நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 5 மணிமேகலை 22 - 30 ஆம் காதை வரை உரையாசிரியர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வித்துவான் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 5 உரையாசிரியர்கள் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வித்துவான் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 336 = 360 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக் குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரண மாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை மணிமேகலை - பதிப்பு வரலாறு மணிமேகலை மூலம் - 1891 மணிமேகலையின் மூலம் 1891 ஆம் ஆண்டில் திருமயிலை சண்முகம் பிள்ளையால் அச்சிடப் பெற்றது என்னும் செய்தியை டாக்டர் சாமிநாதையர் எழுதிய குறிப்புகளால் அறிய முடிகின்றது (என் சரிதம் பக். 1018) அதனைப் பதிப்பிக்கும் காலத்திலேயே அதைப் பற்றி நன்கறிந்த தி.த. கனகசுந்தரம் பிள்ளை 29.3.1891-இல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். மணிமேகலையில் அச்சிடப் பெற்ற மூன்று படிவங்களைப் பார்த்த பின்னர் அக் கடிதத்தை வரைந்துள்ளார். பின்னர் மணிமேகலைப் பதிப்பை ஐயர் எடுத்துக் கொண்டபோது (1898) “அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங் களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புகளுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையில்லை என்று கருதினேன்” என்று குறிப்பிடுகிறார். ஆதலால் 1891-இல் சண்முகம் பிள்ளை மணிமேகலையைப் பதிப்பித்தார் என்பது விளங்குகின்றது. ஆனால் அப்பதிப்பு நூலைக் காண்டற்கு இயலவில்லை. 1894ஆம் ஆண்டில் வெளிவந்த நூலை அறிய முடிகின்றது. அதனை மேலே காண்போம். மணிமேகலை - மூலம் - 1894 கையில் கிடைத்துள்ள அளவில் மணிமேகலையின் முதற்பதிப்பு இதுவேயாகும். புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் மாணவர் திருமயிலை சண்முகம் பிள்ளை தமக்குக் கிடைத்த சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து அச்சு அணியம் செய்தார். கயப்பாக்கம் இரத்தின செட்டியார் மைந்தர் முருகேச செட்டியார் சென்னை ‘ரிப்பன்’ அச்சுக் கூடத்தில் பதிப்பித்தார். வெளியிடப்பெற்ற காலம் ‘விஜயஸ்ரீ தனுர் ரவி’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. சண்முகம் பிள்ளையின் 1891 ஆம் ஆண்டு மணிமேகலைப் பதிப்பையே முருகேச செட்டியார் பதிப்பாசிரியராக இருந்து மீண்டும் பதிப்பித்திருக்கக் கூடும். இந்நூலின் முற்குறிப்பில் விலை 12 அணா என்றுள்ளது. பிற்குறிப்பில் விலை ரூ.க. என்றுள்ளது. சண்முகனார், மணிமேகலை ஏடுகள் சிலவற்றைக் கொண்டு ஆராய்ந்து மூலத்தை ஒழுங்கு செய்து கொண்டார். பதிகத்திலும். மணிமேகலை முப்பது காதைகளிலுமாகப் பாட வேறுபாடுகள் 21 காட்டியுள்ளார். பின்னேயும் சில சுவடிகள் கிடைத்தன. அச்சுவடி களால் மேலும் சில திருத்தங்களும் பாட வேறுபாடுகளும் கிடைத்தன. அவ்வகையால் கிடைத்த பாட வேறுபாடுகள் 51 ஆகும். ஆக மொத்தம் 72 பாட வேறுபாடுகள் இவர் பதிப்பில் காட்டப் பெற்றுள்ளன. ஆனால் டாக்டர் சாமிநாதையர் பதிப்பில் 1357 பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றுள்ளன. இவற்றால் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், சுவடிப் பெருக்கமும் இனிதின் விளங்கும். மணிமேகலை - அரும்பதவுரையுடன் - 1898 இது டாக்டர் சாமிநாதையர் பதிப்பாகும். நான்கு ஆண்டுகளின் முன்னே திருமயிலை சண்முகம் பிள்ளையின் மணிமேகலை மூலப்பதிப்பு வந்ததைச் சாமிநாதையர் அறிவார். அதனை ஆராய்ந்து பார்த்தார். அதில் திருத்தம் பெறவேண்டிய பகுதிகள் மிகுதியாக இருப்பதை உணர்ந்தார். அவர் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் அவர் செய்ய வேண்டிய திருத்தங்களை எடுத்துரைத்தன. அன்றியும் அறிஞர்கள் சிலரும் மணிமேகலைப் பதிப்பு, உரையுடன் வெளிவருதலை மிக விரும்பி வலியுறுத்தினர். குறிப்பாக யாழ்ப்பாணம் தி.த.கனகசுந்தரம் பிள்ளை “ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்கம் என்றிருப்பதை ஒருவர் முழுவதும் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும், மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்கமென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்ட தன் பின் ஏட்டைக் காணாதவர் களெல்லாம் சேரக் கலிங்கமென்றுதானே படிக்கவேண்டும்? ‘எட்டி குமரன் இருந்தோன் தன்னை’ என்பது ‘எட்டிரு மானிருந்தோன்’ என்றும், ‘ஆறறியந்தணர்‘ என்பது ஆற்றி அந்தணர் என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே அறிந்துகொள்ளவும் (29.3.1891) என்று எழுதியிருந்தார். தம் வேட்கையும் அன்பர்கள் தூண்டுதலும் மணிமேகலைப் பதிப்பை விரைவு படுத்தின. தமிழ் நூல்களில் பௌத்த சமயம் தொடர்பாக வரும் பகுதிகளைத் தேடித் தொகுத்தார். நீலகேசி உரையில் பௌத்த சமயக் கண்டனமாக வரும் இடங்களில் அமைந்த புத்தர் வரலாற்றையும், புத்த சமயக் கொள்கைகளையும் ஆய்ந்து எழுதிக் கொண்டார். வீரசோழியத்தில் புத்ததேவனைப் பற்றி வரும் வாழ்த்துப் பாடல்களை எழுதி ஆய்ந்தார். சிவஞான சித்தியார் -பரபக்கம், ஞானப் பிரகாசர் உரை இவற்றில் வரும் பௌத்த சமயக் கருத்துக்களை இராவ்பகதூர் மளுர் அரங்காசாரியார் வழியாக அறிந்தார். வடமொழித் தொடர்களில் எழுந்த ஐயங்களை, பெருகவாழ்ந்தான் அரங்காசாரியராலும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் சீனிவாசாசாரியராலும் அகற்றிக் கொண்டார். மணிமேகலை இலங்கைக்குச் சென்றது பற்றிய செய்தியைக் கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் வழியே ஆங்கிருந்த பௌத்த சமய ஆசிரியர் சுமங்களர் என்பவரால் தெளிவு செய்து கொண்டார். இவ்வாறு பல்வேறு அறிஞர்களின் அருந்துணையாலும், தம் அயராமுயற்சியாலும் மணிமேகலை நூல் நுட்பம் கண்டார். அரும்பதவுரை எழுதி அதனுடன் பதிப்பிக்கத் தொடங்கினார். இப்பதிப்பின் செலவை பொ.பாண்டித்துரைத் தேவர் ஏற்றுக்கொண்டார். உடனிருந்து ஆராய்வார்க்குச் சிறுவயல் குறுநிலமன்னர் முத்துராமலிங்கத் தேவர் மாத ஊதியம் வழங்கினார். கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் அவ்வப்போது தக்க உதவி புரிந்தார். இதன் முதற்பதிப்பு 1898-ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1921-ஆம் ஆண்டிலும் வெளியிடப் பெற்றன. இப்பதிப்பு களுக்கு 12 சுவடிகள் ஆராய்வுக்குக் கிடைத்தன. திருவாவடுதுறை ஆதீனத்துச் சுவடி 1 எட்டையபுரம் பெரிய அரண்மனை சுவடி 1 மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் சுவடி 1 திருநெல்வேலி திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை சுவடி 1 சேலம் இராமசாமி முதலியார் சுவடி 1 நல்லூர் சிற்.கைலாசபிள்ளை சுவடி 1 ஆறுமுகமங்கலம் சுந்தரமூர்த்திப் பிள்ளை சுவடி 1 திருமயிலை சண்முகம் பிள்ளை சுவடி 1 சென்னை தி.முத்துக்குமாரசாமி முதலியார் சுவடி 1 சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தக சாலை சுவடி 1 மதுரைத் தமிழ்ச் சங்கப் பாண்டியன் புத்தகசாலை சுவடி 1 சென்னை பார்சுவநாத நயினார் சுவடி 1 வழக்கம் போலவே முதற் பதிப்பினும் பின்வந்த பதிப்பு களில் பலவகைத் திருத்தங்களும், சீரிய அமைப்புகளும் பெற்று வந்தன. ஆராய்ச்சிக்குக் கிடைத்த சுவடிகளில் மிதிலைப்பட்டிச் சுவடியின் சிறப்பு தன்னிகரற்றதாகும். “மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றைப் பிரதிகளில் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போகிய பாகங்களை யெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகுகெட்டு மாசுபொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவளணிந்து கொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப் பட்டிப் பிரதியே” என்று ஐயர் எழுதுவது இதன் சிறப்பை நன்கு உணர்த்துவதாம். இச்சுவடியிலேதான் ‘பதிகம்’ , ‘கதைபொதி பாட்டு’ எனவும், விழாவறை காதை முதலியன ‘விழாவறைந்த பாட்டு’ முதலியன வாகவும் குறிக்கப் பெற்றிருந்தன.இக்குறிப்பால் காதைகளைப் பாட்டு என்று வழங்குவது உண்டு என்பதும், ‘ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்’ என்னும் பதிகக் குறிப்பு விளக்கமும் புலப்படும். இன்னும் சில காதைகளின் தலைப்பை விரித்து விளக்குமாப் போலவும் இச்சுவடித் தலைப்புகள் இருந்தன. பளிக்கறை புக்ககாதை என்பது மணிமேகலை உதய குமாரனைக் கண்டு பளிக்கறை புக்க காட்டு என்றும் ‘மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு என்றும், சக்கர வாளக் கோட்டமுரைத்த காதை என்பது. மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டமுரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு என்றும் இவ்வாறே பிறவும் விளக்கம் பெற வந்துள்ளன. பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது மணிமேகலை. முழுதுறும் உரைப்பதிப்பு. உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள். வெளியிட்டவர் வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார். விற்பனை உரிமை திருநெல்வேலித் தென்னிந்ததிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெற்றிருந்தது. கழக அப்பர் அச்சகத்திலேயே பாகனேரித் தமிழ்ச் சங்க வெளியீடுகளாகிய அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள் அச்சீட்டுப் பொறுப்பும், விற்பனை உரிமையும் கழகமே கொண்டிருந்தது. விசுவநாதர் கழகத் தலைவராகவும் நெடுங் காலம் இருந்தார் என்பதும் எண்ணத் தக்கதாம். நாவலர் ந.மு.வே. அவர்கள் தம் உடல்நலம் குன்றிய நிலையில் மணிமேகலைக்கு உரை எழுதினார். அறிவறிந்த தம் அருமை மகளார் சிவ.பார்வதியம்மையார் தக்காங்கு உதவினார். எனினும் மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகளுக்கே உரையெழுதி முடிக்கப்பட்ட நிலையில் புகழ்வாழ்வு பெற்றார். ஆதலால் சிலப்பதிகாரத்திற்கு எழுதிய முன்னுரை ஆய்வுரை அருஞ்சொல் அடைவு என்பவை இடம் பெற்றில. எழுதாமல் நின்றிருந்த சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை (27) கச்சி மாநகர் புக்க காதை (28) தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை (29) பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை (30) என்னும் நான்கு காதைகளுக்கும் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் விரிவான உரையெழுதி நூலை நிறைவு செய்தார்கள். இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப் பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்து உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்ட தால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு....., செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு..., இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.” எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற்குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xvii மணிமேகலை 22. சிறை செய் காதை 1 23. சிறைவிடு காதை 25 24. ஆபுத்திரனோடு அடைந்த காதை 43 25. ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை 63 26. வஞ்சிமாநகர் புக்க காதை 90 27. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை 103 28. கச்சிமாநகர் புக்க காதை 158 29. தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை 191 30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை 274 அருஞ்சொல் பொருள் அகரவரிசை 321 மணிமேகலை 22 - 30 ஆம் காதை வரை 22. சிறைசெய் காதை கதிரவன் உதித்தவுடன் கந்திற் பாவையையும் சம்பாபதியையும் வழிபட்டவர்கள் அங்கே உதயகுமரனுக்கு நேர்ந்ததனைச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள முனிவர்களுக்குக் கூறினர். அம்முனிவர்கள் 'நீ இதனை அறிந்த துண்டோ?' என்று மணிமேகலையைக் கேட்ப, அவள் நிகழ்ந்தவற்றை உரைக்க, அன்னோர் மன்னவன் மகன் உடம்பையும் மணிமேகலையையும் வேறிடத்தில் ஒளித்துவைத்து விட்டு, அரசன் கோயிலை யடைந்து தம்முடைய வரவை வாயில் காப்போரால் அறிவித்து உள்ளேசென்று அரசனைக்கண்டு வாழ்த்தினர். அவர்களுள் ஒரு முனிவர், ‘அரசே! இன்று மட்டு மன்று; இப்பதியிலே காமமாகிய கள்ளினைப் பருகிப் பத்தினிப் பெண்டிரை நெருங்கியும், தவமகளிரை விரும்பியும் ஒறுக்கப் பட்டிறந்தோர் முன்னாளிலும் பலருளர்' என்று தொடங்கி, பண்டு காந்தன் என்னும் சோழமன்னனுக்குக் கணிகை வயிற்றுதித்த ககந்தன் என்பவன், பரசுராமனுக்கு அஞ்சிப் புகார் நகரை விடுத்துச் செல்லலுற்ற தந்தையின் கட்டளையால் அப்பதியைப் பாதுகாத்து வரும் நாளில், ககந்தன் மக்களுள் இளையவன் மருதி என்னும் பார்ப்பனியைக் கண்டு காமுற்றுத் தாதையின் வாளால் தடியப் பட்ட வரலாற்றையும், அந்நகரிலிருந்த விசாகை யென்னும் கற்பிற் சிறந்த வணிகமாதை முன்பு மருதியால் மடிந்தவனுக்கு மூத்தோன் கண்டு காமுற்றுத் தந்தையால் வெட்டுண்டிறந்த வரலாற்றையும் உரைத்தனர். கேட்ட அரசன் 'இன்று மட்டுமன்று என்று தொடங்கிப் பலவற்றையும் கூறினீர் ; முன்பு நிகழ்ந்ததாகக் கூறிய அத் தீய வொழுக்கம் இந்நாளிலும் உளதோ ? இயம்புமின்' என்று கேட்ப, அம்முனிவர்களுள் ஒருவர், ‘தன் கணவனாகிய கோவலன் கொலையுண்டது பொறாமல் மாதவி உலக வாழ்வை வெறுத்து முனிவர்களுடைய தவப்பள்ளியை அடைந்தனள்; அவள் பெற்ற மணிமேகலை யென்பவள், இளம் பருவத்தே தானே தவஞ் செய்யத் துணிந்து இல்லந்தோறுஞ் சென்று ஐயமேற்கொண்டு ஊரம்பலமடைந்தாள்; அவள் அவ்வியல்பினளாகவும், உதயகுமரன் அவளை விழைந்து காமம் காழ்கொள நிழல்போல் விட்டுநீங்காது நள்ளிருளில் அவ் வம்பலத்தையடைந்தான்; அது தெரிந்த மணிமேகலை அவன் தன்னை நலியாதிருக்க வேண்டிக் காயசண்டிகை வடிவம் பூண்டனள்; காயசண்டிகையை அழைத்துச் செல்லுதற்கு வந்து அங்கு முன்னமிருந்த அவள் கணவனாகிய காஞ்சனன் என்னும் விஞ்சையன் கண்டு, அவள் மணிமேகலை யென்பதை அறியாமல், அவளைத் தன் மனைவியாகிய காயசண்டிகை யென்றும், அங்கு வந்த உதயகுமரனைத் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றும் தானே அறுதியிட்டுக்கொண்டு முறுகிய சினத்துடன் உடனே. அவனை வாளால் எறிந்து வீழ்த்தினன்' என்று கூறினர். அதுகேட்ட அரசன் தன் மகன் மடிந்ததற்குச் சிறிதும் வருந்துதலின்றிச் சோழிக வேனாதியை நோக்கி, 'உதயகுமரனுக்கு யான் செய்யவேண்டிய தண்டனையைத் தான் செய்தமையால் விஞ்சையன் தகவில னாவன். ‘ மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவ லின்றெனின் இன்றால் ;’ ‘தன்மகனைப்புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர்பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தான் என்னுஞ் சொல் ஏனை யரசர்களின் செவியில் உறுவதற்கு முன்னம் அவனைப் புறங்கா டடைவித்துக் கணிகைமகளாகிய மணிமேகலையையும் சிறைப்படுத்துக' என்றனன் ; சோழிக வேனாதி அவ்வாறு செய்தான். இதன்கண் மருதி வரலாறும் விசாகையின் வரலாறும் மகளிர்க்குச் சிறந்த ஒழுக்கங்களை அறிவுறுத்துவன ; பின்னது கற்பதற்கு மிக்க சுவை பயப்பதுமாகும் மருதியென்பாளுக்குச் சதுக்கப் பூதம் கூறும் வாயிலாக, 'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப், பொய்யில் புலவன் பொருளூரை தேறாய்' எனத் திருவள்ளுவரும், திருக்குறளும் பாராட்டப்படுதல் அறிந்து மகிழற்குரியது.) கடவுள் மண்டிலங் காரிருள் சீப்ப நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் உதய குமரற் குற்றதை யுரைப்பச் 5 சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து மாதவ ரெல்லாம் மணிமே கலைதனை இளங்கொடி யறிவது முண்டோ விதுவெனத் துளங்கா தாங்கவ ளுற்றதை யுரைத்தலும் ஆங்கவள் தன்னை யாருயிர் நீங்கிய 10 வேந்தன் சிறுவனொடு வேறிடத் தொளித்து மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக் கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங் குயர்ந்தோங் குச்சி உவாமதி போல நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகற்செய 15 வேலுங் கோலும் அருட்கண் விழிக்க தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம் மனக்கினி தாக வாழிய வேந்தே! இன்றே யல்ல இப்பதி மருங்கில். 20 கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர் பாற்சென் றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினை யுருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் 25 மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகா 1தொழி நீயெனக் கன்னி யேவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் 30 காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசு ராமனின் பால்வந் தணுகான் 35 அமர முனிவ னகத்தியின் றனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங் குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள் 40 தெள்ளுநீர்க் காவிரி யாடினள் வரூஉம் பார்ப்பனி மருதியைப் பாங்கோ ரின்மையின் யாப்பறை யென்றே யெண்ணின னாகிக் காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீவா என்ன நேரிழை கலங்கி 45 மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன் முத்தீப் பேணும் முறையெனக் கில்லென மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள் 50 பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன் கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன் வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் யான்செய் குற்றம் யானறி கில்லேன் 55 பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும் மாபெரும் பூதந் தோன்றி மடக்கொடி நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும் தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் 60 பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை யாகலின் 65 மடவரல் ஏவ மழையும் பெய்யாது நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது 70 பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக் கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம் மன்முறை யெழுநாள் வைத்தவன் வழூஉம் பின்முறை யல்ல தென்முறை யில்லை ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால் 75 வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலு முண்டென இகந்த பூதம் எடுத்துரை செய்ததப் பூத முரைத்த நாளா லாங்கவன் தாதை வாளால் தடியவும் பட்டனன் 80 இன்னுங் கேளாய் இருங்கட லுடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவ ரேறே தரும தத்தனுந் தன்மா மன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித் தெய்வங் காட்டுந் திப்பிய ஓவியக் 85 கைவினை கடந்த கண்கவர் வனப்பினர் மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக் 1கொத்தன ளென்றே யூர்முழு தலரெழப் புனையா வோவியம் புறம்போந் தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை 90 உலக அறவியி னூடுசென் றேறி இலகொளிக் கந்தின் எழுதியபாவாய் உலகர் பெரும்பழி யொழிப்பாய் நீயென மாநக ருள்ளீர் மழைதரு மிவளென நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும் 95 தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின் மைய லூரோ மனமா சொழியாது மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன் இப்பிறப் பிவனொடுங் கூடே னென்றே நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி 100 மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின் தரும தத்தனும் தந்தையுந் தாயரும் பெருநகர் தன்னைப் பிறகிட் டேகித் தாழ்தரு துன்பந் தலையெடுத் தாயென நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி 105 மிக்கோ ருறையும் விழுப்பெருஞ் செல்வத்துத் தக்கண மதுரை தான்சென் றடைந்தபின் தரும தத்தனுந் தன்மா மன்மகள் விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது பெண்டிரைப் பேணேன் இப்பிறப் பொழிகெனக் 110 கொண்ட விரதந் தன்னுட் கூறி வாணிக மரபின் வருபொரு ளீட்டி நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின் எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண் டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன் 115 அந்த ணாள னொருவன் சென்றீங் கென்செய் தனையோ விருநிதிச் செல்வ பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும் புத்தே ளுலகம் புகாஅ ரென்பது கேட்டு மறிதியோ கேட்டனை யாயின் 120 நீட்டித் திராது நின்னக ரடைகெனத் தக்கண மதுரை தான்வறி தாக இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே! மற்றவ னிவ்வூர் வந்தமை கேட்டுப் பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து 125 நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று நம்முணா மறிந்திலம் நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் 130 நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ உளனில் லாள எனக்கீங் குரையாய் இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன் அப்பிறப் பியான்நின் னடித்தொழில் கேட்குவன் 135 இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது தானஞ் செய்யெனத் தரும தத்தனும் 140 மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி ஆங்கவ னவளுடன் செய்த நல்லறம் ஓங்கிரு வானத்து மீனினும் பலவால் குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள் அமர னருளால் அகனக ரிடூஉம் 145 படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல் மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச் சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த 150 விரிபூ மாலை விரும்பினன் வாங்கித் தொல்லோர் கூறிய மணமீ தாமென எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின் 155 ஏறிய செங்கை யிழிந்தில திந்தக் காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான் மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன் ஊழிதோ றூழி யுலகங் காத்து 160 வாழி யெங்கோ மன்னவ என்று மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும் வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இன்றே யல்ல என்றெடுத் துரைத்து நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் 165 இன்று முளதோ இவ்வினை யுரைமென வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத் தீதின் றாக செங்கோல் வேந்தென மாதவர் தம்முளோர் மாதவ னுரைக்கும் முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் 170 கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும் தள்ளா தாகுங் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் 175 நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர் சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள் காதல னுற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தனள் 180 மற்றவள் பெற்ற மணிமே கலைதான் முற்றா முலையினள் முதிராக் கிளவியள் செய்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும் ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள் ஆங்கவ ளவ்வியல் பினளே யாயினும் 185 நீங்கா னவளை நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமங் காழ்கொள ஆரிரு ளஞ்சான் அம்பல மடைந்தனன் காயசண் டிகைவடி வாயினள் காரிகை காயசண் டிகையும் ஆங்குள ளாதலின் 190 காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சைய னொருவன் தோன்றி ஈங்கிவள் பொருட்டால் வந்தன னிவனென ஆங்கவன் தீவினை யுருத்த தாகலின் மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன் 195 உதய குமரன் ஒழியா னாக ஆங்கவள் தன்னை யம்பலத் தேற்றி ஓங்கிருள் யாமத் திவனையாங் குய்த்துக் காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையுங் கூஉய் 200 விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கவன் தன்கை வாளா லம்பலத் தீங்கிவன் றன்னை யெறிந்ததென் றேத்தி மாதவர் தம்முளோர் மாதவ னுரைத்தலும் 205 சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி யான்செயற் பால திளங்கோன் தன்னைத் தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் 210 மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன் 215 அணிகிளர் நெடுமுடி யரசாள் வேந்தென். உரை 1-4. கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப-ஞாயிற்று மண்டிலம் கரிய இருளை ஒட்டித் தோன்ற, நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு- நெடிய நிலையாகிய தூணின்கண் உள்ள பாவையுடன், முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-சம்பாபதி கோயிலையும் வழிபாடு செய்வோர், உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதய குமரனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கூற: கந்திலும் கோட்டத்திலுமுள்ள பாவையையும் முதியோளையும் வழிபடல் புரிந்தோர் என்க., 5-10. சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து மாதவர் எல்லாம்-சக்கர வாளத்துள்ள அருந்தவரனைவரும் மன்னவன் புதல்வனிறந்த துயரத்தைக் கேட்டு, மணிமேகலைதனை இளங்கொடி அறிவதும் உண்டோ இது என-மணிமேகலையை நோக்கி இளங் கொடியே நீ இச்செயல்பற்றி அறிந்திருக்கின்றனையோ எனவினவ, துளங்காது ஆங்கவள் உற்றதை உரைத்தலும் - மணிமேகலை நடுங்காமல் நிகழ்ந்தவற்றைக் கூறுதலும், ஆங்கவள் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத்து ஒளித்து - அவளை இறந்து கிடந்த அரசிளம் புதல்வனுடன் ஓரிடத்து ஒளித்துவைத்து ; தன்பாற் பிழையின்மையின் துளங்காதுரைத்தனள் என்க. வேறிடத்து - வேறு மறைவான இடத்தில். 11-18. மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில் காப்போருக்குக் கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு அண்மையிற் சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின் நடுவேயுள்ள முழுமதியைப் போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய - மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும் கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி - நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய வேந்தே - நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட ஆண்டுகளனைத் திலும் மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே; வாயில் - வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு பொருட்பன்மொழிகள். செய, விழிக்க என்பன வியங்கோள்; செயவெனெச்சமாகக் கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம். வேலும் கோலும் அருட்கண் விழிக்க என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ வேண்டுமென்றவாறாயிற்று. ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு; அத்துச்சாரியை தொக்கது. இனிதாக: பன்மை யொருமை மயக்கம். மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை கூறியபின், அவருளொருவர், உதயகுமரன் கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம் நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால் தீங்கிழைத்துக் கொலையுண்ட இருவர் வரலாறு களை அரசர்க்குக் கூறுகின்றார். 19-24. இன்றே அல்ல - இன்றுமட்டுமல்ல; இப் பதி மருங்கில்- இந் நகரத்தின்கண், கன்றிய காமக்கள்ளாட்டு அயர்ந்து - அடிப் பட்ட காமமாகிய கள்ளுண்டலைச் செய்து, பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும் - கற்புடைய மகளிரிடம் அவரை விரும்பிப் போய் நெருங்கியும், நற்றவப்பெண்டிர் பின் உளம் போக்கியும் - நல்ல தவஞ்செய்யும் மகளிரின் பின்னர் உளத்தைச்செலுத்தியும், தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்-ஊழ்வினை சினந்துவந்தூட்ட உயிர் துறந்தோர், பாராள் வேந்தே பண்டும் பலரால் - மண்ணுல காளும் மன்னவர் ஏறே முன்னரும் பலர் இருந்திருக்கின்றனர்; கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த. நற்றவம் - வீடுபெறுதற்குச் செய்யுந் தவமுமாம்; 1"நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்" என்பது காண்க. இன்றேயல்ல பண்டும் பலரால் என்க. 25-32. மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் - அரசர் குலத்தைப் பொன்றக்கெடுத்த பரசுராமன்முன், தோன்றல் தகாது ஒழி நீ என - நீ வெளிப்படுதல் தகாது இந் நகரை விட்டு நீங்குவாயாக என்று, கன்னி ஏவலில் - சம்பாபதி ஆணையிட்டமையால், காந்த மன்னவன் - காந்தன் என்ற அரசன், இந்நகர் காப்போர் யார் என நினைஇ-தான் நீங்கின். இந் நகரைக் காப்போர் யாவர் என நினைத்து, நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குற - சம்புத்தீவிலுள்ள பகைவர்கள் நடுக்கமடையுமாறு, காவற் கணிகை தனக்கு ஆம் காதலன் - காவற்கணிகையிடத்து தோன்றிய புதல்வனும், இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்- பகைவர் வெகுண்டு எதிர்ப்பினும் அவர்க்கு வலி குறைதல் இல்லாதவனும் ஆகிய, ககந்தன் ஆம் என-ககந்தன் என்பவனே காத்தற்குப் பொருந்தியவனாவான் என்று, காதலின் கூஉய் - அவனை அன்பொடும் அழைத்து; மருங்கு-குலம்; 1"சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" என்பதன் உரை காண்க. மழுவாள் நெடியோன்-பரசுராமன்; திருமாலின் தோற்றமாகலின் 'நெடியோன்' எனப்பட்டான்: மழுவாள்-மழுவாகிய வாள்; சிவன்பால் தவஞ்செய்து பெற்ற பரசு. இவன் தன்னாற் கொலையுண்ட கார்த்தவீரியன் என்னும் அரசனுடைய புதல்வர்கள் தான் இல்லாதபொழுதில் தன் தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கொன்றமைபற்றி எழுந்த செற்றத்தால் இருபத்தொரு தலைமுறைகாறும் அரசர்குலத்தை அழித்தலை நோன்பாகக் கொண்டனனென்பது வரலாறு. நெடியோன்றன் முன் தோன்றல் தகாது என்றமையின் அவன் ஈண்டுப் போந்தமை பெற்றாம். ‘ஒளி' என்பது பாடமாயின் மறைந்து கொள் என்பது பொருளாகும். கன்னி-துர்க்கையுமாம். நடுக்குறத் தோன்றிய காதலன் என்க. காவற் கணிகை-அரங்காடுங் கூத்தி, அரசனுடைய காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில்லோன்-வலிகுறையாதவன்; தோலாதவன். என-என்றுநினைந்து. 33-39. அரசாள் உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும் உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன் பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில்; கணிகை மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர் நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய சொல். ககந்தன்: அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க 'என்று கூறி' என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றன னென்பது பதிகத்தால்2 அறியப்படும். 40-44. தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்-தெளிந்த நீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற, பார்ப்பனி மருதியைப் பாங்கோர், இன்மையின் - பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்திலுள்ளோர் ஒருவரும் இல்லாமையால், யாப்பறை என்றே எண்ணினன் ஆகி - உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீ வா என்ன - காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன் நீ வா என அழைக்க, நேரிழை கலங்கி - அவள் கலக்கமுற்று ; காவிரி வாயில் - சங்கமுகத் துறையுமாம். பாங்கோரின்மையின் நீ வா என்ன என்றியையும். 45-49. மண்திணி ஞாலத்து - அணுச்செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிராயின்-வேண்டுங்கால் மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிராயின், பிறர் நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம்-யானோ அயலான் உள்ளத்திற் புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என - ஆகலின் முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் - மிகப் பெரிய துன்பத்துடன் தன் மனையின்கண் செல்லாளாய் ; மழைவளம் - மழையாகிய வளம் ; வளம் - வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன். முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென்றிசையங்கி என்பன. பேணுதல் - கணவற்குத் துணையாயிருந்து அதனை வளர்த்தல். 50-56. பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தையடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதில் ஒளித்தேன், வான்தரு கற்பின் மனை யறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான் செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத் தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத் துண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கத்துக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி பலவாறு புலம்புதலும்; பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம் ; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல் கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன், மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின் பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால் ‘பொய்யினை கொல்லோ' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு 1"தவமறைந் தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன் என்பதற்கு ‘இல்லறத்திற்குத் துணையாக நிற்றலை யொழிந்தேன்' என்று பொருள் கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர். 57-58. மாபெரும் பூதம் தோன்றி - மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடி நீ கேள் என்றே நேரிழைக்கு உரைக்கும் - மடக்கொடியே நீ கேட்பாயாக என்று அவட்குக் கூறும். 59-69. தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெரு மழை பெய்யும் எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் - தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம் மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழி களையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பி- கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல் கடலியை ஆகலின் - வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது - நங்காய் நீ ஏவினால் மழையும் பெய்யாது, நிறையுடைப் பெண்டிர் தம்மே போல - நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை - பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மை யுடையையும் அல்லை, ஆங்கவை ஒழிகுவை ஆயின் - முற்கூறிய நின் செயல் களை நீங்குவாயானால், ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது - நங்காய் உயர்ந்த வானத்து மழையும் நீ ‘பெய்' என மொழியிற் பெய்யா நிற்கும் ; "தெய்வந் தொழாஅள்...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில் வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இக் குறளை 1உரையளவையாகக் கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள பெருமதிப்பை இனிது புலப்படுத்தும். பொருளுரை - முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை ; மெய் யுரையுமாம்; பொருள் - மெய்ம்மையாதலைப் 'பொருள்சேர் புகழ்' என்பதனாலறிக. பிசி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாவது; இது பிதிர் எனவும், விடுகதையெனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் 2"நொடியொடு புணர்த்த பிசியி னான" என நொடியைப் பிசிக்கு அடையாகவே கூறியுள்ளார். ஈண்டு நொடி என்பதற்கு வறுமொழி என்று கூறுதல் சாலும். மடவரல் : முன்னிலைப் பெயர். 70-79. பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல - விரும்பிய வண்ணம் ஒழுகும் பெண்டிரைக் கட்டுவதுபோல, கட்டாது உன்னை என் கடுந் தொழிற்பாசம் - எனது கொடிய தொழிலையுடைய பாச மானது நின்னைப் பிணியாது, மன்முறை எழுநாள்வைத்து-அரசன் முறை செய்தற்குக் காலவளவாக ஏழுநாள் நிறுத்தி, அவன் வழுஉம் பின் முறை அல்லது - அந்நாட்களுள் அவன் முறை செய்யாது தவறிய பின்பல்லது, என்முறை இல்லை - யான் முறை செய்யு மாறில்லை, ஈங்கெழுநாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை - மெல்லியலே இன்றைக்கு ஏழாம் நாளில் நின்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோனை, வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என - ககந்தன் கேள்வியுற்று வாளினால் ஒறுத்தலும் உண்டு என்று, இகந்த பூதம் எடுத்துரை செய்தது-தீமையைக் கடந்த பூதம் எடுத்துக் கூறியது, அப்பூதம் உரைத்த நாளால் ஆங்கவன் தாதை வாளால் தடியவும் பட்டனன்-அப்பூதங் கூறிய நாளிலேயே அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டனன்; நீ அங்ஙனம் விழாக் காண்டல் முதலியன செய்து போந் தாயாயினும் கற்பு நெறி கடந்து அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் போலாகாயாகலின் என் பாசம் உன்னைக் கட்டா தென்றும், நின்பால் உள்ளத்தைச் செல்ல விடுத்துப் பிறர்மனை நயத்தலாகிய குற்ற மிழைத்தோனைப் புடைத்துண்டல் வழுவன்றாயினும் ஏழுநாளளவில் அரசன் முறை செய்யா தொழியினே அங்ஙனம் செய்யலாகுமென்றும் பூதங் கூறிற்றென்க. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரை அதற்குத்தக ஒறுத்தல்; 1"முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வவ்வல்" என்றார் பிறசான்றோரும். பின்முறை - பின்பு. எழுநாளில் - ஏழாவது நாளில். மயரி - மயக்கமுடையான். நாளால் - நாளில். 80-81. இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவர் ஏறே-பெரிய கடலை ஆடையாக வுடைய நிலவுலகினை யாளும் செல்வமுடைய அரசர்களுள் ஏறனையாய் இன்னும் கேட்பாயாக ; 82-87. தருமதத்தனும் தன் மாமன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் - தருமதத்தன் என்னும் வணிகனும் அவன்றன் மாமன் மகளாகிய அழகிய பெரிய கண்களையுடைய விசாகை என்பவளும், பேணி தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத்தால் விரும்பி வியப்புடைத்ததாக எழுதப்பட்ட செய்தொழிலின் எல்லை கடந்த ஓவியம்போலக் கண்களைக் கவரும் எழிலுடையர், மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர் எழ- அவருள் தருமதத்தன் மைத்துனன் முறைமையுடையனாதலின் விசாகை அவனுடன் காந்தருவ மணத்திற்கு இயைந்தனள் என்று ஊரெங்கும் அலருண்டாக ; தெய்வம் பேணிக் காட்டும் ஓவியம் எனவும், கைவினை கடந்த ஒவியம் எனவும் கூட்டுக; 2"ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவமமைக்குந் தன்மை, யாதெனத் திகைக்கு மல்லால் மதனற்கு மெழுத வொண்ணாச், சீதை" என்பது ஈண்டு அறியற்பாலது. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர்; அவருள் அவன் மைத்துனன் முறைமையால் அவள் ஒத்தனள் என விரித்துரைக்க. 88-94. புனையா ஓவியம் புறம்போந்து என்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை-ஒள்ளிய நெற்றியையுடைய விசாகை இல்லத்தினின்றும் நீங்கி வண்ணங்களைக்கொண்டு எழுதாது வடிவம் மட்டும் அமைத்த ஓவியப்பாவை வெளிப்போந்தாற் போல, உலக வறவியின் ஊடுசென்று ஏறி - சென்று உலக வறவியின்கண் ஏறி, இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய் - விளங்கும் ஒளியையுடைய தூணின்கண் எழுதப்பட்ட தெய்வப்பாவையே, உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீ என - இவ்'d2வூரிலுள்ளோர் கூறும் பெரிய பழியை நீ நீக்குவாயாக என்று வேண்ட, மாநகர் உள்ளீர் மழை தரும் இவள் என நாவுடைப்பாவை நங்கையை எடுத்தலும் - நாவுடைய அப் பாவை மாநகரிலுள்ளோர்களேஇவள் மழையைத்தரும் கற்புடையாள் என்று விசாகையை உயர்த்திக் கூறுதலும்; செயற்கை யழகொன்றும் இன்மையானும், அலரெழுந்த வருத்தத்தால் ஒளி மாழ்கினமையானும் ‘புனையாவோவியம்' போல என்றார். மழைதரும் என்றமையால் கற்பின் சிறப்புக் கூறப்பட்டது. எடுத்தல்- உயர்த்தல்; உயர்த்துக் கூறுதல். விசாகை ஒழிப்பாய் நீ என, அப்பாவை நங்கையை எடுத்தலு மென்க. 95-100. தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் - இன்னணம் கடவுண் மொழியால் மெய்ம்மை காட்டித் தெளிவிக்கப் பெற்றிலேன் ஆயின், மையல் ஊரோ மனமாசு ஒழியாது - மயக்கங்கொண்ட ஊரவரின் மனவிருள் நீங்காது, மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்-மறுபிறப்பின்கண் மைத்துனற்கு மனைவியாகுவேன், இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே-இப்பிறப்பில் இவனொடு மணம் பொருந்தேன் என்று, நற்றாய் தனக்கு நற்றிறம் சாற்றி - தன் அன்னைக்கு நல்லியல்புகளை எடுத்துக்கூறி, மற்று அவள் கன்னிமாடத்து அடைந்த பின்-விசாகை கன்னிமாடத்திற் சேர்ந்த பின்னர்; மனமாசு - திரிபான எண்ணம், மைத்துனன் - அத்தை மகன் - தருமதத்தன். தான் குமரி மூத்தலால் தாய் துன்புறாவண்ணம் அவட்கு நற்றிறம் மொழிந்தாள் என்க. நற்றிறம் - விரதமுமாம். 101-106. தருமதத்தனும் தந்தையும் தாயரும் - தரும தத்தனும் அவனுடைய தந்தை தாயரும், பெருநகர் தன்னைப் பிறகிட்டேகி- காவிரிபூம்பட்டினத்தைப் பின் வைத்துச் சென்று, தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என - யாங்கள் அழுந்திய துன்பத்தினின்றும் நீக்கியருளினாய் என்று, நாவுடைப்பாவை நலம்பலஏத்தி- கந்திற் பாவையின் சிறப்புகளைப் பலவாறு துதித்து, மிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து-மேலோர் வாழ்கின்ற சிறந்த பெருஞ்செல்வத்தினையுடைய, தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தென்றிசையிலுள்ள கூடற்பதியிற் சென்று சேர்ந்த பின்னர்; பிறகிட்டேகுதல்-பின்னே யிருக்கும்படி கடந்து செல்லுதல். தலையெடுத்தாய்; நீக்கினாய் என்னும் பொருட்டு. 107-110. தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசா கையை அல்லது - தருமதத்தனும் தன் அம்மான் மகளாகிய மலர்ந்த பூக்களையணியும் கூந்தலையுடைய விசாகையை அன்றி, பெண்டிரைப் பேணேன்-வேறு மகளிரை விரும்பேன், இப்பிறப்பு ஒழிகென - இப்பிறப்பு இவ்வாறே நீங்குவதாக வென்று, கொண்டே விரதம் தன்னுட் கூறி-மேற்கொண்ட விரதத்தைத் தன்னுள்ளே கூறிக்கொண்டு; தருமதத்தனும் : உம்மை இறந்தது தழீஇய எச்சம். விரிதரு பூங்குழல் - அடர்ந்த பொலிவுள்ள கூந்தல் என்றுமாம். 111-114. வாணிக மரபின் வருபொருள் ஈட்டி - முறைமையாற் செய்யும் வாணிகத்தால் வளரும் பொருளைத் தொகுத்து, நீள் நிதிச் செல்வனாய்-பெருநிதி படைத்த செல்வனாய், நீள்நில வேந்தனின் - பெரிய நிலத்தினை ஆளும் அரசனால், எட்டிப்பூப்பெற்று - எட்டியென்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவும் பெற்று, இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் - நீங்காத செல்வத்தில் மேம்பட்டவனாய் அறுபதாம் ஆண்டினை எய்தினன். முறைமையால் வாணிகஞ் செய்தலாவது பிறர் பொருளையும் தம் பொருளை யொப்ப மதித்து மிகையாகக் கொள்ளாதும் குறையாகக் கொடாதும் செய்தலாம்; அங்ஙனஞ்செய்வார்க்கு அந் நல்வாணிகத்தால் மேன்மேற் பொருள் வளருமாகலின் 'வாணிக மரபின் வருபொருளீட்டி' என்றார். வருபொருள்-வளரும் பொருள். அவ்வாறு பெரும் பொரு ளீட்டிய வாணிக வாகையுடையார்க்கு அரசன் எட்டிப் பூ அளிப்பனென்க. 115-122. அந்தணாளன் ஒருவன் சென்று - அப்பொழுது மறைய வனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ இரு நிதிச் செல்வ - பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர் பலறம் செய்யினும் - மனைவி யில்லா தோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும், புத்தேள் உலகம் புகாஅர் என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை, கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும் உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம் கேட்டறிந் தனையானால், நீட்டித்து இராது நின் நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல் நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன் தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை அடைந்தனன்; நீட்டித் திராது நின்னகர் அடைக என்றது, விரைவில் நின்பதியை அடைந்து மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால் அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது. 122-124. இருநில வேந்தே - புவியை ஆளும் அரசே, மற்றவன் இவ்'d2வூர் வந்தமை கேட்டு - தருமதத்தன் இப்பகுதிக்கு வந்தது கேட்டு, பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள்- பொன்வளையுடைய விசாகையாகிய நல்லாளும் நாணாது மனையின் புறத்தே வந்து, பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று - பலர் நடுவே தீயனவற்றை நீங்கிய அவ்வணிகனிடம் சென்று ; இருநில வேந்து - சோழ மன்னன்: மாதவர் இங்ஙனம் விளித் துரைக்கின்றனர். அவன் பலர் சூழ இருந்தமையின் பல்லோர் நாப்பண் அவன்பாற் சென்று என்றார். அல்லவை - பொய் முதலிய தீமைகள். 127-134. நம்முள் நாம் அறிந்திலம்-நாம் நம்முள் ஒருவரை யொருவர் அறிகின்றிலம், நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன - முன்னாளில் நம்மை மருளச்செய்த இருவே முடைய அழகும் எங்கே மறைந்தன, ஆறைந்து இரட்டி ஆண்டு ஆயது-உனக்கு அறுபது யாண்டாயிற்று, என் நாறுஐங் கூந்தலும் நரை விராவுற்றன-நாறுகின்ற என் ஐம்பாலாகிய கூந்தலும் நரை விரவுதலுற்றன, இளமையும் காமமும் யாங்கொளித் தனவோ - இளமைப்பருவமும் அப்பருவத்தில் உண்டாம் வேட்கையும் இப் பொழுது எங்கு ஒளித்தனவோ, உளனில்லாள எனக்கு ஈங்கு உரையாய் - மனத்திட்பம் இல்லாதோய் எனக்கு இப்பொழுது கூறு வாயாக, இப்பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் - இப் பிறப்பிலே யான் நின் அடிகளை அடைவேனல்லேன், அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் - மறு பிறப்பில் யான் நின் குற்றேவல் கேட்கப் பெறுவேன்; பல்யாண்டின் முன் இருந்த தம் வடிவு பெரிதும் மாறி ஒருவரை யொருவர் கண்டுகொள்ளுதற் கரிதாயினமையின் 'நம்முள் நாம் அறிந்திலம்' என்றாள். கூந்தலும்: உம்மை எச்சப் பொருட்டு. கூந்தலின் ஐவகையுங் கருதி விராவுற்றன வெனப் பன்மை கூறினார். மேல் பத்தினியில்லோர் பல அறஞ் செய்யினும் புத்தேளுலகம் புகார் ஆகலின் விரைவில் நின்னக ரடைகவென அந்தணன் கூறியது கேட்டுப் போந் தான் என்றலின், தருமதத்தன் விசாகையை மணம்புரியும் கருத்துடன் வந்தானாவன் ; அறுபது யாண்டாகித் தலைநரைத்த பின்னும் மனம் நெகிழ்ந்து மணத்தை விரும்பினமையில் விசாகை அவனை 'உளனில் லாள' என விளிப்பாளாயினள். உளன்-ஊக்கம்; மனவுறுதி. ஆயின்: உரைநடை. கற்புடை மனைவி கணவனை வழிபடுமியல் பினளாகலின். நினக்கு மனையாகேன், மனைவியாகுவேன் என்பாள் முறையே நின் அடி யடையேன், அடித்தொழில் கேட்குவன் என்றாள் என்க. 135-142. இளமையும் நில்லா யாக்கையும் நில்லா - இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது, வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா-வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் - உம்பரு லகத்தைப் புதல்வராலும் பெற வியலாது, மிக்க அறமே விழுத்துணையாவது - எவற்றினும் மேம் பட்ட அறமேசிறந்த துணையாகுவது, தானம் செய் என-ஆதலின் அறம்புரிவாய் என்று கூற, தருமதத்தனும் மாமன்மகள்பால் வான் பொருள் காட்டி - தருமதத்தன் விசாகையிடம் தனது சிறந்த நிதிகளைக் காட்டி, ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம்-அவன் அவளுடன் சேர்ந்து செய்த நல்லறங்கள், ஓங்கிரு வானத்து மீனினும் பலவால் - மிகப்பெரிய விசும்பின்கணுள்ள மீனினும் பலவாகும் ; நில்லாது எனபன, ஈறு தொக்கன. ‘யாக்கையு நிலையா' எனபதும் பாடம். புதல்வருந் தாரார் என்னும் உம்மை பத்தினியுந் தாராள் என்பதுபடநிற்றலின் எச்சவும்மை; இதுவும், மிக்க அறமே விழுத்துணையாவது என்பது "பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும், புத்தே ளுலகம் புகாஅர்" என்பதற்கு மறுப்பாகும். தருமதத்தனாகிய அவனும் என்க. 143-154. குமரிமூத்த அக்கொடுங்குழை நல்லாள்-மணமின்றிக் கன்னியாகவே மூப்புற்ற அவ்விசாகையானவள், அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் படுபழிநீங்கி-உலக அறவியிற் கந்திற்பாவையிலுள்ள துவதிகனென்னும் தேவன் அருளினாலே ஊரிலுள்ளோர் கூறிய அலரினின்றும் நீங்கி, பல்லோர் நாப்பண்-பலர் நடுவண், கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்-கொடிகள் செறிந்த வீதியின் வருகின்றவள் கூந்தல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன்தம்முன் - முன்னர் மருதியின்பொருட்டு இறந்தோனின் முன்ன வனாகிய ஒருவன், கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள-காமம் வயிரங்கொள்ள இருண்ட உள்ளமுடையவனாய், சுரியிரும்பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த-தனது சுரிந்த கரிய குடுமியைச் சுற்றிப் புறத்தே தாழ்ந்த, விரி பூ மாலை விரும்பினன் வாங்கி-விரிந்த மலர்மாலையை விருப்பத்துடன் எடுத்து, தொல்லோர் கூறிய மணம் ஈது ஆமென - இது பண்டையோர் உரைத்த மணம் ஆகும் என்று, எல் அவிழ்தாரோன் - விளக்க மிக்க மாலையை யணிந்த அவன், இடுவான் வேண்டி - அவட்கு இட விரும்பி, மாலை வாங்க - மாலையை எடுத் தற்குக் கையினைத் தலையி லேற்ற, ஏறிய செங்கை நீலக்குறிஞ்சி நீங்காது ஆகலின்-அங்ஙனம் ஏறிய கையானது கருநிறம் வாய்ந்த குடுமியினின்றும் நீங்கவில்லை யாகலின் ; குமரிமூத்தல்-மணமின்றித் தமியளாய் மூத்தல். படுபழி-மைத்துனன் முறையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனளென்று ஊர் கூறிய பொய்ப்பழி. விசாகையின் வரலாற்றைக் கூறி முடித்தவர் முன்புதெய் வத்தினருளாற் பழிநீங்கி அவள் வீதியில் வருங்கால் நிகழ்ந்ததனைஈண் டெடுத்துக் கூறுகின்றனரென்க. மடிந்தோன் - ககந்தன் சிறுவன். மாலையை விரும்பினன் வாங்கி இடுவான் வேண்டி யென்க. மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினை ஏற்ற என வருவித்துரைக்க. 155-158. ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டு-விசாகைக்குச் சூட்டுதற் பொருட்டு மாலை வாங்குவதற்கு ஏறிய கை மீட்டும் இறங்கவில்லை என்பதைக் ககந்தன் கேள்வியுற்று, கடுஞ்சினம் திருகி - கடிய சினம் மிக்கு, மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - மகன் இறக்கும் துன்பத்தை நோக்கா தவனாய் அவனை வாளால் வெட்டினான்; நோக்கான் : நோக்கல் நோக்கம். 159-165. ஊழிதோ றூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்று-எம்மரசர் பெருமானே நீ ஊழியூழிதோறும் உலகங் காத்து வாழ்வாயாகவென்று, மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் - அவணிருந்த அருந்தவர்களுள் ஒருவன் உரைத்தலும், வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் - மாறாத பெருஞ் சிறப்புடைய மன்னவன் அவற்றைக் கேட்டிருந்து, இன்றே அல்ல என்று எடுத்துரைத்து-இன்று மட்டுமல்ல என எடுத்துக் கூறி, நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் - உறுதியை உணர்ந்த மாதவத்தீர் பல நன்னெறியைக் காட்டினீர் - இன்றும் உளதோ இவ்வினை உரைம் என- இந்நாளிலும் இத்தகைய தீவினை உண்டு கொல்லோ உரைத்தருளும் என; "இன்றே யல்ல" என்று தொடங்கியதனை இக்காதையின் 19-ஆம் அடியிற் காண்க. உரைம்என-உரையுமென் றுரைக்க. 166-168. வென்றி நெடுவேல் வேந்தன் கேட்ப-வெற்றி பொருந்திய பெரிய வேற்படையையுடைய மன்னவன் கேட்குமாறு, தீ தின்றாக செங்கோல் வேந்து என-அரசே நின் செங்கோல் தீ தின்றியிருக்க என்று கூறி, மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்-அம்முனி வர்களுள் ஒருவன் உரைப்பான்; 169-176. முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப்பட் டன ஐந்து உள - தத்துவத்தை யுணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த உலகில் விலக்கப்பட்டன ஐந்து உள்ளன, அவற்றில் - அவற்றுள்ளே, கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு குற்றங்களையும் காமம் நீக்காதாகும், தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆகலின் தம்மிடத்து அக்காமத்தை நீக்கினோர் ஏனைய குற்றங்களையும் நீக்கி னோராவர் என்று, நீங்கினர் அன்றே நிறைதவமாக்கள்-காமத்தை ஒழிந்தோரே நிறைந்த தவமுடையவர்கள், நீங்கார் அன்றே நீள்நில வேந்தே தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்-புவியினை ஆளும் அரசே அத்தகையகாமத்தினின்றும் நீங்காதோரே பொறுக்கவொண்ணாத நிரயத்தின்கண் வருந்துவோராவர் ; முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிடப்பட்ட பொருள்: பர தத்துவம். "அவற்றில்...தள்ளாதாகும் காமம்" என்றதனால் கடியப்பட்ட ஐந்தாவன: கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும். கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது. எனவே காம முடையோர் ஏனைய நான்கு குற்றங் களையும் உடையராவ ரென்ப தாயிற்று. 177-183. சேரிய நெடுங்கண் சித்திராபதி மகள் - சிவந்த அரி படர்ந்த பெரிய கண்களையுடைய சித்திராபதியின் மகள், காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-மாதவி காதலனாகிய கோவலன் இறந்த கொடிய துன்பத்தைப் பொறாதவளாய் அறவோர் சாலையை அடைந்தனள், மற்றவள் பெற்ற மணிமேகலை தான் முற்றாமுலையினள் முதிராக் கிளவியள் - அம்மாதவி பெற்ற மணிமேகலை யென்பவள் முற்றாத கொங்கையும் முதிராத சொல்லும் உடையளாகியும், செய்குவன் தவம் எனச் சிற்றிலும் பேரிலும் ஐயங்கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - தவம் செய்வேன் என்று சிறிய இல்லங் களிலும் பெரிய மனைகளிலும் பிச்சை யேற்று உண்டு உலக வறவியை அடைந்தனள்; மகளாகிய மாதவி பொறாள் அடைந்தனள் எனக் கூட்டுக. முதிராக்கிளவி - இளஞ்சொல்; மழலைமொழி. முலையினளும் கிளவியளு மாகிய மணிமேகலை என்றலுமாம். 184-189. ஆங்கவள் அவ்வியல்பினளே ஆயினும் - மணிமேகலை அவ் வியல்பினை உடையவளாயினும், நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் - அவளை எவ்விடத்தும் நிழல் போல நீங்காதவனாய், காரிகை பொருட்டால் காமம் காழ் கொள - அவள் பொருட்டுக் காமம் முற்றி, ஆரிருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - அரிய இருளிலே அஞ்சானாய் அம்பலத்தை அடைந்தனன், காயசண்டிகை வடிவாயினள் காரிகை-மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மாதின் வடிவமெய்தினள், காயசண்டிகையும் ஆங்குளள் ஆதலின் - காயசண்டிகை என்பாள் முன்னர் ஆங்கு இருந்தன ளாதலால் ; அரசனுக்குக் கடிதின் வெகுளியுண்டாகாமைப் பொருட்டு அடைந்தவன் உதயகுமரன் என்பதனை மாதவன் முதற்கண் வெளிப்படக் கூறிற்றிலனென்க. காயசண்டிகை பசிநீங்கி வானிலே செல்வுழி விந்த மலையின் மேற்சென்று விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கினள் என (20: 114-121) மேல் உரைத்தமையின், ஈண்டு "ஆங்குளளாதலின் கணவனாகிய விஞ்சைய னொருவன்தோன்றி' எனக் கூட்டியுரைத் தலுமாம். 190-193. காயசண்டிகையின் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி - காயசண்டிகையின் கொழுநனாகிய தப்பாத வாளினையுடைய விஞ்சையன் ஒருவன் தோன்றி, ஈங்கிவள் பொருட்டால் வந்தனன் இவன் என! ஆங்கவன் தீவினை உருத்தது ஆகலின் - காயசண்டிகை பொருட்டு இவன் ஈண்டு வந்தனன் என்று கருத அவனது தீவினையானது சினந்து பற்றியதாதலால்; ‘என’ என்பதனை, என்று கருத என விரித்துத் தோன்றி என்பதற்கு முடிபாக்குக. ஆங்கவன் தீவினை - உதயகுமரனது தீவினை; காஞ்சனனது தீவினையுமாம். 194-204. மதிமருள் வெண்குடை மன்ன-திங்கள்போலும் வெண் குடையினையுடைய வேந்தே, நின்மகன் உதயகுமரன் ஒழியானாக - நின் புதல்வனாகிய உதயகுமரன் நீங்காதிருக்க, ஆங்கவன் தன்னை அம்பலத்து ஏற்றி-காயசண்டிகை யுருக் கொண்ட மணிமேகலையை அம்பலத்தில் ஏற்றுவித்து, ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து - மிகுந்த இருளையுடைய இடையாமத்தில் இவனை அவ்விடத்திற் செலுத்தி, காயசண்டிகையின் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் - காயசண்டிகையின் கணவனாகிய கூரிய வாட்படையுடைய காஞ்சனனையும் அழைத்து, விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி - அவன் மனைவியாகிய விஞ்சை மகளிடம் இவன் வந்தனன் என்று வஞ்சமுள்ள விஞ்சையனது உள்ளத்தையும் மயக்கி, ஆங்கவன்தன் கை வாளால் அம்பலத்து ஈங்கிவன் தன்னை எறிந்தது என்று - அவனது கைவாளினால் உலகவறவியில் இவனை வெட்டி வீழ்த்தியது என்று, ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்-மாதவருள் ஒருவன் அரசனை வாழ்த்தி உரைத்தவளவில்; ஒழியானாக-அம்பலத்தை விட்டு நீங்காதிருக்க. அத்தீவினை ஏற்றி, உய்த்து, கூஉய், கலக்கி, எறிந்தது என எழுவாய் வருவித்து முடிக்க. இந் நிகழ்ச்சிக்குக் காரணம் பழவினையே யன்றி, காஞ்சனன், மணிமேகலை, உதயகுமரன் என்பவருள் ஒருவரும் அல்லர் என்றபடியாயிற்று. 205-215. சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி - சோழிக ஏனாதியின் முகத்தை நோக்கி, யான் செயற்பாலது இளங்கோன்தன்னைத் தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்-இளங்கோவை யான் செயற்பாலதனை விஞ்சையன் தான்செய்ததனால் தகுதியிலாதவனா யினான், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்-அரசனது காவல் இல்லையானால் தாபதர்களின் தவமும் மகளிர் கற்பும் இல்லையாகும், மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர் வினையாளன் தோன்றினன் என்பது-கன்றையிழந்த பசுவின் துயரினைப் பொறாமல் தன் மகனைத் தேர்க்காலிற் கிடத்தி முறைபுரிந்த மனு வேந்தனின் மரபில் ஒரு தீவினை யாளன் தோன்றினன் என்னும் சொல், வேந்தர்தம் செவி உறுவதன் முன்னம்-ஏனைய அரசர்கள் காதில் புகுவதன் முன், ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றி-இவனை ஈமத்தில் ஏற்றி, கணிகை மகளையும் காவல்செய்க என்றனன் அணிகிளர் நெடுமுடி அரசாள் வேந்து என்-கணிகையின் மகளாகிய மணிமேகலையையும் சிறை செய்க என்றுரைத்தனன் அழகு விளங்குகின்ற பெரிய முடியினையுடைய அரசாளும் மன்னன் என்க. சோழிக ஏனாதி என்பதற்குச் சோழனுடைய ஏனாதிப் பட்டம் பெற்ற சேனைத்தலைவன் என்பது பொருளாகும். ஏனாதி- தானைத் தலைவர்க்கு அரசர் அளிக்கும் பட்டப்பெயர் என்பதும், அதனுடன் மோதிரம் ஒன்றும் அளிக்கப்படும் என்பதும் தொல்காப்பியத்தில் 1"மாராயம் பெற்ற நெடுமொழியானும்" என்பதற்கும், சீவகசிந்தாமணியில் 2"ஆழி தொட்டான்" என்பதற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் அறியப்படும். ஒரே வழி அமைச்சராயினார் தானைத் தலைமை பூண்டு படையை நடத்துவரேல் அச்சார்பு பற்றி அவர்க்கும் இப்பட்டப்பெயர் பொருந்துமென்க. விஞ்சையன், மைந்தன், மணிமேகலை என்னும் மூவரிடத்தும் குற்றமில்லையாக மாதவன் தீவினை மேல் ஏற்றி உரைத்திருப்பினும் அரசனுக்கு ஒவ்வோரியல்பு பற்றி அம் மூவர் பாலுமே வெறுப்புளதாயிற் றென்பது "தகவிலன் விஞ்சையன்," "துயர்வினை யாளன் றோன்றினன்", "கணிகை மகளையும் காவல் செய்க," என்னும் அவன் கூற்றால் அறியப்படும். விஞ்சையன் செய்கையால் தான் முறைசெய்தற்கு இடனில்லாமற் போனமையின் "தகவிலன் விஞ்சையன்" என்றானென்க. காவலின்றெனின், நோன்புமின்று கற்புமின்று எனத் தனித்தனி முடிக்க. மனு வேந்தன் மகனை முறை செய்த வரலாறு பெரியபுரா ணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பால் அறியப்படும். இதனை 3"மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில்" 4"வாயிற் கடைமணி நடுநா நடுங்க; ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன், பெரும்பெயர்ப் புகாரென் பதியே" 5"சிந்தனை யாவிற்குமுற்றத் திருத்தேரின், மைந்தனை யூர்த்த மனுவோனும்" என்பவற்றானு மறிக: துயர்வினை துயருக்கு ஏதுவாகிய வினை; தீவினை. மண்டிலம் சீப்பப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு, மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, ‘இதனை நீ அறிவதுமுண்டோ' என, அவள் உரைத்தலும், அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன், ‘உரையும்' என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, வினைமுடிவு செய்க. சிறைசெய் காதை முற்றிற்று. 23. சிறைவிடு காதை பின்பு மன்னவன் அருளால் வாசந்தவையென்னும் முதியவள் மகன் துயரால் வருந்தும் இராசமாதேவியை அடைந்து அவள் வருத்தம் நீங்குமாறு பல கட்டுரைகள் கூறி ஒருவாறு ஆற்று வித்துச் சென்றனள்; அவள் சென்ற பின்பு, இராசமாதேவி தனது துயர் புறந்தோன்றாவண்ணம் அடக்கிக் கொண்டவளாய், 'மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன்' என்று எண்ணி அரசனைச் சார்ந்து, 'செங்கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக் கோலத்தைக் கண்டு அறிவு திரிந்த உதயகுமரன் அரசாட்சிக்கு உரியவனல்லன்; அவன்அக்கொடுந் தொழிலால் இறந்தது தக்கதே; தனது இளமையைப் பயனற்றதாகச் செய்த பேரறிவுடையளாகிய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று, 'என் றாள். அரசன், ‘நின் கருத்து அவ்வாறாயின் அவளைச் சிறையினின்றும் விடுவி' என்றனன்; என்றலும், மாதேவி அவளைச் சிறையினின்றும் விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவளைத் துன்புறுத்தல் கருதி மயக்கும் மருந்தூட்டியும், தீங்கியற்றுமாறு கல்லாவிளைஞனொருவனை ஏவியும், பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைவித்தும், அவள் ஒன்றானும் துன்பமின்றி யிருந்தமை கண்டு வியந்து நடுங்கி, அவளைநோக்கி, 'மகனையிழந்த துன்பம் பொறுக்கலாற்றாது இத் தீங்குகளைச் செய்தேன்; இவற்றை நீ பொறுத்தருளவேண்டும்', எனப் பலவாறுவேண்டினள். வேண்டவே மணிமேகலை, 'சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றிற் றோன்றிய இராகுலனை நஞ்சுவிழியரவு உயிருண்ட பொழுது அதனைப் பொறாது தீயிற் பாய்ந்து என்உயிரைவிட்ட நாளில் இளங்கோன் பொருட்டு எங்கிருந்தழுதாய் ? இப்பொழுது நின் மகனுடைய உடற்கழுதனையோ? உயிர்க்கழுதனையோ? உடற்கு அழுதனை யேல் அதனை யெடுத்துப் புறங் காட்டிட்டவர் யார்? உயிர்க்கு அழுதனை யேல் வினையின் வழி அது சென்று புகும் உடம்பினை உணர்தல் அரிது; அவ்வுயிர்க்கு நீ அன்பினையாயின் எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்,' என்றுரைத்து, மற்றும், ‘நின் மகனை விஞ்சையன் வெட்டி வீழ்த்துதற்குக் காரணமாயிருந்தது முற்பிறப்பில் அவன் மடைத்தொழிலாள னொருவனை வெட்டி வீழ்த்திய தீவினையேயாகும்', என்று கூறி, 'இச் செய்திகளை நீ எங்ஙனம் அறிந்தாயோ? என்னில், நடந்தது இவ்வாறாகும்,' என்றுதான் உவவனஞ் சென்றது முதலாகத் தெய்வக் கட்டுரை தெளிந்தது ஈறாக யாவற்றையும் விளங்க வுரைத்தனள். உரைத்தவள் பின்னும், 'நீ மருந்தால் எனக்குப் மத்தேற்றினை; யான் மறுபிறப் புணர்ந் தேனாதலின் சிறிதும் அறிவு பிறழா திருந்தேன்; உன் ஏவலால் கல்லாக்கயவன் என்பால் வந்தகாலை வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரவலியால் ஆணுருக்கொண்டிருந்தேன்; நோயில்லாத என்னைப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைப்பித்தாய்; ஊனொழி மந்திர முடைமையினாலே அத்துன்பத்தினின்றும் தப்பினேன். நீ சென்ற பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்த இராகுலனுக்கு இப்பிறப்பில் ஈன்ற தாயாதலின் உனது துயரினைக் களைந்து தீவினையைப் போக்கி உன்னை நன்னெறிப்படுத்தற் பொருட்டே வான் வழியே செல்லுதலையும், வேற்றுருக் கொள்ளு தலையும் யான் நினைந்திலேன்; உனது தடுமாற்றம் நீங்கி, யான் கூறும் இன்னுரையைக் கேட்பாயாக; காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தும் பெருந்துன்பம் விளைப்பனவாகலின், இவற்றைக் கைவிடுதல் வேண்டும்; இவற்றைத் துறந்தோரே சீல முடையோராவர்; செற்றத்தை அடக்கினோரே முற்றவுணர்ந் தோராவர்; வறியோர்க்கு இல்லாதவற்றை அளிப்பவரே வாழ்பவர் எனப்படுவர்; வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கினோரே மறுமை யுலகினை அறிந்தோராவர்; மன்பதைக்கெல்லாம் அன்பு ஒழியாதவரே தத்துவத்தை உணர்ந்தோராவர்,' என்று ஞான மாகிய நீரினை இராசமாதேவியின் செவியில் வார்த்து, அவளது துயரகிய தீயினை மணிமேகலை அவிப்ப, அவள் மனந்தெளிந்து மணிமேகலையை வணங்கினள். மணிமேகலை அதனைப் பொறாளாகி, ‘நீ என் கணவனைப் பெற்ற தாயாதலன்றி, அரசனுடைய மாபெருந் தேவியாகவும் உள்ளாய்; ஆதலால் என்னை வணங்குதல் தகுதியன்று,' என்று கூறித் தானும் அன்புடன் அவளை வணங்கினாள். மன்னவ னருளால் வாசந் தவையெனும் நன்னெடுங் கூந்தல் நரைமூ தாட்டி அரசற் காயினுங் குமரற் காயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க் காயினும் 5 கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி கலங்கஞ ரொழியக் கடிதுசென் றெய்தி 1அழுதடி வீழா தாயிழை தன்னைத் 10 தொழுதுமுன் னின்று தோன்ற வாழ்த்திக் கொற்றங் கொண்டு குடிபுறங் 2காத்தும் 3செற்றத் தெவ்வர் தேஎந்தம தாக்கியும் தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகன் மன்னர் செல்வழிச் செல்கென 15 மூத்து விளிதலிக் குடிப்பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது மன்பதை காக்கு மன்னவன் றன்முன் 20 துன்பங் கொள்ளே லென்றவள் போயபின் கையாற் றுள்ளங் கரந்தகத் தடக்கிப் பொய்யாற் றொழுக்கங் கொண்டுபுற மறைத்து வஞ்சஞ் செய்குவன் மணிமே கலையையென் றஞ்சி லோதி யரசனுக் கொருநாள் 25 பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத் தறிவு திரிந்தோ னரசியல் தானிலன் கரும்புடைத் தடக்கைக் காமன் கையற அரும்பெற லிளமை பெரும்பிறி தாக்கும் அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச் 30 சிறைதக் கன்று செங்கோல் வேந்தெனச் சிறப்பின் பாலார் மக்க ளல்லார் மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச் செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல 35 என்னோ டிருப்பினு மிருக்கஇவ் விளங்கொடி தன்னோ டெடுப்பினுந் தகைக்குந ரில்லென்று அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு அறிவு திரித்திவ் வகனக ரெல்லாம் 40 எறிதரு கோலம்யான் செய்குவ லென்றே மயற்பகை யூட்ட மறுபிறப் புணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவின ளாகக் கல்லா விளைஞ னொருவனைக் கூஉய் வல்லாங்குச் செய்து மணிமே கலைதன் 45 இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப் புணர்குறி செய்து பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே காணம் பலவுங் கைநிறை கொடுப்ப ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த 50 பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும் தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து நாவியன் மந்திரம் நடுங்கா தோதி ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக் காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி 55 அரச ருரிமையி லாடவ ரணுகார் நிரயக் கொடுமகள் நினைப்பறி யேனென் றகநகர் கைவிட் டாங்கவன் போயபின் மகனைநோய் செய்தாளை வைப்ப தென்னென்று உய்யா நோயி னூணொழிந் தனளெனப் 60 பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப ஊணொழி மந்திர முடைமையின் அந்த வாணுதல் மேனி வருந்தா திருப்ப ஐயென விம்மி யாயிழை நடுங்கிச் செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் 65 என்மகற் குற்ற இடுக்கண் பொறாது பொன்னே ரனையாய் பொறுக்கென் றவள்தொழ நீல பதிதன் வயிற்றிற் றோன்றிய ஏலங் கமழ்தா ரிராகுலன் றன்னை அழற்கண் நாகம் ஆருயி ருண்ண 70 விழித்த லாற்றே னென்னுயிர் சுடுநாள் யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப் பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ உடற்கழு தனையே லுன்மகன் றன்னை 75 எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும் 80 மற்றுன் மகனை மாபெருந் தேவி செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி 85 விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே யாங்கறிந் தனையோ ஈங்கிது நீயெனிற் பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத் தெய்வக் கட்டுரை தெளிந்ததை யீறா 90 உற்றதை யெல்லா மொழிவின் றுரைத்து மற்று முரைசெயும் மணிமே கலைதான் மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினே னாயினேன் கல்லாக் கயவன் காரிருட் டான்வர 95 நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்தேன் ஊணொழி மந்திர முடைமையி னன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் 100 காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் தையா லுன்றன் றடுமாற் றவலத்து எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய் ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் 105 காருக மடந்தை கணவனுங் கைவிட ஈன்ற குழவியொடு தான்வே றாகி மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப் புதல்வன் றன்னையோர் புரிநூன் மார்பன் பதியோ ரறியாப் பான்மையின் வளர்க்க 110 ஆங்கப் புதல்வன் அவள்திற மறியான் தான்புணர்ந் தறிந்துபின் றன்னுயிர் நீத்ததும் நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும் சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக் கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப 115 மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப் பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங் கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி 120 கடாஅ யானைமுன் கட்கா முற்றோர் விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வது உண்ட கள்ளி னுறுசெருக்காவது கண்டு மறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர் 125 கையாற் றவலங் கடந்தது முண்டோ களவேர் வாழ்க்கைய ருறூஉங் கடுந்துயர் இளவேய்த் தோளாய்க் கிடுவென வேண்டா மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை துன்பந் தருவன துறத்தல் வேண்டும் 130 கற்ற கல்வி யன்றாற் காரிகை செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர் மல்லன்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர் அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர் திருந்தே ரெல்வளை செல்லுல கறிந்தோர் 135 வருந்தி வந்தோ ரரும்பசி களைந்தோர் துன்ப மறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர் மன்பதைக் கெல்லா மன்பொழி யாரென ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத் தேனா ரோதி செவிமுதல் வார்த்து 140 மகன்றுயர் நெருப்பா மனம்விற காக அகஞ்சுடு வெந்தீ யாயிழை யவிப்பத் தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து மாறுகொண் டோரா மனத்தின ளாகி ஆங்கவள் தொழுதலு மாயிழை பொறாஅள் 145 தான்றொழு தேத்தித் தகுதி செய்திலை காதலற் பயந்தோ யன்றியுங் காவலன் மாபெருந் தேவியென் றெதிர்வணங் கினளென். உரை 1-10. மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால் அழகிய நீண்ட கூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை எடுத்துரைத்தும், பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் - அவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கும் பயன் சிறந்த மொழி யினையுடையாள் ஆதலின், இலங்கு அரிநெடுங்கண் இராசமாதேவி-விளங்குகின்ற அரிபடர்ந்த பெரிய கண்களை யுடைய அரசன் பெருந்தேவி, கலங்கு அஞர் ஒழியக் கடிது சென்று எய்தி-கலங்குதற்குக் காரணமாகிய துன்பம் நீங்குமாறு விரைவிற் சென்று அவளிருப்பிடத்தையடைந்து, அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத் தொழுது முன்னின்று தோன்ற வாழ்த்தி-அவள் அடிகளில் வீழ்ந்து அழாமல் மன்னவன் றேவியை அஞ்சலி செய்து முன்னே நின்று நன்கு வாழ்த்தி ; மன்னவனருளாற் கடிது சென் றெய்தி என்க. மொழியினள் ஆகலின் என விரித்துரைக்க ; மொழியினளாகிய மூதாட்டி என்றியைத்தலுமாம். நிலக்கிழமை-அரசாளு முரிமை. ஆயினும் என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வந்தது ; விகற்பப் பொருட்டுமாம். ஆயிழை : சுட்டு. 11-16. கொற்றம் கொண்டு குடி புறம் காத்தும்-வெற்றி கொண்டு குடிகளைப் பிறர் நலியாமற் பாதுகாத்தும். செற்றத் தெவ்வர் தேஎம் தமதாக்கியும் - பகைமையை யுடைய மாற்றாரது நாட்டினைத் தம்முடையதாக்கியும் அன்றி, தருப் பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச்செல்க என-தருப்பைப் புல்லிற் கிடத்தி வாளாற் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கட் செல்க என்று கூறுமாறு, மூத்து விளிதல்-வாளா முதுமையுற்று இறத்தல், இக்குடிப் பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தகவுடைத்தே - இச்சோழர் குடியிற் பிறந்தோர்க்கு நாணுந் தகுதியை யுடைத்து ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழுகின்றிலது ; கொற்றம் - அரச வுரிமையுமாம். செற்ற தெவ்வர் என்பது பாடமாயின் வெகுண்டெழுந்த பகைவர் என்க. தமதாக்கியும் அன்றி என ஒரு சொல் வருவித்துரைக்க; தமதாக்கியும் மூத்து விளிதல் என்றியைத் துரைப்பாரு முளர். மூத்து விளிதலோடு பிணியால் விளிதலுங் கொள்க. போரிலுயிர் துறவாது நோயால் விளிந்த அரசரது யாக்கையை அந்தணர் தருப்பையிற் கிடத்தி வாளாற் பிளந்து அடக்குவரென்பது, 1"ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்; திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த, நீள்கழல் மறவர் செல்வுழிச்செல்கென, வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்" என்பதனால் அறியப்படும்: 2"மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர்..." என்னும் நச்சினார்க்கினியர் உரையும் ஈண்டு அறியற்பாற்று. மேல், ‘தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று' என வருதற் கேற்ப, 'குடிபுறங்காத்தும்' எனப் பாடம் கொண்டாம். 17-20. தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலு மன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப் படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மை களைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர்; காமத்தால் என்பது வருவித்துரைக்கப் பட்டது. என்னெனப் படும் - எத்தகையதென்று கூறப்படும்; இக்குடிப் பிறந்தோர்க்கு ஏலாத இழிவுடைய தென்றபடி. அவள் துன்புறுதல் அரசற்கு வருத்தத்தைச் செய்யுமாகலின் ‘மன்பதை காக்கு மன்ன வன்றன்முன், துன்பங் கொள்ளேல்' என்றாள். 21-30. கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி-செயலற வினையுடைய உள்ளத்தை மறைத்து அடக்கி, பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறமறைத்து - பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் கொண்டு அதனைப் புறத்தே தோன்றாமல் மறைத்து, வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று-மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன் என்று கருதி, அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெருந்தேவி, அரசனுக்கு ஒரு நாள் - ஒரு நாள், அரசன் பால், பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து-மற்றையோர் பின்னே செல்லாத பிக்குணி வடிவத்தைக் கண்டு, அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன் - அறிவு வேறுபட்ட உதயகுமரன் அரசாளும் தகுதியில்லாதவன், கரும்புடைத் தடக்கைக் காமன் கையற - கரும்பு வில்லையுடைய பெரிய கையை யுடைய காமன் செயலறுமாறு, அரும் பெறல் இளமை பெரும் பிறிதாக்கும்-பெறுதற் கரிய இளமைப் பருவத்தைப் பயன்படாது கெடச் செய்த, அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு-நல்லறிவு நேர்பட்ட மணிமேகலைக்கு, சிறை தக்கன்று செங்கோல் வேந்து என -செங்கோல் வேந்தே சிறை தக்க தன்று என மொழிய; கையாற்றுள்ளம் - புதல்வ னிறந்த துயருடன் கூடிய உள்ளம். தனது தீய எண்ணம் புறந்தோன்றாம் மறைத்தென்க. பிறர் பின் செல்லா-ஆடவர் விரும்பிப் பின் செல்லலாகாத, இவளால் முனிவருள்ளிட்ட பகையை வெல்லக் கருதியிருந்தானாகலின் காமன் கையறுவானென்க; 1"உருவிலாள னொருபெருஞ் சிலை யொடு, விரைமலர் வாளி வெறுநிலத் தெறிய...; அறம்படுத்தனள்" என்பதுங் காண்க. பெரும் பிறிதாக்கல் - கெடுத்தல். தக்கதன்று என்பது விகாரப்பட்டது. வேந்து: அண்மை விளி. என - என்று சொல்ல; அஞ்சிலோதி ஒரு நாள் அரசனுக்குச் சொல்ல வென்க. 31-34. சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் துன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று அரசன் கூற; மறப்பின் பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை. நீயே அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க. 35-38. என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று - இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள் கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து ; 39-42. அறிவு திரித்து - இவளது அறிவை மருந்தினால் வேறு படுத்தி, இவ்வகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே-இவ்வகன்ற ஊரிலுள்ளோ ரனைவரும் இவளை அடிக்கும் கோலத்தைச் செய்வேன் என்று கருதி; மயற்பகை யூட்ட-பித்தேறுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்ட, மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினை அறிந்த மணிமேகலை மறத்தலில்லா அறிவுடன் விளங்க; எறிதல் - கோலால் அடித்தல்; கல்லெறிதலுமாம். மயல் - மருள்; பித்து. மயலாகிய பகை யென்க. மயலூட்டலாவது - மருளுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்டல். 1"வஞ்சமுண்டு மயற்பகை யுற்றோர்" என்றார் இளங்கோ வடிகளும். "மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன், அயர்ப்பது செய்யா அறிவினே னாயினோன்" என இக்காதையுட் பின் வருதலும் அறியற்பாற்று. 43-48. கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச் செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங் கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது மிக்க அழகினையுடைய மார்பின்கண் பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ; அரசன் றேவி கூஉய் உரை யென்று கொடுப்ப வென்க. வல்லாங்கு-வல்லமை; 2"வல்லாங்கு வாழ்து மென்னாது" என்பது காண்க. நிறைய என்பது நிறை என விகாரமாயிற்று. 49-57. ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப ‘மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப் புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர்; மந்திரம் - வேற்றுரு எய்துவிக்கும் மந்திரம். மந்திரம் பிறர் செவிக்குப் புலனாகாவாறு நாப்புடைபெயரும் அளவானே ஓதல் பெறல் வேண்டுமென்பது 1"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின் நவிலப் பாடி" என்பதனாலும் அறியப்படும். ஆயிழை தெளிந்து ஓதி இருப்ப வென்க. உரிமை இல்-உரிமை மகளிர் இருக்கும் இல்லம்; இஃது அந்தப்புரம் எனப்படும்; அதன்கண் ஆடவர் எய்தப் பெறார் என்பதனை 2"ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்" என்பதனா னறிக; மகளிராலேயே காக்கப்படுதலின் இதனைக் 3"குழை முகப் புரிசை" என்பர் திருத்தக்கதேவர். 58-66. மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர் அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சி யுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க; மணிமேகலை காரணமாக உதயகுமரன் இறந்தமையின் 'மகனை நோய் செய்தாளை' என்றாள். என்னென்று - பொருந் தாதென்று என்ற படி. புழுக்கறை - புழுங்கச் செய்யும் அறை; 'புழுக்கறைப் பட்டோர் போன்று" (3.95) என முன் வந்தமையுங் காண்க. (இராச மாதேவி) என்னென்று காட்டி அடைப்ப வென்க. செய்தவத்தாட்டியை: முன்னிலையிற் படர்க்கை. சிறுமை - துன்பம், குற்றம்; என்றது மயற்கை யூட்டியது முதலிய மூன்றையும். பொறாது சிறுமைசெய்தேன் எனக் கூட்டுக. 67-79. நீலபதிதன் வயிற்றில் தோன்றிய - நீலபதி என்பவளது வயிற்றிற் பிறந்த, ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை - மணங்கமழும் மாலையினையுடைய இராகுலனை, அழற் கண் நாகம் ஆருயிர் உண்ண - நஞ்சுவிழி அரவு உயிரைக் கொள்ள, விழித்தல் ஆற்றேன் என்னுயிர்ச் சுடு நாள் - உயிர் வாழ்தலைப் பொறாமல் யான் என துயிரைத் தீயிலிட்ட ஞான்று, யாங்கிருந்து அழுதனை இளங்கோன் தனக்கு - நீ இளங்கோவிற்கு எங்கிருந்து அழுதாய், பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை-பூங்கொடியனைய தேவி பொருந்தா தனவற்றைச் செய்தாய், உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ - நீ நின் மகனது உடலுக்கு அழுதாயோ அன்றி உயிரினுக்கு அழுதாயோ, உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே - உடலின் பொருட்டு அழுதாயானால் நின் மகனைப் புறங் காட்டிலிட்டோர் யாவர், உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது - உயிரின் பொருட்டு அழுதாயேல் செய்வினை வழியே அவ்வுயிர் புகுமிடத்தைத் தெளிய அறிய ஒண்ணாது, அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-ஆராய்ந்த வளையல்களை யுடையவளே நின் மகனது உயிரினிடம் நீ அன்புடைமை யானால் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொள்ளல் வேண்டும்; அழற்கண் நாகம் - திட்டிவிடம் என்னும் பாம்பு; பார்வையால் உயிர் கொல்வது. விழத்தல் என்பது பாடமாயின், இழத்தல் எனப் பிரித்துக் கணவனை யிழந்திருத்தலை ஆற்றேனாய் எனப் பொருள் கொள்க. யாங்கிருந்தழுதனை - அழுதிலாய் என்றபடி, புக்கில்-புகும் இடம்; உடம்பு. வினையால் உயிர் புகும் புக்கில் உணர்வரிய தென்க. ஆய் தொடி: விளி. எவ்வுயிர்க்காயினும் - எல்லாவுயிர் கட்கும். உடம்பிலன்றி உயிரின்கண் வேற்றுமை யின்மையால் அவ்வுயிர்க் கன்பினையாயின் எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் என்றாள் ; அன்றி, எல்லாவுயிர்க்கும் அன்பு செய்வுழி நின் மகனுயிர்க்கும் அன்பு செய்தாயாவை என்றாளுமாம். 80-85. மற்று உன் மகனை மாபெருந்தேவி செற்றகள்வன் செய்தது கேளாய் - அரசமாதேவி, மற்றும் நின்மகனைச் சினந்த காஞ்சனன் கொலைபுரிதற்குக் காரணமான தீவினையைக் கேட்பாயாக, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்தாங்கு உருத்தெழும் வல்வினை - சோற்றுக் கலம் சிதையுமாறு வீழ்ந்த அட்டிலாளனை உடலைத் துண்டமாக வெட்டியமையால் தோன்றி எழுந்த வலிய வினையானது, நஞ்சு விழி அரவின் நல்லுயிர் வாங்கி-விழியில் நஞ்சினைக் கொண்ட பாம்பினால் அவனது நல்லுயிரைக் கொண்டு, விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே-இப்பிறவியில் விஞ்சையனது வாளினால் வீழ்த்தியது ; மாபெருந்தேவி: விளி. கள்வன் - காஞ்சனன். செற்றக் கள்வன் என்பது பாடமாயின், செற்றமாகிய கள்வன் என உருவக மாக்குக. உருத்து - உருக்கொண்டு, சென்ற பிறப்பிலே அரவினால் உயிர் வாங்கி இப்பிறப்பிலே வாளால் வீட்டியது என்க. வீட்டியது - கொன்றது; வீழ்த்தியது என்பதன் மரூஉவுமாம். 86-90. யாங்கறிந்தனையோ ஈங்கிது நீ எனில்-நீ இதனை எங்ஙனம் அறிந்தனை என வினாவின், பூங்கொடி நல்லாய்புகுந்தது இது என - பூங்கொடி போல்வாய் நிகழ்ந்தது இது வென்று, மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா-மலர் கொய்யும் பொருட்டுச் சுதமதியுடன் தான் உவவனம் சென்றது முதலாக, தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா - கந்திற்பாவையின் பொருண்மொழிகளைக் கேட்டுத் தெளிவுற்றது இறுதியாக, உற்றதை எல்லாம் ஒழிவின்று உரைத்து - நிகழ்ந்தன அனைத்தையும் தப்பாமற் கூறி ; ஈங்கிது - இச் செய்தி. கட்டுரையால் தெளிந்ததென்க. தெளிந்ததை: ஐ: அசை. உற்றதை யெல்லாம் ஒருமைப் பன்மை மயக்கம். 91-97. மற்றும் உரை செய்யும் மணிமேகலை தான்-மணிமேகலை பின்னுங் கூறுவாள், மயற்பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் - பித்தேற்றும் மருந்தை யுண்பித்தாயாகவும் மறு பிறப்பினை அறிந்தேன் ஆகலின் மறத்தலில்லா அறிவுடையேனாயினேன், கல்லாக் கயவன் கார் இருள் தான்வர நல்லாய் ஆணுரு நான் கொண்டு இருந்தேன் - மெல்லியலே அறிவிலாக் கீழ்மகன் கரிய இருளின்கண் வர யான் ஆண் வடிவங்கொண்டு இருந்தேன், ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது-பசி நீக்கும் மந்திரம் பெற்றிருந்தமையாலன்றோ நீ செய்த வஞ்சத்தினின்றும் தப்பியது ; மறுபிறப் புணர்ந்தேன் ஆகலின் என விரித்துரைக்க. வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரம் உடைமையினால் ஆணுரு நான் கொண்டிருந்தேன் எனவும் ஏது விரித்துரைக்க. மாணிழை: முன்னிலையிற் படர்க்கை. வஞ்சம் - உய்யா நோயின் ஊணொழிந்தனள் எனப் புழுக்கறை யடைத்தது. 98-101. அந்தரஞ் சேறலும் அயலுருக்கோடலும் - விசும்பூடு செல்லுதலையும் வேற்றுருக் கொள்ளுதலையும், சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்-முற்பிறப்பில் கணவனாயிருந் தோனைப் பெற்ற நினது கொடிய துன்பத்தை நீக்கித் தீவினைகளை ஒழிக்கும் பொருட்டு உளத்தி லெண்ண வில்லை; வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் என்க. 102-103. தையால்-தையலே, உன்றன்-உனது, தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து-தடுமாற்றத்துக்குக் காரணமாகிய வருத்தத்தைச் செய்யும் அறியாமையாகிய மயக்கத்தின் நீங்கி, இன்னுரை கேளாய் - யான் கூறும் இவ்வினிய மொழிகளைக் கேட்பாயாக ; எய்யாமை - அறியாமை. மையல் - செல்வச் செருக்குமாம். 104-111. ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை- அரசரது கொடுங்கோன்மையால் அனைவரும் தத்தம் நிலைகலங்கிய நல்ல நாட்டில் இல்லற ஒழுக்கினளாகிய ஒருத்தி, கணவனும் கைவிட-கணவனும் கைவிட்டமையான், ஈன்ற குழவியொடு தான் வேறாகி - தான் ஈன்ற குழந்தையினின்றும் தான் வேறிடத்துப் பிரிவுற்று, மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி - மயங்கி ஒரு திக்கிற் சென்று வரைவின்றி வாழுமிடத்து, புதல்வன் தன்னை ஓர் புரிநூன் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க- அக்குழவியை ஓரந்தணன் ஊரிலுள்ளோர் அறியாதவாறு வளர்த்து வர, ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான் புணர்ந்து அறிந்து பின் தன்னுயிர் நீத்தலும் - அப்புதல்வன் அவள் தன் தாய் என்னுந் தன்மையை அறியானாய் அவளுடன் கூடிப் பின்னர் உணர்ந்து தனது உயிரைத் துறந்ததனையும்; 1"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்" என்பது ஈண்டு அறியற்பாலது. "மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவலின்றெனில் இன்றால்" (22: 208--9) என முன்னரும் இக் கருத்து வந்துள்ளமை காண்க. காருக மடந்தை-நெய்வோர் குலத்துப் பிறந்த மாது எனவும் பொருள் படும். வரையாள் - தனது நலத்தினை நுகர்தற்குரியவர் உரியரல்லாதவர் என்னும் வரையறை யில்லாளாய்; பொருள் கொடுப்பார் யாவர்க்கும் விற்று என்றபடி. இதனால் காமத்தின் தீமை கூறப்பட்டது. 112-119. நீர் நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளைய மானினது வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில் வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி - மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத் தோனாகி, உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த கண்களினின்று சிந்து கின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும் - அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும் அறிவாயோ ; தன்னுயிர் நீத்ததும் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ என்க. மான்மறி - பெண் மானுமாம். பயிர்தல் - அழைத்தல். அதன் பான்மையனாகி - அதன் இயல்பினனாகி என்றுமாம். ஓட்டி எய்தோன் வேட்டுவன்: சுட்டு. இதனால் கொலையின் தீமை கூறப்பட்டது. 120-123. கடாஅ யானைமுன் கட் காமுற்றோர் விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது-கள்ளை விரும்பி யுண்டோர் மதம் பொருந்திய யானையின் முன்னர் நீங்காமற் சென்று அதன் வெள்ளிய மருப்பிலே வீழ்வது, உண்ட கள்ளின் உறுசெருக்காவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்-அழகிய நங்காய் அவர் கள்ளுண்டதனாற் போந்த பெருங்களிப்பினால் நிகழ்வதனைக் கண்டிருக்கின்றனையோ; கள்ளுண்டு களித்தோர் இங்ஙனம் யானைமுன் சென்று உயிர் துறத்தல் 1"புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று, மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்" என்பதனாலும் அறியப்படும். இதனால் கள்ளின் தீமை கூறப்பட்டது. 