சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 2 தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா.வரலாறு) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் – 2 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 304 = 312 படிகள் : 1000 விலை : உரு. 195/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) என்னைப்பற்றி... 3 தமிழர் தலைவர் 12 1. தமிழர் எழுச்சி 13 2. பெற்றோர் பெருமை 19 3. இளமைப் பருவம் 24 4. குடும்பக் குறும்புகள் 33 5. துறவுக்கோலம் 44 6. பொது வாழ்வு 53 7. காங்கிர தலைவர் 62 8. சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் 81 9. வெளிநாடுகளில் பிரசாரம் 95 10. மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் 105 11. சமதர்ம இயக்கம் 115 12. தோல்வியும் நன்மையும் 129 13. தமிழ்நாடு தமிழருக்கே! 136 14. நீதிக்கட்சித் தலைவர் 147 15. தமிழர் தலைவர் 153 16. சொல்லும் செயலும் 156 17. பேச்சும் எழுத்தும்! 164 18. பெரியார் 179 19. குத்து, வெட்டு வழக்குத் தீர்ப்பின் சில பகுதிகள் 189 20. பெரியார் அவர்களைக் குறித்துக் கரண்ட் 193 21. தந்தை பெரியாரின் வடநாட்டுச் சுற்றுப்பயணம் 195 22. தந்தை பெரியாரும் அய்க்கோர்ட் அவதூறு வழக்கும் 199 பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் 256 தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) (1939) என்னைப் பற்றி... பெரியார் ஈ.வெ.ரா. நான் ஏறக்குறைய சுமார் 50 ஆண்டு காலமாகவே பார்ப்பன - மேல் சாதி மக்கள் என்பவர்கள் - சட்டப்படி - சாதிரப்படி - மதத்தின்படி என்று தாங்கள் அடைந்திருக்கும் வசதியையும் உயர்நிலையையும் பார்ப்பனரல்லாத கீழ்மக்கள் நலனுக்காகக் கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஒழிக்கவேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இதுதான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். இவ்வளவு நாள் வரையிலும் பாடுபட்டும் இந்த நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு, பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள் அவர்கள் தலையெடுக்கவொட்டாமல் அழுத்தப்பட்டு வருகிற துணிச்சலான அநீதிகள் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது, குறைந்திருக்கிற அளவு நிலைத்திருக்குமா என்று சொல்ல முடியாது. - அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் தந்த அறிக்கை நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவன்; உலகம் சுற்றியவன்; பூரண பகுத்தறிவுவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய தேவை யில்லாதவன்; சாதி உணர்ச்சி, சாதிப் பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டு மென்பவன்; 70 ஆண்டு உலக அனுபவம், 30 ஆண்டு வியாபார அனுபவம்; 1915, 16, 17, 18, 19 வரை ரிஜிதர் செய்யப் பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத்தலைவன்; தெ.இ.வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினனாக இருந்தவன்; 5 ஜில்லாவுக்கு இன்கம்டாக் டிரிபு யூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன் மெண்டாரால் நியமிக்கப்பட்டவன்; ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி; பழைய மாணவர் சங்க செக்ரட்டரி; ஹைகூல் போர்டு செக்ரட்டரி; பிறகு தலைவர்; 1914ம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி; 10 ஆண்டு ஆனரரி மாஜிட்ரேட்; ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடெண்ட்; பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்; ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஒர்க் கமிட்டி செக்ரட்டரி; பிளேக் கமிட்டி செக்ரட்டரி; கோவை ஜில்லா 2வது சர்க்கிள் தேவதான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு, பிறகு 1929 வரை வை பிரசிடெண்ட்; பிரசிடெண்ட்; 1918ம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918ம் ஆண்டு யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்ன் மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன் மெண்டாருக்கு வரும் அரிசி வாகன்களில் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து, மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும் படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிடிரியியூட்டிங் ஆஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும் தமிழ்நாடு காங்கிர கமிட்டி செக்ரட்டரி; தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5 வருடம் தலைவராக இருந்தபோது எனக்குச் செயலாளராக டாக்டர். டி.எ.எ.ராஜன், கே.சந்தானம், எ.ராமநாதன், கே.எம்.தங்க பெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். இவைகள் ஒருபுறமிருக்க, 1940-42ல் 2 வைராய்கள்; 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டி னார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்துவிட்டேன். 1919 ஜூலையில் நான் ஜில்லா, தாலுக்கா போர்டு மெம்பர், சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு, கவுன்சில் மெம்பர் பி.ராசகோபாலாச் சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத் தனமான வேலை செய்து விட்டீரே! உமக்குப் புத்தியில்லையா? என்றார். அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, நான் என்ன செய்துவிட்டேன்? என்று கேட்டேன். அவர் தனது மனைவியைப் பார்த்து, அம்மா இவருக்குச் சொல்லு என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்துவிட்டார். அந்த அம்மையார், அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசி பாலிடியில் தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தியதற்காக ராவ்பகதூர் கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் ராவ் சாகிப் தான் சிபாரிசு செய்தார். அய்யர் ராவ் பகதூர் என எழுதி கவர்னருக்கு பைல் போய் இருக்கிறது. நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்துவிட்டீர்களே; இது சரியில்லை என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன். நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆன பிறகுங்கூட, ஆச்சாரியார் என் வீட்டிற்கு வந்தும் என்னை (காங்கிரசில் சேராமல், கதர் போடாமல்) சட்டசபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெழுத்துக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். 41ல் மந்திரிசபை அமைக்க ஒப்புக் கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர், கவர்னர் - ஜெனரல் ஆகியவர்கள் இடமெல்லாம் மந்திரிசபை அமைக்க மறுத்து விட்ட பிறகு, என்னை அழைத்து மந்திரிசபை அமைக்கும்படி, நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியாயிருந்து எனக்கு உதவியும், காங்கிரசு ஆதரவும் தருவதாயும் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். போதும், இவ்வளவு எடுத்துக்காட்டுவதற்கே நான் மிகமிக வெட்கப் படுகிறேன். தறுதலைகளும் பொறாமைக்காரர்களும் சொந்த எதிரிகளும் இதன்மூலம் ஒரு பொதுமனிதன் என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை விட்டுவிட்டு குற்றம் குறை சொல்ல வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் ஏன் வெட்கம் என்பதை விட்டுவிட்டு இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழவேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதைக் காட்டவேயாகும். எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிதுகூட குறையாத அனுபவமும் திறமையும் உண்டு என்பதைக் கூறவுமே யாகும். ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக்கூடும்; பல தவறுகள் செய்திருக்கக்கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம். ஆராய்ச்சியைக் கொண்டே இருக்கும் தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ கடுகளவுகூட காரணம் கொண்டதாய் இருக்காது. அதாவது, ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், உடைக்க வேண்டுமென்றே கருதி கீழே போட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும். இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும்போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத்தான் தூண்டுகிறது. அந்த நிதானம் தவறிய சொற்கள்தான் மேலே என்னைப்பற்றிக் குறிப்பிட்டவையாகும். பொறுத்தருள்க. இன்னமும் சொல்லுகிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்தி ருந்ததாலும், இந்திய சுதந்திரத் திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள், மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், உதவியும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. *** சட்டசபையும், மந்திரி பதவியும், பார்ப்பானிடத்திலும் வடநாட்டானிடத்திலும் இருப்பதால், இன்றைய மந்திரிகள் இதை ஆதரித்து இவைகளை மக்களிடம் பரப்ப கங்காணிகளாக இருக்கிறார்களேயொழிய, மற்றபடி அவர்கள் சொந்தப் புத்தியிலா? தேசபக்தியிலா? பொதுநல உணர்ச்சியிலா? சொல்லட்டுமே! அமெரிக்க, ரஷ்யநாட்டு நீதிபதிகள் முன்னிலையிலோ, அரசியல் நிபுணர்கள் முன்னிலையிலோ, சொல்லட்டுமே பார்ப்போம். பல நாட்டு அரசியல் தலைவர்கள், மந்திரிகள் இங்கு வருகிறார்களே - அவர்களிடம் இந்த தக்ளி, ராட்டினம், பஞ்சுப்பட்டை போடுதல், கதர் நெசவு, கை நெசவு - அடிப்படைப் பள்ளிகள் - இவைகளைக் கொண்டுபோய்க் காட்டி, விசிட்டர் புத்தகங்களில் கையெழுத்து வாங்கட்டுமே பார்ப்போம். உலகில் எங்குமே யில்லாத காட்டு மிராண்டிகள் ஆட்சி, எந்த நாட்டிலுமே இல்லாத பார்ப்பனர் பனியா, துரோகிகள் ஆதிக்கம்; ஒரு பர்மாவும், பாகிதானும், ஒரு இலங்கையும், ஒரு ஆஃப்கானிதானமும், ஒரு நேப் பாளமும் வெள்ளையனை விரட்டிவிட்டுச் சுகமாக வாழும்போது, திராவிடர் நாடாகிய தமிழ்நாடு பார்ப்பன ஆதிக்கத்தை விரட்டி விட்டு சுதந்திரமாக வாழ முடியாதா? - யார் துரோகிகள் *** என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு; ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு. - பகுத்தறிவு 1935 *** திராவிடர்களிடையில் எனக்குக் கெட்டபேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப்பற்றிக் கவலைப்படாத, திராவிட மக்களிடையில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை சிறிதுமில்லை. அப்படிப் போலி நல்ல பெயரின்மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும். அதில் முதன்மையாய் திராவிடன் இழிவு நீங்கவேண்டும் என்கிற ஆசையும் கவலையும் தவிர, வேறு ஒன்றுமே எனக்குக் கவலையாக இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை. இன்று திராவிடனுக்கு உள்ள இழிவு என்னவென்றால், அவன் சூத்திரனாகவிருக்க வேண்டியிருக்கும் இந்து வாக இருப்பதைத் தவிர வேறில்லை. - இன இழிவு ஒழிய... *** இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக்கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டு வார்கள்; பாராட்டா விட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக் குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன். - குடி அரசு *** என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே.மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும் படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களில் அதாவது, துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களை அழைத்து வரும்படி என காரியதர்களுக்குக் கூறினேன். அப்போது அவர் சொன்னார், கொல்லன், கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக் குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்து விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்துகொண்டு, அதன்படி வேலை செய்யக் கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களா யிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார். புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கை தான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று. யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்! ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை. ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா என்று கூறினால், என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக்ட் சூப்ரண்டென் டெண்ட் ‘சுடு! என்று போலீகாரனுக்கு உத்தரவுபோட, அவன் என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்க வில்லையே என்று கூறினால், அந்த சூப்ரண்டென்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக்கடையில் வேலைபார்க்க ஒப்புக்கொண்டவன், அந்த ஆட்டை வெட்டுடா என்று எஜமான் உத்தரவுவிடும்போது, அய்யோ! என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்? என்று கூறினால், ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது? என்று கேட்பானா, இல்லையா, அவனை? ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தச் சர்வாதி காரம் எதற்குப் பயன்படுகிற தென்று? என்னுடைய சர்வாதி காரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக; பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, குடி அரசு, 29.05.1948 *** கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய் என்று டாக்டர் சொன்னால், வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்; காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய் என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மல ஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டுமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம். அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத் தன்மை) எப்பொழுதுதான், எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என்மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? - குடி அரசு, 1947 *** சூத்திரன் என்கிற பட்டம் இழிவு என்று கருதுகிறவர் களுக்குத் தான் நான் இந்த யோசனை சொல்கிறேனே ஒழிய, சூத்திரப் பட்டத்தைப்பற்றிக் கவலையில்லை என்பவர்களுக்கு இதைச் சொல்லுவதில்லை. சூத்திரப் பட்டத்தைப்பற்றிக் கவலைப்படுகிறவர்களையும் கூட, சூத்திரப் பட்டம் ஒழிய வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் இதைச் சொல்லுகிறேனே தவிர, மற்றபடி அவசரப்பட்டு ஆணவத்தால் இதைச் சொல்லவில்லை. - குடி அரசு, 1947 வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்; (1) Physician’s Cure, (2) Surgeon’s Cure - அதாவது, மருந்துகொடுத்து வியாதியை சொதப் படுத்துவது ஒருமுறை, கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து, நோயாளியை பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான், நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை. நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொதப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல. நோயாளிக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அவன் சாகக்கூடாது என்று கருதி, அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சிய மெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்கவேண்டும் என்பதுதான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல, 2,000, 3,000 வருஷங்களாக தடித்துப் போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால், சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள், உலகத்தையும் பாருங்கள், சிந்தியுங்கள். பரிகாரம் தேடுங்கள்! தமிழர் தலைவர் அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவர்க்கு மாற்றி மனத்துள்ளே பேதா பேதம் வஞ்சகம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொன் றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந்தானே! தமிழர் எழுச்சி இன்று தமிழ்நாடெங்கும் தன்மானப் போர் - உரிமைப் போர் முழக்கம் வீறிட்டொலிக் கின்றது. பகுத்தறிவுச் சூரியன் சுடர்விட்டு விளங்குகின்றான். தமிழர்கள் நெடுங்கால உறக்கத் திலிருந்து விழித்தெழுந்து விட்டனர். தங்கள் மொழியைக் காப்பாற்ற முனைந்து நிற்கின்றனர். தங்கள் நாட்டின் உரிமையிற் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். தங்கள் முன்னோர்களின் வீரச் செயல்களை அறிவுக் கண்ணால் பார்த்து அகமகிழ் கின்றனர். தங்களின் இன்றைய இழிநிலையை எண்ணி நாணமடைகின்றனர். இவ் விழிநிலையைத் தகர்த்தெறிந்து, சுயமரியாதையைக் காப்பாற்ற ஒன்று கூடுகின்றனர். இதற்கான முயற்சியில் முன்னேறுகின்றனர். தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இவ்வோசை கோடையிடிபோல் குமுறுகின்றது. ஓரிடத்தில் ஈரிடத்திலா இவ்வோசை? நாடு நகரங்களிலும் இவ் வோசை; பட்டி தொட்டிகளிலும், மூலைமுடுக்குகளிலும் இவ்வொலி. வீடுகள்தோறும் இம் முழக்கம். இம் முழக்கத்தால் நடுநடுங்கு கின்றனர் வஞ்சகர்கள். அவ்வஞ்சகர்களின் நெஞ்சத்திலும் இம் முழக்கத்தின் எதிரொலி இடைவிடாமல் இயங்குகின்றது. அவர்கள் காதுகளைச் செவிடுபடும்படி துளைக்கின்றது. இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நமது வேலையுண்டு; நாம் உண்டு; பிறரைப்பற்றி சிந்தனை நமக்கேன்? என்று கருதியிருப்போர் தமிழகத்தில் சிலர் உளர். ஏன்? பலர் என்றே சொல்லிவிடலாம். இவர்கள் விலங்கு மனப்பான்மை படைத்தவர்கள். இவர்கள் நெஞ்சமும் தமிழர் முழக்கத்தால் திகைக்கின்றது; இளகுகின்றது. தமிழர் என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் இன்று வீர உணர்ச்சியுடன் விளங்குகின்றனர். நம் நாடு தமிழ்; நம் மொழி தமிழ்; நம் நாகரிகம் தமிழ் என்று சிந்திக்கின்றனர். இவைகள் நம் உரிமை; நம் உயிர்; நம் உணர்ச்சி என்று உறுதி கொள்ளுகின்றனர். தமிழர்கள் தம்மைச் சுற்றி மறைத்திருக்கும் அறியாமைத் திரையை நெருப்பிட்டுக் கொளுத்துகின்றனர்; தங்கள் கை கால்களில் பூட்டப்பட்டிருக்கும் மூடநம்பிக்கை விலங்குகளை முறித்தெறிகின்றனர்; நாம் வாழ்வது அடிமைக்கோட்டையின் சாளரங்களில் கண் வைத்து வெளிநிகழ்ச்சிகளைக் கண்டு விட்டனர். தங்கள் வீர உணர்ச்சியால் - ஒற்றுமை ஆற்றலால் - அடிமைக்கோட்டையைப் பொடி செய்துவிட்டு வெளியேற மடிகட்டி நிற்கின்றனர். தமிழர்கள் தங்களுடைய தற்போதைய அடிமைநிலையை நினைக்குந்தோறும் அவர்கள் மீசைகள் துடிக்கின்றன; தோள்கள் தினவெடுக்கின்றன; மார்பு நிமிர்ந்து நிற்கின்றது; கண்கள் நெருப்புப் பொறிகளைக் கக்குகின்றன. உள்ளத்தில் ஊக்கமும், ஆண்மையும், உறுதியும் உயர்ந்து நிற்கின்றன. கண்கள் நெருப்புப் பொறிகளைக் கக்குகின்றன; தமிழர்களின் இத் தன்மையை நோக்கும்போது இனி அவர்கள் எண்ணியதை முடித்துத்தான் தீருவார்கள் என்பது உறுதி! உறுதி! உறுதி! ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்கள் அயர்ந்து உறக்கத்திலிருந்து விழித்தனர்; விழித்ததும் சில ஆண்டுகள் கனவு நிலையில் இருந்தனர்; நீண்டகாலம் உறங்கிய களைப்பால் சிறிது காலம் படுக்கையில் புரண்டுகொண்டே கிடந்தனர். பின்னர்தான் சிறிது சிறிதாகக் கண்ணைக் கசக்கி, முகத்தைத் துடைத்துக் கொண்டு முற்றிலும் விழிப்படைந்தனர். இன்று எட்டுத் திசைகளையும் ஏறிட்டுப் பார்க்கின்றனர். முன்னேற்றப்படிகளில் குதித்தேறுகின்றனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இருந்த நிலை வேறு. அதை நினைத்தால் இன்றைய தமிழர்கள் நாணுவார்கள். சொல்லத் தொடங்கினால் காதுகளைப் பொத்திக் கொள்வார்கள். கேட்கப் பொறுக்க மாட்டார்கள். தலையைக் குனிந்து கொள்ளு வார்கள். அப்பொழுது தங்கள் மானத்தின் பெருமை உணரா திருந்தனர். தங்கள் உரிமைக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பவை களையெல்லாம் தங்களை நல்வழியில் சேர்க்கும் துணைகளென நம்பிவந்தனர். தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கருவிகளை எல்லாம் தங்களை ஈடேற்றக் கிடைத்த பெரும் பேறுகளென நம்பியிருந்தனர். அக்கருவிகளைக் கொண்டு தங்களை அடிமையாக்கிய மக்களையெல்லாம் தங்களுடைய வழிகாட்டி களாகக் கருதியிருந்தனர்; தலைவர்களாக நம்பியிருந்தனர்; குருமார்களாகவும் போற்றிப் பணிந்தனர். இந்நிலை பல நூற்றாண்டுகளாக தமிழர் சமுதாயத்தில் நிலைபெற்றிருந்தது. ஆனால், இந்நிலை மாறி இன்றைய நிலைக்குத் தமிழர்கள் திரும்பியதேன்? காரணம் என்ன? இதற்கு வழிகாட்டியவர் யார்? இக்கேள்விகள் நமது மனத்தில் எழுகின்றன அல்லவா? தமிழர்களின் தன்மானக் கிளர்ச்சியையும் உரிமைக் கிளர்ச்சியையும் கண்டு, ஒரு சாரார் வகுப்புவாதம் என்று கூறுகின்றனர். ஒரு சாரார் தேசிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யென்று கத்துகின்றனர். இவர்கள் தமிழர்கள் கிளர்ச்சியை அடக்கவே இவ்வார்ப்பாட்டம் பண்ணுகின்றனர். இக்கிளர்ச்சிக்கு விதை விதைத்தவர், இதை நீரூற்றி வளர்ப்பவர் ஈரோட்டு இராமசாமி என்று இவ்வெதிரிகள் கூறுகின்றனர். தமிழர்களும் இன்று, எங்கள் தலைவர் இராமசாமிப் பெரியாரே என்று கூறுகின்றனர். தமிழர் கூட்டங்களில் எல்லாம் ஈரோட்டு ராமன் வாழ்க! தோழர் ஈ.வெ.ரா.வாழ்க! ஈ.வெ.ரா.பெரியார் வாழ்க! என்ற முழக்கம் வானத்தைப் பிளக்கின்றது. தமிழர் உரிமையைப் போற்றுவோரும் இன்று ஈ.வெ.ரா.வைப் போற்றுகின்றனர்; தமிழர் கிளர்ச்சி வகுப்புவாதம் என்று தூற்றுவோரும் இன்று ஈ.வெ.ரா.வின் மீது வசை பாடுகின்றனர். 1928 நவம்பர் மாதம் சென்னையில் சீர்திருத்தக்காரர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதுபோது (தற்போது பிரிட்டிஷ் யுத்த மந்திரி சபையில் இந்திய மெம்பராயிருக்கும்) சர்.ஏ.இராமசாமி முதலியார் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திரு.ராமசாமி நாயக்கர் அவர்களின் பெயர் எந்த வீட்டிலும் சொந்தப் பெயராகவே உச்சரிக்கப் படுகின்றது. அஃதன்றி அவரது புகழ் ஆந்திர தேசம், பம்பாய், மத்திய மாகாணங்களுக்கும் பரவியிருக்கின்றது... அவர் தன்னுடைய முழுச்சக்தியையும் படிப்பில்லாத பாமர மக்களிடம் செலுத்தியும், அவர்களுடைய மனோ உணர்ச்சியைக் கிளப்பி விட்டும் வேலை செய்து வருவதே அவரது வெற்றிக்குக் காரணம். இது இன்றும் உண்மையாக இருப்பதைக் காணலாம். ஈ.வெ.ரா.விடம் நமக்கு இன்னும் அடியோடு நம்பிக்கை யற்றுப் போகவில்லை. அவருடைய அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும், உழைப்பும், சுயநலமற்ற தன்மையும் விழலுக்கு இறைத்த நீராகவே போய்க்கொண்டிராமல் நல்ல வழியில் திரும்பக்கூடாதா என்ற ஆசை இன்னும் இருக்கிறது. என்று தமிழர்களைத் தாழ்த்தி, பார்ப்பன ஆதிக்கத்தை வளர்ப்பதற்கென்றே பாடுபடும் ஆனந்த விகடன் பத்திரிகையே 04.06.1939ல் தனது தலையங்கத்தில் குறித்திருக்கிறது என்றால் தமிழர்கள் தங்கள் தலைவராகவும், பெரியாராகவும் ஈ.வெ.ரா.வை ஏற்றுக் கொண்டதில் என்ன வியப்பிருக்கின்றது? தோழர் ஈ.வெ.ரா. அவர்களே தமிழர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிவிட்டவர். தமிழர்கள் வீர உணர்ச்சி பெறுவதற்குக் காரணமாயிருந்தவர். இதில் எள்ளளவும் தவறில்லை. உண்மையிது; வெறும் புகழ்ச்சியல்ல. அவருடைய இடை விடாத உழைப்பு, நெடுங்காலம் அவர் கொண்டிருந்த எண்ணங்கள், உள்ளங்கவரும் அவர்தம் எழுத்துகள், உறுதியான சொற்பொழிவுகள், உள்ளத்தில் தோன்றுவதை ஒளிக்காமல் உரைக்கும் கள்ளமற்ற தன்மை, இவைகளால் இன்று தமிழ் மக்கள் உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது அவரது பகைவர்களாலும் மறக்க முடியாத உண்மை. தோழர் ஈ.வெ.ரா. இன்று தமிழ்நாட்டில் இணையற்ற தலைவராக விளங்குகிறார்; வழிகாட்டியாகப் போற்றப்படு கிறார்; தளராத உழைப்புடைய தொண்டராகக் காணப்படு கிறார். இவருடைய பழைய பகைவர்களுங்கூட இவருக்குப் பொதுமக்களைத் தன் சார்பாக்கும் வல்லமை படைத்தவர் என்பதைத் தடுத்துச் சொல்வதில்லை. இவருக்கு இத்தகைய செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் என்ன? அவருடைய உயர்ந்த பட்டய படிப்பா? அல்லது அதிகாரப் பதவியா? அல்லது பெருநிதிக் குவியலா? அல்லது அரசியல் தந்திரமா? அல்லது ஆண்டவன் அருள் வலிமையா? என்றால், இவையெல்லாம் அல்ல என்று யாரும் சொல்லிவிடலாம். 1928-ம் ஆண்டு, மே 19-ல் பூந்தமல்லியில் செங்கற்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மாநாட்டில் ஈ.வெ.ரா. தலைமை வகித்த போது, நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்குமேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் வாசித்தவனுமல்ல; அந்தப் பத்து வயதிற்கு உட்பட்ட காலத்திலும் என் பெற்றோர்கள் என்னைப் பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம் நான் வீட்டில் இருப்பவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டு, ஓர் இடத்தில் என்னை காவலில் வைப்பதற்காகவே. என்று கூறியுள்ளார். அவர் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் பெறவில்லை; நடுத்தரக் கல்வியையும் கற்க வில்லை; ஆரம்பக் கல்வியைத்தான் சரிவரக் கற்றாரா என்றால் அதுவும் இல்லை. ஆதலால், அவர் படிப்பின் பெருமையால் செல்வாக்குப் பெற்றிருக்கிறார் என்று கூறமுடியாது. அவர் இதுவரையிலும் எந்த உயர்ந்த அரசாங்க வேலை யையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இனி ஏற்றுக்கொள்ளும் எண்ண முடையவரும் அல்லர். அப்படி ஏற்றுக்கொள்ள எண்ணினாலும் அதற்குரிய கல்வித் தகுதி அவரிடமிருப்பதாக அவர் எண்ணுவது மில்லை. ஆதலால், அவர் தமது அதிகாரத்தால் பொதுமக்களிடம் செல்வாக்குப் பெற்றார் என்றும் கூற முடியாது. அவர் ஒரு அன்னக்காவடியல்ல. ஆனால், எதிரிகளை விலைக்கு வாங்கும் பெரும் பொருள் உடையோரும் அல்லர். தம்மை ஆதரிப்போர்க்கெல்லாம் அளவின்றிக் கொடுத்துதவும் ஏராளமான செல்வமும் இல்லை. தாமும், தம்மைச் சார்ந்தோரும் சுகமாக உண்டு உடுத்து வாழ்வதற்குப் போதுமான செல்வம் அவரிடம் உண்டு. பொது ஊழியத்தின் பெயரால் கொள்ளை யடித்து வயிறு வளர்க்கவேண்டும் என்ற நிலை அவருக்கோ, அவர் குடும்பத்தாருக்கோ இல்லை. சோம்பேறிகளுக்குச் சோறு போடுதல், உழைப்பற்றவனுக்கு உதவி செய்தல் இவை பெருங்குற்றம் என்னும் கொள்கையுடைய அவர், செல்வத்தால் பொதுமக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்க முடியாது. அவரிடம் அரசியல் தந்திரம் இருப்பதாக எவரும் கூற மாட்டார்கள்; கூறினாலும் ஒப்புக்கொள்ள முடியாது. நினைப்பும், சொல்லும், செயலும் ஒரு தன்மையாக உள்ளவரிடம் தந்திரம் ஏது? அவர் தந்திரசாலியாக இருந்தால் ஒரு முறையல்ல, இருமுறையல்ல, எட்டுமுறை ஏன் சிறையில் மாட்டிக்கொள்ளு கிறார்? ஆதலால், அவர் தனது அரசியல் தந்திரத்தின் வழியாக பொதுமக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறார் என்பது தவறு. எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது, நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால், நிர்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந் திருப்பேன். அதுபோலவே, கடவுளைப் பற்றியும் மனத்தில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்யவேண்டுமென்று கருதிய காரியம் எதையும், கடவுள் கோபிப்பாரோ என்றோ, தண்டிப்பாரோ என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ (எனக்கு அவசியம் என்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன். எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்; இதற்கு முன்பும் பல தடவை யோசித் திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கையில்லை யென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன், கண்டு பிடிக்க முடியவே இல்லை. என்று 1937-ல் ஈ.வெ.ரா.வே நவமணி ஆண்டுமலரில் எழுதி யுள்ளார். இவர் ஆண்டவனைப்பற்றிக் கவலை இல்லை யென்று வெளிப்படையாகக் கூறுகிறவர். ஆண்டவனுக்காகப் பொருள் செலவழிப்பது வீண் அறியாமை என்பதோடு, வள்ளலார் இராமலிங்க சுவாமிகளைப் போலவே மோட்சம், நரகம், தெய்வம், அவதாரம், வேதம், புராணம், மதம் என்பன முதலியவைகள் எல்லாம் வெறும் புரட்டு, பெரும் புரட்டு என்பவர். எதிரிகள் எல்லோரும் இவரை நாத்திகர் என்று கூறி வருகின்றனர். இவரும் ஒரு சமயத்திலாவது தான் ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள முயன்றவர் அல்லர். இப்படிப்பட்டவர், திரு.