என்றுமுள தென்றமிழ் வழியும் வகையும் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : என்றுமுள தென்றமிழ், வழியும் வகையும் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12 + 84 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 90/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கி யிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதி யிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர் களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை என்றுமுள தென்றமிழ் எண் பக்கம் 1. என்றுமுள தென்றமிழ் 13 2. தமிழரும் நுண்கலைகளும் 22 3. தமிழ்நாட்டு நடனக் கலை 26 4. வள்ளுவரும் காந்தியடிகளும் 37 5. அடிப்படையும் சூழ்நிலையும் 42 6. சமுதாய வாழ்க்கை 47 7. திருக்குறட் சிறப்பு 52 8. திரு. வி. க. 55 9. இளமைப் பருவமும் வாழ்க்கையின் நிலைமையும் 58 10. அதமன் கோட்டை 62 வழியும் வகையும் 1. எண்ணங்கள் 69 2. சொற்கள் 74 3. அமைப்பு 80 4. அலங்காரம் 87 1. என்றுமுள தென்றமிழ் தமிழின் தொன்மை: நமது தாய் மொழியாகிய தமிழ் எக்காலத்தில் தோன்றியது? அதன் பழமை யாது? என்னும் வினாக்களுக்கு மொழியாராய்ச்சியாளர் இதுகாறும் விடை காணவில்லை. இன்று உலகத்தில் பேசப்படும் மொழிகள் மூவாயிரத்துச் சில்லறையாகும். அவற்றுள் காலத்தால் முற்பட்டவை இரண்டே. ஒன்று சீன மொழி; மற்றொன்று நமது தாய்மொழியாகிய தமிழ். உலகப் பழைய மொழிகள் இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், வடமொழி, சீனமொழி, தமிழ்மொழி (திராவிட மொழி) என்பன. இவற்றுள் இன்று பேச்சு வழக்கில் இருப்பன சீனமும் தமிழுமேயாம். இவ்வாறு பண்டை மொழிகளிலும் நமது தமிழ் முன்னணியில் நிற்கின்றது. தோன்றிய நாள் தொட்டு இன்றளவும் பேச்சு வழக்கில் இருந்து வருகின்றது. இத்தகைய பழமையையும் பேச்சு வழக்கிற் பெருமையையும் பெற்ற மொழியைத் தாய் மொழியாகப் பெற்றிருப்பவர் நாம் என்பதை எண்ணத் தமிழ் மக்கள் மெய்யாகவே மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவார்கள் என்பது திண்ணம். இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் என்பதைப் பெரும்பாலோர் ஒப்புவர். அதனைச் செய்த தொல்காப்பியர், அந்நூலுள் ஏறத்தாழ 260 இடங்களில் தமக்குச் சமகாலத்தவரும் தமக்குக் காலத்தால் முற்பட்டவருமான தமிழ் இலக்கண ஆசிரியர் பலரைக் குறிப்பிட்டுள்ளார். யாப்பென மொழிப யாப்பறி புலவர் என்றிசினோரே என்மனார் புலவர் நூலறி புலவர் நுவன்றிசினோரே எனப் பலவாறு வரும் தொடர்கள் இவ்வுண்மையை உணர்த்தும். எனவே, தொல்காப்பியர் காலத்திலும் (ஏறத்தாழ கி. மு. 3-ம் நூற்றாண்டிலும்) அதற்கு முன்பும் தமிழ் இலக்கணப் புலவர் பலரிருந்தனர் என்பதையும், அவர் தம் கருத்துக்களைப் பெரும்பாலும் தழுவியே தொல்காப்பியர் இலக்கண நூல் செய்தார் என்பதையும் இத் தொடர்கள் நன்குணர்த்தும். இதனால் தொல்காப்பியர் காலத்தும் அவருக்கு முற்பட்ட காலத்தும் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகும். ஏறத்தாழக் கி. பி. 10-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில், தொல்காப்பியர் முதலிய ஒருசார் ஆசிரியர் இங்ஙனம் கூறுவர்; பெருங்காக்கை பாடினியார் முதலிய பிறிதொருசார் ஆசிரியர் இங்ஙனம் கூறுவர் என வரும் செய்தி மேற் சொன்ன உண்மையை உறுதிப்படுத்தல் காணலாம். ஏறத்தாழக் கி. மு. 3-ம் நூற்றாண்டிலும், அதற்கு முன்னும் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்தன என்பது மேற்கூறிய உண்மைகளால் நன்கு தெளிவாகும். எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல இலக்கியத்தி லிருந்து எடுக்கப்படுவது இலக்கணம். எனவே, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்களுக்கு உறு கருவிகளாக இலக்கிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது அறிவுடையோர்க்கு நன்கு புலனாகும். பனையோலைகளில் எழுதப்பட்ட அந்நூல்கள் நாளடைவில் அழிந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியம் போன்ற பண்பட்ட இலக்கண நூல் செய்வதற்கு ஏற்ற இலக்கிய நூல்கள் மிகப் பலவாக நம் மொழியில் இருந்திருத்தல் இயல்பே. எனவே, கி. மு. 3-ம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றிய இலக்கணங்களுக்குரிய இலக்கிய நூல்கள் மிகப்பல நூற்றாண்டளவில் செய்யப்பட்டனவாதல் வேண்டும் என்று கருதுதல் தகும். இத்தகைய இலக்கிய வளம் திடீரென்று ஏற்படுவதன்று. பண்டை மனிதர் பேசக் கற்று, எழுதக் கற்று, கருத்து வளர்ச்சி யடைந்து முன்னேறுவதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆதல் வேண்டும் என்று மொழியாராய்ச்சி யாளர் மொழி கின்றனர். இந்த உண்மையை நோக்க, நமது தாய்மொழி எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதென்று மெய்யாகவே கூறுதல் இயலாது. இந்த உண்மையை நன்குணர்ந்து, கல்வியிற் பெரிய கம்பர் என்றுமுள தென்றமிழ் என்று கூறினார். சங்க காலம்: இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்க நூல்கள் மிகச் சில. அவை எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன. எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் நூற்றுக்கணக்கான புலவர்களால் பல்வேறு காலங்களில்-பல்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்டவை. அவற்றைக் கொண்டு அக்காலத் தமிழரசர், சிற்றரசர், வீரர், குடி மக்கள் இவர்களைப் பற்றிய விவரங்களை அறியலாம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் செய்யப்பட்டவை. சங்க காலத்தின் முற்பகுதியை விளக்கும் தொகை நூற்பாடல்கள் பல. அவற்றால் சங்க காலத் தமிழ் மக்கள் இக்காலச் சாதிகளை அறியாதவர் என்பதையும், கோனாட்சியில் தத்தம் தொழில்களைச் செய்துகொண்டு இன்புற்று வாழ்ந்தனர் என்பதையும், வீரத்தையும், காதலையும் போற்றி வந்தனர் என்பதையும் அறியலாம். மேலும் ஆடவர் - பெண்டிர் என்ற வேறுபாடு இன்றி, சமுதாயத்தில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற மாறுபாடு இன்றி, இன்னார் தாம் கல்வி கற்க வேண்டும், இன்னார் கற்றல் கூடாது என்ற வரையரையின்றி அனைவரும் கல்வி கற்றனர் என்பதை அறிந்து மகிழலாம். குயத்தி, காவற் பெண்டு போன்ற சாதாரண மகளிரும் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் தமிழ் வேந்தரால் மதிக்கப் பெற்றனர் என்பதைப் படிக்கும்பொழுது, பண்டைத் தமிழகத்துச் சமுதாய மேம்பாட்டினை நாம் உணர்ந்து மகிழ்கின்றோம்; அத்தகைய உயர்நிலை எப்பொழுது வரும் என்று ஏங்குகின்றோம். அதியமானிடம் அவைக்களப் புலவராயிருந்த ஔவையார் காஞ்சியை ஆண்ட தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்று மீண்டார் என்பதை நோக்க, நமக்கு உண்டாகும் உள்ளக் கிளர்ச்சி சொல்லுந் தரத்ததன்று. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே பெண்மணியை அரசியல் தூதராக அனுப்பிய சங்க காலத் தமிழனது பேரறிவினையும், முற்போக்கு உணர்ச்சியையும் என்னெனப் பாராட்டுவது! தேவை ஏற்படும்பொழுது மாமனார் பெயரையும் கணவன் பெயரையும் தடையின்றிக் கூறலாம் என்பதைச் செயலில் காட்டிய கண்ணகி தேவியின் வழக்காடும் திறத்தையும் கற்பின் சிறப்பையும் நாம் எவ்வாறு பாராட்டப் போகிறோம்! சங்க கால இசைத் தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்ட எண்ணற்ற புலவரின் பாடல்கள் இருக்கின்றன. இசையின் சிறப்பை இனிதுணர்த்தப் பாணரைப் பற்றிய செய்திகள் பல இருக்கின்றன. நாடகத் தமிழின் நலத்தினைக் காட்டக் கூத்தர், விறலியர் பற்றிய குறிப்புக்கள் பல சங்க நூல்களில் காணப் படுகின்றன. மாதவியின் அரங்கேற்று காதை விவரங்கள் மட்டுமே நமது நாடகத் தமிழின் சிறப்பை விளக்கப் போதுமானவை அல்லவா? குடிமக்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்றல் இன்றியமை யாதது என்பதைப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு செய்யுளாகப் பாடினான் என்றால் தமிழ் மன்னன் கல்வித் துறையில் காட்டிய ஆக்கத்தினை நன்குணரலாம். என்மேல் படையெடுத்துவரும் வேந்தரை வெல்லேனாயின், யான் கொடுங்கோல் வேந்தனென்று என் குடிகள் என்னைத் தூற்றுவாராக; மாங்குடி மருதன் போன்ற புலவர் பெருமக்கள் என் நாட்டைப் பாடாது ஒழிவாராக. என்று மற்றொரு பாண்டியன் நெடுஞ்செழியன் கூறும் சூளுரையிலிருந்து அவனது ஆட்சிப் பொறுப்பையும் புலவர்பால் அவன் வைத்திருந்த மதிப்பையும் நன்குணரலாம் அன்றோ? இப்பகைவரை நான் வெல்லேனாயின் பொதுமகளிர் மார்பின் மீது என் மாலை துவள்வதாக என்று சோழன் நலங்கிள்ளி சூளுரைப்பதிலிருந்து நாடாண்ட வேந்தனது நல்லொழுக்கத்தை நன்கறியலாமல்லவா? குடிகளைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்த இத்தகைய தமிழ் வேந்தரது ஆட்சியில் மக்கள் இன்புற்று வாழ்ந்தனர் என்பதில் ஐயம் உண்டோ? புலவர் - பாணர் - கூத்தர் என்ற முத்தமிழ்ப் புலவரைக் காப்பதே தமது கடமை என்று எண்ணி, ஊர்களையும், உண்பொருள்களையும், செல்வப் பொருள்களையும் வரையாது அளித்த வள்ளல்கள் சங்க காலத்தில் வாழ்ந்ததாற்றான் முத்தமிழ் நாட்டில் முழக்கமிட்டது. ஆடவரும் பெண்டிரும் கல்வி - கேள்விகளிற் சிறந்து விளங்கினர். நாடு நாடாக விளங்கியது. இடைக்காலம்: சங்க காலத்தில் வடமொழி வாணர் மிகச் சிலராகவே தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர். அவர் கூட்டுறவா லும், பௌத்தர், சமணர் கூட்டுறவாலும் ஒரு சில பாதகச் சொற்களும், வடமொழிச் சொற்களும் தமிழிற் கலந்தன. அதனாற்றான் சங்க நூல்களில் பிற மொழிச் சொற்கள் மிகச் சிலவாகக் காணப்படுகின்றன. சங்க காலத்திற்குப் (கி. பி. 300) பிறகு தமிழகத்தை ஏறத்தாழ 600 ஆண்டு காலம் பல்லவர் என்ற வேற்று மரபினர் ஆண்டனர். அக்காலத்தில் அவ்வேந்தர் வடமொழி வாணரைத் தமிழகத்திற் குடியேற்றி, நிலங்களையும் சிற்றூர்களையும் அளித்து ஆதரவு தந்தனர். குடி, மங்கலம், புத்தூர், சதுர் வேதமங்கலம், பிரமபுரி, பிரமதேசம் என்ற பெயர்களைக் கொண்ட ஊர்கள் அனைத்தும் வடமொழி வாணர் குடியேறிய ஊர்களேயாகும். இவ்வடவர் கலப்பால், பல்லவர் காலத்தில் வடமொழியிலக்கணம் தமிழில் கலக்கலாயிற்று. பதிகம், விருத்தம் முதலிய பாவகைகள் வட மொழியிலக்கணம் பின்பற்றித் தமிழில் புகுந்தன. வைதிகச் சமயமும் தென்னாட்டில் கால்கொள்ளத் தொடங்கிற்று. எனவே தமிழில் வடமொழிக் கலப்பு மிகுதியாக ஏற்படத் தொடங்கியது. இந்த உண்மையைச் சைவத் திருமுறைகளிலும், ஆழ்வார் அருட்பாடல்களிலும் கண்டு தெளியலாம். வடவர் கூட்டுறவால் தமிழ்ச் சிவன் வேதகால ருத்திரனோடு இணைக்கப்பட்டான்; தமிழ்க்கொற்றவை துர்க்கையோடு இணைக்கப்பட்டாள்; தமிழ் முருகன் சுப்பிரமணிய னாக்கப்பட்டான்; பம்பாய் மாகாணத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த வினாயகர் தமிழகத்திற்குக் குடியேற்றப்பெற்றுத் தமிழ்ச் சிவனுக்கு முதற் பிள்ளையாகும் பேறுபெற்றார். வடமொழிவாணர் எழுதிவைத்த புராணக் கதைகளெல்லாம் திருமுறைகளில் புகுந்துவிட்டன. இராவணன் கைலையைப் பெயர்த்தமை, ஐயனார் பிறப்பு, திருமாலின் அவதாரக் கதைகள், சிவபெருமான் செய்தனவாகக் கூறப்படும் திருவிளை யாடல்கள் முதலியனவும்; படிக்கவும், கேட்கவும் அருவருப்பான சில கதைகளும் சமய நூல்களில் இடம் பெற்றன. சோழப் பேரரசர் காலத்தில் (கி. பி. 900-1300) தமிழகத்தில் கோயில்கள் பெருக்கெடுத்தன. சைவ சமயவெறி தலை தூக்கியது. இக்காலத்தில் சைவ சமயம் சோழப் பேரரசால் போற்றி வளர்க்கப்பட்டது. ஆனால் வைணவம் ஓரளவு அடக்கப் பட்டதென்றே கூறலாம். இராமானுசர் சோழ நாட்டிலிருந்தே விரட்டப்பட்டார். இரண்டாம் குலோத்துங்கன் தில்லையி லிருந்த கோவிந்தராசர் சிலையைப் பெயர்த்துக் கடலில் எறிந்துவிட்டான். கோயில்களைக் கண்காணிக்கும் மகேசுவரர் வைணவரோடு பழகவும் கூடாதென்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. சைவத்திலும் தமிழ்ப் புலமையிலும் அரசியல் அறிவிலும் மிகச் சிறந்த சேக்கிழார் பெருமானும் புறச்சமய வெறுப்பிலிருந்து தப்பவில்லை. மாலும் அயனும் காணாத சிவன் என்ற பொருள்படும் தொடரினைப் பலநூறு இடங்களில் தமது பெரிய புராணத்தில் கூற அவர் தவறவில்லை. இத்துன்ப நிலையில் தோன்றியவனே கம்பன். அப்பெருமகன் நாட்டில் நிலவிய சமய வேறுபாட்டை வெறுத்தான்; அரியும் சிவனும் ஒன்றே என்பதையும், அரசியல் இருக்க வேண்டும் நிலையையும், அரசனது இலக்கணத்தையும் பிற நன்னெறிகளையும் தனது பெருங் காவியமாகிய இராமாயணத்தில் பல இடங்களில் வற்புறுத்திக் கூறியுள்ளான். சோழப் பேரரசின் காலத்தில் சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப ராமாயணம் என்னும் பெருங் காவியங்கள் தோன்றின. கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, மூவர் உலா, குலோத்துங்கன் கோவை, அம்பிகாபதிக் கோவை முதலிய சிறு நூல்கள் தோன்றின. யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, வீர சோழியம், நன்னூல் என்னும் இலக்கண நூல்கள் தோற்ற மெடுத்தன. ஆழ்வார்களின் அருட்பாடல்களுக்கு மணிப்பிரவாள நடையில் விரிவுரை தோன்றியதும் இக்காலத்திலேதான். பன்னிரு திருமுறைகளின் சத்துப் பொருளாகச் சிவஞான போதமும், பிற சித்தாந்த சாத்திரங்களும் இக்காலத்திலேதான் தோன்றின. தமிழரான சோழர் ஆட்சியில் பல துறைகளிலும் தமிழ் நூல்கள் மிகுதியாகத் தோன்றின என்று கூறுதல் தவறாகாது. சங்ககாலச் சைவம் பிற்காலத்தில் வைதீக நெறியோடு இணைந்து நாயன்மாரால் வளர்க்கப்பட்டு, சோழரால் பலப்படுத்தப்பட்டது என்று கூறலாம். இதனாற்றான் சித்தாந்த நூல்களில் வடமொழிக் கலப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. பிற்காலம்: சோழராட்சிக்குப் பிறகு தமிழகம் முலீம் படையெடுப்புக்கு ஆட்பட்டது; பின்னர் விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டது; அதன் பின்னர் கர்நாடக நவாப்பின் ஆட்சிக்கும், மகாராஷ்டிர ஆட்சிக்கும், நாயக்க மன்னர் ஆட்சிக்கும் இடம் தந்தது. இந்த ஆட்சி மாறுபாடுகளினால் தமிழகத்தில் இந்துதான், கன்னடம், தெலுங்குச் சொற்கள் வழங்கலாயின; அவ்வழக்கு நூல்களிலும் புகுந்து விட்டது. வாணிகம் புரியவந்த போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் சொற்களும் தமிழில் புகுந்தன. இப்பிற்காலத்தில் சைவ மடங்களே தமிழை வளர்க்கும் நிலையங்களாக விளங்கின. அவற்றிலிருந்த சமயப்பெரியார்கள் எண்ணற்ற புராணங்களையும் சமய நூல்களையும் இயற்றினர். தமிழராக இருந்து இலாத்தைத் தழுவிய தமிழர்கள் அச் சமயத்தைப் பற்றித் தமிழில் நூல்கள் எழுதினர். அவற்றுள் சிறந்தது உமறுப் புலவர் எழுதிய சீறாப் புராணம். கிறிதவ சமயப்பணி செய்ய வந்த வீரமாமுனிவர் போப்பையர், கால்டுவல் ஐயர், ராட்லர், வின்லோ முதலிய அறிஞர்களும் தமிழில் அகராதிகளையும், செய்யுள் நூல் களையும், மொழி பெயர்ப்பு நூல்களையும், ஆராய்சி நூல் களையும் இயற்றிப் புகழ் படைத்தனர். அப்பெரு மக்களது சீரிய தொண்டினால் தமிழின் பெருமை உலக நாடுகளிற் பரவ லாயிற்று. நமது பெருமையை உலகெலாம் பரவச் செய்த அப் பிறநாட்டு நல்லறிஞர்கட்கு நமது நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக! ஆங்கில ஆட்சியில் இராமலிங்க அடிகள், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற பெருமக்கள் தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடித் தமிழை வளர்த்தனர். யாழ்ப்பாணத் தமிழ்ப்பெரும் புலவரான ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்துள்ள தொண்டு அளவிடற்கரியது. அப்பெருமானைப் பின்பற்றித் திரு. கனக சபைப் பிள்ளை, கதிரைவேற்பிள்ளை, சி. வை. தாமோதரம் பிள்ளை, தி. தா. கனகசுந்தரம் பிள்ளை, சுன்னாகம் குமார சுவாமிப் புலவர், விபுலானந்த அடிகள், மகாவித்துவான் கணேசையர் போன்ற புலவர் பெருமக்கள் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு உண்மையில் அளவிடற்கரியதாகும். இந்த யாழ்ப்பாணப் பெரும் புலவர்களுக்கு தாயகத் தமிழர் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். சங்க நூல்களை நாம் அனைவரும் படித்து மகிழும் வண்ணம் வெளியிட்ட பெரியார் பலர். அவருட் சிறந்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். இப்பெருமகனைத் தமிழுலகம் மறத்தல் இயலாது. காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர், வி. கோ. சூரியநாராயண சாதிரியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, எம். எ. பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, வ உ சிதம்பரம் பிள்ளை, நாவலர் வேங்கடசாமி நாட்டார், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், திரு. நாராயணையங்கார், மறைமலையடிகள், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், திரு. வி. க. போன்ற புலவர் பெருமக்கள் இந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரியதாகுக. இவ் விருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிஞர் பலர் தம் அரிய கவிகளால் நம் உணர்ச்சிகளைத் தட்டி யெழுப்பியுள்ளனர். அவருட் சிறந்தவர் நால்வர் என்னலாம். அந்நால்வருள் சி. சுப்பிரமணிய பாரதியாரும், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையும் இப்போது நம்மிடையே இல்லை. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் இன்று நம்மிடையே இருக்கின்றனர். இக்கவிஞர் தம் பாடல்கள் நாட்டுப் பற்றையும், தமிழ்ப் பற்றையும், சமுதாயச் சீர்திருத்த உணர்ச்சியையும், சமய நினைப்பையும் நமக்கு ஊட்டி வருகின்றன. இன்றும் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பெருமக்கள் பலர் தமிழ்ப் பணி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் நமது உளங்கலந்த நன்றி உரியதாகுக. தொகுப்பு: இதுகாறும் தமிழின் பெருமையும், பழமையும், வரலாறும் ஒருவாறு கூறப்பட்டன. ஒரு பெண்ணின் தூய்மை காக்கப்படுவது போல மொழியின் தூய்மை காக்கப்படல் வேண்டும். தமிழில் தக்க சொல் இல்லாதபோதுதான் பிற மொழிச் சொற்களை எடுத்தாளலாம். `தமிழ் வாழத் தமிழன் வாழ்வான் என்பதை நாம் மறந்து விடுதலாகாது. அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்ற கற்பனைகளையும் கட்டுக்கதை களையும் சமயத் தொடர்பானவை என்று கருதும் அறியாமை தமிழரை விட்டு நீங்குதல் வேண்டும். தமிழன் தாய் மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும், தமிழினப் பற்றும் நிரம்பியவனாக இருத்தல் வேண்டும். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் சித்தாந்த சைவக் கொள்கை தமிழரிடம் பரவும் நாள்தான், தமிழன் வையத்து வாழ்வாங்கு வாழும் பொன்னாளாகும். தமிழ் வாழ்க! தமிழினம் வளர்க!! 2. தமிழரும் நுண்கலைகளும் ]நுண் கலைகள்: இசை, நடனம், நாடகம் என்பன நுண் கலைகள் எனப் பெயர் பெறும். இவற்றைப் போற்றி வளர்க்கும் நாடே நாகரிக நாடு என்பது மக்களது நீண்ட நாட் கருத்தாக இருந்து வருகின்றது. நுண் உணர்வைத் தட்டி எழுப்பித் தம் வயப்படுத்தும் கலைகளாதலின் இவை நுண் கலைகள் எனப் பெயர் பெற்றன. நம் தமிழ் மக்கள் இக்கலைகளை எங்ஙனம் போற்றி வளர்த்தனர் என்பதைச் சுருக்கமாக இங்கு காண்போம். இசைக் கலை: இசை என்னும் சொல் இசைவிப்பது, தன் வயப்படுத்துவது எனப் பொருள்படும். மரம், செடி, கொடி என்னும் ஓரறிவுயிர் முதல் மக்கள் என்னும் ஆறறிவுயிர் ஈறாக உயிர்களனைத்தையும் இசை தன் வயப்படுத்த வல்லது. மகுடி இசையும் இசை தன் வயப்படுத்த வல்லது. மகுடி இசையில் மயங்கும் பாம்பும், இசையில் மயக்குண்டு மிக்க சுமையை இழுக்கும் வண்டி மாடும், பாடிக் கொண்டே பாராங் கற்களை உருட்டுபவரும் மேற் கூறப்பெற்ற உண்மைக்குச் சான்றாவர். இத்தகைச் சிறப்புடைய இசை, மதங் கொண்ட யானையையும், வழிப்பறி செய்யும் கொலைஞரையும் மனமாற்றம் செய்ய வல்லது என்பதை அகநானூறு, நற்றிணை, சிந்தாமணி முதலிய நூற்செய்திகளிலிருந்து அறியலாம். பண்டைத் தமிழகத்தில் செய்யப்பட்ட நூல்களிற் பெரும்பாலான செய்யுள் வடிவிலேயே அமைந்தவை. பிற்காலத்தில் தோன்றிய கல்வெட்டுக்களிற் பலவும் அங்ஙனமே. அவற்றுக்கும் பிற்படத் தோன்றிய அஞ்சல் வடிவில் அமைந்துள்ள சீட்டுக் கவிகளும் மிக்கிருத்தலைக் காண , ஏறத் தாழப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் இசைத் தமிழ் நூல்களே மிக்கிருந்தன என்று கூறுதல் பொருந்தும். தமிழ்ப் பிள்ளைகள் தம் குழந்தைப் பருவத்தில் தாலாட்டுப் பாக்களையும் ஊசற் பாக்களையும் கேட்டனர்; விளையாடும் பருவத்தில் பந்து விளையாட்டுப் பாடல் (கந்துக வரி), அம்மானை, பொற் சுண்ணம், சாழல், தெள்ளேணம், உந்தி பறத்தல், தோள் நோக்கம் முதலிய ஆடல்களுக்குரிய பாடல் களைப் பாடி மகிழ்ந்தனர். மணத்தில் மங்கல வாழ்த்துப் பாடலைக் கேட்டனர். உலக்கை கொண்டு குத்தும் தொழிலுக் குரிய பாட்டு வள்ளைப் பாட்டு எனப் பெயர் பெற்றது. ஏற்றங் கொண்டு நீர் இறைப்பவர் பாடிய ஏற்றப் பாட்டு முதல் உழைப்புத் தொழில்கள் அனைத்திற்கும் பாடல்களிருந்தன என்பது தெரிகின்றது. தமிழன் இறந்த பின்னரும் பாட்டு அவனை விடவில்லை. பலவகைச் சந்தங்களில் ஒப்பாரிப் பாக்கள் இன்றும் இருத்தலைக் காணலாம். இங்ஙனம் பழந் தமிழர் தம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையிலேயே வாழ்ந்து வந்தனர் எனக் கூறுதல் முற்றிலும் பொருந்தும். இசைக்குரிய நூல்கள் பலவற்றுள் சிலப்பதிகாரம் தலைசிறந்தது. அதன் உரையைக் கொண்டு முன்னிருந்த இசைத் தமிழ் நூல்கள், இசைக் கருவிகள், இசைவாணர்கள் பற்றிய பல விவரங்களை நன்கு அறியலாம். கி. பி. 7, 8, 9-ம் நூற்றாண்டுகளில் தோன்றிய தேவாரத் திருப்பதிகங் களும், ஆழ்வார் அருட் பாடல்களும் அக்கால வழக்கிலிருந்த பலவகைப் பண்களையும் (இராகங்கள்) தெரிவிப்பனவாகும். குறவஞ்சி, பள்ளு, சிந்து முதலியன இசைத் தமிழ் நூல்களே. தமிழ்ப் பண்கள் ஏழு; அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெற்றன. இவற்றிலிருந்து பிறப்பவை திறங்கள் எனப்பட்டன. இவ்வாறு பிறக்கும் பண்களும் திறங்களும் பல கிளைகளாக இயங்கும் வகைகளில் எண்ணிறந்த இசை வகைகள் கண்டறியப்பட்டிருந்தன. பண்கள் பல வகைப்படும். அவற்றுள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெரும் பண்கள் ஐந்து. இவற்றின் வகைப்பட்ட பண்கள் பல. அவற்றுள் பகற் பண்கள், இராப் பண்கள், காலை, மாலைப் பண்கள் என அவ்வப் பொழுதிற்கமைந்த பண்களும் வழக்கில் இருந்தன. இசைக் கருவிகள்: தண்ணுமை, தடாரி, குடமுழா முதலிய பலவகைத் தோற் கருவிகளும், புல்லாங்குழல், நாதசுரம் முதலிய துளைக் கருவி களும் அக்கால வழக்கில் இருந்தன. நரம்புக் கருவிகள் பலவகைப்பட்டன. அவற்றுள் ஏழு நரம்புகளை யுடைய செங்கோட்டு யாழ், பதினான்கு நரம்புகளையுடைய சகோட யாழ், பத்தொன்பது நரம்புகளையுடைய மகர யாழ், இருபத்தொரு நரம்புகளையுடைய பேரி யாழ் என்பன வழக்கில் இருந்தன. கி. பி. 300-க்குப் பிறகே வீணை என்னும் புதிய கருவி வழக்கிற்கு வந்தது. வெண்கலத்தாற் செய்யப்பட்ட வகைகள் கஞ்சக் கருவிகள் எனப்பட்டன. இசை வாணர்: பாடுவோர் இன்ன இன்ன இலக்கணங் களுடன் பாடவேண்டும் என்பது சிந்தாமணியிலும் திருவிளையாடற் புராணத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. கருங் கொடிப் புருவம் ஏறா கயல்நெடுங் கண்ணும் ஆடா அருங்கடி மிடறும் விம்மா அணிமணி எயிறும் தோன்றா இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார். வயிறது குழிய வாங்கல் அழுமுகங் காட்டல் வாங்குஞ் செயிரறு புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல் பயிறரு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல் எயிறது காட்டல் இன்ன உடற்றொழிற் குற்றம் என்ப. இசையாசிரியர் தகுதிகள் சிலப்பதிகார உரையிலும் விளக்கப் பட்டு உள்ளன. இசை வாணர்கள் பாணர், பாடினியர் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் அரசர்களாலும், செல்வர்களாலும் பாதுகாக்கப்பட்டனர். நடனக் கலை: இசைக் கலையைப் போலவே நடனக் கலையும் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி பெற்று வந்தது என்பதனைத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய பழந் தமிழ் நூல்களால் நன்கு அறியலாம். வேட்டுவப் பெண்கள் முதல் எல்லா நிலத்து மக்களும் தத்தம் நிலத்துக்குரிய நடன வகையில் சிறப்புற்றிருந்தனர். இதனை வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய பெயர்களைக் கொண்டு நன்கு அறியலாம். நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற பெண்கள் விறலியர் எனப்பட்டனர். நடனத்திற் பயிற்சி பெறும் பெண் ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரை அக்கலையிற் பயிற்சி பெறுதல் வேண்டும். பயிற்றுவிக்கும் ஆடலாசிரியன் இலக்கணம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. வரிசைக்கூத்து, புகழ்க் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, வேத்தியல், பொதுவியல் நடனம் எனப் பலவகைப் பட்டது கூத்து. கூத்து என்னும் பழந்தமிழ்ப் பெயரே நாளடைவில் நடனம் என வழக்குப் பெறுவதாயிற்று. கூத்திற்குரிய பலவகை நூல்கள் அக்காலத்து வழக்கில் இருந்தன. பாடல் பெற்ற பல கோயில்களில் நடனமாதர் இருந்து சமயத் தொடர்பாக நடனக்கலையை நன்கு வளர்த்து வந்தனர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன. அவர் தம் கலைச்சிறப்பைப் பின்வரும் பெரிய புராணப் பாடலைக் கொண்டு நன்கு அறியலாம். கற்பகப்பூந் தளிரடிபோய்க் காமருசா ரிகை செய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கை பெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடை பெயர அற்புதப் பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடினார். நாடகக் கலை: இது கற்றவர், கல்லாதவர் என்னும் இருதிறத்தாரையும் தன் வயப்படுத்த வல்லது; மக்களுக்கு நல்லறிவை ஊட்டி, ஒழுக்கத்தை வளர்க்க வல்லது. இக்கலை முதலில் சமயத் தொடர்பாகவே ஏற்பட்டது என்பது அறிஞர் கருத்து. நாடகத்திற்றான் பாட்டு, வசனம், நடனம் என்பன கலந்து வருகின்றன. ஆதலின் இக்கலை தமிழகத்தில் மிகுதியாக வழங்கப் பட்டது. இராஜ ராஜேவர நாடகம், பூம்புலியூர் நாடகம், சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பன பிற்காலத்தில் நடிக்கப்பட்ட நாடகங்களிற் சிறந்தனவாகும். நாடக ஆசிரியர்கள் பிற்காலச் சோழர் முதலிய தமிழரசரால் நன்கு போற்றப் பட்டனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரால் செய்யப்பட்டது. அந்நாடகம் இன்றும் ஆண்டு தோறும் தஞ்சைப் பெரிய கோயிலில் நடிக்கப்பட்டு வருகிறது. முடிவுரை: நாகரிக உணர்ச்சி தோன்றிய நாள் தொட்டுத் தமிழகத்தில் இம் மூன்று கலைகளும் வளர்பிறை போல வளர்ந்து வந்தன என்பதை இலக்கியங்களும், கல் வெட்டுக்களும் இனிது உணர்த்துகின்றன. 3. தமிழ்நாட்டு நடனக் கலை கூத்தின் தோற்றம்: இறைவனது அருட் படைப்பிலே கூத்து நிகழ்கின்றது. எவரிடமும் பயிற்சி பெறாமலும், கூத்துக் கலையின் பண்பைச் சிறிதளவும் கல்லாமலும், கருமுகில்களைக் காணும் மயில்கள் தம் சிறகுகளை விரித்து ஆடுகின்றன. கொடிய அரவங்கள் மகுடி ஓசையைக் கேட்டதும் தம் புற்றுகளிலிருந்து வெளிப்போந்து இசையில் ஈடுபட்டு மெய்மறந்து படமெடுத்து ஆடுகின்றன. கண்ணனைப் போன்றாரது வேய்ங் குழலில் ஈடுபட்டுக் கன்று - காலிகள் தம்மை மறந்தனவாய் அசைந்தாடு கின்றன. இவற்றைக் கூர்ந்து நோக்கின், இயற்கைப் படைப்பிலேயே கூத்து இயல்பாக அமைந்துள்ள உண்மையை உணரலாகும் அன்றோ? மலை முழைகளில் வாழ்ந்த பண்டை மக்கள் முதற் கண் பலவாறாக ஓசைகளையிட்டு ஒருவர்க்கொருவர் தம் எண்ணங்களை அறிவித்துக் கொண்டனர். பின்னர் அம் மக்கள் சைகைகள் சேர்த்துத் தம் கருத்துக்களை வெளிப்படுத்தினர். பின்னர் படிப்படியாகத் தங்கட்கென மொழியை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு ஒவ்வொரு நாட்டுப் பண்டை மக்களும் தங்கட்கெனத் தனித் தனி மொழியை அமைத்துக் கொண்டனர். மனிதன் பல வகை உணர்ச்சிகள் கொண்டவன்; அளவு கடந்த மகிச்சி உண்டாகும்பொழுது அவன் தன்னை மறந்து கூத்தாடுவான்; கோபமாயிருக்கும்பொழுது கண்சிவந்து உதடுகள் துடிக்கப் பரபரப்புடன் பேசுவான். இங்ஙனம் மனிதன் ஒவ்வொரு உள்ள நிலையில் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுதல் அல்லது செய்தல் இயல்பு. மனிதன் மகிழ்ச்சி நிலையில் தன் விருப்பப்படி பலவகை ஓசைகளை எழுப்ப-அவ்வோசைகள், சில சமயங்களில் அவனை யறியாது அவனுக்கு இன்பத்தை அளிக்க-அவன் மீண்டும் மீண்டும் அவ்வோசைகளை எழுப்பி அனுபவிக்க-இவ்வாறு எழுப்பப்பட்ட ஒலிகளின் சேர்க்கை காதுகட்கு இன்பமளித்த நிலையில், அவனைப் பின்பற்றிப் பலர் அத்துறையில் இறங்கியிருக்கலாம். `மனிதன் தன் கூத்துக்கேற்ப ஒலிகளை எழுப்பியும், கைகளைக் கொட்டியுமிருக்கலாம். அவன் இங்ஙனம் குதித்தது கூத்தாகவும், ஒலிகளை எழுப்பி ஓசையிட்டது இசையாகவும், கைகளைக் கொட்டியது தாளமாகவும் மாறி யிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வாறு பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகின்ற இசை, கூத்து, தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்த தொகுப்பே கூத்து அல்லது நடனம் என்பது. இந்தியாவுக்கு வெளியே: மிகப் பழைய எகிப்திய-சுமேரிய-பாபிலோனிய நாகரிகச் சின்னங்களில் பலவகை நடனங்களை உணர்த்தும் ஓவியங்கள் காணப்படுகின்றன. அதனால் அப்பண்டை நாகரிகங்களில் திழைத்த மக்கள் கூத்துக் கலையில் அநுபவ முற்றிருந்தனர் என்பது தெரிகிறது. இந்தியாவில்: இந்தியாவில் வேத காலத்திற்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தை உணர்த்தும் புதை பொருள்களில் வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. சில கற்சிலைகள் நடன முறையிற் காணப்படுகின்றன. தவுலைக் கழுத்தில் மாட்டித் தொங்கவிட்ட மனித வுருவம் (களி மண்ணிற் செய்யப்பட்டது) கிடைத்துள்ளது. மிருதங்கம், வீணை, தாளம் இவற்றைக் குறிக்கும் ஓவியங்கள் அகப்பட்டுள்ளன. இவற்றைச் சேர்த்து நோக்கும்பொழுது சிந்துவெளி மக்கள் நடனக் கலையில் அறிவுடையவராக இருந்தனர் என்பது வெளியாகிறதன்றோ? வட இந்தியாவில் நடனத்தைப் பற்றி எழுந்த முதல் வட மொழி நூல் பரதம் என்பது. அது கி. மு. 3-ம் நூற்றாண்டினது என்று அறிஞர் அறைகின்றனர். அஃது இன்றளவும் மிகச் சிறந்த நூலாக இருந்து வருகின்றது. அத்தகைய சிறந்த நூல் கி. மு. 3-ம் நூற்றாண்டினது எனின், அதற்கு முன்னரே வட இந்தியாவில் நடனக் கலை மிகப்பெரிய நிலையை அடைந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறதன்றோ? `நடனக் கலை, அறம்-பொருள் இன்பம்-வீடு என்னும் நாற்பேறுகளையும் நல்க வல்லது; மனவுறுதி, உடல் வளம், இன்ப வுணர்ச்சி முதலிய நற்பண்புகளை அளிக்க வல்லது. இக்கலை தரும் இன்பம் தவத்தினர் அடையும் இன்பத்திற்கு இணையானது என்பது பரதத்திற் கூறப்படும் செய்தியாகும். பரதம் தோன்றிய பின்னர் எழுந்த வடநாட்டு ஓவியங் களிலும், சிற்பங்களிலும், இலக்கியங்களிலும் நடனக் கலை நன்கு காட்டப்பட்டுள்ளது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் எழுந்த அயலார் படையெடுப்புக்களாலும் குழப்பங்களாலும் வட இந்தியாவில் இக்கலை நன்கு வளர இடமற்றது. ஆயின், விந்த மலைக்குத் தென்பாற்பட்ட நாடுகளில் இக்கலை நன்னிலையில் வளர்ச்சி பெறலாயிற்று. சங்ககாலத்தில் கூத்துக் கலை: இன்றுள்ள சங்க நூல் களில் தொல்காப்பியம் பழையதென்பதைப் பெரும்பாலோர் ஒப்புகின்றனர். அதன் குறைந்த காலம் ஏறத்தாழக் கி. மு. 500 என்றால் தவறாகாது. அப்பழைய நூலில் பழந்தமிழ் மக்களிடம் இருந்து வந்த கூத்து வகைகள் சில குறிக்கப்பட்டுள்ளன. அவை (1) வேலன் ஆடும் (காந்தள்) வெறிக் கூத்து, (2) வென்ற வீரர் தம் அடையாளப் பூச்சூடி ஆடும் கருங் கூத்து, (3) வெற்றி பாராட்டிப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து, (4) களத்தை விட்டு ஓடாத இளைய வீரனுக்குக் காலில் கழலைக் கட்டி இருபாலரும் ஆடும் கழனிலைக் கூத்து முதலியனவாகும். அவை பெரும்பாலும் போர்த் தொடர்பானவை. இவையன்றி ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலிய வகைகளும் இருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிலிய நானிலங் களிலும் அவ்வந் நிலத்துக்குரிய கூத்தர் இருந்து வந்தனர்; கூத்துக்கள் நடைபெற்றுவந்தன என்பதைச் சங்க நூல்களால் நாம் அறியலாம். குறிஞ்சி நிலத்தில் குறப் பெண்கள் தங்கள் குறிஞ்சி நிலக் கிழவனாகிய முருகப் பெருமானை வழிபட்டு ஆடும் கூத்து, குன்றக் குரவை அல்லது குரவை எனப்படும். இதுவே முல்லை நில மகளிரால் ஆடப் படுமாயின் ஆய்ச்சியர் குரவை எனப் பெயர் பெறும். `குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக் கொட்ப நின்று ஆடும் கூத்தாகும். குரவை யாடுதல் இருபாலருக்கும் உரியது. குறவர் தொண்டகப் பறை கொட்டக் குரவையாடுவர். அது காணும் மகளிரும் மேற் சொன்ன இலக்கணப்படி நின்று ஆடுவர். அங்ஙனம் ஆடும்போது அவர்கள் பாடிக்கொண்டே ஆடுவர். இதன் விவரங்களைத் தொகை நூல்களிலும் சிலப் பதிகாரத்திலும் விரிவாகக் காணலாம். நுணங்கை என்பது கூத்து வகைகளுள் ஒன்று. அது முடங்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக் கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. மகளிர் விழாக் காலங்களில் நுணங்கைக் கூத்தாடுவர். ஆடவர் அம்மகளிர்க்கு முதற்கை கொடுத்தல் வழக்கம்.1 நானிலங்களிலும் இருந்த வள்ளல்கள் பாற் சென்று உள்ளக் குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடிய நடன மங்கை பண்டைத் தமிழகத்தில் விறலி எனப் பெற்றாள். இவ்விறலியர் பாணருடனும் கூத்தருடனும் புலவருடனும் சென்று வள்ளல் களிடம் பரிசு பெற்று வந்தனர். அவர்கள் பெரும்பாலும் பாணருடன் செல்வது வழக்கம். விறலி `ஆடுமகள் என்று பெயர் பெற்றாள்.2 இங்ஙனம் மெய்ப்பாடுகள் தோன்ற நடிக்கும் விறலியர் சங்க காலத்தில் பலர் இருந்தனர் என்பதைத் தொகை நூற்களால் அறியலாம். பண்டை அரசர்கள் விறலியர் ஆடல் - பாடல்களைப் பாராட்டிப் பொன்னரி மாலையைப் பரிசளித்தனர்; தொடி முதலிய சிறந்த நகைகளை வழங்கினர்.3 `விறலியர் நிறமுடைய கலவை பூசப்பட்ட வளைந்த சந்தினையுடைய முன் கையினையும் வேய் போன்ற தோளினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடையவர் என்று