரு பெண்மகள். அவர்தாம் ச. வீரலட்சுமி அம்மையார். இராகவனார் தாய்மாமன் மகளையே திருவாட்டி சுந்தரத்தம்மையாரை மணந்து இனிய இல்லறத்தின் நன்கொடையாக மல்லிகா, சுதந்திரா,தமிழரசி, இரா.மதிவாணன் என மூன்று பெண்மக்களையும், ஒரு ஆண்மகனையும் வழங்கினார். தன் மக்களை பலர் மறுத்தபோதும் தமிழ வழிக் கல்வியிலேயே சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். தன் தங்கையார் திருமணம் நீங்கலாக எல்லாத் திருமணங்களையும் சீர்திருத்தத் திருமணமாகவே நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை என்று அடிக்கடி சொல்லியும் தாயும் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். சீவானந்தம், சாந்தம் சுந்தரவடிவேலு- போன்ற இவரோடு நட்புக் கொண்டு தமிழில் கொண்டுள்ள ஐயப்பாடுகளை அறிந்து கொள் வார்களாம். குறள் ஒப்புவித்தால் - காசு கொடுத்து ஊக்கப்படுத்திப் பாராட்டுவது இவரது இனிய வாழ்வியலாகும். அது இளஞ்சிறார் களாயிருத்தல் வேண்டுமாம்! அயலகக் களிப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயலகங்களுக்குச் சென்று மீண்ட நுண்கலைச் செல்வர் தமிழறிஞர்களான எங்கும் செல்லும் காசு.. கா.சுப்பிரமணியனார், தீந்தமிழ்ப்புலவர் திரு.வி.கலியாண சுந்தரனார், தந்தை பெரியார், தாரூல் இசுலம் ஆசிரியர் பா.தாவூத்சா, இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயக, கண்டி மேயர் சார்ச்-டி-செல்வா, அமைச்சர் பெரி.சுந்தரம் , மேயர் சரவணமுத்து, தமிழக சமன்மைச் சிந்தனையாளர் ப.சீவானந்தம் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு அவர்களால் பன்முறை பாராட்டப் பெற்றார். 1935 ஆம் ஆண்டு பெரியாரிடமிருந்து விலகி தோழர் ப.சீவானந்தத்தோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்றொரு கட்சியை நிறுவி அறிவு என்னும் திங்களேட்டிற்கம் ஆசிரியரானார். 1932இல் இலண்டன் பகுத்தறிவு சங்கம், விடுதலைச் சிந்தனையாளர் மன்றம், அமெரிக்காவிலுள்ள உண்மை நாடுவோர் கழகம்,போன்ற அமைப்புக் களோடு தொடர்பு கொண்டு உறுப்பினராகி பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து தந்தார். இலங்கையில் மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் நினைவு மலர் வெளியிடப் பெரிதும் உதவினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு என்ற இதழில் தொடர்கட்டுரை எழுதி வர அதன் ஆசிரியா கோ.சாரங்கபாணி வேண்டினார். தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற இவரது நூல் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடநூலாக மதுரைப் பல்கலைக்கழகம் ஏற்றுப் புகழ் கொண்டது. ஆய்வின் கூர்மையில் அவரது ஊருக்கு அண்மையிலுள்ள ஆதித்தநல்லூருக்குச் சென்றும், பல்வேறு பொருள்களைப் பார்வையிட்டும், சென்னை அருங்காட்சியகம் சென்றும் ஆய்வு செய்துதான் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் என்ற நூலை எழுதியுள்ளார். சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏராளமான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றின் படங்களை, அணிகலன்கள், விளக்குகள் ஆகியவற்றின் படங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது .. இவரது பனிமலை முயற்சிப் பாங்கினை- நமக்கு உணர்த்துகிறது. யாருமே செய்யாத புதுமையாக நுண்கலைச் செல்வர் அவர்கள் தன் மனைவியார் திருவாட்டி சுந்தரத்தம்மையாரைக் கொண்டு கலைநூற் பதிப்பகம் நிறுவி பல நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி செய்தார் என்பது உலக வரலாற்றில் புதுமையாகும். தம்மிடமிருந்த ஏராளமான காசுகள், நூல்கள், அரிய பொருள்கள் - ஆகியவற்றைத் திருச்சியிலுள்ள ஈபர் கண்காணியர் கல்வி நிறுவனத் திற்கு வழங்கினர் என்று அறிகிறோம். அவை அரிய கலைப் பொருள்களாகத் துலங்குகின்றன. இலங்கையில் ஒரு சின்ன நூல் அந்தக் காலத்தில் நூறு உரூபா கொடுத்து வாங்கியுள்ளார் எனில் அவரது அறிவுத் தாகம் நமக்குப் புலப்படும். பாராட்டுத் தேன்மழையில் 1966 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சட்டப் பேரவைத் தலைவர் மாண்பதை செல்லப்பாண்டியனார் தலைமையில் தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்குப் பொன்னாடை போர்த்தி நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது. 