கட்டுரை மாலை வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : கட்டுரை மாலை ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+74 = 88 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 85/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முகவுரை கட்டுரை மாலை என்னும் பெயர் கொண்டுள்ள இந்நூல் எட்டுக் கட்டுரைகளைத் தன் அகத்தே கொண்டது. அக்கட்டுரைகள் இக்காலப் பள்ளிகளின் நிலைமை, பெண்கல்வி, வரலாறு, புதை பொருள் ஆராய்ச்சி, பழந்தமிழ் கலைகள், தென்னாட்டு-வடநாட்டுப் புலவர் பற்றிய செய்திகள், அவர் தம் அரிய கருத்துகள் முதலிய பல துறைப்பட்டனவாகும். அவை-நம் நாட்டுப் பண்டை நிலையினையும் இன்றுள்ள நிலையையும் இனி இருக்கவேண்டும் நிலையினையும் இனிதின் உணர்த்தி, மொழிப்பற்று, கல்வியில் கருத்து, பெண்கள் முன்னேற்றத்தில் பேரூக்கம், நாட்டு வரலாற்றில் விருப்பம், ஆராய்ச்சியில் ஆர்வம் முதலிய நற்பண்புகளைப் படிப்பவர்பால் தோற்றுவிக்கத்தக்கன. ஆதலின், இந்நூல் மாணவர் உலகிற்கு அறிவு விருந்தாகும் என்பது எனது கருத்து. சேக்கிழார் அகம், சென்னை. மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. இளமைப் பருவமும் வாழ்க்கையின் நிலைமையும் 15 2. சாந்தி நிகேதனம் 20 3. பெண் கல்வி 27 4. பெண்களுக்கு உழைக்கும் பெரியார் 34 5. இராஜேந்திர சோழன் 43 6. பண்டைத் தமிழ் கலைகள் 54 7. புதைபொருள் ஆராய்ச்சி 63 8. சேக்கிழார் 75 1. இளமைப் பருவமும் வாழ்க்கையின் நிலைமையும் இளமையின் சிறப்பு இளமைப் பருவமே வாழ்க்கையில் சீரிய பருவமாகும். எழில் வாய்ந்த பருவமும் அஃதே. அதுவே களங்கமற்ற பருவம். அதுதான் வாழ்க்கை என்னும் நகரின் நடுவண் அமைந்துள்ள மணமிகு பூஞ்சோலை. அப்பருவத்தினை உடையவரே நாட்டின் செல்வம்; நாட்டின் உயிர்நாடி; எதிர்கால நாகரிகத்தை நிலை பெறச் செய்பவர். அவர்களே எதிர்கால உலக மக்கள். நாளை இந்நாட்டுப் பொறுப்பு அவர் தலைமீதே அமர்த்தப்படும். நாட்டின் உயர்வுக்கோ இழிவுக்கோ நாளை அவரே பொறுப்பாளிகள் ஆவர். இப்பேருண்மையை இளைஞர் அனைவரும் உணர்ந்து நேரிய முறையில் நடத்தல் அவசியமாகும். இளமை உணர்வு இந்நினைவு இளைஞரது உள்ளத்தே கருக்கொள்ளுமாயின். நம் நாடு விரைவிற் புனிதமாகும் என்பதில் ஐயமில்லை. என்னை? இளைஞர் தம் நாட்டை உயர்த்த முற்படுபவரே அன்றி, இழித்தலை ஒருபோதும் விரும்பார்; நாட்டை உயர்த்தத் தம்மை முதற்கண் உயர்த்துதல் வேண்டும் ஆதலின் என்க. தம்மை உயர்த்தல் என்பது யாது? தம்மை அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவராகச் செய்து கோடலேயாம். தம்மை அறிவில் உயர்ந்தவராகச் செய்து கோடல் எங்ஙனம்? ஒவ்வோர் இளைஞனும் முதற்கண் தன்னிலைமை இன்னதென்பதையும், தான் தன் நாட்டின் மக்களில் ஒருவன் என்பதையும், தன் நாட்டு நன்மை தீமைகளில் தனக்கும் பங்கு உண்டு என்பதையும் ஐயமற உணர்ந்தவனாதல் வேண்டும். பத்திரிகை வாசித்தல் இவ்வுணர்ச்சி உள்ளத்தே வேரூன்றி வளர்ச்சி பெறுமாயின், அவன், தன் நாட்டில் நடைபெற்றுவரும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கவனிக்கப் பத்திரிகைகளில் ஊக்கஞ் செலுத்துவான்; நாடோறும் பல பத்திரிகைகளைப் படித்து அறிவு வளர்ச்சி பெறுவான். நம் தமிழகப் பத்திரிகைகளைப் படிப்பவன் கவனிக்கத் தகுவதொன்றுண்டு. அஃதாவது, ஒவ்வொரு பத்திரிகையும் ஏதேனும் ஒரு கட்சிபற்றியதே ஆகும். ஆகவே, இளைஞன் எல்லாக் கட்சிப் பத்திரிகைகளையும் படித்துச் செய்திகளை அறிந்து, அறிவிக்கும் செய்திகளை நடுவுநிலையிலிருந்து ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும். 劉d« xU Koî¡F tUjš x›nth® ïisPdJ.* கடமையாகும். ஒவ்வொரு கட்சியும் ஓர் உண்மைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதை இளைஞன் உணர்தல் வேண்டும்; எக்கட்சியினிடத்தும் வெறுப்படைதல் தவறு; கட்சியைச் சேர்ந்தவர் சிலர் செய்யுந் தவற்றைக் கொண்டே கட்சிமீது வெறுப்புறுதல் இழிந்தோர் செயலாகும். கட்சிகளைப் பற்றி முடிவு கூறலில் இளைஞன் பொறுமை காட்டல் இன்றியமையாதது. இந்நிலைமையிலிருந்து கொண்டு, இளைஞன் பல பத்திரிகைகளைப் படித்து படித்து உண்மைச் செய்திகளை உணர்ந்து அவற்றுக்கேற்பத் தன் வாழ்க்கையைத் திருத்துதல் வேண்டும். கற்பதில் ஆராய்ச்சி தன் கல்விப் பயிற்சியிலும் இளைஞன் ஊக்கங் கொண்டவனாக இருத்தல் வேண்டும். எப்பாடத்தையும் தன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளிதல் வேண்டும். ஆசிரியர் சரி; இல்லை என்றால் இல்லை என்னும் முடிவுக்கு வரும் இளைஞன் தன் அறிவைத் தானே கொலை செய்பவன் ஆவான். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்தும் வல்லார் வாய்க் கேட்டும் கொள்ளல் வேண்டும். இளைஞன் ஆய்வு இன்றி எதனையும் கோடல் தவறு. இத்துறையில் இளைஞன் மனவுறுதி உடையனாதல் வேண்டும். என்ன? இளைஞனது அறிவு தெளிந்த பருவம் அஃதாதலாலும் ஆராய்ச்சிக்குரிய பருவமும் அஃதே ஆதலாலும் என்க. இளைஞன் எந்த நூலை எடுத்து வாசிப்பினும், எச்சொற்பொழிவினைக் கேட்பினும், கண்ணால் எதனைக் காணிணும், அவை அனைத்திலும் தன் அறிவைச் செலுத்தி ஆராய்ந்து உண்மை காண முயலல் வேண்டும். இயற்கையில் ஆராய்ச்சி இளைஞன் தான் நாடோறும் காணும் சிறு பொருளையும்; தன் அறிவையும் ஆராய்ச்சியையும் கொண்டு ஆராய்ந்து, அதன் குகுணங்களை உற்றுணர்தல் வேண்டும். இங்ஙனம்; ஒவ்வொன்றிலும் கவனஞ் செலுத்தும் பழக்கம் பெற்ற இளைஞனே உலகில் இன்ப நிலை எய்துபவன். இஃது அறிவினால் எய்தப் பெறும் ஒப்புயர்வற்ற உயர்ச்சி. இந்நிலைமை நம் இளைஞர்பால் வலுப்பெறுமாயின், ஆ! நம் இளைஞர் உலகம் இன்ப உலகம் ஆதலின் ஐயமென்னை? மனவுறுதி வேண்டும் இனி இளைஞன் தன்னை ஆற்றல் உள்ளவனாகச் செய்துகொள்ளல் எங்ஙனம் இயலும் என்பதைக் காண்போம்: அறிவுகொண்டும் வல்லார்வாய்க் கேட்டுணர்ந்தும் தனக்குத் தகுதி எனப்பட்டவற்றைக் கடைப்பிடிப்பதில் உறுதியுள்ளமையே ஆற்றல் என்பது. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒன்று அறிவுகொண்டு ஆயும் ஒருவனுக்குத் தவறாகக் காணப்படலாம். உலகம் முழுவதும் அதனைக் கடைப்பிடிப்பதால், அது தனக்குத் தவறு என்பது தெரிந்த பிறகும் அதனைக் கடைப்பிடிக்கும் இளைஞன், ஆற்றல் அற்றவன் எனப்படுவனே அன்றி, ஆற்றல் பெற்றவன் எனப்படான். சுருங்கக் கூறின், தன் மனச்சாக்ஷிக்கு மாறுபடும் ஒன்றைச் செய்பவன் வலியற்றவன் ஆவன். அங்ஙனம் செய்வதால் அவன், இருளே குடிகொண்ட மக்கள் பலரால் தேவனாகப் போற்றப்படலாம், ஆயினும் என்? அவனது மனச்சாக்ஷி அவனைச் சுட்டெரிக்குமே! அஃது அல்லும் எல்லும் அவனை வதைத்துக்கொண்டிருக்கும். அதனால் அவன், புறத்தில் பெரியவனாகக் காணப்படினும், அகத்துள் ஈனமானவனாக அன்றே கருதப்படுவான்? இந்நிலையே நகரம் என்பது. மனச்சான்று மனச்சாக்ஷிப்படி நடப்பவனே ஆற்றல் உடையவன்; பிறர்க்கஞ்சாத வீரன்; பீடு நடையுடையவன்; கள்ளங் கபடற்ற புன்முறுவலோடு தலை நிமிர்ந்து நடப்பவன். உலகப் பெரியார்களாக விளங்கிவரும் புத்தமஹான், இயேசுநாதர், நபிநாயகம் முதலியோர் தத்தம் அகச்சான்றற்றான் உயர்நிலை உற்றனர்; ஆற்றல் பெற்றனர்; இஃது என் மனச்சாக்ஷிக்கு இடந்தரவில்லை என்று காந்தியடிகள் பல சந்தர்ப்பங்களில் செய்தித் தாள்களில் வெளியிடவில்லையா? அறிவு உயர்நிலை எய்தப் பெறின், அஃது ஆன்ம உணர்ச்சியாகிய மனச்சாக்ஷி என்னும் மாண்புறு பேரோளியின் அணைப்பிலேயே இருக்கும். அதனற்றான் அறிவு பண்பட்ட அறிஞர் மனச்சாக்ஷியின் மந்திராலோசனைப் படியே நடப்பர்; தமது மனச்சாக்ஷிக்கு மாறுபட்ட ஒன்றை இப்பரந்த உலகமே பாதத்தண்டைப் பரிசாக வைப்பதாயினும் ஒருபோதும் செய்யார்; பேசார். இது முப்போதும் உண்மை. இத்தகைய உயர்நிலை இளைஞர்பால் கருக்கொள்ளல் வேண்டும். விடாமுயற்சி இளைஞன் தனது செயலில் விடாமுயற்சியைக் காணல் வேண்டும். அஃதொன்றே எத்தகைய கடின வேலையையும் எளிதில் வெற்றிபெறச் செய்விப்பது. விடாமுயற்சியால் வெற்றி பெற்ற உலகப் பெரியார்களின் அற்புத வரலாறுகளை இளைஞன் இன்பந்தோன்ற வாசித்து உணர்தல் வேண்டும்; அவர்களது வரலாற்றுப் பாதையில் அடிவைத்துப் பெயர்தல் வேண்டும். இளைஞன் - நெப்போலியன், நெல்சன், வாஷிங்டன், சிவாஜி, சேரன் - செங்குட்டுவன், இராஜேந்திர சோழன் போன்ற வீரர்களையும்; ஆப்ரஹாம் லிங்கன், இராம்ஸே மாக்டொனால்ட், ஆலிவர் கிராம் வெல், கெமால் பாஷா, கரிபால்டி போன்ற அரசியல் வீரர்களையும்; தாம ஆல்வா எடிசன், ஹென்றி போர்ட், வில்லியம் மாரி, ஸர். ஜகதீசந்திரபோ, ஸர். சி. வி இராமன், டாக்டர் பி. சி. ரே போன்ற உழைப்பு வீரர்களையும் காட்டாகக் கொண்டு, விடா முயற்சி என்னும் தற்காப்புக் கவசம் அணிந்து, துன்பம் நிறைந்த வாழ்க்கை என்னும் காட்டினுள் துணிச்சலோடு நுழைதல் வேண்டும். இங்ஙனம் நுழையும் வாலிபன் வாழ்க்கையில் வெற்றிபெறுவான்; எத்தகைய துன்பத்தையும் எதிர்த்து நிற்கும் வன்மை எய்துவான்; துன்பமே தன்னைத் தொடராதபடியும் செய்வான்; நோய்களைப் பற்றி நினையான்; வறுமையைப் பற்றி வருந்தான்; மனம்போல வாழ்வு ஆதலால், அவன் தன் மனத்தைக் களங்கம் சேர்ந்துக் கெடுத்துவிடாதபடி எப்போதும் பாதுகாத்தவண்ணமாக இருப்பான்; ஒருவன் ஆவதும் அழிவதும் தன்னாற்றான் என்னும் உண்மையை உணர்ந்து நடப்பவனாவான். ஆதலின், அவன் தன் மனத்தை எப்பொழுதும் தெளிந்த நிலையில் ஊக்கம், உழைப்பு விடாமுயற்சி, உயரிய நோக்கம் என்னும் இவற்றைத் தோற்றுவிக்கும் ஊற்று நிலையில் இருக்கச் செய்வான். ஆ! இங்ஙனம் மனத்தைப் பழக்கும் மாண்புடைமாணவன் இன்பநிலை எய்தப் பெற்றவனே ஆவன். அவன் வாழ்வே இன்ப வாழ்வு. அவனே உலகில் அழியாப் புகழுக்குப் பாத்திரமாவன். இன்ப நிலை இவ்வாறு ஒவ்வோர் இளைஞனும் தன் அறிவையும் ஆற்றலையும் உயர்த்திக்கொண்டே செல்லச்செல்ல, இளைஞர் சமூகம் உயர்நிலை எய்தும் அன்றோ? இளைஞர் சமூகமே நாட்டுக்கு உயிர்நாடி. ஆதலின், இன்ப நிலையில் உள்ள இளைஞர் சமூகத்தைப் பெற்ற நாடும் இன்ப நிலைமை எய்துமன்றோ? இவ்வின்பநிலை இந்நாட்டுக்கு என்று வாய்க்கும்? அன்றோ நாம் உய்ந்தவர் ஆவோம். 2. சாந்தி நிகேதனம் சாந்தி நிகேதனம் என்பது இரவிந்திரநாத தாகூரது நூதன கல்விச்சாலை ஆகும். அது வங்காள மாகாணத்தில் ஒரு கிராமத்தை அடுத்த வெளியில் அமைந்துள்ளது. அவ்வெளியைச் சுற்றி வயல்கள் நிறைந்துள்ளன. இத்தகைய அமைதி கெழுமிய இடத்தில் அமைந்துள்ள கல்விச்சாலை எதற்காக ஏற்படுத்தப் பட்டது? அதனை ஏற்படுத்தியவர் நோக்கம் என்ன? mj‹ ntiy Kiw v‹d? என்னும் வினாக்கட்கு விடை காண்டல் அவசியமன்றோ? இயற்கைக் கல்வி தாகூர் ஒழுக்கத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்த ஒரு குடும்பத்திற் பிறந்தவர். அவர் தந்தையாரான தேவேந்திரநாத தாகூர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்; விரிந்த சிந்தையும் பரந்த நோக்கமும் உடையவர். தாகூருடைய சகோதர சகோதரிகள் ஆடல், பாடல், ஓவியந் தீட்டல், இயற்கை அழகில் ஈடுபடல் முதலியவற்றில் சிறந்து இருந்தனர். இத்தகைய நல்லோர் இடையில் பிறந்து வளர்ந்த தாகூர் இளமையிலேயே இயற்கைப் பேரழகில் ஈடுபட்டார்; பச்சிளம் பயிர்களும் புல்வெளிகளும் ஆற்றின் அமைதி கெழுமிய ஓசையும் நீலவிதானம் போன்ற வானப் பொலிவும் முத்துக்களன்ன விண்மீன்களின் விளக்கமும் சுடு கதிர்தண் கதிர் தோற்றப் பொலிவும் அன்று மலர்ந்து, வண்டுகளாம் விருந்தினரைத் தம் புற இதழ்களாம் மெல்லிய கரங்களால் வலிய அழைத்து விருந்தூட்டத் தேன்பிலிற்றும் மலர்களும் அவர் கண்களையும் உள்ளத்தையும் ஒருங்கே கவர்ந்தன. இயற்கை உலகமே பள்ளிக்கூடம் அழகே ஓர் உருக்கொண்டு விளங்கும் பறவையாகிய மயிலின் ஆடலும், அணில் சுறுசுறுப்புடன் மரக்கிளைகளில் ஏறி இறங்கி விளையாடலும், குயிலின் குரலும், காகத்தின் கருமையும், எறும்பின் இடைவிடா உழைப்பும், பிள்ளைகளின் இன்பகரமான ஆடல் பாடல்களும் அவர் இதயத்தை ஈர்த்தன. அவர் அத்தகைய இயற்கை உலகிலேயே தாமும் இருக்க விழைந்தார்; இயற்கைத் தாயையே தம் அறிவுக்கு விளக்கந்தரும் ஆசிரியராகக் கொண்டார்; ஆற்றங்கரைகளில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார்; ஐம்புலன்களையும் செவிப்புலனாக்கி அரிய பாடல்களின் பண்களில் ஈடுபட்டார்; நடனத்தில் நாட்டஞ் செலுத்தினார்; இறைவன் படைத்த இன்ப உலகத்தையே பள்ளிக் கூடமாகக் கொண்டார்; இறைவன் படைப்புப் பொருள்களையே தாம் கற்கும் நூற்களாகக் கொண்டார். சுருங்க கூறின், தாகூர் இயற்கை அன்னையின் இன்ப மாணவராக இருந்தார் எனல் பொருந்தும். பள்ளிக்கூட வாழ்க்கை இங்ஙனம் இயற்கை மாணவராக இலங்கிய தாகூர். பெற்றோர் வற்புறுத்தலுக்கு இணங்கிப் பள்ளிக்கூடம் சென்றார்; இயற்கை உலகத்தை அறவே மறந்து செயற்கை உலகில் வாழும் மாணவரையும் அவர்களைத் தயாரிக்கும் செயற்கை ஆசிரியர்களையும் அங்குக் கண்டார்; புத்தகப் பூச்சிகளாக விளங்கும் அம்மாணவர்களோடு தாம் விரும்பிய கல்வியைப் பெற இயலாதென்பதை அறிந்தார்; உடனே பள்ளிக் கூடத்தை விட்டு நீங்கினார்; தம் மனம் சென்ற வழிக்கற்கலானார்; வங்க மொழியில் வல்லுநர் ஆனார்; இடையிடையே ஆங்கிலமும் பயின்றார். அவர் இயற்கை உலகத்திலேயே பெரும் பொழுதைக் கழித்தார். பள்ளிக் கல்வியின் குறைபாடுகள் மாணவர் தத்தமக்கு விருப்பமான வேலைகளில் ஈடுபட வசதி இருத்தல் வேண்டும். அவர்கள் விரும்பும் விதம் ஆடிப்பாடி விளையாட வசதிகள் அளித்தல் வேண்டும். அவர்கட்கு இளம்பருவத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இருத்தல் ஆகாது. கல்வி என்பது தாயின் பாலைப்போலக் குழந்தையின் உடலையும் உயிரையும் வளர்க்கத் தக்கதாக அமைதல் வேண்டும். ஏனெனில், அக்குழந்தையின் பிற்கால வாழ்விற்குக் கல்வியே அடிப்படையாதலின் என்க. உலகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அன்பை அடிப்படையாகக் கொண்டதே அன்றிச் சட்ட வரம்பை அடிப்படையாகக் கொண்டதன்று. அன்பு மனிதனிடம் மலர வேண்டுமாயின், அவன் இளமையில் இயற்கை உலகில் இயற்கைப் பொருள்களுக்கிடையே வாழ்தல் வேண்டும். இவ்வுண்மையைப் பள்ளிக்கூடங்கள் என்பவை அறவே மறந்துவிட்டன; செயற்கை நூல்களைப் படிக்கச் செய்கின்றன; குழந்தை தன்னைச் சூழவுள்ள இயற்கைப் பொருள்களோடு பிறக்கிறது என்பதையே மறந்து விட்டன; இயந்திரத்தை இயக்குதல் போலப் பிள்ளைகளைச் சட்ட திட்டங்கள் என்னும் கயிறுகளால் கட்டி இயக்குகின்றன; பள்ளியில் உள்ள நாற்காலி மேஜைகளையும் பிற பொருள்களையுமே பிள்ளைகள் நினைவுகொள்ளந் செய்கின்றன; உறுமி இடித்துரைக்கும் உபாத்தியாயர்களையே பிள்ளைகள் தினமும் தரிசிக்க வசதி அளிக்கின்றன. குழந்தை, தான் இறைவனால் படைக்கப்பட்டதென்பதை மறக்கச் செய்தல் ஆகாது; அதனை, உலகத்தை நன்கு அறியச் செய்வித்தல் வேண்டும். கல்வி என்பது விஷயங்களை மட்டும் கூறுதல் ஆகாது; உலகில் உள்ள எல்லாப் பொருள்களோடும் ஒன்று பட்ட வாழ்வை நடத்தக் கற்பித்தல் ஆகும். குழந்தைக்கு உயிர்களிடத்து அன்பு, இரக்கம் என்பன தோன்றச் செய்தலே கல்வியின் முழு நோக்கமாக இருத்தல் வேண்டும். ஆனால் இப்போதைய கல்விமுறை இவ்விரண்டையும் அழுத்துகிறது; இளமை முதலே தான் வேறு, தன்னைச் சூழவுள்ள உலகம் வேறு என்னும் விபரீத உணர்ச்சியைக் குழந்தைக்கு ஊட்டுகிறது. குழந்தைகள் இயல்பாகவே இயற்கையை விரும்பும் நீங்க இசையாதவை. இளம் பருவத்தில் குழந்தைகள் கதைகளைக் கேட்க விரும்பும். ஆனால் அவ்விருப்பதிற்கு மாறாக இக்கல்விச் சாலைகள் அவற்றின் பதப்படா மூளையில் பல கடின பாடங்களையும் உண்மைகளையும் திணிக்க முயல் கின்றன. இக்கலாசாலைகள் குழந்தையின் இயல்பையும் சுவையையும் மறந்து விட்டன; பலவகை இயல்பும் சுவையும் உள்ள பல திறப்பட்ட குழந்தைகட்கு ஒரே வகைக் கல்வியைத் திணிப்பதில் முனைந்திருக்கின்றன. குழந்தைப்பருவம், சட்ட வரம்புகட்கு அப்பாற் பட்டது; புத்தகச் செய்திகட்கு வெளிப்பட்டது; செயற்கைக் கட்டுப்பாடுகளைக் கடந்தது; இயற்கையோடு இயைந்தது.. மாணவன் ஒருவன் பள்ளிக்கூடத்தில் இருந்த மரத்தின்மீது ஏறிக் கிளை ஒன்றில் அமர்ந்து, தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தான். கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் பெயர்பெற்ற அம்மாணவனது ஆசிரியர் அவனைக் கண்டதும் மனக்குழப்பம் அடைந்தார்; அவன் பெருந் தவறு இழைத்ததாகக் கருதி வருந்தினார். இஃதென்ன விந்தை! தான் விரும்பும் மரமேறுதல் என்பதை ஒருவன் தன் இளம் பருவத்திற்றான் செய்ய உரிமை உண்டு. அம்மாணவன் பருவமடைந்த பின் மரம் ஏறிப் படிக்க விழைவானோ? மரமேறினான் என்பதைக் கண்டதும் மனம் குழம்பிய அதே ஆசிரியர் அந்த மாணவனுக்கு தாவர சாதிரப் போதனை செய்வதில் முனைகிறார்; ஆனால் அதே