இளங்குமரனார் தமிழ்வளம் 13 யாப்பருங்கலம் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 13 பதிப்பாசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 664 = 680 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 425/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்) யாப்பென்னும் பொற்பாவை 1 ஆராய்ச்சி முன்னுரை 2 யாப்பருங்கல விருத்தி 25 உறுப்பியல் 40 செய்யுள் இயல் 235 ஒழிபியல் 400 சித்திரக்கவி மாலை 552 யாப்பருங்கலம் யாப்பென்னும் பொற்பாவை நாகரிகம் இல்லாத மொழிகளிலே மக்களின் நல் லெண்ணங்களைக் காட்டும் சொற்களும், சொற்றொடர்களும் கருமணல்களோடு கலந்து கிடந்த பொற்றுகள்கள் போல், அல்லாத பலவுடன் மயங்கி ஓரொழுங்கு மின்றிச் சிதர்ந்து கிடக்கும். நாகரிகம் அமைந்த மொழியிலோ சிதர்ந்து கிடந்த அச் சொற்களும் சொற் றொடர்களுமாகிய பொற்றுகள் பொறுக்கிச் சேர்க்கப்பட்டு, நல்லிசைப் புலவன் நன்மதிக்குகையில் உருகிச் செய்யுள் என்னும் அச்சிலே வார்க்கப்பட்டு, அளக்கலாகா அழகுமிக்க யாப்பென்னும் பொற்பாவையாய் எழுந்து நின்று விளங்கிக் காண்பார்க்கும் கேட்பார்க்கு மெல்லாம் அழியா இன்பத்தைப் பொழியா நிற்கும். இவ்வியல்பிற்றாய் எழில் நலங்கனிந்த யாப்பானது உயிரையும் உணர்வையும் கரைத்து இன்பவடிவாக்கித் தேன்போல் ஒழுகும் தித்திக்கும் ஓசையின் பல கூறுபாடுகளால் பல பாக்களும் பல பாவினங்களுமாய்ப் பெருகி நிற்கும். வேற்று நாட்டுச் சொற்களும் பொருள்களுமான ஆடை அணிகலன்கள் தன்னை வந்து அணுகப் பெறாமல், தன் தெய்வ வளநாட்டு ஆடை அணிகலன்களையே நமது தண்டமிழ்த்தாய் தன்மேற் கொண்டு பொலிந்த அந்நாளில் அவளது ஆம்பற் செவ்வாயினின்றும் அமிர்தம் ஒழுகினாற்போல் புறம்போந்த வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என்னும் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்கள் பாவினங்களின் அரிய பெரிய அமைதிகளை யெல்லாம் முற்றவெடுத்து முடிய விளக்கும் அருந்தமிழ் நூல் ஒல்காப் பெருமைத் தொல்காப்பியம் ஒன்றுமேயாம். * * * தமிழுக்கே சிறப்புரிமை வாய்ந்த பாக்கள் வழங்கிய பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட பழந்தமிழ்ச் சீரிய நூலான தொல் காப்பியத்தில் பிற்றை ஞான்று வந்த கலித்துறைகள் விருத்தங்கள் முதலியவற்றின் இலக்கணங்கள் ஒரு சிறிதும் காணப்பட மாட்டா. தமிழுக்கே உரிய பாக்கள் பாவினங்களோடு இப்புதிய பாக்கள் பாவினங்களின் இயல்புகளையும் விளங்க விரித்துரைப்பது யாப்பருங்கல விருத்தி என்னும் இந்நூல் ஒன்றுமேயாம். இராவ்பகதூர் ச.பவானந்தம் பிள்ளை அவர்கள் (யாப்பருங்கல விருத்தி; பதிப்புரை. 1916) ஆராய்ச்சி முன்னுரை யாப்பு : யாப்பருங்கலம் என்பது யாப்பு இலக்கணத்திற்கு அமைந்த ஓர் அரிய அணிகலம் போன்ற நூல் என்னும் பொருள் உடையதாம். இனி, யாப்பு என்பதொரு விரிந்த கடல். அக் கடலைக் கடத்தற்கு அமைந்த அரிய கலம் போலும் நூல் என்றுமாம். தீபங்குடியில் வாழ்ந்த சமண சமயச் சான்றோர்களுள், அருங்கலான் வயம் என்னும் ஒரு பிரிவினர் இருந்தனர் என்றும், அப்பிரிவினருள் ஒருவர் யாப்பருங்கலமுடையார் என்றும், அதனால் தான் தம் நூலுக்கு யாப்பு அருங்கலம் என்று பெயர் சூட்டினார் என்றும் அறிஞர் சிலர் கூறுவர். ஆனால், அது வலிந்து பொருள் கோடல் என்பது வெளிப்படை. அருங்கலான் வயம் என்பதைச் சுட்டுவது ஆசிரியர் கருத்தாயின், அருங்கலான் வயயாப்பு என்றோ அருங்கலான் யாப்பு என்றோ அருங்கலான்வயம் என்றோ பெயர் சூட்டியிருப்பார் என்பதைத் தமிழ் நூற் பெயர்களோடு ஒப்பிட்டு நோக்குவார் எளிதில் அறிவர். யாப்பு என்பது கவிதை கட்டாம் என்பது சூடாமணி நிகண்டு (11. பகரவெதுகை. 3) உறுதி என்னும் பொருளும் அதற்கு உண்டு. யாக்க, யாக்குநர், யாக்கும், யாக்கை, யாத்த, யாத்தல், யாத்தற்று, யாத்தன்று, யாத்தனர், யாத்தார், யாத்து, யாத்தேம், யாப்ப, யாப்பர், யாப்பியல், யாப்பிற்று, யாப்புடைத்தாக, யாப்புற, யாப்புறவு முதலாகிய சொற்கள் பெருவரவினவாகப் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள. நீர் நிறுத்துவதற்கு வரம்பு கட்டி அமைக்கப் பெற்ற பாத்தியை யாப்பு என்று வழங்குகின்றார் திருவள்ளுவர். கட்டுதல் என்னும் பொருளிலும் அவரே வழங்கியுள்ளார். நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் (1093) சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து (777) தோல், குருதி, இறைச்சி, நரம்பு, எலும்பு முதலியவற்றால் யாப்புற்று நிற்கும் உடல் யாக்கை என்னும் காரணப் பெயர் கொள்ளும். அவ்வியாக்கையை யாப்புடன் இணைத்துக் காட்டினார் நன்னூலார். பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லால் பொருட்கிட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (268) கூரை வேய்வார் தடுக்குகளை வரிச்சுடன் யாத்தற்குப் பயன்படுத்தும் கருவேல், புளிய வளார்களை ஆக்கை என்று வழங்குவதை இன்றும் நாட்டுப் புறங்களில் கேட்கலாம். ஆக்கை என்பது யாக்கை என்பதன் திரிபேயாம். யாப்பு, கட்டுதல் என்னும் பொருளுடையதாவது எப்படி? எழுத்தால் அசையும், அசையால் சீரும், சீரால் தளையும், தளையால் அடியும், அடியால் தொடையும், தொடையால் பாவும் இனங்களும் கட்டுற்றுத் தொடர்ந்து செல்கின்றன. ஆதலால், யாப்பு என்பது ஆயிற்று. இது காரணங்கருதிய பெயராம். கலமும் காரிகையும் : யாப்பருங் கலமும், யாப்பருங்கலக் காரிகையும் ஒரே ஆசிரியரால் யாக்கப் பெற்ற நூல்கள். யாப்பருங் கலத்தை முதற்கண் இயற்றிய ஆசிரியரே அதனினும் எளிமையும் தெளிவும் வரம்பும் உடையதாகத் தம் பட்டறிவு மிகுதியால் யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார். இஃது அவர்தம் பேரருள் பெருந்திறத்தை விளக்குவதாம். வேதத்திற்கு நிருத்தமும், வியாகரணத்திற்குக் காரிகையும், அவிநயர் யாப்பிற்கு நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து என்னும் காரிகைப் பாயிர உரையால் காரிகை, யாப்பருங்கலத்தின் பின்னே எழுந்த நூல் என்பது தெளிவாம். யாப்பிற்கு அங்கமாய்ச் செய்யப்பட்ட நூல் காரிகை ஆதலின் அது யாப்பருங்கலப் புறநடை எனவும் வழங்கப் பெறுவதாயிற்று (யா.வி.பக் : 69, 134, 239, 264, 328, 346, 352). புறநடையாவது ஒரு நூலுக்கு அங்கமாக அமையும் பிறிதொரு நூலாகும். அவிநயரால் செய்யப் பெற்ற யாப்பு நூலுக்கு அங்கமாக அமைந்தது நாலடி நாற்பது என்பது. அதனைக் குறிப்பிடும் யாப்பருங்கல விருத்தி நாலடி நாற்பது என்னும் புறநடை (யா.வி பக்: 30, 31) என்பது நோக்கத்தக்கது. மேலும், யாப்பருங்கலம் இயற்றிய ஆசிரியரே காரிகையையும் இயற்றினார் என்பதை யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரும், கூறிப்போதுகின்றார். விரவியும் அருகியும் (யா.வி. 15) என்னும் நூற்பாவுரையில் இந்நூலுடையாரும் மாஞ்சீர் கலியுட்புகா என்னும் இதன் புறநடையானும்... விளங்கக் கூறினார் என்க என வரைந்துள்ளார். மாஞ்சீர் கலியுட்புகா என்பது 40 ஆம் காரிகையாம். மாவாழ்சுரம், புலிவாழ்சுரம் என்னும் இரண்டு வஞ்சியுரிச் சீரும் உளவாக வைத்து ஒருபயன் நோக்கித் தூஉ மணி கெழூஉ மணி என்று அளபெடையாக நேர்நடுவாகிய வஞ்சி யுரிச்சீர் எடுத்துக்காட்டினார் நற்றத்தனாரும் வாய்ப்பியனாரும். அதுபோல இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச் சீருக்கு வேறு உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டுதற் பொருட் டாக, குற்றியலுகரம் ஈறாகிய காசு பிறப்பு என்னும் வாய் பாட்டான் நேரீற்று இயற்சீருக்கு வேறு உதாரணம் எடுத்தோதினார் என்றவாறு எனச் செப்பல் இசையன (57) என்னும் நூற் பாவில் விருத்தியுரை ஆசிரியர் வரைந்துள்ளார். காசு பிறப்பு என வெண்பா இறுதி வாய்பாடு கூறியது நேரிசை இன்னிசைபோல எனத் தொடங்கும் 25ஆம் காரிகையாம். அமிதசாகரர் : யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு நூல்களையும் இயற்றிய ஆசிரியர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர் ஆவர். அவர் பெயர் அமிர்தசாகரர், அமுத சாகரர் என்றும் குறிக்கப்பெற்றன. யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் என்றே வெளிப்பட்டது. அன்றியும் காரிகை, வீரசோழியம் இவற்றை எடுத்துக்காட்டி ஆசிரியர் பெயர் அமிர்த சாகரனாரே என்பது ஐயுறவின்றித் துணியப்படும் என்றும் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். (திரு. பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பு; 1916) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய ஏழாம் வெளியீடாகக் காரிகை வெளிப்பட்டது. அது, அமிர்த சாகரனார் அருளிச் செய்த யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர் தாங்கி வந்தது. மேலும், யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியர் அமிர்தசாகரனார் என்பது, இந்நூல் யாவரால் செய்யப் பட்டதோ எனின்....... அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது என்பதனால் தெரிகிறது. அமிர்தசாகரர் என்ற சொல் அமுதசாகரர் என்றும் சுவடிகளில் காணப்படுகின்றது. யாப்பருங்கல விருத்தியின் பாயிரத்துள் இவர் பெயர் அளப்பருங் கடற்பெயர் அருந்தவத்தோன் என்று குறிக்கப் பெற்றுள்ளது. அளத்தற்கு அரிய கடலினது பெயர் எனவே, அஃது அமிதசாகரர் என்று இருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால், இந்நூலின் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ, அமுதசாகரர் என்றோ காணப்படுகின்றதே ஒழிய ஒன்றிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. கிடைத்த யாப்பருங்கல ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. வீரசோழிய உரையிலும் அமுத சாகரனார் என்றே எடுத்தாளப்படுகிறது என்று காரிகையின் நூலாசிரியர் வரலாறு விளக்குகின்றது. (உ.வே.சா. நூல்நிலைய வெளியீடு-7. 1948). நூலாசிரியரது வடமொழி இயற்பெயரை உணர்த்துவது அளப்பருங் கடற்பெயர் என்றும், அளப்பரும் என்பது அமித என்பதையும், கடல் என்பது சாகரம் என்பதையும் குறிப்பிட்டு அமிதசாகரர் என்ற ஆசிரியரை உணர்த்துவதாகும் என்றும் 1919 ஆம் ஆண்டில் விவேக போதினி தொகுதி 12 பகுதி 1இல் முதன்முதலாகத் திரு. அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் எழுதினார்கள். திரு.ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அளப்பருங்கடற்பெயர் உடையவர் அமிதசாகரனாரே என்பதைச் செந்தமிழில் கட்டுரை வழியால் நிறுவிக் காட்டியதுடன் தாம் திருத்தஞ்செய்து வெளியிட்ட காரிகைப் பதிப்பிலும் (கழகப் பதிப்பு) அமித சாகரனார் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அமிதசாகரர் என்னும் பெயர் ஏடு எழுதியோர் பதிப்பித்தோர் ஆகியவர்களால் அமிர்தசாகரர், அமுதசாகரர் எனக் குறிக்கப் பெற்றாலும், அமிதசாகரர் என்னும் உண்மைப் பெயர் வழக்கும் அறவே மறைந்துபோய்விடவில்லை என்பது கல்வெட்டு ஒன்றால் வெளிப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் மாயூரத்தை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலில் இரண்டு பாடல்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அமுதசாகரர் என்றும் மற் றொன்று அமிதசாகரர் என்றும் குறிக்கின்றன. அமிதசாகரர் வரலாற்றை அறிவதற்கு அப்பாடல்கள் துணை நிற்பதால் அவற்றைக் காண்போம். 1. எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ் இருத்திய குலோத்துங்க சோழற்கு யாண்டொரு முப்பத் தெட்டினில் சோணாட்(டு) இசைவளர் இந்தளூர் நாட்டுள் உண்டைநீடியநீ டூர்உமை யோடும் உலாவிய சிவபெரு மானுக்(கு) உவந்து வெண்கயிலை மலைஎனச் சிலையால் உத்தம விமானமிங் கமைத்தான் தண்டமிழ் அமித சாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச் சந்தநூற் காரிகை அவனால் கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க் காவலன் நிலாவினான் எவர்க்கும் கருணையும் நிதியும் காட்டிய மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவனே 2. ஆரிய உலகம் அனைத்தையும் குடைக்கீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற்(கு) ஆண்டொரு நாற்பத் தாறிடைத் தில்லை அம்பலத் தேவட கீழ்ப்பால் போரியல் மதித்துச் சொன்னவா றறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையால் விளங்கப் பொருப்பினால் விருப்புறச் செய்தோன் நேரியற்(கு) ஆண்டோர் அஞ்சுடன் மூன்றில் நிகரிலாக் கற்றளி நீடூர் நிலாவினாற் கமைந்த நிலாவினான் அமுத சாகரன் நெடுந்தமிழ்த் தொகுத்த காரிகைக் குளத்தூர் மன்னவன் தொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக் கற்பக மிழலை நாட்டுவே ளாண்மை கொண்டவன் கண்டன்மா தவனே முதற் கல்வெட்டுச் செய்யுள் குலோத்துங்கன் 38 ஆம் ஆட்சியாண்டிலும், இரண்டாம் செய்யுள் அவன் 46 ஆம் ஆட்சியாண்டிலும் எழுந்தனவாம். குலோத்துங்கன் என்னும் பெயருடன் மூவர் விளங்கி யுள்ளனர். அவருள் முதற் குலோத்துங்கனே நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன் (கி.பி. 1070-1120). இரண்டாங் குலோத்துங்கன் (கி.பி. 1133-1150) மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) ஆகிய இருவரும் 46 யாண்டுகள் கடந்த நெடுங்காலம் ஆண்டனர் அல்லர். அதனால் இக்கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்ற வேந்தன் முதற் குலோத்துங்கனே என்பது வெளிப்படை. முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்ந்தவன் கண்டன் மாதவன் என்பான். அவன் சோழன் தலைமையில் குளத்தூர் மன்னனாக (தலைவனாக) விளங்கினான்; அவன் காலத்தில் குளத்தூர் காரிகைக் குளத்தூர் என வழங்கப் பெற்றது; அவன் முன்னோருள் ஒருவன் அமிதசாகர முனிவரைக் குளத்தூர்க்கு அழைத்து இருக்கச் செய்து காரிகை நூல் இயற்றச் செய்தான். அச்சிறப்பால் அவ்வூர் காரிகைக் குளத்தூர் எனப் பெயர் பெற்றது; காரிகைக் குளத்தூர் செயங்கொண்ட சோழ மண்டலத்துச் சிறுகுன்றநாட்டு மிழலையைச் சேர்ந்த ஊராக இருந்தது என்பனவும் பிறவும் இக்கல்வெட்டுச் செய்யுள்களால் அறியப் பெறுகின்றன. அமிதசாகரர் காலம் : கண்டன் மாதவன் முன்னோருள் ஒருவன் காரிகை செய் வித்தபடியால் அவன் முதற் குலோத்துங்கன் காலத்திற்கு முற்பட்டவனே ஆவன். அன்றியும் தொண்டை நாடு செயங் கொண்ட சோழ மண்டலம் என்று குறிக்கப் பெறுவது நோக்கத் தக்கது. செயங்கொண்ட சோழன் என்பவன் முதல் இராசராசன். அவன் பெயராலேயே செயங் கொண்ட சோழ மண்டலம் என்னும் பெயரைத் தொண்டை நாடு பெற்றது. ஆதலால், அவ் விராச ராசன் காலத்திலேயே அமிதசாகரர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாம். அவன் ஆட்சிக் காலம் கி.பி. 985 - 1014 என்க. இனி வேறொரு வழியாலும் இச்செய்தி உறுதியாம். அமிதசாகரர் ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பது. தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன் என்று யாப்பருங்கலப் பாயிரம் குறிப்பதும், தனக்கு எல்லை தானே ஆகிய துறவொடு பொருந்திய குணசாகரப் பெயரோன் என விருத்தியுரை கூறுவதும் அறிக. அமிதசாகரர் நாடு மாறஞ்சடையன் என்னும் பாண்டியனது மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் இரண்டு பாண்டி நாட்டுக் கழுகுமலையில் உள்ளன. அவற்றுள் குணசாகரர் என்னும் சமண சமய ஆசாரியர் ஒருவர், தம் கோட்பாடுகளைப் பரப்பு வதற்காகப் பரப்புநர் சிலரை நியமித்து அவர்களின் உணவுக்காக நிலக்கொடை புரிந்த செய்தி கூறப் பெற்றுள்ளது. அதில் வீரநாராயணன், உத்தமசீலன் என்னும் பெயர்கள் வருகின்றன. இவை முதற் பராந்தகசோழனையும், உத்தமசோழனையும் குறிப்பன. அவர்கள் காலம் முறையே கி.பி. 907 - 953; 970-985. ஆதலால், அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த முதல் இராசராசன் காலத்தில் (985-1014) குணசாகரரின் மாணவரான அமிதசாகரர் வாழ்ந்தார் என்பது கொள்ளத்தக்கதேயாம். அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண் சிறு குன்ற நாட்டகத்து இருத்தி என்னும் நீடூர்க் கல் வெட்டுச் செய்தியால் அமிதசாகரர் வேற்று நாட்டினர் என்றும், அவரைத் தம் நாட்டகத்து எழுந்தருளச் செய்து குளத்தூரில் இருக்கச் செய்தவன் கண்டன் மாதவன் முன்னோன் என்பதும் விளங்குகின்றன. கழுகுமலைக் கல்வெட்டால் குணசாகரர் பெயர் அறியப் பெறுதலாலும் தம் சமயக் கோட்பாட்டைப் பரப்புதற்குச் சிலரைப் பிற நாடுகளுக்கு விடுத்தார் என்பது தெரிதலாலும் பாண்டி நாட்டில் இருந்து வந்தவர் அமிதசாகரர் என்பது அறியத் தக்கது. காரிகையின் அவையடக்கச் செய்யுளும் அமிதசாகரர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதை வலியுறுத்தும்1 என்பர். குணசாகரர் : காரிகைக்கு உரைகண்டவர் குணசாகரர். அவரை அமித சாகரரின் ஆசிரியராகக் கருதினாரும் உளர். ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபுநிலை உண்டே யன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரை எழுதும் வழக்கம் இல்லை. அன்றியும், தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன் என்று அமிதசாகரரால் பாராட்டப் பெற்ற குணசாகரர், இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ வெனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை யாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமித சாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப் பட்டது என்று அமித சாகரரை எழுதினார் என்பது பொருந்துவதாக இல்லை. அமிதசாகரர் மேல் அளவற்ற அன்பும், அவர்தம் புலமையையும் தவநெறியையும் உச்சிமேற்கொண்டு ஒழுகுதலுமுடையராய், அவர்க்குப் பின்வந்த குணசாகரர் என்னும் ஒருவரால் இயற்றப் பெற்றது காரிகை உரை என்பதே தகும். தம் தந்தை பெயரை மைந்தர்க்கு இட்டு வழங்கும் வழக்குப் போல் 1அறிவுத் தந்தை யாகிய குணசாகரர் பெயரை இட்டு வழங்கிய அமிதசாகரரின் மாணவருள் ஒருவரே இக்காரிகை யுரை கண்ட குணசாகரர் என்பது ஏற்கத் தக்கது. கலம் காரிகை - வேறுபாடுகள் சில : யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் ஒரே ஆசிரியரால் இயற்றப் பெற்றனவே எனினும், சிற்சில வேறு பாடுகள் அந்நூல்களில் அமைந்துள. அவை வருமாறு : யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை நூற்பா ஆசிரியத்தான் அமைந்தது —— கட்டளைக் கலித்துறையான் அமைந்தது. அவையடக்கம் இல்லை —— அவையடக்கம் உண்டு. (2, 3) ஆசிரியர் பெயரும், ஆசிரியர்க்கு ஆசிரியர் பெயரும் அவர் சிறப்பும் கூறப்பெற்றுள. (பாயிரம்) —— கூறப்பெறவில்லை. அசைக்கு உறுப்பு 15 என்னும் (2) — அசைக்கு உறுப்பு 13 என்னும் (4) இயலின் உட்பிரிவாக ஓத்து என்னும் சிறு பிரிவுளது —— இல்லை. விதியும், விதிவிலக்கும் அவ்வவ் விடங்களிலேயே கூறிச் செல்லும் — விதியை உறுப்பியல் செய்யுளியல்களிலும், விதிவிலக்கை ஒழிபியலி லும் கூறிச் செல்லும். மாலை மாற்று முதலிய சித்திரக் கவிமாலை ஒழிபியலில் உண்டு. (96) —— இல்லை, (வாழ்த்து, வசை, ஆனந்தம் என்பவை உரையாசிரியரால் குறிக்கப் பெறுகின்றன.) எடுத்துக்காட்டு நூலாசிரியரால் பாடப்பெறவில்லை — பாடப்பெற்றுள்ளது. (9, 11, 13, 15, 18, 20, 22) மகடூஉ முன்னிலை இல்லை — மகடூஉ முன்னிலை உண்டு. நூலில் கூறப்பெற்ற பொருளும், தொகையும் கூறப்பெறவில்லை —— கூறப்பெற்றுள்ளது. (44) மருட்பாவுக்கு இலக்கணம் கூறப் பெறவில்லை —— கூறப்பெற்றுள்ளது. (35) ஒரு செய்யுளில் பல தொடையும் பல அடியும் வரின் அவற்றை வழங்கும் வகை கூறப்பெற்றுள்ளது. (53) —— கூறப்பெறவில்லை. கழிநெடிலடி அறுசீர் முதலா ஐயிரண்டீறா வருவன என்னும் (25) —— (ஐஞ்சீரின்) மிக்க பாதம் கழிநெடில் என்னும். (12) அகவற்பாவின் ஈற்றுக்கு விதியுண்டு. (69) —— விதியில்லை. ஒன்றினுக்கொன்று சுருங்கும் உறுப்பினது அம்போதரங்கம் என்னும் (83) —— நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி, முச்சீர், குறள் நடுவே மடுப்பின் அம்போதரங்கம் என்னும். (30) காசு பிறப்பு என்னும் வெண்பா வாய்பாடுகள் சுட்டப் பெறவில்லை —— சுட்டப்பெற்றுள. (25) சிந்தியல் வெண்பா வகைகள் குறிக்கப்பெறவில்லை. —— குறிக்கப்பெற்றுள. (24) ஆசிரியரால் முற்றுப் பெறுவித்த நூல். —— 1உரையாசிரியரும் பாடி முற்றுப் பெறுவித்த நூல். இவை போன்ற நுண்ணிய வேறுபாடுகள் இன்னும் சில உள. அவற்றை ஆய்ந்து கொள்க. உரைகள் : யாப்பருங்கலத்திற்குப் பேருரையும், யாப்பருங்கலக் காரிகைக்குச் சிற்றுரையும் எழுந்துள. யாப்பருங்கலம் உரைச் சிறப்பால், யாப்பருங்கல விருத்தி எனப் பெறுவதே அதன் பேருரை மாண்பை வெளிப்படப் புலப்படுத்த வல்லதாம். யாப்பு இலக்கணத்திற்கென அமைந்த ஒரு கலைக்களஞ்சியம் யாப்பருங் கல விருத்தி என்பது புனைந்துரை அன்று. தமிழ் இலக்கணப் பரப்பை - குறிப்பாக யாப்பிலக்கணப் பரப்பை, - யாப்பிலக்கண நூற்பரப்பை - வெள்ளிடை மலையெனக் காட்ட வல்லது யாப்பருங்கல விருத்தியேயாம். யாப்பருங்கலம் தோன்றிய காலத்திற்கு அணித்தாகவே தோன்றியது விருத்தியுரை. அதற்குத் தக்க சான்று இல்லாமல் போய்விடவில்லை. தண்டியலங்கார மேற்கோள்களில் அபயன், அநபாயன் எனப் பெயர் வழங்கிய முதற் குலோத்துங்கனைப் பற்றிய பாடல்கள் பல உள. குலோத்துங்கன் பாடு புகழால் பக்கமெல்லாம் பரவியவன். அவனைப் பற்றிய பாடல்களுள் எதுவும் யாப்பருங்கல விருத்தியிலோ, யாப்பருங்கலக்காரிகை உரையிலோ இடம் பெற்றிலது, இதனால் இவ்வேந்தன் காலத்திற்கு முற்பட்டே இவ்வுரைகள் தோன்றி விட்டன என்று கோடல் தகும். ஆதலால், நூல்கள் தோன்றிய அணிமைக் காலத்திலேயே அவற்றின் உரைகளும் தோன்றி விட்டன என்க. அருங்கலம் காரிகை இவற்றின் உரைகளுள் அருங்கல விருத்தியே முற்பட்டதாம். அருங்கலம் முதற்கண் செய்யப் பெற்றது போலவே அதன் உரையும் முதற்கண் எழுந்தது என்பதற்குத் தக்கசான்றுகள் உள. அருங்கலத்தில் காரிகைச் செய்யுள்கள் காட்டப்பெற்று யாப்பருங்கலப் புறநடை என்றோ காரிகை என்றோ குறிக்கப் பெற்றுள்ளனவே அன்றிக் காரிகை உரை குறிக்கப் பெற்றில. ஆனால் காரிகை உரையில், மற்றும் என்றதனால் பதின்சீரின் மிக்க அடியான் வரப் பெறுவனவும் (ஆசிரிய விருத்தம்) உளவெனக் கொள்க. அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (13) என்றும், இவற்றிற்கு (ஓசைகள்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (21) என்றும், ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பா யாப்பருங்கல விருத்தியுள்ளும் தேசிகமாலை முதலிய வற்றுள்ளும் கண்டு கொள்க (24) என்றும், ஐந்தடி யானும் ஆறடியானும் வருவன (வேற்றொலி வெண்டுறை) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க (27) என்றும், பதின்சீரின் மிக்கு வருவன வெல்லாம் (விருத்தம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (29) என்றும், வெள்ளைச் சுரிதகத்தால் இற்றன (கலி) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க (30) என்றும், எட்டும் பதினாறுமாய் வருவன (அம்போதரங்கம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க (30) என்றும், பிறவும் (வெண்கலிப்பா) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க (31) என்றும், ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் (கலி.39) என்னும் பழம்பாட்டினுள் மயங்கி வந்தவாறு யாப்பருங்கல விருத்தியுட் (86) கண்டுகொள்க என்றும், இவற்றுக்கு (கொச்சகம்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (32) என்றும், இரணத்தொடைக்கும் என்ற உம்மையான் ஒழிந்த மோனை எதுகை இயைபு அளபெடை என்னும் நான்கு தொடைக்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. அவையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (40) என்றும், இவ்வண்ண விகற்பம் எல்லாம் தொல்காப்பியத் துள்ளும் யாப்பருங்கல விருத்தியுள்ளும் கண்டு கொள்க (43) என்றும், வருவனவற்றால் விருத்தியின் முன்மை தெற்றெனப் புலனாம். இக்குறிப்புக்கள் உரைமுன்மையைக் காட்டுவது மட்டுமன்றிப் பிறிதொரு வகையாலும் ஆய்வுக்குத் துணை நிற்பதால் விரியக் காட்டினாம். யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர் குணசாகரர் என்பது பரம்பரையாக வரும் கேள்வியானும், காரிகைச் சுவடிகளின் மேல் வரையப் பெற்றிருக்கும் குறிப்பினாலும் தெரிகிறது. யாப்பருங்கலத்துக்கு உரைகண்டாரும் இவரே. இரண்டு நூல்களின் உரைகளிலும் உரையாசிரியர் எடுத்தாளும் இலக்கண மேற் கோட்சூத்திரங்களும் உதாரண இலக்கியங்களும் ஒற்றுமை யுடையனவாக இருத்தலினாலும் உரைநடையும் பலவிடங்களில் ஒன்றாகக் காணப்படுவதனாலும் இது விளங்குகின்றது1 என்பர். இக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தக்க சான்றுகள் காட்டப் பெறுதல் வேண்டும். ஆனால் இரண்டு உரைகளையும் கண்டவர்கள் வேறுவேறானவர் என்பதற்குச் சான்றுகள் உள. அவற்றைக் காண்போம். இலக்கண நூல்களில் வரும் எடுத்துக் காட்டுக்களும், மேற்கோள்களும் ஒன்றைத் தழுவி ஒன்று வருவது என்பது மரபு. தெரிந்த எடுத்துக்காட்டும் மேற்கோள்களும் பயில வழங்கு மாயின் கற்பார்க்கு இலக்கணம் இடர்ப்பாடு இன்றிப் பதியும் என்பது உரையாசிரியர்கள் உட்கிடை. நன்னூலுக்குரிய பல உரைகளையும் ஒப்பிட்டுக் காண்பார் இவ்வுண்மையை உணர்வர். உரை, மேற்கோள் இவற்றின் ஒப்புமை கருதி நன்னூல் உரைகளை ஒருவரே செய்தார் என்பது இல்லையன்றே! 2இறந்தது விலக்கல், எதிரது போற்றல், ஒருதலை துணிதல், இன்னதல்ல திதுவென மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், தன்குறிவழக்கம் மிகவெடுத்துரைத்தல், 3விதப்புக் கிளவியால் வேண்டுவதுரைத்தல் முதலிய இடங்களில் மட்டுமே உரையாசிரியர்கள் புதிய மேற்கோள்களைக் காட்டிச் செல்வர். எஞ்சிய இடங்களில் ஒருநூற்குக் கண்ட உரைகளிலும், ஒருபொருள் பற்றிய நூல்களிலும் முன்னோர் மொழியையும் பொருளையும் போற்றிக் கொள்வதே மரபு என்க. 1ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்துக் காட்டிய அக்கரச் சுதகமும் மாத்திரைச் சுதகமும், பிந்துமதியும், பிரேளிகையும் முதலாக உடையனவும் இப்பெற்றியே தமிழாகச் சொல்லு மிறைக் கவிகளும் அறிந்து கொள்க என்று யாப்பருங்கல விருத்தி கூறுகின்றது. இதில் உள்ள ஆரியம் என்னும் பாரிரும் பௌவம் என்னும் தொடரை ஆண்டு 2ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை ஆக்கித் தமிழ்ப் படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்று குறிக்கின்றது காரிகையுரை. ஆதலால், இரண்டன் உரையாசிரியரும் ஒருவராகவே இருக்கலாம் என்பார் 3உளரென்பர். தலைமகனும் தலைமகளும் தமியராய் எதிர்ப்படும் காட்சியைக் கற்கந்தும் எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட்பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார் எனத் தொடங்கி இறையனார் களவியல் கூறுமாறே முழுமையும் கூறிச் செல்கிறது களவியற்காரிகை! ஓரிரு பக்க உரைநடை முழுமையிலும் வேற்றுமை இல்லை! அதற்காகக் களவியல் உரைகாரரே, களவியற் காரிகைக்கும் உரைகாரர் என்பதா? அதற்கு எத்துணைத் தடைகள் உள. ஆதலால், முன்னவர் மொழியைப் பொன்னேபோற் போற்றிக் கொண்ட தன்மை இஃது என்க. விருத்தியுரைகாரராலும், காரிகை உரைகாரராலும் மேற் கோள் காட்டப்பெறும் இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் மயேச்சுரர். அவர் பெயரைக் காரிகை மயேச்சுரர் என்றே வழங்குகின்றது. வேறு எவ்வகையாலும் குறிக்கவில்லை (14, 17, 27, 29, 30, 32, 37 உரை காண்க) ஆனால், விருத்தியுரை மயேச்சுரர்க்கு நல்லாசிரியர், பேராசிரியர் என்னும் சிறப்புப் பெயர்களைத் தந்து மகிழ்வதுடன், எதுகைமோனை கெழும முழுமுதல் இறைவன் சிறப்புக்களையெல்லாம் அடைமொழியாக்கி அவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், நல்லாசிரியர் என்று பல இடங்களில் கூறுகின்றது. ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் இயற்றப் பெற்றிருக்குமாயின் ஒரு புலவரை இவ்வாறு வேறுபடக் கூறார் என்க. யாப்பருங்கல விருத்திக்குப் பின்னர் எழுந்ததே காரிகையுரை என்பதை முன்னரே கண்டோம். ஆங்கே காட்டப்பெற்ற பதினோரிடங்களுள் ஒன்றிலேனும் தாம் எழுதிய உரை என்பதை அவர் சுட்டினார் அல்லர். அவருரையாயின் யாம் உரைத்தாம் என்றோ, யாம் கூறிய உரையான் உணர்க என்றோ, ஆண்டுக் கூறினாம் என்றோ குறித்திருப்பர். அவ்வாறு குறிப்பதே பன்னூல் உரைகண்டார் உரையிடைக் காண்பதாம். சிந்தாமணிக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியரே தொல்காப்பியத்திற்கும் உரைகண்டார். அவர் அகன்று பொருள் கிடப்பினும் என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 210) இனிப்பல செய்யுட்கள் வருமாறு சிந்தாமணியுள் யாங் கூறிய உரைகள் பலவாற்றானும் உணர்க என்றும், மாட்டும் எச்சமும் என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 211) மாட்டும் எச்சமும் இன்றி உடனிலையாய் அமைந்தன பலவும் சிந்தாமணியுள் யாங்கூறிய உரையான் உணர்க என்றும், சிந்தாமணி 72 ஆம் செய்யுளில், ஈங்குத் தன்மையை உணர்த்துதல் செலவினும் வரவினும் என்னும் சூத்திரத்திற் கூறினாம் என்றும், 892ஆம் செய்யுளில், ஆசிரியர் நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின்வைத்தது மேல் வருஞ்சூத்திரத்தில் மாவும் மாக்களும் ஐயறி வென்ப என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க. இதனை வாராததனால் வந்தது முடித் தல் என்னும் தந்திர உத்தியாற் கொள்க வென்று ஆண்டுக் கூறிப்போந்தாம் என்றும் கூறுவனவற்றால் அறிக. கலிவெண்பாவின் இலக்கணம் இரண்டு நூல்களிலும் சொல்லப் பெற்றுள்ளது. தன்தளை ஓசை தழீஇநின் றீற்றடி வெண்பா இயலது கலிவெண் பாவே. என்பது யாப்பருங்கலம். இதற்கு உரை கூறிய விருத்தி, வெண்கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும் ஒக்கும் என்கின்றது. மேலும். கலிவெண்பாவே என்ற ஏகார விதப்பினால் வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா என்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறு படுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க என்கின்றது. இதனால் விருத்தி யுரையாசிரியர் அவர் கூறியவாறு வெண் கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும் ஒக்கும் என்னும் கொள்கையுடையவர் என்பதும் அவ்வாறு கருதாமல் இரண்டற்கும் வேறுபாடு உண்டெனக் கருதுவாரும் இருந்தனர் என்பதும் புலப்படும். இவ்வகையில் காரிகை உரையை நோக்க அவர், வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் என்பவருள் ஒருவராகத் தோன்றுகின்றார். வான்தளை தட்டு இசை தனதாகியும் வெண்பா இயைந்தும் விசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே என்னும் காரிகைப் பகுதிக்குக், கலித்தளைத் தட்டுக் கலியோசை தழுவியும் வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும் வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு வழங்கப்படும் என்று உரை கூறி, வாளார்ந்த மழைத் தடங்கண் என்னும் பாடலைச் சான்று காட்டி இது தன் தளையானும் துள்ள லோசையானும் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாப்போல் முடிந்தமையின் வெண்கலிப்பா என்றும், சுடர்த்தொடீஇ கேளாய் என்னும் பாடலைக் காட்டி இது வெள்ளோசை தழுவி வெண்டளை தட்டுச் சிந்தடியால் இற்று ஒருபொருள் மேல் வந்தமையால் கலிவெண்பா என்றும் கூறியுள்ளார். இதனால் இரண்டு உரைகளையும் கண்டவர்கள் வேறு வேறானவர் என்பது விளங்கும். மேலும், எழுத்து முதலியவற்றைக் காரணக்குறியான் வழங்குமாற்றை, எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத் தசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை தூக்கில் தொடர்ந்திசைத்தலின் தூக்கெனப் படுமே என்னும் மேற்கோளால் காட்டுகின்றார் விருத்தியுரைகாரர். இதே நூற்பாவைக் காரிகை யுரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றார். ஆனால், அம்மேற்கோள் எட்டடிகளையுடைய தாய், ஏழு எட்டாம் அடிகள், பாவி நடத்தலில் பாவே; பாவொத் தினமாய் நடத்தலின் இனமெனப் படுமே என வருகின்றன. ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் எழுதப் பெற்றிருக்கு மாயின் இவ்வேறுபாடு நேர்ந்திருக்காது என்பது கருதத் தக்கது. யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் மேற்கோளுக்குப் பயன்படுத்தும் இலக்கண ஆசிரியர்களுள் மயேச்சுரர் என்பார் ஒருவர். அவரை மட்டும் மோனை எதுகை நயமுற நெஞ்சாரப் பாராட்டுகின்றார். இதனால், மயேச்சுரரின் மாணவரோ, அவர் பரம்பரையினரோ விருத்தியுரை கண்டவர் ஆதல் வேண்டும் 1என்பர். மயேச்சுரர்மேல் மட்டற்ற ஈடுபாடுடையவர் விருத்தி யுரைகாரர் என்பது ஏற்கத்தக்கதே. அவ்வீடுபாடு, சைவ சமயத்தின்பால் மயேச்சுரர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாகவோ, சிவபெருமான் பெயர்பூண்டு அவர் விளங்கியது காரணமாகவோ ஏற்பட்டிருக்கவும் கூடும். அவர் காட்டும் 2அடைமொழி அழகுகள் அவ்வாறு எண்ணுதற்கும் இடமளிக்கின்றன. விருத்தியுரை ஆசிரியர்: யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் கடலன்ன கல்வியாளர். அவர் செல்லாத துறையில்லை; கல்லாத கலையில்லை என்று சொல்லுமாறு விரிந்து பரந்த பேரறிவினர். பாயிரம் உட்பட 232 அடிகளே (நூற்பா அகவல் அடிகள்) கொண்டது யாப்பருங்கலம். அதற்கு அவர் கண்டுள்ள உரைவிரிவுப் பரப்பை அச்சிட்ட நூற்பக்கங்களைப் பார்க்கவே புலப்படும். மூன்றே நூற் பாக்களைக் கொண்டது ஒழிபியல். அதில் இரண்டாம் நூற்பா (95) 7 அடிகளைக் கொண்டது. அதற்கு உரை விளக்கம் 378 ஆம் பக்கமுதல் 525 ஆம் பக்க முடிய விரிந்து செல்லுகின்றது. இவ்வொன்றே உரையாசிரியரின் புலமைத் திறத்தைப் பறை யறைந்து சொல்லவல்லதாம். உரையிடையே அகத்தியம். அகநானூறு, அஞ்சனம், அடிநூல், அணிநூல், அமிர்தபதி. அவிநயம், அறிவுடை நம்பி சிந்தம், ஆதிநாதர் ஆய்ந்த நூல், இடைக்காடர் ஊசிமுறி10 இரணமாமஞ்சடை. இராமாயணம், இறையனார் களவியல், இன்மணியாரம், இன்னிலை, உதயணன் கதை, எழுகூற்றிருக்கை, ஐங்குறு நூறு, ஔவையார் பாடல், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம்,20 கணக்கியல், கண்ணனார் கவி, கபிலர் பாடல், கருடநூல், கருநாடகச் சந்தம் (குணகாங்கியம்), கலித்தொகை, கலியாண கதை, கல்லாடர் பாடல், காக்கை பாடினியம், காரைக்காற்பேயார் பாடல்,30 காலகேசி, குடமூக்கிற் பகவர் பாடல், குண்டலகேசி, குமர சேனாபதியார் கோவை, குறுந்தொகை, குறுவேட்டுவச் செய்யுள், கையனார் பாடல், கொன்றைவேந்தன், கோவை, சங்கயாப்பு,40 சந்திரகோடி சந்தம், சந்தோ பிசிதிகள், சாணாச்சிரயம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், சிறுகாக்கை பாடினியம், சூளாமணி, செயதேயம், செயன்முறை, செயிற்றியம்,50 செய்யுளியல், தக்காணியம், தத்துவ தரிசனம், தமிழ் முத்தரையர் கோவை. தாரணை நூல், திணைநூல், திருக்குறள், திருமந்திரம், தேசிகமாலை, தொல்காப்பியம்,60 நக்கீரர் அடிநூல் நக்கீரர் நாலடி, நானூற்று வண்ணம், நல்லாறனார் நூல், நற்றத்தம், நாலடி நாற்பது, நாலடியார், நான்மணிக் கடிகை, நீலகேசி, பட்டினப் பாலை, பத்தினிச் செய்யுள்,70 பரணர் செய்யுள், பரிமாணனார் பாடல், பல்காயம், பனம்பாரம், பன்மணி மாலை, பன்னிருபடலம், பாக்கனார் பாடல், பாடலனார் பாடல், பாட்டியல், பாட்டியல் மரபு,80 பாரதம், பிங்கலகேசி, பிங்கலம், புட்கரனார் பாடல், புராண சாகரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, பூதத்தார் பாடல், பெரியபம்மம், பெருஞ் சித்திரனார் பாடல்,90 பெருந்தலைச் சாத்தனார் பாடல், பெருந் தேவபாணி, பெருவல்ல வெண்பா, பெருவள நல்லூர் பாசண்டம், மயேச்சுரர் யாப்பு, பொய்கையார் வாக்கு, மதுரைக் காஞ்சி, மந்திர நூல், மலைபடுகடாம், மாபிங்கலம்,100 மாபுராணம், மார்க் கண்டேயனார் காஞ்சி, மிச்சாகிருதி, முதுமொழிக் காஞ்சி, முத்தொள்ளாயிரம், மும்மணிக் கோவை, யாப்பருங்கலக் காரிகை, யாப்பியல், லோகவிலாசனி, வடுகச் சந்தம்,110 வளையாபதி, வாசுதேவனார் சிந்தம், வாஞ்சியார் நூல், வாய்ப்பியம், விளக்கத்தனார் பாடல்115 இன்ன பல நூல்களையும் பாடல்களையும் எடுத்துக் காட்டி விளக்கிச் செல்லும் விரிவுரை யாசிரியர் மாண்பு, தனிப் பேராராய்ச்சி மேற்கொள்ளப் பெற்றுத் தனி நூலாக்க வேண்டிய ஒன்றேயாம். கட்டுரை யளவில் சில சில துளிகளைத் தெளிக்கலாமேயன்றி முற்றக் காட்டுதற்கு இயலாது என்பது வெளிப்படை. இவர்தம் உரைப்போக்கு ஓர் ஒழுங்கு பெற்றது. முதற்கண் நூற்பாவைக் குறித்து, என்பது என் நுதலிற்றோ வெனின் என வினாவி, இன்னது நுதலிற்று என்கிறார். பின்னர் அந் நூற்பாவிற்குப் பொழிப்புரையோ சொற்பொருளோ வரைகின்றார்; இன்றியமையாமை ஏற்பட்டால் உரையின் இடையேயும் அதனை விளக்குகிறார்; உரை முடிந்ததும் அந் நூற்பாவில் அமைந்துள்ள இலக்கண அமைதியை ஆராய்கிறார்; சொல்லாராய்ச்சியையும் மேற்கொள்கிறார்; இந்நூற்பா இவ்வாறு அமையினும் கருதிய பொருளைப் பயக்குமே. இவ்வாறு சொல்ல வேண்டியது என்னை என வினாவி, இவற்றைக் கூறுவதற்கு இவ்வாறு கூறினார் என உரைக்கிறார். சிற்சில இடங்களில் தடைகளைத் தாமே எழுப்பி விடைகளைக் கூறுகிறார். உடன் பாட்டில் கூறப் பெற்ற நூற்பாவை எதிர் மறையில் அமைத்துக் காட்டியும் அக்கருத்தை வலியுறுத்துகிறார். எடுத்துக் கொண்டு இலக்கணத்தை விளக்க, உவமைகளையும் கையாள்கிறார்; மேற்கோள் தவறாமல் காட்டுகிறார்; மிக அருகியே வந்துழிக் காண்க என்கிறார்; இதே இலக்கணக் கருத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறியுளர் எனத் தெளிவுறுத்துகிறார்; அவ்வாறு கூறுதலிலும் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ பெரும்பாலும் குறித்து விடுகிறார்; சில இடங்களில் என்றார் பிறரும் என்றும், கூறினார் ஆகலின் என்றும், ஒரு சார் ஆசிரியர் என்றும், தொல்லாசிரியர் என்றும், வடமொழி வழித் தமிழாசிரியர் என்றும், குறிக்கின்றார். காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியார், அவிநயனார், தொல்காப்பியனார், மயேச்சுரர் ஆகியோர் நூற்பாக்களை மிகுதியும் ஆள்கிறார். ஒரு நூற்பாவின் உரை முடிவில், அல்லது ஒரு பகுதியின் முடிவில் தாம் மேலே கூறிய இலக்கணச் செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய சில பல வெண்பாக்களைக் காட்டி, இவற்றை விரித்து உரைத்துக் கொள்க என அமைகின்றார். இத்தகைய செவ்விய நெறியில் செல்வது விருத்தியுரை. எழுத்தசை சீர்கள் அடிதொடை தூக்கோ டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே என்னும் முதல் நூற்பாவின்கண், இவ்வேழு உறுப்பினும் தீர்ந்து யாப்பு உண்டோவெனின், இல்லை, என்போலவெனின், முப்பத்திரண்டு உறுப்பொடும் புணர்ந்தது மக்கட் சட்டகம் என்றால், முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட் சட்டகம் இல்லை; அதுபோல வெனக் கொள்க என உவமையால் விளக்குகின்றார். ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகுபெற, பிற எழுத்துக் களொடு கூடிநின்ற பொழுது அலகு பெறும் என்பதை, ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகுபெறா. எனவே, வேறொரு எழுத்தோடு கூடிநின்ற பொழுது அலகு காரியம் பெறும் என்பதாயிற்று. என்னை? தேவதத்தன் தானாகப் போகலான் என்றால் துணைபெற்றால் போவான் என்பதாம். அதுபோலக் கொள்க என உவமையால் நிறுவுகின்றார். வெண்பா முன்னாகவும் ஆசிரியம் பின்னாகவும் வருவது மருட்பா. அதனை விதப்பினால் அமைத்துக் கொண்டு, கங்கை யமுனைகளது சங்கமம் போலவும் சங்கர நாராயணரது சட்டகக் கல்வியே போலவும், வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருட்கண்மேல் யாப்புற்று மருட்சி யுடைத்தாகப் பாவி நடத்தலின் மருட்பா என்று வழங்கப்படும் என்பாரும் உளர் என்று விளக்குகின்றார். தூங்கிசை வண்ணம் முதலியவற்றை உவமையால் நயம்பட மொழிகின்றார்: முதுபிடி நடந்தாற் போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க. மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட்போலவும் (ஏந்திசை வண்ணம்) வருமெனக் கொள்க. ஒவ்வா நிலத்திற் பண்டி உருண்டாற் போலவும், நாரை இரைத்தாற் போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் (அடுக்கிசை வண்ணம்) வரும். பெருங் குதிரைப் பாய்த்தலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாக உடை அறுத்துக் கொட்டுப் போலவும் (பிரிந்திசை வண்ணம்) வரும். நகரம் இரைந்தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப் பிசையும் இயமர இசையும் தேரைக் குரலும் போலவும் (மயங்கிசை வண்ணம்) வரும். சூறைக் காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது அகவல் வண்ணம். நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது ஒழுகல் வண்ணம். தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கன்மேற் கல் உருட்டினாற் போலவும் வருவது வல்லிசை வண்ணம். அன்ன நடையும் தன்னம் பறையும் போலவும் மணன்மேல், நடந்தாற் போலவும் வருவது மெல்லிசை வண்ணம் இவ்வாறு தொடுத்து உவமைகளை மழையெனப் பொழி கின்றார். (பக்: 412-415) ‘எனப்படும்’ என்னும் சொல்லுக்கு ‘என்று ஞிறப்நித்துச் சொல்லப்படும்’ எனப் பொருள் கூறி, ‘என’ என்னும் அது ஞிறப்நினைக் கூறுமோ? எனின், கூறும்; என்னை? நளியிரு முந்நீர் ஏணியாக என்னும் புறப்பாட்டினுள், முரசு முழங்கு தானை மூவிருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும எனவும், ஆடுகழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே அத்தை எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும், நாடெனப் படுவது சோழ நாடு ஊரெனப் படுவது உறையூர் என்று பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக் கொள்க எனத் தாங்குறித்துக் கூறிய பொருளை இருவகை வழக்குகளாலும் நிறுவிக் காட்டுகின்றார். இவ்வாறே நேர் (233) இசை (234) ஒத்தாழிசை, (292,297) கொச்சகம் (292) சுரிதகம் (297) அம்போதரங்கம் (294) முதலாய் பல சொற்களை ஆய்ந்து எழுதுகின்றார். உரையாளராகிய இவர் பெரும் பாவலராகவும் திகழ்ந்தார் என்பது வெளிப்படை, ஒவ்வோர் இலக்கணமும், அல்லது ஒவ்வொரு பகுதி இலக்கணமும் விளக்கி முடித்துக் காட்டும் இடத்தில் சில பல வெண்பாக்களால் தொகுத்துக் கூறுகிறார். அதன் பின்னர் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க என்கிறார். இவ்வெண்பாக்கள் இன்ன நூலின வென்றாதல், இவர் பாடியன வென்றாதல் குறிக்கப் பெற்றில. பிற நூல்களாலும் அறியப் பெற்றில. இவை இவ்வுரை யாசிரியராலேயே யாக்கப் பெற்றிருக்கக் கூடும். இவ்வாறு இவ்வுரை யகத்துக் காணப் பெறும் வெண்பாக்கள் நூற்றுக்கு மேலும் உள. பிற பாக்களும் அருகிக் காணப்பெறுகின்றன. ஒரு சில இடங்களில் காரிகைப் பாடல்களைக் காட்டி, இக் காரிகையை விரித்துரைத்துக் கொள்க என்றும் வரும் குறிப்புகளால் இக் கருத்து வலியுறும். மிகப் பெரும்பாலான உதாரணப் பாடல்களை இவரே (விருத்தி யுரையாசிரியரே) செய்து அமைத்துக் கொண்டார் என்றும் கருதத் தோன்றுகின்றது. நூலில் சொல்லப்பட்டு இவரால் உரையில் விளக்கப் பெறுகிற அத்தனை இலக்கண விகற்பங்களுக்கும் பொருந்தக் கூடிய பாடல்கள் முன்னே தோன்றியிருந்தன என்பது நம்பக் கூடியதாய் இல்லை என்றும், இணைமோனை (முதலிய) ஏழு விகற்பமும் வருவதற்குக் காட்டிய அணிமலர் அசோகின் தளிர்நலம் என்ற பாடலும், இணையெதுகை (முதலிய) ஏழுவிகற்பமும் வருவதற்குக் காட்டிய பொன்னினன்ன பொறி சுணங்கு என்ற பாடலும், உதாரணங்களாம். இவைபோலவே அறுபது வஞ்சியுரிச்சீரும் வந்த பாட்டு என்று 73 அடிகளையுடைய நீண்ட பாட்டொன்றைத் தருகிறார். இது நலஞ்செலத் தொலைந்த புலம்பொடு பழகி எனத்தொடங்கி, கருங்கடல் நாடனொடு கலவா வூங்கே என்று முடிகிறது. இதுவும் உரையாசிரியர் செய்து அமைத்த தென்றே கருதவேண்டும்; இல்லையானால் இவருக்கென்று வஞ்சியுரிச்சீர் எல்லாம் வருமாறு மற்றொருவர் ஒரு பாடல் பாடி அமைத்தல் நடைபெறுவதொன்றன்று. பலபாட்டுக்களைக் காட்டுவதற்குப் பதிலாக ஒரே பாடலில் காட்டலாம் என்று ஆசிரியரே செய்து காட்டியிருக்கிறார். தொடையோத்து உதாரணப்பாடல்கள் அனைத்துமே இத்தகையன என்றும் கூறுவர் (தமிழ் இலக்கிய வரலாறு 11 ஆம். நூ.ஆ. திரு. மு அ; பக்: 142,149,150.) ஆம்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறுவது தொல்லாசிரியர் நெறி. பின்னாளில் இலக்கணத்திற்கு ஏற்ப இலக்கியம் படைக்கும் நிலை உருவாயிற்று. இலக்கியம் கிட்டாத இலக்கணத்தை வலியுறுத்த என் செய்வது? உரையாசிரியர் எடுத்துக் கொண்ட இலக்கணத்திற்கு ஏற்பத் தாமே இலக்கியம் படைத்துக் காட்டினார் என்று கோடல் பொருந்தும். ஆனால், அவற்றுள் அவர் செய்தவை எவை? அவர்க்கு முன்னிருந் தோர்க்கும் அதே இடர்ப்பாடு உண்டல்லவா! அவர் வழியாகக் கிடைத்த பாடல்கள் எவை? இவற்றைக் கண்டு தெளிவ தென்பது தெளிவற்றதும் இடர்ப்பாடு மிக்கதும் ஆகிய பணியாகும். விருத்தியுரைகாரர் இலக்கணச் சான்றுக்கு ஆசிரியர் பெயரையோ, நூற்பெயரையோ இயன்ற அளவும் தவறாமல் குறித்துச் செல்லும் நெறியை மேற்கொண்டுள்ளார். ஆனால், இலக்கியச் சான்றுக்கு அந்நெறியை மேற்கொண்டாரல்லர். ஆதலால், அவர் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ குறிப்பிடாதன வெல்லாம் அவரே இயற்றியனவாகக் கோடற்கு இல்லை. சான்றாக, அணிமலர் அசோகின் பொன்னின் அன்ன என்னும் இரண்டு பாடல்களும் விருத்தியுரையாசிரியர் செய்தனவாகலாம் என இலக்கிய வரலாறு கூறுகின்றது. ஆனால், அவை அவரால் செய்யப்பெற்றன அல்ல என்பதற்குச் சான்றுளது. இவ்விரண்டு பாடல்களும் யாப்பருங்கலக் காரிகையிலும் எடுத்துக் காட்டாக வந்துள. அவற்றைக் காரிகை உரையாசிரியர் கட்டாயத்தால் காட்டுகின்றார் என்றே கொள்ளவேண்டும். ஏனெனில் அப்பாடலை, நூலியற்றிய அமிதசாகரரோ அவ் விலக்கணத்திற்கு இலக்கியமாகப் 1பாடி வைத்துள்ளார். ஆதலால், அவருக்கு முன்னிருந்தவரோ உடனிருந்தவரோ இயற்றியதாதல் வேண்டும். அவ்வாறாக அப்பாடலை உரையாசிரியர் இயற்றி வைத்தார் என்பது பொருந்தவில்லை அல்லவா! அமிதசாகரர் காரிகையில் 2உதாரண முதனினைப்புக் களாக 7 பாடல்கள் இயற்றியுள்ளார். அப்பாடல்களில் 43 பாடல்களின் முதல்குறிப்புக்கள் உள்ளன. அவர் காட்டியுள்ள முதற்குறிப்புடைய பாடல்கள் அவர்காலந் தொட்டோ, அவர்க்கு முன்தொட்டோ வழக்கில் இருந்தவை என்பதில் ஐயமில்லை. அன்றியும் அவர்க்கு முன்னே விளங்கிய இலக்கண ஆசிரியர்களுள் சிலரும் உதாரண முதனினைப்புக்களைக் காட்டிச் சென்றுள்ளனர் என்பது அறியத்தக்கதாம். காரிகை, மயேச்சுரர் யாப்பேபோல உதாரணம் எடுத்தோதுவது என்றும் (காரிகை. 1. உரை) இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக் கொள்க. என்னை? குன்று கூதிர் பண்பு தோழி விளியசை முத்துறழ் என்றிவை யெல்லாம் தெளிய வந்த செந்துறைச் செந்துறை என்றார் காக்கை பாடினியார் (9) என்றும், யாப்பருங்கலக் காரிகை கூறுவதும், ஓங்கெழில் முதலாக் குன்று கூதிர்..... செந்துறை என்னும் இதனுள், ஓங்கெழில் என்புழி, ஓங் கெழில் அகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு பொருதலற என்னும் பாட்டும், குன்று என்புழி குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான் என்னும் பாட்டும், கூதிர் என்புழி, கூதிர்கொண்டிருள் தூங்கும் என்னும் பாட்டும், பண்பு என்புழி, பண்புகொள் செயன்மாலை என்னும் பாட்டு, தோழி என்புழி தோழிவாழி தோழிவாழி வேழமேறி வென்ற தன்றியும் என்னும் பாட்டும், விளியிசை என்புழி, விளியிசைப்ப விண்ணகம் நடுங்க என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி, முத்துறழகவந்தேங்கி என்னும் பாட்டும், குறிப்பினான் முன்னின்ற மொழியான் அறியவந்தன என்று நன்னூல் (268) மயிலைநாதர் உரை கூறுவதும் நோக்க இக்கருத்து வலியுறும். மேலும், இது செய்யுளியலுடையார் காட்டும் பாட்டு இஃது அணியியலுடையார் காட்டும் பாட்டு என்று இன்னவாறு யாப்பருங்கல விருத்தி பரக்கக் கூறிச் செல்வதும் தக்க சான்றாம். எனினும், இவ்வுரையாசிரியர் எடுத்துக் கொண்ட இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக் காட்டுக் கிட்டாத இடங்களில் தாமே செய்யுள் யாத்தமைத்துக் கொண்டார் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க பொது நெறியேயாம். விருத்தியுரைகாரர் பல்கலைக் குரிசில்; பேரறிஞர்; நயத் தக்க உரையாளர்; சீரிய நினைவாளர்; நாடு கண்டவர்; வரலாற்றுத் தெளிவாளர்; பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர்; இன்ன பல நலங்களெல்லாம் துன்னிய செல்வர்; இவர் தம் நுணுகிய ஆராய்ச்சி நயங்களெல்லாம் விரிவாக மேற்கொள்ளத் தக்கன வாகலின் இவ்வளவில் இவ்வாராய்ச்சி யுரையை நிறுத்தி அமைவாம். சொல்லிற் சுருங்கிப் பொருள் பெருகித் தொன்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும்- நல்யாப் பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி ஒருங்கறிய வல்லார் உணர்ந்து அருளகம் தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன் யாப்பருங்கல விருத்தி பாயிரம் முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன் செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப் பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி யாப்பருங் கலம்நனி யாப்புற வகுத்தோன் தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத் துளக்கறு கேள்வித் துகள்தீர் காட்சி அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே. என்பது பாயிரம். (இதன் பொருள்) முழுது உலகு இறைஞ்ச - மூவகை உலகமும் வணங்க, முற்றொருங்கு உணர்ந்தோன் - முழுதுடன் அறிந்தோனது, செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கி - வள மலர் போலும் செய்ய அடிகளை முறைமையால் இறைஞ்சி, பாற்படு செந்தமிழ்ப் பரவையின் வாங்கி - பாகுபடு தென்றமிழ்க் கடல்வயினின்றும் வாங்கி, யாப்பு அருங்கலம் நனி யாப்பு உற வகுத்தோன் - யாப்பு என்னும் அருங்கலத்தை மிகவும் திண்ணிதாக வகுத்தோன், தனக்கு வரம்பாகிய தவத் தொடு புணர்ந்த - தனக்கு எல்லை தானேயாகிய துறவொடு பொருந்திய, குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅ - குணசாகரப் பெயரோனது கோட்பாட்டின் வழுவாது நிற்கும், துளக்கு அறு கேள்வி - மயக்கம் அற்ற கேள்வியினையும், துகள்தீர் காட்சி - குற்றம் அற்ற அறிவினையும், அளப்பருங் கடற்பெயர் - 1அளத்தற்கு அரிய கடலினது பெயரினையும் உடைய, அருந்தவத்தோன் - அரியதவத்தினை உடையோன் என்றவாறு. இன் - ஐந்தாவதன் உருபு; வாங்கல்-1 அதன் வயிற்கோடல்; நனியென் கிளவி மிகுதிப் பொருட்டே என்றாராகலின்,2 நனி என்றதற்கு ஈண்டு மிகவும் எனப் பொருள் கொண்டார். ஒடு - உடனிகழ்ச்சி. வகுத்தோன் தவத்தோன், என்று கூட்டுக. ஏகாரம், ஈற்றசை. சிறப்புப் பாயிரம் தெய்வ வணக்கம் வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய 3அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே. என்பது சூத்திரம். நூல் நுதலியது உரைக்குமிடத்து நூலாமாறும், நூலின் விகற்பமும், நூல் என்ற சொற்குப் பொருளும், நூலாற் பயனும் உரைத்து உரைக்கற் பாற்று. நூலாவது, முதல்நடு இறுதி மறுதலைப் படாது தொகைவகை விரியின் உட்பொருள் தோன்ற உரையோடு புணர்ந்த ஒழுக்கிற் றாகிச் சூத்திரம் ஒத்துப் படலம் பிண்டமென் றியாப்புறுத் தமைத்த *அவயவத் தாகி நடப்பது. என்னை? நூலெனப் படுவது நுவலுங் காலை *முதலும் முடிவும் மாறுகோள் இன்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையோடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே - (தொல். செய். 166) அதுவே தானும் ஈரிரு வகைத்தே - (தொல். செய். 167) ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஒத்தி னானும் பொதுமொழி *கிளந்த படலத் தானும் 1மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென் றாங்கனை மரபின் இயலும் என்ப -(தொல். செய். 168) என்றார் தொல்காப்பியனார் ஆகலின். அவற்றுட் சூத்திரமாவது, கருதிய பொருளைக் கைக் கொண்டு கண்ணாடியில் நிழல் போலத் தெரிவுறத் தோன்றச் செய்யப்படுவது. என்னை? அவற்றுள், சூத்திரந் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே - (தொல். செய். 169) என்றாராகலின். ஓத்தாவது, ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப் பட வைப்பது ஆகும். என்னை? நேரின மணியை 2நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை ஒருவழி வைப்ப தோத்தென மொழிப உயர்மொழிப் புலவர் - (தொல். செய். 170) என்றாராகலின். படலமாவது, வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்றம் உடைத்தாகத் தொடர வைப்பது என்னை? ஒருநெறி இன்றி 3விரவிய பொருளாற் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும் - (தொல். செய். 171) என்றாராகலின். பிண்டமாவது, உறுப்பு மூன்றும் உள்ளடக்கி, நெறிப்பாடு உடைத்தாய்க் கிடப்பது. என்னை? 1மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர் அது பிண்டம் என்ப - (தொல். செய். 172) என்றாராகலின். இனி, நூலின் விகற்பம் உரைக்குமாறு: நூல் முத்திறப்படும்: முதல் நூலும், வழி நூலும், சார்பு நூலும் என. என்னை? முதல்வழி *சார்பென நூல்மூன் றாகும் - நன்னூல். 6 என்றாராகலின். முதல் நூலாவது, குற்றம் கெடுத்து முற்ற உணர்ந்த நற்றவத்தோன் சொற்றதாகும். என்னை? வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் - தொல். மரபு. 96 என்றாராகலின் வழி நூலாவது, முதல் நூலோடு ஒத்த முடிவிற்றாய்த் தனது ஓர் விகற்பப்படக் கிடப்பது. என்னை? முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி அழியா மரபினது வழிநூல் ஆகும் - நன்னூல் 7 என்றாராகலின். 2சார்பு நூலாவது, அவ்விருவர் நூலுள்ளும் ஒரு வழி முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட வைப்பது. என்னை? இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூல் ஆகும் - நன்னூல் 8 என்றாராகலின். 3நான்காவது எதிர் நூல் என்பதும் ஒன்று உண்டு. யாது அது? முதல்வன் நூலுள் முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழ வைத்தால், அதனைக் கருவியால் திரிபு காட்டி ஒருவாமை வைத்ததற்கு ஒள்ளியோன் ஒரு புலவனான் உய்க்கப்படுவது. என்னை? தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்ப தெதிர் நூல் என்ப ஒருசா ரோரே - இறையனார் 1. மேற் என்றாராகலின். இனி, நூல் என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு: நூல் போறலின், நூல் எனப்படும். என்னை? பாவை போல் வாளைப் பாவை என்றாற்போல. ‘ahnjh üš nghYkhW? எனின், நுண்ணிய பலவாகிய பஞ்சின் நுனிகளால் கைவல் மகடூஉ தனது செய்கை நலம் தோன்ற மாண்பினால் ஓர் இழைப் படுத்தல் அன்றே உலகத்து நூல் நூற்றலாவது? அவ்வாறே, 1சுகிர்ந்து பரந்த 2சொற்பரவைகளால் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் சூத்திரம், ஒத்து, படலம், பிண்டம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று நூல் செய்தலாவது. அவ்வகை நூற்கப்படுதலின், நூலெனப்படும். இனி, நூலாற் பயன் உரைக்குமாறு: நூல் கேட்டு விளங்கிய நுண்ணுணர்வினோன், அபாயம் இல்லாததோர் உபாயத்தினால் அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றை நிரம்புமாறு அறிந்து நிகழ்த்துவானாம். அதனாற் பகரப்பட்ட நான்கினையும் 3பாரம்பரத்தால் பனுவலே பயப்பதாயிற்று எனக் கொள்க. 1. எழுத்து ; (தொகை, வகை, விரி). இனி, நூல் நுதலியது உரைக்குமாறு: 4சிறப்பெழுத்து, 5உறுப்பெழுத்து என்னும் தொகையானும்; ஒற்று, உயிர், உயிர்மெய்யும் என்னும் வகையானும்; உயிரும், மெய்யும், உயிர் மெய்யும், குறிலும், நெடிலும், அளபெடையும், வன்மையும், மென்மையும், இடைமையும், குற்றிய லிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும், ஐகாரக் குறுக்கமும், ஔகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும் என்னும் விரியானும்; 2. அசை ; (தொகை, வகை, விரி). நேரசை, நிரையசை என்னும் தொகையானும்; நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்னும் வகையானும்; சிறப்புடை நேரசை, சிறப்பில் நேரசை, சிறப்புடை நிரையசை, சிறப்பில் நிரையசை, சிறப்புடை நேர்பசை, சிறப்பில் நேர்பசை, சிறப்புடை நிரைபசை, சிறப்பில் நிரைபசை என்னும் விரியானும்; 3. சீர்; (தொகை, வகை, விரி). இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர், என்னும் தொகையானும்; நேரீற்றியற்சீர், நிரையீற்றியற்சீர், நேரீற்றுரிச்சீர், நிரை யீற்றுரிச்சீர், நேரீற்றுப் பொதுச்சீர் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் வகையானும்; 1. சிறப்புடை நேரீற்றியற்சீர், 7. சிறப்புடை நிரையீற்றுரிச்சீர் 2. சிறப்பில் நேரீற்றியற்சீர் 8. சிறப்பில் நிரையீற்றுரிச்சீர் 3. சிறப்புடை நிரையீற்றியற்சீர் 9. சிறப்புடை நேரீற்றுப் பொதுச்சீர் 4. சிறப்பில் நிரையீற்றியற்சீர் 10. சிறப்பில் நேரீற்றுப் பொதுச்சீர் 5. சிறப்புடை நேரீற்றுச்சீர் 11. சிறப்புடை நிரையீற்றுப் பொதுச்சீர் 6. சிறப்பில் நேரீற்றுரிச்சீர் 12. சிறப்பில் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் விரியானும் 4. தளை ; (தொகை, வகை, விரி). வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் தொகையானும்; இயற்சீர் வெண்டளை, உரிச்சீர், வெண்டளை, பொதுச்சீர் வெண்டளை, நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் வகையானும்; இயற்சீர்ச் சிறப்புடைய வெண்டளை, இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளை, உரிச்சீர்ச் சிறப்புடைய வெண்டளை, உரிச்சீர் சிறப்பில் வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்புடை வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்பில் வெண்டளை, நேரொன்றிய சிறப்புடைய ஆசிரியத்தளை, நேரொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, நிரை யொன்றிய சிறப்புடை ஆசிரியத்தளை, நிரையொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, சிறப்புடைக் கலித்தளை, சிறப்பில் கலித்தளை, ஒன்றிய சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றிய சிறப்பில் வஞ்சித் தளை, ஒன்றாத சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றாத சிறப்பில் வஞ்சித்தளை என்னும் விரியானும்; 5. அடி ; (தொகை, வகை, விரி). இயலடி, உரியடி, பொதுவடி என்னும் தொகையானும்; குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் வகையானும்; இயற்குறளடி, உரிக்குறளடி, பொதுக்குறளடி, இயற் சிந்தடி, உரிச்சிந்தடி, பொதுச் சிந்தடி, இயல் அளவடி, உரி அளவடி, பொது அளவடி, இயல் நெடிலடி, உரிநெடிலடி, பொது நெடிலடி, இயற் கழிநெடிலடி, உரிக்கழிநெடிலடி, பொதுக்கழிநெடிலடி என்னும் விரியானும்; 6. தொடை ; (தொகை, வகை, விரி). மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந் தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்னும் தொகையானும்; தலையாகு மோனை, இடையாகு மோனை, கடையாகு மோனை, தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை, சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண், மோனை முரண், எதுகை முரண், செம்முரண், மோனை இயைபு, எதுகை இயைபு, முரண் இயைபு, அளபெடை இயைபு, மயக்கு இயைபு, செவ்விய இயைபு மோனை அளபெடை, எதுகை அளபெடை, முரண் அளபெடை, மயக்கு அளபெடை, செவ்வளபெடை, இயற்செந்தொடை, மருட்செந்தொடை, ஒரு பொருள் இரட்டை, இரு பொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, இரு*முற்று இரட்டை, எழுத்து அந்தாதி, அசை அந்தாதி, சீர் அந்தாதி, அடி அந்தாதி, மயக்கு அந்தாதி, இடையீட்டு அந்தாதி என்னும் வகையானும்; அடி மோனை, இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூட மோனை; கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்று மோனை; அடி எதுகை, இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்று எதுகை; அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண்; அடி இயைபு, இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு; அடி அளபெடை, இணை அளபெடை, பொழிப்பு அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற்கதுவாய் அளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, முற்று அளபெடை எனவும்; கடை இணை மோனை, பின் மோனை, இடைப்புணர் மோனை, கடைக் கூழை மோனை, கடை மோனை; கடை இணை எதுகை, பின் எதுகை, இடைப்புணர் எதுகை, கடைக்கூழை எதுகை, கடை எதுகை; கடை இணை முரண், பின் முரண், இடைப்புணர் முரண், கடைக் கூழை முரண், கடை முரண்; கடை இணை இயைபு, பின் இயைபு, இடைப்புணர் இயைபு, கடைக்கூழை இயைபு, கடை இயைபு; கடை இணை அளபெடை, பின் இணை அளபெடை, இடைப்புணர் அளபெடை, கடைக்கூழை அளபெடை, கடை அளபெடை, எனவும்; அசை விரளச் செந்தொடை, சீர் விரளச் செந்தொடை, இசை விரளச் செந்தொடை, முற்று விரளச் செந்தொடை, குறையீற்று ஒரு பொருள் இரட்டை, குறையீற்றுப் பல பொருள் இரட்டை, நிறையீற்று ஒரு பொருள் இரட்டை, நிறையீற்றுப் பல பொருள் இரட்டை குறையீற்று முற்று இரட்டை, நிறையீற்று முற்று இரட்டை; மண்டில எழுத்து அந்தாதி, செந்நடை எழுத்து அந்தாதி,மண்டில அசை அந்தாதி, செந்நடை அசை அந்தாதி, மண்டிலச் சீர் அந்தாதி, செந்நடைச் சீர் அந்தாதி, மண்டில அடி அந்தாதி, செந்நடை அடி அந்தாதி, மண்டில மயக்கு அந்தாதி, செந்நடை மயக்கு அந்தாதி, மண்டில இடையீட்டு அந்தாதி, செந்நடை இடையீட்டு அந்தாதி என்னும் விரியானும்; எ. பா; (தொகை, வகை, விரி). வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்னும் தொகையானும்; குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா; நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா; நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா, புறநிலை வாழ்த்து மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா, கைக்கிளை மருட்பா என்னும் வகையானும்; குறள் வெண்பா, விகற்பக் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இருவிகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப இன்னிசை வெண்பா பல விகற்ப இன்னிசை வெண்பா, பல விகற்ப நேரிசை வெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா, இன்னியல் நேரிசை ஆசிரியப்பா, விரவியல் நேரிசை ஆசிரியப்பா இன்னியல் இணைக்குறள் ஆசிரியப்பா, விரவியல் இணைக்குறள் ஆசிரியப்பா, இன்னியல் நிலை மண்டில ஆசிரியப்பா, விரவியல் நிலை மண்டில ஆசிரியப்பா, இன்னியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா, விரவியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா; வெள்ளைச் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அகவற் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அளவியல் அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலி வெண்பா, வெண்கலிப்பா, இயற்றரவு கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா, இயற்றரவிணைக் கொச்சக் கலிப்பா சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, இயற்சிஃறா ழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயற்பஃறாழிசைக் கலிப்பா, குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா; இன்னியற்குறளடி வஞ்சிப்பா, வரவியற் குறளடி வஞ்சிப்பா விரவியற்சிந்தடி வஞ்சிப்பா, இன்னியற்சிந்தடி வஞ்சிப்பா, விரவியற்சிந்தடி வஞ்சிப்பா; புறநிலை வாழ்த்துச் சமநிலை மருட்பா, புறநிலை வாழ்த்து வியனிலை மருட்பா, வாயுறை வாழ்த்துச் சமனிலை மருட்பா, வாயுறை வாழ்த்து வியனிலை மருட்பா, செவியறி வுறூஉச் சமனிலை மருட்பா, செவியறிவுறூஉ வியனிலை மருட்பா, கைக்கினைச் சமனிலை மருட்பா, கைக்கிளை வியனிலை மருட்பா என்னும் விரியானும்; அ. பாவினம்; (தொகை, வகை, விரி). தாழிசை, துறை, விருத்தம் என்னும் தொகையானும்; வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்; ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்; கலித் தாழிசை, கலித்துறை, கலி விருத்தம்; வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்னும் வகையானும்; வெண்செந்துறை, குறட்டாழிசை, வெள்ளொத் தாழிசை, வெண்டாழிசை; ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை; வெளி நிலை விருத்தம், வெளி மண்டில விருத்தம் ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத் தாழிசை; ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக் குறட்டுறை; ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம்; கலி ஒத்தாழிசை, கலித்தாழிசை, கலித் துறை, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலி மண்டிலத் துறை, கட்டளைக் கலித்துறை, கலி நிலை விருத்தம், கலி மண்டில விருத்தம், வஞ்சி நிலைத் தாழிசை, வஞ்சி மண்டிலத் தாழிசை, வஞ்சி நிலைத்துறை, வஞ்சி மண்டிலத்துறை, வஞ்சி நிலை விருத்தம், வஞ்சி மண்டில விருத்தம் என்னும் விரியானும். க்ஷ. ஓசை ; (தொகை, வகை, விரி). செப்பல், அகவல், துள்ளல், தூங்கல், கொஞ்சல் என்னும் தொகையானும்; பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணமோடு ஆங்கவை என்ப அறிந்திசி னோரே - தொல். செய். 213 என்னும் வகையானும்; குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதலாகிய 1வண்ணம் நூறு என்னும் விரியானும்; சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிபு நோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங் களை 2ஆலம்பனமாக அருங்கல அணி ஒருங்கு கோத்தாற் போலவும், அலை கடல் கடைந்து அமுது கொண்டாற் போலவும் ஒருங்கு கோத்து ஒரு கோவைப்படுத்து எல்லார்க்கும் உணர்வு புலன் கொள்ளுமாற்றல் யாப்பு உணர்த்துதல் நுதலிற்று. இதனானே இது சார்பு நூல் என்பது முடிந்தது. ïÅ, ‘ï›nth¤J v‹ Ejȉnwh? எனின், அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று; அதனானே; எழுத்தோத்து என்பதாயிற்று. ‘ï¢N¤âu« v‹ Ejȉnwh?’ vÅ‹? சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று என்னை? வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச் சிறப்பென்னும் பாயிரமாம் என்றாராகலின். அச்சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிச் சூத்திரத்தின் விகற்பமும், சூத்திரம் என்ற சொற்குப் பொருளும் உரைத்து உரைக்கப்படும். சூத்திரம் ஆறு வகைப்படும்: பெயர்ச் சூத்திரம், விதிச் சூத்திரம், விலக்கியற் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம் என. பெயரே தொகையே என்ப ஆகலின். அவற்றுள் பெயர்ச் சூத்திரமாவது, இடுகுறியானும் காரணக் குறியானும், பொது வகையானும் இலக்கணங்கட்கு ஓர் உபகாரம் நோக்கி, இஃது இதற்குப் பெயர், என்று இடுவது. விதிச் சூத்திரமாவது, இன்ன தொன்றிற் கிதுவாம் என்று முன்னில் லதனை மொழிவ தாகும். விலக்கியற் சூத்திரமாவது, பொது வகையான் விதிக்கப் பட்டதனை அவ்வகை ஆகாது என்பது. நியமச் சூத்திரமாவது, முன் ஒன்றனால் முடிய வைத்துப் பின்னும் அதனையே எடுத்துக் கொண்டு விதிமுகத்தான் விலக்குவதூஉம், விலக்கும் வகையான் விதிப்பதூஉம் ஆம் எனக் கொள்க. அதிகாரச் சூத்திரமாவது, ஆற்றொழுக்கு, *அரிமான் நோக்கம், 1சார்ச்சி வழி ஒழுகுதல், தவளைப் பாய்த்து என்பவற்றுள் ஒன்று ஏற்கும் வகையால் இயைந்து பொருள் விளைப்பது. ஞாபகச் சூத்திரமாவது, எளிதும் சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை அறிவிப்பது. 1பரிபாடைச் சூத்திரம் என்பனவும் உள. அவை ஈண்டுத் 2தந்திர உத்தியுள்ளே பட்டு அடங்கும் எனக் கொள்க. இவற்றை விகற்பித்துப் பல படுத்துச் சொல்வாரும் உளர். முதற் சூத்திரம் நான்கு வகைப்படும்: வழிபடு தெய்வ வணக்கம் செய்தலும், மங்கல மொழி முதல் வகுத்து எடுத்தலும், தொகை வகை விரியால் நுதலிப் புகுதலும், சொல்லத் தகும் பொருளை எடுத்து உரைத்தலும் என. இனிச் சூத்திரம் என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு: ஏற்புடைப் பொருளெலாம் தோற்று மாறு சூத்திரித்து நடத்தலிற் சூத்திரம் எனப்படும் அது வடமொழித் திரிசொல் எனக் கொள்க. சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிப் பல திறத்தானும் உரைப்ப. என்னை? முத்திறத் தானும் மூவிரு விகற்பினும், பத்திவிதத் தானும் பதின்மூன்று திறத்தானும் எழுவகை யானும் இரண்டுகூற் றானும் வழுவுநனி நீங்க 3மாண்பொடும் 4மதத்தொடும் யாப்புறுத் துரைப்பது சூத்திர உரையே என்பது ஆதலின். அவற்றுள் முத்திறமாவன : பொழிப்பு, அகலம், நுட்பம் என இவை. மூவிரு விகற்பமாவன, எடுத்துக் காட்டல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், 5விடுத்தல் என இவை. பத்து விதமாவன, சொல்லே சொற்பொருள் சோதனை மறைநிலை 1இலேசே எச்சம் நோக்கே துணிபே கருத்தே செலுத்தலென் றீரைங் கிளவியும் நெறிப்பட வருவது பனுவல் உரையே என்று ஓதப்பட்டன. பதின்மூன்று திறமாவன: சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் என இவை. எழுவகையாவன : பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் என இவை. இரண்டு கூறாவன: தொகுத்துக் 2கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்து உரைத்தல் என இவை. வழுவாவன: குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்றுதேய்ந் திறுதல், நின்றுபயன் இன்மை - நன். 12 என இவை மாண்பாவன: சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழமுடைத்தாதல்,*உலகம்மலையாமை,முறையின்வைத்தல்,விழுமியதுபயத்தல்,விளங்குதாரணத்ததாகுதல்........... - நன். 13 என இவை. எழுவகை ஆசிரிய மதமாவன: உடன்படல், மறுத்தல், பிறர்தம் மதமேற் கொண்டு †fisjš, தாஅன் நாட்டித் தனாது *நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர் நூற் குற்றம் காட்டல், ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் *கொளலே என இவை. இவ்வகையே புகுந்தன; புகுந்தன பரப்பி உரைப்பான் புகில், 1இகந்துபட்ட உரையிற்றாம்; எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளவற்றுள் யாதானும் ஒரு வகையாற் கேட்போர் உணர்வு புலன் கொள்ளுமாற்றால் எடுத்துக் கொண்ட சூத்திரப் பொருள் உரைக்க வேண்டும் என்பது ஈண்டுத் துணிபு. அஃது ஆமாறு: வெறிகமழ்... யாப்பே என்பது, நறுநாற்றம் கமழும் தாமரைப் பூவின்மேல் நடந்த அறிவனை இறைஞ்சிச் சொல்லுவன் யாப்பு என்றவாறு. ‘ï¥bghUis¢ brhšYnkh ï¢N¤âu¤ bjhl® bkhÊ? என்னில் சொல்லும். என்னை? வெறி என்பது, நறுநாற்றம் என்றவாறு: கமழ் என்பது, நாறுதல் என்ற வாறு; அது, வெறிகமழ், சந்தனம். வெறி கமழ் துழாய் என்றாற் போலக் கொள்க. தாமரை என்றது, தாமரைப்பூ என்றவாறு; இது 2முதலிற்கூறும் சினையறி கிளவி. - தொல். வேற். மயங். 31 தாமரை புரையும் காமர் சேவடி - குறுந்தொகை. கடவுள் வாழ்த்து. என்றாற்போலக் கொள்க. மீமிசை என்பது, மேன்மேல் என்றவாறு. மீமிசை என்பது, ஒரு பொருட்பன்மொழி சிறப்புப்பற்றி வந்தது. என்னை? ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ - நன்னூல். 398 எ‹whuhfÈ‹, அஃது, அடுக்கன் மீமிசை அருப்பம் பேணாது - மலைபடுகடாம். 19. என்றாற்போலக் கொள்க. ஒதுங்கல் என்பது, நடத்தல். அது, போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை - சூளாமணி. ïரத. 96 என்றாற்போலக் கொள்க. எல்லாப் பொருளையும் ஒரு கணத்திற்றானே அறிந்தமையால், அறிவன் என்பது காரணக் குறி ; ஐ என்பது இரண்டாம் வேற்றுமை. வணங்கி என்பது, இறைஞ்சி என்றவாறு. வணங்கி எனினும், இறைஞ்சி எனினும், பணிந்து எனினும் ஒரு தொழில் அறைகுவன் என்பது சொல்லுவன் என்றவாறு. அறைகுவன் எனினும், மொழிகுவன் எனினும், சொல்லுவன் எனினும் ஒக்கும். யாப்பு என்பது, யாப்பு என்னும் அதிகாரம் என்ற வாறு. யாப்பு எனினும், பாட்டு எனினும், தூக்கு எனினும், செய்யுள் எனினும், தொடர்பு எனினும் ஒக்கும். ஏகாரம், தேற்றேகாரம்; பிரிநிலை எனினும், அமையும். என்னை? தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே - தொல். இடை. 9 என்றாராகலின். வழிபடு தெய்வ வணக்கம் செய்து, மங்கல மொழி முதல் வகுத்து எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம் இடுக்கண் இன்றி இனிது முடியும், என்ப ஆகலின், இச்சூத்திரம் இவ்வாறு கூறப்பட்டது எனக் கொள்க. தெய்வ வாழ்த்து முதலிய செய்யுளுள்ளும், ஆதியங் கடவுளை அருமறை *பயந்தனை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை சேதியஞ் செல்வ! நின் றிருவடி *பரவுதும் காமனைக் கடிந்தனை காலனைக் *கடந்தனை தேமலர் மாரியை திருமறு மார்பினை மாமலர் வண்ண! நின் மலரடி வணங்குதும் ஆரருள் பயந்தனை ஆழ்துயர் *தவிர்த்தனை ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை சீரருள் மொழியைநின் றிருவடி பரவுதும் - 1சூளாமணி. இரத. 96-98 எனக் கொள்க. பாயிரம் முற்றியது உறுப்பியல் 1. எழுத்தோத்து யாப்பு க. எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், யாப்பாவது இன்னது, என்று தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும் குற்றமின்றி நடைபெறுவது யாப்பு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது என்றவாறு. உம்மைகள் தொக்கன. ஒடு, எண் ஒடு. ‘ï›ntGW¥ãD« Ô®ªJ ah¥ò c©nlh? எனின், இல்லை. ‘v‹ nghy? எனின், 1முப்பத்திரண்டு உறுப்பொடு புணர்ந்தது மக்கட் சட்டகம் என்றால், முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட்சட்டகம் இல்லை. அதுபோல எனக் கொள்க. அல்லதூஉம், பிறரும் கூறினர். என்னை? யாப்பெனப் படுவ தியாதென வினவின் தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணுங்கி யோரே என்றார் நற்றத்தனார். இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி யாப்பியல் தானே யாப்புற விரிப்பின், எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே என்றார் பல்காயனார். இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப. அவற்றுள் காரணக்குறியான் வழங்குமாறு: எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து அசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு *தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு *தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை *தூக்கில் தொடர்ந் திசைத்தலின் தூக்கெனப் படுமே யா. கா. 1. மேற். என்றான் ஆசிரியர் எனக் கொள்க. ‘ïit ï«Kiwna it¤jj‰F v‹idnah fhuz«? எனின், எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின், சிறப்புடைத்து என்று முன் வைத்தார். என்னை? சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல் என்பது தந்திர உத்தி ஆகலான். எழுத்தின் பின்னர் அசை வைத்தார், அசை எழுத்தினான் ஆமாகலின். அசையின் பின்னர்ச்சீர் வைத்தார். சீர் அசையினான் ஆமாகலின். சீரின் பின்னர் தளை வைத்தார் தளை சீரினான் ஆமாகலின் தளையின் பின்னர் அடி வைத்தார், அடி தளையினான் ஆமாகலின். அடியின் பின்னர்த் தொடை வைத்தார், தொடை அடியினான் ஆகமாலின். தொடையின் பின்னர்த் தூக்கு வைத்தார், தூக்குத் தொடையினான் ஆமாகலின். தூக்கு எனினும்? பாட்டு எனினும், பா எனினும் ஒக்கும். என்னை? *தூக்கும் பாட்டும் பாவும் ஒன்றென நோக்கிற் றென்ப நுணங்கி யோரே என்றார் பல்காயனார் ஆகலானும், பாவென மொழியினும் தூக்கினது பெயரே என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. எழுத்தசை சீர் தளை அடிதொடை தூக்கோ டியாப்பு என்னாது, இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே, என்றமை யான், அவை முற்றிய ஆறு உறுப்பிற்று ஆயினும், குற்றமின்றி நடைபெறுவது யாப்பு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, எனக் கொள்க. ‘áw¥ò v‹gJ v‰wh‰ bgWJ«? எனின், என என்னும் சொல்லாற் பெறுதும். ‘mJ áw¥ãid¡ TWnkh? எனின், கூறும்; என்னை? நளியிரு முந்நீர் ஏணி யாக என்னும் புறப்பாட்டினுள், (35) முரசுமுழங்கு தானை மூவி ருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும எனவும், ஆடுகழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே யத்தை எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும், நாடெனப்படுவது சோழநாடு ஊரெனப்படுவது உறையூர் என்று 1பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல் லுவார், ஆகலானும் எனக் கொள்க. எனவே, எழுத்துக் குற்றம் முதலாக உடைய செய்யுள் யாப்பு என்று கூறப்படாது என்பது பெறப்பட்டதாயிற்று எனக் கொள்க. அஃதே எனின், எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்காதது யாப்பெனப் படுமே என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். நடையதி யாப்பு என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், *வனப்புடைத் தொடக் கத்து ஒருசாரனவும் யாப்புறுப்பு, என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. அவை 2போக்கி, நிரனிறை முதலிய பொருள்கோட் பகுதியும் 3என்னும் ஒழிபியற் சூத்திரத்துட் சொல்லுதும். 1நாதன் முதலாக நல்லுறுப் பேழியைந் தேதமில் *தன்மை இயலரசாம்; - தாதுக்கள் ஏழும் புணர்ந்த தியாக்கை; எழுத்தாதி ஏழும் புணர்ந்த தியாப்பு தொல்காப் பியல்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்; பல்காய னார்பகுத்துப் பன்னினார்; - நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து இவற்றை விரித்துரைத்துக் கொள்க. அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை உ. உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா குறிலே நெடிலே அளபெடை யென்றா வன்மை மென்மை இடைமை யென்றா சார்பில் தோன்றும் தன்மைய வென்றா ஐஔ மகரக் குறுக்கம் என்றாங்கு ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே. v‹gJ v‹ Ejȉnwh? எனின், அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களினது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உயிரும், மெய்யும், உயிர்மெய்யும், குறிலும், நெடிலும், அளபெடையும், வன்மையும், மென்மையும், இடைமையும், சார்பில் தோன்றும் இயற்கைய மூன்றும், ஐகாரக் குறுக்கமும், ஔகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும் என்றிப் பதினைந்து திறத்து எழுத்தும் அசைக்கு உறுப்பாவன என்றவாறு. உயிராவன, அகரம் முதல் ஔகாரம் ஈறாய்க் கிடந்த பன்னிரண்டு எழுத்தும் எனக் கொள்க. என்னை? அகரம் முதலா ஔகாரம் ஈறா 2இசையோடு புணர்ந்த ஈராறும் உயிரே என்பது சங்க யாப்பு ஆகலின். மெய்யாவன, ககரம் முதல் னகரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும் எனக் கொள்க. என்னை? ககரம் முதலா னகரம் ஈறா இவையீ ரொன்பதும் மெய்யென மொழிப என்பது சங்க யாப்பு ஆகலின். மெய் எனினும், உடம்பு எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். உயிர்மெய்யாவன, உயிரும் மெய்யும் கூடின எழுத் தெனக் கொள்க. என்னை? உயிரும் மெய்யும் புணர்ந்த புணர்ச்சி உயிர்மெய் என்றாங் குணர்ந்தனர் கொளலே எனவும், உயிரும் மெய்யும் 1ஓராங் கியைந்த உயிர்மெய் என்ப உணர்ந்திசி னோரே எனவும், 2உயிரின் அளபே அளபென மொழிப எனவும், உயிரின் அளவுயிர் மெய்யென மொழிப வழக்கொடு வரூஉங் காலை யான எனவும் சொன்னார் தொல்லாசிரியர் ஆகலின். பதினெட்டு மெய்மேலும் பன்னிரண்டு உயிரும் ஏற இருநூற்று ஒருபத்தாறு உயிர்மெய்யாம். என்னை? உயிரீ ராறே; மெய்மூ வாறே; அம்மூ வாறும் உயிரொ 3டுயிர்ப்ப இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே என்பது பல்காயம் ஆகலின். குற்றெழுத்தாவன, அ, இ, உ, எ, ஒ என்னும் இவ்வைந்தும் எனக் கொள்க. என்னை? குறிலோ ரைந்தும் அறிவுறக் கிளப்பின் அஇ உஎ ஒஎனும் இவையே என்பது சங்க யாப்பு ஆகலின். நெட்டெழுத்தாவன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் இவ்வேழும் எனக் கொள்க. என்னை? ஆஈ ஊஏ ஐஓ ஔவெனும் ஏழும் நெட்டெழுத் தென்றல் இயல்பே என்பது சங்க யாப்பு ஆகலின். அஇ உஎ ஒஇவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப்படுமே 1குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும்; 2நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம்; இருநூற் றிருபத் தெட்டு விரிந்தன உயிரே வன்மை மென்மை இடைமை இவை அவிநயம். அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளை கெட நின்றவிடத்து 3யாப்பிழியாமைப் பொருட்டு வேண்டப்பட்டன. என்னை? மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் என்றார் ஆகலின். அவ்வளபெடை தான் இரண்டு வகைப்படும்: உயிரள பெடையும். ஒற்றள பெடையும் என. என்னை? உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென்று ஆயிரண் டென்ப அளபெடை தானே என்றார் ஆகலின். உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு மிடத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தமக்கு இனமாகிய குற்றெழுத்தினோடு அளபெடுக்கும். ஐகாரம், இகரத்தோடு அளபெடுக்கும். ஔகாரம், உகரத்தோடு அளபெடுக்கும், என்னை? குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் 4திம்பர் ஒத்தகுற் றெழுத்தே ஐஔ என்னும் ஆயீ ரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும் என்றார் தொல்காப்பியனார் ஆகலின். (எழுத்து. 41, 42) அவ்வளபெடைதான் நான்கு வகைப்படும்: தனிநிலை அளபெடையும், முதல் நிலை அளபெடையும், இடைநிலை அளபெடையும், இறுதிநிலை அளபெடையும் என. என்னை? தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே என்றார் ஆகலின். அவை வருமாறு: (1) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ - என நெட்டெழுத்து ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தவாறு. (2) பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஔஉவை என ஏழு நெட்டெழுத்தும் முதல்நிலை அளபெடையாய் வந்தவாறு. (3) 1 படாஅகை, 2 பரீஇகம், 3 கழூஉமணி,4 பரேஎரம், 5உளைஇயம், 6புரோஒசை,7 மனௌஉகம் - என ஏழு நெட்டெழுத்தும் இடைநிலை அளபெடையாய் வந்தவாறு. (4) 8படாஅ,9 குரீஇ,10கழூஉ,11விலேஎ, 12விரைஇ,13 நிலோஒ, 14அனௌஉ - என ஏழு நெட்டெழுத்தும் இறுதிநிலை அளபெடையாய் வந்தவாறு. ஒற்றளபெடை போக்கித், தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே, என்னும் சூத்திரத்துள் (3) காட்டுதும். குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை? குறிலொரு மாத்திரை, நெடிலிரு மாத்திரை அளபெடை மூன்றென் றறியல் வேண்டும் என்பது பல்காயம் ஆகலின். மாத்திரையாவது, கண் இமைத்தலொடு கைந்நொடித்தல் ஒத்தகாலம், என்னை? கண்ணிமை நொடியென 1அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே - தொல். எழுத்து. 7 என்றார் தொல்காப்பியனார். கண்ணிமை கைந்நொடி என்றிவை இரண்டும் மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை என்றார் சங்கயாப்புடையார். 2 ஒன்றிரண் டொருமூன் றொன்றரை அரைகால் என்றனர் பொழுதிவை இமைநொடி அளவே யா. கா. 4 மேற். என்றார் பிறரும். விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும், அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின், அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினாரில்லை எனக் கொள்க. வன்மையாவன, க, ச, ட, த, ப, ற என்னும் ஆறும். மென்மையாவன, ங, ஞ, ண, ந, ம, ன என்னும் ஆறும். இடைமையாவன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும் என்னை? வன்மை என்ப க ச ட த ப ற; மென்மை என்ப ங, ஞ, ண, ந, ம, ன; இடைமை என்ப ய ர ல வ ழ ள அவைதாம், புள்ளியொடு நிற்றல் இயல்பென மொழிப; புள்ளியில் காலை உயிர்மெய் ஆகும் என்பவை சங்க யாப்பு ஆகலின். அவை ஒரோ 3ஒன்று அரையரை மாத்திரை எனக் கொள்க. என்னை? 4உறுப்பின் அளவே ஒன்றன் பாகம் என்றார் கையனார். அரைநொடி அளவின் அறுமூ 5வுடம்பே 1அரைநொடி என்ப தியாதென மொழியின், நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே என்றார் சங்கயாப்புடையார். சார்பில் தோன்றும் தன்மைய ஆவன, குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் என இவை. என்னை? குற்றிய லிகரம், குற்றிய லுகரம், ஆய்தப் புள்ளி என்றிவை மூன்றும் சார்பில் தோற்றத் துரிமையு முளவே என்ப ஆகலின். 2ஏழிடத்து ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால், அதனைக் குற்றியலுகரம் என்று வழங்குப. என்னை? எழுவகை இடத்தும் குற்றிய லுகரம் வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே - யா.கா.4.மேற் என்பது பல்காயம் ஆகலின். எழுவகை இடமாவன, நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணைக் ஒற்றின் கீழும், குறில் நெடிற் கீழும், குறில் நெடில் ஒற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என இவை. என்னை? நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்று ஏழ்குற் றுகரக் கிடனென மொழிப என்றார் ஆகலின். அவை வருமாறு: 3நாகு, 4காசு, காடு, காது, 5காபு, 6காறு- என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. நாக்கு, 1காச்சு, 2காட்டு, காத்து, காப்பு, காற்று - என நெடிலொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு வரகு, முரசு, 3முருடு, மருது, 4துரபு, 5கவறு - எனக் குறிலிணைக்கீழ் ஆறு வல்வெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. அரக்கு, பொரிச்சு, 6தெருட்டு, குருத்து, 7பொருப்பு, 8சிரற்று - எனக் குறிலிணை ஒற்றின்கீழ் ஆறு வல்லெழுத் தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. அசோகு, 9பலாசு, 10மலாடு, கெடாது, 11புதாபு, 12விராறு - எனக் குறில் நெடிற் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. நமாக்கு, 13தடாச்சு, 14பனாட்டு, கெடாத்து, புதாப்பு, விராற்று- எனக் குறினெடில் ஒற்றின்கீழ் ஆறு வல்வெழுத் தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. நக்கு, 15கச்சு, கட்டு, கத்து, 16கப்பு, கற்று-- எனக் குற்றொற்றின் கீழ் ஆறு வல்வெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. அக்குற்றியலுகரந்தான் வருமொழிக்கு முதலில் யகரம் வந்தால், திரிந்து குற்றியலிகரம் ஆம். என்னை? 17யகரம் முதல்வரின் உகரம் ஒழிய இகரமும் குறுகும் என்மனார் புலவர் என்றார் பல்காயனார். வல்லெழுத் தாறோ டெழுவகை இடத்தும் உகரம் அரையாம்; யகரமோ டியையின் இகரமும் குறுகும் என்மனார் புலவர் - யா.கா.4 மேற். என்றார் அவிநயனார். அவை வருமாறு: நாகியாது, காசியாது, காடியாது, காதியாது, காபியாது, காறியாது என வந்தவாறு. ஒழிந்தனவும் இவ்வாறே 1ஒட்டிக்கொள்க ; பிற வாற்றானும் கண்டுகொள்க. மியா என்னும் முன்னிலை அசைச் சொற்கண் வந்த இகரமும் குற்றியலிகரமாம். என்னை? குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே - எழுத்து. 34 என்றார் தொல்காப்பியனார் ஆகலின். வரலாறு: 2கேண்மியா, 3சென்மியா எனக் கொள்க; பிற வகையானும் வந்தவழிக் கண்டு கொள்க. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறும். என்னை? குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே என்பது சங்கயாப்பு ஆகலின். 4உயிருள் எகரமும் ஒகரமும் புள்ளி பெறும். என்னை? மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் - எழுத்து. 15 எகர ஒகரத் தியற்கையும் அற்றே - எழுத்து. 16 என்றார் தொல்காப்பியனார் ஆகலின். 5சார்பிற்றோற்றத்த மூன்றும் அரையரை மாத்திரை உடைய எனக் கொள்க. என்னை? மெய்யின் அளவே அரையென மொழிப - எழுத்து. 11 அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே - எழுத்து. 12 என்றார் தொல்காப்பியனார் ஆகலின். ஆய்தம் ஒரு மொழியில் வருகின்றுழிக் குற்றெழுத்தின் கீழாய், உயிர் மெய்யாகிய வல்லெழுத்தினைச் சார்ந்து வரும். என்னை? குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே - எழுத்து . 38 என்றார் தொல்காப்பியனார். ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல்வந் தியலும் என்ப என்றார் கையனார். அவை வருமாறு, 1அஃகம், 2வெஃகா,3 கஃசு, 4கஃடு, கஃது, கஃபு, 5கஃறு - எனக்கொள்க. தொடர் மொழியுள்ளும் அவை வருமாறு வந்த வழிக் கண்டு கொள்க. ஆய்தம் எனினும், அக்கேனம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும். என்னை? அக்கேனம் ஆய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே - யா. கா. 4 மேற். என்றார் அவிநயனார் ஆகலின். இனி ஐகார ஔகாரக் குறுக்கம் ஆமாறு : அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார ஔகாரம் என்பன தம் அளவிற் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒரு பொருளைச் சொல்லுதற்கண். ஒன்றரை மாத்திரையாம். என்னை? *பா.வே.சரி அளபெடை தனியிரண் டல்வழி ஐஔ உளதாம் ஒன்றரை. *தனிமையும் ஆகும் - யா. கா. 4. மேற். என்றார் அவிநயனார். அவை மொழிக்கு முதலும், இடையும், இறுதியும் நின்றவழிக் குறுகுவ எனக் கொள்க. வரலாறு : ஐப்பசி, 6மைப்புறம், 7ஐக்கட்டி எனவும், 1பௌவம், 2மௌவல், 3கெளவை எனவும் ஐகார ஔகாரம் முதல் நின்று ஒன்றரை மாத்திரை ஆயினவாறு. இடையன், மடையன், உடைவாள், கடைவாள் எனவும், சிறுதலை 4நௌவிமான், நறுமலர் 5வௌவினார், ஒல்லென் பௌவம், கல்லென் கெளவை எனவும் இடைநின்ற ஐகார 6ஔகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு. குவளை, தவளை, தினை, பனை எனவும், அந்தௌ, அன்னௌ எனவும் இறுதி நின்ற ஐகார ஔகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு. பை, மை, கை, வை, தை எனவும் கௌ, சௌ, வௌ எனவும், 7தனியே நின்ற ஐகார ஔகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு கண்டு கொள்க. இனி, மகரக் குறுக்கம் ஆமாறு : மகரம் ஒரோவிடத்து அரை மாத்திரையிற் சுருங்கிக் கால் மாத்திரையாம். என்னை? 8அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையிட னருகும் தெரியுங் காலை -எழுத்து. 13 என்பது தொல்காப்பியம். அது வகரமோடு கூட்டத்தின் கண் குறுகும். என்னை? வகார மிசையும் மகாரம் குறுகும் - எழுத்து. 330 எனத் தொல்காப்பியரும், வகரமோ டியையின் மகரமும் குறுகும் எனப் பிறருங் கூறினார் ஆகலின். வரலாறு : வரும் வளைகாரன், தனம் விளைநிலம், வாழும் வணிகன், சூழும் வாவிகள்- எனக் கொள்க. பிற வகையானும் வந்தவழிக் கண்டுகொள்க. சார்பிற் றோன்றும் தன்மைய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், அகரத்தோடு யகர ஒற்று வந்தும், ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாம். அகரத்தோடு உகரம் வந்தும், வகர ஒற்று வந்தும் ஔகாரத்தின் பயத்தவாம். என்னை? ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே ஐயென் எழுத்தோடு மெய்பெறத் தோன்றும் உவ்வொடு வவ்வரின் ஔவிய லாகும் என்றார் அவிநயனார். வரலாறு : அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் - என அகரத்தோடு யகர ஒற்று, ஐயன், 1கைதை, தையல், மையல், கையன் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு. கஃசு, கஃதம், கஃசம் - என அகரத்தோடு ஆய்தம் வந்து, கைசு, கைதம், கைசம் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு. அவ்வை, நவ்வி, அஉவை, நஉவி-என அகரத்தோடு வகர ஒற்றும் உகரமும் வந்து, ஔவை, நௌவி என்னும் ஔகாரத்தின் பயத்தவாயினவாறு. இனி, அசைக்கு உறுப்பே என்பதில் ஏகாரம் ஈற்றசை ; அல்லன எண்ணேகாரம். என்னை? தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே - தொல். இடை. 9 என்ப ஆகலின். என்றா என்பது, எண்ணிடைச்சொல். என்னை? உம்மை தொக்க எனாவென் கிளவியும் ஆவீறாகிய என்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன -தொல். இடை. 41 எனத் தொல்காப்பியரும், குற்றொற் றென்றா நெட்டொற் றென்றா ஒற்றே உயிரே என்மனார் புலவர் எனப் பிறரும் சொன்னார் ஆகலின். ஆங்கு என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஓரெழுத்தே ஒரு பொருளைப் பயந்து நிற்பது சிறப்பெழுத்து என்றும், இயைந்து பொருள் பயப்பது உறுப்பெழுத்து என்றும் வழங்கப்படும் எனக் கொள்க. எழுத்தெல்லாம் ஒற்றும், உயிரும், உயிர்மெய்யும் என அடங்குவனவற்றை இவ்வாறு விகற்பித்துச் சொல்லியது, எழுத்துக்களது பெயர் வேறுபாடுகள் எல்லாம் அறிவித்தற்கும், அப்பெயரால் பெயராக்கி ஆளுதற்கும் எனக் கொள்க. அல்லதூஉம், பிறரும் விகற்பித்துச் சொன்னார் எனக் கொள்க. என்னை? குறினெடில் அளபெடை உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையொ டாய்தம் இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோடு அப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும் - யா. கா. 4. மேற் என்றார் காக்கைபாடினியார். குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக் கெழுத்தே என்றார் சிறுகாக்கைபாடினியார். நெடிய குறிய உயிர்மெய் உயிரும் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கோ டாமசைக் கெழுத்தே என்றார் அவிநயனார். குறினெடில் ஆய்தம் அளபெடையை காரக் குறில்குற் றிகர உகரம் - மறுவில் உயிர்மெய் விராய்மெய்யொ டாறா றெழுத்தாம் 1செயிர்வன்மை மென்மை 2சமன் என்பது நாலடி நாற்பது எழுத்துப் புறனடை. உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக் குறினெடில் அளபெடை மூவினம் எனாஅ 3அஃகிய நாலுயிர் மஃகான் குறுக்கமோடு 4ஐந்துதலை யிட்ட ஐயீ ரெழுத்தும் அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே இது பெரிய பம்மம். குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றுகர ஆதி குறுகிய ஐஔமவ் வாய்தம் - நெறிமையால் ஆய்ந்த அசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையால் ஏய்ந்தன நானான் கெழுத்து. இது நாலடி நாற்பது அசைப் புறனடை. இவ்வெழுத்துக்களாற் செய்யுள் வருமாறு : 5ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ கையாயோ ஐயா களிறு. இஃது உயிர் மிக்கு வந்த செய்யுள். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. - குறள். 350 இது மெய் மிக்கு வந்த செய்யுள். படைகுடி 6கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு. - குறள். 381 இஃது உயிர்மெய் மிக்கு வந்த செய்யுள். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. - குறள். 391 இது குற்றெழுத்து மிக்கு வந்த செய்யுள். யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் 7சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. - குறள். 127 இது நெட்டெழுத்து மிக்கு வந்த செய்யுள். 1ஏஎர் சிதைய 2அழாஅல் 3எலாஅநின் 4சேஎயரி சிந்திய கண். - யா. கா. 37 மேற். இது 5நான்கு அளபெடையும் வந்த செய்யுள். 6தெறுக தெறுக தெறுபகை 7தெற்றாற் பெறுக பெறுக பிறப்பு. இது வன்மை மிக்கு வந்த செய்யுள். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். - குறள். 742. இது மென்மை மிக்கு வந்த செய்யுள். வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வார் ; 8அயலுழுவார் வாழ்வாருள் வாழா தவர். இஃது இடைமை மிக்கு வந்த செய்யுள். குருத்துக் 9குறைத்துக் கொணர்ந்து நமது 10கருப்புச் செறுப்புப் பரப்பு இது குற்றியலுகரம் வந்த செய்யுள். குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர் - குறள். 66 இது குற்றியலிகரம் வந்த செய்யுள். சிலையன் செழுந்தழையன் 11சென்மியா என்று மலையகலான் 12மாடே வரும் இதுவும் குற்றியலிகரம் வந்த செய்யுள். 13அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 14வெஃகி 15வெறிய செயின் - குறள் 85 இஃது ஆய்தம் வந்த செய்யுள். படுமழைத் தண்மலை வெற்பன் உறையும் நெடுந்தகையைக் கண்டதாம் நாள் இஃது ஐகாரக்குறுக்கம் வந்த செய்யுள். நௌவிமான் நோக்கினார் 16அவ்வாய் மணிமுறுவல் வௌவாதார் கெளவை இலர் இஃது ஔகாரக் குறுக்கம் வந்த செய்யுள். 1ஔவித் தழுக்கா றுடையானைச் 2செய்யவன் 3தெளவையைக் காட்டி விடும் - குறள். 167 இதுவும் ஔகாரக் குறுக்கம் வந்த செய்யுள். தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள் தந்தம் வினையான் வரும் - குறள். 63 தாம்வீழ்வார் தாம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் 4காழில் கனி - குறள். 1191 இவை மகரக் குறுக்கம் வந்த செய்யுள். மகரக் குறுக்கத்துக்குப் பயன் மாபுராணம் உடையார் எடுத்து ஓதினார். என்னை? 5கழிநெடில் அசையும் 6காலெழுத் தசையும் பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர் என்றார் ஆகலின். ஆய்தமும் ஒற்றாய் அடங்கினும் ஆங்கதனை ஓதினார் தொன்னூல் உணர்வுடையோர் - நீதியால் ஒற்றாய் அடங்குகினும் உன்கால வேற்றுமையால் சொற்றார் 7மகரச் சுருக்கு. எனவும், மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கும் நனியென்னின் - ஐயென்ப தாவி என வடங்கும் அஃகிற் றெனின் 8மகரத் தேய்விற்கும் அஃதே திறம் எனவும், உயிரென்ற சொல்லானே ஒன்பதாம் ஆவி 9செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலால் என்னிற் குணம்புரிந்தார் ஔவுந்தான் குன்றுதலாற் கூறப் படும் எனவும், கால விகற்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுள் மூல வியனூல் முறைமையால் - ஞாலத்துள் எல்லாம் எடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் *சொல்லாதார்க் காகுமோ தோம்? எனவும், அசையாக்கும் தன்மையவே அன்றித் தொடையோ டிசையாக்கும் ஏனையவும் சொற்றார்- இசைதொடை *தோம் ஆக்கும் எழுத்தனைத்தும் சொன்னார் அசைமுகத்தால் தூக்கியநூற் கேற்பத் தொகுத்து எனவும், குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும் அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் - வறிதே *உயிர்மெய்யும் மூவினமென் றோதினார் என்று செயிரவர்க்கு நின்றதோ சென்று? எனவும், வடாது தெனாதென்று வைத்ததனால் மற்றாண் டெடாதனவும் சொற்றார் இனத்தாற் - கெடாததுபோல் மஃகான் குறுக்கம் வகுத்ததனால் மாட்டெறிந்தார் 1அஃகாய்தந் தானும் அசைக்கு எனவும், ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்2 கந்த தீபகா நையா தகாரம் நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோர்கள் தாமே புணர்த்ததூஉம் 3குற்றாய்தம் தானும் கொளற்கு எனவும், சிறப்புடைய அல்ல எனவிவற்றுட் கொள்ப சிறப்புடைய என்பவே சிந்தித் - துறுப்பசைக்கண் காலளவாம் ஒற்றினையும் கைக்கோடல் காரணமா நூலளவிற் சொற்றார் நுனித்து. எனவும், ஐம்மூ வெழுத்தும் அசைக்குறுப்பாம் என்பதற்கண் உம்மைதாம் எச்சம் எனவுரைப்பார் - ஐம்மூன்றின் மிக்கனவும் கைக்கோடல் வேண்டி வியன்பொருளை மெய்ப்படுக்கும் ஆங்கே விதப்பு எனவும், மகரக் குறுக்கம் வகுத்ததுதான் ஆய்தக் கிகரக் குறுக்கம் முதலாப் - புகரற்ற நாலொன்றும் எண்ணாதே நாட்டுதற்கு ஞாபகமாய் நூலொன்றி நிற்றற் பொருட்டு எனவும் போந்த இவற்றை விரித்துரைத்துக் கொள்க. இன்னும் மகரக் குறுக்கத்திற்குப் பயன்; *மரபுணர்த்துமிடத்துக் கண்டு கொள்க. ஈண்டு உரைப்பிற் பெருகும். (2) ஆய்தத்திற்கும் ஒற்றிற்கும் சிறப்பு விதி ஙு. தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், மேற்சூத்திரத்துள் பொது வகையானே எல்லா எழுத்தும் அசைக்கு உறுப்பாம் என்றார். அவற்றுள் சிலவற்றை விலக்கி, ஒரோ வழியே ஆமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். இச்சூத்திரம், ஆய்தத் திற்கும் ஒற்றிற்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ. ள்.) ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகு காரியம் பெறா அளபெழுந்தவழி அல்லாது, என்றவாறு. எனவே, ஆய்தமும் ஒற்றும் 1ஒரோஒன்றேயாய் நின்று அலகுபெறா, என்பதாம். கார்க்கடல், 2கார்க்கோதை, கதிர்ச்செந்நெல், கடாய்க் கன்று, என இவற்றுள் இரண்டு ஒற்று ஒருங்கு நிற்பினும், ஒரு மாத்திரையுடைய எழுத்தின் பயத்தவாய அலகு காரியம் பெறுங்கொலோ? எனின், பெறா என்பதூஉம் பெறப்பட்டது. என்னை? அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் அலகியல் பெய்தா என்மனார் புலவர். என்றார் அவிநயனார் ஆகலின். ஒற்றள பெழாவழிப் பெற்றவல கிலவே எனவும், 1ஈரொற் றாயினும் 2மூவொற் றாயினும் ஓரொற் றியல என்மனார் புலவர் - யா. கா. 36. மேற் எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க. ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகு பெறா, எனவே, வேறோர் எழுத்தோடு கூடி நின்ற பொழுது அலகு பெறும், என்பதாயிற்று என்னை? தேவதத்தன் தானாகப் போகலான், என்றால், துணை பெற்றால் போம், என்பதாம்; அதுபோலக் கொள்க. அவை வருமாறு: தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான எனவே, தனிநிலை ஒற்றிவை தாமலகு பெறூஉம் அளபெடை ஆகிய காலை யான என்பது பெறப்பட்டது என்பதாயிற்று. காக்கைபாடினியாரும். ஆய்தமும் ஒற்றும் அளபெழ நிற்புழி வேறல கெய்தும் விதியின ஆகும் - யா. கா. 36. மேற். என்றார் எனக் கொள்க. தாம் அலகிலவே என்றவழி ஏகார விதப்பினால், ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து குற்றெழுத்தின் பயத்தவாய் ஓர் அலகு பெறுவது அல்லது, முன்னும் பின்னும் நின்ற எழுத்தினோடு புணர்ந்து நிரையசை ஆகா எனக் கொள்க. இவை என்னும் சுட்டு விதப்பினால், ஒற்றினுள் அளபெழுவன, தாம் என்ப தனாற் பெறப்பட்ட ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள என்னும் பத்து மெய்யும், ஆய்தமும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் வந்து, இறுதிநிலை அளபெடையும் இடைநிலை அளபெடையும் அன்றி ஆகா எனக் கொள்க. என்னை? ஙஞண நமன வயலள ஆய்தம் ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான - யா. கா. மேற். என்றார் பிறரும் எனக் கொள்க. அவை வருமாறு : மங்ங்கலம், 3மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு; 4தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு - என ஆய்தத்தோடு பதினோரொற்றும் குறிற்கீழ் அளபெழுந்தவாறு. அரங்ங்கம், உரிஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, 1முரன்ன்று, 2குரவ்வ்வை, 3அரய்ய்ர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு - என ஆய்தத்தோடு பதினோரொற்றும் குறிலிணைக் கீழ் அளபெழுந்தவாறு. இவ்விருபத்திரண்டு 4புள்ளி அளபெடையும் செய்யுளகத்து அல்லது 5பரவை வழக்கினுள் வாரா எனக் கொள்க. என்னை? மாத்திரை வகையாற் 6றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் - யா. கா. 4. மேற். என்றார் ஆகலான். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: 7எஃஃகின் அஃஃகிய 8எஃஃகுணர் நாவினார் 9வெஃஃகின் வெஃஃகுவர் வீடு எனவும், 10எஃஃகி லங்கிய கையராய் இன்னுயிர் 11வெஃஃகு வார்க்கில்லை வீடு - யா. கா. 36. மேற். எனவும் ஆய்தம் அளபெழுந்து நேரசை ஆயினவாறு கண்டு கொள்க. கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு ; பொன்ன் 12பொறிசுணங்கு ; 13போழ்வாய் இலவம்பூ ; மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன். *பிறமகளா மாறு? - யா. கா. 36. மேற். - தொல். உவம். 3. மேற். பேரா. எனவும், அம்ம் பவள்ள் வரிநெடுங்கண் ; ஆய்வஞ்சிக் கொம்ம் பவள்ள் கொடி 14மருங்குல் ; கோங்கின் அரும்ம் பவள்ள் முலையொக்கும் ; ஒக்கும் கரும்ம் பவள்வாயிற் சொல் -15 யா. கா. 7. மேற். எனவும், வாளேர் தடங்கண் வகையாலும், 1வைகலும் வாளா விருக்கும் வகையாலும் - நாளும் விழைந்ந்து *வேறொன்று சிந்திப்பாள் போலும் குழைந்ந்த கோதை குறிப்பு எனவும், கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும் - மலைபடு. 352. எனவும் 2ஒற்று அளபெழுந்து நேரசை ஆயினவாறு. பிறவும் வந்துழிக் கண்டு கொள்க. ஆய்தமும் ஒற்றெனப் பெற்றசை யாக்கமென் றோதி னாருள ராகவும் ஒண்டமிழ் நாத ராயவர் நா3 நலி போசையிற் கேது வென்றெடுத் தோதினர் என்பவே - தொல். செய். 223 எனவும், நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும் எனவும் கூறினார் ஆகலின். 4மறையவரும் வந்தார் வசிட்டரும் வந்தார் குறைவின்றிக் கொண்டாடல் வேண்டும்- மறையவருள் மிக்க விழுக்குணங்கள் நோக்கி வியநிலத்து மக்கள் வசிட்டரா மாறு பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இகர உகரக் குறுக்கங்களுக்கும் உயிரளபிற்கும் சிறப்பு விதி 4. தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் 1அளபெடை ஆவியும் அலகியல் பிலவே. இச்சூத்திரம், குற்றியலிகரம், குற்றியலுகரம், உயிரள பெடைகட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தளையும், சீரும், வண்ணமும் சொன்ன இலக்கணத்தோடு மாறுகொள்ள வருமே எனின், குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம் பெற எனக் கொள்க, என்றவாறு. எனவே. எதிர் மறுத்தல் என்னும் இலக்கணத்தால், தளைசீர் வண்ணம் தாம்கே டில்வழிக் குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பினவே என்பதாயிற்று. இதன் கருத்து, தளையும், சீரும், வண்ணமும் ஆமாறு சொன்ன இலக்கணத்தோடு மாறு கொள்ளாது ஓர் உப காரம்பட நிற்பின், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உயிரள பெடையும் அலகுகாரியம் பெறும், என்றவாறு. தளை சீர் வண்ணம் ஆமாறு சொன்ன இலக்கணமும் தளை சீர் வண்ணம் எனப்படும், உபசார வழக்கினால்; குண்டல நீல பிங்கல கேசிகளது தோற்றமும் தொழிலும் சொன்ன செய்யுட்களும் வேறொரு வழக்கினால் குண்டகேசி, நீலகேசி, பிங்கலகேசி என்னும் பெயர் பெற்றாற் போல எனக் கொள்க. தளைசீர் வண்ணம் என்புழி உம்மை தொகுத்து நிறுத்துப் பின்னர்க் குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் என்று உம்மை விரித்து, ஒரு நெறியின்றிச் சொல்ல வேண்டியது என்னை? எனின், ஈண்டு நிரனிறை என்னப்படாது, 2கூடுமாற்றாற் கொள்ளப்படும், என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவை வருமாறு: குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர் - குறள்- 66 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் 254 என்ற இவற்றுள் குழலினி தியாழினிது எனவும், அருளல்ல தியாதெனில் எனவும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு, வெள்ளையுட் பிறதளை விரவா (யா. வி. 22) என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின், ஆண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறா என்று விலக்க, வெண்டளையாம். அருளல்ல தியாது என்புழிக் குற்றியலிகரம் ஆமாறு. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல - தொல். எழுத்து. 50 என்பதனாற் கொள்க. சிறுநன்றி யின்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி 1தானவாய்ச் செய்வதூஉம் 2தானமன் றென்பவே 3வானவாம் உள்ளத் தவர் - யா. கா. 36. மேற். என இதனுள் இன்றிவர்க்கியாம் செய்தக்கால் என்புழிக் குற்றியலிகரம் வந்து வஞ்சியுரிச்சீர் ஆயிற்று. இது வெண்பா வினுள் விரவுக என்னும் ஓத்து இல்லாமையால், வெண்பா அழிய நிற்கும். ஆண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறாது என்று களைய, வஞ்சியுரிச்சீர் அன்றாம். இனிக் குற்றியலுகரத்திற்குச் செய்யுள் வருமாறு : கொன்றுகோடுநீடு; *குருதி பாயவும் சென்று; *கோடுநீடு செழுமலை பொருவன வென்றுகோடுநீடு விறல்வேழம் என்றுமூடு நீடு பிடியுளபோலும் அதனால், இண்டிடை இரவிவண் நசைஇவரின் வண்டுண் கோதை உயிர்வா ழலளே - யா. கா. 36. மேற். - தொல். செய்யு. 46. மேற். பேரா. என 1இக்குறளடி வஞ்சிப்பாவினுள் குற்றுகரம் வந்து ஆறசைச் சீரும் ஐயசைச் சீரும் ஆயின. இவ்வாறு வருக என்னும் இலக் கணம் இன்மையால் ஆண்டுக் குற்றியலுகரங்களை இவ்விலக் கணத்தால் அலகு பெறா என்று களையச் சீர் சிதையா தாம். 2தாழிரும் பிணர்த்தடக்கை என்னும் இருசீரடி வஞ்சிப்பா வினுள், எனைப்பல எமக்குத்தண்டாது என ஐயசைச்சீர் வந்ததனுள் குற்றுகரத்தை அலகு பெறாது என்று களையச் சீர் சிதையாதாம். 3நலஞ்செலத் தொலைந்து புலம்பொடு பழகி என்னும் பாட்டினுள், குண்டுநீடுநீர்க் குவளைத் தண்சுனை, குறித்துக் கூடுவோர் நெறிமயங்கவும் எனவும், போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம், புரிந்துவாங்குவீங்கு நரம்பிமிர்தலின் எனவும் வந்த வஞ்சியடிகளுள்ளும் குற்றுகரங்களே அலகு பெறா என்று களையச் சீர் சிதையாதாம். பிறவும் அன்ன. இவற்றுக்கு இலக்கணம் ஓத வேண்டியது என்னை? F‰¿fu¡ F‰Wfu§fŸ tªJ 4ï‹dh§fhŒ mW¤âir¤ jikahš F‰w¥ghL v‹W fisªâlhnkh? எனின், அற்றன்று; அறுத்திசைப்பும் வெறுத்திசைப்பும் குற்றம் என்று களைந்திடப்படா, பிற சான்றோர் செய்யுளகத்தும் அருகி வருமாகலின், எனக் கொள்க. அளபெடைக்குக் கூறுமாறு: இடைநுடங்க ஈர்ங்கோதை பின்றாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து- கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு? - யா. கா. 36 மேற். என இதனுள் உப்போஒ என்புழி அளபெழுந்து கலித் தளை தட்டு, 5வெள்ளையுட் பிறதளை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறு கொள்ளுமாகலின், ஆண்டு அவ்வள பெடையை இவ்விலக்கத்தான் அலகு பெறாது என்று விலக்க, வெண்டளை பிழையாதாம். “ã©zh¡nfhx v‹D« 6ãzhÉ‹ Kf¤âu©L f©nzh¡ Filadngh‰ f£Liu¡F«: - ‘ã©zh¡F¡ bfhŸçnuh? என்பாள்தன் கூரெயிறு காளையரை உள்ளீர்வ போல உள எனவும், பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை; பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னந் தோன்றிலவால் ; - நெல்லுக்கு நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் வெம்முலைக்கும் 1மாறோமால் அன்றளந்த மண்? - யா. கா. 36. மேற். எனவும், களிச்சாத்தாஅ என்றியான் கட்காண நின்று விளித்தாலும் வாரான் விரைந்து 2களிச்சாத்தன். வாளாவே தின்பான் வேலைக்குப் போகலான் காளையாம் பைதல் கவடு எனவும் இவற்றுள் பண்ட மாற்றின்கண்ணும், விளித்தற் கண்ணும் அளபெடை 3அநுகரணங்கள் வந்து, வெண்பாவினுள் நாலசைச் சீராய், 4வண்ணம் அறுப்புழிச் 5செப்பல் இசையன வெண்பா என்னும் இலக்கணத்தோடு மாறாய், செப்பலோசை சிதைய நிற்கும், ஆகலின், ஆண்டு உயிரளபெடைகளை இவ் விலக்கணத்தால் அலகு பெறா என்று விலக்க, வண்ணம் சிதையாதாம். அளபெடை ஆவியும் அலகில, என்னாது, அலகியல்பில என்ற விதப்பினால், ஆண்டு உயிரளபெடைகளை நெட் டெழுத்தே போலக் கொண்டு வழங்கப்படும் எனக் கொள்க. இனி, அவை அலகு பெறுமாறு. 6சிலைவிலங்கு நீள்புருவம் சென் 7றொசிய நோக்கி முலை8 விலங்கிற் றென்று 9முனிவாள் - 10மலைவிலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ 11கார்மாலை கண்கூடும் போழ்து? - யா. கா. 11. 41. மேற். - தண்டி. 16. மேற். இதனுள் குற்றியலுகரம் இவ்விலக்கணத்தோடு மாறு கொள்ளாது நின்று அலகு பெற்றவாறு கண்டுகொள்க. வந்துநீ சேரின் உயிர்வாழும் ; வாராக்கால் 1முந்தியாய் பெய்த வளைகழலும்; - முந்தியாம் 2கோளானே கண்டனம் கோல்குறியாள் இன்னுமோர் நாளானே நாம்புணரு மாறு. - யா. கா. 36 மேற். இதனுள், வந்துநீ என்புழிக் குற்றியலுகரமும், முந்தியாய் என்புழிக் குற்றியலிகரமும் தளை சீர் வண்ணங்கட்கு ஓர் உபகாரம் பட நின்று அலகு பெற்றவாறு பிறவும் அன்ன. காவல் உழவர் களத்தகத்துப் போரேறி 3நாவலோஒ என்றிசைக்கும்; *நாளோதை - காவலன்றன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு - முத்தொள்ளாயிரம் - 4 என இதனுள், நாவலோஒ என்புழி உயிரளபெடை தளை சீர் வண்ணங்களோடு மாறு கொள்ளாது நின்று அலகு பெற்றவாறு. கடாஅக் களிற்றின் கட்படா மாதர் 4படாஅ முலைமேல் துகில் - குறள் 1087 எனவும், 5காஅரி கொண்டான் கதச் 6சோ மதனழித்தான் 7ஆஅழி ஏந்தல் அவன் - யா. வி. 41. மேற். எனவும் இவற்றுள், கடாஅக் களிறு, படாஅ முலை; காஅரி, ஆஅழி என்புழி வந்த உயிரளபெடைகள் தளை சீர் வண்ணங்களோடு மாறு கொள்ளாது நின்று அலகு பெற்றவாறு. 8தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல் 9பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல் மாஅ மிசையான்கொல் நன்னன் நறுநுதலார் 10மாஅமை எல்லாம் பசப்பு - மலைபடுபடாம். இறுதிவெண்பா. என்பதூஉம் கொள்க. சீர்தளை வண்ணம் என்னாது, தளைசீர் வண்ணம் என முறை பிறழக் கூறினமையால், குற்றியலிகரக் குற்றியலு கரங்களைக் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்படும் எனக் கொள்க. தளைசீர் வண்ணம் கெடவரும் என்னாது தாம்கெட வரினே என்ற விதப்பினால், தனிநிலை அளபெடை நேர்நேர் ஆகவும், இறுதி நிலை அளபெடை நிரை நேர் ஆகவும் வைக்கப் படும், மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையான் வரினும், எனக் கொள்க. என்னை? 1 தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே - யா. கா. 37. மேற். என்றார் ஆகலின். இடைநுடங்க ஈர்ங்கோதை என்னும் தொடக்கத்தன அளபெடுப்பன அல்ல. என்னை? மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் - யா. கா. 4. மேற். என்ப ஆகலின். அதனால் இச்சூத்திரத்துள். அளபெடை ஆவியும் என்பது வேண்டா என்று விடுத்திடலாமோ? எனின், அற்றன்று; செய்யுளகத்தும் பரவை வழக்கினுள்ளும் கடாக் களிறு, படாமுலை என்று அளபெடாதே தத்தம் பொருளைப் பயக்கும் சொற்கள், ஒருசார்ச் செய்யுளகத்து வந்து மாத்திரை சுருங்கிச் சீரும் தளையும் சிதைய வந்தால், கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில் - குறள். 1087 என்று சீரும் தளையும் சிதையாமே அளபெடுக்கும். நிலம்பாய்ப்பாய்ப் பட்டன்று நீலமா மென்றோள் கலம்போய்ப்போய்க் கெளவை தரும் - தொல். செய். 17. மேற். பேரா. - யா. வி. 93. 95. மேற். என்றித் தொடக்கத்தன மாத்திரை சுருங்கிச் சீரும் தளையும் சிதைய நில்லா ஆகலின், அளபெடா என்பது. என்னை? மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் - யா. கா. 4. மேற். என்றார் ஆகலின். இதன் கருத்து, பரவை வழக்கினுள் பண்ட மாற்றும், நாவல் கூறலும், அவலமும், அழுகையும், பூசலிடுதலும், முறையிடுதலும் முதலாவுடையனவற்றுள் அளபெடுத்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடா என்பது இலக்கணம் இன்மையின், செய்யுளகத்தே வந்து தளை சீர் வண்ணம் கெட நின்றால் அலகு பெறா என்பதற்கு, அளபெடை ஆவியும் அலகியல்பில, என்பது சொல்லவேண்டும் என்க. அல்லதூஉம், 1 “MÊ ïiH¥g¥ gfšngh«; *ïutÇ‹ njhÊ Jizah¤ Ja®ÔU«; - ‘thÊ eWkhiy jhuhŒ 2âiuanthx! என்னும் 3செறுமாலை *சென்றடையும் போழ்து - யா. கா. 44. மேற் - யா. வி. 96 என்னும் பொய்கையார் வாக்கினுள், திரையவோஒ என்பதனைப் புளிமாங்காயாக வைப்பினும், வகையுளி சேர்த்துக் கருவிளம் என்னும் சீராக வைப்பினும் சீரும் தளையும் சிதைந்து செய்யுள் அழிய நிற்பதன்று ஆயினும், விளி முதலியவற்றுள் அளபெழுந்த செய்யுளிடத்து அவ்வாறே சொல்லப்படும் என்னும் கருத்தினால் அகத்தியனார் ஆனந்த ஓத்தினுள் இதனை, இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே *இயற்பா டில்லா 4எழுத்தா னந்தம் -யா. கா. 44. மேற். -யா. வி. 95. மேற். என்றார் என்க : பிறரும் கூறினார். என்னை? சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும் - யா. வி. 95. மேற். என்றார் மகேச்சுரர். இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும் - யா. வி. 95. மேற். உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே - யா. வி. 95. மேற். என்றார் காக்கைபாடினியார். உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம் சீர்தப வரினும் ஒற்றியற் றாகும் - யா.வி.95. மேற். என்றார் அவிநயனார். ஐந்தா றசையின் அருகி உகரத்தின் வந்தசீர் ஒன்றிரண்டொற் 1றொப்பித்து- 2நந்துவித்தால் வஞ்சிப்பா விற்கியலும் நாலசைச்சீர் 3அல்லுரிச்சீர் தங்கி விரவத் தகும் - யா. வி. 95. மேற். என்றார் பிறரும். ஆற்றல்சால் 4ஆவி முயல 5அகத்தியல்கால் ஏற்றெழுந்த 6தெட்டிடத்தும் 7முத்திறத்தால் - தோற்றி விசையா8 மணுக்கந்தம் 9ஐந்தெழுத்தாய்ப் 10பத்துத் திசையாய்ச் செவிப்புலனாய்ச் சென்று இதனை விரித்து உரைத்துக் கொள்க. 11எழுத்து ஓத்து முடிந்தது. 2. அசை ஓத்து அசையின் வகை 5. நேரசை என்றா நிரையசை என்றா ஆயிரண் டாகி அடங்குமன் அசையே. என்பது சூத்திரம். ‘ï›nth¤J v‹d bga®¤njh? எனின், எழுத்தினான் அசை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், அசை ஓத்து என்னும் பெயர்த்து. ‘ï¢N¤âu« v‹ Ejȉnwh? எனின், எழுத்தினான் ஆக்கப்பட்ட அசைகளது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்) நேரே நிரையே நேர்பே நிரைபென ஈரிரண் டென்ப அசையின் பெயரே - யா. வி. 95. மேற். என விரித்து உரைத்தாராயினும், தொகுத்து நோக்குங்கால், அசையே- அசை, நேரசை என்றா நிரையசை என்றா-நேரசையும் நிரையசையும் என, ஆயிரண்டாகி அடங்கும் - அவ்விரண்டாய் அடங்கும் என்றவாறு. 1நேர்நேராய் நேர்பு அடங்கும்; நிரைநேராய் நிரைபு அடங்கும். நேர்நிரை என்னாது நேரசை நிரையசை என்று விதந்து ஓதிய அதனால் நேரசை ஓரலகு பெறும் ; நிரையசை இரண்டலகு பெறும் எனக்கொள்க. என்னை? நேரசை ஒன்றே நிரையசை இரண்டல(கு) ஆகும் என்ப அறிந்திசி னேரோ எனவும், நேரோர் அலகு நிரையிரண் டலகு நேர்புமூன் றலகு நிரைபுநான் கலகென் றோதினர் புலவர் உணரு மாறே - யா. வி. 95. மேற். எனவும் சொன்னார் அவிநயனார் ஆகலின். நேர்நேர் நிரைநேராய் நேர்பு நிரைபடங்கும்; சீர்மேல் அசைபலவாய்ச் செல்லுங்கால் - ஈரியல்பிற் குற்றிபோற் குற்றுகரம் கொண்டியற்ற நேர்நிரையாய் முற்றும் முடிந்து விடும் என்றார் பிறரும். இனி ஒருசார் வட நூல்வழித் தமிழாசிரியர், நேர், நிரை, நேர்பு, நிரைபு அசைகள் ர, ட, ரு, டு வடிவாக இடுவாரும் உளர். என்னை? நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடுப் போல ஒருவிரல் நேரே எனவும், விரலிடை இட்டன அசைச்சீர் நாலசை விரல்வரை இடையினும் 1மானம் இல்லை எனவும், விரலிடை இட்டன ரடருடு வடிவம் 2நிரல்ப எழுதி அலகு பெறுமே என்றார் மயேச்சுரர்? இனி, நேரசை நிரையசைகளைத் தனியசை, இணையசை என்பாரும் உளர். என்னை? தனியசை என்றா இணையசை என்றா இரண்டென மொழிமனார் இயல்புணர்ந் தோரே என்றார் காக்கைபாடினியார். (க) நேரசை 6. நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகை யானே. என்பது சூத்திரம். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், அதிகாரம் 3பாரித்த இரண்டசையுள்ளும், முதற்கண் நேரசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெடில் குறில் தனியாய் நின்றும் - நெட்டெழுத்துத் தனியே நின்றும், குற்றெழுத்துத் தனியே நின்றும், ஒற்று அடுத்தும் - நெட்டெழுத்து ஒற்றடுத்து நின்றும், குற்றெழுத்து ஒற்றடுத்து நின்றும், நடைபெறும் நேரசை நால்வகையானே- நேரசை இந்நான்கு வகையானும் நடத்தல் பெறும் என்றவாறு. உதாரணம் : ஆ, ழி, வெள், வேல் இதில், ஆ - தனி நெடில் நேரசை. ழி - தனிக்குறில் நேரசை. வெள் - குற்றெழுத்து ஒற்றடுத்த நேரசை. வேல் - நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசை. கோல், வேல், கண், கோழி, வேந்தன், காரி, சேந்தன், பெற்றான், வீடு என்றிவை பிறவும் அன்ன. உதாரணச் செய்யுள் : 1ஆளி நன் 2மான் 3கோள்வல் லேற்றை எனவும், 4போது 5சாந்தம் 6பொற்ப ஏந்தி 7ஆதி நாதற் சேர்வோர் சோதி வானம் துன்னு வோரே - யா. வி. 69. மேற். - யா. கா. 5. மேற். எனவும் இவை நேரசை நான்கும் வந்த செய்யுள். நடைபெறும் என்ற விதப்பால் ஒன்றரை மாத்திரை என்று ஓதப்பட்ட ஐகார ஔகாரக் குறுக்கமும் நேரசையாம் நன்னாட் பூத்த பொன்னிணர் வேங்கை - அகம். 85. எனவும், 8கெளவை போகிய 9கருங்காய் பிடியேழ் நெய்கொள ஒழிகிய பல்கவ ரீரெண் - மலைபடு. 105-6 எனவும், ஔவை என்று வேறெடுத் துரைக்கும் 10தெளவை என்றன் ஓலை எனவும், பௌவத் தன்ன பாயிருள் நீந்தி - யா. வி. 37. மேற். எனவும் கண்டு கொள்க. (2) தனிக்குறில் நேரசை ஆகாத இடங்கள் 7. குறிப்பே ஏவல் தற்சுட் டல்வழித் தனிக்குறில் மொழிமுதல் தனியசை இலவே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், மேற்சூத்திரத்துத் தனிக்குறில் நேரசையாம் என்றவழி, அஃது இன்ன இடத்தன்றி ஆகாது என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்) குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி தனிக் குறில் - குறிப்பின்கண்ணும் ஏவற்கண்ணும் தற்சுட்டின்கண்ணும் அல்லாத வழித் தனிக்குறில், மொழி முதல் தனியசை இலவே- மொழி முதற்கண் நின்று நேரசை ஆதல் இல என்றவாறு. என்னை? தற்சுட் டேவல் குறிப்பிவை அல்வழி முற்றத் தனிக்குறில் முதலசை ஆகா என்றார் பல்காயனார். (உ-ம்) உண்ணான் 1ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் 2துன்னருங் கேளிர் துயர்களையான் - 3கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ! இழந்தான்என் றெண்ணப் படும் - நாலடி. 9. இதனுள் அஆ என்புழிக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழி முதற்கண் நின்று நேரசை ஆயிற்று. 4வெறிகமழ் *தண்புறவின் வீங்கி உகளும் 5மறிமுலை உண்ணாமை வேண்டிப் - 6பறிமுன்கை 7அஉ அறியா அறிவில் இடைமகனே! 8நொ அலையல் நின்னாட்டை நீ - யா. கா. 37. மேற். - யா. வி.37. 95 மேற். இதனுள் நொ என ஏவற்கண் தனிக்குறில் மொழி முதற்கண் வந்து நேரசை ஆயிற்று. நொ என்றது. ஒன்றைச் செய் என்றமையான் ஏவல். அஉ அறியா எனத் தற்சுட்டின் கண் தனிக்குறில் மொழி முதற்கண் நின்று நேரசையாயிற்று. அஉ அறியா என்பதில் அகரம் தன்னை உணர்த்திற்று; ஆதலால், தற்சுட்டு. குறிப்பே என ஏகாரம் மிகுத்துச் கூறிய அதனால், சுட்டின் கண்ணும் வினாவின்கண்ணும் ஒருசார் தனிக்குறில், மொழி முதற்கண் வந்து நேரசையாம். என்னை? ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையும் தனிக்குறில் முதலசை ஆகா; சுட்டினும் வினாவினும் உயிர்வரு காலை ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே என்றார் மயேச்சுரர். (உ- ம்). அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால் எஎவனை வெல்லார் இகல்? இதனுள் முன்னைய மூன்றும் சுட்டு ; எஎவன் என்பது வினா. குறிப்பே ஏவல் தற்சுட்டு........ அசையிலவே, என்றாலும், மொழி முதல் என்பது பெறலாம். என்னை? ஒற்றின் றாகியும் குறிப்பே ஏவல் தற்சுட் டல்வழி முதல்தனி நேராம் என்றார் ஆகலின். அவ்வாற்றலாற்பெற வைத்தும், மொழி முதல் என்று விகற்பித்த அதனால், குறிப்பே ஏவல் தற்சுட்டின் கண் வந்த குற்றெழுத்து விட்டிசைப்பின் அல்லது மற்றொன்றனோடு இயைந்து இனியவாய் நடப்பினும் முதற்கண் நேரசை ஆகா. வரலாறு : 1யரல வழள இடையின மாம் ஏனை மரபு பிழையாத வைப்பு 2அமருந்து தானை அதியர் தம் கோவே! 3துமருந்து தூயனவே கொண்டு என்ற இவற்றுள், யரல வழள என்பன தற்சுட்டின்கண்ணும் து என்பது ஏவற்கண்ணும் வந்து விட்டிசையாது, மற்றொன்ற னோடு இயைந்து இனியவாய் நடத்தலின் நேரசை யாகாவாய் நிரையசையாயின. இலவே என்னும் தேற்றேகார விதப்பினால், குறிப்பு ஏவல் தற்சுட்டின்கண் வந்த குற்றெழுத்து விட்டிசைத்து நிற்பின், மொழியிடையும் இறுதியும் நின்றும் நேரசையாம். (உ-ம்.) அஇ உஎ ஒ இவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே என மொழியிடையிலும் கடையிலும் குற்றெழுத்து தற்சுட்டின் கண் வந்து நேரசை ஆயின. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. (2) நிரையசை அ. குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும் நெறிமையின் நான்காய் வருநிரை அசையே. என்பது சூத்திரம். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிரையசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). குறில் இணை குறில் நெடில் தனித்தும் - குறில் இரண்டு இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், ஒற்று அடுத்தும்- குறில் இணை ஒற்றடுத்தும், குறில் நெடில் இணை ஒற்றடுத்தும், நெறிமையின் நான்காய் வரும் நிரையசையே- நிரையசை இந்த நான்கு முறைமையினும் வரும் என்றவாறு. தனித்தும் என மிகுத்த அதனால், நேரசைகட்கும் நிரை யசைகட்கும் ஓதிய எழுத்துக்கள் மொழியாய் நிற்பினும், மொழிக்கு உறுப்பாய் நிற்பினும் கொள்ளப்படும். அவற்றுள் பொருள் பயந்து நிற்பன சிறப்பசை என்றும், மொழிக்கு உறுப்பாய் நிற்பன சிறப்பில் அசை என்றும் வழங்கப்படும். இவ்விரண்டினானும் 1எட்டசையும் 2உறழப் பதினாறாம். நெறிமையின் என்ற விதப்பினால், நெடில் இரண்டு இணைந்தும் நெடில் குறில் இணைந்தும் நிரையசை ஆகா. என்னை? நெடிலோடு நெடிலும் நெடிலோடு குறிலும் இணையசை ஆதல் இலவென மொழிப என்றார் காக்கைபாடினியார். (c.ம்) வெறி, சுறா, நிறம், விளாம் என வரும் வெறி- குறில் இரண்டு இணைந்த நிரையசை. சுறா- குறில்நெடில் இணைந்த நிரையசை. நிறம்- இரு குறில் இணைந்து ஒற்றடுத்த நிரையசை. விளாம்- குறில்நெடில் இணைந்து ஒற்றடுத்த நிரையசை. பல, பலா, பலம், பலாம் எனவும், மரு, பலா, முயல், கிழான், எனவும், கழி, கனா, கடல், கடாம் எனவும், கறி, பொரு, கடா, கடாம் எனவும் வரும். பிறவும் அன்ன. உதாரணச் செய்யுள் : கடியுலாய் நிமிர்ந்த கயங்குடை வராஅல் எனவும், அணிநிழ லசோகமர்ந் தருள்நெறி நடாத்திய மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே - யா. கா. 5. மேற். எனவும் இவை நிரையசை நான்கும் வந்த செய்யுள். அல்லதூஉம் நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும் குறிலிணை குறினெடில் தனித்துமொற் றடுத்தும் நடைபெறும் அசைநேர் நிரைநா லிரண்டே என்றார் பல்காயனார். குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலோடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசிற் பெயரே - தொல். செய்யுள். 3. என்றார் தொல்காப்பியனார். தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை என்ப - யா. வி. 95. மேற் குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலென்(று) அந்நால் வகைத்தே நிரையசை என்ப - யா.வி. 95. மேற் என்றார் நற்றத்தனார். நேர்நால் வகையும் நெறியுறக் கிளப்பின் நெடிலும் குறிலும் தனியே நிற்றலும் அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும் இவைதாம் நேரசைக் கெழுத்தின் இயல்பே இணைக்குறில் குறினெடில் இணைந்துமொற் றடுத்தும் நிலைக்குறி மரபின் நிரையசைக் கெழுத்தே என்றார் சங்க யாப்பு உடையார். நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் கடிவரை இலவே நேரசைத் தோற்றம் குறிலும் நெடிலும் குறில்முன் நிற்பவும் நெறியினொற் றடுத்தும் நிரையசை ஆகும் என்றார் பிறைநெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். (மயேச்சுரர்) தனிநெடி லாகியும் தனிக்குறி லாகியும் ஒற்றொடு வந்தும் நேரசை யாகும் குறிலிணை யாகியும் குறினெடி லாகியும் ஒற்றொடு வந்தும் நிரையசை யாகும் என்றார் சிறுகாக்கைபாடினியார்1 ஐகாரக்குறுக்கம் இணைந்த நிரையசை 9. ஈறும் இடையும் இணைந்தும் 2இணையசை ஆகும்ஐ என்ப அறிந்திசி னோரே. என்பது சூத்திரம். ï~J v‹ Ejȉnwh? எனின், ஐகாரக் குறுக்கம் இணையசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சீர்க்கு இறுதியும் இடையும் நின்ற ஐகாரம், ஐகாரத்தினோடு இணைந்தும் நிரையசையாம் என்றவாறு. இணைந்தும் என்ற உம்மையான், 3அல்வழி ஐகாரம் குற்றெழுத்தே போல நின்று பிறிதோர் எழுத்தினோடு இணைந்து நிரையசையாம். சீர் என்பது, 4ஆற்றலாற் பெற்றது. அதனை 5அரிமா நோக்கு எனினும், அதிகாரம் எனினும் அமையும். குற்றெழுத்தே போல என்பது, விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் - யா. கா. 4. மேற். என்ப ஆகலானும், குறுமை எழுத்தின் இயல்பே ஐகாரம் நெடுமையின் நீங்கியக் கால் - யா. கா. 36. மேற். என்றார் ஆகலானும் சொல்லப்பட்டது. அந்தமும் நடுவும் நிரையசை யாகும், எனவே, ஆதிக்கண் நின்ற ஐகாரம் நிரையசை ஆகாது. என்னை? ஐயென் நெடுஞ்சினை ஆதி ஒழித்தல(கு) எய்தும் இணையசை என்றிசி னோரே என்றார் காக்கைபாடினியார். இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே என்றார் சிறுகாக்கைபாடினியார். கடையும் இடையும் இணையும் ஐ இரட்டியும் என்றார் அவிநயனார். (உ-ம்) கெண்டையை வென்ற கிளரொளி 1உண்கண்ணாள் பண்டையள் அல்லள் படி2 - யா.கா.36 மேற் இதனுள் கெண்டையை என்புழிச் சீர்க்கடைக்கண் ஐகாரம் இரண்டு இணைந்து நிரையசை ஆயிற்று. அன்னையையான் நோவ 3தவமால் அணியிழாய்! புன்னையையான் நோவன் புலந்து - யா. கா. 