காந்தி போன்றவர்களைப்போல் மத வேஷத்தாலோ, கடவுள் பெயரைச் சொல்லியோ செல்வாக்குப் பெற்றார் என்று கூறமுடியுமா? பின்னர், எதனால்தான் சாதாரண மனிதராகிய அவர் பொதுமக்களின் பெரும் போற்றுதலுக்கு உரியவராக நிற்கிறார்? எதிரிகளின் தூற்றுதலுக்கும் இலக்காகி நிற்கிறார்? இவ்வுண்மையை அறிய நீங்கள் ஆவல் கொள்கிறீர்கள் அல்லவா? அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால்தான் இவ் வுண்மையைக் காணமுடியும். ஆதலால் இப் பெரியார் வாழ்க்கை வரலாற்றை நமக்குத் தெரிந்த வரையிலும் ஆராய்ந்து பார்ப்போம். பெற்றோர் பெருமை ஈரோட்டுக்குச் சென்றவர்களுக்கெல்லாம் காலஞ்சென்ற வெங்கட்ட நாயக்கர் அவர்களின் பெயர் தெரியும். ஊர் சுற்று பவர்களில் அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை அனைவரும் அறிவார்கள். அவர் இல்லம் வணிகர்களுக்கு உறைவிடம். வழிப்போக்கர்களுக்கும் இளைப்பாறுமிடம்; பாகவதர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், சாமியார்களுக்கும் தங்குமிடம்; புலவர்களுக்குப் புகலிடம்; ஏழை, எளியவர்களுக்கும் இன்னல் தீர்க்கும் இடம். இவ்வாறு பலருக்கும் உதவி செய்தவர், கொடைவள்ளலாக விளங்கியவர் வெங்கட்ட நாயக்கர் என்பவர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், நாயக்கர் என்ற பட்டப்பெயர் உடையவர். இவருடைய இனத்தினர் கோவை, சேலம் ஜில்லாக்களில் மிகுதியாக இருக்கின்றனர்; செல்வமும், செல்வாக்கும் பெற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களைக் கன்னடிய நாயக்கர் என்றும், நாயுடுகள் என்றும் வழங்குவர். ஈரோட்டில் இவர் இயற்றிய அறங்கள் பல. அவை இன்றும் நின்று நிலவுகளின்றன. வெங்கட்ட நாயக்கர் சத்திரம் ஒன்று பழைய புகைவண்டி நிலையத்தின் எதிரில் உள்ளது. ஈரோட்டில் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு வசதியுள்ள சத்திரம் இதுதான். புகைவண்டி நிலையம் அங்கிருந்தபோது இச்சத்திரமே பிரயாணி களுக்குப் பேருதவி புரிந்து வந்தது. அதன் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில், மற்றொரு பக்கத்தில் வெங்கட்ட நாயக்கர் இறந்த பின் அவருக்காகக் கட்டப்பட்ட சமாதிக்கோயில், அதனுள் நாயக்கரின் உருவச்சிலை. ஈரோட்டு நகரில் கோட்டைப் பகுதியில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் வெங்கட்ட நாயக்கரின் பெயரும், அவரது மனைவியாரின் பெயரும் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அவைகளில் பெரும்பாலும் அவர்களுடைய திருப்பணியே நிலவுகின்றன. வெங்கட்ட நாயக்கர் தர்ம வைத்தியசாலை ஈரோட்டில் இன்றும் நடைபெறுகிறது. தோழர் ஈ.வெ.கிருஷ்ணப்ப நாயக்கர் இதை நடத்தி வருகிறார். வெங்கட்ட நாயக்கரின் பூத உடம்பு மறைந்துவிட்டது. ஆனால், அவருடைய புகழுடம்பு மட்டிலும் இன்றும் நின்று காட்சி தருகின்றது. ஈரோட்டில், மகாஜன - ஹைகூல் இன்றும் நல்ல புகழுடன் நடைபெறுகிறது. அவ்வுயர்தரக் கலாசாலை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களில், வெங்கட்ட நாயக்கர் முதன்மையானவர். அவர் செய்த அறங்களின் பயனை இன்றும் உள்ளூர்க்காரர்கள் நுகர்கின்றனர்; வெளியூர்க்காரர்களும் அடைகின்றனர். இத்தகைய பெருங்கொடைவள்ளலாக விளங்கியவர் வெங்கட்ட நாயக்கர்; அவர் வாழ்க்கைத் துணைவியாரின் பெயர் சின்னத் தாயம்மையார் என்று அழைக்கப்படும் முத்தம்மாள் ஆவார். நாயக்கருக்கு வழிவழி வந்த செல்வம் ஒன்றும் இல்லை; வறுமையிலே வாழ்க்கையைத் தொடங்கினார்; இளமையிலே வறுமையால் வாடினார். சின்னத்தாயம்மையார் பிறந்த குடி ஒரு சாதாரணச் செல்வக்குடி என்றே சொல்லலாம். ஆயினும், வறுமையே செல்வமாக உடைய நாயக்கருக்கு வாழ்க்கைப் பட்டார்; நாயக்கரின் வறுமைச் செல்வத்தில் அம்மையாரும் பங்கு கொண்டார். வெங்கட்ட நாயக்கர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார்; தாயின் உதவியும் அதிக நாள் அவருக்கில்லை. 12 வயது முதலே கூலி வேலை செய்து பிழைக்கவேண்டிய கொடிய வறுமைப் பிணிக்கு நாயக்கர் ஆளானார். 18 வயதாயிற்று; நல்ல காளைப் பருவம். இக்காலத்தில் கல் தச்சர்களுக்குக் கையாள் வேலை செய்துவந்தார். சின்னத்தாயம்மையும் காளவாயிலிருந்து கல் சுமக்கும் தொழில் செய்து வந்தார். இதனால் அம்மையார் பெற்ற கூலி நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மேலில்லை. நாயக்கருக்குக் கிடைக்கும் கூலியும் 2 அணாவுக்கு மேற்போகாது. ஆனால் நாயக்கர் கூலி நாளடையில் உயர்ந்தது. இரவும் பகலுமாய் வேலை செய்வதில் நாளொன்றுக்கு 12 அணா முதல் ஒன்றரை ரூபாய் வரையில் ஊதியம் கிடைத்தது. இவ்வாறு இருவரும் பாடுபட்டு வேலைசெய்து வாழ்க்கை நடத்தி வந்தனர். சில ஆண்டுகள் சென்றபின், நாயக்கர் வண்டி, மாடுகள் வாங்கினார். வாடகைக்கு வண்டி ஓட்டினார். முன்னைய கல் தச்சுத் தொழிலைக் காட்டிலும் இதில் வருவாய் சிறிது உயர்ந்தது. அக்காலத்தில் ஒரு குடும்பத்துக்கு இவ்வருவாய் போதுமானதாக இருந்தது. என்றாலும், மனைவியார் பக்குவ வயதடைந்துவிட்டதால், வண்டியோட்டிக் கொண்டு நீண்டநாள் வெளியூர்களுக்குப் போகாமலிருப்பதற்காக வண்டி, மாட்டை விற்று ஒரு தட்டுக்கடை, அதாவது சிறு மளிகைக் கடை வைத்தார். இக்காலத்தில் சின்னத்தாயம்மையாரும் வாளாயில்லை. வீட்டில் ஆட்கள் வைத்து, நெல்குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தார். இது மட்டுமல்ல; துவரை, உளுந்து, பயறு முதலியவை களை உடைத்துப் பருப்பாக்குவார்; கொட்டைமுத்தைக் கொண்டு எண்ணெய் எடுப்பார். இவ்வாறு கணவருடைய தொழிலுக்கு உதவி செய்வார். அன்றியும், தானும் இப் பண்டங்களை உள்ளூர் வாரச் சந்தைக்குக் கொண்டு போவார்; விற்பனை செய்வார். இவ்வாணிபத்தின் வழியே சிறுகச் சிறுகத் தேடும் பொருளையும் தன் கணவருடைய வாணிபத்துக்குக் கொடுத்து உதவிபுரிந்து வந்தார்; இவ்வுதவியே நாயக்கர் ஒரு பெரும் வணிகராவதற்குத் துணை செய்தது. வறுமையில் வாழ்ந்த நாயக்கர் பெருஞ் செல்வரானதற்குச் சின்னத்தாயம்மாரின் உழைப்பும், உதவியுமே பெருந்துணையாக நின்றது. தட்டுக்கடை, மண்டிக்கடை ஆகி, நாளடைவில் நாயக்கருடைய வாணிபம் பெருகிற்று; நல்ல வருவாய் கிடைத்து; கடையும் வரவரப் பெருகி, மொத்த விற்பனை செய்யும் பெருங்கடையாயிற்று. பண்டங்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடைக்கு, மண்டிக் கடை என்று பெயர். முதலில் கூலிக்காரராயிருந்த நாயக்கர் வண்டிக் காரரானார். பின்னர், சிறு மளிகைக் கடைக்காரர் ஆனார்; இறுதியில் மண்டிக் கடை முதலாளியாகிவிட்டார். நாயக்கர் முதலாளியானவுடன் நீருற்றுப் போல் செல்வம் பெருகிற்று; செல்வம் பெருகப் பெருக வைணவ மத பக்தியும் பெருகிற்று; பரம பாகவதராகவும் விளங்கினார்; அவர் மனத்தில் அறம்புரியும் எண்ணமும் வளர்ந்தது; எங்கும் நாயக்கர் தர்மம், நாயக்கர் திருப்பணி ஆக விளங்கிற்று. இதற்கிடையில் நாயக்கருக்கும், சின்னத்தாயம்மையாருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டும் இறந்தன. பிறகு 10 வருட காலம் குழந்தை இல்லை. இருவருக்கும் குழந்தை இல்லையே என்ற மனத்துயரம் மிகுந்தது. இதனால் திருமாலிடம் அன்பும், பக்தியும் பெருகின. இருவரும் பெருமாளை நினைத்துப் பிள்ளை வரங்கிடந்தனர்; பாகவதர்களுக்குப் பணிவிடை செய்தனர்; சனிக்கிழமை நோன்பு, ஏகாதசி விரதம் இருந்தனர்; இராமாயணம் கேட்டனர்; பாகவதம் கேட்டனர். இவ்வகையாக இருவருக்கும் வைணவ மதப்பற்று மிகுந்தது. சதா சர்வ காலமும் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர் களாலும், பண்டிதர்களாலும் காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து, தர்மப்பிரபுப் பட்டம் வாங்கவேண்டாமா? இவைகளைத்தானே தான பாத்திரங் களாகப் பேசப்படும்! ஆதலால், இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள். என் தாயார் இவர்களின் அளப்புகளை அதிக பக்தி சிரத்தையுடன் கேட்டுக்கொண்டே இருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கும். இது ஈ.வெ.ரா.வினாலேயே எழுதப்பட்ட செய்தி. இதிலிருந்து நாயக்கர், பெருமைக்காகவும், பெரிய மனிதர் என்ற முறையிலும் அக்கால வழக்கப்படி புலவர்களையும், பாகவதர்களையும் ஆதரித்து வந்ததோடு, பெரும் பக்திமானாகவும் ஆகவேண்டிய வரானார். நாயக்கரும், அம்மையாரும் பிள்ளைப்பேறில்லாமல் மிகவும் ஏங்கியிருந்தனர். இக் காலத்தில் இவர்கள் ஏக்கந்தணிய ஈ.வெ.கிருஷ்ண சாமி 1877ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 28ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பின் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 17ஆம் தேதி ஈ.வெ.ராமசாமி பிறந்தார். இவருக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பொன்னுத் தாயம்மாள் என்பவர் பிறந்தார். இவருக்குப் பின் பத்தாண்டு கழித்துத் திருவாட்டி கண்ணம்மாள் பிறந்தார். முதற்பிள்ளை பிறந்தவுடனேயே நாயக்கருக்கும், அம்மை யாருக்கும் நெடுநாளிருந்த கவலை நீங்கிற்று. சில ஆண்டுகள் சென்று இரண்டாவது பிள்ளையாக ஈ.வெ.ரா. பிறந்தவுடன் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். பின்னுஞ் சில ஆண்டுகளில் இரு பெண் மக்களும் பிறந்தவுடன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை யாரே அளவிட்டுக் கூறவல்லார்? அவர்கள், வெங்கடாசலபதியே தங்களுக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுத்தான்; விரும்பிய பிள்ளைப்பேற்றை அளித்தான் என்று கருதினர். தாங்கள் நோற்ற நோன்பும், ஆற்றிய அறங்களுமே தங்கள் விருப்பத்தை நிறைவேற்றின என்று நம்பினர். அவர்கள் ஆரம்பத்தில் கூலி வேலை செய்தனர். அதன் வழியே வரும் சிறு பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். பின்னர், வாணிபத்தின் மூலம் ஏராளமான செல்வம் பெற்றனர்; வீடுகள் பெற்றனர்; காடுகள், கழனிகளும் பெற்றனர். இத்தகைய பெரு வாழ்வுக்குக் காரணம் அயராத ஊக்கம்; இடைவிடாத உழைப்பு; நாணயம்; நன்னடத்தை. இவ்வுண்மையை அவர்களுக்கு எடுத்துக்காட்டுவோர் அக்காலத்தில் யாருமில்லை; ஆதலால், எல்லாம் எம்பெருமான் செயல் என்று கருதினர்; பாகவதர் களாகவே வாழ்ந்தனர்; இதில் வியப்பு ஒன்றும் இல்லை. வெங்கட்ட நாயக்கர் கோயமுத்தூர் ஜில்லாவின் மேற்குடி மக்களுள் ஒருவரானார். உண்மை நம்பிக்கையோடு கூடிய புராண பக்தி, அறச்செயல், வாணிபத் துறையில் நடந்து கொண்ட நேர்மை, செல்வச் செருக்கின்மை, இக்குணங்கள் அவரிடம் இருந்தன. இவை அவருக்கு உள்ளூரிலும், வெளியூரிலும் நல்ல புகழை நிலை நிறுத்தின. இன்றும் ஈரோட்டில் நாயக்கர் என்றாலே வெங்கட்ட நாயக்கர் என்று கருதப்படுவதும், அவர் பிள்ளை களுக்கு 60 வயதிற்கு மேலாகியும் நாயக்கர் மக்கள் என்றே கூறப்படுவதும் அவரது புகழுக்குப் போதிய சான்றாகும். இளமைப் பருவம் ஈ.வெ.ரா.வின் தந்தையாருக்குச் சிற்றன்னை ஒருவர் இருந்தார். அவர் விதவை; பிள்ளை இல்லாதவர்; அதிகச் செல்வமுடைய வரும் அல்லர். ஆயினும் தனக்கோர் பிள்ளை வேண்டும் என்ற ஆவல் அந்தம்மாளுக்கிருந்தது. ஆதலால், இராமனைத் தனக்குத் தத்துப் பிள்ளையாகக் கொடுத்துவிடும்படி வேண்டினார். வெங்கட்ட நாயக்கர் இதற்கிசைந்தார்; இராமசாமியைத் தத்துப் பிள்ளையாகக் கொடுக்க எண்ணினார். ஆனால், சின்னத்தாயம்மையார் இதற்கிசையவில்லை என்றாலும், இராமசாமி குழந்தைப் பருவம் முதலே அந்தப் பாட்டியின் வீட்டிலேயே தாய்ப்பால் அருந்தாமல் ஆட்டுப்பால் குடித்துக்கொண்டு வீகாரப் பிள்ளையாக வளர்ந்து வந்தார். ஏன் என்றால், ஈ.வெ.ரா. இளம் பருவத்திலேயே கட்டுப் பாடற்றவரானார். கண்டிப்பற்ற முறையில் வளர்க்கப்பட்டார். இவரை வளர்த்து வந்த அம்மையார் போதிய செல்வமற்ற வராய் இருந்ததால், சிற்சில சமயங்களில் ஈ.வெ.ரா.வுக்குத் தேவையான நல்ல உணவுகூடக் கிடைப்பதில்லை. காலை உணவு பழஞ்சோறும், சுண்டற்குழம்புந்தான். தின்பண்டங்கள் கிடைப்பது அரிது. இளம்பிள்ளைகளுக்குத் தின்பண்டங்களில் ஆவலிருப்பது இயல்பல்லவா? எப்பொழுதும் தின்பண்டங்களை விரும்பித்திரிவார். சில சமயங்களில் தெருவில் பட்டாணிக்கடலை கிடந்தால் அவைகளைக்கூட பொறுக்கிவிடுவார். இவ்வாறு வளர்ந்துவந்த நமது இராமசாமி தனது ஆறாவது வயதில் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அவருடைய பள்ளிக்கூட வாழ்வைப் பற்றி அவரே 1937-ல் நவமணி ஆண்டு மலரில் எழுதியிருக்கிறார். எனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அப் பள்ளிக்கூடம் ஈரோடு டவுனுக்குச் சற்று விலகிய தூரத்தில் இருந்தது. (இப்போது அது நடு ஊராகிவிட்டது) அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார்களின் வீடுகள் உண்டு. எண்ணெய்ச் செக்கு சதா ஆட்டிக் கொண்டிருக்கும். மூங்கிலில் பாய், முறம், கூடை பின்னு கின்றவர்கள் தெரு ஓரங்களில் குடிசைக் கட்டிக்கொண்டு தங்கள் வேலைகளைச் செய்வார்கள். சில முலீம்கள் வீடும், குடிசை ரூபமாக அங்கே உண்டு. ஆகவே, அப் பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதக்காரர்கள், சாயபுகள் ஆகியவர்கள். அந்தக் காலத்தில் இவர்கள் வீட்டில் மற்ற சாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்தமாட்டார்கள் அல்லவா? ஆகையால், என் வீட்டார்கள் நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாகச் சொல்லி அனுப்புவார்கள். என்னவென்றால், அங்குள்ளவர்கள் புழங்கக்கூடாத சாதிக்காரர்கள்; அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி என்று சொல்லி அனுப்புவார்கள். அது போலவே, இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் சாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்கு தண்ணீர் கொடுக்கும்போது, ஒரு வெண்கல டம்ளரைக் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கி குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும். பிறகு அதன்மீது தண்ணீர் ஊற்றி, அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி, உள்ளே எடுத்துக் கொண்டு போகும். இதற்குள், எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல், குடிக்கும் போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல்மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரையேறிப் போய், இருமல் வந்து, வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சிலசமயம் கோபித்து வையும். அதனல் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார்களின் பிள்ளை களும் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. எழுந்து நின்று பெருவிரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன், போய்விட்டுச் சீக்கிரம் வா என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலே, அவனது வீடு சற்றுத் தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிலே குடித்துவிட்டு வருவான். ஒருநாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாம் என்று கருதி, ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரலை நீட்டும்போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலையாட்டினார். இருவரும் ஓடினோம். வாத்தியார், ராமா, நீ எங்கே ஓடறே? என்றார். தண்ணிக்கு அய்யா என்றேன். தண்ணிக்கு அவன்கூட போறாயே என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது, ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக் கிறார்) போய்த் தண்ணீர் குடித்து, தண்ணீரை மேலெல்லாம் சிந்திக்கொண்டு, வேஷ்டியையும் நனைத்துக் கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர்த் தாகமெடுத்த போது, ஒரு செட்டியார் பையனுடன் கூடப்போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு, அந்தப் பையனிடம் பேசி வைத்து, அவன் தண்ணீர் குடிக்கப் பெருவிரலைக் காட்டுமுன்பு, நான் ஒண்ணுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று, ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்றுகொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாகப் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்குப் பின்புறமாகப் போனோம். அந்தப் பையன் வீட்டிற்குள் ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல், லோட்டா விளிம்பை உதட்டில் வைத்துக் குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் நீ நாயக்கர் வீட்டுத் தம்பியா? என்றார். நான் ஆமாம் என்றேன். இங்கே தண்ணீர் குடிக்கிறாயே, உங்கள் வீட்டிலே ஒண்ணும் சொல்லமாட்டார் களா? என்றார். சொல்லமாட்டாங்கோ என்று சொல்லிவிட்டு ஓடினேன். அந்தப் பையனும் என்கூட ஓடிவந்தான். அதற்குள் அந்தப் பையனைக் கூப்பிட்டு, டே பழனியப்பா! அந்தச் சொம்பைக் கழுவி உள்ளே வைத்துவிட்டுப் போடா என்றார். அதே மாதிரியாக அந்தப் பையன் லோட்டாவை கழுவி வைத்து விட்டு, வீதி வழியாக முன்புறம் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின்புறமாகப் பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். பின்பு இப்படியே, இதே மாதிரி மற்றொரு சமயம் வேதக்காரர் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டுப் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறிச் சாமான்களும்கூடச் சாப்பிடும்படியாகச் செய்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு இந்தச் செய்தி எட்டியது. வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு, பணம் பெருகி அப்பொழுதுதான் பார்ப்பனர்களைப் போல் நடக்க ஆரம்பித்த காலம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும் என்றாலும், என் தகப்பனாருக்கு இதைப் பற்றி (நான் கண்ட இடத்தில் சாப்பிடுவது பற்றி) அதிகமாகக் கவலை கிடையாது. சீச்சீ! இனி அப்படி செய்யாதே என்று சொல்லுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும். என் தாயார் ஏதோ மூழ்கிவிட்டதுபோல் கருதி மிகத் துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயுபுமார் பையன்கள் கொடுத்த பண்டங்களைக் கூடச் சாப்பிட்டுவிட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வயதிற்குள்ளாகவே முடிந்துவிட்டது. ஏனென்றால், என் சிநேகம், தின்னாத (புழங்கக் கூடாத) சாதியாருடன்தான் அதிகம். அதனாலேயே நான் முரடனாகி விட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன். அந்த விலங்குடனேயே அந்தப் பிள்ளைகளுடன் கூடித்திரிவேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டை போடப் பட்டேன். அப்போதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன். இவ்வாறு இராமசாமி இளம் பருவத்திலேயே கட்டுக் கடங்காதவராகி விட்டார். இதற்கு ஒரு வகையில் தாங்களே காரணம் என்று பெற்றோர் உணர்ந்தனர். பாட்டியார் வீட்டில் இராமசாமி வளர்ந்தார். அவரைக் கண்டிக்க அங்கு யாருமில்லை. அதனால் அடங்காப் பிடாரியானார். இதற்குள் தாய், தந்தையார், இராமசாமியைத் தத்துக் கொடுப்பதாக இருந்த அரைகுறை எண்ணத்தையும் விட்டார்கள். ஏனெனில் செல்வம் பெருகி விட்டது. ஏழைக்குத் தத்துக் கொடுப்பார்களா? ஆகவே, இராமனைத் தங்கள் வீட்டிற்கே அழைத்துக் கொண்டார்கள். இதன் பிறகாவது இவர் தாய், தந்தையர்களின் சட்டதிட்டங் களுக்கு அடங்கி நடந்தாரா வென்றால், அதுதான் இல்லை. தன் விருப்பப்படிதான் எதையும் செய்துவந்தார். பிறகு ஒரு (கூல்) பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அந்தப் பள்ளிக்கூடத்தில் இராமசாமி ஒழுங்காகப் படித்தாரா என்றால் அதுவுமில்லை. உபாத்தியாயருக்குத்தான் தொல்லை கொடுத்து வந்தார். ஒரு சமயம் உபாத்தியாயரைக்கூட அடித்து விட்டார். குறும்புக்காரப் பிள்ளைகளுக்கெல்லாம் இவர்தான் தலைவர். குறும்பு செய்வதிலும் மன்னர். தன் வகுப்பு மாணவர்களை அடிக்கடி அடித்துவிடுவார். இதற்காக இனி வகுப்புப் பிள்ளை களை அடிப்பதில்லை யென்று ஆயிரந்தடவை (Imposition) எழுதும்படியாக உபாத்தியாயர் தண்டிப்பார். இந்தவிதமாக இராமசாமி நூற்றுக்கணக்கான தடவைகளில் எழுதியிருக்கிறார். இவர் பள்ளிக்குச் சென்று வந்ததில், இவர் படிப்பில் ஒரு சிறிதும் வளர்ச்சியில்லை. ஆகவே, பெற்றோர்கள் நிறுத்திவிட்டார்கள். இவர் பள்ளிப்படிப்பும் 10 வயதோடு நின்றுவிட்டது. இவர் பள்ளிக்கூடத்தில் படித்தது அய்ந்து ஆண்டுகள்தான். இந்த அய்ந்தாண்டுகளிலும் படித்த காலம் மிகமிகக் குறைவு. விளையாட்டும் குறும்புத்தனமும் செய்த காலமே மிகுதி. இச் செய்தியை, நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலம் அய்ந்தாண்டுகள் தான். இந்த அய்ந்தாண்டுகளிலும் படித்த நாட்களைவிடக் குறும்புத்தனம் செய்த நாட்களும், உபாத்தியாயருக்குத் தொந்தரவு கொடுத்த நாட்களுமே மிகுதி. என்று ஈ.வெ.ரா.வே பல தடவை எழுதி இருக்கிறார்; பேசியும் இருக்கிறார். 21.07.1939-ல் கோயம்புத்தூர் கவர்ன்மெண்ட் காலேஜ் தமிழ்க் கழக மாணவர் சங்கத்தில் பேசும்போது, நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருஷம், (கூல்) பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறை பள்ளிக்கூடத்தில் 2 வருஷமுந்தான் படித்தவன்... எனக்குப் படிப்பே வராது என்று என் பெற்றோர் முடிவு கட்டிவிட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும், ஆதலால் என்னைப் பள்ளியில் பகல் எல்லாம் பிடித்து வைத்திருந்து, இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுதமுடியாது என்பதுதான் என்று அவரே பேசியிருக்கிறார். இராமசாமியின் பள்ளிப் படிப்பை நிறுத்தியவுடன் அவரைச் சும்மா திரியவிடவில்லை அவர் தந்தையார். தன் முயற்சியாலேயே உழைத்து முன்னுக்கு வந்த முதலாளியல்லவா? தனயனுக் கிருக்கும் அறிவின் திறமையை உணர்ந்தார். படிப்பைக் காட்டிலும் தொழிலில் அவர் அறிவு கூர்மையாகச் செல்லும் என்பதை உணர்ந்தார். தமது கடைக்கு அழைத்துக் கொண்டார். அந்தக் கடை தரகுக்கடை (கமிஷன் கடை) ஆனதால் மிளகாய், மஞ்சள் முதலிய சரக்குகளை ஏலங்கூறுவதும், ரயிலுக்குப் போகும் மூட்டைகளுக்கு விலாசம் போடுவதும் ஆகியவை இவருடைய தொழில். ஏலங்கூறுவதில், மிகவும் திறமையுடையவரானார். சுமார் 12 வயதில் செல்வவானின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு இந்தக் காரியங்களைச் செய்ததால், இவர் ஏலங்கூறும் பண்டங்களைக் கூட்டத்தில் உள்ளவர்கள் அதிக விலைக்குக் கேட்கும்படி செய்துவிடுவார். தன்னிடம் வியாபாரம் செய்ய வருபவர்களை நழுவவிடமாட்டார். வாணிபம் செய்வதில் மிகவும் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்துவிட்டார். ஆனால், அச்சிறு வயதிலும் இவர் குறும்புத்தனத்தை விடவேயில்லை. ஒழிந்த நேரங்களில் விதண்டாவாதம் செய்து கொண்டே யிருப்பார். அப்பொழுதே இவருக்குள் கடவுள், தலைவிதி, புராணம் முதலிய வைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அவைகளைப் பற்றிக் குதர்க்கம் புரிவார். இவருடைய 12வது வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள். தலைவிதி என்பது வெறும் புரட்டு; நமது நன்மை தீமைகளுக்கு நாமே காரணம். தலைவிதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்பது அறிவில்லாத்தனம் என்று தமது 12 வயதிலேயே வாதம் புரிவார். ஈரோட்டுக் கடைத்தெருவில் ராமநாத அய்யர் என்ற கல்லிடைக்குறிச்சிப் பார்ப்பனர் ஒருவர் கடை வைத்திருந்தார். அவர் கடையைத் தாண்டித்தான் ஈ.வெ.ரா. தன் கடைக்குச் செல்ல வேண்டும்; ஒவ்வொரு நாளும் அந்த ராமநாதய்யரை வம்புக்கு இழுக்காமல் போகமாட்டார். அய்யர், தலைவிதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர். எது வந்தாலும் அதற்குத் தலைவிதிதான் காரணம் என்பார். நீர் சொல்லுவது உண்மைதானா? எல்லாவற்றையும் தலைவிதி என்று ஒத்துக் கொள்கிறீரா? என்பார் ஈவெ.ரா. ஒத்துக் கொள்ளுகிறேன் என்பார் அய்யர். அய்யர் கடையின் முன் தட்டி கால்கொடுத்துத் தூக்கி வைக்கப்பட்டிருக்கும். ஈ.வெ.ரா. அத்தட்டியின் காலைக் கீழே தள்ளிவிட்டார். தட்டி அய்யரின் தலையின் மேல் விழுந்தது. அய்யர் கோபங்கொண்டு ஈ.வே.ரா.வை வைது கொண்டு துரத்தினார். தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளிவிட்டது; என்னை ஏன் வைகிறாய்? என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டார். ஈவெ.ரா. இளம்பருவ முதலே இத்தகைய பகுத்தறிவாளராக விளங்கியதற்குக் காரணம், அவருடைய வீட்டின் நிலைமையே யாகும். தாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியைப் பற்றியும் விதண்டாவாதம் பண்ணும் குணம் அவரிடம் இயற்கையாக அமைந்திருந்தது. எதைப் பற்றியும் தாராளமாக வாதிப்பார்; அதற்குரிய ஆற்றலும், அறிவும் அவரிடமிருந்தன. தன் வீட்டாரின் மதாச்சாரங்களை யெல்லாம் பொருளற்றவைகள் என்று அப்பொழுதே உணர்ந்து பரிகாசம் செய்து கொண்டே இருப்பார். இவ்வுணர்ச்சி தனக்குண்டமான காரணத்தை அவரே கூறியுள்ளார். கடைசியாக எனது படிப்பு நிறுத்தப்பட்டு, எங்கள் கடையிலேயே போடப்பட்டுவிட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாகிய புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது. இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால், எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும், சாமியார்களுக்கும், சமயப் பிச்சைக்காரர் களுக்கும், (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்தது. அவர்களை எனக்கு பிடிக்காததால், அவர்கள் சொல்லுவதைப் பரிகாசஞ்செய்ய ஆரம்பித்து, விதண்டாவாதக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல மெல்ல இதுவே ஒழிந்த நேர வேலையாகவும், அதுவே இளைப்பாறு வதற்கு ஒரு துணைக் கருவியாகவும், எனக்கு உண்மையிலே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டது. நான் புராணங் களையோ, வேறு எந்தத் தனிப்பட்ட புதகங்களையோ படித்த தில்லையென்றாலும், சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதாசர்வ காலம் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்காலட்சேபம்செய்யப்பட்டுவந்ததால்...எனக்குச் சமய சம்பந்தமான, புராண சம்பந்தமான விஷயங்கள் தாமாகவே தெரியும்படி ஆகிவிட்டன. அவற்றிலிருந்தேதான் பல கேள்விகள் கேட்கவும்., அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒருவிதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு மேலும் அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு கெட்டிக்காரப் பேச்சுக்காரன் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது. என் தகப்பனாருக்கும் நான் இப்படி விதண்டவாதமான கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும், உள்ளுக்குள் தனது மகன் இப்படிப் புத்தியாய்ப் பேசுகிறானே என்ற மகிழ்ச்சி உண்டு.இந்தச் சம்பவங்கள்தான் எனக்கு மேலும் மேலும் சாதியிலும், மதத்திலும், கடவுள், சாதிரங்கள், புராணங்கள் ஆகியவை களிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இக் கூற்று முற்றும் உண்மை அன்றியும், ஈவெ.ரா. இளம் பருவத்திலேயே வாணிபத்துறையில் புகுத்தப்பட்டதினால் பொது அறிவில் வளர்ச்சி பெற்றார். சாதுரியமாகப் பேசவும் வல்லமை பெற்றார். ஒவ்வொன்றைப் பற்றியும் நன்றாகச் சிந்தித்து முடிவு கட்டும் சிந்தனாசக்தியுடையவரானார். என்றாலும், ஈ.வெ.கிருஷ்ணசாமியே எல்லாவகையிலும் பெற்றோர்களின் அன்புக்குரிய பிள்ளை. இவர் மூத்த பிள்ளை. பிள்ளையில்லையே என்று வருந்தி வரங்கிடந்த காலத்தில் பிறந்தவர். அன்றியும், தாய் தந்தையரின் கட்டளைக்கு அடங்கி நடந்து வந்தார். தாய் தந்தையரைப் போலவே, வைணவ மதப்பற்று டையவரானார். வைதீகப் பழக்க வழக்கங்களை முறைதவறாமல் மேற்கொண்டார். அடக்கம், பொறுமை, கட்டுப்பாடு முதலிய நற்குணங்களுடன் விளங்கினார். இதனால், தாய், தந்தைக்கேற்ற புதல்வர் என்று எல்லோராலும் புகழப்பட்டார். பள்ளிக்கூட நாள்களில் தவறாமல் பள்ளிக்கூடம் செல்வார். சனி, ஞாயிறு முதலிய விடுமுறை நாட்களில் கடைக்குப் போவதும் உண்டு.கிருஷ்ணசாமி நாயக்கர் பள்ளிக்கூடத்தை விட்டபின்னும் கல்விப் பயிற்சியை விட்டுவிடவில்லை. நல்ல வடமொழித் தேர்ச்சியும் பெற்றார். சாதிரங்கள், புராணங்கள் ஆகியவற்றிலும், தமிழிலும் நல்ல புலமை பெற்றார். இவருக்குத் தமிழில் நல்ல செய்யுளியற்றும் திறமையுண்டு. மத சம்பந்தமாகப் பல செய்யுள் நூல்கள் இயற்றியுள்ளார். அவைகள் அச்சிடப் பட்டுள்ளன. போதுமான ஆங்கில அறிவும் இவருக்கு உண்டு. கிருஷ்ணசாமி நாயக்கரும் தமது தந்தையைப் போலவே சிறந்த பாகவதராக விளங்கினார். புலவர்களைப் போற்றி வந்தார். பாகவதர்களைப் பாதுகாத்து வந்தார். இதற்கிடையில் சித்த வைத்திய முறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். இன்று தமிழ் நாட்டிலுள்ள சிறந்த சில வைத்தியர்களுள் இவரும் ஒருவர். மருந்துகளை முறைப்படி செய்வதில் இவருக்கு அளவுகடந்த ஊக்கம். நோயுற்றோர் பிணிகளைப் பயன் கருதாது குணப் படுத்துவதில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. இத் தொழிலின் மூலம் ஊதியம் பெறாமல் எல்லோருக்கும் இலவசமாகவே சிகிச்சை செய்து வருவதால் இவருடைய மருத்துவ வல்லமையைத் தமிழ்நாட்டார் அவ்வளவாக அறிந்து கொள்ளவில்லை. இன்று ஈரோட்டில் நடைபெற்று வரும், வெங்கட்ட நாயக்கர் தர்ம வைத்தியசாலை இவராலேயே நடத்தப்பட்டு வருகின்றது. தானே நேரில் பிணியாளிகளைக் கவனித்து வைத்தியம் செய்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்வரையில் ஈ.வெ.கிருஷ்ணசாமியார் பழுத்த வைதீகக் கோலம் பூண்டிருந்தார். ஆயினும், சில விஷயங்களைத் தவிர, பல வகைகளில் தம்பியின் சமுதாய, அரசியல் கொள்கைகளில் மாறுபடுவதில்லை. இப்பொழுது ஈ.வெ.ரா.வின் கொள்கைகள் முழுவதும் உண்மையென்பதற்குச் சாத்திரங்களிலிருந்தே ஆதரவுகள் கட்டக்கூடிய பெரிய சீர்திருத்தக்காரராக விளங்குகிறார். வைணவ மதத் தேர்ச்சியாளர் களில் இவர் குறிப்பிடத்தக்கவர். மதங்களும் மத நூல்களும் மனிதர்களிடம் அன்பு செலுத்த வேண்டுமென்று கூறுகின்றன. இடைக்காலத்தில் முளைத்த தன்னலக் குருக்கள்மார்களே மதத்தை மாசுபடுத்திவிட்டார்கள். பொருளற்ற பல சடங்குளை உண்டாக்கிப் பொருள் பறிக்க வழி செய்துவிட்டார்கள். மதங்களின் உண்மைக் கொள்கைகளை அறியாதவர்கள் குருமார்களின் சொற்களை நம்பி மூடநம்பிக்கை உடையவர்களானார்கள் என்பது இவர் கொள்கை. இக் கொள்கையை மத நூல்களின் ஆதரவு கொண்டே நிலைநிறுத்தும் ஒரு பேரறிவாளராக விளங்குகிறார். இன்று ஈ.