தாவரத்தை அவன் விரும்பியவாறு பரீக்ஷை செய்ய விடுவதில்லை. இயற்கைக் கல்வியேலேயே அநுபவம் உண்டாகாது. பிள்ளைகள் மரத்தைப் பற்றிய அறிவை மரத்தினிடமிருந்து பெறவேண்டுமே அன்றிப் புத்தகத்திலிருந்து பெறலாகாது. அஃது அவர்கட்கு எத்தகைய பயனும் விளைக்காது. பயனுடைய கல்வி பிள்ளைகளை உண்மையில் ஒன்றுபடச் செய்தல் கல்வியின் பெரு நோக்கமாக இருத்தல் வேண்டும். இறைவனைப் பற்றிய எண்ணம் இளம் பருவத்தில் முகிழ்த்தல் வேண்டும். அதனை முகிழ்த்தச் செய்தலே கல்வியின் அடிப்படையாக அமைதல் வேண்டும். ஆனால் இக்காலக் கல்வி உடலையும் அறிவையும் வளர்க்கப் பாடுபடுகின்றதே அன்றி உயிரை ஓம்பப் பயன்பட வில்லை; ஆத்ம உலகம் இவ்வுலகத்தின் உயிர் நாடியாகும். அதனைக் பிள்ளைகட்கு உணர்த்தலே முதற் கடமையாகும். அதனை அறவே மறக்கச் செய்தல் பயனுடைய கல்வி ஆகாது. இக்காலக் கல்வியால் ஆறறிவு பெற்ற மனிதன் உணர்ச்சியற்ற இயந்திரமாக இயங்குகின்றானே அன்றி, இரக்கம், அன்பு, அருள் என்னும் உயிர்க்கு உறுதுணையானவற்றை உடைய உண்மை மனிதனாக இயங்கவில்லை. பழைய குருகுலங்கள் இளம் பிள்ளைகள் இவ்வுணர்ச்சியை எங்ஙனம் பெறுதல் கூடும்? பண்டைக்காலப் பள்ளிக்கூடங்கள் மீது நம் கவனம் செல்லுதல் வேண்டும். நாம் பண்டைக் குருகுலங்களை நினைவிற் கோடல் நன்று. ஆசிரியரும் மாணவரும் இயற்கை எழிலில் மரங்கட்கு அடியில் இயற்கைப் பொருள்களுக்கு இடையில் இருந்து, இன்பமான காற்று இன்பமான காட்சி - இன்பமான குருகுல வாழ்க்கை இவற்றை நுகர்ந்தனர்; அப்பொழுது அவர்கள் இயற்கைப் பெருந்தேவியின் எழிலுறு திருவுருவமும் அவள் இன்ப விளையாடல்களும் கண்டு கண்டு, படைப்பின் பண்மை உணர்ந்து உணர்ந்து, அப்படைப்புக்குரிய பேரருட் சக்தியை உள்ளத்தால் உணர்ந்து இன்புற்றனர்; படைப்புப் பொருள்களோடு தாமும் ஓன்றுபட்டு மாசுமறுவற்ற மனத்தினராய் இயற்கை அன்னையின் இன்பப் புதல்வராக வாழ்வு நடத்தினர். ஆசிரியர்களோடு குடும்பத்தில் ஒன்றுபட்டு அவர் இடும் சிறு வேலைகளைப் பெருமையகக் கருதி மகிழ்ச்சியோடு செய்து, அவர்களோடு இயற்கைக் கல்வியைக் கற்ற அக்கால மாணவரே உலகத்தில் ஒழுக்க நிலையை வற்புறுத்திய மஹரிஷிகளாகவும் வீரர்களாகவும் மாறினார்கள் என்பதை நம் நாட்டுப் பழைய வரலாறுகளே பகருகின்றன. மெய்க் கல்வி உண்மையை உணர உண்மைப் பொருளில் ஒன்றுபட உண்மையாக வாழ்வை நடத்த உதவி செய்வதே கல்வியாகும். மனிதனைக் கட்டுப்படுத்தும் எதுவும் கல்வி ஆகாது. அவன் சுயேச்சையாக சுதந்திர புருஷனாக இவ்வியற்கை உலகில் வாழ்தல் வேண்டும். அந்நிலையிற்றான் அவன் இவ்வுலகை இன்பந்தரும் இடமாகக் கருதுதல் கூடும். செயற்கைக் சேறாகிய ஆடம்பர வாழ்வு, ஆடை யாபரணங்கள், ஆபாச எண்ணங்கள், அருவருக்கத் தக்க செயல்கள் அவன் நல்வாழ்வில் புகுதல் கூடாது. எளிய வாழ்க்கை-களங்க மற்ற மனநிலை எளிய உடை எளிய உணவு தூய எண்ணங்கள் இவையே மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்துவன. இவற்றை மனிதன் கைப்பற்ற உதவுவதே கல்வியாம். இவற்றை இயற்கையாக அறிவுறுத்தும் கலாசாலைகளே மனிதர்க்கு மெய்க்கல்வி புகட்டும் அறிவுக்கூடங்கள் ஆகும். கல்விச்சாலையின் தலையாய நோக்கம் பிள்ளைகளை, தமக்கு வேண்டுவனவற்றைத் தாமே தயாரித்துக்கொள்ளப் பழக்குதல் வேண்டும். காலையில் நீராட மாணவர் தண்ணீர் இறைத்தல் வேண்டும்; தம் ஆடைகளைத் தாமே துவைத்தல் வேண்டும்; பெரிய மாணவர் சமையல் தொழிலிலும் பழக்கம் பெறுதல் வேண்டும்; மாணவரிடையே ஏற்படும் சண்டைகளை மாணவரே தீர்த்துக்கொள்ளும் பழக்கம் ஏற்படுதல் வேண்டும்; அவர்கள் தாமாகவே தமக்கு வேண்டும் அனைத்தையும் செய்துகொள்ள வன்மை உடையவராக்கக் கலைக்கூடங்கள் முயலல் வேண்டும். சுருங்கக் கூறின், ஒவ்வொரு மாணவனையும் தன்னளவில் சுயேச்சையுடன் வாழக் கற்பிப்பதே கல்விச்சாலையின் தலையாய நோக்கமாதல் வேண்டும். தாகூரின் பள்ளிக்கூடம் இதுகாறுங் கூறப்பெற்ற கருத்துகள் தாகூரது தழைத்த உள்ளத்தில் தோன்றின. அவற்றின் உருவமே அவரால் ஏற்பட்ட சாந்தி நிகேதனம் என்பது. அங்கு மாணவர் மாணவிகள் ஒருங்கே கல்வி கற்கின்றனர். ஆசிரியரும் பிள்ளைகளும் சேர்ந்தே வாழ்க்கின்றனர். தாகூரது போதனையால் பிள்ளைகள் எளிய வாழ்வை மேற்கொண்டுள்ளனர்; எல்லா மாணவரும் கால் நடையாகவே வருகின்றனர். பிள்ளைகளைப் பணச் செருக்கு, ஆடம்பரம் என்னும் நவீனப் பேய் கட்கு அடிமையாக்குதல் ஆகாதென்பதே தாகூரது எண்ணம். அதனாற்றான் அப்பெரியார் எல்லாப் பிள்ளைகளையும் எளிய வாழ்வு வாழப் பழக்கினார்; தம் முதல் மகனைக் கிராமப் பள்ளிக்கூடத்திலேயே ஒருவித ஆடம்பரமும் அற்ற முறையில் படிக்கச் செய்தார். மாணவர் வாழ்க்கை இளம் பிள்ளைகட்குப் பாட நூல்களே இல்லை. ஆசிரியரே பாட நூல்கள்; பிள்ளைகள் பார்க்கும் பொருள்களே பாட நூல்கள். தாகூர் இயற்றிய நாடகங்கள் பிள்ளைகளால் பெருவிருப்போடு நடிக்கப்படுகின்றன; அவருடைய பாடல்கள் பாடப்படுகின்றன. பிள்ளைகள் தாமாகவே நாடகங்களை எழுதி நடித்துப் பழகுகிறார்கள். அவர்கள் தாமாகவே கழகங்களை நிறுவிப் பேசப் பழகுகிறார்கள்; மாத இதழ்களைத் தாமாகவே நடத்துகிறார்கள். மாணவர் பலர் சித்திரம் வரைதலிலும் ஓவியந் தீட்டலிலும் சிறந்து விளங்குகிறார்கள். தாகூர் எல்லாப் பிள்ளைகட்கும் இசையில் இன்பத்தை உண்டாக்கி யுள்ளார்; சிறிது இசைப் பயிற்சி ஏற்பட்டதும் இசைப் புலவரைக் கொண்டு மாணவர்க்கு இசைப் புலமையை ஊட்டியிள்ளார். காலை மாலைகளில் பதினைந்து நிமிட நேரம் பிரார்த்தனை நடைபெறும். அக்காலத்தில் எல்லாப் பிள்ளைகளும் அமைதியாக இருப்பார். சுருங்கக் கூறின், தாகூரின் தூய கருத்துகள் அனைத்தும் சாந்தி நிகேதனத்தில் கையாளப்படுகின்றன என்று கூறலாம். இத்தகைய பண்புடைய பள்ளிக்கூடங்களே இந்தியாவின் பண்டைப் பெருமையை மீட்டும் கொண்டுவரத் தக்கவை. 3. பெண் கல்வி கல்விச் சிறப்பு மனிதன் பெறத்தக்க பேறுகளாகிய அறம், பொருள் , இன்பம், வீடு என்பவற்றை அளிக்கவல்லது கல்வி ஒன்றே. வெளி யுலகத்தில் புகழை நிறுத்துவதும் கல்வியே. பொறுத்தற்கரிய, துன்பம் வந்த காலத்தும் கைகொடுத்து உதவத் தக்கதும் கல்வியே ஆகும். ஆதலின் அக்கல்வியே சிற்றுயிர்க்கு உற்ற துணை என்றார் குமரகுருபர அடிகள். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு) எழுமையும் ஏமாப் புடைத்து. என்றார் முப்பால் உரைத்த முதுபுலவர். கல்வி ஒன்றே உலகில் அழிக்கப்படாதது. அது பொருளைப் போல வெள்ளத்தால் போகாது; வெந்தழலால் வேகாது; வேந்தரால் கொள்ளத்தான் முடியாது; கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது; கள்ளர்க்கோ மிக அரிது; காவலோ மிக எளிது. இக்கல்வியால் பொருளை ஈட்டலாம்; பொருளால் இன்பத்தை நுகரலாம்; பொருளைக்கொண்டு அறம் செய்யலாம்; அறத்தால் வீடு பேற்றை அடையலாம். இங்ஙனம் நாற்பேறுகளையும் பெறச் செய்யும் ஆற்றல் பெற்றது கல்வி ஒன்றே ஆகும். கல்வி அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கிறது; எதனையும் காரண காரியத்துடன் ஆராய்ச்சி செய்யத் தூண்டுகிறது; அவசரத்தை ஒழித்து அமைதியை உண்டாக்குகிறது; ஒன்றைச் செய்யுமுன் அதன் பலாபலன்களை எண்ணிப் பார்க்குமாறு தூண்டுகிறது; உலகத்தைப் பற்றிய அறிவை உண்டாக்குகிறது. உலகத்தில் உள்ள பலதிறப்பட்ட நிற-சமூக-மொழி வேறுபாடுகள் கொண்ட மக்களுடைய வரலாறுகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றை அறியவும், நம் நாட்டு வெளி நாடுகளுடன் எல்லாத் துறைகளிலும் உறவு கொள்ளவும் செய்ய வல்லது கல்வி ஒன்றே. கல்வி கற்றோர் மன்னற்குத் தன்தேச மல்லால் சிறப்பில்லை; (கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு, என்ற மூதுரை எண்ணத் தக்கது. அரசன் ஒருவன் தன் நாட்டை விட்டு வேற்று நாடு புகுவானாயின், அவன் அரச நிலையில் இருத்தல் இயலாது. ஆயின், கல்வி கற்றவன் தான் செல்லும் இடமெல்லாம் சிறப்பெய்துவன். அவனை வரவேற்று மரியாதை செய்து மகிழ்பவர் பலராவர். விவேகானந்த அடிகள் அமெரிக்காவில் பெற்ற பெருஞ்சிறப்பைப் பற்றி நீங்கள் படித்ததில்லையா? இராமதீர்த்த அடிகள் உலகப் பெரு நகரங்களில் வரவேற்கப்பட்டமை அவரது வரலாறு கொண்டு காண்க. அண்மையில் காலமான சுவி இரவீந்திரநாத தாகூர் உலகப் புகழ் பெற்றமைக்கு அவரது கல்வியே காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சர் சி. வி ராமன், சர். ஜகதீச சந்திர போ, சர் பி. சி. ரே போன்ற ஆராய்ச்சியாளரும்; காந்தி அடிகள், ஜவஹர்லால் நேரு, சர். ஏ. இராமசாமி முதலியார், சர். ஆர். கே. ஷண்முகம் செட்டியார் முதலிய நம் நாட்டு அறிஞரும் உலகம் சுற்றிப் பல நாடுகளில் பல கூட்டங்களிற் பேசிப் பெயரும் புகழும் பெற்றமைக்குக் காரணம் கல்வி அன்றோ? கல்வி இல்லாவிடில் இவர்கள் பெயர்களை உலக மக்கள் உணரக் கூடுமோ? கல்வி கற்ற பெண்மணிகள் கல்வி ஒன்றினாற்றான் பெண்மணிகளும் பெருமை எய்தலாம். மைத்ரேயி முதலிய வேதகாலப் பெண்மணிகள் பெருமை பெற்றமைக்குக் காரணம் கல்வியே ஆகும். பழந்தமிழ் நாட்டில் அரசன் பக்கத்தில் சரியாசனமிட்டு இருந்து சிறப்புப் பெற்ற பெண்மணிகள் பலராவர். அவர்கள், பெருங்காக்கைப் பாடினியார், சிறு காக்கைப் பாடினியார், ஔவையார், பெருங்கோப்பெண்டு, பேய்மகள் இளஎயினி, காவற் பெண்டு முதலியோர் ஆவர். இவருள் காக்கைப் பாடினியார் இருவரும் தமிழில் யாப்பிலக்கணம் செய்து அழியாப் புகழ்பெற்ற பெண்பாற் புலவர் ஆவர். ஔவையார் தகடூரை ஆண்ட அதியமான் என்பவனிடமிருந்து திருக்கோவலூர் அரசன்பால் தூது சென்ற சிறப்புடையவர். நாகரிகம் முற்றியிருப்பதாகக் கூறப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பெண்மணிகளை அரசியல் தூதுவராக விடுதல் அரிதாக இருக்கிறது. ஆயின், நமது பழந்தமிழ் நாட்டில் இற்றைக்கு 1800 ஆண்டுகட்குமுன் ஔவையார் அரசியல் தூதுவராக இருந்தார் எனின், அவ்வம்மையார் கல்வியாற் பெற்ற பெருஞ் சிறப்பை என்னென்பது! காவற்பெண்டு என்பவர் காவல் காக்கும் தொழிலில் ஈடுபட்டவர். இவரும் செய்யுள் செய்யக்கூடிய புலமை பெற்றிருந்தார் என்பது, “சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின்மகன் யாண்டுள னோ? என வினவுதி; என்மகன் யாண்டுள னாயினும் அறியேன்; ஒரும் “புலியிருந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே என்னும் புறநானூற்றுப் பாடலால் புலனாகிறது. இங்ஙனம் கேவலம் காவற்பெண்டும் கவிபாடும் நிலையில் பண்டைத் தமிழகக் கல்வி இருந்தது. அம்மட்டோ! பேய் மகள் இளஎயினி (வேட்டுவச்சி), வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரண தொழிலாளர் பெண்மணிகளும் கல்வி கற்றுக் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். இவர்களே இங்ஙனமாயின், அரச மகளிரைப்பற்றி அறைதலும் வேண்டுமோ? பாரிவள்ளலின் அருமைச் செல்வியாக இருவரும் கபிலர்பால் கல்வி கற்றுக் கவிபாடினர். பூதப்பாண்டியன் தேவியார் பண்பட்ட புலமை உடையவர். இடைக்காலத்துத் தோன்றிய வணிகர் மரபினரான காரைக்கால் அம்மையார் கல்வியை என்னென்பது! பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் அம்மையாரின் அருட்பாசுரப் பொலிவினைக் காண்க. இவர்கள் இவ்வுலகில் என்றும் அழியாத புகழைக் கல்வியால் நிலைநாட்டி மறைந்தவராவர். ஆடவரைப் போலவே பெண்களும் கல்வி ஒன்றினாற்றான் தம்புகழ் நிறுத்தலாம்; எல்லா மேதகு பதவிகளையும் பெறலாம். இவ்வுண்மைக்கு இன்று நமது நாட்டில் எடுத்துக் காட்டாக இலங்குபவர் சரோஜனி தேவியார், விஜயலஷ்மி பண்டிதர் முதலியோர் ஆவர். முன்னவர் உலகெலாம் சுற்றியவர்; ஆங்கிலத்தில் அழகிய கவிகள் புனையும் ஆற்றல் உடையவர்; அழகாகப் பேசும் பேராற்றல் பெற்றவர். பின்னவர் ஐக்கிய மாகாண அமைச்சராக இருந்தவர்; இன்று அமெரிக்காவில் இந்திய அரசியல் நிலைமையை விளக்கி அரிய சொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருப்பவர். இவ்விருவர் பெயர்களை அறியாத அரசர்கள் இல்லை; அரசியல் தலைவர்கள் இல்லை; கற்றறிந்த மாந்தர் இல்லை. மெய்யாகவே இவர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுகின்றனர். இவ்வுயர்வுக்குக் காரணம் என்ன? கல்வி ஒன்றே காரணம் ஆகும். குடும்ப வாழ்க்கை பெண்கள் குடும்பத்தை நடத்தவும் கல்வி தேவையாகும். கற்ற பெண்கள் நடத்தும் குடும்பத்திற்கும் கல்லாத பெண்கள் நடத்தும் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு காணத்தக்கது. படித்த பெண்கட்குச் சுகாதாரம் நன்கு தெரியும்; ஆதலின், அவர் தம் வீடுகள், வீட்டுப் பொருள்கள் தூய்மையாகக் காணப்படும். வீட்டுப் பொருள்கள் அவ்வவற்றிற்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்; இடத் தடுமாற்றம் இராது. படியாத பெண்கள் இல்லத்தில் பெரும்பாலும் இத்தகைய தூய்மை நிலை காணல் அரிது. சமையல் பாத்திரங்கள், சமைக்கப்படும் பொருள்கள் இவைபற்றிய நல்லறிவு படித்த பெண்களிடம் காணலாம். அலுமினிப் பாத்திரங்களில் சமையல் செய்யலாகாது என்பதைப் படித்த பெண்கள் அறிவர்; படியாத பெண்கள் அவற்றையே மிகுதியாகப் பயன் படுத்தலைக் காணலாம். உணவுக்குரிய காய் வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றில் இன்னின்னவை இன்னின்ன உணவுச் சத்துகள் கொண்டவை; இவற்றை இன்னவாறு சமைத்தல் வேண்டும் என்பன போன்ற செய்திகளைப் படித்த பெண்கள் உணந்து நடப்பார். இந்நிலையைப் படியாத பெண்களிடம் காண்பது அருமை. பிள்ளைகளை வளர்க்கும் முறை இன்னது என்பதைப் படித்த பெண்கள் அறிவர்; தம் பிள்ளைகட்கு இளமை முதலே நீதி போதனைக்குரிய கதைகளையும் வீரத்தை ஊட்டும் கதைகளையும் விளையாட்டாகப் போதித்து வருவர்; பிள்ளைகள் பள்ளிப்பருவம் அடையும்வரை அத் தாய்மாரே தம் பிள்ளைகட்கு அன்புடைய ஆசிரியராக அமைகின்றனர். சிவாஜி பள்ளிக்குச் செல்லு முன்னரே வீரம், உண்மையுடைமை முதலிய நற்பண்புகள் அமையப் பெற்றமைக்கு அவரது அருமைத் தாயாரே காரணர் என்பதை அறியாதார் யாவர்? தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சீலை என்னும் பழமொழி இங்குச் சிந்திக்கற்பாலது. படியாத பெண்கள் பெற்ற பிள்ளைகள் இத்தகைய இளமைப் பயிற்சியைத் தாய்மாரிடம் பெறுதல் இயலாது! இயலாது!! அவர்கள் பள்ளி ஆசிரியரையே முற்றும் நம்பவேண்டுபவர் ஆகின்றனர்; முதன் முதலில் பள்ளிக்கூடத்தை அச்சத்திற்கும் அழிவிற்கும் உரிய இடமாகக் கருதிப் போகவும் மறுக்கின்றனர்; சண்டித்தனம் செய்கின்றனர். முன் சொன்ன பிள்ளைகளோ எனின், பள்ளிக்கூடத்தைக் கலை இடமாகக் கருதி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். கல்லாத தாய்மார் பேசும் கொச்சைச் சொற்ககளையே பிள்ளைகள் பேசுகின்றனர்; வேறு வழியில்லை. தாய்மார் கற்றவராயின் பிள்ளைகளிடம் இக்குறை இராதன்றோ? ஒரு நாளில் பிள்ளைகள் செய்தற்குரிய வேலைகள் இன்னவை; அவற்றுள் இஃது இந்த நேரத்திற் செய்யத் தகுவது என்பன போன்றவை படித்த தாய்மார் வீட்டுப் பிள்ளைகளிடம் காணலாம். இவற்றை மற்றப் பிள்ளைகளிடம் காண்டல் அரிதினும் அரிது. சுருங்கக் கூறின், படித்த பெண்கள் உள்ள வீடு, கூரை இல்லா வீடாயினும், அஃது இன்பம் தரும் இனிய வீடாகும் என்று ஜான் ரகின் கூறியுள்ளது முக்காலும் உண்மை. படித்த பெண்ணை மணந்தவனே பாக்கியவான்; அவளைத் தாயகப் பெற்ற பிள்ளைகளே பேறு பெற்றவர்கள், அவளே உண்மையான வாழ்வரசி ஆவாள். அவளே அடிசிற்கு இனியாள்; கணவனிடமும் பிள்ளைகளிடமும் அன்புடையாள்; வாழ்க்கையின் விளக்காவாள். கணவனைத் துன்ப நிலையில் தேற்றுவதில் நண்பன் ஆவாள்; தக்க யோசனை சொல்வதில் அமைச்சன் ஆவாள்; இல்லறம் என்னும் நல்லறம் பேணி நடப்பதில் வாழ்க்கைத் துணைவி ஆவாள். இப் பல திறப்பட்ட நற்பண்புகள், படியாத மாதரிடம் காணுதல் அருமையே ஆகும். உத்யோக வாழ்க்கை வறிய பெண்கள் அநாதைப் பெண்கள் தம்மைத் தாமே பொருளீட்டிக் காத்துக்கொள்ளவும் உதவி செய்வதும் கல்வியே ஆகும். நம் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றைவர் எளியவர். எளிய குடும்பத்தில் கணவனது வருவாய் சிறு தொகையினதாக இருக்கிறது. அதனைக் கொண்டு அவன் தன் மனைவி மக்களைக் காப்பாற்றி வாழ்க்கை நடத்தத் துன்புறுதல் வழக்கமாக இருக்கிறது. மனைவி கற்றவளாயின், ஓர் உத்யோகத்தில் அமர்ந்து பொருள் ஈட்டிக் குடும்பத்தை நன்னிலையில் நடத்தலாம் அல்லவா? அவளால் இல்லத்து வறுமை நீங்கும் அல்லவா? எளிய கணவன் திடீரென இறப்பின், அக்குடும்பத்தின் கதி யாதாகும்? திக்கற்றுத் தெருவில் நிற்கவேண்டும் அல்லவா? மனைவி கற்றவளாயின், அக் குடும்பத்தை ஓரளவு நன்னிலையில் இருத்தி நடத்திக்கொண்டு செல்லலாம் அல்லவா? இங்ஙனம் படித்த பெண்கள் உத்யோகங்களையோ தொழில்களையோ செய்து பொருளீட்டிக் குடும்பங்களைக் காத்துவருதல் பாராட்டத் தக்கது. அவர்கட்கு அந்நிலையிற்றான் தன் நம்பிக்கை, வாழ்க்கை இன்பம் முதலியன உண்டாகும். கணவன் வருவாயையே எதிர்பார்த்து நிற்கும் பெண்ணினிடம் இவை அமைதல் அருமை. கணவன் இவளை என்றும் அடிமையாகவே எண்ண இடமுண்டாகிறது. படித்த கணவன் படித்த தன் மனைவியிடம் நடந்துகொள்ளும் முறையே வேறு; படியாதவளிடம் நடந்துகொள்ளும் முறை வேறு. ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைகளைப் படிக்கவைப்பது போலவே பெண் பிள்ளைகளையும் படிக்கவேண்டும்; அவர்கட்குக் கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் அளிக்கவேண்டும். உத்யோகம் செய்யவேண்டும் தேவை ஏற்படும் நிலையில் அவர்கள் அதனைச் செய்யட்டும்; தேவை ஏற்படாத பொழுது இல்லத்து இராணிகளாக இருந்து இல்லறம் என்னும் நல்லறத்தை இனிதே நடத்தட்டும். இவை இரண்டிற்கும் கல்வி வேண்டற்பாலதே ஆகும். படிக்கத் தக்கவை இன்றுள்ள பள்ளிக்கூடக் கல்வி எல்லாப் பெண்கட்கும் வேண்டற்பாலது. குறைந்த உத்யோகத்துக்கு வேண்டிய அளவேனும் கல்வி கற்பது முதற்படி; அவரவர் சக்திக்கு ஏற்ப மேற்படிப்பைப் படிப்பது அடுத்தபடி, இங்ஙனம் படித்த பெண்கள் உத்யோகம் ஏற்பினும் சரி, வாழ்வரசிகளாக இல்லத்திலேயே இருப்பினும் சரி; அவர் தம் படிப்புப் பள்ளிப் படிப்புடன் நின்றுவிடவில்லை என்பதை அறிதல் வேண்டும். அவர்கள் நாட்டு நடப்பை அறிய உலக அறிவைப் பெற அன்றாடம் செய்தித் தாள்களைச் செவ்வையாகப் படித்தல் வேண்டும்; ஜான் ரகின் கூறுமாறு அறிவையும் ஒழுக்கத்தையும் பேணி வளர்க்கும் இலக்கியங்களைக் கருத்தூன்றிப் படிப்பது நல்லது. அதுவே அவர்கள் அறிவைப் பெருக்கும்; அன்பை வளர்க்கும்; ஒழுக்கத்தை ஓம்பும்; உயரிய பண்புகளை உண்மையாகப் பண்படுத்தும்; புலமையைத் தோற்றுவிக்கும். இலக்கியக் கல்வியாற்றான் நம் பெண்டிர், கற்பரசியாகிய கண்ணகி வரலாற்றை அறிய முடியும்; அறம் பேணி வளர்த்த மணிமேலையினது மாண்புறு வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும்; பெரிய புராணப் பெண்மணிகளின் ஒழுகலாறுகளை உணர முடியும்; ஆண்டாளின் அருட் பாசுரங்களை அறிந்து இன்புறக்கூடும். இவ்வரலாறுகளே அவர்கள் வாழ்க்கையாகிய கட்டடத்திற்கு அடிப்படையாகும். 4. பெண்களுக்கு உழைக்கும் பெரியார் (பேராசிரியர் டாண்டு கேசவ கார்வே) கேசவ கார்வே உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இருந்துவருதல் இயல்பு. அத்தகைய மேலோராற்றான் அற வுணர்ச்சி உலகில் நிலைபெற்றுள்ளது என்னல் மிமையாகாது. நம் இந்திய நாட்டில் இத்கைய பேரருளாளர் சிலர் இன்றும் இருந்து வருகின்றனர். அவருள் டாண்டு கேசவ கார்வே என்பவர் ஒருவர் ஆவர். இவரது இனிய வரலாறு கற்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகும். திக்கற்ற கைம்பெண்கட்கு இப் பெரியார் எங்ஙனம் ஊழியஞ் செய்தனர்; பொதுவாகப் பெண்கள் நலனுக்கு இவர் எங்ஙனம் உழைத்தார் - உழைத்து வருகின்றார் என்பன அறிந்து மகிழ்தற்குரியவை. இப்பெரியாரது வரலாறு இளைஞர் உள்ளத்தில் தியாக உணர்ச்சியை ஊட்டும் என்பதில் ஐயமில்லை. பள்ளிப் பருவம் கார்வே, பம்பாய் மாகாணத்தில் இரத்தினகிரி ஜில்லாவில் உள்ள கேத் தாலூகாவைச் சேர்ந்த சிறிய கிராமம் ஒன்றில் 1858-ஆம் ஆண்டு, மே மாதம் 17-ஆந் தேதி பிறந்தார். இவர் பெற்றோர் பணக்காரர் குடும்பத்தினராயினும். கார்வே பிறந்த பொழுது சாதாரண நிலையில் இருந்தனர். அவர்கட்கு, மூரட் என்னும் கிராமத்தில் சிறிது நிலம் இருந்தது. அதனால் அவர்கள் மூரட்டிலேயே வசிக்கலாயினர். கார்வே, மூரட்டில் இருந்த தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். அப்பொழுது பணக்காரர் ஒருவர் தம் மகனுக்கு ஆங்கிலம் கற்பிக்க ஓர் ஆசிரியரைத் தம் வீட்டில் அமர்த்தினார். அவ்வாசிரியரிடம் கார்வே ஓரளவு ஆங்கிலம் கற்றார்; தம் கிராமத்துக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த ஆங்கிலம் கற்ற மாணவரிடமும் ஆங்கிலம் கற்றுவந்தார். பின்னர் இவர் இரத்தினகிரி உயர் கலாசாலையிற் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு இவர் பம்பாயை அடைந்து ஓர் உயர் கலாசாலையில் சேர்ந்து 1881-ல் மெட்றிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர், சில பிள்ளைகட்குப் பாடஞ் சொல்லிப் பொருள் சம்பாதித்து மாணவ வாழ்க்கையை நடத்தி வந்தார்; ஓராண்டு வில்சன் கல்லூரியில் படித்தார்; மறு ஆண்டு எல்பின்டன் கல்லூரியிற் சேர்ந்தார்; அங்கு உதவிச் சம்பளம் பெற்றுப் படித்துவந்தார்; வாரத்துக்கு ஒருவர் வீட்டில் உண்டுவந்தார்; இறுதியில் பி. ஏ. பட்டம் பெற்றார். பம்பாய் வாழ்க்கை இவர் பி. ஏ. பட்டம் பெற்ற பின்னர்ச் சில மாதங்கள் எல்பின்டன் உயர் கலாசாலையில் ஆசிரியராக இருந்தார். இவர் கணிதத்தில் பெயர் பெற்றவர்; பல கலாசாலை மாணவ மாணவிகட்குப் பாடம் சொல்லிப் பொருள் சம்பாதித்து வந்தார். இவருக்கு மாதம் நூற்று எழுபத்தைந்து ரூபாய் வருமானம் வந்தது. இவருக்குப் பதினைந்து வயது நடக்கையிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர் பி. ஏ. பட்டம் பெறு முன்னரே இவருக்கு இரகுநாதன் என்னும் மைந்தன் பிறந்தான். இவர் தம் மனைவியார்க்கும் தங்கைக்கும் வீட்டிலேயே கல்வி கற்பித்து வந்தார். கிராமத்தில் பெண்கள் பள்ளி இவர் தமது கிராமத்தாரை முன்னுக்குக் கொண்டுவர ஓர் ஏற்பாடு செய்தார்: மூரட்டிலிருந்து வெளி இடங்களில் வேலை பார்ப்பவரை ஒன்று சேர்த்துச் சங்கம் ஒன்று கண்டார்; அவர்களிடம் பொருள் திரட்டி மூரம் நன்மை நிதி என்னும் சேமநிதி ஏற்படுத்தினார்; அதற்குத் தாம் இருநூறு ரூபாய் உதவினார்; தம் மகனுக்குச் செய்யவேண்டிய பூணூல் மணச் செலவைச் சுருக்கி, அந்த இருநூரு ரூபாயை மீதப்படுத்தினார்; 1891-ல் இவரது மனைவியார் இறந்தார்; அப்பொழுதும் அவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் சுருக்கி ஐந்நூறு ரூபாய் மீதப்படுத்திச் சேமநிதிக்கு உதவினார்; இங்ஙனம் சேர்க்கப்பட்ட சேம நிதியைக் கொண்டு கிராமத்தில் பெண்கள் பள்ளி ஒன்றை ஏற்படுத்தி நடத்திவந்தார். சீர்திருத்தப் பேச்சு இவர், தமது தாலூகாவில் இருந்த அறிஞரை ஆண்டுக்கு ஒருமுறை ஒன்று சேர்த்துச் சமூக சீர் திருத்தம் சம்பந்தமான விவாதங்களை நடத்தினார்; அக் கூட்டுறவால் பலர் தம் குறுகிய பழைய பழக்கவழக்கங்கள் என்னும் விலங்கினின்றும் சிறிது சிறிதாக மீளலாயினர். இங்ஙனம் கார்வே, 1891-ஆண்டிற்குள் தமது பொதுநலச் சேவையால் தமது பொதுநலச் சேவையால் தமது கிராமத்தார்க்கும் சுற்றுப்பக்கத்தில் இருந்தவர்க்கும் அறிமுகமானார்; எல்லோரும் இவருடைய சுறுசுறுப்பையும் பொதுநலப் பணியில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் கண்டு இவரைப் பாராட்டி ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர். கார்வேயும் பெர்கூசன் கல்லூரியும் உலகப் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண கோகலே என்பவர் நம் கார்வேயுடன் படித்த ஒரு சாலை மாணவர். அவரால் நடத்தப்பட்டுவந்த பெர்கூசன் கல்லூரியில் கணிதப் பேராசிரியர் வேலை காலி ஆயிற்று. அவ்வேலையைக் கார்வேயே பார்த்தல் வேண்டும் என்பது கோகலே விருப்பம். அதனால் அவர் கார்வேயைப் பம்பாயை விட்டுப் பூனாவிற்கு வருமாறு வற்புறுத்தினார். அப் பதவிக்கு மாதச் சம்பளம் நூறு ரூபாய் ஆகும். ஆனால் கார்வே பம்பாயில் நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருந்தார்; எனினும்இவர், தம் நண்பர் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பதவியை ஏற்றுப் பூனா சென்றார். கோகலே, பொதுநலத் தொண்டிற்காகவே பெர்கூசன் கல்லூரியை நடத்தி வந்ததாற்றான் கார்வே குறைந்த சம்பளத்திற்கு அங்குச் சென்றார். கார்வே கணிதம் போதிப்பதில் நிபுணர் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந் தோம் அல்லவா? இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதத்தில் நிபுணர்எனப் பெயர் பெற்றார்; கல்லூரி மாணவர் இவருடைய போதனா முறையில் ஈடுபட்டனர்; இவருடைய எளிய வாழ்க்கையும் நற்குண நற்செயல்களும் அவர்கள் மனத்தை கவர்ந்தன. அவர்கள் இவரைக் கண்கண்ட கடவுளாகக் கொண்டாடினார்கள். இவர் அக் கல்லூரியில் இருபது ஆண்டுகட்கு மேலும் ஆசிரியராக இருந்து புகழ் பெற்று, 1914-ல் ஓய்வு பெற்றார். இவர், பேராசிரியராக இருந்தது பலருக்குத் தெரியாது. இவர், கல்லூரி வேலை முடிந்ததும் வீடு சென்றுவிடுவார்; கல்லூரித் தொடர்பான சங்கங்களில் சிறந்த தொண்டாற்றுவார். இவரது யோசனைக்கு எல்லோரும் மதிப்புக் கொடுத்து வந்தனர். இவரைப் பிரிந்தபோது கல்லூரி மாணவரும் ஆசிரியர் களும் பிரிவுபசார பத்திரங்களைத் தம் கண்ணீரால் நீராட்டித் தந்தனர் எனின், இப் பெரியாருடைய போதனா சக்தியையும் அருங் குணங்களையும் என்னெனப் புகழ்வது! விதவை மணம் இவர், தமது முதல் மனைவியார் இறந்ததும், ஒரு விதவையை மணக்க உறுதிகொண்டார். இவர் இளமை முதலே சீர்திருத்த நோக்கம் கொண்டவர்; குற்றமற்ற மஹாராஷ்டிர பிராமண வகுப்பைச் சேர்ந்த இப் பெரியார், விதவையை மணக்க அக்காலத்தில் துணிந்து போற்றத்தக்க செயல் அன்றோ? இவரது மறு மணத்தைப்பற்றி இவரது தமையனார் கேட்ட போது இவர், நான் மணப்பதாயின், விதவை ஒருத்தியையே மணப்பேன், என்று உறுதியாக உரைத்தார். இவர் தாயார் விதவை மணத்தை விரும்பவில்லை எனினும், இவர் பிடிவாதமாக இருத்தலைப் பார்த்து அவ்வம்மையார் முடிவில் ஒருப்பட்டர். கார்வேயின் உயிர் நண்பராக இருந்தவருள் ஜோஷி என்பவர் ஒருவர். அவருக்குக் கோடுபாய் என்று ஒரு தங்கையார் இருந்தார். அவ்வம்மையார் விதவைக் கோலம் பூண்டவர்; கல்வி கற்றவர்; நாகரிகப் போக்கு உடையவர்; விரிந்த நோக்கமும் பரந்த மனப்பான்மையும் உடையவர். கார்வே அவ்வம்மையாரையே மணக்க உறுதிகொண்டார். 1893-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் தேதி பூனாவில் கார்வேக்கும் கோடுபாய்க்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. சாதிக் கட்டுப்பாடு மஹாராஷ்டிர தேசத்தில் நடந்த முதல் விதவை மணம் இதுவேயாகும். ஆதனால் எல்லாப் பத்திரிகைகளும் இம் மணத்தைப் பாராட்டி எழுதியிருந்தன. இதனால், கார்வேயின் பெயர் பம்பாய் மாகாணத்தார் கவனத்தை இழுத்தது. இவரது துணிகரச் செயலை அறிந்த மூரட் கிராமத்தார் இவர் மீது வெறுப்புக் கொண்டனர்; உறவினர் இவரை அடியோடு வெறுத்தனர்; கிராமத்தில் இருந்த இவரது தமையனாரைப் புறம்பாக்கினர். கார்வே தமது கிராமத்துக்குப் போன பொழுது உற்றாரும் உறவினரும் அவரோடு பேசவில்லை. அவர் தங்கியிருக்க ஒரு பாழடைந்த வீடு விடப்பட்டது. அவர் திருட்டுத்தனமாக இரவு வேலைகளில் தம் தாயாரைப் பார்த்துப் பேசவேண்டியவர் ஆனார். பாவம்! இவர் விதவை மணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட அவமானம் மிகப் பெரிதாகும். எனினும் இவர் மனம் தளர்ந்திலர்; இச்சமூகக் கொடுமைகளால் இவர் மனம் விதவை மணத்தில் நிலைத்த பற்றுக் கொண்டது. விதவை மணத்திற்கு ஆக்கம் கார்வே சமயம் வாய்த்த போதெல்லாம் விதவை மணத்தைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். விதவை மணம் செய்துகொள்ள விரும்பினவர் எல்லோரும் இவரது யோசனைகளைக் கேட்பது வழக்கமாக இருந்தது. இவர் விதவை மறுமணத் தம்பதிகள் பெயர்களைக் கொண்ட பட்டியலைத் தயாரித்தார்; அவர்கட்கு உதவி நிதி ஒன்றைத் திரட்டினார்; ஏழைத் தம்பதிகட்குப் பிறந்து, படிக்க வழியற்ற பிள்ளைகட்குத் தம் இல்லத்தைப் புகலிடமாக உதவிக் கல்வி கற்பித்தார். இவர் தமையனார் மகள் ஒரு விதவை இவர் அவளைப் படிக்க வைத்தார்; பெண்கள் போதனா முறைக் கலாசாலையிற் சேர்த்து, ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்தார்; அவளைப் பேராசிரியர் கோவிந்த சிம்னஜி படே என்பவர்க்கு மறுமணம் செய்துவைத்தார். இங்ஙனம் இவர் விதவையர் பொருட்டுப் பாடுபடுதலைக் கண்ட பலர் இவருக்குப் பொருள் உதவி செய்தனர்; விதவா விவாஹ மண்டலம் என்னும் கழகம் திறக்கப் பேருதவி புரிந்தனர். இவர் செய்த கைம்மை மறுமணங்கள் சாதிகளைக் கடந்தன அல்ல; சமூகக் கட்டுப் பாட்டையும் கடந்தவை அல்ல. ஓரே வகுப்பு ஆண்-பெண்களுக்குள்ளேயே மறுமணங்கள் நடைபெற்றன. இத்தகைய மறுமணக் குடும்பச் சடங்குகளை நடத்த விதவா விவாஹ மண்டலத்தார் புரோகிதர் ஒருவரை நியமித்துக்கொண்டனர். ஏன் எனில், இவர்கள் வீடுகளில் மற்றப் புரோகிதர் வாரார் ஆதலின் என்க. இவற்றோடு, கார்வே, மஹாராஷ்டிரா ஜில்லாக்களில் சுற்றுப்பிராயணம் செய்து, விதவை மணத்தைப் பற்றிச் சொற்பொழிவுகள் பல ஆற்றினார். இவர் சொற்பொழிவுகள் தெளிவானவையாயும் கேட்பவர் உள்ளத்தை ஈர்க்கத்தக்கனவா யும் இருந்தன. அவற்றைக் கேட்ட பலர் இவருக்கு ஊக்கம் அளித்தனர்; பொருள் உதவி செய்தனர். விதவையர் விடுதி விதவைப் பெண்கள் கல்வி கற்றவராக இருத்தல் வேண்டும்; கைத்தொழில்களை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும்; பிறர் உதவி இன்றித் தாமாக வாழ்க்கை நடத்தும் வன்மை பெற்றிருத்தல் வேண்டும் என்பது கார்வே எண்ணம். அதனால் இவர் விதவையர் விடுதி ஒன்றைப் பூனாவில் 1895-ல் ஏற்படுத்தினார்; முதலில் இரண்டொரு விதவையரைச் சேர்த்து உணவளித்து, வெளிப் பள்ளிக்கூடங்களில் படிக்க வசதி அளித்தார்; தாம் தம் ஆயுள் நிதியாக வைத்திருந்த ஐயாயிர ரூபாயை அவ்விடுதிக்கு எழுதி வைத்தார்; அவ்விடுதியைப் பார்த்துக்கொள்ளப் பெண் பார்வையாளர் ஒருவரை நியமித்தார். விதவையார் விடுதி வலுப்பெற்றது. பலர் ஆண்டுதோறும் பெருந்தொகை உதவி வருகின்னறர்; இன்னும் பலர் பலவாறு உதவிசெய்து வருகின்றனர்; பெரிய கட்டடங்கள் தோன்றி விட்டன. இன்று பூனா செல்லும் புதியவர், இவ்விடுதியைப் பாராது மீள்வதில்லை எனின், இதன் இன்றைய நிலைமையை என்னென்பது! விதவையர் விடுதியில் உயர்தர கலாசாலையும் ஏற்படுத்தப் பட்டது. விதவைகட்குத் தையல், பின்னல், சமையல் முதலிய வீட்டு வேலைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றப் பாடங்களும் போதிக்கப்படுகின்றன. பகவத் கீதை கற்பிக்கப்படுகின்றது. விதவையர் நோன்பு, விரதம் முதலியவற்றை அவரவர் விருப்பப் படி அநுஷ்டிக்கலாம். அவரவர் பழக்க வழக்கங்களைப் பின்பற்றலில் தடையொன்றும் இல்லை. சுருங்கக் கூறின், அவ்விடுதி அறிவையும் ஆன்மாவையும் வளர்க்கும் இன்ப விடுதியாக-அறிவுக் களஞ்சியமாக-ஒழுக்கத்தின் நிலைக்களனாக ஒளிர்கின்றது. அதில் இருந்து பயிற்சி பெற்ற விதவையர் பலர் பி. V., எம். V., முதலிய உயர்தர பட்டங்களைப் பெற்று நன்னிலை யில் இருந்து வருகின்றனர்; அவர் அனைவரும் கார்வே மஹானை வாயார வாழ்த்துகின்றனர். மஹிலா வித்தியாலயம் கார்வேயின் பேருழைப்பையும் தந்நலமற்ற சேவையையும் கண்டு களித்த பெருமக்கள் பலர், தம் சிறு பெண்கட்கும் விடுதி ஒன்றை ஏற்படுத்துமாறு இவரை வேண்டினர். பெண்களுக்கு உழைப்பதையே பெருங்கருமமாகக் கொண்ட கார்வே, சிறு விடுதி ஒன்றை ஏற்படுத்திப் பெண்களைச் சேர்த்து உணவளித்தார்; அவர்களை வெளிக்கலாசாலைகட்கு அனுப்பிக் கல்வி கற்கச் செய்தார்; பெண்கள் தொகை பெருகலாயிற்று. உடனே இவர், கோகலே ஏற்படுத்திய இந்திய சேவா சங்கத்தைப்போல- இந்தியப் பெண்கள் சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார்; தம் சொத்தை அச்சங்கத்திற்கே உதவினார்; இவரைப் பின்பற்றி வேறு சிலரும் இங்ஙனம் செய்தனர். இறுதியில் இவர் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் விதவையர் விடுதிக்கு அருகில் நிலம் வாங்கி மஹிலா வித்தியாலயம் என்னும் பெண்கள் விடுதி கட்ட முடிவு செய்தார்; பலர் தம்மால் இயன்ற அளவு பொருள் உதவி செய்தனர். வாடியா என்னும் செல்வச் சீமானின் ஆதியை நிர்வகித்துவரும் பெருமக்கள் இக் கட்டடம் கட்டப் பெருவாரியாக உதவி செய்தார்கள். கட்டடம் கட்டி முடிந்தது. அஃது இன்றும் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்படி அமைந்துள்ளது. பின்பு கார்வே, விதவைகள் விடுதியையும் இக்காலாசாலையயும் சங்கத்தையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் அமைத்து, மகிலாரமம் என்று பெயரிட்டனர். இந்தியப் பெண்கள் பல்கலைக் கழகம் பெண்கள் பல்கலைக் கழகம் ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டும் என்பது கார்வேயின் கனவு. அதற்கு ஏற்றாற்போல இவர், ஜப்பானில் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் சர்வகலா சாலையைப் பற்றிய விவரங்களைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தார்; அறிந்த அன்று முதல் பல்கலைக் கழக நினைவு இவர் உள்ளத்தில் வேரூன்றியது. இவர் தாம் தலைமை வகித்து நடத்திய ஒரு