124-125. பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்- பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக் கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - செயலறவாகிய துன்பத்தினின்றும் நீங்கியதும் உண்டோ ; எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி. இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது. 126-127. களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா; உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவினை யளிப்பது உழவுத்தொழிலாகலின், பிற சில தொழில்களையும் உழவாக உருவகப்படுத்தி, வில்லேருழவர் சொல்லேருழவர் என்றிங்ஙனங் கூறுவர். சான்றோர் களவாகிய ஏரால் உழுது வாழ்தலாவது களவினாற் பிறர் பொருளை வௌவி உண்டு வாழ்தலாம்: 2"கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்" என்றார் பிறரும். களவு செய்தோர் கடுந்துயர் உறுதல் வெளிப் படையாகலின் ‘இதுவென வேண்டா' என்றாளென்க. இதனால் களவின் தீமை கூறப்பட்டது. 128-129. மன்பேருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்; 130-141. கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுதும் உணர்ந்தோராவர், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந் தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப் பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வனிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை மணிமேகலை அவிக்க; செற்றஞ் செறுத்தல் முதலியன இல்வழிக் கற்றகல்வி பயனுடைத் தன்று என்றுமாம்; மேலுரைத்த துன்பந்தரும் காம முதலிய வற்றைத் துறவாவழி, கல்வி பயனுடைத் தன்று என்றுரைத் தலுமாம். கல்வி காரிகையன்று எனக் கூட்டி, கல்வி அழகுடைத் தன்று என்றுரைப்பாரு முளர். செல்லுல கறிதலாவது மறுமையுலகம் உண்டென்பதையும் ஆண்டு இன்புறுதற்கு இவண் செய்யற்பாலது இது வென்பதனையும் அறிதல். துணிபொருள்-தத்துவ ஞானம். தெளிந்து - தெளிவித்து என்றுமாம். 142-147. தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து - தேற்றாங் கொட்டையால் தேற்றப் பெற்ற சிலவாகிய நீரைப் போல மனந் தெளிந்து, மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி - பகைமை கொண்டு சிந்தியாத மனத்தினை யுடையளாகி, ஆங்கவள் தொழுதலும் - மாதேவி வணங்குதலும், ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி-மணிமேகலை அதனைப் பொறாமல் தான் வணங்கித் துதித்து, தகுதி செய்திலை காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந் தேவி என்று - என் நாயகனைப் பெற்ற தாய் அன்றியும் அரசனுடைய பட்டத்துத் தேவியாக உள்ளாய் ஆகலின் நீ தக்க தொன்றினைச் செய்திலை என்று கூறி, எதிர் வணங்கினள் என் - மணிமேகலை எதிர் தொழுதனள் என்க. தேறு - தேற்றாம் வித்து, கலக்கமுற்ற சிறிய நீரானது தேற்றாம் வித்தினால் தெளிவடைதல் போல இராசமா தேவியின் கலங்கிய உள்ளம் மணிமேகலையின் அறிவுரையால் தெளிந்த தென்க. முற் பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்தோனை இப்பிறப்பிற் பெற்றாய் என்க. தகுதி செய்திலை - நீ வணங்கியது தகுதியன்று என்றபடி. வாசந்தவை யென்னும் மூதாட்டி மன்னவனருளாற் சென்றெய்தித் தொழுது முன்னின்று வாழ்த்தி, "மன்னவன்றன்முன் துன்பங்கொள்ளேல்" என்று போயபின் அஞ்சிலோதி கரந்து அடக்கிக்கொண்டு மறைத்து, ஒரு நாள் அரசன்பால் ‘ஆயிழை தனக்கு சிறைதக்கன்று' என, ‘சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல, குழலாள் அவளைக் கூஉய்க் கோயிலுட்புக்கு மயற்பகை யூட்ட, அறிவினளாக, கொடுப்ப அணைதலும், ஆயிழையிருப்ப, போயபின் அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்; அங்ஙனம் உரை செய்பவள் அகஞ் சுடு வெந்தீ அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய் ‘மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென, வினை முடிவு செய்க. சிறைவிடு காதை முற்றிற்று. 24. ஆபுத்திரனாடு அடைந்த காதை உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டு துஞ்சிய தனையும், மணிமேகலை சிறையில் வைக்கப் பட்டிருத்தலையும் கேட்டு வருந்தி நடுங்கி, அவளைச் சிறையினின்றும் விடுவிக்க நினைந்த சித்திராபதி அரசன் தேவிபாற் சென்று வணங்கி, 'மாபெருந்தேவி! கோவல னிறந்தா னென்று மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவப்பள்ளியை அடைந்ததும், அவள் மகளாகிய அரங்கக் கூத்தி பாத்திர மேந்தி மனைதோறுஞ் சென்று ஐயமேற்றதும் யாவரும் எள்ளி நகுதற்குரிய வாயின. இது நிற்க; உதயகுமரன் இறந்த தன்றி, மணிமேகலையால் இனி, இந் நகரத்திற் குண்டாகும் பெருந்துன்பமும் ஒன்றுண்டு; கேட்பாயாக; "முன்னொருநாள் மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி இந்நகரில் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரச் சோலையில் பேரழகின ளாகிய ஒரு மங்கையைக் கண்டு காதலித்து அவளோடும் ஒரு திங்களளவும் அச்சோலையில் உறைவானாயினன்; அம்மங்கை அவனிடஞ் சொல்லாது அகன்றனள்; அரசன் இளங்கொடி யாங் கொளித்தனளென்று பலவிடத்தும் தேடுவனாயினன்; அப்பொழுது நிலத்திற் குளித்தல் முதலிய அரிய ஆற்றல் களையுடைய சாரண னொருவன் வந்தனன்; அரசன் அவனை வணங்கி முன்னின்று ‘என் உயிர் போல்வாள் ஒருத்தி ஈங்கு ஒளித்தனள்; அவளை அடிகள் கண்ட துண்டாயிற் கூறுக,' என்று கேட்ப, அந்தச் சாரணன், 'அரச! அம்மடந்தையை யான் இப்பொழுது கண்டிலேனாயினும் முன்பு அறிந்துளேன்; அவள் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பவனுடைய தேவியான வாசமயிலை யென்பவள் வயிற்றிற் றோன்றியவள்; பீலிவளை யென்னும் பெயரினள்; அவள் பிறந்த நாளில் நிமித்திகனானவன் ‘இவள் பரிதிகுலத்தரச னொருவனைக் கூடிக் கருவுற்று வருவாள்,' என்று அரசனுக்குக் கூறினன்; ‘அவளே நீகூறிய மடந்தை; இனி, அவள் வயிற்றிற்றோன்றும் மகனே வருவான்; அவள் வாராள்; நீ கவலாதிருக்கக் கடவை; இன்னு மொன்று கேள்; இந்திர விழாச் செய்யாத நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரினைக் கடல் கொள்ளும்; இந்திர சாப மிருத்தலால் அது தப்பாது; இதனை உண்மை யெனக்கொண்டு இந் நகரைக் கடல் கொள்ளாதபடி ஆண்டுதோறும் இந்திரவிழாவை மறவாது செய்து வருக,' என்று சொல்லி விட்டுப் போயினன்; அந்நாள் தொடங்கி இந்நகருக்கு எப்பொழுது கேடு வருமோ என்று யாவரும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்; தன் பெயரைப்பெற்ற மடந்தை துன்பமுறுவாளாயின் அதனைப் போக்குதற்கு அத்தெய்வம் வருதலுங் கூடுமோவென்று யானும் அஞ்சாநின்றேன்,' என்று சொல்லிப் பரவி, ‘நன்மனம் பெற்ற நாடகக் கணிகையை என் மனைக்குப் போதருமாறு கட்டளையிடுக,' என்று கேட்ப, இராசமாதேவி, ‘கள்ளும் பொய்யுங் காமமும் கொலையும், உள்ளக் களவு மென் றுரவோர் துறந்தவை' ஆகும்; அவற்றையே கைக்கொண்ட உனது பரத்தைமைத் தொழிலைப் புலைமை யென் றெண்ணி வந்த இவள் உன்னுடன் போந்து உன் மனையிற் புகுதாள்; என்னுடனேயே இருத்தற்குரியள், ‘என்று சொல்லிக் கொண்டிருக்கையில், மணிமேகலையின் நிலைமையைக் கேட்ட மாதவி அதனைச் சுதமதிக்குக் கூறி வருந்திச்சென்று அறவணவடி களை வணங்கி அறிவித்து அவருடன் அவளைச் சிறை மீட்டற் பொருட்டு இராசமாதேவியிடம் வர, இராசமாதேவி அவரைக் கண்டவுடன் ஏனை இருவரோடும் எழுந்து எதிர் சென்று அவ ரடியை வணங்கினாள்; அவர், ‘அறிவுண்டாக' என்று ஆசி கூறினர்; அப்பால் அவள் அருந்தவர்க் கமைந்த தவிசொன்றில் அவரையிருத்தி அடிவிளக்கிச் சிறப்புச் செய்து, ‘எமது நல்வினையே மிகப் பெரியோராகிய நும்மை இங்கு எழுந்தருளச் செய்தது; நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து, மூத்தவிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு,' என்று கூற, அவர், 'யான் இவ்வுடம்பிற் பொருந்தி யிருந்தும் குடக்கில் மறையும் கதிரவனைப் போன்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோயுற்றார் இறந்தா ரென்கை யியல்பே;' என்று உரைத்து, பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களையும் அவருக்கு அறிவுறுத்தி, ‘எப்பொழுதும் நல்லறத்தையே பேணிக் கேட்டு அவ்வா றொழுகுமின்,' என மாதவிக்கும் சுதமதிக்கும் கூறி, மணிமேகலையை நோக்கி, நீ பிற அறங்களை யெல்லாம் கேட்ட பின்பு, இவற்றையும் இவற்றின் பகுதிகளையும் உனக்கு விளங்க உணர்த்துவேன்' என்று கூறித் தம்மிடஞ் செல்லுதற்கு எழுதலும், மணிமேகலை எழுந்து அவரை வணங்கி, பின்பு இராசமாதேவி முதலியோரை நோக்கி, ‘மாதவர் நன் மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந் நகரிலிருப்பேனாயின், உதயகுமரனுக்கு இவள் கூற்றா யிருந்தன ளென்று யாவருங் கூறுவர்; ஆதலால் இங்கிரேன்; இனி ஆபுத்திரனா டடைந்து பின்பு மணிபல்லவஞ் சார்ந்து புத்தபீடிகையைத் தரிசித்துவிட்டு, அப்பால் வஞ்சிநகரஞ் சென்று பத்தினிக் கடவுளைத் தரிசித்தபின் யாங்கணுஞ்சென்று நல்லறஞ் செய்துகொண்டிருப்பேன்; எனக்கு இடருளதாகுமோ என்று நீர் இரங்கன்மின்,' என்று கூறி அவர் களையும் வணங்கி ஆதவன் மறைந்த அந்திமாலைப் பொழுதிலே சென்று உலகவறவியையும் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வலங்கொண்டு துதித்து, விசும்பின் வழியே பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப் புறத்துள்ள ஓர் பூம்பொழிலில் இறங்கி, ஆங்குள்ள ஒரு முனிவனை வணங்கி, ‘இந்நகரின் பெயர் யாது? இதனை யாளும் அரசன் யார்? என்று கேட்டாள்; அம்முனிவன், ;இதன் பெயர் நாகபுரம் என்பது; இதனை யாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணிய ராசன் என்பான்; இவன் பிறந்தநாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தலறியாது; மண்ணும் மரங்களும் பிறவும் பல வளங் களையும் மிகத் தாராநிற்கும்; உயிர்கட்கு ஒருவகையான நோயு மில்லை,' என்று அரசன் பெருமையை அவளுக்குக் கூறினான். மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோ னென்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி 5 மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக் காவலன் றேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு அரவே ரல்கு லருந்தவ மடவார் உரவோற் களித்த வொருபத் தொருவரும் ஆயிரங் கண்ணோ னவிநயம் வழூஉக்கொள 10 மாயிரு ஞாலத்துத் தோன்றிய வைவரும் ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பி னொருநூற்று நால்வரும் திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் றன்முன் உருப்பசி முனிந்த வென்குலத் தொருத்தியும் 15 ஒன்று கடைநின்ற வாறிரு பதின்மரித் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாண்முதல் யானுறு துன்ப மியாவரும் பட்டிலர் மாபெருந் தேவி மாதர் யாரினும் பூவிலை யீத்தவன் பொன்றின னென்று 20 மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும் நகுத லல்லது நாடகக் கணிகையர் தகுதி யென்னார் தன்மை யன்மையின் 25 மன்னவன் மகனே யன்றியு மாதரால் இந்நக ருறூஉ மிடுக்கணு முண்டால் உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டுப் பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல் கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா 30 இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமி லொருசிறைத் தானே தமிய ளொருத்தி தோன்ற இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று மன்னவ னறியான் மயக்க மெய்தாக் 35 கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும் உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும் உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன் மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும் பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த 40 மலர்வா யம்பின் வாசங் கமழப் பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள் பொருவரு பூங்கொடி போயின வந்நாள் யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே 45 வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற மன்னவ னவனை வணங்கி முன்னின்று என்னுயி ரனையா ளீங்கொளித் தாளுளள் 50 அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள் சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான் கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப் பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கின் றாள்பவன் 55 வாகை வேலோன் வளைவணன் றேவி வாச மயிலை வயிற்றுட் டோன்றிய பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள் இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக் கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன் 60 ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள் தீவகச் சாந்தி செய்யா நாளுன் காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம் மணிமே கலைதன் வாய்மொழி யாலது 65 தணியா திந்திர சாபமுண் டாகலின் ஆங்குப்பதி யழிதலு மீங்குப்பதி கெடுதலும் வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக் காசின் மாநகர் கடல்வயிறு புகாமல். வாசவன் விழாக்கோள் மறவே லென்று 70 மாதவன் போயின வந்நாட் டொட்டுமிக் காவன் மாநகர் கலக்கொழி யாதால் தன்பெயர் மடந்தை துயருறு மாயின் மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென அஞ்சினே னரசன் றேவியென் றேத்தி 75 நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருகென விராசமா தேவி கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை 80 புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள் என்னோ டிருக்குமென் றீங்கிவை சொல்வுழிநீ மணிமே கலைதிற மாதவி கேட்டுத் துணிகயந் துகள்படத் துளங்கிய வதுபோல் 85 தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி அறவண ரடிவீழ்ந் தாங்கவர் தம்முடன் மறவேன் மன்னவன் றேவிதன் பால்வரத் தேவியு மாயமுஞ் சித்திரா பதியும் 90 மாதவி மகளு மாதவர்க் காண்டலும் எழுந்தெதிர் சென்றாங் கிணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும் இணைவளை நல்லாள் இராசமா தேவி 95 அருந்தவர்க் கமைந்த வாசனங் காட்டித் திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தவென் காண்டகு நல்வினை நும்மையீங் கழைத்தது நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து 100 மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத் தேவி கேளாய் செய்தவ யாக்கையின் மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன் பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள் 105 பேதைமை செய்கை யுணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் 110 அறியா ராயி னாழ்நர கறிகுவர் பேதைமை யென்ப தியாதென வினவின் ஓதிய விவற்றை யுணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் 115 உலக மூன்றினு முயிரா முலகம் அலகில பல்லுயி ரறுவகைத் தாகும் மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந் தொக்க விலங்கும் பேயு மென்றே நல்வினை தீவினை யென்றிரு வகையால் 120 சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும் தீவினை யென்ப தியாதென வினவின் ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய் 125 கொலையே களவே காமத் தீவிழைவு உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று 130 உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயு நரகரு மாகிக் கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர் 135 நல்வினை யென்ப தியாதென வினவில் சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச் சீலந் தாங்கித் தானந் தலைநின்று மேலென வகுத்த வொருமூன்று திறத்துத் தேவரு மக்களும் பிரமரு மாகி 140 மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் அரசன் றேவியொ டாயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக் 145 கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும் முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து நன்றறி மாதவ னல்லடி வணங்கித் தேவியு மாயமுஞ் சித்திரா பதியும் 150 மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின் இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின் மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர் ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள் மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி 155 வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக் கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல் எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா மனக்கினி யீரென் றவரையும் வணங்கி வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த 160 அந்தி மாலை யாயிழை போகி உலக வறவியு முதியாள் குடிகையும் இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர் 165 பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி இந்நகர்ப் பேர்யா திந்நக ராளும் மன்னவன் யாரென மாதவன் கூறும் நாக புரமிது நன்னக ராள்வோன் 170 பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன் ஈங்கிவன் பிறந்த வந்நாட் டொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது மண்ணு மரனும் வளம்பல தரூஉம் உண்ணின் றுருக்கு நோயுயிர்க் கில்லெனத் 175 தகைமலர்த் தாரோன் றன்றிறங் கூறினன் நகைமலர்ப் பூம்பொழி லருந்தவன் றானென். உரை 1-6. மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகை - அரசன் புதல்வனை வஞ்சனையாற் சேர்த்திய சித்திராபதி, தன் சூழ்ச்சியிற் போயவன் - தனது சூழ்ச்சியாற் சென்ற உதயகுமரன், விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது - விஞ்சையனது வாளினால் இறந்தான் என்பதனை, நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி - உள்ளம் நடுங்கக் கேட்டு மிக வருந்தி, மாதவி மகள்தனை வான்சிறை நீக்க - மணிமேகலையைச் சிறையினின்றும் நீக்கும் பொருட்டு, காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்து - மன்னவன் தேவியின் அடிகளில் வீழ்ந்து பணிந்து; மணிமேகலையின் தாபதக் கோலத்தை அழித்து அவளை உதயகுமரன் கைப்பற்றி நுகருமாறு செய்வேன் என வஞ்சினங் கூறி வந்து அவனை அவள்பாற் செலுத்தினவள் ஆகலின், மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த கணிகை எனச் சித்திராபதியைக் கூறினார். தொல்முது : ஒருபொருட் பன்மொழி. 7-18. அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார் - பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினை யுடைய மடவார், உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும் - இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள - இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால், மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் - புவியிடைத் தோன்றிய ஐவரும், ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த - இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும் - மிக்க சிறப்பினை யுடைய நூற்றுநால்வரும், திருக்கிளர் மணி முடித் தேவர்கோன் தன் முன் - அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்- முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்துத் தோன்றிய ஒருத்தியும், ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் - என்ற நூற்றிருபத்தொருவர், இத் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள் முதல் - பழமையாகிய பெரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி மாதர் யாரினும் - அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ; ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப் பூம்பட்டினத்திலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க. கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய வரலாற்றை எடுத்தியம்பி, 1'மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்' என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக் காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன். முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள் புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி. 19-26. பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன் என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற் புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும் இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும் உண்டு; பூவிலை - பூவிற்கு விலை; அற்றைப் பரிசம் என்பர்: 1"பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர் பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை; அரங்கிலே கூத்தியற்றுதற் ச்குரியவள் என்றபடி. 27-32. உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டு - உப்பளத்தின் மருங்குள்ள உயரிய நெடிய மணற்கரையினை உடைய, பொங்கு திரை உலாவும் புன்னையங் கானல்-மிகுதியான அலைகள் உலாவுகின்ற புன்னைமரச் சோலையின் கண், கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப - ஒளிபொருந்திய மணிகளானாய பெரியமுடியினை யுடையகிள்ளி இளவேனிற்பருவத்தில் தங்குதலால் அவன் முன்னாக, இறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமில் ஒரு சிறை - வியக்குந் தன்மை யமைந்த மலர்மணம் வீசும் பொழிலில் யாருமில்லாத ஒரு பக்கலில், தானே தமியள் ஒருத்தி தோன்ற-தானே தனித்துப் போந்த மெல்லியல் ஒருத்தி தோன்ற; உம்பளம் - உப்பளம்: மெலித்தல் பெற்றது. நெடுமுடிக்கிள்ளி- ஓர் சோழமன்னன்; உதயகுமரன் றந்தை. கிளர்மணி என்பது முடிக்கு அடையாய் வந்தது. முன்னா - முன்னாக; எதிரே. இறும்பூது சான்ற ஒருத்தி யெனக் கூட்டுதலுமாம். நெடு முடிக்கிள்ளி இளவேனிலில் புன்னையங் கானலிலே இறுப்ப, இவன் முன்னாக ஒருத்தி தோன்ற வென்க 33-43. இன்னள் ஆர் கொல் ஈங்கிவள் என்று - இவ்வுழி இருப்பவளாய இத்தன்மையை யுடையாள் யாவளோ என்று, மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-அரசன் அறியானாய் மயக்க மடைந்து, கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் - கண்ட கண்களினும் கேட்ட காதுகளினும், உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் - அருந்திய நாவினும் மோந்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் - தீண்டி யுணர்ந்த உடம்பினும், வெற்றிச் சிலைக் காமன் - வென்றி வில்லினையுடைய காமவேளின், மயிலையும் செயலையும் மாவும் குவளையும் - மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும், பயிலிதழ்க் கமலமும் - செறிந்த இதழ்களையுடைய தாமரையுமாகிய, பருவத்து அலர்ந்த - பருவத்தின்கண் மலரப் பெற்ற, மலர் வாய் அம்பின் வாசம் கமழ - மலர்களாகிய அம்பின் மணங் கமழ்தலால், பலர் புறம் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப - பல மன்னரை வென்று புறங்கண்ட அரசன் பணிந்து அவள் ஏவுந் தொழிலைக் கேட்ப, ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் - ஒரு திங்களளவு அவனுடன் கழித்தாளாயினும் ஒன்றுங் கூறாதே, பொருவரு பூங்கொடி போயின அந்நாள் - ஒப்பற்ற பூங்கொடி போல்வாள் சென்றுவிட்ட அந்தநாளில்; அவளுடைய உருவைக் கண்டும் மொழியைக் கேட்டும் இதழ் முதலியவற்றை உண்டும் உயிர்த்தும் உற்றும் உணர்ந்த அரசனுடைய கண் முதலிய ஐம்பொறிகளிலும் காமனுடைய மலரம்புகள் ஐந்தும் தைத்தன வென்க. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படுவன ஒரே காலத்தில் அவள் கண்ணே நுகரப்பட்டன என்றார்; 1"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண் டொடி கண்ணே யுள" என்பது ஈண்டு நினைத்தற்குரியது. மயிலை முதலியன காமன் அம்புகள்; மலர் களாதலின் வாசங் கமழ என்றார். போரிலே பலரைப் புறங்கண்ட வீரனாயினும் ஓர் மெல்லியற்கு எளிய னாயினான் என்பார், ‘பலர் புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப' என்றார். உரையாள்-தன் வரலாற்றினை உரைத்திலளாய். போயினள் என முடித்து, அங்ஙனம் போயின அந்நாளில் என்றுரைக்க. 44-47. யாங்கு ஒளித்தனள் அவ்விளங்கொடி என்றே - அவ்விளங் கொடி போல்வாள் யாண்டுச் சென்று மறைந்தனள் என, வேந்தரை அட்டோன் மெல்லியல் தேர்வுழி - பகை மன்னரை வென்ற வேந்தன் அவளைத் தேடும்பொழுது, நிலத்திற் குளித்து நெடுவிசும்பு ஏறிச் சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-நிலத்துட் புகுந்து நீண்டவானில் இவர்ந்து நீர்மீது திரியும் ஒரு சாரணன் தோன்ற ; நீரிற் குளித்தல்போல் நிலத்திற் குளித்து எனவும், நிலத்தில் திரிதல்போல் சலத்தில் திரியும் எனவும் விரித்துரைத்துக் கொள்க. நிலத்திற் குளித்தல் முதலியன சித்தி எனவும் இருத்தியெனவும் படும்; 2"நீரினிற் பூவில் வானில் நினைத்துழியொதுங்குகின்ற, சாரணரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்" என்பதுங் காண்க. இனி 3"இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும், வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும், மந்தர மேந்தலு மென்றிவை பிறவும், பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக், கண்டுமறிதும்" என்பதனால் நிலத்திற் குளித்தல் முதலியன சில வித்தைகளாதலும் பெற்றாம். 48-53. மன்னவன் அவனை வணங்கி முன் நின்று - அரசன் அம் முனிவனை வணக்கஞ் செய்து முன்னே நின்று, என் உயிரனையாள் ஈங்கொளித்தாள் உளள் - என் உயிர்போல்வாள் ஈண்டு நின்றும் மறைந்தாள் உளள், அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான் - அத் தன்மை யுடையாளாகிய நங்கை ஒருத்தியை அடிகள் கண்டீரோ கூறுவீராக என்று பணிய அச் சாரணன் மொழிவான், கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை-அம் மங்கையை யான் இப்பொழுது கண்டிலேன் ஆனாலும், பண்டறிவுடையேன் பார்த்திப கேளாய் - முன்னர் அவளைப்பற்றி அறிதலுடையேன் அரசனே கேட்பாயாக; அறிவு உடையேன் - அறிதலுடையேன். 54-59. நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படை யினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன்; நடுக்கு இன்று - நடுங்குதல் இல்லையாக. கணி - நிமித்திகன்., 60-65. ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே, இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய் மொழியால் அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வது மணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம், தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது ; அப் புதல்வன் - அங்ஙனம் அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை - மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி, அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க 66-71. ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்-அவ்வாறு நகரம் அழிவெய்துதலும் இவ்விடத்து அரசு கேடுறலும், வேந்தரை அட்டோய் மெய்யெனக் கொண்டு-பகை மன்னரை வென்ற பெரு வேந்தே உண்மை என்று கொண்டு, இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்-குற்றமற்ற இப் பெருநகரம் கடல் வயிற்றுட் புகா திருக்கும் பொருட்டு, வாசவன் விழாக் கோள் மறவேல் என்று - இந்திரவிழாக் கொண்டாடுதலை மறவாதே என வுரைத்து, மாதவன் போயின அந்நாள் தொட்டும் - சாரணன் சென்ற அந் நாள் தொடங்கி, இக் காவன் மாநகர்க் கலக்கு ஒழியாதால் - காவலமைந்த இப் பெரிய நகரிலுள்ளார் கலக்கம் நீங்கப்பெறார் ; ஆங்கு - அந்நாளில் என்றுமாம். ஈங்கு: அசையுமாம். மாதவன் போயினன் ; போயின அந்நாள்தொட்டு என வேறு அறுத் துரைக்க. 72-76. தன் பெயர் மடந்தை துயருறுமாயின் - தன் பெயரினைக் கொண்ட மணிமேகலை துன்புறு வாளானால், மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டு என-நிலைபெற்ற பெரிய மணிமேகலா தெய்வம் தோன்றுதலும் உண்டு என்று, அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி-மன்னவன் மாதேவி! அச்சமுற்றேன் எனத் துதித்து, நன் மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருக என - நல்லுள்ளம் தோன்றிய மணிமேகலையை என தில்லத்தின்கண் தருக என வேண்ட; அரசன் தேவி! அஞ்சினேன் எனத்துதித்து, நாடகக் கணிகையை என் மனைத் தருக என்று சித்திராபதி கேட்ப வென்க. நன்மனம் நன்னெறிக்கண் செல்லும் மனம். 76-82. இராசமாதேவி - மன்னன் மனைவி, கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் கனவும் என்று உரவோர் துறந்தவை-கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத் திற்றோன்றுங் களவும் தீயனவென்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவற்றை, தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-முதன்மையாகக் கொண்ட நினது கடையான பரத்தமைத் தொழிலை, புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி-புன்மையுடைத்தென அஞ்சி வெளிப்பட்ட மணிமேகலை, நின்னோடு போந்து நின்மனைப் புகுதாள் - நின்னுடன் வந்து நின் மனையை அடைதற் குரிய ளாகாள், என்னோடு இருக்கும் என்று ஈங்கிவை சொல்வுழி-என்னுடன் இருப்பாள் என்று இவ்வாறு கூறும்பொழுது; உரவோர் துறந்தனவாகிய கள் முதலியவற்றைப்புலைமை யென்று அஞ்சிப் போந்த வென்க. தலைமை இல் வாழ்க்கை - கடைப்பட்ட வாழ்க்கை ; 1" மேலோ ராயினும் நூலோ ராயினும், பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும், பிணியெனக் கொண்டு பிறக்கிட்டொழியும், கணிகையர் வாழ்க்கை கடையே" என்பதுங் காண்க. பூங்கொடி புகுதாள் இருக்கும் என்று இராசாமாதேவி சொல்வுழி யென்க,. 83-88. மணிமேகலை திறம் மாதவி கேட்டு-மாதவி மணிமேகலை காவலிலிருக்குஞ் செய்தியைக் கேட்டு, துணி கயம் துகள்படத் துளங்கிய வதுபோல்-தெளிந்த நீரினையுடைய குளம் புழுதி படிதலால் கலங்கிய தன்மைபோல, தெளியாச் சிந்தையள்-கலக்கமுற்ற உள்ளமுடையளாய், சுதமதிக்கு உரைத்து-அதனைச் சுதமதிக்குக் கூறி, வளி ஏறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி - காற்றா னலைக் கப்பட்ட பூங்கொம்பு போல வருந்தி உடல் நடுங்கி, அறவணர் அடி வீழ்ந்து ஆங்கவர் தம்முடன்-அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து அவருடன், மற வேல் மன்னன் தேவி தன்பால் வர - வெற்றி வேல் வேந்தனது தேவியிடம் வர ; துணி - தெளிந்த. துளங்குதல் - நடுங்குதல்; ஈண்டுக் கலங்குதல். துகள்பட - சேறுண்டாக என்றுமாம். தெளிந்த உள்ளம் கலங்கிய தென்பது உவமையாற் பெற்றாம்: 89-93. தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-அறவண முனிவரைக் கண்டவளவில் இராசமா தேவியும் சிலதியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும், எழுந்து எதிர் சென்றாங்கு - எழுந்து எதிரே சென்று, இணை வளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க - வணங்குந் தகுதியுடைய அறவணர் இணையடிகள் இரண்டு வளைய லணிந்த கைகளாலும் வணக்கஞ் செய்ய அறிவுண்டாக என்று ஆங்கவன் கூறலும் - அடிகள் அறிவுண்டாக என வாழ்த்தலும்; 94-100. இணைவளை நல்லாள் இராசமாதேவி - வளையல் சேர்ந்த கைகளையுடைய அரசன் பெருந்தேவி, அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி-தவத்தோர்க்கு உரிய ஆதனத்தைக் காட்டி, திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் - அவரது திருந்திய அடியினை விளக்கிச் சிறப்புச் செய்த பின்னர், யாண்டுபல புக்க நும் இணையடி வருந்த என காண்டகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது - காணுதற்குத்தக்க எனது நல்வினையானது யாண்டு பல சென்று மூத்த நும் திருவடிகள் வருந்துமாறு நும்மை ஈண்டு அழைத்தது, நாத்தொலைவு இல்லையாயினும் தளர்ந்து மூத்தது இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு என - நாமெலிதலில்லை யாயினும் தளர்ந்து முதிர்ந்த இவ்வுடம்பு பன்னெடுநாள் வாழ்வதாக எனத் துதிக்க; காட்டி அதில் இருக்கச்செய்து எனவும், இணையடி வருந்த வருமாறு அழைத்தது எனவும் விரித்துரைத்துக் கொள்க. நாத்தொலை வின்மை- சொற் சோர்வின்மை; சொல்வன்மை. "நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின், உரை மூதாளன்" (12 : 3-4) என முன்னரும் வந்துளது. 101-104. தேவி கேளாய் - அரச மாதேவியே கேட்பாயாக, செய்தவ யாக்கையின் மேவினேனாயினும் வீழ்கதிர் போன்றேன் - தவம் புரியும் உடலிற் பொருந்தினேனாயினும் மறையுங் கதிரவனைப் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே - உலகின்கட் பிறந்தோ ரனைவரும் பிணி மூப்புற்று இறப்பார் என்பது இயற்கையே; தவயாக்கை-தவத்தால் வந்த உடம்பென்றுமாம், இறப்பிற்கு அத்தமிக்கும் ஞாயிற்றை உவமை கூறுதல் பௌத்த நூன் மரபாதலை, "சாக்கா டென்ப தருவுருத் தன்மை, யாக்கை வீழ்கதி ரெனமறைந்திடுதல்" (30: 102-3) என, இந் நூலிற் பின் வருதலானு மறிக. பிணி நோய் - பிணித்துன்பம் என்றும், பிணித்தலையுடைய நோய் என்றும் உரைத்தலுமாம். உலகில் யாவரும் பிறந்தார் மூத்தார் நோயுற்றார் இறந்தார் என்று கூறப்படுதல் இயல்பே என்றலுமாம். பிறப்புப் பிணி மூப் பிறப்புக்கள் உடம்பிற்கு இயற்கை யென்றபடி. இது கேள் - இதனைக் கேட்பாயாக; 105-110. பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈராறும் - பேதைமை முதல் வினைப்பயன் ஈறாக இவையென வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர் - பிறவியெடுத்தோர்அறிந்திடின் ஒப்பற்ற பெரும் பேற்றினை யறிவர், அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் - அவற்றை அறியாரானால் துன்பம் நிறைந்த நிரயத்தினை யறிவர்; பேதைமை-அவிச்சை, செய்கை - கன்மம். உணர்வு - விஞ்ஞானம், அருவுரு - நாமரூபம். வாயில் - ஐம்பொறிகளும் உள்ளமும். ஊறு- பொறிபுலன்களின் இயைபு. நுகர்வு-இன்பதுன்ப நுகர்ச்சி. வேட்கை- அவா. பற்று - புலன்களைப் பற்றிக்கொள்ளுதல் - பவம் - கன்மவீட்டம் பயன்றரு முறைப்படி சார்தல். தோற்றம் - கதிகளிற் பிறத்தல். வினைப் பயன் - கன்மபலம். இவற்றைப் பன்னிரு நிதானம் என்பர். இப் பன்னிரண்டின் இயல்புகளையும் இந்நூலின் 30ஆம் காதையால் அறிக. பெரும்பேறு - நிருவாணம் எனப்படும். நரகு அறிகுவர் என்றது அதனில் அழுந்துவர் என்றபடி. 111-114. பேதைமை என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால், ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால் தாம் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளித்தல் - முயற்கொம்பு உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்; இவற்றை-இப் பன்னிரண்டினையும். கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க. 115-122. உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம் அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர் நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்; பௌத்தநூல் கூறும் உலகம் முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் ‘உலகம் மூன்றினும்' என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத் தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற்கூறின ரென்க. செய்கை யென்பதனை வருவித்து, செய்கை இருவகையால் தோன்றிக் காட்டும் என முடிக்க. 123-134. தீவினை என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் - தீவினை எனப்படுவது யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய் அதனைக் கேட்பாயாக, கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் - கொலையும் களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்-பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையாம் - விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண் எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார் - வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார், படர்குவர் ஆயின் - யாரேனும் அந்நெறிகளிற் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின் கட்படுவர்; காமத் தீவிழைவு - இணை விழைச்சு. எனவென ஒரு சொல் வருவிக்க. உலையா உடம்பு - தளராத வுடம்பு. குறளை - கோட் சொல், பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களில் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்புதல், பொல்லாக்காட்சி - மயக்க வறிவு. வெஃகல் முதலிய மூன்றும் முறையே காமம் வெகுளி மயக்கம் எனப்படும். படர் குவராயின் அங்ஙனம் படர்வோர் என விரித்துரைக்க. 135-140. நல்வினை என்பது யாது என வினவின் - நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி-கூறப்பட்ட பத்துவகைக் குற்றங் களினின்றும் நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று - சீலத்தை மேற்கொண்டு தானம் வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து - உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினை யுடைய, தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் - பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர். சீலம் - விலக்கியன வொழித்து விதித்தன செய்தல். கள்ளுண்ணாமை முதலிய ஐந்தும் ஐவகைச் சீலம் எனப்படும்; இவை இல்லறத்தார்க்குரியன. ஏனோர்க்கு இவற்றுடன் மூன்றும் ஐந்தும் கூட்டி எட்டும் பத்துமாம் என்பர். தானம் தலை நின்று என்புழித் தலைநின்று என்னும் எச்சத்தைத் தலைநிற்றல் எனத் திரித்தும், அங்ஙனம் நிற்போர் என விரித்தும் உரைக்க. நல்வினை என்பது நீங்கித் தாங்கி நிற்றல் என்க. மகிழ்ச்சிவினை-நல்வினை. செய்கையை நல்வினை தீவினை எனப் பாகுபாடு செய்தவர் பின் அவற்றி னியல்பை எதிர் நிரனிறை வகையால் விளக்கின ரென்க. "பேதைமை செய்கை" என்பது முதல் ஈண்டுக் கூறப்பட்ட முப்பத்தைந்து அடிகளும் இந்நூலின் 30ஆம் காதையில் இவ்வாறே வந்துள்ளமை அறியற்பாலது. 141-147. அரசன் தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவி யுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள் - பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்; ஆயிழை நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன் றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப் பின் மணிமேகலையை நோக்கிப் பின்னாள் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன் என்க. 147-158. இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல்லடி வணங்கி - மணிமேகலை எழுந்து நன்னெறிகளை யுணர்ந்த பெருந்தவன் திருந்தடிகளை வணக்கஞ்செய்து, தேவியும் ஆயமும் சித்திராபதியும் -பெருந்தேவியும் ஆயத்தினரும் சித்திராபதியும், மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின் - அறவணவடிகளின் அறமொழிகளை மறவாமல் உய்ப்பீராக, இந்நகர் மருங்கின் யான் உறைவேனாயின் - யான் இந் நகரத்தின்கண் தங்குவேனானால், மன்னவன் மகற்கு இவள் வருங் கூற்று என்குவர் - ஊரோர் இவள் அரசன் புதல்வனுக்குக் கூற்றாய் வந்தவள் என்று கூறுவர்; ஆகலின், ஆபுத்திரன் நாடு அடைந்து அதற்பின்னாள் - யான் ஆபுத்திரனது நாட்டை அடைந்து அதன் பின்னர், மாசில் மணி பல்லவம் தொழுது ஏத்தி-குற்றமற்ற மணிபல்லவத்தை வணங்கித்துதித்து, வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல் - வஞ்சி நகரத்துட் சென்று பத்தினித் தேவியாகிய கண்ணகியின் பொருட்டுக் குறைவில்லாத நல்லறத்தை எவ்விடத்தும் இயற்றுவேன், எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும் என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி - உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து; மாதவியையும் சுதமதியையும் ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது. 159-168. வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல் வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப் பொழுதில் மணிமேகலை அங்கு நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித் தோன்ற லாகிய புண்ணியராசனது பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையு ஈர்த்து - ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன் அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ் செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின் பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ; அந்திப்பொழுதின் செக்கர் வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; 1"வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல். 168-176. மாதவன் கூறும்-அருந்தவனுரைப்பான், நாகபுரம் இது- இந்நகரத்தின் பெயர் நாகபுரம், நன்னகர் ஆள்வோன் - இந் நற்பதியை ஆள்வோன், பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் - பூமி சந்திரன் புதல்வனாகிய புண்ணியராசன் என்போன், ஈங்கு இவன் பிறந்த அந்நாள்தொட்டு-இங்கு இவன் பிறந்த அந்நாள் தொடங்கி, ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது - மிகவுயர்ந்த விசும்பின் மழை பிழைத்தலை யறியாது, மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்-பூமியும் மரங்களும் பல வளங்களையும் அளிக்கும், உள்நின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்என-உயிர் கட்கு உள்ளே நின்று உருக்குகின்ற பிணிகள் இல்லை என்று, தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் நகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன்தான் என்க-கட்டப்பட்ட மலர் மாலையினையுடைய அரசனது வரலாற்றினை ஒளி பொருந்திய மலர்களையுடைய பூஞ்சோலையின்க ணிருந்த பெருந்தவன் மொழிந்தனன். தகை - கட்டிய. அகை மலர் எனப் பிரித்து, மலர்ந்த மலர் என்றலுமாம். தொன்முது கணிகை கேட்டு வருந்தி வீழ்ந்து, "நகர் கலக்கொழி யாது; அஞ்சினேன்" என்று ஏத்தி, "கணிகையை என்மனைத் தருக" என, இராசமாதேவி ஈங்கிவை சொல்வுழி, மாதவி அறவணவடிகளுடன் வர, காண்டலும், எதிர் சென்று துணையடி வணங்க, அவன் ‘அறிவுண்டாக' என்று கூறலும், இராசமாதேவி காட்டி விளக்கிச் செய்தபின், ‘வாழ்க' என, ‘தேவி கேளாய்; நல்லீர் கேண்மின்; மணிமேகலை, முன்னுறக் கூறுவல்' என்று அவனெழுதலும், இளங்கொடி எழுந்துவணங்கி நின்று வணங்கிப் போகி ஏத்தி வலங்கொண்டு சென்று இழிந்து பொறையுயிர்த்து வணங்கி, "யாது? யார்?" என, மாதவன் கூறும்; அங்ஙனம் கூறும் அருந்தவன் கூறினன் என, வினை முடிவு செய்க. ஆபுத்திரனாடு அடைந்த காதை முற்றிற்று. 25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை அப்பொழுது புண்ணியராசன் தன் பெருந்தேவியொடு அப் பொழிலிற் புகுந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி, அறன் மறன் அநித்தம் நித்தம் முதலியவற்றைக் கேட்டுப் பின்பு, “பேரழகினளாய்க் கையிற் பாத்திரங்கொண்டு அறங் கேட்கும் இவள் யார்?'' என வினாவ, அருகே நின்ற கஞ்சுகன் அரசனை வணங்கி, “இவளை ஒப்பவர் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளி வளவனோடு நட்புக்கொள்ளுதலை விரும்பிக் காவிரிப்பூம் பட்டினத்திற்குச்சென்ற பொழுது ஆங்குள்ள அறவணவடிகள் இவள் வரலாறுகளை யெல்லாம் கூறினார் என முன்னரே நான் உரைத்துளேன்; அந் நங்கையே இவள்,'' என்று கூறினன். கூறலும், மணிமேகலை அரசனை நோக்கி, ''நின் கையிலிருந்த பாத்திரமே என் கையை அடைந்தது ; செல்வத்தால் மயங்கினை போலும்; நீ முற்பிறப்பை அறிந்திலையாயினும் ஆவின் வயிற்றிற் பிறந்த இப்பிறப்பையாவது அறிந்திலையே ! என் செய்தனை? மணிபல்லவம் சென்று, புத்த பீடிகையைத் தரிசித்தாலன்றி உனது பிறப்பின் இயல்பை அறியாய்; ஆதலால் ஆங்கு வருவாயாக,'' என்று கூறிவிட்டு, வானிலே எழுந்து சென்று, ஞாயிறு குடதிசையில் வீழ்தற்கு முன்பு மணிபல்லவத்தில் இறங்கி, வலங்கொண்டு புத்த பீடிகையைத் தரிசித்தாள். அது பழம் பிறப்பை அவளுக்கு உணர்த்தியது அதனை யறிந்து கண்டு, காயங்கரை யென்னும் ஆற்றின் கரையில் பிரமதருமன் என்னும் முனிவன் உரைத்ததை எண்ணி வியந்து, அவள் அங்கிருக்கப், புண்ணியராசன் அப்பொழிலை விட்டு நகரிற் புகுந்து தன்னை வளர்த்த அன்னையாகிய அமரசுந்தரியை வினவித் தன் வரலாறு முழுவதையும் அவள் கூறக்கேட்டு வருந்தி அரசாட்சியில் வெறுப் புற்றுத் துறத்தற்குத் துணிந்து தன் கருத்தை வெளியிட்டனன். அதனைக்கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் அவனை வணங்கி, ''அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் கரந்து வறுமை மிக்கது; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன்றியது போல, நீ தோன்றினை; தோன்றிய பின் இந்நாட்டில் வானம் பொய்யாது; மண் வளம் குறையாது ; உயிர்கள் உறுபசி அறியா; இனி நீ நீங்குவாயாயின், உயிர் களெல்லாம் தாயைப்பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகத்தைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று. புத்ததேவன் அருளிய அறமும் ஈதன்று'' என்று கூற, அரசன் கேட்டு, ''மணிபல்லவத்தை வலங்கொள்ள வேண்டும் என எனக்குண்டாய வேட்கை தணித்தற்கரியது; ஆதலின் ஒரு திங்கள் அளவு இந்நகரைப் பாதுகாத்தல் நினது கடன்,'' என்று கூறிப் புறப்பட்டு, நாவாய்ஏறி மணிபல்லவத்தை அடைந்தான். உடனே மணிமேகலை வந்து அழைத்துச் சென்று அவனோடு அத்தீவை வலம் வந்து, ''பழம்பிறப்பை உணர்விக்கும் தருமபீடிகை இது,'' என்று காட்ட, அரசன் அதனைத் தரிசித்து வலங்கொண்டு ஏத்தினன். அப்பீடிகை பழம்பிறப்பின் செய்தியை அவனுக்கு விளங்கத் தெரிவித்தது. அதனை யறிந்து வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில் அமுத சுரபி யென்னும் பாத்திரத்தை யளித்த சிந்தாதேவியை நினைந்து, "தென்றமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய், உணர்விலே தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் மடந்தையே, நான் பிறந்தபிறவிதோறும் நின்னை வழிபடுதலின்றி மறந்து வாழேன்," என்று துதித்து மணிமேகலையோடும் எழுந்து தென்மேற்கிற் சென்று கோமுகிக் கரையில் ஒரு புன்னைமரத்தின் நிழலிலே இருந்தான். இருக்கும்பொழுது, ஆபுத்திரனோடு மணிமேகலை வந்திருத்தலைக் காவற்றெய்வமாகிய தீவ திலகை அறிந்து வந்து, "ஆருயிர் மருந்தினைக் கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய்! அக்காலத்தில் மறந்து இத் தீவில் நின்னைத் தனியே விட்டுக் கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைந்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலை யறிந்து உடனே தம் முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் என்புகள் இவைகாண்; அவர்கள் உண்பிக்க உண்டு உடன் வந்தோர்கள், அவர்கள் இறந்தது தெரிந்து தாங்களும் இறந்தார்கள்; அவர் களுடைய என்புகள் இவை காண்; அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழே உனது பண்டை உடம்பு இருந்ததனைக் காண்," என்று அரசனை நோக்கிக் கூறி, பின்பு மணிமேகலையைப் பார்த்து, "காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டது. அதற்குக் காரணம் கேட்பாயாக; நாக நாட்டரசன் மகளாகிய பீலிவளை என்பவள் தான் பெற்ற குழந்தையுடன் வந்து இத்தீவையும் புத்த பீடிகையையும் வலம் வந்து துதிக்கும் பொழுது கம்பளச் செட்டியின் கப்பல் வந்து தங்க, பீலிவளை அவனிடஞ்சென்று, "இவன் அரசன் புதல்வன்; இவனை அவனிடம் சேர்ப்பாயாக," என்று சொல்லிக் குழந்தையை அவன் கையிற் கொடுக்க, அவன் பெரு மகிழ்ச்சியடைந்து வாங்கி மரக்கலம் ஏறிச்செல்லுகையில் கலம் உடைந்து போயிற்று; போகவே, அதில் இருந்தோரிற் சிலர் மெல்லப் பிழைத்துச் சென்று காவிரிப்பூம் பட்டினத்தை யடைந்து, புதல்வனைக் கெடுத்த செய்தியை அரசனுக்குத் தெரிவித்தனர். அது கேட்டு அவன் பொறாமல் செயலற்றுக் கடற்கரையை அடைந்து மகனைத் தேடித்திரிந்தமையால் நகரிலே இந்திரனுக்கு விழாச்செய்தல் நின்றுவிட்டது. அதனைப் பொறுக்காமல் மணிமேகலா தெய்வம் ‘இந் நகரைக் கடல் கொள்ளுக,' என்று சபிக்க, கடல் நகரை மூடியது; மூடவே, அரசன் வேறிடஞ் சென்றான். அறவணவடி களோடு மாதவியும் சுதமதியும் யாதொரு வருத்தமும் இன்றிப் போய் வஞ்சி நகரம் புகுந்தனர்," என்று சொல்லிப் போயினள். அவள் போன பின்பு புண்ணியராசன் அவ்விடத்தே மணலைத் தோண்டி, அங்கே தோன்றிய தனது பழைய உடம்பின் என்பைக் கண்டு மயக்கமுற்றான். அதைக் கண்ட மணிமேகலை, "நீ என்ன துன்பமுற்றாய்? யான் நின் நாட்டிற்கு வந்து நின்னை ஈங்கு அழைத்து வந்தது நினக்கு முற்பிறப்பை உணர்த்தி, யாண்டும் நின் பெயரை நிலைநிறுத்துதற் பொருட்டேயாகும். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்ற மெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே; இதனை யன்றி வேறு இல்லை," என்று சொல்லித்தேற்றினாள். அதனைக் கேட்ட அரசன், "எனது நாட்டிலும் பிறர்நாட்டிலும் நீ கூறிய நல்லறத்தைச் செய்வேன் : நீ என் பிறப்பை உணர்த்தினை, யான் நின்னிடத்தினின்றும் பிரிதல் ஆற்றேனாகின்றேன்," என, மணிமேகலை, "நீ வருந்தற்க :நீ இங்கே போந்ததற்கு வருந்தி நின்னாடுநின்னை யழைக்கும். ஆதலின் மரக்கலம் ஏறி நீ நின்னாட்டிற்குச் செல்லுக ; யான் வஞ்சி நகரத்திற்குச் செல்வேன்," என்று கூறி விசும்பில் எழுந்தான். அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து தரும சாவகன் றன்னடி வணங்கி அறனு மறனும் அநித்தமு நித்தத் திறனுந் துக்கமுஞ் செல்லுயிர்ப் புக்கிலும் 5 சார்பிற் றேற்றமுஞ் சார்பறுத் துய்தியும் ஆரிய னமைதியு மமைவுறக் கேட்டுப் பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள் கண்ணிணை யியக்கமுங் காமனோ டியங்கா அங்கையிற் பாத்திரங் கொண்டறங் கேட்கும் 10 இங்கிணை யில்லாள் இவள்யா ரென்னக் காவலற் றொழுது கஞ்சுக னுரைப்போன் நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் யாவரு மில்லை யிவள்திற மெல்லாம் கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக் 15 கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன் மாதவ னறவணன் இவள்பிறப் புணர்ந்தாங் கோதின னென்றியா னன்றே யுரைத்தேன் ஆங்கவ ளிவளவ் வகனகர் நீங்கி 20 ஈங்கு வந்தன ளென்றலு மிளங்கொடி நின்கைப் பாத்திர மென்கைப் புகுந்தது மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய் அப்பிறப் பறிந்திலை யாயினு மாவயிற் றிப்பிறப் பறிந்திலை யென்செய் தனையோ 25 மணிப்பல் லவம்வலங் கொண்டா லல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாள் ஆங்கு வருவாய் அரசநீ யென்றப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று மையறு விசும்பின் மடக்கொடி யெழுந்து 30 வெய்யவன் குடபால் வீழா முன்னர் வானின் றிழிந்து மறிதிரை யுலாவும் பூநா றடைகரை யெங்கணும் போகி மணிப்பல் லவம்வலங் கொண்டு மடக்கொடி பிணிப்பறு மாதவன் பீடிகை காண்டலும் 35 தொழுதுவலங் கொள்ளவத் தூமணிப் பீடிகைப் பழுதில் காட்சி தன்பிறப் புணர்த்தக் காயங் கரையெனும் பேரியாற் றடைகரை மாயமின் மாதவன் றன்னடி பணிந்து தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப் 40 பெருமகன் றன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம் விலங்கு நரகரும் பேய்களு மாக்கும் கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் தேவரு மக்களும் பிரமரு மாகுதிர் ஆகலி னல்வினை யயரா தோம்புமின் 45 புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோன் உலகுயக் கோடற் கொருவன் றோன்றும் அந்நா ளவனறங் கேட்டோ ரல்லது இன்னாப் பிறவி யிழுக்குந ரில்லை மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் 50 போற்றுமி னறமெனச் சாற்றிக் காட்டி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர் அவ்வுரை கேட்டுநும் மடிதொழு தேத்த வெவ்வுரை யெங்கட்கு விளம்பினி ராதலின் பெரியவன் றோன்று முன்னரிப் பீடிகை 55 கரியவ னிட்ட காரணந் தானு மன்பெரும் பீடிகை மாய்ந்துயிர் நீங்கிய என்பிறப் புணர்த்தலு மென்னென் றியான்தொழ முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது மற்றப் பீடீகை தன்மிசைப் பொறாஅது 60 பீடிகை பொறுத்த பின்ன ரல்லது வானவன் வணங்கான் மற்றவ் வானவன் பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத் தரும பீடிகை சாற்றுக வென்றே அருளின னாதலி னாயிழை பிறவியும் 65 இருளறக் காட்டு மென்றெடுத் துரைத்தது அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி இன்றெனக் கென்றே யேத்தி வலங்கொண்டு ஈங்கிவ றின்னண மாக விறைவனும் ஆங்கப் பொழில்விட் டகநகர் புக்குத் 70 தந்தை முனியாத் தாய்பசு வாக வந்த பிறவியு மாமுனி யருளால் குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர் அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும் மாமுனி யருளான் மக்களை யில்லோன் 75 பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும் ஆய்தொடி யரிவை யமரசுந் தரியெனும் தாய்வாய்க் கேட்டுத் தாழ்துய ரெய்தி இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியு நினைந்து 80 செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி நாடகங் கண்டு பாடற் பான்மையில் கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர் ஊடற் செவ்வி பார்த்துநீ டாது 85 பாடகத் தாமரைச் சீறடி பணிந்து தேமரு கொங்கையிற் குங்கும மெழுதி அங்கையிற் றுறுமலர் சுரிகுழற் சூட்டி நறுமுகை யமிழ்துறூஉந் திருநகை யருந்தி மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக் 90 கருப்பு வில்லி யருப்புக்கணை தூவத் தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித் தெளிந்த நாதனென் செவிமுத லிட்டவித் தேத மின்றா யின்று விளைந்தது 95 மணிமே கலைதான் காரண மாகவென் றணிமணி நீண்முடி யரசன் கூற மனம்வே றாயினன் மன்னென மந்திரி சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி எங்கோ வாழி யென்சொற் கேண்மதி 100 நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள் பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங் கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித் தான்றனி தின்னுந் தகைமைய தாயது 105 காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல் தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு வானம் பொய்யாது மண்வளம் பிழையாது ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா 110 நீயொழி காலை நின்னா டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம் துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின் இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ 115 பெறுதி விரும்பினை யாகுவை யன்றே தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால் மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே முதுமொழி கூற முதல்வன் கேட்டு 120 மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த தணியா வேட்கை தணித்தற் கரிதால் அரசு முரிமையு மகநகர்ச் சுற்றமும் ஒருமதி யெல்லை காத்தனின் கடனெனக் கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் 125 இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்திறீ வங்க மேறினன் மணிபல் லவத்திடைத் தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும் புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக் 130 காவலன் றன்னொடுங் கடற்றிரை யுலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து பெருமகன் காணாய் பிறப்புணர் விக்கும் தரும பீடிகை யிதுவெனக் காட்ட வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு 135 உலந்த பிறவியை யுயர்மணிப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட என்பிறப் பறிந்தே னென்னிடர் தீர்ந்தேன் தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் 140 மாரி நடுநாள் வயிறுகாய் பசியால் ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு அருந்தூண் காணா தழுங்குவேன் கையின் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது 145 ஏடா வழிய லெழுந்திது கொள்கென அமுத சுரபி யங்கையிற் றந்தென் பவமறு வித்த வானோர் பாவாய் உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும் அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி 150 தேவ ராயினும் பிரம ராயினும் நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி பிறந்த பிறவிகள் பேணுத லல்லது மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி மன்னவன் மணிமே கலையுட னெழுந்து 155 தென்மேற் காகச் சென்று திரையுலாங் கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர் தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி 160 அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர் பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர் 165 ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண் ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர் ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண் ஊர்திரை தொகுத்த வுயர்மணல் புதைப்ப ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால் 170 அன்புடை யாருயி ரரசற் கருளிய என்புடை யாக்கை யிருந்தது காணாய் நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப் பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய் கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை 175 பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய மடவரல் நல்லாய் நின்றன் மாநகர் கடல்வயிறு புக்கது காரணங் கேளாய் நாக நன்னா டாள்வோன் றன்மகள் பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள் 180 பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித் தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக் கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப 185 அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும் பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப் பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக் 190 கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள் இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன் 195 நன்மணி யிழந்த நாகம் போன்று கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள் அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென 200 விட்டனள் சாபம் பட்ட தி துவால் கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேற் றடக்கை வானவன் போல விரிதிரை வந்து வியனகர் விழுங்க ஒருதனி போயின னுலக மன்னவன் 205 அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும் வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர் பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள் உரைத்தன கேட்க வுருகுவை யாயினின் மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம் 210 முன்னா ளெடுத்தது மந்நா ளாங்கவன் அறவர சாண்டது மறவணன் தன்பால் மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின் மன்னவ னிரங்கி மணிமே கலையுடன் 215 துன்னிய தூமண லகழத் தோன்றி ஊன்பிணி யவிழவு முடலென் பொடுங்கித் தான்பிணி யவிழாத் தகைமையை தாகி வெண்சுதை வேய்ந்தவ ணிருக்கையி னிருந்த பண்புகொள் யாக்கையின் படிவ நோக்கி 220 மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய் நின்னா டடைந்தியான் நின்னையீங் கழைத்தது மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி அந்தரத் தீவினு மகன்பெருந் தீவினும் 225 நின்பெயர் நிறுத்த நீணில மாளும் அரசர் தாமே யருளறம் பூண்டால் பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் 230 உண்டியு முடையு முறையுளு மல்லது கண்ட தில்லெனக் காவல னுரைக்கும் என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும் நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன் என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை 235 நின்றிறம் நீங்க லாற்றேன் யானெனப் புன்கண் கொள்ளனீ போந்ததற் கிரங்கிநின் மன்பெரு நாடு வாயெடுத் தழைக்கும் வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று அந்தரத் தெழுந்தன ளணியிழை தானென். உரை 1-6. அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து - மன்னவன் மனைவியுடன் அச் சோலையின்கட் புக்கு, தருமசாவகன் தன்னடி வணங்கி-தருமசாவக முனிவரின் திருவடிகளை வணக்கஞ் செய்து, அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும்-அறமும் பாவமும் அநித்தப்பொருளின் வகைகளும் நித்தப்பொருளின் வகை களும் பிறப்புமுதலாய துக்கமும் செல்லுகின்ற வுயிர் புகுமிடமும், சார்பிற்றோற்றமும்சார்பு அறுத்துஉய்தியும் - பேதைமை முதலிய பன்னிரண்டின் தோற்றமும் அவற்றினீங்கி உய்யும் வகையும், ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு- ஆசிரியனாகிய புத்தனின் இயல்பும் அமைதிபெறக் கேட்டு; அரசன் - புண்ணிய ராசன். தரும சாவகன் என்பது தருமங் கேட்பவன் என்னும் பொருளது. துக்கம் - பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடு என்பன. சார்பிற்றோற்றம் - ஒன்றினொன்று சார்ந்து தோன்றும் பன்னிரு நிதானம். ஆரியன் - குரவன் ; புத்தன். அரசன் புகுந்து வணங்கிக் கேட்டு என்க. 7-10. பெண் இணை இல்லாப் பெருவனப்பு உற்றாள் - மகளிருள் தனக்கு இணையில்லாத பேரழகுடையளாய், கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா - கண்களின் இயங்குதலும் அநங்கனோடு இயங்கா நின்று, அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்- அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக்கொண்டு அறவுரை கேட்கின்ற, இங்கிணை இல்லாள் இவள் யார் என்ன - இணையற்ற இம் மங்கை யாவள் என வினவ ; கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா என்றது இதனைக் கருவியாகக்கொண்டு காமன் போருக்கெழுமாறு இவள் பார்வையின் இயக்கம் உளதென்றபடி: "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" (5: 6) என முன் வந்திருப்பதனோடு ஒத்து நோக்கற்பாலது. இனி, இயங்கா என முற்றாக்கி இயக்கம் தீநெறியிற் சென்றிலது என்றுமாம். அரசன் கேட்டுப் பின்பு இவள் யாரென்ன வென்க. 11-18 காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் - அரசனைப் பணிந்து சட்டையிட்ட பிரதானி உரைக்கின்றவன், காவலந் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை - சம்புத் தீவின்கண் இம்மங்கையை ஒப்பவர் எவரும் இல்லை, இவள் திறமெல்லாம் - இவளுடைய வரலாறு அனைத்தையும், கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டி-கிள்ளிவளவனுடன் நட்புக் கொள்ளுதலை வேண்டி, கள் அவிழ் தாரோய்-தேன் பொருந்திய மலர் மாலையினை யுடையோய், கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்-கலத்துடன் சென்று காவிரியின் பக்கத்ததாகிய புகார்நகரத்தை யடைந்தேன், மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று - அறவண முனிவன் இவளது பிறப்பினை அறிந்தவாறு மொழிந்தனன் என்று, நான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அந் நாளிலேயே கூறினேன்; படப்பை - பக்கம்; தோட்டக்கூறுமாம். 1"காவிரிப் படப்பைப் பட்டினம்" என்றார் இளங்கோவடிகளும். தாரோய்! கெழுதகை வேண்டிப் போகி நன்னகர் புக்கேனாகியயான் அறவணன் இவள் பிறப்பு ஓதினன் என்று இவள் திறமெல்லாம் அன்றே யுரைத்தனன் என்க. 19-24 ஆங்கவள் இவள் அவ் அகல் நகர் நீங்கி-அவள் இந்நங்கையே அவ் வகன்ற நகரத்தினின்றும் நீங்கி, ஈங்கு வந்தனள் என்றலும்- ஈண்டு வந்திருக்கின்றனள் என வுரைத்தலும், இளங்கொடி-மணிமேகலை, நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது - நினது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது, மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் - மிகப் பெருஞ் செல்வத்தால் மயங்கினையாகலின் நீ அதனை அறியாய், அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-நினது முற்பிறப்பினை அறிந்திலாயேனும், ஆ வயிற்று இப்பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ - பசுவின் வயிற்றிலுதித்த இப் பிறப்பினையும் அறிந்திலையே என் செய்தனை ; உரைப்போனாகிய கஞ்சுகன் ‘ஈங்கு வந்தனள்' என்றலும் என்க. அப் பிறப்பு - முற்பிறப்பு; சாலி வயிற்றிற் பிறந்த பிறப்பு. 25-29. மணிப்பல்லவம் வலங்கொண்டால் அல்லது - மணிபல்லவத் தின்கட் சென்று புத்த பீடிகையை வலம் வந்தாலன்றி, பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்-பற்றுக்களையுடைய பிறவியினது தன்மையை அறியாய் ஆகலின், ஆங்கு வருவாய் அரச நீ என்று-அரசனே நீ ஆண்டு வருவாயாக என்று, அப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று - மணங்கமழும் மாலையினையுடைய அம் மன்னவன் முன்னர்க் கூறி, மையறு விசும்பின் மடக்கொடி எழுந்து - இளங்கொடி களங்கமற்ற வானூடு எழுந்து ; பிணிப்பு - பற்று, கட்டு. கமழ் பூந்தாரோன் என்க 30-36. வெய்யவன் குடபால் வீழா முன்னர் - கதிரவன் மேற்றிசையிற் சென்று வீழ்வதன் முன்னம், வானின்று இழிந்து-விசும்பினின்றும் இறங்கி, மறி திரை உலாவும்-வளைந்த அலைகள் உலாவுகின்ற, பூநாறு அடைகரை எங்கணும் போகி - பூக்கள் மணம் வீசுகின்ற அடைகரை'acயெங்குஞ் சென்று, மணிப்பல்லவம் வலங்கொண்டு - மணிப்பல்லவத்தை வலம் வந்து, மடக்கொடி பிணிப்பறு மாதவன் பீடிகைகாண்டலும்- மணிமேகலை பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையைக் காண்டலும், தொழுது வலங்கொள்ள - வலம் வந்து வணங்க, அத் தூமணிப் பீடிகை-அவ் வழகிய தூய பீடிகையின், பழுது இல் காட்சி - குற்றமற்ற காட்சியானது, தன் பிறப்பு உணர்த்த- தனது பிறப்பினை அறிவிக்க; அடைகரை - அணைந்துள்ள கரை. மடக்கொடி எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு காண்டலும், பீடிகைக் காட்சி உணர்த்த வென்க. 37-44. காயங் கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங் கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள, மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து - வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன் அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்- விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும் கலங்கு அஞர்த் தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின் - ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின்; புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும், மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும் 1"அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரு நரகரும், தொக்க விலங்கும் பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு வகையாற், சொல்லப் பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன. 45-51. புலவன் முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்-பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்று உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்யக் கொள்ளுமாறு உதித்தருள்வன், அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது-அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரை யன்றி, இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-துன்பந்தரும் பிறவியினின்றும் தப்பு வோர் எவரும் இல்லை ஆகலின், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம்-பிறரால் தடுத்தற்கரிய கூற்றுவன் வருவதற்கு முன்னரே, போற்றுமின் அறம் எனச் சாற்றிக்காட்டி-அறம்புரிவீராக என்று விளங்க எடுத்துரைத்து, நா கடிப்பாக வாய்ப்பறை அறைந்தீர்-நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர்: புலவன்-ஞானி; புத்தன் என்பதும் இப்பொருட்டு. இனி, புலவன்- இயற்கை யறிவுடையவன் என்றுமாம். உணர்ந்தோன் ஒருவன் தோன்று மென்க. அவன் அறம் - அவன் கூறும் அறம். கூற்றுவன் எதனாலும் தடுத்தற்கரியன் என்பது, 1"மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்" 2"மருந்தில் கூற்றத் தருந்தொழில்" எனப் பிற சான்றோர் கூறுமாற்றானு மறிக; அறைந்து சாற்றிக் காட்டினீர் என விகுதி பிரித்துக் கூட்டுக. மாதவன் றன்னடி பணிந்து பெயர்வோர்க்கெல்லாம் வாய்ப்பறை அறைந்தீர் என இடமும் பாலும் மயங்கியுள்ளன; 'மாதவ நின்னடி' எனப் பாடங் கொள்ளுதல் தக்கது. 52-57. அவ்வுரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வற மொழிகளைக் கேட்டு யாம் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க, வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்-நீர் எங்கட்குத் துன்பந்தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆதலின், பெரியவன் தோன்றுமுன்னர் - புத்தன் தோன்றுதற்கு முன்னரே, இப்பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-இப் பீடிகையை இந்திரன் ஈண்டு இட்ட காரணமும், மன்பெரும் பீடிகை - பெருமைமிக்க இப்பீடிகை, மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும்-யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற் பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும், என் என்று யான் தொழ - என்னையென்று யான் வணங்க; வெவ்வுரை-பதினாறு நாளில் இராகுலன் நஞ்சுவிழி யரவால் உயிர் துறப்பான், நீ அவனுடன் தீயில் மூழ்குவை என்னும் மொழி. இதனை இந்நூல் கஆம் காதையா னறிக. 58-68. முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது - எல்லா மறிந்த இறைவனையன்றி, மற்று அப்பீடிகை தன்மிசைப் பொறாஅது- வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது, பீடிகை பொறுத்தபின்னர் அல்லது-அப்பீடம் அறவோன் அடி யிணையைத் தாங்கியபின்னரேயன்றி, வானவன் வணங்கான்-இந்திரன் அதனை வணங்கான், மற்று அவ்வானவன்-அவ் விண்ணவன், பெருமகற்கு. அமைத்து-புத்தனை அறிந்து கொள்ளும்பொருட்டு இயற்றி, பிறந்தார் பிறவியை - பிறந்தோர் களுடைய பழம்பிறப்பின் செய்தியை, தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் - இத் தரும பீடிகை உணர்த்துக என ஆணைதந்தனன் ஆதலின், ஆயிழை பிறவியும் இருளறக்காட்டும் என்று எடுத்து உரைத்தது-நின் பிறவி யினையும் மயக்கமறக் காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய, அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி இன்று எனக்கு என்றே ஏத்தி வலங்கொண்டு-அன்றுரைத்த நுமது வாய் மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது என்று துதித்து வலங்கொண்டு, ஈங்கிவள் இன்னணம் ஆக - இவ்விடத்து மணிமேகலை இப்படியிருக்க; பெருமகற்கு அமைத்து - பெருமகன் எழுந்தருளுதற் பொருட்டமைத்து என்றுமாம். ஆயிழை, அருந்தவர் என்பன முன்னிலைக்கண் வந்தன. உரைத்ததாகிய வாய்மொழி யென்க. வாய்மொழி இன்று எனக்கு அன்று நேரிலே கேட்டாற் போன்றது என்றுரைத்தலுமாம். 68-79. இறைவனும் - புண்ணியராசனும், ஆங்கப் பொழில் விட்டு அகநகர் புக்கு - அச்சோலையை விட்டு நகரத்துள்ளே சென்று, தந்தை முனியா தாய் பசுவாக வந்த பிறவியும், தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது - தவமுனிவன் திருவருளால் குடராகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல், ஆங்கோர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் - பசுவின் வயிற்றினுள்ளே பொற் றகட்டினாலாய ஒரு முட்டையின்கண் அடங்கிய வண்ணத்தினையும், மாமுனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் - மக்கட்பே றில்லாதவனாகிய பூமிசந்திரன் முனிவர் திருவருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும் ஆய்தொடி அரிவை அமரசுந்தரி என்கின்ற, தாய்வாய் கேட்டுத் தாழ்துயர் எய்தி - தாயினிடமாகக் கேட்டு அறிந்து மிக்க துன்பத்தை யடைந்து, இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்-சென்ற பிறப்பின்கண் தாய் செய்ததனையும், பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து - இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி; முனி - மண்முக முனிவன், 1"மண்முக னென்னு மாமுனி யிடவயின்" என முன் வந்தமை அறிக. அடர்-தகடு. அமர சுந்தரி-பூமி சந்திரன் மனைவி. இறந்த பிறவியின் யாய்-அபஞ்சிகன் மனைவியாகிய சாலி. 80-92. செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க-போர் புரியும் வேற்படையினையுடைய வேந்தர் தம் குறை கூறுதற் கேற்ற காலத்தினை நோக்கி வாட, அரைசு வீற்று இருந்து புரையோர்ப் பேணி-பெரியோரை விரும்பித் துணைக் கொண்டு அரசு புரிந்து செம்மாந்திருந்து, நாடகம் கண்டு - நாடகத்தினைக் கண்டு, பாடற்பான்மையின் கேள்வி இன்னிசை கேட்டு- பாடுதன் முறைமையுடைய கேள்விபொருந்திய இனிய இசையைக் கேட்டு, தேவியர் - மனைவியரின் ஊடற் செவ்வி பார்த்து - ஊடுஞ் செவ்வியை நோக்கி, நீடாது - அது நீட்டியாவாறு, பாடகத் தாமரைச் சீறடி பணிந்து- பாடகமணிந்துள்ள தாமரை மலரைப் போன்ற சிறிய அடிகளை வணங்கி, தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி-அழகிய கொங்கைகளில் குங்குமக் குழம்பால் எழுதி, அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி - நெருங்கிய மலர்களை அழகிய கையினால் சுரிந்த கூந்தலின் கண் சூட்டி, நறுமுகை அமிழ்து உறூஉந் திருநகை அருந்தி-நறிய முகிழ்போலும் அழகிய பற்களிற் பொருந்திய அமிழ்தினையுண்டு, மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்க-திங்களனையமுகத்திலுள்ள கரிய கண்களின் சிவந்த கடை கலக்குறுத்த, கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ - கரும்பினை வில்லாகக்கொண்ட காமன் முகையறா மலராகிய அம்புகளைப் பொழிய, தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து - செருக்குற்ற காமமாகிய கள்ளையுண்டு விளையாடும் விளையாட்டினை இகழ்ந்து, தூ அறத்துறத்தல் நன்று எனச் சாற்றி - பற்றுக்கோடு இல்லையாகத் துறத்தல் நல்லது எனக் கூறி; மன்னர் செவ்விபார்த்தலாவது தம் குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாங் காலம் பார்த்தல். 1"செவ்வி அறம்பார்க்கும்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. புரையோர் - அறிவில் மேம்பட்ட அமைச்சர் புரோகிதர் முதலாயினர். கேள்வி - சுருதி. ஊடல்-கலவியின்பம் பற்றிப் புலத்தல்; அஃது அளவிற் பெருகலாகா தென்பதை, 2"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்" என்பதனாலறிக. ஊடல் நீடாது பணிந்து எழுதிச் சூட்டி யென்க. திரு நகை உறும் அமிழ்து என மாறுக. உணங்க வீற்றிருந்து கண்டு கேட்டு அருந்தித் தருக்கிய காமக் கள்ளாட்டு என முடிக்க. துவரத் துறத்தல் என்னும் பாடத்திற்கு முற்றத் துறத்தல் என்று பொருள் கொள்க. 93-96. தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து-மெய்யுணர்வுடைய தருமசாவக முனிவன் எனது காதினிடம் விதைத்த வித்தானது. ஏதம் இன்றாய் இன்று விளைந்தது மணிமேகலைதான் காரணமாக என்று - மணிமேகலை காரணமாகக் குற்றமின்றாய் இன்று விளைந்தது என்று, அணிமணி நீள்முடி அரசன் கூற - தொன்று தொட்டுவந்த அழகிய மணிமுடியினையுடைய மன்னவன் மொழிய; நீண்முடி - தொன்று தொட்டு வந்த முடி; குடியின் பழமையும் பெருமையும் கூறியபடி. அரசன் துயரெய்தி நினைந்து இகழ்ந்தது சாற்றிக்கூற வென்க. 97-104. மனம் வேறாயினன் மன் என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி - அரசன் மனம் வேறுபட்டனன் என்று மந்திரியாகிய சனமித்திரன் மன்னவன் அடிகளை வணங்கித் துதித்து, எங்கோ வாழி என்சொல் கேண்மதி - எம்மிறைவனே வாழ்வாயாகஎன் மொழியினைக் கேள், நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் - நுந் தந்தையாய பூமிசந்திரன் நின்னைப் பெறுவதற்கு முன்னர், பன்னீராண்டு இப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளம் கரந்து-இந்நகரத்தினையுடைய நல்ல நாடு மிகுதியான உயிர்கள் இறக்குமாறு மழையாகிய செல்வம் பன்னீராண்டு மறைந் தமையால், ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி-பெற்ற தாய் குழந்தைக்கு இரங்காதவளாய், தான் தனி தின்னும் தகைமையதாயது-தானே தனித்து உண்ணுந் தகுதியினை யுடைத்தாயிற்று; மன் - அரசன். மதி; முன்னிலையசை, கரந்து -கரந்தமையால் என்க; கரந்தது என்பதும் பாடம். நாடு - சாவக நாடு. 105-111. காய் வெங் கோடையில் கார் தோன்றியது என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில் கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்-வரிசைப் படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே, தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு - நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு, வானம் பொய்யா மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம் பிழையாதாயிற்று, ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள் மிக்க பசியை அறியாவாயின ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய காலத்து நினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல வாய் விட்ட ழைக்கும்; செங்கோன் மன்னன் குடிகளுக்குத் தாய்போல்வான் என்பது 1" தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்' என்னுங் கருத்து 2"தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க. 112-119. துயர்நிலை உலகம் காத்தல் இன்றி நீ-நீ துன்புறும் நிலையில் உள்ள உலகத்தினைப் பாதுகாத்தலின்றி, உயர் நிலை உலகம் வேட்டனையாயின்-முத்தியுலக மெய்துதலை விரும்பினையானால், இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ - அரசே! உயிர்கள் துன்புற்று மரணமடையவும், பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே - நீ நினக்கு ஊதியமாகிய நிருவாணத்தையே விரும்பினாயாவையன்றே, தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் - தனது உயிர் துன்பத்தால் வருந்துதற்கு இரங்காமல் பிறவுயிர்களைப் பாதுகாக்கும், மன்னுயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் - புத்த தேவனது அறமும் இதுவன்று ஆகலான், மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே - மன்னவனே நீ மாறுபட்ட சிந்தனையைக் கடைப் பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக் கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு; துயர் நிலை யுலகம் என்புழி உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்; 3"உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல் ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும் இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த மொழி. 120-123. மணிபல்லவம் வலங் கொள்வதற்கு எழுந்த-மணி பல்லவத்தினை யடைந்து வலம் வந்து வணங்குவேன் என்றெழுந்த, தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்-நீங்காத விருப்பமானது தணித்திட அரியதாகும் ஆகலின், அரசும் உரிமையும் அகநகர்ச்சுற்றமும் - அரசாட்சியையும் உரிமையையும் அகநகரிலுள்ள பரிசனங்களையும், ஒருமதி எல்லை காத்தல் நின் கடன் என - ஒரு திங்கள் அளவுங் காத்தல் நின்னுடைய கடமையாகும் என மொழிந்து; உரிமை - அந்தப்புர மகளிர். அகநகர்ச் சுற்றம் - அகப் பரிவாரம். முதலிய பரிசனங்கள். 124-127. கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்-மரக்கலத் தொழிலாளரை வருக என அழைத்துக்கொண்டு. இலங்கு நீர்ப் புணரி எறிகரை எய்தி - விளங்குகின்ற நீரினையுடைய கடல் அலைவீசுகின்ற கரையை அடைந்து, வங்கம் ஏறினன் - மரக்கலத்தின்கண் ஏறினன், மணிபல்லவத்திடைத் தங்காது அக்கலம் சென்று சார்ந்து இறுத்தலும்-அம் மரக்கலம் இடையே தங்காமற் சென்று மணிபல்லவத்தை அடைந்து தங்குதலும்; கலம் செய் கம்மியர் - மரக்கல மியற்றுந் தொழிலாளர்; மரக்கலத்தின் உறுப்புகள் சிதைவுழி அவற்றைச் செம்மை செய் தற்கு அவரையும் உடன்கொண்டு செல்வர். 128-133. புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி-குற்றமற்ற மெய்யறிவினையுடைய மணிமேகலை ஆண்டு எய்தி, அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி - புண்ணியராசனது மரக்கலம் என்று அறிந்து உளமகிழ்ச்சியுற்று, காவலன் தன்னொடும் கடற்றிரை உலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து - அரசனுடன் கடலில் அலைகள் உலாவுகின்றதேன் பொருந்திய மலர்ப்பொழிலையுடைய மணிபல்லவத்தை வலங்கொண்டு, பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது எனக் காட்ட - அரச! முற்பிறப்பினை யறிவிக்கும் அறத்தவிசு ஈது காண்பாயாக என்று காட்ட; காவலன் றன்னொடும் வலஞ்செய்து பீடிகையைக்காட்ட வென்க. வலங்கொண்டு ஏத்தினன் 134-137. மன்னவன் - வேந்தன் அப்பீடிகையை வலம்வந்து துதித்தனன், மன்னவற்கு உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை - உயரிய மணிகளானிழைக்கப்பட்ட அவ்வறத்தவிசு அரசனுக்குச் சென்று பிறப்பின்கண் நிகழ்ந்த செய்தியை, கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட-கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடியைப் போல எடுத்துக்காட்ட; பீடிகை உலந்த பிறவியை மண்டிலம்போலக் காட்ட வென்க. 138-157. என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன் எனது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் - தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய் பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே, ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு - செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும் உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் - உண்பதற் குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென - ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்- அறிவின் கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ் அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப் போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது - யான் பிறக்கின்ற பிறவிகள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து, மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும் எழுந்து, தென்மேற்காகச் சென்று- தென்மேற்றிசையின் கட்சென்று, திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை - கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப துறையினருகே தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப; பீடிகையாற் பழம் பிறப்பை யுணர்ந்த புண்ணியராசன் சென்ற பிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான். இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம். நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கி வந்தன. கழூஉம்-போக்கும். பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில் இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம். 158-167. ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில் நின்னை இங்குவிட்டு மறந்து சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் - நீ இறந்தவிடத்தில் உண்ணா நோன்புடனிருந்து தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் - ஒன்பது வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச் செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர் களுடைய என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக; ஆபுத்திரனோடு மணிமேகலை இருந்ததனைக் கண்டு அடைந்த தீவ திலகை முறையே அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு. அப் பெரியோய் - அத்தகு பெரியோய். குறி - இடம். போயினர், நீத்தோர், வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம் நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும் கொள்க. 168-171. ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப-பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த மணல் மறைப்ப, ஆய்மலர்ப்புன்னை அணிநிழற் கீழால் - அழகிய பூக்களை யுடைய புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய் - அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய நினக்குக் கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்; கீழால்: உருபு மயக்கம். ஆருயிர் என்றது விஞ்ஞான கந்தத்தை. அரசற்கு: முன்னிலையிற் படர்க்கை. 172-174. நின் உயிர் கொன்றாய் - நீ நின் உயிரையுங் கொன்றனை, நின் உயிர்க்கு இரங்கி - நினது உயிருக்கு இரக்கமுற்று, பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் - பின்னாளில் ஈண்டுவந்த ஏனோரின் உயிரையுங் கொன்றனை, கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-அங்ஙனம் கொலைஞனாக வுள்ள நீ யல்லயோ அரசனாயினை என்று கூறி; நின் உயிர்க்கு - நின்னுயிர் கழிந்தமைக்கு. பிறர் உயிர் விடுதற்குக் காரணமானமையின் ‘பிறருயிர் கொன்றாய்' என்றது. இது பழிப்பது போலப் புகழ்தலின் வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாகும். 175-177. பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தியுள்ள, மடவரல் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே, நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின் வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர் - காவிரிப்பூம் பட்டினம். 178-183. நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ் வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது; ஆள்வோன் - வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடி குழவியொடு பொருந்தி யென்க. 184-191. கம்பளச்செட்டி கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டி யினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற் சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ் செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள்கெனக் கொடுத்தலும்-இவன் அரசன் புதல்வன் இவனைக்கொண்டு செல்க என்று கொடுத்தலும், பெற்ற உவகையன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே - மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில், இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில் அவ் வங்கங் கவிழ்ந்தது; கம்பளச் செட்டி, பெயர்; கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம். அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான் என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம். 192-200. கெடுகல மாக்கள் - அழிந்த மரக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன் புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று - நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும் தேர்வுழி -கடற்கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து, வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப் பூம்பட்டினம் இந்திரவிழா வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம் அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென இட்டனள் சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள், பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்; 1'நன்மணி இழந்த நாகம்போன்று' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக. 201-208. கடவுள்மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல - பெருமை பொருந்திய தனது தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க - விரிகின்ற அலை களையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழுங்க, ஒருதனி போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச் சென்றனன், அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் - அரிய தவமுடைய அறவண வடிகளுடன் நின் தாயாராகிய மாதவியுஞ் சுதமதியும், வருந்தாது ஏகி வஞ்சியுட் புக்கனர் - வருத்தம் ஒன்று மின்றிச் சென்று வஞ்சி நகரம் புகுந்தனர், பரப்புநீர்ப் பௌவம் பலர் தொழக் காப்போள் உரைத்தன - பரந்த நீரினையுடைய கடலைப் பலரும் வணங்குமாறு காக்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவை எனக்கு உரைக்கப்பட்டன; " கடவுண்மாநகர்......