பாவேந்தம் - 3 காப்பிய இலக்கியம் – 3 குடும்ப விளக்கு இருண்ட வீடு ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 3 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2009 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 216 = 248 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 230/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. பாவேந்தர் பாரதிதாசன் 119 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு வெளியீடு பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  குடும்ப விளக்கு புரட்சிக் கவிஞரின் படைப்புகள் பலவற்றினின்றும் வேறுபட்டு அனைத்துக் கவிதைகளிலும் உயர்ந்த நிலையில் அமைந்திருப்பது குடும்ப விளக்கு என்னும் இனிய காப்பியமாகும். இது தமிழிலக்கிய நெறியில் ஒரு புதுநெறியாக அமைந்தது. பழங்காலச் சமுதாயத்தை நினைவுகூர்ந்து எதிர்காலச் சமுதாயம் எவ்வாறிருக்க வேண்டும் என்று கனவு கண்டு இந்நூலினைச் சிறப்புற யாத்துள்ளார். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தங்கம் - மணவழகு என்னும் நடுத்தர வணிகக் குடும்பத்தினரை மையமாகக் கொண்டு செல்வது குடும்ப விளக்கு. தங்கம் பெயரில் மட்டுமன்றிக் குணத்திலும் இல்லற மாண்பிலும் அருளொழுக்கத்திலும் தங்கமாகவே காட்சி தருபவள்; மணவழகு தங்கத்திற்கு வாய்ந்த தகுதிமிக்க துணைவன். வணிகத்தொழில் புரிபவன். தங்கம் வேலைக்காரியின்றிக் குடும்பத்தின் அனைத்து வேலை களையும் அயராது செய்கின்றாள்; மாமன் மாமியின் நன்மதிப்பைப் பெறு கின்றாள். விருந்தினரை இன்முகம் கொண்டு வரவேற்றுச் சிறந்த முறையில் அன்பினைச் சொரிகின்றாள். வில்லியனூர்ச் செல்வர் மாவரசனாரும் மலர்க்குழலியும் நாவரசும் நகைமுத்தும் தங்கத்தின் வீட்டிற்கு விருந்தினராக வருகின்றனர்; மண வழகன் மகன் வேடப்பனுக்கும் நாவரசின் மகள் நகைமுத்துவுக்கும் காதல் வளர்கின்றது; திருமணத்தில் முடிகின்றது. திருமணம் தமிழர் முறைப்படி புரட்சித் திருமணத் திட்டப்படி பெரியோர் தலைமையில் நடைபெறுகின்றது. மணம் கொண்ட மக்கள் வள்ளுவர் குறளின் பொருளாய்ந்து வாழ்வில் இன்பம் கொள்கின்றனர். வாழ்வின் பயனாக அமிழ்து என்னும் மக்கட்பேறு பெறுகின்றனர். அவர்தம் உயர்நிலை கண்டு முதியோராகிய பெற்றோர் மெத்த மகிழ்ச்சி உறுகின்றனர். இந்நூல் ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், மக்கட்பேறு, திருமணம், முதியோர் காதல் என்னும் ஐந்து பகுதிகளைக் கொண்டது. குடும்ப விளக்கு ஒருநாள் நிகழ்ச்சியில் முதற்பதிப்பில் பிரிவுத் தலைப்புகள் இல்லை. ஆனால் ஐந்து பகுதிகளும் சேர்ந்து மொத்தமாக வெளியிடப்பட்ட பதிப்பில்தான் பிரிவுத் தலைப்புகள் இடம்பெறுகின்றன. குறைந்த கதை மாந்தர்களைக்கொண்டு நிறைந்த வாழ்வைக் காட்டிக் கற்போர் உள்ளத்தில் ஆழமான வாழ்வியலை உணர்த்துகின்ற உயர்ந்த காப்பியம் குடும்பவிளக்கு. ஐந்து சுடர்களைக் கொண்ட அழகிய குத்து விளக்கினைப்போல ஐந்து பகுதிகளைக் கொண்டதாக விளங்குகிறது குடும்பவிளக்கு. பழந்தமிழர் இல்லற வாழ்வை விளக்கும் ஓவியமாக விளங்குவதும், கவிஞர் கண்ட இலட்சியப் பெண்ணின் மொத்த உருவமாகக் காப்பியத் தலைவி விளங்குவதும் நூலின் பொருட் சிறப்பாகும். முதியோர் காதலைப் பற்றி இதுவரை யாரும் சிறப்பாகப் பாடவில்லை. அத்தகைய புதுமையினைக் கொண்டு விளங்குவது இந்நூலின் மற்றொரு சிறப்பாகும். தமிழிலக்கியத்தில் விடப்பட்ட இடம் பாவேந்தரால் முழுமை செய்யப்பெற்றுள்ளது. குடும்ப விளக்கு தொடர்ந்தாற் போல எழுதப்படாமல் கால இடைவெளிபெற்று எழுதப்பட்டாலும் ஆற்றொழுக்கு நடையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எளிய நடையில் அனைவரும் இன்றியமையாத இல்லற வாழ் வியலைப் புரிந்து கொள்ளும் வண்ணம் கவிதைச் சுவையோடு குடும்ப விளக்கு இயற்றப்பட்டுள்ளது. குடும்ப விளக்கு தமிழ்க் குடும்பங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் திகழும் நிலைத்த புகழுடைய நூல் என்பதில் ஐயமில்லை. இக்காப்பியம் வெண்பா 2 - அடிகள் 8ம்; பஃறொடை வெண்பா 4-152 அடி கொண்டு கலிவெண்பா 1-ம் 418 அடிகளும்; நேரிசை ஆசிரியப்பா 25-ம் 753 அடிகளும்; அறுசீர் விருத்தம் 221-ம் 884 அடிகளும் எண்சீர் விருத்தம் 50-ம் 200 அடிகளும் 15 அடிகளைக் கொண்ட 2-இசைப்பாவும் நாலடித்தரவு கொச்சகம் 18-ம் அடிகள் 72-ம், கட்டளைக் கலித்துறை 10-ம் 40 அடிகளும்; வெண்டளையால் வரும் தாலாட்டு 4-ம் 68 அடிகளும் சிந்து கண்ணிகள் 16-ம், 64 அடிகளும் கொண்டு 353 பாடல்களும், 2675 அடிகளால் கொண்டதுமாகும். இருண்ட வீடு சமுதாயக் குறைகளைக் கண்டவிடத்து அதை நகைச்சுவை ததும்பக் கிண்டலும் கேலியுமாய்ச் சுட்டிக் காட்டுவதும் நேரிடையாகச் சுட்டிக் காட்டிக் சாட்டையடி கொடுப்பதும் கவிஞருக்குக் கைவந்த கலையாகும். ‘கிண்டல்காரன்’ என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரைகளும், கதை களும், துணுக்குகளும் தனிக்கவிதைகளும் இதற்குச் சான்று. அவ்வாறு பாரதிதாசனின் சிறப்பு வாய்ந்த காப்பியத்தில் ஒன்று இருண்டவீடு. கவிஞரின் அங்கதக் காப்பியத்தில் (எள்ளல்) ஒன்றான இருண்ட வீடு கல்வியறிவு இல்லாத குடும்பத்தில் அறியாமை எங்ஙனம் ஆட்சி செலுத்துகிறது என்பதை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறது. எல்லா நலனும் விளைக்கும் கல்வியறிவு நிறைந்த குடும்ப விளக்கைத் தந்த கவிஞர் இருண்ட வீட்டையும் தந்துள்ளார். இனியவை நாற்பதைக் கண்ட தமிழிலக்கியம் இன்னா நாற்பதைக் கண்டதுபோலக் குடும்பவிளக்குக்கு நேர் எதிர்மறையாக இருண்ட வீடு தோன்றியுள்ளது. கதிரவன் ஒளிவீசுகின்றான். கட்டிலில் உறங்கும் அவ்வீட்டுத் தலைவியை எழுப்புகிறான். ஆனால் அவள் எழவில்லை. உறங்குகிறாள். எண்ணற்ற வேலைக்காரர்கள் அவர்தம் வேலையினைச் செய்கின்றார்கள். பால் கறந்து வைக்கப்படுகிறது. விழித்தெழுந்த பெரிய பையன் பாலைத் தண்ணீரெனப் பல்துலக்கிப் பிட்டைத் தின்று வயிறு வலிக்க ஓடி, மாட்டின் மீது விழுந்து இரண்டு பல்லையும் இழக்கிறான். பல் விழுந்ததற்குச் சாணி ஒத்தடம் தரப்படுகிறது. இளைய பிள்ளையின் நோய்க்கு வீட்டில் ‘இருளன்’ புகுந்த காரணம் என்று கருதித் தலைவி மந்திரக்காரனை அழைக்கிறாள்; கொண்ட வனுக்கு உணவளித்து ஓம்பவில்லை. வேலைக்காரியே உணவளிக்கிறாள். வீட்டின் நிலைமையறிந்த வேலைக்காரர்கள் அவரவர் எண்ணப்படி செயல்படுகின்றனர். கணக்கன் உறங்குகிறான்; வேலைக்காரி விரும்பிய அளவு பால் குடிக்கிறாள். கேட்பாரில்லை. வந்த விருந்தினனாகிய அண்ணனை ஓம்பாததால் அவர் கடையில் உண்டு வருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் வீண் சண்டை மூள்கிறது. இரவில் திருடன் நுழைகின்றான். சினத்தால் தலைவன் சந்தனக் கல்லையும் முக்காலியையும் வீச மனைவி மக்கள் இறக்கின்றனர். எரிந்த விளக்கும் அணைகிறது. வீடு இருண்ட வீடாகிறது. இருண்ட வீடு உவமை நயம் நிறைந்தது. கதைமாந்தர் பெயரின்றி உலவுவது. தீய குடும்பம் ஒன்றையே சுட்டிக் காட்டுவதால் பெயர் தேவை யில்லை என்று கருதினார் போலும் ஆசிரியர். விறுவிறுப்பான கதை யமைப்பைக் கொண்டுள்ளது இக்காப்பியம். நகைச்சுவை இந்நூலின் சிறப்பாகும். இந்நூல் ஒரு நகைச்சுவைக் களஞ்சியம் என்பார் டாக்டர் சாலய் இளந்திரையன். சமுதாயக் குறைநீக்க வந்த ஒரு மருந்திலக் கியம் இருண்ட வீடு என்பது உண்மையாகும். கல்வியில்லாத வீடு எவ்வாறு இருண்டிருக்கும் என்று காட்டுவது இக்காப்பியத்தின் நோக்கமாகும். கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வி யில்லையேல் அறிவில்லை, ஒழுக்கமில்லை, எதுவுமில்லை. அக் குடும்பத் தினர் அடையத்தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக் கிறேன் என்று பாவேந்தர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் இறுதியில் இல்லார்க்கெல்லாம் ஈண்டுக் கல்விவந் ததுஎனில் கடைத்தேறிற் றுலகே! என்று கவிஞர் கூறியுள்ளது ‘கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கம் என்ற கருத்தை உறுதியாக்கு கிறது. தெளிவுபடுத்துகிறது. இந்நூல் அகவல், ஆசிரியம் என்றுரைக்கப்படும் நேரிசைப்பா வால் 33 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே பாட்டு. 780 அடிகளைக் கொண்டது. -1978ஆம் ஆண்டு முனைவர் ச.சு. இளங்கோஅவர்களால் எழுதப்பட்ட “கதைப் பாடல்கள் ஓர் ஆய்வு” எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை V நுழையுமுன் ... IX வலுவூட்டும் வரலாறு XII பதிப்பின் மதிப்பு XVI 1. குடும்ப விளக்கு முதற் பகுதி - ஒருநாள் நிகழ்ச்சி 1 இரண்டாம் பகுதி - விருந்தோம்பல் 31 மூன்றாம் பகுதி - திருமணம் 69 நான்காம் பகுதி - மக்கட்பேறு 105 ஐந்தாம் பகுதி - முதியோர் காதல் 149 2. இருண்ட வீடு 171 குடும்ப விளக்கு *முதற் பகுதி - ஒருநாள் நிகழ்ச்சி ஆக்கியோன் முன்னுரை குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்! “நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்!” இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்டவுடன், துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல், வேளைக்குச் சாப்பிடுவதுதான் குடும்ப ஒழுக்கம் என்று நினைத்து விடுகிறார்கள். பெண்களிடம் இது பெருவழக்கமாகி வருகிறது. கணவன்மாரும் இந்நிலை முழுத்தன்மை வாய்ந்தது என்று முடிவு கட்டுகிறார்கள். கற்றலும், அதற்குத்தக நிற்றலும் நிறைய அமைந்திருக்க வேண்டும் துணைவியிடத்தும் கணவனிடத்தும். இந்த நிலையில் அங்குத் தோன்றும் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இத்தகைய குடும்பத்தில் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரன், வேலைக்காரி வேண்டாம். அனைத்துக்கும் பிறர் கையை எதிர் பார்ப்பது நிலையற்ற செய்கை; எப்போதும் எதிர்பார்க்கக் கூடிய தன்று; ஏனென்றால், எல்லாரும் வேலைக்காரர் அல்லது எல்லாரும் உடையவர் என்ற நிலையை உண்டாக்கத்தான் அறிவுலகம் விரைந்து வேலை செய்கிறது. இவ் வையத்தின் நோக்கமும் அதுதான்! குடும்ப விளக்கில் வேலையாட்களுக்கு இடம் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டின் பண்டைய அறிஞர்கள் கண்ட குடும்பங்கள் நமக்குச் சீவகன் முதலிய பெருநூற்களிற் காட்சியளிக்கின்றன. இன்றைய நிலையில், எளிய நடையில் அமைந்த “குடும்ப விளக்கு” ஒரு நடுத்தரக் குடும்பம் இது என்று திட்டமாகச் சொல்லா விட்டாலும் கோடிகாட்டியதாகவாவது இருக்கும். குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி, மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க! துணைவியர் எழுத்தறிவில்லாராயின் படித்துக் காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியர் சொல்லிக்காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன். ஏனெனில், தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவதுண்டு. அப்படிச் சொல்ல வேண்டிய சிற்சிலவற்றைக் குடும்ப விளக்குச் சொல்லும்! மிகச் சிறியது, குறள் ஓவியம் குடும்பவிளக்கு; எனினும் இதை உருவாக்கி வெளியிட முன்வந்த தோழர் பாரதசக்தி நிலையம் பாலசுப்பிரமணியம் அவர்கட்கு என் நன்றியுரியது. - பாரதிதாசன் றறற 1. ஒருநாள் நிகழ்ச்சி அகவல் காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை; ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்தி டப்போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். அவள் எழுந்தாள் தூக்கத் தோடு தூங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை எழுந்ததும் எழுந்தன இருகை வீசி! தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி, குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்! கோலமிட்டாள் சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல் துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச் செங்காந் தள்நிகர் மங்கை விரலால் பெரிது செய்து விரிமலர்க் கையில் ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையொடு, முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும், கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும், சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி! காலைப்பாட்டு இல்லத் தினிலே ஏகினாள்; ஏகி யாழின் உறையினை எடுத்தாள்; இசையில் ‘வாழிய வையம் வாழிய’ என்று பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள். தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த் தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின் காதின் வழியே கருத்தில் கலக்கவே, மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர். அமைதி தழுவிய அழகிய இளம்பகல், கமழக் கமழத் தமிழிசை பாடினர். வீட்டு வேலைகள் பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்; செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்; பைம்புனல் தேக்கினாள்; பற்ற வைத்த அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக், குடிக்க இனிய கொத்து மல்லிநீர் இறக்கிப் பாலொடு சருக்கரை இட்டு நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநிலா முகத்தாள் “அத்தான்” என்றனள்; அழகியோன் வந்தான். கணவனுக்கு உதவி வந்த கணவன் மகிழும் வண்ணம் குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி, துளிதேன் சூழும் களிவண்டு போல அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து, மின்னிடை துவள, முன்னின் றுதவி, வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின், குழந்தைகட்குத் தொண்டு “பிள்ளைகாள்” என்றனள்! கிள்ளைகள் வந்தனர்! தூய பசும்பொன் துகளினைப் போன்ற சீயக் காய்த்துகள் செங்கையால் அள்ளிச் சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும் தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு நன்னீ ராட்டி நலஞ்செய் தபின்னர் பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத் துடைத்து, நெஞ்சில் சுரக்கும் அன்பை அடக்கா தவளாய் அழகுமுத் தளித்தே, “பறப்பீர் பச்சைப் புறாக்களே” என, அவர் அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார். காலை யுணவு அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை; “வந்தேன்” என்று மணாளன் வந்தான்; “வந்தோம்” என்று வந்தனர் பிள்ளைகள். பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்த் தழைத்த வாழைத் தளிரிலை தன்னில் பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்; காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர். தாய்தான் வாத்திச்சி நேரம் போவது நினையா திருக்கையில் பாய்ச்சிய இளங்கதிர் பட்டது சுவர்மேல்; அவள் கண்டு, காலை “ஆறுமணி” என உரைத்தாள்; கணவன், “இருக்கா” தென்றான். உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின் அண்டையில் இருந்த அடிக்கும் மணிப்பொறி, பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள். அவள்வாத் திச்சி; அறைவீடு கழகம்; தவழ்ந்தது சங்கத்தமிழ்ச்* சுவை; அள்ளி விழுங்கினார் பிள்ளைகள்; “வேளை யாயிற்றே! பள்ளிக்குப் பிள்ளைகள் எழுங்கள்” என்றனள், எழுந்தனர்; சுவடியை ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப் புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள் சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை கையில் தந்து, கையொடு கூட்டித் தையல், தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக் கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி அளவ ளாவினாள் ஆள னிடத்தில். கடைக்குப் போகும் கணவன் கடைக்குச் செல்லக் கணவன், அழகிய உடைகள் எடுத்தே உடுக்க லானான். “கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர் மழுக்குவீர் அத்தான்” என்று மங்கை சொன்னாள். நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும் சட்டை மாட்டத் தன் கையில் எடுத்தான். பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்; தைத்தாள் தையற் சடுகுடு பொறியால். ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப் பாண்டிய மன்னன் மீண்டது போல, உடுத்திய உடையும் எடுத்த மார்பும் படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள். வெற்றிலைச் சுருள் ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின், வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்; கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர் வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள். தூயவன் அப்போது சொன்ன தென்னெனில், “சுருளுக்கு விலை என்ன? சொல்லுவாய்?” என்ன; “பொருளுக்குத் தக்கது போதும்” என்றாள். “கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே” என்றான். சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள், குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல் தளிர்க்கைக்கு முத்தம் தந்து, குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே! அறுசீர் விருத்தம் அவளின் காதலுள்ளம் உணவுண்ணச் சென்றாள், அப்பம் உண்டனள், சீனி யோடு தணல்நிற மாம்ப ழத்தில் தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்! மணவாளன் அருமை பற்றி மனம்ஒரு கேள்வி கேட்க, இணையற்ற அவன்அன் புக்கு நிகராமோ இவைகள்’ என்றாள். பிள்ளைகள் நினைவு பள்ளிக்குச் சென்றி ருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக்கு தித்து மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தா னோ*,என்(று) உள்ளத்தில் நினைத்தாள்; ஆனால் மூத்தவன் உண்டென் றெண்ணித் தள்ளினாள் அச்சந் தன்னை! தாழ்வாரம் சென்றாள் நங்கை! வீட்டு வேலைகள் ஒட்டடைக் கோலும், கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள்; கட்டிய சிலந்திக் கூடு, கரையானின் கோட்டை யெல்லாம் தட்டியே பெருக்கித் “தூய்மை” தனியர சாளச் செய்து, சட்டைகள் தைப்ப தற்குத் தையலைத் தொட்டாள் தையல்! தையல் வேலை ஆடிக்கொண் டிருந்த தையற் பொறியினை அசைக்கும் ஓர்கை; ஓடிக்கொண் டிருக்கும் தைத்த உடையினை வாங்கும் ஓர்கை! பாடிக்கொண் டேயி ருக்கும் பாவையின் தாம ரைவாய்; நாடிக்கொண் டேயி ருக்கும் குடித்தன நலத்தை நெஞ்சம்! மரச்சாமான் பழுது பார்த்தாள் முடிந்தது தையல் வேலை முன்உள்ள மரச்சா மான்கள் ஒடிந்தவை, பழுது பார்த்தாள்; உளியினால் சீவிப் பூசிப் படிந்துள்ள அழுக்கு நீக்கிப் பளபளப் பாக்கி வைத்தாள். கொல்லூற்று வேலை இடிந்துள்ள சுவர் எடுத்தாள்; சுண்ணாம்பால் போரை பார்த்தாள். மாமன் மாமிக்கு வரவேற்பு நாத்தியார் வீடு சென்ற நன்மாமன், மாமி வந்தார் பார்த்தனள்; உளம்ம கிழ்ந்தாள். பறந்துபோய்த் தெருவில் நின்று வாழ்த்தி நல்வரவு கூறி வணக்கத்தைக் கூறி, “என்றன் நாத்தியார், தங்கள் பேரர் நலந்தானா மாமி” என்றாள். வண்டிவிட் டிறங்கி வந்த மாமியும், மாம னும்,கற் கண்டொத்த மரும கட்குக் கனியொத்த பதிலுங் கூறிக் கொண்டுவந் திட்ட பண்டம் குறையாமல் இறக்கச் சொன்னார். வண்டியில் இருந்த வற்றை இறக்கிடு கின்றாள் மங்கை: மாமி மாமன் வாங்கி வந்தவை கொஞ்சநாள் முன்வாங் கிட்ட கும்ப கோணத்துக் கூசா, மஞ்சள்,குங் குமம், கண்ணாடி, மைவைத்த தகரப் பெட்டி, செஞ்சாந்தின் சீசா, செம்பு, வெற்றிலைச் சீவற் பெட்டி, இஞ்சியின் மூட்டை ஒன்றே, எலுமிச்சைச் சிறிய கோணி, “புதியஓர் தவலை நாலு பொம்மைகள், இரும்புப் பெட்டி, மிதியடிக் கட்டை, பிள்ளை விளையாட மரச்சா மான்கள்; எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய் இருக்கட்டும் வீட்டில் என்று குதிரினில் இருக்கும் நெல்லைக் குத்திட மரக்குந் தாணி; தலையணை, மெத்தைக் கட்டு, சல்லடை, புதுமு றங்கள், எலிப்பொறி, தாழம் பாய்கள்; இப்பக்கம் அகப்ப டாத இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்பட மிலாநல் லெண்ணெய்; கைத்தடி, செந்தா ழம்பூ; திருமணம் வந்தால் வேண்டும் செம்மரத் தினில்முக் காலி; ஒருகாசுக் கொன்று வீதம் கிடைத்த பச்சரிசி மாங்காய்; வரும்மாதம் பொங்கல் மாதம் ஆதலால் விளக்கு மாறு; பரிசாய்ச் சம்பந்தி தந்த பாதாளச் சுரடு, தேங்காய்; மூலைக்கு வட்டம் போட்டு முடித்தமே லுறையும், மற்றும் மேலுக்கோர் சுருக்குப் பையும் விளங்கிடும் குடை, கறுப்புத் தோலுக்குள் காயி தத்தில் தூங்கும்மூக் குக்கண் ணாடி, சேலொத்த விழியாள் யாவும் கண்டனள் செப்ப லுற்றாள்; மருமகள் வினா “இவையெல்லாம் வண்டிக்குள்ளே இருந்தன என்றால், அந்த அவைக்களம் தனிலே நீவிர் எங்குத்தான் அமர்ந்தி ருந்தீர்? சுவைப்புளி அடைத்து வைத்த தோண்டியின் உட்புறத்தில் கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் கால்வைக்க இடமி ராதே?” மாமி விடை என்றனள்; மாமி சொல்வாள்: “இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார்! என்தலை நிமிர, வண்டி மூடிமேல் பொத்த லிட்டார்; உன்மாமன் நடந்து வந்தார். ஊரெல்லாம் சிரித்த” தென்றாள்! மாமன் பேச்சு “ஊரொல்லாம் சிரிக்க வைத்தேன் என்றாளே உன்றன் மாமி! யாரெல்லாம் சிரித்து விட்டார்? என உன்றன் மாமியைக் கேள்! பாரம்மா பழுத்த நல்ல பச்சைவா ழைப்ப ழங்கள்! நேரிலே இதனை யும்பார் பசுமாட்டு நெய்யின் மொந்தை “வண்டியில் எவ்வி டத்தில் வைப்பது? மேன்மை யான பண்டத்தைக் காப்ப தற்குப் பக்குவம் தெரிந்தி ருந்தால் முண்டம்இப் படிச்சொல் வாளா? என்னதான் முழுகிப் போகும் அண்டையில் நடந்து வந்தால்?” என்றனன், அருமை மாமன். மருமகள் செயல் மாமனார் கொண்டு வந்த பொருளெலாம் வரிசை செய்து, தீமையில் லாத வெந்நீர் அண்டாவில் தேக்கி வைத்துத், தூய்மைசேர் உணவு தந்து, துப்பட்டி விரித்த மெத்தை ஆம், அதில்அவர் அயரச் சொல்லிக் கறிவாங்க அவள் நடந்தாள். கடையிலே செலவு செய்த கணக்கினை எழுதி வைத்தாள்; இடையிலே மாமன் “விக்குள் எடுத்தது தண்ணீர் கொஞ்சம் கொடு” எனக் கொடுத்தாள். பின்னர்க் கூடத்துப் பதுமை ஓடி அடுக்களை அரங்கில், நெஞ்சம் அசைத்திட* ஆட லானாள். என்ன கறி வாங்கலாம்? கொண்டவர்க் கெதுபி டிக்கும் குழந்தைகள் எதைவி ரும்பும் தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்க தென்ன உண்பதில் எவரு டம்புக்(கு) எதுவுத வாதென் றெல்லாம் கண்டனள், கறிகள் தோறும் உண்பவர் தம்மைக் கண்டாள். பிள்ளைகள் உள்ளம் எப்படி? பொரியலோ பூனைக் கண்போல் பொலிந்திடும்; சுவைம ணக்கும்! “அருந்துமா சிறிய பிள்ளை” எனஎண்ணும் அவளின் நெஞ்சம்; இருந்தந்தச் சிறிய பிள்ளை இச்சென்று சப்புக் கொட்டி அருந்தியே மகிழ்ந்த தைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்! அத்தானுக்கு எது பிடிக்கும்? பொருளையும் பெரிதென் றெண்ணாள், பூண்வேண்டாள்; தனைம ணந்தோன் அருளையே உயிரென் றெண்ணும் அன்பினாள்; வறுத்தி றக்கும் உருளைநற் கிழங்கில் தன்னை உடையானுக் கிருக்கும் ஆசைத் திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகைசெய் கின்றாள்... எதிர்கால நினைவுகள் இனிவாழும் நாள்நி னைத்தாள் இளையவர் மாமன் மாமி; நனிஇரங் கிடுதல் வேண்டும்; நானவர்க் கன்னை போல்வேன் எனதத்தான் தனையும் பெற்று வாழ்ந்தநாள் எண்ணும் போதில் தனிக்கடன் உடையேன், நானோர் தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள். கிழங்கினை அளியச் செய்வாள், கீரையைக் கடைந்து வைப்பாள் கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள் கொல்லையில் முருங்கைக் காயை ஒழுங்காகத் தோலைச் சீவிப் பல்லில்லார் உதட்டால் மென்று விழுங்கிடும் வகைமு டித்து வேண்டிய எலாம்மு டித்தே. முதியவருக்குத் துணை தூங்கிய மாமன் “அம்மா தூக்கென்னை” என்று சொல்ல, ஏங்கியே ஓடி மாமன் இருக்கின்ற நிலைமை கண்டு, வீங்கிய காலைப் பார்த்தாள் “எழுந்திட வேண்டாம்!” என்றாள்; தாங்கியே மருந்து பூசிக் சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்; அவளோர் மருத்துவச்சி நாடியில் காய்ச்சல் என்றே நன்மருந் துள்ளுக் கீந்தாள்; ஓடிநற் பாலை மொண்டு, மருவுலைக் கஞ்சி ஊற்றி, வாடிய கிழவர்க் கீந்தாள்; மாமிக்கோ தலைநோக் காடாம், ஓடிடச் செய்தாள் மங்கை ஒரேபற்றில் நொடிநே ரத்தில். அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை குழந்தைகள் பள்ளி விட்டு வந்தார்கள்; குருவிக் கூட்டம் இழந்தநல் லுரிமை தன்னை எய்தியே மகிழ்வ தைப்போல்; வழிந்தோடும் புதுவெள் ளத்தை வரவேற்கும் உழவ ரைப்போல், எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்தினாள் இருகை யாலும்! உடை மாற்றினாள் பள்ளியில் அறிஞர் சொன்ன பாடத்தின் வரிசை கேட்டு, வெள்ளிய உடை கழற்றி, வேறுடை அணியச் செய்தே, உள்வீட்டில் பாட்டன் பாட்டி உள்ளதை உணர்த்தி, அந்தக் கள்ளினில் பிள்ளை வண்டு களித்திடும் வண்ணம் செய்தாள்! தலைவி சொன்ன புதுச்செய்தி அன்றைக்கு மணம்பு ரிந்த அழகியோன் வீடு வந்தான்; இன்றைக்கு மணம் புரிந்தாள் எனும்படி நெஞ்சில் அன்பு குன்றாத விழியால், அன்பன் குளிர்விழி தன்னைக் கண்டாள்; “ ஒன்றுண்டு சேதி” என்றாள்; “உரை” என்றான்; “அம்மா அப்பா” “ வந்தார்” என் றுரைத்தாள், கேட்டு “வாழிய” என்று வாழ்த்தி, “ நொந்தார்கள்” என்று கேட்டு நோயுற்ற வகைய றிந்து, தந்தைதாய் கண்டு “உங்கள் தள்ளாத பருவந் தன்னில் நைந்திடும் வண்ணம் நீங்கள் நடந்திட லாமா? மேலும், முதியோர்க்கு ஒக்கநல் லிளமை கண்டீர் கல்விநல் லொழுக்கம் கண்டீர்; மெய்க்காதல் மணமும் பெற்றீர்; இல்லற வெற்றி பெற்றீர்; மக்களைப் பெற்றீர்; வைய வாழ்வெலாம் பெற்றீர்; என்னால்* எக்குறை பெற்றீர்? இன்னும் ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்? “அதிர்ந்திடும் இளமைப் போதில் ஆவன அறங்கள் செய்து முதிர்ந்திடும் பருவந் தன்னில், மக்கட்கு முடியைச் சூட்டி, எதிர்ந்திடும் துன்ப மேதும் இல்லாமல், மக்கள், பேரர் வதிந்திடல் கண்டு, நெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு” அறிவுக்குத் திருவிளக்கு என்றனன்; தந்தை சொல்வார்; “என்னரும் மகனே, மெய்தான் ஒன்றிலும் கவலை கொள்ளேன், உன்னைநான் பெற்ற தாலே! அன்றியும் உன்பெண் டாட்டி அறிவுக்கோர் திருவி ளக்காம், இன்றுநான் அடைந்த நோய்க்கும் நன்மருந் திட்டுக் காத்தாள். செல்லப்பா உணவு கொள்ளச் சிறுவர்கள் தமையும் உண்ணச் “சொல்லப்பா” எனவே, அன்பு சொரிந்திடச் சொல்லி டுந்தன் நல்லப்பா மகிழும் வண்ணம் நல்லதப் பாஎன் றோதி, மெல்லப்பா வைபு ரிந்த விருந்தினை அருந்த லுற்றான், பிள்ளைக்கு அமுது குழந்தைகள் உடனி ருந்து கொஞ்சியே உண்ணு கின்றார் பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதல் போல்! ஒழுங்குறு கறிகள் தம்மில் அவரவர் உளம றிந்து வழங்கினாள் அள்ளி அள்ளி, வழிந்திடும் அன்புள் ளத்தாள். பாடு என்றான் அனைவரும் உண்டார் அங்கே! கூடத்தில் அமர்ந்தி ருந்தார். சுனைவரும் கெண்டைக் கண்ணாள் துணைவனை அணுகி, “நீவிர் எனைவரும் படிஏன் சொல்ல வில்லை” என்றாள் சிரித்தே! தினைவரும் படிஇல் லார்க்கும் திருநல்கும் தமிழ்பா டென்றான். யாழ் எடுத்தாள் குளிர்விழி இளந கைப்பூங் குழலினாள் குந்தி னாள்; தன் தளிருடல் யாழ்உ டம்பு தழுவின; இருகு ரல்கள் ஒளியும்நல் வானும் ஆகி உலவிடும் இசைத்தேர் ஏறித் “தெளிதமிழ்” பவனி வந்தாள் செவிக்கெலாம் காட்சி தந்தாள். கவிதை பாய்ச்சினாள் உள்ளத்தில் கவிதை வைத்தே உயிரினால் எழுப்பி னாள்; அவ் வெள்ளத்தில் கலையைக்* கோத்தாள்; வீணையின் அளவிற் சாய்த்தாள்; தெள்ளத்தெ ளிந்த நீர்போல், செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப் பள்ளத்தில் கோடைத் துன்பம் பறந்திடப் பாய்ச்சி விட்டாள். உயிரெலாம் தமிழில் தொக்கின வீடெலாம் இசையே; வீட்டில் நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச ஏடெலாம் அறிவே; ஏட்டின் எழுத்தெலாம் களிப்பே; அந்தக் காடெலாம் ஆடும் கூத்தே; காகங்கள் குருவி எல்லாம் மாடெல்லாம் இவ்வா றானால் மனிதர்க்கா கேட்க வேண்டும்? கடையை மறந்தீரோ? இடையினில் தனைம றந்தே இருந்ததன் கணவன் தன்னைக் “கடையினை மறந்து விட்டீர் கணக்கர்காத் திருப்பார்” என்று நடையினில் அன்னம் சொன்னாள்; நல்லதோர் நினைவு பெற்ற உடையவன் “ஆம் ஆம்” என்றான்; ஆயினும் “உம் உம்” என்றான். மனைவியிடம் பிச்சை கேட்டான் “கண்ணல்ல; நீதான் சற்றே கடைக்குப்போய்க் கணக்கர் தம்மை உண்பதற் கனுப்பி உண்டு வந்தபின் வா; என் னாசைப் பெண்ணல்ல” என்று சொல்லிச் சோம்பலால் பிச்சை கேட்டான். கண்ணல்ல, கருத்தும் போன்றாள், “சரி” என்று கடைக்குச் சென்றாள். கடையின் நடைமுறை மல்லியை அளப்பார்; கொம்பு மஞ்சளை நிறுப்பார்; நெய்க்குச் சொல்லிய விலை குறைக்கச் சொல்லுவார்; கொள் சரக்கின் நல்லியல் தொகை