பாவேந்தம் - 2 காப்பிய இலக்கியம் – 1 எதிர்பாராத முத்தம் பாண்டியன் பரிசு ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 2 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2009 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 232 = 264 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 245/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர்நகர் சென்னை – 17. தொலைபேசி : 044 2433 903 பாவேந்தர் பாரதிதாசன் 119 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு வெளியீடு பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி . - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  எதிர்பாராத முத்தம் பாவேந்தர் தாம் வாழ்ந்த சமுதாயத்தில் காணும் நிகழ்ச்சிகள் சில வற்றை மையமாகக் கொண்டு சில படைப்புகளைப் படைத்தார். பகுத் தறிவுக் கொள்கையும் சீர்திருத்த நோக்கமும் கொண்ட பாரதிதாசனுக்கு இவ்வகைப் படைப்புகள் தன் கருத்துக்களை வெளியிட தக்க பாலமாய் அமைந்தன. அந்த வரிசையில் ‘எதிர்பாராத முத்தம்’ இவ்வகையைச் சார்ந்தது. இது வணிக குடும்பத்திற் பிறந்த பொன்முடி - பூங்கோதை ஆகியோரின் காதலைப் பற்றிக் கூறும் அருங் காப்பியமாகும். எதிர்பாராத முத்தம் உண்மைக் காதலின் சிறப்பினையும், கற்போர் மனத்தை நெகிழச் செய்யும் இனிய கவிதைகளைக் கொண்டது. இளங் காதலர்களின் உள்ளப் பரிமாற்றங்கள் காதல் உணர்வுகள் இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. துன்ப முடிவைக் கொண்டது. எதிர்பாராத முத்தம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதியில் 21 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் கவிதை மணம் கமழும் தொடரினைத் தலைப்பாகப் பெற்றுள்ளது. பஃறொடை வெண்பா 3-118 அடி; கலிவெண்பா 2-74 அடி; நேரிசை ஆசிரியப்பா 4-81 அடி; அறுசீர் விருத்தம் 93-372 அடி; எண்சீர் விருத்தம் 27-108 அடி ஆக 129 பாடல்களும் 753 அடிகளுமாகும். இரண்டாம் பகுதி ‘முறையீடு’ என்ற தலைப்பைக் கொண்டது. காதல் நிகழ்ச்சிகளோடு பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிறைசூடி தன்னைப் பாடிப் பெருஞ்சிறப்போடு வடநாடு சென்ற குமரகுருபரரின் உண்மை வரலாற்று நிகழ்ச்சியையும் சேர்த்துக் காப்பியமாக்கியிருப்பது இந்நூலிற் காணப்படும் தனிச்சிறப்பாகும். கைலாசபுரத்தில் சண்முகக் கவிராயரும் சிவகாமி அம்மைக்கும் வாயில்லாப் பிள்ளையாகத் தோன்றிய குமரகுருபரன், முருகன் அருளால் ஊமைநிலை நீங்கப்பெற்று, கவிஞராகி, திருச்செந்தூர் முருகன் மீது ‘கந்தர் கலிவெண்பா’ப் பாடினார். ஞான நற்குருவை நாடி நற்கதி அடையவேண்டிக் குமரகுருபரன் புறப்படும்போது மதுரை திரு மலைநாயக்கன் எதிர்கொண்டு வரவேற்றான். அங்கே ‘மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ துதி நூலும், நீதி நூலும் பாடி அங்கிருந்து திருச்சி, திருவானைக்கா சென்று திருவாரூரில் தங்கி ‘நான்மணிமாலை’யைப் பாடினார். மாசிலாமணி தேசிகரை அடைந்து, அவரைத் தம் ஞான நற்குருவெனத் தெளிந்தார். அங்கிருந்து சிதம்பரம் ஏகி, பிள்ளைத்தமிழ், சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை முதலியன வழங்கினார். ஞானமூர்த்தியான தம்பிரானிடம் குருபரர் வந்த போது அவரை நோக்கித் தம்பிரான் வடநாடு ஏகிச் சிவ தருமங்கள் செய்ய ஆணையிடுகிறார். அவ்வாணையைச் சிரமேற்று வடநாட்டுக் கேகி, ‘காசிக் கலம்பகம்’ பாடினார். கம்பராமாயணத்தைப் பற்றியும் சைவ சமய இலக்கியங்கள் பற்றியும் வடநாட்டில் சொற்பெருக்காற்றி, இறுதியில் காசியில் முத்தியும் பெற்றார். “குமரகுருபரன் ஒரு மகா கவி. பழைய நூற்களில் அவருடைய வாழ்க்கை வரலாறாகக் கற்பனை செய்திருப்பதுகூட ரசமாயிருக்கிறது. அத் தமிழ்க் கவிஞன் அறிந்த நறுங் கவிதைகளையும், அத் தமிழரின் வாழ்க்கை வரலாற்றையும் இச் சிறுநூல் தமிழ்நாட்டாருக்கு நினை வூட்டுவதாக இருக்கட்டும்” என்று தம் முன்னுரையில் இப்பகுதியைச் சேர்த்ததற்கான காரணத்தைக் பாரதிதாசன் கூறுகிறார். இக் காப்பியம் கதையோட்டம், கற்பனை, சொல்நயம், கவிதைச் சுவை, எளிய இனிய நடை, ஆகிய பலவற்றிலும் சிறப்பாக அமைந் துள்ளது. எதிர்பாராத முத்தம் என்னும் இக்காப்பியம் பின்னர் பொன்முடி என்ற பெயரில் திரைப்படமானது. திரைப்படத்தில் துன்பியல் கதை இன்பியல் கதையாக மாற்றப்பட்டு விட்டது. சுருக்கமாகக் கூறினால் பாரதிதாசனது எதிர்பாராத முத்தம் தமிழ்ப்பண்பு ஒளிர்ந்திடும் மலர்ப்பூங்கா, கவிதைச் சோலை, நயம் செறிந்த நறுங்கவிதைத் தடாகம் என்றுதான் கூற வேண்டும். பாண்டியன் பரிசு பாண்டியன் பரிசு அரச வரலாற்றுப் பின்னணியில் பின்னப்பட்டு, ஆரவாரமிக்க போர்ச்சூழல் நிறைந்த அமைப்பில் செல்வது. இதில் வீரமும் காதலும் சமுதாய நோக்கும் நன்கு காட்டப்படுகின்றன. காப்பியச் சுவை நிறைந்து விளங்குவது. கதிர் நாட்டரசன் மனைவி கண்ணுக்கினியாளின் அண்ணன் நரிக்கண்ணன் - வேழ நாட்டுப் படைத்தலைவன் - கதிர்நாடு போருக்கு ஆயத்தமில்லா வேளையில் வேழ மன்னனிடம் பொய்யினை மூட்டிப் போர் தொடங்குவதற்குக் காரணமாக இருக்கின்றான். போரில் நரிக் கண்ணன் கதிர்நாட்டரசன் கதிரைவேலைக் கொன்று, தன் தங்கையையும் கொன்றுவிடுகிறான். நாட்டிளவரசி அன்னத்தைக் கொல்ல முயலும் வேளையில் அவள் ஆத்தாக் கிழவியால் காப்பாற்றப்படுகிறாள். இதற் கிடையில் கதிர்நாட்டு அரசுரிமையான பாண்டியன் பரிசு காணாமல் போய்விடுகிறது. அதனைத் தேடிக் கொணர்வோரை மணம் முடித்துக் கொள்வதாக அன்னம் சூளுரைக்கின்றாள். வேழ மன்னன் அன்னத்தின் சூளுரையை நாட்டுக்கு அறிவிக்கிறான். நரிக்கண்ணனும் அவனைச் சூழ்ந்தோரும் பல சூழ்ச்சிகளுக்கிடையே அன்னத்தைச் சார்ந்தோரால் கொல்லப்படுகின்றனர். அன்னத்தின் நெஞ்சைக் கவர்ந்த வேலன் - அவளின் செவிலித் தாயான ஆத்தாக் கிழவியின் மகன் - பேழையைக் கொணர்ந்து அன்னத்திடம் அளிக்கிறான். அன்னம் - வேலன் திருமணம் இனிது நடைபெறுகிறது. 361 எண்சீர் விருத்தங்களால் ‘பாண்டியன் பரிசு’ வெளிவந்துள்ளது. ஓரியலுக்கு ஒரு பாடல் முதல் இருபத்திரண்டு பாடல்வரை அமைந் துள்ளது. இந்நூல் 94 இயல்களைக் கொண்டது. ஒவ்வோரியலிலும் அந்தந்தப் பிரிவுக் கேற்ற தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இருகாய், இருமா, இருகாய் இருமா கொண்ட எண்சீர் விருத்தம் எனும் மண்டில யாப்பால் கொண்டியங்குவது. 1444 அடிகள் கொண்டது. “எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும்” என்னும் கவிஞரின் கருத்துக் கேற்ப இக்காவியம் அமைந்துள்ளது. “இது ஒரு நேர்த்தியான கதை. காவியச் சுவையுடன் கதைச்சுவையும் போட்டி போடுகிறது” என்று முல்லை முத்தையாவும், “பாண்டியன் பரிசு - இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் என்றால் மிகையாகாது” என்று திரு. கலைச்செல்வன் தன் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற நூலிலும், “பாண்டியன் பரிசு படிப்போருக்கு எளிய இனிய கவிதை படித்து மகிழ்ந்தோம். பல தெரிந்தோம் என்னும் மனநிறைவு உண்டு” என்று சாலய் இளந்திரையன் தன்னுடைய புரட்சிக் கவிஞர் கவிதை வளம் என்ற நூலில் கூறியுள்ள கருத்துகளும் இந்நூலின் மேன்மையைக் எடுத்துக் காட்டுவன. “கவிஞர் காவியங்களுள் இதுவே சிறந்த காவிய அமைப்பும் பழமையை ஒட்டிய பாணியும் உடையது” என்று மு.கோவிந்தராசனும், “எல்லோர்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்பது போன்ற கருத்துப் பிழம்புகளால் நிமிர்ந்து நிற்பது பாண்டியன் பரிசு” என்று சாலய் இளந்திரையன் தன்னுடைய புதிய தமிழ்க் கவிதை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். - 1978ஆம் ஆண்டு முனைவர் ச.சு. இளங்கோஅவர்களால் எழுதப்பட்ட “கதைப் பாடல்கள் ஓர் ஆய்வு” எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன் ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xvi 1. எதிர்பாராத முத்தம் 1 2. பாண்டியன் பரிசு 79 எதிர்பாராத முத்தம் ஆக்கியோன் முன்னுரை சுமார் 200 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களில், குமரகுருபரர் ஒரு மகாகவி. பழய நூற்களில் அவருடைய வாழ்க்கை வரலாறாகக் கற்பனை செய்திருப்பதுகூட, ரசமாயிருக்கிறது. அத்தமிழ்க் கவிஞர் அளித்த நறுங்கவிதைகளையும், அத் தமிழரின் வாழ்க்கை வரலாற்றையும், இச்சிறுநூல் தமிழ்நாட்டா ருக்கு நினைவுறுத்துவதாக இருக்கட்டும். தமிழ்நாடு முன்போலில்லை; தமிழர்கள் தமிழ்க் கவிதைகள் கேட்கிறார்கள்; ரசிக்கிறார்கள். வேறு கடமையேற்றுள்ள நான், பாட்டு எழுத ஆசைப்பட்டதற்குக் காரணமும் இதுதான். ஆனால், தமிழ்நாட்டார் கேட்பது வேறு; என் எழுத்துச் சுவை யற்றது என்பது எனக்கு நன்றாய்த் தெரியும்; கவிதை வழங்கும்படி, கவிஞர்க்கு இதை எழுதுவதன் மூலம் நான் விண்ணப்பம் செய்கிறேன். இந்நூலில் காணப்படும் “தொடுக்கும் கடவுள்” என்ற இனிய பாடல், குமரகுருபரர் அருள். “ஐந்து பேரறிவும்” என்பது திருவிருத்தம். இதையும் வெளியிடத் துணிந்து, எனக்கு ஆதரவு காட்டும் “வானம்பாடி” நூற்பதிப்புக் கழகத்தார்க்கு, எனது நன்றி உரியது. - பாரதிதாஸன் கவிஞர் கழறுகிறார் “எதிர்பாராத முத்தம்” காஞ்சி வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் - டி.பி.எஸ். பொன்னப்பன் அவர்களால் முதலில் வெளியிடப் பெற்றது. அது செலவான பின் கேட்பார்க்கு இல்லை என்னும்படி ஆயிற்று. தாள் கிடைப்பது அரிதானமையால், முல்லைப் பதிப்பகத்தார் இன்றேனும் வெளியிட்டமை மகிழ்ச்சிக்குரியதே. அவர்கட்கு நன்றி. புதுச்சேரி, - பாரதிதாசன் 17.09.1944. வெளியிடுவோர் முன்னுரை கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகள் தமிழர்களை, இன்றைய நிலையினின்று அநாயசமாக மேனிலைக்குத் தூக்கிச் செல்லும் சக்தியுடையவை. ‘கலை’ காலத்தின் நிலையை, அழகை, தேவையை, சித்தரித்த சித்திரம் - பாரதிதாஸன் அவர்களின் கவிதைகளின் வரி ஒவ்வொன்றும் அப்படி. தமிழ் முன்னேற்றமே தமிழரின் முன்னேற்றமாகும். தமிழா லன்றித் தமிழரை முன்னேற்ற மடைவிப்பது என்பது, கடைக்கா லில்லாது சுவர் நிலைக்கும் என்று கருதுவதாகும். இன்று இனிய நடையில், தமிழர்கள் எளிதில் சுவைக்கத்தக்க கற்பனை சகிதம் கவிதைகளை வளர்ப்பது, தமிழ்நாட்டை நேரான வழியில் முன்னேற்றுவிப்பதாகும். பாரதிதாஸன் அவர்களின் கவிதைகள், கவிதைகளால் அவ்வக் காலத்தில் வேண்டப்படும் பிரயோஜனத்தை யளிப்பன. அளித்தன. அளிக்கின்றன. நம் காதில் கேட்கிறது கணீரென்று, பாரதிதாஸன் அவர்களை நோக்கித் தமிழ்நாடு “உங்கள் கவிதை தேவை” என்று கேட்கும் பேரொலி; கொஞ்சமாக அன்று; மெதுவாக அன்று; விரைவாக; அதிகமாக. இந்த - நமது உணர்வின் விளைவே, வானம்பாடி நூற் பதிப்புக் கழகம் என்போம். ‘வானம்பாடி’ முதலில் கவிஞர் எழுதித் தந்த “எதிர்பாராத முத்தம்” என்னும் நூலை வெளியிட்டிருக்கிறது. நாம் தமிழர்களைத் தமிழர் தலைவர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம். வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்திற்கு ஆதரவு தரும்படி. காஞ்சீபுரம், டி.பி.எஸ். பொன்னப்பன், 2.3.41 வானம்பாடி நூற்பதிப்புக் கழகம். முன்னுரை தோழர் பாரதிதாசன் அவர்களின் “எதிர்பாராத முத்தம்” எனக்கு இன்பத்தையே அளித்தது. கதைப் போக்கும் மனதைக் கவர்ந்தது; கவிப்போக்கும் மனதைக் கவர்ந்தது. இதில் அமைந்துள்ள பாக்கள் பண்டை இலக்கண முறையைப் பின்பற்றிய, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கலிவெண்பா ஆகிய வைகளே. பஃறொடை வெண்பாவென்று ஆசிரியரால் குறிக்கப் பட்டுள்ள வெண்பாத் தளை பொருந்திய பாட்டும் உண்டு. பஃறொடை வெண்பாவுக்குத், தொல்காப்பியத்தில் நெடு வெண்பாட்டு என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பன்னிரண்டு அடிதான் எல்லையென்றும் சொல்லப்பட்டுள்ளது. பிற்கால இலக்கணமாகிய காரிகையில், பஃறொடை வெண்பா வுக்கு அடி வரையறை கூறப்படவில்லை. நெடுவெண் பாட்டும், பஃறொடை வெண்பாவும் ஒன்றென்று உரையாசிரியர் கருதினர். ஆதலால், பஃறொடை வெண்பாவுக்கும் பன்னிரண்டு அடிகளையே எல்லையாகக் கொண்டனர் உரையாசிரியர்கள். காலஞ்சென்ற கவி பாரதியாரின் குயிற் பாட்டு, வெண்பா வின் தளையமைந்த பாட்டால் ஆகியது. பாரதிதாசன் அவர்களின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும், வெண்பாத்தளை பொருந்திய பாட்டே. ஆனால், பன்னிரண்டு அடிகளுக்கு மேற்பட்ட பழய பஃறொடை வெண்பா ஒன்றுமில்லை. ஆதலின், தோழர் பாரதிதாசன் அவர்களால் குறிக்கப்பட்ட பஃறொடை வெண்பாவென்பதை “வெண்டளைப் பாட்டு” என்னும் புதிய பெயரால் அழைக்கலாம் என்று கருதுகிறேன். இந் நூற்கதையின் பிற்பகுதி, குமரகுருபர சுவாமிகளின் வரலாற்றைக் குறிப்பதாக இருக்கிறது. ஆரியர்களின் உயிர்க் கொலை வேள்வியை எதிர்ப்பது, தென்னாட்டுச் சைவ சமயத்தின் கொள்கை என்னும் கருத்தை உட்கொண்டிருக்கிறது. ஆயினும் பிற்பகுதி, பழய புராணம்போல், மதத் தொடர் புடைய தாக இருக்கும்படி, இந்நூலை அமைத்த தோழரின் கருத்தை நம்மால் உணரமுடியவில்லை. ஆரியர்கள் கொலை வேள்வி செய்யும் நாகரிக முடையவர்கள்; தமிழர் உயிர்களிடம் இரக்கம் காட்டும் நாகரிக முடையவர்கள் என்னும் கருத்தை வலியுறுத்தும் நோக்கமுடன் அக்கதை இணைக்கப் பட்டிருக்கு மாயின் அதை நாம் பாராட்டுகிறோம். தோழர் பாரதிதாசன் கவியின் பெருமை, தமிழ்நாடு அறிந்தது; தமிழ்மக்களால் பாராட்டப்படுவது; தமிழ்ப் புலவர்களாற் போற்றப் படுவது. இந்நூலும் தமிழ் மக்களால் ஆர்வமுடன் சூதரிக்கப்படும் என்பதில் நமக்கு ஐயுறவில்லை. ஈரோடு 14.3.41 - சாமி. சிதம்பரன் ஆசிரியர் பாரதிதாஸன் அவர்கள் மாணவர் தமிழாசிரியர் சிவப்பிரகாசம் அவர்கள் கூறிய சிறப்புரை குமரகுருபரர், முருகன் அருளால் ஊமை நிலை நீங்கப்பெற்ற தாகவும், அவர் அநேக துதி நூற்களை இயற்றிப் பின் ஞான குருவாகத் தருமபுரம் பண்டார சந்நிதியை அடைந்து ஞானோப தேசம் செய்யும் படி வேண்டப் பண்டார சந்நிதி சிதம்பரம் போய்வரக் கட்டளையிட, அதன்படி குருபரர் சிதம்பரம் சென்று சிறப்புடன் திரும்பினார் என்றும், பிறகும் சந்நிதி, வடக்கே போய்க் கடவுட்பணி செய்து வரக் கட்டளை யிட்டார் என்றும் பழைய வரலாறு விரிவாகக் கூறும். ஆயினும் அவ்வரலாற்றில், பண்டார சந்நிதி, குருபரரை ஏன் வடநாட்டுக்கு அனுப்பினார் என்பதற்குக் காரணம் ஒன்றுமே கூறப் பட்டில்லை. ஆசிரியர் பாரதிதாஸனவர்கள் எழுதியுள்ள இந்த “எதிர்பாராத முத்தம்” அதற்குத் தகுந்த காரணத்தைக் கூறுவதாக இருக்கிறது. பூங்கோதை நினைவாகவே இருக்கிறான் பொன்முடி என்ற தென்னாட்டு முத்து வணிகன் மகன். இதற்காகப், பொன்முடியின் தந்தையாகிய மாநாய்கன், பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பி விடுகிறான் பொதிமாட்டுக்காரருடன் முத்து விற்று வர. பூங்கோதைக்கு அவன் பிரிவு பொறுக்கவில்லை. அவளும், சின்னாள் செல்ல, பொதிமாட்டுக்காரருடன் போகிறாள் பொன் முடியைக் காண. பொன்முடி முதலிய தமிழர்களை, வடநாட்டு ஆரியர் யாகத்துக்குப் பொருளுதவி கோரப், பொன்முடி யாகத்தை இழித்துக் கூறி மறுக்கிறான். இதற்காக ஆரியப் பெரியார்கள் தமிழர்களைக் கொலை செய்தும், அவர் பொருளைக் கொள்ளை கொண்டும் போகிறார்கள். தமிழர் சிலருடன் பொன்முடி தப்பித்துக் கொண்டு வருகிறான். அப்போது, தன்னைத் தேடிவரும் பூங் கோதையை எதிர் பாராவிதமாகச் சந்தித்து, அவளைத் தாவுகிறான் ஆவல் மிகுதியால். பொன்முடியைக் கொல்லத் தொடர்ந்துவரும் ஆரிய வீரர், மரத்தின் மறைவிலிருந்து வீசிய கத்தியால், பொன் முடியின் உடல், தலையி னின்றும் பிரிக்கப்படுகிறது. சாகிறான் அவன்; அப் பூங்கோதையும் தன் காதலனுக்காகச் சாகிறாள்! இந்தச் செய்திகள் பெற்றோருக்கு எட்ட, அவர்கள் கதறித், தருமபுரம் பண்டார சந்நிதியிடம் விண்ணப்பிக்கிறார்கள் ஓர் பக்கம் உட்கார்ந்து அழுதபடி. பண்டார சந்நிதியோ, குருபரர் மகத்துவத்தைக் கதைக்கிறார். அந்தக் கதை பெற்றோர்க்கு என்ன ஆறுதல் அளித்தது? ஒன்றுமில்லை அழுதுகொண்டே சென்ற நாய்கன் மார்கள் அழுதுகொண்டே திரும்பினார்கள் அவ்வளவுதான். ஆசிரியர் பாரதிதாஸனவர்கள் எதிர்பாரா முத்தத்தில், நகைச்சுவை அநேக இடத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆயினும் அவை, வெளிப்படையானவை. பண்டார சந்நிதி உபந் நியாசத்தின் முடிவு வரைக்கும், நாய்கன்மார் வார்த்தை ஒன்றும் பேசியதாகவே யில்லை. ஆனால், அழுதுகொண்டே வீடு திரும்பு கிறார்கள். இங்குதான் நகைச்சுவை, இலை - மறைவாக இருந்து கொண்டு, மணத்தை மட்டும் வீசுகிறது! காதத்துக்கொரு கல்நட்டுக் காஞ்சியின் தூரம் எண்பிக்கப் படுகிறது. அதுபோலப், பெரியதொரு வரலாற்றை - அங்கங்குள்ள சம்பவத்தைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதன் மூலம், கதையைப் புலப்படுத்தி விடுகிறார் நூலாசிரியர். அதிலும் கற்பனை, சொல் நயம், கவிதைச் சுவை எளியநடையில் கலகலவென்று பெருக்கெடுக்கின்றன. ஆசிரியர் பாரதிதாஸன் அவர்களின் கவிதைகளால் குறிக்கப் படும் கவிதைகளில் ஒரு புதுமை என்னவெனில், கதையில் ஓர் ஓட்டம்! ஒவ்வொரு வார்த்தையும் இன்றியமை யாதது! ஒரு தொடரையேனும் கவனியாது விடுவதற்கில்லை. விட்டால், கதைச் சுவையைப் பறிகொடுத்தாக வேண்டும்! ஒரு செய்யுளையும் புறக்கணிக்க முடிவதில்லை. புறக்கணித் தால், அந் நூற்பயனையே இழந்தாக வேண்டும். இந்நூலில் ஐந்து முத்தங்கள் குறிக்கிறார் ஆசிரியர். ஐந்தும் ஐந்துவிதமாக; அழகாக! இனிமையாக! காதலன் காதலி பற்றிய வர்ணனை, வியப்புத் தருகின்றன! குப்பையில் கிடந்த எளிய பொருளால் வியத்தகு பயன்பொருள் ஆக்கிக் காட்டுதல்போல், சாதாரண வார்த்தையால் பெரியதோர் உணர்வை - இன்பத்தை - உண்டாக்குகின்றார் ஆசிரியர் என்பது, இந் நூலைக் கவனிப்பார்க்கு இனிது விளங்கும். தமிழ்ப் புலவர், தம் புலமையைத் தம் உயர்வுக்கும் சம்பா தனைக்கும் மாத்திரம் உபயோகப்படுத்துவதும், நாட்டின் பொதுமையில் பொறுப்பின்றி நடந்துகொள்வதுமான இந்நாளில், ஆசிரியர் பாரதி தாஸன் அவர்கள், தமது செந்தமிழ்ப் புலமையை, இத்தகைய கவிதை நூல் இயற்றுதலில் செலவிடுவது, தமிழரால் மறக்கக் கூடியதல்ல. 28, அம்பலத்தாடு ஐயர் மடத்துவீதி புதுவை 5.4.1941 s. சிவப்பிரகாசம் 1 பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு அகவல் உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வெளியிற் புறப்பட் டதுவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக், கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச், செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும், அப்படி யிப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான், பூங்கொடி என்பவள் நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்! பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில், வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்; புனிதை அவள் பெயர். புனல்மொள்ளு தற்கும் குளிப்ப தற்கும் சென்றார் குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! 2 நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை! அறுசீர் விருத்தம் வள்ளியூர்த் தென்புறத்து வனசப் பூம் பொய்கை தன்னில் வெள்ளநீர் தளும்ப, வெள்ள மேலெலாம் முகங்கள், கண்கள்; எள்ளுப் பூ நாசி, கைகள் எழிலொடு மிதக்கப் பெண்கள் தெள்ளு நீராடு கின்றார், சிரிக்கின்றார்! கூவு கின்றார்! பச்சிலைப் பொய்கை யான நீலவான் பரப்பில் தோன்றும் கச்சித முகங்க ளென்னும் கறையிலா நிலாக் கூட்டத்தை, அச்சம யம்கி ழக்குச் சூரியன் அறிந்து நாணி, உச்சி ஏறாது நின்றே ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்! படிகத்துப் பதுமை போன்றாள் நீந்துவாள் ஒருத்தி! பாங்காய் வடிகட்டும் அமுதப் பாட்டை வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்! கடிமலர் மீது மற்றோர் கைம்மலர் வைத்துக் கிள்ளி, மடி சேர்ப் பாள்மற் றொருத்தி! வரும் மூழ்கும் ஓர் பொன் மேனி! புனலினை இறைப்பார்! ஆங்கே பொத்தென்று குதிப்பார் நீரில்! “எனைப்பிடி” என்று மூழ்கி இன்னொரு புறம்போய் நிற்பார்! புனைஉடை அவிழ்த்துப், பொய்கைப் புனலினை மறைப்பார் பூத்த இனமலர் அழகு கண்டே ‘இச்’ சென்று முத்தம் ஈவார். மணிப்புனல் பொய்கை தன்னில் மங்கைமார் கண்ணும், வாயும், அணிமூக்கும், கையும் ஆன அழகிய மலரின் காடும், மணமலர்க் காடும் கூடி மகிழ்ச்சியை விளைத்தல் கண்டோம்! அணங்குகள் மலர்கள் என்ற பேதத்தை அங்கே காணோம்! பொய்கையில் மூழ்கிச்,செப்பில் புதுப்புனல் ஏந்திக், காந்த மெய்யினில் ஈர ஆடை விரித்துப், பொன் மணி இழைகள் வெய்யிலை எதிர்க்கப், பெண்கள் இருவர் மூவர்கள் வீதம் கைவீசி மீள லுற்றார் கனிவீசும் சாலை மார்க்கம்! 3 பூங்கோதை - பொன்முடி எண்சீர் விருத்தம் பூங்கோதை வருகின்றாள் புனிதை யோடு! பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து வாங்கப்போ கின்றான்அவ் வழியாய்! வஞ்சி, வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன் பூங்கோதை யா என்று சந்தே கித்தான்! போனவரு ஷம்வரைக்கும் இரண்டு பேரும் வாங்காத பண்டமில்லை; உண்ணும் போது மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்! அத்தான் என் றழைக்காத நேர முண்டா! அத்தை மக ளைப்பிரிவா னாஅப் பிள்ளை! இத்தனையும் இரு குடும்பப் பகையில் மூழ்கி இருந்ததனை அவன்நினைத்தான்; அவள்நி னைத்தாள்! தொத்துகின்ற கிளிக்கெதிரில், அன்னோன் இன்பத் தோளான மணிக்கிளையும் நெருங்கமேலும் அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை அழகியபட் டத்தரசி நெருங்க லானாள்! “என்விழிகள் அவ்விழியைச் சந்திக் குங்கால் என்னவிதம் நடப்ப”தென யோசிப்பாள் பெண்; ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள்! சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சி ரிக்கும்! திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்! “இன்னவர்தாம் என் அத்தான்” என்றே அந்த எழிற்புனி தையிடம்விரல் சுட்டாது சொன்னாள்! பொன்முடியோ முகநிமிர்ந்து வானி லுள்ள புதுமையெலாம் காண்பவன்போல் பூங்கோ தைதன் இன்பமுகம் தனைச்சுவைப்பான் கீழ்க்கண் ணாலே ‘இப்படியா!’ என்று பெரு மூச்செ றிந்தே, “என் பெற்றோர் இவள் பெற்றோர் உறவுநீங்கி இருப்பதனால் இவளென்னை வெறுப்பா ளோ, நான் முன்னிருந்த உறவுதனைத் தொடங்க லாமோ முடியாதோ” என்று பல எண்ணி நைவான். எதிர்ப்பட்டார்! அவன் பார்த்தான்; அவளும் பார்த்தாள் இருமுகமும் வரிவடிவு கலங்கிப், பின்னர், முதல்இருந்த நிலைக்குவர,இதழ்சி லிர்க்க, முல்லைதனைக் காட்டி,உடன் மூடி, மிக்க அதிகரித்த ஒளிவந்து முகம்அ ளாவ, அடிமூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில் அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில் “அத்தான்”,“பூங்கோதை” என்றார்! நின்றார் அங்கே வையம் சிலிர்த்தது. நற் புனிதை யேகி மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று ‘கையலுத்துப்போகு’தென்று மரத்தின் வேர்மேல் கடிதுவைத்தாள்;“அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன்” என்றாள். அன்னோன், வெடுக்கென்று தான் அணைத்தான்“விடாதீர்” என்றாள் கை இரண்டும் மெய்யிறுக, இதழ்நி லத்தில் கனஉதட்டை ஊன்றினான், விதைத்தான் முத்தம்! உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம் ஏறக், கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில் கடையுகமட்டும் பொருந்திக் கிடப்ப தென்று நிச்சயித்த மறுகணத்தில், பிரிய நேர்ந்த நிலைநினைத்தார்;“அத்தான்”என் றழுதாள்! அன்னோன் “வைச்சேன்உன் மேல் உயிரைச் சுமந்து போவாய்! வரும்என்றன் தேகம்.இனிப் பிரியா” தென்றான்! “நீர்மொண்டு செல்லுபவர் நெருங்கு கின்றார்; நினைப்பாக நாளைவா” என்று சொன்னான். காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக் காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்பாள்! ஓரவிழி சிவப்படைய, அன்னோன் பெண்ணின் ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்! “தூரம்” எனும் ஒருபாவி இடையில் வந்தான், துடித்ததவர் இருநெஞ்சம்! இதுதான் லோகம்! 4 அவன் நினைவு அகவல் அன்று நடுப்பகல் உணவை அருந்தப் பொன்முடி மறந்து போனான்! மாலையில் கடைமேல் இருந்தான்; கணக்கு வரைதல், இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல், வணிகர் கொண்டு வந்த முத்தைக் குணம்ஆ ராய்ந்து கொள்முதல் செய்தல், பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து வரின், அதைக் கருத்தொடு வாங்க முயலுதல், ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய் மோனத் திருந்தோன் முடிவு செய்து, மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி வந்தான் வீடு! வந்தார் தந்தை! தெருவின் திண்ணயிற் குந்தி இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே! பஃறொடை வெண்பா “விற்றுமுதல் என்ன? விலைக்கு வந்த முத்திலே குற்றமில் லையே? நீ கணக்குக் குறித்தாயா?” என்று வினவினான் தந்தை. இனியமகன், “ஒன்றும்நான் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்க வில்லை; அந்தி வியாபா ரம்அது என்னமோ மிகவும் மந்தமாயிற்”றென்றான். மானநாய்கன் வருந்திக், “காலையிலே நீ போய்க் கடையைத் திற! நான் அவ் வேலனிடம் செல்கின்றேன்” என்று விளம்பினான். “நான்போய் வருகின்றேன் அப்பா! நடைச்சிரமம் ஏன்தங்கட்” கென்றான் இனிதாகப் பொன்முடியான்! “இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்; நான் சென்றால் நலமன்றோ” என்றுரைத்தான் சீமான்! “தயவுசெய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்; வெயிலுக்கு முன்நான் போய் வீடுவரு வேன்” என்றான். வேலன்முத் துக்கொடுக்க வேண்டும்; அதுவன்றிச் சோலையப்பன் என்னைவரச் சொல்லி யிருக்கின்றான்; ஆதலினால், நான் நாளை போவ தவசியம். நீ ஏதும் தடுக்காதே” என்று முடித்தான் தந்தை! ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை! அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்! அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள் நச்சுண்ணச் சென்றான் நலிந்து. 5 பண்டாரத் தூது அறுசீர் விருத்தம் பகலவன் உதிப்ப தன்முன் பண்டாரம் பூக்கொ ணர்ந்தான். புகலுவான் அவனி டத்தில் பொன்முடி: “ஐயா, நீவிர் சகலர்க்கும் வீடு வீடாய்ப் பூக்கட்டித் தருகின்றீர்கள்; மகரவீ தியிலே உள்ள மறை நாய்கன் வீடும் உண்டோ? மறை நாய்கன் பெற்ற பெண்ணாள், மயில்போலும் சாயல் கொண்டாள், நிறை மதி முகத்தாள்; கண்கள் நீலம் போல் பூத் திருக்கும்; பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்; பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்; அறையும் அவ் வணங்கை நீவிர் அறிவிரா? அறிவிராயின், சேதியொன் றுரைப்பேன் யார்க்கும் தெரியாமல், அதனை அந்தக் கோதைபால் நீவிர் சென்று கூறிட ஒப்பு வீரா? காதை என் முகத்தில் சாய்ப்பீர்! கையினில் வராகன் பத்துப் போதுமா?” என்று மெல்லப் பொன்முடி புலம்பிக் கேட்டான்! “உன் மாமன் மறைநாய்கன் தான்! அவன் மகள் ஒருத்தி உண்டு; தென்னம் பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக் காரி! இன்னும் கேள்அடை யாளத்தை; இடை, வஞ்சிக் கொடிபோல் அச்சம்! நன்றாகத் தெரியும்! நானும் பூ அளிப் பதும் உண்” டென்றான். “அப்பாவும் மாம னாரும் பூனையும் எலியும் ஆவார்; அப் பெண்ணும் நானும் மெய்யாய் ஆவியும் உடலும் ஆனோம்! செப்பேந்தி அவள் துறைக்குச் செல்லுங்கால், சென்று காண ஒப்பினேன்! கடைக்குப் போக உத்தர விட்டார் தந்தை! இமைநோக என்னை நோக்கி இருப்பாள் கண் திருப்ப மாட்டாள் சுமைக்குடம் தூக்கி அந்தச் சுடர்க்கொடி காத்திருந்தால், ‘நமக் கென்ன என்றி ருத்தல் ஞாயமா?’ நீவிர் சென்றே அமைவில் என்அசந் தர்ப்பத்தை அவளிடம் நன்றாய்ச் சொல்லி சந்திக்க வேறு நேரம் தயவு செய் துரைக்கக் கேட்டு வந்திட்டால் போதும்! என்னைக் கடையிலே வந்து பாரும்! சிந்தையில் தெரிவாள்; கையால் தீண்டுங்கால் உருவம் மாறி அந்தரம் மறைவாள்; கூவி அழும்போதும் அதையே செய்வாள். வையத்தில் ஆண்டு நூறு வாழ நான் எண்ணி னாலும், தையலை இராத்தி ரிக்குள் சந்திக்க வில்லை யானால், மெய்யெங்கே? உயிர்தா னெங்கே? வெடுக்கென்று பிரிந்து போகும்! “உய்யவா? ஒழியவா?” என் றுசாவியே வருவீர் என்றான்! பண்டாரம் ஒப்பிச் சென்றான். பொன்முடி பரிவாய்ப் பின்னும் கண்டபூங் கோதை யென்னும் கவிதையே நினைப்பாய், அன்னாள் தண்டைக் கால்நடை நினைந்து தான் அதுபோல் நடந்தும், ஒண்டொடி சிரிப்பை எண்ணி உதடு பூத்தும் கிடப்பான்! வலிய அங் கணைத்த தெண்ணி மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால் ஒலி கடல் நீலப் பெட்டி உடைத்தெ ழுந்தது கதிர்தான்! பல பல என விடிந்த படியினால், வழக்க மாகப் புலம் நோக்கப் பசுக்கள் போகப் பொன்முடி கடைக்குப் போனான்! 