36. மேற் இதனுள் அன்னையை, புன்னையை என்னும் இரண்டிடத்தும் சீர் நடு ஐகாரம் இரண்டு இணைந்து நிரையசை ஆயிற்று. படுமழைத் தண்மலை வெற்பன் உறையும் நெடுந்தகையைக் கண்டதாம் நாள் இதனுள் படுமழை, தண்மலை என்பவற்றில் சீர்க் கடைக்கண் நின்ற ஐகாரம் குற்றெழுத்தோடு இயைந்து நிரையசை ஆயிற்று. புன்னைப் பொழிலருகே போயினாள் பூங்கொம்பர் தன்னையரும் காணத் தளர்ந்து இதனுள் தன்னையரும் என்புழிச் சீர் நடு ஐகாரம் குற்றெழுத்தினோடு கூடி நிரையசை ஆயிற்று. 4பையுள் மாலைப் பழுமரம் 5படரிய 6நொவ்வுப்பறை 7வாவல் - தொல். கள. 23. மேற். நச். இதனுள் பையுள் எனச் சீர்முதற்கண் நின்ற ஐகாரம் குற்றெழுத்தினோடு கூடி நிரையசை ஆகாதவாறு காண்க. நடைக்குதிரை ஏறி நறுந்தார் 8வழுதி 9அடைப்பையா! 10கோல்தா எனலும்- அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான்;* தனைப்பெறினும் 11கொள்ளா தியாங்காண் டலை - யா. கா. 36. மேற் - யா. வி. 95. மேற். இதனுள், அடைப்பையா என்புழிச் சீர் நடு ஐகாரம் நெட்டெழுத்தினோடு இயைந்து நிரையசை ஆயிற்று. மொழிபுணர்ந்த சீர்முதற்கண் 1மும்மூன்றாம் ஆவி இழிபும் இணையசையாம் என்பர் - ஒழிவின்றித் தேவைத்த தாகச் 2சிவணும் முதற்குறிப்பே ஏவற்க ணின்றும் எனல் குறிப்பே ஏவல் தற்சுட்டு (யா. வி. 7) என்னும் சூத்திரத் தினின்றும் சீர்முதல் என்று அதிகாரம் வருவித்து, மொழி புணர்ந்த சீர்முதற்கண் மும்மூன்றாம் ஆவி இழிபும் இணை யசையாம், என்று ஐகாரக் குறுக்கம் பிறிதொன்றனோடு இயைந்தும், ஐகாரத்தினோடு இயைந்தும் நிரையசையாம் என்று கூட்டிப் பொருள் உரைக்கப்படும். என்னை? வேண்டி யதுநிறுவி வேண்டாப் பொருள்விலக்கும் மாண்பினதாய் நிற்பது நூல் என்பது ஆகலின். வரலாறு; பூந்தாமரை (யா.வி. 15.மேற்) என்னும் பாட்டினுள். புகழ்த லானாப் பெருவண் மையனே எனவும், வண்கொன்றையை3 மருட்டும் வண்டார் குழன்மடவாள் கண்கெண் டையைமருட்டும் காண் எனவும் வருதல் கண்டு கொள்க. 4வழுக்கா இயல்வகையின் வாய்மையால் வேறாய் 5இழுக்கின் 6ஏறும் பொழுக்கே போலும் - எழுத்தின் இசைத்தொடர்ச்சி 7மாலையை எண்முறையாற் 8கண்டித் தசைத்திசைய வைப்ப தசை. இதனை விரித்து உரைத்துக் கொள்க. (ரு) அசை ஓத்து முடிந்தது. 3. சீர் ஓத்து சீர்களின் பெயர் வேறுபாடு க0. 1இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று மயக்கற வகுத்த சீர்மூன் றாகும். என்பது சூத்திரம். இவ்வோத்து அசையினாற் சீராமாறு உணர்த்திற்று ஆகலான், சீர் ஓத்து என்னும் பெயர்த்து. இச்சூத்திரம் என் நுதலிற்றோ?எனின், அசைகளான் ஆகிய சீர்களது வேறுபாடும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று - இயற்சீரும் உரிச்சீரும் பொதுச்சீரும் என்று, மயக்கு அற வகுத்த சீர்மூன்று ஆகும் - ஐயம் அற வகுக்கப்பட்ட சீர் மூன்று வகைப்படும் என்றவாறு. ‘ïit ï«Kiwna it¤j fhuz« v‹? எனின், இயற்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் இயன்று இனிது நடத்தலின், சிறப்பு உடைத்து என்று முன் வைக்கப்பட்டது. என்னை? சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல் என்பது தந்திர உத்தி ஆகலின். உரிச்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் வரும் எனினும், வெண்பாவிற்கும், வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்றலின், இடைக்கண் வைக்கப்பட்டது. பொதுச்சீர் அருகியன்றி வாராமையின், கடைக்கண் வைக்கப்பட்டது. அல்லதூஉம், இரண்டு மூன்று நான்கு என்னும் அசைகளாய் அடுக்கப்படுதலின், எண்முறை வைத்ததூஉம் ஆம். என்னை? இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும் நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும் என்றார் மயேச்சுரர். சீர்மூன் றாகும், எனினும், குறித்த பொருளைக் கொண்டு நிற்கும், மயக்கற வகுத்த என்ற மிகையால், நேரசையும் நிரை யசையும், நேர்பு அசையும், நிரைபு அசையும் என நான்கு அசைவேண்டினர் தொல்காப்பியர் முதலிய ஒரு சாராசிரியர்; நேர்பு அசை நிரைபு அசை வேண்டாது, நேரசை நிரையசை வேண்டி, நாலசைப் பொதுச்சீர் வேண்டினார், காக்கை பாடினியார் முதலிய ஒருசார் ஆசிரியர்; நேர் நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசையும் நாலசைப் பொதுச்சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒருசார் ஆசிரியர்; இந் நூலுடையார் நேர்பு அசையும் நிரைபு அசையும் வேண்டாது; நாலசைப் பொதுச்சீரும் வேண்டாமே நடப்பதோர் உபாயம் கண்டாரேனும், முதல் நூலின் வழி நில்லாது தமது மதம் படுத்துச் சொன்னார் என்னும் பாதுகாவல் நோக்கியும், உலகம் தழீஇய தொட்ப மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு - திருக்குறள். 425. என்ப ஆகலானும், அவ்வாறு உரைப்பின் நுண்ணுணர் வினார்க்கு அல்லது அறிவரிது அகலானும், காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர்தம் மதம் பற்றி ஈண்டு நாலசைச்சீர் எடுத்தோதினார் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. நாலசைச் சீர் வேண்டாமே நடாத்தும் உபாயம் போக்கிக் கூறுதும். அல்லதூஉம், சீர்வயின் பொருள் பயந்து நிற்பனவற்றைச் சிறப் புடைச்சீர் என்றும், வகையுளி சேர்ந்து நிற்பனவற்றைச் சிறப்பில்சீர் என்றும் சொல்வர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது; விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் என்ப ஆகலின். குற்றுகரம் ஒற்றாக்கிக் கூன்வகுத்துச் சிந்தியற்றி மற்று நெடிலும் வகையுளியும் - சொற்றபின் மேலசைச்சீர் நாட்டி அளபெடை வீறழித்தால் நாலசைச்சீர்க் கில்லை நடை - யா. வி. 95 மேற். இதனை விரித்து உரைத்துக் கொள்க. இயற்சீரின் திறமும் தொகையும் கக. ஈரசை கூடிய சீரியற் சீர்; அவை ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே “ï~J v‹ Ejȉnwh? எனின், மேல் அதிகாரம் பாரித்த முறையானே மூவகைச் சீருள்ளும் முதற்கண் இயற்சீர் ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ. ள்) ஈரசை கூடிய சீர் இயற்சீர்- இரண்டசை இணைந்து நின்றது இயற்சீர் எனப்படும்; அவை ஈரிரண்டு என்ப - அவை நான்கு திறத்தன என்பர், இயல்பு உணர்ந்தோரே- நூல் முறைமையினை அறிந்தோர் என்றவாறு. அவை, நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பன. என்னை? நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரையென் றீரிரண் டென்ப இயற்சீர்த் தோற்றம் என்றார் ஆகலின். (c.ம்) தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் எனவும், 1தேமா, புளிமா, 2கணவிரி, பாதிரி எனவும், பூமா, மலர்பூ, மலர்மழை, பூமழை எனவும், இம்மா, 3எழினி, இனிமொழி, இன்மொழி எனவும், வேங்கை, அரிமா, 4வலம்புரி, சந்தனம் எனவும், காசு, பிறப்பு, வரிவளை, 5நூபுரம் எனவும் வரும். பிறவும் அன்ன. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: குன்றக் குறவன் காதல் மடமகள் 1வரையர மகளிர்ப் 2புரையும் சாயலள் 3ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே - ஐங்குறு. 255. எனவும், சீயம் சுமந்த மாசறு மணியணை 4மேய 5உரவோன் சேவடி வாயின் வாழ்த்த வானுல கெளிதே - திருப்பாமாலை, எனவும் இவற்றுள் இயற்சீர் நான்கும் வந்தன. ஈரசைச்சீர் பிறிதாகாது எல்லாப் பொருள் மேலும் சொல்லப்படும் சிறப்புடைமையானும், 6முதற்பா இரண்டி னுள்ளும் பெரும்பான்மை இயன்று இனிது நடத்தலானும் இயற்சீர் என்பது 7காரணக்குறி. *ஒரோஒ வகையினால் ஆகிய ஈரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர் என்றார் காக்கைபாடினியார் கூடிய என்ற மிகையான், இயற்சீரை ஆசிரிய உரிச்சீர் என்றும் வழங்குவாரும் உளர். என்னை? இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் என்றார் காக்கைபாடினியார். (உ) உரிச்சீரின் திறமும் தொகையும் கஉ மூவகைச் சீர்உரிச் சீர்இரு நான்கனுள் நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், உரிச்சீர் ஆமாறும், அவற்றது எண்ணும், பெயர்வேறுபாடும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மூவகைச்சீர் உரிச்சீர் இரு நான்கனுள் - மூன்று அசையான் ஆகிய சீர் உரிச்சீர்; அஃது எட்டு வகைப்படும்; அவற்றுள், நேர் இறு நான்கும் வெள்ளை - நேரசை இறுதி யாகிய நான்கும் வெண்பா உரிச்சீர்; அல்லன பாவினுள் வஞ்சியின்பாற் பட்டனவே- அவை அல்லனவாகிய நிரையசை இறுதியாகிய நான்கும் பாவகையுள் வஞ்சிப்பாவின் பகுதியாய் வஞ்சி உரிச்சீர் எனப்படும் என்றவாறு. பாவினுள் வஞ்சியின் பாற்பட்டனவே, என்ற சிறப்பால், வஞ்சி உரிச்சீர் பிற செய்யுளுள் வரினும், வஞ்சிப்பாவினுட் போல இனிது நடவா என்க. வெண்பா உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு : தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங் காய் என்பன. இனி, பூவாமா, விரிபூமா, நறுவடிமா, பூவிரிமா எனவும், பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள்பெருக்கும், பொன்பெருக்கும் எனவும், தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு தென்கிழக்கு எனவும், வேய்மென்றோன், வளைமென்றோள், வளைகெழுதோள், வேய்கெழுதோள் எனவும் வரும். பிறவும் அன்ன. அவற்றிற்குச் செய்யுள் : பொன்னார மார்பிற் புனைகழற்காற் 1கிள்ளிபேர் 2உன்னேனென் 3றூழுலக்கை பற்றினேற் - 4கென்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் 5கோழிப் 6புனனாடன் பேரே வரும்! - யா. கா. 9. மேற். வான்றோயும் பொன்னெயிலான் வண்டார் மலரடிக்கீழ்த் தேன்றோய் மலர்பெய்ம்மின் சென்று என்னும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன. வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு: தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்பன, இனி, மாவாழ்சுரம், புலிவாழ்சுரம், புலிபடுசுரம், மாபடுசுரம் எனவும், பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி எனவும், மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, சுறமறிதுறை, மீன்மறிதுறை எனவும், பூண்மென்முலை, புணர்மென்முலை, *புணரிளமுலை, பூணிளமுலை எனவும் வரும். அவற்றிற்குச் செய்யுள் : 1சுறமறிவன துறையெல்லாம் ; 2இறவீன்பன இல்லெல்லாம் ; மீன்றிரிவன கிடங்கெல்லாம் ; தேன்றாழ்வன பொழிலெல்லாம்; எனவாங்கு, 3தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு *நெடுமதில் மன்னன் ஊரே - யா. கா. 22. மேற். எனவும், தாளோங்கிய தண் 4பிண்டியின் நாண்மலர்விரி தருநிழற்கீழ்ச் சுடர்பொன்னெயில் நகர்நடுவண் அரியணைமிசை இனிதமர்ந்தனை அதனால், பெருந்தகை அண்ணல்! நிற் 5பரவுதும் திருந்திய 6சிவகதி சேர்கயாம் எனவே - திருப்பாமாலை, எனவும் வரும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தன. பூந்தாமரைப் 7போதலமரத் 8தேம்புனலிடை மீன்றிரிதரு வளவயலிடைக் 9களவயின்மகிழ் 1வினைக்கம்பலை 2மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும், மகிழும் 3மகிழ் தூங் கூரன் புகழ்தல் 4ஆனாப் பெருவண் மையனே - யா. வி. 15. 21. 90. மேற். - யா. கா. 9. மேற். எனவும் கொள்க. இச்சூத்திரம் மொழிமாற்று. எங்ஙனமெனில், மூவசைச் சீருரிச் சீரிரு நான்கினுள் நேரிறு நான்கும் வெண்பா உரிச்சீர்; நிரையிறு நான்கும் வெண்பா உரிச்சீர் ; நிரையிறு நான்கும் வஞ்சி யுரிச்சீர். என்றாராகலின். இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின் உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப - தொல். செய். 19. எனத் தொல்காப்பியனார் வெண்பா உரிச்சீர் என்றதனை மொழி மாற்றி உரிச்சீர் வெண்பா என்றார். அதுபோலக் கொள்க. 5நேரீறாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வெண்பாவுக்கே உரிமை பூண்டு நிற்றலின், வெண்பா உரிச்சீர் என்பதூஉம் காரணக்குறி; 6நிரையீறாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டமையின், வஞ்சி உரிச்சீர் என்பதூஉம் காரணக்குறி. என்னை? மூவசை யான்முடி வெய்திய எட்டனுள் அந்தம் 7தனியசை வெள்ளை ; அல்லன வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே என்றார் காக்கைபாடினியார். ஈரசை யாகிய மூவசைச் சீர்தான் நேரிறின் வெள்ளை; நிரையிறின் வஞ்சி என்றார் சிறுகாக்கை பாடினியார். ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசையின் இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும் நேரிறின் வெள்ளை நிரையிறின் வஞ்சி என்றார் அவிநயனார். பொதுச்சீரின் திறமும் தொகையும் கஙு. நாலசைச் சீர்(பொதுச் சீர்)பதி னாறே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே பொதுச்சீர் ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) நாலசைச்சீர் பொதுச்சீர் - நாலசையானாகிய சீர் பொதுச்சீர் எனப்படும்; பதினாறே - அவைதாம் பதினாறு திறத்தன என்றவாறு. அவற்றுள் 1நேர் இறுதி எட்டும், 2நிரை இறுதி எட்டுமாம், என்னை? ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து. மாறியக்கால் நாலசைச் சீர்பதி னாறாம் என்றார் அவிநயனார். அவற்றிற்கு வாய்பாடு: 1. தேமாந்தண்ணிழல் 9. தேமாநறும்பூ 2. புளிமாந்தண்ணிழல் 10. புளிமாநறும்பூ 3. கருவிளந்தண்ணிழல் 11. கருவிளநறும்பூ 4. கூவிளந்தண்ணிழல் 12. கூவிளநறும்பூ எனவும், எனவும், 5. தேமாந்தண்பூ 13. தேமாநறுநிழல் 6. புளிமாந்தண்பூ 14. புளிமாநறுநிழல் 7. கருவிளந்தண்பூ 15. கருவிளநறுநிழல் 8. கூவிளந்தண்பூ 16. கூவிளநறுநிழல் எனவும், எனவும் கொள்க. தேமா புளிமா கருவிளங் கூவிளமென் றாமா றறிந்தவற்றின் அந்தத்து - நாமாண்பின் தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும் 3நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம் இதன் வழியே 4ஒட்டுக. 1வாய்க்காலும் வாய்த்தலையும் மாண்ட துலைவாயும் நீக்காப் பெருந்துறையும் முன்னிறீஇ - நீக்கா மறிவுவாழ் வென்ப திடையா முதற்கண் சுறமறிப்பின் நாலசைச்சீர் சொல் எனவும், ஆரம் முறுவல் அணிவட மேகலையென் றீரிரண்டும் வைத்தெண் இடையாரச் - சேர்வித்து முத்தும் மணியும் முதல்வைப்ப நாலசைச்சீர் பத்தும்இரு மூன்றும் படும் எனவும் நாலசைச் சீர்க்கு வாய்பாடு கூறினார் பிறரும். அவற்றிற்குச் செய்யுள் : 21. அங்கண்வானத் தமரரரசரும் 2. வெங்களியானை வேல்வேந்தரும் 3. வடிவார்கூந்தல் மங்கையரும் 4. கடிமலரேந்திக் 3கதழ்ந்திறைஞ்சச் 5. சிங்கஞ்சுமந்த மணியணை மிசைக் 6. கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச் 7. செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் 8. முழுமதி 4புரையும் 5முக்கு டைநீழல் 9. வெங்கண்வினைப்பகை 6விளிவெய்தப் 10. பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப 11. 1அனந்தசதுட்டயம் அவையெய்த 12. 2நனந்தலையுலகுடை 3நவைநீங்க 13. மந்தமாருதம் மருங்கசைப்ப 14. அந்தரதுந்துபி நின்றியம்ப 15. இலங்குசாமரை எழுந்தலமர 16. நலங்கிளர் பூமழை நனிசொரிதர இனிதிருந் தருள்நெறி நடாத்திய ஆதிதன் திருவடி பரவுவதும் 4சித்தி பெறற் பொருட்டே - திருப்பாமாலை. யா. வி. 95. மேற் - யா. கா. 9. மேற். இக்குறளடி வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் பதினாறும் முதற்கண்ணே வந்தன. இவை பதினாறும் சிறப்பின்மையின், பொதுச்சீர் என்பது காரணக்குறி. ‘bghJ, áw¥ã‹ikia¢ brhšYnkh? எனின், சொல்லும், என்னை? புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர ! பொதுமக்கட் *காகாதே ; *பாம்பறியும் பாம்பின் கால் - பழமொழி. 5. இதனுள் பொதுவைச் சிறப்பின்மைக்கட் புணர்த்தார் சான்றோர் ஆகலின். பிறரும் நாலசைச்சீர் எடுத்தோதினார். என்னை? அசையே இரண்டும் மூன்றும் தம்முள் இசைய வருவன சீரெனப் படுமே; ஈரிரண் டாகியும் ஒரோவிடத் தியலும் என்றார் பல்காயனார். நாலசை யானும் நடைபெறும்; ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே என்றார் காக்கைபாடினியார், நாலசைச் சீரும் ஒரோவிடத் தியலும் பாவோடு பாவினம் 1பயிறல் இன்றி என்றார் அவிநயனார். ஓரசைச்சீரின் பெயரும் வகையும் கச . ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், ஓரசையினால் ஆகிய சீரும் பொதுச்சீர் ஆகும் என்று எய்துவித்தலும், அதனின் எண் உணர்த்துதலும் நுதலிற்று. (இ-ள்.) ஓர் அசைச்சீரும் அஃது - ஓர் அசையினான் ஆகிய சீரும் அஃது என்று 2மாட்டெறிந்தமையின் பொதுச் சீராம்; ஓர் இரு வகைத்தே - அது நேரசைச்சீரும் நிரையசைச் சீரும் என இரண்டு வகைப்படும் என்றவாறு. (c.ம்) நாள், மலர் என்பன. இவை ஓரசைச்சீருக்கு உதாரணம் உரைத்தது, வெண்பாவின் இறுதி ஓசை ஊட்டுதற்பொருட்டு. அவற்றிற்குச் செய்யுள் : பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் - திருக்குறள். 1121. எனவும், நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - திருக்குறள். 1072. எனவும் இவற்றுள் நேரசையும் நிரையசையும் வந்தவாறு காண்க. என்னை? இசைநிலை நிறைய நிற்குவ வாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே - தொல். செய். 27 என்றார் தொல்காப்பியனார். நேர்நிரை வரினே சீர்நிலை எய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி - யா. வி. 91. மேற். என்றார் அவிநயனார். நேரும் நிரையும் சீராய் வருதலும் சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும் - யா. வி. 91. மேற். என்றார் மயேச்சுரர். முன்னே கூறப்பட்ட சீர்கள் செய்யுளுள் நிற்கும் முறை 15. விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், அச்சீர் செய்யுளகத்து நிற்கும் முறைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) விரவியும் - (இயற்சீரும் உரிச்சீரும் செய்யுளகத்து) மயங்கியும், அருகியும் - (பொதுச்சீர்) அருகியும், வேறும் - (இயற்சீரும் உரிச்சீரும்) வேறுவேறே ஆகியும் (செய்யுளகத்து வரும்) ஒரோவழி மருவியும் - நிரையீறாகிய நாலசைப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப்பாவினுள்ளே வரும்; பெறாதும்- வஞ்சியுரிச் சீர் வெண்பாவினுள் வரப்பெறாதும் 1வழங்குமன் அவையே- அவ்வாற்றால் நடைபெறும் முன் கூறப்பட்ட சீர்கள் என்றவாறு. விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே என்றல்லது, இயற்சீரும் உரிச்சீரும் விரவியும் வரும்; பொதுச்சீர் அருகியும் வரும் ; இயற்சீரும் உரிச்சீரும் வேறு வேறாகியும் வரும் ; நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் வஞ்சியுள்ளே வரும் ; வஞ்சியுரிச்சீர் வெண்பாவினுள் வரப் பெறா. நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும், வஞ்சிப்பா வின் இறுதியினும் வரப்பெறா என்று கூறிற்றிலரேனும், உரையிற்கோடல் என்னும் உத்தியானும், பிற நூன் முடிந்தது தானுடம்படுதல் என்பதனாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது. அசையளபு குறுகல் மகரம் உடைத்தே; இசையிடன் அருகும் தெரியுங் காலை - தொல். எழுத்து. 330 எனத் தொல்காப்பியத்துள் இன்னவிடத்துக் குறுகும் என்று யாப்புறுத்துக் கூறிற்றில்லையேனும், உரையிற்கோடல் என்னும் உத்தி பற்றி வகரத்தின் பின் மகரம் குறுகும், என்று விருத்தியுள் விளங்கக் கூறினார். அதுபோலக் கொள்க. இது பொருந்தாது ; என்னை? வகார மிசையும் மகாரம் குறுகும் - தொல். எழுத்து. 330 என்று போக்கிச் சொன்னார் ஆகலானும், அவிநயத்துள்ளும், முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கின் வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும் எனப் பொது வகையாற் கூறி, இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று கணக்கியலுள் புறநடை யெடுத்தோதினார் ஆகலானும் இந்நூலுடையாரும் 1மாஞ்சீர் கலியுட்புகா (யா. கா. 40) என்னும் இதன் புறநடையானும், நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா ; அயற்பாவில் நாலசைச்சீர் நேரீற்று நாலிரண்டாம் ; - நாலசைச்சீர் ஈறுநிரை சேரின் இருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோர் குறித்து என்னும் புறநடையானும், பிறவாற்றானும் விளங்கக் கூறினார் என்க. இனிப் பிற நூலுட் கூறுமாறு : இயற்சீர் உரிச்சீர் எனவிரு சீரும் மயக்க முறைமையின் நால்வகைப் பாவும் 2இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் உரிச்சீர் விரவ லாயு மியற்சீர் நடக்குந ஆசிரி யத்தொடு வெள்ளை அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் றிணைதலும் 1ஏனுழி ஒன்றுசென் றாகலும் அந்தம் 2இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குணத்த ஆகலும் ஆகுந என்ப அறிந்திசி னோரே - யா. கா. 8. மேற். என்றார் காக்கைபாடினியார். நேரீற் றியற்சீர் கலிவயின் இலவே; வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே என்றார் நற்றத்தனார். ஓசையின் ஒன்றி வரினும்வெண் சீரும் ஆசிரிய அடியுட் குறுகும் என்ப அகவலுள் தன்சீர் வெண்சீர் ஒருங்கு புகலிற் கலியுட் பொருந்தும் என்ப வஞ்சியு ளாயின் எஞ்சுதல் இலவே இயற்சீர் இறுதிநேர் இற்ற காலை வஞ்சி யுள்ளும் வந்த தாகா; ஆயினும் ஒரோவிடத் தாகும் என்ப என்றார் பல்காயனார். கலித்தளை அடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே - தொல். செய். 25. வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா - தொல். செய். 26 என்றார் தொல்காப்பியனார். உரிமை இயற்சீர் மயங்கியும் பாநான் கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சி கலியினோர் இற்ற இயற்சீர் ஆகா என்மனார் புலவர் நிரையிறும் நாலசை வஞ்சி யுள்ளால் விரைவினும் நேரீற் றல்லவை இயலா என்றார் அவிநயனார். நேரீற் றியற்சீர் கலிவயிற் சேரா; நிரையிற் நின்ற நாலசை எல்லாம் வரைதல் வேண்டும் வஞ்சியில் வழியே என்றார் மயேச்சுரனார். இவற்றிற்குச் செய்யுள் : இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து - திருக்குறள் (1091) என இக்குறள்வெண்பாவினுள் 1இயற்சீரும் 2உரிச்சீரும் விரவி வந்தன. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே? - குறுந்தொகை. 2 இவ்வாசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. *அடலணங்கு கழற்செவ்வேல் *அலங்குதார்ச் செம்பியன்றன் கெடலருங் கிளர்வேங்கை எழுதித்தம் உயிரோம்பா துடல்சமத் துருத்தெழுந்த ஒன்னாத பல்லரசர் கடகஞ்சேர் திரண்முன்கை கயிற்றோடும் வைகினவே இக் கலியுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. தாழ்பொழிற் றடாமாஞ்சினை வீழ்குயிற் பெடைமெலிவினைக் கண்டெழுந் துளர்சிறகிற் சென்றணைந்து சேவலாற்றும் செழுநீர்க் கழனி யூரன் கேண்மை மகிழ்நறுங் கூந்தற் கலரா னாதே இவ்வஞ்சியுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. இனிப் பொதுச்சீர் அருகி வருமாறு: 3அலரிநாறு துவர்வாய் அமர்த்த நோக்கின் நன்னுதல் அரிவை எனவும், 4இன்னுயிர் தாங்கும் மதுகை யோளே எனவும், அந்தண் சாந்தமோ டகில்மரம் தொலைச்சிச் 1செந்துசிதைய உழுத செங்குரற் சிறுதினைப் படுங்கிளி நம்மொடு கடியும் நெடுவரை நாடர்க்கு நேர்ந்தனர் எமரே எனவும் இவ்வாசிரியத்துள் நாலசைச்சீர் வந்தது. 2திரைந்துதிரைந்து திரைவரத் திரண்முத்தம் கரைவாங்கி 3நிரைந்துநிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும் 4கண்டல்வண்டற் கழிபிணங்கிக் கருநீல மதுவுண்ணவும் 5கொண்டஞெண்ட மணற்குன்றிற் 6பண்ணையாயம் குடிகெழுவவும் போதணிந்த பொழிற்புன்னைப் 7பராரைப்பெண்ணைப் படுதுறையெம் தூதணிந்த 8வண்டுண்கண்ணித் துறைவனெங்கள் துறைவனே இக்கலியுள் நாலசைச்சீர் வந்தது. 9செங்கண்மேதி கரும்புழக்கி 10அங்கண்ணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலும் செழுநீர், *நல்வயற் கழனி யூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே - யா. கா. 15. மேற். இவ்வஞ்சியுள் நாலசைச்சீர் வந்தது. இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் - திருக்குறள். 615 எனவும், தாழ்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி - திருக்குறள் 1191 எனவும் வரும் குறள்வெண்பாக்களின் இறுதிக்கண் ஓரசைப் பொதுச்சீர் வந்தன. ஊழி நீ; உலகு நீ; உருவும் நீ; அருவும் நீ; - யா. வி. 83. மேற். என்னும் அம்போதரங்க உறுப்பின்கண் 1ஓரசைப் பொதுச்சீர் வந்தன. (கலி விருத்தம்) கை விரிந்தன காந்தளும் பூஞ்சுனை மை விரிந்தன நீலமும் *வான்செய்கண் மெய் விரிந்தன வேங்கையும் *சோர்ந்ததேன் நெய் விரிந்தன நீளிருங் குன்றெலாம் - சூளாமணி. 17 எனவும், (கலி விருத்தம்) குர வணங்கிலை மாவொடு சூழ்கரைச் சர வணம்மிது தானனி போலுமால் அர வணங்குவில் ஆண்டகை சான்றவன் பிரி புணர்ந்துழி வாரலன் என்செய்கோ! - யா. வி. 15; 94. மேற். எனவும் பாவினங்களுள் முதற்கண் 2நேரசைப் பொதுச் சீரும், 3நிரையசைப் பொதுச்சீரும் வந்தன. இனி, இயற்சீரும் உரிச்சீரும், வேறு வேறு வருமாறு: தெறுக தெறுக தெறுபகை தெற்றாற் பெறுக பெறுக பிறப்பு - யா. வி. 95. மேற். இஃது இயற்சீரான் வெண்பா வந்தது. பூம்பாவாய் ! நீயொருநாட் பூம்பொழில்வாய் வந்தாயை யாம்பாவை வேண்டினமோ ஏன்று என உரிச்சீரான் வெண்பா வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே - குறுந்தொகை. 71. இஃது இயற்சீரான் ஆசிரியம் வந்தது. (தரவு கொச்சகம்) 1செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே - யா. வி. 20. 32. 78, 86. மேற் - யா. கா. 11. 15. 21. 32. மேற். இது 2வெண்பாவுரிச்சீரானே கலி வந்தது. (குறளடி வஞ்சிப்பா) எல்லாரும் எந்தமக்கே நல்லறவே உள வென்பர்; நல்லார்கள் நனிதெரியின் கல்லாரும் கற்றாரும் சொல்லாலே வெளிப்படுவர்; அதனால், மண்மிசை மாண்ட கற்பின் விண்ணொடு வீடு விளைக்குமால் அதுவே இது வெண்பாவுரிச்சீரானே வஞ்சி வந்தது. (குறளடி வஞ்சிப்பா) பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை *மீன்றிரிதர வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும், மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே - யா, வி, 9, 21, 90, மேற். - யா. கா. 9, 34. இது 3வஞ்சியுரிச்சீரானே வஞ்சி வந்தது. விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி என்னாது. மருவியும் என்று மயங்க வைத்தமையால், வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றுகரம் வந்துழியன்றி வாரா; வஞ்சியுள் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; இரண்டு வரினும் இயற்சீர் ஆயின், இடையிட்டு வரும்; ஓரசைச்சீர் பெரும்பான்மை வெண்பா வின் இறுதிக் கண்ணும், அம்போதரங்க உறுப்பின் கண்ணும் வரும்; உரிச்சீரானே ஆசிரியம் பயின்று வாரா; இயற் சீரானே வஞ்சியும் கலியும் பயின்று வாரா. இனி, ஒரோவழி மருவியும் வருமாறு: 1நின்றுநின்றுளம் 2நினைபுநினைவொடு 3நீடுதெருமரு நிறைசெலச் செல 4இவளின்றுதன தெழில்வாடவும் 5நறுமாந்தளிர்நிறத் தகைபிறக்கெந் 6தண்முகைமென்குழற் பெருந்தடங்கண் 7பூவுறுநலந்தொலைந் தினியாற்றலள் 8செலச்செலவூரலர் 9செவிசுடச் சுட முகிழ் 10முகிழ்ப்பயலாரறி 11வுறுப்பவுநீடினை தெரிவொடு கெழுமிய திருநலம் புரிவொடு கெழுவுக புனைதா ரோயே! இக் குறளடி வஞ்சிப்பாவினுள் நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் எட்டும் வந்தன. பெறாதும் என்ற உம்மையான், வஞ்சியுரிச்சீர் வெண்பா வினுள் வாராமையும், நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பா வினுள் வாராமையும், மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற் றுள்ளும் காண்க. சுடர்த்தொடீஇ! கேளாய்: தெருவினா மாடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன், எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்! உண்ணுநீர் ஊட்டிவா, என்றாள்; எனயானும் தன்னை அறியாது சென்றேன்; மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, அன்னாய்! ïtbdhUt‹ brŒjJfh©! என்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான், என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன் - கலித்தொகை. 51. இந்தக் கலிவெண்பாவினுள் நேரீற்றியற்சீர் வந்தது. புன்காற் புணர்மருதின் போதப்பிய புனற்றாமரை - யா. வி. 94. மேற். எனவும், தேந்தாட் டீங்கரும்பின் - யா. வி. 94. மேற். எனவும், பூந்தாட் புனற்றாமரை - யா. வி. 94. மேற். எனவும், வார்காற் செழுங்கழுநீர்? எனவும், வென்றி கொண்டறை? எனவும், வஞ்சியடி முதற்கண் நேரீற்று இயற்சீர் வந்தது. எழிலார் சிமயம் முறிகொண் டறையும் முரல்வாய்ச் சுரும்பின் எனவும், காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் - கலித்தொகை. 39. - யா. வி. 86. மேற். எனவும் கொச்சகக் கலியுள்ளும் நேரீற்று இயற்சீர் வந்தது. உடைமணியரை யுருவக் 1குப்பாயத்து என வஞ்சியடி நடு நேரீற்று இயற்சீர் வந்தது. 2அள்ளற்பள்ளத் தகன்சோ ணாட்டு வேங்கைவாயில் வியன்குன் றூரன் - யா. கா. 9. மேற். என்னும் முச்சீரடி வஞ்சியுள் நேரீற்று இயற்சீர் சிறு பான்மை வந்தது. மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு 3தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் - புறநானூறு.2. எனவும், பொன்புனைந்த நகரும் நகர்சூழ்ந்த 4எயிலும் எயிலேந்திய 5கண்ணும் கண்ணேந்திய குணனும் எனவும் இவ் வஞ்சியடி இறுதி நேரீற்று இயற்சீர் சிறு பான்மை வந்தது. இனிப் பாவினத்துள் விரவி வருமாறு: போதார் 6நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான் தாதார் மலரடியைத் 7தணவாது வணங்குவார் தீதார் வினைக் கெடுப்பார் சிறந்து - யா. வி. 66. மேற். இவ் வெள்ளொத்தாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் வந்தன. *நன்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று *முனிவ செய்யார் அன்பு வேண்டு பவர் - யா. கா. 27 இவ்வெள்ளொத் தாழிசை இயற்சீரானே வந்தது. வாராரே என்றென்று மாலைக்கண் நனிதுஞ்சாய் ஊராரே என்றென்றும் ஒன்றொவ்வா உரைசொல்லி யார்யாரே என்றாளே யாய் என உரிச்சீரானே வெள்ளொத்தாழிசை வந்தது. குழிலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளிய என் றயல்வாழ் மந்தி *கழல்வனபோல் *நெஞ்சகைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன். - யா. வி. 67. மேற். - யா. கா. 27. மேற். இவ் வெண்டுறையுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. 1அங்குலியின் அவிரொளியால் 2அருண மாகி அணியாழி மரகதத்தாற் பசுமை கூர்ந்து மங்கலஞ்சேர் 3நூபுரத்தால் அரவம் செய்யும் மலரடியை மடவன்ன மழலை ஓவாச் செங்கமல வனமென்று திகைத்த போழ்தில் தேமொழியால்4 தெருட்டுதியோ 5செலவி னாலோ தொங்கலர்பூங் கருங்கூந்தல் 6சுடிகை நெற்றிச் சுந்தரிநிற் பணிவார்க்கென் துணிவு தானே - யா. வி. 94. மேற். இவ் வாசிரிய விருத்தத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. பிற பாவினங்களுள்ளும் இயற்சீர் உரிச்சீர் விரவவும் பெறும். இனிப் பொதுச்சீர் பாவினத்துள் அருகி வருமாறு : இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி 7இரவில்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் 8லாதுவிட்டாற் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் 9சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே - யா. வி. 94. மேற். இக்கலித்துறையுள் நாலசைச்சீர் வந்தது. உரிமை யின்கண் இன்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால் பெருமை கொன்ற என்பவே - யா. வி. 21. மேற். - யா. கா. 11. மேற். என்னும் இவ்வஞ்சி விருத்தத்துள் ஓரசைப் பொதுச்சீர் வந்தது. கை விரிந்தன காந்தளும் பூஞ்சுனை மை விரிந்தன நீலமும் வான் செய்கண் மெய் விரிந்தன வேங்கையும் *சோர்ந்ததேன் நெய் விரிந்தன நீளிருங் குன்றெலாம் - சூளாமணி. 17 எனவும், குர வணங்கிலை மாவொடு சூழ்கரைச் சர வணம்மிது தானனி போலுமால் அர வணங்குவில் ஆண்டகை சான்றவன் பிரி வுணர்ந்துழி வாரலன் என்செய்கோ! எனவும் வரும் இக்கலி விருத்தத்துள் அடிதோறும் ஓரசைப் பொதுச்சீர் வந்தது. 1இவற்றை வகையுளி சேர்த்துக் கொள்க! என்பாரும் உளர். நேர்நடு வஞ்சியுரிச்சீர் கலியுள்ளும் ஆசிரியத்துள்ளும் வருதல் 16. நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர் கலியினோ டகவலிற் 2கடிவரை இலவே. என்பது என் நுதலிற்றோ? எனின், விதி வகையான் விலக்குதல் நுதலிற்று. (இ-ள்) நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் - நேர் நடுவாகிய தேமாங்கனி, புளிமாங்கனி என்னும் வஞ்சி உரிச்சீர், கலி யினோடு அகவலில் கடிவரை இலவே - கலியுள்ளும் ஆசிரியத் துள்ளும் வரப்பெறும் என்றவாறு. ‘mftš v‹gJ MáÇa¤ij¢ brhšYnkh? எனின், சொல்லும். என்னை? அகவல் என்ப தாசிரியப் பாவே என்பது சங்கயாப்பு ஆகலின். மேற் சூத்திரத்துள் (யா. வி. 15) உரிச்சீரும் இயற்சீரும் விரவியும் வரப்பெறும் செய்யுளகத்து, என்றதனால், இப் பொருள் முடிய வைத்துப் பெயர்த்தும் சூத்திரம் ஓதிய அதனால், கலியுள்ளும் ஆசிரியத்துள்ளும் வஞ்சி உரிச்சீர் வருகின்றுழி நிரை நடு இல்லாதன வருக, என்பது பயன். எனவே, நிரை நடு வாகிய கூவிளங்கனி, கருவிளங்கனி என்னும் இரு சீரும்வாரற்க. என்று விலக்கப்பட்டது ஆகலின், இதனை நியமச்சூத்திரம் என்க. என்னை? முன் ஒன்றினால் முடிய வைத்துப் பின்னும் அதனையே எடுத்துக் கொண்டு விதிமுகத்தான் விலக்குவதூஉம், விலக்கும் வகையான் விதிப்பதூஉம் 1நியமச்சூத்திரம் ஆகலின். வரலாறு : (தரவு) புனற்படப்பைப் 2பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை 3இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை கழுநீரும் குவளையுமங் கரும்பினொடு காய்நெல்லும் பழுநீருள் ஓடித்தேறும் பழனஞ்சூழ் ஊர ! கேள்: (தாழிசை) வடித்தடங்கண் பனிகூர வால்வளைத்தோள் பசப்பெய்தத் துடிக்கியையும் நுண்ணிடைவாய்த் துன்னாது துறப்பாயேல் 4பொடித்தகன்ற வனமுலையாள் புலம்பலும் புலம்பாளோ? வண்டுற்ற நறுங்கோதை 5வால்வளைத் தோள் மெலிவெய்தப் பண்டுற்ற எழில்வாடப் 6பரியாது துறப்பாயேல், உண்டுற்ற காதலின் உள்ளாகி இருப்பாளோ? வேய்தடுத்த மென்றோளும் மேனியும் விளர்ப்பெய்த நீவிடுத்தாங் 7கொண்பொருட்கே நீங்குதலை நினைப்பாயேல், ஆய்மலர்க்கண் பனிகூர ஆவியும் உள்ளாமோ? எனவாங்கு, (தனிச்சொல்) (சுரிதகம்) குவளை உண்கண் இவள்நலம் தொலைய உறுபொருட் கெண்ணிய எண்ணம் மறுபிறப் புண்டெனிற் பெறுக யாமே இந் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் பூந்தாமரை எனவும், இரைதேரிய எனவும் நேர்நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) 1மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றைக் கடிகமழ் புறவிற் 2கணவண் டார்க்கும் 3யாணர்க் கோளூர் என்ப பாணர் பாரம் தாங்கியோன் பதியே இவ் வாசிரியத்துள் மாரியொடு மலர்ந்த என்புழித் தேமாங்கனி என நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) நன்னாள் வேங்கைப் பொன்னேர் புதுமலர் குறிஞ்சியொடு கமழும் குன்ற நாட! கடிபுனற் கோளூர் *அன்னவெம் தொடிபொலி பணைத்தோள் *துறவா தீமே இதனுட் 4குறிஞ்சியோடு கமழும் என்புழிப் புளிமாங் கனி என நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. வரைவிலவே என்ற விதப்பால், ஆசிரியத்துள் இரண்டும் ஓரடியுட் பெரும்பான்மையும் வாரா; வரினும், இயற்சீர் இடையிட்டு நிற்கும்; அருகிக் கண்ணுற்று நிற்குமேனும் சிறப்பில. 5வீங்குமணி விசித்த 6விளங்குபுனை நெடுந்தேர் - யா. வி. 91. மேற். என்னும் ஆசிரியத்துள் இரு சீரும் ஓரடியுள்ளே விசித்த என்னும் இயற்சீர் இடையிட்டு வந்தது. 7வண்டுகெழு 8திலகமொரு மாத்தொலைத்த என்னும் ஆசிரியத்துள் இரு சீரும் கண்ணுற்றவாறு காண்க. அகவல் கலியோடு என்னாது, கலியினோடு அகவல் என முறை பிறழ வைத்தமையால், கொச்சகக் கலிப்பாவினுள் நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் அருகிவரினும், பெரிதும் சிறப்பில. வரலாறு : திரைந்து திரைந்து திரைவரத் திரண்முத்தம் கரைவாங்கி - யா. வி. 15.94. மேற். என்னும் கொச்சகக் கலியுள் 1சிறுநுளைச்சியர் என நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. கலியினோ டகவல் எனப் பொது வகையாற் கூறிற் றேனும், கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளுமே விதி முகத்தால் விலக்குவது. அவற்றின் இனத்துள் நிரை நடுவா யினவும் புகுதும் எனக் கொள்க. ‘m~J v‰wh‰ bgWJ«? எனின், மூவசைச் சீருரிச்சீர் (யா. வி 1.1) என்னும் சூத்திரத்துப் பா என்னும் தவளைப்பாய்த்துளாக அதிகாரம் வருதலானும், உரையிற்கோடல் என்பதனாலும், ஆசிரி யத்தோடு வெள்ளையும் கலியும் நேரடி தன்னால் நிலைபெற நிற்கும் - யா. வி. 27. மேற். என்று பொது வகையாற் சொல்லிப் பாவே கொண்டார் பல்காயனார் ஆகலானும், (நேரிசை வெண்பா) பொதுவகையாற் சொற்றனவும் பொய்தீர் சிறப்பிற் குதவி ஒரோவிடத்து நிற்கும் - விதிவகையால் நின்ற பொருளை நிகழ்விப் பதுநியமம் என்றுரைப்பர் தொல்லோர் எடுத்து - யா. வி. 30. மேற். (நற்றத்தனார்) என்பதனாலும் பெறுதும். வரலாறு : (சந்தக் கலி விருத்தம்) 2வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மௌவல் ; நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்; குளிர்கொடியன 3குழைமாதவி; குவிமுகையன கொகுடி; ஒளிர்கொடியன உயர்திரளினொ டொழுகிணரன ஓடை - சூளாமணி. தூது. 4. இக்கலி விருத்தத்துள் நிரையும் நேரும் நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வந்தன. கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக் குருதிக் கோட்டன இருந்தாட் பெருங்கைக் குன்றாமென அன்றாமெனக் குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்; வென்றார்ந் தமைந்த விளங்கொளி இளம்பிறைத் துளங்குவாள் இலங்கெயிற் றுழலுளைப் பரூஉத்தாள் அதிரும் வானென எதிரும் கூற்றெனச் சுழலா நின்றன சுழிகண் யாளி; சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப் பொறியெருத் தெறுழ்வலிப் புலவுநா றழல்வாய்ப் புனலாமெனக் கனலாமெனப் புகையா நின்றன புலிமான் ஏற்றை; 1என்றாங்கிவை யிவையியங்கலின் எந்திறத்தினி வரல்வேண்டலம் தனிவரலெனத் தலைவிலக்கலின் இறுவரைமிசை எறிகுறும்பிடை இதுவென்னென அதுநோனார் கரவர விடைக்கள உளமது கற்றோர் ஓதும் கற்பன்றே - யா. வி. 25. 6. மேற் - யா. கா. 29. மேற். என்னும் 2ஆசிரியத்துறையுள் வஞ்சியுரிச்சீர் வந்தன. என்னை? 1இணைநடு வியலா வஞ்சி உரிச்சீர் இணையுள ஆசிரி யத்தன ஆகா என்றார் காக்கைபாடினியார். நடுவு நேரியல் வஞ்சி உரிச்சீர் உரிமை யுடைய ஆசிரியத் துள்ளே என்றார் சிறுகாக்கைபாடினியார். நேர்நடு வியலா வஞ்சி உரிச்சீர் ஆசிரி யத்தியல் உண்மையும் உடைய என்றார் அவிநயனார். நிரைநடு வியலா வஞ்சி உரிச்சீர் வருதல் வேண்டும் ஆசிரிய மருங்கின் என்றார் மயேச்சுரர். இவர்களும் இலேசு எச்ச உம்மை விதப்பாற் கலிப்பாவினுள்ளும் உடம்பட்டாரென்க. (நேரிசை வெண்பா) அசையிரண்டும் மூன்றும் அவைநான்கும் ஒன்றும் வசையில் முறைமையான் வந்து - திசைகமழும் ஏரேற்ற கோதாய்! 2எதிபங்கம் வாராமைச் சீரேற்று நிற்பது சீர் சீரோத்து முடிந்தது. 4. தளை ஓத்து தளையும் அதன் தொகையும் கஎ. சீரோடு சீர்தலைப் பெய்வது தளை; அவை ஏழென மொழிப இயல்புணர்ந் தோரே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், தளை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், தளை ஓத்து என்னும் பெயர்த்து. ‘ï¢N¤âu« v‹ Ejȉnwh? எனின், பொது வகையால் தளை ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்). சீரொடு சீர் தலைப்பெய்வது தளை - ஒரு சீரோடு ஒரு சீர் ஏற்று நிற்பது தளை என்று சொல்லப்படும் ; அவை ஏழ் என மொழிப இயல்பு உணர்ந்தோரே - அவைதாம் ஏழு வகைப்படும் என்று சொல்லுவார் நூல் முறை அறிந்தோர் என்றவாறு. ஏழாவன, 1வெண்டளை இரண்டும், 2ஆசிரியத்தளை இரண்டும், கலித்தளை ஒன்றும், 3வஞ்சித்தளை இரண்டும், என. அவை போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துட் காட்டுதும். பிறரும், செயற்குரி இருசீர் செய்யுள் நடப்புழித் தலைப்பெய நிற்பது தளையெனப் படுமே என்றார் ஆகலின், சீரோடு சீர்தலைப் பெய்வது தளை, என்று ஒருமை கூறி, அவை ஏழென மொழிப, என்று எண்ணுழிப் பின்பு பன்மை கூறிய அதனால், தளை வழங்குகின்றுழி, நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தம்முள் 4ஒன்று தலும் 5ஒன்றாமையும் கொண்டு வழங்கப்படும். என்னை? நின்ற சீரீற் றொடுவரும் சீர்முதல் ஒன்றுதல் ஒன்றா தாகுதல் தளையே என்றார் பிறரும் எனக் கொள்க. (நேரிசை வெண்பா) நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள - நின்றால் வளையொன்று முன்கையாய் ! *வந்ததனை வல்லோர் தளையென்று கட்டுரைப்பார் தாம் - யா. வி. 22. மேற். வெண்டளை கஅ. வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே. என்பது என் நுதலிற்றோ? எனின், வெண்டளை இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) வெண்சீர் ஒன்றலும் - 1வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும்சீர் முதலசையோடு ஒன்றலும், இயற்சீர் விகற்பமும் என்று - 2இயற்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் என, இரண்டு என்ப வெண்டளைக்கு இயல்பே - வெண்டளை இயல்பாவன இரண்டு வகைப்படும் என்றவாறு. இயல்பே என்ற விதப்பால், வெண்பா உரிச்சீர் நின்று வெண்பா உரிச்சீரோடு ஒன்றுதலும், இயற்சீர் நின்று இயற் சீரோடு ஒன்றாததூஉம் சிறப்புடைய, வரும் சீர் யாதானுமாக வரப்பெறும். ‘Éf‰g«’ v‹wJ ‘x‹whjjid¢ brhšYnkh? எனின், சொல்லும். என்னை? இயற்சீர் இரண்டு 3தலைப்பெயல் தம்முள் 4விகற்பவகையதுவெண்டளைஆகும் (காக்கைபாடினியார்.) - யா. வி. 21. மேற். - யா. கா. 10. மேற். என்றார் ஆகலின். அவற்றிற்குச் செய்யுள்: (குறள் வெண்பா) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - திருக்குறள். 785 இது வெண்சீரோடு வெண்சீர் ஒன்றி வந்த சிறப்புடை வெண்சீர் வெண்டளை. (குறள் வெண்பா) கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று - திருக்குறள். 402. இது வெண்சீரோடு வேற்றுச்சீர் ஒன்றிய சிறப்பில் வெண்சீர் வெண்டளை. (குறள் வெண்பா) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் - திருக்குறள். 1121. இஃது இயற்சீர் நின்று இயற்சீரோடு விகற்பித்து வந்த சிறப்புடை இயற்சீர் வெண்டளை. (குறள் வெண்பா) இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய் நோக்கொன் றந்நோய் மருந்து - திருக்குறள். 1091. இஃது இயற்சீர் நின்று வேற்றுச் சீரோடு விகற்பித்து வந்த சிறப்பில் இயற்சீர் வெண்டளை. (நேரிசை வெண்பா) சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போழ்து -தண்டியலங்காரம் 16. மேற். -யா. வி. 37, 60 மேற். -யா.கா.11.471. மேற். இதனுள் வெண்டளை எல்லாம் வந்தன. (உ) ஆசிரியத்தளை ககூ. ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரோடு நேரசை ஒன்றல் நிரையசை ஒன்றலென் றயிரு வகைத்தே ஆசிரி யத்தளை. என்பது என் நுதலிற்றோ? எனின், ஆசிரியத்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்.) ஈரசைச் சீர் நின்று இனி வரும் சீரோடு நேர் அசை ஒன்றல் - இயற்சீர் நின்று வரும் சீர் முதலசையொடு நேரசை ஒன்றுவதூஉம், நிரை அசை ஒன்றல் என்று - நிரையசையாய் ஒன்றுவதூஉம் என்று, ஆயிரு வகைத்தே ஆசிரியத்தளை - ஆசிரியத்தளை அவ்விரண்டு வகைப்படும் என்றவாறு. இனி வரும் சீர் என்று சிறப்பித்த அதனால், வரும் சீரும் இயற்சீரே வந்து ஒன்றுவது சிறப்புடைத்து. வரும் சீர் யாதானும் ஆகப்பெறும். வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) உள்ளார் கொல்லோ தோழி! முள்ளுடை அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவளம் ஏய்க்கும் அகில்படு கள்ளியங் காடிறந் தோரே - ஐங்குறுநூறு. தனிப். 2 இஃது 1ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நேர்த்தளை. திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி - புறநானூறு. 2. இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரிய நேர்த்தளை. (நேரிசை ஆசிரியப்பா) 2திருமழை தலைஇய இருள்நிற விசும்பின் விண்ணதிர் *இமிழிசை முழங்கப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே இஃது ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை. (வெண்செந்துறை) 3ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை - முதுமொழிக் காஞ்சி 1 இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை. என்னை? ஈரசை இயற்சீர் ஒன்றிய தெல்லாம் ஆசிரி யத்தளை என்மனார் புலவர் என்றார் மயேச்சுரர். ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை ஆசிரி யத்தளை ஆகும் என்ப (சிறுகாக்கை பாடினியார்) என்றார் பிறரும் ஆகலின். பிறவும் அன்ன. (ங) கலித்தளை உ0. நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர் நிரைவருங் காலைக் கலித்தளை ஆகும். என்பது என் நுதலிற்றோ? எனின், கலித்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). 1நிரை ஈறு இல்லா, உரிச்சீர் முன்னர் - நேர் ஈறாகிய உரிச்சீர் முன்னர், நிரை வரும் காலைக் கலித்தளை ஆகும் - நிரையசை வரும் சீருக்கு முதலாய் வரின் கலித்தளை ஆகும் என்றவாறு. நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர் நிரை வரிற் கலித்தளை யாகும், என்னாது, நிரை வருங் காலை என்று மிகுத்துச் சொல்லிய அதனால், வரும் சீரும் நேரீற்று உரிச்சீரேயாவது சிறப்புடைத்து, பிற சீர் வரப்பெறுமாயினும், எனக் கொள்க. வரலாறு: செல்வப்போர்க் 2கதக்கண்ணன் 3செயிர்த்தெறிந்த 4சினவாழி - யா. வி. 32. 78. 86. மேற். என்பது, நேரீற்று உரிச்சீர் நின்று நேரீற்று உரிச்சீரோடு ஒன்றாது வந்த சிறப்புடைக் கலித்தளை. முற்றொட்டு 5மறவினை முறைமையான் முயலாதார் - யா. வி. 78. மேற். என்பது, நேரீற்று உரிச்சீர் நின்று பிற சீரோடு ஒன்றாது வந்த சிறப்பில் கலித்தளை. இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்று வழங்கவும் பெறும், என்று உரைக்கப்பட்டது ஆகலின், நிரையீறு இல்லாத் தேமா, புளிமா என்னும் இரண்டு ஆசிரிய உரிச்சீர்முன் நிரையசை முதலாகிய சீர் வரினும் கலித்தளையேயாம், பிற, எனின், ஆகாது. ஈரசை கூடிய சீரியற்சீர், என்று எடுத்து ஓதினமை யானும், ஆண்டு இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்று வழங்கப் படும், என்று பிறர் மதம் சொன்னமையானும், இயற்சீர் விகற்பம் வெண்டளை ஆகும், என்று எடுத்து ஓதிப் போந்தமை யானும், எனின், அது பொருந்தாது. நிரையீறாகிய கூவிளம், கருவிளம் என்னும் சீர் நின்று வரும் சீரோடு விகற்பித்தவழி வெண்டளைக்கு இடமாகும் ஆதலான், இயற்சீர்விகற்பம்வெண்டளைஆகும்,என்பதுபழுதாகாது,தேமா,புளிமா,என்னும்இரண்டுஆசிரியஉரிச்சீர்ப்பின்நிரைவரினும்கலித்தளைஆதல்வேண்டும்,என்றுfடாவினால்,mச்சீர்fலிக்குச்áறப்பில்லாமையானும்,ãறüலுள்ïவ்வாறுbசால்லாமைaனும்,‘gšbghU£ nகற்பின்eல்லதுnகாடல்- bதால்.kuò. 111 என்பது jந்திரcத்திMகலானும்,<ண்டுnநரீறாகிய_வகைச்சீர்Ãன்றுxன்றாததுவேfலித்தளைvன்றுbகாள்ளப்படுவதுvனக்bகாள்க.(neÇir வெண்பா) ஈரசைச்சீர் தாமுரிய 1ஆசிரியக் கென்றமையான் நேரீற் றியற்பின் நிரைவருங்கால்- ஓரும் கலித்தளையாம் என்னி2னக வற்சீர் கலியின் ஒலிக்கியையா என்றுரைக்கும் ஓத்து (ச) இதனை விரித்து உரைத்துக் கொள்க. வஞ்சித்தளை உக. தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித் தளையின் வகையிரண் டாகும். ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், வஞ்சித்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). தன் சீர் இறுதி - வஞ்சியுரிச்சீரின் இறுதி, நிரை யொடு நேர் வரின் - வரும் சீர் முதலசை நிரையசையாய் வரவும் நேரசையாய் வரவும், வஞ்சித்தளையின் வகை இரண்டு ஆகும் - வஞ்சித்தளை இரண்டு வகைப்படும் என்றவாறு. வஞ்சித்தளை இரண்டாகும், என்னாது, வஞ்சித் தளை யின் வகை இரண்டாகும், என்ற விதப்பினால், வரும் சீரும் வஞ்சி உரிச்சீராய் வருவது சிறப்புடைத்து, பிற சீரும் வரு மாயினும், எனக் கொள்க. பூந்தாமரைப் போதலமர (யா. வி. 15. மற்.) என்னும் பாட்டினுள் முதல் இரண்டடியும் வஞ்சியுரிச்சீர் நின்று வஞ்சி யுரிச்சீரோடு ஒன்றாது வந்த சிறப்புடை வஞ்சித்தளை; அல்லன, ஒன்றி வந்த சிறப்புடை வஞ்சித்தளை. (குறளடி வஞ்சிப்பா) 1மந்தாநிலம் *மருங்க சைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர் மிசை எனவாங்கு, இனிதின் ஒதுங்கிய *இறைவனை மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே - திருப்பாமாலை. - யா. கா. 11. 21 எனவும், (குறளடி வஞ்சிப்பா) புனல்பொழிவன சுனையெல்லாம்; பூநாறுவ புறவெல்லாம்; வரைமூடுவ மஞ்செல்லாம்; தேனாறுவ பொழிலெல்லாம்; எனவாங்கு, நாறுகுழற் கொடிச்சியர் தம்மலைச் சீறூர் வாழிய செல்வமொடு பெரிதே ! எனவும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நின்று வேற்றுச்சீரோடு 2ஒன்றியும் 3ஒன்றாதும் வந்த சிறப்பில் வஞ்சித்தளை இரண்டும் வந்தவாறு கண்டுகொள்க. தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித் தளை யாம், என்றமையால், வரும் சீர் நிரையும் நேரும் ஒருங்கு நின்று, புளிமா என்னும் சீராய் வரின் அல்லது வஞ்சித்தளை ஆகாது, பிற, எனின், அற்றன்று, வஞ்சித் தளையின் வகையிரண் டாகும் என்று எண்ணி விரித்து உரைத்தமையால், வரும் சீர் நிரை முதலாய் வரினும் நேர் முதலாய் வரினும் வஞ்சித் தளையாம் என்பது. எனவே நிரையும் நேரும் முதலாகிய எல்லாச் சீரினையும் உடன் கொண்டு பிற நூலொடு மாறுகொள்ளாது நிற்கும் எனக் கொள்க. அல்லதூஉம், இருவகை உகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப - தொல் . செய். 4 என்பது, நேர்க்கீழ்க் குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்தது, நுங்கு நுங்கினார், என்றாற்போல ஒருங்கு வரின் நேர்பு அசையாம், நிரைக்கீழ்க் குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்தது, நுழைந்து புக்கார், என்றாற்போல ஒருங்கு வரின் நிரைபு அசையாம், என்பது அன்று. நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நேர்பு அசையாம்; நிரைக்கீழ்க் குற்றிய லுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நிரைபு அசையாம் என்றார் செய்யுளியலுடையார்; அதுபோலக் கொள்க. வஞ்சித் தளைவகை வரைவின் றாகும் என்றாற்போலத், தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித்தளை இரண்டாகும் என்று தொகுத்துச் சொன்னாலும், குறித்த பொருளைக் கொண்டு நிற்கும். வஞ்சித் தளையின் வகையிரண்டாகும் ‘v‹W ÉǤJ¢ brhšy nt©oaJ v‹id? எனின், தளை வழங்குகின்றுழி நேர் ஈறாகிய நாலசைப் பொதுச்சீரை வெண்பா உரிச்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றியது வெண்டளையாகவும், ஒன்றாதது கலித்தளையாகவும்; நிரையீறாகிய நாலசைப் பொதுச் சீரை வஞ்சியுரிச்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றினும் ஒன்றாவிடினும் வஞ்சித்தளை யாகவும்; ஓரசைப் பொதுச்சீரை இயற்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும் ஒன்றாதது வெண்டளையாகவும் கொண்டு வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது ; விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும், என்ப ஆகலின். (கட்டளைக் கலித்துறை) தேமா புளிமா கருவிளம் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகா யடையின் வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே ! வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந்த தருகும்; இனியவற்றுட் கண்ணிய பூவினம் காய்ச்சீர் அனைய; கனியோடொக்கும் ஒண்ணிழற் சீர் ; அசைச் சீரியற் சீரொக்கும் ஒண்டளைக்கே -யா. கா. 7,8. இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. பிறரும், (நேரிசை வெண்பா) நேரிற நேர்வரின் வெண்டளை யாகுமந் நேரிற்ற சீர்ப்பின் நிரைவரின் - ஓரும் கலித்தளையாம் பால்வகையால் வஞ்சித் தளையாம் நிரைவரினும் நாலசைச்சீர்க் கண் எனவும், உரிச்சீர்த் தளைவகைக் கெய்தும் பெயரே நிரைநேர் இறுதி நாலசைச் சீர்க்கண் எனவும், ஓரசைப் பொதுச்சீர் தளைவகை தெரியின் ஈரசைச் சீர்த்தளைக் கெய்தும் பெயரே எனவும், ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயின் வெண்டளை; ஒன்றிய தாசிரியத் தளையே எனவும் சொன்னாரும் உளரெனக் கொள்க. அங்கண்வானத் தமரரரசரும் - திருப்பாமாலை. - யா. வி. 13. மேற். - யா. கா. 9. மேற். என்னும் பாட்டினுள், 1வெங்களியானை வேல்வேந்தரும் என நேரீற்று நாலசைச்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றினமையின், வெண்டளை. 1கடிமலர் ஏந்திக் கதழ்ந்திறைஞ்சி என்பது நேரீற்று நாலசைச்சீரோடு ஒன்றாமையின், கலித்தளை. 2மந்தமாருதம் மருங்கசைப்ப என்பதும், 3அந்தரந்துந்துபி நின்றியம்ப என்பதும் நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வரும் சீரின் முதல் அசையோடு ஒன்றியும் ஒன்றாதும் வந்த வஞ்சித்தளை. இலங்குசாமரை யெழுந்தலமர என்பது நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றிய வஞ்சித்தளை. (வஞ்சி விருத்தம்) உரிமை யின்கண் இன்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால் பெருமை கொன்ற என்பவே - யா. வி. 15. 94. மேற். - யா. கா. 11 மேற். என்னும் இதனுள் மழை என்னும் அசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாமையின், வெண்டளை ; செய் என்னும் அசைச்சீர் நின்று வரும் சீர் முதல் அசையோடு ஒன்றிற்று ஆகலின், ஆசிரியத்தளை. பிறவும் வந்துழிக் காண்க. பிறரும் தளைக்கு இலக்கணம் இவ்வாறே எடுத்து ஓதினார். என்னை? இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்ப நடையது வெண்டளை ஆகும் உரிச்சீ ரதனுள் உரைத்ததை அன்றிக் கலக்கும் தளையெனக் கண்டிசி னோரே இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்பம் இலவாய் விரவி நடப்பின் அதற்பெயர் ஆசிரி யத்தளை ஆகும் வெண்சீர் இறுதிக் கிணையசை பின்வரக் கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் தன்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முளொத் தொன்றினும் ஒன்றா தொழியினும் வஞ்சியின் 1பந்தம் எனப்பெயர் பகரப் படுமே என்றார் காக்கைபாடினியார். ‘m~nj vÅ‹, ït® tU« ÓU« F¿¤J¡ T¿dh® m‹nwh? எனின், அவர் அவை சிறப்புடைமை நோக்கி எடுத்து ஓதினார்; அல்லாத சீரும் உடம்பட்டார் எனக் கொள்க. இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனுள் ஒன்றிய தியல்பே ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை ஆசிரி யத்தளை ஆகும் என்ப வெண்சீர் இறுதி நிரைவரிற் கலித்தளை; வஞ்சி வகைமை வரைவின் றாகும் என்றார் சிறுகாக்கைபாடினியார். ஈரசை இயற்சீர் ஒன்றிய தியல்பே என்றார் அவிநயனார். இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனுள் ஒன்றிய தியல்பே நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின், யாவரும் அறிப 2ஆசிரியத்தளை; 3வேறுபட வரினது வெண்டளை; 4வெண்சீர் ஆறறி புலவர்க் கொன்றினும் அதுவே வெண்சீர்ப் பின்னர் நிரைவருங் காலைக் கண்டனர் புலவர் கலித்தளை யாக வஞ்சி உரிச்சீர் வந்தன வழிமுறை எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே என்றார் மயேச்சுரர். (கட்டளைக் கலித்துறை) 1தன்சீர் தனதொன்றிற் றன்றளை யாம்; தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து; வல் லோர்வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை யாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே - யா. கா. 10 எனவும், (கட்டளைக் கலித்துறை) திருமழை உள்ளார் அகவல்; சிலைவிலங் காகும்வெள்ளை; மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்து; மை தீர்கலியின் தெரிவுறு பந்தம்நல் லாய் ! செல்வப் போர்க்கதக் கண்ணன்என்ப துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே - யா. கா. 11 எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (ரு) தளைகள் மயக்கம் 22. வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும். ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், தளை மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) வெள்ளையுள் பிற தளை விரவா- வெண்பாவினுள் வெண்டளை அன்றி வேற்றுத்தளை வந்து மயங்கா; அல்லன - மற்று ஒழிந்த பாவிடத்தும் பாவினத்திடத்தும், எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும் - வேற்றுத்தளையும் மயங்கியும் வரப்பெறும் என்றவாறு. *மயங்கியும் வழங்கும், என்னும் உம்மை விதப்பால், எல்லாத் தளையும் மயங்கியும் வரினும், தன் தளையான் வந்த பொழுதே பாக்கள் இன்னியல்பாய் நடப்பது எனக் கொள்க. பிறரும், எல்லாத் தளையும் மயங்கினும் தன்றளை அல்லாத் தளையாற் பாவினி தியலா என்றார் ஆகலின். அவை விரவி வருமாறு: (ஆசிரிய அடியுள் தளை மயக்கம்) ஆசிரிய அடியுள் வெண்டளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும், கலித்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், கலித்தளையே வருதலும், வெண்டளையும் வஞ்சித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும் வஞ்சித்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும் உரிய என்றிவற்றாற் பல பட விகற்பித்தும்; (கலி அடியுள் தளை மயக்கம்) கலி அடியுள் தன் தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், தன் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், தன் தளையும் ஆசிரியத்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும், வஞ்சித்தளையும் தன் தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் தன் தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் தன் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையே வருதலும் என்றிவற்றாற் பல பட விகற்பித்தும்; (வஞ்சி அடியுள் தளை மயக்கம்) வஞ்சி அடியுள் வெண்டளையே வருதலும், ஆசிரியத் தளையே வருதலும், கலித்தளையே வருதலும், முச்சீரடி வஞ்சி யுள்ள தன்தளையும் வெண்டளையும் வருதலும், ஆசிரியத் தளையும் தன் தளையும் வருதலும், கலித்தளையும் தன் தளையும் வருதலும், வெண்டளையும் ஆசிரியத்தளையும் வருதலும், வெண்டளையும் கலித்தளையும் வருதலும், கலித்தளையும் ஆசிரியத்தளையும் வருதலும் உரிய என்றிவற்றாற் பொது வகையாற் கூறிச் சிறப்புடைத் தளையானும் சிறப்பில் தளை யானும் இவ்வாறு மயக்கம் சொல்ல எல்லாம் இரட்டியாம் என்று, இவ்வாறு இருதளையும் மயங்கி நிற்ப, பல வேறு வகைப்பட்ட தளைமயக்கமாம் என்று இலக்கியப்பன்மை நோக்கி விகற்பித்து விரித்துக் கூறினார் ஒருசார் ஆசிரியரேனும், எல்லாத் தளையும் வந்து இவற்றுள் மயங்கும் எனவே அடங்கும் என்று, அல்லன, எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும் என்று தொகுத்துச் சொன்னார் இந்நூலுடையார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) நெடுவரைச்1 சாரற்2 குறுங்கோட்டுப்3 பலவின் விண்டுவார்4 தீஞ்சுளை வீங்குகவுட் 5கடுவன் உண்டுசிலம்6 பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப மடியாக் கொலையில் என்னையர் மலையே7 - யா.கா.38.மேற் இவ்வாசிரியத்துள் வேற்றுத்தளை எல்லாம் வந்து மயங்கியவாறு கண்டுகொள்க. (சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா) குடநிலைத்8 தண்புறவிற்9 கோவலர் 10எடுத்தார்ப்பத்11 தடநிலைப் பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குபிணிக்12 கயிறொரீஇத் தாங்குவனத் 13தொன்றப்போய்க் கலியினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு, ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற 14வாறே - யா. வி. 86. மேற். - யா. கா. 21. 32. 38. மேற். இக்கலிப்பாவினுட் பிற பாவின் தளை எல்லாம் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. (குறளடி வஞ்சிப்பா) “ó«bghʉ15 w©fhdš16 òdšbghÊ17 j©gl¥ig18 åehW19 ó§fhŠá¡20 fhdhW21 nfh£blUik¡22 FH¡f‹W23 ãiH¤njho¡ 24 fhŒ¤JWg25 bgUŠbrªbeš26 njŒ¤JH¡F27 kJnehdh® vdth§F¤ Ô§fiH28 th§»29 Éy§F«30 ó«òdš31 Cu !32 புலம்பா 33னாளே இவ்வஞ்சிப்பாவினுள் வெண்டளையும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. இனி, பாவினத்துள் தளை மயங்கி வருமாறு : (வேற்றொலி வெண்டுறை) முழங்குதிரைக் 1கொற்கைவேந்தன்2 *முழுதுலகும் 3ஏவல்செய 4முறைசெய்5 கோமான்6 வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக் கலங்கிநின் றாயெலாம் கருதலா காவணம் இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள் பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே - யா. வி. 67. மேற். - யா. கா. 27, 38. மேற். என்னும் இவ் வெண்டுறையுள் வஞ்சித்தளையும், ஆசிரியத் தளையும், கலித்தளையும், வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. (எண்சீர் ஆசிரிய விருத்தம்) வம்பலைத்த7 வன முலையாள் முகமாய்8 வந்து9 மறுநீக்கி மறைந்திருந்தேற் கறிந்து தானும் அம்பரத்தின் இனிதிழிந்தா லமுதம் கொள்வான் அவிரொளிசேர் மயிரொழுக்காய் அணைந்த தென்று செம்பவளத் திரண்முத்தம் செறியச் செய்து சிலைகோலிக் கணைதெரிந்து சேம மாகக் கொம்பலைத்த நுசுப்பியக்கி மதியம் இட்ட கொடிமதிலென் றவிர் பூணைக் குறிக்கொண் டேனே இவ்வாசிரிய விருத்தத்துள் கலித்தளையும், ஆசிரியத் தளையும், வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. 1நாகம் 2சந்தனத் 3தழைகொண்டு 4நளிவண்டு கடிவ; நாகம் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ; நாகம் செஞ்சுடர் நகுமணி உமிழ்ந்திருள் கடிவ; நாகம் மற்றிது 5நாகர்தம் உலகினை நகுமே - சூளாமணி, 749 இக்கலித்துறையுள் ஆசிரியத்தளையும், கலித்தளையும் வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. கருவிப்6 புட்டிலின்7 கண்டமும்8 மருவிப் பக்கரைப் போழ்களும் விரவிப் போர்க்கள வாயெலாம் புரவித் துண்டங்கள்9 போர்த்தவே இவ்வஞ்சி விருத்தத்துள் ஆசிரியத்தளையும் வெண்டளையும் வந்தன. பிற பாவினங்களுள்ளும் தளை மயங்குமாறு வந்தவழிக் கண்டு கொள்க. வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும் என்பதனுள் அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும், என்பது வேண்டா, வெள்ளையுட் பிறதளை விரவா, என்பதனானே அல்லனவற்றுட் பிறதளை விரவும் என்பது பெறப்படும். என்னை? மேலைச்சேரிக் கோழி வென்றது என்றால், கீழைச்சேரிக் கோழி ஓடிற்று, (என்பது பெறப் பட்டது. அல்லதூஉம், பிறரும், நன்பொது, 51 உரை) 10முக்கட் கூட்டம் களவிற் கில்லை, என்றமையான், முக்கட் கூட்டம் கற்பிற்கு உண்டு, என்பது பெறப்பட்டது என்று விரித்து உரைத்தார் ஆகலானும், எனின், அவ்வகையால் எதிர் மறுத்தல் ஈண்டுப் பெறப்படுமே எனினும், விளங்கச் சொல்லல் என்னும் நூல் மரபினாற் சொல்லப்பட்டதாம். அற்றன்று, வெள்ளையுட் பிறதளை விரவா, என்ப தனைச் சூத்திரமாகக் கொண்ட பொழுது, வெள்ளை என்பதனால் வெண்பாவும், வெண்பா இனமும் கொள்ளப் படும்? எனின், வெண்பா இனத்துள்ளும் வேற்றுத்தளை விரவாது விடல் வேண்டும். வெள்ளை என்பதனால் வெண் பாவே கொள்ளப்படுவது எனின், பாவாய் வேறாகிய ஆசிரியம் கலி, வஞ்சி என்றிவற்றிற் பிறதளை விரவும் என்பது அல்லது, இனத்திற் பிறதளை விரவும் என்பது பெறப்படாது. மேலைச் சேரிக் கோழி வென்றது, என்றால், கீழைச் சேரிக் கோழி ஓடிற்று, என்பதல்லது, ஏனைச்சேரிக் கோழி வென்றது; ஓடிற்று என்பது பெறலாகாது; அவ்வாறே போலவும், முக்கட் கூட்டம் களவிற் கில்லை, என்றால், களவின் வேறாகிய கற்பிற்கு உண்டு, என்பதல்லது, கைக்கிளை, பெருந்திணை என்பன வற்றுள் உண்டு; இல்லை, என்பது பெறப்படாது; அவ்வாறே போலவும், என்று கடாவும் மாணாக்கனைக் குறித்து, வெண்பா வொழித்து அல்லாப் பாவும், பாவினமும், வெண்பா இனமும் பிற தளை விரவும், என்பது அறிவித்தற்கு, வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும். என்பது சொல்ல வேண்டும் எனக் கொள்க. அஃதே எனின், வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன தளையும் மயங்கியும் வழங்கும் v‹whY« F¿¤j bghUis¡ bfh©L ÉF«; ‘všyh« v‹W ÄF¤J¢ brhšy nt©oaJ v‹id? எனின், பெருநூல் மருவா ஒரு சாராரும், சான்றோர் செய்யுட்டன்மை அறியா தோரும் நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் பிற தளையும் வெண்பாவினுள் அருகி வரும் என்பார் உளராயினும், அவ்வாறு வரின், வெண்பா அழியும், செப்பலோசை தழுவி நில்லாது ஆகலின், என்று மறுத்தார் காக்கைபாடினியார் முதலிய மாப்பெரும் புலவர்; அவரது துணிபே இந்நூலுள்ளும் துணிபு, என்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க. (நேரிசை வெண்பா) குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி நிலாவணங்கு *ne®kzšnkš நின்று - *òyhîz§fš கொள்ளும்புட் காக்கின்ற *nfhÆ‹iknah நீபிறர துள்ளம் *òfh¥g துரை - யா.கா.38. மேற். இதனுள் கொள்ளும்புட் காக்கின்ற என்புழிச் செப்ப லோசை கொள்ளுமாறு போலாது, கோயின்மையோ என்புழி வஞ்சியுரிச்சீர் வந்து, வஞ்சித்தளை தட்டுச் செப்பலோசை வழுவிக்கிடந்தவாறும், வகையுளி சேர்த்தல் ஆகாதவாறும், உதாரண வாய்பாட்டால் ஓசை ஊட்டினும் உண்ணாதவாறும் கண்டுகொள்க. 1அல்லதூஉம், சான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சித்தளையும் வேற்றுத்தளையும் வந்த வெண்பா இல்லை போலும் எனக் கொள்க. (குறட்டாழிசை) வளக்கு ளக்கரை மாநீலம் கொய்வாட் களக்க லாகுமோ அன்பு? இதனுள் ஆசிரியத்தளை தட்டுச் செப்பலோசை வழுவிற்று. பிறவும் இவ்வாறு பிறழ்ந்தன கண்டுகொள்க. (கட்டளைக் கலித்துறை) மாஞ்சீர் கலியுட் புகா ; கலிப் பாவின் விளங்கனிவந் தாஞ்சீர் அடையா; அகவல் அகத்துமல் லாதவெல்லாம் தாஞ்சீர் மயங்கும் ; தளையுமதே ; வெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே! - யா.கா.38 இதனை விரித்து உரைத்துக்கொள்க. (நேரிசை வெண்பா) சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் ; வஞ்சியுள் ஊருங் கலிப்பாச் சிறுச்சிறிதே - பாவினும் வெண்பா ஒழித்துத் தளைவிரவும் ; செய்யுளாம் வெண்பாக் கலியுட் புகும் (நாலடி நாற்பது) - யா. வி 32. மேற். எனவும், வெள்ளை ஒழித்தல் பாவொடு பாவினம் சொல்லிய தளைசீர் வரைவில விரவும் எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க. (நேரிசை வெண்பா) நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள - நின்றால் வளையொன்று முன்கையாய் ! வந்ததனை வல்லோர் தளையென்று கட்டுரைப்பார் தாம் அதிகண்டம் என்றும் இசையென்றும் சீரைப் பதச்சேதம் என்றும் பகர்வர்; பதச்சேதம் சந்தித் ததனைத் தளையென்பர் ; அத்தளையைப் பந்தமென் பாரும் பலர் இவற்றை விரித்துரைத்துக் கொள்க. (சு) தளை ஓத்து முடிந்தது. 5. அடி ஓத்து அடியின் வகை 23. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே. ‘ï›nth¤J v‹d bga®¤njh? எனின், தளையினான் அடி ஆமாறும், அடிப் பெயரும், அடிக்கு உரிமையும், அடி மயக்கமும், அடி வரையறையும் ஆமாறும் உணர்த்திற்று ஆதலான் அடி ஓத்து என்னும் பெயர்த்து. “ï¢N¤âu« v‹ Ejȉnwh? எனின், ஒருசார் ஆசிரியர் வேண்டும் அடிகளது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) குறளடியும் சிந்தடியும் அளவடியும் நெடிலடியும் 1கழிநெடிலயும் என இவ்வைந்து திறத்தன அடி என்று உரைத்தார் ஒருசார் தொல்லாசிரியர் என்றவாறு. ‘ï¥bghUis¢ brhšYnkh ï¢N¤âu¤JŸ bjhl® bkhÊ? எனின், சொல்லும். என்னை? குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பது உம்மைத்தொகை ஆதலின், எண்ணும்மை வாசகம்பட விரித்து உரைக்கப்பட்டது. ஐந்து திறத்தன என்பது, அச்சொன்ன அடி ஐந்தே ; ஆகலின் ஐந்து என்பது போந்த பொருள். கடையிணை, பின்முரண் இடைப்புணர் முரண் - யா. வி. 39. என்னும் சூத்திரத்துணின்றும் 2சார்ச்சி வழி ஒழுகுதல் என்னும் அதிகார முறைமையால் ஒருசார் ஆசிரியர் என்பது கொணர்ந்து உரைக்கப்பட்டது, வடநூலுள்ளும், 3ஞாபகத் தானும் விருத்தியானும் அதிகாரம் என்று 4சேண்வயிற் கொணர்ந்து உரைக்கப்படும் ஆகலின், அல்லதூஉம், பல்காயனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எடுத்து ஓதிற்றிலர் ஆதலின், அது வலிந்து உரைக்கப்பட்டது எனவும் அமையும். இது சார்புநூல் ஆகலின், அப்படி விகற்பம் ஓதினார் காக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. என்னை? குறள்சிந் தளவுநெடில் கழிநெடில் என்றாங் கனைவகை மரபின அடிவகை தானே என்றார் ஆகலின். தொல்லை என்பது, கட்டுரைத்தனரே என இறந்த காலப் படர்க்கையொடு தழுவச் சொன்னமையாற் பெறப்பட்டது. ஆசிரியர், என்பது ஆற்றலாற் போந்த பொருள். அணியியல் உடையாரும். இயன்ற செய்யுட் கியைந்த பொருளை உயர்ந்த நடையால் உணரக் கூறலும் அருங்கல மொழியால் அரிதுபடக் காட்டலும் ஒருங்கிரண் டென்ப உயர்நடைப் பொருளே என்னும் சூத்திரத்துள் ஒருங்கிரண்டு என்புழி ஆற்றலாற் போந்த பொருளை, என்ப என்னும் முற்றுச்சொல்லோடு புலவர் என்னும் பெயர் கூட்டிப் பொருளை உரைத்தார் ஆகலின், இதுவும் அவ்வாறே கொள்க. பலவும் சிலவுமாகிய தளையொடு பொருந்திய சீர்களால் அடுத்து நடத்தலின், அடி என்பது காரணக் குறி. என்னை? *தடுத்தனர் தட்ட தளைபல தழுவியும் அடுத்த சீரின் அடியெனப் படுமே என்றார் ஆகலின். குறளடி முதலாகிய அடிகளே இடுகுறியானும் காரணக் குறியானும் வழங்குப. காரணக் குறியான் வழங்குமா றியாதோ? எனின், மக்களில். தீரக்குறியானைக் 1குறளன் என்ப ; அவனின் நெடியானைச் 2சிந்தன் என்ப ; குறியனும் நெடியனும் அல்லாதானே அளவிற்பட்டான் என்ப; அவனின் நெடியானை நெடியன் என்ப; தீர நெடியானைக் கழி நெடியன் என்ப. mjdhš, ï›to¡F« 3ï›thnw bga® br‹wd v‹g.(f) முதல் நான்கு அடிகள் உச. குறளடி சிந்தடி இருசீர் முச்சீர் ; அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர் ; நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மேல் அதிகாரம் பாரித்த ஐந்தடியுள்ளும் முதல் நான்கு அடியும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) குறளடி, சிந்தடி என்றும், அதன் கீழ் இருசீர், முச்சீர் என்றும் ; அளவடி, நெடிலடி, என்றும், அதன் கீழ் நாற்சீர், ஐஞ்சீர் என்றும் இவ்வாறு நிரல்நிறை வகையால் நிறுவி, இரு சீரானே வந்தது குறளடி என்றும், முச்சீரானே வந்தது சிந்தடி என்றும், நாற்சீரானே வந்தது அளவடி என்றும், ஐஞ்சீரானே வந்தது நெடிலடி என்றும் இவ்வாறு கொண்டு வழங்குக என்றவாறு. இருசீர் குறளடி ; சிந்தடி முச்சீர்; அளவடி நாற்சீர் ; அறுசீ ரதனின் இழிப நெடிலடி என்றிசி னோரே என்றார் காக்கைபாடினியார். இச்சூத்திரத்துள் நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே என்பது இல்லாவிடினும் நிரல் நிறைப் பொருள் கோளேயாம்; ஐ ஔ என்னும்ஆயீ ரெழுத்திற் கிகர உகரம் இசைநிறை வாகும் - தொல், எழுத். 42 என்றாற்போல. ‘bga®¤J« mjid vL¤J Xjš nt©oaJ v‹id? எனின், நாற்சீரடி சிறப்புடைத்து ; அதனை நேரடி என்றும், அளவடி என்றும் வழங்குப, என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க. நாற்சீர் கொண்டது நேரடி ; அதுவே தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப என்றார் நற்றத்தனாரும் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு. (வஞ்சித் துறை) 1திரைத்த சாலிகை நிரைத்த போல் 2நிரந் திரைப்ப தேன்களே விரைக்கொள் மாலையாய்! - சூளாமணி. 744 இது குறளடியான் வந்த செய்யுள். (வஞ்சி விருத்தம்) 1இருது வேற்றுமை இன்மையால் 2சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய்! - சூளாமணி. 742 இது சிந்தடியான் வந்த செய்யுள். (கலி விருத்தம்) தேம்பழுத் 3தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் 4தளிந்தன சுனையும் 5வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில 6தவள மாடமே - சூளாமணி. 49 இஃது அளவடியான் வந்த செய்யுள். (கலி நிலைத் துறை) வென்றான் வினையின் *தொகையாய் விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்ஒழி யாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழ்ஒளி மூர்த்தி யாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார் - சூளாமணி. 1 இது நெடிலடியான் வந்த செய்யுள். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (உ) கழிநெடிலடி உரு. கழிநெடி லடியே கசடறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரண் டீறா வருவன பிறவும் வகுத்தனர் கொளலே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், கழிநெடிலடி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கழிநெடிலடியே கசடு அறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரண்டு ஈறா வருவன- கழிநெடிலடி என்பது ஐயுறவு தீர உரைக்குங்கால் அறுசீர் முதலா ஒன்றுதலைச் சிறந்து பத்துச் சீர் இறுதியாக வரும் அடியெல்லாம், பிறவும் வகுத்தனர் கொளலே - பத்துச் சீரின் மிக்குப் *பதின்மூன்று சீரின்காறும் வருவனவும் உள, அவற்றையும் கழிநெடிலடியின்பாற்படுத்து வழங்குக என்றவாறு. ‘frlw v‹gJ ‘Iíwî Ôu’ v‹gjid¢ brhšYnkh? எனின், சொல்லும்; கற்க கசடற (திருக்குறள். 391) என்றார் ஆகலின். கழிநெடிலடியே என்றவழி ஏகாரம் பிரிநிலை. ‘m~J v‰¿‰ ãÇ¡f¥g£lnjh? எனின், குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே - யா. வி. 23 என்னும் சூத்திரத்தினின்றும் பிரிக்கப்பட்டது ; இசைநிறை ஏகாரம் எனினும் அமையும் கழிநெடி லடியே அறுசீர் முதலா ஐயிரண் டீறா என்னாது, கசடறக் கிளப்பின் என்று மிகுத்துச் சொல்லிய அதனால், எண்சீரின் மிக்கு வந்த செய்யுட்கள் சிறப்பில, எனக் கொள்க. இரண்டு முதலா எட்டீ றாகத் திரண்ட சீரான் அடிமுடி வுடைய; இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த அல்ல செய்யு ளுள்ளே (காக்கை பாடினியார்) என்றார் பிறரும் எனக் கொள்க. ஐயிரண் டீறா என்று எடுத்து ஓதினமையால், ஒன்பதின் சீரடியும் பதின்சீரடியும் இடையாகு கழிநெடிலடி எனப்படும். பிறவும் வகுத்தனர் கொளலே என்றமையான், பதின்சீரின் மிக்கு வருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனப்படும் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (அறுசீர் ஆசிரிய விருத்தம்) 1இரைக்கும் அஞ்சிறைப் 2பறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ நுரைக்கள் என்னுமக் குழம்புகள் திகழ்ந்தெழ நுடங்கிய 3 இலையத்தால் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கும் மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே - சூளாமணி. 877 இஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (எழுசீர் ஆசிரிய விருத்தம்) 1கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு கமழ்கின்ற காந்தள் இதழால் அணிகொண் டலர்ந்த 2வனமாலை சூடி 3அகிலாவி குஞ்சி கமழ மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து வரை4 யாக மீது 5திவளத் துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவானி தென்கொல் துணிவே! - சூளாமணி. 1327 இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (எண்சீர் ஆசிரிய விருத்தம்) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண *முழுதுலக மூடியெழின் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழற் சுடரோய்! நின் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா *வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே - சூளாமணி. 1904. இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (ஒன்பதின்சீர் ஆசிரிய விருத்தம்) இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த6 தாரையே இலங்கும் ஆழியின் 7 விலங்கியோள் முடங்கு வா8 லுளை மடங்கல் மீமிசை முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் வடங்கொள் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வனங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன் தடங்கொள் தாமரை இடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே -யா. கா. 13. 29. மேற். இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (பதின்சீர் ஆசிரிய விருத்தம்) கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு கூடி நீடும் ஓடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத நாத என்று நின்று தாழ அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின் நீதியோடும் ஆதி யாய செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே - யா. வி. 53. மேற். - யா. கா. 13.29. மேற் இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (பதினொரு சீர் ஆசிரிய விருத்தம்) அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும் அவிர்சோதி மூன்றொ டணியோகு நான்கும் மதமைந்தும் ஆறு பொருண்மேல் மருளாழி போழும் நயமேழும் மேவி நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்றே வரதற்கோ பத்தின் மகிழ இருளாழி மாய எறியாழி அன்ன எழிலாழி தன்னுள் எழுநாடர் ஓடி இவர்கின்ற எல்லை அளவும் உருளாழி செல்ல ஒளியானை மல்க உலவாத செல்வ முடனாகி ஒண்பொன் உலகுச்சி சேர்வ துளதே இது பதினொருசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுள். (பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்) கோளரி வாளரி வல்லிய மொல்லொலி கொண்ட கொலைத்தொழில் எண்கொடு கேழல்கள் கொட்கும் நெடுஞ்சிமை யுட்கிவர் மால்வரை யாளியை அஞ்சிய வெஞ்சின மால்களி றந்தளி ரன்னத சைந்து மறைந்தகல் அஞ்சுரம் நீவரின் அஞ்சு மனத்தெழு நீளர வல்குல் நிறங்கிளர் நுண்டுகில் நீத்தமை வைத்து நிரைத்த மணிக்கலை நேரிழை மென்முலை ஏர்கெழு நன்னுதல் வாளரி சிந்தி அவிர்ந்து விலங்கின மைந்தரும் உண்கண் வணங்கு நுணங்கிடை வண்டிமிர் வாழ்குழல் ஒண்டொடி மாதே! இது பன்னிருசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுள். (ஆசிரியச் சந்த விருத்தம்) நாடி மீட லல்ல தில்லை நல்ல பூவி னல்லி மேய நம்பி போலு நம்பி தன்னோ டன்பளாய் ஆடு மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் மாதர் பஞ்சி துஞ்சும் அல்குல் நோவ மெல்ல ஒல்கி அல்லல்சேர் வேட ரோடி வேழம் வீழ வெய்ய அம்பின் எய்து சுட்ட வேய்கொள் தீயின் வெந்து விண்டு வெம்மைசேர் கோடை யோடு நீடு வாடு குன்றி னின்று மின்று சென்று கோடி மாட கூட னாடு கூடுமே, இது பதின்மூன்றுசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுள். கொன்றார்ந் தமைந்த (யா. வி. 16. 76 மேற்) என்னும் ஆசிரியத் துறையுள் முதலடியும் மூன்றாமடியும் பதினான்குசீர்க் கடையாகு கழிநெடிலடியானும், அல்லாத அடி இரண்டும் பதினாறு சீர்க் கடையாகு கழிநெடிலடியானும் வந்தன. பதினைஞ்சீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுளும் வந்த வழிக் கண்டுகொள்க. கழிநெடி லடியே கசடறக் கிளப்பின், அறுசீர் முதலா ஐயிரண் டீறா வருவன பிறவும் கொளலே என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; வகுத்தனர் கொளலே என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? நாற்சீரடி தன்னையே நாலெழுத்து முதலாக ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி ; ஏழெழுத்து முதல் ஒன்ப தெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி ; பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி, நேரடி; பதினைந்தெழுத்து முதலாகப் பதினேஎழழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி; பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி ; இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை; என்று இவ்வாறு அடி வகுத்துப் பின்னைக் குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய; சிந்தடியும் அளவடியும், நெடிலடியின் முதற்கண் இரண்டடியும், வெண்பாவிற்கு உரிய; அளவடியுள் கடைக்கண் இரண்டடியும், நெடிலடியும், கழிநெடிலடியும் இலக்கணக் கலிப்பாவிற்கு உரிய; அல்லதூஉம், நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டெழுத்தின்காறும் இருசீரடி வஞ்சிப்பா விற்கு உரிய ; முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு எழுத்து வரையறை இல்லையாயினும், எட்டெழுத்து முதலாக நெடிலடிக்கு ஓதிய எழுத்தளவும் வரப்பெறும், என்றும்; பின்னை, வெண்பா, ஆசிரியம், கலியுள் வரும் சீர் ஐந்தெழுத்தின் மிகா; வஞ்சிப்பாவின் சீர் ஆறெழுத்தின் மிகா; சிறுமை, மூன்றெழுத்தாவது சிறப்புடைத்து ; இரண்டெழுத்தினாலும் அருகி வரப்பெறும், என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது, இது சார்புநூல் ஆகலின். என்னை? நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே - தொல். பொருள். 344 என்று, பின்னை, 1நாலெழுத் தாதி ஆறெழுத் தெல்லை ஏறிய நிலத்த குறளடி என்ப ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே; ஈரெழுத் தேற்றம் இல்வழி யான பத்தெழுத் தென்ப நெடிலடிக் களவே; ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே மூவைந் தெழுத்து நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப மூவா றெழுத்துக் கழிநெடிற் களவே; ஈரெழுத்து மிகுதலும் இவட்பெறும் என்ப தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே - தொல். பொருள். 348-352;358 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் ஆகலின். இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும், ஒற்றும் இவை ஒழித்து எண்ணப் படும் எனக் கொள்க. (நேரிசை வெண்பா) ஈரிரண்டும் *ஓரேழும் ஈரைந்தும் மூவைந்தும் *பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஓரா விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந் தளவு நெடில்1 கழிலோ டைந்து ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும் சிந்து நெடிலடிக்கண் தொல்லிரண்டும் - வந்த தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் *ஒண்பாற் றளைசிதைவில் தண்டாக் கலிக்கு - யா.வி. 95. மேற் ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச் சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம் - ஓரும் நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து - யா.வி. 95.மேற் அளவியற்பா* ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா; வளவஞ்சிக் காறுமாம் மாதோ ; - வளவஞ்சிச் சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத் தன்மை* தெரிந்துணர்வோர் தாம் - யா. வி. 95. மேற் குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிரகன்ற செய்யுள் அடிக்கு - யா.வி. 36. மேற் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. அல்லதூஉம் இயற்சீரான வந்ததனை இயலடி என்றும்; உரிச்சீரான் வந்ததனை உரியடி என்றும்; இரு சீரும் விரவியும், பொதுச்சீர் விரவியும், பொதுச்சீரானே வந்தும் நிகழ்வனவற்றை எல்லாம் பொதுவடி என்றும் வழங்குப என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. ஐந்தடியினையும் இம் மூன்றானே உறழப் பதினைந்தடியாம்; பிறவற்றாற் கூறப் பலவுமாம். (கட்டளைக் கலித்துறை) குறளிரு சீரடி ; சிந்துமுச் சீரடி ; நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி : ஐயொருசீர் நிறைதரு பாதம் நெடிலடி யாம் ; நெடு மென்பணைத்தோட் கறைகெழு வேற்கணல் லாய் ! மிக்க பாதம் கழிநெடிலே திரைத்த இருது குறள்சிந்து ; அளவடி தேம்பழுத்து; விரிக்கும் நெடிலடி வேல்நெடுங் கண்ணி ! வென்றான் வினையின் இரைக்கும் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் ! கழிநெடிலே - யா. கா. 12. 13. (ஙு) இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. வஞ்சிப்பாவிற்குரிய அடிகள் உக. சிந்தடி குறளடி என்றிரண் டடியான் வஞ்சி நடக்கும் என்மனார் புலவர். என்பது சூத்திரம். மேற்கூறப்பட்ட அடியினை எல்லாப் பாவிற் கும் பாவினத்திற்கும் பகுத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், இச்சூத்திரம் வஞ்சிப்பாவிற்கு உரிய அடி உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) சிந்தடியும் குறளடியும் என்ற இவ்விரண்டடி யானும் வஞ்சிப்பா நடக்கும் என்ப புலவர் என்றவாறு. என்மனார் புலவர் என்பது, என்ப புலவர் என்பதனைச் சொல்லுமோ? எனின் சொல்லும். என்னை? என்ப என்பது நிலைமொழியாய், புலவர் என்பது வருமொழியாய், மன், ஆர் என்பன இரண்டு இடைச்சொல் வந்து, நிலைமொழி, ஈற்றின்கட் பகரம் கெட்டு, 1என்மனார் புலவர் என்று முடிந்தது ஆகலின். குறளடி, சிந்தடி என்னாது, சிந்தடி, குறளடி என்று முறை பிறழச் சொன்னமையால், குறளடி வஞ்சிப்பாச் சிறப் புடைத்து, எனக் கொள்க. தலைதடு மாற்றம் தந்துபுணர்ந் துரைத்தல் - தொல். பொருள்.665 தந்திர உத்தி ஆகலின். பிறரும் வஞ்சிப்பாவிற்கு அடி வகுத்து உரைத்தார் எனக் கொள்க. என்னை? சிந்தடி குறளடி என்றா யிரண்டும் வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே என்றார் காக்கைபாடினியார். வஞ்சி அடியே இருசீர்த் தாகும் - தொல். செய். 45. முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே - தொல். செய். 46 என்றார் தொல்காப்பியனார். இருசீர் அடியும் முச்சீர் அடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே என்றார் மயேச்சுரர். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: பானல்வாய்த் தேன்விரிந்தன; கானல்வாய்க் கழிமணந்தன; ஞாழலொடு நறும்புன்னை தாழையொடு முருகுயிர்ப்ப வண்டல்வாய் நறுநெய்தல் கண்டலொடு கடலுடுத்துத் தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துரா அய் இன்னதோர் கடிமண முன்றிலும் உடைத்தே படுமீன் பரதவர் பட்டினத் தானே - யா. வி. 90. மேற் இது குறளடியான் வந்த வஞ்சிப்பா. தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச் சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும் கலங்கஞர் எய்தி *விடுப்பவும் சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே - யா. வி. 90. மேற் எனவும், பரலத்தம் செலவிவளொடு படுமாயின் இரவத்தை நடைவேண்டா இனிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கட் டெவிட்டினர் கொல்லோ எனவாங்கு, நொதுமலர் வேண்டி நின்னோடு மதுகர முற்ற ஆடவர் தாமே - யா. வி. 90. மேற் எனவும் இவை சிந்தடியான் வந்த வஞ்சிப்பா. பிறவும் அன்ன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா அடிகள் உஎ. கலியோடு வெண்பா அகவல் கூறிய அளவடி தன்னால் நடக்குமன் அவையே ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மேல் ஒழிந்த மூன்று பாவிற்கும் உரிய அடி உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கலிப்பாவும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மேற் சொல்லப்பட்ட அளவடியால் நடக்கும் என்றவாறு. அகவல் என்பது, ஆசிரியம் என்றவாறு. என்னை? அகவல் என்ப தாசிரியப் பாவே என்றார் சங்கயாப்பு உடையார் ஆகலின். வெண்பா அகவல் கலி என்னாது, கலியொடு வெண்பா அகவல் தலை தடுமாற்றம் தந்துபுணர்த் துரைத்ததனால், கலியுள் 1அம்போ தரங்க உறுப்புச் சில இருசீர் அடி யாலும் முச்சீர் அடியாலும் வரும் ; அராக உறுப்பு நாற்சீரடியின் மிக்கு வரும், எனக் கொள்க. அவை போக்கிக் கலிப்பாச் சொல்லும் வழிச் சொல்லுதும். கூறிய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், வெண்பா வின் ஈற்றடியும், நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடியும், கலிவெண்பாவின் ஈற்றடியும் முச்சீரான் வரும்; இணைக் குறள் ஆசிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் இருசீரடியும் முச்சீரடியானும் வரும் எனக் கொள்க. தன் என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஆசிரிய விருத்தமும் கலித்துறையும் ஒழித்து, மூன்று பாவினமும் பெரும்பான்மையும் நாற்சீரடியான் வரும் எனக் கொள்க. அவை என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒருசார் ஆசிரிய அடியும் கலியடியும் ஐஞ்சீரான் அருகி வருவனவும் உளவெனக் கொள்க. அவை போக்கி, மிக்கும் குறைந்தும் (யா. வி. 93) என்னும் சூத்திரத்துட் காட்டுதும். விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் என்பவாகலின் இவ்வாறு கூறப்பட்டது. பிறரும் இவ்வாறு இவற்றிற்கு அடிவகுத்து உரைத்தார் என்னை? ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும் நாற்சீர் அடியால் நடைபெற் றனவே சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி உண்டென் றறைப உணர்ந்திசி னோரே என்றார் காக்கைபாடினியார். இருசீர் அடியும் முச்சீர் அடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே அல்லாப் பாவின் அடிவகை தெரியின் எல்லாம் நாற்சீர் அல்லடி இயலா; இறுதியும் அயலும் இடையும் முச்சீர் பெறுதியும்* வரையார் வெள்ளைமுதல் மூன்றும் என்றார் நீர்மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்) இரண்டிலும் மூன்றினும் வஞ்சி ஆகும்; நாற்சீர் அடியாற் பாப்பிற மூன்றே என்றார் அவிநயனார். ஆசிரி யத்தொடு வெள்ளையும் கலியும் நேரடி தன்னால் நிலைபெற நிற்கும் என்றார் பல்காயனார். ஆசிரி யப்பா வெண்பா கலியென மூவகைப் பாவும் நேரடிக் குரிய என்றார் நற்றத்தனார். வஞ்சி அல்லா மூவகைப் பாவும் எஞ்சுதல் இலவே நாற்சீர் அடிவகை என்றார் சிறுகாக்கைபாடினியார் அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை வெண்பா) அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற் கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ- அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென் றஞ்சிப்பின் வாங்கும் அடி! - நாலடியார் 396 என வெண்பா அளவடியான் வந்தவாறு. (நேரிசை ஆசிரியப்பா) நிலத்தினும் பெரிதே ; வானினும் உயர்ந்தன்று; நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே - குறுந்தொகை. 3 என ஆசிரியப்பா அளவடியான் வந்தவாறு. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) (தரவு) அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் *சென்றநம் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் ! வலிப்பல்யான் கேஎளினி. (தாழிசை) அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் ! காடென்றார்; அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே! 1 இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடென்றார்; அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவும் உரைத்தனரே! 2 கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரூஉந் தகையவே காடென்றார் ; அக்காட்டுள் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே! 3 *எனவாங்கு, (தனிச்சொல்) (சுரிதகம்) இனைநல முடைய கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் ; மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன; நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே - கலித்தொகை 11 எனக் 1கலிப்பா அளவடியான் வந்தவாறு. (ரு) பாவினங்களுக்கு உரிய அடி உ.அ. பாவினம் எல்லா அடியினும் நடக்கும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், பொது வகையாற் பாவினங்கட்கு அடி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) குறளடி முதலிய எல்லா அடியானும் பாவினங்கள் நடக்கும் என்றவாறு. உம்மை, முற்றும்மை, இன்ன பாவின் இனம், இன்ன அடியால் நடக்கும் என்று சிறப்பித்துப் போக்கிச் செய்யுள் ஓத்துள்ளே கூறுதும். பிறரும் இவ்வாறு கூறினார். என்னை? விருத்தம் துறையொடு தாழிசை என்றா இனச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் என்றார் காக்கைபாடினியார். எல்லா அடியினும் இனப்பா; நாற்சீர் 1அல்லா மேலடிப் பாவினுக் கியலா என்றார் அவிநயனார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (வஞ்சித்துறை) மைசிறந்தன மணிவரை; கைசிறந்தன காந்தளும்; பொய்சிறந்தனர் காதலர்; மெய்சிறந்திலர் விளங்கிழாய்! - யா. கா.34 மேற். எனக் குறளடியாற் பாவினம் வந்தவாறு. (வஞ்சி விருத்தம்) சோலை ஆர்ந்த சுரத்திடைக் காலை யார் கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல வுண்கணிவள் வாழுமே - யா. கா. 34. மேற். எனச் சிந்தடியாற் பாவினம் வந்தவாறு. (கலி விருத்தம்) கற்பிறங்கு சாரற் கறங்கருவி நன்னாடன் எற்றுறந்தான் என்னில் உடையுமால் என்னெஞ்சம் முற்றுறந்தான் நிற்ப முகிழ்முலையாய்! யானினிப் பிற்றுறக்க லாவதோர் பெண்ணாப் பிறப்பேனே எனவும், (கலி விருத்தம் ) தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே - சூளாமணி 49 எனவும் அளவடியாற் பாவினம் வந்தவாறு. (கலிநிலைத் துறை) யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல், கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே - யா. வி. 88. 94. மேற். - யா. கா. 33 மேற். என நெடிலடியாற் பாவினம் வந்தவாறு. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) பூந்தண் இரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக் காந்தள் கமழ்குலையாற் காதல் மடப்பிடிதன் கவுள்வண் டோப்ப வேந்தன்போல் நின்ற வியன்களிற்றை வில்லினாற் கடிவார் தங்கை ஏந்தெழில் ஆகம் இயையா தியைந்தநோய் இயையும் போலும் என 1அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியாற் பாவினம் வந்தவாறு. (எழுசீர் ஆசிரிய விருத்தம்) சிறு நுதற் பேரமர்க்கண் செய்யவாய்க் கருங்கூந்தற் பெருந்தோட் பேதைக் கொன்றானும் உறுமதி வாண்முகமும் ஒல்கு மருங்குலும் ஒருகாழ் முத்து மேற்கொண்ட மறுநுதி மென்முலையும் வாட வாழாள் வருந்தும் என்று பணிந்தாலும் இறுமருங்குல் என்று சுரும்புதானும் இரங்கா கள்ளும்பூவும் இணைந்து வேண்டி என 2எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியாற் பாவினம் வந்தவாறு. (எண்சீர் ஆசிரிய விருத்தம்) திருமொழியாற் *சின்னகுவச் சிலம்பு பாடும்; சிறையன்னம் திருந்தடிமேற் சிலம்பு பாடும்; அருமானின் முரணவிய அரிசேர்ந் தாடும்; அயில்புரையும் நெடுந்தடங்கண் அரிசேர்ந் தாடும்; விரிமலர்சேர் நறுங்குழல்மேல் விரியும் கந்தம்; வயின்ஞாலம் வியப்பெய்த விரியும் கந்தம்; இருளனங்கன் பெருந்துயரம் இரிக்கும் என்றும்; இணைந்தியக்கி என்றுயரம் இரிக்கும் என்றும் என எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு. (ஆசிரியத் துறை) 1அறிவா ரறிவு மான்றன் படைந்தின்ப மாமருளே பூண்டு மாண்ட செல்வவாண் டகையார் மறிவார் மறியு மனத்தான் *மாசேயெனப் பூண்டென்று மருளார் செல்வ மருளாராய்ப் புரிவா ரெனிற்றுன்பம் புரிவார் போலும் கீழ்க்கீழென்று பொருளே சிந்தித் திருள்நீங்கப் பெரியார் பெருநெறி யேபிழை யார்நின் றுபிறப்பங் குணரவல் லாரென்று முணரவல் லாரே என ஒன்பதின் சீர்2 இடையாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு. (வெண்டுறை) 3கல்லடைந்த சீறூர்க் கணையடைந்த வெஞ்சிலையர் கடுவாய் வேடர் கற்பொன் றில்லாக் கலையேற் றூர்தி சொல்லடைந்த பெண்மைச் சுரும்படைந்த பூங்கோதைச் செவ்வாய்ச் சிதரரிக்கண் அவ்வாய் மென்றோளாள் கொல்லடைந்த வேலன்ன கூர்ம்பரல்வெவ் வியலாகக் குறும்பாற்றோர்க் குரல்கொடிதே மலரும் கொடிதே எனப் பதின்சீர் 4இடையாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு. 5கல்லாற் கடங்கழிய நோக்கி யரிய வென்றும் பெரிய கூறிக் கலங்கி நாளும் புலம்பா யென்றும் சொல்லா லுணர்ந்த வதனை * * * * எனப் பதினொரு சீர்க் 1கடையாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு. பிறவும் கடையாகு கழிநெடிலடியாற் பாவினம் வந்தன, சங்க யாப்பிற் கண்டுகொள்க. (சா) ஆசிரியப்பாவில் பிற பாவடிகள் மயங்குதல் உகூ. இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை அகப்பட வரூஉம் அகவலும் உளவே. என்பது சூத்திரம். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், அடி மயக்கம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கோடலின், இச் சூத்திரம் ஆசிரியப்பாவினுள் அல்லாப் பாவின் அடி மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஈரசைச் சீராலாகிய வெண்பா அடியும் வஞ்சி அடியும் என இவற்றைத் தமக்கு அடியாகக் கொண்டு நடக்கும் ஒருசார் ஆசிரியப்பாக்களும் உள என்றவாறு. அகப்படுத்துதல் என்பது, தமக்கு ஆகச் செய்தல் என்றவாறு: பொருள் அகப்படுத்தார் என்றாற்போலக் கொள்க. பிறரும் இவ்வாறு மயக்கம் சொன்னார். என்னை? இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே - தொல். செய்.62 என்றார் தொல்காப்பியனார். வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே; வெண்பா விரவினும் கலிவரை வின்றே - யா. கா. 39. மேற் என்றார் பல்காயனார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) எறும்பி அளையிற் குறும்பல் சுனைய *உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவவர் சென்ற வாறே; அதுமற் றவலம் கொள்ளாது *நொதுமற் *கழறுமிவ் வழங்க லூரே - குறுந். 12 எனவும், (நேரிசை ஆசிரியப்பா) கொலைவில் எயினர் குறும்பில் உறங்கும் மலைவிலங் கருஞ்சுரம் சிலையொடு கழிமார் அன்புகெழு காதல் கூர நன்பெருந் திருநலம் பிறிதா கின்றே எனவும் இவற்றுள், எறும்பி அளையிற் குறும்பல் சுனைய எனவும், கொலைவில் எயினர் குறும்பில் உறங்கும் எனவும் இயற்சீர் வெள்ளடி வந்தவாறு. இவற்றை, (குறள் வெண்பா) எறும்பி 1அளையிற் 2குறும்பல் 3சுனைய4 குறுந்தொடி ! யாம்செல் சுரம் - யா. கா. 39. மேற். எனவும், (குறள் வெண்பா) கொலைவில் 5எயினர் 6 குறும்பில் 7 உறங்கும்8 மலைவிலங்கு நீள்சுரம் செல் எனவும் இவ்வாறு உச்சரித்து இயற்சீர் வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க. இவை என்று மிகுத்துச் சொல்லிய அதனால், வெண்பா உரிச்சீரோடு விரவி வந்த இயற்சீர் வெள்ளடியும் ஆசிரியத்துள் வரப்பெறும் எனக் கண்டுகொள்க. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி ஏதின் *மாக்களை நோவர் தோழி! *ஒன்றும் நோவார் இல்லை தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் னலக்கே - யா. கா. 39. மேற் இதனுள் அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டென என்பது, வெண்சீர் விரவி வந்த இயற்சீர் வெள்ளடி. இதனை, அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பொங்கிய பூசல் பெரிது என உச்சரித்து வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க. இனி, வஞ்சி விரவி வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) *இருங்கடல் தானையொடு பெருநிலங் கவைஇ உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே ஆண்ட ஏமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் 5. காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயும் கேண்மதி யத்தை; வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை; மாயமோ அன்றே; 10. கள்ளி வேய்ந்த முள்ளியம் பெருங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்கு நோக்கா திழிபிறப்பினோன் ஈயப் பெற்று 15. நிலங்கலன் ஆக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே *செய்ந்நனி முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுவதுடன் துறந்தே - புறநானூறு 363 இதனுள் உப்பிலாஅ அவிப்புழுக்கல் எனவும், கைக் கொண்டு பிறக்குநோக்காது எனவும், இழிபிறப்பினோன் ஈயப்பெற்று எனவும் வஞ்சியடி விரவி வந்தவாறு. இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை வரூஉம் அகவலும் உளவே என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். அகப்பட என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், அகத்திணை யாகிய ஆசிரியப்பாவினகத்து வஞ்சியடி விரவி வரப்பெற, என்றதற்கும், ஒருசார் கலியடி விரவி வரும் ஆசிரியமும் உள, என்றற்கும் வேண்டப்பட்டது. அகத்திணை யல்வழி ஆங்கதன் மருங்கின் வகுத்த சொற்சீர் வஞ்சியொடு மயங்கும் என்றார் பனம்பாரனார் என்னும் ஆசிரியர் ஆகலின். ஆசிரிய மருங்கின் என்னாது, ஆங்கதன் மருங்கின் என்றார் அதிகார வசத்தால் அவ்வாசிரியர் என்று உணர்க. சொற்சீர் அடியாவன, கட்டுரை வகையால் எண்ணொடு புணர்ந்து *முற்றடி யின்றிக் குறைசீர்த் தாகியும் ஒழியிசை யாகியும் வழியிசை புணர்ந்தும் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே - தொல். செய். 123 என்று செய்யுளியல் உடையார் ஓதிய பெற்றியால் வருவன எனக் கொள்க. இனி, கலியடி விரவிய ஆசிரியம் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) ஆனாப் பெருமை அணங்கும் நனியணங்கும் வானோங்கு 1சிமையத்து 2மனமகிழ்ந்து 3பிரியாது4 முருகவேள் உறையும் சாரல் அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே இதனுள் இரண்டாமடி கலியடி; அதனை, வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது தேனோங்கு நறும்பைந்தார்ச் சேயமரும் திருவிற்றே என உச்சரித்துக் கலியடியாமாறு கண்டுகொள்க. 5குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது மருள்பிடி திரிதருஞ் *சோலை அருளா னாகுதல் ஆயிழை ! கொடிதே! - யா. வி. 94. மேற் - யா. கா. 39. மேற் இதனுள்ளும் இரண்டாமடி கலியடி ; அதனை, மாவழங்கு 6பெருங்காட்டு 7மழகளிறு 8காணாது தீவழங்கு சுழல்விழிக்கண் சீயஞ்சென் றுழலுமே என உச்சரித்துக் கலியடி ஆமாறு கண்டுகொள்க. (எ) கலிப்பாவில் பிற பா விரவுமாறு 30. வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே. இஃது என் நுதலிற்றோ? எனின், கலிப்பாவினுள் பிற பா விரவுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) வெண்பா அடி ஒருசார்க் கொச்சகக் கலிப்பா வினுள் மயங்கவும் பெறும் என்றவாறு. வெள்ளடி கலியினுள் விரவவும் பெறும் என்ற உம்மை யால், ஆசிரிய அடியும் வந்து மயங்கப்பெறும் எனக் கொள்க. காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் - கலித்தொகை 30 - யா. வி. 86. மேற் என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள்ளும், நறுவேங்கைத் துறுமலர் நன்னுதலார் கொண்டணிய - யா. வி. 86. மேற். என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள்ளும் வெண்பா வும் ஆசிரியமும் மயங்கி வந்தன. அவை போக்கி, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாக் காட்டும்வழிக் காட்டுதும். என்னை? வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கலிவரை வின்றே - யா. கா. 39. மேற். என்றார் *பல்காயனார்; பொதுவகையாற் சொற்றனவும் பொய்தீர் சிறப்பிற் குதவி ஒரோவிடத்து நிற்கும் - விதிவகையால் நின்ற பொருளை நிகழ்விப் பதுநியமம் என்றுரைப்பர் தொல்லோர் எடுத்து (அ) என்றார் நற்றத்தனார் எனக் கொள்க. வஞ்சிப்பாவில் பிற பா மயங்குமாறு 31. வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார். ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், வஞ்சிப்பாவினுள் பிற பா மயக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி விரவவும் பெறும் என்றவாறு. அகவல் மயங்கினும் வரையார், என்ற உம்மையால், கலியடியும் ஒருசார் வெள்ளடியும் மயங்கி வரவும் பெறும்; சிந்தடியும் குறளடியும் தம்முள் மயங்கிவரும் வஞ்சிப்பாவும் உள, எனக் கொள்க : பட்டினப் பாலை என்னும் வஞ்சிநெடும்பாட்டினுள், 1 நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் - பட்டினப்பாலை 22 என்றித் தொடக்கத்தன ஆசிரிய அடி; வயலாமைப் 2புழுக்குண்டும் 3வறளடும்பின் 4மலர் மலைந்தும் - பட்டினப்பாலை 64-65 என்பது கலியடி; அதனை, வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும் கயல்நாட்டக் கடைசியர்தம் காதலர்தோள் கலந்தனரே என உச்சரித்துக் கலியடி ஆமாறு கண்டுகொள்க. கோழி 5எறிந்த 6கொடுங்காற் 7கனங்குழை - பட்டினப்பாலை 23 என்பது வெள்ளடி ; அதனை, கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை ஆழிசூழ் வையக் கணி என உச்சரித்து வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க. தாழிரும் பிணர்த்தடக்கை - யா. வி. 55. 93. 94.மேற். என்னும் வஞ்சிப்பாவினுள்ளும் கலியடி வந்தன எனக் கொள்க. 8குருகு நாரையொடு கொட்பானா 9விரிதிரைநீர் வியன்கழனி 10மறுகெழீஇய மலிசும்மை எனவாங்கு, தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே - யா. வி. 32. மேற். இது குறளடியும் சிந்தடியும் மயங்கி வந்த வஞ்சிப்பா. பிறவும் அன்ன. வஞ்சியுள் அகவல் மயங்கவும் பெறும், என்னாது, மயங்கினும் வரையார், என்று மற்றொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? வஞ்சிப் பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது, அகத்திணை அல்லாத வழியே, என்ப ஒருசாராசிரியர், என்றற்கு வேண்டப் பட்டது. என்னை? அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே என்பது பன்னிருபடலத்துட் பெருந்திணைப்படலத்துச் சூத்திரம் ஆகலின். அஃதே எனின், பட்டினப்பாலைத் தொடக்கத்தன 1அகத்திணை வஞ்சியாம் பிற, எனின், அத்திணையகத்து வஞ்சி வருவது சிறப்பின்றாயினும், சிறுபான்மை வரப்பெறும், என்பார் உளராகலின், அவையும் அமையும் என்பது. என்னை? அகத்திணை யகவயின் நிற்ப வஞ்சி சிறப்பில எனினும் சிலவிடத் துளவே என்பது மாபுராணச் சூத்திரம் ஆகலின். (கட்டளைக் கலித்துறை) அகப்பா அகவலுள் வஞ்சிசொற் சீரடி யாயிரண்டும் 2புகப்பா லனவல்ல என்பதொல் லோர்கள்; புகரில்வஞ்சி அகப்பாப் பொருளணை யாதென்பர் நாவலர்; ஆங்கருகிப் புகப்பான் மையுமொரு சார்ப்புல வாணர் புகன்றனரே இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளால் மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமும் நண்ணும் கலியினுள்ளால் 3முயக்கப் படுமுதற் காலிரு பாவும் முறைமையினே - யா. கா. 41 இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. ஆசிரியப் பாவின் அயற்பா அடிமயங்கும்; ஆசிரியம் வெண்பாக் கலிக்கணாம் ; - ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும்; வஞ்சிக்கண் வெண்பாவின் ஒண்பா அடிவிரவா உற்று - யா. கா. 39.மேற் சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் ; வஞ்சியுள் ஊரும் கலிப்பாச் 4சிறுச்சிறிதே; - பாவினும் வெண்பா ஒழித்துத் தளைவிரவும்; செய்யுளாம் வெண்பாக் கலியுட் புகும் என்றார் நாலடி நாற்பது உடையார் எனக் கொள்க. (கூ) ஒவ்வொரு பாவிற்கும் அடிச்சிறுமை ஙுஉ. ஈரடி வெண்பாச் சிறுமை; மூவடி ஆசிரி யத்தொடு வஞ்சி; எஞ்சிய தீரிரண் டடியே இழிபென மொழிப. என்பது என் நுதலிற்றோ? எனின், நான்கு பாவிற்கும் சிறுமைக்கு எல்லையாகிய அடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஈரடி வெண்பாவிற்குச் சிறுமை; மூன்றடி ஆசிரியப்பாவிற்கும், வஞ்சிப்பாவிற்கும் சிறுமை; ஒழிந்த கலிப்பாவிற்கும் நான்கடி சிறுமை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ஏகாரம், தேற்றேகாரம். ஒருதொடை ஈரடி வெண்பாச் சிறுமை; இருதொடை மூன்றாம் அடியின் இழிந்து வருவன ஆசிரியம் இல்லென மொழிப; வஞ்சியும் அப்பா வழக்கின ஆகும் - யா. கா. 14. மேற் நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் தாழ்ந்த கலிப்பாத் தழுவுதல் இலவே - யா. கா. 14. மேற். என்றார் காக்கைபாடினியார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (குறள் வெண்பா) தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்? - திருக்குறள். 318 என இரண்டடியால் வெண்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. (நேரிசை ஆசிரியப்பா) அவரோ வாரார் தான்வந் தன்றே எழிற்றகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே - ஐங்குறு நூறு 347 எனவும், (நேரிசை ஆசிரியப்பா) 1முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே 2மலையன் ஒள்வேற் கண்ணி முலையினம் வாராள் முதுக்குறைந் தனளே - சிற்றெட்டகம். - யா. வி. 73. மேற். எனவும் மூன்றடியால் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. குருகு நாரையொடு 1கொட்பானா விரிதிரை நீர் வியன்கழனி மறுகெழீஇய மலி2சும்மை எனவாங்கு, தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே எனவும், 3மந்தாநிலம் வந்தசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர்மிசை எனவாங்கு, இனிதின் ஒதுங்கிய இறைவனை மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே - திருப்பாமாலை. -யா. கா. 11. 21. மேற். எனவும் மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. 4செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே எனவும், 5திருந்திலையி னிலங்குவேற் றிகழ்தண்டார்க் கதக்கண்ணன் விரிந்திலங்கு வெண்குடைக்கீழ் வேந்தட்ட வியன்களத்து முரிந்திரைஞ்சி முத்துரைக்கு முடியெல்லாம் தத்துந்தம் அருந்திறன்மா மறமன்னர்க் கழுவனவே போன்றனவே எனவும் நான்கடியாற் கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. இச்சூத்திரத்துள் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்று முறையிற் கூறாது, வெண்பா ஆசிரியம் வஞ்சி என்று தலை தடுமாற்றம் தந்து புணர்ந்துரைத்தல் வேண்டியது என்னை? எனின், பெருமைக்கெல்லை, பாடுவோனது பொருள் முடியும் குறிப்பே; வரையறை இல்லை, என்பாரும்; அடி வரையறுத்துச் சொல்லுவாரும் என இருதிறத்தார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு என்க. நூல்நயம் அறிவார். ஆயுங்கால், வேறுபாடு இல்லை என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது. ‘ahnjh ntWghL ïšyhjthW? எனின், பெருமைக்கு எல்லை, பாடுவானது பொருள் முடிவு குறிப்பே; வரையறை இல்லை; என்பார், விளங்கக் கூறல் என்னும் நூல் மாண்பு கடைப்பிடித்து மயங்காமை கூறினார். அடிவரை யறுத்து ஓதினார். சிறப்புடைப் பொருளை எடுத்துக் கூறல் என்னும் தந்திர உத்தி பற்றிச் சிறப்புடைமையால் எடுத்தோதி, மிக்கனவும் உடன்பட்டமை உய்த்துணர வைத்தார்; மிக்கடி வருவது செய்யுட் குரித்தே - (சங்கயாப்பு) என்ப ஆகலானும், வாயுறை வாழ்த்து முதலா உடைய வரைவில என்றார் ஆகலானும் எனக் கொள்க. அவர் கூறுமாறு: *படைப்போர் குறிப்பினை *நீக்கிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை இல்லென் றுரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே என்றார் காக்கைபாடினியார். ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் என்றிம் முறையே பாவின் சிறுமை; *தத்தங் குறிப்பின தொடையின் பெருமை என்றார் அவிநயனார். ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும்; பெருமை ஆயிரம்; ஈரடி முதலா ஒன்று தலைச்சிறந் தேழடி காறும் வெண்பாட் டுரிய; வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே *கைக்கிளை அங்கதம் கலியியற் பாட்டே தத்தம் குறிப்பின அளவென மொழிப என்றார் நற்றத்தனார். ஆசிரியப் பாவின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் ; இழிபுமூன் றடியே - தொல். செய். 157 ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப - தொல். செய். 107 நெடுவெண் பாட்டே முந்நான் கடித்தே; குறுவெண் பாட்டுக் களவெழு சீரே - தொல். செய். 158 அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும் - தொல். செய். 159 கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை எனவிவை தொகைநிலை வகையான் அளவில என்ப - தொல். செய். 160 1முடிபொருள் அல்லா தடியள விலவே என்றார் தொல்காப்பியனார். ஏழடி இறுதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக் கியைந்த அடியே மிக்கடி வருவது செய்யுட் குரித்தே மூவடிச் சிறுமை ; பெருமை ஆயிரம் ஆகும் ஆசிரி யத்தின் அளவே என்றார் சங்கயாப்பு உடையார். ஆயிரம் இறுதி மூவடி இழிபா ஆசிரியப் பாட்டின தடித்தொகை அறிப ஈரடி முதலா ஏழடி காறும் தீர்பில வெள்ளைக் கடித்தொகை தானே என்றார் பல்காயனார். ஐயிரு நூறடி ஆசிரியம் ; வஞ்சிச் செய்யுள் நடப்பினும் சிறப்பென மொழிப பேணுபொருள் முடிபே பெருமைக் கெல்லை காணுங் காலைக் கலியலங் கடையே கலியுறுப் பெல்லாங் 2கட்டளை உடைமையின் நெறியின் முறைவழி நிறுத்தல் வேண்டும் கொச்சகக் கலிவயிற் குறித்தபொருள் முடிவாம் *தாழிசை பலவாய் முடிவு முடிவுழி என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற் றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்). வஞ்சி ஆசிரியம் என்றிரு பாட்டும் 3எஞ்சா மூவடி 4இழி5புயர் பாயிரம் என்றாரும் உளரெனக் கொள்க. அவற்றுள், ஆசிரியம் என்ப தகவலின் வழாது கூறிய சீரொடும் தளையொடும் தழீஇ முச்சீர் அடியாய் ஈற்றயல் நின்றும் முச்சீர் அடியிடை ஒரோவழித் தோன்றியும் அவ்வியல் பின்றி மண்டில மாகியும் மூவடி முதலா முறைசிறந் தேறித் 1தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண் டெய்தும் என்ப இயல்புணர்ந் தோரே வஞ்சி தானே அடிவரம் பின்றி எஞ்சா இசைநிலை தூங்கல் எய்தி ஆசிரிய மாகி முடியும் என்ப செப்பல் ஓசையிற் சீர்தளை சிதையாது மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற் குறள்நேர் நெடிலென மூன்றாய் அவற்றின் இறுதி அடியே முச்சீர்த் தாகி அதனீற் றசைச்சீர் எய்தி அடிவகை ஓரிரண்டு முதலா முறைசிறந் தீரா றேறும் என்ப இயல்புணர்ந் தோரே என்றார் பரிமாணனார். (கட்டளைக் கலித்துறை) வெள்ளைக் கிரண்டடி வஞ்சிகு மூன்றடி மூன்றகவற் கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமையொண் போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு குறித்தாங் குறைப்பின் முதுக்குறைந்தாம்; குறையாக்கலியின் திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே - யா. கா. 14.15 என்னும் யாப்பருங்கலப் புறநடைகளைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. எழுத்தினால் ஆகும் அசை; அசையாற் சீராம்; 2இழுக்கிகந்த சீராற் றளையென் - றொழுக்கினார் சீரால் அடி; அடியாற் செய்யுளாம் என்றிடையிட் டோராதே ஓதுவதோ ஒத்து? இது 1கடா. ஒருதளை ஆதியா ஒரேழின் காறும் வருவது மன்னும் அடியென் - றுரையா திருசீர் முதலாக எண்சீர்கா றென்ற அருமுனிவர்க் காய்த்தோ அலர் இது விடை. ஒருதொடை ஈரடியென் றோதிய துள்ளிட் டிருதிறமாச் சொல்லிய தெல்லாம் - இருதிறமும் நல்லா சிரியர் நயமென்றற் கந்நயத்தால் எல்லாரும் தீர்வர் இழுக்கு எண்ணெழுத்திற் றிண்ணியராய் 2எஃகு செவியராய் நுண்ணுணர்விற் சேர்ந்த நுழைவினராய் - மண்மேல் 3நடையறிந்து கட்டுரைக்கும் நாவினோர்க் கல்லால் அடியறியும் தன்மை அரிது 4தடுத்த தளையொன்றும் தாம்பலவும் கூடி அடுத்து நடப்பின் அடியாம் - வடுத்தீர்ந்த பாத *வடமொழியைப் பைதீர் தமிழ்ப்புலமை நாதரடி என்றார் *நமக்கு என இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (க0) அடி ஓத்து முடிந்தது. 6.தொடை ஓத்து தொடை தோன்றுமாறு 33. தொடையே அடியிரண் டியையத் தோன்றும். என்பது சூத்திரம். ‘ï›nth¤J v‹d bga®¤njh? எனின், அடியினால் தொடை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், தொடை ஓத்து என்னும் பெயர்த்து. “ï¢N¤âu« v‹ Ejȉnwh? எனின், பொது வகையால் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) தொடை என்று சொல்லப்படுவது, அடி இரண்டு இயைந்தவழிப் பெறப்படும் என்றவாறு. தொடையே என்பதில் ஏகாரம் பிரிநிலை. ‘v‰¿‰ãÇ¡f¥ g£lnjh? எனின், எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே - யா. வி. 1 என்பதனிற் பிரிக்கப்பட்டது. பிறரும் இவ்வாறு சொன்னார். என்னை? தொடையெனப் படுவ தடைவகை தெரியின், எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றில் நிரல்பட வந்த நெறிமைய தாகி அடியோ டடியிடை யாப்புற நிற்கும் முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே என்றார் காக்கைபாடினியார். அடுத்த அடியிரண் டியாவகைப் பாவினும் *தொடுத்து வழங்கலின் தொடையெனப் படுமே என்றார் வாம மேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர் (மயேச்சுரர்) தொடைக்கு உதாரணம் போக்கிச் சொல்லுதும். (க) தொடையின் வகை ஙுச. மோனை எதுகை முரணியை பளபெடை பாதம் இணையே பொழிப்போ டொரூஉத்தொடை கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணுமார் அவையே. “ï~J v‹ Ejȉnwh? எனின், ஒருசார்த் தொடைகளது பெயரும், அவற்றின் விகற்பமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்றிவை ஐந்தும், அடி, 1இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி, அவை ஒரோவொன்று எட்டுப் பாகுபாட்டைச் சொல்லும் என்றவாறு. பாதம் என்பது, அடி என்றவாறு இணையே என்ற வழி ஏகாரம் எண்ணேகாரம். கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் என்பது, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்றவாறு. சிவணுதல் என்பது, பொருந்துதல் என்றவாறு. என்னை? மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் - தொல். எழுத்து. 46 என்றாற்போலக் கொள்க. மார் என்பது இடைச்சொல். அவை என்பது சுட்டுச்சொல், அவையே என்பதில் ஏகாரம் ஈற்றசை; தேற்றேகாரம் எனினும் அமையும். இனி, அவை கூட்டி வழங்குமாறு: அடி மோனை, இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்று மோனை - என மோனையோடு கூட்டி வழங்கினவாறு. அடி எதுகை, இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்று எதுகை என எதுகையோடு கூட்டி வழங்கினவாறு. அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண் கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் - என முரணோடு கூட்டி வழங்கினவாறு. அடி இயைபு, இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு- என இயைபினோடு கூட்டி வழங்கினவாறு. அடி அளபெடை, இணை அளபெடை, பொழிப்பு அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற் கதுவாய் அளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, முற்று அளபெடை- என அளபெடையோடு கூட்டி வழங்கினவாறு. இவை ஒரோவொன்று எட்டெட்டுப் பாகுபாட்டைச் சொன்னவாறு கண்டு கொள்க. சீரிய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இயைபுத் தொடையை இவ்வாறு வழங்குகின்றுழி 1இறுவாய் முதலாகக் கொண்டு வழங்கப்படும் எனக் கொள்க, அஃது ஈறுபற்றி அறியும் தன்மைத்து ஆகலின். இயைபுத்தொடைக்கு இவ்வாறு எட்டு வகையும் சொன்னார். கையனாரும் தொல்காப்பியரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர். ஈண்டு அவர் மதம் பற்றிச் சொல்லப்பட்டது, இது சார்பு நூல் ஆகலின், இவற்றிற்குச் செய்யுள், போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும். (கலி விருத்தம்) எழுத்தியற் றொடைகளின் இடைக்கண் மாறுகோள் மொழிப்பொருட் டொடைமுறை பிறழ வைத்ததோர் இழுக்கியல் பிலாநிரல் நிறையும் எட்டென ஒழுக்கினர் உண்மையை உணர்த்தல் வேண்டியே இதனை விரித்து உரைத்துக் கொள்க. அவை ஆமாறு போக்கி, நிரனிறை முதலிய (யா.வி.95) என்னும் சூத்திரத்துள்ளே காட்டுதும். (உ) அடிமோனைத் தொடை 35. ஆதி எழுத்தே அடிதொறும் வரினடி மோனைத் தொடையென மொழிமனார் புலவர். ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே அடிமோனைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) முதலடி முதற்கண் வந்த எழுத்தே எல்லா அடி முதற்கண்ணும் வரின், அதனை அடிமோனைத் தொடை என்று வழங்குவர் புலவர் என்றவாறு. ஆதியெழுத்தே என்றவழி ஏகார விதப்பினால், ஆதிச் சொல் அடிதோறும் ஒன்றி வரத் தொடுப்பது சிறப்புடைத்து, எனக் கொள்க. ஆதியெழுத்தே அடிதொறும் ஆதிக்கண் வரின் எனச் சிறப்பியாது, பொது வகையாற் கூறிற்றாகலின், முதலடி முதற்கண் வந்த எழுத்து அடிதோறும் இறுதிக்கண் வரினும், இடைக்கண்வரினும், முதற்கண் வரினும் அடி மோனைத் தொடையாம் பிற, எனின், அற்றன்று; சூத்திரத்துள் ஆதியெழுத்து என்று சொல்லப்பட்டது ஆகலின், அதனோடு சார்த்தி, ஆதி எழுத்தே அடிதோறும் ஆதிக்கண் வரின் என்று இவ்வாறே கொள்ளப்படும். என்னை? வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் 1தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே எனவும், வேற்றுமை இன்றியும் இடமுத லாவறிந் தேற்பன பொதுவின் இசைப்பினும் இழுக்கா எனவும், கேட்டமொழி ஒழித்துக் கேளாக் கிளவியொடு கூட்டியுரை 2கொளுத்தல் கோட்பா டன்றே எனவும், அடிமுதல் ஓரெழுத் தடிமுதற் றொடையே எனவும் சொன்னார் பிறரும் ஆகலின். அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே, (யா. வி. 41) என்பதன் காறும், அடிதோறும் என்பதும் முதல் என்பதும் அதிகாரம் செலுத்தி உரைக்க. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) மாவும் புள்ளும் *வதியிற் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப மாலை தொடுத்த கோதையும் கமழ மாலை வந்த வாடை 3மாயோள் இன்னுயிர்ப் 4புறத்திறுத் தற்றே - யா.வி. 37.மேற் - யா. கா. 18. 41. மேற் இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையான், அடிமோனை. சீர்தோறும் வந்த எழுத்தே முறையான் வந்தால் தொடை விகற்பமாம். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) அணிமலர் அசோகின் தளிர்நலம் 1கவற்றி (இணை) 2அரிற்குரற் கிண்கிணி அரற்றும் சீரடி (பொழிப்பு) அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி (ஒரூஉ) அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல் (கூழை) அரும்பிய கொங்கை 3அவ்வளை 4அமைத்தோள் (மேற்கதுவாய்) 5அவிர்மதி அனைய திரு நுதல் அரிவை (கீழ்க்கதுவாய்) அயில்வேல் 6அனுக்கி அம்பலைத்(து) அமர்த்த (முற்று) கருங்கயல் நெடுங்கண் நோக்கமென் திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே! - யா. கா. 20. மேற். இதனுள் இணை மோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. (ங) அடியெதுகைத் தொடை ஙுசா. இரண்டாம் எழுத்தொன் றியைவதே எதுகை. இஃது என் நுதலிற்றோ? எனின், அடி எதுகை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது அடியெதுகை எனப்படும் என்றவாறு. இரண்டாவது இயைவது எதுகை. என்றாலும், இரண்டாம் எழுத்து என்பது பெறலாம், அதிகார வசத்தானும், பிறரும், முதலெழுத் தொன்றி முடிவது மோனை; ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே v‹wh® MfyhD« ; bga®¤J« ‘vG¤J’ v‹W brhšy nt©oaJ v‹id? எனின், 7அடிக்கு எழுத்து எண்ணுமாறே போலாது, தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும் என்பது அறிவித்தற்குச் சொல்லப்பட்டது. (நேரிசை வெண்பா) எழுத்தென் றதிகாரம் ஈண்டியலா நிற்ப எழுத்தென்று மீண்டும் இயம்பிற் - றிழுக்காமை எல்லா எழுத்தும் தொடைக்காம்; அடிக்கெழுத் தல்லா தனவுமென் றற்கு குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிரகன்ற செய்யுள் அடிக்கு இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும், முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து, பட்டு என்பதற்குக் கட்டு என்பதல்லது, காட்டு என்பது எதுகை ஆகாது; காட்டு என்பதற்குப் பாட்டு என்பதல்லது பட்டு என்பது எதுகை ஆகாது; அரம் என்பதற்குப் பரம் என்பதல்லது பாரம் என்பது எதுகை ஆகாது; பாரம் என்பதற்குக் காரம் என்பதல்லது, கரம் என்பது எதுகை ஆகாது, என்பது அறிவித்தற்கு இயைவதே என்றார். முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை அதன்வழி இயையவும் பெறுமே எனவும், முதலெழுத் தொன்றுவ மோனை; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப - யா. கா. 16. மேற். எனவும் சொன்னார் பல்காயனார் எனக் கொள்க. இரண்டாம் எழுத்து இயைவதே எதுகை, என்னாது, ஒன்று என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், ஒருசார் ஆசிரியர், இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தாலும், மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தாலும் எதுகைப்பாற்படுத்து வழங்குவர், என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள் அணிகிளர் தாரோய் ! அருஞ்சுரம் நீந்தி *வடியமை எஃகம் வலவயின் ஏந்தித் தனியே வருதி நீயெனின், மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே! - யா. கா. 41.மேற் இஃது இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றிய எதுகை. இது 1செய்யுளியல் உடையார் காட்டும் பாட்டு. (குறள் வெண்பா) பவழமும் பொன்னும் குவைஇய முத்தின் திகழரும் *பீன்றபுன் னை - யா. கா. 41. மேற் பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் - திருக்குறள் 292 இவை மூன்றாம் எழுத்து ஒன்றிய எதுகை. (இன்னிசை வெண்பா) 2ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல் மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப - மூசும் முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதான் காண்மோ விறக்கோடு கொண்டெறிக்கின் றேன் இந் நக்கீரர் வாக்கினுள் கடை யிரண்டடியும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க. (நேரிசை வெண்பா) அவிழ்ந்த *துணியசைக்கும் அம்பலமும் சீக்கும் மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து நிழறுழாம் யானை நெடுமான்றேர்க் கிள்ளி கழறொழா மன்னவர்தங் கை - தண்டியலங்காரம் 21. மேற். இப் பொய்கை வாக்கினுள்ளும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டுகொள்க. இதனை இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றினமையால், உயிர் எதுகை என்பாரும் உளர். (இன்னிசை வெண்பா) மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்த அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு - நான்மணிக்கடிகை 22 இதுவும் அதுபோலக் கொள்க. இனி, 1எட்டுத் திறத்தானும் எதுகை வருமாறு : (இன்னிசை வெண்பா) 2வடியேர்கண் ணீர்மல்க வான்பொருட்கட் சென்றார் கடியார் கனங்குழாய்! காணார்கொல் காட்டில் இடியின் முழக்கஞ்சி ஈர்ங்3கவுள் வேழம் பிடியின் புறத்தசைத்த கை? - யா. கா. 18. மேற் எனவும், (குறள் வெண்பா) அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் - திருக்குறள் - 71 எனவும், (குறள் வெண்பா) அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்? - திருக்குறள் 175 எனவும், (குறள் வெண்பா) போதுசேர் கோதாய் ! பொருப்பன் தரக்குறித்தான் தாதுசேர் மார்பின் தழை எனவும், (குறள் வெண்பா) ஆறியாய் முன்புக் கழுந்து வதுதவிர்த்தான் கூறியாய் சொல்லுமோ என்று எனவும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால், அடியெதுகை. (நேரிசை ஆசிரியப்பா) பொன்னின் அன்ன 1பொறிசுணங் கேந்திப் (இணை) பன்மலர்க் கோங்கின் நன்னலம் 2கவற்றி (பொழிப்பு) மின்னவிர் ஒளி3 வடம் தாங்கி மன்னிய (ஒரூஉ) நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழை) என்னையும் இடுக்கட் டுன்னுவித் தின்னடை (மேற்கதுவாய்) அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கதுவாய்) 4கன்னியம் புன்னை இன்னிழற் றுன்னிய (முற்று) மயிலேர் சாயலவ் வாணுதல் அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே - யா. கா. 20. மேற். இதனுள் இணையெதுகை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. (ச) வருக்கம், நெடில், இனம் ஆகிய மோனை எதுகைகள் ஙுஎ. வருக்க நெடில்இனம் வரையார் ஆண்டே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மோனைக்கும் எதுகைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வருக்கமும் நெடிலும் இனமும் வந்தாலும் நீக்கப்படா ; மோனையும் எதுகையும் ஆம் என்றவாறு. அவற்றை வருக்க மோனை, வருக்க எதுகை; நெடில் மோனை, நெடில் எதுகை; இன மோனை, இன எதுகை என்று வழங்குப. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு : (நேரிசை ஆசிரியப்பா) பகலேபல் பூங்கானல் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் 5குளவியொடு 6 கூதளம் விரைஇப் பின்னுப் பிணிஅவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படத் திருத்திப் புனையீர் 7ஓதி செய்குறி நசைஇப் பூந்தார் மார்ப ! புனத்துட் டோன்றிப் பெருவரை அடுக்கத் தொருவேல் ஏந்திப் பேயும் அறியா 8மாவழங்கு பெருங்காட்டுப் பைங்கண் 9உழுவைப் படுபகை வெரீஇப் *பொருதுசினம் தணிந்த பூநுதல் 1ஒருத்தல் போகாது வழங்கும் ஆரிருள் நடுநாள் 2பௌவத் தன்ன பாயிருள் நீந்தி யிப்பொழுது வருகுவை யாயின் நற்றார் மார்ப ! தீண்டலெம் 3கதுப்பே - யா. கா. 