வெ.ரா.வும், ஈ.வெ.கி.யும் தங்களுக்குள் கருத்து வேறுபாடற்றவர்களாக விளங்கு கின்றனர். அரசியல் கொள்கை யில் ஒன்று பட்டிருக்கின்றனர். சமுதாயக் கொள்கையில் ஒன்று பட்டுள்ளனர். மதக் கொள்கையிலும் ஒன்றுபட்டுள்ளனர். விரோதிகளால் பல தொல்லைகளுக்கு உள்ளானாலும் இருவரும் ஒத்த மனத்தினராய், அஞ்சாது பொதுப்பணி புரிந்து வருகின்றனர். குடும்பக் குறும்புகள் இராமசாமியின் இல்லற வாழ்வு அன்பிலேயே தொடங் கிற்று. காதலோடு கட்டுண்டே முளைத்தது. ஈ.வெ.ரா.வின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் நாகம்மையார். அவர் உயிரோடிருந்த வரையிலும் இருவரும் ஒருமனப்பட்டு வாழ்க்கை நடத்தினர். பொது வாழ்விலும் கருத்து வேறுபாடின்றி ஒத்துழைத்து வந்தனர். நாகம்மையார் காலஞ்சென்றபோது, ஈ.வெ.ரா. மனங்குழைந்து எழுதியிருப்பதைக் காண்போர்க்கு இவ் வுண்மை விளங்கும். அவருடைய இல்லற வாழ்வின் சிறப்புத் தோன்றும். நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருந்தேனே யல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில், மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனா யிருந்த காலத்திலும் எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம். இது ஈவெ.ரா.வினால் குடி அரசுத் தலையங்கத்தில் எழுதப்பட்டதாகும். நாகம்மையார் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பியினுடைய பெண். குழந்தைப் பருவத்திலேயே நல்ல தோற்றம் உள்ளவர். தோற்றத்திற்கேற்ற சிறந்த குணம் படைத்தவர். விளையாட்டுப் பருவத்திலேயே நாகம்மையாரும், இராமசாமி யாரும் ஒருவரையொருவர் நேசித்தனர். ஈவெ.ரா.வுக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப்பருவம். விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார். இவருக்கு மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச் செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மாளையே மணப்பேன்; வேறொரு பெண்ணை மணக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய், தந்தையார் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்க வேண்டும்? அவர் (ஈ.வெ.ரா.) மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைச் சிறிதும் நினையாமல், தான் சரியென்று எண்ணியதையே வற்புறுத்தி வரும் ஒரு காரணத்தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன். என்று நமது மாகாண முதல் மந்திரியாக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் 1928-ல் ஈ.வெ.ரா.வைப் பற்றிக் கூறியுள்ளார். இக்குணம் அவருடைய பிறவிக் குணம் என்றே கூறலாம். நாகம்மாள் பிறந்த குடும்பம் பணம் படைத்தன்று. அவரை ஈ.வெ.ராவுக்கு மணமுடிக்கப் பெற்றோருக்கு விருப்பமில்லை. அவர் விருப்பத்துக்கு மாறாகவும் செய்ய முடியவில்லை. இவரைப் போலவே நாகம்மாளும் இவரையே மணக்க உறுதி கொண்டிருந்தார். அம்மையாரின் பெற்றோர்கள் இவ் வுறுதியை அறியாதிருந்தனர். ஆதலால், அவரை மற்றொருவருக்கு மணம் பேசினர். நாகம்மைக்குக் கணவராக முதலில் மணம் பேசப் பட்டவர் முதிர்ந்த வயதினர். முன்னரே இருமுறை மணம்புரிந்து கொண்டவர். இரு மனைவி களையும் இழந்தவர். இவரைத் தனக்கு கணவராக மணம் பேசும் செய்தியை நாகம்மையார் உணர்ந்தார். அம்மையார் தனது எதிர்கால வாழ்க்கை நலனைக் கருத்திற் கொண்டார். பெற்றோரால் முடிவு செய்யப்படும் அத் திருமணத்திற்குத் தான் இணங்க முடியாதெனக் கூறிவிட்டார். மணந்தால் ராமசாமியை மணப்பேன்; இன்றேல் தற்கொலை செய்துகொண்டு இறப்பேன் என்று முடிவாகச் சொல்லி விட்டார். இச்சமயம் அம்மையாருக்கு வயது 13தான். இறுதியில் இராமசாமிக்கும், நாகம்மாளுக்கும் திருமணம் நடத்தப்பட்டது. இராமசாமியின் இளமைக் குறும்பு இன்றும் அவரிடம் உண்டு. குழந்தைகளிடம் குழந்தைபோலவே விளையாடுவார். நண்பர்களிடமும் வேடிக்கையாக விளையாடுவார். சும்மா விருக்கும் போது ஏதாவது வேடிக்கை செய்துகொண்டுதான் இருப்பார். நாகம்மாள் பக்கத்திலிருக்கும் போது அவரை யாராவது, பெரியவர், வயதேறியர், கிழவர் என்று சொன்னால் நாகம்மாளைக் காட்டி, அந்தம்மாளுக்குக் கோபம் வரும், சொல்லாதீர்கள் என்பார். இல்லறத்தில் இவர் செய்த குறும்புகள் மிகவும் வேடிக்கை யானவை; கேட்பதற்கு நகைச்சுவையளிப்பன. அவைகளிற் சில நாகம்மையாரைத் தன்போன்ற சீர்திருத்தம் உடையவராக ஆக்கச் செய்யப்பட்டவை. இராமசாமியின் பெற்றோர்களும், தமையாரும் மாமிச உணவு உட்கொள்ளாதவர்கள். பொதுவாக மருமகள் தங்கள் விருப்பம்போல் நடக்க வேண்டும் என்று விரும்புவது மாமியார், மாமனார்களின் இயற்கை. இது எல்லாக் குடும்பங்களிலும் இருந்துவரும் பழைய வழக்கம் - நாகம்மாளையும் இவ்வாறு நடத்த விரும்பினர். நாகம்மையாரும் சைவ உணவு கொள்ள வேண்டும். வைணவ மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டனர். அம்மையாரும் அவர்கள் எண்ணப்படி ஒழுகினார்; அவர்கள் காட்டிய நோன்புகளை நோற்றார். மதச் சின்னங்களை அணிந்தார். விழாக் காலங்களில் கோயில்களுக்குச் சென்று வந்தார். ஆனால், இவ் வழக்கங்கள் இராமசாமியாருக்குப் பிடிக்கவில்லை. அம்மையாரைச் சீர்திருத்த வேண்டுமென்று முடிவுசெய்து கொண்டார். இராமசாமியாருக்குப் புலால் உணவில் அளவு கடந்த ஆவல். இளமை முதலே இப் பழக்கம் உண்டு. புலால் உணவு இருந்தால்தான் நன்றாகச் சாப்பிடுவார். உடல் நலமில்லா விட்டாலும், மருத்துவர் சாப்பிடக் கூடாது என்று கட்டளை யிட்டாலும் இவ்வகையில் அடங்கமாட்டார். நன்றாகச் சாப்பிட்டு விட்டுச் செறிமானமில்லாமல் துன்பப்படுவார். ஆசாரத்திலோ சொல்லவேண்டுவதில்லை. நான்கு நாள், அய்ந்து நாள் வரையிலும் குளிக்காமலேகூட இருந்துவிடுவார். இவர் புலால் புசிக்கிறார் என்பதற்காகவும், ஆசாரமற்றவராயிருக்கிறார் என்பதற்காகவும் இவருடைய பெற்றோர்கள் இவரைத் தொடுவதில்லை. தொட்டு விட்டால் தீட்டுப்பட்டுவிட்டதென்று தலை முழுகுவார்கள். சின்னத்தாயம்மையார் இறக்கும் வரையிலுங் கூட இப்பழக்கத்தை விடவில்லை. இவர் இராமசாமிக்கு ஏதேனும் தின்பண்டம் கொடுத்தாலும் கையில் படாமல் தூக்கித்தான் கொடுப்பார். இராமசாமியார் வேண்டுமென்றே குறும்புத் தனமாக அவர் கையைத் தொட்டுவிடுவார். தீட்டு, தீட்டு, என்று சொல்லி சிரிப்பார். அம்மையாரும் உடனே சென்று நீராடிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இராமசாமியாரைப்போல் நாகம்மாளையும் ஆசார மில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. நாகம்மையார் இராமசாமியாருக்கு வேண்டிய புலால் உணவைத் தனியாகச் சமைப்பார்; பரிமாறுவார்; பிறகு, நீராடி விட்டுத்தான் சமையல் அறைக்குள் போவார். இராமசாமியும் வெளியில் உட்கார்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக் கூடாது. நாகம்மையார் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்ட பணி. பிள்ளை இல்லை என்பதற் காகவே, இந்நோன்பு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியார்க்குப் புலால் உணவு சமைக்க வேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவர் விரும்பும் உணவைச் சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார். இச்சமயத்தில் இராமசாமி சமையலறைக்குள் நுழைவார். அம்மையார் சாப்பிடுவதற்காகத் தனியாக மூடி வைத்திருக்கும் விரதச் சோற்றை திறப்பார். அதற்குள் எலும்புத் துண்டைப் புதைத்துவிட்டுப் போய் விடுவார். அம்மையார் சாப்பிடப்புகும்போது சோற்றுக்குள்ளிருந்து எலும்புத்துண்டு தலை நீட்டும். இது இராமசாமியின் குறும் பென்பதை அவர் உணர்ந்து கொள்வார். அவ்வளவுதான்; நோன்பும் முடிந்துவிடும். இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா.வின் பெற்றோர் களுக்குத் தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மருமகளை அழைத்து, இந்தப் புருஷனைக் கட்டிக்கொண்டு நீ விரதமிருந்து வாழ்ந்தது போதும்; நிறுத்திவிடு! என்று சொல்லி விட்டனர். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக்கிழமை விரதம் ஒழிந்தது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. ஈ.வெ.ரா.வுக்கு எப்பொழுதும் நாகம்மையார்தான் உணவளிக்க வேண்டும். இரவு எத்தனை மணியானாலும் நாகம்மையார் தூங்கி விட்டாலும் எழுந்துதான் சோறிட வேண்டும். அம்மையார் சிறு பெண். இரவில் அதிகநேரம் விழித்திருக்கமாட்டார். கணவர் வீட்டிற்கு வர நேரமானால் படுத்துறங்கிவிடுவார். ஒருநாள் இரவு ஈ.வெ.ரா. மிகவும் காலந்தாழ்த்தி வந்தார். நாகம்மாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். வழக்கம்போல் எழுப்பிச் சோறுபோடச் சொன்னார். உறக்க மயக்கத்தில் அம்மையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆடி விழுந்து கொண்டே இலையை எடுத்துப் போட்டார். பக்கத்தில் எண்ணெய்க் குடம் இருந்தது. அதிலிருந்து ஒருகுவளை எண்ணெய் ஊற்றிக் கொண்டு வந்து இலையின் பக்கத்தில் வைத்தார். அதன் பக்கத்தில் ஒரு பானையில் அரைப்புத்தூள் இருந்தது. அதில் ஒரு கை அள்ளிக் கொண்டு வந்து வைத்தார். உணவு பரிமாறிவிட்டதாக அம்மையாரின் நினைவு. அப்படியே இலைக்கு எதிரில் படுத்து உறங்கிவிட்டார். ஈ.வெ.ரா.வும் இவ்வேடிக்கையைப் பார்த்தார்; சிரித்துக் கொண்டார். இலையின்முன் உட்கார்ந்தார் பேசாமல். நெடுநேரம் சென்றபின் வீட்டில் உள்ளோர் இக்காட்சியைக் கண்டனர். அம்மையாரை எழுப்பினர். உறக்கத்தைத் தணிய வைத்து உணவிடச் செய்தனர். அதுமுதல் நாகம்மையார் உறங்கி விட்டால் எழுப்பிவிடுவார்கள். அவர் கையில் உணவுப் பண்டங்களை யாரேனும் எடுத்துக் கொடுப்பார்கள். பரிமாறச் செய்வார்கள். ஆனால், எப்பொழுதும் நாகம்மாள்தான் உணவு பரிமாற வேண்டும். நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்தவேண்டும் என்பது ஈ.வெ.ரா.வின் எண்ணம். இதற்காக அவர் செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர் கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்கமுடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, இவள் யாரோ புதிய தாசி; நமது ஊருக்கு வந்திருக்கிறாள்; இவளை நம் வசமாக்க வேண்டும்; நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினர். நாகம்மையார் இக் கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை; கால்கள் வெல வெலத்துவிட்டன; உடம்பு நடுநடுங்கியது. தாங்கமுடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய் விட்டார். ஆயினும், ஒருவாறு சமாளித்துக் கொண்டு அக்காலி களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்து விட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்துகொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்து கொண்டார். நாகம்மையாரை மூடநம்பிக்கையற்றவராகச் செய்ய வேண்டும் என்பது ஈ.வெ.ரா.வின் நோக்கம். இதற்காக அவர் செய்த வேடிக்கைகளில் ஒன்றைக் கூறுவோம். பெரும்பாலும் பெண்களுக்குத் தாலியின் மீது அதிக பக்தி அல்லவா? கணவரைக் காட்டிலும் அதன்மீது கவலை மிகுதி. சமயம் நேரும்போது கணவன்மீது விளக்குமாற்றை வீசும் பட்டிமகளும் தாலியைப் பூசிப்பதில் கண்ணுங்கருத்துமாயிருப்பாள்! பெண்கள் தாலியைக் கழற்றவே மாட்டார்கள். கழுத்தில் தாலியில்லாமல் வாயிற்படி தாண்டக்கூடாது என்பது பழைய கொள்கை. நாகம்மையாருக்கு தாலியைப் பற்றிய இவ்வெண்ணம் இருப்பது இயல்புதானே! தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும், அவர்கள் சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தத் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப் பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு இவ் வார்த்தை பிடிக்காததுதான். என்று இராமசாமியார் தாலியைப்பற்றி 1930-ல் விருதுநகரில் நடந்த ஒரு சுயமரியாதைக் கல்யாணத்தில் கூறினார். இக் கொள்கை அவருக்கு அக்காலத்திலும் உண்டேன்று தெரிகிறது. இராமசாமியார் ஒருநாள் இரவு அம்மையாரின் தாலியைக் கழற்றி விடும்படிக் கூறினார். அம்மையார், தாலியைக் கழற்றுவது கூடாது என்றார். நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் ஊரில் இல்லாத போதுதான் தாலியில்லாம லிருக்கக் கூடாது என்று ஒரு அளப்பு அளந்தார். அம்மையாரும் நாதன் சொல்லை உண்மை என்று நம்பினார்; தாலியைக் கழற்றிக் கொடுத்தார். ஈ.வெ.ரா. அதைத் தன் சட்டைப் பையில் போட்டுவிட்டு உறங்கிவிட்டார். விடிந்தவுடன் அம்மையாரும் தாலியைக் கேட்க மறந்துவிட்டார். இராம சாமியாரும் கொடுக்க மறந்துவிட்டார்; ஈ.வெ.ரா. தாலியின் நினைவில்லாமலே சட்டையை மாட்டிக் கொண்டு வெளியிற் சென்று விட்டார். நாகம்மையாருக்குத் தாலியின் நினைப்பு வந்து விட்டது. கழுத்தில் தாலியில்லாதிருப்பதை யாரேனும் கண்டால் ஏளனம் செய்வார்களே என்று நாண மடைந்தார். கூடியவரையிலும் தன் கழுத்தை பிறர் காணாதபடி மறைத்துக்கொண்டே வேலை பார்த்து வந்தார். அவர் தன் கழுத்து வெளியில் தெரியாதபடி அடிக்கடி துணியை இழுத்து இழுத்து மூடிக்கொண்டு வேலை செய்வதை மாமியார் பார்த்து விட்டார். உடனே, தாலி எங்கே? என்று கேட்டார். நாகம்மாள் தக்க விடைகூற முடியாமல், ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதற்குள் இன்னுஞ் சில பெண்கள் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் நாகம்மையாரை நக்கல் பண்ணத் தொடங்கிவிட்டனர். அம்மையாருக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களுக்கு என்ன தெரியும்? கணவர் ஊரில் இருக்கும்போது தாலியிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்று ஒரு போடு போட்டார். நக்கல் பண்ணிய பெண்கள் பதில் சொல்ல முடியாமல், புருஷனுக்கேற்ற பொண்டாட்டி; நாமென்ன சொல்வது? என்று விலகி விட்டார்கள். நாகம்மையார் தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டார்; அதிக நகைகள் அணியமாட்டார்; விலையுயர்ந்த புடவைகள் கட்டமாட்டார். இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய மைனராய் விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வெ.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளி களும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும். நாகம்மையாருக்குப் படிப்பில்லை. கடைசிக் காலத்தில் கையெழுத்துப் போடமட்டிலும் கற்றுக் கொண்டிருந்தார். ஆயினும், அவர் சிறந்த அறிவாளியாக விளங்கினார். சீர்திருத்தக் கொள்கைகளைப் பற்றி நன்றாக விவாதிக்கும் திறமை பெற்றிருந்தார். அவருக்கு ஓரளவு அரசியல் அறிவும் உண்டு. இவர் இராமசாமி யாருடன் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஒத்துழைத்தார். கள்ளுக்கடை மறியலில் ஒத்துழைத்தார். ஈ.வெ.ரா.வின் பொதுப்பணிகள் எல்லா வற்றிலும் பங்கெடுத்துக் கொண்டார். ஈ.வெ.ரா. வின் பொது ஊழியம் சிறப்படைந்ததற்குக் காலஞ்சென்ற நாகம்மையாரின் ஒத்துழைப்பே காரணமாகும். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்னும் வள்ளுவர் சொல்லுக்கு இலக்கு நாகம்மையாரே. ஆனால் ஒரே ஒரு வகையில் மட்டிலும் அம்மையார் ஈ.வெ.ரா.வுக்கு மாறாக நடந்து வந்தார். அது விருந்தோம்பல் என்னும் செய்கையாகும். ஈ.வெ.ரா.வுடன் பழகியவர்களுக்கு அவர் எத்தகைய சிக்கன புத்தி படைத்தவர் என்பது தெரியும். சிக்கனத்தில் அவரைத் தோற்கடிப்பவர் எவரும் இல்லை. சிக்கனத்திலும் அவரிடம் பேதமில்லை. செல்வரிடம் ஒருவிதமாகவும், வறியவரிடம் ஒருவிதமாகவும் நடந்து கொள்ள மாட்டார். எல்லோரையும் ஒன்றாகத்தான் கருதுவார். இதற்கு இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறோம். ஒருசமயம், சிங்கம்பட்டி ஜமீன்தார் ஈரோட்டுக்கு வருகிறார். அவரை நன்றாக வரவேற்று உபசரித்து அனுப்பவும் என்று ஊத்துக்குளி ஜமீன்தார் ஈ.வெ.ரா.வுக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஜமீன்தார் வரும் நேரமாயிற்று. ஈ.வெ.ரா. அதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் செய்யாமல் எப்பொழுதும்போல் கடையில் நண்பர் களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டார். புகைவண்டி வரும் நேரமாயிற்று. குதிரை பீட்டனை தேடிப்பார்த்தார்; கிடைக்கவில்லை. ஒரு ஜட்கா வண்டியைக் கொண்டுபோய் ரயில்வே டேஷனில் நிறுத்திக்கொண்டார். தன் நண்பர்களுடன் சென்று ஜமீன்தாரை அழைத்து வந்து வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிலும் தடபுடலான விருந்துகள் ஒன்று மில்லை. எப்போதும்போல் உள்ள சாப்பாடு செய்து வைத்து, திரும்பவும் ஜட்கா வண்டியிலேயே டேஷனுக்கு அனுப்பி விட்டார். ஜமீன்தாரை இவ்வாறு வரவேற்பதைப்பற்றி அவருடைய நண்பர்கள் பரிகசித்தனர். அவருடைய சிக்கனத்தைப்பற்றி பேசினர். மாண்ட்ஃபோர்டு சீர்திருத்தப்படி ஏற்பட்ட சென்னை சட்டசபையின் முதல் தலைவரான சர். பி.ராஜகோபாலச்சாரியார் என்பவர் ஈரோடு வழியாக ரயிலில் செல்லுவதாகவும், டேஷனில் தனக்குச் சாப்பாடு தயாரித்து வைக்கும்படியும் வேண்டி ஈ.வெ.ரா.வுக்குத் தந்தி கொடுத்திருந்தார். ஈ.வெ.ரா.வும் குறிப்பிட்ட நேரத்தில் பக்கத்திலிருந்த ஒரு சாப்பாடு கடையிலிருந்து சாப்பாடு கொண்டுவரச் சொல்லிவிட்டு டேஷனுக்குச் சென்றார். ஆச்சாரியாருக்குச் சாப்பாடு செய்துவைத்து வழியனுப்பிவிட்டு வந்தார். கடைக்காரனுக்குச் சாப்பாட்டுக்காகப் பணம் கொடுக்கப் போனார். கடைக்காரன் பணம் வேண்டாம் என்று கூறிவிட்டான். இதிலும் ஈ.வெ.ரா.வுக்குச் செலவில்லை. இதைக் கண்டு நண்பர்கள், ஏன் நல்ல சாப்பாடு தயார் செய்திருக்கக் கூடாது? கடைச் சாப்பாடுதான் போட வேண்டுமா? என்று கேட்டனர். அதற்கு, அவர்களுக்கெல்லாம் இந்தச் சாப்பாடு சாப்பிட்டுப் பழக்க மிருக்கும். இதைவிட வேறென்ன நல்ல சாப்பாடு வேண்டும்? என்று கூறினாராம். இப்பொழுது அவருடைய சிக்கனத்தைப் பற்றியே நண்பர்கள் பரிகசித்தனர். இன்றும் அவருடைய சிக்கனத்தைக் குடி அரசு நிர்வாகத்தை அறிந்தவர்கள் நன்குணர்வார்கள். இரண்டு அங்குலம், இரண்டரை அங்குலத்தில் துண்டுவிழும் காகிதங்களை யெல்லாம் எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொள்வார். அவர் கட்டுரை எழுதுவது இக் காகிதங்களில் தான். அவர் போடும் சட்டைகள் கிழிந்துவிட்டாலும் விடமாட்டார். கிழிந்த சட்டை யுடன் பொது மேடைகளில் ஏறிவிடுவார். மந்திரிகளுடனும், பெரியவர்களுடனும் கூடக் குலாவுவார். சட்டையைப் பற்றிய கவலையே அவருக்குக் கிடையாது. சில சமயங்களில் வீட்டுச் சாப்பாட்டிலும் சிக்கனஞ் செய்ய முயற்சிப்பார். ஏன் இவ்வளவு கறிகள்? கொஞ்சம் போதாதா? காப்பியில் ஏன் இவ்வளவு பால் கலக்கவேண்டும்? காப்பிதான் எதற்கு? மோர் நல்லதாயிற்றே! அதைக் குறைக்கக் கூடாதா? இதைக் குறைக்கக்கூடாதா? ஏன் இவ்வளவு செலவு? என்று சில சமயங்களில் நாகம்மையாரிடம் கூறுவார். அந்தம்மையாரும் எல்லாவற்றையும் அமைதியுடன் கேட்டுக் கொள்வார். அன்றைய சமையலில் பண்டங்கள் இன்னுஞ் சிறிது மிகுதியாகவே சமைக்கப் பட்டிருக்கும். ஈ.வெ.ரா.வைத் தவிர, மற்றவர்களுக்கெல்லாம் நிறைய பரிமாறப்பட்டிருக்கும். இவர் இலையில் வெறும் சோறுதான் காணப்படும். வழக்கம்போல் சோறு உட்கொள்ளுவதற்கு வேண்டிய குழம்பு, மோர் முதலியவைகள்தான் போடப்படும். ஏதாவது பதார்த்தம் வேண்டுமானால் கேட்டுத்தான் வாங்கிக் கொள்ளவேண்டும். சாப்பாட்டில் சிக்கனஞ் செய்யும்படி கூறியதற்காக அம்மையார் இவ்வாறு செய்வார். ஆகவே, சாப்பாடு வகையில் ஈ.வெ.ரா. சிக்கனஞ்செய்ய நினைத்தால் இத் தண்டனை கிடைப்பது திண்ணம். இவ்வொருவகையில் மட்டும் நாகம்மையார் எப்பொழுதும் ஈ.வெ.ரா.வைப் பொருட்படுத்தியதே இல்லை. நாகம்மையார் உயிரோடிருக்கும் வரையிலும் ஈ.வெ.ரா.வின் வீடு எப்பொழுதும் ஒரு விருந்துக் கூடமாகவே விளங்கும்! அவர் எத்தனை பேரானாலும் முன்னெச்சரிக்கை இல்லாமல் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போவார். எந்த நேரத்தில் எவர் சென்றாலும், இரவு 12 மணியானாலும், சாப்பிட வாருங்கள்; இலை போட்டாயிற்று, என்பதுதான் அம்மையாரின் முதல் உபசாரம். நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே. ஒன்று, ஈ.வெ.ரா. எக் காரியஞ் செய்தாலும் அதற்கு தானும் துணை நிற்பது; இரண்டு, தன் இல்லத்திற்கு வரும் எல்லோருக்கும் சோறு போடுவது; இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் இறக்கும் வரையிலும் தவறாமல் பின்பற்றி வந்தார். எவ்வளவு பேர் மிகுதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவருக்கு மகிழ்ச்சி. ‘அடுத்த பந்திக்கு இன்னம் அதிகமான பேர் வரமாட்டார்களா? என்பதே அவருடைய கவலையாக இருக்கும். ஈ.வெ.ரா.வைச் சதா வையும் ஆண்களானாலும் வீட்டுக்கு வந்தால் உடனே சாப்பாடு போட்டுவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பார். இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் நாகம்மையாரைப்பற்றி நன்கறிவார்கள். சீர்திருத்தவாதிகள் அனைவரும் நன்குணர்வார்கள். ஈ.வெ.ரா.வின் அரசியல், சமூக எதிரிகளும் அம்மையாரிடம் மதிப்பும், அன்பும் பாராட்டி வந்தனர். ஈ.வெ.ரா.வின் பொதுவாழ்க்கைக்குக் காரணம் அம்மையாரின் அருங்குணங்களே யென்பதை எவரும் மறுக்க முடியாது. திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 1933-ல் ஈரோட்டில் நாகம்மையாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தபோது கூறியதாவது:- செல்வச் செருக்கில் மூழ்கிக் கிடந்த அம்மையார் தேச நலத்தின் பொருட்டு, அச்செல்வங் களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டார். அம்மையார் ஏட்டுக்கல்வி அதிகம் பெறா விடினும் உலக அறிவில் உயர்ந்து விளங்கினார். கணவனுடைய தேசத் தொண்டிற்கும், பின்னர் அவர் புரிந்த சமூகச் சீர்திருத்தத் தொண்டிற்கும் பெருந்துணையாய்த் தம் கணவருடன் ஒத்துழைத்தார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிரார். தம் இல்லத்திற்கு வருந் தொண்டர்கட்கு இனிய முகத்துடனும், இன்சொல்லுடனும் இன்னமுது படைத்து வந்ததை எவரும் மறுத்துக் கூற முடியாது. ஒரு சமயம் நானும், நாயக்கரும் திருநெல்வேலிக்குப் பிரசார நிமித்தம் சென்றுவிட்டு, ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது அம்மையார் அன்புடன் வரவேற்று உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன். நாகம்மையாரும், இராமசாமியும் இறுதிவரையிலும் வாழ்ந்த வாழ்வு இன்பகரமானதாகும். அது எல்லோராலும் பாராட்டக்கூடியதாக இருந்தது. பெண்மக்களைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வருவது, மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் ஈ.வெ.ரா. அவர்களேயாவர். காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்னும் அவ்வையார் சொல்லுக்கு இவர்கள் வாழ்க்கையே எடுத்துக்காட்டாகும். துறவுக்கோலம் ஈ.வெ.ரா.வுக்குத் திருமணம் நிறைவேறி இரண்டாண்டுகள் ஆயின. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் வாழ்வு நீடிக்க வில்லை. 5 மாதங்கள்தான் வாழ்ந்தது. பிறகு குழந்தையே பிறக்க வில்லை. இக்காலத்தில் ஒரு துறவுத் திருவிளையாடல் நடத்தினார் ஈ.வெ.ரா. அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். நல்ல மேன்மையான வாழ்க்கை; பிரபலமான மைனர்; குடும்பத்துக்கு நல்ல வருவாய்; மிகுந்த செல்வாக்கு; காலிகள் கூட்டம் கைவசம். இந்த நிலையில் எப்படியோ வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிவிட்டது. துறவி ஆசை பிடித்துக் கொண்டது. அத் திருவிளையாடல் கேட்பதற்கு மிகவும் வேடிக்கையானது. சில இடங்களில் துக்க கரமாகவு மிருக்கும். இக்கதையை அவரே சொல்லக் கேட்டால் மிகவும் சுவையோடிருக்கும். ஈ.வெ.ரா.வுக்கு வீட்டில் தந்தையார் ஏதோ கண்டித்ததால் கோபம் ஏற்பட்டது. உடனே இல்லறத்தில் வெறுப்புற்றார். துறவியாகிக் காசிக்குச் சென்று விடுவதென்று தீர்மானித்தார். இன்னும் இரண்டு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்விருவருள் இவர் தங்கையின் கணவரும் ஒருவர். மூவருமாகச் சென்னை சென்றனர். அங்கு ஒரு உணவுச் சாலையில் தங்கினர். அப்பொழுது தெருவின் வழியே ஈரோட்டுக்காரர் யாரோ செல்வதைப் பார்த்தனர்; நெஞ்சந் திடுக்குற்றனர். தங்களைத் தான் தேடுகிறார்களென்று நினைத்து மறைந்து கொண்டனர். பிறகு உடன்வந்த கூட்டாளிகள் மனமாற்றமடைந்து ஊருக்குச் செல்ல நினைத்தனர். ஆனால், ஈ.வெ.ரா. இஷ்டப்படவில்லை. துறவியாகித் தான் தீர்வது என்ற உறுதியுடன் கூடவந்த இருவருக்கும் தெரியாமல் சிறிது பொருளுடன் சென்னையை விட்டுப் புறப்பட்டார். அவர் ஒரு உண்மையான சிங்கம்; சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் பயமென்பது இன்னதென்று அவருக்குத் தெரியாது ... ... அவசியம் நேர்ந்தால் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். என்று நமது மாகாணத்தின் ஆக்டிங் கவர்னராக இருந்த சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் 1928ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா.வைப் பற்றிக் கூறினார். இத்தன்மை அவரிடம் இளம் பருவத்திலேயே அமைந்து கிடந்தது. அஞ்சாநெஞ்சம் படைத்த இராமசாமி சென்னையை விட்டுப் பெஜவாடாவை அடைந்தார். கையில் தங்கக் காப்பு, கொலுசு, காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, விரல்களில் மோதிரங்கள், இடுப்பில் தங்க அரைஞாண். இவரைப்போலவே மன வெறுப்போடு வந்த இரண்டு தமிழ் அய்யர்கள் அங்குப் பெஜவாடா சத்திரத்தில் இவருக்கு நண்பர்களானார்கள். ஒருவர் தஞ்சாவூர்க்காரர்; மற்றவர் கோயம்புத்தூர்க்காரர். பிந்தியவர் கணபதி அய்யர், ஒரு கிராம முன்சீஃப்! முந்தியவர் வெங்கட் ரமணய்யர், ஒரு சமகிருத பண்டிதர்! மூவருமாகப் பெஜவாடாவை விட்டுப் புறப்பட்டு, அய்தராபாத்துக்குச் சென்றார்கள். அங்கு மூவருமாகப் பிச்சையெடுத்து, அதன் மூலம் கிடைக்கும் அரிசியைக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒழிந்த நேரத்தில் தெருப்பக்கங்களில் அரட்டையடித்துக் கொண்டிருப் பார்கள். அய்யர்கள் இருவரும் புராணத்திலுள்ள அதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். அவர்கள் சொல்லுவதை ஈ.வெ.ரா. தனது வழக்கமான பழக்கத்தைக் கொண்டு எதிர்ப்பார். புராணங் களிலுள்ள ஊழல்களைச் சொல்லிப் பரிகசிப்பார். தெருவில் போகிறவர்கள் இவர்களுடைய தர்க்கத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்! அது அவர்களுக்கு மிக அதிசயமாக இருக்கும். அய்தராபாத் சமதானத்தில் உத்தியோகத்திலிருந்த சில தமிழர்கள், வழியில் இவர்களைக் கவனித்தார்கள். அவர்களில் காஞ்சீபுரம் முருகேச முதலியார் என்று ஒருவர். அவர் சமதானத்து ரெஸிடன்ஸி ஆஃபீசில் தலைமை குமாதா. அவரும் அது சமயம் இந்த மூவர்களுடைய வாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஈ.வெ.ரா. பேசும் முறையும், விவாதிக்கும் வன்மையும் அவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதலியார் இவர்கள் மூவரையும் தன் வீட்டிற்கழைத்தார். அவருடைய வீட்டிலிருந்த பெண்கள் ஊருக்குச் சென்றிருந்தமையால், வீட்டிலேயே இருந்து சமைத்துத் தனக்கும் போட்டுவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கு மாறு சொல்லிவிட்டார். முதலியார் ஆஃபீசுக்குப் போகிற வரையில் இவர்களோடு அதுவும் முக்கியமாய் ஈ.வெ.ரா.வுடன் அளவாளாவிக் கொண்டிருப்பார். அவர் ஆஃபீசுக்குப் புறப்பட்டதும் இம் மூவரும் தங்கள் உத்யோகமாகிய ஊருக்குள் பிச்சைக்குப் போய்விடுவார்கள். வீட்டுக்கு வீடு அரிசியும், சில்லறைக்காசுகளும் கிடைக்கும். முதலியார் ஆஃபீசிலிருந்து வருவதற்குள் இவர்களும் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள். ஒருநாள் திடீரென்று முதலியார் இவர்களுடைய சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தார். ஒரு மூலையில் பலரகமான அரிசிகளும், அய்தராபாத் செப்புக் காசுகளும் கொட்டிக் கிடந்தன. இது என்ன? என்று ஈ.வெ.ரா.வைக் கேட்டார் முதலியார். தங்கள் உத்யோகத்தைப்பற்றிச் சொன்னார் ஈ.வெ.ரா. இனி இந்த வேலை வேண்டாம் என்று சொன்னார் முதலியார். தமிழர்களான உத்யோகதர்கள் ஆளுக்கு 2, 3 ரூபாய் வசூல் செய்து கொடுத்தார்கள். எஞ்சினீயர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார்கள். இதற்குள் இம் மூவருக்கும் கிராக்கி அதிகமாகிவிட்டது. ரங்கநாதம் நாயுடு என்பவர் வீட்டில் தினசரி காலட்சேபம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். சமகிருத பண்டிதர் வால்மீகி ராமாயணம், புராணக் கதை, சமகிருத லோகங்களைச் சொல்லி, தமிழில் வியாக்கியானஞ் செய்வார். அங்குத் தெலுங்கர் களே அதிகமாகையால், அந்தத் தமிழ் வியாக்கியானத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டிய வேலைதான் ஈ.வெ.ரா.வுக்கு. பெரிய உத்தியோகதர்களும், பலவிதமான பொதுமக்களும் கூடியிருப்பார்கள். அய்யர் சொல்லும் விஷயங் களில் அதிகமான கைச் சரக்கையும் சேர்த்து அள்ளிவீசுவார் ஈ.வெ.ரா. வேடிக்கை பேச்சுகள், அருமையான கிண்டல்கள், குட்டிக் கதைகள், உவமானங்கள் இவைகளைக் கலந்து சரமாரியாகப் பொழிவார். நகைச்சுவையோடு கேட்போர்களை அப்படியே குலுங்க வைத்துவிடும். மொழிபெயர்ப்பு என்ற பெயர்தானே ஒழிய, ஒரு தனிப் பிரசங்கம் என்றே சொல்லலாம். இவ்விதமாகக் காலட்சேபம் செய்துகொண்டு மூன்று துறவிகளும் சிறிதுகாலம் அங்கு வசித்தார்கள். பிறகு மூவரும் காசிக்குப் போகவேண்டு மென்று முடிவு செய்தனர். மூவரும் புறப்படப் போகும் செய்தியை அறிந்த நண்பர்கள் அவர்களைத் தடுத்தார்கள். முதலியார், ஈவெ.