வானவன்போல" என்றது இல்பொருளுவமம்; 2"வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும் இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும் அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்ப தியோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று" என உவமங் கூறியிருத்தலும் ஈண்டு அறியற்பாலது. 208-213. கேட்க உருகுவையாயின் - இன்னும் கேட்க விரும்பினை யாயின், நின் மன்னுயிர் முதல்வனை - நின் தந்தை மரபில் முந்தை யோனாய ஒரு வணிகனை, மணிமேகலா தெய்வம் முன்னாள் எடுத்ததும் - மணிமேகலை தெய்வம் மரக்கல முடைந்த நாளில் கடலினின்றும் எடுத்துக் காப்பாற்றியதும், அந்நாள் ஆங்கவன் - அந்நாளில் அவ்வணிகன், அறவர சாண்டதும்-புண்ணியதானஞ் செய்தனையும், அறவணன் தன்பால் - அறவண அடிகளிடம், மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பை என்று-மறுபிறப் புணர்ந்தோளாகிய நீ வஞ்சி நகரத்தின்கண் கேட்டுணர்வை என்று கூறி, அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின் - மணிபல்லவத் தீவினுட் காவல் புரியும் அரிய தெய்வமாகிய தீவதிலகை சென்றபின்னர்; உயிர் என்றது குடியை உணர்த்திற்று. அறவரசு - புண்ணிய தானம். மறுபிறப்பாட்டி-மறுபிறப்பினை அறியும் பெற்றியள். அந்தரத் தீவு - சிறு தீவு. 214-220. மன்னவன் இரங்கி-அரசன் வருத்தமுற்று, மணிமேகலை யுடன் துன்னிய தூமணல் அகழ-மணிமேகலையுடன் புன்னை நீழலில் நெருங்கிய தூய மணலைத் தோண்ட; தோன்றி - வெளிப்பட்டு, ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித் தான்பிணி அவிழாத் தகைமையதாகி - தசையினது பிணிப்பு நீங்கவும் யாக்கையின் எலும்புகள் ஒடுக்கமுற்றுத் தான் கட்டவிழாத தன்மையுடையதாய், வெண்சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி - வெள்ளிய சுண்ணத்தினால் வேயப்பட்டு அவ்விடத்து இருத்தலைப் போன்றிருந்த மாண்புமிக்க முற்பிறப்பின் வடிவத்தைப் பார்த்து, மன்னவன் மயங்க - புண்ணிய ராசன் கலக்க மெய்த; தூ - தூய்மை. பிணி - கட்டு. தோன்றித் தகைமயதாகி இருந்த யாக்கையின் படிவமென்க. 220-231. மணிமேகலை எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய் - விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினை யுடைய மன்னவனேநீ என்ன துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான் நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறு பிறப்பு உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத் தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்து வதற்கே யாகும், நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப் படுவது யாது என்று கேட்பின் யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலை பெற்ற உயிர்கட்கெல்லாம் உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று கூற; மறுபிறப்பு என்றது, ஈண்டுச் சென்ற பிறப்பினை. அந்தரத்தீவு பெருந் தீவு என்பவற்றை முன் 1"நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம் பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந் தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்றபடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின் என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க. 2"அற்றார்கட்கு, உண்டியுறையு ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது. 231-239. காவலன் உரைக்கும் - அரசன் கூறுவான், என் நாட்டா யினும் பிறர் நாட்டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன் - நன்னுதால் என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாடுகளிலும் நீ மொழிந்த நல்லறங்களைச் செய்வேன், என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை - என் பழம் பிறப்பினை அறிவித்து அறிவுடையவனாக்கினமையின் நீ என்னைப் படைத்தோயாவை, நின்றிறம் நீங்கல் ஆற்றேன் யான் என - ஆகலின் யான் நின்னிடத்தினின்றும் பிரிதலை ஆற்றேன் என்றுரைக்க, புன்கண் கொள்ளல் - துன்ப மெய்தாதே, நீ போந்ததற்கு இரங்கி-நீ ஈண்டு வந்ததற்கு வருந்தி, நின்மன்பெரு நாடு வாயெடுத்து அழைக்கும்-நினது மிகப்பெரிய நாடு ஓலமிட்டு நின்னையழைக்கும் ஆகலின், வங்கத்து ஏகுதி - மரக்கலத்தினிடமாகச் செல்வாய், வஞ்சியுட் செல்வேன் என்று-யான் வஞ்சிமாநகரஞ் செல்வேன் என்று கூறி, அந்தரத்து எழுந்தனள் அணியிழை தானென்-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்தனள் என்க. ஆயினும்: எண்ணிடைச் சொல். பழம்பிறப் புணர்ந்தது நல்லறம் பூண்டற்குரிய சிறப்புணர்வினனாதற்குக் காரணமா யிருந்தமையின் ‘என்னை நீ படைத்தனை' என்றான்; 1"நானவன்றன் மகள்" என்பது போன்றதிது. நின்னாடு வாயெடுத்தழைக்கும் என்னுங் கருத்து 'நீ யொழி காலை ... கூஉம்' என முன் இக் காதையுள் வந்திருத்தல் காண்க. அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, ‘இவள் யார்' என்னக் கஞ்சுகன், ‘அன்றே உரைத்தேன்; அவள் ஈங்கு வந்தனள்;' என்றலும், இளங்கொடி, ‘ஆங்கு வருவாய்' என்று புகன்று எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும், தொழுது அவள் வலங் கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, ‘அன்றே போன்றது' என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, ‘வித்து இன்று விளைந்தது' என்று கூற, மந்திரி சனமித்திரன், தொழுதேத்தி, ‘மன்னவ, மதிமாறோர்ந்தனை' என்று முதுமொழி கூற, முதல்வன் கேட்டு, ‘வேட்கை தணித்தற்கரியது; காத்தல் நின்கடன்' என்று கூறிக் கூஉய்க் கரையெய்தி ஏறினன்; அக் கலம் சென்று சார்ந்து இருத்தலும், பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, ‘பீடிகை இது' எனக் காட்ட, மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்குப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன் ‘மறந்து வாழேன்' என்று ஏத்தி, மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு வந்தெய்தி, ‘பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண்; என்பு மிவை காண்; காணாய்; கொன்றாய்; கொன்றாய்; கொற்றவனாயினை; மட வரல்நல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங் கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின், அறவணன்றன்பால் வஞ்சியுட் கேட்பை' என்று தெய்வம்' போயபின், மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து ‘கண்டது இல்' என காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், ‘நீங்கலாற்றேன் யான்' என, அணியிழை. ‘ஏகுதி; செல்வன்' என்று எழுந்தனள் என, வினை முடிவு செய்க. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை முற்றிற்று. 26. வஞ்சிமாநகர் புக்க காதை மணிமேகலை வான்வழியாக வஞ்சிமாநகரை யடைந்து அங்கே கண்ணகிக்கும் கோவலற்கும் எடுக்கப்பட்டுள்ள கோயிலை யடைந்து அவர் படிமங்களை வணங்கிப் பரவினாள்; கண்ணகி திருமுன் நின்று கண்ணீர் சொரிந்து, அக் கண்ணகியார் கற்புக் கடன் பூண்டு தன்கடன் முடித்த திறத்தைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்; அவட்குக் கண்ணகியார், மதுரையைத் தாம் அழற்படுத்திய காலையில், மதுராபதியெனும் அந்நகர்த் தெய்வம் தோன்றித் தமது பண்டைப் பிறப்பு வரலாற்றைக் கூறி அப்போது நேர்ந்த சாபத்தால் தமக்கு இத்தீங்கு நேர்ந்தது என்று சொல்லியும் தாம் அந்நகரைத் தீயிட்ட சினப்பாவம் தம்மை எவ்வகையாலும் பற்றா தொழியாதென்றும், அதனால் தாம் பன்முறையும் பிறந்தும் இறந்தும் முடிவில் கபிலநகரடைந்து, புத்த தருமங் கேட்டுத் தவம் பூண்டு, புத்தன் தோன்றி யறமுரைக்கும் காலத்தே, அவனது, புத்தவிகார மேழனையும் ஏத்தித் துன்பப் பிறவி நீங்கி அறங்கேட்டுப் பிறவிநீத்த பெற்றியினைப் பெறல் கூடுமென்றும், அக்காலத்தே இருத்தியும் பல செய்யப்படுமென்றும் சொல்லி, "நீ இவ் வஞ்சிநகர்க்கண்ணே அவ்வச் சமயத்தவர் கூறும் பொருள் களைக் கேட்டு அவற்றின் மெய்ம்மையின்மையைத் தேர்ந்து, புத்த தருமங் கேட்டுப் பிடகநெறி கடவா தொழுகுவாய்,' என்றும் தெளிவித்து, மேலும்கூறலுற்று, ‘நீ இளையளென்றும் பெண் ணென்றும் கருதிச் சமயக் கணக்கர் பலரும் நின்னொடு உரையாடா திகழ்வராதலால், நீ வேற்றுருக்கொள்க" என்றும் உரைத்தார். மணிமேகலையும் அவ்வாறே தனக்கு மணிமேகலா தெய்வம் தந்த மந்திரத்தை யோதி வேற்றுருக் கொண்டு, முனிவரும் கற்றோரும் புலவரும் கூடியிருக்கும் வஞ்சிநகர்ப் புறச்சேரி யடைந்து தனக்கு அறங்கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சியும் நால்வகை வாய்மை மேற்கோடற்குரிய பொருத்தமும் அமைந்தமையால் அங்கே தங்கினாள். (கண்ணகி கோவலர்களின் முற்பிறப்பு வரலாறு 11-31 அடிகளிலும், சேரன் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்ற வெற்றி நலம் 77-90 அடிகளிலும் கூறப்படுகின்றன. அணியிழை யந்தர மாறா வெழுந்து தணியாக் காதற் றாய்கண் ணகியையுங் கொடைகெழு தாதை கோவலன் றன்னையுங் கடவு ளெழுதிய படிமங் காணிய 5 வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து வணங்கி நின்று குணம்பல வேத்தி அற்புக்கட னில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டுமென் 1றழுது முன்னிற்ப 10 ஒருபெரும் பத்தினிக் கடவுளாங் குரைப்போள் எம்மிறைக் குற்ற விடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள் மதுரா பதியெனு மாபெருந் தெய்வம் இதுநீர் முன்செய் வினையின் பயனால் 15 காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத் தாய மன்னவர் வசுவுங் குமரனும் சிங்க புரமுஞ் செழுநீர்க் கபிலையும் அங்காள் கின்றோ ரடற்செரு வுறுநாள் மூவிரு காவத முன்னுந ரின்றி 20 யாவரும் வழங்கா விடத்திற் பொருள்வேட்டுப் பல்கலன் கொண்டு பலரறி யாமல் எல்வளை யாளோ டரிபுர மெய்திப் பண்டக் கலம்பகர் சங்கமன் றன்னைக் கண்டனர் கூறத் தையனின் கணவன் 25 பார்த்திபன் றொழில்செயும் பரத னென்னும் தீத்தொழி லாளன் றெற்றெனப் பற்றி ஒற்ற னிவனென வுரைத்து மன்னற்குக் குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன் ஆங்கவன் மனைவி யழுதன ளரற்றி 30 ஏங்கிமெய் பெயர்ப்போ ளிறுவரை யேறி இட்ட சாபங் கட்டிய தாகும் உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ் சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் 35 மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம் எவ்வகை யானு மெய்துத லொழியாது உம்ப ரில்வழி யிம்பரிற் பல்பிறப்பு யாங்கணு மிருவினை யுய்த்துமைப் போல 40 நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்து மிறந்து முழல்வோம் பின்னர் மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும் தரவரும் பெருமைக் கபிலையம் பதியின் 45 அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப் போதி மூலம் பொருந்திவந் தருளித் தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் 50 அந்நிலை யெல்லா மழிவுறு வகையும் இற்றென வியம்பிக் குற்றவீ டெய்தி எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும் அண்ண லறக்கதிர் விரிக்குங் காலைப் பைந்தொடி தந்தை யுடனே பகவன் 55 இந்திர விகார மேழுமேத் துதலின் துன்பக் கதியிற் றோற்றர வின்றி அன்புறு மனத்தோ டவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றிய மாகுவம் 60 அத்திற மாயினு மநேக காலம் எத்திறத் தார்க்கு மிருத்தியுஞ் செய்குவம் நறைகமழ் கூந்த னங்கை நீயும் முறைமையி னிந்த மூதூ ரகத்தே அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு 65 மெய்வகை யின்னும் நினக்கே விளங்கிய பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய் இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும் இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும் விளைபொரு ளுரையோர் வேற்றுருக் கொள்கென 70 மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்த் தேவ குலமுந் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையு மிடைந்து நற்றவ முனிவருங் கற்றடங் கினரும் 75 நன்னெறி காணிய தொன்னூற் புலவரும் எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கையில் செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய 80 நிலநா டெல்லைதன் மலைநா டென்னக் கைம்மலைக் களிறினந் தம்முண் மயங்கத் தேரு மாவுஞ் செறிகழன் மறவரும் கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக் கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி 85 வங்க நாவியி னதன்வடக் கிழிந்து கனக விசயர் முதற்பல வேந்தர் அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச் சிமைய மோங்கிய விமைய மால்வரைத் தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச் 90 செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன் விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப் பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென். உரை 1-9. அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்து சென்று வஞ்சி நகரத்தின் புறத்தே இறங்கி, தணியாக் காதல் தாய் கண்ணகியையும்-குறையாத அன்புடையளாகிய அன்னை கண்ணகியையும், கொடைகெழுதாதை கோவலன் தன்னையும்-ஈதற்றன்மை மிக்குடையானாகிய தந்தை கோவலனையும், கடவுள் எழுதிய படிமம் காணிய - தெய்வமாக எழுதியமைக்கப் பட்ட வடிவத்தைக் காணும் பொருட்டு, வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து - ஆசை மேன்மேலுந் தூண்டுதலால் அக் கோயிலிற் புகுந்து, வணங்கி நின்று குணம் பல ஏத்தி - வணக்கஞ் செய்து நின்று அவளுடைய சிறந்த குணங்கள் பலவற்றையும் எடுத்துத் துதித்து, அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது - அன்பாகிய கடனிலே நில்லாமலும் நல்ல தவநெறியில் செல்லாமலும், கற்புக் கடன் பூண்டு நுங்கடன் முடித்தது - கற்பினையே கடனாக மேற் கொண்டு நுமது கடனை முடித்ததன் காரணத்தை, அருளல் வேண்டும் என்று அழுது முன்நிற்ப-உரைத்தருள வேண்டும் என்று கூறியழுது கண்ணகி திருமுன் நிற்ப; எழுந்து என்பதன் பின் அவாய் நிலையால் சில சொற்கள் வருவித் துரைக்கப்பட்டன. கடவுள் எழுதிய-தெய்வமாக இயற்றிய. கோவலன் கொடையில் மேம்பட்டவ னென்பது, தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ வுணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்தனன் என்பது முதலிய வரலாற்றானறியப்படும். இதனைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையானறிக. படிமம்-படிவம், வடிவம். கண்ணகி கோட்டத்துக் கோவலனுக்குப் படிவம் அமைக்கப்பட்டதென்பது இதனாற்பெற்றாம். அற்புக்கடன்-தலையன்பினால் கணவனிறப்ப உடனிறத்தலும் தீப்பாய்தலுமாம். நற்றவம் படர்தலாவது கைம்மை நோன்பைநோற்று உடம்பைவருத்துதல். கண்ணகி கற்பையே கடனாகக் கொண்டவளென்தபனை, 1"கற்புக்கடம் பூண்ட வித்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்" 2"கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்" என்பவற்றானறிக. ஈண்டுக் கற்பென்றது மறக் கற்பினை. நும் கடன் முடித்தது என்றது மதுரையை அழற்படுத்திப் பதினான்காம்நாளிற் கோவலனைச் சென்று கூடியதை உணர்த்திற்று. "அற்புக் கடனில்லாது... முடித்தது" என்பவற்றின் கருத்து 3"காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது, இன்னுயி ரீவர் ஈயா ராயின், நன்னீர்ப்பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயினன்பரோ, டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர், பத்தினிப் பெண்டிர்" என, இந்நூலுள் முன்பு வந்திருத் தலால் விளக்கமாம். 10-13. ஒரு பெரும் பத்தினிக்கடவுள் ஆங்கு உரைப்போள்-ஒப்பற்ற பெருமையினையுடைய பத்தினிக் கடவுளாகிய கண்ணகி அப்பொழுது கூறுவாள், எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது - என் காதலன் உற்ற கடுந்துன்பத்தைப் பொறாமல், வெம்மையின் மதுரை வெவ்வழல் படுநாள்-யான் சினத்தினால் மதுரை நகரைக் கொடிய எரிமூட்டிய நாளில், மதுராபதி எனும் மாபெருந்தெய்வம் - மதுராபதி யென்று கூறப்படும் மதுரையின் அதிதேவதையாகிய பெரிய தெய்வம் தோன்றி" இடுக்கண் - துன்பம்" ஈண்டுக் கொலை. வெம்மை - வெகுளி. அழற்படுநாள் - அழற்படுத்து நாளில்" படுதல்: பிறவினைப் பொருட்டு- 'எம்மிறைக்கு' என்பது முதலியன கண்ணகி கூற்று. 14-28. இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க நன்னாட்டு - குற்றமற்ற மலர்ச்சோலை களையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியாராகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமை யினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்; இது நீர் என்பது முதலியன, மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும். பயனால்: ஆல்: அசை. ‘வினையின் பயன்' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின் அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார் என நிரனிறையாகக் கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம். பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென - விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன். 29-34. ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள் இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்ட சாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்; மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; 1“இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'' என்பது காண்க. உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந் தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு 2''கடிபொழி லுடுத்த கலிங்க நன்னாட்டு, வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்...வழுவில் சாபம் பட்டனிர்'' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும் நன்கறியப்படும். 35-53. மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம் - முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம். அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின் முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது, உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து - உம்பருலகினில் நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின் கண்ணும் இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப் போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற் கரிய பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும் மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும் மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல்வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய பெருமையை யுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்து-அளத்தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்தஞாயிறு தோன்றி-அசைவற்ற புத்தனாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி - அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து - தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன்னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக் கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும் 'வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது; விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க. அடு சினப் பாவம்-மதுரையை அழித்த சினமாகிய பாவம்; 1 “தன்னையே கொல்லுஞ் சினம்'' என்பவாகலின் அடு சினம் எனப்பட்ட தென்றலுமாம். இருவினை உய்த்து - இருவினையாற் செலுத்தப்பட்டு. திலகம் - திலகம் போல்வது; மேலாயது. கபிலை - கபிலைநகர்; மகதநாட்டின் தலைநகர்; கபிலர் எனப் பெயரிய முனிவரொருவர் முன்பு தவஞ் செய்தற்கு இடமாயிருந்தமையின் இப்பெயர் பெற்றதென்பர். இது கபில வஸ்து எனவும் வழங்கும். பாரமிதை - கரையை அடைவதற்குரியது; பாரம் - கரை; வீடு பேறாகிய கரையை அடைதற்குரிய தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள்., வலி, ஞானம் என்னும் பத்தும் நிரம்பப் பெறுதல். இவை ஒவ்வொன்றும் தானபாரமிதை முதலிய பெயர்களால் வழங்கும். இவை தசபாரமிதை யெனவும், தசபாரமெனவும் கூறப்படும். 2''தானஞ் சீலம்பொறை தக்கதாய வீரியம், ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும், மானமில் லருளினை வைத்தலேவ லிம்மையும், ஞானமீரைம் பாரமிதை நாடுங்கா லிவைகளும்'' 3''தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி, ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே'' என்பன காண்க. போதி - அரசமரம்; என்றது மாபோதியை. நால் வகை வாய்மை - துயரம், துயரத் தோற்றம், துயர நீக்கம், துயர நீக்க நெறி என்பன. பன்னிரு சார்பு - 1''பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்'' என்பன. இற்று என்பதனைத் தோற்றத்தோடும் வகை யோடும் தனித்தனி கூட்டுக. அண்ணல் - தலைமை. புத்தனை ஞாயிறாக உருவகித்ததற்கேற்ப அவன் அறிவுறுத்தும் அறங்களைக் கதிராக உருவகஞ் செய்தார். புத்த ஞாயிறு நிறைத்துத் தோன்றி வந்தருளித் தெரிந்து இயம்பி எய்தி விரிக்குங்காலை யென்க. 54-59. பைந்தொடி தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் - நின் தந்தையுடனே யான் புத்தனது இந்திர விகாரங்கள் ஏழனையும் வணங்கித் துதித்த நல்வினையினாலே, துன்பக் கதியில் தோற்றரவு இன்றி - இன்னல் தரும் இழி பிறப்பிலே தோன்றுதலின்றி, அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு - அன்பு மிகுந்த உள்ளத்துடன் புத்தனது அறவுரைகளைக் கேட்டு, துறவி உள்ளம் தோன்றி - உள்ளத்தே துறவு தோன்றி, தொடரும் பிறவிநீத்த பெற்றியம் ஆகுவம் - தொடர்ந்து வரும் பிறவியை நீக்கிய இயல்பினை யுடையே மாவேம்; பைந்தொடி: முன்னிலைப் பெயர். பகவன் - புத்தன். விகாரம் - கையாற்செய்யப்படாது நினைவினால் ஆக்கப்பட்டது. இந்திர விகாரம்- ஏழு - காவிரிப்பூம் பட்டினத்திலே இந்திரனால் நிறுமிக்கப் பட்ட ஏழ் அரங்குகள்; விசும்பிலியங்குவோராகிய சாரணர் இருந்து, பௌத்தாகமப் பொருளை யாவர்க்கும் அறிவுறுத்து தற்கு இடமாக இருப்பவை; இதனை 2“பணையைந் தோங்கிய பாசிலைப் போதி, அணிதிகழ் நீழ லற வோன் றிருமொழி, அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும், இந்திர விகார மேழுடன் போகி'' என்பதனால் உணர்க. ‘ஏத்துதலின்' என ஈண்டுக் கூறியதனால், கோவலனும் கண்ணகியும் புகார்நகரி லிருந்தபொழுது இவற்றை வழிபட்டார்களென்பது போதரும். தோற்றரவு - தோன்றுதல்; தொழிற்பெயர்; துன்பக் கதியில் தோன்றுதலின்றி என்பதனால் நற்கதியிற் பிறத்தல் பெற்றாம். துறவி - துறவு; திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில் பேராசிரியர் 3'துறவு துறவியென நின்றாற் போல அளவு அளவியென நின்றது'' என எழுதியுள்ளமை காண்க. பெற்றி யென்றது நிருவாணத்தை. 60-61. அத்திறமாயினும் அநேக காலம் எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் - அவ்வாறு ஆவேமாயினும் பல காலங்கள் எவ் வகைப்பட்டோர்க்கும் சித்தியும் செய்வோம்; இருத்தி - சித்தி. இதனை ரிதி யென்றும், இது பரிணாமிகம், நிருமாணிகமென விருவகைத்தென்றும், ஒவ்வொன்றும் முறையே பதினாறும் இரண்டுமாய் விரியுமென்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன. 62-67. நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங் கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின் இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண் முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு - சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் - அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினக்கே விளங்கிய பின், பெரியோன் பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக் கடவாயாவாய், இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து உரைத்தலும் - தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்; மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. பிடகம் - பௌத்தாகமம்; இது வினயம், சூத்திரம், சாத்திரம் என மூவகைப்படுதலின் திரிபிடகம் எனவும் படும். மூன்றுள் ஒவ்வொன்றும் பல பகுதி களை யுடையதாம். 68-74. இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க என - இவள் இளமையுடைய வளை யணிந்த பெண்ணாவாள் என்று நினக்கு யாவரும் தம் சமய உண்மைகளைக் கூறார் ஆதலின் நீ வேற்றுருவங் கொள்க என்று, மையறு சிறப்பின் தெய்வதம் தந்த-களங்கமற்ற சிறப்பினை யுடைய மணிமேகலா தெய்வங் கொடுத்த, மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய் - மந்திரத்தை ஓதி ஒரு தாபதன் வடிவாகி, தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-கடவுளர் கோயிலும் வேதிகையும் சாலையும் அழகிய பூஞ்சோலையும் வாவியும் நெருங்கி, நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்- நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும், நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்-அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க புலவரும், எங்கணும் விளங்கிய-எங்கும் இருந்து விளங்கிய, எயிற்புற இருக்கையில் - புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய ; மந்திரம் - வேற்றுருவெய்துவிக்கும் மந்திரம். குலம் - கோயில். பள்ளி - சாலை; இதனைத் 1“திணிமணற் புதுப்பூம் பள்ளி'' என்னும் புறநானூற்றினுங் காண்க. மறுமை கருதித் தவஞ் செய்தலைத் தவம் என்றும், வீடு கருதிச் செய்தலை நற்றவம் என்றும் வழங்குதல், 2“நற்றவஞ் செய்வார்க்கிடம் தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்'' என்னுஞ் சிந்தாமணியினாற் பெறப்படுதலின், ஈண்டு ‘நற்றவ முனிவர்' என்று விதந்தது பயன் கருதாது தவம் முயலும் முனிவரரை என்க. தேவ குலம் முதலியன மிடைந்து முனிவர் முதலியோர் விளங்கிய இருக்கை என்பது. 77. செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் - செங்குட்டுவன் என்னும் செங்கோலரசனாகிய சேரர் பெருமானும்; செங்குட்டுவன், பெயர்; இவன், ஆசிரியர் இளங்கோவடிகளின் தமையனும் வஞ்சிமாநகரிற் கண்ணகி படிமம் நிறுவியோனுமாவன். 78-90. பூவா வஞ்சியில் - பூவல்லா வஞ்சியாகிய நகரத்தில், பூத்தவஞ்சி போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய-போர் வினையை மேற்கொண்ட சேனைகள் வஞ்சிப்பூவைத் தமது முடியிலே சூட, நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்க-செல்லும் நிலத்தின் கண் உள்ள நாடுகளின் பரப்பு முழுதும் தனது மலை நாடென்று தோற்றும்படி துதிக்கையைப் பொருந்திய மலை களைப் போன்ற யானைகள் தம்முள் ஒருங்கு சேர்ந்து செல்ல, தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலின் கலிகொள - தேருங் குதிரையும் நெருங்கிய வீரக்கழ லணிந்த வீரரும் முகிலுடன் கூடிய கடல்போல முழங்க, கடைஇ- அவற்றைச் செலுத்தி, கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி- கங்கைப் பெருநதியின் அடைகரையில் தங்கி, வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-வங்கம் என்னும் ஒருவகை மரக்கலத்தின் உதவியால் அந்நதியின் வடகரையில் இறங்கி, கனகவிசயர் முதற் பல வேந்தர் அனைவரை வென்று - கனகன் விசயன் முதல் உத்தரன் விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலராகிய அனைவரையும் வென்று, அவர் அம்பொன் முடிமிசை - அவர்களுடைய அழகிய பொன்முடி யணிந்த தலைமீது, சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - கொடுமுடி உயர்ந்து பெரிய இமய மலையினின்றும் வெட்டி யெடுத்த, தெய்வக் கல்லும்-தெய்வப் படிமம் அமைத்தற்குரிய கல்லையும், தன் திரு முடி மிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் - தனது அழகிய முடியின் மீது தனது வெற்றியின் அடையாள மாகப் பொன்னாற் செய்யப்பட்ட வாகை மலரையும் வைத்த சேரனும்; இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. 'செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர்; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவா வஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும். சேரன் செங்குட்டுவன் வடக்கே போர்மேற் சென்ற வழியிலிருந்த நாடுகளின் பரப்புகள், அவன் சேனையி லிருந்த மலை போன்ற பெரிய யானைகளின் கூட்டம் அங்கங்குந் திரண்டு சென்றபோது அவன்றன் மலைநாடுபோற்றோன் றின வென்க. அடைகரை - வெள்ளத்தால் மணல் அடைந்த கரை. வங்க நாவி: இருபெயரொட்டு. பல வேந்தரென்றது, கனகன் விசயன் என்பாரொடு கூடிச் செங்குட்டுவனை எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய ஆரிய அரசர் பலரை. அனைவரை என்றார், அவரனைவரையும் சேரன் ஒருங்கு வென்றமையின் ; உம்மை விரித்துக் கொள்க. ‘அம் பொன் முடிமிசை' என்ற விடத்துப் பொன் ஆகு பெயர். வாகை - வாகைமலர்; போரில் வெற்றி பெற்றோர் அதற்கு அறிகுறியாக அந்நேரத்திற் சூடும் மலர். அரசர் அதனைப் பொன்னாற் செய்து அணிந்து கொள்வ ராதலின், 'செய் பொன் வாகை' எனப்பட்டது. அவரம்பொன் முடிமிசைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்' என்க. சேரன் செங்குட்டு வனது இவ் வெற்றி வரலாற்றைச் சிலப்பதிகாரத்தின் கால்கோட் காதை நீர்ப்படைக் காதைகளால் அறிக. 91. வில்திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்வலியை விரும்பினோனாகிய செங்குட்டுவனது புகழ் விளங்குமாறு, திறல் - வலி; வெய்யோன் - விரும்பினோன் ; 1 “வெற்றி விறல் வெய்யோன்'' என்றார் புறப்பொருள் வெண்பா மாலையினும். 92-94. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந் தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவுறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க. கொடி, வஞ்சிக்கொடி; 2''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ‘திருந்து நல் ஏது' என்றார். வாய்மை நான்கும் 3மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ‘பொருந்து நால் வாய்மை' எனப்பட்டது. ‘நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்' என்பது. அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ‘அருளல் வேண்டும்' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ‘இன்னது இவ் வியல்பு' என எடுத் துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க. வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று. மணிமேகலை பதிகமுதல் இக்காதை வரை ஆசிரியர், நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களெழுதிய உரை முற்றிற்று. 27. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை (மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி அவர்பாற் சென்று, அளவை வாதி முதல் பூத வாதி யீறாகவுள்ள அவரனைவரையும் வினவ, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை யுரைத்தனர். (இதன் கண் 5-85 அடிகளில் அளவை வாதமும், 89-95 அடிகளில் சைவ வாதமும், 96-104 அடிகளில் பிரம வைணவ வேத வாதங்களும், 110-165 அடிகளில் ஆசீவக வாதமும், 171-201 அடிகளில் நிகண்ட வாதமும், 202-239 அடிகளில் சாங்கிய வாதமும், 242-262 அடிகளில் வைசேடிக வாதமும், 264-268 அடிகளில் பூதவாதமும் கூறப்படுகின்றன.) நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறஞ் சார்ந்து வைதிக மார்க்கத் தளவை வாதியை எய்தின ளெய்திநின் கடைப்பிடி யியம்பென 5 வேத வியாதனுங் கிருத கோடியும் ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர் பத்து மெட்டு மாறும் பண்புறத் தத்தம் வகையாற் றாம்1பகர்ந் திட்டனர் காண்டல் 2கருத லுவம மாகமம் 10 3ஆண்டைய வருத்தா பத்தி யோடியல்பு ஐதிக மபாவ மீட்சி யொழிவறிவு எய்தியுண் டாநெறி யென்றிவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும் மருளில் காட்சி யைவகை யாகும் 15 கண்ணால் வண்ணமும் செவியா லோசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற் சுவையு மெய்யா லூறுமெனச் சொன்ன இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத் துக்கமுஞ் சுகமுமெனத் துயக்கற வறிந்து 20 உயிரும் வாயிலு மனமுமூ றின்றிப் பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச் சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது கிட்டிய தேச நாம சாதி குணக்கிரி யையி னறிவ தாகும் 25 கருத்தள வாவது 1குறிக்கொ ளனுமா னத்தனு மேயத் தகைமை யுணருந் தன்மைய தாகும் மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம் பொதுவெனப் படுவது சாதன சாத்தியம் 30 இவையந் நுவய மின்றா யிருந்துங் கடந்திகழ் யானைக் கானவொலி கேட்டோன் உடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் எச்ச மென்பது வெள்ளவே துவினால் நிச்சயித் தத்தலை மழைநிகழ் வுரைத்தல் 35 முதலென மொழிவது கருக்கொண் முகில்கண் டிதுமழை பெய்யு மெனவியம் பிடுதல் என்னு மேதுவி னொன்றுமுக் காலந் தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி மாண்ட வுயிர்முதன் மாசின் றாகிக் 40 காண்டற் பொருளாற் கண்டில துணர்தல் உவம மாவ தொப்புமை யளவை கவய மாவாப் போலுமெனக் கருதல் ஆகம வளவை யறிவ னூலாற் போக புவன முண்டெனப் புலங்கொளல் 45 அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல் 2இயல்பி யானைமே லிருந்தோன் தோட்டிக்கு அயலொன் றீயா ததுவே கொடுத்தல் ஐதிக மென்ப துலகுரை யிம்மரத்து 50 எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல் அபாவ மென்ப தின்மையோர் பொருளைத் தவாதவ் விடத்துத் தானிலை யென்றல் மீட்சி யென்ப திராமன்வென் றானென மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல் 60 உள்ளநெறி யென்பது நாராசத் திரிவிற் கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல் எட்டுள பிரமா ணாபா சங்கள் சுட்டுணர் வொடுவிரி யக்கோட லையந் தேராது தெளிதல் கண்டுண ராமை 60 எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல் நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது எனைப்பொரு ளுண்மை மாத்திரை காண்டல் திரியக் கோட லொன்றையொன் றென்றல் விரிகதி ரிப்பியை வெள்ளியென் றுணர்தல் 65 ஐய மென்ப தொன்றை 1நிச்சயியா மையற் றறியோ மகனோ வென்றல் தேராது தெளிதல் செண்டு வெளியில் ஓராது தறியை மகனென வுணர்தல் கண்டுண ராமை 2கடுமாப் புலியொன்று 70 அண்டலை முதலிய கண்டுமறி யாமை இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல் உணர்ந்ததை யுணர்த லுறுபனிக் குத்தீப் புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல் 75 நினைப்பெனப் படுவது காரண நிகழாது நினக்கிவர் தாயுந் தந்தையு மென்று பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள் பாங்குறு முலோகா யதமே பௌத்தஞ் சாங்கியம் நையா யிகம்வை சேடிகம் 80 மீமாஞ் சகமாஞ் சமயவா சிரியர் தாம்பிரு கற்பதி சினனே கபிலன் அக்க பாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம் உவமான மருத்தா பத்தி யபாவம் 85 இடையே யிப்போ தியன்றுள வளவைகள் என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென நின்ற சைவ வாதிநேர் படுதலும் பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன இருசுட ரோடிய மானனைம் பூதமென் 90 றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும் படைத்துவிளை யாடும் பண்பி னோனுந் துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந் தன்னில் வேறு தானொன் றிலோனும் 95 அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன் பேருல கெல்லாம் பிரம வாதியோர் தேவ னிட்ட முட்டை யென்றனன் காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன் 100 கற்பங் கைசந் தங்கா லெண்கண் தெற்றெ னிருத்தஞ் செவிக் கைமூக் குற்ற வியாகர ணமுகம் பெற்றுச் சார்பிற் றோன்றா வாரண 1வேதக் காதி யந்த மில்லையது நெறியெனும் 105 வேதிய னுரையின் விதியுங் கேட்டு மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற எத்திறத் தினுமிசை யாதிவ ருரையென ஆசீ வகநூ லறிந்த 2புராணனைப் பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென 110 எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படு கின்ற வரம்பி லறிவ னிறைநூற் பொருள்களைந் துரந்தரு முயிரோ டொருநால் வகையணு அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப் 115 பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும் நிலநீர் தீக்காற் றென3நால் வகையின மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும் வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும் அவ்வகை யறிவ துயிரெனப் படுமே 120 வற்ப மாகி யுறுநிலந் தாழ்ந்து சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய் இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத் தெறுதலு மேற்சே ரியல்பு முடைத்தாம் காற்று விலங்கி யசைத்தல் கடனிவை 125 1வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால் ஆதி யில்லாப் பரமா ணுக்கள் தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா 2புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா 130 ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும் குலாமலை பிறவாக் கூடும் 3பலவும் பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும் 135 மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம் வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதிபோற் செழுநில4 வரைப்பாம் நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற் குறைந்து மொத்துங் கூடா வரிசையின் 140 ஒன்று முக்கா லரைகா லா5யுறும் துன்று6மிக் கதனாற் பெயர்சொலப் படுமே இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச் சிக்கென் பதுவும் நீரா யிழிவதும் தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும் 145 ஆய தொழிலை யடைந்திட மாட்டா ஓரணுத் தெய்வக் கண்ணோ ருணர்குவர் 7தேரார் பூதத் திரட்சியு ளேனோர் மாலைப் போதி லொரு8மயி ரறியார் சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும் 150. கருமம் பிறப்புங் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்புஞ் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்றிவ் வாறு பிறப்பினு மேவிப் பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர் 155 9கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர் அழியல் வேண்டா ரதுவுறற் பாலார் இதுசெம் போக்கி னியல்பிது தப்பும் அதுமண் டலமென் றறியல் வேண்டும் 1பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும் 160 உறுமிடத் தெய்தலுந் துக்கசுக முறுதலும் பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும் கருவிற் பட்ட பொழுதே 2கலக்கும் இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத்தகும் முன்னுள 'd2வூழே பின்னுமுறு விப்பது 165 மற்கலி நூலின் வகையிது வென்னச் சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை நீயுரை நின்னாற் புகழுந் தலைவன்யார் நூற்பொருள் யாவை அப்பொரு ணிகழ்வுங் கட்டும் வீடும் 170 மெய்ப்பட விளம்பென விளம்ப லுறுவோன் இந்திரர் தொழப்படு மிறைவனெம் மிறைவன் தந்த நூற்பொரு டன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமுங் காலா காயமும் தீதில் சீவனும் பரமா ணுக்களும் 175 நல்வினை யுந்தீ வினையுமவ் வினையாற் செய்வுறு பந்தமும் வீடுமித் திறத்த ஆன்ற பொருடன் றன்மைய தாயும் தோன்றுசார் வொன்றின் றன்மைய தாயும் அநித்தமு நித்தமு மாகி நின்று 180 நுனித்த குணத்தோர் கணத்தின் கண்ணே தோற்றமு நிலையுங் கேடு மென்னும் மாற்றரு மூன்று மாக்கலு முரித்தாம் நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம் நிம்பத் தப்பொரு ளன்மை யநித்தியம் 185 பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் இயற்றி யப்பய றழிதலு மேதுத் தருமாத்தி காயந் தானெங்கு முளதாய்ப் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித் தாகிய தன்மாத்தி காயமும் 190 எப்பொருள் களையு நிறுத்த லியற்றும் காலங் கணிக மெனுங்குறு நிகழ்ச்சியும் ஏலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும் ஆக்குமா காய மெல்லாப் பொருட்கும் பூக்குமிடங் கொடுக்கும் புரிவிற் றாகும் 195 சீவ னுடம்போ 1டொத்துக் கூடித் தாவில்சுவை முதலிய புலன்களை நுகரும் ஓரணு புற்கலம் புறவுரு வாகும் சீர்சா னல்வினை தீவினை யாவைசெயும் வருவழி யிரண்டையு மாற்றி முன்செய் 200 அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல் அதுவீ டாகு மென்றன னவன்பின் இதுசாங் கியமத மென்றெடுத் துரைப்போன் தனையறி வரிதாய்த் தான்முக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமை பொதுவாய் 205 எல்லாப் பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து மானென் றுரைத்த புத்தி வெளிப்பட் டதன்கணா காயம் வெளிப்பட் டதன்கண் வாயு வெளிப்பட் டதன்க ணங்கி 210 யானது வெளிப்பட் டதன்க ணப்பின் தன்மை வெளிப்பட் டதின்மண் வெளிப்பட் டவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட் டார்ப்புறு மனத்தாங் கார விகாரமும் ஆகா யத்திற் செவியொலி விகாரமும் 215 வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும் அங்கியிற் கண்ணு மொளியுமாம் விகாரமும் தங்கிய வப்பில்வாய் சுவையெனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட் டிவற்றிற் றொக்கு விகாரமாய் 220 வாக்குப் பாணிபாத பாயுரு பத்தமென ஆக்கிய விவைவெளிப் பட்டிங் கறைந்த பூத விகாரத் தான்மலை மரமுதல் ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து வந்த வழியே யிவைசென் றடங்கி 225 அந்தமில் பிரளய மாயிறு மளவும் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம் அறிதற் கெளிதாய் 1முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் 2பொதுவு மன்றி எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி 230 அப்பொரு ளெல்லா மறிந்திடற் குணர்வாய் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாய் நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன் புலமார் பொருள்க ளிருபத் தைந்துள நிலநீர் தீவளி யாகா யம்மே 235 மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே உறுசுவை யொளியூ றோசைநாற் றம்மே வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம் ஆக்கு மனோபுத்தி யாங்கார சித்தம் உயிரெனு மான்மா வொன்றொடு மாமெனச் 240 செயிரறச் செப்பிய திறமுங் கேட்டு வைசே டிகநின் வழக்குரை யென்னப் பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் சாமா னியமும் விசேடமும் கூட்டமும் ஆமாறு கூறா மதிற்பொரு ளென்பது 245 குணமுந் தொழிலு முடைத்தா யெத்தொகைப் பொருளுக்கு மேதுவா மப்பொரு ளொன்பான் ஞாலநீர் தீவளி யாகா யந்திசை கால மான்மா மனமிவற் றுண்ணிலம் ஒலியூறு நிறஞ்சுவை நாற்றமொ டைந்தும் 250 பயில்குண முடைத்து நின்ற நான்கும் சுவைமுத லொரோகுண மவைகுறை வுடைய ஓசை யூறு நிறநாற் றஞ்சுவை மாசில் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 255 என்னு நீர்மை பக்கமுத லனேகம் கண்ணிய பொருளின் குணங்க ளாகும் பொருளுங் குணமுங் கரும மியற்றற் குரிய வுண்மை தருமுதற் பொதுத்தான் போதலு நிற்றலும் பொதுக்குண மாதலிற் 260 சாதலு நிகழ்தலு மப்பொருட் டன்மை ஒன்றணி கூட்டங் குணமுங் குணியுமென் றொன்றிய வாதியு முரைத்தன னுடனே பூத வாதியைப் புகனீ யென்னத் தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு 265 மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங் குற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும் அவ்வுணர் வவ்வப் பூதத் 1தழிவுகளின் வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும் 270 உயிரில் லாத வுணர்வில் பூதமும் அவ்வப் பூத வழியவை பிறக்கும் மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே கண்கூ டல்லது கருத்தள வழியும் 275 இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல் என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன் பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின் 280 அறிந்தோ ருண்டோ 2வென்றுநக் கிடுதலும் தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும் மைய லுறுவோர் மனம்வே றாம்வகை ஐய மன்றி யில்லையென் றலுநின் தந்தைதா யரையனு மானத் தாலலது 285 இந்த ஞாலத் தெவ்வகை யறிவாய் மெய்யுணர் வின்றிமெய்ப் பொருளுணர் வரிய ஐய மல்லதிது சொல்லப் பெறாயென உள்வரிக் கோலமோ டுன்னிய பொருளுரைத்து ஐவகைச் சமயமு மறிந்தன ளாங்கென். உரை 1-4. சமயக்கணக்கர் தம் திறம்சார்ந்து-மாதவன் வடிவு கொண்டுவந்த மணிமேகலை சமயவாதிகள் உறையும் இடத்துக்குச் சென்று, நவையறு நன்பொருள் உரைமினோ என - குற்றமற்ற மெய்ப்பொருளை யுரைப்பீராக என வினவும் கருத்தினளாய், வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்-வேதநெறியை மேற்கொண்டொழுகும் பிரமாணவாதியை யடைந்தாள், எய்தி - அவ்வாறடைந்தவள், நின் கடைப்பிடி இயம்புஎன - நீ கொண்டொழுகும் சமயக் கொள்கையைச் சொல்வாயாக என்று வினவ எ-று. சமயக்கணக்கர் - சமய நுண்பொருள்களை யாராய்ந்துரைக்கும் சமயவாதிகள். மெய்ப்பொருளை "நவையறு பொருள்" என்றும், அதன் விளைவு நன்மையாதல்பற்றி "நன்பொரு" ளென்றும் கருதினாள். வேதத்தை மேற்கொண் டொழுகும் நெறி, வைதிகமார்க்கமெனப் பட்டது. அளவை, பிரமாணம். கொள்கையைக் "கடைப்பிடி" யென்றார், பல்லாற்றானு மாராய்ந்து கைக்கொள்ளப்படுதலின். அளவைவாதி 5-8. வேதவியாதனும் கிருதகோடியும்-வேதத்தைப் பகுத்து முறை செய்த வியாத முனியும் கிருதகோடி முனியும்; ஏதம்இல் சைமினி எனும் இவ்வாசிரியர் - குற்றமில்லாத சைமினிமுனியு மென்னும் இந்த ஆசிரியன்மார்கள்; பத்தும் எட்டும் ஆறும் - அளவைகளை முறையே பத்தென்றும், எட்டென்றும் ஆறென்றும்; தத்தம் வகையால் பண்புறப் பகர்ந்திட்டனர் - தத்தமக்கேற்ற கூறுபாட்டின் படியே அளத்தற்குரிய தகுதியமையக் கூறியுள்ளனர் எ - று. இங்கே கூறிய வேதவியாதரை, வேதம் முறை செய்தவரும் பிரம சூத்திர மெழுதியவருமாகிய வியாதரல்ல ரென்றும், இவர் பௌராணிகரான வியாதராக இருக்கலாமென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுவர். கிருதகோடி யென்பாரைப் போதாயனரென்றும் கிருதகோடிகவி யென்றும் கூறுப. சைமினி யென்பார் மீமாஞ்சை நூலை யெழுதியவர். இவருள் வியாதர் பத்தளவையும், கிருத கோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும் கொண்டன ரென்பதாம். பிற்காலத்தே சைமினி யெழுதியது பூருவ மீமாஞ்சை யென்றும், வாதராயண ரெழுதியது உத்தரமீமாஞ்சை யென்றும் வழங்கலாயின வெனக்கொள்க. விரிந்தது தொகுத்தல் அவ்வக் காலத்துக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாதலின், "பண்புறப்பகர்ந்திட்டனர்" என்றான் ; முன்னோரை நோக்கப் பின்னோர் ஒரு சில அளவைகளைக் குறைத்துக்கொண்டாராயினும், அளத்தற்குரிய பொருள் எஞ்சாமல் அளக்கப்பட்ட தென்பதும் "பண்புற" என்றதனாற் பெற்றாம். 1. பிரமாணங்கள் 9-13. காண்டல் - காட்சியளவையும்; கருதல்-அனுமான வளவையும்; உவமம்-உவமையளவையும்; ஆகமம்-ஆகம வளவையும்; ஆண்டைய அருத்தாபத்தியோடு-ஆங்கு அவற்றோடு கூறப்படும் அருத்தாபத்தியளவையும்; இயல்பு - இயல்பு அளவையும்; ஐதிகம்-ஐதிக வளவையும்; அபாவம்-அபாவ வளவையும்; மீட்சி ஒழி வறிவு-மீட்சியாலறியும் ஒழிபளவையும்; எய்தி உண்டாம் நெறி- தோன்றியுளதாய் நிகழும் சம்பவ வளவையும்; என்ற இவை தம்மால்-என்று கூறப்பட்ட இப்பத்தாலும்; பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் - பொருளின் உண்மைத் தன்மையையறிதல் வேண்டும் எ -று. காண்டல் முதல் ஆகம மீறாகக் கூறிய நான்கினையும் சிறப்புடையவாகவும் ஏனையவற்றை யத்துணைச் சிறப்பில்லன வாகவும் சில ஆசிரியன்மார் கோடலின், "ஆண்டைய அருத்தா பத்தியோடு" என்று பிரித்தோதினார். ஓடு: எண்ணுப்பொருட்டு. பாரிசேடத்தை, மீட்சி யொழிவு அறிவு என விளக்கினார். சம்பவ வளவை, தோன்றி நின் றியலுவதைக் காட்டலின், "எய்தியுண்டா நெறி" யென்றார். "இவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்" என்றது. இவற்றால் விளையும் பயன் உணர்த்தி நின்றது. காட்சியைப் பிரத்தியக்கமென்றும், கருதலைக் கருத்தென்றும் அனுமானமென்றும், ஆகமத்தைச் சத்தமென்றும், இயல்பைச் சுபாவமென்றும், அபாவத்தை இன்மையென்றும், மீட்சியைப் பாரிசேட மென்றும் கூறுப. புலங்கொளல், ஒரு சொல்லாய் அறிதலென்பது பட நின்றது; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க. வியாதன் கூறிய பத்தையும் ஈண்டுக் கூறி, சைமினி கூறிய ஆறினையும் அளவை வாதத்தின் இறுதியிற் (13--4) கூறி யொழிதலின், 1கிருதகோடி கொண்ட எட்டும் தாமே பெறப்படுதலின், அவற்றைக் கூறா தொழிந்தார். எஞ்சி நிற்கும் சுபாவம், ஐதிகம், பாரிசேடம், சம்பவம் என்ற நான்கனுள், அவரால் விலக்குண்ட இரண்டும் இன்னவையெனத் தெரிந்திலவாயினும், சுபாவம், பாரிசேடம் என்ற இரண்டுக்கும் விலக்குண்டனபோலும் எனக் கருதுவதற்கு இடமுண்டு. 1. காட்சியளவை 14-24. மருளில் காட்சி ஐவகையாகும்-மருட்சிக்குச் சிறிதும் ஏதுவாகாத காட்சி யளவை யைந்து வகைப்படும்: கண்ணால் வண்ணமும்-பொறியால் நிறமும்; செவியால் ஓசையும்- செவிப் பொறியால் ஓசையும்; நண்ணிய மூக்கால் நாற்றமும்-பொருந்திய மூக்காகிய பொறியால் நாற்றமும்; நாவாற் சுவையும்-நாக்காகிய பொறியால் சுவையும்; மெய்யால் ஊறும் என - மெய்யாகிய பொறியால் ஊறும் என்று; சொன்ன இவை இவை-சொல்லப்பட்ட இவற்றை; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-முறையே கண்டும்கேட்டும் மோந்தும் உண்டும் மெய்யுற்றும்; துக்கமும் சுகமும் என - துக்கமென்றும் சுகமென்றும்; துயக்கற அறிந்து - குற்றமற வறிந்து; உயிரும் வாயிலும் மனமும் - உயிரும் இந்திரியங்களும் மனமும்; ஊறின்றி - குற்றமின்றி, பயில் ஒளியொடு - உலகிற் பயில நிலவும் ஞாயிறு திங்கள் தீ என்ற இவற்றின் ஒளி துணையாக ; பொருள் இடம் பழுதின்றி-பொருளும் இடமும் குற்றமற இயைய வைத்து, சுட்டல்-பொருண்மை மாத்திரம் காண்டலும்; திரிதல்-பிறிதொன்றாகக் கோடலும்; கவர் கோடல்-ஐயுறுதலும்; தோன்றாது-இல்லாமல்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியைபின் அறிவதாகும்-சார்ந்துள்ள இடம் பெயர் சாதி குணம் தொழில் என்பவற்றாற் சிறப்பித் தறிவதாம் எ - று. எனவே, பொறிவாயிலாகப் பொருள்களின் நலந் தீங்கு காண்டல் காட்சி யளவையின் பயனாமென்றும், காட்சி நிகழுமிடத்து, உயிரும் பொறிகளும் மனமும், ஒளிநிலவும் பொருளும் இடமும் நோக்கிக் காணப்படும் பொருளினுடைய பெயர் சாதி குணம் தொழில் முதலியவற்றால் சிறப்புற அறிதற்கண் தொழிற்படு மென்றும், பொதுமையிற் காண்டல், திரியக் காண்டல், ஐயுறல் என நிகழ்தல் கூடாதென்றும் கூறியவாறாம். ஈண்டுக் கூறியனவே கௌதமரால் ஐவகையாகக் கூறப்படுகின்றன: அவை காணப் படும் பொருளும், ஒளியும், பொறியும்; மனமும், உயிரும் என்பனவாம். தெளிவுக்காட்சிக்குத் தடையாவன தோடம், சம்பிரயோகம், சமுசுகாரம் என்று கூறுவர். தோடமாவது பொறிகளிடத்தேயுள்ள குற்றம்; சம்பிரயோக மென்பது ஒரு மருங்கு பற்றிய காட்சி: சமுசுகாரமாவது திரிபுக் காட்சி. இவற்றின் விரிவை நியாய பிந்து, நியாய மஞ்சரி முதலிய நூல்களுட் காண்க. ஈண்டுக் கூறிய தோடத்தையே இவ்வாசிரியரும் "ஊறின்றி" யென்றார். "கிட்டிய தேச நாம சாதி குணங்கிரியை"களைக் கற்பனை யென்பதுடன், இவற்றுள், தேசத்தை நீக்கியும் பொருண்மையைக் கூட்டியும் நியாய மஞ்சரி என்னும் நூல் கூறுகிறது. கற்பனையைக்கழித்துக் காணப்படும் பொருண்மை, உணர்வுருவாய் நின்று உரைக்கு எய்தாதாகலின், அஃது எய்துதற்கு இவை வேண்டப்படுதலின், "கிட்டிய தேட...கிரியையின் அறிவ தாகும்" என்றார். தருமகீர்த்தி முதலாயினார் நாமசாதி குணங்கிரியை களின் வைத்துக் காணும் காட்சியறிவைச் சாமானிய விலக்கண மென்றும், இவையின்றிப் பொருண்மைக்காட்சி யுணர்வைச் சுவிலக் கணமென்றும் கூறுவர். துயக்கு-குற்றம்; தடையுமாம். ஏனையளவை போலாது பொருள்களை நேரிற் கண்டறிதலின் காட்சியை "மருளில் காட்சி" என்றாரென வறிக. சுட்டல் முதலிய வற்றை மேலே "பிரமாணா பாச" மென எடுத்தோதி விலக்கு தலின், ஈண்டு வாளாது தொகுத்தோதினார். இனிக் கண்ணாலொரு பொருளைக் காணுமிடத்தும் நிறமேயன்றி யளவு வடிவு முதலிய பிறவும் காணப்படுமாயினும் சிறப்புப்பற்றி நிறம் கூறினார். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. அன்றியும், ஒரு பொருளைக் கண்ணாற் காணுமிடத்துக். கட்பொறியும், மனமும், உயிரும், காண்டற்குத் துணையாகும் ஒளியும் ஒருங்கு தொழில் நிகழ்த்துவது போலச் செவி முதலிய வற்றா னிகழும் காட்சிக்கண்ணும் இந்நிகழ்ச்சியுண்மையின் இவ்வாறே கூறிக்கொள்க. மனமும் உயிரும் பொதுவாயினும், பொறிகளும் அவற்றாற் காணப்படும் பொருளும் ஐவகைப் படுவது பற்றி, "காட்சி யைவகை யாகும்" என்றார். நாமதேசக் குணக் கிரியையின் வைத்தறியும் காட்சி சவிகற்பமென்றும்' அவ்வியபதேசமாய்க் காண்பது நிருவிகற்பமென்றும் பிற்காலத் தோர் கூறுவர். வாற்சாயனர், உத்தியோதகரர் முதலாயினோர் காலத்தே இப்பிரிவு இல்லை. அவர்களைப்போலவே இம் மணிமேகலை ஆசிரியரும் சவிகற்ப நிருவிகற்பப் பிரிவு கூறாமை குறிக்கத்தக்கது. 2. கருத்தளவை 25-29. கருத்தளவாவது - அனுமான வளவையாவது, குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை யுணரும் தன்மையதாகும் - ஏதுவுக்கு நிலைக்களமான குறியாகக்கொண்டு அனுமானத்தாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும், அது - அவ்வனுமானவளவை, மூவகையுற்று - மூன்று வகைப்பட்டு, பொது எச்சம் முதல் ஆம் - பொதுவென்றும் எச்சமென்றும் முதலென்றுமாம் எ - று. ஈண்டு அனுமேயம் என்றது துணியப்படும் மேற்கோளையும். அனுமானமென்றது அதனைத் துணிபு செய்யும் ஏதுவையும் குறித்து நின்றன. குறிகொள் எனற்பாலது எதுகை நோக்கிக் குறிக்கொள் என நின்றது; குறிகொள் என்றும் பாடமுண்டு. இம்மலை தீ யுடைத்து, புகையுண்மையான் என்ற வழி, மலையின் பால் தீயுடைமை துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம். புகை யுண்மை, அதனைச் சாதிக்கும் ஏது. அது தீ யுண்மையைத் துணிபு செய்யும் திறம் அனுமானம், அவ்வேதுவுக்கு நிலைக் களமாய புகை, குறி. இக்குறியை இலிங்கமென்ப. அனுமேயப் பொருட்குத் தகுதி சாதிக்கப்படும் உண்மைத்தன்மை யாதலின், "தகைமை"யெனப்பட்டது. இப் பொது முதலிய மூன்றையும் முறையே அளவை நூலார் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறுவர். 29-32. பொதுவெனப்படுவது - பொதுக் கருத்தளவை யென்று அளவை நூற்புலவராற் கூறப்படுவது, சாதன சாத்தியம் இவை - ஏதுவும் மேற்கோளுமாகிய இவற்றுக்கு, அந்நுவயம் இன்றாய் இருந்தும் - நியதமான உடனிகழ்ச்சி இலதாகிய வழியும், கானம்- காட்டிடத்தே, கடம் திகழ்யானை ஒலி கேட்டோன்-மதம் பொருந்திய யானையின் பிளிறு குரலைக் கேட்டவன் ; உடங்கு - உடனே, எழில் யானை அங்கு உண்டென உணர்தல்-உயர்ந்த யானையொன்று அவ்விடத்தே யுளது என்று உணர்வது எ - று. பொது முதலிய மூன்றுக்கும் உரிய சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்பனபற்றி நையாயிகர் பலர்க்கும் கருத்து வேறுபாடு பெரிது முண்டாயினும், இவ்வாசிரியர் வாற்சாயனர் கூறியாங்குக் கூறுகின்றா ராதலின், "பொது வெனப்படுவது" எனச் சிறப்பித்தார். அந்நுவயமானது காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமைவது. கானவொலிக்கும் யானை யுண்மைக்கும் அந்நுவய மில்லாமையின் "அந் நுவயமின்றா யிருந்தும்" என்றும், கேள்வியும் உணர்வும் இடையறவுபடாத உடனிகழ்ச்சி யாதலால், "உடங்குணர்தல்" என்றுங் கூறினார். எழுச்சிப் பொருட்டாய எழில் ஈண்டு உயர்ச்சி குறித்து நின்றது. இனிச் சாமானியதா திருட்டத்துக்கு வாற்சாயனர், ஒலிக் கேள்வியோடு கொம்புள்ள விலங்கொன்றினைக் கண்டோன், அதற்கு வாலுண்டென வுணர்தலும் சாமானியதா திருட்டம் என்று கூறினர். இவருக்குப் பிற்போந்த உத்தியோதகரர், நாரைகள் குழீஇ யிருப்பதைக் கண்டோன், அங்கே நீருண்டெனத் துணிதல் சாமானியதா திருட்டம் என்றார். ஆயினும், அவர் இம் மூன்றனையும் பற்றிக்கொண்ட கருத்து வேறென அறிக. இதனைச் சாமானியாநுமானம் என்றும் கூறுவர். 33-34. எச்சம் என்பது - எச்சக் கருத்தளவையாவது ; வெள்ள ஏதுவினால் - இவண் வருகின்ற வெள்ளமாகிய காரணத்தைக் கொண்டு; அத் தலை மழை நிகழ்வு - அதன் மேலிடமாகிய அவ்விடத்தே மழை பெய்திருத்தலை; நிச்சயித் துரைத்தல்-துணிந்து கூறுவதாம் எ - று. பள்ளத்தை நோக்கி யோடுதல் நீர்க்கியல்பாதலின், அத்தலை யென்றது மேலிடமாகிய அவ்விடமாயிற்று. மழையினது எச்சம் வெள்ளமாதலின், வெள்ளவேது கொண்டு சாதிக்கும் கருத்தளவை, எச்சக் கருத்தளவை யெனப்பட்டமை யறிக. இந்த எடுத்துக் காட்டையே வாற்சாயனரும் காட்டியுள்ளார். இதனைக் காரியானுமான மென்றும் கூறுப. 35--36. முதல் என மொழிவது - முதற் கருத்தளவையென வழங்குவது; கருக்கொள் முகில் கண்டு - நீர் பொருந்திய கருமுகிலைக் கண்டு, இது மழைபெய்யும் என இயம்பிடுதல் - இம்முகில் மழை பொழியும் எனத் துணிந்து கூறுவதாம். எ - று, மழை பெயற்கு முகில் காரணமாதலின், முதலெனப் பட்டது காரணத்தை முதலென்றல் தமிழ் வழக்கு; "ஆயெட்டென்ப தொழின் முதனிலையே" (தொல். சொல். வேற். மயங். 29) என்றும், "அவ்விரு முதலிற் றோன்று மதுவே" (சொல். வேற்று, 10) என்றும் வருதல் காண்க. கமஞ்சூல் மாமழையைக் "கருக்கொள் முகில்" என்றார். இவ் வெடுத்துக் காட்டே வாற்சாயனராலும் காட்டப்பட்டுள்ளது. இதனைக் காரணானுமானம் என்றலும் ஒன்று. 37-40. என்னும் ஏதுவின் ஒன்று - பொது எச்சம் முதல் என்று கூறப்பட்ட ஏது வகைகளில் ஒன்று ; முக்காலம் ஒன்று தன்னிற் சார்ந்துளதாகி தோன்றும் - மூவகைக் காலங்களில் ஒன்றைப் பொருந்தியதாய்த் தோன்றும்; காண்டற் பொருளால்-காணப்படும் பொருளைக்கொண்டு; மாண்ட உயிர் முதல்-மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல்; கண்டிலது-காணப்படாததனை; மாசின்றாகி - குற்றமின்றி; உணர்தல் - அறிவதாம் எ - று. எனவே, காண்டற் பொருளாற் காணப்படாததனை யுணர்தல் அனுமானவளவை யென்பதாம். "என்னும் ஏதுவின் ஒன்று" என்ற தனால், சாமானியம் சேடம் பூருவம் என்ற மூன்றும் ஏதுவின் வகைமை யுணர்த்தி நிற்பது பெற்றாம். இனி, நையாயிகருட் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறுவர் ; ஈண்டுக் கூறியது வாற்சாயனர் முதலிய பண்டையாசிரியன்மார் கொண்ட கருத்தாமென அறிக. இவ்வாறே அனுமானமென்பதற்கும் ஆசிரியர் பலரும் பலவாறு கூறுப: நியாயவார்த்திகையென்னும் நூலுடையார், தெரியாத தொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப் பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவை யென்றும், நியாய சாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும், தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்தபதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர் ; அவற்றை அவ்வவர் நூல்களுட் காண்க. காட்சியளவை போலாது, இக்கருத்தளவை முக்காலத்தும் ஒத்தியலும் இயல்பிற்றாதலின், "முக்காலந்தன்னிலொன்றிற் சார்ந்துளதாகித் தோன்றும்" என்றார்.உத்தியோதகரரும் காட்சி, நிகழ்காலத்துக்கே யுரித்தென்றும், கருதல்முக்காலத்துக்கு முரித் தென்றும் கூறுவர் (நியாய வார்த். வீவீ. 1 - 31). காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச் செய்தற்கும்,உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும் பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி"யென்றும் கூறினார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி 27; 30) என்றதே மீளவும் கூறியது, வன்புறை. 3. உவமவளவை 41-42. உவமமாவது - உவம வளவையாவது; ஒப்புமை அளவை- ஒன்றோடொன்றனை யொப்புக் கூறியுணர்த்தும் அளவையாகும்; கவயமா - கவயமா வென்பது ஒரு விலங்கென அறியாதானுக்கு அக் கவயமா; ஆப்போலும் எனக்கருதல்-பசுவைப் போலிருக்கும் என்று சொல்லி யுணர்த்துதலாம் எ - று. தானே யுணர்ந்து கோடற்கு உவமை வேண்டாமையின், ஈண்டுக் கருதுதல் பிறவினைப் பொருட்டு. இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம வணியென்று கொண்டாங்கு, அளவை நூலார் உவமவளவை யென்று கொண்டனரென வறிக. இதுவும் "காண்டற் பொருளாற் கண்டில துணர்த" லாயினும், கருத்தளவை தன் பொருட்டும் பிறர் பொருட்டும் பயன்படுவதாக, இது பிறர் பொருட்டே பயன்படுமென்றும், அது காணப்பட்ட ஏதுவைக் கொண்டு காணப்படாத பொருளை யுணர்த்தி நிற்க, இது காணப்பட்ட பொரு ளொப்புமையாற் காணப்படாத பொருளை யுணர்த்துமென்றும் கொள்க. அறிதற்குரிய பொருளும் அதற்குத் துணையாகும் ஒப்புமையும் உவமவளவைக்கு இன்றியமையாத வுறுப்புக்களாம். இவ் வொப்புமை முழுதுமொத்தல், ஒருபுடை யொத்தல் என இருதிறத்ததாம். முழுதுமொத்தற்கு உவமம் வேண்டா; பசு வென்பது பசுப்போலும் எனக் கூறாராதலின்; உவமமெல்லாம் ஒரு புடை யொத்தேயிருக்கும். மேலும் பொருளும் உவமமும் என்ற இரண்டனுள் உவமத்துக்கும் பொருட்கும் "சாதன சாத்தியபாவம்" இன்றியமையாதது என்று நியாயபாடியம் (வீவீ. 1 - 45) கூறுகிறது. இவ்வளவை நூலாரைப் போலவே சட்தரிசன முச்சய மென்னும் நூலாசிரியரான அரிபத்திரரும் இக் கவயமாவையே உவமவளவைக்குப் பொருளாகக் காட்டுவர். இவ் வளவையை வைசேடிகர் கருதலளவைக் கண்ணும், சாங்கியரும் புத்தரும் காட்சிக்கண்ணும் அடக்கிக்கொள்வர். பூருவமீமாஞ் சகரும் வேதாந்திகளும் இதனை மேற்கொண்டு இலக்கணத்திற் சிறிது வேறுபடக் கூறுவர். 4. ஆகமவளவை 43-44. ஆகமவளவை - உரையளவையாவது, அறிவன் நூலால் - விளங்கிய அறிவினையுடைய பெரியோன் கூறிய நூல் கருவியாக, போகபுவனம் உண்டெனப் புலங்கொளல்-போக நுகர்ச்சிக்கென இந் நிலவுலகத்தின் மேலுங் கீழும் உலகங்கள் உண்டென மேற் கொள்வதாம் எ - று. யாவரும் அறிவுடையரே யெனினும், அதனால் விளக்க முற்றோரே அறிவரெனப்படுப வாதலின், அறிவன் என்பதற்கு விளங்கிய அறிவினையுடைய பெரியோன் என்று பொருள் கூறப்பட்டது. அறஞ்செய்தான் துறக்கம் புகும் என்றும்,அல்லது செய்தான் நிரயம் புகும் என்றும் அறிவர் வழங்குதலின், துறக்க நிரயங்களின் உண்மை கொள்ளப்பட்டமை காண்க; "யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்" எனவும், "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 346,168.) எனவும் அறிவர் கூறுமாறு காண்க. இன்பமும் துன்பமுமாகிய இருவகை நுகர்ச்சியும்போகமெனப் படுதலின், இருவகைப் புவனத்தையும், "போகபுவனம்" என்றார். அறிவனை முதல்வனென்றும் ஆத்தனென்றும், ஆகமத்தை, உரையென்றும் சத்தமென்றும் வழங்குப. இக் கூற்று நிகழ்த்து வோன் "வைதிக மார்க்கத்தளவை வாதி" யாதலின், ஆத்தனாவான் தெளிந்த அறிவுடைய பெரியோனென்ற கருத்தால் "அறிவன்" என ஒருமையாற் கூறினான் என வறிக. நையாயிகருள் தொல்லோர் ஆத்தனாவான் இறைவனொருவனே யென்னாது விளங்கிய அறிவுடைய எவனும் ஆத்தனாகலாம் என்றும், "முனிவரும், ஆரியரும் மிலேச்சரும்"(நியா.பாடி.1. 1. 7.) எல்லாருமடங்க "எவனும்" என்றும் கூறுப. பிற்கால நையாயிகரும் வைசேடிகரும் ஆத்தனாவான் இறைவனென்றே கூறுப. 5. அருத்தாபத்தியளவை1 45-46. அருத்தாபத்தி - அருத்தாபத்தியளவை யென்பது, ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால் - ஆயர் குடியிருக்கும் பாடி கங்கையிலிருக்கிறதென்று சொன்னால்,கங்கைக் கரையில் என்றெண்ணல்- கங்கையில் என்றது கங்கையாற்றின் கரையில் என்னும் பொருளதெனக் கோடல் எ - று. ஆயர் குடியிருக்கும் இருப்பு ஆயர்பாடி யெனவழங்கும். ஆயர்பாடி கங்கையிருக்குமென்ற வழி, கங்கையின் இடையே குடியிருத்தல் கூடாமையின், அதன் கரைக்கண் ணிருக்குமென எண்ணியறிந்து கோடல் வேண்டியிருப்பதுபற்றி "எண்ணல்" என்றார். அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு, அதனோடியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல்' அருத்தம்-பொருள்; ஆபத்தி-பிறிதொரு பொருள். "அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் 'd2வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே" (சிவ. சித்தி. அளவை. உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப் படும். கங்கேசர் முதலிய ஆசிரியன்மார்,இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவதென்றோதி, "பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்" என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண் டெனத் துணிந்து, "பகலுண்ணா" னெனவே, "இரவிலுண்பான்" எனத் துணிந்து "சாத்தன் இரவில் உண்பன்" எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப, " யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்: இவன் பருத்திருக்கின்றான் ; ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான், " யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல் உண்டல்வேண்டும்; இவன் பகலில் உண்ணான் : ஆகவே, இவன் இரவில் உண்போனாவான்." 6 - இயல்பளவை 47-48. இயல்பு - இயல்பளவையாவது, யானைமேல் இருந்தோன்- யானையின் பிடரி மேலிருப்போன் ஒருவன்; தோட்டிக்கு அயல் ஒன்று ஈயாது-கோலொன்று கொடுப்பதாயின் தன் கையில் உள்ள தோட்டியின் வேறாக ஒன்றும் கொடாது; அதுவே கொடுத்தல்- அத் தோட்டியினையே கொடுப்பதாம் எ - று. யானைமேல் இருப்பவன் கையில் தோட்டியல்ல துபிறிதொரு கோல் இன்மையின், கோல்கேட்டவழி அத்தோட்டியினைக் கொடுத்தல் அவற்கியல்பாதலால், இஃது இயல்பளவை யெனப் பட்டது; இதனைச் சுபாவவளவை யென்றும் கூறுப. இதனையே பிறரும், "மாமே லிருந்தொரு கோறா வெனிற்சுள்ளிக் கோறரலும், சோமே லிருந்தொரு கோறா வெனிற்றரவேதுணிந்து, பூமேவு கண்ணழுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே, நாமே வியல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்று விளக்கினர். வேறு சில ஆசிரியன்மார், இவ்வியல் பளவைக்கு வேறாகச் சட்டையென ஒன்றைத் தொடுத்துரைப்பர். 7. ஐதிகவளவை 49-50. ஐதிகமென்பது - ஐதிகமென்னும் அளவையாவது; உலகுரை - உலகோராற் கேள்வி வழியாகக் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சொற்பொருளாகும்; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தெளிதல்-இம்மரத்தில் வந்திருப்பதாகிய ஒரு பேய் உண்டு என்று உலகவர் கூறுவதை யுடன்பட்டொழிவது எ - று. ஒருவரும் கண்ணிற் காணாராயினும், பலரும் உண்டென்ப தொன்றே பற்றி யுடன்பட்டொழிவது ஐதிகவளவையாயிற்று. "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள்.850) என்பதும் இதனை யுட்கொண்டிருப்பது காண்க. பிறரும், "கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங்குவலயத் தோர், அன்புடனாலிலலகையுண் டென்பர்க ளென்பதுவும், மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும், என்பர் கணாவல ரென்பது மைதிக மென்பர்களே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்ப.. நியாயபாடியம், இதனை ஆகமளவைக்கண் ணடக்கி, ஆத்தனொருவனாற் கூறப்பட்ட வழி இதுவும் ஆகமவளவையா (வீவீ. 2 - 2) மென்று கூறுகிறது. 8. அபாவவளவை 51-52. அபாவமென்பது-அபாவவளவை யெனப்படுவது; இன்மை ஒரு பொருளின் இல்லாமையாம்; ஓர் பொருளை - பொருளொன்றினை; அவ்விடத்துத் தவாது இலை என்றல் - கூறப்படும் அவ்விடத்தே பற்றற இல்லையென்று கொள்வது எ - று. எனவே, பொருளொன்றின் இன்மை கூறுவது அபாவவளவை யென்றும், அபாவமென்பது இன்மையென்றும் கூறியவாறாம். பொருளொன்றின் உண்மையின்மைகளைக் குறித்துச் சொல் நிகழுமிடத்து, இடமும் காலமும் முதலிய வியைபு பற்றியே நிகழுமாகலின், அவற்றுள்ளும் இடத்தையே சிறப்பித்து, "அவ்விடத்து" என்றும், சிறிது எஞ்சக் கூறிய வழியும் இன்மை பெறப்படாமையின், "தவாது இல்லை என்றல்" என்றும் கூறினான். என்றுமபாவம், முன்னபாவம், ஒன்றினொன்ற பாவம், அழிவுபாட்டபாவம் எனப் பகுத்து ஆராய்தலுமுண்டு,அவற்றை விரிந்த நூல்களுட் காண்க. உள்ளதொன்றின் உண்மைகொண்டு அதனோடியைபுடைய பிறிதொன்றின் இன்மையுணர்வு அபாவமாகாது; அஃது அனுமானத்தினடங்கு (நியா. பா. வீவீ. 2-2) மென்றும், காரியத் தினுண்மை காரணத்தினுண்மை யுணர்த்துவதுபோலக் காரியத்தின் இன்மை காரணத்தின் இன்மை யுணர்த்துமென்றும், ஆகமவளவை யானும் அபாவம் பெறப்படுமென்றும் -நியாயகந்தலி, குசுமாஞ்சலி. நியாயமஞ்சரி முதலிய நூல்கள் கூறுகின்றன. 9. மீட்சியளவை 53-54. மீட்சி-மீட்சியளவையாவது ; இராமன் வென்றான் என - இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமன் வென்றான் என்ற வழி ; மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்- அறமாண்பில்லாத இராவணன் தோற்றா னென்பதை யுணர்ந்து கோடலாம் எ - று. மீட்சியாவது "ஒழிவறிவு" (மணி. 27: 11) என்றாராகலின் ஈண்டு வாளாது மீட்சி யென்றொழிந்தார். இராமனோடு பொருதற்கு முன்பு காறும் துணைசெய்து போந்த அறம், இராமனது பகை பெற்ற வழித் துணையின்றிக் கழிந்தமையின், "மாட்சியில் இராவணன்" என்றார். வென்றோன் பாலுளதாகும் மாட்சி தோற்றோன்பால் இலதாதல் பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம். இவ்வளவையைப் பாரிசேடமென்றும் ஒழிபென்றும் கூறுப. "சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண் புவிமேற், போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப், பாராரி ராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து, நேராமிராவணன் றோற்றசொல் லாகி நிகழ்வதுவே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்றார் பிறரும். நன்னூல், சிவஞான போதம், சிவஞானசித்தி முதலிய நூலுரைகளில் சிவஞான யோகிகள் இப் பாரிசேடத்தைப் பலவிடங்களில் எடுத்தாளுதல் காண்க. சில மீமாஞ்சை நூல்களுள் இது தனித்ததோ ரளவையாகக் கொள்ளப்படுகிறது. 10. உள்ளநெறியளவை 55-56. உள்ளநெறி யென்பது - சம்பவ வளவையாவது; நாராசத் திரிவில் - இருப்புத்துண்டின் சுழற்சியால்; கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல் - கொள்ளக் கிடப்பது காந்தமென்று சொல்வதாம் எ - று. இதனையே மேலே எய்தியுண்டாநெறி யென்றார். பிறரெல்லாம் சம்பவமென்றும் உண்மையென்றும் வழங்குப. நாராசம் - இருப்புத் துண்டு. காந்தமேறிய இருப்புத்துண்டு சலிப்பது உண்மை; சலிப்பினால் காந்த முண்மை துணிவது சம்பவமாயிற்று. முதலின் கண் சினையுண்மையும், தொகுதிக்கண் பகுதியுண்மையும் ஆயிரத்தில் நூறுண்மையும், நூற்றின்கண் தொண்ணூறுண்மையும் சம்பவமென்றும், இது கருதலளவைக்கண் அடங்குமென்றும் நையாயிகர் கூறுவர். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்லும் இதன்கண் அடங்குமெனக்கொண்டு, "துயக்கற வுண்மை யெனநா வலர்க டுணிந்துரைப்ப, தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின், வியக்குற்ற கால்சலிக்கும்தீச் சுடும்விய னீர்குளிரும்,வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே" (சிவ. சித். மறைஞா. மேற்.) என்று கூறுவாருமுளர். 2. பிரமாணாபாசங்கள் 57-61. பிரமாணாபாசங்கள் எட்டுள - மேலே காட்சி முதல் உள்ள நெறி யீறாகக் கூறிய பிரமாணம் பத்திற்கும் ஆகாவென விலக்கப் பட்ட குற்றங்கள் எட்டு உள்ளன; சுட்டுணர்வு - பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வும்; திரியக்கோடல் - திரிபுக் காட்சியும்; ஐயம் - ஐயக்காட்சியும்; தேராது தெளிதல் - தேராத் தேற்றமும்; கண்டுணராமை - அறிவறியாமையும்; எய்தும் இல்வழக்கு- இவற்றோடு பொருந்திய இல்வழக்கும்; உணர்ந்ததை யுணர்தல் மறித்துணர்வும் ; நினைப்பு என - நினைப்பும் என; நிகழ்வ - நிலவு வனவாகும்; மேலே காட்சியளவைக்கு ஆகாவென விலக்கிய சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம் என்றவற்றை ஈண்டும் கூறியது பிரமாணாபாசமாம் இயைபு குறித்து என்க. எட்டுள என்றது, "தொகுத்துச் சுட்டல்"; ஏனைய, "வகுத்து மெய்ந் நிறுத்தல்." தெளிதற்குரிய ஏதுவகையாற் றெளியாது தேறுதல் குற்றமாதலின், தேராத தேற்றத்தைத் "தேராது தெளித" லென்றும், கண்டுணர்தற்குரிய அளவையும் கருவியும்கொண்டு கண்டவழியும் உணராமை அறிவறியாமை யாதலின், அதனைக் "கண்டுணராமை" யென்றும் பண்டேயுணர்ந் திருக்கு மொன்றை மறித்தும் உணர்தல் மிகையாதலின், அதனை "உணர்ந்ததை யுணர்தல்" என்றும் கூறினார். மறதியன் றென்றற்கு "உணர்ந்ததை" என்றார். இது மறித்துணர்வு என்றும் வழங்கும். 61-62. சுட்டுணர் வெனப்படுவது - சுட்டுணர்வு என்பது; எனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல் - எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம் எ - று. குற்றியோ மகனோ தோன்றிய வழி, அக்குற்றி மகன்களின்பெயர் சாதி குணம் தொழில் முதலியன காணாது தோற்றமே பற்றி உளதென்னும் உண்மை மாத்திரம் கண்டொழிதல் என்பதாம்; "பிறிதினை விலக்கலு மாட்டலு மின்றாய், ஒருபொரு ளுரைப்பது சுட்டெனப்படுமே" (நீலகே, 120. உரை. மேற்,) என்பது கருதத்தக்கது. பிற்காலத்தே இது நிருவிகற்பக் காட்சி யெனப்படுவதாயிற்று. 63-64. திரியக்கோடல் - திரியவுணர்தலென்பது ; ஒன்றை ஒன்றென்றல் - காணப்பட்டதொரு பொருளைப் பிறிதொன்றாகக் கொள்ளுதல்; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல் - விரிந்த ஒளிக்கதிர்களையுடைய இப்பியை வெள்ளியென்று உணர்ந்து கொள்வதாம் எ - று. உணர்வின் திரிபு உணரும் செயன்மேனின்றது ; அருணந்தி சிவனாரும் "திரியவே கொண்டல் திரிவாம்" (சிவ. சித்தி. அள. 3) என்பது காண்க. இப்பியை வெள்ளியென்று திரியக் கோடற்கு ஏது அதனது விரிகதிர்த் தோற்றமாதலின், "விரிகதிர் இப்பியை" என்று சிறப்பித்தார். இதனை விபரீதக் காட்சியென்றும் வழங்குப. "ஒன்றை யொன்றென்றல்" இதன் இலக்கணமெனவும், இப்பியை வெள்ளியென் றுணர்தல் எடுத்துக் காட்டெனவும் கொள்க. 65-66. ஐயமென்பது - ஐயமென்னும் பிரமாணக் குற்றமாவது ஒன்றை நிச்சயியா மையல்-காணப்பட்டதொன்றை இன்னதெனத் துணியாமைக் கேதுவாய் நிற்கும் மயக்கம்; தறியோ மகனோ என்றல்-காணப்பட்ட உருவைக் குற்றியோ மகனோ எனக் கவர்வுற்றுத் துணியாதொழிதல் எ - று. ஐயக் காட்சிக் கேதுவாகிய மையலை "ஐய" மென்றார். தறி, குற்றி முன்னர்க் "கவர்கோடல்" (மணி. 27:) என்றதும் காண்க. ஐயத்துக் கேதுவாக மையலாகிய அகக்காரணமொன்றே கூறினாராக, பதார்த்த தரும சங்கிரகமுடையார் ஒளியின்மை, சேய்மை முதலாகப் புறக்காரணமும் கூறுவர். பிற்போந்த அளவைநூலார், ஐயமும் உண்மையுணர்வுக்கு ஊக்கங் கொளுத்துமாற்றால் ஆக்கமாகக் கருதுப. 67-68. தேராது தெளிதல்-ஆராயாது துணிதலென்பது; செண்டு வெளியில் தறியை-செண்டாடும் வெளியிடத்து நிற்குங் குற்றியை; ஓராது-குற்றியோ மகனோ என ஆராயாமலே; மகன் என உணர்தல் - மகனென்றே துணிந்தொழிவது எ - று. செண்டுவெளி-குதிரைவீரர் விளையாட்டயருமிடம்; "செண்டாடுந் தொழில் மகிழ்வம்" (பெரியபு. கழறிற். 155) எனச் சான்றோர் வழங்குவது காண்க. குதிரைவீரரும் குதிரையைப் பிணிக்கும் குற்றியுமிருக்கும் செண்டுவெளியில் நிற்கும் குற்றியைக் குதிரைவீரருள் ஒருவனாக ஆராயாது மேற்கோடல் குற்றமாதல் காண்க. கூற்றுவகையால் தௌத்வு தோன்றினும், ஆராய்ந்த வழி வழுவாதலின், "தேராது தெளிதல்" எனப்பட்டது. தேராத் தெளிவும் தெளிந்ததன் கண் ஐயுறவும் குற்றமென வறிக. 69-70. கண்டுணராமை - கண்டுணராமையென்னும் பிரமாணாபாசமாவது, கடுமாப் புலியொன்று அண்டல் முதலிய - கடிய விலங்காகிய புலியொன்று நெருங்குதல் முதலியவற்றை, கண்டும் - நேரிற் கண்டுவைத்தும், அறியாமை - தம்மைப் பாதுகாவாமைக் கேதுவாகிய அறிவறியாமையாம் எ - று. இரை விழுங்கி யுறங்கும் மாசுணம் எரியாற் சூழப்படினும் இடம் பெயராது கிடத்தல் போல, புலி முதலிய தீங்கு செய்யும் விலங்குகள் நெருங்கி வருதலை யறிந்துவைத்தும் தம்மைப் பாதுகாவாமைக்கு ஏதுவாகிய நல்லறிவின்மை, ஈண்டுக் "கண்டுணராமை" எனப்பட்டது. அறியாமை, அறிந்து பாதுகாத்தலைச் செய்யாமை. இதனை உலகோர் "அலட்சிய புத்தி" யென்றும், அளவை நூலோர், "உபேட்சாத்மக ஞானம்" என்றும் வழங்குவர். அண்டலை யென்புழி ஐ: சாரியை அண்டல், அணுகுதல்; "துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை" (ஞானசம். 197-1) என்புழிப்போல. 71-72. இல்வழக்கென்பது - இல்வழக்கென்று சொல்லப்படுவது, முயற்கோடொப்பன - முயற்கோடு போலவரும் வழக்குகளை, சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்-ஓசைவடிவிற்றாய சொல்லே பொருளாகக் கருத்திற் கொண்டொழிதல் எ - று. முயற்கோடு ஒப்பன என்றது, ஆகாயப்பூ, யாமை மயிர்க்கம்பலம் முதலாயினவற்றை உளப்படுத்தற்கு. இவை பொருளல்லவாயினும், சொன்மாத்திரையால் உண்டெனக் கொண்டொழிதலாற் பயனின்மையின் குற்றமாயின. முயற்கோடு முதலாயின தொடராற்றலாற்பொய்ப் பொருள் குறித்து நிற்பனவாதலின், 'சொல்லின் மாத்திரத்தாற் கருத்திற் றோன்றல்' என்றார். கருத்திற் கொள்ளாவழி ஆண்டுத் தோன்று தலின்மையின், கோடல், "கருத்திற் றோன்றல்" எனப்பட்டது. 73-74. உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்பது, உறுபனிக்குத் தீப்புணர்ந்திடல் மருந்து என- மிக்க குளிருக்கு நெருப்பருகே சார்தல் மருந்தாமென்று, புலங்கொள நினைத்தல் - அறிவானறிந்து மேற்கோடல் எ -று. தட்பத்துக்கு வெப்பம் மாறாதலையுணர்ந்துவைத்தும் தீயருகே சார்தல் குளிர்க்கு மருந்தாமென ஆராய்ந்து தெளிதல் வேண்டாச் செய்கை யாதலால் குற்றமாயிற்று. எத்துணை மிக்க பனியாயினும், மறித்தும் ஆராய்ச்சி வேண்டா என்றற்கு "உறுபனி" யென்றும், அளவையானாராய்ந்து தெளியுமாறு தோன்றப் "புலங்கொள நினைத்தல்" என்றும் கூறினார். 75-77. நினைப்பு எனப்படுவது - நினைப்பென்னும் பிரமாணா பாசமாவது, நினக்கு இவர் தாயுந் தந்தையு மென்று பிறர் சொல - நினக்கு இவர் தாயுந் தந்தையுமாவர் என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், காரணம் நிகழாது கருதல் - பிறர் கூறுவனவற்றைக் காரணவாராய்ச்சியின்றி மேற்கொண் டொழிதலாம் எ - று. எனவே, பிறர் கூறும் அனைத்துச் சொற்களையும் காரண காரிய ஆராய்ச்சியின்றி மேற்கோடல் குற்றமென்ற வாறாம். இக்காலத்தும் வெளுத்த தெல்லாம் பாலெனக் கருதி யேமாற்ற மெய்தினோரை நோக்கி, "நுமக்கு யாவரும் தூயவே மொழி குவரென்னும் நினைப்பு" என்று கூறக் காண்டும். தனக்குத் தாயுந் தந்தையுமாவாரைக் காரண வகையா லாராய்தல் கூடாமையின், "காரணம் நிகழாது" என்றும், தாயறிவிக்க அறியுந் தந்தையினும் தாயைப் பிறர் அறிவிக்கவன்றி யறிதல் கூடாமையின், "பிறர் சொல" என்றும், காரண நிகழாது மேற்கோடற்குரியார் தாயுந் தந்தையுமன்றிப் பிறரின்மையின், "நினைக்கிவர் தாயுந் தந்தையு மென்று பிறர் சொலக் கருதல்" என்றும் கூறினார். கருதுதல் போலக் கருதுதலைக் "கருதல்" என்றார்; இஃது "என்னோற்றான் கொல்லெனும் சொல்" (குறள்-70) என்றாற்போல முடிந்தது- 77. (இப்பெற்றிய அளவைகள்) அளவைகள் இப்பெற்றிய - இது காறும் கூறிய பிரமாணங்களும் அவற்றின் ஆபாசங் களும் இத் தன்மையனவாம் எ - று. இது முடிந்தது முடித்தல். 78-85. பாங்குறும்-பகுதிப்படுகின்ற, உலகாயதம் பௌத்தம் சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலகாயதமும் பௌத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையு மாகிய, சமய ஆசிரியர் தாம் - சமயங்கட்கு முறையே ஆசிரியராவார், பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி - வியாழனும் புத்தனும் கபிலனும் அக்க பாதனும் கணாதனும் சைமினியுமாவர், மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-அவருள் வியாழன் காட்சி யொன்றும், 1புத்தன் காட்சியும் அனுமானமுமாகிய இரண்டும், கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் சேர மூன்றும், அக்கபாதன் அம்மூன்றோடு உவமானம் கூட்டி நான்கும், கணாதன் அந்நான்குடன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும், சைமினி காட்சி முதல் அபாவ மீறாகவுள்ள ஆறும் அளவைகளாகக் கொண்டனர், இப்போது இவையே இயன்றுள அளவைகள் - இப்போழ்து இவ்வாறுமே அச் சமயிகளால் வழங்கப்பட்டு வரும் அளவைகளாகும் எ - று. பாங்கு - பகுதி. பிரத்தியக்கமென்பது பிரத்தியம் எனச் சிதைந்து வந்தது. காட்சியெனினும் பிரத்தியக்கமெனினு மொக்கும். காட்சிக் கண் பொருளை நேரேயுற்றறிதலின், அதனை "மெய்ப் பிரத்தியம்" என்றார். பிரத்திய முதலிய ஆறுமே பொருள்களின் உண்மை துணிதற்குரியவையாதல்பற்றி இவ்வாறு சிறப்பித் தாரெனினுமாம். எண்ணுக் குறித்தியலும் எண்ணேகாரம் இடை யிட்டு நின்றது. அக்கபாதரைக் கௌதமபுத்தரென்றும், கணா தரைக் கணாசனரென்றும் கூறுவதுண்டு. ஏற்புடைய சொற்கள் இசை எச்ச வகையால் பெய்து கூறப்பட்டன. சைவவாதி 86-95. என்றவன் தன்னைவிட்டு - என்று கூறிமுடித்த அளவை வாதியைவிட்டுநீங்கி, இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர் படுதலும் - எங்கட்கு இறைவனாவான் ஈசன் என்று கொண்டொழுகிய சைவவாதி எதிர்ப்பட்டானாக அவனைக் கண்டு, பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன - நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல் பிற்று என மணிமேகலை கேட்க, இரு சுடரொடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டு வகையும் யாக்கையும் உயிருமாய்க் கட்டி நிற்போனும் - ஞாயிறு திங்கள் இயமானன் மண் நீர் தீ காற்று வான் என்ற எட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற்பவனும், கலையுருவினோனும் - பல்வகைக் கலைகளையும் தனக்கு உருவாக வுடையவனும், படைத்து விளையாடும் பண்பினோனும்- யாவற்றையும் படைத்து அப்படைத்தவை நின்று நிலவச் செய்யும் தன்மை யுடையவனும், துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்-படைப்புற்று நிற்பவற்றை யொடுக்கு மாற்றால் அவற்றின் இளைப்பைப் போக்கியருளும் சிறப்புடைய வனும், தன்னில் வேறு ஒன்று இல்லோனும்-தன்னின் வேறாய்த் தனக்கு ஒப்பதும் மிக்கதுமாகிய தெய்வ மொன்று மில்லாதவனுமாகிய, அன்னோன் -அத்தன்மையையுடைய முதல்வனே, இறைவனாகும் என்று உரைத்தனன் - எங்கட்கு இறைவனாவான் என்று சொன்னான். இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் கருவியும் உலகும் பிறவும் படைத்தளித்துக் காத்தலும், அவ்வுயிர்கட் குண்டாகும் இளைப்பு முதலிய நீங்குதற் பொருட்டு ஒடுக்குதலும் செய்து, அவ்வுயிர்கள் செய்யும் வினைக்கேற்ப இன்பமும் துன்பமுமாகிய பயன்களை முறை செய்து வழங்குதலும் செய்தலின் "இறைவன்" என்றார்: இறு என்னும் சொல்லடியாகக் கொண்டு எப்பொருளினும் தங்குபவன் என்றலு மொன்று. இரு சுடர் முதலிய எட்டினையும் கட்டி நிற்றலாவது, தனக்கென வேறுடம்பின்றி அவற்றையே உடம்பாகவும் அவற்றில்தான் உண்ணிறைந்தியக்குதலின் உயிராகவும் கொண்டு நிற்றல். யாக்கையும் உயிருமாய் என மாறுக. கட்டி நிற்போனெனவே, இவ்வாறு உடம்புமுயிருமாக வமைத்துக் கோடல் அவன் தானாகவே தன் நினைவாற் (சங்கற்பத்தால்) சமைப்பதென்றும், இவ்வாறு கட்டிக் கொள்ளாதே வேறாய் நிற்றலும் அவற்குண்டென்றுங் கூறினானாம். முதல்வன் அட்டமூர்த்தியாயிருத்தலை, நாவரசரும், "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாயெறியுங் காற்று மாகி, அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" (6:91,1) என்பது காண்க. கற்கப்படும் கலை பலவும் இறைவனே என்பது, "கலையவன் மறையவன் காற்றொடுதீ, மலையவன் விண்ணொடு மண்ணுமவன்" (109:6) என்று ஞான சம்பந்தரும், "கலையாகிக் கலைஞானம் தானே யாகி" (6:94: 2) என நாவரசரும் கூறுவர். படைத்தலும் காத்தலும் அவற்கு மிக எளிதில் அமைவன என்றற்கு "விளையாடும் பண்பினோன்" என்றார்; "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவெம்பாவை) என்று மணிவாசகர் கூறுதல் காண்க. துயர், இளைப்புத் துன்பம். தோற்றம், சிறப்பு, துடைத்தற்கு ஏது கூறுவர், "துயர் தீர்தோற்றத் தோன்" என்றார். "தன்னில்" என்றதனால் ஒப்பும், வேறு என்ற தனால் மிகுதியும் கொள்ளப்பட்டன. பிரமவாதி 96-97. பிரமவாதி-பிரமவாதி யென்பவன், பேருலகெல்லாம்-பெரிய இவ்வண்ட முழுதும், ஓர் தேவன் - ஒப்பற்ற பிரம தேவனிட்ட, முட்டை என்றனன்-முட்டையாகுமென மணிமேகலைக்குச்சொன்னான். எ - று. இது வைதிக நெறியாகிய அறுவகைச் சமயத்துள் கூறப்படாது புராணங்களிற் கூறப்படும் வழக்கு. இப்பிரமவாதி கூற்றே பற்றி, இவ் வண்டமும் பிரமாண்டமெனப்படுகிறதென வறிக. ஈண்டுக் கூறப்படும் கருத்து மனுதரும நூலில் முதல் அத்தியாயத்திலே (சுலோ. 9) கூறப்படுகிறது. வைணவவாதி 98-99. கடல்வணன் புராணம்-கடலின் நிறத்தை யுடைய னாகிய விட்டுணு புராணத்தை, காதல் கொண்டு ஓதினன் - அன்போடு ஓதிப் பயின்றவனாகிய வைணவ வாதி, நாரணன் காப்பு என்று உரைத்தனன் -தங்கட்கு நாராயணனே இறைவன் என்று மணிமேகலைக்குச் சொன்னான் எ - று. காதல் கொண்டோதினன் எனவே, இவன் வைணவ சமயத்திற் பேரன்பும் கடைப்பிடியும் உடையனென்பது பெற்றாம். முறை செய்தலே யன்றிக் காத்தலும் இறைவன் கடனாகும் இயைபுபற்றி, இறையென்பதற்குக் "காப்பு" என்றான். புராணம்: பழமையான வரலாறு. வேதவாதி 100-105. கற்பம் கை சந்தம் கால் எண் கண்-கற்பமென்னும் அங்கம் கையாகவும் சந்தமென்பது காலாகவும் கணித மென்பது கண்ணாகவும், தெற்றென் நிருத்தம் செவி-தெற்றென விளக்கம் செய்யும் நிருத்த மென்னும் அங்கம் காதாகவும், சிக்கை மூக்கு-சிஷை மூக்காகவும், உற்ற வியாகரணம் முகம் பெற்று - இவற்றோடு பொருந்தும் சொல் இலக்கணம் என்னும் அங்கம் முகமாகவும் கொண்டு, சார்பின் தோன்றா - யாதொன்றனையும் சார்ந்து தோன்றுதலில்லாது தான்றோன்றி யாகிய, ஆரணவேதக்கு-ஆரணமாகிய வேதபுருடனுக்கு, ஆதி அந்தமில்லை-தோற்றமும் கேடும் இல்லை, அது நெறி - அவ்வேதம் கூறுவதே எங்கட்குச் சமய நெறியாம். எ - று. சந்தம், சந்தோவிசிதி. வைதிகச் சொற்களை யாராய் தற்குக்கருவி யாதலின், "தெற்றென் நிருத்த" மெனப்பட்டது. வியாகரணம் ஐந்திர முதலிய வடமொழி யிலக்கணம். வேதம் அநாதி யென்றும் அதனை யுருவகத்தாற் புருடனென்றும் கூறுவது வைதிக வேதியர் மரபு. "வேதம் அபௌருஷேயம்" என்பது பற்றி "சார்பிற் றோன்றாது" என்றார். ஊழிதோறும் தொடக்கத்தே இறைவன் இவ்வேதங்களைத் தொகுத் தளிக்கின்றா னென்பான், அதற்கு இறைவன் போல அநாதி யுண்மைத் தன்மை கற்பித்து, 1"வேதக்கு ஆதியந்தமில்லை" என்றான். "மாயா வாய்மொழி" (பரி. 3.47) என்பதற்கும், "முதுமொழி" (பரி 3.47) என்பதற்கும் கூறப்படும் உரையகத்தும், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி" (குறள். 543) என்பதன் உரையகத்தும் ஆசிரியர் பரிமேலழகர் வேதம் அநாதி நித்தியம் என்பது காணப்படும். வேத புருடற்குக் கற்ப முதலியன கை முதலிய உறுப்புக்களாகக் கூறுவது பற்றி இக்கற்ப முதலிய ஆறும் வேதாங்கமெனப்படும். இனி, நச்சினார்க்கினியர் சிக்கையையொழித்துப் பிரமத்தைக் கூட்டி ஆறங்கமாவன: உலகியற் சொல்லை யொழித்து வைதிகச் சொல்லை யாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனா ராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியா கரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், "ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சி யாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்" (தொல். புறத். 20. உரை) என்றனர். இனி ஈண்டுக் கூறிய எண்ணைச் சோதிடம் என்றும் கொள்ப. "மனக்கினியாற்கு" (மணி. 21.30.) என் புழிப் போல வேதக்கு என்பதும் சாரியை பெறாது முடிந்தது. அவ்வேதம் கூறும் விதி விலக்குகளையே சமயநெறியாகக் கொண் டொழுகுதலின்; "அது நெறி" என்றான். 