மஹாநாட்டில் (1915-ஆம் ஆண்டு) தமது பெரு விருப்பத்தை வெளியிட்டார். இவர் அன்று முதல் நாடெங்கும் சுற்றி அலைந்து, பொருள் சேர்த்தார்; பல்கலைக் கழகத்துக்குரிய செனேட் சபையை 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் அமைத்தார். பின் நாளடைவில் பல்கலைக் கழகம் உருப்பெற லாயிற்று. இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் இரண்டாம் மொழி யாகவும் தாய்மொழி (மஹாராஷ்டிரம்) முதல் மொழியாகவும் இருத்தல் கவனிக்கத்தக்கது. சரித்திர பாடம்,, வீட்டு வேலைகட்கு உரிய பாடம் என்பன கட்டாயப் பாடங்கள் ஆகும். எல்லாப் பாடங்களும் தாய் மொழியிற்றான் கற்பிக்கப்படுகின்றன. இப்பல்கலைக் கழகம் அரசியலார் உதவியை விரும்பவில்லை; அதனால் கார்வே விருப்பப்படி பயன் தரத்தக்க முறையில் பெண்கல்வி அளிக்கப்படுகிறது. இதனிற் படிக்கும் பெண்கள் பிற பல்கலைக் கழகப் பட்டதாரிகளை விட எவ்விதத்தும் இழிந்தவர் இல்லை என்பது பொது மக்கள் கருத்தாகும். ஆசிரியர் பயிற்சிக்கூடம் இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தாற் போலப் ஆசிரியர் பயிற்சிக்கூடம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. சங்கீதம், ஒழுக்கம், மதக்கல்வி, கைத்தொழில், பொது அறிவு முதலிய பயன்தரத்தக்க போதனைகள் அனைத்தும் இங்குத் தரப்படுகின்றன. இக் கலாசாலையில் தேறிய பெண்கள் வியக்கத்தக்க முறையில் போதிக்கின்றனர் என்பது பொது மக்கள் கருத்தாகும். பொருள் உதவி இப்பெரியாருடைய சலியா உழைப்பையும் ஊக்கத்தையும் கண்டு வியந்த பலர் பொருள் உதவி செய்தனர். சர். விதல்தா டி. தாக்கர்சி என்னும் கனவான் மேற்கூறிய சர்வகலாசாலைக்கெனப் பதினைந்து லக்ஷம் ரூபாயை ஒதுக்கிவைத்து, அதன் வட்டியாக ஆண்டு தோறும் வரும் 52,500 ரூபாயைச் சர்வகலாசாலைக்கு உதவினார். பல்கலைக் கழக விரிவு கார்வே, இப்பொருள் உதவியோடு நில்லாமல், உலகெலாம் சுற்றிப் பெரும் பொருள் திரட்டினார். அதன் பயனாக, இன்று இந்தியப் பெண்கள் பல்கலைக் கழகம் மிக்க பெருமை பெற்று விளங்குகின்றது. பூனா, பம்பாய், பரோடா, அகமதாபாத்து என்னும் நான்கு நகரங்களில் நான்கு கல்லூரிகளும்; ஹிங்கினி, பூனா பம்பாய், பரோடா, சூரத், அகமதாபாத்து, இராஜகோட்டை, பகவன் நகர், நாகபுரி, ஐதராபாத்து, சிந்து, மால்வன், பெல்காம், சங்கிலி, சதாரா என்னும் பதினைந்து நகரங்களில் பதினைந்து உயர்தரக் கலாசாலைகளும்; ஷோலாப்பூர், இரத்தினகிரி, வாய் என்னும் மூன்று இடங்களில் மூன்று நடுத்தரக் கலாசாலைகளும்; ஹிங்கினி என்னும் இடத்தில் போதனாமுறைக் கல்லூரியும் மேற்கூறப்பட்ட பெண்கள் பல்கலைக் கழகத்தின் சார்பாக நடந்து வருகின்றன. முடிவு இந்தியாவில், தமக்கு வயதுவந்த நாள்முதல் பெண்கள் முன்னேற்றத்துக்கே தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் அளித்து, இடைவிடா உழைப்பால் ஆயிரக்கணக்கான பெண்கட்குக் கல்விச் செல்வத்தை அளித்துவரும் கார்வே என்னும் இம்மஹான், ஒவ்வோர் இந்தியர் உள்ளத்திலும் இருக்கத்தக்கவர் ஆவர். இவரது சமூக சேவையைப் பாராட்டி அரசாங்கத்தார் இவருக்கு இவருக்குக் கெய்சரி ஹிந்தி வெள்ளிப் பதக்கம் அளித்துப் பெருமைப்படத்தினர். இப்பெரியாருக்கு இப்பொழுது எண்பத்தேழு வயதாகிறது. இவர், இம்முதுமைப் பருவத்திலும் பெண்கள் முன்னேற்றத்தில் பேருக்கம் காட்டி வருகின்றனர். நம் தமிழ்நாட்டுக் கல்விமான்களுட் சிலரேனும் இப்பெரியாரைர்போலப் பாடுபடின், தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிலைமை உயரவழியுண்டு. இவ்வுணர்ச்சி தமிழர்க்கு உண்டாகுமா? 5. இராஜேந்திர சோழன் சங்க காலம் புறநானூறு, அகநானூறு முதலிய நூல்களில் உள்ள பழம் பாக்களைப் பாடிய புலவர் காலமே சங்க காலம் என்பது. அக்காலத்தின் தொடக்கம் இதுவெனத் திட்டமாகக் கூறுதற் கில்லை. ஆனால் அதன் இறுதிக்காலம் (பாக்கள் பாடிய காலமும் அவை தொகுக்கப்பெற்ற காலமும் உட்பட) ஏறத்தாழக் கி. பி 400 எனலாம். சங்க காலச் சோழர் சங்க காலத்தில் முதற் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி,நெடுமுடிக்கிள்ளி முதலிய சோழ மன்னர் பலர் வாழ்ந்திருந்தனர் என்பது சங்க நூல்களால் தெரிகிறது. இவருள் இரண்டாம் கரிகாலன் என்ற கரிகால் வளவன் ஈடும் எடுப்பும் அற்றவன்; தமிழகம் முழுவதையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட பெருவீரன்; வட இந்தியாவில் இருந்த வச்சிர, அவந்தி, மாளுவ வேந்தர்களிடம் பரிசு பெற்று; மீண்டவன்; இமயத்திற் புலிக்கொடி நாட்டிய தமிழரசன்; காவிரிக்குக் கரை இடுவித்தவன் என்று தமிழ் நூல்கள் அவனைப் பலப்பட புகழ்கின்றன. நெடுமுடிக்கிள்ளி என்பவன் மணிமேகலை காலத்துச் சோழ வேந்தன் ஆவன். இடைக்காலச் சோழர் சங்க காலத்து இறுதியிலேயே தொண்டை நாடு, களப்பிரர் ஆட்சிக்கும் பல்லவர் ஆட்சிக்கும் உட் பட்டது. ஏறத்தாழக் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாடு களப்பிரர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்குட்பட்டது; கி. பி ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை பல்லவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இங்ஙனம், புகழ்பெற்று விளங்கிய சோணாடு ஏறத்தாழ ஐஞ்ஞூறு ஆண்டுகள் களப்பிரர்-பல்லவர் ஆட்சியில் இருந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த சோழர் உறையூர், திருவாரூர், பழையாறை என்னும் மூன்று பழைய ஊர்களைத் தன்னகத்தே பெற்ற மிகச் சிறிய நிலப் பகுதியை ஆண்டுவந்தனர். இங்ஙனம் ஆண்டவருள் மங்கையர்க்கரசியாரது தந்தையான சோழன் ஒருவன் ஆவன்; இறுதிப்பல்லவ அரசனான அபராஜிதவர்மனைத் தோற்கடித்துப் பழையபடி சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் ஒருவன். ஆதித்தன் மரபினர் பல்லவப் பேரரசை ஒழித்து அதன்மீது சோழப்பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழனும் அவன் மரபினரும் பிற்காலச் சோழர் எனப்பட்டனர். அவருள் ஆதித்தன் மகனான முதற் பராந்தகன் பேரரசன்; பாண்டிய நாட்டை வென்று அதனைச் சோழப் பெரு நாட்டுடன் சேர்த்துக் கொண்டவன்; தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த சிவபக்தன். பராந்தகனுக்குப் பின் பேரரசனாக விளக்கமுற்றுத் தன் புகழ் நிறுத்தியவன் முதல் இராஜராஜன். இவன் காலம் கி. பி. 985-1014. இவன் பல நாடுகளை வென்று கோதாவரி யாறுமுதல் குமரி முனைவரை சோழப் பேரரசை நிலை நிறுத்தி ஆண்டவன்; ஈழத்தை வென்ற பெரு வீரன்; விமலாதித்தன் என்ற சாளுக்கியனுக்குத் தன் மகளைக் கொடுத்து, முற்றிலும் புதிய மரபினரான கீழைச் சாளுக்கிய ருடன் உறவு கொண்டவன்; உலகம் இன்றும் வியந்து போற்றும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பல ஆண்டுகள் முயன்று கட்டிய கட்டடக் கலைஞன்; நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய திருமுறைகளை முறைப் படுத்திய சிவ பக்தன். இவன் காலத்தில் தமிழ்நாட்டுக் கோவில் களில் இசை, நடனம், நாடகம் என்ற நாகரிகக் கலைகள் செழிப்புற வளர்ச்சியுற்றன; அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலிய நாயன்மார் உருவச் சிலைகள் கோவில்களில் எடுப்பிக்கப் பெற்று விழா, பூசை முதலியன சிறப்புற நடந்தன. இவன் மிகச் சிறந்த சிவ பக்தனாக விளங்கியதால் சிவபாத சேகரன் எனப் பாராட்டப்பட்டான் அரச மாதேவியர் இவன் மனைவியருட் சிறந்த உலக மகா தேவி என்பவள், திருவையாற்றில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி மகிழ்ந்தாள். இவன் தமக்கையான குந்தவை என்பவள், செய்துள்ள கோவில் திருப்பணிகள் பலவாகும். இவ்வம்மை சோழப் பெரு நாட்டின் தலைநகரமான தஞ்சாவூர் அரண்மையில் இல்லாமல், பழையாறையில் இருந்த அரண்மனை யிற்றான் தங்கி இருந்தாள். இராஜராஜன் பாட்டியாரும் கண்டராதித்தர் மனைவியாருமான செம்பியன் மாதேவியார் என்ற மூதாட்டியாரும் பழையாறை அரண்மனையிலேயே இருந்தனர். இவ்வம்மையாரைச் சைவ சமயத் தாய் என்னலாம். இவரது சிவ பக்தி கூறும் தரத்தன்று. இவர் ஏறத்தாழ முப்பது பெரிய சிவன் கோவில்களில் பல திருப்பணிகள் செய்துள்ளார். இவரால் கற்கோவில்களாக மாறிய பழைய பாடல் பெற்ற கோவில்கள் பல; அமைப்பில் பெரியனவாக மாற்றப்பட்ட கோவில்கள் பல; இவரால் நிபந்தங்கள் விடப்பட்ட கோவில்கள் பல. இம்மூதாட்டியார் எண்பது ஆண்டுகட்கு மேலும் வாழ்ந்திருந்தவர். இராஜேந்திரன் இளமை பருவம் இம் மூதாட்டிகள் இருவரிடமே உலகம் போற்றும் பெரு வீரனான கங்கை கொண்ட சோழன் எனப்பட்ட இராஜேந்திர சோழன் வளர்ந்து வந்தான். இராஜராஜன் தன் தமக்கையிடமும் பாட்டியாரிடமும் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவன். ஆதலின் அப்பெருமகன், தன் செல்வ மகனான இராஜேந்திரனை அப்பெருமாட்டிகள் அரவணைப்பில் விட்டு வைத்தான். சிறந்த ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் முதிர்ந்த சிவ பக்தியும் பெற்று விளங்கிய மூதறிவுடைய அப்பெருமாட்டிகளால் வளர்க்கப் பட்ட இராஜேந்திரன் ஒழுக்கமும் கல்வியும் பக்தியும் கொண்டு விளங்கினான்; பண்டித சோழன் என்று பாராட்டப் பெற்ற சோழன் இவன் எனின், இவனது தமிழ்ப் புலமையை என்னென்பது! இளவரசன் இராஜராஜன் வாலிபப் பருவம் கடந்த பின்னரே பட்டம் பெற்றான் என்று ஆராய்ச்சியாளார் கூறுகின்றனர். அங்ஙனமே இராஜேந்திரனும் ஏறத்தாழ 40 அல்லது 45-ஆம் வயதிற்றான் பட்டம் அடைந்திருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. ஆகவே, இராஜேந்திரன் தன் இளவரசுப் பருவத்தைத் தன் தந்தை யுடன் இருந்தே கழித்தவனாவன். அஃதாவது, இராஜராஜன் செய்த போர்களில் பெற்ற வெற்றிகளில் இராஜேந்திரனுக்கும் பங்கு உண்டு. அதனால், இவன் அரசனாதற்கு முன்னரே சோழப் பெரு நாட்டையும், அதன் அரசியல் அமைப்பையும் அதன் பகைசரையும் அவர்களை ஒடுக்க வேண்டிய வழிகளையும் அரசற்குரிய பிற கடமைகளையும் நன்கு அறியப் போதிய வாய்ப்பு இருந்தது என்னலாம். ஏனவே, இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரனது இளவரசுக் காலத்தில் நிகழ்ந்த செயல்கள் யாவை என முதலிற் கவனிப்போம். இராஜராஜன் போர்ச் செயல்கள் 1. இராஜராஜன், தன்னை மதியாதிருந்த பாண்டிய மன்னனையும் அவனுக்குத் துணையாக வந்த சேரனையும் இலங்கை வேந்தனையும் போரில் முறியடித்தான்; சேரனது காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான்; இங்ஙனம் பாண்டி யனையும் சேரனையும் வென்றி கொண்டதால் மும்முடிச் சோழன் எனப் பெயர் பெற்றான். 2. இராஜராஜன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தை அடிப்படுத்தினான்; அப்பிரதேசத்துக்கு இராஜேந்திரனை மஹா தண்டநாயகனாக நியமித்தான். 3. ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்று, வட இலங்கையைக் கைப்பற்றி அதற்கு மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயர் ஈந்து மீண்டான். அவன் காலத்தில் அநுராதபுரம் அழிக்கப்பட்டுப் பொலந்நருவா என்பது தலைநகரம் ஆக்கப் பட்டது. 4. சேலம், வட ஆர்க்காடு, பல்லாரி, கோலார், முதலிய நிலப்பகுதி நுளம்பபாடி எனப்பெயர் பெற்றிருந்தது. சோழன் அதனை அடிமைப்படுத்தினான்; தழைக்காட்டைத் தலைநக ராகக் கொண்ட கங்க பாடியையும் மைசூர் ஜில்லாவின் பல பாகங்களைக் கொண்ட தடிகைபாடியையும் வென்றான். 5. மேலைச்சாளுக்கியருடன் ஒன்பது லக்ஷம் வீரரைக் கொண்ட சோழர் படை போர் செய்து, துங்கபத்திரைக்கு இப்பாற்பட்ட நிலப்பகுதியைக் கைக்கொண்டது. 6. இராஜராஜன் கீழைச் சாளுக்கியருடன் போர் செய்து வெற்றி பெற்றான்; சக்திவர்மன்என்பவனை அரசனாக்கி, அவன் தம்பியான விமலாதித்தனுக்குத் தன் மகளான குந்தவையை மணஞ்செய்து கொடுத்தான். 7. இராஜராஜன் மரக்கலஞ் செலுத்திப் பன்னீராயிரம் சிறு தீவுகளைக் கொண்ட மால்டிவ் தீவுகளைக் கைப்பற்றினான்; முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் கொண்டவன் எனப் பெயர் பெற்றான். இவ்வெற்றியைக் கொண்டு கவனிக்குங்கால், அவனிடம் நல்ல பயிற்சி பெற்ற கப்பற்படை இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகும். இப்போர்களில் எல்லாம் இராஜேந்திரன் பங்கு கொண்டிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இராஜேந்திரன் செய்த போர்ச்செயல்கள் இராஜேந்திரன் கி. பி. 1012-ல் சோழர் அரியணை ஏறினான். அக்காலத்தில், இன்றுள்ள சென்னை மாகாணமும் மைசூர் நாட்டின் பெருப்பகுதியும் இலங்கையும் சோழப் பெருநாடாக விளங்கின. இவன் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் அரசாண்டான். இவன், தன் தந்தை செய்தது போலவே, தன் மைந்தனான இராஜாதிராஜனுக்குத் தான் பட்டம் பெற்ற ஏழாம் ஆண்டிலேயே இளவரசுப் பட்டம் சூட்டினான்; மற்றொரு மகனான சுந்தர சோழனைப் பாண்டிய சேர நாடுகட்குத் தலைவனாக நியமித்தான். இவன் இங்ஙனம் சோழப் பெரு நாட்டைப் பல மாகாணங்களாகப் பகுத்துப் பொறுப்புள்ள வரிடம் ஆட்சியை ஒப்புவித்ததனால், புதிய போர்கள் செய்ய வசதி பெற்றான்; பெரும்படை திரட்டிப் பிற நாடுகளைக் கைக்கொள்ளப் புறப்பட்டான். 1. இவன், கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரைக்கும் இடைப் பட்ட இடைதுறை நாடு, ஹைதராபாத் சமதானத்தில் உள்ள கொள்ளிப் பாக்கை, மான்யகேடம் என்று வழங்கப்பட்ட மண்ணைக்கடக்கம் என்னும் நகரம் முதலியவற்றைக் கைப் பற்றினான். 2. ஈழ மண்டலம் முழுவதும் இராஜேந்திரன் வசமாயிற்று; அங்குப் பல கோவில்கள் தமிழ் முறையிற் கட்டப்பட்டன. 3. இவன் மேலைச் சாளுக்கியருடன் போர் செய்து வென்றான். 4. இவனது படை கங்கை யாறுவரை சென்று மத்திய மாகாணம், கோசலம், ஒட்டர தேசம், தண்டபுத்தி, தக்கண லாடம், வங்காளம் முதலிய நாடுகளை வென்று, கங்கை நீரைத் தன் நாட்டுக்குக் கொணர்ந்தது; அதனால் இவன், கங்கை கொண்ட சோழன் எனப் புகழ்ப் பெயர் பெற்றான்; இப்படை யெடுப்பினால் பெருஞ்செல்வத்துக்கு உரியவன் ஆனான். 5. இராஜேந்திரன் பண்பட்ட கடற்படையைச் செலுத்திக் கடாரம் (பர்மாவில் இருப்பது) என்னும் கடற்கரைப் பிரதேசத்தையும்; மலேய தீபகற்பத்தில் உள்ள மாயிருடிங்கம், இலங்காசோகம், மாப்பப்பாளம், மேவிலிப்பங்கம், வளைப் பந்தூறு, தலைத்தக்கோலம், மாதமர்லிங்கம் முதலிய இடங்களையும்; சுமத்ரா தீவின் கீழ்க்கரையில் உள்ள பனி (பன்னை) ஊர், மலையூர் என்பனவற்றையும்; சுமத்ராவின் வட பகுதியில் உள்ள இலாமுரி தேசத்தையும், நிக்கோபார் எனப்படும் மாநக்கவாரம் தீவுகளையும் கைக்கொண்டான். இங்ஙனம் கடல் கடந்து மலேயாத் தீபகற்பத்தின் மீதும் சுமத்ரா முதலிய தீவுகள் மீதும் படையெடுத்து வென்ற தமிழரசர் வேறு எவரும் இலர் என்பது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திரன், தனது கங்கா விஜயத்தின் அடையாளமாகத் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உடையார் பாளையம் தாலுகாவில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் ஒரு புதிய - பெரிய நகரத்தை அமைத்தான்; அதனில் கங்கைகொண்ட சோழீ வரம் என்னும் கோயிலைக் கட்டினான்; பக்கத்தில் சோழ கங்கம் என்னும் பெரிய ஏரியை எடுப்பித்தான். கங்கை கொண்ட சோழபுரம் இன்று அழிவுற்ற நிலையில் உள்ளது. ஆயினும் இதனைக் காண்பவர், இஃது ஒரு காலத்தில் பெயர் பெற்ற பெரிய நகரமாக விளங்கியது என்னும் உண்மையை உணர்தல் கூடும். இதன் பக்கத்துக் கிராமங்கள் பெரிய நகரத்தின் பல பாகங்கட்கு இடப்பட்டிருந்த பெயர்களைப் பெற்றனவாகவே இருக்கின்றன. இந்நகரம் இன்று பார்ப்பவர் உள்ளத்தை வருத்தச் செய்யும் பரிதாப நிலையில் உள்ளது; காடும் செடியும் வளர்ந்து பாழாய் கிடக்கின்றது. கங்கை கொண்ட சோழீவரம் இந்நகரத்தில் உள்ள கோவில் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலைப் பெரிதும் ஒத்துள்ளது; உருவத்தில் அதனை விடச் சிறியது; ஆயின், சித்திர வேலைப்பாட்டில் அதனினும் சிறந்தது. இதன் கோபுரங்களும் மதிற் சுவர்களும் இடிந்து கிடக்கின்றன. கருவறையும் அதைச் சுற்றியுள்ள பிராகாரமுமே இன்று காணத்தகும் நிலையில் இருப்பவை. விமானம் பெரியது; ஒன்பது அடுக்களைக் கொண்டது; அதன் நாற்புறமும் மாடங்களும் வாசல்களும் அமைந்துள்ளன. விமானத்தில் உள்ள அழகிய பதுமைகள் கண்ணைப் கவரத் தக்கவை. இந்த விமானம் 170 அடி உயரம் உடையதாம். கோவில் மூலதானத்தில் உள்ள சிவ லிங்கம் ஒற்றைக் கல்லால் ஆனது; மிகப் பெரியது. அஃது இப்பொழுது அதன் உச்சியில் இரண்டாகப் பிளக்கப்பட்டு இருக்கிறது. கருவூர்த்தேவர் இக்கோவிலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது. இவ்வியத்தகு பெரிய கோவிலின் சுற்று மதில் கருங்கற்களால், இயன்றது; மூன்றடி