கொடுப்பார்; சாதிக்காய் நிறுக்கச்சொல்வார் வெல்லம் என்றொரு குழந்தை விரல்நீட்டும் கடைக்கு வந்தாள். அவள் வாணிகத் திறமை களிப்பாக்குக் கேட்பார்க் கீந்து களிப்பாக்கிக் கடனாய்த் தந்த புளிப்பாக்கி தீர்ந்த பின்பு கடனாகப் புதுச்ச ரக்கை அளிப்பார்க்குப் பணம் அளித்தாள்; அதன்பின்னர் கணக்கர் எல்லாம் கிளிப்பேச்சுக் காரி யின்பால் உணவுண்ணக் கேட்டுப் போனார். இளகிய நெஞ்சத் தாளை இளகாத வெல்லம் கேட்பார்; அளவாக இலாபம் ஏற்றி அடக்கத்தை எடுத்து ரைப்பாள்! மிளகுக்கு விலையும் கூறி மேன்மையும் கூறிச் சற்றும் புளுகாமல் புகன்ற வண்ணம் புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள். கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள் கொண்டவன் வந்தான்; கண்கள் குளிர்ந்திடக் கண்டாள்: “அத்தான் கண்டுள்ள கணக்கின் வண்ணம் சரக்குகள் கடன்தந் தார்க்குத் தண்டலும் கொடுத்தேன்; விற்று முதலினைத் தனியே வைத்தேன்; உண்டங்கு வேலை” என்றே உரைத்தனள்; வீடு சென்றாள் வீட்டறை மருத்துவமனை படுக்கையில் மாம னாரைப் பார்த்தனள்; “காலில் இன்னும் கடுக்கை தீர்ந்திலதோ” என்று கனிவோடு கேட்டு டுக்கும் உடுக்கையும் மாற்று வித்து, மட்டான உணவு தந்து தடுக்கினி லிருந்து தூக்கிச் சாய்வு நாற்காலி சேர்த்தாள். மற்றும் வீட்டு வேலை வரிசையாய்க் காய வைத்த வடகத்தை, வற்றல் தன்னைப் பெரிசான சாலில் சேர்த்தாள்: பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு) உரியநல் தீனி வைத்தாள்; உறிவிளக் குகள்து டைத்தாள்; வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள் வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள். கடற்கரையில் சிற்றுண வளித்தாள்; பின்பு திரைகடற் கரையை நாடிப் பெற்றதன் மக்கள் சூழப் பெருவீதி ஓர மாகப் பொற்கொடி படர்ந்தாள் தேனைப் பொழிந்திடு பூக்க ளோடு! வற்றாத வெள்ளக் காட்டின் மணற்கரை ஓரம் வந்தாள்! கடற்கரைக் காட்சி அக்கரை செலும்உள் ளத்தை அளாவிடக் கிடந்த வில்லும், இக்கரை அலையின் ஆர்ப்பும், இவற்றிடைச் செவ்வா னத்தின் மிக்கொளி மிதக்கும் மேனி விரிபுனற் புரட்சிப் பாட்டும், “ஒக்கவே வாழ்க மக்காள்” என்பதோர் ஒலியும் கேட்டாள்; காட்சி இன்பம் குளிர்புனல் தெளிவி லெல்லாம் ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத் துளிதொறும் உயிர்து டிக்கும்; தொன்மைசேர் கடல், இவ் வைய வெளியெலாம் அரசு செய்யும்! விண்ணெலாம் ஒளியைச் செய்யும்! களியெலாம் காணக் காணக் கருத்தெலாம் இன்பம் பொங்கும்! கடற் காற்று கடலிடைப் புனலில் ஆடிக் குளிரினிற் கனிந்த காற்றை உடலிடைப் பூசு கின்ற ஒலிகடற் கரையின் ஓரம் அடர்சிற கன்னப் புட்கள் அணிபோல அலைந டக்கும் நடையொடு நடந்து வீடு நண்ணினாள் மக்க ளோடு. இரவுக்கு வரவேற்பு மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை விருந்துண்டு, நீல ஆடை மாற்றுடை யாய்உ டுத்து, மரகத அணிகள் பூண்டு, கோற்கிளை ஒடுங்கும் புட்கள் கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற் கரும்பான இரவு தன்னை(த்) திருவிளக் கேந்தி வந்து தெருவினில் வரவேற் கின்றாள். உருவிளக் கிடவீட் டுக்குள் ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி ஒருபெருங் கலயத் துள்ளே உயர்நறும் புகைஎ ழுப்பிப் பெரியோரின் உள்ளம் எங்கும் பெருகல்போல் பெருகச் செய்தாள். அத்தானை எதிர்பார்க்கின்றாள் கட்டுக்குள் அடங்கா தாடிக் களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள், சுவடிக் குள்ளே செந்தமிழ்த் தீனி உண்ண விட்டுப்பின் அடுக்க ளைக்குள் அமுதத்தை விளைவு செய்தாள்; எட்டுக்கு மணிஅ டிக்க அத்தானை எதிர்பார்க் கின்றாள். எண்சீர் விருத்தம் கட்டில் அழகு சரக்கொன்றை தொங்கலிட்ட பந்த லின்கீழ் தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில் இருக்கின்றன மெத்தைதலை யணைகள் தட்டி இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக் கரைக்கின்ற கலயத்துட் கரைத்துத் தென்றல் கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில் சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும் துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே! அவன் மலை போன்ற செல்வம் பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில் பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப், பாலைச் சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச் சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி, நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில் மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள். பிள்ளைகட்குப் பரிசு கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்; கதையொன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான். மேலிருந்து “பிள்ளைவளர்ப் புப்போட் டிக்கு விடைவந்து சேர்ந்த” தென்றான்; எவ்வாறென்றாள். “ ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும் அப்படிநாம் பிள்ளைகளை வளர்த்த தாலே, பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்ப் பரிசுநமக் குத்தந்தார் பாராய்” என்றான். பழங்காலக் கிழங்கள் அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில் அதைப்போடத் துவக்கினான். “வளர்ப்புப் போட்டி அறியோமே எம்நாளில்” என்றார் பெற்றோர். அப்படிஎன் றாலின்ன தெனவி ளக்கிக் குறைவின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்” கூறினான். “குழந்தைகளை விசாரித் துத்தான் அறிந்தாரோ?” எனக்கேட்டார் அக்கா லத்தார்; அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார். அடுக்களையிற் பிள்ளைகள் பரிசுதனைப் பெற்றபிள்ளை, ஓடி வந்தான் பலருமே சூழ்ந்தார்கள், குருவிக் கூட்டம் பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப் பெருமானும், பெருமாட்டி தானும், அன்பின் அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய் அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்; ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி ஓடிப்போ டா, என்றார்; ‘பசி’ப றந்தான்! குழந்தைகள் தூங்கியபின் அவன்பாடிக் கொண்டிருந்தான் அறை வீட்டுக்குள் அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும், உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்; உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார். குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்; கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் தணிவுகூறி, அவிழ்ந்துவரும் நிலாஒளியில் இதழ்கள் மூடும் அல்லிப்பூ விழிகள் குழந்தைகளும் மூட கதவைத் தாழிட்டாள் கண்டுபடுக் கைதிருத்தி உடைதி ருத்திக், காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி, வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, “தண்ணீர் வை” என்னும்; ஒன்று தலைதூக்கிப் பார்க்கும்; பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம் பணிக்கையிடல்போல் அனைத்தும் தணிக்கை செய்தே ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள். கட்டிலண்டை மங்கை தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்; அண்டையிலே மங்கைபோய் “அத்தான்” என்றாள்; அத்தானா தூங்கிடுவான்? “உட்கார்” என்றான். திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள் சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான் கண்டான்!கண் டாள்!உவப்பின் நடுவி லே,“ஓர் கசப்பான சேதியுண்டு கேட்பீர்” என்றாள்! பொதுத்தொண்டு செய்தோமா? “மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்; அதுபோலத் தானேடி! அதனா லென்ன? அறிவிப்பாய் இளமானே” என்றான் அன்பன். “அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால், இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்? என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவுமில்லை. வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு? “இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது? ஏகாலி வந்தானா? வேலைக் காரி சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா? செந்தாழை வாங்குவமா? கடைச்ச ரக்கை ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்? உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா? கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம். தன்னலத்தால் என்ன நடக்கும்? தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்; தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்! எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்! எப்போது தமிழினுக்குக் கையா லான நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில், அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை; அனைவருமிவ் வாறிருந்தால் எதுந டக்கும்?” பெரும்படியான தொண்டு செய்துள்ளோம் கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக் கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்; “வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும் கரம்படிவீ தித்தமிழர் கழகத் தார்கள் கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்! பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக் கணக்கைப் பேசிவிட்டாய் கண்டபடி” என்று சொல்ல. தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும் “அப்படியா! அறியாத படியால் சொன்னேன். அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின்சொற் படிந டந்தால், மேற்படியார் செப்படிவித் தைப றக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும் முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்” என்றாள். தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன் “இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில், எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும். வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும். மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும் விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன் உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்”என்றான். “பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள் பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்” என்றாள். அன்றன்று புதுமை “அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும் ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக் குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்; ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்; அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ? ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்” என்றான். இரவுக்கு வழியனுப்பு விழா நல்லிரவின்* அமைதியிலே மணிவி ளக்கும் நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல் மெல்ல, உடல் குளிரும்வகை வீசா நிற்கும் வீணையில்லை, காதினிலே இனிமை சேர்க்கும் சொல்லரிதாய், இனிதினிதாய் நாழி கைபோம்; சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள், புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும். குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி – விருந்தோம்பல் கவிஞர் கருத்து! சென்ற “குடும்ப விளக்கு” முதற்பகுதியின் கண் நல்லதோர் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சி குறிக்கப்பெற்றிருந்தது. ஆயினும் அற்றைநாள் விருந்தினர் வரவில்லை. *** இவ்விரண்டாம் பகுதியின்கண் விருந்து வந்தது குறிக்கப் பெற்றுள்ளது. *** முதற்பகுதியின் நிகழ்ச்சிக்கும், இந்நிகழ்ச்சிக்கும் இடையில் எவ்வளவு நாள் சென்றிருக்கும் எனில் ஏறக்குறைய இரண்டாண்டுகள் என்க. இப்பகுதியில் வீட்டின் முதியோர் தள்ளாமை அடைந் துள்ளனர். குடும்பத் தலைவர்களுக்குத் தம் பிள்ளையின் காதல் உள்ளம் புலனாகிறது. *** இந்நூலை வெளியிட முன்வந்த முல்லைப் பதிப்பகத்தினருக்கு என் நன்றி! திருமுன் படைத்தல் இற்றைக்கு முப்பதாண்டின் முன் தொடங்கியே தனித் தமிழில் நூல் எழுதிக் காட்டியும், தனித் தமிழே வேண்டும் எனும் கருத்தை யூட்டியும், வரும் நிறைதமிழ் ஆய்ந்தார் மறைமலையடிகளின் திருமுன் இதைப் படைக்கின்றேன். - பாரதிதாசன் எங்கள் கருத்து! “குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்”, “நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்” இவை நம் கவிஞரின் கருத்து. இந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டாக, கவிஞர் அவர்களின் குடும்பம் முன்னேற்றம் நிறைந்த பல்கலைக் கழகமாக விளங்குகிறது. ‘குடும்ப விளக்கு’ முதற் பகுதி தோன்றுவதற்குக் காரணமே கவிஞர் தம் அருமை மகள் திருமதி சரசுவதிதான்! முதற் பகுதி குடும்பப் பண்பை விளக்குவது; இந்த இரண்டாம் பகுதியில், விருந்தினர்களை வரவேற்று விருந்தோம்பும் முறையும், இல்லத் தலைவரின் இளமை நினைவுகளும், எதிர்காலத் தலைவனின் காதலும், மற்றும் வாழ்க்கைப் பண்பும் காணப்படுகின்றன. கவிஞரின் கவியமுதைப் பற்றி நாம் சொல்ல வேண்டுவதில்லை! அடுத்து வர இருப்பது “திருமணப் பகுதி”! குடும்ப விளக்கை இயற்றிய நம் கவிஞர் அவர்களுக்கும், அவர்தம் அருமை மகளார்க்கும் தமிழ்நாட்டினர் சார்பாக நன்றி செலுத்துகிறோம். - முல்லைப் பதிப்பகம் 2. விருந்தோம்பல் சிந்துகண்ணி *தலைவன் கடைக்குச் சென்றான் அன்பு மணவாளன் ஆன வுணவருந்திப் பின்பு, மனைவி தந்த பேச்சருந்தித் - தன்புதுச் சட்டை யுடுத்துத் தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து - வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முடியொதுக்கிக் “கண்ணேசெல் கின்றேன் கடைக்” கென்றான் - பெண்வாய்க் கடைவிரித்துப் புன்னகைப்புக் காட்டி “நன்”றென்றாள்; குடைவிரித்துத் தோள்சாய்த்துக் கொண்டே - நடைவிரித்தான். தலைவி விருந்தினரை வரவேற்றாள் தன்னருமை மக்கள் தமிழ்க் கழகம் தாம் செல்லப் பின்னரும் ஐயன் செல்லப் பெண்ணரசி - முன் சுவரில் மாட்டி யிருந்த மணிப்பொறி “இரண்டென்று” காட்டி யிருந்ததுவும் கண்டவளாய்த் - தீட்டிச் சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி உடல் நிமிர்ந்தாள் கண்கள் உவந்தாள்; - நடைவீட்டைத் தாண்டி வரும் விருந்தைத் தான்கண்டாள் கையேந்திப் பூண்ட மகிழ்வால் புகழேந்தி - வேண்டி “வருக! அம் மாவருக! ஐயா வருக! வருக! பாப்பா தம்பி” யென்று - பெருகன்பால் பொன் துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்ந்த செந்தா மரையாக - நன்றே வரவேற்றாள்; வந்தவரின் பெட்டி படுக்கை அருகில் அறைக்குள் அமைத்தாள் - விரைவாக அண்டாவின் மூடி அகற்றிச்செம் பில்தண்ணீர் மொண்டுபுறந் தூய்மை முடிப்பிரென்று - விண்டபின் சாய்ந்திருக்க நாற்காலி தந்தும்வெண் தாழையினால் வாய்ந்திருக்கும் பாய்விரித்தும் மற்றதிலே - ஏய்ந்திருக்க வெள்ளையுறை யிட்டிருக்கும் மெத்தை தலையணைகள் உள்ளறையில் ஓடி யெடுத்துதவி - அள்ளியே தேன்குழலும் உண்ணத் தெவிட்டாத பண்ணியமும் வான்குழலாள் கொண்டுவந்து வைத்தேகி - ஆன்கறந்த பாலும் பருகும் படிவேண்டி, வெற்றிலைக்கு நாலும் கலந்து நறுக்கியகாய் - மேலுமிட்டுச் செந்தாழை, பல்பூக்கள் பச்சையொடு சேர்கண்ணி வந்தாள் குழல்சூட்டி மற்றவர்க்கும் - தந்துபின் நின்ற கண்ணாடி நெடும்பேழை தான்திறந்(து) இன்று மலர்ந்த இலக்கியங்கள் - தொன்றுவந்த நன்னூற்கள் செய்தித்தாள் நல்கி, “இதோ வந்தேன்” என்று சமைக்கும் எதிர் அறைக்குள் – சென்றவளை விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு! வந்தோர்கள் கண்டு மலர்வாய் இதழ்நடுங்க, “எந்தாயே எந்தாயே யாமெல்லாம் - குந்தி விலாப்புடைக்க வீட்டில் இந்த வேளையுண வுண்டோம் பலாப்பழம்போல் எம்வயிறு பாரீர் - நிலாப்போலும் இப்போதும் பண்ணியங்கள் இட்டீர் அதையுமுண்டோம் எப்போதுதான் அமைதி” என்றுரைக்க - “அப்படியா! சற்றே விடைதருவீர் தங்களருந் தோழர்தமைப் பெற்றெடுத்த என்மாமன் மாமியர்பால் - உற்ற செய்தி சொல்லிவரு வேன்” என்று தோகை பறந்தோடி மெல்ல “மாமா மாமி வில்லியனூர்ச் - செல்வர்திரு மாவரச னாரும் மலர்க்குழலி அம்மாவும் நாவரசும் பெண்ணாள் நகைமுத்தும் - யாவரும் வந்துள்ளார்” என்றுரைத்தாள். மாமனார் கேட்டவுடன், மாமன் மாமி மகிழ்ச்சி “வந்தாரா? மிக்க மகிழ்ச்சியம்மா - வந்தவரைக் காணவோ கண்டு கலகலெனப் பேசவோ வீணவர்* உற்றேன் விளைவதென்ன! - நாணல் துரும்பென்றும் சொல்லவொண்ணா என்றன் உடம்பை இரும்பென்றா எண்ணுகின்றாய் நீயும் - திரும்பிப் போய்க் கேட்டுக்கொள் நான்அவரை மன்னிப்புக் கேட்டதாய் வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! - நாட்டிலுறு நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில், உற்ற விருந்தை உயிரென்று - பெற்றுவத்தல். மோந்தால் குழையும் அனிச் சப்பூ முகமாற்றம் வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்(று) - ஆய்ந்ததிரு வள்ளுவனார் சொன்னார் அதனை நீ எப்போதும் உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் - தள்ளாதே! ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும் ஈண்டு விருந்தினர்க்கும் இட்டு வத்தல் - வேண்டுமன்றோ? வந்தாரின் தேவை வழக்கம் இவைஅறிய நந்தா விளக்குன்றன் நல்லறிவே! - செந்திருவே! இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற் றிருக்கையிலே தொட்டுப்பார் உன்நெஞ்சைத் தோன்றுமின்பம் - கட்டிக் கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் தந்த விருந்தோம்பும் மேன்மையினா லன்றோ? - தெரிந்ததா?” என்றுரைக்க, மாமி இயம்பலுற்றாள் பின்னர்; மாமி மருமகளுக்கு “முன்வைத்த முத்துத் தயிரிருக்கும் - பின்னறையில் பண்ணியங்கள் மிக்கிருக்கும் பழமை படாத* வெண்ணெய் விளாங்காய் அளவிருக்கும் - கண்ணே மறக்கினும் அம்மாவென்(று) றழைத்து மடிப்பால் கறக்கப் பசுக்காத் திருக்கும் - சிறக்கவே சேலத்தின் அங்காடிச் சேயிழையார் நாள்தோறும் வேலைக் கிடையில் மிகக்கருத்தாய் - தோலில் கலந்த சுளைபிசைந்து காயவைத்து விற்கும் இலந்தவடை வீட்டில் இருக்கும் - மலிந்துநீர் பாய்நாகர் கோவில் பலாச்சுளையின் வற்றலினைப் போய்நீபார் பானையிலே பொன்போலே! தேய்பிறைபோல் கொத்தவரை வற்றல்முதல் கொட்டிவைத்தேன், கிள்ளியே வைத்தவரை உண்டுபின் வையாமைக் - குத்துன்பம் உற்றிடச்செய்! ஊறுகாய் ஒன்றல்ல கேட்பாய்நீ; இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை! - வற்றியவாய் பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் - நேருறவே வெந்தயம் மணக்க அதன் மேற்காயம் போய்மணக்கும் உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் - நைந்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன் - தேடிப்பார் இஞ்சி முறைப்பாகும் எலுமிச்சை சர்பாத்தும் பிஞ்சுக் கடுக்காய் பிசைதுவக்கும் - கொஞ்சமா? கீரைதயிர் இரண்டும் கேடுசெய்யும் இரவில் மோரைப் பெருக்கிடு முப்போதும் - நேரிழையே சோற்றை அள் ளுங்கால் துவள்வாழைத் தண்டில்உறும் சாற்றைப்போ லேவடியத் தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை! வாழை இலையின் அடி உண்பார் வலப்புறத்தில் வீழ விரித்துக் கறிவகைகள் - சூழவைத்துத் தண்ணீர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு வெண்சோ றிடுமுன் மிகஇனிக்கும் - பண்ணியமும் முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே ஒக்கநின்றே உண்டபின்பால் சோறிட்டுத் - தக்கபடி கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால் ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே! கேட்டுப்போ; எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே அக்கறியை மேன்மேலும் அள்ளிவை - விக்குவதை நீமுன் நினைத்து நினைப்பூட்டு நீர்அருந்த! ஈமுன்கால் சோற்றிலையில் இட்டாலும் - தீமையம்மா! பாய்ச்சும் பசும்பயற்றுப் பாகுக்கும் நெய்யளித்துக் காய்ச்சும் கடிமிளகு நீருக்கும் - வாய்ப்பாகத் தூய சருகிலுறு தொன்னைபல வைத்திடுவாய் ஆயுணவு தீர்ந்தே அவர் எழுமுன் - தாயே அவர்கைக்கு நீர் ஏந்தி நெய்ப்பசை யகற்ற உவர்க்கட்டி தன்னை உதவு - துவைத்ததுகில் ஈரம் துடைக்கஎன ஈந்து, மலர்ச் சந்தனமும் ஓரிடத்தே நல்கியே ஒள்இலைகாய் - சேரவைத்து மேல்விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே!” என்றுரைத்தாள். தலைவி விருந்தினரிடம் கால்வலியும்காணாக் கனிமொழியாள் - வேல்விழியை மிக்க மகிழ்ச்சி தழுவ விடைபெற்றுத் தக்க விருந்தினர்பால் தான்சென்றே - “ஒக்கும்என் அன்புள்ள அம்மாவே ஐயாவே, அம்முதியோர் என்பு மெலிந்தார் எழுந்துவரும் - வன்மையிலார், திங்களை அல்லி அரும்புவந்து தேடாதோ? தங்கப் புதையல்எனில் தங்குவனோ - இங்கேழை? பெற்ற பொழு தன்பால் பெற்றாள்தன் பிள்ளையினைப் பற்றி அணைத்துமுகம் பார்க்கஅவா - முற்றாளா? தாய்வந்தாள் தந்தைவந்தான் என்றுரைக்கத் தான்கேட்டால் சேய்வந்து காணும்அவாத் தீர்வானோ - வாயூறிப் போனாரே தங்களது பொன்வருகை கேட்டவுடன் ஊன் உறுதி யில்லை உமைக் காணக் - கூனி வரஇயலா மைக்காக மன்னிப்புத் தாங்கள் தரஇயலு மாஎன்று சாற்றி - வருந்தினார்” என்றுரைத்தாள் இல்லத் தலைவி, இதுகேட்டு, தலைவிக்கு விருந்தினர் “நன்றுரைத்தீர் நாங்கள் போய்க் காணுகின்றோம்”- என்றுரைத்தார். அன்பு விருந்தினர்கள் அங்கு வருவதனைத் தன்மாமன் - மாமியார்பால் சாற்றியே - பின்னர் அறையை மிகத்தூய்மை ஆக்கி, அமர நிறையநாற் காலி நெடும்பாய் - உறஅமைத்துச் “செல்லுக! நீர்” என்றுரைத்தாள் செல்வி; விருந்தினர்கள் செல்லலுற்றார் சென்றே வணக்கமென்று - சொல்லலுற்றார். விருந்தினரைக் கண்ட முதியோர் வந்த விருந்தினர்க்கு வாழ்த்துரைத்துக் கையூன்றி நொந்த படியெழுந்தார் நோய்க்கிழவர் - அந்தோ! விருந்தினர் முதியோர்க்கு “ படுத்திருங்கள் ஐயா! படுத்திருங்கள் அம்மா! அடுத்திருந்து பேசல் அமையும் - கடற்கிணையாம் ஆண்டு பலவும் அறமே புணையாகத் தாண்டி உழைத்தலுத்துத் தள்ளாமை - ஈண்டடைந்தீர்! சென்றநாள் என்னும் செழுங்கடலில் மாப்புதுமை ஒன்றன்பின் ஒன்றாய் உருக்காட்டி - பின்மறையக் கண்டிருந்த தங்கள் அடிநிழலில் காத்திருந்து பண்டிருந்த செய்தி பருகோமோ - மொண்டு மொண்டு! வில்லியனூர் விட்டு விடியப் புறப்பட்டோம் மெல்லநடக் கும்வெள்ளை மாட்டினால் - தொல்லை! கறுப்புக்குத் தக்கதாய்க் காளையொன்று வாங்கப் பொறுப்புள்ள ஆளில்லை! பூட்டை - அறுத்தோடி மூலைக் குளத்தண்டை முள்வேலந் தோப்பினிலே காலைப் பரப்பியது கண்டுபின் - கோல்ஒடித்துக் காட்டிப் பிடித்துவந்து வண்டியிலே கட்டிநான் ஒட்டிவந்தேன்; இங்கே உயர்வான - நாட்டுப் புடவை*பல தேவை அதனால் புதுவைக் கடைகளிலே வாங்கக் கருதி - உடன்வந்தேன்” என்றுரைத்துப் பின்னும் இயம்புகையில், அவ்விடத்தில் தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம் நின்றிருந்த வீட்டின் நெடுந்தலைவி - நன்றே விருந்துவந்த பெண்பால் விரும்பிய வண்ணம் இருந்தொருபால் பேசி இருந்தாள் - பொருந்தவே. நாவரசும் நகைமுத்தும் நாவரசும் மூத்தாள் நகைமுத்தும் வீதியிலே பூவரச நீழலிலே போய் அமர்ந்தார் - மாவரசர் தம்சேதி கூறிப்பின் தங்களுடல் முன்னைவிடக் கொஞ்சம் இளைப்பென்று கூறிடவே - “மிஞ்சாமல் முதியவர்தம் பழைய நினைப்பு இன்னும் இருக்குமோ இளமைப் பருவந்தான்?” என்று கிழவர் இயம்பலுற்றார்: - இன்றைக்கு முன்புதைத்த சட்டைக்கு மூன்றிலொன்று தான்உடம்பு முன்புதைத்த மூங்கில்தான் என்என்பு - மின்னுதளிர் மாவிலைபோல் மேனி வளவளத்துப் போயிற்றே பாவில் ஐந்துபாடி மகிழுதற்கும் - நாவிலையே மாடிப் படியேறும் வாய்ப்பில்லை பேரர்களை ஓடி அணைக்க உறுதியில்லை - தேடிவரும் தங்களைப் போன்றோர்க்குத் தக்கவர வேற்பளித்தே அங்கிங் கழைத்தேக ஆர்வமுண்டு - நுங்கின் இளகல் உடலால் இயலுமா? வில்லின் வளைவுதனை நாணால் வகுப்பர் - வளைவுடலை நாளன்றோ ஆக்கிற்று நாம்என்செய் வோம் - அந்த நாளில் இளமை நலத்தைஇந் - நாளில் நினைத்தால் நமது நெடுந்தோளா இவ்வாறு அனைத்தும் புரிந்ததென ஐயந் - தனைக்கொள்வேன். காட்டாறு காளைப் பருவமன்றோ, கேளுங்கள் நீட்டாய் நிகழ்ந்த சிலவற்றை – நாட்டிலுறு மற்றும் முதியவர் காவிரியில் என்றன் கணையாழி தேடுகையில் பாவிரியப் பண்பாடிப் பையன் ஓர் - ஆவினை ஆற்றில் குளிப்பாட்டும் போதில் அதன்கால்கள் சேற்றில் மாட்டித் திகைத்தலைநான் - மாற்றுதற்குப் போய்முழுகி னேன்என் புறமுதுகில் காலூன்றி மாய்வின்றி மாடு கரையேறச் - சேய்நானும் மாட்டின்வால் பற்றியதால் சேற்றினிலே மாயவில்லை; மேலும் முதியவர் கேட்டீரா இன்னும் கிளத்துகின்றேன் - மாட்டுவண்டி முன்னிருந்த பிள்ளை முடிய நெருங்கையில் நான் பின்னிருந்த கையால் பிடித்திழுத்தேன் - என்ன வலிவாய் எருதிழுத்தும் ஓடவில்லை வண்டி! நலிவொன்றும் பிள்ளைக்கு நண்ண - இலையன்றோ? இன்னும் முதியவர் நீட்டில்லை ஒன்று நிகழ்த்துகின்றேன் - நற்பழங்கள் ஊட்டி வளர்த்தாலும் உரிமையெண்ணிக் - கூட்டில் இருக்கப் பிடிக்காத கிள்ளைபோல் இல்லத் தெருக்கதவை மெல்லத் திறந்தே - இருட்டில் அயலூரில் கூத்துப்பார்த்(து) ஆலடியில் தூங்கி வெயில்வருமுன் வீட்டில் புகுந்து துயில்வதுபோல் காட்டிக் கலைக்கழகம் சென்றேன் கதையில்வந்த பாட்டை முணுமுணுத்துப் பாடுகையில் - நீட்டுப் பிரம்பால் கணக்காயர் பின்ஒன்று வைத்தார் ‘அரம்பைவந்தாள்’ என்றந்தப் பாட்டில் - வரும்வரியை வாய்தவறிச் சொன்னேன் கணக்காயர் வாய்ப்பறிந்து பாய்தலுற்றார் தந்தைக்கும் பாக்குவைத்தார் - போய்வீட்டில் நான்பட்ட தாலையிலே நற்பஞ்சு தான்படுமோ? ஏன்பட்டான் என்றுதான் யார்கேட்டார்! – தேன்போலும் முதியவரின் மற்றொரு கதை பாப்புனைவார் ஓர்நாளில் பாவைபல தந்துசென்னை போய்ப்புலவர்க் கீயஎனைப் போக்கினார் - மாப்பாவை இட்டபெட்டி யைச் சென்னைச் செட்டிகடை ஒன்றில்நான் இட்டங்குக் குந்தி இருக்கையிலே - ‘விட்டேனா பாரடா!’ என்றொருவன் செட்டிமேல் பாய்கையிலே, ‘ஆரடா நீ!’ யென்(று) அதட்டிநான் -நீரோடைக்(கு) உள்ளே விழவுதைத்தேன் ஓர்கை முறிந்தவனும் வெள்ளம்போல் தீயரையென் மேல்விட்டான் - துள்ளிநான் ஓட்டம் பிடிக்கையிலே ஓர்செல்வாக் குள்ளவரும் நீட்டும்என் கம்பி நிறுத்திநிலை - கேட்கையிலே, பொல்லாதார் கூட்டம் புடைசூழக் கண்டஅவர், எல்லாரும் ஊர்ச்சா வடிவருவீர் - நில்லாதீர்; என்றுரைத்தார்! தீயவர்கள் எல்லோருமே மறைந்தார்; அன்றே வினை முடித்தேன் சென்னையி - னின்றகன்றேன். மற்றும் ஒரு நிகழ்ச்சி ஆரும் அறியாமல் அன்பான நண்பரைநான் சாரும் கடல்தாண்டிச் சைகோனில் - சேரும் வணம் செய்யஒரு கட்டுமரம் சென்றேறி னேன்கப்பல் கையெட்டும் எல்லையைநான் காணுகையில் - எய்தும் உளவறிந்து தீயர்சிலர் நீராவி ஒடம் மளமளென ஓட்டி வருதல் - தெளிவுபடக் காணாத் தொலைவினிலே கட்டுமரத் தைவிடென்றேன் ஊணோ உறக்கமோ ஒன்றுமின்றிக் - கோணாமல் நட்ட நடுக்கடலில் ஒன்றரைநாள் நான் கழித்தே எட்டு மணிஇரவில் என்வீட்டைக் - கிட்டினேன். மற்றும் ஒரு நற்செய்தி நாடுதொழும் ஊழியரை நான்காக்க ஓர்வீட்டு மாடியில் நின் றேகுதித்து மான்போலும் - ஓடினேன் ஐயா யிரமக்கட்(கு) ஆம்உரிமை காக்கநான் பொய்யர் தமையெதிர்த்த போதென்னைப் - பொய்வழக்கால் சேர்த்த சிறை எனக்கோர் தென்றல்வரும் சோலையன்றோ! சீர்த்தித் தமிழர்க்குத் தீமைவரப் - பார்த்திரேன்!