1937ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முகம்மது நபி உலக சமாதானத்திற்குச் செய்த தொண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார். 1966-உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக் காசுகள் என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரையாகப் போற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பழங்கால மரக்கலங்கள் 46 வடிவங்களை நெய்மவண்ணத்தில் (Oil paint) வரையப் பெற்றுக் காட்சிக்காக்கி பேரறிஞர் அண்ணாவே பெரிதும் போற்றியும், பாராட்டியும் மகிழ்ந்தார். தமிழ்வளர்ச்சி மன்ற உறுப்பினராகி தமிழ்நாட்டு வரலாறு தொல் பழங்காலம் நூல் வெளியிடும் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது நினைந்த போற்றத்தக்கது. தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை விளக்கும் .. ஏராளமான கலை நூல்கள் .. கலைப்பொருள்கள்.. நாணயங்கள்,புதிய..ahU« கண்டுபிடிக்காத பழந்தமிழ்ப் பொருள்கள்.. இவர் தேடித் தேடிச் சென்று பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். முடிவின் மடியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் .. தமிழ்ச் செம்மல்கள் பேரவை நடத்தும் ஐந்தமிழ் விழா.. 7.3.1981 காலை 10.00 மணியளவில் பழந்தமிழர் அணிகலன்கள் .. அரிய பேச்சு .. நூலாக வந்துள்ளது.. ஐயோ.. 8.3.1981 காலை.. 10.00 பழந்தமிழர் சிற்பக்கலை - இது தலைப்பு. நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.இராகவன் என்ற தமிழ்ப் பேரறிஞர்.. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.. உணர்ச்சியுரை.. ஐயோ! மயக்கமாக வருகிறதே என்கிறார். .. மருத்துவமனைக்குச் கொண்டுசெல்கின்றனர்..11 மணிக்கு தம் எழுபத்தொன்பதாம் அகவையில்பேரhஇயற்fஎய்துகிறார்.. 22.4.1902லேதோன்றியதமிழொளி..08.03.1981 .. மறைகிறது! சாவிலும் தமிழ்ப்படித்தே சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்தே வேக வேண்டும் என்ற கவிதை வரிகள் இவர்தம் புகழைப் பேசிக்கொண்டே இருக்கிறது ஆ.முத்துராமலிங்கம் தச்சநல்லூர்  1. Neither collection is rich in south Indian arms and it is a matter of regret that the government in India while professing to watch over the preservation of archaeological remains has neglected to take advantage of the opportunity of acquiring old weapons from the armouries at Tanjore and Madras and allowed them to be broken up and the contents sold as old metal. A description of Indian and oriental armour by the Right Hon. Lord Egerton of Tatton M.A., (London) 1896. 1. படையுங் கொடியுங் குடியும் முரசும் நடை நவில் புரவியும் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய - தொல் பொருள் 1563. 2. படைகுடி Tழ்miமச்சுந£பரண்ஆW« உடையான் அரசருள் ஏறு - குறள் - 38. 1.The Colos (2nd editiom) K.A.N. Sastry - 1955 (Madras) p. 45 2. புறநானூறு-274 1. * கஜசாதிரம் - பாலகாப்பிய முனிவர். தஞ்சை 1958 - பக். 12 2. A Chinese author, writting in 1178 gives the following account of cola country and its army. This country is at war with kingdoms of the west (of India). The government owns sixty thousand war elephants, every one seven or eight feet (cubits) high - The colas. K.A.N. Sastry P.45 3. அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல் சான் மன்ன ரெயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலும் பாய்ந்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சின வேற்கிள்ளி களிறு - முத்தொள். 17 (அ) குன்றத் திறுத்த குரீஇயினம் போல வம்பு சென் றிறுத்த வரும்புண் யானை - புறம் 19 (ஆ) ஏந்து கோட்டி யானை வேந்தன் பாசறை - அகம் 394 (இ) மதவலி யானை மறவிய பாசறை யிடியுமிழ் முரசம் பொருகளத் தியம்ப - அகம் 354 (ஈ) நளிகட லிருங் குட்டத்து வளிபுடைத்த கலம் போலக் களிறு சென்று களன கற்றவும் - புறம்29. 