அகலமுடையது. இருபுறச் சுவர்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன. அக்கற்கள் கொள்ளிடத்தில் அணையைக் கட்டக் கொண்டு செல்லப்பட்டன. கோவிற் சிற்பங்கள் கவனிப்பார் அற்ற இன்றைய பரிதாப நிலையிலும், அழகொழுகக் காட்சியளிக்கின்றன. கோவிலின் அர்த்த மண்டபத்தை அடையும் பக்க வாயிற் படிக்கட்டுகள் பக்கமாக உள்ள சண்டீசப் பதம் உணர்த்தும் சிற்பம் வியக்கத் தக்கது. சிவபிரான் உமையம்மையோடு அமர்ந்து தமது மடித்த வலக்கால் அடியில் சண்டீசலை அமரச்செய்து, அவர் முடி மீது தமது கொன்றை மாலையைச் சூட்டிச் சண்டீசப்பதம் தந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் அச்சிற்பம் இராஜேந்திரன் காலத்தது. ஆயின், அஃது இன்று செய்தாற்போல எழில் ஒழுகக் காட்சி யளிக்கின்றது. மூலதானத்து எதிரில் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு, விஜயன் தவம் முதலியவற்றைக் குறிக்கும் சிற்பங்களும் விமானத்தைச் சுற்றிலும் அணி செய்து கொண் டிருக்கும் சிற்பங்களும் பார்க்கத்தக்கவை. திருச்சுற்றாலையின் ஒரு பகுதி அழியாமல் இருக்கின்றது. மிகுந்த உயரமான வாயிற் காவலர் சிலைகள் பார்ப்பவர் கவனத்தைத் தம்பால் இழுப்பன வாகும் அழிந்துபட்ட இந்நிலையிலும் அக்கோவிலின் எழில் விளங்குகிறது எனின், இராஜேந்திரன் காலத்தில் அக்கோவில் என்ன நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே விளக்கமாகுமன்றோ? சோழ கங்கம் சோழ கங்கம் என்னும் ஏரி சிறந்த என்ஜினியர்களையும் வியக்கச் செய்வதாகும். இந்தியர் கட்டிய ஏரிகளில் சிறந்ததென்று கருதப்பட்டது போஜபுரத்து ஏரியாகும். ஆயின், இன்றைய ஆராய்ச்சியாளர், சோழ கங்க ஏரியே இந்தியாவிற் சிறந்ததாகும் என்று கருதுகின்றனர். இவ்வேரி தெற்கு வடக்காகப் பதினாறு மைல் நீளமுள்ளது; மிக்க உயரமும் பலமும் பொருந்திய கரையை உடையது. கொள்ளிடத்திலிலுந்து அறுபது மைல் நீளமுள்ள கால்வாய் மூலம் இவ்வேரிக்குத் தண்ணீர் கொண்டு வர இராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தான்; அங்ஙனமே வெள்ளாற்றிலிருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது. இவ்வளவு வசதிகளை அமைத்து அப்பழங்காலத்தில் இவ்வளவு பெரிய ஏரி அமைக்கப்பட்டது எனின், இராஜேந்திரன் ஆற்றலை என்னென்பது! அரச குடும்பம் இராஜேந்திர சோழனுக்கு மனைவியார் பலர் இருந்தனர்; அவர்கள் திரிபுவன மாதேவியார், முக்கோக்கிழான் அடிகள், பஞ்சவன் மாதேவியார், வீர மாதேவியார் முதலியோர் ஆவர். பிள்ளைகளும் பலர் இருந்தனர்; அவர்கள் இராஜாதிராஜன், இராஜேந்திர தேவன், வீர ராஜேந்திரன் முதலியோர் ஆவர். பெண்கள் இருவர் இருந்தனர். அவர்கள் அருண்மொழி நங்கை, அம்மங்கா தேவி என்பவராவர். பிற செய்திகள் அரசன் வட மொழியையும் தென் மொழியையும் வளர்த்து வந்தான் என்பதை இவன் சாஸனங்களைக் கொண்டு அறியலாம். இவன், ஆசார்ய போகமாக ஆண்டுதோறும் பல நிலங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் பூசை செய்து வந்த சர்வசிவ பண்டிதருக்கும் அவருடைய சீடர்க்கும் அளிக்க ஏற்பாடு செய்தான். நாகப் பட்டினத்தில் தந்தை காலத்தில் கட்டத் தொடங்கிய புத்த விஹாரம். இவன் காலத்திற்றான் முற்றுப் பெற்றது. இராஜேந்திரன் காலத்தில் சீன தேசத்தார் சோழ நாட்டுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். சோழனிட மிருந்து பிரதிநிதிகள் சீன நாடு சென்றனர்; சீனத்திலிருந்து பிரதிநிதிகள் சோணாடு வந்தனர். கடல் வாணிபம் சிறந்த நிலையில் இருந்தது. உள்நாட்டு வாணிபமும் உயர்வடைந்து இருந்தது. குடிகள் உள்நாட்டுக் குழப்பம் இன்றி, அமைதியாகக் காலங் கழித்தனர். இராஜேந்திரன் சிறந்த கல்விமான்; பக்திமான். இவன் தன் காலத்தில் இருந்த சைவ-வைணவ மதங்களை இரு கண்கள் போல நடத்தி வந்தான். சோழ நாட்டில் இருந்த தேவாரப் பள்ளிகளை மேற்பார்க்கவோ- கோவில்களில் இருந்த தேவார ஓதுவார்களை மேற்பார்க்கவோ அறியோம்; தேவார நாயகம் என்ற அரசியல் உத்யோகதன் ஒருவன் இராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் இருந்தான் என்பது காஞ்சிபுரத்துக் கயிலாச நாதர் கோவில் கல்வெட்டு ஒன்றால் தெரிகிறது. இவன் தன் பெயரால் பெரும்பாலும் பொற்காசுகளை அச்சிட்டு வழங் கினான். வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கில் இருந்தன. வேந்தனிடம் குதிரைப் படை, யானைப் படை காலாட்படை, கப்பற்படை ஆகிய நாற்படைகளும் இருந்தன. இங்ஙனம் தமிழர் புகழைக் கடல் கடந்தும் பரப்பிய சோழ வேந்தனை கங்கை கொண்டு மீண்ட பெருவீரனை குடிகளை நியாய முறையில் அமைதியாக ஆட்சி புரிந்த பேரரசனைத் தமிழர் மறத்தல் இயலுமோ? கூறுங்கள். இப்பேரரசன் புகழ் வாழ்க! 6. பண்டைத் தமிழ் கலைகள் கலைகள் அறுபத்து நான்கு என்பர். அவற்றுட் பல பண்டைத் தமிழர் வாழ்வில் காணப்பட்டன என்பதை, அழிந்தன போக எஞ்சியனவாக வுள்ள பழைய நூல்களாலும் அவற்றின் உரைகளாலும் அறியலாம். இசைக் கலை உலகத்து நாகரிகக் கலைகளுள் இசைக் கலை ஒன்றாகும். இதன் சிறப்பை உணர்ந்தே தமிழர் முத்தமிழுள் இதனை நடு நாயகமாக வைத்தனர். சிலப்பதிகாரம் அரங்கேற்று கதையைக் கொண்டும், அதற்கு அடியார்க்கு நல்லார் வரைந்துள்ள விரிவுரையைக் கொண்டுமே இசைத் தமிழைப் பற்றிய பல உண்மைகளை உணர்தல் கூடும். பழைய காலத்தில் தோற்கருவி வகைகளிற் பலவும், யாழ் வகைகளில் சகோட யாழ், செங்கோட்டி யாழ், மகர யாழ் முதலாகப் பலவும் தாள வகையிற் பலவும் இருந்தன என்பது தெரிகிறது. ஆயிரம் நரம்புகளை உடைய யாழும் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இசை சங்கங்கள் ஆங்காங்கே இருந்தன. இசைப் புலவர் பலர் இசை பற்றிய ஆராய்ச்சி நிகழ்த்தி வந்தனர்; இசை நூல்கள் பல யாத்தனர். இச்செய்திகளைப் பரிபாடல், சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலிருந்து அறியலாம். இசை ஆசிரியன் நடிக மாதர்க் குரிய ஆசிரியர் பலருள் ஒருவன் என வரும் சிலப்பதிகாரக் குறிப்பைக் காண்க. நாடகக் கலை பண்டைத் தமிழராய நம் முன்னோர் நாடகத் தமிழையும் முத்தமிழுள் ஒன்றாகக் கொண்டனர். தமிழ் நாடகம், கூத்து எனப்படும். அது வேத்தியல், பொதுவியல் என இருவகைப்படும். அவை முறையே அரசர்க்காடும் கூத்து, குடிகட்காடும் கூத்து என்பன. இவ்விருவகைக் கூத்துகள் இங்கிலாந்தில் ஷேக்பியர் காலத்தும் இருந்தமை இங்கு அறியத் தக்கது. நாடக நூல்கள் பல இருந்து அழிந்தன என்பதை உரைகளால் அறிதல் கூடு. நாடகக் கலைக்கு உரியாருடைய இலக்கண முதலியவற்றைப் பற்றிக் கூறும் நூல்கள் பல இருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியாலாம்.1 ஓவியக் கலை ஓவியக் கலை பற்றிய நூல் தமிழில் இருந்தது என்பதை, ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் என்னும் மணிமேகலை அடியால் அறியலாம். சிலப்பதிகார வேனிற்காதை உரையில் அடியார்க்கு நல்லார், ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள; அவற்றுள் இருத்தலாவது என்று விரிவாகக் கூறிச் செல்லலை நோக்க, அவரது காலம்வரை ஓவிய நூல் தமிழகத்தில் இருந்ததென்பதை அறியலாம். ஓவியம் வல்லார் கண்ணுள் வினைஞர் எனப்பட்டனர். இத்தொடர்க்கு, நோக்குவார் கண்ணெதிரே தம் தொழிலை நிறுத்துவோர் என்பது பொருள் என்பர் நச்சினார்க்கினியர். எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர், என்னும் மதுரைக் காஞ்சி அடிகளை நோக்குக. கட்டடங்களில் கண்கவரும் சித்திரங்களைத் தீட்டுதல் தமிழர் மரபு என்பதை, சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும், எனவரும் மணிமேகலை அடிகளால் அறியலாம். ஆடைகளில் சித்திரங்களை எழுதும் வழக்கமும் பழந் தமிழரிடம் இருந்தது. மடலேறும் தலைவன், தலைவியைப் போல ஆடை ஒன்றில் சித்திரம் எழுதுதல் வழக்கம் என்னும் செய்தியால் ஒருவரைப் பார்த்துச் சித்திரம் வரைதலும் உண்டு என்பதையும் அறியலாம். ஓவியக்காரர் தாம் புனைய விரும்பும் சித்திரக் குறிப்புகளை முதலிற் குறித்துக் கொள்ளல் (Sketch) வழக்கம்; அதன் பின்னரே வர்ணங்களை அமைப்பர். இங்ஙனம் முதலிற் குறித்துக் கொள்ளல் புனையா ஓவியம் எனப்படும். மனையகம் புகுந்து மணிமே கலைதான் புனையா ஓவியம் போல நிற்றலும், எனவரும் மணிமேகலை அடிகளையும், புனையா ஓவியம் வண்ணங்களைக் கொண்டு எழுதாத வடிவைக் கோட்டின சித்திரம் என வரும் ஐயரவர்களின் உரையையும் காண்க. திரைச் சீலைகளிலும், கட்டிலைச் சுற்றி அமைக்கப்படும் சீலைகளிலும் படுக்கை மேல் விரிக்கும் துணிகளிலும் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. சித்திரங்களை அமைத்து நெய்வதும் உண்டு. செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாஅம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் என வரும் மணிமேகலை அடிகள் இவ்வுண்மையைப் புலப்படுத்தும். இதுகாறும் கூறிய உண்மைகளால் நம் முன்னோராய பழந்தமிழரது ஓவியக் கலைத்திறனை ஓரளவு உணர்ந்து இன்புறலாம். சிற்பக் கலை மண், செம்பு, பொன், தந்தம், மரம், கல், சுண்ணாம்பு முதலியவற்றால் பலவகைப் பாவைகள் முதலியன செய்யப்பட்டு வந்தன என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களால் அறியலாம். மண்ணைக் கொண்டு பாவை அமைப்பவர் மண்ணீட்டாளர் எனப்பட்டார். தமிழர் சிற்பக் கலையில் சிறந்தவர் என்பதற்கு நூல் ஆதாரங்கள் வேண்டுவதில்லை. அவர் திறமையைப் பற்றிப் புகழ் வாய்ந்த கோவில்களும் மஹாபலிபுரத்தில் உள்ள ஒற்றைக் கல் கோவில்களுமே சான்று பகரும். அணிகள் பொன், வெள்ளி இவற்றால் நகைகள் செய்யப்பெற்று நவரத்தினங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. இவற்றைச் செய்யும் பொற்கொல்லர் நவமணிப் பரீக்ஷையில் கைதேர்ந்தவராக இருந்தனர்; பொன் பரீக்ஷையிலும் சிறந்திருந்தனர். கிளிச்சிறை, ஆடகம் எனப் பொன்னில் பலவகை உண்டு என்பதையும், நவமணிகளில் குற்றமும் குணமும் உண்டு என்பதையும் விளக்கும் நூல்கள் பல தமிழில் இருந்தன என்பதையும் சிலப்பதிகாரத் தாலும் அடியார்க்கு நல்லார் உரையாலும் நன்குணரலாம். நெய்தல் நெய்தல் தொழிலில் தமிழர் பெயர் பெற்று இருந்தனர். பருத்தி, எலிமயிர், ஆட்டுமயிர் இவற்றால் சிறந்த ஆடைகள் அக்காலத்தில் நெய்யப்பட்டு வந்தன. இதனை, பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர், என வரும் சிலப்பதிகார அடிகளாலும் அவற்றின் உரையாலும் உணரலாம். கைம்பெண்டிரும் பிற பெண்டிருமே பெரும்பாலும் நூல் நூற்று வந்தனர். ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல், எனவரும் நற்றிணை அடிகளையும், பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன என வரும் பிறநானூற்று அடியையும் நோக்குக. இங்ஙனம் நூற்கப்பட்ட நூல் இழைகளைக் கொண்டு பலநிறக் கச்சுகளும் ஆடைகளும் பூத்தொழில் அமைந்த கலிங்கங்களும் முடிச்சுகளையும் மணிகளையும் ஓரத்திலேயுடைய பட்டுடைகளும் இருந்தன. பாம்பின் சட்டை போல, மூங்கிலில் உரித்த தோல்போல, பால் ஆவியைப் போல, புகையைப்போல என்று ஆடைகள் உவமிக்கப்படுதலின், ஆடைகளில் மிக்க மென்மை வாய்ந்தனவும் இருந்தன என்பது தெரிகிறது. மடைத் தொழில் உணவு சமைத்தல் மடைத்தொழில் எனப்படும். அதனைச் செய்பவர் மடையர் எனப்படுவர். பாகசாதிரம் மடை நூல் எனப்படும். இம்மடை நூலைப் பற்றிய செய்திகளை மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை முதலிய நூல்களிற் காணலாம். பலவகை உணவு வகைகள் காலத்திற் கேற்றவாறு பழந்தமிழர் உட் கொண்டு வந்தனர் என்பதும், உணவு வகைகள் தயாரிக்கப்படும் விதமும் பிறவும் மடைநூலால் அறியலாம். சோதிட நூல் நிமித்தம் பார்த்தல், சோதிடம் முதலியவற்றிலும் பழந்தமிழர் பண்பட்டு இருந்தனர். இக்கலை பற்றிய நூல் தமிழில் இருந்தது. அதில் குறிபார்த்தல், சகுணம் பார்த்தல் முதலியன கூறப்பட்டனபோலும்! கட்டுவிச்சி என்பவள் வெறியாடு மகள். அவள் கட்டுப் பார்த்து நேர்வனவற்றைச் சொல்வாள். வேலன் என்பவன் வெறியாடுபவன். அவன் கழிங்கு பார்த்துக் கூறுபவன். இவரன்றி, அரசன் போர்க்குப் புறப்படத்தகும் சமயம் கூறும் காலக் கணிதர் (கணிகள்) என்பவரும் தமிழ் நாட்டில் இருந்தனர். இவர் அனைவரும் இக்கலையில் வல்லுநராக இருந்தனர். ஆநிரை கவரப் போவதற்கும் சகுனம் பார்த்துப் போதல் தமிழர் மரபு என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். வானக் கலை பண்டைத் தமிழர் வான சாதிரப் பயிற்சியும் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களால் உணரலாம். சந்திரன் பரிவேடங் கொள்ளும் காலத்தில் குறிஞ்சி நில மக்கள் மணம் செய்துகொள்வர். தமிழர், தம் கட்டிலின் மேல் தட்டில் பன்னிரண்டு இராசிகளை எழுதி வைத்திருந்தனர் என்னும் செய்தியை நெடுநல் வாடைப் பாட்டால் அறியலாம். அரசர் பிறந்த நாள் விழாக் கொண்டாடல் மரபு. சனி மீன் முதலிய நக்ஷத்திரங்களின் பெயர்கள் பல சங்க நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழர் மேனாடுகளுடன் கடல் வாணிபம் செய்துவந்தவர் ஆதலின், நக்ஷத்திரங்களைப்பற்றிய அறிவும் பருவ காலங்களைப் பற்றிய அறிவும் சிறப்புற வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதில் வியப்பில்லை அன்றோ? மருத்துவக் கலை தமிழ் மருத்துவம் சித்த வைத்தியம் எனப்படும். வாழையடி வாழையாக வந்த மருத்துவ முறையையே பிற்காலச் சித்தர்கள் எழுதி வைத்தனர். பழைய தமிழ் நூல்களில் மருத்துவன் தாமோதரனார் போன்ற மருத்துவப் புலவர் பலர் இருந்தனர் என்பதும், மருந்து வகைகள் பல இருந்தன என்பதும், பலவகை மூலிகைகள் நோய்களைக் குணப்படுத்த உபயோகிக்கப்பட்டு வந்தன என்பதும் கூறப்பட்டுள்ளன. காவலும் கரவடமும் ஊர்க்காவல், நாடு காவல் என்பன தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள காவல்பொருட்டுப் பிரிவு உண்டு என்று அகப்பொருள் நூல் கூறும். நாட்டையும் ஊரையும் காப்பவர் இன்ன முறையிற் போதல் வேண்டும்-கள்வர் இன்னின்னபடி மறைந்தும் வெளிப்பட்டும் வருவர் - அவர்களை இவ்விவ்வாறு பிடித்தல் வேண்டும் என்பன போன்ற செய்திகளைக் காவலர்க்கு அறிவுறுத்த எழுந்தவையே காவல் நூலும் கரவட நூலும் ஆகும். இவற்றின் விவரம் மதுரைக் காஞ்சி முதலிய நூல்களில் காணக் கிடைக்கிறது. இவ்வொன்றி லிருந்தே பழந்தமிழர் நாகரிக வாழ்க்கையை நாம் நன்கறிந்து கொள்ளலாம். போர்க் கலை போர் இன்ன விதம் புரியவேண்டும் என்பதை அறிவுறுத்தத் தனி இலக்கணம் தமிழில் உண்டு. அதுவே தொல்காப்பியம் புறத்திணை இயலிற் பெரும் பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் நூல்களிலும் அவ்விலக்கணம் கூறப்படுகிறது. நிரைகவர்தல், நீரை மீட்சி; போருக்குப் போதல், போரை எதிர்த்தல்; மதிலை வளைத்தல், மதிலைக் காத்தல்; வெற்றிபெறுதல் என்று போரில் பல பிரிவுகள் உண்டு. போருக்குப் புறப்படுபவர் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிர் முதலியவர்க்கு ஏதம் உண்டாதலைப் பறையறைந்து அறிவித்துக் காவலிடங்கட்குப் போகச் செய்வார்: ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இருக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும்; நும்மரண் சேர்மினேன அறத்தாறு நுவலும் பூட்கை, என வரும் புறநானூற்றுச் செய்யுள் அடிகளை நோக்குக. நகர அமைப்பு பூம்புகார், வஞ்சி, மதுரை, காஞ்சி முதலிய தலை நகரங்களைப் பற்றிய செய்திகள் மணிமேகலை, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் காண்கையில், பெரிய நகரம் ஒன்றில் தெருக்கள் நீண்டும் அகன்றும் வரிசை வரிசையாக இருந்தன; சந்திகள், சதுக்கம், அம்பலம், மன்றம். பொதியில் முதலிய இடங்கள் இருந்தன. பல இடங்களில் செய்குன்றுகள் அமைந்து இருந்தன; ஆங்காங்குப் பூஞ்சோலைகள் (Barks) இருந்தன; அவற்றுள் பளிங்கறை மண்டபங்கள், மலர்ப் பந்தர்கள், ஒளிந்து விளையாடும் இடங்கள் முதலியன அமைந்திருந்தன; ஒவ்வொரு தொழில் செய்வார்க்கும் தனித் தனித் தெருக்கள் இருந்தன. அரசனது அரண்மனை நகரில் நடு நாயகமாக இருந்தது. பெரிய கடைவீதிகள் உண்டு. அவை நாள் அங்காடி/ அல்லங்காடி (Evening Bazaar) என இருவகைப்படும். நகரத்தில் நூதல்விழி நாட்டத்து இறைவன் கோயில் முதல் பதிவாழ் சதுக்க பூதத்தின் கோயில் ஈறாகப் பல கோயில்கள் உண்டு. தலைநகரத்தைச் சுற்றிக் கோட்டை மதில் உண்டு. அம்மதில்மேல் பலவகை யந்திரப் பொறிகள் வைக்கப்பட்டிருக்கும். மதிலைச் சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழி இருக்கும். அவ்வகழியில் முதலைகள் விடப்பட்டிருக்கும். அகழிக்கும் அப்பால் காவற் காடு அமைந்திருக்கும். இங்ஙனம், குறிப்பிட்ட இலக்கணப்படி தலைநகரங்களையும் பிற நகரங்களையும் அமைக்கும் முறையில் பழந்தமிழர் பண்பட்டிருந்தனர் என்பதைத் தொன்னூல்கள் இனிதுணத்துகின்றன. மதுரை, காஞ்சிபுரம் என்னும் இருபெரு நகரங்களும் தாமரை மலர்போல் அமைந்தவை என்பதைப் பரிபாடல்; பெரும்பாணாற்றுப்படை என்னும் நூல்களைக் கொண்டு நுனித்தறியலாம். இவ்வொன்றிலிருந்தேனும் பண்டைத் தமிழ் மக்களின் நகர அடைப்புத் (Town planning system) திறன் நன்கு உணரக்கூடும் அன்றோ? நகரில் உள்ள வீடுகளை அமைப்பதிலும் அம்மக்கள் சிறந்திருந்தனர் என்று கூறலும் வேண்டுமோ? கோபுரங்கள், வாயில் மாடங்கள், நிலா முற்றங்கள், திண்ணைகள், அறைகள், நீண்டு அகன்ற கூடங்கள் என்பன அவரவர் இயல்புக்கேற்றவாறு வீடுகளில் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளில் ஜன்னல்கள் அமைத்தல் உண்டு. அவை கால் அதர் (காற்று நுழையும் வழி) எனப்பட்டன. வீட்டு முன்புற மாடத்தில் பலவிதச் சிற்பங்கள் தீட்டப்படலும் உண்டு. கிணறு தோண்டுதலைப் பற்றிய விவரங்களைக் கூறும் நூலும் அக்காலத்தில் இருந்ததெனின், அம்மம்ம! நம் மூதாதையர் நாகரிகச் சிறப்பை என்னென்பது! அந்நூல் கூப நூல் எனப்படும். கப்பல் தொழில் தமிழ் நாட்டார் சாலமோன் காலத்திற்கும் (கி.