* மாயும்உயிர் என்றால், மருளாத காளைநான்! ஆயினும் என்செய்கை அனைத்தையுமே - தீயவழிச் செல்லாது நாளும் திருத்தமுறக் காத்த, பா- வல்லாரை நானும் மறப்பதே - இல்லை! இளமைப் பருவமோ எச்செயலும் செய்யும் இளமை அறிவோ(டு) இயைந்தால் - விளைவதெலாம் நாட்டுக்கு நன்றேயாம் நாட்கள் விரைந்தோடும் கேட்டுக்கா ளாகாமல் கீழ்மையின்றி - நாட்டமொடும் அன்பு மலிய அனைத் துயிர்க்கும் தொண்டுசெய்தால் இன்பம் மலியும்! இதுவன்றோ - என்றும் மறவாமல் மக்கள் செயத்தக்க தென்றார்! “துறவாமல் இன்பமுண்டோ சொல்க - அறப்பெரியீர்” என்றுரைத்தார் மாவரசர், இன்னும் உரைப் பார்கிழவர், “நன்றுரைத்தீர் அத்துறவை நான் வேண்டேன் - என்றுமே. இல்லறமே நல்லறம் தானே தனித்தின்பம் கொள்ளத் தகுமோ? நல் தேனிதழாள் இன்றிஒரு சேய்க்கின்பம் - ஆனதுண்டோ? ஞாலத் தொடர்பினால் நல்லின்பம் காணலன்றி ஞாலத்துறவில் இன்பம் நண்ணுவதும் - ஏலுமோ? “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கண்இனிக்கப் - பெற்றெடுத்த தாய்தந்தை வேண்டேன் தமிழ்வேண்டேன் தாய்நாட்டின் ஓய்வு தவிர்க்கும் உரன்வேண்டேன் - தேய்வுற்றே கண்மூக்கு வாய்உடம்பு காதென்னும் ஐந்துவகை ஒண்வாயில் சாத்தி உளம்மாய்ந்து - வண்ணவுடல் பேறிழத்தல் பேரின்பம் அஃதொன்றே வேண்டு”மென்று கூறிடுவார் கூறுவதே அல்லாமல் - வேறுபயன் கண்டாரோ அன்னவர்தாம் ‘காட்டுவிரோ’ என்றுரைத்தால், ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் - கண்டிலர்’ என்று மொழிந்தே இலைச்சோற்றில் பூசனிக்காய் நன்று மறைக்க நனிமுயல்வர் – இன்றுபல ஆச்சிரமம் ஆச்சிரமப் பேரால் அறவிடுதி கண்டுநல்ல பேச்சியம்பிச் சொத்தைப் பெருக்கியே - போய்ச்செல்வர் கூட்டம் பெருக்கிக் குடித்தனத்தை மேல்வளர்த்தார் ஈட்டும் பொருளுக்(கு) இருபதுபேர் ஏட்டாளர்! தோட்டங்கள் கொத்துதற்குத் தொண்ணூறு பேர், கறவை மாட்டுக்கு நல்ல மருத்துவநூல் - காட்டிடுவோர் பத்துப்பேர், காதற் பழங்கள் கடற்கரையில் ஒத்துப்போய் நெஞ்சம் உவந்தளித்த - தொத்துகிளிப் பிள்ளைக்குப் பேர்வைக்க நாலைந்து பேர், அதனை உள்ளுளவாய் விற்றுவர ஒன்பதுபேர் - வெள்ளைநிற மின்னை வணங்க இருபதுபேர் மின்னையுயிர்க் (கு) அன்னை எனச்சொல்ல ஐம்பதுபேர் - தன்னைத் திருமால் பிறப்பென்று தீட்ட, நூல் விற்க வருவாய் விழுக்காடு வாங்க - ஒருநரியார், வீட்டிலுறும் அந்நரிக்கும் பொய்புரட்டு வேலைக்கோ ஆட்டுக்கண் ணன்சேய் அவனொருவன் - நாட்டில் துறவோன் அறவீ(டு) இஃதொன்றுமற் றொன்று; மலையடியில் துறவு நிறத்தை1 நிலைநிறுத்த வந்த - வெறியன் ஒருவன் மலையடியில் ஊரார் விழிக்குத் தெரியும் இடந்தேடிச் சென்று - பெரிதாக வீடமைத்த தாலேதன் வீட்டைத் துறந்தவனாய்க் கூடிந்த மெய்யென்றும் கூட்டில்புள் - ஓடுமுயிர் பொன்றாத உண்மையிலை போயொழியும்! போயொழியும்!! என்றும், இளமை புனற்குமிழி - பொன்னோ புனல்திரை2, யாக்கை புனலெழுத்தே என்றும் அனைத்துலகும் பொய்யென்றும் ஆன்மா - எனும் ஒன்றே மெய், அதனால் மெய்யுணர்தல் வேண்டுமென்றும், அவ்வுணர்வை ஐயம் திரிபின்றி ஐயர் உண்ணச் - செய்கின்ற என்றன் அறவிடுதி ஏற்படுத்தி வைக்குமென்றும், என்றும் உதவா(து) இருந்தபழம் - பொன் பொருளை இங்கே குவிப் பீர்என்றும் என்தம்பி வாரிப்போய் அங்கு குவிக்கட்டும் அச்செயலால் - தாங்கிடும்நும் பற்றுக்கள் போம் என்றும், பற்றேபற் றுக்கோடாய் உற்று வரும்பிறவி ஓடுமென்றும், புற்கைக்குப் போரடித்து மக்கள் புழுவாய்த் துடிக்கையிலும் ஊரடித்துத் தின்னும் உளவுதனை - யாரறிவார்? நாட்டுக்குத் தொண்டு இந்த நெறிகள்எலாம் யார்க்கு நலம்விளைக்கும்? கந்தைக்கும், கண்ணுறங்கக் கூரைக்கும் - அந்தோ தொழில்வேண்டு வார்க்குத் தொழிலில்லை; கல்வி எழில்வேண்டு வார்கள் எவர்க்கும் - கழகமுண்டா? கல்வித் துறைக்குத் தான் காசிலையாம்! செந்தமிழ்நற் செல்விக் குரிமைச் செயலுண்டா? - ‘எல்லாரும் ஒன்‘றென்னும் எண்ணம் உயரவில்லை! ஒற்றுமைதான் நன்றென்னும் எண்ணம் நடப்பதுவோ? - இன்று பெருநிலத்தில் நற்றமிழர் வாழ்வு பிறரால் அருவருக்க லானதெனக் கண்டும் - திருநாட்டில் சாய்பாபா வாற்பொருளைத் தட்டிப் பறிப்பதுவும் மேய்பாபா ஏய்க்கின்ற மெய்வழியின் - வாய்வலியும் பன்னும் இவைபோல் பலப்பலவும் அன்பரே! உன்னுங்கால் அந்தோ! உருகாதோ - கல்நெஞ்சம்? எந்த நெறிபற்றி யாம்ஒழுகல் வேண்டுமெனில், அந்த முறையை அறைகின்றேன் - அந்தமுறை எல்லார்க்கும் ஒத்துவரும் ஏமாற்றம் ஒன்றுமில்லை செல்வம் அதனால் செழித்துவரும் - கல்வி அனைவர்க்கும் உண்டாகும் அல்லல் ஒழியும் தனிநலம்போம்! இன்பமே சாரும் - இனிதாக இவ்வுலக நன்மைக்கே யான்வாழ்கின் றேன்என்றே ஒவ்வொருவ ரும்கருதி உண்மையாய் - எவ்வெவர்க்கும் கல்வியைக் கட்டாயத் தால்நல்கி யாவர்க்கும் நல்லுடலை ஓம்ப நனியுழைத்தால் - அல்லலுண்டா? ஓம்புதல் வேண்டும் ஒழுக்கம்; அழுக்காறு நாம்பெறுதல் நாட்டை இழத்தலே - ஆம்! பொய்யா? மக்களிடைத் தாழ்வுயர்வு மாட்டாமை வேண்டும்நீள் பொய்க்கதையில் பொல்லா மடமையிலே - புக்குப் பிறர்க்கடிமை யுற்றும் பெருவயிறு காத்தல் அறக்கொடிதென் றாய்ந்தமைதல் வேண்டும் - சிறக்கப் படைப்பயிற்சி, நல்ல பயனடையும் ஆற்றல், தடைப்பாடில் லாதெய்தில் சாலும்! - நடைவலியாய் வையம் அறிதல் மறிகடலை வானத்தை ஐயம் அகல அளந்திடுதல் - உய்யும்வணம் பல்கலையும் பெற்றே இளமைப் பருவத்தின் மல்குசீர் வாய்ப்புறுதல் வேண்டும்பின் – நில்லாத காதல் வாழ்க்கை உள்ளம் கவர்ந்தாளின் உள்ளத்தைத் தான்கவர்ந்து வெள்ளத்தில் வெள்ளம் கலந்ததென - விள்ளும்நிலை கண்டு மணம்புரிதல் வேண்டும் கடிமணமும் பண்டை மணமென்றும் பார்ப்பானைக் - கொண்ட அடிமை மணமென்றும் சொல்லும் அனைத்தும் கடிந்து பதிவுமணம் காணல் - கடனாகும் அன்பால் அவளும் அவனும் ஒருமித்தால் துன்பமவ ளுக்கென்னில் துன்புறுவான் - துன்பம் அவனுக்கெனில் அவளும் அவ்வாறே! இந்தச் சுவைமிக்க வாழ்வைத்தான் தூயோர்- நவையற்ற காதல்வாழ் வென்று கழறினார்; அக்காதல் சாதல் வரைக்கும் தழைத்தோங்கும் - காதல் உடையார்தம் வாழ்வில் உளம்வேறு பட்டால் மடவார் பிறனை மணக்க - விடவேண்டும். ஆடவனும் வேறோர் அணங்கை மணக்கலாம் கூடும்மண மக்கள் கொளத்தக்க - நீடுநலம் என்னவெனில், இல்லறத்தைச் செய்தின்பம் எய்துவதாம்! மக்கட் பேறு நன்மக்கட் பேறுபற்றி நானுரைப்ப - தொன்றுண்டாம் ஈண்டுக் குழந்தைகள்தாம் எண்மிகுத்துப் போகாமல் வேண்டும் அளவே விளைத்து, மேல் - வேண்டாக்கால் சேர்க்கை ஒழித்துக் கருத்தடையேனும் செய்க போக்கருநோய் கொண்டால் இருவரும் - யாக்கை ஒருமித்தால் ஐயகோ! உண்டாகும் பிள்ளை இருநிலத்துக் கென்னநலம் செய்யும்- அருமைத் பிறர் நலம் தலைவன் தலைவியர்கள் தங்கள் குடும்ப அலைநீங் கியபின், அயலார் - நிலைதன்னை நாடலாம் என்னாமல் நானிலத்தின் நன்மைக்குப் பாடுபட வேண்டும் எப்போதும் - நாடோ ஒருதீமை கண்டால் ஒதுங்கி நிற்றல் தீமை; எருதுமேல்ஈ மொய்த்த போது - பெருவால் சுழற்றுவதால் துன்பம் தொலையுமா? - ஈக்கள் புழுக்குமிடம் துய்தாகிப் போமா? - இழுக்கொன்று காணில் நமக்கென்ன என்னாமல் கண்டஅதன் ஆணிவேர் கல்லி அழகுலகைப்- பேணுவதில் நேருற்ற துன்பமெலாம் இன்பம்! கவலையின்றிச் சேருவோன் இன்பமெலாம் துன்பமென்க! நேரில் வறியார்க்கொன் றீந்தால்தன் நெஞ்சில்வரு மின்பம் அறியா திரான்எவனும் அன்றோ? வெறிகொள் வலியாரால் வாடும் எளியாரின் சார்பில் புலியாகிப் போர்தொடுக்கும் போதில் வலியோர்கள் எய்யும்கோற் புண்ணும் இனிதாகும் - அவ்வெளியார் உய்ய உழைத்ததனைத் தானினைத்தால் - வையத்தே தன்னலத்தை நீத்தும் பிறர்நலமே தான்நினைத்தும் என்றும் உழைப்பார்க்(கு) இடரிழைப்போன்! - அன்றே நடப்பார் அடியில் நசுங்கும் புழுப்போல் துடிப்பானே தொல்லுலகி னோரால் - இடமகன்ற வையத்து நன்மைக்கே வாழ்வென் றுணர்ந்தவனே செய்யும் தொழிலில் திறம்காண்பான் - ஐயம் அகலும்; அறிவில் உயர்ந்திடுவான் - அன்னோன் புகலும்அனைத் துள்ளும் புதுமை - திகழுமன்றோ? சாதலின் இன்னாத தில்லையென்று சாற்றிடினும் ஏதும்அவன் சாகுங்கால் இன்பமே! - சாதல் வருங்கால் சிரிப்பான் பொதுவுக்கே வாழ்வான் பொதுமக்கள் வாழ்த்தும் பெறுவான் - ஒருநிலவு புகழ் வானில் உடுக்களிடை வாழ்தல்போல் - அன்னோரின் ஊனுடம்பு தீர்ந்தாலும் உற்றபுகழ் - மேனி, விழிதோறும் மேலாரின் நெஞ்சுதொறும் என்றும் அழியாதன் றோ மேலும் ஐயா - மொழிவேன் ‘அறத்தால் வருவதே இன்பம்’ என் றான்றோர் குறித்தார்; குறிப்பறிக; மேலும் - திறத்தால் ‘தவம்செய்வார் தம்கருமம் செய்வார்’ எனவே அவரே உரைத்தார் அறிக! - எவரும் தமைக்காக்க! தம்குடும்பம் காக்க! உலகைத் தமர்என்று தாமுழைக்க வேண்டும் - அமைவான இன்பம் அதுதான் ‘இறப்புக்கும் அப்பாலே ஒன்றுமில்லை’ என்ப துணர்ந்திடுக - அன்றுமுதல் இன்றுவரைக்கும் பெரியோர் செத்தவர்கள் எய்துவதாய்ச் சொன்னவற்றுள் ஒன்றையொன்று தூற்றுவன - அன்றியும் சாக்காடு நெடுந்தூக்கம் சாக்காடு பேரின்பம் என்று நான் சாற்றிடுவேன் தூக்கம் கெடலைத் துயர்என்பீர் - வாய்க்கும்நல் தூக்கத்தை இன்பமென்றீர் அன்றோ? நெடுந்தூக்கம் என்பதுதான் சதல் இதைத்தான்பே ரின்பமென்றேன் என்றார் கிழவர் இனிது தலைவி கூடத்துப் பேச்சு அறுசீர் விருத்தம் மாவர சோடிவ் வாறு வயதானார் பேசும்போது கூவர சான இல்லக் குயிலினாள் கூடந் தன்னில் பாவர சான தன்வாய்ப் பைந்தமிழ் படைத்தி ருந்தாள் ஆ! அரி தென்று காதால் மலர்க்குழல் அதைஉண் கின்றாள். “பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணு தற்கே! கல்வி யில் லாத பெண்கள் களர்நிலம்! அந்நி லத்தில் புல்விளைந் திடலாம்; நல்ல புதல்வர் கள்விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே நல்லறி வுடைய மக்கள் விளைவது நவில வோநான்? வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுத ளத்தல் ஆனஎச் செயலும் ஆண்பெண் அனைவர்க்கும் பொதுவே! இன்று நானிலம் ஆட வர்கள் ஆணையால் நலிவ டைந்து போனதால் பெண் களுக்கு விடுதலை போன தன்றோ! இந்நாளில் பெண்கட் கெல்லாம் ஏற்பட்ட பணியை நன்கு பொன்னேபோல் ஒருகை யாலும் விடுதலை பூணும் செய்கை இன்னொரு மலர்க்கை யாலும் இயற்றுக! கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும் மின்னாள் என்றே உரைப்பேன். சமைப்பதும் வீட்டுவேலை சலிப்பின்றிச் செயலும் பெண்கள் தமக்கேஆம் என்று கூறல் சரியில்லை! ஆட வர்கள் நமக்கும் அப்பணிகள் ஏற்கும் என்றெண்ணும் நன்னாள் காண்போம்! சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்! உணவினை ஆக்கல் மக்கட்(கு) உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு பணத்தினால் அன்று வில்வாட் படையினால் காண்ப தன்று தணலினை அடுப்பில் இட்டுத் தாழியில் சுவையை இட்டே அணித்திருந் திட்டார் உள்ளத்(து) அன்பிட்ட உணவால் வாழ்வோம். சமைப்பது பெண்க ளுக்குத் தவிர்க்கொணாக் கடமை என்றும், சமைத்திடும் தொழிலோ, நல்ல தாய்மார்க்கே தக்க தென்றும், தமிழ்த்திரு நாடு தன்னில் இருக்குமோர் சட்டந் தன்னை இமைப்போதில் நீக்க வேண்டில் பெண்கல்வி வேண்டும் யாண்டும். சமையலில் புதுமை சமையலில் புதுமை வேண்டும்! சமையல்நூல் வளர்ச்சி வேண்டும்! சமையற்குக் “கல்வி இல்லம்” அமைந்திட வேண்டும் யாண்டும்! அமைவிலாக் குடும்பத் துள்ளும் அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில் சமையலில் திறமை வேண்டும் சாக்காடும் தலைகாட் டாதே! கெட்டுடல் வருந்து வோர்கள் சமைக்கும்நற் கேள்வி பெற்றால் கட்டுடல் பெற்று வாழ்வார்! கல்விக்கும், ஒழுக்கத் திற்கும் பட்டுள பாட்டி னின்று விடுதலை படுவ தற்கும் கட்டாயம் சமைக்கும் ஆற்றல் காணுதல் வேண்டும் நாமே. வறுமையும் தெரிவ துண்டோ சமையலில் வல்லார் இல்லில்? நறுநெய்யும் பாலும் தேனும் நனியுள்ள இல்லத் துள்ளும் கறிசமைத் திடக்கல் லாதார் வறியராய்க் கலங்கு வார்கள்! குறுகிய செலவில் இன்பம் குவிப்பார்கள் சமையல் வல்லார்! வீறாப்பு வாழ்வு தன்னை மேற்கொண்டார் என்றால் அன்னார் சோறாக்கிக் கறிகள் ஆக்கிச் சுவைஆக்கக் கற்ற தால்ஆம்! சேறாக்கிக் குடித்த னத்தைத் தீர்த்தார்கள் என்றால் தாறு மாறாக்கிக் கறியை எல்லாம் மண்ணாக்கும் மடமை யால்ஆம். இலையினில் திறத்தால் இட்ட சுவையுள்ள கறியும் சோறும் கலையினில் உயர்த்தும் நாட்டைக் கட்டுக்கள் போக்கும்! வைய நிலையினை உயர்த்தும் இந்த நினைவுதான் உண்டா நம்பால்? தொலையாதா அயர்வு? நல்ல சுவையுணர் வெந்நாள் தோன்றும்? விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள் என்றனள் தலைவி! அந்த எழில்மலர்க் குழலி சொல்வாள்; நன்றாகச் சொன்னீர் அம்மா நம்வீட்டின் செய்தி கேட்பீர்; “இன்றென்ன கறிதான் செய்ய?” என்றுநான் அவரைக் கேட்பேன் நின்றவர் எனையே நோக்கி “நேற்றென்ன கறிகள்?” என்பார்! “பருப்பும்வா ழைக்காய் தானும் குழம்பிட்டேன் உருளைப் பற்றைப் பொரித்திட்டேன்” என்றால், அன்னார் புகலுவார் வெறுப்பி னோடு “பருப்பும்நீள் முருங்கைக் காயும் குழம்பிட்டுக் கருணைப் பற்றைப் பொரிப்பாய்நீ” என்று கூறிப் போய்விடு வார்வே லைக்கே. கீரைத் தண்டுக் குழம்பு மேற்படி கீரை நையல்! மோருந்தான் உண்டு நாளும்! மிளகுநீர் முடுக உண்டு! யாரைத்தான் கேட்க வேண்டும் இவைகளே ஏறி ஆடும் ஊருள்ள இராட்டி னம்போல் சுற்றிடும் ஒவ்வோர் நாளும்! முறையிலோர் புதுமை இல்லை; முற்றிலும் பழைய பாதை! குறைவான உணவே உண்டு குறைவான வாழ்நாள் உற்று நிறைவான வாழ்க்கை தன்னை நடத்துவ தாய்நி னைத்து மறைவதே நம்ம னோரின் வழக்கமா யிற்றம் மாவே. சமையல்முன் னேற்ற மின்றித் தாழ்தற்கு நமது நாட்டில் சமயமும் சாதி என்ற சழக்கும்கா ரணம்என் பேன்நான். அமைவுறும் செட்டி வீட்டில் அயலவன் உண்ப தில்லை தமைஉயர் வென்பான் நாய்க்கன் முதலிநீ தாழ்ந்தோன் என்பான். ஒருவீட்டின் உணவை மற்றும் ஒரு வீட்டர் அறியார் அன்றோ? பெருநாட்டில் சமையற் பாங்கில் முன்னேற்றம் பெறுதல் யாங்ஙன்? தெரிந்தஓர் மிளகு நீரில் செய்முறை பன்னூ றாகும்! இருவீட்டில் ஒரே துவட்டல் எரிவொன்று புகைச்சல் ஒன்று! ஆக்கிடும் கறிகட் குள்ள பெயர்களும், அவர வர்கள் போக்கைப்போல் மாறு கொள்ளும் புளிக்கறி குழம்பு சாம்பார் தேக்காணம் என்பார் ஒன்றை! அப்பளம் அதனைச் சில்லோர் பாழ்க்கப் பப்படம் என்பார்கள் பார்ப்பான் அப்பளாம் என்கின்றான். கல்வி அம்மையீர் சொன்ன வண்ணம் அனைத்துக்கும் கல்வி வேண்டும்! செம்மையிற் பொருள் ஒவ்வொன்றின் பண்புகள் தெரிதல் வேண்டும்! இம்மக்கள் தமக்குள் மேலோர் இழிந்தவர் என்னும் தீமை எம்மட்டில் போமோ, நன்மை அம்மட்டில் இங்குண் டாகும். என்றனள் விருந்து வந்த மலர்க்குழல் என்பாள்! அங்கு நன்றுபூ வரச நீழல் நடுவினில் நகைமுத் தோடு நின்றுநா வரசன் என்னும் இளையவன் நிகழ்த்து கின்றான்! சென்றுநாம் அதையும் கேட்போம் தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோ? நாவரசன் நகைமுத்து உரையாடல் அகவல் ஆளிழுக் கின்ற அழகியவண்டி இந்த வூரில் இருப்பதும், நமது வில்லிய னூரில் இல்லா திருப்பதும் ஏன்அக் காஎன இளையோன் கேட்டான். நகைமுத்து நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்: “கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும் தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும் ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம் இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்! இருவரும் ஒருநிலை எய்தும் நாளில் ஆளைஆள் இழுத்தல் அகலும்! அந்நாளில் தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்.” இழுப்பு வண்டி “அழகிய வண்டி அழகிய வண்டி நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை; வேண்டாப் போது விடுவர் பின்புறம்! காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்! இதுநம் மூரில் எப்போது வரும்? அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?” என்று பிள்ளை இயம்பி நின்றான். நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்? பொதுமக் கள்தம் போக்கு வரவுகள் இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்? ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம் பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்! என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள் பகட்டு பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து) ஏற்படு வார்கள் என்றான் இளையான். செல்வம் இல்லார் செல்வர் போலவும் அழகே இல்லார் அழகியர் போலவும் காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள். என்று கூறினாள் இளநகை முத்தினாள். “அந்நிலை எப்போ ததையுரை” என்றான். “வஞ்சமும் பொய்மையும் வளர்ந்தால்” என்றாள், அழகிய வஞ்சமும் வேண்டாம் நம் பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே. தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள் பஃறொடை வெண்பா செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள் பொங்கும் மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக வீட்டுக் குறட்டில் நின்ற நற்றலைவி வேல்விழிகள் பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள் ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித் தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது அன்னை மகிழ்ச்சி நின்றாள்: சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து மன்றாடும் மாமயிலாள் “வாரீர்” என அழைத்தாள். உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர் பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்! வீட்டாரும் விருந்தினரும் வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும் பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி! எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம் வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல் சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி முற்றத்தில் கையலம்பி முன் விரித்த பாய்நிறையச் சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக் கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது! கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ! பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ! கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா என்றுரைக்க, மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய் ஒத்துத் துவங்கினான் ஒன்று: வேடப்பன் இசைப்பாடல் திரவிடம் நமது நாடு - நல்ல திரவிடம் நமது பேச்சு! திரவிடர் நாம் என்று களித்தோம்! திராவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்! உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின் உருவினை முழுமையும் ஒழித்தோம்! செத்தபின் தன்புகழ் ஒன்றே சிறந்திட வேண்டுதல் கருதி ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும் உயிர்திரா விடரின் குருதி! மாவரசர் இன்னிசை வெண்பா வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம் மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி ஒன்றுபா டென்றாள் உவந்து: நகைமுத்து இசைப்பாடல் கலையினிற் பெண்ணே இலகு, பல் கலையினிற் பெண்ணே இலகு! நிலையினில் உயரவேண்டும் பெண்ணுலகு! மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ புலைமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்! என்று நகைமுத்தாள் பாடினாள்! என்னஇன்பம் என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற இளையார் தலைக்கொன் றியம்பிடுவார். யாரும் களையாது காதுகொடுத் தார். தென்னை நாவரசு அறுசீர் விருத்தம் தலைவிரித்தாய் உடல் இளைத்தாய் ஒற்றைக்கா லால் நின்றாய் தமிழ்நாட் டார்க்குக் குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய் கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே! பனை வீட்டுப்பிள்ளை (1) ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப் பருவத்தில் இட்ட கொட்டை நீரேதும் காப்பேதும் கேளாமல் நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின் வாராய்என் றெனைஓலை விசிறியினால் வரவேற்று நுங்கும் சாறும் சீராகத் தந்ததெனில், பனைபோலும் நட்புமுறை தெரிந்தா ருண்டோ? மா வீட்டுப்பிள்ளை (2) காணிக்குப் புறத்தே ஓர் பதிவிட்ட மாநட்டுக் கண்கா ணித்துக் கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில் அதன்நிழலின் கீழ்இ ருந்தேன் மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின் இலைக்காம்பில் ஊஞ்ச லாடச் சேண்எட்டு கோலெடுத்தேன் கைப்பிடித்தேன் வாய்வைத்தேன் தேன் தேன் தேனே. பலா நாவரசு பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை தங்கக்காம் படர்மி லார்கள் வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா மரத்திற்சிற் றானைக் குட்டி போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த பொழுதினிலே புதுமை கொள்ள மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும் வேர்க்குள்ளும் மணக்கும் நன்றே. மாதுளை வீட்டுப்பிள்ளை (1) குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த கோடெல்லாம் பூவும் பிஞ்சும் உவப்படையச் செய்கின்ற மாதுளையின் உதவியினை என்ன சொல்வேன்? சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின் வண்ணத்துச் செம்பில் இட்டுச் சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று தித்திக்கச் செய்த தன்றோ! வாழை வீட்டுப்பிள்ளை (2) தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி நீர்பாய்ச்சத் தளிர்த்த வாழைச் சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை போற்பெரிய இலைகள் ஈயும் காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும் கடைந்தெடுத்த வெண்ணெ யோடும் ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற் குலையீயும் இந்தா என்றே. களாச்செடி நாவரசு முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு சிறுதூறும் முடங்கி மண்ணின் உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல் ஒத்தபுதற் களாவே!நீ, ஏன் வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற நிற்கின்றாய் எளிய நண்டின் கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது சுவைபெரிது கண்டோ மன்றோ! கொய்யாப்பழம் வீட்டுப்பிள்ளை (1) காட்டுமுயற் காதிலையும், களியானைத் துதிக்கைஅடி மரமும் வானில் நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத் திரள்பழத்தை நம்கண் ணுக்குக் காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என் போம்கையில் கொய்து வாயில் போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென் போம்பொருளின் புதுமைகண்டீர்! அறுசீர் விருத்தம் விருந்தினர் மக்கள் தாமும் வீட்டினர் மக்கள் தாமும் பொருந்திடு கனிப்பாட் டுக்கள் புகல, மாவரசர் தாமும் மருந்துநேர் மொழிகொள் நல்ல மலர்க்குழல் அம்மை யாரும் திருந்திய தலைவி தானும் தேனாற்றில் உளம்கு ளித்தார். மாவரசர் தலைக்கொன்று பாட எண்ணித் தொடங்கினீர் உளம்த ழைத்தே கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும் கழறிட நேர்ந்த தன்றோ! இலைக்கொன்றும் வைத்த மற்ற இன்சுவைக் கறிப டைக்க மலைக்கின்ற போதும் அன்போ வழங்குக என்று கூறும். ‘மலர்க்குழ லாளும் நானும் கடைக்குப்போய் வருதல் வேண்டும் விலைக்குள பொருள்கள் வாங்கி விரைவினில் மீள்வோம்! வீட்டுத் தலைவரை, என்றன் அன்பைக் காணவோ தணியா ஆவல் அலைத்தது நெஞ்சை’ என்றார் மாவர சான நல்லார்! நன்றென்று தலைவி சொன்னாள் நாவர சென்னும் பிள்ளை இன்றென்னை உடன ழைத்துச் செல்வீர்கள் அப்பா என்றான் என்றென்றும் உன்வ ழக்கம் இப்படி யென்று கூறிச் சென்றனர் பெரியார்! பையன் சென்றனன்! தாயும் சென்றாள். வேடப்பன் தனிய றைக்குள் இலக்கியம் விரும்பிச் சென்றான் கூடத்தில் தம்பி தங்கை கதைபேசிக் கொண்டி ருந்தார் மாடத்தை நடையை மற்றும் வாய்ப்புள்ள இடங்கள் தம்மைச் சோடித்து மணிவி ளக்கால் சோறாக்கத் தலைவி சென்றாள். நறுமலர்க் குழலாள் இன்ப நகைமுத்தாள் ஒருபு றத்தில் சிறுவர்பால் எழுது கோலும் சிறுதாளும் கேட்டுப் பெற்று நிறைமகிழ் நெஞ்சு கொள்ள நினைவோஓர் உருவைக் கொள்ள உறுகலை அனைத்தின் மேலாம் ஓவியம் வரைந்தி ருந்தாள். வேடப்பன் எண்சீர் விருத்தம் திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன் திறந்தவிழி செல்லவில்லை! இதுவ ரைக்கும் இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும் இனிப்பிறக்கும் மங்கையரி லேனும் அந்த நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள் இல்லையென நினைக்கின்றேன்! பேசும் பேச்சால் சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள் சிற்பத்திற் பெரும்புரட்சி செயப்பி றந்தாள் காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக் காட்சிதரும் பொருளன்றோ! வீழ்ந்தார் வாழ்வைப் பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்! பூவாத புதுக்காதல் பூக்க நோக்கி ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள் தனியழகை அணிமுரசம் ஆர்க்கின் றாளே! பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன் பெற்றோர்பால் இல்லைஎனைப் பேணும் பெற்றி! அவள்மேற் காதல் அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம் அறங்காக்கும் அவள்நெஞ்சம் வெளியில் தோன்றும் மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல் மங்கைஎனை நோக்குகின்றாள் எனினும், வாழ்வில் அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ! அவள்எனக்குக் கிடைப்பாளோ! துயர்கொள் வேனோ! எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி இன்பக்க ளஞ்சியம்நல் லழகின் வெற்றி பொழிகதிரை மறைத்தொளிகொள் முகிலைப் போலப் புனைஆடை பொன்னொளியைப் பெற்ற தென்றால் அழகுடையாள் திருமேனி என்னே! என்னே! அடைவுசெயும் அன்னம்போல் நடையாள்! யாழும் குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக் கொஞ்சினாள்! கருங்குயிலாள் திரும்புந் தோறும் மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள் மந்தார வானத்து மின்ன லாகும்! புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும் பொன்னான தன்காதல் இலக்கி யத்தில் இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்! தந்தை இல்லத்தில் புகுந்ததையும் உணரான்! மற்றும் அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும் அங்குற்றார் என்பதையும் உணரான்! அன்னை எதிர்வந்தாள் “வேடப்பா” என்றாள், “அம்மா” என்றெழுந்தான் உணவுபடைத் திருத்தல் கண்டான். நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள். நன்றென்று மலர்க்குழலி சொல்லிப் போனாள். தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத் தோய்ந்தாரை* மாற்றுவதோ அருமை அன்றோ? அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க அன்புள்ள இல்லத்தின் தலைவி பூத்த முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே முன்னறையில் நகைமுத்தாள் சென்றுட் கார்ந்தாள்! நகைமுத்து முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க மூன்றுமணி நேரமா வேடப் பர்க்கே எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே எழில்நகைமுத் தாள்புனைந்த ஓவி யத்தை அதேசுவடி மேல் வைத்தாள், உற்றுப் பார்த்தாள்; அவன் சிரித்தான்; அவள், சிரித்தாள் ‘அன்ப ரேநீர் இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?’ என்றாள் ‘உனை’ யென்றான்; ‘யான்பெற்றேன் பெரும்பே’ றென்றாள். ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்! என்னென்ன வோசொன்னான் அவன்அ வட்கே! காதோடு ‘நும்பெற்றோ ரிடத்தில் இந்தக் கடிமணத்தின் முடிவுதனைக் கேட்பீர்’ என்றாள். ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான். உளம்பூத்தாள்! வாய்பதறி விருந்த ருந்தித் தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத் திருமணம்எந் நாளென்றாள்! பிழைக்கு நைந்தாள்! கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும் கடுகளவு புசித்தானா இல்லை. காதற் பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல் புலன்துடித்தான்! நகைமுத்தாள் புறம்போய் ஓர்பால் வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம் மாற்றுவது எந்நாளென் றெண்ணி யெண்ணிச் செய்கைஇழந் தமர்ந்திட்டாள். “நாங்கள் ஊர்க்குச் சென்றுவரு கின்றோம்”என் றுரைத்தான் தந்தை! தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள் தவித்திட்டான் வேடப்பன்! வீட்டுக் காரர் ‘இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன? இருந்துநா ளைப்போக லாம்’என் றார்கள். வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள். வண்டிவந்து வீட்டெதிரில் நிற்கக் கண்டார். வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றிகூறி வெளிச்சென்றார்! வீட்டினரும் உடன்தொ டர்ந்தார்! பிரிந்தாள் நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன் நூறுமுறை நோக்கினான், இனிது பெற்ற பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்கு முன்னர் ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்! அவள்வண்டிப் படிமிதித்தாள், திரும்பிப் பார்த்தாள்! ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்! இனிதாக வாழ்த்துரைகள் மாற்றிக் கொண்டார். வண்டிநகர்ந் தது;மாடு விரைந்த தங்கே! மங்கையவள் தலைசாய்த்து வேடப் பன்மேல் கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக் கிளிபறித்துப் போனதனால் மரம்போல் அங்கே தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித் தவிப்பார்போல் தனித்திருந்தான்; அவன்தாய் ஆன ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின் ஓவியத்தில் தன்மகனின் உருவைக் கண்டாள். குடும்ப விளக்கு மூன்றாம் *பகுதி – திருமணம் முன்னுரை குடும்ப விளக்கின் மூன்றாம் பிரிவாக இத் திருமணம் வெளி வந்துள்ளது. காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு படுவது திருமணம் என்பதும், அன்னாரின் வெளிப்படையான வாழ்க்கை ஒப்பந்தம் திருமணத்தின் அடுத்த கட்டம் என்பதும், அவ்வொப்பந்தத்தைத் துணைபுரிந்து பெரியோர் நிறைவேற்றுவதும், காதலரை வாழ்த்து வதும் திருமண வாழ்த்து என்பதும் என் எண்ணம். பழந்தமிழர் வழக்கமும் இதை மறுக்கவில்லை. இந்நாள் அதை யொட்டியே மணமுறை அமையவேண்டும். பயனற்ற சடங்குகள் விலக்கப்படுவதால் பழுதொன்றுமில்லை. விலக்கப்படாவிடில் பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டதாகும். திராவிடர் பண்பாடு, கலை, ஒழுக்கம் உருவற்றுப் போகும். எனவே பண்டைய தமிழர் திருமண முறையை இந்நாளைக்கு ஏற்ற வகையில் திருத்தியும், குறைத்தும் சேர்த்தும் திருமணம் என்னும் இச்சிறு நூலை எழுதியிருக்கிறேன். ஆதரிக்க. புதுச்சேரி - பாரதிதாசன் 1. 12. 48 3. திருமணம் *1. வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது, மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து சென்றா ளன்றோ நகைமுத்து? - இங்கு*... பஃறொடை வெண்பா புதுவை மணவழகன் பொன்னின் பரிதி எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப் பட்டுக் கரை வேட்டி கட்டி, நீள் சட்டையிட்டுச் சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி ஓர்கையால் தூக்கி ஒருகைக் குடையூன்றி ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில் வந்தாள். ‘ஆளும் கணக்கருமோ அங்கு வந்து காத்திருப்பார் வேளையொடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ? பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம் வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர்ச் சின்னா னிடம் அனுப்பித் தீராத பற்றான ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச் சொல்’ என்று சொல்லி நின்றான் தூய மணவழகன். ‘நல்லதத்தான்’ என்று நவின்றாள் எழில் தங்கம்! காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து மேலும் ஒரு தடவை மெல்லிமுகம் தான் நோக்கிச் சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி நின்றாள். திரும்பினாள் நெஞ்சம் உருகித் தங்கம்! கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்! சின்னவனாம் பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள். அன்னவர்க்குப் பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பி வைத்தாள். தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன் இன்னும் வரவிலையே என்றே எதிர்ப்பார்த்தாள். பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள்தங்கம்! ‘பச்சைப் புலவர் பகர்ந்தவை என்’ என்று தச்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினாவிடவே. ‘நல்லபுற நானூற்றில் நான்கும், திருக்குறளில் ‘கல்வி’ ஒரு பத்தும் கடுந்தோல் விலக்கிச் சுளைசுளையாய், அம்மா சுவைசுவையாய் உண்டேன். இளையேன் நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்? என்றுரைத்தான் வேடப்பன். ‘என்னப்பா வேடப்பா உன் அப்பா சொல்லியதை உற்றுக்கேள்’ என்றாள் தாய்: ‘சின்னானை வில்லியனூர் சென்றுநே ரிற்கண்டே ஐந்நூறு ரூபாயை அட்டியின்றி வாங்கிவா’ என்று புகன்றார் தந்தை இப்போதே நீ செல்வாய்’ என்று தன் பிள்ளைக்கு இயம்பினாள் தங்கம். அகமும் முகமும் அலர்ந்தவனாய், “அம்மா மிகவும் மகிழ்ச்சி” என்று வேடப்பன் சென்றான். அமைய அவர்கட்கே ஆனகறி எண்ணிச் சமைய லுக்குத் தங்கம் சென்றாள். 2. அவள் அண்டையில் அவன் அறுசீர் விருத்தம் தன்கடை மீத மர்ந்து சரக்குகள் நிறுத்தி ருந்த சின்னானை வணங்கி, என்ன செய்திஎன் றினிது கேட்டுப் பின்; அவன் ‘அமர்க’ என்னப் பேசாமல் ஒருபால் குந்திப் பன்மக்கள் அகன்ற பின்பு வேடப்பன் பணத்தைக் கேட்டான். ‘இளகிப்போ யிற்று நீவிர் ஈந்திட்ட நல்ல வெல்லம்; புளிநல்ல தாய் இருந்தால் பொதிஐந்து வேண்டும் தம்பி! மிளகென்ன விலைகொ டுப்பீர்! வெந்தயம் இருப்பில் உண்டோ? களிப்பாக்கு விலைஎவ் வாறு? கழறுக’ என்றான் சின்னான் இளகிய வெல்லம் மாற்றி நல்லதாய் ஈவோம் இன்றே! புளியோகை யிருப்பி லில்லை. பொதிக்கொரு நூறு ரூபாய் மிளகுக்கு விலைஏ றிற்று. வெந்தயம் வரவே யில்லை! களிப்பாக்கு நிறம்ப ழுப்புக் கணிசமாய் இருப்பி லுண்டு! ‘சரக்குவந் தெடுத்துப் போவீர் தவணைக்குத் தருகின் றோமே! இருக்கின்ற பற்றை மட்டும் இன்றைக்குத் தீர்த்தால் போதும். வருத்திய சரக்குக் காக வாணிகர் வந்து குந்தி விரிக்கின்றார் கணக்கை’ என்று வேடப்பன் இனிது சொன்னான். ஐந்நூறு ரூபாய் எண்ணி அளித்தனன் சின்னான்! யாவும், இன்னொரு முறையும் எண்ணி இடுப்பினில் வாரிக் கட்டிச் சின்னானை வணங்கி, ‘அண்ணா சென்றுநான் வருவே’ னென்று முன்னுற நடந்தான் அந்த மொய்குழல் வீட்டை நோக்கி! மாவர சான தந்தை, மலர்க்குழல் என்னும் அன்னை, நாவர சான தம்பி, உடன்வர நகைமுத் தென்னும் பாவையும் விருந்தாய் வந்தாள்; என்னுளந் தனிற்ப டிந்தாள்; ஓவியம் வல்லாள்; என்றன் உருவையும் எழுதினாளே! என்னையே தனி யிருந்து நோக்குவாள்; யான்நோக் குங்கால் தன்னுளம் எனக்கீ வாள்போல் தாமரை முகம்க விழ்ந்து புன்னகை புரிவாள். யானோர் புறஞ்சென்றால் அகந்து டிப்பாள். பின்னிய இரண்டுள்ளத்தின் பெற்றியும் அறிந்தார் பெற்றோர், வீட்டை விட்டகலுதற்கு மெல்லியோ உள்ளம் நைந்தாள்! பூட்டிய வண்டி தன்னில் பலர்ஏறப் புறத்தில் குந்தி வாட்டிய பசிநோ யாளி வட்டித்த சோற்றி லேகண் நாட்டுதல் போல்என் மேல்கண் நாட்டினாள் இமைத்த லின்றி! தலைக்குழல் மேற்செவ் வந்தி! தாமரை, முகமும் வாயும்! மலைக்கின்ற மூக்கெள் ளின்பூ! வாய்த்தசெங் காந்தள் அங்கை! குலுக்கென இடைகு லுங்கச் சிரித்தென்னைக் கொல்லு முல்லை! மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற வண்டியை மறந்தே னில்லை! என்நிலை அறிய வில்லை என்பெற்றோர் மங்கை நல்லாள் தன்னிலை அறிய வில்லை தனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார்? முன்நிலை வேறு; நாங்கள் முழுநீளக் குழந்தை அந்நாள்; நன்னிலை காண வேண்டும் நான் அவள், மணவ றைக்குள்! வேடப்பன் நகைமுத் தாளின் நினைவோடு விரைந்து சென்றான். வீடப்பு றத்தே தோன்ற வீட்டுக்குப் பின்புறத்தில் மாடப்பு றாவைக் கண்டான் மாமர நீழ லின்கீழ்! தேடக்கி டைத்த தேஎன் செல்வமென் றருகிற் சென்றான். பழந்தமிழ்ச் சுவடித் தேனைப் பருகுவாள் எதிரிற் கண்டாள் இழந்ததன் பெருஞ்செல் வத்தை! ‘இறந்தேன் நான் பிறந்தேன்’ என்றாள் ‘தழைந்தமா மரநி ழற்கீழ் எனக்கென்றே தனித்தி ருந்தாய் விழைந்த உன் பெற்றோர் மற்றோர் வீட்டினில் நலமோ’ என்றான். ‘தந்தையார் புதுவை சென்றார் தாயாரோ அண்டை வீட்டிற் குந்தியே கதைவ ளர்ப்பார் குப்பத்துப் பெருமாள் தாத்தா வந்தனர் அவர்தாம் வீட்டு வாயிலில் தூங்கு கின்றார் செந்தமிழ்ப் பள்ளி சென்றார் சிறியவர்!” ஆத லாலே “கருமணற் கடலோ ரத்தில் பிறர்வரக் கண்ட நண்டு விரைந்தோடு வதுபோல்ஓட வேண்டிய தில்லை. சும்மா இரும். மணம், காற்று, நீழல் இவற்றிடை ஒன்று கேட்பேன்; ‘திருமணம் எந்நாள்? நாம், மேல் செயத்தக்க தென்ன?” என்றாள். ‘நகைமுத்தை விரும்பு கின்றேன் நாளைக்கே மணக்க வேண்டும் வகைசெய்க அப்பா’ என்று வாய்விட்டு நானா சொல்வேன்? நிகரற்றாய் உன்பெற் றோர்பால் நீசொன்னா லென்ன?’ என்றான். “மகளுக்கு நாண மில்லை என்பார்கள்; மாட்டேன்’ என்றாள். இல்லத்துள் தாய் புகுந்தாள். ‘எங்குள்ளாய் நகைமுத்’ தென்றே செல்வியை அழைத்தாள்! மங்கை திடுக்கிட்டு வீடு சென்றாள். வில்லினின் றம்பு போல வேடப்பன் கொல்லை நீங்கி நல்லபிள் ளைபோல் வீட்டு வாயிலுள் நடக்க லானாள். மலர்க்குழல் கண்டாள் ‘ஓ! ஓ! வேடப்பா வாவா’ என்றாள். ‘நலந்தானே அப்பா அம்மா? நலந்தானே தம்பி தங்கை? அலம்புக கைகால் வந்தே அமரப்பா சாப்பி டப்பா இலைபோட்டா யிற்று வாவா வேடப்பா’ எனப்ப கர்ந்தாள். தண்டலுக் காக வந்தேன் அப்படி யேஇங் கும்மைக் கண்டுபோ கத்தான் வந்தேன் கடைக்குநான் போகவேண்டும் உண்டுபோ என்கின் றீர்கள் உண்கின்றேன்’ எனவே டப்பன் உண்டனன்; உண்ணக் கண்ட நகைமுத்தோ உவப்பை உண்டாள். “குப்பத்துப் பெருமாள் தாத்தா குறட்டைவிட் டுறங்கி னாரே! எப்படிச் சென்றார்? நீயிங் கிருந்தாயே நகைமுத் தாளே! அப்படி அவர்சென் றாலும் நீயன்றோ அழைக்க வேண்டும் தப்புநீ செய்தாய்’ என்று தாய்மலர்க் குழலி சொன்னாள். இவ்வாறு சொல்லும் போதே கொல்லையி லிருந்த தாத்தா ‘எவ்விடம் சென்று விட்டேன் இங்குத்தான் இருக்கின் றேனே செவ்வாழை தனில்இ ரண்டு சிற்றணில் நெருங்கக் கண்டேன் அவ்விரண் டகன்ற பின்னர் வந்தேன்நாள்’ என்று வந்தார். உணவினை முடித்த பின்னர் ‘ஊருக்குச் செல்ல வேண்டும் மணிஒன்றும் ஆயிற்’ றென்று மலர்க்குழ லிடத்திற் சொன்னான். “துணைக்குநான் வருவேன் தம்பி! தூங்குவாய் சிறிது நேரம் உணவுண்ட இளைப்புத் தீரும் உணர்” என்றார் பெருமாள் தாத்தா ‘இளைப்பாறிச் செல்க தம்பி’ எனமலர்க் குழலும் சொன்னாள். ஒளிமுத்து நகையோ, ஓடி உயர்ந்தஓர் பட்டு மெத்தை விளங்குறு மேல் விரிப்பு, வெள்ளுறைத் தலைய ணைகள் மளமள வென்று வாரி வந்தொரு புறத்தில் இட்டாள். படுக்கையைத் திருத்தம் செய்து வேடப்பன் படுத்தி ருந்தான். இடைஇடை நகைமுத் தாளும் இளநகை காட்டிச் செல்வாள். சுடுமுகத் தாத்தா வந்து ‘தூங்கப்பா’ என்று சொல்வார். கடைவிழி திறந்த பாங்கில் கண்மூடிக் கிடந்தான் பிள்ளை. 3. தந்தைமார் இருவர்க்கும் சண்டை எண்சீர் விருத்தம் மணவழகன், கடையினிலே வணிக ரோடு வரவிருக்கும் சரக்குநிலை ஆய்ந்து பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். அந்நே ரத்தில், கருப்பண்ணன் எனும்ஒருவன் குறுக்கில் வந்து ‘மணவழக ரே,ஆயி ரத்தைந் நூறு மாவரசர்க் கேநீவிர் தருதல் வேண்டும் பணமுழுதும் வாங்கிவரச் சொன்னார்” என்றான்! பதைத்திட்டான் மணவழகன் மானம் எண்ணி! ‘சீட்டேதும் தந்தாரோ? உன்னிடத்தில் செலுத்துவது சரியில்லை அறியேன் உன்னை!* கூட்டத்தின் நடுவினிலே குறுக்கிட் டாயே. கூறுகநீ மாவரச ரிடத்தில்’ என்றான். ‘கேட்கின்றோம் கொடுத்தபணம்! எரிச்சல் என்ன? கெட்டநினைப் புடையவர் நீர்’ என்று கூறி, நீட்டினான் தன்னடையைக் கருப்பண் ணன்தான்! நீருகுத்தான் மணவழகன் இருகண் ணாலும்! வந்திட்டான் மாவரசன் எதிரில் நின்று ‘வைகீழே என்பணத்தை’ என்று சொன்னான். நொந்திட்டான் மணவழகன் நொடியில் எண்ணி நூற்றுக்கு முக்காலாம் வட்டி போட்டுத் தந்திட்டான்! மாவரசன் பெற்றுக் கொண்டான். ‘தகாதவரின் நட்பாலே மானம் போகும்’- இந்த மொழி சொன்னமண வழகன் தன்னை, ஏசிமா வரசன் தான், ஏக லானான். ‘மாவரசன் தன்னைநான் பணமா கேட்டேன்? வைத்துவைப்பாய் என்றுரைத்தான் வாங்கி வைத்தேன். யாவரொடும் பேசிநான் இருக்கும் போதில் எவனோவந் தெனைக் கேட்டான் பணங்கொ டென்று! நோவஉரைத் திட்டானே தீயன் என்னை! நூறாயி ரம்கொடுக்கல் வாங்கல் உள்ளேன்; நாவால்ஓர் வசைகேட்ட தில்லை’ என்று நனிவருந்தி மணவழகன் அழுதி ருந்தான். மணவழகன் வழக்கறிஞ னிடத்திற் சென்றான். மானக்கே டிதற்கென்ன செய்வ தென்று தணிவற்றுப் பதறினான்; பொய் வழக்குத் தான்தொடங்க வழக்கறிஞன் சாற்ற லானான். இணங்கமறுத் தவனாகி நண்பர் பல்லோர் இடமெல்லாம் இதைச்சொல்லி வருந்த லானான். துணைவியிடம் சொல்வதற்கு வீடு வந்தான் தொடர்பாக நடந்தவற்றைச் சொல்லித் தீர்த்தான். 4. எதிர்பாராத இடைஞ்சல் அகவல் “நண்புளார் தீமை நாடினும் அதனைப் பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார் தாவுறும் உங்கள் தகைமையை அந்த மாவர சாலோ மாற்ற முடியும்? தீதுசெய் தார்க்கும் நன்மை செய்வர் மூது ணர்ந்தவர் முனிவு செய்யார் அத்தான் மறப்பீர்! அகம்நோ காதீர்” என்று தேறுதல் இயம்பினாள் தங்கம். மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான். தந்தைதாயா ரிடம்* சாற்று கின்றான்; ‘சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய் மணிபத் தாகிற்று மாவர சில்லம் அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்; மலர்க்குழ லம்மையார் வற்புறுத் தியதால் உண்டேன்; சற்றே உறங்கினேன்; என்னுடன் பெருமாள் தாத்தா வருவா ரானார்’ மகன்சொல் கேட்ட மணவழ கன்தான் முகங்க னலாக ‘முட்டாள்! முட்டாள்! செல்ல லாமோ தீயன் வீடு? மதியார் வீடு மிதியார் நல்லார்! பொல்லாப் பிள்ளை நில்லா தேஎதிர் போபோ!’ என்று புகல லானான். தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து ‘மாவர சின்று மதிப்பிலா வகையில் நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி; கடைக்குப் போயிரு கண்ணே’ என்றாள் அடக்க முடியாத் துன்பம் படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே! 5. பகை நண்பாயிற்று பஃறொடை வெண்பா தாழ்வாரந் தன்னிலொரு சாய்வுநாற் காலியிலே வாழ்வில் ஒரு மாசு வந்ததென எண்ணி மணவழகன் சாய்ந்திருந்தான். மாற்றுயர்ந்த தங்கம் துணைவனுக்கோர் ஆறுதலும் சொல்லி அருகிருந்தாள். தங்கம் என்றுகூவித் தடியூன்றி அப்பெருமாள் தாத்தாவர லானார்; அகமகிழ்ந்தார் அவ்விருவர். சாய்ந்திருக்க நாற்காலி தந்தார்; பருகப்பால் ஈந்து, நலங் கேட்டே எதிரில் அமர்ந்தார்கள். “வேடப்ப னோடுதான் வில்லிய னூரினின்று வாடகை வண்டியிலே வந்தேன். கடைத்தெருவில் வெண்காயம் என்ன விலையென்று கேட்டுவந்தேன். சுண்டைக்காய் வாங்கிவரச் சொன்னாளென் பெண்டாட்டி. வில்லிய னூரில்ஓர் வேடிக்கை கண்டேன்உம் செல்வனைப் பற்றிய செய்திஅது! சொல்லுகிறேன்: ‘பத்துமணி இருக்கும் பாவை நகைமுத்தாள் புத்தகமும் கையுமாய் வீட்டுப் புறத்தினிலே உள்ளதொரு மாமரத்தின் நீழலிலே உட்கார்ந்து தெள்ளு தமிழில் செலுத்தியிருந் தாள்கருத்தை! வேடப்பன் வந்தான் விளைந்தவற்றை என்சொல்வேன்? ‘தேடக் கிடைத்தஎன் செல்வமே’ என்றான். மறைந்துதான் கேட்டிருந்தேன் வஞ்சியின் பேச்சை! ‘இறந்தேன் நான்இன்று பிறந்தேன்’ எனப்புகன்றாள். அன்பின் பெருக்கத்தை அன்னவர்பால் நான்கண்டேன் ‘என்று மணம்நடக்கும்?’ என்றுகேட் டாள்பாவை. ‘பெற்றோர்பால் நீநமது பேரன்பைக் கூறிமணம் இற்றைக்கே ஈடேற ஏற்பாடு செய்’ என்றான். ‘நீதான் சொல்’ என்றுரைத்தான் வேடப்பன்! நேரிழையாள், ‘ஓதுவனேல். நாணமில்லா ஒண்டொடி என்பார்’ என்றாள். இவ்வாறு பேசி இருந்தார்கள் அன்னவற்றை அவ்வாறே சொல்ல அறியேன்! அதேநேரம் வீட்டினின்று தாயழைத்தாள் மெல்லி பறந்தாளே. ஒட்ட மெடுத்தானே வேடப்பன் உட்சென்றான். ‘வா’ என்றழைத்தாள் மலர்க்குழலி சோறிட்டாள், பாவையவள் வேடப்பன் பார்க்க உலவியதும், மெத்தையைத் தூக்கிவந்து தாழ விரித்ததுவும், முத்துச் சிரிப்பை முகத்தில் பரப்பியதும், வேடப்பன் தூங்குவது போலே விழிமூடி ஆடுமயில் வந்தால் அழகைப் பருகியதும், எவ்வாறுரைப்பேன் காண் யானோர் கவிஞனா? இவ்வேளை இந்தநொடி ஏற்பாடு செய்திடுக! இன்றே செயத்தக்க இன்பமணத் தைநாளைக் கென்றால், துடிக்கும் இளமைநிலை என்னவாகும்?” என்றார் பெருமாள். இவையனைத்தும் கேட்டிருந்த குன்றொத்த தோளானும் தங்கக் கொடியும் மயிர்க்கூச் செறிய மகிழ்ச்சிக் கடலில் உயிர்தோயத் தங்கள் உடலை மறந்தே கலகலென வேசிரித்தும் கைகொட்டி ஆர்த்தும் உலவியும் ஓடியும் ஊமை எனஇருந்தும் பேசத் தலைப்பட்டார் ‘எங்கள் பெரியபிள்ளை யின்காதல் நெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியைஎம் சொத்தெல்லாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா? கத்தினான் மாவரசன் கண்டபடி ஏசிவிட்டான். என்பிள்ளை தன்மகள்மேல் எண்ணம்வைத்தான் என்னில், அவன் பொன்னடியை என் தலைமேல் பூண மறுப்பேனோ? என் பிள்ளை உள்ளம், அவன் ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம் ஒன்றானால் எங்கள் பகையும் ஒழியாதோ!” என்றான் மணவழகன், ஏதுரைத்தாள் தங்கம் எனில் இன்றே நீ; வில்லியனுர் ஏகுக தாத்தா தாத்தா எங்கள்மகன் கருத்தை எம்மிடம்சொன் னீர்அதுபோல் திங்கள்முகத் தாள்கருத்தை அன்னவர்பால் செப்பி மணத்தை விரைவில் மணமகன் வீட்டில் பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த உறுதிபெற்று வந்தால்எம் உள்ளம் அமையும். அறிவுடையீர் உம்மால்தான் ஆகும்இது” என்றாள். சிற்றுண வுண்டு சிவப்பேறக் காய்ச்சியபால் பெற்றே பருகிப் பெரியதொரு வண்டியிலே ஏறினார் தாத்தா ‘இசைவார் அவர்’என்று கூறிச்சென் றார் மகிழ்ச்சிகொண்டு. 6. மணமகன் வீட்டில் மணம் அகவல் “காயா பழமா கழறுக” என்றாள். “கனிதான்” என்று கழறினார் தாத்தா. வண்டிவிட் டிறங்கி வந்தார் உள்ளே தங்கம் “நடந்ததைச் சாற்றுக” என்றாள். “என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா? மறைந்ததா?” என்றான் மணவழ கன்தான். “ஒப்பி னாரா? ஒப்பவில் லையா? செப்புக” என்று செப்பினாள் தங்கம். “இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்? கொல்லையில் காதலர் கூடிப் பேசிய எல்லாம் அவரிடம் இயம்பி னீரா? மறந்தீரா?” என்றான் மணவழ கன்தான். “குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும். உரைக்க மாட்டேனா? உட்கா ருங்கள்” என்றார் தாத்தா. இருவரும் அமர்ந்தார். “நான் கிளம்பினேன் நாலு மணிக்கே ஐந்து மணிக்கெல்லாம் அவ்விடம் சேர்ந்தேன். மாவர சிருந்தான். மலர்க்குழல் இருந்தாள். நகைமுத் திருந்தாள். நடந்ததைச் சொன்னேன். “வேறே எவனையும் விரும்பேன்” என்றும், “வேடப் பனைத்தான் விரும்பினேன்” என்றும், சட்ட வட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும். “திருமண முடிவு செப்புக” என்றேன். ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார். ‘மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்” என்றேன் ‘சரிதான்’ என்றார் அவர்களும், “கருப்பண்ணன் என்பவன் கடைக்கு வந்து வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை. ஆயினும் அவன்என் அன்புறு நண்பன். நம்பலாம் அவனை, நம்ப வில்லை: மணவழ கனவனை மதிக்க வில்லை; அதனால் என் மனம் கொதித்த துண்டு. மணவழகன் தன் மகனும், என்றன் இணையிலா மகளும் இணைந்தார் என்றால், பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது? நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன். மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள் அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!” மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி ஆவலொடு கூறினார், அறிக” என்று. பெருமாள் தாத்தா பேசிமு டித்தார். பெரு மகிழ்ச்சி! பெரு மகிழ்ச்சி! இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர். விடியுமா? இரவின் இருட்டு விடியுமா? காலை மலர்க என் றனரே. 7. மணமக்கள் கருத்துரைகள் நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா திண்ணையிலே மாவரசன் சிற்றானைக் குட்டிபோல் கண்ணை எதிர்அனுப்பிக் காத்துக் கிடக்கின்றான். வண்ண மலர்க்குழலி வந்திடுவாள் உட்செல்வாள் பெண்ணாம் நகைமுத்தோ பேசா துலவினளே. கழுத்து மணிகள் கலகலெனக் கொஞ்ச இழுக்கும் எருதுகள் எக்களித்துத் தாவப் பழுப்புநிற வண்டியொன்றும் பச்சையொன்றும் ஆக முழுப்பளுவில் வீட்டுக்கு முன்வந்து நின்றனவே! மணவழகன், தங்கள் மகன், சிறுவன், தாத்தா தணியா மகிழ்ச்சி தவழும் முகத்தாய் அணியாய் இறங்கிவர மாவர சங்கே பணிவாய் வரவேற்கப் பாங்காய்உட் சென்றாரே. ‘அம்மா வருக; என அன்புமலர்க் குழலும் கைம்மலர் தாவக் கனிவாய் வரவேற்றாள். செம்மைநகை முத்தும்எதிர் சென்று ‘வணக்கம்’என்றாள். மெய்ம்மை, மகிழ்ச்சி,அன்பு வீடெல்லாம் ஆர்த்தனவே! தூய்மைசெய நீரளித்துக் கூடத்தில் சொக்கட்டான் பாய்விரித்து நல்லாவின் பாலும் பருகவைத்து வாய்மணக்கும் வெள்ளிலைகாய் வட்டில் தனிலிட்டே ஓய்வாய் நலம்பேசி உள்ளமகிழ்ந் தாரங்கே. “வேடப்பன் உள்ளம் நகைமுத்தை வேண்டிற்றே ஆடும் மயிலும் அவன்மேல் உயிர்வைத்தாள். நாடு நகரறிய நாளொன்றில் இங்கிவரை நீடூழிவாழ்க” என்றார் நெஞ்சார வேதாத்தா! “ஈன்றார் கருத்தென்ன? இன்பத் திருமணத்தை மூன்றுநாட் பின்னை முடிக்க நினைக்கின்றேன். ஆன்ற பெரியோர்க் கழைப்பனுப்ப வேண்டுமன்றோ. தோன்றியஉம் எண்ணத்தைச் சொல்வீர்”என் றார்தாத்தா. மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான். புகழ்ச்சியுறும் “வேடப்பன் பூவை மணத்தை இகழ்ச்சியா செய்திடுவேன்?” என்றாள் மனைவி. நகைப்போடு நன்றென் றுரைத்தான் மணவழகே! அன்புநகை முத்தின் அருகில் அமர்ந்திருந்த தன்துணைவி யானஎழில் தங்கத்தை நோக்கியே ‘உன்கருத்தைச் சொல்’என் றுரைத்தான் மணவழகன். இன்ப நகைமுத்தும் ஏங்கிமுகம் பார்க்கையிலே. “நானோ மறுப்பேன் நகைமுத்தே? என்மகனைத் தேனே, உயிரென்றாய்; சேயவனும் அன்புகொண்டான்; மானே மயிலே மருமகளே என்வீட்டு வான நிலவே மகிழ்”வென்றாள் தங்கமுமே! “இன்ப நகைமுத்தே உன்கருத்தை யானறிவேன். என்றாலும் இங்கே இருப்பார் அறிந்திடவே அன்பால் உரைத்திடுவாய் ஆணழகும் அப்படியே பன்னுதல் வேண்டு” மென்று தாத்தா பகர்ந்தனரே “கட்டழக னைமணக்கக் காத்திருக்கின் றேனேநான் அட்டியில்லை அட்டியில்லை ஆனால் ஒரு திட்டம் மட்டாய்ச் செலவிடுக எங்கள் மணமுடித்துத் தட்டா மல்ஈக தனியில்லம்” என்றனளே. மேலும் நகைமுத்து விண்ணப்பம் செய்கின்றாள்: “ஏலுமட்டும் எங்கள் குடித்தனத்தை யாம்பார்ப்போம். ஏலாமை உண்டானால் என்மாமி யார்உள்ளார்!” சேல்இரண்டு கண்ணானாள் செப்பினாள் இப்படியே! “யானுமதை ஒப்புகிறேன்: என்கருத்தும் அன்னதுவே! நானோ கடையினிலே நன்றுழைப்பேன் அப்பா, ஏ தேனும்ஒரு நூறுரூ பாய்மாதம் ஈந்திடட்டும். தேனோடை எம்வாழ்க்கை,” என்றுரைத்தான் செம்மலுமே! “மாமிகொடு மைக்கு வழியில்லை. மைத்துனர்கள் தாமொன்று சொல்லும் தகவில்லை. தன்துணைவன் ஏமாற்றி னான்தன் இளையவனை என்றுசொல்லும் தீமையில்லை. தக்கதென்று” செப்பிமகிழ்ந் தார்தாத்தா. பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லைஎன்பர் நான்தருவேன், கண்ணை இமையிரண்டு காப்பதுபோல என்மருகர் பண்ணும் குடித்தனத்தை மேலிருந்து பார்த்திடுவேன். உண்மை” என்றான்மாவரசன்; பெற்றவளும் ஒப்பினளே! “நகைமுத்தின் எண்ணத்தை நான்ஒப்பு கின்றேன். மிகஓர் ‘குடும்ப விளக்கேற்றல்’ நன்றே! தகும்” என்றாள்தங்கம்! மணவழகன் தானும் மகனுக்கு மாதமொரு நூறுதர ஒப்பினனே! மூன்றாநாள் நன்கு மணத்தை முடிப்பதென்றும் ஏற்றுகொண்டார் எல்லோரும். சாப்பா டினிதுண்டார். வான்தோய்ந்த வெண்ணிலவில் வண்டி புறப்படுமுன் தேன்சுரக்கச் “சென்று வருகின்றோம்” என்றனரே. 8. திருமண அழைப்பு அகவல் “விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால், வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும், காலை மலர்ந்ததும் கவின்மண வறையில் மாலை யிட்ட மணமக் கள்தமை வாழ்க என்று வாய்மலர்ந் திடவும், உடன்யாம் பரிந்திடும் உணவுண் ணுதற்கும், வந்தருள் புரிக, வந்தருள் புரிக!” என்று, தங்கம் மணவழகு நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே! 9. முதல்நாள் இரவு கட்டளைக் கலித்துறை அன்றிர வொன்ப தடிக்க முரசம் முழங்கும்மணி முன்றிலில் வாழை கமுகுதெங் கின்குலை முத்தின்ஈந்து நன்று சிறக்க நடுப்பகல் போல விளக்கெரியப் பொன்துகில் பூண்ட தெருமாதர் ஆடவர் போந்தனரே! விருப்பந் தரத்தக்க வெண்துகில் கட்டி விளக்கிலகும் தெருப்பந்தல் வாயிலிற் செந்தூக் கிலேமணித் தேர்இரண்டும் இருப்பங்* கெனத்தங்கம் செம்மல் இவர்நின் றிருந்தபடி வரத்,தம் கைகூப்பி வருவார் தமைவர வேற்றனரே! மாடப் புறாக்கள் மயில்குயில் மான்நிகர் மங்கையர்கள் ஆடவர் பிள்ளைகள் எள்ளிட மின்றி அமர்ந்திருந்தார். வீடப் படித்தெருப் பந்தலில் அப்படி! மாடியின்மேல் வேடப்பன் பார்த்துநின் றான்மங்கை யாள்வரும் வேடிக்கையே! இசைவந் ததுபொம்பொம் என்றே! விழிகூச வந்ததொளி! மிசைவண் ணமெருகு கண்ணாடிச் சன்னல்கள் மின்விளக்கம் அசைகின்ற ஊசலின் முன்பின் இருக்கைகள் ஆகியதோர் விசைவண்டி வந்தது வந்தாள் நகைமுத்து மெல்லியலே! மாவர சன்பான மக்கள் மலர்க்குழல் மற்றவர்பின் ஏவலர் பெட்டிகள் பட்டுப் படுக்கைகள் ஏந்திவரப் பூவி லிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல்போல் பாவை இறங்கினள் வண்டிவிட் டேதெருப் பந்தல்முன்னே! ‘வாழி மணப்பெண் நகைமுத்து நல்லபெண் வாழி!’என்றே ஆழி முழக்கென யாரு முழக்க, அடியெடுத்தே யாழின் நரம்பிசை ஏழும் சிலம்பும் சிலம்பஉடன் தோழி நடத்த நடந்தாள்இல் நோக்கிஅத் தூய்மொழியே! வானில் துவைத்த முழுநில வேமுகம்! வண்கடலின் மீனில் துவைத்தநீள் மைவிழி யாள் அவள் வேடப்பனின் ஊனில்து வைத்தும் உயிரில் துவைத்தும் தம் வாயின் உண்ணத் தேனில் துவைத்தநற் செவ்வித ழாள்வீடு சேர்ந்தனளே! பாலும் பழமும்அப் பாவைக் களித்தனர்! பற்பலரும் மேலும் கமழுநீர் தோளும் கமழ்மாலை வெள்ளிலைகாய் ஏலும்படிஎய்தி ஏகினர்! வேடப்பன் இங்குமங்கும் காலும் கடுகத் திரிவான் நகைமுத்துக் கண்படவே! ‘அம்மா துயின்றன ரோ’என வேடப்பன் அவ்வறைக்குள் சும்மா வினவித் தலைநீட்ட அங்கொரு தோழி சொன்னாள்; “எம்மா தரும்துயின்றா”ரெனவே! இதுபொய்ம்மை என்றே செம்மா துளைஇதழ் சிந்தின ளேவெண் நகைமுத்தமே! ‘மூடிய கண்களும் மூடாத நெஞ்சுமாய் முன்னறைக்குள் ஆடிய தோகை அடங்கினள்! அப்படி வேடப்பனும் பாடிய யாழ்போல் கிடந்தனன் ஓர்புறம்! பாழ்இரவோ ஓடியதே, எதிர் உற்றது கீழ்க்கடல் ஒண்கதிரே! 10. மணவாழ்த்தும் வழியனுப்பும் அகவல் எழுந்தது பரிதிக் குழந்தை கடலின் கெழுநீ லத்தில் செம்பொன் தூவி! கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும் மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்! எழும் வளைந்து நெளிந்து விழும் கடல் அலையே. அழகிய தென்பாங் காடற் கலையே! புதிய காலையில் புதிய பரிதியின் எதிரில் அடடா சதிர்க்கச் சேரி! கிழக்கில் திராவிடர்க்குக் கிடைத்த கடல் முரசு, முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு! திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின் பெருங் கூட்டிசையரங்கு பெய்த இசைமழை தெருத்தொறும் இல்லந்தொறும் தென்றல் திருத்தேர் ஏறிச் சென்று காதெலாம் “வருக மணத்துக்” கென்று பெருகிற்று! மணவீடு நோக்கி வந்தனர். என்னே! அணி அணியாக அணியிழை மங்கைமார் துணையோடு நன்மலர் முக்கனி சுமந்து! நகைமுத்தை மலர் பெய்த நன்னீராட்டிக் குறைவற நறும்புகை குழலுக் கூட்டி மணக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி மணியிழை மாட்டி, எம்கண் ணாட்டிக்கு ஏலும் சேலை எதுவென எண்ணி நிலாமுகத் திற்கு நீலச் சேலை நேர்ச்சி ஆக்கி நிலைக் கண்ணாடி பார்க்கச் சொன்னார், பார்த்த நகைமுத்தோ கண்ணா டியில்தனைக் கண்டாள்; தன்மனத் துள்நாடி வேடனுக் கொப்பு நோக்கினாள். காலுக்குச் சராய், மேலுக்குச் சட்டையொடு சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத் தொன்னாள் சேர சோழபாண் டியரில் இந்நாள் ஒருவனோ என்ன நின்றான். ‘வருக திருமண மக்கள்!’ - என்று திருந்து தமிழப்பெரியார் அழைத்தனர். திருமணப் பந்தலின் சிறப்புறு மணவறை, இருமண மக்களை ஏந்தித், தன்னிடை, முழுநில வழகொழுகு முகமும், மற்றும் எழுந்த பரிதிநேர் ஆணழகு முகமும், இருப்பது காட்டி இறுமாப் புற்றது! நிறைமண மன்றெலாம் நறுமணம், இன்னிசை! அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்! உதிரிப் புதுமலர் எதிருறு மன்றின் நிறைந்தார் கையில் நிறையத் தந்தனர். பெரியவர் ஒருவர், “பெண்ணே நகைமுத்து! வேடப் பனை நீ விரும்பிய துண்டோ? வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?” என்னலும், நகைமுத் தெழுந்து வணங்கி, ‘வேடப்பனை நான் விரும்பிய துண்டு; வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்’ என்றாள். வேடப்பா நீ மின்நகை முத்தை மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்’ என்னலும் வேடன் எழுந்து வணங்கி மின்நகை முத்தை விரும்பிய துண்டு; வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்’ என்றான். ‘மணமகள் நகைமுத்து வாழ்க வாழ்கவே! மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!’ என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே; தன்மலர் மாலை பொன்மகட் கிடவும் பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும் ஆன திருமணம் அடைந்த இருவரும், வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும் நன்றி கூறி வணக்கம் நடத்தி நிற்றலும், “நீவிர் நீடு வாழிய; இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க! மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து அறுகுபோல் வேர்பெற! குறைவில் லாத மக்கட்பேறு மல்குக! என்று, மிக்குயர்ந்தார் மேலும் வாழ்த் தினரே! அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல் கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி வெற்றிலை பாக்கு - விரும்பி அளித்தார். மற்றும் ஓர்முறை ‘வாழிய நன்மணம்’ என்று, வந்தவர் எழுந்த அளவில், எழில்மண மக்களும், ஈன்றார் தாமும் “நன்றி ஐயா! நன்றி அம்மா! இலைபோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும் எம்அவா முடிக்க இனிதே வருக! உண்ண வருக உண்ண வருக” என்று பன்முறை இருகை ஏந்தினர். நன்மண விருந்துக்கு நண்ணினர் அனைவரும். மணமகள் மணமகன் மகிழ்வொடு குந்தினர் துணையொடு துணைவர் இணைந்திணைந்து குந்தினர் வரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தினர் விருந்து முடித்து, விரித்த பாயில் அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல் அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க மணமக் கள்தமை வாழ்த்தினர் செல்கையில் எழில்மண மக்கள் ஈன்றோர் வழிய னுப்பினர் வணக்கம் கூறியே. 11. சோலையிற் காதலர் எண்சீர் விருத்தம் நகைமுத்து வேடப்பன் மகிழ்ச்சி யோடு நாழிகையை வழியனுப்பிக் காத்தி ருந்தார்; மிகநல்ல மணிப்பொறியும் ஐந்த டிக்க விசைவண்டி ஓட்டுபவன் வந்து நின்று, “வகைமிக்க அரசினரின் பூங்கா விற்கு வருகின்றீ ரோ?” என்று வணங்கிக் கேட்டான்! தகதகெனத் தனியறைக்கோர் அழகைச் செய்யும் தையலினாள் வேடப்பன் “ஆம்ஆம்” என்றார். விசைவண்டி ஏறினார் இரண்டு பேரும்! விரைகின்ற காவிரியின் வெள்ளம் போலே இசைஎழுப்பிச் சோலைக்குள் ஓடி நிற்க இறங்கினார் மணமக்கள் உலவ லானார். அசையும்அவள் கொடியிடையை இடது கையால் அணைத்தபடி வேடப்பன் அழகு செய்யும் இசைவண்டு பாடுமலர் மரங்கள் புட்கள் இனங்காட்டிப் பெயர்கூறி நடத்திச் சென்றான். வளர்ப்புமயில் நாலைந்து மான்ஏ ழெட்டு மற்றொருபால் புறாக்கூட்டம் பெருவான் கோழி வளைகொண்டை நிலந்தோயக் குப்பைத் தீனி வாய்ப்பறியும் நிறச்சேவல் கூட்டுக் கிள்ளை விளைக்கின்ற காட்சியின்பம் நுகர்ந்தே ஆங்கோர் விசிப்பலகை மேலமர்ந்தார்; வெள்ளைக் கல்லால் ஒளிசிறக்கும் இரண்டுருவம் காணு கின்றார் - ஒரு பெண்ணின் அருள்வேண்டி ஒருவன் நின்றான். “இரங்காதோ பெண்ணுளந்தான் இந்நே ரந்தான்! இன்பத்தில் ஒருசிறிதே ஒன்றே முத்தம் தரவேண்டும் எனக்கெஞ்சி நிற்கக் கூடும்! தந்திட்டால் கைச்சரக்கா குறைந்து போகும்? சரியாக ஆறுமணி, மாலைப் போது தணலேற்றும் தென்றலினை எவன்பொ றுப்பான்? தெரிந்தனையோ?” எனக்கேட்டான் எழில்வே டப்பன்! தெரிந்த தென்றாள்.” வீட்டுக்குச் செல்ல லுற்றார். 12. இன்பத் துறை எண்சீர் விருத்தம் கட்டிலிட்டார் மெத்தை,தலை யணைகள் இட்டார் கண்கவரும் வெண்துகிலும் விரித்தார் மேலே பட்டுப்போர் வைமடித்துப் பாங்கில் வைத்தார். பட்டஇடம் கமழ்கின்ற பன்னீர் வீசித் தட்டுகின்ற காம்பகற்றி மலர்கள் இட்டுச் சந்தனம்பன் னீர், அடைகாய்த் தட்ட மைத்து, மட்டின்றி முக்கனி,பால், பண்ணி யங்கள் வைத்தெங்கும், விளக்கங்கள் ஏற்றி னார்கள். மிகச்சிறப்புச் செய்திட்ட தனிய றைக்கு வெளிப்புறத்துத் தாழ்வாரம் நிறையக் கூடி நகைத்தாடும் குழந்தைகளில் ஒருவன் கேட்டான்: ‘நாங்கள்விளை யாடும்அறை இதுவோ? என்று! “புகவேண்டாம், புதுமணப்பெண் புதுமாப் பிள்ளை, புலவர்தரு திருக்குறளின் பொருளாய் தற்கு வகைசெய்து வைத்தஇடம், வாழ்வில் இன்பம் வாய்க்கும்இடம்!” மணமக்கள் வாழ்க நன்றே! குடும்ப விளக்கு நான்காம் *பகுதி – மக்கட்பேறு ஆக்கியோன் முன்னுரை மனைக்கு விளக்காகிய வாணுதல் (ஐயூர் முடவனார் புறம் 314) புதுவை மணவழகன் தங்கம் ஆகியோரின் மகனான வேடப்பனும், வில்லியனூர் மாவரசு மலர்க்குழல் ஆகியோரின் மகள் நகை முத்தும் காதல் மணம் செய்துகொண்டு தனியில்லத்தில் நன்றே இல்லறம் நடத்தி வருகின்றார்கள் என்பது குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவான திருமணம் என்ற நூலில் காட்டப்பட்ட தன்றோ? அதன் தொடர்பாக அன்னாரின் மக்கட்பேற்றையுரைப்ப தாகும் “மக்கட்பேறு” என்னும் இந்நூல். “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” - குறள் புதுச்சேரி, - பாரதிதாசன் 1. 3. 1950 4. மக்கட்பேறு அறுசீர் விருத்தம் “நகைமுத்து வேடப் பன்தாம் நன்மக்கள் பெற்று வாழ்க! நிகழுநாள் எல்லாம் இன்பம் நிலைபெற! நிறைநாட் செல்வர் புகழ்மிக்கு வாழ்க வாழ்க! எனத்தமிழ்ப் புலவர் வாழ்த்த நகைமுத்து நல்வே டப்பன் மணம்பெற்று வாழ்கின் றார்கள். (1) *மிகுசீர்த்தித் தமிழ வேந்தின் அரசியல் அலுவற் கெல்லாம் தகுசீர்த்தித் தலைவ னான வள்ளுவன் அருளிச் செய்த தொகுசீர்த்தி அறநூ லின்கண் சொல்லிய தலைவி மற்றும் பகுசீர்த்தித் தலைவன் போலே மணம் பெற்றின் புற்றிருந்தார்! (2) நாளெலாம் இன்ப நாளே! நகைமுத்தைத் தழுவும் வேடன் தோளெலாம் இன்பத் தோளே: துணைவியும் துணைவன் தானும் கேளெலாம் கிளைஞர் எல்லாம் போற்றிட இல்ல றத்தின் தாளெலாம் தளர்தல் இன்றி நடத்துவர் தழையு மாறே! (3) பெற்றவர் தேடி வைத்த பெருஞ்செல்வம் உண்டென் றாலும், மற்றும்தான் தேட வேண்டும் மாந்தன்சீர் அதுவே அன்றோ? கற்றவன் வேடப் பன்தான் கடல்போலும் பலச ரக்கு விற்றிடும் கடையும் வைத்தான் வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்! (4) இனித்திட இனித்தி டத்தான் எழில்நகை முத்தி னோடு தனித்தறம் நடாத்து தற்குத் தனியில்லம் கொண்டான்! அன்னோன் நினைப்பெல்லாம் இருநி னைப்பாம் கடைநினைப் பொன்று; நல்ல கனிப்பேச்சுக் கிள்ளை வாழும் தன்வீட்டின் கருத்தொன் றாகும் (5) மூன்றாந் தெருவி லமைந்த பழவீட்டில் அன்பு மிக்க ஈன்றவர் வாழு கின்றார். இடையிடை அவற்பாற் சென்றே தேன்தந்த மொழியாள் தானும் செம்மலும் வணங்கி மீள்வார்; ஈன்றவர் தாமும் வந்தே இவர்திறம் கண்டு செல்வார். (6) நல்லமா வரசும், ஓர்நாள் நவில்மலர்க் குழலாள் தானும் வில்லிய னூரி னின்று மெல்லியல் நகைமுத்தைத்தம் செல்வியை - மகளைப் பார்க்கத் திடும்என்று வந்து சேர்ந்தார். அல்லிப்பூ* விழியாள் தங்கம் - வேடப்பன் அன்னை வந்தாள். (7) இங்கிது கேள்விப் பட்டே எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள். பொங்கிய மகிழ்ச்சி யாலே நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த செங்கதிர் கண்டு நாணும் தேங்குழல், எதிரில் இட்டே மங்காத சுவைநீர் காய்ச்ச மடைப்பள்ளி நோக்கிச் சென்றாள். (8) அனைவரும் அன்பால் உண்பார். மலர்க்குழல், பொன்னி தன்னைத் தனியாக அழைத்துக் காதில் சாற்றினாள் ஏதோ ஒன்றை! நனைமலர்ப் பொன்னி ஓடி நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்! ‘கனிதானா? காயா?’ என்று மலர்க்குழல் அவளைக் கேட்டாள். (9) முத்துப்பல் காட்டிப் பொன்னி மூவிரல் காட்டி விட்டுப் புத்தெழில் நகைமுத் தின்பால் போய்விட்டாள்; இதனை எண்ணிப் பொத்தென மகிழ்ச்சி என்னும் பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை; அத்தூய செய்தி கேட்ட தங்கமும் அகம்பூ ரித்தாள். (10) மலர்க்குழல் தன்ம ணாளன் மாவர சிடத்தில் செய்தி புலப்பட விரல்மூன் றாலே புகன்றனள். அவனும் கேட்டு மலைபோலும் மகிழ்ச்சி தாங்க மாட்டாமல் ஆடல் உற்றான்! இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார் எனஇருந் தார்எல் லோரும். (11) ‘நகைமுத்து நலிவு றாமல் நன்றுகாத் திடுங்கள்’ என்று மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள் மலர்க்குழல்! ‘மெய்யாய் என்றன் அகத்தினில் வைத்துக் காப்பேன் அஞ்சாதீர்’ என்றாள் தங்கம். நகைமுத்துச் சுவைநீர் தந்தாள். நன்றெனப் பருகி னார்கள். (12) மாலையாய் விட்ட தென்றும் மாடுகன் றுகளைப் பார்க்க வேலைஆள் இல்லை என்றும் விளம்பியே வண்டி ஏற மூலைவா ராமல் மாடு முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ மேலோடல் இன்றிப் பெண்ணின் வீட்டையே நோக்கிப் பாயும். (13) “இன்றைக்கே நம்வீட் டுக்குத் திரும்பிட ஏன் நி னைத்தாய்?” என்றுமா வரசு கேட்டான். “எனக்கான பெண்டிர்க் கெல்லாம் நன்றான இந்தச் செய்தி நவிலத்தான் அத்தான்” என்றாள். “ என்தோழ ரிடம்சொல் லத்தான் யான்வந்தேன்” என்றான் அன்னோன். (14) தங்கமோ மகன்மனை விட்டுத் தன்வீடு வந்து சேர்ந்தாள் அங்குநாற் காலி ஒன்றில் அமர்ந்தனள்; உடன்எ ழுந்தாள். எங்கந்தச் சாவி என்றாள்? ஈந்தனர் இருந்த மக்கள் செங்கையாற் றிறந்தாள் தோட்டச் சிறியதோர் அறையை ஓடி. (15) எழில்மண வழகன் வந்தான் தங்கத்தின் எதிரில் நின்றான். “விழிபுகா இருட் டறைக்குள் என்னதான் வேலை? இந்தக் கழிவடைக் குப்பைக் குள்ளே கையிட்டுக் கொள்ளு வானேன்? மொழியாயோ விடை எனக்கு? மொய்குழால்* என்று கேட்டான். (16) அறையினில் அடுக்கப் பட்ட எருமூட்டை அகற்றி, அண்டை நிறைந்திட்ட விறகைத் தள்ளி நெடுங்கோணி மூட்டை தள்ளிக் குறுகிய இடத்தி னின்று குந்தாணி நீக்கி அந்தத் துறையிலே கண்டாள் பிள்ளைத் தொட்டிலை எடுக்க லானாள். (17) “நகைமுத்தாள்” என்று கூறி நடுமூன்று விரலைக் காட்டித் “துகள்போலத் துடைக்க வேண்டும் தொட்டிலை” என்றாள் தங்கம். மகிழ்ந்தனன்! எனினும், “பிள்ளை மருமகள் பெறவோ இன்னும் தொகைஏழு திங்கள் வேண்டும்; இதற்குள்ஏன் தொட்டில்?” என்றான். (18) “பேரவா வளர்க்கும் என்பார் பேதமை! அதுபோல் நீயும் பேரனைக் காண லான பேரவாக் கொண்ட தாலே, சீருற மூன்று திங்கட் கருக்கொண்ட செய்தி கேட்டுக் காரிருள் தன்னில் இன்றே தொட்டிலைக் கண்டெ டுத்தாய்” (19) எனமண வழகன் சொன்னான் ஏந்திழை சிரித்து நாணி இனிதான தொட்டி லைப்போய் ஒருபுறம் எடுத்துச் சார்த்தித் தனதன்பு மணாள னுக்குச் சாப்பாடு போடச் சென்றாள். தனிமண வழகன் வந்து தாழ்வாரத் தேஅ மர்ந்தான். (20) உணவையும் மறந்து விட்டான்; தெருப்பக்கத் தறையின் உள்ளே பணப்பெட்டி தனிலே வெள்ளிப் பாலடை தேடு தற்குத் துணிந்தனன்; அறையில் சென்றான். பெட்டியைத் தூக்கி வந்து கணகண வெனத்தி றந்தான் கைப்பெட்டி தனைஎ டுத்தான். (21) அதனையும் திறந்தான் உள்ளே ஐந்தாறு துணி பிரித்து முதுமையாற் சிதைந்து போன மூக்குப்பா லடையைக் கண்டான். எதிர்வந்து நின்றாள் தங்கம். “பார்த்தாயா இதனை” என்றான். மதிநிகர் முகத்தாள் “யானும் மணாளரும் ஒன்றே” என்றாள். (22) நகைமுத்தாள் மூன்று திங்கள் கருவுற்ற நல்ல செய்தி வகைவகை யாகப் பேசி மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப் பகல்கண்டார். மாம னாரும் நகைமுத்தைப் பார்த்து மீண்டார். அகல்வாளோ தங்கம்? அங்கே நகைமுத்தோ டிருக்க லானாள். (23) “சூடேறிற் றாவெந் நீர்தான்? விளவிடு சுருக்காய்” என்று வேடப்பன் சொன்னான், அன்று விடிந்ததும் நகைமுத் தின்பால்! கூடத்தில் இருந்த தங்கம் “கூடாது கூடா தப்பா வாடவே லைவாங் காதே வஞ்சிமுன் போலே இல்லை” (24) எனக்கூறித் தானே சென்று வெந்நீரை எடுத்து வந்தாள் மனமலர் சிறிது வாட விழிமலர் அவன்மேல் ஓட நனைமலர்க் குழலாள் ஆன நகைமுத்தாள், தன்ம ணாளன் இனிதாகக் குளிப்ப தற்கே இயன்றவா றுதவச் சென்றாள். (25) “நகைமுத்து முன்போல் இல்லை நலியச்செய் யாதே” என்று புகன்றனள் அன்னை யார்.ஏன் புகன்றனர்? எனத்த னக்குள் புகன்றனன் எனினும் தன், கைப் புறத்துள்ள நகைமுத் தாளைப் புகல்என்றும் கேட்டா னில்லை பொழுதோடக் கேட்போம் என்றே. (26) பொழுதோட, இரவு வந்து பொலிந்தது மணிவி ளக்கால்! எழுதோவி யத்தாள் அன்பால் எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி முழுதாவ லோடு சாவி முடிப்புடன் வேடன் வந்தான்; தொழுதோடி ‘வருக’ என்ற சொல்லோடு வரவேற் றாள்பெண் (27) பிள்ளையின் வரவு கண்டு சிலசில பேசித் தங்கம் உள்ளதன் நகைமுத் தின்பால் சொல்லென உரைத்துச் சென்றாள். “கிள்ளையே! நகைமுத் தாளே! கிட்டவா! என்றன் தாயார் துள்ளிப்போய்த் தாமே வெந்நீர் தூக்கிவந் தார்கள் அன்றோ? (28) “நகைமுத்து முன்போல் இல்லை நலிவு செய் யாதே, என்று புகன்றனர் அன்றோ? என்றான் பொன்னே அஃதென்ன?” என்று மிகஆவ லோடு கேட்டான். தன்மூன்று விரல்கள் காட்டி முகநாணிக் கீழ்க்கண் ணாலே முன்நின்றாள் முகத்தைப் பார்த்தான். (29) ‘கருவுற்ற திங்கள் மூன்று கண்டாயா?’ எனவே டப்பன் அருகோடித் தழுவிப் “பெண்ணே அறிவிப்பாய்” என்றான் ‘ஆம் ஆம் இருநூறு தடவை கேட்பீர்!” எனக்கூறி அடுக்க ளைக்குப் பரிமாறச் சென்றாள்! காளை மகிழ்ச்சியிற் பதைத்தி ருந்தான் (30) நான்சிறு பையன் அல்லேன் நான் தந்தை! என்ம னைவி தான்மூன்று திங்க ளாகக் கருவுற்றாள்! தாய்மை உற்றாள்! வான்பெற்ற நிலவைப் போல வந்தொரு குழந்தை என்னைத் தேன்பெற்ற வாயால் அப்பா எனத்தாவும் திங்கள் ஏழில். (31) பெற்றதாய் மடியின் மீது யாழ்கிடப் பதுபோல் பிள்ளை உற்றிடும்; அம்மா என்னும்; அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்! கற்றார் போல்அக் குழந்தை கண்டுதாய் கைப்பு றத்தில் நற்றமிழ்ப் பால்கு டிக்க நகர்த்தும்தன் சிவந்த வாயை. (32) அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை அமிழ்தச்செம் பினையும், தன்பால் இணைஇதழ் குவிய உண்ணும் இளங்குழந் தையையும் சேர்த்தே அணிமேலா டையினால் மூடி அவள்இடை அசைப்பாள்! அன்பின் பணிகாண்பேன் வையம் பெற்ற பயனைக்கண் ணாரக் காண்பேன். (33) எனப்பல வாறு வேடன் எண்ணத்தின் கள்அ ருந்தி மனைநல்லாள் அழைக்கத் தேறி உணவுண்ண மகிழ்ந்து சென்றான் இனிதான உணவு நாவுக் கினிதாகும்; கருக்கொண் டாளின் புனைமேனி காணு கின்றான். புத்துயிர் காணு கின்றான். (34) அகவல் மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை மாவரசு தானும் மலர்க்குழல் தானும் வில்லிய னூரில் சொல்லா இடம்ஏது? நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை அறிந்தோர் அனைவரும் வந்து வந்து தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன் அதையே பேசி அமர்ந்திரா ததுதான் மாவர சுக்கு வருத்தம் தந்தது! தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக் “கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்; காணச் சென்றேன் காலையில், கண்டே உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே என்ன செய்யலாம்” என்பாள் மலர்க்குழல்; வேலைக் காரிகள் வேறெது பேசினும் பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள். ‘இந்த வூட்டில் முந்தி முந்திஒரு பேரன் பொறக்கப் போறான். ஆமாம் இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது. நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும். குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடும்’ என்றும் குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்! வழக்கம் போல்அவன் வந்துசொன் னாலும் மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்? அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான். புதுவேட்டி தந்து, ‘போய்நா டோறும் இதுபோல் சொல்லி இதுபோல் கொள்” என்று மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்! எழில் வேடப்பனை ஈன்றோர் தாமும் நகைமுத் தாளின் நற்றந்தை தாயரும் கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய் நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர். பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம் மடியிற் சுமந்தபடி, ‘பத்தாம் திங்களின்” முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள். வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ் செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும் உதவி. உடலுக் குயிரே போன்றது! மாவரசு நாடோறும் வந்து வந்து நாவர சர்களின் நல்ல நூற்களும் ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும், வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி; நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல் தங்கம், தன்வீடு தன் மகன் வீடு நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை. அயலவர் நாடும் அன்னை நாடும் இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள் வாங்கி வந்து மணவழ கன்தான் “இந்தா குழந்தாய்” என்றுநகை முத்துக்கு ஈந்து போவான், இன்னமும் வாங்கிட! கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட மருத்து விச்சி நாடொறும் வருவாள், நகைமுத் தாளின் உடல்நிலை நாடித் தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில் இருந்தபடி இருப்பது கூடா தென்றும் உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில், வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன், “நகைமுத் துடம்பு நன்று தானே? “கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே? சொல்லுக அம்மா, சொல்லுக, அம்மா!” என்று கேட்பான் துன்பமே இராதென நாலைந் துமுறை நவின்று செல்வாள். அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார் குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும் எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும் கொல்லை முல்லை மல்லிகை பறித்தும் பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும் தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும் பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும் நன்மக ளான நகைமுத் துக்குப் பிறக்க இருப்பது பெண்ணா ஆணா என்பதை அறிய எண்ணி மலர்க்குழல் தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால் என்ன குழந்தை பிறக்கும் என்று வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள். பெரியவர் “பெண்ணே பிறந்து விட்டால் எங்கே போடுவீர்?” என்று கேட்டார். “மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன் கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா” என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள். “ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?” என்று கேட்டார் இன்சொற் பெரியவர். “ஆணையும் அப்படி ஐயா” என்று மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள். “பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும் பிறத்தல் உறுதி” என்றார் பெரியவர். இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச் சிரித்தனர்! வீட்டினுள் சென்றார். வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே. (35) எண்சீர் விருத்தம் பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப் பழக்கமுள மருத்துவிச்சி தனைஅ ழைக்க! உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள் ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்தி ருந்தார். நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல் நிலவுபோல் உடைபுனைந்த மருத்து விச்சி பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள் புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே. பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்ப தான பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள் பெய்என்ற உலகுக்குப் பெய்த வான்போல் கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார் கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து “மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை முத்துப்போல் பிறந்ததுதாய் நலமே” என்றாள். (36) அச்சமெனும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர் அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையி னின்று மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார் வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார். மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார் மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள் பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப் பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில். (37) அறுசீர் விருத்தம் ஈரைந்து திங்க ளாக அகட்டினில் இட்டுச் சேர்த்த சீரேந்து செல்வந் தன்னை அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு நேரேமெல் லாடை போர்த்து நிலாமுகம் வானை, நோக்க ஓராங்கும் அசையா வண்ணம் கிடத்தியே ஒருபாற் சென்றார். (38) சென்றஅம் மகளிர் தம்மில் தங்கம் போய்த் தன் மகன்பால் “உன்மகள் தன்னைக் காண வா”என அழைக்க லானாள். ஒன்றும் சொல் லாம லேஅவ் வேடப்பன் உள்ளே சென்றான். தன்துணை கிடக்கக்* கண்டான்;’ தாய்மையின் சிறப்புக் கண்டான். (39) இளகிய பொன்உருக்கின் சிற்றுடல், இரு நீ லக்கண், ஒளிபடும் பவழச் செவ்வாய் ஒருபிடிக் கரும்பின் கைகால் அளிதமிழ் உயிர்பெற் றங்கே அழகொடும் அசையும் பச்சைக் கிளியினைக் காணப் பெற்றான் கிடைப்பருஞ் செல்வம் பெற்றான். (40) “நகைமுத்து நலமா” என்றான் “நலம் அத் தான்” என்று சொன்னாள். “துகளிலா அன்பே! மிக்க துன்பமுற் றாயோ!” என்றான். “மிகுதுன்பம் இன்பத் திற்கு வேர்”என்றாள், களைப்பில் ஆழ்ந்தாள். “தகாதினிப் பேசல், சற்றே தனிமைகொள்” என்றான்; சென்றான். (41) சிற்சில நாள்கள் செல்ல நகைமுத்து நலிவு தீர்ந்தாள் வெற்பினில்* வெயில்சேர்ந் தாற்போல் மேனியில் ஒளியும் பெற்றாள் கற்பாரின் நிலையே யன்றிக் கற்பிப்பார் நிலையும் உற்றாள்! அற்றைநாள் மகளும் ஆகி அன்னையும் ஆனாள் இந்நாள். (42) பெயர் சூட்டு விழாந டத்த அறிவினிற் பெரியார் மற்றும், அயலவர் உறவி னோர்கள் அனைவர்க்கும் அழைப்புத் தந்தார். வெயில்முகன் வேடப் பன்தன் வீடெலாம் ஆட வர்கள் கயல்விழி மடவார் கூட்டம் கண்கொள்ளாக் காட்சி யேஆம். (43) ஓவியப் பாயின் மீதில் உட்கார்ந்தோர் மின்இ யக்கத் தூவிசி றிக்காற் றோடு சூழ்பன்னீர் மணமும் பெற்றார். மூவேந்தர் காத்த இன்ப முத்தமிழ் இசையுங் கேட்டார். மேவும்அவ் வவையை நோக்கி வேடப்பன் வேண்டு கின்றான்:- (44) “தோழியீர் தோழன் மாரே, வணக்கம்! நற் றூய் தமிழ்தான் வாழிய! அழைப்பை எண்ணி வந்தனிர்; உங்கள் அன்பு வாழிய! இந்த நன்றி என்றும்யாம் மறப்போம் அல்லோம் ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு இடுபெயர் விழாநன் றாக! (45) இவ்விழாத் தலைமை தாங்க இங்குள்ள அறிவின் மூத்தோர் செவ்விதின் ஒப்பி எங்கள் செல்விக்குப் பெயர் கொடுக்க! எவ்வெவர் வாழ்த்தும் நல்க! இறைஞ்சினோம்” என்ற மர்ந்தான். அவ்வாறே ஆக என்றே நகைமுத்தும் உரைத்த மர்ந்தாள் (46) அங்குள்ள அறிவின் மூத்தோர் அவையிடைத் தலைமை பெற்றே, “இங்குநம் நகைமுத் தம்மை வேடப்பர் இளம்பெண் ணுக்கே உங்களின் சார்பில் நான்தான் ஒருபெயர் குறிப்பேன்” என்றார். “அங்ஙனே* ஆக” என்றார். அவையிடை இருந்தோர் யாரும் (47) அப்போது நகைமுத் தம்மை அணிமணி ஆடை பூண்டு முப்பாங்கு மக்கள் காண முத்துத்தேர் வந்த தென்னக் கைப்புறம் குழந்தை என்னும் கவின்தங்கப் படிவம் தாங்கி ஒப்புறு தோழி மார்கள் உடன்வர அவைக்கண்1 வந்தாள். (48) கரும்பட்டு மென்மயிர் போய்க் காற்றொடும் ஆடக் கண்டோர் விரும்பட்டும் என்று சின்ன மின்நெற்றிக் கீழ்இ ரண்டு சுரும்பிட்ட2 கருங்கண் காட்டி எறும்புகொள் தொடர்ச்சி போலும் அரும்பிட்ட3 புருவம் காட்டி அழகுகாட் டும்கு ழந்தை! (49) எள்ளிளஞ் சிறிய பூவை எடுத்துவைத் திட்ட மூக்கும் வள்ளச்செந் தாம ரைப்பூ இதழ்கவிழ்ந் திருந்த வாய்ப்பின் அள்இரண் டும்,சி வப்பு மாதுளை சிதறச் சிந்தும் ஒள்ளிய4 மணிச் சிரிப்பும் உவப்பூட்டும் பெண்கு ழந்தை. (50) அன்னையி னிடத்தி னின்று வேடப்பன், அருமைச் செல்வி, தன்னைத்தன் கையால் வாங்கித் தமிழ்ப்பெரி யார்பால் தந்தான் “என்அன்பே இளம்பி ராட்டி” எனவாங்கி அணைத்து, மற்றும் முன்னுள்ளார் தமக்கும் காட்டி, முறைப்பட மொழிய லுற்றார்: (51) “வானின்று மண்ணில் வந்து மக்களைக் காக்கும்; அஃது தேன்அன்று: கரும்பும் அன்று; செந்நெல்லின் சோறும் அன்று; ஆன்அருள் பாலும் அன்றே; அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை ஆனபே ருலகைக் காக்க அமிழ்வதால் மழையஃ தேயாம்’ (52) தமிழரின் தமிழ்க்கு ழந்தை தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும். அமையுறும் மழைபோல் நன்மை ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள் அமிழ்தென்று பெயர் அமைப்போம் அமிழ்தம்மை நாளும் வாழ்க! தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!” என்றனர் அறிவில் மூத்தார். (53) “அமிழ்தம்மை வாழ்க!” என்றே அனைவரும் வாழ்த்தி னார்கள். அமிழ்தம்மைப் பெயர்பு னைந்த அன்புறு குழந்தை தன்னை எமதன்பே எனவே டப்பன் இருகையால் வாங்கி யேதன் கமழ்குழல் நகைமுத் தின்பால் காட்டினான் கையால் அள்ளி. (54) அமிழ்தம் மா என அணைத்தே அழகிக்கு முத்தம் தந்தாள்! தமிழர்க்கு நன்றி கூறி வெற்றிலை பாக்குத் தந்து தமிழ்பாடி இசை நடத்தி வேடப்பன் தன்கை கூப்ப “அமிழ்தம்மை நாளும் வாழ்க,” எனச்சென்றார் அனைவர் தாமும். (55) இருகாலைச் சப்ப ளித்தே இடதுகைப் புறத்தில், அன்பு பெருகிடத் தலையை ஏந்திப் பின்உடல் மடியிற் றாங்கி மருவியே தன்பாற் செப்பு.