1. *அசுவ பரீட்சை. சரசுவதிமகால் வெளியீடு 1. டினார் - பொன் நாணயம் 2. Marco Polo - Vol II P.385 1. கலி 81 : 17 1. Catalogue of Prehistoric Antiquities Aadichanallur and Perumbair - Alexandar Rea (Madras) 1. * உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் - திருக்குறள் 743 2.* செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் - இராமாயணம் கும்ப. 159 செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு - புறம் 201 1.* கடி மதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு - சில. 14 :66-67 மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - முல்லை 11. 59-61 திங்களு நுழையா வெந்திரப் படுபுழை - புறம் 177. 1-9 1. Vanmiki Ramnayana Kish Kanda Canto; 1941. Versem 2. வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரறா வாயில் - திருமுரு 68-69 செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கு எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் - பதிற்று. 5: 6-7. 3. ஊரில்ல வுயவரிய நீரில்ல நீளிடைய பார்வ லிருக்கை - புறம் 3: 17-19 பருந்து பறக் கல்லாப் பார்வற் பாசறை - மதுரை 231. 1. * ............................................ பெயர் மருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த கடவுள் - மலைபடு. 394 -396 கிடுகு நிரைத் தெஃகூன்றி நடுகல்லி னரண்போல - பட்டினப் 78-79 1. கேழன் மேழி கலையாழி வீணை சிலை கெண்டை யென்றினைய பல்கொடி தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனிப்புலிக் கொடி தழைக்கவே - கலிங்-சப்த மாதாதுடி V.18 “Several flags like the boar, the plough, stag, the lion, the lyre the bow and the Carps went down and the single tiger flag of the cholas which was raised on (Mount) Meru only flourished. The boar represented the Chalukyas” The plough represented Yadavas The stag represented Palas of Bengal The lion represented Sinhalese The bow represented Ceras The carps represented Pandyas Did the lyre represent the Jaffnese? Its possesition in the verse next to the Singalese and before Ceras and the Pandyas is evident confirination of the Surmise” - Ancient Jaffna. Mudaliar C. Rasanayagam C.C.S. Colombo 1. உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்க தோள் புடைப்ப - புறம் 68 * இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்பு சுவைக் கொண்ட விழுப்புணோய் தீர்ந்து மருந்து கொள் மரத்தின் வான்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன் - புறம் 180 1. கலிங்கத்துப் பரணி - கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டார். (ஆ.வி.கனையாநாயுடு இயற்றிய உரையுடன் கூடியது) சென்னை. 1944. 1.* தானை, யானை, குதிரை என்ற கோனார் உட்கும் மூவகை நிலையும் -தொல். பொ. புற.18. தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் - தொல். பொ. புற 17. 2.* கணையும் வேலும், துணையும் மொய்த்தலிற் - தொல். பொ. 1017 குடையும் வாளும் நாள் கோள் அன்றி - தொல். பொ. 1016 தொல் எயிற்று இவர்தலும் தோலது பெருக்கமும் - தொல்.பொ. 1014 1. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லோ உழவர் பகை. - திருக்குறள் 872 2. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - திருக்குறள் 279 3. காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு - திருக்குறள் 500 4. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு - திருக்குறள் 882 5.* கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் - திருக்குறள் 774 உரனென்னும் தோட்டியான் ஓர்ஐந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்குஓர் வித்து - திருக்குறள் 24 6. செய்க பொருளைச் செருநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூறியது இல் - திருக்குறள் 759 1. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. - திருக்குறள் 496 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புனையைச் சுடும். - திருக்குறள் 306 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். 