6 நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு! கலிவெண்பா நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் -சோலை உதிர் பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில், இரு சீவன்கள் மட்டும் திறந்தவிழி -ஆவலினால் மூடா திருந்தனவாம்! முன்னறையில் பொன்முடியான் ஆடா தெழுந்தான் அவள்நினைப்பால்!-ஓடைக்குள் காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்உணர்வால் ஏலா இருளில் வழிதடவி-மேல் ஏகி, வீட்டுத் தெருக்கதவை மெல்ல திறந்திருண்ட காட்டில் இரு கண்ணில்லான் போதல்போல்-பேட்டை அகன்றுபோய், அன்னவளின் வீட்டினது தோட்டம் புகும்வாசல் என்று புகுந்தான்-புகும் தருணம் வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல், ஆணழகன் என்றெண்ணி“அத்தான்” என்றாள் நங்கை! ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத் தாங்கா மகிழ்ச்சியுடன் தான் பிடித்துப்- பூங்கொடியை மாரோ டணைத்து, மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு முத்தம் பறித்தான்! அந்-நேரத்தில், பின் வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன் பொன்முடியை! மங்கை புலன் துடிக்க-அன்பில்லா ஆட்கள் சிலர் வந்தார். புன்னை அடிமரத்தில் போட்டிறுகக் கட்டினார் பொன்முடியை! -நீட்டு மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில் நிலாமுகத்தை ஒற்றி, நிமிர்ந்து,-கலாபமயில் “அப்பா அடிக்காதீர்” என்றழுதாள். அவ்வமுதம் ஒப்பாளைத், தள்ளி உதைக்கலுற்றான்- அப்போது வந்து நின்ற தாயான வஞ்சிவடி வென்பாள் சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள்; -சுந்தரியோ அன்னையின் கைவிலக்கி, ஆணழகிடம் சேர்ந்தே, “என்னை அடியுங்கள்” என்றுரைத்துச் -சின்னவிழி முத்தாரம் பாய்ச்ச, உதட்டின் முனைநடுங்க வித்தார லோகம் விலவிலக்க-அத்தானின் பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள். பின்னும் அவன் கோபம் பெரிதாகி-அன்னார் இருவரையும் இன்னற் படுத்திப், பிரித்தே ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித்,-திருவனைய செல்விதனை வீட்டிற் செலுத்தி, மறைநாய்கன் இல்லத்துட் சென்றான். இவன் செயலை-வல்லிருளும் கண்டு சிரித்ததுபோல், காலை அரும்பிற்று! “வண்டு விழிநீர் வடித்தாளே!-அண்டையில்என் துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ, இன்ப உடலில் அடியேற்றாளே!-அன்புள்ள காதலிக் கின்னும் என்ன கஷ்டம் விளைப்பாரோ! மாது புவிவெறுத்து மாய்வாளோ!- தீதெல்லாம் என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ!” என்று,தன் துன்பத்தை எண்ணாமல்-அன்னாள் நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான் உலராத காயங்க ளோடு. 7 பண்டாரத்தைக் கண்டாள் தத்தை அறுசீர் விருத்தம் பண்டாரம் இரண்டு நாளாய்ப் பூங்கோதை தன்னைப் பார்க்கத் திண்டாடிப் போனான்! அந்தச் செல்வியும் அவ்வாறே யாம்! வண்டான விழியால், அன்னாள் சன்னலின் வழியாய்ப் பார்த்துக் கொண்டி ருந்தாள். பண்டாரம் குறட்டினிற் போதல் பார்த்தாள். இருமினாள். திரும்பிப் பார்த்தான்! தெருச்சன்னல் உள்ளிருந்தே, ஒருசெந்தா மரைஇ தழ்தான் தென்றலால் உதறல் போல, வருக என் றழைத்த கையை மங்கை கைஎன்ற றிந்தான். “பொருளை நீர் கொள்க இந்தத் திருமுகம் புனிதர்க்” கென்றே பகர்ந்தனள், போவீர் போவீர் எனச் சொல்லிப் பறந்தாள்! அன்னோன், மிகுந்த சந் தோஷத் தோடு “மெல்லியே என்ன சேதி? புகலுவாய்” என்று கேட்டான் புகலுவ தொன்று மில்லை அகன்று போ வீர்; எனக்கே பாதுகாப் பதிகம்” என்றாள். “சரிசரி ஒன்றே ஒன்று தாய் தந்தைமார் உன் மீது பரிவுடன் இருக்கின் றாரா? பகை யென்றே நினைக்கின் றாரா? தெரியச் சொல்” என்றான், அன்னாள் “சீக்கிரம் போவீர்” என்றாள். “வரும்படி சொல்ல வா உன் மச்சானை” என்று கேட்டான். “விவரமாய் எழுதியுள்ளேன் விரைவினிற் போவீர்” என்றாள். “அவரங்கே இல்லா விட்டால் ஆரிடம் கொடுப்ப” தென்றான். “தவறாமல் அவரைத் தேடித் தருவதுன் கடமை” என்றாள். “கவலையே உனக்கு வேண்டாம் நான்உனைக் காப்பேன். மேலும் ... ... என்றின்னும் தொடர்ந்தான். மங்கை “என் அன்னை வருவா ளையா முன்னர் நீர் போதல் வேண்டும்” என்று தன்முகம் சுருக்கிப் பின்புறம் திரும்பிப் பார்த்துப் பேதையும் நடுங்க லுற்றாள். “கன்னத்தில் என்ன” என்றான். “காயம்” என்றுரைத்தாள் மங்கை. “தக்கதோர் மருந்துண்” டென்றான். “சரிசரி போவீர்” என்றாள். அக்கணம் திரும்பினாள்; பின் விரல் நொடித் தவளைக் கூவிப், “பக்குவ மாய் நடக்க வேண்டும் நீ” என்றான். பாவை, திக்கென்று தீப்பி டித்த முகங்காட்டச் சென்றொ ழிந்தான். 8 அவள் எழுதிய திருமுகம் அறுசீர் விருத்தம் பொன்முடி கடையிற் குந்திப் புறத்தொழில் ஒன்று மின்றித், தன் மனத் துட்புறத்தில் தகதக என ஒளிக்கும் மின்னலின் கொடிநி கர்த்த விசித்திரப் பூங்கோதைபால் ஒன்றுபட் டிருந்தான்! கண்ணில் ஒளியுண்டு; பார்வை யில்லை! கணக்கர்கள் அங்கோர் பக்கம் கடை வேலை பார்த்திருந்தார். பணம்பெற்ற சந்தோ ஷத்தால் பண்டாரம் விரைந்து வந்தே மணிக்கொடி இடையாள் தந்த திருமுகம் தந்தான்; வாங்கித், தணலிலே நின்றிருப்போர் தண்ணீரில் தாவு தல்போல், எழுத்தினை விழிகள் தாவ இதயத்தால் வாசிக்கின்றான்: “பழத்தோட்டம் அங்கே; தீராப் பசிகாரி இவ்வி டத்தில்! அழத்துக்கம் வரும்ப டிக்கே புன்னையில் உம்மைக் கட்டிப் புழுத்துடி துடிப்பதைப்போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ! புன்னையைப் பார்க்குந் தோறும் புலனெலாம் துடிக்க லானேன்; அன்னையை, வீட்டி லுள்ள ஆட்களை, அழைத்துத் தந்தை என்னையே காவல் காக்க ஏற்பாடு செய்து விட்டார்! என்அறை தெருப்பக் கத்தில் இருப்பது! நானோர் கைதி! அத்தான், என் ஆவி உங்கள் அடைக்கலம்! நீர் மறந்தால் செத்தேன்! இஃதுண்மை, இந்தச் செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் காணேன்! சாத்திரம் கூறுகின்ற பத்தான திசைப ரந்த பரம் பொருள் உயர்வென் கின்றார். அப்பொருள் உயிர்க்கு லத்தின் பேரின்பம் ஆவ தென்று செப்புவார் பெரியார் யாரும் தினந்தோறும் கேட்கின் றோமே; அப்பெரியோர்க ளெல்லாம் ‘வெட்கமாய் இருக்கு தத்தான்’ கைப்பிடித் தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார் போலும்! கனவொன்று கண்டேன் இன்று காமாட்சி கோயி லுக்குள் எனதன்னை, தந்தை, நான், இம் மூவரும், எல்லா ரோடும் தொண தொண என்று பாடித் துதிசெய்து நிற்கும் போதில், எனது பின் புறத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்ன விந்தை! காய்ச்சிய இரும்பா யிற்றுக் காதலால் எனது தேகம்! பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல் தந்தையார் பார்க்கும் பார்வை! கூச்சலும் கிளம்ப, மேன்மேல் கும்பலும் சாய்ந்த தாலே, ஓச்சாமல் உம்தோள் என்மேல் உராய்ந்தது சிலிர்த்துப் போனேன்! பார்த்தீரா நமது தூதாம் பண்டாரம் முக அமைப்பை? போர்த்துள்ள துணியைக் கொண்டு முக்காடு போட்டு, மேலே ஓர் துண்டால் கட்டி, மார்பில் சிவலிங்கம் ஊச லாட, நேரினில், விடியு முன்னர் நெடுங்கையில் குடலை தொங்க, வருகின்றார்; முகத்தில் தாடி வாய்ப்பினைக் கவனித்தீரா? பரிவுடன் நீரும் அந்தப் பண்டார வேஷம் போடக் கருதுவி ரா ஏன் அத்தான்? கண்ணெதிர் உம்மைக் காணும் தருணத்தைக் கோரி, என்றன் சன்னலில் இருக்கவா நான்? அன்னையும் தந்தை யாரும் அறையினில் நம்மைப் பற்றி இன்னமும் கட்சி பேசி இருக்கின்றார்; உம்மை அன்று புன்னையில் கட்டிச் செய்த புண்ணியக் காரியத்தை உன்னத மென்று பேசி உவக்கின்றார் வெட்க மின்றி! குளிர்புனல் ஓடை யே, நான் கொதிக்கின்றேன் இவ்விடத்தில்! வெளியினில் வருவ தில்லை; வீட்டினில், கூட்டுக் குள்ளே கிளியெனப் போட்ட டைத்தார் கெடுநினைப் புடைய பெற்றோர்! எளியவள் வணக்கம் ஏற்பீர்! இப்படிக் குப்பூங் கோதை.” 9 நுணுக்க மறியாச் சணப்பன் அறுசீர் விருத்தம் பொன்முடி படித்த பின்னர்ப் புன்சிரிப் போடு சொல்வான்: “இன்றைக்கே இப்போதே ஓர் பொய்த் தாடி எனக்கு வேண்டும். அன்னத னோடு மீசை அசல் உமக்குள்ள தைப்போல் முன்னே நீர் கொண்டு வாரும் முடிவுசொல் வேன்பின்” என்றான். கணக்கர் கள் அவன் சமீபம் கை கட்டி ஏதோ கேட்க வணக்கமாய் நின்றி ருந்தார்; வணிகர்சேய் கணக்கர்க் கஞ்சிச் சணப்பன் பண்டாரத் தின்பால் சங்கதி பேச வில்லை. நுணுக்கத்தை அறியா ஆண்டி பொன்முடி தன்னை நோக்கி, “அவள் ஒரு வெள்ளை நூல்போல் ஆய்விட்டாள்” என்று சொன்னான். “அவுஷதம் கொடுக்க வேண்டும் அடக்” கென்றான் செம்மல்! பின்னும், “கவலை தான் அவள் நோய்” என்று பண்டாரம் கட்ட விழ்த்தான். “கவடில்லை உன்தாய்க்” கென்று கவசம்செய் ததனை மூடிக், கணக்கரே ஏன்நிற் கின்றீர் பின்வந்து காண்பீர் என்றான் கணக்கரும் போக லானார்; கண்ட அப்பண்டா ரந்தான், அணங்குக்கும் உனக்கும் வந்த தவருக்குந் தானே என்றான், குணமிலா ஊர்க் கதைகள் கூறாதீர் என்று செம்மல், பண்டாரந் தனைப்பி டித்துப் பரபர என இ ழுத்துக் கொண்டேபோய்த் தெருவில் விட்டுக், “குறிப்பறி யாமல் நீவிர் குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் கொட்டாதீர்” என்றான். மீண்டும் பண்டாரம், கணக்கர் தம்மைப் பார்ப்பதாய் உள்ளே செல்ல, பொன்முடி “யாரைப் பார்க்கப் போகின்றீர்?” என்று கேட்டான். “ பொன்முடி, உனக்கும் அந்தப் பூங்கோதை தனக்கும், மெய்யாய் ஒன்றும் சம்பந்த மில்லை என்று போய் உரைக்க எண்ணம்” என்று பண்டாரம் சொன்னான். பொன்முடி இடைம றித்தே, பண்டாரம் அறியத் தக்க பக்குவம் வெகுவாய்க் கூறிக் கண்டிடப் பூங்கோதைபால் காலையில் போக எண்ணங் கொண்டிருப் பதையுங் கூறிப், பிறரிடம் கூறி விட்டால் உண்டாகும் தீமை கூறி உணர்த்தினான்! போனான் ஆண்டி. 10 விடியுமுன் துடியிடை எண்சீர் விருத்தம் சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத் தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி தேவைஇல்லை போலும்! இதை நான்என் தாய்க்குச் செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்! பூவுலகப் பெண்டிரெலாம் இக்கா லத்தில் புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம் என்ன! ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்; அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்! விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்ட மானால் வீதியில்நான் இந்நேரம், பண்டா ரம்போல் வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணா ளர்தாம் வருகின்றா ராவென்று பார்ப்பே னன்றோ? துடிதுடித்துப் போகின்றேன்! இரவி லெல்லாம் தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம் ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்? என்றே உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான் தலைக்கோழி கூவிற்று! முதலில் அந்தத் தையல்தான் அதைக்கேட்டாள். எழுந்தி ருந்தாள் கலைக்காத சாத்துபடிச் சிலையைப்போலே கையோடு செம்பில் நீர் ஏந்தி ஓடி, விலக்கினாள் தாழ்தன்னை! வாசல் தன்னை விளக்கினாள் நீர் தெளித்து! வீதி நோக்கக், குலைத்ததொரு நாய் அங்கே! சரிதான் அந்தக் கொக்குவெள்ளை மேல்வேட்டிப் பண்டா ரந்தான் என்றுமனம் பூரித்தாள். திருவி ழாவே எனை மகிழ்ச்சி செய்யநீ வாவா என்று தன்முகத்தைத் திருப்பாமல் பார்த்திருந்தாள். சணப்பனா? குணக்குன்றா? வருவ தென்று தன்உணர்வைத் தான்கேட்டாள்! ஆளன் வந்தான்! தகதகெனக் குதித்தாடும் தனது காலைச் சொன்னபடி கேள்என்றாள். பூரிப் பெல்லாம் துடுக்கடங்கச் செய்துவிட்டாள்.“அத்தான்” என்றாள்? “ ஆம்” என்றான். நடைவீட்டை அடைந்தார்! அன்னை அப்போது பால்கறக்கத் தொடங்கு கின்றாள். தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்ததைப் போல் தமிழ்ச்சுவடிக் கன்னத்தில், இதழ்உ ணர்வை நேமமுறச் செலுத்திநறுங் கவிச்சு வைகள் நெடுமூச்சுக் கொண்டமட்டும் உறிஞ்சி நின்று மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்! பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான். பூங்கோதை குழல் முடித்துப் புகுந்தாள் உள்ளே! நீ முடித்த வேலையென்ன என்றாள் அன்னை! நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தண்ணீர் மொண்டேன்; ஆ முடித்த முடியவிழ்த்துப் பால்க றந்தீர்; அதை முடித்தீர்; நீர்தெளித்து முடித்தேன். இன்னும் ஈ முடித்த தேன்கூட்டை வடித்தல் போலே எனைவருத்தா தீர் என்றாள். அறைக்குள் சென்றாள். 11 அறையிலிருந்து அம்பலத்தில் அகவல் “ ஒருநாள் இரவில் உம்எச மானின் அருமைப் பிள்ளை, ஐயோ பாவம் பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான் பட்டி ருக்குமா? பட்டிருக் காதே” என்று கூறினான் இரிசன் என்பவன் “ என்ன” என்றான் பொன்னன் என்பவன். இரிசன் என்பவன் சொல்லு கின்றான்: “ பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த மாப்பிள்ளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை! சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல் புன்னை அடியில் பூரிப்பு முத்தம் தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான், பிடித்துக் கட்டினார் பிள்ளையாண் டானை! அடித்தார் மிலாரால்! அழைத்தார் என்னை! அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!” என்றதுகேட்ட பொன்னன் உடனே சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து, மான நாய்கன் தன்னிடம் போனான் விரைவில் புகல்வதற்கே! 12 பெற்றோர் பெருந்துயர் பஃறொடை வெண்பா விளக்குவைத்து நாழிகை ஒன்றாயிற்று. மீசை வளைத்துமே லேற்றிஅந்த மான நாய்கன் வந்தான். “ அன்னம்” என்று கூவினான் அன்னோன் மனைவிதனை; “ என்ன”என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள்! “ பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான். செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத் தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி வாரம் இரண்டா யினவாம். இது என்ன கோரம்!” எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்! அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே அச்சமய மாக “ஐயா” எனக்கூவிப், பொன் முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும், புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும், சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள். “ நல்லதுநீ போபொன்னா” என்று நவின்று, பின், மான நாய்கன் தான் மனத்துயரம் தாங்காமல் “ தான தருமங்கள் நான்செய்து பெற்ற பிள்ளை, ஏன்என் றதட்டாமல் இன்றுவரைக் கும்சிறந்த வானமுதம் போல வளர்த்த அருமை மகன், வெள்ளை உடுத்தி வெளியி லொரு வன்சென்றால் கொள்ளிக் கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில் வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு செல்லப்பா என்று சிறக்க வளர்த்த பிள்ளை, கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா” என்று பலவாறு சொல்லி இருக்கையிலே, நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல், பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக் கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக “ நில்லாதே போ” என்றான். “என்னால் நிகழ்ந்ததில்லை. சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன் பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன் வேறென்ன” என்றுரைத்தான் பண்டாரம்! கேட்டான் இதை நாய்கன், “ சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்” கென்றான். “ பத்து வராகன் பணம் கொடுத்த தாகவும் முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும் எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்? அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்! தாடிஒன்று கேட்டான் எனக்கென்ன! தந்ததுண்டு மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி, நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில், மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப் போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல் ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம்! பொய்யல்ல” என்று பண்டாரம் இயம்பவே, நாய்கனவன் நன்று தெரிந்துகொண்டேன் நான் சொல்வதைக் கேட்பாய் என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே; அன்னவனை நானோ அயலூருக்குப் போகச் சொல்ல நினைக்கின்றேன். அன்னவன்பால் சொல்லாதே; செல்லுவாய் என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான் பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப் பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன், அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம் சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன்; நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர் தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும் முத்துவிற்கப் போகின்றார்.நம்பொன் முடியையும் ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்; கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும் எனச் சொன்னான். அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச் சொன்னது நன்றென்றாள் துணிந்து, 13 இல்லையென்பான் தொல்லை அறுசீர் விருத்தம் பொன்முடி கடையி னின்று வீட்டுக்குப் போகும் போது, தன்னெதிர்ப் பண்டா ரத்தைப் பார்த்தனன்“தனியாய் எங்கே சென்றனிர்” என்று கேட்டான். பண்டாரம் செப்பு கின்றான்: “ உன் தந்தை யாரும், நானும் ஒன்றுமே பேசவில்லை. அவளுக்கும் உனக்கு முள்ள அந்தரங் கத்தை யேனும், அவன் உன்னை மரத்தில் கட்டி அடித்ததை யேனும், காதற் கவலையால் கடையை நீதான் கவனியா மையை யேனும், அவர் கேள்விப் படவே இல்லை அதற்கவர் அழவு மில்லை. நாளைக்கே அயலூர்க் குன்னை அனுப்பிடும் நாட்ட மில்லை; கேளப்பா, தாடிச்சேதி கேட்கவும் இல்லை” என்றான். ஆளனாம் பொன்மு டிக்கோ சந்தேகம் அதிக ரிக்கக், கோளனாம் பண்டா ரத்தின் கொடுமையை வெறுத்துச் சென்றான். 14 எதிர்பாராப் பிரிவு எண்சீர் விருத்தம் பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப் போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர்! அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால் ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக், காதல் கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றான். மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம். வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம் மங்கையரும் ஆடவரும் வீதி தோறும், “ இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்” என்றுரைத்து வாழ்த்த லுற்றார்! மாடிமீது சுடர்ஒன்று தோன்றிற்றுப் பொன்மு டிக்கே துயர்ஒன்று தோன்றிற்றுக், கண்ணீர் சிந்த, அடர்கின்ற பூங்கொடியை விழிக்கு றிப்பால், “அன்பேநீ விடைகொடுப்பாய்” என்று கேட்டான் எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும் எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே! அதிர்ந்ததவள் உள்ளந்தான்! பயணஞ் செல்லும் அணிமுத்து வணிகரோடு கண்ட போது, விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப்போக வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந்தன்னைப் புதுமலர்க்கை யால்அழுத்தித், தலையில் மோதிப், புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்! விடைகேட்கும் பொன்முடிக்குத், திடுக்கிட் டஞ்சும் விழிதானா? விழியொழுகும் நீர்தா னா?பின், இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா? எதுவிடை? பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும் கடைவிழியால் மாடியிலே கனிந்தி ருக்கும் கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை உடைந்து விழுவாள். எழுவாள், அழுவாள் கூவி! “உயிரேநீர் பிரிந்தீரா” என்று சோர்வாள்! 15 அழுதிடுவாள் முழுமதியாள் எண்சீர் விருத்தம் “ இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே இப்போதே வந்திடுவார் என்று கூறி வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு, விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை; இருமூன்று மாதவழித் தூரமுள்ள செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்பதுண்டோ? செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி எழுந்தோடும் கிள்ளைபோல். எனது டம்பில் இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் கொழுந்தோடி, எனதுயிரை நிலைக்கச் செய்க! “கோமானே பிரிந்தீரா?” எனத்து டித்தாள். தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று தள்ளாடும்; விழும்; எழும்;பின் னிற்கும்; சாயும். தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்; தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து படுத்திருந்தாள்; அவளெதிரில், கூடந் தன்னில், நாய்கிடந்து குலைப்பதுபோல், கழுதைக் கூட்டம் நாவறளக் கத்துதல் போல், பேச லுற்றார்: வடநாடு செல்கின்றான் அந்தப் பையன். உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா? நான்நினைக்க வில்லை என்று மகிழ்ச்சிகொண்டு திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள். சிரிப்போடும் சினத்தோடும், “இதனைக் கேளாய் வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்! மாளட்டும்!” என்றுரைத்தான் மறைநாய் கன்தான். வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில் வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை, கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் துள்ளி,உடல் துவள்வதன்றித், தந்தை தாயார் துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 16 எந்நாளோ! பஃறொடை வெண்பா பாராது சென்ற பகல், இரவு, நாழிகையின் ஈரா யிரத்தில் ஒன்றும் இல்லை எனும்படிக்குத் தூங்கா திருக்கின்றேன், தொண்ணூறு நாள் கடந்தேன். தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? கண்டவுடன் வாரி அணைத்துக் கண்ணாட்டியென்று புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ? என்புருகிப் போகின்றேன்; ஈடேற்றம் எந்நாளோ? கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு, தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி, ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன? என்று பலவா றழுதாள், பின் அவ்விரவில் சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள், அப் புன்னைதனைக் கோதை கண்டாள், தன்னுட் குலையதிர்ந்தாள், தாங்காத வாதைகண்டாள், ஓடி மரத்தைத் தழுவித், தன் கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக, ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் பொன்னுடம்பு நோகப் புடைக்க, அவரைப் பிணித்த புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்வி ருள்தான்! தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லு டம்பை விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகை நான், ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்! தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? நோயோ உணவு? நாம் நூறாண்டு வாழ்வோமோ? சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! ஏதோ அறியேன் இனி. 17 ஆசைக்கொரு பெண் அறுசீர் விருத்தம் புன்னையில் அவளு டம்பு புதைந்தது! நினைவு சென்று, கன்னலின் சாறு போலக் கலந்தது செம்ம லோடு! சின்னதோர் திருட்டு மாடு சென்றதால், அதைப் பிடித்துப் பொன்னன் தான் ஓட்டி வந்தான்; புன்னையில் கட்டப் போனான். கயிற்றொடு மரத்தைத் தாவும் பொன்னனின் கையில், தொட்டுப் பயிலாத புதிய மேனி பட்டது. சட்டென் றங்கே அயர்கின்ற நாய்கனைப் போய் அழைத்தனன். நாய்கன் வந்தான். மயில்போன்ற மகளைப், புன்னை மரத்தோடு மரமாய்க் கண்டான். குழந்தாய்என் றழைத்தான். வஞ்சி வடிவினைக் கூவி, “அந்தோ, இழந்தாய்நீ உனது பெண்ணை!” என்றனன். வஞ்சி தானும், முழந்தாளிட் டழுது, பெண்ணின் முடிமுதல் அடிவ ரைக்கும் பழஞ்சீவன் உண்டா என்று, பதைப்புடன் தடவிப் பார்த்தாள். “ அருமையாய்ப் பெற்றெ டுத்த ஆசைக்கோர் பெண்ணே!” என்றும், அருவிநீர் கண்ணீ ராக அன்னையும் தந்தையும், “பொற் றிருவிளக் கனையாய்!” என்றும் செப்பியே, அந்தப் புன்னைப் பெருமரப் பட்டை போலப் பெண்ணினைப் பெயர்த்தெ டுத்தார்! கூடத்தில் கிடத்தி னார்கள் கோதையை! அவள் முகத்தில் மூடிய விழியை நோக்கி மொய்த்திருந் தார்கள். அன்னாள் வாடிய முகத்தில், கொஞ்சம் வடிவேறு வருதல் கண்டார். ஆடிற்று வாயிதழ் தான்! அசைந்தன கண்ணி மைகள்! எழில்விழி திறந்தாள். “அத்தான்” என்றுமூச் செறிந்தாள்! கண்ணீர் ஒழுகிடப், பெற்றோர் தம்மை உற்றுப் பார்த்தாள், கவிழ்ந்தாள். தழுவிய கைகள் நீக்கிப், பெற்றவர் தனியே சென்றார், பழமைபோல் முணு மு ணுத்தார். படுத்தனர்; உறங்கி னார்கள். 18 பறந்தது கிள்ளை அறுசீர் விருத்தம் விடியுமுன் வணிகர் பல்லோர் பொதிமாட்டை விரைந்தே ஓட்டி நடந்தனர் தெருவில்! காதில் கேட்டனள் நங்கை. நெஞ்சு திடங்கொண்டாள், எழுந்தாள். வேண்டும் சில ஆடை, பணம், எடுத்துத் தொடர்ந்தனள் அழகு மேனி தோன்றாமல் முக்கா டிட்டே! வடநாடு செல்லும் முத்து வணிகரும் காணா வண்ணம் கடுகவே நடந்தாள், ஐந்து காதமும் கடந்த பின்னர், நடைமுறை வரலா றெல்லாம் நங்கையாள் வணிக ருக்குத் தடையின்றிக் கூற லானாள் தயைகொண்டார் வணிகர் யாரும். 19 வடநாடு செல்லும் வணிகர் அறுசீர் விருத்தம் பளிச்சென்று நிலா எரிக்கும் இரவினில் பயணம் போகும் ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே ஒருநெஞ்சம், மகர வீதி கிளிச்சந்த மொழியாள் மீது கிடந்தது. வணிக ரோடு வெளிச்சென்ற அன்னோன் தேகம் வெறுந்தேகம் ஆன தன்றோ! வட்டநன் மதியி லெல்லாம் அவள் முக வடிவங் காண்பான்! கொட்டிடும் குளிரில் அப் பூங் கோதை மெய்இன்பங் காண்பான்! எட்டு மோர்வானம் பாடி இன்னிசை தன்னி லெல்லாம் கட்டிக் கரும்பின் வாய்ச் சொற் கவிதையே கண்டு செல்வான். அணி முத்து மணி சுமக்கும் மாடுகள் அலுத்துப் போகும். வணிகர்கள் அதிக தூர வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில் தணியாத அவள் நினைவே பொன்முடி தனக்கு நீங்காப் பிணி யாயிற் றேனும், அந்தப் பெருவழிக் கதுதான் வண்டி! இப்படி வடநாட் டின்கண் டில்லியின் இப்பு றத்தில், முப்பது காத முள்ள மகோதய முனிவ னத்தில், அப்பெரு வணிகர் யாரும் மாடுகள் அவிழ்த்து விட்டுச் சிப்பங்கள் இறக்கிச் சோறு சமைத்திடச் சித்த மானார். அடுப்புக்கும் விறகினுக்கும், இலைக்கலம் அமைப்ப தற்கும், துடுப்புக்கும், அவர வர்கள் துரிதப்பட் டிருந்தார்கள். மாவின் வடுப் போன்ற விழிப் பூங்கோதை வடிவினை மனத்தில் தூக்கி நடப்போன் பொன்முடிதான், அங்கோர் நற்குளக் கரைக்குச் சென்றான். ஆரியப் பெரியோர்; தாடி அழகுசெய் முகத்தோர், யாக காரியம் தொடங்கும் நல்ல கருத்தினர் ஐவர் வந்து, சீரிய தமிழ ரே, ஓ! செந்தமிழ் நாட்டா ரே, எம் கோரிக்கை ஒன்று கேட்பீர் என்றங்கே கூவினார்கள். தென்னாட்டு வணிகரான செல்வர்கள், அதனைக் கேட்டே, என்னஎன் றுசாவ, அங்கே ஒருங்கேவந் தீண்டி னார்கள். “ அன்புள்ள தென்னாட் டாரே, யாகத்துக் காகக் கொஞ்சம் பொன்தரக் கோரு கின்றோம்; புரிகஇத் தருமம்” என்றே வந்தவர் கூறக், கேட்டே மாத்தமிழ் வணிக ரெல்லாம் சிந்தித்தார். பொன்மு டிக்குச் சேதியைத் தெரிவித் தார்கள். வந்தனன் அன்னோன். என்ன வழக்கென்று கேட்டு நின்றான். பந்தியாய் ஆரி யர்கள் பரிவுடன் உரைக்க லானார்: “ மன்னவன் செங்கோல் வாழும், மனுமுறை வாழும்; யாண்டும் மன்னிய தருமம் நான்கு மறைப்பா தத்தால் நடக்கும்; இன்னல்கள் தீரும்; வானம் மழைபொழிந் திருக்கும்; எல்லா நன்மையும் பெருகும்; நாங்கள் நடத்திடும் யாகத் தாலே ஆதலின் உமைக்கேட் கின்றோம் அணிமுத்து வணிகார் நீவிர், ஈதலிற் சிறந்தீர் அன்றோ இல்லையென் றுரைக்க மாட்டீர்! போதமார் முனிவ ரேனும் பொன்னின்றி, இந்நிலத்தில் யாதொன்றும் முடிவதில்லை என்றனர். இதனைக் கேட்டே பொன்முடி உரைக்க லுற்றான்: புலமையில் மிக்கீர்! நாங்கள் தென்னாட்டார்; தமிழர், சைவர்; சீவனை வதைப்ப தான இன்னல்சேர் யாகந் தன்னை யாம்ஒப்ப மாட்டோம் என்றால் பொன்கொடுப் பதுவும் உண்டோ? போவீர்கள் என்று சொன்னான். காளைஇவ் வாறு கூறக் கனமுறு தமிழர் எல்லாம் ஆளன்பொன் முடியின் பேச்சை ஆதரித் தார்கள்; தங்கள் தோளினைத் தூக்கி, அங்கை ஒருதனி விரலால் சுட்டிக், கூளங்காள்! ஒருபொன் கூடக் கொடுத்திடோம் வேள்விக் கென்றார். கையெலாம் துடிக்க அன்னார் கண்சிவந் திடக் கோ பத்தீ மெய்யெலாம் பரவ, நெஞ்சு வெந்திடத் “தென்னாட் டார்கள் ஐயையோ அநேக ருள்ளார் அங்கத்தால் சிங்கம் போன்றார் ஐவர்நாம்” என நினைத்தே அடக்கினார் எழுந்த கோபம். வஞ்சத்தை, எதிர்கா லத்துச் சூழ்ச்சியை, வெளிக்காட் டாமல் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு வாயினால் நேயங் காட்டிக், “ கொஞ்சமும் வருத்தமில்லை கொடாததால்” என்ப தான அஞ்சொற்கள் பேசி நல்ல ஆசியும் கூறிப் போனார். 