41. மேற். இது பகரமெய் வருக்க மோனை. இவ்வகை வருவன முதலெழுத்து ஒன்றாவிடினும், தமது வருக்க ஒப்புமை நோக்கி மோனைப்பாற்படுத்து, வருக்க மோனை என்று வழங்கப்படும் என்றவாறு. (இன்னிசை வெண்பா) 4நீடிணர்க் கொம்பர்க் 5குயிலாலத் தாதூதிப் பாடுவண் டஞ்சி அகலும் பருவத்துத் தோடார் 6தொடிநெகிழ்த்தார் 7உள்ளார் *படரொல்லா 8பாடமை சேக்கையுட் கண் - யா. கா. 41. மேற் இது டகரமெய் வருக்க எதுகை. இவ்வாற்றல் வருவன இரண்டாம் எழுத்து ஒன்றி வராவிடினும், இரண்டாம் எழுத்தின் வருக்க ஒப்புமை நோக்கி எதுகைப்பாற்படுத்து, வருக்க எதுகை என்று வழங்கப்படும். நெடில் மோனை வருமாறு: (குறட்செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை - முதுமொழிக்காஞ்சி 1 இது முதலெழுத்து ஒன்றாமையின், மோனையும் அன்று ; இரண்டாம் எழுத்து ஒன்றுதலும், இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றுதலும், மூன்றாம் எழுத்து ஒன்றுதலும் இன்மையால்; எதுகையும் அன்று சொல்லும் பொருளும் பகைத்து வாராமையின், முரணும் அன்று; இறுவாய் ஒத்து வாராமையின், இயைபும் அன்று; அளபெடுத்து ஒன்றி வாராமையின், அளபெடையும் அன்று; ஒவ்வாமைத் தொடுத்ததின்மையால், செந்தொடையும் அன்று; அடி முழுதும் ஒரு சொல்லே வரத் தொடுத்த தின்மையான், இரட்டைத்தொடையும் அன்று; ஈறு முதலாகத் தொடுத்ததின்மையின், அந்தாதித்தொடையும் அன்று; இதனை நெட்டெழுத்து என்னும் மாத்திரையே ஒப்புமை நோக்கி, இயைந்து இனிதாய்க் கிடத்தலான், நெடில் மோனை என்று வழங்குப. இனி, நெடில் எதுகை வருமாறு: (வெளி விருத்தம்) 1ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்; கூகூ வென்றே 2கூவிளி கொண்டார் - ஒருசாரார்; மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்; ஏகீர் 3நாகீர் ! என்செய்தும் என்றார் - ஒருசாரார்; - யா. கா. 27. 41. மேற். இன்னவெல்லாம் இரண்டாம் எழுத்து ஒன்றாவாயினும், இரண்டாம் எழுத்தின் நெடில் ஒப்புமை நோக்கி, இயைந்து இனியவாய்க் கிடத்தலின், நெடில் எதுகைப்பாற்படுத்து, நெடில் எதுகை என்று வழங்கப்படும். இன மோனை மூன்று வகைப்படும்: வல்லின மோனையும், மெல்லின மோனையும் இடையின மோனையும் என. அவற்றுள் வல்லின மோனை வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) கயலேர் உண்கண் கலுழ நாளும் சுடர்புரை திருநுதல் பசலை பாயத் திருந்திழை அமைத்தோள் அரும்படர் உழப்பப் போகல் வாழி ஐய ! பூத்த கொழுங்கொடி *mÂky® 4தயங்கப் பெருந்தண் *thil வரூஉம் பொழுதே - யா. கா. 41. மேற். இஃது எல்லா அடியும் முதற்கண்ணே வல்லினமே வந்தமையால், வல்லின மோனை என்று கையனார் காட்டிய பாட்டு. பிறவும் அன்ன. மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க. இன எதுகை மூன்று வகைப்படும் : வல்லின எதுகையும், மெல்லின எதுகையும், இடையின எதுகையும் என. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு : (குறள் வெண்பா) தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும் - திருக்குறள் 114 இஃது இரண்டாம் எழுத்து வல்லினம் வந்தமையால், வல்லின எதுகை. (குறள் வெண்பா) அன்பீனும் ஆர்வம் உடைமை; அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு - திருக்குறள் 74 இது மெல்லின எதுகை. (குறள் வெண்பா) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு - திருக்குறள் 299 இஃது இடையின எதுகை. பிறவும் அன்ன. வருக்க நெடிலினம் வரையார், என்றாலும், அதிகார வசத்தால் அவை என்பது பெறலாம் ; பிறரும், அடிதொறு முதலெழுத் 1 தடைவதை 2முதற்றொடை, இடையதன் முன்னொன் றியைவதை எதுகை; நெடிய பிறவும் இனத்தினும் ஆகும் என்றார் ஆகலானும். bga®¤J« ‘M©L’ v‹W ÄF¤J¢ R£o¡ Twš nt©oaJ v‹id? எதுகைத் தொடையிற் சீர் முழுதும் வருவது தலையாகு எதுகை; ஓரெழுத்தே வரத் தொடுப்பது இடையாகு எதுகை ; இனத்தானும் மாத்திரையானும் பிறவாற்றானும் வரத் தொடுப்பது கடையாகு எதுகை என்றும், முன் இரண்டடியும் ஓர் எதுகைத்தொடையாய் வந்து, பின் இரண்டடியும் மற்றொரு திறத்தான் வரினும் குற்றம் இல்லை; அஃது இரண்டடி எதுகை, என்பார் ஒருசார் ஆசிரியர் என்றற்கும், ஒருசார் ஆசிரியர் எதுகைத் தொடையுள் ய, ர, ல, ழ என்னும் நான்கு ஒற்றும் வந்து மிகத் தொடுத்தால், அதனை 3ஆசிடை எதுகை என்று வேண்டுவர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது. அவர் கூறுமாறு : சீர்முழு தொன்றிற் றலையா கெதுகை, ஓரெழுத் தொன்றின் இடை ; கடை பிறவே என்றார் ஆகலின். அவை வருமாறு. (நேரிசை வெண்பா) சிலை1 விலங்கு நீள்புருவம் சென்2றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று 3முனிவாள் - மலை விலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ கார்மாலை 4கண்கூடும் போழ்து? - தண்டியலங்காரம் 16. மேற். - யா. வி. 60 மேற். இது தலையாகு எதுகை. (குறள் வெண்பா) அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள் 1 இஃது இடையாகு எதுகை. (நேரிசை வெண்பா) “MÉ‹ ïila® ÉijaÊ¥g®; ‘m›Éijia¡ fhÄndh ! என்றார் 5கதம்படுவர்; - நாமினிப் பொல்லா தெனினுமப் பூந்தோட்ட வாழ்நருங் கொள்ளாரா நஞ்சொற் குணம் இது கடையாகு எதுகை. மோனைக்கும் இவ்வாறே கொள்க. என்னை? ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்றிவ் வகையால் யாவையும் முடியும் என்ப ஆகலின். வரலாறு : (குறள் வெண்பா) சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு - திருக்குறள் 267 இது தலையாகு மோனை. மாவும் புள்ளும் வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப - யா. வி. 35 மேற். இஃது இடையாகு மோனை. 1பகலே பல்பூங் கானற் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ என்பது கடையாகு மோனை. இனி, இரண்டடி எதுகைக்குச் சொல்லுமாறு : இரண்டடி எதுகை திரண்டொருங் கியைந்தபின் முரண்ட எதுகையும் இரண்டினுள் 2வரையார் என்றார் ஆகலின். வரலாறு : (கலி விருத்தம்) 3உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான் - வளையாபதி எனவும், (எண்சீர் ஆசிரிய விருத்தம்) மணியுமிழ்ந்து மாமலைமேல் மேய்வனவும் நாகம்: மடவர லார்கொய்ய மலர்வனவும் 4நாகம்; பிணியவிழ்ந்து நன்னாளாற் பூப்பனவும் வேங்கை பிறங்கன்மாத் தொலைத்தவற்றூன் துய்ப்பனவும் வேங்கை; இறைக்காசாம் நேசமருள் மாலையும் மாலை; எமக்கினிதா யாமவனைச் சூட்டுவதும் மாலை நிறைகாய்த்தி நெஞ்சஞ்சச் சுடுவதுவும் காமம் நிலங்காக்கும் 5சேஎய்தன் நெடுநகரும் 6காமம் எனவும், (கலி விருத்தம்) மந்திரி கடிதோடி 7மதிபுரை குடையசையத் தந்திர வகைகாணிற் றன்னொடு நிகரில்லாப் பூவிரி கமழ்குஞ்சிச் சாகர மகளொப்பாய் யாவரு மிவணில்லென் றாசற வதுகூறும் எனவும் கொள்க. மோனைக்கும் இவ்வாறே கூறப்படும், ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல், (நன்னூல்14) என்பது தந்திர உத்தியாகலின். வரலாறு: (கலி விருத்தம்) 1ஆகங் கண்டகத் தாலற்ற ஆடவர் ஆகங் கண்டகத் தாலற்ற வன்பினர் பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார். பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார் - யா. கா. 41. மேற். எனக் கொள்க. பிறவும் அன்ன. இனி, ஆசிடை எதுகைக்குச் சொல்லுமாறு: யரலழ என்னும் ஈரிரண் டொற்றும் வரன்முறை பிறழாது வந்திடை உயிர்ப்பினஃ தாசிடை எதுகையென் *றறிந்தனர் கொளலே - யா கா. 41. மேற் என்றார்2 ஆகலின். அவை வருமாறு: (நேரிசை வெண்பா) 3தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப் பொய்க்கோலம் செய்ய ஒழியுமோ - எக்காலும் உண்டி வினையு ளுறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல்? - நாலடியார்.45 எனவும், (கலிநிலைத் துறை) காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி 4வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் 5றிசையாற் றிசைபோய துண்டே- சீவகசிந்தாமணி 31 எனவும் இவை யகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை. (கலி விருத்தம்) மாக்கொடி 6மாணையு 7மவ்வற் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்னின் ஞாழலும் தூக்கொடி கமழ்ந்துதான் றுறக்கம் ஒத்ததே - சூளாமணி 35 எனவும், (இன்னிசை வெண்பா) நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் *பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும் 1கூத்தன் புறப்பட்டக் கால்? - நாலடியார் 26 எனவும், (குறட் செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை - முதுமொழிக்காஞ்சி 1 எனவும் இவை ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை. (நேரிசை வெண்பா) ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு - நாலடியார் 118 இது லகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை. (நேரிசை வெண்பா) 2“mªju¤ JŸns mf§if òw§ifah«; 3‘kªjunk nghY« kidthœ¡if-4kªju¤JŸ thœ»‹nw« ! என்று மகிழன்மின் ; வாணாளும் போகின்ற 5பூளையே போன்று - யா. கா. 41. மேற் இது ழகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை. இவை எல்லாம் வரலாற்று முறைமையோடும் கூடி இயைந்து இனியனவாய்க் கிடப்பனவே கொள்ளப்படும் என்க. ஆண்டே என்ற ஏகார விதப்பினால், எதுகைத் தொடை யானே பாவினம் வருவது, பிற தொடையால் வருமாயினும் ; அல்லதூஉம், தலையாகு மோனையானும் வரப்பெறும்; எனக் கொள்க. எதுகைத் தொடையால் இனம்பிற விரவினும் சிறப்புடை மோனையும் சிவணும் ஆண்டே எனப் பிறரும் சொன்னார். மேற்காட்டிய பாவினத்துள்ளும் பிறவற்றுள்ளும் எதுகைத் தொடையானே வருமாறு கண்டுகொள்க. (வெளி விருத்தம்) ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒரு சாரார் ; கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்; ஏகீர் நாகீர் ! v‹brŒJ« ! என்றார் - ஒருசாரார்; - யா. வி. 37. 68. மேற் - யா. வி. 37. 68. மேற் என்பது இறுதி இயைபாய் வந்ததாயினும், நெடில் எதுகையால் வந்தது. 1முரணாய் வரும் பாவினமும், அளபெடையாய் வரும் பாவினமும் எதுகையிற் றீர்ந்தும் மோனையிற் றீர்ந்தும் வாரா எனக் கொள்க. தலையாகு மோனையாற் பாவினம் வருமாறு: (வஞ்சி விருத்தம்) 2கருநீலம் அணிந்த 3கதுப்பினயற் கருநீலம் அணிந்தன கண்ணிணைகள் கருநீல மணிக்கதிர்க் கட்டியெனக் கருநீலம் அணிந்த *கருங்குழலே - சூளாமணி. 807 எனக் கொள்க. மிகுதி வகையால் ய, ர, ல, ழ, என்னும் நான்குமே ஆசு என்றார் ஆயினும், *வல்லினத்தாறும், வகர ளகரமும், மெல்லினத்து *ங, ஞ, ந என்னும் மூன்றும் ஒழித்து அல்லா ஒற்றும் ஒரோ இடத்து ஆசாய் வரப்பெறும். ண, ம, ன என்னு மூன்றும் வல்லினம் சார்ந்து ஆசாகா; வகார நகார மகாரத்தோடு இயைந்தும் ஆசாகா எனக் கொள்க. இன்னும் அவ்வேகார விதப்பினால், விட்டிசை மோனையும், இடையிட்டெதுகையும் கொள்ளப்படும். என்னை? விட்டிசை மோனையும் இடையிட் டெதுகையும் ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே என்றார் ஆகலின். வரலாறு: (குறள் வெண்பா) *அஉ அறியா அறிவில் இடைமகனே ! 1நொஅலையல் நின்னாட்டை நீ - யா. வி. 7. 95. மேற் -(இடைக்காடனார்) யா. கா. 37. மேற். இதனுள் முதலெழுத்து இரண்டும் 2அளவொத்து விட்டிசைத் தமையால், விட்டிசை மோனை. (நேரிசை ஆசிரியப்பா) தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் 3பைதல் கலுழ வாடா அவ்வரி *வகைஇப் பசலையும் வைகல் தோறும் பைப்பையப் பெருகலின் நீடார் இவணென *நீள்மணங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவம் *செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே - யா. வி. 95. மேற் - யா.கா. 41. மேற் இஃது அடி இடையிட்டு எதுகை வந்தமையால், இடையிட் டெதுகை. எல்லா எதுகைக்கும் முதலசை நேர்க்கு நிரையும், நிரைக்கு நேரும் வாரா; நேர்க்கு நேரும், நிரைக்கு நிரையுமே வருவது எனக் கொள்க. என்னை? நிரைநேர் மறுதலை அடையா தம்முளும் எதுகை முதலசை என்மனார் புலவர் எனவும், யாவகை எதுகையும் அசைமுறை பிறழாப் பாவகை நான்காம் பகருங் காலை எனவும் சொன்னார் ஆகலின். விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் என்பது தந்திர உத்தி ஆகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. பிறரும், மோனைக்கும் எதுகைக்கும் இவ்வாறே சொன்னார். என்னை? அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை - தொல். செய். 32 அஃதொழித் தொன்றின் எதுகை யாகும் - தொல். செய். 33 ஆயிரு தொடைக்கும் 1கிளையெழுத் துரிய - தொல். செய். 34 என்றார் தொல்காப்பியனார். முதலெழுத் தொன்றின் மோனை யாகும் ; அஃதொழித் தொன்றின் எதுகை யாகும்; அவ்விரு தொடைக்கும் கிளையெழுத் துரிய என்றார் நற்றத்தனார். முதலெழுத் தொன்றின் மோனை ; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப - யா. கா. 16. மேற். இவ்விரு தொடைக்கும் கிளையெழுத் துரிய என்றார் பல்காயனார். முதலெழுத் தொன்றி முடிவது மோனை; ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே ; உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் நெறிப்பட வந்தன நேரப் படுமே என்றார் *சிறுகாக்கைபாடினியார். முரண் தொடை ஙுஅ. 2மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே அடி முரண் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடிதொறும் சொல்லும் பொருளும் மறுதலைப் படத் தொடுப்பது அடி முரண் தொடை எனப்படும் என்றவாறு. அம்முரண் மூன்று வகைப்படும் : அவை சொல்லால் முரணுதலும், பொருளான் முரணுதலும், சொல்லும் பொருளும் தம்முள் முரணுதலும் என. இனி, ஒருசார் ஆசிரியர், அவைதாம் 1ஐந்து விகற்பத்தன என்ப. அவை யாவையோ? எனின், சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல் லொடும் பொருளொடும முரணுதலும் என இவை. வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற் 2பசும்புண் வார்ந்த அசும்புடைக் குருதியொடு வெள்விளி பயிற்றும் நாடன் உழைய னாகவும் விழையுமென் நெஞ்சே - 3தொல். செய். 95. பேரா இது சொல்லும் சொல்லும் முரணியது. செந்தொடை என்புழிச் செய்யதாயவண்ணம் இல்லை ; செம்மை என்னும் சொல்லே. கருங்கைக் கானவன் என்புழியும் கருமை என்னும் வண்ணம் இல்லை ; கொன்று வாழும் கை என்பது உணர்த்தியது. (நேரிசை ஆசிரியப்பா) தீமேய் திறல்வரை 4நுழைஇப் பரிமெலிந்து 5நீர்நசை பெறாஅ நெடுநல் யானை வானதிர் தழங்குகுரல் 6மடங்கல் ஆனாது நிலஞ்சேர்பு முயங்கு புலஞ்சேர்ந் தந்தி நிலவென விளக்கு நிரைவளைப் பணைத்தோள் 7இருளேர் ஐம்பால் ஒழியப் பொருள்புரிந் தகறல் 8புரைவதோ அன்றே இது பொருளும் பொருளும் முரணியது : தீ என்னும் பொருட்கு நீர் என்னும் பொருளும், வான் என்னும் பொருட்கு நிலம் என்னும் பொருளும், நிலவு என்னும் பொருட்கு இருள் என்னும் பொருளும் மறுதலைப்பட முரணியது. (நேரிசை ஆசிரியப்பா) பெருமலைக் குறுமகள் *பிறிதோர்த்து நடுங்கலிற் சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு நெடுநீர் பொய்கைக் 1குறுநர் தந்த தண்பனி அவிழ்மலர் நாறுநின் கண்பனி துடைமார் வந்தனர் நமரே இது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது. நெடுநீர் என்புழி நெடுமை என்னும் சொல்லும் உண்டு ; நீரும் நெடிது. குறுநர்தந்த என்புழிக் குறிது என்னும் சொல்லுண்டு; குறும் பொருள் இல்லை. (நேரிசை ஆசிரியப்பா) “brªÔ a‹d ád¤j ahid Ú®eir bgwhm¡ fhd‰ nw®eirï XL« 2RuÅwª jdnu! இது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. செந்தீ என்புழிச் செம்மையும் உண்டு; தீக்கட் செய்யது என்னும் சொல்லும் உண்டு ; நீர் நசை பெறாஅ என்புழிச் சொல் இல்லை ; முரணியது பொருள் எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி செங்குரல் 3ஏனற் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை நல்லன் என்றும் யாமே; தீயன் என்னுமென் தடமென் றோளே - யா. வி. 43. மேற். இது சொல்லும் பொருளும் சொல்லொடும் பொரு ளொடும் முரணியது செங்குரல் என்புழிச் சொல்லும் உண்டு; செம்மை குரற் கண்ணுமுண்டு. பைங்கிளி என்புழிச் சொல்லும் உண்டு; பசுமை கிளிக்கண்ணும் உண்டு. செம்மை என்பதும் பசுமை என்பதும் முரணின் 1ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி என்பதூஉம் அதுவெனக் கொள்க. இனி, அவை எட்டுத் திறத்தானும் முறையே வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில் நிலவுகுவிந் தன்ன வெண்மணல் 2ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன 3நுண்டா திறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே - யா. கா. 18. மேற். இஃது அடிதோறும் மறுதலைப்படத் தொடுத்தமையால், அடிமுரண் (நேரிசை ஆசிரியப்பா) சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு (இணை) சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடம் தாங்கி (பொழிப்பு) குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து (ஒரூஉ) சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் (கூழை) வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும் (மேற்கதுவாய்) இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும் (கீழ்க்கதுவாய்) துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியா (முற்று) தென்றும் இன்னணம் ஆகுமதி பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லேயே! - யா. கா 20. மேற், இதனுள் இணைமுரண் முதலாய ஏழு விகற்பமும் முறையாக வந்தவாறு கண்டு கொள்க. 4முரண் தொடை இலக்கணம் இவ்வாறே பிறரும் சொன்னார் என்னை? மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே - தொல். செய். 95. என்றார் தொல்காப்பியனார். சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே என்றார் நற்றத்தனார். பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே என்றார் பல்காயனார். பொருளினும் சொல்லினும் முரணத் தொடுப்பின் முரணென மொழிப முந்தை யோரே என்றார் மயேச்சுரர். மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும் - யா. கா. 40. மேற். என்றார் அவிநயனார். மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின் இரணத்தொடையென் றெய்தும் பெயரே - யா. கா. 40. மேற். என்றார் காக்கைபாடினியார். (சா) முரண் தொடை விகற்பம் ஙுகூ. கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென இவையும் கூறுப ஒருசா ரோரே. என்பது என் நுதலிற்றோ எனின், முரண் தொடைக்கு ஒருசார் ஆசிரியர் வேண்டும் விகற்பம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கடையிணை முரணும், பின் முரணும், இடைப்புணர் முரணும் என்று சொல்லுவர் ஒருசார் ஆசிரியர் என்றவாறு. கடையிருசீரும் மறுதலைப்படத் தொடுப்பது, கடையிணை முரண்; கடைச் சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுப்பது பின்முரண்; இடை இரு சீரும் மறுதலைப்படத் தொடுப்பது இடைப்புணர் முரண் எனக் கொள்க. கடையிணை பின்முரண் இடைப்புணர் முரண் என்றதல்லது, அவற்றிற்கு இலக்கணம் கூறிற்றில்லையாயினும், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் - நன்னூல் 14 என்பது தந்திர உத்தி ஆகலானும், உரையிற்கோடல் என்ப தாகலானும் இவ்வாறு உரைக்கப்பட்டது எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) *“Û‹nj®ªJ tUªâa fU§fhš bt©FUF njdh® 1PhHš *ÉÇáid¡ F>c« j©zª Jiwt‹ jÉ®¥gî« jÉuh‹; njnuh fhzy« ; fh©L« 1Õnu® t©zK« áWEjš !பெரிதே - யா. கா. 40. மேற் இது கடையிரு சீரும் மறுதலைப்படத் தொடுத்தமையாற் கடையிணை முரண். (நேரிசை ஆசிரியப்பா) சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமியம் இருந்தன மாக நின்றுதன் நலனுடைப் பணிமொழி நன்குபல புகழ்ந்து வீங்குதொடிப் பணைத்தோள் நெகிழத் துறந்தோன் நல்லன்எம் மேனியோ தீதே - யா. கா. 40. மேற். இது கடைச்சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுத் தமையால், பின் முரண். (நிலைமண்டில ஆசிரியப்பா) *போதவிழ் குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையிற் றாழ்ந்த ஓங்குவெள் ளருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு 2விரைஇப் 3பெருமலைச் சீறூர் இழிதரு நலங்கவர்ந் தின்னா *வாயின இனியோர் மாட்டே - யா. கா. 40. மேற். இஃது இடை இரு சீரும் மறுதலைப்படத் தொடுத்தமை யால், இடைப்புணர் முரண். இப்பாட்டுக் கையனார் காட்டியது எனக் கொள்க. இவையும் கூறுப, என்ற உம்மையால், முதற்சீர் ஒழித்து மூன்று சீர்க்கண்ணும் முரணி வந்தால் கடைக்கூழை முரண் எனப்படும். வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளும் அணங்குமால் எம்மே - தமிழ்நெறி விளக்கம் 16. மேற். - களவியற்காரிகை 28. மேற். - யா. கா. 40. மேற். இதன் முதலடியில், கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி எனக் கடைச்சீர் மூன்றும் மறுதலைப்படத் தொடுத்தமையாற் கடைக் கூழை முரண் எனக் கொள்க. ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்பது தந்திர உத்தி ஆகலின், ஏனைத் தொடைக்கும் இவ்வாறே கொள்க. அவை சொல்லுமாறு : கடையிணை மோனை, பின் மோனை, இடைப்புணர் மோனை, கடைக் கூழை மோனை எனவும் ; கடையிணை எதுகை, பின் எதுகை, இடைப்புணர் எதுகை, கடைக் கூழை எதுகை எனவும்; கடையிணை இயைபு, பின் இயைபு, இடைப் புணர் இயைபு, கடைக் கூழை இயைபு எனவும்; கடையிணை அளபெடை, பின் அளபெடை, இடைப்புணர் அளபெடை, கடைக்கூழை அளபெடை எனவும் கண்டு கொள்க. அவற்றிற்குச் செய்யுள் : (நேரிசை ஆசிரியப்பா) பூந்தார்ச் சிறுகிளி புலம்பொடு புலம்ப (கடையிணை) மைம்மலர் நெடுங்கண் வாங்கமை நெடுந்தோள் (பின்) அந்நுண் கொடியிடை கொடியேற் றுறந்து (இடைப்புணர்) சீறடிச் சிலம்பு சிலம்பொடு சிலம்ப (கடைக்கூழை) ஏதில் காளையோ டிவ்வழிப் போதல்கண் டனையோ வாழிய புறவே! இதனுள், கடையிணை மோனை முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) வஞ்சியங் கொடியின் வணங்கிய நுணங்கிடை (கடையிணை) மலர்புரை வடிக்கண் வாங்கமைத் தொடித்தோள் (பின்) மதிபுரை சிறுநுதல் நறுமென் கூந்தல் (இடைப்புணர்) வான்கதிர் வடமலி தடமுலை மடவரல் (கடைக்கூழை) பஞ்சியஞ் சீறடி பனிப்பவிவ் வெஞ்சுரம் மிதிப்ப விளைந்ததால் விதியே! இதனுள், கடையிணை எதுகை முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. (நேரிசை ஆசிரியப்பா) புயலும் போலும் பூங்குழற் பிழம்பே ; (கடையிணை) தொய்யிலும் பொன்னே ; சாயலும் மயிலே ; (பின்) சிலையே நுதலும்; முறுவலும் முத்தே; (இடைப்புணர்) குயிலும் பாலும் ஆம்பலும் மொழியே; (கடைக் கூழை) அரிமதர் நெடுங்கணும் அயிலே ; வரிவளைத் தோளி முகமுமோர் மதியே இதனுள், கடையிணை இயைபு முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. இஃது 1எழுவாய் இறுவாயாகக் கண்டு கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) மெல்லிணர் நறும்பூ விடர்அள் தொடாஅள் (கடையிணை) செய்கையும் வழாஅள் தெய்வமும் தொழாஅள் (பின்) இனிதினின் நகாஅள் இராஅள் யாவதும் (இடைப்புணர்) விரிமலர் மராஅம் கராஅம் விராஅம் (கடைக் கூழை) பின்னிருங் கூந்தல் நன்னுதல் என்னா குவள்கொல் என்னுமென் நெஞ்சே இதனுள், கடையிணை அளபெடை முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. இன்னும், இவையும் கூறுப ஒருசா ரோரே, என்ற உம்மை விதப்பினால், அடியடி தோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்தும் மொழியும் ஒன்றி வந்தால் கடை மோனை என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் கடை எதுகை என்றும், கடை முரணி வந்தால் கடை முரண் என்றும், அடிதொறும் கடைச்சீர் இறுதி எழுத்து ஒன்றி வந்தால் கடை இயைபு என்றும் கடைச்சீர் அளபெடுத்து வந்தால் கடை அளபெடை என்றும் இவ்வாறு பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க. வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) வளரிளங் கொங்கை வான்கெழு மருப்பே; பொறிவண் டோதியிற் பாடுமா மருளே; வாணுதல் ஒண்மதி மருட்டும் மாயோள் இவளென் நோய்தணி மருந்தே இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடைமோனை. (கலிநிலைத் துறை) சுரிதரு மென்குழல் மேலும் மாலைகள் சூட்டினீர்; புரிமணி மேகலை யாளை ஆரமும் பூட்டினீர்; அரிதவழ் வேனெடுங் கண்களும் அஞ்சனம் ஊட்டினீர்; வரிவளை பெய்திளை யாளை நுண்ணிடை வாட்டினீர் இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடை எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) 1கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதே; தடமுலைத் *தவழும் தனிவடம் வெளிதே; நூலினும் நுண்ணிடை சிறிதே; 2ஆடமைத் தோளிக் கல்குலோ பெரிதே - யா. கா. 40. மேற். இஃது அடிதோறும் கடைச்சீர் மறுதலைப்படத் தொடுத்தமையால், கடை முரண். (நேரிசை ஆசிரியப்பா) மாமலர் நெடுங்கண் மானோக் கினவே; பொன்மலர் வேங்கை புணர்முலைச் சுணங்கே; நறுமலர்க் கூந்தலும் 3அறலே ஒண்மலர்க் கமலம் அலைத்தது முகமே எனவும், (குறள் வெண்பா) ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்? - திருக்குறள். 228 எனவும், (குறள் வெண்பா) அளவறியான் நட்டவன் கேண்மையே கீழ்நீர்த் 1தறியறியான் பாய்ந்தாடி அற்று எனவும் இவை முதற்சீர்க்கடை ஒத்து வந்தமையால், கடை இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) தொடுகடற் றுறைதுறை திரிதரும் 2சுறாஅ; கருங்கழி கலந்து கலிதரும் 3கராஅ; மறிதிரை மகரமும் 4வழாஅ; எறிநீர்ச் சேர்ப்ப ! இந் நெறிவரத் 5தகாஅ இஃது அடிதோறும் கடைச்சீர்கண் அளபே தொடுத்து வந்தமையால், கடை அளபெடை. பிறவும் அன்ன. (எ) அடி இயைபுத்தொடை ro. இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே அடி இயைபுத்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடிதோறும் இறுதிக்கண் எழுத்தானும், சொல்லானும் ஒன்றிவரின், அஃது அடி இயைபுத்தொடை எனப்படும் என்றவாறு. வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) மாயோள் கூந்தற் குரலும் நல்ல ; கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல; மலரேர் உண்கணும் நல்ல; பலர்புகழ் 6ஓதியும் நனிநல் லவ்வே - யா. வி. 53. மேற். எனவும், (நேரிசை ஆசிரியப்பா) இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே; நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே; ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே; 7அரிமதர் மழைக்கணும் அணங்கே; திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே; - யா. கா. 18. மேற். எனவும் இவை அடிதோறும் இறுவாய் ஒன்றி வந்தமை யான் ; அடி இயைபுத் தொடை. இனி, அவை எட்டுத் திறத்தானும் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே; (இணை) மற்றதன் அயலே முத்துறழ் மணலே; (பொழிப்பு) நிழலே இனியதன் அயலது கடலே; (ஒரூஉ) மாதர் நகிலே வல்லே இயலே; (கூழை) வில்லே நுதலே வேற்கண் கயலே; (மேற்கதுவாய்) பல்லே 1தளவம் ; பாலே சொல்லே; (கீழ்க்கதுவாய்) புயலே குழலே மயிலே இயலே; (முற்று) அதனால், இவ்வயின் இவ்வுரு இயங்கலின், எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே - யா. கா. 20. மேற். இதனுள், இணை இயைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே என்று சிறப்பித்த அதனால், மோனையாய் வந்து இறுவாய் ஒத்தால் மோனை இயைபு என்றும், எதுகையாய் வந்து இறுவாய் ஒத்தால் எதுகை இயைபு என்றும், முரணாய் வந்து இறுவாய் ஒத்தால் முரண் இயைபு என்றும், அள பெடையாய் வந்து இறுவாய் ஒத்தால் அளபெடை இயைபு என்றும், பலவாய் வந்து இறுவாய் ஒத்தால் மயக்கு இயைபு என்றும், பிற வாராது இறுவாய் ஒத்தால் செவ்வியைபு என்றும் வழங்கப்படும் எனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) பூந்தண் பொழிலிடை 2வாரணம் துஞ்சும் ; பூங்கண் அன்னை இல்லிடைத் துஞ்சும் ; பூங்கொடிப் புனத்தயற் குறவன் துஞ்சும் ; 3பூசலிக் களவென யாந்துஞ் சலமே - யா. வி. 53. மேற் இது மோனை இயைபுத் தொடை. (இன்னிசை வெண்பா) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்; 1விலைப்பாலிற் கொண்டூன் 2மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே யாம் - நான்மணிக் கடிகை 26. இஃது எதுகை இயைபுத் தொடை. (இன்னிசை வெண்பா) இருளிற் கெரிவிளக் கென்றும் பகையே; அருளிற் 3கலைவாழ்க்கை அஃதும் பகையே; மருளிற்கு 4வாலறிவு மாயாப் பகையே; பொருளிற்கஃ 5தின்மை பகை இது முரண் இயைபுத் தொடை. (குறள் வெண்) 6ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல் 7மாஅம் வழங்கும் வரை - யா. வி. 41. மேற். இஃது அளபெடை இயைபுத் தொடை. (நேரிசை ஆசிரியப்பா) பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவண் வரவும் பகற்பின் 8முட்டா திரவினது வரவும் பசியும் 9ஆர்கையும் வரவும் 10பரியினும் போகா துவப்பினும் வருமே - யா. வி. 95. மேற். இது மோனையும் முரணுமாய் வந்து இறுவாய் ஒத்தமை யால், மயக்கு இயைபுத் தொடை. (நேரிசை ஆசிரியப்பா) ஓங்குவரை11 அமன்ற வேங்கைநறு மலரும் ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும் பழனத் தாமரை எழினிற மலரும் இல்லயற் புறவின் முல்லைவெண் மலரும் 1உராஅங் கடற்றிரை 2விராஅ மலரும் வேறுபட 3மிலைச்சிய நாறிருங் குஞ்சி ஏந்தல் பொய்க்குவன் எனவும் பூந்தண் உண்கண் புலம்பா னாவே - யா. வி. 53. மேற். இது பொழிப்பு எதுகையும் பொழிப்பு அளபெடையுமாய் வந்து இறுவாய் ஒத்தமையால், மயக்கு இயைபுத் தொடை. மயக்கு இயைபுத் தொடைக்கு இலக்கணம் பலரும் ஈறு பிறிதாய் வந்த தாயினும் ஆம், என உரைப்பாரும் உளர் எனக் கொள்க. அது போக்கித் தொடைபல தொடுப்பினும் (யா. வி. 55) என்னும் சூத்திரத்துட் காட்டுதும். இயைபுத் தொடைக்கு இலக்கணம் பிறரும் இவ்வாறு சொன்னார். என்னை? இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே - தொல். செய். 95 என்றார் தொல்காப்பியனார். இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப என்றார் அவிநயனார். இயைபே இறுசீர் ஒன்றும் என்ப என்றார் பல்காயனார். இறுசீர் ஒன்றின் இயைபெனப் படுமே என்றார் நற்றத்தனார். (அ) அடி அளபெடைத் தொடை சக. அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே. v‹gJ v‹ Ejȉnwh? எனின், நிறுத்தமுறையானே அளபெடைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடிதொறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரின், அஃது அடி அளபெடைத் தொடை எனப்படும் என்றவாறு. இச் சூத்திரத்துள் முதற்சீர் என்பது இல்லை யாயினும், இருசீர் மிசைவரத் தொடுப்பதை இணையே - யா. வி. 42. மேற். என்னும் சூத்திரத்தினின்றும், சீர் என்றும் முதல் என்றும் சிங்க நோக்கு அதிகாரம் வர உரைக்கப்பட்டது எனக் கொள்க. ஒன்றுவது என்பது, தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே -யா. வி. 2. மேற். - யா. கா. 4. மேற். என்று சொல்லப்பட்ட உயிரளபெடையும், ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள ஆய்தம் என இவை பதினொன்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் என்று சொல்லப்பட்ட ஒற்றளபெடையும் தம்முள் ஒன்றி வருவது எனக் கொள்க. நான்கிடத்தும் ஏழு நெட்டெழுத்தும் அளபெடுப்ப இருபத்தெட்டு உயிரள பெடையாம். அவ்விருபத்தெட்டி னையும் எட்டு விகற்பத்தானும் உறழ, இருநூற்று இருபத்து நாலாம். பதினோர் ஒற்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அள பெடுப்ப இருபத்திரண்டாம். அவ்விருபத்திரண்டினையும் எட்டு விகற்பத்தானும் உறழ, நூற்றெழுபத்தாறு ஒற்றளபெடையாம். அவை இறுதி இடைநிலையாய்க் கூறுபடுப்ப இரட்டியாம். அவை எல்லாம் செய்யுளுள் வந்துழிக் கண்டு கொள்க. (குறள் வெண்பா) ஏஎ வழங்கும் சிலையாய் ! இரவாரல் மாஅ வழங்கும் வரை - யா. வி. 40. மேற். இது சீர்க்கு முன்னும் பின்னும் எழுத்தின்றி ஒரோ வோரெழுத்தே நின்று அளபெடுத்தமையால், தனிநிலை அளபெடைத் தொடை. (குறள் வெண்பா) 1காஅரி கொண்டான் 2கதச்சோ மதனழித்தான் 3ஆஅழி ஏந்தல் அவன் - யா. வி. 95. மேற். இது முதல் நின்ற சொல்லின்கட் பின்னும் எழுத்துப் பெற்று முதலெழுத்து அளபெழுந்தமையால், முதல்நிலை அளபெடைத்தொடை. (குறள் வெண்பா) கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில் - திருக்குறள் 1087 இது முதல் நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால், இறுதி நிலை அளபெடைத் தொடை. (குறள் வெண்பா) உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ விராஅய 1கோதை விளர்ப்பு? இது முதல் நின்ற சீரின் நடுநின்ற எழுத்து அளபெடுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், இடைநிலை அளபெடைத் தொடை. இனி, ஒற்றளபெடை: (குறள் வெண்பா) வண்ண்டு வாரும் மலர்நெடூங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை 2பரிது இஃது இடைநிலை ஒற்றளபெடைத் தொடை. (குறள் வெண்பா) 3உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில் இஃது இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை. தொடையே என அதிகாரம் வர வைத்து, பெயர்த்தும் அளபெடைத் தொடையே என்றதனால், முதல் எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் மோனை அளபெடைத் தொடை என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் எதுகை அளபெடைத் தொடை என்றும், முரணாய் வந்து அளபெழுந்தால் முரண் அளபெடைத் தொடை என்றும், அவை பலவாய் வந்து அளபெழுந்தால் மயக்கு அயபெடைத் தொடை என்றும், பிற வாராது அளபெழுந்தால் செவ்வள பெடைத் தொடை என்றும் வழங்கப்படும். அவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. அஃதே எனின், அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடை என்னாது, அளபெடைத் தொடையே என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், ஒருசார் ஆசிரியரால் இணை முதலாகிய ஒருசார் அளபெடை விகற்பங்கள் சிறுபான்மை ஒன்றாது அளபெடுத்து வரினும், கொள்ளப்படும், என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. தொடை விகற்பத்து 4நான்கு உயிரளபெடையும், இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் மயங்கி வரப்பெறும்; உதாரணம் : ஏஎர் ஆஅர் நீஇள் நீஇர் என்பது கொள்க. இனி, அவை எட்டு வகையானும் வழங்குமாறு: (பஃறொடை வெண்பா) 1ஆஅ 2அளிய 3அலவன்றன் பார்ப்பினோ 4டீஇர் இரையுங்கொண் 5டீரளைப் பள்ளியுள் தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள் 6மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்! ஓஓ 7உழக்கும் துயர்! - யா. கா. 18 மேற். இஃது அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், அடி அளபெடைத் தொடை. (நேரிசை ஆசிரியப்பா) 8தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப் (இணை) பூஉக் குவளைப் போஒ தருந்திக் (பொழிப்பு) காஅய்ச் செந்நெற்9 கறித்துப் போஒய் (ஒரூஉ) 10மாஅத் தாஅள்11 மோஒட் டெருமை (கூழை) தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் (மேற்கதுவாய்) மீஇன் ஆஅர்ந் துகளும் சீஇர் (கீழ்க்கதுவாய்) 12ஏஎர் ஆஅர்ந் நீஇள் இர் (முற்று) ஊரன் செய்த கேண்மை ஆய்வளைத் தோளிக் கலரா னாதே - யா. கா. 20. மேற். இதனுள் இணை அளபெடை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. அளபெடைக்கு இலக்கணம் பிறரும் சொன்னார். என்னை? அளபெடைத் தொடைக்கே அளபெடை யாகும் என்றார் பல்காயனார். அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும் - யா. கா. 16. மேற் என்றார் நற்றத்தனார். அளபெழின் மாறல தொடுப்பதை அளபெடை என்றார் அவிநயனார். சொல்லிசை அளபெழ நிற்பதை அளபெடை என்றார் சிறுகாக்கைபாடினியார். அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே என்றார் *உயரும் புரம்நகரச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்). (கட்டளைக் கலித்துறை) எழுவாய் எழுத்தொன்றின் மோனை ; இறுதி இயைபிரண்டம் வழுவா எழுத்தொன்றின் மாதே! எதுகை ; மறுதலைத்த மொழியான் வரினும் முரண் ; அடி தோறும் முதன்மொழிக்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே மாவும்புள் மோனை ; இயைபின் னகை ; வடி யேரெதுகைக் கேவின் முரணும் இருள்பரந் தீண்டள பாஅவளிய ஓவிலந் தாதி உலகுட னாம்; ஒக்கு மேயிரட்டை; பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே! - யா. கா. 16. 18. இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. இணைத் தொடை சஉ. இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே. மோனை முதலாகிய ஐந்து தொடையும் உணர்த்தி, அவற்றின் விகற்பமும் உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் இச்சூத்திரம் இணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) முதல் இருசீர்க்கண்ணும், மேல் அடிக்கண் வரத்தொடுத்தாற்போல, மோனை முதலாயின வரத்தொடுத் தால், அவை இணை மோனை, இணை எதுகை, இணை முரண், இணை இயைபு, இணை அளபெடை எனப்படும் என்றவாறு. பிறரும், இரண்டாம் சீர்வரின் இணையெனப் படுமே என்றார் ஆகலின். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) தண்ணறுந் 1தகரம் 2நீவிய கூந்தல் தாதார் தண்போ 3தட்டுபு முடித்த தயங்குமணித் தளர்நடைப் *புதல்வர தாயொடும் தம்மனைத் தமரொடும் கெழீஇத் தனிநிலைத் தலைமையொடு பெருங்குறை வின்றே இது முதல் இருசீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், இணை மோனை. (இன்னிசை வெண்பா) கல்லிவர் முல்லைக் *கணவண்டு வாய்திறப்பப் பல்கதிரோன் செல்லும் பகல்நீங் கிருள்மாலை மெல்லியலாய் ! மெல்லப் படர்ந்த திதுவன்றோ *சொல்லியலார் சொல்லிய போழ்து? இது முதல் இரு சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், இணை எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) கருங்கால் வெண்குருகு கனைதுயில் மடியும் 1இடுகுதுறை அகன்கழி இனமீன் மாந்தி ஓங்கிருங் 2குனிகோட் டிருஞ்சினை உறையும் தண்டுறை வெஞ்செலல் மான்றேர்ச் சேர்ப்பன் பகல்கழீஇ எவ்வம் தீரக் கங்குல் யாமத்து வந்துநின் றனனே. இது முதல் இரு சீர்க்கண்ணும் மறு தலைப்படத் தொடுத் தமையால், இணைமுரண். (நேரிசை வெண்பா) பிரிந்துறை வாழ்க்கையை யாமும் பிரிதும் இருந்தெய்க்கும் நெஞ்சே ! புகழும் - பொருந்தும் பெரும்பணைத் தோளி குணனும் மடனும் அருஞ்சுரத் துள்ளும் வரும். இது கடை இரு சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால், இணை இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) 3உலாஅ அலாஅ தொருவழிப் படாஅ 4எலாஅ ! எலாஅ! என்றிது வினவவும் வெரீஇ வெரீஇ வந்தீ 5ஒரீஇ ஒரீஇ ஊரலர் எழவே. இது முதல் இரு சீர்க்கண்ணும் அளபெடுத்தமையால், இணை அளபெடை. அஃதே எனின், இணை முதலாகிய தொடை விகற் பங்கட்கு இலக்கியம் ஈண்டன்றே காட்டற்பாலது? மேற் காட்டியது என்னை? எனின், ஏழு விகற்பமும் முறையானே ஒரு செய்யுளுள்ளே வந்தது கண்டு கற்பார்க்கு எளிமை நோக்கித் தத்தம் தொடைகளோடும் இயையக் காட்டிய தல்லது, இலக்கண முறைமையாவது ஈண்டுக் காட்டுவது எனக் கொள்க. பொழிப்புத் தொடை. 43. முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே. என்பது என் நுதலிற்றோ? எனின், பொழிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால், பொழிப்புத்தொடை எனப்படும் என்றவாறு. அவை பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை, பொழிப்பு முரண், பொழிப்பு இயைபு, பொழிப்பு அளபெடை எனப்படும். சீரிடை விட்டினி தியாப்பது பொழிப்பாம் எனவும், ஒருசீர் இடைவிடிற் பொழிப்பொரூஉ இருசீர் எனவும் பிறரும் சொன்னார் ஆகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக் 1கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த கண்போல் நெய்தல் கமழும் ஆங்கட் 2கலிமாப் பூண்ட கடுந்தேர் 3கவ்வைசெய் தன்றாற் 4கங்குல் வந்தே இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் முதலெழுத்து ஒன்றி வந்தமையால், பொழிப்பு மோனை. (நேரிசை யாசிரியப்பா) பல்கால் வந்து மெல்லக் கூறிச் சொல்லல் வன்மையின் *இல்லவை உணர்த்தும் செல்புனல் 1உடுத்த பல்பூங் கழனி நல்வயல் ஊரன் வல்லன் *ஒல்கா துணர்த்தும் பல்குறை மொழியே இது முதற்சீர்க் கண்ணும், மூன்றாஞ்சீர்க் கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றிவந்தமையால், பொழிப்பு எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை நல்லன் என்றும் யாமே; தீயன் என்னுமென் தடமென் றோளே - யா. வி. 38. மேற். இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், பொழிப்பு முரண். (நேரிசை ஆசிரியப்பா) பெருங்கண் கயலே ; 2சீறியாழ் சொல்லே ; 3முருந்தம் பல்லே ; புருவம் வில்லே; மயிலே மற்றிவள் இயலே; 4தண்கதுப் பறலே: திங்களும் நுதலே இது கடைச்சீர்க் கண்ணும் இரண்டாஞ்சீர்க் கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், பொழிப்பு இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) சுறாஅக் 5கொட்கும் அறாஅ இருங்கழிக் 6கராஅம் கலித்தலின் விராஅல் மீனினம் படாஅ என்னையர் வலையேஎ கெடாஅ நாமிவை விடாஅம் விலைக்கே இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையாற் பொழிப்பு அளபெடை. (கக) ஒரூஉத் தொடை. 44. சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், ஒரூஉத்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நடு இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் நாலாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும் என்றவாறு. அவை ஒரூஉ மோனை, ஒரூஉஎதுகை, ஒரூஉமுரண், ஒரூஉ இயைபு ஒரூஉ அளபெடை என வழங்கப்படும். சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉ என்றாலும் அதிகார வசத்தால் அப்பொருளைப் பயக்கும்; இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப - தொல். செய். 98. என்றார் தொல்காப்பியனார் ஆகலானும். சீரிரண் டிடைவிடின் ஒரூஉவென மொழிப என்றார் பல்காயனார் ஆகலானும் ; பெயர்த்தும் தொடை என்று சொல்ல வேண்டியது என்னை? எனின், தொடை விகற்பம் எல்லாம் நாற்சீர் அடியுள்ளே வழங்கப்படும் என்பது எல்லா ஆசிரியர்க்கும் துணிபென்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) புயல்வீற் றிருந்த 1காமர் புறவிற் 2புல்லார் இனநிரை ஏறொடு புகலப் புன்கண் மாலை உலகுகண் 3புதைப்பப் புரிவளைப் பணைத்தோட் குறுமகள் புலம்புகொண் டனளாம் நம்வயிற் புலந்தே இஃது இடை இருசீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ மோனை. (நேரிசை ஆசிரியப்பா) 4பரியல் யாவதும் பைந்தொடி அரிவை! 5பொரியரை மராஅத்து 6வாலிணர்ச் சுரிமலர் எரியிணர்க் காந்தளோ 7டெல்லுற விரியும் வரிவண் டார்க்கும் நாடன் பிரியா னாதல் பேணின்மற் றரிதே இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) குறுங்கால் 1ஞாழல் கொங்குசேர் நெடுஞ்சினை ஓங்குதிரை உதைப்ப மருங்கிற் றாழ்ந்த தண்ணந் துறைவன் பின்னிலை வெம்படர் பரிந்து நாம் களையா மாயிற் பரியான் பெருங்கடற் 2படப்பைநம் சிறுகுடிப் பொங்குதிரைப்3 பெண்ணை மடலொடு வருமே இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், ஒரூஉ முரண். (நிலைமண்டில ஆசிரியப்பா) பல்லே முத்தம் ; புருவம் வில்லே; சொல்லே அமுதம் ; அணங்கவள் நுதலே; இயலே எண்ணினும் தெரியினும் மயிலே; கயலே கண்ணும் ; நற் கூந்தலும் அறலே இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் ஈற்று எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) வழாஅ *நெஞ்சிற்றந் தெய்வந் தொழாஅ செறாஅச் செய்தியின் யாங்கணும் பெறாஅ தேஎம் பல்பகல் ஒரீஇத் தாஅம் செய்வதே செய்வ *மனாஅ இது முதற்சீர்க்கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் அளபெழுந்து வரத் தொடுத்தமையால், ஒரூஉ அளபெடை. ஒரூஉத்தொடை, இருசீர் இடைவிடில் என்மனார் புலவர் என்றார் அவிநயனார். (கஉ) கூழைத் தொடை 45. மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது கூழை என்மனார் குறியுணர்ந் தோரே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், கூழைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பின், அவற்றைக் கூழை மோனை, கூழை எதுகை, கூழை முரண், கூழை இயைபு, கூழை அளபெடை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பிறரும், மூன்றுவரிற் கூழை; நான்குவரின் முற்றே என்றார் ஆகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) அருவி 1அரற்றும் அணிதிகழ் சிலம்பின் அரக்கின் அன்ன அவிழ்மலர்க் காந்தள் அஞ்சிறை அணிவண் டரற்றும் நாடன் 2அவ்வளை அமைத்தோள் அழிய அகன்றனன் அல்லனோ அளியன் எம்மே இது முதல் மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கூழை மோனை. (நேரிசை ஆசிரியப்பா) பொன்னின் அன்ன புன்னை நுண்டா தன்ன மென்பெடை தன்னிறம் இழக்கும் பன்மீன்3 முன்றுறைத் தொன்னீர்ச் சேர்ப்பன் பின்னிலை 4என்வயின் நின்றனன் என்னோ நன்னுதல் ! நின்வயிற் குறிப்பே? இது கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கூழை எதுகை. (நிலை மண்டில ஆசிரியப்பா) கரிய வெளிய செய்ய கானவர் பெரிய சிறிய 5இட்டிய பிறழ்ந்த நெடிய குறிய 6நிகரில் நீலம் படிய பாவை மாயோள் உண்கண் கடிய கொடிய தன்மையும் உளவே இது முதல் மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், கூழை முரண். (நேரிசை வெண்பா) நின்றழல் செந்தீயும் தண்புனலும் இவ்விரண்டும் மின்கலி வானம் பயந்தாங்கும் - என்றும் பெருந்தோளி கண்ணும் இலங்கும் எயிறும் மருந்தும் பிணியும் தரும் இது கடைமூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால், கூழை இயைபு. (நிலைமண்டில ஆசிரியப்பா) விடாஅ விடாஅ வெரீஇப் பெயரும் தொடாஅத் தொடாஅத் தொடாஅப் பகழியாய்ப் பெறாஅப் பெறாஅப் பெறாஅப் பெயரெனச் செறாஅச் செறாஅச் செறாஅ நிலையே இது முதல் மூன்று சீர்க்கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், கூழை அளபெடை. (கங) மேற்கதுவாய்த் தொடை சசா. முதலயற் சீரொழித் தல்லன மூன்றின் மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே. “v‹gJ v‹ Ejȉnwh? எனின், மேற்கதுவாய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்). இரண்டாம் சீர்க்கண் இன்றி, அல்லாத மூன்று சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால், அவை மேற்கதுவாய் மோனை, மேற்கதுவாய் எதுகை, மேற்கதுவாய் முரண், மேற்கதுவாய் இயைபு, மேற்கதுவாய் அளபெடை என்று வழங்கப்படும் என்றவாறு. அவை வருமாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) 1கணைக்கால் நெய்தல் கண்போல் கடிமலர்க் கருங்கால் ஞாழலொடு கவின்பெறக் கட்டிக் கமழ்தார் மார்பன் கவளம் கடிப்பக் கங்குல் வந்த 1கறங்குமணிக் 2கலிமா கடல்கெழு3 பாக்கம் கல்லெனக் கடுப்பக் கங்குல்வந் தன்றாற் கதழ்பரி கலந்தே இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் மோனை. (நேரிசை ஆசிரியப்பா) 4கண்டலங் 5கைதையொடு விண்டன 6முண்டகம் தண்டா நாற்றம் வண்டுவந் துண்டலின் நுண்டா துறைக்கும் வண்டலந் தண்டுறை *கண்டனம் வருதல் விண்டன *தெண்கடற் சேர்ப்பனைக் கண்டவெம் கண்ணே இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையால், மேற்கதுவாய் எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) வெளியவும் வெற்பிடைக் கரியவும் செய்யவும் ஒளியுடைச் சாரல் இருளவும் வெயிலவும் பரியவும் பன்மணி சிறியவும் நிகரவும் முத்தொடு செம்பொனும் விரைஇச் சிற்றிலும் எங்கள் பேரிலும் நடுவே இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், மேற் கதுவாய் முரண். (இன்னிசை வெண்பா) இருங்கண் விசும்பின்கண் *மான்ற முகங்கான் கருங்கண் முலையின்கண் வேங்கை மலர்காண் குறுந்தண் சுனைக்கண் மலர்ந்த உவக்காண் நறுந்தண் கதுப்பினாள் கண் இஃது 1இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் இயைபு. (நிலைமண்டில ஆசிரியப்பா) கூஉம் புடைக்கலம் சுறாஅ* அறாஅ வறாஅ இடைக்கழி கராஅம் உராஅம் *ஏஎம் எமக்கள மாஅல் ! எனாஅத் தாஅம் சொல்லவும் பெறாஅர் இதோஒ இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் அளபெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் அளபெடை. (கச) கீழ்க்கதுவாய்த் தொடை சஎ. ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது கீழ்க்கது வாயின் கிழமைய தாகும். என்பது என் நுதலிற்றோ? எனின், கீழ்க்கதுவாய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, முதல இருசீர்க்கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுத் தால், அவை கீழ்க்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் இயைபு, கீர்க்கதுவாய் அளபெடை எனப்படும் என்றவாறு. கீழ்க்கது வாயின் கிழமைய தாகும், என்பது, கீழ்க் கதுவாய் என்னும் பெயரினை உரிமையாக உடைத்தாம், என்றவாறு. முடிவதன் முதலயல் கதுவாய் கீழ்மேல் என்றார் பிறரும்,. அவை வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) *குழலிசைக் குரல தும்பி குறைத்த குண்டுசுனைக் குற்ற மாயிதழ்க் குவளை குலைவேற் குறவன் பாசிலைக் குளவியொடு *குறிநெறிக் குரல்வகுத் தடைச்சிய குறிஞ்சிசூழ் குவட்டிடைச் செய்தநம் குறியே இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் மோனை. (நேரிசை வெண்பா) அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்பக் கடுந்தேர் நெடும்பகற் றோன்றும் - கொடுங்குழாய்! பாடுவண் டாடும் பனிமலர் நீடுறை நாடுவாம் கூடும் பொழுது இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) விரிந்தும் சுருங்கியும் வில்லென ஓசிந்தும் குவிந்தும் மலர்ந்தும் குலையுறக் குலாவியும் பெருகியும் சிறுகியும் *பின்னெறி நின்றும் *இருந்தோள் உண்கண் மலர்ந்தும் பொருந்தா பொருந்திய புருவம்புடை பெயர்ந்தே எனவும், கருங்கண் வெள்வளை வார்குழைச் சேயிழை இரும்பும் பொன்னும் இயல்காழ் மணியும் எனவும் இவை மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறு தலைப்படத் தொடுத்தமையால், கீழ்க்கது வாய் முரண். (தரவு கொச்சகம்) அன்னையும் என்னையும் தன்னில் கடியும் பன்னாளும் பாக்கமும் ஓவா தலர் தூற்றும் பூக்கமழும் மெல்லம் புலம்பன் பிரியினும் இன்னுயிர்யாம் இன்னும் இறந்தி ரேமுளேம் இது 1மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க் கதுவாய் இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) ஆஅம் பூஉ மணிமலர் தொடாஅ யாஅம் தேஎம் தண்புனம் தழாஅம் நாஅம் குறியிடை நண்ணும் தேஎ மாஅம் பொருப்பிடை எனாஅ இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் அளபெழுந்தமையால், கீழ்க்கதுவாய் அளபெடை. அஃதே எனின், ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது கீழ்க்கதுவாய் ஆகும் என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும். கிழமைய தாகும், என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் இரண்டாஞ் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்துவாய் என்றும் மூன்றாஞ் சீர்க்கண் இல்லாததனை மேற்கதுவாய் என்றும் வழங்குவர் என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க. (கரு) முற்றுத் தொடை 48. சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே. என்பது என் நுதலிற்றோ? எனின், முற்றுத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தவை முற்று மோனை, முற்று எதுகை, முற்று முரண், முற்று இயைபு, முற்று அளபெடை என்று சிறப்பித்துச் சொல்லப்படும் என்றவாறு. சீர்தொறும் தொடுப்பது முற்று, என்னாது, முற்றெனப் படுமே என்று சிறப்பித்தது, கரியவும் வெளியவும் செய்யவும் பசியவும் என்றாற்போல முற்றும் முரணாது, முதலிரு சீரும் முரணிப் பின்னைக் கடை இரு சீரும் மற்றொருவாற்றான் முரணினும் முற்று முரணேயாம் என்றற்கும், இணை முதலாகிய விகற்பமும், கடையிணை முதலாகிய விகற்பமும் அடிதோறும் வருவது சிறப்புடைத்து, ஓரடியுள்ளும் வரப்பெறுமாயினும் என்றற்கும் எனக் கொள்க. விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் என்ப ஆகலின். மூன்றுவரிற் கூழை; நான்குவரின் முற்றே என்றார் பிறரும் எனக் கொள்க. அவை வருமாறு : (நேரிசை ஆசிரியப்பா) அணியிழை அமைத்தோள் அம்பசப் படைய அரிமதர் அலர்க்கண் அரும்பனி அரும்ப அரும்பொருட் ககன்ற அறவோர் அருளிலர் அற்பின் அழியுமென் அறிவே இஃது எல்லாச்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், முற்று மோனை. (நேரிசை வெண்பா) கல்லிவர் முல்லையும் மெல்லியலார் பல்லரும்பும் *புல்லார்ந்து கொல்லேறு நல்லானைப் - புல்லின பல்கதிரோன் எல்லைக்கட் செல்லுமா றில்லைகொல் *சொல்லியலார் சொல்லிய சொல்? இது சீர்தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால், முற்று எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) நெடுந்தோட் குறுந்தொடி வீங்கு பிணி நெகிழ அரும்பொருள் எளிதெனச் சென்றவர் வருதல் சேய்த்தன் றணித்தெனத் தேற்றவும் தேறாய் அகஞ்சுடப் புறஞ்செவி நிறுத்தனை கிடத்தல் சின்மொழிப் பல்லிருங் கூந்தல் பெருந்தகு சீறடி நன்னுதல் ! தீதே இஃது எல்லாச்சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், முற்று முரண். (இன்னிசை வெண்பா) கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும் ; பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும் முல்லையும் யாழும் இகும் இஃது எல்லாச்சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால் முற்று இயைபு. (நேரிசை ஆசிரியப்பா) குராஅம் விராஅம் பராஅம் உராஅம் தொழாஅள் எழாஅள் விடாஅள் தொடாஅள் இதோஒ இதோஒ என்மகள் எலாஅ! எலாஅ! யாங்குற் றனளே? இது சீர்தோறும் அளபெழுந்தமையால் முற்று அளபெடை. பிறவும் அன்ன. அவைதாம், முதலோ டயல்கொள்வ திணை; அயல் இன்றி மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட் டிறுதியொடு கொள்வ தொரூஉ ; இறுதிச் சீரொழித் தேனைய தொன்றிற் கூழை; முதலீ றடைந்தவற் றின்மை இருவகைக் கதுவாய் ; முற்றும் நிகழ்வது முற்றே; முதலொடெட் டாகும் என்மனார் புலவர் என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர். என்னை? செந்தொடை இயைபிவை அல்லா 1நான்கும் முதற்சீர் அடியால் விகற்பம் கொள்ப (பரிமாணனார்) என்றார் ஆகலின். (கட்டளைக் கலித்துறை) இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீர் இடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீர் அயலில மேல்கீழ் வகுத்த1மை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே - யா. கா. 19. மோனை விகற்பம் அணிமலர் மொய்த்துட னாமியைபிற் கேனை எதுகைக் கினம்பொன்னின் அன்ன இனிமுரணிற் கான விகற்பமும் சீறடிப் பேர தளபெடையின் தான விகற்பமும் தாட்டமா மரையென்ப தாழ்குழலே! - யா. கா. 20 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (கசா) செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை சகூ. செந்தொடை இரட்டையொ டந்தாதி எனவும் வந்த வகையான் வழங்குமன் பெயரே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், இன்னும் சில தொடைகளது பெயர் வேறுபாடு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்; அவற்றுள் இச்சூத்திரம் செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித் தொடையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித் தொடையும் என்று பெயரிட்டு வழங்கப்படும். மற்றொழிந்த தொடைகளும், வரலாற்று முறைமையானே பெயரிட்டு வழங்கப்படும் என்றவாறு. செந்தொடையும், இரட்டைத்தொடையும், அந்தாதித் தொடையும் ஆமாறு போக்கிக் கூறுப. எனவும், வந்த வகையான் வழங்குமன் பெயரே என்றதனால், தொடையெல்லாம் ஆராய்ந்து விகற்பித்துக் 2காணிய புகின், பல்கும் ; சொல்லி 3உலப்பிக்கலாகா, அவற்றை வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்கிப் 4போக்கின் அல்லது, என்பது சொல்லப்பட்டதாயிற்று. அவைதாம் பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண் ணூற்றொன்பது 5என்பாரும், 6வரம்பில் என்பாரும் என இரு திறத்தர் ஆசிரியர். என்னை? முந்திய மோனை எதுகை அளபெடை அந்தமில் முரணே செந்தொடை இயைபே பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும் இயற்படு தொடைகள் இவைமுத லாகப் பதின்மூ வாயிரத் தறுநூ றன்றியும் தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர் வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெல்லொற்றுத் தொடர்ச்சியும் இடையொற்றுத் தொடர்ச்சியும் முறைபிறழ்ந் தியலும் என்றார் சங்கயாப்பு உடையார். மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை இட்ட பத்துக்குறை எழுநூற் *றொன்றும் என்ப உணர்ந்திசி னோரே - தொல். செய். 97. என்றார் தொல்காப்பியனார். மோனை எதுகை முரணே அளபெடை ஏனைச் செந்தொடை இயைபே பொழிப்பே ஒரூஉவே இரட்டை ஒன்பதும் பிறவும் வருவன விரிப்பின் வரம்பில என்ப என்றார் பல்காயனார். பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது தொடை ஆமாறும், அவற்றுள் மிக்கு வருமாறும் 1உபதேச முறையான் உறழ்ந்து கொள்க. உபதேச முறைமையால் உறழுமாறு: நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி விரிந்த அறுநூற்று இருபத்தைந் தடியும், அவற்று ஒரோ அடி இருபத்திரண்டு தொடையும் பெறப்பதின் மூவாயிரத்து எழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப் பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது தொடையாம். அடியிரண்டு இயைந்த வழித் தொடையாம் என்ப வாகலின், ஐம்பத்தொரு நிலமும் களையப்பட்டன. என்னை? (நேரிசை வெண்பா) 1ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான் மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் - தேறும் ஒருபதின்மூ வாயிரத்தோ டொன்றூன மாகி வருமெழுநூ றென்னும் வகை அறுநூற்று இருபத்தைந்து அடியாவன; ஆசிரிய அடி இருநூற்று அறுபத்தொன்றும், வெண்பா அடி இருநூற்று முப்பத்திரண்டும், கலியடி நூற்றுமுப்பத்திரண்டும் என இவை. என்னை? (நேரிசை வெண்பா) இருநூற் றிருமுப்பத் தொன்றகவற் கேனை இருநூற்றோ டெண்ணான்கு வெள்ளைக் - கொருநூற்று முப்பத் திரண்டாம் 2முரற்கைக் கிவையறு நூற் றற்றமில் ஐயைந் தடி. இருபத்திரண்டு தொடையாவன; (நேரிசை வெண்பா) மோனை இரண்டாம்; எதுகையோர் எட்டாகும்; ஏனை முரணைந் தியைபொன்றாம்; - ஏனைப் பொழிப்பாதி ஐந்தும் குறிப்புத் தொடையோ டிழுக்கா இருபத் திரண்டு என இவை. மோனை இரண்டாவன : அடிமோனையும் கிளைமோனையும் என இவை. எதுகை எட்டாவன : இரண்டாம் எழுத்து ஒன்றியதூஉம், மூன்றாம் எழுத்து ஒன்றியதூஉம், சீர்முழுதும் ஒன்றியதூஉம், கிளை எதுகையும், வன்பால் எதுகையும், மென்பால் எதுகையும் இடைப்பால் எதுகையும், உயிர்ப்பால் எதுகையும் என இவை. முரண் ஐந்தாவன: சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொரு ளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லினோடும் பொருளினொடும் முரணுதலும் இவை. இயைபுத் தொடை, கிளை இன்மையின் ஒன்றே. பொழிப்பாதி ஐந்தாவன : பொழிப்பும், ஒரூஉம், செந் தொடையும், இரட்டைத் தொடையும், நிரனிறையும் என இவை. குறிப்புத் தொடையாவது, எழுத்து அல்லாது மொழிக் குறிப்பு ஓசை. அது மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படும் என்று வேண்டினமையான், அதனானும் தொடை கொள்ளப் படும். இருபத்திரண்டு தொடையாவன: (குறள் வெண்பா) அடிமோனை ஏனைக் கிளைமோனை என்று முடியுமாம் மோனைப் பெயர் (மோனை,2) (நேரிசை வெண்பா) இரண்டாம் எழுத்தொன்றல் மூன்றாவ தொன்றால் திரண்டமைந்த சீர்முழுதும் - ஒன்றல் - முரண்டீர் கிளைவன்பால் மென்பால் இடைப்பால் உயிர்ப்பால் விளையும் எதுகையோர் எட்டு (எதுகை, 8) மொழியும் மொழியும் பொருளும் பொருளும் மொழியும் பொருளும் மொழியோ - டழியாத சொல்லும் பொருளும் பொருளொடு சொற்பொருளும் சொல்லும் பொருளுமோர் ஐந்து (முரண், 5) பொழிப்பொரூஉச் செந்தொடை பொய்தீர் இரட்டை அழிப்பில் நிரனிறையோ டைந்தும்- எழுத்தல் குறிப்புத் தொடையியைபும் கொண்டுரைப்பார்க் கல்லால் நெறிப்படுமோ *நூலின் நிலை? (பிற தொடை,7) ஐம்பத்தொரு நிலமாவன : (நேரிசை வெண்பா) வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர் ஒருவா நிலமைம்பத் தொன்று (நிலம், 51) இவற்றால் அடியும், தொடையும், நிலமும் ஆமாறு உரைத்துக் கொள்க. வரம்பில என்பார் கருத்து, ஈண்டு உரைத்த பாவும் தொடையும் பிறவாற்றாற் பெருகி வரும் என்பதும், இவ் வாற்றானும் பிறவாற்றானும் உறழப் பெருகும் என்பதும். அவை போக்கி, நிரனிறை முதலிய பொருள்கோட் பகுதியும் - யா. வி. 95. என்னும் சூத்திரத்துட் கூறுப. (நேரிசை வெண்பா) இணைகூழை முற்றோ டிருகதுவா யுள்ளிட் டணையும் தொடையனைத்தும் கூட்டிக் - கணிதநூல் வல்லார் தொடைப்பெருமை நோக்கி வரம்பின்மை *சொல்லார் ; மற் றஃதன்றோ தோம்? (கஎ) செந்தொடை Uo. செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும். ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே செந்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) செந்தொடை என்பது, மேற் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமை, வேறுபடத் தொடுப்பது என்றவாறு. ஒன்றிய தொடையொடும் விகற்பந் தம்மொடும் ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே என்றார் சிறுகாக்கைபாடினியார். சொல்லிய தொடையொடு வேறுபட் டியலின், சொல்லியற் புலவரது செந்தொடை என்ப - தொல். செய். 96. என்றார் தொல்காப்பியனார். செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும் என்பது : நேரசைக்கு நிரையசை வந்தும், நிரையசைக்கு நேரசை வந்தும், நேரசைக்கு நேரசையேவரினும் நான்கு நேரசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், நிரையசைக்கு நிரையசையே வரினும் நான்கு நிரையசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், இயற்சீருக்கு உரிச்சீரே வந்தும், உரிச்சீருக்கு இயற்சீரே வந்தும், இயற்சீருக்கு இயற்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், உரிச்சீருக்கு உரிச்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், ஓரடி ஒரு வண்ணத்தால் வந்து மற்றையடி மற்றொரு வண்ணத்தால் வந்தும், அசை சீர் இசை என்னும் மூன்றும் ஒவ்வாது வந்தும், 1அனுவும் இனமும் இன்றி முரணாக் கிடப்பது செந்தொடை என்றவாறு. என்னை? அசையினும் சீரினும் இசையினும் எல்லாம் இசையா தாவது செந்தொடை தானே - யா. கா. 17. மேற். என்றார் *பல்காயனார். ஒன்றா தாவது செந்தோடைக் கியல்பே என்றார் நற்றத்தனார். 2செம்பகை யல்லா மரபினதாம் தம்முள் ஒன்றா நிலையது செந்தொடை யாகும் என்றார் காக்கைபாடினியார். மாறல தொவ்வா மரபின செந்தொடை என்றார் அவிநயனார். அவற்றை அசை விரளச் செந்தொடை, சீர் விரளச் செந்தொடை, இசை விரளச் செந்தொடை, முழு விரளச் செந்தொடை எனப் பெயரிட்டு வழங்குவாரும் உளரெனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே - தமிழ்நெறி விளக்கம் 17. - தொல். செய். 100பேரா. - யா. கா. 18. மேற் எனவும், (நேரிசை ஆசிரியப்பா) இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத் தினமீன் வேட்டுவர் ஞாழலொடு *மலையும் மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன தோளே; 5. சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரைப் பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த கானலம் பெருந்துறை நோக்கி இவளே கொய்சுவற் புரவிக் கைவண் கோமான் நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன 10. அம்மா மேனி தொன்னலம் சிதையத் துஞ்சாக் கண்ணள் அலமரும் ; நீயே கடவுள் மராத்த முண்மிடை குடம்பைச் சேவலொடு வதியும் சிறுகரும் பேடை இன்னா துயவும் கங்குலம் 15. நும்மூர் உள்ளுவை ; நோகோ யானே - அகநானூறு 270 எனவும் செந்தொடை வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (கஅ) இரட்டைத் தொடை ருக. இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், இரட்டைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஓர் அடி முடியும் அளவும் ஒரு சீரே நடப்பது இரட்டைத் தொடை என்றவாறு. என்னை? முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும் என்றார் பல்காயனார். சீர்முழு தொன்றின் இரட்டை யாகும் என்றார் நற்றத்தனார். ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை என்றார் அவிநயனார். ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை என்றார் மயேச்சுரர். அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை என்றார் பரிமாணனார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் *சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம் - தொல். செய். 91. பேரா. இளம். - யா. வி. 53 மேற். - யா. கா. 18 மேற். எனவும், (இன்னிசை வெண்பா) பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார் கோவீற் றிருந்தான் *குடை. - நேமிநாதம் 74 மேற். - தொல். செய். 91. மேற். பேரா. இளம். எனவும், (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும் மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார் - நீலகேசி. 51. மேற். எனவும் இரட்டைத் தொடை ஆமாறு கண்டு கொள்க. இரட்டை, அடி முழுதும் ஒரு சீர்த்து, என்னாது, ஒருசீர் இயற்றே என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? (குறள் வெண்பா) 1குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு - யா. வி. 2. மேற். எனவும், 2குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - திருக்குறள் 785 எனவும், (நேரிசை ஆசிரியப்பா) 3மாயோன் மார்பில் ஆரம் போலச் சேயுயர் நெடுவரைப் பெருந்தேன் ஒழுகு சாரல் நாடன் நம்மோ டொருசிறை சாரிற் சாரா நோயே சாரா னாயின் நோய்தணி வின்றே எனவும் இவ்வாறு சொல் வேறுபட்டு அடிமுழுதும் அலகிடுகையான் ஒரு சீரான் வரின் ஆகாது; சொல் வேறுபடாது, பொருள் பிறிதாகியும் ஆகாதும் வருவதே கொள்ளப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. (பஃறொடை வெண்பா) 1ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் 2கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்! நாடி உணர்வார்ப் பெறின் இது பொருள் வேறாய் ஒரு சொல்லே வந்த இரட்டைத் தொடை. இயற்று, என்னாது, இயற்றே என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஓரடி முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வந்தால், அதனை இரு முற்று இரட்டை என்பர்; நிரனிறையினையும் இரட்டைத் தொடைப்பாற்படுத்து வழங்குவர் ஒரு சார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. வரலாறு : (நேரிசை ஆசிரியப்பா) அடியியற் கொடியன மடிபுனம் விடியல் மந்தி தந்த முந்து செந்தினை உறு3 பார்ப் பருத்தும் நாடனொடு சிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே. இஃது இருமுற்று இரட்டை. நிரல்நிறுத் தமைத்தலும் இரட்டைத் தொடையும் மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப - தொல். செய்.90. என்னும் சூத்திரத்துக் காட்டிய நிரல்நிறைத் தொடைக்கு உதாரணம், (இன்னிசை வெண்பா) 1அடல்வேல் அமர்நோக்கி ! நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம் - யா. வி. 95. - தொல்.செய். 91. மேற். பேரா. இளம். என்பதும் கண்டுகொள்க. அவற்றுள் ஒரு பொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, ஒரு முற்று இரட்டை, இரு முற்று இரட்டை என்று பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க. (ககூ) அந்தாதித் தொடை 52. ஈறு முதலாத் தொடுப்பதந் தாதியென் றோதினர் மாதோ உணாந்திசி னோரே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், அந்தாதித் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) எழுத்தும், அசையும், சீரும், அடியும் இறுவாய் 2எழுவாயாகத் தொடுப்பது அந்தாதித் தொடை, என்று மொழிந்தனர் புலவர் என்றவாறு. ஈறு முதலா எனவே, எழுத்தும், அசையும், சீரும், அடியும் இவற்றது முதலாகவே அடங்கும் எனக் கொள்க. என்னை? அடியும் சீரும் அசையும் எழுத்தும் முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ தந்தாதித் தொடையென் றறையல் வேண்டும் - யா. கா. 17. மேற். (நற்றத்தனார்) எனவும், அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை 3முந்தா இசைப்பினஃ தந்தாதித் தொடையே எனவும் பிறரும் கூறினார் ஆகலின்; பிறநூல் முடிந்தது தானுடம் படுதல் - நன்னூல். 14. என்னும் தந்திர உத்தியான், இவ்வாறு உரைக்கப்பட்டது எனினும் இழுக்காது. ஈறு முதலா என்றது, இறுதி முதலாக என்றவாறு. வரலாறு: (ஆசிரிய இணைக்குறட்டுறை) இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கம் அணிபொழில ஆடும்போலும் இளவேனில்! அரங்கம் அணிபொழில ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில் - யா. வி. 76. மேற். - யா.கா. 29. மேற். என்றாற்போலக் கொள்க. ஈறு முதலாத் தொடுப்பதந்தாதி என்ப உணர்ந்தி சினோரே, என்னாது ஓதினர் மாதோ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? இறுதியடியின் இறுதியும், முதலடியின் முதலும் ஒன்றாய் வருவனவற்றை மண்டல அந்தாதி என்றும், அவ்வாறு வாராதனவற்றைச் செந்நடை அந்தாதி என்றும், பல விரவி வருவனவற்றை மயக்கு அந்தாதி என்றும், எழுத்து அசை சீர்களால் இடையிட்டு வந்த அடியந்தாதியை இடையிட்ட அடியந்தாதி என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவர் கூறுமாறு : மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்தந்தாதி, மண்டல அசையந்தாதி, செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டல அடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடியந்தாதி, செந்நடை இடையிட்ட அடியந்தாதி எனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி விரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி திருந்திய சிந்தையைத் திறைகொண் டதுவே. இது மண்டல எழுத்தந்தாதி. (நிலைமண்டில ஆசிரியப்பா) பேதுற விகந்த பெருந்தண் காவிரி விரிதிரை தந்த வெறிகமழ் வாசம் சந்தனக் குழம்பு முலைமிசைத் தடவிய வியனறுங் கோதைக்கு மெல்லிதால் நுசுப்பே இது மண்டல 1அசையந்தாதி (நேரிசை ஆசிரியப்பா) முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம் நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர் எக்கர் இட்ட எறிமீன் உணங்கல் 5. உணங்கல் கவரும் *ஒய்தாள் அன்னம் அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர் மகளிர் கொய்த மயங்கு கொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை தாழை அயலது வீழ்குலைக் கண்டல் கண்டல் அயலது முண்டகக் கானல் கானல் அயலது காமரு நெடுங்கழி நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம் பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் 15. இடவ குடவ தடவ ஞாழலும் இணர துணர்புணர் புன்னையும் கண்டலும் கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித் தீரா *நோயினள் நடுங்கி வாராள் அம்ம வருதுயர் பெரிதே! இத்தொடக்கத்தன செந்நடைச் சீரந்தாதி. (நேரிசை ஆசிரியப்பா) உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி (அசை) மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை (சீர்) முக்குடை நீழற் பொற்புடை ஆசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் (அடி) ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவும் புரிந்து துன்னிய மாந்தரஃ தென்ப (எழுத்து) பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே - திருப்பாமாலை. - யா. கா. 18. மேற். - தொல். செய். 98. இளம். மேற். இது1 மண்டல மயக்கந்தாதி. (நேரிசை ஆசிரியப்பா) பொன்னலர் துதைந்த பொரிதாள் வேங்கை (சீர்) வேங்கை ஓங்கிய வியன்பெருங் குன்றம் குன்றத் தயலது கொடிச்சியர் கொய்புனம் (அசை) புனத்தயற் சென்ற சிலம்பன் சிலம்படி மாதர்க்கு நிறைதோற் றனனே இது சீரந்தாதியும் அசையந்தாதியும் வந்த செந்நடை மயக்கந்தாதி. (நிலைமண்டில ஆசிரியப்பா) வேத முதல்வ ! ஏதமில் அகணித ! தத்துவர் தலைவ ! முத்தி முதல்வ ! வழுவா ஞானக் குழுவுடன் வந்தது துனனாப் பாவ மன்னரை அவித்த தரும நேமிப் பரமனென வியந்து துன்னின ராகி மின்னென மிளிர்ந்த தகைமுடி சாய்த்துச் சத்துவர் வணங்குவ வகை முடி *வில்லினை வாடுக எனவே - திருப்பாமாலை. இஃது 2அசையந்தாதியும் எழுத்தந்தாதியும் மயங்கி வந்த மண்டல மயக்கந்தாதி. இதனை எழுத்தந்தாதி என்று வேண்டு வாரும் உளர். (கலி விருத்தம்) ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய 3சேதியஞ் செல்வ! நின் றிருவடி பரவுதும் - சூளாமணி 214 இஃது அடியந்தாதி. 4இரங்கு குயில்முழவா என்னும் பாட்டினுள் இடையிட்ட அடியந்தாதி வந்தது. (தரவு கொச்சகம்) கழிமலர்ந்த காவிக் களிவண்டு பாடக் குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளும்; குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளப் பொழில்மலர்ப்பூம் புன்னையின் நுண்டாது சிந்தும் இதுவும் இடையிட்ட அடியந்தாதி. பன்மணி மாலையும், மும்மணிக் கோவையும், 1உதயணன் கதையும், தேசிகமாலையும் முதலா உடைய தொடர்நிலைச் செய்யுள்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க. செந்நடை எழுத்தந்தாதியும், செந்நடை அசையந்தாதியும், மண்டலச் சீரந்தாதியும், மண்டல இடையிட்ட அடியந்தாதியும், செந்நடை இடையிட்ட அடியந்தாதியும் வந்தவழிக் கண்டு கொள்க. மோனையாய் வந்தன மோனையந்தாதி, எதுகையாய் வந்தன எதுகை யந்தாதி, முரணாய் வந்தன முரணந்தாதி, இயைபாய் வந்தன இயைபந்தாதி, அளபெடையாய் வந்தன அளபெடையந்தாதி என இவ்வாற்றால் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்கப்படும். வரலாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடு வருமே மேருவரை அன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே - யா. வி. 96. மேள். இது மோனையந்தாதி. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (கட்டளைக் கலித்துறை) அந்தம் முதலாத் தொடுப்பதந்த தாதி ; அடிமுழுதும் வந்த மொழியே வருவ திரட்டை ; வரன்முறையால் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால் செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழற் றேமொழியே! - யா. கா. 17. மாவும்புள் மோனை; இயைபின் னகை; வடியே ரெதுகைக் கேவில் முரணும் இருள்பரந் தீண்டள பாஅவளிய; ஓவிலந் தாதி உலகுட னாம் ; ஒக்கு மேயிரட்டை; பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் *பணிமொழியே! - யா. கா. 18. இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (20) ஒரு செய்யுட்கண் தொடை தளைகளிற் பல விரவி வரின் அவற்றை வழங்குமாறு ருகூ. தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும் முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே. ‘v‹gJ v‹ Ejȉnwh? எனின், ஒரு செய்யுட்கண் பல தொடையும் பலதளையும் வந்தால், அவற்றை வழங்கும் முறை உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஒரு செய்யுளகத்துத் தொடை பல தொடுத்து வந்தாலும், தளை பல விரவி வந்தாலும், அவற்றை முதல் வந்த தொடையாலும் முதல் வந்த தளையாலும் பெயர் கொடுத்து வழங்குக என்றவாறு. மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரால் இயங்கினும் தளைவகை இன்னணம் ஆகும் என்றார் அவிநயனார். பல்வகைத் தொடையொரு பாவினிற் றொடுப்பின், சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே என்றார் சிறுகாக்கைபாடினியார். தொடையடி யுட்பல வந்தால் எழுவாய் உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே என்றார் காக்கைபாடினியார். விகற்பம் கொள்ளா தோசைய தமைதியும் முதற்கண் அடிவயின் முடிவ தாகும் என்றார் பல்காயனார். முதற்சீர்த் தோற்றம் அல்ல தேனை விகற்பம் கொள்ளார் அடியிறந்து வரினே என்றார் நற்றத்தனார். அவை வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) தாமரை புரையும் காமர் சேவடிப் (பொழிப்பெதுகை) பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் (ஒரூஉ எதுகை) நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் (ஒரூஉ மோனை) சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே (பொழிப்பு மோனை) - குறுந்தொகை. கடவுள் வாழ்த்து. இதனுள் பொழிப்பெதுகையும், ஒரூஉ எதுகையும், ஒரூஉ மோனையும், பிறிதும் வந்தனவாயினும், முதல் வந்ததனானே பெயர் கொடுத்துப் பொழிப் பெதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும். (நிலைமண்டில ஆசிரியப்பா) வேரல் வேலி வேர்க்கோட் பலவின் (கூழை மோனை) (அடி எதுகை) சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி; யாரஃ தறிந்திசி னோரே? rhu‰ (x%c vJif) (ïiz Ku©) áWnfh£L¥ bgU«gH« ö§» ah§»tŸ (fil ïiz vJif) cÆ® jt¢ á¿J ; fhknkh bgÇnjh!”(ã‹ முரண்) - குறுந்தொகை 18. இதனுள் அடி எதுகையும், கூழை மோனையும், ஒரூஉ எதுகையும், இணை முரணும், கடையிணை எதுகையும், பின் முரணும் வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும். (நேரிசை ஆசிரியப்பா) அடி கடிமலர் புரையும் காமர் சேவடி (பொழிப்பு மோனை) (எதுகை) கொடிபுரை நுசுப்பிற் பணைத்தேந் திளமுலை அடி வளையொடு கெழீஇய வாங்கமை நெடுந்தோள் (பொ. மோ) (மோனை) வளர்மதி புரையும் திருநுதல் அரிவை அடி சேயரி நாட்டமும் அன்றிக் (முரண்) கருநெடுங் கூழையும் உடையவால் அணங்கே இதனுள் எதுகையும், மோனையும், முரணும் முறையே வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும். (நேரிசை ஆசிரியப்பா) பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் (பொ. முரண்) பண்டைச் செய்தி இன்றிவண் வரவும் ,, (அடி. மோ.) பகற்பின் முட்டா திரவினது வரவும் ,, பசியும் ஆர்கையும் வரவும் பரியினும் போகா துவப்பினும் வருமே - யா. வி. 49. மேற். இதனுள் மோனையும், 1இயைபும், முரணும் வந்தனவாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து அடிமோனைச் செய்யுள் என்று வழங்கப்படும் பிற, எனின், அற்றன்று; முறையானே வேறு வேறு தொடைகள் பெற்று வாராது. பலவாய் வந்து, இறுவாய் ஒத்தமையின், மயக்கு இயைபு எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) *ஓங்குவரை அமன்ற வேங்கை நறு மலரும் ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும் பழனத் தாமரை எழினிற மலரும் இல்லயற் புறவின் முல்லைவெண் மலரும் உராஅம் கடற்றிரை விராஅ மலரும் வேறுபட மிலைச்சிய நாறிருங் குஞ்சி ஏந்தல் பொய்க்குவன் எனவும் பூந்தண் *உண்கண் புலம்பா னாவே - யா. வி. 40. மேற். இதுவும் 2மயக்கு இயைபுத்தொடை என்று வழங்கப்படும். மயக்கு அளபெடைத் தொடையும் வந்தவழிக் கண்டுகொள்க. (கட்டளைக் கலித்துறை) காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே - யா. வி. 94. மேற். இதனுள் எதுகையும் அதற்கேற்ற மோனையும் வந்தனவாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, ஆசிடை எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும். இனித் தளைக்குச் சொல்லுமாறு: (நேரிசை ஆசிரியப்பா) நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப்1 பலவின் விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் 2கடுவன் உண்டுசிலம் 3பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப மடியாக் கொலைவில் என்னையார்4 மலையே - யா. கா. 38. மேற். இதனுள் வெண்டளையும், கலித்தளையும், வஞ்சித்தளையும் வந்தன எனினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, வெண்டளையால் வந்த ஆசிரியப்பா என்று வழங்கப்படும். (எண்சீர் ஆசிரிய விருத்தம்) கடுநாக மதனடக்கி நெடுநீர்ப் பொய்கைக் கடமலர்வேய்ந் துலகளவும் பரந்த கந்த நெடுமாலை நறுமுடிமேல் வைத்தி யேனும் *நின்னையெற் பொன்னயக்க நின்றார் எல்லாம் கொடுமாலை வினையரக்கர் குறும்பு சாயக் குளிரிளம்பூம் பிண்டிக்கீழ் அமர்ந்த கோமான் தடுமாற்றம் தலைப்பிரிக்கும் சரணம் அல்லால் தலைக்கணியாள் என்றுரைத்தல் தகவோ வாழி ! இதனுட் கலித்தளையும், ஆசிரியத்தளையும், வெண்டளையும் வந்தவாயினும், முதல் வந்த தளையாற் பெயர் கொடுத்து, கலித்தளையால் வந்த ஆசிரிய விருத்தம் என்று வழங்கப்படும். பிறவும் இவ்வாறே பெயர் கொடுத்து வழங்குக. தொடையும் தளையும் பலவிர விவரின் முதல்வந்த ததனால் மொழிந்திசிற் பெயரே என்றாலும் கருதிய பொருள் பயக்கும். தொடைபல தொடுப் பினும் தளைபல விரவினும் என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? விகற்பமும் இனமும் வாராமைத் தொடுத்த மோனை, எதுகை முரண், இயைபு, அளபெடைகளைச் செம்மோனை, செவ்வெதுகை, செம்முரண், செவ்வியைபு, செவ்வளபெடை என வழங்கப்படும் என்பதூஉம்; கடையாகு மோனைக்கும் கடையாகு எதுகைக்கும் ஏற்று வந்தால், எதுகைத் தொடை யானே பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம் ; மோனையும் எதுகையுமாய் வந்து முரணினால், மோனை முரண் என்றும் எதுகை முரண் என்றும் பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம் ; இணை மோனை முதலாகிய தொடை விகற்பங்களும் ஓரடியுட் பல விரவி வந்தால், வரன்முறையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம்; வரனடை இல்லாதவழி யாதானும் ஒன்றாற் பெயர் கொடுத்து வழங்கப்படும் என்பாரும், விகற்ப மயக்கம் என்பாரும் என இரு திறத்தார் ஆசிரியர் என்பதூஉம் ; ஓரடியுள் முதற் குறில் விட்டிசைத்து, மற்றை அடியுள் முதற்கட் குற்றெழுத்து வல்லொற்றடுத்து வந்தால், அதனை விட்டிசை வல்லொற்றெதுகை என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பதூஉம்; செய்யுள் ஈற்றடி இறுதி எழுத்தொன்றும் இரண்டு மிகினும் இழுக்காகாது என்பதூஉம் ; இரட்டைத்தொடை இறுதிக்கண் ஓரெழுத்துக் குறையினும் இழுக்காகாது என்பதூஉம்; செய்யுளினம் தொடுக்கின் ஈற்றெழுத்தானும் சொல்லானும் இடையிட்டே தொகுப்பினும் இழுக்காகாது என்பதூஉம் வேற்றினமும் வழியெதுகை முதலியவும் வந்து முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்து வருவனவற்றைச் செந்தொடை மருள் என்றும் மருட்செந்தொடை என்றும் வேண்டுவர் ஒருசார் ஆசிரியர் என்பதூஉம் ; மகார வகாரங்கள் அருகி எதுகையாய் வரினும் இழுக்காகாது என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப்பட்டது; விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் ஆகலின். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) சிலம்படி மாதர் நன்னலம் குறித்துச் சிலம்பதர் நள்ளென் கங்குற் சிலம்பநீ வருதல் தகுவதோ அன்றே இஃது இன எழுத்தும் விகற்பமும் வரத் தொடுத்ததின்மை யால், செம்மோனை. (குறள் வெண்பா) கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் - திருக்குறள் 109. எனவும், (கலி விருத்தம்) வண்டு படக்குவ ளைப் 1பிணை நக்கலர் விண்ட 2நறப்பரு கிக்கிளி யின்மதர் கொண்டு நடைக்களி அன்னம் 3இரைப்பதொர் மண்டு புனற்4புரி சைப்பதி சார்ந்தார் - சூளாமணி 657. எனவும் இவை இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையின், செவ்துகை. (நேரிசை ஆசிரியப்பா) கருங்கடல் உடுத்த மல்லல் ஞாலத்துச் செம்மையின் 5வழாஅது கொடைக்கடம் பூண்டு 6வாழ்வது பொருந்தா தாகிற் சாவதும் இனிதவர் வீவதும் உறுமே இது செம்முரண். (நேரிசை ஆசிரியப்பா) துப்புறழ் செவ்வாய்க் கிளவியும் அணங்கே; கருங்கண் வெம்முலைத் தொய்யிலும் அணங்கே; வாணுதற் றிலகமும் அணங்கே; சிலம்படி மாதர் நாட்டமும் அணங்கே இதில் இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையான் செவ்வியைபு. (குறள் வெண்பா) தாஅ மரைமேல் உறையும் திருமகள் போஒலும் மாதர் இவள் இது செவ்வளபெடை. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - திருக்குறள் 1072 எனவும், கொல்லா நலத்தது நோன்மை ; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - திருக்குறள் 984 எனவும் இவற்றுள் முதலது வருக்க மோனைக்கும் மெல்லின எதுகைக்கும் ஒத்து வந்ததாயினும்; இரண்டாவது எதுகைக்கும் இன மோனைக்கும் ஒத்து வந்ததாயினும், எதுகை என்று வழங்கப்படாது, கடையாகு மோனை என்று வழங்கப் படும். பிறவும் அன்ன. (குறள் வெண்பா) *சொல்லுப சொல்லப் பொறுப்பவே ; யாதொன்றும் சொல்லாத சொல்லப் பொறா - யா. கா. 57. மேற். இது மோனையாய் வந்து முரணினமையால், மோனை முரண். இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் - திருக்குறள் 615 எனவும், அறத்துக்கே அன்புசார் பென்ப அறியார் ; மறத்துக்கும் அஃதே துணை - திருக்குறள் 76 எனவும் இவை எதுகையாய் வந்து முரணினமையான், எதுகை முரண். (நேரிசை ஆசிரியப்பா) மீன்றேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம் தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்; தேரோ காணலம் ; காண்டும் பீரேர் வண்ணமும் சிறுநுதல் ! பெரிதே - யா. வி. 39. மேற். - யா. கா. 40. மேற். கடையிணை முரண் என்று காட்டப்பட்ட இச்செய்யுளுள், தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான் என்னும் அடியுள் மேற்கதுவாய் மோனையும் கடையிணை முரணும் வந்த வாயினும், அவற்று ஐயடியின் 1வரனடை முறையான் அதனையும் கடையிணை முரண் என்று வழங்கப்படும். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் - (குறுந்தொகை 18) என்னும் பாட்டினுள். சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் என்னும் அடியினுள் இணைமுரணும், கடையிணை எதுகையும் வந்தன வாயினும், யாதானும் ஒன்றினாற் பெயர் கொடுத்து, இணை முரண் என்றானும், கடையிணை எதுகை என்றானும் வழங்கப்படும். அல்லாத அடி ஒரு தொடையாகிய வரனடை இல்லாமையால், அதனை விகற்ப மயக்கம் எனினும் இழுக்காகாது. (குறள் வெண்பா) பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை நொஅலையல் நின்னாட்டை நீ - யா. கா. 41. மேற். எனவும், (கலி நிலைத்துறை) *அஇ உஎ ஒஎனும் ஐந்தொழித் தல்லாத *ஒத்தொலி நீண்டிசை வண்ணமென் றோதிய தோத்தாமோ? *கசட தப்பவிந் நாலய னான்கும் கருதாதே முத்தொடு கோத்த முழாத்தலை வைப்பது மூண்டன்றே இவற்றுள் முதற்குறில் விட்டிசைத்து வல்லொற்று அடுத்தாற் போன்று அல்லாத அடி முதற்கண் குற்றெழுத்து வல்லொற்று அடுத்து வந்தமையால், விட்டிசை வல்லொற்று எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) மாயோள் கூந்தற் குரலும் நல்ல ; கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல; மலரேர் உண்கணும் நல்ல ; பலர்புகழ் ஓதியும் நனிநல் லவ்வே - யா. வி. 40. மேற் எனவும், (நிலைமண்டில ஆசிரியப்பா) பூந்தண் பொழிலிடை வாரணம் துஞ்சும்; பூங்கண் அன்னை இல்லிடைத் துஞ்சும்; பூங்கொடிப் புனத்தயற் குறவன் துஞ்சும்; பூசலிக் களவென யாந்துஞ் சலமே - யா. வி. 40. மேற். எனவும் இயைபுத் தொடைச் செய்யுள் என்று சொல்லப் பட்டனவற்றுள் ஈற்றடி 1ஒன்றும் இரண்டும் எழுத்து மிக்கவாறு கண்டு கொள்க. ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் என்னும் இரட்டைத் தொடையின் ஈற்றுச்சீர் ஈற்றெழுத்து ஒன்று குறைந்து வந்தவாறு கண்டுகொள்க. இறுதி குறைந்து வரும் ஒரு பொருள் இரட்டையைக் குறையீற்று ஒரு பொருள் இரட்டை என்றும், குறையாததனை நிறையீற்று ஒரு பொருள் இரட்டை என்றும்; இறுதி குறைந்த பல பொருள் இரட்டையைக் குறையீற்றுப்பல பொருள் இரட்டை என்றும், குறையாததனை நிறையீற்றுப் பலபொருள் இரட்டை என்றும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க. குறையீற்றுப் பல பொருள் இரட்டையும், நிறையீற்றுப் பல பொருட் இரட்டையும் வந்த வழிக் கண்டுகொள்க. இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம், 1உதயணன் கதையும் கலியாண கதையும், பன்மணி மாலையும் மும்மணிக் கோவையும் என்றிவற்றுட் கண்டு கொள்க. (குறள் வெண்பா) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - திருக்குறள். 64. என்பது, *இனவெழுத்துப் பெற்று, முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்தமையின், செந்தொடை மருள் எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே (பொ. இ) யான்சென் றுரைப்பின் மானமின் றெவனோ சொல்லாய் வாழி தோழி! வரைய (இ.பு. எதுகை.) முள்ளில் பொதுளிய பல்குரல் நெடுவெதிர் பொங்குரல் இளமழை துவைப்ப மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே - யா. வி. 95. மேற். - தொல். செய். 219. மேற். இளம். இது பொழிப்பு இயைபும், இடைப்புணர் எதுகையும் வந்து இனமின்றித் தொடுத்தமையாற் செந்தொடை மருள் என்றும் மருட் செந்தொடை என்றும் வழங்கப்படும். இதனைச் செந்தொடையே என்று வழங்கினார் செய்யுளியல் உடையார் எனக் கொள்க. தாமரை புரையும் காமர் சேவடி - குறுந்தொகை - கடவுள் வாழ்த்து. என்னும் பாட்டினுள் 1ஈற்றடி இரண்டும் மகார வகாரங்கள் எதுகையாய் வந்தன. (கலி விருத்தம்) அமரீர் ! அசுரீர் ! அழனா கரையீர்! எமரீர் ! பிறரீர் ! எறிவேல் ஒருவன் நமரீர் ! பகவீர் ! தகவோ தகவென் றவரூர் திரைபாய்ந் துரையா தொழிதல்? இதுவும் அது. இதனை மூன்றாம் எழுத்தொன்று எதுகை என்பாரும் உளர். இனவெழுத்து ஆமாறு சொல்லுதும். அகரமும், ஆகாரமும், ஐகாரமும், ஔகாரமும் தம்முள் இனமாம். *இகரமும், ஈகாரமும், எகரமும், ஏகாரமும், தம்முள் இனமாம் உகரமும், ஊகாரமும், ஒகரமும், ஓகாரமும் தம்முள் இனமாம். இவ்வாறே இவ்வுயிர்மெய்க்கும் ஒட்டிக்கொள்க. ஒற்றுக்களுள். சகர தகரங்களும் தம்முள் இனமாம். ஞகர நகரங்களும் தம்முள் இனமாம். வகர மகரங்களும் தம்முள் இனமாம். இவற்றை அனு என்று வழங்குவாரும் உளர். இவற்றுக்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. (நேரிசை வெண்பா) அகரமோ டாகாரம் ஐகாரம் ஔகான் இகரமோ டீகாரம் எஏ - உகரமோ டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம் ஆகாத அல்ல அனு - யா. கா. 41. மேற். இதனை விரித்து உரைத்துக் கொள்க. அஆ ஐஔ என்றிவை எனாஅ இஈ எஏ என்றிவை எனாஅ உஊ ஒஓ என்றிவை எனாஅத் தசமவ ஞநவெனும் என்றிவை எனாஅ முந்நா லுயிரும் மூவிரு மெய்யும் தம்முள் மயங்கினும் தவறின் றென்ப என்றிவை இனம் ஆமாறு எடுத்து ஓதினார் நல்லாறனார் எனக் கொள்க. இனி, அவற்றுக்குச் செய்யுள் வருமாறு : (எண்சீர் ஆசிரிய விருத்தம்) அருந்தவர்கட் காதியாய் ஐயம் நீக்கி 1ஔவியந்தீர்த் தவிரொளிசேர் ஆக்கை எய்தி 2இருந்திரள்கை இனமருப்பின் யானை யூர்தி 3ஈரைஞ்ஞூ றெழில்நாட்டத் திமையோன் ஏத்த ஒருங்குலகின் . ஓத முந்நீர் ஒலிவளர 4அறம்பகர்ந்த உரவோன் பாதம் கருங்கயற்கட் காரிகையார் காதல் நீக்கிக் கைதொழுதாற் கையகலும்5 கவ்வை தானே எனவும், வண்டிவரும் மலர்வெட்சி மாலை மார்பன் மால்வேண்ட மண்ணளித்த மலிதோள் வள்ளல் 6ஞண்டிவரும் தண்படப்பை ஞாழல் மூதூர் நரபதிக்கு வான்கொடுத்த நகைவேல் நந்தி 7தண்டிவரும் தடவரைத்தோள் சயந்தன் வாடச் சதுமுகனைச் சயஞ்செய்த சங்க பாலன் தெண்டிரைவாய்த் திருமகளோ டமிர்தம் கொண்டான் சீர்பரவச் சென்றகலும்8 செல்லல் தானே எனவும் இனவெழுத்தும் வந்தவாறு கண்டுகொள்க. மாகந் திவண்டு......fokh ணகரத்து நாமம் என்னும் பாட்டின் மூன்றாம் அடியும், மாயாத தொல்லிசைச் சாகர தத்தன் என்பான் என்னும் பாட்டினுள் நடுவிரண்டடியும் இனவெழுத்து வந்திலாமையாற் பிற, எனின், அருகி இனவெழுத் தணையா வாயினும் வரைவில என்ப வயங்கி யோரே என்ப வாகலின் அமையும். இனி வழி எதுகை ஆமாறு: (பதின்சீர் ஆசிரிய விருத்தம்) கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு கூடி நீடும் ஓடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத நாத என்று நின்று தாழ அங்க *புவ்வம் ஆதி யாய ஆதி நூலின் நீதி *யோடும் ஆதி யாய செங்கண் மாலைக் காலை மாலை சேர்வர் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே - யா. வி. 53. மேற் - யா. கா. 13. 29. மேற். எனவும், (கட்டளைக் கலித்துறை) மண்டலம் பண்டுண்ட திண்டோள் வரகுணன் தொண்டியின்வாய்க் கண்டலம் தண்டுறைக் கண்டதொன் றுண்டு கனமகரக் குண்டலம் கெண்டையி ரண்டொடு தொண்டையும் கொண்டொர் (திங்கள்) மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ வருகின்றதே - யா. கா. 41. மேற். எனவும் கண்டுகொள்க. அனுப்பிராசம் என்னும் வடமொழியை அனு என்பதும் வழி எதுகை என்பதும் தமிழ் வழக்கெனக் கொள்க. வழி முரணுவனவற்றை முரண் என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர். வரலாறு: (அறுசீர் ஆசிரிய விருத்தம்) செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல் ஐயநுண் மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக் கொங்கை வெய்யவாய்த் தண்ணேர் நீலம் விரிந்தென விலங்கி நீண்ட மையவாம் மழைக்கண் கூந்தல் மகளிரை வருக என்றான் - சூளாமணி 763. - யா. கா. 41. மேற். - இல. விள. 748. எனவும், (கட்டளைக் கலித்துறை) ஒருமால் வரைநின் றிருசுடர் ஓட்டிமுந் நீர்க்கிடந்த பெருமாநிலனும் சிறுவிலைத் தாவுண்டு பேதையர்கண் பொருமா தவித்தொங்கல் எங்கோன் *பொரவல் லவன்பொதியிற் கருமா *விழிவெண்பல் செவ்வாய்ப் பசும்பொற் கனங்குழைக்கே - யா. கா. 41. மேற். எனவும் கொள்க. வல்லின நடையானும், மெல்லின நடையானும், இடையின நடையானும் எடுத்துக் கொண்ட நடையின் வழுவாது வரத்தொடுத்து முடிப்பது செய்யுள்கட்குச் சிறப்புடைத்து. 1வல்லின நடையாவது, வல்லெழுத்து மிகத் தொடுப்பது; 2மெல்லின நடையாவது, மெல்லெழுத்து மிகத் தொடுப்பது ; 3இடையின நடையாவது இடையெழுத்து மிகத் தொடுப்பது. பிறவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க. (நேரிசை வெண்பா) எழுத்து மொழிபொருளென் றெண்ணிய மூன்றின் வழுக்கின் முறைமை வகையால் - இழுக்கில் அடியோ டடியியைந்தும்4 அந்தரித்தும் வந்தால் தொடையென்பர் தொன்னூ லவர் தொடையுந் தொடைவிகற்புந் தொல்புலவோர் சொற்ற நடையின் வழுவாமை நாடிக் - கடல்பயந்த சீரார் திருவீசுஞ் செய்யுட் கெழுவாயு மாராயத் தீரும் 5அரில் (உக) தொடையோத்து முடிந்தது. உறுப்பியல் முற்றிற்று. செய்யுள் இயல் செய்யுள்களின் வகை ருச. செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின் பாவே பாவினம் எனவிரண் டாகும். ‘ï›nth¤J v‹d bga®¤njh? எனின், தொடை யினானும் அடியினானும் செய்யுள் உணர்த்திற்று ஆகலான், செய்யுள் ஓத்து என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ? எனின், செய்யுள்களது பெயர் வேறுபாடும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) செய்யுள் எனப்படுவனதாம், பொருள் பெற விரிக்குங்கால், பாவும் பாவினமும் என்று இரண்டு திறத்தனவாம் என்றவாறு. தாம் என்பது, செய்யுள்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப் பட்டது; 1தேவர் தாமே தின்னினும், வேம்பு கைக்கும் என்றாற் போலக் கொள்க. அவ்வாறு சிறப்பிக்கவே, சொற் பொருள் உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து, குற்றமின்றி அவை தத்தமுள் தழுவும் கோள் உடையவாய், இன்பம் பெருக்கி, அம்மை முதலாகிய வனப்பு அலங்காரமும் செம்மையும் செறிவும் பெறுவுழிப் பெற்று, இம்மை மறுமைக்கு நன்மை பயந்து, எல்லார்க்கும் புலனுற நடை பெறுவது யாப்பு, பாட்டு, செய்யுள் என்று சொல்லப்படுவது ஆயிற்று. எனவே, செய்யுள் எனப் பெயர் பெற்றும், ஓசைப் பொலிவு முதலாகிய உறுப் பொடு, புணர்ந்து,2 உரையும் நூலும் வகையும் மந்திரமும் முதுசொல்லும் பிசியும் ஆகிய செய்யுள் அல்ல, ஈண்டு வேண்டப்படும் செய்யுள் என்பதூஉம் சொல்லப் படும் எனக் கொள்க. மெய் பெற என்று மிகுத்துச் சொல்லிய அதனால், செய்யுள்கள் இடத்தினானும், தொழிலினானும், பொழுதி னானும், பிறவாற்றானும் பெயர் பெற்று நடப்பனவும் உள எனக் கொள்க. அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் பா என்பதூஉம் காரணக்குறி; ஒருபுடையாற் பாவினோடு ஒத்த இனத்தவாய் நடத்தலின், பாவினம் என்ப தூஉம் காரணக்குறி. இவற்றை இடுகுறி எனினும் இழுக்காகாது. பாக்களின் பெயர் வேறுபாடு (க) ருரு. வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பண்பாய்ந் துரைத்த பாநான் காகும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே பாக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) வெண்பாவும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும், வஞ்சிப்பாவும் எனத் தத்தம் தன்மையால் தெரிந்து சொல்லப் பட்ட பா, நான்கு வகைப்படும் என்றவாறு. Vfhu«, v©nzfhu« ‘fÈna’ v‹w tÊajhš, Vfhu« xʪj tÊ ïšiyahš, m~J ah§‡d« v©Qnkh? எனின், ஒரு வழி நின்றேயும் ஒழிந்தவற்றைக் கொள்ளும். என்னை? எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர் - தொல். இடை. 40 என்பது இலக்கணம் ஆகலின், நான்கு என்றது என்னை? v©nzfhu¤jhš v©z¥g£l eh‹F« v‹gJ bgwyh« m‹nwh? எனின், ஆம்; ஆயினும், அது நூல்நடை எனக் கொள்க. என்னை? கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே - தொல். இடை. 4. ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தற் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் றாங்கவ் வாறே அவ்வயிற் பிரிவே - இறையனார். 35. எனப் பிறரும் சொன்னார் எனக் கொள்க. வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பாநான்கு ஆகும், என்னாது, பண்பாய்ந் துரைத்த பாநான் காகும், என்று சிறப்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், 1வெண்பா முதல் வந்து ஆசிரியமாய் இறுவன, சிறப்பின்மையால், மருட்பா என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை? வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும் (காக்கைபாடினியார்) - யா. கா. 35. மேற். என்றாகலின். அவ்வாறு வருவனதாம், புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும் என இவை. என்னை? புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றும் திண்ணிதிற் றெரியின், வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப - தொல். செய். 159. என்றாராகலின். அவை வருமாறு: (மருட்பா) தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப என்றும் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே - யா. கா. 35. மேற். ïJ, ‘tÊgL bjŒt« Éòw§ fh¥g¥ gÊÔ® brštbkhL xU fhiy¡ bfhUfh‰ áwªJ bghÈthŒ! (தொல். செய். 109) என்றமையான், புறநிலைவாழ்த்து மருட்பா. (மருட்பா) பலமுறையும் ஓம்பப் டுவன கேண்மின்: *சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர் மணித்தேர் ஊர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும் சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா; இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்ததம் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் 1விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா தனைத்தாதல் நீயிரும் காண்டிர்; - நினைத்தகக் 2கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே - யா. கா. 35. மேற். இது மெய்ப்பொருள் சொன்னமையான், வாயுறை வாழ்த்து மருட்பா. என்னை? வாயுறை வாழ்த்தே வயங்க நாடின், வேம்பும் 3கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென் 4றோம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே - தொல். செய். 111. என்றாகலின். (மருட்பா) பல்யானை மன்னர் முருங்க அமருழந்து கொல்யானை தேரோடு 5கோட்டந்து - நல்ல தலையாலங் கானம் பொலியத் - தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் 6மருக.! - அடுதிறல் ஆளி நிமிர்தோள் பெருவழுதி ! - எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி; உடைய உழவரை 7நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல்; 8மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம் காட்டும் அமைச்சதை 9ஆற்றத் தெளியல் ; அடைத்த அரும்பொருள் 10ஆறன்றி வௌவல்; ஈகைப் பெரும்பொருள் ஆசையாற் சென்று பெருங்11 குழிசி, மன்ற மறுக அகழாதி; என்றும் மறப்புற மாக மதுரையார் ஓம்பும் அறப்புறம் 12 ஆசைப் படேற்க ; - அறத்தால் அவையார் 13 கொடுநாத் திருத்தி - நவையாக நட்டார் குழிசி சிதையாதி ; - 14ஒட்டார் செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் *கலிபடைத்தாய்! கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி; அற்றம் அறிந்த அறிவினாய் ! - மற்றும் இவையிவை* 1நீயா தொழுகின் *நிலையாப் பொருகடல் ஆடை நிலமகள் ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே - யா. கா. 35. மேற். இது, வியப்பின்றி உயர்ந்தோர்கண் அவிந்து ஒழுகுதல் கடன், என்று அரசற்கு உரைத்தமையான், செவியறிவுறூஉ மருட்பா எனப்படும். என்னை? செவியுறை தானே, பொங்குதல் இன்றிப் 2புரையோர் நாப்பண் 3அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே - தொல். செய். 113. என்றாராகலின். இவை இவ்வாறே அன்றி, வெண்பாவேயாயும், ஆசிரியமே யாயும் வரப்பெறும் ; கலியும் வஞ்சியுமாய் வரப் பெறா. என்னை? வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ - தொல். செய். 109. வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென இவையும் அன்ன - தொல். செய். 110. என்றாராகலின். கைக்கிளையும் வெண்பா முதலாக ஆசிரிய இயலான் இறும் என்னை? கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே - தொல். செய். 118. என்றாராகலின். வரலாறு: (மருட்பா) திருநுதல் வேரரும்பும்; தேங்கோதை வாடும்; இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த *போகிதழ் உண்கணும் இமைக்கும் ; ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே - புறப்பொருள் வெண்பாமாலை 287. எனவும், (மருட்பா) 1நிழன்மணி நின்றிமைக்கும் நீளார மார்பின் அழன்மணி நாகத் தணையான் - சுழன்மணிசூழ் பொன்னகரம் போகிய2 பூம்பனிச்சை நன்னீர் இளந்தளிர் 3மாவனுக்கும் மேனி - விளங்கும் 4நளிமலர் *நறுநுதல் அரிவை அளிமதி யிஃதோ அகலுமென் உயிரே எனவும் கொள்க. கைக்கிளையும் வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வரும் வழி, ஆசிரிய அடி இரண்டேயாய், அவற்றுள் ஈற்றடி நாற்சீராய், ஈற்றயலடி முச்சீராய் வருவது எனக் கொள்க. என்னை? இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை ஒருதலைக் காம மாகக் கூறிய இலக்கண மரபின் இயல்புற நாட்டி 5அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே 6பெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன் இறுதி எழுசீர் ஆசிரி யம்மே வெண்பா ஆசிரி யத்தாய் மற்றதன் இறுதி எழுசீர் ஆசிரி யம்மே கைக்கிளை மருட்பா வாகி வருகால் ஆசிரியம் வருவ தாயின் மேவா முச்சீர் 7எருத்திற் றாகி முடிவடி எச்சீ ரானும் ஏகாரம் இறுமே என்பது *கடியநன்னீயார் செய்த கைக்கிளைச் சூத்திரம் ஆகலின். புறநிலை வாயுறை செவியறி வவையடக்கு எனவிவை வஞ்சி கலியவற் றியலா அவற்றுள், 8இடையிரு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும் கடையெழு சீரிரண் 9டகவியும் வருமே என்றார் *நல்லாறனார். (தரவு கொச்சகம்) 1வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும் நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல் 2ஆதிசால் பாவும் 3அரசர் வியன்பாவும் ஓதியவா றொன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே - யா. கா. 35. மேற். -யா. வி. 94. மேற். எனவும், (கட்டளைக் கலித்துறை) பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறை வாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை 4ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பால் மொழிமட வாய் ! மருட் பாவெனும் வையகமே - யா. கா. 35. எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க. கங்கை யமுனைகளது சங்கமம் போலவும் சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப்புற்று மருட்சியுடைத்தாகப் பாவி நடத்தலின், மருட்பா என்று வழங்கப்படும், என்பாரும் உளர். இனி, ஒருசார் ஆசிரியர், வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஒத்து வருவனவற்றைச் 5சம மருட்பா என்றும், ஒவ்வாது வருவனவற்றை 6வியன் மருட்பா என்றும் பெயரிட்டு வழங்குவர். அவை கூட்டி வழங்குமாறு; புறநிலை வாழ்த்துச் சம மருட்பா, புறநிலை வாழ்த்து வியன் மருட்பா, வாயுறை வாழ்த்துச் சம மருட்பா, வாயுறை வாழ்த்து வியன் மருட்பா, செவியறிவுறூஉச் சம மருட்பா, செவியறிவுறூஉ வியன் மருட்பா, கைக்கிளைச் சம மருட்பா, கைக்கிளை வியன் மருட்பா எனக் கொள்க. வரலாறு: (மருட்பா) கண்ணுதலான் காப்பக் கடல்மேனி மால்காப்ப 1எண்ணிருதோள் ஏர்நகையாள் தான்காப்ப - *மண்ணியநூற் *சென்னியர் புகழுந் தேவன் மன்னுக நாளும் *மண்மிசைச் சிறந்தே - பெரும்பொருள் விளக்கம். - புறத்திரட்டு 1501 என்பது புறநிலை வாழ்த்துச் சம மருட்பா. தென்ற லிடைபோழ்ந்து (யா. வி. பக் 237) என்பது, புறநிலை வாழ்த்து வியன் மருட்பா. (மருட்பா) நில்லாது செல்வம்; நிலவார் உடம்படைந்தார்; செல்லார் ஒருங்கென்று சிந்தித்து - நல்ல அருளறம் புரிகுவி ராயின் இருளறு சிவகதி எய்தலோ எளிதே இது வாயுறை வாழ்த்துச் சம மருட்பா. பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின். - யா. வி. பக். 212. என்பது, வாயுறை வாழ்த்து வியன் மருட்பா. (மருட்பா) 2இருமூன்றில் ஒன்றுகொண் டேதம் கடிந்து 3பெருநீர்மை யார்தொடர்ச்சி பேணி-இருநிலம் காப்பா யாகுமதி கடனென மாப்பெருந் தானை மன்னர் ஏறே? இது செவியறிவுறூஉச் சம மருட்பா. பல்யானை மன்னர் - யா. வி. பக். 218. என்பது, செவியறிவுறூஉ வியன் மருட்பா. திருநுதல் வேரரும்பும் - யா. வி. பக். 214. என்பது, கைக்கிளைச் சம மருட்பா. நிழன்மணி நின்றிமைக்கும் - யா. வி. பக். 215. என்பது, கைக்கிளை வியன் மருடபா. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. வெண்பா, ஆசிரியம், கலியே, வஞ்சி என இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப. காரணக்குறியான் வழங்குமாறு: (வெண்பா) வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே, வேற்றுத் தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின், வெள்ளை என்பது காரணக்குறி; திருவே போலச் சிறப்புடையாளைத் திரு என்றாற்போலக் கொள்க. (ஆசிரியப்பா) சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்றாகலானும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும், ஆசிரியம் என்பதும் காரணக்குறி. ஆசு எனினும், சிறிது எனினும், நுண்ணிது எனினும் ஒக்கும். (கலிப்பா) சீர், பொருள், இசைகளால் எழுச்சியும், பொலிவும், 1கடுப்பும் உடைமைத் தாகலின், கலி என்பதும் காரணக்குறி. கலித்தல் கன்றல் கஞறல் பம்மல் எழுச்சியும் பொலிவும் எய்தும் என்ப எனவும், கம்பலை சும்மை அழுங்கல் கலிமுழக் கென்றிவை எல்லாம் 2அரவப் பெயரே எனவும், சொன்னாராகலின். (வஞ்சிப்பா) குறளும் சிந்தும் அல்லாத அடிகளை எல்லாம் வஞ்சித்து வருதலானும், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்றிப் பொருள்களை வஞ்சித்து வருதலானும், வஞ்சிக் கொடிபோல் நேர்ந்து நிற்றலானும், வஞ்சி என்னும் திறமே போலும் வனப்பும் ஏர்பு முடைத்தாகலானும், வஞ்சி என்பதும் காரணக்குறி. இவை எல்லாம் ஒருபுடை ஒப்பினாற் பெயர் பெற்றன எனக் கொள்க. ஒன்றுக்கு ஒன்று சிறப்புடைமையின், வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்று இம்முறையே பாற்படுத்து வைத்தார் எனக் கொள்க. வெள்ளை என்றும், பா என்றும் நின்று வெண்பா என்று முடிந்தது எனக் கொள்க. வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் சாதிமேல் சார்த்தி வழங்குவாரும் உளர் எனக் கொள்க. வெண்பா முதலாம் நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணக் குரிய பாவினத் தியற்கையும் அதனோ ரற்றே -யா. வி. 95. மேற். என்றார் வாய்ப்பியம் உடையார் ஆகலின். வெண்பாவினை 1வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முரற்கை என்றும் வழங்குப. (நேரிசை வெண்பா) வெண்பா முதலாக வேதியர் ஆதியா மண்பால் வகுத்த வருணமாம்; - ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் 2மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து - யா. வி. 95. மேற். இதனை விரித்துரைத்துக் கொள்க. இன்னும், வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் 3கிடக்க்கு ஒருசார் ஆசிரியர் உரைக்குமாறு: நாற்சீரடியான் நடைபெறுதலும், வேற்றுப்பாவினால் இறாமையும், எல்லாப் பொருண்மேலும் சொல்லப்படுதலும் என்று இவ்வாற்றால் ஆசிரியத்தோடு ஒத்தலும், உயர்ந்த ஓசைத்தாகலும், உத்தம சாதி ஆகலும், வேற்றுத்தளையும் வேற்றுப்பாவும் விரவாமையும், என்னும் மிகுதிக்குணம் உடைமை நோக்கி, வெண்பா ஆசிரியப்பாவின் முன் வைக்கப் பட்டது. அளவடியால் நடைபெறுதலும், தனது நடையால் தான் இனிது இறுதலும், எல்லாப் பொருள்களையும் தன்கண்ணே அடக்கலும், ஒருவாத பொருளிற்றாதலும் ஒருபுடையால் வெண்பாவோடு ஒத்தலும், அகவிய ஓசைத் தாகலும், அரசர் குலத்தினதாகலும், வேற்றுத்தளையும் அடியும் விரவி வருதலும் என்னும் வேறுபாடு உடைமை நோக்கி வெண்பாவின் பின் வைக்கப்பட்டது ஆசிரியப்பா. நேரடியால் நிலைபெறுதலும், அயலடியும் அயற்றளையும் விரவி வருதலும், இவ்வாற்றான் ஆசிரியத்தோடு ஒத்தலும், அயற்பாவினால் இறுதலும், புறநிலை வாழ்த்து முதலிய பொருள்கண்மேற் புகாமையும், வணிகர் குலத்தின தாகலும், துள்ளல் ஓசைத்தாகலும், நோக்கி ஆசிரியத்தின் பின் வைக்கப் பட்டது கலிப்பா. புறநிலை வாழ்த்து முதலிய பொருள்கண்மேற் புகாமையும், அயற்றளையும் அயலடியும் விரவி வருதலும், அயற்பாவினால் இறுதலும் என்றிவற்றாற் கலிப்பாவினோடு ஒத்தலும், நாற் சீரடியால் வாராமையும், சூத்திர குலத்தினதாகலும், தூங்கல் ஓசைத்தாகலும், அகப்பொருண்மேல் அருகியன்றி வாராமையும் நோக்கிக் கலிப்பாவின் பின் வஞ்சிப்பா வைக்கப்பட்டது. அல்லதூஉம், எடுத்துக்கொண்ட இனவெழுத்து இரண்டா மடி முதற்கட் பெற்றும், இடையிட்டெதுகை பெற்றும், பெறா தும் வந்தது ஒருசார் ஈரடி வஞ்சிப்பா இரண்டடியை உடன் கூட்டி இடையறாமை அசைத்து உச்சரிப்ப எழுத்தும் எதுகையும் பெற்றும் பெறாதும் வந்த ஒலித்தொடர்ச்சியால் கலிப்பா அடியாய்க் கைகலத்தலும், அனுவும் அடியெதுகையும் பொழிப் பெதுகையும் பெற்றும் பெறாதும் வந்த கலிப்பா அடியினைக் கண்டித்து இரண்டாக்கிக் கால இடையீடும் கடைபற்றியது காகூவும்பட உச்சரிப்பத் துள்ளல் ஓசை வழுவித் தூங்கல் ஓசைத்தாய் வஞ்சித்தலும் உடைத்தென்று கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப்பட்டன என்ப. அவர் காட்டும் உதாரணம்: தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக் காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின் - யா. வி. 31. 93. 95. மேற். எனவும், ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத் தேன்தூங்கும் 1உயர்சிமய 2மலைநாறிய வியன்ஞாலத்து - மதுரைக்காஞ்சி 1.4. எனவும் கொள்க. பிறவும் அன்ன. (நேரிசை வெண்பா) 3அறமுதனான் கென்றும் 4அகமுதனாள் கென்றும் திறனமைந்த செம்மைப் பொருண்மேல் - குறைவின்றிச் செய்யப் படுதலாற் செய்யுள் ; செயிர்தீரப் பையத்தாம் 5பாவுதலாற் பா இதனைப் பிரித்துரைத்துக் கொள்க. பாவினங்களின் பெயரும் வழங்கும் முறையும் ருசா. தாழிசை துறையே விருத்தம் என்றிவை பாவினம் பாவொடு பாற்பட் டியலும். இஃது என் நுதலிற்றோ? எனின், நிறுத்த முறையானே பாவினங்களது பெயர் வேறுபாடும், அவற்றை வழங்கும் முறைமையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) தாழிசையும் துறையும் விருத்தமும் என்றிம் மூன்றும் பாவினம் எனப்படும். இவை பாவினோடும் கூடிப் பெயர் பெற்று நடக்கும் என்றவாறு. பாவினோடும் கூடி வழங்குமாறு: வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் எனவும்; ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் எனவும்; கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் எனவும்; வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் எனவும் இவ்வாறு வழங்கப்படும். இவற்றுக்குச் செய்யுள், போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத் துள்ளே காட்டுதும். பிறரும் பாவினங்கட்கு இவ்வாறே சொன்னார். என்னை? வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே என்றார் காக்கைபாடினியார். பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவும் நானான் காகும் என்றார் சிறுகாக்கைபாடினியார். வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தமென் றிந்நான் கல்ல முந்நான் கென்ப என்றார் அவிநயனார். ஒத்தா ழிசைதுறை விருத்தம் எனப்பெயர் வைத்தார் பாவினம் என்ன வகுத்தே என்றார் *மயேச்சுரர். ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்தலானும் ஒத்த தாழத்தால். இசைத்தலானும், ஒத்த பொருண்மேற் பெரும் பான்மையும் மூன்றாய்த் தாழ்ந்திசைத்தலானும், எல்லா வடியானும் ஒத்து நடத்தலானும் தாழிசை என்பதூஉம் காரணக்குறி. ஒருபுடையால் தத்தம் பாவிற்குத் துறை போன்று நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும், எல்லாத் துறை மேலும் இனிது நடத்தலானும், துறை என்பதூஉம் காரணக்குறி. ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தானும் எல்லா அடியும் ஒத்து நடத்தலானும், புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும், விருத்தம் என்பதூஉம் காரணக்குறி. இது வட மொழித்திரிசொல் எனக் கொள்க. இவை ஒருபுடை ஒப்புமை வரலாற்று முறையாற் பெயர் பெற்றன எனக் கொள்க. பாவினங்களை விருத்தம், துறை, தாழிசை என்று காக்கை பாடினியார் வைத்த முறையானே வையாது, தாழிசை, துறை, விருத்தம் என்று தமது மதம் படுத்து முறை பிறழச் சொன்னா ரல்லர் இந்நூலுடையார் ; சிறுகாக்கை பாடினியார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் வைத்த முறைபற்றிச் சொன்னாராகலின், குற்றம் இல்லை என்று கொள்க. (நேரிசை வெண்பா) விருத்தம் வியன்துறை தாழிசையென் றோதா தொருத்1திறுதி யாதியா ஓத- உரைப்பிற் சிறுகாக்கை பாடினியார் செப்பக்கேட் டஃது மறுத்தாரே வண்மையால் வைத்து பண்ணும் திறமும் போற் பாவும் இனமுமாம் ; வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல் திறம்விளரிக் கில்லதுபோற் 2செப்பல் அகவல் இசைமருட்கும் இல்லை இனம் இதனை விரித்துரைத்துக் கொள்க. (ங) வெண்பா ருஎ. செப்பல் இசையன வெண்பா; மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே. இஃது என் நுதலிற்றோ எனின், அதிகாரம் பாரித்த பாக்களுள் நிறுத்த முறையானே வெண்பா ஆமாறு பொது வகையால் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) செப்பல் இசையன வெண்பா - செப்பல் ஓசையைத் தனக்கு ஓசையாக உடைய ஐந்து வெண்பாவும்; மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே- அவ்வெண்பாக்கள் ஈற்றடி முச்சீராகியும், அவ்வீற்றடியின் இறுதி அசைச்சீராகியும் சீர்ச்சீர் ஆகியும் நிற்கப் பெறும் என்றவாறு. அசைச்சீர் ஆகலும் பெறும் என்ற உம்மையால் 1சீர்ச்சீர் ஆகலும் பெறும், என்று சொல்லப்பட்டது. அந்தடி சிந்தடியாகிய அடி என்னாது, ஆகலும் என்ற உம்மை விதப்பினால், ஆண்டு அசைச்சீராய் வரு கின்றுழி, தனிக்குறில் நேரசையும் நெடிலுடைய நிரையசை யும் வருதல் சிறப்பில்லை. அல்லது சீர்ச்சீராய் வரு கின்றுழி, ஆண்டு இயற்சீரன்றி வாரா. அவைதம்முள் நேர்நேர் ஆகிய சீரும் நிரைநேர் ஆகிய சீரும் அன்றி வாரா. அவைதாம் உகர ஈறாய் அன்றி வாரா. அவற்றுட் குற்றிய லுகரம் ஈறாய் வருவது சிறப்புடைத்து. முற்றியலுகரம் ஈறாய் வரினும் பெரியதோர் சிறப்பில. அவைதாம் அருகியன்றி வாரா எனக் கொள்க. அவற்றிற்கு உதாரணம், காசு, பிறப்பு என வரும். வெண்பாவின் இறுதிச் சீர்க்கு உகரம் ஈறாக வேறு உதாரணம் காட்டி, அலகிட்டு ஓசையூட்டும் பொழுது பிற வாய்பாட்டான் ஓசையூட்டல் ஆகாது ஆகலின், எனக் கொள்க. அவ்வாறு ஓசையூட்டுமாறு: (குறள் வெண்பா) கொல்லா நலத்தது 2நோன்மை ; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - திருக்குறள் 984. என்பதனை அலகிட்டு, தேமா கருவிளம் தேமா புளிமாங்காய் தேமா கருவிளம் காசு எனவும், (குறள் வெண்பா) அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள் 1. என்பதனை அலகிட்டு, புளிமா புளிமா புளிமாங்காய் தேமா புளிமா புளிமா பிறப்பு எனவும் இவ்வாற்றால் ஓசையுண்டவாறு கண்டுகொள்க. பிறவும் இவ்வாறே ஓசையூட்டிக் கண்டுகொள்க. அசைச்சீர்க்கு உதாரணம், நாள், மலர் என வரும். அவ்வாற்றால் ஓசையூட்டுமாறு: (குறள் வெண்பா) இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்1 தூன்றும் தூண் - திருக்குறள் 615. என்பதனை அலகிட்டு, தேமா புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் நாள் எனவும், (குறள் வெண்பா) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் 2தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - திருக்குறள் 785. என்பதனை அலகிட்டு, தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா மலர் எனவும் வெண்பா ஓரசைச்சீர் இறுதி ஓசையுண்டவாறு கண்டு கொள்க. இவ்வாறே பிற வெண்பாக்களையும் ஓசையூட்டிச் செப்பலோசை வழுவாமற் கண்டு கொள்க. செப்பல் இசையன வெண்பா; அவை அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே என்னாது, மற்று என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஏந்திசைச் செப்பலும், தூங்கிசைச் செப்பலும், ஒழுகிசைச் செப்பலும் என்று மூன்று வகைப்படும் செப்ப லோசை என்பது அறிவித்தற்கு ஒரு 3தோற்றம் உணர்த்திய தாம். பிறரும் வெண்பாவிற்கு ஓசையும் ஈறும் இவ்வாறே கூறினார். என்னை? ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா செப்பல் ஓசை வெண்பா வாகும் என்றார் சங்கயாப்பு உடையார். அகவல் என்ப தாசிரி யம்மே - தொல். செய். 81. அதாஅன் றென்ப வெண்பா யாப்பே - தொல். செய். 82. என்றார் தொல்காப்பியனார். சிறந்துயர் செப்பல் இசையன வாகி, அறைந்த உறுப்பின் 1அகறல் இன்றி, விளங்கிக் கிடப்பது வெண்பா வாகும் என ஓசை கூறி, சிந்தடி யானே 2இறுதலும். அவ்வடி அந்தம் 3அசைச்சீர் வருதலும், யாப்புற வந்தது வெள்ளை வழக்கியல் தானே என்று ஈறு சொன்னார் காக்கைபாடினியார். ஏந்திசைச் செப்பல் இசையன வாகி வேண்டிய உறுப்பின் வெண்பா வாகும் என்று ஓசை கூறி, முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிரை அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம் என்று ஈறு சொன்னார் அவிநயனார். (கட்டளைக் கலித்துறை) வெண்பா அகவல் கலிப்பா அளவடி ; வஞ்சியென்னும் ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப; ஒலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றோங்குதுள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே ! - யா. கா. 21. நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும்; 4நிகரில் வெள்ளைக் கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்ஒண் காசும்இற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே - யா.கா.25. எனவும் இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. (கட்டளைக் கலித்துறை) மாவாழ் புலிவாழ் சுரமுள வாக மணியிறுவாய் ஓவா தளபெடுத்1 தூஉவும் கெழூஉவும், உதாரணமாய் நாவாழ் பெரும்புகழ் நற்றத்தர் யாப்பில் நடந்ததுபோல் தேய்வாம் உகரம்வந் தாலியற் சீரிங்குச் செப்பியதே - யா. கா. 25. மேற். இதன் கருத்தாவது, மாவாழ்சுரம், புலிவாழ்சுரம் என்னும் இரண்டு வஞ்சியுரிச்சீரும் உளவாக வைத்து, ஒரு பயன் நோக்கித் தூஉமணி கெழூஉமணி என்றளபெடையாக நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீர் எடுத்துக் காட்டினார் நற்றத்தனாரும் வாய்ப்பியனாரும். அதுபோல, இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச்சீருக்கு வேறு உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டுதற் பொருட்டாக, குற்றியலுகரம் ஈறாகிய காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டான் நேரீற்று இயற்சீருக்கு வேறு உதாரணம் எடுத்தோதினார் என்றவாறு. அஃதே எனில், காசு, பிறப்பு என்னும் இரண்டு சீருமே கொண்டு தேமா, புளிமா என்னும் இரண்டு சீரும் களையாமோ? எனின், அற்றன்று ; வெண்பா இறுதி ஓசை யூட்டல் வேண்டிக்காட்டின* காசு பிறப்புக்களே அமைய வைத்துப் பேர்த்தும் தேமா, புளிமா என்னும் இரண்டு சீரும் காட்டியதாவது, காசும் பிறப்பும் குற்றியலுகர ஈறாய் ஓசை சுருங்கி ஈற்றின்கண் நிற்கும். அல்லாதவழி ஏந்திசைச் செப்ப லோசை பூண்டு நில்லாத தேமா, புளிமா என்னும் இரண்டு நெட்டெழுத்திறுதி அவ்வேந்திசைச் செப்பலோசைத் தழுவி நிற்குமாகலின், அந்நுட்ப ஆராய்ச்சி வகையினால் அவையும் ஓதினாராதலின், கூறியது கூறல் என்னும் குற்றமாகாது. என்னை? கூறியது கூறினும் குற்றம் இல்லை *வேறும் ஒருபொருள் விளைக்கு மாயின் என்ப ஆகலின். என்னை? (நேரிசை வெண்பா) காசு பிறப்புமே காட்டாது, தேமாவும் ஆசில் புளிமாவும் ஆய்ந்துரைத்த - தோசைமேல் தேறித்தாஞ் செப்பல் தெளிவிப்ப தன்றாகிற் கூறிற்றே கூறார் கொணர்ந்து என்பதனை விரித்துரைத்துக் கொள்க. செப்பல் வகை வருமாறு: வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர் வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல் என்றார் சங்க யாப்புடையார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை வெண்பா) மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் பொன்1சகள ஆசனமாப் போர்த்து மணி2குயின்ற இன்3சகள வாசனத்தான் ஈடு - யா. வி. 93. மேற் யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு - திருக்குறள் 297 இன்னவை பிறவும் ஏந்திசைச் செப்பலோசை. (நேரிசை வெண்பா) அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற் கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ! - அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென் றஞ்சிப்பின் வாங்கும் அடி - நாலடியார் 396. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் - திருக்குறள் 1121. இன்னவை பிறவும் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வரு வனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை. பிறவும் அன்ன. (நேரிசை வெண்பா) திருநந்து பூம்பொய்கை தேர்ந்துண்ணும் நாராய்! ஒருநன் றுரைத்தல் தவறோ? - கருநந்து 1முத்துப்பந் தீனும் முழங்கருவி நாடற்கென் 2பத்தினிமை அல்குற் பசப்பு கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - திருக்குறள் 984. இன்னவை பிறவும் முத்தொள்ளாயிரத்து வண்ணத்தால் வருவன எல்லாம் ஒழுகிசைச் செப்பலோசை. இவை அம்மூன்றிசைச் செப்பலோசைக்கும் அவிநயனார் காட்டிய பாட்டு. இவை ஈற்றடி முச்சீர் ஆயினவாறும். இறுதி அசைச்சீர் ஆயினவாறும், குற்றியலுகரம் வந்து காசு, பிறப்பு என்னும் சீரால் இற்றவாறும் கண்டு கொள்க. இனி, ஒருசார் ஆசிரியர், வெண்சீரே வந்து வெண்டளை தட்ப ஏந்திசைச் செப்பல் பிறக்கும்; இயற்சீரே வந்து வெண்டளை தட்ப ஒழுகிசைச் செப்பல் பிறக்கும்; வெண்சீரும் இயற்சீரும் வந்து வெண்டளை தட்பத் தூங்கிசைச் செப்பல் பிறக்கும், என்ப. அவை வந்தவழி உச்சரித்துக் கண்டுகொள்க. இனி, மற்றொருசார் ஆசிரியர், செப்பல், வெண்கூ, அகவல் என்னும் மூவகை ஓசை உடைத்து வெண்பா, என்ப. என்னை? பண்பாய்ந் தடக்கிய பாநடை தெரியின், வெண்பா 3மூவிசை விரிக்குங் காலே எனவும், செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா என்றனர் அவையே எனவும் சொன்னாராகலின். அவற்றுள், செப்பல் வெண்பா என்பது, எழுசீரால் நடப்பது என்னை, செப்பல் வெண்பா சீரே ழாகித் தொடைநிலை பெறாஅ தடிநிலை பெறுமே என்றாராகலின். அவர் காட்டும் பாட்டு: (செப்பல் வெண்பா) சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்கம் எவனோ உயிர்க்கு? - திருக்குறள் 31 எனவும், அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை - திருக்குறள் 37. எனவும் கொள்க. வெண்கூ வெண்பா என்பது, நேரிசை வெண்பா இன வெழுத்து மிக்கு இசைப்பது. அஃது ஆசுகவிகள் கூறுமாற்றாற் கூறப் பிறப்பது. என்னை? வெண்கூ வெண்பா எழுத்திறந் திசைக்கும் என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) தண்டடைந்த திண்டோளாய்! தாங்கலாம் தன்மைத்தோ கண்டடைவார் தம்மைக் கனற்றுமா - *வண்டைய நாணீலம் நாறுந்தார் நன்னன் கலைவாய வாணீலக் கண்ணார் வடிவு? எனவும், அறந்தரு தண்செங்கோ லையன்ன 1மாந்தைச் சிறந்தன சேவலோ டூடி - மறந்தொருகால் 2தன்னம் அகன்றாலும் தம்முயிர் வாழாவால் என்ன மகன்றில் இவை? எனவும் இவை வெண்கூ வெண்பா என்று செய்யுளிய லுடையார் காட்டிய பாட்டு. இனி, அகவல் இசையாவது, இன்னிசை வெண்பா. என்னை? அகவல் வெண்பா அடிநிலை பெற்றுச் சீர்நிலை தோறும் தொடைநிலை திரியாது நடைவயின் ஓரடி நெய்யார்ந் தன்ன நேயமுடைத் தாகிப் பொருளொடு புணர்ந்து எழுத்தழி யாதே என்றாராகலின், வரலாறு: (அகவல் வெண்பா) வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்; வைகலும் வைகற்றம் வாணாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார் - நாலடியார் 39. இஃது அகவல் வெண்பா என்று அணியியல் உடையார் காட்டிய பாட்டு. மனைக்குப்பாழ் வாணுதல் இன்மைதான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு - நான்மணிக்கடிகை 26. இஃது அகவல் வெண்பா என்று செய்யுளியல் உடையார் காட்டிய பாட்டு. இவ்வோசை விகற்பம் எல்லாம் சொல்வல்லார்வாய்க் கேட்பின் அல்லது காட்டலாகா என்று உணர்க. மருளொடு புணர்ந்தோர் மருட்கை தீரச் சொல்ல வன்மை வெண்பா *இயல்பே என்றாராகலின். (குறள் வெண்பா) இனமலர்க் கோதாய் ! இலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு - யா. கா. 25. மேற். எனவும், மஞ்சுசூழ் சோலை மலைநாட ! மூத்தாலும் அஞ்சொல் மடவார்க் கருளு - யா. கா. 25. மேற். எனவும், (நேரிசை வெண்பா) அரிமலர் ஆய்ந்தகண் அம்மா கடைசி திருமுகமும் திங்களும் 1செத்துத் - 2தெருமந்து வையத்தும் வானத்தும் செல்லா 1தணங்காகி ஐயத்துள் நின்ற தரவு எனவும், பாலன் றனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின் மேலன்று நீகிடந்தாய் மெய்யென்பர் ; - ஆலன்று *வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் ! சொல்லு - இயற்பா. முதல் திருமொழி 69. -யா. வி. 95. மேற். -தண்டி. 