105-109. எனும்-இவ்வாறு சொல்லும், வேதியன் உரையின் விதியும் கேட்டு - வேதவாதியால் உரைக்கப்படும் பொருள் களைக் கேட்டு, மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற-மெய்யாய நூல் வழக்கு உலக வழக்கு என்று கூறப்படும், எத்திறத்தினும் இவர் உரை இசையாது என - எவ்வகையினும் இவ்வேதியர் முதலாயினோர் கூறுவது பொருந்தாதென்று கருதினவளாய், ஆசீவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக நூற்பொருளை யோதியுணர்ந்த முதியோனொருவனைக் கண்டு, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என - நின்னாற் பரவப்படும் இறைவன் யார் நினக்கு மேற் கோளாகிய நூற்பொருள் யாது என்று வினவ எ - று. வேதங்கூறும் பொருள்கள் விதியும் விலக்குமாகிய வடிவி லிருத்தலின் "விதியும் கேட்டு" என்றார். உம்மையால் விலக்கும் தழுவப்பட்டது. "மெய்த்திறம் வழக்கு" என்பவற்றுள், வழக்கு உலக வழக்கு. "வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்" (தொல். பாயி.) என்பது காண்க. எனவே, மெய்த்திறம் நூல் வழக்காயிற்று. "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு" (மணி. 1: 11) என்று முன்பும் கூறியிருத்தல் காண்க. நூல்வழக்கும் உலக வழக்குமென்ற இரண்டும் உண்மை யாராய்ச்சிக்கும் வேண்டுவன எனச் சான்றோர் கூறுதல் தோன்ற, "விளம்புகின்ற" என்று மணிமேகலை கருதினாள். இவர் என்றது, அளவைவாதி முதல் வேதவாதி யீறாகக் கூறிய வாதி களை. இவர் கூற்றைக் கேட்ட மணிமேகலை அமையாது மேலும் சமயக்கணக்கர் பலரையும் வினவுதற்கு விழைந்தமையின், ஏதுவொன்றும் கூறாது "எத்திறத்தினுமிசையாதிவர் உரையென" ஒழிகின்றாள். பன்னெடுநாள் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அறிவு நிரம்பினமை தோன்றப் "புராணன்" என்றார். பூரண னென்றும் பாடம். பூரணன், ஆசீவக நூலைக்கூறிய மற்கலி. "விரையாவறிவிற் புகழ்பூரணனே" (நீல.673) என்புழி, பூரணன் என்பதற்கு, "பூரணனென்னு மெம்முடைய ஆப்தன்" என்று சமயதிவாகர வாமனமுனிவர் உரை கூறுவதனாலறிக ஆசீவகவாதி 110-119. எல்லையில் பொருள்களில்-எல்லையில்லாத பொருள் களின் இடத்தில், எங்கும் எப்பொழுதும் புல்லிக்கிடந்து புலப்படுகின்ற - எவ்விடத்தும் எப்பொழுதும் நீங்காமற் பொருந்திக் கிடந்து விளங்குவனவாகிய, வரம்பில் அறிவன் இறை-எல்லையில்லாத அறிவினையுடைய மற்கலியாகிய எங்கள் இறைவன் உரைத்த, நூற் பொருள்கள் ஐந்து - நூற்பொருள்கள் ஐந்து வகைப்படும், உரந்தரும் உயிரோடு அணுநால்வகை - (அவை) திண்மைபொருந்திய உயிரும் நால்வகை யணுவகையுமாம் அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வணுக்கள் தாம் தம்மை உற்றும் கண்டும் உணர்ந்திடுமாறு, பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்-ஒன்று ஒன்றினுட் புகுமாறு செறித்த வழியும் ஒன்றா காவகையிற் கூடுதலும் பிரிதலும் செய்யும், நிலம் நீர் தீ காற்று என நால்வகையின - நிலவணுவும் நீரணுவும் தீயணுவும் காற்றணுவுமென நான்கு வகைப்படுவன வாகிய அவை, மலைமரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் - மலையாகவும் மரமாகவும் உடம்பாகவும் திரண்டு உருவாவது முண்டு, வெவ்வேறாகி விரிவதும் செய்யும் - அவை வேறுவேறாகப் பிரிந்து விரிவதும் உண்டு, அவ்வகை அறிவது உயிர் எனப்படும் - திரள்வதும் விரிவதுமாகிய அணுக்களின் அக்கூறுபாடுகளை யறிவது உயிரென்று கூறப்படும் எ - று. பொருள்கள் எல்லையில்லாதனவாதலின், அவற்றால் விளக்க முறும் அறிவும் எல்லையில்லாது விரிதலின், "வரம்பில் அறிவன்" என்றான். மற்கலி, ஆசீவகநெறியைக்கண்டவர். இவரை, மற்கலி கோசலர் என்றும் கூறுப. இவரெழுதிய நூல் நவகதிர் என்று கூறப்படும். ஆசீவகர்க்கு இறைவன் மற்கலி என்பதை, "மற்கலி நூலின் வகையிது" (மணி.27 : 165) என்பதனால் அறிக. நீலகேசி யுடையாரும், ஆசீவகன் கூற்றில் வைத்து, "மற்கலிதானே இறை இனி, ஒன்பதுவாங் கதிர்நூல் யாமுடையன, மண்பெறு நுண் பொரு ளைந்து" (671) என்று கூறுவது காண்க. உணர்வுடைமைபற்றி, உயிரை வேறுவைத்து, "உரந்தரு முயிரோ டொருநால் வகையணு" என்றார். ஓரணு மற்றோரணு விலடங்கினும், ஒன்று மற்றொன்றினுட் புகுந்தொன்றாகாதென்றும், ஒன்றினொன்றடங்கிக் கூடுவதும் பிரிவதும் செய்யு மென்பவாகலின், "பெய்வகை" யென்றும் "கூடிப் பிரிவதும் செய்யு" மென்றும் கூறினான் பிறரும், "குழுவும் பிரியும்" உணல் மேயினும் உள்புகுதல் உரையேம்" (நீலகே. 677) என்றார். "உயிரோடொரு நால்வகையணு" (மணி.27:113) என்று தொகுத்தோதியதை விரித்துரைத்தலின், நிலநீர் தீக்காற்றென நால்வகையின என்று விரித்துரைத்தார். நால்வகையணுவும் கூடிப் பிரியுமென்ற விடத்துக் கூடிநிற்குந் திறத்தை விளக்கற்கு, "மலை மரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" என்றும், பிரியுந் திறத்தை, "வெவ்வேறாகி விரிவதும் செய்யும்" என்றும் கூறினான். உயிர் எனப்படும் எனச் சிறப்பித்தான், அஃது உணர்வதும் பிறர்க் குணர்த்துவதும் செய்யும் சிறப்புப்பற்றி. பிறரும், "அறித் தலறிதலவை தாமுயிராம்" (நீல. 676) என்றார். அறித்தல்-அறிவித்தல். உயிரெனப் பிரித்துக் கூறினா னாயினும், அதுவும் அணுவென்றே கருதப்படும். "உடங்கே யணுவைந் துருவா யுளதே" (நீல. 674) என்பது காண்க. "அவ்வணு" வென்றது உயிரணுவென்றும், "உற்றுங்கண்டு முணர்ந்திடப் பெய்வகைக் கூடிப் பிரிவதும் செய்யும்" என்றது அவ்வுயிரணுவின் இலக்கண மென்றும் கூறுவாருமுளர். வேறுவேறென்பது வெவ்வேறென மரீஇயிற்று. 120-124. நிலம் வற்பமாகி யுறும் - நிலவணு வன்மையுடைய தாயிருக்கும்; நீர் தாழ்ந்து - நீரணுவானது கீழே வீழ்ந்து, சொற்படு சீதத் தொடு சுவையுடைத்தாய் - இயல்பென்று சொல்லப்படும் குளிர்ச்சியுடன் சுவையுடையதாய், இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது - இழினென்னு மோசையுடன் நிலத்தையடைந்து ஆழத்தே சுவறி விடுவதாம், தீ - தீயணு, தெறுதலும் மேற் சேர் இயல்பும் உடைத்தாம் - எரிப்பதும் மேனோக்கி யெழுவதும் இயல்பாக வுடைய தாகும்; காற்று விலங்கி அசைத்தல் கடன் - காற்றணு குறுக்கிட்டசையும் இயல்பினதாகும் எ - று. வற்பம், வன்மை, நிலத்தே தாழ்ந்து ஆழத்தே சுவறுதல் நீரணுவுக்கியல் பென்றும், சுவையுடையை அதன் குணமென்றும் கொள்க. நிலவணுவின் குணம் வற்ப மென்றாராக, நீலகேசியுடையார், "நிலநீர்எரிகாற்றுயிரின் இயல்பும், பலநீ ரிவற்றின் படுபா லவைதாம், புலமா கொலி யொன்றொழிய முதற்காம், சலமாயது தண்மை யையே முதலாம்," "எறித்தல் முதலாயின தீயினதாம், செறித்தலிரை யோடிகை காற்றின வாம், அறித்த லறித லைதா முயிராங், குறித்த பொருளின் குணமாமிவையே" (நீல. 675, 676) என்றும், "மேற்சீர தீயோ டுயிர் காற்று விலங்கு சீராம், பாற்சீர நீரு நிலந்தானும் பனிந்த சீராம், மேற்சீர மேற் போம் விலங் கோடு விலங்கு சீர்கீ, ழாற்சீ ரவிழும் அவையென்னினு மாவ தென்னோ" (நீல. 717) என்றும் கூறுப. 124-137. இவை ஆதியில்லாப் பரமாணுக்கள் இவ்வைவ கையணுக் களும் அநாதியான பரமாணுக்களாதலால், வேற்றியல் பெய்தும் விபரீதத்தால் - வேறாகிய இயல்புகளையும் எய்தும் விகாரமுடைய வாயினும், தீதுற்று யாவதும் சிதைவது செய்யா - கேடுற்றுச் சிறிதும் இல்லையாமாறு அழிவது கிடையா, புதிதாய் ஒன்று பிறந்து ஒன்றிற் புகுதா - புதிதாக ஓரணுத் தோன்றி வேறோ ரணுவுக்குட் புகுவதுமில்லை; முதுநீர் அணுநில வணுவாய்த் திரியா-அநாதியான நீரணுக்கள் அத்தன்மையவான நிலவணுக்களாய் மாறுவதில்லை; ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா - ஓரணு இரண்டணுக் களாய்ப் பிளந்து போவதும் கிடையாது; அன்றியும்-மேலும்; அவல் போல் பரப்பதும் செய்யா-நெல் முதலியவற்றைக் குற்றிப்பெறும் அவல்போல விரிவதுமில்லை; உலாவம் தாழும் உயர்வதும் செய்யும் -உலாவுவதும் தாழ்வதும் உயர்வதும் உண்டு; குலாம் மலை பிறவாக்கூடும் - நிலவணுக் களாற் பொருந்திய மலை கரைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடும்; பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும் - பலவாய்த் தம்மிற் செறிந்து கூடியிருக்குமவை பின்னரும் அக்கூட்டத்திற் பிரிந்து தனித்தனி யணுவாகவும் மாறும்; மரம் மன்னிய வயிரமாகச் செறிந்து வற்பமுமாம் - மரமாய்க் கூடிய அணுக்கள் திண்மையுறக்கூடி வயிரமாகி வன்மையுடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் - மூங்கிலாகி உள்ளே புழையுடையதாகும்; பொருளா முளைக்கும் - வித்தாகி முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம் - தேயாத முழுத் திங்கள் போல வட்டமான செழுமை பொருந்திய நிலப் பரப்பாகும் எ - று. விபரீதம் - விகாரம். கூடுதற்குரிய இயல்பு பிரியுமிடத்து வேறுபடுதலின், "வேற்றியல் பெய்தும் விபரீத" மாயிற்று. வேற்றியல் பெய்தும் விபரீத முடைமையின் விகாரியாதலால் அணுக்கள் அழியுங்கொலென்னு மையமறுத்தற்கு, "ஆதியில்லாப் பரமாணுக்கள்" என்றார். ஆதியின்மையை விளக்கற்கு, "புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா" என்றும், ஒருவகையணு பிறிதொருவகை யணுவாய்த் திரியா மையை விளக்கலுற்று, "முது நீரணு நிலவணு வாய்த் திரியா" என்றும் கூறினான். முதுமையை நிலவணுவுக்கும் கூட்டுக. ஒன்று மற்றொன்றாதல் இல்லையென்பதையே வேறுபல ஏதுக்களால் விளக்குவானாய், ஒன்றிரண்டாகப் பிளத்தலும் நெல் முதலியவற்றைக் குற்றிப் பெறும் அவலைப்போலப் பரத்தலும் இல்லையென்றான். ஒருவகை யணுக்களே தம்மிற் கூடிச் செறிதலும் பிரிதலும் செய்யுமென்றும் அதனால் தந்தன்மை திரியாவென்றும் கூறியதனை, மலையியல்பும் மரத்தியல்பும் நிலப்பரப்பமைதியும் முறையே கூறி விளக்கினான். மரஞ் செடி கொடிகள் முதலியவற்றால் விளையும் பொருள் வித்தாதலின், அவ் வித்தினைப் "பொருள்" என்றார். வயிரமேறிய மரம் நிலை பெறுதல் தானே யமை தலின், "மன்னிய" என்றான். மதி, முழுத்திங்கள்; அதுதானும் மறுநாளே குறையலுறுதலின், அதனினீக்கத் "தேயாமதி" யென்று சிறப்பித்தார். 138-145. நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்-எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் இந்த நிலமுதலிய நால் வகை யணுக்களும் நிலநீர் முதலிய பூதங்களாக நிலவுமிடத்து; வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா - தத்தமக்குரிய அளவிற் குறைதலும் சமமாதலுமின்றி; ஒன்று முக்கால் அரை காலாய் உறும் - நிலமாகிய பூத நிகழ்ச்சிக்கு நிலவணு ஒன்று கூடின் நீரணுவுக்கு முக்காலும் நெருப்புக்கு அரையும் காற்றுக்குக் காலுமாய்ப் பொருந்தும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-பொருந்தும் அணுக்களுள் மிக்கவற்றால் இன்ன பூதமெனப் பெயர் கூறப் படும்; இக்குணத்து அடைந் தாலல்லது - இவ்வளவாக அணுக்கள் செறிவுற்றாலன்றி; நிலனாய்ச் சிக்கென்பதுவும் - நிலமாய் வன்மை யுற்றிருப்பதும்; நீராய் இழிவதும்-நீராகிப் பள்ளம் நோக்கி யோடுவதும்; தீயாய்ச் சுடுவதும் - நெருப்பாகிச் சுடுவதும்; காற்றாய் வீசலும்-காற்றாய் இயங்குவதும்; ஆய தொழிலையடைத் திடமாட்டா- ஆகிய இத்தொழில்களைச் செய்யா எ - று. இவ்வணுக்கள் பூதமாய் நிகழுமிடத்து ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டும் அணுத்திரள் தம் அளவில் குறைந்தோ, தம்மோடு கூடும் பிற அணுக்களின் அளவிற்கொப்பவோ கூடாவென்றற்கு, "வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா" என்றும், அவ்வளவினை, "ஒன்று முக்கால் அரை காலாயுறும்" என்றும் கூறினான். பிறரும், "இரண்டுங்கூடும் நெறி நில நான்கு நீர் மூன், றின்றிரண் டழல்கா லொன்றா விசைந்திடும் பூமியிவ்வா, றென்று நீர் தீ காலாதி யீண்டுவ தென்றியம்பும்" (சிவ. சித். பர. ஆசீவ. 7) என்று கூறுவது காண்க. ஒன்று முக்கால் அரை காலாயுறும் என்பதே பிறிதோர் வாய்பாட்டால் நான்கு மூன்று இரண்டு ஒன்றாகக் கூறப்பட்டதென்க. நிலவணு மிக்கது நிலமென்றும் நீரணுமிக்கது நீரென்றும் இவ்வாறே பிறவுமாதலின், "துன்று மிக்கதனாற் பெயர் சொலப்படுமே" என்றான். 146-149. தெய்வக்கண்ணோர் - ஞானக்கண்ணுடையவர்கள்; ஓர் அணு அறிகுவர் - ஒவ்வோரணுவினையும் கண்டறிகுவர்; ஏனோர் அஃதில்லாத பிறரெல்லாம்; பூதத் திரட்சியுள் ஓரார் - பூதமாய்த் திரண்டு நின்ற வழியும் அணு வுண்மையை யறிகுவாரல்லார்; மாலைப்போதில்-(அஃது எது போல வென்னில்) ஞாயிறு மறைந்த மாலைப் போதில்; ஒரு மயிர் அறியார் - மயிர் ஒவ்வொன்றா யிருத்தலைக் காணாமல்; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும் - மிகுதியாய்த் திரண்டுள்ள மயிர்க் கற்றையின் பிண்டித்த தோற்றத்தைக் காண்பதை யொக்கும் எ - று. கண் முதலிய பொறிகளால் எளிதில் காணமுடியாத அணுக்களை நுண்ணுணர்வுகொண்டு நுணுகிக்காண்டலின், ஞானவான்களைத் "தெய்வக்கண்ணோர்" என்றார்; "ஐயப் படாஅ தகத்த துணர் வானைத், தெய்வத்தோ டொப்பக் கொளல்" (குறள். 702) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏனோர்க்கு அவ்வணு தோற்றப் படாமைக்கு மயிர்த் திரளை யெடுத்துக் காட்டினான். மாலைப் போது கூறியது, அறியாமை சூழ நிற்கும் இயல்புகாட்டி நிற்கிறது. இவ்வணுவாதம் புத்தர், சமணர், வைபாசிகர், சௌத்திராந்திகர் என்ற பலர்க்கும் உடன்பாடு; வைசேடி கரும் இதனை மேற் கொள்வர். "மாலைப் போதிலோர் மயிரு மறியார்" என்றும் பாடம். 150-158. கரும்ம் பிறப்பும் கருநீலப்பிறப்பும் - கரும்பிறப்பென்றும் கருநீலப் பிறப்பென்றும்; பசும்ம் பிறப்பும் - பசும் பிறப் பென்றும்; செம்ம் பிறப்பும் - செம்மைப் பிறப்பென்றும்; பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பு மென்று - பொன்மைப் பிறப்பென்றும் வெண்மைப் பிறப்பென்றும்; இவ்வாறு பிறப்பினும் மேவி-இவ்வறுவவகைப் பிறப்புக்களிலும் பிறந்து; கழிவெண் பிறப்பிற் கலந்து - முடிவில் மிக வெண்மையான பிறப்பிற் பிறந்து வீடுபேறெய்துவர் மக்கள்; அழியல் வேண்டார் - துன்பத்தை விரும்பாதோர்; அது உறற் பாலர்-அவ்வீடு பேற்றிற் குரிய கழிவெண் பிறப்பெய்தும் பான்மை யுடையோராவர்; இது செம் போக்கின் இயல்-இவ்வாறு முறையே பிறந்து வீடெய்தும் நெறி செம்போக் கெனப்படும் நன்னெறி யாம்; இது தப்புமது மண்டலம் என்று அறியல் வேண்டும் - இந் நெறியிற்றவறித் துன்புறுவது மண்டல நெறி யென்று அறிய வேண்டும் எ - று. வீடு பேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக வுயர்ந்து கழிவெண் பிறப்புற்று வீடுபேறடைவர்என்பதாம். இதனைப் பிறரும் "வெண்மைநன் பொன்மை செம்மை கழிவெண்மை நீலம் பச்சை, யுண்மை யிவ்வா றினுள்ளும் கழிவெண்மை யோங்கு வீட்டின், வண்மைய தாகச் சேரு மற்றிவை யுருவம் பற்றி, யுண்மையவ் வெட்டுத் தீட்டுக்கலப்பினி லுணரு மென்றான்" (சிவ. சித். பர. ஆசீவ. 8) என்றார். இவ்வாறு பல்வகைப் பிறப்புக்கட்கும் நிறங்கூறும் இயல்பு சீவக சிந்தாமணி முதலிய சமணூல்களிலும் காணப்படுகிறது. பெரியாழ்வாரும் முத்திப் பேற்றுக்குரிய ராயினாரை "வெள்ளுயிர்" (திருப்பல்லா.) என்று கூறுகின்றார். செம் போக்கு, நேரியசெலவு; பிறப்புவகையில் மேனோக்கிச் செல்லாது கீழ்ப்பட்டுச் சுழலுவதுபற்றி, பிற்போக்கினை "மண்டிலம்" என்றார். 159-165. பெறுதலும் - நற்பேறுகளைப் பெறுவதும்; இழத்தலும்- பெற்றவற்றை யிழந்துவிடுவதும்; இடையூறுறுதலும் - பல்வகை இடையூறுண்டாதலும்; உறுமிடத்து எய்தலும் - பொருந்திய விடத்தே பொருந்தி யிருத்தலும்; பெரிதவை நீங்கலும் - இடத்தினின்று இடத்தையும் ஒக்கல் பொருள் ஏவல் முதலிய வற்றையும் பிரிந்து நீங்குதலும்; துக்க சுகமுறுதலும் - துன்பமும் இன்பமும் அடைவதும்; பிறத்தலும் சாதலும்-பிறப் பிறப்புக்களும்; கருவிற் பட்ட பொழுதே கலக்கும் - கருவியிற் றோன்றிய போதே உயிர்களைச் சார்ந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவை அணுவெனத் தகும் - இன்பமும் துன்பமுமாகிய இவைகளும் அணுவென்று கூறப்படும்; முன்னுள ஊழே - முன்னே எய்திய நலந் தீங்குகட் கேதுவாகிய ஊழே; பின்னும் உறுவிப்பது - பின்னரும் அவை யெய்துதற் கேதுவாம்; இது மற்கலி நூலின் வகை என்ன - இக் கூறிய இது 1மற்கலி கோசலர் என்பார் கூறிய நூற்பொருள் வகையாம் என்று ஆசீவகன் சொல்ல எ - று. பெறுதல் என்றதற் கேற்பச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. உறுமிடத் தெய்தலோடு இயைபுடைய பெரிதவை நீங்கல் செய்யுளாதலின் மாறி நின்றது. அவை யெனப் பன்மையாற் சுட்டியது இடமேயன்றி நாடும் ஒக்கலும் ஏவலும் பிற வளங்களும் உளப்படுத்தற்கு. இப்பெறுதல் முதலிய பலவும் கருவிலே தொடக் குண்பன என்பதைப் பிறரும், "பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும், வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல், கூறிய வெட்டு முன்னே கருவினுட் கொண்ட தாகும், தேறிய 'd2வூழிற் பட்டுச் செல்வதிவ் வுலக மென்றான்" என்றும் "புண்ணிய பாவமென்னு மிரண்டணுப் பொருந்த வைத்தே, எண்ணிய விவற்றி னோடு மேழென வெங்களோடு, நண்ணிய வொருவன் கூறு ஞான மிவ்வாற தென்று, கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்ப ரென்றான்" (சிவ. சித். ஆசீ- 9, 10) என்றும் கூறுதல் காண்க. 166-70. சொல்தடுமாற்றத்தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப் பின் தடுமாறிக்கூறும் ஆசீவகனுடன் தொடர்ந்து சொல் லாடுவதை விட்டகன்று; நிகண்ட வாதியை - ஆங்கேயிருந்த நிகண்டவாதியைக் கண்டு; நின்னாற்புகழும் தலைவன் யார்-நின்னாற் பாராட்டப்படும் இறைவன் யார்; நூற்பொருள் யாவை - நூற்பொருள்கள் யாவை; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என - அப்பொருள்களின் வரலாறும் உயிர்கட்குளவாகும் கட்டும் அதனினின்று விடுதலை பெறுமாறும் நன்கு விளங்கக் கூறுக என்று கேட்க; விளம்பல் உறுவோன் - அவன் சொல்லலுற்றான் எ - று. முன்மொழிந்ததும் பின்மொழிவதும் மாறுபடக் கூறு முகத்தால் உண்மை தோன்றாமற் கூறுவது, சொற்றடுமாற்றம்; "நில நீர் தீக் காற்றென நால்வகையின், மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" (மணி. 27 : 116-7) என்று முன்னே மொழிந்து, பின்னே "முது நீரணு நிலவணு வாய்த்திரியா" (மணி.27:129) என்பது முதலாகத் தடுமாற்ற மெய்தக் கூறுதல் சொல்தடுமாற்றம். தடுமாற்றமுற்று மொழிவோனுடன் சொல்லாடுவது பயனில் செயலாதலின், "தொடர்ச்சியை விட்டு" என்றார். நிகண்டவாதி, நிக்கந்தவாதி யென்றும், நிர்க்கிரந்தவாதியென்றும் நிர்க்கிரண்டவாதி யென்றும் கூறப்படுவன். நிக்கிரண்டம் - உடையில்லாமை; இந்நிகண்டவாதியர் சைனருள் ஒருவகையினரான திகம்பர ரென்றும், அருகரென்றும், சமணரென்றும், கூறுப. புகழும்: செய்வினை வாய்பாட்டில் வந்த செயப்பாட்டுவினை. விளங்கக் கூறாத வழி மெய்ம்மை தோன்றாதாதலால், "மெய்ப்பட விளம்பு" என்றாள். விளம்பலுறுவோன் என்பது பெயராய் "அது வீடாகும் என்றனன்" (மணி. 27 : 201) என்பதனோடு முடியுமாயினும், ஈண்டு உரை யினிது நடத்தற்கு வினைப்படுத்துப் பொருள் கூறப்பட்டது. நிகண்டவாதி 171-176. இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் - இந்திரர்கள் பலராலும் வணங்கப்படும் அருக பரமேட்டி எங்கட்கு இறைவனாவான், தந்த நூற் பொருள் - அவனுரைத்த ஆகமத்தின் பொருள்கள், தன்மாத்திகாயமும், அதன்மாத்தி காயமும்-, காலாகாயம் - காலமும் ஆகாயமும், தீதில் சீவனும் - குற்றமில்லாத சீவனும், பரமாணு - பரமாணுக்களும்: நல்வினையும் தீவினையும், அவ்வினையாற் செய்வுறு பந்தமும் - அவ்விருவினைகளையும் செய்ய வுண்டாகும் கட்டும், வீடும் - வீடு பேறுமாக, இத்திறத்த - இப்பத்து வகையினவாம் எ - று. இந்திரர், பவணேந்திரர், வியந்தரேந்திரர், கற்பேந்திரர், மிருகேந்திரர் எனப் பலராதலின், "இந்திர" ரெனப் பொதுப்படக் கூறினர். 'எனக் கேட்டாங் கெடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான், தனக்காய தர்மமு மதர்மமுங் காலமும், கனப்பாட்டிற் காயமே யுயிருருவே புண்ணியமே, நினைக்குங்காற் பாவமே கட்டு வீடென நிறுத்தி" (நீல. 288) என்று பிறரும் இவ்வாறே தொகுத்தோதிக் காட்டுதல் காண்க. நீலகேசி யுரைகாரர், இவ்விந்திரரை, "ருஷீந்திர சுரேந்திர நரேந்திராதிகள்" (1. உரை) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. உயிர் அநாதிநித்திய மென்பது கொள்கையாதலின், "தீதில் சீவன்" என்றும் இருவினையும் கட்டுண்டற்குக் காரணமாதல்பற்றி, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" என்றும் கூறினான். 177-182. ஆன்ற பொருள் -ஆகமத்தே கூறப்பட்டமைந்த பொருள், தன் தன்மையதாயும் - தன்னியல்பாகிய தன்மையுடைய தாயும், தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும் - சார்பாகத் தோன்றிய பொருளொன்றின் தன்மையையுடையதாயும், ஓர் கணத்தின் கண்ணே நுனித்த குணத்து - ஒரு கணத்தையே கூர்ந்துணரப்படும் குணத்தால், அநித்தமும் நித்தமுமாகி நின்று - நிலையாமைத் தன்மையும் நிலைத்த தன்மையு முடையதாயும், தோற்றமும் நிலையும் கேடு மென்னும் - தோன்றுதல் நிலைபெறுதல் கெடுதல் எனப்படும், மாற்றரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம் - மாற்றுதற்கரிய மூவகை யியல்பு முடைத்தாயு மிருத்தற்குரியதாம் எ - று. எனவே, தன் தன்மையும் சார்ந்த தன்மையும் ஆகிய தன்மை யுடைமையும், ஒரு கணத்தே நித்தமாயும் அநித்தமாயும் இருப்பதும், ஒரு கணத்திலேயே தோற்றம் நிலை கேடு மூன்றுமெய்துவதும் பொருட்கு இயல்பென்பதாம். பொருள்களின் நித்தாநித்தா வியல்பை அவற்றின் குணம் கொண்டே காண்பது பற்றி, "நுனித்த குணத்து" என்றார்; பிறரும், "நின்ற குணங்களினித்தியமென்றும் நிலையிலவாம், என்ற குணங்களினியதம் மென்றும் இயம்புதலால்" என்றும், "கேடிலவாய குணத்தினிலையும் கெடுங்குணத்தி, னீடிலவென்பதும் நேர்ந்து" (நீல. 397,80) என்றும் கூறுதல் காண்க. பொருள்களின் தோற்ற முதலிய மூன்றும் குணங்கருவியாகக் காணப்படுதல்பற்றி, "ஓர் கணத்து" என்பது தோற்ற முதலிய வற்றோடும் இயைந்து நின்றது. "மும்மைத் தன்மையதாம் திருவத்த தென்பொருள்" (நீல. உரை. மேற். 387) என்பது இம்மூன்றற்கும் ஆதரவு தருகிறது. 183-186. நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் - வேம்பின் முளை முளைத்து வேம்பாகவே தோன்றுவது நித்தியமாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-வேம்பினை நட்டு முளைத்த வழி அதன் விதை யழிவது அநித்தியமாம், பயற்றுத்தன்மை கெடாது-பயறு கும்மாயமாயவழியும் அதன் தன்மை கெடாமையின் நிலைபேறும், கும்மாயம் இயற்றி - கும்மாயத்தை யுண்டுபண்ணுதலின் தோற்றமும், அப்பயறு அழிதலும்-அப்பயறு அழிந்து போதலால் கேடும் கொள்க எ - று. எனவே, நித்தாநித்தங்கட்கு வேம்பும், தோற்றக் கேடுகட்குப் பயற்றது கும்மாயமும் எடுத்துக்காட்டாகக் கொள்க. இனி, நித்தா நித்தங்கட்கு நீலகேசியுரைகாரர், "கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன், செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தனனாம், வல்லுவா னொன்றொன்று வல்லா னிதுவன்றோ, நில்லாமை நிற்ற னிலை" (378. உரை மேற்.) என்று காட்டுகின்றார். கும்மாய எடுத்துக்காட்டால் தோற்ற நிலை யிறுதி கூறும் இயல்பை, "கெட்ட திரட்சியுந் தோன்றிய சாந்தும் பொருளெனவும், பட்டன வப்பொருள் பையைகளே யென்னும் பான்மையினால், விட்ட திரள்வினுந் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம், நட்டமுந் தோற்றமு நாட்டே னுருவிற்கு நானுமென்றாள்" (நீல.389) என்று நீலகேசியும் கூறுகிறது. கும்மாயம், பயற்றைக் குழையச் சமைத்த குழைவு. 186-188. ஏது-உலகு உயிர் கட்கு வீடு முதலியவற்றிற்கேதுவாகிய, தன்மாத்தி காயம்-தன்மாத்திகாயமாவது, தான் எங்கும் உளதாய்-தான் எல்லாப் பொருளிடத்தும் எப்போதும் உளதாகி, பொருள்களைப் பொருந்த நடத்தும் - வினை முதலிய பொருள்களை உயிர்கள் பொருந்தி யியங்குமாறு செய்யும் எ - று. எனவே, உயிர்கட்குக் கட்டுநீங்கி வீடுபெறுதற்குத் தருமாத்தி காயம் ஏதுவென்றும், இயங்கியற் பொருள்களின் இயக்கத்துக்கும் இதுவே ஏதுவென்றும் கூறியவாறாம். தருமாத்திகாயமும் மேல் வரும் அதருமாத்திகாயமும் இல்வழி, உலகும் உயிரும் கட்டும் வீடும் இலவாமென்பதை, "அளவதாம் பொருளுலகத்துக் கில்லையேல், அளவிலா காயத்திலணுக் களோடுயிர், அளவளா வின்றியே யகன்று போயபின், உளவல கட்டுவீடுலகத் தோடுமே" 89) என்றுமேருமந்தர புராணம் கூறுவது காண்க. 188-190. அதன்மாத்தி காயம் - அதன் மாத்திகாயமாவது, நித்தியமா அப்படித்தாகி - அழியாத அவ் வியல்பினையுடைய தாய், எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் - எல்லாப் பொருள்களையும் நிற்கப் பண்ணும் எ - று. இதனால், பொருள்களின் இயக்கத்துக்குத் தன்மாத்திகாயம் ஏதுவாதல் போல, அதன்மாத்திகாயம் அவை நிற்றற்குக் காரணமாம் என்பது பெற்றாம். உலகில் உயிர்கள் கட்டுநீங்கி வீடுபெறுதற்கு அதன் மாத்தியும் ஏதுவாகுமென்றற்கு "நித்தியமா அப்படித்தாகி" என்றார். நீலகேசி யுரைகாரரும் "தருமாஸ்தியும் அதர்மாஸ்தியும் பக்ஷிக்குச் சிறகுங் காலும்போல ஜீவபுத்கலங்களுடைய கமனத் திற்கும் ஸ்திதிக்கும் அப்பிரேரக சாதனமென்றவா றாயிற்று" (நீல. 294. உரை) என்பர். 191-193. காலம் - காலமாவது, கணிகமென்னும் குறு நிகழ்ச்சியும் - கணிகமென்னும் குறுகிய காலவளவும், ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் - பொருந்திய கற்பமென்னும் நீண்டகால வளவும், ஆக்கும் - உண்டாக்கும் எ - று. கணிகமாவது, க்ஷணிகம்; "க்ஷணிகமென்பது ஏழு செங்கழு நீரிதழை ஒரு குறட்டிலடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவும் கூரியதோருளிவைத்துக் கூடமிட்டுப் புடைத்தால், ஆறாம் புரையற்று ஏழாம்புரையிற் செல்லுமளவாம். இனி, "கற்பமாவது, ஓசனையகன்றுயர்ந்ததோர் வஜ்ரமலை கர்ப்பிணி யுடுத்த பட்டாடை தோய்க்கப்பட்டுக் கையறத் தேய்ந்ததாம்" (நீல.297. உரை) என்பர். நிகழ்ச்சியெல்லாம்காலத்தின் மேலன வாதலின், "காலங் கணிகமெனுங் குறு நிகழ்ச்சி" யென்றார். 193-194. ஆகாயம் - ஆகாயமாவது, எல்லாப் பொருட்கும்-பொருள்கள் எல்லாவற்றிற்கும், பூக்கும் இடம் கொடுக்கும் - பொருந்துமாறு விரிந்து இடம் கொடுக்கும், புரிவிற்றாகும் - செயலையுடையதாகும் எ - று. உலகத்தில் உள்ள பொருள்களுள் உயர்வன உயர, விரிவன விரிய அவ்வவற்றிற்கேற்ப இடம் விரிந்து கொடுத்தல் பற்றி, "பூக்குமிடங் கொடுக்கும்" என்றார். இதனை, "உளவென்ற பொருட்கெலா மிடங் கொடுத்துடன், தளர்வின்றி நிற்ப தாகாயம்" (93) என்று மேருமந்தர புராணம் கூறுகிறது. "பரந்திடங் கொடுக்கும் விசும்பு" (மலைபடு. 558) என்று சான்றோரும் கூறுப. 195-196. சீவன் - சீவனாவது, உடம்போ டொத்துக் கூடி-உடம்போடு அதனளவும் கூடிப்பரந்து நின்று, தாவில் சுவை முதலிய புலன்களை நுகரும்-கெடாத சுவை முதலிய ஐவகைப் புலன்களையும் நுகரும் எ - று. உயிர்தான் நின்ற உடம்பு முழுதும் பரவிநிற்பதுபற்றி "உடம்போ டொத்துக்கூடி" என்றார். "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்" (மேரு மந். 81) என்று பிறரும் கூறுப. சுவை முதலிய புலன்களை நுகருமாற்றால் செய்யும் வினைகட்கு வினை முதலாகும் உயிர், மீட்டும் அவ்வினைப் பயனை நுகர்வது குறித்துப் பிறக்கும் மறுபிறப்பினும் வினை முதலாகி அப்புலன்களை நுகர்வதால், அப்புலன்கள் கெடாது தொடர்ந்து நிற்பதுபற்றி, "தாவில் சுவை" யென்றார். "பொறி களாற் புலத்தெழு போகம் துய்ப்புழி, இறுதியவினைகளுக் கிறைவனாயபின், பிறிதொரு பிறப்பினவ் வினைப்ப யத்தினுக், கிறைவனா மிதுவுயி ரியற்கை வண்ணமே (மேரு மந். 82) என்பதனா லறிக. 197-201. புற்கலம் ஓர் அணு-புற்கலமாவது பரமாணுவும், புறவுரு வாகும் - பொருட்குப் புறவடிவமாகும், சீர் சால் நல்வினை தீவினையவை செயும் - சிறப்புப் பொருந்திய நல்வினையும் அஃதில்லாத தீவினையுமாகிய அவ்விரண்டும் பயக்கும், வருவழி இரண்டையு மாற்றி-இன்பமும் துன்பமும் வரும் வழியை யடைத்துப் போக்கி, முன்னே செய் அருவினைப் பயன்-முன்பே செய்து கொண்ட அரிய பழவினைப் பயன் களை, அனுபவித்தறுத்திடுதல் - ஒருங்கே நுகர்ந்து கழிப்ப தாகிய, அது வீடாகும்-அதுவே வீடுபேறாகும், என்றனன்-என்று நிகண்டவாதி கூறினான் எ - று. பொருளின் புறத்தவாகிய நாற்றம் சுவை ஊறு வண்ணம் முதலிய வியல்புகளை யுடைமைபற்றி, "புறவுருவாகும்" என்றான்; உயிர்களை யுலகவாழ்வில் ஈடுபடுத்தித் துன்ப மெய்துவிப்பதும் அணுவாதலும் இதற்கு இயல்பாதலை, "புற்கலந்தான், மாற்றிடை யுயிரைப்பற்றி வினை முதலாகித் துன்பம், ஆற்றவும் செய்து கந்த மணுவுமாய் நிற்ப தாமே' (மேரு மந். 83) என்று பிறரும் கூறுதல் காண்க. நல்வினை இன்பம் பயக்கும் சிறப்புடையதாதலின், "சீர்சால் நல்வினை" யென்றும், அச்சிறப்பில்லாமையின், தீவினையை வாளாதும் கூறினான். வினைகளைப் பற்றிப் "பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதைக்"' கண்கூறுதலாலும், பந்தத்தின் இயல்பை, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" (மணி, 27; 175-6) என்றமையாலும், அவற்றைக் கூறாது, வீட்டினைமட்டில் ஈண்டுக் கூறினார். வரும் வழியிரண்டையு மடைத்தலாவது," வருகின்ற கர்மங்களைக் குப்தி சமிதி முதலாயினவற்றால் அடைத்து" விடுதல். பழவினை நிற்க வீடுபெறல் கூடாமையின், அவ் வினைப் பயனை முறையே நுகர்ந்து கழிப்பதின்றி, ஒருங்கே நுகர்ந்து கெடுத்தலையே "அனுபவித்தறுத்திடுதல்" என்றான். பிறரும் இக் கருத்தே கொண்டு, "வரும்பாவமெதிர்காத்து மன்னுந்தம் பழவினையும், ஒருங்காக வுதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றாள்" (நீல 312) என்று கூறினர். சாங்கியவாதி 201-206. அவன் பின்-அந்த நிகண்டவாதி நீங்கிய பின்பு; இது சாங்கிய மதம் என்று எடுத்துரைப்போன்-யான் கூறும் இது சாங்கிய மதக் கொள்கையாமென்று சாங்கியவாதியெடுத்துச் சொல்லுவானாய்; தனை அறிவரிதாய்-தன்னை இத்தன்மைத் தென அறிதற்கரிதாய்; தான் முக்குணமாய் - தானே மூவகைக் குணமுமாய்; மன நிகழ்வின்றி - மனத்தின் நினைவுக்கிட மாகாது; மாண்பமை பொது வாய் - மாட்சிமை பொருந்திய பொது வியல்பினையுடையதாய்; எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல்-எவ்வகைப் பொருளும் தோன்றுதற்கு இடமென்று சொல்லப்படுவது ; மூலப் பகுதி - மூலப் பகுதியாகும் (என்றான்) எ - று. இன்ன தன்மைத்தென யாவராலும் அறியப்படாமை பற்றி மூலப் பகுதியை, "தனையறிவரிதாய்" என்றும், முக்குணங்களின் விளங்கித் தோன்றா நிலையே மூலப் பகுதியின் இயல்பு என்றற்கு, "தான் முக்குணமாய்" என்றும், மனத்திற்கு விளங்காததாதலின், "மனநிகழ்வின்றி" என்றும், எவ்வகைப் பொருளும் தோன்று வதற்குத் தான் மூலமாவதன்றித் தனக்கொரு மூலமில்லாத தாதலின், "மாண்பமை பொதுவாய்" என்றும் கூறினான். "நின்று பரந்தரு வாய்ப்பொறியேதுமிக், கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது" (நீல. 737) என்று பிறரும் ஓதுதல் காண்க. மனநினைவுக் ககப்பட்ட வழி மூலப்பகுதிவிளங்கி விடுமாதலின், மனநிகழ்வில தாயிற்றென வறிக. முக்குணங்களும் விளக்கமின்றி யொடுங்கி யிருக்கும் நிலையைச் சாம்யாவத்தை யென்று சாங்கிய பிரவசன பாடிய முடையார் (வீ: 61) கூறுவர். "தெற்றென வில்லது" (நீல. 735) என்று சமயதிவாகரர் எடுத்துக் கூறுகின்றார். 206-226. சித்தத்து - சித்தமாகிய மூலப்பகுதியினின்று ; மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மானென்று சொல்லப் பட்ட புத்திதத்துவம் வெளிப்படும்; அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு-அந்தப் புத்தியினின்றும் ஆகாயம் வெளிப் படும்; அதன் கண் வாயு வெளிப்பட்டு - அந்த ஆகாயத்தி லிருந்து வாயு வெளிப்படும் ; அதன்கண் அங்கியானது வெளிப்பட்டு-அவ் வாயுவினின்று தீயானது வெளிப்படும்; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு - அத் தீயிலிருந்து நீர் வெளிப்படும்; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரிலிருந்து நிலம் வெளிப்படும்; அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப் பட்டு - அந்த மண்முதலியவற்றின் கூட்டத்திலிருந்து மனம் வெளிப்படும்; ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் - ஆரவாரம் பொருந்திய அந்த மனதினது ஆங்காரமாகிய விகாரமும், ஆகாயத்திற் செவியொலி விகாரமும் - ஆகாயத் தினுடைய செவிக்குப் புலனாகும் ஒலியாகிய விகாரமும்; வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-வாயுவினது மெய்க்குப் புலனாகும் ஊறாகிய விகாரமும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினுடைய கண்ணுக்குப் புலனாகும்-ஒளியாகிய விகாரமும்; அப்பில் வாய் தங்கிய சுவையெனும் விகாரமும் - நீரினது வாய்க்குப் புலனாகத் தங்கிய சுவையாகிய விகாரமும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-நிலத்தினுடைய மூக்குக்குப் புலனாகும் நாற்ற மாகிய விகாரமும் என்று; சொல்லப்பட்ட இவற்றின்-சொல்லப்பட்ட இவற்றுள்; தொக்கு விகாரமாய்-மெய்யினது விகாரமாய்; வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என ஆக்கிய இவை வெளிப்பட்டு-வாய், கால், கை, பாயுரு, உபத்தம் என்று உண்டாகிய இவை வெளிப்படும்; இங்கு அறைந்த பூத விகாரத்தால்-இங்கே ஆகாய முதல் நில மீறாகச் சொல்லப் பட்ட பூதங்களின் கலப்பால்; மலை மரம் முதல் ஓதிய வெளிப்பட்டு - மலையும் மரமும் முதலியவாகச் சொல்லப் பட்டன வெல்லாம் வெளிப்பட்டு; உலகாய் நிகழ்ந்து - உலகமாய்த் தோன்றி நிலவி ; வந்த வழியே இவை சென்றடங்கி - பின்பு தாம் தோன்றிய முறையே சென்று ஒன்றினுள் ஒன்றாயொடுங்கி ; அந்தமில் பிரளயமாய் இறும் அளவும்-ஒழியாத பிரளயமாய் ஒடுங்குங்காறும்; ஒன்றாய் - ஒன்றாகி; எங்கும் பரந்து நித்தியமாம் - எவ்விடத்தும் பரந்து நித்தியப் பொருளாம் எ - று. எனவே, மூலப்பகுதியிலிருந்து மானென்னும்புத்தி தோன்றுமென்றும், அப் புத்தியிலிருந்து ஆகாயமும் அதிலிருந்து ஒன்றன்பின் னொன்றாய்ப் பரம்பரையாய் ஏனைப் பூதங்களும் தோன்றுமென்றும், அவற்றின் கூட்டத்தால் மனமும் அதிலிருந்து ஆங்காரமும் தோன்றுமென்றும், ஆகாய முதலிய பூதங்களிலிருந்து முறையே செவி முதலிய பொறிகளும் ஒலி முதலிய புலன்களும் தோன்றுமென்றும், மெய்யாகிய பொறியின் விகாரமாய் வாக்கு முதலிய கன்மேந்திரியங்களும், பூதங்களின் விகாரமாய் மலை மரம் முதலியனவும் தோன்றி யுலகாய் நிலவுமென்றும், இவ்வுலகம் முடிவில் தோன்றிய முறையே ஒடுங்குமென்றும், அம்மூலப்பகுதி ஒன்றாய் வியாபியாய் நித்தமாய் உள்ளதென்றும் கூறியவாறாம். இம்முறை பரமார்த்த ரென்னும் சீன நாட்டவர் எழுதிய சாங்கியக் கொள்கையுடன் பெரிதும் ஒத்திருப்பது ஆராயத்தக்கது. இனி இச்சாங்கிய நூற்கொள்கையைக் கூறலுற்ற நீலகேசியுரைகாரர், "அந்தப் பிரகிருதியிற் பிறந்த மகானில் அகங்காரமாம்; அந்த அகங்கார தத்துவத்து மனசும் பஞ்சதன்மாத்திரையும், ஞானேந்திரிய மைந்தும், கன்மேந்திரிய மைந்துமாகப் பதினாறும் பிறக்கும் ; பஞ்ச தன்மாத்திரையிற் பஞ்சபூதம் பிறக்கும்" (நீல. 737. உரை) என்பர் ; இனிப் பரிமேலழகர், மூலப்பகுதியின்கண் மானும் அதன்கண் ஆங்காரமும் அதன் கண் தன்மாத்திரையும் தோன்று மென்று கூறி, "அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் பூதங்களுமாகிய பதினாறும்" விகுதியாகு மென்றும், மானும் ஆங்காரமும் தன்மாத்திரை யைந்துமாகிய ஏழும் விகுதியும் பகுதியுமா மெனவும் கூறுவர். இருவர் கூற்றினும் வேறுபாடுணர்ந்து கொள்க. இனி இச்சாங்கிய நூல்களை ஆராய்ந்துரைக்கும் அறிஞர்கள், மூலப்பகுதியிலிருந்து புத்தி யென்னும் மானும், அதிலிருந்து ஆங்காரமும், அதன்கண் மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் தன்மாத்திரையும் தோன்றுமென்றும், தன்மாத்திரையிலிருந்து ஐம்பெரும் பூதமும் தோன்றுமென்றும் கூறுகின்றனர். இதுவே நீலகேசி யுரைகார ராலும் கூறப்படுவது. வாசஸ்பதி யென்பாரும் இவ்வாறே கூறினர்; விஞ்ஞானபிஷு என்பார் ஆங்காரமும் தன்மாத்திரைகளும் மானிலிருந்தே தோன்றுகின்றன என்பர். உரையினிது விளங்குதற்பொருட்டு, வெளிப்பட்டென நின்ற எச்சம் முற்றாகப் பொருள் கூறப்பட்டது. 227-232. அறிதற்கு எளிதாய் - எளிதில் அறியப்படுவதாய்; முக்குணமன்றி - முக்குணங்களு மல்லாததாய் ; பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி-மூலப் பகுதியோடு ஒருவகைப் பொதுத் தன்மையுமின்றி; எப்பொருளும் தோன்றுதற்கு இடமன்றி-எவ்வகையான பொருளும் தோன்றுதற் கிடமல்லாததாய்; அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் - அப்பொருள்வகை யெல்லாவற்றையும் அறிந்து கோடற்குரிய உணர்வாய் ; ஒன்றாய் - ஏகமாய்; எங்கும் பரந்து நித்தியமாய் நின்று - எவ்விடத்தும் வியாபித்து நிற்பதும் நித்தியமானதுமாய் நின்று; உளவுணர்வாய்-உள்ளத்துணர்வு வடிவாய் ; புருடன் நிகழ்தரும் - புருடதத்துவம் நிலவும் எ -று. உடற் கூறுகளைப் பகுத்து நோக்குமிடத்து உடலின் வேறாய் உணர்வு வடிவாய்ப் புருடனதுண்மை எளிதில் உணரப்படுமாறு பற்றி, "அறிதற் கெளிதாய்" என்றும், குணங்கள் மூலப்பகுதியின் இயைபுடையவாதலின், அதனின் வேறாய புருடனை, "முக்குண மன்றி" என்றும், மூலப்பகுதி அசேதனமும் தான் சேதனமு மாதலின், அதற்கும் தனக்கும் பொதுத் தன்மை ஏதுமின்மை தோன்ற, "பொதுவுமன்றி" யென்றும், தானொன்றிற் றோன்றுவதும் தன்னினொன்று தோன்றுவது மின்றி இருத்தலால், "எப்பொருளுந் தோன்றுதற்கிடமின்றி" யென்றும், உணருந் தன்மைத் தென்பது தோன்ற, "அப்பொருளெல்லா மறிந்திடற்குணர்வாய்" என்றும், அவயவப் பகுப்பில்ல தென்றற்கு, "ஒன்றாய்" என்றும், எங்கும் பரந்து நில்லாவழி உணர்வு செல்லாமையின், "எங்கும் பரந்" தென்றும், உடம்பழியினும் தான் அழியாமையின் "நித்தியமாய்" என்றும், உள்ளத்தோடு கூடாவழிச் செயலறுதலின் "உளவுணர்வாய்" என்றும் புருடனைச் சிறப்பித்துக் கூறினார். இவ்வாறே சாங்கிய காரிகையும் சாங்கிய பிரவசன பாடியமும் விளக்கிக் கூறு கின்றன. இனி, நீலகேசியுடையார், "எத்திறத் தின்னும்செய்யான் குணமொன்றிலன், தத்துவ னின்பனபேதனலேபகன், நித்திய னெங்கு முளனெடுங் காட்சியன், துத்த னுடையனென் றோன்றலு மென்றான்: (736) என்று கூறுகின்றார். இவர் கூறுவனவற்றுள் சில சாங்கியநூற் கருத்துக்கு மாறாகக் கூறப்பட்டுள்ளன; அவற்றின் இயல்பை விரிந்த நூல்களுட் கண்டுகொள்க. 233-240. புலமார் பொருள்கள் இருபத்தைந்துள-புருடனால் அறியப்படும் பொருள்கள் இருபத்தைந்தாகவுள்ளன; நிலம் நீர் தீ வளி ஆகாயமே - நிலமும் நீரும் தீயும் காற்றும் ஆகாயமும் என்ற ஐந்தும்; மெய் வாய் கண் மூக்குச் செவி தாமே-மெய்யும் வாயும் கண்ணும் மூக்கும் செவியுமென்ற ஐந்தும்; உறு சுவை யொளி யூறோசை நாற்றம்மே - மெய் முதலிய பொறிகளிலே பொருந்திய சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்ற ஐந்தும் ; வாக்குப்பாணி பாதம் பாயுரு உபத்தம் - வாக்கும் கையும் காலும் பாயுருவும் உபத்தமும் என்ற ஐந்தும்;ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்-இவற்றை ஆக்குவனவாகிய மனமும் மானும் ஆங்காரமும் மூலப் பகுதியுமாகிய நான்கும்; உயிரெனும் ஆன்மா ஒன்றொடுமாம்-உயிரெனப்படும் புருடனென்ற ஒன்றொடுகூட இருபத்தைந் தாம்; எனச் செயிரறச் செப்பிய திறமும் கேட்டு -என்று குற்றமறச் சொல்லியவற்றைக் கேட்டு; சாங்கிய சமயம், பல்வேறு தத்துவப் பொருள்களை ஆசங்கித்து ஆராய்வதுபற்றி, இப்பெயர் பெறுவதாயிற்றென்பர்; வேறு சிலர் இதனை முதன்முதலாகக் கண்டவர் சங்க ரென்றும் அவர் பெயரால் இந்நெறிக்குச் சாங்கியமெனப் பெயரெய்துவதாயிற் றென்றும் கூறுவர்; ஆயினும் இதனை நிலை நாட்டின முதலாசிரியர் கபிலர் என்பதே பெரு வழக்கு. சாங்கிய பிரவசன சூத்திர மென்னும் நூல் இக் கபிலரால் செய்யப் பட்டதென்ப. இஃதொழிய, ஈசுரகிருஷ்ணரெழுதிய சாங்கிய காரிகையே பெரிதும் பலராலும் மேற்கொள்ளப்பட்டுளது. சாங்கிய பிரவசன சூத்திரம் முதன்மூன்று அதிகாரங்களில் சாங்கியநூற் கருத்துக்களையும், நான்காவதில் திருட்டாந் தங்களையும் ஐந்தாவதில் பரபக்க மறுதலையையும், ஆறாவதாகிய இறுதி யதிகாரத்தில் ஏனையவற்றுட் கூறிய வற்றைத் தொகுத்தும் கூறுகிறது. அம்முறையே இம் மணிமேகலையும் முதற்கண் மூலப்பகுதியையும், பின் அதனோடியைபுடைய தத்துவங்களையும், அவற்றிற்குப் பிறகு புருடனையும் கூறி, முடிவில் அவற்றின் தொகை விரிகளைத் தொகுத்துக்கூறுவது குறிக்கத்தக்கது. சருவதரிசன சங்கிரக முரைத்த மாதவர் இச் சாங்கிய தரிசனத்தைக் கூறுதற்குச் சாங்கிய காரிகையையே பெரிதெடுத்துப் பேசுவதால், சிலர் சாங்கிய பிரவசன சூத்திரம் பதினான்காம் நூற்றாண்டிற்குரியதாகக் கூறுகின்றனர்; சிலர் அவ்வாறு கொள்ளாது, சாங்கிய காரிகைக்கு முற்பட்டதென்றும், மாதவர்காலத்தே பெருவழக்கிலிருந்தது பற்றிக் காரிகையே அவராற் கொள்ளப்பட்ட தென்றும் கூறுவர். மானைப் புத்தி யென்றும் மூலப்பகுதியைச் சித்தமென்றும் கூறுவது சாங்கிய நூல் வழக்காதல்பற்றி, அவ்விரண்டினையும் முறையேபுத்தி யென்றும் சித்தமென்றும் கூறினார்; முன்னரும், "சித்தத்து மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு" (மணி. 27: 206-7) என்பது காண்க. புருடன், உயிர், ஆன்மா என்பன ஒரு பொருட் கிளவி; ஆயினும் உயிரது கேவல நிலை புருடன் என்றும், தத்துவத்தொடர்புற்று நிற்கும் நிலை சீவன் என்றும் சாங்கிய நூல்கள் கூறுகின்றன. ஆன்மா வென்பது உபநிடத வழக்கு. உயிரென்பது தமிழ்வழக்கு. ஈண்டுக்கூறியசாங்கிய நெறிக்குரிய கருத்துக்களெல்லாம், அந்நெறி வழங்கும் நூற்பொருளைத் தெளியக் கொண்டு கூறியன வென்றற்கு, "செயிரறச் செப்பியதிறம்" என்றார். "கேட்டு என்றதனால், அக்கேள்வியால் மணிமேகலை யமையாளாயினமை பெறப்பட்டது. இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வைசேடிகவாதி 241-244. வைசேடிக - ஆங்குப்போந்த வைசேடிகவாதியைக் கண்டு வைசேடிகனே; நின்வழக்குரை என்ன - உன்னுடைய நூல்வழக்கினைக் கூறுக என்று மணிமேகலை கேட்க; பொய்தீர் பொருளும் - கெடாத பொருளென்றும்; குணமும் - குணமென்றும்; கருமம் - தொழிலென்றும்; சாமானியமும்-பொதுவென்றும்; விசேடமும் - சிறப்பென்றும்; கூட்டமும் ஆம் ஆறுகூறாம் - சமவாயமென்றும் பொருள்கள் அறுவகைப் படும் எ - று. பொருளைத் திரவிய மென்றும், பொதுவைச் சாமானிய மென்றும், சிறப்பை விசேடமென்றும், கூட்டத்தைச் சமவாய மென்றும் வைசேடிகர் கூறுவர். பிற்கால வைசேடிகர் இவ்வாற னோடு இன்மை கூறும் அபாவத்தைக் கூட்டிப் பொருள் ஏழென் பாராயினர். இவர்கள் கூட்டத்தை அகக் கூட்டம் புறக்கூட்டமெனப் பகுத்து அவற்றைமுறையே சமவாயமென்றும் சம்யோகமென்றும் கூறுப. இவற்றின் விரிவைப் பதார்த்த தரும சங்கிரகம், சத்த பதார்த்தி முதலிய வடநூல்களுட் காண்க. 244-246. அதிற் பொருள் என்பது-அப்பொருட் கூறுபாட்டில் ஒன்றாகிய பொருளெனப்படுவது; குணமும் தொழிலும் உடைத்தாய்-குணஞ் செயல்களையுடையதாய்; எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் - தொகுதிப் பொருள்வகை யெல்லா வற்றிற்கும் காரணமாம் எ - று. குணஞ்செயல்களின் வேறாய் அவற்றை யவாவி நிற்பதும் எவ்வகைத் தொகுதிப் பொருட்கும் காரணமாய் நிற்பதும் பொருளென்றவாறு. இவற்றின் இயல்பை நித்தியம், அநாசிருதம், அந்தியவிசேடமென மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவது முண்டு. முதலும் சார்புமெனக் கொண்டு, முதற்பொருள் நித்த மெனவும், சார்பெல்லாம் அழிதன்மாலைய வென்றும் கூறுப. சார்பு, அவயவி திரவியம் எனப்படும். 246-251. அப்பொருள் ஒன்பான் - அப்பொருள்கள் ஒன்பது வகைப்படும்; ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் - (அவை) நிலமும் நீரும் தீயும் காற்றும் விண்ணும் திசையும் காலமும் ஆன்மாவும் மனமும் ஆம்; இவற்றுள் -இவ்வொன்பதனுள்; நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில்குண முடைத்து - நிலமென்பது ஓசையும் பரிசமும் நிறமும் சுவையும் மணமு மென்று பொருந்தும் ஐந்து குணங்களையு முடையது; நின்ற நான்கும் - ஏனை நீரும் தீயும் காற்றும் விண்ணுமாகிய நான்கும்; அவை ஒரோ குணம் குறைவுடைய - அவ்வொலி முதலிய குணமைந்தனுள் முறையே ஒவ்வொரு குணம் குறைவாக வுள்ளனவாகும் எ - று. என்றது, நீர், மண மொழிந்த நான்கும், தீ, சுவையொழித்த மூன்றும், காற்று, நிறமொழிந்த இரண்டும், விண், பரிசமொழிந்த ஒன்றுமாகவுடையன என்பதாம். ஈண்டுக் காலம், திசை, ஆன்மா, மனம் என்ற நான்கின் இயல்பு காணப்படவில்லை. ஆன்மாவும் மனமும் ஏனைப் பூதங்களைப் போலத் தொகுதிப்பொருள் என்றும், இவற்றுள் ஆன்மா ஒழிந்த ஏனையெட்டும் சேய்மை யண்மை செயற்படல் முதலிய வியல்பினவென்றும், மனமும் ஆன்மாவும் ஆகாயமும் திசையும் காலமும் அணுகாரிய மென்றும், காரணமாகிய அணுக்கள் எளிதிற் புலப்படுவன வல்லவென்றும், மனம், அணுவடிவிற் றாயினும் தன்னினின்றும் ஒன்றுந் தோன்றுதற் கேதுவாகாதென்றும், ஆகாயம், வியாபியாயினும் ஒலியைத் தன்னின்றும் தோற்றுவிக்குமென்றும் கூறுவர். மேலும், ஆன்மா ஒன்றல்ல பலவென்றும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்பு (விசேடம்) உண்டென்றும், இஃது உணருந்தன்மைத்தாயினும் மனத்தோடும் உடம்போடும் கூடினாலன்றி ஒன்றையு முணர மாட்டதென்றும், ஒவ்வோரான்மாவும் மனத்தோடு கூடியே பல்வகைப் பிறப்புக்களையு மெடுக்குமென்றும், வடக்கு கிழக்கு முதலியவாகக் கூறப்படும் இடவகைக் கேதுவாகியது திசை யென்றும், காலம் நித்தியமென்றும் "அதீதாதி வியவகாரவேது" (தருக் சங். 15) வென்றும்கூறுகின்றனர். 252-256. ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை - ஓசையும் பரிசும் நிறமும் நாற்றமும் சுவையும் என்பனவும்; மாசில் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்மை வடிவம் என்னும் நீர்மை- குற்றமில்லாத பெருமையும் சிறுமையும் வன்மையும் மென்மையும் சீர்மையும் நொய்ம்மையும் வடிவமும் எனப்படும் பண்புகளும்; பக்கம் முதல் அநேகம் - இடம் வலம் என்ற பக்கம் மேன்மை கீழ்மை முன்மை பின்மை முதலிய பலவும்; கண்ணிய பொருளின் குணங்களாகும்-சொல்லப்பட்ட பொருள்களின் குணங்களாகும் எ - று. ஓசை முதலியனவும் பெருமை முதலியனவும் பக்கம் முதலியனவும் குணமென ஒன்றாயடங்குமாயினும், சிற்சில வேறுபாடுடைமை பற்றி, இவற்றைப் பகுத்து "மாசில்" என்றும், "என்னும் நீர்மை" யென்றும் சிறப்பித்துரைத்தார். இனி, குணமாவது, "பிறிதொரு பொருளைப்பற்றி நின்று, தான் பிறிதொரு குணத்தை யேலாது, தன்னையுடைய குணப்பொருட்கு ஏதுவாதலும், அதன் யோக விபாகங்களால் திரிதலுமில்லது," என்று கணாதர் (வை. சூ. வீ. 1.16) கூறுகின்றார். இக்கூறிய குணங்களுள் ஓசையாவது ஆகாயத்தின் குணம். ஊறென்பது நிலம் நீர் காற்று என்ற மூன்றன் குணமாம்; இது உடலின் தோலால் உணரப்படும். நிறமென்பது, நிலம் நீர் ஒளியென்ற மூன்றன் குணமாகும்; இந்நிறம் வெண்மை நீலம் பொன்மை செம்மை பசுமை கபிலம் சித்திரம் என எழுவகைப் படும். நாற்றமாவது, நிலத்தின் குணமாய் மூக்கால் உற்றறியப் படுவதாம் ; இது நறு நாற்றம் தீ நாற்றமென விருவகைத்து. சுவை யென்பது, நிலம் நீர் என்ற இரண்டின் குணமாய் நாவால் உணரப்படுவதாம். குண வகைகளுள் ஓசையொழித்த நான்குடன் "சங்கியை, பரிமாணம், பிரதத்துவம், சம்யோகம், விபாகம், பரத்துவம், அபரத்துவம், புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம், பிரயத்னம்" என்ற பதின்மூன்றையுங் கூட்டிப் பதினேழாக வைசேடிக சூத்திரம் (வீ. 1. 6) கூறுகிறது; பதார்த்த தர்ம சங்கிரகம் என்னும் நூல், அப்பதினேழுடன், "குருத்வம், திரவத்வம், சிநேகம், தருமம், அதருமம், சத்தம், சம்ஸ்காரம்' (பக். 10) என்ற ஏழையுங் கூட்டி இருபத்து நான்காகக் கூறும். இவற்றிற்குப் பிற்போந்த தருக்கசங்கிரக தீபிகை முதலிய நூல்கள் மேற்கூறிய குணங்கட்கு மறுதலையாயவற்றையும் கூட்டியுரைப்பனவாயின. 257-258. பொருளும் குணமும்-பொருளும் குணமும் என்ற இரண்டும்; கருமம் இயற்றற்குரிய-செயல் நிகழ்த்தற்கு உரியவாம் எ - று. கருமமாவது ஒரு குணமும் பற்றாது பொருளின்கட் டங்கி அதன் புணர்வு பிரிவுகளின் காரியமாய் நிகழ்வதாம் (வை. சூ. வீ7) என்றும், ஆகாயமும் காலமும் திசையும் ஆன்மாவும் பொருளெனப் பட்டனவாயினும் அருவமாதலின் கருமர் இயற்றற்குரிய வல்ல (வை. சூ. ஸ். 2. 21) என்றும் கூறுவர். 258-260. முதற் பொதுத்தான் உண்மை தரும் - முதன்மையான பொதுவாவது பொருள்களின் உண்மைத் தன்மையை யுணர்த்துவதாம்; போதலும் நிற்றலும் பொதுக்குண மாதலின் - போவதும் வருவதும் எல்லாப் பொருட்கும் முதன்மையில்லாத பொதுக் குணமாதல்போல; சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்னை இறத்தலும் இருத்தலும் அவ்வப் பொருள் முதன்மையில்லாத பொதுத்தன்மையாம் எ - று. எனவே, பொதுமை முதற்பொது என்றும் பொதுவென்றும் இருதிறப் படுமென்றும், உள்ளதாந்தன்மை எல்லாப் பொருட்கும் முதற் பொதுத் தன்மை யென்றும், சிலவற்றிற்கே போக்குவரவு பொதுவாதல்போல இறத்தலும் இருத்தலும் முதன்மையில்லாத பொதுத் தன்னை யென்றும் கூறியவாறு. முதற்பொதுவினைப் பரசாமானிய மென்றும், பொதுவினை அபரசாமானிய மென்றும் கூறுப. மரங்கட்குள்ள மரமாந் தன்னையும் குடங்கட்குள்ள குடமாந் தன்னையும் அபரசாமானியம்; மரங்கட்கும் குடங்கட்கு முள்ளஉள்ளதாந் தன்மை பரசாமானியம் என வேறுபடுத் தறியப்படும். சத்தபதார்த்தி யென்னும் நூல் மூன்றாகப் பகுத்துப் பரம் அபரம் பராபரம் என்று கூறுகிறது. இது பிற்கால வழக்கு. பரசாமானியத்தில் பொருள்களையும் அபராசாமானி யத்தில் குணஞ் செயல்களையும் அடக்கிக் கூறுவது முண்டு. குணத்துக்குக் குணமில்லாமை போலப் பொதுமைக்குப் பொதுமையில்லை. 261. ஒன்று அணு - விசேடமாவது ஒன்றாகி அணுவாகும் எ - று எனவே, பல பொருட்கும் பொதுவாகிய தன்மையன்றி ஒன்றிற்கே யுள்ள சிறப்புத் தன்மை விசேடமாம் என்பதாம். அணு வொவ்வொன்றும் விசேடமாம் என்றற்கு, "ஒன்றணு" என்றார். "சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்" என்பதனால் அணுவைக் கூறினாரேனும், காலமும் இடமும் ஆகாசமும் ஆன்மாவும் மனமும் விசேடப் பொருளாகவே கொள்ளப்படும். அணுக்கள் அளப்பிலவாதலின், விசேடப் பொருள்களும் அளப்பில என்று சந்தபதார்த்தி யுடையார் கூறுகின்றார். 261-263. கூட்டம்-சமவாயமாவது; குணமும் குணியுமென்று ஒன்றிய-குணமும் குணியுமாய் ஒன்றிய ஒற்றுமையா மென்று, வாதியும் உரைத்தனன் - வைசேடிக வாதியும்கூறி முடித் தானாக; உடனே பூதவாதியை நீ புகல் என்ன - உடனே ஆங்குப் போந்த பூதவாதியைக் கண்டு நின்வாதத்தை நீ சொல்லுக வென்று மணிமேகலை கேட்க எ - று. என்றது, குணத்துக்கும் குணிக்குமுள்ள இயைபே சமவாய மென்பது என்றதாம். கணாதர் காரணத்துக்குங் காரியத்துக்கு முள்ள தற்கிழ மைத் தொடர்பு சமவாயம் என்பர்; அவருக்குப் பிற்போந்த வைசேடிகர் பழத்திற் சுவையும் மணியிலொளியும் போல இடமும் இடத்து நிகழ் பொருளுமாகிய தற்கிழமையியைபு சமவாயம் என்றும் வேறுபிறர் அவர்களை மறுத்தும் கூறுவர். பூதவாதி 264-268. தாதகிப் பூவும் கட்டியும் இட்டு-ஆத்திப் பூவையும் கருப்புக் கட்டியையும் பெய்து, மற்றும் கூட்ட-வேறுபிற பொருள்களையும் கலந்தவழி. மதுக்களி பிறந்தாங்கு-கள்ளினிடத்தே களிப்புண் டானாற்போல, உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்-பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும், அவ்வுணர்வு- அவ்வாறு தோன்றிய உணர்வு தானும், அவ்வப் பூதத்தழிவுகளின்- அவ்வப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து, வெவ்வேறு பிரியும்-வேறு வேறாகப் பிரிந்து, பறைஓசையிற் கெடும் -பறை யிடத்தெழுந்த ஓசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் முதலொடு ஒன்றிவிடும் எ - று. தாதகிப்பூ-ஆத்திப்பூ. கட்டி-கரும்பின் சாறடுகட்டி. நீலகேசியுரை காரர், "மா முதலாகிய வைந்து திரவியத்தின் கூட்டத்தின் மத்திய சக்தி பிறந்தாற்போல" (858 உரை) என்று கூறுகின்றார். மா முதலாகிய ஐந்தனுள், மாவொடு தாதகியும் கட்டியும் பெறப்படுவதால் ஏனை யிரண்டையும் "மற்றும் கூட்ட" என்பதனால் கொண்டார் என்று கொள்க. அவை இரண்டும் இன்னவெனத் தெரிந்தில. தாதகி முதலிய ஐந்தின் கூட்டத்தால் மதுவிடத்தே களிப்புத் தோன்று மென்றது, ஐம்பூதக் கூட்டுறவால் உணர்வு பிறக்குமென்றற்குவமை. அவ்வப் பூதக் கூறுகள் தத்தம் முதலொடு பிரிந்து சென்று கூடிவிடுதலின், "வெவ்வேறு பிரியு" மென்றும், பூதங்களிற் கூடுந் திறத்தைப் "பறை யோசையிற் கெடும்" என்றும் கூறினான். பூதவாதிகட்கு நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐம்பூதமும் உடன்பாடு; இதனை, "திண்ணென் றீநில நீர் வளி காயத்தாற், கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய், வண்ண நாற்றஞ் சுவையுனொ டூறொலி, எண்ணுங்காலை யியைந்துழி யெய்துமே" (நீல. 857) என்று பிறரும் எடுத்தோதிக் காட்டுவர். இனி, உலகாயதர் விசும்பொழிந்த பூதநான்கையுமே கொண்டு அவற்றின் கூட்டுறவால் உடலுணர் வுண்டா மென்றும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் கலந்தவழிச் செந்நிறம் பிறத்தல்போலப் பூதக்கலப்பால் உணர்வு பிறக்கு மென்றும் கூறுப. மதுவி னிடத்தே களிப்புப்பிறக்கு மாற்றினை இவர் கூறியதுபோலச் சாருவாகரும் கூறுகின்றனர். இதனை மாதவர் எழுதிய சருவ தரிசன சங்கிரகத்துச் சாருவாக தரிசனத்துட் காண்க. 259-277. உயிரொடுங் கூட்டிய உணர்வுடைப் பூதமும் - உயிர்த் தோற்றத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட வுணர் வுடைய பூதக்கூறும்; உயிரில்லாத உணர்வில் பூதமும் - உடம்பினாக்கத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத பூதக்கூறு மாகிய, அவை-அப்பூதக் கூறுகள்; அவ்வப்பூதவழி பிறக்கும்-அவ் வப்பூதங்களின் வழியாகவே தோன்றும்; மெய்வகை இதுவே; உண்மைநெறி இதுவே யாகும்; உரை விகற்பமுன் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே-இவற்றின் வேறாகக் கூறப் படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவேயாம்; கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்-காட்சி யளவையல்லது வேறே கருத்து முதலியன நிலை பெறாமையின் கொண்டிலம்; இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே-இவ்வாழ்வும் இவ்வாழ்விற் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிவனவாம்; மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே என்றலும்- மறுபிறப்புண்டென்றும் ஈண்டுச் செய்யப்படும் வினைப் பயனை ஆண்டுச்சென்று நுகர்தல் வேண்டுமென்றும் கூறுவது பொய்யென்றும் பூதவாதி கூறினானாக எ - று. பூதங்களில் உணர்வுடையனவும் இல்லனவுமென இருகூறுள வென்றும், உணர்வுடைய வுயிரும் அஃதில்லாத வுடம்பும் அவ்வப் பூதங்களின் கூட்டத்தால் உண்டாமென்றும் கொள்வதனால் பூதவாதிஉலகாயதரில் வேறுபடுகின்றான். பிற கருத்துள்ளவர் களில் பூதவாதியின் கொள்கை உலகாயதரின் கொள்கையொடு ஒத்ததே என்றற்கு, "வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே" என்றான். உண்மைப் பொருள் என்றது தத்துவத்தை, அச்சொற்கு அதுபொருள். நீலகேசியுடையார் காட்டும் பூதவாதத்தில், ஐந்து பூத முங்கூடி அறிவும் இன்பமும் முதலியவற்றைத் தோற்றுவிக்கும்: (858) என்று கூறப்படுகிறதே யன்றி, பூதக்கூட்டத்தை உணர்வுடைப் பூதம், உணர்வில் பூதமென்று பிரித்து இம்மணிமேகலை கூறும் கூற்றுக்கூறப் படவில்லை. 277-289. எல்லா மார்க்கமும் கேட்டு-இங்ஙனம் கூறிவந்த எல்லாச் சமயங்களையும் மணிமேகலை கேட்டு; நன்று அல ஆயினும்-இவர்கள் கூறுவன அறமல்லவாயினும்; நான் மாறு உரைக் கிலேன் - யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப் பவள்; பிறந்த முற்பிறப்பை எய்தப் பெறுதலின்-பிறந்து கழித்த முற்பிறப்பு நிகழ்ச்சியைத் தான் அறிந்திருத்தலால்; அறிந்தோர் உண்டோ என்று - முற்பிறப்பை அறிந்தவர்கள் உண்டோ என்று பூதவாதிகூறியதை நினைந்து; நக்கிடுதலும் - நகைத்துத் தன் வரலாற்றைக் கூறவும், தெய்வமயக்கினும் - தெய்வ மருளாலும்; கனாவுறு திறத்தினும் - கனாக்காணும் வகையாலும்; மையலுறுவோர் - மயங்குபவர்; மனம் வேறாம் வகை-மனம் திரிந்து உரைப்பது போலும் உரைவகையாகும் உனதுரை யாதலால்; ஐயம் அன்றி இல்லை என்றலும் - இஃது ஐயத்துக்கு இடமாவதல்லது உண்மையாகாது என்றானாக; இந்த ஞாலத்து-இந்த நிலவுலகத்தில்; நின் தந்தைதாயரை-உனக்குத் தந்தையுந் தாயுமாகிய பெற்றோரை; அனுமானத்தாலல்லது எவ்வகை அறிவாய் - அனுமான வளவையா லறிதலையன்றி எவ் வகையால் அறிவாய்; மெய்ப் பொருள்கள் - மெய்ம்மையான பொருள்கள் பலவும்; மெய்யுணர் வின்றி உணர்வரிய - உண்மை யுணர்வுக் கேதுவாகிய அனுமான முதலிய வளவைகளாலன்றி அறிதற்கரியனவாகும்; ஐயம் அலது இது சொல்லப்பெறாய் என காட்சியல்லாத பிற அளவைகளாற் கொள்வன. ஐயத்துக்கிட மாவன வென்றும் காட்சியளவாற் கொள்வதொன்றே தெளிவுப் பொருளென்றும் சொல்லாதேகொள் என்று; உள்வரிக் கோல மோடு தன்னை மறைத்த ஆண்வேடத்தோடே நின்று; உள்ளிய பொருள் உரைத்து - தான் கருதிய பொருளை உரைத்துவிட்டு ஆங்கு-அவ் நகரத்தே; ஐவகைச் சமயமும் அறிந்தனள்-இது காறும் கூறிய இவ்வைகைச் சமயங்களின் பொருள்களையும் கேட்டாள் எ - று. நன்று, அறம்; "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்" (குறள்; 38) என்றாற் போல. "நன்றல வாயினும் நான்மா றுரைக்கிலேன்" என ஈண்டுக்கூறுவதுபோல அறவணவடிகள்பால் கூறுமிடத்து, "ஐவகைச் சமயமும், செவ்வி தன்னையின் சிந்தையின் வைத்திலேன்" (29:43-4) என மணிமேகலை கூறுவது காண்க. முற்பிறப்பின் வரலாற்றை யறிந்துள்ள தான் கண்ணெதிரே நிற்கவும், "அறிந் தோருண்டோ?" வெனப் பூதவாதி கேட்டது மணிமேகலைக்கு நகையை விளைவிப்ப, அதுகண்ட பூதவாதி நகைத்ததற்குக் காரணம் வினவுவதும், மணிமேகலை முற்பிறப் புணர்ந்த செய்தி கூறுவதும் நகை யேதுவாகப் பிறந்த சொல்லாட்டாதலின், சொற் பல்காமைப் பொருட்டு "நக்கிடுதலும்" என்றதனாற் பெற வைத்தார். தெய்வ மயக்கும் கனவும் உண்மையல்லவென்னுங் கருத்தால், "ஐயமன்றியில்லை" யென்றான்; "கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே" என்பதனால் தெய்வ மயக்கும், "கன விற் கண்டது நனவின் எய்துதல், தேவர்க் காயினு மிசைதல் செல்லாது" என்பதனால் கனவுநிலையும் உணரப்படும். மெய்யுணர் வென்பது சத்திய ஞானமென்றும், மெய்ப்பொருளென்பன பாரமார்த்திக தத்துவ மென்றும் கூறுப. மணிமேகலை ஆண் வேடந் தாங்கி நிற்றலின் "உள் வரிக்கோல" மென்றார். "உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவம், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே" (சிலப். 8: 89 அடி. மேற்) என்பது காண்க. அளவை முதல் வேதவாத மீறாகியவற்றை வைதிகவாதமென வொன்றாகவும், ஆசீவகவாதம் நிகண்டவாத மிரண்டையு மொன்றாகவும் ஏனைச் சாங்கியம் வைசேடிகம் பூதவாத மூன்றாகவும் கொண்டு ஐவகைச் சமயமெனத் தொகுத்து "ஐவகைச் சமயமு மறிந்தனள்" என்றார்; இனி உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்ற சமயங்கள் ஆறனுள், பௌத்த மொழிந்த ஏனையைந்தையும், இங்கே கேட்கின்றாளா தலின் "ஐவகைச் சமயமும் அறிந்தன" ளென்றாரென்றுமாம். இவ்வகையில் அளவை வாதமும், சைவவாதமும், வைணவ வாதமும் நையாகிகத்தும், பிரம வாதமும் வேதவாதமும் மீமாஞ்சகத்தும், பூதவாதம் உலகாயதத்தும், அடங்கும். ஆசீவக வாதமும் நிகண்டவாதமும் ஒன்றாய் இவ்வைந்தனுள் அடங்கா வாயினும் வழக்காற்றுச் சிறப்புப்பற்றி ஐவகைச் சமயமெனத் தொகுத்தெடுத் தோதினாரெனக் கோடலுமாம். "ஆற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்" (பெருங். 1. 36. 242) என்று கொங்கு வேளிர் கூறுதல் காண்க. இக்கருத்தே பற்றி, சைனமொழிந்த ஏனைய சமயங்களை, "ஐவகைச் சமயமு மறந்தோற் றனவென" (பெருங் 1. 36. 249) ஐவகைச் சமயமென்று அவர் கூறுதல் ஈண்டுக் குறிக்கத்தக்கது. இக் கூறியவற்றால், மணிமேகலை யாசிரியர் காலத்தே தமிழகத்தில் அறுவகைச் சமயங்கள் இருந்தமை விளங்கும். நாவரசர், ஞானசம்பந்தர் முதலாயினர் காலத்தே விளங்கியிருந்த பாசுபதம், காபாலம் முதலிய சமயங்கள், இம்மணிமேகலை யாசிரியர் காலத்தே இருந்தில. வேதவாதத்தின் வேறாகச் சைவமும் வைணவமும் பிரித்துக் கூறப்படுதல் குறிக்கத் தக்கது. அளவை வாதமும் இப்போது மறைந்தொழிந்தன; ஏனைய வற்றுள் நிகண்டவாதம் மட்டில் சைனசமயமென்ற பெயரால் நிலவுகிறது: பௌத்தம் அதனினும் குறைந்து விட்டதே யன்றி, சீனம், சப்பான், சயாம், பர்மா, இலங்கை முதலிய நாடுகளிற் பரவியுள்ளது. பிற சமயங்கள் இருக்குமிடம் தெரியாது நூலளவாய் ஒடுங்கிவிட்டன. இக்காலத்து நிலவும், சைவம், வைணவம், வேதாந்தம் முதலிய சமயங்களில், இச்சமயங்களில் ஏற்புடைய கருத்துக்களும் கொள்கைகளும் கலந்துகொண்ட தனால் மறைந்தன என்று கொள்ளினு மமையும். மணிமேகலை, உரைமினோ வெனச் சார்ந்து, அளவைவாதியை இயம்பென, என்றவன் தன்னைவிட்டு, சைவவாதி நேர்படுதலும், எப்படித் தென்ன, அவன் உரைத்தனன்; பிரமவாதி என்றனன்; கடல் வணன் புராணம் ஓதினன் உரைத்தனன்; வேதியின் உரையின் விதியும் கேட்டு, யாதினும் இசையாது இவர் உரையென, புராணனை யாதென, அவன் வகையிது என்ன, விட்டு, நிகண்ட வாதியை விளம்பென, விளம்பலுறுவான் என்றனன்; அவன்பின் உரைப்போன் செப்பிய திறமும் கேட்டு, வைசேடிக, உரையென்ன, உரைத்தனன்; உடனே பூதவாதி யைப் புகல் நீ என்ன, என்றலும், கேட்டு, உரைக்கிலேன் என்று, நக்கிடுதலும், என்றலும், என, உரைத்து, அறிந்தனள் எனக்கூட்டி, வினை முடிவு செய்க. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை முற்றிற்று. 28. கச்சிமாநகர் புக்க காதை மணிமேகலை சமயக்கணக்கர் கூறிய திறங்களைக் கேட்ட பின் வஞ்சி நகரை நோக்கினாள். அவட்குத் தன் தாய் மாதவி சுதமதி அறவணவடிகள் ஆகிய இவர்கள் நினைவும் உண்டாயிற்று. உடனே வஞ்சி நகர்க்குட் சென்று அதன் புறஞ்சேரியும், அகழும், அரணும், பல்வகைத் தெருக்களும், மன்றமும், பொதியிலும், சந்தியும் சதுக்கமும், செய்குன்றமும், விரைமரக்காவும் பிறவும் கண்டு மகிழ்வுற்றாள். பின்னர் பௌத்த ஞானிகள் உறையும் தவப்பள்ளியையடைந்து, அங்கே தவமேற் கொண்டிருந்த மாசாத்துவானைக் கண்டு அவன் திருவடியை வணங்கித் தன் வரலாற்றினை முறையே தெரிவித்தாள். அவனும், தான் கோவலனும் கண்ணகியும் இறந்தமை கேட்டுப் புத்ததருமம் மேற்கொண்ட தாகத் தெரிவித்து, ‘கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்குமுன்பிருந்த கோவலனென்பான் இந்நகரின்கண் கட்டுவித்த புத்தசயித்தியத்தைக் கண்டு வழிபட வந்தேன்; வந்தவிடத்து இங்குள்ள முனிவர்கள் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்று அருளினர்; அதனால் யான் இங்கே தங்கினேன்; இனி, அறவணவடிகள் நினக்கு அறங்கூறற் கேற்றவிடம் கச்சிமாநகரென் றெண்ணி அங்கே மாதவியும் சுதமதியும் உடன்வரச் சென்றுள்ளார். மேலும் அக் கச்சிமாநகரும் வறுமையால் வருந்துகிறது; உயிர்கள் பல உணவின்றி இறக்கின்றன; அங்கே நீ சென்று அவற்றைப் பாது காப்பது பேரறம்' என்று இசைத்தான். அதுகேட்ட மணிமேகலையும் வஞ்சிநகரின் மேற்றிசையில் விண் படர்ந்து, வடகிழக்காகக் கச்சிமா நகரடைந்து, அது வறங்கூர்தலால் பொலிவிழந்திருப்பது கண்டு மனமிரங்கினாள். பின்னர், அந்நகர் நடுவே- இளங்கிள்ளி யென்பான் அமைத்திருந்த புத்தசயித்தியத்தை வணங்கி, அதற்குத் தென்மேற்கிலிருந்த பொழிலொன்றை யடைந்தாள். அவள் வரவறிந்த கஞ்சகன்சென்று கச்சிவேந்தற் கறிவிப்ப; அவன் தன் அரசி யற்சுற்றம் உடன்வர வந்து மணிமேகலையின் அறச் செயலைப் பாராட்டி வரவேற்று, தனக்குத் தெய்வமொன்று தோன்றி மணிமேகலையைப் பற்றிக் கூறியதைத் தெரிவித்து, அது தன்னை மணிபல்லவத் துள்ளது போலக் கோமுகிப்பொய்கையும் பொழிலும் பிறவும் சமைக்குமாறு பணித்ததையும், அவ்வாறே தான் செய்தமையும் தெரிவித்து, அவ்விடத்தையும் அவட்குக் காண்பித் தான். மணிமேகலையும் அதனைக் கண்டு வழிபட்டுக் "காணார் கேளார் கால்முட மானார், பேணா மாக்கள் பேசார் பிணித்தோர், படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்" முதலிய பலரையும் வருவித்துத் தன் அமுதசுரபியால் இனிய அமுதுண்பித்தாள். அக்காலை அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையது அறச்சாலை யடைந்தனர். அவரைக் கண்டதும் மணிமேகலை அவர்க்குரிய வழிபாடியற்றி, அறுசுவை நால்வகை உணவு தந்து மகிழ்வித்துத் தன் ஆண்வேடத்தை மாற்றிக்கொண்டாள். இதன்கண் வஞ்சிநகரின் சிறப்பு 3-68 அடிகளிலும், மணிமேகலை மாசாத்துவானைக் கண்டதும் அவன் கூறியதும் 69-162 அடிகளிலும், அவள் கச்சிமாநகரடைந்து வேந்தனையும் அவன் சமைத்திருந்த கோமுகிப் பொய்கையையும் பொழிலையும் கண்டது 163-216 அடிகளிலும், அங்கே மணிமேகலை அறச்சாலை யமைத்து உயிர்களை உண்பித்த திறம் 217-234 அடிகளிலும், பின்பு மணிமேகலை அறவணன் முதலியோரை யடைந்தது 235-243 அடி களிலும், அவள் ஆணுரு நீங்கிப் பெண்ணுருக் கொண்டது 244-245 அடிகளிலும் கூறப்படுகின்றன. ) ஆங்குத் தாயரோ டறவணர்த் தேர்ந்து வாங்குவிற் றானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரு முழிஞைவெம் படையும் போற்புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து 5 சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் தந்தமி லாடிய சாந்துகழி நீரும் புவிகா வலன்றன் புண்ணிய நன்னாட் 10 சிவிறியுங் கொம்புஞ் சிதறுவிரை நீரும் மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கைநறு நீரும் அறஞ்செய் மாக்க ளகின்முதல் புகைத்து நிறைந்த பந்தற் றசும்புவார் நீரும் 15 உறுப்புமுர ணுறாமற் கந்தவுத் தியினால் செறித்தரைப் போர்தஞ் செழுமனை நீரும் என்றிந் நீரே யெங்கும் பாய்தலின் கன்றிய கராமு மிடங்கரு மீன்களும் ஒன்றிய புலவொழி யுடம்பின வாகித் 20 தாமரை குவளை கழுநீ ராம்பல் பூமிசைப் பரந்து பொறிவண் டார்ப்ப இந்திர தனுவென விலங்கக ழுடுத்து வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய கடிமதி லோங்கிய விடைநிலை வரைப்பில் 25 பசுமிளை பரந்து பஃறொழி னிறைந்த வெள்ளிக் குன்ற முள்கிழிந் தன்ன நெடுநிலை தோறு நிலாச்சுதை மலரும் கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக் கடைகாப் பமைந்த காவ லாளர் 30 மிடைகொண் டியங்கும் வியன்மலி மறுகும் பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர் மைந்நிண விலைஞர் பாசவர் வாசலர் என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும் 35 செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொ றச்சரும் மண்ணீட் டாளரும் வரந்தர வெழுதிய வோவிய மாக்களும் தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும் 40 மாலைக் காரருங் காலக் கணிதரும் நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் பாண ரென்றிவர் பல்வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு 45 இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும் வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின் கூத்தியல் பறிந்த கூத்தியர் மறுகும் பால்வே றாக வெண்வகைப் பட்ட கூலங் குவைஇய கூல மறுகும் 50 மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும் போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும் கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும் பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் 55 பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோ ரருந்தொழில் குறையா மறுகும் அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும் எனைப்பெருந் தொழில்செ யேனோர் மறுகும் மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும் 60 புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும் சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும் வேணவா மிகுக்கும் விரைமரக் காவும் விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து 65 நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும் சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும் கோலங் குயின்ற கொள்கை யிடங்களும் கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு அந்தர சாரிக ளமர்ந்தினி துறையும் 70 இந்திர விகார மெனவெழில் பெற்று நவையறு நாத னல்லறம் பகர்வோர் உறையும் பள்ளிபுக் கிறைவளை நல்லாள் கோவலன் றாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்துதன் பாத்திர தானமும் 75 தானப் பாயத்தாற் சாவக மன்னவன் ஊனமொன் றின்றி யுலகாள் செல்வமும் செல்வற் கொணர்ந்தத் தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை யுணர்ந்ததும் உணர்ந்தோன் முன்ன ருயர்தெய்வந் தோன்றி 80 மனங்கவல் கெடுத்தது மாநகர் கடல்கொள அறவண வடிகளுந் தாயரு மாங்குவிட்டு இறவா திப்பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் றன்னா டெய்தத் தீவகம் விட்டித் திருநகர் புகுந்ததும் 85 புக்கபி னந்தப் பொய்யுரு வுடனே தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் அவ்வவர் சமயத் தறிபொரு ளெல்லாம் செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும் நாத னல்லறங் கேட்டலை விரும்பி 90 மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும் சொல்லின ளாதலிற் றூயோய் நின்னையென் நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுவெனத் தையல் கேணின் றாதையுந் தாயும் செய்ததீ வினையிற் செழுநகர் கேடுறத் 95 துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து தினைத்தனை யாயினுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா வென்றே நிலைபெற வுணர்ந்தே 100 மலையா வறத்தின் மாதவம் புரிந்தேன் புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர்ச் சேர்ந்தது கேளாய் குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள் 105 துப்படு செவ்வாய்த் துடியிடை யாரொடும் இப்பொழில் புகுந்தாங் கிருந்த வெல்லையுள் இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும் சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் 110 கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின் புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி முற்றவ முடைமையின் முனிகளை யேத்திப் 115 பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்கவர்க் கறுசுவை நால்வகை யமிழ்தம் பாத்திரத் தளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவை யாரொடு மேத்தின னிறைஞ்சலில் பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும் 120 அறத்தகை முதல்வ னருளிய வாய்மை இன்ப வாரமு திறைவன் செவிமுதல் துன்ப நீங்கச் சொரியு மந்நாள் நின்பெருந் தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு 125 நீங்காக் காதற் பாங்க னாதலின் தாங்கா நல்லறந் தானுங் கேட்டு முன்னோர் முறைமையிற் படைத்ததை யன்றித் தன்னா னியன்ற தனம்பல கோடி எழுநா ளெல்லையு னிரவலர்க் கீத்துத் 130 தொழுதவம் புரிந்தோன் சுகதற் கியற்றிய வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம் ஈனோர்க் கெல்லா மிடர்கெட வியன்றது கண்டுதொழு தேத்துங் காதலின் வந்தித் தண்டாக் காட்சி தவத்தோ ரருளிக் 135 காவிரிப் பட்டினங் கடல்கொளு மென்றவத் தூவுரை கேட்டுத் துணிந்திவ ணிருந்தது இன்னுங் கேளாய் நன்னெறி மாதே தீவினை யுருப்பச் சென்றநின் றாதையும் தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால் 140 ஆங்கத் தீவினை யின்னுந் துய்த்துப் பூங்கொடி முன்னவன் போதியி னல்லறந் தாங்கிய தவத்தாற் றான்றவந் தாங்கிக் காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாத னல்லறங் கேட்டுவீ டெய்துமென்று 145 அற்புதக் கிளவி யறிந்தோர் கூறச் சொற்பய னுணர்ந்தேன் றோகை யானும் அந்நா ளாங்கவ னறனெறி கேட்குவன் நின்னது, தன்மையந் நெடுநிலைக் கந்திற் றுன்னிய துவதிக னுரையிற் றுணிந்தனை யன்றோ 150 தவநெறி யறவணன் சாற்றக் கேட்டனன் ஆங்கவன் தானுநின் னறத்திற் கேதுப் பூங்கொடி கச்சி மாநக ராதலின் மற்றம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரு மப்பதிப் படர்ந்தனர் 155 அன்னதை யன்றியு மணியிழை கேளாய் பொன்னெயிற் காஞ்சி நாடுகவி னழிந்து மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலின் அந்நகர் மாதவர்க் கைய மிடுவோர் இன்மையி னிந்நக ரெய்தினர் காணாய் 160 ஆருயிர் மருந்தே யந்நாட் டகவயின் காரெனத் தோன்றிக் காத்தனின் கடனென அருந்தவ னருள வாயிழை வணங்கித் திருந்திய பாத்திரஞ் செங்கையி னேந்திக் கொடிமதின் மூதூர்க் குடக்கணின் றோங்கி 165 வடதிசை மருங்கின் வானத் தியங்கித் தேவர் கோமான் காவன் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது கண்டுளங் கசிந்த வொண்டொடி நங்கை 170 பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு நடுநக ரெல்லை நண்ணின ளிழிந்து தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய 175 சேதியந் தொழுது தென்மேற் காகத் தாதணி பூம்பொழி றான்சென் றெய்தலும் வையங் காவலன் றன்பாற் சென்று கைதொழு திறைஞ்சிக் கஞ்சுக னுரைப்போன் கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் 180 நாவலந் தீவிற் றானனி மிக்கோள் அங்கையி னேந்திய வமுத சுரபியொடு தங்கா திப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் மாமழை போலென மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக் 185 கந்திற் பாவை கட்டுரை யெல்லாம் வாயா கின்றன வந்தித் தேத்தி ஆய்வளை நல்லா டன்னுழைச் சென்று செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ 190 நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம் அலத்தற் காலை யாகிய தறியேன் மயங்குவேன் முன்னரோர் மாதெய்வந் தோன்றி உயங்கா தொழிநின் னுயர்தவத் தாலோர் காரிகை தோன்று மவள்பெருங் கடிஞையின் 195 ஆருயிர் மருந்தா லகனில முய்யும் ஆங்கவ னருளா லமரர்கோ னேவலின் தாங்கா மாரியுந் தானனி பொழியும் அன்னா ளிந்த வகநகர் புகுந்த பின்னா ணிகழும் பேரறம் பலவால் 200 கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது பாரக விதியிற் பண்டையோ ரிழைத்த கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சியொடு மாமணி பல்லவம் வந்த தீங்கெனப் பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத் 205 தெய்வதம் போயபிற் செய்தியா மமைத்தது இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத் தீவகம் போன்ற காவகம் பொருந்திக் கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள் பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டிய 210 அங்கப் பீடிகை யிதுவென வறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத் தீவ திலகையுந் திருமணி மேகலா மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு ஒத்த கோயி லுளத்தகப் புனைந்து 215 விழவுஞ் சிறப்பும் வேந்த னியற்றத் தொழுதகை மாதர் தொழுதன ளேத்திப் பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும் அங்கையி னேந்திய வமுத சுரபியை வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப் 220 பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின் மொய்த்த மூவறு பாடை மாக்களில் காணார் கேளார் கான்முட மானோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர் 225 மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூ றாயிரம் விலங்கின் றொகுதியும் மன்னுயி ரடங்கலும் வந்தொருங் கீண்டி அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப் பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் 230 நீரு நிலமுங் காலமுங் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப்ப வசித்தொழி லுதவி வளந்தந் ததுவெனப் பசிப்பிணி தீர்த்த பாவையை யேத்திச் 235 செல்லுங் காலைத் தாயர் தம்முடன் அல்லவை கடிந்த வறவண வடிகளும் மல்லன் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச் சாலை நண்ணினர் சேறலும் சென்றவர் தம்மைத் திருவடி வணங்கி 240 நன்றென விரும்பி நல்லடி கழுவி ஆசனத் தேற்றி யறுசுவை நால்வகைப் போனக மேந்திப் பொழுதினிற் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து வாய்வ தாகவென் மனப்பாட் டறமென 245 மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென். உரை 1-4. ஆங்குத் தாயரொடு அறவணர்த் தேர்ந்து - வஞ்சி நகரத்தின் கண் மாதவி சுதமதியுடன் அறவணவடிகளையும் காண நினைந்து, வாங்கு வில்தானை வானவன் வஞ்சியின் - வளைந்த வில்லேந்திய படையினையுடைய சேரனது வஞ்சி நகரத்தில், வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போற் புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து - பகை மன்னரும் புறமதிலைக் காக்கும் கொடிய படையினரும் போல அரணைச் சுற்றிலு முள்ள புற நகரத்தைக் கடந்து; வஞ்சி நகர்ப்புறத்தே பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு அவர் திறம் கேட்டுப் போந்த மணிமேகலை தன் தாயரையும் அறவணனையும் நினைந்து புறஞ்சேரி கடந்து, அந்நகர்க்குட் செல்கின்றாளாதலின், "வஞ்சியின் புறக்குடி கடந்து" என்றார். மாதவியோடு சுதமதியையும் உளப்படுத்தி யுரைத்தலின், "தாயர்" என்றார். புறக்குடி, புறநகர். மன்னவ குமரரிருக்கையும் தானைவீரர் இருக்கையும் அரணைச் சூழ்ந்திருத்தலின், "வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல" என்றார். 5-22. சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும்-இல்லங்களிற் சிந்துகின்ற நீரானது செல்லுமாறு கற்களான் மறைத்தமைக்கப்பட்ட சாக்கடை களின் வழியாக மாடங்களிலுள்ள மகளிர் கரிய கூந்தலை யாட்டிய நறுமணக் கலவையினையுடைய நீரும், எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்து கழி நீரும் - வேண்டுங்காற் பெருக்கியும் வேண்டாக்காற் குறைத்தும் தரவல்ல இயந்திரங்கள் அமைந்த பொய்கைகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவரணிந்த சாந்து கழுவுற்றுக் கலந்தோடும் நீரும், புவி காவலன்தன் புண்ணிய நன்னாள் சிவிறியுங் கொம்பும் சிதறு விரை நீரும்-மன்னவன் பிறந்த நன்னாளில் சிவிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேலொருவர் வீசிகின்ற நறுமண நீரும், மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கை நறுநீரும் - மேன்மை பொருந்திய முனிவர் தம் திருவடிகளை ஐவகைச் சீலங்களையுமுடைய உபாசகர்கள் தங்கள் சிவந்த கைகளால் விளக்கும் நன்னீரும், அறஞ்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும்- இல்லறம் புரியும் மாந்தர்கள் அமைத்த அகில் முதலியவற்றைப் புகைத்தலா லெழுந்த நறும்புகை கமழும் தண்ணீர்ப் பந்தர்களில் குடங்களி லிருந்து ஊற்றுகின்ற நீரும், உறுப்பு முரண் உறாமல் கந்தவுத்தி யினாற் செறித்தரைப்போர் தஞ்செழுமனை நீரும்-ஊறப் படும் உறுப்புக்கள் மாறுபடாமல் விரைக் கலவைக்குரிய முறைப்படியே சேர்த்து அரைப்பவருடைய வளம் மிக்க மனைகளின் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்ற இவ்வகைப்பட்ட நீரே யாண்டும் பாய்தலினால், கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பின வாகி-பகைமையிற் றழும்பிய கராம் இடங்கர் என்ற முதலை யினங்களும் மீன்களும் தம்மீது பொருந்திய புலால் நாற்றம் நீங்கிய உடலினையுடையவாகி, பொறிவண்டார்ப்ப தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூ மிசைப் பரந்து - பொறிகளை யுடைய வண்டினங்கள் தேனுண்டாரவாரிக்க, தாமரை குவளை கழுநீர் ஆம்பல் முதலிய பூக்கள் நீர் மேலே பரவப் பெற்று, இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து - வான வில்லைப்போல விளங்குகின்ற அகழியாற் சூழப்பட்டு ; நெய் விரவிய கூந்தலைப் பசை நீங்கக் கலவை தேய்த்தலைத் தலால் மகளிராடிய நீரை, "கருங்குழல் கழீஇய கலவை நீர்" என்றார். எந்திர வாவி, எந்திரத்தால் நீரைப் பெருக்குதலும் குறைத்தலுமுடைய வாவி. பூசிய சாந்தம் நீராட்டில் கழுவப் படுவதுபற்றி, கழுவிய நீர் "சாந்து கழி நீர்" எனப்பட்டது. நாட்டு மன்னனது பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கு ‘வெள்ளணி' யென்றும் 'நாண்மங்கல' மென்றும் வழங்கும். உபாசகர், ஐவகைச் சீலத்தை மேற்கொண்டு அறம்புரிவோர். இல்லறத் தாராயினும், சீலமும் தானமும் சிறந்து தோன்ற அறம் புரிவதுபற்றி, உபாசகர் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். மேலை, மேன்மை; ஐ: பண்புப் பொருண்மை குறித்து நின்றது; சாரியையுமாம். உறுப்புக்களாவன, "நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ டாறு" (சிலப். 514) என அடியார்க்கு நல்லார் காட்டுமாற்றாலறிக கந்தவுத்தி, விரைப் பொருளைத் தக்காங்குக் கலந்து செய்யும் முறை. ஈண்டுக் கூறிய நீர்வகை பலவும் சுருங்கை வழியே சென்று, கிடங்கிற்குள் வீழ்தல் தோன்றச் "சுருங்கைத்தூம்" பென முதற்கண் நிறுத்திக் கூறினார். கராம், இடங்கர் என்பன முதலை வகை. தாமரை முதலிய பூக்கள் நீர்ப்பரப்பின் மேலே மலர்ந்து நிற்பனவாதலால், "மிசைப் பரந்து" என்றார். பல்வகை வண்ணங்கொண்டு விளங்கலின், இந்திர வில்லை யுவமம் கூறினார். 23-28. வந்தெறி பொறிகள் வகை மாண்புடைய-பகைவர் முற்றிய பொழுதில் முன் வந்து பகையெறியுந் தன்மையுடைய இயந்திரங்களின் வகையால் மாட்சிமையுடைய, ஓங்கிய கடிமதில் இடைநிலை வரைப்பில்-உயர்ந்த காவலையுடைய மதிலின் இடையேயுள்ள நில வெல்லையில், பசுமிளை பரந்து - பசிய காவற்காடு பரவப்பெற்று ; பல்தொழில் நிறைந்த-பலவகைத் தொழிலும் நிரம்பிய, வெள்ளிக் குன்றம் உள்கிழிந்தன்ன நெடு நிலைதோறும் நிலாச்சுதை மலரும் - வெள்ளி மலையை நடுவே பிளந்தாற்போல உயரிய நிலைகள்தோறும் நிலவினைப் போல வெள்ளிய சுதை விளங்கும்; கொடிமிடை வாயில் குறுகினள் புக்கு-கொடிகள் செறிந்த வாயிலை அடைந்து புகுந்து; எந்திரவகைகளாவன: நூற்றுவரைக் கொல்லி, அரிநூல் பொறி விற்பொறி, கொக்குப்பொறி, கூகைப்பொறி முதலியன. இவற்றின் வகையைச் சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. ஓங்கிய கடிமதில் என மாறுக. பஃறொழில் நிறைந்த நெடுநிலை, வெள்ளிக் குன்றம் கிழிந்தன்ன நெடுநிலை யென வியையும். மலர்தல், ஈண்டு விளக்கங் குறித்து நின்றது. மிடைதல், செறிதல். குறுகினள் : முற்றெச்சம். 29-34. கடைகாப்பு அமைந்த காவலர் மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும் - வாயில் காத்தற்கு அமைந்த காவலாளர்கள் நெருங்கி யிருக்கும் அகன்ற பெரிய வீதியும், பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும், மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் - இறைச்சி விற்போரும் வெற்றிலை விற்போரும் பஞ்சவாசம் விற்போரும் என்ற இவர்களையுடைய வீதியும் ; பெருஞ் செல்வருடைய பெருமனைகளில் கடையில் காவல் புரியும் வாயிலாளர்களைக் "காவலாளர்" என்றார். மக்களின் போக்குவரவு மிகுதி தோன்ற, "மிடைகொண்டு" என்றார். மிடைந்து அகன்ற தெருவாதலின், "வியன்மலி மறுகு" எனப் பட்டது. பல்வேறு வகையான மீன்களை விற்போர் பலராதல் தோன்றப் பன்மீன் வினைஞர் என்றார். வெள்ளுப்பு என்புழி வெண்மை இயல்பாய பண்பு குறித்தது. நொடையாட்டியர் - விலைக்கு விற்பவர்; "கள்ளோர் களிநொடை நவில" (மதுரை 662) என்றார் பிறரும். காழியர் - பிட்டு வாணிகர். கூவியர்- அப்ப வாணிகர். மைந்நிண விலைஞர் - இறைச்சி விற்போர். ஈண்டுக் கூறப்படும் வணிகர் வகையை, அடிகளும், "காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர், மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர், பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோ, டோசுநர் செறிந்த 'd2வூண்மலி யிருக்கை" (சிலப். 5. 27-4) என்பது காண்க. 34-43. இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்- குயவரும் செப்புக் கலஞ் செய்வோரும், வெண்கலக் கன்னாரும், பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் - பொற்பணி செய்வோரும் பொன்னை உருக்குந் தட்டாரும், மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்-மரத்தை வெட்டுந் தச்சரும், சுதை முதலியன கொண்டு பாவை முதலியன செய்யும் சிற்ப வினைஞரும், வரந்தர எழுதிய ஓவிய மாக்களும் வரந்தருதற்குரிய கடவுள ருருவங்களையும் எழுதவல்ல சித்திரகாரரும், தோலின் துன்னரும் துன்னவினைஞரும்-தோற்பதனிட்டு உறை முதலியன செய்யும் பாணரும் தையல் வேலை செய்யும் செம்மாரும், மாலைக்காரரும் காலக் கணிதரும் - மாலை தொடுப்போரும் சோதிட நூலோரும், நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப - சிறப்புடைய பண்ணும் திறமும் வாய்க்குமாறு, நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர்-மூவகையிடமும் கருவியும் மிடறும் ஒப்பக் காட்டும் திறனுடைய பாணரும், என்றிவர் பல்வகை மறுகும் - என்ற இவர்களுடைய பலதிறப்பட்ட வீதியும்; கோவேளென்பது பிற்காலத்தே வேட்கோவரென வழங்குவ தாயிற்று; ''வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்'' (பெரியபு, நீலக்கண். 1) என்பது காண்க. செய்ஞ்ஞர் என்புழி ஞகரம் பெயரிடைநிலை; அறிஞர் என்புழிப் போல. செம்பினாற் குட முதலியன செய்வோரைச் ''செம்பு செய்ஞ்ஞ'' ரென்றார். மரங்கொல் தச்சர், மரம் வெட்டிப் பலகை வாரை முதலிய செய்யும் தச்சர். மண்ணீட்டாளர், சுதை வேலை செய்யும் கொல்லர். வரந்தரவெழுதிய வோவியம், தெய்வப் படிமம். ஓவிய மாக்கள் சித்திரச் சிற்பிகள். நிலமாவன, வலிவு, மெலிவு, சமம் என்ற மூன்று. கலம், யாழ் முதலிய இசைக்கருவிகள். கண்டம், மிடற்றாற்பாடல். பண், நூற்று மூன்றாகக் காட்டப்படும் பண்கள். திறம், பண்ணுக்கு இன்றியமையாதன வெனக் கூறப்படும் இருபத்தொரு வகைத் திறங்கள். ''குழலினும் யாழினும் குரல் முதலேழும், வழுவின் றிசைந்து வழித்திறங் காட்டும், அரும்பெறன் மரபின் பெரும்பா ணிருக்கை'' (சிலப். 5. 35-7.) என்பதனால் பண்ணுந் திறமும் வாய்க்குமாறும், ''யாழுங் குழலு மேங்கிய மிடறும் இசைவன கேட்ப'' (சிலப். 3.50-1.) என்பதனால் கருவிப் பாடலும் கண்டப் பாடலும் பாடப்படுமாறும் காண்க. 44-47. விலங்கு அரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞர் இரீ இய மறுகும் - வாளரத் தினைக் கொண்டு வெள்ளிய சங்குகளை அறுப்போருடன் விளங்குகின்ற முத்துக்களைக் கோப்போர் இருக்கின்ற தெருவும், வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் - அரசர்க்காடும் கூத்து ஏனோர்க்காடுங் கூத்து என்னும் இருவகையின் இயல்பினையும் அறிந்த நாடக மகளிர் தெருவும்; அரத்தின் தொழில் பொருள்களைக் குறுக்கிட்டறுப்ப தாதலால், “விலங்கரம்'' எனச் சிறப்பித்தார். வளைபோழ்வது வேளாப்பார்ப் பனர்க்கும் தொழிலெனப் பண்டை நூல்கள் கூறுகின்றன: “வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை'' (அகம். 24) என்பதும், “வேளாப் பார்ப்பான் - யாகம் பண்ணாத பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்'' எனவரும் அதன் பழையவுரையும் காண்க. இருக்கையை யுடைய மறுகு, ''இரீ இய மறு'' காயிற்று. கூத்தியல்பு வேத்தியலும் பொதுவியலு மென விரண்டாதலை, முன்னரும் ''வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக் கூத்து'' (மணி 2, 18-9) என்று கூறியிருத்தல் காண்க. கூத்தியர், கூத்தாடும் மகளிர். 48-53. எண்வகைப்பட்ட கூலம் பால்வேறாகக் குவைஇய கூல மறுகும் எண்வகையினையுடைய கூலங்கள் வேறுவேறு பகுதி யாகக் குவிக்கப்பெற்ற தானியக் கடைத்தெருவும், மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-அரசனிடம் நின்றேத்துவோர் இருந்தேத்து வோர் நாழிகை யிசைக்கும் வேதாளிகர் என்போர் வீதியும், போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-இன்பத்தினை விற்கும் பொதுமகளிர் நிறைந்த வீதியும், கண்ணுழைகல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும் - கண்களாற் காண்டற்கும் அரிதாகிய நுண்ணிய நூலினால் கைத்தொழின் மிக்குப் பலநிறங்களுடன் பொருந்திய ஆடைநெய்வோரின்வளப்ப மிக்க தெருவும்; கூலம் பால் வேறாகக் குவைஇய மறுகு என இயைக்க எண்வகைக் கூலமாவன "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரை யொடு கழைவிளை நெல்லே'' (சிலப். 5. 23. அடி. மேற்) இவை தனித்தனியே பகுத்துத் தொகுக்கப் பட்டிருப்பது தோன்ற, “பால்வேறாகக் குவைஇய'' என்றார். இருந்தேத்தல் முதலியவற்றைச் செய்யும் மாகதர் மூவரையும், “சூதர் மாகதர் வேதா ளிகரொடு'' (சிலப். 