1. உருவ வழிபாடும் திருவடிவங்களுக்கு மழு, வில், வேல், அம்பு முதலிய ஆயுதங்களுக்குச் சாத்துவதும் புதுக் கற்கால வழக்கங்களே - தமிழர் சமயம். திரு. கா. சுப்பிரமணி பிள்ளை எம். எம். எம். எல். பக். 9 2. *இருளடைந்த பொழில்களில் வணங்கப்பட்ட தாய்த்தெய்வதிற்குக் கருநிறம் பேசப்பட்டது. மாயோள் என்ற தமிழ்ச் சொல் கரு நிறம் உடையவள் என்று பொருள்படும். மாயோள் ஆண்வடிவமாகத் தொழப்பட்ட போது மாயோன் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. காடுகள் அடர்ந்த முல்லை நிலத்திற்குரிய தமிழ்த் தெய்வம் ஆதியில் மாயோளாய் இருந்து பின் மாயோனாயிற்று. முல்லை நிலத்தில் மாயோள் குழல் ஊதும் மேய்ப்பனாக வழிபடப்பட்டபோது கருநிறத்தான் என்ற பொருளுடைய கிருஷ்ணன் என்ற சொல் ஆரிய வழக்கில் வந்தது. கிருஷ்ணன் முல்லை நிலத்தின் தமிழ்த் தெய்வம் என்றும் அவன் ஆரியத் தெய்வங்களுக்கு வேறானவன் என்றும் காலஞ் சென்ற பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆய்ந்து கூறினார். ஆணைச் சிறப்பாகக் கூறும் மரபு பற்றி விஷ்ணுவைத் தமையனாகவும் சிவ சக்தியைத் தங்கையாகவும் கூறும் வழக்கம் ஏற்பட்டது போலும் - தமிழர் சமயம். கா. சுப்பிரமணிய பிள்ளை பக் 49. * 1. வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ ! இழையணி சிறப்பின் பழையோள் குழவி!! - திருமுருகாற்றுப் படை 258-259 1. Several sculptures of Durga or Chandi with ten arms, as well as with eighteen arms have been found in Northern India & they may be seen in different archaelogical Museums - Indian Images - C.Battachiarya M.A, F.R.S.G.S (Edin) Calcutta.1921. P.36 1. துர்க்கையின் அம்சம் மிக முக்கியமானது. விஷ்ணு துர்க்கையின் சகோதரனானதால் விஷ்ணுவின் ஆயுதங்களை இதில் தாங்கி நிற்பாள் - நாம் வணங்கும் தெய்வங்கள் - பி.ஆர்.சீனிவாசன் (1959) சென்னை. பக் 34. 1. We have a continuity of culture from Paleolithic to neolithic, from neolithic to megalithic and megalithic to Ironage in South India. Origin and spread of the Tamils - V.R.Ramachandra Dikshetar. M.A. 1. The Earliesr stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into central India where in the Narbada Valley have been found middle Pleistocene tools and a fauna gradually extended through the gangas and Yamuna Valleys to North Western India right up to Himalayan Hills-India and the Pacific world- Kalidas Nag. P. 279 2. The Hindus Civilization - Mackay P.11 1. Heras article. New Review Heras. IHQ. XIV PP - 44 ff Heras Indian culture III. Journal of the Benares Hindus university II No 1 etc. 2. The Ancient History of the Near East-H.R.Hall 1. Stone impliments of three distinct classes similar is character to those found in other Countries have been found over nearly the whole of India from Burma to Baluchistan and from assam to Bombay and Madras, Copper-axe heads found at Kangra near Mhow, 1873 are exhibited in British Museum Even iron was known before the separation of the Aryan races, if we may belief the testimony of language as interprated by Max Muller who was shown that the Sanskrit and Gothic terms for iron respectively “ayas” and “ais” - Science and Language P.239. 1. Another legendary invasion of India appears to have proceeded from egypt under the leader who figures under the different names of Bacchus Sesosties or Parasuram so called from Parasu raman so called from parasu or battle axe with which he fought - A. Sketch of Military History of India - W. Egerton M.A., M.P. See Dawson classical dictionary of Hindu Mythology “Parasu Rama” Prof. Dawson thinks that the war of Parasu Rama indicates the struggle between Kshatriyas & Brahmen.(Foot Note in a sketch of the Military History of India P.1) 1. Mohenjo - Daro and the Indus civilization” Sir. Jhon Marshall Vols I, II, III (1931) 2. (1) Buried Empire Partic Carleton PP.162-168. (2) Pre Historic civilization of the Indus Valley - K.N. Dikshih. 