ரா.வைத் தனியே அழைத்து, அப் பிராமணர்கள் கூடப் போக வேண்டாமென்று சொன்னார். அவர் கேட்கவில்லை. ஈவெ.ரா. உயிருக்குமோசம் வந்துவிடுமோ எனப் பயந்து, நகைகளை மட்டுமாவது கழற்றித் தன்னிடம் கொடுத்துவிட்டுப் போகும் படியும், சலிப்புத் தோன்றும் போது அங்கேயே வரும்படியும் கூறினார். முதலில் ஈ.வெ.ரா. சந்தேகப்பட்டார். பிறகு ஒருவாறு துணிந்து நகைகளைக் கழற்றி, அட்டை சோப்புப் பெட்டியில் வைத்து, நகைகளின் விவரங்களடங்கிய துண்டுக் கடிதமும் அதில் வைத்தார்; ஒரே ஒரு ஒன்றரைப் பவுன் மோதிரத்தை மட்டும் இடுப்பில் நூல் அரைஞாண் கயிற்றில் கட்டிவைத்துக் கொண்டார். ஆனால், இதுவரையில் தான் யாரென்றோ, தன்னுடைய ஊரைப் பற்றியோ உண்மையை ஈ.வெ.ரா. எவரிடமும் சொல்லவே இல்லை. கேட்டவர்கட்குத் தான் ஒரு குமாதாவின் மகன் என்று சொல்லி வந்தார். மூவரும் புறப்பட்டார்கள். இவர்களது நண்பர்கள் ஆளுக்கொரு கம்பளி வாங்கிக் கொடுத்தார்கள். கல்கத்தாவுக்குப் போகவேண்டுமென்று சொன்னபடியால், அவ்வூருக்கு ஆளுக்கொரு டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்தார்கள். கையிலும் சுமார் 100 ரூபாய் வரையிலும் பணமிருந்தது. கல்கத்தாவில் 15 நாட்கள் தள்ளினார். கையிலிருந்த பணம் முழுவதும் தாராளமாய்ச் செலவழிந்தது. உடனே அதைவிட்டுக் காசிக்குப் புறப்பட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தனர். அங்கிருந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் கொடுத்த பணத்தின் உதவியால் கல்கத்தாவைவிட்டுக் காசியை அடைந்தனர். காசிக்குச் சென்ற அன்றே இவருடைய கூட்டாளிகளான இரு பார்ப்பனர்களும் இவரைவிட்டுப் பிரிந்துவிட்டனர். அங்கு அவர்களுக்கு எளிதில் சோறு கிடைத்தபடியால், இவரோடு சேர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாததே அதற்குக் காரணம். காசியில் அன்னசத்திரங்கள் ஏராளம்; போகின்றவர், வருகின்றவர் களுக்கெல்லாம் தாராளமாகச் சோறு; அங்கே சோற்றுப் பஞ்சமே இல்லை என்று ஈ.வெ.ரா. அதற்குமுன் காசியைப்பற்றிக் கேள்வியுற்றிருந்தார். காசியை அடைந்தபோது இவர் கையில் ஒரு நாட் செலவுக்குப் போதுமான பணந்தான் இருந்தது. அதுவும் முதல் நாளே செலவழிந்துவிட்டது. சத்திரங்கள் உள்ள இடங்களை எல்லாம் தேடிச்சென்றார். ஓரிடத்திலாவது சோறு கிடைக்கவில்லை. எங்கும் பார்ப்பனர்களுக்குத்தான் சோறு. இவரை யாரும் கவனிக்கவேயில்லை. அடுத்த நாள் முழுவதும் பட்டினி. இவர் கையிலோ காசும் இல்லை. பசியோ தாங்கமுடியவில்லை. இந்நிலையில் ஒரு சத்திரத்தின் வாயிலில் நுழைந்தார். இவர் பார்ப்பனர் அல்லர் என்று கண்டு வாயில் காப்போன் வெளியே தள்ளினான். இவருக்குக் கோபம் வந்துவிட்டது. அப்பொழுது உள்ளேயிருந்து எச்சில் இலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பார்த்தார் இராமசாமி. கோபம் ஒருபுறம்; பசிக்கொடுமை ஒருபுறம். இரண்டும் சேர்ந்து அவ் விலைகளிடம் பிடித்துத்தள்ளின. ஓடினார் கோபத்தோடு - இலைகளிடம்; உட்கார்ந்தார் சட்டமாக. கையைப் போட்டுச் சோற்றை வழித்தார். வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார்; இலையில் இருந்த பண்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன; அவர் பசிப்பிணியும் தணிந்தது. அந்தோ! செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப்பிணி அறியாமலிருந்த நமது இராமசாமியார் எச்சிலைக்கு ஏமாந்து நின்றதை நினைக்க இன்னும் நமது நெஞ்சம் கலங்குகின்றதன்றோ? ஒருபுறம் எவ்வளவு நெஞ்சத் துணிவிருந்தால், கையில் ஒன்றரைப் பவுன் மோதிரம் இருக்க, இச்செயலில் புகுந்திருக்க வேண்டும் என்ற வியப்பும் உண்டாகின்றது! சிரிப்பும் வருகிறது மற்றொரு புறம்! இதன்பின் ஏதாவது வேலைதேடிப் பிழைக்கலாம் என்று கருதிப் புறப்பட்டார். எங்கும் வேலை கிடைக்கவில்லை. முகத்தில் மீசையும் தலையில் மயிரும் இருப்பதால்தான் தன்னை யாரும் துறவியாகக் கருதவில்லையென்று நினைத்து உடனே மொட்டை யடித்துக் கொண்டார். மீசையையும் எடுத்துவிட்டார். கூடவந்த பார்ப்பனரைக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து வாங்கிய ஒரு செம்பை கம்பளியில் சுற்றி அக்குளில் வைத்துக் கொண்டார். செல்வப்பிள்ளை இராமசாமி துறவி ராமசாமியாகி விட்டார். ஒருநாள் ஒரு மடத்தண்டை வந்தார். அதில் சில சாமியார்கள் வசித்தனர். அது கங்கைக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. அவர்களிடம் சென்று, ஏதாவது வேலை கிடைக்குமா? என்று கேட்டார். அவர்கள், இப்பொழுது வேலையில்லை; பூஜைக்கு வில்வம் பறித்துக் கொடு; விளக்குப் போடு; தினம் ஒருவேளைச் சோறு போடுகிறோம் என்றனர். விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்; பல்விளக்கிக் குளித்தபின் திருநீறணிந்து வில்வம் பறிக்கவேண்டும்; மாலையில் குளிக்க வேண்டும்; விளக்கு துடைத்துப் போடவேண்டும்; இவை நிபந்தனை. ஈ.வெ.ரா.வுக்கோ குளிப்பது என்றால் பெரிய சங்கடம். வேர்க்கிறது, உடம்பு எரிகிறது என்று உணர்ந்தால்தான் குளிக்க நினைப்பார். மற்ற நாட்களில் நாகம்மையார்தான் அவரைத் துரத்திக் கொண்டு போய் குளிக்கும் அறையில் தள்ளவேண்டும்; குளிப்பாட்டி விடவேண்டும். இந்த நிலையில் உள்ளவர் குளிர்மிகுந்த காசியில் விடியற்காலத்திலும் கங்கையில் குளிக்கவேண்டுமென்றால், அவரால் முடியக்கூடிய செயலா? சாமியார் விழித்துக் கொள்வதற்குமுன் ஈ.வெ.ரா. எழுந்து விடுவார்; குளித்ததுபோல் பட்டைபட்டையாகத் திருநீறு பூசிக் கொள்வார். ஒற்றைத் துணியுடன் குளிரில் நடுநடுங்கிக் கொண்டு வில்வம் பறித்துக் கொடுப்பார். இவரைப் பார்க்கும் சாமியார்கள் குளித்திருப்பார் என்றே நினைத்துக் கொள்ளுவார்கள். ஆனால் இவர் பல்கூட விளக்கியிருக்கமாட்டார். இவர் குளிக்காமல், பல் விளக்காமல் வில்வம் பறிக்கும் செய்தி சாமியாருக்குத் தெரிந்து விட்டது. ஒருநாள் சாமியார் பார்த்துவிட்டார். அவர் ஏதோ கேட்க, இவர் ஏதோ சொல்ல, இருவருக்கும் வார்த்தை முற்றிச் சண்டையில் முடிந்தது. ஈ.வெ.ரா.வை மடத்தைவிட்டுப் போகும்படி சொல்லிவிட்டார்கள். வெளியே விரட்டப்பட்ட பின் ஈ.வெ.ரா. சும்மா இருக்க வில்லை. கங்கைக்கரையில் சிரார்த்தம் செய்பவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் இருப்பார்களல்லவா? அங்கும் பிண்டம் போடும் அரிசி, பழம் முதலியவைகள் விநியோகிக்கப்படுவதை வாங்கி உண்பதற்காகப் பல பிச்சைக்காரர்கள் நிற்பார்கள். அந்தக் கோஷ்டியில் ஈ.வெ.ரா.வும் சேர்ந்து விட்டார். இந்த முறையில் 30, 40 நாள் வரையில் காலங்கழித்தார். காசியில் வாழ்க்கை செம்மையாகவும், தூய்மையாகவும் இருக்குமென ஈ.வெ.ரா. நம்பியிருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக ஒழுக்க ஈனமும், விபசாரமும் மலிந்து கிடப்பதைக் கண்டார். தம்முடன் கூடப் பிச்சை எடுக்கும் ஆண், பெண் பிச்சைக்காரர்கள் பார்ப்பனப் பெண்கள் உள்பட மதுவருந்துவதும், மாமிசம் வாங்கிச் சுட்டுத் தின்பதும், வெளிப்படையாய் விபசாரஞ் செய்வதும் பார்க்க சகிக்காததாய் இருந்தது. அதனால் அவருக்கு அவ்வூரில் ஒருவித வெறுப்புத் தோன்றிவிட்டது. உடனே அதை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துவிட்டார். கையில் ஒரு செப்புக் காசேனும் இல்லை. இந்த மாதிரி அவசரத்திற்கு அதாவது ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜூக்கு வேண்டுமென்பதற் காகவே காஞ்சீபுரம் முதலியாரின் சொற்படி தான் மறைவாக வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க மோதிரத்தை 19 ரூபாய்க்கு விற்றார். காசியை விட்டுப் புறப்பட்டு அஸன்சூல், பூரி ஆகிய இரண்டு இடங்களிலும் சில நாட்கள் தங்கிவிட்டு எல்லூருக்குச் சென்றார். எல்லூரில் தமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியும். அவர் பெயர் டி.என்.சுப்பிரமணிய பிள்ளை. மராமத்து இலாகாவில் சூபர்வைசர் வேலையிலிருந்தார். ஏற்கனவே ஈரோட்டில் வேலை பார்த்தவர். ஈ.வெ.ரா. டேஷனி லிருந்து இறங்கியதும் அவருடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து நேரே அங்குச் சென்றார். அப்போது நள்ளிரவு. கதவைத் தட்டினார். பிள்ளைக்கு ஈ.வெ.ரா.வை அடையாளம் தெரிய வில்லை. பிறகு வெளிச்சத்தில் பார்த்தும் குரலைக் கொண்டும் கண்டுபிடித்தார். உள்ளே அழைத்துச் சென்று, சாமியாரைத் தம் மனைவிக்குக் காட்டி, இருவரும், ஈ.வெ.ரா.வின் வேடத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். மறுநாள் பிள்ளை ஒரு ஷர்ட்டும், துண்டும் கொடுத்து உடுத்தச் செய்தார். ஈ.வெ.ரா. ஒருமாத காலம் அங்கேயே தங்கியிருந்தார். இதற்குள் ஈரோட்டில் என்ன நடந்தது? வெங்கட்ட நாயக்கத் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வெ.கிருஷ்ணசாமியும், ஈ.வெ.ரா.வின் நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமாக் கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப் பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்; தந்திகள் கொடுத்தனர். எதுவும் பயனில்லாது போயிற்று. சுமார் 2,000 ரூபாய் வரையில் செலவழிந்தது. பெற்றோரும் அலுத்துப்போய் விட்டனர். ஒரு பிள்ளையை இழந்தோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எல்லூரில் இருந்த ராமசாமியோ சூபர்வைஸரிடம் மட்டும் தம் கதைகளைக் கூறி, எவருக்கும் தெரிவிக்காமலிருக்கும்படி கேட்டுக் கொண்டு, அதன்படியே அங்கு வேடிக்கை சிநேகிதராக வசித்து வந்தார். ஒருநாள் அவரும், சூபர்வைஸருமாகக் கடைவீதிப் பக்கம் சென்றபோது, அங்கு ஒரு கடையின் முன் பக்கத்தில் கடைக்காரர் எள் அளந்து கொண்டிருந்தார். அந்தக்கடை மோதே வெங்கன்னா கனிகர ஸ்ரீராமுலு என்பவருடையது; ஈ.வெ.ரா.வின் வியாபார உணர்ச்சி அவரை அந்தப் பக்கம் திருப்பியது. கையில் கொஞ்சம் எள்ளை அள்ளிப் பார்த்தார்; என்ன விலை என்று கடைக் காரரைப் பார்த்துக் கேட்டார். பிறகு எள்ளைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். கடைக்காரர் இவரை யாரென்று பின்னால் வந்த சேவகனை விசாரித்தார். அன்றைய தினமே கடைக்காரர் வெங்கட்ட நாயக்கருக்கு கீழ்வருமாறு கடிதம் எழுதிவிட்டார். தங்கள் மகன் என் கடைக்கு வந்தார்; சரக்கைப் பார்த்தார்; என் கடையில் கொள்முதல் செய்யாமல் வேறு கடையில் செய்திருப்பதாகத் தெரிகிறது. நான் தங்களுக்கு என்ன குற்றஞ் செய்தேன்? இது வரையிலும் எப்போதாவது நாணயக்குறைவாய் நடந்திருக்கிறேனா? தயவுசெய்து தங்கள் மகனுக்கு எழுதுங்கள். இக்கடிதத்தைப் பார்த்தார் வெங்கட்ட நாயக்கர். வியப் புற்றார். அளவுகடந்த மகிழ்ச்சி யடைந்தார். இழந்த கண்ணைத் திரும்பப் பெற்றவரானார். வீட்டிலுள்ள மற்றவர்களும் இச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர். அந்த வினாடியே வெங்கட்ட நாயக்கர் மற்றொரு நண்பரையும் ஒரு ஆளையும் உடனழைத்துக் கொண்டு எல்லூருக்குப் புறப்பட்டார். கடிதம் எழுதிய வணிகரின் கடைக்கு நேரே வந்தார். சூபர்வைஸரின் உறைவிடத்தை தெரிந்து கொண்டார். ஒரு வண்டியிலேறிக் கொண்டு பிள்ளையின் வீட்டெதிரில் வந்திறங்கினார். இரவு நேரம். வீட்டுக்குள் பிள்ளை ஏதோ வேலையாயிருந்தார். ஈ.வெ.ரா.முன் அறையில் படுத்திருந்தார். நாயக்கர் கதவைத் தட்டினார். பிள்ளை கதவைத் திறந்தார். நாயக்கரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். உள்ளே அழைத்துச் சென்று ஒரு அறையில் உட்கார வைத்தார். பக்கத்தில் ஈ.வெ.ரா. நின்றார். அவரைப் பார்த்து, முதலில் பையன் எங்கேயிருக்கிறான், சொல்லுங்கள். மற்ற செய்திகளைப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றார். ராமசாமி திருதிருவென விழித்துக் கொண்டு, நான்தான் என்றார். அதன்பிறகுதான் ஒருவாறு உருத்தெரிந்து கொண்டார். அப்பா! உன்னைப் பெற்றதால் பார்க்காத ஊரெல்லாம் பார்த்துவிட்டேன் என்று சொல்லிச் சிறிது கண்கலங்கினார். இரண்டு நாட்கள் அங்குத் தங்கியபிறகு, ஊருக்குப் புறப்படலாமா? என்று நாயக்கர் கேட்டார். புறப்படலாம் என்றார் ஈ.வெ.ரா. இதற்குள் ஹைதராபாத்துக்குத் தந்தி கொடுத்தார். சோப்புப் பெட்டியும் வந்து சேர்ந்தது. அதைத் தம் தந்தையிடம் கொடுத்தார் ராமசாமி. பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒன்றரைப் பவுன் மோதிரம் தவிர, பாக்கி நகைகள் அப்படியே இருந்தன. நாயக்கர் அதிசயத்தில் திகைத்தார். பிள்ளையாண்டான் நகைகளை விற்றுத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பானென்று நினைத்தார். அடே ராமசாமி! இவ்வளவு நாளாய் எப்படியடா சாப்பிட்டாய்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார். நாம் ஈரோட்டில் கொடுக்கும் சதா விருத்தியை (பிச்சை)யெல்லாம் வசூல் பண்ணிவிட்டேன் என்றார் ஈ.வெ.ரா. ஒரு பக்கம் நாயக்கருக்குத் துக்கம்; ஒரு பக்கம் சிரிப்பு. சரி நகைகளைப் போட்டுக் கொள் என்றார் நாயக்கர். ஈ.வெ.ரா. மறுத்தார். நகைகளை விற்றுச் சாப்பிட்டிருப்பான் என்று ஊரிலுள்ளவர்கள் கருதாமலிப்பதற்காக நகைகளை அணிந்துகொள்ள வேண்டு மென்றும், பிறகு வேண்டுமானால் கழற்றிவிடலாமென்றும் நாயக்கர் சொல்ல, ஈ.வெ.ரா. அதை ஏற்றுக்கொண்டு எல்லா நகைகளையும் அணிந்து கொண்டார். எல்லோரும் எல்லூரைவிட்டுப் புறப்பட்டு சென்னை வழியாக ஈரோட்டை அடைந்தார்கள். சேர்ந்த சில நாட்கள் கழித்ததுமே ஈ.வெ.ரா.வுக்குக் குடும்பத்தில் அதிகப் பொறுப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக மண்டிக்குத் தம் பெயர் இருந்ததை மாற்றி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி என்று பெயரிட்டார். இவருடைய துறவிக்கோலப் படம் இன்றும் உள்ளது. இப் படம் காலஞ்சென்ற பா.வெ.மாணிக்க நாயக்கர் அவர்களால் பெரிதாக்கப்பட்டு ஆயில் பெயிண்ட் செய்யப்பட்டதாகும். பொது வாழ்வு ஈ.வெ.ரா. வின் பொது வாழ்வு மிகுந்த சிறப்புடையது; தன்னலமற்றது; நேர்மையுடையது. இளமைப் பருவ முதல் இப்படித்தான். இளமைப் பருவத்திலேயே சாதி பேதம் அறியாதவர்; மத வேறுபாடு உணராதவர்; கிருதவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், முலீம்கள் முதலிய எல்லா வகுப்புப் பிள்ளைகளுடனும் நன்றாகப் பழகியவர். எப்பொழுதும் 10 பேர்கள் கூடவே இருப்பார்கள். வயதேறியபின்னும் பல வகுப்பினரையும் தோழராகக் கொண்டிருந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டில் எந்த நன்மை, தீமைகள் நடைபெற்றாலும், முதலில் அங்கு அவரைக் காணலாம். யாரும் இவரை அழைப்பார்கள். சில சமயங்களில் அழைப்பில்லாமலே சென்று விடுவார். தோழர்களும் உடன் செல்வார்கள். அவ்வீட்டுக் காரியங்களைத் தாமே முன்னின்று நடத்துவார். காரியங்கள் முற்றும் நிறைவேறிய பின்புதான் வீடு திரும்புவார். இவருடைய இவ் வியற்கைக் குணத்தினால் ஊரார் முழுவதும் இவரை உள்ள தோழராகக் கருதினர். குடும்ப விவகாரங்கள், வியாபாரத் தகராறுகள், சண்டை-சச்சரவுகள் தீர்த்தவண்ணமே இருப்பார். கோர்ட் களிலுருந்தும் விவகாரங்கள் இவரது தீர்ப்புக்கு வரும். எப்படிப் பட்ட விவகாரத்தையும் பைசல் செய்துவிடுவார். ஒரு சமயம் ஈரோட்டில் பிளேக் நோய் வந்துவிட்டது. அதனால் மக்கள் பலர் மடிந்தனர். மற்றவர்கள் அஞ்சி ஊரைவிட்டு ஓடிவிட்டனர். செல்வர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எல்லோருக்கும் முந்தி ஓடிவிட்டனர். போக்கிடமில்லாத ஏழை மக்களே ஊரில் தங்கி உள்ளம் நடுங்கியிருந்தனர். அச்சமயம் ஈ.வெ.ரா. வெளியே போகாமல் தமது தோழர்களுடன் சிறிதும் அஞ்சாமல் ஊரிலிருந்து அவ்வேழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். இச்சமயத்தில் அவர் நடந்து கொண்ட தைரியத்தை இன்றும் பலர் புகழ்வர். அனேக பிணங்களைத் தாமே தூக்கிக்கொண்டு போவார். இந்நிகழ்ச்சியால் அவர் பலராலும் போற்றப்பட்டார். கடைத்தெருவிலும் இவருக்குச் செல்வாக்கு மிகுதி. கடை கணக்குகளில் ஒருவருக்கொருவர் தகராறு வந்ததால் இவர்தாம் தீர்த்து வைப்பார். கணக்கில் நிபுணர். புள்ளிவிவரங்களில் தேர்ந்தவர். எண்சுவடி தலைகீழ்ப் பாடம், இத்துடன் நல்ல நினைப்பு வன்மை! பெரும் புள்ளிகளையும் சிறிது நேரத்தில் வாய்க்கணக்காகவே முடிவு கட்டிவிடுவார். கடை சம்பந்தமான பேரேடு, குறிப்பு முதலியவைகளை ஒருமுறை பார்த்தால் போதும். அப்படியே மனதில் படம் பிடித்துக் கொள்வார். இதனால் எந்தவிதமான கணக்குத் தகராறுகளையும் தீர்க்கும் திறமை பெற்றிருந்தார். நடுநிலைமையில் எவ்விதச் சிக்கல்களையும் முடிவு செய்யுங்குணம் பெற்றிருந்தார். இதனால் கடைக்காரர்களின் பெருமதிப்புக்கும் உரியவ ரானார். இப்பொழுதும் பொது மேடைகளில் பேசும் போது அரசாங்க வரவு - செலவு கணக்கைப் புள்ளிவிவரங் களுடன் வெளியிடுவார். இக் கணக்கின் மூலம் விளங்கும் குற்றங்குறைகளை விளக்கமாக எடுத்துக் காட்டுவார். இவர் பொது வாழ்வில் தலையிட்டபின் விளையாட்டுகள் சிறிது சிறிதாக விலகிவிட்டன. அதிகாரிகளின் நட்பு புகுந்தது; அறிவாளிகளின் கூட்டுறவு வளர்ந்தது. செல்வர்களின் சேர்க்கை பெருகிற்று. காலஞ்சென்ற பா.வெ.மாணிக்க நாயக்கர் போன்ற பெருந்தமிழறிஞர்கள் இவருடைய யுக்தியான வேடிக்கைப் பேச்சுகளுக்காகவே இவரது கூட்டாளிகளாயினர். அக் காலத்தில் கருவூரில் மருதையா பிள்ளையென்னும் பெரும் புலவர் ஒருவரிருந்தார். அக்காலத்துப் புலவர்கள் மருதையா பிள்ளையைக் கண்டால் நடுநடுங்குவார்கள். இவர் யாருக்கும் அஞ்சாதவர். எங்குஞ் செல்வாக்குள்ளவர். இப்பொழுதும் ஈரோட்டுப் பகுதியிலுள்ளவர்கள் இவரைப்பற்றி பல வேடிக்கைக் கதைகள் கூறுவார்கள். இவருக்கு விதண்டாவாதி என்று பெயர். சாதி, சமயம், சாத்திரம் முதலியவைகளிலுள்ள புரட்டுகளைக் கண்டிப்பார். இவருக்கும் ஈ.வெ.ரா.வுக்கும் நெருங்கிய தொர்புண்டு. இவருடைய நட்பு ஈ.வெ.ரா.வின் சீர்திருத்தக் கொள்கைகளுக்குப் பெரிதும் உறுதியளித்து வந்தது. இக் காலத்தில் கைவல்ய சாமியாரின் நட்பும் ஏற்பட்டது. இவர் கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றவர். ஆதலின் கைவல்ய சாமியார் எனப் பெயர் பெற்றார். பார்ப்பனீயத்திற்குப் பரம விரோதி. பகுத்தறிவாளர் ஈ.வெ.ரா. காங்கிரகாரராய் இருக்குங்காலத்தில் ஈ.வெ.ரா.வின் போக்கைக் கண்டிப்பார். பார்ப்னரல்லாதார் இயக்கத்தையே ஆதரிப்பார். இவருடைய நட்பும் அக்காலத்தில் ஈ.வெ.ரா.வின் கொள்கைக்குப் பேராதரவு அளித்து வந்தது. குடி அரசு ஆரம்பித்த காலமுதல் இவர் ஒவ்வொரு வாரமும் அதில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை உண்டாக்கின. அக்கட்டுரை களிலுள்ள விவாதங்களுக்கு அன்றுமுதல் இன்றுவரை எந்தப் படிப்பாளியோ, புலவரோ பதில்கூற முயன்றதுகூட இல்லை. இச் செய்தி அக் காலக் குடி அரசு வாகசர்களுக்கு நன்கு தெரியும். ஈ.வெ.ரா. பல பொதுக்காரியங்களையும் மேற்கொண்டு நடத்தியிருக்கின்றார். தமது கொள்கைக்கு முரண்பாடான காரியங்களிலுங்கூட பொறுப்பெடுத்துக் கொண்டால் அவைகளை நேர்மையாக நடத்தி வைக்கும் குணம் இவரிடமுண்டு. எனது வர்த்தகத் தொழிலில் நான் ஒரு அளவுக்கு வெற்றி பெற்றேன். எனது தகப்பனாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். என் தகப்பனார் இருக்கும்போதே எங்கள் வியாபாரத்திற்கு அவர் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கொடுக்கப்பட்டு விட்டது. ஊர்ப்பெருமை விஷயங்களிலும் என் தகப்பனார் ஒவ்வொன்றிலு மிருந்து விலகிக் கொண்டு என்னையே தள்ளி விட்டார். எங்கள் ஊர் பொதுக்கோவில்கள், சர்க்கார் தேவதான சம்பந்தமான காரியங்கள், உற்சவங்கள் முதலியவை பெரிதும் எங்கள் வீட்டுச் சொந்த காரியம் போலவே நடைபெறும். ஆதலால், அவற்றிற்கு என் தகப்பனார் இருக்கும்போதே என்னையே முதன்மையாக்கி விட்டார்கள். ஒரு சமயம் இதனால் எனக்குக் கடவுள் பக்தி ஏற்படலாம் என்கிற எண்ணமோ, என்னவோ தேவதான கமிட்டிக் காரியதரிசியாகவும் தலைவனாகவும் ஆக்கப்பட்டு விட்டேன். இப்படியெல்லாமிருந்தும் ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியாய், உண்மையாய் செய்வதென்பதல்லாமல் நான் செய்யும் அனேக காரியங்களில் எனக்கு பிடிவாதமான நம்பிக்கையென்பது ஏற்பட்டதே கிடையாது. எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக் கொண்டாலும், நாணயமாகவும், அதிகக் கவலையாகவுமே செய்துவருவேன். என்று அவரே ஒரு சமயத்தில் எழுதியுள்ளார். இவர் ஈரோடு வட்டம் தேவதானக் கமிட்டியின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். அக்காலத்திலேயே உருவ வணக்கத்தை வெறுப்பவர். கோவில்களில் நம்பிக்கையில்லாதவர். திருவிழாக்கள் வீண் செலவுக்குக் காரணமானவை என்பவர். இவைகள் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கின்றன என்னும் உறுதியான கொள்கையையுடையவர். ஆயினும் தம் தலைமைப் பதவியின் பொறுப்புணர்ந்து கோவிலில் நடைபெற வேண்டிய செய்கைகளைத் தவறாமல் நடத்தி வந்தார். தமது கமிட்டிக்குக் கட்டுப்பட்ட பல கோவில்களைப் புதுப்பித்தார். கோவிலின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில்களுக்குப் பழுதுவராமல் திருப்பணிகள் செய்யப் பட்டன. இவர் தேவதானக் கமிட்டிக்குத் தலைவராகுமுன் கமிட்டியில் பணமில்லை. கடன்தானிருந்தது. பல ஆண்டுகள் தலைவராயிருந்து விட்டு அப்பதவியிலிருந்து நீங்குமுன் எல்லாச் செலவுகளும் செய்த பிறகும் சுமார் 45,000 ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இக்காலத்தில் ஈரோடு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் (Chairman) ஆனார். 1919 வரையிலும், அதாவது ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் இவர் அப்பதவியிலிருந்தார். இதற்கு முன் ஆனரரி மாஜிட் ரேட்டாக சுமார் 12 ஆண்டுகள் இருந்தார். தாலுக்கா போர்டு உபதலைவராக இருந்தார். இவர் நகரசபைத் தலைவராக இருந்த காலத்தில் நகருக்குச் செய்த நன்மைகள் பல. இன்றும் அவைகள் அழியாமல் விளங்குகின்றன. இவர் காலத்தில்தான் அந் நகருக்குக் குடிதண்ணீர் வசதி செய்யப் பட்டது. காவிரியிலிருந்து நல்ல தண்ணீர் கிடைக்கும்படி குழாய் போடப்பட்டது. இப்பொழுது ஈரோட்டுச் சிங்காரவனத்தில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர்ப் பெருந்தொட்டியில் இவர் பெயர் கல்லில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவர் தம் அதிகாரத்தைக் கொண்டு செய்த மற்றொரு செயல் இன்னும் ஈரோட்டு மக்களால் போற்றப்படுகிறது. இவர் தலைவராவதற்கு முன், ஈரோட்டுக் கடைத்தெரு மிகவும் நெருக்கமுள்ளதாக இருந்தது. இதனால் மக்கள் போக்குவரவுக்குப் பெரும் இடையூறு நேர்ந்து கொண்டிருந்தது. வண்டிகள் போகும் போது பல ஆபத்துகள் விளைந்தன. இந்தத் தொல்லைகளை நீக்கவேண்டுமானால் கடைத்தெருவை விரிவு படுத்தியாக வேண்டும். விரிவுபடுத்த வேண்டுமானால் இருபுறங்களிலும் உள்ள கடைகளை இடித்துத் தள்ளியாக வேண்டும். கடைகளுக்குச் சொந்தக்காரர்களோ பணம் படைத்த பெருங்குடி மக்கள். மேலும் ஈ.வெ.ரா.வுக்கு நெருங்கிய நண்பர்கள், கட்டடங்கள் அதிக விலையுள்ளவை. கடைகளை இடிக்கத் தொடங்கினால் அவர்களுடைய பகை வந்து சேரும். இவைகள் ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாதவை அல்ல. ஆயினும், யார் பகை நேர்ந்தாலும், எதிர்ப்பு வந்தாலும் பொது மக்களுக்கு நன்மை தரும் செயலைக் கைவிடுதல் கூடாது; உறுதியாக நின்று செய்து முடிக்க வேண்டும் என்னும் பிடிவாதம் எப்பொழுதும் அவருக்கு உண்டு. ஆதலால், யாருக்கும் அஞ்சவில்லை. எத்தகைய எதிர்ப்பையும் பொருட் படுத்தவில்லை. நினைத்த காரியத்தைச் செய்யத் தொடங்கி விட்டார். நில ஆக்கிரமிப்பு என்னும் பெயரால் பெரிய பெரிய விலையுயர்ந்த மாடிக்கடைகள் எல்லாம் முன்புறம் இடித்துத் தகர்க்கப்பட்டன. இதனால் வணிகர்களின் எதிர்ப்பு, கடை உரிமையாளர்களின் எதிர்ப்பு, செல்வர்களின் வெறுப்பு உண்டாயின. ஆனால், பொதுமக்கள் ஈ.வெ.ரா.வின் அஞ்சாமையைப் போற்றினர். இன்னும் அதன் நன்மையை அநுபவிக்கின்றனர். இவர் நகர மன்றத் தலைவராயிருந்தபோது இதுபோல இன்னும் பல சிறந்த காரியங்களைச் செய்துள்ளார். இவர், தாம் பிடித்த காரியத்தைச் சாதிக்கும் குணமுடையவர். இவரைப் பிறர் எளிதில் தம் கொள்கைக்குத் திருப்பிவிட முடியாது. சகவாசமும், சுற்றுச்சார்பும் ஒரு மனிதனுடைய குணங்களுக்குக் காரணம் என்பது இவரிடம் செல்வதில்லை. இவர் பெரிய மைனராகத் திரிந்துங்கூட இவரிடத்தில் ஒரு கெட்ட பழக்கம் மட்டிலும் இன்றுவரையிலும் உண்டாகவே இல்லை. சுற்றுச்சார்புதான் (Association and Surroundings) ஒரு மனிதன் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்கு காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மை என்னைச் சுற்றியிருந்த சுற்றுச்சார்பு, சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன். உதாரணமாக, எனது நல்ல வாலிப பருவத்தில், 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள், ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மது அருந்துபவர்கள் ஆவார்கள். அதுமாத்திரமா? என்னிடத்தில் அதிகக் காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள், ஜமீன்தார்கள், மிராசுதார்கள் ஆகியவர்களும் மது அருந்து பவர்கள். மேற்கண்ட வயதில் அனேகமாக இரவெல்லாம் இந்தக் கூட்டத்தாருடனே கோலாகலமாய் இருந்து, காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து, கொத்துச் சாவியை எடுத்துக்கொண்டு கடை திறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டில், 5 பாட்டில் (பிராந்தி) உடைபடும். எனக்கு மாதத்தில் இந்தச் செலவு சுமார் 40, 50 ரூபாய் ஆகும். என் வீட்டில் சதா 4, 2 பாட்டில்கள் இருக்கும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றிச் சோடா கலந்து கொடுப்பேன். சிலர் அதிகம் குடித்துவிட்டுப் போதையில் என்மீது துப்புவார்கள். ஒரு காலத்தில் ஒரு டிப்டி கலெக்டரும், ஒரு சால்ட் அஸிடெண்ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டுவிட்டு, என்னைப் பிடித்துக் கீழே தள்ளி, என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படி எல்லாம் இருந்தும் என்னை அந்தச் சகவாசமும், சுற்றுச் சார்பும் அது (மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்று யோசிக்கக் கூடத் தூண்டவில்லை. என் மனைவியாருக்கு என்மீது அடிக்கடி சந்தேகம் தோன்றும்; என் வாயை ஊதிக்காட்டச் சொல்லுவார்கள். நான் கிராக்கி செய்வேன். பலாத்காரத்தால் என் வாயை முகர்ந்து பார்த்துத் திருப்தி அடைவார்கள். இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், சுற்றுச்சார்பு எதுவும் என்னை வசப்படுத்திக் கொள்ளவில்லை யென்பதற்காகவே யாகும். இனியும் அம்மாதிரியான சம்பவங்களே அதிகப்படியாகக் காணப்படுகின்றன. இத்தகைய பிடிவாதத் தன்மையுடைவராக இருந்த தனாலேயே இவரால் எதுவும் சாதிக்க முடிந்தது. இவர், தாம் பிடித்ததைச் சாதித்தே தீருவார் என்பதற்கு மற்றொரு வேடிக்கையான உதாரணம். ஒருமுறை இவருக்கு வேண்டிய ஒரு மாது மைசூருக்கு மகாராஜா திருமணத்துக்கு நாட்டியக் கச்சேரிக்காகச் சென்றார். இவரும் கூடச் சென்றார். அரசவையில் கச்சேரிசபைக்குச் செல்ல வேண்டுமானால், முன் அனுமதி பெற்ற பெரிய மனிதர்கள் தான் செல்ல முடியும். மற்றவர்கள் உள்ளே போகமுடியாது. இவரோ முன் அனுமதி பெறவில்லை. அனுமதிச் சீட்டின்றி வாயிலோன் உள்ளே நுழையவிட மாட்டான். எப்படியோ உள்ளே போய் தீரவேண்டும். இதற்கொரு தந்திரம் செய்தார். தன் கையில் ஒரு ஜோடி தாளத்தை வாங்கிக் கொண்டார். நாட்டியக் குழுவில் தாமும் ஒருவர்போல் நடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். இறுதிவரையிலும் இருந்து நாட்டியம் பார்த்துவிட்டு, அந்தம்மாளுடன் திரும்பினார். இதைப்போலவே பல சந்தர்ப்பங்களில் தம் காரியத்தைச் சாதிப்பதற்காகத் தம் அந்ததையோ, கவுரவத்தையோ கவனிக்காமல் எதையும் செய்திருக்கிறார். இப்போதும் அப்படியே. இதற்கிடையில் 1911 ஆம் ஆண்டில் வெங்கட்ட நாயக்கர் காலஞ் சென்றார். இறப்பதற்கு முந்தியே அவருக்கு சமாதி கட்டவேண்டுமென்று கருதி, அவருடைய உடலைக் கொளுத்து வதா, புதைப்பதா என்ற பிரச்சினையை ஈ.வெ.ரா. கிளப்பினார். ஈ.வெ.ரா.வுக்குச் சமாதியில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவர்களுக்குச் சொந்தமான நிலம் ரயில்வேக்காரருக்குத் தேவை இருந்ததால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று தோன்றிற்று. அதில் சமாதி வைத்து விட்டால் எடுக்கமாட்டார்கள் என்று கருதி, தந்திரத்துக்கு ஆக சமாதி வைக்கப் பிடிவாதம் செய்தார். வைணவர்கள், அதுவும் சந்நியாசம் பெறாதவர்கள் புதைக்கப் படக்கூடாது என்றார் ஈ.வெ.கிருஷ்ணசாமி. வைணவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஈ.வெ.ரா. வாதாடினார். இருவருக்கும் வாதம் வலுத்து சாதிரம் பார்த்தார்கள். ஈ.வெ.ரா. தம் தந்தையைக் காயலா படுக்கையில் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்படி செய்தார். ஊருக்குள் புதைப்பதற்காக நகரசபையின் உத்தரவு கேட்டார். உத்தரவு மறுக்கப்பட்டது. கவர்ன்மெண்டுக்கு எழுதி, கலெக்டர் மூலம் உத்தரவு பெற்றார். தந்தையார் உயிருடனிருக்கும்போதே, அவர் முன்னிலையில், அவர் உடலை என்ன செய்வது என்று குமாரர்கள் வாதாடுவதென்றால், விந்தையாயிருக்கிறதல்லவா? தகப்பனார் இருவருக்கும் சமாதானம் சொன்னார். வெங்கட்ட நாயக்கர் இறந்தவுடன் ஈ.வெ.ரா. இஷ்டப்படியே அவருடலைப் புதைத்து ஒரு சமாதி கட்டப்பட்டது. நாயக்கர் இறப்பதற்கு முந்தியே அவரது சொத்தை தர்மத்திற்கு விட்டு ஒரு டிரட் (Trust Deed) எழுதி வைக்கச் செய்துவிட வேண்டுமென ஈ.