20 வணிகர் வரும்போது அகவல் முத்து வணிகர் முழுதும் விற்றுச் சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில், மகோதய முனிவர் வனத்தில் இறங்கினார்; சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார். போகும் போது பொன்கேட்ட அந்த யாகஞ் செய்ய எண்ணு வோர்களின் கொடு விஷம் பூசிய கூரம்பு போன்ற நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்! ஆத்திர முகங்கள் அங்குள்ள தமிழரைப் பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின! தமிழர் கண்டு சந்தே கித்தனர். “ நமது சொத்தும் நல்லுயிர் யாவும் பறிபோகும் என்று படுகின்ற” தென்றே அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான். செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர் கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர். தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன! வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர். தப்பிய சிற்சில தமிழர், வனத்தின் அப்புறத் துள்ள அழகிய ஊரின் பின்புற மாகப் பிரியும் வழியாய்ப் பொன்முடி யோடு போய்ச் சேர்ந்தார்கள். சூறை யாடிய துறவிகள் அங்கே மாறு பாட்டு மனத்தோடு நின்று “ வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்; பைதலி வனத்தின் பக்க மாகச் செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக் கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனை அனுப்பி வைப்போம் வருவீர் இனிநில் லாதீர் என்று போனாரே. 21 ஜீவமுத்தம் எண்சீர் விருத்தம் வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்; வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று வடதிசை நோக்கிச் சென்றாள்; நெருங்க லானார்! வளர்புதர்கள், உயர்மரங்கள், நிறைந்த பூமி! நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும் வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்! வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்! பொன் முடியும் எதிர்கண்டான் ஒரு கூட்டத்தைப்! புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோரான வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்! வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான். தன்நடையை முடுக்கினான். எதிரில், மங்கை தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற் றங்கே! “ என்னஇது! என்ன இது!” என்றே அன்னோன் இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான். “ நிச்சயமாய் அவர்தாம்” என் றுரைத்தாள் மங்கை! “நிசம்” என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல் கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்! கைகள் கொட்டினாள்! ஆடினாள்! ஓடலானாள். “ பச்சை மயில்; இங்கெங்கே! அடடா என்னே! பறந்துவந்து விட்டாளே! அவள்தான்” என்று, கச்சைதனை இறுக்கி எதிர் ஓடிவந்தான். கடிதோடி னாள், அத்தான் என்ற ழைத்தே! நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது நெடுமரத்தின் மறைவினின்று நீள்“வாள்”ஒன்று பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப்’ பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின் சாந்தமுகந் தனைக் கண்டாள் உடலைக் காணாள்! தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட் டன்னம்! 22 தருமபுரச் சந்நிதியில் இருவணிகர் கலி வெண்பா திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த-குருமூர்த்தி சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும் நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம்! - அன்னார் அருளுவார்: மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ள நாமறியோம்! சிந்தை - உருகாதீர்! அன்பே சிவமென் றறிந்தோன், அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை-நன்றுரைத்தான்! ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ! தீதலால் வேறு தெரியாரோ!-சோதியான் சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர் உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர்-மெய்யன்பீர், பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்!-தீங்கு வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார் கடவுள் கருணை இதுவாம்! - வடவர், அழிவாம் குறுநெறியா ரேனும், பழிக்குப் பழிவாங் குதல்சைவப் பாங்குக்-கிழிவாம்! வடநாட்டில் சைவம் வளர்ப்போம்! கொலையின் நடமாட்டம் போகும்! நமனைக்-கெடமாட்டும் தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை ஆளுடையான் செம்மை அருள்வாழி! -கேளீர், குமர குருபரன் ஞான குருவாய் நமையடைந்தான் நன்றிந்த நாள்! 23 குருபரனுக் கருள்புரிந்தான் அறுசீர் விருத்தம் கயிலாச புரத்தில் நல்ல சண்முகக் கவிரா யர்க்கும், மயில்நிகர் சிவகா மிக்கும் வாயிலாப் பிள்ளை யாக அயலவர் நகைக்கும் வண்ணம் குருபரன் அவத ரித்தான். துயரினால் செந்தூர் எய்திக் கந்தனைத் துதித்தார் பெற்றோர்; நாற்பது நாளில் வாக்கு நல்காயேல் எங்கள் ஆவி தோற்பது திண்ண மென்று சொல்லியங் கிருக்கும் போது, வேற்படை முருகப் பிள்ளை குருபரன் தூங்கும் வேளை, சாற்றும்அவ் வூமை நாவிற் சடாட்சரம் அருளிச் சென்றான். 24 ஊமையின் உயர் கவிதை அறுசீர் விருத்தம் அம்மையே அப்பா என்று பெற்றோரை அவன்எ ழுப்பிச் செம்மையே நடந்த தெல்லாம் தெரிவித்தான்! சிந்தை நைந்து கைம்மையாய் வாழ்வாள் நல்ல கணவனைப் பெற்ற தைப்போல், நம்மையே மகிழ வைத்தான் நடமாடும் மயிலோன் என்றார்! மைந்தனாம் குருப ரன்தான் மாலவன் மருகன் வாழும் செந்தூரில் விசுவ ரூப தரிசனம் செய்வா னாகிக், கந்தரின் கலிவெண் பாவாம் கனிச்சாறு பொழியக் கேட்ட அந்த ஊர் மக்கள் யாரும் அதிசயக் கடலில் வீழ்ந்தார்! 25 ஞானகுருவை நாடிச் சென்றான் அறுசீர் விருத்தம் ஞானசற் குருவை நாடி நற்கதி பெறுவ தென்று தானினைந் தேதன் தந்தை தாயர்பால் விடையும் கேட்டான் ஆனபெற் றோர்வ ருந்த அவர்துயர் ஆற்றிச் சென்றான், கால்நிழல் போற்கு மார கவியெனும் தம்பி யோடே மீனாட்சி யம்மன் பிள்ளைத் தமிழ்பாட விரைந்து, தம்பி தானதைக் குறிப்பெ டுக்கத் தமிழ்வளர் மதுரை நாடிப் போனார்கள்; போகும் போது திருமலை நாய்க்க மன்னன் ஆனைகொண் டெதிரில் வந்தே குருபரன்அடியில் வீழ்ந்தான். 26 யானைமேல் பானைத் தேன் அறுசீர் விருத்தம் என்னையும் பொருளாய் எண்ணி எழுதரும் அங்க யற்கண் அன்னை, என் கனவில் தோன்றி, அடிகள் நும் வரவும், நீவிர் சொன்னநற் றமிழும் பற்றிச் சொன்னதால் வந்தேன். யானை தன்னில் நீர்எழுந் தருள்க தமிழுடன்! என்றான் மன்னன். தெய்விகப் பாடல் தன்னைத் திருவரங் கேற்று தற்கே, எய்துமா றனைத்தும் மன்னன் ஏற்பாடு செய்தான். தேவர் துய்யநற் றமிழ்ச்சா ராயம் துய்த்திடக் காத்தி ருந்தார். கையில்வாத் தியங்கள் ஏந்திக் கந்தர்வர் கண்ணாய் நின்றார். 27 அவையிடைச் சிவை அறுசீர் விருத்தம் அரங்கிடை அரசன் ஓர்பால். அறிஞர்கள் ஓர்பால், கேட்கத் தெரிந்தவர், கலையில் வல்லோர் செந்தமிழ் அன்பர் ஓர்பால் இருந்தனர்! அரிய ணைமேல் இருந்தனன் குருப ரன்தான்! வரும்ச னம்தமி ழருந்த வட்டிக்க ஆரம் பித்தான்! அப்போது கூட்டத் தின்கண் அர்ச்சகன் பெற்ற பெண்ணாள், சிப்பத் தைப்பிரித் தெடுத்த சீனத்துப் பொம்மை போன்றாள், ஒப்பியே ஓடி வந்தாள் காற்சிலம் பொலிக்க! மன்னன் கைப்பற்றி மடியில் வைத்தான் கவிதையில் அவாவை வைத்தான். 28 தெய்வப் பாடல் அறுசீர் விருத்தம் குமரகு ருபரன் பாடல் கூறிப்பின் பொருளும் கூறி, அமரரா தியர்வி ருப்பம் ஆம்படி செய்தான்; மற்றோர் அமுதப்பாட் டாரம் பித்தான், அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானமொன் றிருந்த தில்லை சாற்றுவோம் அதனைக் கேட்பீர்; ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடற் றொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறுஞ் சுவையே!அகந்தைக்கிழங்கைஅகழ்ந் தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே! வளர்சிமைய இமயப் பொருப்பில் விளையாடும் இளமான் பிடியே! எறிதரங்கம், உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவு ளத்தில் அழ கொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே! மதுகரம் வாய் மடுக்கும் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே! மலையத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே!” 29 இறைவி மறைவு அறுசீர் விருத்தம் என்றந்தப் பாடல் சொன்னான் குருபரன்! சிறுமி கேட்டு நன்று நன்றென இசைத்தாள்; நன்றெனத் தலை அசைத்தாள்; இன்னொரு முறையுங் கூற இரந்தனள்! பிறரும் கேட்கப் பின்னை யும்குரு பரன்தான் தமிழ்க்கனி பிழியுங் காலை, பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராபரச் சிறுமி, நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள். அரங்கு தன்னில்! ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துட் சென்ற தாலே, கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும்சீ மாட்டி! 30 திருவடி சரணம் அறுசீர் விருத்தம் முழுதுநூல் அரங்கேற்றிப் பின் முடிமன்னன், குதிரை யானை, பழுதிலாச் சிவிகை செம்பொன் காணிக்கை பலவும் வைத்துத் தொழுதனன். குருப ரன்பின், துதிநூலும் நீதி நூலும் எழுதிய அனைத்தும் தந்தே சின்னாட்கள் இருந்து பின்னே, தம்பியை இல்லம் போக்கித், தான், சிராப் பள்ளி யோடு செம்மைசேர் ஆனைக் காவும் சென்று, பின் திருவா ரூரில் பைம்புனற் பழனத் தாரூர் நான்மணி மாலை பாடி, நம்மைவந் தடைந்த காலை நாமொரு கேள்வி கேட்டோம். எழுசீர் விருத்தம் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக், குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே யாக, இந்துவாழ் சடையான் ஆடு மானந்த எல்லையில், தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து, மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்; அறுசீர் விருத்தம் ஆகுமித் திருவி ருத்த அனுபவப் பயனைக் கேட்க, ஈகுவோன் கையி லொன்றும் இல்லாமை போல்த வித்துத், தேகமும் நடுங்கி நின்று திருவடி சரணம் என்றான். ஏகிப்பின் வருக என்றோம்; சிதம்பரம் ஏகி உள்ளான். சென்றஅக் குருப ரன்தான் திரும்பி வந்திடு மோர்நாளும் இன்றுதான், சிறிது நேரம் இருந்திடில் காணக் கூடும்” என்றுநற் றேசிகர் தாம் இருநாய்கன் மாருங் கேட்க நன்றுற மொழிந்தார். கேட்ட நாய்கன் மார்காத் திருந்தார். 31 சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன் அறுசீர் விருத்தம் புள்ளிருக்கும் வேளூர் போய்ப் புனைமுத்துக் குமரன் மீது பிள்ளை நூல்பாடி, மன்றில் பெம்மானை மும்மணிச் சொல் தெள்ளுநீர் ஆட்டிப், பின்னும் சிதம்பரச் செய்யுட் கோவை, அம்மைக் கிரட்டை மாலை அருளினான் இருளொன் றில்லான், மூளும் அன்பாற் பண்டார மும்மணிக் கோவை கொண்டு ஆளுடை ஞானா சானின் அடிமலர் தொழுது பாடி, நீளுறப் பரிசாய்ப் பெற்ற நெடுநிதி அனைத்தும் வைத்து, மீளவும் தொழும் சீடன்பால் விளம்புவான் ஞான மூர்த்தி: “ அப்பனே, இதுகேள், இந்த அரும்பொருள் அனைத்தும் கொண்டு செப்பிடும் வடநா டேகிச் சிவத ருமங்கள் செய்க! அப்பாங்கில் உள்ளா ரெல்லாம் அசைவர்கள், உயிர்வ தைப்போர்; தப்பிலாச் சைவம் சார்ந்தால் அன்பிலே தழைத்து வாழ்வார். சைவநன் மடால யங்கள் தாபிக்க! கோயில் காண்க! நைவார்க்குச் சிவபி ரானின் நாமத்தால் உணவு நல்கும் சைவசத் திரங்கள் காண்க! தடாகங்கள் பூந்தோட் டங்கள் உய்வாக, உயிரின் வேந்தன் உவப்புறச் செய்து மீள்க!” என்று தேசிகனார் சொல்லி இனிதாக ஆசி கூறி, நன்றொரு துறவு காட்டிக் காவியும் நல்கி, ஆங்கே “இன்றொடு வடதே சந்தான் எம்பிரான் இருக்கை யாகித், தென்றமிழ் நாட்டினைப் போல் சிறப்பெலாம் எய்த” என்றார் மறைநாய்கன் மான நாய்கன் வாய்மூடிக் காத்தி ருந்தார் குறைவறு பரிச னங்கள் கூட்டமாய்த் தொடர, அன்பால் இறைவனாம் தேசி கன் தாள் இறைஞ்சிய குரு பரன் தான், பிறைசூடி தன்னைப் பாடிப் பெருஞ்சி றப்போடு சென்றான். 32 இப்போதெப்படி நாய்கன்மார்கள்? அறுசீர் விருத்தம் தேசிகர் சரிதம் சொன்னார். செவிசாய்த்தார் நாய்கன் மார்கள். ஆசிகள் சொல்லக் கேட்டார்: அப்போது குருப ரன்தான் தேசிகர் திருமுன் வந்து சேர்ந்த தும்பார்த் திருந்தார் நேசத்தால் தேசி கர்தாம் நிகழ்த்திய அனைத்தும் கேட்டார். வடநாட்டை நோக்கிச் சென்ற வண்ணமும் பார்த்தி ருந்தார். உடன்சென்று வழி யனுப்ப ஒப்பினோர் தமையும் பார்த்தார். கடன்ஆற்றத் தேசி கர்க்குக் கைகளும் குவித்தார். செல்ல விடை கேட்டார் தேசிகர் தாம் விடைதந்தார்; எனினும், அந்தோ அழுதிடு நாய்கன் மார்கள் அழுது கொண்டே மீண்டார்கள்! எழுதிய ஓவி யங்கள் கலைந்தன எனப்ப தைத்தார்! பழுதிலா எம்கு டும்பப் பரம்பரை ‘ஆல்’ இன் றோடு, விழுதொடு சாய்ந்த தென்று விளம்பினார் உளம்ப தைத்தே பதிப்பகம் பற்றியது ஏறக்குறைய நானூறு எண்சீர் விருத்தங்களால், தனித் தமிழிலே - இனிமையாக இந்தப் பாண்டியன் பரிசை நமக்களித் துள்ளார் கவிஞர். இதில் இன்பச் சுவை, நகைச் சுவை முதலிய சுவைகள் படிப்பவர்களுக்கு நிரம்பக் கிடக்கின்றன. அன்றியும் கதைப் போக்கும் சுவை நிறைந்ததே. பண்டைய நிலை, - பண்டைய வரலாற்றின் நினைவு! இதை நம் உளக் கண்ணில் நமக்குக் கொண்டு வருகிறது. பாண்டியன் தந்த பரிசு பற்றி எழுப்பப்பட்ட இந்த அழகிய ஓவியம், நம் முன்னோரின் மறத் தன்மையை நம் தோளில் மீண்டும் விதைப்பதாக இருக்கிறது. இது நம் தமிழுக்கு - தமிழ்நாட்டிற்கு உகந்த, ஒப்பற்ற காவியமாக விளங்குகிறது. - முல்லைப் பதிப்பகம் கவிஞர் சொல்லுகிறார் உரைநடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம். பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர் என்றார் வள்ளுவர். முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்; மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும் எனத்தோன்றவே. ஏறக்குறைய நானூறு எண் சீர் விருத்தங்களால் எழுதி முடித்தேன். தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச் செய்யுளின் பொருளை எனின் அதுதான் எனக்கு மகிழ்ச்சி யூட்டுவது! எளிய நடை “ஒன்றாலேயே” தமிழின் மேன்மையைத் -தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. என் நூல்களை முறையே நல்ல முறையில் அச்சிட்டு வெளி யிட்டுவரும் முல்லைப் பதிப்பகம் உடையார் என் தோழர்கள், அ. திருநாவுக்கரசர், ப. முத்தையார் இருவர்க்கும் பாண்டியன் பரிசை வெளியிட்டதற்காக ஒருமுறை நன்றி கூறுகிறேன். வாழிய முல்லைப் பதிப்பகம்! - பாரதிதாசன் இவர்கள் யார்? வேலன் ... கதைத் தலைவன் அன்னம் ... கதைத் தலைவி வீரப்பன் ... வேலனின் தந்தை; திருடர் தலைவன் ஆத்தாக் கிழவி ... வீரப்பன் மனைவி கதிரைவேல் ... அன்னத்தின் தந்தை; கதிர் நாட்டரசன் கண்ணுக்கினியாள் ... கதிர் நாட்டரசி வேழமன்னன் ... வேழ நாட்டரசன் நரிக்கண்ணன் ... அன்னத்தின் தாய் மாமன் வேழ நாட்டுப் படைத்தலைவன் பொன்னப்பன் ... யான் மகன் சீனி ... கணக்காயன்; வேலனின் ஆசிரியன் நீலன் ... கதிர் நாட்டமைச்சன் மகன் நீலி ... நீலனின் காதலி; அன்னத்தின் தோழி இயல் - 1 கதிர்நாட்டை நோக்கி வேழநாட்டுப் படை சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத் திறல்மிகுத்த வேழநாட்டுப் படைகள், போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே! பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப்ப டைகள், கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள், கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்ப டைகள், நேர்மிகுத்த வில்,வேல்,வாள் தூக்கிவந்த நெடியகா லாட்படைகள் - இவைகள் யாவும், 1 மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, “வெற்றி வாய்க”என முழங்கினவாம்! சங்கும் மற்றும் பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப் பாரதிரச் செய்தனவாம்! கொடியின் கூட்டம் விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயு தங்கள் விழியதிர மின்னின வாம்!படைத் தலைவர், கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக் கழறுமொழி ஒவ்வொன்றும் அதிர்வேட் டேயாம்! 2 கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது கைகாட்டி “வாபகையே” எனஅ ழைக்கும் புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர் போவீர்கள் விரைவாகப் பகைவர் கோட்டை அதோபாரீர்” எனஉரைத் தார், படைத்த லைவர்; ஆம்என்று குதித்தார்கள் மறவ ரெல்லாம்; அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடிச் சென்றார்! 3 இயல் - 2 கதிர்நாட்டின் வேவுபார்ப்போர் பகைப்படை வருவதைப் பார்த்தார்கள்! அழகியஅக் கதிர்நாட்டுக் கோர்கா தத்தில் அவ்வேழப் படைநெருங்கும் காட்சி தன்னை, விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர் விண்ணுயர்ந்த மதிலின்மேல் நின்று பார்த்தார், மொழிஅதிர்த்தார், பறைஅதிர்த்தார்: “வேழ நாட்டான் முழுப்படையும் எழுப்பிவந்தான்” என்று தங்கள் பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார்; கதிர்நாட்டின் படைமறவர் கொதித்தெ ழுந்தார்! 4 அமைதிகுடி கொண்டிருந்த கதிர்நா டந்தோ அலறிற்று! முதியோர்கள் கலங்கி னார்கள்! தமக்காக அன்றித்,தம் கணவர் மக்கள் தமைஎண்ணி மகளிரெல்லாம் நடுங்கி னார்கள்! “ நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள் நாட்டுவதை நாம்ஒப்ப லாமோ” என்று சிமிழ்க்காத விழியினராய் வாளைத் தூக்கிச் சினத்தோடு வெளிப்போந்தார் இளைஞர் எல்லாம்! 5 இயல் - 3 சதிராடு கூட்டத்தில் அரசன், அரசி கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும், காதல்மனை யாம்கண்ணுக் கினியாள் தானும் சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து தமிழ்ப்பூவால் இசைப்பாக்கள் புனைந்தி ருந்தார். “ அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான், அதோஒருகா தத்தில்”என்றான் படைத்த லைவன். “ எதிர்த்தானா வேழமன்னன்? நரிக்கண் ணன்தான் எமைநோக்கிப் படைநடத்த ஒப்பி னானா? 6 என்கண்ணுக் கினியாளே அன்பே, உன்றன் எழில்அண்ணன் நரிக்கண்ணன், வேழ நாட்டின் வன்மையுறு படைத்தலைவ னாய்இ ருந்தும் வேழர்படை வருவதை,ஏன் என்னி டத்தில் முன்னமேயே சொல்லவில்லை? வேழ நாட்டான் முழுதும்நமை ஆதரிப்ப தாக அன்றோ சொன்னான்? இந் நாட்டினிலே நம்ப டைகள் தோதில்லா திருக்கையிலே நமைஎ திர்த்தார்! 7 இந்நாட்டை உன்அண்ணன் பெறநி னைத்தான்! என்படையின் தளர்நிலையை, அவனை யல்லால் பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான் பெரும்பகைவன் எனக்கு! நெடு வைய மீதில் என்ஆவி போன்றவள் நீ! என்ன செய்வேன்! என்வெற்றி உன்துன்பம் அன்றோ பெண்ணே மன்னவன்நான்! எனைநம்பி வாழு கின்ற மக்கட்கோ என்கடமை ஆற்ற வேண்டும்” 8 என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே எதிரினிலே அரசனது கட்ட ளைக்கு நின்றிருந்தான் படைத்தலைவன்; அமைச்சன் - நின்றான்! நெடுவிழியிற் கனல்சிந்த அரசி சொல்வாள்: “ முன்ஒருநாள் என்அண்ணன் இங்கு வந்தான்; ஏதேதோ மொழிந்திட்டான், என்னி டத்தில்! அன்னவற்றின் பொருள்இந்நாள் அறிய லானேன். அழகியஎன் திருநாட்டை அவன்ப றிக்க 9 திட்டமிட்டான்! மணவாளா உன்றன் ஆணை! திருநாட்டின் மீதாணை! இந்நாட் டின்கண் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற மக்கள்மேல் எனக்குள்ள அன்பின் ஆணை! விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்! விரைவினிலே போர்க்களத்தை அடைவேன்; எந்த வட்டத்தில் அவனுண்டோ அங்கன் னோனை மாய்த்திடுவேன் அல்லதுநான் அவனால் மாய்வேன்! 10 என்அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின் என்உயிரில் நுழைந்ததன்பின் நுழைக! நானோ அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ் அரண்மனையில் அகத்தூய்மை நிரம்பப் பெற்றே என்கால்வைப் பேன்உறுதி!” என்றாள்; ஓடி எதிரில்உறு படைவீடு சென்று மீண்டே என்அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க என்றாள்;தேர் ஏறினாள்; எரியும் கண்ணாள்! 11 துணையாக ஒருபடையும் அவளின் தேரைத் தொடர்ந்ததுதன் நிழல்போலே! கதிரை வேலன் தணல்சிந்தும் விழியாலே நாற்பு றத்தும் தமிழ்மறவர் தமைஏவித் தெற்குக் கோட்டை மணிவாயில் தனையடைந்தான் சிங்கத் தைப்போல்! மன்னவன்தான் பெற்றெடுத்த அன்னம் என்பாள், அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்ம னைக்குள் அடிவைத்தாள்; நொடிப்போதில் நிலைமை கண்டாள்! 12 இயல் - 4 கதிரைவேல் மன்னன் மகள் அன்னம் திகைத்தாள் கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும் குதிரைகளின் குளம்படியின் ஒலியும், யானைக் கூட்டத்தின் மோதுதலும், தேர்அ திர்ப்பும், கொலையுண்ணும் மறவர்விழும் ஒலியும் நன்கு கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில்! கிளியுதடு கனல்சிந்தும், துடிக்கும்; அஞ்சும்! வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம்! வகையறியா அவள்இளமை மறுத்து நிற்கும்! 13 ‘என்ஆத்தா என்செய்வேன்?’ என்றாள் மங்கை! எதிர்நின்ற அக்கிழவி இயம்பு கின்றாள்; ‘உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே; உன்பெற்றோர் வாள்தூக்கி ஓடி யுள்ளார். இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம் ஏன்பறக்க நினைக்கின்றாய்? முடிவு காண்போம்; கன்னலின்சா றேஇங்கு வந்த மர்வாய், கைப்புறத்தில் வா!’என்று சென்ற ணைத்தாள். 14 இயல் - 5 கடும் போர் வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன் வந்தெதிர்த்த பெரும்படைமேற் படையை ஏவி அடுத்துநின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள் அத்தனைக்கும் விடைகூறித் தன்வீச் சுக்கும் கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்! சாவு கொற்றவர்கள் இருவர்பால் மாறி மாறி நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை நூறுமுறை ஏமாந்தாள் ஆளைத் தேடி! 15 கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல் கதிரைவேல் மன்னவனின் மறவர் சில்லோர் சினங்கொண்டு பாய்ந்தார்கள்! வேழ நாட்டுத் திறல்மறவர் நூற்றுவர்க்குக் கதிர்நாட் டார்கள் தனியொருவன் விழுக்காடு தோள்கொ டுத்துத் தனித்துநின்றார் கோட்டைக்குள் பகைபு காமல்! பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும் பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்! 16 என்செய்வார் கதிர்நாட்டார்? வேழ வர்க்கோ இரும்படைகள் அணைகடந்த வெள்ளத் தைப்போல் பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து! கதிர்நாட்டார் பெருந்தோளும் கூர்மை வாளும் முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும் முனைநடுங்கப் போராடும் கதிரை வேலன் இந்நிலைமை தனையுணர்ந்து வேலன் தன்னைத் தனிப்படுத்த எண்ணினான் இறங்கி னான்கீழ்; 17 ஏறிவந்தான் வேழத்தான். கோட்டைக் குள்ளே இருவேந்தர் தனியிடத்தில் போர்பு ரிந்தார்! சீறினஅங் கிருவாள்கள்! மோத லாலே செம்பொறிகள் எழுந்தனமேல்! வெற்றி தோல்வி கூறிடவும் வழியின்றி வலம்இ டம்போய்க் குறிப்பொன்றும் தவறாமல் சுழன்று, வாளை மாறிப்பின் வாங்குங்கால் பலகை தூக்கி வாட்போருக் கிலக்கியத்தை நல்கும் போதில். 18 இயல் - 6 கண்ணுக்கினியாள் அண்ணனைத் தேடினாள் ‘அண்ணன்எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே! ஆட்சியினை யேவிரும்பி உடன்பி றந்த பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து பிழைசுமந்து வாரானோ’ என்று கூறிக். கண்ணுக்கு இனியாளும் கனன்று எழுந்து கடிவாளம் ஒருகையில், பகைவர் பெற்ற புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில், புதுமைசெய ஒருகுதிரை மீதி லேறி 19 பகைப்படையின் உட்புகுந்து தேடிக், கண்ணிற் பட்டவரின் உடல்சாய்த்தே, புறங்கள் எட்டும், நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி நாற்புறத்து வாயிலையும் சுற்றி வந்தாள்! மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை மேற்போர்த்து முகமூடி அணிந்தே ஓர்ஆள் புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கிப்! “போ”என்றாள். பறந்தது தன்குதிரை அங்கே! 20 இயல் - 7 வேழ மன்னனோடு போர்புரிந்த* கதிரைவேல் மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன் போர்செய்து கொண்டிருந்த கதிரை வேலன் பொத்தென, வீழ்ந் தான்,அவனின் முதுகின் மீதில் ஓர்ஈட்டி பாய்ந்ததுபோய்க் கருந்தி ரைக்குள் உடல்மறைத்துக் கொண்டிருந்த நரிக்கண் ணன்!தன் பேர்மறைக்க எண்ணித் தான்அணிந் திருந்த பெருந்திரையை, முகமூடித் துணியை, அங்கு நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து நெடிதுபோய் அரண்மனையில் நின்றி ருந்தான். 21 நின்றிருந்த நரிக்கண் ணன்,உடன்பி றந்த நேரிழையாள் வரும்வழியில் விழியை வைத்தான்; ‘அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்; அவள்ஒழிந்தால், முக்காலும் தீரும்; பின்னும் அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்; அதன்பிறகன் றோஇந்த நாட்டின் ஆட்சி, என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்’ எனநினைத்தான், தினையேனும் மானம் இல்லான்! 22 இயல் - 8 கண்ணுக்கினியாள் மன்னன் இறந்தது கண்டாள் கொலைவாளும் கையுமாய் அரசி வந்தாள்; கொண்டவனைப் பிணமாகக் கண்டாள்; ஆங்கே நிலைகலங்கி நின்றிட்டாள்! “வீழ்ந்த தோநின் நெடுமேனி! வீழ்ந்ததோ கதிர்நா டிந்நாள்! இலைநீதான் எனஅறிந்தால் அஞ்சி வாடும் இந்நாட்டு மக்களை,யார் தேற்று வார்கள்? கலைந்ததுவோ என்காதல் ஓவி யந்தான்!’ எனக்கூறிக் கட்டழகன் உடலை அள்ளி 23 அணைத்திட்டாள் மலர்க்கையால்! கன்னம் உச்சி அணிமார்பு தடவினாள்! ஈட்டி யாலே தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்; தலைகுனிந்தாள்! அப்பிணத்தை நிலத்திற் போட்டாள் இணைபிரியா மானமதும் எம்மை விட்டே ஏகிற்றோ, ஐயகோ! முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்! தூயநின் மூதாதை, என்மூ தாதை, 24 அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை அருமார்பில் முன்தோளில் ஏற்ற தன்றித் தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ? எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற இளவேழ நாட்டரசன், இரக்க மிஞ்ச, “ மனைவிளக்கே, நின்துணைவன் கதிரை வேலன் வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை, 25 முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே முடுகிவந்து நடுமுதுகில் எறிந்தான் ஈட்டி! திகைத்தேன்நான்! சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்! திகழிமய மலைபோலும் அவன்கொண் டுள்ள புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம் போனதெனப் புலம்புவதும் என்ன? பெண்ணே! அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன் அரண்மனைக்கே”என்றுரைத்தான்;சென்றாள்பெண்ணாள். 26 இயல் - 9 அரண்மனைக்குள் படை புகுந்தது; அன்னத்தை ஆத்தாக் கிழவி காத்தாள் வேழவனின் படைவீரர் அரண்ம னைக்குள் விரிநீர்போய் மடைதோறும் பாய்வ தைப்போல் சூழலுற்றார்; பொன்னிருப்புச் சாலைக் குள்ளும் தொகுநெற்க ளஞ்சியத்தும் எவ்வி டத்தும்! ஏழடுக்கும் படைவீரர் கைப்பற் றுங்கால் இருந்தஆத் தாக்கிழவி உளம்ப தைத்துத் கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக் கிளியேந்தல் போலேந்தி வெளியிற் சென்றாள். 27 நிலவறையால் வெளிப்புறத்தில் சென்ற ஆத்தா நீங்கியபின் கதவுதனைச் சாத்த வில்லை. சிலர்கண்டார் காணாத கதவு தன்னைச்! சிலர்புகுந்தார்; சிலர்உள்ளே செல்ல லானார்! சிலர்நெடிது சென்றுமே அரண்ம னைக்குள் திறல்கொண்ட வேழ நாட்டுப்ப டைகள் அலைவதைக்கண் டையோஎன் றுரைத்து மீண்டார். ஆயினும்சிற் சிலர்இருந்தார்! நரிக்கண் ணன்தான், 28 எப்புறத்தும் திரிகின்றான்.