மு. 1000) முற்பட்டே கடல் வாணிபத்திற் சிறந்து விளங்கினவர். ஆதலின், அவர்கள் கப்பல் கட்டும் தொழிலில் கைதேர்ந்திருந்தனர் என்பது கூறாதே அமையும். ஓவ்வொரு தமிழகத்துத் துறைமுகத்திலும் கலங்கரை விளக்கம். பண்டசாலைகள் (Godowns), சுங்கச் சாவடி (Custom House) என்பன இருந்தன. வேற்று நாட்டு வாணிபர், துறைமுகத்தை அடுத்துள்ள பெரிய மாளிகைகளில் வசித்து வந்தனர். குதிரைகள், மேனாட்டு மதுபான வகைகள், இயந்திர வகைகள், விளையாட்டுப் பொருள்கள் இன்ன பிறவும் இறக்குமதி யாயின. தேக்கு, மிளகு, யானைத் தந்தம், சந்தன மரங்கள் முதலியன ஏற்றுமதியாயின. இச்செய்திகள் யாவும் மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தொன்னூல்களிலிருந்து அறியலாம். பிற கலைகள் மாலை தொடுத்தலில் பலவகை உண்டு என்பதைத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. இண்டை, கண்ணிதார் என மாலைகளில் பலவகை உண்டு. அளவை (யைப் பற்றிய) நூல், கோழி நூல், புதையல் நூல், யோக நூல் எனப் பலவகைக் கலை களைப்பற்றிய நூல்கள் அப்பழங்காலத்தில் வழக்கில் இருந்தன. பலவகை எழுத்துக்களைப் பற்றிக் கூறும் நூல்களும் இருந்தன. ஒருவர்க்கொருவர் இரகசியமாகத் தெரிவித்துக்கொள்ளும் செய்திகளை எழுதக் கரந்தெழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. தமிழர் சிலர் யவனர் மொழி, துருக்கர் மொழி, சீன மொழி, வடமொழி இவற்றில் வல்லுநராகவும் இருந்தனர். தமிழ்த் தொழிலாளர், தம் நாடு போந்த பிற நாட்டுத் தொழிலாளருடைய தொழில் நுட்பங்களை அறிந்தும், தம் தொழில் நுட்பத்தை அவர்க்கு அறிவித்தும் தொழில்களைப் பல வழிகளிலும் வளர்த்து வந்தனர். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழர் ஒப்புயர்வற்ற நாகரிகம் பெற்று எல்லாக் கலைகளிலும் வல்லுநராய் வாழ்ந்து வந்தனர் என்று கூறலாம். இதனாலன்றோ, இந்தியாவில் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட அசோக மன்னன் காலத்தும் தமிழகம் தன்னாட்சி பெற்று இலங்கியதுஅவன்,என்நண்பர்களானசேர,சோழ,பாண்டியர்..........v‹W தன் கற்றூண்களில் செதுக்கியுள்ளான் எனின், அப் பேரரசன் போற்ற வாழ்நம் முன்னோர் பெருமையே பெருமை! 7. புதைபொருள் ஆராய்ச்சி நாகரிகக் காலங்கள் மனிதன் வீடுகட்ட அறியாது மலைக் குகைகளில் வாழ்ந்த காலம் முதல் வீடுகள் அமைத்து நகரங்களில் வசிக்கத் தொடங்கிய காலம் வரை அவனது நாகரிகப் பருவங்களைப் பலவகையாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவை (1) பழைய கற்காலம், (2) புதிய கற்காலம், (3) செம்புக் காலம், (4) பித்தளைக் காலம், (5) இரும்புக் காலம், (6) வெண்கலக் காலம் எனப் பலதிறப்படுவன. புதைபொருள் இடங்கள் இங்ஙனம் பல காலங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் அறிவும் ஆராய்ச்சியும் உயர வுயரப் பழைய பொருள்களைப் புறக்கணித்தனர். அவை கவனிப்பார் அற்று நாளடைவில் மண்ணுள் புதையுண்டன. பழைய மக்கள் நல்ல இடங்களைத் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர் ஆதலின், பழுதுற்ற பொருள்களை ஆங்காங்குப் போட்டுவிட்டுப் போயினர். அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுட் புதை யுண்டன. ஆற்று ஓரங்களிலும் கடற்கரையை அடுத்தும் நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்த நாகரிக மக்கள், முறையே ஆற்று வெள்ளத்திற்கும் கடல் கொந்தளிப்புக்கும் அஞ்சி, அந்நகரங்களையும் தம் பொருள்களையும் விட்டு ஓடினமையும் உண்டு. வேறு சில இடங்கள் பகைவர் படையெடுப்புக்கு அஞ்சித் துறக்கப்பட்டன. சில நகரங்கள் எரிமலைகள் இடையூற்றால் அழிவுற்றன. வேறு சில நகரங்கள் மண்மாரியால் அழிந்ததுண்டு. இவ்வாறு பல்வேறு காரணங்களால் அப்பழைய மக்கள் வாழ்ந்துவந்த நகரங்களும் சிற்றூர்களும் அவர்களால் கைவிடப்பட்டு, நாளடைவில் மண்மூடப்பட்டு விட்டன. காவிரிப்பூம்பட்டினம் போன்ற பல நகரப் பகுதிகள் கடலுள் ஆழ்ந்தன. பல நகரங்ள் (பழைய பாடலிபுரம்) ஆற்றங்கரை அடியில் புதையுண்டு விட்டன. வேறு பல நகரங்கள் சமவெளிகளில் மண்மேடிட்டுக் கிடக்கின்றன. புதைபொருள் ஆராய்ச்சி இங்ஙனம் மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்து, அவ்விடங்களிற் காணப்படும் பலவகைப் பட்ட பொருள்களை ஆராய்ந்து, அவற்றைப் பற்றிய உண்மைச் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய மக்களைப் பற்றிய குறிப்புகளையும் அறியும் முயற்சியே புதைபொருள் ஆராய்ச்சி என்பது. சுருங்கக் கூறின், “பல பொருள்களைச் செய்து நாகரிகத்தைத் தோற்றுவித்த பண்டை மக்களது வரலாற்றை அறிய முற்படுவதே புதைபொருள் ஆராய்ச்சி ஆகும்.”* இந்திய- புதைபொருள் ஆராய்ச்சிக் கழகம் இப்புதைபொருள் ஆராய்ச்சி நாட்டு வரலாறு கட்டப்பேதவி ரிகின்றது. ஆதலின், எல்லா நாடுகளிலும்புதை பொருள் ஆராய்ச்சி நபறுகின்றது. நமது தாய்நாட்டிலும் இதனை நடத்த இந்திய அரசாங்கத்தார் ஆரய்ச்சிக் கழகம் அமைத்து வேலை நடத்தி வருகின்றனர்,அக்கழத்தர்ஆண்டுதறும் தம்ஆராய்ச்சி அறிக்கைகiள வெளியிடுகின்றனர். அவர்கள் உழப்பால் நமது நாட்டுப் பண்டை வரலாறு சிறிது சிறிதாக மண்ணிலிருந்து புதைபொருள் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தபடுகிறது. இந்நன்முயற்சியை விளக்கச் சிந்து வெளி ஆராய்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக இங்குக் கூறுவோம். சிந்து பிரதேச நாகரிகம் சிந்துநதி பாயப் பெறும் பிரதேசத்தில் பஞ்சாப் மாகாணத்தில் ஒன்றும், சிந்து மாகாணத்தில் ஒன்றுமாக இரண்டு நகரங்கள் பூமியிலிருந்து இந்திய ஆராய்ச்சியாளரால் 1922-லிருந்து தோண்டி எடுக்கப்பட்டன. அவை இரண்டும் முறையே ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ எனப் பெயர் பெறும். முன்னது பஞ்சாப் மாகாணத்தில் லாஹூர், முல்டான் என்னும் இடங்கட்கு இடையே தோண்டி எடுக்கப்பட்டது; பின்னது சிந்து மாகாணத்தில் லர்க்கானா ஜில்லாவில் புதைந்து கிடந்தது. இவ்விரு நகரங்களும் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் செழிப்புற்ற சிந்துநதி பாயப்பெற்ற இடமாக இருந்தது. அப்பகுதிகளில் அக்காலத்தில் மழை மிகுதியாகப் பெய்தது என்பது அங்குள்ள பெரிய கழிநீர்ப் பாதையால் விளக்கமாகிறது. சிந்துநதியுடன் கி. பி. 14-ஆம் நூற்றாண்டு வரை மஹா மிஹ்ரான் என்னும் யாறும் அப் பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்விரண்டுடன் சிந்துவின் கிளையாறுகளும் சேர்ந்து பாய்ந்த நீர்வளப்பம் இவ்விரு நகரங்களையும் உயர் நாகரிகத்தில் உய்த்ததெனல் மிகையாகாது. மொஹெஞ்சொ-தரோ உள்ள இடம் எழுபது அடி முதல் இருபது அடிவரை மண்ணால் மூடப்பட்டு இருந்தது. ஏழு அடுக்குகள் தோண்டி எடுக்கப் பட்டன. அடி முதல் மூன்று அடுக்குகள் பழையன; இடைப்பட்ட மூன்று இடைக்காலத்தன; மேலுள்ள ஏழாம் அடுக்குப் பிற்பட்ட காலத்தது. இவற்றுக்கும் கீழே சுமார் நாற்பதடி ஆழத்தில் சில அடுக்குகள் காணப்படுகின்றன. அவை பின்னும் பழையனவாக இருத்தல் கூடுமென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. கட்டடங்கள் கட்டடங்கள் பலவகைப்பட்டனவாக உள்ளன. அவை இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகள் முதல் பெரிய மாளிகை ஈறாக் காணப்படுகின்றன. பெரிய மாளிகையின் முன்புற வெளி 85 அடி அகலம் உள்ளது; பின்புறம் 97 அடி அகலம் உள்ளது. பெரிய கூடம், செங்கல் பதித்த மேன்மாடம், மேலிருந்து கழிநீர் இறங்கச் சிறிய வழிகள், கழிநீரைத் தேக்கிக் கொள்ள ஆங்காங்குப் பெரிய சால்கள், சுற்றிலும் அறைகளைக் கொண்ட 32 சதுர அடியுள்ள வீட்டு முற்றம் - இவை ஒவ்வொரு பெரிய மாளிகையிலும் இருப்பவை. பல பெரிய கட்டடங்களும் காணப்படுகின்றன. அவை கோயில்களாக இருந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. மொஹஞ்சொ-தரோவில் பெரிய நீராடு குட்டை ஒன்று காணப்படுகிறது. அதன் நாற்புறமும் படிக்கட்டுகள், நாற்புறமும் அறைகள், 39 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உள்ள நீராடும் இடம், நாற்புறமும் நீர்நிலைக்கு நீர் உதவும் பெரிய கிணறுகள் என்பன இருக்கின்றன. இக்குட்டைக்கு மேல்மூடி மரத்தால் ஆயது. இந்நீராடு குட்டையைக் கட்டியவர் சிறந்த விற்பன்னராக இருத்தல் வேண்டும் எனக் கூறி ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். இக் குட்டையைச் R.ற்றிíŸs சுவர் நான்கு அடிக் கனமுள்ளது. அதைச் சுற்றிலும் வேறெரு சுவரும் உண்டு. அஃது இங்ஙனம் தக்க முறையிற் கட்ட பட்டதாற்றான் 5000 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நன்னிலையில் இருக்கின்றது. பயிரும் உணவும் இப்பெரிய நகரங்களில் வாழ்ந்த மக்கள் கோதுமை, பார்லி இவற்றைப் பயிரிட்டவர் என்பது தெரிகிறது; இப்போதைய எந்திரம் இன்றி வேறெரு கருவியால் அவற்றை அறைத்து வந்தனர்; மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, ஆமை இறைச்சி, மீன் இறைச்சி முதலியவற்றை உண்டு வந்தனர் என்பதற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. விலங்குகள் எருது, எருமை, ஆடு, யானை, ஓட்டகம், பன்றி, கோழி, நாய், குதிரை என்பவை வளர்க்கப்பட்டு வந்தன. இந்நகரங்களில் கீரி, கறுப்பு எலி மான், பைசன், காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல் முதலிய விலங்குகளின் எலும்புகளும் அகப்பட்டுள்ளன. கனிப் பொருள்கள் பொன், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் இவற்றை அப்பண்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பொன், வெள்ளி கலந்ததாக இருத்தலின் அப்பொன் கோலார், அனந்தப்பூர் இவ்விடங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். செம்பு ஈயத்தோடு கலந்திருத்தலின், அஃது இராஜபுதனம், பலுசிதானம், பாரசீகம் முதலிய இடங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும். செம்பைக் கொண்டு வளையல், கத்தி, ஈட்டி, உடைவாள் முதலியன செய்யப்பட்டன. வெள்ளீயம் செம்போடு கலந்து பித்தளையாகிப் பலவற்றுக்கும் பயன்படுவது. தகரம் அடித்தட்டில் கிடைத்ததால், அது, கி. மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதி. இத்தகரம் அல்லது பித்தளை இப்புதைந்த நகரங்களில் காணப்படலால், இந்தியாவில் பித்தளைக் காலம் இல்லை எனக் கூறிவந்தது பொய்த்துவிட்டது. கற்கள் பலவகைப்பட்ட கற்கள் கட்டடங்கட்குப் பயன் பட்டன. சுக்கூர் சுண்ணாம்புக் கற்கள் கழிநீர்ப் பாதையை மூடப் பயன்பட்டன. கீர்தர் மலைக் கற்கள் பாத்திரங்கள், சிமென்ட், சிலைகள் இவற்றுக்குப் பயன்பட்டன. வேறு கற்கள் நிறை முதலியவற்றுக்குப் பயன்பட்டன. ஒருவகை மஞ்சட் கற்கள் லிங்கம் முதலியவற்றுக்குப் பயன்பட்டன. பல உயர்தரக் கற்களைக் கொண்டு அணிகளும் பிறவும் செய்யப்பட்டன. அழகிய பச்சை அமெஜான் கல் என்பது நீலகிரியில் உள்ள தொட்ட பெட்டாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இக்கல்லைப் பெற்றுள்ள இடம் இஃதொன்றே ஆகும். எலும்பு, தந்தம், சங்கு முதலியவையும் பல பொருள்கள் செய்யப் பயன்பட்டன. பஞ்சு மொஹெஞ்சொ-தரோவில் உள்ள வீடுகளில் எல்லாம் நெய்தற் றொழில் நடந்துவந்தது என்பதற்குரிய அடையாளப் பொருள்கள் காணப்படுகின்றன. அங்குப் பஞ்சும் கம்பளியும் நெய்யப்பட்டு வந்தன. அங்கு அகப்பட்ட பஞ்சு, இப்போதைய இந்தியப் பஞ்சு போன்றே இருக்கிறது. இப்பழைய பஞ்சே பாபிலோனியர்க்குச் சிந்து ஆகவும், கிரேக்கருக்குச் சின்டன் (Sindon) ஆகவும் தெரிந்திருந்தது. இப்பஞ்சு, பருத்திப் பஞ்சே ஆகும். மயிர் முடிப்பு அக்காலத்து உடைகளுள் நீண்ட போர்வையும் அடங்கி இருந்தது. இவ்வுண்மை, அங்கு அகப்பட்ட சிலைகள்மீதுள்ள போர்வை வேலைப்பாட்டால் நன்கறியலாம். அக்கால மக்கள் சிறிய தாடியும் மீசையும் வைத்திருந்தனர். சிலர் மீசையின்றித் தாடி மட்டுமே வைத்திருந்தனர். இப்பழக்கம் சுமேரியர் பழக்க மாகும். தலைமயிர் பின்னால் முடியிடப்பட்டது. பெண்கள், மயிரைச் சுற்றிலும் சுருட்டி இடப்பக்கம் கொண்டை போட்டிருந்தனர். அங்கு அகப்பட்ட மூன்று பித்தளைப் பெண் உருவங்கள் இவ்வாறே தலைமுடிப்பு உடையவனாய்க் காண்கின்றன. அணிகள் கழுத்தணி, கங்கணம், மோதிரம், காப்பு, ஒட்டியாணம், காதணி முதலியன அக்கால மக்கள் பயன்படுத்தியவை. பணக்காரர் பொன், வெள்ளி, தந்தம் இவற்றால் நகைகள் செய்தனர்; ஏழைகள் சங்கு, பித்தளை, செம்பு முதலிய வற்றால் நகைகளைச் செய்து பயன்படுத்தினர். கருவிகள் போர்க்கருவிகள் கல், பித்தளை, செம்பு இவற்றால் செய்யப்பட்டவை. கோடரி, இரம்பம், க்ஷவரக் கத்தி முதலியவை செம்பாலும் பித்தளையாலும் செய்யப்பட்டன. கல்லால் செய்யப் பட்ட தட்டுகள், பாத்திரங்கள் முதலியன, மொஹஞ்சொ-தரோவில் வாழ்ந்த மக்களது காலம் மாக்கல் காலம் என்பதை நினைப்பூட்டுவனவாக உள்ளன. போர்க் கருவிகள் இருந்த நிலையை நோக்குகையில் அக்கால மக்கள், பகைவரது எதிர்ப்பை நோக்கி வாழ்ந்தவராகத் தெரியவில்லை. நிறைகள் நிறைகளுட் சிறியவை கற்கலகையால் ஆனவை; முக்கோண உருவில் அமைந்தவை. பெரியவை சர்க்கரைப் பொட்லம் போன்ற உருவில் அமைந்தவை. இவை ஏலம், மெசபொட்டோமியா முதலிய இடங்களில் அகப்பட்ட நிறைகளைவிட நிறையிற் சரியனவை; பின்ன அளவையும் குறிக்கத் தக்கவை: 1,2,4,8,16,32,64,160,200,320,640,1600 வரை பின்ன அளவை உடையவவை. பாத்திரங்கள் வீட்டுக்குரிய பாத்திரங்களுட் பெரும்பாலானவை மண்பாண்டங்களே. மண் கோப்பைகள் மிகுதியாகப் பயன்பட்டன; நீர்ச் சாடிகளும் அங்ஙனமே. மட்பாண்டங்கள் சக்கரத்தின் உதவிகொண்டு செய்யப்பட்டவை; கருமை, செம்மை நிறங்கள் கொண்டவை. இப்பாண்டங்களே உலகில் மிக்க பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்அறைகின்றனர். பொம்மைகள் எலிகள், ஊதுகுழல், மனித உருவங்கள், பறவைகள், வண்டிகள் இவற்றைக் குறிக்கும் களிமண் பொம்மைகள் பெருவாரியகக் காணப்பட்டன. இவ்வண்டிகள் ‘ஊர்’ (Ur) நகரத்தில் (கி. மு. 