5 48.) என்று பிறரும் கூறுப. போக வேட்கை மிக்குவரும் ஆடவர்க்கு அதனை நல்கி, அவர் வரம்பிகவாமைக் காத்தலின், “போகம் புரக்கும் பொதுவர்'' எனப் பொதுமகளிரைக் கூறினார். நோக்கு நுழைய மாட்டாத கைவினையும் நுண்ணூலும் பல்வகை, வண்ணமுமுடைய உடையென்பதாம்; ''நோக்கு நுழைகல்லா நுண்மைய'' (பொருந. 82.) என்று பிறரும் கூறுப. வளம், ஈண்டுப் பொன்னின்மேற்று, 54-59. பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் - பொன்னைக் கட்டளையில் உரைத்து ஓட்டங் கண்டு மாற்றினை அறுதியிடும் வண்ணக்கர் வாழும் நல்ல மாடங்களையுடைய வீதியும், பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் - மாணிக்க முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் நிலைபெற்ற வீதியும், மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் - மறைய வருடைய முத்தீயோம்பல் முதலிய தொழில் குறைவுபடாத அந்தணர் வீதியும், அரசியன் மறுகும் அமைச்சியன் மறுகும் - அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும், ஏனைப் பெருந் தொழில் செய்யும் ஏனோர் மறுகும் - ஏனைய பெரிய தொழில்களைச் செய்யும் சேனைத் தலைவர் முதலிய ஏனையர் வீதியும், மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் - ஊர்நடுவாய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்தியும் நாற் சந்தியும்; பொன்னுரை காணும் வண்ணக்கரும் மாணிக்கம் முதலிய விற்கும் மணிவாணிகரும் பெருஞ் செல்வராதலின், அவருறையும் வீதிகளை ஏனை அந்தணர் அரசர் அமைச்சர் முதலாயினர் வீதிகளைச்சேரக்கூறினார். தீயோம்பல் மறையோதல் முதலியன உயர்ந்தனவாகக் கருதப்பட்டமை தோன்ற, "அருந்தொழில்" என்றார். தானைத் தலைமையும், அரசியற் பணியும், நாட்டுக்கு அரணாகும் பிறசெயல்களும் புரவோர் தொழில்களைப் "பெருந் தொழில்" என்றார். மன்றம் முதலிய இடங்கள் சான்றோர் இருந்து அறங் கூறுவதற்கும் கடவுள் வழிபாடு செய்வதற்கும் உரிய வாதலின், இவற்றைப் பிரித்துக் கூறினார். 'சதுக்கமும் சந்தியும் புதுப்பூக் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" (முருகு. 225-6.) முருகனை வழிபடும் திறம் சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க. 60-68. புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்-புதிதாகக் கொணர்ந்த யானைகளையும் பொன்னாலாய கிண்கிணி மாலை களையுடைய குதிரைகளையும் நடையில் மேம்பாடுறப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைவாதுவரும் உறையும் அழகுமிக்க வீதியும், சேண் ஓங்கு தாழ்ந்த அருவி செய் குன்றமும் - மிக்க உயரத்திலிருந்து தாழ வீழுமாறமைந்த நீரருவி பொருந்திய கட்டு மலைகளும், வேணவா மிகுக்கும் விரைமரக்காவும் - மிக்க ஆர்வத்தை மேன்மேற் றூண்டும் நறுமணச் சோலையும், விண்ணவர் தங்கள் விசும்பிடம்மறந்து- தேவர்கள் தம்முடைய விண்ணுலகத்தையும் மறந்து, நண்ணுதற் கொத்த நன்னீரிடங் களும் - அடைதற்கு ஏற்புடைய நல்ல நீரினையுடைய பொய்கை களும், சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்-அறச்சாலை களும் பேரகங்களும் பொன்னாலமைந்த அம் பலமும், கொள்கை கோலம் குயின்ற இடங்களும் கண்டு மகிழ்வுற்று - நிதானவகைகளை உருப்படுத்தி ஓவியத்தால் அழகுறுத்தப் பட்ட தவச் சாலைகளும் ஆகிய அனைத்தையும் கண்டு உளம் மகிழ்ச்சியுற்று; குதிரையின் செலவு முதலிய சிறப்பியல்களைக் கூறாது, "பெற்றாரை" விதந்தோதியது, புதிது கொணரப் பெற்றுப் பயிற்சி செய்யப் படாமையுணர்ந்து நின்றது. கதி, செலவு, வடித்தல், குற்றம், போக்கி நற்செலவிற் பயிற்றுதல். திருத்தப்படாத சொல்லை, "வடியாக் கிளவி" (சிலப்பதிகாரம்-புறஞ்சேரி இறுத்த காதை, வரி 88) என்று சான்றோர் வழங்குமாறு காண்க. இயற்கை மலைபோல உயரமாகச் சமைத்து அதன் முடியிலிருந்து விழுமாறு அருவிகள் அமைத்த செய்குன்றங்கள் பண்டை நாளில் செல்வமிக்க நகரங் களில் இருந்தன வெனவறிக. உரோம் நாட்டு வரலாறுகளிலும் இத்தகைய செய்குன்றுகளும் செயற்கைச் சோலைகளும் குறிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை உலகின் அற்புதங்களாகவும் குறிக்கின்றனர். துறவியருள்ளத்திலும் இன்ப விழைவு பயக்கும் நலம் பொருந்திய சோலைகள் என்றற்கு, "வேணவா மிகுக்கும் விரைமரக்கா" என்றார். வேட்கை அவா - வேணவா என முடிந்தது. "வேணவாத் தீர்த்த விளக்கே" (பதிகம் 18.) என முன்பும் கூறினர். நீர் நிலைகளில் தெய்வமுறையு மென்பதுபற்றி, "விண்ணவர் "நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்கள்" என்றார். "அணங்குடைப் பனித்துறை" (ஐங். 174) எனப் பிறரும் கூறுப. பல மக்களும் ஒருங்கு கூடி இனிதிருக்கும் பேரகத்தைக் கூடமென்றார். பௌத்த முனிவர் இருந்து தவம் புரியுமிடங்களில் பௌத்த நூல்கள் கூறும் நிதானங்கள் ஒவ்வொன்றுக்கும் உருவங் கோலி ஓவியமெழுதி வைப்பது மரபு; இதனை அஜந்தா குகைகளில் குறித்திருப்பது காண்க. கொள்கை - நிதானம் பன்னிரண்டு. இத்தகைய வீதிகளையும் இடங்களையும் காண்போர் எப்பெற்றியராயினும் மகிழ்ச்சி கோடல் ஒருதலை யாதலின், "கண்டு மகிழ்வுற்" றென்றார். 68-74. இறைவளை நல்லாள்-முன் கையில் வளையினையுடைய மணிமேகலை, கொண்ட வேடமொடு-தான்கொண்ட மாதவன் வடிவத்துடன், அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் - விசும்பின் வழியாகச் செல்வோர் இனிதாகத் தங்குகின்ற, இந்திர விகாரம் என எழில் பெற்று - இந்திர விகாரத்தைப் போலும் அழகு கொண்டு, நவையறு நாதன் நல்லறம் பகர்வோர் உறையும் - குற்ற மற்ற புத்தனது அருளறத்தைக் கூறுவோராகிய துறவியர் இருக்கும், பள்ளிபுக்கு - தவப் பள்ளியை யடைந்து, கோவலன் தாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து - கோவலற்குத் தந்தையும் அவற்குற்றது கேட்டுத் துறவு பூண்டு தவம் புரிவோனுமாகிய மாசாத்து வானைக் கண்டு அவன் அடிகளை வணங்கி; கோவலன் தாதையும் கச்சிவேந்தனும் மணிமேகலையின் உண்மையுரு வுணர்ந் துறையாடுப வாயினும் பிறரெல்லாம் மாதவனென்றே கொள்ளுமாறு மணிமேகலை மாதவன் வேடத் தோடே யிருத்தலின், "கொண்டவேடமொடு" என வற்புறுத்தினார். இவ்வேடம் கச்சிமாநகர்க்கண் அறவணனைக் கண்டு அமுதூட்டிய பின்பே நீங்குகிறதென வறிக. இந்திரவிகாரம், இந்திரனால் மனத்தாற் சமைக்கப்பட்ட அரங்கு. இதன் கண்ணிருந்து வேதசாரணர் அறம் பகர்வர் என்ப. இந்திரவிகார மென எழில் பெற்றுறையும் பள்ளி, அறம் பகர்வோர் உறையும் பள்ளியென வியையும்: மாசாத்துவான் துறவு பூண்ட செய்தி பின்னர் அவனாலேயே கூறப்படுகிறது. 74-80. தன் பாத்திரதானமும் - தன் கையிலுள்ள அமுத சுரபியால் செய்யப்படும் பெருஞ் சோற்றறமும், தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகாள் செல்வமும் - அவ்வாறு சோறளித்த புண்ணியப் பயனால் ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும் புண்ணிய ராசன் குறைவொன்றும் இல்லாமல் அரசளிக்கும் பேறு பெற்றதும், செல்வற் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும்-அவ்வரசனை அழைத்துப்போய் மணிபல்லவத்தின்கண்ணுள்ள அப்பீடிகை விளங்கக் காண்பிக்க அவனைத் தன் முற் பிறப்பினை உணர்வித்ததும், உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் கெடுத்ததும்-பண்டைப் பிறப்புணர்ந்த சாவக மன்னன் முன்னே தீவதிலகை என்னும் உயரிய தெய்வம் வெளிப்பட்டு அவனது மனக்கவற்சியை ஒழித்ததும்; தன் கையிலுள்ள அமுதசுரபியை மாசாத்துவான் வியந்து நோக்கினானாக; அவற்கு முதற்கண் அதன் சிறப்புக் கூறினாளாதலாலும், இந்நூலாசிரியர், அதனைப் பின்னர், (வரி. 217-32) விரியக் கூறுகின்றா ராதலாலும், ஈண்டுப் "பாத்திரதானம்" என்றொழிந்தார். இவ்வறத்தால் விளையும் பயன் இது வென்றற்கு ஆபுத்திரன் சாவக வேந்தனான வரலாற்றைக் கூறுமாற்றால் "உலகாள் செல்வம்" என்றார். வேந்தனாகியும் அவ்வறப்பயனே நுகர்ந்தமை தோன்ற, அவனை, "செல்வன்" என்றார். தீவகம், மணிபல்லவம். ஒல்கல், சுருங்கல். ஆண்டுள்ள புத்தபீடிகை அவன் வரலாற்றை விரியக் கூறினமையின், "ஒல்காது காட்ட" என்றார். உணர்ந்தது: பிறவினைப் பொருட்டு. உயர் தெய்வம்-தீவதிலகை. இந்திரனால் நிறுவப்பட்ட தெய்வமாதலால், "உயர் தெய்வ" மெனச் சிறப்பித்தார். மனங்கவல் - மனக்கவலை. பண்டைப் பிறப்பு வரலாறு கேட்ட புண்ணியராசன் தன் முன்னைப் பிறவியிலெடுத்த உடம்பின் நிலைகண்டு கவன்றானாதலின், (25: 214-20) அதனை "மனங்கவல்" என்றார். கவல்: முதனிலைத் தொழிற் பெயர். 80-91. மாநகர் கடல்கொள அறவணவடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்-காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல்கொள்ள அறவண முனிவரும் மாதவியும் சுதமதியும் இறந்து போகாமல் அம் முதுநகரை விட்டு இவ் வஞ்சி நகரத்தின்கட் புக்கதைத் தன்னைக் கேட்பித்ததும், சாவக மன்னன் தன்னாடு எய்த அத்தீவகம் விட்டு இத்திருநகர் அடைந்ததும் - புண்ணியராசன் தனது சாவகநாடு சேரத் தான் அம் மணிபல்ல வத்தினை விட்டு இவ்வழகிய நகரத்தைச் சேர்ந்ததும், புக்கபின் அந்தப் பொய்யுருவுடனே தக்கசமயிகள் தந் திறம் கேட்டதும் - இப்பதி புகுந்தபின் முன் கொண்ட மாதவன் வடிவத்துடனேயே பல்வகைச் சமயவாதிகளின் சமயக் கருத்து வகைகளைக் கேட்டதும், அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையிற் சிந்தை வையாததும் - அவரவர் சமயங்களில் அறிந்துரைத்த மெய்ப் பொருள்கள் எல்லாம் செவ்வியன அல்லாமையால் அவற்றைத் தான் மனத்துட் கொள்ளாமையும், நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் சொல்லினள் ஆதலின் - புத்தன் அருளறத்தைக் கேட்க விரும்பி அறவணவடி களைத் தேடித் தான் வந்த வரலாற்றையும் கூறினளாகலின்; மாநகர், காவிரிப்பூம்பட்டினம். "இறவாது இப்பதிப் புகுந்தது" என்றதனால், கடல்கோட்காலத்தே பலர் இறந்தமை பெறப்படுகிறது. தீவதிலகை கூறத் தான் கேட்டறிந்தாளாகலின், அத்தெய்வத் தாலென்பது வருவிக்கப்பட்டது. நகரின் செல்வமுற்றும் அறிந்து கூறலின், இந்நகரெனச் சுட்டியொழியாது "இத்திருநகர்" என்றாள். மாவதனுரு, தன்னியற்கையுரு வன்மையின், "பொய்யுரு" வென்றாள். பிறாண்டும், "மாயை" (245) என்பள். கேட்டற்குரிய தகுதியுடையன என்பது தோன்ற, "தக்க சமயிகள் தந்திறம்" என்றாள். செவ்விது: பன்மை யொருமை மயக்கம். பிறாண்டும் "செவ்விதன்மையிற் சிந்தையின் வைத்திலேன் (29 : 44) என்பது காண்க. மாதவன், அறவணன். அவன் கடல்கோட் காலத்தே வஞ்சிநக ரடைந் தானெனத் தெய்வம் கூறின மையின், அவனைக் காண நினைந்து வந்தமை தோன்ற, "மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும்" என்றார். வஞ்சியினின்றும் அவர்கள் கச்சி மாநகர் சென்ற செய்தியைப் பின்னர்மாசாத்துவான் உரைக்கின்றான். 91-102. தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என - தூய குணஞ் செய்கை களையுடையாய், நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி மேலும் கூறலுற்று, தையல் கேள், நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்தமை கேட்டு - நங்காய் கேட்பாயாக, நின் தந்தையும் தாயும் முற்பிறப்பிற் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரைமாநகர் தீக்கிரையாகிக் கேடெய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆகலின் - புத்த தேவனின் அருளறத்தினைப் புரியுந் தகுதியுடையேனாகலின், மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென வறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத் தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையள வேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத் தினையுடைய பெருந்தவஞ் செய்யலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்-அங்ஙனம் தவமேற்கொண்ட யான் அழகிய வஞ்சிக்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத் தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக; கோவனையும் கண்ணகியையும் "நின் தாதையும் தாயும்" என்றான். முற்பிறப்பிற் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றாரென்பான், "செய்த தீவினையின் துன்புற" என்றும் அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினான். புத்தனைச் சுகதனென்ப. அவனுரைத்த அருளறம் அன்பறத்தின் காரியமாகுதல் பற்றி, "அன்புகொள் அறம்" என்றார். புத்தவறங்களை "மலையாவற" மென்றது எத்திறத்தோரும் தவறென மறுத்தற் காகானை பற்றி, எல்லா வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டுமென்ற அறம் எம்மதத் தோர்க்கும் சம்மதமானதென்பதை, "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி, தின்னுயிர் நீக்கும் வினை "(குறள் 327) எனத் திருவள்ளுவர் கூறவது காண்க. உயரிய நாகரிகத்திற்கேற்ற கூறுகளெல்லாம் குற்றமறப் பொருந்திய நகரமென்றற்குத் "திருந்திய நன்னக" ரென்றான். 103-106. குட்டுவர் பெருந்தகை - சூட்ட நாட்டவர்க்குப் பெரிய தகுதியடைந்த தலைவனும், விடர்ச்சிலை பொறித்த வேந்தன் - மலை முடியிலுள்ள சரிவிலே தன் விற்பொறியைப் பொறித்த வேந்தனுமாகிய; குடக்கோச் சேரலன்-குடக்கோச் சேரலாதன் என்பான்; முன் நாள் - முன்பொரு காலத்தே; துப்படு செவ்வாய்த் துடியிடையாரொடு - பவளம் போற் சிவந்த வாயும் துடிபோலு மிடையுமுடைய உரிமை மகளிருடன் போந்து; இப்பொழில் புகுந்து-இச் சோலையை யடைந்து; இனிதிருந்த எல்லையுள் - இன்ப நுகர்ந் திருந்த போழ்து; குட்டுவர் - குட்ட நாட்டவர்; "பல்குட்டுவர் வெல்கோவே" (பத்- மதுரைக் 105) என்பது போல. மிக்க தகுதியுடையாரன்றிப் பிறர் தலைவராதல் கூடாமை தோன்ற, "பெருந்தகை" யென்றார். விடர்-மலை முடியிலுள்ள சரிவு; மலை முடியிடையுள்ள பிளவாய் மக்கள் வழங்கும் வழியைச் சார்ந்ததுமாம்; நவிரமலைப் பிளவில் பல்லவர் தம் வெற்றியைக் குறித்த செய்தியைத் திருவண்ணாமலைக் கல்வெட்டுக் கூறுகிறது. குடக்கோச் சேரலாதன் சேரன் செங்குட்டுவற்கு ஒன்பது தலைமுறை மூத்தவனாதலின், இவனை அச்செங்குட்டுவன் தந்தையான இமயவரம்பனாகக் கோடல் பொருந்தாது; "நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை, முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு, நீங்காக் காதற் பாங்கன்" (மணி. 28: 123-5) என்று இவ்வாசிரியர் கூறுதல் காண்க. கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்த காலத்து சேர நாட்டு வேந்தன் செங்குட்டுவனென வுணர்க. இப்பொழில் என்றது, மாசாத்துவான் இருந்து தவம் புரிந்த சோலை. ஆங்கு: அசைநிலை; ஓரிடத்தைச் சுட்டி ஆங்கென்றா னென்றுமாம். 107-113. இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத் தீவின்கணுள்ள சமனொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய, தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் - தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும் கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின் வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள் அரசனுக்கு நல்வினையாகிய காரணம் பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால், இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய பொழிலின் கண்ணே இறங்கி, கற்றலத்து இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது; புத்த தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால் தருமவுரை குறித்து நாடுகட்கு விடுக்கப்பட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது. ஈண்டுக் கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோ ரென்றற்குக் கருமுகிற் கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற் செல்பவரென்றுமாம். புரை யோர் - உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும் சாரணர் இப் பொழிற்கண் இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்" என்றார். அவர்கள் இருந்து அறங் கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல் மரபு; இதனைச் சிலா தலம் என்றலும் வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163) என்று அடிகள் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. 114-122. "முற்றவம் உடைமையின் காவலன் விரும்பி முனிகளை ஏத்தி - முற்பிறப்பிற் செய்த நற்றவமுடையோனாகலின் அரசன் அச் சாரணரை விருப்பத்துடன் கண்டு துதித்து, பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்கவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து - அவருடைய தாமரை மலர்போலும் திருவடிகளை விளக்கி அவர்க்கு ஏற்ற தன்மையினால் அறுசுவை யினையும் உடைய நான்கு வகைப்பட்ட உணவுகளையும் அளித்து, வேத்தவை யாரொடும் பலபலசிறப்பொடு ஏத்தினன் இறைஞ்சலின் -அரசவை யுறுப்பினரோடு கூடிப் பற்பல சிறப்புக்களைச் செய்து துதித்து வணங்கினா னாகலின், பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும் - பிறப்பினால்வரும் இன்னலும் பிறவாமை யினாற் பெறும் இன்பமும், அறத்தகை முதல்வன் அருளிய வாய்மைஇன்ப ஆரமுது - அற முதல்வனாகிய புத்தன் அருளிச் செய்த நால்வகை வாய்மையும் ஆகிய இன்பம் பயக்கும் கிடைத்தற்கரிய அமிழ்து போலும் அறவுரைகளை; துன்பம் நீங்க - பிறவித் துன்பம் நீங்குமாறு, இறைவன் செவி முதல் சொரியும் அந்நாள் - மன்னவன் செவிகளிடமாக உரைத்த அந்நாளில்; "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்: 262) என்பதுபற்றி, "முற்றவம் உடைமையின்" என்றார். இனிப்பு, புளிப்பு முதலாகச் சுவை ஆறும், தின்னல் பருகல் முதலாக உணவுவகை நான்கும் கொள்க. சாரணர்க்குரிய வழிபாட்டினைத் தனித்த முறையினும் பல்வகைச் சிறப்புக்களை வேத்தவையாருடனும் வேந்தன் ஆற்றினான், அஃது அரசுமுறை யாதலின். பிறப்பிற் றுன்பம்-பிறப்பினானாகுந் துன்பம்; "பிறந்தோருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்" (மணி. 2: 54) என முன்னரும் கூறினர். அறத்தை அமிழ்தென்றராகலின், அதற்கேற்ப, "செவி முதல் சொரிந்து" என்றும், அதனால் விளையும் பயனை, "துன்பம் நீங்க" என்றும் கூறினார். தவமுடைமையின், காவலன் ஏத்தி, விளக்கி, அளித்து, இறைஞ்சலின், அச் சாரணர் வாய்மை யின்பவாரமுது செவி முதற் சொரியு மந்நாள் என இயையும். 123-136. நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் - நின் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பதுதலை முறை முன்னோனாகிய கோவலன் என்பான், மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆகலின்-குடக்கோச் சேரலாதனுக்கு எப்பொழுதும் பிரியாத அன்புடை நண்பனாதலின், தாங்கா நல்லறம் தானும் கேட்டு - தரும சாரணருரைத்த நல்லறத்தினை அரசனுடனிருந்து தானும் கேட்டு, முன்னோர் முறைமையிற் படைத்ததை அன்றித் தன்னால் இயன்ற தனம் பல கோடி-தன் முன்னோர்கள் நல்வழியினாலே படைத்த பெரும் பொருளோடே தன்னால் ஈட்டப்பட்ட அளவிறந்த நிதி களையும், எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து-ஏழு நாட்களுள் இரப்போர்க் களித்து; தொழுதவம் புரிந்தோன்-யாவரும் வணங்கும் தவம் புரிந்தனன்; சுகதற்கு இயற்றிய வானோங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் - புத்த தேவனுக்கு வானளாவிய மலையின்கண் அமைத்த வெள்ளிய ஒளியினையுடைய கோயில், ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது - இவ் வுலகின் கணுள்ளோர்கட்கெல்லாம் துன்பம் நீங்கும் பொருட்டு அமைந்தது, கண்டு தொழுது ஏத்தும் காதலின் - யான் அதனைக் கண்டு வணங்கித் துதிக்கும் விருப்பத்தாலாகும்; வந்து - இவண் வந்து, இத் தண்டாக் காட்சித் தவத்தோர் காவிரிப்பட்டினம் கடல்கொளும் என்ற - நீங்காத நல்லறிவினையுடைய இப் பெருந் தேவர்கள் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோட்படும் எனச் சொல்லி யருளிய; அத் தூவுரை கேட்டுத் துணிந்து இவண்இருந்தது - அந் நன்மொழிகளைக் கேட்டு அங்குப் போதலாகாதெனத் துணிந்தமையால் இவ்விடத்தே யிருப்பேனாயினேன் எ - று. "திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்" (102) என்றவன் அதற்குக் காரணம் கோவலன் இயற்றிய சயித்தியம் இயன்றது கண்டு தொழுதேத்தும் காதலினால், தூவுரைகேட்டுத் துணிந் தமையால் இவணிருந்தது என்றான் என இயைத்துக்கொள்க. கோவலனோடு அக்குலம் தொடர்பற்றுப் போதலின் "நின் பெருந்தாதை" யென்றான். முன்னோனாகிய கோவலன் வேந்தனொடு கூடியிருந்து அறங்கேட்டற்குக் கரணம் கூறுவான், "மன்னவன் தனக்கு நீங்காக் காதற்பாங்க னாதலின்" என்றும், மலைமேற் கட்டிய சீகோவில் என்றற்கு, "வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம்" என்றும், அதனைத் தான் வழிபட விரும்பியதற்குக் காரணம் இதுவென்பான், "ஈனோர்க் கெல்லா மிடர் கெட வியன்றது" என்றும் கூறினான். துணிந்து: காரணப்பொருட்டு. 137-146. நன்னெறி மாதே இன்னுங் கேளாய் - தவநெறியில் ஒழுகும் மணிமேகலையே இன்னும் யான் கூறுவதைக் கேட்பாயாக; தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்-தீவினைவந்து தன் பயனை நல்குதலாலே கொலை யுண்டிறந்த நின் தந்தையும், முற்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி - முன்செய்த தவப் பேற்றால் உம்பருலக வாழ்வினை எய்தி, ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்து - பழவினையின் பயனை நுகர்ந்து, பூங்கொடி முன்னவன் போதியில் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி-இளங்கொடியே, புத்தர் அரசமரத்தின்கீழ் அருள றத்தைமேற்கொண்டிருக்குங்கால் தானும் தவம் பூண்டு; காதலி தன்னொடு கபிலையம்பதியில் நாதன் நல்லறம் கேட்டு வீடெய்தும் என்று - மனைவி கண்ணகியுடன் கபிலைப் பதியில் புத்தன் அறவுரைகளைக் கேட்டு நிருவாண மடைவான் என்று, அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-தெய்வக் கிளவிகளை உணர்ந்தோர் கூற, சொற்பயன் உணர்ந்தேன் - அச்சொற்களின் பயனை நான் அறிந்தேன். "நன்னெறி மாதே" யென்றான், கோவலன் இறந்ததற்குக் காரணம் அவனது முன்னைவினை என்பதை யுணர்ந்திருப்பது பற்றி. வினை உருத்தல்-பிறவுருவுடைப் பொருள் வாயிலாக வினையானது தன் பயனையூட்டுதல். பொற்கொல்லன் வேந்தன் முதலாயினார் வாயிலாகக் கொலைத் துன்பமாகிய பயனை நல்குவது. அடிகளும், "ஊழ்வினை யுருத்துவந்தூட்டு" மென்பது காண்க. நல்வினைப் பயன் முன்னரும்தீவினைப் பயன் பின்னரும் துய்க்கப்படுமென்பது சான்றோர் முடிபாதலின், "தேவரிற் றோற்றி" யென்றும், "இன்னும் துய்த்து" என்றும் கூறினான். "மேற் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம், அவ் வினை யிறுதியின் அடுசினப் பாவம், எவ்வகை யானு மெய்துத லொழியாது" (26:35-7.) எனக் கண்ணகி கூறுதல் காண்க. இது சமண சமயத்துக்கும் உடன்பாடாதலை "நல்வினை கழிதலும் நலியுந் தீவினை, செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது" (சூளா. கல். 231.) என்பதனாலறிக. "ஆங்கத் தீவினையின்னும் துய்த்து" என்பதனால் கோவலன் முன்னைத் தீவினைப் பயன் முற்றும் நுகர்ந்து கழித்தற் குள்ளாகவே கொலையுண்டா னென்றும், அதனைத் தேவப் பிறப்புக்குப் பின்பு நுகர்வனென்றும் அறிக. கோவலனாயிருந்த காலத்து நல்வினையே புரிந்தானென்ப: "இம்மைச் செய்தன யானறி நல்வினை" (சிலப்.15:61) என்பதனாலறிக. எதிர்கால நிகழ்ச்சியை விளங்க முற்கூட்டிக் கூறலின் "அற்புதக்கிளவி" யென்றும், அது பொய்யா தென்றற்கு, "அறிந்தோர் கூற" என்றும் கூறினான். 146-154. தோகை-மயில் போல்வாய்; யானும் அந்நாள் அறநெறி கேட்குவன்- நானும் புத்தன் போதியின்கீழ் உரைத்தருளும் அறநெறிகளை அப்போது உடனிருந்து கேட்பேன்; நின்னது தன்மை அந் நெடுநிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ-உன்னுடைய பின்னிகழ்ச்சிகளைக் கந்திற்பாவை மொழியால் தெளிந்தனை யல்லவோ, அறவணன் சாற்றக் கேட்டனன் - அறவண முனிவர் கூற அதனை நான் கேள்வியுற்றேன், ஆங்கவன் தானும் நின் அறத்திற்கு ஏதுப் பூங்கொடி கச்சிமா நகராதலின் - பூங்கொடிபோல்வாய் நின் அறத்திற்குரிய ஏதுநிகழ்ச்சி கச்சி நகரத்தின்கண் உண்டாமா கலான் அறவணவடிகள் ஆண்டுச் சென்றனர், அம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் - அம் மாதவர் காஞ்சி நகரத்திற்குச் சென்ற நாளில் நின் அன்னையரும் ஆண்டுச் சென்றனர்; "அறநெறி கேட்குவன்" என்பது மாசாத்துவாற்கு எதிர்காலத்தில் நிகழ்வது கூறியது. மணிமேகலைக்கு எதிர்காலத்து நிகழவிருப் பதனை "நின்னது தன்மை" என்றும், அது கந்திற்பாவை வருவதுரைத்த காதைக்கண், "துவதிக னுரைக்கும் சொல்லாலுஞ் சொல்லுவேன்" என்று தொடங்கிக் கூறுவனவற்றால் விரியக் கூறப்படுதலின், "துவதிகனுரையிற் றுணிந்தனை" யென்றும் கூறினான். மணிமேகலைக்குப் புத்தவறம் கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சி கச்சிமாநகர்க்கண் எய்துமென அறவணவடிகளால் தனக்கு முன்பே கூறப்பட்டிருப்பதாக மாசாத்துவான் கூறுவது மணிமேகலையைக் கச்சிமாநகர்க்குச் செல்லப் பணிக்கும் குறிப்பிற்று. அதனையே மேலும்வற் புறுத்தற்கு, அவன் கச்சி நகர்க்குச் சென்ற செய்தியைத் தெரிவித்து நீயும் ஆண்டுச் செல்க வென்றற்கு "தாயரும் அப்பதிப் படர்ந்தன" ரென்றான். இனிக் கச்சி மாநகரின் நிலைமையைக் கூறுகின்றான். 155-162. அணியிழை அன்னதை அன்றியும் கேளாய்-புனையிழாய் அதனை அல்லாமலும் இன்னுமொன்று கேள், பொன்னெயில் காஞ்சிநாடு கவின் அழிந்து மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்- பொன் மதிலையுடைய கச்சி நகரம் அழகு கெடப் பலவுயிர்களும் இறக்குமாறு மழைவளம் இல்லாதொழிந் தமையால், அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் - அப் பதியில் இருந்த அறவோருக்கு அன்னமிடுவோர் இல்லாமையினால் இப் பதியை அடைந்திருக் கின்றவர்களைக் காண்பாயாக, ஆருயிர் மருந்தே அந் நாட்டு அகவையில் காரெனத் தோன்றி காத்தல் நின்கடன் என அருந்தவன் அருள - ஆகலின் அரிய வுயிரை அளிக்கும் மருந்து போல்வாய்! நீ அந் நகரத்தின்கண் மழைதரும் முகிலெனத் தோன்றி அவ் வுயிர்களைக் காப்பாற்றுதல் நினக்குக் கடமையாம் என்று மாசாத்துவான் கூற; அழிந்து: செயவெனச்சத்திரிபு. மடிய: செயவெனெச்சம் காரியப் பொருட்டு. அந்நகர் மாதவர்க் கென்றான், மாதவர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளிரேயாயினும், பௌத்த சமயப் பேரறமுணர்ந்த பெரியோர் இருக்கும் சிறப்புப்பற்றி, ஆண்டிருந்து வந்திருந்தோரை, "அந்நகர் மாதவர்" என்றான். அவர்கள் ஈண்டு வந்திருத்தற்குக் காரணத்தை "ஐயமிடுவோர் இன்மையின்" என்பதனால் குறித்தான். ஆருயிர் மருந்தாகிய உணவுதரும் அமுதசுரபியை யுடைமைபற்றி, மணிமேகலையை, 'ஆருயிர் மருந்தே'' என்றான். வரையாது வழங்கவேண்டுமென்ற குறிப்பால், "காரெனத் தோன்றி" என்றும், செய்யாமை குற்றமென்பது தோன்ற, "காத்தல் நின் கடன்" என்றும் குறிப்பாய்ச் சொன்னான் என்பது. 162-176. ஆயிழை வணங்கி - அழகிய இழையணிந்த மணிமேகலை மாசாத்துவானை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்தி-தெய்வத்தன்மை பொருந்திய அமுதசுரபியைத் தன் சிவந்த கைகளில் ஏந்தி, கொடிமதில் மூதூர்க்குடக்கண் நின்று ஓங்கி - கொடிகளையுடைய மதில் சூழ்ந்த பழமையாகிய வஞ்சிநகரத்தின் மேற்றிசையினின்றும் எழுந்து, வடதிசை மருங்கின் வானத்து இயங்கி - வடதிசைப் பக்கமாக விசும்பிற் சென்று, தேவர்கோமான் காவல்மாநகர் மண்மிசை கிடந்தென வளந்தலை மயங்கிய - தேவர் கட்கரசனான இந்திரன் அரசு புரியும் அமராவதியே வந்து நிலவுலகில் இருந்ததுபோல வளஞ்சிறந் திருந்த, பொன்னகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒண்டொடி நங்கை - அழகிய நகரமான கச்சிமா நகரம், வறுமையாற் பொலிவிழந்து புல்லென்றிருந்த தன்மையைக் கண்டு மனங் கசிந்த மணிமேகலை, பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங் கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து - அழகிய கொடி யினையுடைய அத்தொன்மை நகரத்தின் மதிலை வலஞ் செய்து நடு'd2வூரின் எல்லையை அடைந்து இறங்கி, தொடுகழற்கிள்ளி துணையிளங் கிள்ளி - தொடுகழற் கிள்ளியின் தம்பியாகிய இளங்கிள்ளி, செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம்போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது - சிவந்த பொன்போன்ற பெரிய கிளை களையும் அழகிய மரகதமணியனைய பசிய இலைகளையும் பசிய பூக்களையுமுடைய போதியின் கீழமர்ந்த புத்ததேவற்குக் கட்டுவித்த கோயிலைப் பணிந்து, தென்மேற்காகத் தாதணிபூம் பொழில் தான் சென்று எய்தலும்-தென்மேற்றிசையிற் சென்று தேன் பொருந்திய அழகிய மலர்ச்சோலையைத்தான் அடைதலும்; மீட்டும் வணக்கம் செய்தது விடைபெறுவது குறித்தலின், வணங்கி யென்பதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. மணிமேகலை கையிலிருக்கும் அமுதசுரபி, அவள் போம்போது உடன்போதல் ஒருதலையாகவும், ''திருந்திய பாத்திரம் செங்கையி னேந்தி'' யென்றார். அதனால் மன்னுயி ரோம்பலும் அறவணனைக் காண்டலும் பின்பு அறங்கேட்டலும் நிகழ்தற் சிறப்புப் பற்றி, இந்திரன் காக்கும் அமராவதி நகரை, ''தேவர் கோமான் காவன் மாநகர்'' என மிகுத்தோதியது, பொலிவற்றுப் புல்லென்று தோன்றும் கச்சிநகர், வளமுற்றிருந்த காலத்திருந்த சிறப்பைப் புலப்படுத்தற்கு. வளந்தலை சிறந்த நகரம் பொலிவிழந்திருப்பது காண்பவள் அருள்மிகுதியால் உளங்கரைந்து இரங்குவது தோன்ற, ''கண்டுளங் கசிந்த'' என்றும், அதனைத் தொடி நெகிழ்ந்து காட்டுமாதலின் ''ஒண்டொடி'' யென்றும் குறித்தார். ஒண்டொடி நங்கை சுட்டுமாத் திரையாய் நின்றது. ''காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே'' (பதிற். 19) என்று பிறரும் கூறுப. இழிந்து நண்ணினள் என மாறுக. நண்ணினள்: முற்றெச்சம். சயித்தியம் என்பது சேதியம் என வந்தது. ஆயிழை வணங்கி, கண்டு, உளங் கசிந்தவள் வலங்கொண்டு, இழிந்து நண்ணி, தொழுது, சென்றெய்தலும் என முடிக்க. 177-183. வையங் காவலன் தன்பாற் சென்று கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்-இளங்கொடையைக் கண்ணுற்ற கஞ்சுகன் ஒருவன் மாநிலங் காவல் புரியும் அரசன்பாற் சென்று கைகூப்பி வணங்கிக் கூறுவானாய், கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலந்தீவில் தான்நனிமிக்கோள் - கோவலனுடைய புதல்வியும் துறவறம் பூண்டு நற்றவம் புரிபவளும் சம்புத்தீவின்கண் மிகச் சிறந்தவளுமாகிய மணிமேகலை என்பாள், அங்கையின் ஏந்திய அமுத சுரபியொ- தான் கையி லேந்தியுள்ள அமுதசுரபி என்னும் தெய்வக் கடிஞையுடன், தங்காது மாமழைபோல் இப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் - இந்நகரத்தின்கணுள்ள தருமத வனத்தில் பெருமுகில் போல வந்துதோன்றினள் என மொழிய; கஞ்சுகன் சட்டையிட்ட அரச சேவகன், காவலன், இளங்கிள்ளி, குணவதம், இதனைக் குணவிரதம் என்ப; இச்சொல் சமணூல்களிற் பயில வழங்குவது. பௌத்த நூல்கள், தூதகுணம் என்றும் அது பன்னிருவகை விரதங்களையுடையதென்றும் கூறுதலின், அது குறித்து, ''குணவதம்'' என்றார். அவை பஞ்சகுலிகம், திரிசிவரிகம், நாமாதிகம், வைந்தபாதிகம், ஏகாசநிகம், கலுபச்ச பத்திகம், ஆரணியகம், விருக்க மூலிகம், அபியவாகசிகம், சமச்சானிகம், நைசாதிகம், யதாசமஸ்தாரிகம் எனப் பன்னிரண்டாம். இவற்றை இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை முதலிய பௌத்த நூல்களிற் கண்டுகொள்க. மழைமுகில் மலை முதலிய வற்றால் தடைப் பட்டுத் தங்கி யொழிவதுபோல தங்காது நேரே தான் குறித்த விடம் போதருதலால் ''தங்காது'' என்றும், மழைவர உயிர்கள் தளிர்த்தல்போல் இவள் வரவால் மக்கள் பசி நீங்கி இன்பம் பெறுமாறு தோன்ற ''மாமழைபோல் வந்து தோன்றினள்'' என்றும், வந்து தங்கியிருக்குமிடந்தானும் இது வென்றற்கு ''தருமதவனத்தே'' யென்றுங் கூறினான். சென்று காண்பது நலம் என்பது குறிப்பு. 184-187. மன்னனும் விரும்பி மந்திரச் சுற்றமொடு - அரசனும் அது கேட்டு ஆவலுடன் அமைச்சர் முதலாயினோர் சூழ்வர, கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாயாகின்றன வந்தித்து ஏத்தி-கந்திற்பாவை மொழிந்த பொருளுரை யாவும் உண்மையேயாகின்றன என எண்ணி அதனை நினைத்துத் துதித்து, ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று - அழகிய வளையணிந்த நற்றவம் பூண்ட மணிமேகலைபாற் சென்று; மணிமேகலையைக் காணச் செல்லும் வேந்தன் அமைச்சர் முதலாயினாருடன் சேறல் சிறப்பாதலின், “மந்திரச் சுற்றமொடு'' என்றார் ; செய்வதும் தவிர்வதும் அவ்வப்போது தெரிந்துரைப்பவ ரவராதலின். மணிமேகலை வரவை முன்னரே கந்திற்பாவை வேந்தற் குரைத்திருத்தலின், அவன் ''கட்டுரை யெல்லாம் வாயாகின்று'' என்று வியந்தான்: பன்மை யொருமை மயக்கம். 188-191. நலத்தகை நல்லாய் செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-நற்குண நற்செய்கைகளையுடையாய்! எனது செங்கோலானது வளைந்ததனாலோ துறவோர் தவநெறியிற் றிறம்பியதாலோ தேன் சொரியும் மலர் சூடிய கூந்தலையுடைய மகளிர் கற்புக் குறைந்ததனாலோ, நன்னாடு எல்லாம் அலத்தற்காலை ஆகியது அறியேன் - நலஞ் சிறந்த நாடெங்கும் எதனால் இவ்வறுமைக் காலம் வந்தெய்தியது என்று அறியாது மயங்கு வேனாயினேன்; மணிமேகலை மாதவனுருவில் தோன்றினாளாயினும் கச்சி நகர்க் கண் இருந்த கந்திற்பாவை யுரைத்திருந்தபடியால், அதுவே வாயிலாக அவளைக் கஞ்சுகனும் வேந்தனும் தெரிந்து கொண்டனரெனக்கொள்க. அதனாற்றான் “நலத்தகை நல்லாய்'' என்றான். அரசு கோல்கோடலும் மாதவர் நோன்பு கெடலும் மகளிர் கற்புக்குறைபடலும் நாடு நலங் குன்றுதற் கேதுவாகலின், ''கோல் கோடியோ தவம் பிழைத்தோ கற்புக் குறைபட்டோ நன்னா டெல்லாம் அலத்தற் காலையாகியது'' என்றும், இக்குறையினைக் காண முயன்றும் அம்முயற்சி பயன்படாமையின், “அறியேன்'' என்றும் கூறினான். அலத்தற் காலை - துன்பக் காலம்: ஈண்டு வறுமை மேற்று. 192-206. மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி - கலக்க முறுவேன் முன்னே ஒரு பெரிய தெய்வம் வெளிப்பட்டு, உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் - வருந்தற்க எனத் தேற்றி நினது பெருந் தவத்தினாலே ஈண்டு ஒரு மங்கை வருவாள் என்று சொல்லி, அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் கையிற் கொண்ட பெருமை பொருந்திய பாத்திரத்தின் கண்ணுள்ள நிறைந்த உயிர்களின் பசிப்பிணிக்கு மருந்தாகிய உணவினால் பெரிய நிலத்து மக்கள் உய்தி பெறுவர், ஆங்கவள் அருளால் அமரர்கோன் ஏவலில் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் - அவளது அருளினாலே இந்திரன் ஏவல்பெற்று முகில்கள் மிக்க மழையை மிகவும் பொழியும், அன்னாள் இந்த அகனகர் புகுந்த பின்னாள் நிகழும் பேரறம் பலவால் - அந்நங்கை இந்தப் பெரிய நகரத்திற் புகுந்த பின்பு ஈண்டு நிகழும் பெரிய அறங்கள் பலவாகும், கார் வறம் கூரினும் நீர்வறங் கூராது - மழை பெய்யாது ஒழியினும் நீர் வறுமை யுண்டாகாது, பண்டையோர் இழைத்த - முன்னோரால் அமைக்கப் பெற்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு மாமணிபல்லவம் வந்தது ஈங்கென - கொழுவிய நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையுடன் பெரிய மணிபல்லவமே ஈண்டு வந்திருக்கின்றது என்னுமாறு, பொய்கையும் பொழிலும் பாரகம் விதியிற் புனைமின் என்று அறைந்து அத் தெய்வம் போயபின் - வாவியுஞ் சோலையும் இந்நிலத்தே முறைப்படி உண்டாக்கி அழகு படுத்துவீராக என்று கூறி அத்தெய்வம் சென்ற பின்னர்; செய்து யாம் அமைத்தது இவ்விடம் என்றே அவ்விடங் காட்ட - யாங்கள் செய்தமைத்த இடம் இதுவாகும் என்று கூறி அவ்விடத்தை மணிமேகலைக்குக் காட்ட; மயங்குவேன் முன்னர்த் தெய்வம் தோன்றி, தோன்றும், நிலம் உய்யும், மாரி பொழியும், அறம் பலவால், வறங்கூராது, புனைமின் என அறைந்து போயபின், அமைத்தது இவ்விடம் என்று காட்ட என, இயையும். மணிமேகலை போதருதற்குக் காரணம் வேந்தனது தவம் என்றற்கு “நின்னுயர் தவத்தால்'' என்றார். ஆருயிர் என்புழி, ஆர்தல்- நிறைதல். மிக்க மழை யென்றற்குத் “தாங்கா மாரி'' என்றார். கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண் பண்டையோர் இழைத்தன ராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும் முறைப்படி செய்தமைத்தலின், “பாரக விதியின்'' என்றார். பாரக விதியிற் புனைமின் என இயைக்க. செய்தி - செயற்கை ; எனவே மணிபல்லவம் இயற்கையா யமைந்த தென்றும், கோமுகி மட்டில் பண்டையோரிழைத்த தென்றும் கொள்க. பாரக வீதியின் என்றும் பாடம். 206-219. அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளஞ்சிறந்த காரிகை நல்லாள் - மணிபல்லவத்தை ஒத்த அச்சோலையிற் சென்று அதன் சிறப்பினைக் கண்டு மன மகிழ்ந்த மணிமேகலை, பண்டை யெம்பிறப்பினைப் பான்மையிற் காட்டிய அங்கப்பீடிகை இதுவென - எம்முடைய பண்டைப் பிறப்பை அறிவுறுத்திய அத் தீவின்கணுள்ள புத்த பீடிகை இதுவாகும் என்று, அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து - புத்தன் திருவடித் தாமரை பொருந்திய பீடிகை முறைப்படி யமைத்து; வந்தித்து ஏத்துதற்கு தீவதிலகையும் திருமணிமேகலா மாபெருந் தெய்வமும்-தான் வணங்கி வழிபடும் பொருட்டுத் தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும், ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து - பீடிகைக்கேற்பவமைந்த கோயிற்குள் ஆண்டைய தகுதியெல்லாமமையச் செய்தமைத்து, விழவுஞ் சிறப்பும் வேந்தன் இயற்ற - அவற்றிற்கு விழாக்களும் வேறு சிறப்புக்களும் அரசனைக்கொண்டு இயற்றுவித்து, தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி - வணங்கப்படுந் தகுதியினையுடைய மணிமேகலை பணிந்து துதித்து, அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்து எனும் அமுத சுரபியை - கையில் ஏந்தியுள்ள பசியாகிய நோய்க்கு மருந்து என்னும் அமுதசுரபியை, பங்கயப் பீடிகை வைத்து நின்று எல்லா வுயிரும் வருக என - புத்த பீடிகைக்கண்ணே வைத்து நின்று அனைத்துயிரும் உணவுண்ண வருக என அழைக்க; தன் பிறப்பும் மாதவி சுதமதி முதலாயினார் பிறப்பும் அறிந்து கொண்டமையின், “எம்பிறப்பினை'' யென்றாள். அங்கு அப்பீடிகை - அம் மணிபல்லவத்தே யிருந்த தன் பழம் பிறப்பறிதற் கேதுவாகிய புத்த பீடிகை. பங்கயப் பீடிகை - தாமரைப்பூப்போ லமைக்கப் பட்ட பீடிகை; ஈண்டு அது புத்தனுடைய தாமரைபோலும் திருவடி பொருந்துதற் கமைந்த பீடிகை யென்னுமாறு நின்றது. தீவதிலகை, பீடிகை காக்கும் தெய்வதம். மணிமேகலைக்குப் பெருநலஞ் செய்த தெய்வ மாகலின், “திரு மணி மேகலா மாபெருந் தெய்வம்'' என்று சிறப்பித்தார். பீடிகை யமைந்த பெருங்கோயில், தீவதிலகை மணிமேகலா தெய்வம் என்ற இரண்டும் ஒருங்கு நிறுவுதற்கமையுமாறு செய்யப்பட்டது பற்றி, “ஒத்த கோயி'' லென்றார். உளத்தக என்று கொண்டு, நினைத்தற்குத்தக என்று உரை கூறுவாருமுளர். பசிப்பிணி மருந்து நல்கும் சுரபியை “மருந்தெனும் சுரபி'' யென்றும், இதுகாறும் அங்கையி னேந்தி நின்ற சுரபியை, பீடிகையில் வைத்து வழிபட்டு எடுத்தலின், “அங்கையி னேந்திய அமுத சுரபி'' என்றும் கூறினார். 220-227. பைத்தர வல்குல் பாவை தன் கிளவியின்-படத்தையுடைய பாம்புபோலும் அல்குலையுடைய பாவையைப்போன்ற மணிமேகலை தன் இனிய மொழிகளால், மொய்த்த மூவறு பாடை மாக்களில் - நெருங்கிய பதினெண்வகை மொழியினை யுடைய மாக்களில், காணார் கேளார் கான்முடமானோர் - குருடரும் செவிடரும் முடவரும், பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் - பாதுகாப்போரற்ற அகதிகளும் மூங்கையரும் நோயுற்றவரும், படிவநோன்பியர் பசிநோயுற்றோர் - தவவேடத்தையும் விரதங்களையு முடையோரும் பசியாகிய பிணியடைந்தோரும், மடிநல்கூர்ந்த மக்கள் யாவரும் - உடையின்றித் துன்பமெய்திய மக்கள் அனைவரும், பன்னூறாயிரம் விலங்கின் தொகுதியும் - பலகோடி விலங்கு களின் கூட்டமும், மன்னுயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி - நிலைபெற்ற உயிர்கள் யாவும் ஒருங்கே வந்து சேரவும்; பைத்தரவல்குலென்றது, பாவைக்கு அடை. பாவை போல் வாளைப் பாவையென்றது ஆகுபெயர். கால் முடமானோர்-காலால் முடமானவர்; பிணித்தோர்-நோயுற்றவர்: இது துச்சாரியைபெற்று முடிந்தது; பிணிக் கப்பட்டோ ரென்றுமாம். மடி - உடை; மடிமையால் வறுமையுறு வோரை யருளுவது அம் மடிமையாகிய தீவினையை வளர்க்குஞ் செய்கையால் அறமாகா தொழிதலின், “சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள்'' என்றல் பொருந்தாமையறிக. ஈண்டவெனத் திரிக்க; ஈண்டியென்றே கொண்டு, செல்லும் என்பதனோ டியைத்தலுமொன்று. 228-235. அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-உண்போ ரனைவருக்கும் அரிய உயிரை வளர்க்கும் மருந்தாய், பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்-பெரியோர் கையிலிட்ட அறத்தின் பயனும், நீரு நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளையும் - நீர் நிலம் பொழுது கருவி ஆகிய யாவும் செவ்வே அமைந்த விடத்து விதைக்கப்பட்ட விதையாலுண்டாகிய விளைபயனும், பெருகிய தென்ன - பெருகியவாறு போல; பெருவளம் சுரப்ப - மிக்க வளத்தினை அப் பாத்திரம் சுரந்து கொடுக்க; வசித்தொழில் உதவி வளந்தந்தது என - மழை பெயலைச் செய்து உலகிற்கு வளத்தைத் தந்ததுபோல உணவுதந்து ; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலை - தமது பசி நோயை நீக்கிய பாவைபோலும் மணிமேகலையை வணங்கி வாழ்த்திக் கொண்டு அவரனைவரும் திரும்பிச் செல்லுங் காலத்தில்; தக்கார்க்குச் செய்த அறம் சிறிதாயினும் பெரும்பயன் விளைப்பது போலச்சுரபியிலிட்ட சிறுசோறு கொடுக்கக் குறை படாது மிக்குப்பெருகிற் றென்றற்குப், “பெருந்தவர்கைபெய் பிச்சையின்பய “னை யுவமங் காட்டினார்'' பெருந்தவர் கைபெய் பிச்சை பெருகுதலைப் பிறரும், “அறப் பயனும், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்'' (நாலடி : 38) என்பது காண்க. முன்பும் “அறத்தி னீட்டிய வொண் பொருளறவோன், திறத்து வழிப்படூஉஞ் செய்கைபோல, வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத், தான்தொலை வில்லாத் தகைமை'' (17:3-6) யுடையது இச்சுரபி என்றது காண்க. கருவி, ஏர் முதலாயின வித்துவமம், சுரபியின் தகைமையைக் காட்சியின் வைத்து விளக்கியவாறு. வசி-மழை. மறுவலும் பாவையென்றார், இவ்வாற்றால் உவகையும் வியப்பும் கொள்ளாமை தோன்ற. 235-245. தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண வடிகளும்- மாதவியும் சுதமதியும் அறனல்லவற்றை நீக்கிய அறவணரும், மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச்சாலை நண்ணினர் சேறலும் - வளமிக்க பழைமை பொருந்திய நகரத்தின்கண் நிலைபெற்ற உயிர்களின் முதல்வியாகிய மணிமேகலை உணவளிக்கும் அறச்சாலையை வந்தடைதலும், நன்றென விரும்பிச் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி நல்லடி கழுவி - வரவுணர்ந்த மணிமேகலை நன்றென விரும்பி எழுந்து சென்று அவர்தம் திருவடிகளைப் பணிந்து நீரால் அவர் அடிகளை விளக்கி, ஆசனத்தேற்றி அறுசுவை நால்வகைப் போனகம் ஏந்தி - நற்றவிசிலிருத்தி அறுசுவையினை யுடைய நான்குவகைப்பட்ட திருவமுதினை ஏந்தி, பொழுதினிற் கொண்டபின் - உண்டற்குரிய காலமெய்த அவர்கள் உண்ட பின்னர்; பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து - பசிய வெற்றிலையும் பாக்கும் கருப்பூரமும் அளித்து, வாய்வதாக என் மனப்பாட்டு அறம் என மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் - என் மனத்தின்கணுளதாகிய அறமானது பலித்திடுக என்று கூறி வேற் றுருவினின்றும் நீங்கி அறவணவடிகளை மணிமேகலைவணங்கினள். காண்டல் வேட்கை மிக்குடையரா யிருந்தமையின், “தாயர் தம்முடன்'' என்றார். மணிமேகலை வரவால் நகரம் அல்லல் நீங்கி மல்லலுற்றமை தோன்ற, “மல்லல் மூதூர்'' என்றும், பசி மிகுதியால் உயிராகிய முதல் அது நின்றவுடம்பினின்றும் நீங்கும் நிலையிலிருப்ப, உண்டி தந்து நிற்கப்பண்ணிய மாண்புபற்றி, மணிமேகலையை, “மன்னுயிர் முதல்வி'' யென்றும் சிறப்பித்தார். அறவணன் வரவு தன்னை நோக்கி அறமே வருவதாகக் கருது கின்றாளாதலின், “நன்றென விரும்பி'' எதிர் கொண்டாளெனவறிக. பின்னரும், “வாயவதாக என் மனப்பாட்டறம்'' என்பது காண்க. மாதவனுருவம் மாயமெனப்பட்டது, மணிமேகலையின் உண்மை வடிவமன்மையின். மணிமேகலை, தாயரோடு அறவணர்த்தேர்ந்து, வஞ்சியின் புறக்குடி கடந்து, மறுகும் மன்றமுதலியனவும், விரைமரைக்காவும், இடங்களும் கண்டு மகிழ்வுற்று, கொண்ட வேடமொடு, பள்ளிபுக்கு, மாதவம் புரிந் தோன் பாதம் பணிந்து, சொல்லின ளாதலின், அவட்கு அருந்தவன் நின்கடன் என அருள, ஆயிழை, பாத்திரம் செங்கையினேந்தி, மூதூர்க் கணின்றோங்கி, வடதிசை மருங்கின் வானத்தியங்கி, நகர் புல்லென்றாயது கண்டு உளம் கசிந்த ஒண்டொடி, வலங்கொண்டு, இழிந்து நண்ணி' சேதியந் தொழுது, பொழில் சென்றெய்தலும், கஞ்சுகன் வேந்தற் குரைப்போன் வந்து தோன்றினள் என, மன்னனும் விரும்பிச் சென்று, அவ்விடம் காட்ட, காவகம் பொருந்தி, வருத்து, புனைந்து, இயற்ற, ஏத்தி, சுரபியை வைத்து நின்று, வருகென, கிளவியின், காணார் முதலாகிய மாக்களும் விலங்கின் தொகுதியும், சுரப்பவுண்டு, ஏத்திச் செல்லுங்காலை, தாயரும் அடிகளும் நண்ணினர் சேறலும், விரும்பிச் சென்று, வணங்கி, கழுவி, ஏந்தி, கொண்டபின், படைத்து, வாய்வதாக என மாயை விட்டு இறைஞ்சினள் என, வினை முடிபுகொள்க. கச்சிமாநகர் புக்க காதை முற்றிற்று. 29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை காஞ்சிமாநகர்க்கண் அறவணவடிகளையும் மாதவி சுதமதி யாகிய இருவரையுங் கண்டு மகிழ்ந்த மணிமேகலை, அறவணனை வணங்கி ''அற முரைத்தருள்க'' வென வேண்டினள். அறவணன் அவளை வாழ்த்தி, காவிரிப் பூம்பட்டினம் கடல் கோட்படுதற்குக் காரணம் நெடுமுடிக் கிள்ளி மகனையிழந்த துயரத்தால் இந்திர விழாவைக் கைவிட்டானாக, இந்திரன் சினந்திட்ட சாபமென்றும் மணிமேகலாதெய்வம் அவன் சாபத்தோடொப்ப இட்ட சாப மென்றும் கூறினான். அவள் இச்செய்திகளைத் தான் முன்பே தீவதிலகைபாற் கேட்டறிந்ததாகத் தெரிவித்துத் தான் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும், அச்சமயங்களைச் சிந்தையிற் கொள்ளாதொழிந்ததும், வேற்றுரு நீங்கி இயற்கையுரு வெய்தியதும் எடுத்தோதி, மெய்ப்பொருள் அருளுக வென அறவணனை மறு படியும் வணங்கினாள். ஆதிசினேந்திரன் அருளிய அளவைகள், பிரத்தியக்கம் அனுமானம் என்ற இரண்டேயாம்; பிரத்தியக்க மாவது சுட்டுணர்வு; அனுமானம்; காரணம் காரியம் சாமானியம் என மூவகை யாகக் கூறப்படுமாயினும் காரியானுமானமே பிழையில்லாதது; இது பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனமென ஐந்துறுப்புக்களை யுடையது; எனினும், இறுதியிற் கூறிய உபநயம், நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; எஞ்சி நின்ற பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்றனுள் திட்டாந்தம்: சாதன்மியம், வைதன்மியம் என இரு வகைப்படும்; குற்றமில்லாத பக்க முதலியன, நன்பக்கம், நல்லேது. நல்ல திட்டாந்தம் எனவரும்; குற்ற முடையவை பக்கப்போலி, ஏதுப் போலி, திட்டாந்தப் போலி எனப்படும்; பக்கப்போலி பிரத்தியக்க விருத்த முதலாக ஒன்பது வகையும், வைதன்மிய திட்டாந்தப் போலி ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம் விருத்தமென மூவகையும், சாதன்மிய திட்டாந்தப் போலி சாதன தன்ம விகல முதலாக ஐவகையும், சாத்தியா வியாவிருத்தி முதலாக ஐவகையுமாம். இவற்றுள் தீயவற்றாற் காட்டப்படுவனவற்றை யாராய்ந்து மெய்ப்பொருளைஐயமின்றி அறிந்துகொள்க என அறவணன் உரைத்தான். இதன்கண் காவரிப்பூம்பட்டினம் கடல்கோட் படுதற்குரிய காரணம் 2-36 அடிகளிலும், பிரத்தியக்க அளவை 46-51 அடிகளிலும், அனுமானம் 52-56 அடிகளிலும், பக்க முதலிய உறுப்புக்கள் 57-110 அடிகளிலும், நன்பக்கம் முதலிய மூன்றும் 111-142 அடிகளிலும், பக்கப்போலி 143-190 அடிகளிலும், ஏதுப்போலி 191-324 அடிகளிலும், திட்டாந்தப் போலி 325-468 அடிகளிலும் உரைக்கப் படுகின்றன. இறைஞ்சிய விளங்கொடி தன்னை வாழ்த்தி அறந்திகழ் நாவி னறவண னுரைப்போன் வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலி வளைதான் பயந்த 5 புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித் தனிக்கலக் கம்பலச் செட்டிகைத் தரலும் வணங்கிக் கொண்டவன் வங்க மேற்றிக் கொணர்ந்திடு மந்நாட் கூரிரு ளியாமத்து அடைகரைக் கணித்தா வம்பி கெடுதலும் 10 மரக்கலங் கெடுத்தோன் மைந்தனைக் காணாது அரைசற் குணர்த்தலு மவனயர் வுற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த 15 மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்க முங்கிக் கேடுறப் பொன்னி னூசி பசுங்கம் பளத்துத் துன்னிய தென்னத் தொடுகட லுழந்துழி எழுநா ளெல்லை யிடுக்கண்வந் தெய்தா 20 வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையிற் றனாது பாண்டு கம்பளந் தானடுக் குற்ற தன்மை நோக்கி ஆதி முதல்வன் போதி மூலத்து நாத னாவோ னளிநீர்ப் பரப்பின் 25 எவ்வமுற் றான்றன தெவ்வந் தீரெனப் பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும் அறவர சாளவு மறவாழி யுருட்டவும் பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே சாரண ரறிந்தோர் காரணங் கூற 30 அந்த வுதவிக் காங்கவள் பெயரைத் தந்தையிட் டனனினைத் தையனின் துறவியும் அன்றே கனவி னனவென வறைந்த மென்பூ மேனிமணி மேகலா தெய்வம் என்பவட் கொப்ப வவனிடு சாபத்து 35 நகர்கடல் கொள்ளநின் றாயரும் யானும் பகருநின் பொருட்டா லிப்பதிப் படர்ந்தனம் என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப் பொன்றிகழ் புத்த பீடிகை போற்றுந் தீவ திலகையு மித்திறஞ் செப்பினள் 40 ஆதலி னன்ன வணிநகர் மருங்கே வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும் நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே அவ்வுரு வென்ன வைவகைச் சமயமுஞ் செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன் 45 அடிகள் மெய்ப்பொரு ளருளுக வென்ன நொடிகுவெ னங்காய் நுண்ணிதிற் கேணீ ஆதி சினேந்திர னளவை யிரண்டே ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச் சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி 50 விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள் மற்றவை யனுமா னத்துமடை யும்மெனக் 1காரிய காரண சாமா னியக்கருத் தோரிற் பிழைக்கையு முண்டுபிழை யாதது கனலிற் புகைபோற் காரியக் கருத்தே 55 ஏனை யளவைக ளெல்லாங் கருத்தினில் ஆன முறைமையி னனுமான மாம்பிற பக்க மேதுத் திட்டாந்த முபநயம் நிகமன மென்ன வைந்துள வவற்றிற் பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல் 60 புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம் உபநய மலையும் புகையுடைத் தென்றல் நிகமனம் புகையிடைத் தேநெருப் புடைத்தெனல் நெருப்புடைத் தல்லா தியாதொன் றதுபுகைப் 65 பொருத்த மின்று புனல்போ லென்றல் 1மேய விபக்கத்து மீட்சி மொழியாய் வைதன் மியதிட் டாந்த மாகுந் தூய காரிய வேதுச் சுபாவம் ஆயிற் சத்த மநித்த மென்றல் 70 பக்கம் பண்ணப் படுத லாலெனல் பக்க தன்ம வசன மாகும் யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது அநித்தங் கடம்போ லென்றல் சபக்கத் தொடர்ச்சி யாதொன் றநித்தமல் லாதது 75 பண்ணப் படாத தாகாசம் போலெனல் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி யென்க அநன்னு வயத்திற் பிரமாண மாவது இவ்வெள் ளிடைக்கட் குடமிலை யென்றல் செவ்விய பக்கந் தோன்றாமை யில்லெனல் 80 பக்க தன்ம வசன மாகும் இன்மையிற் கண்டில முயற்கோ டென்றல் அந்நெறிச் சபக்கம் யாதொன் றுண்டது தோற்றா வடுக்குங் கைந்நெல்லி போலெனல் ஏற்ற விபக்கத் துரையென லாகும் 85 இவ்வகை யேதுப் பொருள்சா திப்பன என்னைகா ரியம்புகை சாதித்த தென்னிற் புகையுள விடத்து நெருப்புண் டென்னும் அன்னுவயத் தாலு நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும் 90 புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின் நேரிய புகையி னிகழ்ந்துண் டான ஊர்த்தச் சாமங் கௌடிலச் சாமம் வாய்த்த நெருப்பின்வரு காரிய மாதலின் மேனோக் கிக்கறுத் திருப்பபகைத் திருப்ப 95 தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் அன்னு வயஞ்சா திக்கின் முன்னும் கழுதை யையுங் கணிகை யையுந் தம்மி லொருகா லத்தோ ரிடத்தே அன்னு வயங்கண் டான்பிற் காலத்துக் 100 கழுதையைக் கண்ட விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டு மதுகூ டாநெருப் பிலாவிடத் துப்புகை யிலையென் னேரத் திருத்தகு வெதிரேகஞ் சாதிக்கு மென்னின் நாய்வா லில்லாக் கழுதையின் பிடரின் 105 நரிவாலு மிலையாக் காணப் பட்ட அதனையே கொண்டு பிறிதோ ரிடத்து நரிவாலி னானாய் வாலையனு மித்தல் அரிதா மதனா லதுவு மாகாது ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந் 110 திட்டாந் தத்தி லேசென் றடங்கும் பக்க மேதுத் திட்டாந் தங்கள் ஒக்க நல்லவுந் தீயவு முளவதில் வெளிப்பட் டுள்ள தன்மி யினையும் வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம் 115 பிறிதின் வேறாம் வேறுபாட் டினையுந் தன்கட் சார்த்திய நயந்தருத லுடையது நன்கென் பக்கமென நாட்டுக வதுதான் சத்த மநித்த நித்தமென் றொன்றைப் பற்றி நாட்டப் படுவததில் தன்மி 120 சத்தஞ் சாத்திய தன்ம மாவது நித்தா நித்த நிகழுநல் லேது மூன்றாய்த் தோன்று மொழிந்த பக்கத் தூன்றி நிற்றலுஞ் சபக்கத்துண் டாதலும் விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ் 125 சாதிக் கிற்பொரு டன்னாற் பக்கத் தோதிய பொதுவகை யொன்றி யிருத்தல் சத்த வநித்தஞ் சாத்திய மாயின் ஒத்த வநித்தங் கடாதி போலெனல் விபக்கம் விளம்பில் யாதொன் றியாதொன் 130 றநித்தமல் லாதது பண்ணப் படாதது ஆஅ காசம் போலென் றாகும் பண்ணப் படுதலுஞ் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கஞ் சபக்கத் திலுமாய் விபக்கத் தின்றி யநித்தத் தினுக்கு 135 மிகத்தரு மேதுவாய் விளங்கிற் றென்க ஏதமி றிட்டாந் தம்மிரு வகைய சாதன் மியம்வை தன்மி யம்மெனச் சாதன் மியமெனப் படுவது தானே அநித்தங் கடாதி யன்னுவயத் தென்கை 140 வைதன் மியதிட் டாந்தஞ் சாத்தியம் எய்தா விடத்தி லேதுவு மின்மை இத்திற நல்ல சாதனத் தொத்தன தீய பக்கமுந் தீய வேதுவுந் தீய வெடுத்துக் காட்டு மாவன 145 பக்கப் போலியு மேதுப் போலியுங் திட்டாந்தப் போலியு மாஅ மிவற்றுட் பக்கப் போலி யொன்பது வகைப்படும் பிரத்தி யக்க விருத்த மனுமான விருத்தஞ் சுவசன விருத்த முலோக 150 விருத்த மாகம விருத்த மப்பிர சித்த விசேடண மப்பிர சித்த விசேடிய மப்பிர சித்த வுபயம் அப்பிர சித்த சம்பந் தம்மென எண்ணிய விவற்றுட் பிரத்தியக்க விருத்தங் 155 கண்ணிய காட்சி மாறுகொள லாகுஞ் சத்தஞ் செவிக்குப் புலனன் றென்னல் மற்றனு மான விருத்த மாவது கருத்தள வையைமா றாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்திய மென்றல் 160 சுவசன விருத்தந்தன் சொன்மாறி யியம்பல் என்தாய் மலடி யென்றே யியம்பல் உலக விருத்த முலகின்மா றாமுரை இலகுமதி சந்திர னல்ல வென்றல் ஆகம விருத்தந்தன் நூன்மா றறைதல் 165 அநித்த வாதியா யுள்ளவை சேடிகன் அநித்தி யத்தைநித் தியமென நுவறல் அப்பிர சித்த விசேடண மாவது தத்த மெதிரிக்குச் சாத்தியந் தெரியாமை பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக் 170 குறித்துச் சத்தம் விநாசி யென்றால் அவனவி நாச வாதி யாதலிற் சாத்திய விநாசமப் பிரசித்த மாகும் அப்பிர சித்த விசேடிய மாவ தெதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி 175 யிருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான் என்றா லவன நான்ம வாதி ஆதலிற் றன்மி யப்பிர சித்தம் அப்பிர சித்த வுபய மாவது 180 மாறா னோற்குத் தன்மி சாத்தியம ஏறா தப்பிர சித்தமா யிருத்தல் பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச் சுகமுத லியதொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா வென்றாற் சுகமுமான் மாவுந் 185 தாமிசை யாமையி லப்பிரசித் தோபயம் அப்பிர சித்த சம்பந்த மாவ தெதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல் மாறாம் பௌத்தற்குச் சத்த வநித்தங் கூறி லவன்ன் கொள்கையஃ தாகலில் 190 வேறு சாதிக்க வேண்டா தாகும் ஏதுப் போலி யோதின்மூன் றாகும் அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென உபயா சித்த மன்னியதரா சித்தஞ் சித்தா சித்த மாசிரயா சித்தம் 195 எனநான் கசித்த முபயா சித்தஞ் சாதன வேது விருவர்க்கு மின்றிச் சத்த மநித்தங் கட்புலத் தென்றல் அன்னியதரா சித்த மாறாய் நின்றாற்கு உன்னிய வேது வன்றா யொழிதல் 200 சத்தஞ் செயலுற லநித்த மென்னிற் சித்த வெளிப்பா டல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக் கசித்த மாகுஞ் சித்தா சித்த மாவது ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல் 205 ஆவி பனியென வையுறா நின்றே தூய புகைநெருப் புண்டெனத் துணிதல் ஆசிரயா சித்த மாறா னவனுக் கேற்ற தன்மி யின்மை காட்டுதல் ஆகாசம் சத்த குணத்தாற் பொருளா மென்னின் 210 ஆகா சம்பொரு ளல்லவென் பாற்குத் தன்மி யசித்த மநைகாந் திகமுஞ் சாதா ரணமசா தாரணஞ் சபக்கைக தேச விருத்தி விபக்க வியாபி விபக்கைக தேச விருத்தி சபக்க 215 வியாபி யுபயைக தேச விருத்தி விருத்த வியபி சாரியென் றாறு சாதாரணஞ் சபக்க விபக்கத் துக்கும் ஏதுப் பொதுவா யிருத்தல் சத்தம் அநித்த மறியப் படுதலி லென்றால் 220 அறியப் படுதனித் தாநித்த மிரண்டுக்குஞ் செறியுங் கடம்போல் அநித்தத் தறிவோ ஆகா சம்போ லநித்தத் தறிவோ என்ன லசாதா ரணமா வதுதான் உன்னிய பக்கத் துண்டா மேதுச் 225 சபக்க விபக்கந் தம்மிலின் றாதல் சத்த நித்தங் கேட்கப் படுதலின் என்னிற் கேட்கப் படலெனு மேதுப் பக்கத் துள்ள தாயி னல்லது சபக்க விபக்கத்து மீட்சித் தாதலிற் 230 சங்கய மெய்தி யநேகாந் திகமாஞ் சபக்கைக தேச விருத்தி விபக்க வியாபி யாவ தேதுச் சபக்கத் தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கும் உண்டாத லாகுஞ் சத்தஞ் செயலிடைத் 235 தோன்றா தாகு மநித்த மாகலின் என்றா லநித்த மென்ற வேதுச் செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்க மின்னினு மாகா சத்தினு மின்னின் நிகழ்ந்தா காசத்திற் காணா தாகலின் 240 அநித்தங் கடாதியி னொத்தலிற் கடம்போல் அழிந்து செயலிற் றோன்றுமோ மின்போல் அழிந்து செயலிற் றோன்றா தோவெனல் விபக்கைக தேச விருத்த சபக்க வியாபி யாவ தேது விபக்கத் 245 தோரிடத் துற்றுச் சபக்கத்தொத் தியறல் சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்த மாதலின் எனின் அநித்த வேதுச் செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகா யத்தினு மின்னினு மின்னி னிகழ்ந்தா காசத்துக் காணாது 250 சபக்கக் கடாதிக டம்மில் எங்குமா யேகாந்த மல்ல மின்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோவெனல் உபயைக தேச விருத்தி யேதுச் 255 சபக்கத் தினும்விபக் கத்தினு மாகி ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்த நித்த மமூர்த்த மாதலி னென்னின் அமூர்த்த வேது நித்தத் தினுக்குச் சபக்கவா காச பரமா ணுக்களின் 260 ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம் பரமா ணுவினிக ழாமை யானும் விபக்க மான கடசுகா திகளிற் சுகத்து நிகழ்ந்து கடத்தொழிந் தமையினும் ஏகதே சத்து நிகழ்வதே காந்தமன் 265 றமூர்த்த மாகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம்போ லநித்தமோ வெனல் விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய் விருத்த வேதுவிற் கும்மிடங் கொடுத்தல் 270 சத்த மநித்தஞ் செயலிடைத் தோன்றலின் சபக்கமா யுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தங் கேட்கப் படுதலிற் சத்தத் துவம்போ லெனச்சாற் றிடுதல் இரண்டினுஞ் சங்கயமா யேகாந்த மல்ல 275 விருத்தந் தன்னைத் திருத்தக விளம்பின் தன்மச் சொரூப விபரீத சாதனந் தன்ம விசேட விபரீத சாதனந் தன்மிச் சொரூப விபரீத சாதனந் தன்மி விசேட விபரீத சாதனம் 280 என்ன நான்கு வகைய தாகும் அத் தன்மச் சொரூப விபரீத சாதனஞ் சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத்து உருவங் கெடுதல் சத்த நித்தம் பண்ணப் படுதலி னென்றாற் பண்ணப் 285 படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட் டநித்தஞ் சாதித்த லான்விப ரீதந் தன்ம விசேட விபரீத சாதனஞ் சொன்ன வேதுச் சாத்திய தன்மந் 290 தன்னிடை விசேடங் கெடச் சாதித்தல் கண்முத லோர்க்கு மிந்திரி யங்கள் எண்ணிற் பரார்த்தந் தொக்குநிற் றலினாற் சயனா சனங்கள் போல வென்றால் தொக்கு நிற்றலி னென்கின்ற வேதுச் 295 சயனா சனத்தின் பராரத்தம்போற் கண்முதல் இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச் சயனா சனவா னைப்போ லாகிக் கண்முத லிந்தியத் துக்கும் பரனாய்ச் சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள 300 ஆன்மா வைச்சா வயவ மாகச் சாதித் துச்சாத் தியதன் மத்தின் விசேடங் கெடுத்த லின்விப ரீதத் தன்மிச் சொரூப விபரீத சாதனந் தன்மி யுடைய சொரூபாத் திரத்தினை 305 ஏதுத் தானே விபரீதப் படுத்தல் பாவந் திரவியங் கன்ம மன்று குணமு மன்றெத் திரவிய மாமெக் குணகன் மத்துண் மையின்வே றாதலாற் சாமா னியவிசே டம்போ லென்றாற் 310 பொருளுங் குணமுங் கருமமு மொன்றாய் நின்றவற் றின்னிடை யுண்மைவே றாதலா லென்று காட்டப் பட்ட வேது மூன்றினுடை உண்மை வேறு படுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியத் தில்லா மையினுந் 315 திட்டாந் தத்திற் சாமானியம் விசேடம் போக்கிப பிறிதொன் றில்லாமை யானும் பாவ மென்று பகர்ந்ததன் மியினை அபாவ மாக்குத லான்விப ரீதந் தன்மி விசேட விபரீத சாதனந் 320 தன்மி விசேட லபாவஞ் சாதித்தல் முன்னங் காட்டப் பட்ட வேதுவே பாவமா கின்றது கருத்தா வுடைய கிரியையுங் குணமுமா மதனை விபரீத மாக்கிய தாதலாற் றன்மி விசேடங் 325 கெடுத்தது தீய வெடுத்துக்காட் டாவன தாமே திட்டாந்த வாபா சங்கள் திட்டாந் தம்மிரு வகைப்படு மென்றுமுற் கூறப் பட்டன விங்க ணவற்றுட் சாதன் மியதிட் டாந்தவா பாசம் 330 ஓதி லைந்து வகையுள தாகுஞ் சாதன தன்ம விகலமுஞ் சாத்திய தன்ம விகலமு முபய தன்ம விகலமு மநன்னு வயம்விப ரீதான் னுவய மென்ன வைதன் மியதிட் 335 டாந்த வாபா சமுமை வகைய சாத்தி யாவி யாவி ருத்தி சாத னாவி யாவி ருத்தி யுபயாவி யாவி ருத்தியவ் வெதிரேகம் விபரீத வெதிரேக மென்ன விவற்றுட் 340 சாதன தன்ம விகல மாவது திட்டாந் தத்திற் சாதனங் குறைவது சத்த நித்த மமூர்த்த மாதலான் யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம் ஆதலாற் காண்புற்றது பரமாணு விலெனில் 345 திட்டாந் தப்பர மாணு நித்தத் தோடு மூர்த்த மாதலாற் சாத்திய தன்ம நித்தத்துவ நிரம்பிச் சாதன தன்மவமூர்த் தத்துவங் குறையுஞ் சாத்திய தன்ம விகல மாவது 350 காட்டப் பட்ட திட்டாந் தத்திற் சாத்திய தன்மங் குறைவு படுதல் சத்த நித்த மமூர்த்த மாதலால் யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம் புத்தி போஒ லென்றால் 355 திட்டாந்த மாகக் காட்டப் பட்ட புத்தி யமூர்த்த மாகி நின்றே யநித்த மாதலாற் சாதன வமூர்த்தத்துவ நிரம்பிச் சாத்திய நித்தத்துவங் குறையும் உபய தன்ம விகல மாவது 360 காட்டப் பட்ட திட்டாந் தத்திலே சாத்திய சாதன மிரண்டுங் குறைதல் அன்றியு மதுதான் சன்னு மசன்னும் என்றிரு வகையா மிவற்றுட்சன் னாவுள உபய தன்ம விகல மாவது 365 உள்ள பொருட்கட் சாத்திய சாதனங் கொள்ளு மிரண்டுங் குறையக் காட்டுதல் சத்த நித்த மமூர்த்த மாதலான் யாதொன்றி யாதொன் றமூர்த்தமது நித்தம் கடம்போ லெனிற்றிட் டாந்த மாகக் 370 காட்டப் பட்டகடந் தானுண் டாகிச் சாத்திய மாயுள நித்தத் துவமும் சாதன மாயுள வமூர்த்தத்து வமுங்குறையும் அசன்னா வுள்ள வுபயதன்ம விகலம் இல்லாப் பொருட்கட் சாத்திய சாதனம் 375 என்னு மிரண்டுங் குறையக் காட்டுதல் சத்த மநித்த மூர்த்த மாதலான் யாதொன் றியாதொன்று மூர்த்தமத நித்தம் ஆகாசம் போலெனுந் திட்டாந் தத்துச் சாத்திய தன்மமா யுள்ள வநித்தமுஞ் 380 சாதன தன்மமா யுள்ள மூர்த்தமும் இரண்டு மாகாச மசத்தென் பானுக் கதன்க ணின்மை யானே குறையும் உண்டென் பானுக் காகாச நித்தம் அமூர்த்த மாதலா லவனுக்குங் குறையும் 385 அநன்னுவய மாவது சாதன சாத்தியந் தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே இரண்ட னுடைய வுண்மையைக் காட்டுதல் சத்த மநித்தங் கிருத்த மாதலின் யாதொன்று யாதொன்று கிருத்தம தநித்தமெனும் 390 அன்னுவயஞ் சொல்லாது குடத்தின் கண்ணே கிருத்த வநித்தங் காணப் பட்ட என்றா லன்னுவயந் தெரியா தாகும் விபரீ தான் னுவயம் வியாபகத் துடைய அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல் 395 சத்த மநித்தங் கிருத்தத் தாலெனின் யாதொன்று யாதொன்று கிருத்த மநித்தமென வியாப்பியத் தால்வியா பகத்தைக் கருதா தியாதொன் றியாதொன் றநித்தமது கிருத்தமென வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல் 400 அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை இன்றியு நிகழ்த லின்விப ரீதமாம் வைதன்மிய திட்டாந் தத்துச் சாத்தி யாவியளா விருத்தி யாவது சாதன தன்ம மீண்டு 405 சாத்திய தன்ம மீளா தொழிதல் சத்த நித்த மமூர்த்தத் தென்றால் யாதொன் றியாதொன்று நித்தமு மன்றது அமூர்த்தமு மன்று பரமாணுப் போலெனின் அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட 410 பரமாணு நித்தமாய் மூர்த்த மாதலிற் சாதன வமூர்த்த மீண்டு சாத்திய நித்த மீளா தொழிதல் சாத னாவியா விருத்தி யாவது சாத்திய தன்ம மீண்டு 415 சாதன தன்ம மீளா தொழிதல் சத்த நித்த மமூர்த்தத் தென்றால் யாதொன் றியாதொன்று நித்த மன்றஃ தமூர்த்தமு மன்று கன்மம்போ லென்றால் வைதன் மியதிட் டாந்த மாகக் 420 காட்டப் பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே யநித்த மாதலிற் சாத்திய மான நித்திய மீண்டு சாதன மான வமூர்த்த மீளா துபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட 425 வைதன் மியதிட் டாந்தத்தி னின்று சாதன சாத்தியங்கள் மீளாமை யன்றியும் உண்மையி னுபயா வியாவி ருத்தி இன்மையி னுபயா வியாவி ருத்தி எனவிரு வகை யுண்மையின் 430 உபயாவி யாவிருத்தி யுள்ள பொருட்கட் சாத்திய சாதன மீளா தபடி வைதன் மியதிட் டாந்தங் காட்டல் சத்த நித்த மமூர்த்த மாதலின் என்றாற் கியாதொன் றியாதொன்று நித்தமன் 435 றமூர்த்தமு மன்றா காசம்போ லென்றால் வைதன்மியா திட்டாந்த மாகக் காட்டப்பட்ட ஆகா சம்பொரு ளென்பாற்கு ஆகாச நித்தமு மமூர்த்தமு மாதலாற் சாத்திய நித்தமுஞ் சாதனமா வுள்ள 440 அமூர்த்தமு மிரண்டு மீண்டில வின்மையின் உபயாவி யாவிருத்தி யாவது சத்த மநித்த மூர்த்த மாதலான் என்றவிடத் தியாதொன் றியாதொன் றநித்த மூர்த்தமு மன்றா காசம் போலென 445 வைதன் மியதிட் டாந்தங் காட்டில் ஆகா சம்பொரு ளல்லவென் பானுக்கு ஆகாசந் தானே யுண்மையின் மையினாற் சாத்திய வநித்தமுஞ் சாதன மூர்த்தமும் மீட்சியு மீளா மையுமிலை யாகும் 450 அவ்வெதி ரேக மாவது சாத்தியம் இல்லா விடத்துச் சாதன மின்மை சொல்லாதே விடுத லாகுஞ் சத்தம் நித்தம் பண்ணப் படாமையா லென்றால் யாதொன் றியாதொன்று நித்த மன்று 455 பண்ணப் படுவ தல்லா ததுவும் அன்றெனு மிவ்வெதி ரேகந் தெரியச் சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப் படுதலு மநித்தமுங் கண்டே மாதலான் என்னின் வெதிரே கந்தெரி யாது 460 விபரீத வெதிரேக மாவது பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல் சத்த நித்த மூர்த்த மாதலின் என்றா லென்று நின்ற விடத்து யாதோ ரிடத்து நித்தமு மில்லையவ் 465 விடத்து மூர்த்தமு மில்லை யெனாதே யாதோ ரிடத்து மூர்த்தமு மில்லையவ் விடத்து நித்தமு மில்லை யென்றால் வெதிரேக மாறு கொள்ளு மெனக்கொள்க நாட்டிய விப்படித் தீயசா தனத்தாற் 470 காட்டு மனுமான வாபா சத்தின் மெய்யும் பொய்யு மித்திர விதியால் ஐய மின்றி யறிந்துகொ ளாய்ந்தென் உரை 1-13. இறைஞ்சிய இளங்கொடி தன்னை-தன்னை வணங்கிய இளங்கொடி போன்ற மணிமேகலையை, அறம் திகழ் நாவின் அறவணன் வாழ்த்தி - அறவுரையால் விளக்கமுறும் நாவினையுடைய அறவணவடிகள் வாழ்த்தி, உரைப்போன் - காவிரிப்பட்டினம் கடல் கோட்படுதற்கு நேர்ந்தகாரணம் கூறுவானாய், நாக நாடாள் வோன் தன் மகள் - நாக நாட்டை யாளும் அரசனுடைய மகளாகிய, பீலி வளை - பீலிவளை யென்பவள், தீவகம் பொருந்தி-தான் மணிபல்லவத் தீவிலிருந்து கொண்டு, வென்வேற்கிள்ளிக்கு - சோழன் நெடு முடிக்கிள்ளி யென்பானுக்கு, தான் பயந்த புனிற்றிளங் குழவியை- தான் பெற்ற ஈன்றணிமை தீராத இளங்குழந்தையை, தனிக்கலக் கம்பலச் செட்டி கைத்தரலும்-தனியே கலஞ் செலுத்திப் போந்த கம்பலச் செட்டிபால் கையடைப்படுத்துச் சோழன் பாற் சேர்க்க என விடுத்தாளாக, வணங்கிக்கொண்டவன் - அவளை வணங்கி அக் குழவியை ஏற்றுச் செல்லும் அச் செட்டி, வங்கமேற்றிக் கொணர்ந்திடும் அந்நாள்-தன் தனிக் கலத்தில் கொண்டுவந்த அக்காலத்தில், அடைகரைக்கு அணித்தா-சோழமண்டலக் கரைக்கு அண்மையில் வரும்போது, கூர் இருள் யாமத்து - மிக்க இருள்சூழ்ந்த நடுவியாமத்தே, அம்பி கெடுதலும் - மரக்கலம் சிதைந்து கெட்டதாக, மரக்கலம் கெடுத்தோன்-கலம்கெட்டுத் தான்மட்டில் தனியே தப்பிக் கரையை யடைந்த அச் செட்டி, மைந்தனைக் காணாது அரைசற்குஉணர்த்தலும்-அரசன் மகனைத்தேடியும் காணாமல் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தலும், அவன் அயர்வுற்று-அரசன் மனம் வருந்தி, விரைவனன் தேடி-விரைந்து சென்று தேடித் திரிந்ததனால், விழாக்கோள் மறப்ப - காவிரிப் பூம்பட்டினத்தில் எடுத்தற்குரிய இந்திரவிழா மறக்கப் பட்டதாக, தன் விழாத் தவிர்தலின்- தனக்குரிய விழாச் செய்யப்படாது கழிதலால், வானவர் தலைவன்-(சினமுற்ற) வானவர்க்கிறைவனான இந்திரன் எ-று. நாக நாட்டு வேந்தனை, "நாக நாடு நடுக்கின் றாள்பவன், வாகை வேலான் வளைவணன்" (மணி. 24:54-5) என்றமையின் ஈண்டுவாளாது "நாக நாடாள்வோன்" என்றொழிந்தார். ஈன்றணிமை தீருமுன்னே தான் பெற்ற குழவியை விடுத்தமையின், "புனிற்றிளங் குழவி" யென்றார். நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை மணிபல்லவம் போந்து புத்த பீடிகையை வலஞ் செய்து வணங்க வந்திருந்த காலத்தே ஆங்குப் போந்த கம்பலச்செட்டிபால் தன் குழவியைக்கையடைப்படுத்துத் தான் அம் மணிபல்லவத்தே தவிர்ந்தமையின், "தீவகம் பொருந்தி" யென்றும், அச் செட்டியும் தனியே கலஞ் செலுத்தி வந்தமை தோன்ற, "தனிக் கலக் கம்பலச் செட்டி"யென்றும், தன்பாற் கையடைப்படுத்துவது அரசிளங் குழவியாதலாலும், கையடைப்படுத்துபவள் அரசன் மனைவி யாதலாலும் "வணங்கி"யென்றும் கூறினார். முன்பும், "தொழுதனன் வாங்கி" (25: 189) என்பது காண்க; அரசிளங் குழவி உயிருய்தலின், "அடைகரை யணித்தா" என்றும், அதனைச் செட்டி காணா தல மருதற் கேது கலஞ்சிதை காலமாதலின், "கூரிருள் யாமத்"தென்றும் குறித்தார். தன் குழவியை யிழந்த கொடுந் துயரம் சோழன் உள்ளத்தைக் கவர்ந்து வருத்துதலின், விழாவைப்பற்றிய நினைவு மறைவதாயிற் றென்றற்கு, "அயர்வுற்" றென்றும், விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப" என்றும் தெரித்துரைத்தார். இதனாற் பயன், குழவியின் மறைவுகுறித்து அரசன் உள்ளத்துத் தோன்றிய அயர்ச்சி, காவிரிப்பூம்பட்டினம் கெடுதற் கேதுவாயிற் றென்பதாம். 14-18. நின் உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த - உனக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனது நெடியகுலத்திற் பிறந்த, மன்னுயிர்முதல்வன்-மிக்க உயிர்கட்கெல்லாம் அருள் செய்யும் முன்னோனொருவன், மகர வேலையுள் முன்னிய வங்கம்-மகரமீன் வாழும் கடலில் தான் செலுத்திச் சென்ற மரக்கலம், பசுங் கம்பளத்து பொன்னின் ஊசி துன்னிய தென்ன - பசுமையான கம்பளத்தில் இரும்பாற் செய்த ஊசியொன்று எளிதிற்றைத்து இடந் தெரியாது மறைந்தாற் போல, முங்கிக் கேடுற - மூழ்கிக் கெட்டதாக, தொடு கடல் உழந்துழி-ஆழ்ந்த கடற்கண்ணே வருந்தினகாலத்து எ-று. கப்பளத்து ஊசி துன்னியதென்ன, கடலிடத்தே வங்கம் கேடுற என இயைக்க. கோவலன் பெயர் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகும் பான்மையளாதலின், "நின்னுயிர்த் தந்தை" யென்றும், அவன் குலத்து முன்னோன் எவ்வுயிர்க்கும் அருள் மேவிய அறவோனாதலின் "மன்னுயிர் முதல்வன்" என்றும் சிறப்பித்தார். பிறாண்டும் அவனை, "ஆதி முதல்வன் போதி மூலத்து, நாதனாவோன்" (29:23-4) என்பர். இரும்பைக் கரும்பொன்னென வழங்கும் வழக்குப்பற்றி, "பொன்" னென்றார். பசுங் கம்பளங் கருங் கடற்கும், பொன்னினூசி வங்கத்துக்கும் உவமை. கடலலையால் உதைப்புண்டு ஏழுநாள்காறும் மிதந்து வருந்தினமையின், "தொடுகடல் உழந்துழி" என்பாராயினர். 19-29. ஏழு நாள் எல்லை-இவ்வாறு ஏழுநாள்காறும் வருந்தி, இடுக்கண் வந்து எய்தா-உயிரிழக்குந் துன்பம் வந்து நெருங்கிய எல்லையில், சீலம் வாய்மையின் வழுவாக் கொண்ட பான்மையின்-ஐவகைச் சீலமும் நால்வகை வாய்மையும் குற்றமற மேற்கொண்டொழுகும் இயல்பின னாதலால், தனாது பாண்டு கம்பளம்-இந்திரன் தான் வீற்றிருக்கும் பாண்டு கம்பளமிட்ட இருக்கை, நடுக்குற்ற தன்மை நோக்கி - அசையத் தொடங்கிய வமைதி கண்டு, போதி மூலத்து ஆதிமுதல்வன் நாதனாவோன்-இவ்வணிகன் போதியின் அடியிலிருந்து நோற்ற ஆதி முதல்வனும் நாதனுமாகிய போதி சத்துவனாகும் தகுதியுடையவனாவான், நளி நீர்ப்பரப்பின்-பெரிய கடற் பரப்பிலே, எவ்வமுற்றான் தனது எவ்வம்தீர் என - துன்ப முற்ற இவனது துன்பத்தைப் போக்குவாயாக என ஆங்கிருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணிக்கவும், அறவரசாளவும்-உலகில் அறம்புரியும் வேந்தரே அரசாளவும், அறவாழிஉருட்டவும்-அவரது அறவாணையே நிலவவும், பிறவிதோறு உதவும் பெற்றியன் - எடுத்த பிறப்புத் தோறும் அவர்கட்கு உதவிபுரியும் தன்மையுடையவளாகிய அவள், பவ்வத்து எடுத்து - கடலினின்றும் அவனையெடுத்து, பாரமிதை முற்றவும் - கரை சேரவும், உதவும் பெற்றியள்-உதவிய செய்கை யுடையளாவாள், என்று - என, அறிந்தோர் சாரணர் - அந்நிகழ்ச்சியை யறிந்த சாரணர் வந்து, காரணம் கூற - நினக்கு மணிமேகலை யென்ற பெயர் வைத்தற்குரிய காரணமிது வென்று கூறவே எ - று. ஏழு நாள் வரையிற் கடலிடை யுழந்தவன் உயிர் இழக்கும் நிலை யெய்திய செய்தியை "இடுக்கண் வந்தெய்தா" என்று குறித்தார். அக்காலமே இந்திரன் இருக்கும் பாண்டு கம்பளம் அசைந்து அவற்கு இவனுறுந் துன்பத்தை யறிவிக்குங் காலம். உலகத்தில் அறவோர் அறச்செயலின் மிகுதியையும் அவர்க்குற்ற கெடுதியையும் பாண்டு கம்பளம் அசைந்து அவ்விந்திரற் கறிவிக்கு மென்பது புத்தர் சமணர்களின் கொள்கை. உடனே இந்திரன் அருகு நின்ற மணிமேகலா தெய்வத்தை நோக்கி, "நீ சென்று அவன் இறப்புத் துன்பத்தைப் போக்குக" வென்று பணிப்பவன். அவன் இயல்பை விரியக் கூறுங் கால மன்மையின் சுருக்கமாக, "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதனாவோன்" என்று அறிவுறுத்தி, "நளிநீர்ப் பரப்பி னெவ்வ முற்றான்றன் எவ்வந்தீர்" என்று பணித்தான். நாதனாவோரைப் போதிசத்துவர் என்ப- போதி - உண்மை ஞானம்; சத்துவரென்பது பாலி மொழியடியாக வந்து வீரனென்னும் பொருள் படுவது. எனவே, போதி சத்துவ ரென்பது ஞானமே வடிவாக முயலும் சான்றோ ரென்பதாம். நாதனாவோ னென்பதும் இக்கருத்தையே வற்புறுத்துமாறு காண்க. இனி மணிமேகலா தெய்வத்தின் இயல்பினை, அறவரசாளவும் அறவாழியுருளவும் மக்கட்குதவும் மாண்புடையளென்று கூறினான். உதவும் பெற்றியள் என்பதை "பாரமிதை முற்றவும்" என்புழியும் கூட்டுக. பாரமிதை - கரை; இதனின் வேறாக உயிர்நிலை யென்றும் சால்பென்றும் பொருள் கூறுதலுமுண்டு. "நின்னுயிர்த் தந்தை" யென்பது முதல் "பிறவி தோறுதவும் பெற்றியள்" என்பது வரை, சாரணர் கோவலற் குரைத்த கூற்றினைக் கொண்டு கூறியது. 30-37. அந்த உதவிக்கு - அந்த வுதவி குறித்து, ஆங்கு - நினக்குப் பெயரிடும் நாளில், அவள் பெயரை - அம்மணிமேகலையின் பெயரையே, நினைத் தந்தை இட்டனன் - உனக்கு உன் தந்தையாகிய கோவலன் இட்டான்; தையல் நின் துறவியும் - அவன் மகளாகிய உனது துறவினையும்; அன்றே கனவின் நனவென அறைந்த-அன்றிரவே அவன் கனவிற் றோன்றி நனவிற் றெளியப் பேசுவது போலச் சொல்லிய; மென் பூமேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப - மெல்லிய பூப்போன்ற மேனியையுடைய அம்மணிமேகலா தெய்வ மெனப்படும் அவள் கருத்துக்கேற்ப; அவன் இடு சாபத்து - அவ்விந்திரனிட்ட சாபத்தால்; நகர் கடல்கொள்ள, காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொண்டொழியவே; நின் தாயரும் யானும் - நினக்குத் தாயாகிய மாதவியும் சுதமதியு முதலாயினாருடன் யானும்; பகரும் நின் பொருட்டால் - பலரும் புகழும் உன்னைக் காணும் பொருட்டு; இப்பதிப்படர்ந்தனம் - இக் காஞ்சியம்பதியை யடைந்தேம்; என்றலும் - என்று அறவணவடிகள் கூறினாராக எ - று. வானவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின். என்பவட்கொப்ப, அவனிடு சாபத்தின் நகர் கடல்கொள்ள, நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம் என்றலும் என இயைக்க, வானவர் தலைவனாகிய அவன்,. நோக்கி, எவ்வந் தீரென, பவ்வத்தெடுத்துப் பாரமிதை முற்றவும், உதவும் பெற்றியள் என்று சாரணர் காரணம் கூற, அந்த உதவிக்கு அவள் பெயரைத் தந்தை இட்டனன்; அவட்கொப்ப, சாபத்து, கடல்கொள்ள, படர்ந்தனம் எனக் கூட்டிக் கொள்க. விழாக்கோள் மறந்தது காரணமாக இந்திரன் சினங்கொண்டு இட்ட சாபத்தால் நகர் கடல்கொள்ளப்பட்டது கூறுவான் தொடங்கிய அறவணன், மணிமேகலை இட்ட சாபமும் அக் கடல்கோட்கு ஏதுவாதலின் அதனையும் கூட்டி ''மணிமேகலா தெய்வம் என்பவட்கொப்ப அவனிடு சாபத்து'' என்றான். தன் விழாக்கோள் மறந்த சிறு பிழைக்குப் பெருநகர மொன்றை யழிக்குஞ் சினங் கொண்ட இந்திரன்பால் மணிமேகலைக்கு அருவருப்புண்டாகா வண்ணம், அவன் கோவலன் குலத்து முன்னோனுக்குற்ற இடுக்கண் களைந்த வரலாற்றையும், அவனது அருட்பணியை மேற்கொண்டாற்றிய மணிமேகலா தெய்வத்துக்கும் மணிமேகலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டுதற்குக் கோவலற்குச் சாரணர் உரைத்தவற்றையும் எடுத்தோதினான். இது மணிமேகலை நகரழிவு குறித்து வருந்தாமை விளைவித்தது. நினையென்புழி நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்று. தையல் மகளென்னும் பொருட்டு; இதனை விளியாக்கினுமமையும். துறவு துறவியென நின்றது. பகரும் என்பதை ''இப்பதி'' யென்பதனோடு டியைத்தலுமொன்று. இந்திரவிழாவை மறந்தது குறித்து மணிமேகலா தெய்வம் சாபமிட்ட வரலாற்றை முன்னே, ''வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது, மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள், அணி நகர் தன்னை யலைகடல் கொள்கென, இட்டனள் சாபம்'' (மணி. 25: 197-200) என்றமையின். ஈண்டு வாளாது ''என்பவட்கொப்ப'' என்றொழிந்தார். 37-45. அறவணன் தாள் இணை இறைஞ்சி - அது கேட்ட மணிமேகலை அறவணவடிகளின் இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, பொன்திகழ் புத்தபீடிகை போற்றும் தீவதிலகையும் - மணிபல்ல வத்திலுள்ள பொன்போல் ஒளிவிடும் புத்த பீடிகைக்குக் காவல் புரிந்த தீவதிலகை யென்பாளும், இத் திறம் செப்பினள் - நீவிர் கூறிய இச் செய்தியை எனக்குத் தெரிவித் துள்ளாள்; ஆதலின் - ஆதலால் இதிலொரு வியப்பில்லை; அன்ன அணி நகர் மருங்கே - அந்நகரமே போல அழகிய வஞ்சிநகர்ப் புறத்தே; வேற்றுருக்கொண்டு - மாதவனொருவன் உருக்கொண்டு சென்று; வெவ்வேறுரைக்கும் - ஒருவரினொருவர் வேறுபட்டுச் சொல்லும்; நூற்றுறைச் சமய நுண் பொருள் கேட்டு - நூல் நெறியாக வந்த நுண்ணிய சமயப் பொருளைக் கேட்டு; அவ்வுரு என்ன - யான் மேற்கொண்டிருந்த எனக் கொவ்வாத உருவம்போல ; ஐவகைச் சமயமும் - ஐந்து வகைச் சமயத்து நுண் பொருள்கள்; செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்-எனக்குச் செம்மையுடைய வாகத் தோன்றாமையின் மனத்துட் கொள்ளா தொழிந்தேன்; அடிகள்-அடிகளே; மெய்ப்பொருள் அருளுக-உண்மைப் பொருளையடி யேனுக்கு உரைத்தருளுவீராக; என்ன - என்று வேண்டி நின்றாளாக எ - று. அறவணன் கருத்தை யறிந்து கொண்டமையின். மணிமேகலை, நகர்க்குற்ற அழிவினைத் தான்முன்பே அறிந்திருந்த செய்தியை யுரைத்தாள். ஆதலால் என்பது முதலாயின எஞ்சி நின்றன. ஆதலின் அது பற்றிய பேச்சு வேண்டா வென்றலும், தன் கருத்தினைச் சட்டென வெளியிடுதலும் சீலமன்மையின், “ஆதலின்'' என வொழிந்தா ளென்று மாம். வஞ்சி நகரும் காவிரிப் பூம்பட்டினம் போல எல்லா நலங்களும் நிறைந்திருந்தமை தோன்ற, “அன்ன அணிநகர்'' என்றாள். தான் வேற்றுருக் கொண்ட காரணம் கூறிற்றிலள், “இளையள் வளைய ளென் றுனக் கியாவரும், விளைபொரு ளுரையார்" (26;68-9) எனக் கண்ணகி யுரைத்த காரணம் அறவணன் இயல்பாகவே யறிந்தவ னென்று. ஒருவரோ டொருவர் ஒவ்வாமலுரைத்தலின், ''வெவ்வேறுரைக்கும்'' என்றும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நூலைப் பின்பற்றி நிலவுதலால், “நூற் றுறைச் சமய'' மென்றும் கூறினாள். தான் காஞ்சிமாநக ரடைந்து அறவணன் முதலாயினாரைக் கண்ட பின்பே அவ்வேற்றுருவைக் களைந்து உண்மையுருவொடு நின்றமையின், “அவ்வுரு'' வெனச் சுட்டியும், தனக்கு ஒவ்வாமை தோன்ற, அதனையுவமித்து முரைத்தாள், செவ்விது என்பதனை ஒவ்வொரு சமய நுண்பொருட்கு மேற்றுக. இனி அவ்வுருவை வையாமை போல இவற்றையும் வைத்திலேன் என்றுமாம். வையாமைக் கேது அவற்றால் மெய்ப்பொருளைத் தெளிய முடிய வில்லை; அதனை நீவிரே யுரைத்தல் வேண்டும் என்றற்கு, “அடிகள் மெய்ப்பொருள் அருளுக'' என வேண்டினாள். 46-48. நங்காய் - நங்கையே; நொடிகுவென் - நீ கேட்கும் மெய்ப் பொருளைக் கேட்டுத் தெளிதற்குரிய நெறியைச் சொல்லுவேன்; நீ நுண்ணிதின் கேள் - நீ அறிவா னுணுகிக் கேட்பாயாக; ஆதி சினேந்திரன் - ஆதி புத்தன் மேற்கொண்டுரைத்த, ஏதம் இல் பிரத்தியம் கருத்தளவு என்ன - குற்றமில்லாத காட்சியும் கருத்து மென்று; அளவை இரண்டே-அளவைகள் இரண்டோயாகும் எ-று. மகளிருள் அறிவாற் சிறந்து நிற்றலின், “நங்காய்'' என்றும், கேட்போர் வேட்கை யறிந்தேற்ப வுரைக்குமாறு தோன்ற, “நொடிகுவென்'' என்றும், சொல்லுந்திறம் பல்வேறு வகையாய்ப் பரந்து சேறலின், கேட்கும் அவள், கேட்கப்படும் பொருளை நுணுகியறியும் மனவொருமை யுடையளாதல் வேண்டுமென்பான், “நுண்ணிதிற் கேள்'' என்றும் கூறினான். பௌத்தம் சினேந்திரனாற் கூறப்பட்ட தென்பது முன்பே கூறப்பட்டதாயினும் ஈண்டுக் கூற்று நிகழ்த்துவோன் வேறாதல் பற்றி, “ஆதி சினேந்திரன்'' என்றான். சினேந்திரர் பலராதல் பற்றி, ஆதிசினேந்திரனெனத் தெரித்து மொழிந்தான். காட்சியைப் பிரத்தியக்ஷமென்றும் கருத்தை அனுமான மென்றும் கூறுபவாதலின், அவற்றைப் பிரத்தியமெனச் சிதைத்தும், கருத்தளவையென மொழிபெயர்த்தும் கூறினான். காட்சி காண்டல் என்பன சவிகற்பக் காட்சிக்கும் பொது வாதலால், பிரத்தியம் “சுட்டுணர்'' வாய் வேறுபடுவது பற்றி மொழி பெயர்க்கா தொழிந்தாரென வுணர்க. ஏதமில் என்பது கருத்தள வோடும் இயையும்; எனவே, ஏதமில் பிரத்தியம். ஏதமில் கருத்து என அளவை இரண்டாதல் பெற்றாம். பிரத்தியக்கத்துக்குரிய குற்றம், “சுட்டல் திரிதல் கவர்கோடல்'' என்றும், “சுட்டுணர் வொடுதிரி யக்கோட லையந் தேராது தெளிதல் கண்டுணராமை'' என்றும் கூறிய வாற்றா லறிக. கருத்தளவைக்குரிய குற்றங்களைப் பின்னர்ப் “பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப் போலியுமாம்'' என வகுத்துக் கூறுப. மெய்யுணர்வுப் பேறு நேர்முகமாகவும் வழிமுகமாகவும் நிகழ்த்தலின், பௌத்தர்கள் நேர்முகப் பேற்றைப் பிரத்திய மென்றும், வழி முகத்தைக் கருத்தென்றும் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபற்றி “அளவை யிரண்டே'' யென்றார்; ஏகாரம்: தோற்றம்; ஏனைப் பத்தும் எட்டும் ஆறும் என்றவற்றுள், இரண்டை வாங்கிக் கொண்டதாகக் கொள்வார்க்குப் பிரிநிலையுமாம். 49-51. சுட்டுணர்வை - ஒரு பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டுணரும் உணர்வை; பிரத்தியக்கம் எனச் சொலி - காட்சியளவை யென்று மேற்கொண்டு; நாம சாதி குணக் கிரியைகள் - பிறராற் கொள்ளப்படும் பெயர் சாதி குணம் தொழில் என்பவை, அனுமானத்தும் அடையும் என -கருத்தளவைக்கும் செல்லுமென வாராய்ந்து தெளிந்து; அவை விட்டனர் - அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர் எ - று. காட்சியாவது கண் முதலிய பொறிகளால் வண்ண முதலிய வற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின் இயல்பை இடம் காலம் பொருள் ஒளிகளோடு படுத்துக் “கிட்டிய நாம சாதிக் குணக் கிரியையின் அறிவதாகும்'' என அளவை நூலார் கூறுதலின், அவரின் வேறுபடுத்தற்குச் “சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச் சொலி விட்டனர்'' என்றும், நாமசாதிக் குணக்கிரியையின் வைத்தறியும் இலக்கணம் காட்சிக் கேயன்றிக் கருத்தளவைக்குஞ் சேறலின், அஃது அதிவியாத்தியாதல் கண்டு, “அவை விட்டனர்'' என்றும் கூறினார். சுட்டுணர்வு பொருண்மை மாத்திரை கண்டொழித லென்னும் பொருளதாதலை “சுட்டுணர் வெனப்படுவது, ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்'' (மணி. 27: 61--2) என்பர். சுட்டுணர்வு நிருவிகற்பக்காட்சி யென்றும், அனுமானத்தும் என்ற எச்ச உம்மையால் நாம சாதிக் குணக் கிரியையின் வைத்துணரும் உணர்வு சவிகற்பக்காட்சி யென்றும் கொள்க; இவற்றை முறையே இந்திரிய ஞானமென்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுப. நாமசாதி முதலிய வற்றைத் திக்கநாகர் ''பஞ்சவித கற்பனை'' யென்றும், இவை, “யாவும் அனுமான வனுமேய பாவம்'' என்றும் கூறுவரெனத் தருமகீர்த்தி உரைத்த தத்துவபிந்துவின் உரைகாரர் (90.17) குறிக்கின்றார் தத்துவ சங்கிரகம், நியாயபிந்து, பிரமாண சமுச்சமும், நியாயப் பிரவேசம் முதலிய நூலுரைகளில் இவற்றின் இயல்பைப் பரக்கக் காண்க. சுட்டுணர்வு சவிகற்பக் காட்சிக்கு அடிப்படையாகும்; அது சவிகற்பக் காட்சியைப் பயவாவிடின் குற்றமாம். ஆதலாற்றான், அளவை நூலார், அதனைப் பிரமாணாபாசங்கள் எட்டனுள் ஒன்றாகக் கூறுகின்றனர். மற்று : வினைமாற்று. 52-56. காரண காரிய சாமானியக் கருத்து-காரணானுமானம் காரியானுமானம் சாமானியானுமான மெனப்படும் மூன்று; ஓரின் - பொதுப்பட நோக்குமிடத்து; பிழைக்கையுமுண்டு-உண்மையுணர் தற்குதவாது குற்றப்படுதலுமுண்டு; பிழையாதது-அவற்றுள் வழுப் படாதது; கனலிற் புகைபோல் காரியக் கருத்து - கனலும் புகையும் போலக் காரியானுமான மொன்றேயாகும்; ஏனை அளவைக ளெல்லாம் - மற்ற ஆகம முதலாகக் கூறிய அளவைகளெல்லாம்; கருத்தினில் ஆனமுறைமையின் - வழியளவைக்குரியவாகும் முறைமையினையுடையவாதலால்; அனுமானமாம் - கருத்தளவைக்கண் அடங்கும் எ - று. அளவை வாதி “மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்'' என்று கூறிய அனுமான வகையை மறுத்துரைத்தலின் ''ஓரிற் பிழைக்கையு முண்டு'' என்றார். பொது வென்றது சாமானிய கருத்தும், எச்சமென்பது காரியக் கருத்தும், முதலென்பது காரணக் கருத்துமாக அறவணவடிகளாற் கொண்டு கூறப்படு கின்றன. சாமானியக் கருத்தின்கண், சாதனமும் சாத்தியமும் அந்நுவயமாய் இல்லாமையின், ஐயத்துக்கிடமாம்; கானத்தில் எழும் யானையொலி, அக்கானத்தே இன்னவிடமென வரைந்து காட்டாமையின் பிழையாம் என்று நியாயபிந்து (3. 65) கூறுகிறது, கருமுகில் கண்டவிடத்து மழை பெய்யுமெனத் துணியும் காரணானு மானத்தின் சாதனமாகிய முகில் காரணமாகச் சாத்தியமாகிய மழை வரவு ஒருதலையாய்த் துணியப்படாமையின் பிழையாம். காரணமாகிய முகிற்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமாகக் காற்று முதலிய வுண்மையின் அவாந்தர காரணம் சாத்தியத்திற்குக் கட்டுப்பட்டதன்றாதலால் துணிவு ஒரு தலையாய்ப் பெறப்படாதென்பர். இவற்றின் விரிந்த ஆராய்ச்சியைத் திக்கநாகர்1 முதலியோர் கூறிய நுல்களிற் கண்டு கொள்க. காரியானு மானத்தின்கண், ஏதுவாகிய காரியத்தின்கண், காரணமாகிய பொருளுண்மை நியதமாதலின் பிழைத்தற்கு இடமின்மைபற்றி, “பிழையாதது கனலின் புகைபோற் காரியக் கருத்தே'' என்றார். ஆகம மேற்கோள் அதனைக் கூறுவோனும் கூறும் பொருளும் என இருதிறமாக வகுக்கப்பெற்றுக் கூறுவோனாயின் ஆகமம் அனுமானத் தடங்குமென்றும் பொருளாயின் காட்சிக்கண் அடங்குமென்றும் திக்கநாகர் கூறுகின்றார். இவ்வாறே ஐதிகத்தை ஆகமத்தும், அருத்தாபத்தியை யனுமானத்தும் நையாயிகரும் வைசேடி கரும் அடக்கிக் கூறுதலின், காட்சியுங் கருத்து மொழிந்த அளவைகள் யாவும் கருத்தினும் காட்சியினும் அடங்குமாறு கண்டு, காட்சிக்கண் அடங்குவன கருத்தின் கண்ணும் அடங்குமென்று தேர்ந்து ''கருத்தினிலான முறைமையின் அனுமானமாம்'' என்றார். பிற: அசைநிலை. 57-63. பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துள - மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் உபநயமும் நிகமனமும் என ஐந்து உறுப்புக்கள் கருத்தள வைக்குண்டு; அவற்றிற் பக்கம் இம்மலை நெருப்புடைத்து எனல் - அவ்வைந்தனுள் மேற் கோளாவது இம்மலை நெருப்பை டையது என்று மொழிதல்; பொருந்து ஏது புகையுடைத்தா தலால் எனல் - இம்மேற்கோளைச் சாதித்தற்குப் பொருந்திய ஏதுவாவது புகையுடைமையால் என்பது; திட்டாந்தம் வகையமை அடுக்களைபோல் - எடுத்துக் காட்டாவது பல வகைப்பட்ட அடுக்களை போல என்று சொல்லுதல்; உபநயம் மலையும் புகையுடைத் தென்றல் - உபநயமாவது இம்மலையும் புகையுடையதாம் என்பது; நிகமனம் புகையுடைத்தே நெருப் புடைத்து எனல்-நிகமனமாவது யாது யாது புகையுடையது அது நெருப்புடையது என்று துணிந்து கூறல் எ - று. ஆதி சினேந்திரன் கூறிய இருவகை யளவைகளையும் முறையே கூறுவார், அளவைவாதி அவ்விருவகையையும் பற்றிக் கூறியவற்றை மேற்கொண்டு அவற்றுள் தம் சமயக் கருத்துக் கொவ்வாதனவற்றை விலக்கித் தூய்மை செய்து வந்தாராகலின், இனி அனுமானத்துக்கு உறுப்பாகிய ஐந்தையும் விளக்கிக் கூறுவாராயினார். அனுமானம் தன் பொருட்டென்றும் பிறர் பொருட்டென்றும் இரு வகைப்படும் என எல்லாப் புத்தநூல்களும் கூறியிருப்பவும், இவ்வாசிரியர் கூறாராயினார். இவ்வகைமையை ஏனோரும் மேற்கொண்டிருத்தலின் பதார்த்த தரும சங்கிரக முடையார் சுநிச்சிதார்த்தம் என்றும் பரார்த்தம் (பக். 