ஓர்அ றைக்குள் எதிர்பார்த்த ஒருபேழை தன்னைக் கண்டான் அப்படியே தூக்கினான்; அடுத்தி ருந்த ஆள்ஒருவ னிடந்தந்தான்; “இதனை என்றன் குப்பனெனும் தேரோட்டி இடம்சேர்” என்று கொடுத்தனுப்பித், தான்நினைத்த சூழ்ச்சி தன்னை அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான்! அரசிக்கு நல்லவனாய்த் தன்னைக் காட்ட, 29 அரசர்தமைக் குடிகள்எலாம் காணு கின்ற அழகியதோர் கூடத்தில் கீழ்க்கி டந்து சரசரெனப் புரண்டபடி. “எனக்கேன் வாழ்வு? சாக்காடே வாராயோ? உடன்பி றந்தாள் அரசியென வாழ்கின்றாள் என இ ருந்தேன்; அத்தீயன் வேழத்தான் கதிர்நா டாளும் பெருமைகொள்என் மைத்துனனைக் கொலைபு ரிந்து பிடுங்கினான் நாட்டையும்”என் றழுதி ருந்தான். 30 இயல் - 10 கண்ணுக்கினியாள் வந்தாள்; நரிக்கண்ணன் வஞ்சம் பேசினான். வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க, வல்லியிடை துவள, மேல்நல்ல தோள்கள் ஆட,எடுத் தூன்றும்அடி இடறக், கண்ணில் அழகிழந்து குழல்சரிந்து, வீழ, மங்கை, ‘நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து நாளும்எனைக் காத்துவந்த துணைஇ ழந்து வாடுகின்றேன்’ எனக்கதறி நெஞ்சம் சோர, வந்தாள்அண் ணன்புரளும் கூடந் தன்னில், 31 “மைத்துனனை நானிழந்தேன் தங்கை யே!என் மன்னன்எனைத் தள்ளிவிட்டான்; அதுபோ கட்டும்; செத்தானை இனிக்காண முடிவ துண்டோ? திருநாட்டை நீஇழந்து, துணைஇ ழந்து, கைத்தூண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற காட்சியினை நான்காண நேர்ந்த தேயோ! வைத்திருந்தான் படைத்தலைவ னாக என்னை; மைத்துனனை இகழ்ந்துரைத்தால் பொறுப்பே னோநான்? 32 கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான்; கடிந்துரைத்தேன்; மறுநொடியில் அமைச்ச னுக்குப் புதுத்தலைமை தந்தேபின் படையெ ழுப்பிப், பொன்னான கதிர்நாட்டின் மேல்வி டுத்தான்; எதிர்பாராப் படைஎடுப்பை அறியீர் அன்றோ; இதைக்கூற இங்குவந்தேன்; வருவ தற்குள் சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத் தீர்த்தானே மைத்துனனை! அன்பு வேந்தை! 33 உயிர்போன்றாய்! உடன்பிறப்பே என்றன் ஆவி உடலைவிட்டுப் போவதுமெய்! வைய கத்தில் துயர்தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து சொல்லுமோர் சொல்லையும்நான் பொறுப்ப துண்டோ? முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றா லுந்தன், முத்தான தங்கையவள் வாழ்க்கைப் பட்ட வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு மைத்துனன்என் றுரைத்தபெரு மைபோ யிற்றே!” 34 இயல் - 11 நரிக்கண்ணன் வஞ்சம் பேசுகையில், இவனிடம் கரிய உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று நரிக் கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக் கொன்றான். எனஉரைத்தான்; துடித்தழுதான்; மேலும் பேச்சை எடுக்கையிலே, கரியஉடை போர்த்த ஓர்ஆள், “ இனிஎன்ன செய்வ”தென நரியைக் கேட்டே எதிர்வந்தான், அவள்கண்டாள், வாளைத் தூக்கிப் “ புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி புகுத்தியவன் நீதானா” என்றாள் “இல்லை எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார் ஈயுமுன்னே மன்னவர்மேல் ஈட்டி எய்தார்” 35 என்றுரைத்தான்! அதே நொடியில் நரிக்கண் ணன்தான் இடையினிலே மறைத்திருந்த வாளெ டுத்து நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை நிலத்தினிலே விழுமாறு வெட்டிச் சாய்த்தே “ ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள் உயிர்நடுங்க வைத்தவளை ஒழித்தேன்” என்று நின்றுபெரு மூச்சுவிட்டான்! எங்கே அந்த நேரிழையாள் அன்னம்என உள்ளே சென்றான். 36 இயல் - 12 நரிக்கண்ணன் அன்னத்தைத்தேடி உள்ளே செல்ல, அங்கிருந்த ஆள் நடந்ததைத் தன் வேழ நாட்டு மன்னனிடம் சென்று கூறினான். மன்னன் வியப்புறுகின்றான். கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று கண்டவற்றை அரசனிடம் நன்று சொன்னான்! பெருவாளால் தன்கையால் உடன்பி றந்த பெண்ணாளைக் கொன்றானா என்று மன்னன் உருகினான். மக்களிடை மகனாய் வாழ ஒண்ணாத கொடுவிலங்கை இந்நாள் மட்டும் தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்ம னைக்குள்! தீருவதெந் நாள்இந்தப் பழிதான் என்றான். 37 அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த அழிவொன்றே தொழிலான மறவர் தாமும் இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி, இளைத்தஉடல், களைத்தவிழிக் கிழவன், “வேந்தே கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்? காயின்றேல் கனியருமை யாரே காண்பார்? நரிக்கண்ணர் இலைஎனில்நும் அருமை தன்னை நானிலந்தான் அறிந்திடுமோ நவில்க” என்றான். 38 இயல் - 13 அன்னத்தைக் காணாது திரியும் நரிக்கண்ணன் எதிரில் தேரோட்டியான குப்பன் வந்தான். அன்னத்தை அரண்மனையில் காண வில்லை! ஆத்தாவைக் காணவில்லை! நரிக்கண் ணன்தான் என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்! எதிரினிலே தேரோட்டும் குப்பன் வந்தான்! பொன்னான பேழையினைப் பெற்றா யோ? என் புகழுக்கும் ஆட்சிக்கும் ஆணி வேரை உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய்; ஒருத்தரிடம் சொல்லாதே என்று ரைத்தான். 39 நானறியேன் பேழையினை என்றான் குப்பன்! நடுங்கினான் நரிக்கண்ணன்! “ஐயோ ஐயோ போனதோ! இங்கிருந்த ஆளி டத்தில் போயிதனைக் குப்பனிடம் கொடுஎன் றேனே, ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ உடையுடுத்து நின்றிருந்தான்; ஏய்த்தான் போலும்! ஏனிந்தப் பிழைசெய்தேன்? என்வாழ் வுக்கே இடையூறு சூழ்ந்தேனே” எனத்து டித்தே, 40 அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்; ஆவிநிகர் பேழையினை அடைதல் வேண்டும்; என்னுமொரு கருத்தோடு அரண்ம னைக்குள் இட்டிருந்த ஓர்தவிசில் சென்றுட் கார்ந்தான்! மன்னவனை ஏமாற்றிக் கதிர்நாட் டாட்சி வாங்குவதில் சிறிதேனும் தொல்லை யில்லை அன்னத்தை ஆத்தாவைத் தேட வேண்டும், அரும்பேழை வேண்டும்எனப் பெருந்துன் புற்றான். 41 இயல் - 14 அவன் எதிர் வேழநாட்டு மன்னன் வருகின்றான். அவனிடம் தொடங்குகிறான் பொய்ம்மூட்டைகளை நரிக்கண்ணன். ஆத்தாவை, அன்னத்தைப், பேழை தன்னை, அடையாளப் படிஎங்கும் படையா ளர்கள் போய்த்தேட வகைசெய்து கொண்டி ருந்த பொல்லாத நரியானின் எதிரில், மன்னன் கோத்தான முத்துலவு மார்பி னோடு குன்றுநடை கொண்டதுபோல் சென்று நின்றான்! சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால் சரசரெனச் சொற்பெருக்கை, எழுந்து நின்றே. 42 நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக் கிப்பின் நாற்படைக்கும் தலைவனென ஏற்ப டுத்திக் கோளும்பொய் சூதுமிலான் எனஉ ணர்ந்து கொண்டு,பெருந் தொண்டெல்லாம் எனக்கே தந்து நீளிஎனும் மன்னனைநான் போரில் வென்ற நினைவாகப் பரிசீந்த கனியே உன்றன் தோளைஇகழ்ந் தாளிவள்;என் வாளால் வெட்டித் தொடுகழற்குக் காணிக்கை இட்டேன் காண்க. 43 “ வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை மறவேந்தே நீகொன்றாய்” என்று தீய நெஞ்சத்தால் நினைத்தாளே! “திண்தோள், மானம் நீத்ததோள்” என்றாளே! ஐயோ, அன்னாள் கொஞ்சத்தால் மாண்டாளே, நாள டைவில் கொடுவாளால் சிறிதுசிறி தாய றுத்து கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு கெட்டேனே கெட்டேனே கெட்டேன் ஐயா. 44 உடன்பிறந்தேன்’ என்றுரைத்தாள் `ஆமாம்’ என்றேன்! “உன்னரசை இந்நொடியில் சூழ்ச்சி யாலே மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்! மன்னவனைப் பழிவாங்கி விட்டே இந்தக் கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்”என் றாள்என் காதுபெற்ற துன்பத்தை என்ன சொல்வேன்! கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன் கொடைமன்னா அருள்புரிக தருக வாளை. 45 நல்லாரின் பெருநிலையம் இந்த வையம்! நான்தீயா ளொடுபிறந்த தாலே தீயன்! எல்லாரும் போலேநான் இன்னும் இங்கே இருக்கின்றேன் சாகாமல்! ஒன்று மட்டும் சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த தூயோய்நின் புகழுக்கும் அறத்தி னுக்கும் முல்லைமுனை அளவென்னால் பழிநே ராமல் முழுதுண்மை யாய்நடந்தேன் இதன்பொ ருட்டு 46 நான்செத்த பின்அடையும் வானாட் டின்கண் நானூறு சிற்றூர்கொள் ஒருபே ரூரும் தேனூறும் சோலைசூழ் அப்பே ரூரில் செப்பரிய அரண்மனையும் அரண்ம னைக்குள் பால்நேரில் காய்ச்சி,அதில் சீனி இட்டுப் பத்துவகைச் சிற்றுணவும் ஒத்த பெண்ணும் ஊனின்ப நுகர்கின்ற அறைஇ ருந்தால் ஒருத்தருக்கும் இல்லைஅது எனக்கே” என்றான். 47 இயல் - 15 நரிக்கண்ணன் பேச்சை நம்பிவிட்ட வேழ மன்னன் நரிக் கண்ணனுக்கு இரங்கினான்; இந்த நாடு உன்னுடைய முன்னோருடையது என்பதற்குப் பட்டயம் உண்டா என்றான். அரசனுரைத் திடுகின்றான்; அப்ப னேஉன் அன்பினையும் பண்பினையும் அறியார் யாவர்? ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில் உயர்காய்கள் அத்தனையும் வெறுப்ப துண்டோ? அரசியவள் தீயவள்தான், உடன்பி றந்த அறம்பிழையா மறவன்நீ! அழுதல் வேண்டாம் நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன் நாடென்றாய்! அதற்குள்ள சான்று முண்டோ? 48 அதுவிருந்தால் காட்டுகநீ! இந்த நாட்டின் ஆட்சியினை உனக்களித்து விடுவேன் என்றான்! பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்? பாட்டனுக்குப் பாட்டனாம் பறைக்கண் ணற்குக் குதிரைநிரை கொண்டநெடு முடியான் என்னும் கொடுநாட்டு மன்னன்அளித் தான்இந் நாட்டைப் பதினாயி ரம் பேரை வென்ற தாலே! பரிசாகத் தந்ததன்றி வேறொன் றில்லை! 49 அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற அருஞ்செப்புப் பட்டயத்தைக் கதிரை வேலன் முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு, மூன்றாநாள் தூங்கையிலே கொலையும் செய்தான்! தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ சழக்கனவன் குடிகளிடம் தப்பி வாழ்ந்தான்? என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை; இங்கிரா தேஎன்றான் அங்கு வந்தேன்! 50 இந்நாட்டை நானாள வேண்டு மென்ற எண்ணமே எனக்கில்லை; என்றன் தந்தை அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே அங்கையினைத் தன்மார்பில் அழுத்தி, “அப்பா உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன்நீ ஒப்பிடுக, உன்நாளில் வேழ நாட்டின் மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட் டுக்கு மன்னவனாய் இரு!நமது மானங் காப்பாய்.” 51 எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ எழில்வேழ நாட்டினில்நான் அடைந்தி ருக்கும் தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம் தவிர்ப்பதற்கும் துணிகின்றேன்; ஐய னேநீ எனைத்தமிழில் “படைத்தலைவா” என்ற ழைக்கும் இன்பத்துக் கீடாக இந்த வையம் தனைத்தரினும் ஒப்பேனே! ஒருசொல் சொல்க; “தாளடைந்த நரிக்கண்ணன் ஆள்க” என்றே! 52 வணங்குகின்றேன். எனக்கூறி வணங்கி நிற்க மன்னவனும் மனமிரங்கி, “அஞ்சேல்! அஞ்சேல்! இணங்குகின்றேன். நீ ஆள்க” எனஉ ரைத்தான் “இன்றைக்கே முடிசூட்டிக் கொள்க” என்றான்! பிணங்குவித்தும் மைத்துனனை உடன்பி றப்பைப் பெருவஞ்ச கத்தாலே சாகச் செய்தும் அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான் அன்பில்லாத் தன்னுளத்தால் மகிழ்ந்து நின்றான். 53 இயல் - 16 வீரப்பன் என்னும் திருடர் தலைவன் தோழர்களிடம் தன் வரலாறு கூறுகிறான். கதிர்நாடு சார்ந்திருக்கும் தென்ம லைமேல் கருநொச்சிக் காட்டினிலோர் பாறை மீதில் மிதியடிக்கால் மீதிலோர் காலைப் போட்டு வீரப்பன் எனும்திருடர் தலைவன் குந்தி எதிர்நிற்கும் தோழர்கள்பால் இதனைச் சொன்னான்; எல்லாரும் கேட்டிருந்தார் கைகள் கட்டி! “முதுமையினை அடைந்துவிட்டேன். வாழ்நாள் எல்லாம் முட்டின்றிக் கழித்துவந்தேன். ஆனால் கேளீர்! 54 ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான், கண்போல் ஒருமனைவி! இருவரையும் பிரிந்தேன். ஆண்டும் இருபதுஆ யினஎன்றன் தீயொ ழுக்கம் என்மனைவி யாம்ஆத்தா வெறுத்தாள்! நீயோ திருடுவதை விடவேண்டும்! அன்றி என்னைத் தீண்டுவதை விடவேண்டும் என்றாள். என்பால் வரவேண்டாம் இவ்விடத்தில் என்றாள்! என்றன் மகனைநான் நல்வழியில் வளர்ப்பேன் என்றாள். 55 ஒருவனிடம் ஏற்பட்ட தீயொ ழுக்கம் உடன்வளர்ந்தே, பின்னதுதான் நீக்க ஒண்ணாப் பெருநோயாய் மாறுவது மெய்யே, நானும் பெண்டாட்டி பிள்ளைகளை விட்ட தன்றி ஒருநாளும் தீத்தொழிலை விடுவ தென்றே உள்ளத்தால் நினைத்ததுவும் இல்லை! ஐயோ அருமையுறு பெண்டுபிள்ளை நினைவே யாக அகன்றநாள் ஒவ்வொன்றும் துன்ப நாளே. 56 நானும்என் மனையாளும் வாழ்ந் திருந்த நல்லூரை அவள்அகன்றாள்; புல்லூர் ஏகித் தானங்குக் கைப்பாடு பட்டாள், சின்ன தனிக்குடிசை ஒன்றினையும் கட்டிக் கொண்டாள்; தேனடையும் ஈயும்போல் மகனும் தானும், வறுமையிலும் செம்மையினைக் காண்பா ராகி, சீனிஎனும் கணக்காயர் இடத்தில் அன்பின் சிறுவனையும் படிக்கவிட்டாள்; சிலநாள் செல்ல 57 கணக்காயர் முயற்சியினால் அரண்ம னைக்குள் கால்வைத்தாள்; பணிச்சியாய் இருந்தாள்; பின்னர்த் துணையானாள் கதிர்நாட்டின் அரசி யார்க்கே! தூயதன்ம கன்இன்னும் கணக்கா யர்பால் இணக்கமுறக் கலைபலவும் பயில்கின் றான்.நான் இவையனைத்தும் அறிந்துள்ளேன்; எனினும் அங்கே அணுகினேன் இல்லை.எனை அவள்கண் டாலும் அகம்வெறுத்துத் தலைகுனிந்து மறைந்து போவாள்! 58 அப்பையன் வேலனுக்கு நான்தான் தந்தை ஆத்தா தான் என்மனைவி’ என்ற உண்மை இப்பெரிய நாட்டினிலே, இந்த நாளில், யானறிவேன்; அவளறிவாள்; அறியார் மற்றோர்! செப்பினேன் இன்றுதான் உம்மி டத்தில்! செப்பாதீர் யாரிடத்தும்! இன்று நானோ எப்பாடும் படவில்லை காலாள் போலே எதிர்நின்றேன் நரிக்கண்ணன் பேழை தந்தான். 59 இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே எவ்விடத்தும் அரண்மனையில் வேழ நாட்டின் படைவீரர் உலாவினார்! எலிகள் ஓடிப் பண்டங்கள் உருட்டுதல்போல் பொருளை யெல்லாம் தடதடென உருட்டினார். அவர வர்கள் சலிப்பின்றிக் கவர்ந்தார்கள், கலைப்பொ ருள்கள்! இடையிடையே நரிக்கண்ணன் செல்வான், மீள்வான், எதையோதான் மிகக்கருத்தாய்த் தேட லானான். 60 இயல் - 17 வீரப்பன், அன்று நரிக்கண்ணன் தந்த பாண்டியன் பரிசு என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான். ஓர்அறையில் பேழையினை அரிதிற் கண்டான்; உண்டான மகிழ்ச்சிக்கோர் அளவே யில்லை! யாருக்கும் தெரியாமல், அதைத்தே ரோட்டி இடம்சேர்க்க எண்ணினான். அங்கு நான்தான் நேரினிலே நின்றிருந்தேன். தன்ஆள் என்றே நினைத்திட்டான்: “தேரோட்டி இடம்சேர்” என்றான் பாராட்டி னேன்அவனை! எடுத்து வந்தேன்! பாருங்கள் எனப்பேழை தனைக்காட் டிட்டான். 61 சிரித்திட்ட திருடர்களில் ஒருவன் சொல்வான்: “திருடர்களைக் குறைவாகச் சொல்வார் மக்கள்; இருக்கின்ற பேழையினைத் தேடித், தூக்கி எடுத்துப்போ, என்றானே, அவனை யாரும் ஒருபேச்சும் பேசார்கள்; சும்மா நின்ற உம்மைஅவன் திருடனென்று சொன்னா னன்றோ? பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்; பொதுவுடமை யோன்திருட்டைக் களைவிக் கின்றான்!” 62 என்றுரைத்தான்! மற்றொருவன் இயம்பு கின்றான்: என்னெண்ணம் அதுவல்ல, வேண்டு மென்றே பொன்னையோ காசினையோ நாமெ டுத்துப் போம்படிசெய் கின்றார்கள். அதன்பின் நம்மை வன்சிறையில் அடைப்பார்கள். திருட ரென்று மக்களிடம் சொல்வார்கள். இவைஏன் என்றால், ‘மன்னர்,பழம் புலவர்,வணிகர்கட் கெல்லாம் வரும்பெயரை நமக்காக்கும் முயற்சி’ என்றான்! 63 வீரப்பன் கூறுகின்றான்: என்தோ ழர்காள்! வேலனுக்கு நானளித்த தொன்று மில்லை. ஆர்அப்பன் என்பதையும் அறியான் வேலன். ஆத்தாவும் அதைக்கூற விரும்ப வில்லை! நேரிற்போய் இருவரையும் காணு தற்கும் நெஞ்சமோ ஆவலடை கின்ற துண்டு - சீரில்லை என்னுடம்பின் நிலையில்! என்ன செய்வதென எண்ணுகின்றேன்! பேழை தன்னை 64 நான்திறந்து பார்த்ததிலே விலையு யர்ந்த நகை,ஆடை, அழகியவாள், முடிஇ வைகள், வான்திறந்த உடுக்கள்போல் கதிர்போல் கண்டேன்! மன்னர்தரும் பட்டயமும் ஒன்று கண்டேன்! ஈன்றானின் சொத்தாக அதனை என்றன் எழில்மகனுக் குச்சேர்க்க, இங்கு யார்க்கும் தோன்றாத இடத்தினிலே புதைப்பேன்; பின்பு சொல்வேன்இ ருக்குமிடம் என்று சொன்னான். 65 ஆண்டவரே, நும்மனைவி எங்க ளன்னை அடியேங்கள் உடன்பிறந்த வேலன் ஆன ஈண்டுள்ள இருவரையும் அறியேம் யாமும்! இன்பமுறும் மனைவியார் உமைவி லக்கிப் பூண்டுள்ள உறுதியோ பெரிது! தாங்கள் போகாமல் இருந்ததுவும் புதுமை ஆகும்! ஊன்தளர்ந்தீர், உடல்தளர்ந்தீர், இனியும் செல்ல ஒப்பீரோ என்றுரைத்தார் நட்புக் கொண்டோர். 66 ‘நீங்களெலாம் இங்கிருப்பீர்; பேழை தன்னை நிலையாக ஓரிடத்தில் மறைத்து வைத்துத் தாங்காத ஆவலினைத் தணிப்ப தற்குத் தனியாகப் புல்லூர்ப்போய் வருவேன்’ என்று வாங்கியதோர் வில்லைப்போல் வளைந்த மேனி வானுயர்ந்த குன்றுபோல் நிமிர்ந்து நின்றான்; ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை உம்மென்று தூக்கினான்; உடன்ந டந்தான்! 67 இயல் - 18 வேலன் முதலியவர்க்குச் சீனி என்னும் கணக்காயர் நாட்டின் உண்மை செப்பினார். சீனியெனும் கணக்காயர் வீற்றி ருந்தார், சேணுயர்ந்த ஆலடியில்! எதிரில் சிங்கம் போனிமிர்ந்த பார்வையினால் வேலன் மற்றும் புலியிளைஞர் அமர்ந்திருந்தார் கணக்கா யர்தாம் தேனிகர்த்த தமிழாலே புதிய செய்தி செப்பினார்: இளைஞர்களே, அன்புள் ளாரே, ஏனிந்த நாட்டின்மேல் வேழ நாட்டான் எழுப்பினான் தன்படையை? அதுவு மின்றி 68 பெருமைமிகு கதிரைவேல் மன்னன் மீது பின்னிருந்தே எவன்ஈட்டி தன்னை எய்தான்? அரசியினைக் கொன்றவன்யார்? அரசர் பெற்ற அன்னத்தைக் கொலைசெய்ய நினைப்போன் யாவன்? திருநிறைந்த கதிர்நாட்டின் அரச னென்று திகழுமுடி தனைச்சூட இந்த நேரம் அரண்மனையின் நடுவினிலே வேழ நாட்டின் அரசனெதிர் நின்றிருப்போன் எவன்கண் டீரோ? 69 கதிர்நாட்டின் மேலந்த வேழ நாட்டான் கடும்பகைகொள் ளச்செய்தோன் நரிக்கண் ணன்தான்! முதுகினிலே பின்னின்று ஈட்டி எய்தோன், மொய்குழலைக் கொலைசெய்தோன், அன்னந் தன்னை எதிர்ப்பட்டால் கொலைசெய்ய இருப்போன் அன்னோன்- இப்போது மணிமுடியும் பெறப்போ கின்றான்! மதியுடையாய் வேலனே, உன்அன் னைக்கும் மாக்கொடுமை நரிக்கண்ணன் ஆக்கக் கூடும்! 70 இயல் - 19 வேலா! உன் அன்னை ஆத்தாக் கிழவியைக் காப்பாற்றநீ உடனே போ என்றான் கணக்காயன். உன்அன்னை ஆத்தாவைக் காப்ப தற்கோ உடனேபோ! இந்தா,வாள்! குதிரை தந்தேன்! என்கலைகள் உன்னுயிரைக் காக்க! நாட்டின் இகழ்ச்சிகளைப் போக்குக!நீ புகழ்ச்சி கொள்க! பின்உனக்கு வேண்டுமெனில் இங்கி ருக்கும் பிறதோழர் துணைபுரிவார்; விடைபெற் றுக்கொள்!” என்றுரைத்தார் வாள்எடுத்துக் குதிரை ஏறி எதிர்வணங்கிப் புல்லூரே அதிரச் சென்றான். 71 “ ஐயாவே வேலனுக்குத் துணையாய்ச் செல்ல ஐந்தாறு குதிரைகளை எமக்கிப் போதே கையாலே இவைஎன்று காட்டி விட்டால் கண்ணாலே பார்த்திடுவோம்; அவன ழைத்தால் நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போலே நெஞ்சாலே கொள்கின்ற விசையி னோடு வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்; வாளாலே தங்கள்புகழ் வளர்ப்போம்!” என்றே 72 இருகைகூப் பிச்சொன்னான் ஒருசேய்! அங்கே இருக்கைவிட் டெழுந்தொருசேய் அறிக்கை செய்வான்: ‘வருகைக்குக் காத்திருப்பான் ஐயா; வேலன் வாழ்க்கைக்கும் உதவாது தாழ்க்கை செய்தால்! பருகைக்கு நஞ்சளித்த பழிக்கை ஏற்பேன்; பதைக்கையிலே தடுப்பீரோ? இதைக்கை விட்டால் அருள்கைக்கு நாளெதுதான்? என்மேல் வேலன் அன்புகைக்கும்; அவன்பகைக்கும் கைவ லுக்கும்! 73 போமாறு தலையசைப்பீர்! என்று சொன்னான். புதுமாறு தலைவேண்டும் ஒருவன் நின்றே! ஆமாறு நாமுணர்ந்தோம்; வேலன் அங்கே அழுமாறு தலையிடா திருந்து விட்டால், ஏமாறு தலையடைந்த இந்த நாட்டின் எழில்மாறும் நிலைமாறும்! ஆட்சி மாறும்! நாம்ஆறு தலையடைய நரியின் நோக்கம் நகுமாறு தலையிடுவோம், நவில்க’ என்றான். 74 பொறுத்திருப்பார் வாழ்ந்திருப்பார்! இந்த நாட்டில் புகுந்திருப்பார்; இங்கிருப்பார் தம்மை யெல்லாம் நிறுத்திருப்பார்; இலேசென்று நினைத்தி ருப்போர் நிகழ்வதைக்கண் திருப்பாது பார்த்தி ருப்பார்; குறித்திருப்பார் ஆத்தாவைத் தீயோள் என்று குளிர்ந்திருப்பார்; அவளிறந்தால்! செம்மல் வேலன் மறத்திருப்பார் வைகாணா திருப்பார், காண்பார்! மறைந்திருப்பார், கையிருப்பார் அறிவார் என்றான். 75 இயல் - 20 புல்லூர்ச் சிறுகுடிசையில் ஆத்தாவும் அன்னமும் புல்லூரிற் சிறுகுடிசை தனில்இ ரண்டு புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றை யொன்று நல்லுரையிற் தேற்றியிருந் தன.அவற்றில் நரைபட்ட ஆத்தாளின் நெஞ்ச மொன்று; வல்லூறு குறிவைத்த புறாப்போல் வாழும் மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ள மொன்று! சொல்லிஅழு தாள் ஆத்தா; ஆற்றாள் கண்ணீர் சொரிந்தழுகின் றாளின்னும் பெண்ணை நோக்கி. 76 அன்னத்தின் கண்ணினிக்கும் மகனைத் தேடி ஆவணியில் மணமுடித்துத் தைப்பி றப்பில் மன்னியசிங் கஞ்சுமந்த தவிசில் ஏற்றிக் கதிர்நாட்டின் மணிமுடியை அவளுக் காக்கி என்கண்ணால் பார்த்துள்ளம் மகிழ்வே னென்ற எழில்மன்னன் மொழிஎண்ணி அழுவே னாநான்? அன்னவனின் திருத்தோளும் அகன்ற மார்பும் அழிவுற்ற தைஎண்ணி அழுவே னாநான்? 77 அருமைமகள் தனக்கேற்ற அன்ப னோடும் ஆணிப்பொன் கட்டில்எனும் சேற்றி னுள்ளே எருமைஎனக் கிடந்தின்பம் நுகரு கின்ற எழில்நாளை நான்காணப்பெ றேனோ என்ற பெருமாட்டி மொழிஎண்ணி அழுவே னாநான்? பிள்ளைக்கு நஞ்சூட்டும் தாய்போல் அந்த நரிக்கண்ணன் வஞ்சித்துக் கொன்ற போது நாளற்றுப் போனதெண்ணி அழுவே னாநான்? 78 எதிரெதிரே இருதழற்பந்து கள்சு ழன்றே இருப்பதுபோல் கதிர்நாட்டான் வேழ நாட்டான் அதிர்கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும் கட்புலனுக் கப்பாலாய் விசைகொள் ளுங்கால் முதியஓர் காலாள்போல் தாடி மீசை முடித்துநான் அங்கிருந்தேன். நரிக்கண் ணன்தான் பதுங்குகறுப் புடைபூண்டு வேந்தை மாய்த்தான்- பதைத்தேனே அதைஎண்ணி அழுவே னாநான்? 79 நானிருந்தேன் காலாட்கள் பலரி ருந்தார் நடுவினிலே வேழநாட் டரசன் நின்றான் மேனிமிர்ந்த கரியஉடைக் காலாள் வந்து மெல்லிதனை நரிக்கண்ணன் வெட்டிச் சாய்த்த ஊன்நடுங்கும் செய்தியினைச் சொன்னான். மன்னன் உளம்நடுங்க மற்றவர்கள் உடல்ந டுங்க நானிருந்து மன்னவனைத் தேற்றுங் கால்என் நல்லுயிர்ஒ டுங்கியதற் கழுவே னாநான்? 80 பழநாள்பாண் டியன்உன்றன் மூதா தைக்குப் பரிசளித்தான் இந்நாட்டை! அதைக்கு றிக்கும் முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும் மூடியஅப் பேழையும்போ யிற்றே அந்தோ! இழந்ததினால் பேழையினை, அழகு மிக்க இந்நாடு நின்உரிமை என்ற உண்மை ஒழிந்திடுமே! அதைஎண்ணி அழுவே னோநான்? இவ்வண்ணம் உரைத்தழுது கொண்டி ருந்தாள். 81 இயல் - 21 கிழவி, இவ்வாறு நடந்தவை கூறி நையும்போது, வீரப்பன் அக்குடிசை நோக்கி வந்தவன் இவைகளை ஒளிந்து கேட்டிருந்தான். உண்மை உணர்ந்தான். வெளியினிலே பேழையொடு நின்றி ருந்த வீரப்பன் இவற்றையெல்லாம் கேட்டி ருந்தான்; களிகொண்டான்! தன்முதுகில் உள்ள பேழை கதிர்நாடு கவின்அன்னம் உடைமை என்று வெளிப்படுத்தத் தக்கதோர் பேழை என்று விளங்கிற்று! தன்மனைவி ஆத்தா, அங்குக் கிளிமொழியாள் அன்னத்தைக் காப்ப தற்கும் கேடுதனை நீக்கற்கும் முயலு கின்ற 82 நிலையாவும் விளங்கிற்று! வீரப் பன்தான் நீள்பேழை தனைஆத்தா விடம்இப் போதே குலையாமல் தந்திடவும் நினைத்தான்! நாட்டின் கொந்தளிப்பில் பேழையினை அவள்காப் பாற்றும் வலிஏது? பொறுத்திருப்பேன் எனமு டித்து மற்றும்அவர் பேசுவதைக் கேட்டி ருந்தான்! தலைமீது கைவைத்துத், “தாயே அப்பா தனிவிட்டுச் சென்றீரோ இனிவாழ் வேனோ? 83 இயல் - 22 அன்னத்தின் துன்பம் ஐயகோ என்ஆத்தா! வைய கத்தில் அன்னைமடிந் தாளென்று சொன்ன சொல்லைத் தையலென துளம்பொறுத்த துண்டு; பின்பு தந்தையிறந் ததுபொறுத்த துண்டு; மேலும் துய்யகதிர் நாட்டுரிமை பேழை யோடு தொலைந்ததையும் பொறுத்ததுண்டு; பொறாத தீமை செய்துவந்தான் என்மாமன் என்றால் இந்தச் சிறியஉளம் பெருந்துயரைப் பொறுப்ப துண்டோ? 84 உடன்பிறந்தா ளைவெட்டி, அன்னோள் ஆவி ஒப்பானின் உடல்சாய்த்தே இப்பால் என்னைத் தொடர்ந்தழிக்க எண்ணியவன் மாமன் என்றால், சுரந்தபால் இருந்தருந்திப் பரந்து லாவும் நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் நிறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக் கிடந்துதவம் புரிகின்ற உலகில் இந்நாள் ‘கேடிழைக்கும் உற”வெனும்சொல் கேட்ப தேயோ? 85 ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை ஒருக்கணித்து மார்பணைத்து மேனி யெல்லாம் கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன் கண்மறைக்கும் சுரிகுழலை மேலொ துக்கி மைப்புருவ விழிமீது விழிய மைத்து மலர்வாயால் குளிர்தமிழால் கண்ணே என்று செப்பிமுத்த மிட்டாளே! அன்புள் ளாளின் செந்தாம ரைமுகத்தை மறப்பே னோநான்? 86 இம்மாநி லம்புகழும் தந்தை, முந்தை ஈட்டிவைத்த மாணிக்கம் கூட்டி அள்ளிக் கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால் கலையருள வேண்டித்தன் தலைவ ணங்கி அம்மாஎ னக்கூவிக் கைம்மே லேந்தி அருகமர்ந்து பருகஎன்று பாலும் தந்தே “ அ”ம்முதல் எழுத்தளித்தான்; அறிவோ அன்னோன் அன்பான திருமுகத்தை எண்ணி வாடும்! 87 ஊராளும் தலைவனின்குற் றேவல் செய்வோன் ஓட்டுவிக்கும் சிற்றாளின் கீழ்க்கி டக்கும் ஓர்ஆளின், மகள்,தன்னை உவந்து பெற்றோர் உயிர்துறந்தால் உளந்துடிப்பாள் என்றால், இந்தப் பாராளப் பெற்றாரை என்பெற் றோரை பறிகொடுத்த என்னுயிரோ உடலில் நிற்கும்? யாருமில்லை யான்பெற்ற பேறு பெற்றோர்; இன்றைக்கோ* என்போலக் கெட்டா ரில்லை! 88 இயல் - 23 பதிவிருந்து கேட்டிருந்த வீரப்பன் போய்விட்டான். நரிக் கண்ணனுக்கு முடிசூட்டுவதை முரசறைகிறான் ஒருவன்! எனத்துடித்தாள்! வீரப்பன் எடுத்தான் ஓட்டம்! இங்கிருந்தால் அன்னத்தைத் தேடு வோரின் சினத்தீயில் வெந்திடுதல் அன்றிப் பேழை சிறியநரிக் கண்ணனிடம் சேரு மென்று நினைத்தானாய், யாருமிலா இடம்பு குந்தான்! நீங்கியபின் முரசறைவோன், “நரிக்கண் ணர்தாம் இனிக்கதிர்நாட் டுக்கரசராய் முடிபூண் கின்றார் இந்நாள்”என் றான்இதனை இருவர் கேட்டார். 89 அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான் அழிவைத்தான்! விழிவைத்தான் உரிமை வேரில்! குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில்! எங்கும் கொலை,வைத்தான்! குறைவைத்தான் எண்ணா னாகி வெடிவைத்தான் அறம்வளர்த்த இவ்வீட் டுக்கும்! மின்னொளியே, தன்தலையில் உன்ன தான “ முடி”வைத்தான்; முழக்குகின்றான்; அன்னோன் வாழ்வின் முடிவைத்தான் முழக்குகின்றான் முரச றைந்தே! 90 இந்நேரம் நரிக்கண்ணன் நன்னீ ராடி, எழிலுடையும் இழைபலவும் பூண்டு, வேழ மன்னவனை எதிர்பார்த்துப், பொன்னில் மின்னும் மணிமுடியை அணிவதற்குக் காத்தி ருப்பான்! இந்நேரம், தான்இருக்கும், இடத்தி னின்றே எழிலரண்ம னைநோக்கித் தேரி லேறிப் பின்யாரும் சூழ்ந்துவர வருவான் வேழன்! பேரவையில், மகிழ்ச்சிகொள எவர்இ ருப்பார்?” 91 இயல் - 24 முரசறைதல் கேட்ட ஆத்தா அவனைத் தூற்றுங்கால், எதிரிகள் குடிசையைச் சூழ்ந்தார்கள்! அதே நேரத்தில் வேலனும் பகைவரை எதிர்த்தான். என்றுரைத்த ஆத்தாதன் எரிவை எல்லாம் எடுத்துரைக்கும் நேரத்தில், குடிசை நோக்கி “ அன்னம்அதில் தான்இருப்பாள், ஆத்தா என்னும் அக்கிழவி யுடனிருப்பாள்” என்று கூவி முன்வந்தார் சிலபகைவர் குடிசை நோக்கி! முழங்கிற்றுக் குதிரைகளின் அடிஓ சைதான்! பின்னொருவன் வருகின்றான், அவன்பேர் வேலன்! பெருவாளும் குதிரையும்பாய்ந் தனப கைமேல்! 92 பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் பாய்ந்தனன்பல் ஆடுகட்குள் வேங்கை போலே! கலங்கினர்வே ழவர்!பத்துப் பேர்மாண் டார்கள்! கத்திசுழல் ஓசை, ம றவர்மு ழக்கம், குலைநடுங்க வைத்தன!ஆத் தாதன்,வேலன் குரல்கேட்டாள், வேழவர்கள் அங்கு வந்த நிலையுணர்ந்தாள், அன்னத்தை நோக்கி அங்கு நிகழ்கின்ற போர்நோக்கம் நிகழ்த்திப், பின்னர், 93 இயல் - 25 வேலவனும் பகைவரும் போர் நடத்துகையில், அன்னம், ஆத்தா உருமாறி வெளிச் சென்றார்கள். அன்னத்தை ஆடவனாய் உருமாற் றிட்டாள்; அன்றுபோல் தன்னுருவம் மாற்றிக் கொண்டாள்; கன்னமறைக் குந்தாடி யுடைய தாத்தா, கண்ணொத்த பையனோடு செல்வ தைப்போல் தன்மகனின் கணக்காயர் சீனி வாழும் தனிவீட்டை நோக்கியே விரைந்து சென்றாள்; உன்மகனின் நிலைஎன்ன என்றாள் அன்னம், ஊர்மீட்கச் சாகட்டும் என்றாள் ஆத்தா! 94 ‘கண்ணெடுத்தும் பார்த்தோமா? கைவா ளோடு கடும்போரில் தனியாகக் கிடந்த சேயைப், பெண்ணெடுத்து வளர்த்திட்டாள் அதனா லேதான் பிள்ளைஉயிர் போவதையும் பெற்ற தாய்தான் எண்ணவில்லை’ என்றுலகம் உனைப்ப ழிக்கும்; என்னால்தான் இப்பழியென் றெனைப் பழிக்கும்! மண்ணெடுத்துச் சுட்டிடுசெங் கல்லோ, அன்றி, மலைக்கல்லோ உன்னெஞ்சம் என்றாள் அன்னம். 95 இயல் - 26 ஆத்தாவும் அன்னமும் சீனிக் கணக்காயன் வீடு நோக்கிப் போனார்கள். எதிரில் வேலனின் துணைவர் குதிரைமேல் ஏறிக் குடிசை நோக்கிப் போவதைக் கண்டார்கள். “ *வேலவனைக் காப்பதற்கு நம்மா லாமா? வீண்கவலை கொள்ளுவதில் ஆவ தென்ன? ஞாலத்தில் என்பிள்ளை யின்தி றத்தை நானறியக் கணக்காயர் சொன்ன துண்டு! சோலைஅதோ! அதையடுத்த சிற்றூர் காண்பாய்! தொடர்ந்துவா, விரைவாக” என்றாள் ஆத்தா. நாலைந்து குதிரைகளில் வாள்பி டித்த நல்லிளைஞர் எதிர்வருதல் இருவர் கண்டார். 