3. These are Aryans used Chariots in which a warior, wearing coach of Mail & a helmet stood beside the driver ready to shoot with bow and arrows are else to use his spear and axlence or sling reading from Indian History ethel. R. Sykes (LONDON) Part I. P.8 1. The wonder that was India - A.S. Basham B.A. ph.D.1954 Newyork. 2. Aryanisation of India. Prof. N-Dutt PP 39-68 3. (a) Historical studies - Shoshee Chandra Dutt 1879 P.P.157-187 (b) The oldest extent traditions of a great contest between Rama, king of Ayodhya or Oude and Ravana, king of Lanka or Ceylon which has been usually refered to a period of remote antiquity but which a recent writer has attemption to identify with a struggle between Brahminism and Buddhism”- A Description of Indian and Oriental armour by Lord W. Egerton M.A., M.P.P.2. 1. Indian History (appendix) - Vol. VI P.481 1. “It is evident that the lotus was not borrowed from India as it was favourite plant of egypt before the Hindus had established their religion there” - History of Herodotus Vol. II. (Foot Note) 1862. P.128 1. (a) “Already in that remote age there appears to have existed an intercourse for purpose of trade dating probably from the earliest times between India and the Countries on the sea board of the Medetrranean and specially Phoneci. It is probable that South India is the land of Ophir from which solomon obtained “Gold and silver ivory and apes and peacocks (1. kings X .227. 17. Description of Indian and oriental armour. The Right Hoon Lord Egertion of Tallon M.A., (LONDON) 1896. P.10 Histoire General des Languages Semiteque Erist Renan (LONDON) P.10 1. He describes the army as Consisting of 400,000 men including 20,000 cavalry and 2,000 chariots Chief city was defendeed by 575 towers and a ditch 30 cubits deep and entered by 60 gated. 2. Pre Historic India - P.125 1. See Catalogue of Indian Art by. Lieut. Cole. P.51 1. This ancient form of sword recalls the Greek KUXIS of which quintus curlins says “copidas vogans gladio” “level curvatos falcibus smiles” quoted by cob.Lane Hox. Cat Anthropological collechon. P.174. 1. Elliot, History of India Vol. III. P. 233 1. Col. Yule, Marco Polo. Vol II., P. 63. 1. Timur may have acquired the secret of gunpowder in his first expedition in to Asia Minor and it is probably that he carried back artificers with him to Bokhara, who introduced the art into Asia” History of Gunpowder by colonel W. Andersh (1862) London. P.11 1. One of the most important of the new factor was the advent of the Muslim. They began to settle on the western coast of Southern India. Soon after the rise of Islam. There they were welcome as traders soldiers and sailors and they soon acquired a position of influence in the princis palihis of the coast of Decan and the South. Their settlements became centres of religious influences and their ideas spread among the people. In north the Arab Muslims first expanded toward the east; they appeared as invaders & although. 