231) என்றும், நியாயபிந்து டீகையுடையார் ஞானான்மகம், சத்தான்மகம் (பக்.21) என்றும், சத்த பதார்த்தி யுடையார் அருத்தரூபத்வம் சத்தரூபத்வம் (பக். 154) என்றும் கூறுப. புத்தருட் சிலர் பக்க முதலிய வைந் துறுப்பும் பரார்த் தானுமானத்துக்குரிய வென்றும் பக்க முதலிய மூன்று சுவார்த் தானுமானத்துக்குரிய வென்றுங் கூறுபவாயினும் இவ்வகைகள் பெயரால் வேறுபடினும் கருத்து ஒன்றாதல் காண்க. வாற்சாயனர் இவ்வைந்தனோடு, ஜிஞ்ஞாசம், சமுசயம், சக்கிய பிராப்தி, பிரயோசனம், சமுசய வியுதாசம் என்ற ஐந்தும் கூட்டிப் பத்தாகக் கூறுவ (நியாயபாடி 1. 1. 32) "ரென்றும். பத்திரபாகு வென்பார், இப்பத்தையும் பெயர் வேறுபடுத்து, பிரதிஞ்ஞை, பிரதிஞ்ஞா விபத்தி, ஏது, ஏதுவிபத்தி, விபக்கம், விபக்கப் பிரதிசேதம், திருட்டாந்தம், ஆகாங்ஷை, ஆகாங்ஷா பிரதிசேதம், நிகமனம் என்று கூறுவரென்றும் பேராசிரியர் இராதாகிருட்டினனார்1 எடுத்துக்காட்டுகின்றார். பக்கம், தன்பக்கம் மறுதலைப் பக்கம் என வகுக்கப்பட்டுச் சபக்கம்விபக்கம்என மேலே வழங்குபவாதலின், ஈண்டு மேற்கோளென்றாதல் பிரதிஞ்ஞை என்றாதல் கூறாராயினார். பொருந்தேது என்றதனால், பொருந்தாஏது வென்பதுண் டென்றும், அது குற்றமுடைத்தென விலக்கப்படுமெனவும் அறிக. அடுக்களை, ஒரு கிளையும் பல கிளையுமுடையவாய்ப் பல வகைப்படுவதுபற்றி, "வகையமை அடுக்களை" யென்றார் ; இனி, "வகையமை யடுக்களை" யென்றற்கு, "துணிபொருள் வகையும் ஏதுப்பொருள் வகையும் பொருந்தியுள்ள பாகசாலை" யென்றும், "முறையானமைந்த பாகசாலைபோலும் எனக் கொள்வது மொன்" றென்றும், "முறையாவது வியாப்தி வசனத்துடன் கூறுதல்" என்றும் கூறுவர்2 திரு. நாராயணையங்காரவர்கள். பக்கப் பொருளை ஏது திட்டாந்தங்களா லுண்மையெனத் துணிந்தபின் அத்துணிபை யெடுத்தோதுவதுஉபநய மாதலின், "மலையும் புகையுடைத் தென்ற" லென்றார். திட்டாந்தப் பொருளைத் தழுவி நிற்றலின் உம்மை எச்சப் பொருட்டு. 64-67. யாதொன்று நெருப்புடைத்தல்லாது அது புகைப் பொருத்தம் இன்று புனல்போல்-யாதொன்று நெருப் புடைய தன்றோ அது புகையொடு பொருந்துவதன்று புனல்போல; என்றல் - என்று சொல்லுவது; மேவிய பக்கத்து மீட்சிமொழி யாய்-மேற்கோளாய்ப் பொருந்திய பக்கத்து மறு தலையாய்; வைதன்மிய திட்டாந்தமாகும்- வைதன்மிய திட்டாந்தமெனப் படும் எ - று. யாதொன்று புகையுடையது அது நெருப்புடையது. அடுக்களை போல என்பது சாதன்மிய திட்டாந்தம். அதனை "வகையமையடுக் களை போல் திட்டாந்தம்" என்று கூறினாராகலின், அதன் பக்கத்து மீட்சி மொழி நெருப்புடைத் தல்லாதது யாது அது புகைப் பொருத்த முடையதன்று என்பது பெறப்படுவது கொண்டு, "மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்" என்றும், இதனை வற்புறுத்தும் திட்டாந்தம் இது வென்பார், "வைதன்மிய திட்டாந்தமாகும்" என்றும் கூறினார். பக்க முதலியவற்றை விளக்கி வருபவர், புகையுடைத்தே நெருப்புடைத்தென நிகமனம் கூறிய வழி, அவ்வாறு கூறாது, யாதொன்று நெருப்புடைத் தல்லாது அது புகைப் பொருத்தமின்று புனல்போல் என எதிர்மறை முகத்தால் வற்புறுத்துவது யாண்டடங்கும் என்பார்க்கு, அது பக்கத்து மீட்சி மொழியாய் வைதன்மிய திட்டாந்தமாம் என்றாரெனக் கொள்க; வைதன்மிய திட்டாந்தத்தின் இயல்பைப் பிறாண்டுக் கூறுப. 68-71. தூய காரிய ஏது சுபாவம் ஆயின் - குற்றமற்ற காரிய வியை பிற்றாகிய ஏது சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமமாவதை யாராயுமிடத்து;பக்க தன்ம வசனமாகும்-அது பக்க தன்ம வசனம் எனப்படும்;சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அநித்த மாம் என்பது பக்கம்; பண்ணப்படுதலால் - எழுப்பப்படுவதால் என்பது பக்க தன்ம வசனம் எ - று. காரியம் காரணம் பொது என முன்னர்க் கூறிய ஏதுவகை மூன்றனுள், "பிழையாதது காரியக் கருத்தே" (54.5) என்றாராகலின், ஈண்டு அதனைத் "தூய காரிய வேது" என்றும், இயல்பாய தன்மம் என்ற பொருண்மை தோன்றச் "சுபாவம்" என்றும் கூறினார். பக்க தன்ம வசனமாகும் என்பது சுபாவத்தோடும் சென்றியையும். இவ்வாறே திக்க நாகரும், "அநித்ய: ஸப்தைதி பஷ வசனம். க்ருதகத்வாத்இதி பஷதர்ம வசனம்" என்று கூறுவர். 72-76. சபக்கத் தொடர்ச்சி - சபக்கத் தொடர்ச்சி யென்பது; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது-யாதொன்று செய்யப்படுவதோ; அநித்தியம் கடம்போல் என்றல்-அஃது அநித்தமாகும் குடம் போல் என்று சொல்லுவதாம்; யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாது அநித்தமல்லாததோ அது செய்யப்படாததாம் ஆகாயம் போல என்று மறு தலைப்பக்கமாக நின்று சொல்லுவது; விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க - விபக்கத் தொடர்ச்சி யென்னும் மீட்சிமொழி யென்று அறிக எ - று. பக்க தன்மமாகிய பண்ணப்படுதலா லென்பதையே தொடர்ந்து பக்கப் பொருளாக நிறுத்தி மேலே சாதித்த அநித்தத்துவத்தை வற்புறுத்துவது பற்றிச் "சபக்கத் தொடர்ச்சி" யென்றும் சாதிக்கப்பட்ட பொருட்கு மறுதலைப் பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி மறுதலை யேதுவால் ஏற்ற திட்டாந்தங் காட்டிச் சாதித்தலின், "விபக்கத் தொடர்ச்சி" யென்றும், அவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க வசனத்தின் மறுதலை யாதலின் "மீட்சி மொழி"யென்றும் கூறினார். சபக்கம்-தன்பக்கம். இதன் மறுதலை விபக்கம். திக்க நாகர் சபக்கத் தொடர்ச்சியை, சபக்கானுகம வசன மென்றும், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியை வெதிரேக வசன மென்றும் உரைக்கின்றார். 77-84. அநந்நுவயத்திற் பிரமாணமாவது - அந்நுவய வியாத்தி யில்லாத அநந்நுவய அநுமானத்தாற் பொருளை யுணருந் திறமாவது; இவ்வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல் செவ்விய பக்கம்- இவ் வெற்றிடத்தில் குடம் இல்லை என்பது நல்ல பக்க மொழியாகும்; தோன்றாமையில் எனல் பக்க தன்ம வசனமாகும் - தோன்றாமையால் என்னும் ஏது பக்க தன்ம வசனமாம்; இன்மையின் கண்டில முயற்கோடுஎன்றல் அந்நெறிச் சபக்கம்-யாதொன்று வெள்ளிடை இல்லையோ அதனைக் காண்பது இல்லை, முயற்கோடு போல என்பது அந்நெறியிற் பெறப்படும்சபக்கத் தொடர்ச்சியாம்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும் கை நெல்லிபோல் எனல் - யாதொன்று வெள்ளிடை யுள்ளதோ அது காணப்படும், கையகத்துற்ற நெல்லிக்கனிபோல என்பது; ஏற்ற விபக்கத்து உரை எனலாகும் - அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி மொழி யாகும் எ - று. ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வெள்ளிடை யென்றது சபக்க விபக்கங்கட்குக் கூட்டியுரைக்கப்பட்டது. அந்நுவய வியாத்தியில்லாதது அநந்நுவயம் என்றாயிற்று. பிரமாணம், அளத்தற் கருவி மேனின்றது. வெள்ளிடை யென்பதே குடமின்மை உணர்த்து மென்பாரை மறுத்தற்குச் "செவ்விய பக்க" மென்றார். முயற்கோ டென் புழித் திருட்டாந்த வியைபாகிய உவம வுருபு எஞ்சி நின்றது. தோற்றரவடுக்கு மென்பது ஒரு சொல்லாய்த் தோன்றுமென்பது பட நின்றது. வெள்ளிலையை வெற்றிலை யென்பதுபோல வெற்றிடம், வெள்ளிட மென வந்தது. வெண்மை, வெறுமை மேற்று. இல் : ஏதுப்பொருட்டாய ஐந்தாவதனுருபு. காண்டல் இலவென்பது கண்டில வென வந்தது. கண்டில மெனக்கொண்டு காண்ப தில்லே மென்றும், முயற்கோடு கண்டில எனவியைத்து முயற்கோடுகள் காணப்பட்டில வென்றும் கூறலுமொன்று. யாதொன்றுண்டென் புழி, உண்மை, கண் முதற் பொறிகட்குத் தோன்ற வுளதாதல். 85-90. ஏது இவ்வகை பொருள் சாதிப்பன - சாதனமாகிய ஏதுக்கள் இக்கூறிய வகையால் பொருளைச் சாதிப்பனவாம்; காரியம் புகை சாதித்தது - காரியமாகிய புகையே காரணமாகிய நெருப்புண்மையைச் சாதித்தது; என்னை யென்னின்-அது தானும் எங்ஙனம் என்றால்; புகை யுளவிடத்து நெருப்புண்டு என்னும் அந்நு வயத்தாலும் - புகை தோன்றுமிடத்து நெருப்புளதா மென்னும் உடன்பாட்டுட னிகழ்ச்சியாலும்; நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும்-யாண்டு நெருப்பில்லை ஆண்டுப் புகையில்லையா மென்னும் எதிர்மறை யுடனிகழ்ச்சியாலும்; புகைஇ நெருப்பைச் சாதித்தது - புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம் எ - று. ஏதுக்கள் பொருளைச் சாதிக்கு திறத்தை அநுமான வளவையைப் பற்றிக் கூறியவாற்றால் பக்கம் முதலாக விளக்கிப் போந்தமையின் அவற்றை மறுத்துத் தமது கொள்கையைக் கூறுவாராய், "இவ்வகை யேதுப்பொருள் சாதிப்பன" என்று முன் மொழிந்துகொண்டு ஏதுப் பொருளைச் சாதிக்கும் நெறியைப் பல்வேறு தடைகளால் மறுக்கத் தொடங்கி, "காரியம் புகை சாதித்த தென்னை யென்னின்" என்றொரு கடாவை யெழுப்பி, அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும் புகை நெருப்புண்மையைச் சாதித்த தென்பார், "புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றார். யாண்டுப் புகையுண்டு ஆண்டு நெருப்புண்டு, அடுக்களை போல என்பது அந்நுவயஞ் சாதித்தல்; எங்கு நெருப்பில்லை அங்குப் புகையில்லை, புனல்போல என்பது வெதிரேகஞ் சாதித்தல். புகை நெருப்பைச் சாதித்தது என்றவிடத்துக் கருவி கருத்தாவாக உபசரிக்கப்பட்டது. அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும் என்புழி, என் என்னும் இடைச்சொற் றொக்கதாகக் கொண்டு, அந்நுவயத்தாலேனும் வெதிரேகத்தாலேனும் என்று உரைப்பர் திரு. நாராயணையங்கார். 90-95. என்னின்-என்று இவ்வாறு ஏதுப்பொருளைச் சாதிக்கு மென்றால்; நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம்-நெருப்பின் காரியமாய்ப் பொருந்திய புகையிடத் துண்டாகிய மேனோக்கிய செலவும்; கௌடிலச் சாமம்-வளைந்து படர்ந்தமையும் படலமுமாகிய இரண்டும்; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலால்-காரணமாய் அமைந்த நெருப்பினின்று தோன்றிவரும் காரியமாதலால்; மேனோக்கிக் கறுத்திருப்ப-மேனோக்கிச் சென்று கறுத்திருப்பனவும்; பகைத் திருப்ப-மேனோக்காது மாறுபட்டுப் பரந்து படலமாய்ப் படர்ந்திருப்பனவும் ; நெருப்பைச் சாதிக்க வேண்டுமே-தாம் தோன்றியுள்ள விடத்தே நெருப்புண்டெனச் சாதிக்க வேண்டு மல்லவோ எ - று. காரணத்தின் பண்பு காரியத்து முண்டென்னும் அளவைநூற் கருத்தை யுட்கொண்டு, மேனோக்கிய செலவும் படலமாய்ப் படர்தலும் காரணமாகிய நெருப்பின் காரிய மென்றற்கு, "வாய்த்த நெருப்பின் வரு காரியம்" என்றார். "பிழையாதது காரியக்கருத்தே" யென்றதை மேற்கொண்டு, இக்காரியங்களும் காரணமாகிய நெருப்புண்மை சாதிக்க வேண்டுமல்லவோ என்பார், "காரிய மாதலின் மேனோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்கவேண்டும்" என்றார். தாம்; அசை. எதிர்மறை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. இதனாற் பயன், காரியம் காரணஞ் சாதித்தல், அன்னுவயஞ் சாதித்தல், வெதிரேகஞ் சாதித்தல் என்ற மூன்றனுள், காரியவேதுவாய புகை பிழைபடு மாறு காட்டியவாறு. ஊர்த்தஸ் யாம்மன் என்பது ஊர்த்தச் சாமம் என வந்தது. கௌடிலஸ்யாமம், வளைந்து படர்ந்து செல்வது. மேனோக்கிய செலவின் மாறாகப் படர்ந்திருப்பது பற்றிப் "பகைத் திருப்ப" வென்றார். 96-101. அன்னுவயம் சாதிக்கின் - உடன்பாட் டுடனிகழ்ச்சிப் பொருளதாகிய அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கப் படுமாயின்; முன்னும் ஒரு காலத்து ஓரிடத்தே கழுதையையும் கணிகையையும் தம்மில் அன்னுவயங் கண்டான் - முன்னொரு காலத்தே ஓரிடத்தில் கழுதையும் கணிகை யொருத்தியும் தம்மில் உடங்கிருப்பக் கண்டவ னொருவன்; பிற்காலத்துக் கழுதையைக் கண்டு பின்னொரு காலத்தே கழுதை யிருப்பக் கண்டு; அவிடத்து- அவ்விடத்தே; கணிகையை அனுமிக்க வேண்டுமே - கணிகையும் உடனிருப்பதாகத் துணிய வேண்டுமல்லவோ; அது கூடா-அது கூடாதாம் எ - று. அன்னுவயம் என்புழி மூன்றாவது விகாரத்தாற் றொக்கது. செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. நெருப்பும் புகையும் அன்னுவயமாகக் கண்டவன் பிறிதோரிடத்துப் புகை கண்டவழி நெருப்புண்மை சாதிக்கும் திறம் குறித்து முன்னர்ப் "புகையுள விடத்து நெருப்புண்டென்னும் அன்னுவயத்தாலும்" என்று கூறியதை மறுக்கும் குறிப்பினால் "அன்னுவயஞ் சாதிக்கின்" என்றார். அவ்விடத்தெனற்பாலது அவிடத்து என விகாரமாயிற்று. எதிர்மறை யேகாரம் ஈண்டும் பிரித்துக் கூட்டப்பட்டது. கூடா தென்பது ஈறு குறைந்தது. இதனால் அன்னுவ யானுமானம் பிழைபடுமாறு காட்டியவாறு. 101-108. நெருப்பிலா விடத்துப் புகை இலையென நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் - நெருப்பில்லாதவிடத்திற் புகையில்லையாம் என மேற்கொள்ளும் அந்தச் சிறப்பமைந் திருக்கின்ற எதில்மறையுட னிகழ்ச்சிப் பொருளதாகிய வெதிரேகம் பொருளுண்மை சாதிக்கு மென்பாயாயின்; நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரில்-(ஓரிடத்தே) நாய்வால் இல்லாத கழுதையின் பிடரியிலே; நரிவாலும் இலையா - நரியினது வாலும் இல்லையாக; காணப்பட்ட அதனையே கொண்டு-அங்ஙனம் காணப்பட்ட வெதிரேக அறிவே கொண்டு; பிறிதோரிடத்து - பிறிதோரிடத்துக்குச் சென்ற காலை; நரிவாலில் நாய்வாலை யனுமித்தல்-நரிவாலிருப்பக் கண்டு நாய்வாலு முண்டெனத் துணிதல்; அரிதாம் - கூடாதாம்; அதனால் அதுவும் ஆகாது - ஆதலால் வெதிரேகியனு மானமும் கூடாதன்றோ எ - று. "நெருப்பிலா விடத்துப் புகையிலையென நேர் வெதிரேகம்" என்றது, முன்னே "நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதி ரேகத்தாலும், புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றதைக் கொண்டு கூறியது. நேர்தல்; உடன்பட்டு மேற்கோடல். அவ் வெதிரேக மென்னாது, "திருத்தகு வெதிரேக" மென்றது இழித்தற் குறிப்பு. திரு : துணி பொருளைச் சாதிக்குஞ் சிறப்பு; ஈண்டு அது குறிப்பு மொழியாய்ச் சிறப்பின்மை குறித்தது; தீங்கட்டானை நன்கட்டாய் என்றாற்போல, கழுதையின் பிடரிமயிர் நிலைக் களமாக, நாய்வாலுமில்லை நரிவாலுமில்லை என்று கண்ட வெதிரேகத்தை, "நாய்வாலில்லாக் கழுதையின் பிடரியின் நரிவாலு மிலையாக் காணப்பட்டவது" என்றொழிந்தார். "பிறிதோரிடத்து" என்றமையின் ஓரிடத்தென முன் மொழிந்து கொள்ளப்பட்டது. இதனால் வெதிரேக யனுமானமும் பிழைபடுமாறு காட்டியவா றாயிற்று. 109-110. ஒட்டிய உபநயம் - பக்க முதலிய மூன்றோடு சேரவுள்ளன வாகிய உபநயமும்; நிகமனம் - நிகமனமும்; இரண்டும் - ஆகிய இரண்டும்; திட்டாந்தத்தில் சென்று அடங்கும் - மூன்றாவ தாகிய திட்டாந்தத்தின்கண் அடங்கிவிடும் எ - று. எனவே, அவை எம்மனோர்க் காகா என்பதாம். இந்நூலாசிரியர் காலத்தே அளவை நூலார் பக்க முதலிய ஐந்தனையும் மேற்கொண் டொழுகின ரென்றும், அவற்றுள் உபநயமும் நிகமனமும் திட்டாந்தத்தில் அடங்குமென்றும், எனவே தாம் மேற்கொள்வன பக்க முதலிய மூன்றுமே யென்றும், இதுகாறும் கூறிய வாற்றாற் பெறப்படும். "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலி, விட்டனர் நாம சாதிக் குணக் கிரியைகள்" (49-50) எனப் பிறர்மேல் வைத்துக் கூறியதுபோல, ஈண்டும் திட்டாந்தத்திலே "அடக்கினர்" எனப் பிற ஆசிரியர் மேல்வைத் துரையாது, தாமே தெளிந்து கூறுமாறு தோன்ற, "திட்டாந்தத்திலே சென்றடங்கும்" என்றார். இவ்வாறே இவ்வற வணவடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம் பதியிலிருந்து வடநாடு சென்று சிறந்த திக்கநாகரும் பக்கமுதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க் கறிவுறுத்தி யிருக்கின்றார். இம்மூன்றனையும் முதன் முதலில் வடிகட்டி யுரைத்த ஆசிரியர் மணிமேகலை யாசிரியரென்ப தறியாது நாகார்ச்சுனரென்பார் தாமெழுதிய உபய கௌசல்ய சூத்திர மென்னும் நூலிற் கூறி யுள்ளார் என்று கூறுவாரும் மூன்றாக வடிகட்டிய முதலாசிரியர் திக்கநாகரே யென்பாரும் உளர். இம்மூன்றும் பக்கம் ஏது திட்டாந்த மென்பனவா மென்றும், இம்மூன்றற்கும் சாதன மென்பது பெயரென்றும், இவற்றால் கேட்போர் அறியப்படாத பொருள் அறிவுறுத்தப்படுகிறதென்றும் தாமெழுதிய நியாயப் பிரவேச மென்னும் நூலில், "பக்ஷாதி வசநாநி ஸாதனம் பக்ஷஹேது த்ருஷ்டாந்த வசநைர்ஹ ப்ராஸ்நி காநாமப்ரதீ தோர்த்த: ப்ரதிபாத்யத இதி" என்று கூறியிருப்பது காண்க. இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தி யென்பார் நியாயபிந்து வென்னும் தமது நூலில் மூன்றையும் இரண்டாக அடக்கு கின்றார். பிறரெல்லாம் உபநயத்தை ஏதுவின் கண்ணும், நிகமனத்தைப் பக்கத்தின் கண்ணும் அடக்குப. சமணரும் வேதாந்திகளும் மீமாஞ் சகரும் இம்மூன்றையுமே மேற்கொண் டொழுகு கின்றனர்; பௌட்கர முதலிய சைவாகமங்கள் ஐந்தையுமே மேற் கொண்டொழுகுதலால் வாகீசமுனிவர் முதலிய தமிழாசிரியன் மாரும், சிவாக்கிரயோகிகள் முதலிய வடமொழி யுரைகாரரும் ஐந்தையும் மேற் கொண்டனர். இனி, ஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்து வாழ்ந்த புத்தர்கள் பக்கத்தன்மமாகிய ஏதுவும் பக்கவசனமாகிய எடுத்த மொழியு மாகிய இரண்டுமே கொண்டிருந்தனர். இவையே தருமகீர்த்தி முதலாயினர் மேற்கொண்டனவாம். இதுகாறும் பிறர் மதம் எடுத்தோதி மறுத்த ஆசிரியர் இனித் தம் கொள்கையை யுரைக்கின்றார். 111-112. பக்கம் ஏது திட்டாந்தங்கள் - பக்கமும் ஏதுவும் திட்டாந் தமுமாகிய மூன்றனுள்ளும்; ஒக்க நல்லவும் தீயவும் உள-ஒவ்வொன்றிலும் குற்றமில்லாதனவும் குற்றமுடையனவும் உள்ளன எ-று. மூன்றிலும் ஒப்ப இவ்வேறுபாடிருத்தலின் "ஒக்க நல்லனவும் தீயனவும் உள" என்றும், குற்றமின்மை நன்மையும், குற்றமுண்மை தீமையு மாதலால் அவற்றைப் பயன் குறித்து, "நல்லவும்" என்றும் "தீயவும்" என்றும் கூறினார். நல்லவை நன்பக்கம் என்றும் நல்லேது என்றும், "ஏதமில் திட்டாந்த" மென்றும் வழங்கும்; தீயவை, பக்கப் போலி, ஏதுப்போலி, திட்டாந்தப் போலியென்றும், தீய பக்கம் தீய வேது தீயவெடுத்துக்காட்டென்றும் வழங்கும். இனி, இதற்குத் திரு. நாராயணையங்கார், ‘பக்க முதலிய மூன்றுறுப்புக்களும் முற்றும் நல்லனவாதலால் நல்லனுமானமாதலும், அவற்றுள் ஒரோவொன்று தீயன வாதலானே அனுமானாபாசமாதலும், உள்ளனவா மென்றவாறு" என்றும், "நல்லனவாதற்கு ஒக்கவென்ற தனால் தீயனவாதற் கொரோ வொன்றே சாலுமென்பதாயிற்று" என்றும் கூறுவர். 112-121. நன்பக்கம் - குற்றமில்லாத பக்கமாவது; வெளிப் பட்டுள்ள தன்மியினையும் - வெளிப்படையாகத் தோன்றி நிற்கும்தன்மியையும்; வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் - அவ்வாறு விளங்கத் தோன்றி நிற்கும் சாத்தியதன்மக் கூறுபாடு; பிறிதின் வேறாம் வேறுபாட்டினையும் - பிறிதொரு பொருளினின்றும் வேறாகவுடையதாகும் வேறுபாட்டையும்; தன் கண் சார்த்திய நயம் தருதலுடையது - தன் கண்ணே சார்த்திக் கூறப்படும் தன்மையுடையதாகும்; என நாட்டுக-எனத் துணிவாயாக; அது - அஃதாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்ற ஒன்றைப்பற்றி - சத்தம் அநித்த மென்றும் சத்தம் நித்தமென்றும் வரும் இரண்டனுள் ஒன்றை மேற்கொண்டு; நாட்டப்படுவது - ஏது திட்டாந்தங்களால் சாதிப்பதாகும்; அதில் - அப் பக்க வசனத்தில்; தன்மி சத்தம் - தன்மியாவது சத்தம்; சாத்திய தன்மமாவது - அவற்றை முறையே சாதித்தற்குப் பொருந்திய தன்மமாவது; தித்தாநித்தம்- நித்தத்துவமும் அநித்தத்துவமுமாம். எ - று. பக்கத்துட் கூறப்படும் தன்மியும் சாத்தியதன்மமும் வாதிபிரதி வாதிகட்கு நன்கு தெரிந்தவை யென்றற்கு, வெளிப்பட்டுள்ள தன்மி" யென்றும், வெளிப்பட்டுள சாத்தியதன்ம" மென்றும் சிறப்பித்தார். தன்மி யின்னதென்றும் அது நிற்கும் நற்பக்க வசனம் இதுவென்றும் காட்டுவார், "தன்மி சத்தம்" என்றும், "சத்தம் அநித்த நித்தமென் றொன்றைப்பற்றி நாட்டுவது" என்றுங் காட்டினார். பக்கமும் தன்மியுங் காட்டிய வழி இயைபுபடுதலின் சாத்திய தன்மத்தைக் காட்டுவதற்கு, "சாத்தியதன்மமாவது நித்தா நித்தம்" என்றார். சத்தம் அநித்தம் நித்தமென்றதற்கேற்பக் கூறாது, செய்யுளாகலின், நித்தா நித்தமென மாறிக் கூறினார். பக்க வசனத்துத் தன்மி யெழுவாயும் சாத்திய தன்மம் பயனிலையு மாதலின், இவ்விரண்டையு மெடுத்தோதுவது பக்க வசனமென் றொழியாது, தன்மியைக் கூறவே, அதன் சாத்திய தன்மமும் அடங்குமென்ற கருத்தால், "வெளிப்பட்டுள்ள தன்மியினையும்" என்றும், தன்மி வெளிப்படையாய தென்னின், அதன் சாத்திய தன்மமும் அவ்வியல்பிற்றே யென்பது தோன்ற "வெளிப்பட்டுள சாத்தியத் தன்மம்" என்றும், அது தன் படர்ச்சிக்குட்பட்ட ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் உடம்பாடும் எதிர் மறையுமாகிய பலவகையால் நாட்டப்படுதலின், சாத்திய தன்ம மென்னாது "சாத்திய தன்மத்திற" மென்றும், சத்தம் அநித்த மெனச் சாதிக்குமிடத்து நித்தமாகிய தன்மத்தையுடைய பிற பொருள்களின் வேறாம் இயல்பை, பிறிதின் வேறாம் வேறு பாட்டினையும்" உடைய தென்றும் கூறினார். பக்க தன்மம், திட்டாந்தம், சபக்கத் தொடர்ச்சி முதலிய இயைந்து சாத்திய மாகிய பயனை வற்புறுத்தற்கு நன்பக்கம் இடமாகும். நயத்தின் விளைவு பயனென்பர். அதனை "நயங்க ணான்காற் பயன்க ளெய்தி" (மணி. 30 : 35) என்பது காண்க. சாத்திய தன்மம் - தன்மியோ டின மாயவற்றில் ஒன்றியிருத்தல் ஒற்றுமை நயம் ; பிறிதின்பால் இல்லாது வேறாதல். வேற்றுமை நயம். நற்பக்கமாவது இவ்விருவகை நயங்களையு முடைத்தாதல் பற்றி, "தன்கட் சார்த்திய நயந்தருமலுடைய" வென்றார். இதனால், நற்பக்கமாவது வெளிப் பட்டுள்ள தன்மியையும், வெளிப்பட்டுள்ள சாத்திய தன்மத்தையும், அத்தன்மத்தின் படர்ச்சிக் குட்பட்ட இனப்பொருளின்கண் ஒன்றி நிற்கும் ஒற்றுமையே யன்றிப் பிறிதின் வேறாம் வேறுபாட்டையும் உடையதென்பது கூறப்பட்டதாம். பிறிதின் வேறாம் வேறுபாடுடைமை கூறவே, இனமாயவற்றில் ஒற்றுமையுடைமைதானே எய்துதலின் உம்மையாற்றழீஇக் கொண்டார். "வெளிப்பட்டுள்ள" என ஒருமுறைக்கிருமுறை மிகுத்துக் கூறியதனால், இத் தன்மி தன்மங்கள் பிரிதிவாதி யறியாதனவா யிருத்தல் கூடாதென்றும் பக்க வசனமும், கவர்பொருள் வைப்பு, மாறுகொளக் கூறல், குறிப்பிற் பொருள் தரல் முதலியனவின்றி எடுத்த பொருளை யெளிதினிது காட்டுவதா யிருத்தல் வேண்மென்றும் கொள்க. இது பலரும் அறிந்த செய்தியாதலின், இந்நூலாசிரியர், இலேசினாற் பெறவைத்தார். இனி ஆசிரியர் திக்கநாகர் இலேசினாற்போந்த இவற்றையே யெடுத்துப் பக்க வசனத்துக்கு இலக்கணமாகக் கூறினரேயன்றி, ஈண்டு எடுத்தோதப்படும் நலமுற்றும் கூறிற்றிலர்; பக்கவசனத்தின் சொல்லமைதி தூய்மையுறின் இலக்கணந் தானே யமையு மென்பது கருத்துப்போலும். நியாயப் பிரவேசத்தில், பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியைத் தன்கண் உடைமையால் சாத்தியமாக விரும்பப்படுவது என்ற கருத்துப்படவே அவர் கூறுகின்றார். இனி, 1திரு நாராயணையங்கார், "பிறிதின் வேறாம் வேறுபாடாவது பக்கம் சபக்கவிபக்கங்களினின்றும் வேறு பட்டிருத்த" லென்றும் இப் "பிறிதின் வேறாம் வேறுபா" டுடைமையைத் திக்கநாதர் பக்கத்துக் கிலக்கணமாகக் கூறாமைக்குக் காரணங் கூறலுற்று, "மணிமேகலை நூன் மரபினர்க்குப் பிறிதின்வேறாம் வேறுபாடும் பக்ஷலக்ஷணத்திற் சேர்க்கப் பட்டிருத்தலால் எல்லாப் பொருளும் அநித்தமென்று பக்ஷவசனங் கூறில், எல்லாமென்னும் சொற்பொருளுக்குப் பிறிதாயொரு பொருளு மில்லாமையால் அதற்குப் பிறிதின் வேறாம் வேறுபாடின்மைபற்றி அதனைப் பக்ஷவசனமாகக் கொள்ளத்தகா தென்பதே யுடன்பாடென்று தோன்றுகிற" தென்றும் "இக் கொள்கை சுத்த தருக்கமுறையுடைய நியாய நூலார்க்கெல்லாம் உடன்பாடா" மென்றும் கூறுகின்றார். பக்க வசனத்துக் கெடுத்துக்காட்டாகச் "சத்த வநித்தம் நித்த மென்றொன்றைப்பற்றி நாட்டப்படுவது" என்று இவ்வாசிரியர் சொன்னதே சிறிது வேறுபாட்டுடன் நியாயப் பிரவேசத்திலும் காணப்படுகிறது. 121-124. நிகழும் நல்லேது மூன்றாய்த் தோன்றும் - நன்பக்கத்துக்குப் பக்கதன்ம வசனமாய் நிலவும் நல்லேது வென்பது மூன்று வகையாகத் தோன்றுகிறது ; மொழிந்த பக்கத்து ஊன்றித் தோன்றலும் - மொழியப்பட்ட பக்கப்பொருளில் நிலை பெற்ற இயைபுடைத்தாதலும்; சபக்கத்து உண்டாதலும் - சபக்கப் பொருளின்கண் இல்லையாகாது உளதாதலும்; விபக்கத்து இன்றியே விடுதலும் - பக்கத்தின் மீட்சியாகிய விபக்கப் பொருளின் கண் அறவே இல்லையாதலுமாம் எ - று. ஏதுவினைப் பக்க தன்ம வசனமென்பது வழக்கு; "சத்தம் அநித்த மென்றல்பக்கம், பண்ணப்படுதலாலெனல் பக்கதன்ம வசனமாகும்" (மணி.29;69-71) என்றமை காண்க. பக்கத்தில் வந்துள்ள தன்மியின் தன்மமே சாதனமாகிய ஏதுவாதலின், "மொழிந்த பக்கத் தூன்றி நிற்றல்" இலக்கணமாயிற்று. மொழிந்த என்பது செயப்பாட்டுவினைப் பொருட்டாய பெயரெச்சம். தன்ம மில்வழித் தன்மியாதல் கூடாமை பற்றி, தன்மம் தன்மிக்கண் இயைந்து நிற்கும் இயல்பை, "ஊன்றித் தோன்றல்" என்றார். பக்கப் பொருட்குரிய பொதுத் தன்மமேயுடைய ஏனைப் பொருளெல்லாம் சபக்கத்தடங்குதலால், அவற்றின் கண்ணும் அத்தன்மம் காணப் படுவதுபற்றி, "சபக்கத் துண்டாதல்" என்றார்; உண்டாதல், உளதாதல், சபக்கப் பொருட்கு மாறாய பொருள் விபக்கப் பொருளாதலின், அதன்பால் உளதாகும் பக்க தன்மம் விபக்கத்து அறவேயில்லையா மென்பது உணரப்படுமாயினும், உய்த்துணர்வு எடுத்தோத்தில்வழி யென்பதுபற்றி, "விபக்கத்தின்றியே விடுதலை" என்றார். நன்பக்கத்துக்குரிய ஏதுவொன்றே, பக்கப் பொருளில் நிலைபேறும், சபக்கத்தில் உளதாதலும், விபக்கத்து இலதா தலுமாகிய மூவகையாய்ப் பகுத்தாராயப்படுவதுபற்றி "மூன்றாய்த் தோன்றும்" என்றார். ஏகாரம்: தேற்றம். உம்மை எண்ணுப் பொருட்டு. இனி, ஈண்டுக் கூறிய வியல்பை எடுத்துக் காட்டுக் களால் முறையே வற்புறுத்துகின்றார். 124-135. சபக்கம் சாதிக்கின்-நல்லேதுவானது சபக்கத்தின் கண் உளதாய் நின்று பக்கத்தோதிய சாத்திய தன்மத்தைச் சாதிக்கு மாயின்; பொருள் தன்னால் பக்கத்து ஓதிய பொதுவகை ஒன்றியிருத்தல்-தான் எடுத்துக் காட்டும் பொருளின் பொதுத் தன்மத்தோடு பக்க வசனத்துட் கூறிய சாத்திய தன்மம் ஒத்திருத்தல் வேண்டும்; சத்த அநித்தம் ஒத்த சாத்தியமாயின் - சத்தம் அநித்த மென்ற பக்க வசனத்துள் அநித்தத்துமாகிய தன்மம் சாதிக்கப் படுமிடத்து; அநித்தம் ஒத்த கடாதிபோல் எனல் - அநித்தத்துவ மாகிய தன்மத்தை யொப்ப வுடைய குட முதலியவற்றைப்போல் என நாட்டுதல்; விபக்கம் விளம்பில் - இதற்கு விபக்க நிலை காட்டுவதாயின்; யாதொன்று யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப் படாதது ஆகாசம்போல் என்று ஆகும் - தொகுபொருள் அநித்தமன்று, அது பண்ணப்படாததாம், ஆகாசம் போல எனவரும் ; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் - பண்ணப்படுவதும் பண்ணுஞ் செய்கை யிடத்தே தோன்றுவது மாகிய பொதுத் தன்மமானது; நண்ணிய பக்கம் சபக்கத்திலு மாய் - ஆராய்ச்சிக்குப் பொருந்திய பக்கப் பொருளிலும் சபக்கப் பொருளிலும் உளதாய்; விபக்கத்தின்றி - விபக்கத்தோதும் பொருளிடத்தே அறவே இல்லையாய்; அநித்ததினுக்கு - சத்தமாகிய தன்மி அநித்தத்துவமாகிய தன்மத்தையுடைய தென்பதைச் சாதித்தற்கு ; மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க - மிகவும் பொருத்தமான ஏதுவாய் விளங்கிவிட்டது என அறிக. எ - று. ஒத்த அநித்த மென்பதை, அநித்தம் ஒத்த என மாறுக. இனி, திரு. நாராயணையங்கார் கிடந்தபடியே கொண்டு, "எதிரியால் ஒத்துக்கொள்ளப்பட்ட அநித்தியப் பொருளாகிய குட முதலியன போல் என்று கூறுதல்" என்பர். "விபக்கம் விளம்பில்" என்றது, அதனை விளம்புவது ஏதுவின் தூய்மையை விளக்குதற் பயத்த தெனக் குறிப்பித்து நிற்கிறது. பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் எனப் பன்மை யாற் கூறினராயினும், இரு வழியும் ஒத்த நிலையில் பொதுத் தன்மமாயஒருமைப் பொருள்படுதலின், "விளங்கிற்"றென வொருமை முடிவு கூறினார். இவ்வகையால் இவ்வேது தன் பயனைக் குற்றமறச் சாதித்துத் தரும் சிறப்புத் தோன்ற "மிகத்தரும்1 ஏதுவாய் விளங்கிற்"றென்றார். எனக் கொள்க. 136-142. ஏதம்இல் திட்டாந்தம் - குற்றமில்லாத திட்டாந்தம்; சாதன்மியம் வைதன்மியம் என இருவகைய - சாதன்மிய திட்டாந்தமென்றும், வைதன்மிய திட்டாந்தமென்றும் இருவகைப்படுவனவாம்; சாதன்மிய மெனப்படுவது - அவற்றுள் சாதன்மிய திட்டாந்தமெனப்படுவது; அந்நுவயத்து - உடன் பாட்டு நெறிக் கண்; அநித்தம் கடாதி என்கை - சத்தம் அநித்தம், பண்ணப்படுதலால், கடாதிபோல என எடுத்துக் காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் - வைதன்மிய திட்டாந்த மாவது ; சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மை - சாத்திய தன்மம் இல்லாத பொருளிடத்தில் பக்க தன்ம மாகிய ஏதுவும் இல்லையாயொழிதல்; இத்திறம் - நன் பக்கம் நல்லேது நற்றிட்டாந்தமென்ற இவ்வகைகள் மூன்றும்; நல்ல சாதனத்து ஒத்தன - வழுவின்றிச் சாதித்தற்கு ஒப்ப ஏற்புடைய வாகும் எ - று. முன்னே சபக்க விபக்கங்களைத் தனித்தனியே யெடுத்து இலக்கணங் கூறாதொழிந்தார், ஈண்டு இருவகைத் திட்டாந்தங்களில் சாதன் மியத்துக்கு எடுத்துக்காட்டுக் கூறியும் வைதன்மியத்துக்கு இலக்கணங் கூறியும் விளக்கஞ் செய்தார். சாதன்மியத்துக்கு2 இலக்கணம், "எங்கு ஏதுவிற்குச் சபக்கத்தில் மாத்திரம் உண்மை சொல்லப்படுகிறதோ அது" என்றும், வைதன்மியத் திட்டாந்தத்துக்கு எடுத்துக்காட்டு, "யாதொன்று செய்யப்பட்டது அது அநித்த மாகக் காணப்பட்டது குட முதலியன போல" என்றும் நியாயப் பிரவேசம் கூறுகிறது. "பக்கமேது திட்டாந்தங்கள், ஒக்க நல்லவும்...உள" என்று முன்பு கூறினமையின், ஈண்டும் அதற்கேற்ப, "ஒத்தன" என்றார். 143-153. தீயபக்கமும் தீயஏதுவும் தீயஎடுத்துக்காட்டுமாவன - குற்றமுடைய பக்கமும் ஏதுவும் எடுத்துக்காட்டு மென்பவை; பக்கப் போலியும் ஏதுப்போலியும் திட்டாந்தப் போலியுமாம் - பக்கப்போலி ஏதுப்போலி திட்டாந்தப்போலி என வழங்கும்; இவற்றுள்-இம் மூன்றனுள்; பக்கப்போலி என்பது - பக்கப் போலி என்று வழங்குவது; பிரத்தியக்க விருத்தம்...என - பிரத்தியக்க விருத்தமெனவும் அனுமான விருத்தமெனவும், சுவசன விருத்தமெனவும் உலோக விருத்தமெனவும் ஆகம விருத்த மெனவும் அப்பிரசித்த விசேடண மெனவும் அப் பிரசித்த விசேடிய மெனவும் அப்பிரசித்தவுபயமெனவும் அப்பிரசித்த சம்பந்தமெனவும்; ஒன்பது வகைப்படும்-ஒன்பது வகையாகக் கூறப்படும் எ - று. போலிகளை முறையே தீயபக்கம் தீயவேது தீயவெடுத்துக் காட்டென முன்னர்க் கூறியது, பக்கப்போலி முதலியவற்றிற்கு இலக்கணம்; அஃதாவது பக்கப் போலியாவது தீயபக்கம் என்றும், ஏதுப்போலி தீய வேது என்றும் திட்டாந்தப்போலி தீயஎடுத்துக் காட்டென்றும் கொள்க வென்பதாம். நியாயப் பிரவேசம் தீயபக்கம் முதலிய மூன்றையும் முறையே பக்ஷாபாசம் ஏதுவா பாசம் திருஷ்டாந்தாபாசம் என்று கூறி அவற்றிற்கு இலக்கண மாகப் பக்ஷாபாசம் பிரத்தியக்ஷ விருத்த முதலாயினவாமென்றும், ஏதுவாபாசம் அசித்தம் அநைகாந்திக முதலாயினவா மென்றும் திருஷ்டாந்தாபாசம் சாதன்மியம் வைதன்மியமென விருவகைத் தாய்ச் சாதன்மியம் சாதனதன்மாசித்தம், சாத்திய தன்மா சித்தம் உபயதன்மாசித்தம் அநந்நுவயம் விபரீ தாந்நுவயம் என்பனவா மென்றும், வைதன்மியம் ஐவகைத்தாய்ச் சாத்தியா வியாவிருத்தி சாதனா வியாவருத்தி உபயா வியாவிருத்தி அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகமென்பனவா மென்றும் கூறுகிறது. இப் பக்கப்போலி ஏனைத் தருக்கநூல்களில் பிரதிஞ்ஞாபாசம் என்றும் வழங்கும். ஆராய்ச்சியாளர் பக்கப்போலி முதலிய மூன்றனுள், ஏதுப்போலி யொன்றே பழமையானதென்றும். ஏனையிரண்டும் வாற்சாயனரை யுள்ளிட்ட அறிஞர் காலத்தனவல்லவென்றும் கூறுப, உத்யோதகரர் இவ் விரண்டையும் மறுப்பர். ‘சிலர் பக்கப்போலி திட்டாந்தப்போலி என்பவற்றைப் பொருளாகக் கொள்ளவில்லை. பிரசத்தபாதர் தம்முடைய பதார்த்த தரும சங்கிரகத்தில் பக்கப்போலி ஐந்துவகைப்பட்டு, முறையே பிரத்தியக்க விருத்தம், அநுமான விருத்தம், உலக விருத்தம், ஆகம விருத்தம், சுவவசன விருத்த மென்றியலும் என்பர். மணிமேகலை யாசிரியர் அவ்வைந்தனோடு அப்பிரசித்த விசேடண முதலிய நான்கையும் கூட்டி ஒன்பதாகக் கூறினாராக, அவற்றையே நியாயப்பிரவேச முடையாரும் மேற்கொண்டுள்ளனர். இனி சுலோக வார்த்திக முடையார் இவற்றின் வேறாகக்1 கூறுவர். 154-156. எண்ணிய இவற்றுள் - குற்றமுடையனவென ஆராய்ந்து காணப்பட்டவிவற்றுள்; பிரத்தியக்க விருத்தம் - பிரத்தியக்க விருத்த மென்பது; கண்ணிய காட்சி மாறுகொளலாம் - கண் முதலிய பொறிவாயிலாகத் தெளியக் கண்ட அறிவுக்கு மாறாகக் கொண்டுரைப்பதாம்; சத்தம் செவிக்குப் புலனன்று என்றல் - இதற்கு உதாரணமாவது சத்தம் காதுக்குப் புலப் படுவதில்லை யென்று சொல்லுதல் எ - று. குற்றமுடையனவெனக் கண்டபின், அக்குற்றத்தின் இயல்பை யெண்ணுமிடத்து முன்னர்க் கூறியவாறு பலவகைப் பட்டுத் தோன்றினமை தோன்ற, "எண்ணிய விவற்றுள்" என்றும், சுட்டுணர் வாகிய காட்சி, வாயால் உரைத்தற்ககப்படாமையின், "நாமதேச குணக்கிரியையின்" வைத்தறியும் தெளிவுக் காட்சி யென்றற்குக் "கண்ணிய காட்சி" யென்றும் கூறினார். காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. சத்தம் செவிக்குப் புலனாதல் கண்ணிய காட்சி, புலனன்று என்றல் அக்காட்சிக்கு மாறுகோளுரை, இனி, "கண்ணிய காட்சி மாறு கொளலாகிய இலக்கணத்தைவிட்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தை மட்டில் நியாயப் பிரவேசம் கூறுகிறது; பதார்த்ததரும சங்கிரகம் ஈண்டுக் கூறிய இலக்கணத்தைக் கூறி, "தீ தண்ணிது" என உதாரணம் காட்டுகிறது. 157-159. அனுமான விருத்தம்-அனுமான விருத்தமாவது; கருத்தள வையை மாறாக்கூறல் - கருதலளவையால் துணியப்பட்ட வொன்றைத் தவறாக எடுத்துக் கூறுதலாம்; அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல் - அநித்தியத்துவமாகிய தன்மத்தையுடைய குடத்தை நித்தியத்துவமுடைய தன்மியாகக் கூறுவது போல்வது எ - று. மற்று: அசை. தீயபக்க மாதலின், தவறாக வென்பது வருவித் துரைக்கப் பட்டது. அநித்தியம் நித்தியமென்பன அவ்வத் தன்மத்தின் மேனின்றன. நியாயப்பிரவேசத்துள் ஈண்டுக் காட்டப்பட்ட வுதாரண மொன்றுமே காணப்படுகிறது. பதார்த்ததரும சங்கிரகம் "கணம் அம்பரம்" என உதாரணமும் ஈண்டுக் காட்டப்படும் இலக்கணமும் கூறுகிறது. 160-161. சுவவசன விருத்தம்-சுவவசன விருத்தமாவது; தன் சொல் மாறி இயம்பல் - தான் சொல்லும் சொற்கள் ஒன்றுக் கொன்று மாறுபடக் கூறுதல்; என் தாய் மலடி என்று இயம்பல் - என்னைப் பெற்ற தாய் மகப்பெறாத மலடி எனச்சொல்வது போல்வது எ - று. ஏ: அசைநிலை. திக்கநாகர் நியாயப்பிரவேசத்துள் இதற்கு இலக்கணங் கூறாது என்தாய் மலடியென்ற இவ்வுதாரணத்தை யேகாட்டுகின்றார். பிரசத்தபாதர் இலக்கணமும், "சொற்கள் ஒருபொருளும் உணர்த்தா" என வுதாரணமும் கூறுவர். 162-163. உலக விருத்தம்-உலக விருத்தமெனப்படும் பக்கப் போலி யாவது; உலகின்மாறாம் உரை - உலகவர் கூறும் கூற்றுக்கு மாறு படக் கூறுவதாம்; இலங்கு மதி சந்திரன் அல்ல என்றல்-விளங்குகின்ற திங்களைச் சந்திரனல்ல என்று சொல்வது போல்வது எ-று. உலகவர், உலகத்தில் வாழும் உயர்ந்தோர். அவர் உரைப்பது மரபு. அதற்கு மாறாகப் பேசுவது மரபு வழு. சந்திரனை மதி யென்பது மரபாதலின், அதனை அன்று என்பது மரபு வழுவாகிய உலக விருத்தமாயிற்று. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன் 388) என்றார் பவணந்தியாரும் ‘மயங்கல் கூடா தம்மர பினவே" (சொல். 11) என்பது தொல்காப்பியம். மதி யென்றது சந்திரனையே யென்பது தோன்ற, "இலங்குமதி" எனச் சிறப்பித்துக் காட்டு கின்றார். இதற்கு நியாயப் பிரவேசம், உலக விருத்தமென்பது "மனிதர் மண்டையோடு தூய்மையுடையது, உயிருடம் பினுறுப்பாதலால், சங்குச் சிப்பிபோலும் என்று கூறுவது" என்று கூறுகிறது; இதனின் வேறே இலக்கணம் கூறப்படவில்லை. இதற்கு இலக்கணமும் உதாரணமும் கூறும் பதார்த்த தரும சங்கிரகம், "மது பார்ப்பானால் உண்ணப்படுவது" என்று உதாரணம் காட்டுகிறது. பார்ப்பான் மது வுண்ணா னென்பது உலகத்து உயர்ந்தோர் உரைக்கும் உரை. உலக விருத்தமுரைப்போன் பேய்எனப்படுவ னென்பாராய்த் திருவள்ளுவர், "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பர். இதனைச் சுலோக வார்த்திக முடையார் சருவலோக பிரசித்த விரோத மென்றும், நியாயமுக முடையார் பிரசித்தவிரோதமென்றும் வழங்குப. 164-166. ஆகம விருத்தம் - ஆகம விருத்த மெனப்படுவது; தன் நூல் மாறு அறைதல் - தான் ஆதரவாக மேற்கொள்ளும் நூலுக்கு மாறாகக் கூறுவது; அநித்த வாதியா உள்ள வைசேடிகன் - சத்தம் அநித்த மென்று நூன்முகமாக மேற்கொள்ளும் வைசேடிகவாதி; அநித்தியத்தை நித்தியம் என நுவறல் - சத்தம் அநித்த மென்னாது நித்தம் என்று சொல்லுவது போல்வது எ - று. வைசேடிக நூல்கள் "அவயவதிரவியங்கள்" சார்பு பொருள் களாதலின் அநித்த மென்றும், சத்தமும் அவ்வகையால் அநித்த மென்றும் கூறுவது பற்றி, "அநித்தவாதியாவுள்ள வைசேடிகன்" என்றார் மெய்யுணர்வுப் பேற்றுக்குக் கருத்தும் ஆகமமுமே நேரிய வாயில்கள்1 என்று விதந்து கூறும் இயல்புபற்றி ஏனை அநித்த வாதிகளைக் கூறாது வைசேடிகனை எடுத்தோதினாரென வறிக. நியாயப் பிரவேச முடையாரும் இதற்கு இலக்கணங் கூறிற்றில ராயினும், "வைசேடிகன் சத்தம் நித்த மென்பது" என்றே கூறுகின்றார். இனி, பிரசத்த பாதர் இதற்கு அசற் காரியவாதியாகிய வைசேடிகன் சற்காரிய வாதங்கூறல் ஆகம விரோதம் என்பர். இவ்வைந்தனையும் ஆராய்ந்த ஆசிரியன்மார் உலக விருத்தத்தை ஆகம விருத்தத்திலும் ஆகம விருத்த சுவவசன விருத்தங்களை முதலிரண்டிலும் அடக்கிக் கூறுவோரும், அடக்கலாகாதென மறுத்துக் கூறுவோரும் பலர். அவற்றை நியாய கந்தலி முதலியநூல்களிற் கண்டு கொள்க. 167-172. அப்பிரசித்த விசேடணமாவது-அப்பிரசித்த விசேடண மென்னும் குற்றமாவது; தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை - தத்தமக் கெதிரியாகிய பிரதிவாதிக்குத்தான் சாதிக்கும் பொருள் அறியாததா யிருத்தலாம்; மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து - பிரதிவாதியாய் நின்ற சாங்கியனை நோக்கி; பௌத்தன்- புத்தனாகிய வாதி; சத்தம் விநாசி என்றால் - சத்தம் அநித்தம் என்பானாயின்; அவன் அவிநாசி யாதலால் - அச் சாங்கியன் நித்த மென்னும் கொள்கையுடையவனாதலால்; சாத்திய விநாசம் அப் பிரசித்தமாகும் - துணிபொருளாகிய அநித்தத்துவம் அப்பிரசித்தமாய்க் குற்றமாம் எ - று. ஈண்டு விசேடண மென்றது அடைமொழியன்று; துணி பொருளுணர்த்தும் சொல்லும் சொற்றொடருமாகிய "சாத்திய வசனம்." சத்தம் அநித்தம் என்று பக்க மொழியில், அநித்த மென்பது விசேடணம். "தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை" குற்றமெனவே தெரிய நிற்றலே வேண்டுவதென்பது நன்பக்கத்துக் கிலக்கணமாம். சாங்கியன்2சற்காரியவாதி யாதலின், சத்த மநித்த மென்பது அவற்கு உடன்பாடன்று. காரியப் பொருள் தன் பருவுருக் (தூலநிலை) கெட்டு அருவுருவாய காரணநிலை பெறுவதே "விநாச" மென்பது சற்காரிய வாதம். பொருள்கள் கணந்தோறும் அழிவன வென்பது பௌத்த நூற் கொள்கை. ஆதலாற்றான், "மாறாய் நின்ற சாங்கியன்" என்றார். நியாயப் பிரவேசமும், வழக்கம்போல இதனையோர் எடுத்துக் காட்டால் விளக்கலுற்று, ஈண்டுக் கூறியதுபோல "பௌத்தஸ்ய சாங்க்யம் ப்ரதி விநாஸீ ஸப்தைதி" என்று கூறுகிறது. சத்தம் நித்தமென்னும் கொள்கையையுடைய சாங்கியனுக்கு, சத்தம் நித்தமன்று, அநித்த மென்று சாதிப்பது பௌத்தனாகிய வாதிக்கு முறையாதலாலும், வாதி பிரதி வாதிகட் கிடையே துணிபொருள் "பிரசித்த" மாயிருக்குமாயின், ஆராய்ச்சிக் கிடமின்மையாலும் அப்பிரசித்த விசேடணம் குற்றமெனக் கருதுவது பொருத்தமன்று எனக் கூறுவோருமுளர். அவரை மறுத்துப் பிரதிவாதி தான் அதனைக் கல்லாதா னொட்பம்போலக் கொண்ட வழி அவனைத் தெருட்டுங் குறிப்புடைய வாதி அப்பிரசித்த விசேடணங் கூறுதல் குற்றமென நாட்டுவர் 1கமலசீலர். 173-178. அப்பிரசித்த விசேடியமாவது-அப்பிரசித்தவிசேடிய மென்னுங் குற்றமாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தமின்றி இருத்தல்- எதிரியாகிய பிரதிவாதிக்குப் பக்கவசனத்து எழுவாயாகிய தன்மி தெரியாததா யிருத்தலாம்; சாங்கியன் - ஆன்மவாதியாகிய சாங்கியன்; மாறாய்நின்ற பௌத்தனைக் குறித்து-மாறுபட்டு நிற்கும் பிரதி வாதியாகிய பௌத்தனை நோக்கி; ஆன்மா சைதன்னியவான்என்றால் ஆன்மா சித்துப் பொருளென்று சொல்வானானால்; அவன் அநான்மவாதி யாதலின் - அப் பௌத்தன் ஆன்மாவென்பதொன்றில்லை யென்னும் வாதியாகையால்; தன்மி அப்பிரசித்தம் - தன்மி பிரதிவாதிக்குப் பிரசித்தமில்லாத தென்னும் குற்றமாயிற்று எ - று. பக்க வசனத்தின் சாத்திய தன்மத்தை விசேடணமென்றும், தன்மியை விசேடியமென்றும் வழங்குவதுண்மை தோன்ற, அப்பிரசித்த விசேடணமென்றும் அப்பிரசித்த விசேடிய மென்றும் உரைக்கின்றார். தன்மியே தெரியாதபோது அதன்பா லுண்டெனச் சாதிக்கப்படும்சாத்திய தன்மம் பிரதிவாதிக்கு விளங்காதாகலின், இம் மேற்கோள்குற்றத்தின்பாற் படுவதாயிற்றென்பர். சாங்கியன் ஆன்மாவென்றொருபொருளு ண்டென்பதை, "மனோபுத்தி யாங்காரசித்தம், உயிரெனுமான்மா வொன்றொடுமாம்" (மணி. 27: 238-9) என்று (சாங்கியன்) கூறுமாற்றாலறிக. சாங்கிய காரிகை முதலிய நூல்களிலும் ஆன்மாவுண்மை வற்புறுத்தப்படுகிறது. நீலகேசி "மன்னுயிர்" (735) என்றும், சிவஞானசித்தியார், "சுத்த புருடன்" (நிரீசுர சாங்கியன். 1) என்றும் இக் கருத்தைத் காட்டு மாறு காண்க. ஐவகைக் கந்தங்கட்கு வேறாக ஆன்மா வென்ப தொன்றில்லை யென்பர் பௌத்தர்; இதனைச் சத சஹஸ்ரிக பிரஞ்ஞை பாரமிதை யென்னும் நூலில் முதல் பன்னிரண்டு அதிகாரங்களுள் வற்புறுத்துமாறு காண்க. இனி இவ் வப்பிரசித்த விசேடி யத்தைப்பற்றிக் கூறலுற்ற நியாயப் பிரவேசம் பௌத்தனை நோக்கிச் சாங்கியனொருவன் ஆன்மா வறிவுடைப் பொருளென்று சொல்வது அப்பிரசித்த விசேடிய மென்பதுபடக் கூறுகிறதேயன்றி இலக்கணமொன்றும் கூறிற்றிலது. 179-185. அப்பிரசித்த வுபயமாவது - அப்பிரசித்த வுபயமென்னுங் குற்றமாவது;மாறானோற்குத் தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் - எதிரியாகிய பிரதிவாதிக்கு வாதி கூறும் பக்க வசனத்துப் பொருளின் சாத்தியதன்மம் விளக்கமின்றி யுணரப் படாததா யொழிவது; பகர் வைசேடிகன்-வாதியாய் நின்று பக்க வசனங்கூறும் வைசேடிகன்; பௌத்தனைக் குறித்து - பிரதிவாதியாகும் பௌத்தனை நோக்கி; சுக முதலிய தொகைப் பொருட்கு ஆன்மா காரணம்-சுகம் துக்கம் இச்சை முதலியவாகக் கூறப்படும் தொகைப் பொருட்கு ஆன்மாவே காரணமாம்; என்றால் - என்று சொல்வானாயின்; ஆன்மாவும் சுகமும் தாம் இசையாமையில் - ஆன்மாவைத் தன்மியென்றும் சுக முதலியன அதன் தன்ம மென்றும் தாங்கள் கொள்வதில்லாமையால்; அப் பிரசித் தோபயம் - தன்மியாகிய விசேடியமும் தன்மமாகிய விசேடண முமாகிய இரண்டும் பிரசித்தமில்லாமை யென்னும் குற்றமாம் எ - று. அப்பிரசித்தம், விளக்கமின்மை; உபயம் விசேடண விசேடிய மாகிய இரண்டு. விசேடண விசேடியமிரண்டும் தனித்தனியே அப்பிரசித்தமாகிய வழி, அவை முறையே அப்பிரசித்த விசேடண மென்றும் அப்பிரசித்த விசேடிய மென்றும் வருமென்றவர், பக்க வசன மொன்றின்கண் விசேடண விசேடியமிரண்டும் ஒருங்கே பிரசித்தமில்லாத வழி, அப்பிர சித்த வுபயமாம் என்பது இதனாற் கூறியவாறு. வாதியொடு மாறுபடுதலால் பிரதிவாதி மாறானோன் என்று கூறப்படுகின்றான். விசேடண விசேடிய மிரண்டும் தன் சமய நூல்களில் கூறப்படாதனவாதலின் பிரதிவாதி மனத்தில் கொள்ளப் படாமைபற்றி, “ஏறாது'' என்றும் “அப்பிரசித்தமாயிருத்த'' லென்றும் கூறல் வேண்டிற்று. முன் மொழிபவன் வாதியாதலின், வைசேடிகனாகிய வாதியைப் “பகர் வைசேடிகன்'' என்று விசேடித்தார். தொகைப் பொருளெனப் பட்டவை “சுகம் துக்கம் இச்சை வெறுப்பு முயற்சி அறம் மறம் என்பன; இவை வைசேடிகரால் ஆன்மாவின் கண் நிகழும் காரியமாகிய குணங்களென்று கொள்ளப் பட்டன''1 என்பர் திரு. நாராயணையங்கார். சுகமும் துக்கமும் விருப்பும் வெறுப்பும் முயற்சியும் அறிவும் ஆன்மாவின் குணங்களென வைசேடிக ருரைப்ப2 ஈண்டுக் கூறிய சுக முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா வென்னுங் கூற்றைப் பல ஏதுக்களைக் காட்டி மறுப்பர் 3சாந்த ரக்ஷிதர். இனி, நியாயப் பிரவேசமுடையார், இந்த அப்பிரசித்த வுபயத்துக்கு இலக்கணங் கூறாராயினும், ஆன்மா சுக முதலியவற்றுக்குச் சமவாயி காரணமென்று வைசேடிகன் பௌத்தனை நோக்கிச் சொல்வது அப்பிரசித்த வுபயமெனப்படும் என்ற இதனையே மொழிபெயர்த் துரைக்கின்றார். ஆன்மாவைப் பற்றி வைசேடிகர் கூறுவது நையாயிகர்க்கும் உடன் பாடாதலின், பின் வந்த சாந்தரக்ஷிதர் நையாயிகரை முன்னிலைப்படுத்து மறுப்பு நிகழ்த்துகின்றார். 186-190. அப்பிரசித்த சம்பந்தமாவது அப்பிரசித்த சம்பந்த மென்று சொல்லப்படுவது;எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்- பிரதிவாதிக்கு ஏற்றதாகிய பொருளை வாதியாகிய தானே சாதித்துக் கொடுத்தல்; மாறாம் பௌத்தற்கு-பிரதிவாதி யாகிய பௌத்தனை நோக்கி; சத்த அநித்தம் கூறில் - சத்தம் அநித்தம் என்று சொன்னால்; அவன் கொள்கை அஃது ஆகலின் - அவனுடைய கொள்கையுமதுவே யாதலால்; வேறு சாதிக்க வேண்டாதாகும் - வாதிக்கு வேறே சாதித்தற்கு இடமில்லையாய்க் குற்றம் எ-று. பிரதிவாதியாவான் இசைந்து மேற்கொண்டொழுகும் பொருளை “இசைந்த பொருள்'' என்றும், அதனை மறுக்கும்குறிப்புடைய பொருளை யெடுத்தோதிச் சாதிக்கற்பாலனாகிய வாதி, அது செய்யாது அப்பிரதி வாதிக்குரிய பொருளையே சாதித்துக் கொடுக்குமாற்றால் தோல்வியுறு வதே யன்றி அவனோடொத்த கருத்துடையனாய் இயையும் இயைபு யாண்டும் காணப் படாமையின் “அப்பிரசித்த சம்பந்த'' மென்றும், அச் செய்கை வாதிக்குக் குற்றமாமென்றும் இதனாற் கூறினார். பிரதிவாதி யாவானொருவன் தன் வாதந் தோற்று வாதி கூறும் வாதத்தை யேற்று அவனோடியையும் இயைபு “பிரசித்த '' மேயன்றி வாதி தோற்றுப் பிரதி வாதி பக்கல் இயைதல் அப்பிரசித்தமாமென வறிக, எடுத்துக்கூறும் பக்க வசனமே வாதிக்குத் தோல்வித் தானமும் பிரதிவாதிக்குத் சித்த சாதனமுமாதலின், பக்க போலியுமாயிற்றென்க. நன் பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியும் வெளிப்பட்டுள்ள சாத்தியதன்மத்திறமும் உடைத் தென்றார் ; அவற்றின் வெளிப்படை பிரதிவாதி யறிந்ததாயி னும், அதனை யுடன்படுதல் மறுத்தல் என்ற இரண்டனுள் ஒன்றைச் செய்தற்பொருட்டுப் பக்கவசனம் கூறப்படுதலின் அஃது இதனின் வேறாதல் அறிக ; என்னை, இஃது அப் பிரதிவாதி துணிந்து கொண்ட பொருளையே சாதித்துக் குற்றப்படுதலின். இனி, நியாயப்பிரவேசமுடையார், இவ்வாசிரியர் கூறியவாறு கூறாது பிரசித்த சம்பந்தமென்று கொண்டு அதற்கேற்பப் பிரசித்த சம்பந்தமென்பது சத்தம் செவிப் புலனாமென்பது என்றனர். இது பக்கப்போலி யாதற்குரிய அமைதி யில்லாதிருப்பதனை யாராய்ந்து கண்ட திரு. நாராயணையங்கார் இதனை அப்பிரசித்தா சம்பந்தம் எனத் திருத்திக் கொண்டுரைப்பர். திபேத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூலில் இந்தப் பிரசித்த சம்பந் தத்துக்குத் தீ வெம்மையுடைய தென்றோரெடுத்துக்காட்டுக் காணப் படுவதாக ஆசிரியர் வித்தியாபூஷணர் மொழிபெயர்த் துள்ளார். இனி, திரு. விதுசேகரனார் இப் பிரசித்த சம்பந்த மென்னும் பக்க போலியின் இயல்பை யாராய்ந்து, நியாயப் பிரவேச சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் கோளாறுண்டெனத் துணிகின்றார். நியாயப்பிரவேச பதிப்பாசிரிய ரான துருவனார் நியாயப்பிரவேச விருத்தியுரை முதல் பல நூல்களை யாராய்ந்து, இதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தவறில்லையென்று காட்டுகின்றார். எது எவ்வாறாயினும் நியாயப்பிரவேசமுடையார் கொண்ட பிரசித்த சம்பந்தமும் மணிமேகலையாசிரியர் கொண்ட அப்பிரசித்த சம்பந்தமும் வேறு வேறு நிற்பனவென்றும் இரு நூல்களும் முறையே காட்டும் எடுத்துக்காட்டுகள் அவ்வற்றிற் கேற்பனவென்றும் துணிந்து கோடற்குரியனவாம். தமிழகத்தில் நிலவிய பௌத்தர்களிடையே பக்கப்போலி யொன்பது வகையாகப் பகுப்புண்டு நிலவிய காலத்தே வடநாட்டில் வடமொழி வாணரிடையே பிரத்தியக்க விருத்த முதலிய ஐந்துமே நிலவின; தமிழகத்திலிருந்து வடநாடு சென்ற பௌத்தர்கள் பக்கப்போலி யொன்பது வகையினையும் எடுத்துக் கூறினர். அங்ஙனம் கூறி யோருள் நியாயப்பிரவேச முடையார் தாம் முதன்முதலில் நூல்வாயிலாக வடமொழியில் வெளிப்படுத்தினார். அப்பிரசித்த சம்பந்த மென மணிமேகலையாசிரியர் முதலிய அக்காலப் பௌத்த ஆசிரியன்மார் உரைத்த பக்கப் போலியைப் பிரசித்த சம்பந்தமென பிறழக் கொண்ட பிறழ்ச்சி முன்னுக்குப்பின் முரண்விளைத்து நிற்கின்றதென்றும், நியாயப் பிரவேசத்திற் குறிக்கப்பட்ட பிழை, பின்னே தமிழகத்திற் புலனாகாது திபேத்துக்கும் சீனாவுக்கும் சென்று மறுபடியும் வடமொழிக் குள்ளே சுழலத் தொடங்கினமையின், அதன் விருத்தியுரை காரராதல் அவரிற் பின்வந்தோராதல் ஒருவரும் தமிழ்நூல்களை யாராய்ந்து திருத்தஞ் செய்து கொள்ளாதொழிந்தனரென்றும் அறிக. இவ் வுண்மையை நுனித்துணரும் மதுகையில்லாதார் சிலர், நியாயப்பிரவேசத்தின் வழி வந்த தாகும் இம்மணிமேகலையென்று கொண்டு ஈண்டுக் கூறப்படும். அப்பிரசித்த சம்பந்த முதலியவற்றிற்குத்1 தமிழ்நெறி யல்லாத முறையிற் பொருள் கூற முயன்று குன்றுமுட்டிய குரீஇப்போல இடர்ப்படு வாராயினர். 191-192 ஏதுப்போலி ஓதின் -ஏதுப்போலி யெனப்படும் தீய வேதுவை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என - அசித்தமென்றும் அநைகாந்திகமென்றும் விருத்த மென்றும்; மூன்றாகும் - மூவகைப்படும் எ - று. ஏதுப் போலியை அசித்தம் முதலிய மூன்றாக வகுத்துப் பின்னொவ் வொன்றையும் முறையே நான்கும் ஆறும் நான்குமாக விரித்துக் கூறுப வாதலின், அந் நெறிமை தோன்ற, ''ஓதின்'' என்றார். அசித்தமாவது ஏது பொருந்தாமையாற் கருதிய பயன் சித்தியாதொழிதல்; அநைகாந்திகமாவது ஒரு முடிபுமின்றி யொழிவது; விருத்தமாவது ஏதுவானது வேண்டும் பயனைச் சாதியாது முரண்விளைத் தொழிவது. இனி 2நியாயப் பிரவேச முடையாரும் ஏது வாபாசம் அசித்த முதலியமூன்று வகைப்படு மென்றேகூறுகின்றார்; மற்று, கோதமர், சவ்வியபிசாரி, விருத்தம் பிரகரண சமம், சாத்திய சமம். காலாதீதம் என ஐவகையாகவும் பிரசத்தபாதர், அசித்தம், விருத்தம், சந்திக்தம், அனத்தியாவசிதம் என நான்கு வகையாகவும் வேறு சிலர் ஆறுவகையாகவும் கூறுப, ஆராய்ச்சியாளர், அசித்தமென்னும் ஏதுப்போலிவகை வட நாட்டு அளவை நூலார்க்குப்3 பிற்காலத்தே தெரியவந்த தென்பர். ஏனை அநைகாந்திக மும் விருத்தமும் அளவை நூலார் பலர்க்கும் பண்டே தெரிந்தனவாம். 193-195 அசித்தம் - அசித்தமென்னும் ஏதுப்போலி; உபயாசித்தம் என நான்கு - உபயாசித்தமென்றும் அன்யதரா சித்த மென்றும் சித்தா சித்தமென்றும் ஆசிரயா சித்தமென்றும் நான்காய் விரியும் எ - று. நியாயப்பிரவேசமுடையார்4 இவ்வாறே அசித்தவேதுப் போலி நான்குவகைப் படுமென்றும் அவை உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்தம் ஆசிரயாசித்தம் எனபன வாம் என்றும் கூறுவர்; பிரசத்த பாதர்1 உபயாசித்தம் அன்னிய தராசித்தம், தற்பவாசித்தம் அணுமேயாசித்தம் என நால்வகைப் படுத்துக் கூறுவர். சுலோக வார்த்திக முடையார்,2 அசித்தம் சொரூபாசித்தம் ஆசிரயாசித்தம் என இரண்டா மென்றும், உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்த மென்ற மூன்றும் இவ்விரண்டின் உள்வகையாமென்றும் கூறுவர்; சந்திக்தாசித்தம் என்பது இந்நூலிற் காணப்படவில்லையாயினும், சித்தா சித்தம் என்பது அதன் நிலையில் நிற்கிறது. 195-197 உபயா சித்தம் - உபயா சித்தமென்னும் ஏதுப் போலி யாவது; சாதனவேது - சாதனமாகிய ஏது; இருவர்க்கும் இன்றி வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதன மாதலில்லையாய்; சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல்-சத்தம் அநித்தம் கண்ணுக்குப் புலனாதலால் என்றாற் போல்வதாம் எ - று. பக்கவசனத்திருக்கும் சாத்திய தன்மத்தைச் சாதித்து கொடுக்கும் சிறப்புப்பற்றி, ஏதுவைச் “சாதனவேது'' என்று சிறப்பித்தார்; சாதனமாதல் ஏதுவிற்கு இயல்பாயினும் ஈண்டு அது சாதனமாதல் இல்லையென்ற குறிப்பால் இவ்வாறு கூறினார் என்றுமாம். சத்தம் அநித்த மென்னும் பக்கவசனத்தில் அநித்த மென்னும் சாத்தியதன்மத்தைச் சாதித்தற்கு ஏதுவாகிய “கட் புலனாதலின்'' என்பது வாதி பிரதி வாதிகளாகிய இருவர்க்கும் பொருந்தாமையாற் பயன்படாமை காண்க. இதுபற்றியே இஃது உபயாசித்தவேதுப் போலியாயிற்று. நியாயப் பிரவேச முடையாரும் இவ்வுபயாசித்தத்துக்கு இவர் காட்டிய உதார ணத்தை மேற்கொண்டு இலக்கணத்தைக் கூறாதொழிந்தார்; பிரசத்த பாதர். “சத்தம் அநித்தம் அவயவமுடைமையால்'' என்று உதாரணம் கூறுகின்றார். கோதமர் இதனைச் சொரூபாசித்தி யென்பர். 198-202 அநித்தியதராசித்தம் - அன்னிய தராசித்த மென்னும் அசித்தப் போலியாவது; மாறாய் நின்றாற்கு-பிரதிவாதியாய் நின்ற ஒருவனுக்கு; உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் - வாதி யாகிய தான் எடுத்துக்கூறிய ஏது அவனால் ஏன்னுக் கொள்ளப்பட்ட சாதன மாகாது போவதாம்; சத்தம் அநித்தம் செயலுறல் என்னில் - சத்தம் அநித்தம் செய்கையிற் றோன்றுதலால் என்று பிரதிவாதியாய் நிற்கும் சாங்கிய னொருவனுக்குச் சொன்னால் உய்த்த சாங்கியனுக்கு - சொல்லப்பட்ட சாங்கியனுக்கு; சித்தவெளிப்பாடு அல்லது- செயலிடைத் தோன்றுதலென்பது காரணமாகிய மூலப் பகுதி செய்கைக்கண் சத்தமாய்த் தோன்றுகிறதென்று விளங்குமே யின்றி; அசித்தமாகும் - அநித்தியத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகாது பயனில் ஏதுவாம் எ - று. அநித்தியதராசித்த மென்பதே உண்மைப்பாடம்; 1அன்னியதாசித்த மென்பது உற்பாத காரணத்துக் கூறப்படும் குற்றமாதலாலும், ஈண்டு அனுமானத்துக்கு வேண்டும் ஏதுக்கட் காகா வென்ற குற்றமே கூறப் படலாலும் ‘இம்மணிமேகலையைப் பின்பற்றி யெழுந்த நியாயப் பிரவே சத்து அன்னியதரா சித்தமென்ற பாடமே காணப்படலாலும், பிரசத்த பாதர் முதலாயினோரும் ஏதுப்போலி வகைகளுள் அன்னியதராசித்தம் என்றே ஏதுப்போலி காட்டுதலாலும் அன்னியதாசித்தம் என்ற பாடம் பொருந்தாமை யறிக. திரு. நாராயணையங்காரும்2 அன்னியதராசித்த மென்றே பாடங்கோடல் நேரி தென்பர். அன்னியதரன், வாதி பிரதிவாதி யிருவரில் ஒருவன். பக்கவசனத்துக் கூறிய பொருளைச் சாதித்தற்குத் தக்கதென மேற்கொண்டு கூறுதலின், "உன்னியஏது" என்றும் அற்றாயினும் அது போலியாயிற்றென்றற்கு இவ்வாறு சிறப்பித்தும் கூறினார். செயலுறல் என்புழி, உறல் என்பது தோன்றுதல் என்னும் பொருட்டு. உறல் என்புழி, ஆனுருபு விகாரத்தாற்றொக்கது. சித்தம், மூலப்பகுதி, சத்தம் முதலிய யாவும் மூலப்பகுதியின் காரிய மென்றும், காரணவடிவில் தோற்றமின்மையும் காரியவடிவில் தோற்றமுடைமையும் பொருட்கியல்பென்னும் சற்காரியவாதி யாதலின், சாங்கியன் செயலிடைத் தோன்று வனயாவும் புதியவல்ல; காரணமாகிய மூலப்பகுதியின் காரியமென்றே கருதுதலால், அவற்கு இச்செயலிடைத் தோன்றலால் என்னும் ஏது, சத்தமாகிய தன்மியின் கண்ணும், அநித்தமாகிய தன்மத்தின்கண்ணும் பொருந்தாதொழிதலால், அசித்தமாம் என்பார், "உய்த்த சாங்கியனுக்குச் சித்த வெளிப்பா"டென்றும், சாதன சாத்திய வகையில் "அசித்தமாகும்" என்றும் கூறினார். சாதனமாகிய ஏதுவைக்கொண்டு பக்க வசனப் பொருளைக் கருதுதற்குச் சமைந்த சாங்கியன் என்றற்கு, "உய்த்த சாங்கியன்" என்றும் உய்த்துணருமிடத்து இது குற்றமென மேற்கொள்ளா னென்றும் கூறியவாறு அறிக. இங்குக் காட்டப்பட்ட எடுத்துக் காட்டே பதார்த்த தரும சங்கிரகத்தும் நியாயப்பிரவேசத்தும் காணப்படுகிறது. இவ்விரண்டும் முறையே மீமாஞ்சகனையும் சாங்கியனையும் பிரதிவாதியாகக் கொள்ளுகின்றன. 203-204. சித்தாசித்தமாவது-சித்தாசித்தமென்னும் அசித்த வேதுப் போலியாவது; ஏது சங்கயமாய்-எடுத்தோதும் ஏதுவே ஐயத்திற்கிடமானதாயிருக்க; சாதித்தல்-அது கொண்டு ஒன்றைச் சாதிப்பதாம்; ஆவி பனி என ஐயுறாநின்றே - புகையோ பனியோ என ஐயுற்றுத் துணியாமலே; தூய புகை - அது தூய புகையாமெனத் தானே ஏறட்டுக்கொண்டு; நெருப்புண்டு எனத் துணிதல்-அங்கே நெருப்புளது என்று துணிந்து சொல்லுதல் எ - று. புகை யென்பதே துணிபாயின் இவ்வேது சித்தமாயும், பனி யென்று துணியப்படின் அசித்தமாயும் திரிதலின், இது சித்தா சித்த மென்னும் குற்றமாயிற்று. சங்கயமாக வென்பது சங்கய மாயென நின்றது. சங்கயம்: சம்சயமென்பதன் திரிபு. இதனை நியாயப்பிரவேச முடையோர், சந்திக்தா சித்தமென்றும், பிர சத்தபாதர் தற்பவாசித்த மென்றும் கொண்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தையே தத்தம் நூல்களிற் காட்டியுள்ளனர். 207-211. ஆசிரயாசித்தம்-ஆசிரயாசித்த மென்னும் அசித்த வேதுப் போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மியின்மை காட்டுதல் -வாதியாகிய தன்னோடு மாறுபட்ட பிரதிவாதிக்கு அவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மியல்லாத வொன்றைத் தன்மியாகச் சொல்லி அதற்குரிய ஏதுவொன்றைக் கூறிக் காட்டுவதாம்; ஆகாசம் பொருளாம் - ஆகாசம் பொருளாகும்; சத்த குணத்தால்-சத்தமாகிய குணமுடைமையால்; என்னில்-என்று சொன்னால்; ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு - ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத பிரதிவாதிக்கு; தன்மி அசித்தம் - அவ்வாகாசமாகிய தன்மி அசித்தமாம்; ஆகவே ஆசிரயமாகிய தன்மி யசித்தமாய் நிற்றலால் அதனைச் சாதித்தற்கு வந்த ஏது ஆசிரயாசித்தமாயிற் றென்க. இன்மை: அன்மைப் பொருட்டாய் அதனையுடைய தன்மிமேனின்றது. காட்டுதல்: அத்தன்மியையும் அதன் சாத்திய தன்மத்தையும் பக்க வசனமாக நிறுத்தி ஏதுவொன்று காட்டிச் சாதித்தலைக் குறித்து நின்றது. ஏதுவொன்று கூறிக் காட்டுத லென்னாதவழி அப்பிரசித்த விசேடிய மென்னும் பக்கப் போலியாய் முடியுமெனவறிக. இனி, நியாயப்பிரவேச முடையார், ஆகாயம் ஒரு பொருளன் றென்பானொருவனை நோக்கி, "ஆகாசம் திரவியம் குணாசிரயத்தையுடைமையால்" என்பது ஆசிரயாசித்த மென்பர்; பதார்த்தசங்கிரக முடையார், இருள் திரவியம் கருமை நிறமாகிய பண்புடைமையால் என்று காட்டுவர்; இவர் இதனை அனுமேயாசித்தமென வழங்குப வாயினும், சீதரர் அனுமேயா சித்த மாவது ஆசிரயாசித்தமென்றே விளக்குவர். ஆசிரயம்: பக்கவசனத்து எழுவாயாகிய பொருள். நியாய சூத்திரமுடையார், ஆசிரயா சித்தத்துக்கு, "கடவுளென்பது இல்லை, அக் கடவுட்குத் தேகமின்மையால்" என்று உதாரணங் காட்டுவர்; வாற்சாயனார் முதலாயினோர், சாத்தியா சமத்துக்குக் காட்டும் உதாரணமும் விளக்கவுரையும் ஆசிரயாசித்த மாகிய ஏதுப்போலிக்கும் ஒத்தவா யிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது. அவர் "நிழல் ஒரு திரவியம் இயக்க முடைமையால்" என்பர். ஏனை நியாய நூல்களில் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதற்குமேலாக ஏகதேசாசித்த மென்றும் வியாப்பியத்துவாசித்த மென்றும் கூறுவாரும் சொரூபா சித்தம், வியாப்பியத்துவாசித்தம், ஆசிரயாசித்தம், ஞானாசித்தம் என நால்வகைப்படுத் துரைப்பாருமெனப் பல திறத்தர் ஆசிரியர். அவற்றையெல்லாம்1 விரிந்த நூல்களுட் கண்டுகொள்க. 211-216. அநைகாந்திகமும் - அநைகாந்திக மென்னும் ஏதுப் போலியும்; சாதாரணம்...என்றாறு - சாதாரணமென்றும் அசாதாரண மென்றும் சபக்கை தேச விருத்தி விபக்க வியாபி யென்றும் விபக்கைக தேச விருத்தி சபக்க வியாபியென்றும் உபயைகதேச விருத்தி யென்றும் விருத்த வியபிசாரியென்றும் ஆறுவகைப்படும் எ - று. சாத்தியதன்மத்தைத் துணிவித்தற்கு வந்த பக்கதன்மவசனம் வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதனமாய்ப் பஃறலையான முடிபுகோடற் கிடந்தருவது அநைகாந்திகமென்பதாம். அநேக அந்தத்தைக் கொள்வது அநைகாந்திக மெனவறிக. நையாயிகர் இதனைச் சாதாரணம் அசாதாரணம் அனுபசங்காரி என மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவர். இம்மணிமேகலையாசிரியர் கூறிய இவற்றையே நியாயப் பிரவேசம் பிரமாண சமுச்சயம்2என்ற நூல்களையுடையாரும் மேற்கொண்டு கூறுகின்றார். ஏனை வைசேடிகர் முதலாயினார் சந்தித்த வேதுவா பாசமென்பது இவ்வநைகாந்திக வேதுப் போலிக்கண் அடங்குமென்ப. 217-223. சாதாரணம் - அநைகாந்திக வேதுப் போலிவகையாகிய சாதாரண அநைகாந்திக மென்பது; ஏது - வாதியாற் கூறப்படும் ஏதுவானது; சபக்க விபக்கத்துக்கும் பொதுவாய் இருத்தல் - சபக்கத்துக்கும் மறுதலையாகிய விபக்கத்துக்கும் பொதுவாய் இருப்பது; சத்தம் அநித்தம் அறியப்படுதலின் என்றால்-சத்தம் அநித்தம் என்ற பக்கவசனத்துச் சாத்திய தன்மமாகிய அநித்துவத்தைச் சாதித்தற்கு அறியப்படுதலால் என்று ஏதுக் கூறினால்; அறியப்படுதல் - அறியப்படுதல் என்னும் அந்த ஏதுவானது; நித்த அநித்தம் இரண்டுக்கும் செறியும் - நித்தமென்று சாதித்தற்கும் அநித்தமென்று சாதித்தற்கும் சென்று பொருந்துதலால்; கடம்போல் அநித்தத்து அறிவோ - கடம்போல அநித்தமென்று அறிவதோ; ஆகாசம்போல நித்தத்து அறிவோ - ஆகாயம்போல நித்தமென்று அறிவதோ; என்னல் - என்று ஐயுறுதற்கு இடமாவது எ - று. சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் ஏது நிற்பதனால் துணி பொருள் பெறப்படாது பஃறலைப்பட்ட ஐயத்துக்கு இடனா மென்பதை உதாரணத்தின்கட் குறித்தலால், "பொதுவாய் இருத்தல்" என்றொழிந்தார். சபக்கத்தோடு உண்டாகும் பொருத்தம் எத்துணையோ அத்துணைப் பொருத்தமே விபக்கத்துக்கும் உண்டென்பார், அதனை விளக்கும் உதாரணத்தின்மேல் வைத்து, "நித்தா நித்த மிரண்டுக்கும் செறியும்" என்றார். பக்கத்தோடும் சபக்கத்தோடும் சென்றியைதற்குரிய ஏது மிகை பட விரிந்து விபக்கத்தும் சென் றியைவது பற்றி இதனை முதற்கண் நிறுத்தி யுரைத்துள்ளாரெனவறிக. இனி, நியாயப்பிரவேசமுடையார் இவரைப்போல் இதற் கிலக்கணங் காட்டிலராயினும் இவர் காட்டிய உதாரணமே1 யெடுத்தோதுகின்றார். பிரசத்தபாதரும் சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் இயையும் ஏது சாதாரணமாம் என்றும், இஃது ஐயத்துக்கிடனாவதென்றும் கூறி, "இது பசு, கொம்புடைமையால்" என்று உதாரணமும்2 காட்டுகின்றார். 223-230. 3அசாதாரணமாவது-அசாதாரண மென்னும் அநைகாந்திக வேதுப் போலியாவது; உன்னிய பக்கத்து உண்டாம் ஏது - சாதிக்கக் கருதிச் சொல்லும் பக்க வசனத்துக்குப் பொருந்தி நிற்கும் ஏதுவானது; சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் - அப்பக்க தன்மி யொழிய ஏனைச் சபக்க விபக்கங்களில் முற்றும் பொருந்தா தொழிவதாம்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்னில்-சத்தம் நித்தம் என்று பக்க வசனமும் அதனிடத்துள்ள கேட்கப்படுதலா லென்னும் ஏதுவும் எடுத்துக் கூறினால்; கேட்கப் படலெனும் ஏது - செவியாற் கேட்கப் படுதலென்னும் ஏது; பக்கத்து உள்ள தாயின் அல்லது - பக்க தன்மியாகிய சத்தத்தின்கண் உளதாவ தேயன்றி; சபக்க விபக்கத்து மீட்சித்து - சபக்க விபக்கங்களில் இல்லையாய்; சங்கயமெய்தி-ஐயத்துக் கிடமாய்; அநைகாந்திகமாம் - அநைகாந்திகமென்னும் குற்றமாம் எ - று. "உன்னிய பக்கத்து" என்பதற்கு, "உன்னிய ஏது" என்புழி உரைத்தது போல வுரைத்துக் கொள்க. "பக்கத்து உண்டாமேது" என்றது அவ்வசாதாரண வேது சபக்க விபக்க மிரண்டினும் பொருந்தாது பக்க தன்மி யிடத்து மட்டிற் பொருந்தி யிருப்பதை யுணர்த்தி நின்றது. "கேட்கப்படுதலின்" என்புழிச் செவியா லென்பது அவாய் நிலையான் வந்தது. மீட்சி: எதிர்மறை; ஈண்டு இன்மை குறித்து நின்றது. சங்கயமாவது: நித்தமும் அநித்தமு முடைய பொருள்களுள் சத்த மொழிந்த பிற எப்பொருளைத் துணிதற்குச் செவியாற் கேட்கப்படுவது ஏதுவாம் என ஐயுறுதல். இவ்வாறே1 நியாயப் பிரவேசமுடையாரும், "கிம் பூதஸ்ய ஸ்ராவணத்வம்" எனக் கூறுதல் காண்க; ஈண்டும் இவ்வட நூலாசிரியர் அசாதாரணத்துக்கு இலக்கணம் கூறிற்றிலர். இனி, இவ் வசாதாரணம் பிரசத்தபாதரால் அனத்தியாவசித்தம் என்று கூறப்படுகிறது. "உன்னிய பக்கத் துண்டா மேது சபக்க விபக்கந் தம்மில் இன்றாதல்" என ஈண்டு மணிமேகலை யாசிரியர் கூறிய இலக்கணமே பிரசத்தபாதரால் அந்த அனத்திய வசித்தத்துக்கும் கூறப்படுகிறது; ஆனால் அவர் "சங்கயமெய்தி அநைகாந்திகமாம்" என்பதை மறுத்து இதன்பால் ஐயத்துக் கேதுவாகிய பொதுத் தன்மை கிடையாதெனக் காட்டுவர்2 சத்தபதார்த்தி யென்னும் நூலில் இந்த அனத்தியா வசித்தத்தைக் கூறுமிடத்துப் பாட வேறுபாடாகச் சந்திக்தா சித்தமும் காணப்படுவதை நோக்கின், அனத்தியாவசித்தத்தின்கண் ஐயத்துக் கிடமுண்டெனக் கருது வோரு முளரென்றற் கெண்ண முண்டாகிறது; பிரசத்தபாதர் நிகழ்த்தும் தடைவிடைகளும் அவ்வெண்ணத்தை வற்புறுத்து கின்றன. ஆதலால், மணிமேகலை யாசிரியர் "சங்கய மெய்தி யநைகாந்திகமாம்" என்பது ஒருசாராசிரியர்க் குடன்பாடென்பது இனிது விளங்கும். ஆயினும் பக்கத்துண்டாமேது, சபக்க விபக்கங் களில் ஒப்பவோ மிக்கோ குறைந்தோ இருந்தாலன்றி, ஐயம் பிறவாதாகலின், பிரசத்தபாதர் கூறுவது பொருத்தமாமென வறிக. பக்க தன்மியின்கண் உள்ள தன்மம் பொதுத் தன்மமாகாது அதற்கே சிறப்பாக வுரியதாயின் அதனிடத்தே ஐயம் நிகழா தென்பர். செவியால் கேட்கப்படுவதாகிய தன்மம் சத்தமொன்றிற் கன்றிப் பிறவெவற்றிற்கும் இல்லாமையும் அறிக. 231-242. 1சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபியாவது-சபக்க ஏகதேச விருத்தி விபக்க வியாபியென்னும் ஏதுப்போலி யென்பது; சபக்கத்து ஓர் இடத்து எய்தி-சபக்கப் பொருள் களில் ஏதேனும் ஒன்றிற் பொருந்தி; விபக்கத்து எங்கும் உண்டாதலாகும் - விபக்கப் பொருள்கள் எல்லாவற்றிலும் பொருந்தி யிருப்பதாகும்: சத்தம் செயலிடைத் தோன்றா தாகும் - சத்தம் செயலிடத்துத் தோன்றுவ தன்றெனப் பக்க வசனமும்; அநித்தமாகலின் என்றால் - அநித்தமாதலால் என எதுவும் சொன்னால்; செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் - செயலிடத்துத் தோன்றாமையாகிய சாத்தியதன்மம் நிலவுதற்குரிய சபக்கமான; மின்னினும் ஆகாசத்தினும் - மின்னும் ஆகாசமுமாகிய இவற்றினுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தி; ஆகாசத்திற் காணாதாகலின்- ஆகாசத்தினிடத்தே பொருந்தாமையால்; அநித்தம்-அநித்த மென்னும் ஏது; கடாதியின் ஒத்தலின்-விபக்கமான கட முதலிய அநித்தப் பொருள்களில் முழுதும் பொருந்துவதால்; கடம்போல் அழிந்து செயலில் தோன்றுமோ - அக் கட முதலியவை போல அழிதலால் செயலிடத்தே தோன்றுமோ; மின்போல் அழிந்து செயலில் தோன்றாதோ - மின்னுவானது அழிந்து செயலிடத்துத் தோன்றாமை போல அழிதலால் தோன்றாதொழியுமோ; எனல் - என ஐயுற்றுத் துணிவெய்தா தொழிவதாம் எ - று. சபைக்கைகதேச விருத்தி விபக்க வியாபி யென்பதன் இலக்கணம் இதுவென்பார், "ஏது சபக்கத் தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கு முண்டாதலாகு"மென்றார். எங்கும் உண்டாதலாவது எல்லாப் பொருளிடத்தும் ஒக்க வியாத்தி யுடையதாதல். ஏக தேசப் படர்ச்சியை வியாத்தியென்னாராதலின், "ஏக தேச விருத்தி" யென்றார். விருத்தி2 "படங் குடிலாவதுபோல் விரிவது," இனி, இவ்வேதுப் போலி சபக்கத்து ஏகதேச விருத்தியுடைத்தாதலை விளக்கலுற்று, "அநித்தமென்ற வேது செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் மின்னினும் ஆகாசத்தினும் மின்னினிகழ்ந்து ஆகாசத்திற் காணாதாகலின்" என்றார். சத்தம் செயலிடைத் தோன்றாது என்ற பக்க வசனத்துச் செயலிடைத்தோன்றாமை சாத்திய தன்மம்; அத்தன்மம் மின்னினும் ஆகாயத்தினும் பொருந்துதலின் அவை யிரண்டும் சபக்கமாதல் தெள்ளிதாதலால், "செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்க மின்னினும் ஆகாசத்தினும்" என்றார்; என்றது மின்னும் ஆகாசமும் செயப்படுபொருளல்ல வென்றவாறு. பக்கதன்மமாகிய அநித்தியத்துவம் சபக்க மிரண்டனுள் மின்னிடத் துளதாதலாலும் ஆகாசத்தில் இல்லையாதலாலும், "மின்னினிகழ்ந் தாகாசத்திற் காணாதாகலின்"என்றார். இது சபக்கைக தேச விருத்தி கூறியது. இனி, சபக்கத்துக்குரிய செயலிடைத் தோன்றாமை யாகிய தன்மத்தின் மறுதலையான செயலிடைத் தோன்றுவதைத் தன்மமாகவுடைய விபக்கப் பொருள் இவையென்பார் கடம் முதலியனவென்று கூறி, அக் கட முதலியவற்றில், சபக்கத்தேக தேச விருத்தியாய் நிற்கும் அநித்தத்துவமாகிய பக்கதன்மம் முழுதும் வியாபித்திருக்கின்ற தென்பார், "அநித்தம் கடாதியின் ஒத்தலின்" என்றார். இதனால் விபக்க வியாபகம் கூறிய வாறாயிற்று. இவ்வாறு சபக்கத்தேக தேச விருத்தியும் விபக்கத்து வியாத்தியுடைமையும் கூறியவர், இவ்வேது அநைகாந்திக வேதுப் போலியாவதும் கூறுவார், "கடம்போலழிந்து செயலிற் றோன்றுமோ மின்போலழிந்து செயலிற் றோன்றாதோ வெனல்" என்றார். விபக்கத்து முழுதும் வியாத்தியுடையதாதலின் அதுபற்றி, 'கடம் போலழிந்து செயலிற் றோன்றுமோ" என்றும், சபக்கத்தேகதேசப் பொருத்தம்பற்றி, "மின்போல் அழிந்து செயலிற் றோன்றாதோ" வென்றும் கூறினார். இவ்வாறு இருதலையும் ஐயத்துக்கிடமாதல் தோன்றவே அநைகாந்திகமாதல் விளங்கிற்று. அழிந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. 243-253. 1விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி - விபக்கத்து ஏகதேச விருத்தியாய்ச் சபக்கத்து முழுதும் வியாபித்திருக்கும் அநைகாந்திக வேதுப் போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; விபக்கத்து ஓரிடத்து உற்று - விபக்கத்துள்ள பொருள்களில் ஒன்றிற் பொருந்தி; சபக்கத்து ஒத்து இயறல் - சபக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றிலும் நன்கு பொருந்தி யிருப்பதாம்; சத்தம் செயலிடைத் தோன்றும் - சத்தம் செய்யப்பட்டுத் தோன்றும் என்று பக்க வசனம் கூறி; அநித்த மாதலின் எனின்- அநித்த மாதலால் எனப் பக்கதன்ம வசன மாகிய ஏதுவைக் கூறினால்; அநித்த வேது - அநித்தமாகிய அந்த ஏது; செயலிடைத் தோன்றற்கு விபக்க ஆகாயத்தினும் மின்னினும்-செய்யப்பட்டுத் தோன்றுவதாகிய தன்மத்துக்கு விபக்கமாகிய ஆகாயம் மின்னென்ற இவற்றுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தியும்; ஆகாசத்துக் காணாது - ஆகாசத்தின்கண் பொருந்தாமலும்; சபக்கக் கடாதிகள் தம்மில் - அநித்தமாகிய தன்மத்துக்குச் சபக்கப் பொருள் களான கடம் முதலியவற்றில்; எங்குமாய்-எல்லாவற்றிலும் முழுதும் பொருந்துவதாய்; ஏகாந்தம் அல்ல-அநைகாந்திக மென்னும் குற்றமாய்; மின்போல் அநித்தியமாய்ச் செயலிடைத் தோன்றாதோ - மின்போல் அநித்தத் தன்மை யுடைத்தாய்ச் செய்யப்பட்டுத் தோன்றுவதன்றோ எனவும்; கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ-கடம்போல் அநித்தத் தன்மையுடையதாய்ச் செயப்படு பொருளாய்த் தோன்றுவதோ எனவும்; எனல் - ஐயத்துக் கிடமாய் ஒரு முடிவெய்தா வகையிற் கூறுவது எ - று. இது முன்னர்க்கூறிய சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபியைப்போல்வதாயினும், ஆண்டுச் சபக்கத்துக் காணப் பட்ட ஏகதேச விருத்தி, ஈண்டு விபக்கத்தும், ஆண்டு விபக்கத்துப் பொருந்தி நின்ற வியாத்தி ஈண்டுச் சபக்கத்தும் நிற்பதே வேறு பாடென்க. ஈண்டும் இதன் இலக்கணத்தை "ஏது விபக்கத் தோரிடத் துற்றுச் சபக்கத்து ஒத்தியறல்" என்றார். வியாபித் திருப்பதை "ஒத்தியறல்" என்றார். ஓரிடம், ஏகதேசம்- இதனை விளக்கற்கு மேற்கொண்ட உதாரண வியல்பை, "சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்த மாதலின் எனில் அநித்த வேது செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினும் மின்னினிகழ்ந் தாகாசத்துக் காணாது சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்றார். சொன்முடிபு நோக்கி, எங்குமாயென எச்ச வாய்ப் பாட்டாற் கூறினார். செயலிடைத் தோன்றலைத் தன்மமாக வுடைய சபக்கத்துக்கு மீட்சியாகிய விபக்கத்தில் செயலிடைத் தோன்றாமை தன்மமாதலின் அதனையுடைய ஆகாய மின்னுக்களை, "செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினு" மென்றும், அநித்தத்துவ மாகிய தன்மம் மின்னிடத்து உளதாயும் ஆகாயத்தின் கண் இலதாயும் இருத்தல்பற்றி, "மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது" என்றும் கூறுமாற்றால் விபக்கைகதேச விருத்திகூறியவா றாயிற்று. அநித்தத்துவமும் செயலிடைத் தோன்றலுமாகிய தன்மத்தை யுடைய கட முதலியன சபக்கமாதலினாலும், அவற்றின் கண் அது முழுதும் பொருந்தி யிருத்தலினாலும், "சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்னுமாற்றால் சபக்கத்து வியாபியாதல் விளக்கியவாறாயிற்று. இனி, இவ்வேது அநைகாந்திகமாதலை விளக்கற்கு "மின்போல்அநித்த" மாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடல்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ" என்றார். 254-266. உபயைகதேச விருத்தி - உபய ஏகதேச விருத்தி யென்னும் அநைகாந்திக ஏதுப்போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி - சபக்கம் விபக்கம் என்ற இரண்டிடத்துக்கு முரியதாய்; ஓர் தேசத்து வர்த்தித்தல் - ஒவ்வொன்றினும் ஒரு புடைப் பொருத்தமே யுடையதாய் நிலவுவதாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்னில் - சத்தம் நித்தமெனப் பக்கவசனமும் அமூர்த்த மாதலால் என ஏதுவும் கூறினால் அமூர்த்த ஏது - அமூர்த்த மாகிய ஏது; நித்தத்தினுக்குச் சபக்க ஆகாச பரமாணுக்களின் - நித்தத்துவமாகிய தன்மத்தையுடைய சபக்கத் தடங்கு வனவான ஆகாசம் பரமாணு என்ற இவற்றினுள்; ஆகாசத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது ஆகாசத்தின்கட் பொருந்தி; மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும் - மூர்த்தப் பொருளாகிய பரமாணுவின்கண் பொருந்தா தொழி வதாலும்; விபக்கமான கட சுகாதிகளில் - நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன்மத்தையுடைய வல்லாத விபக்கத் தடங்குவனவான குடம் இன்பம் என்ற இவற்றினுள்; சுகத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது இன்பத்துக்குப் பொருத்தமாய்; கடத்து ஒழிந்தமையினும் - குடத்துக்குப் பொருந்தாதொழிவதாலும்; ஏக தேசத்து நிகழ்வது - சபக்க விபக்க மிரண்டினும் ஒரு புடைப் பொருத்த முடைத்தாயிற் றென்பதாம்; ஏகாந்தமன்று-அநைகாந்திகமாதல் எவ்வாறெனின்; அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ-அமூர்த்தமான பொருள் ஆகாசம் போல நித்தமானதோ; அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ - அவ்வமூர்த்தப் பொருள் இன்பம் போல அநித்தமோ; எனல் - என்று ஐயுற்றுத் துணி பொருள் காணாது மயங்குதல் எ - று. முன்னர், சபக்கைகதேச விருத்தியும் விபக்கைகதேச விருத்தியு மாகிய இரண்டும் தனித்தனியாகக் கூறியவர், இதன்கண் இரண்டிடத்தும் ஏகதேச விருத்திப்படும் ஏதுப் போலியை யெடுத் தோதுதலின், சொற்சுருங்குதல் பற்றி, உபயைகதேச விருத்தி யென்றார். நியாயப் பிரவேசமுடையார், உபய பக்ஷைகதேச விருத்தி யென்று சிறிது விரியக் கூறினார். தமிழகத்து நிலவக்கண்ட இக்கருத்தை ஏனை நாட்டுப் பௌத்தர்கள் இனிதறிந்து கோடற்கு, சபக்க விபக்க மென்றிரண்டினும் ஒப்பப் பொருந்துதலின், "ஏதுச் சபக்கத்தினும் விபக்கத் தினுமாகி" யென்றும் அப்பொருத்தமும் முழுதும் பொருந்திய பொருத்தமன்று, ஓரொன்றிற் பொருந்தும் ஒருபுடைப் பொருத்த மென்றற்கு, "ஓர் தேசத்து வர்த்தித்தல்" என்றும் கூறினார். ஓர் தேசம் ஏக தேசம். வர்த்தித்தல்-இயலுதல். இவ்வாற்றால் உபயைகதேசவிருத்தி அநைகாந்திக போலிக்கு இலக்கணம் கூறியவாறாம். அமூர்த்தம் - உருவின்மை. இவ்வேதுப் போலி உப யைகதேச விருத்தியாதலை உதாரணத்தாற் காட்டலுற்று, "சத்தம் நித்தம் அமூர்த்த மாதலின் என்னின்" என்பதனால் பக்கவசனமும் ஏதுவும் முதற்கட் கூறிப் பின்னர், "அமூர்த்த வேது நித்தத்தினுக்குச் சபக்க வாகாசபரமாணுக்களின், ஆகாசத்து நிகழ்ந்து, மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும், விபக்க மான கட சுகாதிகளிற், சுகத்து நிகழ்ந்து கடத் தொழிந்தமையானும், ஏக தேசத்து நிகழ்வது" என்றார். ஆகாசம், அமூர்த்தம். பரமாணு, மூர்த்தம். இவை அநித்தத்துவ தன்மமுடைமையின். சபக்கமாயின. கடசுகாதிகள் அநித்தத்துவ தன்மமுடைமை பற்றி விபக்கமாயின; இவற்றுள் கடம் மூர்த்தம், சுகம் அமூர்த்தம். ஏகாந்தமன்றெனவே அநைகாந்திகமென்பது தானே பெறப்பட்டது. அநைகாந்திக மாவது இவ் வகையாலென்றற்கு, "அமூர்த்த மாகாசம் போல் நித்தமோ, அமூர்த்தம் சுகம்போ லநித்தமோ" என்றார். 267-274. விருத்த வியபிசாரி-விருத்த வியபிசாரி யென்னும் அநைகாந்திக வேதுப்போலியாவது; திருந்தா ஏதுவாய் - திருந்திய வேதுவன்றாய்; விருத்த வேதுவிற்கும் இடம் கொடுத்தல்-விருத்த வேதுவாகிய ஏதுப்போலிக்கும் இடம் கொடுத்து அதனோடுறைவது; சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் - பிரதிவாதி யாவான் சத்தம் அநித்தம் செய்யப் பட்டுத் தோன்றுதலால் என்றும்; ஒத்தது எனின் - இஃது ஏதுவுக்குரிய இலக்கண முற்றும் பொருந்தியதென்றும் கூறுவானாயின்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்துவம் போல் எனச் சாற்றிடுதல் - சத்தம் நித்தம் செவியாற் கேட்கப் படுவதால் சத்தத் தன்மைபோல என வாதியாகிய தான் அவற்குச் சொல்லுவது; இரண்டினும் சங்கயமாய் - இவ்விரண்டேதுக்களையும் ஒருங்கு காண்பதால் இவை ஐய வேதுவாய்; ஏகாந்தமல்ல - அநைகாந்திகமாம் எ - று. திருந்திய வேதுவாவது ஏதுவுக்குரிய இலக்கணத்திற் குறை பாடிலதாய்ச் சபக்கத்தின்கண் பல பொருளினும் சென்று பொருந்தும் செம்மையுடையது. இவ்வாறு பல பொருட்களிற் சென்று பொருந்தும் செம்மை குறைந்தது திருந்தா ஏதுவாம்; இஃது எடுத்துக்காட்டப்படும் சபக்கப்பொருளொன்றி னன்றிப் பிறவற்றிற் சென்று பொருந்தாதென வறிக. சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்ற பக்க வசனமும் ஏதுவாகிய இக் கூற்றின் கண், கேட்கப்படுதலாகிய ஏது பக்கப் பொருளாகிய சத்தத்தின் கண்ணும், சத்தத்துவம் என்று காட்டப்படும் சபக்கத்தின் கண்ணும் பொருந்துகின்றதேயன்றி, சத்தத்துவ மொழிந்த ஏனையவற்றின்கண் சென்று பொருந்தும் செம்மையில்லாமை யறிக; இது பற்றியே இது "திருந்தா வேது" எனப்பட்டது. திருந்தாமை, ஈண்டுப் பயிலப்படாமைமேற்று. விருத்த வேது, துணி பொருளைச் சாதியாது மறுதலை பயப்பது. பிரதிவாதி காட்டிய "செயலிடைத் தோன்றலின்" என்ற ஏது அநித்தமென்னும் பொருளைச் சாதித்து, வாதியின் துணிபொருளாகிய நித்தத்துவத்தைச் சாதியாமையின் விருத்த வேதுவாயிற்று. ஈண்டுக் கூறிய திருந்தா வேதுவானது பிரதிவாதி கூறிய பக்கதன்ம வசனமாகிய "செயலிற் றோன்றலின்" என்ற விருத்தவேதுவுடன், சத்தமாகிய பொருளிடத்தே பொருந்தி உடங்கிருத்தலின் வியபிசாரியாயிற்று. ஆகவே, வாதி கூறும் திருந்தா ஏது வொன்று பிரதிவாதி கூறும் ஏதுவுடன் கூடியிருப்பது விருத்த வியபிசாரி யென்னும் ஏதுப்போலி என்ற வாறாம். இவ்விருத்த வியபிசாரி யென்னுந் தொடர், மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை. "விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய், விருத்த வேதுவிற்கும் இடங் கொடுத்த" லென்பது இலக்கணமும், "சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின், ஒத்ததெனின் அச்செயலிடைத் தோன்றற்குச் சபக்கமாயுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்தவம் போலெனச் சாற்றிடுதல்" என்பது எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமுங் கூறியவாறு. இனி அடுத்து வரும் விருத்த வேதுப் போலிக்கு ஈண்டு விருத்தவேது கூறியது ஓராற்றால் தோற்றுவாய் செய்தவாறுமாயிற்று. இவ்விளக்கத்தில் வரும் வாதி மீமாஞ்சகனென்றும், பிரதிவாதி வைசேடிகனென்றும் கொள்க; கொள்ளவே, சத்தம் நித்தத்துவ முடையதெனச் சாதிக்க முயலும் மீமாஞ்சகன் "கேட்கப்படுதலின்" என்ற ஏதுவைக் காட்டிச் சத்தத்துவத்தைச் சபக்கமாக நிறுத்தி வற்புறுத்தினானா யினும், சத்தம் அநித்தத்துவமுடைய தென்பதனை வைசேடிகன் "செயலிடைத் தோன்றலி" னென்ற திருந்திய ஏதுவும் கட முதலிய சபக்கமுங் காட்டி வற்புறுப்ப, அம்மீமாஞ்சகனது ஏது திருந்தா வேதுவாய், வைசேடிகனது ஏதுவும் உடனிருக்க வமைவது வியபிசாரமாயிற்றெனத் தெளிந்து கொள்ளப்படும். செவியால் என்பது அவாய் நிலை. இனி, இவ்விருத்த வியபிசாரி யேதுப் போலியால், சத்தம் அநித்தமென்றாதல் நித்தமென்றாதல் துணியப்படாமையின் அநைகாந்திகமாயிற்று. சாதாரணம் முதல் விருத்த வியபிசாரி யீறாகக் கூறிய அறுவகை ஏதுப் போலிகளுட் சில, நையாயிகர் வைசேடிகர் முதலியோர் நூல்களினும் காணப்படுகின்றன. அநைகாந்திகம் சவ்வியபிசாரியென்றும் சந்தித்த வேதுப்போலி யென்றும் அநிச்சித வேதுப்போலி யென்றும் வழங்கும். சாதாரணம் அசாதாரணம் என்பன பிரசத்தபாதரால் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவர் சாதாரண மொன்றே ஐய வேதுப் போலியாமென்று கூறி, அதன்கண் சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபி, விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி, உபயைகதேச விருத்தி யென்ற மூன்றும் அடங்குமாறு கூறுகின்றார். மேலும், அவர் அசாதாரணம் ஐயவேதுப்போலியாகாதென்று சொல்லி, அதனை அனத்தியாவசித்தம் என்று பெயரிட்டுத் தனியாகக் கொள்வர்; விருத்த வியபிசாரி யேதுப்போலி ஐய வேதுப்போலி யாகாதென மறுப்பர். குமரிலபட்டர் சாதாரணம் அசாதாரணம் விருத்த வியபிசாரி என்ற மூன்றையும் மேற்கொண்டு, விருத்த வியபிசாரிக்குக் "காற்று உருவமுடைத்து, பரிசிக்கப்படுவதால்; காற்று அருவமானது, நிறமின்மையால்" என்று எடுத்துக்காட்டும் கூறுவர். இவ்வாறு பலரும் கூறுவனவற்றை யெல்லாம் நோக்கு மிடத்து அநைகாந்திக முதலிய வேதுப்போலியைப் பலவகையாக வகுத்துக் கூறிய முதன்மை பௌத்தர்கட்கே யுரியதென்று இனிது தோன்றுகிறது. மேலும், இப்பாகுபாடு திக்கநாகரால் முதற்கண் விளக்கிக் கூறப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முகமாக வுரைப்பதனாலும், அத் திக்க நாகர் தொடக்கத்தில் தமிழகத்துக் காஞ்சியம்பதியிலிருந்து புலமை சிறந்த பின்பே வடநாடு சென்றனரென அவர் வரலாறு கூறுவதனாலும், அவருக்கு இத்தெளிவினை நல்கிய நியாயநூற்புலவர் தமிழகத்தே அவர் நாளிலும் அதற்கு முற்காலத்தும் இருந்தமை புலனாதலின், இம்மணிமேகலை யாசிரியர் இவற்றைத் தம் தமிழாசிரியன் மார் கூறிப் போந்த முறையே கூறுகின்றாரென்பது மனங் கொள்ளற்பாற்றுதிக்க நாகர்க்குப் பிற்போந்த தரும கீர்த்தி முதலாயினோர் சாதாரணம் அசாதாரணமென்ற இரண்டையுமே மேற்கொண்டு, பிறவற்றை வேறுவகையிற் றொகுத்துக் கொண்டனர். அவ்வாறு தாம் தொகுத்தும் வகுத்தும் மேற் கோடல் பற்றிக் கூறியவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகுமாதலின் அவற்றை அவரவர் நூல்களிற் கண்டுகொள்க. இனி, சைவாகமங்கள், அநைகாந்திகத்தைச் சவ்வியபிசாரி யென்றும், அது சாதாரணம், அசாதாரணம், அனத்தியாவசித்த மென மூவகைப்படுமென்றும் உரைக்கின்றன. (பௌஷ். பாடி. சு. 890-1) 275-280. விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்-விருத்த வேதுப் போலியைச் செம்மையாகக் கூறுவதாயின்; தன்மச்சொரூப விபரீத சாதனம்......என்ன - தன்மச் சொரூப விபரீத சாதன மென்றும், தன்ம விசேட விபரீத சாதனமென்றும், தன்மிச் சொரூப விபரீத சாதனமென்றும், தன்மி விசேட விபரீத சாதன மென்றும்; நான்கு வகையதாகும் - நான்கு வகையினை யுடைய தாம் எ - று. இக்கூறிய நான்கும் நியாயப் பிரவேசத்தும் உள்ளன. விருத்த மாவது: ஏது, பக்கம் சபக்கம் விபக்கமென்ற மூன்றனுள் சபக்கத் தின்றிப் பக்கத்தும் விபக்கத்தும் பொருந்தி யிருப்பது என்று சத்தபதார்த்தி யென்னும் நூல் (சு. 159) கூறுகிறது; அஃதாவது பக்க வசனத்துக் கூறப்படும் துணிபொருளைச் சாதியாது மாறு கொளநிற்பது என்பதாம். நியாய நூல்களுள் விருத்தம் ஒன்றாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இந்நூலில் நான்காக வகுக்கப் பட்டுள்ளது; சுலோக வார்த்திகமுடையார்,1 விருத்த வேதுப் போலியைச் சிலர் அறுவகை யாகவும் சிலர் நால்வகையாகவும் சிலர் ஒன்றாகவும் கொண்டனரென்று கூறி, அறுவகையாவன, தருமச்சொரூப விருத்தம், தருமவிசேட விருத்தம், தருமிச்சொரூப விருத்தம், தருமி விசேட விருத்தம் தருமா தருமச் சொரூப விருத்தம், தருமாதரும விசேட விருத்தம் என்பன வாம் என்பர். அநைகாந்திக வகையைத் தொகுத்து இரண்டாகக் கொண்டது போல, இவ்விருத்த வேதுப்போலியையும் தரும கீர்த்தி யென்பார்2 இரண்டாகவே தொகுத்துக் கொள்ளுகின்றார். 280-287. அத்தன்மச் சொரூப விபரீத சாதனம் - அந்நால்வகை விருத்த வேதுப் போலிகளுள் தன்மச் சொரூப விபரீத சாதன வேதுப்போலியாவது; சொன்ன ஏதுவில் - வாதி தான் கூறிய ஏதுவினாலே; சாத்திய தன்மத்து உருவம் கெடும்-சாத்திய தன்மமாகிய துணிபொருளின் சிறப்பியல்பு கெட மொழிவது; சத்தம் நித்தம் பண்ணப்படுதலின் என்றால் - சத்தம் நித்தம் என்று பக்க வசனம் கூறும் வாதி பண்ணப்படுவதால் என்று ஏதுக் கூறுவானாயின்; பண்ணப்படுவது அநித்தமாதலின் - யாதொன்று பண்ணப் படுவது அஃது அநித்தமாதலால்; பண்ணப்பட்ட ஏது-பண்ணப் படுதலாகிய ஏது ; சாத்திய தன்ம நித்தத்தை விட்டு - சாதிக்கப் பட வேண்டிய தன்மமாகிய நித்தியத்துவத்தைச் சாதிக்காமல் ; அநித்தம் சாதித்தலான் - சத்தம் அநித்தமென்று சாதித்துக் கொடுப்பதால்; விபரீதம் - விருத்தமாயிற்று எ - று. இவ்விருத்தவேது சிறிது சுருக்கமாக நியாயப் பிரவேசத்துட் காணப்படுகிறது. அகரச் சுட்டு, நான்காக வகுத்துக் கூறியதனைக் காட்டிநின்றது. சாத்திய தன்மமாவது, சத்தம் நித்தம் என்ற பக்க வசனத்துள் துணியப்படுவதாய் நின்ற நித்தத்துவ மென்ற தன்மம். உருவம், சொரூப விலக்கணமெனப்படும் சிறப்புத் தன்மம். கெடுதல் ஈண்டுச் சாதிக்கப்படா வகைமொழிதல்; பிரதிவாதிக்கு நல்ல சாதன மாதல் என்றுமாம். பண்ணப்படாமை நித்தத்துவத்துக்குச் சிறப்பியல் பாதலின், அந்நித்தத்துவத்தைச் சாதிப்பான் பண்ணப் படுதலென்று ஏதுக்கூறுதல் அச் சிறப்பியல்புக்கு மாறாதல் காண்க. பண்ணப்படுதலாகிய ஏதுவைப் "பண்ணப்பட்ட ஏது" என்றார் ; பொச்சாவாமையாகிய கருவியைப் "பொச்சாவாக் கருவி" (குறள்-53.7) என்றாற் போல. பக்க தன்மத்தைச் சாதிக்க வந்த ஏது, அதனைச் செய்யாது சபக்கத்தும் நில்லாது விபக்கத்துப் பொருந்தி நிற்றலின், "விபரீதம்" என்றார், இதன்கண் "சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத் துருவம் கெடுதல்" என்பது இலக்கணம் கூறிற்று. ஏதுவின் இன்; ஏதுப் பொருட்டாய் நின்ற ஐந்தனுருபு சுலோக வார்த்திகமுடையாரும் ஈண்டுக் காட்டிய உதாரணமே காட்டுவராயினும், இவ்விருத்தத்தைத் தருமபாதை என்பர். 288-302. தன்ம விசேட விபரீத சாதனம்-தன்ம விசேட விபரீத சாதன மெனப்படும் ஏதுப்போலியாவது; சொன்ன ஏது -வாதியாற் கூறப்பட்ட ஏதுவானது; சாத்திய தன்மம் தன்னிடை - துணியப்படும் தன்மத்தின் கண்ணுள்ள; விசேடம் கெடச் சாதித்தல் - விசேடம் இன்றாமாறு சாதிப்பதாம்; ஓர்க்கும் கண் முதல் இந்திரியங்கள் - பொருள்களையறிதற்குக் கருவியாகிய கண் முதலிய பொறிகள்; எண்ணின் - ஆராயு மிடத்து; பரார்த்தம் - தம்மின் வேறாயுள்ள ஆன்மாவுக்குப் பயன்படுவனவாம்; தொக்கு நிற்றலினால் - பலவாய்த் தொக்கிருப்பதால்; சயன ஆசனங்கள் போல - படுக்கையும் இருக்கையும் போல; என்றால்-என்று கூறிய வழி; தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது-தொக்குநிற்பதால்என்று கூறிய ஏது; சயனாசனத்தின் பரார்த்தம் போல் - படுக்கையும் இருக்கையு மாகியவைகள் பிறர்க்குப் பயன்படுவனவாதல் போல; கண் முதல் இந்திரியங்களையும் பரார்த்தத்திற் சாதித்து - கண் முதலிய பொறிகளையும் பிறர்க்குப் பயன்படுவனவாதலை யெய்துவித்து; சயனாசனவானைப் போலாகி-படுக்கையிருக் கைகளைப் பயன்கொள்ளும் புருடனுளனாதல் போல ; கண் முதலிய இந்திரியத்துக்கும் பரனாய்ச் சாதிக்கிற - கண் முதலிய பொறிகட்கு வேறாய் அவற்றைப் பயன் கொள்ளு வோனாய் வேறே சாதிக்கப்படுகிற; நிர் அவயவ மாயுள்ள ஆன்மாவை - அவயவப் பகுப்பில்லாத ஆன்மாவை; சாவய மாகச் சாதித்து - சயனாசனவானைப்போல அவயவப் பகுப்புடை யனாகச் சாதிக்கு முகத்தால்; சாத்திய தன்மத்தின்-சாத்திய தன்ம மாகிய பரார்த்தம் என்புழிப் பரனாகிய ஆன்மாவினது; விசேடம் கெடுத்தலின் - சிறப்பியல்பாகிய அவயவப் பகுப் பின்மையைக் கெடுத்து அவயவப் பகுப்புடையனாக்குதலால்; விபரீதம் - விருத்த ஏதுவாயிற்று எ - று. சாத்திய தன்மத்தோடு பிரிப்பின்றி யொன்றாயிருக்கும் சிறப்பியல்பைச் "சொரூபம்" என்றாராதலின், அவ்வாறின்றி அத்தன்மத்தால் உய்த்துணரப்படும் சிறப்பியைபுகளை ஈண்டு 'விசேடம்' என்றார். "கண்முதல் இந்திரியங்க" ளென்னாது "ஓர்க்கு" மென மிகுத்துச் சொன்னதனால், கண் முதலிய பொறிகளேயன்றி அவற்றோடு கூடிய உடம்பும் கொள்க. தான் வேறு தனுகரணாதிகள் வேறு எனப் பகுத்துணர்வார்க்கன்றி, அவை பரார்த்தமென்பது விளங்காமையின், "எண்ணின்" என்றார். வாதியாவான் நிகழ்த்திய கூற்றில், "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்த" மென்றது பக்க வசனம்; "தொக்கு நிற்றலினால்" என்றது ஏது; "சயனாசனங்கள் போல" என்றது திட்டாந்தம். தொக்கு நிற்றலினால் என்ற ஏதுவை மறுக்கின்றாராதலின் மீட்டும், "தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது" என்றார். சயனாசனங்கள் பரார்த்தம் எனவே, அவற்றிற்குப் பரனாய்ப் பயன்கொள்வான் ஒருவன் உண்டெனத் துணியப்படுதலின், "சயனாசனவானைப் போல" என்றார். சயனாசனங்களும் பலவற்றின் தொகுதியாய காரியமாதலின், "சாதித்து" எனச் செய்தெனெச்சத்தாற் கூறினார். 