3200) அகப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட தேரைப் போல இருத்தல் கவனிக்கதக்கது. எழுத்துக் குறிகள் சிந்துப் பிரதேச மக்கள் எழுதக் கற்றவர். அவர்தம் எழுத்துக்கள் சித்திரக் குறிகள். அக்குறிகள் பழைய எலமைட், பழைய சுமேரிய, எகிப்திய எழுத்துக்களைப் போன்றவையே. அவற்றுள் 396 குறிகள் அகப்பட்டுள்ளன. அவை பாத்திரங்களின்மீதும் காப்புகளின் மீதும் முத்திரைகளின்மீதும் பிறவற்றின் மீதும் காணப்படுக்கின்றன. அவை வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளன. அவை சித்திரச் சங்கேதக் குறிகளே தவிர எழுத்துகள் அல்ல என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சிலைகள் இச்சிந்துப் பிரதேச மக்கள் ஓரளவு சிற்பத்திறமை வாய்ந்தவர். இவ்வுண்மையைத் திமில் கொண்ட எருது, எருமை, பைசன் முதலியவை செதுக்கப்பட்ட முத்திரைகளைக்கொண்டும்; வேட்டை நாய், செம்மறி யாடு, அணில், குரங்கு இவற்றின் பொம்மைகளைக் கொண்டும் அறியலாம். கற்சிலைகள் மூன்றில் ஒன்று யோகியின் உருவத்தில் அமைந்துள்ளது; யோகியின் பார்வை மூக்கின்மீது படிந்துள்ளது. இரண்டாம் சிலை தலைமட்டுமே உள்ளது. அஃது எழும்பிய கன்ன எலும்புகள், பெரிய மெல்லிய உதடுகொண்ட வாய், அகன்ற விகாரமான காதுகள் இவற்றை உடையது. மூன்றாம் சிலை போர்வை போர்த்து அமர்ந்துள்ள அமைப்பை உடையது. இவற்றோடு நடனமாது ஒருத்தியின் சிலையும் காணப்படுகிறது. அச்சிலையின் கால்கள் மிக்க நீண்டனவாய் இசைக்கு ஏற்பத் தாளம் போடுவனவாய் அமைந்துள்ளன; கைகளும் மிக்க நீளமானவை. ஹரப்பாவில் காணப்பட்ட சிலைகள் இரண்டு: அவற்றுள் ஒன்று சிவந்த கல்லில் செய்யப்பட்டது; தடித்த மனித உருவத்தைக் காட்டுவது. முற்றொன்று பழுப்பு நிறம் அமைந்த கற்பலகையால் ஆனது. இடதுகாலைத் தூக்கியும் வலது கால்மீது நின்றும் நடனம் ஆடுவதுபோல் அவ்வாண் உருவம் அமைந்துள்ளது. இது சிவ நடராஜாது பழைய உருவம் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். நெறி (மதம்) ஒருவகைக் களிமண்ணால் செய்யப்பட்ட பெருவாரியான பெண் உருவங்கள் பலுசிதானத்திலும் சிந்துப் பிரதேசத்திலும் கிடைத்துள்ளன. இவை போன்றவை பல மேற்கு ஆசிய நாடுகளில் (ஏலம், மெசபொட்டோமியா, சிரியா, பாலதீனம், டிரான்கபியா, சிறிய ஆசியா, சைப்ர, கிரீட், சைக்லேட், பால்கன் நாடுகள், ஈஜிப்ட்) கிடைத்துள்ளன. இவை நிலமகளுடைய உருவச்சிலைகள் என்று ஆராய்ச்சி யாளர் அறைவர். ஹரப்பாவில் கிடைத்துள்ள முத்திரை ஒன்றில் தாயின் வயிற்றிலிருந்து செடி ஒன்று தோன்றுகிறது. ஒருவன் கத்தியை வைத்துக்கொண்டு நிற்கிறான். பெண் ஒருத்தி உயரத் தூக்கிய கைகளோடு (பலியிடப்படுபவள் போலும்!) நிற்கிறாள். சிவ வணக்கம் வேறொரு முத்திரையில் முக்கண்களையும் மூன்று முகங்களையுமுடைய சிவன் உருவம் யோகத்தில் இருப்பதுபோலக் காணப்படுகிறது. அவ்வுருவினைச் சுற்றிலும் யானை, புலி, காண்டாமிருகம் முதலிய விலங்குகள் அதே முத்திரையிற் செதுக்கப்பட்டுள்ளன. ஆசனத்தின்கீழ் இரண்டு கொம்புள்ள மான் ஒன்று நின்கின்றது. இவற்றை நோக்குகையில், சிவன் பசுபதி (விலங்குகட்குத் தலைவன்) என்பது குறிக்கவே இம்முத்திரை பயன்படுகிறது என்பர் ஆராய்ச்சியாளர். சிவனது தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவை சைவரது சூலத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்பர் ஆராய்ச்சியாளர். வேறோரு முத்திரையில் யோகி உருவத்தின்முன் நாகன் ஒருவன் பிரார்த்தனை செய்தல் காணப்படுகிறது. பிறிதொன்றில் அதே யோகி ஒரே தலையுடன் தனித்திருப்பதாகத் தெரிகிறது. R. P. சண்டா என்னும் பேராசிரியர், சிந்துப் பிரதேசக் குறியீடுகளில் காணப்படும் நான்கு கைகளையுடைய சித்திரங்கள் பிற்கால இந்துமதக் கடவுளராய (நாற்கைகளை யுடைய) பிரமன், விஷ்ணு, சிவன் இவர்களைக் குறிப்பன ஆகலாம் என்பர். அவரே, நிற்கின்ற நிலையில் ஆறு உருவங்கள் சில முத்திரைகளில் காணப்படுகின்றன. அவை சமணயோகிகளைப்போல உள்ளன. மட்ரா (வட மதுரை) கண்காட்சிச் சாலையில் உள்ள கி.பி. இரண்டாம் நூற்றாண்டிதான ரிஷபதேவர் சிலையில் உள்ளவாறே மேற்கூறியவை காணப்படுகின்றன. நின்றபடி யோகத்தில் இருப்பது சமணயோகிகட்மே சிறப்பானது. ரிஷபம் சமணரது அடையாளக் குறி. சில முத்திரைகளில் யோகிக்கு முன்பு தரையில் எருது இருப்பதாக உள்ளது வியக்கத்தக்கது. எனவே, இவ்வுருவங்கள் ரிஷபத்தேவரைக் குறிக்கக் கூடியனவாக இருக்கலாம் என்பர். அங்ஙனம் இருத்தல் கூடுமாயின், சைவத்துடன் சமணமும் சரித்திர காலத்துக்கும் அப்பாற்பட்ட பழைய சமயமாதல் வேண்டும் என்பது அவர்தம் கருத்தாகும். வேறு சிலர் எருதும் யோகியும் சைவத்தையே குறிப்பன என்பர். லிங்க வழிபாடு முற்கூறப்பட்ட சிவ-சக்தி வழிபாட்டைத் தவிர லிங்க வணக்கமும் இருந்தது. லிங்கங்கள் சிந்துப் பிரதேசத்திலும் பலுசிதானத்திலும் கிடைத்துள்ளன. ஹரப்பாவிலும் மொஹெஞ்சொ-தரோவிலும் கிடைத்துள்ள சிறிய அளவுள்ள லிங்கங்கள், திருஷ்டி தோஷாதிகளும் பேய் பிசாசுகளின் சேஷ்டைகளும் தாக்காதிருத்தற் பொருட்டு அணியப்பட்டு வந்தன. பெரியவை வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன. மர வணக்கம் சிந்துப் பிரதேச மக்கள் மரங்களையும் அவற்றில் வசிப்பன வாகக் கருதப்பட்ட தேவதைகளையும் வழிபட்டு வந்தனர் என்பது ஹரப்பாவில் அகப்பட்ட சில முத்திரைகளிலிருந்து வெளியாகிறது. மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த ஒரு முத்திரையில் அரசமரக் கிளைகள் இரண்டிற்கு இடையில் பெண் தெய்வம் ஒன்று நிற்கின்றது. அதனை நீண்ட கூந்தலையுடைய ஏழு பெண்கள் வழிபடுவதாகத் தெரிகிறது. வேறொரு பெண் உருவமும் பாதி குனிந்து வழிபடுவதாக உள்ளது. அவ்வுருவத்தின் பக்கத்தில் மனித முகத்துடன் பாதி உருவம் எருதாகவும் பாதி ஆடாகவும் உள்ள விலங்கொன்று காணப்படு கிறது. அது மரதேவதையின் வாகனமோ, யாதோ, அறியக்கூடவில்லை. ஹரப்பாவில் கிடைத்துள்ள வேறு சில முத்திரைகளிலும் இத்தகைய பெண் தெய்வமும் நூதன விலங்கும் காணப்படுகின்றன. விலங்கு வணக்கம் இவ்வணக்கமும் சிந்துப் பிரதேச மக்களிடை இருந்ததென்பது வெளிப்படை: மனித முகம், பாதி எருது உருவம், பாதி ஆடு அல்லது யானை உருவம்; பாதி மனித உருவம், பாதி வேறு உருவம். இந்நூதன விலங்கு கொம்பு முளைத்த புலியோடு போர்புரிவதாகப் பல முத்திரைகளில் காணப்படுகிறது. சில முத்திரைகளில் தெய்வங்கட்கும் நாகங்கட்கும் கொம்புகள் இருப்பதாகக் காணப்படுகின்றன. கொம்புள்ள விலங்குகள் சில, வழிபாடு பெறுதல் சில முத்திரைகளில் காணப்படுகிறது. எருது, எருமை, காண்டாமிருகம், குட்டைப் கொம்புள்ள எருது, புலி, யானை என்பன வழிபாடு பெற்றவை என்பதும் சில முத்திரைகளால் வெளியாகிறது. இங்ஙனமே பல பறவைகள், வேறு விலங்குகள் முதலியனவும் காணப்படுகின்றன. சுருங்கச் கூறின், சிந்துப் பிரதேச மக்களது மதம்-சக்தி (தாய்) வணக்கத்தை உடையது; சிவ வழிபாட்டை உடையது; யோகத்தில் பற்றுடையது; விலங்கு வணக்கத்தை உடையது; மர வணக்கத்தையும் மரம் வாழ் தெய்வ வணக்கத்தையும் கொண்டது; கற்களாலான சிவலிங்க வழிபாடு உடையது; தூப தீப வழிபாடு உடையது; திருஷ்டி-தோஷாதிகளிலும், பேய் பிசாசுகள் தாக்குதலிலும் நம்பிக்கை உடையது. இவற்றுள் பல இந்து நாகரிகத்திற்கே சிறப்பானவை. இடுதலும் சுடுதலும் இம்மதத்தைப் பின்பற்றிவந்த பண்டை மக்கள் இறந்தவர் உடலை எரித்து வந்தனர்; எரித்துச் சாம்பலையும் எலும்புகளையும் பெரிய மட்பாண்டங்களில் (தாழிகளில்) இட்டு, அந்த ஆவி உண்பதற்கென்று சில பொருள்களையும் இட்டு வந்தனர். சில தாழிகளில் சாம்பலும் உணவுப் பொருள்களுமே காணப்படுகின்றன; எலும்பை வீசிவிட்டனர் போலும் !அல்லது எலும்பே அகப்படவில்லை போலும்! இத்தகைய தாழிகள் பல பலுசி தானத்திலும் கிடைத்துள்ளன. பிணங்களைப் புதைத்தல் சிறுவரவிற்று. மொஹெஞ்சொ-தரோவில் புதைக்கப்பட்ட 21 எலும்புக் கூடுகள் அகப்பட்டனவாம். அவை அகப்பட்ட இடத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர், இவை இந்நகரம் அழிவடைந்தபோது இறந்தவருடைய எலும்புக் கூடுகள் ஆகும் எனக் கூறுகின்றனர். அவ்வெலும்புக் கூடுகளுட் சில பழைய ஆட்ரேலியர் (Proto Australoids) மத்தியதரைக் கடற் பிரதேசத்தினர் (Mediteraneans), அல்பைனர் (Alpines) இவர்தம் எலும்புக் கூடுகளை ஒத்துள்ளனவாம். காலம் இச்சிந்து வெளி மக்களது காலம். அஃதாவது இந்த இரண்டு நகரங்களும் செழிப்புற்று இருந்த காலம் குறைந்தது கி. மு 3250-கி. மு. 2750-ஆக இருத்தல் கூடும் என்று இந்திய ஆராய்ச்சித் துறைத்தலைவராக இருந்த சர். ஜான் மார்ஷல் கூறி யுள்ளார். அக்கூற்றையே பேராசிரியர் R.P. சண்டா, முக்கர்ஜி போன்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒப்புகின்றனர். முடிவு இன்றுவரை மொஹெஞ்சொ-தரோவில் பத்தில் ஒரு பாகமே தோண்டி எடுக்கப்பட்டது. எஞ்சிய பாகம் தோண்டி எடுக்கப்படவில்லை. தோண்டி எடுக்கப்பட்ட பகுதியிற் கண்ட பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவே இங்குக் குறிப்பிடப்பட்டது. இவ்வெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்பர் சிலர்; ஆரியர் என்பர் சிலர்; மங்கோலியர் என்பர் சிலர்; அம்மக்களைப்பற்றித் திட்டமாக ஒன்றும் கூறுதற்கில்லை என்பர் சிலர். மேற்கொண்டு ஆராய்ச்சி நடைபெறின் உண்மை விளங்கலாம் போலும்! 8. சேக்கிழார் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டுப் புவலர்) தொண்டை நாடு பழந்தமிழ் நாடு என்பது வடக்கே வேங்கட மலையையும் தெற்கே குமரி முனையையும் கிழக்கிலும் மேற்கிலும் கடலையும் எல்லைகளாக உடைய நிலப்பரப்பாக இருந்தது. அது சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தரால் பன்னெடுங்காலமாக ஆளப்பட்டு வந்தது. காளத்தி முதல் பாலாறுவரை யுள்ள நிலப் பரப்புத் தொண்டை நாடு எனப் பெயர் பெற்றது. அந்நாடு மலை மலைநாடு; செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்தூர் ஜில்லாக்களைக் கொண்ட நிலப்பகுதியாகும். அது கி. பி 2-ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் அடங்கி இருந்தது. தொண்டை நாட்டின் தலை நகரம் காஞ்சிபுரம். அஃது ஏறக்குறையக் கி. மு 5-ஆம் நூற்றாண்டு முதலே சிறந்த கலைப்பீடமாக இருந்தது; புண்ணிய க்ஷேத்திர மாகவும் விளங்கியது. தொண்டை நாட்டுப் பிரிவுகள் இந்நாட்டு பண்டைக்கால முதலே 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை-1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக் காட்டுக் கோட்டம், 9. களத்தூர்க் கோட்டம் , 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14. இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19.செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக் கோட்டம், 22.வேலூர்க் கோட்டம், 23. சேத்தூர்க் கோட்டம், 24. புலியூர்க் கோட்டம் என்பன. புலியூர்க் கோட்டம் இது சென்னையை அடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள புலியூர் என்பதைத் தலைநகராகக் கொண்ட நிலப் பகுதி. இதன்கண் பூவிருந்தவல்லி, குன்றத்தூர், கோவூர் முதலிய பல ஊர்கள் அடங்கும். இக்கோட்டம் செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலைப் பெற்றுள்ள செழுமையான நிலப் பகுதியாகும். குன்றத்தூர் கோட்டத்தின் உட்பகுதி நாடு என்பது. புலியூர்க் கோட்டத்து நாடுகளுள் குன்றத்தூர் நாடு என்பது ஒன்று. அந்நாட்டின் தலைநகரம் குன்றத்தூர். இது சென்னைக்கடுத்த பல்லாவரம் (பல்லவ புரம்) என்னும் ஊரிலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ளது; சென்னையிலிருந்து ஏறக்குறைய 14 கல் தொலைவில் உள்ளது. இஃது இன்று திருநாகேவரம், மணஞ்சேரி, நத்தம் என்னும் மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. இவற்றுள் நத்தம் என்னும் பகுதியிற்றான், சேக்கிழார் பிறந்து வளர்ந்த இல்லம் அவரது திருக்கோவிலாகத் திகழ்கின்றது; அங்குத்தான் சேக்கிழார் மரபினர் வாழ்கின்றனர். அங்குள்ள சிவன், பெருமாள் கோவில்கள் பழையவை. அவை இன்று அழிநிலையில் இருக்கின்றன. சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் திருநாகேவரம் கோவிலைத் தன் அகத்தே பெற்ற ஊர்ப்பகுதி திருநாகேவரம் என்று வழங்கப்படுகிறது. அங்குச் செங்குந்த மரபினரே வாழ்கின்றனர். மணஞ்சேரி என்பது ஒரு பகுதி. இம்மூன்று பகுதிளையும் ஒன்றாகக் கொண்டதே குன்றத்தூர் என்பது. இவ்வூர் செம்பரம்பாக்கத்து ஏரிப் பாய்ச்சலை உடைய விளைநிலங்களைக் கொண்டது. இதன் பழைய தோற்றம், இது சேக்கிழார் காலத்தில் சீரிய நிலையில் இருந்த நகரம் என்பதை உணர்த்துகிறது. சேக்கிழார் மரபு தொண்டை நாட்டிற் குடியேறிய வேளாளர் மரபுகளுள் சேக்கிழார் மரபு ஒன்றாகும். அம்மரபினர் தொண்டை நாட்டுக் கோட்டங்கள் பலவற்றில் பரவி இருந்தனர். அவர்கள் பிற்காலச் சோழர் காலத்தில் (கி. நி. 900-1300) அரசியலில் உயர்பதவிகள் தாங்கி வந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவர் அனைவர்க்கும் சேக்கிழார் என்பது மரபுப் பெயராக வழங்கப்பட்டுள்ளது. குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் ஏறக்குறையக் கி. பி. 12-ஆம் நூற்றாண்டுமுதல், அஃதாவது, பெரிய புராணம் பாடிய சேக்கிழார் கால முதல் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே அரசியலில் சிறப்புப் பெற்று வந்துள்ளனர் என்பது கல்வெட்டு களிலிருந்து தெரிகிறது அங்ஙனம் முதன்மை பெற்ற குன்றத்தூர்ச் சேக்கிழாருள் முதல்வர் நமது பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஆவார். இவர் காலத்தில், சேக்கிழான் - பாலறாவாயன் என்ற களப்பாளராயன் என்பவர் சோழ அரசியலில் சிறந்த உத்யோகதராக இருந்தார். இவருக்கு பிறகு (1) குன்றத்தூர்ச் சேக்கிழான் - அம்மையப்பன் பராந்தக தேவன் என்ற கரிகால சோழப் பல்லவராயன், (2) சேக்கிழான் - புவனப்பெருமாள் என்ற துண்டக நாடு உடையான், (3) சேக்கிழான் - பட்டியதேவன் ஆட் கொண்டான், (4) சேக்கிழான் - அரையன் ஆட் கொண்ட தேவன் என்ற முனையதரையன், (5) சேக்கிழான் - வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப் பெருமாள், (6) சேக்கிழான் - ஆடவல்லான் முதலியவர் சோழப் பேரரசிற் சிறப்புற்று இருந்தனர் என்று சொல்லலாம். பெரிய புராண ஆசிரியர் இங்ஙனம் சேக்கிழார்என்ற மரபுப் பெயர் பலருடைய இயற்பெயர், பட்டப் பெயர்களுடன் இணைக்கப்பட்டு வழங்கி இருந்தாலும், பெரிய புராணம் பாடிய சிறந்த காரணத்தால் அதன் ஆசிரியரது இயற்பெயர் மறைந்து, குடிப்பெயர் ஒன்றே நிலைத்து, அஃதொன்றே அவரை இன்று வரை குறித்துவருதல் கவனிக்கத் தக்கது. சேக்கிழார் என்றால், அஃது இன்று இயற் பெயராகக் கருதத்தக்க நிலையை அடைந்துவிட்டது. அதலின், நாமும் இக்கட்டுரையில் அவரைச் சேக்கிழார் என்றே குறிப்போம். சேக்கிழார் வரலாறு உரைப்பவை எவை? சேக்கிழார்க்குப் பிறகு ஏறத்தாழக் கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியிற் செய்யப்பட்ட சேக்கிழார் புராணம் என்ற சிறுநூலும், சேக்கிழார் பாடிய பெரிய பிராணமுமே அவரது வரலாற்றை ஓரளவு உரைப்பன ஆகும். இவை இரண் டிலும் உள்ள நம்பத் தக்கவற்றை-பெரும்பாலும் கல்வெட்டுகட்கும் பிற சான்றுகட்கும் ஒத்து வருவனவற்றைத் துணையாகக் கொண்டே இவரது வரலாறு கூறல் நேர்மையாகும். இயற்பெயர் சேக்கிழார் கி. பி 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவராவர். இவர் தொண்டை மண்டல வேளாளர்; சேக்கிழார் மரபினர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பது சேக்கிழார் புராணக் கூற்று; இராமதேவன் என்று கல்வெட்டைக் கொண்டு ஊகிக்கலாம். சைவமரபில் பிறந்தவர் வைணவப் பெயர் தாங்கி இருத்தல் பழைய வழக்கமே ஆகும். அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர், நரசிங்கன்என்ற வைணவப் பெயரைத் தாங்கி யிருந்தார் ; திருவிசைப்பாப் பாடிய மற்றொரு சிவனடியார் புருஷோத்தம நம்பி என்ற வைணவப் பெயரைப் பெற்றிருந்தார் என்பது இங்கு நினைக்கதக்கது. சேக்கிழார் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. புலமைக்குரிய கல்வி சேக்கிழார் இளமைப் பருவத்திற்றானே தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றிருத்தல் வேண்டும் என்பது அவர் பாடிய பெரிய புராணத்திலிருந்து வெளியாகின்றது. இவர் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காவியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பல்லவர் காலத்தில் (கி. நி 400-900) தோன்றிய பிரபந்தங்கள், சைவத் திருமுறைகள், சைவசித்தாந்த நூல்கள், சோழர் காலத்தில் தோன்றிய கலிங்கத்துப் பரணி, இராஜராஜ நாடகம், இராஜராஜ விஜயம், கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் முதலிய நூல்கள் என்பவற்றை நன்கு கற்றவர் என்பது இவர் நூல் கொண்டு கூறலாம். சுருங்கக் கூறின், சேக்கிழர்ர் தமிழ் இலக்கண இலக்கியப் புலமையில் தமது காலத்தில் ஒப்புயர்வற்று விளங்கினார் எனக் கூறலாம். அநபாயன் சேக்கிழார் காலத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன், அநபாயன் என்பதைச் சிறப்புப் பெயராகப் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் ஆவான். இவன் வழிவழியாகச் சைவ சமயத்தைச் சேர்ந்த சோழர் மரபில் வந்தவன்; சிறந்த சிவபக்தன்; சைவத்தில் மிக அழுத்தமான பற்றுடையவன். இவன் சிதம்பரத்தில் செய்த திருப்பணிகள் பலவாகும். சுருங்கக் கூறின், இவன் சிதம்பரம் கோவிலை மிக்க அழகுப் படுத்தினான்; பேரம்பலத்தைப் பொன் வேய்ந்து, பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்று பாராட்டப் பெற்றான். இவன் பட்டம் பெற்றவுடன் சிறையிடப் பெற்றிருந்த பகை மன்னரை விடுதலை செய்தான்; மறையவர்க்கும் புலவர்க்கும் கொடையாளியாக விளங்கினான்; தில்லைக் கூத்தபிரான் மீது அளவற்ற பக்தி கொண்டவன். இவனுடைய (மேற் சொன்ன) சிறப்பியல்புகளைப் பெரிய புராணம், குலோத்துங்கன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி என்ற நூல்களும் கல்வெட்டு களும் ஒன்றாகவே கூறுகின்றன. இவனது பட்டத்தரசி புவனமுழுதுடையாள் என்பவள்; மகன் (இரண்டாம்) இராஜராஜன் என்பவன். இவ்வநபாயன் காலத்தில் சோழப் பெருநாட்டின் தலைநகரமாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம் என்பது. இவனது அமைச்சர் அவையில் முதல்வராக இருந்தவர்தாம் சேக்கிழார்; உத்தம சோழப் பல்லவராயன் என்று அரசன் அளித்த பட்டத்துடன் தம் அமைச்சர் கடமையைச் செலுத்தி வந்தார். அக்காலச் சைவ சமய நிலைமை 1. அறுபத்து மூன்று நாயன்மார் காலம் ஏறத்தாழக் கி. பி 400 முதல் 900 என்னலாம். இந்தப் பரந்துப்பட்ட காலமே, பல்லவர் தமிழ் நாட்டில் பேரரசராக இருந்த காலம். சைவ-வைணவ சமயங்கள், முறையே நாயன்மார்-ஆழ்வார்களால் புத்துயிர் தரப் பெற்றுச் சமண-பௌத்த சமயங்களை ஒடுக்கைய காலம் இதுவே யாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் தலயாத்திரை செய்து, இருநூற்றுக்கு மேற்பட்ட சிவ தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடிச் சைவ சமயப் பெருமையைத் தமிழ் நாட்டிற் பரப்பிய காலமும் இதுதான். அந்தந்த நாயன்மார் பிறந்து வாழ்ந்த பதிகளில் உள்ள கோவில்களில், அவர்தம் உருவச்சிலைகள் எடுப்பித்து, அவற்றுக்கு விழா, பூசை முதலியன நடைபெறத் தொடங்கிய காலமும் இதுவே. இக்காலப் பல்லவ அரசருள் பெரும்பாலார் சிறந்த சிவனடியாராக இருந்தவர்; ஆகமங்களிலும் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும், சமயச் சார்பான் இசை- நடனம் - நாடகம் - ஓவியம் - சிற்பம் என்ற கலைகளை வளர்ப்பதிலும் வல்லுநராக விளங்கினர்; ஆங்காங்குப் புதிய கற்கோவில்களைக் கட்டிக் கோவில் கட்டும் முறையில் புதிய யுகத்தைத் தோற்றுவித்தனர்; பாடல் பெற்ற கோவில்கட்கு மதிப்பீந்தனர்; வடமொழி தென் மொழிகளை வளம்பெற வளர்த்தனர். இவர்கள் ஆட்சிக்குட்பட்ட திருக்கோவலூர் மலையமான்கள், திருமுனைப்பாடி நாட்டை யாண்ட முனையரையர்கள் முதலிய சிற்றரசர்களும் சைவ சமயத்தை உயிராகக் கருதி வளர்த்தனர். இவ்வாறு பேரரசர் - சிற்றரசர் - நாயன்மார் ஆக முத்திறத்தவரும் சமயத் துறையில் ஒன்றுபட்டு உழைத்தமை யால் தமிழ் நாட்டில் சைவ சமயம் பீடுமிக்க சமயமாகத் திகழ்ந்தது; சைவத் திரு முறைகள் ஓதப்பட்டன; நாயன்மார் உருவச் சிலைகள் கோவில்களில் எழுந்தருளப் பெற்றன; பூசைகளும் விழாக்களும் குறைவற நடந்தன. 2. பல்லவப் பேரரசு வீழ்ந்த பிறகு சோழப் பேரரசு ஏற்பட்டது. அக்காலத்தில் (கி. நி. 