96 எங்கிருந்து வருகின்றீர்! என்றான் ஓர்சேய் எழில்வேலன் அவ்விடத்தில் வேழ வர்பால் வெங்குருதிப் போர்செய்து கொண்டி ருக்கும் விழற்குடிசைப் புறமாக வந்தோம் என்று தங்குதடை இல்லாமல் ஆத்தா சொன்னாள்! தாவினார் இளைஞரெல்லாம் குதிரை ஏவி! மங்கையிரு கைகொட்டி மகிழ்ந்தாள்; “உன்றன் மகன்முகமும் பார்த்தறியேன் ஆத்தா” என்றாள். 97 இயல் - 27 ஆலடியில் கணக்காயன் எதிரில் சென்று மாற்றுடை களைகிறார்கள். பின், அனைவரும் மாற்றுருவத்தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள். ஆலடியில் அமர்ந்திருந்த கணக்கா யர்பால் ஆத்தாவும் மங்கையும்போய்ப் போர்த்தி ருந்த மேலுடையும் தாம்விலக்கி, நின்று,செய்தி விளக்கிடவே, கணக்காயர் கிளத்த லானார்: வேலவனோ உமைக்காக்க அங்கு வந்தான் வேழவரை எதிர்த்துப்போ ரிடவு மானான் நாலைந்து பேர்இளைஞர் துணைக்கும் சென்றார் நரிக்கண்ணன் தெரிந்துகொள்வான் இனிஎன் நோக்கம்! 98 என்னையவன் சிறைப்படுத்த எண்ணு முன்னம் யாமெல்லாம் மாற்றுருவத் தோடு சென்று மன்னவனாம் வேழவனைத் தனியே கண்டு மங்கைநிலை கூறுவது நல்ல தென்றார்! நன்றென்றார் இருவருமே! உருவம் மாற்றி நடந்தார்கள் மூவருமாய், அரண்ம னைக்குத் தென்புறத்தே வேழவனார் தங்கி யுள்ள திருமன்று தனைநோக்கி மிகவி ரைந்தே! 99 இயல் - 28 வேழமன்னன் திருமன்றில் அமைந்து நரிக்குக் கதிர் நாட்டைப் பட்டம் கட்டினேன் என்று மகிழ்ந்தான். அதை ஒரு முதியோன் மறுத்தான். ஒளிவிளக்குப் பத்தாயி ரத்தின் நாப்பண் உயிர்விளக்காய் வீற்றிருந்தான் வேழ மன்னன்! தெளிவிளக்கும் அறிவுடைய அமைச்சன் தானும், சிறியபடைத் தலைவர்களும் சூழ்ந்தி ருந்தார். களிமிகுக்க வேழத்தான் உரைக்க லுற்றான் கண்ணெதிரில் இருக்கின்ற தன்னாட் டார்பால்; குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக் கொடுத்துவிட்டேன்; அவன்குறையை முடித்து விட்டேன் 100 என்னருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம் யான்புரியத் தக்கதுபு ரிந்து விட்டேன் தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில் தான்பெறத்த குந்ததைத்தான் பெற்று விட்டான்! பொன்முடியை அவன்தலையில் சூட்டும் போது பொதுமக்கள் இந்நாட்டார் முகத்தி லெல்லாம் துன்பத்தை நான்கண்டேன் ஏனோ என்றான் “சொல்வேன்”என் றொருமுதியோன் வணங்கிச் சொல்வான்: 101 நரிக்கண்ணன் கதிர்நாட்டை அடைவ தற்கு நல்லதொரு சூழ்ச்சியினைத் தேட லானான்; எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே ஏற்றினான் தங்கட்கு! நம்பி னீர்கள்! ஒருநாளும் தங்களை அக்கதிரை வேலன் உள்ளத்தால் பேச்சாலே இகழ்ந்த தில்லை...! பெரும்படையும் கொண்டுவந்தீர்! நடந்த போரில் மறவர்நெறி பிழைத்ததுவும் அறமோ ஐயா? 102 இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே ஈட்டியினைப் பின்வந்து கதிர்நாட் டான்மேல் நரிக்கண்ணன் செலுத்தினான், நானும் கண்டேன்! நகைத்ததுவான்! நாணிற்று நல்ல றந்தான்! இருக்கட்டும் பெருவேந்தே, அரசி யாரை எதிர்பாரா வகையாக வஞ்சத் தாலே பெருங்கொலைசெய் தான்அந்தோ! இப்பெண் ணாளைப் பிறரறியா வகையில்நான் காத்தேன் அன்றே. 103 இவ்விளைய பூங்கொடியின் வேர றுக்க என்னவெலாம் செய்கின்றான்! என்னைக் கொல்ல ஒவ்வாத முறையெல்லாம் சூழு கின்றான்! உங்களிடம் நீதிகேட் கின்றேன் என்று, செவ்விதழாள் அன்னத்தை முகிலின் மீண்ட திங்களென மாற்றுருவம் களைந்து காட்டி, அவ்வகையே தானும்தன் உண்மை காட்டி, “ஆத்தாஎன் பேர்;அரசின் பணிப்பெண்” என்றாள். 104 இயல் - 29 ஆத்தா அன்னம் என அறிந்த வேழமன்னன் வியப்புற்ற தோடு, பழி என்மேலல்ல என்றான். வியப்புற்றான்; முகநிறையக் கண்தி றந்து மெல்லியினை*, ஆத்தாவைப் பார்த்தான்; மிக்க துயருற்றான்: “ஒருநாட்டைப் பிடித்த பின்னர் தொடர்புடையார் தமைக்கொல்ல ஒப்பு வேனோ? செயப்பட்ட போர்நடுவில் பகையை நானோ பின்னிருந்து கொலைபுரியச் செய்வேன்?” என்று வியர்த்திட்டான் உடலெல்லாம்! அந்தத் தீயன் விளைத்திட்டான்; நானல்லேன் என்று சொன்னான். 105 அப்போதே நானினைத்தேன்; கேள்வி யுற்றேன்; அவற்றையெல்லாம் நரிக்கண்ணன் மறுத்துக் கூறித் தப்பேதும் இல்லான்போல் ஆடல் செய்தான். கதிர்நாட்டின் தனியரசாய் நரிக்கண் ணற்கும் இப்போது தான்முடியைச் சூட்டி வந்தேன் என்செய்வேன் பழிசுமந்தேன், பழிசு மந்தேன்! எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி யான்காப்பேன் அஞ்சாதீர் என்றான் மன்னன். 106 இயல் - 30 அன்னம் முதலியவரைக் காக்கும் வழியை அரசன் ஆராய்ந்தான். பின்னும்அவன் அமைச்சனையே, நோக்கி, இந்தப் பெண்ணரசி இனிஉய்யும் வண்ணம் யாது? சின்னநடை நரிக்கண்ணன் இடம்வி டுத்தால் தீங்கிழைப்பான்; நல்லஉளப் பாங்கொன் றில்லான்; அன்னையினைக் கொலைசெய்தான்: தந்தை தன்னை அழித்திட்டான்; அன்னத்தை ஒழிப்ப தற்கும் முன்னின்று காத்தாளை ஆத்தா என்னும் முதியாளைத் தீர்த்திடவும், குதியா நின்றான்! 107 கூறுகநின் கருத்தென்றான்; அமைச்சன் சொல்வான்: கொடியோனைக் கதிர்நாட்டை ஆள விட்டீர்! சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில் திருமுடியோ சூட்டுவது? பின்பு காண்பீர்! வீறுடைய கதிரைவேல் மன்னன் ஈன்ற வெண்நிலவு முகத்தாளின் எண்ணங் கேட்டு வேறுநாட் டிளவரசை மணக்கச் செய்து மேலுமொரு தீங்கின்றிக் காக்க வேண்டும். 108 இயல் - 31 ‘‘அன்னம் முதலியவரைக் காப்பாற்ற வேழ நாட்டிலிருந்து ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை ஆண்டுவரச் செய்க’’ என்றான் அமைச்சன். கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி கடுகளவும் தீங்கின்றி இருப்ப தற்குப் பொதுநாட்டம் உடையஓர் அநிஞன் தன்னைப் போயிங்கு நீர்அனுப்ப வேண்டும் என்றான் எதுநாட்டம்? அன்னமே சொல்வாய் என்றான். ஏந்தல்மொழி கேட்டமலர்க் கூந்தல் சொல்வாள்: ‘‘ சதுர்நாட்டிப் பகைமுடிமேல் தாளை நாட்டும் தமிழ்நாட்டுப் பெருவேந்தே, அவையில் உள்ளீர்! 109 பழநாளிற் பாண்டியனின் படைந டத்திப் பகைகொண்ட சோழனையும் வெற்றி கொண்ட அழல்வேலான் என்னருமை மூதா தைக்கே அளித்தான்ஓர் பேழையினைப் பரிசாய்! அந்த எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும் இழை,ஆடை, வாள்பலவும் இருக்கும்; மேலும் அழகான கதிர்நாட்டின் வரலா றெல்லாம் அப்பேழை சொல்லி விடும்; ஆத லாலே, 110 இயல் - 32 அன்னம் கூறுவாள் : என்பேழை அரண்மனையில் இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே வேழமா நாடுடைய வேந்தே, என்றன் மேனாளின் நற்புகழை விளக்கும் அந்தப் பேழைமா றாமல்அதைக் காட்டும் வண்ணம் பெரியதோர் கட்டளையும் இடுதல் வேண்டும்; ஏழையரின் குறைதீர்த்தல் கடமை யன்றோ?’’ என்றுரைத்தாள்; ‘‘நன்றுரைத்தாய் பெண்ணே, அந்தப் பேழைமாற் றம்சிறிதும் இன்றி இங்கே பெரும்படையால் வரும்படிசெய் கின்றே”னென்று. 111 ஆளியெனும் படைத்தலைவா செல்க என்றான்; ஆயிரவர் உடன்செல்க என்றான்! இந்த நாளில்இதே நேரத்தில் அரண்ம னைக்கு நாற்புறமும் காப்பமைத்தும் உட்பு குந்தும் ஆளிருவர் மூவர்விழுக் காடு நீடும் அறைதோறும் தேடிடுக எங்கும் பார்ப்பீர்! கேளீர்இதை, அப்பேழை அடையா ளத்தைக் கிளிமொழியாள் சொல்லிடுவாள்’’ என்றான் மன்னன், 112 இயல் - 33 பேழையின் அடையாளம் கூறினாள் அன்னம் இளவஞ்சி அன்னம்உரைத் திடுவாள்: “ஐயா என்பேழை மன்னவரின் வாளின் நீளம்! உள்அகலம் மூன்றுசாண்! உயரம் நாற்சாண்; ஒளிதிகழும் கிளிச்சிறைப்பொன் தகடு தன்னால் வெளிப்புறமும், பொதிகைமலைச் சந்த னத்தின் வெண்பலகை உட்புறமும் காணும் மேலே உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளி ருக்கும் உயர்பொருள்கள் அத்தனைக்கும் பெயர்கள் காணும் 113 வாள்,நகைகள், ஆடைவகை முழுநீ ளத்தில் வைத்திடுபொற் பட்டயம்பே ழைக்கு ளுண்டு! காணுகநீர் என்றுரைத்துத் தான ணிந்த கழுத்தணியைக் கழற்றியதில் அமைத்தி ருந்த ஆணிப்பொற் பேழையதன் அடையா ளத்தை அரசருக்கும் படையாட்சி தனக்கும் காட்டிச் சேணுயர்ந்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின் தென்அறையில் அப்பேழை இருக்கும்” என்றாள். 114 இயல் - 34 அன்னம் முதலியவர்களுடன் படையை அனுப்பி அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான் மன்னன். “ ஓடுக,பாண் டியன்பரிசை நோக்கி நீவீர்! உமைத்தடுத்தால் நமதாணை அவர்க்குச் சொல்க! தேடுக”வென் றான்மன்னன்! சென்றிட் டார்கள்! “திருநாட்டை வென்றேன்நான் எனினும் அந்த நாடுதனை உடையவர்க்கே நான ளித்து நாளடைவில் அவரிடத்தில் கப்பம் கொள்ளல் பீடுடைய அறமாகும்! இந்த நாட்டின் பேருரிமை ஆராய்வேன்” என்றான் மன்னன். 115 அந்நேரம் எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்த அமைச்சன்இது கூறுகின்றான் மன்ன வன்பால்: மன்னவரே ஆளியினைப் போகச் சொன்னீர்- மற்றந்தப் படைத்தலைவன் நரிக்கண் ணற்குச் சின்னவனே ஆதலினால் பேழை தேடும் திறத்தினிலே குறைச்சல்வந் துசேரக் கூடும் இந்நிலையில் பொறுப்புள்ள ஆள னுப்பி எழிற்பேழை தனைத்தேடச் செய்க என்றான். 116 ஆத்தாவும் உரைத்திடுவாள்: ஆம்ஆம் நானே அவ்விடத்தில் போகின்றேன்; துணைய ளிப்பீர்! தீத்தாவும் கண்ணாலே நரிக்கண் ணன்தான் சிறியபடைத் தலைவனையே அஞ்ச வைத்துக் காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக் கைப்பற்றிக் கொள்வானே!” என்று கூறத் தாத்தாவைப் போலுருவை மாற்றிக் கொள்க, தக்கபடை யொடுசெல்க என்றான் மன்னன். 117 இயல் - 35 அன்னம் முதலியவர் அரண்மனையடைந்தார்கள்: ஆளி, அரண்மனையில் தேடியதில் பேழை இல்லை என்றான். முன்போல ஆணுருவம் பூண்டாள் ஆத்தா, முழுநீள வாள்ஒன்றும் இடையில் சேர்த்தாள்! பின்தொடர்ந்தான் கணக்காயன், வாளும் ஏந்திப்! பிற,காலாட் படைதொடர அரண்மனைக்கு முன்,வாயில் தனையடைந்தார்! மேலும் உள்ளே மொய்த்தபடை மேல்சென்று மொய்த்து நிற்கச் சின்னதொரு படைத்தலைவன் ஆளி என்பான் “தேடியதில் பேழையினைக் காணோம்” என்றான். 118 திடுக்கிட்டான் கணக்காயன்! நரிக்கண் ணையா தெருக்கதவின் அருகினிலும் போக வேண்டாம்; படைமறவர் யாவருமே வெளிச்செல் லாதீர்- பகரும்இது வேழவரின் ஆணை யாகும்! அடுக்களையோ ஆடரங்கோ, எவ்வி டத்தும் அணுவணுவாய்ப் பேழையினைத் தேட வேண்டும்! நடுவிலுள்ள உமையும்ஆ ராய வேண்டும் நகராதீர்! என்றுரைத்தான்; நன்றென் றார்கள். 119 இயல் - 36 கணக்காயன் முதலியவர்கள் தேடினார்கள். அங்கிருந்த மற்றவர்கள் அவ்விடம் விட்டு வெளியிற் செல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், ஒருவன் மட்டும் வெளியில் ஓடுகிறான். ஆத்தா பின் தொடர்கின்றாள். கணக்காயன் எவ்விடத்தும் துணைவ ரோடு கடிதாகத் தேடுகையில், ஆட்கள் தம்முள் இணைப்பாக நின்றிருக்கும் ஒருவன் கண்ணை இமைக்காமல் நாற்றிசையும் செலுத்து வோனாய் அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல அகலுவதைக் கருத்தாக ஆத்தா பார்த்தே, ‘கணுக்காலை வெட்டுவேன் செல்லேல்’ என்றாள் கடிதுபறந் தான்;பறந்தாள், வாளை ஓச்சி! 120 இயல் - 37 ஓடியவன் கணுக்காலை ஆத்தா வெட்ட, அதேபோதில் அவன் அவளின் இடது கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள். அரசநெடுந் தெருநீங்கிப் பல்க லைகள் ஆய்கூடம், நோய்நீக்கும் மருத்து வத்தின் பெருநிலையம் நீங்கிப்பின், குறுக்கே ஓடிப் பிறைக்கோட்டு யானைபல நிறுத்தும் கூடத் தருகினிலோர் இருள்கிடக்கும் பொதுமன் றத்தில் அவன்புகுந்தான். கணுக்காலை வெட்டி னாள்.தன் அரிதான இடக்கையை இழந்தாள் ஆத்தா! இருமுதியார் அருகருகு துடித்து வீழ்ந்தார். 121 செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும் தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்! “ஆவி இந்நிலையில் ஆயிற்றா” என்னும் வாய்கள்! இரண்டுள்ளம் சுரப்பற்ற பசுக்காம் பைப்போல் எந்நினைவும் இல்லாமல் துன்ப மேயாம்! இம்’மென்னும் இருகுரல்கள் வைய வாழ்க்கை சின்னேரம் சின்னேரம் என்ப தெண்ணத் திடுக்கிடும்அவ் விருமுதுமைப் பருவம் ஆங்கே! 122 தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த தடை,பிரிவு கசப்பனைத்தும் பல்லாண் டாகப் புனத்திலுறும் புதல்போலே வளர்ந்த தாலே புறத்தொடர்பே இல்லாத முதிய ஆத்தா அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில் அம்மாஎன் பதுபோலே, துணைவன் தன்னை நினைத்தவளாய்த் தாழ்குரலில் “அத்தான்” என்றாள்; நிறைவியப்பால் வீரப்பன் “ஆத்தா” என்றான்! 123 இயல் - 38 வீரப்பன் தன் மனைவியான ஆத்தாவைப் புரண்டணைத் தான், அவளும் அவ்வாறே! “ ஆண்என்று வாள்சுமந்தும் எனைத்தொ டர்ந்தும் ஆள்என்றும் மரமென்றும் தெரியாப் போதில் காண்என்று கணுக்காலைத் தீர்த்தாய் என்உள் கனிஎன்றும் கரும்பென்றும் கிடந்த நீதான்; வீண்என்று கருதுகிலேன்! என்செய் கைக்கு விளைவென்று கருதுகின்றேன்! கொடிய சாவைப் பூண்என்று புகன்றாலும் மகிழ்வேன்” என்று, புரண்டணைத்துப், ‘பொன்னே’என் றழுதான் கூவி! 124 “ படையாளிற் பகைஆள்போல் இருந்தாய் அத்தான்! பாண்டியனார் பரிசென்னும் நீண்ட பேழைக் குடையாளின் பணியாள்நான்! நரிக்கண் ணற்கே உளவாளாய் நீயங்கே ஓடி னாய்என் றடையாளம் தெரியாமல் இழைத்த குற்றம்; அறிவாளா, பொறுத்திடுக” என்று நெஞ்சம் உடைவாளாய் இருகையால் அணைத்த மெய்யை ஒருகையால் அணைத்தன்பின் உயர்வா ளானாள்! 125 பிள்ளையெங்கே?’ எனக்கேட்டான் வீரப் பன்தான்; “பெருங்குடிசை தனிலெனையும் வேந்தன் பெற்ற கிள்ளையையும் சிறைசெய்ய நரிக்கண் தீயன் கிளப்பிவிட்ட கொடுமறவர் உயிரை அங்கே கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்; அன்னம் என்னும் கோவையிட்ட செவ்விதழாள் உள்ளத் துள்ளே முள்ளையிட்டார் போல்அச்ச மேமே லிட்டு முறையிட்டாள், இட்டுவந்தேன்” என்றாள் ஆத்தா. 126 மண்காண முகில்கிழித்து நிலவு வந்து மற்றவர்கள் நமைக்காண வைத்தல் காண்பாய்; புண்காண இடருற்றுக் கிடக்கின் றோமே! புறஞ்சென்று நலங்காண வகையு மில்லை! பண்காணும் மொழிஅன்னம் தனையும், பெற்ற படிகண்டபிள் ளையையும் இந்நாள் என்றன் கண்காணு மோஎன்றான்! துன்பத் துக்கோர் கரைகாணா மற்கிடந்தார் இருவர் அங்கே. 127 இயல் - 39 நரிக்கண்ணனை வேழ மன்னன் சீறினான் திகழ்வேழ மன்னனுடன் அமைச்சன், அன்னம், செயலுடையார் திருமன்றில் அமர்ந்தி ருந்தார்! அகம்வேறு பட்டநரிக் கண்ணன் அங்கே அழைத்தபடி வந்துநின்றான்; வணக்கம் செய்தான்! “ இகழ்ச்சிமுடி பூண்டவனே, என்செய் தாய்நீ? இந்நாட்டு மன்னவனைப் பின்னி ருந்து நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடே நாட்டின் நங்கையினைத் தங்கையென்றும் பாராய்; கொன்றாய்! 128 நாடிழந்தாள்; நற்றந்தை, தாயி ழந்தாள்; நலமிழந்தாள், கலமிழந்தாள்; கொடி பறந்த வீடிழந்தாள்; புகழ் இழந்தாள்; மணமி ழந்த விரிமலரைப் போலிருந்தாள்! அரச அன்னப் பேடிழந்த அனைத்துக்கும் நீஆ ளாகிப் பெற்றவற்றில் மீதியுள்ள உயிர்இ ழக்கத் தேடுகின்றாய்; ஆத்தாவைத் தீர்த்திட் டாயோ, திருடிவிட்டாய் பாண்டியனார் பரிசை ஏடா! 129 பின்னறிவாய் என்தோளின் வாளின் சீற்றம்! பிழைசெய்த தேன்”என்று மன்னன் கேட்டான். “ முன்னறியும் அறிஞர்க்கு முதல்வ ரான மூதறிஞ ரே,முழுதும் அறிவீர் என்னை! என்னறிவால் வானொடுவிண் ணறிய நாயேன் எக்கொலையும் செய்தறியேன்; பொறுத்த ருள்க. கன்னலிடைக் கணுக்கண்டு பொறாரோ? தங்கள் கைவாளால் வீழ்த்திடுமுன், காலில் வீழ்ந்தேன்! 130 இயல் - 40 தான் கொலை செய்யவில்லை; என் மகனை மணந்து கொண்டு இந்நாட்டை இவளே ஆளட்டும் என்றான் நரிக்கண்ணன். அன்னத்தைக் கொலைபுரிதல் இல்லை; அந்தோ ஆத்தாவைக் கொலைபுரிதல் இல்லை; அந்தப் பொன்னொத்த பேழையினைக் கண்ட தில்லை; பொய்யுரைப்ப தாய்இல்லை; இதையும் கேட்பீர்: கன்னத்தைத் தன்நகமே கீறி டாது! கதிர்நாட்டை ஆண்டான்என் மைத்து னன்தான்; தன்அத்தை மகனைஇவள் மணந்து கொண்டு தானாள்க இந்நாட்டைப் பின்நாள் என்றான். 131 நரிஇவ்வா றுரைத்தஉடன், அரசன், “ஆம் ஆம் நன்முடிவு! நன்முடிவே!! அன்ன மேஉன் கருத்தென்ன? அதுதானே?” என்று கேட்டான் கனிமொழியாள் கூறுகின்றாள்: குயிலி னங்கள் திருச்சின்னம் ஊத,நறுந் தென்றல் வீசச், செவ்வடியால் அன்னம்உலா வரும்நா டாள்வீர்! ஒருத்தன்எனை மணப்பதெனில் அன்னோன், என்றன் உயர்பேழை தனைத்தேடித் தருதல் வேண்டும். 132 இயல் - 41 அன்னம் “என் பேழையைத் தேடித் தருவோனையே நான் மணப்பேன்” என்றாள். முன்பாண்டு வையத்தில் முறைந டாத்தி முத்தாண்டான் எனும்பெயரை நிலைநி றுத்தும் தென்பாண்டி நாட்டான்பால் என்மூ தாதை சிறைச்சோழ னைவென்று, பெற்ற தான என்பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன் எவனெனினும் அவனுக்கே உரியோள் ஆவேன்! அன்பாண்டா ரே,இதுஎன் உறுதி யாகும்; அருள்புரிய வேண்டுமென்றாள் தெருள்உள் ளத்தாள். 133 காற்றுக்கும் ஆடாமல், கனல்த னக்கும் கரியாமல் நன்முறையில் முப்ப ழத்தின் சாற்றுக்கு நிகரான மொழியா ளே,நீ சாற்றுமொழி ஒவ்வொன்றும் நோக்கும் போது நூற்றுக்கொன் றேஅன்றோ மானே! உன்றன் நுண்ணறிவால் நீயுரைத்த வாறு நானும் ஏற்றுக்கொண் டேனதுபோல் ஆகட் டும்;தீர்ப் பிதுவென்றான் மதிபெற்ற வேழ மன்னன். 134 இயல் - 42 அன்னத்தின் எண்ணத்தை அரசன் ஒப்பினான். இம் முடிவை முரசறைவிக்கக் கேட்டுக் கொண்டாள் அன்னம். “ இம்முடிவை நாட்டார்க்கு முரச றைந்தே இயம்புவிக்க வேண்டுகின்றேன்” என்றாள் அன்னம்! செம்முடியை அசைத்திட்டான் மன்னன்; ஆங்கே செயல்முடிப்போம் என்றார்கள் அங்கி ருந்தோர்... “ அம்முடிவால் தீமைபல நேர்தல் கூடும். அன்னமே, மருமகளே, இதனைக் கேட்பாய்! தம்முடிமேல் பேழையினைத் தூக்கி வந்த தண்டூன்று கிழவரைநீ மணப்ப துண்டோ?” 135 எனக்கேட்டான் நரிக் கண்ணன், அன்னம் - சொன்னாள்: “ஈவார்ஓர் கிழவரெனில் எனைம ணக்க நினைப்பரோ? நினைப்பரெனில் கிழவ ரல்லர்- நெஞ்சத்தில் இளைத்தாரே வயதில் மூத்தார்” எனஉரைக்கப், பின்னும்நரிக் கண்ணன்: “நோயால் இடருற்றோன் என்றாலோ?” என்று கேட்டான். “ தனியரசு போக்காத நோயை நானே தவிர்க்கின்ற பேறுபெற்றால் மகிழ்வேன்” என்றாள். 136 “பகையாளி யாயிருந்தால் தீமை” என்றான். “பகையாளி உறவாளி ஆதல் உண்டு; மிகஉறவும் பகையாளி ஆதல் உண்டு - வியப்பில்லை இது”என்றாள். “குழந்தை யாயின் நகையாரோ” என்றுரைத் தான்.“அவ் வரும்பு நன்மணத்தைச் செய்யுமெனல் நகைப்பே!” என்றாள் “இகழ்சாதி ஒப்புவதோ!” என்று கேட்டான். “இவ்வுலகில் எல்லாரும் நிகரே” என்றாள்! 137 கூழையே னுங்கொண்டு காட்டு மேட்டுக் கொல்லையே னும்சுற்றித் திரியு மந்த ஏழையே னும்கண்ணுக் கினியான் இன்றேல் இம்மியே னும்வாழ்வை இனியான் வேண்டேன்! “ கோழையே னும்பெண்டிர் இவ்வா றோதும் கொள்கைஏ னில்லைகாண்: இன்பம் இன்றேல் பேழைஏன், சீர்த்திஏன், பெற்றி ருக்கும் பெண்மைஏன், இளமைஏன்?” என்றான் மாமன் 138 ஒத்தஅன்பால் ஒருத்திபெறும் காத லின்பம் ஒன்றுதான் இங்குள்ள தென்று ரைத்தாய்; செத்தவன்பால் ஒருத்திபெறும் இன்பம் உண்டு சேதிஇது புதிதாகும்; கேட்க வேண்டும்: மெத்த,வன்பால் வஞ்சத்தால் மான மின்றி மிக்கபெரு மக்களெல்லாம் ஏங்க ஏங்கச் சொத்துஅவன்பால் பெற்றவனை மாற்றி அந்தத் தூயான்பால் அன்புபெறச் செய்தல் இன்பம்! 139 இன்பம்வரும் வழிகள்பல உண்டு மண்ணில்! எதிர்த்துநேர் வெற்றிபெற முடியா தென்றே அன்பமைய உறவாடித் தன்கை வாளால் அழித்துப்பின் முழுநாடும் அடைந்தான் என்றால், பின்பவன்பால் பொன்னாட்டை மீட்கப் போக்கும் பெருநாட்கள் ஒவ்வொன்றும் திருநா ளாகும்! வன்பகையால் துடிக்கையிலும் தொண்டு செய்வோன் வரவேற்கும் இன்பத்துக் களவே இல்லை! 140 என்றுபல கூறியபின், எழில்வேந் தன்பால் “என்பாண்டி யன்பரிசைத் தேடு விக்க இன்றுமுதல் நீவிர்,நடு நின்று நோக்கி இடரின்றிக் காப்பதுநும் கடனே” என்றாள். நன்றுமட மயிலேநீ செல்க என்றான்,- “நரிக்கண்ணா, இருக்கின்றேன் நானும் இங்கே; ஒன்றுபிழை என்றாலும் ஒப்பேன்! அன்னம் ஒருத்திஉயிர் உன்குடியின் உயிருக் கொப்பாம்! 141 அன்னத்தின் அன்புடையார்; நரிக்கண் ணற்கே ஆனவர்கள் என்னுமோர் பாகு பாடு தன்னை நம் படைமறவர், உளவு காண்போர் சற்றேனும் கருதாமல் நடத்தல் வேண்டும்; சின்னநரிக் கண்ணனவன் வஞ்சம், சூழ்ச்சி, செயநினைப்பான்; செய்திடுமுன் என்பால் சொல்க! மன்னுகவே சரிநீதி என்று மன்னன் வழுத்தினான் எல்லாரும் வணங்கிச் சென்றார். 142 இயல் - 43 முரசறையப்பட்டது! கதிர்நாட்டின் வீதியெல்லாம் யானை மீது கடிமுரசு முழங்கினான்; அன்னம் என்னும் கதிரைவேல் மன்னன்மகள் இழந்து போன கவின்பாண்டியன் பரிசைத் தேடித் தந்தால் அதுபோதே அவனையோ அவன்கு றிக்கும் ஆளனையோ அவள்மணப்பாள்! தேடு வோர்க்கும் எதிர்ப்பில்லை, - எவராலும் இடரும் இல்லை. இதுவேழ மன்னவனார் ஆணை” என்றான்! 143 இயல் - 44 ஊர்ப் பேச்சுக்கள் முழக்கத்தைக் கேட்டவர்கள் பல உ ரைப்பார்: முறையறியா நரிக்கண்ணன் மகனாய் வந்த கொழுக்கட்டை அன்னத்தை மணந்து கொள்வான்; கொடுத்திடுவான், எடுத்திருக்கும் பேழை தன்னை! வழக்கத்தை விடுவானோ? வஞ்சம் சூழ்ச்சி வற்றாத கடலன்றோ? உற்றார் தம்மை இழக்கத்தான் செய்தானே! இருக்கும் பெண்ணை இழுக்கத்தான் இச்சூழ்ச்சி செய்தான் என்பார். 144 கள்ளர்பலர் இருக்கின்றார் தென்மலைக்குள் கைப்பற்றிப் போயிருப்பார்; அங்குச் சென்றால் உள்ளபொருள் அகப்படுமே என்பார்; ஆனால் உட்செல்ல யார்துணிவார் என்று ரைப்பார், பிள்ளைகள்போய் அரண்மனையில் விளையா டுங்கால் பெட்டியினை எடுத்திருப்பார், அவர்கள் அப்பன் கொள்ளையடித் துக்கொள்வான்; அன்ன மென்னும் ‘கோக்காத முத்தை’என்று சிலபேர் சொல்வார். 145 அவ்வமைச்சன் பொல்லாத திருட னன்றோ? ஆளில்லா நேரத்தில் அடித்துக் கொன்று செவ்வையாய் இந்நாளில் அன்னத் திற்குத் தித்திப்புக் காட்டிஅந்த மாம்ப ழத்தைக் கவ்விடுவான் அள்ளூறக் கசக்க ‘எட்டிக் காயா’என்பார்சிலபேர்! அந்தப் பேழை இவ்வால மரத்தடியில் என்பார் சில்லோர்; இத்தோப்பில் இக்கிணற்றில் என்பார் பல்லோர்! 146 இயல் - 45 நீலி என்னும் தோழியிடம் அன்னம் வருத்தமுரைத்தாள் நிலவெரிக்கும் இரவினிலே அரச அன்னம் நீலிஎனும் தோழியிடம் நிகழ்த்து கின்றாள்: குலையெரிந்து போனதடி! ஆத்தா வின்கை குறைபட்டுப் போனது; அவள்ம ணாளர் நிலைகலங்கக் கணுக்காலை இழந்து போனார்! நெற்றியிலே வாளின் நுனிபட்ட தாலே, மலைநிகர்த்த தோளுடையான் வேல னுக்கு வாடிற்றாம் மலர்முகமும்! என்னால்! என்னால்! 147 வீரப்பக் கிழவரைநான் கண்டேன்; அன்னார் விளக்கமுறச் சொல்லவில்லை எனினும், ‘பெண்ணே!’ ஆரப்பன் நாட்டுக்கு நரிபி றந்தான்? அதுவெல்லாம் இல்லைஇனி நீயே ஆள்வாய்! நேரப்போ வதையெல்லாம் அறிவார் யாவர்? நிலையறியா நரிக்கண்ணன் கூத்த டித்தான்! தீரட்டும் என்நோயும்; ஆத்தா நோயும்! சேரப்பல் லாண்டுநீ வாழி’ என்றார். 148 இயல் - 46 நீலியும் அன்னமும் பேசியிருக்கையில் நரியின் மகன் பொன்னப்பன் வந்தான். பெரியார்வாய்ச் சொற்பலிக்கும் என்றாள் அன்னம்; “பிழையார்செய் தாலுமவர் பிழையார் அம்மா! உரியார்க்கோ தாயகமும் உரிய தாகும்,- ஒன்றுக்கும் அஞ்சற்க” என்றாள் நீலி! நரியாரின் மகன்வந்தான் அங்கப் போது- நான்உன்றன் அத்தான்என் றான்சி ரித்தான்! தெரியாதா நான்நேற்றுக் காலை, வீட்டுத் தென்புறத்தில் நின்றிருந்தாய் பார்த்தேன் என்றான்! 149 என்அப்பன் உன்மாமன் ஆத லாலே எனக்குநீ மைத்துனிதான்! நானுன் அத்தான்! பொன்னப்பன் என்றுபெயர் எனக்கு! நான்,மேல் போட்டிருக்கும் பொன்னாடை பார்ந கைபார்! உன்னைப்போல் நான்அழகன்; அழகி நீயும்! ஒன்பதுதேர் எனக்குமுண்டு வெள்ளி யாலே! தின்னப்பல் பண்டங்கள் வீட்டி லுண்டு திடுக்கிட்டுப் போவாய்நீ அவற்றைக் கண்டால்! 150 தேனாலும் பாலாலும் என்றன் மேனி செம்மையுடன் வளர்ந்த துண்டு. மெய்தான் இந்நாள் மானாலும் கிளியாலும் இளைத்துப் போனேன், மலர்ச் சோலை தன்னில்நான் ஓடி ஆடி! ஆனாலும் ஒருபேச்சுக் கேட்பாய்; நானோ அரசன்மகன்! பலர்என்னை மணக்க வந்தார்; போனாலும் போகட்டும் அன்ன மென்னும் பூவையைத் தான்மணப்போ மேஎனநி னைத்தேன். 151 எவ்வளவோ வேலையுண்டு முடிக்க வேண்டும்: இங்கிருந்து போய்முதலில் முரச றைந்தே எவ்வூர்க்கும் திருமணத்தை முழக்கச் சொல்லி எங்கெங்கும் வீதிகளை விளக்கச் சொல்லி ஒவ்வொருவீ டும்சிறப்புச் செய்யச் சொல்லி உன்பேரும் என்பேரும் எழுதி ஓலை செவ்வையுறப் பிறநாட்டு மன்னர்க் கெல்லாம் திருமணத்தின் அறிவிப்பை அனுப்பவேண்டும். 152 மணந்துகொண்டால் என்னிடமே இருக்க வேண்டும்; மரியாதை யாய்நடந்து கொள்ள வேண்டும்! பிணம்போல எப்போதும் தூங்க வேண்டாம்! பிச்சைக்கா ரர்வந்தால் அரிசி போடு! பணம்போடு; குறைந்துவிடப் போவ தில்லை! பாலினிக்கும்! நம்வீட்டில் மோர்பு ளிக்கும்! துணிந்துநிற்பாய் என்னோடு திருடர் வந்தால்! சுருக்கமென்ன முகத்தினிலே? அதெல்லாம் வேண்டாம். 153 மனைவிஎன்றும் கணவனென்றும் இருந்தால் ஏதோ மகிழ்ச்சியினால் கலாம்புலாம் எனக்கி டத்தல் அனைவர்க்கும் உள்ளதுதான்; ஆனால் நாட்டின் அரசனென்றும் குடிகளென்றும் இருத்த லாலே எனைவந்து தொந்தரவு செய்ய லாமா? எனக்கன்றோ அதுகுறைவு? நீயே சொல்வாய்- மனிதனுக்குத் தொல்லையுண்டு பண்ணு கின்றாய்; மனைவியா மற்றென்ன விலங்கு தானா? 154 இவ்வகையாய்ப் பொன்னப்பன் அடுக்கு கின்றான் இளவஞ்சி, நீலிமுகம் பார்த்துப் பார்த்தே செவ்விதழின் கதவுடைத்து வரும்சி ரிப்பைத் திருப்பிஅழைத் துள்ளடக்கிக் கொண்டி ருந்தாள். எவ்வளவோ சொல்லிவிட்டான், இன்னும் சொல்வான்; என்தம்பி உனக்கென்ன பகையா? உன்னை அவ்வளவாய் மதிக்கவில்லை என்று சொன்னால் ஆர்குற்றம்? அப்படிநீ வைத்துக் கொண்டாய்! 155 மாமியார் ஒன்றுசொன்னால் மறுக்கின் றாயே மருமகளைக் காப்பதெல்லாம் யார்பொ றுப்பு? நாமியார் அவரைவிடச் சிறியோ மன்றோ? நம்பிள்ளை குட்டிகளை வளர்ப்ப வர்யார்? மீமீஎன் றழும்ஒன்று, மற்றும் ஒன்று விளையாடும், ஒருபிள்ளை தேர்ந டத்தும்- ஆமிந்த வேலையெலாம் அவர்பார்க் கட்டும்; அதிலேநீ தலையிடுதல் சரியே இல்லை! 156 மணவீட்டின் வாயிலிலே கமுகும் தெங்கும் வாழையும் கட்டுதல்வேண் டும்;ஒருபு றத்தில் கணகணென இசைக்கருவி முழங்க வேண்டும்; கைகாட்டிக் கண்காட்டி ஆடும் மாதர் மணியரங்கில் அணிசெய்ய வேண்டும்! அங்கு வருவார்க்கு வெற்றிலையும் பாக்கும் தந்து வணக்கத்தைச் சொல்லியனுப் புதலும் வேண்டும்- வாயார நமைவாழ்த்தி அவர்கள் போவார்! 157 இவைஎல்லாம் ஒருபுறமி ருக்க, நானோ ஏழைகட்குச் சோறிட்டுத் துணியும் தந்து கவலையிலா திருக்கும்வகை செய்வ தென்று காப்புக்கட் டிக்கொண்டேன்! அதுவு மின்றி தவில் அடிப்போன் காதெல்லாம் கிழிப்பான்; அந்தச் சந்தடியை விலக்கிவிட வேண்டும்! மிக்க உவகையுடன் தாலியினைக் கட்டு கின்றேன் உன்கழுத்தை என்பக்கம் திருப்பு நன்றாய்- 158 ஏன்வெட்கப் படவேண்டும்? கட்டு வோன்நான் இதனாலே யாருன்னை இகழ்வார் கூறு? கூன்என்ன? நிமிர்ந்திருந்தால் நல்ல தன்றோ? கூட்டமாய் வந்தவர்கள் போன பின்பு ஏனத்தில் பசுப்பாலை ஏந்தி வந்தே எனக்குமுனக் கும்கொடுக்கும் போது, நீஎன் மானத்தைக் கெடுக்காதே சொன்னேன் சொன்னேன்; வாங்கிக்கொள் நான்குடிப்பேன்; குடிப்பாய் நீயும் 159 பிள்ளைகளைத் தூங்கவைத்த பிறகு தானே பெற்றவள்தூங் கிடவேண்டும்? அதைவி டுத்துச் சொள்ளொழுக நீமுன்பு தூங்க லாமா?- சொல்என்றான் கொட்டாவி விட்டுக் கொண்டே! பள்ளிக்குப் போகையிலே பிள்ளை கட்குப் பண்டங்கள் கொடுத்தனுப்பச் சொன்னான்; சொல்லி, வெள்ளைவிழி காட்டிஉடல் துவண்டு குந்தி மெதுவாகப் படுத்துப்பின் குறட்டை விட்டான்! 160 சிரிக்கின்ற நீலியினை நோக்கி அன்னம் தெளிந்திடும்உள் ளத்தோடு செப்பு கின்றாள்: “ இருக்குமென நான்நினைத்தேன் அந்தப் பேழை இவனிடத்தில் இல்லையடி, நல்ல வேளை; சிரிக்கஉடல் எடுத்தவனை மணக்கத் தக்க தேவைஇல்லை; ஆனாலும் இவனைப் போலே பொருத்தமில்லான் பேழையினைக் கொண்டு தந்தால் பொற்றாலி புனையவோ வேண்டும்?” என்றாள். 161 இயல் - 47 நீலியும் அன்னமும் நிலா முற்றத்திற் சேர்ந்தனர். அதே இரவில் நரிக்கண்ணனும் அமைச்சும் தனித்துப் பேசியிருந்தார்கள் சிரித்திருந்த நீலியவள் இரக்க முற்றாள் சிலபேசி நிலாமுற்றம் நீங்கி னார்கள்! விரித்திருந்த மெத்தையிலே தனிய றைக்குள் மேம்பாட்டுத் தாமரைக்கண் கூம்ப லுற்றாள் கிரிச்சென்னும் சுவர்க்கோழி வாய டங்கிக் கிடக்கின்ற நள்ளிரவில் அமைதி யின்றி நரிக்கண்ணன் தனக்குரிய அமைச்ச னோடு நடுக்கமொடு பலபேசிக் கிடப்பா னானான். 162 தேன்வெறுக்கும் வண்டுண்டோ! நல்அ றப்போர்ச் செயல்வெறுக்கும் தமிழருண்டோ! தெண்ணீர் தன்னை மீன்வெறுத்த துண்டோ?இவ் வன்ன மென்னும் மின்னாள்தன் திருமணத்தை வெறுத்து ரைத்தாள் ஏன்வெறுத்தாள்? பேரின்பம் விரும்பு கின்றாள்! எதைஅவள்பே ரின்பமென நினைத்தாள்? யாவும் தான்வெறுத்தும், என்குடியை வேர றுத்தும் தன்பழிதீர்ப் பதையே பேரின்பம் என்றாள் 163 பேழையினை, அதிலிருக்கும் பட்ட யத்தைப் பெற்றபின்பு கதிர்நாட்டின் உரிமை தன்னை வேழத்தா னிடம்காட்டி ஆட்சி பெற்று வெள்ளெருக்கை என்வீட்டில் வளர்க்க அன்றோ ஆழத்தில் உழுகின்றாள்? என்ன செய்வேன்! அறிவுடையாய் உரைஎன்றான்! அமைச்சன் சொல்வான் பேழைகிடைக் காதபடி செய்ய வேண்டும் கிடைத்துவிட்டால் பேரிழவே என்று சொன்னான். 