43. மேற். எனவும், எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே - களியிற் பொருந்தா *தவனைப் பொரலுற் றரியாய் இருந்தான் திருநாமம் எண்ணு - இயற்பா. முதல் திருமொழி 51. எனவும் இவை முற்றியலுகரம் அருகிக் காசு, பிறப்பு என்னும் இரண்டு சீரானும் இற்றனவாயினும், சிறப்பிலபோலும் எனக் கொள்க. அரிமலர் ஆய்ந்தகண் என்பது (முதலியன) பொய்கையார் வாக்கு. (குறள் வெண்பா) நுண்மைசால் கேள்வி நுணங்கியோர் சொல்லையாய் தொன்மைசால் நன்மருந் து எனவும், நெடு நுண் சிலையலைக்கும் நீர்மைத்தே பேதை கொடிநுண் புருவக் குலா எனவும், (நேரிசை வெண்பா) நிழலிடையிஃ தோபுகுந்து நிற்கவே என்றேற் கழலிடை அம்மலரே போன்றாய் - கழலுடைக்காற் காம்போச னாமூர்க் கடலார் மடமகளே ! வேம்போவென் வாயின் வினா? எனவும், (குறள் வெண்பா) சொல்லு சொல்லப் *பொறுப்பவே ; யாதொன்றும் சொல்லாத சொல்லப் *பொறா எனவும் தனிக்குறில் நேரசையும் நெடிலுடை நிரையசையும் இறுதிக்கண் அருகி வந்தனவாயினும், சிறப்பின்மை உச்சரித்துக் கண்டு கொள்க. (நேரிசை வெண்பா) குற்றுகரச் சீரோ டுகர வகாரச்சீர் இற்ற எழுவாயாப் பின்னிசைத்தாய் - முற்றுகரம் *ஈறாய் வருமே எனினும் நிரையவாய்க் கூறார் சிறப்புடைத்தாக் கொண்டு இதுவும் ஒருசார் ஆசிரியர் மதம். அவர் காட்டும் உதாரணம் : (குறள் வெண்பா) அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு - திருக்குறள் 382. எனவும், ஊருணி நீர்நிறைந் தற்றே 1உலகவாம் பேரறி வாளன் திரு - திருக்குறள் 215. எனவும் முற்றுகர ஈற்றடிக்குச் சீர் இவை. குற்றுகர முற்றுரங்கட்கு மேற் காட்டினவும் கொள்க. (ச) வெண்பாவின் வகை ருஅ. குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை எனவைந் தாகும் வெண்பாத் தானே. இச்சூத்திரம், செப்பலோசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனையடி நாற்சீராய், வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்டளை தட்டு, வேற்றுத்தளை விரவாது, ஈற்றடியின் இறுதிச்சீர் காசு, பிறப்பு, தோள், வளை என்னும் வாய்பாட்டான் இறும் என்றும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஒற்றும் ஆய்தமும் அல்லாத எழுத்து ஏழு முதலாகப் பதினாறு எழுத்தின்காறும் உயர்ந்த பத்து 2நிலமும் பெற்ற நாற்சீர் அடித்தாய், ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறு நிலமும் பெற்ற முச்சீர் அடியான் முடியும் என்றும் வேண்டப்பட்ட 1வெண்பா வினது விகற்பம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) குறள் வெண்பாவும், சிந்தியல் வெண்பாவும், இன்னிசை வெண்பாவும், நேரிசை வெண்பாவும், பஃறொடை வெண்பாவும் என ஐந்து வகைப்படும் வெண்பா, என்பர் ஆசிரியர் என்றவாறு. குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்று முறையிற் கூறாது, குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, பஃறொடை என்று முறை பிறழச் சொல்லவேண்டியது என்னை? எனின், அஃது ஒரு பயன் நோக்கிச் சொல்லப்பட்டது. தலைதடு மாற்றம் தந்து புனைந் துரைத்தல் என்பது தந்திர உத்தி ஆகலின். ‘ahJ m¥ga‹? எனில், வெண்பாவினை ஓரடி முக்கால் என்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்கால் என்றும், நேரிசை வெண்பாவினை நேரடி மூவடி முக்கால் என்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் என்றும், பஃறொடை வெண்பாவினைப் பலவடி முக்கால் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை எனவைந் தென்ப வெண்பா v‹dhJ, ‘MF«’ vd ÄF¤J¢ brhšy nt©oaJ v‹id? எனின், செப்பலோசையிற் சிறிது சிதைந்த பஃறொடை வெண்பாவினைக் கலி வெண்பாவாகவும், அல்லாத வெண்பாக்களது சிதைவினை ஒருபுடை ஒப்புமை நோக்கித் தத்தம் இனமாகவும் கொண்டு வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப. காரணக்குறியான் வழங்குமாறு: குறளும் சிந்தும் என இவற்றை மேல் அடிக்குச் சொன்னாற்போல் (யா.வி. 24) உரைத்துக் கொள்க. நேர் என்பது, மாறாதற்கண்ணும், ஒத்தற்கண்ணும், தனிமைக்கண்ணும், மிகுதிக்கண்ணும், நுட்பத்தின் கண்ணும், சமனாதற்கண்ணும், உடம்படுதற்கண்ணும், பாதிக்கண்ணும், தலைப்பாட்டின் கண்ணும், நிலைப்பாட்டின் கண்ணும், கொடைக்கண்ணும் நிகழும். என்னை? 2நேர்ந்தார், அரண்பல கடந்த அடுபோர்ச் செழிய! எனவும், 1நேர்பொருள் நிறுத்தனன் எனவும், 1நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு - நன்னூல் 15. எனவும், 2நேரசை எனவும், 3நேரே நல்லன, நேரே செல்வன எனவும், 4நேர் நூல், நேர் ஆடை எனவும், 5நாற்சீர் கொண்டது நேரடி - யா. வி. 24. மேற். எனவும், 6நெட்டெழுத்தா நேரப்படும் எனவும், 7நேர் போகி - யா. வி. 2. மேற். எனவும், 8நேர்பட்ட இரண்டு படையும் எனவும், 8நேர்ந்திருந்தன எனவும், 9நேராமற் கற்பது கல்வி அன்றே எனவும், 9நேரா நோன்பு எனவும், 9நேராநெஞ்சத்தான் நட்டான் அல்லன் எனவும், 10உப்பு நேர்ந்தார் எனவும், 10புளி நேர்ந்தார் எனவும், 10நேரிழை மகளிர் - பட்டினப்பாலை 22. எனவும் வழங்குவர் ஆகலின். இசை என்பது, ஓசைக்கண்ணும், சொல்லின் கண்ணும், புகழின் கண்ணும் நிகழும். என்னை? இசையெலாம் இசைய இசையெலாம் ஆர்ப்ப எனவும், நுவற்சி நொடியே கிளவி இசைத்தல் புகற்சி அனைய சொல்லின் பாலே எனவும், இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை - முதுமொழிக் காஞ்சி; இல்லாப்பத்து, 8 எனவும் சொல்லப்படுதலின். இனி, 1ஒரு நாட்டார் இயை என்பதனை இசை என்று வழங்குவரெனக் கொள்க. முன்னும் பின்னும் ஒவ்வாதாய் மறுதலைப்பட்ட விகற்பத்தாற் சொல்லுவ ராகலானும், ஒத்த ஒரு விகற்பத்தால் இசைத்தலானும், தனிச்சொல் உடைமையானும், மிக்க புகழிற்றாக லானும், நுண்ணிய பொருண்மேற் சொல்லப்படுதலானும், அளவிற்பட்ட நான்கடியாற் சொல்லப்படுதலானும், அளவிற் பட்ட நான்கடியாற் சொல்லப்படுதலானும், புலவரான் உடம் பட்ட ஓசையும் சொல்லும் புகழும் உடைத்தாகலானும், முதற்குறளோடு தனிச்சொல் இடை ஒன்றும் இரண்டும் அசை கூட்டி இசைக்கப்படுதலானும், தலைப்பட்ட சொல்லும் பொருளும் உடைத்தாகலானும், புகழ் வேண்டும் ஒருவற்கு 2தாயப்பாட்டாய்க் 3கொடைக்கடம் பூண்பித்துப் 4போய்ப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும் நேரிசை வெண்பா என்பதூஉம் காரணக்குறி. இனிதாய் இயலும் ஓசையும் சொல்லும் உண்டாய்ப் போய்ப்பாடு உடைத்தாகலின், இன்னிசை வெண்பா என்பதூஉம் காரணக்குறி. (ரு) பல தொடையானும் தொடுக்கப்படுதலாற் பஃறொடை வெண்பா என்பதூஉம் காரணக்குறி. குறள் வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் 59. ஈரடி குறள் ; சிந் திருதொடை இயற்றே. இச்சூத்திரம் அதிகாரம் பாரித்த ஐந்து வெண்பா வினுள்ளும் முறையானே குறள் வெண்பா ஆமாறும், சிந்தியல் வெண்பா ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஈரடி குறள்- (பொது இலக்கணத்தோடு மாறு கொள்ளாது பொருந்திய) இரண்டடியால் வருவது குறள் வெண்பா எனப்படும் ; (ஈரடி குறள் என்னும் சொற்பொருள், இருசீர் குறளடி; சிந்தடி முச்சீர் (யா. வி. 24. மேற்) (என்றாற் போலக் கொள்க). சிந்து இரு தொடை இயற்றே - மூன்றடியால் வருவது சிந்தியல் வெண்பா எனப்படும் என்றவாறு. இரு தொடை எனவே, மூன்றடி என்பது பெறப் பட்டது; அடியிரண்டு இயைந் தவழித் தொடை என்பது ஆகலின். ஈரடி குறள்; சிந்து இரு தொடைத்தே, என்னாது, இயற்றே, என்று விகற்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்து தொடையானும் வருவனவற்றை இனக்குறள் வெண்பா என்றும், செந்தொடையானும் ஒழிந்த தொடை விகற்பத்தானும் வருவனவற்றை விகற்பக் குறள் வெண்பா என்றும், மூன்றடியால் நேரிசை வெண்பாவே போல வருவன வற்றை நேரிசைச் சிந்தியல் வெண்பா என்றும் இன்னிசை வெண்பாவே போல மூன்றடியால் வருவனவற்றை இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு : (இனக்குறள் வெண்பா) சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (மோனை) - திருக்குறள்267. எனவும், தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் ! (எதுகை) - திருக்குறள் 318. எனவும், இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் (முரண்) - திருக்குறள் 615 எனவும், 1சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு கதிர்வளைத் தோளுங் கரும்பு (இயைபு) எனவும், கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேல் துகில் (அளபெடை) - திருக்குறள் 1087. எனவும் முறையானே ஐந்து தொடையானும் இனக்குறள் வெண்பா வந்தவாறு கண்டுகொள்க. (விகற்பக் குறள் வெண்பா) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - திருக்குறள் 64 எனவும், அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ *கனங்குழை மாதர்கொல் ! 1மாலுமென் நெஞ்சு ! (வி. தொடை) - திருக்குறள் 1081. எனவும், அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே *நன்னுதல் நோக்கோர் வளம் (செந்தொடை) எனவும் இவை செந்தொடையானும் விகற்பத் தொடையானும் வந்தமையான், விகற்பக் குறள் வெண்பா. இவற்றை இவ்வாறன்றி ஒருவிகற்பக் குறள் வெண்பா வென்றும் பல விகற்பக் குறள் வெண்பா வென்றும் சொல்வாரும் உளர். அவற்றிற்குச் செய்யுள். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் - திருக்குறள் 395. எனவும், உருவுகண் டெள்ளாமைவேண்டும் உருள்பெருந் தேர்க்(கு) அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் 667. எனவும் வரும். இவையும் அவற்றினுள்ளே அடங்குமெனக் கொள்க. (நேரிசைச் சிந்தியல் வெண்பா) நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான் பாலைநல் வாயின் மகள் (இரு விகற்பம்) - தொல். செய். 114. இளம். - யா. வி. 95. மேற். - யா. கா. 25. மேற். எனவும், காளையோ டாடிக் கதக்காரி தோன்றுங்கால் 1வாளழுவ மக்களோ டாகுமாம் ; - கோளொடும் 2பொன்றுமாம் நங்காய் ! நம் கேள் (இரு விகற்பம்) எனவும், அறிந்தானே ஏத்தி அறிவாங் கறிந்து சிறந்தார்க்குச் செவ்வன் உரைக்கும் - சிறந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு (ஒரு விகற்பம்) - யா. கா. 25. மேற். எனவும் இவை இரண்டாம் அடியின் இறுதி தனிச்சொல்லால் 3அடிமூன்றாய், மூன்றடியாய் இரு விகற்பத்தானும் நேரிசை வெண்பாவே போல வந்தமையான், நேரிசைச் சிந்தியல் வெண்பா. (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) 4நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி (ஒரு விகற்பம்) - தொல். செய். 114. இளம். -யா. வி. 95. மேற். -யா. கா. 25. மேற். எனவும், 5சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை (பல விகற்பம்) - தொல்.செய்.114.இளம். - யா.வி.95.மேற். - யா. கா. 25. மேற். எனவும், முல்லை முறுவலித்துக் காட்டின; மெல்லவே 6சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற ; போயினார் திண்டேர் வரவுரைக்கும் கார் (பல விகற்பம்) - யா. கா. 25. மேற். எனவும் இவை மூன்றடியாய் இன்னிசை வெண்பாவே போலத் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வந்தமையான், இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இவற்றுக்கு இலக்கணம் பிறரும் இவ்வாறே சொன்னார். என்னை? தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே என்றார் காக்கைபாடினியார். ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே என்றார் அவிநயனார். ஐம்பெருந் தொடையின் இனக்குறள் விகற்பம் செந்தொடை *விகற்பொடு செயிர்தீர் ஈரடி எனவும், நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்துமென் றீரடி முக்கால் இருவகைப் படுமே - யா. கா. 25. மேற். எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க. (கட்டளைக் கலித்துறை) நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும் ; நிகரில்வெள்ளைக் கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்ஒண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே - யா. கா. 26. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க. நேரிசை வெண்பா rho. நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன் ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும் நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும். இச்சூத்திரம் நேரிசை வெண்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நாலோர் அடியாய் - நான்கு அடியாய், தனி இரண்டாவதன் ஈறு - தனிச்சொல் இரண்டாம் அடியின் இறுதியாய், ஒரூஉ 1வாய்முற்று - அவ்விரண்டாமடி ஒரூஉத் தொடையாயும் கதுவாய்த் தொடையாயும் முற்றுத் தொடை யாயும், (ஆய் என்னும் சொல் 2ஆதிதீபகம் ஆதலின், 3இரு வழியும் கூட்டி உரைக்கப்பட்டது) இரு விகற்பு ஒன்றினும் நேரிசை வெண்பா எனப் பெயர் ஆகும் - இரண்டு விகற்பத் தானும் ஒரு விகற்பத்தானும் வருவது நேரிசை வெண்பாவாம் என்றவாறு. வாய் என்பது, பல பொருட்டு ஆயினும், ஒரூஉவினோடும் முற்றினோடும் வந்தமையால், கதுவாயைத் தலைக்குறைத்து வாய் என்று சொல்லப்பட்டது எனக் கொள்க. என்னை? வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும் பொருள்தெரி நிலையே - யா. வி. 35. மேற். என்பது இலக்கணம் ஆகலின். அல்லதூஉம், பிறரும் கண்ணாடி என்பதனைத் தலைக்குறைத்து, ஆடி நிழலின் அறியத் தோன்றி (தொல். பொ. 481) என்றார் எனக் கொள்க. இரண்டாமடி ஒரூஉத் தொடையாய் வருவது சிறப் புடைத்து ஆகலின், முன் வைக்கப்பட்டது; சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல், என்பது தந்திர உத்தி ஆகலின். முற்றுத்தொடை, அருகியன்றி வாராமையின், கடைக்கண் வைக்கப்பட்டது. கதுவாய்த்தொடை, இடையாய இயல்பிற்றாகலின், இடைக்கண் வைக்கப்பட்டது. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (இருவிகற்ப நேரிசை வெண்பா) சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலை விலங்கிற் றென்று முனிவாள் - மலை விலங்கு தார்மாலை மார்ப ! jÅik bghW¡Fnkh fh®khiy f©TL« nghœJ? - தண்டியலங்காரம் 16.மேற். -யா. வி. 4. 18. 37. மேற். எனவும், வண்மை மதம்பொழிந்து மாற்றார் திறல்வாடத் திண்மை பொழிந்து *திகழும்போன்ம் - ஒண்மைசால் நற்சிறைவண் டார்க்கும் நளிநீர் வயற்பம்பைக் கற்சிறை என்னும் களிறு எனவும் இவை இரண்டாமடி 1ஒரூஉத் தொடையாய், இரண்டு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா. (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) வில்லுடையான் 1வானவன் ; 2வீயாத் தமிழுடையான் பல்வேற் கடற்றானைப் பாண்டியன் ; - சொல்லிகவா 3இல்லுடையான் பாலை இளஞ்சாத்தன் வேட்டனே; நெல்லுடையான் 4நீர்நாட்டார் கோ எனவும், ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞ ராயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் *தெரிவைபோற் போத்தறார் புல்லறிவி னார் - நாலடியார் 351. எனவும் இவை இரண்டாமடி ஒரூஉத்தொடையாய், ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) எல்லைநீர் ஞாலம் முதலாய ஏழுலகும் 5வல்லனாய் முன்னளந்தான் அல்லனே - தொல்லமரை வேட்டானை வீய வியன்புலியை வெஞ்சமத்து வாட்டானைக் கூட்டழித்த மால் எனவும், (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) எற்றே பலியிரக்கும் இட்டால் அதுவேலான் 6நெற்றிமேல் ஒற்றைக்கண் நீறாடி - முற்றத்துப் பொற்றொடிப்பந் தாடிப் பொடியாடித் தீயாடிக் கற்றாடும் நம்மேற் கழறு எனவும் இவை இரண்டாமடி கதுவாய்த் தொடையாய், இரு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா. (இரு விகற்ப நேரிசை வெண்பா) பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்த 7தொல்லவையார் எல்லாரும் சொல்வதூஉம் - மெல்லிணர்ப் பூந்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத் தேந்தாம வேலான் திறம் எனவும், (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) பொன்னிணர் ஞாழற் புதல்வதியும் நாரைகாள்! 8f‹Åa« ò‹idnkš m‹d§fhŸ !- என்னே நீர் இன்னொலிநீர்ச் சேர்ப்பன் இரவில் வருவதன்முன் கொன்னே குறிசெய்த வாறு? எனவும் இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொல்லான் அடிமூய், முற்றுத் தொடையாய், இரு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா. (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) 1வஞ்சியேன் என்றவன்றன் ஊருரைத்தான் ; யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான் 2வஞ்சியாய் ! 3வஞ்சியார் கோ - யா. கா. 23. மேற். இது மோனைத் தொடையாய், இரண்டாமடியின் இறுதி, தனிச் சொல்லான் அடிமூய், ஒரூஉத்தொடையாயும், ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா. (இரு விகற்ப நேரிசை வெண்பா) 4கானலம் பட்ட கலிமாத்தன் கைக்கொண்டு 5கானலம் பட்டினத்துக் கண்ணுற்றான் - கானலம் 6போதிற மோதிப் புரிவான்று மால்கடல்வாய்ப் 7போதிற மோதிப் புரிந்து இது மோனையாய், இரண்டு விகற்பத்தான் வந்தது. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை இடையாயார் தெங்கின் அனையர் ; - தலையாயார் எண்ணரும் 8பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு - நாலடியார் 216. இது முரணாய், இரு விகற்பத்தான் வந்தது. 9தா அய்த்தா அய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார் போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப்போஒய் நிற்குமோ நீடு நெடும்10புதவம் தானணைந்து பொற்குமோ *என்னாது போந்து இஃது அளபெடையாய், இரு விகற்பத்தான் வந்தது. நேரிசை வெண்பாவினுள் முதலிரண்டடியும் மோனையும் எதுகையும் ஒருசார் முரணும் அளபெடையும் என்னும் இந்நான்கு தொடையானும் அல்லது, செந்தொடையானும் இயைபுத்தொடையானும் வாரா. என்னை? இரண்டாம் அடியின் ஈறொரூஉ எய்தி முரண்ட *எதுகை ஆகியும், ஆகா திரண்டு துணியாய் இடைநனி போழ்ந்தும் *நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா - யா. கா. 23. மேற். என்றார் காக்கைபாடினியார். அஃதே எனின், முற்றும் கதுவாயும் சொல்லிற்றிலர் பிற, எனின், அற்றன்று; சிறப்புடைமை நோக்கி ஒரூஉத்தொடையை எடுத்து ஓதினார்; அல்லனவும் விதப்பானும், பிறவாற்றானும் உடன்பட்டார் எனக் கொள்க. என்னை? குறட்பா இரண்டவை நால்வகைத் தொடையாய், முதற்பாத் தனிச்சொலின் அடிமூய், இருவகை விகற்பின் நடத்தல் நேரிசை வெண்பா - யா. கா. 23. மேற். என்றார் அவிநயனார். ‘ïj‹ fU¤âahnjh? எனின், இரண்டு குறட்பாவாய், நடுவுத் தொடைக்கேற்ற தனிசொல்லால் அடிமூவாய், முதற்குறட் பாவின் முதற்றொடை, எதுகை. பகைத்தொடை, அளபெடை என்னும் நான்கு தொடையாய், ஒத்த விகற்பத்தானும் ஒவ்வா விகற்பத்தானும் வருவது நேரிசை வெண்பா, என்று மொழி மாற்றுப் பொருள்கோள் வகையால் கூறினார் என்று உணர்க. நாலோர் அடியாய்த் தனியிரண் டாவதன் ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும் நேரிசை வெண்பா ஆகும் என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும்; நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும் என்று விகற்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? இரண்டு குறள் வெண்பாவாய், நடுவுத் தொடைக்கேற்ற தனிச்சொற் பெற்று, ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவனவும், ஒற்றுமைப் படாத உலோகங்கள் ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவினோடு தனிச் சொலிடை வேறுபட்டால் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு, ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவன என்று அறியுமாற்றால் ஆறு விகற்பம் படுத்துச் சொல்லு வர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு என்க. என்னை? இருகுறள் நடுவண் தனிச்சொற் பெற்றும், இரண்டொன் றாசும் அவணிடை யிட்டும், ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும் நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும் என்றாராகலின். அவர் காட்டும் பாட்டு: (இரு விகற்ப நேரிசை வெண்பா) படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு ; - 1(நடைமுறையின்) அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - திருக்குறள் 381, 382. எனவும், தடமண்டு தாமரையின் தாதா 2டலவன் இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினான் ஊர் - யா. கா. 23. மேற். எனவும் இவை இரு குறள் நடுவண் தனிச்சொற்பெற்ற மாத்திரையானே வந்த இரு விகற்ப நேரிசை வெண்பா. (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின், அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு ; *(சிறந்தீர்) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - திருக்குறள் 204. 22. எனவும், “mÇa 3tiuÑ©L fh£Lth® ahnu bgÇa 4tiutÆu« bfh©L?- தெரியின், கரிய 5வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் 6பெரிய வரைவயிரம் கொண்டு? - நீதிவெண்பா. - யா. கா. 23. மேற். எனவும் இவை இரு குறள் தனிச்சொற் பெற்று ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா. (இரு விகற்ப நேரிசை வெண்பா) எய்தற் கரிய *இயன்றக்கால் அந்நிலைய செய்தற் கரிய செயல் என்று- வய்யகத் தீதல் இசைபட வாழ்தல் ; அதுவல்ல தூதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் 480, 231. இது முதற் குறட்பாவினோடு தனிச்சொலிடை இரண்டசை யால் ஆசிட்டு இரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா. வஞ்சியேன் என்றவன்றன் (பக். 267) என்பது, இரண்டசையால் ஆசிட்டு, ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா. சிலை விலங்கு நீள் புருவம் (பக். 265) என்பது, இரண்டு விகற்பத்தால், ஓரசையால் ஆசிட்ட நேரிசை வெண்பா. ஆர்த்த அறிவினர் ஆண்டளைஞ ராயினும் (பக். 266) என்பது ஓரசையால் ஆசிட்டு ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா. ஈண்டுத் தொல்லாசிரியர் வைத்த முறையானே சொல்லப் பட்டது. (எ) இன்னிசை வெண்பா சாக. விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொல் இயற்றப் படாதன இன்னிசை வெண்பா. இஃது இன்னிசை வெண்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் தனிச் சொல் இன்றி நான்கடியான் வருவன இன்னிசை வெண்பா எனப்படும் என்றவாறு. நான்கடி என்பது, அதிகாரவசத்தால் உரைக்கப்பட்டது. பிறரும் இவ்வாறே சொன்னார் என்க. என்னை? தனிச்சொல் தழுவல வாகி, விகற்பம் பலபல தோன்றினும் ஒன்றே வரினும் *இயற்பெயர் இன்னிசை என்றிசி னோரே என்றார் காக்கைபாடினியார். ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன இன்னிசை வெண்பா என்றார் சிறுகாக்கைபாடினியார். ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை வெண்பா என்றார் அவிநயனார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) 1துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்த2கூழ் பல்லாரோ டுண்க : 3அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் - நாலடியார் 2. எனவும், வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் - நாலடியார் 39 -யா. வி. 57. மேற். எனவும் இவை ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா. (பல விகற்ப இன்னிசை வெண்பா) வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை; அளந்தன 4போகம் அவரவ ராற்றால்; விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல் - நாலடியார் 103. எனவும், தலைக்கட் டலையைந்தும் காணேன் கடைக்கணேல் என்னா இருவரும் இங்கில்லை ; பொன்னோடை ஆழியாய் ! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ் ஏழியான் இக்கிடந்த ஏறு எனவும், வடிமலர்த்தார் நாகர் மணிக்கவரி வீச, முடிமலர்த்தேம் போதிமையோர் தன்னடிக்கீழ்ப் பெய்ய, இனிதிருந்து நல்லறம் சொல்லியான் எல்லாத் துனியிருந்த துன்பந்தீர்ப் பான் எனவும், தேனார் மலர்க்கூந்தற் றேமொழியாய் ! மேனாள் பொருளைப் பொருளென்று நம்மறந்து போனார் உருடேர் மணியோசை யோடும் - இருள் தூங்க வந்த திதுவோ மழை எனவும், கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து உருவுடைக் *கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும் - நாலடியார் 274. எனவும், கடற்குட்டம் போழ்வார் கலவர்; படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் ; தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் ; அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும் - நான் மணிக்கடிகை 16. எனவும் இவையெல்லாம் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொற் படாதன இன்னிசை வெண்பா என்றாலும் கருதிய பொருளைத் தழுவி நிற்கும் ; இயற்றப் படாதன என்ற மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வருவனவும் உள என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது. வரலாறு: (பல விகற்ப இன்னிசை வெண்பா) *பகலவன்செய் தூதி ! நிற் பண்பின்றி *வந்தால் இகலினில் நின்றார் வலியும் - இகலுடைய நன்னயத்தோ* டாயாக்காற் சந்தியாம் *அன்னான் *நடைநட்பின் நட்டாருட் பேறு இப்பொய்கையார் வாக்கினுள், தனிச்சொற்பெற்றுப் பல விகற்பத்தால் (இன்னிசை வெண்பா) வந்தவாறு கண்டுகொள்க. (பல விகற்ப இன்னிசை வெண்பா) மலிதேரான் 1கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் ;- மலிதேரான் கச்சி 2படுவ கடல்படா ; கச்சி கடல்படுவ எல்லாம் படும் - தண்டியலங்காரம் 49. மேற். -யா. கா. 24. மேற். எனவும், அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; - திங்கள் மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார், தெருமந்து தேய்வர் ஒருமா சுறின் - நாலடியார் 151. எனவும் இவை தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வந்தன. என்னை? ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியும், தனிச்சொல் இன்றிப் பலவிகிற் பாகியும், அடியடி தோறும் ஒரூஉத்தொடை அடைநவும் எனவைந் தாகும் இன்னிசை தானே - யா. கா. 24. மேற். என்றாராகலின். தனிச்சொற்பெற்றுப் பலவிகற்பத்தால் வருவன விதப்பினால் உடன்பட்டார் காக்கைபாடினியார். (அ) பஃறொடை வெண்பா 62. பாதம் பலவரின் பஃறொடை வெண்பா. இச்சூத்திரம், பஃறொடை வெண்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) நான்கடியின் மிக்க பல அடியால் வருவது பஃறொடை வெண்பா எனப்படும் என்றவாறு. நேரிசை வெண்பாவிற்கும் இன்னிசை வெண்பாவிற்கும் நான்கடி உரிமை சொன்னாராகலின், நான்கடியின் மிக்க பல அடி என்பது ஆற்றலாற் பெறப்பட்டது. பல தொடையான் வருவது பஃறொடை வெண்பா, எனக் காரணக் குறியோடு வாசகம் தழுவச் சூத்திரம் செய்யாது, வேறொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? ஒத்த விகற்பம் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பம் பஃறொடை வெண்பா என்று இரண்டு விகற்பப்படும் என்பது அறிவித்தற்குச் சொல்லப்பட்டது. வரலாறு: (ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா) 1சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல், கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி, பொருகயல், தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன *மாவடர் ஆற்றுக்கா லாட்டியார் கண் - தொல். செய். 114. இளம். - யா. கா. 24. மேற். இஃது ஒரு விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா. (பல விகற்பப் பஃறொடை வெண்பா) பன்மாடக் கூடல் மதுரை *நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே - பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் 2அந்நிலையள் - யானை 3எருத்தத் திருந்த இலங்கிலைவேற் றென்னன் திருத்தார்நன் றென்றேன் 4தியேன் - தொல். செய். 114. இளம். இது பல விகற்பத்தால் வந்த ஆறடிப் பஃறொடை வெண்பா. (பல விகற்பப் பஃறொடை வெண்பா) வையக மெல்லாம் கழனியாம் ; -வையகத்துச் செய்யகமே *நாற்றிசையும் தேயங்கள் ; -செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு ; - வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலையூர்கள் ; - சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் ; - கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம் - யா. கா. 24. மேற். இது பல விகற்பத்தால் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா. (பல விகற்பப் பஃறொடை வெண்பா) மலைமேல் மரங்கொணர்ந்து மாண்புடைத்தாச் செய்த நிலையொத்த வீதி நெடுமாடக் கூடல் விலைத்தயிர் கொள்ளீரோ? என்பாள் முலையிரண்டும் சோழன் உறந்தைக் குரும்பையோ ! தொண்டைமான் வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்போ ! ஈழத்துத் தச்சன் கடைந்த இணைச்செப்போ! அச்சுற்றுள் அன்னமோ! ஆய்மயிலோ ! 1ஆரஞர்நோய் செய்தாளை இன்னந் தெரிகிற் றிலம் இஃது எட்டடியால் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா. (பல விகற்பப் பஃறொடை வெண்பா) சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய்! வற்றா வளவயலும் 2வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் 3ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் ! நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக்கூறக் கட்டலர் தாமரையுள் ஏழும், கடுமான்றேர்க் *4கத்திருவ ருள்ளைந்தும், காயா மரமொன்றும், பெற்றவிழ்தேர்ந் துண்ணாத பேயின் *இருந்தலையும், வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயர், என்றாள் வானவன்கை விற்பொறித்த வேற்புருவத் தாள் - தொல். செய் 114. இளம். இது பன்னீரடியாற் 5பெருவல்லத்தைச் சொன்ன வெண்பா. இன்னும் பல அடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராணசாகரமும் முதலாகவுடைய செய்யுள்களிற் கண்டு கொள்க. தொடையடி இத்துணை என்னும் வழக்கம் உடையதை இன்றி உறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமம் கொளலே என்றார் காக்கைபாடினியார். தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா என்றார் சிறுகாக்கைபாடினியார். தொடைமிகத் தொடுப்பது பஃறொடை வெண்பா என்றார் அவிநயனார். ஏழடி இறுதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக் கியைந்தன அடியே; மிக்கடி வருவது செய்யுட் குறித்தே (சங்கயாப்பு) - யா. வி. 32. மேற். எனவும், ஆறடி முக்காற் பாட்டெனப் படுமே; ஏறிய அடியும் செய்யுளுள் வரையார் எனவும் ஒருசார் ஆசிரியர், சிறப்புடைமை நோக்கி, ஏழடி என்று எடுத்தோதினார். அல்லவும் உடம்பட்டார் *தொடர்நிலைப் பஃறொடை வெண்பாப் பல அடியாலும் வரும் என்று இவ்வாறு சொன்னார் எனக் கொள்க. குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்னும் ஐந்து வெண்பாவும் இனக்குறள் வெண்பா, விகற்பக்குறள் வெண்பா நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப இன்னிசை வெண்பா, பல விகற்ப இன்னிசை வெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என்று இவ்வாறு விகற்பிக்கப் பத்தாம். அவை தன்சீர் வெண்டளையாலும் இயற்சீர் வெண்டளையாலும் கூறுபடுப்ப, இருபதாம். அவை தன்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும் தன் சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும், இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும் இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும் இவ்வாறு கூறுபடுப்ப, நாற்பதாம். மூன்று செப்பலோசையாலும் பத்து வெண்பா வினையும் உறழ முப்பதாம். ஓசையும் தளையும் கூட்டி உறழ நூற்றிருபதாம். மற்றும் பிறவகையாலும் விகற்பித்து நோக்கப் பலவுமாம். (கட்டளைக் கலித்துறை) ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை ; துன்னும் அடிபலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடையாம் ; சிறை வண்டினங்கள் துன்றும் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே! - யா. கா. 24. என்னும் இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. (நேரிசை வெண்பா) பண்பாய்ந்த 1ஏழு பதினா றிழிபுயர்வா வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின் ஈற்றடிக் 2கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும் 3பாற்படுத்தார் நூலோர் பயின்று எனவும், குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமோ டொற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு எனவும், முற்றுகரந் தானும் 4முதற்பாவின் ஈற்றடிப்பின் நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல் துடிமருங்கின் மெல்லியலாய் 5சொல்லு எனவும், ஆதியாய் ஆற்றல் உடைத்தாய் வரம்பிகவா நீதிசால் நூல்பொருந்தி நிற்றலால் - ஓதநீர் 6மண்பாவு தொல்சீர் மறைவாணர் பாற்சார்த்தி வெண்பா உரைத்தார் விரித்து எனவும், (இதன் ஈற்றடி எழுத்துப் பதினொன்று) வெண்பாவோர் ஐந்தும் விகற்பத்தாற் பத்தாகித் தண்பாற் றளைநான்கின் நாற்பதாய்த் - திண்பான்மைச் செப்பல் ஒரு மூன்றின் வந்துறழத் சேர்ந்தபாத் தப்பாத 7முந்நாற்ப தாம் எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (கூ) வெண் செந்துறை சாங. ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், வெண்பாவின் இனம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார், அவற்றுள் இச்சூத்திரம் வெண்செந்துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஒழுகிய ஓசையினை உடைத்தாய்த் தம்முள் ஒத்து வந்த இரண்டு அடித்தாய், விழுமிய பொருளைப் பயந்து நிற்பது யாது? அது வெண்செந்துறை என்றும் செந்துறை வெள்ளை என்றும் வழங்கப்படும் என்றவாறு. சீர் வரையறுத்திலாமையின், எனைத்துச் சீரானும் வரப் பெறும். அந்தம் குறையா தடியிரண் டாமெனிற் செந்துறை என்னும் சிறப்பின தாகும் என்றார் காக்கைபாடினியார். ஈரடி இயைந்தது குறள்வெண்பா பாவே; ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை - யா. வி. 59. மேற். என்றார் அவிநயனார். இனி அதற்குச் செய்யுள் வருமாறு : (வெண் செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை - முதுமொழிக் காஞ்சி. 1 எனவும், கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே - கொன்றை வேந்தன். 1 எனவும் இவை நாற்சீர் இரண்டடியால் வந்த செந்துறை வெள்ளை. (வெண் செந்துறை) நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னும் மாந்தர்கள் 1குடிலும் செய்து கொள்ளாதே இஃது அறுசீர் அடியால் வந்த செந்துறை வெள்ளை. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (க0) குறட்டாழிசை சாச. அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும் சந்தழி குறளும் தாழிசைக் குறளே. இச்சூத்திரம், குறட்டாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அந்தடி குறைநவும் - இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவனவும் (இரண்டடி என்பது, அதிகார வரைவி னால் உரைக்கப்பட்டது), செந்துறைச் சிதைவும்- விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வெண்செந் துறையிற் சிதைந்து இரண்டடியும் ஒத்துவருவனவும், சந்தழி குறளும் - செப்பலோசையிற் சிதைந்து வந்த குறள் வெண்பாவும், தாழிசைக் குறளே - குறட்டாழிசை என்றும் தாழிசைக் குறள் என்றும் வழங்கப்படும் என்றவாறு. அவற்றுக்குச் செய்யுள் வருமாறு: (குறட்டாழிசை) நீல மாகடல் நீடு வார்திரை நின்ற போற்பொங்கிப் பொன்றும் ஆங்கவை காலம்பல காலம் சென்று செல்வ யாக்கை கழிதலுமே - யா. கா. 26. மேற். எனவும், 1 பாவடிமத யானை மன்னர்கள் *பைம்பொன் நீள்முடி மேல்நிலாவிய சேவடி எங்கோமான் செழும்பொன் எயிலவனே எனவும், நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற் கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே - யா. கா. 26. மேற். எனவும், தண்ணந் தூநீர் ஆடச் சேந்த 2வண்ண ஓதி கண் எனவும் இவை இரண்டடியாய், ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை. உறிபோல் நரம்பெ ழுந்தும் 3பளத்தி சிறியள் செவிசிந் திலபொரித் தனவே எனவும், திடுதிம் மெனநின் றுமுழா அதிரப் படிதம் பயில் கூத் தருமார்த் தனரே எனவும், அறந்தருவா னன்றோ புறந்தருவா னன்றோ மறந்தேயு மையாங் கிறுங்கிடுதிர் கண்டீர் எனவும், அறுவர்க் கறுவரைப் பெற்றுங் 1கவுந்தி மறுவறு பத்தினி போல்வையி னீரே - யா. கா. 26 மேற். எனவும், 2பிண்டியின் னீழற் பெருமான் பிடர்த்தலை மண்டிலந் தோன்றுமால் வாழி அன்னாய் ! - யா. கா. 26 மேற். எனவும், என்னே சொல்லுதி வாழி நங்காய் ! பொன்னே சொல்லுவன் போகு நங்காய் ! எனவும் இவை ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி, இரண்டடியும் ஒத்து வந்தமையாற் செந்துறை சிதைந்த குறட்டாழிசை. 3கோடல் மன்னு பூங்கானல் குயில்கள் மன்னு நீள்சோலை நாட வருநம் மினியர் நயந்து எனவும், வண்டார் பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் 4பண்டையள் அல்லள் படி - யா. கா. 26 மேற். எனவும் இவை நாலசைச்சீரால் வந்தும், வேற்றுத்தளை விரவியும் செப்பலோசை அழிந்தும் வந்தமையால், சந்தழி குறட்டாழிசை. பிறவும் அன்ன. (கட்டளைக் கலித்துறை) அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் செந்துறை ஆகும் திருவே! அதன்பெயர் ; சீர்பலவாய் அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபுமங்கேழ் சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. (கக) குறட்பாவின் இனம் சாரு. உரைத்தன இரண்டும் குறட்பா இனமே. இச்சூத்திரம், வெண்செந்துறையும் குறட்டாழிசையும் இன்னபாவின் இனம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) இங்ஙனம் சொல்லப்பட்ட செந்துறை வெள்ளை யும் தாழிசைக் குறளும், குறள் வெண்பாவின் இனம் என்றவாறு. பிறரும் இவற்றிற்கு இலக்கணச் சூத்திரம் சொல்லிப் பின்னையும், கூறிய இரண்டும் குறட்பா இனமே என்றார் எனக் கொள்க. செந்துறை வெள்ளையும் தாழிசைக் குறளும் ஏழுதளை யாலும் கூறுபடுப்ப, இரண்டுமாய்ப் பதினான்கு செய்யுளாம் ; சிறப்புடைத் தளையும் சிறப்பில் தளையும் என்றிவ்வாற்றாற் கூறுபடுப்ப, இருபத்தெட்டாம்; மற்றும் விகற்பிக்கப் பலவுமாம். வெண்பாவிற்கு இனமாய், செவ்விதாய், ஒழுகிய ஓசைத் தாய், விழுமிய பொருளை உள்புக்குத் துறைபோய நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலின், வெண்செந்துறை என்பதூஉம், செந்துறை வெள்ளை என்பதூஉம் காரணக்குறி. இரண்டடியாம் நேரடித்தாய்த் தாழ்ந்திசைத்தலானும், ஒழுகலோசையினும் செப்பலோசையினும் வழுவித் தாழ்ந்த ஓசைத்தாகலானும், விழுப்ப மின்றித் திண்ணிதாகிய பொருளைச் சொல்லுதலானும் குறட்டாழிசை என்பதூஉம், தாழிசைக் குறள் என்பதூஉம் காரணக்குறி. (கஉ) வெண்டாழிசை சாசா. அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் விடினது வெள்ளொத் தாழிசை யாகும். இச்சூத்திரம், வெண்டாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடி மூன்றாய், ஈற்றடி முச்சீராய், இறுவன யாவை? அவை வெள்ளொத்தாழிசை என்றும் வெண்டாழிசை என்றும் வழங்கப்படும் என்றவாறு. அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் வெள்ளொத் தாழிசை ஆகும் என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும், விடினது என்று மிகுத்துச் சொல்லவேண்டியது என்னை? சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்று வந்து நடப்பன வெள்ளொத்தாழிசை எனப்படும் என்றற்கும்; வெள்ளொத்தாழிசை கொள்ளாது, பிற தளை தட்டு, ஒன்றாயும் இரண்டாயும் ஒரு பொருண்மேல் மூன்றாயும், மூன்றின் மிக்கு வருவனவும் எல்லாம் வெண்டாழிசை எனப்படும் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது. பிறரும், ஈரடி முக்கால் இசையினும் தளையினும் வேறுபட் டியல்வன வெண்டா ழிசையே என்றார் எனக் கொள்க. வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை விரவாது ஒரு பொருண்மேல் மூன்றாயும்; வெள்ளோசை தழுவாது வேற்றுத்தளை விரவி ஒரு பொருண்மேல் ஒன்றாயும், இரண்டு இணைந்தும், மூன்றின் மிக்கும், மூன்று அடுக்கிப் பொருள் வேறாயும் வருவன எல்லாம் ஈரடி முக்கால் என்னும் வெண்பாவின் இனமெனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (வெள்ளொத்தாழிசை) அன்னாய் ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி 1ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து 2துன்னான் துறந்து விடல்? 1 ஏடீ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து 3வீடான்* துறந்து விடல்? 2 பாவாய் ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்? 3 - யா. கா. 27 மேற். 3 என இவை வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை விரவாது, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையின், வெள்ளொத்தாழிசை. (வெண்டாழிசை) போதார் நறும்பிண்டிப் பொன்னார் *மணியணையான் தாதார் மலரடியைத் 1தணவாது வணங்குவார் தீதார் வினைகெடுப்பார் சிறந்து - யா.வி.15.மேற். இது வெள்ளோசை தழுவாது, வேற்றுத்தளை விரவி, முதற்கண் வெண்டளை தட்டு வந்தமையான், வெண்டாழிசை எனப்படும். (வெண்டாழிசை) *நன்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று *முனிவ செய்யார் அன்பு வேண்டு பவர் - யா. வி. 15. மேற். -யா. கா. 27. மேற். இஃது ஆசிரியத்தளையான் வந்த வெண்டாழிசை. (வெண்டாழிசை) சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக் கார்வந்த ததனோடும் கமழ்குழலாய் ! நிற்பிரிந்தார் தேர்வந்த திதுகாணாய் சிறந்து இது கலித்தளையான் வந்த வெண்டாழிசை. (வெண்டாழிசை) முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத் தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து வழங்கின இவை காணாய் வந்து இது வஞ்சித்தளையான் வந்த வெண்டாழிசை, பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, பிறவும் வந்த வழிக் கண்டு கொள்க. வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை என்றவற்றை வேறுபடாதே வெள்ளொத்தாழிசையே என்று வழங்கவும் அமையும். தன்பா அடித்தொகை மூன்றாய் இறும்படி வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின் தண்பா இனங்களிற் றாழிசையாகும். என்றார் காக்கைபாடினியார். அடிமூன் றாகி வெண்பாப் போல இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை என்றார் சிறுகாக்கைபாடினியார். அடிமூன் றாகி வெண்பாப் போல இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை (ககூ) என்றார் அவிநயனார். வெண்டுறை சாஎ. மூன்றடி முதலா ஏழடி காறும்வந் தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும். இச்சூத்திரம், வெண்டுறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) மூன்று அடி முதலாக ஒன்று தலைச் சிறந்து ஏழடிகாறும் வந்து, கடைக்கண் ஓரடியும் பல அடியும் ஒரு சீரும் இரு சீரும் பல சீரும் குறைந்து, அவை எல்லாம் ஓர் இசையாய் வரினும் ; முதல் ஓர் இசையாய்ப் பின் ஓர் இசையாய் வரினும், வெண்டுறையாம் என்றவாறு. அவற்றை ஓரொலி வெண்டுறை என்றும் வேற்றொலி வெண்டுறை என்றும் வழங்குப. வரலாறு: (ஓரொலி வெண்டுறை) 1தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடி ரண்டும் பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே - யா. கா. 27. மேற். இது மூன்றடியாய், ஈற்றடி இரண்டும் இரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. குழலிசைய வண்டினங்கள் 2கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய, அழலெரியின் மூழ்கினவால் அந்தோ ! 3mËa ! என் றயல் வாழ் மந்தி கலுழ்வன போல் 4நெஞ்சகைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன் - யா. கா. 27. மேற். இது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன் செறிவுறும் *எழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிறபிற நிகழ்வன பின் - யா. கா. 27. மேற். இஃது ஐந்தடியாய், ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. (வேற்றொலி வெண்டுறை) கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்? இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே 1ஏமுற்றால் இயைவ தென்னாம்? பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்? புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே? mšyhjh® bghŒaht j¿gntš mikahnjh? இஃது ஐந்தடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை. முழங்கு களியானே 2மூரிக் கடற்படை 3முறித்தார் மன்னர் வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் 4விண்ணன் செழுந்தண்பூம் 5பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய எழுந்த6சே திகத்துள் இருந்தவண் ணல்லடி விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத் தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ இஃது ஆறடியாய். முதலடி இரண்டும் அறுசீராய், பின் நான் கடியும் நாற்சீராய், முதலிரண்டடியும் ஓர் இசையாய், பின் நான்கடியும் மற்றோர் இசையாய் வந்தமையால், வேற்றொலி வெண்டுறை எனப்படும். முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான் வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய வைவேல் பாடிக் கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம் இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந் தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள் புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்து நின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே இஃது ஏழடியாய், முதலிரண்டடியும் அறுசீராய், ஓரோ சையால் வந்து, பின் ஐந்தடியும் நாற்சீராய், வேறோர் ஓசையால் வந்த வேற்றொலி வெண்டுறை. என்னை? அடியைந் தாகியும் மிக்கும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும், வெண்டுறை என்னும் விதியின வாகும் என்றார் காக்கைபாடினியார். பெற்றவடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய் இற்ற அடியும் ஈற்றயல் அடியும் ஒன்றும் இரண்டும் நின்ற *தனசீர் கண்டன குறையின் வெண்டுறை யாகும் என்றார் மயேச்சுரர். ஐந்தா றடியின் நடந்தவும் அந்தடி 1ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும் வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே என்றார் அவிநயனார். இவர்களும் விதப்பான்* மூன்றடி முதலா ஏழடிகாறும் இவ்வாறே உடன்பட்டார் எனக் கொள்க. (கச) வெளி விருத்தம் சாஅ. நான்கடி யானும் நடைபெற் றடிதொறும் தான்றனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே. இச்சூத்திரம், வெளி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்கு அடியானும், நடைபெற்று- நான்கு அடியால் வந்து, (நான்கு அடியானும் என்ற உம்மையான், மூன்று அடியானும் அருகி வரப்பெறும் எனக் கொள்க), அடிதொறும் தான் தனிச்சொல் கொளின் வெளிவிருத்தமே - அடிதொறும் இறுதிக்கண் ஒரு சொல்லே தனிச்சொல்லாய்ப் பொருள் கொண்டு முடியின் வெளி விருத்தம் எனப்படும் என்றவாறு. இறுதி என்பது, மூன்றடி முதலா ஏழடி காறும் (யா. வி. 67) என்னும் சூத்திரத்தினின்றும் அதிகாரம் வருவித்து உரைக்கப் பட்டது. அடிதொறும் தனிச்சொற்கொளின் வெளி விருத்தம்மே, என்னாது, தான் என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தனிச் சொல்லை அடி உட்படச் சொன்னால் இயைபுத் தொடையாம்; இஃது அப்பெற்றியன்றியே வேறாய் வந்தது போலும் இங்குத் தனிச்சொல்லாவது என்று அடியுட்படாதே பிரித்து அலகிட்டு வழங்கப்படும். அல்லாது, அடிதொறும் பொருள் அற்று மண்டிலமாய் வருவன அடிமறி மண்டில வெளி விருத்தம் என்றும். அல்லாதன நிலை வெளி விருத்தம் என்றும் வழங்கப்படும் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (அடி மறி மண்டில வெளி விருத்தம்) சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்; 1புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்; கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல்- எஞ்ஞான்றும்; நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும் எனவும், ‘Mth ! என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்; கூகூ! என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்; மாமா ! என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்; ஏகிர் நாகீர் ! என்செய்தும் ! என்றார் - ஒருசாரார்; -யா. கா. 27. 41. மேற். எனவும், மாலை மணங்கமழும் 2மௌவல் முகைவிரியும் - எந்தைகுன்றம்; காலை 3மணிக்குவளை காதலர் கண்விழிக்கும் - எந்தைகுன்றம் நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும் - எந்தைகுன்றம் ஆலி மயிலகவ *அந்தண் டுவனமே - எந்தைகுன்றம் எனவும் இவை நான்கு அடியாய், அடிதோறும் பொருள் அற்று அடிமறியாய் வந்தமையால், அடிமறி மண்டில வெளி விருத்தம். (நிலை வெளி விருத்தம்) சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - 4அம்மானாய் ! ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும்-அம்மானாய்! மாயிருந் தானை 1மயிடன் றலையின்மேல் - அம்மானாய் ! பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய் ! இஃது அடிமறியாய் வாராமையின், நிலை வெளி விருத்தம். (அடி மறி மண்டில வெளி விருத்தம்) உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே! பெற்றம் உடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே! மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே? எனவும், ஆடு 2கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே - எந்தைகுன்றம் ; நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே - எந்தைகுன்றம்; கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே - எந்தைகுன்றம் எனவும் இவை மூன்றடியாய் வந்த அடி மறி மண்டில வெளி விருத்தம். (நிலை வெளி விருத்தம்) ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ்ப் - புறாவே! வேதங்கள் நான்கும் 3விரித்தான் விரைமலர்மேற் - புறாவே! பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே! இது மூன்றடியால் வந்த நிலை வெளி விருத்தம். பிறரும் இலக்கணம் இவ்வாறே சொன்னார். என்னை? ஒரு மூன் றொருநான் கடியடி தோறும் தனிச்சொற் றழுவி நடப்பன 4வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே - யா. கா. 27. மேற். என்றார் காக்கைபாடினியார். நான்கு மூன்றடி தோறும் தனிச்சொல் தோன்ற வருவன வெளிவிருத் தம்மே என்றார் சிறுகாக்கைபாடினியார். மூன்று நான்கடி தோறும் தனிச்சொற் *கொளீஇய எல்லாம் வெளிவிருத் தம்மே என்றார் அவிநயனார். மூவடி யாகியும் நாலடி யாகியும் பாவடி வீழ்ந்து பாடலுள் நடந்தும் கடிவரை விலவாய் அடிதொறும் தனிச்சொல் திருத்தகு நிலைய விருத்த மாகும் என்றார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர். (மயேச்சுரர்) மூன்றடியால் வரும் வெளி விருத்தமும், மூன்றடியால் வரும் வெண்டுறையும், வெள்ளொத்தாழிசையும் சிந்தியல் வெண்பாவின் இனம் என்றும் ; தனிச்சொல் உடைமை யால், நான்கடி வெளி விருத்தம் நேரிசை வெண்பாவின் இனம் என்றும், நான்கடி வெண்டுறை இன்னிசை வெண்பா வின் இனம் என்றும் ; ஐந்தடி முதலா ஏறிய அடியுடைய வெண்டுறைகள் பஃறொடை வெண்பாவின் இனம் என்றும் ஒருபுடை ஒப்புமை நோக்கி, அப்பாற்சார்த்தி வழங்கப் படும். வெண்பாவிற்கு இனமாகிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும், வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, அடிமறி மண்டில வெளிவிருத்தம், நிலை வெளி விருத்தம் என்று கூறுபடுப்ப, ஆறாம் ; அவற்றுள் வெள்ளொத்தாழிசை, வெண்டளை நான்கினாலும் கூறுபடுப்ப, நான்கே ஆவது, வேற்றுத்தளை விரவாதாகலின். வெண்டாழிசை முதலாகிய ஐந்தும், சிறப்புடைய ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, எழுபதாம்; வெள்ளொத்தாழிசை யோடும் கூட்டிச் சொல்ல, எழுபத்து நாலாம்; பிறவாற்றால் விகற்பிக்கப் பலவாம். (கட்டளைக் கலித்துறை) மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத் தான்றனிச் சொற்பெறும் தண்டா விருத்தம்; வெண்டாழிசையே ஆன்றடி யாய்வெள்ளை போன்றிறும் ; மூன்றிழி பேழுயர்வாய் ஆன்றடி தாஞ்சில அந்தம் குறைந்திறும் வெண்டுறையே - யா. கா. 27. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க. (கரு) வெண்பாவும் அதன் இனமும் முடிந்தன. ஆசிரியப்பா 69. அகவல் இசையன அகவல்; மற்றவை ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், முறையானே ஆசிரியப்பா ஆமாறு, பொதுவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய நான்கு ஆசிரியப்பாவும், ஏ என்றும், ஓ என்றும், ஈ என்றும், ஆய் என்றும், என் என்றும், ஐ என்றும் இறும் என்றவாறு. அகவல் என்பது, ஆசிரியம் என்றவாறு. என்னை? அகவல் என்ப தாசிரியப் பாவே - (சங்கயாப்பு) -யா. வி. 16. 27. மேற். என்றாராகலின். ஏ, ஓ, ஈ என்புழி ஏ என்னும் அசைச்சொல்லை முன் வைத்தமையால், ஏ என்று இறுவது சிறப்புடைத்து. என்னை? சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல் என்பது தந்திர உத்தியாகலின். அகவல் இசையன அகவல்; அவை ஏஓ ஈஆய் என்ஐ என்றிறும் என்னாது, மற்று என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும், ஒழுகிசை அகவலும் என மூன்று வகைப்படும் அகவல் ஓசை என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது ; 1நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும், நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும், ஆயிரு தளையுமொத் தாகிய அகவலும், ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்னா ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப - யா. கா. 21 மேற். என்றாராகலின். (நேரிசை ஆசிரியப்பா) போது சாந்தம் 2பொற்ப ஏந்தி 3ஆதி நாதற் சேர்வோர் சோதி வானம் துன்னு வோரே - யா. கா. 5,21. மேற். என்பது ஏந்திசை அகவல் ஓசை. (நேரிசை ஆசிரியப்பா) அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய மணிதிகழ் அவிரொளி 1வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே - யா. கா. 5,12. மேற். என்பது தூங்கிசை அகவல் ஓசை. (நேரிசை ஆசிரியப்பா) குன்றக் குறவன் காதல் மடமகள் வரையர மகளிர் 2புரையும் சாயலள் 3ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே - யா. கா. 9. 21. மேற். என்பது ஒழுகிசை அகவல் ஓசை. இன்னும் பிறவாற்றான் வருவன: (நேரிசை ஆசிரியப்பா) கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே; எம்மில் அயல தேழில் 4உம்பர் 5மயிலடி இலைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் 6பாடுநனி கேட்டே - குறுந். 138. இன்னவை பிறவும் தூங்கிசை அகவல் ஓசை எனப்படும். (நிலைமண்டில ஆசிரியப்பா) பொழிலே இரவோ ரன்ன இருளிற் றாகியும், நிலவோ ரன்ன வெண்மணல் ஒழுகியும், அரைசுமணம் நயந்த பந்தர்ப் போலவும், வரைவாழ் இயக்கியர் உறைவிடம் போலவும் 7வண்ணனை முற்றா தாகியும், ஒண்ணிழற் பூவிரி நாற்றம் அன்றியும் 8ஏர்வரக் குங்குமம் கமழும் எங்கோன் வரையென வியந்தனன் இருந்து வீணை பண்ணி நயந்த கீதம் பாடும் என்ப 9வயந்த மாகிய பொழிலி னானே இன்னவை பிறவும் ஏந்திசை அகவல் ஓசை எனப்படும். (நூற்பா) இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பின் தானினிது விளங்கி யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை அடிதொடை 1தூக்கோ டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் 2ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே எனவும், முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன் - யா. வி. பாயிரம். எனவும் இன்னவை எல்லாம் நூற்பா அகவல் ஓசையாய், ஒழுகிசை அகவல் ஓசை எனப்படும். இவை ஏ என்று இற்றவாறு கண்டுகொள்க. (நேரிசை ஆசிரியப்பா) 3பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெரும ! நிற் 4றகைக்குநர் யாரோ - அகநானூறு 46. இஃது ஓ என்று இற்ற ஆசிரியம் குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி இரங்குமென் 5றழுங்கல் வேண்டா செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு 6சென்றீ இஃது ஈ என்று இற்ற ஆசிரியம். முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் 7புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும் தண்டுறை ஊரன் தெளிப்பவும் உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்! - ஐங்குறுநூறு 21 இஃது ஆய் என்று இற்ற ஆசிரியம். (நிலைமண்டில ஆசிரியப்பா) அலந்த மஞ்ஞை யாமம் கூவப் புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென் - பெருங்கதை 1: 54: 144-5 இன்னவை பிறவும் உதயணன் கதையின்கண் என் என்று இற்ற ஆசிரியம் எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப் பூந்தண் சிலம்பன் தேந்தழை இவை, எனக் காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப் பூண்முலை நோக்கி இறைஞ்சி வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை இஃது ஐ என்று இற்ற ஆசிரியம். என் என்னும் அசைச்சொல் ஆசிரியத்துள் அருகியன்றி வாராது, வரினும், சிறப்பிலது எனக் கொள்க. தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க் கன்பா வறைந்த ஆசிரியம் என்ப என்று ஓசை சொல்லி, ஏயெனச் சொல்லின் ஆசிரியம் இறுமே; *ஓஆய் என ஒரோவழி ஆகும் என்னென் சொல்லும் பிறவும் ஒன்றித் துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே என்று ஈறு சொன்னார் அவிநயனார். இயற்சீர்த் தாகியும், அயற்சீர் விரவியும், தன்றளை தழுவியும், பிறதளை தட்டும், அகவல் ஓசைய தாசிரி யம்மே என்று ஓசை சொல்லி, ஏயென் றிறுவ தாசிரியத் தியல்பே; ஓய் இறுதியும் உரியவா சிரியம் நின்ற தாதி நிலைமண் டிலத்துள் என்றும் என்னென் றிறுதிவரை வின்றே அல்லா ஒற்றும் அகவலின் இறுதி நில்லா அல்ல; நிற்பன வரையார் என்று ஈறு சொன்னார் நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்) ஈ என்றும் ஐ என்றும் இறும் என்று இவர்கள் சொற்றிலரால் எனின், இவர்களும் இலேசு எச்சு உம்மை விதப்புக்களால் உடம்பட்டார்; இந்நூலுடையார் எடுத்து ஓதினார். இது வேற்றுமை. அகவல் ஓசை ஆசிரி யம்மே (கசு) என்று பிறரும் சொன்னார் எனக் கொள்க. ஆசிரியப்பாவின் பெயர் வேறுபாடு vo. நேரிசை இணைக்குறள் மண்டிலம் நிலைப்பெயர் ஆகுமண் டிலமென் றகவல் நான்கே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின் அகவல் ஓசையோடு அளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும், தன் தளை தழுவியும் பிற தளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வாராது அயற்பா அடி மயங்கியும் மயங் காதும், ஐஞ்சீர் அடியால் அருகி வரும் என்றும், நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்ற நாற்சீரடியால் நடைபெறும் என்றும் வேண்டப்பட்ட ஆசிரியப்பாவினது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நேரிசை ஆசிரியமும், இணைக்குறள் ஆசிரியமும், நிலைமண்டில ஆசிரியமும், அடிமறி மண்டில ஆசிரியமும் என ஆசிரியப்பா நான்காகும் என்றவாறு. ïJ bkhÊ kh‰W¢ N¤âu« ‘v›thnwh? எனின், நிலைப் பெயர் ஆகும் மண்டிலம் என்றவழி, நிலை என்ப தனையும் மண்டிலம் என்பதனையும் கூட்டி நிலை மண்டிலம் என்றும் ; பின்னை அகவல் என்பதனையும் பெயர் என்ப தனையும் நான்கு என்பதனையும் ஆகும் என்பதனையும் கூட்டி, அகவற் பெயர் நான்காகும், என்றும் கொள்க. மிக்க புகழும் சொல்லும் ஓசையும் உடைத்தாகலினால், நேரிசை என்பதூஉம் காரணக்குறி. இணைந்து குறைந்த அடியுடைத்தாகலின், இணைக் குறள் என்பதூஉம் காரணக்குறி. எல்லா அடியும் முதல் நடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் ஒத்து வருதலின், அடி மறி மண்டிலம் என்பதூஉம் காரணக்குறி. ஒரு பெற்றியே நின்று எல்லா அடியும் ஒத்து நடத்தலின், நிலை மண்டிலம் என்பதூஉம் காரணக்குறி. என்னை? நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம் ஈரிரண் டியல எண்ணுங் காலை என்றார் பிறரும். 1மூன்று அகவல் ஓசையானும் நான்கு ஆசிரியப்பாவையும் உறழப் பன்னிரண்டாம். நான்கு ஆசிரியப்பாவினையும் சிறப்புடை ஏழ்தளை, சிறப்பில் ஏழ்தளை எனக் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம். அவை ஓசையும் தளையும் கூட்டி உறழ. நூற்று அறுபத்தெட்டாம். பெயர் என்ற விதப்பு என்னை? எனின், ஒருசார் ஆசிரியர் வேற்றடி விரவி வந்த ஆசிரியங்களை விரவியல் ஆசிரியம் என்றும் விரவா தனவற்றை இன்னியல் ஆசிரியம் என்றும் சொல்லுவர் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. நான்கு ஆசிரியத்தினையும் இவ்விரு பெயராற் கூறுபடுப்ப, எட்டாம், அவை ஓசையும், தளையும் கூட்டி உறழ, முந்நூற்று முப்பத்தாறாம். பிறவாற்றான் விகற்பிக்கப் பலவாம். (கஎ) நேரிசை ஆசிரியப்பா எக. அந்த அடியின் அயலடி சிந்தடி வந்தன நேரிசை ஆசிரி யம்மே. ‘ï~J, v‹ Ejȉnwh? எனின், மேல் அதிகாரம் பாரித்த நான்கனுள் நேரிசை ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அந்த அடியின் அயல் அடி - ஈற்றடியின் மேலையடி, சிந்தடி வந்தன- முச்சீரடியான் வந்தன, நேரிசை ஆசிரியம்மே - நேரிசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. வரலாறு: நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் 1கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே - குறுந்தொகை 3. இஃதீற்றயலடி முச்சீரான் வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா. (நேரிசை ஆசிரியப்பா) சிறுவெள் ளரவின் 2அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யாஅங்கு இளையள் முளைவாள் எயிற்றள் வளையுடைக் கையளெம் அணங்கி யோளே - குறுந். 119. இது தூங்கிசை அகவற் சிறப்புடை இயற்சீரான் வந்த நேரிசை ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. சிந்து வந்தன என்னாது, பெயர்த்தும் அடி என்றது என்னை? கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வருவுழி எருத்தடி முச்சீரான் வரப்பெறாது என்பர் கடியநன்னியார் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை? கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின், முச்சீர் எருத்தின் றாகி, முடிவடி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே (கடியநன்னியார்) என்றாராகலின். இற்றதன் மேலடி ஒருசீர் குறைய நிற்பது நேரிசை ஆசிரி யம்மே என்றார் அவிநயனார். இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி பெறுவன நேரிசை ஆசிரி யம்மே என்றார் சிறுகாக்கைபாடினியார். (கஅ) இணைக்குறள் ஆசிரியப்பா எஉ. இணைக்குறள் இடைபல குறைந்திறல் இயல்பே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், இணைக்குறள் ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) இணைக்குறள் - இணைக்குறள் ஆசிரியப்பா, இடை பல குறைந்து இறல் இயல்பே - ஈற்றடியின் மேலையடி இரண்டு சீரும் ஒரு சீரும் குறைந்து இறுதல் இயல்பு எனப்படும். என்றவாறு. ஈற்றடியின் மேலையடி என்பது, 1அதிகாரம் வருவித்து உரைத்தது. இயல்பே என்ற விதப்பால், முதலடியும் ஈற்றடியும் ஒழித்து ஏனையடி ஒரோவொன்று ஒரு சீரும் இரு சீரும் குறைந்து வரும் என்க. (இணைக்குறள் ஆசிரியப்பா) 2நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை, சாரச் சாரச் சார்ந்து, தீரத் தீரத் தீர்பொல் லாதே - தொல். செய். 66. இளம். பேரா. மேற். - யா. கா. 28. மேற். இது சிறப்புடை நேரொன்றாசிரியத் தளையான் வந்து, ஈற்றயலடி இரண்டும் முச்சீரான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா. *இவனினும் இவனினும் இவள்வருந் தினளே; *இவனினும் வருந்தினன் இவனே; *இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே; தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே; நன்மலை நாடனும் உளனே; புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே இது சிறப்புடை நிரையொன்றாசிரியத் தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா. *குன்றுவாழ் கொடிச்சியர் சீறூர் எடுத்த அம்மெல் லாகத் தலரிவ 1னோனாது நீங்கிய வண்ணமும் நீங்கிப் பாங்கியற் றமரொடும் வந்து தாங்கிய இன்பம் தணந்தனை பெரிதே இது சிறப்பில் கலித்தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா. 2சிறியகட் பெறினே எமக்கீயு 3மன்னே ! பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே ! சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே ! 5. பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே ! என்பொடு4 தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே ! அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே 5நரந்தம் நாறும் தன்கையாற் புலவுநாறும் என்றலை தைவரு மன்னே ! 10. அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் 6துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன் 15. அரு7நிறத் தியங்கிய வேலே; 8ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ ! இனிப் பாடுநரும் இல்லை; பாடுநருக்கொன் றீகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் 20. சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்று ஈயாது வீயும் உயிர்1தவப் பலவே - புறநானூறு 235. இதனுள் இருசீர் அடியும் முச்சீரடியும் வந்தன. என்னை? இடைபல குறைவ திணைக்குற ளாகும் என்றார் அவிநயனார். ஈற்றயல் குறைந்த நேரிசை ; இணையாம் ஏற்ற அடியின் இடைபல குறைந்தன என்றார் மயேச்சுரர். அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா யிரண்டும் இடைவர நிற்ப திணைக்குறள் ஆகும் என்றார் காக்கைபாடினியார். இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும் என்றார் சிறுகாக்கைபாடினியார். (ககூ) அடி மறி மண்டில ஆசிரியப்பா எஙு. மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம் இஃது என் நுதலிற்றோ? எனின், அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) மனம் படும் அடி முதலாய் இறின் - 2யாதானும் மனப்பட்டது ஓர் அடி முதலாகச் சொல்லப்பட முடிவது, மண்டிலம்-மண்டில ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. வரலாறு: (அடி மறி மண்டில ஆசிரியப்பா) மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் *கட்பனி வரலா னாவே; ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே; கூறாய் தோழியாம் வாழு மாறே - தொல். செய். 115. பேரா. மேற். - யா. வி. 95. மேற். இது தன் சீர் நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா. பூங்கட் குறுந்தொடி யாங்குற் றனளோ? புனல்சேர் ஊரன் பொதுமகன் அன்றோ? ஏதில் மாக்கட் கெவனா கியரோ? போதி பாண ! நின் பொய்ம்மொழி எவனோ? இது சிறப்புடை இயற்சீர் வெண்டளையான் வந்த மண்டில ஆசிரியப்பா. 1சூரல் பம்பிய சிறுகான் யாறே; 2சூரர மகளிர் ஆரணங் கினரே; வாரலை எனினே யானஞ் சுவலே; சாரல் நாட ! நீவர லாறே - தொல். செய். 113. இளம். மேற். - யா. கா. 28. மேற். இது சிறப்புடை ஆசிரிய நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா. இவற்றை மனப்பட்டது ஓர் அடி முதலாக உச்சரித்து, ஓசையும் பொருளும் பிழையாதவாறு கண்டுகொள்க. என்னை? உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதது மண்டில யாப்பே - யா. கா. 28. மேற். என்றார் காக்கைபாடினியார். கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர் என்றார் சிறுகாக்கைபாடினியார். கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டிலம் ஒத்திறின் நிலைமண் டிலமே என்றார் அவிநயனார். எவ்வடி யானும் முதனடு இறுதி அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே என்றார் மயேச்சுரர். அஃதேல், அடிமுதலாய் வரின் என்னாது, இறின் என்று வெறுத்திசைப்பக் கூறியது என்னை? நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில ஆசிரியங்கள், முதலும் இறுதியும் ஒன்றி வந்தால், அவற்றை நேரிசை மண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் மண்டில ஆசிரியப்பா, மண்டில ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா எனப் பெயரிட்டு வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை? எழுவாய் இரட்டித் திறுதி ஒன்றாய் வரினது மண்டில ஆசிரி யம்மே என்றாராகலின். வரலாறு: முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி *முலையினம் வாராள் முதுக்குறைந் தனளே -சிற்றெட்டகம் (தமிழ்நெறி விளக்கம் 22. மேற்.) - யா. வி. 32. மேற். இது நேரிசை மண்டில ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (உ0) நிலைமண்டில ஆசிரியப்பா எச. ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே. இஃது என் நுதலிற்றோ எனின், நிலைமண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஒத்த அடியின ஆகியும்- (நேரிசை, இணைக்குறள் போலாது) எல்லா அடியும் சீர் ஒத்து நின்றவாறே நின்று முடிவன ஆகியும், ஒற்று இற நிற்பவும் - அவ்வவற்று ஈற்றினும் யாதானும் ஓர் ஒற்றினையும் ஈறாக நிற்பனவும், என்னும் - என் என்னும் அசைச்சொல் ஈறாக நிற்பனவும், நிலைமண்டிலமே - நிலை மண்டில ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. நிற்பவும் என்ற உம்மையான், நூற்பா நிலை மண்டில மும் பிறவும் ஏ, ஓ, ஈ, ஆ, ஐ என்னும் ஐந்து உயிரும் அல்லாப் பிற உயிரும் இசைவன எல்லாம் ஈறாகி வரப் பெறும் எனக் கொள்க. வரலாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) 1வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி ; யாரஃ தறிந்திசி னோரே! சாரற் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர் 1தவச் சிறிது ; காமமோ பெரிதே! - குறுந்தொகை 18. இஃது எல்லா அடியும் ஒத்துச் சிறப்புடை நேர்த்தளையான் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா. 2பானலொடு கமழும் கானலந் தண்கழி முத்துகுத் தன்ன கொத்துதிர் புன்னைக் 3கொடுஞ்சினை நெடுங்கோட் டிருந்தபார்ப் பிற்குக் 4குண்டுறை அன்னம் மீன்கவர்ந்து கொடுக்கும் தண்டுறை ஊரன் 5தக்கானெனல் கொடிதே இது சிறப்பில் வஞ்சித்தளை ஒன்றி வந்த நிலைமண்டில ஆசிரியப்பா. இவை எல்லா அடியும் ஒத்து நின்றவாறே நின்று இற்றன. பிற தளையானும் வந்தவாறு கண்டுகொள்க. 6கோண்மாக் கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க் கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வானவன் கூடல் அன்ன குறுந்தொடி அரிவை ஆடமை மென்றோன் *நசைஇ நாடொறும் 7வடிநுனை எஃகம் வலவயின் ஏந்திக் கைபோற் காந்தட் கடிமலர் 8அவிழும் மைதோய் சிலம்பன் நள்ளிருள் வருவிடம் இது மகரம் ஈறாய் வந்த நிலைமண்டிலம். உதயணன் கதையும் கலியாண கதையும் என் என்னும் அசைச் சொல்லால் இற்ற நிலைமண்டிலம். ஆற்றுச் செலவும் அளைமறி நாகமும் தாப்பிசைத் தளையும் தனிநிலைப் பெய்தியோ டேற்கும் பொருள்கோள் இவையாம் எனலான் இது னகரம் ஈறாய் வந்த நூற்பா நிலைமண்டிலம். பிறவும் வந்துழிக் காண்க. என்னை? 1ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்னென் கிளவியை ஈறா கப்பெறும்; அன்ன பிறவும் நிலைமண் டிலமே என்றார் அவிநயனார். ஒத்த அடியின நிலைமண் டிலமே என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித் *துன்னப் பெறூஉம் நிலைமண் டிலமே; என்னென் றிறுதல் வரைதல் இன்றே அல்லா ஒற்றினும் *அதனினாம் இறுதி நில்லா அல்ல; நிற்பன வரையார் என்றார் மயேச்சுரர். (நேரிசை வெண்பா) நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும் ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம் ; - மூன்றுடைய பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக வைத்தார் முரற்கைக் கெழுத்து - யா. வி. 86. மேற் 2எல்லா நிலமும் அடிப்படுத் தீரிரண்டு நல்லா கமப்பொருளை நண்ணுதலால் - பல்லோர்க்கும் சீரா சிரியத்தைத் தேர்வேந்தன் என்றுரைத்தார் பேரா சிரியர் பெயர் (உக) இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. ஆசிரியத் தாழிசை எரு. மூன்றடி ஒத்த முடிபின் ஆய்விடின் ஆன்ற அகவற் றாழிசை ஆகும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், ஆசிரியப்பா உணர்த்தி இனம் உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் இச்சூத்திரம் தாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மூன்று அடி ஒத்த முடிபின ஆய்விடின் - அடி மூன்றாய்த் தம்முள் அளவொத்து இறுவனவாயின், ஆன்ற அகவல் தாழிசை ஆகும் - அவை அமைந்த ஆசிரியத் தாழிசை யும் ஆசிரிய ஒத்தாழிசையும் ஆம் என்றவாறு. சீர் வரையறை இன்மையின், எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும். ஆன்ற என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒரு பொருண் மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்புடைத்து. என்னை? ஒத்த ஒருபொருள் மூவடி முடியினஃ 1 தொத்தா ழிசையாம் உடன்மூன் றடுக்கின் - யா. கா. 29. மேற். என்றார் மயேச்சுரர். அவ்வாறே ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி வருவன ஆசிரிய ஒத்தாழிசை என்றும், ஒரு பொருண்மேல் ஒன்றாயும் இரண்டாயும் மூன்று அடுக்கிப் பொருள் வேறாயும், மூன்றின் மிக்கவும் ஆசிரியத் தாழிசை என்றும் விகற்பித்துக் கூறுவர் ஒருசார் ஆசிரியர். வரலாறு: ஆசிரிய ஒத்தாழிசை 2சாருண் ஆடைச் சாய்கோல் இடையன் நேர்கொள் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் 3எற்றே எல்லே! அத்துண் ஆடை ஆய்கோல் இடையன் நற்கார் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே! துவருண் ஆடைச் சாய்கோல் இடையன் *கவர் கான் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே! இவை ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி, நாற்சீர் அடியான் சிறப்புடை ஆசிரிய நேர்த்தளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை. கன்று 1குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் 2மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ! பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ ! கொல்லையஞ் சாரற் 3குருந்தொசித் தமாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ ! - சிலப்பதிகாரம் 17: 1-3. இவை இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை. (ஆசிரியத் தாழிசை) நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி *நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப் *பகவன்றன் அடியிணையைப் 4பயிறும் நாமே - தொல். செய். 15. இளம். மேற். இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், எண்சீர்க் கழிநெடிலடியாற் சிறப்புடைக் கலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை. வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை பான்மதி 5விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை 6நீனிற வண்ணநின் *நிரைகழல் தொழுதனம் - யா.கா.29.மேற். இது சிறப்புடை ஆசிரியத் தளையான் வந்த ஆசிரியத் தாழிசை. இனி, ஒரு பொருண்மேல் இரண்டாகியும், மூன்றாகிப் பொருள் வேறாகியும், அதின் மிக்கனவும் வந்தவழிக் காண்க. ஆசிரியத் தாழிசை எனினும், ஆசிரிய ஒத்தாழிசை எனினும் இழுக்காது. என்னை? அடிமூன் றொத்திறின் ஒத்தா ழிசையே என்றார் சிறுகாக்கைபாடினியார். (22) ஆசிரியத் துறை எசு. கடையதன் அயலடி கடைதபு நடையவும் நடுவடி மடக்காய் நான்கடி யாகி இடையிடை குறைநவும் அகவற் றுறையே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், ஆசிரியத் துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஈற்றயல் அடி குறைந்து நான்கடியாய் வருவனவும், ஈற்றயல் அடி குறைந்து இடையந்தத்து அடி மடக்காய் நான்கடியாய் வருவனவும், இடையடி குறைந்து நான்கடியாய் வருவனவும், இடையிடை குறைந்து இடை மடக்காய் நான்கடியாய் வருவனவும் ஆசிரியத் துறையாம் என்றவாறு. நடுவடி மடக்காய் என்பதனை ஒருகால் இருதலையும் கூட்டி, நான்கடி என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, 1மத்திம தீபமாக உரைக்க. சீர் வரையறை இன்மையின், எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும். நடையவும் என்ற மிகையான், முதல் அயலடி குறைந்தும், நடு ஈரடி குறைந்தும் மிக்கும் வருவனவும் ஆசிரியத் துறையாம். அல்லது, ஓரடி குறைந்து வருவன ஆசிரிய நேர்த்துறை யும் ஈரடி குறைந்து வருவன ஆசிரிய இணைக்குறட்டுறையும் எனப்படும். வரலாறு: (ஆசிரிய நேர்த்துறை) கரைபொரு கான்யாற்றங் 2கல்லதர் எம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் *தடுபுலி யேறஞ்சி அகன்றுபோக நரையுரு மேறு நுங்கை வேலஞ்சும் நும்மை வரையர மங்கையர் 3வவ்வுதல் அஞ்சுதும் 4வாரலையோ ! - தொல். செய். 175. இளம். மேற். - யா. கா. 29. மேற். எனவும், வானகச் சோலை வரையதர் எம்முள்ளி வருதிராயின் யானைகண் டார்க்கும் *அரியேறு நும்மஞ்சி அகன்றுபோக யானையோ நுங்கைவேல் அஞ்சுக நும்மை வானர மகளிர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையோ! எனவும் இவை ஈற்றயல் அடி குறைந்து, இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையானும், சிறப்பில் வெண்டளையானும் வந்த ஆசிரிய நேர்த்துறை. வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப் 1பிண்டித் தழையேந்தி 2மாவினவித் தணந்தோன் யாரே தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து 3படர்ந்தோனன்றே? - யா. கா. 29. மேற். எனவும், கண்ணியோர் கண்ணி வலத்தசைத்து காரி கமழ் கண்டார் காமம் புனைபவோ காரி? பண்ணியோர் பாடல் எழப்பண்ணி காரி பணைமுழவின் சீர்தயங்கப் பாடானோ காரி? சீர்தயங்கத் தார்தயங்கச் செய்யாத *செய்திவண் நீர் தயங்கு கண்ணினளாய் நிற்கவோ காரி? நினக்கினியார்க் கெல்லாம் 4இனையையோ காரி? எனவும் இவை ஈற்றயலடி குறைந்து, இடை மடக்காய், நான்கடியாய், வெண்டளையான் வந்த ஆசிரிய நேர்த்துறை. கொன்றார்ந்தமைந்த..........f‰g‹nw” - யா. வி. 16. 25. மேற் - யா. கா. 29. மேற். இது முதலடியும் மூன்றாம் அடியும் பதினான்கு சீராய், ஏனையடி இரண்டும் பதினாறு சீராய், இடையிடை குறைந்து வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை. இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்! அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில் - யா. கா. 29. மேற். எனவும், போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தீதுறு தீவினை இலரே எனவும் இவை யிடையிடை குறைந்து இடை மடக்காய், நான்கடியாய் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை. (ஆசிரிய நேர்த்துறை) வரிகொள் அரவும் மதியும் சுழலக் கரிகால் ஏந்தி ஆடுமே; கரிகால் ஏந்தி ஆடு மிறைவன், புரிபுன் சடைமேற் புனலும் பிறழ்வே இது முதல் அயலடி ஒரு சீர் குறைந்து, ஏனை மூன்றும் நாற்சீர் அடியாய், இடை மடக்காய் வந்த ஆசிரிய நேர்த்துறை. (ஆசிரிய இணைக்குறட்டுறை) 1பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கனைகழற்கால் ஒருபால் தோன்றும்; நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால் வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந் தாடும் துகிலொருபால் அவ்வுருவம் 2ஆண்பெண்ணென் றறிவார் யாரோ? இது நடு இரு சீர் குறைந்து, ஏனையடி இரண்டும் ஆறு சீரான் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை. (ஆசிரியத்துறை) 3கோடல் விண்டு 4கோபம் ஊர்ந்த கொல்லைவாய் மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம் ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய் ! 5வாடல் ; 6மைந்தர் தேரும் வந்து தோன்றுமே இது நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத்துறை. பிறவும் வந்தவழிக் காண்க. மடக்கு மூவகை : அடி மடக்கும், சீர் மடக்கும், அசை மடக்கும் என. என்னை? இரண்டாம் அடியை இனிதின் மடக்கலும், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் மடக்கலும், இரண்டாம் அடியின் ஈற்றசை மடக்கலும் இவ்வா றென்ப மடக்குதல் தானே என்றாராகலின். வரலாறு: வண்டுளர் பூந்தார் (யா. வி. பக். 306) எனவும், இரங்கு குயின் முழவா (யா. வி. பக். 307) எனவும் இவை அடி மடக்கு. கண்ணியோர் கண்ணி (யா. வி. பக். 306) என்பது சீர் மடக்கு. (ஆசிரிய நேர்த்துறை) 1முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத் தொத்தலரும் கானற் றுறையேம் துறைவழி வந்தெனது தொன்னலனும் நாணு நிறைவளையும் வௌவி நினையானச் 2சேர்ப்பன் இஃது 3அசை இடை மடக்கு. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. என்னை? அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற் கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி எடுத்துரை பெற்ற இருநெடில் ஈற்றின் அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும் அளவடி ஐஞ்சீர் நெடிலடி தம்முள் உறழத் தோன்றி ஒத்த தொடையாய் விளைவது அப்பெயர் வேண்டப் படுமே என்றார் காக்கைபாடினியார். எண்சீர் அடியீற் றயலடி குறைநவும் ஐஞ்சீர் அடியினும் பிறவினும் இடையொன்ற அந்தத் தொடையாய் அடிநான் காகி உறழக் குறைநவும் துறையெனப் படுமே என்றார் மயேச்சுரர். நாற்சீர் அடிநான் கந்தத்தொடை நடந்தவும் ஐஞ்சீர் அடிநடந் துறழவடி குறைந்தவும் அறுசீர் எழுசீர் அவ்வியல் நடந்தவும் எண்சீர் நாலடி *யீற்றயல் குறைந்தும் தன்சீர்ப் பாதியின் அடிமுடி வுடைத்தாய் அந்தத் *தொடையின் அவ்வடி நடப்பிற் குறையா உறுப்பினது துறையெனப் படுமே என்றார் அவிநயனார். ஆசிரிய விருத்தம் எஎ. கழிநெடில் அடிநான் கொத்திறின் விருத்தமஃ தழியா மரபின் அகவல் ஆகும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், ஆசிரிய விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கழிநெடில் அடி நான்காய்த் தம்முள் அளவொத்து முடியின், அஃது ஆசிரிய விருத்தமாம் என்றவாறு. அழியா மரபினது அகவல் என்ற ஆசிரியப்பாவினைச் சிறப்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? ஒருசார் ஆசிரியர், அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல், உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்று ஆறு 1விகற்பிற்று அகவல் ஓசை, என்பர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை? அகவல் ஆறும் வெண்பா மூன்றும் பண்புறத் தெரியும் பகுதிய ; மற்றது நன்றறி புலவர் நாட்டினர் என்ப எனவும், ஆறு வகையின் அகவலொடு கொள்ளாது வேறுபட வரினது வெண்பா ஆகும் எனவும், அவைதாம், அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல் உறுப்பின் அகவல், ஏந்திசை அகவலென் றவ்வா றென்ப அறிந்திசி னோரே எனவும் சொன்னாராகலின். அவற்றுள் அகப்பா அகவலாவன, அகப்பொருளைத் தழுவி, 2ஐயீருறுப்பினவாய், வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா எல்லாம் எனக் கொள்க. என்னை? அகப்பா அகவல், ஐயீ ருறுப்பின் ஆசிரி யம்மே அவைதாம், முன்னும் பின்னும் தூங்கல் இன்றிச் சென்னெறி மருங்கிற் சென்றிசைக் கும்மே என்றாராகலின். புறப்பா அகவலாவன, 1பாடாண்டுறை மேற்பாடும் ஆசிரியம் எனக் கொள்க. என்னை? புறப்பா அகவல் பொருந்தக் கூறிற் பாடாண் பகுதி நாடுங் காலை என்றார் ஆகலின். நூற்பா அகவலான, விழுமிய பொருளைத் தழுவிய சூத்திரயாப்பினவாய் வருவன என்னை? நூற்பா அகவல் நுணங்க நாடின் சூத்திரம் *குறித்த யாப்பின வாகி இசைவரம் பின்றி *விழுமிதின் நடக்கும் என்றாராகலின். சித்திர அகவலாவன, சீர்தொறும் அகவி வருவன. என்னை? சித்திர அகவல், சீர்தொறும் அகவும் சித்திரம் உடைத்தே என்றாராகலின். உறுப்பின் அகவலாவன, ஒரு பொருண்மேற் பரந் திசைப்பன. என்னை? உறுப்பின் அகவல் ஒருபொருள் நுதலி இசைபரந் தியலும் இயற்கைத் தென்ப என்றாராகலின். ஏந்திசை அகவலாவன, எழுத்திறந்து இசைப்பன. என்னை? ஏந்திசை அகவல் எழுத்திறந் திசைக்கும் பாங்கறிந் துணர்ந்தோர் பகருங் காலை என்றாராகலின். அல்லதூஉம், அஃது என விகற்பித்த அதனால், அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டிலம் விருத்தம் என்றும், அடிமறியாகாது நிற்பனவற்றை ஆசிரிய நிலை விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. வரலாறு: (அறுசீர் ஆசிரிய விருத்தம்) விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க விறல்வாள் வீசி விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடும் 1மாதங்கி *மடஞ்சேர் நோக்கம் மா2தாந்தாம் வடிக்கண் நீல மலர்தாந்தாம் தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்கைத் 3தண்ணுமையே. - யா. கா. 29. மேற். இஃது அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம். (எழுசீர் ஆசிரிய விருத்தம்) படையொன்றும் இல்லை அணியில்லை சுற்ற மதுவில்லை பற்றும் இனியொன் றடைகின்ற தில்லை அமிழ்துண்ப தில்லை அறிவொன்றும் எண்ணி அறியார் புடைநின்று 4நான்ற மணிமாலை போத நிலவீசு மாகம் உறநீள் 5குடையொன்ற தொன்றும் அதன்மேல தொன்றும் உடையார்க்கி தென்ன குணனே இஃது எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம். (எண்சீர் ஆசிரிய விருத்தம்) அருகிவரும் கிளிமொழியால் அமிழ்தம் தோற்றி அகன்பொழில்வாய் உனைப்பரவி அடைந்த மாந்தர் கருதியதே கொடுத்துயர்ந்த காட்சி நோக்கிக் கற்பகத்தோ டொப்புரைப்பர் சிலவர் ; அல்லார் வருதளிரின் நறுமேனி மயிலஞ் சாயல் வாணுதலாட் கரிதில்லை யதற்க ணுண்டென் றொருதலையாய் ஒவ்வாமை உரைப்பர் யானோ *ஒளியியக்கி இருதிறமும் உடன்பட் டேனே இது சிறப்புடைக் கலித்தளை தட்டு, எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம். ஒன்பதின் சீராலும் பதின்சீராலும் ஆகிய இடையாகு கழிநெடில் அடியாலும், பதினொருசீர் முதலாகிய கடையாகு கழி நெடில் அடியாலும் வந்த ஆசிரிய நிலை விருத்தம் அடி யோத்தினுட் கண்டுகொள்க. இனி, ஆசிரிய மண்டில விருத்தம் வருமாறு; (அறுசீர் அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்) செங்கயலும் கருவிளையும் *செருவேலும் பொருகணையும் 1செயிர்க்கும் நாட்டம்; பங்கயமும் இலவலரும் பனிமுருக்கும் பவழமுமே பழிக்கும் *செவ்வாய்; பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும் புடைவீங் கல்குல்; கொங்கிவரும் கருங்கூந்தற் கொடியிடையாள் வனமுலையும் கூற்றம் கூற்றம் இஃது அறுசீர்க் கழிநெடில் அடியான் அடிமறியாய்க் கூறப் படுதலால், அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம். (எண்சீர் ஆசிரிய மண்டில விருத்தம்) வெறிவிரவு புன்சடைமேல் 2வெள்ளம் பரக்கும்; விறல்விசயன் ஆகத்து 2வெள்ளம் பரக்கும்; கறைவிரவு நஞ்சுண்டு 3கண்டங் கறுக்கும்; கழலடைந்தார் தீவினையைக் 3கண்டங் கறுக்கும்; பொறிவிரவு பூண்முலையாள் 4போகத்த னாகும்; பொதுநீக்கித் தன்னடைந்தார் 4போகத்த னாகும்; நெறிவிரவு காஞ்சி 5நெறிக்காரைக் காட்டான்; நிழலடைந்தார் தம்மை 5நெறிக்காரைக் காட்டான் எனவும், நிலங்கா ரணமாக 6நீர்க்கங்கை ஏற்றான்; நீண்டதா ளாலங்கோர் 6நீர்க்கங்கை ஏற்றான்; 1சலங்கா ரணமாகச் 2சங்குவாய் வைத்தான்; 3தாயலாள் 4வீய 5நஞ் சங்குவாய் வைத்தான்; துலங்காச்சீர்த் தானவரைத் 6துன்னத்தா னட்டான்; துன்னுவார்க் கின்னமிர்தம் தின்னத்தா 7னட்டான்; இலங்கா புரத்தார்தம் கோமனை 8எய்தான் ; ஏத்தாதார் நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் 9எய்தான் இவை எல்லா அடியும் முதல் நடு இறுதியாகச் சொன்னாலும் பொருள் கொண்டு நிற்குமாகலின், ஆசிரிய மண்டில விருத்தம். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. (வெண்டளைக் கலித்துறை) தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன நான்கடியாய் எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே சுருக்கடி யாயும் துறையாம் ; குறைவில்தொல் சீரகவல் விருத்தம் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே! - யா. கா. 29. இக்காரிகையை விரித்து உரைத்துக்கொள்க. அறுசீர் முதலா நெடியவை எல்லாம் நெறிவயின் திரிய நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா இனத்துள விருத்தம் என்றார் காக்கைபாடினியார். அறுசீர் எழுசீர் அடிமிக வரூஉம் முறைமைய நாலடி விருத்தம் ஆகும் என்றார் சிறுகாக்கைபாடினியார். அறுசீர் எழுசீர் அடிமிக நின்றவும் குறைவில் நான்கடி விருத்தம் ஆகும் என்றார் அவிநயனார். ஆறு முதலா எண்சீர் காறும் கூறும் நான்கடி ஆசிரிய விருத்தம் என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். ஆசிரியத்து இனமாகிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும். ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறட்டுறை, ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம் என்று கூறுபடுப்ப, ஆறாம். அவை சிறப்புடை ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, எண்பத்து நான்காம். பிறவாற்றாலும் விகற்பிக்கப் பலவாம். அவற்றுள் ஓரடி குறைந்து வருவனவற்றை நேரிசை ஆசிரியப்பாவின் இனம் என்றும், ஈரடி குறைந்து வருவன வற்றை இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனமென்றும், அடிமறியாய் வருவனவற்றை மண்டில ஆசிரியப்பாவின் இனம் என்றும், அடிமறி இன்றியே நின்றவாறே நின்று பொருள் பயப்பன நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் என்றும் இவ்வாறே ஒரு புடை ஒப்புமை நோக்கிப் 1பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க. என்னை? (நேரிசை வெண்பா) அகவற் கினமாய ஆறினையும் ஈரேழ் பகுதித் தளையவற்றாற் பார்ப்பத் - தொகுதிக்கண் எண்பத்து நான்காம் ; இனியவற்றின் மிக்கனவும் பண்புற்றுப் பார்த்துக் கொளல் ஆசிரியப்பாவும் அதன் இனமும் முடிந்தன. (உச) கலிப்பா எஅ. துள்ளல் இசையன கலிப்பா ; மற்றவை வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த ஓசையாக பொது வகையாற் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) துள்ளல் ஓசையைத் தமக்கு முறையானே உடைய எல்லாம் கலிப்பா ; அவை வெண்பாவும் ஆசிரியப்பாவுமாய் இறும் என்றவாறு. 2பிறிதின் நடப்பினும் வஞ்சியும் கலியும் இறுதி மருங்கின் ஆசிரி யம்மே கலியே வெண்பா வாயினும் வரையார் என்றார் ஆகலின். துள்ளல் இசையன கலியே; வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறும் என்றாலும், சார்ச்சியால், அவை என்பது பெறலாம்; மற்றவை என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஏந்திசைத் துள்ளலும், அகவற்றுள்ளலும், பிரிந் திசைத் துள்ளலும் என மூன்று வகைப்படும் துள்ளல் ஓசை, என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. ‘btŸisí« mftYkhŒ’ v‹gjid, ‘bt©ghî« MáÇa¥ghîkhŒ Éuhí«, MáÇa¥ghî« bt©ghîkhŒ Éuhí«’ v‹W bfhŸshnkh? எனின், கொள்ளாம். என்னை? பிற நூலுள் இவ்வாறு சொல்லிற்றிலர் ஆகலானும், பிறநூல் முடிந்தது தானுடம் படுதல், (நன். 14) என்பவாகலானும், பல் பொருட் கேற்பின் நல்லது கோடல், (தொல். பொ. 665) என்பது தந்திர உத்தி ஆகலானும், வெண்பாவாயும் இறும்; ஆசிரிய மாயும் இறும், என்று வேறு வேறே கூட்டித் தீபகப் பொருளாகக் கொள்ளப்படும். வெள்ளையும் அகவலுமாய் இறும் என்னாது, விளைந்து இறும், என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஒருசார்க் கொச்சகக் கலிப்பாக்கள் கலியடியானே இறுவனவும் உள என்பதூஉம், ஆசிரிய நேர்த்தளையாற் கலிப்பா மிக்கு வாரா என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப் பட்டது; விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும், என்ப வாகலின். அம்மூன்று ஓசையானும் செய்யுள் வருமாறு: (தரவு கொச்சகம்) முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே வரு1சினனார் அருமறை நூல் வழிபிழையா மன முடையார் இருவினைபோய் விழமுறியா2 எதிரியகா தியையெறியா நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே - யா. கா. 11. 21. மேற். இஃது 3ஏந்திசைத் துள்ளலோசை. செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்த் தொளித்ததே - 4(சூளாமணிப்பாடலென்பர்) இஃது 1அகவற் றுள்ளல் ஓசை. மணிகிளர் நெடுமுடி வானவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இரைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவ கேள் - யா. வி. 86. மேற். இது 2பிரிந்திசைத் துள்ளல் ஓசை. (கலித்தாழிசை) முற்றொட்டு மறவினையை முறைமையான் முயலாதார் சொற்றொட்ட வாய்மையாற் சோர்வுமங் குளதாமோ? தொன்மைக்கண் வினைசெய்யார் *துப்புரவின் இரங்குவார் பன்மைக்கண் உள்ளந்தேர் பயமின்றிக் கழிவாரே? செல்வதூஉம் வருவதூஉம் சிறந்தாங்குத் *தமக்கறிந்து நல்லறமே புரிவதூஉம் நல்லார்கள் கடனன்றே? இன்னவை பிறவும் பிரிந்திசைத் துள்ளல் ஓசையால் வந்தன எனக் கொள்க. சுரிதகத்தால் இறுமாறு, இனிக் காட்டும் கலிப்பாவினுள் கண்டு கொள்க. வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி எடுத்துயர் துள்ளல் இசையன வாகல் கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே என்றார் காக்கைபாடினியார். ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி ஏந்திய துள்ளல் இசையது கலியே என்றார் அவிநயனார். சீரிற் கிளர்ந்த தன்றளை தழுவி நேரீற் றியற்சீர் சேரா தாகி துள்ளல் ஓசையிற் றள்ளா தாகி ஓதப் பட்ட உறுப்புவேறு பலவாய் ஏதம் இல்லன கலியெனப் படுமே என்றார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர். (உரு) கலிப்பாவின் வகை எகூ. ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற் சீரும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்கு, நேரடித்தாய்த் தன்றளையும் அயற்றளையும் தட்டு வரும் என்றும் ; புற நிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேல் வாராது, பதின்மூன் றெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலமும் பெற்று அளவடி மிகுத்து வரும் கலிப்பாவினது பெயர் வேறுபாடும் அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஒத்தாழிசைக் கலியும், கலி வெண்பாவும், கொச்சகக் கலியும் என மூன்று வகைப்படும் கலிப்பா என்றவாறு. அளவிற்பட்டு ஆழமுடைத்தாகிய பொருளைச் சொல்லு தலானும், ஓதப்பட்ட கலிப்பாவினாலும், பொது இலக்கணத் தோடு ஒத்து ஆழமுடைத்தாய் இசைத்தலானும், ஒத்துத் தாழ்ந்த புகழிற்று ஆகலானும், ஒத்த பொருண்மேல் மூன்றாய்த் தாழ்ந் திசைக்கும் ஒத்தாழிசையைத் தனக்குச் சிறப்புறுப்பாக உடைத்து ஆகலானும், ஒத்தாழிசைக்கலி என்பதூஉம் காரணக்குறி. கலியாய் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாவே போன்று இறுதலானும், வெண்பாவினிற் சிறிதே வேறுபட்டுக் 1கலித்த ஓசைத்து ஆகலானும், கலிவெண்பா என்பதூஉம் வெண் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. 2கொச்சகம் போல மிக்கு குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் கிடக்கும் உறுப்பிற்று ஆகலானும், கலி ஓசைக்குச் சிறப்பில்லாத நேரீற்று இயற்சீரை உட்கொண்டு நிற்றலானும், கொச்சகக் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. சிறப்பில்லாததனை ஒரு சாரார் கொச்சை என்றும் கொச்சகம் என்றும் வழங்குவர் எனக் கொள்க. ஒத்தாழிசைக்கலி, சிறப்புடைத்து ஆகலின், முன்னர் வைக்கப்பட்டது; வெண்கலி, அளவிற்படாத அமைதித்தாய், ஈற்றடி முச்சீராகலின், இடைக்கண் வைக்கப்பட்டது; கொச்சகக் கலி, சிறப்பின்மையின், இறுதிக்கண் வைக்கப்பட்டது எனக் கொள்க. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும் என்றார் நற்றத்தனார். வெண்கலி ஒத்தா ழிசைக்கலி கொச்சகம் என்றொரு மூன்றே கலியென மொழிப என்றார் காக்கைபாடினியார். கொச்சகம் வெண்கலி ஒத்தா ழிசையென முத்திற மாகும் கலியின் பகுதி என்றார் சங்கயாப்பு உடையார். இவர்களும் ஒரு பயன் நோக்கி முறை பிறழ வைத்தார்கள். ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகமென முத்திறத் தான்வரும் கலிப்பா என்ப என்றார் அவிநயனார். ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகம் முத்திறத் தடங்கும் எல்லாக் கலியும் என்றார் பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். (உசு) ஒத்தாழிசைக் கலியின் வகை அ0. நேரிசை அம்போ தரங்கம்வண் ணகமென் றோதிய மூன்றே ஒத்தா ழிசைக்கலி. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், பொதுவகையாற் கலிப்பாவி னைத் தொகுத்தும் வகுத்தும் சொன்னார், விரித்து உணர்த்து வான் எடுத்துக்கொண்டார் ; அவற்றுள் இஃது ஒத்தாழிசைக் கலிப்பாவின் பெயர் வேறுபாடும் எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவும், அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவும், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவும் என மூன்று வகைப்படும் ஒத்தாழிசை கலிப்பா என்றவாறு. ஓதிய என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? பொது வகையால் ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் நேரீற்று இயற்சீர் புகப்பெறாது, என்று சொல்லப்பட்டது ஆயினும், கலி ஒலி வழுவாது வரும் தரவு தாழிசைகள் உள்ளே வரப் பெறா; வேற்றொலியால் வரும் அம்போதரங்க உறுப்பி னுள்ளும், ஒருசார் அராகத்துள்ளும் வரப்பெறும், என்று மயக்கம் தீர வேண்டப்பட்டது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுதிதகம் என்று அளவிற்பட்ட நான்கு உறுப்பினாற் கூறப்படுதலானும், உடன்பட்ட ஒலியிற்று ஆகலானும், நுண் பொருண்மேற் சொல்லப்படுதலானும், மிக்க புகழிற்று ஆகலானும், 1நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. அழகிற்றாய் ஒழுகித் தரங்கம்பட்ட உறுப்பிற்று ஆகலானும், உயர்ந்து எழுந்து ஒருகாலைக்கு ஒருகால் கலி சார்ந்து சுருங்கித் தரங்கம்பட்ட நீர்த்திரை போலும் உறுப்புக்களே உடைத்தாகலானும், 2அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. அம்போ தரங்கம் என்பது நீர்த்திரையைச் சொல்லுமோ? எனின், சொல்லும் ; அம்புத் தரங்கம் என்னும் வட மொழியை அம்போ தரங்கம் என்று திரித்துச் சொன்னார் ஆகலின். தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலானும், வாரா நின்ற ஒலியிற்றிரிந்து வேறு ஒரு 3வண்ணத்தாற் சொல்லப்பட்ட முடுகியல் அடி உடைத்தாக லானும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. 4ஒன்றுக்கு ஒன்று ஒரோ உறுப்பு மிக்கு வருதலின், நேரிசை, அம்போ தரங்கம், வண்ணகம் என்று இம் முறையே வைக்கப்பட்டன. (உஎ) வெண்கலி கொச்சகக் கலிகளின் வரையறை அக. வெண்கலி ஒன்றே கொச்சகம் ஐந்தெனப் பண்பறி புலவர் பாற்படுத் தனரே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், வெண்கலிப்பாவினதூஉம், கொச்சகக் கலிப்பாவினதூஉம் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கலி வெண்பா ஒன்று, எனவும், 1தரவு கொச்சகக் கலிப்பாவும், தரவிணைக்கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்சிசைக் கொச்சகக் கலிப்பாவும் என ஐந்து வகைப்படும் கொச்சகக் கலிப்பா, எனவும் இவவாற்றாற் கூறுபடுத்துச் சொன்னார் புலத்துறை முற்றிய பொய்தீர் புலவர் என்றவாறு. பண்பறி புலவர் என்று சிறப்பித்த அதனால், நேரீற்று இயற்சீர் வரும் ஒத்தாழிசைக் கலிப்பா உளவாயினும், ஒரு புடை ஒப்புமை நோக்கிக் கொச்சகக் கலிப்பாவின்பாற்படுத்து வழங்கப்படும் எனக் கொள்க. ஏந்திசைத்துள்ளலும், அகவற்றுள்ளலும், பிரிந்திசைத் துள்ளலும் என்னும் இம்மூன்று துள்ளல் ஓசையானும் ஒன்பது கலிப்பாவினையும் கூறுபடுப்ப, இருபத்தேழாம். ஒன்பது கலிப்பாவினையும், ஆசிரிய நேர்த்தளை இரண்டும் ஒழித்து அல்லாத சிறப்புடை ஆறுதளையாலும் கூறுபடுப்ப, நூற்றெட்டாம். ஓசையும் தளையும் கூட்டி உறழ, முந்நூற்று இருபத்து நான்கு கலிப்பாவாம். கலி வெண்பாவினுள்ளும் கொச்சகக் கலிப்பாவினுள்ளும் ஆசிரிய நேர்த்தளை இரண்டும் அருகி வரப்பெறும் என்று அவற்றொடும் கூட்டிச் சொல் லுங்கால் முந்நூற்று அறுபது கலிப்பாவாம். பிறவாற்றாலும் விகற்பிக்க, எழுநூற்றிருபதாம். என்னை? (நேரிசை வெண்பா) ஒத்தா ழிசைக்கலியென் றோதிய ஆறினையும் முத்திறத் தோசையான் முன்முரணி - வைத்து வழுவற்ற ஆறிரண்டு வான்றளையால் மாற எழுமுப்பத் தாறாம் எனல் - யா. வி. 86. மேற். கொச்சகம் ஈரைந்தும் வெண்கலி ஓரிரண்டும் வைத்திசையோர் மூன்றினால் மாறியபின்- மற்றவற்றை மாசில் பதினான்கு வான்றளையால் மாறவாம் ஆசில்கலிக் கைஞ்ஞூற்று நான்கு - யா. வி. 86. மேற். ஒத்தாழிசைக்கலி இருநூற்று ஒருபத்தாறும், வெண்கலி எண்பத்து நான்கும், கொச்சகக்கலி நானூற்றிருபதுமாய், எழுநூற்றிருபதாம். பிறவாற்றானும் விகற்பிக்கப் பலவுமாம். தரவு கொச்சகம் முதலாக உடையன. காரணக் குறியாய் நின்றன. அவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (உஅ) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா அஉ. தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த் தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச் சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய் நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. தரவு எனினும், எருத்தம் எனினும் ஒக்கும். தாழிசை எனினும், இடைநிலைப்பாட்டு எனினும் ஒக்கும். தனிச்சொல் எனினும், இடைநிலை எனினும், கூன் எனினும் ஒக்கும். சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வாரம் எனினும் வைப்பு எனினும், போக்கியல் எனினும் ஒக்கும். (ï.Ÿ) juî x‹W - ‘juî’ v‹D« cW¥ò Kj‰ f©nz tªJ, jhÊir _‹W« rkdhŒ - (juÉ‹ ã‹d®¤) ‘jhÊir’ v‹D« ïu©lh« cW¥ò« j«KŸ x¤J _‹whŒ tªJ, juɉ RU§» - (m¤jhÊir xnuh x‹whŒ¤) juɉ FiwªJ, ‘juɉ RU§»’ v‹gjid ‘_‹W jhÊir íkhŒ¤ juɉ RU§»’ v‹W bfhŸsyhnkh? எனின், கொள்ளலாம். என்னை? இடைநிலைப் பாட்டே, தரவகப் பட்ட மரபிற் றென்ப - (பொ. 446) என்றார் தொல்காப்பியனார் ஆகலானும், ஒரோ ஒன்றே அத்தரவின் அகப்பட்டது என்றே கொள்ளப்பட்டது ஆகலானும், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் - (தொல். பொ. 665.) என்பது தந்திர உத்தி ஆகலானும், அதுவே துணிபு. தனி நிலைத்து ஆகி - (தாழிசைப்பின்) தனிச்சொல் என்னும் 1மூன்றாம் உறுப்பு உடைத்தாய், சுரிதகம் சொன்ன இரண்டி னுள் ஒன்றாய் - சுரிதகம் என்னும் நான்காம் உறுப்பு மேற் சொல்லப்பட்ட வெண்பாவானும் ஆசிரியப்பாவானுமாய் வந்து, நிகழ்வது நேரிசை ஒத்தாழிசை - (நான்கு உறுப்பினானும் வந்தது) யாது? அது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு. எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக் கொண்டு தந்து முன் நிற்றலின், தரவு என்பதூஉம் காரணக்குறி. ஒத்த ஒரு பொருள் முடிவினால் ஒத்த தாழ்ச்சியால் இசைத்தலானும், தரவிற் குறைந்து இசைத்தலானும், ஒத்தாழிசை என்பதூஉம் தாழிசை என்பதூஉம் காரணக்குறி. ஒரு சொல்லாய்ப் பொருள் நிரம்பித் தனியே நிற்றலின், தனி நிலை என்பதூஉம் காரணக்குறி. ஓரிடத்து ஓடாநின்ற நீர், குழியானும் திடரானும் சார்ந்தவிடத்துச் சுரிந்தோடும் அதனைச் சுரிந்து என்றும் சுழி என்றும் வழங்குவது போல, தான் கலியோசையாய் வாராநின்றது வெள்ளையானும் ஆசிரியமானுமாய்த் தக்க தொரு பொருளை உட்கொண்டு நிற்றலான், 1சுரிதகம் என்பதூஉம் காரணக்குறி. பிறரும், தந்துமுன் நிற்றலின் தரவே; தாழிசை ஒத்தா ழத்தின தொத்தா ழிசையே தனிதர நிற்றலின் தனிநிலை; குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின் 2சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப - யா. கா. 30. மேற். என்றார் ஆகலின். நிகழ்வது என்று விதந்த அதனால், அம்போதரங்கமும், வண்ணகமும் இருமூன்றடியே தரவின் பெருமை; அல்லன, மூன்றடிச் சிறுமையின் மிக வாரா. 3அம்பு வண்ணகம் இருமூன் றடியின; முந்திய மூன்றடிச் சிறுமையின் மிகாவாய்த் தந்துமுன் நிற்றலின் தரவா கும்மே இரண்டடி சிறுமை ; பெருமையதன் இரட்டி தரவிற் குறைந்தன தாழிசை ஆகும் தனிநிலை சுரிதகம் வரைநிலை இலவே சிறுமை இரண்டடி; பெருமைபொருள் முடிவே சுரிதகம் என்ப *தொல்லை யோரே என்றார் ஆகலின், இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. கலியுறுப்புக்கு அளவை, செயன்முறையுள்ளும், செயிற் றியத் துள்ளும், அகத்தியத்துள்ளும் முடிந்தவாறு அறிந்து கண்டு கொள்க. அவை ஈண்டு உரைப்பிற் பெருகும். வல்லார் வாய்க் கேட்டு உணர்க. வரலாறு: (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் *பூண்டுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? இது தரவு. சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய என்பவாற் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவரால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவாற் புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? இவை மூன்றும் தாழிசை. எனவாங்கு. இது தனிச்சொல். அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் *பொன்னொடும் தேரொடும் தானையிற் பொலிந்தே - யா. கா. 30. மேற். இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம். இது தரவு மூன்றடியால் வந்து, தாழிசை மூன்றும் இரண்டடி யால் வந்து, தனிச்சொற் பெற்று, மூன்றடி ஆசிரியத் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. இது சிறப்புடைக் கலித் தளையால் வந்தது. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய் எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து *பத்தறு காவதம் பகைபசி பிணிநீங்க உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரைபோற் செவ்வியோய் ! இது தரவு. எள்ளனைத்தும் இடரின்றி எழில்மாண்ட 1பொன்னெயிலின் உள்ளிருந்த உன்னையே *உறுதுணையென் றடைந்தோரை 2வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் விழுமிதோ? குணங்களின் வரம்பிகந்து கூடிய 3பன்னிரண்டு கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் அடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டுள் உறைகென்றால் பெருமையோ? விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய் மடத்தகைய மயிலனையார் வணங்கநின் அடைந்தோரை தடத்தகைய காடுறைக என்பதுநின் தகுதியோ? இவை தாழிசை. எனவாங்கு. இது தனிச்சொல். அனைத்துணையை ஆயினும் ஆகமற் றுன்கண் தினைத்துணையும் தீயவை இன்மையிற் சேர்தும் வினைத்தொகையை வீட்டுக என்று - இலக்கண விளக்கம், 738. மேற். இது சுரிதகம். இது நான்கடியாய்த் தரவு வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியாய்த் தனிச்சொல் வந்து, வெள்ளைச் சுரிதகமாய், ஆசிரியச் சிறப்பில் நிரைத்தளையால் வந்த நேரிசை ஒத் தாழிசைக் கலிப்பா. பல அடியானும் வேற்றுத் தளையானும் வருவன வந்த வழிக் கண்டுகொள்க. பிறரும் இதற்கு இலக்கணம் இவ்வாறே சொன்னார். என்னை? தரவே தாழிசை தனிநிலை சுரிதகம். எனநான் குறுப்பின தொத்தா ழிசையே தன்னுடை அந்தமும் தாழிசை யாதியும் துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை தரவுக் கியல்பே தன்னொடு நிற்றல் தத்தமில் ஒத்துத் தரவின்அகப்பட நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை ஆங்கென் கிளவி அடையாத் தொடைபட நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் ஆசிரியம் வெண்பா எனவிவை தம்முள் ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது 1சுழியம் எனப்பெயர் சுரிதக மாகும் என்றார் காக்கைபாடினியார். விட்டிசை முதற்பாத் தரவடி ஒத்தாங் கொட்டிய மூன்றிடைத் தாழிசை அதன்பின் மிக்கதோர் சொல்லாம் தனிநிலை சுரிதகம் ஆசிரி யத்தொடு வெள்ளையின் இறுதலென் றோதினார் ஒத்தா ழிசைக்கலிக் குறுப்பே என்றார் அவிநயனார். தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த் தனிச்சொல் இடைக்கிடந்து சுரிதகம் தழுவ வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி தரவின் அளவிற் சுரிதகம் அயற்பா விரவும் என்ப ஆசிரியம் வெள்ளை என்றார் காம வேளைக் 2கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர். அவர் 3தரவின் றுணையே சுரிதகம் ஆவது சிறப்புடைமையால் எடுத்து ஓதினார், தரவின் மிக்கும் குறைந்தும் வருவன உளவாயினும் எனக் கொள்க. (உகூ) அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 83. முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) (தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் உடைத்தாய்) மேற்கூறிய தாழிசைக்குப் பின்னாய் (அடியினானும் சீரினானும் முறையே) ஒன்றினுக்கு ஒன்று சுருங்கி வரும் உறுப்பு உடையது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்றது, அதிகாரம் வருவித்து உரைக்கப்பட்டது. அம்போதரங்க உறுப்பு எனினும், 1அசையடி எனினும், பிரிந்திசைக் குறள் எனினும், சொற்சீர் அடி எனினும், எண் எனினும் ஒக்கும். அவற்றை முறையே 2பேரெண், சிற்றெண், இடையெண், அளவெண் என்றும் சொல்லுவர். அவை உறுப்புத் தாழிசைப்பின் ஈரடியால் இரண்டும், அதன் பின் நாற்சீர் அடியால் நான்கும், அதன்பின் முச்சீர் அடியால் எட்டும், அதன்பின் இருசீர் அடியாற் பதினாறுமாய் வரும். என்னை? ஈரடி இரண்டும் ஓரடி நான்கும் முச்சீர் எட்டும் இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம் - (யா. கா. 30. மேற்) எனவும், இரண்டும் நான்கும் எட்டும் இரட்டியும் வருவன முறையே ஒருநிரை படாஅ திரண்டடி ஓரடி முச்சீர் இருசீர் அசையடி வரினே அம்போ தரங்கம் எனவும் சொன்னார் ஆகலின். முச்சீர் அடியால் எட்டும், இருசீர் அடியாற் பதினாறும் என்று சொல்லப்பட்டன குறைந்து வரவும் பெறும். இப்பொருள் எல்லாம் எற்றாற் பெறுதும்? எனின், உரையிற் கோடல் என்னும் தந்திர உத்தியானும், முறைமுறை என்னும் விதப்பினானும், பிறநூல் முடிந்தது தானுடம் படுதல் என்பதனானும் பெறுதும் எனக் கொள்க. வரலாறு: (அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா) கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ அழலவிர் சுழல்செங்கண் 1அரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூறுகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்! இது தரவு. முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர் அடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவண் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? கலியொலி வியனுலகம் கலந்துட னனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோவும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர* வெதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய *வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ? இவை தாழிசை. இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல்! நின்னிறம். விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் ! புரையும் நின்னுடை. இவை பேரெண். கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை; தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. இவை சிற்றெண். போரவுணர்க் கடந்தோய் நீ ; புணர்மருதம் பிளந்தோய் நீ ; *நீரகலம் அளந்தோய் நீ; நிழல்திகழும் படைபோய் நீ இவை இடையெண். ஊழி நீ ; உலகு நீ; உருவு நீ ; அருவு நீ; ஆழி நீ ; அருளு நீ ; அறமு நீ ; மறமு நீ. இவை அளவெண். எனவாங்கு. இது தனிச்சொல் அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே - 1(விளக்கத்தனார்) - தொல். செய். 146. பேரா. மேற். -யா. கா. 30. மேற். இது சுரிதகம். இஃது எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட முச்சீர் அடி அம்போதரங்கமும் இருசீர் அடி அம்போதரங்கமும் குறைந்து, முச்சீர் அடி நான்காய் இருசீர் அடி எட்டாய், சிறப்பில் இயற்சீர் வெண்டளையால் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே. இது தரவு. ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர் மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ ஊர்கோளோ டுடன்முளைத்த *ஒளிவட்டம் உடைத்தன்றே? கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி *இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே? வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார் நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் *திருந்துநிழல் திளைத்தன்றே? இவை தாழிசை. மல்லல் வையம் அடிதொழு தேத்த அல்லல் நீக்கற் கறப்புணை ஆயினை. ஒருதுணி வழிய உயிர்க்கரண் ஆகி இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினே. இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி; வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி; விருப்புறு தமனியம் விளக்கு நின்னிறம்; *ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ். இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம். *இந்திரர்க்கும் இந்திரன் நீ; இணையில்லா இருக்கையை நீ; மந்திர மொழியினை நீ; மாதவர்க்கு முதல்வனும் நீ; அருமைசால் அறத்தினை நீ; ஆருயிரும் அளித்தனை நீ; பெருமைசால் குணத்தினை நீ; பிறர்க்கறியாத் திறத்தினை நீ. இவை முச்சீர் ஓரடி எட்டம்போ தரங்கம். பரமன் நீ ; பகவன் நீ ; பண்ணவன் நீ; புண்ணியன் நீ; உரவன் நீ; குரவன் நீ; ஊழி நீ ; உலகு நீ; அருளும் நீ ; அறமும் நீ; அன்பும் நீ ; அணைவும் நீ ; பொருளும் நீ ; பொருப்பும் நீ ; பூமி நீ ; புணையும் நீ; இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம். எனவாங்கு. இது தனிச்சொல். அருள்நெறி ஒருவ! நிற் பரவுதும் *எங்கோத் திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத் தெண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன் செருமுனை செருக்கறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே இது சுரிதகம். இதனுள் எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட உறுப்புக் குறையாதே வந்தவாறு கண்டுகொள்க. இஃது அம்போதரங்க உறுப்பு அழகு குறையாதே, ஆசிரியச் சிறப்பில் நிரைத்தளையால் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. பிற தளையாலும் வந்தவழிக் கண்டுகொள்க. (கட்டளைக் கலித்துறை) தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய் நிரலொன்றின் நேரிசை ஒத்தா ழிசைக்கலி ; நீர்த்திரைபோல் மரபொன்றும் நேரடி முச்சீர் குறள்நடு வேமடுப்ப தரவொன்றும் அல்குல்! அம்போ தரங்கவொத் தாழிசையே - யா. கா. 30. இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. பிறரும் இதற்கு இலக்கணம் இவ்வாறே சொன்னார். என்னை? நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கம் சுருங்கி *அசையடி தாழிசை விட்டிசை *வீயத் தொடுத்துச் சுரிதகம் தாக்கித் *தவிர்ந்த தரவினோ டேனவும் யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம் என்றார் காக்கைபாடினியார். தரவே தாழிசை தனிச்சொற் சுரிதகம் வருவன எல்லாம் தாழிசைக் கலியே சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையிற் சுருங்கி மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ அளவின எல்லாம் அம்போ தரங்கம் என்றார் சிறுகாக்கைபாடினியார். உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த அடியால் நீர்த்திரை போல அசையடி பெறினவை அம்போ தரங்கம் என்றார் அவிநயனார். தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே என்பது சூத்திரமாகக் கொண்டு, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் உடைத்தாய் நிகழ்வது என்று அதிகாரம் வருவித்து உரைத்தாலும் கருதிய பொருளைப் பயக்கும். முந்திய என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஒருசார் ஆசிரியர் தரவும் சுரிதகமும் ஆறடியால் வந்து நான்கடியாய்த் தாழிசை மூன்றும் வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன், இரண்டடியால் ஓர் அராகம் வந்து, அதன் பின் இரண்டடியால் இரண்டு பேரெண் வந்து, ஓரடி யால் நான்கு இடையெண் வந்து, சிற்றெண் இரு சீரால் எட்டாய், அவை இரண்டு கூடி ஓரடியே போன்று இம்முறை அம்போதரங்க உறுப்புப் பெற்று முடிவது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும், தரவும் சுரிதகமும் ஐந்தடியான் வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியால் வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன் இரண்டடியால் ஓர் அராகம் வந்து, இரண்டு ஓரடியால் பேரெண் அறுசீரால் வந்து, இடையெண் முச்சீரால் வந்து. எட்டுச் சிற்றெண் ஒரு சீரும் ஓர் அசையுமாய் இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் ; தரவும் சுரிதகமும் நான்கடியால் வந்து, ஈரடியால் மூன்று தாழிசை வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன் இரண்டடியால் ஓர் அராகம் வந்து, ஓர் அடியால் இரண்டு பேரெண் வந்து, இரு சீரால் நான்கு இடையெண் வந்து, ஒரு சீரால் எட்டுச் சிற்றெண் வந்து. இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வேண்டுவர் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை? தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன்னர் ஆழ்புனற் றிரைபுரை அம்போ தரங்கம் உம்பர் மொழிந்த தாழிசை வழியே அம்போ தரங்கம் வண்ணகமும் ஆகும் அவையே, 1தேவ பாணியென் றேவவும் படுமே வழிபடு தெய்வம் வழுத்திவழி மொழியின் தலையிடை கடையென அம்போ தரங்கம் நிலையினவ் வளவின் நிலையுங் காலை அராகம் பேரெண் இடையெண் சிற்றெண் *விராக என்ப தாழிசைப் பின்னர்க் கூறிய தரவே ஆறடித் தாகும் தரவின் வழிமுறை தாழிசை மூன்றும் வரன்முறை பிறழா நாலடிக் குரிய; தந்துமுன் நிறீஇத் தரவினிற் றாழிசை உறுப்பினும் குணத்தினும் நெறிப்படப் புணரும் தாழிசைப் பின்னர் அராகவடி இரண்டே அராகத் திறுதி பேரெண் இரண்டு விராக என்ப இரண்டிரண் டடியால் பேரெண் வழியால் இடையெண் நாலடி நேரல் வேண்டும் நெறியறி புலவர் பெற்ற நாலடி அரையடி முடிவின சிற்றெண் பகுதி இருநான் காகும் மூவகை எண்ணின் பொருள்வகை முடிவும் யாவகை எண்ணிற்கும் அகப்பட முடியும் சிற்றெண் அகத்தே *சேர்த்தப் படுவோன் பெற்றபுகழ் தொடுப்பினும் பிழைப்ப தில்லை அடக்கியல் உறுப்பும் ஆறடித் தாகத் தொடுக்கு மாகிற் றொல்லையோர் துணிவே கொள்ளப் பட்ட உறுப்போ டிருதலையும் தள்ளாது வருவது தலையள வாகும் உடையதம் உறுப்பின் ஒன்றுகுறை வின்றி இடையள விலக்கணம் இருதலை உறுப்பும் அவ்வைந் தடியாய், அமைவுறு தாழிசை மூன்றுமூன் றடியான் மூன்றுமுடி வெய்திப் பேரெண் அறுசீர் இடையெண் முச்சீர் சேரும் சிற்றெண் சீருமோர் அசையும் நேரல் வேண்டும் நெறியறி புலவர் கடையள வென்ப துடையுறுப் பெஞ்சாது முடிவும் முதலும் நாலடித் தாகி அடிவகை இரண்டிற் றாழிசை மூன்றாய்ப் பேரெண் இரண்டடி பெற்றபின் இடையெண் நேரடி நான்கும் அரையடி முடிவிற் சிற்றெண் எட்டும் சீர்நால் இரட்டியும் பெற்ற தாயினது கடையள வென்ப அம்மூ வளவிற்கும் அராகவடி இரண்டே ஈறும் முதலும் எல்லா அளவிற்கும் கூறிய முறைமையிற் கொள்ளல் வேண்டும் என்றார் ஆகலின். அவர்கள் காட்டும் உதாரணம்: (தளையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா- தேவ பாணி) அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி ஓசனைசூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும் அருளறமே அறமாக அயலார்கண் மயலாக இருளறநன் கெடுத்தியம்பி *இருவினைகள் கடிந்திசினோய் ! இது தரவு. துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால் இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் எரித்தனையாய் அருளெல்லாம் அடைந்தெங்கண் அருளுவதுன் அருளாமோ? மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைந்தோரைக் கதிபொருதக் கருவரைமேல் கதிர்பெருக முகம் வைத்துக் கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர் நின்மினீர் எனவுணர்த்தல் நிருமல! நின் பெருமையோ? (போல்) மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ உலகெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ? இவை தாழிசை. அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர முரசதிர் இமிழிசை முரணிய மொழியினை இஃது அராகம். அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம்; மழையது மலியொலி மலிகடல் அலையொலி முழையுறை அரியது முழக்கம் நின்மொழி இவை பேரெண். வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை; சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை; அருவினை வெல்பவக் கரும்புணை ஆயினை; ஒருவனை ஆகி உலகுடன் உணர்ந்தனை. இவை இடையென். உலகுடன் உணர்ந்தனை; உயிர்முழு தோம்பினை; நிலவுறழ் நிறத்தனை; நிழலியல் ஆக்கையை; மாதவர் தாதையை ; மலர்மிசை மகிழ்ந்தனை; போதிவர் பிண்டியை ; புலவருட் புலவனை. இவை சிற்றெண். அரையடி எண் எனவும் அமையும். எனவாங்கு, இது தனிச்சொல் அருளுடை ஒருவ! நிற் பரவுதும் எங்கோன் இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்தி மால்வரைச் *áy«ò நந்தி ஒற்றைச் செங்கோல் ஓச்சிக் கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே இது சுரிதகம். இது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவ பாணி. இஃது அல்லாதன செயன்முறையோடும் செயிற்றியத் தொடும் அகத்தியத் தோடும் ஒக்கப் பாடின இல்லை என்ப. இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா வருமாறு: பிறப்பென்னும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி இறப்பிலநின் அருள் புரிந்தாங் கெமக்கெல்லாம் அருளினையாய் மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும் அறவாழி வலனுயிரி அருணெறியே அருளியோய் ! இது தரவு. அருளெல்லாம் அகத்தடக்கி அடிநிழலே அடைந்தோர்க்குப் பொருளெல்லாம் நீவிளங்கிப் புகரில்லா வகையினால் இருளில்லா *Éa‹Phd« இயம்பியதுன் இயலாமோ? தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் அளவைகளால் கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி அறைந்ததற்பின் பேதில்லா இயற்காட்சி அருளியதுன் பெருமையோ? துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகலப் புணையில்லா உயிர்கட்குப் *bghUÉšyh அருளினால் இணையில்லா *ïabyhG¡f« இசைத்ததுநின் இறைமையோ? இவை தாழிசை. அருள்புரி திருமொழி அமரரும் அரசரும் மருள்வழி மனிதரும் மகிழ்வுற இயம்பினை. இஃது அராகம். பூமலர் 1துதைந்த பொழிலணி கொழுநிழற் றேமலர் அசோகினை; தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை. இவை பேரெண். 2காமரு கதிர்மதி முகத்தினை; சாமரை இடையிடை மகிழ்ந்தனை; தாமரை மலர்புரை அடியினை; தாமரை மலர்மிசை ஒதுங்கினை. இவை இடையெண். அறிவினை நீ ; அதிசயம் நீ ; அருளினை நீ ; பொருளினை நீ; உறுவனை நீ ; உயர்வினை நீ; உலகினை நீ ; அலகினை நீ; இவை சிற்றெண். எனவாங்கு, இது தனிச்சொல். இனைய ஆதலின் முனைவருள் முனைவ ! நினையுங் காலை நின்னடி அடைதும் ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து துன்னிய தீவினைத் துகள்தீர் முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே இது சுரிதகம். இஃது இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி. கடையளவு அம்போ தரங்க ஒத்தாழிசை கலிப்பாப் பெருந்தேவ பாணி வருமாறு: கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும் உடையையாய் உலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ அறவாழி வலனுயரி அருணெறியே அருளியோய்! இது தரவு. வினையென்னும் வியன்பகையை வேரோடும் 1உடன்கீழ்ந்து முனைவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ? பொருளாடல் புரியீரேல் 2புகத்தீரும் எனவருளி மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ? வேந்தற்கும் முனைவற்கும் விலங்கிற்கும் அருள்துறவாத் 3தோந்தீரத் துறந்தநின் துறவரசும் துறவாமோ? இவை தாழிசை. முழுதுணர் முனைவருள் முனைவர ! முனைவர்கள் தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை. இஃது அராகம். 4நிழன்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்; எழின்மதி இதுவென இகலும் நின்முகம். இவை பேரெண். 5கருவினை கடந்தோய் நீ ; காலனை அடர்ந்தோய் நீ ; ஒருவினையும் இல்லோய் நீ ; உயர்கதிக்கு முனைவன் நீ. இவை இடையெண். அறவன்நீ; 6அமலன்நீ; அருளு நீ; பொருளு நீ; உறுவன் நீ; உயர்வு நீ; உலகு நீ ; 7அலகு நீ. இவை சிற்றெண். எனவாங்கு, இது தனிச்சொல். அருளுடை ஒருவ! நின் அடியிணை பரவுதும் இருளுடை 1நாற்கதி இடர்முழு தகலப் பாடுதற் குரிய பல்புகழ் வீடுபே றுலகம் கூடுக எனவே இது சுரிதகம். இது கடையளவு அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி. இவ்வாறு விரித்து வெளிப்படச் சொன்னார் ; 2திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர். இம்மூன்றினையும் அளவியல் அம்போதரங்க ஒத் தாழிசைக் கலிப்பா என்றும், அல்லாதனவற்றை அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வழங்குவாரும் உளர் எனக் கொள்க. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா அச. அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) மேற்சொல்லப்பட்ட தரவும் தாழிசையும், அம்போ தரங்க உறுப்பும், தனிச்சொல்லும், சுரிதகமும் என்றிவற்றொடும் ஒருங்கு கடுகி நடக்கும் அடியுடை அராக உறுப்பும், தாழிசைப் பின்னைக் கூட்டிச் சொல்லப் படுவது யாது? அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு. தாழிசைப் பின்னே என்பது அதிகாரத்தால் வருவித்து உரைக்கப்பட்டது. தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் எனக் கொள்க. அராகம் எனினும், வண்ணகம் எனினும், அடுக்கியல் எனினும், *முடுகியல் எனினும், ஒக்கும். அவற்றொடும் அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி என்றாலும் முடுகியலுடைய அராகம் என்பது பெறலாம் ; அராக அடி முடுகி நடக்கும் இயற்கையது ஆகலானும், அச்சொலப் பட்ட உறுப்பொ டராகவடி வைத்த நடையது வண்ணகம் ஆகும் என்றார் காக்கைபாடினியார் ஆகலானும், முடுகியலடியே கொள்ளப்பட்டது ஆகலானும்; பெயர்த்தும், முடுகியல் அடியுடை அராகம் என்று எடுத்து ஓத வேண்டியது என்னை? அவ்வராக உறுப்பு, அளவடி முதலாகிய எல்லா அடியாலும் வரப்பெறும்; அடி வரையாது, சிறுமை நான்கடி, பெருமை எட்டடி, இடையிடை எத்துணையாயினும் வரப்பெறும் என்பதூஉம், ஒரு சாரனவற்றுள் அகவலும் வெள்ளையும் விரவி அராகமாயும் அருகி வரப்பெறும் என்பதூஉம், அம்போ தரங்க உறுப்புச் சில குறைந்தும் வரப்பெறும் என்ப தூஉம் அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை? அளவடி முதலா அனைத்தினும் நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும் - யா. கா. 31. மேற். என்றார் ஆகலின். அஃதே எனின், அவற்றொடு முடுகடி அராகம் மடுப்பது என்றாலும், உரைத்த எல்லாம் பெறலாம், விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும், என்பவாகலின் ; இயல் என்று விதப்படுக்கி ஓதியது என்னை? இதன் பயன், இவற்றிற்கு உதாரணம் காட்டிப் பின்னர்ச் சொல்லுதும். இவற்றுக்குச் செய்யுள் வருமாறு: (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்ற துளங்குமணிக் கனைகழற்கால் 1துறுமலர் நறும்பைந்தார்ப் 2பரூஉத் தடக்கை மதயானைப் *gf£blÊš நெரிகுஞ்சி 3குரூஉக்கொண்ட மணிப்பூணோய் ! குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலையளிக்கும் தண்டுறை *Cu! நீ. இது தரவு. காட்சியாற் கலப்பெய்தி *vªâw¤J¡ கதிப்பாகி *kh£áah றறியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந் தருளுவதும் அருளாமோ? அன்பினால் 1அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை2 பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோள் அருளுதற் கிருளிடைத் 3தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த் தடவரைத்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ? இவை தாழிசை. தாதுறு முறிசெறி தடமலர் இடையிடை தழலென விரவின பொழில்; போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி; தீதுறு திறமறு கெனநனி முனமுனம் துணையொடு பிணைவன துறை; மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல். இவை நான்கும் அராகம். கொடுந்திறல் உடையன சுறவேறு கொட்பதனால் இடுங்கழி இரவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ? கருநிறத் 4தெறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானல் இரவாரல் என்றிலமோ? இவை நாற்சீர் ஈரடி இரண்டம்போ தரங்கம். நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே; துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே; அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே; நயப்பொடு கழிந்தன்றால் நனவதுவும் நன்னுதற்கே. இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம். அத்திறத்தால் அசைந்தன தோள்; அலரதற்கு மெலிந்தன கண்; பொய்த்துரையால் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்தனமுலை; அழலினால் அசைந்தது நகை; அணியினால் ஒசிந்ததிடை; *“FHÈdhš அவிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த அலர்த்தொருபால்; கட்கொண்டால் துளித்தொருபால்; கழிவெய்தும் படித்தொருபால்; 1பரிவுறூஉம் தகைத்தொருபால் ; படர்வுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉம் துயரொருபால்; இளிவந்த எழிற்றொருபால்; மெலிவுவந் தலைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால் ; ஏதிலர்சென் றணைந்தொருபால்; இயனாணிற் செறிவொருபால். இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம். எனவாங்கு, இது தனிச்சொல். இன்னதிவ் வழக்கம் இத்திறம் இவணலம் என்னவும் முன்னாள் துன்னாய் ஆகிக் கலந்த வண்மையை ஆயினும் நலந்தகக் கிளையொடு கெழீஇத் தளையவிழ் கோதையைக் கற்பொடு *fhÂa யாமே பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே - யா. கா. 