1பரன், வேறானவன் ; தன்னின் வேறாகக் காணப்படுவனவற்றினும் தான் மேம்பட்ட இயல்புடைமை பற்றி ஆன்மாவைப் பரன் என்றார். சாதிக்கிற என்றது செயப்பாட்டு வினைப் பொருட்டு, சாவயவம் - அவயவத்தோடு கூடியது; நிரவயவம்-அவயவ மில்லாதது. சாங்கியனொருவன் பௌத்த னொருவனை நோக்கி, ஆன்மாவினுண்மை சாதிப்பானாய் "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்தம். தொக்கு நிற்றலினால், சயனாசனங்கள் போல்" என்று மொழிந்து சயனாசனங்கட்குப் பரமாய்ச் சயனாசனவான் ஒருவன் உளனாதல் போல, கண் முதலிய இந்திரியங்கட்கும் பரமாய் ஆன்மா வென்ப தொன்றுண்டென்று சாதித்தானாக, அவன் கூறிய ஏதுவை மறுக்கப்புக்க பௌத்தன், சாங்கியனால் காட்டப்பட்ட சயனாசனாவான் அவயவத்தோடு கூடியவ னாதலால், ஆன்மாவும் அவயவத்தோடு கூடியவ னாவானென்றும் மற்று ஆன்மா நிர் அவயவி யென்பது சாங்கியன் கொள்கையாதலின் நிர் அவயவியாகிய விசேடவியல்பை இவ்வாதம் கெடுத்தழித் தலின், 1சாங்கியன் கூறிய ஏது தன்ம விசேட விபரீத சாதனமாயிற்று. குமாரிலபட்டர் இத் தன்ம விசேட விபரீத சாதனத்தைத் தருமா தருமி விசேட பாதை என்பர். 303-318. தன்மிச் சொரூப விபரீத சாதனம் - தன்மிச் சொரூப விபரீத சாதனமெனப்படும் விருத்த வேதுப் போலியாவது; தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை - வாதியாற் கூறப்படும் தன்மியின் சிறப்பியல்பை; ஏதுத்தானே - அவன் கூறும் ஏதுவே; விபரீதப்படுத்தல்-விருத்தமாக்கி விடுவது; பாவம் திரவியம் அன்று கண்மமன்று குணமுமன்றாம் - பாவம் திரவியம் குணம் கன்மம் என்பவற்றுள் ஒன்றுமன்று; எத்திரவியம் எக்குணம் கன்மத்து உண்மையின் வேறாதலால் - எல்லாப் பொருள் குணம் தொழில் களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய வுண்மைத் தன்மையுடைமையால்; சாமானிய விசேடம் போல் - சாமானியமும் விசேடமும் போல ; என்றால் - என்று வைசேடிக வாதி யொருவன் சொன்னால்; பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற்றினிடை யுண்மை வேறாதலால்-பொருள் குணந்தொழி லென ஒருங்கு நின்றவற்றின் கண்ணுள்ள உண்மைத் தன்மையின் வேறாகப் பொதுவுண்மைத் தன்மையுடைமையால் ; என்று காட்டப்பட்ட வேது - என்று வாதியாற் கூறப்பட்ட ஏதுவின்கண் ; மூன்றினுடை யுண்மை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை - மூன்றின் கண்ணுமுள்ள உண்மைத் தன்மையின் வேறுபட்டு நிற்கும் பொதுவாம் உண்மைத் தன்மை; சாத்தியத்து இல்லாமையினும் - சாதிக்கப்படும் பக்க தன்மியாகிய பாவத்தின் கண் இல்லாமையானும் ; திடடாந்தத்தில்-திட்டாந்தத்தின் கூறப்பட்ட; சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் - பொதுவுஞ் சிறப்புமாகிய இயல்புடைய பொருள்களுள் ஒன்றில்வழிப் பிறி தொன்றில்லை யாதலானும்; பாவம் என்று பகர்ந்த தன்மியினை - பாவமென்று பக்க வசனத்துள் எடுத்தோதப்பட்ட தன்மியின் சொரூப வியல்பைக் கெடுத்து; அபாவமாக்குதலால் - அபாவமெனச் சாதித்து விடுதலால்; விபரீதம் - விருத்தப் போலியாயிற்று எ-று. ஆமென்பதனை அன்றென்பதனோடும், அன்றென்பதைத் திரவியத் தோடும் ஒட்டி, திரவியமன்றாம், கன்மமன்றாம், குணமுமன்றாமென இயைத்துக்கொள்க. எத்திரவியத்தும் எக்குண எக்கன்மத்தும் எனற் பாலன எத்திரவிய மெக்குண கன்மத்தென நின்றன. எல்லாத் திரவிய குண கன்மங்களிலும் உள்ள பாவத்தின் வேறாதலால் என்பான், பாவத்தை உண்மையென்பதுபற்றி, "உண்மையின் வேறாதலால்" என்றான். சாமானிய விசேடம் போல் என்பது திட்டாந்தம். மூன்றினுடை உண்மையாவது திரவியம் முதலிய மூன்றின்கண்ணுமுள்ள பாவம். இதனை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை பாவ பதார்த்த மாறினுள்ளும் அமைந்து கிடக்கும் பாவம். சொரூபம் ஈண்டுத் தன்மத்தின் மேற்று. "உண்மை யேதுபடுத்தும்" என்பது "உண்மையின் வேறாதலால்" என்றதனோடு பொருந்தாமையின், "வேறு படுத்தும்" எனத் திருத்திக் கொள்ளப்பட்டது ; திரு. நாராயணையங்கார் "வேறு படுத்துப் பொதுவாமுண்மை" எனத் திருத்திக் கொள்வர். இனி, இவ்வாறு திருத்திக் கொள்ளாது "உண்மை பேதுப் படுத்தும்" என்ற பாடத்தைக்கொண்டு, பேதம்பேது என நின்றதாகக் கோடலுமமையும். திரவியம் குணம் கன்மம் சாமானியம் விசேடம் சமவாயம் என்ற ஆறனையும் பாவ பதார்த்தமென்றும், திரவிய முதலிய மூன்றனையும் சத்துவ சம்பந்தமென்றும், ஏனை மூன்றனையும் சுவான்ம சத்துவமென்றும், இவ்விருவகையினும் இயைந் திருக்கும் பாவத்தைப் பரமசத்தென்றும் வைசேடிகர் கூறுவர். சாமானிய முதலியமூன்றும்பாவபதார்த்தங்களேயாயினும், திரவிய முதலியவற்றைப்போல் இடம்பொருள் காலங்களில் வைத்துணரப்படுவனவல்ல ; அவை "புத்தியபேஷம்" எனப்படும். அதனால், "பாவம் திரவியமன்று கன்மமுமன்று குணமுமன்றாம்" என்று பக்க வசனமும் திரவிய குண கன்மங்களது "உண்மையின் வேறாதலால்" எனப் பக்க தன்ம வசனமும் கூறினான். விசேடத்தின்கண் சாமானியம் உளதாயினும், விசேடத் துண்மையின் சாமானியத் துண்மை வேறாதல்போல என எடுத்துக் காட்டுவான், சாமானிய விசேடம் போல் என்றான். இது வைசேடிகனாகிய வாதி கூற்று. இவ்வைசேடிகன் கூறிய ஏது தன்மிச்சொரூப விபரீத சாதனமென வுரைத்து மறுக்கும் பிரதிவாதி, இவ்வேது, "சாத்தியத்தில்லாமை யானும், திட்டாந்தத்திற் சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும் பாவமென்று பகர்ந்த தன்மியினை அபாவமாக்குதலான் விபரீதம்" என்றுரைக்கின்றான். திரவிய முதலிய மூன்றினிடத்து உள்ள உண்மையின் வேறுபடுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியமாகிய பாவத்தின்கண் இல்லை யென்பான், "சாத்தியத்தில்லாமையினும்" என்றும் திட்டாந்த மாகக் காட்டப்படும் சாமானிய விசேடங்களுள், சாமானியமில் வழி விசேடப்பொருளும் விசேடமில்வழிச் சாமானியப் பொருளும், இரண்டுமில்வழி எப்பொருளும் இல்லையா யொழி தலால், "சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும்" என்றும் இதனால் தன்மியாகிய பாவத்துக்குச் சொரூபமாகிய திரவிய குண கன்மமன்மை இல்லையாய்ப் பாவமென்ப தொன்றில்லை யென்பதுபட நிற்றல்பற்றி, "பகர்ந்த தன்மியினை அபாவமாக்கு தலான் விபரீத" மென்றும் கூறி மறுக்கின்றான். இனி, இதற்கு நியாயப்பிரவேசமுடையார் காட்டும் காரணமும் கருத்துரையும் வேறாதலை யறிந்து கொள்க. குமாரிலபட்டர் இதனை, தர்மிச் சொரூப பாதையென்று பெயரிட்டு, "சமவாயம் பொருளன்று குண மன்று தொழிலுமன்று, பொருளுண்மை யுணர்வுக்கு இடனாதலால், இங்கே கடமுளது என இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபு போல" என்று உதாரணமும் காட்டி, ஈண்டுக் கூறிய எது சமவாயத்தைக் கெடுத்துச் சையோகத்தைச் சாதித்தலின், தன்மிச் சொரூப பாதையா1 மென்றனர். 319-325. தன்மி விசேட விபரீத சாதனம்-தன்மி விசேட விபரீத சாதன மெனப்படும் விருத்தப் போலியாவது; தன்மி விசேட அபாவம் சாதித்தல்-தன்மியின் சிறப்பியைபாகிய பாவத்தை அபாவமாகச் சாதிப்பது; முன்னம் காட்டப்பட்ட ஏதுவே - பாவம் திரவிய குணகன்ம மன்றென முன்னர்க் காட்டிய பக்கவசனத்து ஏதுவாகிய திரவிய குணகன்மத் துண்மையின் வேறாதலால் என்பதே; பாவ மாகின்றது-பாவமானது; கருத்தாவுடைய கிரியையும் குணமுமாம் அதனை - கருத்தாவாகிய வாதியாற் கொள்ளப்படாத தொழிலுங் குணமுமாம் என்பதைச் சாதித்து; விபரீத மாக்கியதாதலால்-அவ்வாதி யெடுத் தோதிய கருத்துக்கு மறுதலை முடிபைப் பயந்தமையால்; தன்மி விசேடம் கெடுத்தது - தன்மியின் சிறப்பியைபைக் கெடுத்தது எ - று. தன்மியையும் அதன் தன்மத்தையுங் கொண்டு, உய்த்துணரப் படும் தன்மியின் சிறப்பியைபு "தன்மி விசேட"மென வறிக. பாவமாகிய தன்மி, திரவியகுண கன்மமன்றெனவே, திரவியகுண கன்ம மன்மை தன்மியின் விசேடமாயிற்று. முன்னங் காட்டப் பட்ட ஏது தன்மிச் சொரூப விபரீத சாதனமாய்கெட்டமையின், பாவமானது திரவியகுண கன்மமாம் என்றாகிப் பாவத்தின் விசேடத்தைக் கெடுத்தலின், "பாவமாகின்றது கிரியையும் குணமுமாமதனைச் சாதித்து விபரீதமாக்கியது" என்றார். இதனால் தன்மியின் விசேடம் கெடுவது பயனாயினமையின், "தன்மி விசேடம் கெடுத்தது" என்றார். பக்கவசனம் கூறிய வைசேடி கனாகிய வாதியைக் "கருத்தா" வென்றும், அவன் மேற்கொள்ளாத கருத்தை அவன் கூறிய ஏதுவே எய்துவித்தலின் "உடைய" என்றும் கூறினார். உடைய என்றது எதிர்மறைக் குறிப்பு. சாத்தனென்பான் எனற்பாலதைச் சாத்தினென்கின்றவன் என்பதுபோல, பாவமாவ தெனற் பாலது "பாவமாகின்ற" தெனப்பட்டது. பாவமாகின்றது கிரியையுங் குணமுமாமது என்பது எழுவாயும் பயனிலையுமா யியைந்து ஒரு சொன்னீர்மைப்பட்டு அன்சாரி'ac யையும் ஐயுருபுமேற்று விபரீதமாக்கிய தென்பதனோடு முடிந்தது. இனி, தன்மிச் சொரூப விபரீத சாதனத்துக்குக் காட்டிய பக்க வசனமும் எதுவுமே கொண்டு, தன்மி விசேட விபரீதசாதனத்தை இம் மணிமேகலை யாசிரியர் விளக்கியதுபோலவே, நியாயப் பிரவேச முடையாரும் விளக்குகின்றார். தன்மி விசேட பாதையெனக் கூறி மேற் கொள்ளும் குமாரிலபட்டரும், இவ்வாறே தன்மிச் சொரூப பாதைக்குக் கூறிய வேதுவையே கொண்டு பொருள்களின் பல்வகை இயைபுகட்கு உண்மை காண்கின்றார். ‘சிவநெறிப் பிரகாச வுரைகாரர், விருத்தத்தைச் சாத்திய விபரீத வியாத்தன் என்றும், சாதன விபரீத வியாத்த னென்றும் இருவகைப் படுத்து, "சாத்திய விபரீத வியாத்தனாவது, சத்தம் அநித்யமாக வேண்டும், காரியமாகையால், ஆகாசம்போல் என்னுமிடத்துக் காரியத்துவம் என்கிற ஏதுவானது தன்னுடைய சாத்தியமான நித்தியமா யிருக்கிற தற்கு விபரீதமான அநித்தியமா யிருக்கிறத னோடே வியாப்த மாகையால் சாத்திய விபரீதமென்னும் ஏத்துவா பாசன், சாதன விபரீத வியாப்தனாவது,மனம் அநித்தியமாகவேண்டும். சேதன மாகையால், ஆன்மாவைப்போ லென்னுமிடத்து; அநித்தியத்துவ மானது சாதனமான சேதனத்துவத்துக்கு விபரீதமான அசேதனத் துடன் வியாப்தமாகையால் சாதன விபரீத வியாப்தன்" என்று விளக் குவர். இவ்வாறே அவரவரும் கூறுவனவற்றை யறிந்து கொள்க. 325-328 திட்டாந்த ஆபாசங்கள் - திட்டாந்தப் போலியென்பன; தீய எடுத்துக் காட்டாவன - குற்றமுடைய எடுத்துக் காட்டுக்களாம், திட்டாந்தம் இருவகைப்படுமென்று முற் கூறப்பட்டன - திட்டாந் தங்கள் இருவகையாகும் என முன்பே கூறியவற்றைக் கடைப் பிடிக்க எ - று. தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்தப் போலி (143-6) என்றாராகலின், அவையே ஈண்டும் கூறப்படுகின்றன வென்பார், "தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்த ஆபாசம்" என்றார். தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. திட்டாந்தம் இருவகையா மென்பதை முன்னர், "ஏதமில் திட்டாந்தம் இருவகைய, சாதன்மியம் வைதன்மியமென" (136-7) என்று சொல்லி முறையே இரண்டினையும் விளக்கிக் கூறியுள்ளதை நினைப்பித்தற்கு ‘முற் கூறப்பட்டன' என்றார். திட்டாந்தாபாசம் நிதரிசனாபாதம் எனவும் வழங்கும். 328-339. இங்கண் - இவ்விடத்தே; அவற்றுள்-திட்டாந்தப்போலி வகை இரண்டனுள்; சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஓதில்-சாதன்மிய திட்டாந்தப் போலிவகையைக் கூறுமிடத்து; சாதன தன்மவிகலம் ...என்ன-சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம், விபரீ தாந்நுவயம் என்று; ஐந்து வகையுளாகும் -ஐந்து வகைப்படும்; வைதன்மிய திட்டாந்த ஆபாசம் - வைதன்மிய திட்டாந்தப் போலியும்; சாத்தியாவியா விருத்தி... என்ன - சாத்தியாவியா விருத்தி யென்றும், சாதனா வியாவிருத்தி யென்றும் உபயாவியா விருத்தி யென்றும் அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும்; ஐவகைய-ஐந்துவகைப்படும் எ - று. நியாயப் பிரவேசமுடையாரும் இவ்வாறே சாதன்மியம் வைதன்மியம் என்ற இரண்டையும் தனித்தனியாக நிறுத்தி அவ்வைந்துவகையாக வகுத்துரைப்பர். ஆயினும் அவர் வகுத் துரைக்கும் பெயர்வகை சிறிது வேறுபடுகிறது. சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன தன்மா சித்தம், சாத்திய தன்மா சித்தம், உபய தன்மா சித்தம், அநந்நுவயம், விபரீதாந்நுவயம் என்றும், வைதன்மிய திட்டாந்தப் போலிவகையைச் சாத்தியவியா விருத்தம், சாதனவியா விருத்தம், உபயாவியா விருத்தம், அவ் வெதிரேகம், விபரீத வியதிரேகம் என்றும் கூறுகின்றார். பிரசத்த பாதந் 1சாதன்மிய திட்டாந்தப்போலியைச் சாதன்மியநிதரிசனா பாச மென்று கொண்டு, இலிங்கா சித்தம் அனுமேயா சித்தம், உபயா சித்தம், ஆசிரயா சித்தம், அனனுகதம், விபரீதானுகதம் என அறுவகையாகவும், வைதன்மிய நிதரிசனாபாசத்தை, இலிங்கா வியா விருத்தம், அனுமேயா வியா விருத்தம், உபயா வியா விருத்தம், ஆசிரயா சித்தம் அவியா விருத்தம், விபரீத வியா விருத்தம் என அறுவகையாகவும் கூறுவர். தரும கீர்த்தி 1 யென்பார் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதனைப் பெருக்கி இனத்துக்கு ஒன்பதாக வகுத்துரைக்கின்றார். பிற்காலத்து நையாயிகரான நியாயசார முடையார் ஒவ்வொன்றையும் பப்பத் தாக வகுத்துரைப்பர். இத் திட்டாந்தப்போலி, நையாயிகருட் சிலரால் உதாகரணாபாசம் என்று வழங்கப்படுகிறது. சைவாகமங்கள், சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன வைகலியம் சாத்திய வைகலியம், உபய வைகலியம், சொருப வைகலியம் என நான்காகவும், வைதன்மிய திட்டாந்தப் போலியைச் சாத்தியாபாவ விகலம், சாதனாபாவ விகலம், உபயா பாவ விகலம், ஆசிரயாபாவ விகலம் என நான்காகவும் வகுத்துக் கூறும். இவற்றைப் பௌட்கர முதலிய ஆகமங்களுட் காண்க. 339-348. இவற்றுள்-சாதன்மிய திட்டாந்தப் போலி வகை யைந்தனுள்; சாதன தன்ம விகலமாவது-சாதன தன்மவிகல மென்னும் திட்டாந்தப் போலியாவது; திட்டாந்தத்திற் சாதனம் குறைவது - வாதியாவான் காட்டும் திட்டாந்தத்தில் அவன் கூறும் ஏதுவாகிய சாதனம் பொருந்தா தொழிவது; சத்தம் நித்தம் அமூர்த்த மாதலான்-சத்தம் நித்தமாகும் அமூர்த்தமாகையால் எனப் பக்க வசனமும் ஏதுவும் கூறி; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமாதலால்-யாது யாது அமூர்த்தம் அது நித்தமென வியாத்தி வசனம் காட்டி; பரமாணுவில் காண்புற்றது எனில் - இதற்குத் திட்டாந்தம் பரமாணுவில் காணப்பட்டது என்று சொன்னால்; திட்டாந்தப் பரமாணு-திட்டாந்தமாகிய பரமாணு; நித்தத் தோடு மூர்த்தமாதலால் - நித்தத்துவமும் மூர்த்தமாம் இயல்புடையதாதலால்; சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி- சாதிக்கவேண்டிய தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தி; சாதன தன்ம அமூர்த்தத் துவம் குறையும்-ஏதுவிற் கூறிய தன்மமாகிய அமூர்த்தத் தன்மை பொருந்திற்றில்லையாம் ஆதலால் இத் திட்டாந்தம் சாதன தன்ம விகலத் திட்டாந்தப் போலியாயிற்று எ - று. இம் மணிமேகலை யாசிரியர் சாதன தன்ம விகல மென்றாராக, நியாயப் பிரவேசமுடையார் சாதன தர்மாசித்தம் என்றனர்; இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தியார், சாதன தன்ம விகலமென மணிமேகலை யாசிரியர் கூறியாங்குக் கூறுகின்றார். விகலமெனினும் அசித்தமெனினும் ஒன்றே. குறைத்தல், இன்மைப் பொருட்டு. குறைவிற்கு எல்லை இன்மையாதலின், இல்லாமை யெய்தும் நிலையைக் குறைதலென்றார். ஏனையிடத்தும் இதுவே கூறிக்கொள்க. "திட்டாந்தத்திற் சாதனம் குறைவ" தென்றது சாதனதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "சத்தம் நித்தம்" என்ற மேற்கோளை "அமூர்த்த மாதலான்" என்ற ஏதுவால் வலியுறுத்துவார், அதன் வியாத்தியை எடுத்தோதிக் காட்டுதலின், "யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்" என்றார். இவ்வியாத்தியைச் சபக்கத்தினும்காட்டவேண்டிப் "பரமாணுப் போல" எனத் திட்டாந்தம் காட்டியவழி, அப் பரமாணு நித்தமாந் தன்மமும் மூர்த்தமாமியல்பும்உடைத்தாதலால், சாதன தன்ம மாகிய நித்தத்துவம் பொருந்தி நிற்ப, அமூர்த்தத்துவம் பொருந் தாமையால், சாதனமாகிய ஏதுவின் 'தன்மமாகிய அமூர்த்தத்துவம் பொருந்தாத திட்டாந்தப் போலியாயிற்று. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம். 349-358. சாத்திய தன்ம விகலமாவது-சாத்திய தன்ம விகலமென்னுந் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்தில்- வாதியாவான் தான் கூறிய ஏதுவோடு கூடியபக்க வசனத்தை நாட்டுவதற்குக் காட்டிய திட்டாந்தத்தின்கண்; சாத்திய தன்மம் குறைவு. படுதல்-சாத்தியமாகிய தன்மியின் தன்மம் இல்லையாய் விடுதல் சத்தம் நித்தம் அமூர்த்தமாதலால்-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாத வினாலே என்று பக்க வசனமும் ஏதுவும்; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அதுநித்தம்-யாதுயாது அமுர்த்தம் அதுநித்தம் என்று வியாத்தி வசனமும் கூறி, புத்திபோல் என்றால்-புத்திபோல எனத் திட்டாந்தம் காட்டினால்; திட்டாந்தமாகக் காட்டப் பட்ட புத்தி - வாதியால் திட்டாந்தமாக எடுத்துக்காட்டப் பட்ட புத்தியானது ; அமூர்த்தமாகி நின்றே-அமூர்த்தத்துவ முடையதாயினும்; சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி - ஏதுவின் கண்ணுள்ள அமூர்த்தத்துவமாகிய தன்மம் பொருந்த ; சாத்திய நித்தத்துவம் குறையும்-பக்க தன்மியின் தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தா தொழிகிறது ; ஆதலால் இது சாத்திய தன்ம விகலமாயிற்று எ - று. பக்க வசனத்துக் காட்டப்படும் தன்மியின் தன்மமுடைமையைச் சாதித்தற்குத் திட்டாந்தம் காட்டுமிடத்து, அது சபக்கமாதலின் அதன் பால் சாதித்தற்குரிய தன்மத்துக்கு வியாத்தியில்லை யாயின் குற்றமா மென்று கூறலின், "சாத்திய தன்மம் குறைவு படுதல்" என்று குறித்தார். யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் என ஏதுவுக்கு வியாத்தி வசனம் கூறினும், அதனுட்டுணி பொருளாகக் கூறப்படும் நித்திய தன்மம் திட்டாந்தமாகிய புத்தியின்கண் இன்மையின் இது திட்டாந்தப் போலியாயிற்றென வறிக. இனி உமாபதி சிவாச்சாரியார், இதற்கு, "ஆத்மா நித்தியம், விபுவாகையால், ஆகாசம்போல" என்று கூறி, ஆகாசம் சத்த தன்மாத்திரையின் காரியமாகையால் நித்தியத்துவமுடைய தன்மையின் சாத்திய விகலமாயிற்று 1எனபர். இதற்குச் 2சிவநெறிப் பிரகாசவுரைகாரர். "காரியம் காரியமல்லவென்று சந்தேகப் பட்டிருக்கிற வத்துவானது காரியமாகவேண்டும். பிரத்தியட்சமா கையால், ஆன் மாவைப்போ லென்னுமிடத்துச் சாத்தியமாயிருக்கிற காரியத்துவம் ஆன்மாவினிடத்தில் இல்லாதிருக்கையால் சாத்தியமான இதனிலும் திட்டாந்தாபாசம்" என்று கூறுவர். 359-363. உபய தன்ம விகலமாவது-உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்திலே வாதியாற் காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண்; சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்-சாத்தியத்தின் தன்மமும் சாதனமாகிய ஏதுவின் தன்மமும் என்ற இரண்டும் வியாத்தி யில்லா தொழிவதாம் ; அன்றியும் - மேலும்; அது - அவ் வுபயதன்ம விகலம் ; சன்னும் அசன்னும் என்று இருவகையாம் - சன்னாவுள்ள உபய தன்ம விகலம் அசன்னாவுள்ள வுபய தன்ம விகலம் என்று இருவகைத்தாகும் எ - று. உபய தன்ம விகலம் இவ்வாறு இருவகையாகப் பிறராற் கூறப்பட வில்லை. இம் மணிமேகலை யாசிரியர் போல நியாயப் பிரவேச முடையாரும் சன்னும் அசன்னுமாக இருவகையாகவே கூறியுள்ளார். சன் - உள்ளது; அசன் - இல்லது. இவ்வாறு இருவகையாகக் கொண்டதே யன்றி, உபய தன்ம விகலத்தை உபயாசித்தமென்று வழங்குவதற்கேற்ப இவ்விரண்டினையும் முறையே வித்யமானோபயாசித்த மென்றும் அவித்யமானோபயா சித்தம் என்றும் கூறுவர். 363-372. இவற்றுள் சன்னாவுள உபய தன்ம விகலமாவது-இரண்டாக வகுக்கப்பட்ட இவற்றுள் சன்னாகவுள்ள உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண்-திட்டாந்தமாகக் காட்டப்பட்ட உள்பொருளின் கண்ணே; சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும்-சாத்திய தன்மமும் சாதன தன்மமுமாகிய இரண்டும்; குறையக் காட்டுதல்-பொருந்தா தொழிவது : சத்தம் நித்தம் - சத்தம் நித்தமென்று பக்க வசனமும்; அமூர்த்த மாதலான் - அமூர்த்த மாதலாலெனப் பக்க தன்ம வசனமும் ; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் - யாது யாது அமூர்த்தம் அது நித்தமாமென வியாத்தி வசனமும் கூறி; கடம் போல் எனில்-குடம்போல் என உள் பொருளாகிய வொன்றைத் திட்டாந்த மாகக் கூறிய வழி; திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கடம்தான்- திட்டாந்தமாகக் காட்டப்பட்டுள்ள குடந்தானும் ; உண்டாகி- உள்பொருளாய்; சாத்தியமாய் உள நித்தத்துவமும் - சாத்திய தன்மமாகிய நித்தத்துவமும்; சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் -சாதன தன்மமாகிய அமூர்த்தத்துவமும்; குறையும்- இல்லையாம் எ - று. "உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்" என்றது சன்னாவுள்ள உபய தன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "காட்டுதல்" என்றதனால், உள் பொருள் காட்டுத் திட்டாந்தப் பகுதியாதல் நன்கு பெறப்படுதலால் எடுத்தோதாராயினார். சத்தம் நித்தமென்றது சாத்தியத்தின் தன்மம் நித்தத்துவமென்பதும், அமூர்த்தமாதலால் என்றது சாதன மிது வென்பதும் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமென்றது. சாதன தன்மம் அமூர்த்தத்துவமென்பதும் விளக்கி நிற்றல் காண்க. உள்ள தாகியதொரு பொருளென்றற்கு, "உண்டாகி" யென்றார். குடம் அநித்தத் தன்மையும் மூர்த்தமும் (உருவம்) உடையதாதலால் திட்டாந்தப் போலியாத லறிக. உபயாசித்தமெனக் கொண்ட இத் திட்டாந்தப் போலிக்குப் பிரசத்தபாதரும் வித்யாமானோபயா சித்தமெனக் கொண்ட நியாயப் பிரவேசமுடையாரும் "கடம்போ" லென்னும் இத் திட்டாந்தத்தையே யெடுத்துக் காட்டி யுள்ளனர். 373-384. அசன்னாவுள்ள உபயதன்மவிகலம்-அசன்னாவுள்ள வுபய தன்மவிகல மென்னும் திட்டாந்தப் போலியாவது; இல்லாப் பொருட்கண்-பிரதிவாதிக்கு இல்பொருளா மொன்றைக் காட்டுமிடத்து அதன்கண்; சாத்திய சாதனம் இரண்டும் குறையக் காட்டுதல்-சாத்திதன்மம் சாதன தன்மம் என்ற இரண்டும் இல்லையாகக் காட்டுவது; சத்தம் அநித்தம்-சத்தம் அநித்தமானது எனச் சாத்திய வசனமும்; மூர்த்த மாதலான்-மூர்த்த மாகையாலெனச் சாதன வசனமும்; யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் - யாதொன்று யாதொன்று மூர்த்தம் அஃது அநித்தமென வியாத்தி வசனமும் கூறி; ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து - ஆகாசம் போல எனக் காட்டும் திட்டாந்தத்தின் கண்; சாத்திய தன்மமாயுள்ள அநித்தமும்-சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமான அநித்தத்துவமும்; சாதன தன்மமாயுள்ள மூர்த்தமும் -சாதனமாகிய ஏதுவின் தன்மமான மூர்த்தத்துவமும்; ஆகிய இரண்டும் - இருதன்மங்களும்! ஆகாசம் அசத்து என்பானுக்கு - ஆகாசமென வொன்று கிடையாது (இல்பொருள்) என்னும் வாதிக்கு; அதன்கண் இன்மையானே குறையும்-அத்திட்டாந்தத்தின்கண் இல்லையா யொழியும்; உண்டென்பானுக்கு - உள்பொருளெனக் கருதும் வாதிக்கு; ஆகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்- அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் ஆகிய விருதன்மங்களை யுடைத்தாதலால்; அவனுக்குங் குறையும்-அவற்கும் உபய தன்ம விகலமாம் எ - று. "இல்லாப் பொருட்கண் சாத்திய சாதன மிரண்டுங் குறையக் காட்டுத" லென்றது அசன்னாபுள்ள வுபயதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறியது. "இல்லாப் பொருள் என்றது பிரதிவாதியால் இல்லையெனக் கருதப்படுவதொரு பொருள். ஆகாசத்தை உண்டெனக் கொள்வோரும் இல்லையெனக் கருதுவோரும் வாதிகள் இருதிறத்தர்; இல்லையென்போர் பௌத்த வாதிகள். அசத்து இல்லாதது; சத்து உள்ளது; ந+சத்து என்பது அசத்தென நின்றது; நகரம் அன்மை, இன்மை, மறுதலை என்ற முப்பொருண்மை யுடைத்தாதலின், ஈண்டு இன்மைபற்றி அசத்தென்றதெனக் கொள்க. அசத்துப் பொருளெனச் சைவநூல்கள் கூறுவன சத்துக்கு மாறாயவற்றையென வறிக. சத்தம் அநித்தமென்ற பக்க வசனத்து அநித்தம் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமாகக் கூறுதலின், "சாத்திய தன்மமாயுள்ளவநித்தமும்" என்றும், இவ்விருவகைத் தன்மங்கட்கு இடமாகிய ஆகாசம் இல்லையென்ற பௌத்த வாதிக்கு, இரண்டும் இலவாதல் தானே விளங்குதலின், "அதன்கண் இன்மையானே குறையும்" என்றும், ஆகாசத்தை யுண்டெனக் கூறும் வைசேடிகர் அது நித்தமென்றும் அமூர்த்த மென்றும் கூறுபவாதலின் "ஆகாசம் நித்தம் அமூர்த்தமாதலால் அவனுக்குங் குறையும்" என்றும் கூறினார். உம்மை: எச்சப்பொருளது. 385-392. அநன்னுவயமாவது - அநன்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; சாதன சாத்தியம் தம்மின் - சாதன சாத்தியங் களினுடைய; கூட்ட மாத்திரம் சொல்லாது - அன்னுவயத்தைச் சொல்லிக் காட்டாமல்; இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் - இரண்டும் பொருந்தியுள்ள திட்டாந்தத்தை மட்டிற் காட்டி யொழிதலாம்; சத்தம் அநித்தம் - சத்தம் அநித்தமென்னும் சாத்திய வசனமும்; கிருத்தமாதலின் - பண்ணப்படுதலால் என்னும் சாதன வசனமும் சொல்லி; யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் அன்னுவயம் சொல்லாது - யதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமாம் என அந்நுவய வியாத்தி வசனம் சொல்லாமல்; குடத்தின்கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட வென்றால் - குடத்தின்கண்ணே சாதன சாத்திய தன்மங்கள் காணப் படுகின்றனவென்று சொன்னால்; அன்னுவயந் தெரியா தாகும்-உடனிகழ்ச்சியாக வியாத்தி தெரியாமையாகிய திட்டாந்தப் போலியாம் எ - று. அன்னுவயத்தின் இல்லாமை அநன்னுவயம், அன்னுவயம், உடனிகழ்ச்சி; அஃது ஈண்டுக் கூட்டம் எனப்பட்டது. இன், தம்மின் என்பன சாரியை: ஆறனுருபு தொக்கது. சாத்திய சாதனவசன மிரண்டும் கூறித் திட்டாந்தம் கூறப்படுதலால், "கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்" என்றார். கூட்டமென்ற அன்னுவயமாவது இது வென்பார், "யாதொன்று யாதொன்று கிருத்தம் அது நித்தம் எனும் அந்நுவயம்" என்றார். அஃதென்னல் வேண்டும் ஆய்தம் தொக்கது. கிருத்தம்: வடசொற்சிதைவு. கிருத்தமென்னும் சாதன தன்மமும் அநித்தமென்னும் சாத்திய தன்மமும் குடமாகிய திட்டாந்தத்திலே உள்ளன என்பான், "குடத்தின் கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட" வென்கின்றான். "கானந் தகைப்ப செலவு" என்றாற்போல காணப்பட்ட என்பது அன்பெறாது வந்தது. அன்னுவயங் காட்டாதொழியின், காட்டப்பட்ட திட்டாந்தத் தின்கண் சாதன சாத்தியங்கட்கு வியாத்தி யுண்டென் கின்றானோ, இல்லையென்கின்றானோ என எதிரி ஐயுற்று மேலே தடை பல தொடுத்தற்கிடனாய்க் குன்றக்கூறலென்னுங் குற்றப்படுதலின், இதனைக் குற்ற மென்பராயினர். 393-401. விபரீ தான்னுவயம்-விபரீ தான்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; வியாபகத்துடைய அன்னுவயத்தாலே - வியாபகமாயுள்ள சாத்தியப் பொருளின் தன்மத்தின் அன்னுவய வியைபு கொண்டே; வியாப்பியம் விதித்தல் - வியாப்பியமாகிய சாதன தன்மமும் பொருந்தியிருப்பதாகக் கருதிக் காட்டுவதாம்; சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்- சத்தம் அநித்தமெனச் சாதிக்கு மாற்றால் பண்ணப் படுதலால் என ஏதுக் கூறினால்; யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என - யாதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமென வியாத்தி காட்டி; வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது - சாதன தன்மத்தின் வியாப்பியத்தைக் கொண்டு சாத்திய தன்மத்தின் வியாபகத்தை அன்னுவயமாகக் கொள்ளாது; யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தமென - யாதொரு பொருள் அநித்தமோ அது பண்ணப் படுவதென; வியாபகத்தால் - சாத்திய தன்மத்தைக் கொண்டு; வியாப்பியத்தைக் கருதுதல் - சாதன தன்மத்தைக் கருதிக்கொள்ளுதல் விபரீதான்னுவயமாம்; அப்படிக் கருதின் - அவ்வாறு கருதிக் கொள்ளுமிடத்து; வியாபகம் வியாப் பியத்தை யின்றியும் நிகழ்தலின்-வியாபகமாயுள்ள பொருள் வியாப்பியமாய்த் தன்கண் அடங்குவதைக் காட்டா தொழிவது முண்மையின் ; விபரீதமாம் - விபரீதமாகிய குற்றமாம் எ - று. "வியாபகத்துடைய அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்" என்றது, விபரீதான் னுவயத்தின் இலக்கணம் கூறிற்று. அன்னுவயம், கூட்டம், உடனிகழ்ச்சி, வியாத்தி யென்பன ஒரு பொருளன. நெருப்பும் புகையுமாகிய இரண்டனுள் நெருப்பில் புகையடங்கித் தோன்றுவதுபற்றி நெருப்பு வியாபகமும் புகை வியாப்பியமுமாம். ஒன்றினொன் றடங்கியுடனிகழும் பொருள்களுள் அடங்கிக் குறைவற உடனிகழ்வது வியாப்பியமென்றும் அடங்காது மற்றதை அகத்திட்டு மிக்கிருப்பது வியாபகமென்றும் வழங்கும். வியாப்பிய மாகிய புகை, வியாபகமான நெருப்புண்மையைக் காட்டல் கூடுமே யன்றி, வியாபகமான நெருப்புண்மையால் புகையாகிய வியாப்பிய முண்மையைக் காட்டல் கூடாது. பழுக்கக் காய்ச்சிய இரும்பினிடத்தே நெருப்புளதாயினும் அது புகையின்றி யிருக்கக் காண்கின்றே மாதலால், வியாபகத்தின் அன்னுவயத்தால் வியாப்பியப் பொருளைத் துணிவதென்பது குற்றமாதலின், "வியாபகத் துடைய அன்னுவயத்தாலே வியாப்பியத்தை விதித்தல்" விபரீ தான்னுவயமாகிய குற்றமா மென்றார். சத்தம் அநித்தம் கிருத்தத் தால் எனில் சாத்திய தன்மமாகிய அநித்தத்துவம் வியாபகமும் சாதன தன்மமாகிய கிருத்தத்துவம் வியாப்பியமுமாம்; புகையுண்மை யாகிய வியாப்பியத்தால் நெருப்புண்மையாகிய வியாபகம் காணப்படுவது போல கிருத்தத்துவமாகிய வியாப்பியத்தால் அநித்தத்துவமாகிய வியாபகம் பெறப்படுவது கண்டு, "யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தமென வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது" என்றார். வியாபகமாகிய நெருப்புண்மை கொண்டு வியாப்பியமாகிய புகையுண்மை துணிதல் எவ்வாறு குற்றமோ அவ்வாறே வியாபகமாகிய அநித்தத்துவமான சாத்திய தன்மத்தைக் கொண்டு, வியாப்பியமாகிய கிருத்தத்துவமான சாதன தன்மத்தைத் துணிவது குற்றமென்பார், "யாதொன்றுயாதொன்று அநித்தம் அது கிருத்தமென வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்... விபரீதமாம்" என்றார். புகையாகிய வியாப்பியமின்றியும் நெருப் பாகிய வியாபகம் இருத்தலுண்மையின், அதனையே யேதுவாக நிறுத்தி, "வியாபகம் வியாப்பியத்தை யின்றியும் நிகழ்தலின்" என்று கூறினார். வியாப்பியமான சாதனதன்மம் தன்வியாத் தியால் வியாபகமான சாத்திய தன்மத்தைக் காட்டுதல் முறையே யன்றி, சாத்திய தன்மத்தைக் கொண்டு சாதன தன்மத்தைத் துணிவது மாறுகொளலாகிய விபரீத மாதலால், இது விபரீதான் னுவயமாயிற்று. வியாபகம் வியாப்பிய மென்பன அவ்வவற்றிற் குரிய பொருண்மேனின்றன. அநன்னுவயம் விபரீதான்னுவய மிரண்டினையும் பிரசத்த பாதர் அனனுகத நிதரிசனாபாசமென்றும் விபரீ தானுகத நிதரிசனாபாசமென்றும் வழங்குவர். நியாயப் பிரவேசமுடையார் இவ்விரண்டிற்கும்இங்கே கூறிய பெயர்களையே மேற் கொண்டாரேனும் அநன்னுவயத்திற் கிலக்கணங் கூறியதுபோல விபரீ தான்னுவயத்திற் கது கூறாராயினர். 402-412. வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியா விருத்தியாவது - வைதன்மிய திட்டாந்தப் போலிவகையில் கூறப்படும் சாத்தியா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது ; சாதன தன்மம் மீண்டு-வைதன்மிய திட்டாந்தத்துக் கேற்ப மீளுதற்குரிய சாதன சாத்திய மிரண்டனுள் சாதன தன்மம் மீண்டு நிற்க; சாத்திய தன்மம் மீளாதொழில் - சாத்தியப் பொருளின் தன்மம் மாத்திரம் மீளாது வைதன்மிய திட்டாந்தத்தின்கண் பொருந்தி யிருப்பதாம் ; சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்- சத்தம் நித்தத்துவமுடையது அமூர்த்தத்துவமுடையதாகையால் என்று சொல்லி; யாதொன்று யாதொன்று நித்தமு மன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப்போல் எனில் - யாதொரு பொருள் நித்தமன்று அஃது அமூர்த்தமன்று என அதற்கு விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி கூறிப் பரமாணுவைப் போல என வைதன்மிய திட்டாந்தம் காட்டினால், அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணு - அவ்வாறு வாதியாவான் வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டிய பரமாணுவானது; நித்த மாய மூர்த்த மாதலின்-நித்தமாயும் மூர்த்தமாயும் இருத்தலால்; சாதன அமூர்த்தம் மீண்டு - சாதனமாகிய அமூர்த்தத்துவத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் பொருந்தி நிற்ப; சாத்திய நித்தம் மீளாதொழிதல்- சாத்திய தன்மமாகிய நித்தத்தின் மீட்சியான அநித்தத்துவம் இப்பரமாணுவின்கண் இல்லாதொழிதலால் இதுகுற்றமாயிற்று எ-று. மீளுதல், எதிர்மறை முகத்தால் வலியுறுதல்; அஃதாவது சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றவழி, யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமெனவரும் வியாத்திக்கு மறுதலையாய் யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்த மன்றென வியாத்தி வசனம் கூறி, குடம்போல எனத் திட்டாந்தம் காட்டி, அதன்பால் நித்தமன்மையும் அமூர்த்தமன்மையும் வெளிப்படையாதலால், அவ்வாற்றால் சாத்திய தன்மமான நித்தத்துவத்தையும் சாதன தன்மமான அமூர்த்தத்துவத்தையும் வலியுறுத்துவதாம். உடன்பாட்டாலும் எதிர் மறையாலும் பொருளுண்மை வற்புறுத்துவது நன்றாதலின், இரண்டிற்கும் முறையேயுரிய திட்டாந்தங்கள் சாதன்மிய திட்டாந்தமெனவும் வைதன்மிய திட்டாந்த மெனவும் வழங்கலாயின. சாதன்மியம்-சாத்திய சாதன தன்மங்களை யுடையது; வைதன்மியம் - மறுதலைச் சாத்திய சாதன தன்மங்களையுடையது. இவற்றை அன்னுவய திட்டாந்த மென்றும் வெதிரேக திட்டாந்த மென்றும் பிறரெல்லாம் கூறுப. "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்பது சாதனத்தோடு கூடிய சாத்திய வசனம். இதன் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழிக் குரியவை சாத்திய சாதனங்களின் மறுதலைத் தன்மிகளாதலின், அது ‘யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்த மன்று" என்பதனால் உரைக்கப்பட்டது. இதனை வற்புறுத் தற்குக் காட்டும் வைதன்மிய திட்டாந்தம் "பரமாணுப்போல்" என்பது இதன்பால் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மத்துக்கு மீட்சியாய நித்தமன்மையும், சாதனமாகிய அமூர்த்தத்திற்கு மீட்சியாய அமூர்த்தமன்மையும் பொருந்துமாயின், இது குற்ற மில்லாத வைதன்மிய திட்டாந்தமாம். பரமாணுவின்கண் சாதன தன்ம மீட்சியாகிய மூர்த்தத்துவம் மீண்டு நிலை பெறுதலின், "சாதனவமூர்த்தம் மீண்டு" என்றும், சாத்தியமான சத்த தன்மமான நித்தத்தின் மீட்சியாகிய அநித்தத்துவம் காணப் படாமையால், அச் சாத்திய தன்மம் மீட்சிபெறாமையை, "சாத்திய நித்தம் மீளா தொழிதல்" என்றும் கூறினார். எனவே, பரமாணுவாகிய வைதன்மிய திட்டாந்தத்தில் சாத்திய தன்ம மீட்சி பொருந்தாது சாதன தன்ம மீட்சியொன்றே பொருந்துதல் பற்றிக் குற்றமாதலின், வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப் படுவதாயிற்று. 413-423. சாதனா வியா விருத்தியாவது-வைதன்மிய திட்டாந்தத்துச் சாதனா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது; சாத்திய தன்மம் மீண்டு - மீளுதற்குரியவற்றுள் சாத்தியப் பொருளின் தன்மம் மீள; சாதன தன்மம் மீளாதொழிதல்-சாதனமாகிய ஏதுவின் தன்மம் மீளாது குற்றப்படுதல்; சத்தம் நித்தம்-சத்தம் நித்தத்துவமுடையதெனச் சாத்திய வசனமும்; அமூர்த்தத்து என்றால் - அமூர்த்தத்துவமுடைய தாகையா லெனச் சாதனவசன மும்கூறி; யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமும் அன்று - யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்தமு மல்லாதது என மீட்சிக் குரிய வியாத்தி வசனம் காட்டி; கன்மம் போல் என்றால் - கன்மம் போல எனத் திட்டாந்தம் கூறினால்; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கன்மம் - எதிர்மறை நெறிக் குரிய திட்டாந்தமாகக் காட்டிய கன்மமானது; அமூர்த்தமாய் நின்று-அமூர்த்தத்துவ முடையதாய் நின்று; அநித்தமாதலின் - அநித்தத்துவம் முடையதாதலால்; சாத்தியமான நித்தியம் மீண்டு - சாத்திய தன்மமான நித்தத்துக்கு மீட்சியாகிய அநித்தத்துவம் எய்திற்றாக; சாதன வமூர்த்தம் மீளாது-சாதன தன்மமான அமூர்த்தத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் எய்தாது அமூர்த்தத்துவமே எய்துதலால் குற்றமாயிற்று எ - று. சத்தம் நித்தம் அமூர்த்தத்துவத்தை யுடைமையால் என்று கூறிய வாதி, இதனை விபக்கத்து வாயிலாக வைதன்மிய திட்டாந்தம் காட்டி வலியுறுத்துவானாய், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாக, "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமுமன்" றென்றும், அதற்கு வைதன்மிய திட்டாந்தமாகக் "கன்மம் போல், என்றும் கூறுவானாயின் என்றார். நித்தமன்மை யாகிய சாத்திய தன்ம மீட்சியும், அமூர்த்த மன்மையாகிய சாதன தன்ம மீட்சியும், விபக்கத் தொடர்ச்சி மொழிக்கண் எய்தியும், கன்மமாகிய திட்டாந்தத்தின்கண், அமூர்த்தத்துவமாகிய சாதன தன்மம் காணப்படுகிறதேயன்றி, அதன் மீட்சி காணப் படாமையின் "சாதனமான வமூர்த்தம் மீளா"தென்றும், கன்ம திட்டாந்தத்தில் நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சி காணப்படுதலால், "சாத்தியமான நித்திய மீண்டு" என்றும் கூறினார். 424-429. உபயா வியா விருத்தி - உபயாவியா விருத்தியாவது; காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று - மேற்கோளை எதிர்மறை நெறியாற் சாதிப்பான் தொடங்கி வாதி காட்டும் வைதன்மிய திட்டாந்தத்திலிருந்து; சாதன சாத்தியங்கள் மீளாமை - சாதன சாத்தியங்களின் தன்ம மிரண்டின் மறுதலைத் தன்மங்கள் பொருந்தாதொழிவது; அன்றியும்-மேலும்; உண்மையின் உபயா வியா விருத்தி - உள்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந் தாமையும்; இன்மையின் உபயாவியா விருத்தி என - இல் பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந்தாமையும் என; இருவகை - இருவகைப் படும் எ - று. முன்னர், உபய தன்ம விகலமென்ற சாதன்மிய திட்டாந்தப் போலியை இருவகைப்படுத்துக் கூறினாராகலின், அதன் மீட்சியாகிய வைதன்மியப் பகுதிக்கண் வரும் உபயாவியா விருத்தியையும் அவ்வாறே இரு வகைப்படுத்தி, "உண்மையின் உபயாவியா விருத்தி இன்மையின் உபவாவியா விருத்தியென விருவகை" யென்றார். இவர் உபய தன்ம விகலமாகிய சாதன்மிய திட்டாந்தப் போலியை யிருவகைப்படுத்தோதியதை மேற்கொண்டு தாமும் இருவகைப்படுத்தாதுரைத்த நியாயப் பிரவேசமுடையார், இவ்வுபயாவியா விருத்தியை அவ்வாறு இருவகைப்படுத்தா தொழிகின்றார்; "காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று சாதன சாத்தியங்கள் மீளாமை" யென்பது உபயாவியா விருத்தியின் இலக்கணம். மீளுதல், மறுதலைத் தன்மம் பொருந்த நிற்றல். 429 - 440. உண்மையின் உபயாவியா விருத்தி-உண்மையின் உபயா வியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண் சாத்திய சாதன மீளாதபடி - உள்ளதாகிய பொருளொன்றின்கண் சாத்திய சாதன தன்மங்களின் மீட்சித் தன்மங்கள் பொருந்தாதபடி; வைதன்மிய திட்டாந்தம் காட்டல் - வைதன்மிய நெறிக்குரிய திட்டாந்தம் உரைத்தலாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றாற்கு-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாதலால் என்றோதிய வாதிக்கு; யாதொன்று யாதொன்று நித்தமன்று அமூர்த்தமு மன்று - யாதொரு பொருள் நித்தமல்லாதது அஃது அமூர்த்தமல்லாதது என்று விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என்றால் - ஆகாசம்போல என வைதன்மிய திட்டாந்தங் காட்டினால் ; வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டப்பட்ட ஆகாசம்-வைதன்மிய நெறியால் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசத்தை ; பொருள் என்பாற்கு - பொருளென்று மேற்கொள்ளும் அவ்வாதிக்கு ; ஆகாசம் நித்தமும் அமுர்த்தமும் ஆதலால் -அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன்மங்களை யுடையதாகையால்; சாத்திய நித்தமும் - சாத்திய தன்மமான நித்தத்துவமும்; சாதனமாவுள்ள அமூர்த்தமும் -சாதன தன்மமான அமூர்த்தத்துவமுமாகிய இரண்டும், மீண்டில - இரண்டிற்கும் மீட்சியாகிய நித்தமன்மையும் அமூர்த் தமன்மையும் பொருந்தா தொழிதலின் குற்றமாயிற்று எ - று. சத்தம் நித்தம், அமூர்த்தமாகலின் என்று கூறும் வாதி பக்கத்துக்கு விபக்க வியாத்தி வசனம் "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமன்று" என்பதாகலின், அதனை யெடுத்தோதினார். இதற்கு விபக்கவாதி காட்டும் திட்டாந்தம் இதவென்பார், "ஆகாசம்போல்" என்றார். எனவே, ஆகாசம் நித்த மன்மையும் அமூர்த்த மன்மையுமாகிய இரண்டு தன்மங்களையு முடைய தென்பது பெறப்படும். சத்தம் நித்தமென்ற வாதி, ஆகாசம் உள்பொருளென்று கொள்ளும் கொள்கை யுடையனாயின், அதன் பால் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் என்ற தன்மங்களுண் டென்ப தெய்துதலின், "ஆகாசம் பொருளென்பாற் காகாசம் நித்தமும் அமூர்த்தமுமாதலால்" என்றும், இவ்விரண்டும் சாத்திய சாதனங்களின் தன்ம மன்மையின், "சாத்திய நித்தமும் சாதன மாவுள்ள வமூர்த்தமும் இரண்டும் மீண்டில" என்றும் கூறினார். ஈண்டு, ஆகாசம் உள்ளதொரு பொருளாகக்கொண்டு கூறுதலின், இஃது உண்மையின் உபயாவியா விருத்தியாயிற்று. 440-449. இன்மையின் உபயாவியா விருத்தியாவது - இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சத்தம் அநித்தம் மூர்த்தமாதலால்-சத்தம் அநித்தமாம் மூர்த்த மாதலினால்; என்றவிடத்து - என்று பக்க வசனம் கூறிய வழி, யாதொன்று யாதொன்று அநித்தம் அன்று மூர்த்தமு மன்று - யாதொரு பொருள் அநித்தமல்லது அது மூர்த்தமல்லாதது என விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் - ஆகாசம் போலவென்று வைதன்மிய நெறி பற்றிய திட்டாந்தம் காட்டப்படுமானால்; ஆகாசம் பொருளல்ல வென்பானுக்கு-ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத வாதிக்கு; ஆகாசம் உண்மையின்மையினால் - ஆகாசம் உள் பொருளன்றாதலால்; சாத்திய வநித்தமும்-சாத்திய தன்மமான அநித்தத்துவமும்; சாதன மூர்த்தமும்-சாதன தன்மமான மூர்த்தத்துவமும்; மீட்சியும் மீளாமையும் இலையாகும் - மீண்டு நிற்றலும் மீளாதே நின்றியைதலும் இல்லையாய்க் குற்றமாம் எ - று. காட்டப்படும் திட்டாந்தம் பொருளாகக் கொள்ளப் படா விடத்து அதன்பால் உளவென்றும் இலவென்றும் கூறற்குரிய தன்மங்களே யில்லையாய் ஒழிதலின், அத்தகைய பொருளைத் திட்டாந்தமாகக் காட்டுதல் குற்றமாம்; ஆதலால் இஃது இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப் படுவதாயிற்று. உம்மை: இசைநிறை. அன்றென்பதை அநித்தத்துக்கும் கூட்டுக. இனி, நியாயப் பிரவேசமுடையாரைப் போலவே பிரசத்த பாதரும் இவ் வுபயாவியா விருத்தியை ஒன்றாகவே கொண்டு ஆகாசத்தையே திட்டாந்தமாகக் 1காட்டுகின்றார். 450-459. அவ் வெதிரேகமாவது-அவ் வெதிரேகமென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சாத்தியமில்லாவிடத்து-சாத்திய தன்மம் இல்லாதவிடத்து; சாதனம் இன்மை சொல்லாதே விடுதலாகும் -சாதன தன்மம் இல்லையென்று எடுத்துச் சொல்லா தொழிவதாம்; சத்தம் நித்தம் பண்ணப் படாமையால் என்றால் - சத்தம் நித்தமாகும் பண்ணப் படுவதன்றாதலால் என்ற வழி; யாதொன்று யாதொன்று நித்தமன்று-யாதொரு பொருள் நித்தமன்றோ; பண்ணப் படுவதல்லாததும் அன்று எனும்-பண்ணப்படாததன்று என்னும்; இவ் வெதிரேகம் தெரியச் சொல்லாது - இவ் வெதிரேகக் கூற்றை எதிரிக்குத் தோன்ற எடுத்துச் சொல்லாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டே மாதலால் - குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயப்படுந் தன்மையும் அநித்தத்துவமும் கண்டுள்ளேமாதலால்; என்னின்- என்று சொன்னால் ; வெதிரேகம் தெரியாது - குடத்தின்கண் சாத்திய தன்மமான நித்தியத்துவம் இல்லாமையால், பண்ணப் படாமையுமில்லை என்ற வெதிரேக வியாத்தி விளங்கத் தெரிவிக்கப்படாமையின் அவ் வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாயிற்று எ - று. சாத்திய தன்மமில்லாவிடத்துச் சாதன தன்மம் இல்லாமை சொல்வது வெதிரேக வியாத்தி வசனமாகும். வெதிரேகம்-எதிர்மறை. இதனையே முன்னர் விபக்கத் தொடர்ச்சி மீட்சி யென்றார். வைதன்மிய திட்டாந்தங் காட்டுமிடத்து, இதனை எடுத்து விளங்கவுரைத்த பின்பே காட்ட வேண்டுமாதலின், உரையாது காட்டுவது வெதிரேக விலக்கணத்துக்குக் குற்ற மாதலின், "அவ் வெதிரேகம்" என்றும், அஃதாவது, "சாத்திய மில்லாவிடத்துச் சாதனமின்மை சொல்லாது விடுதலாகு" மென்றும் கூறினார். இதனை விளக்குவார், "சத்தம் நித்தம் பண்ணப் படாமையால்" என முதற்கண் பக்க வசனமும் ஏதுவும் கூறி, இதற்கு, கூறற்பாலதாகிய விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாகும் வெதிரேக வியாத்திவசனம் இது வென்பார், "யாதொன்று நித்தமன்று பண்ணப் படுவதல்லாததுவுமன்று எனும் இவ் வெதிரேகம்" என்றும், இதனை முன்பே கூறாது, வாளா குடத்தைத் திட்டாந்தமாகக் காட்டல் அவ் வெதிரேக மென்னும் குற்றமாமென்றற்கு, "குடத்தின் கண்ணே பண்ணப் படுதலும் அநித்தமுங் கண்டேமாதலால் என்னின் வெதிரேகம் தெரியாது" என்றும் கூறினார். இனி, நியாயப் பிரவேசமுடையார் சாத்திய சாதனதன்மங்களின் இல்லாமையை யுணர்த்தும் வெதிரேக வியாத்திவசனம் காட்டாமலே விபத்துக்குரிய திட்டாந்தத்தைக் காட்டுவது அவ் வெதிரேகத் திட்டாந்தாபாசம் என்று இலக்கணமும் குடத்தின் கண் மூர்த்தமன்மையும் அநித்தத்தன்மையும் காணப்பட்டனவெனத் திட்டாந்தமும் காட்டுவர். பிரசத்தபாதர் இதனை அவியாவிருத்த நிதரிசனாபாசம் என்று பெயர் கூறி, கடம்போல என இவ்வாறே உதாரணங் காட்டுகின்றார். 460-468. விபரீத வெதிரேகமாவது - விபரீத வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாவது; பிரிவைத் தலை தடுமாறாச் சொல்லுதல்- விபக்கத்து வெதிரேக வியாத்தி வசனத்தைத் தலைதடுமாறச் சொல்லுவதாம் ; சத்தம் நித்தம் மூர்த்த மாதலின் என்றால் சத்தம் நித்தமாம் மூர்த்தமாகையால் என்று சாத்திய சாதன வசனமான பக்கத்தைக் கூறினால்; என்று நின்றவிடத்து - என்று இவ்வாறுநின்றதற்கு விபக்க வெதிரேக வியாத்தி கூறுமிடத்து; யாதோரிடத்து நித்தமு மில்லை அவ்விடத்து மூர்த்தமுமில்லை யெனாது - யாதொரு பொருளிடத்து நித்தத்துவ மில்லையோ அப் பொருளிடத்து மூர்த்தத்துவமும் இல்லையாம் என்று சொல்லாமல் ; யாதோரிடத்து மூர்த்தமும் இல்லை அவ்விடத்து நித்தமும் இல்லை யென்றால் - யாதோர் பொருளிடத்து மூர்த்தத்துவ மில்லையோ அப் பொருளிடத்தே நித்தத்துவமுமில்லை யெனத் தடுமாறிச் சொன்னால்; வெதிரேகம் மாறு கொள்ளும் எனக் கொள்க-வெதிரேக திட்டாந்தம் மாறு பட்டுக் குற்றமாமெனக் கொள்வாயாக எ - று. பக்கத்தின் மறுதலையான விபக்கத் தொடர்ச்சியை மீட்சி யென வழங்குதலின், அதற்கேற்ப, அதன் வியாத்தி வசனத்தைப் பிரிவென்றார். பக்கத்தைப் புலப்படக் கூறினாலன்றி விபக்கம் பெறப்படாமை பற்றி, ''சத்தம் நித்தம் மூர்த்தமாதலினென்றால்'' என்றார். இனி, வழுவின்றிக் கூறற்பாலதாகிய விபக்க வியாத்தி வெதிரேக வசனம் இஃதென்பார், "யாதோரிடத்து நித்தமும் இல்லை அவ்விடத்து மூர்த்தமும் இல்லை' யென்றும், இவ்வாறு கூறாது தலைதடுமாறிக் கூறும் தவறாய முறையைக்காட்டற்கு, ''யாதோரிடத்து மூர்த்தமுமில்லை அவ்விடத்து நித்தமு மில்லை''யென்றும்,இக் கூற்று விபரீத வெதிரேகமாம் என்பார், ''வெதிரேகம் மாறு கொள்ளுமெனக் கொள்க" என்றும் கூறினார். வெதிரேகக் கூற்றை மாறுகொளக் கூறுதலின் விபரீ தமாமென வறிக. என்றால், மாறுகொள்ளும் என இயைத்து, மூர்த்த மாதலின் என்றால் அதற்குரிய வியாத்தி வசனத்தை...என்று தடுமாறிச்சொன்னால் மாறுகொள்ளும் என்றவாறா மென்க. இனி, நியாயப் பிரவேசமுடையார், இவ் வாசிரியர் கூறியது போல இலக்கணங் கூறாது உதாரணமட்டிற் கூறுவர். இதனைப் பிரசத்தபாதர் விபரீத வியாவிருத்த மென்றனர். இதுகாறுங் கூறியவாற்றால், மணிமேகலை யாசிரியர் காலத்தே தமிழகத்து நிலவிய பௌத்தரிடையே பக்கப்போலி ஒன்பதும், ஏதுப்போலி பதினான்கும் திட்டாந்தப்போலி பத்துமாக முப்பத்துமூன்று போலிகள் நிலவின வென்பதும், இவற்றையே நியாயப் பிரவேச முடையார் மேற்கொண்டு வடநாட்டுப் புத்தரிடையே பரப்ப,அவர்கள் ஏனையோர் கூறியவற்றோடு இயைத்துப் பிற்காலத்தே தமக் கேற்றவாறு பெருக்கிக் கொண்டன ரென்பதும்உணரற் பாலனவாம். காட்சி, கருத்து என்ற இருவகை அளவைகளையும்கூறற்கு முன், அளவையின் இன்றியமையாமை, அளத்தற்குரிய கருவிகள், அவை பொருள்களை யளக்குந்திறம், அறிவு, அறியாமை, ஐயம், வழு முதலியனவும், அளவைக்குப் பின் கூறப்படும் வாதவியல், தோல்வி வகை முதலியனவும் இந் நூற்கண் கூறப்படவில்லை. நியாயப் பிரவேசமுடையார். தம் நூற்கண் கூறற்குரியன, முறையே, சாதனாபாசம், சுவார்த்தப் பிரமாணம், பிரத்தியக்கம், அனு மானம்,பிரத்தியக்காபாசம், அனுமானாபாசம், தூஷணம், தூஷணாபாசம் என எட்டு வகையாகக் கூறுதலால், இவ் வெட்டும், மணிமேகலை யாசிரியர் காலத்தே நம் தமிழகத்தே நிலவின வென்பது துணிபாம். ஆயினும், இவர் ஈண்டு அளவை நூல் கூறவந்தா ரல்லராகலின், உண்மை யுணர்வுக்கு இன்றியமையா வெனக் கொண்ட அளவை யிரண்டையுமே கூறலுற்று, அவற்றுட் காட்சியைச்சிறிதும் கருத்தளவையைப் பெரிதுமாகக் கூறினார். மேலும், அளவை நூல் கூறும் கருத்துக்களுட் சிலவற்றைச் சமயக்கணக்கர்தம் திறங்கேட்ட காதைக்கண் அளவை வாதி கூற்றில் வைத்துக் கூறியிருப்பதும் குறிக்கத் தக்கதாம். அவன் கூறிய காட்சியுங் கருத்தும் தமக்கு உடன்பாடாகலின், அவற்றுள் தம் சமயநூற் கருத்துக்கேற்ப விளக்கத்தகுவனவற்றை இக் காதைக்கண் தொடக்கத்தே விளக்கி விடுகின்றார். காட்சிபற்றி அளவைவாதி கூறியவற்றைத் தழீஇக் கொள்பவர், அவற்றைச் "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலிவிட்டனர்நாமசாதிக் குணக் கிரியைகள், மற்றவை யனுமானத்தும் அடையும் என"' என்பதனால் செம்மை செய்துகொள்வதும், கருத்துப்பற்றி அவன் கூறுவனவற்றைத் தழீஇக் கொள்பவர், கருத்தளவை பற்றியும் அதன் பக்க முதலிய உறுப்புக்களைப்பற்றியுங் கூறுவனவற்றால் தூய்மை செய்துகொள்வதும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். எதிரி கூறும் கூற்றிலுள்ள குற்றங்களைக் காட்டுதல் தூடண மென்றும், அவற்றைக் காட்டுமிடத் துண்டாகுங் குற்றங்களைத் தூடணாபாசமென்றும் கூறுப. அத் தூடணாபாசந்தானும் ஆறுவகைப்படும் என்றும், அவை "குறையில்லாத சாதனங்களிற் குறைகூறுதல், குற்றமற்ற பக்கவுறுப்பிற் பக்கக் குற்றங்கூறுதல், சித்தித்திருக்கும் ஏதுவை அசித்தவேது வென்றல், ஏகாந்த வேதுவை அநேகாந்த வேதுவென்றல், அவிருத்தவேதுவை விருத்தவேது வென்றல், குற்றமற்ற திட்டாந்தத்தைக் குற்றமுடைய தென்றல்" என்றும் கூறுப. ஈண்டு, கூற்று நிகழ்த்தும் அறவணவடிகள் மணிமேகலைக்கு உண்மையுணர்ந்து கோடற்கேற்ற கருவியாக இவற்றைக் கூறுகின்றாரேயன்றி, பிறரோடு சொற்போர் நிகழ்த்தற் பொருட்டன்மையின், இவற்றைக் கூறாராயினார். 469-472. இப்படி நாட்டிய தீய சாதனத்தால் - இவ்வாறு காட்டப் பட்ட குற்றமுடைய சாதனங்களால்; காட்டும் அனுமான ஆபாசத்தின்-காட்டப்படும் போலிக் கருத்துக்களின்; மெய்யும் பொய்யும்-மெய்ம்மைத் தன்மையும் பொய்ம்மைத் தன்மையும்; இத்திற விதியால் (விலக்கால்)--இம் மெய்யும் பொய்யுமாகிய கூறுகட்கேற்பக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்கமைந்த விதிவிலக்குகளைக் கொண்டு: ஐயமின்றி-ஐயந் திரிபின்றி; ஆய்ந்து அறிந்துகொள் - ஆராய்ந்து அறிந்து கொள்க; என்-என்று கூறினான் எ-று. அளவை நெறிபற்றி இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்துச் சுட்டுதலின், "இப்படி நாட்டிய" என்றும், தீய சாதனத்தாற் காட்டுவதே அனுமானாபாசம் என்பதென்றற்கு, "தீய சாதனத்தாற் காட்டும் அனுமானாபாசத்தின்" என்றும் கூறினான். நியாயப் பிரவேசமுடையாரும் "ஹேத்து வாபாஸ பூர்வகம்ஞானம் அனுமானாபாஸம்" என்பது காண்க. பக்கம், ஏது, திட்டாந்தமென்ற மூன்றனுள், ஏது சிறந்தமையின், "தீய சாதனத்தால் காட்டும் அனுமானாபாசம்" என்றான்; ஆயினும், தீய பக்கமும் தீய எடுத்துக் காட்டும் அனுபானாபாசமாம் என்பது கருத்தாகக் கொள்க. 1"மெய்யும் பொய்யும்" கூறியதனால், அவற்றிற்கேற்ப விதியும் விலக்கும் கொள்ளப்பட்டன. இவ் விதி விலக்குகள் மேல்வரும் பவத்திற மறுகெனப் பாவைநோற்ற காதைக் கண் கூறப்படுதலின், அவற்றை யீண்டுத் தோற்றுவாய் செய்தார். இளங்கொடி தன்னை, வாழ்த்தி, உரைப்போன், விழாக்கோள் மறப்ப, தன் விழாத் தவிர்தலின் மணிமேகலா தெய்வம் என்பவட் கொப்ப, அவனிடு சாபத்து,நகர் கடல் கொள்ள, இப்பதிப் படர்ந்தனம் என்றலும்,இறைஞ்சி, வைத்திலேன், அருளுக என்ன, நங்காய் நொடிகுவென் கேள்நீ; அளவை இரண்டே, ஏனை எல்லாம் அனுமானமாம்; பக்கம், ஏது, திட்டாந்தம். உபநயம், நிகமனம் என்ன ஐந்துள; உபநயம் நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; பக்கம் ஏது திட்டாந்தங்கள் நல்லவும் தீயவும் உள; நன்பக்கம் என நாட்டுக; நல்லேது ஊன்றி நிற்றலும், உண்டாதலும் இன்றியே விடுதலும், ஏதமில் திட்டாந்தம் இருவகைய,தீய பக்கமும் தீய வேதுவும் தீயவெடுத்துக் காட்டு மாவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியுமாம்; பக்கப் போலி பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த சம்பந்தம் என ஒன்பது வகைப்படும்; ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம், விருத்தம் என மூன்றாகும். நான்கு அசித்தம்; அநைகாந்திகமும் ஆறு; விருத்தம் விளம்பில் நான்கு வகையதாகும்; தீயவெடுத்துக் காட்டாவன திட்டாந்த வாபாசங்கள்;சாதன்மிய திட்டாந்த வாபாசம் ஓதில்,என்ன ஐந்து; வைதன்மிய திட்டாந்தாபாசமும் என்ன ஐவகைய; இப்படி நாட்டிய தீய சாதனத்தால் அனுமா னாபாசத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால், ஆய்ந்து அறிந்து கொள் என்றான் என, வினைமுடிபு கொள்க. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை முற்றிற்று. 30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை தருமம் கேட்கப்புக்க மணிமேகலைக்கு மெய்ப் பொருளைத் தேர்ந்துணர்தற்கு வேண்டும் அளவைகளையும், அவற்றுள் தீயவற்றை நீக்கித் தூயவற்றால் பொருளின் மெய்ம்மைத் தன்மையை ஐயமின்றி அறியும் திறத்தையும் அறிவுறுத்த அறவண அடிகள், மேலும் கூறற்குரிய அறங்களைக் கூறச் சமைந்தார். மணிமேகலையும் புத்த தன்ம சங்கமென்னும் மும்மணிகளையும் மும்மையின் வணங்கிப் புத்த தருமத்தைச் சரண்புகுந்தாள். அமரர் வேண்டு கோட்கிரங்கித் துடித லோகத்தினின்றும் தோன்றி, போதி மூலத்திருந்த வாமன் உரைத்த திருவறத்தை அவற்குப் பிற்போந்த எண்ணிலரான புத்தர்கள் வழிவழியாக வுரைத்துப் போந்தனர்; அதனை உனக்குரைப்பேன் என அறவணவடிகள் உரைக்கத் தொடங்கி, பன்னிரு நிதானங்களும், அவற்றின் மண்டிலவகையும், கண்ட வகையும், சந்தி வகையும், தோற்ற வகையும், கால வகையும், பிறவும் தொகுத்தும் விரித்தும் கூறினார். பின்பு, நால்வகை வாய்மையும், ஐவகைக் கந்தமும், அறுவகை வழக்கும், நால்வகை நயங்களும், வினாவிடைகளும் விரித்து விளங்கக் கூறினார். முடிவில் கட்டும் வீடும் ஒவ்வொன்றன் காரணமும் அவரவர் முயற்சியால் விளையுமேயன்றிப் பிறராற் றரப்படுமாறில்லை யென்பதை வற்புறுத்தி, இறுதியாக, மேலே கூறிய பொருள் எல்லாவற்றிற்கும் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றுமே காரணமென்றும், காமத்தை அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத் தனித்துப் பார்த்துப் பற்றறுக்கும் அசுப பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும், வெகுளியை மைத்திரி பாவனை, கருணா பாவனை, முதித பாவனைகளால் கெடுத்தல் வேண்டுமென்றும், மயக்கத்தை ஞான நூற் பொருளைக் கேட்டல் சிந்தித்தல் பாவனை தரிசனையெனவரும் உபேக்ஷா பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும் அறிவுறுத் தினாராக, மணிமேகலையும் அவர் காட்டிய ஞானவிளக்கின் துணை கொண்டு தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுப்பேனென நோற்கலானாள். இதன்கண் மணிமேகலை சரண்புகுதல் 1-5 அடிகளிலும், அறவணன் புத்த தருமத்தைத் தொகுத்துரைக்குந்திறம் 6-44 அடிகளிலும், பன்னிருநிதானங்களின் இயல் 45-133 அடிகளிலும், கண்டவியல் 134-147 அடிகளிலும், சந்தியியல் 148-152 அடிகளிலும், பிறப்பியல் 153-158 அடிகளிலும், காலவியல் 159-166 அடிகளிலும், குற்றவியல்பும் வீட்டியல்பும் 167-178 அடிகளிலும், நால்வகை வாய்மைகள் 179-188 அடிகளிலும், ஐங்கந்தங்கள் 189-190 அடிகளிலும், வழக்கியல் 191-216 அடிகளிலும், நால்வகை நயங்களும் பயனும் 217-235 அடிகளிலும், வினாவிடை 236-249 அடிகளிலும், நால்வகைப் பாவனைகள் 250-260 அடிகளிலும்,மணிமேகலை நோற்றலைத் தலைப்பட்டது 263-4 அடிகளிலும் கூறப்படுகின்றன. தானந் தாங்கிச் சீலந் தலைநின்று போன பிறப்பிற் புகுந்ததை யணர்ந்தோள் புத்த தன்ம சங்க மென்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச் 5 சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின் முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன் அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத் துடித லோக மொழியத் தோன்றிப் 10 போதி மூலம் பொருந்தி யிருந்து மாரனை வென்று வீர னாகிக் குற்ற மூன்று முற்ற வறுக்கும் வாமன் வாய்மை யேமக் கட்டுரை இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ் 15 சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது ஈரறு பொருளி னீந்தநெறி யுடைத்தாய்ச் சார்பிற் றோன்றித் தத்தமின் மீட்டும் இலக்கணத் தொடர்தலின் மண்டில வகையா யறியக் காட்டி 20 எதிர்முறை யொப்ப மீட்சியு மாகி ஈங்கி தில்லா வழியில் லாகி ஈங்கி துள்ள வழியுண் டாகலில் தக்க தக்க சார்பிற் றோற்றமெனச் சொற்றகப் பட்டு மிலக்கணத் தொடர்பாற் 25 கருதப் பட்டுங் கண்டநான் குடைத்தாய் மருவிய சந்தி வகைமூன் றுடைத்தாய்த் தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த் தோற்றற் கேற்ற காலமூன் றுடைத்தாய்க் குற்றமும் வினையும் பயனும் விளைந்து 30 நிலையில வறிய துன்பமென நோக்க உலையா வீட்டிற் குறுதி யாகி நால்வகை வாய்மைக்குச் சார்பிட னாகி ஐந்துவகைக் கந்தத் தமைதி யாகி மெய்வகை யாறு வழக்குமுக மெய்தி 35 நயங்க ணான்காற் பயன்க ளெய்தி இயன்றநால் வகையால் வினாவிடை யுடைத்தாய் நின்மிதி யின்றி யூழ்பா டின்றிப் பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப் பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய் 40 யானு மின்றி யென்னது மின்றிப் போனது மின்றி வந்தது மின்றி முடித்தலு மின்றி முடிவு மின்றி வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன வெல்லாந் தானே யாகிய 45 பேதைமை செய்கை யுணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த வியல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் 50 அறியா ராயி னாழ்நர கறிகுவர் பேதைமை யென்ப தியாதென வினவின் ஓதிய விவற்றை யுணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் 55 உலக மூன்றினு முயிரா முலகம் அலகில பல்லுயி ரறுவகைத் தாகும் மக்களுந் தேவரும் பிரமரு நரகருந் தொக்க விலங்கும் பேயு மென்றே நல்வினை தீவினை யென்றிரு வகையாற் 60 சொல்லப் பட்ட கருவிற் சார்தலுங் கருவிற் பட்ட பொழுதினுட் டோற்றி வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டுந் தீவினை யென்ப தியாதென வினவின் 65 ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில் சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும் 70 வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென் றுள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயு நரகரு மாகிக் 75 கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர் நல்வினை யென்ப தியாதென வினவிற் சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச் சீலந் தாங்கித் தானந் தலைநின்று மேலென வகுத்த வொருமூன்று திறத்துத் 80 தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் உணர்வெனப் படுவ துறங்குவோ ருணர்விற் புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த 85 உயிரு முடம்பு மாகு மென்ப வாயி லாறு மாயுங் காலை உள்ள முறுவிக்க வுறுமிட னாகும் ஊறென வுரைப்ப துள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுத லென்ப 90 நுகர்வே யுணர்வு புலன்களை நுகர்தல் வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை பற்றெனப் படுவது பசைஇய வறிவே பவமெனப் படுவது கரும வீட்டந் தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல் 95 பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின் உறப்புண ருள்ளஞ் சார்பொடு கதிகளிற் காரண காரிய வுருக்களிற் றோன்றல் பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற் றிரிந்துடம் பிடும்பை புரிதல் 100 மூப்பென மொழிவ தந்தத் தளவுந் தாக்குநிலை யாமையிற் றாந்தளர்ந் திடுதல் சாக்கா டென்ப தருவுருத் தன்மை யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல் பேதைமை சார்வாச் செய்கை யாகுஞ் 105 செய்கை சார்வா வுணர்ச்சி யாகும் உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் அருவுருச் சார்வா வாயி லாகும் வாயில் சார்வா 'd2வூறா கும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் 110 நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் வேட்கை சார்ந்து பற்றா கும்மே பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரண மாக வருமே யேனை வழிமுறைத் தோற்றந் 115 தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா டவல மரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரு மென்ப ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி பேதைமை மீளச் செய்கை மீளுஞ் 120 செய்கை மீள வுணர்ச்சி மீளும் உணர்ச்சி மீள வருவுரு மீளும் அருவுரு மீள வாயின் மீளும் வாயின் மீள 'd2வூறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் 125 நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளுங் கருமத் தொகுதி மீளத் தோற்ற மீளுந் தோற்ற மீளப் 130 பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்கா டவல மரற்றுக் கவலை கையா றென்றிக் கடையில் துன்பம் எல்லா மீளுமிவ் வகையான் மீட்சி ஆதிக் கண்ட மாகு மென்ப 135 பேதைமை செய்கை யென் றிவை யிரண்டுங் காரண வகைய வாத லானே இரண்டாங் கண்ட மாகு மென்ப உணர்ச்சி யருவுரு வாயி லூறே நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன 140 முன்னவற் றியல்பாற் றுன்னிய வாதலின் மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக் கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட் குற்றமும் வினையு மாக லானே 145 நான்காங் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம் எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற் பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம் 150 புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே 155 தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும் உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும் உணர்வு முருவு முடங்கத் தோன்றிப் புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங் கால மூன்றுங் கருதுங் காலை 160 இறந்த கால மென்னல் வேண்டும் மறந்த பேதைமை செய்கையா னவற்றை நிகழ்ந்த காலமென நேரப் படுமே உணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே 165 தோற்ற மென்றிவை சொல்லுங் காலை எதிர்கா லம்மென விசைக்கப் படுமே பிறப்பே பிணியே மூப்பே சாவே அவல மரற்றுக் கவலைகை யாறுகள் குலவிய குற்றமெனக் கூறப் படுமே 170 அவாவே பற்றே பேதைமை யென்றிவை புனையுமடை பவமும் வினைசெய லாகும் உணர்ச்சி யருவுரு வாயி லூறே நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை நிகழ்ச்சிப்பய னாங்கே நேருங் காலைக் 175 குற்றமும் வினையும் பயனுந் துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிக ணிலையா எப்பொரு ளுக்கு மான்மா விலையென இப்படி யுணரு மிவைவீட் டியல்பாம் உணர்வே யருவுரு வாயி லூறே 180 நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவல மரற்றுக் கவலைகை யாறென நுவலப் படுவன நோயா கும்மே அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை யவாவே பற்றுக் 185 கரும வீட்டமிவை காரண மாகும் துன்பந் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை 190 உள்ள வறிவிவை யைங்கந்த மாவன அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பிற் றொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந் துரை யென்ற நான்கினு மியைந்த உண்மை வழக்கு மின்மை வழக்கும் 195 உள்ளது சார்ந்த வுண்மை வழக்கும் இல்லது சார்ந்த வின்மை வழக்கும் உள்ளது சார்ந்த வின்மை வழக்கும் இல்லது சார்ந்த வுண்மை வழக்குமெனச் சொல்லிய தொகைத்திற முடம்புநீர் நாடு 200 தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந் நிகழ்ச்சியி லவற்றை நெல்லென வழங்குதல் இயல்பு மிகுத்துரை யீறுடைத் தென்றுந் தோன்றிற் றென்று மூத்த தென்றும் மூன்றி னொன்றி னியல்புமிகுத் துரைத்தல் 205 இயைந்துரை யென்ப தெழுத்துப்பல கூடச் சொல்லெனத் தோற்றும் பலநாட் கூடிய எல்லையைத் திங்க ளென்று வழங்குதல் உள்வழக் குணர்வில் வழக்கு முயற்கோடு உள்ளது சார்ந்த வுள்வழக் காகுஞ் 210 சித்தத் துடனே யொத்த நுகர்ச்சி உள்ளது சார்ந்த வில்வழக் காகுஞ் சித்தமுற் பவித்தது மின்போ லென்கை இல்லது சார்ந்த வுண்மைவழக் காகுங் காரண மின்றிக் காரிய நேர்தல் 215 இல்லது சார்ந்த வில்வழக் காகும் முயற்கோ டின்மையிற் றோற்றமு மில்லெனல் நான்கு நயமெனத் தோன்றப் படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை யியல்பென்க காரண காரிய மாகிய பொருள்களை. 220 ஒன்றா வுணர்த லொற்றுமை நயமாம் வீற்றுவீற் றாக வேதனை கொள்வது வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும் பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு ஒன்றிய காரண முதவுகா ரியத்தைத் 225 தருதற் குள்ளந் தானிலை யென்றல் புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் நெல்வித் தகத்து ணென்முளை தோற்றுமெனல் நல்ல வியல்புநய மிவற்றினாங் கொள்பயன் தொக்க பொருளல தொன்றில்லை யென்றும் 230 அப்பொரு ளிடைப்பற் றாகா தொன்றுஞ் செய்வா னொடுகொட் பாடிலை யென்றும் எய்துகா ரணத்தால் காரிய மென்றும் அதுவு மன்றத லாதது மன்றென்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் 235 வினாவிடை நான்குள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய்வா ளாமையெனத் தோன்றியது கெடுமோ கெடாதோ வென்றாற் கேடுண் டென்றல் துணிந்துசொல லாகுஞ் 240 செத்தான் பிறப்பா னோபிற வானோ என்று செப்பிற் பற்றிறந் தானோ வன்மக னோவெனல் மிகக்கூ றிட்டு மொழிதலென விளம்புவர் வினாவின் விடுத்தன் முட்டை முந்திற்றோ 245 பனைமுந் திற்றோ வெனக்கட் டுரைசெய் என்றா லெம்முட்டைக் கெப்பனை யென்றல் வாய்வா ளாமை யாகா யப்பூப் பழைதோ புதிதோ வென்று புகல்வான் உரைக்கு மாற்ற முரையா திருத்தல் 250 கட்டும் வீடு மதன்கா ரணத்தது ஒட்டித் தருதற் குரியோ ரில்லை யாமே லுரைத்த பொருள்கட் கெல்லாங் காமம் வெகுளி மயக்கங் காரணம் அநித்தந் துக்க மநான்மா வசுசியெனத் 255 தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல் மைத்திரி கருணா முதிதையென் றறிந்து திருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுக சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி யுய்த்து மயக்கங் கடிக 260 இந்நால் வகையான் மனத்திரு ணீங்கென்று முன்பின் மலையா மங்கல மொழியின் ஞான தீப நன்கனங் காட்டத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவை நோற்றனளென். உரை 1-5. போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் - தனது முன்னைப் பிறப்பு வரலாற்றை யறிந்தவளான மணிமேகலை; தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு; சீலம் தலைநின்று- சீலங்களின் வழி நின்று; புத்த தன்ம சங்கமென்னும் முத்திறமணியை-புத்தன் தருமம் சங்கமென்னும் கொள்கை களான முக்கூற்று மணிகளையும்; மும்மையின் வணங்கி - மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் வணங்கி; சரணா கதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புகலில்லாத வளாய், சரண் சென்று அடைந்த பின்-புத்த சங்கத்தே அடைக்கலமாகப் புகுந்த பின்னர் எ - று. சீலந் தாங்கித் தானம் மேற்கொண்டது ஏதுவாகப் போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் என்றுமாம். பின்பும், "சீலந்தாங்கித் தானம் தலைநின்று" (30: 78) என்பர். எனவே தானமும் சீலமும் ஒப்ப வேண்டுவன வென்பது துணிபாம். பாரமிதை பத்தனுள் முதலாவதாகிய இது தானபாரமிதை யெனவும் வழங்கும்; சீலம் சீல பாரமிதை யெனப்படும். பண்டை நாளிற் பாரமிதை ஆறாகவும் பிற்காலத்தே பத்தாகவும் வகுக்கப் பட்டன. பழைய பாரமிதை ஆறாவன; தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், பிரஞ்ஞை என்னவாம்; பின் சேர்க்கப் பட்டவை உபாயம், துணிவு, வலி, ஞானம் என்ற நான்குமாம். இவற்றுள் முதலிற் கூறிய தானமும் சீலமும் உலகியல் வாழ்விலிருப் போர் தொடக்கத்தே மேற்கொள்ளற்பாலன வென்றும், இவற்றினால் விளையும் பயன், மறுமையில் இன்பப் பிறப்பெய்துவ தென்றும் திக்க நிகாயம் (1: 110-2) கூறுகிறது. இத் தானத்தைப் போதி சத்துவபூமி யென்னும் நூலாசிரியர் ஒன்பது வகையாகக் கூறுவர்; அவை சுபாவதானம், சருவ தானம், துட்கர தானம், சருவதோமுக தானம், சற்புருட தானம், சருவகார தானம், விகதார்த்திக தானம், இகமுத்திர சுக தானம், விசுத்த தான மென்பனவாம். மன மொழி மெய்களை யடக்கி யறநெறிக்கட் செலுத்துவதே சீலமென்றும், அது சம்வரசீலம், குசலதரும சங்கிராஹக சீலம், சத்துவகிரியா சீலம் என மூவகைப் படு மென்றும் தருமசங்கிரக மென்னும் பௌத்த நூல் கூறுகிறது. இனி, இச் சீலத்தைச் சப்த சீல மென்று ஒரு சாராரும், பஞ்சசீல மென்றொரு சாராரும் பகுத்து முடிவில் தசசீலமாகக் கொண்டனரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொடக்கமுதல் தசசீலமென்ற பாகுபாடு தோன்றியதுவரை இச்சீலம். மூன்றும், ஐந்தும், ஏழுமாகப் பெருகிவந்து முடிவிற்றான் பத்தாயிற்று என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. பஞ்சசீலமென்பன உபாசகருக் குரிய வென்று விநயபிடகம்1 கூறுகிறது. கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன் சொலியம்பாமை, பயனில மொழியாமை, வெஃகாமை, வெகுளாமை. நற்காட்சியென்ற பத்தும் தசசீலமாம். நற்காட்சியை "மித்யாத்ருஷ்டி வ்ரத்தி" என்றுகூறுப. புத்தனாந் தன்மையும் புத்த தருமமும் புத்த சங்கமும் மூன்று மணிகளாக உருவகஞ் செய்து 1இரத்தினத்திரய மென்ப வாதலின், இவரும் 'முத்திற மணி" யென்றார். புத்தம் சரணங் கச்சாமி, தருமம்சரணங் கச்சாமி, சங்கம் சரணங் கச்சாமி என்று மூன்றையும் மும்முறைசொல்லி வழிபடுவது பற்றி, "மும்மையின் வணங்கி" யென்றாரென்றுமாம். புத்த தருமத்தை மேற்கொள்வோர் தொடக்கத்தே இம்மூன்றையும் சரண்புகுதல் வேண்டுமென அவதான சதகம் கூறுகிறது; அவ்வாறே மணிமேகலையும். சரண்புகுதலின், "சரணாகதியாய்ச் சரண் சென்றடைந்தபின்" என்றார். புத்த சங்கத்துச் சத்துவராதற்கு இது முதற்படி யெனப்படும். 6-15. முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்-முன்பின் மாறு பாடில்லாத அறங்களின் வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்; உயிர்-உயிர்கள்; அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி நிரம்பியிருந்த காலத்தில்; முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப-முடியணிந்து விளங்குந்தேவர்கள் தன்னை முறைப்படி வணங்கி நிலவுலகிற் றோன்றி அறங்கூற வேண்டுமெனக் குறையிரந்து நின்றதனால்; துடிதலோகம் ஒழியத் தோன்றி - துடித லோகத்தை விட்டு மண்ணுலகிற் றோன்றி; போதி மூலம் பொருந்தி யிருந்து-புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து; மாரனை வென்று வீரனாகி - மாரனென்னும் தேவனை வென்றதனால் வீரனாக விளங்கி; குற்ற மூன்றும் முற்றவறுக்கும்-மூவகைக் குற்றங்களையும் அறவே கெடுத்து இலவாக்கும்; வாமன் வாய்மை ஏமக் கட்டுரை - புத்த தேவனது மெய்ம்மை நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்புமாக எடுத்தோதியதும்; இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் - அவர்க்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்த சங்கத்தோர் பலராலும்; சிறந் தருள்கூர்ந்து-உயிர்கள்பால் மிக்க அருள்கொண்டு; திருவாய் மொழிந்தது - மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டது. மாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது எ - று. துடிதலோகத்து அமரர் இரப்ப, தோன்றி, இருந்து, வீரனாகி, அறுக்கும் வாமன் கட்டுரையும் புத்தர்கள் மொழிந்ததுமாகிய அறம் என இயைத்து, ஈண்டு யான் கூறலுறுவதென்பதை இசை யெச்சத்தாற் பெய்துரைத்து முடிக்க. புத்தன், தருமம், சங்கம், என்ற மூன்றனுள், புத்தனையும் சங்கத்தையும் இதனாற் கூறி, தருமத்தை யுரைத்தற்கு முகஞ் செய்கின்றார்; இவ்வாறே சாந்தி தேவரும் தாமெழுதிய போதி சரியாவதார பஞ்சிகை (வீவீ 8) யிலும் கூறுதல் காண்க. இவ்வாறு புத்தனையும் சங்கத்தையும் கூறியபின் தருமங் கூறுபவாயினும் வழிபடுமிடத்து புத்தன், தருமம், சங்கம் என்ற மூன்றையும் இம் முறையே வழிபடுவரென வறிக. புத்தனது உடமபைத் தன்ம காயமென்றும், அவனை அறத்தின் வடிவமென்றும் திவ்வியாவதானம் முதலிய நூல்கள் கூறுதலால், இவரும் திருவறமூர்த்தி" யென்றார். அறிவு, தானந்தாங்கிச் சீலம் தலை நிற்றற்கேதுவாகிய நல்லறிவு. மக்களென்னாது "உயிர்" என்றார். நல்லறிவு வறிதாயினமையின் ; "அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்" (குறள்: 848) என்றாற்போல. புத்தன் பிறத்தல் வேண்டித் துடித லோகத்தே தேவர்குறையிரந்து நின்றசெய்தியை, "தேவரெல்லாம்,. தொக்கொருங்கீண்டித் துடிதலோகத்து, மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப" (12:72-4) என்று முன்னரும் கூறுப. வடநூல்கள், புத்தர் தாமே நிலவுலகிற் றோன்றுதற் கெண்ணி, இடமும் காலமும் குறித்துக்கொண்டு தோன்றுவ ரென்று கூறுகின்றன. போதி - அரசமரம். புத்தர் பலரும் போதி மரத்தையே இருக்கையாய்க் கொள்ளவில்லை; விபாசி யென்னும் புத்தர் பாதிரி மரத்தையும், சிகி யென்பார் பூவரசினையும் கொண்டன ரெனப் பாலிமொழியிலுள்ள நூல்கள் கூறுகின்றன வென்பர். தீ நெறியிற் செலுத்தும் தேவனை மாரனென்றும், அவனுக்கு முப்பத்தாறு கோடி தானை வீரரும், இரதி அரதி திருஷணை என மூன்று பெண்மக்களும். விப்பிரமன், ஹர்ஷன், தருப்பன் என மூன்று ஆண்மக்களு முண்டென்பர். அவன் வரலாற்றை அசுவகோசர், க்ஷேமேந்திரர் முதலியோர் எழுதிய வடநூல்களுட் காண்க. வென்று: காரணப் பொருட்டு. ஆதி புத்தனுக்குப் பின்னர் பல புத்தர்கள் உளராயின ரென்றும். அவர் தொகுதியைப் புத்தசங்கமென்றும் அவர் ஆதிபுத்தன் கூறிய அறங்களை வழிவழியாய்த் தோன்றி யறிவுறுத்துவ ரென்றும் கூறுபவாதலின், "எண்ணில் புத்தர்களும் திருவாய் மலர்ந் தருளியது" என்றார். குற்ற மூன்றாவன மன மொழி மெய் மூன்றானும் உண்டாகும் பத்து வகைக் குற்றம். காம முதலிய மூன்றெனினுமாம். 16-19. ஈரறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் - இப் புத்தன் மொழிந்த கட்டுரைப்பொருள் பன்னிரண்டு பொருள்களாகக் கூறப்படும் நெறியை யுடையதாய்; சார்பின் தோன்றி - ஒன்றினொன்று காரண காரியமாய்ச் சார்ந்து தோன்றி; தத்தமில் மீட்டும்-தம்மில் மீளத் தோன்றுமாற்றால்; இலக்கு அணத் தொடர்தலின் - காரண காரியமா யியையத் தொடர்ந்து தோன்றுதலால்; மண்டில வகையாய் அறியக் காட்டி - மண்டலிக்கும் முறையில் வைத்து விளங்கக் காட்டி எ - று. ஈரறு பொருளாவன: பேதைமை, செய்கை, உணர்வு. அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரு நிதானங்களாகும். அவை சார்பில் தோன்றலாவது பேதைமையிலிருந்து செய்கையும், அச் செய்கையி லிருந்து உணர்வும், உணர்விலிருந்து அருவுருவும், அதிலிருந்து வாயிலும், அதிலிருந்து ஊறும், அதிலிருந்து நுகர்வும், அதிலிருந்து வேட்கையும் அதிலிருந்து பற்றும், அதிலிருந்து பவமும், அதிலிருந்து தோற்றமும், அத் தோற்றத்திலிருந்து வினைப்பயனும் தோன்றுதல், செய்கைக்குப் பேதைமை இலக்கும், உணர்வுக்குச் செய்கையிலக்கும், இவ்வாறே ஒவ்வொன்றும் இலக்காய் நிற்குமென வறிக. அவ்வாறாகுமிடத்து, வினைப் பயனிலிருந்து மீளப் பேதைமையும், அதிலிருந்து செய்கையும் பிறவும் தோன்றுதலின், "இலக்கணத் தொடர்தலின்" என்றார். இவ்வண்ணம் பேதைமை முதலிய பன்னிரண்டும் ஒன்றற்கொன்று காரண காரியமாய் இடையறவின்றிக் கறங்கோலை போலச் சுழன்று தோன்றுமாறு விளங்க, "மண்டில வகையா யறியக் காட்டி" யென்றார். இதனை "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" (24-5) என்று மேலும் கூறுப. 20-25. எதிர்மறை ஓப்ப-இவ்வாறு எதிர்தோன்றுதற் கேதுவாகிய காரணத்தை நீக்கிய வழி; மீட்சியுமாகி-பேதைமை முதலிய வற்றினின்று மீட்சி யுண்டாம்; ஈங்கு இது இல்லா - இவ்வாறு காரணமில்லை யாகவே; வழி இல்லாகி - காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லையாதலாலும்; ஈங்கு இது உள்ள - இவ்வாறே காரணத்தை விரும்பிய வழி; வழியுண்டாதலின்-காரியமாகிய தோற்ற முண்டாதலாலும்; தக்க தக்க சார்பில் தோற்றம் என - காரணங்களை யுள்ளுதலும் தள்ளுதலு மாகிய தகுதிக் கேற்பச் சார்பில் தோன்றும் காரியத் தோற்றம் உண்டாதலும் இல்லையாதலுமென்று; சொற்றகப்பட்டும் - சொல்லப்பட்டும்; இலக்கணத் தொடர்பால் கருதப்பட்டும் - காரண காரியங்களின் உண்மையின்மைகள் இவ்வியைபால் உணரப்பட்டும் வரும் எ - று. பேதைமையினின்று செய்கையும் செய்கையினின்றுணர்வும் இவ்வாறு பிறவும் தோன்றும் வழிமுறைத் தோற்றத்துக்கு மாறாக, பேதைமை முதலியவற்றை நீக்கியவழித் தோற்றமின்றாதலின் "எதிர் முறையொப்ப" என்றார். ஓப்புதல்-நீக்குதல், இதனையே சிறிது விளக்கலுற்று பேதைமை யில்வழிச் செய்கையின்மையும், செய்கையில்வழி உணர்வின்மையும், இவ்வாறு பிறவற்றின் இன்மையும் பெறப்படுவது பற்றி "ஈங்கிது வில்லா வழியில் லாகி" யென்றும், பேதைமை முதலிய வற்றைக் கொண்ட வழி, செய்கை முதலியன வுளவாதலும் பெறப்படுதலின், "ஈங்கிதுவுள்ள வழியுண்டாதலின்" என்றும் கூறினார். மீட்சிவகையை மேலே "பேதைமை மீளச் செய்கை மீளும்" என்பது முதலியவற்றாலும், வழிமுறைத் தோற்றமுண்டாதலை, "பேதைமை சார் வாச் செய்கை யாகும்" என்பது முதலியவற்றாலும் கூறுப. காண்டல் கருதல் என அளவை யிரண்டாதலின். அவற்றிற் கேற்பக் காட்சியாற் காணப்படுவதை "சார்பிற்றோற்றமெனச் சொற்றகப் பட்டும்" என்றும், கருதலாற் கொள்ளப்படுவதை, "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" என்றும் கூறினார். 25-26. கண்டம் நான்கு உடைத்தாய்-நான்கு வகையான கண்டங் களை யுடையதாய்; மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்-அக் கண்டங்கள் தம்மிற்புணரும் புணர்ச்சியை மூன்று வகையாக வுடையதாய் இந்நிதானம் இயலும் எ - று. பேதைமை முதலிய பன்னிரண்டனையும் நான்காகப் பகுத்து ஒவ்வொன்றையும் கண்டமெனக் கூறுப; அவற்றுள் பேதைமையும், செய்கையும் முதற் கண்டமெனவும், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு. நுகர்வு என்ற ஐந்தும் இரண்டாங்கண்ட மெனவும். வேட்கை, பற்று, பவம் என்ற மூன்றும் மூன்றாங் கண்டமெனவும், தோற்றமும், வினைப்பயனும் நான்காங் கண்டமெனவும் கூறுப. இவற்றின் இயல்பை, "ஆதிக் கண்டமாகுமென்ப" என்பது முதலியவற்றால் விரியக் கூறுப. முதற் கண்டத்தின் ஈறாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்தின் முதனின்ற உணர்வும் கூடும் கூட்டத்தை முதற் சந்தியென்றும், இரண்டாங்கண்டத் தீற்று நுகர்வும் மூன்றாங் கண்டத்து முதனின்ற வேட்கையும் கூடும் கூட்டம் இரண்டாஞ் சந்நியென்றும், மூன்றங் கண்டத் தீற்றுப் பவமும் நான்காங் கண்டத்து முதனின்ற தோற்றமும் கூடும் கூட்டம் மூன்றாஞ் சந்தியெனவும் கூறப்படும்; இவற்றின் இயல்பை. "பிறப்பின் முதலுணர்வாதிச் சந்தி" என்பது முதலியவற்றால் விளங்கக் கூறுப. இந்நிதானம் இயலும் என்பது வருவிக்கப்பட்டது. 27-28. பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்; தோற்றற்கேற்ற காலம் மூன்றுடைத்தாய் - அம்மூவகைப் பிறப்பும் தோன்றுதற் கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும் எ - று. பிறப்பு மூன்றாவன; அருவம், உருவம், காமம் என்பன. காலம் மூன்று; இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்பன, இவற்றை, "மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை" (30,158) என்பது முதலிய வற்றாலும் "கால மூன்றுங் கருதுங் காலை" (30-159) என்பது முதலியவற்றாலும் விளக்கிக் கூறுப. 29-31. குற்றமும்-வேட்கையும் பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும்; வினையும்-பவமும் செய்கையுமாகிய வினை களும்; பயனும்- இவை யொழிந்த ஏழுமாகிய பயனுமாக; விளைந்து-இப்பன்னிரண்டும் நிலவுதலால்; நிலையில நிலையில்லாதனவென்றும்; வறிய - பயனில்லாதனவென்றும்; துன்பம் என - துன்பமென்றும்; நோக்க- இவற்றைக் கண்டு கழிக்கவே; உலையா வீட்டிற்குறுதியாகி-கெடாத வீடுபேற்றிற்கு உறுதியாகிய நன்ஞானமுண்டாம் எ-று. பேதைமை முதலிய பன்னிரண்டனுள், வேட்கையும், பற்றும், பேதைமையும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினை யென்றும், உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, பிறப்பு, வினைப்பயனாகிய ஏழும் பயனென்றும் வகுத்தோதி, இவற்றை "நிலையில வறிய" என நோக்கி யொழிதலால் வீடுபேற்றிற் குறுதியுண்டா மென்பார், "உலையா வீட்டிற் குறுதியாகி" யென்றார். பிறாண்டும், "துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா, எப்பொருளுக்கு மான்மா விலையென இப்படி யுணரும் இவை வீட்டியல்பாம்" என்று கூறுதல் காண்க. 32-34. நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி-நான்கு வகை யாகிய வாய்மைகட்கும் சார்பிடனாகியும்; ஐந்து வகைக் கந்தத்து அமைதியாகி - ஐவகைக் கந்தங்களுக்கும் அமைவுடைய தாயும்; மெய்வகை ஆறு வழக்கு முகம் எய்தி - மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம் நிலவும் எ-று. வாய்மை நான்காவன: துக்கம், துக்க நீக்கம் துக்கத் தோற்றம், துக்க நீக்க நெறியென்பன. ஐவகைக் கந்தமாவன; உருவம், வேதனை, குறிப்பு, பாவனை விஞ்ஞான மென்பன. வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த வுண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த வுண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப. 35-36. நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங் களாலும் நால்வகைப் பான்களை உற்று; இயன்ற-இவற்றோடு ஒப்பிவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய்-நான்கு வகையான வினாவிடையுமுடைாயதாய் இந்நிதானம் இயலும் எ-று. நயங்கள் நான்காவன: ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்பன. பயன் நான்கினையும் "தொக்க பொருளல தொன்றில்லை யென்றும், அப்பொருளிடைப் பற்றாகா தென்றும், செய்வானோடு கோட்பாடில்லை யென்றும். எய்து காரணத்தாங் காரியம் என்று மதுவு மன்று அலாதது மன்றென்றும், விதிமுறை தொகையினால் விரிந்த" (30-229-34) என்று கூறுதலாலறிக. வினாவிடை நான்காவன; "வினாவிடை நான்குள, துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமையென" (30. 285--37) என வருதல் காண்க. 37-44. நின்மிதி இன்றி - நிருமிக்கப்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடு வதில்லையாய்; பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்; யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதென்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும் இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி - பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும் பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந் நிதானங்கள் எ-று. நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மிதியின்றி" யென்பது முதலாக விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய" என்றார் ஒன்றின்வழி யொன்று தொடர்ந் தொடுங்குதலும் மீளத் தோன்றுதலு முண்டேயன்றி யறக் கெடுவதில்லை யென்றற்கு, "ஊழ்பாடின்றி" என்றதனோ டொழியாது "பின் போக்கல்லது பொன்றக் கெடாதாய்" என்றார். இவை எப்போதும் செய்வோனை யவாவி நிற்குமென்பது தோன்ற, "பண்ணுநரின்றிப் பண்ணப்படாதாய்" என்றும், செய்வோர் செய்திப் பயன் கண்டு "யான் செய்தேன்" என்றும், "இஃது எனது" என்றும், எண்ணுதற் கேதுவாவதல்லது, அவை தாமே யல்ல என்றற்கு, "யானுமின்றி என்னதுமின்றி" யென்றும், இவ்வாறே பிறவும் கூறினார். இங்ஙனம் எதிர்மறை முகத்தாற் கூறியவர், உடன்பாட்டு வாய்பாட்டால் வற்புறுத்தற்கு இவை "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய" என்றார், இவ்வளவும் நிதானத்தின் பொதுவியல்பே கூறிற்றென வறிக. திருவாய் மொழிந்தது; நெறியுடைத்தாய். கண்ட நான்குடைத்தாய், மூன்றுடைத்தாய், மூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, அமைதியாகி, முகமெய்தி, பயன்களெய்தி, உடைத்தாய் கெடாதாய் பண்ணப்படாதாய், இன்றி , இன்றி இன்றி, தானேயாகிய 'பேதைமை, முதலியனவெனக் கூட்டி முடிவு செய்க. இக்கூறிய கருத்தையே மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச்சுனர்1 எட்டு வகையாகக் கூறுகின்றார். 45-50. பேதைமை...ஈராறும் - பேதையையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின் இயல்பு பன்னிரண்டினையும்; பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள் ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய வீடுபேற்றினை எய்துவர்; அறியாராயின் - அறியா தொழிவாராயின்; ஆழ்நாரகறிகுவர் - கரையேற முடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தாம் அறிவர் எ-று. பேதைமை முதலாகக் கூறிய இப்பன்னிரண்டினையும் ஏனைப் புத்த நூல்கள் முறையே, அவிச்சை சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதானம், பரிசம், வேதனை திருஷ்ணை, உபாதானம், பவம் சாதி என்று கூறுகின்றன. இவ்வாசிரியர் வாயில் என்றதனை ஏனையோர் சடாயதனம் என்றற்குக் காரணம், பொறியைந் தனோடு மனத்தையும் கூட்டிக் கோடலேயாகும். இவர் சடாயதன மென்பதை விலக்கிப் பஞ்சேந்திரியங்களையே கோடலின், இவ்வாறு கூறும் தசபூமிக சூத்திர முடையாரோடு இவர் ஒத்த கருத்துடையரென்று காணலாம்; ஆயினும் அவர் வேட்கையை அபிநந்தனை யென்றும், தோற்றத்தைப் பஞ்சஸ்கந்த மென்றும் கூறுதலின், அவரோடு அவர் முழுவதும் ஒவ்வாமை யறிந்துகொள்க. சில நூல்கள் அவிச்சையிற் றொடங்காது, வினைப்பயன் முதலாகத் தொடங்கிப் பேதைமை யீறாகக் கூறுகின்றன. இப் பன்னிரண்டனையும் பகுத்தாராய்ந்தறிதலால் விளையும் பயன் இது வென்பார், "பிறந்தோ ரறியின் பெரும்பே றறிகுவ, ரறியா ராயி னாழ் நர கறிகுவர்" என்றார். பெரும்பேறு - வீடுபேறு; அதனிற் பெரியது வேறில்லை யாதலின். தசபூமிக சூத்திர முடையா (சூ; 48) ரும் இவ்வாறே கூறுகின்றார். 51-54. பேதைமை யென்பது யாதென வினவின் - பேதைமை யெனச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால்; ஓதிய இவற்றை உணராது-நால்வகையாகக் கூறிய வாய்மை களையும் நிதானங்களையும் உணர்ந்து கொள்ளாமல்; மயங்கி - மயக்கமுற்று; இயற்படு பொருளால் கண்டது மறந்து-காட்சியாலும் கருத்தளவையாலும் அறிந்தவற்றை மறந்து; முயற்கோடு உண்டெனக் கேட்டு அது தெளிதல் - முயற்குக் கொம்பு உண்டோ இல்லையோ என்பதைப் பிறரைக் கேட்டு உண்டெனின் உண்டெனத் தெளிவதாம் எ-று. வாய்மைகளையும் அவற்றை விளக்கும் இயல்புடைய நிதானங்களையும் "இவற்றை" யெனக் குறித்தார். காட்சி கருத்து என்ற இரு வகையளவையாலும் அறியும் பொருள்களை "இயற்படுபொருள்" என்றார். பௌத்தர் காட்சியுங் கருத்து மல்லாத பிறவளவைகள் தூய்மை யுடையவல்ல வென்ப வாகலின், கேள்விக்குரிய "கேட்டது தெளிதல்" பேதைமை எனப்படுவ தாயிற்று. இனி, தம்மசங்கணி யென்னும் நூல் பேதைமையாவது நால்வகை வாய்மைகளையு மறியாமை (1100, 1102), என்று கூறுகிறது. இவ்வாறே, "பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுடனாய்க், காமுற்றா மதன் பயத்தினிற் காமனைக் கடந்து, நாம ரூஉம்புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும். வாமன் வாய்மையை மறந்திட்டு மறைந்தொழி கின்றாம்" (வீர. யாப். 