164 நமைச்சேர்ந்த படைமற வர்போல் உடுத்து நம்மோடு நின்றிருந்தான் அவன்பால் தந்து “சுமந்துபோய்த் தேரோட்டி யிடம்கொ டுப்பாய் தூய்தான பேழையினை” என்று சொன்னேன் இமைக்குள்ளே கருவிழியைக் கொண்டு போகும் எத்தனவன் பேழையினை ஏப்ப மிட்டான் கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும் கதிர்நாட்டின் மலைமேல்தான் இருத்தல் கூடும். 165 பெரும்பாலும் பேழையங்கே இருத்தல் கூடும் பெருந்திரளாய் ஆட்களைநாம் அனுப்ப வேண்டும்! ஒருவரையும் மலைப்பக்கம் விடுதல் வேண்டாம். ஊர்தோறும் தேடுவதும் தேவை என்று நரிக்கண்ணன் உரைத்திட்டான். அமைச்சன் சொல்வான் நம்மலையில் பிறர்வருதல் கூடா தென்று தெரிவித்தல் முறையல்ல, வேழ மன்னர் திட்டத்தை நாம்மறுத்தல் கூடா தென்றான். 166 ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நானு ரைப்பேன் அம்மலையில் இப்போதே பூதம் ஒன்றை நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி நாடெல்லாம் அந்நிலையைப் பரப்ப வேண்டும் போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள் போய்த்தேடு வாரெல்லாம் நாமே யாவோம் நீமாறு பேசாமல் இதனைச் செய்க நெடும்பேழை கிட்டும்என நரியு ரைத்தான். 167 இயல் - 48 நரிக்கண்ணனின் ஏற்பாட்டின்படி “எட்டி” என்பான் பூதம்போல் மலைமேல் ஏறிக் கூச்சலிட்டான். “ எட்டி” எனும் ஓர் ஆளை அழைத்து வந்தே எரிவிழியும் கருமுகமும் நீண்ட பல்லும் குட்டைமயிர் விரிதலையும் கொடுவாள் கையும் கூக்குரலும் நீர்ப்பாம்பு நெளியும் மார்பும் கட்டியதோர் காருடையும் ஆக மாற்றிக் காணுவார் நிலைப்படியே பூதம் ஆக்கி விட்டார்கள் மலையின்மேல்! “எட்டி” நின்று வெளியெல்லாம் அதிர்ச்சியுறக் கூச்சலிட்டான். 168 இயல் - 49 பூதத்தைக் கண்டவரும் கேள்வியுற்றவரும் அஞ்சி நிலை குலைந்தோடினார்கள். ஒளிவிளைக்கும் கதிரவனும், தோன்றாக் காலை உயிர்விளைக்க* நெல்விளைக்கும் உழவ ரெல்லாம் களிவிளைக்கும் தமிழாலே பண்டி தர்க்குக் கலைவிளக்கும் எளியநடைப் பாட்டுப் பாடிக் குளிர்விளைக்கும் மலைசார்ந்த நன்செய் நாடிக் கொழுவிளைக்க உழச்சென்றார்; காதில் கேட்டார் வெளிவிளைத்த கூச்சலினை! மலைமேற் கண்டார் விழிவிளைக்கும் எரியோடு கரும்பூ தத்தை! 169 ஆழ்ந்தடிக்கும் ஏரடியும் தாற்றுக் கோலும் அயலடிக்கும் வால்எருதும் நோக்கா ராகி வீழ்ந்தடித்துக் கொண்டோடி நகர டைந்து விலா அடிக்கும் பெருமூச்சு விட்டு நின்று சூழ்ந்தடித்துத் தின்னஒரு கரிய பூதம் சுடரடிக்கும் கொடுவாளும் கையு மாகத் தாழ்ந்தடிமேல் அடிவைத்து வருங்கால் அந்தச் சந்தடிகேட் டடியேங்கள் வாழ்ந்தோம் என்றார். 170 இதுமட்டும் சிலர்உரைக்கக் கேட்கு மட்டும் இன்னொருவன் புளுகினான் இயன்ற மட்டும்; அதுமட்டும் தனியல்ல வான மட்டும் அளவுடைய ஐந்தாறு பெரும்பூ தங்கள் குதிமட்டும் நிலத்தினிலே தோன்றா வாகிக் கொண்டமட்டும் ஆட்களையும் வாயிற் கௌவி எதுமட்டும் வருவேன்என் றெனையே பார்க்கும் என்மட்டும் தப்பினேன் என்று சொன்னான். 171 வாலிருந்த தா?என்றே ஒருசேய் கேட்டான் வாலில்லை பின்புறத்தில் ஏதோ ஒன்று கோலிருந்த தோஎன்றும் கொடியோ என்றும் கூறமுடியா நிலையில் இருந்த தென்றான் மேலிருந்து வந்திடுமோ என்றான், அந்த வீதிவரை வந்ததனைப் பார்த்தேன் என்றான். காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக் கடிதாக ஓடினான் ஐயோ என்றே! 172 அவனோடக் கண்டொருவன் ஓட அங்கே அத்தனைபே ரும்பறந்தார்! பூதம்! பூதம் இவணோடி வந்ததெனக் கூச்ச லிட்டார்! இவ்வீதி அவ்வீதி மக்கள் எல்லாம் கவணோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும் எவ்விடத்தில் போவதென்றும் கருத வில்லை கவலைஎரு துகள்போல மக்கள் யாரும் கால்கடுக்க நகர்சுற்றிச் சுற்றி வந்தார். 173 அத்தெருவில் அவ்வீட்டில் பூத மென்றும் அதுபூதம் இதுபூதம் எனப்பு கன்றும் தொத்துகின்ற வெளவால்போல் மரத்தின் மீதும் தூங்குகின்ற பூனைபோல் பரண்கள் மீதும் முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றி னுள்ளும் மூட்டையினைப் போல்வீட்டின் இடுக்கி னுள்ளும் மொய்த்திருக்க லானார்கள்! கருத்தின் பூதம் முன்னிற்கும் பூதமாய் எங்கும் கண்டே! 174 முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம் முகம்திரும்பிப் பார்க்குமுனம் பூதம் பூதம் என்றலறி எதிர்வருவோர் தமைஅ ணைக்க என்செய்வோம் பூதமென அவரும் ஓடி நின்றிருக்கும் குதிரையை யோஎதையோ தொட்டு நிலைகலங்கி விழும்போதும் புழுதி தூற்றி முன்றிலிலே பிள்ளைகளின் கண்கெ டுத்து முழுநாட்டின் எழில்கெடுக்க முழக்கஞ் செய்வார் 175 இயல் - 50 அமைச்சன் மகனும் பேழை தேடத் துவங்கினான் நாடுமுழு தும்பூத நடுக்கம் கொள்ள நரிக்கண்ணன் ஆட்களெல்லாம் பேழை தன்னைத் தேடுவதில் இருந்தார்கள் தென்ம லைமேல் சிலஅறிஞர் நாம்பேழை தேடப் போனால் கேடுபல சூழ்ந்திடுவான் புதிய மன்னன், கிடக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தார் பாடுபட்டுப் பார்ப்போமே எனநி னைத்தே பலஇடத்தும் அமைச்சன்மகன் அலைத லுற்றான்! 176 சீனிஎனும் கணக்காயன் தன்பால் கற்கும் திறனுடைய இளைஞர்களை அழைத்த ழைத்துத் தானினைக்கும் இடமெல்லாம் தேடச் சொல்லித் தளர்வின்றி முயன்றிடுவான்.அன்ன மெனும் தேனிதழாள் வானிமிர்ந்த சோலை தன்னில் திண்ணையிலே உட்கார்ந்த வண்ண மாக ஏனடியே நீலியே பேழை தன்னை யானடையும் நாள்வருமோ என்று நைவாள். 177 இயல் - 51 நீலியோடு அன்னம்! நினைக்கையிலே என்நெஞ்சம் எரியு தேடீ; நினையாமல் இருப்பதற்கோர் வழியு முண்டோ? பனைக்கைஉறும் களிறுபோல் தந்தை யாரும் படருமலர்க் கொடிபோலும் அன்னை யாரும் எனைக்கையிலே ஏந்திவளர்த் தார்கள் ஐயோ! இறக்கையிலே துடிக்கையிலே என்றன் பெண்ணே உனைக்கையில்வைத் தோம்இப்போ துளத்தில் வைத்தோம் உயிர்விட்டோம் அயல்விடுத்தோம் எனச்சென் றாரோ! 178 நன்செய்வாய்ச் செந்நெலெலாம் பொன்ம லைபோல் நனிகுவிக்கும் கதிர்நாட்டின் முடிபு னைந்த பின்செய்வாய் அருஞ்செயல்கள் அறச்செ யல்கள்! பெருநூலின் ஆராய்ச்சி, இளமை போகும் முன்செய்வாய் என்றுரைத்த என்பெற் றோர்கள் முதுநாட்டை விட்டாவி முடியும் போதில் என்செய்வாய் என்செய்வாய் என்றன் பெண்ணே எனப்பரிவாய்க் கதறிற்றோ அவரின் செவ்வாய்? 179 இயல் - 52 துயருறும் அன்னத்தை ஓடம் ஏறி உலவ, நீலி அழைத்தாள். விழிப்புனலில் குளிப்பவளாய்த் துன்ப ஆற்றின் மேற்றுறையும் காணாளாய் இவ்வா றெல்லாம் கொழிப்பாள்நெஞ் சிளகுமொழி! அன்ன மேபூங் கொடியேநல் இளம்பிடியே வளர்ந்த தேக்கின் செழிப்பினில் நிழல்சாய்ந்த செய்யாற் றோரம் திருத்தமுற நிறுத்திவைத்த ஓடம் ஏறிக் கழிப்போமே நேரத்தை! என்றாள் நீலி, கையூன்றி எழுந்திருந்தாள் தையல் நல்லாள். 180 நீர்தேங்கும் செய்யாற்றின் ஓடம், துன்பம் நினைத்தேங்கும் அன்னத்தை நீலி யைப்பூந் தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத் தடக்கையால் துடுப்பசைய ஓட்டு வார்கள் ஆர்தாங்கள் எனக்கேட்கும் இன்பம் ஊட்டும் அரும்பாட்டுப் பலஇசைத்தும் ஓட்ட லானார். சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்தி டாது செல்லல்போல் தெண்ணீரில் சென்ற தோடம். 181 தேங்கிநிற்கும் புனல்மீது செல்லா நிற்கும் செம்படகில் ஒருபுறத்தில் சிரித்த வண்ணம் பாங்கிநிற்கப் பார்த்துநின்ற அன்னம் சொல்வாள்! பாரடிநீ மேற்றிசைவா னத்தை! அங்கும் தேங்கிநிற்கும் பொன்னாற்றில் செழுமா ணிக்கச் செம்பருத்திப் படகோடும்! கீழ்த்தி சைவான் வாங்கிநிற்கும் ஒளியைப்பார்! காட்சித் தேனில் வண்டடிநாம் என்றுரைத்து மகிழ்ந்து நின்றாள். 182 இயல் - 53 படகு ஆற்றில் போம்போது, மழையும் பெருங் காற்றும்! கிழக்கினைநோக் கிப்படகு செல்லும் போதில் கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும் வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர் மழைக்கண்ணீர் உகுத்ததுவான் மேற்கி னின்று வந்ததுசெய் யாற்றினிலே பெரிய வெள்ளம் பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போலப் பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி 183 தம்மாலா காதென்று கைவிட் டார்கள் தடந்தோளால் படகோட்டும் மக்கள் யாரும்! இம்மாநி லத்தின்வாழ் விதுவோ என்றே இழைபோலும் இடையுடையாள் அழுதாள்! நீலி கைம்மீது தலைசாய்த்துக் கதற லானாள்! கவிழ்ந்துபோம் நிலையினிலே வந்த ஓடம், செம்மானூர்க் கரையினிலோர் குடிசைக் குள்ளே தெரிந்ததுதாய்க் கும்சேய்க்கும்! விரைந்தெ ழுந்தே. 184 இயல் - 54 ஆத்தாவோடிருந்த வேலன் ஓடி ஓடத்தை நிறுத்தி, இருவரையும் தன் குடிசைக்குக் கொணர்ந்தான். “ விடை”என்று கேட்டான்சேய்! நடஎன் றாள்தாய் விரைந்தோடிப் பெருமரத்தில் கயிறு கட்டி நெடுமுனையை ஒருகையாற் பற்றி நீந்தி, நிலைதவறும் ஓடத்தில் ஏறிச் சேந்திக் கடிதினிலே ஓடத்தைக் கரையிற் சேர்த்தான் கசங்கியஓர் கொடிபோலக் கிடந்த அன்னத் துடியிடைக்கும் நீலிக்கும் தோள்கொ டுத்துச் சுரைபடர்ந்த சிறுகுடிசை தன்னிற் சேர்த்தான்! 185 கண்ணேஎன் அன்னமே, நீயோ? நீயோ? கனிமொழியே நீலியே நீயோ? நீயோ? மண்ணாள நீபிறந்தி ருக்க ஆற்றில் மழைப்புனலும் பெருங்காற்றும் உன்னை மாய்க்க ஒண்ணுமோ? என்றுரைத்துக் களைப்பு நீக்கி உடைமாற்றிக் குடிநீரும் காய்ச்சித் தந்து தண்ணென்று தரையிருக்கும் என்று சென்று தடுக்கிட்டுத் தலையணையும் இடுப்புக் கீந்தே 186 நனைந்தகுழலுக் குச்சந்த னம்பு கைத்து நளிருண்டோ எனநெற்றி தொட்டுப் பார்த்துப் பனம்பழத்தின் சாறிட்ட பனாட்டும் தேனும் பரிந்தளித்துக் கருங்குயிலை அருந்தச் சொல்லி நினைந்திருந்தேன் மறந்துவிட்டேன் செங்க ரும்பை நெறித்தெடுத்த சாற்றுக்கற் கண்டு காய்ச்சப் புனைந்துவைத்தேன் முல்லையிலே கண்ணி ஒன்று புரிகுழலில் வைஎன்று தந்தாள் ஆத்தா! 187 இயல் - 55 அன்னம், வேலன் அன்புப் பேச்சுகள் ஆத்தாவே இவர்யார் என்றன்னம் கேட்டாள்! அவன்தான்என் மகன்என்று சொன்னாள் ஆத்தா. தீத்தாவும் கண்ணுடையார் வேழ நாட்டார் சிறைபிடிக்க வருகையிலே மறித்தே என்னைக் காத்தாரும் இவர்தாமோ? என்றாள் அன்னம் கடமைபுரிந் தான்இவனே என்றாள் ஆத்தா! வாய்த்தீரே மானத்தை உயிரைக் காக்க மறப்பரிது நும்நன்றி என்றாள் அன்னம் 188 ஒருசற்றும் பயனில்லா உடம்பை, வாழ்வோ உண்டில்லை என்னுமொரு மின்னைத், தின்ன நரிசற்றும் விலகாத கூட்டைச், சான்றோர் நகைப்புக்கே இலக்கான குமிழி தன்னை முரசுக்கு வாய்ஓயாக் குறட்டில் மன்னர் முடிசாய்க்க நெடிதாண்ட மன்ன ரின்பெண் ணரசுக்கோ ஆட்படுத்தா திருத்தல் வேண்டும்? அறிவுக்கோ இழிவுதனை ஆக்க வேண்டும்! 189 எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால் செத்தொழியும் நாள்எனக்குத் திருநா ளாகும் பனையளவு நலமேனும் தன்ன லத்தைப் பார்ப்பானோர் மக்களிலே பதடி யாவான் உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ துண்டென்றால் அதற்கென்றன் உயிருண் டென்றான். 190 இழந்தபாண் டியன்பரிசைத் தருவார்க் கென்னை இழந்துபோ வேன்,என்று முரசம் எங்கும் முழங்கியஓர் சேதியினை அறியீர் போலும்! முயலாமே இத்தனைநாள் கழித்தீர் போலும்! பழம்பெரிய பாண்டியனார் பேழைக் குள்ளே பகைவர்தமை ஒழித்திடும்ஓர் குறிப்பும் உண்டு! கொழுத்தபுகழ் உமக்குண்டு, கொண்டு வந்தால்! கொடைகொடுத்த தாகும்இந் நாட்டுக் கென்றாள். 191 பேழையின தடையாளம், பறிபோய் விட்ட பின்னிலைமை, முன்னிலைமை, பூதச் சேதி, ஆழ உரைத் திடலானாள் அன்னம்! வேலன் அத்தனையும் கேட்டிருந்தான். “நானோ மெத்த ஏழைமகன்; நரிக்கண்ணர் ஆணை எங்கே யானெங்கே, ஆயினும்என் கடமை உண்டு. பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப் பேருலகில் உயிர்வாழேன்’ என்றான் வேலன். 192 மாத்தீயன் நரிக்கண்ணன், காணா வண்ணம் மறைத்தவளும், வேழனிடம் வழக்கும் இட்டுக் காத்தவளும், நேர்நின்றே இன்றும் அன்றும் காத்தவனை ஈன்றெடுத்துப் பாலும் ஊற்றிக் காத்தவளும், இனிக்காப்பா ளும்,பெண் ணாளின் கண்ணெனவே வாழ்பவளும் ஆன அன்பின் ஆத்தாவின் இடதுகை நோக்கி நோக்கி அழுதிருந்தாள், வீரப்பன் நிலைக்கு நைந்தாள். 193 இயல் - 56 கொய்யாக் குடியில் வீரப்பன், ஒரு குடிசையில் இருக்கிறான். தோழன் ஒருவன் வருகிறான். செய்யாற்றின் கரையினிலே, செம்மா னூரில் செல்வனையும், மனைவியையும், விட்டு வேறு கொய்யாக்கு டிக்குச்சென் றான்வீ ரப்பன், கொய்திட்ட காலோடும் ஆட்க ளோடும்! எய்துமோர் கால்நோயால் அவ்வி டத்தில் இரவினில்ஓர் குடிசையிலே இருக்கும் போதில் ஐயாஎன் றொருதோழன் அழைத்தான்; “இந்த அரசாட்சி நம்மிடத்தில் வந்த” தென்றான். 194 மாட்சியுறும் மன்னவனைப் பின்னால் குத்தி மன்னவனின் இன்னுயிராய், வையத் தின்கண் காட்சிக்கோர் ஓவியமாய், வாழ்ந்து வந்த கட்டழகை வஞ்சத்தால் வெட்டி வீழ்த்தி, வாட்சுழலால் உயிர்சுழலக், கணக்கில் லாத மக்களைவீழ்த் துங்கொடுமை தீரா இந்த ஆட்சிக்குப் புறம்பாய்நான் இருக்கும் போதே அற்றதுகால்! அரசுபெற்றால் உயிர்போம் என்றான். 195 இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்? சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்! சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும். 196 எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்: கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் இல்லாரும் அங்கில்லை; பிறன்ந லத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே! நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில், நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ் சாங்கம்! 197 என்றுரைத்தான் வீரப்பன்! தோழன் சொல்வான்: எழிற்பாண் டியன்பரிசைத் தேடு கின்றார் தென்மலையிற் பிறர்அணுகா திருக்கும் வண்ணம் செய்துவிட ஒருவனை அம்மலைமேல் ஏற்றித் தின்னவரும் பூதமிது என்று சொல்லித் தெருவாரை அழும்பிள்ளை ஆக்கி வைத்தே அன்னவரே பேழையினைத் தேட லானார் அம்மலையை இன்றளந்தால் ஆள்மட் டந்தான். 198 வீடெல்லாம் தரைமட்டம், ஆல்இ ருந்த வேரெல்லாம் பறித்ததிலே கிணற்றின் மட்டம்! காடகழ்ந்த நீரூற்றின் ஆழம் காணில் கடலுண்டே அதுநமக்குக் கணுக்கால் மட்டம்! ஈடற்ற கலைப்பொருள்கள் இருக்கும் மன்றம், எண்ணற்ற ஆய்கூடம், பள்ளி, இந்த நாடழிய ஆளுகின்ற நரிக்கண் ணற்கோ நல்லறிவோ அணுவுக்கும் மிகவும் மட்டம்! 199 மூட்டையொடு கழுதைநடந் திருக்கும், பின்னே முழுக்கூனன் ஏகாலி செல்வான், அந்தப் பாட்டையிலே பஞ்சுநிறை கூடை போகும், உழவர்க்குப் பழங்கூழும் எடுத்துச் செல்வார், கூட்டுநீ லச்சாயம் கொண்டு செல்வார், குறுக்குநெடுக் காய்மக்கள் பலபேர் செல்வார்! காட்டாளோ பூதம்என் பான்,அஞ்சி வீழ்வார்! கரும்பூதம் வெண்பூதம் ஆவார் யாரும். 200 அரண்மனையின் யானைவரப், பூதம் என்றே அலறினார், மாவுத்தன்! வைக்கோல் வண்டி எருதின்மேல் வீழ்ந்தான்!சாய்ந் ததுவைக் கோலும் எழுப்பிவைத்த சாரந்தான் நெளிய உச்சி இருந்தகொல் லூற்றுக்கா ரன்கு தித்தான்! எரியடுப்பால் கூரையும் வைக்கோலும் பற்றித் தெருப்பற்றி எரிகையிலே, பூதம் அங்கே சிரிப்பதென அலறினார் அடுத்த ஊரார்! 201 அஞ்சவைக்கும் பூதத்தை அஞ்ச வைக்க அஞ்சாறு பூதத்தை நாம னுப்பிக் கொஞ்சிவிளை யாடவிட்டால் நல்ல தாகும் கூறுகநீர் விடைஎன்றான். அதனைக் கேட்டு நெஞ்சில்வைத் தேவீரப் பன்“வேண்டு மானால் நிகழ்த்துவோம். நடப்பதெல்லாம் அறிய வேண்டும் வஞ்சமுற்ற நரிக்கண்ணன் ஆட்கள், எந்த வழிச்சென்றார் என்பதையும் காண்போம் என்றான். 202 கொண்டுவந்த பேழையினை மகனி டத்தில் கொடுப்பதெனில், நான்கொடுத்தால் சிக்கல் உண்டாம் பண்டெனது செயலைஅவன் அறிய நேரும்; பாண்டியனார் பரிசினையும் வெறுப்பான்” என்று தொண்டுகிழ வன்புகன்றான்! “மகனி டத்தில் சொல்லாமல் பிறர்கையால் கொடுப்பீர்” என்றே அண்டையிலே இருந்தஅவன் சொல்ல, ஆம்ஆம் அதுநன்று நன்றென்றான் அவ்வீ ரப்பன்! 203 இயல் - 57 நரிக்கண்ணனின் அமைச்சன் மகனான நீலன், நீலியைக் காணுகின்றான். அமைச்சன்மக னானஓர் நீலன் என்பான், அருஞ்சூழ்ச்சி செய்வதிலே மிகக்கை காரன்! இமைக்கின்ற நேரமதும், வீணாக் காமல் எழிற்பாண்டி யன்பேழை, அன்னம், ஆட்சி நமக்குவரு மோஎன்று நினைத்தா னாகி நல்லபல சூழ்ச்சியெலாம் நாடு கின்றான். சிமிழ்க்காத கண்ணோடு தெருக்கள் தோறும் சிற்றூர்கள் மற்றுமுள இடத்தி லெல்லாம். 204 அன்னத்தைத் தேடுகையில் நீலி அங்கே ஆற்றோரம் நின்றிருந்தாள், மாலைப் போதில்! இன்னவளை ஆராய்வேன் எனநெ ருங்கி “என்ன வியப் பிதுநீலி? தேடிப் போன கன்னலொன்று காலடியிற் கிடைத்த தைப்போல் கண்ணெதிரில் கிடைத்தாயே! என்எண் ணத்தை உன்னிடத்தில் சொல்லிவிட வேண்டும்; என்னை எவ்வழிநீ விட்டாலும் ஒப்பு கின்றேன். 205 என்தந்தை என்னிடத்தில் இன்று வந்தார்; எப்போது மணம்புரிய எண்ணு கின்றாய் என்றுரைத்தார். யானுரைத்தேன். இவ்வை யத்தில் என்னுளத்தை கொள்ளைகொண்ட பெண்ஒ ருத்தி பொன்வேலி தனில்உண்டு! நீலி என்று புகழ்வார்கள் அவளின்பேர்! அன்னத் திற்கும் இன்னுயிரைப் போன்றுள்ளாள்! அவளை யன்றி எவளையும் நான்மணம்புரி யேன்என்று சொன்னேன். 206 மாந்தளிரால் மெல்லுடலும், மணக்கும் செந்தா மரையிதழால் வாயிதழும் உடையாய் கேட்பாய் “சாய்ந்துதிடீர் எனவிழுந்தார் என்றன் தந்தை! “தலைகொழுத்த பிள்ளையே அமைச்ச னுக்கு வாய்ந்திருக்கும் பிள்ளைநீ பாங்கி யைப்போய் மணம்புரிந்தால் என்ஆகும்?” எனத்துடித்தார். தீர்ந்ததினி அவளிடத்தில் சென்ற உள்ளம் திரும்பாது தீர்ப்பென்றேன், ஒப்புக் கொண்டார்! 207 என்னநீ நினைக்கின்றாய்? அன்னத் திற்கே எழிற்பேழை தனைத்தேடித் தந்து, பின்னர், அன்னத்தை ஏன்மணக்க லாகா தென்றால், அவள்என்றன் கண்ணுக்குப் பிடிக்க வில்லை. பொன்னுக்கு பித்தளையோ ஒத்த தாகும்? பூவுக்கு நிகரா மோ சருகின் குப்பை? மின்னலிடை, கன்னல்மொழி, இன்னும் சொன்னால் விரியுலகில் ஒருத்திநீ, அழகின் உச்சி! 208 ஒளியேனும் வானத்தை மறத்தல் கூடும் உயிரேனும் உடம்பதனை மறத்தல் கூடும் எளியேனும் உமைமறத்தல் உண்டோ? அன்றி எனையேனும் நீமறத்தல் உண்டோ? பச்சைக் கிளியேனும் குயிலேனும் கேட்டால் நாணக் கிளத்துமொழி அன்னம்நம தொருமைப் பாட்டைத் துளியேனும் அறிவது கூடாது; சின்னச் சொல்லேனும் வெளிப்படுதல் கூடா தென்றான். 209 விழிபார்க்க எண்ணிடுமே உன்னை! யாரும் விலைபார்க்க இயலாத முத்தே நானுன் வழிபார்த்து நிற்குமிடம் சொன்னால் நீயோ வரப்பார்த்து முகம்பார்த்துப் போவேன்! இல்லை வழிபார்த்துப் பார்த்துநீ ஏங்கென் றாயோ- ஒழிந்தேன்என் றெண்ணிநீ எனைப்பு தைத்த குழிபார்க்கத் தான்வருதல் முன்னே சொன்னால் கோவையிதழ் சுவைபார்த்துப் போவேன் என்றான். 210 மன்றிரண்டு தெரியுமன்றோ அவற்றில் நெல்லி மரமிரண்டின் நடுவுள்ள பொதுமன் றுக்குள் இன்றிரண்டு நாட்களிலே வருவேன்! வந்தால் எனக்கிரண்டு பட்டாடை தருவீர்! மெல்ல ஒன்றிரண்டு பேசியபின் சுப்பல் ஒன்றை உளியிரண்டாய்த் தறித்ததுபோல் பிரிதல் வேண்டும்! பொன்திரண்டு வந்தாலும் சரிதான் என்னைப் போட்டிரண்டாய் வெட்டிடினும் நில்லேன் என்றாள். 211 எத்தடையும் இல்லையடி மாம ரத்தை இசைந்தடையும் கருங்குயிலே! கதிர்நாட் டானின் சொத்தடையக் கவர்ந்ததன்றி அன்னத் துக்கும் சூழ்கின்றான் வாழ்வுக்கே தடைகள் என்றால் இத்தடைகள் நீங்குதற்கு முயல்கின் றாளா? எழிற்பாண்டி யன்பரிசின் நிலைமை என்ன? கொத்தடையும் மலர்க்குழலே என்னி டத்தில் கூறுதற்குத் தடைஎன்ன என்றான் நீலன். 212 கூடுவிட்டுத் தாயைவிட்டுப் பறந்து விட்ட குயிற்குஞ்சு போலன்னம் ஒருத்தி, மன்னர் வீடுவிட்டு வேலைவிட்ட ஆத்தா, வேலன் விரல்விட்டே எண்ணிடுமித் தொகையுள் ளார்போய்த் தேடிவிட்டால் கிடைத்து விடுமோ அப்பேழை! தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல் மூடிவிட்டார் பேழையினை! அவர்கள் கொஞ்சம் மூச்சுவிட்டால் தானேநாம் அறிதல் கூடும். 213 இடக்கையோ ஆத்தாவுக் கில்லை! இவ்வா றிருக்கையிலே அவள்துணைவர் வீரப் பர்க்கோ நடக்கையிலே ஊன்றுதற்கோ கணுக்கா லில்லை நறுக்கையிலே பொன்வீசும் ஒளியாற் செய்தே எடுக்கையிலே அமைவுற்ற மேனி யாட்கோ இயற்கையிலே இடையில்லை என்பார் கற்றோர்! படுக்கையிலும் விழிக்கையிலும் பலகை ஓலைப் படுக்கையலால் வேலனுக்கோ நினைவே யில்லை. 214 எதுமுடியும் அவராலே? என்றாள் நீலி! ஏன்முடியா தென்கின்றாய்? புல்லூர் தன்னில் புதுமுடிவேந் தன்விட்ட மறவர் தம்மைப் புறங்காணச் செய்தானே வேலன்? ஆத்தா, முதுமுடியான் கதிர்வேலன் பெற்றெ டுத்த முன்முடிந்த மேகலையாள் அன்னத் திற்கோ “இதுமுடிய இதுசெய்வாய்”- என்று கூறி ஏற்றமுடி வைச்செய்யும் ஆற்ற லுள்ளாள்! 215 ஆத்தாவின் துணைவர்யார்? அறியேன் என்றான் ஆனமட்டும் உளவறிய எண்ணி நீலன்! கூத்தாடிப் பிழைப்பார்போல் தோன்று கின்றார். குடிசையிலே அப்பொருளும் கண்டேன் என்றாள் பார்த்தாயா என்னென்ன உடைகள் என்றான். படைமறவர் உடை,இந்த வைய வாழ்வை நீத்தாரின் உடைபலவும் கண்டேன் என்றாள் நீசொல்லும் வீரப்பர் எங்கே என்றான். 216 “ போவிரைவில்” என்றுரைத்தாள் ஆத்தா அன்னோர் போய்விட்டார் எமைவிட்டே எந்த ஊர்க்கோ! வாவிரைவில் என்றுரைத்தால் வருவார் போலும்! மறுத்துரையார் ஆத்தாவின் மொழியை என்றாள், தீவிரைவில் கொல்லுதல்போல் பூதம் வந்து தெருவாரைக் கொல்லுவதால் என்றன் அன்பே நீவிரைவில் போஉன்றன் குடிசைக் கென்றான் நீலியவள் குலுக்கென்று சிரித்துச் சொல்வாள்: 217 ஊருக்குட் பூதமெனப் புளுகி னோரின் உள்ளத்தை நினைத்துநான் சிரித்தேன்; அன்னார் நேருக்கு நேரடையும் தீமை தன்னை நினைத்துநான் சிரித்திட்டேன் என்றன் வாழ்வின் சீருக்கு வாய்த்திருக்கும் அன்பே, பூதச் சிறுசெய்தி நம்புகின்றீர் உம்மைக் கண்டால் தேருக்குச் செப்பனிட்ட முட்டுக் கட்டை சிரிக்குமெனில் நான்சிரித்தல் வீணே என்றாள். 218 உன்னகத்தை யறிவதற்கே இதனைச் சொன்னேன் உயிர்வகையில் பூதம்என ஒன்று மில்லை தன்னகத்தில் வளர்ந்துவரும் மடமை யின்பேர் தன்னடியால் நடவாத பூத மென்று சொன்னகற்றோர் மொழியினைநான் ஒப்பு கின்றேன் தொன்மைஎனும் உச்சியிலே அறிவால் வாழ்ந்த பொன்னகத்தில் தமிழகத்தில் தாய கத்தில் பூதம்எனும் சொல்நுழைதல் புதுமை என்றான். 219 திங்களிடம் குளிர்போலும் கதிர வன்பால் செந்தழல்போ லும்பூவில் மணமே போலும் உங்களிடம் எனக்குள்ள அன்பின் மீதில் ஒருபழியும் நேராமல் விரைந்து நீவீர். தங்களிடம் நோக்கியே செல்ல வேண்டும் தமிழ்நிகர்த்த அமுதமொழி மங்கை அன்னம் இங்குவரக் கூடுமன்றோ என்றாள் நீலி! இன்னும்ஒரு சேதிஎன்று சொல்வான் நீலன்: 220 என்பொருட்டு நின்னழகை, அன்பே ஈந்தாய் எதன்பொருட்டு நானிதனை மறத்தல் வேண்டும்? நின்பொருட்டு அவளுக்கோர் நன்மை செய்ய நினைக்கின்றேன். அன்னந்தான் இழிந்த பேழை யின்பொருட்டுப் பொருள்,ஆவி உடல்வேண் டாமல் இனியுழைக்கக் கடவேன்நான்! அன்பு நீலி, தன்பொருட்டு வாழ்வானோர்! ஏழை! மக்கள் தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன் என்றான். 221 மின்னையும்பன் மலர்களையும் கொண்டி யாக்கை வேண்டுமென அமைத்ததென விளங்கும் அன்னம் தன்னையும்நான் அறியேனே! வேழ நாடு தனிலிருந்து வந்துள்ளேன் ஆத லாலே என்னையுந்தன் தொண்டரொடு சேர்த்துக் கொள்ள எழிலுடையாள் இடத்தில்நீ மொழிதல் வேண்டும்! பொன்னையும்வார்ப் படநுண்மை தனையும் வையப் புகழ்கொள்ளச் செய்திடும்பெண் ணழகு நங்காய்! 222 நலங்கெடவே கதிர்நாட்டை ஏப்ப மிட்ட நரிக்குத்தான் என்தந்தை அமைச்சன்! மெய்தான்! குலுங்குநகை முத்தாகக் கொழிக்கும் பெண்ணே! கொடியவனைத் தொலைப்பதென்றன் தந்தை நோக்கம் விலங்குபழக் கிடுவானின் வெள்ளா டொன்று வேங்கையிடம் நெருங்கையிலே மகிழ்வ துண்டோ? தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை தேனென்றா நினைக்கின்றார் தமிழ கத்தார்? 223 கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக் கொடுங்கொடியான் நரிக்கண்ணன் எனில்எ னக்கோ வேப்பங்காய்! அவனும்எனை விதைபற் றாத வெள்ளரிக்காய் என்றுநினைத் திடவு மில்லை! தீப்பொங்கும் மலையடியில் வாழு கின்றேன் சிலிர்க்கின்ற குளிர்தென்றல் உலவும் தென்னந் தோப்பிங்கே காணுகின்றேன்! குடியி ருப்பேன். சொல்ஒருசொல் அவளிடத்தில் என்றான் நீலன். 224 கரும்பல்ல; அதுபிழிந்த சாறே போலும் கழறுகின்ற மொழியுடையாள் அன்னம் நெஞ்சம் இரும்பல்ல! நான்சொல்வேன் ஏற்றுக் கொள்வாள்! இருநாளில் பதிலுரைப்பேன் என்றாள் நீலி, அரும்பல்ல; கண்ணல்ல அவ்வா றேசெய்! அனுப்பென்னை! இனிப்பான தேனே! சற்றே திரும்பல்லல் தீர்என்று செப்பிச் சென்றான். தேனிதழாள் அவன்பிரிவால் தியங்கி நின்றாள். 225 இயல் - 58 ஊர்ப் பேச்சு இத்தனைநாள் ஆயிற்றே பேழை எங்கே? இந்நாட்டில் அதுவிருந்தால் வெளிப்ப டாதோ! முத்தன்ன வெண்ணகையாள் திரும ணந்தான் முடியுநாள் எந்நாளோ என்பார் சில்லோர்! வைத்தவர்கண் ஏமாறக் கவர்ந்து சென்றார் வண்கடலில் போட்டாரோ? நரிப்பேர் கொண்ட எத்தனவன் தானெடுத்துப் பேழை தன்னை எரித்தானோ என்றுரைப்பார் மற்றும் சில்லோர்! 226 நற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்கு நலமல்லால் தீமையில்லை என்பார் சில்லோர் பொற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்குப் பொல்லாங்கே ஆதலினால் மறைத்தான் என்று சொற்பலவும் விரிப்பார்கள் சிலர்! இப் பூதத் துயர்என்று தீர்ந்திடுமோ என்பார் சில்லோர்! தெற்குமலை காடுநகர் நாடு யாவும் தேடுவதாய் அழிக்கின்றார் என்பார் சில்லோர்! 227 இயல் - 59 வேழ மன்னனும் அமைச்சனும் வேழவனும், அமைச்சனொடு வீற்றி ருந்தான் விளக்கமுறு திருமன்றில்! உரைக்க லானான்! பாழடைந்த இருள்வீட்டில் விளக்கு, வானப் பனிப்புகையில் எழுந்தகதிர், அன்னம் என்பாள்! வாழஒரு பாண்டியனார் பரிசு வேண்டி வாடுகின்றாள் நாள்பலவும் வறிதே யாகப் பேழையினை நரிக்கண்ணன் தானும் தேடிப் பெருந்தொல்லை யடைகின்றான் என்று சொன்னான். 228 அப்பேழை நரிகண்ண னிடத்தே யில்லை, அவனதனை யிழந்ததுவும் வியப்பே யாகும்! ஒப்பேதும் இல்லாத மங்கை யன்னம் உடல்உடைமை ஆவியெலாம் பேழை என்று செப்பினாள் அதிலென்ன ஐயப் பாடு? திருநாட்டின் ஆட்சியும்தன் மணமும் அந்தக் கைப்பேழை தனிலுண்டு! கிடைத்தால் நெஞ்சக் களிப்புஏழை யடைவாள்என் றமைச்சன் சொன்னான். 229 இயல் - 60 நரிக்கண்ணன், பேழை தேடுவாரை மேற்பார்வை பார்த்துத் திரிகிறான் தென்மலையில் தேடுகின்ற கூட்டம், காட்டில் தேடுகின்ற ஒருகூட்டம், நாட்டில் தேடி இன்னல்விளைத் திடுங்கூட்டம், வீடு தோறும் எங்குண்டு பேழைஎன அதட்டும் கூட்டம், பன்னுமிவை அனைத்துக்கும் மேற்பார் வைக்குப் பறக்கின்ற தலைவர்களின் தலைவ னாகிச் சென்றுசென்று நிலையறிவான் எவ்விடத்தும் தேரேறி நரிக்கண்ணன் ஊரி லெல்லாம். 230 தட்டுப்பட் டதுவோடா பேழை என்று தரைபிளப்பார் தலைவனைப்போய்க் கேட்பான்! ஆங்கு வெட்டுப்ப டாதிருக்க வேண்டும் பேழை மெல்லனவே மண்வெட்ட வேண்டும் என்பான்! முட்டுப்படா துழைப்பீர்! கிடைத்தால் பேழை முந்நூறு பொன்னளிப்பேன் என்பான்! ஓர்பால் சிட்டுப்ப றந்ததுபோல் தெருவில் ஓடித் தெரிந்ததுவோ உளவென்பான் நரிக்கண் ணன்தான்! 231 தெருத்தோறும் வாழ்வாரை ஒருங்க ழைத்துச் செப்பிடுவீர் உண்மைதனை; அரண்ம னைக்குள் ஒருபேழை தனைத்தந்தேன், அதனை வாங்கி ஒளித்தவரும் நீர்தாமே? என்று கேட்டுப் பெருமக்கள் தமையெல்லாம் உளம்வ ருத்திப் பெரியோரை அதட்டிடுவான், பெண்டிர் தம்மை எரிமூளும் கண்ணாலே அஞ்ச வைப்பான் இழிசெயலான் நரிக்கண்ணன் என்னும் தீயன். 232 இயல் - 61 அன்னம் குதிரைஏறிப் பேழைக்குப் புலன் கேட்கிறாள் ஓடிக்கொண் டேயிருக்கும் குதிரை, காதில் ஒலித்துக்கொண் டேயிருக்கும் காற்கு ளம்பும்! ஆடிக்கொண் டேயிருக்கும் நெற்றித் தொங்கல் அழகைக்கொண் டாள்அன்னம் அதனை ஊர்ந்தே தேடிக்கொண் டேயிருந்தாள் பேழை தன்னைத் தேனைக்கொண் டேபொழியும் மழையைப் போலே பாடிக்கொண் டேஇருந்தாள் நிலைமை பற்றிப் பருகிக்கொண் டேயிருந்தார் இரங்கி ஊரார்! 233 பண்டிருந்த பாண்டியனார் பரிசை, என்றன் பழம்புகழைப் பொன்னான பேழை தன்னைக் கண்டிருந்த துண்டென்றால் கூறு வீரோ காணாதார் இனியேனும் முயலு வீரோ? வண்டிருந்து பண்பாடிக் கொண்டி ருக்கும் மலர்ச்சோலைக் கதிர்நாட்டின் மகள்நா னன்றோ? தொண்டிருந்த உள்ளத்தீர்! மறவர் மக்காள்! தொல்லையினைத் தீர்த்திடுவீர் என்றாள் அன்னம்; 234 நீர்அடையும் விழியுடையாள்; தெருக்கள் தோறும் நிகழ்த்துமொழி கேட்டவர்கள், இருகை ஏந்திச் சீரடைய வேண்டுமெனில் எல்லா மாண்பும் சென்றடையும் எந்திருவே இந்நாள் இந்தப் பாரடையும் தீமையெல் லாம்நீங்கி நல்ல பயனடைய வேண்டுமெனில் நல்ல றம்தான் பேரடைய வேண்டுமெனில் பேழை வேண்டும்! அதைத்தேடும் பெருங்கடமை எமக்கே என்றார். 235 இயல் - 62 அன்னம் அலைந்து, பின் ஒரு சோலை அடைந்தாள். அகல்வானில் விட்டுவிட்டு மின்னல் போல ஆங்காங்குச் சென்றுபின் மீண்டா ளாகிப் பகல்வானம் மாணிக்கப் புனலா டுங்கால் படர்முல்லை சிரித்திருக்கும் சோலை கண்டு புகலானாள்; குதிரையினை விட்டாள்! அங்குப் புன்னைவர வேற்பளிக்கத் தென்றல் வந்து துகிர்உடலில் மணந்தடவ இசைய ரங்கு தும்பியார் துவக்கினார்! அமர்ந்தாள் அன்னம்; 236 தாமரைக்கண் இமைஇதழோ அசைய வில்லை தளிர்மேனி அசையவில்லை “பூ”வை மற்றோர் பூமறைப்ப தைப்போலும் எழிற்கன் னத்தில் பொற்கொடிதன் அங்கைதனை ஊன்றி, நெஞ்சே நீமறைக்கா தேஉன்றன் இன்ப யாழை நிகழ்த்தென்றாள்; உகுத்தஇசை உணர்வால் அள்ளித் தீமையிலா உயிர்பருகக் கிடந்தாள்; வையம் செந்தமிழி லக்கியத்தின் வருகை நோக்க. 237 மீதுயர்ந்த இருதோள்கள் ஒளியை வாரி வீசுகின்ற குன்றங்கள்! மறவன் தூக்கி ஊதுகின்ற வளைகொம்பின் புருவத் தின்மேல் உயர்நெற்றி அஞ்சாமை முழங்கும் கூடம்! மோதுகின்ற இளங்களிறு போல்ந டந்து முன்வாயிற் புன்னகையை விளைப்பான்! ஆனால் காதலில்லை அவன்கண்ணில்! தேன்பற் றாத கவின்மலரில் இடமிலைஎன் உயிர்வண் டுக்கே. 238 கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல ஒளித்திரைபோல் தலைமயிர்சிங் கத்தின் தோற்றம்! உயிர்ப்பரிதி வான்போன்ற மேனி வாய்ந்தான்! துளித்தநறுந் தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்குகுரல் முழங்குகின்ற கடலே! ஆனால் களிக்கஒரு காதலில்லை அன்னோன் கண்ணில்! கவின்மலரில் தேனிலைஎன் உயிர்வண் டுக்கே! 239 அடுக்கிவைத்த அழகழகாம் உறுப்புக் கள்மேல் அனுப்பிவைத்த என்விழிகள் ஒளியு மங்கித் தடுக்கிவிழும் எழும்ஒன்றில் சறுக்கி வீழும்! தனிப்பிறவி! வையத்து மக்கள் தம்மில் எடுக்கஎடுக் கக்குறையாச் சுவையின் ஊற்றை இனிக்கஇனிக் கக்காணும் ஆண்மை! ஆனால் துடிக்குமோர் காதலில்லை அன்னோன் கண்ணில்! தூய்மலரில் தேன்இலைஎன் உயிர்வண் டுக்கே! 240 தீங்கைஇனிப் பொறேன்என்னும் கண்கள்! என்றன் திருநாளைத் தனக்கென்றே நினைக்கும் நெஞ்சம்! வேங்கைஅவன் அஞ்சாதே என்ற பேச்சு வீணல்ல வெற்றிமுர சென்று சொல்வேன்! ஏங்கையிலே எனைமீட்டான்! ஓடம் விட்டே! இறக்கினான்! தொட்டஇடம் மறக்க வில்லை! பாங்குறஓர் காதலில்லை அன்னோன் கண்ணில்! பனிமலரில் தேனிலைஎன் உயிர்வண் டுக்கே! 241 விழிஇல்லை; உணர்வில்லை; குடிசை தன்னில் வீழ்ந்திருந்தேன் அப்போதில் என்றன் ஆத்தா, மொழியில்லை இதுமருந்தே எனும்ப டிக்கு மொய்குழலே என்றழைத்தாள்; உயிர டைந்தேன்; வழியில்லை என்றிருந்த என்கண் முன்னே வாய்த்தவனை யார்என்றேன் வேலன் என்றாள்! எழுகின்ற காதலில்லை அன்னோன் கண்ணில்! எழில்மலரில் தேன்இலைஎன் உயிர்வண் டுக்கே. 242 இயல் - 63 இவ்வாறு அன்னம் துயில்கையில் அங்கே ஓர் துறவி வந்தான். நனவுலகில் இவ்வண்ணம் இருந்தாள் அன்னம்! நல்விழியைத் துயில்வந்து கௌவ, ஆங்கே கனவுலகில் இலக்கியத்தைத் தொடர்வா ளானாள் கைம்மலரில் தலைசாய்த்துப் புன்சி ரிப்பைக் கனிஇதழில் புதைத்துடலை ஒருக்க ணித்துக் கைவல்லான் வைத்தயாழ் போற்கி டந்தாள் இனிநானும் இவ்வுடலும் புளியும் ஓடும் என்றிருக்கும் ஓர்துறவி அங்கு வந்தான். 243 துவராடை உடுத்திருந்தான்! தோலின் ஆடை தோளினிலே சுமந்திருந்தான் சுரைக்கு டுக்கை தவறாமல் கைப்பிடியாய்ப் பிடித்தி ருந்தான்! தடியொன்று வைத்திருந்தான்! உடைவாள் ஒன்றும் எவரேனும் எதிர்க்கையிலே உதவு மென்றே இடுப்பில்வைத்தான்!பற்கொம்பு,விசிறி, செம்பு, கவிகைஇவை யல்லாமல் எல்லாம் நீத்த கடுந்துறவி தூங்குவோள் எதிர்உட் கார்ந்தான்! 244 இயல் - 64 அன்னம் துறவியைக் கண்டு திடுக்கிட்டாள். வெண்தாடி நிலம்புரள மேல்நி மிர்ந்த விழிமூடித் தாமரையின் இருக்கை கொண்டு கொண்டாடும் கற்பாறை போலிருந்தான்! கொஞ்சுகிளி விழிப்பாளா எனநி னைத்தே! வண்டோடு பூவிதழும் பறக்கக் காற்று மரக்கிளையை நெடிதழைத்துச் சருகை எல்லாம் திண்டாட வைக்கையிலே இமைதி றந்தாள்! திடுக்கிட்டாள்! துறவிதனை எதிரிற் கண்டாள். 245 விரைந்தெழுந்தே ஆடைதனை ஒதுக்கி நின்று மென்மலர்க்கை கூப்பினாள்! துறவி சொல்வான்; தெரிந்து கொண்டேன் நின்உள்ளம் வாழ்க நன்றே! சிறந்தஓர் பாண்டியனின் பரிசு, கைக்கு வரும்.சிறிதும் வருந்தாதே என்று சொல்ல ‘வாய்மலர்க எந்நாளில்’ என்றாள் அன்னம்! “ அருங்கிளியே உனக்கான ஆடவன் பால் அதையுரைப்பேன் இங்கவனை அனுப்பாய்” என்றான். 246 பெரியானைக் கைகூப்பிக் குதிரை ஏறிப் பெண்ணரசி “உம்”என்றாள் செம்மா னூரின் அருகினிலே வேலன்வரக் கண்டாள். கையால் அழைத்திட்டாள்! செய்தியினைக் காதில் சொன்னாள்! தெருவினிலே நின்றிருப்பேன்! வரவு நோக்கிச் செவிக்கமுது கொண்டுவர வேண்டு மென்றாள்! “ இரு”என்றான் செம்மானூர்க் குடிசை சேர்ந்தாள் எழில்வேலன் பெரியானை நோக்கிச் சென்றான். 247 இயல் - 65 தென்மலையில் நரிக்கண்ணன் ஆட்கள் பேழைக்குத் தோண்டு கிறார்கள். அப்போது அங்கு ஓர் பூதம் வெளிப்படுகிறது. எல்லாரும் பறந்தார்கள். நரிக் கண்ணனிடம் சொன்னார்கள். தென்மலையில் பேழையினைத் தேடு கின்றார் சிலர்அங்கு கற்பிளப்பார்! மண்ணெ டுப்பார்! சின்னகுகை புகுந்திடுவார்! மாலைப் போதும் சென்றுவிட, இரவினிலே மலையின் உச்சி மின்னிற்றுப் பெருங்கூச்சல் கேட்ட தங்கே மேல்நோக்கி ஐயையோ எனஅ திர்ந்தார் நின்றதொரு நெடும்பூதம் நரிக்கண் ணன்பால் நிகழ்த்தினார் ‘தென்மலையில் எவரு மில்லை! 248 ஓடினான் நரிக்கண்ணன் தென்ம லைக்கே உடன்சென்றார் படைமறவர் பல்லோர்! பூதம் ஆடியதும், நெடுவேலைச் சுழற்றி நின்றே அரற்றியதும் கண்டார்கள் நடுங்கி ஓடி மூடிவைத்த தெருக்கதவை உதைத்துத் தள்ளி முன்வீட்டின் அறைபுகுந்து தாழிட் டார்கள்! பாடுபட்டு நான்கண்ட சூழ்ச்சி தன்னைப் பயன்படுத்திக் கொண்டானே அவன்யார் என்றே! 249 நரிக்கண்ணன் எண்ணினான்! பூதந் தன்னை நான்குமுறை நோக்கினான் நோக்க நோக்கப் பெரிதாகும் நிலைகண்டான்! நடுக்கம் கொண்டான்! பெரும்பூதம் தென்மலை யில்இருந்த செய்தி தெரியாமல் இருந்தேனே எனமு டித்தான்! தென்மலைக்கும் அரண்மனைக்கும் இடையில் வாய்த்த அரைக்காதம் அதைநினைத்தான்! ஓட லானான்! அரண்மனைக்குள் பெரும்பூதம்! என்று கேட்டான். 250 வடதிசையைத் தான்மறந்து மேற்கு நோக்கி வாழ்ந்தேன்கெட் டேனென்றே ஓடும் போதும் தடதடென ஆயிரம்பேர் எதிர்வந் தார்கள் சரியாக ஒருதென்னை அளவு யர்ந்த கொடும்பூதம் வந்ததெனக் கூறினார்கள் குள்ளநரி பட்டதுயர் கூறொ ணாதே பிடித்தான்பின் ஓட்டத்தைக் கிழக்கு நோக்கிப் பெரும்பூதம் என்றுரைத்தார் அங்கும் பல்லோர். 251 இயல் - 66 நரிக்கண்ணன், அவன் கூட்டம், பூதம் பூதம் என்று அரண்மனையைக் காலி செய்தார்கள்; அன்னம் உள் நுழைந்தாள். வேலன் முதலியவரும் சேர்ந்தார். அரண்மனையில் நரிக்கண்ணன் ஆட்கள், பெண்கள், அருகிருந்த தூண்,கதவு பெட்டி யாவும் பெரும்பூத மாய்த்தோன்றக் கதறி, ஓடிப் பிணியுற்றார்! உயிர்விட்டார். சிற்சி லர்போய்ப் பரணுக்குள் குடிபுகுந்தார்! இவ்வா றாகப் பாழான அரண்மனைக்குள் யாழ்ச்சொல் அன்னம் திரண்மலைத்தோள் வேலனொடும் நீலி யோடும் சிரித்தபடி உள்நுழைந்தாள் செப்ப லுற்றாள்: 252 “ ஆளுயரம் இருந்ததுவாம் நரியார் பூதம்! ஆள்ஒருவன் தோளிலோர் ஆளை யேற்றத் தோளுயர்ந்த இரட்டையாட் பூத மன்றோ சுடுநெருப்பைக் கக்குகின்ற நமது பூதம்! கோளுக்குக் கோள்பொய்க்குப் பொய்யே வேண்டும் கொடியவன்வெட் டியகிணற்றில் அவனே வீழ்ந்தான் நாளும்எழில் நாட்டார்கள் பூத மென்று நடுங்குநிலை இரங்கத்தக் கதுதான்” என்றாள். 253 சிரித்துவிளை யாடஇது நேர மன்றே! திண்ணூரின் குளக்கரையில் நெடுநா ளாக இருப்பவனோர் திருடனென இயம்பு கின்றார் யான்செல்வேன் விடைகொடுக்க என்றான் வேலன்! இருக்கட்டும்! நீலிநீ துறவி யாரை இங்கழைத்து வா,என்றாள்; நீலி சென்றாள்! நெருப்பிற்கு நீருண்டு தணிக்க! அன்னம் நினைப்புக்குத் தணிக்கையிட அவனால் ஆகும். 254 துறவுடையார் “பேழைஅகப் படும்”என் கின்றார்! தொல்லைஇனி நமக்கில்லை என்றாள் அன்னம்! அறிவுடையார் பிறர்தம்மை நம்பித் தம்மால் ஆம்செயல்செய் யாமல்இரார் என்றான் வேலன்! முறையாமோ இமைப்பொழுதே அமைதி கேட்டேன்* முழுநாளும் தழல்தழுவிக் கிடப்பா ருண்டோ? நிறைவுறும்உன் மொழியான குளிர்ம ரத்து நீழலிலே விளையாடி மகிழ்வேன் என்றாள். 255 கரும்பெடுத்துப் பிழிந்ததுவும் உன்சொல் தானோ? கனியெடுத்து வைத்ததும்உன் இதழோ? முல்லை அரும்பெடுத்துக் கொட்டியதும் உன்சி ரிப்போ? அடியெடுத்தால் அழகெடுக்கும் அன்ன மேஉன் சுரும்பெடுத்த இசைபோலும் சொல்லெ டுத்தால் சுவைஎடுப்பாய் இருக்கும்இனிக் கொஞ்சிப் பேசி இரும்பெடுத்துச் செய்திருக்கும் என்றன் காதில் இன்னமுதைப் பாய்ச்சாயோ என்றான் வேலன். 256 பிள்ளைநிலை என்னுமொரு கனியின் சாறும் பேரிளமை என்னுமொரு கரும்பின் சாறும் கொள்ளைபடப் பெய்துவைத்த இளமை என்னும் கொப்பரையில் நாள்என்னும் பூனை நாவால் மொள்ளையிலே “உயிர்”என்பார் பார்த்தி ருத்தல் முறைதானோ என்றுரைத்தாள் அன்னம்! வேலன் அள்ளையிலே காதல்-அதை அருந்தல் இன்பம்! அகமொத்து மேல்நடத்தல் அறமாம் என்றான். 257 இயல் - 67 அதற்குள் துறவி வந்து சேர்ந்தான் மற்றுமொரு பேச்செடுத்தாள் அன்னம், அங்கே வண்டிவரும் ஓசையினைக் கேட்டு நைந்தாள்! ஒற்றைஎரு திழுத்துவந்த வண்டி விட்டே ஊன்றுகோல் துணையாகத் துறவி வந்தான். கற்றைமலர்க் குழலுடையாள் நீலி யோடு கைகூப்பி வரவேற்க, வாழ்த்துக் கூறி மற்றவரைப் புறம்போக்கி வேலன் காதில் வாய்மலரை ஒற்றிமலர்த் தேனைப் பெய்தான். 258 நீலியவள் விடைபெற்று வெளியிற் சென்றாள் நீளறையில் தனித்திருந்தாள் அன்னம் அன்னாள் சேலின்விழி மகிழ்ச்சியினால் மின்னும்! வாயின் செவ்விதழில் குறுநகைப்புச் சிந்தும்! நல்ல வேலியிட்ட நன்செய்யிலே விதைத்த வித்தும் விளையுமென அவள்உள்ளம் கூத்த டிக்கும்! மேலுமவன் அடிமையுளம் உடையான் அல்லன், மென்மலர்நான்! தும்பிஅவன் எனவி யந்தாள். 259 இயல் - 68 நீலியும் நீலனும் பேசியிருந்தார்கள் நீலன் வீட்டில் ஓதுகின்றான் நீலியிடம் நீலன்: என்றன் உயிர்போன்ற நீலியே வாராய் வாராய் பூதமென ஒன்றில்லை என்று முன்பு புகன்றாயே! இகழ்ந்தாயே என்னை! விண்ணை மோதுதல்போல் வரும்பூதம் பார்த்தாய் அன்றோ? மொய்குழலே இங்கேயும் இப்போ தும்தான் தீதுசெய்ய வரக்கூடும்! என்று கூறித் தெருவிளக்குத் தூண்ஒன்றை உற்றுப் பார்த்தான். 260 முன்வந்த பூதத்தை நரிவி டுத்தான்! முதற்பூதம் நடுநடுங்கிச் சாகு மாறு பின்வந்த பூதத்தை இளைய அன்னம் பெற்றெடுத்தாள் என்றுரைத்துச் சிரித்தாள் நீலி! என்னபொருள் இதற்கென்று நீலன் கேட்டான், இதன்பொருள்தான் மடமைமேல் வெற்றி என்றாள் ஒன்றுமே விளங்கவில்லை என்றான் நீலன் ஓர்ஆளும், கருப்புடையும் பூதம் என்றாள்! 261 வாட்படையும் வேற்படையும் கண்டு நெஞ்சம் மலைப்படையக் குதித்தபூ தத்துக் கெல்லாம் ஆட்படைதான் அடிப்படையோ? அஞ்சி ஓடி அலுப்படைந்தேன் இதுகாறும் என்றான் நீலன். “ மீட்படையா மக்கட்கு மீட்பும், சற்றும் விழிப்படையா மக்கட்கு விழிப்பும் நல்கத் தோட்படையால் வையத்தை வெல்லும் வேலன் துணைப்படையாய் அன்னத்துக் கமைந்தான்” என்றாள். 262 ஆள்பிடிக்கு மோஅவளுக் கென்று கேட்டான், அடிபிடித்த வேர்கல்லி நூல்பி டித்து வாள்பிடித்த றுத்தெடுத்த செம்மர த்தில் வான்பிடிக்கச் செப்பனிட்ட தேர்போன் றானின் தாள்பிடித்து வாழ்கின்றாள் அன்னம்! வேலன் தகைமைஎலாம் மிகப்பிடிக்கும்! அவளுக் கன்னோன் தோள்பிடிக்கும்; சுவையெல்லாம் பிடித்தெ டுத்த தூயதமிழ் நடைபிடிக்கும் என்றாள் நீலி! 263 எம்சொத்தே, கதிர்நாடு, நாமே ஆள்வோம் எனநினைத்தார் நரிக்கண்ணர்; தீதே செய்தார்! பஞ்சொத்துப் பறக்கின்றார் நாட்டு மக்கள்! பலர்ஒத்து விரைவாகச், செழித்த மாவின் பிஞ்சொத்த கண்ணாளுக் கிந்த நாட்டைப் பெருமைபெற முடிசூட்டி முடித்துவிட்டால், நெஞ்சொத்த நாமிருவர் மணமு டித்து நெடுவாழ்வு தொடங்கலாம்! உன்னி டத்தில், 264 ‘அன்னத்தை நான்காண வேண்டும் என்றேன் அதைமறந்தாய்’ என்னேடி என்றான் நீலன்! சொன்னத்தை நான்மறந்து போக வில்லை தொடர்பொன்றும் இல்லாத புதிய ஆளை என்னத்துக் கவள்நம்ப வேண்டும்? அன்னாள் எண்ணத்தை நானறிவேன் என்றாள் நீலி! “பொன்னொத்த பேழைக்கு முயல்கின் றாளா? புலன்ஏதும் கிடைத்ததுவா?” என்றான் நீலன். 265 “ ஒருதுறவி வேலனுக்கே ஆன மட்டும் உதவுகின்றான் பேழையினைத் தேடி வந்து தருவதாய் உரைக்கின்றான் பேழைக் காகச் சற்றேனும் கவலையிலா திருக்கின் றார்கள். வரும்பேழை என்றுதான் நினைக்கின் றேன்நான் மறைவாகப் பேசுகின்றார் எனைய கற்றிப்! பெரும்பூதம் விட்டதுவும் துறவி வேலை பின்நடத்த இருப்பானும் அவனே” என்றாள். 266 வட்டிலிட்ட வெற்றிலைக்குச் சீவல் நெய்யால் வறுத்தெடுத்து நிறுத்தநிறை மணமும் சேர்த்துத் தட்டிலிட்டுச், செம்பினிலே இன்பால் பெய்து தனித்தனியே முக்கனியின் சுளையும் இட்டுப் பட்டிலிட்ட மேல்விரிப்பில் பூவ டிப்பைப் பாரெல்லாம் மணம்பரவத் தெளித்துத் தங்கக் கட்டிலிட்ட அறைகாட்டி நீலி தோள்மேல் கையிட்டான் பெருவீடு கமழச் சென்றார். 267 இயல் - 69 நரிக்கண்ணன் அஞ்சியோடி யடைந்த ஆனையூர்ப் பள்ளியில், தன் ஆட்களிடமும், அமைச்சனிடமும் பேசியிருந்தான். சென்றடைந்த ஆனையூர்ப் பள்ளி தன்னில் சிலமறவர் உடனிருந்தார்; அவரை நோக்கி இன்றடைந்த பூதத்தை இதற்கு முன்னே எங்கேனும் கண்டதுண்டோ நீங்கள் எல்லாம் குன்றடைந்த நம்ஆட்கள் கண்ட துண்டோ! கூறுங்கள் என்றுரைத்தான் நரிக்கண் தீயன்! என்றுமிதைக் கண்டறியோம் கேட்டோ மில்லை என்றுரைத்தார் எல்லோரும்! அமைச்சன் சொல்வான்: 268 ஆனையூர் தனில்வந்தோம் இவ்வி டத்தில் அப்பூதம் வாராத தென்ன; நாமும் பானையினைத் தலைகவிழ்த்துச் செய்த தைப்போல் பகைவர்களும் ஒருபூதம் செய்தார் போலும்! ஏனிதற்கு நாமஞ்ச வேண்டும் என்றான். இதற்கிடையில் அமைச்சன்மகன் நீலன் என்பான் தேனிதழாள் நீலியிடம் பெற்ற நல்ல செய்திகளில் சிலசொல்ல அங்கே வந்தான். 269 இயல் - 70 அங்கு வந்த நீலன் நரிக்கண்ணனை அஞ்சாதிருக்கச் சொல்கின்றான். பூதத்துக் கஞ்சுவதோ வேந்தே? அஃது, பொய்ப்பூதம்! ஆள்கொண்டு செய்த பூதம்; ஊதப்ப றக்குமொரு சருகு! வற்றி உலுத்தஒரு மிலார்!அந்தஅன்னத் திற்குத் தோதாக ஒருதுறவி இந்தச் சூழ்ச்சி சொல்லி வைத்தான், அவ்விளைய அன்ன மும்தன் காதலனும், துறந்தானும் அரண்ம னைக்குள் கால்வைக்க லாயிற்றே! பேழை தன்னை, 270 அரண்மனையில் தேடுகின்றார்! அவ்வி டந்தான் அதுகிடைக்கும் என்பதுதான் அவர்க ருத்து! விரைந்தங்கு வாரீரோ என்றான் நீலன்! வேந்தன்நரிக் கண்ணன்எரிக் கண்ண னாகிப் பொருந்தும்இது! நடவுங்கள் அரண்ம னைக்குள்! போயிருக்கும் அன்னத்தைத் துரத்த வேண்டும்! இருந்தங்குப் பேழையினை நாமே தேடி எடுத்திடுவோம் என்றுரைத்தான்! நீலன் சொல்வான்; 271 இங்கிருந்தே, எல்லாரும் பூதங் கள்போல் எழில்மாற்றி மொழிமாற்றிக் கிளம்ப வேண்டும்; அங்கிருக்கும் ஊர்மக்கள் அஞ்சிப் போவார்; அன்னத்தின் ஆதரவும் குறைந்து போகும்; சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல சேயிழைதன் கூட்டமொடு பறந்து போவாள்; எங்கிருக்கும் ஆட்களையும் அழைப்பீர் என்றான் ஏற்பாட்டை நரிக்கண்ணன் ஒப்புக் கொண்டான். 272 இயல் - 71 நீலன், அரண்மனையில் அன்னத்தின் கூட்டத்தைக் கண்டு நரிக்கண்ணன் முதலியவர்கள் பூதமாக வரவிருப்பதைக் கூறினான். அரண்மனையை நோக்கிவந்த நீலன், நீலி அன்னமெனும் உன்னருமைத் தலைவி யார்க்கும் பெருமைபெரும் வேலனார், துறவி யார்க்கும் பின்னுள்ளார் அனைவர்க்கும் உனக்கும் தீமை வருவதையும் அறியீரோ? உயிர்பி ழைப்பீர். வாரீரோ வாரீரோ என்றான் நீலன். அரசன்மகள் உள்ளழைத்தாள். நீலன் சென்றான். அமைத்திட்ட நரிக்கண்ணன் திட்டம் சொல்வான். 273 இன்றிரவு பூதங்கள் நூறு வந்தே இங்குள்ளார் அனைவரையும் கொன்று போடும்! ஒன்றதிலே நரிப்பூதம்! மற்ற எல்லாம் உடனிருக்கும் படைமறவர் எனும்பூ தங்கள்! நன்றிதனை நானறிவேன்! நானோ அந்த நரியாரின் அமைச்சன்மகன்! நீலி என்பாள் என்னுயிர்போன் றாள்,அவளோ தங்கள் தோழி! என்னிடத்தில் மிகவாகச் சொல்லி யுள்ளாள். 274 துறவியார் இவர்தாமோ! வேல னாரும் தூயபிற நண்பர்களும் இவர்கள் தாமோ? நிறையஎனக் கன்புண்டு தங்கள் மீதில்! நேரினிலே மட்டுந்தான் கண்ட தில்லை! பிறகெல்லாம் பேசலாம்! வருந்தீ மைக்குப் பெரிதுநீர் கருதிடுக என்றான்! வேலன், இறையவரின் அமைச்சருக்கு மகனா ரேநீர் இன்றிழைத்த நன்றியையாம் மறவோம் என்றான். 275 என்றவுடன் துறவியவன் நீல னாரே இங்குவரும் பூதங்கள் தம்மை நாமே சென்றெதிர்ப்போம்! உம்தந்தை அடையா ளத்தைச் செப்பிடுவீர் அவரைநாம் காத்தல் வேண்டும் என்றுரைத்தான், அதுகேட்ட நீலன், “தந்தை இடதுகையில் வேப்பிலைவைத் திருப்பார் அந்த மன்னன் அடையாளமோ தலையில் மாம்பூ வைத்திருப்பான் அறிந்திடுவீர்” என்று சொன்னான். 276 பறந்ததுவே லன்குதிரை! அன்னம் ஓர்பால் பாய்ந்தேறித் தன்பரியைப் பறக்கச் சொன்னாள்! “பிறந்ததுநம் விடுதலைநாள்! பிறந்த தின்பம்! பிளந்ததுபோய் ஆள்வாரின் சூழ்ச்சிப் பாறை! மறந்ததுவும் உண்டோநம் வாளும் தோளும் மாற்றலர்கள் ஏற்றுவந்த பழியை என்றே அறைந்தார்கள் வெல்முரசம்! தோழர் எல்லாம் அடடாஎன் றரண்மனைக்குள் கடிது வந்தார். 277 கணக்காயர் வந்திட்டார்! தம்பால் நாளும் கற்பாரும் வந்திட்டார்! வீரப் பர்க்குத் துணைத்தோழர் வந்திட்டார்! நாட்டின் அன்பு சுரப்பான நெஞ்சத்து மறவர் எல்லாம் பணிக்காக உயிர்என்று கொதித்து வந்தார்! பகையாக வந்தவரைத் தொகையாய் வெட்டிப் பிணக்காடு செய்கருவி அனைத்தும் தீட்டிப் பிழைகாட்ட வழியின்றித் தொழில் புரிந்தார். 278 இயல் - 72 அன்னம் வேழ மன்னனைக் கண்டு பேசலுற்றாள். வஞ்சியவள் வேழனிடம் சென்றாள், ஐயா மக்கள்எல்லாம் பூதத்தால் நடுங்கு கின்றார். நெஞ்சுறுதி கொண்டவரும் அதைஎ திர்க்க நினைப்பதில்லை தங்களின்பே ராணை எண்ணி! அஞ்சல்எனத் தாங்களும்ஓர் சொல்லைச் சொல்லி அருளுவதும் இல்லையெனில் ஆர்தாம் காப்பார்? கெஞ்சுபவர் சார்பில்நான் கெஞ்சு கின்றேன். கெடுதலையைத் தீர்ப்பதுநும் கடனே என்றாள். 279 முதலிலொரு சிறுபூதம் வந்த தென்றார்! முன்னிலுமு யர்ந்ததுவாய் மற்றொன் றென்றார்! கதிர்நாடு பட்டதுபஞ் சும்ப டாது கண்டாரும் காணாரும் சொன்ன சொல்லால் இதுபூதம் அதுபூதம் எனந டுங்கி இறப்பாரும் ஆனார்கள் புதுமை அன்றோ? புதுமன்னன் நாடாள வந்தான் பூதம் போந்ததென ஓடிவிட்டான் கூட்டத் தோடு. 280 அஞ்சவைக்கும் பூதத்தை எதிர்த்துக் கொல்வார் ஆர்எனினும் அவர்க்குநாம் காப்ப ளிப்போம்! வஞ்சிஎழில் அன்னமே இதுநம் ஆணை! மக்கட்கெ லாமிதனை எடுத்து ரைப்பாய்! மிஞ்சவிடக் கூடாது பொல்லாங் கெல்லாம் விளைந்தனவே பூதத்தால் என்றான் வேலன்! நஞ்சுக்கு மருந்தையா தங்கள் ஆணை நன்றையா என்றுரைத்தே அன்னம் சென்றாள். 281 இழந்தானோர் ஏழை,பெருஞ் செல்வம் பெற்றான் எனமகிழ்ந்து வரும்அன்னம் தன்னை நோக்கிப் பழந்தானா என்றான் வேலன், பழுத்த பழந்தான்என் றுரைத்திட்டாள்! அரண்ம னைக்குள் நுழைந்தாளைத் துறவியவன் கேட்கப் பூதம், நுழைந்தாளைக் கொல்லுவதால் அதைம றித்து முழந்தாளை முறிஎன்றார் மன்னர் என்று மொழிந்திடவே துறவியவன் மகிழ்வு கொண்டான். 282 இயல் - 73 இரவில் நூறு பூதம் வருவதாக அன்னத்தின் ஆள் வந்து அன்னம் முதலியவரிடம் கூறினான். சேறுண்டு நடவுண்டென் றிருப்பார் தாமும் திருவுண்டு கடையுண்டென் றிருப்பார் தாமும் வீறுண்டு வாளுண்டென் றிருப்பார் தாமும் வினவுண்டு படிப்புண்டென் றிருப்பார் தாமும் சோறுண்டு மனைமக்க ளோடு சென்று துயிலுண்டு கிடக்கின்ற இரவில் ஓர்ஆள் நூறுண்டு பூதங்கள் வருவ தைநான் நோக்கியதும் உண்டென்றான் துறவி யின்பால்! 283 வாளெடுப்பீர் இடக்கையில் பலகை கொள்வீர் வரிப்புலியின் கூட்டம்போல் சுருக்காய் ஓடித் தோளெடுக்கும் முன்பகையின் உயிரெ டுப்பீர் தூயவனே! நரிக்கண்ணன் தலையில் மாம்பூ! தேளெடுத்து வைத்ததென இருக்கும் வேம்பின் சிறியஇலைக் கொத்தன்றோ அமைச்சர் கொண்டார்! தாளெடுப்பீர் நடப்பீர்கள் வேல னாரே தலைமைநடாத் துகஎன்று துறவி சொன்னான். 284 இயல் - 74 அன்னம் நரிக்கண்ணனை மாய்த்தாள் ஞாயிற்றின் ஒளிமுகத்து வேலன், அன்னம் காலாட்கள், நடந்தார்கள்! கோட்டை வாயில் போயிற்றுக் கூட்டமிது பூதக் கூட்டம்! பூபூஎன் றதட்டிற்று நேரில் வந்தே! ஆயிற்றா உமைக்காத்துக் கொள்வீர் என்றான் அடல்வேலன்! எதிர்த்தார்கள்! பனையி னின்று காய்இற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன் கருந்தலைவீழ்ந் ததுவேஅன் னத்தின் வாளால்! 285 நாற்புறத்தும் வளைத்தார்கள் பகைக்கூட் டத்தை நடுப்புறத்தில் அமைச்சன்உயிர்ப் பிச்சை கொள்ள ஏற்புரைத்து, மற்றவரின் உயிரை வாங்கி எடுத்துவந்த எரிக்கொள்ளி யால்மு கங்கள் மாற்றமுறத் தீய்த்தபின் பிணத்தை எல்லாம் வரிசையுறக் கிடத்தி,அரண் மனைய டைந்தார். வீற்றிருந்த துறவியவன் நடந்த எல்லாம் வினவினான்; அமைச்சன்தான் மொழிய லானான்: 286 இயல் - 75 நீலன் தந்தையும் நரிக்கண்ணன் அமைச்சனுமாகிய ஒருவன் துறவிபால் நடந்தவை கூறினான். தீப்பட்ட காட்டினிலே வேங்கை யோடு சிறுமுயலும் சாதல்போல் நரியின் மைந்தன் சாப்பாட்டுப் பொன்னப்பன் தானும் செத்தான். தன்தாயும் உடனிறந்தாள். பூதப் போர்வை காப்பாற்றும் எனநினைத்தார்! அதனால் மாண்டார்! கண்ணிமைப்பில், அன்னத்தால் நரிஇ றந்தான் வேப்பிலைக்கை யுடையஎனைப் புறம்வி டுத்து வீழ்த்தினார் பகையனைத்தும் வேலர் என்றான். 287 தேரோடும் வீதியிலே கதிர்நாட் டானின் செந்நீரோ டும்வண்ணம் வஞ்சம் செய்தும் காரோடு நிகர்குழலாள் அரசி தன்னைக் கனிவோடு பேசித்தன் கையால் மாய்த்தும், சீரோடு வாழ்ந்திருக்க நினைத்தான்; அந்தத் தீயோனும்* தீர்ந்தான்.தன் குடித்த னத்தை வேரோடும் தீர்த்திட்டான்! இரங்கு கின்றேன். மேல்என்ன விளைந்ததெனத் துறவி கேட்டான். 288 பூதமெனச் சொல்வதெலாம் மனிதர் என்று புகல்வதற்கே, பிணத்தையெலாம் வரிசை யாக்கி மீதமுள்ள அமைச்சரையாம் அழைத்து வந்தோம்! விடிந்தவுடன் நாட்டார்கள் கண்டும் கேட்டும் ஓதுவதால் வேழநாட் டரசன் எண்ணம் உணர்ந்திடுதல் முடியுமென வேலன் சொன்னான் தீதொன்றும் இல்லைஇனித் துயில்வீர் என்று செப்பினான் நற்றுறவி! ஒப்பிச் சென்றார். 289 இயல் - 76 வேலன் நெஞ்சம் அன்னத்தின் மேல்! சன்னலிலே தென்றல்வந்து குளிர்வி ளைக்கும்! தனியறையோ அமைதியினைச் செய்யும்; மிக்க மென்மையுறு பஞ்சணையோ துயில்க என்று விளம்பும்!அவன் உளம்அங்கே இருந்தால் தானே! கன்னலிலே சாறெடுத்து தமிழ்கு ழைத்துக் கனிஇதழாற் பரிமாறும் இனிய சொல்லாள் அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன் ஐயத்தை மேன்மேலும் உடைய னாகி. 290 விண்ணிடையே பன்னூறா யிரம்மீன் கட்கு வெண்ணிலவு போல்அந்த மங்கை அன்னம் மண்ணிடையே பெண்ணினத்துக் கொருத்தி அன்றோ? வாழ்விடையே பெருவாழ்வும் வாழ்ந்தாள்; என்றன் கண்ணிடையே மலர்க்காடா னாளே! உள்ளக் கருத்திடையே மணமானா ளேஎன் செய்வேன்! நுண்ணிடையாள் எனக்குத்தா னோஅல் லாது நோயிடையே சாகத்தான் பிறந்துள் ளேனோ! 291 தேனைப்போல் மொழியுடையாள்; அன்ற லர்ந்த செந்தாமரை மலர்போல் முகத்தாள்; கெண்டை மீனைப்போல் விழியுடையாள் விட்ட திர்ந்த மின்னைப்போல் நுண்ணிடையாள்! யாவும் கொண்ட வானைப்போல் உயர்வாழ்வு வாழ்ந்தாள்; என்றன் மகிழ்ச்சிக்கு மகிழ்ந்துநான் நைந்தால் நையும் மானைப்போன் றாள்எனக்குத் தானோ அன்றி வறிதேநான் சாகத்தான் பிறந்துள் ளேனோ! 292 பயிரடைந்த ஊட்டத்தி னூடு தோன்றும் பச்சைப்ப சுந்தோகை மயிலோ! நல்ல உயிரடைந்த ஓவியமோ! அச்சில் வார்த்த ஒளியடைந்த வடிவமோ! வைய மென்றும் பெயரடைந்த பெருவாழ்வு வாய்ந்தாள்! என்மேல் பெண்ணடைந்த மகிழ்ச்சிக்கோர் எல்லை யில்லை உயர்வடைந்தாள் எனக்குத்தா னோஅல் லாமே ஊன்மெலிந்து சாகத்தான் பிறந்துள் ளேனோ! 293 திருந்தாதோ முல்லையெனச் சிரிப்பாள்! நன்றே செழிக்காதோ வையமென அறங்கள் செய்வாள்! அருந்தாதோ தும்பியென வாய் மலர்வாள்! அடையாதோ அன்னம்எனும் நடையாள்! நாடு வருந்தாதோ எனஆளும் வாழ்வு வாய்ந்தாள்! வாய்க்காதோ என்அருள்தான் என்று நோக்கி இருந்தாளே எனக்குத்தா னோஅல் லாமே இடருற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ! 294 கொம்பென்றால் அவள்மெய்யைத், தார்வ ருந்தும்! கொடியென்றால் அவளிடையை மின்வ ருந்தும்! அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்! அலையென்றால் அவள்குழலை முகில்வ ருந்தும் செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள் செயல்என்றால் “உளம்வாய்மெய் உனக்கே ஆகும் நம்பென்பாள்” எனக்குத்தா னோஅல் லாது நலிவுற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ! 295 பொன்னிழையால் பூப்போட்ட நீலப் பட்டுப் புடவையொடு நடையழகு கண்டேன் ஆங்கோர் புன்னைமரம் மலர்குலுங்க நடந்த தென்ன புதுமையென நான்வியந்தேன்! இவ்வை யத்தில் மன்னுமிள வரசிஎனும் வாழ்வு வாய்ந்தாள் மலர்விழியால் அருட்பிச்சை கேட்பாள் என்னை! அன்னமவள் எனக்குத்தா னோஅல் லாமே அகம்நொந்து சாகத்தான் பிறந்துள் ளேனோ! 296 ஆடப்போம் புனலிலெலாம் அவளே, காற்றில் அசையப்போம் பொழிலிலெலாம் அவளே! கண்ணால் தேடப்போம் பொருளிலெலாம் அவளே நேரில் தின்னப்போம் சுவையிலெலாம் அவளே, வண்டு பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில் படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று வாடக்,கண் துயிலாமல் இருந்தான் வேலன் மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான். 297 இயல் - 77 ஊர்ப் பேச்சு விடிந்ததுவே கருவண்ண இரவும்! ஆர்ந்து வழிந்ததுவே பொன்வண்ணப் பகலும்! எங்கும் ஒடிந்தது,தீ யோன்பிடித்த கொடுங்கோல்! வானில் உயர்ந்ததுநல் லோரின்கை! சிலர்அ றிந்து முடிந்தது பூதச் சூழ்ச்சிஎன மகிழ்ந்தார்; மூளுகின்ற அச்சமினி இல்லை என்றார்! கடிந்துரைத்தார் நரியானை, கைகள் கொட்டிக் களித்திடுவார் பாடிடுவார் ஆடு வார்கள்! 298 அரசனிது கேள்வியுற்றான், வியந்தான்; சென்றே அப்பிணங்க ளைக்கண்டான்! நரிக்கண் ணற்கு வரும்இந்த நிலைக்கிரக்கம் கொண்டா னேனும் வஞ்சகர்க்கு வாய்ப்பதுதான், வாய்த்த தென்று கருதினான்; பூதமென வந்த தாலே கட்டோடு மாண்டுவிட்டான், மாளச் செய்த ஒருகூட்டம் உண்டென்றால் அதனை நான்தான் உண்டாக்கி னேன்என்றன் சட்டத் தாலே 299 தொல்லைஇனிக் கதிர்நாட்டுக் கில்லை பூதச் சூழ்ச்சியோ வேரற்றுப் போன தாலே! ‘வில்லைநிகர் நுதலுடைய அன்னம், பேழை வேண்டுகின்றாள் அதன்முடிவு காண வேண்டும். கல்லையெலாம் மலையெலாம் கட்டி டங்கள் காட்சிதரும் மன்றமெலாம் அகழ்ந்தும் சாய்த்தும் இல்லைஇது வரைக்குமே அருமைப் பேழை இருக்கின்ற தெனும்பேச்சும்* என்றான் மன்னன். 300 வேழவனோ இவ்வாறு கூறக் கேட்டு விளம்பிடுவான் நல்லமைச்சன்; மன்னர் மன்னா! பேழையினைக் காண்பதுவும் எந்த நாளோ! பெருநாட்கள் நாமிங்குக் கழிக்க லாமோ! ஏழெட்டு நாட்களிலே பேழை கிட்டா திருந்திட்டால் கதிர்நாட்டின் ஆட்சி தன்னை மாழைஎனும் தங்கள்அரும் மரும கருக்கு வழங்குவதே ஒழுங்காகும் என்று சொன்னான். 301 இயல் - 78 வேழமன்னன் “ஏழு நாளில் பேழை அகப்படாவிட்டால் கதிர்நாடு மாழைக்கு முடி சூட்டப்படும்” என்று பறை அறைவித்தான். எவரெதனைச் சொன்னாலும் ஆம்ஆம் என்றே இயம்புகின்ற வேழத்தான் இதையும் ஒப்பித் தவறொன்று மில்லைஇதில் ஏழு நாட்கள் தவணையிட் டுப்பறையறை யச்சொல்க என்றான்! நவிலலுற்றான் எவ்விடத்தும் வள்ளு வன்போய்! நாடெல்லாம் முரசொலியைக் கேட்டார் மக்கள் இவண்ஏழு நாட்களிலே பேழை காணா திருக்குமெனில் மாழைக்கே கதிர்நா டாகும். 302 சிறுகுடியில் நல்ஆத்தா இருந்தாள்! ஆங்கே தேனிதழாள் அன்னந்தன் விழிநீர் சிந்த இறையவனாம் வேழத்தான் சொன்ன வண்ணம் ஏழுநாள் போய்விட்டால் நாடும் போமே அறையாயோ ஒருவழியை ஆத்தா என்றே அழுதிருந்தாள்! வீரப்பர், கதிர்நாட் டாட்சி பெறுவாய்நீ என்றாரே அவரைக் காணப் பெறுவேனோ எங்குள்ளார் பேசாய் என்றாள். 303 இடைத்துகிலால் கண்துடைத்தே அன்ன மேஎன் அன்புக்கு வாய்ப்பிடமே! என்து ணைவர் நொடிப்போதும் சோர்வின்றிப் பேழை தன்னை நோக்கும்விழி மூடாமல் தேடு கின்றார். துடிக்கும்நரிக் கண்ணனவன் ஒழிந்தான் நீயே தொட்டவாள் அவன்குடியை அழித்த துண்டு. கொடிக்குநிகர் இடையாளே கதிர்நாட் டாட்சி கொள்ளுநாள் இதுஅன்றோ என்றாள் ஆத்தா. 304 வாயோரம் “உயிர்வாங்கும் சிரிப்பு” மின்னி வழிகின்ற வேலவனின் திருமு கத்தில் மாயாத என்நெஞ்சம் சென்று சென்று மாய்வதனை இவ்வையம் அறிவ துண்டோ? தீயோரும் என்நிலைமை அறிந்தால், என்றன் திருப்பேழை தாராரோ எனத்து டித்துப் பாயோரம் ஆத்தாவின் மடியின் மீது தலைசாய்த்துப் படுத்தபடி பலநி னைத்தாள். 305 நான்குநாள் ஆயினவே! பேழை தன்னை நாட்டாரில் ஒருபேதை கண்ட தாயும் நான்கேட்க வில்லையே மலர்மு கத்தில் நறைபெருக்கும் இதழானைப் பெறுவ துண்டோ? வான்முகிலில் பெருங்கடலின் கீழ்ப்பால் இந்த வையத்தில் பெருங்காட்டில் இருப்ப தாக ஊன்செவியில் நான்கேட்கப் பெற்றால் என்றன் உயிர்கொடுத்தும் பேழையினைப் பெறுவேன் அன்றோ! 306 எனத்துடித்தே எழுந்திடுவாள்! வீதி நோக்கி எழில்நகரை உள்ளத்தால் நோக்கி நோக்கி இனித்தேடும் இடம்இல்லை எனமு டித்தும் இருகாலும் செல்லும்வழிச் சென்றி ருந்தாள். தனித்தாளும் அரசுபோல் துறவி யங்கே தானொருபால் வீற்றிருந்தான் அரண்ம னைக்குள்! கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழ றிந்த கணக்காயர் முதற்பலரும் அருகி ருந்தார். 307 கணக்காயன், அறிஞரே, துறவி யாரே, கடிதினிலே பாண்டியனார் பரிசு தன்னைத், தணிக்காத காதலனார் வேலன் கொள்ளத் தண்அருளைப் புரியீரோ என்று சொல்லத் துணுக்கமுறு கின்றதுவே என்றன் உள்ளம் தூயபாண்டி யன்பரிசு வெளியில் வந்தால் பிணக்கங்கள் வஞ்சங்கள் பிறக்கும், தூய பேழைநிலை என்னாமோ? கருத வேண்டும்! 308 ஆயினும்நான் பேழைதனை நாளைக் கீவேன் அறநெறியின் மறவர்களில் ஒருவன் வேலன்! தூய,அவ் அன்னமும்இக் கதிர்நா டாளத் தோன்றியவள்! கவலைஏன்? நீவிர் போக ஆயவெலாம் நான்முடிப்பேன் என்று ரைத்தான். அகமகிழ்ந்தார் அங்கிருந்தார்; அகன்று போனார்; ஆயிழையாள் நீலியவள் பொதுமன் றத்தில் ஆளனிடம் அன்புசெய விரைவிற் சென்றாள்! 309 இயல் - 79 நீலன் நீலி பேச்சு அன்பாகப் பேசியும்கை தொட்டும், தோளை அணைத்தும்பின் முகத்தோடும் முகமி ணைத்தும் இன்பாக இரவுகழித் திடலாம் என்றே எண்ணிச்சென் றாள்அந்த நீலி! நீலன், முன்பாகச் சொல்லடிநீ பேழை பற்றி முடிவென்ன செய்துள்ளார் அவர்தாம் என்றான்! பின்பாகட் டும்சற்றே தமிழும் அன்பும் பிசைந்தாற்போல் பேசியிருப் போமே என்றாள். 310 மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி வற்றாத அன்பூற்றே சற்றே கேட்பாய்! புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத் திற்குப் பொன்முடியைச் சூட்டிவிட்டால் நாட்டார் பெற்ற இகழ்ச்சிமுடி வடையுமடி! நமது நெஞ்சும் இன்னலிலா திருக்குமடி! அப்போ தன்றோ தொகுத்துவைத்த முத்தங்கள், கொடுக்கல், வாங்கல், தொழில்விரைந்து நடக்குமடி என்றான் நீலன். 311 நாளைக்குப் பேழைவரும் என்றாள் நீலி! நற்பேழை இருப்பிடத்தைக் கேட்டான் நீலன்! காளைக்கும் மங்கைக்கும் கணக்கா யர்க்கும் காட்டுங்கால் காணுவார் என்றாள்! தென்னம் பாளைக்கு நிகரான நகைமு கத்தாய் பகற்போதில் என்வீடு வருவாய்! இந்த வேளைக்கு விடைகொடுப்பாய் என்று கூறி விரைவாக நடந்திட்டான் வீடு நோக்கி. 312 இயல் - 80 நீலன் வீடுசென்று பேழையோடு வருவோனை மறித்துப் பறிக்கச் சொல்லி, ஆட்களை ஏவினான். வீடடைந்தான் நீலனவன்! பொழுதோ இன்னும் விடியவில்லை! ஆட்கள்பலர் எவ்வி டத்தும் காடடைந்த விலங்குகள்போல் உலவ லானார் கடகடெனக் குதிரையினை நடத்து கின்றார்! கூடடைந்த கிளிபோலக் குடிசை தன்னில் கொடியிடையாள் இருந்திடுவாள்! விரைவில் அங்கே ஓடிடுங்கள் என்றகுரல் கேட்கும் ஓர்பால்! ஊக்கங்கொள் வீர்என்னும் ஒருகு ரல்தான்! 313 எவனேனும் பேழையொடு செல்வா னாயின் எதிர்த்திடுவீர், பேழையினைப் பறிப்பீர் என்று நவிலுமோர் குரல்!நீண்ட வாள்ம றைத்து நடவுங்கள் என்றதட்டும் ஓர்கு ரல்தான்! சுவரைப்போய் பார்என்பான் ஒருவன்! பேழை தோளின்மேல் வைத்தபடி நிற்கின் றான்பார்! அவனைமறி என்றொருவன் கூறக் கேட்டே அத்திமரத் தைஒருவன் குத்தி நைவான். 314 ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான் காலடிஓ சைகாட்டா தொருவன் சென்று கல்தூணை மற்போருக் கழைக்க லானான்! வேலடியை ஆள்என்று நெருங்கி முட்கள் வெடுக்கென்று தைத்ததினால் நடுக்கங் கொண்டான்! மேலெழுந்த நிலவிலும்,இத் தொல்லை யாயின் மிகுமிருட்டு வேளைஎ னில் என்ஆ வாரோ? 315 ஆளொருவன் வரக்கண்டால் ஐந்து பேர்கள் ஆரங்கே என்றதட்டி நிறுத்து மந்த நாளிரவு மெதுவாக நடக்கக் கீழ்ப்பால் நடுக்கடலில் இளங்கதிர்தான் நுனிமு ளைக்கும் வேளையிலே கதிர்நாட்டின் மேற்கி னின்று வேலன்ஒரு குதிரையின்மேல் பேழை யோடும் வாளோடும் வருகின்றான்! அவனைக் சூழ்ந்து மறவர்பலர் வருகின்றார் குதிரை மீதே. 316 இயல் - 81 வேலன் பேழை தூக்கிக் குதிரைமேல் வர, எதிரிகள் எதிர்க்க - வேலன் ஆட்களும் கை கலந்தார்கள். சீழ்க்கையடித் தேஒருவன், வேலன்! பேழை! செல்லுங்கள் என்றுரைத்தான்! வேலன், மேலே வாழ்க்கையிலே வன்பிணிகள் பாய்ந்த தைப்போல் மறவர்பலர் வாளுருவிப் பாய்ந்திட் டார்கள்! தாழ்க்கையின் றிஎதிர்த்தார் வேலன்கூட் டத்தார்! சாய்ந்தனதோள் தலைகால்கள் தடத டென்று! கீழ்க்கடலின் மிசைவந்த பரிதி அங்கே கிடந்தஉடற் குருதியிலே கண்வி ழித்தான் 317 கணக்காயன் மாணவரும், வீரப் பர்க்குக் கையுதவி யானவரும் பகைக்கூட் டத்தைப் பிணக்காடு செய்கின்றார்! பகைவர் தாமும் பிளக்கின்றார் பல்லோரை! பேழை தன்னை அணைத்தபடி வாள்சுழற்றும் வேலன் தன்னை அழிப்பதுவே கருத்தாகப் பகைவர் கூட்டம் தணற்காடாய்ச் சூழ்கையிலே பேழை காக்கத் தட்டினான் குதிரையினைத் தறுகண் வேலன். 318 பறந்ததுவே லன்குதிரை தெற்கு நோக்கி! பகைவர்களும் தொடர்ந்தார்கள் வேலன் தன்னைச்! சிறந்தகணக் காயன்நெடும் பரியும் ஆங்கே செல்பகைமேற் சென்றதுசெஞ் சிறுத்தை போலே! மறைந்திடுவான் வேலன்ஒரு காட்டில்! மேட்டில் வாய்ந்திடுவான் பகைகாண! அவன்தி றத்தை அறிந்துபகை பாயுங்கால் குதிரை தன்னை ஆற்றினிலே நீந்துவிப்பான்; தோப்பில் மீள்வான்! 319 தன்னருமைப் பேழையொடு குதிரை தன்னைத் தட்டுவான்; விரைவினிலே செலுத்து கின்றான்! பின்தொடரும் பகைவர்சிலர் சோர்ந்து நிற்பார்! பின்செல்லும் கணக்காயன் அவரைக் கொல்வான்! இன்னல்தரும் பகைவர்தொகை குறையும் அங்கே! என்றாலும் அத்தீயோர் தொடரு கின்றார். மின்னொளியாள் இன்னுயிர்போல் வாள்அன் னத்தின் மீதுற்ற அன்புளத்தான்; தீது காணான்! 320 இயல் - 82 துறவியிடம் வேலன் நிலையைச் சொல்கிறான் ஒருவன். துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று ‘தூயவனைப் பகைவர்பலர் தொடரு கின்றார்! ‘திறல்வேலன் பேழையுடன் திரியா நின்றான் வேலனோடு கணக்காயர் தாமும் சென்றார்! முறைமையுடன் வேலனிடம் கிடைத்த பேழை முரடர்களால் பறிபோகக் கூடும் என்றான். துறவிஉளம் கலங்கினான், வேழ வன்பால் சொல்லுகபோய் இதைஎன்றான்! சென்றான் அன்னோன். 321 அவ்வேழ மன்னவனால் கதிர்நா டெங்கும் அமைதிநிலை பெற்றதுதீ யோரால் யார்க்கும் எவ்விடத்தும் தீங்கில்லை, நகர்காப் பாளர் எங்கெங்கும் வாள்பிடித்து நின்றி ருந்தார். கவ்விற்று மாலைஇருள்! வேலன் தன்னைக் காண்போமோ எனப்பலரும் ஐயுற் றார்கள் இவ்வளவில் வேலனையும் கொன்றி ருப்பார் என்றுபலர் எண்ணியுளம் ஏங்கு வார்கள்! 322 நரிவாழ்வு வேரோடு சாய்ந்த பின்னும் நாட்டினிலே அன்னத்தின் நலத்தைப் போக்க இருப்பவர்தாம் யார்என்று கேட்பார் சில்லோர்! இளவரசி அன்னத்தை அடைவ தற்கோ எழிற்பேழை வேண்டும்! அதை வேலன் பெற்றான்; பெற்றான்போல் பெறுவதற்கு முயலு கின்றார்! ஒருபொருளிற் பற்றுடையார் அறத்தால் கொள்வார் ஒரு சிலர்தீ நெறிச் செல்வார் என்றார் சில்லோர்! 323 குடிசையிலே நல்லாத்தா மயக்கத் தாலே குற்றுயிராய்ப் புரண்டபடி கிடந்தாள்! போழ்து விடிந்ததுவும் தானறியாள்! பரிதி மேற்கில் விழுந்ததையும் அவளறியாள்; இரவு வந்து படிந்தது தனிக்குடிலில்! விளக்கு மில்லை! பதறினாள்! விழிதிறந்தாள்! எழுந்தி ருந்தாள்! உடல்நோகத் தீக்கடைந்தாள்! விளக்கை ஏற்றி உடன்துயின்ற அன்னத்தைப் பார்த்தாள், இல்லை! 324 இயல் - 83 ஆத்தாவுடன் படுத்திருந்தாள் அன்னம். அவள் விடியலில் காணவில்லை. சேயிழையாள் துயில்கிடந்த இடத்தில் தோய்ந்த செங்குருதி கண்டிட்டாள் ஐயோ என்று வாயிலிலும் உட்புறத்தும் வெளிப்பு றத்தும் வஞ்சியுடல் தனைத்தேடிக் காணா ளாகித் தூயவளே அன்னமே என்று கூவிச் சொல்லொன்றும் செவியினிலே கேளா ளாகி நீயோடி இறந்திட்டாய் எனத்து டித்தாள் நீலிஅவள் அவ்விடத்தில் ஓடி வந்தாள். 325 அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி அழகுடலை இடுகாட்டில் பட்டுப் போன புன்னையடி யில்புதைத்தார்; என்றன் ஆத்தா! போனதடி கதிர்நாட்டின் தேனூற் றென்று! சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி! துன்பத்து மலையடி,யிற் புதைந்தாள் ஆத்தா! சின்னக்குடில் செங்குருதி வெள்ளம் கண்டு சிவக்கின்ற திருவிளக்கும் நடுங்கிற் றங்கே! 326 இயல் - 84 அதேநேரம் பேழையோடு வேலன் வந்தான். இக்கொடிய காட்சியினை வேலன் கண்டான் இதோபாண் டியன்பரிசு! தாயே! என்ன? பொற்கொடிஎங் கே?என்று விரைந்து கேட்டான் பொன்னனையாள் செங்குருதி இங்கே சிந்த அக்கொடியோர் சாக்குத்திப் பட்ட புன்னை அடியினிலே புதைத்தாரே என்றாள் ஆத்தா! தைக்கின்ற வேல்நூறும் அம்பு நூறும் சருக்கென்று பாய்ந்ததுபோல் உளம்து டித்தே 327 ஐயகோஎன அலறி என்றன் வாழ்வும் அழிந்ததடி அன்னமே, என்றி ரண்டு கையாலும் தலைமோதிக், “கண்ணே உன்றன் கலக்கத்தை தீர்க்குமோர் இலக்கி யத்தைப் பொய்யாத பாண்டியனார் பரிசை உண்மை புலப்படுத்தும் பட்டயத்தைக் கொண்டு வந்து வையாயோ என்றாயே வஞ்சி, தூக்கி வந்தேனே செந்தேனே எனக்கேன் பேழை! 328 இயல் - 85 நரிகள் மண்ணைத் தூற்றும் இடுகாடு; வேலன் அங்குச் சென்றான் அலறி. எங்குள்ளாய் உடன்வைத்துக் கொள்வாய்” என்றே இட்டதோர் பேழைதனைத் தோளில் ஏற்றி அங்குள்ள புன்னையினை எண்ணி வேலன் அழுதபடி ஓடுகின்றான்! முழுநி லாவும் பொங்குதுயர் காணவும்பொ றாத தாகி மறைந்ததுவே போய்க்கரிய முகிலுக் குப்பின்! மங்காமல் விழிக்கும்நரி மண்ணை எற்ற வருகின்ற இடுகாட்டிற் புன்னை யின்கீழ். 329 பிணமேடு தனைக்கண்டான் நெஞ்சி ரண்டாய்ப் பிளந்ததுபோல் திடுக்கிட்டான்! ஆவி தன்னைத் தணலேறிச் சுட்டதுபோல் துடித்தான்! காணத் தாங்காது கைவிரைந்து விழித்தான் கண்ணை! மணல்மீது தான்வைத்தே பேழை தன்னை மற்றுமொரு முறைகண்டான்! கனவோ அன்றி உணர்வேதும் கலங்கியதோ எனநி னைத்தான். உயிர்க்குயிரே அன்னமே எனஅ ழைத்தான்! 330 சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச் சிரிப்புக்கும், கருப்பஞ்சாற் றுச்சொல் லுக்கும், குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கார்போல் கூந்தலுக்கும், சாந்தமுகத் திங்க ளுக்கும் உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே உயிர்நீயே என்றுணர்ந்தேன் இயங்க லானேன்! அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம் அவியவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை? 331 படித்ததுண்டு; கேட்டதுண்டு; கண்ட தென்ன? பகலியங்கி இரவுறங்கும் சிறுமை யன்றித் தடித்தஉடல் பெருநெறியிற் சென்ற தில்லை தனித்தினிக்கும் இசைத்தமிழில் தேனும் கூட்டி வடித்தெடுத்த மொழியாளே, மலர்க்கண் காட்டி வாழ்விலெனை உயர்வித்தாய், உயிரே, உன்சீர் முடித்தனையே திருவிளக்கே இந்த வையம் முடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை? 332 பிறக்கமுடி யாதினிமேல் பெண்ஒ ருத்தி! பிரிக்கமுடி யாதஉயிர்ப் பொருளே! நெஞ்சம் மறக்கமுடி யாதஎல்லாம் பேசி, இன்ப வாழ்க்கையெனும் கடற்கரையின் ஒட்டில் நானோ சிறக்கஒரு முறையேனும் மூழ்க வில்லை! சேயிழையே தீங்கனியே அந்தோ நீதான் இறப்பதுவோ! திருவிளக்கே இந்த வையம் இறக்கவிலை எனில்எனக்கிங் கென்ன வேலை! 333 மோதல்ஒன்றோ? எதிர்ப்பொன்றோ இப்பே ழைக்கு? முழுமூச்சும் ஈடுவைத்துக் காத்து வந்தேன்! ஈதல்ஒன்று மற்றொன்று சாதல் என்றே எண்ணினேன்! அன்னமே உன்மேற் கொண்ட காதலன்றோ என்வெற்றி! கண்தி றந்து காணாயோ? பேழையை யும்எனையும் விட்டுச் சாதலுண்டோ திருவிளக்கே இந்த வையம் சாகவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை? 334 வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றி ருந்தேன் விண்ணினின்று வீழ்ந்தேனே தென்றல் காற்றின் பண்ணமைந்த தமிழ்ப்பொதிகை எனக்கே என்றேன் பாழ்ங்கிணற்றில் தூக்கிஎறி யப்பெற் றேனே! திண்ணெனவே இழந்தேனே, பசியைப் போக்கத் திரட்டியமுப் பழச்சாறே! என்னை விட்டு மண்ணடைந்தாய்! திருவிளக்கே இந்த வையம் மடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை? 335 கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல் களிமயிலும் காட்டாதே! ஒசிந்த மென்மை இடையழகு மின்னலிடை இல்லை யேசெவ் விதழ்கண்டார் மலரிதழும் காண்பா ருண்டோ உடையெல்லாம் நீலமணி! கடலோ நாணும்! ஒளிமுகத்தைக் கண்டிட்டால் பரிதி நாணும்! மடிந்தாயோ திருவிளக்கே இந்த வையம் மடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை? 336 இயல் - 86 பிணத்தைத் தோண்டி மடியில் சார்த்தினான். நிலவு அப்போது முகிலில் மறைந்திருந்தது. புதைத்தாரோ இரக்கமில்லார் பொன்னுடம்பைப் புதுமுகத்தைக் கடைசிமுறை காட்டாய் என்று பதைத்தானாய்ப் பிணப்புதையல் தோண்டிக், கூட்டை பரிந்தெடுத்துத் தன்மடியில் கிடத்திக், கூந்தல் ஒதுக்கி,முழு நிலா,முகிலில் புதைந்த தென்று இருளிடையே ஒளிமுகமும் புதைந்த தென்று கொதித்துள்ளம், கண்ணேஎன் கண்ணே என்று கூப்பிட்டு முகத்தோடு முகத்தைச் சேர்த்தே. 337 “ முத்தமடி” கடைசிமுறை! ஒன்றே ஒன்று முடிந்ததடி என்வாழ்வும்! உயிர்க்கி ளைமேல் தொத்துகிளியே, என்று மலர்க்கன் னத்தைத் துணைவிழியால் தேடுங்கால் முழுநி லாவும் மொய்த்தமுகில் கிழித்துவெளிப் பட்ட தாலே முழுதழுகி, ஊன்கழன்ற முகத்தைக் கண்டான்! கொத்தாக குழல்கழன்ற நிலையும் கண்டான்! குடல்சரிதல் கண்டான்;பல் இளித்தல் கண்டான்; 338 இயல் - 87 பின்னர் நிலா வெளிப்படவே, பிணத்தின் அழகற்ற நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை! வெறுத்துரைத்தான் பெண்ணுலகை! சீ!என்று பிணம்எறிந்து விரைந்தெ ழுந்து சிதையுடலை மறுமுறையும் உற்று நோக்கி ஏ! இதற்குத் தானா?இவ் வழியு டற்கா? இருள்கண்டால் விழிமூடும்! நோயும் அஞ்சும் வாயெச்சில் கண்டாலும் அருவ ருக்கும்! மாக்கீழ்மை! இதற்குத்தா னாஇப் பாடு! ஈயருந்த அழுகுதசை, எறும்பு மொய்க்க இற்றொழுகு புண்ணீர்!மற் றிதிலோ நாட்டம்? 339 பேன்நாறி வீழ்குழலைத் தேனா றென்றும் பீளைஒழு கும்விழியை நீல மென்றும் மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும் வெறுங்குறும்பிக் காதைஎழில் வள்ளை என்றும் ஊன்நாறும் ஊத்தைப்பல் வாய்உதட்டை ஒளிமுல்லை செவ்வாம்பல் கோவை என்றும் தோல்நாறும் கன்னம்கண் ணாடி என்றும் துயர்ஈளை பயில்குரலைக் குயில்தான் என்றும் 340 உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின் உச்சிஅதிர் மின்னலிலும் அச்ச மென்றும் கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும் குறுகியசெக் குலக்கைக்கால் வாழை என்றும் இடும்பையிலே இடும்குதிகால் சுவடி என்றும் ஈரித்தவெள் ளடிதாம ரைப்பூ என்றும் கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில் கிழக்கினையும் மேற்கென்று கிளத்து வார்போல்! 341 கண்ணுக்கு மையிட்டும் காதில் மூக்கில் கல்லிழைத்த நகையிட்டும், சிக்க றுக்க ஒண்ணாத குழலுக்கு மலர்கள் இட்டும் உரைநாணும் உடலுக்குத் திரையை இட்டும் பெண்ணென்று வந்தவளை இட்ட வெல்லாம் பிரிப்பாரேல் காண்போர்கள் சிரிப்ப ரன்றோ? மண்ணுக்கு வைத்த சுமை; வாழ்வின் நஞ்சு மங்கையரை வெங்கனவாய் மதித்தார் மேலோர்! 342 மாவடுவென் றால்விழியை மரமே நாணும்! மலர்என்றால் பெண்முகத்தைச் சோலை நாணும்! காவடிபோ லும்தோளை மூங்கில் என்றால் காக்கையுந் தன்கால்வைக் கக்கூசு மன்றோ! நாவடுச்சொல் தேனென்றால் வண்டோ ஓப்பும்? நங்கையரின் அங்கையோ செங்காந் தட்பூ! சாவடியின் கால்விளங்கு நிகர்க ழுத்தைச் சங்கென்றால் இக்கொடுமை எங்க டுக்கும்? 343 தேன்பாதி கொடுநஞ்சு பாதி என்றும் திருப்பாதி வறுமைநிலை பாதி என்றும் வான்பாதி படுசூறை பாதி என்றும் வழிபாதி அடைமுட்கள் பாதி யென்றும் ஊன்பாதி பெருநோயும் பாதி என்றும் உரைப்பதுபோல் பெண்ணொருத்தி ஆட வன்பால் நான்பாதி நீபாதி என்பர் ஆயின் நல்வாழ்விற் சரிபாதி இல்லை ஆகும். 344 இருளெல்லாம் பகலாக எண்ணி, நாளும் இரவெல்லாம் சலியாமல் ஓடி ஆடித், தெருளில்லா நெஞ்சுடையேன் அலைந்தேன், இன்பம் தேரேன்; இத் துறைநாடி இன்ன லுற்றேன்! அருளில்லா, வாட்படை வேற்ப டைக்கும் அழிவில்லா திருந்திட்டேன் எனினும் அந்தோ பொருளில்லாப் பெண்மையைநான் பொருளா யெண்ணிப் பொழுதெல்லாம் பழுதாக்கி விட்டே னன்றோ? 345 தாய்க்கேனும் தொண்டுசெய்யார்! அன்பு கொண்ட தந்தைக்குத் தொண்டுசெய்யார்! தன்நாட் டார்க்குப் போய்த்தூய தொண்டுசெய்யார்! தமிழ்வ ளர்க்கும் புதுநூற்குத் தொண்டுசெய்யார்! கல்லார் நல்லா ராய்த்திகழத் தொண்டு செய்யார்! அடிமை மாற அறத்துக்குத் தொண்டுசெய்யார்! பெண்களென்னும் நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார் நுனிஏறி அடிமரத்தை வெட்டு வார்போல்! 346 பெண்ணினத்தைத் தூற்றலுற்றான்! பெண்ணி னத்தைப் பெரிதென்னும் வையத்தை அருவ ருத்தான்! கண்ணிழந்தான் போலிருந்தான்! எதையும் அங்குக் காணாமல் இருந்ததனால் காதல் தேனை உண்ணுவதும் தீர்ந்திட்டான், மெய்வெ றுத்தான்! உயிர்வெறுத்தான்! பெண்நெருப்பில் வீழ்தல் இன்றிப் பண்படுத்த முடியாதோ உலகை என்றான்! பலசொன்னான் முடிவான கருத்தும் சொல்வான்! 347 இயல் - 88 பெண்ணுலகை ஏசுகின்ற வேலனின் பின் அன்னம் வந்து நின்று அழைத்தாள்! முதுவையம்! தீச்செயலால் முடிந்த வையம்! முடிவிலொரு பயனில்லா வையம் என்றான்! அதுபோதில் பின்புறத்தில் அன்னம் வந்தே அடியோடு தீர்ந்ததுவோ ஆஆ என்றாள்! இதுவைய மாஎன்றான்! “உள்ளேன்” என்றாள்! இரண்டுமுகில்! இரண்டுநிலா! உனைநான் பெற்றேன் புதுவையம்! புதுவையம் இதுதான் என்றான்! பூவைநீ இலாவையம் விழலே என்றான்! 348 திகழ்வேலன் பாண்டியனார் பரிசு தன்னைச் செங்கையிரண் டும்சேர்த்துத் தூக்கி, “உன்றன் புகழ்க்குரிய பேழையினைக் கொள்க” என்றான்! பூங்கையால் வாங்கினாள் முகத்தில் ஒற்றி மகிழ்ச்சியொடு கீழ்அமைத்தாள்; திறந்தாள், கண்ணால் மங்காத பட்டயமும் அனைத்தும் கண்டாள்! முகம்தாழ்த்திக், கால்விரலால் தரையைக் கீறி முடிந்ததுசூள்; கடிமணந்தான் மிச்சம் என்றாள். 349 இயல் - 89 வேலன் நடந்ததை உரைத்தான். ஆம்என்றான் அள்ளூற! இனிமேல் உம்மை அத்தான்என் றழைத்திடுவேன் என்றாள் அன்னம்! தூமணியே செய்என்றான்! என்னை வந்து தொடுங்கள் அத்தான்என் றுரைத்தாள்! தீர்ந்தபின்னர் மாமயிலே இனிமெதுவாய் நடப்பாய் என்று மணிப்பேழை தான்தூக்கி நடக்க லானான்! தீமையுறு பிணமென்ன? இறந்த தாகச் செப்பியவர் யார்என்றாள்! வேலன் சொன்னான்; 350 தெங்குபெருங் குலைசுமந்த தைப்போல் பேழை செங்கையிலே சுமந்துகுடி சைபு குந்தேன். மங்கைஎழில் அன்னமெங்கே என்று கேட்டேன். மரத்தடியில் புதைத்தார்கள் என்றார் தாயார். செங்குருதி தோய்ந்திருத்தல் கண்டேன். அங்கே செவ்விழியால் நீர்பெருக இருந்தாள் நீலி! இங்குவந்தேன், சரி,அதுபோ கட்டும், பெண்ணே இன்பமன்றோ நடைமுத்தம் என்றான் வேலன். 351 இயல் - 90 அன்னம், நீலன் வீட்டில் இருந்ததையும் இப்போது குடிசைக்கு வந்தபோது ஆத்தா வியப்புற்றுச் சொன்னதையும் சொல்கிறாள். உம்அன்னை யுடன்துயின்றேன், விடியு முன்னே உலவிவர நீலிஎன்னை அழைத்துச் சென்றாள்! அம்மருங்கில் தீயவர்கள் எனைஎதிர்த்தார்! அப்போது நீலன் எனைத்தன் அகத்தில் செம்மையுற இருஎன்றான், வெளியிற் சென்றால் தீமைஎன உரைத்திட்டான் அங்கி ருந்தேன்! இம்மதியின் ஒளியினிலே குடிசை வந்தேன், எழில்நீலி ஆத்தாவும் வியப்புற் றார்கள்! 352 நானிறந்து போனேனாம்! புன்னை யண்டை நல்லுடலைப் புதைத்தாராம்! ஆத்தா வின்பால் தேனிதழாள் நீலிஇது சொன்னாள்! அந்தச் சேயிழைக்கோ நீலனுரைத் தானாம்! என்றன் ஊன்உகுத்த செங்குருதி குடிசை தன்னில் ஒரேவெள்ள மாயிற்றாம்! இதுவு மன்றிப் போனதுயிர் எனும்படியே அருமை ஆத்தா புலன்மயங்கிக் கிடந்ததுவும் வியப்பே என்றாள். 353 இயல் - 91 வேலன், நீலனுடைய சூழ்ச்சியைக் கூறினான் என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன் எழிலுடைய நீலியிடம் உளவ றிந்தான். இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான் இதற்கிடையில் நீஇறந்தாய் என்ற பொய்யை என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்; இவையெல்லாம் இருக்கட்டும் பெண்இ தழ்தான் கன்னலின்சா றென்கின்றார் மெய்யா என்றான் காணீர்என, உளங்கனிந்தாள்! நடக்க லுற்றார்! 354 நானில்லை எனத்தெரிந்தால் நீயு மில்லை நடுத்தெருவில் பேழைதான் கிடக்கும்! நீலன் தானிந்த நாட்டினையும், எனையும் பெற்றுத் தனியாட்சி நடத்தலாம் எனநி னைத்தான்! தேனில்லை எனில்நல்ல வண்டு மில்லை செத்தொழிவேன் நீஇறந்தால்! இதனை நீலன் ஏனறிய வில்லை?இருக் கட்டும்! தென்றல் இருவர்க்கும் நடுச்செல்ல விடாதீர் என்றாள். 355 இயல் - 92 அனைவரும் ஒன்று சேர்ந்தனர் வேழவனின் படைமறவர் காப்ப ளிக்க விரைவாக எதிர்வந்தார்! கணக்கா யர்தாம் வாழ்கஎன வாழ்த்துரைத்த வண்ணம் வந்தார்! மற்றுமுள தோழர்களும் வந்து சேர்ந்தார் பேழையினைக் கண்டார்கள் வேல னோடு! பெடைஅன்னம் நடைகண்டு மகிழ்வு கொண்டார்! தாழுமுழுத் துறவியவன் வந்தான்! ஆத்தா தள்ளாடி நடந்துவந்தாள்! நீலி வந்தாள்! 356 வெற்றியெல்லாம் நீர்அருளிச் செய்தீர் என்று வேலன்தான் துறவியினை வணங்கி நின்றான்! உற்றபெரு வாழ்வனைத்தும் நீவிர் தந்தீர் ஒருபோதும் மறவேன்என் றுரைத்தாள் அன்னம்! பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான் பெருவியப்புக் கிடமில்லை என்று கூறி ஒற்றுநரை முடிநீக்கி வீரப் பன்தன் உருக்காட்டி னான்யார்க்கும் உவகை யூட்டி! 357 இயல் - 93 முடிசூட்டு விழா அறிவிப்பு தெருவெல்லாம் மறுநாளே முரச றைந்து திருநாடு வேலர்க்குத் தரும்வி ழாவைப் பெருநாடெல் லாம்உரைத்தார் வான்ம றைத்துப் பின்னிவைத்த வண்ணப்பந் தல்கள்* நாட்டி இருள்நாடா திருக்கும்வகை விளக்கும் இட்டார் எழுதிவைத்த ஓவியங்கள் உயிர்பெற் றாற்போல் வருகாலிற் சிலம்பசைய மாதர் இல்லம் மணியாக்கித் தணியாது மகிழ்ந்தி ருந்தார்! 358 அரசிருக்கைப் பெருங்கூடம் சிறக்க, ஆங்கே அணிமடவார் மறவேந்தர் சூழ்ந்தி ருக்க முரசெழுப்பக், கருவியெலாம் இசையெ ழுப்ப முதுநாட்டுப் பெருமக்கள் புதுமை காண, வரிசையொடு காத்திருக்க வேழ நாட்டு மன்னவனும் வந்துநின்றே “அன்னம்” “வேலன்” திருமணமும் இதுஎன்றான்! கதிர்நாட் டாட்சித் திருமுடியும் இதுஎன்று புனைந்தான் நன்றே! 359 இயல் - 94 அன்னல் வேலன் மண வாழ்த்து! தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார் தமிழி சைக்குத் தனிப்புலவர் வாழ்த்திசைத்தார், நகைமு கத்தின் அமுதமொழி மங்கைமார், மலர்பொ ழிந்தே அரசியார் அரசர்நனி வாழ்க என்றார்! தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன் தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும் கமழ்கின்ற பெருங்கூட்டம் விட்ட கன்றார் கதிர்நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே! 360 மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை மலர்ச்சோலை தான்புகுந்தே குடமெ டுத்தே அணித்தான குளிர்புனலை ஏந்தி முல்லை அடிவார்ப்பாள் போற்காட்டிக் கீழ்க்கண் ணாலே தணிக்காத காதலொடும் அன்புள் ளானைத் தான்பார்த்த படியிருந்தாள்! வேலன் தேடி பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம் பறக்குமுனம் பறந்தின்பம் பகிர்ந்தான் வாழி! 361 பிற்சேர்க்கை பாரதிதாசனார்க்குப் பாராட்டுரை பாவலர் பாரதிதாசனாரைப் பல்லாண்டுகளாக நான் அறிவேன். அவர் கவிதையில் வேகம் உண்டு; விடுதலைத்தாகம் உண்டு. பண்பும் உண்டு; பயனும் உண்டு. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமையில்லை” என்னும் பாரதியார் வாய்மொழியை இவர் பொன்போற் போற்றுபவர். இந்நாட்டில் உண்மைத்தமிழர் தலை யெடுக்கும் காலத்தில் இவர்க்கு உருவச்சிலையெடுப்பர். அன்பர் பாரதி தாசனார் நெடுங்காலம் தழைத்தோங்கி வாழ்ந்து, தமிழ்த் தொண்டு புரிக. - ரா.பி. சேதுப்பிள்ளை (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) ஆற்றல்வாய்ந்த புரட்சி புரட்சியைக் கண்டால் எனக்கு வெறுப்புக் கிடையாது. புரட்சி யில்லாதபடி உலகத்தில் நன்மை ஒன்றும் இதுவரை விளைந்ததில்லை. சமுதாயச் சீர்திருத்தம் முதலியவற்றில் இதுவரை தலையிட்டுள்ள வர்கள் அனைவரும் புரட்சிக்காரர்களே. ஒவ்வொரு கவிஞனும் ஒரு வகையில் புரட்சிக்காரன் என்றே நான் கூறுவேன். கம்பனைக் குறித்து நான் அவ்வாறே எழுதியிருக்கிறேன். ஆனால், அது ஒரு நல்ல நெறியைப் பின்பற்றியதாக இருத்தல் வேண்டும். ஒரு பரம்பரையை உண்டுபண்ணக்கூடிய வல்லமை உடையதாக இருத்தல் வேண்டும். அப்புரட்சி ஒரு மனிதனுடைய தனியளவில் நின்றுவிட்டால் போதாது; பொதுமக்கள் அதனை அங்கீகரித்தல் வேண்டும். அவர்கள் அதில் பங்குகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது நீடித்த பயனைத் தரவல்லது. பாரதிதாசனுடைய புரட்சி புதுமையாகவுள்ளது; ஆற்றல் வாய்ந்தது. இவ்விரண்டு இயல்புகளும் நன்றாகப் புலப்படுகின்றன. இப்புரட்சியால் உண்டாகும் விளைவை எதிர்காலம் தான் மதிப்பிடுதல் வேண்டும். - எஸ். வையாபுரிப்பிள்ளை (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) பாரதிதாசன் நண்பர் பாரதிதாசனின் ஐம்பத்து நான்காவதாண்டு நிறைவை யொட்டி ஒரு புத்தகம் வெளியாவதுபற்றி நான்மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். பாரதிதாசன் உலகத்தில் தோன்றிப் பல ஆண்டுகள் ஆயினும், அவர் உடம்பிலும் உள்ளத்திலும் இளமை யுடையவ ராகவே விளங்குகின்றார். அவர் ஓர் உண்மைக் கவியாயிருப்பதே அவரது இளமைக்குக் காரணம். பாரதிதாசனை ஒரு வீரக்கவி யென்று சொல்ல வேண்டும். பாரதியார் சொல்லும் “வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தை” பாரதிதாசன் பாடல்களில் காணலாம். அசத்தியத்தை, அஞ்ஞானத்தை, அநியா யத்தைக் கண்டிப்பதில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பற்றவை. “பொய்திகழும் உலகநடை என் சொல்கேன், என்சொல்கேன்” என்று தாயுமானவர் புலம்பினார். “நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!” என்று பாரதியார் நெஞ்சம் குமுறினார். பாரதிதாசனும் அதே நிலையில்தான் தமது பாடல்களைப் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது கண்டனம் மிகவும் கடுமை யாயிருப்பின், அதற்கு அவரது உணர்ச்சி மிகுதியே காரணமாகும். தமிழ்நாட்டில் கவி பாடுவதில் பாரதிதாசனுக்கு நிகரானவர் பாரதிதாசனே ஆவர். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, பல அற்புதப் பாடல்கள் பாடித் தமிழ் அன்னைக்குச் சூட்ட வேண்டு மென்று அவர் அடிமலர்களை வாழ்த்துகின்றேன். - பரலி. சு. நெல்லையப்பர், ஆசிரியர் லோகபகாரி (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) தமிழ்த்தாயின் தவப்புதல்வர் கவிஞர் பாரதிதாசனுக்குப் பல பெரியார்களும் புலவர் களும், இதரத் தமிழ் அறிஞர்களும் புகழ்மாலை சூட்டியிருக் கிறார்கள். அவரைப் புரட்சிக் கவிஞரென்றும் புதுமைக் கலைஞ ரென்றும், புதுமை அறிஞரென்றும் பலவிதமாகப் பாராட்டியிருக் கிறார்கள். நந் தமிழ்நாட்டில் அவருடைய சிறந்த கவிதைகளைப் போற்றாதார் யாருமேயில்லை என்று சொல்லலாம். அவருடைய புரட்சிக் கொள்கைகளும், புதுமை எண்ணங்களும் சிறு பான்மைக் கூட்டத்தாருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்; அவருடைய பரந்த கருத்துகளும், சிறந்த அறிவுரை களும் பிற்போக்காளர் களுக்கு வேம்பாக இருக்கலாம்; ஆனால், கவிஞர் பாரதிதாசன் கவிதைகளின் பண்பை அனுபவித்தவர்கள் அனைவரும் அதைத் தீம்பாலமுதமாகக் கொள்வர் என்பதில் ஐயமில்லை. அப்படிப் பட்ட அரும்பெருங் கவியரசை எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகைபடக் கூறல் என்னும் குற்றத்தின்பாற் படாது. எவ்வளவு புகழுரை கூறினாலும் அவ்வளவும் தகும் என்று சொல்லும்படியான பெருமை உடையவை நமது அருமைக் கவிஞர் பாரதிதாசனுடைய கவிதைகள் அவருடைய சொல் வளம், கற்பனைத் திறம், அறிவுச் சித்திரம், மொழிப்பற்று, இயக்கத் தொண்டு முதலிய வற்றை நன்கறிந்த தமிழுலகம், இன்று அவரை “தமிழ்த்தாயின் தவச்சேய் வாழி! பல்லாண்டு வாழியவே! என்று மனமுவந்து வாழ்த்துகின்றது. - பத்திரிகை ஆலோசகர், டி. ஏ. வி. நாதன் (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) ஒப்புயர்வற்ற புரட்சிக்கவிஞர் இன்றையத் தமிழ் உலகில், ஓர் ஒப்புயர்வற்ற புரட்சிக் கவிஞர் அன்பர் பாரதிதாசன் ஆவர். அவர் மனதுக்கு உகந்த ஒரு முறையில், தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்துக்கும், தமிழர் சமூகத்திற்கும் தளராது சேவை புரிந்து வருபவர். அவருடைய கொள்கைகளில் பலருக்கு அபிப்ராய பேத மிருக்கலாம். ஆனால் அவருடைய தமிழ்த் தொண்டில் - அவருடைய மேதையில் எவருக்கும் அபிப்ராயபேதமிருக்க முடியாது. மறுமலர்ச்சி என்பதற்காக இலக்கணத்தைப் புறக்கணித்து விடாமல், சொல்லுக்குச் சொல் உயர்வு ததும்பும் வண்ணம் சிறந்த பொருள்களை உள்ளடக்கி நயம் மிகுந்த கற்பனைப் பொலிவுடன் புதுமைக் கவிதைகள் இயற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதாம். - ஏ. எஸ். சர்மா, ஆசிரியர் செட்டிநாடு (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) கவிஞர் சில நினைவுகள் “இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் எங்கள் பகைவர்” “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வரிகளை ஒவ்வொரு தமிழரும் வாழ்வில் கடைப்பிடித்தால் தமிழ்வளம் பெருகும், தமிழர்கள் வாழ்வு பெறுவார்கள் என்பது உறுதி. - பொற்செல்வி இளமுருகு (நூல்: பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டுவிழா மலர் - 1991)