வெ.ரா. தீர்மானித்து விட்டார். மூத்தபிள்ளை இதை எதிர்த்தார். முடிவில் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இன்றும் அப் பத்திரத்தில் சாட்சி போட்டிருப்பவர்களில் ஈ.வெ.ரா. மட்டும் கையெழுத்திட் டிருப்பதைப் பார்க்கலாம். குடும்பச் செலவுக்கு இரண்டு பிள்ளைகளுக்கும் தாராளமாய்ப் போதுமான சொத்தை மட்டும் விலக்கி, எஞ்சியுள்ள சொத்து முழுதும் தர்மத்திற்கே எழுதி வைக்கப்பட்டது. அப்போதே முழுச் சொத்தும் ஆண்டொன்றுக்குச் சுமார் 20,000 ரூயாய் வருமான முடைய தென்றால், எவ்வளவு மிகுதியான பொருளைச் சேமித்து வைத்திருந்தார் வெங்கட்ட நாயக்கர் என்பது விளங்கும். ஈரோட்டில் 1920ஆம் ஆண்டு வரையிலும் ஈ.வெ.ரா.வின் தொடர்பில்லாத பொது நிலையங்களேயில்லை. பொதுக் காரியங் களும் இருந்ததில்லை. இவரை நகரத் தலைவராக ஜனங்கள் தேர்ந்தெடுத்தபோது இவர் அப்பதவிக்கு லாயக்கில்லை யென்றும், இஷ்டம்போல் பொறுப்பில்லாமல் திரிகிறவர் என்றும் அங்குள்ள பார்ப்பனர்களுடைய தூண்டுதலால் கலெக்டருக்குச் சிலர் ஆட்சேபனை மனு போட்டார்கள். அங்குள்ள கிறிதவப் பாதிரி மார்கள் முயற்சிக்கு இவர் விரோதமாக இருந்து வந்ததால், அவர்கள் பள்ளிக்கூடங்களை நடக்கவிடாமல் செய்ததால் இரண்டொரு பாதிரிமார்களும் இதற்கு உடந்தையா யிருந்தார்கள். எனவே, கலெக்டர் அவ்விதமே இவர் தகுதியில்லை என்று எழுதி விட்டார். அச்சமயம் ஸர்.பி.ராஜகோபாலாச்சாரியார் தல தாபன மெம்பராக இருந்தார். அவர் ஈரோட்டில் சப்-கலெக்டராக இருந்தவர். ஈவெ.ரா.- தம் மேலுள்ள பொறாமையால் சிலர் இவ்விதம் பொய்யாக மனு கொடுத்துள்ளார்களென்றும், அச்சமயம் தாம் 29 பொது நிலையங்களில் அங்கத்தினராயும், நிர்வாகதராயும், தலைவராயும் இருப்பதாகவும் ஒரு மனு கொடுத்தார். அவைகளுள் ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, தேவதானம், போர் நிதி, அர்பன் பாங்க், ஆனரரி மாஜிட்ரேட் வணிகர் சங்கம், சங்கீதசபை, விவசாயிகள் சங்கம், நாயுடு சங்கம், வாசகசாலை, மகாஜன ஹைகூல், சமரசக்கமிட்டி, சண்டைக்கு ஆள் சேர்க்கும் கமிட்டி முதலியவைகள் மிக முக்கியமானவைகளாகும். இதையறிந்த ஸர். பி. ராஜகோபாலாச்சாரியார்-ஈ.வெ.ரா.வை முன்னமே தெரிந்த வரானதால் முதலில் கொடுக்கப் பட்ட ஆட்சேபனை மனுவைப் பொய்யென்று தள்ளி ஈ.வெ.ரா.வைச் சேர்மெனாக நியமித்தார். 1919 ஆம் ஆண்டில் ஈரோட்டில் இராமசாமியார் சேர்மென், சேலத்தில் திருவாளர் சி.ராஜகோபாலாச்சாரியார் சேர்மென், இவர் அடிக்கடி ஈரோட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு நகரசபை நிர்வாகத்தைக் கண்டு மிகவும் புகழ்ந்து பேசுவார். ஒரு சமயம் ஈ.வெ.ரா.வைப் பார்த்து, உங்களுடைய சானிடரி இன்பெக்டரை எங்கள் நகரசபைக்குக் கொடுங்கள் என்று திரு.ராஜகோபாலாச் சாரியார் கேட்டார் என்றால், ஈரோட்டின் நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்? அச்சமயம் மதுரை மில் தொழிலாளர்கள் சம்பந்தமாய் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்களின் வழக்கு மதுரையில் நடந்து கொண்டிருந்தது. அதற்கு திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்களே வக்கீல். ஆகையால், திரு.வரதராஜலு நாயுடுவும், திரு.ராஜகோபாலாச்சாரியாரும் அடிக்கடி ஈ.வெ.ரா.வின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அதன் பயனாகவும், பொது நிலையங்கள் பலவற்றில் ஏற்கனவே தொடர்பு வைத்துக்கொண்டு ஊக்கமாய் வேலை செய்துவந்த பழக்கத்தாலும் அவ்விருவரும் ஈ.வெ.ரா.வைக் காங்கிரசிற்கு இழுத்தார்கள். சி.ராஜகோபாலாச் சாரியாரும், ஈ.வெ.ரா.வும் சேர்ந்தாற்போல் சேர்மென் பதவிகளை நாஜிநாமா செய்தார்கள். அச்சமயம் பஞ்சாப் படுகொலைக்காக பலர் ராஜிநாமா செய்த சமயமாதலால், சர்.பி.ராஜகோபாலாச் சாரியார் ஈரோட்டுக்கு வந்து ஈ.வெ.ரா.வுக்கு ராவ் பகதூர் பட்டம் சிபார்சு செய்திருப்பதாகவும், ராஜிநாமாவை வாப வாங்கும் படியும் கேட்டுக் கொண்டார்; ஈவெ.ரா. இணங்கவில்லை. திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரும் அப்போது காங்கிரசிலிருந்தார். 1920-ல் காந்தியாரின் திட்டப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. தீண்டாமை விலக்கு, மது விலக்கு, கோர்ட்டு விலக்கு, பள்ளிக்கூட விலக்கு, உத்தியோக விடுதலை ஆகியவைகள் ஈ.வெ.ரா. மனத்தைக் கவர்ந்தன என்றாலும், தீண்டாமை ஒழிப்பு விஷயத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவதற்கு நல்ல சந்தர்ப்ப மொன்று ஏற்படப் போகிறது என்ற ஆசையாலும், ஜாதி வேற்றுமையை ஒழிக்கவேண்டிய காரியத்திற்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்ற அவாவினாலும் சிறிதும் யோசிக்காமல் சட்டென்று காங்கிரசில் இறங்கிவிட்டார். உடனே தமது மற்றும் உள்ள எல்லா கவுரவ பதவிகளையும் உதறித் தள்ளினார். தாம் கொண்டிருந்த பொதுநிலையத் தொடர்புகளை யெல்லாம் சிறிதுசிறிதாக அறுத்துக் கொண்டார். இக்காலத்தில் இவர் தந்தையார் காலமுதல் நடைபெற்று வந்ததும், இவர் பெயராலேயே 15 ஆண்டுகள் நடந்து வந்ததுமான வாணிபமும் நிறுத்தப்பட்டது. இவர் நடத்திவந்த பஞ்சு ஆலையையும் நிறுத்தி விட்டார். ஒத்துழையாமைப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி, தாமே ஒரு பிரசாரத் தொண்டராக ஆகி தமிழ்நாடெங்கும் சுற்றுப்பிரயாணஞ் செய்து வரலானார். இச்சமயத்தில் அரசியல் வானத்தில் பெசண்ட் அம்மையார் உச்ச நிலையில் இருந்தார். அவருக்குத் துணையாகப் பல மார்த்தப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். இவர்கள் மிகவும் மிதவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தபடியால், ஈ.வெ.ரா.வும், அவரது நண்பர்களும் பெசண்ட் அம்மையாரை அரசியலிலிருந்து ஒழித்து விட வேண்டுமென்று முடிவுசெய்துவிட்டனர்; ஸ்ரீரங்கத்தில் திரு.கே.வி.ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஈ.வெ.ரா., சி.ராஜகோபாலாச்சாரியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, விஜயராக வாச்சாரியார், டாக்டர் ராஜன், வரதராஜலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், ஆதிநாராயண செட்டியார், மு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் ஆகிய ஒன்பது பேருங்கூடி, பெசண்ட் அம்மை யாருடைய ஹோம்ரூல் கிளர்ச்சிக்கு விரோதமாய்ப் பிரசாரம் செய்வதென முடிவு செய்துகொண்டனர். இக்கூட்டுறவு வளரும்போது மற்றொரு புறம் நீதிக்கட்சியும் (Justice Party) வளர்ந்து கொண்டே வந்தது. காங்கிர தலைவர் ஈ.வெ.ரா. திரு. காந்தியாரின் சொற்களையெல்லாம் முற்றும் நம்பினார். அவற்றையே தமது ஒத்துழையாமைப் பிரசாரத்தில் பேசினார். தாம் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளை யெல்லாம் வீசி யெறிந்தார். சிகரெட் குடிப்பது, வெற்றிலை போடுவது முதலிய அனேக பழக்கவழக்கங்களை ஒரே பகலில் அடியோடு நிறுத்திவிட்டார். ஒரு சாது ஆனார். முரட்டுக்கதரையே உடுத்தினார். தாம் மட்டிலும் அல்ல; உயர்ந்த பட்டு உடுத்திவந்த நாகம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். தமது 80 வயது அம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். மற்றும் வீட்டில் உள்ளவர்களையும், தம் இனத்த வரையும் நண்பரையும் கதர் அணியச் செய்தார். ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில்படாது வாழ்ந்தவர். ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் நமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியவர்போல் எளிய உடைதரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்? என்று 24.05.1924-ல் ஈ.வெ.ரா. சிறைப்பட்டபோது நவசக்தியில் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுவரும் கதர் இயக்கம் ஈ.வெ.ரா. வினாலேயே பலமடைந்தது. அவர் தாம் கதரைக் காங்கிரசோடு பிணைத்தார். காங்கிர கதர் வதிராலயங்கள் அவரால் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை தனிப்பட்ட வியாபாரிகள் கொள்ளை அடித்து வந்தார்கள். திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் நிர்வாகம் நடத்திவந்த திருச்செங்கோடு ஆசிரமமும் ஈ.வெ.ரா. வினாலேயே திறந்து வைக்கப் பட்டதாகும். கதரைப்பற்றி அவர் செய்த சொற்பொழிவுகள் அளவற்றவை. அவர் சொற்பொழிவைக் கேட்ட ஒருவன் சீமைத் துணியைக் கையினாலும் தொட மாட்டான். அதை நெருப்பிலிட்டுக் கொளுத்துவான். உடனே கதர் கட்டத் தொடங்கிவிடுவான். தீண்டாமை விலக்கைப் பற்றியும் மிகவும் வன்மையாகப் பேசுவார். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப் படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் பொறுமை யோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மை யிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? இது தீண்டாமை விலக்கைப் பற்றிப் பத்தாண்டுகட்குமுன் அவர் பேசிய பேச்சாகும். இவ்விதமே கேட்போர் மனங்கசியும் படிப் பேசுவார். அக்காலத்திலேயே காங்கிரசில் உள்ள வைதீகர் களுக்கு இவர் கருத்துகளில் முரண்பாடு உண்டு. கோர்ட்டுகளை விலக்குதல், பள்ளிக்கூடங்களை விடுதல் முதலியவைகளைப் பற்றிப் பேசுவாரானால் உடனே அப் பேச்சுக்குப் பலன் விளைந்துதான் தீரும். ஒத்துழையாமை காலத்தில் இராமசாமியார் செய்து வந்த சொற்பொழிவுகள் தமிழ்நாட்டினரின் மனத்தைக் கவர்ந்து வந்தன. பிரசாரகர்களுக்கு அவுடதம் போலாயின. இன்றும் தமிழ்நாட்டில் நல்ல கெட்டிக்காரச் சொல்வன்மைப் பிரசாரகர்கள் என்போர் இவரது பேச்சுகளில் உள்ளவைகளைப் பொறுக்கி பேசுவதன் மூலமேதான் பெயர் பெற்றிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சொல் வன்மையில் இவருக்கு இணை எவரும் இல்லை. இது இவர் பகைவர்களாலும் மறுக்கப்படாத செய்தி. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். என்பது வள்ளுவர் மொழி. இதற்கு இவர் சொற்பொழிவே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் ஒத்துழையாமைக் காலத்தில் ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவுக்குத் தனி மதிப்பிருந்தது. தனித்த பெரும் பயனும் விளைந்தது. மூலையாகட்டும், முடுக்காகட்டும், நாடாகட்டும், நகர மாகட்டும், ஈரோட்டு இராமசாமி நாயக்கர் பிரசங்கம் என்றால் போதும் படிக்கா தவர்களும் படித்தவர்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிடுவார்கள். கேட்போர் சலிப்படையாத படி மணிக்கணக்கில் 2 மணி 3 மணிநேரம் பேசுவார். இவருடைய சொற்பொழிவில் வீரச்சுவை நிறைந்திருக்கும். வேண்டுமிடத்தில் சோகத்தன்மை சொட்டும். நகைச்சுவையைக் கொட்டுவதில் இவருக்கும ஈடாக எவரும் இலர். மரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடிதெரியும் படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும்... ... அப்பா! நாயக்கரின் அழகு பிரசங்கத்தை, ஆணித் தரமான சொற்களை, அணியணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகள், அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிப்பைப் பார்க்கவும், கேட்கவும் வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பதுபோல், வந்து மொய்ப்பார்கள்.... அவர் இயற்கையின் புதல்வன். மண்ணை மணந்த மணாளன், மண்ணோடு உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை.... செய்யவேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதுபோல தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை... நாயக்கர் மகாஸரஸி, பரம ரஸிகர். இது 1933ல் காந்தி என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. நல்ல எழுத்தாளரான வ.ராமசாமி அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டது. ஈ.வெ.ரா. கதர் வளர்ச்சிக்காக ராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிவந்தார். கதர் மூட்டைத் தூக்கி விற்றார். அந்நிய நாட்டுத் துணியை விலக்கவேண்டுமென்பதற்கும், கதரையே அணிய வேண்டுமென்பதற்கும் இவர் சொல்லும் விதவிதமான காரணங்கள் கேட்பவர்கள் மனதை அவ் வினாடியிலேயே கவ்விவிடும். சுருங்கக் கூறவேண்டுமானால் தமிழ் நாட்டில் இன்று கதர் உடுத்துபவர்களில் நூற்றுக்குத் தொண்ணுறு பேரும், இதுவரையில் கதர் உடுத்தி இப்போது கைவிட்ட பல்லாயிரக்கணக்கானவரும் ஈ.வெ.ரா.வின் சொற் பொழிவைக் கேட்டுக் கதர் அணிந்தவர்களேயாவார்கள். கோர்ட்டு களை விலக்கவேண்டும் என்பதை செயலில் காட்டியவர் இவரேயாகும். இக் கொள்கையின் பயனாகத் தம் குடும்பத்திற்கு வரவேண்டிய சுமார் 50,000 ரூபாயை இழந்தார். அதில் 28,000 ரூபாய்க்கு ஒரு அடமானப் பத்திரம் இருந்தது. ஒத்துழையாமை காரணமாய் கோர்ட்டுக்குப் போய் அதை வசூலிக்க ஈ.வெ.ரா. விரும்பவில்லை. காங்கிரசுக்குத் தலைவராகயிருந்த சேலம் சி.விஜயராகவாச்சாரியார் அவர்கள் இதையறிந்தார். இந்தப் பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உமக்கு இஷ்ட மில்லாமையானால் நீர் அதை மேடோவர் (மாற்றி) செய்து கொடுத்துவிடும். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தையடைய உமக்கு இஷ்டமில்லை யானால், வசூல் செய்ததும் அதைத் திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடும் என்று ஈ.வெ.ரா.விடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார். அதுசமயம் அவர் திரு.விஜயராகவாச் சாரியாருக்குச் சொன்னதாவது: நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக்கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான். இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல. கொள்கை பெரியது; பணம் பெரிதல்ல; என்பதாகும். ஒரு பொதுக்கூட்டததில் இந்தப் பிரதாபம் வந்தபோது, இந்தச் சேதி உண்மையா? என்று திருச்சி தோழர் ச.ம.சி.பரமசிவம் அவர்கள் சேலம் திரு.விஜயராகவாச்சாரியாருக்கு கடிதம் எழுதிக் கேட்டார். அதற்கு ஆச்சாரியார், ஆம் என்று பதில் எழுதியதோடு, ஈ.வே.ரா.வின் விஷயத்தில் இதைப் பற்றித் தமக்கு எழுதிக் கேட்டது அதிசயமாயிருந்த தென்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மதுவிலக்குப் பிரச்சாரம் மும்முரமாக நடந்தபோது, காந்தியார் ஒரு பணியிட்டார். கள்ளுக்கு உதவும் மரங்களை யெல்லாம் வெட்டிவிட வேண்டும் இது அப்பணி வடநாட்டில் பெரும்பாலும் கள் தருவது ஈச்ச மரங்கள். அவைகளை வெட்டி வீழ்த்துவதால் பெருஞ்சேதம் இல்லை. தென்னாட்டில் அப்படியல்ல. இங்கே கள் இறக்கப்படுவது தென்னை மரங்களில். தென்னையின் பயன் மிகமிகப் பெரியது. இவைகள் அழிக்கப் பட்டால் நாட்டுக்கு பொருட்சேதம் பல. இதைப்பற்றிக் காந்தியார் சிந்திக்கவே இல்லை போலும்! காந்தியாரின் பணியைப் பலர் ஏற்றனர். வடநாட்டில் பல இடங்களில் ஈச்சமரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டன. இச்செய்தி, செய்தித்தாள்களில் வந்தன. கண்டார் ஈ.வெ.ரா. காந்தீய வெறியில் மூழ்கியிருந்தார் அல்லவா? தமது தோட்டங்களிலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார். அக்காலத்தில் காந்தீய வெறியினால் தென்னைகள் வெட்டி வீழ்த்திய பைத்தியக்காரர்களில் இவரே தலைசிறந்தவர் என்று கூறலாம். 1921ஆம் ஆண்டில் கள்ளுக்கடை மறியல் மிகவும் புகழ் பெற்றது. ஈரோட்டில் மறியல் மும்முரம் மிகுதி. ஈ.வெ.ரா. மறியலைத் தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக 144 தடையுத் தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மறியல்காரர்கள் தடையுத்தரவை பொருட்படுத்தவில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை புகுந்தனர். 1921 நவம்பரில் ஈ.வெ.ரா.வும் அவரோடு சுமார் 100 தொண்டர்களோடு சிறைப் பிடிக்கப்பட்டார். ஒரு மாதம் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி. நாடெங்கும் கலவரம். இச்சமயம் நாகம்மையாரும், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர். மறியல் செய்பவர்கள் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர். நாகம்மையாரும், அவருடன் சென்ற தோழர்களும் சிறைப் படுத்தப்பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி 10,000 பேர்களுக்கு சிறை வேண்டி யிருக்குமென்று அதிகாரிகள் கருதி, சென்னை அரசாங்கத்துக்குத் தந்தி கொடுத்து முன்னறிவுடன் தடையுத்தரவை நீக்கினர். அதுசமயம் சர்க்கார் 144க்கு மதிப்பற்று வாய்தா காலத்திற்குள் ரத்து செய்யப்பட்டது இது ஒன்றேயாகும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது. இவ்வாறு குடும்பத்துடன் தேசத்திற்குத் தியாகம் செய்த இராமசாமியாரை இன்று சிலர் நாக்கில் நரம்பின்றி தேசத்துரோகி என்று தூற்றுகின்றனர். என்னே! இக்கற்றுக் குட்டிகளின் பேதமை. இச்சமயம் பொதுவாகவே இந்தியாவில் நடந்துவந்த ஒத்துழையாமைக் கிளர்ச்சி சம்பந்தமாகக் காங்கிரசுக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு சமாதான ஒப்பந்த பேச்சு நடைபெற்றது. இதற்காகப் பம்பாயில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற சர்.சங்கரன் நாயர் தலைவர். இம்மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு. இம்மாநாட்டின் நடவடிக்கை துவக்கப்படும் முன்பு திரு.பண்டிட் மாளவியா அவர்களும், சர்.சங்கரன் நாயர் அவர்களும் மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கை துவக்கலாம் என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது காந்தியார், மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண் களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும் என்று பதிலுரைத்தார். இச்செய்தி அச்சமயம் 19-1-22ஆம் மேதி வெளியான ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக் கிறது. காந்தியார் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், ஈவெ.ரா.வின் மனைவி நாகம்மையார், அவரது தங்கை கண்ணம்மாள் ஆகிய இரு பெண்மணிகளும் மறியலுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆதலால், அவர்களின் கருத்தை யறிந்த பின்பே முடிவு செய்யவேண்டுமென்று கருதிக் கூறியதேயாகும். கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன் முதல் முடிவு செய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. அவர்கள் வீட்டில் காந்தியார் முதலிய தலைவர்கள் கூடின காலத்தில் கள்ளுக்கடை மறியல் செய்யவேண்டுமென்று பேசி முடிவு செய்யப்பட்டது. அம் முடிவுக்கு அடிப்படை ஈ.வெ.ரா.வின் முழு ஆதரவேயாகும். இவ்வுண்மையை இளங்கன்றுகள் சில அறியாதிருக்கலாம். ஆனால் காந்தியாரும், ஆச்சாரியாரும் மறந்திருக்க முடியாது. பின்பு ஒத்துழையாமை ஒருவாறு அடங்கிற்று. பலர் அம்முறை தவறு என்று உணர்ந்தனர். அவர்களில் காலஞ்சென்ற சி.ஆர்.தா என்பவரும் ஒருவர். விலகி நின்று கூச்சலிடுவது பயன்தராது. கோட்டைக்குள் சென்று எதிரிகளை மடக்க வேண்டும் என்ற கொள்கையுடன் சுயராஜ்யக் கட்சியைத் தொடங்கினார் இவர். இக்கட்சியை ஈ.வெ.ரா. ஆதரிக்கவில்லை; எதிர்த்தார். காந்தியார் முதலிய மற்றும் பலரும் ஒப்புக்கொள்ள வில்லை. திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரும் ஈ.வெ.ரா.வையே பின்பற்றினார். காந்தியாரின் தலைமைக்கடங்கிய இவர்கள் வைதீக ஒத்துழையாதார் அல்லது மாறுதல் வேண்டாதார் என்று அழைக்கப்பட்டனர். ஆயினும் சுயராஜ்யக் கட்சி வளர்ச்சியடைந்து வந்தது. தென்னாட்டிலும் இக்கட்சி உரம் பெற்றது. அப்பொழுது நமது மாகாணத்தில் நீதிக்கட்சியின் பேரால் பார்ப்பனரல்லாதார் அதிகாரம் நடத்தினர். பார்ப்பனர்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காகவே சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்தார்கள் என்றும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து நின்றனர் என்றும் சொல்ல வேண்டும். பார்ப்பனரல்லாதார் கட்சியை அதிகாரத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பது அக்காலச் சுயராஜ்யக் கட்சியின் நோக்கம். இதனாலேயே பார்ப்பனர்கள் அனைவரும் ஒருமுகமாக அக்கட்சியைப் போற்றினர், ஆதரித்தனர். இவ்வுண்மையை ஈ.வெ.ரா.வும் அறிந்து கொண்டார். மலையாளத்தில் வைக்கம் என்ற ஊரிலுள்ள தெருவில் தாழ்த்தப் பட்டவர்கள் நடக்கக்கூடாது என்பது வெகுநாளைய கட்டுப்பாடாய் இருந்து வந்தது. அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையுணர்ச்சி கொண்டனர். தெருவில் நடக்கும் உரிமைபெற விரும்பினர். அதற்காக ஒரு சத்தியாக்கிரகத்தைத் துவக்கவேண்டுமென்று கேரள காங்கிர தலைவர்கள் கருதினர். அதன்படியே துவக்கினர். காலஞ்சென்ற ஜார்ஜ் ஜோசஃப் உள்பட 19 பேர் வரிசையாகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டுவிட்டனர். தலைவர் இல்லாத திண்டாட்டத்தால் சத்தியாக்கிரகம் நின்றுவிடும் போலாகிவிட்டது. சிறையிலிருந்த படியே யோசித்துத் தோழர்கள் ஜார்ஜ் ஜோசஃபும் குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். பெரிய காரியத்தைத் தொடங்கி விட்டோம்; அடக்குமுறை பலப்பட்டு விட்டது; இவ்வளவு சீக்கிரத்தில் நாங்களெல்லோரும் கைது செய்யப் படுவோமென்று எதிர்பார்க்க வில்லை; தாங்கள் உடனே வைக்கம் வந்து சத்யாக்கிரகத்தை ஏற்று நடத்தினால்தான் கேரளத் தினுடைய மானமும், எங்களுடைய மானமும் மிஞ்சும்; காலதாமதம் செய்யவோ, யோசித்துப் பார்க்கவோ நேரமில்லை. உடனே வரவும் என்று ஜெயிலில் இருந்த படியே இரகசியமாக ஆள்வசம் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். ஈ.வெ.ரா. குளித்தலை அரசியல் மாநாட்டில் இருந்தபடியே மதுலை ஜில்லா சுற்றுப்பிரயாணம் சென்றிருந்தார். அங்கு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் வைக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அவருக்கு கிடைத்தது. அன்று வருஷப் பிறப்பு, அதைப் பார்த்தவுடன் நாகம்மையாரிடம் தம் நோய் குணமாகி விட்டதென்று பொய் சொல்லி விட்டு, படுக்கை, துணி மூட்டை முதலியவைகளைச் சற்றுப் பெரிதாகவே கட்டிக் கொண்டு அன்றிரவே வைக்கத்திற்குப் புறப்பட்டுவிட்டார். மறுநாள் பகல் 2 மணிக்கு வைக்கம் சேர்ந்தார். உடனே தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டுவிடுவாரென்று மக்கள் கருதினார்கள். ஆனால் காரியம் அப்படி நடக்கவில்லை. ராமசாமியார் வைக்கம் வந்து சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட சங்கதி திருவாங்கூர் அரசருக்கு எட்டிற்று. அவர் உடனே போலீ கமிஷனரை அழைத்து ஈ.வெ.ரா.வைக் கைதியாக்க வேண்டாமென்று சொல்லிவிட்டார். பிறகு திவான் பேஷ்காரையழைத்து ராமசாமி திருவாங்கூரில் இருக்கும் வரையில் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அரசாங்க விருந்தாளிபோல், குறிப்பாகக் கவனித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார். இது அப்போதிருந்த திவான் ராகவய்யாவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் போலீ கமிஷனர் பிட் துரையும், திவான் பேஷ்கர் சுப்பிரமணிய அய்யரும் சத்தியாகிரக நிலையத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்த பொது மக்கள் ஈ.வெ.ரா.வைக் கைது செய்வதற்காகத் தான் வந்திருக்கிறார்களெனக் கருதினார்கள்; ராமசாமியாரும் அவ்விதமே கருதினார். மூட்டையைக் கட்டிக் கொண்டு தயாரானார். ஆனால் நடந்த தென்ன? அதிகாரிகள் இருவரும் அவரிடம் சென்றார்கள். அவரை வணங்கினார்கள். அவருடைய நலனைப்பற்றி விசாரித் தார்கள். அவரது சவுகரியத்திற்காகத் தாங்கள் என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள். ஈ.வெ.ரா.வைப் பார்த்து, சத்தியாகிரகம் வேறு; அரச மரியாதை வேறு என்று சொன்னார்கள். அதற்கு ராமசாமியார், நான் சத்தியாகிரகம் சம்பந்தமாக வந்திருக்கிறேனேயொழிய விருந்தாளியாகவோ, அரச மரியாதையைப் பெறவோ வரவில்லை. ஆதலால், தாங்கள் சட்டப்படிச் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்று சொன்னார். இதற்குள் ஏராளமான மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதிகாரிகள் ஈ.வெ.ரா.வுக்கு செய்யும் மரியாதையைப் பார்த்த பொதுமக்கள் குழப்பமடைந்துவிட்டார்கள். அவர் நன்மைக்கு வந்தாரோ, தீமைக்கு வந்தாரோ, சத்தியாகிரகத்தை நிறுத்தி விடுவாரோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். கடைசியாக அதிகாரிகள், மகாராஜா அவர்கள் தமது வரவேற்பைத் தெரிவிப்பதற்காகவும் எங்களை இங்கு அனுப்பினார்கள் என்று சொன்னபோதுதான் அரசருக்கும், தமக்குமுள்ள பரிச்சயமும், அதன் சந்தர்ப்பங்களும் ராமசாமியாருக்கு ஞாபகத்திற்கு வந்தன. அதன் விவரம் என்னவென்றால், திருவாங்கூர் அரசர் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நடுவில் இறங்கிக் குளித்துச் சாப்பிட்டுப்போவதற்காக ஈரோடு டேஷனில் இறங்கும் போதெல்லாம் அரசர், ஈ.வெ.ராவின் ரயில்வே டேஷன் பங்களாவிலும் அவரது பரிவாரங்கள் ராமசாமியாரின் சத்திரத்திலும் தங்கி உணவருந்திப் போவது வழக்கம், அவ்விதமே பல தடவைகள் வந்து போயிருக்கிறார். அதன்மூலம் அரசருக்கும் சில அதிகாரி களுக்கும், ஈ.வெ.ரா.வின் குடும்பத்தாருக்கும் அறிமுகமுண்டு. இதன் காரணமாகத் தாம் பல தடவைகளில் பெற்ற உபசாரங் களுக்குப் பதில் உபகாரங்கள் செய்வதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக அரசர் கருதினார். ஆகையால்தான் அதிகாரி களை ஈ.வெ.ரா.விடம் அனுப்பினார். அரசர் அவர்கள் தன்னைப் பற்றித் தப்பாக நினைக்கக்கூடாதென்றும், தம் கடமையைச் செய்ய வந்திருப்பதாகவும், அரசர் அவர்களும் தமது கடமையைச் சட்டப் படிச் செய்வதில் தமக்காக எவ்வித தாட்சண்யமும் பார்க்கக் கூடாதென்றும் ஈ.வெ.ரா. கூறி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து அனுப்பிவிட்டார். பிறகு இச்சத்தியாகிரகத்தில் ராமசாமியாரும் அவருடன் கூடச் சென்ற தோழர் அய்யாமுத்துவும் சிறைப்பட்டனர். உடனே நாகம்மையார், தோழர் எ.ராமநாதன் அவர்களுடன் ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். சிறிதுகாலம் தோழர் ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கி சத்தியா கிரகத்தை நடத்தினார். பின் நாகம்மையார் இதில் முக்கிய பங்கு கொண்டார். இச்சமயம் தமிழ்நாட்டிலிருந்தும் மலையாளத்திலிருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். இச்சமயம் ஒரு மாதமானதும் ஈ.வெ.ரா. விடுதலையானார். விடுதலை ஆனவுடன் அவருக்குப் பிரஷ்ட உத்தரவு போடப்பட்டது. ஈ.வெ.ரா. அதையும் மீறினார். அதனால் மறுபடியும் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டார். அதன்பிறகு நாகம்மையார் தலைமை தாங்கி பல பெண்களுடன் திருவாங்கூர் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, புரட்சியான பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டார். இறுதியில் சத்தியாகிரகம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதல் வெற்றி பெற்றது வைக்கம் சத்தியாகிரகம் ஒன்றேயாகும். இச்சத்தியா கிரகத்தின் பின்விளைவே தான் கோவில் பிரவேசக் கிளர்ச்சி ஏற்பட்டு, திருவாங்கூர் கோவில்கள் எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்துவிடப் பட்டதாகும். இச்சத்தியாகிரகம் நாடெங்கும் புகழ்பெற்றுவிட்டது. இதனால் ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் என்ற பெயர் பெற்றார். இன்றும் தமிழ்நாட்டார் இப்பெயரை மறக்கவில்லை. வைக்கம் வீரர் என்றால் போதும் ஈ.வெ.ரா. என்று நன்கறிவார்கள். எனவே தீண்டாமையை ஒழிப்பதற்காகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் இவர் இருமுறை சிறையிலிடப்பட்டார். 22.04.1924-ல் ஒருமாத தண்டனை பெற்று அருவிக்குத்திச் சிறையி லிருந்தார். இது அரசர் லேசான தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டதால் ஏற்பட்ட தாகும். விடுதலையானவுடன் ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் தண்டிக்கப்பட்டுத் திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார். என்றாலும் நான்கு மாதத்திலேயே அரசர் இறந்துபோய் விட்டதால் அரச விளம்பரம் (Proclamation) காரணமாக விடுதலை செய்யப்பட்டார். விடுதலை யானவுடன் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்கலாமென்றும், தம் தாயாரைப் பார்க்கலாமென்றும் கருதி ஈரோட்டுக்குச் சென்றார். ராமசாமியார் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு கதர் பிரசாரம் செய்துவந்தபோது, சென்னை யில் பேசிய பேச்சுக்காக அரச வெறுப்பு, வகுப்பு வெறுப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு 124-A, 153-A, செக்ஷன்களில் படிச் சென்னை அரசாங்கத்தாரால் 11-9-1924-ல், அதாவது ஈரோட்டுக்கு வந்த வுடனேயே சிறைப்பிடிக்கப் பட்டுச் சென்னைக்குக் கொண்டுபோய், அங்கு சில நாள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இதை இவர் மறுபடியும் திருவாங்கூருக்குச் சென்று, அங்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதற்காகவே சென்னை அரசாங்கத்தார் திருவாங்கூர் அரசாங்கத்திற்குச் செய்யும் உதவியென்று சொல்லிக் கொள்ளப்பட்டது. ஏனெனில், அச்சமயம் திருவாங்கூர் திவானாக இருந்தவர் ராகவய்யா. சென்னை மாகாணத்திற்குச் சட்டமந்திரியாயிருந்தவர் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர். இவ்வழக்கில் ராமசாமியார் எதிர்வழக்காடவில்லை. என்றாலும் நியாயமற்ற வழக்கானதால் சர்க்காராலேயே பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு முடிவதற்குள் வைக்கத்தில் தெருவை எல்லோருக்கும் திறந்துவிட வேண்டுமென்று சர்க்காரே தீர்மானித்து, அதற்குள்ள வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். இச்சமயம் நம் நாட்டு பத்திரிகைகளெல்லாம் நடு நிலைமையின்றி ஒரு சார்பாகவே நடைபெற்றுவந்தன. அவைகள் எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்களையே ஆதரித்துவந்தன. வைக்கம் சத்தியாகிரகத்திலும், ஈ.