1. By 1750 the British Control in the three Presidencies of Bombay, Madras and Bengal was well established and her forces were well poised for greater exploits.. “The country can be termed as the era of British expansion in the world” - History of Indian army - Rajendra Singh. P. 69. after the Conquest of Sindh they could not make any advance into India from that direction> their merchiants? missionaries and Saints visited the Country, travelley freely and settled in the towns. The rule of the Sultans of Delhi was over thrown by the invasion of Babur who founded the Mughal empire in India in the begining of the sixteenth century. His descendants continued to rule over a wide empire till the commencement of the exteenth century and then the power of Mughals rapidly declined and the British established their dominion in India” - Short History of the Indian people - Tara Chand M.A., D. PHIL (1934) 1. To this fourfold division of armies into elephants charioss cavaby and infantry oaaj game of chess said by Hirdusi to have been introduced by an ambassador from the King of kanur to the Court of Naushiryan or by Sassa son of Dahir in the reign of Bahram king of Persia, bears interesting widtness. The “castles” represented the howahs carried by the elephants which the Greeks in expedition of Alexandar magnified into castle. The “Bishops” take the place of cars and where we have a “queen” they have a “mantri” or minister of statel a leader who mingles everywhere in the fight. The “knight and “pawns” represent the two other classes. If Iran Cation. The “siyaru-e Muta - akhkhirin” “Review of Modern times” Calcutta 1789 I am I P 72 1. a) I king x 22 (Holy Bible). b) It is probable that Southern India is the land of ophir from which soloman obtained gold and silver ivory, and apes and peacocks. c) Renan has shown the connexion of India with Phoenicia by proving that the words in the semihi languages for monkey, peacock and elephant have been borrowed from the aryan languages of India - Historic General Indian court langues semihiques Ernest Renan 1855 see also Hand Book to Indian Court 1878. P-16 Dr. Birdwood. 1. He describes the army as consisting of 4,00,000 men include 2000 cavalry and 2000 chariots. The chief city was defended by 574 towers and a ditch 30 cubits deep and entered by 60 gates. 1. The arms represented on the Bhilsa Jopes are bows and arrows, dagger, sword, spear wish triangular head, axe, battle axe trident infantry and cavalry shield. At Udayagiri bow and arrows, trident sword and circular shield - Bhilsa Topes 8216. 2. Arian Indica XXI 1. Hergussion, History of Architicture p.10 2. Catalogue of Indian art - Lieuf cole p-51 1. Journal of the Asiatic Society. Calcutta VI. VIIX 1. Historical Studies - Shoshee Chandra Dutt. (1879) 1. Hist., of India - Elliot Vol. 1, P. 88 bu Prof Dauron. 1. “Timur away have acquired the secres of gunpoa in his fersh expedition into Asia Minor The ruanufactic of geernpoe matchlocks and cannon was Prevalant in Asia Minor ( 1 of 02) it is probably that Carried back arsificars with him to Bokhara who inrtodiced the art into Asia” - History of Gunpowder - Colonel W. Anderson. P.11 -(1862) 2. Arsilery for the use of fircarms in th East. 1. “The knowledge and practic of this mighty weapon was not confined to North India. South India knew this weapon well from the begining of its written history. The huge figures of warriors particularly that of Anjuna carved out in the Meenakshi temple of Madurai well migh prove its existenee in South India as an efficent instrument of fighting” - Apparatus of war in ancient India - A.P. Chandrasekharan (Bhavans Journal. Dec. 27.1959) 1. Javelin and spear which came next in importance were seldom used by vedic Aryans although these weapons were not unknown to them. It was during the Mahabharata war that Javelin and spear attained importance and they were known by different names: Sah, Kunta, Kunapa, Salyam, Sanku, etc. The trident which was a kind of spear was popular in South India, and it was believed that it is the weapon of Lord Siva who of all the three Gods, of Creation, Preservation and destruction, Commands the highest veneration and popularity among South Indians. Thirukkural, the Tamil Bible, mentions the lance in two places - Apparatus of war in ancient India - A.P. Chandrasekharan. (Bhavanis Journal 27 Decd. 1959) Bombay. P. 60. 