கோவூர்கிழார் பாராட்டியுள்ளர். விறலியர் யாழ் வாசித்தாற் போலப் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய விறல்பட ஆடுதலை யுடையார் என்று மாங்குடி மருதனாரும் பெருங் கவுசிகனாரும் கூறல் விறலியருடைய இசைச் சிறப்பினையும் நடனப் பயிற்சியின் மேன்மை யினையும் நன்கு உணர்த்துவதாகும்.4 `சோழன் நலங் கிள்ளி (இத்தகைய) விறலியர்க்கு மாட மதுரையையோ வஞ்சி மாநகரத்தையோ வேண்டுமாயின் தரவல்லவன் என்று கோவூர் கிழார் கூறியுள்ளதிலிருந்து விறலியர் பண்டை அரசர்பால் பெற்றிருந்த பெருஞ்சிறப்பினைக் காணலாம்.5 விறலி கூத்தி, ஆடுமகள், ஆடுகளமகள் எனவும் நூற்களிற் குறிக்கப்பட்டாள். அங்ஙனமே, நடனமாடுபவன் கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் எனப்பட்டான். இவர்கள் சங்க காலத்திற் கூத்துக் கலையை வளர்த்த கலைவாணர் ஆவர். அவர்கள் நடனமாடிய அரங்கம் ஆடுகளம் எனப்பட்டது. விழாக் காலங்களில் இவர்கள் பல வகைக் கூத்துக்களை ஆடினார்கள்; பிற காலங்களில் அரசர் முதலிய வள்ளியோர்பாற் சென்று, பாடி - ஆடிப் பரிசில் பெற்று மீண்டார்கள். இவர்களது கலையை உணர்த்தும் நூலே கூத்த நூல் என்பது. சிலப்பதிகாரத்தில்: சிலப்பதிகாரத்தில் கூத்து என்பது நாடகம் என்னும் பெயருடன் வழங்கப் பெற்றுள்ளது. நாடக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பெயர்களின் பொருளையே அளிப்பதாகும். மாதவி நாடக மங்கை (விறலி), அவள் ஆடிய களம் நாடக அரங்கு எனப் பெயர் பெற்றது. இப்பெயர்கள் வடவர் நுழைவினால் உண்டான பெயர் மாற்றங்கள் என்னலாம். சிலப்பதிகாரத்தில் நடனக் கலையைப் பற்றிய பல விவரங்கள் அரங்கேற்று காதையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. நடன மகள் சிறப்பாகக் கூத்து, பாட்டு, அழகு இம் மூன்றிலும் நிறைவு பெற்றவளாக இருத்தல் வேண்டும். அவள் ஏழு வயது முதல் 12 வயது வரை (ஏறத்தாழ ஆறாண்டுகள்) கூத்தக் கலையிற் பயிற்சி பெறுதல் வேண்டும். நடன மகளைப் பயிற்றுவிக்கும் ஆடல் ஆசிரியன் இருவகைக் கூத்துக்களில் வல்லவனாக இருத்தல் வேண்டும். `இருவகைக் கூத்தாவன; வசைக் கூத்து-புகழ்க் கூத்து; வேத்தியல்-பொதுவியல்; வலிக் கூத்து-வலிச்சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து-விநோதக் கூத்து; ஆரியம் - தமிழ்; இயல்புக் கூத்து-தேசிகக் கூத்து எனப் பலவகை. இவை விரிந்த நூல்களிற் காண்க எனவரும் அடியார்க்கு நல்லார் உரை காணத் தக்கது. `சாந்திக் கூத்து என்பது தலைவன் இன்ப மேந்தி நின்று ஆடிய கூத்து. அது (1) சொக்கம், (2) மெய், (3) அவனயம், (4) நாடகம் என நால்வகைப்படும். இவற்றுள் (1) சொக்கம் என்பது தூய நடனம். அது 108 கரணமுடையது; (2) மெய்க் கூத்து என்பது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப் படும். இவை மெய்த் தொழிற் கூத்தாகலின் மெய்க் கூத்தாயின. இவை அகச்சுவை பற்றி எடுத்தலின் `அக மார்க்கம் என நிகழ்த்தப்படும்; (3) அபிநயக் கூத்து என்பது கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கை காட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து; (4) நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து. . . . என வரும் அடியார்க்கு நல்லார் உரையும், அவர் மேலும் அரங்கேற்று காதையில் தரும் பல விவரங்களும் ஊன்றிப் படித்து உணரற்பாலன. அவை சிலப்பதிகார காலத்தில் இருந்த கூத்துக் கலையின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்தும் செய்திகள் ஆகும். நடன மகளை அக்கலையில் தயாரிக்கும் ஆடல் ஆசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, தண்ணுமை ஆசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி என்பன யாவை என்பதைச் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் தெளிவுறக் காணலாம். `இன்னின்னவற்றில் முழுப் பயிற்சி பெற்றவரே இன்னின்ன ஆசிரியர் என இளங்கோவடிகள் கூறுதலைக் காண, அவர் காலத்தில் தமிழகத்தில் இசையும் கூத்தும் மிகவுயரிய நிலையிற் சீரும் சிறப்பும் பெற்றிருந்தன என்பது வெள்ளிடை மலை போல் விளக்கமாகும். ஆடற்குரிய அரங்கு எங்ஙனம் அமைக்கப்படல் வேண்டும் என்பது இந் நூலுள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது; அரங்கிற் புகுந்து ஆடும் இயல்பு விவரிக்கப்பட்டுள்ளது. அரங்கினிற் புகுந்து மாதவி பாடினாள்; ஆடினாள். அப்பொழுது மேற் சொன்ன பலவகை ஆசிரியர்கள் அரங்கில் இருந்து தத்தம் தொழில் செய்தனர். அவ்வமயம், குழல்வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே; முழவொடு கூடிநின் றிசைந்த தாமந் திரிகை. . . . . . யாமந் திரிகையோ டந்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி வந்த முறையின் வழிமுறை வழாமல். . . . . . . . . . மாதவி யாடினாள்.6 இக்கருத்துடன், நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற மாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார். எனவரும் (கி. பி. 12-ம் நூற்றாண்டிற் பாடப்பட்ட) கம்ப ராமாயணச் செய்யுளின் கருத்து ஒன்றுபடல் காண்க. மேற் சொன்ன கூத்து வகைகளுள் சாக்கைக் கூத்து என்பது ஒன்று. சாக்கையன் என்பவன் கூத்து நிகழ்த்தும் ஒரு மரபினன். அவனால் ஆடப் படும் கூத்து `சாக்கைக் கூத்து எனப் பெயர் பெற்றது. சாக்கையன் ஒருவன் சேரன்-செங்குட்டுவனுக்கு முன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடினன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.7 இச்சாக்கைக் கூத்தர் தமிழகத்தில் பிற்பட்ட நூற்றாண்டுகளிலும் இருந்து வந்தனர் என்பது கல் வெட்டுக்களால் அறியப்படுகிறது. சங்க காலத்திருந்த கூத்த நூல்கள்: மேற் சொல்லப்பட்ட பலவகைக் கூத்து வகைகளையும், விறலியர்-கூத்தர் முதலியவர் இருந்தமையையும் நோக்கச் சங்க காலத்தில் கூத்த நூல்கள் இருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடைமலை. ஆயின் அந்நூற் பெயர்களை உள்ளவாறு அறியச் சான்றில்லை. கி. பி. 14-ம் நூற்றாண்டினரும் சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்தவருமான அடியார்க்கு நல்லார், தமக்குப் பல நூற்றாண்டுகட்கு முன் பாடப்பட்ட சிலப்பதிகாரத்திற்கு உரை காண்கையில் சில கூத்த நூற்பெயர்களைக் குறிக்கின்றார். அவற்றுட் பல சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்று கொள்வதைவிட, அடியார்க்கு நல்லார் காலத்தில் இருந்தன-அவர் அவற்றை நன்கு படித் தறிந்தவர் எனக் கோடலே பொருத்த முடையதாகும். அவர் குறிக்கும் கூத்த நூல்களாவன: 1. பரதம், 2. அகத்தியம், 3. முறுவல், 4. சம்பந்தம், 5. குண நூல், 6.செயிற்றியம், 7. இசை நுணுக்கம், 8. இந்திரகாளியம், 9. பஞ்ச மரபு, 10. பரத சேனாபதீயம், 11. மதிவாணனார் நாடகத் தமிழ் நூல், 12. கூத்த நூல். இவற்றுள் முதல் இரண்டு நூல்கள் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே சிறந்தன என்பது குறிக்கப்பட்டுள்ளது. பிற நூல்களிலிருந்து இரண்டொரு சூத்திரங்கள் அடியார்க்கு நல்லார், பேராசிரியர் முதலியோரால் ஆளப்பட்டுள்ளன. இந் நூல்களுள் ஒன்றேனும் இக்காலத்தில் கிடைத்திலது. பல்லவர் காலம்; சிற்பச் சான்றுகள்: இங்ஙனம் சங்க காலத்திற் சிறப்புற்றிருந்த கூத்தக்கலை, பல்லவர் காலத்தில் வளர்ச்சி பெற்றதென்று கூறலில் தடையில்லை. முதலாம் மகேந்திரன் கலை இன்பன். அவன் கூத்தக் கலையிலும் பெரிதும் ஈடுபாடுடையவன் என்பதை உறுதிப்படுத்தச் சித்தன்ன வாசல் நடன மாதர் ஓவியங்களே ஏற்ற சான்றாகும். அவன் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாடக நூலில் சிவனார் ஆடிய தாண்டவ நடனம் மூவுலகங்களையும் ஒருமைப்படுத்த வல்லது என்று பாராட்டி வரைந்துள்ளான். இராஜசிங்கன் நடனக் கலையில் மிக்க ஈடுபாடு கொண்டவன். அவன் தான் கட்டுவித்த கயிலாச நாதர் கோவிலில் சிவனார் ஆடிய பாதகை நடனம், லதா விருசிக நடனம், ஊர்த்துவத் தாண்டவம், ஆனந்த தாண்டவம் முதலிய நடன வகைகளைச் சிற்ப அமைப்பிற் காட்டி அழியாப் புகழ் பெற்றான். பல வகை நடிகையர் உருவங்களும் அக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சி-வைகுந்தப் பெருமாள் கோவிலில் கூத்தர், கூத்தியர் உருவங்கள் இரு சிற்பங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஆடவர் - பெண்டிர் இரு திறத்தாரும் சேர்ந்து ஆடிய கூத்து வகைகளும் அக்காலத்தில் இருந்தன என்பதற்கு அச்சிற்பங்கள் சான்றாகும்; வைகுந்தப் பெருமாள் கோவில் வடக்குச் சிற்பங்களை நோக்குக. இலக்கியச் சான்று: பல்லவர் காலத்தில் எழுந்த சைவத் திருமுறைகளில் இறைவனாடிய பலவகைக் கூத்துக்கள் இடம் பெற்றுள்ளன. நடன மாதர் பாடல் பெற்ற சிறந்த கோவில்களில் இருந்து நடனக் கலையை வளர்த்து வந்தனர் என்பதைத் திருப்பதிகங்களிற் காணலாம். தேனோர் மொழியார் தினைத்தங் காடித் திகழும் குடமூக்கில் வலம்வந்த மடவார்கள் நடமாட மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்பவர் உறையும் புகார் சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர் ஏரார்பூங் கச்சி என்பனவும் இவைபோன்று திருப்பதிகங்களில் வருவனவும் அக்காலக் கூத்துக் கலை வளர்ச்சியை நன்குணர்த்துவனவாகும். கி. பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரை மணந்து கொண்ட பரவையார் திருவாரூர்க் கோவில் நடனமாதராவர். அவர் ஆடல்-பாடல்களிற் சிறந்து விளங்கினார். நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்தில் தில்லைப் பெருமான் கூத்தப் பெருமான் (நடராசர்) என்று நாயன்மாராற் பாடப்பட்டனர். அவன் திருக் கூத்தைச் சிறப்பித்து அவர்கள் பல பாக்கள் பாடியுள்ளார்கள். பல்லவர் காலத்துக் கோவில்களில் நடனமாதர் இருந்தனர் என்பதற்கு மேற்சொன்ன இலக்கியச் சான்றுகளே யன்றி கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. அம் மாதரசிகளே இசையையும், கூத்தையையும் வளர்த்தனர். அவர்கள் அக்காலத்தில் கணிகையர், மாணிக்கத்தார் எனப் பட்டனர். காஞ்சி-மூத்தீச்சுரர் கோவிலில் மட்டும் நாற்பத் திரணடு பேர் இருந்து இசை, கூத்துக்களை வளர்த்தனர் எனின், பிற கோவில்களில் இருந்தாரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? அதுபற்றிய விவரங்கள் விரிக்கிற் பெருகும். சோழர் கால சிற்பங்கள்: தமிழக வரலாற்றில் சோழர் காலம் பொற்காலம் (900-1300) என்னலாம். அக்காலத்தில் சைவ-வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெற்றன. கோவில்கள் கற்கோவில்களாக மாற்றப்பட்டன. ஓவியம்-சிற்பம்-இசை- நடனம் - நாடகம் முதலிய கலைகள் நன்கு வளர்க்கப்பட்டன. சோழர்கள் சிறந்த மொழிப்பற்றும் கலை உணர்ச்சியும் கொண்டவர்கள். அவர்கள் காலத்திற் புதுப்பிக்கப்பட்டனவும் புதியனவாகக் கட்டப்பட்டனவுமான கோவில்களில் எல்லாம் மண்டபங்களின்-கருவறைகளின் அடிப்பகுதிகளில் எல்லாம், நடன வகைகள் செதுக்கப்பட்டன. சிதம்பரம், காஞ்சி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் முதலிய இடங்களிலுள்ள பெரிய கோவில்களைக் கூர்ந்து கவனித்து இவ்வுண்மையை அறியலாம். கூத்தியர் மட்டுமே தனித்திருந்து ஆடுதல் முதலிய ஆடல் வகைகள் - கணக்கிடற்கரிய (மிகப் பலவாகிய) நடன வகைகள் - சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. கல் வெட்டுக்கள்: சிறந்த சிவபக்தனான இராஜராஜன் தான் தஞ்சையில் அமைத்த பெரிய கோவிலில் இசை, நடனம் இரண்டையும் வளர்க்க பதியிலார் நானூற்றுவரைப் பல கோவில் களிலிருந்து வரவழைத்து ஒவ்வொரு வருக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் அளித்தான் என்று பெரிய கோவிற் கல்வெட்டுப் பேசுகிறது. அம் மாதரசிகள் பல கோவில்களிலிருந்து வந்தவர்கள் என்பதை நோக்கப் பல கோவில்களிலும் கூத்தியர் இருந்தனர் என்பது பெறப் படுகிறதன்றோ? திருவிடை மருதூரை யடுத்த காமரச வல்லி என்ற பதியில் சாக்கைக் கூத்தில் வல்லவன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் இருந்தான். அவன் `சாக்கை மாராயன் என்ற பட்டம் பெற்றதாகக் கல்வெட்டுக் குறிக் கின்றது. எனவே, சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்ட சாக்கைக் கூத்து கி. பி. 11-ம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இருந்தது என்பது புலனாகிறதன்றோ? இலக்கியம்: சோழர் காலத்து இலக்கியங்களுட் சிறந்தன பெரிய புராணமும் கம்ப ராமாயணமுமே என்னலாம். பெரிய புராணத்தில் நடனம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.8 கம்பர் தம் காலத்து நடனத்தைச் சிறப்பித்த தன்மை முன்னரே கூறப்பட்டது. சோழர் காலத்திற் சிறப்பாகக் கூறத்தக்க தென்ன? நடன வகைகள் என்றும் அழியாத முறையில் கற்சுவற் களிற் செதுக்கப் பெற்றவையே சிறப்பென்னலாம். சைவம் அவர்கள் காலத்தில் நன்கு வளர்ந்ததாதலின், சமயத் தொடர் பாக நடனமும் நன்கு வளர்ந்ததென்பதை ஐயத்திற் கிடமின்றிக் கூறுலாம். பிற்காலத்தில்: தமிழகம், நாய்க்கராலும், மஹாராஷ்டிர ராலும் ஆளப்பட்ட காலத்தில் கருநாடக சங்கீதம் தமிழகத்திற் புகுந்தது; பரதநாட்டியம் தலை தூக்கியது. அக்காலத்தில் வடமொழி நாட்டிய நூல்கள் தமிழில் பெயர்த்தெழுதப் பட்டன.9 அவற்றுள் (1) மகாபரத சூடாமணி, (2) அபிநய தர்ப்பணம், (3) அபிநய தர்ப்பண விலாஸம், (4) பாவராக தாளம், (5) சுத்தானந்தப் பிரகாசம், (6) ஆதி மூல பரதம், (7) பரத சாதிரம், (8) பரத சேனாபதீயம், (9) சபாரஞ்சித சிந்தாமணி என்பன குறிக்கத்தக்கவை. இவற்றுள் சில இன்னும் அச்சாக வில்லை. 4. வள்ளுவரும் காந்தியடிகளும் முன்னுரை: குழந்தைப் பருவம், கல்விப் பருவம், இல் வாழ்க்கைப் பருவம், அலுவற் பருவம், முதுமைப் பருவம் என்னும் வாழ்க்கைப் பருவங்கள் அனைத்திலும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே வரையறுத்துக் கூறிய பெரியார் வள்ளுவர். அவர் கூறியுள்ள அறிவுரைகள் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டிருப்பினும், உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானவையாகும். அவர் கூறியுள்ள உயர்ந்த கருத்துக்களே, இதுகாறும் உலகில் தோன்றி மறைந்த பெரியார்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அறிவுரைகளிலும் ஊடுருவி நிற்கக் காண்கிறோம். இங்ஙனம் எந்த மகானுடைய வரலாற்று நிகழ்ச்சிகளிலும் அருளுரை களிலும் வள்ளுவரின் வாய்மொழி ஊடுருவி நிற்பதைக் கண்டு வியந்த காரணத்தாற்றான், வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெரும் புலவர் பாரதியார் பாராட்டி மகிழ்ந்தார். அடிகளின் இளமைப் பருவம்: இருபதாம் நூற்றாண்டில் விளக்க முற்றிருந்த பெரியாருள் காந்தியடிகள் தலைசிறந்தவர். அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அருளுரைகளிலும் திருக்குறட் கருத்துக்கள் ஊடுருவி நிற்றலை அறிவுடையோர் காணக் கூடும். காந்தியடிகள் இளமைப் பருவத்தில் அரிச்சந்திரன் நாடகத்தையும், பிரகலாதன் நாடகத்தையும் நேரில் கண்டார். அரிச்சந்திரன் பொய் பேசுதல் கூடாது என்று தான் கொண்ட கொள்கையை நிறைவேற்றத் தன் நாட்டைத் துறந்தான்; தன் மனைவி மக்களை விற்றான்; மனம் கலங்கவில்லை; இறுதியில் தன்னையே விற்றான். பிரகலாதன் தான் கொண்ட கருத்தைத் தந்தையின் கொடுமைகளுக்கிடையே விட்டு விடவில்லை; மனவுறுதியோடு தன் கொள்கையில் நின்றான். இவ்விருவரும் தங்கள் கொள்கையில் அசைவின்றி நின்ற காரணத்தால்தான் அழியாப் புகழ் பெற்றனர். இத்தகைய மனவுறுதி மக்களிடம் இருப்பின் நினைத்ததை நினைத்தபடியே அடைவர் என்பதில் ஐயமில்லை. இவ்வுண்மையை வான்புகழ் கொண்ட வள்ளுவர், எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின் என்னும் குறளால் வெளிப்படுத்தியுள்ளார். இளமைப் பருவத்தில் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகப் பெரியார் ஒருவரையோ அல்லது சிலரையோ கொண்டு, தத்தம் வாழ்க்கையைச் செப்பம் செய்து கொள்ளுதல் சிறப்புடையதாகும். பெரியாரைத் துணைக் கோடலால் இளைஞர் உள்ளங்களில் தீய நினைவுகள் எழா; உயிர்களிடம் அன்பு, எளியோரிடம் இரக்கம், அனைவரும் உடன் பிறந்தார் என்ற கருத்து, சமரச மனப்பான்மை முதலிய உயர் பண்புகள் இளமை முதல் உள்ளத்தில் வேரூன்றிப் படிப்படியாக வளரும். ஆதலால் வாழ்க்கை வளம் பெற ஒவ்வொரு இளைஞனும் தனக்கு வழிகாட்டியாகப் பெரியோர் சிலரைப் பேணிக் கொள்ளுதல் இன்றியமையாதது. இவ்வுண்மையை நன்குணர்ந்த காந்தியடிகள் தமது இளமைப் பருவத்தில் அரிச்சந்திரனையும், பிரகலாதனையும் பேணித் தமராக் கொண்டார்; உயரிய கொள்கையைப் பல இன்னல்களுக்கும் இடையில் தவறவிடாது நிறைவேற்றினார். இவ்வெற்றிக்குக் காரணம் பெரியாரைத் துணைக் கொண்டமையேயாகும். இவ்வுண்மையையே வள்ளுவர், அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் என்னும் திருக்குறளில் திறம்பட வைத்துள்ளார். அடிகளாரின் சீரிய நெறிகள்: கொல்லாமை அடிகளின் சீரிய நெறிகளுள் ஒன்று. புலால் உண்ணலை அடிகளார் வெறுத்தார்; அவ்வாறே பொய் பேசுதலையும் வெறுத்தார். புலால் உண்ணுதல் விலங்கு, பறவைகளின் உயிர்க் கொலை யாகும். பொய் பேசுதல் மனிதப் பண்பினையே கொலை செய்வது. இவ்விரண்டையும் வள்ளுவரும் கடிந்து ஒதுக்கியுள்ளார். ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்பது வள்ளுவர் கண்ட சீரிய நெறி. இந்திய மக்கள் பல்வேறு சமயத்தினர்; பல்லாயிரக்கணக் கான சாதியினர்; பல்வேறு மொழியினர்; பல்வேறு நாகரிகங் களை உடையவர். இந்நாற்பது கோடி மக்களுடைய உள்ளங் களையும் ஒருவர் தம்பால் இழுப்பதென்பது அரிதினும் அரிது. இது செயற்கரிய செயல். உண்மையுடைமை, இன்னா செய்யாமை (அகிம்சை), சொன்னவாறு நடத்தல் என்னும் சீரிய பண்புகளால் காந்தியார் `அடிகள் ஆனார். இங்ஙனம் செயற் கரிய செய்த பெரியார் உலக வரலாற்றில் மிகச் சிலரேயாவர். விஞ்ஞான முறையில் அமைந்த போர்க் கருவிகளைக் கொண்ட மிகப்பெரிய வல்லரசை உண்மையுடைமை, இன்னா செய்யாமை, ஒழுக்க நெறியோடு அமைந்த கட்டுப்பாடு என்னும் மூன்றாலும் பணியச் செய்த பெருமை இப்பரந்த உலகத்தில் காந்தியடிகள் ஒருவருக்கே உரியது. இதனாற்றான் அவர் பெரியர் எனப் பெயர் பெற்றார். அவர் செய்த செயற்கரிய செயலில், செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்னும் குறளின் சீரிய கருத்து ஊடுருவி நிற்கிறதன்றோ? உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதியார் கூறியது போல, வெள்ளை அரசாங்கம் இழைத்த இன்னல்களின் அளவிற்கேற்ப அடிகளது மனவுறுதி வளர் பிறைபோல் வளர்ந்து வந்தது. நாடு உரிமைபெற வேண்டும் என்ற அவரது கொள்கை வரவர வலுப்பெற்றது. அவர் வெள்ளையர் துன்பங்களுக்கஞ்சவில்லை; மனம் மாறவில்லை; அந்நிலையில் அவரது தோற்றம் மலையினும் பெரிதாக விளக்கமுற்றது. அவ்விளக்கத்தாற்றான் நாடு விடுதலையடைந்தது. இத்தகைய விளக்கத்தை வள்ளுவர் வாயாரப் பாராட்டுகின்றார். நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது இல்வாழ்க்கை: இல்வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒத்த கருத்தினராக இருந்தாற்றான் வாழ்க்கை வளம் பெறும்; இல்லறம் நல்லறமாகத் திகழும். அன்புணர்ச்சியே இல்வாழ்க்கை யின் பண்பாகும்; அறவுணர்ச்சியே இல்வாழ்க்கையின் பயனாகும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற வள்ளுவர் கூற்றையும் நோக்குக. இச்சீரிய முறையில் அடிகளாரும் அவர் மனைவியாரும் இல்லறமென்னும் நல்லறத்தை இனிது நடத்தினர் என்பதை, அவர்தம் வரலாறே அழகுறக் காட்டுகின்றதன்றோ? அசையாத கடவுட் பற்று: அடிகள் சிறந்த படிப்பாளி; புத்தரைப்போல, ஏசுநாதரைப் போல எதனையும் எண்ணி எண்ணிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரும் பேரறிஞர்; தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் கண்ணியர்; தூய்மையான ஒழுக்கம் உடையவர்; இவை அனைத்திற்கும் மேலாக உள்ளத்தைத் தூய்மையாக்கும் பிரார்த்தனையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். ஒருவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் தன்னைப் படைத்த ஆண்டவனை மதியாவிடில் அவனது படிப்பும் பயனற்றது என்பது வள்ளுவர் கருத்து. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனின் இவ்வுயர்ந்த கருத்தை நடைமுறையில் செய்து காட்டியவர் காந்தியடிகள். முடிவுரை: பகுத்தறிவு, பெற்ற மனிதன் தக்கது இன்னது, தகாதது இன்னது என்பதைத் தம் பகுத்தறிவால் அறிந்து, கொள்ள வேண்டுவதைக் கொண்டு, தள்ளவேண்டுவதைத் தள்ளி, வாழ்க்கையை நெறிப்படுத்திச் செல்லக் கடமைப் பட்டவன். அவன் படிப்படியாகப் பொதுமக்கள் கவனத்தைத் தன்பால் இழுப்பவன் உண்மையுடைமை, ஒழுக்கமுடைமை, சான்றாண்மை முதலிய நற்பண்புகளுக்கு நிலைக்களனாக விளங்குபவன். அவனே மனிதருள் மாணிக்கம்; அவனே உலகத்தில் வாழ வேண்டும் முறைப்படி வாழ்கின்றவன்; அவனே தெய்வத்தன்மை உடையவன்; தெய்வங்களுள் ஒன்றாகக் கருதப்படுபவன். இதுதான் மனிதன் பெறத்தக்கபேறு. இதனைப் பெற்றவர் காந்தியடிகள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் 5. அடிப்படையும் சூழ்நிலையும் தமிழிலக்கிய வரலாற்றைக் கூர்ந்து பார்ப்போமாயின் அவ்வக் காலங்களுக்கு ஏற்றவாறே கவிஞர்கள் தோன்றித் தொண்டாற்றினர் என்னும் உண்மையை நன்கு உணரலாம். சங்க காலத்தில் வாழ்க்கை இன்பம் வளமாக இருந்தது. தமிழ் நாட்டைத் தமிழரசர் ஆண்டுவந்த அக்காலத்தில் போரும் காதல் வாழ்க்கையுமே சமுதாயத்தில் சிறந்து காணப்பட்டன. ஆதலால் அக்காலப் புலவர்கள் தம் பாக்களில் போர் நிகழ்ச்சிகட்கும் காதல் வாழ்க்கைக்குமே சிறப்பிடம் தந்தனர். போரினும் காதல் வாழ்க்கை மிகவும் சிறந்திருந்த காரணத்தால் புறப்பாக்களினும் அப்பாக்களே அதிகமாகப் பாடப் பட்டுள்ளன. சங்ககால இறுதிப் பகுதியில் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் என்னும் சமயங்கள் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றிருந்தன. அக்காலத்தில் அச்சமய நிலைகளைப் படம் பிடித்துக்காட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் புலவர்களால் எழுதப்பட்டன. கி. பி. 7-ம் நூற் றாண்டு வரை தமிழகத்தில் சமயப் போராட்டங்கள் நடைபெற்றன. சைவ - வைணவர்களால் நாடெங்கும் சமயப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. ஆதலால் அக்காலத்தில் சைவத் திருமுறைகள் பலவும், ஆழ்வார்களின் அருட்பாடல்களும் எழுந்தன. பிறகாலச் சோழப் பேரரசில் சைவமும் வைணவமும் நிலை நிறுத்தப்பட்டன. இவற்றிற்கு ஏற்ப பெரிய புராணமும், கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாடல்களுக்கு விரிவுரைகளும் தோன்றின. சோழரது சைவப் பற்றைத் துணையாகக் கொண்டு சைவர் சிலர் வைணவத்தை ஒடுக்கப் பார்த்தனர்; வைணவத்தை ஓரளவு வெறுத்தனர். இதன் சாயலைப் பெரிய புராணத்தில் பல இடங்களில் காணலாம். இச்சைவ - வைணவ வெறுப்பு பல நூற்றாண்டுகள் இந்த நாட்டில் இருந்தது என்பதைச் சமய மறுப்பு நூல்களும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய அஷ்டப்பிரபந்தமும் பிறவும் தெளிவுறுத்தும். அரியும் சிவனும் ஒன்று என்பதையும், சமய சமரசம் வேண்டும் என்பதையும் கம்பன் பல இடங்களில் வற்புறுத்திச் சென்றான். சோழப் பேரரசு பல போர்களில் ஈடுபட்டிருந்த காலத்தில், கலிங்கத்துப் பரணி போன்ற போரைப் பற்றிய நூல்கள் தோன்றலாயின. சோழப் பெருநாடு கடல் கடந்த நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அப்பொழுது பலர் செல்வச் செருக்கில் திளைத்தனர். செல்வ வளத்தினால் இன்பத்துறையிலேயே மிகுதியாக ஈடுபடும் சமுதாயம் அழிந்து போகும் என்பது உலக வரலாறு கூறும் உண்மை. ரோமப் பேரரசு அழிந்தமைக்கு அடிப்படைக்காரணம் இதுவே. இவ்வுண்மைக்கேற்ப கி. பி. 13-ம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது. வீழ்ச்சியுறும் நிலையில், இன்பத் துறையில் ஈடுபட்ட சமுதாயம் இருந்த நிலையைக் கம்பன் தனது இராமகாதையில் நாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், பூக்கொய் படலம், புனம் விளையாட்டுப் படலம் என்பனவற்றில் நன்கு விளக்கிக் காட்டி யுள்ளான். அக்காலத்தில் குடியாட்சியில்லை. அரசன் ஒருவனே எல்லாம் செய்ய வல்லவன். ஆதலின், கம்பன் சமுதாயச் சீர்கேட்டை நேரில் கண்டிக்காமல் அதனைக் கோசல நாட்டுச் சமுதாய நிலையின் மேல் ஏற்றி மறைமுகமாகக் கூறிச் சென்றான். சோழராட்சிக்குப் பிறகு நாட்டில் தமிழாட்சி மறைந்து விட்டது. வெள்ளையராட்சி ஏற்படும் வரையில் நாட்டில் பல சமயங்களும் பலநூறு சாதிகளும் தத்தம் நிலையை வேரூன்றச் செய்து கொண்டன. இவற்றால் சமுதாயத்தில் உள்ளக் கிளர்ச்சி குன்றியது; வாழ்க்கை நிலையற்றதாக உணரப்பட்டது; சமயப் பற்றுத் தலைதூக்கியது. புலவர்களைப் போற்றிப் பாதுகாக்க வள்ளல்கள் இல்லை. அத்துன்ப நிலையில் கணக்கற்ற தல புராணங்கள் தோன்றின. இச் சீர்கெட்ட காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சமுதாயத்தின் இழி நிலையையும், சாதி வெறியையும், மக்களின் மூடப்பழக்க வழக்கங்களையும் கண்டு உளம் நொந்து அவர்களைத் திருத்தும் முறையில் பல பாடல்கள் பாடி யுள்ளனர். வெள்ளையர் ஆட்சி ஏற்பட்டதும் மேனாட்டுக் கல்வி முறை இங்கு கால்கொண்டது. ஆங்கிலக் கல்வியால் தமிழ் மக்கள் உலக அறிவைப் பெறலாயினர். பலநாட்டு வரலாறுகளை அறியலாயினர்; பிற நாடுகளில் இல்லாத சாதி வேறுபாடுகள் `புண்ணிய பூமி என்று சொல்லப்படும் இந்தியாவில் மட்டும் இருந்து சமுதாயத்தை அலைக்கழிப்பதை உணர்ந்தனர். எண்ணிறந்த நாடுகளில் சக்கிலி போன்ற சாதாரண மக்கள் தம் முயற்சியால் உயர்ச்சி பெறுதலையும் இந்நாட்டில் மட்டும் அவர்கள் சாதிமுறையால் உயர்வு பெறாத நிலையில் இருந்ததையும் கண்டனர். ஒவ்வொரு நாட்டுச் சமுதாய மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரு சமுதாய மக்களாக வாழ்வதையும்; இந்தியர் மட்டும் பாழான சாதிக் கட்டுப்பாட்டினால் படிப்படியாகத் தாழ்வதையும் கண்டனர். சமுதாயத்தின் ஒரு பாதியாக விளங்கும் பெண்கள் கல்வியறிவற்ற இழிநிலையில் இருந்ததையும், அதே சமயத்தில் பிறநாட்டு மகளிர் கல்வியறிவு பெற்றுச் சமுதாயத்தில் சிறந்து விளங்கியதையும் தெளிந்தனர். நம் மக்களிடம் நிலவியிருக்கும் கல்வியின்மை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், சாதிக் கட்டுப்பாடு ஆகிய இவையே நமது சமுதாய இழிநிலைக்குக் காரணம் என்பதையும் நன்கறிந்தனர். இந்த இழிநிலை மாறவேண்டும், `ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் நற் கொள்கை சமுதாயத்தில் பரவ வேண்டும் என்று விரும்பினர். இவ்விருப்பத்தை வெளிப் படுத்திய பெரியாருள் காலத்தில் முற்பட்டவர் இராமலிங்கர். இவர் ஆறு ஆயிரத்துக்கு மேற்பட்ட தம் பாக்களில் சாதிகளை யும் மதங்களையும் சாத்திரக் குப்பைகளையும் வன்மையாகப் பல இடங்களில் கண்டித்துப் பாடியுள்ளார். இராமலிங்க அடிகள் 19-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த பெரியார். பாரதியார் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். பலசாதிப் புலவர்களும் பல மதப்புலவர்களும் மனம் வேறுபா டற்ற நிலையில் கலந்து பழகிய எட்டயபுரத்தில் பிறந்தார். அவர் பிறந்த நூற்றாண்டில் சீர்திருத்தத் துறவியாகிய இராமலிங்க அடிகள் பாடிய அருட்பாக்கள் பெருக்கெடுத் திருந்தன. ஏறத்தாழ 14 ஆயிரம் பாக்களைப் பாடிய மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பெண் மதிமாலை முதலிய சீர்திருத்தப் பாக்களைப் பாடிய வேதநாயகம் பிள்ளை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சீர்திருத்தத் துறவியாகிய சுந்தர சாமிகள் இக்காலத்தவர்கள். சாதி வேறுபாடுகள், தீண்டாமை, பெண்ணடிமை முதலியவற்றை வன்மையாகக் கண்டித்து உலகப் புகழ்பெற்ற விவேகானந்தா அடிகள் இந்நாடு முழுவதும் சுற்றிச் சீர்திருத்தப் பிரச்சாரமும் சமயப் பிரச்சாரமும் அக்காலத்திற்றான் செய்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் என்ற நாடக நூலை இயற்றிய காலமும் அதுவே. அப்பெரு நூலில் காணப்படும் தமிழ்த் தாய் வணக்கமும் தமிழின் பெருமையும் பாரதியார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. சமுதாயத்தில் உரிமை காண முயன்ற திருவள்ளுவர் திருக்குறளும், முத்தமிழ்நாட்டு விவரங்களை நடுவு நிலைமை தவறாமல் இளங்கோவடிகள் செய்த சிலப்பதிகாரமும், சமய சமரசத்தைப் பரப்ப முயன்ற கம்பர் செய்த இராமாயணமும் பாரதியார் உள்ளத்தில் பதிந்து நின்றன. பாரதியின் இளமைக் காலத்திற்றான் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர், சி. வை. தாமோதரம் பிள்ளை முதலிய தமிழ்ப் பெரியோர்கள் பனையோலைகளில் இருந்து தமிழ் நூல்களைப் பதிப்பித்தனர். ஒரு கடவுள் வணக்கத்தை வற்புறுத்தும் ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் பரவி வந்த காலமும் அதுவே. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமுதாயத்தின் இழிவுகளை வன்மையாகக் கண்டித்த கோகலே, காந்தியடிகள் போன்ற நாட்டுத் தலைவர்கள் பெயர் பெற்ற காலமும் அதுவே, நாடெங்கும் அரசியல் கொந்தளிப்பு தோன்றிய காலமும் அதுதான். பாரதியார் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவ ராக விளங்கினார். சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி சமுதாய இழிவுக்கு அடிப்படைக் காரணங்களை ஆய்ந்தறியும் நுண்ணறிவு அவர்பால் இருந்தது. பாரதியார்; வ. உ. á., வ. வே. சு. ஐயர், இராச கோபாலாச்சாரியார், திரு. வி. க. போன்ற பெரியார்களது நட்பிலும் நலம் பெற்றார்; இவர்களுடைய சீர்திருத்தக் கருத்துக்களும் அவருக்கு உள்ளக் கிளர்ச்சியை ஊட்டின. இதுகாறும் கூறப்பெற்ற பல நூலறிவும் சமுதாய அறிவும் நல்லோர் கருத்துக்களும், 19-ம் நூற்றாண்டில் எழுந்த இராமலிங்க அடிகள் போன்றோரது சீர்திருத்தங்களும் அரசியல் தலைவர் களுடைய அரசியல் கருத்துக்களுமே இயல்பாகக் கவிபாடும் ஆற்றல் பெற்ற பாரதியின் உள்ளத்தில் எல்லா மக்களும் படித்துணரத் தக்க எளிய நடையில் கவிதைகளாகத் தோற்றம் எடுத்தன. இந்த உண்மையை மறந்தால், பாரதியார் பாக்களுக்குரிய அடிப்படையைச் சாத்திரீய முறையில் (Scientific Method) கண்டறியும் நெறியினின்றும் பிறழ்ந்தவராவோம். இந்த அடிப்படையை உளம்கொண்டு, அவர் பாடல்களை நோக்குதல் வேண்டும். 6. சமுதாய வாழ்க்கை முன்னுரை: பாரதியாருடைய பாடல்கள், உரைநடைச் செய்திகள், கடிதங்கள் முதலியவற்றை நன்கு ஆராயின், அரசியல், சமயம், தமிழ், சமுதாயம் என்னும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம். இவற்றுள் அரசியல் பற்றி அவர் பாடிய பாக்களில் பல, அரசியல் உரிமை பெறுவதற்காக என்றே ஆவேச உணர்ச்சியுடன் பாடப்பட்டவை. அரசியல் உரிமை பெற்ற பிறகு அவற்றைப் பாடுவதில் பொருளில்லை அல்லவா? எனவே, அவற்றை இப்பொழுது பாடுவோர் தொகை குறைந்துவிட்டது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் சைவத்துக்கும் சமணத்துக்கும் போராட்டம் எழுந்த காலத்தில் ஞானசம்பந்தர் தமது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு செய்யுளைச் சமண - பௌத்த கண்டனத்துக் காகவே ஒதுக்கி வைத்தார். அப்பொழுது அது தேவையாக இருந்தது. சமணமும் பௌத்தமும் ஒடுக்கப்பட்ட பிறகு, அப் பாடல்கள் பாடவேண்டிய தேவை அமையாததால், வரலாற் றளவிலேயே நூலில் இடம் பெற்றுள்ளன. அவைபோலவே, பாரதியார் பாடிய அரசியற் பாடல்களுள் பல, இன்றும் எதிர்காலத்திலும் அரசியல் போராட்டத்தை உணர்த்தும் நிலையிலேயே நூலில் இடம் பெறத்தக்கனவாக இருக்கின்றன. இவ்வாறே சமுதாயத்தைப் பற்றிய அவர் பாடல்களும் சமுதாயத்திற்குத் தேவைப்படும் அளவில்தான் மக்களால் அடிக்கடி பாடப்படும்; மேற்கோளாக எடுத்துக் கூறப்படும். இன்னும் சில ஆண்டுகளுள் சமுதாய அமைப்பு ஒழுங்கு செய்யப்படுமாயின் அவ்வொழுங்குக்குப் பிறகு சமுதாயப் பாடல்கள் அரசியற் பாடல்களைப் போல சமுதாய வரலாற்றைக் குறிக்கத்தான் பயன்படும். இந்த உண்மையை நாம் மறந்துவிடலாகாது எஞ்சியுள்ள சமயம், தமிழ் என்னும் இரண்டும் பற்றிய பாடல்கள் என்றும் செல்வாக்குப் பெற்றிருக்கும். சமயம் என்றும் நிலைத்திருப்பது. அது எந்த நிலையிலும் எத்தகைய உருவுடனும் நிலைத்திருக்கத் தக்க ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் சமயம் பற்றிய பாக்கள் மக்கள் வழக்கில் இருந்துகொண்டே இருக்கும். இவ்வாறே, என்றுமுள தென்றமிழ் என்று கம்பன் பாராட்டிய நம் தாய்மொழியாகிய தமிழைப் பற்றிய பாடல்கள் தமிழ்மொழி உள்ள வரையிலும் நிலைத்தே நிற்கும். சங்க காலத்தில்: ஒரு நாட்டு எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் அந்நாட்டுச் சமுதாயத்தில் இருத்தல் வேண்டும். மக்கள் சிறப்பாகக் கல்வியறிவு வாய்ந்தவராயிருத்தல் வேண்டும். கல்வியால் அறிவு வளர, அறிவின் துணைகொண்டு மக்கள் நாகரிகத்தையும் கலைகளையும் அரசியலையும் சமுதாயத்தின் கொடுமுடியாகிய பண்பாட்டையும் நன்கு வளர்க்க முடியும். இப்பண்புகள் எல்லாம் நிறையப் பெற்ற சமுதாயத்தைக் கொண்டு, நாடு நாகரிக நாடு ஆகும். இப்பண்புகள் சங்க காலத்தின் முற்பகுதியில் தமிழகத்தில் நிலைத்திருந்தன. சங்ககாலச் சமுதாயம் இக்காலத்தில் உள்ள சாதிகளை அறியாதது. இக்கால வழக்கில் இருக்கும் நாயுடு, முதலியார், பிள்ளை, செட்டியார், தேவர் போன்ற சாதிகளைக் குறிக்கும் பெயர்கள் அக்காலத்தில் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எழுந்த காலம் அது. இடைக்காலத்தில்: சங்க காலத்தின் இறுதிப் பகுதியிலும் பிற்பட்ட பல்லவ காலத்திலும் தொழில், பண்பு, நிலம் பற்றி உண்டான பெயர்கள் பிறவி பற்றிய சாதிப்பெயர்கள் என்று தவறாகக் கருதப்பட்டன. அரசாங்க ஆண்களை மாநகரத்தார்க்கு அறிவிப்பவன் என்ற பொருள்படும் `பறையன் என்பது தொழில் பற்றி வந்த பெயர். மறம்-வீரம்; இப்பண்பு பற்றி வந்த பெயர் `மறவர் என்பது. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற நில அமைப்பில் இடையில் உள்ள முல்லை நிலத்தைச் சேர்ந்த ஆயர், `இடைநிலத்தார் என்ற பொருளில் `இடையர் எனப்பட்டனர் இங்ஙனம் உண்டான பிரிவுகளின் வரலாறு மறக்கப்பட்ட பிற்காலத்தில், இவை பிறவி பற்றியனவாகக் கருதப்பட்டன. இவை நாயன்மார், ஆழ்வார் காலங்களில் தலை தூக்கின. அப்பொழுது அப்பெருமக்கள் இவ்வேற்றுமைகளைக் கண்டித்தனர். சாதி வேறுபாடுகள் இல்லாத சமணத்தையும் பௌத்தத்தையும் அடக்க முயன்ற சைவமும் வைணவமும் அப்பொழுது சாதிகளை வளர்க்க விரும்பவில்லை. சமணமும் பௌத்தமும் ஒடுக்கப்பட்ட பிற்காலத்தில், சாதிகள் தலை தூக்கின; தலைவிரித்து ஆடின; கொடுமைகள் மிகுந்தன. இன்னின்ன வகுப்பார் தெருவில் செருப்பணிந்து போகலாகாது, இன்னின்ன வகுப்பார் மாடி வீடு கட்டலாகாது, இன்னின்ன வகுப்பார் இன்னின்ன வகுப்பாருக்கு எதிரில் இவ்வளவு தூரம் நின்று பேச வேண்டும் என்ற வரையறை ஏற்பட்டிருந்தது. இவ்வாறு சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் சாதி வேறுபாடுகளால் தம்முரிமை இழந்து புண்பட்ட மனத்துடன் வாழ வேண்டிய நிலைமை அக்காலத்தில் இருந்தது. இதனால் அரசன் ஆணைக்கு அடங்கிய சமுதாயம் மேற்போக்கில் ஒன்று பட்டதாகக் காணப்பட்டது; உட்போக்கில் ஆற்ற முடியாத மனக் கொதிப்புடன் சின்னா பின்னப்பட்டுக் கிடந்தது. சுருங்கக் கூறின், அக்காலச் சமுதாயம் யானை நோயால் தாக்கப்பட்ட விளாம்பழம் போல இருந்தது என்று கூறலாம். பிற்காலத்தில்: இங்ஙனம் சமுதாயம் சாதி நோயால் பீடிக்கப்பட்டுக் கிடந்ததால்தான் பகைவர் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியவில்லை; வந்தவர்க்கெல்லாம் அடி பணியும் துன்ப நிலையில் தாழ்ந்தது. புண்ணுடைய நெஞ்சோடு வாழ்ந்த மக்கள், சாதியற்ற இலாத்தையும் கிறிதுவத்தையும் தழுவ லாயினர். இத்தழுவலால் தங்கள் சமுதாயத்தின் பலம் ஒடுங்குவதைக் கண்டும், சாதி வெறியரின் மனம் இரங்கவில்லை. இந்த நிலையைச் சித்தர்கள் வன்மையாகக் கண்டித்தனர். ஆண்சாதி பெண்சாதி ஆக இரு சாதி வீண்சாதி மற்ற எல்லாம்-குதம்பாய்! வீண்சாதி மற்ற எல்லாம் என்னும் குதம்பைச் சித்தர் பாடல் நோக்கத்தக்கது. 19-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் இச்சாதிகளை வன்மையாகக் கண்டித்தனர்; இவை பற்றிய நூல்களையும் வெறுத்தனர். சாதிகளை ஒழிக்கவே ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் தோன்றின. விவேகானந்தர் சாதிகள் உள்ள வரையில் இந்தியா உருப்படாது என்று வருந்திக் கூறினார். 20-ம் நூற்றாண்டில் தாகூர், காந்தியடிகள் முதலிய பெரியோர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு இச்சாதிகள் இருத்தலாகாது என்று பேசியும் எழுதியும் வந்தனர். பாரதியார்: இங்ஙனம் எண்ணற்ற பெருமக்கள் வெறுத்துக் கூறிய சாதிகள் பாரதியார் கண்களைக் கவர்ந்தன. அவர் இவற்றைக் கூர்ந்து நோக்கினார். இவற்றால் மக்கள் அடைந் துள்ள அறிவீனத்தையும் மூடப் பழக்க வழக்கங்களையும் தெளிந்தார் பாரதியார். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் குழந்தைப் பருவத்திலேயே சாதி பற்றிய அறிவுரை வழங்குதல் நல்லது என்று கருதினார்; அதனால் பாப்பாவைப் பார்த்துக் கூறியதாகப் பாடியுள்ளார். சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் சாதி, குலம், வருணம் என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. சாதியைக் குறிக்கும் சொல்லே தமிழில் இல்லை. என்று தம்மிடம் பாரதியார் அடிக்கடி கூறியதாக டாக்டர் சோமசுந்தர பாரதியார் கூறுவது வழக்கம். சட்டம் தேவை: நமது சமுதாயத்தில் கணக்கற்ற சாதிகள் ஏற்படுத்தப் பட்டன. பல வகைக் கட்டுப்பாடுகள் உண்டாக்கப் பட்டன. இக்கட்டுப் பாட்டினால் ஒரு சிலரே சமுதாயத்தில் வாழ்வு பெற்றனர். மற்றவர் பாரதியார் கூறினாற்போலப் `பாமரராய், விலங்குகளாய் வாழ்ந்தனர். ஒவ்வொரு சாதியும் தனித்தனித் தெருவில் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்த காரணத்தால், காலப்போக்கில் பல சாதியினரும் மனங் கலந்து வாழ முடியவில்லை. இந்த நிலையில் ஆங்கிலேயக் கல்வி நமக்கு அறிவைக் கொடுத்தது; வேறு எந்த நாட்டிலும் இக் கொடுமைகள் இல்லை என்பதை உணர்த்தியது. இதனால் மக்களிடையே கிளர்ச்சி எழுந்தது. இன்று நாட்டில் பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்தாலும் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியாலும் பொருளாதாரப் புரட்சியாலும் சாதி வேறுபாடுகள் படிப் படியாகக் குறைந்து வருகின்றன. ஆயினும், சாதிகளைக் குறித்த பலகைகள் இன்னும் கடைகளில் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்தச் சாதியார் ஒரு தொகுதியில் மிகப் பலராக வாழ்கின்றனரோ அங்கு அவருள் ஒருவரையே தேர்தலில் நிறுத்தும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. மக்கள் மன மாற்றத்தால் இவற்றை ஒழிக்க முடியாது. கடுமையான சமுதாயப் புரட்சிகரமான சட்டத்தால்தான் சாதிகளை ஒழிக்க முடியும். காமராசருக்கு வாழ்த்து: சமுதாய இழி நிலைக்குக் கல்வியின்மையே முக்கியக் காரணம். இதனை நன்குணர்ந்த நமது அரும்பெருந் தலைவராகிய காமராசர் 1954-ல் மாநில முதலமைச்சர் பதவி ஏற்றதும், இலவசக் கல்வியை வழங்கினார். கல்வி வளர அறிவு வளரும்; அறிவு வளரச் சாதி பற்றிய எண்ணங்கள் தளரும்; அறியாமையால் உண்டான மூடப் பழக்க வழக்கங்கள் ஒழியும். சமயத்தின் பெயராலும் மூட நம்பிக்கையின் பயனாலும் நடைபெறும் வீண் செலவுகள் நிறுத்தப்படும்; சமுதாயம் தொழில் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் விரைந்து முன்னேறும். முடிவுரை: கவியரசர் பாரதியார் உண்மையாக இச் சமுதாயம் உருப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் எண்ணியபடியே இச்சமுதாயம் உருப்பட அரசாங்கம் வேலை செய்கிறது. ஆனால் விரைந்து, அஞ்சாமல், அழுத்தமாக வேலை செய்ய வேண்டும். அங்ஙனம் செய்யின், பாரதி கனவு கண்ட சமுதாயம் விரைவில் உருப்பெறும் என்று திண்ணமாகக் கூறலாம். 7. திருக்குறட் சிறப்பு இன்றுள்ள தமிழ் நூல்களில் தொல்காப்பியமும் திருக்குறளுமே இணையற்ற பெருநூல்கள் என்று கூறலாம். தொல்காப்பியம் ஏறத்தாழ கி. மு. நான்கு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாகச் சொல்லலாம். அதனை அடுத்துச் செய்யப்பட்ட பெருநூல் `குறள் என்பது அறிஞர் பலரது கருத்து. திருக்குறள் மனித வாழ்வுக்கு இன்றியமையாத அறம்-பொருள்-இன்பம் என்ற மூன்றையும் விரித்துக் கூறுவது. வீடுபேற்றை அறத்துப் பாலிலேயே சுருங்கக் கூறுவது. இம்முறை வியாச பாரதத்தால் காணலாம். வீடுபேற்றிற்கு அறம் அடிப்படையானது. அறத்தைப் பற்றிப் பேசுமிடத்திலேயே வீடுபேற்றைப் பற்றிக் கூறுதல் முன்னோர் கண்ட முறையாகும். இக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும் பரிமேலழகர் உரையே இலக்கிய நயமும், பொருள் வளமும் செறிந்ததாகும். ஒரு சில கருத்துக்களும் பொருளுரைகளும் மாறுபடுவனவாக இருப்பினும், இன்றுள்ள உரைகளில் அதுவே மிகச் சிறந்தது என்பது அறிஞர் முடிவாகும். வள்ளுவர் உள்படுகருமத்தலைவர் ஆதலின் சிறந்த அரசியலறிவு வாய்க்கப் பெற்றவர்; சங்கத்துச் சான்றோருள் அறத்துறையிலும் இன்பத் துறையிலும் அக்காலத்திருந்த நூற்கடலைக் கரைகண்ட பெரியோராவர்; பலவரிகளில் விளக்கவேண்டிய உண்மைகளை ஒன்றே முக்காலடியில் சொல்லழகும் பொருளழகும் பொருந்தச் சொற்களைக் கோர்த்த திறனாளர் என்பன அவருடைய குறள்களிலிருந்து நாம் அறியத் தகுந்த உண்மையாகும். திருக்குறளுக்கு உண்மை உரைகண்டு மகிழ வேண்டுமாயின் அறிவு இலக்கிய நூல்களையும் சைவ - வைணவ-பௌத்த-சமண இலக்கிய நூல்களையும் நன்கு படித்துணர்தல் இன்றியமை யாதது. வள்ளுவர் எல்லாச் சமயத்தவரையும் உளங் கொண்டு பொதுமறை இயற்றினாராதலின் அவருடைய உண்மைக் கருத்துக்களை அறிய மேற்சொன்ன பலதுறை நூல்களின் அறிவு தேவைப்படுகின்றது. ஐந்தவித்தானாற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி ஐந்தவித்தான் ஆற்றலுக்குத் தேவர் கோவாகிய இந்திரனே ஏற்ற சான்றாவான் என்பது இதன் பொருள். அஃதாவது, ஐந்தவித்த பெரியாருடைய பெருமை அறிவதற்கு தேவர் தலைவனாகிய இந்திரனது செயலே ஏற்ற சான்றாகும் என்பது கருத்து. இதற்குப் பரிமேலழகர், இந்திரன் இழிசெயல், கௌதமன் சாபமும் அகலிகைத் தொடர்பும் பொருளாக எழுந்தது இக்குறள் என்று கூறியுள்ளார். இப்பொருள் கோடல் பொருந்தாது என்னை? சுவைஒளி ஊறோசை நாற்ற மென் றைந்தும் ஒண்டொடி கண்ணெ யுள என்பது குறள். இவ்வொண்டொடியோடு இன்ப வாழ்க்கை நடத்தியவன் கௌதமன் என்பது வரலாறு. எனவே, அவனை ஐந்தவித்தான் என்று கூறுதல் தவறாகுமன்றோ? ஆதலால் பரிமேலழகர் காட்டும் பொருளுரை பொருந்தாதென்க. பின்னை இதற்கமைந்த பொருத்தமான உரைதான் யாது? விடையைக் காண மணிமேகலைக்குச் செல்லுதல் வேண்டும். ஐம்புலன்களை வென்ற பெரியோன் உலகில் தோன்றிய வுடன் தேவர் கோவாகிய இந்திரன் அமர்ந்துள்ள ஆசனத்தின் மீது இடப்பட்ட பாண்டு கம்பளம் அசைவு கொடுக்கும். அவ்வசைவைக் கொண்டு உண்மை உணர்ந்த இந்திரன் தன் இருக்கையை விட்டெழுந்து அவையில் உள்ள தேவர்க்கு இதனை அறிவிப்பான். உடனே அனைவரும் ஐந்தவித்த அப் பெரியோனுக்கு மனவணக்கம் புரிவர். இதனைச் சமண சமய நூல்களில் விளக்கக் காணலாம். இப்பொருளை உளங்கொண்டு மேற் கூறப்பெற்ற குறளைப் படிப்பின் எளிதில் பொருள் விளங்கும். இங்ஙனம் செல்லும் குறள்கள் சில உண்டு. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது நாடறிந்த நாட்பட்ட பழமொழி. இதனை உளங்கொண்டு வள்ளுவர் கூறும் செய்தியைக் காண்க. ஒருவர் எப்பொருளைப் பற்றிப் பேசுவதாயினும் அதனைக் கேட்பவர் எவராயினும் அப்பொருளின் உண்மை கொள்வதே கேட்பவர் கடமையாகும். அஃதாவது மிகச் சாதாரணமான மனிதர்-குறைந்த கல்வியறிவுடைய மனிதர் பொருளாதாரம் என்னும் பொருள் பற்றிப் பேசுவதாக வைத்துக் கொள்ளுவோம். பொருளாதார நிபுணர்கள் பேசவேண்டிய அப்பொருளை, அத்துறையில் தகுதிபெறாத ஒருவர் பேசுவதை நாம் கேட்பதா என்று கற்றோரும் மற்றோரும் கருதுதல் உண்டு. அவரது பேச்சில் பொருளாதார அறிஞர்களும் நினைந்தறியாத உண்மைகள் இருக்கலாமன்றோ? ஆதலால் பேசுபவர் தம்மினும் தகுதியில் குறைந்தவராயினும் கேட்க வேண்டுவது அறிஞர் கடமை. பேசுபவர் எவராக இருப்பினும், கேட்பவர் எவராக இருப்பினும் பேசப்படும் பொருளினது உண்மையைக் காண்பதே அறிவுடைமை என்பது வள்ளுவரது முடிந்த முடிபாகு மென்பதனைத் தெளிவுறக் கூறும் குறள் இதுவாகும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு 8. திரு. வி. க. தமிழ்ப்பெரியார் திரு. வி. க. வை நான் இருபத்தைந்து ஆண்டுகளாக அறிவேன். அவர் என் உள்ளம் கவர்ந்த கள்வர். இணையற்ற எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், பரந்த நோக்கத்தினர், விரிந்த சிந்தையினர், குழந்தை உள்ளம் வாய்ந்தவர், நண்பர் இவர் - பகைவர் இவர் என்பதை அறியாதவர், பல நூல்களின் குறிப்புரை ஆசிரியர், சில நூல்களின் விருத்தியுரை ஆசிரியர், அரசியல் அறிஞர், தொழிலாளர் தலைவர், சிறந்த சைவர், ஆயினும் சமயப் பொது நோக்கு உடையவர். திரு. வி. க. சென்னை இராயப்பேட்டையிலுள்ள வெலிமிஷன் கல்லூரியில் படித்தவர். கதிரைவேல் பிள்ளை என்னும் பெரியாரிடம் தமிழ்ப் புலமை பெற்றவர். தாம் கற்ற கல்லூரியிலேயே சிறிதுகாலம் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர், அன்னி பெசண்ட் அம்மையாரின் அன்புக்குரிய மாணவராகிப் பொது வாழ்வில் ஈடுபட்டார். பத்திரிகை ஆசிரியர் ஆனார். எளிய தமிழ் நடையில் கட்டுரைகள் வரைந்தார், பேசினார். காங்கிர கட்சியிலும் சேர்ந்து பல ஆண்டுகள் உழைத்தார். திரு. வி. க. சமரச நோக்கம் படைத்தவராதலால் அரசியல் மாநாடு களிலும் சீர்திருத்த மாநாடுகளிலும் தாராளமாகக் கலந்து செற்பொழிவு களாற்றினார். அவர் எந்தக் கூட்டத்தில் பேசினும், அவரது பேருரை தமிழிலக்கிய நயமும்-செய்திகளும் பொருந்தியவையாகவே இருப்பது வழக்கம். அவரது இனிய சொற்பொழிவை போற்றாதவர்களில்லை. அவரது எளிய நடையிலமைந்த சொற்பொழிவு பண்டிதர் முதல் பாமரரீறாக அனைவரையும் இன்புறுத்தி வந்தது. தாம் ஒன்றைப் பேசுவதற்கு முன்னரே அதைப் பற்றி நன்கு சிந்தித்துக் கட்டுரை எழுதி விடுதல் அவரது வழக்கம். அங்ஙனம் தொகுக்கப்பட்ட கட்டுரைகளே பல நூல்களாகப் பிற்காலத்தில் வெளி வந்தன. திரு.வி.க. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகத் தொழிலாளர் இயக்க வளர்ச்சியில் ஈடுபட்டவர். அவரது தொழிலாளரியக்கம் அறத்தை அடிப்படையாகக் கொண்டது. எத்தகைய பயனையும் கருதாமல் தொழிலாளர் இயக்கத்திற்குப் பாடுபட்ட சிறந்த ஒழுக்கமுள்ள தலைவர் மிகச் சிலருள் நமது திரு. வி. க. வும் ஒருவராவர். திரு. வி. க. எளிய நடையில் பொருளமைதி பொருந்தக் கவிதை பாடுவதில் வல்லவர். முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், கிறிதுவின் அருள் வேட்டல், உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் முதலியன அவரது செய்யு ளியற்றும் திறமைக்குத் தக்க சான்றாகும். தங்குறை தீர்வுள்ளார் தளாந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கீற் பார்விழுமியோர் என்பது திரு. வி. க. விடம் காணத்தக்கது. 1937-ம் ஆண்டு சென்னையில் சாது நாராயண தேசிகர் மடாலயத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் நானும் திரு. வி. க. தலைமையிற் பேசினோம். அப்பொழுது தம்மைத் தேடிக் கொண்டு அங்கு திடீரென்று வந்த பெரியார் ஈ. வே. ரா. அவர்களைச் சிறிது நேரம் சொற்பொழிவாற்றும்படி வேண்டி, உங்களை நாத்திகர் என்று சிலர் குறை கூறுகின்றனர். அதற்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி இந்த மடாலயக் கூட்டத்தில் வேண்டிக்கொள் கிறேன் என்றார். உடனே பெரியார் பேச எழுந்து, அன்பே சிவம் என்ற தலைப்பில் பேசினார்; அன்பே சிவம் என்பது மக்கள் நம்பிக்கைக்குரிய கருத்தாக இருக்குமாயின் நான் மனமார வரவேற்கிறேன். அன்பே சிவம் என்று ஒருகால் கூறிவிட்டு, மற்றொருகால் அதற்கு மாறான செயல்களைச் சமயத்தின் பேரால் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; ஆண்டுக்கு ஒருமுறை கடவுளுக்குத் திருமணம் செய்வதும், நாள்தோறும் கடவுளைப் பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதும் கடவுள் பெயரால் நடைபெறத்தக்க செயல் களாகுமா? இத்தகைய செயல்களில் விருப்பங்கொண்டு ஒரு கடவுள் இருக்கிறது என்றால், அத்தகைய கடவுள்தான் இல்லை யென்று நான் சொல்லுகிறேன். `அன்பே கடவுள், `அன்பே சிவம் என்னும் உயிர் நாடியான கருத்துக்களுக்கு நான் முரண்பட்டவன் அல்லேன் எனப் பேசி முடித்தார். இப்பேச்சைக் கேட்டதும் மடாலயத்தில் கூடியிருந்த அறிஞரனைவரும் அகம் மலர, முகமலர்ந்தனர். மிகுந்த ஊக்கமும் உணர்ச்சியுங் கொண்டு திரு. வி. க. எழுந்து இத்தகைய சீரிய கருத்துடைய இப்பெரியவரை-அவர் சொற்பொழிவைச் சிறிதும் கேளாமல்-பேசியதன் கருத்தை உணராமல் தவறான பிரச்சாரம் நாட்டில் உழலுவது எவ்வளவு வெட்கக்கேடாக இருக்கிறது, பாருங்கள் என்று உருக்கமாகப் பேசி முடித்தார். இவ்வாறு திரு. வி. க. தம் நண்பர்களின் மீது சுமத்தப்படும் பழிகளை - அவை தவறாயின் - சமயம் வரும்போது நீக்க முயற்சிப்பது வழக்கம். சுருங்கக்கூறின் சாதிப்பற்றற்ற -எல்லோரையும் உண்மையாகவே சமமாகக் கருதும் மனப்பண்பு வாய்ந்த திரு. வி. க. வைப் போன்ற சமரசவாதியைத் தமிழகம் இப்பொழுது பெற்றிருக்கவில்லையென்பது தவறாகாது. அவர் தனது முன்னேற்றத்தில் பேரார்வம் காட்டுதல் போலவே, தமிழர் அனைவர் முன்னேற்றத்திலும் மிக்க கருத்துள்ளவர். இப் பெரியார் தமிழர் அனைவராலும் போற்றப்படும் பெருமை யுடையவர். 9. இளமைப் பருவமும் வாழ்க்கையின் நிலைமையும் இளமைப் பருவமே மனித வாழ்க்கையில் சீரிய பருவ மாகும்; அழகு வாய்ந்த பருவம்; களங்கமற்ற பருவம்; வாழ்க்கை என்னும் நகரில் உள்ள மணமிகு பூஞ்சோலை. அப்பருவத்தினை உடையவரே நாட்டுச் செல்வம்; உயிர்நாடி; எதிர்கால நாகரிகத்தை நிலை பெறச் செய்பவர்; எதிர்கால உலக மக்கள். நாட்டுப் பொறுப்புக்கு நாளை அவர்களே பொறுப்பாளியாவர். இவ்வுணர்ச்சி இளைஞர் உள்ளத்தே கருக்கொள்ளு மாயின், நம் நாடு விரைவில் புனிதமாகும் என்பதில் ஐயமில்லை. ஏன்? இளைஞர் தம் நாட்டை உயர்த்த முற்படுவரே அன்றி, இழித்தலை ஒருபோதும் விரும்பார். நாட்டை உயர்த்தத் தம்மை முற்படுத்தியாதல் வேண்டும். தம்மை முற்படுத்தியாதல் என்பது யாது? தம்மை அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவராகச் செய்து கொள்ளலேயாம். தம்மை அறிவில் உயர்ந்தவராகச் செய்து கொள்ளல் எங்ஙனம்? ஒவ்வோர் இளைஞனும் முதலில் தன்னிலைமை இன்னதென்பதையும், தான் தன் நாட்டின் மக்களில் ஒருவன் என்பதையும் ஐயமற உணர்ந்தவனாதல் வேண்டும். இவ்வுணர்ச்சி உள்ளத்தே தோன்றி வளருமாயின், அவன் தன் நாட்டில் நடைபெற்றுவரும் அன்றாட நடைமுறை களைக் கவனிக்கச் செய்தித்தாட்களில் ஊக்கஞ் செலுத்துவான்; நாடோறும் செய்தித்தாள்களைப் படித்து, அறிவு வளர்ச்சி அடைவான். நம் தமிழகச் செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞன் கவனிக்கத்தக்கதொன்றுண்டு. அஃதாவது, ஒவ்வொரு செய்தித்தாளும் ஒரு கட்சியைப் பற்றி இருத்தலே யாகும். எனவே, நாட்டில் உள்ள எல்லாக் கட்சிச் செய்தித் தாள்கள் அறிவிக்கும் செய்திகளையும் படித்துணர்தல் அவன் கடமையாகும். ஒவ்வொரு கட்சியும் ஓர் உண்மைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டதென்பதை உணர்தல் வேண்டும். எக்கட்சியினிடத்தும் வெறுப்புக் கொள்ளல் தவறு; கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் தவறுகள் செய்யின் அவர் தம் முன் செயலைக் கொண்டே அக்கட்சி இழிவானது என்னும் முடிவுக்கு வருதல் பெருந்தவறு. கட்சிகளைப் பற்றி முடிவு கொள்வதில் இளைஞன் பொறுமை கொள்ளல் வேண்டும். இந்நிலையில் இருந்துகொண்டு இளைஞன் நாடோறும் வரும் செய்தித்தாள்களை நன்கு பயின்று உண்மைச் செய்திகளை உணர்ந்து, அவற்றிற்கேற்பத் தன் வாழ்க்கையைத் திருத்துதல் வேண்டும். இரண்டாவதாகத் தன் கல்விப் பயிற்சியில் இளைஞன் ஊக்கம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். எப்பாடத்தையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளிதல் வேண்டும். ஆசிரியர் சரி என்றால் சரி இல்லை என்றால் இல்லை என்னும் முடிவுக்கு வரும் இளைஞன் தன்னறிவைத்தானே கொலை செய்பவனாவான். அறிவும் ஆராய்ச்சியும்: இளைஞன் எந்த நூலை வாசிப்பினும், எந்தச் சொற்பொழிவைக் கேட்பினும், கண்ணால் எதனைக் காணினும் அவற்றில் தன் அறிவையும் ஆராய்ச்சியை யும் செலுத்தி உண்மை காண முயல வேண்டும். வரலாற்றுத் தொடர்பானவை, பிற கலைகள் தொடர் பானவை இவற்றை வேறு வழியின்மையால் நம்பித் தானாக வேண்டும். இளைஞன் தான் நாடோறும் காணும் சிறு பொருளையும், தன் அறிவையும், ஆராய்ச்சியையும் கொண்டு ஆராய்ந்து அதன் குணாகுணங்களை உணர்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வொன்றிலும் தன் அறிவும், ஆராய்ச்சியும் அவாவிச் செலுத்தி உண்மை கண்டு மகிழும். இளைஞனே உலகில் இன்பநிலை எய்துபவன். இஃது அறிவினால் அடையப் பெறும் ஒப்புயர்வற்ற உயர்ச்சி. இந்நிலைமை நம் இளைஞரிடம் வலுப்பெறுதல் வேண்டும். இனி இளைஞன் தன்னை ஆற்றலில் உயர்ந்தவனாகச் செய்து கொள்ளல் எங்ஙனம் இயலும்? அறிவுகொண்டு ஆராய்ந்தவற்றைக் கடைப்பிடிப்பதில் உறுதியுள்ளமையே ஆற்றல் (வலிமை) என்பது. உலகம் முழுமையும் கடைப்பிடிக்கும் ஒன்று, அறிவு கொண்டு ஆராயும் இளைஞனுக்குத் தவறாகக் காணப்படலாம். உலகம் முழுமையும் ஒன்றைக் கடைப் பிடித்தாலும் அது தனக்குத் `தவறு எனத் தெரிந்ததும் அதனைக் கடைப்பிடிக்கும் இளைஞன் ஆற்றல் அற்றவன் எனப் படுவானேயன்றி, ஆற்றல் பெற்றவன் எனப்படான். சுருங்கக் கூறின், தன் மனச்சாட்சிக்கு மாறுபடுமொன்றைச் செய்பவன் ஆற்றல் அற்றவனே ஆவான். அப்படி மாறான ஒன்றினைச் செய்வதால் அவன், இருளே குடிகொண்ட பெரும்பான்மை மக்களால் தேவனாகப் போற்றப்படலாம். ஆயின் என்னை? அவனது மனச்சாட்சி அவனை அல்லும் பகலும் வதைத்துக் கொண்டுதானே இருக்கும். அதனால் அவன் புறத்தில் பெரியவனாகக் காணப்படினும், அகத்துள் ஈனமானவனாக அன்றோ கருதப்படுவான். மனச்சாட்சியின் மந்திராலோசனை: மனச்சாட்சிப்படி நடப்பவனே ஆற்றல் பெற்றவன். புத்தர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர், இராமதீர்த்தர், காந்தியடிகள் போன்ற பெரியோர் மனச்சாட்சியாற்றான் ஆற்றல் பெற்றனர். அறிவு உயர்நிலை எய்தப்பெறின், அஃது ஆன்ம உணர்ச்சியாகிய மனைச்சாட்சி என்னும் மாண்புறு பேரொளியின் அணைப்பிலேயே இருக்கும். அதனாற்றான் அறிவு நிலைமை நிரம்பப்பெற்ற அறிஞர் மனச்சாட்சியின் மந்திராலோசனைப் படியே நடப்பர். தமது மனச் சாட்சிக்கு மாறுபட்ட ஒன்றை - இப்பரந்த உலகமே பாதத்தண்டை வரும் பரிசாக இருப்பினும்-ஒரு போதும் செய்யார்; பேசார். இத்தகைய உயர்நிலை இளைஞர் பால் இலங்குதல் வேண்டும். இளைஞன் தன் செயலில் விடா முயற்சியை மேற் கொள்ளல் வேண்டும். அஃதொன்றே எத்தகைய கடின வேலையையும் எளிதில் வெற்றிபெறச் செய்விப்பது. விடாமுயற்சியால் வெற்றி பெற்ற உலகப் பெரியோர்களின் அற்புத வரலாறுகளை இளைஞன் இன்பந்தோன்ற வாசித்து உணர்தல் வேண்டும்; அவர்களது வரலாற்றுப் பாதையில் அடிவைத்துப் பெயர்தல் வேண்டும். நெப்போலியன், நெல்சன், வெல்லிங்டன், சிவாஜி போன்ற போர் வீரர்களையும், ஆப்ரஹாம்லிங்கன், இராம்ஸே மாக்டொனால்ட், ஆலிவர் கிராம்வெல், முஸோலினி, ஹிட்லர், கமால் பாஷா, டாலின் போன்ற அரசியல் வீரர்களையும் தாம ஆல்வா எடிசன், ஹென்றி போர்டு, வில்லியம் மாரி போன்ற உழைப்பு வீரர்களையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு, விடாமுயற்சி என்னும் தற்காப்புக் கவசம் அணிந்து, துன்பம் நிறைந்த வாழ்க்கையாகிய காட்டினுள் துணிவுடன் நுழைதல் வேண்டும். `விடாமுயற்சியைக் கைக்கொண்ட இளைஞன், வாழ்க்கையில் வெற்றியுறுவான்; அவன் எத்தகைய துன்பமும் தன்னை அணுக ஒட்டாது வாழ்க்கையை நடத்துவான்; துன்ப நிலைமையைத் தன் மனத்தால் மறந்தும் நினையான். மனம்போல வாழ்வு ஆதலால், அவன் தன் மனத்தைக் களங்கம் சேர்ந்து கெடுத்து விடாதபடி எப்பொழுதும் பாதுகாத்த வண்ணமாக இருப்பான். ஒருவன் ஆவதும் அழிவதும் தன்னாற்றான் என்னும் உண்மையை அவ்விளைஞன் உணர்ந்தவன் ஆவான்; ஆதலின், தன் மனத்தை எப்போதும் தெளிந்த நிலையில்-ஊக்கம், உழைப்பு, விடாமுயற்சி, உயரிய நோக்கம் என்னும் இவற்றைத் தோற்றுவிக்கும் ஊற்று நிலையில் இருக்கச்செய்வான். இங்ஙனம் மனத்தை அமைக்கும் மாண்பு பெற்ற இளைஞன் இன்ப நிலை எய்தப்பெற்றவனே என்பதில் ஐயமுண்டா? இத்தகைய இளைஞனே உலகில் அழியாப் புகழுக்குக் காரணமாவான். இங்ஙனம் ஒவ்வோர் இளைஞனும் தன் அறிவையும் ஆற்றலையும் உயர்த்திக்கொண்டே செல்லச் செல்ல, இளைஞர் சமூகம் இன்பச் சமூகமாக மாறுமன்றோ? இளைஞர் சமூகமே நாட்டுக்கு உயிர் நாடி. எனவே, இளைஞர் சமூகம் இன்பநிலை எய்தின், அச்சமூகத்தைப் பெற்றுள்ள நாடும் இன்பநிலை எய்தும் என்பதில் ஐயமென்ன? இதுகாறும் கூறியவற்றால் இளைஞர் தம்மை அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவராகச் செய்து கொள்ளலின் மூலமாகவே தம் தாய்நாட்டை உயர்த்த முடியும் என்பது மலையிலக்காம். 10. அதமன் கோட்டை ] சேலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து கல் தொலைவில் தர்மபுரி என்னும் ஊர் அமைந்துள்ளது. சேலம்-தர்மபுரி ப பாதையில் தர்மபுரியிலிருந்து ஐந்து கல் தொலைவில் அதமன் கோட்டை என்னும் சிற்றூர் இருக்கிறது. பாதையின் வலப்புறத்தில் ஊர் அமைந்திருக்கிறது. இடப்புறம் திறந்த வெளியில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் காணப்படுகின்றன; பாதையை அடுத்துள்ள வெளியில் அங்காளம்மன் கோவில், வயிரநாதர் கோவில் என்பன பூசையின்றி விடப்பட்டுள்ளன. வயிர நாதர் கோவிலுக்கு எதிரில் சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றிருக்கிறது. அதனை அடுத்துத் தேய்ந்துபோன சாசனக் கல் ஒன்று தரையிற் புதையுண்டு கிடக்கிறது. ப பாதையில் இருபுறங்களிலுமுள்ள நிலப் பகுதியைச் சுற்றிலும் ஏரியின் கரைபோல உயர்ந்த பகுதி காணப்படுகிறது. அப்பகுதி பண்டைக் கோட்டையின் சுற்றுச் சுவர் அடிப்படை என்று ஊரார் உரைக்கின்றனர். பாதைக்கு வலப்புறமுள்ள மேட்டுப் பகுதியில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் பாழடைந்துள்ளன. அவற்றிற்கும் பாதைக்கும் இடைப்பட்ட இடத்தில் மழை பெய்யும் காலத்தில் பொன் துகள் கிடைத்துவருவதாக ஊரார் கூறுகின்றனர். அப்பகுதியில் தனியாக ஒரு இலிங்கமும் உள்ளது. வயிர நாதர் கோவிலில் இருந்த சிலை அதமன் கோட்டைக் கிராமத்திலுள்ள ஓர் பிராமணர் வசம் இருப்பதாகவும் அக் கோவிலுக்குரிய மானிய நிலங்களை அப்பிராமணரே அனுபவித்து வருவதாகவும் ஊரார் உரைக்கின்றனர். ப பாதையின் ஓரம் நிறுத்தப்பட்டுள்ள சமண தீர்த்தங்கரர் சிலையை; ஒரு வண்ணாத்தியின் சூழ்ச்சியால் அதமன் கோட்டை அழிக்கப்பட்டதென்றும் அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்த வேண்டி உறுப்புக்களை அறுத்த நிலையில் அவளது சிலை ஊர் அறிய நிறுத்தப் பட்டது என்றும் ஊரார் நினைக்கின்றனர். அச்சிலை சமண தீர்த்தங்கரர் சிலை என்ற உண்மையை அறியாத காரணத்தால் இக் கதை எழுந்தது போலும்! தகடூரின் கோட்டைப் பகுதி என்று கூறப்படும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் பெருமாள் கோவில் ஒன்றும் நன்னிலையில் காணப்படுகின்றன. அம்மன் கோவில் அடியில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அக்கோவிலின் உட்புறத்தில் அதியமான் கோட்டைக்குச் சுரங்கப்பாதை ஒன்று இருந்தது என்று கோவிலார் கூறுகின்றனர். அக்கோவில் கல்வெட்டுக் களில் கொங்கு நாட்டுத் தகடூர் என்ற தொடர் காணப் படுகிறது. தகடூரின் ஒரு பகுதியான விருபாட்சிபுரம் என்னும் இடத்திலுள்ள அனுமான் கோவில் கல்வெட்டுக்களில், தர்மராசன் என்ற சிற்றரசனால் பிரம்மதேயமாக அளிக்கப்பட்ட காரணத்தினால் தகடூர் - தர்மபுரி எனப் பெயர் பெற்றது என்ற செய்தி காணக் கிடக்கின்றது. விருபாட்சிபுரம் என்னும் அப் பகுதியில் இன்னும் பிராமணர் பலராக உள்ளனர். இன்றுள்ள இச்சான்றுகளை நோக்க இன்றைய தர்மபுரியே சங்ககாலத்தில் அதியமான் ஆண்ட தகடூர் என்பதும் அதியமான் கோட்டை என்ற பெயரே நாளடைவில் அதமன் கோட்டை என மருவி வழங்கலாயிற்று என்பதும் நன்கறியலாம். அதமன் கோட்டை நிலப்பகுதியில் பண்டைக்கால மட்பாண்டச் சிதைவுகள் மிகுதியாக இருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் காணப்படும் மிகப் பெரிய செங்கற்கள் காணக்கிடக்கின்றன. ஆங்காங்கு உழுகின்ற பொழுது கட்டிடச் சுவர்கள் உழுகருவியைத் தடைப்படுத்துவதாக ஊரார் உரைக்கின்றனர். இன்றுள்ள அடையாளங்களைக் கொண்டு பார்க்கும்பொழுது, அதமன் கோட்டை ஏறத்தாழ ஒரு கல் நீளமும் ஒரு கல் அகலமும் உடைய ஒரு கோட்டையாக அமைந்திருத்தல் வேண்டும் என்று கூறுதல் தகும். சங்க காலத்தில் கொங்கு நாட்டில் முடிமன்னர் இல்லை. சேலம், கோயமுத்தூர், நீலகிரி என்னும் மாவட்டங்களைக் கொண்ட கொங்கு நாட்டில் தகடூர் அதியமான், முதிர மலைக்குமணன், கொல்லிப் பொருநன் போன்ற சிற்றரசர்களே ஆண்டு வந்தனர். தகடூரை ஆண்ட அதியமான் சிறந்த போர் வீரன்; பெரிய கொடையாளி. அவன் உள்ளங் கவர்ந்த புலவர் ஔவையார். உண்டோரை நீண்ட நாள் உயிர் வாழச் செய்யும் ஆற்றல் பொருந்திய நெல்லிக்கனியைப் பறித்த அதியமான், அதனைத் தான் உண்ணாது ஔவையாருக்கு ஈந்து தன் தியாகத்தை உலகறியச் செய்தான். சங்க காலத்திற்குப் பின்பு பல்லவர் காலத்திலும் அதியமான்கள் இருந்திருக்கின்றனர்; பிற்காலச் சோழர் காலத்திலும் சோழப் பேரரசுக்குட்பட்ட சிற்றரசர்களாக இருந்து வந்தனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. எனவே, சங்க காலம் முதல் கி. பி. 14-ம் நூற்றாண்டுவரை அதியமான்கள் தென்னிந்திய வரலாற்றில் இடம் பெற்றிருந்தனர் என்பது உண்மையாகும். புதை பொருள் ஆராய்ச்சியாளர் அதமன் கோட்டையில் ஆராய்ச்சிகள் நடத்தினால் அரிய செய்திகள் பல வெளியாகும்.  வழியும் வகையும் முன்னுரை `கட்டுரை எழுதுதல் என்னும் தொடரில் பள்ளி மாணவர்க் கென்று நான்கு சொற்பொழிவுகள் செய்ய வேண்டும் என்று சென்னை வானொலி நிலையத்தார் விரும்பினர். அவர்கள் விருப்பத்திற்கிணங்கிப் பேசிய சொற்பொழிவுகள் நான்கும் மாணவர்க்குக் கட்டுரை எழுத வழிகாட்டுவன. எனவே அவற்றை `வழியும் வகையும் என்ற பெயரில் வெளியிட விரும்பினேன். சென்னை வானொலி நிலையத்தார் இசை வளித்தனர். அவர்கட்கு நன்றி. மா. இராசமாணிக்கம் 1. எண்ணங்கள் `கட்டுரை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய எல்லா விவரங்களையும் தக்க சொற்களில் அமைத்து, முறைபடக் கோத்த மாலைபோல முறைப்படுத்தி எழுதும் அமைப்பு எனச் சுருங்கச் சொல்லலாம். கட்டுரை எழுதுவதற்கு வேண்டும் பொருள்கள் எவை? (1) நாம் எந்தப் பொருளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதனைப் பற்றிய எண்ணங்களை ஆழமாகச் சிந்தித்துத் தயார் செய்ய வேண்டும். (2) இவ்வாறு எண்ணங்களைத் தொகுத்துக்கொண்ட பிறகு, அவற்றைத் தெரிவிக்க ஏற்புடைய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். (3) பின்னர் கருத்துக்கள் தொடர்ந்துவரத்தக்க முறையில் ஏற்ற சொற்களைக் கொண்ட வாங்கியங்களைச் செம்மையாக எழுத வேண்டும்; ஒரு வாக்கியமும் அதனை அடுத்து வரும் வாக்கியமும் கருத்தினால் பிணைந்து செல்லத் தக்க முறையில் அமையவேண்டும். (4) ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட வாக்கியங்களின் தொகுப்பே `பத்தி அல்லது `பாரா எனப்படும். ஒரு கட்டுரையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்ப, 3, 4, 5, 6 முதலாகப் பல பத்திகள் அமையும். ஒரு வாக்கியத்துக்கும் அதனை அடுத்துவரும் வாக்கியத்துக்கும் பொருள் தொடர்பு இருத்தல் போலவே - ஒரு பத்திக்கும் அதனை அடுத்துவரும் பத்திக்கும் கட்டுரைப் பொருளைப்பற்றிய தொடர்பு இருக்க வேண்டுவது அவசியமாகும். (5) நமது உடலில் முடி - இடை - அடி என மூன்று பகுதிகள் இருப்பது போலக் கட்டுரையிலும் தொடக்கம், உடல், முடிவு என மூன்று பகுதிகள் சிறப்பாக இருப்பது நல்லது. இந்த ஐவகை அமைப்புக்களையும் நன்றாய்த் தெரிந்து கொண்டவர் எழுதும் கட்டுரை சிறந்து விளங்கும். இவற்றுள் முதலிற் கூறப்பட்ட கட்டுரைக்குரிய எண்ணங்கள் என்பதைப் பற்றி இனிக் கவனிப்போம். நாம் எழுதும் பொருளைப்பற்றிய- கட்டுரைக்கு உயிர் நாடியாக உள்ள-எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்பொருளைப் பற்றி நமக்குப் பல எண்ணங்கள் தோன்றலாம்; அவை தோன்றும் பொழுது முறையாகத் தோன்றும் எனக் கூறுவதற்கில்லை. ஆதலால் அவை தோன்றும் வகையில் முதலிற் குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லா எண்ணங்களையும் தோன்றும் வகையில் முதலிற் குறித்துக் கொண்ட பிறகு, அவற்றை எழுத வேண்டும். முறைப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிட்டு ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு குறிப்பைப்பற்றியும் இன்னின்ன செய்திகளைத்தான் சொல்லவேண்டும் என்று வரையறை செய்து கொள்ள வேண்டும். அந்த வரையறைப்படி முறைப்பட எளிய வாக்கியங்களில் எழுதிச்செல்ல வேண்டும். ஒரு குறிப்புக் குரிய விளக்கம் ஒரே பத்தியில் அடங்குமாறு எழுத வேண்டும். அடுத்த குறிப்பைப்பற்றி முன் சொன்னவாறே ஒரு பத்தி எழுத வேண்டும். இவ்வாறு முறைப்பட எழுதி முடிக்கப்படுவதே நல்ல கட்டுரை இலக்கணத்தைப் பெற்றதாகும். புகைவண்டியைப்பற்றிய ஒரு கட்டுரை வரையத் தேவைப்படும் எண்ணங்கள் யாவை? 1 . புகைவண்டி என்பது யாது? 2. அதன் அமைப்பு. 3. அது செல்லும் பாதை. 4. அவ்வண்டியில் இருந்து வேலை பார்ப்பவர். 5. புகை வண்டியின் பயன். என்னும் ஐவகைக் குறிப்புக்கள் நமக்குத் தோன்றுகின்றன. இவற்றைக் குறித்துக்கொண்ட பிறகு ஒவ்வொரு குறிப்புக்கும் தேவையான விவரங்களை எண்ணி எண்ணி அவற்றையும் குறித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்ட பிறகு, ஒவ்வொரு குறிப்புக்கும் உரிய விவரங் களை ஒவ்வொரு பத்தியாக எழுதிச் செல்ல வேண்டும். சாரணர் இயக்கம்பற்றி ஒரு கட்டுரை எழுதத் தேவைப் படும் எண்ணங்கள் யாவை? 1. சாரணர் இயக்கம் என்பது யாது? 2. மூன்று வாக்குறுதிகள் - கடவுள், அரசர், நாடு, சாரணர் சட்டதிட்டங்கள், பிறர்க்குத்தொண்டு. 3. சாரணர் ஒழுங்குமுறை-உடை ஒழுங்கு, நடை ஒழுங்கு முதலியன. 4. இயக்கத்தால் உண்டாகும் நலன்கள். என்னும் நால்வகைக் குறிப்புக்கள் நமக்குத் தோன்றுகின்றன. இவ்வாறே எந்தப் பொருளைப் பற்றி வரைய நேர்ந்தாலும் முதலில் இவ்வாறு குறிப்புக்களைத் தயார் செய்யவேண்டும்; பின்னர் ஒவ்வொரு குறிப்புக்கும் வேண்டும் விவரங்களைக் குறிக்க வேண்டும். பிறகே இவற்றைத் துணையாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டும். இதனை மேலும் நன்கு விளக்க இங்கு ஒரு மாதிரிக் கட்டுரை தரப்படுகின்றது. அதனை நன்கு கவனிக்கவும். குதிரையை நாம் எல்லோரும் நன்றாய் அறிவோம். ஆதலால் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்வோம். முன் சொன்னபடி நமக்குக் குதிரையைப்பற்றி உண்டாகும் எண்ணங்களை முதலிற் குறித்துக்கொள்ள வேண்டும். குதிரையைப்பற்றி நன்றாய்ச் சிந்தித் தோமாயின் கீழ்வரும் எண்ணங்கள் நமக்குத் தோன்றலாம். குதிரை குறிப்புக்கள் 1 உருவ அமைப்பு: உருவம், தோல் - தலை - கழுத்து-இடைப்பகுதி - கால்கள் - வால். 2 அதன் உணவு: புல்-கொள். 3 அதன்வகை: போர்க் குதிரைகள் - வண்டி இழுக்கும் குதிரைகள் - உழவுக் குதிரைகள் - சவாரிக் குதிரைகள் - வேட்டைக் குதிரைகள் - பந்தயக் குதிரைகள். 4 குதிரையின் இயல்பு: அமைதி - பொறுமை - கீழ்ப்படிதல் - நுண்ணறிவு. 5 அதன் பயன்: வண்டி இழுத்தல் - ஏர் - உழுதல் - வேட்டை யாடல் - பந்தயம் ஓடுதல் - போரிற் பயன்டுபதல் - அதன் தோலும் குளம்பும் பயன்படுதல். கட்டுரை 1 குதிரை உருவத்திற் பெரியது; வலிமையுள்ளது. அதன் தோல் உறுதிவாய்ந்தது. அத்தோலின் மேற்புறம் மென்மையாகவும், அழகாகவும் காணப்படும். குதிரையின் தலை நீண்டது. அதன் கண்கள் பெரியவை. அவை எதிரேயும் நாலாப்பக்கங்களிலும் பார்க்கத்தக்கவாறு தகுந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காதுகள் குட்டையானவை; ஆனால் நன்றாய்க் கேட்கக்கூடியவை. அதன் பற்கள் உறுதியானவை. குதிரையின் கழுத்துப் பருத்து நீண்டது; பலம் உள்ளது. அதன் மீது மயிர் அடர்ந்து வளர்ந்து அழகு செய்கிறது. குதிரையின் இடைப்பகுதி பருத்தது; நல்ல அமைப்புடையது. பருத்துள்ள அந்த இடைப்பகுதியைத் தாங்கத்தக்க கால்கள் நீண்டிருக்கின்றன. அவை இடைப்பகுதியை நோக்க மெல்லியவாக இருப்பினும் உறுதியானவை; விரைந்து ஓட உதவி செய்பவை. குதிரையின் வால் குட்டையானது. அது நீண்ட மயிர்களை உடையது. அம்மயிர்கள் வாலை நெருக்கமாகப் போர்த்துள்ளன. 2 குதிரை புல்மேயும்; புல்லைக் கடித்துத் தின்னும்; ஆனால் அசைபோடாது. குதிரை வேகவைத்த கொள்ளையும் விருப்பத்துடன் தின்னும். 3 குதிரைகள் பல துறைகளிற் பயன்படும். அவ்வப் பயனுக்குத் தக்கபடி குதிரைகளின் பெயர்களும் வேறுபடும். ஆகவே அவை 1. போர்க் குதிரைகள் 2. வண்டி இழுக்கும் குதிரைகள் 3. ஏர் உழும் குதிரைகள் 4. சவாரிக் குதிரைகள் 5. வேட்டைக் குதிரைகள் 6. பந்தயக் குதிரைகள் எனப் பலவகைப்படும். 4 குதிரை பெருந்தன்மை வாய்ந்த விலங்கு. அது அமைதியும், பொறுமையும், கீழ்ப்படிதலும், நுண்ணறிவும் உள்ளது. 5 குதிரை போரில் சிறந்த பங்கு பெற்றுள்ளது. நால்வகைப் படைகளிற் `குதிரைப்படை என்பது ஒன்றல்லவா? இங்ஙனம் படைக்குப்பயன் பட்டதால் அது பழைய நூல்களில் எல்லாம் போற்றப்பட்டுள்ளது. செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனது நீலவேணிக் குதிரை அரசன் குறிப்பறிந்து செயலாற்ற வல்லது என்பதும் அதனை அரசன் தன் உயிர் போலக் கருதிவந்தான் என்பதும் தேசிங்கு ராஜன் பாடல்களைக்கொண்டு நன்கறியலாம். குதிரை வண்டியிழுக்க உதவுகின்றது; மேனாடுகளில் உழவுக்குப் பயன்படுகிறது; பிரபுக்கள், சிற்றரசர், பேரரசர்கள் வேட்டையாடக் குதிரை மீதே செல்வது வழக்கம். அவர்கள் பவனி வரவும், சவாரி செய்யவும், காலை மாலைகளில் உலாவச் செல்லவும் குதிரை பயன்பட்டது; இன்றும் பல இடங்களில் பயன் படுத்தப்படு கிறது. குதிரைப்பந்தய ஓட்டம் என்பது உலகப் புகழ் பெற்றது. விரைந்து ஓடக்கூடிய அழகிய குதிரைகள் எல்லா நாடுகளிலும் செல்வமாகக் கருதி வளர்க்கப்படுகின்றன. அவை டெல்லி முதலிய இடங்களில் நடை பெறும் ஓட்டப் பந்தயங்களில் பங்கு கொள்கின்றன. நமது சென்னையை அடுத்த கிண்டியில் குதிரைப்பந்தய ஆட்டம் நடைபெறுகிறது அல்லவா? நம் சுதேசமன்னர் பலர் இப்பந்தயக் குதிரைகளைத் தம் பிள்ளைகளைப் போலப் பெரும்பொருள் செலவழித்துச் செல்வமாக வளர்த்து வருகின்றனர். இறந்த குதிரைத் தோல் பாடம் செய்யப்பட்டுப் பல பொருள்கள் செய்யப்பயன்டுகிறது. அதன் குளம்புகள் வச்சிரம் செய்யப் பயன்படுகின்றன. இவ்வாறு முதலில் குறிப்புக்களைத் தயார் செய்து கொண்டு, அக்குறிப்புக்களைப் பத்திகளாக அமைத்துப் பின்னரே முறைப்படிக் கட்டுரை வரையவேண்டும். 2 சொற்கள் ஒரு கட்டுரைக்கு முதலில் தேவைப்படுவன எண்ணங்கள்; அடுத்துத் தேவைப்படுவன அவ்வெண்ணங்களை வெளிப் படுத்த வல்ல சொற்கள் ஆகும். கருதிய ஒன்றை வெளிப்படுத்த ஏற்ற சொற்கள் இல்லையாயின், நமது எண்ணம் இன்னது என்பதை நல்ல முறையில் வெளிப்படுத்தல் இயலாது. `குதிரை கத்துகிறது என்று ஒரு மாணவன் கூறினால் அல்லது எழுதி னால் கேட்பவர் அவனைப் பரிகசிப்பார்கள். `குதிரை கனைக்கிறது என்றுதான் கூறவேண்டும் அல்லது எழுதவேண்டும். இந்த உதாரணத் திலிருந்து `கத்துகிறது என்பது ஏற்புடைய சொல் அன்று என்பதும் `கனைக்கிறது என்பதே ஏற்றசொல் என்பதும் தெரிகிற தன்றோ? இவ்வாறே `கழுதை கனைக்கிறது என்று கூறலாகாது; `கழுதை கத்துகிறது என்று தான் கூறவேண்டும். இப்படியே, சிங்கம் முழங்குகின்றது யானை பிளிறுகின்றது நாய் குரைக்கின்றது மயில் அகவுகிறது கோழி கூவுகிறது காகம் கரைகிறது பன்றி உருமுகிறது ஆந்தை அலறுகிறது எருது முக்காரம் போடுகிறது என்று அதனதனுக்குள்ள தொன்று தொட்டு வரும் வழக்குச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறே கன்று, பிள்ளை, குட்டி முதலிய இளமைப் பெயர்களை மரபு அறிந்து தக்க இடத்தில் கையாள வேண்டும். `யானைப்பிள்ளை என்று கூறுதல் தவறு. `யானைக்கன்று `யானைக்குட்டி என்று வழங்குதல் வேண்டும். அங்ஙனமே `கழுதைக்கன்று என்று கூறுதல் தவறு. `கழுதைக்குட்டி என்றே வழங்குதல் வேண்டும். எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே என்று இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆதலின் மரபு பற்றி அதாவது பழங்காலத்திலிருந்து வழங்கிவரும் முறைமைப்படி சொற்களை வழங்க வேண்டும் என்பதே பெரியோர் கருத்து. இந்தக் கட்டுப்பாடு இல்லையாயின் மொழி கெட்டுவிடும் ஆகவே, யானைக் கன்று, யானைக்குட்டி வாழைக்கன்று மாங்கன்று கழுதைக்குட்டி, குதிரைக்குட்டி தவளைக்குஞ்சு, மீன்குஞ்சு கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை என்று மரபுபற்றி ஏற்ற சொற்களையே நாம் பயன்படுத்த வேண்டும். சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து நின்று முடிந்த ஒரு கருத்தினைத் தெரிவிப்பது வாக்கியம் என்று சொல்லப்படும். ஆதலின் படிப்பவர்க்கு ஒரு கருத்தினை எளிதில் அறிவிக்கத் தக்க சொற்களே வாக்கியத்தில் அமையவேண்டும். அதாவது கருத்தினை விளக்கும் ஆற்றல் வாய்ந்த சொற்களாகவே அவை இருத்தல் வேண்டும். படிப்பவர் அகக்கண்ணுக்கு முன் கூறக் கருதிய கருத்துச் சித்திரமாகக் காட்டவல்ல சொற்களே `ஆற்றல் வாய்ந்த சொற்கள் என்பன. கீழ்வரும் சொற்களைக் கவனியுங்கள் முருகன் தன் ஆட்டைத் தேடிக்கொண்டு காட்டிற்குள் சென்றான். அவன் பார்வை நாலாப்பக்கங்களிலும் சென்றது. இங்ஙனம் பார்த்துச் சென்றவன் திடீரென்று நின்றான். அவன் பார்வை ஒரு பொருளின் மேற் சென்றது. அவன் உடல் நடுங்கியது. ஆ! புலி படுத்திருக்கிறது. அது என்னைப் பார்க்குமுன் நான் ஓடிவிடுதலே நன்று என்று அவன் எண்ணினான். அதனால் அவன் புலியைப் பார்த்துக்கொண்டே சிறிது தூரம் மெல்ல நடந்து பின்னர் வந்த வழியே ஓடலானான். காட்டிற்கு வெளியே வந்த அவன் ஓரிடத்தில் அமர்ந்தான். கடவுளே, நான் இன்று யமன் வாயிலிருந்து தப்பினேன் என்று தனக்குள் கூறிக் கொண்டான். இந்தப் பகுதியில் பல வாக்கியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாக்கியத்திலும் பல சொற்கள் இருக்கின்றன. இச்சொற்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைந்து கருத்தினை அழகுடனும் உணர்ச்சியுடனும் வெளிப்படுத்து கின்றன; முருகன் - காடு - புலி- முருகனது நடுக்கம் - சமயோசித அறிவு - அவன் தப்பிப்பிழைத்தல் - என்பவற்றைப் படிப்பவர் அகக்கண் முன்பு நிறுத்துகின்றன. இச்சொற்களில் ஒன்றை எடுத்துவிடினும் கருத்துக் கெட்டுவிடும். மேலும் இச்சொற்கள் எல்லாம், எல்லோர்க்கும் பொருள் விளங்கும் எளிய சொற்கள், இவ்வாறு எளிய சொற்களையும் இடத்திற்கேற்ற சொற் களையுமே மாணவர் பயன்படுத்த அறிய வேண்டும். இதுவரை கூறியவற்றால் கட்டுரைக்கு உயிர் நாடி எண்ணங்கள் என்பதும், அவ்வெண்ணங்கட்கு உயிர்நாடி சொற்களே என்பதும், அறிந்தோம். இங்ஙனம் கட்டுரையில் சிறப்பிடம் பெற்றுள்ள சொற்கள் எந்த இலக்கணங்களைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை அடுத்துக் காண்போம். சொற்கள் கருத்தை அப்படியே வெளிப்படுத்துவனவாக இருத்தல் வேண்டும்; இத்துறையில் வழக்கத்தில் இல்லாதனவும் புதியனவும் அகற்றப்பட வேண்டும். கொச்சை யானவையும், இடத்திற்கு இடம் வேறுபடுவனவும், செய்யுள் தன்மை பெற்றனவும், செய்தித்தாள்களில் புதியனவாக ஆளப்படுவனவும், பிழைபட்டனவும், இலக்கண அமைதி அற்றனவுமான சொற் களை அறவே அகற்றுதல் வேண்டும். சொற்கள் வழக்கில் உள்ளனவும், கற்றறிந்தோர் வழங்கு வனவும், இலக்கியத்தில் பயின்றனவுமாக இருத்தல் வேண்டும். அச்சொற்களே தூய சொற்கள் எனப்படும். சொற்கள் தெளிவான பொருளை உணர்த்த வேண்டும். உணர்ச்சி உண்டாக்கத்தக்க ஆற்றல் பெற்றனவாக இருத்தல் வேண்டும். பொதுவாகவோ, தெளிவின்றியோ, வெறும் அடுக்காகவோ சொற்கள் இருத்தலாகாது. விஞ்ஞானிகள் எப்பொழுதும் தாங்கள் கண்ட உண்மை களை ஒளித்து வையாமல் வெளியிட்டு விடவே செய்வார்கள் என்னும் வாக்கியத்தில், `வெளியிட்டுவிடவே செய்வார்கள் என்பது பொருளைக் கொடுக்கும் சொல் அடுக்கு ஆகும். `வெளியிடுவர் என்னும் எளிய சொல் ஒன்றே கருதிய பொருளை நேராகத் தருவது. அதனைப் பெய்து, விஞ்ஞானிகள் எப்பொழுதும் தாங்கள் கண்ட உண்மைகளை ஒளித்துவை யாமல் வெளியிடுவர் என்று அமைப்பதே முறையாகும். மேற்சொன்ன இலக்கணங்கள் அமைந்த சொற்களை மாணவர் எவ்வாறு தொகுத்தல் வேண்டும்? கட்டுரை எழுதத் தொடங்கும் தொடக்கநிலை மாணவன் தன்னைச் சொற்களைக் கற்கும் மாணவனாகக் கருதவேண்டும்; கருதிப்படிக்கும் நூலிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப்படிக்க வேண்டும்; ஒவ்வொரு சொல்லையும் பிழையற உச்சரிக்கப் பழகவேண்டும். பின்னர் அதனை எழுதவேண்டும். சொல்லின் பகுதியைக் கவனிக்க வேண்டும்; அப்பகுதியிலிருந்து பிறக்கும் சொற்களைக்கண்டு தொகுத்துக் கொள்ள வேண்டும் `போ என்னும் பகுதியிலிருந்து போனான், போகிறான், போவான், போகும், போவான், போதல், போக்கு, போனவன் என்றெல்லாம் பெருகும் சொற்களைத் தொகுக்க வேண்டும். அவற்றில் ஒவ்வொரு சொல்லின் பொருளும் அது பயன்டும் இடமும் கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லும் தனிப்பட்ட நிலையில் ஒரு பொருளைத் தரும். அதுவே வாக்கியத்தின் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு பொருளையும் தரலாம். இவ்வாறு சொல் வடிவத்தையும் பொருளையும் ஊன்றிப் பார்த்துக் கற்றுக்கொண்டே அஃது அமைந்துள்ள வாக்கியத்தைக் கவனித்தல் வேண்டும். இலக்கியச் சொற்களைத் தொகுப்பதற்குச் சிறந்த புலவர்கள் எழுதியுள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். அமைதியாக ஆழ்ந்து கவனித்துப் படிக்க வேண்டும். தக்க சொற்கள், தொடர்கள், மரபுத் தொடர்கள், சிறந்த வாக்கியங்கள் இவற்றைக் குறித்துக்கொள்ள வேண்டும். இங்ஙனம் சொற் செல்வம் சேர்க்காவிடில், மாணவர் நினைத்த பொருளை உடனே எழுத முடியாது. எண்ணங்களும் அவற்றுக்கு ஏற்ற சொற்களும் பருந்தும் நிழலும் போலப் பிணைந்து வர வேண்டும். ஏற்ற சொற்களைக் கற்கவும் தொகுக்கவும் செய்யுட் பயிற்சி இருப்பது மிகவும் நல்லதாகும். செய்யுள் என்பது என்ன? `பலவகைப்பட்ட பகுதிகளால் உயிர்க்கு இடமாக இயற்றப்பட்ட உடம்பு போல - பலவகைச் சொற்களாலும் பொருளுக்கு இடமாகத் தங்கள் அறிவினால் கற்று வல்லோர் அலங்காரம் தோன்றச் செய்வது செய்யுள் எனப்படும். ஆதலின் செய்யுளில் புலவர் நன்றாய் யோசித்துத் தேர்ந்தெடுத்த சொற்களே இடம் பெற்றிருக்கும்; அழகிய தொடர்கள் காணப்படும்; இனிய தகுதியான கருத்துக்கள் காணப்படும். செய்யுளுக்கென்றே அமைந்த தனி முறையில் சொற்கள் பொருந்தியுள்ள தன்மை, அவை தரும் திட்டமான பொருள், சொற்கள் சேர்ந்துள்ள முறை இவற்றை மாணவர் படித்தறிதல் நல்லது. `படித்தவர் படித்தவரை விரும்புவர் என்று எழுதுவதற்கும் `கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதற்கும் உள்ள நடைபெறுபாட்டையும், அதனைச் சொல்வதில் உள்ள அழகு வேறுபாட்டையும் நன்கு உணர்க. இவ்வாறு பொருத்தமான சொற்கள், தொடர்கள், பழமொழிகள் முதலியன செய்யுட்களில் மலிந்து கிடக்கின்றன. அவற்றை எடுத்தாள்வதால் கட்டுரை அழகு பெற்று மிளிரும். உண்டு கற்றவர் மதிப்பினையும் பெறும். பேசுந்தமிழுக்கும் எழுதுந் தமிழுக்கும் மிகுந்த வேறுபாடு என்பதை நன்கு உணர வேண்டும். தமிழ் மக்களுட் பெரும்பாலர் எழுத்தறிவற்றவர். ஆதலின் அவர்களால் சொற்கள் உருக்குலைந்த நிலையிற்றான் உச்சரிக்கப்படுகின்றனர்.அவர்களே சமூகத்தின் பெருந் தொகையினராக இருத்தலின், படித்த சிறுபான்மையினரும் சொற் களைப்பற்றிய கவலையின்றிப் பாமரரைப் போலவே உச்சரித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் உருக்குலைந்த சொற்களே உச்சரிக்கப்படுகின்றன. உ-ம், `நேற்று என்னும் பிழையற்ற சொல் `நேத்து `நேத்திக்கி என்றெல்லாம் உச்சரிக்கப்படுகிறது. இங்ஙனம் பேச்சு வழக்கிலிருக்கும் சொற்களை மாணவர் எழுதவேண்டும். அவை `வாரியா `போரியா என்பன போன்ற கொச்சைச் சொற்களாகவே இருக்கும். முன் சொன்ன தமிழ்ப்புலவர் நூல்களில் இவற்றிற்குரிய இலக்கண அமைப்புடைய சொற்கள் எவை, என்பதை மாணவர் அறிந்து, அவற்றைக் கொச்சைச் சொற்கட்கு நேர் நேராக எழுதவேண்டும். அவை `வருகிறாயா போகிறாயா என்பன போன்ற சொற்களாக நூலிற் காணப்படும். இந்த இருவகைச் சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து மாணவர் திருந்துதல் வேண்டும். மாணவர் பிழையற்ற சொற்களையே பேசுதல் என்பதை விரதமாகக் கொண்டு பேசி வருவராயின், அவர்கள் எழுத்தில் பிழையான சொற்கள் தலை காட்டா. அவர்களால் பாமர மக்களும் அறிவு பெற்றுத் திருந்துவர். ஆதலின் மாணவர் பிழையற்ற சொற்களைப் பேசப் பிழையற்ற தமிழ் நூல்களை நிரம்பப் படித்தல்; திருத்தமுறப் பேசுவது போலவே, எழுதவும் பழக வேண்டும். இப்பயிற்சி வலுப்பெறுமாயின், ஒவ்வொரு மாணவனும் பிழையற்ற சொற்களின் களஞ்சியமாகக் காட்சி அளிப்பான். 3. அமைப்பு ]கட்டுரை எழுதுவதற்கு முதலில் வேண்டப்படுவன எண்ணங்கள். அவற்றை அடுத்து வேண்டப்படுவன அவ் வெண்ணங்களைத் தெளிவாகத் தெரிவிக்கவல்ல ஆற்றல் வாய்ந்த சொற்கள். இந்த இரண்டும் இருந்தாற் போதுமா? ஆற்றல் வாய்ந்த சொற்களைக் கோவைப்பட அடுக்கிக் குறித்த கருத்தினை வெளியிடும் வாக்கியங்கள் செவ்வையாக அமையவேண்டும்; அவ்வாக்கியங்கள் குறித்த ஒரு பொருளை முறைப்பட விளக்கி ஒரு பத்தியாக (பாராவாக) அமைத்தல் வேண்டும். இத்தகைய பல பத்திகள் கொண்டது ஒரு கட்டுரை. இவை அனைத்துமே கட்டுரை அமைப்பிற்கு அவசியமானவை. வாக்கியங்கள் முதலில் வாக்கியங்களைப்பற்றிக் கவனிப்போம். ஒரு வாக்கியம் என்பது என்ன? குறித்த ஒரு கருத்தினைத் தெளிவாக விளக்கத் தக்க சொற்களின் இணைப்பே வாக்கியம் எனப்படும். அதனில் ஓர் எழுவாய், ஒரு பயனிலை இருக்கும். அது ஒரு செய்தியை அல்லது வினாவை அல்லது கட்டளையைக் கொண்டதாக இருக்கும். உதாரணம் 1. இராமன் பள்ளிக்குச் சென்றான்/ இது செய்தி வாக்கியம். 2. நேற்று வந்தவர் யார்? - இது வினா வாக்கியம். 3. முருகா, பாடம் படி - இது கட்டளை வாக்கியம். வாக்கியத்தில் எழுவாய் பயனிலைகளை எம்முறையில் அமைக்க வேண்டும் என்பது கவனிக்கத் தக்கது. பெரும்பாலும் வாக்கியத்தின் முதலில் எழுவாய் அமைவதே இலக்கண அமைதிக்குப் பொருத்தமானது. இவ்வாறே வாக்கியத்தின் இறுதியில் பயனிலை அதாவது வினைமுற்று அமைந்து வரவேண்டும். உதாரணம் 1. நான் கடைக்குப் போனேன்- இது தனி வாக்கியம். இதனில் `நான் என்னும் எழுவாய் முதலிலும் `போனேன் என்னும் பயனிலை கடைசியிலும் இருப்பதைக் கவனியுங்கள். இதைவிடப் பெரிய வாக்கியமாயினும் இம்முறையில் அமைந்து வருதலே தமிழ் இலக்கண மரபுக்கு ஒத்ததாகும். உதாரணம்: அவன் நேற்றுப் பந்துவிளையாடும் பொழுது கால் இடறி விழுந்தான்-இந்த வாக்கியம் இரண்டு சிறு வாக்கியங்களைக் கொண்டது. ஆயினும் ஒரே எழுவாயும் பயனிலையும் வரும்படி அமைந்திருப்பதைக் காண்க. இவ்வாறு எழுவாய் முதலிலும் பயனிலை இறுதியிலும் அமைவதில் உள்ள சிறப்பென்ன? பயனிலை அல்லது கருத்தை முடிக்கும் சொல் கடைசியில் இருப்பதால் படிப்பவர் பயனிலைக்கு வரும்வரையில், கருத்தினை அறியக்கூடவில்லை. அதனால் படிப்பவர் ஆவல் நிலைக்கிறது; வளர்ந்துகொண்டே போகிறது; வாக்கியம் முடியும்வரை அந்த ஆவல் நீடித்திருக்கிறது; பயனிலையுடன் படிப்பவர் மனம் அமைதி அடைகிறது. இந்த வாக்கியத்தைக் கவனியுங்கள்:- முருகன் நடு இரவில் தன் ஊரை நோக்கி ஒற்றையடிப் பாதையில் சென்றுகொண்டிருந்த பொழுது, திருடர் இருவர் அவனைச் சந்தித்து, அவனிடம் இருந்த பணத்தைக் கவர்ந்து சென்றனர். இந்தப்பெரிய வாக்கியத்தில், `கவர்ந்து சென்றனர் என்னும் கடைசி வார்த்தை வரும்வரை, படிப்பவர் கவனம் இழுக்கப் படுதலைக் காண்க. சில இடங்களில் மிகுந்த கவலை, ஆவல், அவசரம், அச்சம் இவற்றைக் கருதிப் பயனிலை முன் வைக்கப்படுதலும் உண்டு. சீதையைத் தேடச் சென்ற அனுமன் இலங்கையிலிருந்து திரும்பினான். அவன் வருவதைக் கண்ட இராமன் இவன் சீதையை இலங்கையிற் கண்டானோ இல்லையோ, வந்து என்ன சொல்வானோ! என்று கவலை கொண்டான். அக்கவலை அவன் முகத்தில் நன்றாக வெளிப்பட்டது. அதனை உணர்ந்த அனுமான், கண்டேன் சீதையை என்று கூவிக்கொண்டே இராமனை நெருங்கினான். இத்தகைய இடங்களில் பயனிலை முன்வருவதே சிறப்புடையது. ஒரு நல்ல வாக்கியத்திற்குத் தேவையானவை எவை? 1. ஒரு கருத்தைத் தெளிவாகவும் பொருத்தமாகவும் படிப்பவரை உணர வைப்பதே வாக்கியத்தின் நோக்கமாகும். இந் நோக்கம் நிறைவேற வேண்டுமாயின், வாக்கியத்திற் குறித்த கருத்துக்குப் பொருத்தமான சொற்கள் இருத்தல் வேண்டும்; கருத்தினை மறைக்கும் சொற்கள், வேண்டாத சொற்கள், சுற்றி வளைத்துக் கூறத்தக்க சொற்கள் என்பன இடம் பெறலாகாது. உ-ம், இராமன் வந்தான் - என்பதற்குப் பதிலாக இராமனானவன் வந்தான் - என்று கூறுதல் வேண்டாதது. 2. வாக்கியத்தில் தெளிவு அவசியம். படிக்கும் பொழுதே டையின்றிப் பொருள் தெளிவாக விளங்கும்படி வாக்கியத்தை அமைக்கவேண்டும். உ-ம். அதோ தெரிகிறதே வலைஞர்சேரி, அதன் தலைவன் மகள் தான் நாம் இப்போது சந்தித்தது. இது பொருத்தமற்ற சொற்களின் இணைப்பினால் குழப்பத்தைத் தருகிற வாக்கிய மாகும். அதோ தெரிவது வலைஞர்சேரி. அதன் தலைவன் மகளைத்தான் நாம் சற்று முன் சந்தித்தோம் -எ ன்று சில சொற்களைப் பொருத்தமறிந்து மாற்றி அமைப்பதால் வாக்கியத்தில் பொருள் தெளிவு ஏற்படுகிறது. 3. ஒரு வாக்கியம் ஒரு கருத்தினையே கொண்டிருத்தல் வேண்டும். தொடர்பு இல்லாத பல கருத்துக்கள் ஒரே வாக்கியத்தில் இருத்தலாகாது. உ-ம். செங்குட்டுவன் படையொடு சென்றான்; போரிட்டான்; பகைவரை வென்றான் என்று இவ்வாறு வாக்கியம் ஒரு கருத்தினைக் கொண்டிருத்தலே சிறப்புடையது. 