31. மேற். இது சுரிதகம் இஃது ஆறு உறுப்பும் குறைவின்றி வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையில் தெரிந்தோங்கிச் சரிவில்லா இன்பத்தாற் சங்கரனாய், முழுதுலகும் தெரிந்தொன்றி உணர்ந்துநின் திப்பியஞா னந்தன்னால் விரிந்தெங்கும் சென்றமையால் 1விண்ணுவாய், மண்மிசைத் தேர்வுற்ற ஆரிடம் நான்மையினும் திரிவில்லாச் சார்வுற்ற நான்மையினும் 2சதுமுகனாய் ஓங்கினையே! இது தரவு. இருத்தியும் நூனெறிய தியல்வகை தன்னாலும் வருத்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய் ! தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால் அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ? ஏதிலா உயிர்களை *v›tif¤ தியக்கத்தும் காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன் வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப் பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ? எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம் செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்க் கொலைத்திறத்தாற் கூட்டுண்ணும் கூற்றப்பே ரரசனுங்க அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமோ? இவை தாழிசை. தாருறு நனைசினை தழலெழில் சுழல்சுழற் கைவகை முகைநகு தடமலர் அசோகினை; சீருறு கெழுதகு செழுமணி முழுதணி *3mÇíis விலங்கரை சணிபொனின் அணையினை; வாருறு கதிரெதிர் மரகதம் நிரைநிரை *ÉÇòÇ தெளிமதி 1வெருவரு குடையினை; போருறு தகையன புயலுளர் வியலொளி புதுமது நறவின புனைமலர் மழையினை; பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு பொலிமலி கலிவெலும் பொருவுறும் எயிலினை; வெறிகிளர் உருவின விரைவினின் இனிதெழ எறிவரு தெரிதக வினிதுளர் கவரியை; விறலுணர் பிறவியை வெருவரு முரைதரு வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை; அறிவளர் அமரர்கள் அதிபதி இவனெனக் கடலுடை இடிபட எறிவன விசையினை. இவை அராகம். (பேரெண்) மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோ டின்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே! புன்மைசால் அறம்நீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத் தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே! இவை பேரெண். பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ? வீடுடைய நெறியைநின் மேனியே விளக்காதோ? 2ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே உரையாதோ 3கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ? இவை இடையெண். அறிவினால் அளவிலைநீ ; அன்பினால் அசைவிலைநீ; செறிவினாற் சிறந்தனை நீ; செம்மையாற் செழுங்கதிர்நீ; காட்சியாற் 4கடையிலைநீ ; கடஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ மாட்சியால் மகிழ்வினைநீ; மணிவரைபோல் வடிவினைநீ. இவை சிற்றெண். வலம்புரி கலந்தொருபால்; வால்வளை 1ஞெமிர்ந்தொருபால்; நலந்தரு கொடியொருபால் ; நலம்புணர் குணமொருபால்; தீதறு திருவொருபால்; திகழொளி மணியொருபால்; போதுறும் அலரொருபால்; புணர்கங்கை யாறொருபால்; ஆடியின் ஒளியொருபால்; அழலெரி யதுவொருபால்; மூடிய முரசொருபால்; முழங்குநீர்க் கடலொருபால்; பொழிலொடு கயமொருபால்; பொருவரு களிறொரு பால்: எழிலுடை ஏறொருபால்; இணையரி மானொருபால். இவை அளவெண். எனவாங்கு, இது தனிச்சொல். இவைமுத லாகிய இலக்கப் பொறிகிளர் நவையில் காட்சி நல்லறத் தலைவ! நின் தொல்குணம் தொடர்ந்துநின் றேத்துதும் பல்குணப் பெருநெறி அருளியெம் பிறவியைத் 2தெறுவதோர் வரமிகத் தருகுவை எனநனி பரவுதும் பரம ! நின் அடியிணை பணிந்தே இது சுரிதகம். இஃது அராக அடி எண்சீரால் எட்டாய், அல்லா உறுப்புக் குறையாதே வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) கல்லின்மேல் 3நாறிய கனபவளக் கொடியேய்ப்பக் கொல்சின மதவெருமைத் தலையொ துங்கி மற்றதன் சில்குருதிச் சீறடிமேற் சிலம்போடு கழல்நனைப்ப விளங்குபொன் நெடுவரைமேல் வெய்துறுமின் எழுந்தாங்குத் துளங்காச்சீர்ப் படையோடும் தொழிலோடும் பொலிந்தோடக் களங்கொண்டு முடியுகைத்த 1கலைமானேற் றூர்தியோய் ! இது தரவு. பெருந்தகைமை பிறக்கொழியப் பிடிக்கோடும் களிறேபோல் அருஞ்சமத்து நினக்குடைந்த அவுணரை நினைக்குங்காற் கரும்புருவ நுதல்வியர்ப்பக் கச்சினால் விசித்தநின் மருங்குல தளவெண்ணின் மாயமும் போலுமே ! பேழ்வாய விறற்கூளி பின்னார்ப்ப முன்சென்று வீழ்வாயா நீயெறிந்த வீரரை நினைக்குங்காற் கேழ்கிளர் விரன்முன்கைக் கிளியிருப்ப எடுக்கில்லா 2மாழைமை காணுங்கால் மம்மரும் போலுமே ! வாளுறழ் உயர்விசும்பின் வாய்மடித்து விரற்சுட்டித் தாள்சோர நினக்குடைந்த தானவரை நினைக்குங்காற் பூளையார்ந் தெழிலெய்தப் பொறியணை புரையுநின் தோளின தளவெண்ணில் தோற்றாரும் போலுமே! இவை தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். கடிகமழ் பூங்குலைக் கலங்கிருந் துடுப்பிற் கார்க்காந்தள் முகைவென்றன விரல் விரலுற விரித்தமைத்து விசும்பு 3தை வந்து முலையொடு முகத்தொடு தடுமாறின பந்து; பந்தவிழ் பணிச்சென்னி கையயற் றெரீஇய *mnrh»‹ அந்தளிர் அணிகொண்டது நுதல்; நுதலிவர் கதுப்புக் குதவியபொன் 4கஞலின மணி; மணிமகரம் உருவாக நிகரொத்தன முத்து; முத்துநகைக் கதிர்மின்னாக அவிர்துகிலிடைப் பூங்கண் இவை அராகம். (பேரெண்) 1அரியொண்கண் அம்பிற் பிறழும் ; வரியல்குல் வண்டிருப் பன்ன தகைத்து. 2கூழை புறமுறத் தாழ்ந்தன ; வாழை வருமுகிழ் ஏய்க்கும் முலை. இவை பேரெண். பெருமட மான்பிணை வென்றது நோக்கு; சிறுமருங்குற் கொல்கின முல்லைக் கொடி. இவை சிற்றெண். படுமணி படுமொருகை; பைங்கிளி யதுவொருகை; வடிநுதி வேலொருகை; வாள்கொண்ட தகைத்தொருகை; 3சேடகத்தாற் 4சேடொருகை; சிலைசேர்ந்த தொழிற்றொருகை. இவை இடையெண். கோடொரு கை ; இயமொரு கை. இவை அளவெண். எனவாங்கு, இது தனிச்சொல். இருபாற் பட்டநின் இணையடி பரவுதும் ஒருபாற் பட்டெமக் கருளுவோய் எனவே இது சுரிதகம். இஃது அகவலும் வெள்ளையும் விரவிய ஓசையால் அராகம் வந்து, பேரெண் வெண்குறளாய்ச், சிற்றெண் இரண்டாய், இடையெண் மூன்றாய், அளவெண் இரண்டாய், இவற்றாற் சில அம்போதரங்க உறுப்புக் குறைந்து, உரிச்சீர்ச் சிறப்பில் வெண்டளையால் வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. 5நுழைதுகில் அகலல்குல் நுசுப்பின்கீழ்க் கலையிமைப்ப விழைதகுபூண் முலைநெருங்க விற்கிடந்த திருநுதல் என்னும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா அகவலும் வெள்ளையுமாய் அராகம் வந்து, பேரெண் குறள்வெண்பாவாய், அல்லா அம்போதரங்க உறுப்புக் குறைந்து, ஆறு உறுப்பும் உடைத்தாய் வந்தது எனக் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க. அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் என்று விதப்பு அடுக்கிச் சொல்ல வேண்டியது என்னை? ஒருசார் ஆசிரியர், தலையளவு அம்போ தரங்க ஒத்தாழி சைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும் தாழிசையும் பெற்ற அடியளவு பெற்று, தாழிசைப் பின்னர்த் தனிநிலை பெற்றும் அதன்பின் அராக அடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நாற்சீர் முதலாகப் பதின்மூன்று சீர் ஈறாக, இடை அந்தாதித்து, இத் துணைச் சீராலும் அராக அடிபெற்று அம்போதரங்கத்துக்கு ஓதப்பட்ட அராக அடியின்றிக் குறிலிணை பயின்ற அடி பெற்று, அடுக்கிசை, முடுகியல், அராகம் என்னும் மூன்று பெயரும் பெற்று, தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின், வண்ணகம் எனப்படும்; இடை அந்தாதித் தொடை யானும் வரப்பெறும், என்று இவ்வாற்றாற் சொன்னார்; அஃது இந் நூலுள்ளும் உடம்பட்டது என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது. வண்ணகத் தியற்கை திண்ணிதிற் கிளப்பின், தரவொடு தாழிசை தலையள வெய்தித் தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப் பேரெண், இட்ட எண்ணுடைத் தாகி *இடையெண் வழியால் அராகவடி நான்கும் கீழள வாகப் பேரள வெட்டாச் சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட இடைநடு எனைத்தும் சீர்வகை முறைமையின் அராகம் பெற்றும் அம்போ தரங்கத் தராகவடி இன்றி மடக்கடி மேலே முச்சீர் எய்திக் குறிலிணை பயின்ற அசைமிசை முடுகி அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும் உடைப்பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப அந்தாதித் தொடையினும் அடிநடை உடைமையும் முந்தையோர் கண்ட முறைமை என்ப என்றார் பிறை நெடுமுடிக் கறை மிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். வரலாறு: (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) சிலப்பொலிக்கும் இணையடியும் செறுகுறங்கும் பணைத்தோளும் நலம்புகழ்தற் கரிதாய நகைமுகமும் புரிகுழலும் இலங்கிழையாற் பொலிவுற்ற எழில்நிறமும் இவைகவற்ற அந்தணனாய் அறமொரீஇ அணியிழைநின் பணிபிழைத்து முந்துணரான் பிரிவாற்றா முகிலுறங்கு மணிவரைமேல் வந்தவிழ்ந்த மலரயனாய் வரம்வேண்ட அருளியோய்! இது தரவு. போதிவரும் மலர்ப்பிண்டிப் புங்கவன்றன் அறநெறியைத் தீதிலா வினைபெருகத் திருநலமும் ஒருமனத்தாற் 1பேதிவரும் பிறவிகளைப் பிரித்தருளு கெனவணங்கிக் 2காதிவரும் மணிக்குழையாய் ! கடவுளடி அடைந்தனையே! மதுவார்ந்த மலர்ப்பிண்டி மாதவன தருணெறியைக் கதுவாய்ப்பட் டியலாமைக் கழிகாவல் மிகைபூண்டு பொதுவாய்வண் டறைசோலைப் பொழிலணியும் சந்தத்துள் இதுவாகும் அறநெறியென் றினிதமர்ந்த இயல்பினையே! தேனுலாம் மலர்ப்பிண்டித் தேவர்கோன் றிருந்தடியை வானுலாம் அமரர்களும் விஞ்சையரும் வந்தேத்த ஊனுலாம் உடம்பெய்தி உச்சந்த மால்வரைமேல் வேனிலாம் மனங்கனல விதூடகனை விரும்பினையே! இவை தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். அணிகிளர் துகிலல்குல் மணிமலி கலையினை; பணிமொழி நினதருள் பலரிவண் அருளென மருள்குவை; கறையறு துறவுடை இறைவன திருவடி கவவுறு காதலை; முறையற முழுவது மலிபொருள் நிலைமையை மலமற வுணர்தலும் மகிழ்ந்தனை; திருமலர் கஞலிய 3சிகழிகை திகழ்தரு மணிமலி மகரமும் மறுவுறு திலகமும் அணிந்தனை; முழுமதி இதுவென முதுபுதல் மதுவிரி திருமலர் இதுவென ஒளியினும் மணியினும் இகலிய முகத்தினை; நகையென மினலென நளிர்சுடர் ஒளியென வகையமை அமிழ்தென வளைகடல் மணியென முகைவிரி மலரென முறுவலை; குழலென அமிழ்தென நனியினி கனியென மலியொலி மருவிய மலருறை 2மிஞிறென மகிழ்தரு குயிலென மழலைய மொழியினை; பெறலரு மரபின திருவமர் அருள்மொழி உருவருள் உறுவர்கள் ஒழிவிலர் விரவலின் மருளற அருளிய அறிவன தருள்மொழி மகிழ்ந்தனை. இவை அராகம். குரும்பையும் பொற்செப்பும் கோங்கின் அரும்பும் விரும்பின வீங்கு முலை. *முலைத்தலைச் செஞ்சுணங்கு வேங்கை மலரோ டலைத்தன அம்பொற் பிதிர். இவை பேரெண். மணிபுனைந்த முடியினைநீ ; மானிகலும் நோக்கினைநீ; அணிபுனைந்த அல்குலைநீ; அரும்புறழும் முறுவலைநீ; காதணிந்த குழையினைநீ ; கதுப்பணிந்த கண்ணியை நீ; போதணிந்த குழலினை நீ; பொருவரிய புகழினை நீ. இவை சிற்றெண். அதனால், இது தனிச்சொல். அருள்நெறி பயந்த அறிவருள் அறிவன் பொருள்நெறி புகன்ற வாய்மொழி வழாது குணந்துறை போகிய எண்ணரும் பெருமைக் கணந்துறை போகிய காவலன் கண்ணி உலவுபுகழ் உரவோன் திருநகர் நிலவி எம்மிடர் நீக்குமதி நீயே இது 1சுரிதகம். இது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு ஓதப்பட்ட உறுப்புப் பிழையாது வந்தவாறு: தரவும் தாழிசையும் தலையளவு பெற்றுத் தாழிசைப் பின்னர் அராகம் பெறாது தனிச்சொல் பெற்று அம்போ தரங்கத்திற்கோதிய அராகவடி பெறாதாய் வண்ணகத்துக் கோதப்பட்ட அராகம் நான்கும் எட்டும் என்னும்படி எட்டடியால் அராகமவை நாற்சீர் முதலாகப் பதின்மூன்று சீர் இறுதியாக அராக அடி வருக என்னும் ஓத்தினால் வந்து, அராகத்து இறுதிக்கண் வெண்பாவாய்ப் பேரெண் இரண்டடியால் இரண்டு வந்து, அவை அந்தாதித் தொடையால் வந்து இடையெண் வாராதாய், சிற்றெண் தலையளவிற்கு ஓதிய அரையடி எண் எட்டும் வந்து, தனிச் சொற்பெற்றுக் கடைக்கண் அடக்கியலுள் வண்ணித்து வந்து சுரிதகத்தால் இற்றது. மற்றையன இவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத் துள்ளும் ஓதிய இலக்கணம் தழுவிக் கிடந்தன இல்லை என்பது. இவ்வாறு சொன்னார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர். இவ்வாறு வருவனவற்றை அளவியல் வண்ணக ஒத்தாழி சைக் கலிப்பா என்றும், அல்லனவற்றை அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வழங்குவாரும் உளர் எனக் கொள்க. குறில்வயின் நிரையசை கூட்டிய வாரா தடியவட் பெறினே வண்ணக மாகும் என்றார் அவிநயனார் எனக் கொள்க. (ஙக) கலி வெண்பா அரு. தன்றளை ஓசை தழீஇநின் றீற்றடி வெண்பா இயலது கலிவெண் பாவே. ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே கலிவெண்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடை அடி வெண்பா இறுமாறே போல முச்சீர் அடியால் இறுவது யாது? அது கலிவெண்பா என்று வழங்கப்படும் என்றவாறு. தன்றளை ஓசை தழீஇயும் என்னும் உம்மை விதப் பினால், ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு, முச்சீரால் இறுவனவும் வெண்கலிப்பா என்று வழங்கப்படும் எனக் கொள்க. தன்றளை ஓசை தழீஇநின் றீற்றடி வெண்பாக் கலிவெண் பாவே என்னாது, ஈற்றடி வெண்பா இயலது என்று விதப்பித்த அதனால், ஈற்றடி வெள்ளோசை கொண்டும் முச்சீர் அடியால் இறுவதே கொள்ளப்படும் எனக் கொள்க. என்னை? கலியொலி கொண்டு தன்றளை விரவா இறுமடி வரினே வெண்கலி ஆகும் என்றார் அவிநயனார். தளைகலி தட்டன தன்சீர் வெள்ளை களையுந இன்றிக் கடையடி குறையின் விரவிவரல் இல்லா வெண்கலி ஆகும் என்றார் மயேச்சுரர். வெண்டளை தன்றளை என்றிரு தன்மையின் வெண்பா இயலது வெண்கலி ஆகும் - யா. கா. 31. மேற். என்றார் காக்கைபாடினியார். 1வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும். வரலாறு: (கலி வெண்பா) பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் 2பயில்வானா விண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் 3பயில்வார்கள் விண்ணாளும் வேந்தரா வார் இது சிறப்புடைக் கலித்தளையால் வந்த கலி வெண்பா. நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச 4மாகதஞ்சேர் வாய்மொழியான் *khjt®¡F« அல்லார்க்கும் தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு மாதுயரம் தீர்ப்ப தெளிது இஃது உரிச்சீர் வெண்டளையால் வந்த கலி வெண்பா. ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண் வார்மலர்த் தடங்கண்ணாள் வலைப்பட்டு வருந்தியவென் தார்வரை அகல்மார்பன் தனிமையை அறியுங்கொல் சீர்நிறை கொடியிடை சிறந்து! - யா. கா. 31. மேற். இது சிறப்பில் ஆசிரிய நிரைத்தளையால் வந்த கலி வெண்பா. முழங்குகுரல் *Kuáa«g முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்ப் பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற் பொருகழற்கால் வயமன்னர் போற்றிசைப்ப வீற்றிருப்பார் மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணந்தாங்கி அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து இது சிறப்பில் வஞ்சித் தளையால் வந்த வெண்கலிப்பா. ஒழிந்த தளைபட்ட வெண்கலிப்பாவும் வந்த வழிக் கண்டு கொள்க. இச்சூத்திரத்துள் தன்றளை ஓசை தழீஇநின்று என்பது வேண்டா, ஈற்றடி வெண்பா இயலது கலிவெண்பா, என அமையும். என்னை? வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத்தளையும் மயங்கியும் வழங்கும் - யா. வி. 22. என்னும் இலக்கணத்தால், வெண்பா ஒழித்து அல்லாத செய்யுள்களுள் வேற்றுத் தளை விரவும் என்பதூஉம், விரவினும் தன்றளையால் வருவது சிறப்புடைத்து என்பதூஉம் கூறப்பட்டன. துள்ளல் இசையன கலியே, (யா. வி. 78) என்னும் பொது இலக்கணத்தால், கலி எல்லாம் துள்ளல் ஓசையாலே வரும் என்பதூஉம் சொல்லப்பட்டது ஆகலின், பெயர்த்தும் தன்றளை ஓசை தழீஇநின்று என்று கூறியது கூற வேண்டியது என்னை? ஒருசார் ஆசிரியர், செப்பல் ஓசையிற் சிறிது வழுவிற்று வழுவாது என்னும் பெற்றியானும், செப்பல் ஓசையிற் சிதை யாதும் ஒரு பொருண்மேல் வெள்ளடியால் வந்து வெண்பா இறுமாறே இறுவன கலி வெண்பா என்னும் சிறப்புடைய, என்று எடுத்து ஓதினார் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை? ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் *திரிபின்றி வருவது கலிவெண் பாட்டே - செய். 154. என்றார் தொல்காப்பியனார் ஆகலின். வரலாறு: (கலி வெண்பா) சுடர்த்தொடீஇ ! கேளாய்: தெருவினாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே ! உண்ணுநீர் வேட்டேன், எனவந்தாற் கன்னை அடர்பொற் 1சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் ! உண்ணுநீர் ஊட்டிவா, என்றாள் ; எனயானும் தன்னை அறியாது சென்றேன்; மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் 2தெருமந்திட்(டு), அன்னாய் ! ïtbdhUt‹ brŒjJfh© ! என்றேனா, அன்னை அலறிப் 3படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான், என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ, மற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன் - கலித்தொகை. 51. இது வெள்ளோசை கொண்டு ஒரு பொருண்மேல் வெள்ளடியால் வந்த கலி வெண்பா. வெள்ளோசையின் வழுவி வேற்றுத்தளையால் வருவனவும் வந்துழிக் கண்டு கொள்க. இதுவும் விதப்பினால் உரைத்துக் கொள்க. கலிவெண் பாவே என்றவழி ஏகார விதப்பினால், 4வெள்ளோசையினால் வருவதனைக் கலி வெண்பா என்றும், பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க. (கட்டளைக் கலித்துறை) அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி ; வான்றளைதட் டிசைதன தாகியும் வெண்பா இயைந்துமின் பான்மொழியாய் ! விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே - யா. கா. 31. இவ்வியாப்பருங்கலப் புறநடைக் காரிகையை விரித் துரைத்துக் கொள்க. (ஙஉ) கொச்சகக் கலிப்பா அகூ. தரவே தரவிணை தாழிசை தாமும் சிலவும் பலவும் சிறந்து மயங்கியும் மற்றும் விகற்பம் பலவாய வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், கொச்சகக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) தரவே தரவிணை தாழிசை தாமும் சிலவும் பலவும் சிறந்து மயங்கியும் - தரவே வந்தும், தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் வெண்பாவினோடும் ஆசிரியத்தி னோடும் மயங்கியும் வருவன எல்லாம் கொச்சகக் கலிப்பா என்றும்; (தரவு ஒன்றே வந்தால் தரவு கொச்சகக் கலிப்பா என்றும், தரவு இரண்டாய் வந்தால் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்றும், சில தாழிசையால் வந்தால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், பல தாழிசையால் வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் பிற பாவினோடு மயங்கியும் வந்தால் அதனை மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்குப. சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், (நன். 14) என்பது தந்திர உத்தி ஆகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. தாமும் என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தனிச் சொல் இடையிடையே வரவும் அமையும்; அம்போதரங்க உறுப்பும் அருகி வரும் ; சுரிதகமும் அருகி வரப்பெறும் , எனக் கொள்க. சிறந்து என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இவற்றின் தாழிசை ஈற்றடி குறைந்து வரவும் அமையும் எனக் கொள்க) மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும் - கலிக்கு ஓதப்பட்ட உறுப்பெல்லாம் குறை வின்றிக் கலியது தன்மை பெற்ற உறுப்புக்கள் மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் அராக அடி அந்தாதித் தொடை தொடுத்தும், அத்தொடை பலவாய் வந்தும், கலிக்கண் வாரா என்ற நேரீற்று இயற்சீர் வந்தும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வந்தும், ஐஞ்சீர் அடி வந்தும், முச்சீராலும் இரு சீராலும் அம்போ தரங்க உறுப்புப் பெற்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் கலிப்பாக்களோடு ஒவ்வாது வருவன எல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்கப்படும் என்றவாறு. தரவு ஒன்றாய்ச் சுரிதகம் பெற்றதனைச் சுரிதகத் தரவு கொச்சகம் என்றும், சுரிதகம் இல்லாததனை இயற்றரவு கொச்சம் என்றும், தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வந்ததனைச் சுரிதகத் தரவிணைக் கொச்சகம் என்றும், சுரிதகம் இல்லாத தனை இயற்றரவிணைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறையாது சில தாழிசையால் வந்ததனை இயற்சிஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறைந்து சில தாழிசையால் வந்ததனைக் குறைச்சிஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறையாது பல தாழிசையால் வந்ததனை இயற்பஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறைந்து பல தாழிசையால் வந்ததனை குறைப் பஃறாழிசைக் கொச்சகம் என்றும், கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக் களோடு மயங்கி வந்ததனை இயல்மயங்கிசைக் கொச்சகம் என்றும், பிற பாவினோடு மயங்கி வந்ததனை அயல் மயங்கிசைக் கொச்சகம் என்றும் இவ்வாறு வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க. என்னை? ஓதப் பட்ட உறுப்புவகை எல்லாம் ஏதப் படாமைக் கலிக்கியல் பெய்தி மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் *ml¡»aš அந்தம் தொடுத்தன பல்கியும் கலிவயிற் கடிந்த சீரிடை மிடைந்தும் நாற்சீர் இறந்த சீரொடு சிவணியும் முச்சீர் இருசீர் அம்போ தரங்கம் அச்சீர் *Koto அழிவில தழுவியும் கொச்சகக் கலியெனக் கூறவும் படுமே - யா. கா. 32. மேற். என்றார் பிறரும் எனக் கொள்க. அவற்றை இயல் மயங்கிசை என்று வழங்குவர் எனக் கொள்க. மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும் என்பதனாலே, இப்பொருள் எல்லாம் விரித்து உரைத்துக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (இயற்றரவு கொச்சகக் கலிப்பா) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே - யா. வி. 15. 20. 32. 78. மேற். எனவும், வெறிகொண் டலரும் பொழிலார் சிமயம் முறிகொண் டறையும் முரல்வார் சுரும்பின் ஒலிகொண் டதனின் னிசைபா டிவர நலமின் புறுநா டகமா டிநிற்ப மகமந் திசென்றந் திதொழப் படுஞ்சீர் மிகநந் தியவிஞ் சையன்வென் றனனே எனவும் இவை இயற்றரவு கொச்சகக் கலிப்பா. (இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா) வார்பணிய தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்ச ஊர்பணிய மதியம்போல் நெடுங்குடைக்கீழ் உலாப்போந்தான் கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே. அவற்கண்டு, பூமலர் நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டைத் தூமலர்க்கண் மடவார்க்குத் தொல்பகையே அன்றியும் காவலற்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதே இது வெண்டளையால் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா. (சுரிதகத் தரவு கொச்சகம்) குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத் தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து *å§Fã¡ கயிறொரீஇத் தாங்குவனத் *bjh‹w¥ போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப. இது தரவு. என வாங்கு. இது தனிச்சொல். ஆனோடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே - யா. கா. 21. மேற். இது சுரிதகம். இது சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா. (சுரிதகத் தரவிணைக் கொச்சகம்) வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க் கொடிபடு *tiukhl¡ கோழியார் கோமானே ! இது தரவு, எனவாங்கு, இது தனிச்சொல். துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங் கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ? இதுவும் தரவு. அதனால், இது தனிச்சொல். செவ்வாய்ப் பேதை இவள்திறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே? - யா. கா. 32. மேற். இது சுரிதகம். இது சிறப்புடை ஆசிரியத் தளையால் வந்த சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா. பிற தளையாலும் வந்த வழிக் கண்டுகொள்க. (இயற்சிஃறாழிசைக் கொச்சகம்) பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே இது தரவு. ஆங்கொருசார். இது தனிச்சொல். உச்சியார்க் கிறைவனாய் உலகமெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் 1புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே; இது தாழிசை. ஆங்கொருசார். இது தனிச்சொல். அக்காலம் அணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து 2வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங்கைக் காணாத காரணத்தாற் 3சமழ்த்தனரே ; இது தாழிசை. ஆங்கொருசார். இது தனிச்சொல். மால்கொண்ட பகை தணிப்பான் 4மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட 5சேவலங் கொடியோனாப் பாவித்தார் வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே இது தாழிசை, அஃதான்று, இது தனிச்சொல். கொடித்தேர் *m©zš கொற்கைக் கோமான் *Ëwòfœ ஒருவன் செம்பூட் சேஎய் என்றுநனி அறிந்தனர் பலரே; தானும் 6ஐவருள் ஒருவனென் றறியல் ஆகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே ! - யா. கா. 32. மேற். - வீரசோழியம், யாப்பு, 12, மேற். இது சுரிதகம். இஃது இடையிடை தனிச்சொல் வந்து, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டு, தாழிசை மூன்றேயாய்த் தன்தளையால் வந்த இயற்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. (குறைச்சிஃறாழிசைக் கொச்சகம்) மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்ற ஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடி மணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார் அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே இது தரவு. தானவ்வழி, இது தனிச்சொல், 1எழுப்பற்றிச் 2சனந்துறுமி எவ்வழியும் இயமியம்ப 3விழுக்குற்று நின்றாரும் பலர்; இது தாழிசை, ஆங்கே, இது தனிச்சொல், வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக் கோளுற்று நின்றாரும் பலர்; இது தாழிசை. ஆண்டே, இது தனிச்சொல். இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப் பற்றாது நின்றாரும் பலர் இது தாழிசை. அதுகண்டு, இது தனிச்சொல். மைவரை *Ãw¤J¤j‹ மாலை இயல்தாழக் கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்ப அழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம் எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டன கோல வரிவளை தானும் 4காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே! இது சுரிதகம். இஃது இடையிடை தனிச்சொல் வந்து, ஈற்றடி குறைந்து வந்த மூன்று தாழிசை பெற்று வந்தமையால், குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, சிறப்பில் வெண்டளையால் வந்து, நாலடித் தரவாகி, இரண்டடித் தாழிசையாலும் ஆறடிச் சுரிதகத்தாலும் வந்தது எனக் கொள்க. பிற தளையாலும் வந்தவழிக் கண்டு கொள்க. (இயற்பஃறாழிசைக் கொச்சகம்) தண்மதியோர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங் குண்மதியும் உடனிறையும் உடன்றளர முன்னாட்கண் கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையின் நிறைகவர்ந்து பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ? இது தரவு. இளநலம் இவள்வாட இரும்பொருட்குப் பிரிவாயேல், 1தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ? தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல், வகைநலம் இவள்வாடி வருந்தியில் இருப்பாளோ? அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல், மணிநலம் மகிழ்மேனி மாசோடு *kÈthnsh? நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல், 2ஓம்பிரியோம் என்றநின் உயர்மொழியும் பழுதாமோ? குன்றளித்த திரள்தோளாய் ! கொய்புனத்துக் கூடியநாள் அன்றளித்த அருண்மொழியால் அருளியது அருளாமோ? சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப் பல்பகலும் 3தலையளித்த *gÂbkhÊí« பழுதாமோ? இவை ஆறும் தாழிசை. அதனால், இது தனிச்சொல். அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரியன ; வெறுக்கையும் அற்றே; விழுமிய தறிமதி அறிவாம் 4கழுமிய காதலில் தரும்பொருள் சிறிதே - யா. கா. 32. மேற். இது சுரிதகம். இது சிறப்புடைத் தன்றளையால் நாலடித் தரவும், இரண்டடித் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், நாலடிச் சுரிதகமும் பெற்று வந்த இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வந்த வழிக் கண்டு கொள்க. (இயல் மயங்கிசைக் கொச்சகம்) மணிகிளர் நெடுமுடி மாயவனும் 1தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் ; நுரைநிவந் தவையன்ன 2நொப்பறைய சிறையன்னம் இரைநயந் 3திறைகூறும் ஏமஞ்சார் துறைவ ! கேள்: வரையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கரையெனக் கடலெனக் கடிதுவந் திசைப்பினும், விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவ ! கேள்: இவை இரண்டும் தரவு. கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடி நெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்; கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்; நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்; கனைவரல்யாற் றிடுகரைபோற் கைந்நில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்; வீழ்சுடரில் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கில்லா தாழுமென் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்; கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால். இவை யாறும் தாழிசை. அதனால், இது தனிச்சொல். அடும்பயில் *ïW«ãil நெடும்பனை மிசைதொறும் கொடும்புற மடலிடை ஒடுங்கின 4குருகு ; செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர் நெறிதரு புரவியின் மறிதரும் 5திமில் ; அரசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைதரு திரையொடு கரைபொரும் கடல்; *my§bfhË விரிசுடர் *ïy§bfÊš மறைதொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில். இவை நான்கும் அராகம். விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ; கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன்; நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன்; நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? மறவாத அருளுடையேன் மனநிற்கு மாறுரையாய்; துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் காதலார் மார்பன்றிக் 1காமக்கு மருந்துரையாய்; ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய் இணைபிரிந்தார் மார்பன்றி 2இன்பக்கு மருந்துரையாய்; துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய். இவை யாறும் தாழிசை. என வாங்கு இது தனிச்சொல். பகைபோன் றதுதுறை; பரிவாயின குறி ; நகையிழந் ததுமுகம் ; நனிநாணிற் றுளம்; தகையிழந் ததுதோள்; தலைசிறந்தது துயர்; 3புகைபரந் ததுமெய் ; 4பொறையாகின்றென் உயிர் இவை இருசீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். அதனால், இது தனிச்சொல். இனையது நிலையால் அனையது பொழுதால் 5இனையல் வாழி தோழி ! துனைவரல் பனியொடு கழிக உண்கண் ; என்னொடு கழிகவித் துன்னிய நோயே! - யா. கா. 32. மேற். இது சுரிதகம். இது தரவு இரட்டித்துத், தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம் நான்கும், 1பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச் சொல்லும், எட்டு அம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும், சுரிதகமும் இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புமே மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தமை யால், இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. (அயல் மயங்கிசைக் கொச்சகம்) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாகம் உறத்தழீஇப் போதந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே; இது தரவு. அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் கானக நாடன் மகன்; சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! வள்ளிகீழ் வீழா, வரைமிசைத் தேன்தொடா, கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்; காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வற் றொழுதெழலால் தம்மையரும் தாம்பிழையார் தாம்தொடுத்த கோல் ; இவை தாழிசை. என வாங்கு, இது தனிச்சொல். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருந்து சாய்த்தார் தலை; தெரியிழாய்! நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; நல்லாய் ! நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாம் தாங்குவார் என்னோற் றனர்கொல் ! புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ? நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? விண்டோய்கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ? பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ? மைதவழ் வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉம் கண்களும் கண்களோ ! என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்; நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண் மன் ; எனவாங்கு, இது தனிச்சொல். “be¿a¿ br¿F¿ òÇâÇ g¿ah m¿tid KªJÖï¤ *jifÄF bjhiftif m¿í« rh‹wt® ïdkhf ntŒòiu bk‹nwhŸ griyí« m«gY« kha¥ òz®¢áí« všyh« clܧf¢ nría® bt‰gD« *tªjd‹ *nghbjÊš c©fQ« bghÈfkh ïÅna?”- கலித்தொகை 39 இது சுரிதகம். 1இது வெள்ளை பலவும், மயங்கி ஆசிரிய அடியும் விரவி வந்தமையால், அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. இதன் முதற்கண் நேரீற்று இயற்சீர் வந்தவாறு கண்டுகொள்க. (மயங்கிசைக் கொச்சகம்) நறுவேங்கைத் 2துறுமலர் நன்னுதலார் கொண்டணிய உறுபாங்கர்ப் புனத்தருகர் ஒருசிறைநின் றேமாகக் கடிகாவற் குறவர்தம் காப்பினாற் கதஞ்சிறந்திட் டிடியோடு முழக்கிற்றாய் இருங்களிறு தோன்றலும் 3அஞ்செமக்கு வந்தடைய அருளினால் வேல்விடலை வெஞ்சினத்தால் அதன்றிறல்வீழ்த் தெந்தடந்தோள் 4கவைஇக் (கொளப் பொற்பின்றி முலைபொதிர்த்த என்பதனால் என்றோழி கற்பினால் உலகினுட் கருதியதே ஆகுமே. இது தரவு. அவனே, அயன்மலைக் காவலன் காதல னாமே; இவளே, அதற்கொண்டும் 5பயப்பெய்தினளே; யானே, இதற்கொண்டும் பெரும்படர் எய்தினனே; அதனால், இதுவிதன் நிலைமையெனும் அதுவிதி யுணரா மதுவிரி மலரியன் உறுவனள் 6அலர்; அலர்சிலர் பலரறி குறியுறு வகைகொடி தனையிது மிக 7நொது மலர்வரை வதைகடன் நுமர் ; நுமர்தரு விதியென நுணுகிய விலகிடை தமர்பல ருடன்மகிழ் தகையின திவள்தகை; தகைபெறு குழலெழில் அழல்சுழல் பழியினள்; பழிபடர் இடரொடு பலர் பலதுயர் செலப்புரி புரிதெரி விலர்தமர் ; தமர்பல தகுதியோ டெமரிவர் *jifÄif நவிறுத லதுவிதி இவை அந்தாதித் தொடையாகிய அராகம். இனியே, ஆடல் நடைப்புரவிச் செம்பூட் சேஎய் கூடலெனக் குயின்றன தோள்; மறந்தரு தானைச் செங்கோற் கிள்ளி உறந்தையிற் சிறந்தன முலை; மஞ்சுவரைத் திணிதோட் பூழியர் மன்னவன் வஞ்சியென மலர்ந்தன கண்; இன்றே, பொலிகநும் வினையே ! பொலிகநும் வினையே: நாணணி கொண்ட நன்னுதல் அரிவைக்கும் பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும் மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய புனையீ ரோதிக்கும் பொலிகநும் வினையே! இவ்வகை, வினைசெய் மாக்களும் விரும்பினர் வாழ்த்திப் புனைநலம் எய்தின்றிப் பதியே; நொதுமலர்க் *fiwªj‹W முரசு; கதுமெனக் கதிர்த்தது கடி; *kzbkhL மகிழ்ந்தது மனை; கண்ணொடு *fæïÆd கிளை; அதான்று, இது தனிச்சொல். முன்னாட் களவொடு பழகிப் பின்னாட் கற்பொடு புணர்ந்தன்றால் இதுவே இது சுரிதகம். இதுவும், பிரிந்திசைக்குறள் அடிகளும், அந்தாதித் தொடையாகிய அராக அடிகளும், தனிச்சொற்களும் விரவி, மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும், இவை இடையிடை ஆசிரியங்களும் வெள்ளைகளும் மயங்கியும் வந்தமையான், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். பிரிந்திசைக் குறளடியாவன, இருசீர் அடியும் முச்சீர் அடியுமாய் வரும் அம்போதரங்கம் எனக் கொள்க. பிறரும் இவற்றுக்கு இவ்வாறே இலக்கணம் சொன்னார். என்னை? தரவே யாகியும் இரட்டியும் தாழிசை சிலவும் பலவும் மயங்கியும் பாவே றொத்தா ழிசைக்கலிக் கொவ்வா உறுப்பின கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப என்றார் அவிநயனார். தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும் தனிச்சொற் பலவாய் இடையிடை நடந்தவும் ஒத்தா ழிசைக்கலி உறுப்பினிற் பிறழ்ந்தவும் வைத்தவழி முறையால் வண்ணக இறுவாய் மயங்கி வந்தவும் இயங்குநெறி முறைமையிற் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர் - யா. கா. 32. மேற். என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர். எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும், இடைநிலை இன்றி எருத்துடைத் தாயும், எருத்தம் இரட்டித் திடைநிலை பெற்றும், இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும், இடையும் எருத்தும் இரட்டுற வந்தும், எருத்தம் இரட்டித் திடைநிலை ஆறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும், தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யின்றி *ïilÆil வெண்பாச் சிலபல சேர்ந்தும் மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன கொச்சகம் என்னும் *F¿Æd ஆகும் என்றார் காக்கைபாடினியார். இனி ஒருசார்க் கொச்சகங்களை ஒருபோகு என்று வழங்குவாரும் உளர். மயேச்சுரராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவ பாணியும் திரிந்து, தரவு ஒழிந்து அல்லா உறுப்புப் பெறினும், தாழிசை ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப் பட்ட மூவகை எண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஓதப் பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கிய உறுப்பு ஒழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒருபோகு எனப்படும். அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின அம்போதரங்க ஒரு போகு எனவும், வண்ணக உறுப்புத் தழீஇயின வண்ணக ஒரு போகு எனவும்படும். என்னை? கூறிய உறுப்பிற் குறைபா டின்றித் தேறிய இரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை ஒழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப உணர்ந்திசி னோரே என்றார் மயேச்சுரர். வரலாறு: (அம்போதரங்க ஒரு போகு) கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத் திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே; முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர அகல்விசும்பின் அமரர்க்கும் ஆரமுதம் படைத்தனையே; வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத் திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே. இவை மூன்றும் தாழிசை. அமரரை அமரிடை அமருல கதுவிட நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை; இஃது அராகம். அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை, உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை. இவை பேரெண். ஆதிக்கண் அரசெய்தினை; நீதிக்கண் மதிநிரம்பினை; விளங்கெரி முதல்வேட்டனை ; துளங்கெரியவர் புகழ்துளக்கினை. இவை இடையெண். அலகு நீ ; உலகு நீ ; அருளு நீ ; பொருளு நீ; நிலவு நீ ; வெயிலு நீ; நிழலு நீ ; நீரு நீ; இவை அளபெண். எனவாங்கு, இது தனிச்சொல். பவழம் எறிதிரைப் *ghif¡ கோவே! புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி ; உலகுடன் அளந்தனை நீயே ; உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே இது சுரிதகம். இஃது அம்போ தரங்க ஒரு போகு. பிறவும் அம்போதரங்க உறுப்புப் பெற்று வந்த அம்போ தரங்க ஒரு போகு, வந்தவழிக் கண்டு கொள்க. வண்ணக உறுப்புப் பெற்று வந்தன எல்லாம் வண்ணக ஒரு போகு. அவை வருமாறு : (வண்ணக ஒரு போகு) அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றுப் புகலிடநின் குடைநிழலாப் புகு1மரணம் பிறிதின்றி மறந்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிலைதளரப் புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே; அதனால், கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை; முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின் இணைமலர் பலர்புகழ் பயில்வதொர் பண்பினை; மருளுறு துதைகதிர் மணியது மணிநிற மருளும் நின்குடை; குடையது குளிர்நிழல் அடைகுன உயிர்களை அளிக்கும் நின்கோல்; கோலது செம்மையிற் 1குரைகடல் வளாகம் மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று. இவை அராகம். (பேரெண்) ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா நீரினும் இனிதுநின் அருள்; அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும் இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு. இவை பேரெண். (சிற்றெண்) நீரகலம் காத்தோய்நீ ; நிலவுலகம் ஈந்தோய் நீ; போரமர்க் கடந்தோய்நீ ; புனையெரிமுன் வேட்டோய் நீ; ஒற்றைவெண் குடையோய்நீ ; கொற்றச்செங் கோலோய் நீ; 2பாகையந் துறைவனீ; பரியவர் இறைவனீ இவை சிற்றெண். எனவாங்கு, இது தனிச்சொல். பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந் தருள்புரி பெரும்புகழ் அச்சுத இனைய ஆதலின் பனிமதி தவழும் நந்தி மாமலைச் சிலம்ப நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே! இது சுரிதகம். இது வண்ணக ஒரு போகு. பிறவும் வண்ணக உறுப்புப் பெற்று வந்த வண்ணக ஒரு போகு, வந்தவழிக் கண்டு கொள்க. என்னை? தரவின் றாகித் தாழிசை பெற்றும், தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும், எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும், அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும், யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது கொச்சக ஒருபோ காகும் என்ப - பொ. 461. என்றார் தொல்காப்பியனார். அவையெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. இவையெல்லாம், மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும் என்பதனால் உரைத்துக்கொள்க. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலிவெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிகைக் கொச்சகக் கலிப்பா என்னும் ஒன்பது கலிப்பாவும்; வெள்ளைச் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அகவற் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அளவியல் அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலி வெண்பா, வெண் கலிப்பா, இயற்றரவு கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா, இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, இயற் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைப் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என இவ்வாறு விகற்பிக்கப் பதினெட்டாம். அவை 1மூன்று துள்ளல் ஓசையானும் உறழ, ஐம்பத்து நான்காம். பதினெட்டுக் கலியினையும், ஆசிரிய நேர்த்தளை இரண் டும் ஒழித்து, அல்லாத பன்னிரு தளையானும் கூறுபடுப்ப, இருநூற்று ஒருபத்தாறாம்; ஓசையும் தளையும் கூட்டி உறழ, அறுநூற்று நாற்பத்தெட்டாம். ஒத்தாழிசைக் கலிப்பா ஒழித்து, அல்லாக் கலியுள் ஆசிரிய நேர்த்தளை இரண்டும் அருகி வரப்பெறும் என அவற்றோடும் கூட்டி உரைக்குங்கால், எழு நூற்றிருபது கலிப்பாவாம்; பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம். என்னை? (நேரிசை வெண்பா) ஒத்தா ழிசைக்கலியென் றோதிய ஆறினையும் முத்திறத் தோசையால் முன்முரணி - வைத்து வழுவற்ற ஆறிரண்டு வான்றளையால் மாற எழுமுப்பத் தாறாம் எனல் - யா. வி. 81. மேற். கொச்சகம் ஈரைந்தும் வெண்கலி ஓரிரண்டும் வைத்திசையோர் மூன்றினால் மாறியபின்- மற்றவற்றை மாசில் பதினான்கு வான்றளையால் மாறவாம் *MášfÈ¡ கைஞ்ஞூற்று நான்கு - யா. வி. 81. மேற் என்றார் ஆகலின். நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும் ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம் - மூன்றுடைய பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக வைத்தார் முரற்கைக் கெழுத்து - யா. வி. 74. மேற். ஏதம் தழுவா திசைசேர்ந் திருநான்கு நீதி நலஞ்சேர்ந்து நிற்றலால் - ஓதிய மூன்றாங் கிடக்கை முறைமை முரற்கைக்கு மூன்றாங் குலம்வகுத்தார் முன் வணிகர்க்கு எண்ணிலமாவன: *“jÅik ஆற்றல் முனிவிலன் ஆதல், *ïl¤J¤ தெருமரல் பொழுதொடு புணர்தல், உறுவது தெரிதல், இறுவதஞ் சாமை, *tF¤jš, ஈட்டல், வாணிகன் துறையே - திவாகாரம், 12: 126 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (கட்டளைக் கலித்துறை) தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய் மரபே பயின்றும் மயங்கியும் வந்த வாங்கமைத்தோள் அரவேர் அகலல்குல் அம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக் குரவே கமழ்குழ லாய்! கொண்ட வான்பெயர் கொச்சகமே - யா. கா. 32. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க. கலித்தாழிசை அஎ. அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினிற் கடையடி மிகுவது கலித்தா ழிசையே. “ï~J v‹ Ejȉnwh? எனின், கலிப்பா ஆமாறு உணர்த்திக் கலிப்பாவின் இனம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; இச் சூத்திரம், கலிப்பாவின் இனத்தினுள் தாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடி சிலவாயும் பலவாயும் வந்து, தத்தமில் ஒத்து, ஈற்றடிக்கு மிக்கு வருவன எல்லாம் கலியொத்தாழிசை என்றும் கலித்தாழிசை என்றும் வழங்கப்படும் என்றவாறு. அடியெனைத் தாகியும் ஒத்துக் கடையடி மிகுவது கலித் தாழிசையே, என்னாது, வந்து என்றும், அளவினில் என்றும் மிகுத்துச் சொல்லவேண்டியது என்னை? வந்து என்று மிகுத்துச் சொல்லியதாவது, இரண்டடி யினவாய் ஈற்றடி மிக்கு வருவனவும்; ஈற்றடி மிக்கு ஏனையடி தம்முள் ஒவ்வாது அருகி வருவனவும் உள ஒருசார்த்தாழிசை என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. அளவினில் என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்றும், ஒன்றாயும் இரண்டாயும் மூன்றின் மிக்கும் மூன்றாய்ப் பொருள் வேறாயும் வருவனவற்றைக் கலித் தாழிசை என்றும் பெயர் வேறுபடுத்துச் சொல்லுவாரும் உளர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. கலித்தாழிசையே என்று ஏகார விதப்புச் சொல்ல வேண்டியது என்னை? ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவனவற்றை எல்லாம் சிறப்புடைக் கலித்தாழிசை என்றும் ஒவ்வாது வருவனவற்றைச் சிறப்பில் கலித்தாழிசை என்றும், ஈரடியானும் ஈற்றடி மிக்கு வருவனவும் சிறப்பில் கலித்தாழிசை என்றும் சொல்லுவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க. வரலாறு : (கலியொத்தாழிசை) கொய்தினை 1காத்தும் 2குளவி அடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின் ; ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம் ஆசில் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின்; மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின். - யா. கா. 33. மேற். இவை இரண்டடியாய், ஈற்றடி மிக்கு, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால், கலியொத்தாழிசை எனப்படும். (சிறப்புடைக் கலித்தாழிசை) வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம் 3கேள்வரும் போழ்தின் 4எழால்வாழி வெண்டிங்காள் ! கேள்வரும் போழ்தின் எழாதாய்க் 5குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள் ! - யா. கா. 33. மேற். இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடி தம்முள் ஒத்து வந்தமையால், சிறப்புடைக் கலித்தாழிசை எனப்படும். (சிறப்பில் கலித்தாழிசை) நிலமகள் கேள்வனும் நேர்கழலி னானும் நலமிகு கச்சியார் கோவென்பவே; நலமிகு கச்சியார் கோவாயி னானும் சிலைமிகு தோட்சிங்கன் அவனென்பவே; செருவிடை யானை அவனென்பவே. எனவும், பூண்ட பறையறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே; நீண்ட சடையான் ஆடும் என்ப மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே - யா. கா. 33. மேற். எனவும் இவை ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண்டாமடி குறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்த சிறப்பில் கலித்தாழிசை. பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க. கலியொத்தாழிசை, கலித்தாழிசை என்று வேறு படாதே அவற்றைக் கலித்தாழிசை என்று வழங்கவும் அமையும். இவற்றை எல்லாம் விகற்பித்துச், சிறப்புடைக் கலியொத் தாழிசை, சிறப்பில் கலியொத்தாழிசை, சிறப்புடைக் கலித் தாழிசை, சிறப்பில் கலித்தாழிசை, என்று கூறுபடுப்ப, நான்காம். அவை சிறப்புடைத் தளையானும், சிறப்பில் தளையானும் கூறுபடுத்து நோக்க, ஐம்பத்தாறாம். அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. அந்தடி மிக்குப் பலசில வாயடி தந்தமில் ஒன்றிய தாழிசை ஆகும் - யா. கா. 33. மேற். என்றார் காக்கைபாடினியார். அந்த அடிமிக் கல்லா அடியே தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே என்றார் சிறுகாக்கைபாடினியார். ஈற்றடி மிக்கள வொத்தன வாகிப் பலவும் சிலவும் அடியாய் வரினே கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும் என்றார் அவிநயனார். அடிபல வாகியும் கடையடி சீர்மிகிற் கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர். கலித்துறை அஅ. நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், கலித்துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) ஐஞ்சீர் அடி நான்காய் நடப்பது கலித்துறை எனப்படும் என்றவாறு. நெடிலடி நான்காயது கலித்துறை என்னாது, நிகழ்வது என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? அடிமறியாய் ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றைக் கலி மண்டிலத்துறை என்றும், அடி மறி ஆகாதே ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றைக் கலி நிலைத்துறை என்றும் வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவை வருமாறு: (கலி மண்டிலத் துறை) மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்; தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்; தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்; சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும் இஃது அடிதோறும் பொருள் முடிந்து, அடி மறியாய், ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி மண்டிலத் துறை எனப்படும். (கலி நிலைத் துறை) யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான், தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் 1கைதையும் எல்லாம் 2கரியன்றே? - யா. வி. 28. 95. மேற். - யா. கா. 33. மேற். இஃது அடி மறி ஆகாதே ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி நிலைத்துறை எனப்படும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இவை 3பதினாலு தளையாற் கூறுபடுத்து நோக்க, இருபத்தெட்டுத் துறையாம் போலும் எனக் கொள்க. ஐஞ்சீர் அடியின் அடித்தொகை நான்மையொ டெஞ்சா *âa‹wd எல்லாம் கலித்துறை - யா. கா. 39. மேற். என்றார் காக்கைபாடினியார். ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும் என்றார் அவிநயனார். கலி விருத்தம் அகூ. அளவடி நான்கின கலிவிருத் தம்மே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், கலி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நாற்சீரால் ஆகிய நான்கடி உடையன எல்லாம் கலி விருத்தம் எனப்படும் என்றவாறு. அளவடி நான்கின கலிவிருத் தம்மே என்றவழி ஏகார விதப்பினால், அடிமறியாய், நாற்சீர் நாலடியால் வருவன கலி மண்டில விருத்தம் என்றும் ; அடிமறி ஆகாதே நாற்சீர் நாலடியால் வருவன கலி நிலை விருத்தம் என்றும் வழங்கப்படும் எனக் கொள்க. வரலாறு: (கலி மண்டில விருத்தம்) இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி ; வெந்திறல் ஞாயிற்றெழில் 1வீவிலொளி வெல்லுமடி; மந்திரத்தின் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி ; அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி இஃது அடி மறியாய் நிற்றலின், கலி மண்டில விருத்தம் என்று வழங்கப்படும் எனக் கொள்க. (கலி நிலை விருத்தம்) விரிகதிர் மதிமுக மடநடை கணவனொ 2டரியுறு கொழுநிழல் 3அசையின் பொழுதினில் எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன் தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே இஃது அடி மறி ஆகாதே நின்றவாறே நின்று பொருள் பயத்தலின், கலி நிலை விருத்தம் என்று வழங்கப்படும். இவை பதினாலு தளையாற் கூறுபடுத்து நோக்க, இருபத் தெட்டு விருத்தமாம். அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. அளவடி நான்கின என்று பன்மை சொல்லிய அதனால், கலி ஒலி வழுவாது நாற்சீர் நாலடியான் வருவன எல்லாம் தரவு கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்படும் எனக் கொள்க. வரலாறு: செல்வப்போர்க் கதக்கண்ணன் (யா. வி. 15. 20. 32. 78. 86) என்பது கலித்தளையான் வந்தது. நாற்சீர் நாலடி வருவ தாயின் ஒலியின் இயைந்த கலிவிருத் தம்மே என்றார் அவிநயனார். ஐஞ்சீர் நாற்சீர் அடிநான் காயின் எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும் என்றார் மயேச்சுரர். நாலொரு சீரால் நடந்த அடித்தொகை ஈரிரண் டாகி இயன்றவை யாவும் காரிகை *rh‹w கலிவிருத் தம்மே - யா. கா. 33. மேற். என்றார் காக்கைபாடினியார். நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே என்றார் சிறுகாக்கைபாடினியார். கலிக்கு இனமாகிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றினுள்ளும் ஒரு பொருண் மேல் மூன்றாய் வரும் தாழி சையை ஒரு புடை ஒப்புமை நோக்கி ஒரு பொருண்மேல் மூன்றாய் வரும் தாழிசையை சிறப்புறுப்பாக உடைய ஒத்தாழிசைக் கலிப்பாவின் இனம் என்றும்; ஒரு பொருண் மேல் ஒன்றாயும், இரண்டாயும், மூன்றின் மிக்கும் வரும் தாழிசையை மிக்கும் குறைந்தும் கிடத்தல் என்னும் ஒப்புமை நோக்கி, கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும் ; ஐஞ்சீர் அடி கொச்சகத்துள் அருகி வரும் ஆகலின், அவ் வொப்புமையால் கலித்துறையையும் கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும் ; விருத்தம் நாற்சீர் நாலடியால் வருதலின், கலி வெண்பாவின் இனம் என்றும் அவற்றால் ஒரு புடை ஒப்புமை நோக்கிப் பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க. (கட்டளைக் கலித்துறை) அடி1வரை யின்றி அளவொத்தும் 2அந்தடி நீண்டிசைப்பின் கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது ; 3நேரடி ஈரிரண்டாய் விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே! - யா. கா 33. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க. கலிப்பாவும் அதன் இனமும் முடிந்தன. வஞ்சிப்பா கூ. தூங்கல் இசையன வஞ்சி, மற்றவை ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், நிறுத்த முறையானே வஞ்சிப்பாவிற்கு ஓசையும் ஈறும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) தூங்கல் ஓசையைத் தமக்கு ஒசையாக உடையன வஞ்சிப்பாக்கள். அவை, தனிச்சொல்லோடு புணர்ந்து, ஆசிரியர் சுரிதகத்தால் இறும் என்றவாறு. தூங்கல் இசையன வஞ்சி; ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; மற்றவை என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? 1ஏந்திசைத் தூங்கலும், 2அகவற் றூங்கலும், 3பிரிந்திசைத் தூங்கலும் என மூன்று வகைப்படும் தூங்கல் ஓசை, என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. இரண்டு வஞ்சிப்பாவினையும் பதினான்கு தளையானும் உறழ, இருபத்தெட்டாம் ; ஓசையும் தளையும் கூட்டி உறழ, எண்பத்து நான்காம் எனக் கொள்க. தூங்கல் இசையன வஞ்சி ; மற்றவை தனிச்சொலோ டகவலின் இறுமே என்னாது, ஆய்ந்த என்று மிகுத்துச் சொல்லியது, ஒரு சாரார் வேற்றடி விரவாத வஞ்சிப்பாக்களை இன்னியல் வஞ்சிப்பா எனவும் வேற்றடி விரவி வந்த வஞ்சிப்பாக்களை *ÉuÉaš வஞ்சிப்பா எனவும், வேண்டுவர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. இவ்விரண்டு வஞ்சிப்பாவினையும் இவ்விரு பெயரானும் கூறுபடுப்ப, நான்காம் ; இன்னியற் குறளடி வஞ்சிப்பா, விரவியற் குறளடி வஞ்சிப்பா, இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா என. இவை மூன்று தூங்கல் ஓசையானும் உறழப், பன்னிரண்டாம்; அவை பதினாலு தளை யாலும் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம்; ஓசையும் தளையும் கூட்டி உறழ, நுற்றறுபத் தெட்டாம்; பிறவகையாலும் விகற்பிக்கப் பலவுமாம் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (குறளடி வஞ்சிப்பா) பார்பரவிய பருவரைத்தாய்க் கார்கவினிய கதழொளியாய் நீர்மல்கிய நீண்மலரவாய்த் திறமல்கிய தேனினமுமாய், அதனால், மொய்மலர் துவன்றிய தேம்பாய் மலரடி இணைய வைத்தவா மனனே! என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா. பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை *Û‹¿Çju வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும், மகிழும் மகிழ்தூங் கூரன் 1புகழ்தல் ஆனாப் பெருவன் மையனே - யா. வி. 9. 15. 21. மேற். - யா. கா. 9. 34. மேற். என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா பானல்வாய்த் தேன்விரிந்தன; கானல்வாய்க் *fÊkzªjd ; ஞாழலொடு நறும்புன்னை தாழையொடு முருகுயிர்ப்ப, வண்டல்வாய் நறுநெய்தல் கண்டலொடு கடலுடுத்துத் தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துரா அய் இன்னதோர் கடிமண முன்றிலும் உடைத்தே படுமீன் பரதவர் பட்டினந் தானே இஃது அகவற் றூங்கல் குறளடி வஞ்சிப்பா. தொடியுடைய தோண்மணந்தனன்; கடிகாவிற் பூச்சூடினன்; *eiwfkGŠ சாந்தநீவினன்; செற்றோரை வழிதபுத்தனன் ; நட்டோரை உயர்வு கூறினன்; வலியரென வழிமொழியலன்; மெலியரென *nk‰bršyy‹ ; பிறரைத்தான் இரப்பறியலன்; இரப்போர்க்கு மறுப்பறியலன்; வேந்துடை அவையகத் தோங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன்; *bghUgil புறங்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன்; நெடுந்தெருவில் தேர்வழங்கினன்; ஓங்கியல களிறூர்ந்தனன் ; *Ôªnjw‰ றசும்பு தொலைச்சினன்; பாணுவப்பப் பசிதீர்த்தனன்; மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்வகை எல்லாம் செய்தனன் ஆகலின், இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படுகவிப் *òfœbtŒnah‹ றலையே - புறநானூறு 239. இது பிரிந்திசைத் தூங்கல் குறளடி வஞ்சிப்பா. (சிந்தடி வஞ்சிப்பா) கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினாடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன் புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறும் நாற்கதி ; வீடுநனி எளிதே ! - திருப்பாமாலை. - யா. வி. 95. மேற் - யா. கா. 34. மேற். இஃது ஏந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா. தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச் சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும், கலங்கஞர் எய்தி *ÉL¥gî« சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே - யா. வி. 26. மேற். - யா. கா. 23. 34. மேற். இஃது அகவற் றூங்கல் சிந்தடி வஞ்சிப்பா பரலத்தம் செலவிவளொடு படுமாயின் இரவத்தை நடைவேண்டா இனிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கண் தெவிட்டினர் கொல்லோ எனவாங்கு, நொதுமலர் வேண்டி நின்னொடு மதுகரம் உற்ற ஆடவர் தாமே - யா. வி. 26. மேற். இது பிரிந்திசைத் தூங்கிற் சிந்தடி வஞ்சிப்பா. அங்கண்வானத் தமரரசரும் வெங்களியானை வேல்வேந்தரும் வடிவார் கூந்தல் மங்கையரும் கடிமலர் ஏந்திக் கதழ்ந்திறைஞ்சச் சிங்கஞ்சுமந்த மணியணைமிசை கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையு முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் பொன்புனை நெடுமதிப் புடைவளைப்ப அனந்தச துட்டயம் அவையெய்த நனந்தலையுலகுடன் நவைநீங்க மந்தமாருதம் மருங்கசைப்ப அந்தரந்துமி நின்றியம்ப இலங்குசாமரை எழுந்தலமர நலங்கிளர் பூமழை நனிசொரிதர இனிதிருந்து அருணெறி நடாத்திய ஆதிதன் திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே. - யா. கா. 9. மேற். -இது பொதுச்சீரான் வந்த குறளடி வஞ்சிப்பா. 1பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டு, ஆசிரிய அடி விரவி வந்த ஏந்திசைத் தூங்கல் விரவியற் குறளடி வஞ்சிப்பா. விரவியற் சிந்தடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டு கொள்க. தளை விகற்பங்களால் வருவனவும் வந்தவழிக் கண்டு கொள்க. தன்றளை 2பாதம் தனிச்சொற் சுரிதகம் என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே என்றார் காக்கைபாடினியார். தூங்கல் இசையாய்த் தனிச்சொற் சுரிதகம் தான்பெறும் அடிதளை தழீஇவரை வின்றாய் எஞ்சா வகையது வஞ்சிப் பாவே என்றார் அவிநயனார். தூங்கல் ஓசை நீங்கா தாகி நாற்சீர் நிரம்பா அடியிரண் டுடைத்தாய் மேற்சீர் ஓதிய ஐஞ்சிர் பெற்றுச் சுரிதகம் ஆசிரியம் உரியதனின் அடுத்து வந்த தாயின் வஞ்சிப் பாவே என்றார் நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர். (நேரிசை வெண்பா) ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச் சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்; - ஓரும் நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து எனவும், பன்னிய சீர்பயின்று பத்து நிலத்தவாய் மன்னவனைச் சேர்ந்து வனப்பெய்தி - மன்னுதலால், நான்காம்பா என்றுரைக்கும் நாமநூல் வஞ்சியை நான்காம் குலமென்றார் நன்கு எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. இரு சீர் அடி வஞ்சிக்கு 1ஒன்பது நிலத்தோடு முச்சீர் அடி வஞ்சி சிறப்பின்மையால், ஒரு நிலமேயாகக் கொண்டு, வஞ்சி எல்லாமாய்ப் பத்து நிலம் என்ப தொல்காப்பியனார் முதலாகிய தொல்லாசிரியர். அதுவே இந்நூலுள்ளும் துணிபு. 2நான்காம் குலத்திற்குப் பத்து நிலமாவன: ஆணைவழி நிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடன் ஆற்றல், கசிவகத் துண்மை, ஓவா முயற்சி, ஒக்கல் போற்றல், மன்றிடை மகிழ்தல், ஒற்றுமை கோடல், திருந்திய அறத்திற் றீரா தொழுகல், விருந்துபுறந் தருதல் வேளாண் டுறையே என்று ஓதப்பட்டன. மன்னவன் என்ப தாசிரி யம்மே வெண்பா முதலாம் நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய என்றார் வாய்ப்பியம் உடையார் ஆகலின். இதனை விரித்து உரைத்துக் கொள்க. வஞ்சித்தாழிசையும் துறையும் கூக. குறளடி நான்மையிற் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; தனிவரின் துறையென மொழிப துணிந்திசி னோரே ï~J v‹ Ejȉnwh? எனின், வஞ்சித்தாழிசையும் வஞ்சித் துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) இரு சீர் அடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; அச்செய்யுள் நான்கடியாய் ஒரு பொருண்மேல் ஒன்றாய் வருவது வஞ்சித் துறை என்று நூற்றுணிவு உடையார் கூறுவார் என்றவாறு. ஒரு பொருண்மேல் ஆகிய தொடர்ச்சி ஈண்டும் கோவைக் கிளவியாற் கூறுபடுப்பது எனக் கொள்க. தனிவரின், துறையென மொழிப துணிந்திசி னோரே என்றாலும் கருதிய பொருளைக் கொண்டு நிற்கும்; வருவன என்று மற்றொரு வாய்ப்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வருவன வற்றை வஞ்சி நிலைத் தாழிசை என்றும்; அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டிலத் தாழிசை என்றும்; ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வருவனவற்றை வஞ்சி நிலைத் துறை என்றும் அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டிலத் துறை என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (வஞ்சி நிலைத் தாழிசை) இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் 1அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண் ; மடப்பிடியை மதவேழம் தடக்கையால் வெயில்மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்; பேடையை 2இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண் - யா. வி. 95. மேற். - யா. கா. 34. மேற். இவை ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால் வஞ்சி நிலைத் தாழிசை. வஞ்சி மண்டிலத் தாழிசை வந்த வழிக் கண்டு கொள்க. (வஞ்சி நிலைத் துறை) மார்வுற அணிந்தாலும் மார்வுறாய் மணிவடமே! தோளுறச் செறித்தாளும் தோளுறாய் கிளர்வளையே! இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வந்தமை யால், வஞ்சி நிலைத் துறை. (வஞ்சி மண்டிலத் துறை) முல்லைவாய் முறுவலித்தன ; கொல்லைவாய்க் குருந்தீன்றன; மல்லல்வான் மழைமுழங்கின; செல்வர்தேர் வரவுண்டாம் - யா. வி. 95. மேற். இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறியாய் வந்தமையால், வஞ்சி மண்டிலத் துறை. பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க. பிறரும் இவ்வாறே சொன்னார். என்னை? ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும் குறளடி நான்கின் கூடின வாயின் முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி வருவன வஞ்சித் தாழிசை ஆகும் - யா. கா. 34. மேற். என்றார் காக்கைபாடினியார். எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில் வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே என்றார் சிறுகாக்கைபாடினியார். இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே என்றார் அவிநயனார். இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி வருவது வஞ்சித் தாழிசை ; தனிநின் றொருபொருள் முடிந்தது துறையென மொழிப என்றார் மயேச்சுரர். வஞ்சி விருத்தம் கூஉ. சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய தெஞ்சா விருத்தம் என்மனார் புலவர். ‘ï~J v‹ Ejȉnwh? எனின், வஞ்சி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) முச்சீர் அடி நான்கு உடைத்தாய் வரும் செய்யுள் வஞ்சி விருத்தம் என்பர் புலவர் என்றவாறு. சிந்தடி நான்காய் வருவது வஞ்சியது விருத்தம் என்மனார் புலவர் என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; எஞ்சா என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? முச்சீர் அடி நான்காய் அடி மறி ஆகாதே வருவனவற்றை வஞ்சி நிலை விருத்தம் என்றும், அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டில விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. வரலாறு : (வஞ்சி நிலை விருத்தம்) *“thsh வார்கழல் வீக்கிய தாளார் தாமுடைந் தோடினார் நாளை நாணுடை மங்கைமார் தோளை நாணிலர் தோயவே எனவும், முந்து கொன்ற மொய்ம்பினான் வந்து தோன்ற வார்சிலை அம்பின் எய்து கொன்றுதாய்க் கின்பம் எய்து வித்தபின் எனவும் இவை அடி மறி ஆகாதே வந்தமையால், வஞ்சி நிலை விருத்தம். (வஞ்சி மண்டில விருத்தம்) சொல்லல் 1ஓம்புமின் 2தோம்நனி; செல்லல் ஓம்புமின் தீநெறி; கல்லல் ஓம்புமின் 3கைதவம்; மல்லல் ஞாலத்து மாந்தர்கள் ! இஃது அடி மறியாய் வந்தமையால், வஞ்சி மண்டில விருத்தம். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (கட்டளைக் கலித்துறை) குறளடி நான்கின மூன்றொரு தாழிசை; கோதில்வஞ்சித் துறையொரு வாது தனிவரு மாய்விடின் ; சிந்தடிநான் கறைதரு காலை அமுதே! விருத்தம் ; தனிச்சொல்வந்து மறைதலில் 1வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே! - யா. கா. 34. இக் காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. முச்சீர் நாலடி ஒத்தவை வரினே வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே என்றார் சிறுகாக்கைபாடினியார். சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய தெஞ்சா விருத்தம் என்று பிறிதொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? எல்லாப் பாவும் தன் சீராலும் தன் தளையாலும் வருவன, தலையாகு இன்பா என்றும்; தன் சீரும் தன் தளையும் பிற பாவின் சீரோடும் தளையோடும் மயங்கி வருவன, இடையாகு இன்பா என்றும் ; தன் சீரும் தன் தளையும் இன்றியே வருவன கடையாகு இன்பா என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை? தன்சீர் நிலையில் தளைதம தழீஇய இன்பா என்பர் இயல்புணர்ந் தோரே ஏனையவே விரவின் இடையென் படுமே; தானிடை இல்லது கடையெனப் படுமே என்றார் மயேச்சுரர். வஞ்சி நிலைத் தாழிசை முதலாக உடையன செய்யுள், சிறப்புடை ஏழு தளையாலும், சிறப்பில் ஏழு தளையாலும், கூறுபடுப்ப, ஒரோ ஒன்று பதினான்கு பாகுபாட்டைச் சொல்லும்; பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம். (நேரிசை வெண்பா) வஞ்சிப்பா நான்குந்தன் வாலியமூன் றோசையால் எஞ்சாத ஈராறாம் ; ஈண்டவற்றை - எஞ்சாத 2பந்தம் பதினான்கின் மாறப் பழுதின்றி வந்தன நூற்றறுபத் தெட்டு எனவும், அந்தத்திற் பாவிற் கினமாய ஆறினையும் பந்தம் பதினான்கி னாற்பரப்ப - வந்தன எண்பத்து நான்காம் இனியவற்றின் மிக்கனவும் பண்புற்றுப் 1பாத்துக் கொளல் எனவும் இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. வஞ்சிப்பாவும் அதன் இனமும் முடிந்தன. புறநடை கூங. மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மேற்சொல்லப்பட்ட பாக்கட்கெல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) (மேற்சீரும் அடியும் வரையறுக்கப்பட்ட பாவும் பாவினமும் சொன்ன பெற்றியில் திரிந்து) மிக்கும் குறைந்தும் வந்தாலும், அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி, ஒழிந்த செய்யுள்களையும் அவற்றின் பாற்படுத்து வழங்கப்படும் என்றவாறு. வரலாறு : (கலி விருத்தம்) கோழியும் கூவின ; குக்கில் *miH¤jd; தாழியுள் நீலத் தடங்கணீர் ! போதுமினோ; ஆழிசூழ் வையத் *j¿t‹ அடியேத்திக் கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல் ஊழியும் மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய்! நாற்சீர் நாலடியால் வருவது கலி விருத்தம், என்று வரை யறுத்துச் சொன்னார். இஃது ஐந்தடியால் வந்ததாயினும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற்படுத்து வழங்கப்படும் இதனைத் தரவு கொச்சகம் என்பாரும் உளர். இஃது அவிநயனார் காட்டிய பாட்டு. (கலி விருத்தம்) நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே! கோலம் குயின்ற குழலும் 2கொழுஞ்சிகையும் 3காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே! காலக் கனலெரியின் வேவனகண்டாலும், சால மயங்குவ தென்வாழி நெஞ்சே ! - வளையாபதி, 3 எனவும், வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் 1மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே ! உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல் 2சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே ! - வளையாபதி, 4. எனவும் இத்தொடக்கத்தன ஒருசார் வளையாபதிப் பாட்டும், கல்லினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவற் கொல்லையிற் களிறெறி வெற் 3பே யாதே; கொல்லையிற் களிறேறி வெற்பனிவ் வியனாட்டார் பல்புகழ் வானவன் றாளே யாதே; பல்புகழ் வானவன் *whbshL மன்னர்க்கோர் 4நல்ல படாஅ பறையே யாதே எனவும், ஈரிதழ் இணர்நீலம் இடைதெரியா தரிந்திடூஉம் ஆய்கதிர் அழற்செந்நெல் அரியே யாதே; ஆய்கதிர் அழற்செந்நெல் அகன்செறுவில் அரிந்திடூஉம் காவிரி வளநாடன் கழலே யாதே; காவிரி வளநாடன் கழல்சேர்ந்த மன்னர்க் காரர ணிற்றல் அரிதே யாதே எனவும், நித்திலம் கழலாக நிரைதொடி மடநல்லார் 5எக்கர்வான் இருமணல் இணரே யாதே; எக்கர்வான் இருமணல் இணர்புணர்ந் திசைத்தாடும் கொற்கையார் கோமான் கொடியே யாதே; கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச் செற்றர ணிற்றல் அரிதே யாதே எனவும் இத் தொடக்கத்தன ஒருசார் *K¥ng£L¢ செய்யுளும் ஆறடியான் மிக்கனவேனும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற்படுத்து வழங்கப்படும்; கொச்சகக் கலியின் பாற்படுத்தினும் ஆம். இவை மிக்கன. இனிக் குறைந்து வருவன, ஆசிரியப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை என்றார். ஆயினும், கலிக்கும் வஞ்சிக்கும் சுரிதகமாய் இரண்டடியால் வந்தனவும் உள. அவற்றையும் இவ்விலக் கத்தாற் குற்றம் இல்லை என்று வழங்குப. மருட்பாவும் அவ்வாறே எனக் கொள்க. வரலாறு: (வஞ்சிப்பா) சுற்றும்நீர் சூழ்கிடங்கிற் பொற்றாமரைப் பூம்1 படப்பைத் தெண்ணீர் நல்வயல் ஊரன் கேண்மை அல்லிருங் கூந்தற் கலரா னாதே ! - யா. கா. 43. மேற். வஞ்சிப் பாவிற்கு மூன்றடிச் சிறுமை என்று வரையறுத்துச் சொன்னார். இஃது இரண்டடியால் வந்ததாயினும், ஒரு புடை ஒப்புமை நோக்கி, வஞ்சிப்பாவின்பாற்படுத்து வழங்கப்படும். இரண்டடியால் வஞ்சி வரும், என்று எடுத்து ஓதினார், மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. என்னை? 2வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியென நுண்பா உணர்ந்தோர் நுவலுங் காலை இரண்டும் மூன்றும் நான்கும் இரண்டும் திரண்ட அடியின் சிறுமைக் கெல்லை - (மயேச்சுரர்) - யா. கா. 14. மேற். என்றார் ஆகலின். அவர் காட்டும் பாட்டு : (வஞ்சிப்பா) பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்; அதனால் அறிவன தடியிணை பரவப் பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே - திருப்பாமாலை. - யா. கா. 14. மேற். இதனை முச்சீர் அடி வஞ்சியாக அலகிட்டு, அகவல் இரண்டடி ஆமாறு கண்டு கொள்க. சிறியகட் பெறினே (யா. வி. 72. மேற்). என்னும் இணைக் குறள் ஆசிரியப்பாவினுள் ஐஞ்சீர் அடியும் அருகி வந்தன எனக் கொள்க. அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுன்னீர் *bjh£LHªJ மலைந்தனையே - யா. வி. 95. மேற். இக்கலியுள் ஐஞ்சீர் அடியும் வந்தன எனக் கொள்க. கலியொடு வெண்பா அகவல் கூறிய அளவடி தன்னால் நடக்குமன் அவையே - யா. வி. 27. மேற். என்ற சூத்திரத்தில் அவை என்ற விதப்பினாலும், இச் சூத்திரத்தாலும் இவற்றையும் குற்றம் இல்லை என்று கொண்டு வழங்குப, புராண கவிஞராற் சொல்லப்பட்டன ஆகலின். (குறள் வெண்பா) 1நிலம்பா அய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோள் கலம்போஒய்ப்போஒய்க் கெளவை தரும் - யா.வி. 4. 95. மேற். இவ்வெண்பாவுள் ஐஞ்சீர் அடியும் வந்தது பிற, எனின், அளபெடை சீரும் தளையும் அடியும் தொடையும் கெடாமைப் பொருட்டு வேண்டுவதல்லது, அளபெழுந்து கெடநின்ற விடத்து வேண்டப்பட்டது. என்னை? மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் என்றார் ஆகலின். அதனுள் 2முதற்சீர் புளிமாங்காயாகவும் இரண்டாஞ்சீர் தேமாங்காயாகவும் அலகிட்டு, நாற்சீரேயாகக் கொள்க. ‘IŠÓ® btŸisí£ òfhik v‰wh‰ bgWJ«? எனின் ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற் குரிய அல்ல - தொ. பொ. 375. மேற். என்று நக்கீரனார் அடி நூலுள் எடுத்து ஓதப்பட்டமையாற் பெறுதும்; பிறநூல் முடிந்தது தானுடம் படுதல் (நன். 14) என்பது தந்திர உத்தி ஆகலின். ïÅ, ‘MáÇa¤JŸS« fÈíŸS« IŠá® mo tU« v‹gJ v‰wh‰ bgWJ«? எனின், *வெள்ளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப - தொ. பொ. 375. என்று தொல்காப்பியனார் எடுத்து ஓதினமையாற் பெறுதும். இப்பாட்டுக்களும் செய்யுளியலுட் காட்டின எனக் கொள்க. (குறளடி வஞ்சிப்பா) தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக் காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்த களிற்றெருத்தின் நிலனெளியத் தொகுபீண்டிக் கடல்மருளப் படைநடுவண் 1ஏற்றுரியின் இமிழ்முரசம் கூற்றுட்க எழீஇச்சிலைப்பக் கேளல்லவர் 2மிடல்சாய வாள்வலியால் நிலம்வௌவி முழுதாண்டவர் வழிகாவல் குன்றுமருளச் சோறுகுவைஇப் புனல்மருளநன் னெய் சொரிந்து திருமறைமுதல்வர் வழிகாட்ட ஆகுதியின் அழலருத்திப் பல்கேள்வித் துறைபோகிய தொல்லிசையான் மீக்கூறும் கொற்கையார் குலவேறே! கூடலார் அடுபொருந ! என்றியான், 3அல்கியார்ந்த அரிக்கிணையின் மரபுளியின் வரவிசைப்ப நனிவிரும்பி நயனோக்கி இனிவேண்டாநின் கிணைத்தொழிலென எனக்கொவ்வாமைப் பெரிதருளித் தனக்கொப்பத் தலையளித்தனன் அதற்கொண்டும், கலங்கொண்டன கள்ளென்கோ ! 1காழ்கோத்தன சூட்டென்கோ! நெய்கனிந்தன 2வறையென்கோ! 3குய்கொண்டன துவையென்கோ! எனைப்பல எமக்குத்தண்டாது வைகறொறுங்கைகவி சொரிதரலை விலங்குகதிர் அவிர்4வெள்ளி 5அலங்குபெண்ணை வழியுறையினும் 6குளஞ்சேர்ந்து சனிகொட்பினும் 7அருந்தே மாந்தனம் யாமே; வருந்தல் வேண்டா வாழ்கநின் *whns ! முப்பத்தாறு அடியான் வந்த இக்குறளடி வஞ்சியுள் என்றியான் எனவும் அதற்கொண்டும் எனவும் சீர் 8கூனாய் வந்தன. தூங்கல் இசையன வஞ்சி ; மற்றவை ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே - யா. வி. 90. என்றார், இது சுரிதகத் தருகு தனிச்சொல் இன்றி வந்ததாயினும், வஞ்சிப்பா என்றே வழங்கப்படும். பிறவும் புராண கவிஞராற் பாடப்பட்டு, மிக்கும் குறைந்தும் வருவனவற்றை இவ்விலக்கணத்தால் ஒரு புடை ஒப்புமை நோக்கிப் பெயரிட்டு வழங்கப்படும். என்னை? உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள் வகுத்துரை பற்றியும் அன்றிப் பிறவும் நடக்குந ஆண்டை நடைவகை யுள்ளே என்றார் காக்கைபாடினியார். ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும் மிக்கடி வரினும் அப்பாற் படுமே என்றார் அவிநயனார். பாவும் இனமும் மேவிய அன்றியும் வேறுபட நடந்தும் கூறுபட வரினும் 9ஆறறி புலவர் அறிந்தனர் கொளலே என்றார் பிறை தெடுமுடிக் கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (ஆரிடச் செய்யுள்) வரிசை பெரிதுடையர் கட்கலமுந் தூயர் புரிசை ஒருசாரார் அம்பலமும் தண்ணீரும் தன்னிலத்த அல்ல - புரிசைக்குத் தெற்கொற்றித் தோன்றும் திருநென் மலியேநம் பொற்கொற்றி புக்கிருக்கும் ஊர் எனவும், கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத் தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார் - கிடங்கில் வளையாற் *bghȪnjhŸ வையெயிற்றுச் செவ்வாய் *ïisah£o கண்ணொக்கும் என்று எனவும், வஞ்சி வெளிய குருகெல்லாம் ; பஞ்சவன் நான்மாடக் கூடலிற் கல்வலிது; சோழன் உறந்தைக் கரும்பினிது; தொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது எனவும் வரும் இத்தொடக்கத்துப் பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம் முதலாகிய ஒருசார்ச் செய்யுள்களும் எப்பாற்படுமோ எனின், 1ஆரிடச் செய்யுள் எனப்படும். ஆரிடம் என்பது, உலகியற செய்யுள்கட்கு ஓதிய உறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக் கொள்க. வரிசை பெரிதுடையர் என்பது மிக்கது. அல்லன, மிக்கும் குறைந்தும் வந்தன. அவ்வாரிடச் செய்யுள் பாடுதற்கு உரியர், ஆக்குதற்கும் கெடுத்தற்கும் ஆற்றலுடையார் ஆகி, முக்காலத்துப் பண்பும் உணரும் இருடிகள் எனக் கொள்க. என்னை? உலகியற் செய்யுட் கோதிய *msÉa‰ குறையவும் 2விதப்பவும் குறையா ஆற்றல் இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப எனவும், ஆரிடச் செய்யுள் பாடுதற் குரியோர் கற்றோர் அறியா அறிவுமிக் குடையோர் மூவகைக் காலப் பண்பு முறை உணரும் *M‰wš சான்ற அருந்தவத் தோரே எனவும் சொன்னார் பாட்டியல் மரபு உடையார் ஆகலின். அல்லது, வடநூல் உடையாரும், பிங்கலம் முதலாகிய சந்தோபிசிதிகளுள் விருத்தச் சாதி விகற்பங்களாற் கிடந்த உலகியற் சுலோகங்களில் மிக்கும் குறைந்தும் கிடப்ப இருடிகளாற் சொல்லப்படுவனவற்றை ஆரிடம் என்று வழங்குவர் எனக் கொள்க. அஃதே எனின், ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக் காருடைய பீலி 1கடிகாவாச் - *ÓÇa அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு - தண்டியலங்காரம், 38, மேற். எனவும், 2உடையராய்ச் சென்றக்கால் ஊரெலாம் சுற்றம்; *KilatuhŒ¡ கோலூன்றிச் சென்றக்கால் - சுற்றம் *ciltÆW« வேறு படும் - இன்னிலை 12. எனவும், கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க ஒண்செங் குருதியுள் ஓஒ கிடந்ததே - 3கெண்டிக் கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை ! - தண்டியலங்காரம், 115. மேற் vdî« ï¤bjhl¡f¤J¥ bgUŠá¤âudh® brŒíS«, xsitah® brŒíS«, g¤âÅ¢ brŒíS« Kjyhf cilad všyh« v¥gh‰gL«? எனின், ஆரிடப் போலி என்றும், ஆரிடவாசகம் என்றும் வழங்கப்படும் என்க. இவையெல்லாம், இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூலப் பெருந்தலைச் சாத்தர் இத் தொடக்கதோராலும், பெருஞ்சித்திரனார் தொடக்கத் தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும் பாடப்படுவன எனக் கொள்க. என்னை? மனத்தது பாடும் மாண்பி னோரும் சினத்திற் கெடப்பாடும் செவ்வியோரும் முனிக்கணச் செய்யுள் மொழியவும் *bgWg” என்பது பாட்டியல் மரபு ஆகலின். வரலாறு: இலைநல வாயினும் எட்டி பழுத்தாற் 1குலைநல வாங்கனி கொண்டுண லாகா ;- விலையான் முலைநலம் *f©L முறுவலிக் கின்ற வினையுடை நெஞ்சினை *ntJbfh ளீரே - திருமந்திரம், 204. இம்மூலர் வாக்கு மிக்கு வந்தவாறு கண்டுகொள்க. வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை 2நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதே புட்கரனார் கண்ட புணர்ப்பு இது மந்திர நூலுட் புட்கரனார் கண்ட எழுத்துக்குறி வெண்பா. இஃது இரண்டாம் அடி குறைந்து வந்தது. கிடங்கிற் கிடங்கில் என்னும் பொய்கையார் வாக்கு, (பக். 368) மிக்கு வந்தது. கறைப்பற் பெருமோட்டுக் 3காடு கிழவோட் 4கரைத்திருந்த சாந்துதொட் டப்பேய் மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக் குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு இது பூதத்தாரும் காரைக்காற்பேயாரும் பாடியது. இதுவும் இரண்டாம் அடி குறைந்து வந்தவாறு கண்டு கொள்க. அறிவுடை நம்பியார் செய்த சிந்தம் எப்பாற் படுமோ? vÅ‹, ö§fš Xir¤jhŒ¢ RÇjf¤jUF jÅ¢ brhš ï‹¿¤ “jhÊU« ãz®¤ jl¡if’ v‹D« tŠá¥ghnt nghy tªjikah‹”jÅ¢brhš ïšyh tŠá¥gh v‹W tH§fhnkh? எனின், வழங்காம்; செவியறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருள் உறுப்பு அழிந்தமையால், உறுப்பழி செய்யுள் எனப்படும்; புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியுமாய் வரப்பெறா, என்றார் ஆகலின். என்னை? வழிபடும் தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ - தொல். பொ. 422. வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன - தொல். பொ. 423. என்றார் தொல்காப்பியனார் ஆகலானும், புறநிலை வாயுறை செவியறி அவையடக் கெனவிவை வஞ்சி கலியவற் றியலா என்றார் நல்லாறனார் ஆகலானும். அஃதே எனின், விளக்கத்தனார் பாடிய கெடலரு மாமுனிவர் (யா. வி. 83. மேற்) என்னும் கலிப்பா, புறநிலை வாழ்த்தாய் வந்தது பிற எனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தால் வந்தமையால், குற்றம் இன்று எனக் கொள்க. திருக்கொண்டு பெருக்கம் எய்திவீற் றிருந்து குற்றம் கெடுத்து விசும்பு தைவரக் கொற்றக் குடையெடுப் பித்துநிலம் நெளியப் படைபரப்பி ஆங்காங்குக் களிறி யாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடி ஓம்பி நற்றாய் போல உற்றது பரிந்து 1நுகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குக் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவு நின்று செங்கோல் ஒச்சி யாறில்வழி யாறு தோற்றியும் குளனில்வழிக் குளந்2தொடு வித்தும் 3முயல்பாய்வழிக் கயல்பாயப் பண்ணியும் களிறு பிளிற்றும்வழிப் பெற்றம்பிளிற்றக் கண்டும் களிறூர் பலகாற் சென்றுதேன் தோயவும் தண்புனற் படப்பைத் தாகியும் 4குழைகொண்டு கோழி எறிந்தும் இழைகொண்ட டான்றட்டும் இலக்கங் கொண்டு செங்கால் நாரை எறிந்தும் உலக்கை கொண்டு வாளை ஓச்சியும் தங்குறை நீக்கிப் பிறர்குறை திருத்தி நாடாள்வதே அரசாட்சி என இத்தொடக்கத்தனவும், பாசாண்டங்களுக்கு, ஒரு சார்ச் சொற்கட்டும், கரிப்போக்கு வாசகத்து ஒரு சார்ச் சொற் கட்டும், எப்பாற்படும் எனின், அவையெல்லாம் 1சொற்சீர் அடி எனப்படும் எனக் கொள்க. என்னை? கட்டுரை வகையால் எண்ணொடு புணர்ந்தும், *K£lo இன்றிக் குறைசீர்த் தாகியும், *xÊair யாகியும், வழியசை புணர்ந்தும், சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே - யா. வி. 29. மேற். - தொல். செய். 122. என்பது இலக்கணம் ஆகலின். செய்யுள் இயல் முற்றிற்று. ஒழிபியல் தனிச்சொல் நிற்கும் இடம் கூச. அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் ; அஃ திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மேற்சொல்லப்பட்ட பாக்கட்குத் தனிச்சொல் நிற்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அடி முதற்கண் செய்யுளகத்துப் பொருளைத் தழீஇத் தனியே நிற்பது, தனிச்சொல் எனப்படும்; அது, வஞ்சிப்பாவின் ஈற்றின் கண்ணும் வரப்பெறும் என்பர் புலவர் என்றவாறு. இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப, என்னும் உம்மையால், தனிச்சொல் இடையும் வஞ்சியுள் நிற்கப்பெறும் எனக் கொள்க அல்லதூஉம், பிறரும் இவ்வாறே சொன்னார். என்னை? 1உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும் மறுக்கட் படாத மரபின ஆகியும் எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே 2வஞ்சி மருங்கின் இறுதியும் ஆமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே என்றார் காக்கைபாடினியார். 3தனியே அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்; அஃ திறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப என்றார் அவிநயனார். தனிச்சொல்லைக் கூன் என்று வழங்குவாரும் உளர் எனக் கொள்க. என்னை? 1அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூன்என மொழிப 2வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே 3அசைகூன் ஆகும் என்மனார் புலவர் என்றார் பல்காயனார் ஆகலானும், 4தானே அடிமுதற் பொருள்பெற வருவது கூன்என மொழிப குறியுணர்ந் தோரே 5வஞ்சி இறுதியும் வரையார் என்ப என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. வரலாறு: (நேரிசை வெண்பா) உதுக்காண், சுரந்தானா வண்கைச் *Rtzkh¥ பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி- இரந்தார்மாட் டின்மை அகல்வது போல இருணீங்க மின்னும் அளித்தோ மழை என இவ்வெண்பாவினுள் அடிமுதற்கண் உதுக்காண் எனத் தனிச்சொல் வந்தவாறு கண்டுகொள்க. (நேரிசை ஆசிரியப்பா) அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே, தோடார் எல்வளை நெகிழ நாளும் பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே; அன்னள் அளியள் என்னாது மாமழை இன்னும் பெய்ய முழங்கி மின்னும் *njhÊ என்னுயிர் குறித்தே - குறுந்தொகை. 216. என இவ்வாசிரியத்துள் அவரே எனவும், யானே எனவும் கூன் வந்தவாறு கண்டு கொள்க. (தரவு கொச்சகம்) உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே ; பிறழினும் ïUªjifa* இறுவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே; சிறுதகையார் சிறுதகைமை *áw¥bgÅD« பிறழ்வின்றி உறுதகைமை உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே என இக்கலியடி முதற்கண் உலகினுள் எனத் தனிச்சொல் வந்தவாறு கண்டுகொள்க. (குறளடி வஞ்சிப்பா) உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும் பிற்கொடுத்தார் முற்கொளவும் உறுதிவழி ஒழுகுமென்ப; அதனால், நற்றிறம் நாடுதல் நன்மை *g‰¿a யாவையும் பரிவறத் துறந்தே என இவ்வஞ்சிப்பாவின் அடி முதற்கண் உலகே எனத் தனிச் சொல் வந்தவாறு கண்டு கொள்க. தாழிரும் பிணர்த்தடக்கை (யா. வி. 93. மேற்.) என்னும் வஞ்சிப் பாட்டினுள் அடி முதற்கண் என்றியான் எனவும், அதற்கொண்டும் எனவும் சீர் கூனாய் வந்தன. *“khtH§fÈ‹ மயக்குற்றன வழி - புறநானூறு. 345. என வஞ்சியின் இறுதி தனிச்சொல் வந்தவாறு கண்டுகொள்க. கலங்கழா அலிற் றுறை கலக்குற்றன - புறநானூறு. 345. என வஞ்சியடியின் நடு, துறை எனத் தனிச்சொல் வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. காமர் கடும்புனல் என்னும் கலிப்பாவினுள், சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே! - (கலித்தொகை. 39) என ஓரடியால் தனிச்சொல் வந்தவாறு ; ஓரடியாலும் கலிக்கண் தனிச்சொல் வரப்பெறும் ஆகலின். என்னை? வெண்சீர் வரைவின்றிச் சென்று விரவினும் தன்பால் மிகுதியின் வருவன எல்லாம் வஞ்சி உரிச்சீர் விரவினும் வெண்பா அருகுந தனிச்சொல் அசைச்சீர் அடியே என்றார் ஆகலின். அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்; இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். அஃது என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னையோ? எனின், நான்கு பாவின் அடி முதற் கண்ணும் சீர் கூனாய் வரப்பெறும், என்பாராயினும். வஞ்சியடியின் முதற் கண் அசை கூனாய் வருவதும், உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வருவ தும் சிறப்புடைய ; வஞ்சியடியின் இடையும் இறுதியும் அசை கூனாய் வருவதன்றிச் சீர் கூனாய் வாராது; ஆண்டு உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் அருகிக் கூனாய் வரவும் பெறும்; அச்சிர், அல்லாப் பாவின் அடி முதற்கண் அருகி அல்லது கூனாய் வாராது; கொச்சகக் கலியுள் ஓரடி கூனாய் வருமாயினும், சிறப்பில்லை; வெண்பா, ஆசிரியம், கலி என்னும் இவற்றின் அடியுள் இடையும் இறுதியும் கூன் வரப் பெறாது என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. வரலாறு: அடி, அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன எனவும், 1மா எறிபதத்தான் இடங்காட்ட - புறநானூறு, 4. எனவும் வஞ்சியடியின் முதற்கண் அடி எனவும் மா எனவும் அசை கூனாய் வந்தவாறு. வேந்து, வேல்வாங்கிப் பிடித்துருத்தலின் எனவும், தெருவு, தேரோடத் தேய்ந்தகன்றன எனவும் வஞ்சியடியின் முதற்கண் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வந்தவாறு. வஞ்சியடி இறுதி அசை கூனாய் வந்தன மேற்காட்டின எனக் கொள்க. வடாஅது, பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும், கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின நீர்நிலை நிவப்பின் கீழும் மேல - புறநானூறு, 6. என்னும் ஆசிரியத்துள், அடி முதற்கண் வடாஅது உகரஈறாய நேரீற்று இயற்சீர்க் கூன் அருகி வந்தது. பிறவற்றுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க. வஞ்சி அல்லாப் பாக்கள் அடி இடையும் இறுதியும் கூன் வாராதவாறு மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க. (குறள் வெண்பா) அடிமுதற்கண் நான்கிற்கும் சீர்கூனாம் ; ஆகும் இடைகடையும் வஞ்சிக் கசை என்றாரும் உளர். புறநடை 95. நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும் அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும் எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும் வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும் அம்மை முதலிய ஆயிரு நான்மையும் வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத் திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே. ‘ï~J v‹ Ejȉnwh? எனின், மேற்சொல்லப்பட்ட செய்யுள்கட்கெல்லாம் எய்தியதோர் புறநடை இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) நிரல் நிறை முதலாகிய பொருள்கோளும், அறுவகைப்பட்ட சொல்லினது விகாரமும், எழுத்து அல்லாத கிளவியை அசைபெறுத்து இயற்றலும், வகையுளி சேர்த்தலும், அம்மை முதலாகிய எட்டு யாப்பலங்காரமும், வண்ணங்களும், மற்றொழிந்தனவும் வரலாற்று முறைமையோடும் பொருந்த நடாத்துதல் புலவர் கடன் என்றவாறு. (க) நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியாவன: நிரல்நிறையும், சுண்ணமொழி மாற்றும், அடி மறி மொழி மாற்றும், அடி மொழி மாற்றும், பூட்டு விற்பொருள் கோளும், புனல் யாற்றுப் பொருள் கோளும், அளை மறி பாப்புப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு கூட்டுப் பொருள்கோளும் என இவ்வொன்பதும் எனக் கொள்க. அவற்றுள், (க) 1நிரல் நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும்: பெயர் நிரல் நிறையும், வினை நிரல் நிறையும் என. அவற்றுள் பெயர் நிரல் நிறை வருமாறு: (இன்னிசை வெண்பா) கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் - நேமிநாதம், 92, மேற். எனவும், (நிலைமண்டில ஆசிரியப்பா) பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை பாவை முத்தம் gšÈjœ¡* குவளை மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே எனவும், (நேரிசை வெண்பா) கடைசெப்பும் வேயும் கதிர்முலையும் தோளும்; இடைசெப்பின் ஏர்கொடி ; அன்னம் - நடைசெப்பின்; வண்டுவாழ் கூந்தலாள் 1வாயும் மடநோக்கும் தொண்டைமான் ஆறை மகட்கு எனவும், வாக்கு முகந்தேன் மலர்க்கமலம் ; வண்குவளைப் பூக்குரும்பை வேய்கண் புணர்முலைதோள்; நோக்கல்குல் மான்றேர் ; மயிந்தன் மணியருவி வேங்கடத்துத் தேன்றேர் குறவர் மகட்கு எனவும், பூமாலை நீர்உறையுள் ; புள்ஏறு புள்கொடி; வாய்மைவேல் ஆழி படைக்கலம் ;- நாமம் பிரமன் இறைக்கண்ணன் ; பொன்தீக்கார் மேனி ; கருமம் படைப்பழிப்புக் காப்பு எனவும் கொள்க. இனி எழுத்துமாறு நிரல் நிறை வருமாறு: காமவிதி கண்முகம் ; மென்மருங்குல் செய்யவாய் தோமில் துகடினி ; சொல்லமுதம் ;-தேமலர்க் காந்தள் குரும்பை கனகம் மடவாள்கை ஏந்திளங் கொங்கை எழில் - நேமிநாதம், 92, மேற். இஃது எழுத்துமாறு நிரல் நிறை. இஃது எழுத்தாற் கொள்ளுமாறு: காவி கண், என்றும், மதி முகம் என்றும், துடி மருங்குல் என்றும், கனி வாய் என்றும் விடுக்க. இனி, வினை நிரல் நிறை வருமாறு: (இன்னிசை வெண்பா) அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆம்என்று தாம் - யா.வி. 51. மேற். - தொல். பொ. 403. மேற். எனவும், (நேரிசை வெண்பா) 1காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப போதுசேர் தார்மார்ப ! போர்ச்செழிய! -நீதியால் மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு நுண்ணிய வாய பொருள் - நேமிநாதம். 92. மேற். எனவும், உண்டூர்ந் துதைத்தழித் தூதிக்காத் தேற்றளந்து கொண்டெடுத்து வாய்போழ்ந்து சென்றாக்கிக்- கண்டறுத்தாள் பேய்முலை புட்சகடம் சோகோடா நீர்நிலம் பூமலைமா தூதமிர்தம் நஞ்சு எனவும், இறுத்தொசிச் தட்டுதைத் தேந்திப்போழ்ந் தாடிப் பறித்தெறிந் தூர்ந்தணைந்து காத்தான் - செறுத்த விடைகுருந்தம் மல்லன் உருள்மலைமா கூத்துப் படைவிளவு புட்பாம் பினம் எனவும், (தரவு கொச்சகம்) 2பேய்முலை வியன்ஞாலம் பூங்குருந்தம் மதவேழம் வாய்மருப் பெழிலேறு வாட்கண்ணார் குரவைச்சீர் உண்டானும் அளந்தானும் ஒசித்தானும் காத்தானும் கொண்டானும் கொடுத்தானும் கொடியுவணத் தானரோ எனவும் இன்ன பிறவும் வந்தவாறு கண்டுகொள்க. இனி, முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல் நிறை என்று வேண்டுவாரும் உளர். அவற்றுள் 1முறை நிரல் நிறை வருமாறு: (அறுசீர் ஆசிரிய விருத்தம்) பிரமன்மால் பினாகி இந்து பேரிருள் செம்மை பீதம் விரவலில் வெண்மை வட்டம் மிக்கமுக் கோணம் நாற்கோண் வரிசிலை வாயு வன்னி மாநிலம் வருண ராசன் பரலவம் எடுத்தல் ஏந்தல் இழித்தலே கெடுத்த *yhnw” எனவும், இருணிறம் வளையம் வாயு எடுப்புதல் பிரமன் யஃகான் எரிதிரி கோணம் செம்மை ஏற்றன்மால் இரேபை யாகும் பெருநிலம் சதுரம் பீதம் பினாகி கோள் இழைத்த லஃகான் வருணன்விற் றவளம் விந்து மாற்றுதல் வகாரம் வித்தே எனவும், (தரவு கொச்சகம்) 2புள்ளிப் பொறியே சுடர்நந்தி போர்க்குலிசம் வள்ளிதழ்த் தாமரையும் வைக்கவம் மண்டலத்தே மண்டலத்தைப் புள்ளின் வதன முதலாகக் கொண்டழியச் சிந்திப்பக் குன்றும் கொடுவிடமே எனவும், (அறுசீர் ஆசிரிய விருத்தம்) அடிமுழந் தாளோ டுந்தி அணிமிட றாதி யாகப் படுபனி கந்த முந்நீர் பருதியஞ் சனமென் றின்ன வடிவுடை வயின தேயன் வலிமிகு நகுலன் குக்கில் இடியுரு மேற்றோ டின்ன இயைந்தவ னாகத் தானே எனவும், (குறள் வெண்பா) முறிமேனி ; முத்தம் முறுவல் ; வெறிநாற்றம் ; வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு - திருக்குறள். 1113. எனவும், (குறள் வெண்பா) வாய்பவளம் ; வேய்தோள் ; மருங்குல் இளவஞ்சி ஆய்மலர்க் கோதை யவட்கு எனவும், (அறுசீர் ஆசிரிய விருத்தம்) ஆனை ஊற்றின் மீன்சுவையின் அசுணம் இசையின் அளிநாற்றத் தேனைப் பதங்கம் உருவங்கண் டிடுக்கண் எய்தும்; *ï›tid¤J« கான மயிலஞ் சாயலர் காட்டிக் கெளவை விளைத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே! - சாந்திபுராணம் (புறத்திரட்டு, 292.) - நேமிநாதம், 92. மேற். எனவும், மலைமுலை நீராடை மாரிமென் கூந்தல் எனவும், இன்னவை பிறவும் முறை நிரல் நிறை. பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க. 1எதிர் நிரல் நிறை வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) குன்ற வெண்மணல் ஏறி நின்றுநின் றின்னம் *fh©f« வம்மோ தோழி ! களிறும் கந்தும் போல நளிகடல் கூம்பும் கலனும் தோன்றும் தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே எனவும், (கலி விருத்தம்) அனந்தனும் குளிகனும் ஆதி யாகிய நனந்தலைப் பெருங்குலம் நான்கு நாட்டிய கனங்கெழு கருடநூ லகத்துக் காணலாம் இனம்புரி எதிர் நிரல் நிறையும் என்பவே எனவும், நெருப்பினும் நிலத்தினும் நிவந்த காற்றினும் திருத்தகு நீரினும் திருந்தத் தோன்றிய பெருக்கிய தவளமே பீதம் செம்மையோ டிருட்பிழம் பெனவுணர் இவற்றின் வண்ணமே எனவும், (குறள் வெண்பா) கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துள் பேதை புகல் - திருக்குறள், 849. எனவும், விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் - திருக்குறள், 410. எனவும், (இன்னிசை வெண்பா) வில்லம்பு வேய்தோள் விலங்கரிக்கண் வெல்புருவம் பல்வாய் மொழிதேன் பவளம் பனிமுத்தம் நல்லாயூர் அன்னாள் நடைசாயல் நோக்கமான் மல்குசீர் மஞ்ஞை பிடி எனவும், (நேரிசை வெண்பா) 1ஆடவர்கள் எவ்வா றகல்வரணி வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இவன்றோ மன்றார் *kâ‰f¢á மாண்பு? - தண்டியலங்காரம், 67. மேற். - நேமிநாதம், 92. மேற். எனவும் கொள்க. 2மயக்க நிரல் நிறை வருமாறு: (இன்னிசை வெண்பா) கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு ; பொன்ன் பொறிசுணங்கு ; போழ்வாய் இலவம்பூ; மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு? - யா. வி. 3. மேற். எனவும், (ஆசிரிய இணைக்குறட்டுறை) இரங்கு குயின் முழவா, இன்னிசையாழ் தேனா, அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் ! அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின், மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில் - யா. வி. 52. 76. மேற். எனவும் வரும். இனி ஒருசார் ஆசிரியர், நிறை எண் நிரல் நிறை குறை எண் நிரல் நிறை, மிகை எண் நிரல் நிறை என்று வேண்டு வோரும் உளர் எனக் கொள்க. வரலாறு: (கலி விருத்தம்) சாந்தும் தண்டழை யுஞ்சுர மங்கையர்க் கேந்தி நின்றன இம்1மலை ஆரமே; வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியும் *VªJ 2சாகைய இம்3மலை ஆரமே - சூளாமணி, 752. இதனுள் இரண்டு பொருள் நிறுவிப் பின்னும் இரண்டு பொருள் நிறுவினமையால், நிறை எண் நிரல் நிறை. (கலி நிலைத்துறை) யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லி பிரிவானேற் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே? - யா. வி. 28. 88. மேற். -நேமிநாதம், 92. மேற். இதனுள் மூன்று பொருள் நிறுவி, ஒரு வழி இரண்டே நிறுவினமையால், குறை எண் நிரல் நிறை. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) ஆசை அல்குல் பெரியாரை அருளும் இடையும் சிறியாரைக் கூசு மொழியும் புருவமும் குடில மாகி இருப்பாரை வாசக் குழலும் மலர்க்கண்ணும் மனமும் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே! - நாரத சரிதை (புறத்திரட்டு, 1060) இதனுள் இரண்டு பொருள் நிறுவிப் பின் ஒரு வழி மூன்று பொருள் நிறுவினமையால், மிகை எண் நிரல் நிறை. பிறவும் அன்ன. இனி ஒருசார் ஆசிரியர், ஒரு முதல் நிரல் நிறை, இரு முதல் நிரல் நிறை, உய்த்துணர் நிரல் நிறை என்று வேண்டு வாரும் உளர். வரலாறு: (நேரிசை வெண்பா) மீனாடு தண்டேறு வேதியர் ஆதியா ஆனாத ஐந்தொன்பான் ஆயினவும் - தேனார் விரைக்கமல வாண்முகத்தாய் ! வெள்ளை முதலா உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு - யா. வி. 95. மேற். இது முதல் நிறுத்த முறையானே முற்றும் நிறுவாது, முதல் ஒன்றே சொன்னமையால், ஒரு முதல் நிரல் நிறை. வெண்பா முதலாக வேதியர் ஆதியா மண்பால் வகுத்த வருணமாம் ;-ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் மனந்தட்பக் கற்றார் மகிழ்ந்து - யா. வி. 55 மேற். இஃது இரு திறமும் முதலே சொன்னமையால், இரு முதல் நிரல் நிறை. செய்யோன் செழும்புகரோன் தெள்ளியோன் தேய்கதிரோன் வெய்யோன் புதன்வெளியோன் *bt‹¿nrŒ - பொய்யாப்பொன் செல்லாச் சனிகாரி தேவர்கோன் மந்திரியே இல்காற் கிறைவரா வார் (கலி விருத்தம்) சேய்புகர் மால்மதி ஆளுமுன் னாளினைக் காய்கதிர் மால்பகர் சேயிடை *ehËid மாசறு பொன்சனி காரிபொன் னாங்கடை ஆசறு நாள்களை அஞ்சக வூணே இது பன்னிரண்டு பொருள் நிறுவி, ஒழிந்தவற்றை ஆதியும் கடையும் கொள்ளாது ஓர் இராசிக்கும் காலுக்கும் இறைவர் என்று பேர் குறியாது சொன்னாராயினும், மேடம் முதலாகிய இராசி என்று மேடத்தின் முதற்காலும் முதல் நாளின் முதற் காலும் என்று 1உய்த்துணர வைத்தமையால், உய்த்துணர் நிரல் நிறை. அஞ்சகம் ஒரு நாளுக்கு நாலு காலாக ஒட்டிக்கொள்க. (நேரிசை வெண்பா) பூமன் தெறுகதிரோன் பொன்காரி ஒண்புகரோன் வாமப் புதன்வெளியோன் மாமந்தன் - சோமன் சேய் சந்திரனே செவ்வாய் சதமகன்றன் மந்திரியே அந்திரையக் காணமாள் வார் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) ஆடரிவி லாதிநடு அந்தமுறை சேயிரவி அம்பொ னயிலும் தேடுசுற வேறுசனி வெள்ளிபுத னள்ளுமெறி தேள லவன்மீ னோடுமுயல் திங்களினொ டங்கிகுரு வுண்டலணர் தண்டு துலைநீர் மூடுகுட மோடுபுகர் காரிபுத னேரிதனை உண்ணு முறையே இவையும் உய்த்துணர் நிரல் நிறை இவ்விரண்டும் திரையக் காணம். ஓர் இராசி மும்மூன்றாக ஒட்டிக்கொள்க. இனி ஒருசார் ஆசிரியர், நிரல் நிறையைத் தொடைப் பாற்படுத்து, அடி நிரல் நிறை, இணை நிரல் நிறை, பொழிப்பு நிரல் நிறை, ஒரூஉ நிரல் நிறை, கூழை நிரல் நிறை, மேற்கதுவாய் நிரல் நிறை, கீழ்க்கதுவாய் நிரல் நிறை, முற்று நிரல் நிறை என்று வேண்டுவாரும் உளர் எனக் கொள்க. வரலாறு: (நேரிசை வெண்பா) முலைகலிங்கம் மூரி நிலமா மகட்கு மலைபரவை ; மாரிமென் கூந்தல் ;-குலநதி தண்ணாரம் காஞ்சி தகைசால் முகமவட்குக் கண்ணாவான் ஏறுயர்த்த கோ எனவும், (குறள் வெண்பா) கொடிவடிவேல் கூட்டழிக்கும் கொவ்வைவாய் மாதர் இடைநெடுங்கண் என்னும் உறுப்பு எனவும் இவை அடிதோறும் முதற்சீர்க்கண்ணே நிரல் நிறுத் தமையான், அடி நிரல் நிறை. (நேரிசை வெண்பா) நண்ணினர்க்கும் நண்ணார்க்கும் நாடோறும் கோடாமைத் தண்ணியராய் வெய்யராய்த் தக்காரோ-டெண்ணிக் கருங்கடல்சூழ் மாநிலத்தைக் காப்பதாம் அன்றே இருங்கழற்கால் வேந்தர்க் கியல்பு? எனவும், (கலி விருத்தம்) எண்ணினர் எண்ணகக் படாத செய்கையான் அண்ணினர் அகன்றவர் திறத்தும் ஆணையான் நண்ணினர் பகைவரென் றிவர்க்கு நாடொறும் தண்ணியன் வெய்யனத் தானை வேந்தனே - சூளாமணி 52. எனவும் இவை முதல் இரு சீர்க்கண்ணும் நிரல் நிறுத் தமையால், இணை நிரல் நிறை. (நேரிசை வெண்பா) புருவமும் பூணார் புணர்முலையும் கூறின், வரிசிலையும் மாண்பமைந்த கோங்கும் ; -தெரியுங்கால் நல்லிடை மெல்லியலார் நாட்டம் இவையிரண்டும் வல்லி வசைதீர் மலர் இது முதற் சீர்க்கண்ணும் மூன்றாம் சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், பொழிப்பு நிரல் நிறை. (இன்னிசை வெண்பா) புரிகுழலும் பூணாற் முலையாள் திருமுகமும் கொன்றையும் குன்றா தொளிசிறக்கும் திங்களும் என்றுரைப்பின் அல்ல தினிவே றுவமமற் றொன்றுரைக்க லாமோ ஒருங்கு? இது முதற் சீர்க்கண்ணும் நான்காம் சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், ஒரூஉ நிரல் நிறை. கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்; பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும் முல்லையும் யாழும் இகும் - யா. வி. 48. மேற். இது நான்காம் சீர் இன்றி முதல் மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், கூழை நிரல் நிறை. பல்லும் பணிமொழியாள் வாயும் பணைமுலையும் முல்லையும் முந்நீர்ப் பவளமும் கோங்கரும்பும் நல்லிணர்க் கோதை நறுநுதலும் நாட்டமும் வில்லும் கயலும் இகும் இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், மேற்கதுவாய் நிரல் நிறை. (நிலைமண்டில ஆசிரியப்பா) பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை மாயோண் முறுவல் மழைப்பெருங் கண்ணே - யா. வி. பக். 379 இது மூன்றாம் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், கீழ்க்கதுவாய் நிரல் நிறை. (இன்னிசை வெண்பா) அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம் - யா. வி. 51. மேற். என்பது நான்கு சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், முற்று நிரல் நிறை. இரண்டும் நான்கும் எட்டும் இரட்டியும் இரண்டடி ஓரடி முச்சீர் இருசீர் நிரந்த முறைமையின் நீர்த்திரை போல்வரின் அம்போ தரங்கமென் றறிந்தனர் கொளலே இதுவும் அது. இனி, ஒருசார் ஆசிரியர். பகற்செய்யும் செஞ்ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்டிங்களும் - மதுரைக்காஞ்சி, 7-8. என இவ்வாறு வருவனவற்றை முரண் நிரல் நிறை என்று வேண்டுவர். நிரல்நிறை தானே, வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையும் - தொல். எச்ச. 9. என்பது நிரல் நிறைக்கு இலக்கணம். (உ) சுண்ண மொழி மாற்று வருமாறு: (இன்னிசை வெண்பா) சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை - யா. வி. 59 மேற். - யா. கா. 43 மேற் இதனுள், சுரை என்று நின்றது மிதப்ப என்பதனோடு பொருள் கொள்ளவும், அம்மி என்று நின்றது ஆழ என்பதனோடு பொருள்கொள்ளவும், யானைக்கு என்று நின்றது நிலை என்பதனோடு பொருள் கொள்ளவும். முயற்கு என்று நின்றது நீத்து என்பதனோடு பொருள் கொள்ளவும் வந்தமை யால், சுண்ணமொழி மாற்று. சுண்ணந் தானே, பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர் ஒட்டுவழி அறிந்து துணிந்தனர் இயற்றல் - தொல். எச்ச. 16. என்றாராகலின். (வு) அடிமறி மொழி மாற்று வருமாறு: (அடி மறி மண்டில ஆசிரியப்பா) சூரல் பம்பிய சிறுகாண் யாறே; சூரர மகளிர் ஆரணங் கினரே; *வாரலை எனினே யானஞ் சுவலே; சாரல் நாட! நீவர லாறே - யா. வி. 73. மேற். - யா. கா. 43. மேற். எனவும், மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் கட்பனி வரலா னாவே; ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே; கூறாய் தோழியான் வாழு மாறே - யா. வி. 73. மேற். - நேமிநாதம். 92. மேற். எனவும், இட்டில் இரும்புழை இருளிய பொழுதே; பட்டி உளியம் கொட்கும் ஆங்கே; பொற்றொடி உண்கண் நீர்நில் லாவே; வெற்ப ! வாரல் வியன்மலை யாறே எனவும் கொள்க. இவை வேண்டிற்று ஓரடி முதலாகச் சொன்னாலும் பொருள் கொண்டு நிற்றலால், 1அடி மறி மொழி மாற்று. அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே - தொல். எச்ச. 11. என்பவாகலின். (4) அடி மொழி மாற்று வருமாறு: (குறள் வெண்பா) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு - யா. கா. 43 மேற். இதனுள் ஆலத்து மேல என்பதனோடு வாலின் நெடிய குரங்கு என்பதனைக் கூட்டியும், குவளை என்பதனோடு குளத்துள என்பதனைக் கூட்டியும் பொருள் கொண்ட மையால், 1அடி மொழி மாற்று; இரண்டடி மொழி மாற்று எனவும் அமையும். மொழிமாற் றியற்கை, சொல்நிலை மாற்றிப் பொருளெதிர் இயைய முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல் - தொல். எச்ச. 13. என்பவாகலின். (குறள் வெண்பா) குன்றத்து மேல குவளை குளத்துள் செங்கோடு வேரி மலர் - நேமிநாதம், 92. மேற். எனவும், உள்ளடி உள்ளன ஓலை செவியுள முள்ளஞ்சித் தொட்ட செருப்பு எனவும் இன்னவை பிறவும் அன்ன. (பஃறொடை வெண்பா) சொல்லாதல் சொல்லின் பொருளாதல் முன்முறைவைத் தவ்வகை நேர்கொள் நிரல் நிறையாம் ; அவ்வவ் விடையிட் டெதிரும் விராய்ச்சொல் இடையிடை இட்டன சுண்ணம்; இரண்டடியாற் சொல்வர நிற்ப தடிமொழி மாற்றல் ; அதடி மறியா முழுதும்யாப்பு இதனைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. (5) பூட்டுவிற் பொருள்கோள் வருமாறு: (நேரிசை வெண்பா) திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் ; மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம் ;-உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு - முத்தொள்ளாயிரம். - நேமிநாதம், 92, மேற். இதனுள், திறந்திடுமின் என்பது கதவு என்பதனோடு பொருள் நோக்கு உடைமையின் 1பூட்டுவிற் பொருள் கோள் ஆயிற்று. (சு) புனல் யாற்றுப் பொருள்கோள் வருமாறு: (இன்னிசை வெண்பா) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம் - நான்மணிக்கடிகை, 26. இஃது அடிதோறும் பொருள் அற்று மீளாது சேறலின், 2புனல் யாற்று பொருள்கோள் ஆயிற்று. (எ) அளை மறி பாப்புப் பொருள்கோள் வருமாறு: (அறுசீர் ஆசிரிய விருத்தம்) தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதிக்கட் சுழல்வார் தாமும், மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறிமுன்னி முயலா தாரே - யா. கா. 43. மேற். இதனுள், வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறி முன்னி முயலாதார் என்னும் இறுதிச்சொல் முதலும் இடையும் சென்று மறித்துப் பொருள் கோடலின், 3அளை மறி பாப்புப் பொருள்கோள் ஆயிற்று. (அ) தாப்பிசைப் பொருள்கோள் வருமாறு: (குறள் வெண்பா) உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு - திருக்குறள், 255. இஃது, ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை, எனவும், ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு, எனவும் நடு நின்ற ஊன் என்னும் சொல்லே முதலும் இறுதியும் நின்று பொருள் கொண்டமையால், 1தாப்பிசைப் பொருள்கோள் ஆயிற்று. (கூ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை ஆகிக் கடுநவைப் படீஇயரோ நீயே; நெடுநீர் யாணர் ஊரனொடு வதிந்த ஏம இன்றுயில் எடுப்பி யோயே! - குறுந்தொகை, 107. இதனுள், தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் என்ப தனையும், கடுநவைப் படீஇயரோ நீயே, என்பதனையும், இன்றுயில் எடுப்பியோய், என்பதனையும் கூட்டிப் பொருள் கொண்டமையால், 2கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆயிற்று. (இன்னிசை வெண்பா) 3தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின் - நேமிநாதம், 92. மேற். - யா. கா. 43. மேற். இதனுள், அஞ்சனத் தன்ன பைங்கூந்தல் எனவும், தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன பசலை எனவும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால், இதுவும் கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆயிற்று. (நேரிசை வெண்பா) ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி விறன்முள்ளுர் வேங்கை வெதிர்நாணுத் தோளாய் நிறனுள்ளூர் உள்ள தலர் - யா. கா. 43. மேற். ïjDŸ, ‘btâ® ehQ« njhshŒ! என்றும், நிறன் வேங்கை என்றும், அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந் தியம்பும் என்றும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால், இதுவும் அது. பிறவும் அன்ன. கொண்டு கூட்டுழித் தன்னுள்ள சொல்லாதல். பொருளாதல் கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் தன் இல்லாத சொல்லாதல் பொருளாதல் கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் என நான்காம் அவை வந்தவழிக் கண்டு கொள்க. நிரல் நிறை, சுண்ணம், அடி மறி மொழி மாற்று, அடி மொழி மாற்று என்னும் இந்நான்கினோடும், பூட்டு வில், புனல் யாறு, தாப்பிசை, அளை மறி பாப்பு, கொண்டு கூட்டு என்னும் இவ்வைந்து செய்யுட் பொருள்கோளும் உறழ, இருபதாம். அவை வந்த வழிக் கண்டு கொள்க. இருபது வகையானும் காட்டினார் அவிநயனார் எனக் கொள்க. 1ஆதித் தீபகம், 2அந்தத் தீபகம், 3மத்திமத் தீபகம், 4சிங்க நோக்கு, 5தேரைத் தத்து, 6பாசி நீக்கு, 7ஒரு சிறை நிலை என்று இவ்வகையாற் பொருள்கோள் சொல்வாரும் உளர். அவையும் அவற்றுள்ளே அடங்கும் எனக் கொள்க. அவை எல்லாம் வல்லார்வாய்க் கேட்டு உணர்க. ஈண்டு உரைப்பிற் பெருகும். 2 அறுவகைப்பட்ட சொல்லின் விகாரமாவன : அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும், மெலிக்கும்வழி மெலித்தலும், விரிக்கும்வழி விரித்தலும், தொகுக்கும்வழித் தொகுத்தலும், நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர் - தொல். சொல். 71. என்று ஓதப்பட்டன. வரலாறு: 1குறுத்தாட் பூதம் சுமந்த அறக்கதிர் ஆழியெம் அண்ணலைத் தொழவே இதனுள், குறுந்தாள் என்பதனைக் குறுத்தாள் என்று வலிக்கும் வழி வலித்தவாறு. 2தண்டையின் இனக்கிளி கடிவோள் பண்டையள் அல்லள் மானோக் கினளே இதனுள், தட்டை என்னும் சொல்லைத் தண்டை என்று மெலிக்கும் வழி மெலித்தவாறு. (இன்னிசை வெண்பா) 3வெண்மணல் எக்கர் விரிதிரை தந்தநீர் கண்ணாடி மண்டிலத் தூதாவி ஒத்திழியும் தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார் வண்ணம் கடைப்பிடியா தார் இதனுள், தண்டுறைவர் எனற்பாலதனைத் தண்ணந் துறைவர் என விரிக்கும்வழி விரித்தவாறு. (நேரிசை வெண்பா) 4பூத்தாட் புறவிற் புனைமதில் கைவிடார் காத்தவிக் காவலர் ; ஏனையார் - பாத்துறார் வேண்டார் வணக்கி விறன்மதில் தான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன் இதனுள் வேண்டாதாரை வணக்கி, எனற்பாலதனை வேண்டார் வணக்கி என்று தொகுக்கும் வழித் தொகுத்தவாறு. 5பாசிழை ஆகம் பசப்பித்தான் பைந்தொடியை மாசேனன் என்று மனங்கொளீஇ - மாசேனன் சேயிதழ்க் கண்ணி *jU»yh‹ சேர்த்தியென் நோய்தீர நெஞ்சின்மேல் வைத்து இதனுள் பச்சிழை எனற்பாலதனைப் பாசிழை என நீட்டும் வழி நீட்டியவாறு. எருத்தந் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் - யா. வி. 62. மேற். - யா. கா. 43. மேற். இதனுள் தீயேன் எனற்பாலதனைத் தியேன் என்று குறுக்கும் வழிக் குறுக்கியவாறு. பிறவும் அன்ன. அறுவகைப்பட்ட சொல்லின் விகாரமும் என்ற உம்மையால்; 1தலைக்குறைத்தலும், இடைக்குறைத் தலும், கடைக் குறைத்தலும் என இவையும் வரலாற்று முறைமையோடும் கூட்டி வழங்கப்படும். வரலாறு: மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி - யா. கா. 43. மேற். இதனுள், தாமரை எனற்பாலதனை மரை என்று தலைக் குறைத்து வழங்கியவாறு வேதின வெரிநின் ஓதி முது போத்து -குறுந்தொகை, 140 இதனுள், ஓந்தி எனற்பாலதனை ஓதி என்று இடைக் குறைத்தவாறு. அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை - மலைபடுகடாம் 100-101 இதனுள் ஆரல் எனற்பாலதனை ஆல் என்று இடைக் குறைத்தவாறு. நீலுண் துகிலிகை கடுப்பப் பலவுடன் - யா. கா. 43. மேற். இதனுள், நீலம் உண் துகிலிகை எனற்பாலதனை நீலுண் துகிலிகை என்று கடைக்குறைத்தவாறு. பிறவும் அன்ன. 3 எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும் என்பது, எழுத்து அல்லாத 2முற்கும், வீளையும், இலதையும், 3அநுகரணமும், முதலாக உடையன செய்யுளகத்து வந்தால், அவற்றைச் செய்யுள் நடை அழியாமை, அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்குதலும் என்றவாறு. வரலாறு: (நேரிசை வெண்பா) “k‹wy§ bfh‹iw ky®Äiyª J~Ft~ bf‹W *gÆU« ïilkfnd !- சென்று மறியாட்டை உண்ணாமை வன்கையால் வல்லே அறியாயோ 1அண்ணாக்கு மாறு? - யா. கா. 49. மேற். எனவும், ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய ஊசிமுறியுட் கண்டு, அலகிட்டுக் கொள்க. பிறவும் அன்ன. எழுத்தல் இசையே அசையொடு சீர்க்கண் நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே - யா. கா. 43 மேற். என்றார் பிறரும். 4 வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும் என்பது, அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் வண்ணமும் செய்யுட்கட் கழியாமை வகையுளி சேர்த்தலும் என்றவாறு. 2வகையுளி என்பது, முன்னும் பின்னும் அசை முத லாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமை வண்ணம் அறுத்தல் என்றவாறு. அவற்றுட் சில வருமாறு: (குறள் வெண்பா) கடியார்பூங் கோதை கடாயினான் திண்டேர் சிறியாடன் சிற்றில் சிதைத்து - யா. கா. 43 மேற். இதனுள் கடியார் என்றும், பூங்கோதை என்றும், கடாயினான் என்றும் அலகிடின், ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு, வெள்ளையுட் பிறதளை விரவா (யா. வி. 22) என்னும் இலக்கணத்தோடு மாறு கொள்ளும் ஆதலின், அதனைக் கடியார்பூ என்று புளிமாங்காய் ஆகவும், கோதை என்று தேமா ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதை யாவாம். (நேரிசை வெண்பா) பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும் ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால் - நீடுநீர் நல்வயல் ஊரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது - யா.வி. 95. மேற். இப்பாட்டினுள், டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின், வண்ணம் அழிந்து கிடக்கும். (நேரிசை ஆசிரியப்பா) போதார் கூந்தல் இயலணி அழுங்க ஏதி *yh£oia நீபிரிந் ததற்கே அழலவிர் மணிப்பூண் நனைய *mHyh னாவெங் கண்ணே தெய்யோ! - ஐங்குறு நூறு 232. இதனுள், அழலானா என்றும், எங்கண்ணே என்றும், தெய்யோ என்றும் அலகிடின், குற்றப்பட நிற்கும், ஆசிரியமும் முச்சீரால் இறுக என்னும் ஒத்து இலாமையின் ; அதனை வகையுளி சேர்த்தி, முதற்சீரைப் புளிமா என்னும் சீராகவும், அல்லாதன மூன்றும் தேமா என்னும் சீராகவும் அலகிட்டுக்கொள்ளப் பிழையாதாம். தாழிரும் பிணர்த்தடக்கை (யா. வி. பக். 220) என்பதனுள், தாழிரும் பிணர்த்தடக்கை என்பது ஓரடியாகவும், தண்கவுள் இழிகடாத்த என்பது ஓரடியாகவும், காழ்வரக் கதம்பேணா என்பது ஓரடியாகவும், கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின் என்பது ஓரடியாகவும் அலகிட்டால், இருசீர் அடி வஞ்சிப்பாவாய்த் தனது தூங்கல் ஓசை பிழையாது நிற்கும் என்ப ஒருசாரார். இனி ஒருசாரார், வஞ்சிப்பாவினுள் கலியடியும் வரப்பெறும் ஆகலின், முதல் இரண்டடியும் கலியாக்கொண்டு, கலியடி விரவிய வஞ்சிப்பா என்று வழங்குவர் எனக் கொள்க. பிறவும் அன்ன. (நேரிசை வெண்பா) அருள்நோக்கும் நீரார் அசைசீர் அடிக்கண் பொருள்நோக்கா தோசையே நோக்கி - மருள்நீக்கிக் கூம்பவும் கூம்பா தலரவும் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு இதனை விரித்து உரைத்துக் கொள்க. பிறரும், எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறைத் தொழுக்கலும் அடியொடு தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே - (அவிநயம்) என்றார் எனக் கொள்க. 5 அம்மை முதலிய ஆயிரு நான்மையும் என்பது, அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என இவை எட்டும் எனக் கொள்க. (1) அம்மையாவது, சிலவாய மெல்லியவாய சொற்களால் ஒள்ளிய வாய பொருண்மேற் சிலவடியாற் சொல்லப்படுவது. என்னை? 1சின்மென் மொழியாற் சீரிது நுவலின் அம்மை தானே அடிநிமிர் வின்றே என்றாராகலின். வரலாறு: (குறள் வெண்பா) அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை? - திருக்குறள் 315 எனக் கொள்க. (2) அழகாவது, செய்யுட் சொல்லாகிய திரி சொல்லினால், ஓசை இனியதாக, நன்கியாக்கப்படுவது. என்னை? செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே - தொல். செ. 294 என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) துணியிரும் *gu¥gf« குறைய வாங்கி அணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப! நெடுவரை மருங்கிற் *gu«gw இழிதரும் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்கும் கல்லதர் நெறியே! எனக் கொள்க. (3) தொன்மையாவது, பழமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப் படுவனவற்றினமேற்று. என்னை? தொன்மை தானே, உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே - தொல். செய். 285. என்றாராகலின். வரலாறு: செறிதொடி உவகை கேளாய் செஞ்சுடர்த் தெறுகதிர்ச் செல்வன்.... என்பது போல்வனவும், பாரதமும், இராமாயணமும் கொள்க. (4) தோல் என்பது, இழுமென்று மெல்லியவாய் சொற் களால் விழுமிய வாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களோடும் கூடிய பல அடியை உடைய வாய்க் கிடப்பனவும் என இரண்டு வகைப்படும். என்னை? இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் - தொல்ட. செய். 236. என்றாராகலின். வரலாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணிவிளக் கழலும் சேக்கைத் துணிதரு வெள்ளம் துயில்புடை பெயர்க்கும் ஓளியோன் காஞ்சி எளிதெனக் கூறின், இம்மை இல்லை மறுமை இல்லை நன்மை இல்லைத் தீமை இல்லைச் செய்வோர் இல்லைச் செய்பொருள் இல்லை அறவோர் யாரஃ திறுவுழி இறுகென் இது மார்க்கண்டேயனார் காஞ்சி, இழுமென் மொழியால் விழுமியது நுவன்றது. திருமழை தலைஇய இருணிற விசும்பின் - மலைபடுகடாம் 1 என்பது, பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகியது. இது மலைபடுகடாம். (5) விருந்து என்பது. புதியவாயினவற்றின் மேற்று. அவை இப்பொழுது உள்ளாரைப் பாடும் பாட்டு. என்னை? விருந்தே தானும், புதுவது புனைந்த யாப்பின் மேற்றே - தொல். செய். 287. என்றாராகலின். அவை 1வழிப்பட்டுழி அறிந்துகொள்க. (6) இயைபு என்பது, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல. வ, ழ, ள எனப்பட்ட பதினோரு புள்ளி ஈறாய் வந்த பாட்டு எல்லாம். அவை பதினோருதாரணமும் வந்தவழிக் கண்டுகொள்க. என்னை? ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே - தொல். செய். 238. என்றாராகலின். (7) புலன் என்பது, இயற்சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு என்னை? * தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின், புலனென மொழிப் புலனுணர்ந் தோரே -தொல். செய். 239. என்றாரகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) பார்க்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்செறி முரசின் முழங்கி ஒன்னார் மலைமுற் றின்றே வயங்கு துளி சிதறிச் சென்றவள் திருமுகம் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி பாக ! உதுக்காண் 2மாவொடு புணர்ந்த மாஅல் போல இரும்பிடி உழைய தாகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே எனக் கொள்க. (8) இழைபு என்பது, வல்லொற்று யாதும் தீண்டாது செய்யுளியலுடையாரால் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலாப் பதினேழ் நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது. என்னை? ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித் தோங்கிய மொழியால் ஆங்கனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும் - தொல். செய். 240. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) *“ng®ªJ சென்று சார்ந்து சார்ந்து (4) தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து (5) குறளடி வண்டு சூழ விண்டு வீங்கி (6) (4-6) நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் (7) ஊர்வாய் ஊதை வீச வீர்வாய் (8) சிந்தடி மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9) (7-9) நன்மணம் கமழும் பன்னெல் ஊர ! (10) அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11) 1நேரடி இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12) (10-14) *ïW«bgd மலரிடை எழுந்த மாவின் (13) நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14) அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் (15) நெடிலடி மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் (16) (15-17) ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17) நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் (18) கழி இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19) நெடிலடி கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20) (18-20) பெருமணம் புணர்ந்தனை என்பவஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே - யா. கா. 43. மேற். எனக் கொள்க. 9 வண்ணமும் என்பது, வண்ணங்களும் என்றவாறு.... அவ்வண்ணந் தானே இருபது எனக் கொள்க. என்னை? வண்ணந் தானே நாலைந் தென்ப - தொல். செய். 210 என்றாராகலின். அவைதாம், பாஅ வண்ணம், தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென் *wh§fit என்ப அறிந்திசி னோரே - தொல். செய். 211. என்று ஓதப்பட்டன. அவற்றுள், பாஅ வண்ணம், சொற்சீர் அடியால் நூலுள் பயில வருவது. என்னை? அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் - தொல். செய். 212 என்றாராகலின். வரலாறு: குஐ ஆன்என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே - தொல். நூல். 25. எனவும், அஇ உஇம் மூன்றும் சுட்டு - தொல். நூல். 31. எனவும் கொள்க. தாஅ வண்ணமாவது, தோன்றுமிடத்து ஓரோவடி இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். என்னை? தாஅ வண்ணம், இடையிட்டு வந்த எதுகைத் தாகும் - தொல். செய். 213 என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழவா வாடா அவ்வரி *òijï¥ பசலையும் வைகல் தோறும் பைபையப் *bgUf நீடார் இவணென *Ú©kz« கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவம் *brŒahJ வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடித மின்னுமிக் கார்மழைக் குரலே - இலக். விளக். 757 மேற். - யா. வி. 37 மேற். - யா. கா. 41 மேற். என்னும் பாட்டுக் கொள்க. வல்லிசை வண்ணமாவது, வல்லெழுத்து மிகுவது. என்னை? வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே - தொல். செய். 214. என்றாராகலின். வரலாறு: (பஃறொடை வெண்பா) வட்டொட்டி அன்ன வணர்முடப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழம்பூத் தொட்டிட்டுக் கொள்ளும் துறைச்சேர்ப்ப ! நின்னொடு விட்டொட்டி உள்ளம் விடாது *ÃidÆ‹nkš ஒட்டொட்டி நீங்காதே ஒட்டு - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. மெல்லிசை வண்ணமாவது, மெல்லெழுத்து மிக்கு வருவது. என்னை? மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே - தொல். செய். 215. எனக் கொள்க. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) பொன்னின் அன்ன புன்னைநுண் தாது மணியின் அன்ன நெய்தலங் கானல் மனவென உதிரும் மாநீர்ச் சேர்ப்ப ! மாண்வினை நெடுந்தேர் பூண்மணி ஒழிய மம்மர் மாலை வாநீ நன்மா மேனி நயந்தனை எனினே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. இயைபு வண்ணம் என்பது, இடையெழுத்து மிக்கு வருவது. என்னை? இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே - தொல். செய். 216. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) வால்வெள் ளருவி வரைமிசை இழியவும் கோள்வல் லுழுவை விடரிடை யியம்பவும் *thS» ருளியம் வரையக மிசைப்பவும் வேலொளி விளக்கினர் வரினே யாரோ தோழி ! வாழ்கிற் போரே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. அளபெடை வண்ணமாவது, அளபெடை பயின்று வருவது என்னை? அளபெடை வண்ணம் அளபெடை பயிலும் - தொல். செய். 217. என்றாராகலின். வரலாறு: (இன்னிசை வெண்பா) 1தாஅம் படுநர்க்குத் தண்ணீர் உளகொலோ! ஆஅம் பலபழி அன்னை அறிவுறில்: வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஓம் நுவலுமிவ் வூர் எனக் கொள்க. நெடுஞ்சீர் வண்ணம் என்பது, நெட்டெழுத்துப் பயின்று வருவது என்னை? நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் - தொல். செய். 218. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) நீரூர் பானா யாறே; காடே நீலூர் காயாம் பூவீ யாவே; காரூர் பானா மாலே; யானே யாரோ தாமே வாழா மோரே; ஊரூர் பாகா ! தேரே; பீரூர் தோளாள் பேரூ ராளே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. குறுஞ்சீர் வண்ணம் என்பது, குற்றெழுத்துப் பயின்று வருவது என்னை? குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும் - தொல். செய். 219. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) உறுபெயல் எழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை *bghâjis அவிழக் குறிவரு பருவம் இதுவென மறுகுபு செறிதொடி நலமிலை அழியல் அறியலை அரிவை கருதிய பொருளே - இலக். விளக். 757. மேற் என்க கொள்க. சித்திர வண்ணம் என்பது, குற்றெழுத்தும் நெட் டெழுத்தும் விராய் வருவது. என்னை? சித்திர வண்ணம், நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே - தொல். செய். 220. என்றாராகலின். வரலாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) ஊர வாழி ஊர தேர தார வாரி பேர சேரி கார வேரி பாய வாரி பீர நீர தோழி தோளே எனக் கொள்க. நலிபு வண்ணம் என்பது, ஆய்தம் உடைத்தாய் வருவது. என்னை? நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்1 - தொல். செய். 221. என்றாராகலின். வரலாறு: (இன்னிசை வெண்பா) எஃகொ டவன்காப்ப ஏமார்ந்தாள் போதந்தாள் அஃகுநீர்க் கான்யாற் றயன்மணல் எக்கர்மேல்; இஃதோநின் பாவை திருந்தடி ; பின்றை அஃதோ விடலை அடி எனக் கொள்க. அகப்பாட்டு வண்ணம் என்பது முடியாதது போன்று முடிவது என்னை? அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே - தொல். செய். 222. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) பன்மீன் உணங்கற் படுபுள் ஒப்பியும் புன்னை நுண்டாது நம்மொடு தொகுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றித் தோளி னீங்காமை சூளிற் றேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்துபுற மாறி இனையன் ஆகி ஈங்குனைத் துறந்தோன் பொய்தல் ஆயத்துப் பொலந்தொடி மகளிரொடு கோடுயர் வெண்மணல் ஏறி ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி! - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. புறப்பாட்டு வண்ணம் என்பது, முடிந்தது போன்று முடியாததன் மேற்று. என்னை? புறப்பாட்டு வண்ணம், முடிந்தது போன்று முடியா தாகும் - தொல். செய். 223. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) நிலவுமணல் அகன்றுறை வலவன் ஏவலின் எரிமணிப் புள்ளினம் மொய்ப்ப நெருநலும் வந்தன்று கொண்கன் தேரே இன்றும் 1வருகுவ தாயிற் சென்று சென்று தொன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு தண்போதின் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அல்கலும் படர்மலி உள்ளமொடு மடன்மா ஏறி உறுதுயர் உலகுடன் அறியநம் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. ஒழுகு வண்ணம் என்பது, ஓசையின் ஒழுகிக் கிடப்பது. என்னை? ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும் - தொல். செய். 224. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) அம்ம வாழி தோழி ! *fhjy® *ïdÛ‹ பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை *m‹ã‹ நலிய உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே சேய அல்ல இன்னளி இறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. ஒரூஉ வண்ணம் என்பது, ஒன்றாத தொடையாற் கிடப்பது. அஃதி யாதோ? எனின், செந்தொடை. என்னை? ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் - தொல். செய். 225. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் *khdÄ‹ றெவனோ சொல்லாய் வாழி தோழி ! வரைய முள்ளில் பொதுளிய அலங்குகுரல் நெடுவெதிர் *பொங்குவால் இளமழை துவைப்ப மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. எண்ணு வண்ணம் என்பது, செவ்வெண்ணினாலும், உம்மை எண்ணினாலும், என எண்ணினாலும், என்றா எண்ணினாலும், பிறவும் யாதானும் ஓர் எண்ணினாலும் வருவது. என்னை? எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் - தொல். செய். 226. என்றாராகலின். வரலாறு: (நிலை மண்டில ஆசிரியப்பா) பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே - யா. வி. 95. உரை மேற். எனக் கொள்க. இது செவ்வெண் பெற்றது. பிறவும் அன்ன. அகைப்பு வண்ணம் என்பது, அறுத்து அறுத்துச் சொல்லப்படுவது. என்னை? அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும் - தொல். செய். 227. என்றாராகலின். வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தை அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர் அண்ணல் என்போன் இயன்ற சேனை முரசிரங்கும் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலி என்னவன் - இலக். விளக். 757. எனக் கொள்க. தூங்கல் வண்ணம் என்பது, பெரும்பான்மையும் வஞ்சி பயின்று வருவது. என்னை? தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும் - தொல். செய். 228. என்றாராகலின். வரலாறு: (குறளடி வஞ்சிப்பா) தென்குமரி வடவிமய மாஅவெல்லைத் தம்புகழ்விளங்கக் கடலன்ன படைநாப்பண் மலையன்ன களிற்றெருத்தின் ஞாயிற்றன்ன சேண்விளங்குதிறலர் திங்களன்ன வெண்குடையுயரிய ஒன்னாதார் மிடல்சாயத் துன்னரிய அகழ்கடந்தவர் பொன்னுடைய எயில்முருக்கி ஓவத் தன்ன வினைபுனை நல்லிற் கோவத் தன்ன கனையெரி கவரச் சென்றவர் திறல் மழுங்கவாற்றலிற் புலவர்பல புகழ்கொண்டு பெறலரிய விழுத்தாயம் விறலியர்க்கு மகிழ்ந்துவீசினை ஒன்னார் துப்பிற் றென்னவர் மருக ! பல்கிளைப் பசிநோனாது கல்பிறங்கிய சுரம்நீந்தி இவண்வந்த நசைவாழ்நன் எனவைத்ததெல்லாம் பிறர்க்காகும் ஈந்ததெல்லாம் எனக்காகும் பொருள்கொடுத்தும் புகழ்கொள்வனென இவற்கீயேன் எனக்கீவனென என்னோக்காது நின்னோக்கி என்னைவிடுமதி வென்வேல்வழுதி! வெயிற்கதிர் நுழையா வியன்பெருங் காவிற் றண்புனல் வையை ஒண்டுறைத் தொகுத்த *nfhLW மணலினும் ஏத்திப் பாடுதும் பெரும ! நின் னாடொறும் புகழ்ந்தே எனக் கொள்க. ஏந்தல் வண்ணம் என்பது, சொல்லிய சொல்லிற் சிறந்து வருவது. என்னை? ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும் - தொல். செய். 229. என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா; கூடலிற் கூடலே கூடலும் ;- கூடல் அரும்பிய முல்லை அரும்பவிழு மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க. உருட்டு வண்ணம் என்பது, அராகத் தொடைமேல் வருவது. என்னை? உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும் - தொல். செய். 230. என்றாராகலின். வரலாறு: (வண்ணக ஒருபோகு) (அராகம்) அணிகிளர் சிறுபொறி அவிர் துத்தி மாநாகத் தெருத்தேறி துணியிரும் பனிமுந்நீர் *தொட்டுழந்து மலைந்தனையே; ஆர்கலி உயரகல் எழில்வானத் தமரர்கணம் உடனார்ப்ப *வார்புனல் இகன்மிகல மறமல்லனை மாய்க்கலிற் பொங்கினை; முள்ளெயிற் றரிமருள்கண் ஆய்த்தியரொடு நிரைநடுங்க வரைதிரள் நிமிர்தடக் கையினனி மலையெடுத் தேந்தினை; இஃதராகம். காமருதகைய கல்லியல் மார்பினை; கண்பொரு சுடரொளி நேமியை; பூமலி வினைபுனை தாரினை; பொன்புனை வினைபுனை உடுக்கையை; இது பேரெண். அனையன. இது தனிச்சொல். பலவுடன் புகழ்தகப் பயந்தோய் ! நின் இணைபுணர் கழலடி பரவுதும் துணைபுணர் உவகையொடு மன்னுதும் எனவே - யா. வி. 93. மேற். இது சுரிதகம். எனக் கொள்க. முடுகு வண்ணம் என்பது, அடியற்றவுழி அறியலாகாதாய், நீண்ட அடித்தாய், அராகம் தொகுத்து வருவது. என்னை? முடுகு வண்ணம் முடிவறி யாமல் அடியிறந் தொழுகும் அதனோ ரற்றே - தொல். செய். 231. என்றாராகலின். வரலாறு: (அராகம்) பெருகலி யொலிமலி துணையணி பிறழத் துயல்வியல் வளனுரை பிதிர அதிரும் மதிவிலங் குருளுடை இருண்முந்நீர் அருங்கலம் கவர்ந்தனையே; வகைதகை வளர்தளிர் உறுதுயர் வணரிணர் துணர்புயல் புகையணங் குறுசினை வினவா வினவில் உயர்வ ராயின் வினைபடக் கிடந்தோய்! நின் சூழுறு சுடரொளி திகழணி மணியலங் கிலங்கவிர் கதிர்முத்தமொ டுறழந்தியாத்த தொடையமை துணைபுனை வினை தொடுகழல் அடியிணை பரவுதும் யாமே எனக் கொள்க. இவ்வாறு வண்ண விகற்பம் எடுத்து ஓதினார் தொல் காப்பியனாரும் கையனாரும் முதலாக உடையார். அவிநயனார், தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்ற இவ்வைந்தினையும்; அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என்ற இவ்வைந்தினையும் கூட்டி உறழ, நூறு வண்ணம் பிறக்கும் என்றார். அவை உறழுமாறு: தூங்கிசை வண்ணம் 20 (அகவல் :) குறில் அகவல் தூங்கிசை வண்ணம், நெடில் அகவல் தூங்கிசை வண்ணம், வலி அகவல் தூங்கிசை வண்ணம், மெலி அகவல் தூங்கிசை வண்ணம், இடை அகவல் தூங்கிசை வண்ணம் எனவும், (ஒழுகல்:) குறில் ஒழுகல் தூங்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் தூங்கிசை வண்ணம், வலி ஒழுகல் தூங்கிசை வண்ணம், மெலி ஒழுகல் தூங்கிசை வண்ணம், இடை ஒழுகல் தூங்கிசை வண்ணம் எனவும்; (வல்லிசை:) குறில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், வலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம், இடை வல்லிசைத் தூங்கிசை வண்ணம் எனவும், (மெல்லிசை) குறில் மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடில் மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், வலிமெல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், இடை மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், எனவும் இவை குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதலிய இருபது தூங்கல் வண்ணம். அவைதாம் முதுபிடி நடந்தாற்போலவும், கோம்பி நடந்தாற்போலவும், நாரை நடந்தாற்போலவும், வரும். அவை ஒரு புடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க. ஏந்திசை வண்ணம் 20 (அகவல்:) குறில் அகவல் ஏந்திசை வண்ணம், நெடில் அகவல் ஏந்திசை வண்ணம், வலி அகவல் ஏந்திசை வண்ணம், மெலி அகவல் ஏந்திசை வண்ணம், இடை அகவல் ஏந்திசை வண்ணம் எனவும்; (ஒழுகல்:) குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், மெலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், இடை ஒழுகல் ஏந்திசை வண்ணம் எனவும்; (வல்லிசை:) குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் வல்லிசை ஏந்திசை வண்ணம், வலி வல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி வல்லிசை ஏந்திசை வண்ணம், இடை வல்லிசை ஏந்திசை வண்ணம் எனவும்; (மெல்லிசை :) குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், வலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், இடை மெல்லிசை ஏந்திசை வண்ணம் எனவும் - இவை குறில் அகவல் ஏந்திசை வண்ணம் முதலிய இருபது ஏந்திசை வண்ணம். அவைதாம் மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட்போலவும் வரு மெனக் கொள்க. அடுக்கிசை வண்ணம் 20 (அகவல்:) குறில் அகவல் அடுக்கிசை வண்ணம், நெடில் அகவல் அடுக்கிசை வண்ணம், வலி அகவல் அடுக்கிசை வண்ணம், மெலி அகவல் அடுக்கிசை வண்ணம், இடை அகவல் அடுக்கிசை வண்ணம் எனவும்; (ஒழுகல்:) குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், வலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், மெலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், இடை ஒழுகல் அடுக்கிசை வண்ணம் எனவும்; (வல்லிசை:) குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை வல்லிசை அடுக்கிசை வண்ணம் எனவும்; (மெல்லிசை:) குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம் முதலிய இருபது அடுக்கிசை வண்ணம். அவை தாம் ஒவ்வா நிலத்திற் பண்டி உருண்டாற் போலவும், நாரை இரைத்தாற் போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் வரும். பிரிந்திசை வண்ணம் 20 (அகவல்:) குறில் அகவல் பிரிந்திசை வண்ணம், நெடில் அகவல் பிரிந்திசை வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம், இடை அகவல் பிரிந்திசை வண்ணம் எனவும்; (ஒழுகல்:) குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், வலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், இடை ஒழுகல் பிரிந்திசை வண்ணம் எனவும்; (வல்லிசை:) குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் எனவும்; (மெல்லிசை:) குறில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் எனவும் இவை குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் முதலிய இருபது பிரிந்திசை வண்ணம். அவைதாம் பெருங்குதிரைப் பாய்த்தலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாக உடையறுத்துக் கொட்டுப் போலவும் வரும். மயங்கிசை வண்ணம் 20 (அகவல் :) குறில் அகவல் மயங்கிசை வண்ணம், நெடில் அகவல் மயங்கிசை வண்ணம், வலி அகவல் மயங்கிசை வண்ணம், மெலி அகவல் மயங்கிசை வண்ணம், இடை அகவல் மயங்கிசை வண்ணம் எனவும்; (ஒழுகல்:) குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் மயங்கிசை வண்ணம், வலி ஒழுகல் மயங்கிசை வண்ணம், மெலி ஒழுகல் மயங்கிசை வண்ணம், இடை ஒழுகல் மயங்கிசை வண்ணம் எனவும்; (வல்லிசை :) குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில் வல்லிசை மயங்கிசை வண்ணம், வலி வல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி வல்லிசை மயங்கிசை வண்ணம், இடை வல்லிசை மயங்கிசை வண்ணம் எனவும்; (மெல்லிசை:) குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை மயங்கிசை வண்ணம், வலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், இடை மெல்லிசை மயங்கிசை வண்ணம் எனவும் இவை குறில் அகவல் மயங்கிசை வண்ணம் முதலிய இருபது மயங்கிசை வண்ணம். அவைதாம் நகரம் இரைந்தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப் பிசையும் இயமர இசையும் தேரைக் குரலும் போலவும் வரும். சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது, அகவல் வண்ணம். நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது, ஒழுகல் வண்ணம். தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கன் மேற் கல் உருட்டினாற் போலவும் வருவது, வல்லிசை வண்ணம். அன்ன நடையும் *j‹d«giwí« போலவும், மணன் மேல் நடந்தாற் போலவும் வருவது, மெல்லிசை வண்ணம். இவை தொழில் வகையால் ஒரு புடை ஒப்புமை காட்டியவாறு. இவை நூறு வண்ணமும் தம்முள் மயங்கி வரினும், மிக்க தனாற் பெயர் கொடுத்து வழங்கப்பெறும். வரலாறு: (கலி நிலைத்துறை) வினையொழி பொழுதின்கட் செல்வமே போல அஃகிச் சுனையெழு குவளையும் ஆம்பலும் தீய்ந்து வாடிக் கனையெரி கழைதீண்டிக் காடுவெந் *njhL கில்லா நனைகவுள் எழில்வேழம் நாவசைந் தெய்தி யாங்கு இன்னவும், ஆசிரியங்களும், பாவைப்பாட்டும், அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் எனப்படும். இவற்றை ஐந்தெழுத்தின் மேலும் 1ஒட்டிக் கொள்க. (கலி விருத்தம்) கோலமலர் கொண்டுசில மந்திமலை வுடைத்தாய்ச் சோலைதொறுந் தாழ்ந்தபொழிற் சோர்வியலுயர் விஞ்சை நீலமலர்க் கண்ணினவர் நீடுநனி ஏத்தச் சீலமிகு நாதனடி சேரவினை சேரா இன்னவும், வஞ்சியும், வஞ்சிப்பாவினமும் ஒழுகிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க. (எழுசீர் ஆசிரிய விருத்தம்) ஏறுயர் கொடியின் இருவிசும் பதிரும் எறிமுர சதிர்கடற் றானை வீறுயர் மணிக்கால் வெண்குடை ஓங்கு தண்டுறை யின்பழை யாற்று மாறடு படிவ kâíW*efUŸ மாதவன் ஏதமில் பாதம் வீறடு கதிகள் Mœfâ*åH விளங்கிய விழுத்துணை யாமே என இச் சந்தத்தனவும்; (அறுசீர் ஆசிரிய விருத்தம்) பூவி னார்பொழிற் பிண்டியின்கீழ்ப் பொருவறு திருநகர்ப் பொன்னெயிலுள் மாவி னார்நலம் நோக்கினல்லார் பலர்ப ணிந்துவந் தடிவணங்கி என இன்ன வண்ணத்தனவும் எல்லாம் வல்லிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க. (குறள்வெண் செந்துறை) தேனி னார்மலர்ப் பிண்டியி னீழற்றேவர் ஏத்த வானி னார்குடை யானடி நாளும் வணங்குதுமே (கலி விருத்தம்) தாழி ஓங்கு மலர்க்கண்ணவர் தண்ணடி பாழி ஓங்கு புனலார்பழை யாற்றுள் ஊழி நின்ற மதியான்மதி சேர்ந்து வாழி என்று வணங்கவினை வாரா என இன்னவை எல்லாம் மெல்லிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க. (தரவு கொச்சகம்) களவினாற் கொணர்ந்தவெண் காணமும் விழுப்பொன்னும் உளவெனினும் யான்றுய்ப்பல் உலவாது கிடந்தமையால் வளையினாற் பொலிந்தகை வாட்கண்ணாள் வழிப்படூஉம் கனைவாரிற் கனையிருட்கட் காணேன்மற் றிதுவல்லால் என இன்னவும், கலிப்பாக்களும், தும்பிப்பாட்டும் குறில் அகவல் ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (ஆசிரியத் துறை) வரையென மாடங்கன் ஓங்குறு வீதியின் வஞ்சி மன்னவன் புரைபுரை நின்றலர் பூந்தொடை யற்பொறை யன்றா னருளானேற் கரையெனக் காலையும் காண்பரிய கடல்போலும் கெளவையும் அரையின மேகலை ஒட ஓடுமிவள் ஆவி ஆற்றாதே என இன்ன ஆசிரியத்துறை விருத்தங்களும், வெண் பாக்களும், வெள்ளொத் தாழிசைகளும் எல்லாம் குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (நிலைமண்டில ஆசிரியப்பா) நெறிநீர் இருங்கரி நீலமும் *N£lhŸ பொறிமாண் வரியலவன் *M£lY« ஆட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண் சேர்ப்பயான் என் சொல்லிச் *bršnfh?” இதுவும் அது. (கலி விருத்தம்) இட்ட கன்றளை யானினி என்செய்கோ கட்டெ ழில்லழ காகடி தென்னவே மட்டெ ழின்மலர்த் தார்பொலி மார்பனும் கெட்டெ ழுந்திறை கூறுவ னோவெனா பறைபட் டனபட் டனசங் கினொலி முறைவிட் டனவிட் டனமுன் னுலவாத் திறைவிட் டனர்கொட் டினர்திண் கலிமா நிறைகொட் டினரொட் டினர்நீள் முழவால் இன்னவும் குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (கலிநிலைத் துறை) மான்வீடு போழ்திற் பிணையின் உயிர்போவ தேபோல் யான்வீடு போழ்தின் இதுவேகொல் நினக்கும் என்னத் தேனூறும் இன்சொல் மடவாய்! அழுதாற்ற கில்லாய் வானூடு போய வரைகா ணியசென்ற காலை என இன்னவும், உழவர் ஓதை (சிலப் . 7:4) எனப்படுவனவும் குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந் தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) கொடியிடை மாதர் மேனி குவளைமலர் உண்கண் என்றும் பிடிநடை மாதர் மாண்ட நடைதா னெனப்பேது எய்தும் வடிவொடு வார்ந்த மென்றோள் வளை சேர்ந்த கைகாந்தள் என்றும் இடையிடை நின்று நின்று பலகாலும் உவப்ப தென்னோ! - வளையாபதி. என்ன இன்ன பிறவும், எழுசீர் அடியால் வந்தனவும் எல்லாம் குறில் அகவல் அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத் தின்மேலும் ஒட்டிக்கொள்க. (எண்சீர் ஆசிரிய விருத்தம்) மாலையால் வாடையால் அந்திபால் மதியால் மனமுனம் உணர்வது நோயுறச் செய்த சோலையால் தென்றலால் சுரும்பிவர் பொழிலால் சொரிதரு காரொடு விரிதரு பொழுதே கோலவால் வளையாற் கொடுப்பறி யானேற் கொள்வதும் உயிரொடு பிறரொடும் அன்றோ ! காலையார் வரவே காதலும் ஆங்கோர் காலையென் னுங்கடல் நீந்திய வினையே என இன்னவும், பிறவும், எண்சீரடி மிக்கு வருவனவும் குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) கடியான் வெயிலெறிப்பக் கல்லளையுள் வெதும்பிய கலங்கற் சின்னீர் அடியால் உலகளந்த ஆழியான் ஆக்கிய அமிழ்தென் றெண்ணிக் கொடியான் கொடுப்பக் குடங்கையாற் கொண்டிருந்து குடிக்கல் தேற்றான் வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம் பீன்றாளிவ் வருவா ளாமே எனவும், அடைமின்சென் றடைமின்சென் றவனாக்கிய சினகரத் திறைவன் றாளை எனவும் அறுசீரடியால் வருவன எல்லாம் குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. பிடியுடை நடையடு நடையினள் தெரியின் கடிபடும் இலமலர் அடிநனி தனதாம் துடியிடை அடுமிவள் நடுவொடி வதுபோல் வடுவடி அடுமிவள் நெடுமலர் புரைகண் எனவும், கடுமுடையை நாறுகரு மேனியின ளாகிப் படுமுடையுள் 1மாகுலவர் பாத்துணலும் ஈயார் இடமுடைய நாடுநனி ஏகெனலும் போகித் தடமுடைய கன்முழையி னாடமிய ளாகி எனவும் இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. சூரலும் பிரம்பும் சுற்றிய எனவும், (கலி விருத்தம்) முன்றில் நின்ற முடமுதிர் பெண்ணைமேல் அன்றில் காள் ! நுமை ஆற்ற வினவுதும்; தொன்று காலம் தொடர்ந்துடன் ஆடினான் சென்று ழிச்செலும் செந்நெறி யாதென எனவும், குரவ ணங்கிலை மாவொடு சூழ்கரைச் சரவ ணம்மிது தானனி போலுமால் அரவ ணங்குவில் ஆண்டகை சான்றவன் பிரிவு ணர்ந்துடன் வாரலன் என்செய்கோ! - யா. வி. 15. மேற் எனவும் இன்னவை எல்லாம் குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (கலி விருத்தம்) அறிவல் அறிவல் அமுதே அமுதே எறிவெண் டிரைமீ திகலிற் றறிவல்; இறுகல் இறுகல் இதுகேள் இதுகேள்; பெறுவல் பெறுவல் பிழைப்பொன் றுபெறாய் எனவும், தேனம ருந்திரு வாரிள வேனிலின் மானம ரும்மட நோக்கியர் நோக்காய் தானுரு கல்லெயில் தாங்கிநின் றாய்கரி *ahdf லாதடி அஞ்சலி செய்தும் எனவும், கதிர்கொள் மதியும் கனபொன் களிறும் பயில்கொண் டுபரந் தழகா கியினி எனவும் இன்னவை எல்லாம் குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம். இவையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) துடித்த டித்தி மிழ்தரு துளங்கு வெள்ள ருவிநீர் தொடுத்தே டுத்த மாலைபோல் தொடர்ந்து தோன்றும் தூய்மைசால் அடுத்த டுத்து ரைபுக அசைவில் சீ1ரு ருச்சந்தம் மடுத்த டுத்து வைகலும் மறத்த லின்றி வாழ்த்துவாம் என இன்னவை எல்லாம் குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (தரவு கொச்சகம்) களியுந்தி வீழ்ந்த கதிர்செய்ய வெய்யோன் ஒளியுந்தி நீண்டகுடை ஒருவனல் கானேல் நிலமுந்தி யோடும் வளைமுல்லை மெல்ல நகுமுந்தி யாகின்ற தாவியா தாங்கொலோ! என இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை பிரிந்திசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) வாங்குபு கொள்ள நின்றாள் வாரண வாசி மன்னன் தேங்கமழ் ஒலிமென் கூந்தல் தேவினாட் கீன்ற மங்கை ஆங்கவள் அருகல் அல்லாள் அத்தின புரத்தி ராசன் வான்புகழ் மங்கை வாகைப் பூநிறம் அன்ன மேனி என இன்னவை எல்லாம் குறில் அகவல் மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (கட்டளைக் கலித்துறை) ஆசைப் படுவ அருந்தவம் கல்வி ; அல் *yh¥ãwfŸ! பேசப் படுவ திலம் ; இவை யாவை பிறப்பிறப்பாம் தேசத் தியற்கை தெரிந்துணர் வாருக்குச் சேயிழைமார் பாசப் படுகுழிப் *g‰wW¤ தார்வினைப் பற்றறுத்தார் என இன்னவை எல்லாம் குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (கலி நிலைத்துறை) தாமத் தூண்களைத் தருக்கொடு முருக்குதல் முரணும் தூமத் தூவகல் எடுத்துக்கொண் டுழையவர் எறியும் வாமத் தோள்களின் வலித்தனன் புடைத்தெடுத் தரற்றும் பேய்மைத் தீத்தொழில் பெருகிய தரசனும் உணர்ந்தான் என இன்னவை எல்லாம் குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) உருகா தார்தம் இன்னுயிர்காத் தொழிய லாமோ உணர்ந்தார்க்கு வருகார் போல வளஞ்சுரந்திவ் வையம் காக்கும் வயமாறன் முருகார் ஆர மார்பினான் முரசம் ஆர்ப்ப முல்லைகாள் ! குருகார் பௌவம் உண்டிருண்ட கொண்டல் என்று குழைத்தீரோ? எனவும், கண்ணுடையா ரவர்கண்டார் கண்ணில்புண் பிறவெல்லாம் எனவும் இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. இவற்றில் ஒரு வண்ணத்தாலேயும் பல வண்ணத்தாலேயும் வரும். இப் பெற்றியே கடையில்லா விகற்பமாம். அவற்றை ஒரு விகற்பத்தாற் சொன்னவாறு. பிற வகையால் வரும் வண்ணங் களையும் ஒரூஉ வண்ணங்களையும் உரைத்தவற்றோடு ஒருபுடை ஒப்புமையாற் சார்த்தி உணர்க. என்னை? (கட்டளைக் கலித்துறை) தூங்கேந் *jL¡F¥ பிரிதல் மயங்கிசை வைத்துப்பின்னும் ஆங்கே அகவல் ஒழுகல் வலிமெலிப் பாற்படுத்துப் பாங்கே குறில் நெடில் வல்லிசை மெல்லிசை யோடிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறும் தலைப்படுமே - யா. கா. 43. மேற். எனக் கொள்க. எ இனி, வழு என்பது, குற்றம். அது நான்கு வகைப்படும்: எழுத்து வழுவும், சொல் வழுவும், பொருள் வழுவும், யாப்பு வழுவும் என. அவற்றுள் (1) எழுத்து வழுவாவது, எழுத்ததிகாரத் தோடு மாறு கொள்வது. வரலாறு: (நேரிசை வெண்பா) வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே அன்றிப் பிறிதும் குறையுடையான் போலும் - செறிதொடீஇ தேமான் இதணத்தான் நாமாக நம்புனத்தே மாமான்பின் வந்த மகன் ! என இதனுள், தேமா எனற்பாலதனைத் தேமான் என னகர ஒற்றுக் கொடுத்தமையால், எழுத்து வழு ஆயிற்று. என்னை? முன்னிலை நெடிலும் ஆவும் மாவும் னம்மிகப் புணரும் இயங்குதிணை யான என்றாராகலின். (2) சொல் வழுவாவது, சொல்லதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை? சொல்லின் வழுவே சொல்லோத்து மரபிற் சொல்லிய குற்றம் தோன்ற லான என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) இசையெல்லாம் கொட்ட எழிற்றானை ஊர்ந்து வசையிலா மன்னர்வந் தேத்த - இசையும் அடிசில் பருகி அணியார்த்துப் போந்தான் கொடிமதிற் கோழியார் கோ இதனுள், இசையெல்லாம் ஆர்ப்ப எனவும், எழிற்றானை நாப்பண் எனவும், அடிசில் அயின்று எனவும், அணி அணிந்து போந்தான் எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக் கொண்டு பொதுவினால் முடித்தற்பாலனவற்றைப் பொதுப் பெயரால் எடுத்துக் கொண்டு சிறப்பு வினையான் ஒன்றற்கே உரிய சொற்புணர்த்தமையான். சொல் வழு ஆயிற்று. என்னை? வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார் - தொல். சொல். 46. எனவும், வேறுவினை யுடைய பொதுவினை கிளப்பப் பொதுவினை யுடைய வேற்றுமை உண்டோ? எனவும் கூறினாராகலின். (3) பொருள் வழுவாவது, பொருளதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை? பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) முன்னும் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் ! அத்திசையே இன்னும் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் பெருகொளியால் மிக்க பிறை - தொல். பொ. 114. மேற். இது நாண நாட்டம். பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை அறிவன்மற் - றிண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் ! உதிரம் உடைத்திதன் கோடு: - (சிற்றெட்டகம்) இது நடுங்க நாட்டம். இவை இரண்டும் பொருளதிகாரத்தோடு மாறு கொண்டன. என்னை? நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி காணுங் காலைத் தலைமகள் தேத்து என்றாராகலின். (நேரிசை ஆசிரியப்பா) வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும் ஊரன் செய்த கேண்மை தேரை வாலினும் பெரிதா கின்றே இதுவும் பொருள் இன்மையாற் பொருள் வழு ஆயிற்று. (4) யாப்பு வழுவாவது, யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை? யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம் கோப்ப வாராக் கோவைத் தாகும் என்றாராகலின். வரலாறு: குமண ! வாழி ! குமண உமணர் உப்பிற் றேய்கநின் பகையே ; யான்சில பெருமை வேண்டி வந்தேன்; நீநின் பெருமை வேண்டின் தா இப்பாட்டு முதல் எடுத்துக்கொண்ட ஓசையிற்கெட்டுப் பின் பரவிக் கட்டுரையால் வந்தமையால், யாப்பு வழு. பிறவும் அன்ன. அறுத்து இசைப்பும், வெறுத்து இசைப்பும், அகன்று இசைப்பும் என்னும் ஓசைக் குற்றம் வருமாறு: (குறளடி வஞ்சிப்பா) 1வீங்குமணி விசித்த விளங்குபுனை நெடுந்தேர் காம்புநீடு மயங்குகாட்டுள் பாம்புபெரிது வழங்குதோ றோங்கு வயங்குகலிமா நிரைபுநிரைபு வலவன், வாம்பரி கடவி வந்தோன் கெழூஉமணி அகலம் தழூஉமதி விரைந்தே இது நாலசைப் பொதுச்சீர் பலவும் வந்து வஞ்சி தூங்கினமை யின், அறுத்திசைப்பு என்னும் குற்றம் ஆயிற்று. (நேரிசை வெண்பா) ஓங்கிலை வேலோன் ஒளியால் அளிபெற்ற பூந்துழாய் போன்றேமும் யாமேமற் - றேய்ந்து தகைமொய்ம்பிற் றாழ்தடக்கைத் தண்ணருவி நாடன் பகைமுனை போன்றேமும் யாம் இதனுள், தகைமொய்ம்பிற் றாழ்தடக்கை என்புழி வஞ்சி தூங்கிசைத்தமையால், வெறுத்து இசைப்பு. சிறுநன்றி இன்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெறுநன்றி *ã‹D« பெரிதென் - றுறுநன்றி தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே வானவாம் உள்ளத் தவர் - யா. வி. 4. மேற். இதனுள், சிறுநன்றி இன்றிவர்க்கியாம் என்புழிக் குற்றியலிகரம் வந்து, வெட்டென்று இன்னாங்காய் இசைத்தமையால், வெறுத்து இசைப்பு ஆயிற்று. கற்றற் றற்ற சுடற்ற கடற்றிரை விற்றற் றற்ற வில்லேர் புருவத்தள் சொற்றற் றற்ற சுடர்க்குழை மாதரோ டுற்றற் றற்றதென் நெஞ்சு இதுவும் வெறுத்து இசைப்பு. கானக நாடன் கருங்கோன் பெருமலைமேல் ஆனை கிடந்தாற்போல் ஆய பெருங்கற்கள் தாமே கிடந்தன கொல்லோ ! அவையேற்றிப் பெற்றிப் பிறக்கிவைத்தார் உளர்கொல்லோ! இது, முன் செய்யுளாய் வந்து, இறுதி பரவிக் கட்டுரையால் வந்தமையால் அகன்று இசைப்பு என்னும் குற்றம் ஆயிற்று. இதுவும் யாப்புக் குற்றத்துள்ளே பட்டு அடங்கும். இன்னும் வழு என்பதனாலே, ஆனந்தம் முதலாகிய குற்றங்களும் அறிந்து கொள்க. பிறவும் அன்ன. திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே என்பதனால், அவற்றை எல்லாம் பிழையாமே நடாத்துதல் புலவர்கள் கடன் என்றவாறு. இச்சூத்திரத்துள் பிறவும் என்று சொல்லிய அதனானே, நூலும், சூத்திரமும், ஓத்தும், படலமும், பிண்டமும் ஆமாறும், அடியின்றி நடப்பனவும், ஓரடியாய் நடப்பனவும், புனைந் துரையாய் நடப்பனவும், ஆமாறும் உணர்ந்து கொள்க. நூலாவது, மூவகைத்தாய், மூவரின் நடைபெற்று, நால் வகைப் பயத்ததாய், எழுவகை ஆசிரியர் மதவிகற்பத்தாயப், பத்துவகைக் குற்றத்திற்றீர்ந்து, பத்துவகை மாண்பிற்றாய்ப் பதின்மூன்று வகையாக உரை பெற்று, முப்பத்திரண்டு தந்திர உத்தியொடு புணர்ந்து வருவது. அவற்றுள், மூன்றுவகையாவன, தந்திரம், சூத்திரம், விருத்தி என இவை. மூவரின் நடைபெறலாவது, அம்மூன்றும் நடாத்துவார் மூவர் ஆசிரியர் எனக் கொள்க. நால்வகைப் பயனாவன. 1அறம், பொருள், இன்பம், வீடு என்பன. எழுவகை ஆசிரியர் மத விகற்பமாவன, 2உடம்படுதல் மறுத்தல் என்பன முதலாக உடையன எனக் கொள்க. பத்துவகைக் குற்றமாவன, 3குன்றக்கூறல் முதலாக உடையன எனக் கொள்க. பத்துவகை மாண்பாவன, 4சுருங்க வைத்தல் முதலாக உடையன எனக் கொள்க. பதின்மூன்றுவகை உரையாவன. 5சூத்திரம் தோற்றல் முதலாக உடையன எனக் கொள்க. முப்பத்திரண்டு தந்திர உத்தியாவன: நுதலிப் புகுதல், ஓத்துமுறை வைப்பே, தொகுத்துக் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடம் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல், எடுத்த மொழியின் எய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல், தன்னினம் முடித்தல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், மாட்டெறிந் தொழிதல் பிறநூல் முடிந்தது தானுடம் படுதல் தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன்மேற் கோடல், பின்னது நிறுத்தல், எடுத்துக் காட்டல், முடிந்தது முடித்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், தொடர்ச்சொற் புணர்த்தல் யாப்புறத் தமைத்தல், உரைத்தும் என்றல், விகற்பத்து முடித்தல், தொகுத்துடன் முடித்தல், ஒருதலை துணிதல், உய்த்துணர வைத்தல் - நன்னூல், 14. அதுவே தானும் ஈரிரு வகைத்தே - தொல். செய். 168. ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும், இனமொழி கிளந்த ஓத்தி னானும். பொதுமொழி கிளந்த படலத் தானும், மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்என் றாங்கனை மரபின் இயலும் என்ப - தொல். செய். 169. அவற்றுள், சூத்திரந் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருணனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே - தொல். செய். 170. நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை ஒருவழி வைப்ப தோத்தென மொழிப உயர்மொழிப் புலவர் - தொல். செய். 171. ஒருநெறி இன்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும் - தொல். செய். 172. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின், தோன்றுமொழிப் புலவர் அதுபிண்டம் என்ப - தொல். செய். 173. ïit üY«, N¤âuK«., ஓத்தும், படலமும், பிண்டமும் ஆமாறு சொன்னவாறு. இவை எல்லாம் முன் சொல்லிப் போந்தன அன்றோ? (யா. வி. 1) எனின், உரைப்பான் புகுகின்றுழி இது நூலாமாறு, என்று காட்டிற்றல்லது, இந்த நூலுட் சூத்திரத்தின் பொருள் என்று அப்பொழுது சொல்லிற்றில்லை எனக் கொள்க. உரையொடு நூலிவை அடியில நடப்பினும், வரைவில என்ப வாய்மொழிப் புலவர் 1மொழி2பிசி3முதுசொல் மூன்றும் அன்ன என்றார் பல்காயனார். உரையும் நூலும் அடியின்றி நடப்பினும், வரைவில என்ப வயங்கி யோரே வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங் காமுரை மூன்றும் அன்ன என்ப என்றார் நற்றத்தனார். இவை அடியின்றி நடப்பன உரைத்தவாறு. செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை அடியின் ஈட்டத் தழகுபட்டியலும் ஒரோவடி யானும் ஒரோவிடத் தியலும் அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆக்கின என்ப அறிந்திசி னோரே என்றார் பல்காயனார். இவை ஓரடியால் நடப்பன உரைத்தவாறு. புனைந்துரை இரு திறத்தன: பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும் சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் என. என்னை? உரைக்கப் படும்பொருட் கொத்தன எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும் என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) அடையார்பூங் கோதையாட் கல்குலும் தோன்றும் புடையார் வனமுலையும் தோன்றும் - இடையாதும் கண்டுகொளா தாயினும் காரிகை நீர்மையாட் குண்டாகல் வேண்டும் நுசுப்பு எனவும், (குறள் வெண்பா) அயிர்ப்பாகல் நோக்குவேன் கண்டேன் *kÆ®¥gh»‰ பாகத்திற் பாகம் நுசுப்பு எனவும் இவை பெரியதனைச் சுருக்கின. *“fiy¡fzh® நின்றிட்ட பூசல் கடைக்கணார் கேளாமை நீண்டன கண் எனவும், பொன்மலி கூடல் பூமலி கச்சி மாரி ஈகை மணியணி மாடம் எனவும் இன்னவை எல்லாம் சிறியவற்றைப் பெருக்கின. பிறவும் அன்ன. இன்னும், வண்ணமும் பிறவும் என்றதனாலே, நாலசைச் சீர் இன்றியே நடாத்துமாறும், நான்கசையும் எண்பத்திரண்டு சீரும் கொண்டு இயற்றுமாறும், எழுபது தளை வழுவிற்றீர்ந்த அறுநூற்று இருபத்தைந்து அடியும் ஆமாறும், சந்தமும் தாண்டகமும் ஆமாறும், பாக்கட்கு வருணம் முதலாயினவற்றை வகுத்து வழங்குமாறும் உரைத்துக் கொள்க. அவை சொல்லுமாறு: (நேரிசை வெண்பா) குற்றுகரம் ஒற்றாக்கிக் கூன்வகுத்துச் சிந்தியற்றி மற்று நெடிலும் வகையுளியும் - சொற்றபின் மேலசைச்சீர் நாட்டி அளபெடை வீறழித்தால் நாலசைச்சீர்க் கில்லை நடை என்பது, ஏழ் நயமும் *bjhF¤jthW. (கலி விருத்தம்) காக்கை பாடினி யார்முதலாகிய மாக்க விப்புல வோர்மதம் பற்றியீங் கூக்கம் இன்மையுண் டாமுக ரத்தையொற் றாக்கின் நாலசைச் சீரணை யாதரோ இதன் கருத்து: 1குண்டுநீடுநீர்க் குவளைத்தண்சுனை எனவும், 2குறித்துக்கூடுவோர் நெறிமயங்கவும் எனவும், 3 போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம் எனவும், 1புரிந்துவாங்குவீங்கு நரம்பிவர்தலின் எனவும், 2கொன்றுகோடுநீடு குருதிமாறவும் - யா. வி. 4. மேற். எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் ஐயசைச்சீரும் ஆறசைச் சீரும் வந்தனவற்றைக் காக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மதம் பற்றி, இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும் - யா. வி. 4. மேற் (காக்கைபாடினியார்) எனவும், இஉஇரண்டன் குறுக்கம் தளைதபின் ஒற்றெழுத் தாகும் உயிரள பெடையும் எனவும், சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும் - யா. வி. 4. மேற். (மயேச்சுரர்) எனவும், உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம் சீர்தப வரினும் ஒற்றியற் றாகும் - யா. வி. 4. மேற். (அவிநயனார்) எனவும், (நேரிசை வெண்பா) ஐந்தா றசையின் அருகி உகரத்தின் வந்தசீர் ஒன்றிரண்டொற் றொப்பித்து - நந்துவித்தால் வஞ்சிப்பா விற்கியலும் நாலசைச்சீர் ; அல்லுரிச்சீர் தங்கி விரவத் தகும் - யா.வி. 4. மேற். எனவும் இவ்விலக்கணங்களினாலே ஆண்டுக் குற்றியலுகரங்களை ஐயசைச்சீரும் ஆறசைச்சீரும் அல்லவென்று அவ்வாறே அவற்றையும் களைக. வசையில்புகழ் வயங்குவெண்மீன் - பட்டினப்பாலை 1 எனவும், சோறுவாக்கிய கொழுங்கஞ்சி - பட்டினப்பாலை 44 எனவும், களிறுவழங்குதெருவில் நெடுந்தேரேறி எனவும், திரைந்துதிரைந்து திரைவரத் திரள்முத்தம் கரைவாங்கி நிரைந்துநிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும் - யா. வி. 15. மேற். எனவும், இரவுவரவுபே ரின்னாநெறி எனவும் வரும் இத்தொடக்கத்தனவற்றையும் இவ்விலக்கணத் தாலும், தளைசீர் வண்ணம் தாங்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பிலவே - யா. வி. 4. மேற். என்னும் இவ்விலக்கணத்தாலும் குற்றுகரங்களை ஒற்றாக்கிக் கொள்ள மூவகைச் சீரே ஆம் என்பது. நேர்பசை நிரைபசை வேண்டும் ஆசிரியர்க்கு. அவை எல்லாம் மூவகைச் சீரேயாம் எனக் கொள்க. (கலி விருத்தம்) குற்றிய லிகரமும் குறுகல் இன்றியே மற்றுள நாலசை வந்த வாலெனின் முற்றிய முதல்நடு இறுதி வஞ்சியுள் குற்றமில் கூன்வரக் குற்றம் இல்லையே என்பதன் கருத்து. அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன எனவும், மா, வேயெறிபதத்தா னிடங்காட்ட எனவும், மண்கொண்ட குழிக் குவளைபூக்குந்தண் சோணாட்டுப் பொருநன் எனவும், கலங்கழாலிற் றுறை கலக்கானா எனவும், மாவழங்கலின் மயக்குற்றன வழி - புறநானூறு 345. எனவும், தேனாறுபூந் தெருகுவளை மிசை எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் குற்றுகரம் இன்றியேயும் நாலசைச்சீர் வந்தன. பிறவெனின், அவற்றுள் அடி என்பதும், மா என்பதும் முதற்கண் கூனாகவும்; குழி என்பதும், துறை என்பதும் இடைக்கண் கூனாகவும்; வழி என்பதும், மிசை என்பதும் கடைக்கண் கூனாகவும் வைப்ப, நாலசைச்சீர் அன்றாம். வஞ்சி அடியின் முதலும் இடையும் இறுதியும் அசை கூனாகப் பெறும். வஞ்சியடி முதற்கண் சீர் கூனாகவும் பெறும். இடையும் இறுதியும் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீரும் கூனாய் வரப்பெறும். அல்லாச்சீர் கூனாய் வரப்பெறா. நேர்பசை நிரைபசை வேண்டும் ஆசிரியர்க்கும் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீரும் அசையாம். இவை எல்லா ஆசிரியர்க்கும் துணிபு எனக் கொள்க. பிறவும் அன்ன. இவையும் அவர் காட்டியவே எனக் கொள்க. இன்னும் அவர் காட்டுமாறு. அதற்கொண்டு, கலங்கொண்டன கள்ளென்கோ! காழ்கோத்தன சூட்டென்கோ! - யா. வி. 93. மேற். எனவும், வேந்து, வேல்வாங்கி வியந்துருத்தலின் எனவும், தெருவு தேரோடத் தேய்ந்தகன்றன - புறநானூறு 345. எனவும் கொள்க. இவற்றுள், அதற்கொண்டு எனவும், வேந்து எனவும், தெருவு எனவும் இவை எல்லாம் சீர் கூனாயின. இவற்றிற்கு இலக்கணம் சொல்லுமாறு: உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும் மறுக்கப் படாத மரபின வாகியும் எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே - யா. வி. 94. மேற். வஞ்சி மருங்கின் இறுதியும் ஆமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே - யா. வி. 94. மேற். என்பன காக்கைபாடினியம். தனிச்சொல் என்ப தடிமுதற் பொருளொடு தனித்தனி நடக்கும்; வஞ்சியுள் ஈறே என்பது சிறுகாக்கைபாடினியம். 1தனியே, அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப என்பது அவிநயம். 2அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூன்என மொழிப 3வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே 4அசைகூன் ஆகும் என்மனார் புலவர் என்பன பல்காயம். 5தானே அடிமுதற் பொருள்பெற வருவது கூன்என மொழிப குறியுணர்ந் தோரே வஞ்சி இறுதியும் வரையார் என்ப என்பன நற்றத்தம். 6வட இமயமொடு தென் பொதியிலிடை என்பதனுள் வட என்பதும், தென் என்பதும் கூன் எனக் கொள்க. (கலி விருத்தம்) அந்தமும் ஆதியும் நடுவும் கூனசை வந்தன அன்றியும் வந்த வாமெனின் முந்திய குறளடி மொழிந்த தன்றது சிந்தென நாலசை சேர்வ தில்லையே என்ற இதன் கருத்து, வஞ்சிப்பாவின் முதல் நடு இறுதி கூன் இன்றியும், தண்முகைமென்குழல் பெருந்தடங்கண் பூவேநலந்தொலைந் தினியாற்றலள் எனவும், வலமாதிறத்தான் வளிகொட்ப எனவும், அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு - யா.வி. 95. மேற். எனவும், வேங்கைவாயில் வியன்குன்றூரன் - யா. வி. 95. மேற். எனவும், அங்கண்வானத் தமரரசரும் - யா. வி. 90. மேற். எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் நாலசைச்சீர் வந்தன்றே எனின், அவை குறளடி வஞ்சி அல்ல; சிந்தடி வஞ்சியாக வைப்ப, நாலசைச்சீர் அல்லவாம், என்பது. பிறவும் அன்ன. எல்லா ஆசிரியரும், வஞ்சியுள் மூன்றிடத்தும் நிரை யீற்றியற் சீர் மிக்கு வரும்; நேரீற்று இயற்சீர் முதலும் இடையும் அருகிவரப் பெறும் ; என்ப. என்னை? தாழ்பொழிற் றடமாஞ்சினை வீழ்குயிற் பெடைமெலிவினை - யா. வி. 15. மேற். எனவும், 1தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராஅய் - யா. வி. 26. மேற். எனவும், புன்காற் புணர்மருதின் போதப்பிய புனற்றாமரை - யா. கா. 38. மேற். எனவும், உடைமணியரை உருவக் குப்பாயத்து எனவும், தேந்தாட் டீங்கரும்பின் - யா. கா. 38. மேற். எனவும், பூந்தாட் புனற்றாமரை - யா. கா. 38. மேற். எனவும் காட்டுவாராகலின். பல்காயனார், நேரீற்று இயற்சீர் வஞ்சியடியின் இறுதியும் அருகி வரப்பெறும் என்றார். அவர் கூறுமாறு: இயற்சீர் நேரீறல் தன்றளை உடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை; வஞ்சியுள்ளும் வந்த தாகா; ஆயினும் ஒரோவிடத் தாகும் என்ப என்பது பல்காயம். கலித்தளை அடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே - தொல். செய். 24. வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா - தொல். செய். 25. என்றார் தொல்காப்பியனார். நேரீற் றியற்சீர் கலிவயின் இலவே; வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே என்பது நற்றத்தம். செங்கண் மேதி கரும்புழக்கி (பக். 96.) என்றித் தொடக்கத் தனவற்றைச் சிந்தடியும் குறளடியும் விரவி வந்த வஞ்சிப்பா எனக் கொள்க. (கலி விருத்தம்) நேரசை இறுதியாய் நிகழும் ஈரசைச் சீர்க்கடை வஞ்சியுட் செலவும் கூறினார் நேர்நிரை நேர்பொடு நிரையும் நாலசைச் சீருநன் கெடுத்துடன் செப்பி னாரரோ இது பல்காயனார் மதம். குற்றிய லுகரமும் கூனும் சிந்துமா முற்றிய அன்றியும் மொழிவ ராமெனின், தெற்றென நெடிலடி சேரும் என்பது சொற்றபின் நாலசைத் தோற்றம் இல்லையே இதன் கருத்து, சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே - புறநானூறு 235 என்றித்தொடக்கத்தன ஆசிரிய அடிகளுள்ளும், கண்டல்வண்டற் *fÊãz§»¡ கருநீல மதுவிம்மவும் கொண்டல்கொண்ட பணைமுன்றிற் பண்ணையாம் குடிகெழுவவும் என்றித் தொடக்கத்துக் கொச்சக அடிகளுள்ளும் முன்சொன்ன பெற்றி அன்றி நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அவைதாம் நாற்சீர் அல்ல என்று ஐஞ்சீர் அடியாக வைப்ப, நாலசைச்சீர் அல்லவாம். தொல்காப்பியனாரும் கீரனாரும் முதலாக உள்ளார், ஒருசார் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீரடியும் அருகி வரப்பெறும் என்று, என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே! அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே! - புறநானூறு 235 என்னும் ஆசிரிய அடிகளும், அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறி - யா. வி. 93. மேற். என்னும் கலியடியும் காட்டுவாராகலின் என்பது. அவர் சொல்லுமாறு: வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப - தொல். செய். 62. என்பது தொல்காப்பியம். ஆசிரியம் கலி என்று அதிகாரம் வருவித்து உரைக்கப் பட்டது இச்சூத்திரம். ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற் குரிய அல்ல என நக்கீரர் அடிநூலுள் வெண்பா யாப்பிற்கு உரிய அல்ல என்றமையால், ஆசிரியத்துக்கும் கலிக்கும் ஐஞ்சீர் அடி புகுதலும் மண்டிலம் ஆகலும் உரிய என்று விரித்து உரைத்தார் எனக் கொள்க. (கலி விருத்தம்) சேரும் நேரடிப் பாவிலைஞ் சீரடி ஏரும் வெள்ளையல் லாவழி என்பது சோர்வி லாததொல் காப்பியத் துள்ளுநக் கீர னாரடி நூலுள்ளும் கேட்கவே இதனை விரித்து உரைத்துக் கொள்க. தகைபெறு பொதியிலெம் தலைவன் ஆணையின் தொகைவகை விரிபடச் சொற்ற நூல்களுள் வகையுளி சேர்த்துதல் வகுப்பர் ஆதலால், நகைபெற நாலசை நடப்ப தில்லையே இதன் கருத்து, (எழுசீர் ஆசிரிய விருத்தம்) கங்கணக் கைப்பந்தார்க் கனைகழற்காற் கருவரைபோல் நீண்ட மார்பிற் காமர்கோலம் பொங்கிய சாமரை பொற்ப ஏந்திப் புடைநின் றமரர்கள் போற்றிவீசச் சிங்கம் சுமந்துயர்ந்த ஆசனத்தின்மேற் சிவகதிக்கு வேந்தாகித் தேவர் ஏத்த அங்கம் பயந்த அறிவனாய அறப்படைமூன் றாய்ந்தானடி அடைவா மன்றே இவ்வெழுசீர் ஆசிரிய விருத்தம் முதலாக உடையனவற்றில் மேற் சொன்ன பெற்றி அன்றியேயும் நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அகத்தியனார் ஆணையாற் செய்யப்பட்ட நூல்கள் எல்லாம் வகையுளி சேர்த்துக என்பதனால், 1போற்றிவீச என்பதனை யும் 2ஆசனத்தின் மேல் என்பதனையும் வகையுளி சேர்த்த மூவசைச்சீர் என்பதாம். நாலசைச்சீர் வேண்டும் ஆசிரியரும். (நேரிசை வெண்பா) பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும் ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால் - நீடுநீர் நல்வயல் ஊரான் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது என்பதனுள், 3டுகர நகரங்களை வகையுளி சேர்த்தி, மூவசைச் சீரேயாக வைப்பராகலின் என்பது. எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறை ஒழுக்கலும் *mobahL தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே என்றார் அவிநயனார். குன்றியும் தோன்றியும் பிறிதுபிறி தாகியும் ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம் அசையும் சீரும் அடியும் எல்லாம் வகையுள் சேர்த்தல் வல்லோர் மேற்றே என்றார் நற்றத்தனார். (கலி விருத்தம்) அசைகளும் ஒரோவழி ஆகும் சீரியல் இசைபெற நிற்புழி என்ப துண்மையால், விசைபெறு துறையினை விருத்த மாக்கினால் நசைபெறு நாலசை நடப்ப தில்லையே இதன் கருத்து, (கட்டளைக் கலித்துறை) குயிலும் குழலும் அலைத்தன தீஞ்சொற்கள் கொவ்வைச்செவ்வாய் கயலும் மலரும் கடுத்தன உண்கண்கள் வெண்முத்தம்பல் இயலும் படியுள தாவது நன்றன்றித் தோன்றியக்கால் அயிலுஞ்செவ் வேலும் அழலம்பும் ஆம்பிற ஆடவர்க்கே எனவும், இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் சூடும்நெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே - யா. வி. 15. மேற். எனவும், இத்தொடக்கத்துக் கலித்துறையுள் நாலசைச்சீர் வந்தன, பிறவெனின், அவை கலித்துறை அல்ல என்று சீர் சீராக இறுவழி அசைச் சீராக, ஆசிரிய விருத்தமாம்; பலரும் அவற்றை விருத்தம் என்று வழங்குவராகலின், எல்லா ஆசிரியரும், அசையும் ஒரோவழிச் சீராம், என்ப; ஊர் அலரெழச் சேரி கல்லென - குறுந்தொகை, 262. எனவும், (வஞ்சி விருத்தம்) உரிமை யின்கண் இன்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால் பெருமை *bfh‹w என்பவே - யா. வி. 15. 21. மேற். - யா. கா. 12. மேற். எனவும் காட்டுவர் ஆகலின் என்பது. இசைநிலை நிறைய நிற்குவ *thÆ‹ அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே - தொல். செய். 26. என்றார் தொல்காப்பியனார். நேர்நிரை வரினே சீர்நிலை எய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி - யா. வி. 14. மேற். என்றார் அவிநயனார். நேரும் நிரையும் சீராய் வருதலும் சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும் - யா. வி. 14. மேற். என்றார் மயேச்சுரர். (கலி விருத்தம்) தளையொடு சீர்தபின் தக்க ஆவிகள் அளபெடா ; எடுப்பினும் அலகு காரியம் விளைவில என்பவர் மீட்டும் நாலசை உளசில சீருமென் றுரைப்ப தென்கொலோ! இதன் கருத்து, (நேரிசை வெண்பா) தாஅய்த்தாஅய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார் போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப்போஒய் நிற்குமோ நீடு நெடும்புதவம் தானணைந்து பொற்குமோ என்னாது போந்து - யா. வி. 60. மேற். இதனுள், மேற்சொன்ன பெற்றி அன்றியேயும் நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அற்றன்று; (குறள் வெண்பா) நிலம்பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோள் கலம்போஒய்ப்போஒய்க் கெளவை தரும் - யா. வி. 4. 93. மேற். இத்தொடக்கத்தனவற்றுள், தளையும் சீரும் வண்ணமும் கெட நில்லாமையின் அளபெடா ; அளபெடுப்பினும், அலகு காரியம் பெறா என்று மூவசைச்சீராக வைப்பராகலானும், (குறள் வெண்பா) காஅரி கொண்டான் கதச்சே மதனழித்தான் ஆஅழி ஏந்தல் அவன் இத்தொடக்கத்தனவற்றுள். மாத்திரை வகையாற் றளைதப கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் என்று தளை கெடாமற்பொருட்டு அளபெடுத்து வெண்டளை ஆக்குவர் ஆகலானும், இவ்வாறே தாஅய்த்தாஅய் என்ற இத்தொடக்கத்தனவற்றுள்ளும் சீரும் தளையும் கெட்டு நில்லா ஆகலின், ஓர் அளபெடையை அளபெடாது என்று நெட் டெழுத்தே போலக் கொண்டு அலகிட மூவசைச் சீரேயாம். நாலசைச்சீர் கொள்வான் புகினும், உதாரண வாய்ப்பாட்டான் ஓசை யூட்டி வண்ணம் அறுக்கும்பொழுது சான்றோர் கோவை யுள் வெண்பாப் போல ஓசை உண்ணாது, செப்பலோசை வழுவும் என்பது. இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும் உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே -யா. கா. 37. மேற். என்றார் காக்கைபாடினியார். சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும் என்றார் மயேச்சுரர். உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம் சீர்தப வரினும் ஒற்றியற் றாகும் என்றார் அவிநயனார். (குறளடி வஞ்சிப்பா) கோவாமுத்திற் கண்பனிகால வழுத்தாண்மார்வ பழுதறவஞ்சி வாராவாரிருள் ஏரிழிந்தழிய வளைவாய் தேய்ந்தனள் களைவருகாதலின் ஆனாவழகி தானனிபுலம்பி அழல்சேர்லமெழுகிற் கலுழ்வனள்கவல வாராவிடினவள் ஆருயிரிழத்தலின் பெரியவரியவள் பருவரல்பெருகலின் இனியே, அல்ல குறிப்பினும் ஆகுவ களவியல் வேண்டும் கடுப்பொடு மடுத்தே முன்சொன்னதே அன்றி இவ்விருசீர் அடி வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் பதினாறும் வந்தன. பிறவெனின், அது வஞ்சிப்பா அன்று; அகவல் ஓசைத்தாய் நாற்சீர் அடியால் வந்தமையால், இயற்சீரால் வந்த நேரிசை ஆசிரியப்பாவாகக் கொள்ள நாலசைச்சீர் அன்றாம். தனிச்சொல் ஆசிரியத்துள்ளும் வரும் எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) 1உமணர்சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா டின்னா என்றி ராயின், இனியவோ பெரும ! தமியேற்கு மனையே? - குறுந்தொகை, 124. ‘ïj‹ Kj‰f© ehyir¢Ó® tªjj‹nwh? எனின், அஃது ஐஞ்சீர் அடியாக வைப்பினும், குற்றுகரத்தை ஒற்றாகக் கொண்டு நாற்சீர் அடியாக வைப்பினும் நாலசைச்சீர் அன்றாம். இனியிரந்து வாங்கின் என்னும் அடியினும் மூன்றாஞ் சீர்க்கண் நாலசைச்சீர் வந்தது எனினும், ஆண்டுக் குற்றுகரத்தை ஒற்றாகக் கொள்ளவும். அளபெடையை அலகு காரியம் பெறாது என்று விலக்கவும், ஐஞ்சீர் அடி ஆக்கவும் நாலசைச்சீர் அன்றாம். (குறட்டாழிசை) 1கோடன்மன்னு பூங்கானக் குயில்கண்மன்னு நீள்சோலை நாடவரு *நம்மை நயந்து என இதனுள்ளும் நாலசைச்சீர் வந்தன எனின், அதனை முதலடி அறுசீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அலகிட்டு அந்தடி குறைந்து வந்த தாழிசைக்குறள் என்று வழங்க நாலசைச்சீர் அன்றாம். (குறட்டாழிசை) காம்புதேம்பா வெற்பிற் கல்லையுள் வாழ்கின்ற பாம்பிற் கடிய புலி இதனுள் முதலடிக்கண் நாலசைச்சீர் வந்தது பிற, எனின், முதலடியை ஐஞ்சீர் அடியாகக் கொண்டு, ஈற்றடி குறைந்த தாழிசைக் குறளாகக் கொள்ள, நாலசைச்சீர் அன்றாம். நாலசைச்சீர் வேண்டும் ஒருசார் ஆசிரியரும், வெண்பாவினுள் அளபெழுந் தால் அன்றி நாலசைச்சீர் வாரா என்று இத்தொடக்கத்தன வற்றையும் தாழிசைக்குறளேயாகக் கொள்வர் எனக் கொள்க. (வெளி விருத்தம்) கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்கோயான் எண்டிசையும் தோகை இருந்தாவி ஏங்கினவால் - என்செய்கோயான்! - யா. கா. 6. மேற். என்னும் வெளி விருத்தத்துள் என்செய்கோயான் என்னு மதனை வகையுளி சேர்த்தவும் ஆகாதாய் நாலசைச்சீர் வந்தது பிற எனின், அதனைக் குறளடியால் வந்த தனிச்சொல் எனக் கொள்க. கலியுள், சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே! - கலித்தொகை 39: 12. என அளவடியால் தனிச்சொல் வந்தது. அதற்கு இலக்கணம், (இன்னிசை வெண்பா) வெண்சீர் வரைவின்றிச் சென்று விரவினும் தன்பால் மிகுதி இனமெல்லாம் வஞ்சி உரிச்சீர் விரவுதல் வெண்பாவிற் கில்லை தனிச்சொல் அசைச்சீர் அடி என்பதனை விரித்து உரைத்துக்கொள்க. இவ்வகையே நாலசைச்சீர் வேண்டாமே நடாத்தும் உபாயம் கண்டாராயினும், இவ்வாறு உரைப்பின் உணர் வினார்க்கு அன்றி அறிய ஒண்ணாது ஆதலானும், பழைய நூல் வழி நில்லாது தமது மதம்பிடித்துச் சொன்னார் என்னும் பாதுகாவலானும். (குறள் வெண்பா) உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு - திருக்குறள் 425. என்ப ஆகலானும், காக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மாப்பெரும் புலவர்தம் மதம்பற்றி நாலசைச்சீர் விரித்தோதினார் இந்நூலுடையார் எனக் கொள்க. (நேரிசை வெண்பா) நேர்பும் நிரைபசையும் நேராதே நாலசைச்சீர் சேரும் சிறிதென்று செப்பாதே - பாரின்மேல் தென்றமிழ்நூல் யாப்புரைத்தான் சிந்தைபோல் நுண்ணிதே இன்றமிழ்போல் நல்லாள் இடை இனி, நாலசையும், பத்து இயற்சீரும், எட்டு ஆசிரிய உரிச்சீரும், நான்கு வெண்பா உரிச்சீரும், அறுபது வஞ்சி உரிச்சீரும் ஆமாறு சொல்லுதும். எழுத்தினால் ஆக்கப்படும் அசை நான்கு வகைப்படும். நேரசையும் நிரையசையும், நேர்பு அசையும், நிரைபு அசையும் என. என்னை? நேரே நிரையே நேர்பே நிரைபென ஈரிரண் டென்ப அசையின் பெயரே - யா. வி. 5. மேற். என்றாராகலின். அவற்றுள், நேரசை நான்கு வகைப்படும் : தனிநெடிலும், தனிக்குறிலும், நெட்டெழுத்தும், குற்றொற்றும் என. என்னை? தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை என்ப - யா. வி. 8. மேற். (நற்றத்தம்) என்பவாகலின். அதற்கு உதாரணம், கா ரி, சேந் தன் என வரும். நிரையசை நான்கு வகைப்படும்: குறில் இணையும், குறில் நெடிலும், குறில் இணை ஒற்றும், குறில் நெடில் ஒற்றும் என. என்னை? குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நிரையசை என்ப - யா. வி. 8. மேற். (நற்றத்தம்) என்பவாகலின். அதற்கு உதாரணம், பல, பலா, பலம், கிழான் என வரும். நேர்பசை, நிரைபசை ஆமாறு சொல்லுதும்: நேர் முதலாகிய குற்றிய லுகரம் நேர்பு அசையாம் ; நிரை முதலாகிய குற்றியலுகரம் நிரைபு அசையாம். என்னை? என்னை? நேர்முத லாகிய குற்றிய லுகரம் நேர்பென மொழிப ; நிரைமுதல் நிரைபே என்பவாகலின். நேர்பு அசைக்கு உதாரணம், கோடு, தோன்று, குன்று என வரும். நிரைபு அசைக்கு உதாரணம், மரபு, மயங்கு, மலாடு, மலாட்டு என வரும். நேர் முதலாகிய முற்றியலுகரமும் நிரை முதலாகிய முற்றியலுகரமும் நேர்பசையும் நிரைபசையுமாம். முற்றிய லுகரம் வரினுமவை பெயரே என்பவாகலின். முற்றியலுகரமாவது, மெல்லெழுத்தும் இடையெழுத் தும் சார்ந்து வரும் உகரம். முற்றியலுகர நேர்பசைக்கு உதாரணம், காணு, வேணு, மின்னு. மண்ணு என வரும். முற்றியலுகர நிரைபசைக்கு உதாரணம், உருமு, அரவு, விரவு, செலவு என வரும். நேர் முதலாகிய இரு வகை உகரமும் ஒற்று அடுப்பினும் நேர் பசையாகும். நிரை முதலாகிய இருவகை உகரமும் ஒற்று அடுப்பினும் நிரைபசையாகும். என்னை? குற்றிய லுகரம் முற்றிய லுகரம் ஒற்றொடு தோன்றற் குரிய வாகும் என்பவாகலின். அவற்றிற்கு உதாரணம்: சேற்றுக்கால், ஆட்டுக்கால், எனவும், களிற்றுத்தாள், வெளிற்றுப்பனை எனவும் இவை குற்றியலுகரம் ஒற்றொடு வந்த நேர்பசை நிரைபசைகள். மின்னுப்பூண், மண்ணுச்சாந்து எனவும், உருமுத்தீ, வெருவுப் பாம்பு, விரவுப்பூண், விழவுக்களம் எனவும் இவை முற்றியலுகரம் ஒற்றொடு வந்த நேர்பசை நிரைபசைகள். (கட்டளைக் கலித்துறை) குறிலும் நெடிலும் குறிலிணை தானும் குறில்நெடிலும் நெறிநின் றுயிர்ப்பினும் நேர்ந்தொற் றடுப்பினும் நேர்நிரையென் றறி; முந்தை நேர்நிரை ஐந்தீ ருகரம் அடுத்து வந்தால் நெறிநுண் கருங்குழல் ! நேர்பும் நிரைபும்; ஒற்றோடு மற்றே இதனை விரித்து உரைத்துக் கொள்க. நேரோ ரலகு ; நிரையிரண் டலகு; நேர்புமூன் றலகு; நிரைபுநான் கலகென் றோதினர் புலவர் உணரு மாறே - யா. வி. 5. மேற். (அவிநயம்) நேரசையும் நிரையசையும் இயல் அசை எனப்படும்; நேர்பசையும் நிரைபசையும் உரியசை எனப்படும். என்னை? முதலிரண் டியலசை; ஏனைய உரியசை என்பவாகலின். அவ்வசை இரண்டு கூடியும் சீராம் ; மூன்று கூடியும் சீராம். என்னை? ஈரசை கொண்டது சீரெனப் படுமே; மூவசை இறத்தல் இல்லென மொழிப என்பவாகலின். ஆகச் சீர் இரண்டு வகைப்படும்; இயற்சீரும் உரிச்சீரும் என. அவற்றுள், இயற்சீர் பத்து வகைப்படும் ; 1நேரசையும் நிரையசையும் மயங்கின நான்கு சீரும், 2நேர்பு நிரைபு *Kjyhf நேரசை இறுதியாகிய இரண்டு சீரும், 3நேரசைப் பின்னும் நிரையசைப் பின்னும் நேர்பசையும் நிரைபசையும் வந்து ஆகிய நான்கு சீரும் என. என்னை? இயலசை மயக்கம் இயற்சீர் ஆகும்; உரியசைப் பின்னர் நேரியல் காலையும் இயற்சீர்ப் பால; இயலசை இறுதி வரூஉம் உரியசை இயற்சீர்ப் பால ஆகும் என்ப என்றாராகலின். அவற்றிற்கு உதாரணம்: தேமா, புளிமா, பாதிரி, கணவிரி எனவும், போதுபூ, விறகுதீ, எனவும், போரேறு, பூமருது, கடியாறு, மழகளிறு எனவும் கொள்க. (கட்டளைக் கலித்துறை) நேரும் நிரையும் மயங்கிய நான்கென்ப ; நேரிறுவாய் நேர்பும் நிரைபும் முதலியற் சீர்களும், நேர்நிரைப்பின் நேர்பும் நிரைபும் நிலவிய நான்கும் நிரைவளைத்தோள் நேர்நுண் குழல்மட வாய் ! இயற் சீரென்று நேர்ந்தனரே இதனை விரித்து உரைத்துக் கொள்க. இனி, உரிச்சீர் மூன்று வகைப்படும்: ஆசிரிய உரிச்சீரும் வெண்பா உரிச்சீரும், வஞ்சி உரிச்சீரும் என. என்னை? ஆசிரிய உரிச்சீர் வெண்பா உரிச்சீர் வஞ்சியொடு மூன்றே உரிச்சீர்த் தோற்றம் என்பவாகலின். அவற்றுள், ஆசிரிய உரிச்சீர் எட்டு வகைப்படும்: 1நேர்பும், நிரைபும் மயங்கிய நான்கும், 2நேர்பும் நிரைபும் நிரை இறுதி யாகிய இரண்டும், 3தலைநிலை அளபெடைப்பின் நிரை வந்த தும், 4இறுதி நிலை அளபெடைப்பின் நிரை வந்ததும் என. என்னை? உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்; நிரையிறு காலையும் அதனோ ரற்றே எனச்சொன்னாராகலின். அவற்றிற்கு உதராணம்: வீடுபேறு, மாறுகுருகு, வரகுசோறு, முருட்டுமருது எனவும், நீடுகொடி, குழறுபுலி எனவும், தூஉமணி, கெழூஉமணி எனவும் கொள்க. (கட்டளைக் கலித்துறை) நேர்பும் நிரைபும் மயங்கிய நான்கும் நிரையிறுவாய் நேர்பும் நிரைபும் முதலிய சீர்களும் நேர்நிரையாய்ச் சேரும் அளபெடைப் பின்னிரை சேரிரு சீரொடெட்டும் ஆரும் அறிவுற ஓதினர் ஆசிரி யக்கவையே என இதனை விரித்து உரைத்துக் கொள்க. இனி, வெண்பா உரிச்சீர் நான்கு வகைப்படும்: 5நேர் நேரும் நிரைநேரும் ஆகிய இரண்டுசீர் முதற்கண்ணும் முறையானே நேரும் நிரையும் புணர்ப்ப அவை தோன்றும். என்னை? நேர்நேர் நிரைநேர் ஆயிரு சீரும் நேர்முத லாகவும் நிரைமுத லாகவும் நான்கென மொழிப வெண்பா உரிச்சீர் என்பவாகலின். வரலாறு: பூவாமா, பூவிரிமா, விரிபூமா, நறுவடிமா எனக் கொள்க. மாசெல்வாய், மாபடுவாய், புலிசெல்வாய், புலிபடுவாய் எனினும் ஒக்கும். இனி, வஞ்சி உரிச்சீர் ஆவன, வெண்பா உரிச்சீர் அல்லாத மூவசைச் சீர் அறுபதும் எனக் கொள்க. என்னை? வெண்பா உரிச்சீர் அல்லா மூவசை எல்லாம் வஞ்சி உரிச்சீர் ஆகும் என்பவாகலின். அவற்றிற்கு உதாரணம்: (இன்னிசை வெண்பா) மாபுலி பாம்பு களிறென் றிவைமுதலாச் சேல்படு போகு வழங்கென் றிவைநடுவா வாய்சுரம் காடு கடறீறா வைத்தாரே பாசுரம்வஞ் சிக்குரிச் சீர் இதன் வழியே உறழ்ந்தால், அறுபத்து நான்கு மூவசைச் சீராம். (செல் என்பது, முதல் நீண்டது) அவற்றுள் நான்கு வெண்பா உரிச்சீரும் ஒழித்து, அல்லாத அறுபதும் வஞ்சி உரிச்சீர்க்கு உதாரணமாம் எனக் கொள்க. அவை சொல்லுமாறு: 1மாசெல்வாய், 2மாபடுவாய், மாபோகுவாய், மாவழங்குவாய்; 3புலிசெல்வாய், 4புலிபடுவாய், புலிபோகுவாய், புலிவழங்குவாய்; பாம்புசெல்வாய், பாம்புபடுவாய், பாம்புபோகுவாய், பாம்புவழங்குவாய்; களிறுசெல்வாய், களிறுபடுவாய், களிறுபோகுவாய், களிறுவழங்குவாய்; என இவை நேர் ஈறாக வந்த பதினாறும், மாசெல்சுரம், மாபடுசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம்; புலிசெல்சுரம், புலிபடுசுரம், புலிபோகுசுரம், புலிவழங்குசுரம்; பாம்புசெல்சுரம், பாம்புபடுசுரம், பாம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம்; களிறுசெல்சுரம், களிறுபடுசுரம், களிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம்; என இவை நேர் ஈறாக வந்த பதினாறும், மாசெல்சுரம், மாபடுசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம்; புலிசெல்சுரம், புலிபடுசுரம், புலிபோகுசுரம், புலிவழங்குசுரம்; பாம்புசெல்சுரம், பாம்புபடுசுரம், பாம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம்; களிறுசெல்சுரம், களிறுபடுசுரம், களிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம்; என இவை நிரையீறாகிய பதினாறும், மாசெல்காடு, மாபடுகாடு, மாபோகுகாடு, மாவழங்குகாடு; புலிசெல்காடு, புலிபடுகாடு, புலிபோகுகாடு, புலிவழங்குகாடு; பாம்புசெல்காடு, பாம்புபடுகாடு, பாம்புபோகுகாடு, பாம்புவழங்குகாடு; களிறுசெல்காடு, களிறுபடுகாடு, களிறுபோகுகாடு, களிறுவழங்குகாடு. என இவை நேர்பு ஈறாகிய பதினாறும், மாசெல்கடறு, மாபடுகடறு, மாபோகுகடறு, மாவழங்குகடறு; புலிசெல்கடறு, புலிபடுகடறு, புலிபோகுகடறு, புலிவழங்குகடறு பாம்புசெல்கடறு, பாம்புபடுகடறு, பாம்புபோகுகடறு, பாம்புவழங்குகடறு; களிறுசெல்கடறு, களிறுபடுகறு, களிறுபோகுகடறு, களிறுவழங்குகடறு. என இவை நிரைபு ஈறாகிய பதினாறும், எனக் கொள்க. இவற்றுள், மாசெல்வாய், மாபடுவாய், புலிசெல்வாய், புலிபடு வாய் என நான்கும் வெண்பா உரிச்சீர் ; ஒழிந்த அறுபதும் வஞ்சி உரிச்சீர். (கட்டளைக் கலித்துறை) நேர்நிரை நேர்பு நிரைபுமுப் பாலும் நிரைத்துறழ்ந்தாற் சீர்நிலை முப்பத் திரண்டின் இரட்டியச் சீரிலுள்ளார் நேர்நிரை யாதி இடைகடை நேர்வந்த நான்கும் வெள்ளைக் காரியர் ஓதினர் அல்லன வஞ்சிக் கறுபதுமே இதனை விரித்து உரைத்துக் கொள்க. இயற்சீர் முதலாகியவற்றிற்கு இலக்கியம் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) 1குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென 2மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது 1மருள்பிடி திரிதரும் சோலை 2அருளான் ஆகுதல் ஆயிழை ! கொடிதே! - யா. வி. 29. மேற். இது பத்து இயற்சீரும் வந்த பாட்டு. (நேரிசை ஆசிரியப்பா) 3வீங்குபிணி விசித்த 4விளங்குபுனை நெடுந்தேர் 5காம்புநீடு 6மயங்குகாட்டுப் 7பாம்பு பெரிது 8வழங்கு தொறோங்கு வயங்கு கலிமா நிரைபு நிரைபு வலவன், வாம்பரி கடவி வந்தோன் 9கெழூஉமணி அகலம் 10தழூஉமதி விரைந்தே - யா. வி. 94. மேற். இஃது எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்த பாட்டு. நன்மாறா வருவாயோ நறுவடிமா பூவுதிர இஃது நான்கு வெண்பா உரிச்சீரும் வந்த பாட்டு. (இணைக்குறள் ஆசிரியப்பா) நலஞ்செலத் தொலைந்த புலம்பொடு பழகி இன்னா வாயின அன்னோ தோழி! மாசெல்வாய் பார்தோயப் பரந்துமூழ்கி மாபடுவாய் நீர்சுமந்த நிரைசெலவினாள் 5 புலிசெல்வாய் இடித்தோவா தடுத்துரறிக் புலிபடுவாய் கடுஞ்சினத்த களிறுபோல பாம்புசெல்வாய் வீண்டுகொண்மூ வியந்தேறி களிறுசெல்வாய் இலங்குபுநீர் பொழிதலின் பாம்புபடுவாய் மாண்டுசொரியும் திரளருவி 10. களிறுபடுவாய் வரன்று மணிநீள் வரைத்ததும்பவும் மாபோகுவாய் தேனாறுபூந் தெரிகுவளைமிசைத் புலிபோகுவாய் திசைபோகுகால் உளர்ந்துயிர்த்தலிற் பாம்புபோகுவாய் குண்டுநீடுநீர்க் குவளைத்தண்சுனை களிறுபோகுவாய் குறித்துக்கூடுவோர் நெறிமயங்கவும் 15. மாவழங்குவாய் வான்வழங்குவாள் வளரிளம்பிறை புலிவழங்குவாய் வரைத்தயங்குநீர் கரைவிலங்கலின் பாம்புவழங்குவாய் நின்றுதயங்குநீள் நிலவுதலின் களிறுவழங்குவாய் நெடிதுநெடிதுசென் றிராப் பெருகவும் மாசெல்சுரம் 1தேமாநறும் பழஞ்சிந்தியும் 20. புலி செல்சுரம் திரளாசினிக் கனிமாந்தியும் பாம்புசெல்சுரம் 2சூழ்ந்துமைம்மயிர்க் காருகம் களிறுசெல்சுரம் சுழன்றுபாய்வன விளையாடவும், மாபடுசுரம் நீள்கருமுக நிரைமுசுக்கலை புலிபடுசுரம் நிரைச்சுளைப்பழம் பலவேறிக் 25. பாம்புபடுசுரம் கோடுகுலைப்பன உகந்துகனிக் களிறுபடுசுரம் குடைந்துமுழங்குவ குரல்பயிற்றவும் மாபோகுசுரம் தாழ்கூடுசினைத் தண்சண்பகம் புலிபோகுசுரம் தகைகூடுநிறப் போதவிழ்தலின் பாம்புபோகுசுரம் வண்டுகூடுவன வரித்தும்பி 30. களிறுபோகுசுரம் மணந்துசென்றுபல குரன்மிழற்றவும் மாவழங்குசுரம் போர்தயங்குவன மதவேழம் புலிவழங்குசுரம் பொலிந்தியற்றுவன மத்தம் சொரியவும் பாம்புவழங்குசுரம் கோடுதயங்குவன குடர்மூழ்கிக் களிறுவழங்குசுரம் குழைந்துநிரந்துநனி பரப்பவும் 35. மாசெல்காடு nfhlšÚL* கொழு முகையொடு புலிசெல்காடு குடசஞ்சூடும் குறுங்குறவர் பாம்புசெல்காடு சோறுபேணாது பிழிமகிழ்ந்து களிறுசெல்காடு சுழல்புதாங்காது பிணைந்தாடவும் மாபடுகாடு கல்பொருயாறு கடிதெழுதலிற் 40. புலிபடுகாடு கனைதுணைநீடு விடரகன்றுறைக பாம்புபடுகாடு என்றுநினையாது கரைபோகிக் களிறுபடுகாடு கரைந்துதவிராது பிடியலறவும் மாபோகு காடு 3மால்நீடுபோது மகிழ்சிலம்பின் புலிபோகு காடு 4மகிழ்ந்தாடுதோகை மயில் தளர்தலிற் 45. பாம்புபோகு காடு போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம் களிறுபோகுகாடு புரிந்துவாங்குவீங்கு நரம்பிவர்தலின் மாவழங்குகாடு நீர்குடைந்துபாடு மடமங்கையர் புலிவழங்குகாடு நிரையொருங்குநின்று கதுப்புளரித் பாம்புவழங்குகாடு தூசுகளைந்துவேறு துகில்திருத்தித் 50. களிறுவழங்குகாடு 1துளங்கு பொலிந்துதோன்று கலனணியவும் மாசெல்கடறு வேய்கண்ணுடைந்து முத்துதிரவும் புலிசெல்கடறு வெதிர்கண்ணுடைந்து நெல்லுதிரவும் பாம்புசெல்கடறு காடுதீமணந்து பொன்னிமைப்பவும் களிறுசெல்கடறு கலந்துதேன்பிளந்து நெய்யொழுகவும் 55. மாபடுகடறு *Nœbfhoãz§F சுடர்வேங்கைமிசைத் புலிபடுகடறு 2துணர்க்கறிமிளகு வளமுக்கிச் பாம்புபடுகடறு 3சென்றுசுவையுணர்ந்து சிறுகடுவன் களிறுபடுகடறு சிரித்துமுகஞ்சிவந்து மெய்மறப்பவும் மாபோகுகடறு 4விண்டோடுவிளங்கு வெண்மணல்விராய் 60. புலிபோகுகடறு விராய்நீண்டுமயங்கு செங்காந்தளொடு பாம்புபோகுகடறு மாறுமாறுதொடர்ந்து மலைக்கொடிச்சியர் களிறுளபோகுகடறு மலிவுதோறும் மகிழ்ந்து தழைபுனையவும் மாவழங்குகடறு 5தேன்வழங்குமுழங்கு திகழ்நாற் புலிவழங்குகடறு 6றிசைமருண்டுவெருண்டு நிலமாந்தர் 65. பாம்புவழங்குகடறு நீடுசுன்றுமுழன்று நெறியுணரா களிறுவழங்குகடறு நினைபுநினைபுபரிபு 7புலரவும்கூடவும் சூருடையனபல சுனைமலர்ந்து சுழல்வணங்குவன சுடர்க்குவளை கண்டோர்கண்டோர் மகிழ்ந்துமாறவும் 70 களித்துக்களியோ டுவந்து பிளிற்றவும் இன்னனபிறவும் இன்னுயிர்மருள உருவினுந்தொழிலினும் வெருவரத்தோன்றி அரும்புல கவினிய மணிமலைக் கருங்கல் நாடனொடு கலவா வூங்கே இஃது அறுபது வஞ்சி உரிச்சீரும் வந்த பாட்டு, இப் பாட்டினுள் முதலடி இரண்டும் ஆசிரிய அடி. அல்லன வற்றை இருசீர் அடியாக அலகிட்டு அடிதோறும் முதற் கண்ணே மூவசைச்சீர் அறுபத்து நான்கும் வந்தவாறு கண்டுகொள்க. வஞ்சியுரிச்சீர் அறுபதும் வெண்பாவிற் புகப்பெறா; ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் மாசெல்சுரம், புலி செல்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு, மாசெல்கடறு, புலிசெல் கடறு, பாம்புசெல்வாய், பாம்புபடுவாய், களிறு செல்வாய், களிறுபடுவாய் என்னும் பத்து வஞ்சியுரிச்சீரும் புகப் பெறும் எனக் கொள்க. என்னை? (நேரிசை வெண்பா) இருநான் ககவற்சீர் ஈரைந் தியற்சீர் ஒருநான்கு வெள்ளைக் குரிச்சீர் - ஒருவாத மூவிருவான் வஞ்சிக் கவற்றுட் கலியகவற் பாவிரவற் பாலனவும் பத்து எனவும், மாசெல் புலிசெல் சுரங்காடு வான்கடறு பாசிழையாய்! பாம்பு களிற்றின்பின் - பேசிய செல்வாய் படுவாய் சிவணிய சீரிவையே பல்லோர் பயின்றுரைக்கும் பத்து எனவும், (இன்னிசை வெண்பா) நேர்நேர் நிரைநேர்ப்பின் நேரொழித்த ஈரசையும் சீரேற் றவற்றாதி நேர்பும் நிரைபசையும் ஈரொன்றிற் சீரொன்றாய் இன்சீராம் வஞ்சிச்சீர் ஆசிரியத் துட்புகும் பத்து எனவும், (குறள் வெண்பா) நிரைபாதி நேர்பாதி அந்தாதி நேர்நேர் நிரைநேரிற் சேர்ந்தவும் பத்து எனவும் வரும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. ஒழிந்த 1ஐம்பது வஞ்சியுரிச்சீரும் அகவலுட் புகப்பெறா எனக் கொள்க; கலியுள்ளும், அவ்வாறே எனக் கொள்க. வஞ்சி இறுதியுள்ளும் ஒத்தாழிசைக் கலியுள்ளும் தேமா, புளிமா என்னும் இரண்டு இயற்சீரும் புகப்பெறா ஒழிந்த சீர் எல்லாச் செய்யுளுள்ளும் புகப்பெறும். இனி, அசைச்சீராய் நின்றவிடத்துத் தளை வழங்கும் பொழுது நேரசைச்சீருக்கு மற்றும் ஓரலகு கொடுத்து நேர்நேர் ஆகவும், நிரையசைச்சீருக்கு மற்றும் ஓரலகு கொடுத்து நிரை நேர் ஆகவும், நேர்பு அசைச்சீருள் ஓரலகு களைந்து தேமா ஆகவும், நிரைபு அசைச் சீருள் ஓரலகு களைந்து புளிமா ஆகவும் வைப்பர் எனக் கொள்க. என்னை? உரியசைச் சீர்ப்பின் உகரம் நேராய்த் திரியும் *jisÆy சேர்த லானே என்றார் நல்லாறனார். சீரா கிடனும் உரியசை உடைய நேரீற் றியற்சீர் அவ்வயி னான என்றார் நற்றத்தனார். இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான - தொ. பொ. 340. என்றார் தொல்காப்பியனார். (குறள் வெண்பா) நேர்நேராம், நேரசையும் நேர்பும்; நிரைநேராம் 1ஏனை இரண்டும் எனல் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா - தொல். பொ. 367. என்றும் ; போதுபூ, போரேறு, பூமருது இவைகளைப் பாதிரி யாகவும்; விறகுதீ, கடியாறு, மழகளிறு, இவைகளைக் கண விரியாகவும்; வெண்சீரின் ஈற்றசை நிரைபசையாகவும் இயற்றித் தொல்காப்பியனாரும் நற்றத்தனாரும் முதலாகிய ஆசிரியர் சொன்ன மதமெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுக் கொள்க; ஈண்டு உரைப்பின் பெருகும். ஒழிந்தன எல்லாம் இந்நூலோடு ஒக்கும். (குறள் வெண்பா) போதுபூப் போரேறு பூமருதென் றிம்மூன்றும் பாதிரியா வைக்கப் படும் எனவும், ஏனைய மூன்றும் கணவிரியாம் வெண்சீரின் ஈறு நிரையாம் எனல் எனவும் இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. இனி, ஒரு சாரார் சொல்லும் கடாவும் விடையும் : (நேரிசை வெண்பா) குற்றுகரம் ஒற்றாகக் கொள்ளாதே வெள்ளையான் மற்றும் தளைவிரவும் மற்றதனால் - குற்றுகரம் ஐந்தா றசைச்சீர் அருகிவரும் வஞ்சிக்கண் என்றாற்றான் என்னாம் இழுக்கு? இது கடா. அறுத்திசைக்கும் செய்யுட்பால் அன்றுள்ளான் றன்பேர் செறிப்பிற் செயிர்வாக்காம் என்னும் - குறிப்பினாற் கேடுரைத்தார் கெட்டவரோ பற்றார்க்கும் கேடல்லர் நாடறியும் என்பதனால் நன்கு இது விடை. இனி, ஐந்து வகைப்பட்ட பதினேழ் நிலத்தவாய எழுபது தளையிற்றீர்ந்த சிறப்புடை 1நாற்சீரடி அறுநூற்று இருபத் தைந்தும் ஆவன சொல்லப்படும். ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்த எழுபது *jisÆ‹ வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே - தொல். பொ. 362. என்றாராகலின். 2ஐவகை அடியும் பதினேழ் நிலமும் மேற்சொல்லப் பட்டன. (யா. வி. 49) எழுபது தளை வழுவாவன: ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளை 3தட்பப் பதினேழும், கலித்தளை தட்பப் பதினேழுமாய், ஆசிரியப்பாவிற்கு முப்பத்து நான்கு தளை வழுவாம். என்னை? ஐவகை அடியும் அறிவுறத் தெரியின் மெய்வகை அமைந்த பதினேழ் நிலமே ஆசிரிய மருங்கின் ஐந்தும் உரிமையிற் சீரிய வெள்ளைக் கலித்தளை வரினே 1நாலெண் வழுவோ டிரண்டென மொழிப என்றாராகலின். வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்தும், கலித்தளை தட்பப் பத்துமாய் வெண்பாவிற்கு இருபது தளை வழுவாம். என்னை? சிந்தோ டளவு நெடிலீ றொழிய வந்த உரிமை ஈரைந்து நிலத்தும் மென்றளை கலியொடு 2தட்டன வெள்ளைக் கொன்றிய தளைவழு இருப தென்ப என்றாராகலின். மென்றளை என்பது ஆசிரியத்தளை. கலி நிலவும் எட்டினுள்ளும் வெண்டளை தட்ப எட்டும், ஆசிரியத் தளை தட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறு தளை வழுவாம். என்னை? அளவிரு நிலத்தொடு நெடில்கழி நெடிலென விரவும் இருநான் கெய்திய கலியினுள் மரபே வெள்ளை ஆசிரி யத்தளை வரினும் வழுவகை ஈரெட் டாகும் என்றாராகலின். (குறள் வெண்பா) மூன்றிற்கும் சொன்ன முறையால் தொகுத்துணரத் தோன்றும் வழுவெழுப தாம் இவை 3எழுபது தளை வழுவாவன. இனி, அறுநூற்று இருபத்தைந்து அடியும் காட்டுமிடத்துச் சீர் வரையறுக்கின்றுழிக் குற்றுகர இகரங்களை ஒற்றாகக் கொண்டு, முற்றுகர இகரங்களை எழுத்தாகக் கொண்டு வழங்கப்படும். (நேரிசை வெண்பா) குற்றுகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும் முற்றுகர முற்றசீ ராமென்ப-தெற்றெனக் குற்றிகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும் முற்றிகர முற்றசீ ராம் என்றாராகலின். ஆசிரியப்பாவிற்கு உரிய இருநூற்று அறுபத்தோரடியும் ஆமாறு சொல்லுமிடத்து, ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் பதினாறாம்; இயற்சீர் பத்தும், தன் சீர் ஆறும் என. அவற்றுள் தன் சீர் ஆறும் தளை வகுக்கப்படாமையின் ஆறும் கொள்ளப்படா. என்னை? (நேரிசை வெண்பா) இயற்சீர் ஒருபதும் தன்சீரோர் ஆறும் இயற்றுப ஆசிரி யத்தென் - றியற்றுங்கால் தன்சீர் வருமேல் தளைநோக்கார் மற்றொழிந்த இன்சீராற் கொள்வர் தளை என்பவாகலின். இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து நான்கு நிலைமையவாம், இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என. என்னை? (குறள் வெண்பா) திரண்டியற்சீர் பத்திற்கும் நான்காம் நிலைமை இரண்டாதி ஐந்தீ றெழுத்து என்பாவகலின். அவற்றுள், ஈரெழுத்துச் சீராவன, நான்காம். அவை யாவன, போதுபூ, போரேறு, பாதிரி, தேமா என இவை. என்னை? (குறள் வெண்பா) ஈரெழுத்துச் சீராவ போதுபூப் போரேறு பாதிரி தேமா இவை என்பவாகலின். அவற்றுள், தேமாவும் பாதிரியும் சிறுமை. ஐந்தெழுத் தடியினின்றும் பெருமை பதினேழெழுத்தடிகாறும் உரிமை யாய்ப் பதின் மூன்றடியும் ஒரோ ஒரு சீர் பெற இரண்டுமாய் இருபத்தாறாம். என்னை? (குறள் வெண்பா) தேமாவும் பாதிரியும் *சிற்றெல்லை ஐந்தெழுத்தா ஏறும் பதினே ழெழுத்து எனவும், ஒருசீர் பதின்மூன் றடிக்குரித் தாக இருசீரு மாயிருபத் தாறு எனவும் சொன்னாராகலின். இனி, போதுபூ, போரேறு என்னும் இரண்டு ஈரெழுத் துச்சீரும் ஆறெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்பு ஒரோ ஒன்று பன்னிரண்டிற்கும் உரியவாக, இரண்டுமாக இருபத்து நான்கு அடியாம். என்னை? (குறள் வெண்பா) ஆறெழுத் தாதி பதினேழு காறுயரும் போதுபூப் போரே றிவை ஒன்றிற்குப் பன்னிரண் டாக இருசீர்க்கும் வந்த இருபத்து நான்கு என்றாராகலின். இவ்விருபத்து நான்கும் முன் சொன்ன இருபத்தாறுமாய் ஈரெழுத்துச் சீராம் வழி ஆசிரிய அடித்தொகை ஐம்பது. என்னை? (குறள் வெண்பா) எடுத்துரைத்த ஈரெழுத்துச் சீரினா லாய அடித்தொகை ஐம்ப தெனல் என்பவாகலின். இனி, மூவெழுத்துச் சீராவன, ஏழு சீர். அவையாவன. பாதிரி, புளிமா, விறகுதீ, போதுபூ, போரேறு, பூமருது, கடியாறு என இவை. என்னை? (நேரிசை வெண்பா) பாதிரி இன்புளி மாப்பாய் விறகுதீப் போதுபூப் போரேறு பூமருது - கோதில் கடியா றெனவேழும் மூவெழுத்துச் சீராய் அடியாகும் என்றுரைத்தார் ஆய்ந்து என்பவாகலின். அவற்றுள், போதுபூ, விறகுதீ, கடியாறு என்னும் இம் மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடி காறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற, மூன்றுமாய் முப்பத்தாறாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) போதுபூக் கோதில் விறகுதீப் பூங்கடியா றேழாதி ஈரொன்பான் ஏற ஒரோவொன்றிற் காகுமுப் பன்னீ ரடி என்பவாகலின். இனி பாதிரி, புளிமா, போரேறு, பூமருது என்னும் நான்கு சீரும் ஆறெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத் தடிகாறும் உயர்ந்த பதின்மூன்றடியும் பெற, நான்குமாய் ஐம்பத்திரண்டு அடியாம். என்னை? (குறள் வெண்பா) ஏனை ஒருநான்கும் ஆறாதி ஈரொன்பான் ஏறுதலால் ஐம்பத் திரண்டு என்பவாகலின். மேற்சொன்ன முப்பத்தாறும், இவை ஐம்பத்திரண்டும் தலைப் பெய்ய, மூவெழுத்துச் சீராயவழி, ஆசிரிய அடித் தொகை எண்பத்தெட்டு. என்னை? (குறள் வெண்பா) எடுத்துரைத்த மூவெழுத்துச் சீரினான் ஆய அடித்தொகை எண்பத்தெட் டாம் என்பவாகலின். இனி, நாலெழுத்துச் சீராவன ஐந்து வகைப்படும். ‘mit ahitnah? எனின், கணவிரி, பூமருது, கடியாறு, விறகுதீ, மழகளிறு என இவை? என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) கணவிரி பூமருது கார்க்கடி யாறு விறகுதீ நான்கெழுத்தும் ஆகும் ;-குறைவில் மழகளிறும் அன்ன தகைத்து என்பவாகலின். அவற்றுள், பூமருது ஏழெழுத்தடி முதலாகப் பத் தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியும் பெற பதின்மூன்றேயாம். என்னை? (குறள் வெண்பா) பூமரு தேழாதி பத்தொன்பான் காறுயர ஆகும் அடிபதின்மூன் றாம் என்பவாகலின். ஒழிந்த கணவிரி, கடியாறு, மழகளிறு, விறகுதீ, என்னும் நான்கு சீரும் எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற, நான்கு மாய் நாற்பத்தெட்டு அடியாம். என்னை? (குறள் வெண்பா) ஒழிந்தநான் கெட்டாதி பத்தொன்பான் காறும் மொழிந்த அடிநாற்பத் தெட்டு என்பவாகலின். முன் சொன்ன பூமருது பெற்ற பதின்மூன்றும், இவை நாற்பத்தெட்டும் கூடி நான்கெழுத்துச் சீராய வழி, ஆசிரிய அடித்தொகை அறுபத்தொன்று. என்னை? (குறள் வெண்பா) நாட்டிய நாலெழுத்துச் சீரால் அடித்தொகை கூட்டி அறுபதின்மேல் ஒன்று என்பவாகலின். இனி ஐந்தெழுத்துச் சீராவது மழகளிறு என்பது. அதுதான், ஒன்பது எழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பன்னிரண்டு அடியும் பெறுவது. என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஐந்தெழுத் தாகும் மழகளி றச்சீரால் ஒன்பான் முதலா இருப துயர்த்தெண்ண வந்த அடிபன் னிரண்டு என்பவாகலின். இவை பத்து இயற்சீருள்ளும் ஈரெழுத்துச் சீரால் ஐம்பதும், மூவெழுத்துச் சீரால் எண்பத்தெட்டும், நாலெ ழுத்துச் சீரால் அறுபத்தொன்றும், ஐந்தெழுத்துச் சீரால், பன்னிரண்டும் தலைப்பெய்ய, நான்கு நிலைமையானும் ஆயின ஆசிரிய அடித்தொகை இருநூற்று ஒருபத்தொன்று. என்னை? (குறள் வெண்பா) நான்கு நிலைமைக்கும் வந்த அடித்தொகை நான்கைம்பான் மேலொருபத் தொன்று என்பவாகலின், இனி, ஆசிரியத்துள் அசைச்சீராயினவற்றால் அடியா மாறு: ஓரெழுத்துச் சீரும், இரண்டெழுத்துச் சீரும், மூன்றெ ழுத்துச் சீருமாக வழங்கா எனக்கொள்க. என்னை? (குறள் வெண்பா) ஓரெழுத்தும் ஈரெழுத்தும் மூவெழுத்து மாவழங்கா ஆசிரியத் துள்ளசைச்சீர் ஆம் என்பவாகலின். அவற்றுள், நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தாய வழி, நான்கெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்றிற்குப் பன்னிரண்டு அடியாக, இரண்டிற்கு மாய் இருபத்து நான்காம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நேரசையும் நேர்பசையும் ஓரெழுத் தாயவழி நான்கெழுத் தாதி பதினைந்து காறுயரத் தோன்றுமால் நாலா றடி என்பவாகலின். அவ்விரண்டசையும் தேமா என்னும் சீரேயாகு தலால், இரண்டுமாய் அலகு நிலையாற் பன்னிரண்டேயாகக் கொள்ளப்படும். என்னை? (குறள் வெண்பா) இருபன் னிரண்டென்பர் ஏனையார் ; ஈண்டை ஒருபன் னிரண்டே துணிவு என்பவாகலின். இனி, நேர்பு அசை இரண்டெழுத்தாகக் கொள்ளுமிடத்து ஐந்தெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயரப் பன்னிரண்டு அடியாம். என்னை? (குறள் வெண்பா) நேர்பீ ரெழுந்தாங்கால் ஐந்தாதி ஈரெட்டுச் சேர அடிபன் னிரண்டு என்பவாகலின். நிரையசையும் நிரைபு அசையும் இரண்டெழுத்தாய வழி, ஐந்தெழுத்தடி முதலாகப் பதினேழெழுத்தடிகாறும் உயர்ந்து, ஒரோ ஒன்று பதின்மூன்றாக இரண்டுமாக இருபத்தாறாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நிரையும் நிரைபும் இரண்டெழுத் தாங்காற் புரைதீரைந் தாதி பதினே ழுயர்வாய் இயையும் இருபதின்மேல் ஆறு என்பவாகலின். நிரையசையும் நிரைபு அசையும் புளிமா என்னும் சீரேயாகுதலால் அலகு நிலையாற் பதின் மூன்றேயாகக் கொள்க. என்னை? (குறள் வெண்பா) இருபதின்மேல் ஆறென்பர் ஏனையார் ; ஈண்டை ஒருபதின்மேல் மூன்றே துணிபு என்பவாகலின். இனி நிரைபு அசை மூன்றெழுத்தாயவழி, ஆறெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியாம். என்னை? (நேரிசைச் சிந்தியல் வெண்பா) புரைதீரா பதினெட் டுயர நிரைபு பதின்மூன்றா நேரப் - புரைதீர்ந்த மூவெழுத்தாங் காலை முடிவு என்பவாகலின். நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தும் ஈரெழுத்துமா ஆங்கால், இருபத்து நான்கடி ஆக்கின; நிரை அசையும் நிரைபு அசையும் ஈரெழுத்தும் மூவெழுத்துமா ஆங்கால், இருபத்தாறடி ஆக்கின. இவை எல்லாம் தலைப்பெய்ய, ஆசிரியத்துள் ஐம்பதடி அசைச்சீர் ஆயின. என்னை? (குறள் வெண்பா) ஆசிரி யத்துள் அசைச்சீர் அடித்தொகை நாட்டினர் ஐம்பது நன்கு என்பவாகலின். இவை ஐம்பதும், மேற்சொன்ன இருநூற்று ஒருபத்தோரடி யும் தலைப்பெய்து எண்ண, ஆசிரிய அடித்தொகை இருநூற்று அறுபத்தொன்றாம். என்னை? (குறள் வெண்பா) அரில்தீர் அகவற் கடித்தொகை ஆய்ந்தார் இருநூற் றறுபத்தொன் றென்று என்பவாகலின். இனி, வஞ்சிப்பாக் குறளடி மூன்றும், சிந்தடி மூன்றும், அளவடியுள் முதல் மூன்றும் பெற்ற ஒன்பது நிலமும், முச்சீர்க் கட்டளையாற் பெற்ற முச்சீரடியுமாய் வஞ்சி பத்து நிலமும் பெற, அவையும் ஆசிரிய அடியுள்ளே அடங்கும் என்பது. என்னை? (குறள் வெண்பா) ஆசிரியம் பெற்ற அடிநிலமே வஞ்சிக்கும் ஆகுமாஞ் சீராற் குறைத்து என்பவாகலின். வெண்பாவிற்கு உரிய இருநூற்று முப்பத்திரண்டு அடியும் ஆமாறு சொல்லுமிடத்து, இயற்சீர் பத்தும் தன்சீர் நான்குமாய், வெண்பாவிற்குப் பதினான்கு சீருமாம். என்னை? (குறள் வெண்பா) வெள்ளைக் கியற்சீர் பத்துந்தன் சீரொரு நான்குமாக் கொள்வர் குறித்து என்பவாகலின். அவை நான்கு நிலைமையவாம்: இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என. என்னை? (குறள் வெண்பா) இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தும் திரண்டே எழுத்துச்சீர் ஆம் என்பவாகலின். வெண்பாவிற்குச் சொல்லப்பட்ட பதினான்கு சீருள்ளும் தேமாவும், பாதிரியும், போதுபூவும், போரேறும் என்னும் நான்கு சீரும் ஈரெழுத்துச் சீராம். என்னை? (குறள் வெண்பா) தேமாவே பாதிரி போதுபூப் போரேறென் றாகுமாம் ஈரெழுத்துச் சீர் என்பவாகலின். அவற்றுள், தேமா எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத் தடிகாறும் உயர்ந்த ஒன்பதடியும் பெற்ற ஒன்பதேயாம். என்னை? (குறள் வெண்பா) தேமாவெட் டாதி பதினா றுயர்த்தெண்ண ஆமாகும் ஒன்ப தடி என்பவாகலின். ஒழிந்த பாதிரியும், போதுபூவும், போரேறும் என்றிவை மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்று ஒன்பதாக, இருபத்தேழடியாம். என்னை? (குறள் வெண்பா) கழிந்தமூன் றேழாதி மூவைந் துயர மொழிந்தனர் மூவொன்ப தென்று என்பவாகலின். ஈரெழுத்தாய வழி, நான்கு சீரானும் ஆக்கப்பட்ட வெண்பாவிற்கு அடித்தொகை முப்பத்தாறு. என்னை? (குறள் வெண்பா) ஈரெழுத்து நாற்சீரா வெள்ளைக் கடித்தொகை கூறுவர் முப்பத்தா றென்று என்பவாகலின். வெள்ளைக்கு மூவெழுத்துச் சீராவன, பாதிரியும், மாசெல்வாயும், மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், போரேறும், பூமருதும். விறகு தீயும், கடியாறும் என ஒன்பது சீரும் எனக் கொள்க. என்னை? (நேரிசை வெண்பா) பாதிரியும் மாசெல்வாய் மாபடுவாய் இன்புளிமாப் போதுபூப் போரேறு பூமருது - தீதில் விறகுதீ வீழ்கடியா றொன்பதாம் என்றாங் கறைகுவர் மூவெழுத்துச் சீர் என்பவாகலின். அவற்றுள், விறகுதீயும், கடியாறும் என்றிரண்டு சீரும் ஏழெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயர்ந்த பத்தடியும் ஒரோ ஒன்றிற்குப் பத்துப் பத்தாக, இரண்டிற்குமாக இருபது அடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) தாவில் விறகுதீத் தண்கடியா றென்றிரண்டும் ஏழுமுத லாகப் பதினா றுயர்த்தெண்ண ஆகும் அடியிருப தாம் என்பவகாலின். ஒழிந்த பாதிரியும், மாசெல்வாயும், மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், பூமருதும், போரேறும் என ஏழு சீரும் எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர்ந்த ஒன்பதடியும் ஏற, ஒரோ ஒன்றுக்கு ஒன்பது அடியாக, அறுபத்து மூன்று அடியாம். என்னை? (குறள் வெண்பா) ஏனை எழுசீரும் எட்டாதி ஈரெட்டாய் ஏறத்தாம் ஏழொன்ப தாம் என்பவாகலின். மூவெழுத்துச் சீராயவழி, வெள்ளைக்கு அடித்தொகை எண்பத்து மூன்று. என்னை? (குறள் வெண்பா) மூவெழுத் தாம்வழி வெள்ளைக் கடித்தொகை எண்ணுங்கால் எண்பத்து மூன்று என்பவாகலின். வெள்ளைக்கு நான்கெழுத்துச் சீராவன, கணவிரியும், பூமருதும், கடியாறும், மழகளிறும், மாபடுவாயும், விறகு தீயும், புலிசெல்வாயும் என இவ்வேழு சீரும். என்னை? (இன்னிசை வெண்பா) கணவிரி பூமருது கார்க்கடி யாறு மழகளிறு மாபடுவாய் வாய்ந்த விறகுதீக் கொள்ளப் புலிசெல்வா யோடு குறித்தேழு வெள்ளைக்கு நான்கெழுத்துச் சீர் என்பவாகலின். அவற்றுள், பூமருதும், மாபடுவாயும், என இரண்டு சீரும் ஒன்பது எழுத்தடி, முதலாகப் பதினாறு எழுத்தடிகாறும், உயர்ந்த ஒரோ ஒன்றிற்கு எட்டாக, இரண்டுமாய்ப் பதினாறு அடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நன்பால பூமருது மாபடுவாய் என்றிரண்டும ஒன்பான் முதலாய்ப் பதினா றெழுத்தேற வந்த அடிபதினா றாம் என்பவாகலின். ஒழிந்த கணவிரியும், கடியாறும், மழகளிறும், விறகு தீயும், புலிசெல்வாயும் என இவ்வைந்தும் எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர்ந்த ஒன்பது அடியும் ஒரோ ஒன்றிற்கு ஒன்பதாக ஐந்திற்குமாய் நாற் பத்தைந்து அடியாம். என்னை? (குறள் வெண்பா) ஏனையைந் தெட்டு முதற்பதி னுறுயர ஆன அடிநாற்பத் தைந்து என்பவாகலின். நாலெழுத்து ஆயவழி, வெள்ளைக்கு அடித்தொகை அறுபத்தொன்று. என்னை? (குறள் வெண்பா) நாலெழுத் தாம்வழி வெள்ளைக் கடித்தொகை ஆகும் அறுபதின்மேல் ஒன்று என்பவாகலின். வெண்பாவிற்கு ஐந்தெழுத்துச் சீராவன, மழகளிறும், புலிபடுவாயும் என இவை. என்னை? (குறள் வெண்பா) மழகளிறு வாய்ந்த புலிபடுவாய் என்ப அளவியன்ற ஐந்தெழுத்தாம் சீர் என்பவாகலின். இவை இரண்டும் ஒன்பது எழுத்தடி முதலாகப் பதினைந் தெழுத்தடிகாறும் உயர, ஒரோ ஒன்றிற்கு எட்டாகப் பதினாறு அடியாம். என்னை? (குறள் வெண்பா) எட்டாதி மூவைந் தெழுத்துயர அச்சீராற் பட்ட அடிபதி னாறு ஒன்பான் முதலாக ஐந்தெழுத்துச் சீரிரண் டாய அடிபதி னாறு என்பவாகலின். வெண்பாவிற்குச் சீரால் ஆம் அடித்தொகை நூற்றுத் தொண்ணூற்றாறு. என்னை? (குறள் வெண்பா) தோற்றுங்கால் சீராலாம் வெள்ளைக்கடித்தொகை நூற்றுத்தொண் ணூற்றின்மேல் ஆறு என்பவாகலின். இனி, வெண்பாவினுள் அசை சீராய் நடக்குமாறு: வெண்பாவினுள் நாலசையும் சீராமிடத்து மூன்று நிலைமை யவாம் ; ஓர் எழுத்தினாற் சீராகலும், இரண்டெழுத்தினாற் சீராகலும், மூன்று எழுத்தினாற் சீராகலும் என. என்னை? (குறள் வெண்பா) வெள்ளையுள் நாலசையும் சீராங்கால் முந்நிலைமை கொள்ளுமாம் ஒன்றாதி மூன்று எனவும், ஓரெழுத் தாதியா மூன்றெழுத் தீறாக மூன்று நிலைமைப் படும் எனவும், சொன்னாராகலின். அவை வருமாறு: நேர் அசையும் நேர்பு அசையும் ஓர் எழுத்தினாற் சீராகுமிடத்து ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்து எழுத்தடி காறும் உயர, ஒரோ ஒன்றிற்கு ஒன்பதாக, இரண்டிற்கு மாய்ப் பதினெட்டாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நேர்நேர் பசையிரண்டும் ஓரெழுத்துச் சீராங்கால் ஏழு முதலாப் பதினைந் துயர்த்தெண்ண. ஆகுமீ ரொன்ப தடி என்பவாகலின். அவ்விரண்டினையும் தேமா என்னும் சீராகக் கொள்ள, அலகு நிலையால் ஒன்பதாம். என்னை? (குறள் வெண்பா) இரண்டொன்ப தாயினும் இவ்விரண்டும் கூட்டித் திரண்டொன்ப தாகச் செயல் என்பவாகலின். நேர்பசை ஈரெழுத்துச் சீராம்வழி எட்டெழுத்து அடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர்த்தெண்ண ஒன்பது அடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நேர்பசை ஈரெழுத் தாம்வழிச் சீரிதின் எட்டாதி ஈரெட்டுயர்த்தெண்ண ஆமென்றாங் கொட்டினார் ஒன்ப தடி என்பவாகலின். இனி, நிரை அசையும் நிரைபு அசையும் ஈரெழுத்தாய வழி ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்த் தெண்ண ; ஒரோ ஒன்று ஒன்பதாக, இரண்டுமாய்ப் பதி னெட்டடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) நிரையும் நிரைபும் இரண்டெழுத்தாங் காலைப் புரைதீரே ழாதி பதினைந் துயர உரைசாலீ ரொன்ப தடி என்பவாகலின். இரண்டும் புளிமா என்னும் சீரே ஆகுதலால், இரண் டினையும் ஒன்பதாகக் கொள்க. என்னை? (குறள் வெண்பா) இரண்டு புளிமாவென் றெண்ணினார் ஆய்ந்து திரண்டொன்ப தாகச் செயல் என்பவாகலின். இனி, நிரைபு அசை மூவெழுத்துச் சீராமிடத்து எட் டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர, ஒன்பது அடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வைத்த நிரைபசை மூவெழுத்துச் சீராங்கால் எட்டு முதலாப் பதினா றுயர்த்தெண்ண ஒட்டினார் ஒன்ப தடி என்பவாகலின். வெண்பாவினுள் நான்கு அசையும் அசைச்சீராய் நின்று ஆக்கின அடித்தொகை முப்பத்தாறாம். என்னை? (குறள் வெண்பா) வெள்ளைக் கசைச்சீரால் ஆகும் அடித்தொகை கொள்ளுங்கால் முப்பதின்மேல் ஆறு என்பவாகலின். இவையெல்லாம் தலைப்பெய்து எண்ண, வெண்பா அடித்தொகை இருநூற்று முப்பத்திரண்டு. என்னை? (குறள் வெண்பா) தெரியுங்கால் வெள்ளைக் கடித்தொகை செப்பல் இருநூற்று முப்பத் திரண்டு என்பவாகலின். இனி, கலிக்குரிய சீரால் அடி ஆமாறு: வெண்பா உரிச்சீர் நான்கும், நீடுகொடி, குழறுபுலி என்னும் இரண்டு ஆசிரிய உரிச்சீரும், இயற்சீர் பத்தினுள்ளும் தேமா, புளிமா என்னும் இரண்டு நேரீற்று இயற்சீரும் ஒழித்து ஒழிந்த எட்டு இயற் சீருமாய், பதினான்கு சீரும் கலிக்குரியவாம். என்னை? (நேரிசை வெண்பா) திரியேறு பூமாசேர் வாயாத் திரிந்து மருதுகொடி மாவருவா யாறு - விரிதீப் புலிசேர ஆகும் புலிகளிறு வந்து புலிவருமா யாங்கலியுட் புக்கு என இதனை விரித்து உரைத்துக் கொள்க. வெண்பா உரிச்சீர் ஒருநான்கும் ஆசிரியத் தின்பா உரிச்சீருள் ஓரிரண்டும் திண்பா இயற்சீரின் எட்டினோ டீரேழு சீரும் உரைப்பர் கலிக்குரிமை உய்த்து என்பவாகலின். அவை நான்கு நிலைமையவாம். என்னை? (குறள் வெண்பா) உய்த்துரைத்த ஈரேழும் நான்கு நிலைமையால் வைத்துரைப்பர் நன்குணர்ந் தோர் என்பவாகலின். நான்கு நிலைமையாவன: இரண்டெழுத்துச் சீரா கலும், மூன்றெழுத்துச் சீராகலும், நான்கெழுத்துச் சீராகலும், ஐந்தெழுத்துச் சீராகலும் என இவை. என்னை? (குறள் வெண்பா) திரண்டவை நானிலைமை செப்பில் எழுத்தோர் இரண்டொடு மூன்றுநான் கைந்து என்பவாகலின். அவற்றுள் பாதிரி, போதுபூ, போரேறு என்னும் இம் மூன்றும் ஈரெழுத்தாம்வழிப் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பதினேழெழுத்து அடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் ஒரோ ஒன்றிற்கு ஐந்தாக, மூன்றுமாய்ப் பதினைந்தடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) பாதிரி போதுபூப் போரேறென் றிம்மூன்றும் ஆதி பதின்மூன்றாய்ப் பத்தின்மேல் ஏழுயர் வாகும் பதினைந் தடி என்பவாகலின். இனி, மூவெழுத்துச் சீராய் கலியுள் நடப்பன, பாதிரி, போதுபூ, விறகுதீ, போரேறு, பூமருது, கடியாறு, நீடு கொடி, மாசெல்வாய், மாபடுவாய் என்னும் இவ்வொன்பது சீரும் எனக் கொள்க. என்னை? (பஃறொடை வெண்பா) பாதிரி போதுபூப் பாய விறகுதீப் போரேறு பூமருது பூங்கடியா றோதிய நீடு கொடியோடு மாசெல்வாய் மாபடுவாய் மூதறிவார் மூவோ ரெழுத்தின் முடிந்தனவென் றோதினார் ஒன்பது சீர் என்பவாகலின். அவற்றுள் கடியாறு, மாசெல்வாய், மாபடுவாய் என்னும் இம் மூன்றும் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பதினெட்டு எழுத்தடிகாறும் உயர்ந்த ஆறடியும் பெற, மூன்றுமாய்ப் பதினெட்டடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஒத்த கடியாறு மாசெல்வாய் மாபடுவாய் பத்தின்மேல் மூன்றாதி பத்தின்மேல் எட்டுயர ஒத்த அடிபதி னெட்டு என்பவாகலின். இனி, ஒழிந்த ஆறுமாவன: பாதிரி, போதுபூ, விறகுதீ, போரேறு, பூமருது, நீடுகொடி என்னும் இவ்வாறும் பதினான்கெழுத்தடி முதலாகப் பதினெட்டு எழுத்தடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் பெற்று, ஒரோ ஒன்று ஐந்தடியாக, ஆறுமாய் முப்பது அடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஏனை அறுசீரும் ஈரேழ் முதலாக நானான்கின் மேலிரண் டோங்கி ஒரோவொன்றற் கைந்தா அடிமுப்ப தாம் என்பவாகலின். இவை முப்பதும் மேற்கூறிய பதினெட்டுமாய் மூவெழுத் தாய வழிக் கலியடித்தொகை நாற்பத்தெட்டு. என்னை? (குறள் வெண்பா) மூவெழுத் தாங்கால் முரற்கைக் கடித்தொகைமேல் ஏவினார் நாற்பதின்மேல் எட்டு என்பவாகலின். நாலெழுத்துச் சீராய்க் கலியுள் நடப்பன. கணவிரி, கடியாறு, விறகுதீ, பூமருது, நீடுகொடி, புலிசெல்வாய், மாபடுவாய், மழகளிறு, குழறு புலி என்னும் ஒன்பது சீரும் எனக் கொள்க. (பஃறொடை வெண்பா) நலமிகு நாலெழுத் தாயவழி நல்லாய்! கணவிரி கார்க்கடி யாறு விறகுதீப் பூமருது நீடு கொடியே புலிசெல்வாய் மாபடு வாயே மழகளிறு தாவில் குழறுபுலி என்றார் குறித்து என்பவாகலின். அவற்றுள் கணவிரி, கடியாறு மழகளிறு என்னும் மூன்றும் பதினான்கு எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்தடிகாறும் உயர்ந்த ஆறு அடியும் பெற, ஒரோ ஒன்று ஆறாக, மூன்றுமாய்ப் பதினெட்டடியாம். என்னை? (இன்னிசை வெண்பா) கணவிரியும் கண்ணார் கடியாறும் ஏனை மழகளிறும் நாலெழுத்துக் கொள்ளும் இயல்வகையா ஈரேழ் முதலாக ஈரொன்பான் மேலொன்று சேர அடிபதி னெட்டு என்பவாகலின். மாபடுவாய் பதினான்கு எழுத்து அடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர, ஆறடியாம். என்னை? (குறள் வெண்பா) மாபடுவாய் பத்தின்மேல் நான்காதி பத்தொன்ப தேற அடியிருமூன் றாம் என்பவாகலின். புலிசெல்வாய் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர, ஏழடியாம். என்னை? (குறள் வெண்பா) பத்தின்மேல் மூன்று முதலாகப் புலிசெல்வாய் பத்தொன்ப தேறவே ழாம் என்பவாகலின். விறகுதீ, பூமருது, நீடுகொடி, குழறுபுலி என்னும் நான்கும் பதினைந்து எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் பெற, நான்குமாய் இருபதாம். என்னை? (குறள் வெண்பா) ஏனைநான் கைம்மூ வெழுத்தாதி பத்தொன்ப தேற அடியிருப தாம் என்பவாகலின். நான்கெழுத்தாம்வழிக் கலியடித் தொகை ஐம்பத் தொன்று. என்னை? (குறள் வெண்பா) நாலெழுத் தாங்கால் கலியின் அடித்தொகை ஆயுங்கால் ஐம்பதின்மேல் ஒன்று என்பவாகலின். இனி, கலிக்குரிய ஐந்தெழுத்துச் சீராவன : மழகளிறு, புலிபடுவாய், குழறுபுலி என்னும் இவை. என்னை? (குறள் வெண்பா) மழகளிறு வாய்ந்த புலிபடு வாயே குழறுபுலி ஐந்தெழுத்துச் சிர் என்பவாகலின். அவற்றுள் குழறுபுலி பதினாறு எழுத்தடி முதலாக இருபதெழுத்து அடிகாறும் உயர்த்து எண்ண, ஐந்தடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) கோதில் சிறப்பிற் குழறு புலியென்ப தீரெட்டி னாதி இருப துயர்த்தெண்ண ஆகும் அடித்தொகை ஐந்து என்பவாகலின். மழகளிறு பதினைந்து எழுத்தடி முதலாக இருபது எழுத்தடிகாறும் உயர்த்தெண்ண ஆறடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) மாசில் சிறப்பின் மழகளி றென்னுஞ்சீர் மூவோரைந் தாதி இருப துயர்த்தெண்ண ஆயின ஆறடி ஆய்ந்து என்பவாகலின். புலிபடுவாய் பதினான்கு எழுத்தடி முதலாக இருபது எழுத்தடி காறும் உயர்த்தெண்ண. ஏழடியாம். என்னை? (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) பொற்பமைந்தார் சொன்ன புலிபடுவாய் என்னுஞ்சீர் பத்தின்மேல் நான்கு முதலிருப தீறாக ஒத்தமைந்த ஓரேழ் அடி என்பவாகலின். ஐந்தெழுத்தாம்வழிக் கலியின் அடித்தொகை பதி னெட்டு. என்னை? (குறள் வெண்பா) ஐயெழுத் தாயவழி ஆன்ற கலியடி எய்துங்கால் ஈரொன்ப தாம் என்பவாகலின். இனி, கலியடியெல்லாம் கூட்டி எண்ண, நூற்று முப்பத்திரண்டு அடியாம். என்னை? (குறள் வெண்பா) கருதுங்கால் ஆய்ந்த கலியடி எல்லாம் ஒரு நூற்று முப்பத் திரண்டு என்பவாகலின். கலியடியுள் அசைச்சீராயின இல்லையென்று உணர்க. ஆசிரிய அடி இருநூற்று அறுபத்தொன்று; வெண்பா அடி இருநூற்று முப்பத்திரண்டு ; கலியடி நூற்று முப்பத்திரண்டு; ஆக அறுநூற்று இருபத்தைந்து அடியாம். என்னை? (நேரிசை வெண்பா) இருநூற் றிருமுப்பத் தொன்றகவற் கேனை இருநூற்றோ டெண்ணான்கு வெள்ளைக் - கொருநூற்று முப்பத் திரண்டாம் முரற்கைக் கிவையறு நூற் றற்றமில் ஐயைந் தடி - யா. வி. 49. மேற். என்பவாகலின். இனி, சந்தமும் தாண்டகமும் ஆமாறு: நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த இருபத்து மூன்று அடியானும் வந்து, தம்முள் ஒத்தும்; குருவும் லகுவும் ஒத்தும் வந்தன அளவியற்சந்தம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழிச்சந்தம். இதுபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய், எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற்றாண்டகம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அள வழித்தாண்டகம். என்னை? (நேரிசை வெண்பா) ஈரிரண் டாதி இருபத்தா றந்தமாச் சாரும் எழுத்தின்கட் சந்தமாம் ;- சீரொத்த மூவொன்ப தாதியா முற்றின தாண்டகமென் றோதினார் தொல்லோர் எடுத்து சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்தலகு வந்த முறையை வழுவாவேல் - முந்தை அளவியலாம் என்றுரைப்பர் ; அவ்வாறன் றாகில் அளவழி யாமென்ப ரால் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. 1குரு லகு ஆவன: குற்றெழுத்து ஒற்று அடாது வந்தது லகு 2அது ரகர வடிவிற்று. இனிக் குற்றெழுத்து ஒற்றடுத்தும் நெட்டெழுத்து ஒற்றடுத்தும், நெட்டெழுத்துத் தனித்தும் வந்தது குருவாம். 3அது டகர வடிவிற்று. அடி இறுதிக்கண் வந்த குற்றெழுத்து ஒருகாற் கூறு மாற்றாற் குருவாகவும் இடப்படும். லகுவிற்கு ஓரலகாகவும் குருவிற்கு ஈரலகாகவும் இடினும் இழுக்காகா. (குறள் வெண்பா) ரகரவடி வாமீ திலகு; குருவே நிகரில் டகாரமென நேர் - யா. வி. 5. மேற். என்றாராகலின். (நேரிசை வெண்பா) குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் ; நெட்டெழுத்தும் குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக் குருவென்ப தாகும் ; குறிலும் குருவாம் ஒருகால் அடியிறுதி உற்று எனவும், (குறள் வெண்பா) *“F¿šyF வாகும் ; குருவாம் நெடிலும் எனவும் சொன்னாராகலான். அவற்றிற்குச் செய்யுள்: (வஞ்சித்துறை) 1ஆதி நாதர் பாத மூலம் நீதி யாய்நின் றோத நெஞ்சே! இது நாலெழுத்தடி அளவியற்சந்தம். பந்தம் நீக்குறில் அந்தம் இல்குணத் தெந்தை பாதமே சிந்தி நெஞ்சமே! இஃது ஐந்தெழுத்தடி அளவியற்சந்தம். திரித்து *btªJa« முரித்து நல்லறம் விரித்த வேதியர்க் குரித்தென் உள்ளமே இஃது ஆறெழுத்தடி அளவியற்சந்தம். (வஞ்சி விருத்தம்) பாடு வண்டு பாண்செயும் நீடு பிண்டி நீழலான் வீடு வேண்டு வார்க்கெலாம் ஊடு போக்கும் உத்தமன் இஃது ஏழெழுத்தடி அளவியற்சந்தம். முரன்று சென்று வண்டினம் நிரந்த பிண்டி நீழலுட் பரந்த சோதி நாதனெம் அரந்தை நீக்கும் அண்ணலே! இஃது எட்டெழுத்தடி அளவியற்சந்தம். *“Édia¤ தான்மிடைந் தோட்டிநீர்! அனகத் தானருள் காண்குறிற் கனகத் தாமரைப் பூமிசைச் சினனைச் சிந்திமின் செவ்வனே இஃது ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம். கருதிற் கவினார் கயனாட்டத் திருவிற் புருவத் திவளேயாம் மருவற் கினியாள் மனமென்னோ உருவக் கமலத் துறைவாளே இது பத்தெழுத்தடி அளவியற்சந்தம். (கலி விருத்தம்) ஆதி யான்ற வாழியி னானலர்ச் சோதி யான்சொரி பூமழை யான்வினைக் காதி வென்ற பிரானவன் பாதமே நீதி *ahÃid வாழிய நெஞ்சமே; இது பதினோரெழுத்தடி அளவியற்சந்தம். குரவு தான்விரி கொங்கொடு கூடின மரவ மாமலர் ஊதிய வண்டுகாள் ! இரவி போலெழி லார்க்கெம ராகிநீர் கரவி றூதுரை மின்கடி தாகவே இது பன்னிரண்டெழுத்தடி அளவியற்சந்தம். காலையெலா முதற்கணே கண்டு கொண்டுபெண் கொலையினாம் கொடுந்தொழில் பூண்டு கோலவெஞ் சிலையினான் செழுஞ்சுரம் சேர்த்த செவ்வனே மலையமா ருதத்தொடும் வந்து தோன்றுமே எனவும், (கலி நிலைத்துறை) கோடற் கொல்லைக் கோல அரங்கிற் குவவுத்தேன் பாடக் கொன்றைப் பைம்பொழில் நீழற் பருவஞ்சேர் வாடைப் பாங்காய் மத்த மயூரக் கிழவோன்வந் *jhl¡ கொண்மூ ஆர்த்தன அம்பொற் கொடியன்னாய்! எனவும் இவை பதின்மூன்றெழுத்தடி அளவியற்சந்தம். குரவக் கோலக் கோங்கணி சோலைக் குயிலாலப் பரவைத் தேன்காள்! பாடுமி னீரும் பகைவெல்வான் புரவித் தேர்மேற் போனவ ரானா தினிவந்தால் விரவிக் கோநின் வெங்கணை வேனிற் பொருவேளே இது பதினான்கெழுத்தடி அளவியற்சந்தம். (தரவு கொச்சகம்) யதிகணம் இருநிலம் இறைவனோ டிமையோர் துதிதிகழ் மொழியிசை துதைமதில் உடையேம் அதிபதி அடியிணை அடைகுவம் எழுநாம் மதிபுரை திருமுக மடநடை மயிலே இது பதினைந்தெழுத்தடி, அளவியற்சந்தம். (கட்டளைக் கலித்துறை) மாவரு கானல் வரையதர்ப் பாங்கர் மலிகுரவின் பூமலி சோலைத் திருவரூங் காண்பர் புதுமதுநீர்த் தாமரை வாவித் தடமலர் சாடிக் கயலுகளக் காமரு நீலம் கனையிருள் காலும் கழனிகளே இது பதினாறெழுத்தடி அளவியற்சந்தம். (எழுசீர் விருத்தம்) கோலக் கொன்றைக் கொழுநன் எழிலார் கொம்பன தோளை நாளும் சாலப் புல்லித் தளவ மடவாள் தானகத் தோகை எல்லாம் ஆலக் கொண்மூ அதிரும் இதுகாண் ஆய்மலர்க் கோதை நல்லாய் காலச் செவ்வேற் கனகக் கடகக் காதலர் சொன்ன ஆறே எனவும், (கட்டளைக் கலித்துறை) செருவிளை வைவேல் திகழொளி வேந்தர் திருமுடிமேல் உருவிளை ஒண்போ துறுநின பாதங் குறைவறியாக் கருவிளை யாட்டும் கவினுடை வாட்கட் கனிபுரைவாய்த் திருவிளை யாடும் கனவரை யாகச் சினவரனே எனவும் இவை பதினேழெழுத்தடி அளவியற்சந்தம். (அறுசிர் விருத்தம்) பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப் பணியாய் மணியார் அணைமேல் பணியா வொருமூ வுலகும் கணியா துணரும் கவினார் கலைமா மடவாள் கணவா ! அணியார் கமலத் தலரா சனனே ! அறவா ழியனே! இது பதினெட்டெழுத்தடி அளவியற்சந்தம். (எழுசீர் விருத்தம்) அன்னங் கண்டர விந்த வாவி யதுகண் டம்பூம் பொழிற்புன்னைநின் றின்னுங் கண்ட ஞாழலி னீழ லிதுகண் டிங்கேநில் யான்சென்று கோன் மன்னும் காவி விரிந்த வாச மலரா லனைகே தகைப்போது பொன்னம் போது கவிரந் தாது துயலத் தண்டாது தந்தீவனே இது பத்தொன்பது எழுத்தடி அளவியற்சந்தம். அருவிப் பலவரை காள் ! சொக் கத்தருவே ! அம் மாதவிப் பந்தர்காள் மருவிப் போதினி கோது சூத வனமே வடாதுன்ன லீர்களாற் செருவிற் கேயுரு வன்ன செம்மலிக் குன்றத் திடையின்வந்த தாலவர்க் கிருவிப் பைம்புன நோக்கி யேயினை யாரினைந் தெய்தினார் என்மினே இஃது இருபதெழுத்தடி அளவியற்சந்தம். பின்றாழும் பீலி கோலிப் பெருமுகில் அதிரப் பிண்டமாய் வண்டுபாடப் பொன்றாழும் கொன்றை நீழற் புனமயில் இனமாய்ப் பூமிசைப் போந்துதேதே என்றாடக் கோடல் இளகின இதுகார் என்ப தியங்கி நின்றுநாளைச் சென்றார்தேர் வந்து தோன்றும் செறிவளை மடநல்லாய் செல்கநின் செல்லறான் எனவும், வண்பாராள் மன்னர்பொன் மகுடங் கிரிகாள மாலை கொய்யாத போதினிற் பெண்பாலோர் கேளவன் ஞானப் பெருங்கட லைவர்ப் பேரிளம் பெண்டிராதி பண்பாரென் பாடு பாதம் பரமநிருப மாலைக் குணகீர்த்தி என்பர் நண்பாரின் கமலமாண் புடையவ ரடைவர் நற்குணச் சித்தி தானே எனவும் இவை இருபத்தோரெழுத்தடி அளவியற்சந்தம். அருமாலைத் தாதலர நின்றமர் குழுவினோ டாயிரச் செங்க ணானும் திருநாமம் செப்பறேற் றான்றிகழ் ஒளிவளையத் தேசுமீ தூர வீரர் கருமாலைக் காதிவென் றாய்கமல சாரணமும் கண்டுகை கூப்ப மாட்டாப் bgUkh‹k‰* பெற்றியா னின்பெருமை அருகனாம் வல்லமோ பேசு மாறே? இஃது இருபத்திரண்டெழுத்தடி அளவியற்சந்தம். (எண்சீர் விருத்தம்) சோதி மண்டலம் தோன்றுவ துளதேற் சொரியு மாமலர்த் தூமழை யுளதேற் காதி வென்றதோர் காட்சியு முளதேற் கவரி மாருதம் கால்வன வுளவேற் பாத பங்கயம் சேர்நரு முளரேற் பரமகீதமும் பாடுநருளரேல் ஆதி மாதவர் தாமரு குளரேல் அவரை யேதெளிந் தாட்படு மனனே! இஃது இருபத்து மூன்றெழுத்தடி அளவியற்சந்தம். விலங்கு நீண்முடி யிலங்க மீமிசை விரிந்த மாதவி புரிந்த நீள்கொடி உலங்கோ டோள்கொடு சலந்து சூழ்தர உறைந்த புள்ளின நிறைந்த வார்சடை அலங்க றாழ்தர மலர்ந்த தோள்வலி அசைந்த ஆடவர் இசைந்த சேவடி வலங்கொள் நாவலர் அலர்ந்த வானிடை வரம்பில் இன்பமும் ஒருங்கு சேர்வரே இஃது இருபத்துநான்கெருத்தடி, அளவியற்சந்தம். (அறுசீர் விருத்தம்) திருகிய புரிகுழல் அரிவைய ரவரொடு திகழொளி இமையவரும் பெருகிய கரிகுல மருவிய படையொடு பரிதலில் அரசவையும் முருகுடை மலரொடு முறைமுறை வழிபட முனிகளை நனியகலா அருகன் திருவடி அடைபவர் அடைகுவர் அமரொளி அமருலகே எனவும், (எண்சீர் விருத்தம்) பொங்கழல் நாகம் புற்றக நீங்கிப் புரிமிக முறுகிய கயிறென மிளிரும் தங்கிய வெண்டேர் வெஞ்சுர நீந்தித் தனதட மிடைசெறி மடமயில் இயலாய்ச் செங்கய லொண்கட் டேமொழி யாளும் திறலொடு முடுகிய செறிகழ லவனும் பங்கய வாவிப் பன்மணி மாடப் பதிநனி குறுகுவர் பரிவொழி யினிநீ எனவும் இவை இருபத்தைந்தெழுத்தடி அளவியற்சந்தம். (கலி நிலைத்துறை) கரிமருவு கடிமதிலி னிடுகொடிகள் திசைதடவு கடுமையினதாய்த் திருமருவு பெருவிழவொ டமரர்குழு வொழுகுதொழு செழுமைவழுவாத் திருமரபி னரபதிக ளணிகிளரு மணிமகுட முறமறுவிலாக் குருமருவு விரிகமல சரணநனி பணிவர்மலி குருசினகரே இஃது இருபத்தாறெழுத்தடி அளவியற்சந்தம். இனி, அளவழிச் சந்தத்திற்குச் சில வருமாறு: (வஞ்சி விருத்தம்) பொங்கு சாமரை தாம்வீசச் சிங்க பீடம் அமர்ந்தவெங் கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிக் செங்க ணானடி சேர்மினே எனவும், போத லேபொரு ளாக்கொண்ட காத லாற்கொரு காரியம் தூது சென்றுரை யாய்தும்பி! நீதி யானெறி போகியே எனவும், (அறுசீர் விருத்தம்) அருண மாஞ்சினை கறித்துட னகன்பொழில் அலவலைக் குயில்கூவத் தருண வேனிலும் புகுந்தது தனுநெகத் தடமலர்ச் சரபுங்கம் கருண மூலமோ டுறநிறைத் திறைஞ்சினன் கறைமிடற் றிறைநாட்டக் கிரணந் தான்சுடக் கிரியிடைத் திருவுடம் பிழந்துழல் கிழவோனே எனவும் இவை நான்கடியும் எழுத்தொத்துக் 1குரு லகு ஒவ்வாது வந்த அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் காண்க. (அறுசீர் விருத்தம்) அருங்கயம் விசும்பிற் பார்க்கும் அணிச்சிறு சிரலை அஞ்சி (18) இருங்கயம் துறந்த திங்கள் இடங்கொண்டு கிடந்த நீலம் (18) நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் (17) கருங்கயல் அல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே 16) - சிந்தாமணி. 626. இஃது எழுத்தும், குருவும், இலகுவும் ஒவ்வாது வந்த அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி. தாண்டகம் வருமாறு: (எண்சீர் விருத்தம்) வானிலவி முகிலாப்ப மருவி மாண்பால் மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத் தேனுலவு நறுமுல்லை *KWtš ஈனத் திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக் கானிலவு மலிகொன்றை கனக ஞாலக் கவினியவாய்ச் சார்ந்ததுகார் கலந்து கண்ணார் மானிலவு மடநோட்க்கின் நெடிய வாட்கண் வனமுலையாய் ! மற்றுமனம் வருந்தல் நீயே இஃது இருபத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம். (ஒன்பதின்சீர் விருத்தம்) கருநிறப் பொறிமுகக் கடதடத் தமிழ்செவிக் கழைமருப் புறுவலிக் கவினுடைக் கரிகளைக் கனவரைக்கட் சுருணிறத் தெரியுளைச் சுரிமுகத் தொளியுகிர்ச் சுடரெயிற் றிடிகுரற் றுறுமயிர்த் *JÅ፠தரிசுழற்றும் இருளுடைச் சிறுநெறிக் கவலையுட் டளிவரற் கினிவரத் தகுவதன் றிரவினிற் பகலினிற் பெரிதுநன்றால் திருநிறப் புரிவளைச் சிறுநுதற் பெரியகட் சிகழிகைப் புனைகுழற் றுவரிதழ்த் திகழொளிக் கலையிவட்கே இது முப்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம். (பதினொருசீர் விருத்தம்) அனவரதம் அமரர் அரிவையரொ டணுகி அகனமரும் உவகை யதுவிதியி னவர வணிதிகழ வருவர் ஒருபால் ; கன வரையொ டிகலும் அகலமொளி கலவு கரகமல நிலவு கனகமுடி கவினு கழலரசர் துழனி ஒருபால் ; தனவரத நளின சரணநனி பரவு தகவுடைய முனிகள் தரணிதொழு வழுவில் ` தருமநெறி மொழிவர் ஒருபால் ; சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி தெனிருமொழி அளவு சிவபுரம தடைதல் திடனே இது நாற்பத்துமூன்றெழுத்தடி அளவியற்றாண்டகம். (பதினான்கு சீர் விருத்தம்) அல்லற் கோடைக் கொல்லைத் தேவாய் அலைகடலின் அமுதம் அளறுபட அணுகி அணிபுணரி பருகி அரவலறி மறுக அதிர்ந்தன கார்முகில்; மல்லற் செல்வக் கொல்லைப் பாங்கே மலிபிடவம் அலர வருதளவம் இளக மயிலினமும் அகவ மதுகரமும் முரல மகிழ்ந்தன மானினம்; தொல்லைக் கைம்மாச் செம்மற் றிண்டேர் துரகமொடு வயவர் அரவமிகு பரவை தொலையவரன் அழிய *நிலமைதுயர் அடைய இலங்கிய தோளினாய் ! எல்லைக் காலம் சொல்லிற் றீதாம் எழுதுகொடி அனைய இடுகுமிடை ஒடிய எழினிலவு கனகம் இனமணியோ டியைய இணைந்தெழு கொங்கையாய்! இது நாற்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம். ஒழிந்த அளவியற்றாண்டகமும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி, அளவழித் தாண்டகத்திற் சில வருமாறு: (எண்சீர் விருத்தம்) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண முழுதுலக மூடியெழில் முளைவயிர நாற்றித் (30) தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற் சுடரோய் ! உன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்: (28) சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் (29) பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே (28) - சூளாமணி, 1904. இஃது எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித் தாண்டகம். பிறவும் அன்ன. சந்த அடியும் தாண்டக அடியும் விரவி ஓசை கொண்டு வந்தால், அவை சந்தத்தாண்டகம் என்றும், தாண்டகச் சந்தம் என்றும் வழங்கப்படும். என்னை? (நேரிசை வெண்பா) சந்தச் 1சரணமும் தாண்டகத்தின் 2பாதமும் வந்து மயங்கி வழுவிகந்த - செந்தமிழ்நர் ஈண்டு வடநூற் புலவர் இயற்சந்தத் தாண்டகம் என்றுரைப்ப தாம் என்பவாகலின். அவற்றுட் சில வருமாறு: (எண்சீர் விருத்தம்) 1அங்குயிலின் அவிரொளியால் அருண மாகி அணியாழி மரகதத்தாற் பசுமை கூர்ந்து (28) மங்கலஞ்சேர் நூபுரத்தால் அரவம் செய்யும் மலரடியை மடவன்ன மழலை ஓவாச் (27) செங்கமல வனமென்று திகைத்த போழ்தில் தேமொழியால் தெருட்டுதியோ, செலவி னாலோ? (27) தொங்கலம்பூங் கருங்கூந்தற் சுடிகை நெற்றிச் சுந்தரி ! நிற் பணிவார்க்கென் துணிவு தானே! (26) - யா.வி. 15. மேற். இதனுட் சந்த அடியும் தாண்டக அடியும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன. இனி, ஒரு சாரர், சந்த அடி, பலவாய் வருவனவற்றைச் சந்தத் தாண்டகம் என்றும், தாண்டக அடி பலவாய் வருவன வற்றைத் தாண்டகச் சந்தம் என்றும், சந்த அடியும் தாண்டக அடியும் ஒத்து வருவனவற்றைச் சமசந்தத் தாண்டகம் என்றும் வழங்குவர். அவை வந்தவழிக் கண்டு கொள்க. நான்கடியும் ஒத்து வருவனவும், நான்கடியும் ஒவ்வாது வருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால், வருவனவும், பிறவாற்றால் வருவனவும்; மாராச்சையும், மிச்சாகிருதியும் முதலாகிய சாதியும்; ஆரிடமும், பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும்; பிங்கலமும், மாபிங்கலமும், சய தேவமும், ஞானசாரியமும், சந்திரகோடிச்சந்தமும், மயூரத் திரிசந்தமும், மேடகத்திரிசந்தரும் முதலாகிய சந்தோபிசிதிகளுள்ளும்; பாட்டியல் மரபு, மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் தகுதியுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. அவை ஈண்டு உரைப்பிற் பெருகும். சந்தமும் தாண்டகமும் என்ற இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றுகர இகரங்களை எழுத்தாகவே கொண்டு எண்ணுக. இனி, காக்கை பாடினியாரும், பாட்டியல் உடையாரும், வாய்ப்பியம் உடையாரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர், இவற்றையும் இனத்தின் பாற்படுத்து வழங்குவர். தொல்காப்பியனார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர், இவற்றையும் மேற்கூறப்பட்ட பாவினங்களையும் கொச்சகக் கலிப்பாற்படுத்து வழங்குவர் எனக் கொள்க. இனி, ஒருசார் வடநூல்வழித் தமிழாசிரியர், ஒரு புடை ஒப்புமை நோக்கி இனமெனப்படா ; மூவகைப்பட்ட விருத்தங்களுள்ளும், சந்தத் தாண்டகங்களுள்ளுமே பட்டு அடங்கும், என்பர். இந் நூலுடையார், காக்கை பாடினியார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் மதம் பற்றி எடுத்து ஓதி, இவையும் உடன்பட்டாரெனக் கொள்க. என்னை? (நேரிசை வெண்பா) ஒருபுடையால் ஒப்புரைப்பின் மற்றுமோர் பாவிற் கொருபுடையால் ஒக்குமா றுண்டாம் ; இருபுடையும் ஒப்பித்துக் கோடுமோ, ஒன்றிற்கே சார்த்துமோ, எப்பெற்றிக் கோடும் இனம் இது கடா. (கலி விருத்தம்) 1குன்றி ஏய்க்கும் உடுக்கையென் றாற்கரி தென்று மோ, சிவப் பென்றுமோ, அவ்விரண் டொன்றி நின்றவென் றோதுது மோ? எனின், நின்ற தோர் வரலாற்றொடு நிற்குமே இது விடை. (நேரிசை வெண்பா) வெள்ளைக்குச் செப்பல் அகவற் ககவலே துள்ளலே தூங்கல் கலிவஞ்சிக் - குள்ளாகும் தொன்னூற் புலவர் துணிவெனிற் பாவினமும் சொன்னூற் புலவர் துணிபு இனி, செய்யுள்களுக்கு வருணம் முதலாயின சொல்லுமாறு: (நேரிசை வெண்பா) தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள் நாள்கதி சாதி கிழமைநாள் நன்கமையப் பாற்படுக்க பானான்கின் பால் வெண்பா முதலாக வேதியர் ஆதியா மண்பால் வகுத்த வருணமாம்; -ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து - யா. வி. 55, 95, மேற். எனக் கொள்க. வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய - யா. வி. 55. மேற். பாவினத் தியற்கையும் அதனோ ரற்றே சீரினும் தளையினும் சட்டக மரபினும் பேரா மரபின பாட்டெனப் படுமே அவைதிரி பாகின் விசாதி யாகும் என்றார் *thŒ¥ãa« உடையார் எனக் கொள்க. இவற்றுக்கு நிறமும், திணையும், பூவும், சாந்தும், புகையும், பண்ணும், திறனும், இருதுவும், திங்களும், நாளும், பக்கமும், கிழமையும், பொழுதும், கோளும், இராசியும், தெய்வமும், திசையும், மந்திரமும், மண்டிலமும், பொறியும், எழுத்து முதலாகிய பண்பும் அறிந்து ஆராதிப்ப இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி, நன்மை பயக்கும். இவையெல்லாம் திணைநூலுட் கண்டு கொள்க. அவற்றுட் சில *brhšYkhW. (நேரிசை வெண்பா) வெண்பா முதலாக வேதிய ராதியா மண்பால் வகுத்த வருணமாம் ; ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து மீனாடு தண்டேறு வேதிய ராதிய ஆனாத ஐந்தொன்பா னாயினவும்- தேனார் விரைக்கமல வாண்முகத்தாய் ! வெள்ளை முதலா உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு - யா. வி. 95. மேற். ஆரல் மகமோ டனுடம் அவிட்டமென் றீரிண்டும் ஆதியா வெண்ணியநாள் - சீரிய வெண்பா அகவல் கலிவஞ்சி என்றுரைத்தார் எண்பா அறிவோர் எடுத்து வேதியர்க்கு வெண்மை; வியன்செம்மை வேந்தர்க்கு; நீதிசால்1 பீதம் நிதிக்கிழவோர்க் - கோதிய நீலமாம் ஏனை நிலைமையோர்க் கக்குலத்தின் பாலவாம் பாவிற்கும் அற்று ஆரம் அரிசந் தனம்2 பழுப்போ டங்கலவை பாரியனற் பாநான்கின் பாற்படுத்தார் - சீரிய வெண்போது செங்கழுநீர் 3வேரிசேர் சண்பகத்தின் வண்போது நீல மலர் 4மகயிரம் ஆதியா வண்பூரங் காறும் வகையின் மருட்பாவின் நாளாம் - தகாதென் 5ஞெண் டோராசாந் தேரிரு சந்தச்சென் றொண்போது தேரிற் பவளம் சிவப்பு (தரவு கொச்சகம்) வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும் நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல் ஆதிசால் பாவும் அரசர் வியன்பாவும் ஓதியவா றொன்றா மருட்பாவாய் ஓங்கிற்றே - யா. வி. 55. மேற். (நேரிசை வெண்பா) பாநாளாற் பாவோரை தாமொப்பப் பண்புணர்ந்த மாநா வலர்வகுத்த வாய்மையாற் - பாநான்கின் மூவிற் றினமும் மொழிப் 6புத்தேள் உண்மகிழப் பாவித்துப் பாடப் படும் பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின் ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும் பாற்படுத்தாற் நூலோர் பயின்று - யா. வி. 62. மேற் முற்றுகரந் தானும் முதற்பாவின் ஈற்றடிப்பின் நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல் 7துடிமருங்கின் மெல்லியலாய் ! சொல்லு பாலன் றனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின் மேலன்று நீகிடந்தாய் மெய்யென்பர் - ஆலன்று வேலைநீர் உள்ளதோ, விண்ணதோ, மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் ! சொல்லு - இயற்பா - முதல் திருவந்தாதி 69. 1எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே- களியிற் பொருந்தா தவனைப் பொரலுற் றரியாய் இருந்தான் திருநாமம் *v©Q” - இயற்பா - முதல் திருவந்தாதி 51. இப் பொய்கையார் வாக்கினுள் முற்றியலுகரம் ஈறாய் வந்தன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. (நேரிசை வெண்பா) முல்லை குறிஞ்சி மருதத்தின் பின்னெய்தல் எல்லையில் பாக்கட் கியற்றிணையாம் ;- முல்லை குறிஞ்சி யெனவிரண்டு குன்றா மருட்கென் றறைந்தார் வியன்புலவோர் ஆய்ந்து எனவும், முல்லை அந்தணன் ; குறிஞ்சி அரசன்; மல்லல் மருதம் வாணிகன் என்ப; நெய்தல் சூத்திரன் ; நினையுங் காலைப் பல்குலம் என்ப பாலை யானே எனவும், (நேரிசை வெண்பா) பண்ணும் திறமும்போல் பாவும் இனமுமாம் வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல் திறம்விளரிக் கில்லதுபோல் செப்பல் அகவல் இசை 2மருட்கும் இல்லை இனம் - யா. வி. 55. மேற். எனவும், பாடப் படுவோர்க்கும் பாடு மவன்றனக்கும் நாடப் படுநயங்கள் நாடாதே - பாடுமேற் காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல் ஆகித்தற் சேரும் அலர் எனவும், நாற்பா நடைதெரிந்த நன்னூற் பெரும்புலவர் நூற்பால் நயந்த நுழைபொருளைப் - பாச்சார்த்திப் பாவித்துப் பார்மேல் நடாத்தப் படருமே நாவித் தகத்து 1நகம் எனவும், (கலி விருத்தம்) புலந்துறை போகிய நலவர் நாவினுட் கலந்துறை கலைமகள் கவிதை கந்தமா நிலந்தொழப் புறப்படும் நிலையள் ஆகுமிவ் விலங்கிழை பெருமையை எண்ண வேண்டுமோ! எனவும், (கட்டளைக் கலித்துறை) 2உள்ளப் பரவையி னூல்வரை நாட்டியொண் கேள்விதம்பா எள்ளப் படாமை இயையக் கடையின் இசைபெருக்கும் வள்ளற் குணநாவர் வானோர் களைவள மைப்படுக்கும் வெள்ளைக் கவிதை அமிழ்தமெல் லார்க்கும் வெளிப்படுமே அகமுத லாய பொருள்கவிக் காவி அணிதழைப்பத் தகமுத லோர்சொற்ற பாவின சட்டகக் கட்டுரையே நிகழ்தரும் ஓசை இயனடை யானெடு நீர்வரைப்பிற் புகழ்தரு வாய்மைப் பயன்வியன் சீர்த்திப்புத் தேளுலகே எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. அறம் பொருள் இன்பம் வீடுபெறு ஆமாறு சொன்ன நூல்களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும், சொகினமும், வக்கினகிரந்தமும், மந்திரவாதமும், மருத்துவநூலும், சாமுத்திரியமும், நிலத்துநூலும், ஆயுதநூலும், பத்து விச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கல நூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொருள் உபதேசமும், வல்லாராயும், கவிப் பெருமையும், சாவவும் கெடவும் பாடு மாறும் மனத்தது பாடுமாறும், பாடப்படுவோர்க்கும் வரும் நன்மையும், தீமையும் அறியுமாறும் வல்லார்வாய்க் கேட்டு உணர்ந்துகொள்க, ஈண்டு உரைப்பிற் பெருகும். இனிப் பாவினங்களுட் சமக்கிரதமும் வேற்றுப் பாடையும் விரவி வந்தால், அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும், உலோகவிலாசனியும், பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையன எனக் கொள்க. (நேரிசை வெண்பா) செந்தமிழ்ச் செய்யுள் தெரிந்துணர்ந்து செந்தமிழ்க்கண் வந்த வடமொழியை மாற்றாதே - சந்தம் வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டோ 1தழுவாது நிற்குந் தமிழ்? பாக்கட்கு ஓசை பிறக்குமாறு உரைத்துக்கொள்க. அவை சொல்லுமாறு: (குறள் வெண்பா) வெண்சீரிற் செப்பல் பிறக்கும்; விகற்பத்துப் பண்பாய்ந்த துள்ளல் படும் இயற்சீருள் தோன்றும் அகவல் ; அவற்றின் விகற்பத்து வெள்ளோசை யாம் தன்சீருள் தூங்கல் கலியடியின் கண்டக்கால் வஞ்சிக் கிசையாய் வரும் மயங்கி வருவனவும் வல்லோர் வகுப்ப மயங்காமற் கொண்டுணரற் பாற்று என இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (நேரிசை வெண்பா) “jiyt‹ jiyKjyh¤ jh®ntªj‹ fhW« kiyKjyh khehŒf‹ khnj !- நிலமுழுதும் மன்னர்கோ னாளு மறைமுதலா வஞ்சிக்கோன் தன்முதலோர்த் தந்தானும் தான் ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்தும் மூவைந்தும் பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஏர்பாய் விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந் தளவு நெடில்கலியோ டைந்து ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும் சிந்து நெடிலடிக்கட் டொல்லிரண்டும் - வந்த தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற் றளைசிதைவில் தண்டாக் கலிக்கு - யா. வி. 25. மேற். ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச் சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்; - ஓரும் நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து - யா. வி. 25. மேற். (குறள் வெண்பா) ஐந்தாதி ஐயிரண் டீறாம் அறுநிலமும் வந்தவடி வெள்ளைக் களவு (நேரிசை வெண்பா) பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின் ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும் பாற்படுத்தார் நூலோர் பயின்று இவற்றின் கருத்து: நாலெழுத்து முதலாகிய மூன்றும் குறளடி : ஏழெழுத்து முதலாகிய மூன்றும் சிந்தடி; பத்தெழுத்து முதலாகிய ஐந்தும் அளவடி; பதினைந் தெழுத்து முதலாகிய மூன்றும் நெடிலடி; பதினெட் டெழுத்து முதலாகிய மூன்றும் கழிநெடிலடி. அவற்றுள் 1ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும். சிந்தடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறு நிலத்தானும் வரப்பெறும். பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலத்தானும் இலக்கணக் கலிப்பா வரப் பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும் குறைந்தும் வரப்பெறும். இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப் பன்னீரெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப் பெறும். முச்சீரடி வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும். முச்சீரடி யெல்லாம் ஒரு நிலமாகக் கொண்டு, இரு சீரடி வஞ்சி நிலம் ஒன்பதோடும் கூட்டி, வஞ்சிநிலம் பத்து என்ப. அல்லாது இருபது எழுத்தின் மிக்கு வரும் நாற்சீரடிப்பா இல்லை. நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு, இருபத்து நான்கு எழுத்தின்காறும் வரப்பெறும், என்பது. வெண்பா ஆசிரியங்களுள்ளும் இலக்கணக் கலிப் பாவினுள்ளும் வரும் சீர் ஐந்தெழுத்தின் மிகப்பெறா. வஞ்சியுள் வரும் சீர் ஆறு எழுத்து ஆகவும் பெறும்; சிறுமை மூன்று எழுத்து ஆவது சிறப்புடைத்து ; இரண்டெழுத் தினால் அருகி வரப்பெறுமாயினும் எனக் கொள்க. என்னை? (நேரிசை வெண்பா) அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா; வளவஞ்சிக் காறுமாம் மாதோ ;- வளவஞ்சிச் சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத் தன்மை தெரிந்துணர்வோர் தாம் - யா. வி. 25. மேற். என்பவாகலின். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) குறளடி 4-6 *1ng®ªJ சென்று சார்ந்து சார்ந்து (4) தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து (5) வண்டு சூழ விண்டு வீங்கி (6) சிந்தடி 7-6 நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் (7) ஊர்வாய் ஊதை வீச *C®thŒ (8) *kÂna® நுண்டோ டொல்கி மாலை (9) அளவடி 10-14 நன்மணம் கமழும் பன்னெல் ஊர! (10) அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11) இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12) இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் (13) நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14) நெடிலடி 15-17 *mÂeil அசைஇய அரியமை சிலம்பின் (15) மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் (16) ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17) கழிநெடிலடி 18-20 நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் (18) இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19) கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20) பெருமணம் புணர்ந்தனை என்பவஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே - யா. வி. பக். 427 மேற். - யா. கா. 43. மேற். என்னும் ஆசிரியம், நான்கெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்று, குறளடி முதலாகிய ஐந்தடியாலும் வந்தது. இவ்வெழுத்துக்களால் வெண்பா வருமாறு: (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) 1மட்டுத்தான் உண்டு மதஞ்சேர்த்து விட்டுக் (7) களியானை கொண்டுவா என்றான் - களியானைக் கியாரோ எதிர்நிற் பவர்! இஃது ஏழெழுத்தடி வெண்பா. ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன் (8) பொன்னோடை யானையின் மேற்கொண்டான் - என்னாங்கொல் மன்னர் உறையும் மதில்! இஃது எட்டெழுத்தடி வெண்பா. (குறள் வெண்பா) சென்று முகந்து நுதலாட்டி மாறேற்று (9) வென்று பெயர்ந்தானெங் கோ இஃது ஒன்பதெழுத்தடி வெண்பா. இவை மூன்றும் சிந்தடி. (நேரிசை வெண்பா) நின்று திரியும் சுடருளை நில்லாது (10) வென்று திரிதருவேன் யானுளனாச் - சென்றோங்கி மண்ணக மார்பின் மறையலோ மற்றினியென் கண்ணகத்துப் பட்ட படி இது பத்தெழுத்தடி வெண்பா. இற்றேன் உடம்பின் எழினலம் என்றென்று (11) பற்றுவிட் டேங்கும் உயிர்போல - மற்று நறுமென் கதுப்பினாள் தோடோயின் நண்ணும் *kWneh¡ குடையவாம் கண் இது பதினோரெழுத்தடி வெண்பா. புறத்தன நீருள பூவுள மாவின் (12) திறத்தன கொற்சேரி யவ்வே- அறத்தின் மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறைசெய்த கண் - தண்டியலங்காரம், 40. மேற். இது பன்னிரண்டெழுத்தடி வெண்பா. இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற (13) அரியிளஞ் செங்காற் FHÉ* அருகிருந் தூமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு - முத்தொள்ளாயிரம் இது பதின்மூன்றெழுத்தடி வெண்பா. மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார் மார்பன் (14) அணிமகர வெல்கொடியா னன்னான் - தனிநின்று தன்னை *tz§fhik¤ தானணங்க வல்லாளே *v‹id அணங்குறியி னாள் இது பதினான்கெழுத்தடி வெண்பா. இவை ஐந்தும் அளவடி. (நேரிசை வெண்பா) முகமறிந்தார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் (15) அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் - ககமறையா மன்னைநீ வார்குழை வையெயிற்றாய்! என்னோமற் றென்னையும் வாழும் எனல் ! இது பதினைந்தெழுத்தடி வெண்பா. (குறள் வெண்பா) படியுடையார் பற்றமைந்தக்கண்ணு மடியுடையார் (16) மாண்பயன் எய்தல் அரிது - திருக்குறள், 606. இது பதினாறெழுத்தடி வெண்பா. இவை இரண்டும் நெடிலடி. இனி, வெண்பாவின் ஈற்றடிக்கு இலக்கியம் வருமாறு: (குறள் வெண்பா) பிண்டி மலர்மேற் பிறங்கெரியுட் 1கந்துருள்போல் வண்டு சுழன்று வரும் (5) இஃது ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு (6) - திருக்குறள், 284. இஃது ஆறெழுத்து ஈற்றடி வெண்பா. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் (7) - திருக்குறள், 282. இஃது ஏழெழுத்து ஈற்றடி வெண்பா. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்? (8) திருக்குறள்,237. இஃது எட்டெழுத்து ஈற்றடி வெண்பா. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள (9) திருக்குறள், 222. இஃது ஒன்பதெழுத்து ஈற்றடி வெண்பா. குணம்புரியா மாந்தரையும் கூடுமால் என்னே மணங்கமழும் தாமரைமேல் மாது! (10) இது பத்தெழுத்து ஈற்றடி வெண்பா. ஒழிந்தனவும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி, ஒருசார் ஆசிரியர், ஈற்றடி ஒழித்து ஏனையடி எழுத்து ஒத்து வருவனவற்றைக் கட்டளை வெண்பா என்றும், ஒவ்வாது வருவனவற்றைக் கலம்பக வெண்பா என்றும், ஈற்றடி எழுத்தும் ஏனையடி எழுத்தும் ஒத்து வருவனவற்றைச் சமநடை வெண்பா என்றும், ஈற்றடி எழுத்தினோடு ஏனையடி எழுத்துச் சில ஒத்தும் ஒவ்வாதும் வருவனவற்றைச் சமவியல் வெண்பா என்றும், ஈற்றடி எழுத்து மிக்கு ஏனையடி எழுத்துக் குறைந்து தம்முள் ஒவ்வாது வருவனவற்றை 1 மயூரவியல் வெண்பா என்றும் வழங்குவர். அவற்றுட் சில வருமாறு: (கட்டளை வெண்பா) நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி (13) அடைப்பையா ! கோறா, எனலும் - அடைப்பையான் கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் தலைபெறினும் எள்ளாதி யாங்காண் டலை - யா. வி. 9. மேற். எனவும், வெறிகமழ் *j©òwÉ‹ வீங்கி உகளும் (13) மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்னகை அஉ அறியா அறிவில் இடைமகனே ! நொஅலையல் நின்னாட்டை நீ - யா. வி. 7. 37. மேற். எனவும், மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்! (12) பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத் தொடுத்து மொழிவ *jÄœ” (இடைக்காடனார் பாடல்) எனவும், கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற் றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம் - தண்டியலங்காரம், 62. மேற். எனவும், நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு (12) சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான் (12) பாலைநல் வாயின் மகள் - யா. வி. 59. மேற். எனவும், இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண் (14) டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச் செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால் கிஞ்சுவாய் அஞ்சொற் கிளி எனவும் இவை ஈற்றடியல்லா ஏனையடியெல்லாம் எழுத்து ஒத்து வந்தமையாற் கட்டளை வெண்பா. மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் (16) அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் (15) பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற (14) இன்சகள ஆசனத்தான் ஈடு - யா. வி. 57. மேற். எனவும், தானோரும் எம்முள்ளி வாராது தானண்ணி (11) வானோரை வாட உரப்புங்கொல் - வானோர் (11) முடிக்கோடி தேய்த்தான் மூவமிழ்தம் தந்தான் (12) அடிக்கோடி மீளாத அன்பு? எனவும் இவை எல்லா அடியும் எழுத்து ஒவ்வாது வந்தமை யால், கலம்பக வெண்பா. (சமநடை வெண்பா) சென்று புரிந்து திரிந்து செருவென்றான் (9) மின்றிகழும் வெண்குடைக்கீழ் வேந்து (9) இஃது ஈற்றடியும் ஏனை அடியும் எழுத்து ஒத்து வந்தமை யால், சமநடை வெண்பா. சமவியல் வெண்பா வந்தவழிக் கண்டு கொள்க. (மயூரவியல் வெண்பா) குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு (8) மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது (8) பெரும்பிணியை நீக்குவதாம் பீடு (10) இஃது ஈற்றடி மிக்கு, ஏனை அடி குறைந்து, தம்முள் ஒவ்வாது வந்தமையால், 1மயூரவியல் வெண்பா. இனி, பதின்மூன்று எழுத்தடி முதலாகிய 2இலக்கணக்கலி எட்டும் வருமாறு: (இலக்கணக் கலிப்பா) 3அன்றுதான் குடையாக வின்றுநளி நீர்சோரக் குன்றெடுத்து மழைகாத்த கோலப்பூண் மார்பினோய் ! இது பதின்மூன்று எழுத்தடிக் கலிப்பா. மாசற்ற மதிபோல வனப்புற்ற முகங்கண்டு தூசுற்ற துகின் மருங்கிற் றுடிநடு வெனத்தோன்றி இது பதினான்கு எழுத்தடிக் கலிப்பா. இவை இரண்டும் அளவடி. ஊனுடை உழுவையின் உதிரந்தோய் உகிர்போல வேனிலை எதிர்கொண்டு முருக்கெல்லாம் அரும்பினவே இது பதினைந்து எழுத்தடிக் கலிப்பா. வாயாநோய் மருந்தாகி வருந்தியநாள் இதுவன்றோ? இது பதினாறெழுத்தடிக் கலிப்பா. மாவலிசேர் வரைமார்பின் இகல்வெய்யோன் மனமகிழ இது பதினேழெழுத்தடிக் கலிப்பா. இவை மூன்றும் நெடிலடி. அறனின்றமிழ் கையொழியான் அவலங்கொண் டதுநினையான் இது பதினெட்டெழுத்தடிக் கலிப்பா. உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிவொல்லாய் செலவலித்தல் இது பத்தொன்பது எழுத்தடிக் கலிப்பா. நிலங்கிளையா நெடிதுயிரா நிறைதளரா நிரைவளையாள் கலந்திருந்தார் கதுப்புளரார் கயல்கடிந்த கருந்தடங்கண் இஃது இருபஏதழுத்தடிக் கலிப்பா இவை மூன்றும் கழிநெடிலடி. இவையெல்லாம் குற்றிகர குற்றுகரங்களும், ஒற்றும், ஆய்தமும் நீக்கி எழுத்தெண்ணி முதலடியே கொள்க. இனி, நாலெழுத்து முதலாகப் பன்னிரண்டு எழுத்தின் காறும் உயர்ந்த ஒன்பது நிலமும் பெற்ற இருசீரடி வஞ்சிப்பா வருமாறு: (வஞ்சிப்பா) கல்சேர்ந்து கால்தோன்று மல்குநீர் புனல்பரப்பும் இது நாலெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. தண்பால் வெங்கள்ளின் இஃது ஐந்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. கண்டுதண்டாக் கட்கின்பத் துண்டுதண்டா மிகுவளத்தான் இஃது ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. இவை மூன்றும் குறளடி. 1காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின் - யா. வி. 93. மேற். இஃது ஏழெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்து - யா. வி. 93. மேற். இஃது எட்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. 2நிலனெளியத் தொகுபீண்டி - யா. வி. 93. மேற். இஃது ஒன்பது எழுத்து இருசீரடி வஞ்சிப்பா. இவை மூன்றும் சிந்தடி. அகன்ஞாலம் நிலைதுளங்கினும் பகன்ஞாயிற் றிருள்பரப்பினும் இது பத்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. தாள், களங்கொளக் கழல் பறைந்தன - புறநானூறு, 4. இது பதினோரெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. குருகிரிதலின் கிளிகடியினர் இது பன்னிரண்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. இவை மூன்றும் அளவடி. இனி எட்டெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த முச்சீரடி வஞ்சிப்பா வருமாறு: அள்ளற் பள்ளத் தகன் சோணாட்டு - யா. வி. 94. மேற். எனவும், வேங்கை வாயில் வியன்குன்றூர் - யா.வி. 94. மேற். எனவும் இவை எட்டெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா. மதுவிரவிய மலர்கஞலிய வயற்றாமரை இது பதினேழெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா. கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன (16) வடிவாலெயிற் றழலுளைய வள்ளுகிர (15) பணையெருத்தின் இணையரிமான் அணையேறித் (14) துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன் (13) புணையெனத், திருவுரு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே - யா. வி. 90. மேற். இதனுட் பதினாறும், பதினைந்தும், பதினான்கும், பதின் மூன்றும் எழுத்து வந்தன. ஒன்பதும், பத்தும், பதினொன்றும், பன்னிரண்டும் ஆகிய எழுத்தான் வந்த முச்சீரடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டுகொள்க. எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் கட்டளைக்கலி என்றும், ஒவ்வாது வருவனவற்றைக் கலம் பகக்கலி என்றும் வழங்குவர். இவ்வாறே கட்டளை ஆசிரியம், கலம்பக ஆசிரியம் என்றும்; கட்டளை வஞ்சி, கலம்பக வஞ்சி என்றும் வழங்கப்படும். (கலி விருத்தம்) கட்டளை கலம்பகம் சமநடை சமவியம் மட்டவிழ் குழலினாய் ! மயூர சமவியம் ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க் கிட்டமா யவர்கள்வெண் பாவின் பேர்களே இதனை விரித்து உரைத்துக்கொள்க. இனி, இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப் பாவினம் வருமாறு: (தரவுக் கொச்சகம்) கொடிகொடியொடு மிடைவனவுள குடைகுடையொடு கடிநறுமலர் சொரிவனவுள கடிமதிலுள கவரியுமுள குடைமிசையுள அடிவழிபடும் அமரருமுளர் *mUbshËts ரரியணையுள இடிமுரசமும் அதிர்வனவுள இனிதினிதவ ரதுதுறவுமே என வரும். இனிச் சந்தங்கட்கும் தாண்டகங்கட்கும் பிரத்தாரம் முதலாகிய ஆறு 1பிரத்தியமும் சொல்லப்படும். என்னை? (நேரிசை வெண்பா) சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்திலகு வந்த முறைமை வழுவாவேல் - முந்தை அளவியலாம் என்றுரைப்பர் ; அவ்வாறன் றாகில் அளவழி யாமென்ப ரால் - யா. வி. பக். 476. இதனை விரித்து உரைத்துக்கொள்க. அளவியற்சந்தத்திற்கும் அளவியற்றாண்டகத்திற்கும் 1பிரத்தாரமும் நட்டமும் உத்திட்டமும், ஒன்று இரண்டு மூன்று என்னும் முறைமையான் ஏறச் சொன்ன இலகு செய்கையும் எண்ணும் அலகிட்டு, நில அளவையும் என்னும் இவ்வாறு பிரத்தியமும் சொல்லப்படும். பிரத்தரிக்கும்படி: 2குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம் குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு - யா.வி. பக். 507. இது பிரத்தரிப்பதற்கு இலக்கணம். பிரத்தாரம் எனினும், உறழ்ச்சி எனினும் ஒக்கும். நட்டம் என்பது, அவ்வாறு பிரத்தரிக்கப்பட்டனவற்றுள் இனைத்தாவது என்று அறிவதன் அலகு நிலை அறியேன் என்றால், சொல்லப்பட்ட பிரத்தார எண்ணினை அரை செய்து ஓர் இலகு வைத்துப் பாகஞ் செய்யப் போதாதவழி ஆண்டு ஓர் உருவிட்டுப் பாகம் செய்து, ஆண்டு ஒரு குரு இடுக. இவ்வாறே பிரத்தார அடி எழுத்துள்ளளவும் வைக்க. அதற்கு இலக்கணம்: (நேரிசை வெண்பா) இனைத்தாவ தென்றறிவன் ஈடறியேன் என்றால் அனைத்தரைசெய் தாண்டிலகு வைக்க - நினைத்தனை விள்ளத்தான் ஆகாதேல் வேறோர் *cUÉ£L¡ கொள்ளத்தான் ஆகும் குரு - வீரசோ. 133. மேற்இ. இது நட்டத்திற்கு இலக்கணம். நட்டம் எனினும் கேடு எனினும் ஒக்கும். இனி, பிரத்தரித்ததன் அலகிருக்கை அறிவேன்; எனைத் தாவது என்று அதன் எண் அறியேன் என்றால், அதன் பிரத் தாரத்தின்மேல் ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு என்று இவ்வாறே ஒன்று முதலாக இரட்டித்தது முடிவளவும் ஏறவிட்டு, இலகுவின்மேல் நின்ற இலக்கங்களைக் கூட்டி, அதனோடு ஒரு குரு இட்டு, அதன் அளவினால் இனைத்தாம் விருத்தம் என்று சொல்லுக. இதற்கு இலக்கணம்: (நேரிசை வெண்பா) ஒன்றிரண்டு நான்கெட்டென் றுள்ளளவும் ஓர்த்திரட்டிக் தென்றும் இலகுவின்மேல் எண்களோ - டொன்றிட்டு வைத்த முறைமை *tGthik¡ கட்டுரைப்ப துத்திட்டம் ; சுட்டெனினும் ஒன்று - வீரசோ. 134. மேற். இனி, ஓர் இலகு முதலாவுடைய விருத்தம் இன்னதனை என்று விகற்பித்துச் சொல்லுமாறு: விருத்த அடியுள் எழுத்து எனைத்து உள அவ்வனைத்தும் ஒன்று முதல் ஒன்று 1உத்தரம் அனுலோமமாக மேல் ஏறவிட்டுப் பின்னை முதல் இருந்த ஒன்றினைச் சிதையாதே அதனை இரண்டாவதனிற் கூட்டி, இரண்டாவதனை மூன்றாவதனிற் கூட்டி, மூன்றாவதனை நான்காவதனிற் கூட்டி, இவ்வாறே இறுதி ஒழித்து இறுதி அல்லனவும் கூட்டி, மீட்டும் அதன் அயல் அளவும் கூட்டி, இவ்வாறே கீழ் முதல் வைத்த ஒன்றின் முதல் அளவு அயல் அளவும் கூட்டி, முறையானே மேனின்றும் கீழ் இழிய ஒன்று முதல் ஒன்று உத்தரமாக இலக்கம் இட்டு, மேலைக் 2குப்பையினின்றும் கீழை ஒன்றின்காறும் நிறுத்தி, மேலைக் குப்பையில் விருத்தம் ஓர் இலகு உடையனவாகவும், இரண்டாம் குப்பையில் விருத்தம் இரண்டிலகு உடையனவாகவும், மூன்றாம் குப்பையில் விருத்தம் மூன்றிலகு உடையனவாகவும், நான்காம் குப்பையில் விருத்தம் நான்கிலகு உடையனவாகவும், இவ்வாறே கடைக்கண் நின்ற முற்றிலகு விருத்தத்தளவும் ஒன்று உத்தரமாக எண்ணிக்கொள்க. எல்லாக் குப்பை இலகு விருத்தங்களையும் உடன் கூட்டிப் பின்னை ஒரு முழுக் குரு விருத்தம் உடன் கூட்டிச் சொல்ல, அச்சாதியிற் பிறந்த விருத்தங்கள் எல்லாவற்றிற்கும் தொகையாம். அதற்கு இலக்கணம்: (நேரிசை வெண்பா) ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டொன்ப *bj‹Wa® விச்சை அளவொரீஇ - ஒன்றிலொன் றிட்டிட் டிறுதி ஒழித்தொழிய ஏகாதி ஒட்டி இலகுகொண் டொட்டு - வீரசோ. 135. மேற். இனி இவ்விருத்தத்தில் விரிந்த விருத்தச் சாதியில் இன்னதனை விருத்தம், இன்னதனை எழுத்து, இன்னதனைக் குரு, இன்னதனை இலகு, இன்னதனை மாத்திரை என்று வரையறுத்துக் கூறுமாறு. ஒரு விருத்தத்தினைப் பிரத்தார முறையால் உறழ்ந்து பெற்ற விருத்தங்களைத் திரட்டி ஐந்து படி வைத்து, முதற்படி ஒழித்து ஒழிந்த நான்கு படியினையும் விருத்தத்து ஓரடியுள் எழுத்து எண்ணிக்கொண்டு அவ்வெழுத்துக்களால் மாற, மூன்றாம் படியினையும் நான்காம் படியினையும் அரை செய்து, முடிவிற் படியில் அதன் பாதம் ஒரு பத்திரமாகக் கூட்டினால், முதற்படி, விருத்தங்களது அளவையாம்: இரண்டாம் படி, எழுத்துக்களது அளவையாம்; மூன்றாம் படியும் நான்காம் படியும், குரு இலகுகளது அளவையாம்; ஐந்தாம் படி, மாத்திரைகளது அளவையாம். அதற்கு இலக்கணம்: (இன்னிசை வெண்பா) விருத்த *ÉU¤âÆid வேறைந்தா நாட்டி விருத்த அடியெழுத்தால் மாறி- அருத்திக்க மூன்றொடு நான்காய குப்பை ஒருக்கதன் பாதியுடன் வைக்கமே லே - வீரசோ. 136. மேற். விருத்த *ÉU¤âaj‹ வீவில் எழுத்துக் குருக்களோ டேனைக் குறைவில் இலகு வருக்கத்தின் மாத்திரை என்றிவை ஐந்தும் விகற்பித்து வேண்டப் படும் - வீரசோ. 136. மேற். இனி, பிரத்தரித்த விருத்தங்களது விரலளவை கூறுமாறு: *ÉǤj அப்பிரத்தார விருத்தங்களை இரட்டித்து ஒன்றுகளைய, விரல் அளவையாம். (குறள் வெண்பா) பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய விரற்களவை யாகி விடும் என்றாராகலின். அவ்விரல் பன்னிரண்டு கொண்டது சாணாம். சாண் இரண்டு கொண்டது முழமாம். முழம் நான்கு கொண்டது கோலாம். கோல் ஐஞ்ஞூறு கொண்டது கூப்பீடாம். கூப்பீடு நான்கு கொண்டது காதமாம். இவ்வாறு வகுத்துப் பிழையாமற் கூறுக. அதற்கு இலக்கணம். (கலி விருத்தம்) பெருக்கிய வாறு பிரத்தரித் தாங்கட் டருக்கிய நாவலர் சந்தத் தரணி இரட்டித் ததனந்தத் தொன்று களைய விரற்கள வாமென்று வேண்டுவர் தாமே (நேரிசை வெண்பா) நாலிருசாண் கொண்டத நற்கோலாம்; ஐந்நூறு கோலியைந்த நீளம் குரோசமே ;- நாலு குரோசமோர் காவதமாம் ;- குன்றாத சாணும் விரோதந்தீர் முந்நால் விரல் (குறள் வெண்பா) முந்நால் விரற்சாண் இரண்டுகை நான்குகோல் ஐஞ்ஞூறு கூப்பீ டளவு (நேரிசை வெண்பா) பரமாணுத் தேர்த்துகள் பஞ்சித்துய் எஞ்சா மயிர்மணல் 1ஐயவி எண்ணெல்-அ விரலளவும் எட்டெட்டா ஏறும் எழில்விரல் ஆதியா ஒட்டினவும் நூன்முறையால் ஒட்டு (குறள் வெண்பா) படையொடுதீ நீர்வளியாற் பங்கப் படாத முடிபொருள் முந்தை அணு இவற்றை விரித்து உரைத்துக் கொள்க. (நேரிசை வெண்பா) உறழ்ச்சிகே டுத்திட்டம் ஒன்றிரண்டென் றேத்தித் திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங் கெண்ணி நிலவளவோ டேய்ந்த இருமூன்றே திண்ணியோர் கண்ட தெளிவு இது சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியமும் சொன்னவாறு. இனி, ஒருசார் ஆசிரியர், உறழ்ச்சி நில அளவுகளை விகற்பித்துச் சொல்லுமாறு. உறழ்ச்சி இரு வகைப்படும்: முற்றக் குருவே வைத்து உறழ்தலும், முற்ற இலகுவே வைத்து உறழ்தலும் என. அவற்றுள் முற்றக் குருவே வைத்து உறழுமாறு: (குறள் வெண்பா) குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம் குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு - யா. வி. பக். 508. எனக் கொள்க. பிரத்தாரம் செய்தற்கு இலக்கணம். (குறள் வெண்பா) 1ஈறு வருக்கித் திழித்திரட்டித் தன்றவற்றான் மாறியுய்த் திங்ஙனே வைத்து எனவும், 2ஆர்த்த படியினெதி ரச்சுன் வருமாயிற் பேர்த்திருகால் வைக்க பெரிது எனவும் கொள்க. (நேரிசை வெண்பா) இரண்டுநான் கெட்டுப் பதினாறு முப்பத் திரண்டொடறு பத்துநான் கென்றாங்- கிரட்டித்தே உற்கிருதி காறும் உலையா முறைமையால் நற்குரைப்பான் நாவலனா வான் - வீரசோ. 187. மேற். ஒன்றாதி என்றார் வடபுலவோர் சந்தங்கட் கென்றார் இருமூன் றெழுத்தாதி - தென்றமிழாற் சீரிரண்டாம் என்றுரைத்தார் எல்லாரும் மேன்மூன்றோ டோரிரண்டாம் என்றார் உயர்வு - (குறள் வெண்பா) ஈரைஞ்ஞூற் றெண்மூன்றாம் என்பர் பிரத்தரித்தால் ஈரைந்தாம் சந்தத்திற் கெண் - வீரசோ. 137. மேற். பத்தாம் சந்தத்திற்கு எண், ஆயிரத்து இருபத்து நான்கு என்றவாறு. (குறள் வெண்பா) மதிலிரண்டு மாவாறு வாய்ந்த வசுக்கள் பதினைந்தாம் சந்தப் பரப்பு - வீரசோ. 137. மேற். பதினைந்தாம் சந்தத்திற்குத் தொகை, முப்பத்தீராயிரத்து எழுநூற்று அறுபத்தெட்டு. (குறள் வெண்பா) உருவுபா ழென்பரவை யோரெட்டைந் தேழா றிருபதாம் சந்தத்தின் எண் இருபதாம் சந்தத்திற்குத் தொகை, பத்து லட்சத்து நாற்பத் தெண்ணாயிர்த்து ஐஞ்ஞூற்று எழுபத்தாறு. (குறள் வெண்பா) ஆறேழ் உருஷ்பாழ் எட்டோடு மங்கலமாம் ஆறோடுநான் குற்கிருதிக் காம் இருபத்தாறாம் சந்தத்திற்குத் தொகை, ஆறு கோடியே எழுபத் தொரு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து நாலு. (குறள் வெண்பா) ஏற இரட்டித் திழிய அரைசெய்து கூறுக தேறும் பொருள் உத்தம் என்னும் ஒரெழுத்து முதற் சந்தத்திற்குப் பிரத்தார எண்தொகை 2; இரண்டாம் சந்தத்திற்கு 4; மூன்றாம் சந்தத்திற்கு 8; நாலாம் சந்தத்திற்கு 16; ஐந்தாம் சந்தத்திற்கு 32; ஆறாம் சந்தத்திற்கு 64; ஏழாம் சந்தத்திற்கு 128; எட்டாம் சந்தத்திற்கு 256; ஒன்பதாம் சந்தத்திற்கு 512; பத்தாம் சந்தத்திற்கு 1,024; பதினோராம் சந்தத்திற்கு 2,048; பன்னிரண்டாம் சந்தத்திற்கு 4,096; பதின்மூன்றாம் சந்தத்திற்கு 8,192; பதினான்காம் சந்தத்திற்கு 16, 384; பதினைந்தாம் சந்தத்திற்கு 32,768; பதினாறாம் சந்தத்திற்கு 65,536; பதினேழாம் சந்தத்திற்கு 131, 072; பதினெட்டாம் சந்தத்திற்கு 262, 144; பத்தொன்பதாம் சந்தத்திற்கு 524,288; இருபதாம் சந்தத்திற்கு 10, 48, 576; இருபத்தோராம் சந்தத்திற்கு 20, 97,152; இருபத்திரண்டாம் சந்தத்திற்கு 41,94,304; இருபத்து மூன்றாம் சந்தத்திற்கு 83,88,608; இருபத்துநான்காம் சந்தத்திற்கு 1,67,77,216; இருபத்தைந்தாம் சந்தத்திற்கு 3,35,54,432; உற்கிருதி என்னும் இருபத்தாறாம் சந்தத்திற்குப் பிரத்தார அடித்தொகை, 6,71,08,864; இது பிரத்தார எண்களின் தொகை, 1உத்தம் என்னும் ஓரெழுத்துச் சந்தம் முதலாக, உற்கருதி என்னும் 2இருபத்தாறு எழுத்துச் சந்தத்தளவும் முறையானே கண்டுகொள்க. பிரத்தரித்து நின்ற சந்தத்தினுள் இரண்டு களைய, அதன் கீழ்ப் போன சந்தம் எல்லாவற்றிற்கும் தொகையாம். இனி, விரல் அளவு சொல்லுமாறு: (குறள் வெண்பா) பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய விரற்களவை யாகி விடும் ஆதி இரட்டித் ததனகத் தொன்றிடினும் வேறுபா டில்லை விரல் - வீரசோ. 137. மேற். ஒருபடி நீக்கி ஒழிந்த தரைசெய்தால் ஆதி யதற்கு விரல் (நேரிசை வெண்பா) மூன்றேழு மூவைந்து முப்பதின்மேல் ஓருருவு மூன்றுடை மூவிருபான் ஒன்றிரண்டேழ்- தோன்ற இரட்டித்தாங் கோருருவிட் டெண்ணுவான் காணும் விரற்றொகையா நின்ற விரி - வீரசோ. 137. மேற். முதல் விருத்தத்தின் பிரத்தார நில அளவை விரல் மூன்று; இரண்டாவதன் நில அளவை விரல் ஏழு; மூன்றாவதன் நில அளவை விரல் பதினைந்து ; நாலாவதன் நில அளவை விரல் முப்பத்தொன்று; ஐந்தாவதன் நில அளவை விரல் அறுபத்து மூன்று ; ஆறாவதன் நில அளவை விரல் நூற்றிருபத்தேழு; ஏழாவதன் நில அளவை விரல் இருநூற்று ஐம்பத்தைந்து ; எட்டாவதன் நில அளவை விரல் ஐந்நூற்றுப் பதினொன்று ; ஒன்பதாவதன் நில அளவை விரல் ஆயிரத்து இருபத்து மூன்று; பத்தாவதன் நில அளவை விரல் இரண்டாயிரத்து நாற்பத்தேழு; பதினொன்றாவதன் நில அளவை விரல் நாலாயிரத்துத் தொண் ணூற்றைந்து; பன்னிரண்டாவதன் நில அளவை விரல் எண்ணா யிரத்து நூற்றுத் தொண்ணூற்றொன்று ; பதின்மூன்றாவதன் நில அளவை விரல் பதினாயிரத்து முந்நூற்று எண்பத்து மூன்று; பதினாலாவதன் நில அளவை விரல் முப்பத்தீராயிரத்து எழு நூற்று அறுபத்தேழு; பதினைந்தாவதன் நில அளவை விரல் அறுபத்தையாயிரத்து ஐந்நூற்று முப்பத்தைந்து ; பதினாறாவதன் நில அளவை விரல் லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுபத் தொன்று; பதினேழாவதன் நில அளவைவிரல் இரண்டு லட்சத்து அறுபத்தீராயிரத்து நூற்று நாற்பத்து மூன்று ; பதினெட்டாவதன் நில அளவை விரல் ஐந்து லட்சத்து இருபத்து நாலாயிரத்து இருநூற்று எண்பத்தேழு; பத்தொன்ப தாவதன் நில அளவை விரல் பத்து லட்சத்து நாற்பத் தெண்ணாயிரத்து ஐந்நூற்று எழுபத்தைந்து; இருபதாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் இருபது லட்சத்துத் தொண் ணூற்றேழாயிரத்து நூற்று ஐம்பத்தொன்று; இருபத்தோராஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் நாற்பத்தொரு லட்சத்துத் தொண்ணூற்று நாலாயிரத்து முந்நூற்று மூன்று; இருபத்திரண்டாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் எண்பத்து மூன்று லட்சத்து எண்பத்தெண்ணாயிரத்து அறு நூற்றேழு; இருபத்து மூன்றாஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் ஒரு கோடியே அறுபத்தேழு லட்சத்து எழுபத் தேழாயிரத்து இரு நூற்றுப் பதினைந்து; இருபத்து நாலாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் மூன்று கோடியே முப்பத்தைந்து லட்சத்து ஐம்பத்து நாலாயிரத்து நானூற்று முப்பத்தொன்று ; இருபத்தைந்தாவது சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் ஆறு கோடியே எழுபத்தொரு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று; உற்கிருதி என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் பதின்மூன்று கோடியே நாற்பத்திரண்டு லட்சத்துப் பதி னேழாயிரத்து எழுநூற்று இருபத்தேழு. இவை உத்தம் முதல் உற்கிரதி ஈறாகிய சம விருத்தங்களது பிரத்தார நில அளவை விரல்; முறையானே கண்டு கொள்க. (குறள் வெண்பா) இராயிரத்து நாற்பத்தே ழென்றுரைப்பர் பத்து விராயதற்குச் சொன்ன விரல் ஆறைந்தைந் தையே ழெனவுரைப்பர் மூவைந்து மேவிய பூமி விரல் இரண்டுபாழ் மும்மூன்றேழ் ஏகமைந் தொன்றே வருமிருபான் பூமி விரல் ஒன்றுதீ நான்கிரண்டோ டொன்றேழ் முனியிரண்டேழ் நற்கிருதிச் சந்த விரல் விரலைச் சாணும், முழமும், கோலும், கூப்பீடும் காதமும் செய்து சொல்லுமாறு: (குறள் வெண்பா) முந்நால் விரல்சாண் இரண்டுகை நான்குகோல் ஐஞ்ஞூறு கூப்பீ டளவு இதன் வழியே ஒட்டிக் கொள்க. உற்கிருதி என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் நில அளவை அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதின் காதமும், நூற்றொருகோலும், ஒரு முழமும், ஏழு விரலும் எனக் கொள்க. (குறள் வெண்பா) ஏற்புடைய காதம் குறைந்த எழுநூறு நூற்றொருகோல் கைவிரல் ஏழு பிறவும் இவ்வாறே நில அளவை கண்டு கொள்க. இனி, உத்தம் முதலாக உற்கிருதி ஈறாகக் கிடந்த இருபத் தாறு சந்தங்கட்கும் முறையானே பிரத்தார நில அளவை சொல்லுமாறு: உத்தத்தின் விரல் அளவை மூவிரல்; இரண்டாவதன் விரல் அளவை ஏழு ; மூன்றவாதன் விரல் அளவை. சாணே மூவிரல் ; (இவை மூன்று சந்தமும் தமிழ்க்கு உரிய அல்லாதன) நான் காவதற்கு முழமே ஏழு விரல் ; ஐந்தாவதற்கு இரு முழங்கை சாணே மூவிரல் ; ஆறாவதற்கு ஒரு கோலே ஒரு முழமே ஏழு விரல் ; ஏழவாதற்கு இரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; எட்டாவதற்கு ஐங்கோலே ஒரு முழமே ஏழு விரல்; ஒன்பதா வதற்கு பதின்கோலே இருமுழங்கை சாணே மூவிரல்; பத்தா வதற்கு இருபத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதி னொன்றாவதற்கு நாற்பத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பன்னிரண்டாவதற்கு எண்பத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதின்மூன்றாவதற்கு நூற்றெழுபதின் கோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பதினான்காவதற்கு முந்நூற்று நாற்பத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதினைந்தாவதற்குக் கூப்பீடே நூற்றெண்பத்திருகோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பதினாறாவதற்கு இரண்டு கூப்பீடே முந்நூற்றறுபத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல் ; பதினேழாவதற்கு ஒரு காதமே ஒரு கூப்பீடே இருநூற்று முப்பதின் கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; பதினெட்டாவதற்கு இரு காதமே இரண்டு கூப்பீடே நானூற்றறுபத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பத்தொன்பதாவதற்கு ஐங்காதமே ஒரு T¥Õnl* நூற்று இருபத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; இருபதாவதற்குப் பதின் காதமே மூன்று கூப்பீடே முந்நூற்று நாற்பத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல் ; இருபத் தொன்றாவதற்கு இருபத்தொரு காதமே மூன்று கூப்பீடே நூற்றுத்தொண்ணூறு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; இருபத்திரண்டாவதற்கு நாற்பத்து மூன்று காதமே இரண்டு கூப்பீடே முந்நூற்றெண்பத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; இருபத்து மூன்றாவதற்கு எண்பத்தேழு காதமே ஒரு கூப்பீடே இருநூற்று அறுபத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல். இருபத்து நான்காவதற்கு நூற்றெழுபத்து நான்கு காதமே மூன்று கூப்பீடே இருபத்தைங்கோலே ஒரு முழமே ஏழு விரல்; இருபத்தைந்தாவதற்கு முந்நூற்று நாற் பத்தொன்பதின் காதமே இரண்டு கூப்பீடே *I«gâ‹ கோலே இரு முழமேகைச் சாணே மூவிரல். உற்கிருதி என்னும் இரு பத்தாறாவதற்கு அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதின் காதமே நூற்றொரு கோலே ஒரு முழமே ஏழு விரல் எனக் கொள்க. இனி, உத்தம் முதலாக உற்கிருதி ஈறாகக் கிடந்த விருத்தச் சந்தங்களின் எழுத்து வரையறுத்துச் சொல்லுமாறு: ஓர் அடியுள் எழுத்து எண்ணி, அவற்றை நான்கினால் மாற, நான்கடிக்கும் எழுத்தாம் எனக் கொள்க. (குறள் வெண்பா) அடியுள் எழுத்தினை நான்கினால் அரைசெய்து முடியுமாம் நான்கடிக்கும் எண் அல்லது, (நேரிசை வெண்பா) சந்த எழுத்தலகிற் றள்ளி அரைசெய்து 1சந்த எழுத்தின் அரைகூட்ட - முந்துகுருப் பாதத் தளவாகும் ; பாதமே மாறிவர ஏதமில் நான்கடிக்கும் எண் இவ்வுரைச் சூத்திரத்தின் கருத்தாவது: தான் வேண்டப் பட்ட சந்தத்தின் எழுத்துக்களை வருக்கித்து அரை செய்து, அவ்வருக்க மூலத்துட் சந்த எழுத்தின் அரை கூட்ட, அச்சந்தங்கள் அள வெழுத்துச் சங்கையாம் ; அவற்றை நான்கினால் மாற, நான் கடிக்கும் எழுத்தாம். உத்தம் என்னும் முதற்சந்தத்திற்கும் எழுத்து நான்கு ; இரண்டாவதற்கு எழுத்து எட்டு; மூன்றாவதற்குப் பன்னிரண்டு; நான்காவதற்குப் பதினாறு ; ஐந்தாவதற்கு இருபது ; ஆறாவதற்கு இருபத்துநாலு ; ஏழாவதற்கு இருபத்தெட்டு ; எட்டாவதற்கு முப்பத்திரண்டு ; ஒன்பதாவதற்கு முப்பத்தாறு ; பத்தாவதற்கு நாற்பது; பதினொன்றாவதற்கு நாற்பத்து நாலு; பன்னிரண்டா வதற்கு நாற்பத்தெட்டு, பதின்மூன்றாவதற்கு ஐம்பத்திரண்டு; பதினான்காவதற்கு ஐம்பத்தாறு பதினைந்தாவதற்கு அறுபது பதினாறாவதற்கு அறுபத்து நான்கு பதினேழாவதற்கு அறுபத் தெட்டு ; பதினெட்டாவதற்கு எழுபத்திரண்டு; பத்தொன்பதா வதற்கு எழுபத்தாறு; இருபதாவதற்கு எண்பது ; இருபத் தொன்றாவதற்கு எண்பத்து நாலு ; இருபத்திரண்டாவதற்கு எண்பத்தெட்டு ; இருபத்து மூன்றாவதற்குத் தொண்ணூற்றி ரண்டு; இருபத்து நான்காவதற்கு தொண்ணுற்றாறு ; இருபத் தைந்தாவதற்கு நூறு; இருபத்தாறாவதற்கு நூற்றுநாலு. இனி, அளவழிச் சந்தங்கட்குப் பெயர் சொல்லுமாறு: 2அளவழிச் சந்தங்களிற் சீர் ஒத்து ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்ததனை நிசாத்து என்றும், இரண்டெழுத்துக் குறைந்து வந்ததனை விராட்டு என்றும், ஓரெழுத்து மிக்கு வந்ததனைப் புரிக்கு என்றும், இரண்டெழுத்து மிக்கு வந்ததனைச் சுராட்டு என்றும்; முதலடியும் நான்காமடியும் சீர் ஒத்து ஓர் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் சீர் ஒத்து சீர் எழுத்து மிக்கதனை யவமத்திமம் என்றும் தோரையிடைச் செய்யுள் என்றும்; இடை இரண்டடியும் குறைந்ததனைப் பிபீலிகா மத்திமம் என்றும் எறுப்பிடைச் செய்யுள் என்றும்; முதலிரண்டடியும் ஒத்துக் கடையிரண்டடியும் எழுத்து மிக்கு வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒத்து எழுந்து மிக்குக் கடையிரண்டடியும் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து கடையிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவனவற்றையும், ஒன்றிடை விட்டுக் குன்றி வருவனவற்றையும், ஒன்றிடை யிட்டு மிக்கும் குறைந்தும் வருவனவற்றையும் பாதிச்சமச் செய்யுள் என்றும்; இவ்வாறின்றிச் சீர் ஒத்து மிக்கும் குறைந்தும் வருவன வற்றை அளவழிப்பையுட் சந்தம் என்றும் வேண்டுவர். தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர் ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர். அவற்றுட் சில வருமாறு: (கலி விருத்தம்) பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (12) செங்கயல் இனநிரை திளைக்கும் செல்வமும் (13) மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி (13) அங்கயற் பிறழ்ச்சியும் *mKj நீரவே (13) - சூளாமணி, 8. இது சீர் ஒத்து, ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்தமை யால் நிசாத்து. கொல்லைக் கொன்றைக் கொழுநன் றன்னை (9) மல்லற் பொழில்வாய் மணியேர் முறுவல் (11) முல்லைக் குறமா மடவாள் முறுகப் (11) புல்லிக் குளிரப் பொழியாய் புயலே! (11) இஃது ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீர் ஒத்து வந்தமையால், விராட்டு. என்னை? (குறள் வெண்பா) ஓரெழுத்துக் குன்றின் நிசாத்தாம் ; விராட்டாகும் ஈரெழுத்துக் குன்றும் எனின், என்பவாகலின். (வஞ்சித்துறை) பேடையை இரும்போத்துத் ((7) தோகையால் வெயின்மறைக்கும் (8) காடகம் இறந்தார்க்கே (7) ஓடுமென் மனனேகாண் (7) - யா. வி. 91. மேற். இஃது ஓரடியுள் ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமையால் புரிக்கு. (கலி விருத்தம்) கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன் (12) றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர் (12) அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள; (12) மலையென நிவந்துள மதலை மாடமே (14) இஃது இரண்டெழுத்து ஓரடியுள் மிக்குச் சீர் ஒத்து வந்தமை யால், சுராட்டு. என்னை? (குறள் வெண்பா) ஓரெழுத்து மிக்காற் புரிக்காம் ; சுராட்டாகும் ஈரெழுத்து மிக்க தெனின் என்பவாகலின். (வஞ்சித்துறை) மல்லன்மா மழையார்ப்பக் (7) கொல்லைவாய்க் குருந்திளகின; (9) முல்லைவாய் முறுவலித்தன; (9) செல்வர்தேர் வரவுண்டாம் (7) இது முதலடியும் நான்காம் அடியும் எழுத்துக் குறைந்து, நடு இரண்டடியும் எழுத்து மிக்கு, நாலடியும் சீரொத்து வந்தமையால், 1யவமத்திமம் எனக் கொள்க. (தரவு கொச்சகம்) பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவா (13) வரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம் (12) விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான் (12) இரவும் பகலும்வந் தென்றலைமே லானே (13) இது முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக் குறைந்து, நாலடியும் சீர் ஒத்து வந்தமையால், பிபீலிகா மத்திமம். என்னை? (குறள் வெண்பா) இடைக்கண் இரண்டடியும் மிக்கால் யவமாம் ; எறுப்பிடையாம் குன்றின் எழுத்து என்பவாகலின். (கலி விருத்தம்) *“âUɉbfh® கற்பகத் தெரியன் மாலையார் (13) உருவிற்கோர் விளக்கமாம் ஒண்பொற் பூங்கொடி (13) முருகற்கும் அனங்கற்கும் எனக்கும் மொய்சடை (14) ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே. (14) - சிந்தாமணி 1488. இது முதலிரண்டடியும் எழுத்துக் குறைந்து, கடையிரண்டடியும் எழுத்துமிக்கு, நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சம விருத்தம். (வஞ்சித்துறை) மடப்பிடியை மதவேழம் (9) தடக்கையால் வெயின்மறைக்கும் (9) இடைச்சுரம் இறந்தார்க்கே (8) நடக்குமென் மனனேகாண் (8) - யா. வி. 91. மேற். இரும்பிடியை இகல்வேழம் (9) பெருங்கையால் வெயின்மறைக்கும் (9) அருஞ்சுரம் இறந்தார்க்கே (8) விரும்புமென் மனனேகாண் (8) - யா. வி. 91ன. மேற். இவை முதலிரண்டடியும் எழுத்து மிக்குக், கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து, நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால் பாதிச் சமச் செய்யுள். (கலி விருத்தம்) அடிமிசை அரசர்கள் *tz§f ஆண்டவன் (14) பொடிமிசை யப்புறம் புரள விப்புறம் (18) இடிமுர சதிரவொர் இளவல் தன்னொடும் (14) கடிமணம் *òFÄtŸ கற்பின் நீர்மையே. (13) - சூளாமணி. 2091. இது முதலடியும் மூன்றாம் அடியும் எழுத்து மிக்கு, இரண்டாம் அடியும் ஈற்றடியும் எழுத்துக் குறைந்து, நாலடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சம விருத்தம். (அறுசீர் விருத்தம்) மெய்யறி விலாமை என்னும் வித்தினிற் பிறந்து வெய்ய (16) கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின் (17) மையற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை (16) நெய்யற நிழற்றும் வேலோய்! நினைத்தனை நினைக்க என்றான் (17) - சூளாமணி 198. இது முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும், ஏனை இரண்டடியும் எழுத்து, மிக்கும் நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால் பாதிச் சம விருத்தம். என்னை? (தரவு கொச்சகம்) முடிவிரண்டும் மிக்கும் முதலிரண்டும் நைந்தும் முடிவிரண்டும் குன்றி முதலிரண்டும் மிக்கும் அடியிடையிட் *l~»í« மிக்கும் வருமேற் படியின்மேற் பாதிச் சமவிருத்த மாமே என்பவாகலின். இதனைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. இனி, சிறப்புடைப் பையுட் சந்தங்களிற் சில வருமாறு: (அறுசீர் விருத்தம்) ஆதியான் அருளாழி தாங்கினான் ஆயிரவெங் கதிரோன் நாணும் (19) சோதியான் சுரர்வணங்கும் திருவடியான் சுடுநீற்றான் நனையப் பட்ட (22) காதியான் அருளிய கதிர்முடி கவித்தாண்டான் மருகன் கண்டாய் (20) ஓதியான் உரைப்பினும் இவன்வலிக்கு நிகராவார் உளரோ வேந்தர் (21) - சூளாமணி. 250 இது முதலடி பத்தொன்பது எழுத்தாயும், இரண்டாமடி இருபத்திரண்டு எழுத்தாயும், மூன்றாமடி இருபது எழுத்தாயும், நான்காம் அடி இருபத்தோ ரெழுத்தாயும் வந்தமையால், அளவழிப்பையுட்சந்தம். (கலி விருத்தம்) மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத் (14) துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும் (13) அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால் (12) அணிவரு சிவகதி அடைவ தின்பமே (14) - சூளாமணி. 2075. இது முதலடியும் முடிவடியும் பதினாலெழுத்தாய், இடையடி இரண்டும் பதின்மூன்றும் பன்னிரண்டுமாய், எழுத்து ஒவ்வாது வந்தமையால், அளவழிப் பையுட்சந்தம். இதனை எறுப் பிடைச் சந்தச் செய்யுள் என்பாரும் உளர். (அறுசீர் விருத்தம்) செஞ்சுடர்க் கடவுட் டிண்டேர் இவுளிகால் திவள வூன்றும் (17) மஞ்சுடை *மகர்வை நெற்றி *வானுழு வாயில் மாடத் (15) தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம் (16) வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே (15) - சூளாமணி. 38. இதுவும் முதலடி பதினேழெழுத்தாய், இரண்டாமடியும் நான்காமடியும் பதினைந்தெழுத்தாய், மூன்றாமடி பதினா றெழுத்தாய் வந்தமையால், அளவழிப் பையுட் சந்தம். இதனைப் பாதிச் சமப் பையுட் சந்தம் என்பாரும் உளர். (அறுசீர் விருத்தம்) என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவர் என்று (15) கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும் (17) சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க ஆங்கோர் (16) கொன்னவில் பூதம் nghY«*Fw©kf‹ இதனைச் சொன்னான்(16) - சூளாமணி. 679. இது முதலடி பதினைந்தெழுத்தாய், இரண்டாமடி பதினேழெழுத்தாய்ப் பின் இரண்டடியும் பதினாறெழுத்தாய் வந்தமையால், அளவழிச் சந்தப் பையுள். பிறவும் இவ்வாறு வருவனவற்றை எல்லாம் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்குக. என்னை? வந்த முறையாற் பெயர்கொடுத் தெல்லாம் தந்தம் முறையால் தழாஅல் வேண்டும் என்பது இலக்கணமாகலின். தாண்டகமும் இவ்வாறே கொள்க. ஒன்றென முடித்தலென், றின்ன வகையால் யாவையும் முடியும் என்பவாகலின். குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவையும் யாப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத் தால் வருவனவற்றின் 1முதற்கண் நிரையசைவரின், ஓரடி பதினேழெழுத்தாம்; முதற்கண் நேரசை வரின் ஓரடி பதி னாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் கொண்டு எண்ணப்படும். என்னை? (நேரிசை வெண்பா) எழுவாய் நிரைவரினாம் ஏழுடைய ஈரைந் தெழுவாய் தனிவரினொன் றெஞ்சும் - வழுவாத கோவையும் செய்யுட்கால் குன்றா பெருகாவென் றேவினார் தொல்லோர் *vG¤J” என்பவாகலின். அவற்றுட் சில வருமாறு: (கட்டளைக் கலித்துறை) இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டாற் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே - யா. வி. 15. மேற். எனவும், காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண்டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே - யா. வி. 53. மேற். எனவும், திண்டேர் வயவரைச் சேர்வைவென் றானன்ன தேங்கவுண்மா வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய வார்சிலம்ப ! நண்போ நினையிற்பொல் லாதது ; நிற்க; என் னன்னுதலாள் கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே! - யா. வி. 96. மேற் எனவும் இவற்றுட் கண்டு கொள்க. (கலி விருத்தம்) முன்றில் எங்கும் *KUfa® பாணியும் சென்று வீழரு வித்திரள் ஓசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம் - சூளாமணி. 13. என்னும் சந்தத்து நேரசை முதலாய் வருமடி பதி னோரெழுத்து ஆயினவாறு. நிரையசை முதலாய் வருமடி, பன்னிரண்டு எழுத்தாம். வரலாறு: (கலி விருத்தம்) அணங்க னாரன ஆடல் முழவமும் கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும் மணங்கொள் வார்முர சும்வயல் ஓதையும் இணங்கி எங்கும் *ïU¡ifaª நாடெல்லாம் - சூளாமணி 15 என இதுனுள் நிரையசை முதலாய் வரும் அடி பன்னிரண்டு எழுத்தாய் வந்தவாறு கண்டு கொள்க. சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்ற இவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய்வரின், ஓரடி பதினான்கு எழுத்தாம்; நிரையசை முதலாய்வரின், ஓரடி பதினைந் தெழுத்தாம். பிங்கல கேசியின் முதற் பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார். அல்லன எல்லாம் ஒக்கும். வரலாறு: (கலி நிலைத்துறை) மூவா முதலா உலகம் ஒருமூன்றும் ஏத்தத் தாவாத வின்பம் தலையா யதுதன்னின் எய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப தேவாதி தேவன் அவன்சே வடிசேர்தும் அன்றே - சிந்தாமணி - (கடவுள் வாழ்த்து) எனவும், வென்றான் வினையின் தொகையா யவிரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒரியாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி யாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் *வினைநீங்கி நின்றார் - சூளாமணி - (கடவுள் வாழ்த்து) எனவும், முன்றான் பெருமைக் கணின்றான் முடிவெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்ற னக்கென் றொன்றா னுமுள்ளான் பிறர்க்கே உறுதிக்கு ழந்தான் அன்றே இறைவன்? அவன்றாள் சரணாங்கள் அன்றே - குண்டலகேசி - (கடவுள் வாழ்த்து) எனவும், நல்லார் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும் இல்லான் உயிர்கட் கிடர்தீர்த் துயிரின்பம் எய்தும் சொல்லான் தருமச் சுடரோன் எழுந்தொன்மை யானான் எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி - நீலகேசி - (கடவுள் வாழ்த்து) எனவும், குற்றங்கள் மூன்றும் இலனாய்க் குணங்கட் கிடனாய் - அமிர்தபதி - (கடவுள் வாழ்த்து) எனவும் இவை நேரசை முதலாய் வந்து ஓரடி பதி னான்கெழுத்து ஆனவாறு கண்டு கொள்க. மதியம் கெடுத்த வயமீன் எனத்தம்பி மாழாந் துதிதற் குரியாள் பணியால் உடனாய வாறும் நிதியின் னெறியின் அவன்றோ ழர்நிரந்த வாறும் பதியின் அகன்று பயந்தா ளைப்பணிந்த வாறும் - சிந்தாமணி. பதிகம் 23. என நிரையசை முதலாய் வந்து, பதினைந்தெழுத்து ஓரடிக்கண் வந்தவாறு கண்டு கொள்க. (சந்தக் கலி விருத்தம்) அம்பொன் மாலை யார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க் கொம்ப னார்கோ டுத்த முத்த நீர வாய கோழரைப் பைம்பொன் வாழை செம்பொ னிற்ப ழுத்து வீழ்ந்த சோதியால் அம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ போலுமே - சூளாமணி 131. இந்தச் சந்தத்தால் நேரசை முதலாக வருவன ஒரோ அடியுள் பதினைந் தெழுத்தாயும், நிரையசை முதலாய் வருவன பதினா றெழுத்தாயும் வருதல் பெரும்பான்மைய எனக் கொள்க. கவர்க திர்வ ரஃகிறுங்கு காய்க வின்ற எட்குழாம் துவரை கொட்ப யறுழுந்து தோரையோடு சூழ்கொடி அவரை யின்ன பல்லு ணாவ ளக்கரிய என்பவாற் கவரும்வண்டு சூழநின்று காந்தள்கை மறித்தவே இது நிரையசை முதலாய்ப் பதினாறெழுத்தாயினவாறு கண்டு கொள்க. மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலிற் பூசு சாந்த ழிந்தி ழிந்தி புள்ளி வேர்பு லர்த்தலால் வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய் வீசி 1வெள்ளி லோத்தி ரப்பொ தும்பு பாய்ந்து விம்முமே - சூளாமணி 134. இஃது இச்சந்தத்தால் வந்து, மூன்றாமடி எழுத்துக் குறைந்து வந்தது. *“bjŒt நாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில் *g›t முத்த வார்ம ணற் பரம்பு மௌவல் மண்டபம் எவ்வ மாடு *Ú®¥bgh ழில் இடங்க ளின்ப மாக்கலாற் கவ்வை யாவ தந்நகர்க் காம னார்செய் கவ்வையே - சூளாமணி 136. இதுவும் சந்தத்தால் வந்து, ஈற்றடி பதினான்கெழுத்தாய் வந்தது. இவ்வாறு எழுத்துக் குறைந்தும் மிக்கும் வருவனவற்றை அறிந்து, நிசாத்து என்றும், விராட்டு என்றும், புரிக்கு என்றும், சுராட்டு என்றும் பெயரிட்டு வழங்குக. நான்கடியும் எழுத்து ஒத்து வருவனவற்றைத் தலையாகு சந்தம் என்றும், ஓரெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவற்றை இடையாகு சந்தம் என்றும், இரண்டெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவனவற்றையும் பிறவாற்றான் மிக்கும் குறைந்தும் வருவனவற்றையும் கடையாகு சந்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர். தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர் இவற்றையெல்லாம் ஞானாசாரியமும், *ranjtK«, மிச்சா கிருதியும் பிங்கலமும், மாபிலங்கலமும், இரண மாமஞ்சுடையும், சந்திரகோடிச் சந்தமும் குணகாங்கி என்னும் கருநாடகச் சந்தமும், வாஞ்சியார் செய்த வடுகச் சந்தமும் ஆகியவற்றுள்ளும், மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் தகுதி யுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. இவையெல்லாம் விகற்பித்து உரைக்கப் பெருகும். ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், குருவும் இலகுவும் புணர்ந்து முற்றவரினும், முற்றக் குருவேயாயும் முற்ற இலகு வேயாயும் வரினும், சமானம் என்பதாம்; இலகுவும் குருவும் புணர்ந்து முறை வரிற் பிரமாணம் என்பதாம்; இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வரினும், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும், விதானம் என்பதாம், என்பர். என்னை? (நேரிசை வெண்பா) குருலகுமுற் றாயும் குருவிலகு வேறாய் வருமெனினாம் தைமதீர் சமானம் ; - குருலகுவின் பிற்றான் வரிற்பிர மாணம் ; விதானமாம் என்றார் இரண்டாம் எனின் என்பவகாலின் வரலாறு: (கலி விருத்தம்) போது விண்ட புண்ட ரீக மாத ரோடு வைக வேண்டின் ஆதி நாதர் ஆய்ந்த நூலின் நீதி ஓதி நின்மின் நீடு எனவும், (வஞ்சித்துறை) கற்ற நூலினார் செற்ற நீக்கினார் வெற்றி வேந்தருக் குற்ற தூதரே எனவும் இவை குருவும் இலகுவும் அடி முடியளவும் முறையே வந்தமையால், சமானம். (கலி விருத்தம்) காரார் தோகைக் கண்ணார் சாயற் றேரார் அல்குல் தேனார் தீஞ்சொல் போரார் வேற்கட் பொன்னே! இன்னே வாரார் அல்லர் போனார் தாமே இது முற்றக் குருவே வந்தமையால், சமானம் எனப்படும். (வஞ்சித் துறை) முருகு விரிகமலம் மருவு சினவரன திருவ டிகடொழுமின் அருகு மலமகல இது முற்ற இலகுவே வந்தமையால், சமானம் எனப்படும். (வஞ்சித்துறை) கயற்க ருங்கண் அந்நலார் முயக்க நீக்கி மொய்ம்மலர் புயற்பு ரிந்த புண்ணியர்க் கியற்று மின்கள் ஈரமே இது இலகுவும் குருவும் முறையே வந்தமையால், பிரமாணச் செய்யுள் எனப்படும். (கலி விருத்தம்) தூங்கக் கனகச் சோதி வளாகத் தங்கப் பெருநூல் ஆதியை ஆளும் செங்கட் சினவேள் சேவடி சேர்வார் தங்கட் கமரும் தண்கடல் நாடே இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவும் முறையானே வந்தமையால், விதானச் செய்யுள்எனப்படும். (வஞ்சித் துறை) பொருளாளிற் புகழாமென் றருளாளர்க் குரையாயுந் திருமார்பிற் சினனேயொன் றருளாய்நின் அடியேற்கே இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவும் முறையானே வந்தமையால், விதானச் செய்யுள்எனப்படும். (வஞ்சி விருத்தம்) பூவார் பொய்கைப் பொற்போதில் தேவார் செங்கட் சேயாநீ யாவா வென்னா தென்னோசூர் மாவா னானைக் கொன்றானே! இது முற்றக் குருவே வந்தமையால், சமானம். பிறவும் அன்ன. இவையெல்லாம் 1பிறவும் என்றதனாற் கொள்க. செய்யுள் ஓத்துக் கரணம். முற்றும் சித்திரக்கவி மாலை 96. மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம், ஏக பாதம், எழுகூற் றிருக்கை, காதை கரப்பே, கரந்துறை பாட்டே, தூசம் கொளலே, வாவ னாற்றி, கூட *rJ®¤j«, கோமூத் திரியே, *XbuG¤ தினத்தால் உயர்ந்த பாட்டே, பாத மயக்கே, பாவின் புணர்ப்பே, ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட் பாட்டே, சித்திரப் பாவே, விசித்திரப் பாவே, விகற்ப நடையே வினாவுத் தரமே, சருப்பதோ பத்திரம், சார்ந்த எழுத்து வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள் ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே; உருவக மாதி விரவியல் ஈறா வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும் கவியே கமகன் வாதி வாக்கியென் றவர்கள் தன்மையும் அவையின தமைதியும் பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும் ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும் விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும் பண்ணும் திறமும் பாலையும் கூடமும் எண்ணிய திணையும் இருதுவும் காலமும் எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் தந்திர உத்தியும் தருக்கமும் நடமும் முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன் அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே. இச்சூத்திரம் நூல் உரைக்கும் ஆசிரியனது பெருமை உணர்த்துதல் நுதலிற்று. மாலை மாற்றாவது, ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டே ஆவது. வரலாறு: (குறள் வெண்பா) நீமாலை மாறாடி நீனாடு நாடுனா நீடிறா மாலைமா நீ எனவும், பூமாலை காரணீ பூமேத வேதமே பூணீர காலைமா பூ எனவும், (நேரிசை வெண்பா) காதுரும பூமாலை காதுசேர் போதாமி காதொருவன் யார்வேலை மாமாது - காதுமா மாலைவேர் யான்வருதோ காமிதா போர்சேது காலைமா பூமருது கா எனவும், காடா மாதா லீதாகா காதா லீதா மாடாகா எனவும், காடா மாற பிறமா மாதா தாமா மாற பிறமா டாகா எனவும் வரும். சக்கரம் வருமாறு: சக்கரம் பல விதத்தவாயினும், நான்காரச் சக்கரமும், ஆறாரச் சக்கரமும், எட்டாரச் சக்கரமும் என அடங்கும். அவற்றுள் நான்காரச் சக்கரம் வருமாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடும் வருமே மேருவரை யன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே - யா. வி. 52. மேற். இது நான்கு 1ஆராய், நடுவு மே என்னும் எழுத்து நின்று, முதலும் ஈறும் அதுவேயாய்ச் 2சூட்டின்மேல் நாற்பத்து நான்கு எழுத்தாய், ஆர்மேல் ஒரோ எழுத்தாய் முற்றுப் பெற்றது. (நேரிசை ஆசிரியப்பா) நவைக்கணம் வீய நன்னூ லாய்ந்து சேட்டலர் விராய மோட்டார் பிண்டி நன்னிழன் மேயோன் சேவடி துன்னினர் துன்னலர் துகட்டிரும் *ãw¥gnj” இது நான்கு ஆராய், நடுவு மோவிராய் என்பது பட்டு, ஆர்மேல் ஐவைந்தெழுத்தாய், சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது. இனி, ஆறாரச்சக்கரம் வருமாறு: (நேரிசை வெண்பா) பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார் கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு - மோங்குநன் மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற் பூக்கோதை மாதர்தன் பொற்பு இஃது ஆறு ஆராய், நடுவு ரகரவொற்று நின்று, குறட்டைச் சூழத் தா என்னும் எழுத்து நின்று, ஆர்மேல் ஏழெழுத்து நின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப் பெற் முடிந்தது. (நேரிசை வெண்பா) காலைமான் விழியகறல் குன்றாத செவ்வி கலிவான்சென் றூன்ற மயங்கி - யொலிபாவி விண்க ணிடித்தலற லின்றாகி மின்னுக கொண்கன் விரவிரவின் கண் இஃது ஆறு ஆராய், கலி மல்லன் என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, நடுவு றகரம் நின்று, ஆர்மேல் அவ்வாறு எழுத்துப் பெற்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்துப் பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது. (நேரிசை வெண்பா) மண்பாய வையகத்து மாலைமாற் றீறாக எண்பா லெழுத்தும் இணையொப்ப - வெண்பாவின் சீர்கிடப்பத் தென்றமி ழாளி கலிமல்லன் பேர்கிடப்பப் பேசல் அரிது இதன் வழியே எழுதிக் கண்டு கொள்க. (நேரிசை வெண்பா) தக்கவர் சம்பந்தந் தாங்கி யிவணெஞ்சா மக்கட் டொகைஞாலந் தந்தோம்பி - மிக்கின்றோ விண்மணந் தஞ்சாந்தந் நீவி நிரைத்தந்த தண்மணவிற் சான்றோர் தயா இதுவும் ஆறு ஆராய், நடுவுத் தகாரம் நின்று, குறட்டைச் சூழ நகர ஒற்று நின்று, ஆர்மேல் எவ்வேழெழுத்து நின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது. (நேரிசை வெண்பா) ஆறாராய் அவ்வார்மேல் எவ்வே ழெழுத்தாகி ஏரார்ந்த நேமிமேல் ஈராறாய்ச் - சீரார்ந்த ஒண்குறட்டைச் சூழ நடுவோர் தகாரமேற் றண்மணவிற் சக்கரமாந் தான் இதன் வழியே எழுதிக் கண்டுகொள்க. இனி, எட்டாரச் சக்கரம் வருமாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) கார்க்கட லொலிமா வார்ப்பொ டானாக் கோளகட் டரவ மாழ்துய ரழுந்த வாகந் திருநல மாகமுன் னடைமத் தாவரை நிறீஇய மால்வரை கடிந்த காடவர் கோன்றிரு வாரமிழ் தாடவர்க் கடந்த தப்புத் தரத்தது தானே (நேரிசை வெண்பா) ஆரெட்டாய் அவ்வார்மேல் ஐயைந் தெழுத்தாகி ஏரொத்த நேமிமேல் எண்ணான்காய் - 1 வாரத்தால் வாழ்க *tÈtya மாலுளதேன் மாதவர்கோன் சூழ்தருமச் சக்கரமாச் சொல்லு இதன் வழியே அதனை எழுதிக் கண்டு கொள்க. .........................ÃtªJòil யிருங்கடல் வளவிய ...................கிl¡if¥ பார்மிசைப் பல்வரைமுன் மலகுவளங் கெழுமிய வசையறு நிதிய மீதில புரிக பாரி போலவொன் றினிதி னேத்திக் கவியெலாஞ் சொல்லவு மீவோர்ப் பெறாதெனப் பல்கிளை தேம்பச் செந்தீக் கட்புலத் துளங்கொண்டு துளங்கா வோங்குமிசை யிரவலன் களிறுசெவி தாழ்த்துக் கேழலோ டாழ்தரு நீரகடுங் கலுழி நீந்திக் கண்டேன் களைகண் பூந்தேன் பண்ணியல் யாழ்நல மொழியவர் கண்மலர் புல்லிக் கலக்கநின் றோளே இஃது, (கலி வெண்பா) எட்டாராய் ஆர்மேற்பத் தொன்ப தெழுத்தாகி வட்டத்துள் எண்ணான்காய் வன்குறட்டில் - எட்டும் அரிதீரன் பாட்டென்றங்கார்நடுவ©நின்wஇருநா‹கியைவதுபார்¤துண்ணெ‹றொருவாkஆராÊபாய்ந்jஇடந்தேhறழகிதா¥பாராளு«பல்லtமல்லனெ‹ -றராய்ªதொருங்கமைªதுள்ளாற்க›வா»யொலிநீர்¡கருங்கட‰றண்களந்jவேந்த‹ -இருங்கழற்காšவண்டுறையுªதண்டா®மருசாâவாட்களைக©திண்டேhளிணைச்செவ்Éதண்டாதா¡ -கொண்டமை¤தாசிரிaமாக்»யதனு£கரந்தJமாசில்சீ®வள்ளுவ‹பாட்டினுŸ -ஏசிலhஎல்லhவிளக்கு«விளக்கல்yசான்றோர்க்கு¥பொய்யhவிளக்fவிளக்கு” எனக் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய சின்மென் கிளவித் தெய்வப் பாரியு மில்லை யாகிய திரவலர் வினையெனத் தன்னுடன் பொத்திய jசிடுáதவலுkடுத்தbமய்யினள்fடைத்தலைKன்சனத்Ôவதுnநாக்கியே * *(?)ஏனை முனைகெட வேவிய வெட்சி சால்பிற்றந் தோலா தாங்கே மதிநிலை வென்றி வேழ மிகுதி பாடி நின்றனள் விறலி நெருந லின்றே அஞ்சி பாடிய அவ்வை போல வறுமை யுற்ற சிறுமை மூதுரை தணந்து மிக்க தழற்பொலி திருமணி யணிந்தரைத் துஞ்ச வல்லிநின் *nwhns” இதுவும், (கலி வெண்பா) வட்டம் இரட்டித்து வன்குறட் டுள்ளமைந்த எட்டாரச் சக்கரமிச் சக்கரத்தின் இட்டமையப் பட்ட எழுத்துப் பதிற்றெட்டோ டைந்துதலை இட்ட ஒருநூ றிவையிடுமா செப்பிய ஆழியின்மேல் நின்றங் கணிசிறந்த ஆயுங்கால் ஏழும் இருபதும் ஐந்தும் இனமுறையே வாழியர்நின் றாரின்மேல் வல்லோர் வகுத்தனவும் ஆழி முறையிற் பதினெட்டாம் சூழியன்ற இன்குறட்டுள் எட்டும் இரவலர்தம் பல்கிளைக்கே அன்புரைக்கு மஞ்சாதான் பாட்டென்று முன்புரைத்த ஆராழி பாய அணிதங் கிடந்தொறவன் தீராச் சிறப்புப்பேர் சேர்வித்து நேரொத்த சவ்வகத்து மூன்றா வதுதந்த சக்கரத்தின் செவ்வகத்து வேந்துந் தெரிந்திவற்றால் இவ்வகையே ஆசிரியம் ஆக்கி அதனுட் கரந்துரைத்த நேரிசை வெண்பா நினையுங்கால் பாரில் தருமலிந்த வண்மை தலைத்தந்து மிக்க திருமலிந்து தீதிலவே யாக - வுருமலிந்த வென்னரசன் மள்ளன் மதினிலை யேதிலர்க டுன்னரிய வெஞ்சினத்தான் றோள் எனக் கொள்க. சக்கரத்திற்கும் 1திரிபாகிக்கும் எழுத்து எண்ணுகின்றுழி எல்லா எழுத்தும் கொள்ளப்படும்; அடிக்கு எழுத்து எண்ணுமாறு போலக் குற்றிகரக் குற்றுகரங்களும் ஒற்றும் ஆய்தமும் ஒழித்து எண்ணப்படா. திரிபாகிக்கும் அத்தொடக்கத்தன கொள்க. சக்கரத்திற்குக் காட்டின பாட்டுள்ளும் கண்டு கொள்க. இதனுட் சக்கரம் என்ற தனானே, பூமிச் சக்கரமும், ஆகாயச் சக்கரமும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கரமும், கலுபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும், சக்கரச் சக்கரமும், அரவுச் சக்கரமும் முதலாக வுடையன புணர்ப்பாவையுள்ளும், போக்கியத்துள்ளும், கிரணியத்துள்ளும், வதுவிச்சையுள்ளும் கண்டு கொள்க. அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத் தது பாடுதற்கும் பற்றாம் என்று கொள்க. சுழிகுளமாவது, எட்டெழுத்தாய் நான்கு வரியும் முற்றுப் பெற்ற பாட்டு, முதலும் ஈறும் சுழித்து வாசித்தாலும் அப்பாட்டே ஆவது. வரலாறு: (வஞ்சித் துறை) அதிகமல மாகாவே திண்ணிற மேர்போகா கணிநீங்கு மார்மா மறங்குவகு மேல எனவும், கதமிகு வன்கோளி தன்குன் றீவாற்கோ மிகுதிற மாநீவான் குன்றதன் மாறீவ எனவும், சதமக லாவேலர் தனதிண் டேரகல மதியடு வானூரவே கண்டுயிலா வாடேலா எனவும் கொள்க. ஏகபாதமாவது, ஓரடியே நாற்கால் உச்சரித்தால், பாட்டுப் பொருள் வேறுபட்டு முடிவது. வரலாறு: 1நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள் எனவும், அம்பு தைத்த விலங்கர வித்தன எனவும், வாளும் வாளியுங் கோத்தெறிந் திட்டன எனவும், சிலீமுகம் பாய்தரு குஞ்சி யாயினார் எனவும், களிறும் வந்தன கண்டும்வந் தனரோ எனவும், அரையர் கோனயி ராவண மேறினான் எனவும் இவற்றை நாற்கால் உச்சரித்து, ஏக பாதம் ஆமாறு கண்டு கொள்க. எழு கூற்றிருக்கையாவது, ஏழு அறை ஆக்கி, முறை யானே 1குறுமக்கள் முன்னின்றும் புக்கும் பேர்ந்தும் 2விளையாடும் பெற்றியான் வழுவாமை ஒன்று முதலாக ஏழிறுதியாக முறையானே பாடுவது. வரலாறு: (இணைக்குறள் ஆசிரியப்பா) ஒருபொருட் கிருதுணி புரைத்தனை யொருகா லிருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி யீரறம் பயந்த வோரரு ளாழியை யிருமலர் நெடுங்க ணரிவையர் தம்மொடு மூவகை யுலகி னால்வகைத் தேவரு மும்மையி னிறைஞ்சு மீரடி யொருவனை யிருவினை பிரித்து மூவெயின் முருக்கி நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ! நான்மறை யாள ! மும்மதிற் கிழவ ! இருகுண மொருமையிற் றெரிவுறக் கிளந்த விருசுடர் மருட்டு முக்குடைச் செல்வ! நால்வகை வருணமு மைவகைக் குலனு மாறறி மாந்தர்க் கறிவுற வகுத்தனை யைந்நிற நறுமலர் முன்னுற வேந்தி நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண் டிருகையுங் கூப்பி யொருமையின் வணங்கி யரசர் நெருக்குறூஉ முரசுமுழங்கு முற்றத் திருநிதிப் பிறங்கலொ டிமையவர் brhÇjÈ‹* முருகயர் வுயிர்க்கு மும்மலர் மாரியை நால்வகை யனந்தமு நயந்தனை தேவரி னைவகை விழவு மையற வெய்தினை யாறுபுரி நிலையுந் தேறினர்க் கியம்பினை யெழுநயம் விரித்த திருமறு மார்பினை யறுபொரு ளறைந்தனை யைம்பத மருளினை நான்குநின் முகமே மூன்று நின் கண்ணே யிரண்டுநின் கவரி யொன்றுநின் னசோகே யொருதன்மையை யிருதிறத்தினை முக்குணத்தினை நால்வகையினை யைம்பதத்தினை யறுபிறவியை யேழகற்றிய மாதவத்தினை யரிமருவிய மணியணையினை வளர்கதிரொளி மண்டலத்தினை அதனால், மாகெழு நீழற் கேவலந் தோற்றிய வாதியங் குரிசினிற் பரவுதுந் தீதறு சிவகதி சேர்கயா மெனவே - 1திருப்பாமாலை. எனவும், (இணைக்குறள் ஆசிரியப்பா) ஓருடம் பிருவரா யொன்றி யொன்றுபுரிந் தீரிதழ்க் கொன்றை சூடினை; மூவிலைச் சூல மேந்தினை; சுடருஞ் சென்னிமிசை யிருகோட் டொருமதி யெழில்பெற மிலைச்சினை; ஒருகணை யிருதோள் செவியுற வாங்கி மூவெயி னாற்றிசை முனையரண் செகுத்தனை; ஆற்ற முந்நெறி பயந்தனை; தேற்றி யிரண்டி னீக்கி யொன்றி னொன்ற விரண்டு மில்லோர்க்கு முந்நெறி யுலகங் காட்டினை; அந்நெறி நான்கென வூழி தோற்றினை; வாள்செலு மைந்தலை யரவரைக் கசைத்தனை; நான்முகன் மேன்முகக் கபால மேந்தினை; நூலின் முப்புரி மார்பினை; மூவா மேனியை; இருவரை குடையா வேந்திய வாற்ற லொருபெருங் கடவு ளொருவ னாயினை; ஆங்குநிற் காணா திருவரு மூவுல கியைந்துடன் றிரிதர நாற்றிசை யைம்பெருங் குன்றத் தழலாய்த் தோற்றினை; ஆறுநின் சடைய தைந்துநின் றுறையே; நான்குநின் வாய்மொழி; மூன்றுநின் கண்ணே; இரண்டுநின் படையே; ஒன்றுநின் னேறே; ஒன்றியல் காட்சி யுமையவ ணடுங்க விருங்களிற் றுரிவை போர்த்தனை; நெருங்கிய முத்தீ நான்மறை யைம்புல னடக்கிய வறுதொழி லாளர்க் குறுதுயர் தீர்த்தனை; ஏழிய லின்னரம் பியக்கினை; தாழா வாறின் னமிழ்தம் பயந்தனை யைந்தினில் வீறுயர் கோவை விழுத்தக வேந்தினை; ஆல நீழ லருந்தவர்க் கறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை; நன்றியின். முந்நீர்ச் சூர்மா முரணறக் கொன்றங் கிருவரை யெறிந்த வொருவன் றாதையை; ஒருமிட றிருவடி வாக்கினை; தரும மூவகை யுலகுட னுணரக் கூறினை; நால்வகை யிலக்கண விலக்கிய நலம்பட மொழிந்தனை; ஐங்கணைக் காமற் காய்ந்தனை; அறுவகைச் சமயமு நெறியுளி வகுத்தனை; ஏழி னோசை யிராவணன் பாடத் தாழாக் கேட்டவன் றலைநனி பொருந்தி யாறிய சினத்தை யாகி யைங்கதித் தேரொடு மற்றவன் செல்கென விடுத்தனை; நாற்றோ ணளனே நந்திபிங் கிருடியென் றாற்றற் பூத மூன்றுடன் பாட விருகண் மொந்தை 1யொருகண் கொட்ட மட்டவிழ் கோதை மலைமகள் காண நட்ட மாடிய நாத னீயே; அதனால், மண்டிணி ஞாலத்து மன்னுயிர்க் கெல்லா மூழி நின்னடி யேத்தி நின்றபல் லூழியும் பொன்னுல கெய்துவர் காண்பர் அதனால், அறியேன் சொன்ன வறிவில் வாய்மொழி வறிதெனக் கொள்ளா யுலகம் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய வண்ணநின் பாதம் பரவுதுஞ் சென்னியிற் பணிந்தே2 எனவும் இவை எழுகூற்றிருக்கை. காதை கரப்பு என்பது, ஒரு பாட்டினுள் மற்றொரு பாட்டுக்கு எழுத்து உளவாய்ச் சொற்புகாமே பாடுவது. வரலாறு: (நேரிசை வெண்பா) பல்லார்க்கு மீயும் பரிசிற் கொடைத்தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன் - மல்லலந்தார் செஞ்சொற் செருந்தைதன் றென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்கின் வந்து இதனுட்போந்த செய்யுள்: (குறள் வெண்பா) 1எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து - திருக்குறள் 125. என இக்குறள் வெண்பாவின்கண் நேரிசை வெண்பாவின் எழுத்து உளவாய்ச் சொற்புக்கிலாமை எழுதித் தெரிந்து கொள்க. கரந்துறை பாட்டு என்பது, ஒரு பாட்டுச் செவ்வே எழுதினால், அதனை ஈற்று நின்று மொழிக்கு முதலாயின எழுத்துத் தொடங்கி, ஒன்று இடையிட்டு எழுத்துக் கொள்ள, மற்றொரு பாட்டுப் போதுவது. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) காண்கவினன் காரோர் திரைக நல்ல பரம்புவாய் கானலம் விடுதிசை சோரல்மா போரளிக் கொருங்குதோ லினங்கோ ளோகுமெண் வாயக லிலமே னுள்ளார் வார்கலைக் கூவீ வார்ந்தார்த் தேறுநற் றுளிக்கணங் கருவிகதிர் கோளாய் தாதேர்ந் தாடுந் தேர்வ திற்றெகின் கடவிட் டேகா காசி லெழிலிய போமே யாடுசெவி நோன்றா ளானை யாடினனே இதனைக் கீழ்மேலாக ஒன்றிடையிட்டு எழுதப் போந்த செய்யுள், (நேரிசை வெண்பா) ஆளான் விடுமே யழிசிகாட் டன்றெதிர்ந்தார் தாளார் கருங்களிற்றுத் தார்வீக்க - வாளா னுலகவா மெங்கோன தோங்கொளிபோல் சோதி விலகாவாம் பல்கதிரோன் விண் என வந்தவாறு கண்டு கொள்க. தூசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது. வாவனாற்றி என்பது, ஓர் எழுத்துக் கொடுத்தால், அது முதலாக ஈற்றடி பாடி; பின்னும் ஓர் எழுத்துக் கொடுத்தால், எருத்தடி பாடி; மற்றோர் எழுத்துக் கொடுத்தால், இரண்டாமடி பாடி; பின்னும் ஓர் எழுத்துக் கொடுத்தால், முதலடி பாடிப் பொருள் முடிய எதுகை வழுவாமற் பாடுவது. 1கூடசதுர்த்தமாவது, நான்காமடிக்கு எழுத்து முதல் மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது. வரலாறு: (கட்டளைக் கலித்துறை) கருமால் வினைகள்கை யேறிச் செடிசெய்து காறடப் போய் அருமா நிரயத் தழுந்துதற் கஞ்சியஞ் சோதிவளர் பெருமான் மதிதெறு முக்குடை நீழற் பிணியொழிக்குந் திருமால் திருந்தடிக் காளா யொழிந்ததென் சிந்தனையே எனக் கொள்க. 2கோமூத்திரி என்பது, இரண்டு வரியாக எழுதி, மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அதுவேயாவது. வரலாறு: (வஞ்சி விருத்தம்) மேவார் சார்கை சார்வாகா மாவார் சார்கை சார்வாமா? காவார் சார்கை சார்வாகா மாவார் சார்கை சார்வாமா? எனவும், பரவிப் பாரகத் தார்பணி யுங்கழ லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே விரவிப் போரவைத் தார்துணி வெங்கழ லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே எனவும் கொள்க. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. ஓரினத்தெழுத்தால் உயர்ந்த பாட்டு என்பது, ஓரெழுத்தினாலேயும், ஒருசார் இனத்தினாலேயும் பாடுவது. வரலாறு: (நேரிசைச் சிந்தியல் வெண்பா) காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா - தண்டியலங்காரம் 96 மேற். எனவும், (இன்னிசை வெண்பா) தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தண்டியலங்காரம் 96 மேற். எனவும் கொள்க. இனவெழுத்துப் பாட்டாவது, மூன்று வகைப்படும்: வல்லினமும், மெல்லினமும், இடையினமும், என. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை வெண்பா) கற்புடைத்தாக் காட்டுதற் காகாதோ கைகாட்டிச் சொற்படைத்துக் காட்டற்கட் டுக்கத்தாற் - பொற்புடைத்தாய் பாட்டாற்றப் பாடிப் பறைகொட்டக் கொட்டத்துக் கோட்டாற்றுச் சேதிகத்துக் கூத்து எனவும், (குறள் வெண்பா) தெறுக தெறுக தெறுபகை தெற்றாற் பெறுக பெறுக பிறப்பு - யா. வி. 2. மேற் எனவும் இவை வல்லினத்தான் வந்த பாட்டு. (நேரிசை வெண்பா) நன்மனமும் நாணமும் முன்னினும் நான்முன்னேன் நின்மனமும் நின்னானு மென்னென்னோ - நன்மனமும் நண்ணுமே நன்மாமை நண்ணுமா மெண்ணுமினோ மண்ணின்மேன் மானன்ன மா இது மெல்லினத்தால் வந்தது. (நேரிசை வெண்பா) வில்லாள ருள்ளாரேல் வாளிலர் வாளாளர் வில்லாள ருள்ளாரை வெல்வாரேல் - வில்லார் வல்லாள ருள்ளாரை வைவ ரவர்வயின் வல்லாள ருள்ளார் வலி எனவும், (குறள் வெண்பா) வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுழுவார் வாழ்வாருள் வாழா தவர் - யா. வி. 2, 15 மேற். எனவும் இவை இடையினத்தான் வந்த பாட்டு. பாத மயக்காவது, மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியை கொளுத்துவது. வரலாறு: (நிலை மண்டில ஆசிரியப்பா) ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகநானூறு 8:1) கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப்பாட்டு. 37) நன்னாட் பூத்த பொன்னிணர் வேங்கை (அகநானூறு 85, 20) மலர்கொய லுறுவதென் மனமவள் மாட்டே இது பழவடி மூன்றனோடு தாம் ஓர் அடி பாடிப் பாக்கனார் பாடிய பாதமயக்கு. பாவின் புணர்ப்பாவது, நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால், அவையே அடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கைப் பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன் கண்டகம் புக்க செங்கண் மறவன் யாழி னின்னிசை மூழ்க வீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே இது பாவுக்கு ஒப்பப் பாடியது. 1ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒரு மொழியைப் பாட்டின் இறுதிக் கண் வைத்துப் பிறிதொரு பொருள் பயக்கப்பாடுவது. வரலாறு: (நேரிசை வெண்பா) நறுமாந் தளிர்மேனி நாளுறாப் பிள்ளை உறுமாறு கொள்ளின் வருந்தும் - பெறுமாறு வெண்ணெய் உருக்கு நறுநெய் கொடுத்தேனும் எண்ணெய்கொண் டப்புந் தலை எனவும், என்னை நீ காயல் எரிகதிரோய் ! யான்பயந்த பொன்னங் கழலான்பின் போகிய - மின்னைக் கருதலரே யாகிக் கருணனைக்கொன் றிட்ட பருதிவேற் பாண்டவரைக் காய் எனவும், செய்துமோ பாண ! திருவி லுடனேந்திப் பொய்தீர் நெடுந்தேர் *òÇjf - மெய்யே பலமுறை யாலிரவென் மாமகிழார் சோரர் FyKiwah‰* செற்றான் குறை எனவும், இவை *bghŒif¡ கதயானை சூழாசிரியர் பாடியன. அவர் வைத்த *ÉujkhtJ. (நேரிசை வெண்பா) 1தேருடைத்தாய்க் *f‰ghŒ¤ திணைமருதாய்த் திண்மரம் ஓரடியுட் பத்துடன் ஒற்றுப்பேர்த் - தேருடைய பண்பாவு தொல்சீர் மறமன்னர் தன்முன்னால் வெண்பா உரைப்பான் கவி எனவும் வரும். பிறவும் அன்ன. ஒரு பொருட்பாட்டாவது, ஒன்றனையே வருணித்துப் பாடுவது. வரலாறு: (நிலைமண்டில ஆசிரியப்பா) மனங்கனிந் தன்ன மண்மிசைத் தோன்றிப் பனங்கனி நிறத்த பரூஉத்தாள் முழுமுதல் நார்பொதி வயிற்றி னீர்பொதி மென்முளை தந்துநிறுத் தன்ன தோற்றமொடு கவின்பெறத் திரிந்துவிட் டன்ன திண்கெழு நுண்சுருள் ஊழி நூழிலை யுயரிய வரைபுரை கலிங்க மேய்ப்ப *th»a நெகிழ்ந்த வாளினஞ் கருக்கின் அவ்வயி றழுங்கச் சூல்சுமந் தெழுந்த செம்மூக் கணிகுலை மூங்கா மூக்கெனத் தோன்றியாங் கெய்தி *myu§ கோதை யாயிழை மகளிர் பரிசர மேய்ப்பப் பலபோது பொதுளி நாய்சிரித் தன்ன தோற்றமோ டுடும்பின் தோலுரித் தன்ன பூம்படு பட்டைக் கிளிச்சிற கேய்க்கும் பாவையம் பசுங்காய் இழுதி னன்ன இன்கனி ஏந்தி வாழைதன் னகலிலை மறைக்கும் ஊரன் முரண்கொள் யானை முத்துப்படை அழுங்க அரண்கொள் மாக்களிற் றோன்றும் நாடன் அன்புதர வந்த என்புருகு பசலை தணிமருந்த தறியாள் அன்னை உருவுகிளர் அந்தளி, ரென்னுமென் றடமென் றோளே என வரும். பிறவும் அன்ன. *á¤âu¥gh என்பது, நான்கு கூடின எல்லாம் பத்தாகவும் மூன்று கூடின வெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது. வரலாறு: (நேரிசை ஆசிரியப்பா) ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின் (10) ஈரறம் பயந்த நான்முக அண்ணல்) மூவகை உலகிற்கும் ஒரு பெருங் கடவுள் (10) நால்வகை யோனியுள் இருவினை கடிந்து முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன் நால்வகை அளவையும் இருவகைப் பண்பும் (10) ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன் ஈரடி பரவினர் என்ப nguh* நானெறி பெறுகிற் போரே (10) இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப்பா. இதனை நான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்க. (நேரிசை வெண்பா) இருவரமாம் ஏழுநாள் ஆறமர்ந்தான் கோயில் ஒருவனையே நாடிய போந்தேம் - ஒருவனும் எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோ டைந்தலைய நாகத் தவன் - திருப்பாமாலை. இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனை ஈசானன் திசை முதலாக எட்டுத் திசை மேலும் நிறுத்தி, நடுவே பின் ஐந்து நிறுத்திவிடுவது. 2 7 6 9 5 1 4 3 8 பிறவும் அன்ன. *Éá¤âu¥gh என்பது, எங்கும் ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாயின எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி அவ்வெழுத்துக்களை ஒழுங்கும் கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெருத்துக்கு ஓரடியாக வானும் ஒரு சீராகவானும் முற்றுப் பெறப் பாடுவது. எழுத்து நிறுவுதற்கு இலக்கணம்: ஒருவன் பாண்டவர் யானைக்கொம்பே புள்ளித்தாய்க் கண்ணன்றோடு திசையே எனக் கொள்க. நான்காவது முதலா நான்கிறுதியாக அதன் மூன்று முதலாக முடிவது எனவும் கொள்க. அமிதபதி கவி என வரும் பிறவும் அன்ன. 1விகற்ப நடைய வினாவுத்தரமாவது, வினாவினார்க்கு வினாக்குறையாகிய ஒரு மொழியும் தொடர்மொழியும் புணர்ப்பது. வரலாறு: (நேரிசை வெண்பா) 2பூமேலாள் ஆரென்பார் ? பூம்போர்வை என்செய்யும் தீமேல் படின்? bfhL¤jh® bfhŸtbjt‹ ?- ஆமே நலந்திகழும் செங்கை நயதீரன் எங்கோன் சிலம்பின் திருவேங் கடம் இது தொடர்மொழி வினாவுத்தரம். ஒரு மொழி வினா வுத்தரம் வந்துழிக் கண்டு கொள்க. இவற்றின் விகற்பமும் அறிந்து கொள்க. 3சருப்பதோபத்திரமாவது, எட்டு எழுத்தான் இயன்ற நான்கு வரியாம். அவை மாலை மாற்றும், குழிகுளமுமாய் ஒருங்கு வரச் சொல்வது. வரலாறு: (வஞ்சி விருத்தம்) நீகாவா மாமா வாகாநீ தாமாவா தாதா வாமாதா வாவாகோ தாதா கோவாவா மாதாதா மாமா தாதாமா எனவும், பீநீகா மாமா காநீபீ நீகாமா வாவா மாகாநீ காமாவா கோகோ வாமாகா மாவாகோ தாதா கோவாமா எனவும், மாநீகா மாமா காநீபீ நீகாமா வாவா மாகாநீ காமாவா கோகோ வாமாகா மாவாகோ தாதா கோவாமா எனவும், மாமாதா நீநீ தாமாமா மாதீயா காகா யாதீமா தாயாவே டாடா வேயாதா நீகாடா யாயா டாகாநீ எனவும் கொள்க. இப்பெற்றியே எல்லா எழுத்தும் மொழிக்கு முதலா யினவே நிறுவி, ஓரெழுத்துக்கு ஓரடியாகப் பாடிப்பொருள் முடிப்பனவும் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்தவழிக் கண்டு கொள்க. எழுத்து வருத்தனமாவது, ஓரெழுத்து முதலாக 1ஒன்று தலைச்சிறந்து ஏறிய எழுத்துக்களால் முறையே பொருள் பயக்கச் சொல்லுவது. (நேரிசை வெண்பா) 2கூர்ப்பதனை ஓரெழுத்தால் என்சொல்லும் ? துய்ப்பதற்குப் பேர்த்தெழுத்தொன் றிட்டாற் பெயரென்னாம் ? - பேர்த்தும் பிணக்கும் எழுத்தொன்று போர்த்துரைத்தால் என்னாம்? மணத்தின் பெயர்வதுவை யாம் எனக் கொள்க. பிறவும் அன்ன. சார்ந்த எழுத்து வருத்தனம் என்று சொன்னவதனால், முன்னம் ஒரு சொல்லேயாய்ப் பின்னை முறையானே ஒரோ எழுத்து ஏறச் சொல்லப்படுவனவும் எழுத்து வருத்தனம் எனப்படும். அவை 1வந்த வழிக் கண்டு கொள்க. மற்றும் வடநூற் கடலுள் ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே என்பது, ஆரியம் என்னும் பாரிரும்பௌவத்துக் காட்டிய அக்கரச் சுதகமும், மாத்திரைச் சுதகமும், பிந்து மதியும் பிரேளிகையும் முதலாகவுடையனவும், இப்பெற்றியே தமிழாகச் சொல்லும் மிறைக் கவிகளும் அறிந்து கொள்க, என்றவாறு. அவற்றுட் சில வருமாறு: (நேரிசை வெண்பா) நெற்பெயர தொன்றை நிறுவிக் கடைநீக்க நற்பயத்தி னாற்கால தொன்றாகும் ; - மற்றதன் ஈற்றெழுத்து நீக்க இயல்புடைய நூற்செய்கை பாற்படத் தோன்றும் பயின்று இஃது 2அக்கரச் சுதகம்; எழுத்துச் சுருக்கம் எனவும் அமையும். வரலாறு: பாலாவி, பாலா, பா. எனக் கொள்க. (குறள் வெண்பா) க. வாம மணிமே கலையார் மயிர்குறுகின் ஆமவர் பெய்யும் அணி எனவும், உ. வண்ணத்தின் ஒன்றோதி மாத்திரையிற் குன்றுமேல் கண்ணன் உமிழ்ந்த பொருள் எனவும், ஙு. மயிர்நிறுவி மற்றதற்கோர் 1புள்ளி கொடுப்பின் செயிர்தீர் மரமாகும் சென்று - நன்னூல் 269 மேற். எனவும், இவை மாத்திரைச் சுதகம் ; அளவுச் சுதகம் எனவும் அமையும். வரலாறு: 2க. கூழை. குழை உ. நீலம், நிலம் ஙு. ஓதி, ஒதி. எனக் கொள்க. பிந்துமதி என்பது, எல்லா எழுத்தும் புள்ளி யுடையனவே வருவது. வரலாறு: (குறள் வெண்பா) நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென் கொட்கொண்டென் செய்கொண்டென் செம்பொன் கொண்டென்? 3எல்லா எழுத்தும் புள்ளியுடையனவே வந்தமையால், இது பிந்து மதி. (அறுசீர் விருத்தம்) தறியும் இரண்டு தையலார் அணியும் இரண்டு தார்வேந்தர் அறிய அரசர் வீற்றிருக்கும் அணையும் இரண்டென் றுடையராய்ச் செறிய வல்லான் றேய்த்தமையாற் செழும்பூர் சோலை தாமுடையர் வெறிகொள் தொண்டை யார்வேந்த னவையுள் விரவா ரொருவரே வரலாறு: பொத்தகம் இது 4பிரேளிகை. பிறவும் அன்ன. விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டு என்று சிறப்பித் தவதனால், நிரோட்டி பாடுதலும், அலகிருக்கை வெண்பாப் பாடுதலும், முண்டப் பாட்டு வாசித்தலும், தேர்கையும், திரிபாகியும், கண்ட கட்டும், கல்லவலும் முதலாக வுடை யனவும் அறிந்து கொள்க. அவற்றுள் நிரோட்டியாவது: (நேரிசை வெண்பா) 1ஆறிரண்டாம் ஆவியும் ஐயிரண்டாம் அவியும் மாறிகந்த உஊவும் ஓனமும் - கூறில் வகர பகரமஃகான் வந்தணையாச் செய்யுள் நிகரில் நிரோட்டி எனல் வரலாறு: (நேரிசை வெண்பா) ஆர்கலிநீர் ஞாலத் தலந்தார்கட் காற்றலாற் காரெழிலி நாணக் கலந்ததே - சீர்சான்ற சண்டர சண்டன் சனந்தாங்கி சங்கையார் கண்டர கண்டன்றன் கை பிறவும் அன்ன. தேர்கையாவன: குறைத்தலைப் பிணங்கண்டு காவிப் பல்லன் என்றான் என்பதும், குதிரை பட்ட நிலமிது, எனச் செத்தது பெட்டைக் குதிரை, ஏன்றான் என்பதும் முதலா வுடையன. விரலும் 2கண்டகமும் கண்டறிந்தான், என்பதும் பிறவும் அன்ன. 3திரிபாகியாவது, மூன்றெழுத்தாய் ஒன்றின் பெயராய், முதலும் ஈறும் ஒன்றின் பெயராய், இடையும் ஈறும் ஒன்றின் பெயராயின, என்று வாயின் வாசகம் செய்வதும் நிறுவுவதுமாம். வரலாறு: பாதிரி என நிறுத்தி, பாரி திரி என்று அவிழ்ப்பது. பிறவும் அன்ன. கண்ட கட்டு என்பது, பசுக்கொண்டு போது, என்று சொல்ல போயினான், சென்று கண்டு மீண்டு வந்து, அவை யுள்ளாயின, என்னிற் போதாவாயின, என்று அவிழ்ப்பது, பிறவும் அன்ன. கல்லவலாவது, நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகம் செய்வது. வரலாறு : மனையிற்கு நன்று முதுபோக்குத் தீது முதுபோக்கே அன்று பெருமூர்க்குத் தீது என்பனவாம். உருவக மாதி விரவியல் ஈறா வருமலங் காரமும் என்பது, உருவகமும், உவமையும், 1வழிமொழியும், மடக்கும், தீபகமும், வேற்றுமை நிலையும், வெளிப்படை நிலையும், நோக்கும், உட்கோளும், தொகை மொழியும், மிகை மொழியும், வார்த்தையும், தன்மையும், 2பிற பொருள் வைப்பும், சிறப்பு மொழியும், சிலேடையும், மறுத்து மொழி நிலையும், உடனிலைக் கூட்டமும், நுவலா நுவற்சியும், உயர் மொழியும், 3நிதரிசனமும், 4மாறாட்டும், 5ஒருங்கியல் மொழியும், ஐயமும், உயர்வும், 6விரவியலும், வாழ்த்தும் என்று ஓதப்பட்ட அலங்காரங்களும் என்றவாறு. அவை அணியியலுட் கண்டு கொள்க. வாழ்த்து இரண்டு வகைப்படும்: மெய் வாழ்த்தும், இரு புற வாழ்த்தும் என. வரலாறு: (நேரிசை வெண்பா) கார்நறு நீலம் *fofa¤J வைகலும் நீர்நிலை நின்ற *ga‹bfhnyh - கூர் நுனைவேல் வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம்? - முத்தொள்ளாயிரம். இது மெய் வாழ்த்து. இருபுற வாழ்த்து வருமாறு: (நேரிசை வெண்பா) பண்டும் ஒருகாற்றன் பைந்தொடியைக் கோட்பட்டு வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப் பூமான் திருமகளுக் கின்னம் புலம்புமால் வாமான்றோர் வையையார் கோ இஃது இருபுற வாழ்த்து. வசையும் இரண்டு வகைப்படும்: மெய் வசையும் இரு புற வசையும் என. வரலாறு: (நேரிசை வெண்பா) தந்தை இலைச்சுமடன் தாய்தொழீஇ தான்பார்ப்பான் எந்தைக்கீ தெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை அவியுணவி னார்தெரியின் யாவதாங் கொல்லோ கவிகண்ண னார்தம் பிறப்பு! இது மெய் வசை. (நேரிசை வெண்பா) படையொடு போகாது நின்றெறிந்தான் என்றுங் கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு பாடி வழங்கும் தெருவெல்லாம் தான்சென்று கோடி வழங்கு மகன் இஃது இரு புற வசை. கவியே கமகன் வாதி வாக்கியென் றவர்கள் தன்மையும் என்பது, கவியும், கமகனும், வாதியும், வாக்கியும் என்ற இந்நால் வரது தன்மையும், என்றவாறு. அவருட் கவி என்பார் நான்கு வகைப்படுவர்: ஆசு கவியும்; மதுர கவியும், சித்திர கவியும், வித்தார கவியும் என. அவரைக் கடுங்கவி, இன்கவி, அருங்கவி, பெருங்கவி என்று வேண்டுவாரும் உளர். 1ஆசுகவியாவான், கொடுத்த பொருளும், தொடுத்த சூழலும், அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவான். 1மதுர கவியாவான், சொற்செல்வமும் பொருட் பெருமையும் உடைத்தாய்த் தொடையும் தொடை விகற்பமும் துதைந்து, உருவகம் முதலாகிய அலங்காரங்களை உட்கொண்டு, ஓசைப் பொலிவு உடைத்தாய், உய்த்துணரும் புலவர்கட்கு ஒலி கடல் அமிழ்தம் போன்று இன்பம் பயக்கப் பாடுவான். 2சித்திர கவியாவான், மாலை மாற்று முதலிய அருங்கவி பாடும் தன்மையை உடையான். 3வித்தார கவியாவான், மும்மணிக் கோவையும், பன்மணி மாலையும், மறமும், கலி வெண்பாவும், மடலூர்ச்சியும் முதலாகிய நெடும்பாட்டுக் கோவையும்; பாசாண்டமும், கூத்தும், விருத்தமும், கதை முதலாகிய செய்யுளும் இயல் இசை நாடகங்களோடும் கலை நூல்களோடும் பொருந்தப் பாடும் பெருங்கவி எனக் கொள்க. ஒழிந்த விகற்பங்கள் கவி மயக்கறையுள்ளும், பிற வற்றுள்ளும் கண்டு கொள்க. இனி, 4கமகனாவான், பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கல்லாத நூல்களையும், கற்றார் வியப்ப உய்த்துரைக்கும் கருத்துடைய புலவன் எனக் கொள்க. 5வாதியாவான், மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் நாட்டி, 6அளவை செய்து, தன்கோள் நிறீஇப் பிறன் கோள் மறுப்பான் எனக் கொள்க. வரலாறு: நிலைபேறு இல்லை சொல், செய்யப்படுதலால்; குடம் போல, என்பது, நிரலே மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் ஆயின. நிலைபேறு இல்லை சொல், என்பது மேற்கோள்; செய்யப்படுதலால் என்பது ஏது; குடம் போல என்பது எடுத்துக் காட்டு. நிலைபேறு உடைத்துச் சொல், செய்யப்படாமையால்; ஆகாயம் போலும், என்பதும் ஓர் அளவை. அளவை எனினும், பிரமாணம் எனினும் ஒக்கும். இனி, வாதம் என்பது, சல வாதமும் விதண்டா வாதமும் முதலாகப் பல என்று எடுத்து ஓதுவாரும் உளர். வாக்கி என்பான், அறம் பொருள் இன்பம் வீடுகண்மேற் கேட்க வேட்கை பிணிக்கச் சொல்லும் ஆற்றல் உடைய ஆசிரியன் எனக் கொள்க. அவையினது அமைதியும் என்பது, அவையோரது தன்மையும் என்றவாறு. அவைதாம் நான்கு வகைப்படும்: நல் அவையும், தீ அவையும், குறை அவையும், நிறை அவையும் என. என்னை? அவையெனப் படுபவை அரில்தபத் தெரியின் நல்லவை தீயவை குறைநிறை யவையெனச் சொல்லுப என்ப தொல்லை யோரே என்பவாகலின். (நல்லவை) அவற்றுள், நல்லவை யென்பது நாடுங் காலை எத்துறை யானும் இருவரும் இயம்பும் அத்துறை வல்லோர் அறனொடு புணர்ந்தோர் மெய்ப்பொருள் கண்டோர் மிக்கவை ஓர்ப்போர் கற்றவர் கல்விக் கடாவிடை அறிவோர் செற்றமும் சினமும் சேரா மனத்தோர் முனிவொன் றில்லோர் மூர்க்கர் அல்லோர் இனிய முகத்தோர் இருந்துரை கேட்போர் வேந்தன் ஒருவர்கண் வாரம் படினும் தாந்தாம் ஒருவர்கட் பாங்கு படாதோர் அன்னோர் முன்னர்க் கூறிய பொழுதிற் றொலையு மாயினும் 1தொலைவெனப் படாஅது வெல்லு மாயினும் மிகச்சிறப் புடைத்தே எனக் கொள்க. (தீயவை) தீயவை என்பது தெரியுங் காலைச் 2சுலாவும் சுண்டும் தாமேற் கொண்டு நிலவாப் பொருள்களைக் குலவி யெடுத்தாங் குரைத்தவொரு வற்காய்ச் செருவென மொழிந்து சொல்லிய துணரா தல்லவை யுணர்ந்து 3வாரம் படுவது தீயவை யாகும் எனக் கொள்க. (நிறையவை) நிறையவை என்பது நினையுங் காலை எல்லாப் பொருளும் தம்மகத் தடக்கி எதிர்வரு மொழிகளை எடுத்துரைப் பதுவே எனக் கொள்க. (குறையவை) குறையவை என்பது கூறுங் காலை நிறைவில் சொல்லே நினைந்தவை யெடுப்ப அறையும் என்ப ஆணையின்4 இகந்தே எனக் கொள்க. (தொலைவு) 5தொலைவெனப் படுபவை சொல்லுங் காலைக் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் பொருளல கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற்றாகிப் பழித்த மொழியான் இழித்துக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் இன்னா வகையின் மனங்கோ ளின்மை அன்னவை பிறவும் அவற்றினெறி யாகும் எனக் கொள்க. பாடுதல் மரபு என்பது, குலனும் விச்சையும் ஒழுக்கமும் பிராயமம் என்றிவற்றிற்குத் தக்க வகையால், பாட்டுடைத் தலை மகனையும் அவன் சின்னங்களையுமே பாடுதலும், கிளவிப் பொருள் அல்லனவற்றொடு பாட்டுடைத் தலைமகனைப் பெயரும் ஊரும் முதலிய உறுப்புக்களைச் சேர்த்திப் பாடுதலும், தீயனவற்றை அவன் பகைவரைச் சார்த்திப் பாடுதலும் என இரண்டாம். அவையெல்லாம் பெரிய முப்பழம் முதலாயின வற்றுட் கண்டு கொள்க. தாரணைப் பகுதியும் என்பது, தாரணை விகற்பங்களும் என்றவாறு. தாரணை விகற்பங்களாவன, நாம தாரணையும், அக்கரத் தாரணையும், செய்யுட்டாரணையும், சதுரங்கத் தாரணையும், சித்திரத் தாரணையும், வயிரத் தாரணையும், வாயுத் தாரணையும், நிறைவு குறைவாகிய வெண்பொருட் டாரணையும், வந்துத் தாரணையும் ஆயினவற்றை உருவக்கர சங்கேதங்களால் இடம்பட வறிந்து தரித்து, அனுலோம மாகவும் பிரதிலோமமாகவும் பிறவாறாகவும் சொல்லுவது. அவையெல்லாம் 1தாரணை நூலுட் கண்டு கொள்க. சதுரங்க அறையில் உருவுகளை 2உருவக்கர சங்கேதங்களால் திரித்துக் குதிரையடியாகவும், குதிரையும் யானையுமாகவும் பாய்ந்து வருவதற்கு இலக்கணம் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா) கடிகம ழிலைமலர் சீரிதழ்த் தாமரைப் பனிமலர் வாட்டிய மீமிசை நிகரினூ புரமிக வூன்றலின் மேலொளி நெருங்கிய சேண்விளங் கெழிலடி குறுகுதுந் தூநிறப் பெருமலர் வேங்கையு மூங்கிலு நுடங்கிப் பிணியவிழ் வீத்த மாத்த ணறவமும் சாந்தமு மகிலும் கிளர்ந்து தீங்கனிக் சூரலு முகிரலுங் கெழுமித் தேறிய நூலவர் பேணும் வெட்சியு முறிததை விரைமலர் மகிழு நாகமும் பீடுடைத் திருவுஞ் சகமலி யாதி கீர்த்தி ஊனமில் கேள்வியிற் றெளிந்து சுரும்பிவர் நீடிணர்ப் பாசிலை வடுமா மிசைமிக உருகெழு மென்கனி நேரே பூசணித் துகளறு செங்கா யெங்கெனக் கூறி ஈண்டிய காதலிற் றடவிய சிறுநுதற் பெருமதர் மழைக்கட் செவ்வாய்ப் புரிகுழ லிக்கியாம் பொதிபெறற் பொருட்டே1 இந்நேரிசை ஆசிரியம் வேண்டியதோர் முதலாகவாயினும், வேண்டியதோர் அறை ஈறாகவாயினும் பாய்த்துவது. 2சிறு நுதலவரைப் பாய்த்த அறுபத்துநாலு வெங்குதிரை வரும். இனி, 3குதிரையும் யானையுமாகப் பாய்த்துமாறு. (நிலைமண்டில ஆசிரியப்பா) செங்கை யுந்திச் சீர்மலி யாரம் கீழணி தாழ்பொழில் கண்ணகன் திண்ணிலம் சகமலி யிருவினைச் சார மீரம் சித்திர மத்திரம் கிளரொளி தளரகிற் கார்மழை தீரணி நான்மறை மீனுரு வாடை பீடை வித்தர் பத்தர் நிலமும் மலையும் பிரமனு மவர்மணி மிகவு நகுமதி மாரி நீரில் பார வீரர் புள்ளி வெள்ளை முத்தி நெய்த்த நூலோர் மேலோர் பேரா வூழி பெரிய வுருவுடை பூதிய வேதன் மூரி நோன்ற மெய்ம்மை நுண்மை தெள்ளிய குருபரன் எந்தையன் சுந்தர னூரன் சேரன் தூதன் கேசவன் சூழ்பொழி லேழணி கூறிய நேர்வு கெழுமிய துத்திச் சீரி கரிபரி தெரிந்தனன் தெளிந்தே இதன் அடைவே கரியும் பரியும் வேண்டியதோர் அறை முதலா கவும், வேண்டியதோர் அறை ஈறாகவும் துதித்து வரைய, அறுபத்து நாலும் வரும். இனி இவற்றைச். சிறு நுதல் கடிகமழ் பெருமதர் மழைக்கண் துத்திச் செங்கை சீரிய கரிபரி என மாறியும் படிக்கக் கடிதின் உதவும். அறைகட்கு எழுத்து நிறுத்துவதற்கு இலக்கணம்: (குறள் வெண்பா) 1அன்னம் கழிசங்கு தத்தை நகர்பறவை மன்னன் வலம்புரியோ டெட்டு (அறுசீர் விருத்தம்) 2அன்னம் ஒன்றாம்; கழியிரண்டாம் ; அணிநீர்ச் சங்கம் ஒருமூன்றாம்; தண்ணந் தத்தை ஈரிரண்டாம் ; தகைசால் நகரம் ஐந்தாகும்; பன்னும் பறவை இருமூன்றாம்; பழிதீர் மன்னன் ஓரேழாம்; மன்னு மொழியாய் ! வலம்புரியேல் மருடீர் இருநான் காகும்மே எனக் கொள்க. இவற்றை நிரலே அ, க, ச, த, ந, ப, ம, வ என அணிந்து, அந்த அறைகளில் ஏகார எழுத்தளவு எதிர் நடாத்த அறுபத்து நாலறைக்கும் எழுத்துக்களாம். 3ஆனந்தம் ஆறு வகைப்படும்: எழுத்தானந்தமும், சொல்லானந்தமும், பொருளானந்தமும், யாப்பானந்தமும், தூக்கானந்தமம், தொடையானந்தமும் என. உறுபுகழ் மரபின் உயர்ந்தோர் கூறிய அறுவகை மரபின ஆனந் தம்மே அவைதாம், இயனெறி திரிந்த எழுத்தா னந்தமும் சொன்னெறி வழீஇய சொல்லா னந்தமும் புகழ்ச்சிநிலை திரிந்த பொருளா னந்தமும் யாப்புநிலை திரிந்த யாப்பா னந்தமும் தூக்குநெறி திரிந்த தூக்கா னந்தமும் தொடைநெறி திரிந்த தொடையா னந்தமும் நடையறி புலவர் நாடினர் இவையே அவற்றுள் எழுத்தானந்தமாவது, பாடப்படுவோன் பெயரைச் சார்த்தி எழுத்து அளபெழப் பாடுவது. என்னை? இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே இயற்பா டில்லா எழுத்தா னந்தம் - யா. வி. 4. மேற். என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) ஆழி யிழைப்பப் பகல்போம்; இரவரின் தோழி துணையாத் துயர்தீரும் ; -வாழி நறுமாலை தாராய் திரையவோஒ வென்னும் செறுமாலை சென்றடையும் போது - யா. வி. 4. மேற். இது பொய்கையார் வாக்கு. இதனுள் திரையவோஒ என்புழி இயற்பெயர் சார்த்தி எழுத்தளபெழுந்தமையான், எழுத்தானந்தம். சொல்லானந்தமாவது, இயற்பெயர் மருங்கின் மங்கலம் அழியத் தொழிற்சொல் பாட்டுடைத் தலைமகன்மேல் ஏறப் பாடுவது. என்னை? இயற்பெயர் மருங்கின் மங்கலம் அழியத் தொழிற்பெயர் புணர்ப்பினது சொல்லா னந்தம் - யா. வி. 4. மேற். என்றாராகலின். வரலாறு: (நேரிசை வெண்பா) என்னிற் பொலிந்த திவண்முகம் என்றெண்ணித் தன்னிற் குறைபடுப்பான் தண்மதியம் - மின்னி விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன் எரிந்திலங்கு வேலின் எழும் இதனுள் மதியை விசயன் வேல்போல் எழும் என்பான், விசயன் எரிந்து, என அத்தொழில் அவன்மேல் ஏறச் சொன்னமையாற் சொல்லானந்தம். பொருளானந்தமாவது, பாட்டுடைத் தலைமகன் நாட்டின் யாதானும் ஒன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற விடத்து, அத்திணைக்கு உரிய இறைச்சிப் பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதூஉம், புகழ்தலுற்றவிடத்து ஆகாத பெற்றியின், மங்கலம் அழியச் சொல்வதூஉம். மங்கல மாகிய உவமையால் மங்கலம் இல்லாத உபமேயத்தை உவ மிப்பதூஉம், தலைமகனோடு உவமிக்கப் பட்டதற்கு இடை யூறுபடச் சொல்லுவதூஉம் முதலாக வுடையன எனக் கொள்க. என்னை? இறைச்சிப் பொருளை ஊறுபடக் கிளப்பினும் புகழ்ச்சிக் கிளவியிற் பொருந்தா கூறலும் உவமைக் காட்சியின் ஊனம் தோன்றினும் இவையல பிறவும் இன்னவை வரினே. அவையென மொழிப பொருளா னந்தம் - யா. வி. 4. மேற். என்றாராகலின். வரலாறு: முறிமே யாக்கைதன் கிளையொடு துவன்றிச் சிறுமை யுற்ற களையாப் பூசல் - மலைபடுகடாம் 313 -4 என மலைபடு கடாத்துக் கூத்தரை ஆற்றுப்படுப்பான், நீர் போம் வழியுள் இன்னவும் இன்னவும் ஏதங்களாவன; அவற்றைச் சாராதே போமின், என்பான், ஒரு குரங்கு ஒரு வரைமேலிருந்து வழுவி ஒரு விடாகம் புக்கு விழுந்தது கண்டு, மற்றைக் குட்டியும் தாயும் விடாகம் புக்கு வீழ்ந்தன; வீழக் குரங்குகள் எல்லாம் அவற்றுக்கு இரங்கி அழுது, பெரியதோர் ஆரவாரம் எழுந்தது. அவ்வரையை ஒருவிப் போமின், என்றான். அவன் மலைக்கு உரிய இறைச்சிப் பொருளாகிய குரங்கிற்கு இடையூறு சொன்னமையால், இது பொருளானந்தம். கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத் திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற - மலைபடுகடாம் 44 - 46. என்பது, பீலி விரித்துப் பல மயில் இருந்தாற்போல வழி வந்து அசைந்த வருத்தத்தால் தத்தம் கேசங்களை எடுத்து முடிக்க இல்லாது விரித்திருப்பார், அவர் மலைமேல் வழிபோம் கூத்தப் பெண்டிர், என்று புகழ்தலுற்றான். பெண் சாதிகள் ஊறுபட்டு அழுகை நிகழ்ந்தவிடத்து மயிர் விரித்திருப்பார்கள். அவ்வகை மங்கலம் இல்லாத மயிர் விரியை அவன் நாட்டோடும் புகழ்ந் தமையான், இதுவும், பொருளானந்தம். பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத் தகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை - மலைபடுகடாம் 99 -101. என்பது, நாடு புகழ்தலுற்றான், மற்ற மங்கலம் உளவாக வைத்து, வானத்துள் துறுமித் தோன்றுங் கார்த்திகை மீனோடு கடைப் பட்டார் தின்னும் அடகாகிய முசுண்டையின் பூவை ஒப்பித் தமையான், இஃது உவமக் காட்சியுள் ஊனம் தோன்றிய ஆனந்த உவமை. (கட்டளைக் கலித்துறை) திண்டேர் வயவரைச் சேர்வைவென் றானன்ன தேங்கவுண்மா வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய வார்சிலம்ப! நண்போ நினையிற்பொல் லாதது; நிற்க என னன்னுதலாள் கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே - யா. வி. 95. மேற். இதனுள் தலைமகனோடு உவமிக்கப்பட்ட யானையைத் துரந்தான் என ஊறுபடச் சொன்னமையால், இதுவும் உவமக் காட்சியில் ஊனம் தோன்றிய ஆனந்த உவமை. (நேரிசை வெண்பா) வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் - வள்ளற்கு மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாரு மேலார் விரைந்து இதனுட் புலியினோடு உவமிக்கப்படுகின்ற தலை மகனாகிய வீரனோடு நாயை உவமித்தமையால், இறப்ப இழிந்த ஆனந்த உவமை. (நேரிசை வெண்பா) இந்திரனே போலும் இளஞ்சாத்தன்; சாத்தற்கு மந்தரமே போன்றிலங்கும் மல்லாகம் ; - மந்தரத்துத் தாழருவி போன்றுளது தார்மாலை ; அம்மாலை ஏழுலகும் நாறும் இனிது இதனுள் கீழ்மகனாகிய சாத்தனைக் குல மன்னரை உவமிக்கப் பாலனவற்றோடு அவனுக்குப் பரிக்கலாகாமை உவமித்தலின், இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை. சென்றுபடு பருதியிற் சிவந்த தோற்றத்தை. இதனுள் படுஞாயிற்றுக்கு உவமையாகக் காட்டலின், இறந்து பாட்டுவமை ஆனந்தம். 1தீயி னன்ன ஒண்செங் காந்தள் தூவலிற் கலித்த புதுமுகை ஊன்செத் தெய்யா தெறிந்த புன்புறச் சேவல் ஊஉன் அன்மையின் உண்ணா துகுத்தென நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் - மலைபடுகடாம் 145-150. இதனுள், தீப்போலாம் உருவம் தோன்றும் செங்காந்தட் பூவினை ஊன் என்று கருதி அறியாது எறிந்த பருந்து, காலான் இடுக்கி வாயிற்குத்தி, ஊன் அன்மை கண்டு விட்டது, என்று காந்தட் பூவினது சிவப்பினைக் குணனேறச் சொல்லுவான், அவாவிச் சென்றது கொண்டு, அவாவியது அன்மையால் விட்டது என்று பரிசிற்கவி, அவாவிய கவியை அவாக்கெடக் கூறினமையின், இது பரிசிற் பொருளானந்தம். யாப்பானந்தமாவது முன் தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப் பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ, அதன் பின்னே சிறப்புடை மொழி நிறீஇச் சிறப்பிக்கப் படுவதனை இவ்வாறு இடர்ப்படப் பாடுவது. என்னை? முதற்றொடை மருங்கின் மொழிநிறுத் தொருபெயர் இடைப்படுத் தவ்வழி *ïL§FÓ®¥ படினே வாய்ப்ப நோக்கி வல்லோர் கூறிய யாப்பா னந்தமென் றறைதல் வேண்டும் (அகத்தியனார் ஆனந்த ஓத்து) என்றாராகலின். வரலாறு: (கட்டளைக் கலித்துறை) ஊகத்தி னான்மல்கு சோலை 1யுளிய னுயர்வரைவாய் மேகத்தி னாலுமின் னாலு மிகவு மெலிந்திளைத்த ஆகத்தி னேற்கரு ளாயென் பணியுமை வாயெயிற்று நாகத்தி னான்மால் கடைந்திடப் பட்ட நளிகடலே! (அகத்தியனார் ஆனந்த ஓத்து) எனக் கொள்க. தூக்கானந்தமாவது, கஞ்சத் தாளம் முதலிய கருவி களோடும் இசைந்த இசைக்கீழ்ப் பாடுதற்கண், அவன் பெயரைச் சார்த்தி, உயரவும் இறுகவும் பெயர் பிளந்து பண்ணியும், ஒருவர்க்கும் பெயர் புலனாகாமையும் சொல்லுதல். என்னை? தாழா மரபினர் யாழொடு புணர்ந்த பாவகை ஒருவனைப் பாடுங் காலைத் தொல்வகை மரபின் அவன்பெயர் தோற்றி ஏங்கினும் இடுங்கினும் எழுந்துபிரிந் திசைப்பினும் தூங்கினும் குழறினும் தூக்கா னந்தம் (அகத்தியனார் ஆனந்த ஓத்து) என்றாராகலின். அவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. தொடையானந்தமாவது, அளபெடைத் தொடைப் பாட்டினுட் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்த்தி அள பெடுப்பத் தொடுப்பது, என்னை? அளபெடை மருங்கிற் பாடப் படுவோன் பெயரொடு தொடுப்பிற் பெற்றியில் வழுவாத் தொடையா னந்தம் எனவே துணிக (அகத்தியனார் ஆனந்த ஓத்து) என்றாராகலின். வரலாறு: (குறள் வெண்பா) வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஒம் நுவலுமிவ் வூர் இதனுட் புரவி வழுதி என்று அடைப்பெயர் சார்த்தி அளபெடுப்பத் தொடுப்பினும் தொடையானந்தம். (குறள் வெண்பா) வாஅ வழுதி மதுரை மறுகினிற் போஒ பகைமுனைப் போர் இஃது அடையடாமையின் மிக வழு. ïÅ, 1‘Mdªj¥ igퟒ v‹gJ« x‹W c©L: m~jhtJ, fsÉDshÆD« f‰ãDshÆD« jiytD« jiyÉí« j«Ä‰ ãǪJÊ¥ ãÇth‰whJ ifaW Jau bkhL fh£á¡F mthÉ bkŒ bkÈî‰W mÊîÊ Æu§»¥ gh£Lil¤ jiytdJ ehlhD« CuhD« F¿¤J, mt‹ C® nkš m‹¿š V§»D«, FÆš TÉD«, Ma® FHÈir nf£ãD«, V‰¿‹ k¡Fuš nf£ãD«, mtdhL NœªJ »lªJ mtŸ V§»D«, ‘ v‹DÆ® fÊí«,’ v‹W ï›thW T¿D«, ‘mt‹ C® midahŸ, ehL midahŸ, cÆÇ fÊ»‹wJ! எனினும், பிறவாற்றானும் குணமேம் பட்டன ஊரும் நாடும் பார்த்துச் சார்த்திக் கூறினும், உவப்பினும் அவை ஆனந்தப் பையுள். என்னை? களவினும் கற்பினும் கலக்க மில்லாத் தலைவனும் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடும் நாட்டொடும் உள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையுள் என்று பழித்தனர் புலவர் (ஆனந்த ஓத்து) என்று எடுத்து ஓதினார் அகத்தியனார். அவற்றுக்கு இலக்கியம் வந்துழிக் கண்டுகொள்க. இனி, மாபுராணமுடையார் கூறுமாறு: விகாரமாத்திரை யாகிய உயிரள பெடையும், 1கால் மாத்திரையாகிய ஒற்றும் பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும் அவன் பெயர்க்கு அடையாகிய சொற்கண்ணும் புணர்ப்பிற் குற்றம் என்றார். என்னை? கழிநெடில் அசையும் காலெழுத் தசையும் பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர் - யா. வி. 2. மேற். என்பவாகலின். அவர் காட்டும் உதாரணம்: (குறள் வெண்பா) மன்னும் வழுதி வருமருங்கு நின்றாளென் றின்னும் உரைக்குமிவ் வூர் என்பதனுள், விகார மாத்திரையாகிய கால் மாத்திரையாய் மகர ஒற்று பெயர் அருகு வரலின், வழு. (குறள் வெண்பா) வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஒம் நுவலுமிவ் வூர் என்பதனுள் ; விகார மாத்திரையாகிய உயிரளபெடையை வழுதி என்னும் பெயர்க்கு அடையாகிய புரவிக்குப் புணர்த்தலின், வழு. இனி, இசையானந்தம் ஒன்று. அஃதாவது, அவல முற்றிருந்தோர்க்கு இசையாகிய பஞ்சமமும்,. குறிஞ்சியும், பியந்தையும். பாலையாழும், காந்தார பஞ்சமமும், இவற் றொடு பியந்தை யாழும், தலைவனைப் புகழ்ந்த பாடாண் பாட்டிற்கும் இசையாகி வரப் புணர்ப்பது இசையானந்தம் எனப்படும். என்னை? சிறையழி துயரொடு சிந்தையிற் பிரிந்த கவலை கூர்ந்த கருணைக்குப் பெயரே அவலம் என்ப அறிந்திசி னோரே அவலம் என்பதற் கிசையெனப் படுவது குறிஞ்சி புறநிலை பியந்தை யென்றா பரந்த விகற்பிற் பாலை யாழே கருதிய கற்பிற் காந்தார பஞ்சமம் இசையா னந்தம் என்மனார் புலவர் என்றாராகலின். பாட்டுடைத் தலைவனையே கிளவிப்படக் கிளவித் தலை வனாகக் கூறுவதூஉம் ஆனந்தம் எனக் கொள்க. என்னை? 1உருவிலியாகிய ஒருபெருங் கிழவனை அருவி கூறுதல் ஆனந் தம்மே - புறப்பொருள் வெண்பாமாலை. 235 மேற். என்றாராகலின். ஆனந்தம் முதலிய ஊனமும் என்றதனால், பிரி பொருட்டொடர் மொழி முதலிய குற்றங்களும் மறு வாராமற் புணர்க்கப்படும். பிரிபொருட் டொடர்மொழி முரண்மொழி யெனாஅ ஒருபொருள் மொழியே ஐயமொழி யெனாஅ முறைபிறழ வைப்பே சொல்வழு வெனாஅ யாப்பின் வழுவே நடைவழு வெனாஅப் 5. பொருளின் வழுவே புணர்ப்புவழு வெனாஅக் கலையொடு மலைவே காலமலை வெனாஅ உலக மலைவே இடமலை வெனாஅ மேற்கோள் மலைவே ஓதுமலை வெனாஅ எடுத்துரை மலைவே நூன்மலை வெனாஅ 10. இருநான் கடுத்த ஈரைம் புறவும்; உய்த்துணர் மொழியே ஒட்டுப்பிரி மொழியே பிறிதுபடு மொழியே பிசிபடு மொழியே உத்தி மறுதலை எனவரூஉம் இவையும் இடக்கர் இசையவும் இடக்கர்ப் பொருளவும் 15. இடக்கர்ப் படவரூஉம் சந்தி இசையவும் இன்னா இசையவும் எனவெடுத் திவற்றொடு முன்னாங் கூறிய பிறழ்வும் தொகைஇ ஏழுடை இருபான் ஊனம் நீக்குபு பாட வல்லோன் கவிஞன் ; அன்றேல், 20. அடங்காப் புதல்வற் பயந்த பரத்தையிற் புறஞ்சொற் பெறூஉம் புலவ ரானே எனக் கொள்க. இனி, செய்யுளாவன: செய்யு டாமே மெய்யுற விரிப்பின் தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள் உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் இசைநுவல் மரபின் இயன்ற செய்யுள் நயநிலை மருங்கின் சாதியொடு தொகைஇ அவையென மொழிப அறிந்திசி னோரே என்று ஓதப்பட்டனவெல்லாம் அணியியலுட் காண்க. இனி, விளம்பனத்தியற்கையும் என்பது: விளம்பனத் தியற்கை விரிக்குங் காலை ஆரியம் தமிழொடு நேரிதின் அடக்கிய உலகின் தோற்றமும் ஊழி இறுதியும் வகைசால் தொண்ணூற் றறுவர தியற்கையும் வேத நாவின் வேதியர் ஒழுக்கமும் ஆதி காலத் தரசர் செய்கையும் அவ்வந் நாட்டார் அறியும் வகையால் ஆடியும் பாடியும் அறிவரக் கிளத்தல் - வீரசோழியம் 179 மேற். எனக் கொள்க. இனி, நரம்பின விகற்பமும் என்பது: 1நரம்பு எழு வகைய: சூரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என. என்னை? இளிகுரல் துத்தம் நான்கு மாத்திரை; விளரி கைக்கிளை மூன்றே யாகும்; தாரம் உழையிரண் டாகத் தகுமே என்றாராகலின். இனிப் பண் நான்கு வகைய: அவை பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், செவ்வழி யாழ் என்பன. என்னை? பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர் என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோ டைந்தும் என்ப இனி, பண் சார்வாகத் தோன்றியன திறமாம். என்னை? பண்சார் வாகப் பரந்தன எல்லாம் திண்டிறம் என்ப திறனறிந் தோரே என்றாராகலின். அத்திறம் 1இருபத்தொரு வகைய: 2அராகம் நோதிரம் உறழ்ப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே நைவளம் காந்தாரம் பஞ்சுரம் படுமலை மருள்அயிர்ப் பரற்றுச் செந்திறம் எட்டும் குறிஞ்சியாழ்த் திறனே நவிர்வடுகு வஞ்சி செந்நிறம் நான்கும் மருதயாழ்த் திறனே சாதாரி பியந்தை நேர்ந்த திறமே பெயர்திறம் யாமயாழ் சாதாரி நான்குஞ்செவ் வழியாழ்த் திறனே என்றார் வாய்ப்பியனார். பாலை எழு வகைய: 3செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என. குரல் குரலாகச் செம்பாலை பிறக்கும். துத்தம் குரலாகப் படுமலைப் பாலை பிறக்கும். கைக்கிளை குரலாகச் செவ்வழிப் பாலை பிறக்கும். உழை குரலாக அரும்பாலை பிறக்கும். இளி குரலாகக் கோடிப் பாலை பிறக்கும். விளரி குரலாக விளரிப் பாலை பிறக்கும். தாரம் குரலாக மேற்செம்பாலை பிறக்கும் என்க. இனிக், கூடம் ஆமாறு: (1குறள் வெண்பா) 1. உகுதிறத்துத் துப்பாயார் தாவென்பார்க் கில்லென்பான் கைப்பையாய்க் குற்று விடும் 2. இல்லென்பான் கையிற் குடாஅ விரகிலிக் குள்ளதென் துய்ப்பதென் தான்? - நன்னூல் 268. மயிலை. மேற். 3. விடுகைபோ லுள்ளத் துத்திரத்திட் டானும் இடுகுவையிற் கைக்குங் குறை 4. தாவென்பார்க் கில்லென்பான் கையுண்டேற் குன்ற விடாஅ னுலகத் துது 5. குன்றா விளையுள் உயர்நலிந் துன்புற்றுத் தாவென் றிரப்பாடன் கை - நன்னூல் 268. மயிலை. மேற் 6. துப்பாயார் தாவென்பார்க் கில்லென்பான் கையுள் குடாஅன் விடாஅன் உழைப்பு 7. கைமாட்சி குன்று விரகன் உடலகத் துண்மாட்சித் தாயினு மில் இவை ஏழும் கூடப் பாட்டு. என்னை? (குறள் வெண்பா) 2நின்ற நரம்புக்கா றாநரம்பு சென்றுமுன் நிற்பது கூடமாச் செப்பு என்றாராகலின். இவற்றின் பயன் வல்லோர்வாய்க் கேட்க. ஈண்டு உரைப்பிற் பெருகு மாகலின், அகத்தியத்துட் காண்க. இனி, எண் இரண்டு வகைய: கணிதமும் கரணமும் என. அவற்றுள் கணிதமாவன, பதினாறு வரி கருமமும், ஆறு கலாச வருணமும், இரண்டு பிரகரணச் சாதியும் முதகுப்பையும், ஐங்குப்பையும் என்ற இப் பரிகருமமும்; மிச்சிரகமும் முதலாகிய எட்டதிகாரமுமாம். அவை அவினந்த மாலையும், அரச சட்டமும், வருத்தமானமும் முதலியவற்றுட் காண்க. இனி, திணையாவன நான்கு வகைய: அகத்திணை, அகப்புறத் திணை, புறத்திணை, புறப்புறத்திணை என. என்னை? அகமே அகப்புறம் புறமே புறப்புறம் எனநான் கென்ப திணையின் பகுதி என்றாராகலின். அகத்திணை இருவகைய: களவு, கற்பு என. என்னை? களவும் கற்பும் கைகோ ளாக அளவில் அன்பின தகமெனப் படுமே ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே அவற்றுள் களவெனப் படுவ தூஉழ் *fht‹ மரபின் பாற்பட வருமே கற்பெனப் படுவது கரணமோ டியையக் கூடிய பிறவும் கூறுதற் குரித்தே எய்திய இரண்டும் கைகோள் என்ப கிழவன் பாங்கன், கிழத்தி தோழி திறத்தன கூற்றே இன்ன பிறவும் அகத்திணை. இனி, அகப்புறமாவன, காந்தள், வள்ளி, சுரநடை, முது பாலை தாபதம், தபுதாரம், குற்றிசை, குறுங்கலி, பாசறை முல்லை, இல்லாண்முல்லை என்ற இவை பத்தும்; கைக் கிளை, பெருந்திணை என்ற இவை இரண்டும் என்க. 1ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டு மாயுங்கால் காந்தள் ..... ....... ............mk®¤jå ரைந்தும் அகத்தின் புறமே கைக்கிளை யென்றா பெருந்திணையென்றா§கத்திzஇரண்டு«அகத்திணை¥புறனே” இவை பன்னிரு படலம். அவற்றுட் கைக்கிளையாவது, காட்சி முதலாம் கை காமம். என்னை? கைக்கிளை தானே காணுங் காலைக் கூட்டமில் கிளவிக் கைக்கிளை அகப்புறம் பெருந்திணைப் பொருளே பொருந்தக் கூறின், அறத்தின் இயன்ற அகத்தொடு புணராத் திறத்த தென்ப திறனறிந் தோரே நிலையா அன்பின் நீடா இன்பத் துலகமலை வெல்லாம் பெருந்திணை அகப்புறம் என்றாராகலின். இனிப் புறமாவது, வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை என்றாங் கித்திற மேழும் புறனென மொழிப வெட்சி முதலாத் தும்பை யீறாச் செப்பிய ஏழும் புறப்பொரு ளாகும் எனக் கொள்க. வெட்சி ஆ கவர்தலானும், கரந்தை உட்குவரச் சென்று விடுத்தலானும், 1வெட்சியும் கரந்தையும் தம்முள் மாறே - பன்னிருபடலம் வஞ்சி மேற்செல்லோனும், காஞ்சி அஞ்சாது எதிர் சென்று ஊன்றலானும், 2வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே - பன்னிருபடலம் உழிஞை ஆரெயில் முற்றலானும், நொச்சி விழுமிதின் அவ்வெயிற் காத்தலானும், 3உழிஞையும் நொச்சியும் தன்முள் மாறே - பன்னிருபடலம் 4பொருதல் தும்பை புணர்வ தென்ப இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துட் காண்க. புறப்புறமாவன, வாகையும், பாடாண் பாட்டும், பொது வியற்றிணையும் எனக் கொள்க. என்னை? வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் போகிய மூன்றும் புறப்புறப் பொருளே என்றார் தொல்காப்பிய அகத்தியம் உடையார். மதுவிரி வாகையும் பாடாண் பாட்டும் பொதுவியற் படலமும் புறமா கும்மே என்றார் வாய்ப்பியனார். இவை ஆமாறு, 5வெண்பா மாலையுள்ளும் பன்னிரு படலத்துள்ளும் காண்க. இன்னும் திணையே என்றதனால், குறிஞ்சி முதலிய ஐந்திணையும் உணர்த்தும். என்னை? குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் அருஞ்சுரப் பாலையோ டைந்தும் அகமே என்றாராகலின். அவை Mமாறு:“bkŒtif கூதிர் * * * * * முன்பனி வகையே இது குறிஞ்சித்திணை. 1வெம்பர லத்தம் ..... ..... ..... வகையே இது பாலைத்திணை. தவலரும் .... ..... ..... உறுப்பே இது முல்லைத்திணை அருங்கடல் .... ...... ..... உறுப்பே இது நெய்தற்றிணை. ஒல்லென் ..... ...... ..... யே இது மருதத்திணை. இடனே பருவம் பொழுதூண் பொருள்பெயர் கடவுண் மாந்தர் களவிழ வூர்நீர் மாமரம் புட்பறை யாழென் றிவற்றின் ஆகிய மரபின் அகனைந் திணைக்கு முந்தைய மூன்று முதல்கரு வேனை ஐந்தா நிலைய துரிப்பொரு ளாகும் மற்றவை தம்முள் மயங்கினும் அப்பெயர் பெற்ற திணையின் பெயர்க்கொடை பெறுமே செவ்விய உரிப்பொருட் கேது வாகவே எவ்வகை இறைச்சியும் இயற்றுப தெரிந்தே ஒருவன் பெயர்மலை யாறுநா டூரிவை வரினாண் டுலகியல் வழக்கந் தோற்றல் ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. இன்னும் அவ்விதப்பான் உயர்திணையும் அஃறிணையும் ஆமாறு உரைத்தும்: உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே; அஃறிணை என்மனார் அவரல பிறவே; ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே - தொல். சொல். 1. எனவும், மக்கட் சுட்டே உயர்திணை யாகும் எனவும், தேவரும் நரகரும் மேவவும் பெறுமே எனவும், ஏவிய இம்மூன் றன்றி ஒழிந்தவை யாவகைப் பொருளும் அஃறிணை யாகும் எனவும் கொள்க. இனி, ஒரு சாரார், அகத்திணை, புறத்திணை, அகப் புறத்திணை என மூன்றாய் அடங்கும், என்ப. ஆமாறு அவிநயத்துட் காண்க. இனி, இருதுவாவன: காரே கூதிர் முன்பனி, பின்பனி சீரிள வேனில் வேனில் என்றாங் கிருமூ வகைய பருவம்; அவைதாம் ஆவணி முதலா இவ்விரண் டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே இந்த இருது வருணனை அணியியலுட் காண்க. இனி, காலம் மூவகைய: இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என. என்னை? இறந்ததும் நிகழ்வதும் எதிர்வதும் என்னும் திறந்தெரி வுடையன கால மாகும் என்றாராகலின். அன்றியும், நன்னர்க் காலம், நற்காலம்; தீந்த காலம், தீக்காலம்; நற்றீக்காலம், தீத்தீக் காலம் என இவையுமாம். நான்கு யுகமும் எனினுமாம். இவை ஆமாறு உரைப்பிற் பெரு கலின், உலக சமய பேதம் வல்லார் வாய்க் கேட்டு உணர்க. இனி, 1எண் வகை மணம் ஆவன: பிரம மணம், விதி மணம், ஆரிட மணம், தெய்வ மணம், அசுர மணம், இராக்கத மணம், பைசாச மணம், கந்தருவ மணம் என்பன. பிரம மணமாவது, ஓர் இருதுக்கண்ட கன்னியை மற்றை இருதுக் காணாமே கொளற்பால மரபினோர்க்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை? (நேரிசை வெண்பா) ஒப்பாருக் கொப்பார் ஒருபூப் பிரிந்தபின் இப்பால் மதிதோன்றா எல்லைக்கண் - அப்பால் தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் போலும் பெயர் என்றாராகலின். விதி மணமாவது, கொடுத்த பரியத்தின் இரு மடங்கு மகட் கொடுப்போன் கொடுத்தல். என்னை? (நேரிசை வெண்பா) கொடுத்த பொருள்வாங்கிக் கொண்ட பொழுது மடுப்பர் மடுத்தற் கமைந்தால் - அடுப்போன் இரண்டா மடங்குபெய் தீவ ததுவே இரண்டாம் மணத்தின் இயல்பு என்றாராகலின். ஆரிடமாவது, ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர்க் கைக்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை? (நேரிசை வெண்பா) இற்குலத்தோ டொப்பானுக் கொப்பான் இமிலேறாப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து - முற்படுத்து வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை ஆரிடம் பேராம் அதற்கு என்றாராகலின். தெய்வமாவது, வேள்விக் களத்துத் தீப்பாரித்துத் தீ முன்னர் வேள்வி ஆசிரியர்க்குக் கைக்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை? (நேரிசை வெண்பா) மெய்ப்பாலைப் பெண்டன்மை எய்தியபின் மெல்லியலை ஒப்ப உணர்ந்த பொழுதுண்டல் - ஒப்பாற்கு நெய்தயங்கு தீமுன்னர் நேரிழையை ஈவதே தெய்வப்பே ராகும் தெளிந்து என்றாராகலின். இவை நான்கும் அந்தணர்க்கு உரிய. அசுரமாவது, இன்னது செய்தார்க்கு இவள் உரியள், என்ற விடத்து, அன்னது செய்து எய்துவது. அவை வில்லேற்று தல், திரிபன்றி எய்தல், கொல் ஏறு கோடல் முதலிய. என்னை? (நேரிசை வெண்பா) வில்லேற்றல் வேள்வியைக் காத்தல் மிகுவலிக் கொல்லேற் றியல்குழையைக் கோடலென் - றெல்லாம் அரியனசெய் தெய்தினான் ஆயின் அசுரம்; அரியவாம் அந்த மணம் இராக்கதமாவது, ஆடை மேலிடுதல், பூ மேலிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல். என்னை? (நேரிசை வெண்பா) பூந்துகிலோ டின்னவுமேல் இட்டும் புதவடைத்தும் பாய்ந்து *fjªjhmŒ¥ பற்றிக்கொண் - டேந்திழையை எய்தப் படுவ திராக்கதம் என்பதே மைதீர்ந்தார் சொல்லும் மணம் பைசாசமாவது, துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், களித் தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும் இழிதகு மரபில் யாருமில்லா ஒரு சிறைக்கண் புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். என்னை? (நேரிசை வெண்பா) துஞ்சல் களித்தல் மயங்குதல் மாழாத்தல் அஞ்சல் அறிவழிதல் சாதலென் - றெஞ்சினவும் இன்ன திறத்தான் இழிதக வெய்துபவேல் பின்னைப் பிசாசமணப் பேர் எனவும், குணத்தி னிழிந்த மயங்கியவ ரோடும் பிணத்தினும் விலங்கினும்பிணைவது பிசாசம் எனவும் சொன்னாராகலின். கந்தருவமாவது, ஒத்த குலனும் குணனும் அழகும் அறிவும் பருவமும் உடையார், யாருமில் ஒருசிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். என்னை? (நேரிசை வெண்பா) ஒத்த குலத்தார் தமியராய் ஓரிடத்துத் தத்தமிற் கண்டதம் அன்பினால் - உய்த்திட 1அந்தரம் இன்றிப் புணர்வ ததுவரோ கந்தருவம் என்ற கருத்து எனவும், முற்செய் வினையது முறையா உண்மையின் ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து காட்சி ஐயம் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணும் மடனும் அச்சமும் பயிர்ப்பும் அவற்கும் உயிர்த்தகத் தடக்கிய அறிவும் நிறையும் ஓர்ப்பும் தேற்றமும் மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தில் மெய்யுறு வகையுமுள் ளல்ல துடம்படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே என்றார் அவிநயனார். இனி, 1எழுத்து நான்கு வகைய: உருவெழுத்தும், உணர்வெழுத்தும், ஒலியெழுத்தும், தன்மையெழுத்தும் என. என்னை? அவற்றுள், உருவே உணர்வே ஒலியே தன்மையென இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும் என்றாராகலின். அவற்றுள் 2உருவெழுத்தாவது, எழுதப்படுவது. என்னை? காணப் பட்ட உருவம் எல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவில் ஓவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும் என்றாராகலின். உணர்வெழுத்தாவது, கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை உண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும் ஒலியெழுத்தாவது, 3இசைப்படு புள்ளின் எழாஅல் போலச் செவிப்புல னாவ தொலியெழுத் தாகும் தன்மையெழுத்தாவது, முதற்கா ரணமுந் துணைக்கா ரணமும் துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும் அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின் மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே என 4எழுத்தினது விகற்பமும், எழுத்தினது புணர்ச்சியும் எழுத்ததிகாரத்துட் காண்க. அ, க, ச, ட, த, ப, ய, முதலிய ஆயவெழுத்தும் ; அ, ச, ல, வ, ர, ங, ய முதலிய இராசி எழுத்தும்; கார்த்திகை முதலிய நாள் எழுத்தும்; தோபம் முதலிய நால்வகை எழுத்தும்; சாதி முதலிய தன்மை எழுத்தும்; உச்சாடனை முதலிய உக்கிர எழுத்தும்; சித்திர காருடம் முதலிய முத்திற எழுத்தும்; பாகியல் முதலிய நால்வகை எழுத்தும்; புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும்; தாது முதலிய யோனி எழுத்தும்; மாகமடையம் முதலிய சங்கேத எழுத்தும்; கலி முதலிய சங்கேத எழுத்தும்; பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்ற இத்தொடக்கத்தனவும்; கட்டுரை எழுத்தும்; வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்; மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார் வாய்க் கேட்க. இனி, சொல் நான்கு வகைய: பெயர்ச்சொல், தொழிற் சொல், இடைச்சொல், உரிச்சொல் என. எப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும் வழுவில் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் ஆகும் சுடும்பொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப இடைநின் றிசைப்ப திடைச்சொல் ஆகும் மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ந் துரிமையொ டியற்றுவ துரிச்சொல் ஆகும் என்பன வாய்ப்பியம். இனி, ஒருசார் ஆசிரியர். இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்றும் உரைப்பர். அவற்றுள் திரிசொற் சில வருமாறு: பைஞ்ஞீலம் பைதிரம் விரற்றலை யோர்பித்தை பூழிலவம் பீளை துருவையனல் தொடுப்பகை பிறடி கருவுள நவிரல் வசிதலையல் நிவப்புச் செப்பிய பிறவும் திரிசொல் ஆகும் ஆடு, எருது, விடை, ஏறு, மோத்தை, சேவல், ஒருத்தல், கலை, களிறு, ஏற்றை, கடுவன், கூரன், பகடு என இவை ஆண் பெயர். மகடு, ஆ, பிடி, குமரி, கன்னி, பிணவு, முடுவல் என்ற இன்னவை பெண் பெயர். குழவி, மகவு, மறி, குருளை என்ற இன்னவை இளமைக்கு எய்திய பெயர். பெயரிவை மும்மையும் பிறவுமிப் பொருட்கண் இயைபெதிர் இயலும் என்றுணர்ந் தியையக் குறியொடு காரணம் கொளவகுத் தொழிந்த தறிய வுரைப்போன் ஆசிரி யன்னே என இவற்றின் விரிவறிந்து வந்துழிக் காண்க. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழி வரி முதலிய வற்றுட் காண்க. இனி, செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு: 1நாற்பெரும் பண்ணும். 2இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை; ஒன்பது மேற்புறமும், பதினோராடலும் என்ற இவையெல்லாம் வெண்டுறை யாகும், என்பது வாய்ப்பியம். இனி, ஒரு சார் ஆசிரியர் சொல்லுமாறு: கந்தருவம் என்பது கசடறக் கிளப்பிற் செந்துறை வெண்டுறை எனவிரு வகைத்தே 3அவற்றுட் செந்துறை என்பது, பாட்டிற்கு ஏற்பது; வெண்டுறை என்பது, ஆடற்கு ஏற்பது. என்னை? செந்துறை என்ப தொலிகுறித் தற்றே; வெண்டுறை என்பது கூத்தின் மேற்றே என்பவாகலின். செந்துறை விரி மூவகைய: செந்துறையும், செந்துறைச் செந்துறையும், வெண்டுறைச் செந்துறையும் என. வெண்டுறை விரி மூவகைய: வெண்டுறையும், வெண்டுறை வெண்டுறையும், செந்துறை வெண்டுறையும் என. என்னை? ஆங்கிரு துறையும் அறுவகைப் பகுதிய பாங்கின் உணரும் பண்பி னானே என்றாராகலின். அவற்றுட் செந்துறைப் பாட்டாவன, பரிபாடலும், மகிழிசையும், காம இன்னிசையும் என்பன. என்னை? தெய்வம் காமம் மையில் பொருளாம் பரிபா டல்லே மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற் காமவின் னிசையே யாற்றிசை இவற்றைச் செந்துறை என்று சேர்த்தினர் புலவர் என்றாராகலின். செந்துறைச் செந்துறைப் பாட்டாவன. 1ஓங்கெழில் முதலாக் குன்று கூதிர் பண்பு தோழி விளியிசை முத்துறழ் என்றிவை யெல்லாம் தெளிய வந்த செந்துறைச் செந்துறை எனக் கொள்க. வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன, கலியும், வரியும், சிற்றிசையும், சிற்றிசைச் சிற்றிசையும் என்ற இத்தொடக்கத்தன. என்னை? கலியே வரியே சிற்றிசை என்றா மலிதரு பேரிசைச் சிற்றிசைச் சிற்றிசை என்றிவை யெல்லாம் பாணி யியந்தூக் கொன்ற நோக்கி ஒளிபட வந்த வெண்டுறைச் செந்துறை வேண்டுங் காலை என்றாராகலின். வெண்டுறைப் பாட்டாவன, 1இலக்கு நாட்டிச் செய்யப் படும் கூத்திற்கு உரிவாகிய வரியும், குரவையும், மண்டிலமும், சேதமும் முதலிய. வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன, பதி னோராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும் பாடல்களையும் கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன. என்னை? அவ்வப் பொருளால் அரில்தப நாடிப் பாட்டினிற் புகழ்தல் பாடலி தாகலிற் 2பதினோ ராடற் பாட்டாய் வந்தன வெண்டுறை வெண்டுறை எனவிரித் தனரே என்றாராகலின். இனி, இவற்றின் உறுப்பு ஐம்பத்து மூன்றாவன, அல்லிய உறுப்பு ஆறு; கொட்டி உறுப்பு நான்கு; குடத்தின் உறுப்பு ஐந்து; பாண்டரங்க உறுப்பு ஆறு மல்லாடல் உறுப்பு ஐந்து; துடியாடல் உறுப்பு ஆறு; கடையத்து உறுப்பு ஆறு; பேட்டின் உறுப்பு நான்கு; மரக்காலாடல் உறுப்பு நான்கு; பாவை உறுப்பு மூன்று என இவை. இவற்றின் தன்மை செயிற்றியமும், சயந்தமும், பொய் கையார் நூலும் முதலியவற்றுட் காண்க; ஈண்டு உரைப்பிற் பெருகும். ‘gândh uhlY« Modh® ahnuh? எனின், (குறள் வெண்பா) அல்லியம் மாயவன் ஆடல்; அதற்குறுப்புச் சொல்லினரா றாகத் துணிந்து (1) கொட்டி கடம்பமர்ந்தான் ஆடல்; அதற்குறுப் பொட்டினார் மூன்றுடன் ஒன்று (2) அறுமுகத்தன் ஆடல் குடைக்கூத் ததற்குப் பெறுமுறுப்பு நான்காகப் பேசு (3) குடத்தாடல் குன்றெடுத்தான் ஆடல்; அதற்கு மடக்கிய ஐந்துறுப் பாம் (4) முக்கணன் ஆடிற்றுப் பாண்டரங்கம்; மற்றதற் கொக்குமுறுப் பாறா உணர் (5) மாயவன் ஆடிற்று மல்லாடல்; மற்றதற் காய உறுப்புக்கள் ஐந்து (6) துடியாடல் மங்கை எழுவர தாடற் கடியாம் உறுப்புக்கள் ஆறு (7) கடையம் அயிராணி ஆடல்; அதனிற் குடைய உறுப்பைந்தோ டொன்று (8) காமன தாடலாம் பேட்டா டதற்குறுப்பு நாமிக வாராயின் நான்கு (9) மாயவள் ஆடல் மரக்கால்; அதற்குறுப் பேய்வன ஈரிரண் டென் (10) திருவாடல் பாவை; அதற்குறுப்புத் தேரின் ஒருவா திரண்டுடன் ஒன்று (11) எனக் கொள்க. (குறள் வெண்பா) 1பல்வரை நின்றாடல் ஆறு; மற் றைந்துந்தன் எல்லையின் வீழ்ந்தாடல் என் செந்துறை வெண்டுறைப் பாட்டாவன, தெய்வமும், பாவையும், வானூர் மதியமும், இலங்கிரும், வைளவமும், ஒன்று கொட்டும், முருட்டும் என்ற இத் தொடக்கத்து மேற்புறச் செய்யுள் எனக் கொள்க. என்னை? தேவ பாணி முதலா ஏவிய ஒன்றீ றாகக் கிடந்தவும் வந்த இலங்கிரு வைளவம் வானூர் மதியம் என்றிம் மொழிந்த மேற்புறம் எல்லாம் செந்துறை வெண்டுறை சேர்த்துங் காலே என்றாராகலின். இனி, முப்பத்திரு வகை உத்தியாவன, முன் கூறியவே. (யா. வி. 