5 மேற்) என்று பிறரும் கூறுதல் காண்க. திக்க நிகாயத்தின் பகுதியாகிய மகா நியாய சுத்தித்திற் காணப்படும் நிதானங்களுள் இப்பேதைமை காணப்படாமையின், ஒருகால் இது வைதிக சமய நூல்களிலிருந்து மேற்கொண்ட தாகலா மென்றும், திபேத்தி லுள்ள கோயில்களில் இப்பேதைமையாகிய நிதானம், குருடனாக வுருவு கொடுத்தோவிய மெழுதப்பட்டுள தென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. 55-63. உலகம் மூன்றினும் - மூவகையுலகங்களிலும்; உயிராம். உலகம் அலகில - உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாம்; பல் உயிர் - பலவாகிய உயிர்கள்; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் - மக்கள் தேவர் பிரமர் நரகர் என்றும்; தொக்க விலங்கும்பேயும் என்று-புட்களோடு தொக்கிருக்கும் விலங்கும் பேயும் என் றும்; அறுவகைத்தாம்-அறுவகைப்படும்; நல்வினை தீவினை என்று இருவகையால் - நற்செய்கையும் தீச்செய்கையு மாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்-மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை யடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி - அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோற்றி; வினைப்பயன் விளையுங்காலை-செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில்; மனப் பேரின்பமும் - மனத்தின் கண் பெரிய இன்பத்தையும்; கவலையும் - துன்பத்தையும்: காட்டும் - காட்டுவதும் செய்யும் எ - று. உலகம் பாவம் புண்ணியம் என இருவகைப்படுமென்றும், புண்ணிய வுலகம் தேவவுலகம் உருவப்பிரமவுலகம் அருவப்பிரமவுலகமென மூவகையாக நிலவுமென்றும், இவை பொதுவில் முப்பத்தொன்றா மென்றும் கூறுப வாயினும், வினை செய்தற் குரியது நடுவுலக மெனவும், நல்வினைப் பயன் நுகர்தற் குரியது மேலுலக மெனவும், தீவினைப் பயனை நுகர்தற்குரியது கீழுலக மெனவும் முக்கூறுபடுவதுபற்றி, "உலக மூன்றினும்" என்றார். இது தமிழகத்து வழக்குப்போலும். பண்டைத் தமிழ்ப் புத்தநூல்கள் உலக மூன்றென்றே கொண்டுள்ளன வென்பதை, "இவ் வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருணீங்க, எவ்வுலகுந் தொழு தேத்த வெழுந்த செழுஞ்சுடர்" (வீர. யாப். 11. மேற்.) என வரும் பழம் பாட்டாலு மறியலாம். நரகர், பேய், விலங்கு முதலிய வற்றிற்குரிய வுலகினும் கீழுலகத்தவ ராயினும், அசுரருமகப்பட உயர்திணையாற் கூறப்படும் இயைபு பற்றி, மக்கள் முதலாயினரொடு கூட்டி "மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்" என்றார். புள் முதலிய பிற வுயிர்களுமடங்க, "தொக்க விலங்கு" என்றார். பெரும்பான்மையான நூல்கள் பிரமரைத் தேவருள் அடக்கி, மக்களும் தேவரும் நரகரும் விலங்கும் பேயுமென உயிர்வகை யைந்தென்றே கூறுகின்றன. வேறு சில நூல்கள் இவ்வைந்தனோடு அசுரரைக் கூட்டி உயிர்வகை யாறென்றும் கூறும் இவ்வாசிரியர் அவ்வசுரரை நரகரோடு அடக்கிக் கொள்கின்றாரென வறிக. ஒரு பிறப்பிற் செய்தவினை மறு பிறப்பிற் கருவிலேயே தோன்றித் தன்பயனை நுகர்விக்குங் காலமெய்துங்காறும் அமைந்திருந்து, வந்ததும் தவறாது நுகர் விப்பதுபற்றி, "கருவிற்பட்ட பொழுதினுட்டோற்றி" என்றும், "வினைப்பயன் விளையுங் காலை உயிர் கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்" என்றும் கூறினார். நல்வினைப்பயன் இன்பமும் தீவினைப்பயன் கவலையு மாதலின், இரண்டும் கூறப்பட்டன. சார்தலும் என்றதற்கேற்பக் காட்டும் என்பது காட்டுதல் செய்யும் எனப் பொருளுரைக்கப்பட்டது. இது சொற் பொருள் விரித்தல். 64-75. ஆய்தொடி நங்காய் - அழகிய வளையணிந்த நங்கையே; தீவினை யென்பது யாதென வினவின்-தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; அதுகேளாய்-யான் சொல்லு மதனைக் கேட்பாயாக ; கொலையே களவே காமத் தீ விழைவு - கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய; உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும் - கெடாத வுடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும்; பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என-பொய்யுரையும் புறங்கூறலும் கடுஞ்சொற் சொல்லுதலும் பயனில்சொல் சொல்லுதலும் என்று; சொல்லில் தோன்றுவ நான்கும் - வாக்கினிடத்தே யுண்டாகும் தீவினைகள் நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி யென்று - பிறர் பொருளை வௌவக் *கருதலும் வெகுளுதலும் குற்றம்பட வுணர்தலு மென்று; உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என - மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றுமென; பத்துவகையால் - பத்துவகைப்படுதலால்; பயன்தெரி புலவர்-வினைவகையும் அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இப் பத்தினையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினையார்; படர்குவராயின் - நினைவராயின் ; விலங்கும் பேயும் நரகருமாகி - விலங்கும் பேயும் நரகருமாகிய கதிகளுட் பிறந்து ; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப வுடம்புற்று வருந்துவர் எ - று. எனவே, தீவினை, மெய் வாய் மனம் என்ற மூன்றாலும் செய்யப்படு மென்றும், அவ்வகையால் மெய்யில் மூன்றும் வாயில் நான்கும் மனத்தில் மூன்றுமாக வினை பத்தாமென்றும், இவற்றைச் செய்தோர் விலங்கும் பேயும் நரகருமாய்ப் பிறந்து துன்புறுவரென்றும் கூறியவாறாம். பிறரும், "மருடறா மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத் தாமே" (நீலகே. மேற்.) என்பர். ஆங்க என்பது அசை நிலை. பொதுவாகத் துறவிகளாற் பெரிதும் விலக்கப்பட்டது காமமெனினும், புத்த துறவிகள் ஏனை யெல்லாரினும் விஞ்சினவராவர்; லளிதா விஸ்தரம் என்ற நூல் (பக்: 206) இக் காமத்தின் தீமையை முப்பத்து மூன்று உவமைகளால் விரித்துக் கூறுவதை நோக்கின், "காமத் தீவிழை" வென இவர் கூறுவது பொருத்தமாகவே யுளது. தான் உள்ளளவும் கொலை முதலிய குற்றங்கட் கேதுவாதல் பற்றி, "உலையாவுடம்பு" என்றார். உலைதல் - ஈண்டுக் குற்றத்தின் தொடர்பு கெடுதல். குறளை - கோட் சொல்லுதலுமாம். கடுஞ்சொல் - இன்னாச்சொல். "சொல்லுக சொல்லிற் பயனுடைய" (குறள்.200) என்றமையின், பயனில் சொல் சொல்லுதல் தீவினையாயிற்று. நற்காட்சியின் மறுதலை யாதலின் "பொல்லாக் காட்சி" யென்றார். மனம் சிறிது மறப்பினும், அதற்கிடனாகும் உடம்பின் துன்பநிலை மறவாது கலங்கி யலையச் செய்யுமாறு தோன்ற, "கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்" என்றார். எனவே, கலக்கமும் கவலையுமே உள்ளத்திருப்பனவாம் என்றவாறயிற்று. வினையைச் சமஸ் காரம் என்று வழங்கும் க்ஷேமேந்திரரும், இது மன மொழி மெய்களால் தோன்றுவதென்றே தமது போதிசத்துவ அவதானகற்பம் என்ற நூலிற் கூறியுள்ளார். வினையுண்மை கொள்ளும் ஏனைச் சமயத்த வரும் இதனை யுடன்பட்டுரைப்பர். சிலர் இம் மூன்றுடன் அறிவென ஒன்றைக் கூட்டி, நான்காக வுரைத்தலு முண்டு. 76-81. நல்வினை யென்பது யாதென வினவின்-நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி - முன்பு சொல்லப் பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி; சீலம் தாங்கி - சீலத்தை மேற்கொண்டு; தானம் தலைநின்று - தானங்கள் பலவற்றையும் செய்து; மேலென வகுத்த ஒரு மூன்று திறத்து - மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப்பட்ட மூன்றாகிய; மக்களும் தேவரும் பிரமருமாகி-மக்களென்றும் தேவரென்றும் பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து; மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் - தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர் எ - று. சொல்லிய பத்துமாவன : "உடம்பிற் றோன்றுவ மூன்றும்," "சொல்லிற் றோன்றுவ நான்கும்,; "உள்ளந்தன்னில் உருப்பன மூன்றுமெனப் பத்து வகை" என அறிக. இப்பத்தினின்றும் நீங்கும் நீக்கத்தைச் சாதித்துக் கொடுக்கும் பாரமிதை பத்தினுள் முதற்கண் வேண்டுவன தானமும் சீலமு மாதலின், இவற்றைச் "சீலந் தாங்கித் தானம் தலைநின்று" எனச் செயன்மேல் வைத்துக் கூறினார். எல்லா வுயிர்க்கும் பொதுவாகக் கூறுதலின், மக்கட் கதியினையும் "மேலென வகுத்த" கதி யென்றார். நல்வினையின் பயன் மகிழ்ச்சி யாதலின், "மகிழ்ச்சி" யெனப்பட்டது. 82-83. உணர்வெனப்படுவது - உணர்வு என்று சொல்லப்படும் நிதானமாவது; உறங்குவோர் உணர்வின் - கண்ணுறங்கு மொரு வர்பாலுள்ள வுணர்வுபோல; புரிவு இன்றாகி - விளக்கமின்றி; புலன் கொளாது - செய்கையின்றி யுண்மை மாத்திரையாய் இருப்பது எ - று. உறங்குவோர்பாலுள்ள வுணர்வு, செய்கைக்கு வினைமுதலாதலும் செய்வினைப் பயனை நுகர்வதாதலும் பிறவுமின்றி உண்மை மாத்திரை யாய் இருப்பது கண்கூடாதலின், அதனை யெடுத்துக் காட்டி விளக்கினார். புலன் கொளல் - இந்திரியங்களாலும் மனத்தாலும்பொருண்மை கண்டு பயன் நுகர்தல். க்ஷேமேந் திரரும் (ii. 599) இவ்வாறே கூறுவர். இவ்வுணர்வை விஞ்ஞான மென்பதே பெரு வழக்கு. இதற்கு மாறாய்ப் புரிவுடைத்தாய்ப் புலன்கொள நிற்கும் உணர்வுநிலை சடாயதன மென்றும், வாயிலென்றும் வழங்கப்படுவது பற்றி, சில பௌத்த நூல்கள் உணர்வையும் வாயிலையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறுதலும் ஆராய்தலும் செய்கின்றன. இனி, அஜந்தாக்குகை யோவியத்தில், ஒரு வாலில்லாக் குரங்கு மரமேறுவது போலக் காணப்படுவது இந்த நிதானத்தைக் குறிப்பதா மெனக் கூறுப. 84-85. அருவுரு என்பது - அருவுரு வெனப்படும் நிதானமாவது; அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப - அவ்வுணர் வொடு கூடிய உயிரும் உடம்புமாகும் என்று புலவர் சொல்லுவர் எ - று. உயிர் அருவமாயும் உடம்பு உருவமாயு மிருத்தலின் இரண்டையும் சேர வைத்து அருவுரு வென்றனர். வட நூல்கள் இதனை நாம ரூப மென்றும், நாமத்தின்கண் காட்சி கருத்து, உணர்வு, செய்கை முதலியன அடங்குமென்றும், ரூபத்தின்கண் நில முதலிய நான்கு பூதங்களின் கூட்டமாகிய உடம்படங்கு மென்றும் கூறுப. திபேத்திற் காணப்படும் ஓவியங்களும், இஃது ஓராற்றைக் கடக்கும் படகு போல வரையப்பட்டுள தென்பர். சாந்தோக்கியம், பிரகதாரணிய முதலிய வுபநிடதங்களிலிருந்தே இந்நிதானம் பௌத்தர்களால் மேற்கொள்ளப் பட்டதாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சொல்லுதற்கேற்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. 86-87. ஆயுங்காலை - ஆராயுமிடத்து; வாயில் ஆறும்-இந்திரிய மைந்தும் மனமும் ஆகிய வாயில்களாறும்; உள்ளம் உறுவிக்க-உள்ளத் தின்கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு; உறும் இட னாகு மென்ப-உரிய இடமாகுமென்று புலவர் கூறுவர் எ - று. வாயில்களாறாவன : மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என் பனவாம். இவ்வாறினாலும் உணரப்படும் பொருள்களும் அறுவகையாதலின், மெய் முதலியவற்றை அகவாயிலென்றும், மெய்யாலறியப்படும் பொருள் வாயா லறியப்படும் பொருள் முதலியவற்றைப் புறவாயி லென்றும் பகுத்தோதுதலு முண்மையின், "ஆயுங்காலை" யென்றார். வாயிலை வடநூலார் ஆயதனம் என்பவாகலின், இது சடாயதனமென வட நூல்களுட் கூறப்படுகிறது. வாயில், "பொறிவாயி லைந்தவித் தான்" குறள் -6.) என்புழிப்போல நின்றது. இது மனிதெனாருவன் தலைபோலவும், ஆறு சாளரமுள்ள வீடுபோலவும் ஓவிய மெழுதப்பட்டுளது. "மனதில் இல்லை, மனதில் உளது" என்ற வழக்குரையே பொருளுணர்வுக்கு மனம் இடமாதலை வற்புறுத்துதலின், அதனை விதந் தோதாராயினார் என வறிக. 88-89. ஊறென வுரைப்பது - ஊறு எனக் கூறப்படும் நிதான மாவது; உள்ளமும் வாயிலும் - மனமும் இந்திரியங்களும்: வேறு புலன்களை மேவுதல் என்ப - தம்மின் புறமாகிய பொருள்களைப் பொருந்துவதென்று புலவர் கூறுவர் எ - று. இதனை வடநூலார் பரிசம் என்பர். இச் சொல்லிரண்டும் மெய்யாகிய இந்திரியமே யன்றிக் கண் முதலியனவும் மனமும் பொருளை யுணர்தற்குளதாகும் இயைபினை யுணர்த்தும் பொதுச்சொற்களாமெனக் கொள்க. கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்குமுள தாகும் இயைபும் ஊறெனப்படு மென்பதாம். பொறிகளில், "கோளில் பொறி"யு (குறள் 8.) முளவாதலின், கோடற்குரிய புலன்களை, "வேறு புலன்கள்" என்றும், மெய் முதலிய வாயில்களாற் கொண்டவற்றைத் தன் கண் மேவக் கொள்ளுதலும் தள்ளுதலும் செய்யும் செய்கை வேறுபாடு பற்றி, உள்ளத்தைப் பிரித்து, "உள்ளமும் வாயிலும்" என்றும் கூறினார். புலன் என்றது, புறவாயில்களாகிய பொருள்களை யென்க. மெய் முதலியவற்றால் உணரப்படும் புறப்பொருள்கள் புலன்களில் அடங்கிப் பொறி வாயிலாக உள்ளத்துச் சென்று பொருந்து மாறுபற்றிப் "புலன்கள்" விதந்தோதப்பட்டனவென வறிக. இவ்'d2வூற்றினை நையாயிகர் சந்நிகர்ஷம் என்பர்; வைசேடிகர் சம்பந்தமென்று கொண்டு, சையோகம், சையுக்த சமவாயம், சையுக்த சமவேத சமவாயம், சமவாயம், சமவேத சமவாயம், விசேடண விசேடியமென ஆறாகப் பகுத்துக் கூறுப. மற்று, பௌத்தர் நிதானவகையுள் வைத்து நையாயிகர் முதலியோர் கூறியவற்றுள் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை மேற்கொண்டும் கூறுப. நையாயிகர் கூறும் இந்திரியம், பொருள், சந்நிகர்ஷம், ஞானம் என்ற நான்கனுள், இந்திரியமும் பொருளும் வாயிலின் கண்ணும், சந்நிகர்ஷம் ஊற்றின் கண்ணும், ஞானம் பிறவற்றின்கண்ணும் அடங்குமா றறிக. இந் நிதானம் கண்ணில் அம்பு தைப்புண்டிருக்கும் ஒருவன்போல ஓவியஞ் செய்யப்படு கிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 90-92. நுகர்வே - நுகர்ச்சி யெனப்படும் நிதானமாவது; புலன் களை யுணர்வு நுகர்தல்-புலன்களாகிய பொருளை யுணர்ந்து அவற்றின் பயனை யடைதல்; வேட்கை - வேட்கை யென்னும் நிதானமாவது; விரும்பி நுகர்ச்சி யாராமை - அப் பயனை விரும்பி நுகர்ந்தவழி அதன்மேற் செல்லும் ஆசையடங் காமையாம்; பற்று எனப்படுவது- பற்றெனப்படும் நிதான மாவது; பசைஇய அறிவு - அடங்கா தெழுந்த ஆசையால் அதனையேபற்றி நிற்பதாம் எ - று. நுகர்வினை வேதனை யென்றும், வேட்கையைத் திருஷ்ணை யென்றும், பற்றினை உபாதானமென்றும் வடநூல்கள் கூறு கின்றன. போதி மூலத்து நாதனாவோர்க்கு இன்றியமையாத நால்வகைச் சுமிருதி யுபத் தானங்கட்கும் இந்நுகர்வு அடிப்படை யென்பர். அந்நான்கும் காயம் வேதனை சித்தம் தன்மம் என வரும். இது காதலிருவர் தம்மிற் றழீஇ யிருப்பது போல ஓவியஞ் செய்யப்படுகிறது. வேட்கை, ஐம்புல நுகர்ச்சி வேட்கை, பிறப்பு வேட்கை, பிறவாமை வேட்கை யென முக்கூறுபடும். நிலையாத வற்றை நிலையுடையவாகக் கருதி விருப்பஞ் செய்தற்கு இதுவே முதல். வேட்கையைத் தாயாகவும், பேதைமையைத் தந்தை யாகவும் உலகியற் றுன்பவாழ்க்கையை அவ்விரண்டின் கான் முளையாகவும் இலங்காவதார சூத்திரமென்னும் நூல் உருவகஞ் செய் துரைக்கின்றது. மாரனென்னும் தேவனுக்கு இவ்வேட்கையை மகனென்பர். இதனைக் கள்ளருந்துமொருவனாக உருவகஞ் செய்து ஓவிய மெழுதியுள்ளனர். பிறப் பிறப்புக்கட்கு முதற்காரணமென்பது பற்றி, பற்றினை உபதானமென்று கூறுகின்றனர். இது, விடயம், புகழ், சம்பிரதாயம், ஆன்மா என நான்கு வகையாள் இயலும் என்பர். விடயமாவது, இந்திரயங்களால் உண்டாகும் இன்பத்திற்கு பற்றுச் செய்வது; புகழாவது, பிறர் புகழ்வதை விரும்பியும் இகழ்வதை யஞ்சியும் பற்றுச் செய்வது; சம்பிரதாயமாவது, வேள்வி செய்தல் முதலிய சடங்குகளிலும், விரத நோன்புகளிலும் பற்றுச் செய்தல்; ஆன்மா, ஆன்மா வுண்டென நினைந்து அதன்மேற் பற்றுச் செய்வது, ஒருவன் பல்வகைப் பூக்களைப் பறித்துத் தொகுப்பது போல இதனை யுருவகப் படுத்தி ஓவியந் தீட்டியுள்ளனர். 93-94. பவம் எனப்படுவது - பவமென்று சொல்லப்படும் நிதானமாவது ; கரும ஈட்டம் - கருமங்களின் தொகுதி; தரும் முறை இது என - தன் பயனை விளைத்துக் கொடுக்கும் முறைமை யிதுவாகு மென்று கருதி; தாம்தாம் சார்தல் - கருமத்தைச் செய்தோர் அப் பயனையுடன்பட்டு என்று கொண்டமைவதாம் எ - று. உடன்பட்டு என்று கொண்டமைவதாவது,1 'நன்றாங்கால் நல்லவாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற்' படாது அதன் விளைவாய துன்பத்தையும் நுகர்தற்குச் சமைந்தவுள்ள முடையனாதல். இதற்குப் பலரும் பலவாறாகக் கூறுகின்றனர். க்ஷேமேந்திரர் பவமாவது உருவு கோடலென்று கொண்டு, அது காமம், ரூபம், அரூபமென மூவகைப் படுமென்பர். ஒல்டன்பர்க் கென்பார், பிறப் பிறப்புக்களின் இடைய றாமை யென்பர். வடநாட்டுப் பௌத்தர்கள், பவத்தைத் திருமணம் போலவும் தோற்றத்தை மகப்பேறு போலவும் கொள்கின்றனர். இவர் கருத்தை யுணராது பலரும் பலவாறு கூறி இடர்ப்படும் திறத்தை ஹார்தயாள் என்பார் 2தாமெழுதிய ஆராய்ச்சி நூலில் விரியக் கூறுமாற்றா லறிக. முன்னைப் பிறப்புக்களிற் செய்த பற்றுக் காரணமாக வரும் பிறப்புக்கிடையே, பற்றுக் காரணமாக விளைந்த கருமத்தொகுதியில் வரக் கடவ நன்மை தீமைகட்கு இப்பவ மென்னும் நிதானம், இடமும் காலமுமா யமைவ தென்பது பௌத்தநூல்களின் துணிபென வறிக. திபேத்தியர் இதனை ஒரு மணமகளாக வுருவங் கற்பிக்கின்றனர். 95-97. பிறப்பெனப்படுவது-பிறப்பென்னும் நிதானமவது; கருமப் பெற்றியின் - செய்த வினைகளின் தன்மைக் கேற்ப; உறப்புணர் உள்ளம் - ஏனையவற்றோடு மிகவும் சேர்ந் திருக்கும் விஞ்ஞான மானது; சார்பொடு - முன்னும் பின்னு மாய்ச் சாரும் நிதானங்களுடன்; கதிகளில் - பலவகைப் பிறப்புக் களிலும்; காரண காரியவுருக்களில் தோன்றல் - காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுவதாம் எ - று. செய்யப்படும் வினைக்கேற்பப் பிறப்பெய்துதலால் "கருமப் பெற்றியின்: என்றும், உருவம், வேதனை, சஞ்ஞை, சமஸ்காரம் என்ற நான்கு கந்தங்களுடன் பிரிப்பறச் சேர்ந்திருக்கும் இயல்பு பற்றி, விஞ்ஞான கந்தத்தை, "உறப்புணர் உள்ளம்" என்றும், நிதானங்கள் தாமும் ஒன்றை யொன்று சார்வாகக்கொண்டு தோன்றுதலின், "சார் பொடு" என்றும், உருவுடைய உடம்பும், முன்னைய வுடம்புகளின் காரியமாயும், வரும் உடம்புகட்குக் காரணமாயும் இயைதலின், "காரண காரிய வுருக்க"ளென்றும் கூறினார். காரண காரியமாய் இயையும் உடம்பெல்லாம் ஐவகைக் கந்தங்களின் கூட்டமென்பது பௌத்த நூற் றுணிபாதலின் உறப்புணர் உள்ளம் சார்வோடு கதிகளில் உருக்களில் தோன்றல் என்றாற் போலவே, ஐங்கந்தங்களின் தோற்றமே பிறப்பெனப்படும் நிதானமாம் என்று தசபூமிக சூத்திரமுடையார் கூறுகின்றார். கருமப் பெற்றியின் சார்பொடு கதிகளில் தோன்றல் என்ற கருத்தையே வேறு வாய்பாட்டால், பல்வகைப் பிறப்பின் சுழற்சித் தோற்றம் பிறப்பென்பதென்று க்ஷேமேந்திரர் கூறுகின்றார். இப் பிறப்பினை வடநூல்கள் சாதியென்று வழங்குகின்றன. திபேத்தி லுள்ள ஓவியங்கள் இதனை மணஞ் செய்துகொண்டதன் விளை வாக மகற்பெற்ற மனிதனொருவன்போல் உருவந்தீட்டிக் காட்டுகின்றன. 98-103. பிணியெனப்படுவது - நோய் என்று சொல்லப்படுவது; பிறிது சார்பாய் - பேதைமை முதலாகக் கூறியவற்றின் வேறாய சார்பாய், உடம்பு இயற்கையின் திரிந்து-உடம்பின் தன்மையின் வேறுபட்டு; இடும்பை புரிதல் - அதற்குத் துன்பத்தை யுண்டு பண்ணுவதாம்; மூப்பென மொழிவது-மூப்பென்று சொல்லப்படுவது; அந்தத்து அளவும் - சாகும் வரையில்; தாக்கும் நிலையாமையின் - வந்து மோதுகின்ற நிலையாமையால்; தளர்ந்திடுதல்-உடம்பு தளர்ச்சி யெய்து வதாம்; சாக்காடென்பது-இறத்தலென்று சொல்லப்படுவது; அருவுருத்தன்மை யாக்கை-அருவாதலும் உருவாதலு மாகிய தன்மையினையுடைய வுடம்பானது; வீழ்கதிரென மறைந் திடுதல்-மேலைக் கடலில் விழும் ஞாயிறுபோல மறைவதாம் எ - று. பிணியும் மூப்பும் சாக்காடுமென இவர் கூறினாராக வடநூலார் பலரும் திரையும் மரணமுமென்ற இரண்டையே கூறுவர் ; சிலர் பிணியைக் கூட்டித் திரையும் பிணியும் மரணமும் என்பர். சிலர் இவற்றோடு அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் பிறவும் கூட்டிக் கூறுவர். இப் பிணி முதலியன தோற்றம் சார்வாகத் தோன்றுவனவாயினும் தம்முள் ஒன்றற்கொன்று சார்வா காமையின், "சார்பிறிதாய்" என்றார் ; இதனைப் பிறிது சார்பாய் என மாறிக்கொள்க. உடம்பின் இயல்பான தன்மையில் உளதாகும் திரிபே நோய் என்பார். "இயற்கையின் திரிந்து" என்றும், இதனால் விளையும் பயன் இதுவென்பார், "இடும்பை பிரிதல்" என்றும் கூறினார். அந்தம் - சாக்காடு. கணந்தோறும் நிலையாமை யெய்துதலின், "தாக்கும் நிலையாமை"யென்றும், அதன் தாக்குதற் காற்றாது உடம்பு தளர்ச்சியடைகிறதென்பார், "தாக்கும் நிலையாமை யிற்றாந் தளர்ந்திடுதல்" என்றும் குறிப்பித்தார். உருவ வகையால் காயமென்றும், அருவவகையில் தன்மம், சித்தம், வேதனை என்றும் உடம்பானது போதி சத்துவரால் உணரப்படுவது பற்றி "அருவுருத் தன்மை யாக்கை" என்றார். உடம்பு, புறவுடம்பு, அகவுடம்பு, அகப்புற வுடம்பு எனக் காணப்படும் வழக்கும் புத்தர்களிடையே யுண்டு, "இளங் கதிர் ஞாயி றெள்ளுந் தோற்ற" த்தோடு விளங்கும் உடம்பு, இறக்குங்கால் அதன் வீழ்ச்சி போறலின், "வீழ் கதிரென மறைந்திடுதல்" என்றார். திபேத்தியர்களால் இங்கே கூறிய பிணி மூப்பு முதலியன சுடலைக்குக் கொண்டுபோகப்படும் பிணம் போல உருவமெழுதப்பட்டுள்ளன. 104-117. பேதைமை சார்வாச் செய்கை யாகும் - பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய நிதானம் தோன்றும்; செயற்கை சார்வா உணர்ச்சியாகும்-அச் செய்கையைச் சார்பாகக் கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ; உணர்ச்சி சார்வா அருவுருவாகும் - அவ்வுணர்ச்சியைச் சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்; அருவுரு சார்வா வாயிலாகும் - அவ்வருவுருவைச் சார்பாகக் கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்; வாயில் சார்வா ஊறாகும்மே-அவ்வாயிலைச் சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்; ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் - அவ்'d2வூற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சி யாகிய நிதானம் தோன்றும்; நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் - அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும்; பற்றின் கருமத் தொகுதி தோன்றும் - அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயன் தோன்றும்; கருமத் தொகுதி காரணமாக - வினைப்பயனைக் காரணமாகக் கொண்டு ; ஏனை வழி முறைத் தோற்றம் வரும்-ஏனைப் பவமும் தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்; தோற்றம் சார்பின்-அத்தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு; பிணி மூப்பு சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவலில் துன்பம் தலை வரும்-நோயும் முதுமையும் இறப்பும் அவலமும் அழுகையும் கவலையும் செயலறுதியுமென்ற கெடாத துன்பமாகிய நிதானம் தோன்றும்; என்ப-என்று நிதான வியல்பறிந்த புலவர் கூறுவர் எ - று. நிதானமென்னும் சொற்குத் தொடர்ச்சியுறக் கட்டுத லென்பது பொருளாதலின், அவ்வியைபுதோன்றச் "சார்வா" என்றும், "சார்ந்து" என்றும் கூறினார். பௌத்தர்களின் வட நூல்களிலும் இந்நிதானம் பன்னிரண்டின் தோற்றமுறை ஈண்டுக் கூறப்பட்டது போலவே, "அவிச்சையைக் காரணமாகக் கொண்டு சம்ஸ்காரமும், சம்ஸ்காரத்தைக் காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும், விஞ்ஞானத்தைக் காரணமாகக் கொண்டு நாமரூபமும், நாமரூபத்தைக் காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாயதனத்தைக் காரணமாகக் கொண்டு பரிசமும், பரிசத்தைக் காரணமாகக் கொண்டு வேதனையும், வேதனையைக் காரணமாகக் கொண்டு திருஷ்ணையும், திருஷ்ணையைக் காரணமாகக் கொண்டு உபாதானமும், உபாதானத்தைக் காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரணமாகக் கொண்டு ஜாதியும், ஜாதியைக் காரணமாகக் கொண்டு பிணி மூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும்" என்று கூறப்படுமாறு காண்க. பிணி மூப்பு முதலியன இன்பமல்ல வாதலின், "தவலில் துன்பம்" எனப்பட்டன. 118-133. இந்நுகர்ச்சி-பேதமை முதலாக நுகரப்படும் இந்நிதானங் களின் தொடர்பு; ஊழில் மண்டிலமாச் சூழும்-முடிவில்லாத மண்டில முறையாக (வட்டமாய்)ச் சூழ்ந்து நிற்பதாகும்; பேதைமை மீளச் செய்கை மீளும்-பேதைமையாகிய நிதானம் நீங்கின் அதன் காரியமாகிய செய்கை நீங்கும்; செய்கை மீள உணர்ச்சி மீளும் - செய்கையாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய உணர்ச்சி நீங்கும்; உணர்ச்சி மீள அருவுரு மீளும்-உணர்ச்சியாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய அருவுரு நீங்கும்; அருவுரு மீள வாயில் மீளும்- அருவுருவாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வாயில் நீங்கும்; வாயில் மீள ஊறு மீளும் - வாயிலாகிய நிதானம் நீங்க ஊறாகிய அதன் காரியம் ஒழியும் ; ஊறு மீள நுகர்ச்சி மீளும் - ஊறாகிய நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய நுகர்ச்சி நீங்கும்; நுகர்ச்சி மீள வேட்கை மீளும்-நுகர்ச்சியாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வேட்கை நீங்கும்; வேட்கை மீள பற்று மீளும் - வேட்கையாகிய நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய பற்று நீங்கும் : பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் - பற்றுநீங்கிய வழி அதன் காரியமாய்த் தோன்றும் வினைப்பயன் நீங்கும்; கருமத் தொகுதி மீள தோற்றம் மீளும்-அவ்வினைப்பயன் நீங்கவே பவமாகிய அதன் காரியம் நீங்கும்; தோற்றம் மீள பிறப்பு மீளும்-பவம் நீங்கிய வழிப் பிறப்பு நீங்கும்; பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடும் அவலம் அரற்று கவலை கையாறு என்று இக்கடையில் துன்பமெல்லாம் மீளும் - பிறப்பு நீங்கிய வழி அதனைச் சார்ந்துண்டாகும் பிணியும் முதுமையும் சாக்காடு அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்ற இம் முடிவில்லாத துன்பங்களெல்லாம் ஒழியும்; மீட்சி இவ்வகையால் என்ப - துக்க நிவாரணமாகிய மீட்சி இவ்வாறாகும் என்று அறிந்தோர் சொல்லுவர் எ - று. பிறப்பைச் சார்ந்து தோன்றும் பிணி மூப்பு முதலிய துன்பங்க களால் பேதைமையும், அது சார்வாகச் செய்கையும் இவ்வாறே பிறவும் காரண காரியமா யியைந்து கறங்கு போலச் சுழலுதலின், "ஊழின் மண்டிலமாச் சூழும்" என்றும், இவற்றினாக்கம் நுகர்ச்சியாதலின் ‘இந்நுகர்ச்சி"யெனச் சுட்டியும் கூறினார். ஊழ்-முடிவு; காரண காரியமாய் இயையும் முறைமை யென்றுமாம். இவ்வாறு நிதானம் பன்னிரண்டின் தோற்றமும் ஆக்கமும் கூறியது துக்கமும் துக்கத்தோற்றமுமாகிய இருவகை வாய்மை களையும் குறித்து நிற்குமாறறிக. "இவ்வகையால் மீட்சி"யென்றது துக்க நீக்கமாகிய வாய்மை குறித்து நின்றது. நிதானங்களின் ஆக்கமும் நீக்கமும் கூறியவாற்றால், உலகியல் நிகழ்ச்சி யனைத்தும் காரண காரிய வியைபால் நிகழ்வதன்றிப் பிறிதில்லை யென்னும் பௌத்தநூற் றுணிபை வலியுறுத்தி நிற்குமாறு காண்க. முன்னே "தவலில் துன்ப" மென்றமையின், ஈண்டுக் "கடையில் துன்ப" மென்றார். இனி, நிறுத்த முறையானே "கண்ட நான்குடைத்தாய்" என்ற நால்வகைக் கண்டங்களையும் முறையே கூறுகின்றார். 134-136. பேதமை செய்கை என்றிவை இரண்டும் - நிதானம் பன்னிரண்டனுள் பேதமையும் செய்கையுமாகிய இரண்டும்; காரண வகைய வாதலால் - ஏனையவற்றிற்குக் காரணமாகும் கூறுபாடுடைய வாகையால்; ஆதிக்கண்டமாகும் என்ப - முதற் கண்ட மெனப்படும் என்று சான்றோர் கூறுப எ - று. கண்டம் நான்காகப் பகுத்துக் கூறும் முறை வடநுல்களுள் எதன் கண் உளது என்பது தெரியவில்லை. "என்ப" எனப் பிற ஆசிரியர்மேல் வைத்தோதுதலால், இப்பாகுபாட்டினை யுணர்த்தும் நூல்கள் இருந்திருக்க வேண்டுமென்ப தொருதலை. ஏனையவாவன, இரண்டாங் கண்டத்துட் கூறப்படும் உணர்ச்சி முதலிய வைந்துமென வறிக. 137-140. உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சியென்று நோக் கப்படுவன-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியு மென்று காணப்படும் நிதானங்கள் ஐந்தும்; முன்னவற்று இயல் பால்-முன்னே முதற் கண்டத்துக் கூறப் பட்ட இரண்டின் இயல்பினாலே; துன்னியவாதலின்-வந்தன வாதலால்; இரண்டாங் கண்டம் ஆகும் என்ப-இரண்டாங் கண்ட மெனப்படும் என்பர் எ - று. பேதைமையும் செய்கையும் ஏனை யுணர்ச்சி முதலிய வைந்துந் தோன்றித் துன்பஞ் செய்தற்கு அடிப்படையிலேயே கோட்டம் விளைப் பதுபற்றி, "முன்னவற் றியல்பால் துன்னிய" வென்றார். இயல்பு - துக்கத்துக் கேதுவாய கோட்டமுடைமை. உணர்ச்சி முதலிய வைந்தும் அறிவால் பகுத்துணரப்படுவதுபற்றி, "நோக்கப் படுவன" என்றார். 141-144. வேட்கை பற்று கரும வீட்டம் எனக் கட்டுரைப்பவை - வேட்கையும் பற்றும் கருமத் தொகுதியு மெனப் பகுத்தோதப் படும் நிதான மூன்றும்; அப்பெற்றி-அம்முறையே; நுகர்ச்சி யொழுக்கினுள் குற்றமும் வினையு மாகலான்-உணர்ச்சி முதல் நுகர்ச்சியீறாக ஐந்தனாலும் நிகழும் நிகழ்ச்சிக்கண் விளையும் குற்றமும் அதற்குரிய வினையுமாதலால்; மூன்றாங் கண்டம்-மூன்றாங் கண்டமெனப்படும் எ - று. செய்கை வினையும்; அதன் பயனாகிய செயப்படுபொருள் கருமமுமாதலால்; அச் செயப்படுபொருட் டொகுதியைக் 'கரும வீட்டம்', என்றார். பிற விடங்களிற் கருமத் தொகுதி யென்றதும் இக்கருத்தே பற்றியென வறிக. கருமத் தொகுதியின் உடன் விளைவு பவ மாதலின், வேட்கை முதல் மூன்றுடன் பவத்தையும் கூட்டி, மூன்றாங் கண்டத்துள் அடக்கிக் கொள்க., இதனாலே நான்காம் கண்டத்தில் பவம் கூறப்படாமை யறிக. வேட்கை முதல் பவம் ஈறாக நின்ற நான்கனுள், வேட்கையும் பற்றும் குற்ற மென்றும், கரும வீட்டமும் பவமும் வினையென்றும் கொள்க. 145-147. பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடுந் துன்பமென இவை-பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடாகக் கூறப்படும் துன்பமும் என்ற இவை; பிறப்பில் உழக்கு பயனாதலின்-பிறந்தவுடம்பின்கண் எய்தி வருந்தும் வினைப்பயனாதலால்; நான்காம் கண்டம் - நான்காம் கண்டமெனப்படும் எ - று. பிணி மூப்பு முதலியனவும் அவற்றிற்குச் சார்பாய பிறப்பும் உடம்பொடு தோன்றிய வழியே வந்து வருத்துவனவாதலால், "பிறப்பில் உழக்கு பயனாதலின்" என்றார். பயன் எனவே, வினைப்பயனாதல் பெற்றாம். மூன்றாங் கண்டத் திறுதியில் வினையைக் கூறலின் இதன் கண் அதன் பயனைக் கூறியவாறு காண்க. இனி, மூவகைச் சந்திகளைக் கூறுகின்றார். 148-152. பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்குக் காரணமாகிய செய்கையும் உணர்ச்சியும் பொருந்துவது முதற் சந்தியாம்; நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி; புகர்ச்சி யின்றி அறிவது இரண்டாம் சந்தி - குற்றமின்றி யறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தியாகும்; கன்மக் கூட்டத் தொடு வருபிறப்பிடை முன்னிச்செல்வது மூன்றாம் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வ தாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் எ - று. நால்வகைக் கண்டங்களும் சொற்புணர்ச்சிபோலத் தம்மிற்புணரு மியல்பினவாதலின், சந்திகள் மூன்றாயினவென வறிக. முதற்கண்டத்திறுதிக் கண்ணதாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்து முதற் கண்ணதாகிய உணர்ச்சியும் பொருந்தும் சந்தி முதற்சந்தி யாதலின், "பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி" என்றார். ஆதிச்சந்தி யென்பது தமிழ்முடிபு பெற்றது. பிறப்புக் கேதுவாகிய கரும வீட்டத்துக்கு முதலாதலின் செய்கையை, "பிறப்பின் முதல்" என்றார். இவ்வாறே இரண்டாங் கண்டத் தீற்றினின்ற நுகர்ச்சியும் மூன்றாங் கண்டத்து முதலில் வரும் வேட்கையும் பொருந்துஞ் சந்தியை இரண்டாஞ் சந்தி யென்றும், மூன்றாங் கண்டத்தீற்றுக் கருமவீட்டமும் நான்காங் கண்டத்து முதலில் நிற்கும் பிறப்பும் புணரும் புணர்ச்சியை மூன்றாஞ் சந்தி யென்றும் கூறினாரென வறிக. நான்காங் கண்டத்து வரும் பிறப்பு உருவுடைத்தாகலின், அதனை நாடிக்கொள்ளும் இயைபு தோன்ற, "முன்னிச் செல்வது" என்றார். புகர்ச்சி - குற்றம். கன்மத் தொகுதி: ஈண்டுப் பவத்தைக் குறித்து நின்றது. 153-158. மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை-மூன்று வகையான பிறப்புக்களையும் கூறுமிடத்து; ஆன்ற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் - தூய்மை யமைந்த விசுத்தி மார்க்கத்து முடிவாகிய சமாதி ஞானமே வீடுபேறெனத் துணிந்து அதுவேயாய்த் தோன்றி நிற்பதும்; உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும் - உணர்வாகவே யாகாது அவ் வுணர்வு உள்ளே யடங்க உருக்கொண்டு நிற்பதும்; உணர்வும் உருவும்உடங்கத் தோன்றி - உணர்வும் உருவும் உடனிகழத் தோன்றி; புணர் தரு மக்கள் தெய்வம் விலங்காகையும் - கூட்டமாய் உறையும் மக்களும் தெய்வமும் விலங்குமாகத் தோன்றி நிற்பதுமாம் எ - று. சமாதி ஞானமே வீடெனத் துணிந்து நிற்கும் பிறப்பு அருவப் பிறப்பென்றும், உணர்வுள் அடங்க வுருவாய்த் தோன்றுவது உருவப் பிறப்பென்றும், உணர்வும் உருவும் உடங்கு தோன்றும் பிறப்பு தெய்வப் பிறப்பும் மக்கட் பிறப்பும் விலங்குப் பிறப்புமா மென்றும் கூறும் முறைமைபற்றி இவ்வாறு கூறினார். இவற்றை முறையே அரூபதாது, ரூபதாது, காமதாது என்றும் கூறுப.1 உடங்கு: உடங்கவென வினையெச்சமாயிற்று. புணர்தல்-கூடியுறைதல். இதனைத் தேவர்க்கும் விலங்குக்கும் கூட்டுக. இனி, மேலே கூறிய இருவகைப் பிறப்பும் எய்துதற்குரிமை தோன்ற, "புணர்தரு மக்கள்" என்றாரென்றுமாம். தோன்றியும் என்புழி விலங்காகையும் என்றதற் கேற்ப நிற்பதும் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. 159-168. காலம் மூன்றும்-காலவகை மூன்றனையும்; கருதுங்காலை - ஆராயுமிடத்து; மறந்த பேதைமை செய்கையானவற்றை - மறத்தலைச் செய்யும் பேதைமையும் செய்கையும் என்ற இரண்டு நிதானங்களையும்; இறந்தகாலம் என்னல் வேண்டும் - இறந்த காலமென அறியவேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்றிவை-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் என்ற இந் நிதானங் களை; சொல்லுங்காலை - கால வகையிற் கூறுபடுத் துரைக்கு மிடத்து; நிகழ்ந்த காலமென நேரப்படும் - இவை நிகழ்கால மெனக் கொள்ளப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு அவலம் அரற்று கவலை கையாறுகள் - பிறப்பும் பிணியும் முதுமையும் சாக்காடும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறு மென்ற இவைகள்; எதிர்காலம் என இசைக்கப்படும்-எதிர்காலத் தனவாம் என்று சொல்லப்படும் எ - று. காலம் மூன்றென்று கொண்டு, அவற்றுள் இந்நிதானங்கள் பன்னிரண்டினையும் ஈண்டுக் கூறிய வகையே பகுத்தடக்குந் திறம் பெரும்பான்மை வழக்காகும் என்று1 ஆராய்ச்சியாளர் கூறு கின்றனர். மறத்தலைச் செய்யும் பேதைமையை ஒற்றுமை நயத்தால் "மறந்தபேதைமை" யென்றார். இப் பாகுபாடு தேரவாதத்தை மேற்கொண்டு கூறும் முறை யென்று ஓல்டன்பர்க்கென்பார் கூறுதலால் அறிகின்றோம். மகாயான புத்தர்கள் இக் காலப் பாகுபாட்டை விழைகின்றிலர். இது குறித்து ஆராய்ச்சி நிகழ்த்திய புலவர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வழங்கி முரணுவது பற்றி இம் மணிமேகலை கூறும் முறையே ஓரளவிற் கொள்ளற் பாற்றென வமைவர். 169-174. அவா பற்று பேதைமை என்றிவை-வேட்கையும் பற்றும் பேதைமையுமென்ற இம் மூன்றும்; குலவிய குற்றமெனக் கூறப்படும் -வினைக்கும் அதன் பயனாய துன்பத்துக்கும் ஏற்கப் பொருந்திய குற்றமென அறிஞர்களாற் கூறப்படும்; புனையும் பவமும் அடைவினையும் செயலாகும்-உருப்படுத்தும் பவமும் அதனையடுத்து வரும் வினையும் செய்கையாகும்; ஆங்கே நேருங்காலை-அப்பொழுது குற்றம் வினையென்ற இரண்டாலும் விளையும் பயனைக் கருதுமிடத்து; உணர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சிப் பயன் - உணர்ச்சியும் பிறப்பும் முதுமையும் நோயும் சாக்காடும் என்ற இவை குற்றவினை நிகழ்ச்சியின் பயனாகும் எ -று. இப் பகுதி பேதைமை முதல் பன்னிரண்டாகக் கூறிய நிதானங் களைக் குற்றமும் வினையும் பயனுமென மூவகைப்படுத்து, பேதைமை பற்று வேட்கை யென்ற மூன்றும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினையென்றும், உணர்ச்சி முத லேனை யேழும் பயனென்றும் கூறியவாறாயிற்று. அவாவும் வேட்கையும் ஓரினமாதலின், வேட்கையை அவாவென்றார். வேட்கை மிகுதியாற் பற்றும், பற்றுமிகுதியாற் பேதைமையும் தோன்றி மன முதலிய கருவிகளைக் குற்றப்படுத்தலின், அவ்வியைபு பற்றி, "அவாவே பற்றே பேதைமை யென்றிவை" யென முறை செய்தார். தோற்றத்துக்கு வேண்டுங் காரணங்களைத் தொகுத்தல் பற்றி, பவத்தைப் "புனையும் பவம்" என்றும், தோற்றிய வுருவின் பாலுளவாகும் அசைவும் அசைவின்மையும் வினையாகலின், "அடைவினை" யென்றும் கூறினார். குற்றமும் வினை நேர்பட்ட வழிப் பயனுமுண்டாதல் ஒருதலையாதலின், "ஆங்கே நேருங் காலை" யென்றார். செய்கையின் பயன் "நிகழ்ச்சிப் பயன்" எனப்பட்டது. 175-178. குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்றமும் வினையும் பயனுமாகிய யாவும் துன்பம் பயப்பனவாகும்; பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா - குற்ற முதலியவற்றாற் பெற்ற பிறப்புக் குரிய வுடம்புகள் நிலையில்லாதனவாகும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலை - உயர்திணையும் அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பதொன்று கிடையாது; என இப்படி உணரும் இவை-என்று இவ்வாறு உணரப்படும் இவைகள்; வீட்டியல்பாம் - வீடு பேற்றிற்கு உறுதியாம் எ -று. குற்ற முதலிய மூன்றும் துன்பம் பயப்பனவாதலின், "துன்பம்" என்றும், இத் துன்பத்தை நுகர்தற்கு இடனும் கருவியுமாகிய உடம்புகளை, "பெற்ற தோற்றப் பெற்றிகள்" என்றும் அவை வளர்தலும் மூத்தலும் பிணிப்பட் டிறத்தலும் செய்தல் கண்கூடாகலின், "நிலையா" என்றும், எப் பொருளை யாராய்ந்து நோக்கினும் அவை குற்ற முதலிய மூன்றன் துன்பச் சூழலிற்பட்டு ஐவகைக் கந்தக் கூட்டமாய உடம்பொடு கூடி நின்று நிலை பேறின்றி மாயக் காண்பதன்றி, அவற்றின் வேறாகிய ஆன்மா வென வொன்று நிலையுடைத்தாகக் காணப்படாமையின், "ஆன்மா விலை" யென்றும், இவற்றை இவ்வகையாற் பகுத்துணர்ந்த வழி இவற்றின் நீக்கம் தானே யுண்டாதலின், "இவை வீட்டியல்பாம்" என்றும் கூறினார். இப் பகுத்துணர்வே வீடுபேற்றிற் குறுதியா மென்பதை, முன்பும், "நிலையில வறிய துன்பமென நோக்க, உலையா வீட்டிற் குறுதி யாகி" என்றது காண்க. இதனால் வீடுபேற்றிற்கு உறுதி கூறிய அறவணவடிகள், நிறுத்த முறையானே நால்வகை வாய்மைகளையும் நிரலேநிறுத்திக் கூறுகின்றார். 179-182. உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு பிறப்பு பிணி மூப்பு சாவு என - உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் பிறப்பும் பிணியும் மூப்பும் சாக்காடும் என்றும்; அவலம் அரற்று கவலை கையாறு என - அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்றும்; நுவலப்படுவன - சொல்லப்படும் நிதானங்களே; நோயாகும் - துக்கமாம் எ று. பிறப்புக்கும் சாக்காட்டிற்கும் இடையே பிணியினும் மூப்பினும் விரவியும் தனித்தும் வந்து துன்புறுத்தலின், அவல முதலிய நான்கினையும் பிரித்துக் கூறினார். பிரித்துக் காட்டும் என வென்னும் இடைச் சொல் எண்ணுப் பொருளில் வந்து பிறாண்டும் சென்றியையுமாறு பிரிந்து நின்றது. நோய் செய்வனவற்றை நோயென்றது உபசாரம். இதனால் துக்க மென்னும் முதல்வாய்மை கூறியவாறு. 183-185. அந்நோய் தனக்கு - அத் துக்கத் தோற்றத்துக்கு; பேதைமை செய்கை அவா பற்றுக் கரும வீட்டம் இவை-பேதைமையும் வினையும் வேட்கையும் பற்றும் வினைப் பயன்களும் என்ற இவையே; காரணமாகும் - காரணமாம், எ - று. அந் நோய் என்ற சுட்டு ஆற்றலால் அதன் தோற்றம் குறித்து நின்றது. வினையும் வினைப்பயனும் வேறு வேறாய்க் காரணமாதல் தோன்ற, "செய்கை" யென்றும், "கரும வீட்ட" மென்றும் கூறினார். துக்கத்தோற்றம் கூறுமாற்றால் அதன் காரணம் பேதைமை முதலிய வைந்துமாமென்று கூறி இரண்டாவது வாய்மை கூறியவாறு. தொக்கு நின்ற ஏகாரம் பிரிநிலை. 186-188. துன்பம் தோற்றம் பற்று காரணம்-துன்பத்துக்கும் பிறப்புக்கும் பற்றுடைமையே காரணமாம்; இன்பம் வீடு பற்றிலி காரணம் - இன்பத்துக்கும் பிறவாத வீடுபேற்றிற்கும் பற்றின்மையே காரணமாம்; ஒன்றிய உரை - ஒருங்கே தொகுத் துரைக்கும் இவ்வுரையே; வாய்மை நான்காவது - நால்வகை வாய்மையாவது எ - று. துன்பம் தோற்றம் பற்றே காரணம் என்றது, மூன்றாவதாகக் கூறப்படும் துக்க நீக்கம். இன்பம் வீடு பற்றிலி காரணம் என்றது. நான்காவதாகக் கூறப்படும் துக்க நீக்க நெறி. துக்கம் துக்கத் தோற்றம் துக்க நீக்கம் துக்க நீக்க நெறியென்னும் இவற்றைத் துக்கம் சமுசயம் நிரோதம் மார்க்கம் என்று கூறி, ஒவ்வொன்றும் தன்மஞான க்ஷாந்தி, தன்மஞானம், அந்வய ஞான க்ஷாந்தி, அந்வய ஞானமென நந் நான்கு வகைப்பட்டுப் பதினாறாக விரிதலின், இவற்றைச் சுருங்க வுரைப்பதை, "ஒன்றியவுரை"யென்றார். முன்பும், "பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம், பற்றின் வருவது முன்னது பின்னது, அற்றோ ருறுவது" (2: 64-7) என வேறு வகையாற் கூறியிருத்தல் காண்க. 189-190 .உருவு - உருவமும்; நுகர்ச்சி - வேதனையும்; குறிப்பு - குறிப்பும்; பாவனை - பாவனையும்; உள்ள அறிவு - விஞ்ஞானமும் என்ற; இவை ஐங்கந்தமாவன - இவைகள் ஐவகைக் கந்தங்களெனப்படும் எ - று. ஈண்டுக் கூறிய உருவு முதலைந்தையும் "ஓங்குருவம் வேதனை யுளக்குறிப்புப் பாவனைமெய், தாங்குணர்வென் றைந்தாங்கந் தம்" என்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. வட நூல்கள் இவ் வைந்தனுள் நுகர்ச்சியை வேதனை யென்றும், குறிப்பினைச் சஞ்ஞை யென்றும், பாவனையைச் சம்ஸ்கார மென்றும் கூறுகின்றன. இவற்றுள் உருவமாவது உடல்; அது பூதம் உபாதாய மென்னும் இரண்டினாலுண்டாம்; வேதனை யாவது துன்பமும் இன்பமும் இரண்டும் விரவுவது மென மூன்றாகும்; குறிப்பாவது ஐம்பொறியும் மனமுமாம்; பாவனை யாவது மெய் வாய் மனம் என்ற மூன்றாலு முண்டாகும் அறமும் பாவமுமாம்; விஞ்ஞானமாவது இந்நான்கினோடும் பொருந்தி யெண்ணும் எண்ணமாம் என்று பரமத திமிரபரனு உடையார் கூறுகின்றார். இவ் வைந்துங் கூடிய கூட்டமே அருவுருவெனப் படும் உயிருமுடம்புமெனக்கொள்க.1 இவற்றின் விரவைச் சிவஞானசித்தி முதலிய தமிழ் நூல்களிலும் சருவதரிசன சங்கிரக முதலிய வட நூல்களிலும் கண்டு கொள்க. 191-198. மறுவின்று கிளப்பின் - குறைவின்றிக் கூறுமிடத்து; அறுவகை வழக்கு - ஆறுவகைப்பட்ட வழக்காவன; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும்- தொகையும் தொடர்ச்சியும் தன்மைமிகுத்துரையும் இயைந் துரையும் என்ற நான்கோடும்; இயைந்த - சேர்ந்து வருவன வாகிய; உண்மை வழக்கு...இல்லது சார்ந்த வுண்மை வழக்கும் என - உண்மை வழக்கெனவும், இன்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வுண்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வுண்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வின்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வின்மை வழக்கெனவுமாம் எ - று எனவென்பது எங்குஞ் சென்றியைந்தது. ஆம் என்பது வருவிக்கப்பட்டது. தொகை முதலியன இயைந்த வழக்காவது தொகையுண்மை வழக்கு தொகையின்மை வழக்கு என்றாற் போல வருவது. இவ்வாறே பிறவும் ஒட்டிக் கொள்க. இவ்வகையால் வழக்கு இருபத்து நான்காமாயினும், ஈண்டு ஆசிரியர் சுருக்கம் வேண்டித் தொகை முதலிய நான்கையும் தனிப்படக் கூறி, அவற்றின் பின் அறுவகை வழக்கினையும் பொதுப்படக் கூறு கின்றார். சுருங்கக் கூறுமிடத்தும் இன்றியமையாது வேண்டப் படுவனவற்றை யெஞ்சாமற் கூற வேண்டுவது பற்றி, "மறுவறக் கிளப்பின்" என்றார். 199-201. சொல்லிய தொகைத்திறம்-மேலே தொகை முதலாகச் சொல்லப்பட்டவற்றுள் தொகை யென்னும் கூறாவது; உடம்பு நீர் நாடு - உடம்பும் நீரும் நாடுமாகும்; தொடர்ச்சி - தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் - நெல்வித்தின் முளையும் முளையில் தாளும் அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சியால்; அவற்றை நெல்லென வழங்குதல் - அக்காரண காரியங்களை நெல்லென்று வழங்குவதாம் எ - று. பல்வகைத் தாதுக்களின் கூட்டத்தை உடம்பென்றும், பல சிறு துளிகளின் கூட்டத்தை நீரென்றும், பல சிறியவும் பெரியவு மாகிய ஊர்களின் கூட்டத்தை நாடென்றும் வழங்குவது தொகைத் திறம் என்பார், "தொகைத்திறம் உடம்பு நீர் நா"டென்றார். நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குமாறு போலக் காரண காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி யென்பார், "வித்து முளைதாளென்றிந் நிகழ்ச்சியில் அவற்றை நெல்வென வழங்குதல்" என்றார். இனி, இந்நூற்களை யாராய்ந்து கண்ட அருணந்தி சிவனார், தொகையுந் தொடர்ச்சியும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைந்து தொகை யுண்மை வழக்கென்றும், தொகையின்மை வழக்கென்றும், தொடர்ச்சி யுண்மை வழக்கென்றும் தொடர்ச்சியின்மை வழக்கென்றும் வருமென்று கூறித் தொகையுண்மை வழக்காவது, "ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி யைந்துங்கூடி, வருபவனென்று ரைத்தல் தொகை யுண்மை வழக்க தாகும்" என்றும், தொகையின்மை வழக்காவது, "உருவமங் காதி யாய வைந்தையு மொருவனின்று, தருவது தொகையின் இன்மை வழக்கதாம் சாற்றுங் காலே" என்றும், தொடர்ச்சி யுண்மை வழக்காவது, "காரண காரியத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின், சோர்வறத் தோன்றுங் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை" யென்றும் தொடர்ச்சியின்மை வழக்காவது "ஒருவனே எக்காலத்து முள்ளா னென்று தேர்வது தொடர்ச்சி யின்மை வழக்கதாம்" (சிவ. சித்தி. பரபக். 70-71) என்று கூறுகின்றார். 202-204. இயல்பு மிகுத்துரை - தன்மை மிகுத்துரையாவது; ஈறுடைத்தென்றும் - ஒரு பொருள் அழிந்ததென்றும்; தோன்றிற்றென்றும் - பிறந்ததென்றும்; மூத்ததென்றும் - முதுமை யுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள்; மூன்றின்-மூன்றனுள்; ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் - ஒரு கூற்றின் தன்மையை மிக் கெடுத்துக் கூறுவதாம் எ - று. ஈறுடைமையாகிய தன்மையை "ஈறுடைத்தென்றும்" பிறப்புடைமையைத் "தோன்றிற்றென்றும்" முதுமையுறுந் தன்மையை "மூத்ததென்றுங்" கூறினார். பிறப்பு மூப்பு இறப்பு என்னாது பிறழக் கூறினார். செய்யுளாதலின். தோற்றத்தினும் அழிவு நன்கு விளங்குதலும் முதுமை அவ்வழிவுபோல நன்கு விளங்காமையுங் கண்டு இவ்வாறு கூறினாரெனினுமாம். இதனையும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைக்கும் அருணந்தி சிவனார், இரண்டினையும், "தோற்றிய பொருள்க ளெல்லாம் நாசமா மென்று சொல்லும். மாற்றமூன்றுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை, போற்றிய பொருள் கண் கட்குப் போனது போன்முதிர்ந்து, வேற்றுமைப்பட்ட தென்கை மிகுத்துரை யில்வழக்கே" (சிவ சித். பரபக். 72) என்று கூறுவர். இதற்கு உரைகண்ட திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் "கண்கட்குப் போனது போன் முதிர்ந்து வேற்றுமைப் படுகை காரியமழிந்து காரணங் கிடக்கை" யென்றும், "மிகுத்துரை மூன்றும் உள்வழக்கு இல்வழக்கு இரண்டினும் வழங்கும் வழியெனக் கொள்க" என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது. இவ்வாசிரியர் மேலே கூறுகின்ற இயைந்துரைத் திறத்தை அருணந்தி சிவனார் விளக்கிற்றிலர். அவர், இதனை மேற்கொள்ளாமையை, தொகை தொடர்ச்சி மிகுத்துரை மூன்றும் உண்மை வழக்கு இன்மை வழக்கு என்ற இரண்டி னோடுறழ ஆறாதலைக் காட்டி, "தொகை தொடர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய், உற்றிடும் வழக் கிரண்டு மொன்றுமூன்றாகி யாறாம்" (சிவ. சித். பரபக் 69) என்பதனாலும் துணியப்படும். படவே, இயைந்துரை யொழித்து ஏனைமூன்றுமே கொண்ட பௌத்த நூல்களும் உண்டென்பது எய்துகிறது. 205-207. இயைந்துரை என்பது-இயைந்துரை என்று சொல்லப் படுவது; எழுத்துப் பல கூடச் சொல்லெனத் தோற்றும் - எழுத்துக்கள் பல கூடிய வழிச் சொல்லென்பது தோற்றுமாறு போலன்றி; பல நாள் கூடிய எல்லையை - பல நாட்கள் கூடிய ஒரு கால வெல்லையை; திங்கள் என்று வழங்குதல் - திங்களென்று வழங்குவது போல்வது எ - று. எழுத்துக்களின் கூட்டத்தால் உண்டாகும் சொல் தொகைத் திறமாதலின், அதனை விலக்கி, இத்துணையென வரையறுக்கப் பட்டவற்றின் கூட்டம் "இயைந்துரை"யென்றார். அன்றி யென்பது அவாய் நிலை. முப்பதும் முப்பத்தொன்றும் முப்பத்திரண்டும் இருபத்தொன்பதுமாய்த் திங்களின் நாளெல்லை வேறுபடுதலின், "பல நாள் கூடிய எல்லை" என்றார். ஆனித்திங்கள் முப்பத்திரண்டு நாட்களும் சித்திரை முதலியன முப்பத்தொரு நாட்களும் ஐப்பசி முதலியன முப்பது நாட்களும் கார்த்திகை இருபத்தொன்பது நாட்களும் கொண்டிருத்தல் காண்க. வரையறைப்படாத பல பொருள்தொகுதி தொகை யெனவும், வரையறைப்பட்ட பல பொருள் தொகுதி இயைந்துரையெனவும் வழங்குப. 208-216. உள்வழக்கு உணர்வு-உள்வழக் கென்பது உள்ளதாகிய உணர்ச்சியை யுளதென்றல்; இல்வழக்கு முயற்கோடு - இல்வழக்காவது இல்லாததாகிய முயற்கோட்டினை இல்லை யென்றல்; உள்ளது சார்ந்த வுள் வழக்கு - உள்ளது சார்ந்து வரும் உள் வழக்காவது; சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சியாகும் - உள்ளதாகிய உணர்வோடு அதற்கியைந்த நுகர்ச்சியு முண்டென்பதாம்; மின்போல் - மின்னுப்போல; சித்தம் உற்பவித்தது என்கை - உணர்வாகிய உள்பொருள் தோன்றிற்றென இல்வழக்குக் கூறுதல்; உள்ளது சார்ந்த இல்வழக்காகும் - உள்ளதைச் சார்ந்து வரும் இல்வழக்கெனப்படும்; காரணம் இன்றிக் காரியம் நேர்தல்-காரணமில்லையாகக் காரியத்தைக் கொண்டுரைத்தல்; இல்லதுசார்ந்த உள்வழக்காகும் - இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும்; முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல்லெனல் - முயற்கோடு இல் பொருளாதலின் அதற்குத் தோற்றமில்லை யென்று கூறுதல்; இல்லது சார்ந்த இல்வழக்காகும்-இல்லாததைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும் எ - று. சித்தமாகிய உணர்வு உள்பொருள் அதனால் உணர்ந்து கொள்ளப் படும் நுகர்ச்சி உள்வழக்காதலின் "சித்தத் துடனேயொத்த நுகர்ச்சி" உள்ளது சார்ந்த வுள் வழக்காயிற்று. உள்பொருட்குத் தோற்றங் கூறல் இல்வழக்காதலால் "சித்தமுற் பவித்தது" என்றும், "மின்போல்" என்றும் அதனை யெடுத்துக் காட்டினார். காரணம் காணப்படாததாகக் காணப்படும் காரியத்தைக் கொண்டு கூறுவது இல்லது சார்ந்த உள்வழக்காகும். முன்பு இல்லாதது பின்பு தோன்றியது கூறல் இவ்வில்லது சார்ந்த வுள்வழக்கின் பாற்படும் என்ப. இனி, அருணந்திசிவனார் இவ்வறுவகை வழக்கு களையும், "உள்வழக் குளதுண்டென்கை முயற்கோடின் றில்வ ழக்கே:" என்றும் "உணர்வுசார்ந்துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை, உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த வின்மை, உணர்வுமுன் பின்றித் தோன்றலில்லது சார்ந்த வுண்மை, உணரினில் லதுசா ரின்மை யுள்ளங்கை யுரோம நாணே" (சிவ. சித்தி. பரபக். 74) என்றும் கூறுவர். 217-228. நான்கு நயமெனத் தோன்றப்படுவன-நால்வகை நயங் களெனத் தெளிய வுணரப்படுபவை; ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க - ஒற்றுமையும் வேற்றுமையும் புரிவின்மையும் இயல்பும் என்பனவாம் என அறிக; ஒற்றுமை நயம்-அவற்றுள் ஒற்றுமை நயமாவது; காரண காரிய மாகிய பொருள்களை ஒன்றாவுணர்தல் - காரணமும் காரியமுமாய் நிற்கும் பொருள்களை வேற்றுமை கருதாது காரணமா யாதல் காரியமா யாதல் உணர்ந்து கோடலாம்; வீற்று வீற்றாக வேதனை கொள்வது - காரண காரியங்களை ஒன்றாகவுணராது தனித்தனி வேறுபடுத் துணர்ந்து கோடல்; வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்-வேற்றுமை நயமென்று கொள்கவென ஆசிரியர் விரும்புவர்; பொன்றக் கெடாப் பொருள் வழிப் பொருள்களுக்கு-முற்றக் கெடுதலில்லாத முதற் பொருள் காரியப் பொருள் என்பவற்றிற்கு; ஒன்றிய காரணம் - பொருந்தியுள்ள காரணம்; உதவுகாரியத்தைத் தருதற்கு உள்ளம் இல்லை என்றல்-விளைத்தற்குரிய காரியத்தைப் பயத்தலை யறிதற்கேற்ற உணர்வுநிலை யில்லை யென்பது; புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் - புரிவின்மை நயமெனக் கூறலை ஆசிரியன் விரும்பும்; நெல்வித் தகத்துள் நெல் முளை தோன்றுமெனல்-நெல் விதையினின்று நெல் முளையே தோன்றுமெனக் கோடல்; நல்ல இயல்பு நயம் - குற்றமற்ற இயல்பு நயமெனப்படும் எ - று. காரியத்தை விரும்புமொருவன் அதற்குரிய காரணம் தோன்றிய வழி, அக்காரணத்தையே காரியமாகக் கூறல் ஒற்றுமை நயம். சோறு வேண்டுங் குறையுடையானொருவன் அரிசி பெற்ற வழிச் சோறு பெற்றேன் என்பது ஒற்றுமை நயம். இவ்வாறே காரியத்துக்கும் கூறிக் கொள்க. இது புகை இது நெருப்பு எனக் காரண காரியங் களை வேறுபடுத்துணர்வது வேற்றுமை நயமென்பார், "வீற்று வீற்றாக வேதனை கொள்வ"தென்றார். வேதனை - உணர்வு. வேதனை கொள்வதென்பது ஒரு சொல்லால் உணர்தலென்னும் பொருளதாயிற்று. பொன்றக் கெடாப் பொருள் - நித்தப் பொருள்; முதற் பொருள் என்றலுமாம் நித்தப் பொருளின் நித்தத்துவத்துக்குரிய காரணங் காண்டலும், அதனால் அத்தன்மை யெய்துதலும் உணர்தலாகாமையானும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புமாகிய காரண மூன்றுங் கூடிச் செம்மை நிறமாகிய காரியத்தைப் பயத்தல் எவ்வாறென வறிதல் கூடாமை யானும், "ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்குள்ளம் தான் இலையென்றல்" என்றார். புரிவின்மை - உணரவாராமை; புரிதல் - விளங்குதல். உள்ளத்தின் செயல் உணர்தலால் ஒற்றுமை நயத்தால் "உள்ளம்" என்றார், மடவோரும் எளிதினுணர் வதாகலின், இயல்பு நலத்தை, "நல்ல இயல்பு நயம்" என்றார். 228-234. இவற்றின் நாம் கொள்பயன்-இந்நால்வகை நயங் களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன; தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் - எல்லாம் காரண காரியமாய்த் தொக்க பொருள்களேயன்றித் தனியே ஒன்று கிடையா தென்றும்; அப் பொருளிடைப் பற்று ஆகாதென்றும் - அப்பொருள்களிடத்தே பற்று வைத்தல் கூடாதென்றும்; செய்வானொடு கோட்பாடு இலை என்றும் - வினை முதலாகிய கருத்தாவொடு செய்கைக்கு இயைபு கொள்ளுதல் இல்லை யென்றும்; எய்து காரணத்தால் காரியம் என்றும் - பொருந்து கின்ற காரணத்தினால் காரியம் பிறக்குமென்றும்; அதுவும் அன்று அது அலாததுமன்று என்றும் - அது காரண காரியமு மன்று அல்லாதது மன்று என்றும்; விதிமுறை - முறை முறையாக; தொகையினால் நான்கும் விரிந்த - தொகை முதலியவற்றால் நான்காய் விரிந்தன எ - று. காரண காரியமாய்த் தொக்கவற்றை ஒற்றுமை நயத்தால் ஒன்றாய்க் காண்டலின், எல்லாம் தொக்க பொருள் எனத் துணிவது ஒற்றுமை நயத்தாலாம் பயன் என்றார். ஒற்றுமை நயத்தாற் சுகமென்றும் துக்கமென்றும் தோன்றுவன வேற்றுமை நயத்தால் பல்வேறு கூறுகளாய் வேறுபட்டுத் தோன்றுதலின், "அப் பொருளிடைப் பற்றாகா" தென்பது பயனாயிற்று. செய்வோனாகிய காரணத்தால் நிகழும் செய்கையும் கருமமும் புரிவின்மை நயத்தால் உணர வாராமையின், "செய்வானொடு கோட்பாடிலை" யென்பது பயனாயிற்று. நெல்வித்தினின்று நெல் முளை தோன்றக் காணும் இயல்பு நயத்தலால் காரணத்தினின்று காரியம் பிறக்கு மென்ற உணர்வும், வித்து முளையாகாமையும், முளை வித்தின் வேறன்றென்பதும் பயனாயின. இவ்வாறு ஒவ்வொரு நயமும் முறையே பயனை விளைத்தலின், "விதி முறை விரிந்த" என்றார். விரிந்த: அன் பெறாது முடிந்த அஃறிணைப் பன்மை முற்றுவினை. 235-237. வினா விடை நான்குள - வினாக்கட்குரிய விடை நான்கு வகையாக உள்ளன ; துணிந்து சொல்லல் - அவை ஒரு தலையாய்த் துணிந்து கூறலும் ; கூறிட்டு மொழிதல் - பல கூறு செய்து ஒவ்வொன்றாய்க் கூறலும் ; வினாவினை விடுத்தல் - வினா வெதிர் வினவுமாற்றால் விடை யிறுத்தலும்; வாய் வாளாமை யென-வாய் பேசாமையு மென்பனவாகும் எ - று. வினா விடை யென்று இவ்வாசிரியர் கூறியது தொடுக்கும் வினாவிற்கு விடுக்கும் விடை யென்னும் பொருளதாகக் கொண்டு, "செப்பினும் வினாவினும் வழாஅ லோம்பல்" (தொல். சொல். 13) என்புழிச் செப்பின்கண் அடக்கி, "செப்பு நான்கு வகைப் படும், துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் என" என்று தெய்வச் சிலையார் கூறுகின்றார். வாளாதிருத்தலை வாளாமை யென்றார் ; உண்ணாதிருத்தலை உண்ணாமை யென்றாற் போல "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (தொல். சொல். 14) என்பவாகலின், வினா விடுத்தலினும் வினாவின் விடுத்தலென்பது சீரிதாத லறிக. 238-239. தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்-தோன்றிய தொரு பொருள் கெடுமோ கெடாதோ என்று வினாவினால்; கேடுண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் - விடை தோன்றியதற்குக் கேடுண்டு என ஒருதலையாய்த் துணிந்து கூறுதல் துணிந்து சொல்லுதலாம் எ - று. தோன்றின் மறைதல் கண்கூடாதலின், தோன்றியது கெடுமோ கெடாதோ என்று வினவுவோர்க்குக் கெடுமெனத் துணிந்து கூறல் செப்பாயிற்று. தெய்வச்சிலையாரும் "துணிந்து கூறலாவது தோன்றியது கெடுமோ என்ற வழி, கெடுமென்றல்" என்பர். தோன்றியது கெடுதற்கு, "தோற்றமுண்டேல் மரணமுண்டு" (7 : 2) என நம்பி யாரூரரும் கூறியருளுதல் காண்க. 240-243. செத்தான் பிறப்பானோ பிறவானோ என்று - செத்த வனைக் குறித்து ஒருவன் இவன் மீட்டும் பிறப்பானோ பிறக்கமாட்டானோ என்று கேட்ட வழி ; செப்பின் - அவற்கிறுக்கும் விடையில் ; பற்றிறந்தானோ அன்மகனோ எனல் - அவன் பற்றறத் துறந்தவனோ அல்லனோ எனப் பகுத்துத் துறந்தவனாயின் பிறவானென்றும், அல்லனாயின் பிறப்பானென்றும் கூறல் ; கூறிட்டு மொழிதல் - கூறு செய்து விடுத்தலென; மிக விளம்புவர்-விளங்கச் சான்றோர் சொல்லுவார்கள் எ -று. பிறப்புப் பிறவாமைகட்கு வேண்டும் காரணம் விளங் காமையின் கூறிடல் வேண்டிற்று. "பற்றிறந்தானோ அன்மகனோ எனல்" கூறிட்டு வினாவிக் காரணம் பெற்று, செவ்விய விடையிறுப் பான் பற்றிறந்தானாயின் பிறவானென்றும், அன்மகனாயின் பிறப்பானென்றும் மொழிவான். கூறிட்டு வினாவி மொழி தலென்னாது, "மொழிதல்" என்றதனால் ஏற்புடைய மொழிகள் வருவிக்கப்பட்டன. இனித் தெய்வச்சிலை யார், "கூறிட்டு மொழி தலாவது செத்தவன் பிறப்பானோ என்ற வழி, பற்றறத் துறந்தானோ பிறனோ என்றல்," என்று வினா வாய்பாட்டாற் கூறிட்டு மொழிதல் கூறுவர். 244-246. வினாவின் விடுத்தல் - வினாவெதிர் வினாவி விடை யிறுத்தலாவது ; முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ எனக் கட்டுரை செய் என்றால் - முட்டையாகிய விதை முந்தியதோ பனை முந்தியதோ இன்னது முந்தியது என விடையிறுக்க என்று ஒருவன் வினாவினால்; எம்முட்டைக்கு எப்பனை என்றல்-எந்த முட்டைக்கு எந்தப் பனை காட்டுக என விடையிறுத்தலாம் எ - று. பனையின் விதையை முட்டை யென்றல் வழக்கு. பனை விதையின் கூடு கொண்டு எண்ணெய் விற்பார் அதனை முட்டை யென்று வழங்குமாறு காண்க. முட்டையைக் காட்டியவழி, அதனைப் பயந்த பனை முந்திற்றாதலும், பனையைக் காட்டியவழி முட்டை முந்தியதாதலும் இனிது விளங்குதலின், எதிர் வினாவும் விடையாதல் கண்டு, "வினாவின் விடுத்தல்" என்றார். "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (சொல். 14) என்பது தொல் காப்பியம். தெய்வச்சிலையாரும் இதுவே கூறினர். 247-249. வாய் வாளாமை - ஒன்றும் விடை கூறாதொழி தலாவது; ஆகாயப்பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு-ஆகாயப் பூ பழமையானதோ புதியதோ என்று கேட்க விரும்புவோன் வினாவிற்கு; மாற்றம் உரையாதிருத்தல் - விடையொன்றும் கூறாதொழிதலாம் எ -று. ஆகாயத்தில் பூ இல்லாமையின், அது இல் பொருளாதலின் அதனைக் குறித்து வினாதலும் விடுத்தலும் பயனில மொழி தலாய்க் குற்றம் பயத்தலின், வாய் வாளாமை வேண்டுவதாயிற்று. தெய்வச் சிலையாரும் "ஆகாயப் பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை" யென்றார். விடை யொன்றும் கூறாது அவனோடு வேறு உரையாடலும் கூடாதென்றற்கு, "மாற்றம்" என்றும், அவன் பயனில் சொல் பாராட்டுவோ னென்பார், "புகல்வோன்" என்றும் கூறினார். 250-253. கட்டும் வீடும் - கட்டும் வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் - ஒவ்வொன்றன் காரணத்தினையும்; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை-கூடியிருந்து பெறு வித்தற் குரியவர் பிறர் யாருமில்லை; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் - யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்க ளெல்லாவற்றிற்கும்; காமம் வெகுளி மயக்கம் காரணம் - காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம் எ - று. கட்டு என்பது துக்கமும் அதற் கேதுவு மென்ற இவற்றோடு பிணிப் புண்டிருத்தல். வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். அதன் காரணத்தது என்பதை இரண்டோடும் இயைக்க. கட்டும் வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும் அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படை யான காரணம் காமம் வெகுளி மயக்கங்களாதலின், "மேலுரைத்த பொருள் கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கங் காரணம்" என்றார் திருவள்ளுவரும், "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன், நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360) என்றல் காண்க. வீடுபேற்றினைப் புதல்வராற் பெறலாமென்பாரை மறுத்தற்கு, "ஒட்டித் தருதற் குரியோ ரில்லை" யென்றார்; முன்னரும், "புத்தே ளுலகம் புதல்வருந் தாரார், மிக்க வறமே விழுத்துணை யாவது" (22. 137-8) என்றார். 254-255. அநித்தம் துக்கம் அநான்மா அசுசி யெனத் தனித்துப் பார்த்து - பொருள்கள் நிலையில்லாதன வென்றும் துன்பந் தருவன வென்றும் அநான்மா வென்றும் அருவருப் புடையன வென்றும் தனித்தனியாக ஆராய்ந்து கண்டு; பற்று அறுத் திடுதல் - பற்றினை நீக்குமுகத்தால் காமமாகிய காரணத்தைக் கெடுப்பாயாக எ - று. இவ்வநித்த முதலிய நான்கினையும் விபரியாசங்க ளென்றும், அநித்தியம் அநான்மா அசுசிதுக்கமென முறை செய்தும் அசுவகோசரும், வாசபந்துவும், சாந்திதேவரும் கூறுவர். நால்வகைமிருதியுபத்தானங்கட்கும் முன்னர் இன்றியமையாது வேண்டப்படுவன இந்நான்கு மென்றும், இதனாற் காமமாகிய பெருங் குற்றங் கெடுமென்றும் ஆசிரியர் பலரும் வற்புறுத்து கின்றனர். இதனை அசுப பாவனை யென்றலு முண்டு. 256-257. மைத்திரி கருணை முதிதை என்று அறிந்து - மைத்திரி பாவனை கருணைப் பாவனை முதிதைப் பாவனை யென்று சொல்லப் படுகின்ற பாவனைகளை யறிந்து; திருந்தும் நல்லுணர்வால் - அவற்றால் திருந்தப் பெறும் நல்லுணர்வு கொண்டு; செற்றம் அற்றிடுக- வெகுளியைப் போக்குவாயாக எ -று. மைத்திரி பாவனையாவது எல்லா வுயிர்களையும் நட்புற வோடு நினைந்து அவையெல்லாம் துன்பம் நோய் முதலியன வின்றி இன்ப முடையவாகுக என நினைத்தல் என்று சதசஹஸ்ரிக பிரத்ஞபாரமிதை1 யென்ற நூல் கூறுகிறது. இப் பாவனையால் எவ்வுயிர்க்கும் நலஞ் செய்தற்கும், அவற்றிற்கு வேண்டுவனவற்றை யுதவுதற்கு முரிய திருந்திய வுணர்வு பிறக்கிறது. கருணைப் பாவனையாவது பிறவுயிர்கட் குண்டாகுந் துன்பங் கண்டு உள்ளமுருகி அதனை நீக்கற்கு விரையும் விரைவுணர்வு எய்து கிறது. இதனைச் செய்வோர், உயிர்கள் வறுமையின்றியின்பச் செல்வ முடையவாகுக எனப் பாவிப்பர். முதிதைப் பாவனை யாவது பிறவுயிர்கள் பெற்றிருக்கும் ஆக்கமும் இன்பமும் கண்டு மன மகிழ்வும் நிறைவும் அமைதியுங்கொண்டு, அவை அவற்றின் நீங்கா திருப்பனவாகுக என நினைப்பது. இதனால் எப்போதும் செவ்விய உணர்வுடையதாயிருக்கும் செம்மை நிலை யுண்டா கிறது என்பர். இப்பாவனைகளால் உணர்வின் செம்மை குன்றாது விளங்குதலால், "மைத்திரி கருணா முதிதை யென்றறிந்து திருந்தும் நல்லுணர்வால்" என்றும்' இதனால் வெகுளியாகிய குற்றம் எளிதின் நீங்குதலின், 'நல்லுணர்வாற் செற்ற மற்றிடுக" என்றும் கூறினார். 258-259. சுருதி சிந்தனா பாவனை தரிசனை கருதி உய்த்து-சுருதியும் சிந்தனையும் பாவனையும் தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து; மயக்கம் கடிக - மயக்கத்தைப் போக்குவாயாக எ-று. சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்ட வற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல். இச் சுருதி முதலிய நான்கினையும் உபேக்ஷா பாவனை யென்றும் கூறுப. இதனால் "செத்தினும் போழினும் செஞ்சாந் தெறியினும்" திரியாத மெய்யுணர்வு2 விளைதலால், "கருதியுய்த்து மயக்கம் கடிக" என்றார். கருதியுய்த்தல் - ஆராய்ந்துணர்தல். 260-264. இந் நால்வகையால் - இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால்; மனத்திருள் நீங்கு என்று - மனமயக்கம் கெடு வாயாக என்று; முன்பின் மலையா-முன்னுக்குப் பின் முரணுதல் இல்லாத; மங்கல மொழியின் - அறமாகிய சொற்களால்; ஞானதீபம் நன் கனம் காட்ட - ஞானமாகிய விளக்கத்தைத் தெளியக் காட்டினாராக; பாவை - பாவைபோலும் மணிமேகலை; தவத்திறம் பூண்டு- உண்மை ஞானத்துக்குரிய தவத்தின் கூறுகளை மேற்கொண்டு; தருமம் கேட்டு - பல்வகை யறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு; பவத்திறம் அறுகு என நோற்றனள்-பிறப்புக்கேதுவாகிய குற்றங்களின் நீங்குவேனென நோற்கலுற்றாள் எ - று. "இந் நால்வகையால் மனத்திருணீங்" கென்றது, நியமப் பொருட்டாய் வந்த அனுவாதம். இவ்வாறு கொள்ளாது, மைத்திரி, கருணை, முதிதை, உபேக்ஷை யென்ற நால்வகை யெனக் கொண்டு அவற்றால் மயக்கமும் வெகுளியும் காமமும் நீங்குக என்று கோடலு மொன்று; அக் காலை மயக்கத்தோடு ஏனைக் காம வெகுளியும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும். முன்னுக்குப் பின் மலைவு தோன்றக் கூறுவது குற்றமாதலின், அதனை விலக்கற்கு, "முன்பின் மலையா மொழி" யென்றார். மங்கலமாவது அறமாதலின், அறவுரையை, "மங்கல மொழி" யென்றார். "மலையா வறத்தின்" (28. 100) என்றும் "முரணாத் திருவறம்" (30. 6) என்றும் முன்பும் கூறியிருத்தல் காண்க. அஞ்ஞானத்தை இருளென்ப வாதலின், அவ் வியைபே பற்றிச் சான்றோர் ஞானத்தை ஒளியாகக் கூறும் சிறப்புத் தோன்ற, "ஞானதீபம்" என்றும், அதனை ஐயந்திரிபறக் காண்பிக்கும் சிறப்பினை, "நன்கனம் காட்ட" என்றும் கூறினார். தானம், சீலம் எனப் பத்து வகையான பாரமிதைகளை, தவத்திறமென்றார் எண்வகைப் படுதலின். அறநெறியை, "தருமம்" என்று பொதுப்படக் குறித்தார். அவை, நற்காட்சி, நல்லொழுக்கம், நல் வாய்மை, நல்வாழ்க்கை, நற்செய்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்செய்கை என்பன வென்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. அறுகு: செய்கென்னும் வாய்பாட்டுத் தன்மை வினைமுற்று. தானந் தாங்கிச் சீலம் தலைநின்று உணர்ந்தோன். வணங்கிச் சென்றடைந்தபின், மொழிவோன், வாமன் ஏமக் கட்டுரை, ஈரறு பொருளின் ஈந்த நெறியுடைத்தாய், தோன்றி மீட்டும் தொடர் தலின் மண்டில வகையா யறியக் காட்டி, கண்ட நான்குடைத்தாய், சந்திவகை மூன்றுடைத்தாய், தோற்றம் மூன்று வகையாய், காலமூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, ஆறு வழக்கு முகமெய்தி, நயங்கணான் காற்பயன்களெய்தி, நால்வகை வினாவிடை யுடைத்தாய், எல்லாந் தானேயாகிய பேதைமை முதலிய பன்னிரண்டும் அறியிற் பெரும் பேற்றகுவர் ; அறியார் நரகறிகுவர் ; பேதமை முதலியன இவை ; மண்டில வகை இவை; கண்டம் இவை; நயங்கள் இவை; வினாவிடை யிவை; கட்டும் வீடும் காரணம் தருதற்குரியோரில்லை ; காமம் வெகுளி மயக்கம் காரணம்; பற்றறுத்திடுதல், செற்ற மற்றிடுக, மயக்கங் கடிக, மனத்திருள் நீங்குக என்று காட்ட, தவத்திறம் பூண்டு, பாவை, தருமம் கேட்டு, அறுகென நோற்றனள் என, வினை முடிபு கொள்க. மணிமேகலை 27 ஆம் காதை முதல் இக்காதை வரை ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியவுரை முடிந்தது.  அருஞ்சொல் பொருள் அகரவரிசை அருஞ்சொல் காதை அடி அகம் - மனம் 23 141 அங்கி - நெருப்பு 27 209 அஞர் - துன்பம் 23 8 அடித் தொழில்-குற்றேவல் 22 134 அண்டல்-நெருங்குதல் 27 70 அநித்தம் - நித்தமல்லாதது: நிலையற்றது 25 3 அந்தணாளன் - மறையவன் 22 115 அந்தம்-ஒழிவு:முடிபு 27 225 அந்தர சாரிகள் - வானின் வழியாகச்செல்வோர் 28 69 அம்பி-நாவாய்; மரக்கலம் 29 9 அயர்த்தல் -மறத்தல் 23 42 அயர்ந்து - செய்து 22 20 அரசர் உரிமைஇல்-அந்தப் புரம் 23 55 அரற்றல் - புலம்பல் 22 56 அருத்தா பத்தி - பொருள் அளவை: ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல் 27 45 அருவுரு - உயிரும் உடம்புமாம் வடிவ உண்மையும்,இன்மையும் 30 84 அருள் கண் - அருள் நோக்கம் 22 15 அலர் - பழிச்சொல் 22 87 அல்லவை-அறமல்லாதவை 22 173 அழற்கண் நாகம் - திட்டி விடம்என்னும்பாம்பு 23 69 அழியல் - துன்பம் 27 156 அளவைவாதி - பிரமாணவாதி 27 3 அறுகு - அறுப்பேன்; நீக்குவேன்: (செய்கென் வாய் பாட்டுத் தன்மை யொருமை வினைமுற்று) 30 264 அற்பு - அன்பு 26 7 ஆகம அளவை - உரையளவை: உரைப் பிரமாணம் 27 43 அருஞ்சொல் காதை அடி ஆகமவிருத்தம் - நூலில் கூறும் அற முதலியவற்றை நம்பாது கூறுதல் 29 164 ஆசனம் - இருக்கை 29 295 ஆசீவகம் - ஆசீவகம் என்னும் சமயநெறி 27 108 ஆணு - அன்பு (பதிகம்) 17 ஆயம் - சிலதியர்: பணிப் பெண்கள் 24 89 ஆரியன் - குரவன்; பெரியோன்: ஈண்டுப் புத்தன் 25 6 ஆரிருள்-மிக்க இருள் 22 187 ஆர்ப்பு - ஆரவாரம் 27 213 ஆறு - வழி 26 1 இடங்கர் - முதலை 28 18 இணை - இரண்டு 23 45 இந்திர மருமான் - இந்திரன் வழித்தோன்றல் 24 164 இந்திர விகாரம் - இந்திரனால் ஆக்கப்பட்ட ஏழ் அரங்குகள் 26 55 இப்பி-சிப்பி: கிளிஞ்சில் 27 64 இம்பர் - இவ்வுலகம் 26 38 இயக்கம் - செல்லுதல் 25 8 இயவு - வழி; பாதை 13 8 இயல்பு - இயல்பென்னும் அளவை 27 47 இருங்கோ வேட்கள் - குயவர் 28 34 இருசுடர் - ஞாயிறு திங்கள் ஆகிய இரண்டு ஒளிப் பொருள்கள் 27 89 இருத்தி - சித்தி 26 61 இலஞ்சி - பொய்கை; தடாகம் 28 202 இறுவரை-பெரியமலை 26 30 இற்று - இத்தன்மையுடையது 30 48 இன்மை-ஒரு பொருளின்இல்லாமை 27 51 ஈனோர் - இவ்வுலகத்தில் உள்ளோர் 28 132 அருஞ்சொல் காதை அடி உணர்ந்ததை உணர்தல் - மறித்துணர்வு 27 60 உபத்தம் - பெண் ஆண் உறுப்பு 27 237 உம்பர் - மேலிடம் 26 38 உம்பளம் - உப்பளம்: (மெலித்தல் விகாரம்) 24 27 உம்மைவினை-பழவினை 26 32 உயிர் ஈறு செய்தோர் - உயிரை விட்டு விட்டோர் 22 23 உயிர்த்து - மோந்து 27 18 உயிர்மருந்து - சோறு 25 160 உய்தி - உய்வாய்; மேம்படுவாய் (முன்னிலை யொருமை) 21 179 உய்யா நோய் - உயிர் உய்ய வொண்ணாத நோய் 23 59 உலகவிருத்தம் - உலக இயல்புக்கு மாறுபாடாக உரைப்பது 29 162 உவாமதி - முழுமதி: கலை நிறைந்த சந்திரன் 22 13 ஊட்டினை - உண்ணுமாறு செய்தாய் 23 92 ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல் 30 37 ஊறு - பொறி புலன்களின் இயைபு 24 106 ஊன்பிணி - தசையின்கட்டு 25 216 எட்டிப்பூ - எட்டி என்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவும்: வணிகர் பெறும் பட்டம் 22 113 எல் - ஒளி 22 152 எவ்வம் - துன்பம் 22 46 எறிதல்-கோலாலடித்தல் 23 40 ஏகாந்தம் - அநைகாந்திகம்; ஒன்று பட்டது 29 274 ஏமம் - பாதுகாப்பு 30 13 ஏலம் - மணம் 23 68 ஏனாதி-சேனைத்தலைவர்க்கு அரசனால் அளிக்கப் பெறும் பட்டப் பெயர் 22 205 ஒருசிறைப்பாடு - ஒருபுறத்தின் பக்கம் 23 50 ஒற்றன் - உளவறிந்து கூறுவோன் 26 27 ஓதி-கூந்தல் 23 24 கஞ்சகாரர் - வெண்கலக் கன்னார் 28 35 அருஞ்சொல் காதை அடி கஞ்சுகன் - சட்டையிட்ட அரச சேவகன் 28 178 கடம் - காடு 23 112 கடம் - குடம் 29 73 கடல்வணன்-திருமால் 27 98 கடல்வயிறு - கடலில் உள்ளிடம் 24 63 கடவுள் மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம் 22 1 கடிப்பு - பறையடிக்குங் குறுந்தடி 25 51 கட்டி - கருப்புக்கட்டி 27 264 கட்டுரை - பொருள்நிறைந்த சொல் 23 5 கணி - சோதிடன் 24 59 கண்ணிய - சொல்லப்பட்ட 27 256 கந்தவுத்தி - மணப் பொருளைத் தக்கபடி கலந்து செய்யும் முறை 28 15 கயவன் - கீழ்மகன் 23 94 கராம் - முதலை 28 18 கருகிய - இருண்ட 22 148 கருணாபாவனை - பிற உயிர்கட்கு உண்டாகும் துன்பத்தை நீக்கவிரைதல் 30 256 கலம்-யாழ் முதலிய கருவிகள் 28 42 கவயமா-காட்டுப்பசு 27 42 கவர்கோடல்-ஐயுறுதல் 27 22 கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த 22 20 காதலன் - புதல்வன் 22 30 காருக மடந்தை - இல்லற ஒழுக்கினள் 23 105 காலக் கணிதர்-சோதிடர் 28 40 காழியர்-பிட்டு வாணிகர் 28 32 காழ் - வயிரம் 22 148 கிரியை -தொழில் 22 24 கிருத்தம்-செய்யப்படுவது 29 388 குஞ்சி - குடுமி: ஆண்மக்களின் தலைமயிர் 22 154 குழவி - குழந்தை 29 5 குறி - குறித்த இடம் 25 164 கூஉய் - அழைத்து 22 32 கூவியர்-அப்பவாணிகர் 28 32 கைநிறை - கைகொள்ளும் படி 23 48 அருஞ்சொல் காதை அடி கைம்மலை - கையையுடைய மலைபோல்வது : யானை 26 81 கைவினை - செய்தொழில் 22 85 கொண்டோன்-கணவன் 22 51 கொற்றம் - வெற்றி 23 11 கொற்றவன்-அரசன் 25 186 சங்கயம் - ஐயம்: சந்தேகம் 29 230 சயித்தம் - கோயில் 28 131 சலம் - நீர் 24 47 சாமானியம் - பொது 27 243 சிக்கு - வன்மை; திண்மை 27 143 சிந்தனை - கேட்டவற்றை நினைவு கூர்தல் 30 258 சிமையம் - கொடுமுடி 26 88 சிலம்பு - மலை 28 108 சிவிறி - விசிறி 28 10 சிற்றில் - சிறிய இல்லம் 22 182 சீப்ப - ஒட்ட; போக்க 22 1 சீலம் - ஒழுக்கம்: விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல் 24 137 சுட்டல் - பொருண்மை காண்டல் 27 22 சுருதி-அறவுரை கேட்டல் 30 258 சூதர் - இருந்தேத்துவோர் 28 50 செம்போக்கு - நேராகச் செல்லுதல் 27 157 செயப்பாட்டுவினை - செய்வினை 23 77 செயலை - அசோகமரம் 24 38 செரு - போர் 23 14 செல்வுழி-செல்லும் இடம் ;வீரசுவர்க்கம் 23 14 செற்றம் - பகைமை 23 12 சேதியம் - கோயில் 28 175 சொல்லின் மாத்திரம் - சொல்லே பொருள் 27 72 சோழர்தம் குலக்கொடி(பதிகம்) 23 ஞானதீபம்-அறிவுவிளக்கு 30 262 தகைக்குநர் - தடுப்பவர் 23 36 தண்டமிழ்ப் பாவை - குளிர்ந்த தமிழ்ப்பாவை; காவிரி (பதிகம்) 25 தருப்பை - தருப்பைப்புல்; நாணற்புல் 23 13 அருஞ்சொல் காதை அடி தலையெடுத்தாய் - நீக்கினாய் 22 103 தாதகிப்பூ - ஆத்திப்பூ 27 264 தாதை - தந்தை; பெற்றவன் 22 79 தாதை - தந்தை; பெற்றவன் 28 123 திகிரி - ஆணைச்சக்கரம் 22 16 திட்டாந்தம் - எடுத்துக் காட்டு 29 57 திணிதல் - சேர்தல் 22 45 திரிதல்-ஒன்று மற்றொன்றாக வேறுபடல் 27 22 திருகி - மிகுந்து 22 157 திருத்தக - செம்மையாக 29 275 திலகம் - திலகம்போல்வது; மேலானது 26 43 துக்கம் - துன்பம்: பிறப்பு பிணி, மூப்பு, சாவு என்பன 25 4 துடைக்கும் - நீக்கும் 23 6 துணிகயம்-தெளிந்த நீரினையுடைய குளம்: ஊருணி 24 84 துணிபொருள் - மெய்ப்பொருள்: தத்துவஞானம் 23 136 துயக்கு - குற்றம் 27 19 துளங்காது-நடுங்காமல் 22 8 துன்ன வினைஞர் - தையல்வேலை செய்வோர் 28 39 தூ பற்று: விருப்பத்துக்குக் காரணமாகவுள்ளது 25 92 தெய்வக் கல் - தெய்வப் படிமம் அமைத்தற்குரியகல் 26 89 தெவ்வர் - பகைவர் 23 12 தெறுதல்-எரித்தல்: அழித்தல் 27 123 தெற்றி-வேதிகை திண்ணை 26 72 தேம் - அழகு 25 86 தேஎம்-தேசம்: நாடு 23 12 தேசம் - இடம் 27 23 தேவகுலம் - கடவுளர் கோயில் 26 72 தேறு-தேற்றாங்கொட்டை, தேற்றா விதை 23 142 தொகுதி - தொகுப்பு; சேர்க்கை 24 136 தோற்றம் - பிறத்தல் 24 107 தோற்றரவு - தோற்றம்; பிறவி 26 56 தோன்றினன் - பிறந்தான்; 22 221 அருஞ்சொல் காதை அடி நகுதல் நகைத்தல்; சிரித்தல் 24 23 நண்ணார் - பகைவர் 22 29 நவை-குற்றம் 27 1 நன்பொருள்-மெய்ப்பொருள் 27 1 நாணுத் தகவு - நாணுந்தகுதி 23 16 நாப்பண்-நடுவண்; நடுவில் 22 145 நாப்புடை-நாக்கின் அடி 23 16 நாமம்-பெயர் 27 23 நிம்பம் - வேம்பு 27 183 நிரப்புநர் - கொடுப்போர் 23 133 நில்லா - நிலைபெறா 22 135 நிவந்தோங்கு-மிகவுயர்ந்த 22 14 நின்மிதி-நியமிக்கப்படுதல் 30 37 நுகர்வு-இன்ப துன்ப நுகர்ச்சி 24 106 நொடி - பொருளொடு புணர்ந்த நகைமொழி 22 62 நோன்பு - தவம் 22 208 பக்கம் - இடம்வலம் என்ற பக்கங்கள் 27 255 பசுமிளை-பசியகாவற்காடு 28 25 படப்பை-பக்கம்; தோட்டம் 25 16 பட்டவை - உண்டாகுந் துன்பங்கள் 23 6 பயந்தோய்-பெற்றோய்: (முன்னிலை யொருமை) 23 100 பயிர்க்குரல்-விளியோசை : கூப்பிடும் ஒலி 23 116 பரசுதல்-வணங்குதல் 27 88 பரம அணு-மிக நுண்ணிய அணு 27 126 பவத்திறம்-பிறப்புக்கு ஏதுவாகிய குற்றம் 30 264 பவம்-நல்வினை தீவினைகளின் பயன் தருகின்ற முறைப்படி சார்தல் 24 107 பளிதம் - கற்பூரம் 28 243 பற்று - புலன்களைப் பற்றிக் கொள்ளுதல் 24 107 பாங்கு - பகுதி: பகுக்கப்படுவது 27 78 பாசவர்-வெற்றிலை விற்போர் 28 33 பாசிலைத் திரையல் - பசிய வெற்றிலை 28 243 அருஞ்சொல் காதை அடி பாடகம்-காலிலணியும் ஒரு வகை அணி 25 85 பாணி - கைகள் 27 237 பாயுரு - எருவாய் 27 237 பாரமிதை - வீடு பேறாகிய கரையை அடைதற்குரிய பத்துவகைகள் 26 45 பாவனை-கேட்டவாறு நடத்தல் 30 258 பாவை - ஓவியம் ; பாவைபோலுள்ள மணிமேகலை 30 264 பான்மை-முறைமை 23 47 பிசி-பொருளொடு புணராப் பொய்ம்மொழி 22 62 பிடகநெறி - புத்தனருளிச்செய்த ஆகமங்களின் வழி 26 66 பித்தை - குடுமி 22 149 பிரத்தியம் - காட்சி; நேரில் அறிவது 27 83 பிரமாண ஆபாசங்கள் -அளவைகட்குப் பொருந்தாதவைகள் 27 85 பிறகிடுதல்-பின்னே இருக்கும்படி கடந்து செல்லுதல் 22 102 பிறர்நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்தில் புகுதல் இலர் 22 46 பின்நிலை - தாழ்ந்து நிற்றல் (பதிகம்) 19 புகுந்தது-நிகழ்ந்தது: நடந்தது 23 87 புத்தேள் - தேவர் 22 118 புலங்கொளல்-அறிதல் 27 13 புலைமை-புன்மை, கீழ்மை 24 80 புறங்காத்தல்-பாதுகாத்தல் 23 11 புறம் - வௌத்யிடம் 23 22 புன்னை-புன்னைமரம் 25 157 பூவிலை - பூவிற்கு விலை; அற்றைப் பரிசம் 24 19 பெட்டு - விரும்பி 22 70 பெரும்பிறிதாக்கல்-கெடுத்தல் 23 28 பெரும்பேறு-வீடுபெறுதல்: மோட்சம் 30 49 பெற்றி - தன்மை 22 67 பெற்றிமை-தன்மை; இயல்பு 21 161 பேணல்-வணங்குதல் 22 64 பேதைமை-மயங்கிக் கண்டது மறந்து கேட்ட பொய்யை மெய்யெனத் தெளிதல் 24 105 அருஞ்சொல் காதை அடி பொதுவர் - பொதுமகளிர்; கணிகையர் 28 51 பொல்லாக்காட்சி - மயக்க அறிவு 24 129 பொறை யுயிர்த்தல்- இளைப்பாறுதல் 24 165 பொன்வாகை -பொன்னாற் செய்யப்பட்ட வெற்றிமாலை 26 90 பொன்றக்கெடாஅ-முழுதும் கெடாத 30 223 போந்து - வந்து 22 88 போழ்நர்-அறுப்பவர் 28 44 போழ்ந்து-பிளந்து: கீறி 23 13 மகரம் - மகரமீன் 29 15 மங்கலமொழி-நன்மொழி; அறமாகிய சொற்கள் 30 261 மணிவினைஞர் - முத்துக்களைக் கோப்போர் 28 45 மண் - அணு 22 45 மதி - திங்கள்: மாதம் 24 42 மம்மர் - மயக்கம் 22 128 மயரி - மயக்கமுடையோன் 22 75 மயல் - மருள்: பித்து 23 41 மயற்பகை - பித்தேற்றும் மருந்து 23 92 மயிலை-மல்லிகை 24 38 மருங்கு-குலம்; வழிமுறை 22 25 மலைதல்-மாறுபடுதல் 30 261 மல்லல்-வளப்பம் 23 132 மழுவாள் நெடியோன்-பரசுராமன் 22 25 மறவர் - வீரர் 26 82 மனமாசு-மனவிருள்; திரிபான எண்ணம் 22 94 மன்பதை-உயிர்ப்பன்மை: உயிர்ப் பொருள்களின்தொகுதி 23 16 மாகதர்-நின்றேத்துவோர் 28 50 மாண்ட-மாட்சிமைப்பட்ட;சிறந்த 27 39 மாயை - வேற்றுருவம் 28 245 மாறு - பகைமை 23 143 மான்று - மயங்கி 23 107 முங்கி-மூழ்கி; அமிழ்ந்து 29 16 முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிட்ட உண்மைப் பொருள் 22 169 அருஞ்சொல் காதை அடி முதிகைப் பாவனை - பிற உயிர்கள் நலங்கண்டு அவை என்றும் நன்கு வாழ எண்ணுதல் 30 256 முதிராக் கிளவி - இளஞ் சொல்: மழலைமொழி 22 181 முதுநீர்-பழமையாகிய நீரையுடையது: கடல் 22 169 மேலை - மேன்மை 28 11 மைந்நிண விலைஞர்- இறைச்சி விற்போர் 28 33 மையறு மண்டிலம் - குற்ற மற்ற கண்ணாடி 25 137 யாப்பறை-உறுதியற்றவன் 22 42 வடிவேல்-கூரியவேல் 25 202 வயிரம் - வைரமணி 27 135 வர்த்தித்தல் - உண்டாதல் 29 256 வல்லாங்கு-வல்லமை 23 44 வழி - மரபு; குலம் 22 210 வளம் - வருவாய் 22 45 வளி - காற்று 24 86 வளையோன்-வளைய லணிந்தவள் 26 68 வற்பம்-வன்மை : திண்மை 27 120 வனப்பு - அழகு 22 128 வாகை - வெற்றி 24 55 வாக்கு - வாய் 27 237 வாசவர் - பஞ்சவாசம் னூ விற் போர் 28 33 வாயில் ஐம்பொறிகளும், உள்ளமும் 24 106 வாய்வாளாமை-வாய்பேசா திருத்தல் 30 237 வாளால் எறிதல் - வாள் கொண்டு வெட்டுதல் 22 158 விசி - கட்டுதல் 22 63 விசேடம் - சிறப்பு 27 243 விபரீதம் - விகாரம்; வேறு பாடு 27 125 வியன் - அகலம் 25 1203 விளிதல் - இறத்தல் 23 15 வீட்டியது - கொன்றது : வீழ்த்தியது 23 85 அருஞ்சொல் காதை அடி வீயா - கெடாத ; மாறாத 22 162 வீற்று வீற்றாக - வெவ்வேறாக 30 221 வெஃகல் - விரும்புதல் 30 70 வெம்மை - சினம் 26 12 வெய்யவன் - சூரியன் 25 30 வெய்யவன் - விரும்பினோன் 26 91 அருஞ்சொல் காதை அடி வேட்டனை-விரும்பினாய் 25 113 வேதாளிகர் - நாழிகைக் கணக்குக் கூறுவோர் 28 50 வேத்தவை - வேந்தவை : வலித்தல் விகாரம். அரசர் பேரவை யென் பது பொருள் 28 118 வைதிக மார்க்கம்-வேதநெறி 27 3 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தாகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் 1 தொளி. 1. கொத்தன ரென்றே. 1 சீவக : 77. 1. முருகு : 275. 2. மணி. பதிகம் : 10-12. 1 சிலப். 5; 128 - 34. 1. குறள் : 55. 2. தொல், செய், 165. 1. கலி. நெய்தல்: 16. 2. கம்ப. பால. மிதிலைக். 5. 1. தொல். புறத். 8. 2. சீவக. 2167. 3. பழ. 242. 4. சிலப். 20: 53-9. 5. விக்கிரம சோழனுலா. 4 (பாடம்) 1. அழுதனளடி வீழ்ந்து 2. காத்துச் 3. செற்ற தெவ்வர். 1 புறம். 93. 2 தொல். அகத். 44. உரை. 1. சிலப். 30: 25-8 1. சிலப், 1:122. 2. புறம். 163. 1. முருகு. 186-7. 2. நெடுநல். 107. 3. சீவக. 275. 1 கலி. 5. 1. மணி. 32: 45--6. 2. பெரும்பாண். 40-1. 1. சிலப். 21 : 35. 1. சிலப். 5 : 51. 1. குறள், 1101. 2. சூடா நிகண்டு. 2;4. 3. பெருங்கதை. 3-4:86-90 1 சிலப் 11 : 180-3. 1. அகம்: 71. 1. சிலப். 15: 151 1. மணி. 30: 56-60. 1. தொல். புறத ச்திணை. 24. 2. புறம். 3. 1. மணி. 15:4. 1. குறள். 130. 2. குறள். 1302. 1. கம்ப. பால. அரசியல். 4. 2. புறம். 4. 3. குறுந். 361. 1. மணி. 7: 131. 2. சிலப். 25: 106. 1. மணி. 4 : 195 - 4. 2. ஏலாதி. 9. 1. சிலப். 24. தென்னவன். (பாடம்.) 1 றழுது ணிற்ப. 1. சிலப். 15:163-6. 2. சிலப்.29: ‘தற்பயந்தாள்.’ 3. மணி. 2:42-48. 1. சீவக. 1833. 27. 2. சிலப். 23 :70. 1. குறள். 305: 2. நீல. மொக்கல. 88. 3. வீர. யாப்பு. 11-உதாரணம். 1. மணி. 24 : 105-7. 2. சிலப். 10 : 11-4. 3. திருச்சிற். 10.உரை. 1 புறம். 33. 2 சீவக: 76. 1 சிலப். 26: 50-1. 1. புறப் - வெ. 68. 2. மணி. 28 ; 101-2 3.. மணி. 2 : 4-7 : 26 : 48. 1. பகிர்ந்திட்டனர். 2. கருத்தேயுவம. 3. மாண்டவருத் தாபத் தீயோடியைபு. 1. குறிகொளனு மானத். 2. இயைபியானை. 1. நிச்சயியாது. 2. கடுமருப்புலியி லோர்ந்து. 1. வேதத், தாதியந்தமில்லையதுவே நெறியெனும். 2. பூரணனை. 3. நால்வகையினு. 1. வேற்றியலெய்தும். 2. புத்தாய்ப். 3. மலையும். 4. வரைப்பால். 5. துன்றும். 6. மிக்க வதனிற். 7. நோலா பூதத்திரட்சி. 8. மயிரும். 9. கழிவேய் பிறப்பிற். 1. இறத்தலு மிழத்தலும். 2. பிறக்கும். 1. ஒத்துத் தோன்றி. 1. முக்குணமின்றி. 2. பொருளுமின்றி. 1. தழிவின்; 2. வெனநக்கிடுதலும். 1. இக் கிருதகோடி யென்பாரது வரலாறு இதுகாறும் ஆராய்ச்சிக்கு நன்கு விளங்கவில்லை. 1. இதனைச்சபரர் முதலியோர் திருஷ்டார்த்தாபத்தி, சுருதார்த்தா பத்தி யென இருவகைப் படுத்துரைப்பர். கௌடிலியர் தந்திரவுத்திகளில் ஒன்றாக்குவர் (அதி. 15: அத். 1). 1. தார்க்கிகரட்சையென்னும் நூலாசிரியரான வரதராச ரென்பார், உலகாயதர் காட்சயாகிய ஓரளவையும், புத்தரும் வைசேடிகரும் காட்சியும் கருதலுமாகிய இரண்டளவையும், சாங்கியர் அவ்விரண்டோடு உரையினைக் கூட்டி மூன்றளவையும், நையாயிகருள் ஒரு சாரார் அம்மூன்றோடு உவமையைக் கூட்டி நான்களவையும், மீமாஞ்சகருள் ஒருசாரார் அந்நான்குடன் அபாவத்தைக் கூட்டி ஐந்தளவையும் கொண்டனர் என்பர். சைவருட் பெரும்பாலோர் காண்டல், கருதல், உரையென்ற மூன்றளவையும், பௌட்கர முதலிய ஆகமவழி நின்றோர் அம் மூன்றோடு அருத்தாபத்தியைக் கூட்டி நான்களவையும் கொள்ப. பட்டாசாரியன் நெறி நின்றோர், காட்சி, கருதல், உரை, உவமை, அருத்தாபத்தி, அபாவம் என்ற ஆறுமே கொண்டன ரென்றும், பிரபாகர நெறி நின்றோர் அபாவமொழிந்த ஏனை ஐந்துமே கொண்டன ரென்றும், நையாயிகர் அருத்தாபத்தி யொழிந்த ஏனை நான்குமே கொண்டன ரென்றும், சாங்கியர் உவமை யொழிந்த மூன்றும் கொண்டனரென்றும், வைசேடிகரும், புத்தரும் காட்சியும் கருத்துமே கொள்பவென்றும், உலகாயதர் காட்சியொன்றே கொள்வரென்றும் சாத்திர தீபிகையின் ஆங்கில முன்னுரை கூறுகிறது. 1. வேதம் அநாதி நித்தியமென்பது பற்றி நிகழும் தடை விடைகளை நியாய பாடியத்தும் நியாயவார்த்திக தாற்பரிய டீகை (i. 1. 68)யிலும் நீலகேசி வேதவாதச் சருக்கத்தும் (ix) சாத்திர தீபிகை (அதி. VIII) முதலிய வேறு பல நூல்களிலும் காணலாம். 1. இம்மற்கலி கோசலர் மக்கலி கோசலரென்றும் கூறப்படுவர். இவர் ஆசீவகருள் மூன்றாந் தீர்த்தங்கரரென்றும், அசோகமன்னனுடைய பேரனான தசரதனென்பான் இந்நெறியிற் பேரீடுபாடுடையனென்றும் கூறுவர். ஆசீவகநெறியைக் கண்ட ஆசிரியன் எளிய குடியில் ஆக்களைக் கட்டும் தொழுவத்தில் (கோசாலையில்) பிறந்ததுபற்றி, அவர் நெறி நின்ற தலைவர்கள் கோசலர் எனப் பட்டனர். மக்கலி என்ற சொற்குப் பலரும் பல்வேறு பொருள் உரைப்பர். சிலர் இவர்தந்தை வீடுதோறும் சென்று ஓவியங்கள் காட்டி வயிறு வளர்த்தது பற்றி, அவர் மகனான இவர் மக்கலி யெனப்பட்டாரென்றும, சிலர் இவரைப் பின்பற்றினோர் ஆடையின்றி யம்மணமாய்த் திரிந்தமையின் தம்மைப் பாதுகாத்துக் கோடற்கு மூங்கிற் கோலைக் கையிலேந்தித் திரிந்தமையின் இப்பெயர் பெற்றன ரென்றும், சிலர் "இடறி விழாதே" (மா. கலி.) என்று அடிக்கடி இவர் தம் மாணவர்க்குரைத்ததுபற்றி இவ்வாறு பெயர் பெற்றாரென்றும் கூறுப (History of Indian Philosophy Vol. II. P. 456). "யாதும் செய்யாதே; சும்மா இரு" என்பது ஆசீவகர் குறிக்கோள் என்பர் (பதஞ்சலியார் பாடியம். Vol. III. பக். 96). நீலகேசியும், "மோனாந் திருந்தனன்" (680) என்கின்றது. 1. காரணகாரிய சாமானியக். 1. மேவிய பக்கத்து 1. பிரமாண சமுச்சயம் ii. 30 Buddhistic Logic, Vol. I. P. 266. 1. Indian Philosophy p. 80.(2nd Edn.) 2. செந்தமிழ் Vol. 34. பக். 46. 1 செந்தமிழ் Vol. xxxii. பக் 29-30. 1. நியா. பிர. 2. பதார்த்த.பக். 234. 1. அனுமான பரிச்சேதம் சு, 52-75 1. வைசேடிக சூத்திரம். iii. 2. 8. 12. 2 சாங்கி, சூ. பாடி. i. iii. 123, 1. தத்து. சங்கி. 1484. 1. செந்தமிழ் Vol, XXXii. P. 159. 2. வை, N. v. 1,2 3. 3. தத்துவ சங்கிரகம் Vol. I Chap. VII. 4 217, 218, 219. 1. O. R. J. Vol. XI. P. 125-6. 2. நியா. பிர. பக். 3-8 3. Ind. Logic. P. 190. 4. நியா. பிர. பக். 9-10(3) 1. வைசேடிகபாடியம், பக். 238-9. 2. அனுமானபரிச்சேதம் (75-83). 1. முதல் துணை நிமித்தமெனக் கொண்டு செய்யும் காரணகாரிய வாராய்ச்சிக்கண் அன்னியதாசித்த மென்ற குற்றவாராய்ச்சி நிகழ்த்தப் படுதலை சித்தாந்த முக்தாவளி முதலிய வடநூல்களுட் காண்க. 2. செந்தமிழ் XXXii. பக். 207. 1. பௌஷ்: பாடி, 4. 838. 9 உரை, சிவநெறி. பக். 31.2. 2. Fragments from Dinnaga. P. 29-33. 1. நியா. பிர. பக். 3. 18-21. 2. பிரசத்த. பாடி. பக். 228. 3. நியா. பிர. பக். 3-4. செந்தமிழ் XXXII. பக். 235-9. 1. நியா. பிர. பக். 4-2. 2. பிரசத் பாடி. பக்த. 238-9. 1.. நியா. பிர. பக் 4-2--10. 2. விருத்தியைச் சூக்கும பரிணாமமென்றும் கூறுப. 1. நியா. பிர. பக். 4, 10-16. 1. சுலோக வார்த்திகம், அனுமான. 96. 2. நியாயபிந்து. பக். 115 1. ஒழிபொருளைப் பரன் என்பது தருக்க நெறி. இது ஞானாமிர்த முதலிய தமிழ் நூல்களிலும் மிருகேந்திர முதலிய வடநூல்களிலும் வழங்குவது சித்தார்த்த சைவர் அறிந்தது. 1. இச்சாங்கிய வாதம் சாங்கிய காரிகை (காரிகை 17) யிலும் சுலோக வார்த்திகத்திலும், (அனுமானபரி. 96-107) நியாய ரத்னாகரத்திலும், சாந்த ரஷிதருடைய தத்துவ சங்கிரகத்திலும் (vii 307-10) காணப்படுகிறது 1. சுலோக. வார்த். அனுமான, 100-101. 1. சுலோ, வார்த். அநுமான. 102-103. 1. வைசே. பாடி. பக். 247. 1. நியாயபிந்து. பக், 166-7. 1. பௌட்க, பாடி. (897-898. உரை.) 2. 28 உரை. 1 பிரசத்த பாடி. பக். 247. 1. தீயசாதனமாவது பக்கப் போலி ஏதுப் போலி திட்டாந்தப் போலி யென்பதை நியாயப் பிரவேசம், "ஏஷாம் யக்ஷ ஹேது த்ருஷ் டாந்தா பாஸா நாம் வசநாநி ஸாதனாபாசம்" என்பது காண்க. 1. 83. 1. அவதான சதகம் (1: 301-4). 1. "No destruction. no production; no discontinuity, no per manence; no unity; no diversity: coming (appearance), no going (disappearance)" - (11--13.) 1. பக். 323. 2. Bodhi Sathva Docrine P. 242. 1. Compendium of philosophy by Rys Davids. p. 262. 1. தரும சங்கிரகம். Sec. 127, 128, 129. 1 தரும சங்கிரகம் Sec. 96. 1. 141-1. (i-xii) 2. லலிதா விஸ்தாரம். 35: 9.