* வாய்சேர்த்து மகள்மு கத்தில் ஒருமுத்து நகைமுத் தீந்தாள். உடம்பெல்லாம் மகிழ்முத் தானாள். (56) அமிழ்துண்ணும் குழந்தை வாயின் அழகி தழ்குவிந்தி ருக்கும் கமழ்செந்தா மரைய ரும்பு கதிர்காண அவிழ்மு னைபோல்! தமிழ்நலம் மனத்தால் உண்பார் விழிஒன்றிற் சார்வ தில்லை அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும் அயல்நோக்கல் சிறிதும் இல்லை. (57) உண்பது பிறகா கட்டும் உலகைப்பார்க் கின்றேன் என்று துண்ணென முகம்தி ருப்பித் தூயதாய் முகமே காணும்; கண்மகிழ்ந் திடும்செவ் வாயின் கடைமகிழ்ந் திடும் இவ் வையம் உண்மையாய்த் தன் தாய் என்றே உணர்வதால் உளம் பூரிக்கும். (58) விரிவாழைப் பூவின் கொப்பூழ் வெள்விழி யின்மேல் ஓடும் கருவண்டு விழியால் சொல்லும் கதைஎன்ன என்றால் அன்னை சிரித்தொரு பாட்டுச் சொல்லித் திரும்பவும் மார்ப ணைந்து பொருட்சிறப்பை யும்வி ளக்கும் பொன்னான கைக்கு ழந்தை. (59) “மண்ணாண்ட மூவேந் தர்தம் மரபினார் என்ம ணாளர் பெண்ணாளுக் களித்த இன்பப் பயனாய்இப் பெருவை யத்தார் உள்நாண அழகு மிக்க ஒருமகள் பெற்றேன்” என்றே, எண்ணியே அன்னை தன்“பால்” உண்பாளின் முகத்தைப் பார்த்தாள். (60) மணிவிழி இமையால் மூடி உறக்கத்தில் நகைம றைத்துத் தணிவுறும் தமிழர் யாழ்போல் தன்மடி மேல்அ மைந்த அணியுடல் குழந்தை கண்டாள் அன்புடன் இருகை ஏந்திப் பணியாளர் செய்த தொட்டிற் பஞ்சணை வளர்த்த லானாள். (61) பஃறொடை வெண்பா தன் மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத் தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்; அங்கந்த வேளையிலே அன்புமகள் பெற்ற திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக் காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே! பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார் கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத் தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார். உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில் உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத் தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ளஒரு பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட விட்டாள் விளைந்த தொரு பாட்டு. தாயின் தாலாட்டு: பொன்னே மணியே புதுமலரே செந்தேனே மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு! தன்னே ரிலாத தமிழே தமிழ்ப் பாட்டே அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்? என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள் உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்! என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ? கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு! சின்னமலர்க் காலசையச் செங்கைமலர் அசைய உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு! தோழிமார் தாலாட்டு: தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே! தகையாளர் வையத்தில் தந்த திருவே தொகைபோட்டு வாங்கஒண்ணாத் *தூய் அமிழ்தே! கண் வளராய்! கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும் சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால் பொன் “உறக்க நாடு” புலம்பாதோ கண்மணியே! தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப் பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால் திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச அங்“குறக்க நாட்டார்” அவாமறுத்த தாகாதோ? செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய் கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால் தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்! பஞ்சுமெத்தைப் பட்டு பரந்தஒரு மேல்விரிப்பில் மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல் பிஞ்சுமா வின்விழியைப் பெண்ணே இமைக்கதவால் அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்! தங்கத்துப் பாட்டி தாலாட்டு: ஆட்டனத்தி யான அருமை மணாளனையே ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப் போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீ தானோ? செல்வத்தமிழ் வேந்தர் போற்றும் செழுந்தமிழாம் கல்விக் கரசி கலைச்செல்வி ஒளவை இனியும் தமிழ் காத்தே இந்நாட்டைக் காக்க நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே? நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின் பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப் பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ? அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ? தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள் நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே! கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப் பொற்கொடியே என்னருமைப் பொன்னே நீகண்ணுறங்காய்! மலர்க்குழல் பாட்டி தாலாட்டு: உச்சி விளாம் பழத்தின் உட்சுளையும் கற்கண்டும் பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி இச்சிச் செனஉண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும் பிச்சைமுத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே! தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன் மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன் அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம் வஞ்சியே இப்பெரிய வையப் படிவம் முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும் துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும் முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால் மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ? எமையாள் இனத்தாரின் யாழின் இசையும் தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும் குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும் தமிழின் இசையும் சரியாமோ, என்றன் அமிழ்தே, மலர்வாய் நீ அங்காப்பின் ஓசைக்கே; இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு! தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்குக! பிள்ளையைத் தூக்கும் முறை: அகவல் நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன் இல்லில் நுழைந்தான் “என்கண் மணியே என்றன் அமிழ்தே” என்று கூவியபடி! மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக் கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து வந்துதாழ் வாரத்தில் மணவா ளனிடம் காட்டி நின்றாள்! கண்டவே டப்பன் அடக்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை எடுக்க விரைந்தான். “அதுதான் இயலாது! கொள் அன்று; கொத்தமல்லி அன்று; பிள்ளை அத்தான்” என்றாள் பெற்றவள். “பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் நானும் கொள்ளவே சொல்லிக் கொடு”வெனக் கேட்டான். வேடப் பனுக்கு விளக்குவாள் துணைவி, *ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்; சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்! இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும். இன்னும் சொல்வேன் நன்று கேட்க: குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை! அம்மலர்த் தண்டே அழகிய ‘மெல்லுடல்’ தண்டுடல் மலர்த்தலை தாங்குமா அத்தான்? தலை, உடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல் தவறாது தூக்குவது தலையா கியகடன் தெரிந்ததா அத்தான்” என்றாள் தெரிவை “கற்றேன் கணக்கா யரேகற் றபடி நிற்கும் படியும் நிகழ்த்துக” என்றான். தூக்கிக் காட்டினாள் தோகை தூக்கினான். “சரி”எனச் சொன்னாள் துணைவியே. தந்தையின் தவறு: அறுசீர் விருத்தம் வேடப்பன் உணவ ருந்தி மகளோடு விளையா டற்குக் கூடத்தில் வந்து பார்த்தான் தூங்கிடும் குழந்தை கண்டான்! தேடக்கி டைத்தல் இல்லாச் செல்வமே என்றெடுத் தான் வாடப் புரிந்த தாலே மகள்வீறீட் டழுதல் கண்டான். (62) நகைமுத்து விரைந்து வந்தாள் குழந்தையின் நலிவு நீங்கத் தகும்படி தொட்டில் தன்னில் தாலாட்டித் தூங்கச் செய்தேன்; “அகத்தினில் அன்பு கொண்டீர் ஆயினும் குழந்தை தன்னை மிகத்துன்பம் அடையச் செய்தீர் விலக்கஇச் செய்கை” என்றாள். (63) “குழந்தைதான் தூங்கும்போதில் எழுப்பினால் குற்ற மென்ன? அழுதிடும் குழந்தைக் கான ஆறுதல் தூக்கந் தானோ? ஒழுங்கோடு குழந்தை ஓம்பல் உனக்குத்தான் தெரியும் போலும்! முழங்காதே பேச்சை வாயை மூடென்றான் வேடப் பன்தான். (64) அன்புள்ள துணைவன் ஆங்கே இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்! துன்புற்றாள் நகைமுத் தாளும் துணைவரின் சினமே எண்ணி! என்பெற்ற குழந்தைக் காகத் துணைவரின் வெறுப்பை ஏற்றேன்; அன்பரைத் திருத்து தற்கும் அன்புதான் தூண்டிற் றென்னை. (65) இப்படி நினைத்தா ளாகி இல்லத்துப் பணிமு டித்தும் கைப்புறக் குழந்தை தன்னைத் தோளிலே போட்டுக் காத்தும் அப்புறம் பகலைத் தள்ளி இரவினில் அன்ப னுக்கே ஒப்புறத் துணைபு ரிந்தும் இரவினில் உறங்கச் சென்றாள். (66) படுக்கையின் விரிப்பு மாற்றிப் பக்கத்தில் குழந்தைக் கான துடைக்கின்ற துணிகள் தேடித் தூயபல் விரிப்பும் தேடி விடிவி ளக்கும் திருத்தி விலாப்புறத் திற் குழந்தை குடித்தபால் எடுத்தல் கண்டு குட்டையால் தூய்மை செய்தே (67) உடலினை ஒருக்க ணித்தே குழந்தையை மார்போ டொட்டித் தடமலர் வலக்கை தன்னைத் தலைக்கணை மீது வைத்தும் இடதுகை குழந்தை மேலே வில்லைப்போல் வளைய இட்டும் கடுகள வசைதல் இன்றிக் கண்வளர் கின்றாள் அன்னை! (68) தாய்மையின் ஆற்றல் அன்றுநள் ளிரவில் வேடன் விழித்தனன்; அருகில் உள்ள தன்மனை. தன் குழந்தை நிலைமையை நோக்க லானான்: “ என்மனை ஒருக்க ணித்தே இடக்கையைக் குழந்தை மீதில் சின்னக்கூ டார மாக்கிச் சேல்விழி துயில்கின் றாளே. (69) ஒருநூலே புரண்டா ளேனும், தெருவினை ஒக்கச் செய்யும் உருளையின் கீழ்ம லர்போல் ஒழியுமே பெற்ற பிள்ளை! தெரியவே இல்லை இஃது தெரிவைக்கே” எனவே டப்பன் அருகிலே அமர்ந்தி ருந்தான் அகன்றிட மனம்வ ராமல்! (70) மங்கையை எழுப்பு தற்கு வழியொன்று கண்ட றிந்தான்: அங்கவள் களைந்தெ றிந்த *மலர்க்கண்ணி யைஅன் னாளின் திங்களின் முகத்தில் போட்டான்! சேயிழை விழித்தா ளில்லை. இங்கினிக் குழந்தை தன்னை எழுப்புவேன் எனநி னைந்தே (71) மலர்க்கண்ணி தனில்அ விழ்ந்த மலரிதழ் ஒன்றைத் தூக்கம் கலைத்திடக் குழந்தை மீது போட்டனன்! தாயின் கைதான் மலரிதழ் தனைத்து டைத்து மற்றும்தன் இடம்போ யிற்றே! தலைவனோ இதனைக் கண்டான். தாய்மையின் ஆற்றல் கண்டான். (72) தலைவிக்கு மதிப்புச் செய்தான். தாய்மைக்கு வணக்கம் செய்தான். இலைஎன்பால் குழந்தை காக்கும் ஆற்றல்எட் டுணையும் என்றான். தலைமட்டும் இரண்டென் றாலும் குழந்தையும் தாயும் ஒற்றைக் குலையேயாம்; உயிரும் ஒன்றே! உள்ளத்தின் கூறும் ஒன்றே! (73) எனக்கென்ன தெரியும் தாய்க்கும் இளங்குழந் தைக்கு முள்ள மனத்திடைத் தொடர்பு? மற்றும் வாயினாற் பேசார்; தாயும் தனதரும் குழந்தை தானும் கண்ணாலும் மனத்தி னாலும் தனித்துப்பே சிக்கொள் கின்றார். என்றுபோய்த் தான்து யின்றான். (74) ஓராண்டு வான்பார்த்துக் கிடந்த மேனி மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர் தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச் செம்மையாய்த் தவழ்ந்தும் நின்றும் தான்பார்க்க அங்கும் இங்கும் தள்ளாடி நடந்தும், கெண்டை மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள் ஓராண்டு மேவல் உற்றாள். (75) பட்டுப்பா வாடை கட்டிப் பச்சைப்பூச் சட்டை இட்டுக் கட்டிய முல்லைக் கண்ணி கரும்பாம்பின் பின்னல் தன்னில் நெட்டுறச் சூட்டி, நெற்றி நேர்உறச் சுட்டி வைத்து, விட்டனள் அமிழ்தை ஆடத் தாழ்வார மீதில் அன்னை! (76) ஓடி வா சிந்து கண்ணி அமிழ்தே அமிழ்தேஓடிவா - என் அன்பின் விளைவேஓடிவா தமிழின் சுவையே ஓடிவா - என் தங்கப் பாப்பா ஓடிவா கமழும் பூவே ஓடிவா - என் கண்ணின் மணியேஓடிவா குமியும் புகழே ஓடிவா - என் குத்து விளக்கே ஓடிவா பச்சைக்கிளியே ஓடிவா - என் பாடும் தும்பி ஓடிவா அச்சுப் பெண்ணே ஓடிவா - என் ஆடும் கொடியே ஓடிவா மெச்சும் குயிலே ஓடிவா - என் விரியும் சுடரே ஓடிவா தச்சுத் திறமை ஓடிவா - என் தங்கப் புதையே ஓடிவா வள்ளத் தேனே ஓடிவா - என் வானம் பாடி ஓடிவா வெள்ளப் பாலே ஓடிவா - என் வீட்டு விளக்கே ஓடிவா துள்ளும் கன்றே ஓடிவா - என் தோகை மயிலே ஓடிவா அள்ளும் சுனையே ஓடிவா - என் அன்பின் கனியே ஓடிவா முத்து நிலாவே ஓடிவா - என் மும்மைத் தமிழே ஓடிவா கத்தும் கடலே ஒடிவா - என் கட்டிக் கரும்பே ஓடிவா தொத்தும் கிளியே ஓடிவா - என் தூண்டா விளக்கே ஓடிவா கொத்துப் பூவே ஓடிவா - என் குழந்தை அமிழ்தே ஓடிவா செல்வப் பொருளே ஓடிவா - என் செந்தா மரையே ஓடிவா கல்விப் பொருளே ஓடிவா - என் காவிரி ஆறே ஓடிவா முல்லைக் கொடியே ஓடிவா - என் மூசைத் தங்கமே ஓடிவா அல்லிப் பூவே ஓடிவா - என் அன்பின் அமிழ்தே ஓடிவா தென்றற் காற்றே ஒடிவா - என் செவ்விள நீரே ஓடிவா குன்றாச் சுவையே ஓடிவா - என் கொள்ளா அழகே ஓடிவா ஒன்றா உணர்வே ஓடிவா - என் ஓவியக் கனவே ஓடிவா மன்றின் மணியே ஓடிவா - என் மல்லிகை மலரே ஓடிவா பாடும் சிட்டே ஓடிவா - என் பருகும் சாறே ஒடிவா நாடும் திருவே ஓடிவா - என் நடைஓ வியமே ஓடிவா சூடும் தாரே ஓடிவா - என் சோலை நிழலே ஓடிவா வாடா மலரே ஓடிவா - என் வஞ்சிக் கொடியே ஓடிவா தண்டை குலுங்க ஓடிவா - என் சங்கத் தமிழே ஓடிவா கெண்டை விழியே ஓடிவா - என் கிள்ளை மொழியே ஓடிவா பெண்டிர்க் கரசி ஓடிவா - என் பேறே உயிரே ஓடிவா ஒண்டொடியாளே ஓடிவா - என் ஓடைப் புனலே ஓடிவா அறுசீர் விருத்தம் வேடப்பன் வந்தான் அங்கே விளையாடும் குழந்தை கண்டான் ஓடச் செய் கின்றாய் காலும் ஓயாதோ குழந்தைக் கென்றான் கோடைக்குக் குளிரே ‘நான் ஓர் குதிரை, நீஅரசி என்றான். கூடத்தில் மண்டி போட்டான் குழந்தையை முதுகில் கொண்டான். (77) அப்பாக் குதிரை சிந்து கண்ணி அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய் தப்பாக் குதிரை தாவும் குதிரை தளராக் குதிரை ஏய் ஏய் ஏய் சப்பைக் குதிரை இல்லை இல்லை தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய் ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்! பேசும் குதிரை பெருத்த குதிரை பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய் தோசைக் குதிரை சோற்றுக் குதிரை சோராக் குதிரை ஏய் ஏய் ஏய் மீசைக்குதிரை வெற்றிக் குதிரை வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய் தேசுக் குதிரை தெற்குக் குதிரை சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்! சோறூட்டல் அகவல் உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச் சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக் குழந்தைக்குக் காக்கை காட்டி விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே சிந்து கண்ணி காக்கா காக்கா கண்ணாட்டி கைப்பிள் ளைக்குச் சோறூட்டிப் பாக்கியை நீஅள் ளிக்கொண்டே பறந்து போஎன் கற்கண்டே. ஆக்கிய சோறென் சிட்டுக்கே அதுவா வேண்டும் எட்டிப்போ தூக்கிக் கொண்டா போய்விடுவாய்? சுருக்காய் வாங்கும் இன்னொருவாய். உன்வாய் பெரிய ஒளிவாயாம் ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம் தன்னால் உண்ணும் என் தங்கம் தண்ணீர் குடிக்க வா அஞ்சும்? சொன்னால் கேட்கும் என் பட்டும் சோற்றை உண்ணும் இம் மட்டும் இன்னும் காக்கா நெருங்கிவா இதையும் உண்டு பறந்துபோ. நிலாக் காட்டல் அறுசீர் விருத்தம் மேற்றிசை ஒளிவெள் ளத்தில் வீழ்ந்தது செங்க திர்போய்த் தூற்றிய முத்துக் கொல்லை முழுநிலாத் தோற்றம் கண்டார். காற்றிலோர் குளிரும் கண்டார். மாடியில், நிலாமுற் றத்தில் ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார் எழில்நிலாக் காட்டு கின்றார். சிந்து கண்ணி நிலா நிலா வாவா - ஒளி நிறைவி ளக்கே வா வா உலா வினாய் விண்ணில் - நீ ஒளிபு ரிந்தாய் கண்ணில் குலா வலாம் நாட்டில் - இனிக் கொஞ்ச லாம்என் வீட்டில் பலா மரம் உண்டு-நற் பழமெ லாம்கற் கண்டு நிலா நிலா வாவா -ஒளி நிறைவி ளக்கே வாவா! அழகெ லாம்எ னக்கே -என் அன்பெ லாம்உ னக்கே முழுநி லாஎன் பூவே-உன் முத்த மொன்று தேவை பழக லாம்இ றங்கு-நற் பைந்த மிழுண் டிங்கு விழியி லேஓ ளிர்ந்தாய்-என் மெய்யி லேகு ளிர்ந்தாய் நிலா நிலா வாவா -ஒளி நிறைவி ளக்கே வாவா! வானம் நீலத் தோப்பு-நீ மங்கா தமத் தாப்பு கூனி மீன்கள் மின்னும் - ஒளிக் குட்டை நீஎன் றெண்ணும் சீனத் துப்பால் கோப்பை-நீ சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை கானல் வெளியும் குளிரும் - உனைக் காண மணமும் ஒளிரும் நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா! விண்ணக் கடலில் தெப்பம்-நீ விரித்த இலையில் அப்பம் உண்ணக் குவித்த தளியல் - நீ உரித்த கிழங்கின் அளியல் பண்ணும் வெள்ளித் தட்டு-நீ பச்ச ரிசியின் பிட்டு வெண்பட் டான குடையே-நீ விழுங்கி டும்பா லடையே நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா! பேச்சு அகவல் மரப்பா வைகள் வைத்துவிளை யாடும் அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள் மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள் அமிழ்தை நோக்கி “நான் யாரம்மா” என்றான் அமிழ்தம் “ஐயா” என்றாள். அதனால் குன்றியது முகம் கொதித்தது நெஞ்சம் மாவர சுக்கு! மகளை நோக்கி ‘யான் அயலானா? ஏன்எனைத் தாத்தா என்று சொல்ல வில்லை” என்றான். அதுகேட்டுத் “தாத்தா” என்றாள் அமிழ்து, முகமும் மலர்ந்தது! மாவரசுக் (கு) அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே! தேவை அகவல் காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும் வேடன் “என்ன வேண்டும்” என்றான் அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்; “கோழி” “நாயி குட்டி” “அம்மா” இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்: “அத்தான் குழந்தை, “அம்மா என்றாள் என்போல் இன்னுமோர் அம்மா அன்றுகேட்டது! பொம்மை அம்மாவே. குறளில் கோயில் இல்லை அகவல் நாடி முத்து வேடப் பனிடம் “இன்றி யமையா ஒன்றுக் காகக் கடன்பத்து ரூபாய் கொடு” வென்று கேட்டான். வேடன் கொடுப்பதாய் விளம்பினான். அதற்குள் அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில் தூக்கி வந்து தொப்பென்று போட்டுக் “கோவிலு காட்டுப்பா” என்று கூறினாள். “குறளில் கோயிலே இல்லை யம்மா” என்றான் வேடன். இதனைக் கேட்ட நாடிமுத்து நவிலு கின்றான்; “தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே பத்து ரூபாய் பணம்உனைக் கேட்டேன். கோயில் இல்லையா குறளில்? ஆயின்என் பணத்துக் கில்லை அழிவே!” சேறும் சோறும் தேன் அகவல் அறையில் தூங்கி யிருந்த அமிழ்து, சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம் நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து) இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து கொல்லையின் முல்லைக் கொடியின் அடியில் சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால் சிற்றில் ஒன்று செய்து முடித்தபின் தந்தை உண்ணும் தயிரின் சோற்றை அங்கையால் அள்ளி ஆ ஆ என்றாள்! அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான் தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு, சின்னவள் அன்னை யான திறத்தை நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள். சேறும் சோறும் தந்தைக்குத் தேனே! நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே! “அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்”எனச் செப்பிய வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே! அன்பு பெருகுக. அகவல் அன்னை தங்கம் அழிழ்தொடு பேசித் தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின் முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள். தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான். இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்! சுவரி லேதன் உருப்படம் தொங்கியது கண்ட அமிழ்து கனிவாய் திறந்து “இதில்நான் சின்னவள், இப்போது பெரியவள்” என்றாள், “ஆம் ஆம்” என்றான் தந்தை! “எப்படிப் பெரியவள் ஆனேன்” என்றாள். “உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே. இப்போது மூன்றாண் டாயின” என்றான். “ஆண்டுகள் எப்படித் தாண்டும்” என்றாள். “நேரம் போகப் போக நேரே ஆண்டும் போகும் அல்லவா” என்றான். “நேரம் போவதை நேரில் பார்க்கத் கூடுமோ” என்று கூறினாள் அமிழ்து “பார்இதோ மணிப் பொறி நேரம்ஓடுவதை இருமுள் ஓடிக் காட்டும் என்றான். “முள்ஓட வில்லையே” என்று மொழிந்தாள். ஓடுவது தெரியாது ஓடுகின் றது நாள், வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ” என்றுவே டப்பன் இயம்பு கின்றான் தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள், “நரைப்பது தெரியாது - நரைக்கின் றதுமுடி” என்று தனக்குள் இயம்பு கின்றாள். “பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்” என்று கொல்லையில் இருந்த நகைமுத்தும் பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்* தாங்கி நடந்து, தன்இடை நோவதாய் ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள். “பெருகுவது தெரியாது பெருகுகின் றதுயிர்” என்பதும் உண்மை போலும்! அன்பு பெருகுக வைய அமைதிக்கே! நடந்து வந்த கரும்பு அகவல் நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது. மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள் மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர். வேடப் பன்ஓர் பால்வீற் றிருக்கின்றான். எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப் பூவிழிச் செவ்விதழ்ப் புதியிள மைந்தனை “ இளஞ்சேரன்” வாஎன இருகையில் ஏந்தி ஒருபுறம் மயிலென உலவு கின்றாள் புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார் முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார் யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்! அமிழ்தம் எங்கே! - அனைவரும் எழுந்தார், அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும் சின்னஞ் சிறிய செங்கதிர் போல மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும், குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும், முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும் அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக் கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர் நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது! முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும் அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும், கைதூக்கி ‘அப்பா’ என்று கனிதமிழ்க் கட்டிக் கரும்பு மட்டும் கலகலத் தண்டை பாடத் தாவி வந்தாள். புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும் முற்றத்தில் உட்கார வேண்டினார் உற்று நோக்கினார் 1உருக்கவர் பெட்டியே! புகைப்படம் அகவல் நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம் அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து வேடன் முதலியோர் பீடுற அமைந்தார் பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப் புகைப்படம் எடுத்தே; அகத்தின் மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே. திராவிடமக்கள் வாழிய அகவல் அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள் தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு, வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில் இளஞ்சே ரனை நீயார் என்று கேட்டுப் பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ தன்மார்பு காட்டி ‘நான்தம்பி’ என்றான். “ தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி”2 என்றே இயம்பி அமிழ்து வந்தாள். வாழிய தமிழ் மக்கள்! வாழிய நற்றமிழ் வையகம் இனிதே! குடும்ப விளக்கு ஐந்தாம் பகுதி - *முதியோர் காதல் முன்னுரை தங்கமும் மணவழகும் முதுமை பெற்றனர். மக்களைப் பெற்றனர். பேரர் பேர்த்தியர் கண்டனர். வாழ்நாளெல்லாம் அறங்கள் வழுவாது காத்தனர். அவர்கள் நிரம்பிய உள்ளத்தினர். புலன்கள் தேய்ந்தன. கருவிகள் ஓய்வுபெற்றன. உள்ளம் உண்டு. “முதியோர் காதல்” *இங்ஙனம் என மொழிவது இந்நூல். பாரதிதாசன் 5. முதியோர் காதல் அறுசீர் விருத்தம் மூத்தபிள்ளை முதியவரோடு வேடப்பன் தம்பி யான வெற்றிவேல், மனைவி யோடு வேடப்பன் வாழ்ந்தி ருந்த வீட்டினில் வாழு கின்றான், வேடப்ப னோ,தன் தந்தை வீட்டினிற் குடும்பத் தோடு பீடுற வாழு கின்றான். பெற்றவர் முதுமை பெற்றார் முதியோர்க்கு மருமகள் தொண்டு வேடப்பன் மனைவி யான நகைமுத்து மிகவும் அன்பாய் வேடப்பன் தந்தை தாய்க்கு வேண்டுவ தறிந்தே அன்னார் வாடுதல் சிறிதும் இன்றி வாய்ப்புறத் தொண்டு செய்வாள். ஆடிய பம்ப ரங்கள் அல்லவா அம்மூத் தோர்கள்? தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம் தலைக்கடை அறைக்குள் அந்தத் தளர்மண வழகர் ஓர்பால் இலக்கியம் படிப்பார்! இன்பத் துணைவியார் கேட்டி ருப்பார்! உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து) அம்மையார் ஒருபால் குந்திப் பலஆய்வார்; துணைவர் கேட்பார்; துயிலுவார்; பழங்கா லத்தார். மணவழகர் உடல் நிலை மணவழ கர்க்கு முன்போல் வன்மையோ தோளில் இல்லை! துணைவிழி ,ஒளியும் குன்றக் கண்ணாடித் துணையை வேண்டும் பணையுடல்,சருகு! வாயிற் பல்லில்லை! மயிர்வெண் பட்டே! உணவெலாம் பாலின் கஞ்சி; உலவுதல் சிறிதே ஆகும். தங்கத்தம்மையார் உடல்நிலை நன்னிலாக் கதிர்போல் கூந்தல் நரைத்தது. கொண்டை யிட்டு முன்னிலா முகில்உண் டாற்போல் முகத்தொளி குறைய லானார்! அன்புடல் அறத்தால் தோய்ந்த ஆயிரம் பிறைமூ தாட்டி மன்னுசீர் அன்னாள் மெய்யோ வானவில் போற்கூ னிற்றே! முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள் இருபெரு முதியோர் தம்மைத் தலைக்கடை அறைசு மந்து பெரும்பேறு பெற்ற தன்றோ! பிள்ளைகள், அவர்ம னைமார் வருவார்கள்; அறங்கேட் பார்கள். மற்றுள பேர்த்தி பேரர் வருவார்கள் அளவ ளாவி மணியோடு பள்ளி செல்வார். இரு முதியோர் நிரம்பிய உள்ளம் மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம் மகள்மார்க்கும் அவ்வா றேயாம் எம்தக்க கடன்மு டித்தோம் இனிதாக வாழு கின்றோம். முந்துறச் சுற்றத் தார்க்கும் செய்வன முழுதும் செய்தோம் இந்தநாள் வரைக்கும் வாய்மை இம்மியும் மறந்த தில்லை. நாட்டுக்கு நலம் செய்தோம் இந்நாட்டின் நலனுக் காக நல்லறம் இயற்றி வந்தோம். எந்நாளும் பிறர்க்குத் தீமை எங்களால் நடந்த தில்லை. சின்னதோர் நன்றி செய்தார் திறம்மறந் தறியோம் என்றே இன்னிசை பாடும் அன்னார் இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும். முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில் விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில் என்றனை! நேற்றோ? அல்ல; இதற்குமுன் இளமை என்ப (து) தென்றைக்கோ அன்றைக் கேநான்! கதையாகிக் கனவாய்ப் போகும் நிகழ்ந்தவை; எனினும் அந்த முதியோளே வாழு கின்றாள் என்நெஞ்சில் மூன்று போதும். இருக்கின்றாள் அது எனக்கின்பம் புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள்உ டம்பு! சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும்மூ தாட்டி! மதியல்ல முகம்அ வட்கு வறள்நிலம்! குழிகள் கண்கள்! எதுஎனக் கின்பம் நல்கும்? ‘‘இருக்கின்றாள்’’ என்ப தொன்றே! நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்! இனிக்கின்ற தமிழை அன்னாள் இசைக்கின்ற ஆற்றல் இல்லை. தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள் தனித்துள்ளாள் மறுபு றத்தே! எனைக்கண்டும், என்னைத் தொட்டும் பயில்கிலாள்; எனினும் என்னை நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்; நிலைக்கின்ற தென்பால் இன்பம்! அன்புள்ளம் காணுகின்றேன் அகத்தின்பம் காணுகின்றேன் என்பும்நற் றோலும் வற்ற, ஊன்றுகோல் இழுக்கி வீழத் தன்புது மேனி, காலத் தாக்கினால் குலைய லானாள். என்முது விழிகா ணற்கும் இயலாதே! எனினும் அன்னாள் அன்புள்ளம் காணு கின்றேன்! அகத்தின்பம் காணு கின்றேன்1 பேரர் அம்மாயி என்றழைப்பார் அது கேட்பேன் இன்பம் செய்யும் செம்மா துளைபி ளந்து சிதறிடும் சிரிப்பால் என்னை அம்மாது களிக்கச் செய்வாள்! அதுவெலாம் அந்நாள்! இந்நாள் அம்மணி நகைப்பும் கேளேன் ஆயினும் பேரர் ஓர் கால் ‘‘அம்மாயீ’’ என்பார்! கேட்பேன் அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்! அன்னை என்றழைப்பார் மக்கள் இன்புறும் என்றன் நெஞ்சம் இன்னிழை பூண்டி ருப்பாள் அத்தான்என் றழைப்பாள் என்னை நன்மொழி ஒன்று சொல்வாள் நான்இசை யாழே கேட்பேன்! அன்னவை அந்நாள்! இந்நாள் அன்னவள் தன்னை நோக்கி, ‘அன்னாய்’ என் றழைப்பார் மக்கள் அதுகேட்பேன்; இன்பம் கொள்வேன்! அவள் உள்ள உலகம் எனக்கு உவப்பூட்டும் உயிர்ப்பினை நிலைநிறுத்தும் நன்மழை உலக நூலைச் செயிர்ப்பற *நீத்தார் செய்வார் செவ்வே அவ் வறநூல் தன்னை முயற்சியிற் காப்பார் மன்னர். எனக்கென்ன இனி?அம் மூதாட்டி உயிர்வாழ்வாள் ஆத லாற்றான் உவப்பூட்டும் எனக்கிவ் வையம்! அவர் வாழ்வாவது அவள்மேல் வைத்த காதல் வாழாது வாழ்ந்து மூத்த மணவழ குள்ளம் இஃதே! ஆழாழிப் புனல் அசைவை, ஆர்ப்பினை எண்ணி டாது வீழுற அதனில் வீழ்த்தும் இருப்பாணி போல்அ வள்மேல் காழுற மனத்தில் வைத்த காதலால் வாழு கின்றார்! என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான் காம்பரிந் திட்ட பூவைக் கட்டிலில் பரப்பி, மேலே பாம்புரி போலும் மேன்மைப் பட்டுடை விரித்துப்போட்டால், தீம்பாலைப் பருகி அன்பன் சிறக்கவே துயில்வான் இன்றும் மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச மெத்தையில் துயிலு கின்றான். நெஞ்சக் காட்டில் உலவும் மான் பாங்குற மணியும் பொன்னும் பதித்தபாண் டியன்தேர் போல ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில் எழிலுற உலவா நிற்பான்! ஏங்குமா றில்லை இன்றும் என்னிரு கண்நி கர்த்தோன் நீங்காமான் போல்என் நெஞ்சக் காட்டினில் உலவு கின்றான் என் நெஞ்சில் தேன்மழை அவன் மெய்யுற வாய்சு வைக்க விழி, அழ குண்ண, மூக்கு வெய்யசந் தனத்தோள் மோப்ப, விளைதமிழ் காது கேட்க, ஐயன்பால் புலன்கள் ஐந்தால் அமிழ்தள்ள வேண்டும்! இந்நாள் பெய்கின்றான் என்நெஞ் சத்தில் தேன்மழை, பிரித லின்றி! அவனைச் சுமக்க மனம் ஓயாது அறம்செய்த கையும் ஓயும் மக்களை அன்பால் தூக்கிப் புறம்போன காலும் ஓயும்! செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம்கேட்ட காதும் ஓயும்! செயல்கண்ட கண்ணும் ஓயும்! மறவனைச் சுமக்கும் என்றன் மனமட்டும் ஓய்த லில்லை அயலவன் கண்படாமல் காத்து வந்தேன் வெயில்பட்டால் உருகிப் போகும் மெழுகினால் இயன்ற பாவை! பெயும்மழை பட்ட போதே கரையும்கற் கண்டின் பேழை! புயல்பட்டால் நிலைகொள் ளாத பூம்பொழில்! என்ம ணாளன் அயலவள் கண்பட் டால்சீர் அழியும்என் றன்பால் காத்தேன். தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன் தொப்பென்ற ஓசை கேட்டால் துயருறும் என்றும், சாற்றில் உப்பொன்று குறைந்தால் உண்ணல் ஒழியுமே என்றும், ஒன்றை ஒப்பெனில் ஒப்பா விட்டால் உடைபடும் உள்ளம் என்றும் தப்பொன்றம் இன்றி என்றன் தமிழனை அன்பாற் காத்தேன். எத்தீமை நேருமோ என்று நினைப்பாள் மூதாட்டி தற்காத்துத் தற்கொண் டானைத் தான்காத்துத் தகைமை சான்ற சொற்காத்துச் சோர்வி லாளே பெண்என்று வள்ளு வர்தாம் முற்சொன்ன படியே என்றன் முத்தினைக் காத்து வந்தேன். எத்தீமை மனக்கு றைச்சல் எய்துமோ எனநி னைப்பேன்! எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு அகவல் பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா என்று பேரன் ஈய வந்தான். தம்பியே உன்றன் தாத்தா வுக்குக் கொடு போ! என்று கூறிக் கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே! பொரிமாத் தந்தான் உண்டாள் நாணிப்போனார் தம்மிடம் அகவல் வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும், உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும் மணவழ கர்,தம் மனையாள் நினைவாய்க் கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல் துணையொடு தம்,தலை யணைக்கீழ் வைத்த பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே நடந்து, தம் துணைவியை நண்ணினார். அப்போது மருமகள் நகைமுத்து வந்து, “மாமா என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்? என்னிடம் கூறினால் யான்செய் யேனா?” என்றாள். பொரிமா இடையில் மறைத்தும் தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும் ஒன்று மில்லை ஒன்று மில்லை என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்! மருகி போனாள். கிழவர் துணைவியின் அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி உண்ணென்று வேண்டி நின்றார்! உண்டாள்! நாணிப் பிரிந்தார் உவந்தே! அவள் தனிச்செல்ல மணவழகர் பொறார் அகவல் தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை மணவழகு நோக்க மனது பொறாராய் மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன் துணைவிக்குத் துணைசெயக் கண்டால் தணிவார் தமது தணியா நெஞ்சமே. அவருக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம் அகவல் மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால் அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத் தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை உறைமாற் றுவாள்அவள்; மணந்தநாள் பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே. முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள் அகவல் ஒருநாள் மாலை பெருமூ தாட்டி நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம் மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்; செம்பில் எண்ணெயும் சீயக் காயும் ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன். “உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை எண்ணெய் தேய்க்க அனுப்புக” என்றார். “நானே அப்பணி நடத்துவேன்” என்றேன். “மானே, மெல்இடை வஞ்சியே, நீபோய்க் கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும் களியுடன் இருப்பாய் கவலைஏன்?” என்றார். அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன். பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய் தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே என்றன் மாமியார், “என்னன்பு மகனே, ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை உனக்கு முழுகாட்டக் ஒப்பிய” தென்றார். அதற்கென் மணாளர், “ஆம் அவள் என்னை எண்ணெய் இட்டுக்கொள எழுந்திரும் என்றாள். ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று இப்ப ணிச்சியை அனுப்பினாள்” என்றார். அப்படி யாஎன் றன்புறு மாமியார் இப்புறம் திரும்பி எதிரில் நோக்க, முக்கா டிட்டே முகம்மறைத் தபடி சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத் “தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே இங்கே அனுப்படி” என்றார். பணிச்சி அகலும் போது முக்கா டகன்றது. தங்கமே பணிச்சி என்பதை அங்கென் மாமியார், அன்பர் கண் டனரே! மணிமொழியாரிடம் மணவழகர் அகவல் மனதில் மாசு வராமையே அறம் எனும் வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான் அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன் அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார் வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த ஒருத்தி உள்ளத்தை உரிமையாய்க் கொண்டேன் அதுதான் மணமென அறிஞர் கூடிப் புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே. இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என் குடும்ப விளக்கு! வேறெது கூறுவேன்? என்பால்அன்பை நிரம்ப ஏற்றவள் நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள் நவையறு கல்வியால் நன்மக் கள்தமை அவையினில் முதன்மை, அடையச் செய்தேன் அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன். நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால் நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம் இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ? எய்தவே இன்பம் ஏகலும் மீளலும் அடையும் அன்றோ? அவ்வா றின்றி அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள் நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்! எனமண வழகர் இயம்பிய அளவில், “ இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள் உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!” எனமணி மொழியார் இனிது கேட்டார். நன்றென அழகர் நவில லானார்:- இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி “படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும் இருந்த நண்பர் பிரிந்து போகவே, என்றன் அறையில் யான்தனித் திருந்தேன். நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள். தனிமையை நெஞ்சு தாங்க வில்லை. தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன் இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர என்னை அனுப்பினாள் என்றன் தலைவி என்றாள் தோழி என்னெதிர் வந்து! போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும் வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு “ கொதிக்கின்ற தெ”ன்று கூறினாள். “இங்கே குளிர்கின்றதோ” எனக் கூறி அனுப்பினேன். “ இறக்கும் நேரம்” என்றாள் வந்து! “ வாழும் நேரமோ இங்குமட்டும்?” என்றேன். சென்றாள். உடனே என்றன் இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள். “ அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை முடித்தோடி வருவேன்” என்று மொழிந்தாள். “ தோழிபார்க் கட்டும் சோறாக் கும்பணி” என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி, “ தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்; பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?” என்றாள். “மாமியார் இல்லையா?” என்றேன். “ அந்தோ அந்தோ” என்றுதன் அங்கையால் தன்வாய் மூடித் “தளர்ந்த கிழவியை அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள் கொழுந னோடு கொஞ்சினாள் என்று வையம் இகழுமே” என்று, வஞ்சி தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச் சமையல் முடித்துத் தமிழோ அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே! மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார் அகவல் “ உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவ” என்று மூத்தாள் ஒளவை மொழிந்த வண்ணம் என்றும் மக்களின் எண்ணம் பலவாம்; எண்ணம் தோற்பதும் ஈடேறுவதும் ஆகும். அதனால், அகத்தின் நிலைமை நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும். இவற்றையே நொடிதொறும் ஏற்படு கின்ற ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர். இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்! “ நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றிரே வழுத்துவீர் அதை” என மணிமொழி கேட்டார். அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்; செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்! சேறும் பூசித் திரும்பலும் இல்லை. பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை. தீமையில் லாவிடம் இன்பம் திகழும். என்ன என்னிடம் மீதி என்றால், ஒன்றே! ஒன்றே! அதன் பெயர் உயிர்ப்பாம். அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால் இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர் “ அன்பின் வழிய துயிர்நிலை”- அறிக. என்றன் அன்புக் குரியவர் எவரெனில் மனைவி, மக்கள், பேரர், உறவினர். ஆயினும் மனைவி, என் அன்புக் கருகில் இருப்பவள், என்மேல் அன்புவைத்(து) இருப்பவள்” என்றார் மணவ ழகரே. மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார் அறுசீர் விருத்தம் சேவல்கூ விற்று; வானம் சிரித்தது; நூற்றைந் தாண்டு மேவிய அழகர் கண்கள் விரிந்தன! கிழவி யாரின் தூவிழி மலர்ந்தது! ஆங்கே துணைவனார் துணையை நண்ணிப் ‘பாவையே தூக்கப் பொய்கை படிந்தாயோ இரவில்” என்றார். அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள் குடித்தோமே பாலின் கஞ்சி; குறட்பாவில் இரண்டு செய்யுள் படித்தோமே, அவற்றி னுக்கு விரிவுரை பலவும் ஆய்ந்து முடித்தோமே! மொணமொ ணென்று மணிப்பொறி சரியாய்ப் பத்தும் அடித்தது துயின்றேன் இப்போ(து) அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள். தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர் நிறையாண்டு நூறும் பெற்ற நெடுமூத்தாள் இதனைக் கூற குறைவற்ற மகிழ்ச்சி யாலே அழகரும் கூறு கின்றார்: நிறுத்தினோம் நெடிய பேச்சை பொறி, மணி பத்தே என்று குறித்தது துயின்றேன் சேவல் கூவவே எழுந்தேன் என்றார். கிழவன் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம் புதுக்காலை; குளிர்ந்த காலைப் போதிலே உனைநெ ருங்கி இதுபேசும் பேறு பெற்றேன் என்றனன் கிழவோன்! அன்னாள் எதிர்வந்த அமிழ்தே, அன்பே, யான்பெற்ற இன்பம் போதும் அதோ நகைமுத்து வந்தாள் நமைக்காண்பாள் அகல்வீர் என்றாள். நூற்று ஐந்து ஆண்டுவரை நீவீர் வாழக் காரணம் என்ன? எண்சீர் விருத்தம் மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார் மணவழகர் அன்போடு வரவேற்புச் சொன்னார். “ இற்றைநாள் நூற்றைந்தாண் டாயினஉ மக்கே இத்தனைநாள் உயிர்வாழக் காரணந்தான் என்ன? சற்றதனை உரைத்திடுக!” எனக்கேட்டார் மொழியார். “ தந்தைதாய்1 நல்லொழுக்க முடையவர்கள்; என்னைக் கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும், கருத்தினிலும் சேர்த்தறியேன் தீயொழுக்கம் கண்டீர். நன்மனைவியுடையார் எல்லாம் உடையார் இவரன்றி2 நானடைந்த மனைவியோ என்றால் எனக்கினியாள்! என்னிரண்டு 3கண்களே போல்வாள் நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும் நாட்டத்தாள்; 4அவளாலே என்வாழ்க்கை காத்தேன்; அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்; அவளாலேஎன் குடும்பம் மாசிலதாய்ச், சற்றும் கவலையிலா5 தாயிற்று; நன்மனைவி உடையார், கடலுலகப்6 பெரும்புகழும் வாழ்நாளும் உடையார்! உலக அமைதிக்கு இலேசு வழி இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின் இலேசுவழி ஒன்றுண்டு பெண்களை ஆடவர்கள் எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும். தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா? செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல் செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால் அமைதியுல குண்டாகும் என்னஇதில் ஐயம்? மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம் மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின் மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா. மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால் மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை. துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர் தொல்லையிலா அவ்வுலகம் யான்வாழும் இல்லம். பகையில்லை, அங்கின்மை இல்லை,பிணி இல்லை. பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே! உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்? என்றுரைத்தார் மணவழகர். இதைஎல்லாம் கேட்ட எழிலான மணிமொழியார், உங்கட்குப் பின்னர் நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?” என்றார். “ நான்நல்லவன், என்மனைவி நனிநல்லள்; நாங்கள் என்றும்மன நலம் உடையோம்”, ஆதலினால் அன்றோ, எம்மக்கள் நல்லவர்கள், எம்மக்கள் கொண்ட பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர் நனிநல்லர் பொலியும்இனி யும்குடும்பம்” என்றுரைத்தார் அழகர். தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்தல் உண்டு “ கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய* வில்லை மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை நீவீர் செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது? தெரிவிப்பீர்” என்றுமணி மொழியார்தாம் கேட்கத் துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச் சொல்லலுற்றார், முதியோளும் நகர்ந்துவந்துட் கார்ந்தாள். இன்புறும் இரண்டு மனப்பறவைகள் “ வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும் மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர் தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம் துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை. ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலவாம் ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச் சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையொன்று பற்றிச் சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை. இருமனம் இரு மயில்கள்; தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை அசைதென்றல் குளிர்வீசும் சந்தனச்சோ லைக்குள் திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும், தெவிட்டாது காதல்நுகர் செந்தேன்சிட் டுக்கள்! பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்! பெண்இவளோ ஆண்நானோ எனவே வேறாய்ப் பிரித்துணர மாட்டாது பிசைந்து கூட் டமிழ்து! பேசினார் இவ்வாறு; கூசினள்மூ தாட்டி. அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும் அறுசீர் விருத்தம் மாநில மக்கள் எல்லாம் தூங்கும்நள் ளிரவில், தங்கம் ஏனின்னும் தூங்க வில்லை? இருநுனி தொடவ ளைக்கக் கூனல்வில் போலே மெய்யும் கூனிக்கி டந்த வண்ணம் ஆனதோ மணிபத் தென்றாள். மணிப்பொறி அடிக்கக் கேட்டே. அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள் “ அவன்துயின் றானோ?” என்னும் ஐயத்தால் தான்தூங் காமல் கவலைகொள் வாளை எங்கும் காண்கிலோம் இவளை அல்லால்! துவள்கின்ற மெய்யாள் தன்கைத் துடுப்பினால் தரைது ழாவித் தவழ்கின்றாள் தன்ம ணாளன் படுக்கையைத் தாவித் தாவி. ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள். “ வருகின்றா யோடி தங்கம் வா”என்றோர் ஒலிகேட் கின்றாள். சருகொன்று காற்றால் வந்து வீழ்ந்தது போலே தங்கப் பெரியாளும் பெரியான் அண்டைத் தலையணை மீது சாய்ந்தாள். அருகரு கிருவர்; மிக்க அன்புண்டு; செயலே இல்லை! இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை ஒளிதரும் அறைவி ளக்கும்! ஒளிக்கப்பால் இவர்கள் வாழ்வார்! வெளியினை இருளும் கௌவும் இருட்கப்பால் விளங்கு கின்றார்! எளிதாகத் தென்றல் வீசும் என்பயன்? அவர்அங் கில்லை களித்தன மனம்இ ரண்டும் கழறுமா றில்லை அஃதே மனவுலகில் இருவர் பேச்சுக்கள் இருமனம் அறிவு வானில் முழங்கின இவ்வா றாக:- “ பெரியோளே என்நி னைப்பால் தூங்காது பிழைசெய் கின்றாய்” “ உரியோனே, எனையே எண்ணி உறங்காது வருந்து கின்றாய்” “ பெருந்தொல்லை தூக்க மின்மை” “ நற்றூக்கம் பெரிய இன்பம்!” என் நினைவைவிட்டுத் தூங்குக அரைநாளின் தூக்க மேஇவ் வாறின்பம் அளிக்கு மானால் ஒருநாளின் முழுதும் தூங்கல் ஒப்பிலா இன்பம் அன்றோ? “அரிவையே என்றன் நெஞ்சை அள்ளாதே தனியே தூங்கே.” “உரியானே எம்ம னத்தைப் பறிக்காதே உறக்கங் கொள்வாய்”. நெடிய தூக்கம் நீடிய இன்பம் தூங்கினார் கனவும் அற்ற தூக்கநல் லுலகில்! பின்னர் ஏங்கினார் விழித்த தாலே! இன்பமே விரும்ப லானார்! தூங்குவோம்! நிலைத்த இன்பம் துய்ப்போம் நாம்என்றார்! நன்றே தூங்குகின் றார்நல் லின்பம் தோய்கின்றார் வாழ்கின் றாரால்! இருண்ட வீடு ஆக்கியோன் முன்னுரை ‘இருண்ட வீடு’, ‘குடும்ப விளக்கு’ என்னும் நூலுக்கு எதிர் மாறான கருத்தை விளக்குவதாகும். கல்வியில்லாத குடும்பம் இருண்ட வீடு அன்றோ? முத்தமிழ் நிலையம், என் நூற்களை வெளி யிடுவதே நோக்கமாகக் கொண்டு நிறுவப் பெற்றதாகும். என் நூற்கள் அனைத்தையும் அவர்கள் உரிமையுடன் வெளியிடுகிறார்கள் என்பதைச் சொல்லவேண்டுமா? இதுபற்றி நான் நிலையத்தார்க்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன். புதுவை, பாரதிதாசன் 24. 3. 44 முன்னுரை கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வி யில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவு மில்லை. அக் குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறேன். ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வியின் இன்றியமை யாமையை உணர்வதுதான் இதை ஊன்றிப் படிப்பதால் ஏற்படும் பயனாகும். புதுச்சேரி பாரதிதாசன் 9. 12. 1948 அத்தியாயம் - 1 தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல். கடலின் மீது கதிரவன் தோன்றிப் படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின் வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான். விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள். அப்போது மணியும் ஆறரை ஆனதால் எப்பொழு தும்போல் இரிசன் என்ற மாடு கறப்பவன் வந்து கறந்து பாலொடு செம்பை, மூலையில் கட்டிய உறியில் வைக்காது-உரலின் அண்டையில் வைத்துப் போனான், மங்கையின் கணவனோ, சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான். அத்தியாயம் - 2 குழந்தையின் அழுகை, பையனின் பொய், தந்தையின் போக்கு. தாயோ துயில்வதில் தனிமை பொறாமல் நோயுடன் குழந்தை நூறு தடவை அம்மா என்றும் அப்பா என்றும் கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது! பெரிய பையன் பிட்டையும் வடையையும் கருதி, முதலில் கையால் சாம்பலைத் தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின் அருகில் இருந்தபால் செம்பை, விரைவில் தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்; பாக்கி இருப்பது பால்என் றறிந்து கடிது சென்றே“இடையன் இப்படிச் செம்பின் பாலைச் சிந்தினான்” என்று, நம்பும் படியே நவின்றான் தந்தைபால்! தந்தையார் “நாளைக் கந்த இடையன் வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்” தருளினார். அத்தியாயம் - 3 பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத் தொடங்கினான்; இரண்டு பற்களின் மறைவு பிட்டுக் காரி தட்டினாள் கதவையே திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன் பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான் பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான் ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான் நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான் வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான் மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான் வில்லம்பு போல மிக விரை வாக நடுவிற் கிடந்த நாயை மிதித்துப் படபட வென்று பானையைத் தள்ளிக் கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று நின்ற பசுவின் நெற்றியில் மோதி இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப் புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு! அத்தியாயம் - 4 தலைவி எழுந்தாள்; சாணமிட்டாள்; கோலமிட்டாள்; அவளைக் கண்ட பகலவன் நடுங்கினான். நாயின் அலறல் நற்பசுக் கதறல் பானையின் படபடா பையனின் ஐயோ- இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே எழுந்தாள். அவளோ, பிழிந்து போட்ட கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள். இதுதான் பாதை எனும்உணர் வின்றி மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள். பாதி திறந்த கோதையின் விழியோ பலகறை நடுவில் பதிந்த கோடுபோல் தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது, ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள். உடைந்த பெட்டிமேல் கிடந்த பிட்டைத் தொடர்ந்துநாய் தின்பதும் தோன்ற வில்லை. நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர் கிடந்த சாணியைக் கிளறி எடுத்து மீந்தபாற் செம்பில் விழுது கரைத்துச் சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள்குழல் முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல் மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது! வாலிழந்து போன மந்தி முகத்தாள் கோல மிடவும் குனிந்தாள்; தாமரை போல எழுதப் போட்ட திட்டம் சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம் அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது! பொன்நிறக் கதிரொடு போந்த பகலவன் இந்நில மக்கள்பால் தன் விழி செலுத்தினான்! கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள் காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின! அத்தியாயம் - 5 தலைவி, தலைவன், பேச்சு, பையனுக்கு மருத்துவம், சாணி ஒத்தடம். குறட்டி னின்று கோதை, உட்சென்று* கணவனின் எதிர்வந்து கையோய்ந்து குந்தினாள். காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார். தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன் “ என்ன மணியடி?” என்று கேட்டான். “ சண்டிமணிப் பொறிக்குச் சாவி கொடுக்க அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்; வரவே இல்லை மாமா” என்றாள். அந்த நேரம் அண்டை வீட்டுக் கந்தன், குடையும் காலிற் செருப்புமாய் வீட்டி னின்று வெளியிற் செல்வதைப் பார்த்த கணவன், “பாரடி அவனை, அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக் கடைக்குச் செல்லும் கருத்தை” என்றான். “ விடியா மூஞ்சி விடியு முன்பே போனால் நீயும் போக வேண்டுமோ?” என்று கூறி இளிக்க லானாள். பெரிய பையன் அருகில் வந்தான் வடையும் கையும் வாயும் புண்ணுமாய் நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே ‘என்ன என்ன’ என்று கேட்டாள் தாய். புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த இரண்டு பற்கள் இல்லை என்றுரைத்தான். வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் என்றான். உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால் மறுநொடி ஆறுமென்று மங்கை மருத்துவ மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள். பிறகா கட்டும் பிட்டைத் தின்பாய் வேலைக் காரி விடிந்தபின் வருவாள் பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள். எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள். அத்தியாயம் - 6 பிட்டை நாய் தின்றது, மீண்டும் வாங்கிய பிட்டுக்குத் தலைவர் 1புறப்படுகிறார். புதிய பிட்டை உண்ணப்2 பையன் உதடு இடந்தரவில்லை. அழுமூஞ்சி பிட்டை அணுகினான். நாயும் நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று. தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால் பெரிய பையன் சிறிய நரிபோல் ஊழ் ஊழ் என்றே ஊளையிட் டிருந்தான். வீடு பெருக்கும் வேம்பு வந்தாள்! சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்! கடைக்கென் றமைந்த கணக்கன் வந்தான்! கூடத்து நடுவில் ஏடு விரித்தே மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும் சங்கிலி படைத்தாள் தலைவருக் காகவே! பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை, மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார். காலைக் கடனைக் கழிக்கக் கருதினார். பிட்டையும் வடையையும் பெட்டியில் குந்திக் கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன். அவனுடல் கொஞ்சம் அசைந்தது, வாய்எயிறு கவலை மாட்டின் கழுத்துப் போல வீங்கி இருந்ததால் வெடுக்கென வலித்தது! தாங்காது கையால் தடவிப் பார்த்தான்! நோயும் பெரியவன் நோக்க வில்லை! வாயில் நுழைய வடைக்கு வழியில்லை! அத்தியாயம் - 7 பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது. மற்றவர்க்குப் பிட்டு வேண்டாம் என்று முடிந்தது. பிள்ளைக்கு வாயில்லை. வீட்டின் தலைவி நீட்டிய காலும் ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க் குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள். இழந்த உயிரில் இம்மி யளவு பிள்ளையின் உடலொடு பிணைந்தி ருந்ததால், வள்ளிக் கொடியும் வதங்கிய தைப்போல் தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது. தாயோ சங்கிலி தன்னை அழைத்து “ வாங்கி வந்த வடையையும் பிட்டையும் கொண்டுவா பசியடி குழந்தைக்” கென்றாள். தட்டில் வடையும் பிட்டும் கொண்டு சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள். கூடத்து நடுவில் ஏடு விரித்து வைத்த பிட்டையும் வடையையும், வந்து மொய்த்த ஈயொடு முதல்வர் தின்றார்! மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன் சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார். அதனால் அதை அவர் அருந்துதல் நீங்கி, கையினால்1 “வேண்டாம் வடை” என்று காட்டினார்.2 பெரிய பையன் பிசைந்தான் பிட்டை! ஒரு துளிகூட உண்ணமாட் டாமல் கொரகொர கொழகொழ கொணகொண என்றான். இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால் “ எயிறு வீங்கி இடத்தை மறித்தது தின்பதற் கென்ன செய்வேன்?” என்பதாம். பையனால் இப்படிப் பகர முடிந்தது. தலைவரால் அப்படிச் சாற்ற முடிந்தது. பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும் தாயை நோக்கி அத் தடுக்குக் குழந்தை “ தாயே எனக்கிது சாகும் நேரம்” என்று வாயால் சொல்லும் வல்லமை இல்லை. அறிவெனும் வெளிச்சம் அங்கே யில்லை. மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது. அத்தியாயம் - 8 பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு! தந்தியும் ஆணியும் தளர்ந்த யாழ்* போல் கூடத்து நடுவில் வாடிய சருகுபோல் பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான். என்பு முறிந்த வன்புலி யுடம்பைக் கன்மேல் கிடத்திய காட்சி போல ஓய்வுடன் தலைவர் காட்சி போல ஓய்வுடன் தலைவர் ஒருப்பக்கத்தில் சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார் வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது; நடைவீட் டினிலே கடையின் கணக்கன் நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான் வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர். இல்லத் தலைவி எண்ண லானாள்: குழந்தை யுடம்பில் கோளா றென்ன? வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே! களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட விளங்குறும் அதுபோல், வேளை தோறும் கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப் பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே! எனப்பல வாறு நினைக்கும் போது நெட்டை யன்தலை குட்டை இறைப்பினில் பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில் பட்டதோர் எண்ணம்! பார்வை திருப்பினாள்: “ மந்திரக் காரன் வரட்டும்” என்றாள். அந்தச் சங்கிலி, “அவர் ஏன்” என்றாள். “ இந்த வீட்டில் இருளன் புகுந்ததால் நொந்தது குழந்தை நோயால்” என்றாள். “ வாலன் என்னும் மந்திரக் காரனை அழைக்கின் றேன்”என் றறைந்தாள் சங்கிலி! “ சரிபோ!” என்று தலைவி சொன்னாள்! நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி! “ ஏழரை ஒன்ப திராகு காலம் இப்போது வேண்டாம்”-என்றான் தலைவன். வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள், நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள். வேலைக் காரியும் வீட்டின் தலைவியும் நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக் காப்பீர் என்று காப்புங் கட்டி வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார். அத்தியாயம் - 9 வரவேண்டிய பணம் நல்ல வேளையில்தான் வந்தது வீட்டு முன்கட்டில் வீட்டுக் காரனும் “ காட்டுமுத்” தெனும் கணக்கனும் ஏதோ ஓசை காட்டிப் பேசி யிருந்தனர். அந்த நேரம் அந்த இடத்தில் பாக்கியும் வட்டியும் பட்டுச் செட்டி தூக்கி வந்து தொகையாய் எண்ணினான். வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும் சீட்டை எடுத்துச் செல்லு* வைத்தார். பட்டுச் செட்டி பகரு கின்றான்: “ இராகு காலம் எட்டிப் போனபின் தரவேண் டியத்தைத் தந்தேன்; ஆயினும் தந்த பணத்தைச் சரியாய் எண்ணிச் சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்” என்று கூறி எழுந்து போனான்! அத்தியாயம் - 10 வீட்டின் தூய்மை, எலிக்கூத்து, பூனை மகிழ்ச்சி, எறிபடும் குப்பை இனிதாய்ப், பகல்மணி பனிரண் டானது! பழங்கல அறைக்குள் பதுங்கி யிருந்த கிழஎலி கள்தம் கிளைஞ ரோடு கூடத் திற்சிறு குண்டான் மேலும் மாடிப் படியில் மட்குடந் தனிலும், ஆடல் பாடல் அரங்கு செய்தன. தயிரின் மொந்தையில் தலை புகாததால் நறுக்கென்று சாய்த்து நக்கிற்றுப் பூனை! வடித்த சோற்றை வட்டிலில் கண்டு தடித்தடிக் காக்கைகள் சலிக்கத் தின்றன! வீட்டினுள் காற்று வீசுந் தோறும் மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை பூமழை யாகப் பொழியும் தரையில்! ஊமைக் குப்பைகள் உம் மென்று மேலெழும்! அத்தியாயம் - 11 தலைவர் சாப்பிட முடியவில்லை; இலந்தையூர்க்குப் புறப்பட வேண்டியதாயிற்று. சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்: அங்கே பசியால் அழியும் தலைவரோ மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில் எப்போ தும்போல் இரண்டு பல்லிகள் பளபள வென்று *பாடவே, தலைவர் மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார். அந்த நேரம் அங்குநின் றிருந்த கணக்கன் தலைவரைக் கனிவுடன் அழைத்தே “ இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச் சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக் கண்டு பணத்தைக் கையொடு வாங்கிக் கொண்டு வருவதாய்க் கூறி னீர்களே! ஐதராப் பாக்கம் அவன் ஓடிவிட்டால் பைதரா வழக்கும் பயன்படாதே பத்துப் பைகள் பறிபோக லாமோ?” என்று பலவும் எடுத்துச் சொன்னான்! “ நன்று நன்று சென்று நீஒரு காரைப் பேசிக் கடிதில் கொண்டுவா. அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு. கடன் பட்டவனைக் கையொடு பிடிக்க அரச காவலர் அங்கே இருப்பரேல் ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா” என்றான் தலைவன்! ஏகினான் கணக்கன். அத்தியாயம் - 12 தலைவரின் மைத்துனர் வருகிறார்; வரவேண்டாம் என்று வரவேற்றார். ளொள்ளொள் என்று வெள்ளைநாய், வீட்டின் வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை வீட்டுக் காரர் கேட்டார் காதில், நீட்டினார் தலையை வீட்டின் வெளியில் மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார். வாரும் வாரும் வாரும் என்றார். மைத்துனர், வந்தேன் வந்தேன் என்று வாயிற் படிமேல் வைத்தார் காலை. இடறிற்றுக் கால்! இரும்இரும் மச்சான் வராதீர் மச்சான் வராதீர் என்றார். இல்லை இல்லை என்றார் மைத்துனர். தூய குறிதான் தோன்றும் வரைக்கும் வாயிலில் காலை வைக்கலா காதென மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில் மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார். காரும் சாவடிக் காவல ரோடு நேரில் வீட்டெதிர் நின்றது வந்து. விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்; விரைவாய்க் காரும் தெருவை அகன்றது. கணக்கனும் அந்தக் காரில் சென்றான். அத்தியாயம் - 13 தலைவியும் அவளின் அண்ணனும் பேசுகிறார்கள் குழந்தைக்குப் பண்டம் வாங்கி* வந்தார் மாமா. மைத்துனர் வீடு வந்து நுழைந்தார். ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத் “ தங்கையே என்ன அங்கே செய்கின்றாய்? குழந்தைக் கென்ன? குறைபா டில்லையே? உடம்புக் கென்ன? ஒன்று மில்லையே? பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே? குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?” என்று கேட்டார். எதிரில் நின்றவள் “ இருக்கின் றேன்நான்” என்று கூறினாள். சாகா திருப்பது தனக்கே வியப்போ? அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த வாயிலாக் குழந்தையை மைத்துனர் கண்டார். இயம்ப முடியா இரக்கம் அடைந்தார். அவ்விரக் கத்தின் அறிகுறி யாகத் தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும் ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார். பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக் கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத்தெதிர் வஞ்சம் இன்றி வைத்துக், ‘குழந்தையே பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும் வாங்கி வந்தேன் மருந்துபோல்’ என்றார்; ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக் காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்! குழந்தை கிடந்த கூட மெல்லாம் உழுந்து கிடந்த ஒருகளம் போலவும் வேம்பின் பழம்பூ விரிதரை போலவும் ஈயின் காடும் எறும்பின் காடும் ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார். அத்தியாயம் - 14 பெரிய பையனுக்கு விளையாட்டுத் துப்பாக்கி! அனைவர்க்கும் மகிழ்ச்சி! அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு மாம்பழம் விளாம்பழம் வந்த *வழியில் காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து மாமனை எதிர்பார்த் தூமைபோல் அழுதான். மாமனோ சென்னையில் வாங்கி வந்த கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான். பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்! வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல் பிணம்சிரிப் பதுபோல் பெரிதும் சிரித்தான். தங்க மாமனார் தாமும் சிரித்தார் உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள். கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல் வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை மாமனார் காட்டினார். மங்கையும் பையனும் வியப்படைந் தார்கள் வீட்டுக் காரியோ “ அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல் வைத்துவிடுங்கள் வைத்து விடுங்கள் அவனிடம் கொடுக்க லாகா” தென்றாள். அவ்வா றதனை அங்கே வைத்தான். அடையாளம் - 15 பையனின் சாதகம், கைப்பிள்ளைக்குச் சாவே கிடையாது. “ என்னருந் தங்கையே இந்தப் பெரியவன் நன்றாகப் படிக்கின் றானா? சொல்” என்றான். தங்கை இயம்பு கின்றாள். “ சாதகம் பார்த்தோம்; சரியாய் அவனுக்குப் பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம். இருபதில் உலகையே என்னதென் பானாம்” என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள். “ கையோ டிந்தக் கைக் குழந்தையின் குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன?” என்று கேட்டான் பின்னும் அண்ணன். “ காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப் போட்ட போதிலும் போகாதாம் உயிர்; தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான். மந்தத் தாலே வந்த நலி*விது! இந்த வீட்டில் இருளன் புகுந்ததால் நலிவிவ் வாறு வலிவு பட்டது. வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு வருவதும் போவதும் வழக்கந் தானே! நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும் ஏழும லையான் இரக்கம் வைப்பான். காப்பாய் என்று காப்பும் கட்டினேன்” என்று தங்கை இயம்பினாள். அவனோ சமையல் ஆனதா தங்கையே என்றான். அடையாளம் - 16 அண்ணன் தன் பசியைக் கூறினான்; தங்கை அவன் ஏறி வந்த வண்டியை மெச்சுகிறாள். ஆமாம் இந்த அலைச்சலில் உங்களைச் சாப்பிடும் படியும் சாற்ற வில்லை என்றாள். வெந்நீர் இருக்குமா என்றான். ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர் கொதிக்க வைப்பேன் குளிப்பீர் என்றாள். வெற்றிலை கொஞ்சம் வேண்டும் என்றான். ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன் என்று கூறி ஈந்தாள் வெற்றிலை. வெற்றிலை போட்டான். வெறித்துப் பார்த்தான் சாப்பிடச் சொல்லிக் கூப்பிட வில்லை. பசியால் அண்ணன் பதைபதைக் கின்றான்; துடிப்போடு தங்கைபால் சொல்ல லானான்; விடிய நாலுக்கு வீட்டை விட்டுக் கிளம்பி னேனா? கிளிய னூரில் சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன். அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும் புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன் ஏறினேன்; இங்கே இழிந்தேன்” என்றான். இந்தக் கதையை இயம்பித் தனது பொறுக்கொணாப் பசியைப் புகன்றான். அவளோ எங்கள் அண்ணன் ஏறி வந்த வண்டியே வண்டி வண்டியே வண்டி என்று வண்டியின் இயல்பைப் பற்றி எண்ணி மகிழ்ந்தாள்! மண்ணாங் கட்டி! அடையாளம் - 17 மாலை ஏழு மணிக்குக் காப்பி முடிகிறது அண்ணன் உடனே அருகி லிருந்த உணவு விடுதியில் உண்டு வந்தான். குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை, பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல், இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று. வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின், தலைவியை எழுப்பித் தந்தார், குடித்தாள்! பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே இருபணிப் பெண்டிரும் *இருசெம்பு குடித்தார். அருமை யான அண்ணனை எழுப்பி ஒருசெம்புக் காப்பி தரும்படி, தலைவி இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பி காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள். வேலைக் காரியின் விருப்பப் படி அவன் வேண்டாம் என்று விளம்பி விட்டான். அடையாளம் - 18 மஞ்சள்தாள் திருமணத்தாள்தானே வேறென்ன? * காகிதம் படிக்கையில் தலைவர் வருகிறார். அண்ணனும் தங்கையும் அருகில் நெருங்கியே பிறந்தஊர்க் கதைகள் பேசலா னார்கள்: “ நமது வீட்டின் நாலாவது வீட்டுக் கமலத் துக்குக் கண்ணாலம் என்று காயிதம் வந்தது கண்டீரா?” என்றுதன் அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக் “ கமலம் இறந்து கணக்கிலா நாட்கள் ஆயின” என்றான். அது கேட்டு மங்கை இல்லை அண்ணா இதோ பாருமென்று மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக் கொண்டு வந்து கொடுத்தாள்; அதை அவன் மேலுறை கிழித்து நாலுசொல் படித்தான். அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது. வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார். சாய்வு நாற்காலியில் சலிப்புடன் சாய்ந்தார். “ ஐதராப் பாக்கம் அவன் போய் விட்டான். பணமும் போனது; பற்றாக் குறைக்கோ இன்று ரூபாய் இருபத் தைந்தும், பட்டினி யோடு பறந்து திரிந்த தொல்லையும் வீணாய்த் தொலைந்தன” என்றார். அந்த நேரம் அண்ணன் அங்கே திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான். ஏட்டினில் இருந்த தென்ன வென்றால்: “ அன்புடை யவரே அவ்வா சாமி ஐந்து நாளில் ஐதராப் பாக்கம் போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான் கடிதம் இதனைக் கண்டவுடனே வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய் வாங்கி விடலாம், வந்து சேரவும். அங்கவன் போனபின் இங்குநீர் வருவது வீணே இங்ஙனம் வீரா சாமி.” அத்தியாயம் - 19 தலைவர் எரிச்சல்; இருவர் சண்டை வந்த அண்ணனும் போய்விட்டான் எப்போது வந்த திந்தக் கடிதம் என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார், ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது. திருமணத் துக்குச் செல்லமாட்டீர் என்று அடுப்பங் கரையில் அதனை வைத்தேன். இதனா லென்ன என்றாள் தலைவி. இதுவா திருமணம் என்றார் தலைவர். மஞ்சள் கடிதம் மணமா அல்லவா? என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள். பதரே என்று பல்லவி தொடங்கினார். அடக்கென் றெடுத்தாள் அவள்அநு பல்லவி! “ எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி மங்கிப் போக வைத்தாய் காலடி பொங்க லாண்டி யாகப் போம்படி புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி” எனவே இப்படி முடித்தார் முதலடி! தானும் தொடங்கினாள் தாளத் தின்படி: “ ஊருக் கழித்தாய் உருப்பட வாநீ நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ இனியும் ஊரில் எடுபட வாநீ என்றுகூறி எழுந்தாள் அம்மை. இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன் வந்த அண்ணன் வந்த வழியே சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான். அத்தியாயம் - 20 தலைவர் கோபித்துக் கொண்டு புறப்படுகிறார் வீட்டுக் காரர் மேலும் தொடங்கினார்: இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப் பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப் பல்லைக் கடித்தே பரக்க விழித்தே கொல்லைக் கோடிக் கோலைத் தேடி விட்டே னாஎன1 மீசை முறுக்கிச் சட்டென இதுதான் தக்க தென்று துண்டை எடுத்துத் தோளில் போட்டுச் சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர் கோதி நுணாக்காய்க் குடுமி முடித்துக் காதில் தொங்கும் கடுக்கனைத் துடைத்துச் “ சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன் கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன் இங்கு நான்இரேன் சங்கிலி, தெரிந்ததா! எங்கே பையன்? இரடா இங்கே. என்றுகூறி-எங்கே? செருப்பும்? ஒன்றுதானா? என்றதை அணிந்து, சென்று பின்பு திரும்பி வந்து கன்றையும் மாட்டையும் நன்று கருதுநீ உன்னிடம் குழந்தையை ஒப்பு வித்தேன்2 சங்கிலி இன்னும் நான் சாற்றுவ தைக் கேள்; இப்போ தேநான் இவ்விடம் விட்டுச் செட்டித் தெருவில் தென்னை மரத்தோ டொட்டி இருக்கும் ஒருவீட்டருகில் குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும் இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில் இருப்பேன். நீயோ என்னை அங்கு வந்து கிந்து வருவாய் கிருவாய் என்று கூப்பிட எண்ண வேண்டாம். அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான் தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில் இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்.” என்று தலைவர் இரைச்சல் போட்டு நடைவரைக் கும்போய் இடையில் திரும்பி அழைப்பார் இல்லை ஆதலால், மீண்டும் திரும்பிப் பார்த்துத் தெருவொடு சென்றார். அத்தியாயம் - 21 சங்கிலி தேற்றல்,1 தலைவியின் தூற்றல்2 சங்கிலி வந்து தலைவியை நோக்கியே தங்க மான தங்கள் கணவருக் கிப்படி யெல்லாம் எரிச்சலுண் டாக்குதல் தப்பா அல்லவா சாற்றுவீர் என்றாள். எரிச்சலை அடக்க எனக்குத் தெரியும்3 “ உரைத்தது போதும் உட்கார்” என்று தலைவி சொன்னாள். சங்கிலி அமர்ந்தாள். மலைக்கு ரங்கா மனிதரா அவர்தாம்? கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார் ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும் இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை. சுவரா கல்லா சொல்வதைப் பொறுக்க, மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார். சீச்சி இவரொரு சின்னப் பிறவி என்றிவ் வாறு பன்றிபோல் உறுமிச் சென்று சோறுபோடு என்றாள் தலைவி. அத்தியாயம் - 22 மண்ணெண்ணெய்க் கையோடு சாப்பிடுகிறார்கள். சமையல் நன்றாயில்லை என்பதற்குக் காரணம் தோன்றவில்லை. பையன் நோய் சிறிது படிந்திருந் ததால் பையன் நிமிர்ந்து பசிபசி என்றான்! பைய னுக்கும் பரிமாறி னார்கள். தாயும் பிள்ளையும் சரேலென் றெழுந்தே இட்டமண் ணெண்ணெய்ப் புட்டியை இடறி எண்ணெய் சாய்ந்ததால் இச்இச் என்றே இருவரும் கையால் எடுத்துரு வாக்கிக் கடிது சமையல் கட்டிணை அடைந்தார் சோற்றில் ஏதும் சுடுநாற்றம் இல்லை. சாற்றி லேதும் தவறே இல்லை குழம்பில் ஏதுங் குற்ற மில்லை அவைகள் *சுவையுடன் அமைந்தன எனினும் அந்த இருவரும் அலம்பாத கையோடு வந்துட் கார்ந்தார் வழக்கப் படியே. சோற்றில் ஏதோ சுவை குறைவுற்றது சாற்றில் ஏதோ தவறு தோன்றிற்று குழம்பில் ஏதோ குறை தோன்றிற்று சுவையுடன் அமைந்தவை கவலை விளைத்தன. வீட்டுக் காரி மிகவும் சினந்து இவற்றில் இனிமேல் சுவைதனை ஏற்ற முடியுமா என்று மொழிந்தாள், மொழிந்ததும், என்னா லாவ தினியொன்று மில்லை என்று கூறினாள் எதிர்நின்ற சங்கிலி. உண்டு முடித்ததும் உள்ள கறியையும் மீந்த சோற்றையும் வேலைக் காரிகள் ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர். அத்தியாயம் - 23 வீட்டுக்காரி, பையன் தூக்கம் பெரிய பையன் பெட்டி யண்டையில் கொரகொர வென்று குறட்டை ஏற மெழுகு போல அழுக்குப் படிந்த தலையணை மீது தலையை வைத்து விலகாது மூட்டை வெடுக்கென்று கடிப்பதும் தோன்றா உணர்வோடு தூங்க லானான். ஈன்ற தாயோ ஈன்றகைப் பிள்ளையின் அண்டையில் படுத்தாள், அலறிற்றுப் பசு; வைக்கோல் போட மறந்தே னென்றே ஓடி, *வைக்கோலைத் தேடிப் போட்டு நாடி வந்து நடுவிற் படுத்தாள். தெருவில் நாயும் குரைப்பது கேட்டுத் தெருவின் கதவைச் சென்றுதாழ் இட்டாள். நவாப்புக் குதிரை நாடு முழுதும் சவாரி வந்து தரையில் புரளல்போல் படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்! அத்தியாயம் - 24 இரவு பத்து மணி; தலைவர் திரும்பி வருகிறார் எண்ணெய் இன்றி இருண்டன விளக்குகள், இருண்ட வீட்டில் இருளும் குழந்தையும் அன்றி, மற்றை யனைவரும் துயின்றனர். குற்றுயி ராகக் குழந்தை கிடந்தது. தூற்றும் பழியை ஏற்க அஞ்சி நள்ளிரு ளானது பிள்ளை சாகாமல். தன்மடி தனிலே தாங்கிக் கிடந்தது. சரியாய் அப்போது-இரவு பத்துமணி; தலைவர் திரும்பித் தம்வீடு நோக்கினார் தலைவா சலில்நாய் தான் வரவேற்றது வீடு மூடியும் விளக் கவிந் தும் இருட் காடுபோல் இருப்பது கருதிக் கனைத்தார். கனைப்பது கேட்டு மனையாள் வந்து, தாழ் திறப்பாள் அல்லவா? திறக்கவே யில்லை. நாயை நோக்கி நவின்றார் தலைவர் ‘நீயேன் தெருவில் நிற்கிறாய்’ என்று நாய் அது கேட்டு ‘ஞய்ஞய்’ என்றதாம். அதற்கும் வழியில்லை அழகிய வீட்டில். கதவைத் தட்டினார் கையின் விரலால்! பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு! அழுந்தத் தட்டினார் அங்கை யாலே! அடித்தார் இடித்தார் படபட வென்றே! எட்டி உதைத்தார் இருநூறு தடவை! முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்! அத்தியாயம் - 25 1அண்டை அயலார்க்கு இடையூறு! 2சினத்தோடு வந்தவர் சிரிப்போடு திரும்பினர்! எதுவும் பயன்பட வில்லை ஆயினும் அண்டை அயலில் அருகில் இருந்தவர் தக்கத் தரிகிடத் தாளம் கேட்டுத் தூக்கம் கலைந்ததால் சூழ்ந்தோடி வந்து மூக்கில் எரிச்சலை முன்னே நிறுத்தி என்னாங் காணும் இந்நே ரத்தில் தச்சுப் பட்டறை வைச்சது போலவும் அச்சுப் பீப்பாய் அடிப்பது போலவும் இப்படித் தட்டி இன்னல் விளைக்கிறீர்? உள்ளே இருப்பவர் உயிரோ டிருந்தால் கொள்ளுக் கட்டிய குதிரை போல வாய்திறக் காமலா வம்பு செய்வார்கள்? என்று கூறி இரைச்சலிட் டார்கள். இதுகேட் டந்த ஏதும் கெட்டவர் கதவு மிகவும் கனத்த தென்றார் “ எழுந்து திறப்பாள் என்பதை நீவிர் எதிர்பார்த் திடவே யில்லை போலும், கதவை உடைப்பதே கருத்துப் போலும்!” என்று சிரித்தே ஏகினார் வந்தவர். அத்தியாயம் - 26 கதவு திறக்கப்பட்டது. தலைவர்க்குப் பசி. கூச்சலிட்டுப் பார்த்தார். மேலும் கதவிடிப்பு வேலை தொடங்கிற்று! பனிரண்டு மணிக்குத் தனிப்பெருந் தலைவியின் சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான் விழித்தாள். காதில் வீதியில் தொலைவில் புழுவொன்று சருகுமேல் புரள்வது போன்ற ஓசை தன்னை உற்றுக் கேட்டாள். ஆசை ஆம்படை யானா என்றே மெதுவாய் எழுந்து மெதுவாய் நின்று மெதுவாய்ப் பெயர்ந்து மெதுவாய் நடந்தே கோட்டை நடுவின் வேட்டுப் போலத் தலைவர் இடிக்கும் தடித்த கதவைத் திறந்து விட்டுத் திரும்பி வந்து நிறைமுக் காட்டோடு நீட்டிப் படுத்தாள். தலைவி விழிப்புடன் தலையசைப் பதையும் முதல்மகன் கொண்ட முழுத்தூக் கத்தையும் இருட்டில் விளக்கை ஏற்றிப் பார்த்த தலைவர்“ஏனடா தம்பி சாப்பாடு- உண்டா இல்லையா உரையடா” என்றார். “ சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது. போய்ப் பார்த்துத்தான் புறப்பட்டு வந்தேன்” என்று கூறினார்! ஏதும் பதிலில்லை. அத்தனை பேரும் அழிந்தா போனீர்? ஒருவரும் இல்லா தொழிந்தா போனீர்? என்று கூறி இரைச்ச லிட்டார். அத்தியாயம் - 27 சாப்பாடு இல்லை என்று தெரிந்தபின் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் தலைவர் அமைவாய் விளக்கை அங்கையில் தூக்கிச் சமையல் அறைக்குத் தாமே சென்றார். ஏன மெல்லாம் இறக்கி இறக்கிப் பூனை போலப் புரட்டித் தள்ளிப் பொரியற் சட்டியைப் போட்டு டைத்துச் கரியச் சட்டியைத் தட்டென்று போட்டே எண்ணெய்ச் *சட்டியை எடுத்துச் சாய்த்து வெண்ணைய்த் தாழியை விரியத் தள்ளிச் சோற்றுப் பானை துடைக்கப் பட்டதைக் குழம்புச் சட்டிக் கழுவப் பட்டதைத் தெரிந்து, பசியோ திருதிரு என்று எரிவு கொள்ள, இழவோ என்று திறந்த வற்றைத் திறந்தே போட்டுப் பெருச்சாளிக்குப் பிழைப்புண் டாக்கிக் கூடத் தினில் குந்திப் பார்த்தும் பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும் எதுவும் நடவா தென்று தெரிந்தபின் தலைவர் ஓர் உறுதி சாற்ற லானார்: சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று! அத்தியாயம் - 28 திருடன் வந்து, அலமாரி திறந்து, தன்செயலை அமைதியோடு செய்கிறான் சரியாய் ஒருமணி இரவில் தலைவர் தூக்கமும் பசியின் துடிப்பும் விழிப்பும் இரங்கத் தக்கவாய் இருந்தன. தலைவியோ கனவால் விழிப்பதும் கண்ணயர் வதுமாய் இருந்தாள். பையன் சொறிவான், தூங்குவான்! இந்த நிலைமையில் இவர்கள் இருக்கையில் திருடன் ஒருவன் தெருப் பக்கத்து மாடிமேல் ஏறி ஆடா தசையாது முற்றத்து வழியைப் பற்றி இறங்கினான். அவனோ கறுப்புடை அரையிற் கட்டிப் பிறைபோற் கத்தியும் பிடித்தி ருந்தான்! ஓசை யின்றி உள்ளறை புகுந்தான். படர்ந்தெரி விளக்கைப் பளிச்சென்ற வித்தான்! அலமாரி தன்னை அங்கையால் தடவினான்! சாவி யில்லை; தாவி நகர்ந்து தலைவியின் தலைமாடு தடவினான்; இல்லை! சாய்வுநாற் காலியில் சாய்ந்திருந் தவரின் அண்டையில் இருந்த குண்டுப் பெட்டிமேல் இருந்தது சாவி; எடுத்துச் சென்றே அலமாரி தன்னைக் கிலுக்கென்று திறந்தான்! வீட்டுநாய் அதனைக் கேட்டுக் குலைத்தது! தலைவர் விழித்தார். தலைவி விழித்தாள். பெரியவன் விழித்தான். தெருவில் தொலைவில் எதையோ கண்டு பதைத்தது நாய்என்று மதமத வென்று மல்லாந் திருந்தனர்! சிறிது நேரம் சென்ற பின்னர் நிறையப் பணத்தாள் நிறையப் பணங்கள் போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக் கையில் தூக்கினான் கரிய திருடன். பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை அனைவர் காதையும் அசைத்த தேனும் “ தலைவர் எதையோ தடவு கின்றார்” என்று தலைவி எண்ணி யிருந்தாள் “ தலைவி பாக்குத் தடவினாள்” என்று தலைவர் நினைத்துச் “சரி”என் றிருந்தார். பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான். திருடன் துணியொன்று தேடி, அதிலே பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக் கட்டி இடது கையிற் பிடித்து வலது கையில் வைத்தான் கத்தியை! அத்தியாயம் - 29 திருடனைத் தேள் கொட்டிற்று. திருடன் இருப்பதைத் தலைவர் அறிந்து, அங்கிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தார். அவன்தன் காலை அயலில் பெயர்த்தான்; கௌவிற்றுக் காலைக் கடுந்தேள் ஒன்று. கடுந்தேள் அகற்றக் காலை உதறினான். தகரப் பெட்டியில் தன்கால் பட்டதால் தடாரென் றெழுந்த சந்தடிக் கிடையில் கள்ளன் உட்புறக் கதவில் நுழைந்தான். தலைவர் சடுதியில் விளக்கை ஏற்றினார். கதவில் திருடன் பதுங்கி யிருப்பது வெளியில் இடுக்கால் வெளிப்பட் டதினால் தலைவர் தமது தலையைச் சாய்த்துக் கத்தியைக் கள்ளனைக் கண்ணால் பார்த்துப் பின்வாங்கும் போது பெட்டியின் மேல் கைத்துப் பாக்கி வைத் திருப்பதைக் கண்டார்: அதனைக் கையில் எடுத்தார். விளையாட் டுக்கு வெடிப்ப தாயினும் அந்தத் திருடனை அஞ்ச வைக்கலாம் என்று தலைவர் எண்ணிக் கொண்டார்.* அத்தியாயம் - 30 விளையாட்டுத் துப்பாக்கியை மெய்யானதென்று திருடன் நடுங்கினான். ஆனால், பையன், 1திருடனை உண்மையுணரச் செய்துவிட்டான் அந்த வேளையில் அருமைத் தலைவி “ கள்ளனா” என்று வெள்ளையாய்க் கேட்டாள். கள்ளன் அதுகேட்டுக் கதவிற் பதுங்கினான்; கைத்துப் பாக்கியைக் கண்டு நடுங்கினான். “ என்னைச் சுடாதீர்!” என்று கூறிப் பணத்தைக் கொடுத்துப் பயணப் படவும் பண்ணினான் முடிவு! பையன் அப்போது நிலைமை யாவும் நேரில் அறிந்தும், பொய்த் துப்பாக்கியை மெய்த்துப் பாக்கி என்று நினைக்கும் தன்னருந் தந்தையை மடையன் என்றெண்ணி 2வாளா யிருந்தான். “ எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம் சுடுவேன் பாரடா சுடுவேன்” என்று கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர். அதுகேட்டுப் பெரியவன்“அப்பா! அப்பா. அத்துப் பாக்கி பொய்த் துப்பாக்கி; தக்கை வெடிப்பது தானே” என்றான். திருடனுக்கு அச்சம் தீர்ந்து போயிற்று. மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில் இதுவா தெருவுக்கு ஏற்ற வழியென்று திருடன் கேட்டுச் சென்று மறைந்தான். திருடன் கையோடு செல்வமும் மறைந்தது. தலைவியும் பையனும் தலைவர் தாமும் குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்! அத்தியாயம் - 31 திருடன் போனது தெரிந்தபின், தலைவருக்கு எரிச்சல் வந்தது; அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது திருடன் அந்தத் தெருவைவிட் டகன்றதை ஐய மின்றி அறிந்த பின்னர், தலைவர் அலறத் தலைப்பட்டார்; “அடே கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய் கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான் பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி என்றாய், சென்றான் பொருளையும் தூக்கி” என்று கூறி, எதிரில் இருந்த சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப் படுத்தி ருந்த பையனை நோக்கி எறிந்தார். பசியும், எரிபோல் சினமும், மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி மார்பினில் வீழ்ந்தது; மங்கை “ஆ” என்று கதறினாள்; அஃதவள்* கடைசிக் கூச்சல்! அத்தியாயம் - 32 பெரிய பையன் இல்லை. அயலார் நலம் விசாரிக்கிறார்கள். குறிதவ றாமல் எறிந்த முக்காலி பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது. தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த விறகின் கட்டை வீணே: ஏனெனில் முன்பே பெரியவன் முடிவை அடைந்தான்! அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும் எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது. வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள். எதிர்த்த வீட்டான் என்ன வென்றாள் திருடனா என்றான் சீனன். விளக்கை ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன். எதிர்த்த வீட்டின் எல்லிக் கிழவி, குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே இப்போ தெப்படி என்று கேட்டாள். விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை விளித்தார் தலைவர்: விடையே இல்லை! என்மேல் வருத்தம் என்று கூறிப் பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்; ஏதும் பதிலே இல்லை. அவனும் வருத்தமாய் இருப்பதாய் நினைத்தார்! அயல்வீட்டார்கள் அகல்விளக் கேற்றினர் கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து மாண்டது குழந்தை மாண்டது என்றாள்! மனைவியும் பையனும் மாண்ட சேதி அதன்பின் அனைவரும் அறிய லாயினர். தெருவார் வந்து சேர்ந்தார் உள்ளே. ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார். அரச காவலர் ஐந்துபேர் வந்தார் ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள். அத்தியாயம் - 33 கல்வியில்லா வீடு இருண்ட வீடு எல்லா நலமும் ஈந்திடும் கல்வி இல்லா வீட்டை இருண்டவீ டென்க! படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின் துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க! அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம் நெறி காணாது நின்ற படிவிழும்! சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம் வித்தால் விளைவன மேன்மை, இன்பம்!1 செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்? கல்வி இல்லான் கண்இலான்2 என்க. இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும் படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்! கல்லான் வலியிலான்; கண்ணிலான்; அவன்பால் எல்லா நோயும் எப்போது முண்டு. கற்க எவரும்; எக்குறை நேரினும் நிற்காது கற்க. நிறைவாழ் வென்பது கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள் கற்க! ஆடவர் கற்க! கல்லார் முதிய ராயினும் முயல்க கல்வியில்! எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும் படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும். ஊமையுங் கற்க ஊமை நிலைபோம்! ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்! கையும் காலும் இல்லான் கற்க உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான். இல்லார்க் கெல்லாம்* ஈண்டுக் கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே!