பூம்புகார் நகரம் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பூம்புகார் நகரம் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் முகவுரை இந்நூலின் முதற்கண் அமைந்துள்ள கட்டுரை பூம்புகார் நகரம் என்பது. அப்பெயரே இந்நூலுக்கும் பெயராக அமைந்துள்ளது. தமிழ் மாணவர்க்குப் பல பொருள் பற்றிய அறிவு வளரவேண்டுமென்னும் கருத்தால் இந்நூலில் புதை பொருள் ஆராய்ச்சி, பண்டைத் தமிழ் நகரங்கள், இராமாயணம்,பெரிய புராணம் போன்ற காவியங்களில் காணப்படும் செய்திகள், பண்டைக்காலப் போர் முறைகளை விளக்கும் கலிங்கப் போர் பற்றிய செய்திகள், நுண் கலைகளான ஓவியம், சிற்பம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இப் பலதுறைக் கட்டுரைகளையும் இக்கால மாணவர்கள் படித்துணரின், புதை பொருள் ஆராய்ச்சியால் பழைமையை உணர்ந்து அறியும் ஆற்றல் பெறுவர்: உழைப்பால் உயர்வடைய ஊக்கம் அடைவர்; நுண்கலைகளின் அருமைப்பாட்டை உணர்ந்து அவற்றைக் காக்கவும் வளர்க்கவும் முனைவர்; நம் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் புலவர் திறமையையும் உள்ளவாறு உணர்ந்து தமிழ் இலக்கியங்களில் பற்றுள்ளம் கொள்வர். மாணவர் இந்நலங்களைப் பெறுதல் வேண்டும் என்பதே இந்நூல் வெளியீட்டின் நோக்கமாகும். மா. இராசமாணிக்கனார் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) பொருளடக்கம் 1. பூம்புகார் நகரம் 3 2. மாமல்லபுரம் 13 3. ஓவியமும் சிற்பமும் 18 4. நாகப்பட்டினம் 24 5. மணிமேகலை 30 6. பெரிய புராணத்திற் காணப்படும் நாகரிகப் பண்பாடு 37 7. கன்னனும் கும்பகர்ணனும் 45 8. இந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சி 50 9. புதைந்த நகரங்கள் 60 10. கலிங்கப் போர் 69 பூம்புகார் நகரம் 1.பூம்புகார் நகரம் * பெயர் விளக்கம் ‘புகார்’ என்ற சொல்லுக்கு ‘ஆற்று முகம்’ என்பது பொருள். “புகா அர்ப் புகுந்த பெருங்கலம்” என்பது புறநானூறு. காவிரி கடலோடு கலக்கும் இடமும் அதனைச் சார்ந்த மணற்பரப்பும் தாழம்பூக்காடு நிறைந்த பகுதியாகும். அங்குப் புன்னை முதலிய மரங்கள் செழித்திருத்தன. இக்காரணத்தால் புகார் என்பது “பூங்கானல்” “பூமலி பெருந்துறை’ என்று பட்டினப்பாலை கூறும். எனவே, “பூங்கானல்” என்பது பூம்புகார் என வழங்குதல் இயல்பேயன்றோ! ஆற்று முகத்தை உணர்த்தும் ‘புகார்’ என்னும் பெயர். அவ்விடத்தில் அமைந்த நகரத்திற்கம் பெயராயிற்று. நகரப் பிரிவுகள் பூம்புகாரைப் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை என்னும் பண்டைய நூல்களில் புகார் நகரப் பிரிவுகளும் அவை பற்றிய விளக்கமும் காணப்படுகின்றன. புகார் நகரத்தில் கடற்கரையைச் சார்ந்த பகுதி மருவூர்ப்பாக்கம் எனவும், அதற்கு அப்பாற்பட்ட பகுதி பட்டினப்பாக்கம் எனவும் பெயர் பெற்றன. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி சோலைகள் நிறைந்த தாய்ப் பெருங்கடைத் தெருவைத் தன்னகத்தே கொண்டதாய் இருந்தது. அவ்விடம் நாளங்காடி எனப்பெயர் பெற்றது. மருவூர்ப்பாக்கம் பூம்புகார் கடற்கரைப் பட்டினமாதலின் கரையோரம் இருந்த மருவூர்ப்பாக்கத்தில், சோழ நாட்டுடன் வாணிகம் நடத்தி வந்த அயல் நாட்டார் பெரிய மாளிகைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். பட்டு நூலாலும் எலி மயிராலும் பருத்தி நூலாலும் நுட்பமான தொழிலைச் செய்த பட்டுச்சாலியர் தெருவும், விலையுயர்ந்த மணிகளும் பொன்னும் சேமித்து வைக்கப்பட்ட தெருக்களும், நெல் முதலிய கூலவகை களை விற்கும் தெருக்களும், பிட்டு வாணிகர், அப்பவாணிகர் கள் விற்பவர், மீன் பிடிப்பவர், உப்பு விற்பவர், பலவகை இறைச்சிகளை விற்போர், கற்பூரம் முதலிய வாசனைப் பொருள்களை விற்போர், ஆட்டு வாணிகர், எண்ணெய் வாணிகர், கன்னார், தச்சர், கொல்லர், ஓவியர், சிற்பர், குயவர், உருக்குத் தட்டார், இரத்தினப்பணித் தட்டார், சிப்பித் தொழில் செய்பவர், தோலைக் கொண்டு பலவகை உறைகளைச் செய்பவர், கிழி, நெட்டி இவற்றைக்கொண்டு மலர், வாடாத மாலை, பொய்க் கொண்டை முதலியவற்றைச் செய்பவர் வாழும் தெருக்களும், இசையில் வல்ல குழலர், பாணர், ஏவல் மக்கள் முதலியோர் வாழத்தக்க தெருக்களும் மருவூர்ப்பாக்கத்தில் இருந்தன. பட்டினப்பாக்கம் அரசனும் அரச மரபினரும் வாழும் பெருந்தெரு, தேரோடும் தெரு, கடைத்தெரு, செல்வ வணிகருடைய மாடமாளிகைகள் நிறைந்த தெரு, மறையவர் தெரு, வேளாளர், மருத்துவர், சோதிடர் தெருக்கள், முத்துக் கோப்பவர், சங்கறுப்பவர், அரசனை நின்று பாடுவார், இருந்து பாடுவார், வைதாளியாடுவார், கடிகையார் (Time- keepers), சாந்திக் கூத்தர், களத்தாடும் கூத்திகள், அகக்கூத்தாடும் பதியிலார், பரத்தையர், பணிப்பெண்கள், தோற்கருவி முதலிய பலவகைக் கருவிகளை இசைப்பவர், விகடம் செய்பவர், குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர், காலாட் படையினர் முதலியோர் வாழ்ந்த தனித்தனித் தெருக்கள் என்பன பட்டினப்பாக்கத்தை அழகு செய்தன. நாளங்காடி மேற்கூறப்பட்ட நகரப் பகுதிகள் இரண்டிற்கும் இடையில் பொதுநிலம் இருந்தது. அங்கு வரிசை வரிசையாக வளர்ந்த மரங்களைக் கொண்ட சோலை இருந்தது. அம்மரங்களையே தூணாகக்கொண்டு கட்டப்பட்ட கடைகள் மிகப்பலவாக விளங்கின. அவற்றின் தொகுதி நாளங்காடி எனப்பட்டது. அங்கு முசுகுந்தன் ஏவலால் நிலைத்த நாளங்காடிப் பூதத்திற்குக் கோயில் இருந்தது. சித்திரை மாதத்துச் சித்திரை நாளில் மறக்குடிப் பெண்டிர் அப்பூதத்தை வழிபட்டு, “எம் மன்னனது நாடு முழுதும் வறுமை நீங்கி வளம் சிறப்பதாக” என வாழ்த்தித் துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடுதல் வழக்கம். அரசன்மேல் அளவுகடந்த பற்றுடைய வீரர்கள் தம் வேந்தன் நலத்தைக் கருதித் தம் தலைகளையறுத்துப் பூதத்திற்குப் பலியிட்டு வந்தனர். இந் நாளங்காடியைப் போலவே மருவூர்ப் பாக்கத்தில் இராக்கடைகள் இருந்தன. அவற்றின் தொகுதி அல்லங்காடி எனப்பட்டது. பலவகை மன்றங்கள் பொருளைக் களவு செய்வோரை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தும் வெள்ளிடை மன்றம், பலவகை நோயாளர் நீராடிய அளவில் நலனைச் செய்யும் பொய்கையுடைய இலஞ்சி மன்றம் (இலஞ்சி மடு), பித்துக்கொண்டவர், நஞ்சுண்டவர், விடக்கடியுண்டவர், பேய் பிடிக்கப்பட்டவர் ஒருமுறை சூழ்ந்து வருதலால் அவர்கள் தெளிவுபெறக் காரணமாகிய ஒளியை வெளிப்படுத்தும் நீண்ட கல் நிறுத்தப்பெற்ற மன்றம், பொய்த் தவ வேடங் கொண்டவரும், கணவரை வஞ்சித் தொழுகும் பெண்டிரும், தீய அமைச்சரும், புறங் கூறுவோரும் ஆகிய இவர்களைத் தண்டிக்கும் இயல்புடைய பூதம் நிலைபெற்ற பூத சதுக்கம், அரசனது செங்கோல் சிறிதளவு தவறினாலும் அவனது அறங்கூறவையத்தார் நடுவுநிலை தவறினும் நாவாற்கூறாது நீர் உகுத்துக் கண்ணாற்கூறும் பாவையொன்று நிற்கும் பாவை மன்றம் ஆகிய ஐந்தும் பூம்புகாரில் குறிக்கத்தக்க மன்றங்களாகும். கோயில்கள் பூம்புகாரில் இருந்த கோயில்களில் (1) சிவன் கோயில், (2) பெருமாள் கோவில், (3) பலராமன் கோயில், (4) இந்திரன் கோயில், (5) முருகன் கோயில், (6) சூரியன் கோயில், (7) சந்திரன் கோயில், (8) புத்தர் கோவில், (9) அருகதேவன் (சமணர்) கோயில் என்பன குறிப்பிடத் தக்கவை. சமணர் மடத்தில் துறவு பூண்ட ஆடவரும் இருந்தனர்; பெண்டிரும் இருந்தனர். அவருள் ஆடவர் அடிகள் என்றும், பெண்டிர் அடிகள், குரத்திமார் என்றும் அழைக்கப்பட்டனர். பௌத்த மடத்திலும் ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் இருந்தனர். ஆண் துறவிக்குப் பிக்கு என்றும் பெண் துறவிக்குப் பிக்குணி என்றும் பெயர்கள் வழங்கின. தெருக்களும் வீடுகளும் பூம்புகார் நகரத் தெருக்கள் அகன்றும் காற்றோட்ட வசதிக்கேற்பவும் அமைந்திருந்தன. தெருக்களிலிருந்த பெரும்பாலான வீடுகள் மாட மாளிகைகளாகத் காணப்பெற்றன. சில மாளிகைச் சுவர்களில் தேவர், மக்கள், விலங்குகள், பறவைகள் முதலிய உயிர்களைக் குறிக்கும் கதையுருவங்கள் காணப்பெற்றன. மானின் கண்போன்ற தொளையிடப்பட்ட சாளரங்கள் மாளிகைகளில் இருந்தன. அயல் நாட்டவர் தமக்கென அமைத்துக்கொண்ட கட்டடங்கள் காண்போர் கண்களை அயலிற் செல்லவிடாமல் தடுத்தனவாய் மிக்க வேலைப்பாடு கொண்டிருந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. சில வீடுகள் தட்டை ஓடுகள் இடப்பெற்றுச் சாந்து பூசப்பெற்றவை. அவை ‘வேயா மாடங்கள்’ எனப்பட்டன. சில மாடங்கள் மிக உயர்ந்து காணப்பட்டன. அவை சொர்க்கத்தை ஒத்தன என்று பட்டினப்பாலை பகர்கின்றது. அவற்றில் வாழும் மகளிர் தென்றல் காற்று வீசும் சாளரங்களின் எதிரே நின்று, அங்காடித் தெருவில் மாதர்பாட, குழல் ஊத, யாழ் வாசிக்க, முரசு கொட்ட, முழவு ஒலிப்ப நடை பெறும் முருக விழாவைக் காண்பர்; முருகக் கடவுளையும் பிற தெய்வங்களையும் அங்கிருந்தபடியே தம் கைகளைக் குவித்து வணங்குவர். மாளிகையில் மேற்பகுதி நிலவு காயத்தக்க திறந்தவெளியாக அமைக்கப் பெற்றிருந்தது. அது ‘நிலா முற்றம்’ எனப்பெயர் பெற்றது. வனங்கள் பூம்புகார் நகரத்து வனங்களில் குறிப்பிடத்தக்கவை சில. அவற்றுள் தண்ணீரை நிரப்பவும், அத்தண்ணீரை வெளியேற்றவும் வல்ல இயந்திர அமைப்புடைய வாவியைத் தன்னகத்தே பெற்ற அழகிய பூஞ்சோலை ஒன்று. அஃது அரசர் அமைச்சர் முதலியோர்க்கு உரிய இடமாகும். மற்றொன்று உய்யான வனமென்பது. சூரிய கிரணத்தால் சிறகை யிழந்த சம்பாதி என்ற பறவை யிருந்த சம்பாதி வனமொன்று காவிரியின் தந்தையென்று கூறத்தக்க கவேரன் தவம் செய்த கவேரவனம் ஒன்று. உவவனம் என்பது ஒன்று. அவ்வனத்தில் தன் அகத்துள் இருப்பவர் ஓசையை வெளிப்படுத்தாமல் அவர் தம் உருவங்களை மட்டும் வெளிப்படுத்தும் பளிங்கு மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தினுள்ளே மாணிக்கச் சோதி பரந்த பதுமபீடம் ஒன்று இருந்தது. பூம்புகார் நகர் தோன்றிய காலத்தே உடன் தோன்றியதான நன்காடு சக்கரவாளக் கோட்டம் எனப் பெயர் பெற்றது. அது நாற்புறத்தும் வாயில்களுடைய மதிலால் சூழப்பட்டது; காளிகோட்டமும் பலவகை மன்றங்களும், அருந்தவர், அரசர், பத்தினிப் பெண்டிர் இவர்கட்கு எழுப்பிய கோட்டங்களும் பிறவும் கொண்டது. அரங்குகள் அறிவாலும் திருவாலும் செழித்திருந்த பூம்புகார் நகரில் கலைகள் நன்கு வளர்க்கப்பட்டன என்று அரங்கேற்று காதையால் நன்கறியலாம்; அக்காதையில் கூறப்பட்டுள்ள மாதவி ஆடிய நடன அரங்கத்தின் சிறப்பினை நன்கு தெளியலாம். நகரப்பரப்பு கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு பூம்புகாரை விட்டு நீங்கிய முறையைக் கூறவந்த இளங்கோவடிகள், நகரத்தின் மேற்குப் பக்கத்தில் ஊர் வாசலுக்கப்பால்-இலவந்திகை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்; அதற்கப்பால், இருமருங்கும் சோலை சூழ்ந்த பெரிய சாலை வழியே பூம்புகார் மக்கள் சென்று நீராடும் திருமுகத் துறையைக் குறிப்பிடுகின்றார்; அக்காலத்தில் அங்கொரு வாயில் இருந்ததாகவும் குறித்துள்ளார்; அதற்கப்பால் கோவலன் மேற்குத் திசையில் மதுரை நோக்கிச் சென்றான் என்று குறித்துள்ளார். இவற்றை நோக்க, நகரத்தின் மேற்குப் பகுதியின் கடைசி எல்லை, காவிரிக்கரையில் திருமுகத் துறையிடத்து அமைந்த வாசல்வரை இருந்ததெனக் கொள்ளலாம். சதுக்கப் பூதம், “அவ்வூர் நாற்காத எல்லையும் கேட்கும்படி தனது கடிய குரலால் உணர்த்தியது” எனவரும் இளங்கோவடிகள் கூற்றையும், “காத நான்கு ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்,” என்னும் அரும்பதவுரை யாசிரியர் குறிப்பையும் நோக்க, பூம்புகார் நான்கு காதம் அதாவது நாற்பது மைல் சுற்றளவுடையது என்னும் உண்மை புலனாகும். திருவெண்காட்டில் தோன்றிய அடிகள், “திருவெண்காட்டு அடிகள்” என்று கூறப்படாமல், பட்டினத்தடிகள் என்று கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கூறப்பட்டிருப்பதை நோக்கத் திருவெண்காடு, பழைய காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியாகவே பண்டையோர் கருதி வந்தனர் என்பது நன்கு விளங்கும். இவ்வாறு நுணுக்கமாகக் கவனித்துவரின், இன்றுள்ள காவிரிப்பூம் பட்டினத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்கள் பண்டைப் பூம்புகாரின் நகரப்பகுதிகளே என்பதை நன்கறியக்கூடும். புகார்க் கடற்கரை புகார்த் துறையில் கடலில் வரும் மரக்கலங்களைக் கரைநோக்கி அழைக்கும்கலங்கரை விளக்கம் இருந்தது. துறை முகத்தில் பலநாட்டுக் கப்பல்களும் தத்தம் கொடிகள் அசைந்தாட நின்று கொண்டிருந்தன. அவற்றில் மலைதரு பண்டங்களும், கடல்தரு பண்டங்களும், நிலமளிக்கும் பண்டங்களும் ஏற்றப்பட்டன; இறக்கப்பட்டன. அயல் நாட்டுக் கண்ணாடிப் பொருள்கள், பட்டாடைகள், குடிவகைகள், பலவகை இயந்திரப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. கடலோரமாகவே கங்கை வரை சென்று வட இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்த சோழ நாட்டுக் கப்பல்களும் துறைமுகத்தில் இருந்தன. இப்பொருள்களை இறக்கிக் கணக்கெடுக்கவும் ஏற்றுமதி பொருள்களைக் கணக்கிட்டுச் சோழர் முத்திரையாகிய புலி முத்திரை பொறிக்கப்பட்ட மூட்டைகளைக் கப்பலில் ஏற்றவும், நூற்றுக் கணக்கான மக்கள் துறைமுகத்தில் வேலை செய்தனர். இறக்குமதியாகும் பொருள்களைத் தீர்வை வரையறுத்துக் கடமை (Custom) கொள்ளும் ஆயத்துறைகள் (Custom House) இருந்தன; பிறகு அப்பண்டங்கட்குச் சோழனது இலச்சினையை இட்டு அவற்றை இட்டுவைக்கும் பண்டசாலைகள் (Warehouses), கிடங்குகள் (Godowns), உயர்ந்த மேடைகள் (னுடிஉமள யனே நைசள) இருந்தன. காவிரி கடலொடு கலக்கும் சங்கமுகத்திற்கு அயலதாகிய பூக்கள் மலர்ந்த நெய்தற்கானலிடத்துச் சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு குளங்கள் இருந்தன. அவற்றில் மூழ்கிக் காமனைத் தொழுபவர் இம்மையிலும் மறுமையிலும் கணவனை விட்டு நீங்கார் என்று தேவந்தி என்ற ஒரு தோழி கண்ணகிக்குக் கூறினாள். காவிரிப்பூம்பட்டினம் வாணிகச் சிறப்பால் அக்காலத் தமிழகத்தில் சிறப்புற்றிருந்தது. அதனாற்றான் இளங்கோவடிகள், “இருநில மன்னற்குப் பெருவளங் காட்டத் திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாம்” எனப் பாராட்டி. “காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ-வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்” என்று உளமார வாழ்த்தி அருளினார். பிற்காலத்தில் பூம்புகார் கோவலனுக்குப் பிறகு மாதவியும் மணிமேகலையும் வாழ்ந்த காலத்தில் பூம்புகார் கடல் கொண்டு விட்டதாக மணிமேகலைக் காவியம் கூறுகிறது. அஃதாவது, கடல் உள் நோக்கி வந்ததென்பது பொருள். இதனால் காவிரிப்பூம் பட்டினம் முழுவதுமே அழிந்துவிட்டது எனக் கருத இடமுண்டாகிறதுஇ ஆயின், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இருந்த புத்த தத்தர், கி.பி, 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் என்பவர் கூற்றுக்களிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் வளத்துடன் இருந்ததென்பது தெரிகிறது. மேலும் சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராகக் கூறத் தகும் இயற்பகை நாயனார் காலத்திலும் பூம்புகார் ஓரளவு நன்னிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றை நோக்க, மணிமேகலை கூறும் கடல்கோள், நகரத்தின் கடற்பகுதியை அழித்திருக்கும் என்று கொள்ளுதலே பொருந்தும். புத்த தத்தர் கூற்று மேலே கூறப்பெற்ற புத்ததத்தர் ஒரு பௌத்த சமயப் பெரியார். இவர் “அபிதர்மாவதாரம்” என்னும் நூலைச் சோழ நாட்டில் இருந்து எழுதியவர். இவர், “காவிரிப்பூம் பட்டினம் செல்வ வணிகரைக் கொண்டது; மாடமாளிகைகள் நிரம்பியது; இனிய பூஞ்சோலைகளை உடையது; அரண்மனைகளைக் கொண்டது. கண்ணதாசன் கட்டிய புத்த விகாரத்தில் நான் இருந்து என் மாணவி சுமதியின் வேண்டுகோளால் இந்நூலை எழுதினேன்,” என்று மேற்சொன்ன தமது நூலின் ஈற்றிற் குறித்துள்ளார். இக்கூற்றுக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பூம்புகார் இருந்த நிலையை ஒருவாறு உணர்த்துகிறது அன்றோ? சம்பந்தரும் பூம்புகாரும் இன்றுள்ள சாய்க்காட்டுக் கோயிலும் அதற்குக் கிழக்கேயுள்ள பல்லவன் ஈச்சரமும் சம்பந்தர் பாடல் பெற்றவை. “மாளிகைகள் நிறைந்த வளப்பம் மிகுந்த புகாரை அடுத்துச் சாய்க்காடு இருந்தது. அங்கு மலர்கள் பூத்த வாவிகள் பல. அங்குச் சோலைகள் மிகுதி; புன்னை மரங்களும் உண்டு. சோலைகளில் மயில்கள் ஆடும். கோவிலில் பேரி முதலிய வாத்தியங்கள் முழங்கும்,” என்று சம்பந்தர் திருச்சாய்க்காட்டுப் பதிகத்துள் கூறியுள்ளார். மேலும் அவர், “வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காடு,” “பூம்புகார்ச் சாய்க்காடு,” “காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காடு,” “மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதிச் சுங்கெலாம் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காடு,” “தையலார் பாட்டோவாச் சாய்க்காடு,” என்று கூறியிருத்தலை நோக்குக. “குழல், வீணை மொந்தை, முழவு இவை ஒலிக்க, நடனமாதர் கழலின் ஓசை ஆர்க்க, மக்கள் பூம்புகாரைச் சேர்ந்த பல்லவனீச்சரத்தை வழிபடுகிறார்கள். தண்டு, உடுக்கை, தாளம், தக்கை ஒலிக்கப் பல்லவனீச்சரத்தில் நடன மாதர் நடமிடுகின்றனர்,” என்று சம்பந்தர் பல்லவனீச்ரப் பதிகத்தில் குறித்துள்ளார். இத்தகைய சான்றுகளால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வரையில் பூம்புகார் போற்றத் தக்க வளநகரமாக இருந்திருப்பதை நன்கறியலாம். ஆயின், இந்நகரம் இன்று வளமற்ற சிற்றூராகக் காணப்படுகின்றது. இன்றைய பூம்புகார்* மாயூரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் போகும் பாதையில், 12-கல் அளவில் கைகாட்டி மரம் ஒன்று இருக்கின்றது. அதிலிருந்த கடற்கரை வரை ஒரே சாலை மூன்று கல் தொலைவிற் போகின்றது. அதன் இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. அங்கிருப்பவர் பழங்குடி மக்கள். இரண்டு அக்கிரகாரங்கள் இருக்கின்றன. அங்கு மறையவர் இருக்கின்றனர். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதைகள் மேடு பள்ளங்கள் உடையன. சாலைக்கு இடப்புறமே சிறு குடியிருப்புகள் மிகுதியாக இருக்கின்றன. சாலைக்கு இருபுறத்திலும் பழைய உறை கிணறுகள் இருக்கின்றன. ‘இங்கு நாங்கள் கிணறுகள் தோண்டுவதில்லை; இவையெல்லாம் பழைய காலத்துக் கிணறுகள்,’ என்று அங்குள்ளார் கூறுகின்றனர். நெடுஞ் தெருவிற்கு இடப்புறம் சிறிது தொலைவில் பெருந்திகள் இருக்கின்றன. ‘அவை அக்கிரகாரம் இருந்த இடம், வேளாளர் தெரு இருந்த இடம் என்று எங்கள் பாட்டனார் சொல்லக் கேட்டோம்,’ என்று 80 வயதுடைய கிழவர் ஒருவர் சொன்னார். அத்திடலைச் சுற்றிலும் வயல்கள் இருக்கின்றன. திடல்கள் மட்டும் தோண்டப்பட்டில எங்குத் தோண்டினாலும் பழைய செங்கற்களும் மட்பாண்டச் சிதைவுகளும் காணக்கிடக்கின்றன. கோவில்கள் இம்மூன்று கல்நீளமுள்ள பாதை நெடுகப் பல சிறிய பழைய கோவில்கள் இருக்கின்றன. இவை பலவகைப்பட்டவை: (1) கீற்றுக் கூரையும் சுவர்களும் உடைய கோவில்கள், (2) செங்கற் சுவர்களும் ஓட்டுக் கூரையும் கொண்ட கோவில்கள்; ஒரே அறை; அதைச் சுற்றி நாற்புறமும் அகன்ற திண்ணை; அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள்; சுவர்மீது கடவுளர் ஓவியங்கள்; சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரைமீது கலசம் கொண்ட கோவில்கள் பல; சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை. சம்பாதிக் கோவில் என்னும் பெயருடன் இடிந்து பாழ்பட்ட மிகச் சிறிய கோவிற்பகுதி ஒன்று இருக்கின்றது. காவிரிக்கு வலப்புறம் காவிரிக்கு அப்பால் பெரிய மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரின் சிறந்த பகுதி என்று அங்குள்ளோர் கூறுகின்றனர். அம்மேட்டின்மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு, “அம்மணல் மேட்டை எவரேனும் தோண்டிப் பார்த்தனரா?” என்று கேட்டேன். அவ்வம்மை, “அங்கு அகழ்ந்தது இல்லை,” என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன் ஏன்? “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறள் என் நினைவிற்கு வந்தது. இக்காலத்தில் பண்டிதரும் பயன் படுத்தாத ‘அகழ்தல்’ என்னும் தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தார் என்பது வியப்பே அன்றோ? பூம்புகார் அழிந்தாலும், பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சி உடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும் என்பதிலோ, மாதவி பாடிய கானல் வரிப்பாடலின் நினைவு எழும் என்பதிலோ ஐயமில்லை. வாழ்க பூம்புகார்! 2. மாமல்லபுரம் சங்க காலத்துத் தொண்டை நாட்டில் இருந்த துறைமுக நகரங் களுள் இன்றைய மகாபலிபுரமும் ஒன்றாகும். இஃது அக்காலத்தில் ‘பட்டினம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இப்பட்டினத்தைப் பற்றிய குறிப்புகளைப் பெரும்பாணாற்றுப் படையிற் கீழ்வருமாறு காணலாம்: சங்க காலத்தில் “ அந்நகரத் துறைமுகத்துள், மேற்றிசையிலிருந்து பரிகளையும் வடதிசையிலிருந்து பண்டங்களையும் கொண்டு வந்த கப்பல்கள் நிறைந்திருக்கும்; கரையோரத் தெருக்களில் பரதவர் வளமனைகளும் காவல் நிறைந்த பண்டசாலைகளும் இருக்கும்: வீடுகளில் விளை பொருள்கள் நிறைந்திருக்கும்; விலை உயர்ந்த அணிவகைகளை அணிந்தவரும் மயில்போன்ற சாயலை உடையவரும் ஆகிய மங்கையர் உலாவுவர்; காற் சிலம்புகள் ஒலிக்கப் பந்தாடி மகிழ்வர்; கைவளை ஒலிக்கும்படி கழங்கு விளையாடுவர். “கடற்கரையின் மற்றொருபால் கள்ளுக்கடை ஒன்று இருக்கும். அங்குப் பசிய கொடிகள் கட்குடிப்போரை அழைப்பனபோல் அசைந் தாடிக் கொண்டிருக்கும். கடையின் முற்றத்தில் தெய்வத்திற்குத் தூவின பூக்கள் பரவிக் கிடக்கும். அங்கு ஒரு பால் கள்ளைத் தயாரிக்கும் மகளிர் வட்டில்களைப் பலகாலும் கழுவுவதால் சிந்தின நீர் தேங்கிச் சேறாக இருக்கும்; தாய்ப்பன்றி தன் குட்டிகளுடன் இறங்கி அச்சேற்றைக் கலக்கும்; மற்றொருபால் ஆண் பன்றி வளர்க்கப்படும். அங்குச் செல்வோர் பன்றி இறைச்சியுடன் கள்ளைப் பெறலாம். “துறைமுகத்தில் மிக்க உயரமானதும் கற்றை முதலியவற்றால் வேயப்படாததுமான உயர்ந்த மாடம் ஒன்று உண்டு; கடலில் திசை தெரியாது மயங்கும் கலங்களைக் `கரை இங்கு இருக்கின்றது வருக,’ எனப் பரிந்து அழைக்கும் விளக்கம் ஏற்றி வைக்கப் பெற்றுள்ளது. அதனைக் கடந்து செல்லின், தென்னங்கீற்றால் வேய்ந்த கூரையையும், முற்றத்தில் மஞ்சள் செடிகளையும் கொண்ட வீடுகளைக் காணலாம். அவ்வீடுகளில் தங்கும் புதியவர் இளநீர், வாழைப்பழம், பனை நுங்கு, முற்றின வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பெற்று உண்ணலாம். இத்துறைமுக நகரம் செல்வவளம் கொழிக்கும் பேரூராகும்.” பல்லவர் காலத்தில் சங்க காலத்திற்குப் பிறகு தொண்டை நாடு பல்லவர் ஆட்சிக்குட்பட்டது, பல்லவர்காலம் முழுவதும் (சுமார் கி.பி. 300-900) இந்நகரம் பல நிலைகளிலும் சிறப்புற்று விளங்கியது என்பதைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும், மாமல்ல புரத்திலேயே இன்றளவும் காணப்படுகின்ற கற்கோவில்களும் சிற்பங்களும் எடுத்துரைக்கின்றன. மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோவில் என்னும் பெயருடன் குகைக் கோவில் ஒன்று இருக்கின்றது. அஃது ஒரு பாறையைக் குடைந்து அமைக்கப்பெற்ற கோவில். அதனுள் சிம்ம விஷ்ணுவையும் அவன் மனைவியர் இருவரை குறிக்கும் உருவச் சிற்பங்கள் ஒரு புறத்திலும் அவற்றுக்கு நேர் எதிரில் மகேந்திரவர்மனை அவன் மனைவியர் இருவரையும் குறிக்கும் உருவசிற்பங்களும் இன்றளவும் நாம் காணுமாறு இருக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் காலம் ஏறத்தாழ கி.பி. 575-600 என்றும், மகேந்திரவர்மன் காலம் ஏறக்குறையக் கி.பி. 600-630 என்றும் வரலாறு ஆசிரியர் கூறியுள்ளனர். ஏனவே, கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாமல்லபுரம் பல்வேந்தர் கருத்தினை ஈர்த்த நகரமாக இருந்தது என்பது தெளிவாகும். மகேந்திரனுக்குப் பின் வந்த முதலாம் நரசிம்மவர்மன், வட இந்தியாவில் பேரரசனாக இருந்த ஹர்ஷவர்த்தனனையே வென்ற பெரு வீரனான இரண்டாம் புலிகேசியைக் கி,.பி. 642-இல் வென்றான். அவன் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி வெற்றித் தூண் நாட்டினான்; இங்ஙனம்தான் பெற்ற வெற்றியைப் பாராட்டித் தன்னை மஹாமல்லன் என அழைத்துக்கொண்டான்; தன் நாட்டின் சிறந்த துறைமுக நகரமான இன்றைய மகாபலிபுரத்தைப் பெரிதாக்கி மஹாமல்லபுரம் என்று பெயரிட்டான். அவன் காலத்தில் அவனிடம் தஞ்சம் புகுந்த இலங்கை அரசனுக்காக அவன் கடற்படையை மஹாமல்லபுரத்திலிருந்து அனுப்பினான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இங்ஙனம், நரசிம்மவர்மனால் ‘மஹாமல்லபுரம்’ என்று இடப்பட்ட பெயரே பின்னர் மாமல்லபுரம் என்றும் மாமல்லை என்றும், மல்லை என்றும் மருவி வழங்கலாயிற்று. ஒற்றைக் கற்கோயில்கள் நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போலக் குடைவரைக் கோவில்களை அமைக்காமல் சிறிய குன்றுகளையே கோவில்களாக அமைக்கத் தொடங்கினான். மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவர் இரதங்கள் என்று இன்று சொல்லப் படுகின்றவை இரதங்கள் அல்ல: ஒற்றைக்-கற்-கோவில்களே யாகும். இக் கோவில்களை அமைக்கும் வேலை இவன் காலத்தில் தொடங்கப்பெற்று, இவனுக்குப் பின் வந்த முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் முடிவு பெற்றது மகாமல்லனுiடய கல்வெட்டுக்களும், முதலாம் பரமேசுவரவர் மனுடைய கல்வெட்டுக்களும் இவ்வொற்றைக் கற்கோவில்களிற் காணப்படுவதால், இவ்விருவராலும் இவை அமைப்புண்டவை என்று கருதுதல் பொருத்தமாகும். இவ்வொற்றைக் கற்கோவில்கள் ஐந்தும் அக்காலத்திலிருந்த பலவகைக் கோயில்களின் அமைப்புக்களை நமக்கு அறிவிப்பனவாகும். கோவில் தூண்களின் அமைப்பும், சுவர்களின் அமைப்பும் அச்சுவர்களிற் காணப்படும் பல்வேறு சிற்பங்களின் அமைப்பும், கோவிலின் விமான வேலைப்பாடும் பிறவும் நேரிற்கண்டு களிக்கத்தக்கவை. மண்டபங்களும் பாறைகளும் இக்கற்கோவில்களேயன்றி, மாமல்லபுரத்தில் வேறு சில மண்டபங்களும் இருக்கின்றன. அவை மலைச் சரிவுகளில் குடையப்பட்டவை. அவற்றுள் ஒன்றில் துர்க்கை எருமைத்தலை அசுரனோடு போரிட்டு வெல்லுதல் மிகச் சிறந்த சிற்பகமாகக் காட்டப்பட்டுள்ளது. மற்றொன்றில் பகீரதன் தவத்தை குறிக்கும்- பல நுணுக்கமான விவரங்களைக்கொண்ட பெரியதோர் சிற்பம் காட்சியளிக்கின்றது. அதை பகீரதன் தவம் என்று சிலரும், கங்கைக்கரைக் காட்சி என்று வேறு சிலரும், சமணர் கதை ஒன்றினை விளக்கும் சிற்பம் என்று பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். உண்மை எதுவாயினும், அம்மண்டப சுவர்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் காண்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கவல்லது என்பதில் ஐயமில்லை. இம்மண்டபச் சிற்பங்களேயன்றிப் பாறை சிற்பங்களும் சில காணப்படுகின்றன. அவற்றுள் கண்ணன் மலை எடுத்து மழை தடுத்த வரலாற்றை குறிக்கும் சிற்பம் மிக்க சிறப்பு வாய்ந்த கண்ணன் உயரப் பிடித்த மலைக்குக்கீழ் ஆநிரைகளும் கோவலர்களும் வந்து நிற்பதாகக் காட்டப்பட்டுள்ள சிற்பம் நுண்ணிய வேலைப்பாடமைந்தது. இவை அனைத்தையும் நேரிற் காண்பவரே அங்குள்ள சிற்பக்கலையின் நுட்பத்தை நன்கு அறிந்து இன்புறுதல் கூடும். கடற்கரைக் கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்லவ அரசனாக இருந்த இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) என்பவன் எடுப்பித்ததே மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவிலாகும். இராஜசிம்மன் மகேந்திரனைப் போலக் குடைவரைக் கோவிலையோ, முதலாம் நரசிம்மவர்மனைப் போல ஒற்றைக்கற் கோவிலையோ அமைப்பதிற் பெரு விருப்பம் காட்டாது, கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதிலேயே கருத்தைச் செலுத்தினான். அங்ஙனம் அவனால் கட்டப்பட்ட புதுமுறைக்கோவில்களில் கடற்கரைக் கோவில் சிறிய அளவினது; காஞ்சி-கயிலாச நாதர் கோவில் பெரிய அளவினது. இவ்விரு கோவில்களிலும் உள்ள விமான அமைப்புக் கவனிக்கத்தக்கது. இதன் மிகப்பெரிய உருவமே தஞ்சைப் பெரிய கோவில் விமானம். ஆழ்வார் பன்னிருவருள் பூதத்தாழ்வார் இத்துறைமுக நகரிற் பிறந்தவர். இவர் தம் திருவந்தாதியில் மாமல்லபுரத்தைப் பாடியுள்ளார். கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வாரும் இப் பெருநகரைப் பாடியுள்ளார். “புலங்கொள்நிதிக் குவையோடு புகழைக்கைம்மாக் களிற்றினமும் நலங்கொள் நவ மணிக்குவையுஞ் சுமந்தெங்கு நான்றொசிந்து கலங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்னென் மடநெஞ்சே” என்பது அவர் பாட்டு. இன்றுள்ள மாமல்லபுரத்திற்கு மூன்றுகல் தொலைவில் சாளுவன்குப்பம் என்னும் சிற்றூர் இருக்கிறது. அங்குப் புலித்தலைக் குகைக்கோவில் என்னும் பெயருடன் சிறிய குடைவரைக் கோவில் ஒன்று இருக்கிறது. மிகச் சிறிய பாறை உள்ளே குடையப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் திறந்த வாய்களையுடைய புலித்தலைகள் சுற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சாளுவன் குப்பம் மாமல்லபுரத்தின் ஒரு பகுதியாக இ.ருத்தல் கூடும் என்பது அறிஞர் கருத்து. இதுகாறும் கூறப்பெற்றவையன்றி, வேறு சில குடைவரைக் கோவில்களும் சிறிய அளவில் இருக்கின்றன. ஒரு பாறையின் மீது கலங்கரை விளக்கம் இருந்த அமைப்புக் காணப்படுகின்றது. இப்பண்டை நகரம் கி.பி., 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சோழப் பேரரசர் காலத்தில் துறைமுகப்பட்டினமாக இருந்ததா என்பது திட்டமாகத் தெரியவில்லை. இதன் சிறப்பனைத்தும் பல்லவர் காலத்தோடு முடிவுற்றதாகக் கொள்ளவே இதுகாறும் கிடைத்துள்ள சான்றுகள் இடந்தருகின்றன. முடிவுரை பல்லவர் முயன்றமைத்த குடைவரைக் கோவில்கள், ஒற்றைக் கற்கோவில்கள், கற்கோவில்கள் என்னும் மூவகைக் கோவில் களையும் தன்னகத்தே பெற்றுச் சிற்பக் கலைக்கூடமாக விளங்கிய பழைய மாமல்லபுரத்தின் பெரும்பகுதி எவ்வாறு அழிந்தது என்பது இதுகாறும் தெரிந்துகொள்ள முடியவில்லை. புதைபொருள் ஆராய்ச்சியாளர் இத்துறையிற் கவனம் செலுத்துவராயின், பல செய்திகள் புலனாகும். 3. ஓவியமும் சிற்பமும் ஓவியம் என்பது சித்திரம் தீட்டுதல். சிற்பம் என்பது கல், செம்பு, வெண்கலம் முதலிய உலோகங்களைக் கொண்டு உருவங்களை அமைத்தல். இவ்விரண்டு கலைகளும் நாகரிக நாட்டுக் கலைகள் ஆகும். இவை இல்லா நாடுகள் ஓரளவு பிற்போக்கு நாடுகள் எனப்படும். ஆனால், இந்தியா பண்டுதொட்டே இக்கலைகளை வளர்த்து வந்துள்ளது. சிந்துவெளியில் சிந்து, பஞ்சாப் மண்டிலங்களில் புதைந்து கிடந்த மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா என்னும் பண்டை நகரங்கள் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்டு முற்பட்டவை. அங்குக் கிடைத்த கற்சிலைகள் வியத்தகு வேலைப்பாடு கூடியனவாக இருக்கின்றன. வெண் கலத்தால் இயன்ற (வார்ப்படம் கொண்ட) நடனமாதின் சிலையைக் கண்டு வியவாத ஆராய்ச்சி அறிஞர் இல்லை. கால் தூக்கி ஆடும் நடராசர் சிலை என்று நம்பத்தக்க சிலை ஒன்றும் கிடைத்துள்ளது. மட்பாண்டங்கள், தாழிகள், தாயித்துகள், முத்திரைகள் முதலிய வற்றின் மீது தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் பேரழகுடன் பண்பட்ட வேலைப்பாடும் கூடியனவாக இருக்கின்றன. அவ்வோவியங்கள் எத்தகைப் பழுதும் இன்றி, அன்று போலவே இன்றும் இருத்தலே வியப்பினும் வியப்பு! இவற்றைக் கண்ணுற்ற ஆராய்ச்சியாளர், “ஓவியக்கலையும் சிற்பக்கலையும் பண்டுதொட்டே இந்தியர்க்கு உரியனவாக இருந்து வருபவை,” என்று முடிவு கூறுகின்றனர். கலை இக்கலைகள் உண்டாகக் காரணம் என்ன? மனிதன், தனக்கு உண்டாகும் அறிவுப்பெருக்கம் ஒரு வகையில் அளவுக்கு மேற்படுமாயின், அதனைத் தன் உள்ளத்து உணர்வினின்று பல்வேறு துறைகளில் வெளிப்படுத்துகின்றான். சித்திரம் வல்லான் படங்கள் வாயிலாகவும், சிற்பம் வல்லான் சிற்பங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகின்றனர். இங்ஙனம் உணர்ச்சிப் பெருக்கத்தால் வெளிப்படும் ஒன்று கலை (Art) என்பது. இத்திறன் பணத்தின் பொருட்டு உண்டாவதன்று; உள்ளத்து உணர்ச்சி மேலீட்டால் உண்டாவதே ஆகும். இத்திறமை நல் வழியிற் பயன்படுமாயின், இதனை அழகிய ஓவியங்கள், சிற்பங்கள், கவிகள், கட்டடங்கள் முதலியவற்றிற் கண்டு களிக்கலாம்; மாறுபடுமாயின், விகார வடிவங்களிற் கண்டு வெறுக்கலாம். கலை வாழும் இடங்கள் இவ்வாறு, உள் உணர்வின் தெளிந்த நிலையில் பெருக்கெடுத்து வெளிப்போந்த கலைத் திறனாற்றான் பாபிலோன் நகரம் பேரழகு பெற்றுத் திகழ்ந்தது; உலகப் புகழ் பெற்ற பண்டை ரோமாபுரி வனப்புற்று வாழ்ந்தது. நமது நாட்டிலும் காஞ்சி, அமராவதி, எல்லோரா, மாமல்லபுரம் முதலிய இடங்களில் உள்ள அழகு வடியும் அரிய காட்சிகள் தோன்றலாயின. இக்கலைத்திறனாற்றான் கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் தாஜ்மஹால் தோன்றியது: ஐம்புலன்களையும் ஒரு வழிப்படுத்தும் அஜந்தாக் குகைச் சிற்பங்கள் வெளிப்பட்டன. இவை அனைத்தையும் தோற்றுவித்த பெருமக்கள் மறைந்தனர் ஆயினும்; அவர்தம் அகத்தூய்மையை-கலைத் திறனை-கலை யுணர்வை, அவர் தம் செயல்கள் வாயிலாக உணர்ந்து உவக்கின்றோம். இவ்விரு கலைகளிலும் தென் இந்தியா இளைத்ததன்று. கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகம் புகுந்த சமண-பௌத்த முனிவர்கள் தம் ஆன்ம உணர்ச்சியை முன்னிட்டுக் குகைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அக்குகைகளில் பல அரிய சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர்; ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். பல குகைகளில் பல்லவ அரசர்கள் இவ்விரு கலைகளையும் விளக்கியுள்ளனர். அவருட் சிறந்தவன் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்மன் என்பவன் இவன் முதலில் சமண சமயத்தவனாக இருந்து அப்பருக்குப் பல கொடுமைகள் இழைத்தவன்; இறுதியில் சைவப்பற்றுக் கொண்டு சமணத்தைத் துறந்து சைவன் ஆனவன். இப்பேரரசன் முயற்சியால் தமிழகத்துச் சிற்ப-ஓவியக்கலைகள் சிறந்து விளங்கின என்னல் மிகையாகாது. இவன் குடைவித்த குடைவரைக் கோவில்கள் பல. அவற்றுள் ஒன்று சித்தன்ன வாசல் என்பது. அக் குகைக் கோவில் இவ்விரு கலைகட்கும் புகலிடமாக இருக்கின்ற தென்னல் மிகையாகாது. சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்ன வாசல் திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கில் இருபது கல் தொலைவில் இருக்கும் சிற்றூர் ஆகும்; நாரத்தமலைப் புகை வண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் இருக்கின்றது. இங்குள்ள மலை மிகச்சிறியது. அதன் மீது ஏறிச்செல்லின், அழகின் இருப்பிடமாகவுள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். அதன் முன்புறம் சுவர் மறைப்பு உண்டு. அத்துடன் இரும்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கொரு காவலாளியும் காட்சி அளிக்கிறான். குகையின் முன் மண்டபத்தில் இரண்டு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று சமண தீர்த்தங்கரரான பார்சுவநாதர் உருவம்; மற்றது சமண சமயத் தலைவர் உருவம். தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை ஆதலின், அதனை உணர்த்த அவர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டு இருக்கும். சமயத்தலைவர்கள் பிறப்புடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே குறிக்கப்பட்டிருக்கும். பார்சுவநாதர் முடிமீது நாகம் ஒன்று படம் விரித்து நிழல் தருவது போலச் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுவரில் மூன்று சிலைகள் உள்ளன. அவற்றுள் இரண்டு முக்குடைகளை உடையவை. சித்தன்னவாசல் ஓவியக்கலையில் பெயர் பெற்ற இடமாகும். பல நூற்றாண்டுகள் கழிந்தன ஆதலின், குகைக் கோவிற் சுவர்கள் மீது இருந்த ஓவியங்கள் அழிந்துபட்டன. ஆனால், தூண்கள், மேற்கூரை, மூலைகள் இவற்றின்மீதுள்ள காறைச் சுவர்க்கோலங்கள் (Frescoes) அழியாமல் இருக்கின்றன. இவை பண்டைத் தெளிவுடன் இராவிடினும், பழம் பெருமையை அறிய விரும்புவார் விழிகட்கு அரிய விருந்தாகவே காட்சி அளிக்கின்றன. கூரையில் உள்ள ஓவியங்களே வனப்பு மிக்கவை. உணர்ச்சி ஊட்டுபவை; கண்ணையும் கருத்தையும் கவர்பவை. வெளிமண்டபக் கூரை முதல் மூலஸ்தானம் வரை பரவியுள்ள இவ் வேலைப்பாடு சமணர் துறக்கத்தை விளக்குவதாகும். வேலைப்பாட்டின் நடுவில் அழகிய தாமரைக்குளம் ஒன்று காணப்படுகிறது. அதனில், நன்னெறியில் வாழ்ந்து காலமான சமணர் (பவ்யர் எனப்படுவோர்) தீர்த்தங்கரர் அறமொழிகளைக் கேட்பதாகச் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. படத்தில் மூன்று பவ்யர் காணப்படுகின்றனர். அவர்கள் தாமரை மலர்களைப் பறித்து வைத்திருத்தல் போலவும், பறிப்பது போலவும் சித்திரங்கள் காண்கின்றன. பவ்யர் ஒருவர் செந்நிறத்தவராகக் (செந்நிறம் தூய ஆவியைக் குறிப்பதாகும்) காணப்படுகிறார். இருவர் ஆரஞ்சு நிறத்தினர், இம் மூவர் சித்திரங்களும் தாமரை மலர்களும் வியக்கத்தக்கவாறு பல உறுப்புக்களுடன் தீட்டப்பட்டுள்ளன. இச் சித்திரங்கள் இயற்கை மலர்களைப் பெரிதும் ஒத்திருத்தலே வியப்புக்கு உரியது. இக்குகைக் கோவில் தூண்கள் இரண்டில் காணப்படும் நடனச் சிலைகள் இரண்டும் பேரழகு பெற்றவை. நடனக் கலையில் கைதேர்ந்த வேலைக்காரரே இவற்றைத் தீட்டியிருத்தல் வேண்டும். இவை உயிர் ஓவியங்களாகக் காட்சி அளிக்கின்றன; நடனக் கலையின் நுட்பமான பகுதிகளை உணர்த்தி நிற்கின்றன. தென்புறத் தூண் ஒன்றில், இச் சிற்ப-ஓவியக் கலைகளை இக்ககைக் கோவிலில் உணர்த்த முயன்ற மகேந்திரவர்மனது முடியுடைத் தலை தீட்டப்பட்டுள்ளது அதன் அருகில் அவன் மனைவியின் உருவமும் காணப்படுகிறது. சுருங்கக் கூறின், சிற்ப-ஓவியக் கலைகளில் உணர்த்தி கொண்ட மக்கட்குச் சித்தன்ன வாசல் சீரிய காட்சிகளை நல்கும் என்பதில் ஐயமில்லை. சிற்பக்கலை சிற்பக்கலையிலும் தமிழகம் இளைத்ததன்று. காஞ்சி-கயிலாசநாதர் கோவில், காஞ்சி-வைகுந்தப் பெருமாள் கோவில், மாமல்லபுரத்து ரதங்கள் ஆகிய இவற்றில் பல்லவர் காலச் சிற்பத் திறனைக் கண்டு களிக்கலாம். காஞ்சி-கயிலாசநாதர் கோவிலும் வைகுந்தப் பெருமாள் கோவிலும் சிற்பக் கலைக் கூடங்கள் என்றே சொல்லலாம். அவற்றின் உட்புறச் சுவர்கள் முழுமையிலும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. நடராசருடைய பலவகை நடனங்களை விளக்கும் சிற்பங்கள் கயிலாச நாதர் கோயிலில் காணப்படுகின்றன. புராண வரலாறுகளை விளக்கும் சிற்பங்களும் மிகப்பலவாக அக்கோயிலில் காட்சியளிக்கின்றன. பல்லவர் வரலாற்றின் பெரும் பகுதி வைகுந்தப் பெருமாள் கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவரை அடுத்து நாடாண்ட சோழப் பேரரசர்கள் கட்டிய தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் என்னும் இடங்களில் உள்ள பெரிய கோவில்கள் சோழர் காலச் சிற்பக் கூடங்கள் என்னலாம். சுமார் ஏழடி உயரமுள்ள வாயிற் காவலர் உருவங்கள் பார்ப்போர் விழிகளைத் தம்பால் ஈர்ப்பனவாகும். சிவபெருமான் உமாதேவியுடன் எழுந்தருளி விசாரசருமருக்குச் சண்டீசப்பதம் வழங்கிய நிகழ்ச்சியைக் காட்டும் சிற்பம் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் அழகொழுகக் காட்சி யளிக்கின்றது. இதுபோன்றே கஜலட்சுமி, நாமகள் முதலியோரைக் குறிக்கும் சிற்பங்களும் கண்ணைக் கவரும் நிலையில் அங்கு இருக்கின்றன. நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள், தாராசுரத்துச் சிவன் கோவில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் மிகச்சிறிய சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிறிய உருவில் அமைந்த அச் சிற்பங்கள் நிகழ்ச்சிகளைத் தெளிவாக விளக்கி நிற்றல், சிற்பக் கலைஞரின் கலை நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். திருபுவனை வீரே சுவரத்தில் உள்ள முன் மண்டபமும் தூண் வேலைப்பாடுகளும் பிற சிற்பங்களும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. தஞ்சைப் பெரிய கோவில் விமானத்திலும் கங்கை கொண்ட சோழேச்சரத்து விமானத்திலும் அற்புத வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் பல உண்டு. இவையாவும் இந்நாட்டுச் சிற்ப வல்லுநர் கலை யுணர்வையும் தமிழ் மக்களின் கலை ஆர்வத்தையும் உலகறியச் செய்வனவாகும். முடிவுரை அழகு ஒழுகும் இந்த உலகம் இறைவனுடைய சிற்ப-ஓவியத் திறனைக் காட்டுவதாகும். அவனது சிற்பத்திறனை மக்கட் படைப்பிலும் மலை முதலிய பருப்பொருள்களிலும் கண்டு களிக்கலாம். அவனது ஓவிய ஆற்றலை இயற்கைக் காட்சிகள் மூலம் கண்டு கண்டு இன்பம் எய்தலாம். இவ்விரண்டும் கலந்துள்ள இடமே அழகு ஒழுகும்ஆனந்த இடமாகும்; அமைதிக்கு அமைந்த இன்ப இடம். அதுவே அழகு அடைக்கலம் புகுந்துள்ள இடமாகும். அழகு என்பது யாது? கண்ணையும் கருத்தையும் ஈர்த்து ஒருவழிப்படுத்தும் பொலிவே அழகு எனப்படுவது. இவ்வழகுள்ள இடங்களே ஓவியங்களும் சிற்பங்களும் களி நடம் புரியும் மேடைகள். இத்தகைய இன்ப மேடைகளில் சித்தன்னவாசலும் ஒன்றாகும். இத்தகைய இன்பக்கலைகளை விளக்கி, இவற்றின் வாயிலாக நமது தொன்மை நாகரிகத்தை உலகிற்கு உணர்த்தி, நம்புலன்களை ஒருவழிப்படுத்தும் காட்சிக்கினிய நல்லிடங் களைச் சென்று காணுதல் நமது கடமை ஆகும். இவற்றைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்தல் நமது தலையாய கடமை. 4. நாகப்பட்டினம் சோழநாடு “செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னி” என்று புலவர்களால் ஏத்தெடுக்கப் பெற்ற காவிரியாறு தன் கிளையாறுகளுடன் பாய்வதால்”சோழவள நாடு சோறுடைத்து” என்று பாராட்டப் பெற்றது. சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும் வட வெள்ளாறு வரை உள்ள தென் ஆர்க்காட்டுப் பகுதியையும் தன் அகத்தே பெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சோழநாடு சோழர் என்ற மரபரசரால் ஆளப்பட்டு வந்தது. சங்க காலத்தில் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளக்க முற்றிருந்தது. தேவார காலம் மாதவியின் மகளான மணிமேகலையின் காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதி கடல் கொந்தளிப்பால் அழிந்தது என்பதை மணிமேகலை என்னும் காப்பியம் விளக்கமுறக் கூறுகின்றது. சங்ககாலத்திற்குப் பிறகு தமிழகத்தின் பெரும் பகுதி பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டது. அக்காலத்தில் சோழநாட்டில் சிறந்த துறைமுக நகரமாக இருந்தது நாகப்பட்டினம் என்பது தேவாரப்பாடல்களால் தெரிகிறது. “வங்கமலி கடல் நாகை” என்று கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவுக்கரசர் குறித்துள்ளார். அதே நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர், மலைபோல் உயர்ந்த கப்பல்கள் தங்கும் நாகை என்று குறிப்பிட்டுள்ளார். துறைமுகப்பட்டினமாக இருந்தமை யால் நகரம் செழிப்புற்றிருந்தது. இதனை 9-ஆம் நூற்றாண் டினரான சுந்தரர், “ செல்வக் கடல் நாகை” என்று குறிப்பதிலிருந்து உணரலாம். நாகை “காண்பினரிய மணிமாடம் நிறைந்த நெடு வீதி” களைக் கொண்டது என்று சுந்தரர் பாடியுள்ளார். அந்நகரத்தில் கல்வி வளம் நன்னிலையில் இருந்தது என்பதைத் திருநாவுக்கரசர், “கற்றார் பயில் நாகை” என்பதிலிருந்து நன்கறியலாம். நாகையில் சிவபெருமான் திருக்கோயில் ஒன்று பல்லவர் காலத்தில் (கி.பி. 300-900) இருந்தது. அதன் பெயர் “காரோணம்” என்பது. அக்கோவில் மேற்சொன்ன சமய குரவர் காலங்களில் பக்திக்கு நிலைக்களமாக இருந்தது என்பதும், மிக்க செல்வ வளம் பெற்றிருந்தது என்பதும் திருமுறைப் பாடல்களால் தெரிகின்றன. “சுந்தரனே கந்தமுத லாடையா பரணம் பண்டாரத் தேயெனக்குப் பணித்தருளல் வேண்டும்” என்பது சுந்தரர் நாகைக் காரோணத்திற் பாடிய பாடலின் ஒரு பகுதி. கோவில் பண்டாரத்திலிருந்து வாசனைப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றைத் தமக்குத் தந்தருள வேண்டும் என்று சுந்தரர் சிவபெருமானை வேண்டியுள்ளார். பெரிய புராணச் சான்று கி.பி. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரது காலத்திலேயே நாகை செல்வத்திற் சிறந்த நகரமாகவும் துறைமுகப் பட்டினமாகவும் இருந்தது என்பது பெரிய புராணத்தால் தெரிகிறது. காரைக்காலிற் பிறந்து வளர்ந்த அம்மையார், நாகையில் கடல் வாணிகத்திற் சிறந்த வணிகன் மகனை மணந்துகொண்டார். கி.பி. 8-ஆம் நூற்றாண்டினர் என்று மதிக்கத்தக்க அதிபத்த நாயனார் காலத்தில் நாகை ‘கப்பல் செல்வம்’ பெற்றிருந்தது என்று சேக்கிழார் கூறியுள்ளார். வரலாற்றுச் சான்று கி.பி. 720-இல் நரசிம்ம பல்லவன் (இராஜ சிம்ம பல்லவன்) சீனப் பேரரசை மதித்துப் பௌத்தர்கட்காக நாகையில் ஒரு கோவில் கட்டி, அதற்குப் பெயரிடுமாறு சீனப் பேரரசனை வேண்டினான். சீனப் பேரரசன் அங்ஙனமே செய்து பல பரிசுகளும் அனுப்பினான் என்பது சீனர் எழுதிவைத்துள்ள குறிப்புக்களிலிருந்து அறியலாம். சீனர்கள் பௌத்த சமயத்தினர்; கடல் வணிகத்திற் சிறந்தவர். அவர்கள் நாகையில் தங்கிக் கடல் வாணிகம் செய்தனர். அவர்கள் வழிபாட்டிற்குப் புத்தர் கோவில் ஒன்று பல்லவனால் கட்டப்பட்டது. பல்லவ நாடு அக்காலத்திற் சீன நாட்டுடன் கடல் வாணிகம் செய்து வந்தது. சீனப் பேரரசனை மகிழ்விக்கவே பல்லவன் நாகையில் புத்தர் கோவிலைக் கட்டினான். இக்குறிப்புக்களாலும் நாகை சிறந்த கடற்றுறைப் பட்டினமாக இருந்ததென்பதை நன்கறியலாம். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் நாகைப் பௌத்த விகாரத்தில் இருந்த முழுமையும் பொன்னால் செய்யப்பட்டிருந்த புத்தர் உருவச் சிலையைக் கவர்ந்து சென்று, அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருமதில் எழுப்பித்தல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்தார் என்று வைணவ நூல்கள் கூறுகின்றன. இதிலிருந்து இராஜசிம்மன் கட்டிய பௌத்த விஹாரத்தைப்பற்றி நன்கறியலாம் அன்றோ? பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. 986 முதல் 1014 வரை அரசாண்ட இராசராசன் காலத்தில் நாகையில் ‘ஸ்ரீசைலேந்திர சூடாமணி விகாரை’ என்னும் பௌத்த பள்ளி கட்டப்பட்டது. மலேயா, சுமத்திரா என்னும் பகுதிகளை ஆண்ட ஸ்ரீ மாற விஸ்ரீயோத்துங்கவர்மன் என்ற அரசனது வேண்டுகோட்படி அந்த விகாரையை நாகையிற் கட்ட இராசராசன் இசைவு தந்தான். அந்த விகாரை ஸ்ரீ மாற விஜயோத்துங்கன் தந்தையான சூடாமணி வர்மனது பெயர் தாங்கிச் ‘சூடாமணி விகாரை’ எனப்பட்டது. இராசராசன் நாகையை அடுத்த ஆனை மங்கலம் முதலிய ஊர்களை அவ்விகாரைக்குப் பள்ளிச் சந்தமாக அளித்தான். ஆயினும் சாசனம் எழுதுவதற்கு முன் அவன் இறந்துவிட்டதால், அவன் செல்வ மைந்தனான இராசேந்திர சோழன் செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதிக் கொடுத்தான். கி.பி 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், “சோழ நாடு என்னும் கற்பகப் பூங்கொடியின் `மலர்’ என்று சொல்லத் தக்க முறையில் பல நலங்களையும் பெற்று விளங்கியது நாகப்பட்டினம் என்னும் திரு நகரம்” என்று பாடியுள்ளார். இதிலிருந்து அந்நகரம், சோழப் பெருநாட்டில் மிகச் சிறந்த நகரமாக இருந்தது என்பதை உணரலாம். விசயநகர அரசர் காலத்தில் பர்மாவில் ‘பெகு’ நாட்டை ஆண்ட ராமாபதி அரசன் இலங்கைக்கு ஒரு தூதனையும் பௌத்த பிட்சுக்கள் பதினொருவரையும் அனுப்பினான். அவர்கள் இலங்கையில் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு கப்பலேறிச் சென்றனர். வழியில் அக்கப்பல் புயலிற் சிக்கி உடைந்தது. அவர்கள் உயிர் பிழைத்துக் கரையேறி நாகையை அடைந்தார்கள். அங்கிருந்த ‘படரிகாராமம்’ என்னும் பௌத்த பள்ளியில் தங்கியிருந் தார்கள்; அப்பள்ளிக்கு அருகே சீனப் பேரரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த கோவிலில் புத்த தேவரை வணங்கினார்கள். இந்த நிகழ்ச்சி கி.பி. 1477-இல் நடைபெற்ற தாகப் பர்மா நாட்டுக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. நாகையிற் காளமேகம் திருநாவுக்கரசராற் சிறப்பித்துக் கூறப்பட்ட நாகை மக்களின் கல்விநிலை தொடர்ந்து உயரிய நிலையில் இருந்து வந்திருத்தல் வேண்டும் என்பது செவிவழிச் செய்தியால் அறியப்படும். கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் ஒருமுறை நாகை சென்றார்:”சோறு விக்குமிடம் எது?” என்று தெருவில் பாக்கு வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கேட்டார்; அதற்கு அவர்கள் நகைத்து, சோறு தொண்டையில் விக்கும்,” என்று குறும்பாகப் பதில் கூறினார்கள். அதனால் வெகுண்ட காளமேகம் அருகில் கிடந்த அடுப்புக்கரி ஒன்றை எடுத்து, எதிரிலிருந்த ஒரு வீட்டுச் சுவர்மீது, “பாக்குத் தெரித்துவிளை யாடசிறு பாலகர்க்கு நாக்கு…” என்பதுவரை எழுதி, பசி கடுகியதால், உண்டு வந்த பிறகு பிள்ளைகளைச் சபித்து எழுதவேண்டும் என்று, இரண்டாம் வரியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார். அவர் செயலைக் கவனித்துக்கொண்டிருந்த பிள்ளைகள், அவர் சென்றபிள், சுவர் அருகே சென்று, அவர் எழுதிவிட்டுச் சென்றதைப் பார்த்தனர்; வாக்கியம் குறைவாக இருத்தலைப் பார்த்து, ஒரு கரித்துண்டை எடுத்து, “நாக்குத் தமிழ்விளங்க நாகேசா” என்று இரண்டாம் வரியை முடித்துவிட்டு, வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தனர். “நாக்குத் தெரித்துவிழ நாகேசா” என்று முடிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே திரும்பி வந்த காளமேகம், தாம் விட்டுச் சென்றது நிறைவாக்கப் பட்டிருப்பதைக் கண்டார்; அது பிள்ளைகள் செயல் என்பதை அறிந்தார்; அவர்தம் தமிழறிவிற்கு வியந்தார்; அப்பிள்ளைகளை அருகழைத்து ஆசீர்வதித்துச் சென்றார். ஆங்கிலேயர் காலத்தில் கி.பி. 1725-ஆம் ஆண்டில் ‘சீனா கோவில்’ என்ற பெயருடன் ஒரு கோவில் நாகையில் இருந்ததென்று வாலெண்டியன் என்பவர் குறித்துள்ளார். அதே கோவிலைத் தாம் 1846-இல் பார்த்தாகச் சர்வால்டர் எலியட் என்பவர் எழுதியுள்ளார். டச்சுக்காரர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் வாணிகம் நடத்திய 18, 19-ஆம் நூற்றாண்டுகளிலும் நாகை கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது; கிருத்தவப் பாதிரிமார்கள் அங்கிருந்துகொண்டு தங்கள் சமயத்தையும் கல்வியையும் பரப்பி வந்தார்கள். இவை அனைத்தையும் நோக்க, கடல் நாகை, பல்லவர் கால முதல் வெள்ளையல் காலம் வரை வாணிகத்திலும் கல்வியிலும் சிறந்திருந்தது என்பதை ஐயமற உணரலாம் அல்லவா? மகாவித்துவான் பிள்ளையவர்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் நாகையில் கற்றவரும் சிவநெறிச் செல்வரும் தம் காலத்தில் வாழ்ந்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். நாகையில் கற்றவர் நீண்ட காலமாக இருந்து வந்தனர் என்பது முன்னரே குறிக்கப் பட்டது. சிவநெறிச் செல்வர்களும் அவ்வாறே இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிப்பதில் தவறில்லை. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ‘தேவாரத் திருக்கூட்டம்’ என்ற சிவபக்தர் சங்கம் நாகையில் இருந்தது. அதனைச் சேர்ந்த சீரியர் வேண்டுகோளின் படி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்யைவர்கள், ‘திருநாகைக் காரோணப் புராணம்’ என்னும் அரியநூலை 1868-இல் பாடினார்; ஓராண்டு முழுதும் நாகையில் தங்கி, அவ்வரிய நூலைப் படித்து அரங்கேற்றம் செய்தார். அப் பெரியாருடைய அரங்கேற்ற வைபவத்தைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் சமய குருவாகிய ‘சுந்தர சுவாமிகளும்’ நேரிற் கண்டு களித்தார். சிவநெறிச் செல்வர்கள் புராணத்தைப் பாராட்டிப் பிள்ளையவர்கட்குப் பெருஞ்சிறப்புச் செய்தனர். இங்ஙனம் நாகை கல்வி, செல்வம், சமயம் என்னும் முத்துறைகளிலும் பல்லவர் காலமுதல் மேம்பட்டு வந்தது. நீங்கள் ஒவ்வொரு பண்டை நகரத்தைப் பற்றியும் இவ்வாறு பல விவரங்களை முயன்று அறிதல் நல்லது. 5. மணிமேகலை பிறப்பும் வளர்ப்பும் ஏறத்தாழ ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் என்ற வணிகன் வளர்ந்து வந்தான். அவனுக்குக் கண்ணகியென்ற மனைவி இருந்தாள். அத்தொன்னகரத்தில் ஆடல் பாடல்களில் வல்ல மாதவி என்ற நடிகை ஒருத்தியும் வாழ்ந்து வந்தாள். கோவலன் அவளுடைய ஆடல் பாடல்களில் ஈடுபட்டு, கண்ணகியை மறந்து, மாதவியோடு வாழலானான். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன. கோவலனுக்கும், மாதவிக்கும் ஒரு பெண் மகவு பிறந்தது. கோவலன் மூதாதையருள் ஒருவன் கடல் வாணிகத்திற் சிறந்தவன். அவன் ஒருமுறை கடலிற் சென்றபொழுது, அவன் சென்ற கப்பல் கடலுள் ஆழ்ந்தது. பௌத்தர்கள் பாராட்டும் மணிமேகலை என்ற பெண் தெய்வம் தோன்றி அவ்வணிகனைக் காத்தது. ஆதலின், அவன் மரபில் வந்த கோவலன் அத்தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்கு .இட்டு வழங்கினான். அதனால், மாதவியின் மகள் மணிமேகலை யென்று யாவராலும் வழங்கப்பட்டாள். பெற்றோர் தம் அருமந்த குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சீராட்டி வளர்த்தனர். குழந்தை தன் மழலைச் சொற்களாலும், செயல்களாலும் பெற்றோரை மகிழ்வித்தது. கோவலன் கொலையுண்டமை மாதவிபால் மனக்கசப்புக் கொண்ட கோவலன் கண்ணகியின் வளமனைக்குச் சென்றான்; தன் தவற்றைக் கூறி வருந்தினான்; தான் மதுரை சென்று வாணிகம் செய்ய விரும்புவதாகக் கூறினான். உத்தம பத்தினியாகிய கண்ணகி தன் கால் சிலம்பை விற்று வரும் பொருளை முதலாகக் கொண்ட வாணிகம் செய்யும்படி கூறினாள். கோவலன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். அன்றிரவு கோவலனும் கண்ணகியும் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் அறிவியாமல் பூம்புகார் நகரத்தைவிட்டுப் புறப்பட்டனர்; பல நாள் வழி நடந்து இறுதியில் மதுரையை அடைந்தனர். கோவலன் கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றை எடுத்துச் சென்று அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டினான். அப்பொற் கொல்லன் பாண்டி மாதேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வன். அவன் கோவலன் காட்டிய சிலம்பைக் கண்டதும், “இவனே அரசமாதேவி யின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் என்று அரசனிடம் கூறி இவனைக் கொலை செய்தால் என் களவு வெளிப்பட வழியில்லை.” என்று தன்னுள் கூறிக்கொண்டான். அவன் நினைத்தபடியே செய்தான். ஒரு குற்றமும் செய்யாத கோவலன் பொற்கொல்லன் சொன்ன பொய்யால் கொலையுண்டான் கண்ணகி தெய்வமாதல் தன் கணவன் கள்வன் என்று கருதிக் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி அடியுண்ட வேங்கையெனச் சீறினாள்; மதுரை நகரத் தெருக்களில் அழுது புலம்பினாள்; காவலனிடம் சென்று, தன் மற்றொரு சிலம்பை உடைத்துக் காட்டினாள். அச்சிலம்பில் மாணிக்கப் பரல் இருந்தது. பாண்டி மாதேவின் சிலம்பில் முத்துப் பரல் இருந்தது. பாண்டியன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தான்; அவ்வளவில் அறிவு மயங்கி விழுந்தான். மீண்டும் அவன் எழவில்லை. அவன் இறந்தது கண்ட பாண்டிமாதேவியும் உயிர்விட்டாள். கண்ணகி மதுரையை எரித்தாள்; பின்பு வைகையின் வடகரை வழியே மேற்கு நோக்கி நடந்தாள்; சேரநாட்டை அடைந்தாள்; ஒரு மலை மீது ஏறி நின்றாள்; அப்பொழுது அங்கு விமானத்தில் வந்த கணவனுடன் விண்ணுலகம் சென்றாள். கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் என்ற புலவர் வாயிலாக உணர்ந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோவில் கட்டி விழா இயற்றினான். கண்ணகி அன்று முதல் தமிழ் நாட்டு மக்களால் பத்தினிக் கடவுளாக வழிபடப்பட்டாள். மாதவி துறவு கோவலன் மதுரையில் கொலையுண்டதும், கண்ணகி சேர நாட்டில் தெய்வமானதும் கேள்வியுற்ற மாதவி ஆறாத்துயர் கொண்டாள்; அன்று முதல் ஆடல்பாடல்களில் ஈடுபடவில்லை. அவள் அறவண அடிகள் என்ற பௌத்த துறவியிடம் பௌத்த சமய உபதேசங்களைக் கேட்டுப் பௌத்த சமயத் துறவியானாள். அவள் மகளான மணிமேகலை, கண்கவர் வனப்புடன் மணப்பருவத்தை அடைந்தும், ஆடல்பாடல்களில் விருப்பம் கொள்ளவில்லை; சிறந்த ஒழுக்கத்துடன் தாயின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தாள். உதயகுமரன் அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட சோழனுக்கு உதயகுமரன் என்ற மகனிருந்தான். அவன் மணிமேகலையை உளமாரக் காதலித்தான். ஆயின் மணிமேகலை அவனோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை. மணிமேகலா தேவி அவள்பால் அன்பு கொண்டது; மணிபல்லவம் என்ற தீவிற்கு அவளைத் தூக்கிச் சென்றது; நினைத்தவுடன் உருமாறும் மந்திரத்தையும் வானத்திற் பறந்து செல்ல வசதியளிக்கும் மந்திரத்தையும் அவளுக்கு உபதேசித்தது. மணிமேகலை அத்தெய்வத்தின் அருளால் தன் முற்பிறப்பின் வரலாற்றையும் அறிந்தாள்; உதயகுமரனே முற்பிறப்பில் தன் கணவணாக இருந்தவன் என்பதையும் உணர்ந்தாள். மணிபல்லவத் தீவில் அமுதசுரபி என்ற பிச்சைப் பாத்திரம் அவளுக்குக் கிடைத்தது. அதில் சிறந்த பத்தினி முதலில் அன்னமிட்டதால், அவ்வன்னம் எடுக்க எடுக்கக் குறையாது வளர்ந்து வந்தது. மணிமேகலை அவ்வதிசயப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு, கண்ணில்லாதவர், காது கேளாதவர், முடவர், நோயாளர் முதலிய ஏழைகளுக்கு உணவளித்து வந்தாள். அப்பேரழகி காண சண்டிகை என்ற வித்தியாதர மகளுடன் அறிமுகமானாள். அவள், மணிமேகலையால் பசி நீங்கிக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தன் ஊர் போய்ச் சேர்ந்தாள். உதயகுமரன் தன்னை வந்து துன்புறுத்துவான் என அஞ்சிய மணிமேகலை, தன் மந்திர வலியால் காண சண்டிகையின் உருவம் தாங்கி முன்போல அன்னதானம் செய்துவந்தாள். காய சண்டிகையைப் பல இடங்களில் தேடிக்காணாமல் பூம்புகார் நகரத்தை யடைந்த அவள் கணவன், காய சண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைத் தன் மனைவியென்றே நம்பினான். அவ்வமயம் மணிமேகலை உதயகுமரனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள். அவள் அவ்வித்தியாதரனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் உதய குமரனோடு அப்புறம் சென்றாள். தன் மனைவி தன்னை அலட்சியம் செய்ததாக அவ்வித்தியாதரன் எண்ணிக் கடுங்கோபம் கொண்டான்; தன் மனைவியைக் காதலியாக்க விரும்பிய உதயகுமரனை ஒழிக்க விரும்பினான். அன்றிரவு மணிமேகலை படுத்திருந்த தனியிடத்தை நோக்கி உதயகுமரன் விரைந்து வந்தான். நள்ளிருளில் அவன் வருவதை எதிர்பார்த்துப் பதுங்கியிருந்த வித்தியாதரன் திடீரெனப் பாய்ந்து தன் உடைவாளால் அவனை வெட்டி வீழ்த்தினான்; உடனே விண்ணிற் பறந்து தன் நகரம் போய்ச் சேர்ந்தான். உதயகுமரன் வெட்டுண்டதை யறிந்த மணிமேகலை அழுது புலம்பினாள். சோழர் நீதிமுறை மணிமேகலை மீது கொண்ட காதலால் உதயகுமரன் வெட்டுண்டு வீழ்ந்தான் என்பதையறிந்த சக்கரவாளக் கோட்டத்திலிருந்த முனிவர்கள் சோழ வேந்தனை நேரிற் கண்டு வாழ்த்தினர். அவருள் ஒருவர், “ அரசே! இந்நகரில் பத்தினிப் பெண்டிரையும் தவ மகளிரையும் விரும்பி, அவ்விருப்பத்தால் தண்டிக்கப்பட்டு இறந்தவர் பலராவர். முன்னொரு காலத்தில் இந்நாட்டையாண்ட ககந்தனுடைய பிள்ளைகளுள் இளையவன், காவிரியில் நீராடி விட்டுத் தனித்து வந்த மருதியென்பவளை ஆவலோடு பார்த்தான். அவள் மனம் கலங்கிப் பூதசதுக்கம் போந்து அப்பூதத்தினிடம் முறையிட்டாள் அப்பூதம் `உன்னை விரும்பிய அரசன் மகன் ஏழு நாட்களுள் அரசனால் வெட்டப்படுவான்’ என்று கூறியது. இளவரசன் அவ்வாறே தன் தந்தையால் வெட்டப்பட்டான். விசாகை என்னும் வணிக மகளைக் கண்ட ககந்தனது மூத்த மகன் தான் அணிந்திருந்த மாலையை அவள் கழுத்தில் போட விரும்பினான். ஆனால் அம்மாலையை எடுக்க முனைந்த அவன் கைகள் மாலையைத் தொட்டவுடன் மேலும் அசையாது நின்றுவிட்டன. விசாகையின் ஒழுக்கச் சிறப்பால் அவன் கைகள் அசையாது நின்றுவிட்டன என்பதைப் பலர் வாயிலாக அறிந்த சோழ மன்னன், தனக்கு இருப்பவன் ஒரே மகன் என்பதையும் பொருட்படுத்தாமல் வாளால் வெட்டி வீழ்த்தினான். “சோழர் பெருமானே! தன் கணவனாகிய கோவலன் கொலையுண்ட பின்பு உலக வாழ்வை வெறுத்த மாதவி முனிவர் தவச்சாலையை அடைந்தாள். அவள் பெற்ற மணிமேகலை இளம்பெண்; வீடுதோறும் சென்று ஐயமேற்று ஏழைகளை உண்பித்து வந்தாள். உன் மகனான உதயகுமரன் அவளையடைய விரும்பினான். அவள் அவனுக்குப் பயற்து காய சண்டிகை என்ற வித்தியாதர மகளது வடிவம் கொண்டாள். காய சண்டிகையின் கணவன் மணிமேகலையைத் தன் மனைவி என மயங்கினான்; அவளை விரும்பிவந்த உதயகுமரன் மீது சினம் உற்றாள்; உடனே அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான்,” என்று விளக்கமாகக் கூறினர். இவற்றைக் கேட்ட மன்னன் தன் மகன் இறந்தமைக்கு வருந்தவில்லை. ஆவன் தன் படைத்தலைவனை நோக்கி, “தன் மகனை நிலத்தில் கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த சோழப் பேரரசன் பரம்பரையில் இத்தீயவன் பிறந்தான் என்பதைப் பிற அரசர்கள் கேட்குமுன்பே அவன் உடலை எரித்துவிடுக. கணிகை மகளாகிய மணிமேகலையையும் சிறைப்படுத்துக,” என்றனன். படைத்தலைவன் அவ்வாறே செய்தான். சிறையில் மணிமேகலை “என் மகனை இறக்கும்படி செய்த இம் மணிமேகலையைப் பலவாறு வருத்துவேன்” என்று துணிவு கொண்ட சோழமாதேவி, அவளைச் சிறையிலிருந்து விடுதலை செய்து தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டாள்; அவளைப் பைத்தியம் பிடித்தவள் என்று பிறர்மதிக்கும்படி செய்ய மயக்க மருந்தை அவளுக்கு ஊட்டினாள். மணிமேகலை மறுபிறப்பு உணர்ந்தவள் ஆதலால் சிறிதும் அறிவு வேறுபடாமல் இருந்தாள் அப்பால் சோழமாதேவி ஓர் இளைஞனை ஏவி அவளை கெடுக்கத் தூண்டினாள். அக்கொடியவன் வருகையை உணர்ந்த மணிமேகலை தன் மந்திர பலத்தால் ஆண்வேடம் பூண்டு அங்கே யிருந்தாள். தன் சூழ்ச்சிகள் பலியாமையால் சினந்த சோழமாதேவி, `நோய் மிகுதியால் இவளுக்கு உணவு செல்ல வில்லை’ என்று கூறி அவளைப் புழுக்கறையுள் அடைத்தாள். உணவு இன்றி இருக்கத்தக்க மந்திர வலியால் மணிமேகலை பலநாள் உடல் வாட்டமின்றி அவ்வறையுள் இருந்தாள். அதனைக்கண்ட சோழமாதேவி வியப்புற்றாள்; தான் செய்த கொடுமைகளை எண்ணி வருந்தினாள்; தன்னை மன்னிக்கும்படி மணிமேகலையை வேண்டினாள்; மணிமேகலையைத் தேடிவந்த அறவண அடிகளுடன் அனுப்பினாள். வஞ்சியில் மணிமேகலை மணிமேகலை சாவகம் முதலிய பல இடங்களில் சென்று திரும்பிய பின்பு, சேரர் தலைநகராகிய வஞ்சி மாநகரத்தை அடைந்தாள். அந்நகர்ப் புறத்தே இருந்த பத்தினிக் கோயிலைக் கண்டு, உள் நுழைந்து கண்ணகித் தெய்வத்தை வணங்கினாள்; பின்னர் வஞ்சி நகருள் சென்று பல சமயவாதிகளைக் கண்டாள்; ஒவ்வொரு சமயத்தின் கொள்கைகளையும் சிறப்பினையும் கேட்டறிந்தாள். பின்பு அவள் பௌத்த முனிவர் வாழ்ந்த மடத்திற்குச் சென்று அங்கே தவம் செய்துகொண்டிருந்த கோவலன் தந்தையான மாசாத்துவானைப் பணிந்தாள். மாசாத்துவான் காஞ்சி நகரம் வறுமையில் வாடுவதாகவும் உடனே சென்று அங்கு அன்னதானம் செய்யும்படியும் அறிவுறுத்தினான். உடனே மணிமேகலை காஞ்சியை நோக்கி விரைந்தாள். காஞ்சியில் மணிமேகலை காஞ்சியை அடைந்த மணிமேகலை, அங்குச் சோழவேந்தன் கட்டிய புத்தர் கோவிலை வணங்கி, அதற்குத் தென்மேற்கில் சென்று ஒரு சோலையில் தங்கினள். அவள் வரவு அறிந்த சோழவேந்தன் அவளைக்கண்டு தன் நாட்டு வறுமையைப் போக்கும்படி வேண்டினான். மணிமேகலை அன்று முதல் அந்நாட்டு ஏழைகளுக்கு அமுதசுரபி என்னும் பிச்சைப்பாத்திர வன்மையால் உணவளித்து வந்தாள். காவிரிப்பூம்பட்டினம் கடலால் தாக்குண்ட காரணத்தால் அந்நகரை விட்டுப் புறப்பட்ட அறவண அடிகள் மாதவி, அவள் தோழி சுதமதி என்ற மூவரும் காஞ்சியை அடைந்தனர். மணிமேகலை அவர்களை வரவேற்றுத் தன் ஆதரவில் வைத்துக் கொண்டாள். தானம் செய்வதை மேற்கொண்டு ஒழுக்கத்தில் முதன்மையாக நின்று பழம்பிறப்பின் உணர்ச்சி பெற்ற மணிமேகலை, அறவண அடிகளிடம் பௌத்த தருமத்தைக் கேட்டறிந்தாள். மணிமேகலை அவ்வுபதேசங்களைக் கேட்டு அந்நகரிலேயே தவம் கிடந்தாள். மணிமேகலை-காவியம் இவ்வரலாற்றை இளங்கோவடிகளுக்கு நண்பரான மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் முப்பது காதைகளைக் கொண்ட பெருங் காவியமாகப் பாடியுள்ளார். இந்நூலுள் பௌத்த சமயப் பிரசாரமே மிகுந்து காணப்படுகிறது. இடையிடையே தமிழ்நாட்டின் சிறந்த நகரங்களான காவிரிப்பூம்பட்டினம் காஞ்சிமாநகரம், வஞ்சிமாநகரம் முதலியவை பற்றிய அக்கால விவரங்களும், அக்காலத் தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், கொள்கைகளும், பிறவும் கூறப்பட்டுள்ளன. பண்டைக்காலத் தமிழக வரலாற்றை அறியவும், மொழி, சொல், பற்றிய விவரங்களை அறியவும் இக்காவியம் பெருந்துணை புரிவதாகும். பழந்தமிழ் நாட்டுச் செய்திகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் இப்பெருங் காவியத்தைப் படித்து இன்புறுதல் நலமாகும். 6. பெரிய புராணத்திற் காணப்படும் நாகரிகப் பண்பாடு முகவுரை பெரிய புராணம் என்பது அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறுகளைப் பற்றிப் பேசுவது. அந்நாயன்மார் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-900 என்னலாம். அவர்களைப் பற்றிக் கூறும் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவ்வாறு பாட்டுடைத் தலைவர்கள் காலத்திற்கும் சேக்கிழார்க்கும் இடையில் ஏறக்குறைய 300 ஆண்டுகள் வேறுபாடு இருப்பினும், நடுவுநிலை கொண்டு ஆராயின், அநபாய சோழனுக்கு முதல் அமைச்சரான சேக்கிழார், இயன்றவரை நாயன்மார் காலச் செய்திகளையும் நாகரிகக் குறிப்புகளையுமே தமது நூலில் குறித்துள்ளார் என்பது வெளியாகிறது. ஆதலின், பெரிய புராணத்திற் காணப்படும் நாகரிகப் பண்பாட்டுக் குறிப்புகள், நாயன்மார் வாழ்ந்த பரந்துபட்ட காலமான பல்லவர்காலச் செய்திகளே என்று கோடலில் தவறில்லை. அஃதாவது, பெரிய புராணத்தைக்கொண்டு தமிழகத்தில் கி.பி. 300 முதல் 900 வரை நிலவியிருந்த நாகரிகப் பண்பாடு இத்தகையது என ஐயத்திற்கு இடமின்றிக் கூறுலாம். 1.சமூக அமைப்பு அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், பலவகைத் தொழிலாளர் என்ற பாகுபாடுகள் இருந்தன. ஆனால் அவை சமய-சமூகத் துறைகளில் மிக்க ஒருமைப்பாடு உடையனவாகக் காணப்பட்டன. மறையவர் வேதங்களில் வல்ல மறையவர் தமிழ் அரசரால் சிறப்பிக்கப் பெற்றனர்; ‘பிரமதேயம்’ என்ற பெயரால் பல சிற்றூர்களைப் பெற்றனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் பிரமபுரி, அகரம் அல்லது அக்கிரகாரம், பிரமதேசம், சதுர்வேதிமங்கலம், புதூர் அல்லது புத்தூர், மங்கலம் எனப் பல பெயர்களாற் குறிக்கப்பெற்றன. ஆவர்கள் தாங்கள் இருந்த இடங்களில் ஊராட்சியை நன்கு கவனித்து வந்தார்கள். திருவெண்ணெய் நல்லூர், தில்லை (சிதம்பரம், சேய்ஞலூர் என்ற ஊர்களில் இத்தகைய மறையவர் ஊராட்சி மன்றங்கள் இருந்தன. அவை ஊர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கின. வடமொழியிற் புலமை பெற்றிருந்தாற்போலவே திருஞானசம்பந்தர் போன்ற மறையவர் தமிழிற் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசர் தமிழகத்தில் வடநாட்டு முறை பற்றிய க்ஷத்திரியர் என்ற வகுப்பு இல்லை. இங்குச் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் என்ற பேரரசரும், குறும்பர், கள்ளர், மலைவாணர் முதலிய சிற்றரச மரபினரும் இருந்தனர்; இவர் அனைவரும் அமைச்சு முதலிய அரசவுறுப்புக்கள் அனைத்தும் வாய்க்கப் பெற்றிருந்தனர். வணிகர் நாயன்மார் காலத்தில் காரைக்கால், நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், மயிலாப்பூர் என்பன கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கின. இந்த நகரங்களில் பெருஞ்செல்வர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் முதலிய கடல் கடந்த நாடுகளுடன் வாணிகம் செய்து வந்தார்கள். உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடைபெற்றது. வணிகர் பண்டப் பொதிகளைக் கள்வரிடமிருந்து காக்கப் போர்ப் பயிற்சியும் பெற்றிருந்தனர்; போர் வீரர்க்குரிய எல்லாப் போர்க்கருவி களையும் வைத்திருந்தனர். வேளாளர் பயிர்தொழிலில் ஈடுபட்டவர் வேளாளர்; நாட்டுக்கு முதுகெலும்பு போன்றவர்; அரசர்க்குப் பெண் கொடுக்கும் உரிமை பெற்றவர். திருநாவுக்கரசர் வேளாளர். அவர் ஏறத்தாழ 15 வருடகாலம் சமணராய் இருந்து, பல கலை நூல்களைப் படித்துத் ‘தருமசேனர்’ என்ற பட்டம் பெற்றவர். அவர் தமக்கையார் திலகவதியார், அவரை மீட்டுச் சைவராக்கச் சக்தி பெற்றிருந்தார் எனின், அவ்வம்மையாரின் கல்வி கேள்வி ஒழுக்கங்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை அல்லவா? நாயன்மார் அறுபத்து மூவருள் பதின் மூவர் பிராமனர்; அவர்கட்கு இணையாக வேளாளருள்ளும் பதின்மூவர் நாயன்மாராய் விளங்கினர் எனின், அவர்களுடைய கல்வி கேள்வி ஒழுக்க நிலையின் உயர்வினை நன்குணரலாம் அல்லவா? பிற வகுப்பார் பல தொழில் செய்து வந்தவரும் கல்வி கேள்விகளில் வல்லவராய் இருந்தனர். நந்தனார் என்பவர் பறையர் மரபினர். அவர் காலத்தில் தீண்டாமை தமிழ் நாட்டில் இருந்தது என்பது அவர் வரலாற்றால் தெரிகிறது; ஆயினும், கல்வி ஒழுக்கங்களில் சிறந்தார் சமூகத்தில் ஏற்றம் பெற்றனர் என்பதற்கு அவர் வரலாறே சான்றாய் நிற்கிறது. பண்ணில் வல்லபாணர் மரபினர் அக்காலத்தில் ஓரளவு இழிந்தவராகக் கருதப்பட்டனர் போலும்! எனினும், சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையும் பெருஞ்சிறப்புடன் நடத்தியதைக் காண, சமயத் துறையில் சாதி வேறுபாடு பெரிதளவு கவனிக்கப்பட வில்லை என்பது தெரிகிறது. 2. மகளிரும் மணமும் மகளிர் நாயன்மார் காலத்துப் பெண்கள் சமூகம் ஆடவர்க்குச் சமமாகக் கருதப்பட்டது. நாயன்மார் பூசை, அடியாரை உபசரித்தல், கோவிலில் வழிபாடு செய்தல், சமயத்தொண்டு புரிதல் முதலிய வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும் ஆடவர்க்குச் சமமாகவே பெண்டிரும் நடத்தப்பட்டனர். அம்மாதரசிகள் சிறந்த கல்வி ஒழுக்கங்களிற் சிறந்திருந்தமை யாற்றான் இத்தகைய உரிமைகளைப் பெற்றிருந்தார்கள் என்னல் தவறாகாது. வணிகப் பெண்மணியாகிய காரைக்கால் அம்மையார், திருமுறைகளில் சேர்க்கத்தக்க பத்திச்சுவை பொருந்திய பாடல்களைப் பாடவல்லவராய் இருந்தார்; சிறந்த பல்கலைப் புலவரான அப்பரைச் சமணத்திலிருந்து சைவராக்கும் ஆற்றல் அவர் தமக்கையார் பெற்றிருந்தார்; தம் கணவரைச் சமணத்தி லிருந்து சைவராக்க மங்கையர்க்கரசியார் முனைந்தனர்; யாழ்ப்பாணராகிய திருநீலகண்டருடன் அவர் மனைவியாரும் பாடிக்கொண்டே ஞானசம்பந்தருடன் தல யாத்திரை செய்தார். இவை அனைத்தும் அக்காலப் பெண்மணிகளின் உயர்நிலைiயக் குறிக்கின்றன அல்லவா? இத்தகைய பெண்மணிகள் தங்கள் கணவருடன் ஒத்துழைத்தமையாற்றான் அக்காலச் சைவ சமயம் வீறுகொண்டு வளர்ந்தது. சமய வளர்ச்சிக்காகச் சில பெண்கள் துறவு நிலை பூண்டு கன்னி மாடத்தில் இருந்தார்கள். அக்கன்னி மாடப் பெண்கள் விரும்பினால், மணவாழ்வை மேற்கொள்ள உரிமை பெற்றிருந்தார்கள். உடன்கட்டை ஏறுதல் அக்கால வழக்கம். திருநாவுக்கரசர் தகப்பனார் இறந்தவுடன் தாயார் உடன்கட்டை ஏறினார். மனைவிமார் கணவரது தவறான ஒழுக்கத்தை வெறுத்தனர்; அக்கணவரைத் தொடவும் அருவருத்தனர். திருமண முறைகள் மணமகனே ஒரு பெண்ணை விரும்பிப் பெரியோரைப் பெண்வீட்டாரிடம் அனுப்புதல் உண்டு. மணமகன் தந்தை முதலியோர் நேரே பெண் வீட்டாரிடம் சென்று மகள் பேசலும் உண்டு. இருதிறத்தார் இசைவும் தெளிந்த பின்னரே மணநாள் குறிப்பிடப்படும். மணத்திற்கு மணமகனுடைய ‘குணமே’ சிறப்பாகக் கருதப்பட்டது. இவ்வளவு நுட்பமாகக் கவனித்தும் காரைக்கால் அம்மையார் கணவன் அவருக்கு ஏற்றபடி நடக்கத் தவறி, அவரது இல்வாழ்க்கையைக் கெடுத்தான். சம்பந்தர் திருமணம் வைதிய முறைப்படி நடந்தது. சுந்தரர் (குருக்கள்) திருமணம் காதல் திருமணம்; கோவிலில் நடந்தது. பெண் தனக்கு மணமுடிவு செய்த பிறகு கணவன் இறந்துபடின், மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. அவள் உடனே இறத்தல் அல்லது கைம்மை நோன்பு மேற்கொள்ளல் என்ற இரண்டில் ஒன்றனை மேற்கொண்டாள். குருக்கள் மரபினரான சுந்தரர் கணிகைப் பெண்ணையும் வேளாளர் மகளையும் மணந்தார்; கோட்புலியார் என்ற வேளாளர், தம் பெண்களை மணக்குமாறு சுந்தரரை வேண்டினார்; சிவநேசச் செட்டியார் தம் மகளை மணக்கும்படி சம்பந்தரை வேண்டினார். இவற்றை நோக்க, சைவர்க்குள் மணத்தொடர்பாகச் சாதி வேறுபாடுகள் கவனிக்கப்பட்டில என்பது தெரிகிறது. 3. அரசியல் கழகங்கள் அரசர் தமிழகத்தில் அரசர் என்ற தனிமரபு இல்லை என்று முன் சொன்னோம். தமிழகத்துப் பேரரசராயினும் சிற்றரசராயினும், அவர்க்குப் பின் அவர் மக்களே பட்டத்தை அடைந்து வந்தார்கள். அரசமரபினர் இல்லாதபொழுது அமைச்சரும் குடிமக்களும் பட்டத்து யானையை ஏவிவிடுவார்கள். அது தன் துதிக்ககையில் மாலை ஒன்றைத் தாங்கி வெளிச் சென்று ஒருவர்க்கு அதனை அணிவித்துத் தன்மீது சுமந்துவரும். அவர் அரசராக முடி சூட்டப்பெறுவர். இங்ஙனம் வணிக மரபினரான மூர்த்தி நாயனார் பாண்டிய நாட்டுக்கு அரசராக்கப்பட்டார். அரசன் குடிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தான்; தன்னாலும், தன் பரிசனத்தாலும், கள்வராலும், பகைவராலும், விலங்குகளhலும் உண்டாகக்கூடிய துன்பங்களைப் போக்கினான்; அரசன் தன் சமயத்தையே சிறப்பாகக் கவனித்தான்; அதனை எதிர்த்தவரைத் தண்டித்தான்; ஆனால், பிற சமயத்தில் பற்று ஏற்பட்டதும் பழைய சமயத்தினிடம் பகைமை காட்டலும் இயல்பாய் இருந்தது. இவற்றைக் குணபரன், நெடுமாறன் என்பவர் செயல்களிலிருந்து அறியலாம். பொதுவாக அரசன் தன் சமய விதிகட்குக் கட்டுப்பட்டு நடந்தான்; அவ்விதிகளை மீறினார் யாவராயினும் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தான். அரசன் இறந்தால், உடன் இறக்கும் வேலைக்காரப் படை அக்காலத்தில் இருந்தது. பொதுநல அமைப்புகள் பெரிய புராணம் கொண்டு ஆராயும்பொழுது நாயன்மார் காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் சிறந்த கலைப்பீடமாய் விளங்கியது என்பது தெரிகிறது. அது சமணசமண மடம் இருந்த பதியாகும். அப்பர் அம்மடத்திற்றான் பல கலைகளைக் கற்றுத் தருமசேனர் என்ற பட்டம் பெற்றார். இங்ஙனம் சமணர் குடியிருந்த திருவாரூர், திருவோத்தூர், திருமயிலாப்பூர் முதலிய இடங்கள் கல்வி கேள்விகளில் சிறந்திருந்தன. அங்ஙனமே பௌத்தர்கள் வாழ்ந்த போதி மங்கை பௌத்தர்க்குச் சிறந்த கலைப் பீடமாய் விளங்கியது. சைவம், சமணம், வைணவம், பௌத்தம் ஆகிய நான்கிற்கும் காஞ்சி தாயகமாய் விளங்கியது. ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று அப்பர் பாராட்டுவதிலிருந்து இந்த உண்மையை உணரலாம். பாலி, வடமொழி, தமிழ்க்கல்வி அக்காலத்திற் சிறப்புற்றிருந்தன. இதனைப் புத்ததத்தர், ஹியூன் சுவாங் போன்றவர் கூற்றுக்களைக் கொண்டும் மெய்ப்பிக்கலாம். சமயக் கல்வியைப் புகட்டக் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அம்மடங்களில் மாணவர் பொதுக் கல்வியும் சமயக் கல்வியும் பெற்றனர். அப்பர், சம்பந்தர் போன்ற சமய ஆசிரியர் தங்குவதற்கும் அவை பயன்பட்டன. திருவீழி மிழலை, திருமருகல், திருமறைக்காடு, திருப்புகலூர் முதலிய பல இடங்களில் இத்தகைய மடங்கள் இருந்தன. ஊராட்சி மன்றங்கள் இருந்தன என்பதை முன்னரே குறித்தோம் அல்லவா? அவற்றில் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அநுபவம் ஆகிய இவைகளே உறுப்பினர்க்கு இலக்கணமாகக் கருதப்பட்டன. கிராமச் சபையில் அவ்வூர்த் தொடர்பான எல்லாப்பத்திரங்களும் ஓர் அறையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டன. அது ‘அரண் தரு காப்பு’ எனப்பட்டது. கிராமச் சபைக் கணக்கன் ஒருவன் இருந்தான். வழக்குகளில் ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி ஆகிய மூன்றையும் கவனித்தே தீர்ப்பு அளிக்கப் பட்டது. சிறுவர் குற்றங்கட்குப் பெற்றோர்கள் பொறுப்பாளி களாகக் கருதப்பட்டார்கள். இங்ஙனம் நீதி முறைச் சட்டங்கள் இருந்தாற்போலவே, இன்னின்ன விலங்குகளைத்தான் வேட்டை யாட வேண்டும் என்று காட்லாகாச் சட்டமும் இருந்ததென்று ஊகிக்க இடமுண்டு. 4. சமயம் நாயன்மார் காலத்தில் சமணம், சைவம், வைணவம், பௌத்தம் என்ற சமயங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. சமணத்தில் திகம்பர சமணமே மிகுதியாகப் பரவியிருந்தது. அதன் செல்வாக்கினால் சைவம் தலை தூக்க முடியாதிருந்தது. பின்னர் அப்பர் தொண்டை நாட்டைச் சைவ நாடாக்கினார். சம்பந்தர் பாண்டி நாட்டைச் சைவ நாடாக்கினார்; சமணரையும் பௌத்தரையும் வாதங்களில் வென்றார். சமயப் போராட்டத்தில் தோற்றவர் கழுவேறுதல் அல்லது ஏற்றப்படுதல் அக்கால வழக்கம் போலும்! சைவருள் காபாலிகர், பாசுபதர், காளாமுகர் எனப் பலவகையினர் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் வடநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள்; தங்கள் சமயப் பழக்க வழக்கங்களை இந்நாட்டிற் பரப்பினார்கள். அவர்கட்கென்று சில ஊர்களில் மடங்கள் இருந்தன. தமிழ் நாட்டில் சுமார் 500 சிவன் கோயில்கள் இருந்தன. அவற்றில் விழாக்கள் நடைபெற்றன. சிதம்பரம், திருவாரூர்க் கோவில்கள் மிகச் சிறந்தவையெனக் கருதப்பட்டன. 5. பிற குறிப்புகள் சிதம்பரம், காஞ்சி முதலியவை சிறந்த பெரிய நகரங்களாய் இருந்தன. திருவெண்ணெய் நல்லூர் முதலியன கிராமங்கள். இவையென்றி, வேடர்சேரி, வலைஞர்பாடி முதலிய வாழிடங்களும் இருந்தன. நகர அமைப்பு, கிராம அமைப்பு என்பனவற்றை இன்றைய காஞ்சி, சிதம்பரம் முதலிய நகரங்களைக் கொண்டும், பாடல்பெற்ற கோவிலையுடைய கிராமத்தைக் கொண்டும் எளிதில் அறியலாம். காஞ்சிநகர அமைப்பு மிகச் சிறந்த விற்பன்னரால் அமைக்கப்பட்டது என்பதைக் கெட்டிஸ் துரை அறிக்கையைக் கொண்டு நன்கறியலாம். உடை, நகை, போர்க் கருவிகள், இசை, நடனம் பற்றிய பல விவரங்கள் பெரிய புராணத்திற் கூறப்பட்டுள. அவ்விவரங்கள் சரி என்பதைச் சித்தன்ன வாசல் ஓவியங்களைக் கொண்டும் கயிலாசநாதர் கோவில் வைகுந்தப் பெருமாள் கோவிற் சிற்பங்களைக்கொண்டும் நன்குணரலாம். முடிவுரை: பல்லவர் காலத் தமிழர் நாகரிக வாழ்க்கையைக் கூறிய தமிழ் நூல்கள் திருமுறைகள் நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம் ஆகிய மூன்றுமே என்னலாம். இவற்றுள் மிக்க பயனைத் தருவது பெரிய புராணமே. அது வரலாற்றுக்கும் அக்காலச் சமுதாய வாழ்வினை அறிவதற்கும் பெருந்துணை புரிவதாகும். அத்தகைய பெருநூலை அளித்தருளிய சேக்கிழார் பெருமானுக்கு நமது வணக்கம் உரியதாகுக! 7. கன்னனும் கும்பகர்ணனும் கன்னன் வரலாற்றைப் பாரதத்தில் காணலாம். கும்பர்ணன் வரலாற்றை இராமாயணத்தில் பார்க்கலாம். இருவேறு நூல்களில் உள்ளவர்களை யாம் இங்கு அவர்களின் குண நலங்களைக் கொண்டு ஒன்று சேர்க்க முயல்வதே இக்கட்டுரையின் கருத்தாகும். கன்னன் இயற்கையில் நல்லவன். அரவக்கொடியோன் தன்னை ஆதரித்து வந்தமையால் அவன் எண்ணப்படியே இவன் நடந்து வந்தான். ஆனால் உண்மை, நியாயம் செய்ந் நன்றியறிதல் முதலிய உயரிய குணங்கள் அவனிடம் ஒளிர்ந்தன. கன்னன் கதையை அறியாதார் இலர். ஆதலின் ஈண்டு வேண்டிய பகுதியை மட்டும் வரைகுவாம்: கண்ணன் துரியோதனனிடம் தூதனாகச் சென்றபோது, குந்தியின் மைந்தன் கன்னன் என்னும் உண்மையைக் குந்திக்கு அறிவித்து, அவனைப் பாண்டவருடன் சேர்க்கும்படி கூறினான். குந்தி, கன்னனிடம் சென்று, தான் அவன் அன்னை என்பதை மெய்ப்பித்தhள். பின்னர், குந்தி தன் மைந்தனைப் பாண்டவருடன் சேருமாறு வற்புறுத்தினாள். இவ்விடத்தேதான் கன்னனது உயரிய குணம் ஒளிர்வது. அம்மையின் மொழி கேட்ட மைந்தன், “அம்மே! பெற்றோர் இன்னார் என்று அறியாதிருந்த என்னைத் தன் உற்ற நண்பனாகக் கொண்டான் அரவக்கொடியோன்; சீரும் சிறப்பும் தனது பெருவாழ்வும் எனக்கே அளித்தான்; என்னுடன் உண்டான்; என் எச்சில் என்னோடு உண்டான்; என்னை அங்க நாட்டிற்கு அரசனாக்கினான்; தன் தம்பியரையும் சுற்றத் தாரையும் என்னடி வணங்குமாறு செய்தான். மற்றும் ஓர் செய்தி கூறுவல்: ஒரு நாள் அந்தப்புரத்தில்யானும் அவன் மனைவியும் தனித்திருந்து சொக்கட்டான் ஆடினோம்; அவ்வமயம் துரியோதனன் என் பின்புறத்தில் வந்தான். அதை யான் காணவில்லை. எதிர்ப்புறத்தே இருந்த அவன் மனைவி கண்டாள்; உடனே எழுந்தாள். அவள் எழுந்த காரணத்தை அறியாத யான் அவளை உட்காரச் செய்ய, அவளது மேலாடையைப் பற்றினேன். அவ்வளவில் அவளது மணிமாலை இற்று விழுந்தது. மணிகள் கீழே சிதறின. அந்நிலையில் அவள் கணவன் என்முன் புன் சிரிப்புடன் வந்து நின்றான். அவனைக் கண்ணுற்ற யான் என் பிழையை நினைந்து அயர்ந்தேன்: செய்வதறியாது விழித்தேன். அப்போது அவன், “அண்ணா! இம்மணிகளைக் கோக்கவோ, அல்லது பொறுக்கவோ” என்றான். என் மீது எள்ளளவும் சந்தேகம் கொள்ளாத அப்பெருந்தகையினது மனப்பான்மையை அப்போதே யான் அறிந்தேன். அம்மா! இத்தகைய அரசனுக்கு எவ்வாறு நான் துரோகம் செய்வேன்? எங்ஙனம் அவன் செய்த நன்றியை மறப்பேன்? அங்ஙனம் யான் நன்றி மறவேன். அவனது செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே இனி எனக்குப் பெரும் புகழும் கருமமும் ஆகும்,” என்றான். இந்நிலையைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் அழகுபடக் கூறியுள்ளதைக் கண்டு மகிழ்க: “மதமா மதக்களிற்றான் மற்றெனக்குச் செய்த உதவி யுலகறியு மன்றே-உதவிதனை நன்றுசெய்தோர் தங்களுக்கு நானிலத்தில் நல்லோர்கள் குன்றுவதோ செய்ந்நன்றி கூறு. நன்றாக மன்னன் எனக்கிந்த நாடறியக் குன்றாத நன்மை பலகொடுத்தான்-என்றாலும் ஈண்டவன் செய்த வுதவியினை யான்மறந்தால் தீண்டுவளோ தாமரையாள் தேர்ந்து? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிப்ப அற்று விழுந்த அராமணிகள்-மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கெ னாருயிரைம் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு.” பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வாரும், “திடம்படுத் திடுவேலி ராஜரா ஜனுக்குச் செருமுனைச் சென்று செஞ் சோற்றுக் கடன்கழிப் பதுவே எனக்கினிப் புகழுங் கரூமமும் தருமமும் என்றான்,” எனக் கூறி மகிழ்ந்தார். எனவே, கன்னன் வீர பராக்கிரமம் வாய்ந்த பாண்டவர் தன் தம்பியர் என்பதை அறிந்தும், அவர்களைச் சேர்வதால் தான் புவியரசாகலாம் என்பதை அறிந்தும். அந்த அற்ப ஆசையைச் சிறிதும் கொள்ளாது நன்றி மறவாச் செயலையே சிறந்ததாகக் கொண்டான் என்பது பெறப்படுகின்றதன்றோ? இத்தகைய சிறந்த குணமே மக்களிடம் வேரூன்றியிருக்க வேண்டுவது. இக்கன்னனே போர்க்களத்தில் கண்ணன் தரிசனத்தைக் கண்ணுற்றபோது, ‘செஞ்சோற்றுக் கடன் கழித்தேன்’ எனக் கூறிக் களித்தான். இனிக் கும்பகர்ணனைக் கவனிப்போம்: இராவணன், கும்பகர்ணன், விபீடணன் என்ற மூவரிலும் அறிவிற் சிறந்தவன் கும்பகர்ணனே. அவன் இராவணனின் செயலை வெறுத்தான்; ‘பிறன் மனைவியை ஒருவன் கவர்தல் நியாயம் அன்று’ என்று அவன் தெள்ளிதில் உணர்ந்திருந்தான்; தமையன் பிழையைப் பலவாறு கூறிக்கண்டித்தான். அவனைப் போருக்குச் செல்லும்படி இராவணன் கூறினான். அப்போது அவன், “அந்தோ! அண்ணா ! இன்னும் அச்சானகி துயரம் தீரவில்லையா? வெஞ்சமர் மூண்டுவிட்டதா? வானளாவிய நினது புகழ் மாயுங்காலம் வந்துவிட்டதா? நுhம் அழியக்கூடிய காலம் நெருங்கிவிட்டதோ? திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! இராமன் தோள்களை வெல்லலாம், சீதை மேனியைப் புல்லாம் என்பதும் நீ நினைக்கத் தக்கவையோ? தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து, நின் மையறு தம்பியோடு அளவளாவுதலே நீ உய்திறம்” எனக்கூறியது போற்றற்குரியது. தம்பியின் கூற்றிற் சினம் கொண்ட இலங்கை வேந்தன், “மனிதராகிய இராமலக்குமணரை வணங்கி, இவரை வணங்குதலோடு நில்லாது, அநுமான் என்ற குரங்கையும் கும்பிட்டுப் பிழைத்தல் என்பது, இவ்வுடலோடு வாழவேண்டும் என்று விரும்பும் உன் பின்னவனாகிய விபீடணனுக்கும் உனக்குமே கடமையாக இருக்கட்டும். யான் அது செய்ய முடியாது. என் முன் இராதே; எழுந்து போ,” என்று அவை அலறக் கூறிப் போருக்கெழுந்தான். தமையன் அறியாமையைக் கண்ட கும்பகர்ணன் மனம் வருந்திப் போருக்குப் புறப்பட்டான். அங்ஙனம் புறப்பட்டவன் தமையனை நோக்கி, “தலைவ, யான் வெற்றி பெற்று மீண்டும் வருவேன் என்பது கூற முடியாது. விதியானது என்னைப் பிடர் பிடித்துத் தள்ளுகின்றது. யான் இறந்த பின்னராவது சீதையை விடுதல் உனக்கு நன்றாம். அண்ணா! என்னைக் கொல்பவர் உன்னைக் கொல்லாது விடார். ஆதலால், பின்னையெண்ணுதல் பிழை. அப்பெய்வளை தன்னை விட்டு விடுதல் நன்று” என்றான். என் கூறியும் என்? இராவணன் கேட்டானில்லை. முடிவில் கும்பகர்ணன் புறப்பட்டுப் போகையில், அண்ணனது அடிக்கமலத்தில் தன் முடிபட வணங்கி , “ ஐய, இனி யான் உனது முகத்தில் விழித்தல் என்பது அற்றுவிட்டது. ஆதலால் யான் இன்றுவரை அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகள் எவையேனும் இருப்பின், அவற்றைப் பொறுத்தருள்க”+ என்று கூறிய கனிந்த சொற்கள் கல்நெஞ்சம் உடைய இலங்கைக் காவலன் மனத்தையும் கலக்கின என்றால், நம் மனம் கனிவதைக் கேட்பானேன்? கும்பகர்ணன் தமையனிடம் நீங்காத அன்புடையவன். அவனது நன்மையில் நாட்டமுடையவன்; தன்னை அன்றளவும் காத்த தமையனுக்காக உயிர்விடத் துணிந்தே போருக்கு எழுந்தான். செஞ்சோற்றுக்கடன் கழித்தலே தான் செயத் தக்கது என்பதை மானமுள்ள அவ்வீரன் கரு தினான். போர்க்களத்தில் விபீடணன் கும்பகர்ணனை அணுகி, இராமனுடன் சேரும்படி வேண்டினான். அதைக்கேட்டு நகைத்துக் கும்பகர்ணன் கூறிய கூற்றுமான வீரம் பொருந்தியதாய் உள்ளது: “நீரில் தோன்றி மறையும் குமிழியையொத்த வாழ்வை நம்பி, என்னை ஆருயிர்த் துணையெனக் கருதி நெடிதுநாள் வளர்த்து இப்போது என்னைப் போருக்கு அனுப்பிய அண்ணனுக்குத் துரோகம் செய்யமாட்டேன்; யான் உயிர் துறப்பினும் துறப்பேன்; செய்ந் நன்றியறிதலைத் துறவேன்” என்று கூறும் கும்பகர்ணன் கூற்றில் ஒழுக்கமும் மானமும் மிளிர்வதைக் காண்க. மீண்டும் அந்த அறிஞன் இளவலை நோக்கி, “புலையுறு மரணம் எய்தல் எமக்கது புகழதேயால்” என்று உயர்ந்த அரசவீரனது சிறந்த கொள்கையை வற்புறுத்திப் பேசுகின்றான். “தம்பி, அரசன் தீமை செய்தால் அறிவு புகட்ட வேண்டுவது நம் கடமை. அதனையும் அவன் கொள்ளானாயின். அவனது சோற்றை உண்ட நான் அவனுக்காகப் போர் செய்து இறத்தலே நன்று; அதுவே உண்டவர்க்கு உரியது.” மேலும், கும்பகர்ணன் பின்னோனை விளித்து, “எம்பி! அண்ணனுக்குப் பகைவன் என் பகைவன் அல்லனோ? யமனை ஆடல்கொண்ட யான், அவனை அடைக்கலங்கொண்டு புண்பட்ட நெஞ்சோடு உயிர் வாழ இசையேன்,” என்று கூறும் வீரமொழிகள் கும்பகருணனது வீரத்தையும் உயர்ந்த ஒழுக்கத்தையும் காட்டுகின்றன. இங்ஙனம் கூறிய கும்பகர்ணன், முடிவில் தன்னாலானவரை போர் செய்து தன் கடனைக் கழித்துக் காலன் வாய்ப்பட்டான். கன்னனும் தன் கடனைக் கழித்து மடிந்தான். கன்னனும் கும்பகர்ணனும் ‘செய்நன்றியறிதல்’ என்னும் சீரிய குணத்துடன் ஒழுகியதே அன்னார் தனிச் சிறப்பைக் காட்டா நிற்கின்றது. 8. இந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சி நாகரிக வளர்ச்சி முதல் மனிதன் வீடு கட்ட அறியாது மலைக்குகைகளில் வாழ்ந்தான். அவன் அப்பருவத்தில் இயல்பாகக் கிடைத்த கற்களையே தனக்குரிய கருவிகளாகக் கொண்டான்; பின்னர் அறிவும் ஆராய்ச்சி யும் பெருகப் பெருக ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் கிடைத்த களிமண்ணைக் கொண்டு வீடுகளை அமைத்தான்; தனக்கு வேண்டிய பண்டங்களைச் செய்து கொண்டான்; தன் பேச்சைப் புலப்படுத்தச் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினான்; அவ்வெழுத்துக்களை மண்பாண்டங்கள் மீதும் பிறவற்றின்மீதும் பொறித்தான். மண்ணை அறுத்துக் கற்களாக்கிச் சுட்டு, அச்செங்கற்களைக் கொண்டு வீடுகளை அமைத்தான்; சுடாத கற்களையும் பயன்படுத்தினான். மனிதர் இவ்வாறு படிப்படியாக மலைநாடு, காடு, ஆற்றுவெளி. கடற்கரை என்னும் இடங்களிற் பரவி, அங்கங்குக் கிடைத்த சாதனங்களைக் கொண்டு வாழலாயினர். நாளடைவில் இப்பல இடத்து மக்களுள் வாணிகம் பற்றிக் கூட்டுறவு உண்டாயிற்று. பலவகைக் காலங்கள் முதல் மனிதன் காலத்தில் பதப்படுத்தப்படாத கற்களே கருவிகளாக அமைந்திருந்தன; அடுத்த காலத்தில் பதப்படுத்தப் பட்ட கற்கருவிகள் விளக்கமுற்றன. இவ்விரு காலங்களும் கற்காலம் எனப்படும். அறிவு பெற்ற மனிதர் செம்பு, வெண்கலம், பித்தளை, இரும்பு ஆகிய உலோகங்களைப் படிப்படியாகக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினர். அக்காலங்கள் முறையே செம்புக் காலம். வெண்கலக் காலம், பித்தளைக் காலம், இரும்புக் காலம் எனப்படும். அக்காலங்கள் மனிதனுடைய அறிவு வளர்ச்சியையும், நாகரிக வளர்ச்சியையும் உணர்த்துவனவாகும். துறக்கப்பட்ட இடங்கள் முதலிற் கற்கருவிகளைப் ‘பயன்படுத்திய மனிதன் உலோகங் களைக் கொண்டு கருவிகள் செய்ய அறிந்ததும், கற்கருவிகiளப் புறக்கணித்தான்; பயனற்ற மண்பாண்டங்கiளப் போகவிட்டான். இவை நாளடைவில் கவனிப்பார் அற்று மண்ணில் புதையுண்டன. இறந்தவரைப் பெரிய மட்பாத்திரத்தில் (தாழிகளில்) இருத்திப் புதைத்தல் பண்டையோர் மரபு. அத்தாழிகள் எண்ணிறந்தன; பண்டை மக்கள் வாழ்ந்த இடங்களில் புதைந்து கிடக்கின்றன. பழைய மக்கள் செழிப்புள்ள இடங்களைத்தேடி அடிக்கடி அலைந்து திரிந்தனர் ஆதலின், அங்கங்கே பயனற்ற பொருள்களைப் போட்டுவிட்டுப் போயினர். அவை நாளடைவில் மண்ணில் மறைந்தன. ஆற்று ஓரங்களில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு ஓரளவு நாகரிகத்துடன் வாழ்ந்த மக்கள், ஆற்று வெள்ளத்தால் நகரம் அழியக்கண்டு, வேறு இடம் புகுந்தனர். இங்ஙனமே கடற்கரை ஓரமாக வாழ்ந்த மக்கள் அமைத்த நகரங்களும் கடலுக்கு இரையாயின. சில நகரங்கள் எரிமலைகட்கு இலக்காகி அழிந்தன. வேற்றுநாட்டு மக்கள் படையெடுப்பால் பாழான நகரங்கள் பல. இங்ஙனம் பல்வேறு காரணங்களால் பண்டைக்கால முதலே பல நகரங்களும் சிற்றூர்களும் அழிந்து, நாளடைவில் பூமியிற் புதையுண்டன; சில மண்மேடிட்டுக் கிடக்கின்றன. பழைய நூல் குறிப்புகள் “இப்பொழுதுள்ள கன்னியாகுமரி முனைக்குத் தெற்கே `குமரி நாடு’ என்ற பெயருடன் பெருநாடு ஒன்று இருந்தது. அந்நாட்டில் குமரி மலைத்தொடர், குமரியாறு, பஃறுளியாறு, பழைய மதுரை என்பன இருந்தன. அவை அழிந்த பிறகு கிழக்குக் கடற்கரையில் அலைவாய் (கபாடபுரம் என்பதைப் பாண்டியன் தலைநகரமாகக் கொண்டான். அதுவும் கடலுள் ஆழ்ந்தது; பழைய கொள்கை நகரமும் கடலுக்கு இரையாயது; சிறந்த துறைமுகப் பட்டினங்களாகிய காவிரிப்பூம்பட்டினம் முதலியன கடல் கொந்தளிப்பால் அழிந்தன,” என்பன போன்ற செய்திகளைத் தமிழ் நூல்களில் நாம் காண்கின்றோம்; அவற்றின் பழைய வரலாறுகளை அறிய, அவ்விடங்களை இயலும்வரை அகழ்ந்து காண ஆவல் கொள்கிறோம் அல்லவா? இங்ஙனமே ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்த பாலஸ்தீன நகரங்கள் பல இன்று காணுமாறில்லை. ஹோமர் எழுதிய ‘இலியட்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ட்ராய்’ நகரம் காணப்படவில்லை “அவை மண்ணுள் மறைப்புண்டு மண்மேடிட்டுக் கிடத்தல் வேண்டும். அவற்றைக் கண்டறிந்து அகழ்ந்து ஆராயவேண்டும்,” என்னும் அவா அறிஞர் உள்ளத்தில் தோன்றுதல் இயல்பன்றோ? இங்ஙனம் வேதங்களிலும் இதிகாசங்களிலும், புராணங்களிலும், பௌத்த சமண நூல்களிலும் சிறப்பாகப் பேசப்பட்ட நாலந்தா, தக்ஷசீலம், கோசாம்பி, பாடலிபுரம் முதலிய வடநாட்டுப் பழைய நகரங்களைக் கண்டறிய இந்தியர் விரும்புதல் இயல்புதானே. புதைபொருள் ஆராய்ச்சி இவ்வாறு நூல்களில் கூறப்பட்டும் கூறப்படாமலும் உள்ள-பண்டை மக்கள் வாழ்ந்த பலதிறப்பட்ட இடங்களை அறிந்து, அகழ்ந்து பார்த்து, அவ் விடங்களிற் காணப்படும் பொருள்களை ஆராய்ந்து, அவற்றைப் பற்றித் தோன்றும் செய்திகளையும், அவற்றைப் பயன்படுத்திய மக்களைப் பற்றிய விவரங்களையும் அறியும் முயற்சியே புதை பொருள் ஆராய்ச்சி என்பது. இவ்வாராய்ச்சிக்குத் துணையாக இருப்பவை மண்டை ஓட்டைச் சோதிக்கும் கலை, பிற உயிர்களின் எலும்புகளை ஆராயும் கலை, நில நூல் அறிவு முதலியனவாகும். ஆராய்ச்சி நடைபெற்ற வெளி இடங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் புதைபொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. மேனாட்டரே இவ்வாராய்ச்சியிற் சிறந்து விளங்குகின்றனர். மத்திய தரைக் கடலில் உள்ள மால்ட்டா தீவு, எகிப்து, பாலஸ்தீனம், அசிரியா, பாபிலோனியா, ஏலம், பரரசீகம், என்பன ஆராய்ச்சிக்குரிய இடங்கள் ஆகும். உலகத்துப் பண்டை நாகரிக நாடுகளில் எகிப்து தலைசிறந்தது என்பது இந்த ஆராய்ச்சியாற் புலனாயிற்று. அங்குக் கி.மு. 4000 ஆண்டுகட்கு முன்னும் பின்னும் வாழ்ந்த எகிப்திய அரசர்கள் தமக்கெனக் கட்டிய கல்லறைகளே பிரமிட் கோபுரங்கள் என்பன. அவை ஏறக்குறைய 80 ஆகும். அவற்றுள் மிகப் பெரியது 764 சதுர அடிப் பரப்பும் 480 அடி உயரமும் கொண்டது. அதில் உள்ள கற்களைக் கொண்டு ஒரு நகரத்தை அமைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அறிஞர் அந்தக் கல்லறைகளை ஆராய்ந்து மதிப்பிடத்தக்க பல பொருள்களை எடுத்தனர்; அங்குக் காணப்பட்ட சித்திர எழுத்துக்களை ஆராய்ந்தனர்; படித்துப் பொருள் கண்டனர்; எகிப்திய நாகரிகம் மிக்க பழமையானது என்னும் முடிவுக்கு வந்தனர். இங்ஙனமே மேனாட்டு அறிஞர் டைக்ரிஸ், யூப்ரடீஸ் ஆறுகட்கு இடைப்பட்ட நிலப்பகுதியையும் அவற்றை அடுத்துள்ள இடங்களையும் அகழ்ந்து ஆராய்ந்தனர். “சுமேரியர், பாபிலோனியர். அசிரியர் முதலிய பலதிறப்பட்ட இனத்தவர் அவ்விடங்களில் தனித்தனி நாகரிகத்தை வளர்த்து மறைந்தனர்; அவர்கள் வழிபட்ட சூரியன், சந்திரன், சிவன், அம்மை முதலியவர் கோவில்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவர்கள் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தின மக்களாவர். சுமேரியர் பேசிய மொழி துருக்கி, தமிழ் போன்ற ஒட்டு மொழியாகும்,” என்று ஆராய்ச்சியாளர் அறிவித்தனர். இந்திய ஆராய்ச்சிக் கழகம் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ் பெற்றது: ஆதலின், புதைபொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாகும் என்பது அரசாங்கத்தார் கருத்து; அதனால் ‘இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக் கழகம்’ ஒன்றை நிறுவினர். அக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்தவர் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர். அவர் வட இந்தியாவில் பல இடங்களில் ஆராய்ச்சி நிகழ்த்தினர். அவரது பேருழைப்பின் பயனாய் நாலந்தா, தக்ஷசீலம், பாடலிபுரம், கௌசாம்பி முதலிய பழைய நகரங்களைப் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளிப்பட்டன; தென்னிந்தியாவில் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க சிற்பங்களும் கல்வெட்டுகளும் கட்டடச் சிதைவுகளும் கிடைத்தன. சிந்து மாகாணப் புதையல் சிந்து மாகாணம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு வளமான இடமாக இருக்கின்றது. சிந்துநதி பாயப்பெறும் சமவெளியில் நூற்றுக்கு மேற்பட்ட பழைய நகரங்களும் சிற்றூர்களும் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றுள் சான்ஹ]-தரோ, மொஹஞ்சொ-தரோ, தகஞ்ச தரோ, அலிமுராத், பாண்டிவாஹி முதலிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அவ்விடங்களில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அங்குப் பல வகைப்பட்ட பழைய கட்டடங்கள், மட்பாண்டங்கள், நுண்ணிய துளையுடைய மிகச் சிறிய மணிகள், வழவழப்பான களிமண் பொம்மைகள், பலவகைக் கற்களால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், சித்திர எழுத்துக்களைக் கொண்ட பாத்திரச் சிதைவுகள். முத்திரைகள் முதலியன கிடைத்தன. இவை அனைத்தினும் மிக்க பயன்தரத்தக்க இடம் மொஹஞ்சொ-தரோ என்பது. அது 1922-இலிருந்து அகழ்ந்து ஆராயப்பட்டு வருகின்றது. இதுவரை பத்தில் ஒரு பங்கே அகழப்பட்டுள்ளது. ஆயினும் அதுபற்றி வந்துள்ள ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். மொஹஞ்சொ-தரோ இந்நகரம் அமைந்துள்ள இடத்தில் பல மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 1,300 கெஜம் நீளமும் 670 கெஜம் அகலமும் உடையது. மற்றொன்று 440 கெஜம் நீளமும் 330 கெஜம் அகலமும் கொண்டது. மற்றவை சிறிய அளவின. தோண்டப்பட்ட இடத்தில் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைந்துள்ளன. பெரிய தெருக்களின் அகலம் 33 அடி. பல கட்டடங்கள் மேல் மாடங்களைக் கொண்டவை. எல்லாத் தெருக்களிலும் கால்வாய்கள் நன்னிலையில் அமைந்துள்ளன. வீட்டுக்கால்வாய் தெருக்கால் வாயுடன் பெரிய சதுரக் குழியில் கலக்கிறது. எல்லாக் கால்வாய்களும் பெரிய செங்கற்களால் செவ்வையாக மூடப்பட்டுள்ளன. வீட்டு மேல் மாடத்திலிருந்து கழிவு நீர் மண் குழை வழியே கீழே இறங்கிக் கீழ்க் கால்வாயில் கலக்கிறது மண்குழை சுவர்க்குள் பதிக்கப்பட்டுள்ளது. அகன்ற தெருக்களின் அமைப்பையும் கழிநீர்ப் பாதைகள் அமைப்பையும் கண்டு ஆராய்ச்சியாளர், “இந் நகர மக்கள் சிறந்த சுகாதார முறையில் வாழ்ந்த நாகரிக மக்கள்,” என்று கூறி வியக்கின்றனர். இக்கால வளமனைகளை (பங்களாக்களை)ப் போன்ற பெரிய விடுதிகளும் சாதாரண மக்கள் வசிக்கத்தக்க வீடுகளும் அங்கு இருக்கின்றன; எல்லா வீடுகளும் செங்கற் கட்டடங்களே ஆகும். வீடுகளின் உட்புறம் சுடாத செங்கற்களும் வெளிப்புறம் சுட்ட செங்கற்களும் காண்கின்றன. சிறிய வீடாயினும் நான்கு அல்லது ஐந்து அறைகளைக் கொண்டதாக இருக்கிறது. சில வளமனைகளில் மேல் மாடத்திற்குச் செல்ல இரண்டு படிக்கட்டுகள் உள்ளன. மேல் மாடத்திலேயே நீராடும் அறை இருத்தல் வியக்கத் தக்கது. சமையல் அறைகள் தமக்குரிய இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ளன. அந் நகரத்தில் கிடைத்துள்ள பொருள்கள் கணக்கில. சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் நூற்றுக் கணக்கில் கிடைத்துள்ளன. அவற்றையும் எழுத்துக்களையும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் கீழ்வருமாறு கூறகின்றனர்: “இப் பொருள்களைப் பயன்படுத்திய மக்கள் ஏறத்தாழக் கி,மு, 3000 ஆண்டுகட்கு முற்பட்டவர் ஆவர். இவர்கள் நிலம் கடந்தும் கடல் கடந்தும் வாணிகம் செய்து பொருளீட்டியவர்; பல தெய்வ வழிபாடு கொண்டவர்; உயர்ந்த ஆடை அணிகளைப் பயன்படுத்தினவர்: கைத் தொழில்களிற் சிறந்தவர்: இடுதலும் சுடுதலும் கையாண்டவர்; உயரிய நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவர்; நாகரிகக் கலைகளாகிய இசை , ஓவியம், நடனம், மருத்துவம் முதலியவற்றை நன்கறிந்தவர்; பாரசீகம் முதல் எகிப்து வரை நாகரிக நாடுகளுடன் வாணிகம் நடத்தினர். இவர்கள் தம் காலத்து நாகரிக மக்களுள் உயர்ந்தவர் ஆவர். இவர்கள் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்க்கு முற்பட்ட மக்கள் என்பதில் ஐயமில்லை; ஆயின், `திராவிடரா? பிறரா?’ என்பது இன்றுள்ள ஆராய்ச்சி கொண்டு திட்டமாகக் கூறுவதற்கில்iல.” இந்திய வரலாற்றில் புதுமை பத்தாண்டுகட்கு முன்வரை இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் ‘ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் அநாகரிக மக்கள் வாழ்ந்திருந்தனர்’ என்ற வாக்கியம் சிறப்பிடம் பெற்றிருந்தது. ஆனால், இன்றைய நூல்களில் ‘சிந்து வெளி நாகரிகம்’ ஒரு பாடமாக இடம் பெற்றுப் பழைய எண்ணத்தை மாற்றிவிட்டது. இப்பாடத்திற்குப் பிறகே ‘ஆரியர்’ பற்றிய பாடம் புத்தகங்களில் எழுதப்படுகின்றது. இதனால், ‘புதை பொருள் ஆராய்ச்சி’ புரியும் திருவிளையாடலை நன்குணரலாம். அஃது ஒரு நாட்டு வரலாற்றில் மாறுதல்களை உண்டாக்கிக் கொண்டே செல்லவல்லது; நாட்டு மக்கட்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டவல்லது. பழைய கொள்கையில் மாற்றம் உலகத்துப் பழைய நாகரிகங்களில் எகிப்திய நாகரிகமே சிறந்தது என்பதும் காலத்தால் முற்பட்டது என்பதும் பழைய கொள்கையாக இருந்தது. மொஹெஞ்சொ-தரோவில் ஆராய்ச்சி தொடங்கியது முதல் அந்தக் கொள்கை மாறுதல் அடைந்துவிட்டது. அதற்குப் பதிலாக சிந்துவெளி நாகரிகமே பழமையும் சிறப்பும் உடையது என்னும் புதிய கொள்கை வலுத்து வருகின்றது. இத்தகைய வரலாற்று மாறுதல்களைச் செய்யும் வன்மை புதை பொருள் ஆராய்ச்சிக்கு உண்டு என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிகிறதன்றோ? இது நிற்க. சென்னை மாகாணத்தில் புதை பொருள் ஆராய்ச்சி பல்லாரி மாவட்டத்தில் பெருங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பலவகைச் சமாதிகள் இருக்கின்றன. அவற்றுள் ஏறத்தாழ இரண்டாயிரம் கண்டு பிடிக்கப்பட்டன. அனந்தப்பூர் மாவட்டத்தில் கற்கால மக்கள் புறக்கணித்து விட்ட கல் உளிகள், கல் எந்திரங்கள், கத்திகள் முதலியன அகப்பட்டன. கடப்பை மாவட்டத்தில் புதிய கற்காலப் பெண்கள் பயன்படுத்திய மரச்சீப்புகள், மதிப்புக்குரிய வேலைப்பாடு கொண்ட மட்பாண்டங்கள் முதலியன தோண்டி எடுக்கப்பட்டன. கிருஷ்ணை மாவட்டத்தில் வர்ண வேலைப்பாடு கொண்ட களிமண் காப்புகள், நெல் கொட்டப் பயன்பட்ட குதிர் முதலிய பொருள்கள் கிடைத்தன. செங்கற்பட்டு மாவட்டத்தில் (பல்லாவரத்தில்) சவக்குழிகள் பல ஆராயப்பட்டன. அவற்றில் மண்பெட்டிகள், தாழிகள், எலும்புகள் முதலியன கிடைத்தன. இவற்றைப் போன்றே திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்ச நல்லூரில் பல ஏக்கர் பரப்புள்ள இடங்களில் ஏராளமான தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் குடிசைகள் வடிவில் அமைந்த பிணப் பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டன. கோவன் புத்தூர் (கோயம்புத்தூர்) மாவட்டத்தில் (பல்லடம் தாலூகா) பல மண்மேடுகள் இருக்கின்றன. செட்டி பாளையம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள மண்மேடு பதினைந்து ஆண்டுகட்கு முன் சோதிக்கப்பட்டது. அதன் நீளம் 85 அடி; அகலம் 71 அடி; உயரம் 10 அடி. அதன் அருகில் மட்பாண்டச் சிதைவுகளும் பலவகை உலோகப் பொருள்களும் எலும்புகளும் கிடைக்கின்றன. அது கல்லால் ஆன பிணக்கோவிலை நடுவே கொண்டுள்ளது. அதன் உட்புறத்தில் பலவகைப் பழைய பொருள்கள் இருந்தன. மழமழப்பான கறுப்பு நிற மட்பாண்டங்கள், கோப்பைகள் மான் அல்லது ஆடு மேலே நிற்பது போலச் செய்யப்பட்ட மூடிகளைக் கொண்ட கோப்பைகள் முதலியன அகப்பட்டன. இத்தகைய வேலைப்பாடு கொண்ட மூடிகள் பாரசீகத்தில் கிடைத்தனவாம். புதுக்கோட்டை புதுக்கோட்டைச் சீமை புதைபொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாகும். அங்குப் புதிய கற்கால மக்கள் பிணம் புதைத்த முறைகளைக் காணலாம்; இறந்தவன் உடல் உட்கார்ந்த நிலையில் தாழியில் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பாதியளவு மணல் பரப்பப்பட்டுள்ளது. அதன்மீது அரிசி முதலிய தானிய வகைகளைக் கொண்ட தட்டொன்று வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வைத்துப் புதைக்கப்பட்ட தாழியின் பக்கங்களில் இறந்தவன் உபயோகித்த கற்கருவிகளும் பிறவும் வைக்கப்பட்டுள்ளன. தாழி மணல் பரப்பப்பட்டு மூடி இடப்பட்டுள்ளது. தாழியைப் புதைத்த குழி மணல் இடப்பட்டுப் பாறையால் மூடப்பட்டிருக்கிறது. அப்பாறை மீது மணல் கொட்டிப் பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டிருக்கிறது. இப்பாறையைச் சுற்றிச் சிறிது உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டுள. இவ்வாறு தாழிகள் புதைக்கப் பெற்றுள்ள இடங்களை மேலாகத் தட்டினால் ஓசை நன்றாகக் கேட்கும். தாழிகள் பல வடிவின. இரும்புக் காலத்துப் பிணப்பெட்டிகள் இரு பகுதிகள் கொண்டவை; ஒன்றில் பிணமும் மற்றதில் அவ்விறந்தவர் பயன்படுத்தின பொருள்களும் வைக்கப்பட்டன. இவ்விடங்களை முற்றும் அகழ்ந்து பொறுமையோடு ஆராய்ச்சி செய்யின், கற்கால இரும்புக் கால மக்களைப் பற்றிய பல செய்திகளை நன்கறியலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்ச நல்லூர் இவ்வாராய்ச்சிக்கு ஏற்ற இடமாகும். அரிக்கமேடு இங்ஙனம் புதை பொருள் ஆராய்ச்சிக்குரிய இடங்கள் மிகப் பலவாகச் சென்னை மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றுள் பிரெஞ்சுக்காரர்க்குரிய புதுச்சேரியும் அதனைச் சூழவுள்ள நிலப் பகுதியும் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்யத் தக்கவை ஆகும். புதுவையை அடுத்த அரியாங் (அரையன்?) குப்பம் என்னும் பகுதியில் செஞ்சியர்ற்றங்கரை ஓரமாக ஒரு மேடு இருக்கிறது. அஃது அரிக்கமேடு எனப் பெயர் பெற்றது. செஞ்சியாற்று வெள்ளத்தால் பல நூற்றாண்டுகளாக அம்மேடு கரைக்கப்பட்டு வந்துள்ளது. அம் மேட்டின் மீது மாந்தோப்பும் தென்னந்தோப்பும் இருக்கின்றன. 1939-இல் தென்னம் பிள்ளை வைக்கக் குழிகள் எடுத்தபொழுது, அவற்றிலிருந்து சில நாணயங்களும் மண்பாண்டங்களும் அரிய வேலைப்பாடு கொண்ட மணிகளும் அகப்பட்டன. இதனை அறிந்த புதுவை ஆராய்ச்சி நிபுணரான பேராசிரியர் துப்ரெயில் துரை அவர்கள் அங்குச் சென்று ஆராய்ச்சி நடத்தினார்; அங்குச் சங்கு மணிகள் முதலிய பொருள்களைக் கொண்ட தொழிற்சாலை இருந்தது என்றும், அத் தொழிற்சாலையைத் தன் அகத்தே பெற்ற நகரம் மேட்டினுள் இருக்கிறதென்றும், அத் தொன்னகரின் காலம் ஏறத்தாழ 2,000 ஆண்டுகட்கு முற்பட்டதாகலாம் என்றும், அதனைத் தென்னிந்திய தக்ஷசீலம் என்று கூறலாம் என்றும் ஹிந்துப் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வரைந்தார். அக்கட்டுரையைக் கண்டு ஆராய்ச்சியாளர் பலர் அரிக்க மேட்டைக் காணச் சென்றனர். அங்குக் கிடைத்த மணிகள், மண்பாண்டச் சிதைவுகள் முதலியவற்றைக் கண்டு மீண்டனர். இறுதியாக அண்மையில் பிரிட்டிஷ்-பிரெஞ்சு அரசாங்கங்கள் இணைந்து முயன்றதன் பயனாக, அரிக்கமேட்டின் சில பகுதிகள் தோண்டப்பட்டன. நம்மவர்க்கு வேண்டுகோள் இத்தகைய ஆராய்ச்சி மிக்க பயன் உடையது. ஆயின், நம் நாட்டுச் செல்வர் இத்துறைகளில் ஊக்கம் காட்டுவதில்லை. மேனாட்டுச் செல்வர் இத்துறைகட்குப் பெரும்பொருள் உதவுகின்றனர். அவருள் புதுமை களைக் காண்பதில் ஒரு சாரார் ஈடுபடின், பழைய செய்திகளை அறியப் பிறிதொரு சாரார் முன் வருகின்றனர்; உலகின் பல பகுதி கட்குஞ் சென்று ஆராய்ச்சி செய்கின்றனர். அவ்வப்போது ஆராய்ந்த வற்றைச் செய்தித் தாள்கள் வாயிலாக உலகத்தார்க்கு அறிவிக் கின்றனர்; மலைகள் மீது ஏறி ஆராய்கின்றனர். கடலுக்கடியிலும் சென்று ஆராய்ச்சி புரிகின்றனர். வானத்திற் பறந்தும் உண்மைகள் பல காண்கின்றனர். சுருங்கக் கூறின், உலக வரலாற்றையும் பிறவற்றையும் அறிய அரும்பாடு படுகின்றனர். உழைப்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அம்மேனாட்டாரைப் போல நம் நாட்டுச் செல்வரும் அறிஞரும் இத்தகைய ஆராய்ச்சித் துறைகளில் ஆர்வம் காட்டிப் பொருள் உதவி செய்து உழைப்பின், இயல்பாகவே பழம் பெருமை கொண்ட நம் நாடு பலவகையான அற்புத விவரங்களை உலகத்தார்க்கு அறிவிக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? 