வெ.ரா.வின் வழக்கிலும் அவைகள் நடுநிலைமை வகிக்கவில்லை. பார்ப்பனரல்லாதாரின் கருத்துகளைப் பற்றிய உண்மைச் செய்திகளை வெளியிடுவதே இல்லை. பார்ப்பனல்லாதார் இயக்கத்தின் பேரால் நடைபெற்று வந்த ஆங்கில தினசரி ஜடி பத்திரிகையும், தமிழ் தினசரி திராவிடன் பத்திரிகையும் செல்வாக்கில்லாமல் இருந்தன. ஆதலால், பார்ப்பன ரல்லாதார் நன்மையைப் பாதுகாக்க ஒரு தனிப்பத்திரிகை வேண்டும் என்கின்ற எண்ணம் இவருக்கு அப்போதுதான் உதயமாயிற்று போலும்! எனவே, 02-05-1925-ல் குடி அரசு என்னும் பேரால் ஈ.வெ.ரா. ஒரு வாரப் பத்திரிகையை ஈரோட்டில் தொடங்கினார். இது இன்றும் நடந்துவருகிறது. இப்பத்திரிகை, சிறந்த தமிழறிஞரும், பெரியாருமாகிய திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி என்னும் ஞானியார் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப்போல் இல்லாமல், மனத்தில் பட்டதைத் தைரியமாய்ப் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இது ஈ.வெ.ரா. அச்சமயம் கூறியது. இவரது அச்சுக் கூடத்திற்கும் உண்மை விளக்கம் பிர என்று பெயரிட்டார். பத்திரிகையை ஆரம்பித்து வைக்குமாறு ஞானியார் சுவாமிகளைக் கேட்டுக்கொண்ட போது, இவ்வாறு உரைத்தார். குடி அரசின் முதல் வெளியீட்டில் அதன் நோக்கத்தைப்பற்றிக் குறிப் பிட்டுள்ளதையும் கீழே தருகிறோம். ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும், இதை அறவே விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று. மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத் துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு, தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால், இவ் வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும். குடி அரசுப் பத்திரிகை தோன்றிய அன்றுமுதல் இன்று வரையில் இந்நோக்கத்தில் மாறுதல் இன்றிப் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறது. இதைக் குடி அரசின் தொடர்ந்த வாசகர்கள் அறிவார்கள். அவரது கொள்கைகளைத் திரட்டிய பாடலாகிய அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி... என்ற செய்யுளைக் குடி அரசுப் பத்திரிகையின் தலையங்கத்திற்கு மேல் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வந்தார். எனவே, அப் பாடலை இந்நூலின் ஆரம்பத்தில் சேர்த்துள்ளோம். அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவர்க்கு மாற்றி மனத்துள்ளே பேதா பேதம் வஞ்சகம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொன் றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந்தானே! குடி அரசை ஆரம்பித்து வைத்தபோது திரு.ஞானியார் சுவாமிகள் கூறிய மொழிகள் இவை: நமது நாட்டில் பல பத்திரிகைகள் இருந்தும் இப் பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றும் இல்லை. நமது நாட்டில் உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக் கின்றது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடி அரசுவின் கருத்தும் அதுவேயென நான் அறிந்துகொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்கவேண்டும். இவை குடி அரசின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும். இப்பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு. இக்காலத்தில் குருகுல போராட்டம் தொடங்கிற்று. தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற பெயருடன் வ.வெ.சுப்ரமணிய அய்யர் அவர்களால் சேரன்மாதேவியில் ஒரு தேசீய நிலையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பெயர் குருகுலம். அதற்குப் பண உதவி செய்தவர்கள் தமிழ் மக்கள். காங்கிரசிலிருந்தும் பத்து ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதன் வளர்ச்சிக்காக ஈ.வெ.ரா., டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.கலியாண சுந்தர முதலியார், கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் செட்டியார் முதலியவர்கள் உழைத்தனர். ஆனால், குருகுலத்தில் உண்மையாய் நடந்தது என்ன? பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு; பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு; வேறு வேறு இடம்; வேறு வேறு பிரார்த்தனை. இதன் மூலம் ஜாதிப்பிரிவுக்கு ஆக்கம். இவை குருகுலத்தில் நடைபெற்றன. இப்பிரிவினை தவறு; குருகுல நோக்கத்துக்கு மாறுபட்டது; தேசீய ஒற்றுமைக்கு ஏற்றதன்று; சமபந்தி உணவே அளிக்கப்பட வேண்டும் என்று ஈ.வெ.ரா. கூறினார். அப்போது ஈ.வெ.ரா. காங்கிர காரியதரிசி. காங்கிரசில் குருகுலத்துக்கு 10,00 ரூபாய் கொடுக்க இசைந்து, ரூ.5,000 முதலில் கொடுத்ததால் மீதி 5,000 ரூபாயை வ.வெ.சு. அய்யர் கேட்டார். குருகுலத்தில் ஜாதி பேதம் இருப்பதால் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அய்யர் ஈ.வெ.ரா.வின் கூட்டுக் காரியதரிசியாய் இருந்த ஒரு பார்ப்பனரிடம் செக் வாங்கிக் கொண்டு போய் விட்டார். இதை ஈ.வெ.ரா. தெரிந்ததும் குருகுலத்தோடு போர் தொடுத்தனர். இதற்கு டாக்டர் நாயுடு ஆதரவளித்தார். திரு.வி.கலியாண சுந்தர முதலியாரும் ஆதரவளித்தார். இப்போது மந்திரியாயிருக்கும் திரு.S.ராமநாதன் அவர்கள் வீட்டில்தான் முதன்முதல் குருகுலத்தை எதிர்த்து, அதை ஒழித்துவிட வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டது. அப்போது கூடி ஏற்பாடு செய்த வர்கள் திரு.ராமதநாதன், ஈ.வெ.ரா., திரு.வி.கலியாணசுந்தர முதலியார், N.தண்டபாணிப்பிள்ளை ஆகியவர்கள். டாக்டர் நாயுடுவைத் தலைவராக வைத்துக்கொண்டு பார்ப்பனிய வளர்ச்சிக்காக இருந்த இக் குருகுலத்தை அடியோடு ஒழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். வ.வெ.சு.அய்யர் இக்கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை. அய்யரின் கொள்கை நாடெங்கும் கண்டிக்கப்பட்டது. நாயுடுவும், நாயக்கரும் இதைப்பற்றி நாடெங்கும் சென்று கண்டித்துப் பேசினர். இக்கிளர்ச்சியை அடக்கக் காந்தியாரும் தலையிட்டார். குருகுலத்தில் ஜாதிப் பிரிவினைக்கு இடந்தருதல் கூடாது. சமபந்தி உணவு தான் அளிக்க வேண்டும் என்ற காந்தியாரின் கருத்தையும் அய்யர் ஏற்கவில்லை. பார்ப்பனப் பிள்ளைகளும் அல்லாத பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்து வதற்கு நான் ஒருப்பட முடியாது. அப்படிச் செய்தால் குரு குலம் கெட்டுவிடும் என்று அய்யர் கூறிவிட்டார். இது ஈ.வெ.ரா. வுக்குப் பார்ப்பனர்களையும், காங்கிரசையும் தாக்குவதற்குச் சாதனமாயிற்று. இக்குருகுலப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரும் பரபரப்பு உண்டாயிற்று. பார்ப்பனர்கள் தீண்டாமையைப் பற்றிப் பேசுவது வெறும் பேச்சு; அவர்கள் தேசீயத்தைப்பற்றிப் பேசுவது வீண்; ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்குப் பொருள் இல்லை என்ற நிரந்தரமான உண்மையை உணர்ந்து கொண்டனர். தமிழ் மக்கள் குருகுலத்துக்குப் பண உதவி செய்து வந்த பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் உதவியை நிறுத்திக் கொண்டனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதன் பொருட்டுச் சேர்க்கப் பட்ட தொகைள், நாயுடு, ஈ.வெ.ரா., திரு.வி.க. இவர்களின் முயற்சியால் ஆங்காங்கே நின்றுவிட்டன. எரிவதை இழுத்து விட்டால் கொதிப்பது எங்கே? குருகுலம் ஒழிந்தது. தேசீயத்தின் பேரால் வருணாச்சிரம தருமத்தை நிலைநிறுத்த ஏற்பட்ட ஒரு நிலையம் ஒழிந்ததைப் பற்றித் தமிழர் களிகூர்ந்தனர். இக்காலத்தில் மற்றொரு நிகழ்ச்சி. அதுவும் குறிப்பிடத் தக்கது. திருச்சியில் தமிழ்நாடு காங்கிர கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில் டாக்டர் வரதராஜூலு நாயுடு பார்ப்பனத் துவேஷப் பிரசாரம் செய்து வருவதாய் கூறி, அவர்மீது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்தை ஈ.வெ.ரா. எதிர்த்துப்பேசித் தோற்கடித்தார். அதன் காரணமாக, அந்தக் கூட்டத்திலேயே டாக்டர் டி.எ.எ.ராஜன், சி.ராஜகோபாலாச்சாரியார், என்.எ.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர். சாமிநாத சாதிரி ஆகிய அய்ந்து பேரும் உடனே ராஜினாமா செய்து, கமிட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். டாக்டர் நாயுடு இந்நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டாரென்று நம்புகிறோம். இச்சமயத்தில் டாக்டர் நாயுடு தமிழ்நாடு காங்கிர கமிட்டித் தலைவர்; ஈ.வெ.ரா. காரியதரிசி; இதற்கு முன் இரண்டு ஆண்டுகளும் ஈ.வெ.ரா. தலைவர்; எ.ராமநாதன் காரியதரிசி. காங்கிரசுக்குள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற உணர்ச்சி ஏற்பட்டதற்கு இதுவே வெளிப்படையான காரணம். இக்காலத்தில், காலஞ்சென்ற பனகல் அரசரால் சென்னை சட்ட சபையில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (Hindu Religious Endowments Act) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எல்லாப் பார்ப்பனர்களும் எதிர்த்தனர். இந்து மதத்தில் சர்க்கார் தலையிடுகிறதென்று கூச்சலிட்டனர். கோயில்கள் பாழ்படும் என்று புலம்பினர். கோயில் தர்மகர்த்தாக்களும், மடாதிபதிகளும் சட்டத்தைக் கண்டித்தனர். திரு.S. சீனிவாசய்யங்கார், விஜயராக வாச்சாரியார் உள்பட பார்ப்பன வழக்கறிஞர்கள் பலரும் இதனால் மதத்திற்கு ஆபத்து என்றும், இச்சட்டம் செய்யச் சென்னை சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூச்சலிட்டனர். இவைகளில் சிலர் இந்தக் காரணத்தை வைத்து, அச்சட்டத்தை ரத்து செய்வதற்கு வைராயிடமும், கவர்னரிடமும் சொல்லி ஏற்பாடு செய்யப்போவதாக மடாதிபதிகளிடம் கூறி, அவர்களிட மிருந்து நிரம்பப் பணம் பெற்றுக் கொழுத்தனர். காங்கிர பார்ப்பனர்களும் இதை எதிர்த்தனர். இச்சமயம் ஈ.வெ.ரா. ஒரு அறிக்கை வெளியிட்டார். கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலையைப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர் களுக்குத்தான் இதனால் ஆபத்து என்று கருத்துடையது அவ் வறிக்கை. அவ்வறிக்கையை டாக்டர் நாயுடுவும், எ.ராமநாதனும், திரு.வி.க.முதலியாரும் ஆதரித்தார்கள் ஈ.வெ.ரா. காங்கிரசிலேயே வகுப்புரிமைக்கும், சமுதாய உரிமைக்கும் போராடியவர்; போராடி வந்தார். பார்ப் பனரல்லாதாருக்கு அரசியலில் தக்க பாதுகாப்பளிக்க வேண்டு மென்று கூறிவந்தார். வகுப்பு எண்ணிக்கைக்குத் தக்கவாறு உத்தியோகம் கொடுக்கவேண்டும் என்பதை ஆதரித்தார். நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் ஈ.வெ.ரா. போன்றவர்கள், நீதிக்கட்சியுடன் சேர்ந்துவிடாமலிருப்பதற்காக, சென்னை மாகாண சங்கம் என்றும், தேசீய சங்கமென்றும் இரண்டு உண்டாக்கப்பட்டன. காலஞ்சென்ற கேசவப்பிள்ளை அவர்கள் முந்தியதற்குத் தலைவர்; இதைத் தோற்றுவித்தவர்கள் பார்ப்பனர் களே. பார்ப்பனரல்லாதார் கட்சியைத் திட்டுவதே இச்சங்கத்தாரின் பணி. அக்காலத்தில் ஈ.வெ.ரா. இப்பணியை ஆற்றவில்லை யென்றாலும் அச்சங்கத்திற்குப் பொருளுதவி செய்து ஆதரித்து வந்தார். அச்சங்கம் பார்ப்பனரல்லாதார் பெயரால் நடை பெற்றாலும் சங்கத்தை ஆட்டி வைத்தவர்கள் பார்ப்பனர்களே யாவார்கள். இச்சங்கத்திலும், தேசீய சங்கத்திலும் ஈ.வெ.ரா. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். என்றாலும் அது காரணமாகவே அச்சங்கங்கள் உடனே கொல்லப்பட்டுவிட்டன. அதற்குப்பின் நடந்த தமிழ்நாடு காங்கிர மாகாண மாநாடுகளில் எல்லாம் ஈ.வெ.ரா. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி வந்திருக்கிறார் 1920-ல் நடந்த திருநெல்வேலி மாநாட்டில் ஈ.வெ.ரா. வகுப்புவாரி தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியில் 6 ஓட்டுகள் அதிகமாகப் பெற்று நிறைவேற்றினார். மாநாட்டில் தலைவர் எ.சீனிவாசய்யங்கார் இது பொதுநலத்துக்குக் கேடு என்று அனுமதிக்காமல் மறுத்துவிட்டார். 1921-ல் தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் பிரேரேபித்தார். அதுசமயம் C.R. அவர்கள், கொள்கையாக வைத்துக் கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம் என்று தடுத்தார். 1922-ல் திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் ஈ.வே.ரா. பிரேரேபித்தார். அப்போது நடந்த வாதத்தில்தான் ஈ.வெ.ரா. கோபமடைந்து மனுதர்ம சாதிரத் தையும், இராமாயணத்தையும் நெருப்பில் கொளுத்த வேண்டும் என்றார். கலவரம் ஏற்பட்டு திரு.விஜயராவாச்சாரியார் அடங்கி விட்டார். பிறகு 1923-ல் சேலம் மாகாண மாநாட்டில் பிரேரே பித்தார். கலகமாகும்போல் இருந்தது. ஜார்ஜ் ஜோசஃபும், டாக்டர் நாயுடுவும் நிறுத்திவிட்டார்கள். 1924-ல் திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. தலைமையில் மாகாண மாநாடு என்றாலும், எ.சீனிவாசய்யங்கார் வகுப்புவாரித் தீர்மானத்தைத் தோற்கடிக்க, சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டி வந்து தடுத்தார்; நின்றுபோய்விட்டது. 1925-ல் திரு.வி.க. தலைமையில் காஞ்சீபுரத்தில் ஈ.வெ.ரா. பிரேரேபித்தார். திரு.வி.க. தீர்மானத்தை நிராகரித்தார். ஈ.வெ.ரா. கோபித்துக் கொண்டு காங்கிரசைவிட்டு வெளியேறிவிட்டார். இவ்வாறு ஈ.வெ.ரா. எப்போதும் பார்ப்பனரல்லாதார் உரிமையிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்துக்காகவும் போராடியே வந்திருக்கிறார். 1924 டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய தமிழ்நாடு 30ஆவது காங்கிர மாகாண மாநாடு நடைபெற்றபோது, அதற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈ.வெ.ரா. அப்போதும் மாகாண காங்கிர கமிட்டிக்கும் தலைவர். அம்மாநாட்டின் தலைமையுரையில் அவர் பேசியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப்பற்றி அவர் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவில் ஹிந்து, முலீம் ஒற்றுமை குலையா திருப்பினும் ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை குறைந்து வருவதுண்மை. முதலாவது பிராமணர் - பிராமணரல்லாதார் நிலையைச் சிறிது சிந்திப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் வேற்றுமை யுணர்வு தோன்றுவானேன்? வேற்றுமைக்கு அடிப்படையான காரணங்கள் இருத்தல் வேண்டும். அக்காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்க தேச பக்தர்கள் முயலவேண்டும். காங்கிரவாதியாயிருந்த டாக்டர் நாயர் திடீரென ஒரு கட்சியைத் தோற்றுவிக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவை களோ அவைகள் இன்னும் நிற்கின்றனவா, இல்லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்து விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவைகள் தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும்வரை தமிழ்நாட்டில் பிராமணர், பிராமண ரல்லாதார் ஒற்றுமை நிலவுதலரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன். - ( நவசக்தி, 1924 நவம்பர்-21) இதனாலும் பார்ப்பனரல்லாதாரின் நிலை எப்பொழுதுமே இவர் கருத்தைக் கவர்ந்து வந்ததென்பதை அறியலாம். 1925 நவம்பர் மாதத்தில் காஞ்சீபுரத்தில் தமிழ் மாகாண மாநாடு நடைபெற்றது. திரு.வி.க.முதலியார் அம்மாநாட்டின் தலைவர். அம் மாநாட்டில் ஈ.வெ.ரா.வின் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத் தீர்மானத்திற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. தீர்மானம் தலைவரால் நிராகரிக்கப் பட்டது என்று முன்னமே கூறினோம். அப்பொழுதுதான், காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே ஒரு பெருங்கூட்டம் அவருடன் மாநாட்டை விட்டு வெளியேறிவிட்டது. காஞ்சி மாநாட்டின்போது, அங்கேயே ஈ.வெ.ரா.வின் முயற்சியால் ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. அதன் தலைவர் கோவை திரு. T.A. ராமலிங்க செட்டியார். செட்டியாரைத் தலைமை தாங்கும்படி கூறியபோது ஈ.வெ.ரா.:-தேசத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றிப் பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும். இவ்வாறு பிரிவினை இல்லை யென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங் கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது. பிராமணர், பிராமணரல்லாதார் பிரிவினை இல்லையென்பது உடலில் உள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடல்நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்றமுயல்வதே பொது நோக்குடைய அறிஞர் கடமையாகும். என்று கூறினார். இது ஈ.வெ.ரா.வின் அக்காலக் கொள்கை யையும் உணர்ச்சியையும் காட்டுகின்றதன்றோ? 1925-ம் ஆண்டு வரையிலும் ஈ.வெ.ரா. உண்மையான காங்கிரசுக்காரராகவே இருந்தார். ஒரு தீவிரமான ஒத்துழையா தாரராகவும் இருந்தார். காங்கிரசின் ஆதரவுகொண்டே ஜாதி வேற்றுமையை நிலை நிறுத்தவும், வருணாச்சிரமத்தை ஏற்படுத்தவும் சுயராஜ்யக் கட்சியின் மூலம், பார்ப்பனரல்லாதார் கட்சியையும், அவர்களது தேவைகளையும் ஒழிக்கவும், காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்று கூடி முயற்சி செய்தார்கள். இதைச் சந்தேகமற உள்ளிருந்து உணர்ந்து கொண்டதே ஈ.வெ.ரா. காங்கிரசைவிட்டு விலகியதற்கு முதற் காரணமென்று கூறலாம். கதர் போர்டு நிர்வாகத்திலும் ஈ.வெ.ரா.வே தலைவராக இருந்த போதிலும் K.சந்தானம் என்கின்ற ஒரு பார்ப்பனர் காரியதரிசியாக இருந்ததால், அதிக பார்ப்பனர்களே மிகுதியாக இருந்து வந்ததும் அதன் வருவாய் முழுவதும், அதற்காகச் செலவிடும் பொருளும், பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே பயன்பட்டு வந்ததும் இவருக்குப் பிடிக்கவில்லை. அதற்காகச் செய்த பல போராட்டங்களில் காந்தியார் தலையிட்டதால் ஈ.வெ.ரா. வெற்றிபெற முடியாமல் போனதும் இவர் விலகியதற்கு மற்றொரு காரணமென்று சொல்லலாம். இந்நிலையில், 1926-ம் ஆண்டு நவம்பரில் சென்னை சட்ட சபைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் ஈ.வெ.ரா. வெளிப்படையாக எக்கட்சியினரையும் ஆதரிக்க வில்லை. நல்ல திறமையுடையவர்கள், பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுகிறவர்கள், தன்னலமின்றிப் பொது நலத்துக்கு உழைக்கும் உண்மைக் கருத்துடையவர்கள்- இவர்கள் சட்டசபைக்குச் செல்லும் தகுதி யுடையவர்கள். இத்தகையவர் களையே வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இவருடைய கருத்து. இதையே சொற்கள் மூலமும், பத்திரிகைகள் மூலமும் வெளியிட்டு வந்தார். இச்சமயம் ஒத்துழையாதார் என்று சொல்லிக்கொண்டிருந்த திரு.ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள் சுயராஜ்யக் கட்சியின் வெற்றிக்காக மறைமுகமாக வேலை செய்து வருவதாக ஈ.வெ.ரா. அறிந்தார். பார்ப்பனரல்லாதார் கட்சியைத் தொலைத்துவிட்டுச் சுயராஜ்யக் கட்சியின் பேரால் பார்ப்பனர்கள் அவர் மந்திரிப் பதவிகளில் அமர வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் தெரிந்தார். பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்கள் வகுப்பு நலத்தையேதான் நாடுவார்கள் என்னும் உண்மையை இப்பொழுதுதான் ஈ.வெ.ரா. நன்கு உணர்ந்தார். அரசியலில் பார்ப்பனர்களை ஒரு பொழுதும் நம்பாதீர்கள் என்னும் சர்.பி.தியாகராயரின் மொழியின் உண்மையை உணர்ந்தார். இனி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கே உழைப்பதென்று உறுதி கொண்டார். தாம் எடுத்துக்கொண்ட செயலை இடையில் விட்டுவிடுந் தன்மை ஈ.வெ.ரா.விடம் இல்லை. வெற்றி காணும் வரை உழைப்பார். இவ்வுறுதியில் இவருக்கிணை எவரும் இலர். இவர் காங்கிரசில் இருந்தபோதே இவரே காங்கிர; காங்கிரசே இவர். இவர் வீட்டிலேயே காங்கிர தாபனமிருக்கும். இதுபோலவே எந்த தாபனத்தில், எந்த இயக்கத்தில் இருந்து உண்மையாகத் தொண்டாற்றப் புறப்பட்டாலும் அந்த தாபனத்தையே தம் முடையாக்கிக் கொள்வார். அவரே இயக்கமாக ஆகிவிடுவார். இது அவரது இயற்கைக் குணம். காங்கிரசின் கட்டளைப்படி பலமுறை சிறைபுகுந்தார். மற்றவர்களும் சிறை புகுவதற்கு இவரே வழிகாட்டினார். பல மாநாடுகளில் தலைமை தாங்கினார். எல்லா மாநாடுகளுக்கும் தவறாமல் சென்று வருவார். நாகம்மையாரையும் உடன்கூட்டிச் செல்வார். ஒவ்வோரு அகில இந்தியக் காங்கிரசுக்கும் மனைவியுடன் சென்று வந்தார். இவ்வளவு தியாகஞ் செய்தவர்கள் இன்றைய காங்கிரசில் எவரும் இலர். திரு. நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் தம் கருத்தை நிறைவேற்றும் பொருட்டு இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாரா யிருக்கிறார். என்று 1928-ல் பனகல் அரசர் ஈ.வெ.ரா.வைப்பற்றிக் கூறினார். இத்தன்மை விளையாட்டு பருவமுதல் அவரிடம் வளர்ந்து வந்தது என்பது பலருக்கும் தெரியும். இவர் 1926-க்குப் பின் காங்கிரசை முழுவன்மையுடன் எதிர்த்தே வருகிறார். சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் 1926 நவம்பரில் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சி படுதோல்வி யடைந்தது. சுயராஜ்யக் கட்சியினர் சென்னையில் மந்திரி பதவி ஏற்க முயன்றனர். அவர்களுள் யார் முதல் மந்திரியாவதென்ற குழப்பம் வளர்ந்தது. இதனால் மந்திரிசபை அமைக்காமல் விட்டனர். இச்சமயம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் சுயேச்சசைக் கட்சியின் பேரால் மந்திரி சபையை அமைத்தார். இம்மந்திரி சபையைச் சுயராஜ்யக் கட்சியினர் பின்னிருந்து தாங்கினர். தோல்வியடைந்த நீதிக்கட்சியினர் படுத்துவிட்டனர். தலைவர்கள், இவ்வளவுதான் நமது அரசியல் வாழ்வு என்று எண்ணி வீட்டுக்குள் உட்கார்ந்துவிட்டனர். ஆனால், ஈ.வெ.ரா. சிறிதும் தளர்ச்சியடையவில்லை. தோல்வியையும் நன்மைக்கே என்று வீரமுழக்கஞ் செய்தார். இராமசாமியார் அளித்த ஊக்கம் ஒரு மாநாடாக உருவெடுத்தது. 1926 டிசம்பர் 25, 26ஆம் நாட்களில் மதுரையில் மாகாண பார்ப்பன ரல்லாதார் மாநாடு கூடிற்று. இதைக் கூட்டியவர் காலஞ்சென்ற உத்தம பாளையம் பெருநிலக்கிழார், M.T. சுப்பிரமணிய முதலியார். சர்.A.P.பாத்ரோ இம் மாநாட்டின் தலைவர். மாநாட்டில் அளவு கடந்த ஊக்கம் தாண்டவமாடிற்று. தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். தொண்டர் அனைவரும் திரண்டிருந்தனர். எண்ணற்ற காங்கிரகாரர்களும் இதில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டுப் பழம்பெரும் தலைவர் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, சாத்தூர் சுப்பிரமணிய நயினார், ஜியார்ஜ் ஜோசஃப் முதலியவர்களும் வந்திருந்தனர். இம்மாநாட்டினால் பார்ப்பன ரல்லாதார் இயக்கம் புத்துயிர் பெற்றது; ஓங்கி உரம்பெற்று வளர்ந்தது. இக்காலத்திலும் ஈ.வெ.ரா. கதர்ப்பணி புரிந்துவந்தார். இம் மாநாட்டிலும் கதரை ஆதரித்து நிறைவேற்றச் செய்தார். இதன்பின் நீதிக்கட்சியினர் பலரும் கதர் கட்டத் தொடங்கினர். பின்னர், நாடெங்கும் பல பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன. ஈ.வெ.ரா. எங்கும் சென்று சொல்மாரி பொழிந்து வந்தார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு இவர் புத்துயிர் கொடுத்ததைப் பற்றிச் சர்.ஏ.ராமசாமி முதலியார் கூறியிருப்பது இது:- பார்ப்பனப் பத்திரிகைகள் நம்மீது பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன. நீதிக்கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி என்று பாமர மக்களிடம் கூறி, நம்மீது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கிவிட்டன. இந்நிலையில் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமது இயக்கத்தின் உண்மையை எடுத்துச் சொல்லி உயிர் கொடுத்தார். அன்றியும், 1815ஆம் ஆண்டில் பிரெஞ்சு தேசத்தில் ரூஸோ என்பவர் அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்ததுபோல், நம் நாட்டில் சுயமரியாதையைக் காக்க உழைக்கும் நமது நாயக்கர், தமிழ்நாட்டின் ரூஸோ ஆவார். இவ்வாறு 1927 ஜூலையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கூறினார். இந்த நாளில், அதாவது 1927 ஜூலையில் கோவையில் பார்ப்பனரல்லாதார் விசேஷ மாநாடு ஒன்று கூடிற்று. இதன் தலைவர் திருநெல்வேலி S. குமாரசாமி ரெட்டியார் அவர்கள். இம்மாநாட்டிற்குத் திரு.வி.க. டாக்டர் பி.வரதராஜூலு, சர்.ஆர்.கே. ஷண்முகம், சுரேந்திரநாத் ஆரியா முதலியவர்கள் வந்திருந்தனர். இவர்கள் நீதிக்கட்சியினர், காங்கிரசில் சேர்ந்து அதைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினர். நீதிக்கட்சித் தலைவர்களும் இதற்கிணங்கினர். ஆனால், ஈவெ.ரா.வும் மற்றைய பெருந்திரளான நீதிக்கட்சியினரும் இதற்கிணங்கவில்லை. கடைசியில் ஈ.வெ.ரா. விட்டுக் கொடுத்ததனால் காங்கிரசில் நீதிக் கட்சியினர் தனிப்பட்ட முறையில் இஷ்டப்பட்டவர்கள் சேரலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. ஆனால், இறுதியில் அத்தீர்மானத்தில் ஒன்றும் பயன் விளையவில்லை. இம்மாநாட்டில், சென்னை கவர்னர்மீது நம்பிக்கை இல்லையென்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது குறிப்பிடத் தக்கதாகும். இத்தீர்மானத்திற்கு, பாராளு மன்றத்தினர் சென்னை கவர்னரைத் திருப்பியழைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு திருத்தத்தை ஈ.வெ.ரா. கொண்டு வந்தார். இதை மாநாட்டினர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், மாநாட்டுத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஈ.வெ.ரா. இத்திருத்தத்தைப் பின்வாங்கிக் கொண்டார். இம்மாநாட்டிற்குப் பின் நீதிக்கட்சியின் பிரசாரம் நாடெங்கும் மும்முரமாக நடை பெற்றது. பொதுமக்களும் பேராதரவு புரிந்து வந்தனர். பின்பு திரு.ஏ.ராமசாமி முதலியார் காங்கிரசில் சேர்ந்தார்; கதர் உடுத்தினார். அவரை அ.இ.கா. கமிட்டிக்கு தெரிந்தெடுக்க மறுத்து விட்டார்கள். மெம்பர் சேகரிக்கும் ஃபாரங்களையே பத்திரப்படுத்தி விட்டார்கள். அதிலிருந்து ஜடி கட்சிக்குக் காங்கிர மோகம் விட்டுப் போயிற்று. இக்காலத்தில், நாம் சுயமரியாதை யடைந்தால்தான் அரசியல் உரிமை பெறத் தகுதியுடையவராவோம். முதலில் நாம் சுயமரியாதை பெறவே முயற்சிக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. சுறி வந்தார். நமது மூடநம்பிக்கையும் முட்டாள்தனமும் நம்மைவிட்டு விலகி, சுயமரியாதை அடைந்தபிறகுதான் நாம் ஆட்சிபுரிவதற்கு உரியவர்களாவோம். நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்து விட்டபின்தான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை உண்டு. ஒரு மனிதனைப் பார்த்துப் பிராமணன் என்று சொல்லுவதனாலேயே நாம் தாழ்ந்த ஜாதியென்பதையும், சூத்திரர் என்பதையும், நாமே ஒப்புக் கொண்டவர்களாகிறோம். இதைப்பற்றிக் கவலையில்லா மக்களுக்குச் சுயராஜ்யம் எதற்காக? காங்கிர எதற்காக? சங்கங்கள் எதற்காக? பொதுநலச் சேவை என்கிற வேஷம் எதற்காக? இது ஈ.வெ.ரா.வின் 1927 ஆம் ஆண்டு சுயமரியாதைப் பிரசாரம். ஈ.வெ.ரா. காங்கிரசில் இருந்து விலகிய 1925ஆம் வருஷம் முதல் 2 ஆண்டு தீவிரமாய் பிரசாரம் மூலமும், குடி அரசு மூலமும் ஜாதி ஒழிப்பு பிரசாரம் செய்ததன் பலனாய் பார்ப்பனர்கள் பயந்து காந்தியாரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து வருணாசிரம பிரசாரம் செய்யும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். ஆகவே காந்தியார் தென்னாட்டுக்கு வந்து பல இடங்களில் வருணாச்சிரமத் தர்மத்தை ஆதரித்துப் பேசினார். இதற்கோர் எடுத்துக்காட்டு:- ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத்தார் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். அவைகளை அவன் சரிவர நிறை வேற்றும் போது அவன் உயந்தவனாகிறான். ஜன சேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம். எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம். அந்தத் தர்மத்தை அவன் செய்யும் போது அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வருணத்தினர்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை, கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர் களாகின்றார்கள். இப்படியிருக்கையில், உயர்வு - தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாச்சிரம தர்மமானது சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல. இவ்வாறு திரு. காந்தியார் மைசூரில் பேசியதாக 1927ம் ஆண்டு ஆகடில் வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. வருணாச்சிரமத்தை வைத்துக்கொண்டே தீண்டாமையை ஒழிக்கலாம் என்ற காந்தியாரின் கருத்தை இப் பேச்சு தெளிவாய்க் காட்டுகிறது. ஈ.வெ.ரா.வோ, வருணாச்சிரமம் ஒழிய வேண்டுமானால், அதற்கு அடிப்படையானவைகளையும் ஒழிக்கவேண்டுமென்று கூறி வந்தார். இது சம்பந்தமாக ஈ.வெ.ரா.வும், திரு.காந்தியாரும் 1927ஆம் ஆண்டில் கலந்து பேசினர். திரு.எ.ராமநாதன் அவர்களும் உடனிருந்தார். திரு.காந்தியா ருக்கும், தமக்கும் நடந்த விவாதம் பற்றி ஈ.வெ.ரா. குடி அரசில் எழுதியுள்ளது வருமாறு: முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் மகாத்மாவிடம் நானும், நமது நண்பரான திரு.எ.ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது, என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம். அதாவது, ஒன்று காங்கிர என்பதை ஒழிக்கவேண்டியது. இரண்டாவது, ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது. மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும். இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதா யில்லை யென்றும் சொல்லி மகாத்மாவினிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம். (28.08.1927 - குடி அரசு தலையங்கம்) இதற்குப்பின் திரு.காந்தியாரிடம் இவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் விட்டுவிட்டார். காந்தியாரின் போக்கையும் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கினார். நாளடைவில் கதர் இயக்கத்திலிருந்த பற்றும் குறைந்தது. கதர் நாலாஞ்சாதியான சூத்திரர்கள்-என்றும் கீழ்நிலை யிலேயே இருப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட சூழ்ச்சி தத்துவம் ஆகும் என்பது ஈ.வெ.ரா. கருத்து. இது ஒரு வருணாச்சிரம தர்ம திட்டமே ஆகும் என்று கண்டார். மற்றும், கதர் இலாகா பார்ப்பனர்களின் உத்தியோக சாலையாக இருப்பதைக் கண்டித்தார். இந்த முயற்சியில் திரு.எ.ராமநாதன் அவர்களும் தீவிர பங்கெடுத்துக்கொண்டு, கதர் ஒரு பொருளாதாரத் திட்டமல்லவென்பதைப் பல புள்ளி விவரங்களுடன் நிரூபித்துக் காட்டினார். கதரின் மூடநம்பிக்கை என்ற ஒரு புத்தகமும் எழுதினார். அவைகளை எவராலும் இது வரை மறுப்பதற்கு முடியவில்லை, இன்று அவராலும் மறுக்க முடியவில்லை. ஈ.வெ.ரா. இதுவரை மதுவிலக்குக்கு ஆக ஈரோட்டில் ஒரு தரமும், கதர் பிரசாரத்துக்கு ஆகச் சென்னையில் ஒரு தரமும், தீண்டாமை விலக்குக்கு, சத்தியாக்கிரகம் செய்ததற்கு ஆக திருவாங் கூரில் (வைக்கத்தில்) இருமுறையும் ஆக 4 முறை சிறைப்பிடிக்கப்பட்டதை மேலே குறிப்பிட்டோம் அல்லவா? தொழிலாளர்களுக்கு ஆக சிறைப்பட்டதையும் கூறுவோம். 1927ல் நாகப்பட்டணத்தில் உள்ள ரயில்வே ஒர்க்ஷாப் தொழிலாளர்கள் ஒரு பெரிய வேலைநிறுத்தம் செய்தார்கள். அத்தொழிலாளர்களில் அதிகம்பேர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். ஈ.வெ.ரா.விடம் அதிக பக்தியும், மரியாதையும் கொண்டவர்கள். அவர் களுடைய சங்கம் மிக்க ஒழுங்கு முறைப்படி நடந்துவந்தது. அதில் காங்கிரசை ஆதரிப்பவர்களும் சிலர் உண்டு. நாகப்பட்டணத்து ஒர்க்ஷாப்பைப் பொன்மலைக்கு மாற்றும் விஷயத்தில் ரயில்வேக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட சில நிபந்தனைகள் தொழிலாளர்களுக்குச் சற்றுக் கஷ்ட மாகவும், அநீதியாகவும் தோன்றிற்று. அதில் கம்பெனியாருக்கும், தொழிலாளி களுக்கும் தகராறு ஏற்பட்டது; இந்தச் சமயத்தில் ஈ.வெ.ரா. நாகப்பட்டணம் சென்று தொழிலாளிகளை இணங்கிப் போகும் படிச் சொன்னார். அப்பொழுது ஜடி கட்சி ஆட்சியாக இருந்ததால் காங்கிரகாரர்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் ஜடி கட்சியாருக்குக் கெட்டபேர் உண்டாக்கு வதற்கு ஆகத் தொழிலாளர்களை இணங்க வொட்டாமல் செய்து வேலை நிறுத்தம் செய்யும்படித் தூண்டி விட்டார்கள். ஈ.வெ.ரா.வுக்குச் சிறிதும் இஷ்டமில்லாத நிலைமை யில் அவர் எவ்வளவோ தடுத்தும் திடீரென்று தொழிலாளிகள் வேலை நிறுத்தம் (டிரைக்) செய்துவிட்டார்கள். தென்இந்தியாவில் உள்ள அனேக ஒர்க்ஷாப்புகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. பொது உடைமைக்காரர்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துவதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ரயில் தண்டவாளங்கள் பிடுங்கப் பட்டன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன; பலாத்காரங்கள் மலிந்துவிட்டன; ரயில் போக்குவரவும் தடைப்பட்டு விட்டன. பிறகு இயற்கையாகவே அடக்குமுறை வலுத்துவிட்டது. காங்கிரகாரர்கள் ஜாடையாய் விலகிக்கொண்டார்கள். காங்கிர பத்திரிகைகள் பல்ட்டி அடித்து, ரயில்வே கம்பெனியாரை ஆதரிக்கவும் வேலை நிறுத்தத்தைக் குறைகூறவும் ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் ஈ.வெ.ரா. பத்திரிகையான குடி அரசு திராவிடன் (தினசரி) ஆகிய இரண்டு பத்திரிகைகள் மாத்திரம் ஆதரித்ததோடு, ஈ,வெ.ரா.வும், ஆங்காங்குச் சென்று, சொற்பொழிவாற்றித் தொழிலாளிகளுக்கு ஆதரவும், பொருளுதவியும் செய்யும்படி வேண்டிக்கொண்டார். கடைசியில் சர்க்கார் பொதுக்கூட்டங்கள் கூட்டப்படக் கூடாது என்றும், யாரும் பேசக்கூடாது என்றும் தடை உத்தரவைப் போட்டார்கள். ஈ.வெ.ரா. அத்தடையுத்தரவை மீறி கூட்டம்போட்டு, அதில் சொற்பொழிவு நிகழ்த்தி சர்க்காரையும், ரயில்வேக்காரரையும் கண்டித்துப் பேசினார். சர்க்கார்-ஈ.வெ.ரா.வையும், மற்றும் கண்ணப்பர் ஈவரன், மாரியப்பன், சுப்பு முதலிய பல தோழர் களையும் கைதாக்கி சிறைசெய்து வழக்குத் தொடர்ந்தார்கள். ஈ.வெ.ரா.வும் தோழர்களும் சிறிதுகாலம் சிறையிலிருந்தார்கள். வழக்கில் ஈ.வெ.ரா. எதிர்வழக்காடுவதில்லை என்றும், வழக்கில் கலந்து கொள்ளுவதில்லை என்றும் சொல்லி விட்டார். வழக்கு விசாரணையில் பெரிய செக்ஷன்கள் போட வேண்டியதாக ஏற்பட்டுவிட்டது. குற்றப்பத்திரிகைள் வாசித்தாய் விட்டன. டிஃபென்சுக்கு வாய்தாபோடப்பட்டு தண்டனை சொல்ல வேண்டியது மாத்திரம் பாக்கியாக இருந்தது. வாய்தா தேதியில் சிறை செல்லத் தயாராகவும், வருஷக்கணக்கில் தண்டனை ஏற்படுமென்ற முடிவுடனும் எதிரிகள் கோர்ட்டுக்கு வந்தார்கள். கோர்ட்டில் ஏராளமான கூட்டம் இருந்தது. தண்டனை சொன்னவுடன் பூமாலைகள் போட பலர் மாலைகளுடன் வந்திருந்தனர். நீதிபதி குற்றவாளியைக் கூப்பிட்டுக் கூண்டில் நிறுத்தியதும், உங்கள்மீது ஏற்பட்ட குற்றச்சாட்டை சர்க்கார் பின்வாங்கிக் (வித்திட்றா செய்து) கொண்டார்கள். நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார். ஈ.வெ.ரா. மிக்க மனவருத்தத் துடன் வீடு திரும்பினார். இது அய்ந்தாவது தடவை எனலாம். 1927-ல் இந்தியாவுக்கு அரசியல் உரிமை வழங்குவது பற்றி ஆராய ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதற்குச் சைமன் கமிஷன் என்று பெயர். இதில் இந்தியர்கள் யாரும் நியமனம் பெறவில்லையன்று கூறிக் காங்கிரகாரர்கள் இதை எதிர்த்தனர். இந்தக் கமிஷனுடன் ஒத்துழைக்கக்கூடாதென்று கூறினர். இதுசமயம் டாக்டர் சுப்பராயன் மந்திரிசபையில் தகராறு வளர்ந்தது. அவருடைய கூட்டு மந்திரிகள் இராஜிநாமாச் செய்யும் படியான நிலைமை ஏற்பட்டது. இச்சமயம் நீதிக்கட்சியின் கூட்டுறவின்றி மந்திரிசபை அமைக்க இடமில்லாமற் போய் விட்டது. நீதிக்கட்சியாரும், சுயமரியாதைக் கட்சியாரும் இம் மந்திரிசபைக்கு ஆதரவு தந்தனர். 1928 மார்ச் மாதத்தில் டாக்டர் சுப்பராயன் அவர்களின் புதிய மந்திரிசபை அமைந்தது. இதில் திரு.S. முத்தையா முதலியாரும், திரு.சேதுரத்தினம் அய்யரும் மந்திரிகளாக இடம் பெற்றனர். இதற்குப் பெயர் சுயேச்சை மந்திரிசபை. ஆனால், இது நீதிக்கட்சியின் சொற்படிதான் ஆடிற்று. அக்கட்சியின் திட்டங்களையே நடத்தி வைத்தது. ஈ.வெ.ரா காஞ்சிபுரம் மாநாட்டில் தெரிவித்துவிட்டு வெளியில் வந்தபடி வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை சர்க்கார் ஏற்றுக் கொண்டார்கள். மந்திரி திரு. S. முத்தையா முதலியார் தமது அபார முயற்சியால் அதைச் சர்க்கார் திட்டமாக ஒப்புக் கொள்ளச் செய்து, ஒரு அளவு அனுபவத்திலும் கொண்டுவந்து வைத்து விட்டார். இச்சமயம் சுரேந்திரநாத் ஆர்யா அவர்களால் பார்ப் பனரல்லாதார் வாலிபர் இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கு ஒவ்வொரு நகரத்திலும் கிளைகள் உண்டாயின. ஈ.வெ.ரா.வின் கொள்கையைப் பின்பற்றிச் சமூக சீர்திருத்த வேலை செய்து வந்தது இவ்வியக்கம். அரசியல் ஆராய்ச்சி செய்ய வந்த ராயல் கமிஷனை ஈ.வெ.ரா. வரவேற்க வேண்டுமென்று கூறினார். காங்கிரகாரர்களைத் தவிர, மற்ற அரசியல் கட்சியினர் என்ன செய்வதென்று தோன்றாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நீதிக்கட்சியினரும், தடுமாறிக் கொண்டிருந்தனர். ஆனால், ஈ.வெ.ரா. ஒருவரே அஞ்சாமல் கமிஷனை வரவேற்க வேண்டும் என்று முதன் முதலாகக் கூறினார். இது சம்பந்தமாக நீதிக்கட்சியினருக்கு அவர் கூறியதாவது:- பகிஷ்காரக் கூட்டத்தில் ஜடி கட்சியாரும் சேர்ந்து கொண்டால் தேவலாம்போல் அக்கட்சிப் பிரமுகர்களுக்குத் தோன்றுவதாய்த் தெரிகின்றது. அவர்கள் அப்படி நினைத் திருப்பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம்... இம்மாதிரி மனக்கிலேசங்கள் வரும்போது உண்மைத் தலைவர் களான டாக்டர் நாயர் பெருமானையும்; சர்.தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா?... முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால், பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள், தங்களைக் காங்கிர தலைவர்கள் என்பவர்கள்போல், தங்கள் பெண்டு, பிள்ளை, குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும், அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு, வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக் கும், தொழிலாளிகளுக்கும் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளு கிறோம். (11.12.1927 குடி அரசு தலையங்கம்) இவ்வெச்சரிக்கைக்குப் பிறகுதான் நீதிக்கட்சியினர் கமிஷனை வரவேற்கத் துணிந்தனர். ஈ.வெ.ரா. இக்கமிஷனை வரவேற்க வேண்டும் என்று கூறியதைக் காங்கிரகாரர்களும், அவர்கள் பத்திரிகைகளும் எதிர்த்தனர். இவர்மேல் வசைமாரி பொழிந்தனர். இவரா அவைகளைப் பொருட்படுத்துகிறவர்? சைமன் கமிஷன் எதிர்ப்பு என்பது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் போராட்டம் என்று அய்ந்தாறு தலையங்கங்கள் எழுதினார். பதினாயிரக் கணக்கான துண்டும் பிரசுரம் வெளியிட்டார். பிறகு நாளடைவில் காங்கிரசின் ஒத்துழையாமைக் கூச்சலும் பொருளற்று ஒழிந்தது. காங்கிர காரர்களே வேறுவேறு பெயர்களால் கமிஷனை வரவேற்றனர். நமது நாட்டில் இருந்த வகுப்புச் சங்கங்கள் எல்லாம் கமிஷனை வரவேற்றன. எல்லா மத நிலையங்களும் வரவேற்றன. மிதவாதிகள் வரவேற்றனர். பார்ப்பனர்களையே அதிகம்கொண்ட வருணாச்சிரம, சநாதன சங்கங்கள் வரவேற்றன. வக்கீல் சங்கங்கள் வரவேற்றன. எல்லா மாகாண முலீம்களும் வரவேற்றனர். நீதிக்கட்சியினரும் வரவேற்றனர். சென்னையில் இக்கமிஷன் வேலை வெற்றியுடன் முடிந்ததற்கு ஈ.வெ.ரா.வே காரணமாவார். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தது போல், 16.12.1928-ல் திடீரென்று நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் இறந்தார். இதனால் நீதிக்கட்சிக்கு பேரிழப்பு நேர்ந்தது. பார்ப்பனரல்லாத மக்களனைவரும் மனமுடைந்தனர். இச்சமயம் ஈ.வெ.ரா. எழுதியதைப் பாருங்கள்:- ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவுபெற்றதால், பெரியதும், திறமையானதுமான ஒரு யுத்தம், முனைந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர் பார்த்துத் திரும்பியபோது; சேனாதி பதி இறந்துபோய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால் அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படித் துடிக்குமோ அதுபோல நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள். ஆனாலும், இதற்காக மனமுடைந்து போகாமல், இந்த நிவர்த்தி யில்லாததும், துக்ககரமானதுமான சந்தர்ப்பத்தையும், இதுவும் ஒரு நன்மைக்காக என்பதுபோல் கருதி, அதை அந்தப்படி உபயோகித்துக் கொள்வதுதான் அறிவுடைமை யாகும். அன்றியும் அதுதான் அறிவும், வீரமும், தியாகமும், உறுதியும் கொண்ட தலைவரால் நடத்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு ஏற்ற குணமாகும். (23.12.1928 குடி அரசு தலையங்கம்) ஈ.வெ.ரா. தாம் எழுதியதுபோலவே முன்னிலும் தளராது இயக்கத்திற்காக உழைத்து, பனகல் அரசர் இறந்ததால் இயக்கம் தளர்ந்து போய் விடவில்லை என்று மக்கள் உணரும்படி ஊக்கம்ஊட்டி வந்தார். இதன் பலனாக 1929 பிப்ரவரி மாதம் 17, 18 ஆம் நாட்களில், செங்கற் பட்டு முதல் மாகாணச் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டின் தலைவர் தோழர் W.P.A. சவுந்தரபாண்டியன் அவர்கள். இம்மாநாட்டிற்குச் சமூக சீர்திருத்தத்தில் ஆர்வங்கொண்ட பதினாயிரக் கணக்கான மக்கள் வந்து குழுமியிருந்தனர். தீண்டாமை, ஜாதிபேதம் ஒழிப்பது, மதக் குறிகளை விட்டுவிடுதல், ஜாதியைக் குறிக்கும் பட்டப்பெயர்களை நீக்குதல், புரோகிதத்தை அடியோடு நீக்குதல், கோவில்களில் பூஜை செய்யத் தரகர் கூடாது, கடவுள் வணக்கத்திற்காக ஒரு காசுகூடச் செலவிடக் கூடாது, பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பது என்பவை போன்ற பல தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேறின. இம்மாநாட்டில் கொடியேற்று விழா செய்த சர்.பி.டி.ராஜன் அவர்கள் கூறியது இதுவாகும்:- மனிதனுக்கு மனிதன் வேற்றுமையையும், வகுப்புக்கு வகுப்புப் பிரிவினையையும் உண்டாக்குகிற ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டையும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஒரு கட்டுப்பாட்டையும், சமூகத்தில் பெரும்பாலோரை ஆடு மாடு களுக்கும் கேவலமாய் நடத்துவதற்கு ஏதுவான கட்டுப்பாட்டையும், கோயில்களுக்குள் அதைச் சேர்ந்தோர்கள் செல்லக்கூடா தென்று தடுக்கும் கட்டுப் பாட்டையும், பெண்களை ஒதுக்கி அடிமை போல் நடத்துவதற்கு இடங்கொடுக்கிற கட்டுப் பாட்டையும், மற்றும் இவை போன்றவைகளையும் ஒழிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சுயமரியாதை இயக்கம் நடைபெற்றது. அதே மாநாட்டை அச்சமயம் முதல் மந்திரியாயிருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் திறந்துவைக்கும் போது கூறியது இது: எனது நண்பர் திரு.ஈ.வெ.ரா. ராமசாமி நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் நன்றாக வேரூன்றி அசைக்க முடியாதபடி நிலையோடு நிற்பதோடல்லாமல், அது பெரும்பான்மையான மக்களைத் தன்னுள் கவர்ந்து கொண்டு வருவதைக் காணக்காண நான் அளவிட முடியாத மகிழ்ச்சி யடைகிறேன். மாநாட்டின் தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்கள் தமது தலைமையுரையில் கூறியுள்ளதையும் கவனியுங்கள்: சமதர்மக் கடனாற்ற ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றமடைந்து வருங்கால், அவ் வியக்கத்திற்குத் திடீரென நற்காலம் கிட்டியது. மக்களிடையே செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அச்சந்தர்ப்பம் எது? அதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வீர கர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன் பல விளைத்து வருபவரான நமது மாபெரும் தலைவர் உயர்திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களால் சுயமரியாதை வேதம் மக்களிடையே பரவ ஆரம்பித்த புண்ணிய தினத்தையே யான் இங்குக் குறிக்கிறேன். எனது தலைவர் திரு. நாயக்கர் அவர்கள் அனுபோகசாலி; ஆராய்ச்சியாளர்; அவர் நாடெங்கும் சுற்றி மக்களின் குணங்கள் யாவற்றையும் தீர உணர்ந்துள்ளார். இவ்விதம் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட நமது இயக்கத்தின் சிறப்பை அதிகம் விவரித்துத் தற்பெருமை கொள்ள நான் விரும்பவில்லை. இந்த மாநாட்டுத் தீர்மானங்கள் பல நீதிக்கட்சி வைதீகர் களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர்கள் சமுதாயச் சீர்திருத்தத்தில் மேம்போக்காகவே நடந்து கொண்டனர். இம்மாநாட்டிற்குப்பின் பல எதிர்ப்புகள் தோன்றின. ஈவெ.ரா.வை நாதிகர் என்றும், தேசத் துரோகி என்றும், மதத் துரோகி என்றும் எதிரிகள் வசை கூறினர். அவர் தோழர்களையும் தூற்றி வந்தனர். எதிரிகளுக்கு எண்ணற்ற பத்திரிகைகள் இருந்தன. சுயமரியாதை இயக்கத்தைத் திட்டுவதற்கே, பார்ப்பனர்கள் உதவிகொண்டு, தேசபந்து என்ற ஒரு வாரப் பத்திரிகை நடந்தது. அதற்குக் காங்கிர நிதியிலிருந்து பண உதவி செய்யப்பட்டது. பார்ப்பனர்கள் தாராளமாகப் பணஉதவி செய்தார்கள். ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் முதன்மையான பத்திரிகை குடி அரசு ஒன்றே. ரிவோல்ட் என்னும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றும் ஈரோட்டிலிருந்து கொஞ்ச காலம் வெளிவந்தது. இதன் ஆசிரியர் களாக முதலில் ஈ.வெ.ரா.வும், திரு. எ. இராமநாதன்,எம்.ஏ., பி.எல்., அவர்களும், பின்னர் திரு. எ.குருசாமியும் இருந்தனர். இது 1928-ல்தான் தொடங்கப் பட்டது. சென்னையில் நடைபெற்ற திராவிடன் தினசரி, ஈ.வெ.ரா.வின் மேற்பார்வையில் நடந்தது. ஈ.வெ.ரா.வும், திரு.ஜே.எ. கண்ணப்பரும் இதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். தமிழ்நாடு இளைஞர்களையெல்லாம் சுயமரியாதை இயக்கம் தன் வசமாக்கிவிட்டது. வயதேறிய ஈ.வெ.ரா. இளைஞர் தலைவராக விளங்கினார். காங்கிரசு இளைஞர்கள் பலரும் இவ்வியக்கத்திற் சேர்ந்தனர். ஜாதி உயர்வு பாராட்டிக் கொண்டிருந்தவர்கள் வயிற்றில் இடி விழுந்தது. பார்ப்பனர்களுக்கு இருந்த மரியாதை ஒழிந்தது. சமயத்தின் பேரால் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள் உட்கார்ந்து விட்டனர். சடங்குகளின் பேரால் கொள்ளை யடித்தவர்கள் ஒடுங்கிவிட்டனர். இச்சுயநலக் கூட்டத்தார் அனைவரும் இயக்கத்தை எதிர்த்தனர். இக்காலத்தில் திருவாளர்கள் டாக்டர் சுப்பராயன், சர்.ஷண்முகம், சர்.பன்னீர்செல்வம், எம்.கே.ரெட்டி, சர்.ஏ.ராமசாமி முதலியார், எ.முத்தையா முதலியார், சவுந்தரபாண்டியன், நாகர்கோயில் பி.சிதம்பரம், சிவகங்கை எ.ராமச்சந்திரன் சேர்வை, சி.டி.நாயகம், எ.ராமநாதன் போன்ற தலைவர் களெல்லாம் சுயமரியாதை மாநாடுகளிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். எதிரிகளுக்குத் தக்க பதில் கூறிவந்தார்கள். இயக்கத்தின் உண்மையைப் பொதுமக்களுக்குக் கூறி வந்தார்கள். தோழர்களான எ.குருசாமி, சாமி சிதம்பரனார், ஆ.பொன்னம்பலனார், கே.வி.அழகர்சாமி, ஏ.எ.அருணாசலம், சொ.முருகப்பர், எ.வி.லிங்கம், சி.ஏ.அய்யாமுத்து, மாயவரம் சி.நடராஜன், நாகை மணி, என்.பி.காளியப்பன், பி.எ.தண்டபாணி, ச.ம.சி.பரமசிவம்,கோவை ஏ.ஆர்.சிவானந்தம், அருப்புக்கோட்டை கருப்பையா, சித்தர்க்காடு ராமையா, திருமதி. ராமாமிர் தத்தம்மாள், ஜே.எ.கண்ணப்பர், பூவாளூர் செல்வகணபதி போன்ற பலர் நாடெங்குஞ் சுற்றி எதிரிகளின் வாயை அடக்கி வந்தனர். இவ்வியக்கத்தின் பலனாகப் பல கலப்புத் திருமணங் களும், விதவைத் திருமணங்களும் நடைபெற்றன. முருகப்பா-மரகதவல்லி திருமணம்; குருசாமி-குஞ்சிதம் திருமணம்; சிதம்பரனார்-சிவகாமி திருமணம்; இரத்தினசபாபதி-அன்னபூரணி திருமணம்; இராம சுப்ரமணியம்-நீலாவதி திருமணம் போன்ற பல திருமணங்களும் இவ்வியக்கத்தின் பலனாக நடைபெற்றவை களேயாகும். புரோகிதமற்ற திருமணங்கள் எங்கும் கணக்கில்லாமல் நடந்தன. பலர் தங்கள் சாதிப் பெயர்களைத் துறந்தனர்; சமயக் குறிகளை மறந்தனர். ஆயிரக்கணக்கானவர் திதி கொடுக்கும் மூடவழக்கத்தை உதறினர். இவைகளெல்லாம் வைதீகர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டன. அவர்கள் தங்களால் முடிந்த வரையில் எதிர்க்கூச்சல் போட்டனர். இக்காலக் குடி அரசில் இராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி முதலியவையும் மற்றும் பல புராண ஆராய்ச்சிகளும் வெளிவந்தன. இதைக்கண்டு பொறாத சைவப் பண்டிதர்கள் பலர், வைணவப் பண்டிதர்கள் பலர் ஈ.வெ.ரா.வை எதிர்த்தனர். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் கண்டித்தனர். இவர்களின் கண்டனங்களெல்லாம், தோழர்களான கைவல்ய சாமியார், சீதா சாமியார், சி.ஏ.அய்யாமுத்து, சிதம்பர முத்தரையர், ஞானானந்தன், சாமி சிதம்பரனார், எ.குருசாமி, சந்திரசேகரப் பாவலர் முதலி யவர்களின் எழுத்துக்களால் தவிடு பொடியாயின. ஈ.வெ.ரா.வோ சிறிதும் பின்வாங்காமல், மத-சமூக-புராண ஊழல்களைப் பற்றியும் குடி அரசில் விடாமல் எழுதிவந்தார். மாதத்தில் 20 நாள் சுற்றுப்பிரயாணம் செய்து, பொது மேடைகளில் விரிவுரையாற்றி வந்தார். வைதீகர்களெல்லாம் இந்த இயக்கத்தை எப்படியாவது அடக்காவிட்டால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமென அஞ்சினர். பெரிய மடாதிபதிகளெல்லாம் ஈ.வெ.ரா.வைத் தங்கள் வழிக்கு எப்படியாவது இழுக்கவேண்டு மென்று கவலையுற்றனர். இது சம்பந்தமாகத் தம்மை வந்து சந்திக்கும்படி சிருங்கேரி மடத்துச் சங்கராச்சாரியார் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு திருமுகம் விடுத்தார். அது கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதன் மொழி பெயர்ப்பும், அதுபற்றி ஈ.வெ.ரா. எழுதிய குறிப்பும் 1930 மார்ச் 2ம் நாள் வெளிவந்த குடி அரசில் உள்ளது. திரு.சங்கராச்சாரியார் கடிதத்தில் உள்ள சில முக்கிய பகுதியை மட்டிலும் கீழே தருகிறோம்:- ... ...எல்லோருக்கும் சேமம் உண்டாகும்படிக்கும், பாரபட்ச மில்லாமல் படிக்கும் சாதிர எல்லைகள் நடவாமல் படிக்கும்... எல்லோருக்கும் பிரமானந்தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம் இருக்கிறது. கர்மகாண்டத்தில் அவரவர்கள் நன்றாய்க் கடமைகளை செய்து நடந்து... பிரம்மானந்த சாட்சாத்காரம் அடையச்செய்வதே விரமமாகக்கொண்ட இந்தக் குருபீடமானது... சிஷ்யர்களை ஏற்படுத்திச் சதாசாரத்தில் பழக்கி சந்நியாசம் அளிப்பது வழக்கமாயிருக்கிறது. காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து சாத்தியமானவரையில், சிஷ்யர்களைச் சன்மார்க்கத் திலும், சதாசாரத்திலும் நடத்திச் சந்தோஷ மாயிருக்கச் செய்து கொண்டு வருகிறது. இன்னும் காலதேச வர்த்தமானத்தை யோசித்து சாதிரங்கள் இடங்கொடுத்திருக்கிற வரையிலும்... சிஷ்யர்களுக்குச் சில சுதந்தரங்களையும் இந்த ஜகத்குரு சமதானம் கொடுக்கவேண்டியது அவசியமாகத் தோன்றி யிருக்கிறது. நீங்கள் நெடுநாளாய்ப் பாரபட்சமின்றியும், தாட்சண்யங் களுக்கு உட்படாமலும், ஜீவகாருண்யமுள்ளவராயும் வய நன்மையைக் கருதாமல், லோக நன்மையையே முக்கியமாகக் கருதி, சுக துக்கங்களைப் பாராமல் மானாவமானத்தைக் கவனியாமல், ஜன்மமெடுத்ததற்குப் பரோபகாரமே சாதனமென்று கருதி, உங்கள் தர்மபத்தினி சமேதரராய்ப் பாடுபட்டு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கியிருக்கிறது. உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி, எங்கள் அபிப் பிராயங்களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சஹாயஞ் செய்து அநுக்கிரகிக்க வேண்டுமென்று தேவதா பிரேரணை உண்டாக்கி யிருப்பதால், விவேகியாகிய நீரும், உங்கள் தர்ம பத்தினியும்... இந்தச் சமதானத்திற்கு வந்து, ஸ்ரீசாரதா சந்திர மௌளீதர சுவாமிகள் பிரசாத அநுக்ரகம் பெற்று, இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீமுகம் எழுதிவைத்து அனுப்பலாயிற்று. இக்கடிதத்திற்கு ஈ.வெ.ரா. தமது நன்றியைத் தெரிவித்து விட்டு எழுதியிருப்பது கீழ் வருவதாகும்: அந்த ஸ்ரீமுகத்திலே சனாதன தர்மத்தைக் கெடுக்காமல், கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து, சாதிரங்கள் இடங்கொடுக்கும் வரையில் என்கின்ற நிபந் தனைகள் கண்டு, அதற்கு விரோதமில்லாமல் சில சுவதந்தரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாவேயிருக்கின்றது. ஆயினும் பொறுப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும், பல கொள்கைகளுக்கு அபிப்பிராய கர்த்தாவாகயிருப்பவரும், பல மக்களால் வணங்கிக் கொண்டாடி மதிக்கத்தக்கவராயிருப்பவருமான ஒரு பெரியாரின் அழைப்பை மதித்து, அதற்கு இணங்கி, அங்குச் சென்றுவர வேண்டியது மிக்க நியாயமாகும் என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாம் என்றே கருதியிருக்கின்றோம். இது அக்கடிதத்தைப்பற்றி ஈ.வெ.ரா. வெளியிட்ட கருத்து நண்பர் பலரும், சங்கராச்சாரியாரை ஈ.வெ.ரா. சந்திப்பதால் யாதும் பயன் விளையாது என்று கருதினர். அவர் தமது கொள்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஈ.வெ.ரா.வையே தம் வழிக்குத் திருப்ப முயல்வார். ஆதலால் சந்திப்பது வீண் என்று உறுதியாக நம்பினர். இந்நிகழ்ச்சி சுயமரியாதை இயக்கத்தின் அப்போதைய வளர்ச்சியையும் போக்கையும் காட்டுவதை நன்குணரலாம். வெளிநாடுகளில் பிரசாரம் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டோடு மட்டிலும் நிற்கவில்லை. உள்நாட்டிலும் பல மாகாணங்களில் பரவிற்று. தென் ஆப்பிரிக்கா, மலேயா, இலங்கை, பர்மா முதலிய வெளிநாடு களிலும் பரவிவிட்டது. அங்கெல்லாம் குடி அரசும், ரிவோல்ட்டும் ஏராளமாகச் சென்றன. அவ்விடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் தோன்றின. வெளிநாடுகளிலிருந்து ஈ.வெ.ரா.வுக்கும், அவர் தோழர்களுக்கும் அழைப்புகள் வந்தன. நமது நாட்டிலும் மலையாளத்திலும் இவ்வியக்கம் மிகவும் வலுப்பெற்றது. அங்குள்ள ஈழவர்கள் முழுவதும் இதை ஆதரித்து நின்றனர். 1930 ஜூலை மாதத்தில் திருநெல்வேலியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ஈ.வெ.ரா.வின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. படத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கியவர் மாஜி உயர்தர நீதிமன்ற நீதிபதியும், S.N.D.P. யோகமென்ற ஈழவர் சங்கத்தின் காரியதரிசியுமாகிய திரு.எம்.கோவிந்தன் அவர்கள். அச்சமயம் அவர் கூறியதாவது:- கோட்டயத்தில் நடைபெற்ற S.N.D.P. மாநாட்டில் பத்தா யிரத்துக்கு அதிகமான மக்களுக்கு இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு மிக எளியதாகவும், நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது நாட்டில் (மலையாளம்) சுயமரியாதை விதைகள் முளைகண்டிருந்தவை இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும். மலையாளத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் எவ்வளவு தூரம் பரவியிருந்தன என்பதை நிரூபித்துக்காட்டுவதற்கு இது தக்க சான்றாகும். இவ்வியக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி பெற்றது கண்டு, வைதீகப் பார்ப்பனர்களும், தேசீயப் பார்ப்பனர் களும் திடுக்குற்றனர். எங்களுக்குச் சுயராஜ்யம் வேண்டாம்; வெள்ளைக்காரர்களே இருக்கவேண்டும் என்று சொல்லவும் தொடங்கினர். 1929 ஜூலை மாதம் 20ம் நாள் திருநெல்வேலி ஜில்லா 2வது சுயமரியாதை மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அம்மாநாட்டை, நமது மாகாண மந்திரியாக இருந்த எ.குருசாமி ரெட்டியார் திறந்து வைத்தார். அவர் அச்சமயம் இச்செய்தியைத் தெளிவாக விளக்கியுள்ளார். அது வருமாறு: இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும், அறியா மையையும், உயர்வு - தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் தேசத்தில் எவ்வளவு பரவியிருக்கின்ற தென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாகாணங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும், அவற்றில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும். நம்மியக்கத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு பயப்படு கிறார்கள் என்பதற்கு, சைமன் கமிஷன் விசாரணையில் பார்ப்பனர் கொடுத்த சாட்சியமே போதுமானது. அதாவது தேசீயப் பார்ப்பனரும், வருணாச்சிரமப் பார்ப்பனருமாகிய ஒரு பிரபல பார்ப்பனர் சைமன் கமிஷனிடத்தில் சாட்சியம் கொடுக்கும் போது தல தாபனங்களில் தலைமைப் பதவிகளாகிய ஜில்லா போர்டு தலைவர் முதலிய பதவிகளை வகிக்கத் தகுந்த இந்தியர் நமது நாட்டில் இல்லையென்றும், இந்தியர்கள் சுயராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள் அல்லர் என்றும் என் முன்னேயே எடுத்துச் சொன்னார். நான் அவரை, இது உம்முடைய அபிப்பிராயமா? என்று கேட்டேன். அவர் சற்றும் வெட்கமின்றி, இதுவே தான் இந்நாட்டு எல்லாப் பார்ப்பனர்களுடைய அபிப்பிராயம் என்று சொன்னார். நான், நீங்கள் ஜில்லா போர்டு தலைமைப்பதவி வகித்தீர்களே, அப்போது நீங்கள் தகுதியுடையவர்களாக இருந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் பதில் சொல்லமுடியாமல் விழித்தார். அப்போது திரு.சைமன் அவர்கள் நண்பர்மீது பரிதாபப்பட்டு, போதும் விட்டுவிடுங்கள் என்றும், அவரது அபிப்பிராயம் விளங்கிவிட்டது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். சுயராஜ்யமே வேண்டமென்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு அவர்களைக் கொண்டுவந்து விட்டதற்குக் காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும். 1929 இறுதியில், மலேயா நாட்டுத் தமிழர்கள் ஈ.வெ.ரா.வை அந்நாட்டிற்கு அழைத்தனர். இச்சமயம் குடி அரசும், ரிவோல்ட்டும் சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மலேயா நாட்டில், ஈப்போ நகரில், தமிழர் சீர்திருத்தச் சங்க மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மா நாட்டைத் திறந்து வைப்பதற்காக ஈ.வெ.ரா. அழைக்கப் பட்டார். அந்நாடு முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் பொருட்டு அவருடைய தோழர்களும் அழைக்கப்பட்டனர். 1929 டிசம்பர் 15ம் நாள் ஈ.வெ.ரா.வும், நாகம்மையாரும், தோழர்கள் எ.ராமநாதன், ஆ.பொன்னம் பலனார், சாமி சிதம்பரனார், சி.நடராஜன் முதலியவர்களும் நாகையில் கப்பலேறினர். அந்நாட்டிலும் தேசீயத்தின் பெயரால் சிலர் கொள்ளை யடித்து வந்தனர். மதத்தின் பெயரால் ஏமாற்றி வந்தனர். இக் குழுவினர் ஈ.வெ.ராவின் வருகை கேட்டுத் திகைத்தனர். தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று நடுங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். இவர்கள் ஈ.