900-1300) சைவ சமயம் மிக்க அளவில் வளர்ச்சி பெற்றதென்னலாம். சோழர் என்றுமே சைவ சமயத்திலிருந்து விலகாதவர்; வழிவழிச் சைவர்; வறுமையும் சிறுமையும் உற்ற காலத்திலும் சிவத்தொண்டு செய்து வந்த பெரு மக்கள். ஆதலின் அவர்கள் பேரரசு ஏற்பட்டதும் பாடல் பெற்ற பழங்கோவில்களைக் கற்றளிகளாக மாற்றினர்; அவற்றுக்கு ஏராளமான நிலங்களை மானியமாக விட்டனர்; பொன்னையும் மணிகளையும் கொண்டு அணிகள் செய்து மூர்த்தங்கட்கு இட்டு மகிழ்ந்தனர். சோழப் பேரரசருள் சிறந்த இராஜராஜன், நம்பி யாண்டார் நம்பி என்னும் சைவப் பெரும்புலவரைக் கொண்டு அப்பர், சம்பந்தர், சுந்தரர் திருப்பதிகங்களை (அழிந்தன போக எஞ்சியவற்றை) ஏழு திருமுறை களாக வகுக்கச் செய்தான்; தஞ்சையில் உலகம் வியக்கும் பெரிய கோவிலைக் கட்டி அங்குச் சைவம், இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் இவற்றை வளர்த்தான்; நாயன்மார்க்குச் செப்புச் சிலைகள் எடுப்பித்துச் சிறப்பித்தான். இவன் மகனான கங்கை கொண்ட சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தைப் புதிதாக உண்டாக்கி, அதனைச் சோழப் பெருநாட்டின் கோநகரம் ஆக்கினான்; அங்குத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற சீரும் சிறப்பும் கொண்ட கங்கை கொண்ட சோழீவரம் கட்டினான். அக்கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டது. தேவாரப் பள்ளிகளை மேற்பார்க்க அல்லது கோவில்களில் இருந்த தேவார ஓதுவார்களை மேற்பார்க்கத் தேவார நாயகம் என்ற அரசியல் அலுவலாளன் இராஜேந்திரன் ஆட்சியில் இருந்தான் எனின், திருப்பதிகங்கள் அக்காலத்தில் பெற்றிருந்த சிறப்பை என்னென்பது! இராஜேந்திரற்குப் பின் வந்த சோழர் காலத்தில் சைவ சமயம் மேலும் வளர்ச்சி பெறலாயிற்று. பல கோவில்களில் நாயன்மார் உருவச்சிலைகட்குப் பூசை, விழா முதலியன நடைபெற்றன; திருப்பதிகங்கள் நாளும் ஓதப்பெற்றன; நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள் ஓவியங்கள் வாயிலாகவும் சிற்பங்கள் மூலமாகவும் காட்சி யளித்தன. நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதி, சம்பந்தரைப் பற்றிப் பாடிய நூல்கள், அப்பரைப் பற்றிப் பாடியி நூல், பிறர் பாடிய தில்லை உலாப் போன்ற சிறிய பிரபந்தங்கள் என்பவற்றின் வாயிலாகவும் நாயன்மார் வரலாறுகள் ஓரளவு நாட்டிற் பரவி இருந்தன. கோவில் என்ற தனிச்சிறப்புப் பெற்ற சிதம்பரம் - நடராசப்பெருமான் கோவில் சோழர் காலத்தில் மிகவுயர்ந்த நிலையில் இருந்தது. திருமுறைகள் செப்புத் தகடுகளில் எழுதப்பட்டன. பல கோவில்களில் தேவார ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றை நாளும் எடுத்துப் பூசிக்கவும், படிக்கவும், அழிந்ததைப் புதுக்கவும் வல்ல ஒருவர் தமிழ் விரகர் எனப்பட்டார். அவருக்கு மானியம் விடப்பட்டிருந்தது. கோவில்களில் பல புராணங்கள் படிக்கப்பட்டன. இப் படிப்பிற்கெனச் சில கோவில்களில் தனிக்கட்டடம் இருந்தது. இவ்வாறு சேக்கிழார்க்கு முன்பே, பொதுவாகச் சைவ சமயமும் சிறப்பாக நாயன்மார் வரலாறுகளும் நாடெங்கும் பரவி நன்னிலையில் இருந்தன. சேக்கிழாரும் நாயன்மார் வரலாறுகளும் நாயன்மார் அறுபத்து மூவரைப்பற்றிக் குறிப்பவை (1) திருத்தொண்டத் தொகை, (2) திருத்தொண்டர் திரு அந்தாதி, (3) சைவத் திருமுறைகள் பதினொன்று, (4) நம்பி பாடிய சம்பந்தர் அப்பரைப் பற்றிய சிறு நூல்கள் முதலியன ஆகும். இவை அனைத்திலும் கூறப்படாத பல புதிய செய்திகள் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ளன. ‘இப்புதிய செய்திகள் சேக்கிழார்க்கு எப்படிக் கிடைத்தன? என்பதே நமது கேள்வி. 1. சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சர்; ஆதலின், அரசியல் அறிவு நிரம்பப் பெற்றவராவர். அப்புலவர் நாயன்மார் வரலாறுகளை ஆராய்கையில்-சேர, சோழ, பாண்டியர் நாயன்மாராக இருந்தமையும்; பல்லவ அரசர், களப்பிர அரசர் நாயன்மாராக இருந்தமையும்; திருக்கோவலூர் அரசர், திருமுனைப்பாடி நாட்டரசர், குறும்பர் தலைவர், கொடும்பாளூரை யாண்ட வேளிர்குலத் தலைவர் முதலானோர் நாயன்மாராக இருந்தமையும்; பல்லவர் - சோழர் சேனைத் தலைவர்கள் நாயன்மார்களாக இருந்தமையும் கண்டார்; ஆதலின், அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தம் காலத்தில் இருந்த அவரவர் மரபினரைக் கேட்டே தொகுத்தல் நலம் எனக் கருதினார்; அங்ஙனம் முயன்று, கிடைத்தவரை தொகுத்தனர். அங்ஙனம் தொகுத்தவற்றுள் (1) கோப்பெருஞ் சோழர், புகழ்ச்சோழர், தண்டியடிகள் குங்கிலியக்கலயர் - அப்பர் புராணங்களில் வரும் சோழ மன்னர் இவர்களைப்பற்றிய செய்திகளும்; (2) சேரமான் பெருமாள் நாயனாரைப் பற்றிய செய்திகளும்; (3) நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் பற்றிய செய்திகளும்; (4) ஐயடிகள் காடவர்கோன், காடவர் கோன் கழற்சிங்கன், அப்பரைத் துன்புறுத்திய குணபரன் (மஹேந்திரவர்மன்), பூசலார் காலத்து இராஜசிம்மன் என்ற பல்லவ வேந்தரைப் பற்றிய குறிப்புகளும்; (5) கூற்றுவ நாயனார், இடங்கழி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மிழலைக்குறும்பர், நரசிங்க முனையரையர் பற்றிய செய்திகளும்; (6) பல்லவர் சேனைத் தலைவரான சிறுத்தொண்டர், சோழர் தானைத் தலைவரான கலிக்காமர், கோட்புலியார், மானக்கஞ்சாறர் இவர் தம் வரலாறு பற்றிய செய்திகளும் குறிப்பிடத்தக்கவையாகும். இப்புதிய செய்திகளுட் பல பல்லவர் - சோழர் காலப் பட்டயங்கள், கல்வெட்டுகள் இவற்றின் துணைக்கொண்டும் தொகுக்கப்பட்டன என்று திட்டமாகக் கூறலாம். 2. சமண பௌத்த சமய சம்பந்தமான செய்திகள் பல சிந்தாமணி, நீலகேசி போன்ற சமண நூல்களிலும் மணிமேகலை, குண்டலகேசி போன்ற பௌத்த நூல்களிலும் இருப்பவை; சில இந்நூல்களில் இல்லாதவை. ஆயின், சேக்கிழார் காலத்தில் சோழப் பெருநாட்டில் சமணர் மடங்கள் பல இடங்களில் இருந்தன. அவற்றில் சமண முனிவரும் பெண் துறவியரும் இருந்து சமயத் தொண்டாற்றி வந்தனர். சமய நூல்கள் அவர் தம் கோவில்களில் படிக்கப்பட்டன என்பன கல்வெட்டுகளைக் கொண்டு அறியலாம். இங்ஙனமே நாகையில் சிறந்த பௌத்த விஹாரம் ஒன்று இருந்தது. சேக்கிழார் மேற்சொன்ன சமய நூல்களைப் படித்ததோடு தம் காலத்திலிருந்த சமண பௌத்த அறிஞரோடு அளவளாவி அவர்தம் சமயக் கொள்கைகளை மிகத் தெளிவாக (First hand information) அறிந்தனர் என்று கூறல் தவறாகாது. 3. வரலாற்றுப் புகழ் பெறாத ஏனைய நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார், முன்னூல் குறிப்புகளைக் கொண்டும் தமது தலயாத்திரையின் பொழுது கிடைத்த குறிப்புகளைக் கொண்டும் விரிவாகப் பாடினார் என்று கூறலாம். சேக்கிழார் தலயாத்திரை சேக்கிழார், பெரிய புராணம் பாடுக என்று அரசன் வேண்டிக்கொண்ட பிறகோ, அல்லது அதற்கு முன்போ தமிழ் நாடு முழுவதும் நன்றாக யாத்திரை செய்து பல குறிப்புகளைத் தொகுத்தவர் என்பது பெரிய புராணத்தால் அறியத்தகும் செய்தியாகும். 1. திருநாவுக்கரசரது தொண்டை நாட்டு யாத்திரையைப் பற்றிச் சேக்கிழார் கூறியுள்ள செய்திகள் அனைத்தும் உண்மை என்பதைத் தொண்டை நாட்டு யாத்திரை செய்தவர் நன்குணர்வர். இவ்வாறே சம்பந்தரது சோழ-பாண்டிய நாட்டு யாத்திரை, சுந்தரரது தலயாத்திரை முதலியனவும் பற்றிச் சேக்கிழார் தந்துள்ள குறிப்புகள் இன்றளவும் உண்மையாதல் கண்டு மகிழலாம். சேக்கிழார், தமிழ் நாட்டு ஆறுகள் அனைத்தையும் அவற்றின் இரண்டு கரைகள் மீதுள்ள சிவன் கோவில்களையும் நன்கறிந்தவர். அப்பர் கெடில நதியைத் தாண்டி அதன் தென் கயரயே சென்று இன்ன தலத்தைத் தரிசித்தார்; சம்பந்தர் முள்ளியாற்றைக் கடந்து வடக்கே சென்று இன்ன தலத்தைத் தரிசித்தார்; சுந்தரர் நிவா நதி வழியே சென்று இன்னின்ன கோவில்களைத் தரிசித்தார்... ... ... பொன்னி வடகரைமீது மேற்கு நோக்கிச் சென்று கொங்கு நாட்டை அடைந்தார். ... .... ...... என்றெல்லாம் சேக்கிழார் செப்பியுள்ளமை கருத்தூன்றிக் கவனிக்கற்பாலது. 2. நாயன்மார் பதிகளைத் தெளிவாகக் குறித்திருத்தல் வியப்பினும் வியப்பாகும். நந்தனார் பிறந்த ஆதனூர் எது? தமிழகத்தில் ஆதனூர்கள் பல இருந்தன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. இதனை நன்குணர்ந்த சேக்கிழார், தமது பெரிய புராணத்தைப் படிப்பவர் எளிதில் உணருமாறு, கொள்ளிடத்தின் வட கரையில் அதன் அலைகள் மோதுகின்ற நிலையில் உள்ளது ஆதனூர்; அப்பதி மேல் கானாட்டைச் சேர்ந்தது, என்று தெளிவாகத் தெரிவித்திருத்தல் பாராட்டத் தக்கது. இக்குறிப்பால் நந்தனாரது ஆதனூர், சிதம்பரம் தாலூகாவில் உள்ளது என்பது தெரிகிறது. இங்ஙனம், சுந்தரரோ நம்பியாண்டார் நம்பியோ குறியாத நாயன்மார் பதிகள் பலவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறி யிருத்தலை நோக்க, இப்பெரும்புலவர் அப்பதிகளை நேரிற் சென்று கண்டவர் என்பது நன்கு புலனாகும் அன்றோ? 3. சுந்தரர் வெள்ளானைமீது கயிலை சென்றமை, சேரமான் பெருமாள் யானைமீது கயிலை சென்றமை, சுந்தரரை இறைவன் வந்து தடுத்தாட் கொண்டமை, சண்டேவரர்க்கு அம்மை யப்பர் தோன்றிச் சண்டீசப் பதம் அருளினமை போன்ற நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்களும் சிற்பங்களும் சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன. அவர் அவற்றைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழீவரம் மேலைக்கடம்பூர்க் கோவில் முதலிய கோவில்களில் கண்டு மகிழ்ந்தார் என்னலாம். பெரிய புராணம் பாடிய வரலாறு இவ்வாறு சேக்கிழார், நாயன்மார் வரலாறுகட்குரிய குறிப்புகளை நூல்கள் கோவில்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் - கல்வெட்டுகள் - அவ்வம்மரபினர் வாய்மொழி இவற்றை ஆராய்ந்து தொகுத்தார் என்னலாம். இவர் நாயன்மார் வரலாறுகளை நன்கறிந்தவர் என்பதை இளவரசனான இராஜராஜன் வாயிலாகவோ அல்லது தானாகவோ அறிந்த இரண்டாம் குலோத்துங்கன், சேக்கிழார் சொல்ல நாயன்மார் வரலாறுகளை விரிவாகக் கேட்டான்; கேட்டு, வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, இவ்வியத்தகு அடியார்கள் வரலாறு களை நீவிரே ஒரு பெரிய காவியமாகப் பாடியருளுக என்று வேண்டினான்; அவருக்கு வேண்டும் ஆள் உதவி, பொருள் உதவிகளைச் செய்து அவரைத் தில்லைக்கு அனுப்பினான். தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தபிரான் திருமுன்பு சென்று வணங்கி நின்று, பெருமானே, பெருமை மிக்க நின் அடியார் வரலாறுகளை யான் எங்ஙனம் புராணமாகப் பாடுவேன்! என்று ஏங்கி நிற்க, உலகெலாம் என்றொரு தொடர் சேக்கிழார் செவிகளிற் பட்டது. அவர் அதனைக் கூத்தபிரான் அருள்வாக்கெனக் கொண்டு, அதனையே தமது நூலுக்கு முதலாகக் கொண்டார்; கொண்டு, உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் ஆலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவோம். என்ற கடவுள் வாழ்த்துடன் தமது நூலைத் தொடங்கிப் புராணம் பாடி முடித்தார். அந்நூல் 4253 செய்யுட்களைக் கொண்டது. அதன் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது. பெரிய புராண அரங்கேற்றம் பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் முற்றுப் பெற்றதை அறிந்த அநபாயன், தில்லைத் திருக்கோவில் பெரு மண்டபத்தில் அறிஞர் அவையைக் கூட்டினான். அப்பேரவையில் சேக்கிழார் தமது நூலைப்பாடி விளக்கி அரங்கேற்றம் செய்தார். அநபாயன் பெரு மகிழ்ச்சியுற்று நூலையும் புலவரையும் யானைமீதேற்றி நகர் வலம் செய்வித்துப் பெருஞ் சிறப்புச் செய்தான். அப்பொழுது அவரது பெரிய புராண வாக்கைப் பாராட்டி அருண்மொழித் தேவன் என்ற புகழ்ப்பெயர் உண்டானது போலும்! அவரது சிவபக்தியின் சீரிய நிலையைப் பாராட்டி மக்கள் அவரை மாதேவடிகள் (மஹாதேவனுக்கு அடியவர்) என ஏத்தெடுத்ததனாற் போலும்! அவர், மாதேவடிகள் இராமதேவன் என்ற உத்தம சோழப் பல்லவராயன் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளார்! சிவபக்தரும் சீரிய சைவப் புலவருமாகிய சேக்கிழார் பெருமானை மேலும் அமைச்சராக வைத்திருக்க அரசன் விரும்பவில்லை; அதனால், அவர் தம்பியாரான சேக்கிழார் - பாலறாவாயரை உயர் அலுவலாளராகத் தன்னிடம் வைத்துக்கொண்டான். இறுதிக் காலம் அரசியல் பதவியினின்றும் ஓய்வு பெற்ற சேக்கிழார் பல சிவதலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்தார்; இறுதியில் தில்லையில் தங்கி மெய்யடியாருடன் உறவு பூண்டு தம் இறுதி நாட்களைக் கழித்தார். குன்றை முனி சேக்கிழார், அண்ட வாணரடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர் என்று சேக்கிழார் புராணம் கூறலை நோக்கச், சேக்கிழார் உயர்நிலை நன்கு விளங்கும். சேக்கிழார் சிறப்பு சேக்கிழார் கி. பி. 12-ஆம் நூற்றாண்டுப் புலவர். அவர் நாயன்மார் வரலாறுகளைத் தம் மனம் போனவாறு பாடி யிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாது, தமிழ் நாடு முழுவதுத் சுற்றித் திரிந்து, பாடல் பெற்ற கோவில்களையும் நாயன்மார் வாழ்ந்த பதிகளையும் பார்வையிட்டார்; அவர்தம் வரலாறுகளை ஆங்காங்கிருந்த வல்லார்வாய்க் கேட்டுணர்ந்தார்; நாயன்மாரைப்பற்றிய ஓவியங்களையும் சிற்பங்களையும் ஆராய்ந்தார். இங்ஙனம் அரும்பாடுபட்டு, உண்மைகைளத் திரட்டி எழுதுபவனே சாத்திரீய வரலாற்று ஆசிரியன்* என்று மேனாட்டார் கூறுகின்றனர். மேனாட்டார் இன்று கூறும் சாத்திரீய முறையில் இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ்ப் பெரும்புலவராகிய சேக்கிழார், நாயன்மார் வரலாறுகளைத் தொகுத்துப் பெரியதோர் காவியமாகப் பாடி வைத்தனர் எனின், அவருடைய ஆராய்ச்சி அறிவு நுட்பத்தை என்னெனப் பாராட்ட வல்லோம்! அவரைப்போன்ற ஆராய்ச்சிப் புலவரைத் தமிழ் மொழியிற் காணல் அரிதன்றோ?  1. சிலப்பதிகார வேனிற்காதை உரையில் அடியார்க்கு நல்லார், இனி நாடக நூலார் இவ்விருப்பை ஐம்பதென விரி வரையறை கூறித் தொகை வரையறை கூறுவார், அவற்றை ஒன்பதின் அடக்கிக் கூறினார் என உணர்க . . . . . என்று கூறியிருத்தல் காண்க. * “Archaeology is the study of the human past, concerned principally with the activities of man as a maker of things.” — Stanley Casson in his “Progress of Archaeoloãy.” * The Scientific Historian – Vide Johnson’s ‘Theory of History’.