9. புதைந்த நகரங்கள் முன்னுரை பஞ்சாப் மாகாணத்தில் லாகூர், முல்டான் என்னும் இடங்கட்கு இடையே தோண்டி எடுக்கப்பட்ட நகரம் ‘ஹரப்பா’ என்பது. சிந்து மாகாணத்தில்-லர்க்காணா மாவட்டத்தில் புதைந்து கிடந்த நகரம், ‘மொஹெஞ்சொ-தரோ’ என்பது. இவ்விரு நகரங்களும் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் செழிப்புற்ற இடமாக இருந்தது. அப்பகுதியில் அக்காலத்தில் மழை மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்பது. இரு நகரங்களிலும் காணப்படும் பெரிய கழிநீர்ப் பாதையால் விளக்கமாகிறது. சிந்து நதியுடன் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை ‘மாஹா மிஹ்ரான்’ என்னும் யாறும் அப்பகுதியில் ஓடிக் கொண்டிருந்தது. இவ்விரண்டுடன் சிந்துவின் துணையாறுகளும் சேர்ந்து பாய்ந்த நீர் வளப்பம் இவ்விரு நகரங்களையும் உயர் நாகரிகத்தில் உய்த்ததெனல் மிகையாகாது. வெள்ளப் பிரதேசமாதலின் அப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் வன்மையுடையவாகவும், மேற்கூரை உயர்ந்தவையாகவும் அமைக்கப்பட்டிருந்தன. மொஹெஞ்சொ-தரோ நகரம் உள்ள இடம் (70 அடி முதல் 20 அடி வரை) மண்ணால் மூடப்பட்டிருந்தது. ஏழு அடுக்குகள் தோண்டி எடுக்கப்பட்டன. அடியில் இருந்த முதல் மூன்று அடுக்குகள் பழையன; இடைப்பட்ட மூன்று இடைக்காலத்தன; மேலுள்ள 7-ஆம் அடுக்குப் பிற்பட்ட காலத்தது. இவற்றிற்கும் கீழே சுமார் 40 அடி ஆழத்தில் சில அடுக்குகள் காணப்படுகின்றன. அவை பின்னும் பழையனவாக இருக்கக்கூடும் என்பர் ஆராய்ச்சியாளர். முதலில் எடுக்கப்பட்ட ஏழு அடுக்குகளும் உயரிய நாகரிகத்தை வெளிப்படுத்து கின்றன என்பது அறியத்தக்கது. கட்டடங்கள் கட்டடங்கள் பலவகைப்பட்டவை. இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகள் முதல் பெரிய மாளிகை ஈறாகக் காணப் படுகின்றன. மாளிகையின் முன்புற வெளி 85 அடி; 97 அடி பின்புறம்; பெரியகூடம், செங்கல் பதித்த மேன்மாடம், மேலிருந்து கழிநீர் இறங்கச் சிறிய வழிகள். கழிநீரைத் தேக்கிக் கொள்ள ஆங்காங்கே பெரிய சால்கள், சுற்றிலும் அறைகளைக் கொண்ட 32 சதுர அடியுள்ள வீட்டு முற்றம் முதலியன ஒவ்வொரு மாளிகையிலும் காணலாம். பல பெரிய கட்டடங்களும் காணப்படுகின்றன. அவை, கோயில்களாக இருந்திருக்கலாம் என்பர் ஆராய்ச்சியாளர். இவற்றினும்கவனிக்கத்தக்கது ‘பெரிய நீராடு குட்டை’ ஆகும். நாற்புறமும் படிக்கட்டுகள், அறைகள்; 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழமுள்ள நீராடும் இடம்; நாற்புறமும் நீர் நிலைக்கு-நீர் உதவும் கிணறுகள்; இக்குட்டைக்கு ‘மேல் மூடி’ மரத்தால் ஆயது. இந்நீராடு குட்டையைக் கட்டியவர் சிறந்த விற்பன்னராக இருத்தல் வேண்டும் எனக் கூறி வியக்கின்றனர் ஆராய்ச்சியாளர். இக்குட்டையைச் சுற்றியுள்ள சுவர் 4 அடி கனமுள்ளது. ஆதைச் சுற்றிலும் வேறொரு சுவரும் உண்டு. அஃது அங்ஙனம் உயர்ந்த முறையில் கட்டப்பட்டதாற்றான் 5000 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நன்னிலையில் இருக்கின்றது. பயிரும் உணவும் இப்பெரிய நகரங்களில் வாழ்ந்த மக்கள் கோதுமை, பார்லி இவற்றைப் பயிரிட்டவர் என்பது தெரிகிறது; இக்கால இயந்திரம் (எந்திரம்) இன்றி, வேறொரு கற்கருவியால் கோதுமையையும் பார்லியையும் அரைத்து வந்தனர்; மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, பறவைகளின் இறைச்சி, ஆமை இறைச்சி, மீன் இவற்றை உண்டு வந்தனர் என்பதற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. விலங்குகள் எருது, எருமை, ஆடு, யானை, ஒட்டகம், பன்றி, கோழி, நாய், குதிரை, இவற்றை வளர்த்து வந்தனர். (இந்நகரங்களில் கீரி, கறுப்பு எலி, மான், பைசன், காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல் முதலியவற்றின் எலும்புகளும் அகப்பட்டன.) கனிப்பொருள்கள் பொன், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் (இரும்பு இல்லை) இவற்றை அப்பண்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பொன், வெள்ளி கலந்ததாக இருத்தலின் அப்பொன் கோலார், அனந்தபூர் இவ்விடங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். நகைகட்கே பொன் பயன்பட்டது. செம்பு, ஈயத்தோடு கலந்திருத்தலின் அது இராஜபுதனம், பலுசிஸ்தானம் அல்லது பாரசீகம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து; அது வளையல், கத்தி, ஈட்டி, உடை வாள் முதலியன செய்யப் பயன்பட்டது. வெள்ளீயம் (தகரம்) செம்போடு கலந்து பித்தளையாகிப் பலவற்றிற்குப் பயன்படுவது. அடித்தட்டில் கிடைத்ததால், தகரம் கிமு. 3000-க்கு முன்னரே இந்தியாவில் பயன்பட்டதென்பது ஒருதலை. இத்தகரம் அல்லது பித்தளை, இப்புதைந்த நகரங்களில் காணப்படலால், ‘இந்தியாவில் பித்தளைக் காலம் இல்லை’ எனக் கூறிவந்தது பொய்த்துவிட்டது. கற்கள் பலவகைப்பட்ட கற்கள் கட்டிடங்கட்குப் பயன்பட்டன. சுக்கூர் சுண்ணாம்புக் கற்கள் கழிநீர்ப் பாதையை மூடப் பயன்பட்டன. ‘கீர்தர்’ மலைக்கற்கள் பாத்திரங்கள், சிமெண்ட், சிலைகள் இவற்றுக்குப் பயன்பட்டன. வேறு கற்கள் நிலை முதலியவற்றுக்குப் பயன்பட்டன. ஒருவகை மஞ்சட் கல் லிங்கம் முதலியவற்றுக்குப் பயன்பட்டது. பல உயர்தரக் கற்கள் அணிகட்கும் பிறவற்றுக்கும் பயன்பட்டன. அழகிய பச்சை ‘அமெஸான் கல்’ என்பது. நீலகிரியில் உள்ள ‘தொட்ட பெட்டா’விலிருந்து கொண்டுவரப்பட்டது. (இந்தியாவில் இக்கல் உள்ள இடம் இஃது ஒன்றே.) எலும்பு, தந்தம், சங்கு முதலியவையும் பயன்பட்டன. பஞ்சு மொஹெஞ்சொ-தரோவில் உள்ள வீடுகளில் எல்லாம் நெய்தற்றொழில் நடந்துவந்தது என்பதற்கு உரிய அடையாளப் பொருள்கள் காணப்படுகின்றன. கம்பளியும் பஞ்சுமே நெய்யப்பட்டு வந்தவை. அங்கு அகப்பட்ட பஞ்சு, இப்போதைய இந்தியப் பஞ்சு போன்றே இருக்கிறது. இப்பழைய பஞ்சே பாபிலோனியர்க்குச் ‘சிந்து’ ஆகவும், கிரேக்கருக்கு ‘சிண்டன்’ (Sindon) ஆகவும் தெரிந்திருந்தது. இப் பஞ்சு பருத்திச் செடியினதே அன்றி, இலவம் பஞ்சு அன்று. மயிர் முடிப்பு அக்கால உடைகளுள் நீண்ட ‘போர்வை’யும் அடங்கியிருந்தது. இவ்வுண்மை, அங்கு அகப்பட்டுள்ள சிலைகள் மீதுள்ள போர்வை வேலைப்பாட்டால் நன்கறியலாம். அக்கால மக்கள் சிறிய தாடியும் மீசையும் வைத்திருந்தனர்; சிலர் மீசையின்றித் தாடி மட்டுமே வைத்திருந்தனர். இப்பழக்கம் சுமேரியர் பழக்கமாகும். தலைமயிர் பின்னால் முடியிடப்பட்டது. பெண்கள், மயிரைச் சுற்றிலும் சுருட்டி இடப்பக்கம் கொண்டைபோல் போட்டிருந்தனர். அங்கு அகப்பட்ட மூன்று பித்தளைப் பெண் உருவங்கள் இவ்வாறே தலைமுடி உடையவாயுள. அணிகள் கழுத்தணி, கங்கணம், மோதிரம், காப்பு, ஒட்டியாணம், காதணி முதலியன அக்கால மக்கள் பயன்படுத்தியவை. இவற்றைப் பணக்காரர்-பொன், வெள்ளி, தந்தம், உயர் கற்கள் இவற்றால் செய்து வந்தனர்; ஏழைகள் சங்கு, பித்தளை, செம்பு. ஒரு வகைக்கல் இவற்றால் செய்துவந்தனர். கருவிகள் போர்க்கருவிகள் கல்லாலும் பித்தளை அல்லது செம்பாலும் செய்யப்பட்டவை கோடரி, இரம்பம், சிரைக்கும் கத்தி முதலியன செம்பாலும் பித்தளையாலும் செய்யப்பட்டiவ. கல்லால் ஆய தட்டுகள், பாத்திரங்கள் முதலியன, மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த மக்கள் காலம் ‘மாக்கல் காலம்’ என்று நினைக்கவே இடந்தருகின்றன. போர்க் கருவிகள் இருந்த நிலையை நோக்குகையில், அக்கால மக்கள் எதிர்ப்பை நோக்கி வாழ்ந்தவராகத் தெரியவில்லை. நிறைகள் சிறியவை கற்பலகையால் ஆனவை; முச் சதுர உருவில் அமைந்தவை. பெரியவை சர்க்கரைப் பொட்டணம் போன்ற உருவில் அமைந்தவை. இவை ‘ஏலம்’ ‘மெசபொட்டேமியா’ முதலிய இடங்களில் அகப்பட்ட நிறைகளை விட, நிறையில் சரியானவை; பின்ன அளவையும் குறிக்கத் தக்கவை; 1, 2, 4, 8, 16, 32, 64, 160, 200, 320, 640, 1,600 வரை பின்ன அளவை உடையவை. பாத்திரங்கள் வீட்டுக்கு உரிய பாத்திரங்களுள் பெரும்பாலள மட்பாண்டங்களே. கோப்பைகள் மிகுதியாகப் பயன்பட்டன; நீர்ச்சாடிகளும் அங்ஙனமே. மட்பாண்டங்கள் சக்கரத்தின் உதவிகொண்டு செய்யப்பட்டவை; கருமை, செம்மை நிறங்கள் கொண்டவை; ‘இப்பாண்டங்களே உலகில் மிகப் பழமையானவை’ என்பர் ஆராய்ச்சியாளர். பொம்மைகள் களிமண் பொம்மைகள் பெருவாரியாகக் காணப்பட்டன; எலிகள் ஊதுகுழல், (பறவைகள் உருவில்) மனித உருவங்கள், பறவைகள், வண்டிகள் முதலியன. இவ்வண்டிகள் ‘ஊர்’ (ருச) நகரத்தில் (கி.மு.3200) அகப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட தேரைப்போல இருத்தல் கவனிக்கத் தக்கது. எழுத்துக் குறிகள் சிந்துப் பிரதேச மக்கள் எழுதக் கற்றவர். அவர்தம் எழுத்துக்கள் சித்திரக்குறிகள். அக்குறிகள் பழைய எலமைட், பழைய சுமேரிய, எகிப்திய எழுத்துக்களைப் போன்றவையே. அவற்றில் 396 குறிகள் அகப்பட்டுள்ளன. அவை பாத்திரங்களின் மீதும், காப்புகளின் மீதும், முத்திரைகளின் மீதும், பிறவற்றின் மீதும், காணப்படுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்தும் காணப் படுகின்றன. அவை வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளன. ‘அவை சித்திர சங்கேதக் குறிகளே தவிர எழுத்துக்கள் அல்ல’ என்பர் ஆராய்ச்சியாளர் சிலர். சிலைகள் இச்சிந்துப் பிரதேச மக்கள் சிற்பத்திறமை ஓரளவு வாய்ந்தவர்கள்; இதைத் திமில் கொண்ட எருது, எருமை, பைசன் முதலியவை தீட்டப்பெற்ற முத்திரைகளைக்கொண்டும், வேட்டை நாய், செம்மறி யாடு, அணில், குரங்கு இவற்றின் பொம்மைகளைக் கொண்டும் அறியலாம். கற்சிலைகள்மூன்றில், ஒன்று யோகியின் உருவத்தில் அமைந்துள்ளது; யோகியின் பார்வை மூக்கின் நுனிமீது படிந்துள்ளது. இரண்டாவது, தலைமட்டுமே உள்ள சிலை. அது எழும்பிய கன்ன எலும்புகள், பெரிய மெல்லிய உதடு கொண்ட வாய் அகன்ற விகாரமான காதுகள் முதலியவற்றை உடையது. மூன்றாவது சிலை, போர்வை போர்த்து அமைந்துள்ள உருவம். இவற்றோடு நடனமாது ஒருத்தியின் சிலையும் காணப்படுகிறது. அச்சிலையின் கால்கள் மிக நீண்டவையாய் இசைக்கு ஏற்பத் தாளம் போடும் நிலையில் அமைந்துள்ளன. கைகளும் மிக்க நீளமானவை. ஹரப்பாவில் காணப்பட்ட சிலைகள் இரண்டு; அவற்றுள் ஒன்று சிவந்த கல்லில் செய்யப்பட்டது; தடித்த மனிதன் உருவைக் காட்டுவது. மற்றொன்று பழுப்பு நிறம் அமைந்த கற்பலகையால் ஆனது; இடக்கால் வலக்கால்மீது நின்றும் நடனம் ஆடுவதுபோல அந்த (ஆண்) உருவம் அமைந்துள்ளது. இது ‘ சிவ-நடராசரது பழைய உருவம்’ என்பர் ஆராய்ச்சியாளர்; இச்சிலைகளில் அமைந்த வேலைப்பாடு கிரேக்கருடையது என்பர். நெறி (மதம்) பெருவாரியான பெண் உருவங்கள் பலுசிஸ்தானத்திலும் சிந்துப் பிரதேசத்திலும் கிடைத்துள்ளன. இவை போன்றவை பல மேற்கு ஆசிய நாடுகளில் (ஏலம், மெசபொட்டேமியா, சிரியா, பாலஸ்தீனம், டிரான்ஸ்கஸ்பியா, சிறிய ஆசியா, சைப்ரஸ், கிரீட், பால்கன் நாடுகள். எகிப்து கிடைத்துள்ளன. இவை தாயின் (இயற்கைத் தாயின்) உருவச் சிலைகள் என்பதை ஆராய்ச்சியாளர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹரப்பாவில் கிடைத்துள்ள முத்திரை ஒன்றில் தாயின் வயிற்றிலிருந்து ஒரு செடி தோன்றுகிறது; ஒருவன் கத்தியை வைத்துக்கொண்டு நிற்கின்றான். பெண் ஒருத்தி தூக்கிய கைகளோடு (பலியிடப் படுபவள் போலும்!) நின்று கொண்டு இருக்கிறாள். சிவ வணக்கம் வேறொரு முத்திரையில் முக்கண்களையும் மூன்று முகங்களையும் உடைய சிவன் உருவம் யோகத்தில் இருப்பது போல் காணப்படுகிறது. அவ்வுருவினைச் சுற்றிலும் யானை, புலி, காண்டாமிருகம் முதலிய விலங்குகள் முத்திரையில் செதுக்கப் பட்டுள்ளன. ஆசனத்தின் கீழ் இரு கொம்புள்ள மான் நிற்கிறது. இவற்றை நோக்குகையில், சிவன்-பசுபதி (விலங்குகளின் தலைவன்) என்பது குறிக்கவே இம் முத்திரை பயன்படுகிறது’, என்பர் ஆராய்ச்சியாளர். சிவனது தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவை சைவர் தம் திரிசூலத்தைக் குறிப்பனவாக இருக்கலாம் என்பர். மொஹஞ்சொ-தரோவில் உள்ள வேறொரு முத்திரையில் ‘யோகி’ உருவத்தின்முன் ‘நாகன்’ ஒருவன் பிரார்த்தனை புரிவது காணப்படுகிறது. வேறொன்றில் அதே யோகி (ஒரே தலையுடன்) தனியாக இருப்பதாக உள்ளது. ‘சிந்துப் பிரதேசக் குறியீடுகளில் காணப்படும் நான்கு கைகiளயுடைய சித்திரங்கள்’ பிற்கால இந்துக் கடவுளராய (நாற்கைகளையுடைய) பிரமன், விஷ்ணு, சிவனைக் குறிப்பன வாகலாம் என்பர் சு.ஞ. சண்டா என்னும் பேராசிரியர். ஆவரே, “நிற்கின்ற நிலையில் ஆறு உருவங்கள் சில முத்திரைகளில் காணப்படுகின்றன; அவை சமண யோகிகளைப் போல உள்ளன; (வட இந்தியாவில் உள்ள) மதுரைக் கண்காட்சித் சாலையில் உள்ள கி.பி. 2-ஆம் நூற்றாண்டினதாகவுள்ள ரிஷப தேவர் சிலையில் உள்ளவாறே மேற்கூறியவை காணப் படுகின்றன; நின்று யோகத்தில் இருப்பது சமண யோகிகட்கே சிறப்பானது; ‘ரிஷபம், எருது. இது சமணரது அடையாளக் குறி. சில முத்திரை களில், யோகிக்கு முன்பு தரையில் எருது இருப்பதாக உள்ளது வியக்கத் தக்கது; எனவே, இவ்வுருவங்கள் ரிஷப தேவரைக் குறிப்பனவாக இருக்கக் கூடுமோ’ என ஆராய்ச்சியாளர் சிலர் ஐயறுகின்றனர். அங்ஙனம் இருத்தல் கூடுமாயின், சைவத்துடன் சமணமும் மிக்க பழமை வாய்ந்ததாக இருத்தல் வேண்டும் என்பது அவர்தம் கருத்தாகும். வேறு சிலர் எருதும் தேவரும் சைவத்தையே குறிப்பன என்பர். பீட-இலிங்க வழிபாடு “முற்கூறிய சிவ-சக்தி வழிபாட்டைத் தவிர, பீட-இலிங்க வணக்கமும் சிந்து வெளியில் இருந்ததாகத் தெரிகிறது. சிந்து வெளியிலும் பலுசிஸ்தானத்திலும் இவை கிடைத்துள்ளன. இவை அவற்றைக் குறிப்பனவே என்பதை அவற்றைக் கண்ணுறு வோர் நன்கறியக்கூடும். ஹரப்பாவிலும் மொஹெஞ்சொ -தரோவிலும் கிடைத்துள்ளவற்றுள் சிறிய அளவின, திருஷ்டி தோஷாதிகளும் பேய் பிசாசுகளின் சேட்டைகளும் தாக்கா திருக்கும் பொருட்டு அணியப்பட்டு வந்தன. பெரியவை வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன.”* மர வணக்கம் பண்டை மக்கள் மரங்களையும் அவற்றில் உறைவனவாகக் கருதப்பட்ட தேவதைகளையும் வழிபட்டு வந்தனர் என்பது ஹரப்பாவில் அகப்பட்ட சில முத்திரைகளிலிருந்து தெரிகிறது. (இப்பழக்கம் தமிழகத்தில் இன்று வழக்குடையதாம்.) மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த ஒரு முத்திரையில் அரசமரக் கிளைகள் இரண்டுக்கு இடையில் பெண் தெய்வம் ஒன்று காணப்படுகிறது. அதனை நீண்ட கூந்தலையுடைய ஏழு பெண்கள் வழிபடுவதாகத் தெரிகிறது. வேறொரு பெண் உருவம் பாதி குனிந்து வழுபடுவதாக உள்ளது. அவ்வுருவத்தின் பக்கத்தில் மனித முகத்துடன் பாதி உருவம் எருதாகவும் பாதி ஆடாகவும் உள்ள விலங்கொன்று காணப்படுகிறது. அது மரத் தேவதையின் வாகனமோ, யாதோ அறியக்கூடவில்லை. ஹரப்பாவில் கிடைத்துள்ள வேறு இரண்டொன்றிலும் இத்தகைய பெண் தெய்வமும் நூதன விலங்கும் காணப்படுகின்றன. விலங்கு வணக்கம் இது சிந்துப் பிரதேச மக்களிடம் இருந்ததென்பது வெளிப்படை. மனித முகம் பாதி, எருது உருவம் பாதி; ஆடு அல்லது யானை யுருவம்; பாதி மனித உருவம், பாதி வேறு உருவம்; இந் நூதன விலங்கு கொம்பு முளைத்த புலியோடு போரிடல் மாதிரி முத்திரைகளில் காண்கிறது. தெய்வங்கட்கும் நாகங்கட்கும் கொம்புகள் இருப்பதாகக் காணப்படுகின்றன. கொம்புள்ள விலங்குகள் சில வழிபாடு பெறுவது சில முத்திரைகளால் தெரிகிறது. எருது, யானை, எருமை, காண்டா மிருகம், குட்டைக் கொம்புள்ள எருது, புலி- இவை வழிபாடு பெற்றன என்பதும் சில முத்திரைகளால் வெளியாகிறது. இங்ஙனமே பல பறவைகள், வேறு விலங்குகள் முதலியனவும் காணப்படுகின்றன. இன்றும் விலங்குகளுள் சிலவும் பறவைகளில் சிலவும் இந்துக்களால் தூயவையாகக் கருதப்படு கின்றமை இங்கு நினைத்தற்குரியது; மயில், கருடன், எருது, ஆடு, பசு, யானை, எருமை, அன்னம், சிங்கம், சேவல், பன்றி முதலியன வழிபாட்டுக்கு உரியனவாக உள்ளன அல்லவா?) சுருங்கக் கூறின், சிந்துவெளி மக்களது மதம் சக்தி (தாய்) வணக்கத்தையுடையது; சிவ வழிபாட்டை உடையது; யோகத்தில் பற்றுடையது; விலங்கு வணக்கத்தையுடையது; மர வணக்கத்தையும், மரம் வாழ் தெய்வ வணக்கத்தையும் உடையது: கற்சிலைகளாகிய பீட-இலிங்க வணக்கத்தை உடையது; தூப-தீப வழிபாடு உடையது; திருஷ்டி தோஷாதிகளிலும் பேய் பிசாசுகள் தாக்குதலிலும் நம்பிக்கை உடையது. இவற்றுள் பெரும்பாலான இந்தியாவுக்கே சிறப்பாக உடையவை. இடுதலும் சுடுதலும் இம் மதத்தைப் பின்பற்றி வந்த பண்டை மக்கள், இறந்தார் உடலை எரித்து வந்தனர்; எரித்துச் சாம்பலையும் எலும்புகளையும் பெரிய மட்பாத்திரங்களில் (தாழிகளில்) இட்டு, அந்த ஆவி உண்பதற்கென்று சில பொருள்களையும் இட்டுவந்தனர்; சில தாழிகளில் சாம்பலும் உணவுப் பொருள்களுமே காணப்படுகின்றன. எலும்பே அகப்படவில்லை போலும்! அல்லது எலும்பே அகப்படவில்லை போலும்! இத்தகைய தாழிகள் பல பலுசிஸ்தானத்தில் கிடைத்துள்ளன. பிணங்களைப் புதைத்தல் சிறு வரவிற்று. மொஹெஞ்சொ-தரோவில் புதைக்கப்பட்ட 21 எலும்புக் கூடுகள் அகப்பட்டனவாம். இவை அகப்பட்ட இடத்தைச் சோதித்துப் பார்த்த ஆராய்ச்சியாளர், ‘இவை அந்நகரம் அழிவடைந்த போது இறந்தவருடைய எலும்புகள்’ எனக் கூறுகின்றனர். 10. கலிங்கப் போர் முதற் குலோத்துங்கன் ஏறத்தாழக் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் தென்னிந்தியாவை ஒரு குடைக்கீழ் வைத் தாண்ட பெருமை சோழர்களுக்கே உரியது. அச்சோழருள் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் என்பவர் பெரு வீரர்கள். முதற் குலோத்துங்கன் தந்தையான இராசராச நரேந்திரன் முதலாம் இராசேந்திர சோழனுடைய மகளை மணந்துகொண்டவன். அந்நரேந்திரன் தந்தையான விமலாதித்தன் முதலாம் இராசராசன் மகளான குந்தவையை மணந்து கொண்டவன். எனவே, சாளுக்கிய தந்தைக்கும் சோழத் தாய்க்கும் பிறந்தவன் குலோத்துங்கள். விமலாதித்தன் முதலிய சாளுக்கியர் கோதாவிரி, கிருஷ்ணையாறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதிiய ஆண்டு வந்தனர். இவர் கீழைச் சாளுக்கியர் எனப்படுவர். முதலாம் இராசேந்திரனுடைய மக்கள் மூவரும் மாண்ட பிறகு, சோழப் பெருநாட்டை ஆள்வதற்கு அரச வழியில் பிள்ளை இல்லாததால், சோழப் பெண் வழியில் வந்த முதற் குலோத்துங்கள் வேங்கி நாட்டுக்கும் சோழப் பெருநாட்டுக்கும் மன்னனானான். சோழப் பெருநாடு அவன் காலத்தில் கலிங்கம் வரை பரவி இருந்தது. அவன் ஆட்சிக்கு உட்பட்ட அரசர் பலராவர். அவர்கள் ஆண்டுதோறும் அவனுக்குக் கப்பம் செலுத்தி வந்தனர். சோழப் பெருநாட்டிற்குக் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. பெருநாட்டின் வடபகுதியில் காஞ்சீபுரம் அரசன் தங்கும் அரண்மனை உடையதாக இருந்தது. பேரரசன் தன் நாடு சுற்றி வருங்கால், காஞ்சீபுரத்து அரண்மனையில் தங்குவது வழக்கம். அவ்வாறு அவன் தங்கும்பொழுது தன் நாட்டின் வடபகுதியில் இருந்த சிற்றரசர்கள் அது வரையிலும் காலம் தாழ்த்தாது திறைப்பணம் கட்டி வந்தனரா என்பதை ஆராய்வது வழக்கம். சோழன் படையெடுப்பு முதற் குலோத்துங்க சோழன் ஒருமுறை காஞ்சியில் இருந்தபொழுது அரசாங்கக் கணக்கரை நோக்கி, “இன்னும் திறை கொடாதார் உளரோ?” என வினவினான். கணக்கர் முன் போந்து அரசரைப் பணிந்து, “ அரசே, வட கலிங்கத்து அரசனான சோட கங்கன் என்பவன் இரண்டு முறை திறை கொண்டு வந்திலன்,” என்றனர். அவ்வார்த்தைகள் செவிப்படுதலும், மன்னன் விழிகள் நெருப்புப் பொறிகளைக் கக்கின; உடல் வியர்த்தது. அவன் கடைப் புருவங்கள் நெற்றி முற்றச் சென்றன. அவன் கோப நகை நகைத்து. “அவ்வாறாயின், வடகலிங்கம் சென்று அவனைக் கொணர்மின்,” என்று உறுமினான். உடனே சேனைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், “அடியேனுக்கு விடை தருக: அவனை இன்னே கொணர்வேன்”, என்றான். அரசனும் நன்றென விடையளித்தான். அக்கணமே தொண்டைமான் நெற்றிப்பட்டம் அணிந்த யானையின்மீது ஏறினான். சோழன்படை அவனைப் பின் தொடர்ந்தது. இரை தேடிச் செல்லும் பெரும் புலியைப் போலத் தொண்டைமான் வீராவேசத்தோடு கலிங்க நாட்டை நோக்கிச் சென்றான். சோழன் படை சென்ற வேகத்தால் நாற்றிசைகளும் அதிர்ந்தன. மலைகள் நிலைதடுமாறின. அப்படை பல ஆறுகளைக் கடந்து கலிங்க நாட்டினுள் புகுந்தது. படையெடுப்பின் பயன் அப்படையில் இருந்த வீரர் கலிங்க நாட்டைச் சேர்ந்த கிராமங்களிற் புகுந்து, கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். அதனை அறிந்த பத்தினிப் பெண்டிர் பலர், தத்தம் இல்லங்களின் பின்புறக் கதவைத் திறந்துகொண்டு, குழந்தைகளோடு ஓட்டம் பிடித்தனர். வீரர் சிலர், வீடுகளைக் கொளுத்திவிட்டனர். சிலர், வைக்கோல் போர்களைக் கொளுத்தினர். சிலர் ஆடு மாடுகளை மடக்கித் தம் வசமாக்கினர். சிலர் தம்மை எதிர்த்தாரை நமனுலகுக்கு அனுப்பினர். குடிகள் சிலர் பகைவருக்குப் பயந்து ஓடினர். பகைவர் அவர்களை மடக்கி, ஆடையாபரணங்களைக் கவர்ந்து கொண்டனர். வீரர்கள், “சோழ மன்னருக்கு வெற்றி! சோழ மன்னர் பெருமானுக்கு வெற்றி!” என்று சொல்லிக் கொண்டு கூத்தாடினர். சிலர், “பிடி, அடி” என்றும், வேறு சிலர், “பிடி, குத்து, உதை” என்றும், சிலர், “பிடி, வெட்டு”என்றும் வானம் அதிரக் கூறினர். சோழ நாட்டு வீரர் தம்மால் கூடிய வரையில் தம் கோபத்தையும் வீரத்தையும் கலிங்கநாட்டின் மீதும் குடிகள் மீதும் திறம்படக் காட்டினர். அவ்வீரர்களின் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பல நசுங்கின. முதியோர் பலர் உயிர் துறந்தனர். சிறுவர் சிறுமியர் அல்லலுற்றனர். உறுப்பிழந்தார் பலர்; கரமிழந்தார் சிலர்; சிரமிழந்தார் பலர்; செவியிழந்தார் சிலர். இவ்வாறு கலிங்கநாடு பெருந்துன்பம் உற்றது. குடிகள் கலக்கம் கலிங்கநாட்டுத் தலைநகருள் சோணாட்டுச் சேனை புகுந்தது. நகரமாந்தர், “மதில்கள் இடிகின்றனவே! வீடுகள் எரிகின்றனவே! Òபுகைத் திரள் பரவுகின்றதே! அந்தோ! அரண் எங்கே! நமக்குப் புகலிடம் எங்கே! இங்கு இவர்களை எதிர்க்கத் தக்க தலைவன் யாவன்! அந்தோ! படைகள் மேலும் மேலும் வருகின்றனவே! நாம் மடிவது திண்ணம்! ஐயோ! நம் அரசன் சோடகங்கன் குலோத்துங்க மன்னவனுக்குச் செலுத்த வேண்டிய திறைப் பொருளைச் செலுத்தாமல் தாமதித்தால் அன்றோ இவ்வவதி நேரிட்டது! அவன் இப்படைகளுக்கு முன் நின்று எவ்வாறு போர் செய்ய மாடுவன்! ஆபயன் விட்ட படைகள் வந்து விட்டனவே! இனி என் செய்வோம்! நம் விதி இருந்தவாறு என்னே! எதற்கும் அரசனிடம் சென்று முறையிடுவோம்!” எனக் கூறிப் புலம்பியவராய், உரை குழற, உடல் பதற, `நான் முன்; நான் முன்’ என்று ஒருவர்க் கொருவர் முன்னே ஓடிச் சோடகங்கனது கொலு மண்டபத்தை அடைந்தனர். குடிகள் முறையீடு அடைந்த குடிகள் அரசனைப் பணிந்த, “அரசரே, அந்தோ! வந்துவிட்டதே குலோத்துங்கன் படை! தும் இறைவரே, நீர் கட்டவேண்டிய திறைப்பொருள்களைக் கட்டியிருந்தால், இந்நாட்டிற்கு இக்கதி நேரிட்டிராதே! ஐயோ ! ஊர்கள் எரிகின்றன1 பகைவர், நாட்டைக் கொள்ளையிடுகின்றனர்! பெண்டிர் கதறி அழுது ஓடுகின்றனர்! இத்துன்பம் எங்களால் பொறுக்க முடியாது! நீர் தாம் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!” என்று முறையிட்டனர். குடிகளின் முறையீட்டைக் கேட்ட சோடகங்கனது மனம் கொதித்தது; கண்கள் சிவந்தன. மனக் கொதிப்படைந்த அவன், “குடிகளே, சோழன் குலோத்துங்கனும் வந்தனனோ? அவனது தானை மட்டும் வந்துள்ளதோ?” என்று உசாவினான். குடிகள், “இறைவரே, சோழ தேவன் வரவில்லை. அவன் மந்திரியும் தானைத் தலைவனும் வண்டை வேந்தனுமான கருணாகரத் தொண்டைமான் நால்வகைச் சேனைகளோடும் வந்துள்ளான். அவன் வந்த போதே இக்கதிக்கு ஆளாயினோம்! அந்தச் சோழனே நேரில் வந்திருந்தால் நாங்கள் இத்துணை நேரம் நமனுலகில் வசிப்போம்” என்றார்கள். சோடகங்கன் வீரவுரை குடிகள் கூறியவற்றைக் கேட்ட காவலன், வெகுளியினால் நெடு மூச்சு விட்டு, வியந்து நோக்கி, “குடிகளே, நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. திக்குகளில் உள்ள யானைகளை அடக்கி அவற்றின் மதத்தைத் தன் மலர் மாலையில் மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டுகளுக்கு இரையாகத் தருபவன் அக்குலோத்துங்கன். வெற்றி மிக்க அவ்வேந்தன் நேரே வந்திருப்பின் சிறிது அச்சப்பட வேண்டுவதே. அங்ஙனம் அவன் வாராமல், தன் சேனையை அனுப்பியுள்ளான். ஆதலால், வெற்றி நமக்கே உரியது. அவன் அனுப்பியுள்ள தண்டினுக்கும், அத்தண்டினை நடத்தி வந்துள்ள கருணாகரத் தொண்டை மானுக்கும் அஞ்சுபவன் யான் அல்லேன். அச்சோழனுக்குக் கெட்ட காலம் வந்துற்றதாலேயே அவன் அறிவு மயங்கி, என்னை வெல்ல இச்சேனையை அனுப்பியுள்ளான் என்பது தெரிகிறது. காட்டரணும், மலையரணும், கடல் அரணும் உடையது இக்கலிங்கர் பூமி என்பதை அத்தண்டு அறிந்திலது போலும்! நன்று நன்று! வரட்டும்; ஒரு கை பார்க்கிறேன்! அவ்வநபாயனுக்கு யான் எதற்காகத் திறை கட்டவேண்டும்? அவன் வன்மையைப் போர்முனையில் காட்டி என்னை வெல்லட்டும், பார்ப்போம்! குடிகளே, நீங்கள் செல்லலாம். யான் இதோ போருக்குச் செல்கிறேன்,” என்று வீரம் பேசினான். எங்கராயன் சோடகங்கன் கூறியவற்றை அமைச்சர் கேட்டனர். சோழனது வலிமையும், அவனது தானைத் தலைவனது தறுகண்மையும், சேனையின் பெருமையும் அவர்கள் நன்கு அறிந்தவர்கள்; சோடகங்கன் எளிமையை அவர்கள் அறியாதவர்களும் அல்லர்; எனினும், அவனுக்கு அறிவுறுத்த அஞ்சினர் என்றாலும், அவ்வமைச்சருள் பரந்த சிந்தையும், விரிந்த நோக்கமும் உண்மையே பேசும் இயல்புமுடைய எங்கராயன் என்னும் அமைச்சன் ஒருவன் இருந்தான். அவன் தனக்கு உண்மை என்று தோன்றுவனவற்றைச் சிறிதும் அச்சம் இல்லாது எடுத்துக்கூறும் இயல்புடையவன். கேட்பவன் அரசனாயினும் சரி: ஆண்டியாயினும் சரி; நியாயத்தையும் உண்மையையும் ஒளிக்காமற் கூறுவான். ஆவன் எவர்க்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவன். சோடகங்கன் சோழனது சேனையைக் கேவலமாகப் பேசியது அவன் மனத்தைப் புண்படுத்தியது. அதன் பெருமையை உணராது அங்ஙனம் பிதற்றியது பிழை என்று அவன் எண்ணினான்;அச்சேனையின் பெருமையை எடுத்துக் கூறி, அதனிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும்படி அவனுக்கு அறிவுறுத்த விரும்பினான். அமைச்சன் அறிவுரை எங்கராயன் என்ற அமைச்சன் தன் இருக்கையை விட்டு எழுந்து, “அரசர் கோபிப்பார் என்பதை உணர்ந்தும், உண்மையான அமைச்சன் தன் அறிவுக்கு எட்டியதைக் கூறியே தீருவன். ஆதலால், வேந்தரே, யான் கூறுவதை அமைதியோடு கேளும்: யான் பேசியது பிழை என்று எண்ணி, என்னை நீர் தண்டித்தாலும் சரி; என் வார்த்தையை எடுத்துக் கொள்ளினும் சரியே. ஏனக்குத் தெரிந்தவற்றை யான் கூறுகிறேன். நீர் சோழனது சேனையைக் கேவலமாகக் கருதிப் பற்பலவாறு பேசினீர். அவ்வாறு நீர் பேசியது தவறு. சோழன் வாராது தன் தானையை விடுத்தான் என்றீர். ஏனைய அரசர்களை வெல்ல அவன் இத்தானையைத்தானே அனுப்பினான்! இதன் பெருமையைக் கூறுவேன், கேளும்: “சோழன் இச்சேனையை அனுப்பிப் பாண்டியர் ஐவரையும் படாத பாடு படுத்தினன்; பாண்டி நாட்டைக் கைப்பற்றியது இத்தானையே ஆகும். கடலைக் கடந்து விழிஞம் அழித்ததும், காந்தளூர்ச் சாலையைக் கைக்கொண்டதும் இத்தண்டு அல்லவா? முன்னொரு முறை இப்படையுடன் போரிட எழுந்து நமது படை பட்ட பாட்டினை மறந்து விட்டீரோ? தண்ட நாயகரால் காக்கப்பட்டு வந்த நவிலை என்னும் ஊரில். ஆயிரம் யானைகளைக் கைப்பற்றியதும் இச்சேனையே. சோழனுடைய இத்தண்டினால் தத்தம் மண்டலங்களை இழந்து தவிக்கின்ற அரசர் எத்துணையர் என்பது எண்ணி அறிய முடியுமோ? இத்தகைய சிறப்பும் வீரமும் வாய்ந்த சோழன் சேனைமுன், நமது வாள் வலியும் தோள் வலியும் படை வலியும் எம்மாத்திரம்? இதனைத் தீர யோசித்து எக்காரியமும் செய்யத் துணியும். நான் கூறியவை உமக்குச் சலிப்பாகத் தோன்றி, என்னை நீர் இப்போது சீறிச் சினந்தீராகிலும், நாளை இச்சேனையின் எதிரில் நிற்கும் போதாகிலும் யான் கூறியவற்றை நினைப்பீர். யான் எனக்குத் தெரிந்தன சொன்னேன். இனி உமது விருப்பம்போல நடந்து கொள்க,” என்று கூறித் தன் இருக்கையில் அமர்ந்தான். வேந்தன் சீற்றவுரை அமைச்சன் கூறியவற்றைக் கேட்டுச் சினந்த அரசன், “அடா! அறிவற்ற அமைச்சனே! என் வார்த்தைக்கு எதிர்வார்த்தை உரைப்பதென்றால் இமயவரும் என்னெதிரில் வரத்துணியார்! நெடு நாட்களாகப் போர்பெறாமல் என் தோள்கள் தினவு கொண்டிருப்பதை நீ அறியாய். சிங்கத்தை அதன் குகையின் கண்ணே சென்று யானை எதிர்க்குமோ? அவ்வாறு எதிர்க்கச் சென்றால், அதன் அறிவீனத்தை என்னென்பது? அத்தன்மை போலச் சோழனது சேனை என் நாட்டிலேயே எதிர்க்க வந்தால், அதற்கு அழிவு காலம் குறுகிவிட்டது என்பது புலப்படவில்லையா? நீ இத்துணை நாட்களாக என்னுடன் பழகியிருந்தும், என்னுடைய தோள் வலியும் வாள் வலியும் யாதும் அறியாதவன்போலப் பேசிவிட்டனை! இங்ஙனம் பேசியது நின் போதைமையாலன்றோ? நமது நாற்படையும் சோழனால் விடப்பட்டு வந்துள்ள படையின் எதிர்சென்று போர் தொடங்குக,” என்றான். கலிங்கப் போர் அரசன் சொல்லி வாய் மூடுமுன் கலிங்கப் படை கலித்தெழுந்தது. காடுகள் பொடிபட்டன. முரசங்கள் ஆர்த்தன. அருவிகள் அனல்பட்டன. எள்ளிடுதற்கும் இடைவெளியின்றி, ஒருவர் உடலில் ஒருவர் உடல் புக நெருங்கிச் சென்றனர்; கலிங்கப் படை சோழன் படைமுன் நின்றது. இருதிறத்துச் சேனைகளும் ஒன்றெயொன்று எதிர்த்தன. ‘படை எடும். எடும்’ என்ற ஓசையும், ‘படை விடும், விடும்!’ என்ற ஒலியும், நாண்களைத் தெறிக்கின்ற ஓசை எண்டிசைகளும் வெடித்தாற் போன்றிருந்தது. உலகெலாம் செவிடு படுமாறு கரிகளும் பரிகளும் பிளிறுதலும் கனைத்தலும் செய்தன. இருதிறப் படைகளும் எதிரெதிராக முட்டியமை. கடலோடு கடல் எதிர்த்தாற் போன்றிருந்தது. பரியோடு பரி மலைந்தது, அலையோடு அலை பொருதாற் போலவும், கரியோடு கரி மலைந்தது, மலையோடு மலை எதிர்த்தாற் போலவும் இருந்தன. தேர்கள் ஒன்றையொன்று மோதுதல், ஒரு மேகம் மற்றொரு மேகத்தை முட்டியது போல இருந்தது. படைவீரர் படை வீரரோடு எதிர்த்துப் போர் புரிந்தனர். அவர்கள் தங்கள் ஈட்டிகளை எல்லாப் பக்கங்களிலும் வீசி மலைந்தார்கள். அவர்கள் கையிற் கொண்ட சிலைகள் கோடையிடிபோல இருந்தன. ஒவ்வொரு வில்லினின்றும் அம்பு மழை பெய்தது. பெய்யவே, குறுதியாறு பெருகியது. அவ்வாறு சிரங்களையும், கரங்களையும், கரிகளையும், பரிகளையும், அவற்றைத் தின்ன வந்த நரிகளையும் இழுத்துச் சென்றது. அரசர்களுடைய கொற்றக் குடைகள் நுரைபோல ஆற்றில் மிதந்தன. வெட்டுண்ட யானைகளின் உடற் கூறுகள் அவ்வாற்றின் இருபுறமும் அடுக்கியிருந்த காட்சி, ஆற்றின் இருகரைகள் போன்றிருந்தது. பகைவர் வில்லில் கணையைத் தொடுப்பதைக் கண்டதும், கையில் அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பில் தைத்துள்ள பாணங்களைப் பற்றி எடுத்துச் சிலையில் தொடுத்துவிட்டனர். கரிகள் வீரரை எதிர்த்தன. கால்கள் அறுபட்ட வீரர்கள் அக்கால்களைக் கரிகள்மீது வீசி எறிந்தனர். குதிரைகள் வீரரை மார்பிலேயே உதைத்துக் கொன்றன. வீரருட் சிலர் அங்ஙனம் தம்மை உதைக்க வந்த பரியின் தலையைத் துணித்து, அதனை ஈட்டியில் நாட்டிக் கூத்தாடினர். இங்ஙனம் இருதிறப் படைகளும் இளைக்காமல் அமர் செய்யும்போது, விரைவில் போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய கருணாகரத் தொண்டைமான் தன் யானையை முன்னே செலுத்தினான். அவன் படையும் முன்னே பாய்ந்து சென்றது. அவ்வளவில் பகைவீரர் வெட்டுண்டனர்; யானைகள் துணிக்கப்ட்டன: குதிரைகள் பிளக்கப்பட்டன: தேர்கள் முறிக்கப்பட்டன: கலிங்கர் சேனை நிலை தளர்ந்தது; வீரர் முதுகுகாட்டி ஓடினர். “இப்படை தெய்வத்தன்மை வாய்ந்ததோ! இது மாயையோ! அன்றி மறலியோ! ஊழியின் இறுதிக் காலமோ! ஏன்று அலறியவராய்ப் பகைவர் நாற்றிசைகளிலும் ஓட ஆரம்பித்தனர். கலிங்கர் தோல்வி கருணாகரத் தொண்டைமான் போர்க்களத்தில் ஆவேசங் கொண்டவனைப் போன்று பகைவர் சேனையைச் சின்னபின்னம் ஆக்கினான். போர் விரைவில் முற்றுப்பெற்றது. கலிங்கர் தோற்று ஓடினர். பல கரிகளும் பரிகளும் தேர்களும் நவநிதிக் குவியல்களும் சோழன் படைவீரர் கைப்பட்டன. இவற்றையெல்லாம் கைக்கொண்ட பின், தொண்மைமான் கலிங்க நாட்டரசனைத் தேடிப் பிடித்து வர வீரரை ஏவினன். கலிங்கத்தரசன் தன் சேனை அடியோடு சிதறியோடியதைக் கண்டதும் அச்சம் அடைந்து, போர்க் களத்தினின்றும் ஓடி, காட்டில் மறைந்தான். ஆனால், அபயன் வீரர் அவனைப் பிடியாது விடுவரோ? அவன் அடிச்சுவடும் காணப்பெறாது, வரையும் வனமும் துருவித் தேடி, முடிவில் ஒரு மலைக் குகையில் இருக்கக் கண்டனர்; உடனே அவனைக் கைப்பிடியாகப் பிடித்து மீண்டனர். அவ்வாறு அவர்கள் மீண்டும் வருகையில் எதிர்ப்பட்ட கலிங்க வீரர் சிலர், தம் உடல் முழுவதும் சாம்பல் பூசி, “வீரர்களே, நாங்கள் கலிங்கர் அல்லேம்; பரதேசிகள்; எங்களைத் துன்புறுத்த வேண்டா.” என்று கூறித் தப்பியோடினர். சிலர் வில்லின் நாணை மடித்து முப்புரி நூலாக்கித் தரித்துக் கொண்டு “ஐயன்மீர், நாங்கள் இந்நாட்டினர்கள் அல்லேம்; கங்கையாற்றிற் படிந்து மீள்கின்றேம்,” என்று சொல்லிப் பிழைத்தனர். வேறு சிலர், இரத்தத்தில் தோய்ந்த கொடிச் சீலைகளை அரையில் உடுத்திக்கொண்டு, “ஐயன்மீர், நாங்கள் புத்த மதத்தினர்கள்; கலிங்கர்கள் அல்லேம்; எங்களைக் கொல்வதால் நீங்கள் ஒரு நன்மையும் பெறமாட்டீர்கள்,” என்று கூறித் தப்பினர். ஞில வீரர்கள் யானைகளின் கழுத்திற் கட்டியிருந்த மணிகளைக் கழற்றிக் கையிற் பிடித்துக்கொண்டு, சோழ வீரர்களை நோக்கி, “வீரர்களே, நாங்கள் தெலுங்குப் பாணர்கள்; அரசனைப் பாடிச் சன்மானம் பெற வந்துள்ளோம்; என்று சொல்லிப் பிழைத்துப் போனார்கள். இவ்வாறு பொய் மொழிகள் பல புகன்று உய்ந்தவர்களையும், கலிங்க நாட்டில் இருந்த முதியவர், குழவிகள், பெண்கள் ஆகிய இவர்களையும் தவிர்த்து, வேறு மக்கள் அந்நாட்டில் இல்லா தொழிந்தார்கள். கலிங்கத்துப் பரணி இவ்வாறு பலவகை அரண் காவலைப் பெற்ற வட கலிங்க நாட்டை அதம் செய்து, சோடகங்கனையும் சிறைப் பிடித்து, வெற்றிமாலை புனைந்து தொண்டைமான் சோழநாட்டை நோக்கித் திரும்பினான்: சின்னாட்களில் குலோத்துங்கனது அரண்மனையை அடைந்தான்; தன் வெற்றியை விளங்க உரைத்தான். குலோத்துங்கன் தொண்டைமானைப் புகழ்ந்த, தன் படை வீரர்களுக்குப் பெருவிருந்து நடத்திப் பரவிதப் பரிசுகள் தந்தான். இந்தக் கலிங்க வெற்றியைச் சிறப்பித்தே, அப்பொழுது குலோத்துங்கனது அவைப் புலவராய் இருந்த ஐயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துப் பரணி என்னும் ஒரு நூலை இயற்றினார்; அதை அவ்வரசனது அவையிலேயே அரங்கேற்றினார். அந்நூல் வருணனை மிக்கது, சிறந்த நடையில் அமைந்தது. நீங்கள் அதனைப் படித்து இன்புறுக. *இப்பண்டை நகரம் இருந்த இடத்தை யான் 12-3-1943 இல் சென்று பார்வையிட்டேன்.