1. “The knowledge and practic of this mighty weapon was not confined to North India. South India knew this weapon well from the begining of its written history. The huge figures of warriors particularly that of Arjuna carved out in the Meenakshi temple of Madurai well meigh prove its existence in the South India as an efficent instrument of fighting” - A chadrasegaran (article) Bhavans Journal Dece. 27. 1959 (Bombay). 1. தொடித்தலை விழுந்தண் டூண்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சில சொல் - புறம் 343: 42 -43. 2. Mccrindle, India and its Invasion - Alexander PP 234, 366. 1. நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல் நிமிர்ந்த மாஅல் - முல்லை 1-2 1. வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும் செந்நெல் வான்பொறி சிதறியன்ன - குறுந் 53: 3-4 *2 வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமகனல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே - புறம். 279: 8-11 1. நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு - குறள் 683 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் - குறள் 774. 1. கெடுக சிந்தை கடிதிவ டுணிவே மூதின் மகளி ராத றகுமே மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன் பெரு நிறை விலங்கி யாண்டுப் பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துழீ இப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகனல்ல தில்லோன் செருமுக நோக்கி செல் கென விடுமே - புறம் 279. 2 வாளொடு என வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் நுண்அவை அஞ்சு பவர்க்கு - குறள் 726 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல் - குறள் 727 1. “It is note- worthy that all these three types of sword are represented in the frescoes and sculptures at Ajenta while Kirich and Pattisa blades have been found in the Tindenvelly urn burials” - Art of war in ancien India Dr. P.C Chaavarti M.A.Ph. D - 1941. P.164 1. Alexander Rea’s Catalogue of prehistoric Anti - queties from adichanallor & Perumbair (Madras) 1917. 2. Sir John Marshall Mohenjo Daro and the Indus civilization.I. P.35. 1. கிடுகு நிரைத் தெஃகூன்றி நடுகல்லி னரண் போல - பட்டினப்பாலை 78-79 கிடு - கேடயம். எஃகு - ஈட்டி 1. Coins of India - Cunningham, Pl. IV. fig. 8. 2. Catalogoue of coins in the Indian Musem A. Smitdh Vol I Pl.XXI *1. நீரு நிலனுந் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவா ணெடியோன் மதுரை - 453-455 The coins of Tairunelvelly - Rev. E. Loventhal (1888) Madras. Pl.2. 1. .. . . . . . . . .. . . . . . . . . . . . . . .வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் பழையும் ஐயவித்துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் - சிலப் . மது. 15:207 சிவகசிந்தாமணி - திருத்தக்க தேவர் 1:101 - 104 1. “The Boomerang Boom” - by Gegrard power (The word 1965). 1. மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுளிஞையொரு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை - புறநா 50 : 1-6 பேய்க்க ணன்ன பிளிறுகடி முரசு மாக்க ணகலறை யதிர்வன முழங்க - பட் 236 - 237 படுகண் முரசங் காலை யியம்ப - மதுரை.232 நாண்முர சிரங்கு மிடனுடைவரைம்பு -புறம் 161-29