95. மேற்) தருக்கமாவன, 1ஏகாந்த வாதமும், அநேகாந்த வாத மும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும்; சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க. இனி, நாடகச் செய்யுளாவன. வரியே குரவை மதலை மேடம் முரியே தாழிசை முன்னிலை வாழ்த்தே தேவ பாணி சிற்றிசை நேரிசை பாவை தனிநிலை பாங்கமை மடலே என்று ஓதப்பட்டன. அவை இன்மணியாரத்துள்ளும் பிற வற்றுள்ளும் கண்டு கொள்க. முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன் அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே என்பது, மேல் நூல் முடிந்த முறைமையின் வாழாமைச் சொன்னவும், சித்திர சமைய பத்திர சேதக கணித கத்தவுத்தி முதலிய பிறவும் அறிந்து இடத்திற்கு ஏற்ற வாற்றான் உரைக்க வல்லோன் கேள்வி முற்றிய ஆசிரியன் என்று கூறப்படுவான் என்றவாறு. (நேரிசை வெண்பா) சொல்லிற் சுருங்கி பொருள்பெருகித் *bjh‹Phd« எல்லாம் விளக்கி இருளகற்றும்-நல்யாப் பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி *XU§fy®¤j வல்லோர் உணர்ந்து ஒழிபியல் முற்றிற்று. யாப்பருங்கல மூலமும் விருத்தியுரையும் முற்றும். நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை (எண். பக்க எண்) அகவல் இசையன குறளடி நான்மையிற் அடிமுதற் பொருள்பெற குறள்சிந் தின்னிசை அடியெனத் தாகியும் குறிப்பே ஏவல் அடியொரு மூன்றுவந் குறிலிணை குறில்நெடில் அந்த அடியின் சிந்தடி குறளடி அந்தடி குறைநவும் சிந்தடி நான்காய் அவற்றொடு முடுகியல் சீரிரண் டிடைவிடத் அளபெடை ஒன்றுவ சீரோடு சீர்தலைப் அளவடி நான்கின சீர்தொறும் தொடுப்பது ஆதி எழுத்தே செந்தொடை இரட்டையொ இணைக்குறள் இடைபல செந்தொடை ஒவ்வாத் இயற்சீர் உரிச்சீர் செப்பல் இசையன இயற்சீர் வெள்ளடி செய்யுள் தாமே இரட்டை அடிமுழு தரவே தரவிணை இரண்டாம் எழுத் தரவொன்று தாழிசை இருசீர் மிசைவரத் தளைசீர் வண்ணம் இறுவாய் ஒப்பினஃ தனிநிலை ஒற்றிவை ஈரசை கூடிய தன்சீர் இறுதி ஈரசைச் சீர்நின் தன்றளை ஓசை ஈரடி குறள் தாழிசை துறையே ஈரடி வெண்பாச் துள்ளல் இசையன ஈறு முதலாத் தூங்கல் இசையன ஈறும் இடையும் தொடைபல தொடுப்பினும் ஈற்றயற் சீரொழித் தொடையே அடியிரண் உயிரே மெய்யே நாலசைச் சீர் பொதுச் உரைத்தன இரண்டும் நாலோ ரடியாய்த் எழுத்தசை சீர்தளை நான்கடி யானும் ஒத்த அடியின நிரல் நிறை முதலிய ஒத்தா ழிசைக்கலி நிரைநடு இயலா ஒழுகிய ஓசையின் நிரையீ றில்லா ஓரசைச் சீருமஃ நெடிலடி நான்காய் கடையதன் அயலடி நெடில் குறில் கடையிணை பின்முரண் நேரசை என்றா கலியொடு வெண்பா நேரிசை அம்போ கழிநெடி லடியே நேரிசை இணைக்குறள் கழிநெடில் அடிநான் பாதம் பலவரின் குறளடி சிந்தடி - அ பாவினம் எல்லா குறளடி சிந்தடி - இ மனப்படும் அடிமுத மாலை மாற்றே மோனை எதுகை மிக்கும் குறைந்தும் வஞ்சியுள் அகவல் முதலயற் சீரொழித் வருக்க நெடில் இனம் முதலொடு மூன்றாஞ் விகற்பொன் றாகியும் முந்திய தாழிசைக் விரவியும் அருகியும் முழுதுல கிறைஞ்ச வெண்கலி ஒன்றே மூவசைச் சீர்உரிச் வெண்சீர் ஒன்றலும் மூவொரு சீரும் வெண்பா ஆசிரியம் மூன்றடி ஒத்த வெள்ளடிகலியினுள் மூன்றடி முதலா வெள்ளையுட் பிறதளை மொழியினும் பொருளினும் வெறிகமழ் தாமரை இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகரவரிசை (எண்: பக்க எண்) அ ஆ ஐ ஔ என்றிவை அடிதொறும் தலையெழுத் அஇ உஇம் மூன்றும் அடிதொறு முதலெழுத் அஇ உஎ. ஒஇவை அடிபல வாகியும் அஇ உஎ, ஒ எனும் அடிமறிச் செய்தி அஃதொழித் தொன்றின் அடிமுதல் ஓரெழுத் அக்கேனம் ஆய்தம் அடிமுதற்கண் நான்கிற் அகத்திணை அகவயின் அடிமுதற் பொருள்பெற அகத்திணை மருங்கின் அடிமுழு தொருசீர் அகத்திணை அல்வழி அடிமூன் றாகி அகப்பா அகவல் ஐயீ அடிமூன் றொத்திறின் அகப்பா அகவலுள் அடிமோனை ஏனைக் அகப்பாட்டு வண்ணம் அடியினிற் பொருளைத் அகமுத லாய அடியும் சீரும் அகமே அகப்புறம் அடியுள் எழுத்தினை அகரம் முதலா ஔகாரம் அடியைந் தாகியும் அகரமோ டாகாரம் அடிவரை இன்றி அகவல் ஆறும் அடுத்த அடியிரண் அகவல் என்ப அதாஅன் றென்ப அகவல் ஓசை அதிகண்டம் என்றும் அகவல் வெண்பா அதுவே சொல்லும் அகவலுள் தன்சீர் அதுவே தானும் ஈரிரு அந்த அடிமிக் கல்லா அகவற் கினமாய அந்தடி மிக்குப் பலசில அகைப்பு வண்ணம் அந்தத்திற் பாவிற் கினமாய அங்கதப் பாட்டவற் அந்தம் குறையா அச்சொலப்பட்ட அந்தம் முதலாத் அசைகளும் ஒரோவழி அந்தமில் பாதம் அசைகூ னாகும் அந்தமும் ஆதியும் அசையடி முன்னர் அந்தாதித் தொடையினும் அசையாக்கும் தன்மைய அந்நாற் சொல்லும் அசையிரண்டும் மூன்றும் அம்பு வண்ணகம் அசையினும் சீரினும் அம்மூ வளவிற்கும் அசையினும் சீரினு மிசை அராகம் நோதிறம் அசையே இரண்டும் அரில்தீர் அகவற் கடித்தொகை அடக்கியல் உறுப்பும் அருகி இனவெழுத் அடித் தொகை அன்னம் ஒன்றாம் அருங்கடல் - உறுப்பே அன்னம் கழிசங்கு அருள்நோக்கும் நீரார் அனந்தனும் குளிகனும் அரைநொடி அளவின ஆஈ ஊஏ ஐஓ அரைநொடி என்ப ஆங்கிரு துறையும் அரையளபு குறுகல் ஆங்கென் கிளவி அல்லா ஒற்றினும் ஆசிரி யத்துள் அசைச்சீர் அல்லா ஒற்றும் அகவலின் ஆசிரி யத்தொடு வெள்ளை அல்லாப் பாவின் அடிவகை ஆசிரிய நடைத்தே வஞ்சி அல்லியம் ஆடல் ஆசிரியப் பாவின் அல்லியம் மாயவன் ஆடல் ஆசிரியப் பாவின் அயற்பா அவலம் என்பதற் ஆசிரியப் பாவின் அளவிற் அவ்வப் பொருளா ஆசிரியப் பாவின் சிறுமைக் அவ்வியல் நிலையும் ஆசிரியப்பா வெண்பா அவற்றுள், ஆசிரியம் ஆசிரியம் என்ப அவற்றுள் உருவே ஆசிரியம் பெற்ற அவற்றுள் களவெனப் ஆசிரியம் வெண்பா என அவற்றுள், சூத்திரந் ஆசிரியம் வெண்பாக் கலியோ அவற்றுள், நல்லவை ஆசிரிய மருங்கின் அவற்றுள், பாஅ வண்ணம் ஆசிரிய வுரிச்சீர் அவைதாம், அகப்பா அகவல் ஆணைவழி நிற்றல் அவைதாம், இயனெறி திரிந்த ஆதியாய் ஆற்றல் அவைதாம், பாஅ வண்ணம் ஆதி யிரட்டித் அவைதாம், பாட்டுறை நூலே ஆய்தந் தானே அவைதாம், புள்ளியொடு ஆய்தமும் ஒற்றாய் அவைதாம், முதலோ டயல் ஆய்தமும் ஒற்றும் அவைதாம், முன்னும் பின்னும் ஆய்தமும் ஒற்றெனப் அவைதிரி பாகின் ஆய்தமும் யவ்வும் அவையெனப் படுமவை ஆய்ந்த அகப்புறம் அவையே, தேவ பாணியென் ஆய்ந்த உறுப்பின் அளபெடை ஒன்றுவ ஆயிரம் இறுதி மூவடி அளபெடைத் தொடைக்கே ஆயிரு தொடைக்கும் அளபெடை தனியிரண் ஆரம் அரி சந்தனம் அளபெடை மருங்கிற் ஆரம் முறுவல் அளபெடை வண்ணம் ஆரல் மகமோ டனுடம் அளபெழின் அல்லதை ஆர்த்த படியினெதி ரச்சுன் அளபெழின் மாறல ஆரிடச் செய்யுள் அளபெழுந் தியாப்பினஃ ஆரெட்டாய் அவ்வார்மெல் அளவடி அந்தமும் ஆற்றல்சால் ஆவி அளவடி ஐஞ்சீர் ஆற்றுச் செலவும் அளவடி முதலா ஆறடி முக்காற் அளவியற்பா ஆன்றசீர் ஆறராய் அவ்வார்மேல் அளவிரு நிலத்தொடு ஆறிரண்டாம் ஆவியும் அறமுதனான் கென்றும் ஆறுவகையின் அகவலா அறுசீர் எழுசீர் ஆறிரண்டோ ஆவியும் அறுசீர் முதலா ஆறிரண்டோ டைந்தடியை ஆறுமுதலா எண்சீர் இரண்டுபாழ் மும்மூன்றேழ் ஆறெழுத்தாகிபதினே இரண்டு புளிமாவென் அறுத்திசைக்கும் செய்யுட் இரண்டும் நான்கும் அறுமுகத்தன் ஆடல் இரண்டு முதலா எட்டீ ஆறு முதலா எண்சீர் இரண்டெழுத்து மூன்றெழுத் ஆறு வகையின் அகவலொ இரண்டொன்ப தாயினும் ஆறெழுத்தாகி பதினே இரவு வரவுபே ரின்னா ஆறே ழுருவுபாழ் எட்டோ இராயிரத்து நாற்பத்தேழ் ஆறைந்தைந் தையேழ் இருகுறள் நடுவண் இஉ இரண்டன் இருசீர் அடியும் முச்சீர் இஉ, இரண்டன்.. நிற்புழி இருசீர் இடையிடின் இசைநிலை நிறைய இருசீர் குறளடி இசைப்படு புள்ளின் இருசீர் நாலடி.... இறுவது இடனே பருவம் இருசீர் நாலடி ... ஒன்றி இடைக்கண் இரண்டடியும் இருசீர் மிசை இணை இடைநிலைப் பாட்டே இருசீர் மிசைவரத் இடைபல குறைவ இருதலைக் காமம் அன்றிக் இடையிடை சீர்தபின் இருநான் ககவற்சீர் இடையிரு செய்யுளும் இருநூற் றிருமுப்பத் இடையும் கடையும் இருபதின்மேல் ஆறென்ப இணைக்குறில் குறினெடில் இருபன் னிரண்டென்பர் இணைகூழை முற்றோ இருவகை உகரமோ இணைநடுவியலா இருவர் நூற்கும் ஒருசிறை இமிழ்கடல் வரைப்பின் இழுமென் மொழியான் இயலசை மயக்கம் இளிகுரல் துத்தம் இயற்சீர் இரண்டு இற்குலத்தோ டொப்பானுக் இயற்சீர் இரண்டு .... இலவாய் இற்றதன் மேலடி இயற்சீர் இறுதி நேரிற்ற இறந்ததும் நிகழ்வதும் இயற்சீர் இறுதிமுன் இறுசீர் அடிமேல் இயற்சீர் உரிச்சீர் எனவிரு இறுசீர் ஒன்றின் இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் இறுவாய் ஒப்பினஃ இயற்சீர் எல்லாம் இறுவாய் ஒன்றல் இயற்சீர் ஒருபதும் இயற்சீர் ஒன்றா இயற்சீர்த் தாகியும் இயற்சீர் நேரிறல் இயற்சீர்ப் பாற்படுத் இறைச்சிப் பொருளை இயற்சீர் வெண்டளை இன்ன தொன்றிற் இயற்சீர் வெள்ளடி இனைத்தாவ தென்றறிவன் இயற்சீருட் டோன்றும் ஈரசை கொண்டது இயற்பெயர் சார்த்தி ஈரசைச்சீர் தாமுரிய இயற்பெயர் மருங்கின் ஈரசைச் சீர் நான் இயற்றளை வெள்ளடி ஈரசைச்சீர் பின்முன்னா இயன்ற செய்யுட் ஈரசை நாற்சீர் இயைபு வண்ணம் ஈரசை யாகிய இயைபே இறுசீர் ஈரசை இயற்சீர்... இயல்பே இரண்டடி எதுகை ஈரசை யியற்சீர் ஒன்றியதெல்லாம் இரண்டடி சிறமை ஈரசை யியற்சீர் ஒன்றிய நிலைமை இரண்டாஞ் சீர்வரின் ஈரடி இரண்டும் ஓரடி இரண்டாம் அடியின் ஈரடி இயைந்தது குறள் இரண்டாம் அடியை ஈரடி முக்கால் இரண்டாம் எழுத்தொன்றல் ஈரடி முதலா ஏழடி இரண்டினும் மூன்றினும் ஈரிரண்டாதி இரண்டுநான் கெட்டுப் ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரிரண்டும் ஓரேழாம் உவ்வொடு வவ்வரின் ஈரிரண்டும் ஓரெழும் உழிஞையும் நொச்சியும் ஈரிரண்டோ டீரா உள்ளப் பரவையின் ஈரெழுத்துச் சீராவ உறழ்ச்சிகே டுத்திட்டம் ஈரெழுத்து நாற்சீரா உறுப்பிற் குறைந்தவும் ஈரெழுத் தொருமொழி உறுப்பின் அகவல் ஈரைஞ்ஞூற் றெண்மூன்றா உறுப்பின் அளவே ஈரொற் றாயினும் உறுபுகழ் மரபின் ஈற்றடி மிக்கள எகர ஒகரத் ஈற்றயல் குறைந்த எஞ்சா இருசீர் ஈறு வருக்கித் எட்டாதி மூவைந் உடன்படல் மறுத்தல் எட்டாராய் ஆர்மேற்பத் உடையதம் உறுப்பின் எடுத்துரைத்த ஈரெழுத்துச் உணர்த்திய பாவினுள் எடுத்துரைத்த மூவெழுத் உம்மை தொக்க எனா எண்சீர் அடியீற் றயலடி உய்த்துரைத்த ஈரேழும் எண்ணு வண்ணம் உயர்திணை என்மனார் எண்ணெழுத்திற் றிண்ணி உயிரள பெடையும் ஒற்றள எண்ணே காரம் உயிரள பெடையும் குறு எதுகைத் தொடையால் உயிரள பேழும் எப்பொரு ளேனும் உயிரின் அளபுயிர் எய்திய இரண்டும் கைகோ உயிரின் அளபே அளபென எருத்தியல் இன்றி உயிரீ ராறே மெய்ம்மூ எல்லா அடியினும் இனப்பா உயிரும் மெய்யும் ஒராங் எல்லாத் தளையும் மயங்கினும் உயிரும் மெய்யும் புணர்ந்த எல்லா நிலமும் அடிப்படுத் உயிருறுப் புயிர்மெய் எவ்வடி யானும் உயிரென்ற சொல்லானே எழுத்தசை சீர்தளை உரிச்சீர்த் தளைவகை எழுத்தல் இசையே உரிச்சீர் விரவ லாயும் எழுத்தல் கிளவியின் உரிச்சீ ரதனுள் உரைத்ததை எழுத்தியற் றொடைகளின் உரிமை இயற்சீர் மயங்கியும் எழுத்தினா லாகும் அசை உரியசைச் சீர்ப்பின் உகர எழுத்து மொழிபொருள் உரியசை மயக்கம் எழுத்தென் றதிகாரம் உருட்டு வண்ணம் எழுதப் படுதலின் உருவ மாதி எழுவகை இடத்தும் உருவிலி யாகிய ஒரு எழுவாய் இரட்டித் உருவுபாழ் என்பரவை எழுவாய் எழுத்தொன்றின் உரைக்கப் படும்பொருட் எழுவாய் நிரைவரினும் உரைத்த உறுப்பொடு என்னென் சொல்லும் உரைப்போர் குறிப்பின் என்னெனும் அசைச்சொலும் உரையும் நூலும் ஏதம் தழுவா திசைசேர்ந் உரையொடு நூலிவை ஏந்தல் வண்ணம் உலகியற் செய்யுட் ஏந்திசை அகவல் ஏந்திசைச் செப்பல் ஒருசீர் இடைவிடிற் ஏந்திசைச் செப்பலும் ஒருசீர் பதின்மூன் றடிக்கு ஏயென் றிறுவ ஒருதளை ஆதியா ஏயெனச் சொல்லின் ஒருதொடை ஈரடியென் ஏவல் குறிப்பே ஒருதொடை ஈரடி வெண்பா ஏவிய இம்மூன் றன்றி ஒருநெறி யின்றி விரவிய ஏழடி இறுதி ஈரடி ஒருபடி நீக்கி ஒழிந்த ஏழெழுத் தென்ப ஒருபுடையால் ஒப்புரைப்பின் ஏற்புடைப் பொருளெலாம் ஒருபொருட் பன்மொழி ஏற்புடைய காதங் ஒருபொருள் நுதலிய சூத் ஏற இரட்டித் திழிய ஒருபொருள் நுதலிய வெள்ளடி ஏனை அறுசீரும் ஒருமூன் றொருநான் ஏனை எழுசீரும் ஒருவன் பெயர்மலை ஏனைநான் கைம்மூ ஒருவிகற் பாகித் ஏனைய மூன்றும் கணவிரி ஒரூஉத்தொடை இருசீர் ஏனையைந் தெட்டு ஒரூஉ வண்ணம் ஏனையொரு நான்கும் ஒரோஒ வகையினால் ஆகிய ஐ ஔ என்னும் ஒரோவடி யானும் ஐஞ்சீர் அடுக்கலும் ஒல்லென் ஐஞ்சீர் நாற்சீர் ஒழிந்தநான் கெட்டாதி ஐஞ்சீர் நான்கடி ஒழுகு வண்ணம் ஐந்தாதி ஐயிரண் ஒளியும் ஆற்றலும் ஐந்தா றிசையின் ஒற்றள பெழாவழிப் ஐந்தா றடியின் ஒற்றின் றாகியும் ஐந்திணை தழுவிய அக் ஒற்றினுள் சகர ஐந்தும் அகவற்கு ஒற்றொடு புணர்ந்த ஐந்தெழுத் தாகும் மழகளி ஒன்பான் முதலாக ஐந்பெருந் தொடையின் ஒன்றா தாவது ஐம்மூ வெழுத்தும் ஒன்றாதி என்றார் ஐயிரு நூறடி ஒன்றிய தொடையொடும் ஐயெழுத் தாயவழி ஒன்றிரண்டு நான்கெட்டு ஐயெ னெடுஞ்சினை ஒன்றிரண்டு மூன்றுநான் ஐயௌ மவ்வென் ஒன்றிரண் டொருமூன் ஐவகை அடியும் அறிவு ஐவகை அடியும் விரிக்குங் ஒன்றிற்குப் பன்னிரண் ஒத்த அடித்தாய் ஒன்றினம் முடித்தல் ஒத்த அடியின நிலைமண் ஒன்றினை நான்மை ஒத்த அடியினும் ஒவ்வா ஒன்றுதீ நான்கிரண்டோ ஒத்த ஒருபொருள் ஒன்றும் இரண்டும் ஒத்த கடியாறு ஒன்றும் பலவும் விகற்பாய் ஒத்த குலத்தார் ஒன்றும் பலவும் விகற்பொடு ஒத்தா ழிசைக்கலியென் ஒன்றென முடித்த ஒத்தா ழிசைக்கலி கலிவெண் ஓங்கெழில், குன்று கூதிர் ஒத்தா ழிசைக்கலி வெண்கலி ஓசையின் ஒன்றி வரினும் ஒத்தா ழிசைக்கலிவெண்.... கொச் ஓதப் பட்ட உறுப்புவகை ஒத்தா ழிசைதுறை ஓதல் காவல் பகை தணி ஒப்பாருக் கொப்பார் ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா. ஒருசீர் அடிமுழு தாயின் ஓரசைப் பொதுச்சீர்த் தளை ஒருசீர் அடிமுழுதும் வருவ ஓரெழுத் தாதியா ஓரெழுத்துக் குன்றின் குற்றியலிகரம் குற்றிய ஓரெழுத்தும் ஈரெழுத்தும் குற்றிய லிகரம் நிற்றல் ஓரெழுத்தும் மிக்காற் புரிக் குற்றிய லிகரமும் குற்றிய ககரம் முதலா னகரம் குற்றிய லிகரமும் குறுகல் கட்டளை கலம்பகம் குற்றிய லுகரமும் கூனும் கட்டுரை வகையான் குற்றிய லுகர முற்றிய கடையம் அயிராணி குற்றுகரச் சீரோடு கடையள வென்ப குற்றுகரத் தோடு கடையும் இடையும் குற்றுகரம் ஒற்றாக்கிக் கண்ணிமை கைந்நொடி குற்றுகரம் ஒற்றாகக் கண்ணிமை நொடியென குற்றுகரம் குற்றிகரம் கணவிரி பூமருது குற்றெழுத்துச் செவ்வி கணவிரியும் கண்ணார் குற்றெழுத் துத்தொண் கந்தருவம் என்பது குற்றொற் றென்றா கம்பலை சும்மை குறட்பா இரண்டவை ககுதுங்கால் ஆய்ந்த குறளடி சிந்தடி கலித்தல் கன்றல் குறளடி நான்கின் கலித்தளை அடிவயின் குறளடி நான்கின் கலியுறுப் பெல்லாம் குறளிரு சீரடி கலியே வரியே குறிஞ்சி முல்லை கலியே வெண்பா குறியதன் முன்னர் கலியொடு வெண்பா குறிய நெடிய கலியொலி கொண்டு குறில்வயின் நிரையசை கலிவெண் பாட்டே குறிலிணை குறினெடில் கவியே கமகன் குறிலிணை யாகியும் கழிநெடி லசையும் குறிலும் நெடிலும் அள கழிநெடி லடியே குறிலும் நெடிலும் குறிலிணை கழிந்தமூன் றேழாதி குறிலும் நெடிலும் குறில்முன் கழிவே ஆக்கம் குறிலுயிர் வல்லெழுத்து களவினும் கற்பினும் குறிலே நெடிலே களவும் கற்பும் கைகோ குறிலொரு மாத்திரை கற்பெனப் படுவது குறிலோ ரைந்தும் காக்கை பாடினி யார்முத குறினெடில் அளபெடை காசு பிறப்புமே குறினெடில் ஆய்தம் காணப்பட்ட உருவம் குறினெடில் ஆவி காமன தாடலாம் குறுஞ்சீர் வண்ணம் காரே கூதிர் குறுமையும் நெடுமையும் காலே விகற்பத்தாற் குறுமை யெழுத்தின் கிழவன் பாங்கன் குறையவை என்பது குஐ ஆன் என வரூஉம் குன்றக் கூறல் குடத்தாடல் குன்றெடுத்தான் குன்றிசை மொழிவயின் குணத்தி னிழிந்த குன்றியும் தோன்றியும் குருக்கீழ் இலகுவாம் குன்றி ஏய்க்கும் உடுக்கை குருலகு வாகும் கூறிய இரண்டும் குற்றிகரம் குற்றுகரம் கூறிய உறுப்பிற் கைக்கிளை என்றா கூறியது கூறினும் கைக்கிளை தானே கேட்ட மொழியொழித்து கைக்கிளை மருட்பா கைக்கிளை ஆசிரியம் கொச்சகக் கலிவயிற் செப்பல் ஓசையிற் கொச்சகம் ஈரைந்தும் செப்பல் வெண்பாச் சீரே கொச்சகம் வெண்கலி செப்பல் வெண்பாவெண்கூ கொட்டி கடம்பமர்ந்தான் செம்பகை யல்லா கொடுத்த பொருள் வாங்கிக் செய்யு டாமே கொண்ட அடிமுத செய்யுண் மொழியாற் கொண்டவோர் குறியாற் செயற்குரி இருசீர் கொள்ளப்பட்ட செயிர்தீர் செய்யுட் கோதில் சிறப்பிற் குழறுபுலி செவ்விய உரிப்பொருட் ஙஞண நமன செவியுறை தானே சந்தச் சரணமும் சேர்த்திய தரவொடு சந்தமும் தாண்டகமும் சேரு நேரடிப் பாவிலைஞ் சந்த எருத்தலகிற் சொல்லாதல் சொல்லின் சாதாரிப் பியந்தை சொல்லிசை அளபெழ சித்திர அகவல் சொல்லிய தொடையொடு சித்திர வண்ணம் சொல்லிற் சுருங்கிப் சிந்தடி குறளடி சொல்லின் முடிவின் சிந்தடி யானே சொல்லின் வழுவே சிந்தும் குறளும் சொல்லினும் பொருளினும் சிந்தோ டளவு சொல்லே சொற்பொருள் சிற்றெண் அகத்தே ஞகாரை முதல சிறந்துயர் செப்பல் தகைபெறு பொதியிலெந் சிறப்புடைப் பொருளை தடுத்த தளையொன்றும் சிறப்புடைய அல்லவென தடுத்தனர் தட்ட சிறுமை இரண்டடி தண்ணிழல் தண்பூ சிறையழி துயரொடு தத்தமில் ஒத்துத் சின்மென் மொழியாற் தந்துமுன்னிற்றலிற் சீர்தப வரினும் தரவின் அளவிற் சுரிதகம் சீர்தளை சிதைவுழி தரவின் வழிமுறை சீர்முழு தொன்றின் தரவின் றாகித் சீர்வண்ணம் வெள்ளைக் தரவே தரவிணை.... சிலபல சீரா கிடனும் தரவே தரவிணை..... தாமும் சீரிடை விட்டினி தரவே தாழிசை தனிச் சீரிரண் டிடைவிட தரவே தாழிசை தனிநிலை சீரிரண் டிடைவிடின் தரவே யாகியும் சீரிற் கிளர்ந்த தரவொன் றாகித் சீரினும் தளையினும் தரவொன்று தாழிசை சுடுபொன் மருங்கிற் தருக்கியல் தாழிசை சுண்ணந் தானே தலைதடு மாற்றம் சுருங்கச் சொல்லல் தலைவரும் - உறுப்பே செந்தமிழ் செய்யுட் தளைகலி தட்டன செந்துறை என்ப தளைசீர் வண்ணம் செந்தொடை இயைபிவை தளையொடு சீர்தபிற் தற்சுட் டேவல் தன்கோள் நிறீஇப் தன்சீர் இரண்டு தெரிந்த மொழியாற் தன்சீர் தனதொன் தேமா புளிமா தன்சீர் நிலையிற் தேமாவும் பாதிரியும் தன்சீருட் டூங்கல் தேமாவெட் டாதி தன்சீ ருள்வழித் தேமாவே பாதிரி தன்சீ ரெழுத்தின் தேருடைத்தாய்க் கற்பாய் தன்பா அடித்தொகை தேவ பாணி தன்பால் உறுப்புத் தேவரும் நரகரும் தன்றளை பாதம் தேற்றம் வினாவே தன்னுடை யந்தமும் தொடைபல தொடுப்பன தனிச்சொல் என்ப தொடைமிகத் தொடுப்பது தனிச்சொல் தழுவல தொடையடி இத்துணை தனிதர நிற்றலிற் தொடையடி யுட்பல தனிநிலை அளபெடை தொடையும் தளையும் தனிநிலை ஒற்றிவை தொடையும் தொடை தனிநிலை சுரிதகம் தொடையெனப் படுவ தனிநிலை முதனிலை தொடையொன் றடியிரண் தனிநெடில் தனிக்குறில் தொல்காப் பியப்புலவோர் தனிநெடி லாகியும் தொலைவெனப் படுபவை தனிமை யாற்றல் தொன்மை தானே தனியசை என்றா தோற்றுங்காற் சீராலாம் தனியே, அடிமுதற் நடுவு நேரியல் வஞ்சி தாஅ வண்ணம் நலமிகு நாலெழுத் தாவில் விறகுதீத் நலிபு வண்ணம் தாழா மரபினர் நவிர்வடுகு வஞ்சி தாழிசைக் கீறாய் நன்பால பூமருது தாழிசைப் பின்னர் அராக நனியென் கிளவி தாழிசைப் பின்னர்த் தனிச் நாட்டிய நாலெழுத்துச் தான மொத்த நாணவும் நடுங்கவும் தானே அடிமுதற் நாதன் முதலாக திரண்டவை நானிலைமை நாலசைச்சீர் வெண்பா திரண்டியற்சீர் பத்திற்கு நாலசைச் சீரும் திரியேறு பூமாசேர் நாலசை யானடை திருமலை உள்ளார் நாலசை யானும் திருவாடல் பாவை நாலிருசாண் கொண்டது திரைத்த இருது நாலெழுத் தாங்காற் தீயவை என்பது நாலெழுத் தாதி துஞ்சல் களித்தல் நாலெழுத் தாம்வழி துடியாடல் மங்கை நாலொரு சீரால் தூக்கும் பாட்டும் நாலோ ரடியாய்த் தூங்கல் இசையன நாற்சீர் அடிநான் தூங்கல் இசையாய்த் நாற்சீர் கொண்ட தடி தூங்கல் ஓசை நீங்கா நாற்சீர் கொண்டது தூங்கல் வண்ணம் நாற்சீர் நாலடி கலிவிருத் தூங்கேந் தடுக்குப் நாற்சீர் நாலடி வருவ தெய்வம் காமம் நாற்பா நடைதெரிந்த தெய்வம் துணையிராசிப் நான்காம் அடியினும் தெரியுங்கால் வெள்ளைக் நான் நிலைமைக்கும் நான்கு மூன்றடி நேரசை ஒன்றே நான்கு முதலாக நேரசையும் நேர்பசையும் நிரல் நிறுத் தமைத்தலும் நேரிசை இணைநிலை நிரனிறை தானே நேரிசை இன்னிசை போல நிரனிறை முதலிய நேரிசைச் சிந்தும் நிரைநடு வியலா நேரிற நேர்வரின நிரைநேர் மறுதலை நேரின மணியை நிரைபாதி நேர்பாதி நேரீற் றியற்சீர் கலிவயிற் நிரையிறும் நாலசை நேரீற் றியற்சீர் கலிவயின் நிரையும் நிரைபும் நேரும் நிரையும் சீராய் நிலையா அன்பின் நேரும் நிரையும் மயங்கிய நிறையவை என்பது நேரும் நிரையுமாம் நின்றசீர் ஈற்றொடு நேரே நிரையே நின்றசீர் ஈறும் நேரோர் அலகு நின்ற தாதி நிலைமண் நைவளம் காந்தார நின்ற நரம்புக்கா றாநரம்பு படைப்போர் குறிப்பினை நீர்த்திரை போல படையொடுதீ நீர் நுதலிப் புகுதல் பண்சார் வாகப் பரந்தன நுவற்சி நொடியே பண்ணும் திறமும்போற் நூலெனப் படுவது பண்பாய்ந்த ஏழு நூற்பா அகவல் பண்பாய்ந் தடக்கிய நெடிய குறிய பண்பார் புறநிலை நெடில்குறில் தனியாய் பத்தின்மேல் மூன்று நெடிலும் குறிலும் பத்தெழுத் தென்ப நெடிலும் குறிலிணை பரமாணுத் தேர்த்துகள் நெடிலொடு நெடிலும் பல்பொருட் கேற்பின் நெடுஞ்சீர் வண்ணம் பல்வகைத் தொடையொரு நெடுவெண் பாட்டே பல்வரை நின்றாடல் நெருப்பினும் நிலத்தினும் பன்னிய சீர்பயின்று நேர்நடு வியலா வஞ்சி பாஅ வண்ணம் நேர்நால் வகையும் பாட்டுரை நூலே நேர்நிரை நேர்பு பாடப் படுவோர்க்கும் நேர்நிரை வரினே பாதிரி போதுபூப் பாய நேர்நேர் இயற்றளை பாதிரி போதுபூப் போரே நேர்நேர் நிரைநேர் பாதிரி இன்புளி மாப்பாய் நேர்நேர் நிரைநேர் ஆயிரு பாதிரியும் மாசெல்வாய் நேர்நேர் நிரைநேர்ப்பின் பாநாளாற் பாவோரை நேர்நேர் நிரைநேராய் பாலை குறிஞ்சி நேர்நேர் பசையிரண்டும் பாவினத் தியற்கையும் நேர்நேராம் நேரசையும் பாவும் இனமும் நேர்பசை ஈரெழுத் பாவென மொழியினும் நேர்பீ ழெழுத்தாங்கால் பாவே தாழிசை நேர்பும் நிரைபசையும் பிரத்தார எண்ணிரட்டித் நேர்பும் நிரைபும் பிரிபொருட் டொடர்மொழி நேர்முத லாகிய பிறநூல் முடிந்தது நேரசை இறுதியாய் பிறிதி னடப்பினும் புரைதீரா றாதி மாவாழ் புலிவாழ் புறநிலை வாயுறை மாவும்புள் மோனை புறப்பா அகவல் மாறல தொவ்வா புறப்பாட்டு வண்ணம் மிக்கடி வருவது பூந்துகிலோ டின்னவும் மீனாடு தண்டேறு பூமரு தேழாதி முக்கணன் ஆடிற்றுப் பெயரிவை மும்மையும் முச்சீர் அடியான் பெருக்கிய வாறு பிரத்தாரித் முச்சீர் நாலடி பெருந்திணைப் பொருளே முச்சீ ரானும் பெற்ற நாலடி முடிபொருள் அல்லர் பெற்றவடி ஐந்தினும் முடிவதன் முதலயல் பேணுபொருண்முடிபே முடிவிரண்டு மிக்கு பைஞ்ஞிலம் பைதிரம் முடுகு வண்ணம் பொதுவகையாற் சொற்றன முத்திறத் தானும் பொருதல் தும்பை முதல் நடு இறுதி பொருளின் வழுவே முதல்வழி புடையென பொருளினுஞ் சொல்லினும் முதலிரண் டியலசை பொருளினும் மொழியினும் முதலிற் கூறும் சினையறி பொழிப்பொரூஉச் செந்தொடை முதலெழுத் தளவொத் பொற்பமைந்தார் சொன்ன முதலெழுத் தொன்றி போதுபூக் கோதில் முதலெழுத் தொன்றின் ... ஆகும் போதுபூப் போரேறு முதலெழுத் தொன்றின் ... எதுகை மக்கட் சுட்டே முதலெழுத் தொன்றுவ மகயிர மாதியா முதற்கா ரணமும் மகரக் குறுக்கம் முதற்சீர்த் தோற்றம் மண்பாய வையகத்து முதற்றொடை மருங்கின் மதிலிரண்டு மாவாறு முந்திய மோனை மதுவிரி வாகையும் முந்துநூல் முடிந்த மயங்கிய தொடைமுதல் முந்நால் விரற்சாண் மயங்கி வருவனவும் முல்லை அந்தணன் மருவிய சொல்லொடு முல்லை குறிஞ்சி மருளொடு புணர்ந்தோர் முழுவதும் ஒன்றின் மழகளிறு வாய்ந்த முற்செய் வினையது மற்றவை தம்முள் முற்றிய லுகரம் மற்றும் விகற்பம் முற்றுகரந் தானும் மறுதலை உரைப்பினும் முன்னிலை நெடிலும் மன்னவன் என்ப முன்னோர் நூலின் மனத்தது பாடும் மூவகை எண்ணின் மாசில் சிறப்பின் மூவகைச் சீருரிச் மாசெல் புலிசெல் மூவசை யான்முடி மாஞ்சீர் கலியுட் மூவடிச் சிறுமை மாத்திரை வகையாற் மூவடி யாகியும் மாபடுவாய் பத்தின்மேல் மூவா றெழுத்தே மாபுலி பாம்பு களிறென் மூவெழுத் தாங்கால் மாயவள் ஆடல் மூவெழுத் தாம்வழி மாயவன் ஆடிற்று வஞ்சி விரவல் மூவைந் தெழுத்தே வட்டம் இரட்டித்து மூன்றடி யானும் வடாது தெனாதென்று மூன்றிற்கும் சொன்ன வண்ணகத் தியற்கை மூன்று நான்கடி வண்ணந் தானே மூன்றுவரிற் கூழை வணக்கம் அதிகாரம் மூன்றுறுப் படக்கிய வந்த முறையாற் மூன்றேழு மூவைந்து வரியே குரவை மெய்ப்பாலைப் பெண் வல்லிசை வண்ணம் மெய்பெறு மரபிற் வல்லெழுத்தாறோ மெய்யின் அளவே வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெய்யின் இயக்கம் வழிபடு தெய்வம் நிற்புறம் மெய்யின் இயற்கை வழிபடு தெய்வம் வழுத்தி மெய்யென்ற சொல்லானே வழுக்கா இயல்வகையின் மெய்வகை கூதிர் வழுவில் மூவகைக் மெல்லிசை வண்ணம் வன்மை என்ப மொழிபிசி முதுசொல் வனப்பியல்தானே மொழிபுணர்ந்த சீர்முதற்கண் வாகை பாடாண் மொழிமாற் றியற்கை வாய்க்காலும் வாய்த்தலையும் மொழியினும் பொருளினும் வாய்மொழி பிசியே மொழியும் மொழியும் வாயுறை வாழ்த்தே மோனை இரண்டாம் வாளா வார்கழல் மோனை எதுகை விகற்பம் கொள்ளா மோனை விகற்பம் விட்டிசை முதற்பாத் யகரம் முதல்வரின் விட்டிசை மோனையும் யரல வழள விதப்புக் கிளவி யரலழ என்னும் விரலிடை யிட்டன அசைச்சீர் யாப்பின் வழுவே விரலிடையிட்டனரடருடு யாப்பெனப் படுவ விருத்தம் துறையோடு யாவகை எதுகையும் விருத்தம் வியன்துறை ரகரவடி வாமீ திலகு விருத்த விருத்தியதன் வகரமோ டியையின் விருத்த விருத்தியினை வகார மிசையும் விருந்தே தானும் வகுத்த உறுப்பின் வில்லேற்றல் வேள்வி வஞ்சி அடியே விளம்பனத் தியற்கை வஞ்சி அல்லா விளரியாழோ வஞ்சி ஆசிரியம் வினையின் நீங்கி வஞ்சி இறுதியும் வெட்சி கரந்தை வஞ்சி இறுதியும் வரையார் வெட்சி முதலா வஞ்சி உரிச்சீர் வெட்சியும் கரந்தையும் வஞ்சித் தளைவகை வெண்கலி ஒத்தா வஞ்சி தானே வெண்கூ வெண்பா வஞ்சிப்பா நான்கும் வெண்சீர் இறுதிக் கிணை வஞ்சி மருங்கின் வெண்சீர் இறுதி நிரை வஞ்சி மருங்கினும் வெண்சீர் ஒன்றலும் வஞ்சியும் காஞ்சியும் வெண்சீர் வரைவின்றி வஞ்சியு ளாயின வெள்ளைக் கியற்சீர் வெண்சீர்ப் பின்னர் வெள்ளைக் கிரண்டடி வெண்சீர் வெண்டளை வெள்ளைக்குச் செப்பல் வெண்சீரிற் செப்பல் வெள்ளை நிலம்பத் வெண்டளை தன்றளை வெள்ளை முதலா வெண்டளை விரவியும் வெள்ளையுட் பிறதளை வெண்பா அகவல் வெள்ளையுள் நாலசை வெண்பா ஆசிரி யத்தாய் வெள்ளை ஒழித்தல் வெண்பா ஆசிரியம் வெள்ளை விரவியும் வெண்பாத்தாழிசை வேண்டி யதுநிறுவி வெண்பாமுதலா வேதவாய் மேன்மகனும் வெண்பாமுதலாக வேதியர்க்கு வெண்மை வெண்பா விருத்தம் வேற்றுமை யின்றியும் வெண்பா வுரிச்சீர் அல்லா வேறுபட வரினது வெண்பா வுரிச்சீர் ஒரு நான் வேறுபடு வினையினும் வெண்பாவோ ரைந்தும் வேறுவினைப் பொதுச்சொல் வெம்பர லத்தம் வேறுவினை யுடைய வெள்ளைக் கசைச்சீரால் வைத்த நிரைபசை இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகரவரிசை (எண். பக்க எண்) அஅவனும் இஇவனும் அம்பு தைத்த விலங்கர அஉ அறியா அம்பொன் மலையார் அஃகி அகன்ற அம்ம் பவள்ள் வரிநெ அகர முதல அம்ம வாழி தோழி அகலிடமும் அமருலகும் அமரீர் அசுரீர் அகலிரு விசும்பின் அமருந்து தானை அகன்ஞாலம் நிலை அமிழ்தினும் ஆற்ற அங்கண் மதியம் அயிர்ப்பாக னோக்கு அங்கண் வானத் அரக்காம்பல நாறும்வாய் அங்கண் விசும்பின் அரிதாய அறனெய்தி அங்குலியின் அவிரொளி அரிமலர் ஆய்ந்தகண் அஞ்சாமை ஈகை அரிய வரைகீண்டு அடலணங்கு கழற் அருகிலரும் கிளிமொழி அடல்வேல் அமர்நோக்கி அருங்கயம் விசும்பில் அடி அதர் சேர்தலின் அருண மாஞ்சினை அடிமிசை அரசர்கள் அருந்தவர்கட் காதியாய் அடிமுழந் தாளோ டுந்தி அருமாலைத் தாதலர அடியியற் கொடியன அருவி அரற்றும் அடுக்கன் மீமிசை அருவிப் பலவரைகாள் அடும்பின் நெடுங்கொடி அருளல்ல தியாதெனின் அடைமின்சென் றடை அருளாழி ஒன்றும் அடையார்பூங் கோதை அரையர் கோனயி ராவணம் அணங்க னாரன அல்லற் கோடைக் அணங்குகொல் ஆய் அலந்த மஞ்ஞை அணிகிளர் சிறுபொறி அலரிநாறு துவர்வாய் அணிநிழல் அசோகமர்ந் அலைகடற் கதிர்முத்தம் அணிமலர் அசோகின் அலைப்பான் பிறவுயிரை அணியிழை அமைத்தோள் அவரே, கேடில் அத்துண் ஆடை அவரோ வாரார் அதற்கொண்டு அவிழ்ந்த துணியசைக்கும் அதிகமல மாகாவே அள்ளற் பள்ளத் அந்தண் சாந்தமோ அளவறியா னட்டவன் அந்தரத் துள்ளே அறத்தா றிதுவென அறத்துக்கே அன்பு ஆனை ஊற்றின் அறந்தருதண் செங்கோ இசையிள் பெரியதோர் அறந்தருவா னான்றோ இசையெல்லாம் கொட்ட அறனின்றமிழ் இசையெலாம் இசைய அறிஞர் இயம்பிய இட்ட கன்றனை அறிந்தானை ஏத்தி இட்டில் இரும்புழை அறிவல் அறிவல் இடங்கை வெஞ்சிலை அறிவறை போகிய இடைநுடங்க ஈர்ங்கோதை அறிவார் அறிவும் இந்திரர்கள் ஏத்துமடி அறிவினான் ஆகுவ இந்திரனே போலும் அறுவர்க் கறுவரைப் இரங்கு குயின்முழவா அன்பிற்கும் உண்டோ இரவு வரவுபே ரின்ற அன்பீனும் ஆர்வம் இரியன் மகளிர் அன்றுதான் குடையாக இருங்கடல் தானையொடு அன்னம் கண்டர இருங்கண் விசும்பின்கண் அன்னாய் அறங்கொல் இருங்கழி மலர்ந்த அன்னையும் என்னையும் இருணிறம் வளையம் அன்னையையான் நோவ இருது வேற்றுமை அனவரதம் அமர இருநெடுஞ் செஞ்சுடர் ஆஅ அளிய இருநோக் கிவளுண்க ஆஅம் பூஉ இரும்பிடியை இகல்வேழம் ஆகம் கண்டகத் இருமூன்றில் ஒன்றுகொண் ஆசை அல்குல் இருவரமாம் ஏழுநாள் ஆசைப் படுவ இருள்விரிந் தன்ன ஆடரிவி லாதிநடு இருளிற் கெரிவிளக்கு ஆடவர்கள் எவ்வா இரைக்கும் அஞ்சிறைப் ஆடுகழைக் கரும்பின் இல்லென்பான் கையில் ஆடுகழை கிழிக்கும் இலனென்னும் எவ்வம் ஆதி நாதர் இலைநல வாயினும் ஆதியங் கடவுளை இவனினும் இவனினும் ஆதியான் அருளாழி இற்றேன் உடம்பின் ஆதியான் அறவாழி இறுத்தொசித் தட்டு ஆய்தினை காத்தும் இன்பம் விழையான் ஆர்கலி உலகத்து இன்னகைத் துவர்வாய்க் ஆர்கலிநீர் ஞாலத் இன்னமிழ்தம் ஊட்டி ஆர்த்த அறிவினர் இன்னுயிர் தாங்கும் ஆர்த்தார்த்துக் கண் இனமலர்க் கோதாய் ஆரருள் பயந்தனை ஈத்துவக்கும் இன்பம் ஆரிய மன்னர் ஈயற் புற்றத் தீர்ம்புறத் ஆலத்து மேல ஈரிதழ் இணர்நீலம் ஆவா என்றே உகுதிறத்துத் துப்பாயார் ஆவின் இடையர் உகுபனிக்கண் உறைப்பவும் ஆவே றுருவின உடைமணி அரையுருவக் ஆழி இழைப்பப் உடையராய்ச் ஆளான் விடுமேல் உடையார்முன் இல்லார் ஆளி நன்மான் உண்டூர்ந் துதைத்தழித் ஆறியாம் முன்புக்கு உண்ணாமை யுள்ள ஆனாப் பெருமை உண்ணான் ஒளிநிறான் உதுக்காண், சுரந்தானா என்னே செல்லுதி உமணர் சேர்ந்து என்னை நீ காயல் உரன்ன் அமைந்த ஏஎர் ஆஅர் உரா அயதேவர்க் ஏஎர் சிதைய உரிமை யின்கண் ஏஎ வழங்கும் உருகா தார்தம் ஏடீ அறங்கொல் உருவுகண் டெள்ளாமை ஏதங்கள் நீங்க உரைப்பார் உரைப்பவை ஏர்மலர் நறுங்கோதை உலகம் தழீஇய ஏரி இரண்டும் உலகம் மூன்றும் ஏறுயர் கொடியின் உலகினுட் பெருந்தகையார் ஐயாவோ ஐயாவோ உலகுடன் விளக்கும் ஒக்குமே ஒக்குமே உலகே, முற்கொடுத்தார் ஒருதிரட் பிண்டிப் உலாஅ உலாஅ ஒருபொருட் கிருதணி உள்ளடி உள்ளன ஒருமால் வரைநின் உள்ளார் கொல்லோ ஓங்கிலை வேலோன் உற்ற படையினார் ஓங்குதிரை வியன்பரப் உறிபோல் நரம்பே ஓங்குவரை யமன்ற உறுபெயல் எழிலி ஓங்குமலைத் தொடுத்த ஊகத்தி னான்மல்கு ஓடையே ஓடையே ஊசி அறுகை ஓருடம் பிருவரா ஊர அலரெழச் ஔவித் தழுக்கா ஊரவாழி ஊர ஔவை என்று ஊருணி நீர்நிறைந் கங்கணக்கைப் பைந்தார் ஊழிநீ உலகுநீ கடற்குட்டம் போழ்வர் ஊனுடை உழுவையி கடாஅக் களிற்றின்மேல் எஃஃ கிலங்கிய கடிகமழ் இலைமலர் எஃஃகின் அஃகிய கடிமலர் புரையும் எஃகொடவன் காப்ப கடியார்பூங் கோதை எண்ணினர் எண்ணகப் கடியான் வெயிலெறிப்ப எய்தற் கரிய கடியுலாய் நிமிர்ந்த எல்லார்க்கும் நன்றாம் கடுநாக மதனடக்கி எல்லாரும் எந்தமக்கே கடுமுடைய நாறுகரு எல்லா விளக்கும் கடைசெப்பும் வேயும் எல்லைநீர் ஞாலம் கடையாயார் நட்பிற் எழிலார் சிமயம் கடையில்லா அறிவோடு எளிதின் இரண்டடியும் கண்டகம் பற்றிக் எற்றே பலியிரக்கும் கண்டல் வண்டற் எறும்பி அளையிற் கண்டலங் கைதையொடு என்பொடு தடிபடு கண்டு தண்டாக் என்னிது விளைந்த கண்ண் கருவிளை என்னிற் பொலிந்த கண்ண் டண்ணெனக் கண்ணியோர் கண்ணி கற்புடைத்தாக் காட்டுதற்கு கண்ணுடையாரவர்கண் `கற்ற நூலினார் கண்ணுதலான் காப்பக் கற்றற் றற்ற கண்ணும் புருவமும் கறைப்பற் பெருமோட்டு கணங்கோ டோகை கன்று குணிலாக் கணங்கொள் வண்டினம் காஅரி கொண்டான் கணிகொண் டலர்ந்த காக்கைக்கா காகூகை கணைக்கால் நெய்தல் காடா மாதா லீதாகா கதமிகு வனகோழி காண்கவினான் காரோர் கதிர்கொள் மதியும் காதுசேர் தாழ் குழையாய் கயல்மலைப் பன்ன காம்புதேம் பாவெற்பிற் கயலேர் உண்கண் காமர் கடும் புனல் கயற்கருங்கண் அந்நலார் காமவிதி கண்முகம் கரவொடு நின்றார் காமனைக் கடிந்தனை கரிமருவு கடிமதிலின் காய்ந்துவிண் டார்நையக் கரிய வெளிய காய்மாண்ட தெங்கின் கரியவும் வெளியவும் கார்க்கடல் ஒலிமா கருங்கடல் உடுத்த கார்நறு நீலம் கருங்கால் வெண்குருகு காரார் தோகைக் கருங்கண் வெள்வளை காவல் உழவர் கருதிற் கவினார் காவியங் கருங்கட் கருநிறப் பொறிமுகக் காழ்வரக் கதம்பேணா கருநீலம் அணிந்த காளையோ டாடிக் கருமால் வினைகள் கானக நாடன் கருவிப் புட்டிலின் கானலம் பட்ட கரைபொரு கான்யாற்றங் கிடங்கிற் கிடங்கிற் கரை பொருநீர்க் கடல் குடநிலைத் தண்புறவிற் கல்சேர்ந்து கால்தோன்று குண்டு நீடுநீர்க் குவளை கல்லடைந்த சீறூர் குணம்புரியா மாந்தரையும் கல்லாதார் நல்லவையுட் குமண வாழி குமண கல்லாதான் சொற்கா குயிலும் குழலும் கல்லாற் கடங்கழிய குரவக் கோலக் கல்லிவர் முல்லைக் குர வணங்கிலை கல்லிவர் முல்லையும் குரவு தான்விரி கல்லின்மேல் நாறிய குராஅம் விராஅம் கல்வினைக் கதிர்மதிக்கண் குருகிரிதலின் கிளி கலங்கழாலிற் குருகு நாரையொடு கலைபயில் அல்குலார் குருகுவெண் டாளி கலைக்கணார் குருந்துக் குறைந்து கலையெலாம் முதற்கணே குருந்து குளிர்ந்து கவர்கதிர் வரஃகிறுங்கு குலாவணங்கு வில்லெயினர் கழாஅக்கால் பள்ளியுள் குவளை உண்கண் கழிமலர்ந்த காவிக் குவியிணர்த் தோன்றி களவினாற் கொணர்ந்த குழலிசைக் குரல் களிச்சாத்தாஅ என்றியான் குழலிசைய வண்டினங்கன் களியுந்தி வீழ்ந்த குழலினி தியாழினி களிறும் வந்தன குழலும் யாழும் களிறுவழங்கு தெருவில் குறித்துக் கூடுவோர் கற்க கசடறக் குறுங்கால் ஞாழல் கற்பிறங்கு சாரற் சதமகலா வேலர் குறுத்தாட் பூதம் சாந்தும் தண்டழை குன்றக் குறவன் சாரல் ஓங்கிய குன்றத்து மேல சாருண் ஆடைச் குன்ற வெண்மணல் சிலம்படி மாதர் குன்றா விளையுள் சிலம்பொலிக்கும் இணை குன்றுவாழ் கொடிச்சியார் சிலீமுகம்பாய் தருகுஞ்சி குன்றேறி சிலையன் செழுந்தழையன் கூஉம் புடைக்கலம் சிலை விலங்கு நீள்புருவம் கூடுவார் கூடல்கள் சிற்றியாறு பாய்ந்தாடும் கூர்ப்பதனை ஓரெழுத்தால் சிறப்பீனும் செல்வமும் கெடலரு மாமுனிவர் சிறியகட் பெறினே கெண்டையை வென்ற சிறுகுடி யீரே கைமாட்சி விரகன் சிறுகோட்டுப் பெரும்பழம் கைவிரிந்தன காந்தளும் சிறுசோற்றானும் கொங்கு தங்கு சிறுநன்றி இன்றிவர்க் கொங்குதேர் வாழ்க்கை சிறுநுதற் பேரமர்க்கண் கொடிகுவளை கொட்டை சீயம் சுமந்த கொடி கொடி யொடு சீர்கொண்ட கருங்கடலில் கொடியிடை மாதர் சீறடிப் பேரகல் கொடிவடிவேல் கூட்டழிக்கும் சுடச்சுடரும் பொன் கொடிவாலன குருநிறத் சுடர்த்தொடீஇ கேளாய் கொடுத்தலும் சுடிகை நுதன்மடவாள் கொண்டல் முழங்கினவால் சுரிதருமென் குழன் கொய்தினை காத்தும் சுரையாழ அம்மி கொலைவில் எயினர் சுற்றுநீர் சூழ்கிடங்கில் கொலைமான் விழியகறல் சுறமறிவன துறையெல்லாம் கொல்லா நலத்தது சுறாஅக் கொட்கும் கொல்லைக் கொன்றை சூரல் பம்பிய கொல்லையஞ் சாரல் சூரலும் பிரம்பும் கொன்றன்ன இன்னா செங்கண் மேதி கொன்றார்ந் தமைந்த செங்கயலும் கருவிளையும் கொன்றுகோடுநீடு குருதி செங்கை உந்திச் கொன்றை வேய்ந்த செஞ்சுடர்க் கடவுட் கொன்னூர் துஞ்சினும் செந்தீ யன்ன கோடல் மன்னு செந்தொடைப் பகழி கோடல் விண்டு செய்துமோ பாண கோடற் கொல்லைக் செய்யவாய்ப் பசும்பொன் கோண்மாக் கொட்குமென் செய்யோன் செழும்புகரோன் கோலக் கொன்றை செருவிளை வைவேற் கோலமலர் கொண்டுசில கெளவைபோகிய கோவா முத்திற் தாளாளர் அல்லாதார் கோழி எறிந்த தாளோங்கிய தண்பிண்டி கோழியும் கூவின தானோரும் எம்முள்ளி கோளரிவாளரி திடுதிம் மெனநின் செல்வப்போர்க் கதக்கண் திண்டேர் வயவரைச் செறிதொடி உவகை திரித்து வெந்துயரம் சென்றுபடு பருதியிற் திரியாச் சுற்றமொடு சென்று புரிந்து திருக்கொண்டு பெருக்கம் சென்று முகந்து திருகிய புரிகுழல் சேய்புகர்மால்மதி திருந்திலையின் இலங்கிலை சேயரி நாட்டமும் திருநந்து பூம்பொய்கை சேற்றுக்கால் நீலம் திருநுதல் வேர்வரும்பும் சொல்லல் ஓம்புமின் திருமழை தலைஇய சொல்லல் சொல்லல் திருமொழியாற் சின்ன சொல்லுப சொல்லப் திருவிற் கோர் கற்பகத் சோதி மண்டலம் திரைத்த சாலிகை சோலை யார்ந்த திரைந்து திரைந்து சோறுவாக்கிய திறந்திடுமின் தீயவை தக்கவர் சம்பந்தம் தீமேய் திறல்வரை தக்கார் தகவலிர் தீயி னன்ன தக்கோலம் தின்று துகடீர் பெருஞ்செல்வம் தடங்கடல் மண்ணில் துங்கக் கனகச் தடமண்டு தாமரையின் துடித்த டித்தி மிழ்தரு தண்டடைந்த திண்டோ துணியிரம் பரப்பகம் தண்டையின் இனக்கிளி துப்பாயார் தாவென்பார்க் தண்ணறுந் தகரம் துப்புறழ் செவ்வாய்க் தண்ணந் தூநீர் துவருண் ஆடைச் தண்பால் வெங்கள்ளின் துளியொடு மயங்கிய தண்மதியேர் முகத்தாளை தூஉஉத் தீம்புகை தண்முகை மென்குழல் தெங்கங்காய போலத் தத்தித்தா தூதுதி தெய்வ நாறு தந்தை இலைச்சுமடன் தெரிவில்லா வினைகெடுத்து தம்பொருள் என்பதம் தெருவு தேரோடத் தலைக்கட் டலையைந்தும் தெறுக தெறுக தலைவன் றலைமுதலாத் தென்குமரி வடவிமயம் தவளமுத்தம் சங்கீன்று தென்றல் இடைபோழ்ந்து தறியும் இரண்டு தேந்தாட்டீங்கரும்பின் தன்னுயிர்க் கின்னாமை தேம்பழுத் தினியநீர் தாஅ மரைமேல் தேன்ம ருந்திரு தாஅட் டாஅ மரை தேனார் மலர்க்கூந்தற் தாஅம் படுநகர்க்கு தேனாறுபூந் தாஅய்த் தாஅய்ச் தேனினார் மலர்ப்பிண்டி தாம்வீழ்வார் தம்வீழப் தொடிநெகிர்ந் தனவே தாம்வீழ்வார் மென்றோ தொடியுடைய தோண் தாமத் தூண்களைத் தொடுகடற் றுறைதுறை தாமரை புரையும் தொடுத்த வேம்பின்மிசைத் தாவென்பார்க் கில்லென் தொன்னலத்தின் புலம் தாழ்ந்த உணர்வினராய்த் தோடார் எல்வளை தாழ்பொழிற் றடமாஞ்சினை நீரின் றண்மையும் தாழி யோங்கு நீரூர் பானா யாறே தாழிரும் பிணர்த்தடக்கை நீல நிறத்தனவாய் தாள், களங்கொள நீல மாகடல் நீடு நடைக்குதிரை ஏறி நீலுண் டுகிலிகை நண்ணினர்க்கும் நண் நுண்மைசால் கேள்வி நண்ணு வார்வினை நுழைதுகில் அகலல்குல் நல்லார் வணங்கப் நெடுந்தோட் குறுந்தொடி நலங்கிளர் திருமணியும் நெடுநுண் சிலையாக்கும் நலஞ்செலத் தொலைந்து நெடுவரைச் சாரற் நவைக்கணம் வீய நெய்கொண்டென் நளியிரு முந்நீர் நெற்பெயரா தொன்றை நற்கொற்ற வாயில் நெறிநீர் இருங்கழி நறுநீல நெய்தலும் நேரிழை மகளிர் நறுமாந் தளிர்மேனி நோக்கினாள் நோக் நறுவேங்கைத் துறுமலர் நௌவிமான் நோக்கினார் நன்மனமும் நாணமும் பகலவன்செய் தூதி நன்மாறா வருவாயோ பகலே, பல்பூங் கானற் நன்மிதென்று பகற்செய்யும் நன்றறி வாரிற் பங்கயம் காடுகொண் நன்றியாங்கள் படியுடையார் நன்னாட் பூத்த படுமழைத் தண்மலை நன்னாள் வேங்கைப் படைகுடி கூழமைச்சு நாகஞ் சந்தனத் படையொடு போகாது நாகிளம்பூம் பிண்டிக் கீழ் படையொன்றுமில்லை நாடி மீடல் அல்ல பண்கொண்ட வரிவண் நாணால் நிறைந்த பண்டிப் புனத்துப் நார்த்தொடுத் தீர்க்கிலென் பண்டும் ஒருகாற்றன் நித்திலம் கழலாக பண்ணும் திறமும்போற் நில்லாது செல்வம் பந்தம் நீக்குறில் நிலங்கா ரணமாக பரலத்தம் நிலங்கிளையா நெடிதுயிரா பரவிப் பாரகத் தார் நிலத்தினும் பெரிதே பரவு பொழுதெல்லாம் நிலமகள் கேள்வனும்` பரவை மாக்கடல் நிலம்பாஅய்ப்பாஅய் பரியல் யாவதும் நிலவரைநீள் புகழ் பருவரை நிவந்து நிலவுமணல் அகன்றுறை பரூஉத் தடக்கை நிலனெளியத் தொகுபிண்டி பல்கால் வந்து நிழலிடையிஃ தோபுகுந்து பல்யானை மன்னர் நிழன்மணி நின்றிமைக்கும் பல்லார்க்கும் ஈயும் நிற்பவே நிற்பவே பல்லுக்குத் தோற்ற நின்றழல் செந்தீயும் பல்லும் பணிமொழியாள் நின்றன நின்று பல்லே முத்தம் நின்று திரியும் சுடருளை பல்வளையார் கூடிப் நின்றுநின்றுளம் நினையு பலமுறையும் ஓம்பப் நீகாவா மாமா வாகாநீ பூண்ட பறையறையப் நீடற்க வினையென்று பூத்த வேங்கை நீடிணர்க் கொம்பர்க் பூத்தாட் புறவிற் நீமாலை மாறாடி பூந்தண்சினை மலர்மல்கிய பவழமும் பொன்னும் பூந்தண் பொழிலிடை பற்றிப் பலகாலும் பூந்தாட் புனற்றாமரை பற்றுக பற்றற்றான் பூந்தாமரைப் போதலமர பறைபட்டன பட்டன பூந்தார்ச் சிறுகிளி பன்மாடக்கூடல் பூம்பாவாய் நீயொருநாட் பன்மீன் உணங்கற் பூம்பொழிற் றண்கானல் பாசிழை ஆகம் பூமலை நீருறையுள் பாடகஞ்சேர் காலொரு பூமன் றெறுகதிரோன் பாடுகோ பாடுகோ பூமாலை காரணீ பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பூமேலாள் ஆரென்பர் பாடு வண்டு பாண் பூவார் பொய்கைப் பாம்பு கயிறாக் பூவி னார்பொழிற் பாயிரும் பரப்பகம் பெயலொடு வைகிய பார்க்கடல் முகந்த பெருகலி ஒலிமலி பார்பரவிய பருவரைத்தாய் பெருங்கண் கயலே பாலன் றனதுருவாய் பெருமலைக் குறுமகள் பாலொடு தேன் கலந் பேடையை இரும்போத்துத் பாவடி மதயானை பேதுற விகந்த பாவாய் அறங்கொல் பேய்முலை வியன்ஞாலம் பானல்வாய்த் தேன் பேர்ந்து சென்று பானலொடு கமழும் பையுள் மாலைப் பழுமரம் பிடியுடை நடையடு பொங்கழல் நாகம் பிண்ட நெல்லின் பொங்கு சாமரை பிண்டி மலர்மேற் பொய்மையும் வாய்மை பிண்டியின் நீழல் பொருளாளிற் புகழாமென் பிண்ணாக்கோஒ என்னும் பொழிலே, இரவோ ரன்ன பிணியார் பிறவிக் பொறையன் செழியன் பிரமன்மால் பினாகி பொன்புனைந்த நகரும் பிரிந்துறை வாழ்க்கையை பொன்மலி கூடற் பிறப்பென்னும் பிணி பொன்னலர் துதைந்த பின்றாழும் பீலி பொன்னார மார்பிற் பீநீகா மாமா காநீபீ பொன்னிணர் ஞாழற் புகழ்தல் ஆனாப் பொன்னிலங்கு புகழ்பட வாழாதார் பொன்னி னன்ன புன்னை புயல்வீற் றிருந்த பொன்ன னன்ன பொறிசுணங் புயலும் போலும் போத லே பொரு ளாக் புரிகுழலும் பூணார் போதவிழ் குறிஞ்சி புரிந்து வாங்கு வீங்கு போதார் கூந்தல் புருவமும் பூணார் போதார் நறும்பிண்டி புலந்துறை போகிய போதியங் கிழவனை புலமிக் கவரைப் போது சாந்தம் புள்ளிப் பொறியே போதுசேர் கோதாய் புறத்தன ஊரன போதுசேர்ந்து கூடு புன்காற் புணர்மருதின் போத விண்ட புண்டரீக புன்னைப் பொழிலருகே போதுறு முக்குடைப் புனல்பொழிவன சுனை மாயோன் மார்பில் புனற்படப்பைப் பூந்தா மார்வுற அணிந்தாலும் பூங்கட் குறுந்தொடி மாரியொடு மலர்ந்த பூங்கடம்பின் அந்தார் மாலை மணங்கமழும் பௌவத் தன்ன பாயிருள் மாலையால் வாடையால் மஞ்சுசூழ் சோலை மாவடு வென்னும் மட்டுத்தான் உண்டு மாவரு கானல் மடப்பிடியை மதவேழம் மாவலிசேர் வரைமார்பி மண்கொண்ட குழி மாவழங்கலின் மண்டலம் பண்டுண்ட மாவழங்கு பெருங்காட்டு மண்டிணிந்த நிலனும் மாவும் புள்ளும் வதிவயிற் மணிகிளர் நெடுமுடி மாறாக் காதலர் மலைமறந் மணிநீரும் மண்ணும் மான்வீடு போழ்திற் மணிமலர்ந் துமிழொளி மிக்க மாதவம் வீட்டுல மணிமிடைந்த பைம்பூண் மீன்றேர்ந் தருந்திய மணியுமிர்ந்து மாமலைமேல் முகமறிந்தார் மூதுணர்ந்தார் மதியம் கெடுத்த முத்தரும்பிப் பைம்பொன் மதுவிரவீய மலர்கஞலிய முத்தொடு மணிதயங்கு மந்தரமும் மாகடலும் முதுக்குறைந் தனளே மந்தாநிலம் மருங்கசைப்ப முந்து கொன்ற மொய்ம் மந்திரி கடிதோடி முந்நீர் ஈன்ற அந்நீர் மயிர்நிறுவி மற்றதற் முரசுமுழுங்கு தானை மருந்தெனின் மருந்தே முரன்று சென்று வண்டினம் மரையிதழ் புரையும் முருகவிழ்தா மரைமலர் மல்லன்மா மழையார்ப்ப முருகுவிரி கமல மலிதேரான் கச்சியும் முல்லை முறுவலித்துக் மலைமிசை எழுந்த முல்லைவாய் முறுவலித்தன மலைமுலை நீராடை முலைகலிங்கம் மூரி மலைமேல் மரங்கொணர்ந்து முழங்குகடல் முகந்து மறந்தும் பிறன்கேடு முழங்குகளியானை மறையவரும் வந்தார் முழங்குகுரல் முரசியம்ப மன்றலங் கொன்றை முழங்குதிரைக் கொற்கை மன்னும் வழுதி முழுதுல கிறைஞ்ச மனங்கனிந் தன்ன முள்ளி நீடிய முதுநீ மனைக்குப்பாழ் முற்றொட்டு மறவினை மனையிற்கு நன்று முறிமே யாக்கை மாஎறிபதத்தான் முறிமேனி முத்தம் மாக்கொடி மானையும் முன்றான் பெருமைக்க மாகம் திவண்டு முன்றி லெங்கும் மாசற்ற மதிபோல முனறி னின்ற முடமுதிர் மாசில் கண்ணி முன்னும் தொழத் மாநீகா மாமா காநீமா வாய்பவளம் வேந்தோள் மாமலர் நெடுங்கண் வாயாநோய் மருந்தாகி மாமாதா நீநீ தாமாமா வார்காற் செழுங்கழுநீர் மாயவனாய் முற்றோன்றி வார்பணிய தாமத்தால் முடமுதிர்மாயாத தொல்லிசை வாராரே என்றென்று மாயோள் கூந்தற் வால்வெள் ளருவி மூவடிவி னாலிரண்டு வாள்வரி வேங்கை மூவா முதலா உலகம் வாளார் வார்கழல் மெய்யறி விலாமை வாளும் வாளியும் மெல்லிணர் நறும்பூ வாளேர் தடங்கண் மென்றினை காத்தும் வாளை மேய்ந்த மேவார் சார்கை வான்றேயும் பொன்னெயில் மேனமக் கருளும் வானகச் சோலை மைசிறந்தன மணிவரை வானிலவி முகிலார்ப்ப மொய்த்துடன் தவழும் வானுற நிமிர்ந்தனை யதிகணம் வானோங்கு சிமையத்து யாகாவா ராயினும் விடஞ்சூழ் அரவின் யாதானும் நாடாமால் விடாஅ விடாஅ வெரீஇ யானும் தோழியும் விடுகைபோல் உள்ளத் யானை, எருத்தக் வித்தகர் செய்த வச்சிரம் வாவி விரிகதிர் மதிமுகம் வசையில் புகழ் விரிந்தும் சுருங்கியும் வஞ்சியங் கொடியின் வில்லம்பு வேய்தோள் வஞ்சியேன் என்றவன்றன் வில்லாளர் உள்ளாரேல் வஞ்சி வெளிய குருகெல் வில்லுடையான் வானவன் வட்டொட்டி யன்ன விலங்கு நீண்முடி வடவிமயமொடு விலங்கொடு மக்கள் வடாஅது, பனிபடு விளங்குமணிப் பசும்பொன் வடிமலர்த்தார் நாகர் வினையத் தான்மிடை வடியேர் கண்ணீர்மல்க வினையொழி பொழுதின்கட் வடிவுடை நெடுமுடி வீங்குமணி விசித்த வண்கொன்றை வெண்மணல் எக்கர் வண்டார் பூங்கோதை வெளியவும் வெற்பிடைக் வண்டிவரு மலர்வெட்சி வெறிகமழ் தண்சிலம்பின் வண்டுகெழு திலக வெறிகமழ் தண்புறவின் வண்டுபடக் குவளை வெறிகொண் டலரும் வண்டுளர் பூந்தார் வெறியுறு கமழ்கண்ணி வண்ண்டு வாழும் வெறிவிரவு புன்சடைமேல் வண்ணத்தின் ஒன்றோதி வென்றான் வினையின் வண்பாராள் மன்னர்பொன் வென்றி கொண்டறை வண்மை மதம்பொழிந்து வேங்கையஞ் சாரல் ஓங்கிய வந்துநீ சேரின் உயிர் வேங்கை வாயில் வியன்குன் வம்பலைத்த வனமுலையாள் வேத முதல்வ வயலாமைப் புழுக்குண்டும் வேதின வெரிநின் ஓதி வயலுழுவார் வாழ்வாருள் வேந்து வேல்வாங்கி வரிகொள் அரவும் வேரல் வேலி வரிசை பெரிதுடையர் வைகலும் வைகல் வரையென மாடங்கள் வலமாதிறத்தான்வளி வழாஅ நெஞ்சிற்றம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் வளக்கு ளக்கரை மாநீலம் வளம்பட வேண்டாதார் வளர்கொடியன வளரிளங் கொங்கை வையக மெல்லாம் வாஅம் புரவி வழுதி வாஅ வழுதி மதுரை வாக்குமுகந் தேன்மலர் வாங்குபு கொள்ள வாணெடுங்கண் பனிகூர வாமமணிமே கலையார் பொருட் குறிப்பு அகரவரிசை (எண்: பக்க எண்) அகத்திணை அகப்பா அகவல் அகப்பாட்டுவண்ணம் அகப்புறத்தினை அகவல் அகவல் இசை அகவல் வெண்பா அகவற்றுள்ளல் ஓசை அகவற்றூங்கல் குறளடி வஞ்சிப்பா அகவற்றூங்கள் சிந்தடி வஞ்சிப்பா அகன்று இசைப்பு அகைப்பு வண்ணம் அக்கரச் சுதகம் அசுரம் அசை இடை மடக்கு அசை கூனாய் வருதல் அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை அசை சீராய் நடக்குமாறு அசை; (தொகை, வகை, விரி) அசை மடக்கு அசையின் வகை அடி எதுகைச் செய்யுள் அடி கூனாய் வருதல் அடி; (தொகை, வகை, விரி) அடி நிரல் நிறை அடி மடக்கு அடி மறி மண்டில ஆசிரியப்பா அடி மறி மண்டில வெளி விருத்தம் அடிமறி மொழி மாற்று அடிமுரண் அடி மோனைத் தொடை அடியந்தாதி அடியள பெடைத் தொடை அடியியைபுத் தொடை அடியின் வகை அடியெதுகைத் தொடை அடுக்கிசை வண்ணம் அதிகாரச் சூத்திரம் அந்தாதித் தொடை அம்பேதரங்க உறுப்பு அழகு குறையாமல் ஆசிரியச் சிறப்பில் நிரைத்தளையால் வந்த அம்போதரங்க ஒத்தாசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒருபோகு அம்மை அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா அயல் மயங்கிசைக் கொச்சகம் அல்லியம் அழகு அளபெடை அளபெடை இயைபுத் தொடை அளபெடையாய், இரு விகற்பத் தான் வந்த நேரிசை வெண்பா அளபெடை வகை அளபெடை வண்ணம் அளவடி அளவடியாற் கலிவிருத்தம் அளவடியான் வந்த நேரிசை ஆசிரியப்பா அளவடியான் வந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா அளவடியன் வந்த நேரிசை வெண்பா அளவழிப்பையுட் சந்தம் அளை மறியாப்புப் பொருள்கோள் அறுசீர் அடியால் வந்த செந்துறை வெள்ளை அறுசீர்க்கழிநெடிலடி அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறுத்திசைப்பு அறுபது வஞ்சி உரிச்சீரும் வந்த பாட்டு அறுவகைப்பட்ட சொல்லின் விகாரம் அனு ஆசிடை எதுகை ஆசிடை எதுகைச் செய்யுள் ஆசிரிய இணைக்குறட் டுறை ஆசிரிய உரிச்சீர் எட்டு வகை ஆசிரியத் தளை ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை ஆசிரியத் தாழிசை ஆசிரியத்துள் நாலசைச்சீர் ஆசிரியத்துள் வஞ்சியுரிச்சீர் வருதல் ஆசிரியத்துள் வேற்றுத்தளை எல்லாம் மயங்கிவரல் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீர் அடி ஆசிரியத் துறை ஆசிரிய நிரைத்தளையால் வந்த கலிவெண்பா ஆசிரிய நேர்த்தளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை ஆசிரிய நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா ஆசிரிய நேர்த்துறை ஆசிரியப்பா ஆசிரியப்பா பன்னிரண்டாம் ஆசிரியப்பாவில் பிற பாவடிகள் மயங்குதல் ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் பதினாறு ஆசிரியப்பாவிற்குச் சிறுமை ஆசிரியப்பாவினுள் ஐஞ்சீர் அடி ஆசிரியப்பாவின் பெயர் வேறு பாடு ஆசிரிய மண்டில விருத்தம் ஆசிரியம் எட்டாம் ஆசிரியம் ஐம்பத்தாறாம் ஆசிரியம் முந்நூற்று முப்பத்தாறாம் ஆசிரிய விருத்தம் ஆசுகவி ஆண்பெயர் ஆய் என்று இற்ற ஆசிரியம் ஆய்தத்திற்கும் ஒற்றிற்கும் சிறப்பு விதி ஆய்தம் அளபெழுந்து நேரசை யாதல் ஆய்தம் வந்த செய்யுள் ஆரிடச் செய்யுள் ஆரிடப் போலி ஆரிடம் ஆரிட வாசகம் ஆறடியாய் முதலடி இரண்டும் அறுசீராய் பின் நான்கடியும், நாற்சீராய், முதலிரண்டடியும் ஓர் இசையாய், பின் நான்கடியும் மற்றோர் இசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை ஆறாரச் சக்கரம் ஆறு விகற்பிற்று அகவல் ஓசை ஆறெழுத்து அளவியற்சந்தம் ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பா ஆறெழுத்து ஈற்றடி வெண்பா ஆனந்த உவமை ஆனந்தப் பையுள் ஆனந்தம் இகர உகரக் குறுக்கங்களுக்கும் உயிரளபிற்கும் சிறப்பு விதி இசை இசையானந்தம் இடை நிலை அளபெடை இடைநிலை அளபெடைத் தொடை இடைநிலை ஒற்றளபெடைத் தொடை இடைப்புணர் முரண் இடைமை மிக்கு வந்த செய்யுள் இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா இடையாகு இன்பா இடையாகு எதுகை இடையாகு கழிநெடிலடி இடையாகு மோனை இடையிடை குறைந்து இடை மடக்காய், நான்கடியாய் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை இடையிட்ட அடியந்தாதி இடையிட்டெதுகை இடையின எதுகை இடையின மோனை இணை அளபெடை இணை இயைபு இணை இயைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையே வரல் இணை எதுகை இணைக்குறளாசிரியப்பா இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனம் இணைத் தொடை இணை நிரல்நிறை இணை முரண் இணை மோனை இயலடி இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா இயல்மயங்கிசைக் கொச்சகம் இயற்சீரான் வரும் வெள்ளொத்தாழிசை இயற்சீரின் திறமும் தொகையும் இயற்சீரின் வாய்பாடு இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வரல் இயற்சிஃறாழிசைக் கொச்சகம் இயற்சீர் இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை இயற்சீர் நான்கும் வந்த செய்யுள் இயற்சீர் நின்று இயற்சீரோடு விகற்பித்து வந்த சிறப்புடை இயற்சீர் வெண்டளை இயற்சீர் நின்று வேற்றுச் சீரோடு விகற்பித்து வந்த சிறப்பில் இயற்சீர் வெண்டளை இயற்சீர் பத்து வகை இயற்சீர் வெண்டளையால் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா இயற்சீர் வெண்டளையான் வந்த மண்டில ஆசிரியப்பா இயற்சீர் வெள்ளடி நேரிசை ஆசிரியப்பா இயற்பஃறாழிசைக் கொச்சகம் இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா இயற்றரவிணைக் கொச்சகம் இயற்றரவு கொச்சகம் இயற்றரவு கொசச்கக் கலிப்பா இயைபு இயைபுத் தொடை இயைபு வகை இயைபு வண்ணம் இரட்டைத் தொடை இரண்டடியாய், ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை இரண்டடியும் ஒத்துவந்து செந்துறை சிதைந்த குறட்டாழிசை இரண்டு உரைக் கூறுகள் இரண்டெழுத்துச்சீர் இராக்கதம் இருகுறள் தனிச்சொற் பெற்று ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா இருகுறள் நடுவண் தனிச் சொற்பெற்ற இருவிகற்ப நேரிசை வெண்பா இருது இருபது எழுத்தின் மிக்க நாற் சீரடிப் பாவினம் இருபதெழுத்தடி அளவியற் சந்தம் இருபதெழுத்தடிக் கலிப்பா இருபத்தாறெழுத்தடி அளவியற்சந்தம் இருபத்திரண்டு புள்ளி அளபெடை இருபத்திரெண்டெழுத்தடி அளவியற் சந்தம் இருபத்து நான்கெழுத்தடி அளவியற்சந்தம் இருபத்துமூன்றெழுத்தடி அளவியற்சந்தம் இருபத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம் இருபத்தைந்தெழுத்தடி அளவியற் சந்தம் இருபத்தோரெழுத்தடி அளவியற் சந்தம் இருபுறவசை இருபுறவாழ்த்து இருமுதல் நிரல்நிறை இருமுற்று இரட்டை இருவிகற்ப நேரிசை வெண்பா இருவிகற்ப நேரிசை வெண்பா மோனைத் தொடை இழைபு இளமைக்கு எய்திய பெயர் இறந்துபாட்டுவமை ஆனந்தம் இறப்ப இழிந்த ஆனந்த உவமை இறுதிநிலை அளபெடை இறுதிநிலை அளபெடைத் தொடை இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை இனக்குறள் வெண்பா இனவெழுத்துப் பாட்டு இன்னிசைச் சிந்தியல் வெண்பா இன்னிசை வெண்பா இன்னியல் ஆசிரியம் இன்னியற் குறளடி வஞ்சிப்பா இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா ஈ என்று இற்ற ஆசிரியம் ஈரசைச்சீர் நின்று ஈரசைச் சீரோடு ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை ஈரசைச்சீர் நின்று வேற்றுச் சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை ஈரெழுத்துச் சீராவன ஈற்றயலடி குறைந்து, இடைமடக்காய் நான்கடியாய் வெண்டளையான் வந்த ஆசிரிய நேர்த்துறை உணர்வெழுத்து உத்தம் உயிர்மிக்கு வந்த செய்யுள் உயிர்மெய் மிக்குவந்த செய்யுள் உய்த்துணர் நிரல்நிறை உரிச்சீரான் வரும் வெள்ளொத்தாழிசை உரிச்சீரின் திறமும் தொகையும் உரிச்சீர் உரிச்சீர் மூன்று வகை உரிச்சீர் வெண்டளையால் வந்த கலி வெண்பா உரியசை உரியடி உருட்டு வண்ணம் உருவெழுத்து உரை மாண்பு உரை வழு உழிஞை உறுப்பழி செய்யுள் உறுப்பின் அகவல் உற்கிருதி எட்டடியால் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா எட்டாரச்சக்கம் எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்த பாட்டு எட்டெழுத்தடி அளவியற் சந்தம் எட்டெழுத்தடி வெண்பா எட்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா எட்டெழுத்து ஈற்றடிவெண்பா எட்டெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா எண்சீர்க் கழிநெடிலடி எண்சீர்ச் சிறப்புடைக்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலைவிருத்தம் எண்ணு வண்ணம் எண்வகை மணம் எதிர் நிரல்நிறை எதிர் நூல் எதுகை இயைபுத் தொடை எதுகை எட்டாவன எதுகை முரண் எதுகைவகை எல்லா உறுப்பும் குறையாதே வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எழுகூற்றிருக்கை எழுசீர்க்கழி நெடிலடி எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலைவிருத்தம் எழுத்தந்தாதி எழுத்தானந்தம் எழுத்து ; (தொகை, வகை, விரி) எழுத்துமாறு நிரல் நிறை எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித்தாண்டகம் எழுத்தும், குருவும், இலகுவும் ஒவ்வாது வத்த அளவழிச் சந்தம் எழுத்து வருத்தனம் எழுத்து வழு எழுத்தோத்து எழுநூற்றிருபது கலிப்பா எழுபது தளைவழு எழுவகை ஆசிரிய மதம் எழுவகை ஆசிரிய மத விகற்பம் எழுவகை நரம்பு எழுவகை யுரை எறுப்பிடைச் சந்தச் செய்யுள் எறுப்பிடைச் செய்யுள் என் என்று இற்ற ஆசிரியம் ஏ என்று இற்ற ஆசிரியம் ஏகபாதம் ஏந்தல் வண்ணம் ஏந்திசை அகவல் ஏந்திசை அகவல் ஓசை ஏந்திசைச் செப்பலோசை ஏந்திசைத் துள்ளலோசை ஏந்திசைத் தூங்கல் ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா ஏந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா ஏந்திசை வண்ணம் ஏழடியாய் முதலிரண்டடியும் அறுசீராய், ஓரசையால் வந்து, பின் ஐந்தடியும் நாற்சீராய், வேறோர் ஓசையால் வந்த வேற்றொலி வெண்டுறை ஏழெழுத்தடி அளவியற் சந்தம் ஏழெழுத்தடி வெண்பா ஏழெழுத்து இருசீரடி வஞ்சிப்பா ஏழெழுத்து ஈற்றடி வெண்பா ஐ என்று இற்ற ஆசிரியம் ஐகாரக் குறுக்கம் இணைந்த நிரையசை ஐகாரக் குறுக்கம் வந்த செய்யுள் ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை ஐந்தடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்துவந்த வேற்றொலி வெண்டுறை ஐந்தடியாய், ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை ஐந்தடியால் வந்த கலிவிருத்தம் ஐந்திணை ஐந்தெழுத்தடி அளவியற் சந்தம் ஐந்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா ஐந்தெழத்துச் சீராவது ஒத்தாழிசை ஒத்தாழிசைக்கலி ஒத்தாழிசைக் கலிப்பாவின் இனம் ஒத்தாழிசைக் கலியின் வகை ஒருபொருட் பாட்டு ஒருபோகு ஒருமுதல் நிரல் நிறை ஒருவிகற்ப இன்னிசை வெண்பா ஒருவிகற்ப நேரிசை வெண்பா மோனைத் தொடை ஒரு விதற்பப் பஃறொடை வெண்பா ஒரூஉ அளபெடை ஒரூஉ இயைபு ஒரூஉ எதுகை ஒரூஉத் தொடை ஒரூஉ நிரல் நிறை ஒரூஉ முரண் ஒரூஉ மோனை ஒரூஉ வண்ணம் ஒலியெழுத்து ஒழுகிசை அகவல் ஓசை ஒழுகிசைச் செப்பலோசை ஒழுகிசைத் தூங்கல் வண்ணம் ஒழுகு வண்ணம் ஒற்று அளபெழுந்து நேரசையாதல் ஒற்றுப் பெயர்த்தல் ஒன்பதின்சீர் இடையாகு கழிநெடிலடி ஆசிரியத்துறை ஒன்பதின்சீர்க் கழிநெடிலடி ஒன்பதெழுத்தடி அளவியற் சந்தம் ஒன்பதெழுத்தடி ஈற்றடி வெண்பா ஒன்பதெழுத்தடி வெண்பா ஒன்பதெழுத்து இருசீரடி வஞ்சிப்பா ஒன்றாது வந்த சிறப்புடை வஞ்சித்தளை ஒன்றி வந்த சிறப்புடை வஞ்சித்தளை ஓ என்று இற்ற ஆசிரியம் ஓசை; (தொகை, வகை, விரி) ஓத்து ஓரசைச் சீரின் பெயரும் வகையும் ஓரொலி வெண்டுறை ஔகாரக் குறுக்கம் வந்த செய்யுள் கடை அளபெடை கடை இயைபு கடை எதுகை கடைக்கூழை முரண் கடைமுரண் கடைமோனை கடையம் கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா கடையாகு இன்பா கடையாகு எதுகை கடையாகு கழிநெடிலடி கடையாகு மோனை கடையிணை அளபெடை முதலாகிய நான்கு விகற்பம் முறையே வரல் கடையிணை இயைபு முதலாகிய நான்கு விகற்பமும் முறையே வரல் கடையிணை எதுகை முதலாகிய நான்கு விகற்பமும் முறையே வரல் கடையிணை முரண் கடையிணை, மோனை முதலாகிய நான்கு விகற்பமும் முறையே வரல் கட்டளை வெண்பா கண்டக் கட்டு கந்தருவம் கமகன் கரந்துறை பாட்டு கலம்பக வெண்பா கலி அடியுள் தளைமயக்கம் கலித்தளை கலித்தளையால் வந்த ஆசிரிய விருத்தம் கலித்தளையான் வந்த வெண்டாழிசை கலித்தாழிசை கலித்துறை கலித்துறையுன் ஆசிரியத்தளையும் கலித்தளையும் வெண்டளையும் மயங்கி வரல் கலித்துறையுள் நாலசைச்சீர் வருதல் கலிநிலைத்துறை கலிநிலை விருத்தம் கலிப்பா கலிப்பா இருபத்தேழாம் கலிப்பா எழுநூற்றிருபது கலிப்பா நூற்றெட்டாம் கலிப்பா முந்நூற்று அறுபது கலிப்பா முந்நூற்று இருபத்து நான்கு கலிப்பாவில் பிற பா விரவுமாறு கலிப்பாவிற்குச் சிறுமை கலிப்பாவினுட் பிறபாவின் தளை மயங்கி வரல் கலிப்பாவின் வகை கலி மண்டிலத்துறை கலிமண்டில விருத்தம் கலியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா கலியுள் ஐஞ்சீர் அடி கலியுள் நாலசைச்சீர் கலியொத்தாழிசை கலிவிருத்தம் கலிவெண்பா கலிவெண்பாவினுள் நேரீற்றியற்சீர் கலிவெண்பாவின் இனம் கழிநெடிலடி களவு கற்பு காஞ்சி காதை கரப்பு கீழ்க்கதுவாய் அளபெடை கீழ்க்கதுவாய் இயைபு கீழ்க்கதுவாய் எதுகை கீழ்க்கதுவாய்த் தொடை கீழ்க்கதுவாய் நிரல் நிறை கீழ்க்கதுவாய் முரண் கீழ்க்கதுவாய் மோனை குடத்தாடல் குடைக்கூத்து குரு, லகு குறட்டாழிசை குறட்பாவின் இனம் குறளடி குறளடியான் வந்த வஞ்சிப்பா குறளடி வஞ்சித்துறை குறளடி வஞ்சிப்பா குறள் வெண்பாக்களின் இறுதிக்கண் ஓரசைப் பொதுச்சீர் குறள் வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் குறிஞ்சியாழ்த்திறன் குறிப்புத் தொடை குறில் அகவல் அடுக்கிசை வண்ணம் குறில் அகவல் ஏந்திசை வண்ணம் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் குறில் அகவல் மயங்கிசை வண்ணம் குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம் குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம் குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம் குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம் குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம் குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம் குறில் மெல்லிசை பிரிந்திசை வண்ணம் குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம் குறில் மெல்லிசை பிரிந்திசை வண்ணம் குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம் குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம் குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம் குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் குறை எண் நிரல் நிறை குறைச்சிஃறாழிசைக் கொச்சகம் குறைப்பஃறாழிசைக் கொச்சகம் குறையவை குறையீற்று ஒரு பொருள் இரட்டை குறையீற்றுப் பல பொருள் இரட்டை குற்றியலிகரம் வந்த செய்யுள் குற்றியலுகரம் குற்றியலுகரம் வந்த செய்யுள் குற்றெழுத்து ஒற்றடுத்த நேரசை குற்றெழுத்து மிக்கு வந்த செய்யுள் கூடசதுர்த்தம் கூடப் பாட்டு கூழை அளபெடை கூழை இயைபு கூழை எதுகை கூழைத் தொடை கூழை நிரல் நிறை கூழை முரண் கூழை மோனை கூன் கூன் வருமுறை கைக்கிளை கைக்கிளைப் பொருள் மேல் ஆசிரியம் கொச்சகக் கலிப்பா கொச்சகக் கலிப்பாவின் இனம் கொட்டி கொண்டு கூட்டுப் பொருள் கோள் கோமூத்திரி சக்கரம் சந்தத்தாண்டகம் சந்தமும் தாண்டகமும் சந்தழி குறட்டாழிசை சமசந்தத் தாண்டகம் சமநடை வெண்பா சமவியல் வெண்பா சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியம் சமானம் சருப்பதோபத்திரம் சலவாதம் சார்பு நூல் சித்திர அகவல் சித்திரக்கவி சித்திரக்கவி மாலை சித்திரப்பா சித்திர வண்ணம் சிந்தடி சிந்தடியான் வந்த வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா சிந்தடி வஞ்சி விருத்தம் சிறப்பசை சிறப்பில் அசை சிறப்பில் கலித்தாழிசை சிறப்பில் வஞ்சித்தளை ஒன்றிவந்த நிலைமண்டில ஆசிரியப்பா சிறப்புடைக் கலித்தளையான்வந்த ஆசிரியத் தாழிசை சிறப்புடைக் கலித்தளையால் வந்த கலி வெண்பா சிறப்புடைக் கலித்தாழிசை சிறப்புடை நேர்த்தளையான் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா சிறப்புடை வெண்டளையானும் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா சிறப்புடை வெண்டளையானும், சிறப்பில் வெண்டளையானும் வந்த ஆசிரிய நேர்த்துறை சீரின் நான்கு நிலைமை சீர்; (தொகை, வகை, விரி) சீர்களின் பெயர் வேறுபாடு சீர்கள் செய்யுளுள் நிற்கும் முறை சீர் கூனாய் வருதல் சீர்க் கடைக்கண் ஐகாரம் இரண்டு இணைந்து நிரையசையாதல் சீர்நடு ஐகார இரண்டு இணைந்து நிரையசையாதல் சீர்மடக்கு சுண்ண மொழி மாற்று சுராட்டு சுரிதகத் தரவிணைக் கொச்சகம் சுரிதகத்தரவுக் கொச்சகம் சுரிதகம் சுழிகுளம் சூத்திரம் சூத்திரம் என்ற சொற்குப் பொருள் செந்துறை செந்துறைச் செந்துறைப் பாட்டு செந்துறைப் பாட்டு செந்துறை வெண்டுறைப் பாட்டு செந்தொடை செந்தொடை மருள் செந்நடைச் சீரந்தாதி செந்நடை மயக்கந்தாதி செப்பலோசை செப்பல் வகை செப்பல் வெண்பா செம்முரண் செம்மோனை செய்யுட் பொருட்கோள் இருபது ஆதல் செய்யுள்களின் வகை செவ்வழியாழ்த் திறன் செவ்வள பெடை செவ்வியைபு செவ்வெதுகை சொல்லானந்தம் சொல்லும் சொல்லும் முரணியது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது சொல்வழு சொற்சீர் அடி ஞாபகச் சூத்திரம் டகரமெய் வருக்க எதுகை தரவு தரவுக் கொச்சகக் கலிப்பா தருக்கம் தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா தலையாகு இன்பா தலையாகு எதுகை தலையாகு மோனை தலையாகு மோனையாற் பாவினம் வரல் தளை ; (தொகை, வகை, விரி) தளைகள் மயக்கம் தளையும் அதன் தொகையும் தனிக்குறில் நேரசை தனிக்குறில் நேரசை ஆகாத இடங்கள் தனிக்குறில் மொழி முதற்கண்வந்து நேரசையாதல் தனிச்சொல் தனிச்சொல் நிற்கும் இடம் தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா தனிநிலை தனிநிலை அளபெடை தனிநிலை அளபெடைத் தொடை தனிநெடில் நேரசை தன்சீர் நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா தன்மை யெழுத்து தாஅ வண்ணம் தாண்டகச் சந்தம் தாப்பிசைப் பொருள்கோள் தாரணைப் பகுதி தாழிசை திரிபாகி திருவாடல் தீயவை துடியாடல் தும்பை தூக்கானந்தம் தூங்கல் வண்ணம் தூங்கிசை அகவல் ஓசை தூங்கிசைச் செப்பலோசை தூங்கிசை வண்ணம் தூசங் கொளல் தெய்வம் தேர்கை தொடர்மொழி வினாவுத்தரம் தொடை; (தொகை, வகை, விரி) தொடை தளைகளிற் பல விரவிவரின் அவற்றை வழங்குதல் தொடை தோன்றுமாறு தொடையானந்தம் தொடையின் வகை தொலைவு தொன்மை தோரையிடைச் செய்யுள் தோல் நடு இருசீர் குறைந்து ஏனையடி இரண்டும் ஆறுசீரான் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத்துறை நட்டத்திற்கு இலக்கணம் நலிபு வண்ணம் நல்லவை நாலசைச் சீர்க்குப்பிற வாய்பாடு நாலசைப் பொதுச்சீர் நின்று ஒன்றிய வஞ்சித்தளை நாலெழுத்தடி அளவியற் சந்தம் நாலெழுத்து இருசீரடி வஞ்சிப்பா நாலெழுத்துச் சீராவன நால்வகைப் பயன் நாற்சீரடி அறுநூற்று இருபத்தைந்து நாற்சீர் இரண்டடியால் வந்த செந்துறை வெள்ளை நாற்பத்து மூன்றெழுத்தடி அளவியற் றாண்டகம் நாற்பத்தே ழெழுத்தடி அளவி யற்றாண்டகம் நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டுசீர் குறைந்து வந்தஓரொலி வெண்டுறை நான்கடியும் எழுத் தொத்துக் குருலகு ஒவ்வாது வந்த அளவழிச் சந்தம் நான்காம் குலத்திற்குப் பத்து நிலம் நான்காரச் சக்கரம் நான்கு அளபெடையும் வந்த செய்யுள் நான்குவகை எழுத்து நான்குவகைச் சொல் நான்குவகைப் பண் நான்கு வெண்பா உரிச்சீரும் வந்த பாட்டு நான்கெழுத்துச் சீர் நிசாத்து நியமச் சூத்திரம் நிரையசை நிரையசை நான்கும் வந்த செய்யுள் நிரோட்டி நிலைமண்டில ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் நிலை வெளி விருத்தம் நிறை எண் நிரல் நிறை நிறையவை நிறையீற்று ஒரு பொருள் இரட்டை நிறையீற்றுப் பல பொருள் இரட்டை நூல் நூற்பா அகவல் நெடிலடி நெடிலடியாற் கலிநிலைத் துறை நெடில் எதுகை நெடில் மோனை நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசை நெட்டெழுத்து மிக்கு வந்த செய்யுள் நேரசை நேரசை நான்கும் வந்த செய்யுள் நேரிசை ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பாவின் இனம் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா நேரிசைச் சிந்தியல் வெண்பா நேரிசை மண்டில ஆசிரியப்பா நேரிசை மண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் மண்டில ஆசிரியப்பா, மண்டில ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா நேரிசை யாசிரியப்பா நேரிசை வெண்பா நேரீற்று உரிச்சீர் நின்று நேரீற்று உரிச்சீரோடு ஒன்றாது வந்த சிறப்புடைக் கலித்தளை நேரீற்று உரிச்சீர் நின்று பிற சீரோடு ஒன்றாது வந்த சிறப்பில் கலித்தளை நேரீற்று நாலசைச் சீரோடு ஒன்றாத கலித்தளை நேரீற்று நாலசைச்சீர் நின்று ஒன்றிய வெண்டனை நேர் நேர்நடு வஞ்சியுரிச்சீர் கலியுள்ளும் ஆசிரியத் துள்ளும் வருதல் நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீர் நேர்பசை நிரைபசை நொச்சி பஃறொடை வெண்பா பகரமெய் வருக்கமோனை படலம் பதினாறெழுத்தடி அளவியற் சந்தடி பதினாறெழுததடிக் கலிப்பா பதினாறெழுத்தடி வெண்பா பதினான்கு எழுத்தடி கலிப்பா பதினான்கெழுத்தடி அளவியற் சந்தம் பதினான்கெழுத்தடி வெண்பா பதினெட்டெழுத்தடி அளவியற்சந்தம் பதினெட்டெழுத்தடிக் கலிப்பா பதினேழெழுத்தடி அளவியற் சந்தடி பதினேழெழுத்தடிக் கலிப்பா பதினேழெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா பதினேழ் நிலமும் பெற்று, குறளடி முதலாகிய ஐந்தடியாலும் வந்த ஆசிரியப்பா பதினைஞ்சீர்க் கடையாகுகழி நெடிலடி பதினைந்து எழுத்தடிக் கலிப்பா பதினைந்தெழுத்தடி அளவியற் சந்தம் பதினொருசீர்க் கடையாகுகழி நெடிலடி பதினொருசீர்க் கடையாகு கழிநெடிலடியான் பாவினம் பதினோரெழுத்தடி அளவியற் சந்தம் பதினோரெழுத்தடி வெண்பா பதினோரெழுத்து இருசீரடி வஞ்சிப்பா பதின்சீர் இடையாகு கழிநெடிலடி வெண்டுறை பதின்சீர்க் கழிநெடிலடி பதின்மூன்று எழுத்தடிக் கலிப்பா பதின்மூன்று சீர்க் கடையாகு கழிநெடிலடி பதின்மூன்று திறவுரை பதின்மூன்று வகை உரை பதின்மூன்றெழுத்தடி அளவியற் சந்தம் பதின்மூன்றெழுத்தடி வெண்பா பத்து இயற்சீரும் வந்த பாட்டு பத்துவகைக் குற்றம் பத்துவகை மாண்பு பத்துவித வுரை பத்தெழுத்தடி அளவியற் சந்தம் பத்தெழுத்தடி ஈற்றடி வெண்பா பத்தெழுத்தடி வெண்பா பத்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா பத்தொன்பது எழுத்தடிக் கலிப்பா பத்தொன்பதெழுத்தடி அளவியற் சந்தம் பரிசிற் பொருளானந்தம் பரிபாடைச் சூத்திரம் பல விகற்ப இன்னிசை வெண்பா பல விகற்பத்தால் வந்த ஆறடிப் பஃறொடை வெண்பா பல விகற்பத்தால் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா பன்னிரண்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா பன்னிருசீர்க் கடையாகு கழிநெடிலடி பன்னிரெண்டெழுத்தடி அளவியற் சந்தம் பன்னிரெண்டெழுத்தடி வெண்பா பன்னீரடியாற் பெருவல்லத்தைச் சொன்ன பஃறொடை வெண்பா பாஅ வண்ணம் பாக்களின் பெயர் வேறுபாடு பாடுதல் மரபு பாத மயக்கம் பாதிச் சமச் செய்யுள் பாதிச் சமவிருத்தம் பா; (தொகை, வகை, விரி) பாண்டரங்கம் பாலை யாழ்த்திறன் பாவிற்கு அடிச்சிறுமை பாவினங்களின் பெயரும் வழங்கும் முறையும் பாவினங்களுக்கு உரிய அடி பாவினம்; (தொகை, வகை, விரி) பிண்டம் பிபீலிகா மத்திமம் பிரம மணம் பிரமாணச் செய்யுள் பிரமாணம் பிரத்தரிப்பதற்கு இலக்கணம் பிரத்தாரம் செய்தற்கு இலக்கணம் பிரிந்திசைத்துள்ளல் ஓசை பிரிந்திசைத் தூங்கல் பிரிந்திசைத் தூங்கல் குறளடி வஞ்சிப்பா பிரிந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா பிரிந்திசை வண்ணம் பிரிபொருட்டொடர் மொழி முதலிய குற்றங்கள் பிரேளிகை பின் முரண் புரிக்கு புலன் புறத்திணை புறப்பா அகவல் புறப்பாட்டு வண்ணம் புறப்புறத்திணை புறப்புறம் புனல்யாற்றுப் பொருள் கோள் புனைந்துரை இரு திறத்தன பூட்டுவிற் பொருள்கோள் பெண்பெயர் பெயர்ச் சூத்திரம் பெயர் நிரல்நிறை பேடாடல்ல் பைசாசம் பொதுச்சீரான் வந்த குறளடி வஞ்சிப்பா பொதுச்சீர் பொதுச்சீரின் திறமும் தொகையும் பொதுச்சீரின் வாய்பாடு பொதுவடி பொருளானந்தம் பொருளும் பொருளும் முரணியது பொருள்கோட் பகுதி பொருள்வழு பொழிப்பாதி ஐந்தாவன பொழிப்பு அளபெடை பொழிப்பு இயைபு பொழிப்பு எதுகை பொழிப்புத் தொடை பொழிப்பு நிரல்நிறை பொழிப்பு முரண் பொழிப்பு மோனை பொழிப் பெதுகைச் செய்யுள் மகரக் குறுக்கம் வந்த செய்யுள் மகரம் ஈறாய் வந்த நிலை மண்டிலம் மண்டல அசையந்தாதி மண்டல எழுத்தந்தாதி மண்டல மயக்கந்தாதி மண்டில ஆசிரியப்பாவின் இனம் மதுரகவி மயக்க நிரல்நிறை மயக்கு இயைபுத் தொடை மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா மயங்கிசைக் கொச்சகம் மயங்கிசைவண்ணம் மயூரவியல் வெண்பா மரக்கால் மருட் செந்தொடை மருதயாழ்த்திறன் மல்லாடல் மாத்திரை மாலை மாற்று மிகைஎண் நிரல்நிறை முடுகு வண்ணம் முதலடியும் மூன்றாம் அடியும் பதினான்கு சீராய் ஏனையடி இரண்டும் பதினாறு சீராய் இடையிடை குறைந்து வந்த ஆசிரிய இணைக் குறட்டுறை முதல் நான்கு அடிகள் முதல்நிலை அளபெடை முதல்நிலை அளபெடைத் தொடை முதல் நூல் முத்திற வுரை முப்பத்திரண்டு தந்திர உத்தி முப்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம் முரணாய், இருவிகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா முரண் இயைபுத் தொடை முரண் ஐந்தாவன முரண் தொடை முரண் தொடை விகற்பம் முரண் நிரல் நிறை முரண் வகை முறை நிரல் நிறை முற்று அளபெடை முற்று இயைபு முற்று எதுகை முற்றுத் தொடை முற்று நிரல் நிரை முற்றுமுரண் முற்றுமோனை மூவகைக் காலம் மூவகைச் சொல் மூவகைத்துள்ளல் ஓசை: ஏந்திசைத் துள்ளல், அகவற்றுள்ளல், பிரிந்திசைத் துள்ளல் மூவகை மடக்கு மூவர் ஆசிரியர் மூவிருவிகற்ப வுரை மூவெழுத்துச் சீராவன மூன்றடியாய் ஈற்றடி இரண்டும் இருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை மூன்றடியாய் வந்த அடிமறி மண்டில வெளி விருத்தம் மூன்றடியால் வந்த நிலை வெளி விருத்தம் மூன்று வகையான நூல் மூன்றெழுதுச் சீர் மெய் மிக்கு வந்த செய்யுள் மெய்வசை மெய் வாழ்த்து மெல்லிசைத் தூங்கல் வண்ணம் மெல்லிசை வண்ணம் மெல்லின எதுகை மெல்லின மோனை மென்மை மிக்கு வந்த செய்யுள் மேற்கதுவாய் அளபெடை மேற்கதுவாய் இயைபு மேற்கதுவாய் எதுகை மேற்கதுவாய் தொடை மேற்கதுவாய் நிரல் நிறை மேற்கதுவாய் முரண் மேற்கதுவாய் மோனை மோனை இயைபுத் தொடை மோனை இரண்டாவன மோனை முரண் மோனை யந்தாதி மோனை வகை யகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை யவமத்திமம் யாப்பு யாப்பானந்தம் யாப்பு வழு ரகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை வகையுளி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா வண்ணக ஒரு போகு வண்ணகம் வண்ணந்தானே இருபது வஞ்சி வஞ்சி அடியுள் தளை மயக்கம் வஞ்சி உரிச்சீர் வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு வஞ்சி உரிச்சீர் நான்கும் வந்த செய்யுள் வஞ்சித் தளை வஞ்சித்தளையான் வந்த வெண்டாழிசை வஞ்சித்தாழிசையும் துறையும் வஞ்சி நிலைத்தாழிசை வஞ்சி நிலைத்துறை வஞ்சிநிலை விருத்தம் வஞ்சிப்பா வஞ்சிப்பாவில் பிறபா மயங்குமாறு வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வஞ்சிப்பாவிற்குரிய அடிகள் வஞ்சிப்பாவினுள் கலியடி வஞ்சி மண்டிலத் தாழிசை வஞ்சி மண்டிலத் துறை வஞ்சி மண்டில விருத்தம் வஞ்சியுரிச்சீரானே வஞ்சி வஞ்சியுரிச்சீர் பயில் முறை வஞ்சியுள் நாலசைச் சீர் வஞ்சி விருத்தத்துள் ஓரசைப் பொதுச்சீர் வருதல் வஞ்சி விருத்தம் வருக்கம், நெடில், இனம் ஆகிய மோனை எதுகைகள் வல்லிசைத் தூங்கல் வண்ணம் வல்லிசை வண்ணம் வல்லின எதுகை வல்லின மோனை வழி எதுகை வழி நூல் வன்மை மிக்கு வந்த செய்யுள் வாக்கி வாதி வாவனாற்றி விகற்பக் குறள் வெண்பா விகற்ப நடைய வினாவுத்தரம் விகற்பப் பஃறொடை - ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா - ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா விசித்திரப்பா விட்டிசை மோனை விட்டிசை வல்லொற்று எதுகை விதண்டா வாதம் விதானச் செய்யுள் விதானம் விதிச் சூத்திரம் விதி மணம் வித்தாரக் கவி விரவியல் ஆசிரியம் விரவியற் குறளடி வஞ்சிப்பா விரவியற் சிந்தடி வஞ்சிப்பா விராட்டு விருத்தத்துள் கலித்தளையும், ஆசிரியத்தளையும் வெண்டளையும் மயங்கி வரல் விருத்தத்துள் நிரையும் நேரும் நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருதல் விருந்து விலக்கியற் சூத்திரம் வினை நிரல் நிறை வெட்சி வெண்கலி கொச்சகக் கலிலிகளின் வரையறை வெண்கலிப்பா வெண்கூ வெண்பா வெண்சீரோடு வெண்சீர் ஒன்றி வந்த சிறப்புடை வெண்சீர் வெண்டளை வெண்சீரோடு வேற்றுச்சீர் ஒன்றிய சிறப்பில் வெண்சீர் வெண்டளை வெண்சீர் விரவி வந்த இயற்சீர் வெள்ளடி நேரிசை ஆசிரியப்பா வெண் செந்துறை வெண்டளை வெண்டளையால் வந்த ஆசிரியப்பா வெண்டாழிசை வெண்டுறை வெண்டுறைச் செந்துறைப் பாட்டு வெண்டுறைப் பாட்டு வெண்டுறையுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வருதல் வெண்டுறையுள் வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித் தளையும் மயங்கி வரல் வெண்பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா அடிகள் வெண்பா உரிச்சீர் வெண்பா உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு வெண்பா உரிச்சீர் நான்கும் வந்த செய்யுள் வெண்பாவிற்குச் சிறுமை வெண்பாவின் வகை வெண்பாவுரிச்சீரானே கலி வெண்பாவுரிச்சீரானே வஞ்சி வெளி விருத்தம் வெள்ளொத்தாழிசை வெள்ளொத் தாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் வெறுத்து இசைப்பு வேற்றுத்தளை விரவாது, ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்த வெள்ளொத் தாழிசை வேற்றுத்தளை விரவி வந்த வெண்டாழிசை வேற்றொலி வெண்டுறை ழகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை னகரம் ஈறாய் வந்த நுற்பா நிலைமண்டிலம் சிறப்புப் பெயர் அகரவரிசை (எண்: பக்க எண்) அகத்திணை ஆடை நூல் அகத்திணை வஞ்சி ஆதிநாதன் அகத்தியம், அகத்தியனார் ஆதிமாதவர் அகநானூறு ஆதியங்கடவுள் அச்சுதன் ஆமூர் அஞ்சனம் ஆயிரச் செங்கணான் அடி நூல் ஆயுத நூல் அணி நூல் ஆரிடச் செய்யுள் அணியியல் ஆரிடப் போலி அணியியலுடையார் ஆரிடம் அத்தியூர் ஆரிய மன்னர் அத்தினபுரம் ஆழியான் அதியம் கோ ஆறை (ஓரூர்) அமரர்கள் அதிபதி ஆனந்த ஓத்து அமிர்தபதி ஆனோற்றான் அயன் இடைக்காடனார் அரசச் சட்டம் இந்திரர்கள் அரி இந்நூலுடையார் அரிமா (நரசிம்மம்) இமயம் இயக்கியர் அருகன் இரணமாமஞ்சு அருங்கல நூல் இராமாயணம் அவிநயம், அவிநயனார்: இருட்கொடி அவினந்தமாலை இருடிகள் அள்ளுர் இருதிறத் தாசிரியர் அறிவன் இலங்காபுரம் அறவாழி இளஞ்சாத்தன் வேட்டன் அறவாழியான் இறை அறிவுடை நம்பி சிந்தம் இன்மணியாரம் ஆஅழி ஏந்தல் ஈசானன் திசை ஆசிரியம் (நூல்) ஈரைஞ்ஞூற்றெழில் நாட்டத் தோன் ஆசுவிகள் ஈழம் ஆடும் இறைவன் உதயணன் கதை உமையொரு பாகன் கல்லாடர் உருச்சந்தம் கலிமல்லன் உலகளந்தான் கலியாணக் கதை உலோக விலாசனி கலைமகள் உவணக் கொடி கலைமா மடவாள் உவணத்தான் கலைமான் ஏற்றூர் தியாள் உளியன் கலையேற்றூர்தி உறந்தை கவுந்தி உறந்தையார் கோன் களிச் சாத்தன் ஊசிமுறி கறைமிடற்றிறை ஊரகம் கன்னித்துறை எண்ணிருகோள் ஏர் நகையான் காஅரி எழுத்ததிகாரம் காக்கைபாடினியம் எழுத்துக் குறிவெண்பா காக்கைபாடினியார் ஏமாங்கதம் காஞ்சி நெறிக்காரை ஏழியான் காடு கிழவோள் ஏழில் (குன்றம்) காதி ஒருசார் ஆசிரியர் காதிவென்றான் ஒரு நாட்டார் காம்போசன் ஒளி மூர்த்தி காமம் (கதிர் காமம்) ஔவையார் காமன் கங்கை காரி கச்சி காரிகை கச்சியார்கோ காரைக்கால் பேயார் கடல் ஏந்திய கோன் காலகேசி கடிய நன்னியார் காலன் கடுங்கோன் காளிங்கன் கண்டன் கிடங்கில் கண்ணன் கிள்ளி கண்ணுதலான் கீரனார்கணக்கியல் கதக் கண்ணன் குடமூக்கிற் பகவர் கபிலர் குடவரை கமகன் குண்டலம் கரிப்போக்கு வாசகம் குண்டலகேசி கருட நூல் குணகடல் கருநாடகச் சந்தம் குணகாங்கி கருவரை குமணன் குமரி (தென்குமரி) சிவகதி குறுவேட்டுவச் செய்யுள் சிவபுரம் குன்றூர் சிறுகாக்கை பாடினியம் குன்றெடுத்தான் சிறுகாக்கை பாடினியார் கூடல் சினகர், சினகரம் கூடல்நாடு சுந்தரி கூடலார் சுவணமாப்பூதன் கூடலார் கோமான் சுள்ளற்கோல் கூற்றம் சூளாமணி கைக்கிளைச் சூத்திரம் செங்கண்மால் கையனார் செங்கணான் கொல்லி செம்பியன் கொற்கை செம்பூட்செய் கொற்கைக் கோமான் செய்யுளியல், செய்யுளியலுடை கொன்றைவேய்ந்த செல்வன் செயன்முறை கோக்கிள்ளி செயிற்றியம் கோழி செழியன் கோழியார் கோமான் சென்னியர் சங்க பாலன் சேஎய் சங்க யாப்பு சேட் சென்னி சங்கர நாராயணன் சேதிகம் சங்கரன் சேந்தன் சடையன் சேவலங்கொடியோன் சதுமுகன் சொகினம் சந்தம் சொற்கட்டு சந்திரகோடிச் சந்தம் சோ சந்தோபிசிதி சோணாடு சமற்கிருதம் சோதிடம் சயதேவம் சோழன் சயந்தம் ஞானசாரியம் சயந்தன் தக்காணியம் சரவணம் தண்டியலங்காரம் சாகரதத்தன் தத்துவ தரிசனம் சாமுத்திரியம் தமிழ் சார்பு நூல் தமிழ்நர் பெருமான் சிங்கன் தமிழ்ப் புலமைநாதர் சித்ரகவி தமிழியல் சிந்தம் தலையாலங்கானம் சிந்தாமணி திணை நூல் சிலம்புநந்தி திருநென்மலி திருமகள் நாலடி நாற்பது திரையக்காணம் நாலடி நானூறு தும்பிப் பாட்டு நாற்கதி தென்குமரி நான்மாடக் கூடல் தென்பொதியியல் நான்முகன் தென்னயம்பை நிலத்து நூல் தென்னவன் நிலமகள் கேள்வன் தேசிகமாலை நீலகேசி தேவதத்தன் நீலம் தொண்டி நீனிற வண்ணன் தொண்டை நாடு நெடியவன் தொண்டைமான் நெடுமாடக் கூடல் தொண்டையர்கோ நெடுமுடி மாயவன் தொல்காப்பிய அகத்தியம் பகவதி தொல்காப்பியம் பகவன் தொல்காப்பியனார் பஞ்சவன் தொல்புலவர் பட்டினப்பாலை தொல்லாசிரியர் பத்தினைச் செய்யுள் தொன்னூற் கவிஞர் பத்து விச்சை தொன்னூற் புலவர் பம்பைக் கற்சிறை தெளவை பரணர் நக்கீரர் பரிமாணனார் நக்கீரனார் அடிநூல் பல்காயம், பல்காயனார்: நகுலன் பலராமன் நஞ்சுண்ட கண்டன் பழைசை நந்தி பழையனூர் நந்திமாமாலை பழையாறு நம்பி பறம்பு நல்லாசிரியர் பன்மணிமலை நல்லாயூர் பன்னிருபடலம் நல்லாதனார் பனம்பாரனார் நல்லாறனார் பனிவரை நல்லாறன் மொழிவரி பாகை நற்றத்தனார் பாகைக்கோ நன்றறி புலவர் பாசண்டம் நன்னன் பாட்டியல் உடையார் பாட்டியல் மரபுடையார் மயேச்சுரர் பாடகம் மருத்துவ நூல் பாடலனார் மலைபடுகடாம் பாண்டியன் மலைமகள் பாரதம் மலையன் பாரி மழவர் பாலை மா (சூரன்மா) பாலை நல்வாயில் மா (திருமகள்) பாவைப் பாட்டு மாஅல் பிங்கலகேசி மாகதம் பிங்கலம் மாசேனன் பிண்டி மாடக் கூடல் பிரமன் மாதங்கி பினாகி மாபிங்கலம் புகார்க்கிள்ளி மாபுராணம் புட்கரனார் மாயவன் புத்தூர் மார்க்கண்டேயனார் காஞ்சி புரந்தரன் மாராச்சை புராண கவிஞர் மால் புராண சாகரம் மாறமிச்சா கிருதி புறநடை முத்தொள்ளாயிரம் புனல்நாடன் முப்பெட்டுச் செய்யுள் பூதத்தார் மும்மணிக் கோவை பூழியர் கோன் முரண்டராசன் பூழியர் மன்னன் முல்லைப்பாட்டு பெரிய பம்மம் முள்ளூர் பெருஞ் சித்திரனார் மூலர் பெருந்தலைச் சாத்தனார் மேடகச் சந்தம் பெருந்திணைப் படலம் மொழிப்புத்தேள் பெருவல்லம் யமுனை பெருவழுதி யாப்பருங்கலக் காரிகை பெருவள நல்லூர் பாசண்டம் யாப்பருங்கலப் புறநடை பேராசிரியர் யானை யூர்தி பொதியில் வக்கிரன் பொய்கைக் கதயானை சூழாசிரியர் வக்கின கிரந்தம் பொய்கையார் வாக்கு வஞ்சி பொற்கொற்றி வஞ்சியார்கோ பொறையன் வஞ்சி நெடும்பாட்டு பொன்னெயில் வடநூல் போதியங்கிழவன் வடநூல் வழித்தமிழாசிரியர் போந்தை வடநூற் புலவோர் மகனை முறைசெய்தான் வடபுலவோர் மதுரகவி வடமொழி மதுரை வடவிமயம் மந்தரம் வடுகச் சந்தம் மந்திர நூல் வயின தேவன் மந்திரவாதம் வரகுணன் மயிடன் வரதன் மயிந்தன் வருணராசன் மயூரத்திரிசந்தம் வருத்த மானம் வழுதி விண்ணு வளவன் விதூடகன் வாக்கி விளக்கத்தனார் வாசுதேவனார் சிந்தம் வெஃகா வாஞ்சியார் வெண்பாமாலை வாதி வேங்கடம் வாய்ப்பியம் வேங்கை வாயில் வாரணவாசி வேம்பு மாலை வானவன் வேனிலான் விசயன் வையை விஞ்சையர் விண்ணன் விண்ணு விதூடகன் வித்தாரகவி விளக்கத்தனார் வெஃகா வெண்பாமாலை வேங்கடம் வேங்கை வாயில் வேம்பு மாலை வேனிலான் வையை  1. அமிதசாகரர் நாடு அவருடைய ஆசிரியர்க்குரிய பாண்டி மண்டலமே எனலாம். அவ்வபிமானம்பற்றிப் போலும் தொண்டை நாட்டில் இருந்து இயற்றிய காரிகை நூலை ஆண்டு அரங்கேற்றாது தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்ப அப்பாண்டியனது அவைமுன்பு இம் முனிவர் அரங்கேற்றிய தென்க. மீனவன் கேட்ப என்பதிலுள்ள வினை எச்சத்தை அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் என்பதனுள் சொன்ன என்ற வினையுடன் கூட்டியும் பொருள் கூறலாம். ஆயினும் கேட்போர், களம் என்ற பாயிர விலக்கணம் அதனால் அமையாமையின் அஃது ஏற்புடைத்தன்று என்க. - சாசனத் தமிழ்க் கவிசரித.பக்:44. 1. ஒரு நூலாசிரியர் தம் குருவின் பெயரைத் தம் மாணாக்கருக்கு இடுவது மரபு. சமயத் துறையில் இதை எங்கும் காணலாம். திருக்கடவூரில் இருந்த ஆளுடைய நாயனார் என்பவர் தம் குருவான திருவியலூர் உய்யவந்தார் உபதேதித்த ஞானப் பொருளைத் தம்மாணாக்கருக்கு உணர்த்திய போது, அவருக்குத் தம் குருவின் பெயரையே அமைத்தார்; அவரே திருக்களிற்றுப் படியார் என்ற சைவசாத்திர நூல் செய்த திருக்கடவூர் உய்யவந்தார் என்பவர். இதுபோலவே, பரஞ்சோதி முனிவர் என்பவர் பூமியில் இறங்கிச் சுவேதவனப் பெருமாள் என்ற குழந்தைக்குச் சிவஞானம் உபதேசித்த போது, தம் குருவாகிய சத்திய ஞான தரிசனிகள் பெயரின் தமிழ் வடிவாகிய மெய்கண்டார் என்ற பெயரைத் தீட்சா நாமமாகச் சூட்டினார். இவற்றை ஒப்ப, சைன சமயத்தில் முனிவராயிருந்த அமிதசாகரர் தம் மாணாக்கர் ஒருவருக்குத் தம் குருவின் பெயரான குணசாகரர் என்பதையே சூட்டினார் என்று கருத வேண்டும். - தமிழ் இலக்கிய வரலாறு. 11ஆம் நூ.ஆ.பக் : 194-5 திரு.மு.அருணாசலம் 1. 22ஆம் காரிகைக்கு மேலே வரும் உதாரணச் செய்யுள்கள் அனைத்தும் உரையாசிரியரால் செய்யப் பெற்றவையே, ஒவ்வொரு செய்யுளின் பின்னும், உரைச் சூத்திரம் எனத் தவறாது குறிக்கப் பெற்றிருத்தல் அறிக. 1. யாப்பருங்கலக் காரிகை. உ, வே. சா. நூல்நிலைய வெளியீடு; உரையாசிரியர் வரலாறு, 2. உத்திவகைகள் (நன். 14) 3. விதப்புக்கிளவி வேண்டியது விளைக்கும் என்பது நூற்பா 1. யா. வி. பக்: 547 2. யா. கா. பாயிரம். உரை. 3. உரையாசிரியர்கள். திரு. மு. வை. அரவிந்தன் பக். 485. 1. விருத்தியுரை எழுதியவர் பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுரருடைய மாணவரோ அவர் பரம்பரையினரோ ஆதல்வேண்டும் - தென்றலிலே தேன் மொழி. (பக் 59-60) டாக்டர் மொ. அ. துரையரங்கனார். 2. பிறை நெடுமுடிக் கறைடற் றரனார் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் (53, 133). நீர்மலிந்த வார்சடையோன் பேர்மகிழ்ந்த பேராசிரியர் (117, 263, 268). வாம மேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர் (136). உயரும் புரம் நகரச் செற்றவன் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் (221). பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (293) காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர் (300, 341, 349). திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் (312). 1. மோனை விகற்பம் அணிமலர் மொய்த்துட னாமியைபிற் (கு) ஏனை எதுகைக்(கு) இனம் பொன்னின் அன்ன இனிமுரணிற்(கு) ஆன விகற்பமும் சீறடிப் பேர(து) அளபெடையின் தான விகற்பமும் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே என்பது தொடைவிகற்பங்களுக்கு அமிதசாகரர் காட்டும் உதாரண முதனினைப்புப் பாட்டு (காரிகை. 20) 2. காரிகையில் அமிதசாகரரால் பாடப்பெற்ற 7 பாடல்களும் 22 ஆம் காரிகையுடன் அமைகின்றன. அதற்குமேல் வரும் உதாரண முதனினைப்புப் பாடல்கள் 11 உம் உரைச்சூத்திரங்கள். அவை உரையாசிரியரால் யாக்கப் பெற்றவை. நூலாசிரியர் முதற்கண் நூலையியற்றி உதாரண முதனினைப்புக்களைப்பின்னே சேர்த்திருக்கவேண்டும். இயற்கைப் பரிவாலோ யாதானுமோர் காரணத்தாலோ ஆசிரியரால் நிறைவு செய்யப் பெறாமல் உரையாசிரியர்கள் நிறைவு செய்யப் பெற்றிருக்க வேண்டும்! 1. அளத்தற்கு அரிய கடல் என்றது அமித சாகரம். அப்பெயரோன் அமித சாகரன் என்க. 1. அதன் வயிற் கோடலாவது செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு, முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் துக்கோடலாம். 2. நனியாப்புற என்றதற்கு மிகவும் திண்ணிதாக என்று கூறிய பொருளை. 3. அறிவன் - அருகன். அவன் திருப் பெயர்களில் ஒன்று பூமிசை நடந்தோன் என்பது. மற்றொன்று கமல ஊர்தி என்பது. ஒதுங்குதல்- நடத்தல். (பாட வேறுபாடு) *mta வத்தாய் *KjšeL விறுதி. 1. மூன்றுறுப் படக்கிய பிண்டமாவது சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றும் அடக்கிய தொகுதி. 2. நிரல் - வரிசை ; ஒழுங்கு. 3. விரவுதல் - கலத்தல் (பா. வே.) *bjhlÇa. 1. வாளாதே மூன்றுறுப் படக்கிய பிண்டம் என்றான் மேல். ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமும் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனையும் அடக்கி நிற்பது பிண்டம் என்கின்றான் என்பது ...... தொல்காப்பியம் என்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் எனப்படும். அவற்றுள் ஓத்தும் சூத்திரமும் ஒழிந்த இருகூறும் எனப்படும். தொல். பேரா. 2, 3. இறையனார் களவியல் க. உரை காண்க. (gh.nt.)*òilbad. 1. சுகிர்ந்து - பிளவுபட்டு. 2. பரவை - கடல்; வழக்குமாம். 3. பாரம்பரம் - முறைமை, மரபு. 4. ஓரெழுத்து ஒருமொழியாய் நிற்பது. 5. பல எழுத்துக்களுடன் கூடிச் சொற்கு உறுப்பாய் நிற்பது. 1. தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்று இவ்வைந்தினையும் முதல் வைத்து, அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்று இந்நான்கினையும் இடைவைத்து, குறில் வண்ணம், நெடில்வண்ணம், வலிவண்ணம், மெலிவண்ணம், இடைவண்ணம் என்று இவ்வைந்தினையும் கடைவைத்துக் கூட்டியுறழ நூறு வண்ணமும் பிறக்கும். யாப். காரிகை. 43. உரை. 2. ஆலம்பனம் - பற்றுக்கோடு. 1. சார்ச்சி - சாருதல் (பா.வே) *mÇkh. 1. தெய்வ வணக்கஞ் செயலும் மங்கலமொழி முதல் வகுத்தலும் தொகை வகை விரியாய்ச் சொல்லலும் ஏற்புடைப் பொருளை யுரைத்தலும் என்னும் நான்கும் பரிபாடைச் சூத்திரமாம். 2. நுதலிப் புகுதல் முதலாகிய முப்பத்திரண்டு உத்திகள். நன். 14. 3. மாண்பு- அழகு. சுருங்கச் சொல்லல் முதலாகிய பத்துவகை. நன் 13. 4. உடன்படல், மறுத்தல் முதலாகிய நூன்மதங்கள் ஏழு. நன். 11. 5. விடை கூறல். 1. அகத்துக் கருதியவற்றைப் புறத்துக் குறிகளால் உணர்த்துவது. 2. சொற்பொருள் உரைத்தல். (பா.வே) *KiwÆ‹.... 1. இகந்துப்பட்ட - வரையறை கடந்த. (பா. வே) முறையின் வைப்பே உலகமலை யாமை. †fisnt நிறுப்பே. வகுத்தல். 2. முதலாகு பெயர். 1. இம்மூன்று வரிப்பாடல்களிலும் இரண்டாம் அடி மடக்கடியாக மீண்டும் வருதல் சூளாமணியில் காண்க. (பா. வே) பகர்ந்தனை. *tz§»d«. *fhŒªjid. *mɤjid. *bjhGjd«. 1. குழல், நெற்றி, புருவம், கண், காது, மூக்கு, இதழ், பல், முகம், கழுத்து, தோள், முன்னங்கை, உள்ளங்கை, கைவிரல், கைந்நகம், கொங்கை, கொங்கைக்கண், வயிறு, வயிற்றின் மயிரொழுக்கு, வயிற்று மடிப்பு, இடை, கொப்பூழ், குறி, தொடை, முழங்கால், கணைக்கால், புறங்கால், காற்பரடு, குதிகால், கால்விரல், கால்நகம், அடி என்பன முப்பத்திரண்டு உறுப்புக்களாம். திருவரங்கக் கலம்பகம். 56. சட்டகம் - உடல். (பா. வே) *j£Lw. *bjhL¤Jk‹ சேறலின். *“ghÉ நடத்தலில் பாவே; பாவொத்து இனமாய் நடத்தலின் இனமெனப் படுமே தூங்கித் தொடர்ந் தென்பதூஉம் பாடம். தூக்கி - செறிந்து - புறம், 126. *“ah¥ò« பாட்டும் தூக்கும் தொடர்பும் செய்யுளைநோக் கிற்றென்ப நுணங்கி யோரே - யாப். கா. 1. 1. உலகவழக்கு. 2. விடுத்து. இவை போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும். யாப். கா. 21. உரை. 3. யா. வி. 95. (பா. வே.) *mut வனப்புடைத் (அரவம் - ஒலி) 1. நாதன் முதலாக நல்லுறுப்பு ஏழு - அரசன், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் அரசியல் உறுப்புக்கள், தாதுக்கள் ஏழு - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். எழுத்தாதி ஏழு - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா. 2. அளபெடுத்து இசை கூட்டுவதும், நயம் ஊட்டுவதும் உயிர் ஒலியே ஆகலின் இசையொடு புணர்ந்த ஈராறும் என்றார். * (பா. வே) இயலாசாம். 1. ஒன்றாக இணைந்த 2. உயிரின் அளபே உயிர்மெய்யின் அளபு என்க. 3. புணர்தல், கூடல். 1. உயிர்க்குறில் ஐந்தும், உயிர்மெய்க்குறில் தொண்ணூறும் ஆக 95. 2. உயிர்நெடில் ஏழும், உயிர்மெய்நெடில் நூற்றிருபத்தாறும் ஆக 133. 3. செய்யுள் இலக்கணம் பிழைபடாமைப் பொருட்டு 4. இம்பர் - பின். 1. கொடி. 2. மதில் ; அகழுமாம் 3. கழுவித் தூய்மை செய்த மணி. 4. பேரழகு. 5. வளைவோம். 6. யானைக் கழுத்திடு கயிறு. 7. மனமகிழ்ச்சி. 8. குட்டிப்பிடவம். 9. குருவி. 10. கழுமரம். 11. வில்லம்பு. 12. மணம். 13. நிலா. 14. புலம்பல். 1. அவையே. 2. குறில் ஒரு மாத்திரை. நெடில் இரண்டு மாத்திரை. உயிரளபெடை மூன்று மாத்திரை. ஐகாரமும் ஔகாரமும் ஒன்றரை மாத்திரை, ஆய்தம், மெய், குற்றியலிகரம், குற்றியலுகரம் அரை மாத்திரை. ஆய்தக் குறுக்கம், மகரக்குறுக்கம் கால் மாத்திரை. ஒற்றளபெடை ஒரு மாத்திரை. 3. ஒவ்வொன்று. 4,5. மெய்யெழுத்து. 1. நொடியின் கூறுபாட்டை, உன்னல் காலே ஊன்றல் அரையே, முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே என்னும் நூற்பாவான் அறிக, யா. கா. 4. மேற். 2. தொல்காப்பியரும், பவணந்தி முனிவரும் குற்றுகரத்திற்கு ஆறிடமே வேண்டினர். ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் - தொல். குற்றிய. 1 நெடிலோ டாய்தம் உயிர்வலி மெலியிடை தொடர்மொழி இறுதிவன்மை ஊருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே - நன். எழுத்து. 39 3. இளமை ; எருதுமாம். 4. குற்றம். 5. புறா. 6. பொழுது. 1. ஒலிக் குறிப்பு. 2. எடுத்துக்காட்டு. 3. ஒருவகைத் தோற் கருவி. 4. செலுத்து. 5. சூது. 6.தெளியச்செய். 7. மலை 8. வெகுள். 9. ஒருவகைப் பலா. 10. மலையமானாடு. 11. கதவு வீட்டுப் புகும் வழி. 12. கலந்தது. 13. பெரியது; வளைந்தது. 14. பனைவெல்லம். 15. மார்புக்கட்டு 16. கவடு. 17. யகரம் வரும்வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது - என்பது தொல். எழுத்து. 410. 1. இயைத்துக்கொள்க. 2. கேள். 3. செல். (மியா. திரியாது வந்த குற்றிய லிகரம்) 4. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்னும் விதிப்படி மெய்யெழுத்தொன்றே இது காலைப் புள்ளியுடன் நிற்கின்றது. முன்னாளில், குற்றியலிகரம், குற்றியலுகரம், எகரம், ஒகரம் ஆகியவையும் புள்ளி பெற்று வழங்கின. அவை இப்பொழுது புள்ளி பெறாமை புதுவன புகுதல் என்க. 5. குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் (தொல். எழுத்து. 2) 1. தானியம். 2. திருமால் திருப்பதிகளுள் ஒன்று. 3. காற்பலம். 4. கஃடு, கஃது, கஃபு என்பவை எழுத்தல் இசை என்பர். 5. கறுத்துள்ளதைக் காட்டும் குறிப்பு. (தொல். எழுத்து. 40. மேற்). 6. மை - கருமை, ஆடு. 7. ஐ-அழகு. (பாவே). *x‹wiu மாத்திரையும் ஒரு மாத்திரையுமாம். *jÅí« ஐ யாகும். பார்க்க. அன்றும் இன்றும் பக்.47. 1. கடல். 2. மல்லிகை. 3. துன்பம், ஒலி. 4. பெண்மான். 5. கவந்தார். 6. ஔகாரம் மொழிமுதற் கண்ணே குறுகும் எனப் பிற ஆசிரியர் கூற இவர் இடையும் கடையும் குறுகும் என்றது தொடர் மொழியில் என்க. 7. இரண்டு மாத்திரை அளவினவாய ஐகார ஔகாரங்கள் தனியே நிற்புழியும் ஒன்றரை மாத்திரை அளவினவாகக் குறுகும் என ஈண்டுக் கூறியது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டு ஒலிக்குமிடத்து அவ்வோசை இடர்ப்படாதவாறு கொள்ளற்கு என்க. - முதற் பதிப்பு. 8. அரையளவு குறுகல் - தனக்குரிய அரைமாத்திரை அளவினும் குறுகுதல் ; அஃதாவது கால் மாத்திரை யாதல். அருகும் - வழக்கிற் சிறுபான்மையாக வரும். 1. தாழை. 1. செயிர் - சினம். வல்லொலியுடையது வல்லினம் ஆகலின் செயிர் என்னும் அடைமொழி தந்தார். 2. சமன் - நடுவே நிற்பது ; இடையெழுத்து. 3. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஐகாரக் குறுக்கமும் ஔகாரக் குறுக்கமும். 4. பதினைந்தெழுத்து. 5. ஐயா களிற்றைக் கைத்து (சினந்து) எய்யாயோ என்க. 6. கூழ் - உணவு. 7. துன்புறுவர். 1. அழகு. 2. அழாதே. 3. தோழியே. 4. செவ்வரி. 5. ஏஎர் என்பதன்கண் முதனின்றும், அழாஅல் என்பதன்கண் இடைநின்றும், எலாஅ என்பதன்கண் கடைநின்றும் சேஎ என்பதன்கண் தனியே நின்றும் அளபெடுத்தமை காண்க. 6. அழிக்க. 7. அழித்தால். 8. வயலல்லா வறண்டநிலம்; பிறதொழில் செய்வாருமாம். 9. வெட்டி. 10. கரும்புப் பாத்தி. 11. செல். 12. பக்கம். 13. நுணுகி. 14. விரும்பி. 15. வெறுக்கதக்கவை. 16. அழகியவாய். 1. மனங்கொதித்து. 2. திருமகள். 3. மூத்தவள். 4. விதையில்லாத. 5. அளபெடை அசை. 6. மகரக் குறுக்கம்; கால் ஆவது கால் மாத்திரை. 7. மகரக் குறுக்கம். 8. மகரக்குறுக்கம். 9. குற்றம். 1. ஆய்தக் குறுக்கம். 2. கடைநிலை விளக்கு. 3. ஆய்தக் குறுக்கம். (பா. வே). *Úyh¢ சுருக்க நிலை. *jh«.* உயிர்மெய்யம். 1. தனித்து. 2. கருங்கூந்தல். (பா. வே). *khòuhz¤âl¤J. 1. ஈரொற்றுடனிலை (எ. டு) கார்க்கடல் 2. மூவொற்றுடனிலை (எ- டு) பார்ப்பு. இதிலுள்ள ஈற்றுகரம் குற்றியலுகரம் ஆகலின் அதுவும் ஒற்றாக மூவொற்றுடனிலையாயிற்றாம். 3. முகில். 4. பகைவர். 1. ஒலித்து. 2. ஒருவகைக் கூத்து. 3. அரசர். 4. ஒற்றள பெடை. 5. உலகவழக்கு. 6. தளைகெட. 7. கூர்நுனைபோல் நுணுகிய. 8. கூரிதாய் உணரும் நாவினர் 9. விரும்பின். 10. வேல் முதலிய கொலைக்கருவி 11. விரும்பிக் கொல்வார் தின்பார். 12. புள்ளியாய்ப் பரவிய தேமல். 13. பிளந்தவாய். 14. இடுப்பு. 15. இதனைப் பொய்கையார் வாக்கு என்று கூறும் யா. கா. (பா. nt).* குறமகளா. 1. நாள்தோறும் 2. இதனாற் பெறப்பட்டது யாதோவெனின் ஒற்றுக்கு மாத்திரை அரையன்றே? அது அளபெழுங்கால் ஈரொற்றாய் நின்று ஒரு மாத்திரை அளவுபெறும். அதனால் அது குற்றெழுத்து என்று கொள்ளப்படும். அப்போது அது தனக்கு முன்னும் பின்னும் நின்ற குற்றெழுத்துடன் கூடின் இருகுறில் இணைந்த நிரையசை என்று கொள்ளப்படும். கொள்ளப்படவே ஓரசையின் பாற்பட்டுச் சீராகாது செய்யுட் சந்தம் கெடும். ஆகலின் அங்ஙனம் கொள்ளாது தனித்தனி நின்ற இருகுறிலாகக் கொண்டு தேமா என்னும் வாய்பாட்டான் அலகு செய்து கொள்க என்றது பெறப்பட்டது அம்ம், கொம்ம், அரும்ம், கரும்ம், கண்ண், தண்ண், என்பவற்றுள் நின்ற ஈரொற்றையும் குறிலின்பாற் படுத்து நேரசையாகக் கொள்ளின் வெண்டளை பிழையாது நிற்றல் கண்டு கொள்க.. மு. ப.கு. 3. நலிபு வண்ணம். 4. பிறப் பொன்றானே சிறப்புற்ற மறையவரும், பிறப்பான் மட்டுமன்றித் தவம் முதலிய விழுமிய பண்புகளாலும் உயர்வெய்திய வசிட்டரும் வந்தனர். இருவரையும் குறைவின்றிக் கொண்டாடுதல் வேண்டும்; ஏனெனின், மறையவருள் மிக்க விழுக்குணங்களை நோக்கிப் பெருநில மக்கள் தாங்களும் அப்பண்புகளை யுடையவர்களாய் வசிட்டரேயாக முயலுமாறு என்க. மிக்க விழுக்குணங்களான் மேன்மையடைந்தாரைச் சார்ந்தொழுகும் ஏனையரும் அம்மேலோரெய்தும் சிறப்பினைத் தாமும் நன்னெறி கடைப்பிடித்தொழுகி எய்தல்போல், சிறப்பில் எழுத்துக்களும் சிறப்புடை எழுத்துகளைச் சார்ந்து மொழியிற் பயின்று சிறப்பெய்தும் என்பது இச்செய்யுளின் ஒட்டணியாற் பெற்ற பொருள் என்க; என்பது இரண்டாம் பதிப்பின் குறிப்புரை. *(gh. வே). வேமென்று. 1. உயிரளபெடை 2. பொருந்தும் முறையால், கூறுமாற்றால் என்பவையும் பாடம். 1. தான் விரும்பி. 2. கொடை. 3. வீட்டுலகை விரும்பும். (பா. வே) *(1) குருதி மாறவும். (2) கொலைக்களிறு கடாம். *br‹W நீடு. 1. இருசீரடி. இச் செய்யுளிலுள்ள கோடு என்னும் சொல் தந்தம், மலைமுகடு, சங்கு ஆகிய பொருள்களில் வந்தது. ஊடு நீடு பிடி என்பதை நீடு ஊடு பிடி என்றியைக்க. 2. யா. வி. 93. மேற். 3. யா. வி. 95. மேற். 4. இனிமை யில்லாததாய். 5. யா.வி. 22. 6. பெண். 1. பதிலாகக் கொள்வதோ. 2. களிச்சாத்தன், வாளாவே தின்பான் வேலைக்குப் போகலான், காளையாம் பைதல் கவடு - இவ்வடிகள் ஏட்டுப் பிரதியிலில்லை; முன்பதிப்பிலுள; என்பது இ. ப. கு. 3. ஒலிக்குறிப்புக்கள் 4. பாவின்கண் நிகழும் ஓசை விகற்பம். 5. யா. வி. 57. 6. வில் தோற்றோடுதற்குக் காரணமான. 7. வளைய 8. தழுவுதலினின்றும் விலகியது. 9. வருந்துவான். 10. மலையையும் தோற்கச் செய்யும். 11. கார்கால மாலைப்பொழுது. 1. முன்னே, தாய். 2. பட்டறிவால். 3. நெற்போர் விடுவோர் பகட்டினைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு. 4. படுக்காத ; நிமிர்ந்த. 5. கருநிறக்காளை. 6. ஓரரணம். 7. திருமால். 8. தூஉஉ என்பது நான்கு மாத்திரை பெற்று நின்றதாகலின் இது செப்பலோசை பிழையாது வந்தது என்பர் நச். (தொல். நூன் 6) தூஉத் தீம்புகை எனக் கொண்ட பேராசிரியர் இதனை ஆசிரியத்தளை எனக் காட்டினார். (தொல். செய்யுள் 62) 9. பரவி. 10. நிறம். (பா. nt).* நாவோதை. 1. இந்நூற்பா நற்றத்தனார் பாடியது என்பர். 1. கூடலிழைத்தல்; தலைவன் வருவானா என்பதை நிலத்தில் வட்டமாகக் கோடிட்டுப் பார்க்கும் ஒரு வழக்கம். 2. சோழனே. 3. கொல்லும் மாலைப் பொழுது. 4. எழுத்துக் குற்றம் (பா. வே) *ïubtšyh« *br‹wizªjnghJ . *ïa‰gl லில்லா. 1. சமனாக்கி. 2. கெடச் செய்தால். (பா.வே) இரவெல்லாம் சென்றணைந்த போது இயற்பட நல்லா 3. கூறப்பெற்றவை அல்லாத வஞ்சியுரிச்சீர் 4. உயிர் முயற்சி செய்ய. 5. உள்ளியங்கும் காற்று. 6. மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம், 7. எடுத்தல், படுத்தல், நலிதல் என்னும் மூவகை ஒலி முயற்சி. 8. அணுக்களின் தொகுதி. 9. உயிரும், மெய்யும், ஆய்தமும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஆகிய ஐந்தெழுத்து எனலுமாம் 10. எண்டிசையும் வானும் நிலமும். 11. அசைக்கு உறுப்பாய் அமையும் எழுத்துக்களைக் குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதல் பேரமர்க் கண்செய்ய வாய்ஐய நுண்ணிடையாய் அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே என்னும் காரிகையானும் (யா. கா. 4.) அறிக. இக்காரிகையில் அசைக் குறுப்புப் பதின்மூன்று என்றார். ஆய்தக் குறுக்கத்தினையும் சேர்த்து உறுப்பு பதினாலெனக் கொள்வாரும் உளர். 1. நேரசையோடு ஒன்றிவந்த குற்றுகரமும் அதனொடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை எனப்படும். நிரையசையோடு ஒன்றிவந்த குற்றுகரமும் அதனொடு ஒன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் (தொல். செய்யுள். 4. பேரா.) 1. குற்றம் 2. வரிசை. 3. விரித்த ; எடுத்துரைத்த. 1. யாளி. 2. விலங்கு 3. ஆற்றல் மிக்க ஆண் விலங்கு. 4. மலர். 5. சந்தனம். 6. அழகுற. 7. முதல் தீர்த்தங்கரர்; அருக தேவனுமாம். 8. இளங் காய். 9. முதிர்ந்த காய். 10. மூத்தாள். 1. உளநாளில் புகழை நிலைநிறுத்தான். 2. வாய்த்தற்கு அரிய உறவினர். 3. பயனின்றி ; வாளா. 4. இஃது இடைக்காடனார் பாடல் என்பர். 5. ஆட்டுக்குட்டி. 6.பனையோலைத் தடுக்கு. 7. எட்டும் இரண்டும் அறியாத; அ, உ என்பன தமிழில் 8,2 என்னும் இலக்கங்களைக் குறிக்கும். 8. துன்புறுத்தாதே. * (பா. வே) தண்சிலம்பின் அஉம் என்பது ஆயின், அ என்னும் எழுத்தையும் அறியாத. 1. தற்சுட்டு. 2. பேரெழுச்சி. 3. து-உண். 1. நேரசை நான்கும் நிரையசை நான்கும் 2. பெருக்க. 1. குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறினெடிலே நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென் றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே. என்னும் காரிகைச் செய்யுள் இவண் கருதத் தக்கதாம் (யா. கா. 5) 2. நிரையசை. 3. இணை அல்லாத வழி. 4. இன்ன சொல் இன்ன பொருள் உணர்த்தும் என்னும் நியதி. 5. சிங்க நோக்கு; அது முன்னும் பின்னும் நோக்குவது. 1. ஒளியுடைய கண்ணாள் ; மையுண்ட கண்ணாளுமாம். 2. படி- உடல். படி பண்டையள் அல்லள் என இயைக்க. 3. பொருந்தாக் குற்றமாம். 4. துன்பம். 5. சென்ற. 6. விரைந்து பறக்கும். 7. வௌவால். 8. பாண்டியன். 9. வெற்றிலை மடித்துக் கொடுப்போனே. 10. குதிரைச் சாட்டை; சுள்ளற் சிறுகோல் என்பதும் அது (குதிரை மேலிருந்து கோல்தா என்றால் - சுள்ளற்கோலாம் ஆகலானும் - தொல். சொல், 53 இளம்பூரணர் உரை). 11. அதன் விரைவு நாம் காண்டலைக் கொள்ளாது. (பா. வே). *jiy¥bg¿D«, எள்ளா. 1. ஒன்பதாம் உயிராகிய ஐகாரம் 2. பொருந்தும். 3.மயக்கும். 4. குறைபடாத. 5. குறைபட்டால் 6. எறும்பின் சாரை. 7 வரிசை. 8. துணித்து; துண்டித்து. 1. ஈரசை நாற்சீர் அகவற் குரியவெண் பாவினவாம் நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் ஓரசை யேநின்றும் சீராம் பொதுவொரு நாலசையே என்பது காரிகை. (யா. கா. 6) இயற்சீரை முதற்சீர் எனவும் நேரீற்று உரிச்சீரை இடைச்சீர் எனவும், நிரையீற்று உரிச்சீரைச் கடைச்சீர் எனவும் வழங்கும் வீரசோழியம் (யாப்பு. 1-2). 1. முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமல் வண்ணம் அறுத்தல் (யா. வி. சூ. 95 உரை). 1. இயற்சீரைத் தேமா, புளிமா, கணவிரி, பாதிரி எனவும் வாய்க்கால், வாய்த்தலை, தலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப -தொல். செய். 13. பேரா. 2. அலரி ; கணவிரிமாலை- மணிமே. 3: 104. 3. திரை; ஒருகுடி. 4. சங்கு. 5. சிலம்பு. 1. மலை வாழ் தெய்வப் பெண்டிர் 2. ஒக்கும். 3. அழகிய ; வியக்கத் தக்கவள். 4. அமர்ந்த. 5. வலியோன் அருகன். 6. வெண்பாவும் ஆசிரியப்பாவும். 7. இஃது ஆட்சியும் குணனும் காரணமாகப் பெற்ற பெயர். 1. ஆட்சி: இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின் எனவும் (தொல். செய். 19) பிறாண்டும் ஆளும். 2. குணம் : இயற்சீராகலாணும், நான்கு பாவிற்கும் இயன்று வருதலானும் குணம் காரணமாயிற்று. இயல்பு வகையான் ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும், நான்கு பாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும் இயலசையான் வரும் ஈரசைச் சீர் ஆதலானும், இவற்றை ஒரு பாவிற்கு உரிமை கூறுதல் அரிதாகலானும், இவற்றை இயற்சீர் என்றான். (தொல். செய். 13 பேரா.) (பா. வே. ) *xnuh அகை. அகை- கூறுபாடு (சீவக. 2694). 1. சோழன். 2. நினையேன். 3. நினைப்பழிதல். 4.எக்காரணத்தாலோ. 5. உறையூர். 6. நீர்வளமிக்க சோழநாடன். 1. சுறாமீன் திரிவன. 2.தேன்கூடு. 3. மருத நிலம். 4. அசோக மரம். 5. வணங்குவோம் 6. சமணர் கூறும் முத்தி நிலை (சிலப் 10: 180) 7. மலர் அசைய. 8. இனிய நீர். 9. களவொழுக்கத்தில். (பா. வே) *tsÇsKiy. *br§nfhš. 1. வேலைசெய்வார் ஒலி. 2. மனையில் ஒலிக்கவும். 3. மகிழ்ச்சி தங்கியுள்ள மருத நிலத் தலைவன். 4. கெடாத. 5. தேமாங்காய், புளி மாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் ஆகியவை. 6. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகியவை. 7. நேரசை. 1. தண்பூ நான்கும், நறும்பூ நான்கும் ஆகிய எட்டு. 2. தண்ணிழல் நான்கும், நறு நிழல் நான்கும் ஆகிய எட்டு. 3. இணைக்க, 4. பொருத்துக. 1. இயற்சீரைத் தேமா, புளிமா, கணவிரி பாதிரி எனவும் வாய்க்கால், வாய்த்தலை தலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப -தொல். செய். 13. பேரா. 2. இப்பதினாறு அடிகளிலும் பதினாறுநாலசைச் சீர்கள் வருமாறு: 1. தேமாந்தண்பூ, 2. கூவிளந்தண்பூ, 3. புளிமாந்தண்பூ, 4. கருவிளந்தண்பூ. 5. தேமாநறும்பூ, 6. கூவிளநறும்பூ. 7. புளிமாநறும்பூ. 8. கருவிளநறும்பூ. 9. தேமாநறுநிழல். 10. கூவிளநறுநிழல். 11. புளிமாநறுநிழல். 12. கருவிளநறுநிழல். 13. தேமாந்தண்ணிழல். 14. கூவிளந்தண்ணிழல். 15. புளிமாந் தண்ணில். 16. கருவிளந் தண்ணிழல். 3. திரண்டு. 4. ஒக்கும். 5. சந்திராத்திரயம், நித்தியவினோதம், சகல பாசனம் என்னும் மூன்று அடுக்குள்ள (அருகக் கடவுளுக்கு உரிய) குடை (சீவக . 1244). 6. அழிய. 1. 11 ஆம் அடியிலுள்ள அனந்தச துட்டயம் என்னும் சீரையும், 13 ஆம் அடியிலுள்ள மந்தமாருதம் என்னும் சீரையும், 15 ஆம் அடியிலுள்ள இலங்குசாமரை என்னும் சீரையும் முறையே அனந் - த- சதுட் - டயம், மந் - த- மா- ருதம், இலங் - கு- சா- மரை என அலகிட்டு, புளிமாநறுநிழல், தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல் என்னும் வாய் பாடுகளாகக் கொள்க. சீர் பக்குவிட்டிசைப்புழியும் குற்றியலுகரம் இடையிட்டிசைப்புழியும் இங்ஙனம் அசையமைதி கொள்ளல் பண்டை வழக்கெனக் கொள்க. இ. ப. கு. அனந்த சதுட்டயம் (ஆன்மா நிருவாணதசையிலெய்தும்) அனந்த ஞானம் (கடையிலா அறிவு), அனந்த தரிசனம் (கடையிலாக் காட்சி,) அனந்த வீரியம் (கடையிலா வீரியம்). அனந்த சுகம் (கடையிலா இன்பம்) என்ப (சீவக. 2846 உரை). 2. அகன்ற இடம். 3. குற்றம். 4. சமணர் கூறும் முத்திநிலை. (பா. வே) *fhfhth«. *gh«g¿í« பாம்பின் கால். 1. கண்ணுற நிற்றல் இல்லாமல். 2. ஒரு நூற்பாவிற் கூறிய விதியை அதனை ஒத்த நூற்பாவிற்கும் இணைத்துக்கொள்ளும் ஓர் உத்தி (நன். 14). 1. இதன்பின், நேரீறாகிய தேமா புளிமா என்னும் இரண்டு இயற்சீரும் ஒத்தாழிசைக் கலிப்பாவிலும், தரவு தாழிசைகளுள்ளும் வரப்பெறா; வஞ்சியுள்ளும் இறுதிக்கண் பெரும்பான்மையும் வரப்பெறா என்னுந் தொடர்கள் பழைய பதிப்பிற் காணப்படுகின்றன; எனினும் கிடைத்த ஏடுகளிற் காணப்படவில்லை என்பது இ. ப. கு. 1. மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந் தாஞ்சீர் அடையா அகவல் அகத்தும்அல் லாதவெல்லாம் தாஞ்சீர் மயங்கும் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயல்தளை பூங்கொடியே. 2. பாவினங்களாகிய தாழிசை துறை விருத்தம் - என்னும் மூன்று. 1. பிறவிடத்து. 2. நிரையசை. 1. ஈரசைச்சீர் ; அவை: 1,3,6,7. 2. மூவசைச்சீர் ; அவை : 2,4,5. 3. அல - ரி - நா - று = புளிமாந் தண்பூ. 4. இன் - னுயிர் - தாங் - கும் = கூவிளந்தண்பூ. (பா. வே) *mlš வணங்கு. *mz§Fjh®¢. 1. செந் - து - சிதை - ய = தேமாநறும்பூ 2. திரைந் - து - திரைந் - து = புளிமா நறும்பூ. 3. நிரைந் - து - நிரைந் - து = புளிமா நறும்பூ 4. கண் - டல் - வண் - டல் தேமாந்தண்பூ 5. கொண் - ட - ஞெண் - ட = தேமாந்தண்பூ 6. பண் - ணை - யா - யம் = தேமாந்தண்பூ 7. பரா - ரைப் - பெண் - ணை = புளிமாந்தண்பூ 8. வண் - டுண் - கண் - ணி = தேமாந்தண்பூ 9. செங் - கண் - மே - தி = தேமாந்தண்பூ 10. அங் - கண் - ணீ - லத் = தேமாந்தண்பூ (பா. வே.) *ešta லூரன் கேண்மை. 1. நீ என்பவை. 2. கை, மை, மெய், நெய் என்பன. 3. குர, சர, அர, பிரி என்பன. (பா. வே) *th‹brŒ நாண். *nr®ªjnj‹. 1. கதக்கண்ணன் எறிந்த ஆழி, மன்னர் தலைய முருக்கி, கொண்மூ (முகில்) இடையே நுழையும் மதியம்போல் யானையின் மருமத்துப் பாய்ந்தது. கொண்மூ யானையின் மருமத்திற்கும் மதியம் ஆழிக்கும் (சக்கரத்திற்கும்) உவமைகளாக வந்தன. 2. காய்ச்சீர். 3. கனிச்சீர். (பா. வே) *Û‹âÇjU«. 1. நின் - று - நின் - றுளம் = தேமாந்தண்ணிழல் (1) 2. நினை - பு - நினை - வொடு = புளிமாநறுநிழல் 3. நீ - டு - தெரு - மரு = தேமாநறுநிழல் (2) 4. இவ - ளின் - று - தன = புளிமாந்தண்ணிழல்(3) 5. நறு - மாந் - தளிர் - நிறத் - புளிமாநறுநிழல் (4) 6. தண் - முகை - மென் - குழல் - கூவிளந்தண்ணிழல் (5) 7. பூ - வுறு - நலந் - தொலைந் = கூவிளநறுநிழல்(6) 8. செலச் - செல - வூ - ரலர் = கருவிளந்தண்ணிழல்(7) 9. செவி - சுடச் - சுட - முகிழ் = கருவிளநறுநிழல் 10. முகிழ்ப் - பய - லா. ரறி = கருவிளந்தண்ணிழல் (8) 11. உறுப் - பவு - நீ- டினை = கருவிளந்தண்ணிழல் 1. சட்டை. 2. சேறு. 3. தடவும். 4. மதில். 5. கண்ணேணி. 6. நறிய அசோகு. 7. அகலாது. (பா. வே) *e©ã. *KÅî. 1. விரல். 2. சிவப்பு. 3. சிலம்பு. 4. தெளிவித்தாயோ. 5. நடையாலோ. 6. சுட்டி என்னும் அணிகலம். 7. புளிமாந்தண் பூ 8, 9. தேமாந்தண் பூ. (பா. வே) *fYœtdnghš. *beŠra®ªJ. 1. வகையுளி சேர்த்தால் முதலிரு சீர்களும் கைவி ரிந்தன, மைவிரிந்தன, மெய்வி ரிந்தன நெய்வி ரிந்தன எனவும், குரவ ணங்கிலை, சரவ ணம்மிது, அரவ ணங்குவில், பிரிவு ணர்ந்துழி எனவும் இயற்சீராதல் காண்க. 2. விலக்கப்பெறாது. ஆகவே வரப்பெறும் என்க. (பா. வே) *nr®ªjnj‹. 1. பாயிர உரையைப் பார்க்க 2. பூந் - தா - மரை = தேமாங்கனி. 3. இரை - தே - ரிய = புளிமாங்கனி. 4. வியர்த்து. 5. வெண்ணிற வளையல் (சங்கு வளையல்) 6. இரங்காது. 7. புகழ்வாய்ந்த பொருளுக்கு. 1. மா - ரி. யொடு = தேமாங்கனி. 2. தொகுதியான வண்டு. 3. புதுவருவாய். 4. குறிஞ் - சி. யொடு = புளிமாங்கனி. 5. வீங் - கு - மணி = தேமாங்கனி 6. விளங் - கு - புனை = புளிமாங்கனி. 7. வண் - டு - கெழு = தேமாங்கனி. 8. தில - க - மொரு = புளிமாங்கனி. (பா. வே) *m‹d. *JwthŒ நீயே. 1. சிறு - நுளைச் - சியர் = கருவிளங்கனி. 2. வளர் - கொடி - யன = கருவிளங்கனி. 3. குழை - மா - தவி = புளிமாங்கனி. 1. இவ்வடி பல்வேறு பதிப்புக்களிலும் (யா. வி; யா. கா) வெவ்வேறு வகையில் இருபது சீருடையதாகக் காணப்பெறுகிறது. இதில் பதினாறு சீரே இருத்தல் வேண்டும். 2. இது நான்கடியாய் முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் அல்லாத அடியிரண்டும் பதினாறு சீராய் இடை இடை குறைந்து வந்த ஆசிரியத்துறை யா. கா. 29. இதே இலக்கணம் பெற்ற ஆசிரியத் துறைக்கு. (எ. டு) உண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவும் மெய்யெனப் பெயர்பெற் றுன்னாமுன மின்னாமென வுளதாய் மாய்வது நிலையில் யாக்கை கண்டாங் கிகழுங் கிழமுதி ரமையத் தைவளி பித்தென மெய்தரும் வித்திற் கடலிற் றிரையென வுடலிற் றிரையொடு கலியா நின்றன நலிவு செய் நோய்கள் புண்டாங் கயின்முக் குடுமிப் படையொடு மெயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர் பகையாமென நிழலாமெனத் திரியா நின்றது கொலைசெய் கூற்றம் விண்டாங் ககலுபு மெய்ப்பொரு டுணிவோர் மின்பொலி பொன்புனை மன்றிலெம் முயிராம் விமலன் குஞ்சித கமலங் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே. -சிதம்பரச் செய்யுட் கோவை. 1. நிரைநடு வாகாத. 2. யதிவழு (தண்டி . 113) 1. வெண்சீர் வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும். 2. நேரொன்று ஆசிரியத்தளையும், நிரையொன்று ஆசிரியத்தளையும். 3. ஒன்றிய வஞ்சித்தளையும். ஒன்றா வஞ்சித்தளையும் 4. நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, வெண்சீர்வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை. 5. இயற்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை. 1. வெண்சீர் வெண்டளை. 2. இயற்சீர் வெண்டளை. 3. கூடல், 4. வேறுபடுதல் ; மாமுன்நிரையும்; விளமுன்நேரும் வருதல். (பா. வே) *tªjd நூலோர். 1. ஈரசை நாற்சீர் அகவற் குரிய 2. இதன் முதலிரண்டடிகள் மலைபடுகடாம் 1-2. 3. கடல். (பா. வே) *ïÄÊ‹. 1. நிரை ஈறு இல்லாமையாவது நேர் ஈறு உடைமை. 2. தேமாங்காய் முன் புளிமாங்காய் 3. புளிமாங்காய் முன் கருவிளங்காய். 4. கருவிளங் காய்முன் புளிமாங்காய். 5. தேமாங்காய் முன் கருவிளம். 1. ஆசிரியப் பாவிற்கு. 2. அகவற்சீர் கலியின் ஒலிக்கியையா; கலி, துள்ளல் ஓசையுடைய தாகலின் நேரீற்று இயற்சீர் ஒலி கலிக்குப் பொருந்தா என்றார். மாஞ்சீர் கலியுட் புகா என்பது (யா. கா. 38) நோக்குக. 1. தென்றல். இப்பாடலின் முதலிரண்டடிகளில் ஒன்றிய வஞ்சித் தளையும் மூன்றாமடியில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்துள்ளன. 2. ஒன்றிவந்தவை முதல், இரண்டு, நான்காம் அடிகள்; ஒன்றிய வஞ்சித்தளை. 3. ஒன்றாது வந்தது இரண்டாமடி; ஒன்றாத வஞ்சித்தளை. (பா. வே) *tªjir¥g. *mUf‹. 1. கூவிளந்தண்பூ. 1. கருவிளந்தண்பூ. 2. தேமாந்தண்ணிழல். 3. கூவிளந்தண்ணிழல். 1. தளை. 2. நேர்ஒன்றியது நேரொன்றாசிரியத் தளை. நிரைஒன்றியது நிரையொன்றாசிரியத்தளை. 3. இயற்சீர் வெண்டளை. 4. வெண்சீர் வெண்டளை. 1. சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் தண்சீர் என்னும் பாடமே கொண்டு தன் என்பன இரண்டும் ஆசிரியப்பா முதலிய மூன்றையும் தனித்தனி சுட்டுமாறு நின்றன என்பர். இ.ப.கு. (பா. வே) *ka§»í« வழங்கும் என்ற உம்மையால் எல்லாத் தளையும் மயங்கியும் வரினும் தன்தளையான் வரினே சிறப்புடைத்து; என்னை? எல்லாத் தளையும் மயங்கினும் தன்தளை அல்லாத் தளையாற் பாவினி தியலா என்றார் ஆகலின். 1. 2. இயற்சீர் வெண்டளை. 3. கலித்தளை. 4. வெண்சீர் வெண்டளை. 5. ஒன்றிய வஞ்சித்தளை. 6 ஒன்றாத வஞ்சித்தளை. 7. யா. வி. 53 உரைமேற். 8 இயற்சீர் வெண்டளை. 9. வெண்சீர் வெண்டளை. 10. நிரையொன்றாசிரியத்தளை. 11. கலித்தளை. 12. ஒன்றிய வஞ்சித்தளை. 13. ஒன்றாத வஞ்சித்தளை. 14. நேரொன்றாசிரியத்தளை. 15, 17, 28, 29, 31, 32. இயற்சீர் வெண்டளை. 18, 19, 20, 21, 24, 26. வெண்சீர் வெண்டளை,16, 22, 23, 25, 27. கலித்தளை. 30. 33. நேரொன்றாசிரியத்தளை. 1. ஒன்றாத வஞ்சித்தளை. 2. கலித்தளை. 3. வெண்சீர் வெண்டளை 4. ஒன்றிய வஞ்சித்தளை. 5. நேரொன்றாசிரியத்தளை. 6. இயற்சீர் வெண்டளை 7. கலித்தளை. 8. நேரொன் றாசிரியத்தளை. 9. இயற்சீர் வெண்டளை. (பா. வே) **KGJyF« புரந்தளித்து. 1. நான்கடிகளிலும் முதற்சீராக அமைந்த நாகம் என்னும் சொல், யானை, சுரபுன்னை, பாம்பு, மலை என்னும் பொருள்களைத் தந்தது 2. நேரொன்றாசிரியத்தளை. 3. நிரை யொன்றாசிரியத்தளை. 4. கலித்தளை. 5. இயற்சீர் வெண்டளை 6. நேரொன்றாசிரியத்தளை. 7. இயற்சீர் வெண்டளை. 8. நிரையொன்றாசிரியத்தளை 9. வெண்சீர் வெண்டளை. 10. களவியற் காரிகை. 1. கோயின்மையோ என்பதை கோ - யின் - மை - யோ என அலகிட்டுத் தேமாந்தண்பூ என வாய்பாடு கூறிப் பூச்சீரெல்லாம் காய்ச்சீர் இயல என்பார் உளராயினும் எனக்கருதி அல்லதூஉம் ............ இல்லை போலும் எனக்கொள்க என்றார். அன்றியும் இன்மை என்பதிலுள்ள னகரஒற்றை நீக்கி இமை என்றாக்கிக் கூவிளங்காயாகக் கொள்வர். (எ - டு) தாளின்மறுத் தான்கண்டு (நளவெண்பா). இத்தொடக்கத்து ஒருசார் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வந்தனவாலோ எனின் திருவள்ளுவப் பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய பிறசான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர் வாராமையாலும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஒத்தில்லாமையாலும் வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையாலும் இத் தொடக்கத்தன குற்றமல்லது குணமாகாவென்பது காக்கைபாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு ; இதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு என்னும் யா. கா. உரைப்பகுதி இவண் நோக்கத்தக்கது. 1. மிகுதி. 2. தொடர்பு. 3. குறிப்பாலும். 4.தொலைவிலிருந்து கொண்டுவந்து. 1. 2. தேரை நடப்பன போற்குறள் சிந்தினொடு ஓரும் நடந்தன ஒண்டொடி முன்னே -சீவகசிந்தாமணி. 631. 3. மக்களுள் தீரக்குறியானைக் குறளன் என்றும், அவனின் நெடியானைச் சிந்தன் என்றும், ஒப்பமைந்தானை அளவுட்பட்டான் என்றும், அவனின் நெடியானை நெடியான் என்றும், அவனின் நெடியானைக் கழிய நெடியான் என்றும் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெயரென்பது தொல். செய். 40. பேரா. (பா. வே) *jL¤jd தட்டத். 1. சுருங்கிய கவசத்தை, 2. வரிசையாய். 1. பருவம். 2. வேதம். 3.கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஊறிய சுவையான நீர். 4. முதிர்ந்தன. 5. தேன். 6. வெண்மை. (பா. வே) *bjhifaha. 1. ஒலிக்கும். 2. வண்டுகள். 3. கலப்பால் (பா. வே) *gâdhW. 1. கணி - கணியம் (சோதிடம்). 2. பன்னிறமாலை 3. அகிற்புகை. 4. மார்பு. 5. அசைய. 6. தாருகனை. 7. அழித்தவள்; தாருகன் பேருரம் கிழித்தபெண் (சிலப். 20: 39- 40). 8 பிடரிமயிரையுடைய சிங்கம். (பா. வே) *KGJyF மூடிமுனை வயிர நாற்றித். *thbyk¡F¥ 1. குறளடி முதலாகக் கழிநெடிலடி ஈறா எழுத்து வகையால் அடியெண்ணுமாற்றை 95 ஆம் நூற்பாவின்கண் வரும் போந்து போந்து சார்ந்து சார்ந்து என்னும் மேற்கோட் பாடலில் காண்க. 1. கழில் - கழிநெடிலடி. (பா. வே) *VbHG¤J«. *ghÇiaªj. *j‹gh‰. *v‹wÓ®. *bjǪJz®ªnjh®. 1. என்மனார் என்பது செய்யுள் முடிபெய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச் சொல். என்றிசினோர் கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச் சொல். என்ப என்னும் முற்றுச் சொல்லினது பகரம் குறைந்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச் சொல் பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின், என்மனார் என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது நூலுள்ளும் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும் இசைநிறை என்பது மறுத்றுப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாகலானும் அவர்க்கது கருத்தன்றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலான் செய்யுள் முடிபென்று கூறாராயினார் - தொல். சொல் 1. சேனா. (பா. வே) *ÆU¥gî«. 1. நீர் அலை. தோன்றுமிடத்துப் பெரிதாக இருந்து கரை சாரச் சாரக் குறைந்து வருவது அலையின் இயல்பு. அவ்வியல்புடையது அம்போதரங்கம் எனக் காரணக் குறியாயிற்று. நீர்த் திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறள் நடுவே மடுப்பின் அது அம்போ தரங்கம் - யா. கா. 30. (பா. வே.) *bgWjY«. (பா. வே) *bga®ªje§. 1. இஃது ஐந்தடித்தரவும், நாலடித் தாழிசையும் அசைநிலையாகிய அடைநிலைக் கிளவியும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக் கலி - நச். (gh.nt)*mjdhš 1. அல்லாமல் மேலே உயர்ந்த சீர்களையுடைய அடிகள் பாவில் வாரா. 1, எண்சீரின் மிக்கு வந்த செய்யுட்கள் சிறப்பில என்று முன்னே (35) கூறினார் ஆகலின் இதனைச் சிறப்புடைக் கழிநெடிலடி என்றார். 2. குறிப்பு 2. காண்க. (பா.வே) *á‹dt¢ 1. இஃது இடையீரடி குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத்துறை ஆதலின், முதலாயும் நான்காமடியுமே எடுத்துக் காட்டாகக் கொள்க. 2. ஒன்பதின் சீர்அடியும், பதின் சீரடியும் இடையாகு கழிநெடிலடி எனப்படும். (யா. கா. 35) *mk®brad¥. 3. இது வெண்டுறையாதலின், இதன் முதலடியையே எடுத்துக் காட்டாகக் கொள்க. 4. குறிப்பு. 2. காண்க. 5. இச்செய்யுளின் முதலடியையே எடுத்துக்காட்டாகக் கொள்க. 1. பதின்சீரின் மிக்குவருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனப்படும். (யா. கா. 35) (பா. வே) உலைக்கனல் *behJky®¡. *fYGÄ›. 1, 2, 3, 4. இயற்சீர் வெண்டளைகள். 5, 6, 7, 8. இயற்சீர் வெண்டளைகள். (பா. வே) *kh¡fS. *v‹W« இருங்கட லுடுத்தவிப் பொருங்கண் மாநிலங். *òw§fh£L (பா.வே) *brŒªÚ 1, 2, 3, 4. கலித்தளைகள். முட்டடி. 5. இளமை பொருந்திய ஆளி, யானைக் கோட்டைப் பறித்து, யானையை உண்டதாக. 6, 7, 8. கலித்தளைகள். (பா. வே) *rhuš. (பா. வே) *e‰w¤jdh®. 1. ஈரசை நாற்சீர் அகவற்குரிய ஆகலின் இஃதாசிரிய அடியாயிற்று. 2, 3, 4. கலித்தளைகள். 5, 6, 7. இயற்சீர் வெண்டளைகள். 8. சிந்தடி. 9, 10. குறளடிகள். 1. அகப்பொருள் குறித்து வரும் வஞ்சிப்பா. 2. புகா. 3. இணையும். 4. மிகச்சிறிது. 1. பேரறிவு உற்றனள். 2. மலையமான் திருமுடிக்காரி ; மலைநாட்டு வேந்தனுமாய். 1. ஆடுதல். 2. ஒலி. 3. தென்றற் காற்று. 4. இதனைச் சூளாமணிச் செய்யுள் என்பர். (தக்கயாகப்பரணி விசேடக் குறிப்பு 5) 5. இதனையும் சூளாமணிச் செய்யுள் என்பர். (இ.ப) (பா. வே) *ciu¥ngh®. *m‹¿. *j§F¿¥ பினவே. *if¡»is மயக்கம் கலிவெண் பாட்டே. 1. இந்நூற்பா தொல்காப்பியம் அச்சுப்பிரதியிற் காணப்படவில்லை. 2. அறுதியிட்ட அளவு. 3. குறையாத. 4. சிற்றெல்லை. 5. பேரெல்லை. (பா.வே) **jhÊirígyîª தழுவுதல் முடிபே. 1. 900+90+8+2=ஆயிரம் என்றது ஆசிரியத்தின் அடிப்பெருமை. 2. குற்றமற்ற. 1. வினா. 2. நுண்செவியர். 3. வழக்கறிந்து. 4. தடுத்தலால் (தட்டு நிற்றலால்) தளை ; காரணக்குறி. (பா. வே) *tobkhÊia¥ *e‹F. (பா. வே) *bjhL¤jd® வழங்கலின். 1. இருசீர் மிசையிணை யாகும்; பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீர் இடையிட்ட தீறலி கூழை முதலிறுவாய் வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே - யா. கா. 19. 1. இறுதி 1. தெளிய. 2. அறிவுறுத்தல். 3. மாமைநிறத்தையுடையோள். 4. முற்றுகை இடுதல். (பா. வே) பதிவயிற்; வதுவையிற். வதி - வழி. 1. மாமை நிறத்தையுடையோன் 2. முற்றுகை இடுதல் 1. வருந்தச் செய்து. 2. தவளைபோல் ஒலிக்கும். 3. அழகிய வளையல். 4. மூங்கில். 5. விளங்கிய முழுமதி. 6. வருத்தி. 7. அடிக்கு எழுத்து எண்ணுங்கால் ஒற்றெழுத்துக்களை நீக்கி, உயிர் எழுத்துக்களும் உயிர்மெய்யெழுத்துக்களுமே எண்ணிக் கொள்ளப்படும்; எண்ணப்படும் என்பதாம் (யா. வி. 25, உரை காண்க) 1. இது கையனார் காட்டிய பாட்டு என்பது யா. கா. 41. மேற். 2. இவ்வெண்பாவில் சிறிது வேறுபட்டுள்ள ஒரு பாடலை நக்கீரர் பாடலென விநோதரசமஞ்சிரி கூறுகிறது. தமிழறியும் பெருமான் காண்க. (பா. வே) *totik. *Õ‹wdò‹. *Õ‹wò‹ *J யியைக்கும். 1. அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று. 2. மாவடுவின் பிளவு. 3. கன்னம். (பா.வே) பொய்கையார். இன்று. 1. அழகிய தேமல். 2. வருத்தி. 3. மாலை. 4. இளம்புன்னை; கொழுமையான புன்னையுமாம். 5. காட்டுமல்லிகை. 6. ஒருவகைச் செடி. 7. கூந்தலையுடையாள். 8. கொடுவிலங்கு. 9. புலி. 1. யானை. 2. கடல். 3. கூந்தல். 4. நிறைந்த பூங்கொத்து. 5. குயில்பாட. 6. வளைகழலுமாறு மெலிவித்தோர். 7. நினையார். 8. வேலைப்பாடமைந்த படுக்கை. (பா. வே) *bgh§Fád« தணியாப். *glbyhšyh. 1. இரக்கக் குறிப்பு. 2. கூப்பீடு. 3. இளையீர். 4.விளங்க. (பா. வே) *mÂky®. *thilbahL வரூஉம். 1. அடைவதை - அடைவது; இயைவதை - இயைவது. 2. மோனைத்தொடை. 3. ஆசு - பற்றாசு. பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி. ஒற்றுமைப்படாத உலோகங்கள் ஒற்றுமைப் படப் பற்றாசிட்டு விளக்கினாற் போல யா. கா. 23. உரை. 1. விலங்குதல் - விலக்குதல். 2. வளைய. 3. ஊடுவாள். 4. சேருமிடத்து. 5. சினம். 1. முழுப்பாடலும் இந்நூற்பாவின் முதற்கண்ணே உள்ளது. 2. விலக்கார். 3. வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள். இது தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கண் கண்டது. 4. சுரபுன்னை. 5. முருகன். 6. கதிர்காமம். 7. மதியம்போன்ற. 1. இஃதிரண்டடிமோனை. கண்டகம் - வாள். பாயோதரம் - மார்பு; வானம். 2. காக்கை பாடினியார் எனவும் கையனார் எனவும் பாடவேறு பாடுகள் உள (யா. கா. 41). 3. வெற்றிலை; மணப் பொருளுமாம். 4. பலா. 5. புகழ். 6. ஒருவகைக்கொடி. 7. ஒருவகை மல்லிகை (சீவக. 475) செம்முல்லையும் (பெருங் 1: 51: 40) (பா.வே) *wiwaš வேண்டும். 1. உயிர். 2. அழகிய பதவிநிலை. 3. மாயம். 4. மாளிகை. 5. பூளைப்பூ. (பா. வே) *gh®¡FÊ¥ பெய்கிலென், பாத்துழிப் பெய்யிலென். 1. முரணாகவும் அளபெடையாகவும் வரினும் மோனை எதுகைகளை இன்றிவாராது என்றார்; இவையின்றி வருமோ என்றார்க்கு ஐயமறுத்தல். 2. கருங்குவளை 3. கூந்தல் (பா. வே) *fU§FHyhŸ. *tšÈd¤J¥ பகரமும் . ங, ஞ, ண. வகார நகார தகார. 1. துன்புறுத்தாதே. 2. மாத்திரைஒத்து. 3. துன்பம். (பா. வே) *mc«, *òijï¥ *Úkd§. *bghŒahJ. 1. இனவெழுத்து. 2. தொல். செய். 95. ஆசிரிய மொழியாக மேற்கொள்ளப் பெற்றது. (பா. வே) *fh¡ifghoÅah®. 1. அதுவே, சொல்லும் பொருளும் ஒருமையிற் பன்மையிற் றம்மின் முரணும் சால்பொரு நான்காய்ச் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் ஒல்லுபு முரணலின் ஓரைந் தாகும் - மாறனலங்காரம் 182. 2. பசும்புண் என்புழிப் பசுமையாய வண்ணம் இல்லை. பசுமை என்னும் சொல்லே. வெள்விளி என்புழி வெண்மையாய வண்ணம் இல்லை. அறிவின்மை சுட்டும் வெண்மை என்னும் சொல்லே. 3. இம்மேற்கோள் பாடலின் முதல் இரண்டடிகளே ஆண்டுக் காட்டப் பெற்றுள. 4. நுழைந்து 5. நீர்வேட்கை தீரப்பெறாத, 6. சிங்கம், 7. கரிய ஐம்பகுப்பாகிய கூந்தலை யுடையாள். 8. தகுவதோ. 1. பறிப்பார். 2. காடகன்றனர். 3. தினை. (பா. வே) *bgUÃy¡ *ã¿njh®ªJ. 1. ஓங்குமலை என்புழிச் சொல்லும் உண்டு. ஓங்குதல் மலைக்கண்ணுமூண்டு. தாழ்ந்திலங்கு அருவி என்புழிச் சொல்லும் உண்டு. தாழ்தல் அருவிக் கண்ணும் உண்டு. ஆதலால். சொல்லும் பொருளும் சொல்லொடு பொருளொடும் முரணின. 2. ஒருபால். 3. நுண்ணிய மகரந்தம் சொரியும். 4. முரண் தொடை, பகைத்தொடை, இரணத்தொடை என்பன ஒருபொருள. (பா. வே) *ïUŸguª. 1. புலிநகக் கொன்றை, (பா.வே.) *Û‹nw®ª தருந்திய. *ÉÇáid¤ தொகூஉம். 1. பீர்க்கம்பூநிறம் ; அஃதாவது பசலை. 2. கலந்து. 3. ஈற்றுச்சீர் ஒழித்து அல்லவற்றுள் இரண்டு சீர்க்கண் மறுதலைப்படத் தொடுப்பதும் இடைப்புணர் முரணோ என்று எண்ணும்படி அடிகள் 5உம் 6உம் அமைந்துள்ளன. யா. கா. 40. குறிப்புரை. உ. வே. சா. (பா. வே) போதுவிரி. வாயினம், (பா. வே) 1. முதலிடம் முடிவிடமாக. 1. கெண்டைமீன் போரிடல். 2. அசையும் மூங்கில். 3. கரு மணல். (பா. வே) *âtS«. 1. ஆப்பு, தூண். 2. ஒருவகை மீன். 3. முதலை. 4. தவறா. 5. தகாது 6. கூந்தல். 7. செவ்வரி. (பா. வே) கூந்தற் bgŒj* கூடலும். 1. முல்லை. 2. யானை. 3. வருத்தும் களவொழுக்க நினைவால். 1. விலையால். 2. உண்ணல். 3. கொலைவாழ்க்கை. 4. மெய்யறிவு. 5. இல்லாமை; வறுமை. 6. அம்பு. 7. விலங்கு. 8. தடையில்லாது. 9. உண்ணல். 10. தடுத்து நிறுத்தினும். 11. செறிந்த. 1. உலாவும். 2. கலந்த. 3. அணிந்த. 1. காரிநிறக்காளை அஃதாவது கருநிறம். 2. வலிய சோ என்னும் அரணம். 3. திருமால். 1. கோதைக்கு உண்டாய விளர்நிறம்; காதலற் பிரிவால் நேர்வது. 2. பெரிது. 3. வலிமை ; திறம். 4. தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை என நான்கு உயிரள பெடை. குறிற் கீழ் குறிலிணைக் கீழ் என இரண்டு ஒற்றளபெடை. 1. இரக்கக் குறிப்பு. 2. இரங்கத் தக்கது. 3. நண்டு தன் குஞ்சினோடு. 4. நுண்ணிய உணவு. 5. ஈரத்தோடு கூடிய சேற்று வளையுள். 6. விரும்பித் துன்பத்திற்கு ஆடப்பட்ட. 7. இரக்கக் குறிப்பு. 8. தாள் தாமரை. 9. தின்று ; கடித்து. 10. பேரடி 11. பெரிய எருமை 12. அழகமைந்த பெரியநீர். 1. மணக்கலவை. 2. தடவிய. 3. இணைத்து. (பா. வே) *caU«g® நகர்ச் செற்றவன்; திரிபுரமெரித்தவர். 1. இடுக்கு, 2. வளைந்த. 3. அகலுதல் அல்லாது; அகலாது 4. எல்லா என்னும் விளி. 5. விலகி. (பா. வே) *òjšt®. *fËt©L. *brhšÈah®. 1. நெய்தல். 2. குதிரை. 3. துன்பம். 4. இரவு. (பா. வே.) *ešyit. 1. சூழ்ந்த. 2. யாழ் வகையுள் ஒன்று. 3. மயிலிறகின் அடி; வெண்குருத்து 4. தண்ணிய கூந்தல் கருமணலே. 5. சுழலும். 6. முதலைகள் மிகுந்திருத்தலின். *xšfh *Dz®¤J«. 1. அழகிய முல்லை நிலம். 2. புல்லுண்ணும் பசுத்திரன். 3. மூட. 4. வருந்தாதே. 5. பொரிந்தெழுப்பிய அடி. 6. வெண்ணிற அரும்பு. 7. கதிர்வர. 1. புலிநகக் கொன்றை. 2. தோட்டம். 3. பனை. (பா. வே) *beŠá‰ றெய்வமும் தொழாஅள். *bkdhm. 1. ஒலிக்கும். 2. அழகிய வளையலும் மூங்கில் போலும் தோளும். 3. நீர்த்துறை. 4. என்னிடம் 5. சுருங்கிய. 6. நிகர் அளவானது; நெடுமையும் குறுமையும் இல்லது. 1. திரண்ட அடி. 1. ஒலிக்கும் மணி. 2. குதிரை. 3. கடற்கரைச் சிற்றூர். 4. நீர்முள்ளி. 5. தாழை. 6. தாமரை. (பா.வே) *f©ld வருதல் விண்ட. *bj©oiu¢. *<‹w. 1. முதலயற் சீர் (இரண்டாம் சீர்) ஒழித்து அல்லன மூன்றும் இயையத் தொடுப்பது மேற்கதுவாய். ஆயின், எடுத்துக்காட்டாம் பாடலில் மூன்றாம் சீர் ஒழிந்த மூன்று சீர்களுமே இயைந்துள. இயைபு ஈற்றுச் சீரை முதற் சீராகக் கொண்டு எண்ணப்பெறுமாகலின் பிழையின்றாம். எனின் மேலே கீழ்க்கதுவாய்க்குக் காட்டப்பெறும் எடுத்துக் காட்டுப் பொருந்தாததாகி விடுகின்றது. அவ்வெடுத்துக்காட்டைப் பொருந்தியதாகக் கொண்டால் இவ்வெடுத்துக்காட்டுப் பொருந்திற்றில்லையாம். ஆய்க. (பா. வே) *cwhm. *ntv மெமக்குள்ள மாஅலே நாஅம். (பா. வே) *FHÈir குரற்றும்பி குறைந்த *FWbe¿¡. (பா. வே) *ã‹id நிமிர்ந்தும். *ïUªJ முண்கண் மலர்ந்தும் பொருந்தா, பொருந்திய புருவம் புடைபெயர்ந் தனவே. 1. மேற்கதுவாய் இயைபு பற்றிய குறிப்பினைக் காண்க. (பா. வே) *òšyUªJ. *brhšÈah®. 1. நான்கும், என்றது மோனை, எதுகை, முரண், அளபெடை என்பவற்றை என்க. 1. குற்றமற்ற. 2. காணப்புகுந்தால். 3. முடிப்பிக்க முடியா. 4. முடிப்பின். போக்கின் அல்லது முடிப்பிக்கலாகா என இயைக்க. 5. மெய்பெறு மரபின் என்னும் செய்யுளியல் நூற்பாவிற்கு இளம்பூரணர் உரைத்த உரைகாண்க. வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது என்றவாறு என உரைகூறி அத்தொடை விகற்பங்களை எண்ணிக் காட்டியுள்ளார். (தொல். செய். 97). 6. பல்காயனார் முதலிய ஆசிரியர்கள். மோனை எதுகை முரணே எனவரும் நூற்பாவைக் காண்க. 1. ஆசாற் சார்ந்து அமைவுறக் கேட்கு முறை. (பா. வே) *bwh‹g~ தென்ப எனப் பாடங் கொண்டனர் பேராசிரியரும் நச்சினாகினியரும். 1. ஆறிரண்டோடைந்தடி என்றது, முறையே ஆறு இரண்டு ஐந்து என்னும் எண்களை நிறுவி நோக்க அமையும் 625 அடிகளை என்க. 2. கலிக்கு. (பா. வே) *bjh‹}š நிலை. (பா. வே) *brhšyhŒªjh® சொல்லும் தொகை. 1. தானமொத்த குறிலும் நெடிலும் தம்முள் இனமாம். அகர ஆகார ஐகார ஔகாரங்கள் தம்முள் இனமாம். இகர ஈகார எகர ஏகாரங்கள் தம்முள் இனமாம். உகர ஊகார ஒகர ஓகாரங்கள் தம்முள் இனமாம். உயிர் மெய்க்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஒற்றினுள் சகர தகரங்கள் தம்முள் இனமாம். ஞகர நகரங்கள் தம்முள் இனமாம். மகரவகரங்கள் தம்முள் இனமாம். இவை அனுவென்றும் வழங்கப்படும் - யா. கா. 41; யா. வி. 53 உரை காண்க. 2. முரண்டொடை. (பா. வே) *fh¡ifghoÅah®; கையனார். (பா. வே) *Äiyí«. 1. அனைத்துச் சீர்களும் புளிமா வாதல் அறிக. 2. இவ்வடியின் அனைத்துச் சீர்களும் தேமாங்காய். 3. இவ்வடியின் அனைத்துச் சீர்களும் தேமா. (பா. வே) *ÓbuÇ *bfhil. 1. கூடற் பழனத்து ஓடை, ஓடைக்கொடி. கொல்லி மலைமேல் ஓடை, மலை வழி. மாறன் மதகளிற்று நுதல்மேல் ஓடை, நெற்றிப் பட்டம். கோடலங் கொல்லைப் புனத்து ஓடை, நீரோடை. 2. வெண்காந்தள். 3. குஞ்சுக்கு ஊட்டும். 1. நின்முகம் தடமதியம் ஆமென்று கடலும் உடலும்; கனையிருளும் இரிந்தோடும்; ஆம்பலும் மலரும்; பாம்பும் பார்க்கும் என இயைக்க. இது வினை நிரல் நிறை. 2, 3. முதலாக. 1. எழுத்தந்தாதிக்குக் காட்டப்பெற்ற எடுத்துக் காட்டில் வே என ஈறும் வேங் என முதலும் அமைந்துள்ளமையால் நேரசையே ஆயினும் எழுத்தளவே அந்தாதி ஆயிற்று. அசையந்தாதிக்குக் காட்டப் பெற்ற எடுத்துக்காட்டில் ஈற்றசையும் முதலசையும் ஒன்றாயிருத்தல் அறிந்து வேற்றுமை காண்க. (பா. வே) *brªjhŸ. *nehbad. 1. இதில் எழுத்து அசை சீர் அடி என்னும் நான்கும் மயங்கி உலகு என்னும் முதற்சீர் உலகே என்னும் ஈற்றுச்சீரோடு மண்டலித்து முடிந்தமை காண்க. 2. பாடலின் ஈறும் முதலும் அசையந்தாதி. எஞ்சியவை எழுத்தந்தாதி. 3. சைனத்திருக்கோயில். 4. இப்பாடலை 218 ஆம் பக்கத்துக் காண்க. (பா. வே) *tšÉid. 1. பெருங்கதை. *gÅbkhÊna. 1. அடியிறுதியில் வரும் வரவும் என்பன. 2. இப் பாடலில் இயைபுத் தொடையும், பொழிப்பு எதுகைத் தொடையும், பொழிப்பு அளபெடைத் தொடையும், பொழிப்பு மோனைத் தொடையும் வந்தனவாகலின் மயக்கு இயைபுத் தொடையாயிற்று. (பா. வே) *X§Fkiy. *x©f©. 1, 2 கலித்தளைகள். 3. வஞ்சித்தளை. 4. கலித்தளை. (பா. வே) *Ëidna போனயக்க. 1. பிணைநக்கு - கட்டவிழ்ந்து. 2. தேன் பருகி. 3. ஒலிப்பதோர். 4. கோட்டை.. 5. தவறாது, 6. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம், ஈதல் இயைக் கடை என்னும் குறளை நோக்குக. 1. வரும் ஒழுங்கு. (பா. வே) *brhšYg சொல்லப் பெறுபவே யாதொன்றும் சொல்லாது சொல்லப் பெறா. 1. முதற் செய்யுளில் வே என்னும் ஓரெழுத்தும், இரண்டாஞ் செய்யுளில் லமே என்னும் ஈரெழுத்தும் மிக்க எழுத்தெனக் கொள்க. (பா. வே) *f¢rl. (பா. வே) *mï உண்ணிருலுக் கென்றும். *x‰bwhÈ. 1. யா. வி. 52 உரையை நோக்குக. (பா. வே) *ïdbtG¤J முதலாயின பெற்று. 1. சேவலங் கொடியோன் காப்ப ஏமவைகல் எய்தின்றால் உலகே (பா. வே) இகர ஈகார எகர ஏகாரங்களும் யா என்பதும் தம்முள் இனமாம். 1. பொறாமை. 2. ஐராவதம் என்னும் வெள்ளை யானை. 3. இந்திரன். 4. அருகதேவன். 5. துன்பம். 6. நண்டு. 7. ஒருபடை. 8. துன்பம். (பா. வே) பூர்வம். யோதும். 1. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைகொண் டன்ன துடைத்து. - திருக்குறள் 1082. அறிவறை போகிய பொறியறு நெஞ்சத் திறைமுறை பிழைத்தோன் வாயிலோயோ - சிலப்பதிகாரம் 20: 25-6. (பா. வே) *ngh® வல்லவன் பூம்பொதியில். *Ãiwbt©gš. 2. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. - திருக்குறள் 1081 பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப வெங்கணும் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே. - சிலப். 29: 20. 3. குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். - திருக்குறள் 66. குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவி - சிலப்பதிகாரம் 2: 58-9. 4. முரணியும், 5. குற்றம். 1. நாலடி, 112. 2. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் - தொல். செய். 78. 1. வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே - யா. கா. 35. (பா. வே) *brhy‹Kiwf£. 1. வேறுபட்டுவரும். 2. இறுதி இரண்டும் ஆசிரிய அடிகள். 3. நோய்க்கு மருந்தாம் நஞ்சு. 4. பாதுகாக்கும் சொல். 5. கொண்டு. 6. வழித்தோன்றால். 7. மனம் வருந்த. 8. வீரர். 9. முற்ற. 10. முறையின்றிக் கவராதே. 11. உண்கலம். 12. ஆசைப்படாதே. 13. ஒருபால்சாய்ந்த நா. 14. பகைவர். (பா. வே) *fÉíil¤jhŒ. 1. விலக்காது. 2. சான்றோர் இடையே. 3. அடங்கி ஒழுகுதல். (பா. வே) *åah. *Ãiyah«. *nrÆjœ. 1. ஒளிமிக்க மணி. 2. அழகிய கூந்தல். பனிச்சையாவது ஐம்பால் கூந்தலுள் ஒன்று. 3. மாந்தளிர் அழகைத் தொலைக்கும் உடல். 4. தண்ணியமலர். 5. முறையாக 6. முதற்கண் பெறுவது. 7. ஈற்றயலடி. 8. வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉம். 9. அகவல் ஒலியுடன். (பா. வே) *e‹Djš. *foa நன்னியார். *ešyhjdh®. 1. மறையோன். 2. வெண்பா. 3. அகவல். 4. குறையில்லா. 5. சமனிலை மருட்பா. 6. வியனிலை மருட்பா. 1. துர்க்கை. 2. ஆறில் ஒரு பங்கு வரிகொண்டு. 3. சான்றோர், அமைச்சர். (பா. வே) *g©Âa நூற். (பா. வே) *br‹Åa®¡ களிக்கும் தெய்வநீ. *k©Äirahnd. 1. விரைவு. 2. ஒலியின் பெயர். 1. வன்பா, மென்பா என்பவை பாடுதல் அருமை எளிமை கருதிய குறியாகலாம். முரலுதல், முரற்றல் என்பவை ஒலித்தல் பொருளன. கலி என்பதும் அப்பொருளதே என்பதை முன்னே காட்டினார். 2. மனங்குளிர; அஃதாவது நிரம்ப. 3. வைப்புமுறை. 1. உயர்முகடு. 2. மலைவிளங்கிய. 3. அறம்பொருள் இன்பம் வீடு. 4. அகம், புறம், அகப்புறம், புறப்புறம். 5. பரவுதல். (பா. வே) *âÇòubkǤj விரிசடை நிருத்தர் பேர்மகிழ்ந்த பேராசிரியர்; திரிபுரமெரித்த எரிசுடர்க் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர். 1. இறுதிக்கண் நிற்கும் தாழிசையை முதற்கண் ஓத. 2. வெண்பாவும் அகவலும் இணைந்து வரும் மருட்பாவுக்கு. 1. சீரே சீராக வருதல். 2. நோன்பு. 1. நிலைநிறுத்தும். 2. தன் கையகத்தில் ஒப்பற்ற பொருள், 3. வெளிப்பாடு. 1. விலகல். 2. முடிதலும். 3. நாள், மலர் வாய்பாடு. 4. இணையற்ற வெண்பாவிற்கு. 1. ஈண்டு அளபெடைகள் அலகு பெற்றில. (பா. வே) *“F‰¿aYfu« ஈறாகிய நேரீற்றியற் சீர்களைத் தேமா புளிமாவென்று ஓசை ஊட்டற்கு அஞ்சிக் காசு பிறப்பென்று இறுவதென்று முன்னோர் சொன்னவாறு. குற்றியலுகரம் ஓசை சுருங்கி ஈற்றின்கண் இனிது நிற்கும் என்பது முதற்குறிப்பு. *ntbwhU பொருளை. 1. இருக்கை. 2. பதித்த. 3. அட்டணைக் காலிட்டு இருந்து, இடக்கை இருகாலினும் ஊன்றிக் குஞ்சித்திருப்பது 1. திரண்ட முத்து. பந்து - திரட்சி. 2. மாறா அன்பு. 3. மூவகை ஒலி. 1. ஓரூர். 2. சிறிதே விலகினாலும். பூவிடைப் படினும் யாண்டுகழிந்தன்ன நீருறை மகன்றில் - குறுந். 57. (பா. வே) *t©lilªj. 1. ஒப்பாகத்தோன்ற. 2. மயங்கி. (பா. வே) *ïany. 1. வருந்தியதாகி. (பா. வே) *ntiy சூழ் நீரதோ. (பா. வே) *ïuÂaid¡ கொல்லுற் 1. உலகோரால் விரும்பப்பெறும். 2. இடம். (பா. வே) *bgWgnt. *bgwh. *“