4. வாக்கியத்தில் உள்ள சொற்கள் படிக்க எளிமையும் இனிமையும் உடையனவாக இருத்தல் வேண்டும். சொற்கள் கடுமையும் நீட்சியும் உடையனவாக இருத்தல் ஆகாது. உ-ம். நீ நல்ல கேள்வியைக் கேட்டனை-என்பதற்குப் பதிலாக `நீ நன்கு கடாவினாய் என்பதோ `நீ கேட்ட கடா நன்று எனக்கூறுதலோ சரியன்று. 5. வாக்கியத்தில் வற்புறுத்த விரும்பும் பகுதிக்குச் சிறப்பிடம் தர அறியவேண்டும். உ-ம். முருகன் நன்றாகப்படித்தான்; பல பரிசுகளைப் பெற்றான்; இந்த வாக்கியத்தில் `படித்தான் `பெற்றான் என்று இரண்டு பயனிலைகள் இருத்தலால் வற்புறுத்தத்தக்க பரிசு பெற்றான் என்பது சிறப்பற்றதாகி விட்டது. அதனை வற்புறுத்த வேண்டுமாயின், முருகன் நன்றாய்ப்படித்துப் பல பரிசுகளைப் பெற்றான் என்று மாற்றி அமைக்க வேண்டும். இங்ஙனம் சொன்ன முறைகளைப் பின் பற்றினால் சிறந்த வாக்கியங்கள் அமையும். இனி வாக்கியங்களைத் தன் அகத்தே கொண்ட பத்திகளைக் கவனிப்போம். பத்திகள் பத்தி என்பது என்ன? கட்டுரையில் பல பத்திகள் உண்டு. ஒவ்வொரு பத்தியும் குறித்த ஒரு பொருளைப் பற்றியது. அப்பொருள் கோவையாகப் பல வாக்கியங்களில் விளக்கப் பட்டிருக்கும். பத்தியில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கருத்துத் தொடர்பு இருக்கும். இந்த இலக்கணங்களை உடையது பத்தி அல்லது பாரா எனப்படும். உ-ம். சென்னையிலிருந்து தஞ்சை வரை எனது புகைவண்டிப் பிரயாணம். கட்டுரைத் தலைப்பு. குறிப்புக்கள் 1 பிரயாண ஏற்பாடு 2 நான் பிரயாணம் செய்த வண்டி 3 எனது பிரயாண அனுபவம் 4 தஞ்சையில் நான் கண்டவை 5 சென்னைக்குத் திரும்புதல் என்ற ஐந்து குறிப்புக்கள் தரலாம். இந்த ஒவ்வொரு குறிப்பையும் பற்றி ஒரு பத்தி எழுதலாம். இவ்வாறு எழுதினால் இக்கட்டுரை ஐந்து பத்திகளை உடையதாக ஆகும். ஒரு பத்தியிலுள்ள வாக்கியம் ஒவ்வொன்றும் முன் னதனுடன் தொடர்புடையதாகவோ, அடுத்து வரும் வாக்கியத் திற்கு உதவியாகவோ அமைதல் வேண்டும். ஆனால் ஏனென் றால், அதனாற்றான், அங்ஙனம், இருப்பினும் என்றாற்போன்ற சொற்களும் வாக்கியங்களையும் பொருளையும் இணைத்துக் கொண்டு நிற்கும். இவை இல்லாவிடில் கருத்துத் தொடர்பாவது இருத்தல் வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே ஒரு நாட்டு உயர்வுக்கு உரியவை. வேளாண்மை நன்முறையில் நடைபெற வேண்டு மாயின், நாட்டில் பெரிய ஆறுகள் இருத்தல் அவசியமாகும். அந்த ஆறுகளின் நீரை வயல்களுக்குக் கொண்டு செல்லத் தக்க கால்வாய்கள் பல இருத்தல் வேண்டும். ஆறுகளில் ஆண்டு முழுவதும் நீர் பாய்ந்தாற்றான் கால்வாய்களிலும் நீர் பாய்ந்து கொண்டிருக்கும். வயல்களுக்குக் குறைவின்றி நீர் கிடைத்துக் கொடிருக்கும். இந்தப் பத்தியில் ஐந்து வாக்கியங்கள் இருக்கின்றன. இந்த ஐந்தும் கருத்தினால் ஒன்றை ஒன்று இணைத்துக் கொண் டிருப்பதைக் கவனியுங்கள். இவ்வாறே ஒரு பத்திக்கும் மற்றொரு பத்திக்கும் தொடர்பு இருத்தல் வேண்டும். முன்னர் வாக்கியத்திற்குச் சொன்னாற்போலவே, ஒரு பத்திக்கும் உயிர்நாடியாக இருப்பவை சில உண்டு. அவை (1) பத்தி முழுவதும் ஒரே கருத்து நிலவவேண்டும். (2) வாக்கியத் தொடர்பும் பொருள் தொடர்பும் இருத்தல் வேண்டும். (3) வற்புறுத்தப்படும் கருத்து தெளிவாக இருத்தல் வேண்டும். இம் மூன்றையும் உடைய பத்தியே சிறந்த பத்தியாகும். இம்மாதிரி யான பத்திகளைக்கொண்ட கட்டுரை கற்றாராற் போற்றப்படும். அமைப்பு கட்டுரைக்கு எண்ணங்கள் தேவை என்பதை அறிந்தோம். எண்ணங்களைத் தவறின்றி வெளிப்படுத்த ஏற்ற சொற்கள் அவசியம் என்பதை உணர்ந்தோம். அச்சொற்கள் வாக்கியத்தில் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் கண்டோம். அந்த வாக்கியங்களைத் தன் அகத்தே கொண்ட பத்தி எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதையும் பார்த்தோம். இனி, இப் பத்திகளைக்கொண்ட கட்டுரை என்ன அமைப்புடையதாக இருக்கவேண்டும் என்பதைக் கவனிப்போம். ஒரு கட்டுரைக்குத் தொடக்கம், நடு, முடிவு என்னும் மூன்று முக்கியமான பகுதிகள் இருக்க வேண்டும். தொடக்கம் என்பது எடுத்துக்கொண்ட பொருளுக்கு `முன்னுரை போன்றது. `நடுப் பகுதி கட்டுரைப் பொருளைத் திறம்பட விளக்குவதாகும். `முடிவு என்பது கட்டுரைப் பொருளைப் பற்றிய முடிவான கருத்தினைக் கூறுவது. நமது உடலுக்கு தலை, இடை, கால் என முப்பகுதிகள் இருத்தல் போலக் கட்டுரைக்கும் இந்த மூன்று உறுப்புகளும் தேவையானவை. இவை மனத்தில் இருக்கு மாயின் எந்தக் கட்டுரைக்கும் ஒழுங்காகக் குறிப்புக்களைத் தயாரிக்க முடியும். கட்டுரைக்கான சில குறிப்புக்களைத் தருகிறேன். 1. பால் பண்ணை குறிப்புக்கள் முன்னுரை 1. பால் பண்ணைத் தொழில். 2. கிராமம் (மாணவன் பார்த்தது) இடைப்பகுதி 3. பெரியவர் முயற்சி 4. பசுக்கள்                5. பால் பண்ணைத் தொழில் நடைபெறும் முறை முடிவு 6. என் கருத்து சந்தையைப் பற்றிய ஒரு கட்டுரைக்கான குறிப்புக்கள். 2. சந்தை குறிப்புக்கள் முன்னுரை 1. சந்தை என்பது யாது? 2. இட அமைப்பு 3. பலவகைக் கடைகள் இடைப்பகுதி 4. கால்நடை வியாபாரம்                5. வண்டிகள் 6. சுங்க வசூல் முடிவுரை 7. சந்தையின் பயன் இதுவரை கூறப்பெற்ற அனைத்தையும் மனத்திற்கொண்டு, ஆழமாகச் சிந்தித்துக் குறிப்புக்களைத் தயாரித்து, நன்முறையில் வரையப்படும் கட்டுரையே சிறந்தாகும். 4. அலங்காரம் நாம் ஒன்றைப் படிக்கும்பொழுது சிற்சில இடங்களில் நிறுத்தி வாசித்தால்தான் பொருள் விளங்கும். அவ்வாறு நிறுத்த வேண்டும் இடங்களை உணர்த்தும் பொருட்டு வாக்கியத்தில் சில குறிகள் இடப்படும். சில வாக்கியங்கள் கேள்வியில் முடியும்; சில வாக்கியங்கள் விருப்பு, வருத்தம், ஏமாற்றம், மகிழ்ச்சி இவற்றை உணர்த்தும். சில வாக்கியங்களில் பிறருடைய சொற் களை அப்படியே ஆளும்படி இருக்கும். இத்தகைய இடங்களில் எல்லாம் இடத்துக்கு ஏற்ற குறிகள் அமைக்கப்படும். இவை நிறுத்தக் குறிகள் என்று பெயர் பெறும். இவை (1) காற்புள்ளி (2) அரைப்புள்ளி (3) முக்காற்புள்ளி (4) முற்றுப்புள்ளி (5) கேள்விக்குறி (6) உணர்ச்சிக்குறி (7) மேற்கோள்குறி என்று கூறப்படும். 1. காற்புள்ளி என்பது ஆங்கிலத்தில் `காமா என்று கூறப்படும். வாக்கியங்களில் பொருள் விளக்கம் தருவதற்காக வினையெச்சங்களை அடுத்துப் பெரும்பாலும் இடற்பெறும். அங்கு ஒரு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். உ-ம். நான் கடைக்குச் சென்று, முருகனைக் கண்டு, ஒரு புத்தகம் வாங்கினேன். 2. அரைப்புள்ளி என்பது ஒரு புள்ளியும் அதன்கீழ் காற் புள்ளியும் கொண்ட அடையாளமாகும். இது `செமிகோலன் என்று ஆங்கிலத்தில் பெயர்பெறும். ஒரு வாக்கியத்தில் ஒரு எழுவாய் வந்து பல பயனிலைகள் வருமாயின் ஒவ்வொரு பயனிலையின் முடிவிலும் இக்குறியை இடவேண்டும் இங்கு 2 மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். உ-ம். முருகன் கடைக்குப்போனான்; ஆறணா கொடுத்தான்; ஒரு புத்தகம் வாங்கினான். 3. முக்காற்புள்ளி என்பது ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு புள்ளிகளை இடுவது. `இவன் கூறிய பின்வருவன எனவரும் இடங்களிலும், உரைநடைகளில் பேசுபவர் பெயர்களை அடுத்தும் சிறப்பாக இக்குறிவரும். இங்கு மூன்று மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். இது கோலன் என்று ஆங்கிலத்தில் கூறப்படும். 4. முற்றுப்புள்ளி என்பது வாக்கியத்தின் இறுதியில் இடந் தருவது. இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்தவேண்டும். இது புல்டாப் என்று ஆங்கிலத்தில் பெயர் பெறும். 5. கண்ணா, எங்குப் போனாய்? - என்று இவ்வாறு கேள்வி யாகவரும் வாக்கியங்களின் கடைசியில் கேள்விக்குறி வரும் இங்கும் நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். 6. நேர்க்கோடும் அதன் அடியில் ஒரு புள்ளியும் சேர்ந்தது உணர்ச்சிக்குறி என்பது. இது துன்பம், கவலை, ஆவல், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளைக் காட்டவரும் சொற்களை அடுத்து இடவேண்டுவது இங்கும் நான்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்தவேண்டும். உ-ம். (1) அடடா! அவருக்கு இக்கதி ஏற்பட்டது வருந்தற்கு உரியதே! (2) ஆ! என்ன ஆச்சரியம்! அவரா இவர்? (3) ஐயோ! என் தகப்பனாரா ஆபத்தில் சிக்கிக்கொண்டார்! 7. முருகன் கண்ணனைப் பார்த்து, நீ எப்பொழுது புதுவையி லிருந்து வந்தாய்? என்று கேட்டான்.- இந்த வாக்கியத்தில்-நீ எப்பொழுது புதுவையி லிருந்து வந்தாய்? என்பது முருகன் பேசிய நேர்ப்பேச்சு. ஆதலால் அதனை மேற்கோள் குறிகட்குள் அடக்கவேண்டும். இக்குறிகளை எல்லாம் ஆளவேண்டும். இடமறிந்து ஆண்டுள்ள கட்டுரை மதிப்பைப் பெறும். கட்டுரை எடுத்துக்கொண்ட ஒரு பொருளின் பல பகுதிகளையும் நன்கு விளக்கிப் பொருளிள் கருத்தினைப் படிப்பவர் மனத்திற் பதியச் செய்யும் ஆற்றல் வாய்ந்த எழுத்துச் சித்திரமே கட்டுரை என்பது. கட்டுரை வகை இக் கட்டுரை பொருளுக்கேற்பப் பலதிறப்படும். அவை (1) வருணனைக் கட்டுரை (2) ஒழுகியல் கட்டுரை (3) விளக்கக் கட்டுரை (4) பண்பியல் கட்டுரை (5) வாழ்வியல் கட்டுரை (6) பொருளியல் கட்டுரை (7) அறிவியல் கட்டுரை எனப் பல வகைப்படும். கட்டுரை வகை-விளக்கம் 1. வரலாற்றுப் புகழ்பெற்ற தஞ்சாவூர், காஞ்சீபுரம், மகாபலிபுரம் முதலிய பழைமையான நகரங்களைப் பார்வையிட்டு வருணித்துக்கூறும் கட்டுரை வருணனைக் கட்டுரை எனப்படும். 2. ஆற்றொழுக்குப்போல ஒரு கதை அல்லது ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒருவரது வாழ்க்கை வரலாறு கூறிச்செல்லும் கட்டுரை, ஒழுகியல் கட்டுரை எனப்படும். 3. நட்பு, ஒழுக்கமுடைமை, அன்பு முதலியவற்றை விளக்கி வரையப்படும் கட்டுரை விளக்கக் கட்டுரை எனப்படும். 4. ஒருவருடைய பண்புகளில் ஒன்றை அல்லது ஒரு பொருளின் தன்மைகளுள் ஒன்றையே எடுத்து விளக்கிச் செல்லும் கட்டுரை பண்பியல் கட்டுரை எனப்படும். `காந்தி அடிகளும், தீண்டாமையும், `காந்தி அடிகளும், உண்ணா விரதமும், `காந்தி அடிகளும், அஹிம்சையும் எனத் தனித் தனிப் பண்பு பற்றி வரையப்படும் கட்டுரைகள் பண்பியல் கட்டுரைகள் எனப்படும். 5. மக்கள் நல்வாழ்விற்குத் தேவையான தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சாதி வேறு பாட்டு ஒழிப்பு, இளமை மண ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் முதலியன வாழ்வியற் செய்திகள் ஆகும். இவை பற்றி வரையப்படும் கட்டுரைகள் வாழ்வியல் கட்டுரைகள் எனப்படும். 6. நாட்டின் பொருள் வருவாய், செலவு, வருவாயைப் பெருக்க வழிகள், கூட்டுறவு இயக்கம், குடிசைக் கைத் தொழில்கள், போக்குவரவு சாதனங்கள், பயிர்த்தொழில் முறைகள், பாங்குகள் முதலிய பொருளியல் சம்பந்தமானவை. இவை பற்றி வரையப்படும் கட்டுரைகள் பொருளியல் கட்டுரைகள் எனப்படும். 7. கல்வி என்பது அறிவைப் பெருக்கும் சாதனம், சிறுவர் கல்வி, பெண் கல்வி, முதியோர் கல்வி, சமயக்கல்வி, ஒழுக்கக்கல்வி, தொழிற்கல்வி முதலியவற்றைப்பற்றி வரையப்படும் கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் எனப்படும். 8. இக்கட்டுரை வகைகள் அல்லாமல் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், குடிமைப் பயிற்சிக் கழகம் முதலிய இளைஞர் இயக்கங்களும் ஆக்க வேலைகளும் பற்றி வரையப் படும் கட்டுரைகளும் உண்டு. 9. பலவகைக் கடிதங்களை வரையும் பயிற்சியும் கட்டுரைப் பயிற்சியைச் சேர்ந்ததே ஆகும். கட்டுரை அலங்காரம் எடுத்துக்கொண்ட பொருளைப்பற்றி கோவையாக ஏற்ற சொற்களை அமைத்து எழுதுவது சாதாரணக் கட்டுரை எனப் படும். அதனை நீர் நிறைந்த ஒரு குளத்திற்கு ஒப்பிடலாம். அக் கட்டுரையில் இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர், பெரியோர் பொன்மொழிகள், பல நூற்றாண்டுகளாக நூல்களிலும் பேச்சிலும் ஆட்சி பெற்றுள்ள பழமொழிகள், உவமைகள், உருவகங்கள், மேற்கோள் பாடல்கள் முதலியவற்றை இடத்துக்கேற்ப நுழைத்து எழுதினால், அக்கட்டுரை தாமரை மலர்கள் மலர்ந்துள்ள குளம் கண்கவர் வனப்புடன் காட்சியளிப்பது போல அலங்காரம் பெற்று விளங்கும். இத்தகைய கட்டுரையே படிப்பவர்க்கு இன்பம் தரும். இனி இவற்றுள் ஒவ்வொன்றையும் வாக்கியத்தில் எவ்வாறு அமைத்துக் கூறுவது என்பதை இனிவரும் உதாரணங்களைக்கொண்டு காண்க. கலகல, சலசல, படபட என்பன இரட்டைக்கிளவி, பாம்பு, பாம்பு, தேள், தேள், வருக வருக, மாறி மாறி என்பன அடுக்குத் தொடர். உ-ம். 1. நான் கூறியதைக்கேட்டு முருகன் தன் கைகளைக் கொட்டிக் கலகலவென்று சிரித்தான். அப்பொழுது இருளில் பக்கத்துப் புதரில் சலசல வென்று ஓசை கேட்டது. என் மனம் படபட வென்று அடித்துக்கொண்டது. முருகன் எதனையோ உற்று நோக்கிப் பாம்பு பாம்பு என்று கூவினான். நான், அப்பா, உடனே வருக வருக என்று கூவினேன். இந்த உதாரணத்தில் இரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடர்களும் இடத்திற்கேற்ப ஆளப்பட்டுள்ளதைக் காண்க. 2. என் தகப்பனார் என்னைப்பார்த்து, தம்பி, `மனிதன் தன் நற்செயல் களால் தன்னை உயர்த்திக் கொள்கிறான்; தன் தீச்செயல்களால் தன்னைத் தாழ்த்த்திக்கொள்கிறான் என்பது விவேகாநந்தர் பொன்னுரையாகும். அப்பொன்னுரைக்கு ஏற்ப, உன் நண்பனான கோபாலன் தன் நற்செயல்களால் எல்லோர் பாராட்டுக்கும், உரியவனாக இருக்கிறான்; கோவிந்தன் தன் தீச்செயல்களால் இருந்த வேலையையும் கெடுத்துக்கொண்டு துன்பப்படு கிறான். பெரியோர் பொன் மொழிகள் அனுபவ வாக்குகள் ஆகும் என்றார். 3. கண்ணன் தன் ஊரில் மணியக்காரன். அவன் அந்த வேலையைப் பெற்ற நாள்முதல் கர்வம் கொண்டு திரிகிறான்; சிறு குற்றங்கட்கெல்லாம் கடுமையான தண்டனை விதிக்கிறான்; ஊரிலுள்ள பெரியோருடைய நல்லுரைகளையும் கேட்பதில்லை. அவனிடம் மணியக்காரர் பதவியைக் கொடுத்தது, குரங்கின் கையில் கொள்ளி கொடுத்தது போலாகும் என்று ஊரார் பேசிக்கொள்கின்றனர். 4. கோவலன் மகளாகிய மணிமேகலை பதினாறு வயது நிறையப்பெற்றவள். அவள் தந்தை அவள் விரும்பிய பொருள்களை வாங்கித்தந்தான். அப்பொழுது அவள் முகம் அன்று மலர்ந்த தாமரை மலரென மலர்ந்தது. அவள் தந்தை மதுரையிற் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும் இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கினாள். மலையிலிருந்து கீழ் நோக்கி விழும் அருவிபோல அவள் விழிகளிலிருந்து நீர் கீழே விழுந்தது. 5. யானைக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதை போலச் செங்குட்டுவன் பகைவர் கூட்டத்துட் பாய்ந்தான். இந்த வாக்கியங்களில் வந்துள்ள உவமைகளையும் இடங்களையும் கவனியுங்கள். மலர் போன்ற கை என்பது உவமை. கையாகியமலர், என்பது உருவகம். இத்தகைய உருவகங்களை வாக்கியங்களிற் பயன்படுத்த அறிய வேண்டும். உ-ம். 1. பகைவரது சேனையாகிய கடலில் வீமனாகிய மரக்கலம் அஞ்சாது ஓடிற்று. 2. காந்தி அடிகளை நேரிற்காணப் பல ஆண்டுகளாக விரும்பிய இளமங்கை ஒருத்தி அவரை நேரிற் கண்டதும் அன்பு மேலிடக் கண் அருவி பொழிய, கைத்தாமரை தலைமேல் குவிய, மதிமுகம் மலர வரவேற்று, அவருடைய அடித்தாமரைகளில் விழுந்து பணிந்தாள். இவற்றுள் வந்துள்ள உருவகங்களையும் அவை ஆளப்பெற்ற சந்தர்ப்பங்களையும் கூர்ந்து நோக்குக. பெரியோர் பாடல்களை மேற்கோளாக இடமறிந்து ஆள்வது நல்லது. உ-ம். கல்வி, செல்வம் ஆகிய இரண்டனுள் செல்வம் தீ விபத்தினால் அழியும்; கள்வரால் கொண்டு செல்லப்படும்; வெள்ளத்தினால் அழிவுறும்; அரசாங்கத்தினால் கைப்பற்றப் படும்; வாணிகத்தில் அழியலாம். ஆனால் இத்தகைய நஷ்டங்கள் கல்விக்கு இல்லை. பணக்காரன் அல்லது பணத்திற் சிறந்த அரசன் தன் ஊரில் அல்லது நாட்டில் தான் மதிக்கப் படுவான். அவனை மற்ற நாட்டினர் மதிக்க இடமில்லை. ஆனால் கற்ற அறிஞனை எல்லா நாட்டவரும் மதிப்பர். விவேகானந்தர், டி. ஸி. போ, சர். சி. வி. இராமன் போன்ற அறிஞர்கள் உலகில் பெற்றுள்ள மதிப்பினைச் சாதாரண அரசர்கள் பெற்றிலர் அல்லவா? இக்கருத்தினையே, மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேச மல்லால் சிறப்பில்லை; கற்றோற்குச் சென்ற இட மெல்லாம் சிறப்பு. என்ற பெரியோர் செய்யுளும் மெய்ப்பித்தல் காண்க, என்று மேற்கோள் காட்டி எழுதுவது சிறப்புடையதாகும். முடிவுரை கட்டுரை எழுதுமுன் கட்டுரைப் பொருளுக்கு ஏற்ப முதலில் குறிப்புக்களைத் தயார்செய்து கொள்ளவேண்டும்; அவற்றைக் கட்டுரைத் தலைப்பிற்குக் கீழ் முறைப்பட எண்ணிட்டு எழுதவேண்டும்; பிறகு ஒவ்வொரு குறிப்பினையும் விளக்கி ஒரு பத்தி வீதம் எழுதிக் கட்டுரையை முடிக்கவேண்டும். ஒவ்வொரு வரியிலும் சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, எழுத்துக்கள் தெளிவாகத் தெரியும்படி எழுதவேண்டும்; வரிக்குவரி போதுமான அளவு இடம் விடவேண்டும். பாரா எண்களை ஓரத்தில் குறிப்பது நல்லது. பாராவுக்குப் பாரா போதுமான இடம் விடுத்தல் வேண்டும். இதுகாறும் கூறிவந்த அனைத்தையும் கருத்திற்கொண்டு, பலவகை அழகுகளையும் இடை இடையே வைத்து, எளிய பிழையற்ற நடையில் வரையப்படும் கட்டுரை சிறப்பு வாய்ந்தது என்று ஆசிரியரால் பாராட்டப்படும்.  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)