வெ.ரா.வையும், அவர் தோழர்களையும் மலேயாவுக்கு வராமல் தடுக்கவேண்டுமென்று பலமான முயற்சி செய்தனர்; மலேயா அரசாங்கத்தாரிடம், இராமசாமியும் அவர்கள் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள்; காங்கிரசுக்காரர்கள்; பொது மக்களைக் கலகம் பண்ணும்படி தூண்டுகிறவர்கள்; அவர்கள் இங்கு வந்தால் அரசாங்கத்திற்கு ஆபத்து. பொது மக்களிடையில் குழப்பம் உண்டாகும். ஆதலால், அவர்களை இறங்கவிடாமல் கப்பலிலிருந்த படியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று முறையிட்டனர். இம்முறையீடு பலிக்கவில்லை. ஆயினும் இக்கூட்டத்தார் சும்மா விடவில்லை. தேசத் துரோகிகள் வருகின்றார்கள்; நாதிகர்கள் வருகின்றார்கள்; மதத்துரோகிகள் வருகின்றார்கள்; அவர்களை ஒருவரும் வரவேற்கக்கூடாது; தமிழ்மக்கள் ஒருவரும் அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது. அவர்களுடைய கூட்டங் களுக்கும் செல்லக் கூடாது என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இக்காரணத்தால் ஈ.வெ.ரா.வையும், அவர் தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடிவிட்டனர். இவர்கள் பினாங்கு துறைமுகத்தில் இறங்கும் போது 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அங்குக் கூடியிருந்தனர். இறங்கியதும் இவர்களுக்கு பல சங்கத்தினர் மாலைகள் சூட்டினார்கள். வரவேற்பிதழ்கள் வாசித்தனர். இந்துக்கள், முலீம்கள் அனைவரும் இவ்வரவேற்பில் கலந்திருந்தனர். பாமர மக்கள் பலர் அறியாமையால் ஈ.வெ.ரா.வின் பாதத்தில் விழுந்து வணங்கினர். அவர் நடந்து சென்ற அடிச்சுவட்டைக் கண்களில் ஒத்திக்கொண்டனர். பினாங்கில் வெளியான பத்திரிகைகள் எல்லாம் இவ்வரவேற்பைப் பாராட்டி எழுதின. இதுவரை எந்த இந்தியத் தலைவர்களுக்கும் இத்தகைய வரவேற்பு நடைபேற்ற தில்லை என்று குறித்திருந்தன. இவ்வரவேற்பைக் கண்டவுடன் எதிரிகள் நடுநடுங்கினார்கள். இதில் கலந்து கொள்ளாதிருந்தவர்கள் எல்லோரும் திகைப் புற்றார்கள். விலகியிருந்த ஒருசில இந்து முலீம் கனவான்களும் பிறகு கலந்து கொண்டனர். 20.10.1929ல் இவர்கள் பினாங்கில் இறங்கினர். அன்று மாலையே அதைவிட்டுப் புறப்பட்டு கோலப்பிறை, கோலாகஞ்சார் முதலிய ஊர்களுக்குச் சென்று விட்டு 23.12.1929ல் ஈப்போவுக்குச் சென்றனர். அங்குத் தமிழர் சீர்திருத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டை ஈ.வெ.ரா. திறந்து வைத்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். அந்த மாநாட்டில் தமிழர்கள், முலீம்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், யாழ்பாணிகள் அனைவரும் கலந்திருந்தனர். ஈப்போ மாநாடு முடிந்தபின், நேரே சிங்கப்பூர் சென்றார்கள். சிங்கப்பூரில் ஈ.வெ.ரா.வுக்கு நடந்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்குப் பல பொதுக் கூட்டங்கள் நடந்தன. ஈ.வெ.ரா. சிங்கப்பூருக்குச் சென்ற 26-12-1929ல் மலேயா இந்திய சங்க மாநாடு நடைபெற்றது. அதற்கு ஈ.வெ.ரா. அழைக்கப் பட்டிருந்தார். இவரும் அங்கே சென்று அவர்கள் வேண்டுகோளுக் கிணங்கி ஒரு விரிவுரை செய்தார். இந்த மாநாடு எங்கள் நாட்டுக் காங்கிரசைப் பின் பற்றாமல், அரசாங்கத்தாரை உத்தியோகமும், பதவியும் கேட்காமல், நாட்டின் நலனுக்கும், பொதுமக்களின் நன்மைக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தும்படியான மாதிரியில் நடந்துகொள்ள வேண்டும். அதற்கு மார்க்கம், மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு அறிவையும், சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டும் என்பதல்ல வென்பதே எனது அபிப்பிராயம். இந்தியர்கள் என்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது, லட்சியத்தை ஒன்றுபடுத்திக் கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது இவ்வாறு அங்குப் பேசினார். இதைப் பெரும்பாலான மக்கள் வரவேற்றனர். அவ்வூர் நகர மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு நகரப் பெரியார்களில் ஒருவரான பார்டன் என்னும் ஒரு ஆங்கிலேயர் தலைமை தாங்கினார். அம்மண்டபத்தின் மாடியில் நான்கு புறங்களிலும் மக்கள் நிரம்பியிருந்தனர். ஊசி விழுந்தாலும் கணீர் என்று ஒலி கேட்கும். அவ்வளவு அமைதி குடிகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும்போது அமெரிக்க மாதாகிய மி. மேயோ என்பவர் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் ஊழல்களைக் குறிப்பிட்டார். அத்தகைய ஊழல்களையெல்லாம் போக்குவது தான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஒருவர் கேள்வி கேட்டார். ஈ.வெ.ரா.வும் தக்க விடை கூறினார். கேள்வி: மேயோ எழுதியதன் கருத்து என்ன? பதில் : கருத்து என்ன என்பதை நாம் பிறகு கவனிப்போம். அந்தம்மாள் எழுதியிருப்பவை உண்மையா? பொய்யா? என்று முதலில பார்க்க வேண்டும். கேள்வி : காந்தியார் அந்தம்மாளைச் சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியிருக்கிறாரே? பதில் : திரு. காந்தியார், சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியது உண்மையாயிருந்தாலும், சாக்கடை இல்லாத இடத்தையாவது, சிங்காரவனத்தையாவது காட்டி, அவற்றைப் பார்க்க அந்தம்மாளைக் கூப்பிட்டி ருக்கலாம். அப்படிக் காட்டுவதற்கு ஆதார மில்லாததால் தான் காந்தியார் இந்தியர்களைப் பார்த்து, மேயோ எழுதிய புத்தகத்தை மறந்துவிடாமல் எப்பொழுதும் ஒரு பக்கத்தில் வைத்திருங்கள் என்று சொல்லி யிருக்கிறார். இதன் கருத்து சாக்கடையைச் சுத்தம் செய்யுங்கள் என்பதே யாகும். கேள்வி : வேறு பலர் மறுப்பு எழுதியிருக்கிறார்களே? பதில் : மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்க வில்லை. மி.மேயோ நாட்டிலும் இவ்விதம் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால், இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா? ஒப்புக்கொள்வதாகும். இவ்வாறு அவர் கேள்விகளுக்கு விடைகூறி, மேயோ கூற்று ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டிப் பேசினார். கேள்வி கேட்டவர் வெட்கமடைந்தார். மலேயா சுற்றுப் பிரயாணம் ஒரு மாதத்திற்குமேல் இல்லை; டிசம்பரில் சென்று ஜனவரியில் திரும்பினார். இக்குறைந்த காலத்தில் அந்நாடெங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர்பார், பத்துபகார், மலாக்கா, தம்பின் கோலப்பிறை, கோலாகுபு தஞ்மாலிம், சுங்கைகுரூட், செலுக்கான்சர், கம்மார், கோலா கஞ்சார், சுங்கபட்டாணி முதலிய ஊர்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. காலைப் பொதுக்கூட்டம் ஒரு ஊரில்; மாலைப் பொதுக்கூட்டம் மற்றோர் ஊரில்; நடுப்பகலில் ஒரு ஊர்; இரவில் வேற்றூர். நள்ளிரவிலும் பொதுக்கூட்டம்; பொதுக் கூட்டங்களுக்கு கணக்கில்லை. ஒரே காலத்தில் இரண்டு பொதுக் கூட்டங்கள் வெவ்வேறு ஊர்களில் நடைபெறும். பெரும்பாலும் பொதுக் கூட்டங்களில் தோழர்கள் ஈ,வெ.ரா., எ.ராமநாதன், அ.பொன்னம் பலனார், சாமி சிதம்பரனார், சி.நடராஜன், என்.பி.காளியப்பன் முதலியவர்கள் பேசுவார்கள். பொதுக் கூட்டங்களுக்குச் சீனர்கள், ஜப்பானியர், மலேயர்கள் திரளாக வந்தனர். இந்தியப் பெரியாரைப் பார்க்க வேண்டு மென்பதே இவர்கள் ஆவல். செல்வாக்குள்ள தமிழர்கள் ஈ.வெ.ரா.வைத் தனியாகச் சந்தித்துப் பேசுவார்கள். பத்திரிகைப் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள். அவர்கள் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றி வாதம் புரிவார்கள். அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் தக்க விடை கூறுவார். அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள். மலேயாவில் உள்ள தமிழர்களிடத்தில் நம் நாட்டைப் போல சாதிச் சண்டைகள் இல்லை; மதப்போராட்டங்கள் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களும் குறைவு. பல தலைமுறை களுக்கு முன் குடியேறிய அந்நாட்டிலேயே நிலையாக வாழும் தமிழர்களும் இருக்கின்றனர். அங்குள்ள சீனர்கள், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள், முலீம்கள் முதலியவர்களின் பழக்கத்தால் தமிழர்களும் ஓரளவு ஒற்றுமை பெற்றுள்ளனர். ஆதலால், அவர்களுக்குச் சுயமரியாதைக் கொள்கைகள் புதியவையல்ல. சாதிப் போர், சமய வெறுப்பு, வீண் சடங்குகள் ஒழிய வேண்டும் என்பது அவர்களுக்கு முற்றிலும் உடன்பாடு. இவை ஓரளவு பழக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பவையே. இந்தியா வில் இக்கொடுமைகள் நிலைத்துள்ளன. இவற்றை ஒழித்துத் தமிழர்களை ஒன்றுபடுத்தவே சுயமரியாதை இயக்கம் பாடுபடு கின்றது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால், அவர்கள் இவ்வியக்கத்துக்குப் பேராதரவு தந்தனர். மலேயா நாட்டில் ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவைக் கேட்பதற்கென ஒவ்வொரிடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவரைப் பார்ப்பதற்கெனப் பலர் திரண்டனர். இராமசாமியார் என்ற பெயரைக் கேட்டவுடன் பாமர மக்கள் பலர் அவரை ஒரு பெரிய சாமியார் என்றே நினைத்துக் கொண்டனர். இந்த இந்தியச் சாமியாரைத் தரிசிக்க வேண்டுமென்று அவர்களில் பலர் வந்தனர். இதற்க உதாரணமாக அங்கு நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியைக் கூறுகிறோம். ஒரு சிறு கிராமத்தில் மாலை 6 மணிக்கு ஒரு பொதுக் கூட்டம் போடப்பட்டிருந்தது. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்து விட்டது. இரவுச் சாப்பாடும் முடிந்தது. நல்ல நிலவு. தெருவில் நாற்காலிகள் போட்டு ஈ.வெ.ரா.வும் தோழர்களும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இச்சமயம் சுமார் 40 வயதுள்ள ஒரு பெண்மணி சுமார் 20 வயதுள்ள தன் பெண்ணுடன் வந்தாள். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே? என்று தேடினாள். அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டு இராமசாமி யாரைக் காட்டினர். அவள் உடனே தன் பெண்ணுடன் வந்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினாள்; எழுந்தாள்; சுவாமி, நான் பத்துக் கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன். ஆதலால் நேரமாகிவிட்டது. உங்கள் உபதேசத்தைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. இவள் என் பெண். (தன் பெண்ணைக் காட்டி) இவளுக்குக் கல்யாணமாகி நான்கு வருஷங்கள் ஆயின. இன்னும் பிள்ளை பிறக்கவேயில்லை. நீங்கள் ஏதாவது நல்வாக்குக் கொடுக்கவேண்டும். தங்கள் வரத்தால்தான் பிள்ளை பிறக்க வேண்டும் என்று பரிதாபக் குரலிற் கூறினாள். இதைக் கேட்டதும் பக்கத்திலுள்ளவர்கள் நகைத்தனர். ஈ.வெ.ரா.வும் நகைத்தார். அப்பெண்மணியின்அறியாமைக்கு இரங்கினார். அவளை நோக்கி, அம்மா! நான் சாமியாரல்ல; வெறும் ஆசாமிதான். எனக்கே 30 வருஷமாகப் பிள்ளையில்லை. நான் சொல்வதை நம்பாவிட்டால், இந்த அம்மாவைக் (நாகம்மையாரைக் காட்டி) கேட்டுப்பார். தனக்கே பிள்ளை யில்லாதவன் உனக்கு எப்படி வரம் கொடுக்க முடியும்? பிள்ளை யில்லாவிட்டால் என்ன? இங்கிருக்கும் வரையிலும் நன்றாகச் சம்பாதித்துச் சாப்பிடுங்கள். சிக்கனமாகச் செலவு செய்து மீதம் பிடியுங்கள். அப்பொழுதுதான் இந்தியாவுக்குப் போனால் சுகமாயிருக்கலாம் என்றார். அப்பெண்பிள்ளை, சாமி, நீங்கள் சொல்லுவதை நான் நம்பமாட்டேன். பெரியவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ஏழையின்மேல் பெரிய மனது வைத்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும் என்று பிடிவாதம் பண்ணினாள். இறுதியில் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சரி; உன் மகளுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிள்ளைக் கவலை வேண்டாம். பிறகு நல்ல ஆண் குழந்தை பெற்றுச் சுகமாக வாழ்வாள் என்று சொன்னார். அவளும் சமாதானமடைந்து சென்றாள். நண்பர்கள் யாவரும் வேடிக்கையாகப் பரிகாசஞ் செய்தனர். மலேயா நாட்டில் இவர் சொற்பொழிவைக் கேட்ட எதிரிகள் கூட சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டனர். ஓரிடத்திலாவது கூட்டத்தில் குழப்பம் நேரவில்லை. ஒவ்வோரு கூட்டத்திற்கும் பெரிய மனிதர்கள் என்பவர்கள் வந்து கூடி விட்டார்கள். சில சமயங்களில் ஈ.வெ.ரா.விடம் மதங்களைப்பற்றி மிகுதியாகக் கண்டிக்காமலிருந்தால் நலம் என்று யாராவது சொல்லுவார்கள். இவருக்கு எப்பொழுதும் முக தாட்சண்யம் அதிகம். தமது பரம்பரைப் பகைவரானாலும் நேரில் கண்டு விட்டால், அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வார். ஆதலால், அப்படிப்பட்ட சமயங்களில் ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவு, வழவழா கொழகொழா என்றிருக்கும். தமக்கும் தம் தோழர்களுக்கும் அளித்த வரவேற்பைப் புகழ்ந்து கொண்டிருப்பார். விருந்தைப் பாராட்டிக் கொண்டி ருப்பார். சமூக விஷயங்களைப் பற்றிச் சொற்களை அடுக்கிக் கொண்டே போவார். அவருடைய உண்மையான கருத்து எளிதில் வெளிப்படாது. சொற்பொழிவில் உயிர் இராது, வீரம் இராது. கூட்டத்தில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரிந்தால் தான் நன்றாகப் பேசுவார். கேள்விகள் கேட்டுவிட்டால் போதும். விரிவுரை வீரவுரையாகிவிடும். எதிரிகள் வெட்கித் தலைகுனிவார்கள். எந்த இடத்திலும் இதுவரையிலும் இவர் தம்மைக் கேட்ட கேள்வி களுக்குப் பதில் கூறாமல் போனதே யில்லை. பதில் ஆணித்தரமாக இருக்கும். இதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுகின்றோம். 1928ம் ஆண்டில் சிதம்பரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றிப் பேசினார். அச்சொற் பொழிவில் மதத்தைப்பற்றியும், அதில் உள்ள ஊழல்களைப் பற்றியும் பேசும்போது, ஒரு பார்ப்பனர் வந்து கேள்வி கேட்டார். அக்கேள்விகளும், அவற்றிற்கு இவரளித்த விடைகளும் இவை. இந்தக் கேள்வி இவர்மீது பொது ஜனங்களுக்கு வெறுப்பு வரட்டும் என்பதற்கு ஆகவே. நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே! இது சரியா? என்று கேட்டார். அதற்கு ஈ.வெ.ரா. உடனே: ஆம்! வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகிறேன்! (என்று மேஜை மேலிருந்து கைத்தடியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார் கோவில் பக்கம். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர்.) மற்றொரு பார்ப்பனர்: ஆனால், அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது என்றார். ஈ.வெ.ரா.: - அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உச்சாடனத்துக்கு உண்மையில் சக்தி இருக்குமானால், இதோ எதிரில் இருக்கும் உயிருள்ள மனிதருக்கும் கொஞ்சம் அதே மந்திரத்தை உபதேசம் செய்து, அவரை அந்தக் கல்லுச் சாமிக்குப் பக்கத்திலிருந்து பூசனை செய்யும்படியாகவாவது செய்யக் கூடாதா? என்றார். முதலில் கேட்டவர், இந்துமதம் என ஒன்று இல்லை யென்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். நீங்களாவது ஒரு புது மதம் சொல்லக் கூடாதா? என்றார். ஈ.வெ.ரா.: நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும், சாமி என்றும், புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும், உண்மையாகவும், மற்ற மக்களிடத்தில் அன்பாகவும், சம பாவிப்பாகவும், பரோபகார எண்ணத் துடனும் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லா விட்டாலும், சரி என்றுதான் சொல்லுகிறேன் என்றார். கேட்டவர்: இருக்கின்றதை ஒழிப்பதானால், மற்றொன்றைக் காட்ட வேண்டாமா? என்றார். ஈ.வெ.ரா: வீட்டிற்குள் அசிங்கம் இருக்கின்றது; நாற்றம் அடிக்கிறது; எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கின்றது என்று கேட்பது சரியாகுமா? இந்துமதம் என்றால் உலக மெல்லாம் நாறுகின்றதே! அந்தத் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும் என்றார். மேலே கூறியதுபோல் ஈ.வெ.ரா. பிறர் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு, அதிக விறுவிறுப்பின்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தோழர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்களே சில நல்ல கேள்விகளை எழுதுவார்கள். எதிரிகள் கேட்பது போல், ஈ.வெ.ரா.விடம் அனுப்பிவிடுவார்கள். பிறகு சொல்லவா வேண்டும்! நீர் வீழ்ச்சிதான்! அறிவு வெள்ளந்தான்! இந்நிகழ்ச்சி மலேயா நாட்டில் பல இடங்களில் நடைபெற்றது. ஈ.வெ.ரா.வின் மலேயா சுற்றுப்பிரயாணத்தால் பெரும் பயன் விளைந்தது. அந்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையடைந்தனர். சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி முற்றும் நன்றாக உணர்ந்தனர். அவர்களிடம் புதிய கிளர்ச்சியும், சமூகச் சீர்திருத்தத்தில் அளவு கடந்த ஆவலும் தோன்றின. மலேயா நாட்டில் ஈ.வெ.ரா.வின் சுற்றுப்பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் பலர். சிங்கப்பூரிலும் இப்பொழுது, தமிழ் முரசு என்னும் பத்திரிகையை நடத்திவரும் தோழர் ஜி.சாரங்க பாணி, ஈப்போ ஆர்.ஆர்.அய்யாறு, தாமோதரம், சுப்பையா, சுவாமி அற்புதானந்தா முதலியவர்கள் சுற்றுப்பிரயாணம் முடியும் வரையிலும் கூடவே இருந்தனர். ஈ.வெ.ரா.வும், அவரது தோழர்களும் 1930 ஜனவரி 16ல் இந்தியாவுக்குத் திரும்பினர். மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் ஈ.வெ.ரா. மலேயாவிலிருந்து திரும்பிய பிறகு, குடி அரசும் ரிவோல்ட்டும் மீண்டும் ஈரோட்டுக்குச் சென்றன. ஈரோட்டுக்கு வந்த இரண்டொரு வாரங்களில் ரிவோல்ட் பத்திரிக்கை நிறுத்தப்பட்டது. இச்சமயம் நாடெங்கும் சுயமரியாதை இயக்கம் கொழுந்துவிட்டெரிந்தது. ஆனால் நீதிக்கட்சித் தலைவர்கள் மட்டிலும் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி இருந்தனர். அவர்கள் முன்னேற்றமான சீர்திருத்தத்தைக் கண்டு அஞ்சினர். அவர்களிற் பலர் தங்கள் பட்டப்பெயர்களை விட்டால், தங்கள் பெருமை போய்விடும் என்று நினைத்தனர். பலர் தங்கள் திருநீற்றுப் பூச்சை விட அஞ்சினர். இதற்கிடையில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் சொல்லி வந்தனர். இது ஈ.வெ.ரா.வுக்கும், அவரது தோழர்களுக்கும் விருப்பமில்லை. இத்தகைய பல காரணங்களால் நீதிக்கட்சித் தலைவர் என்பவர் களுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் அவ்வளவு தொடர் பில்லாமலிருந்து, இந்தப் பிளவை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டு, சுயமரியாதை இயக்கத்தை அழிக்க எவ்வளவோ முயன்றனர். இந்நாளில், அதாவது, 1930-ல், திரு.காந்தியாரால் உப்புப் போர் தொடங்கப்பட்டது. இதை ஈ.வெ.ரா ஒப்புக் கொள்ள வில்லை . எதிர்த்து குடி அரசுவில் எழுதினார். முதலாவது, காந்தியாரின் உப்புப் போர் என்பதில் நமக்குச் சிறிதும் நம்பிக்கையில்லை. அதாவது, இதன் கொள்கைகளிடமும், நடத்துகின்ற தலைவர்களின் சொந்தக் கொள்கைகளிடமும், சில தலைவர்களின் நல்ல எண்ணத்தினிடமும் நமக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில், இவர்கள் தேசத்தைவிட, தேச மக்களைவிடத் தங்கள் நிலையையும், தங்கள் அந்ததையும், கவுரவத்தையும் பிரதானமாய்க் கருதியிருப்பவர்களும், சிலர் தங்கள் மதத்தின் ஆதிக்கத்தையும், வருணாச்சிரம தர்ம ஆதிக்கத்தையும், தங்கள் வகுப்பின் ஆதிக்கத்தையும் பிரதானமாய்க் கருதியிருப் பவர்களுமாய் இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கிறோம். அன்றியும், இந்தியாவின் இன்றைய நிலைமைக்குப் பூரண சுயேச்சை வேண்டுமானால் - விடுதலை வேண்டுமானால் - சுயராஜ்யம் என்பது வேண்டுமானால் - வெள்ளைக்காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் - முதலில் மத ஆதிக்கமும், அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும்; தீண்டாமை ஒழிய வேண்டும்; பெண்கள் கட்டுப்பாடு ஒழிய வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; பார்ப்பனர் ஆதிக்கம் அடியோடு ஒழியவேண்டும். முதலாளித் தன்மை ஒழியவேண்டும்; இவ்வளவும் நடந்த பிறகுதான் வெள்ளைக்காரர் கொடுங்கோன்மை (தானாய் ஒழிந்துவிடும் அல்லது) நம்மால் ஒழிக்கப்பட வேண்டும்; ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு. இச்சந்தர்ப்பத்தைத் தேசீய நடிகர்கள் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டனர். ஈ.வெ.ரா.வையும், அவரது தோழர் களையும் தேசச் துரோகிகள் என்றும், வெள்ளைக்காரர்களின் அடிமைகளென்றும் பறை சாற்றினர். எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிடலாம் என்று எண்ணினர். ஈ.வெ.ரா.வுக்குப் பல மொட்டைக் கடிதங்கள் எழுதினார்கள். சிவப்புக் கடிதங்கள் வரைந்தார்கள். சுட்டுவிடுவதாகவும், வெட்டிவிடுவதாகவும், குத்திவிடுவதாகவும் எழுதினார்கள். ஆயினும் இவர் தமது கொள்கையை விடவில்லை. எதிரிகளின் மிரட்டலுக்குச் சிறிதும் அஞ்சவில்லை. நமக்குப் பல மிரட்டுதல் மொட்டைக் கடிதங்களும், யோசனை கூறும் நண்பர்கள் கடிதங்களும் வந்தவண்ணமாய் இருக்கின்றன. இந்த இயக்கத்தில் (உப்புப் போர்) நாம் ஈடுபடாததாலும், அதைப் போற்றியாவது எழுதாமல் இருப்பதாலும், மற்றும் அதைக் கண்டித்து எழுதுவதாலும் இத்துடன் நமது செல்வாக்கு ஒழிந்து, சுயமரியாதை இயக்கமே அடங்கிப் போகும் என்றும் நமது எதிரிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டு மிருக்கின்றனர். எப்படியிருந்தாலும் சரி, உப்புக் காய்ச்சும் சட்டமறுப்பு வெற்றிபெற்றுத் தெருத்தெருவாய் உப்பு மலைமலையாய்க் குவிந்து கிடந்தாலும் சரி, அதோடு வெள்ளைக்காரர் ராஜாங்கமே ஒழிந்து, இந்தியா பூரண சுயேச்சை அடைந்து, இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி, இந்த உப்புக் காய்ச்சும் காரியத்தையோ, இது சம்பந்தமான சட்டமறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஒப்புக் கொள்ளவே மாட்டோம் என்பதைத் தைரியமாய்ச் சொல்வதோடு, இதனால் இந்தியாவுக்கு ஒரு வளைந்துபோன குண்டூசியளவுகூட நன்மையேற்படாது என்றும் கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவோம். (குடி அரசு 13.04.1930) என்று மீண்டும் சட்டமறுப்பை எதிர்த்து எழுதினார். சுயமரியாதைக்காரர்களிலே ஒருசிலர் கலக்கமடைந்தனர்; தங்கள் உறுதியிழந்து உப்புப் போரில் கலக்கலாமா என்று நினைத்தனர். உப்புப் போரில் கலக்காவிட்டாலும் அதைக் கண்டிக்காமலாவது இருக்கவேண்டும் என்று எண்ணினர். ஆனால், ஈ.வெ.ரா. விட்டுக் கொடுக்கவில்லை. 1930 மே மாதம் 10, 11ம் நாட்களில் ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதனுடன் இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மாநாடு முதலியவைகளும் நடந்தன. சுயமரியாதை மாநாட்டுத் தலைவர், திரு M.R. ஜெயக்கர், சர்.ஆர்.கே.ஷண்முகம் வரவேற்புக் கழகத் தலைவர். இளைஞர் மாநாட்டுத் தலைவர், நாகர்கோயில் தோழர் P. சிதம்பரம், B.A.B.L., அவர்கள். பெண்கள் மாநாட்டுத் தலைவர், டாக்டர் S. முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், மதுவிலக்கு மாநாட்டுத் தலைவர் சிவகெங்கைத் தோழர் S. ராமச்சந்திரன் சேர்வை, B.A.B.L., அவர்கள். சங்கீத மாநாட்டுத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சங்கீத ஆசிரியர், திரு.மு. பொன்னையா அவர்கள். மாநாட்டுத் தலைவர் திரு.ஜெயக்கர் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் உண்மையான கொள்கைகளை உணர்ந்தார். அதன் மத, சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை வரவேற்றார்; பாராட்டினார்; மத, சமுதாயச் சீர்திருத்த நோக்கங் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதைக் கண்டு திகைப் படைந்தார். இந்துக்களும், கிறிதவர்களும், முலீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டு வியப்புற்றார். இவ்வகுப்பார் யாவரும் ஆயிரக்கணக்கில் உடனிருந்து உண்ணுவது, தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப் படுபவர்களே யாவருக்கும் சமையல் செய்வது, பரிமாறுவது என்று மாபெரும் சமூகப் புரட்சியை இந்நாட்டில் முதன்முதல் உண்டாக்கியது சுயமரியததை இயக்கந்தான் என்பதைப் பார்த்தும் ஆச்சரியத்தால் திகைத்தார். இவ் வியக்கத்தைத் தோற்றுவித்த ஈ.வெ.ரா.வின் ஆற்றலைப் புகழ்ந்தார்; அறிவைப் போற்றினார். உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிதவர்களும், முகமதியர்களும் சேர்ந்திருப்பது விசேஷமாகும். மதத் தலைவர்களும் - காங்கிர தலைவர்களும் செய்யமுடியாத காரியத்தை நீங்கள் செய்து முடித்திருக்கின்றீர்கள். சுயமரியாதை இயக்கம் ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், அநீதிக்கு உட்பட்டிருப்பவர்கள், சமத்துவத்தை அடையாத வர்கள் ஆகியோர்களை முன்னேற்றுவதற்காகவே ஏற்பட்டது. நமக்கு எதிரிகள் சர்க்காராயினும் சரி; மேல்சாதியாரெனப் படுவோராயினும் சரி; அவர்கள் எதிர்ப்பை நாம் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது. திரு.ஈ.வெ.ராமசாமியார் சட்டசபைகளைப்பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர். இவர் உங்கள் இயக்கத்திலிருக்கின்றார். மேற்குறித்தவை, திரு.ஜெயக்கரின் விரிவுரையில் உள்ளவை. ஈரோட்டு மாநாட்டில், அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சில இளைஞர்கள் முயன்றனர். சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக்கூடாது; யார் எவ்வளவு தூற்றினாலுஞ் சரி, போற்றினாலுஞ் சரி; சட்ட மறுப்பை ஆதரிக்கக்கூடாது. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெறவேண்டும் என்று ஈ.வெ.ரா. உறுதி யோடிருந்தார். ஆதலால், இத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இம்மாநாட்டில் செங்கற்பட்டுத் தீர்மானங்கள் முழுவதும் ஒப்புக்கொள்ளப் பட்டன. பெண்ணுரிமை சம்பந்தமாகப் பல தீர்மானங்கள் நிறைவேறின. எந்த அரசாங்க ஊழியர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கக்கூடாது என்ற தீர்மானம் அவற்றுள் குறிப்பிடத் தக்கதாகும். ஏனெனில், இதன்பிறகே காங்கிர 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது. இம்மாநாட்டிற்குப்பின் சுயமரியாதை இளைஞர்கள் சிலர் இயக்கத்தைவிட்டு விலகினர்; காங்கிர குழியில் வீழ்ந்தனர். எதிரிகளின் பண நுழைவு, உப்புப் போரில் இவர்களுக்குண்டான போலி மோகம், ஈ.வெ.ரா.வின் தனிப்பட்ட முறையில் உண்டான கோபம், இவையே இவர்களைப் பிரித்துவிட்டன. இவர்கள் தேசீய நாடார், தேசீய முலீம் என்பதுபோல் தேசீய சுயமரியாதைக் காரர்கள் என்ற பெயர் பூண்டு, சிலர் கூடி ஈ.வெ.ரா.வைத் தூற்றினார்கள். மற்ற தோழர்களையும் பழித்தார்கள். ஆயினும் இயக்கம் வளர்ச்சி பெற்றே வந்தது. இக்காலத்தில் நீதிக்கட்சியைச் சேர்ந்த வைதீகப் பணக்காரர்கள் பலரும் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிவிட்டனர் என்றே கூறலாம். 1930 செப்டம்பர் மாதத்தில் சென்னை சட்டசபைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. சுயேச்சையாக நின்ற பலர் தோல்வியடைந்தனர். காங்கிர அன்பர் என்று சொல்லிக் கொண்டவர்களும் வீழ்ந்தனர். சுயராஜ்யக் கட்சியின் பெயரே தெரியாமல் மறைந்து விட்டது. நீதிக்கட்சியின் இவ்வெற்றிக்குக் காரணம், சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ரா.வின் உழைப்புமே. இவ்வுண்மையை உலகம் அறியும். ஆனால், அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராயிருந்தவர்கள் இவ்வுண்மையை மறந்துவிட்டனர். நீதிக்கட்சி வெற்றி பெற்றதும், காலஞ் சென்ற திவான் பகதூர் முனுசாமி நாயுடு அவர்கள் தலைமையின்கீழ் மந்திரிசபை அமைக்கப்பட்டது. திரு.நாயுடு அவர்கள் முதல்மந்திரி. கட்சித் தலைவர். காங்கிரசில் பற்றுள்ளவர். இச்சமயம் நீதிக் கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் அதிகத் தொடர்பில்லை. இயக்கத்தின் விரைவான முற்போக்கு நீதிக் கட்சியினரை அஞ்சும்படிச் செய்துவிட்டது. 1931 ஆகடில் விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. இதன் தலைவர், சர்.ஆர்.கே.சண்முகம் அவர்கள். வரவேற்புத் தலைவர், தோழர் வி.வி.ராமசாமி அவர்கள். இம்மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங் களுள், மதங்கள் மனித சமூக ஒற்றுமைக்குத் தடை செய்கின்றன. மூடநம்பிக்கைகளை வேரூன்றச் செய்கின்றன. அவைகளை ஆதலால், அழிக்கவேண்டும். கதர் கைக்தொழில் இந்தியாவின் பொருளாதார நிலையை வளர்க்காது. கைத்தொழில் வளர்ச்சிக்கு இயந்திர சாதனங்களே ஏற்றவை என்னுங் கருத்துடைய தீர்மானங்கள் குறிக்கத்தக்கவை. மற்றும் செங்கற் பட்டுத் தீர்மானங்களையும், ஈரோட்டுத் தீர்மானங்களையும் ஒப்புக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டன. இதனால் சுயமரியாதை இயக்கத்திற்குப் பல புதிய எதிரிகள் முளைத்தனர். மதமொழிப்புத் தீர்மானத்தை அவர்கள் எல்லோரும் முழு மூச்சுடன் எதிர்த்தனர். முலீம்களின் எதிர்ப்பு மற்றொருபுறம்; இந்து வைதீகர்கள் எதிர்ப்பு எல்லாப்புறங்களிலும் இந்நிலையிலும் இயக்கம் பின்னடையவில்லை. கற்றறிந்த இளைஞர்களின் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்தே வந்தது. மேலும் லண்டன் R.P.A. என்ற பகுத்தறிவுக் கழகத்தாரின் புத்தகங்களும், பிரசுரங்களும் இன்னும் இதைப்போல் அமெரிக்காவிலுள்ள சங்கங்களின் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்பட்டன. சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் அதிகத் தீவிரமாகப் பரவலாயின. இதன்பிறகு சுயமரியாதை இயக்கம், சமதர்மப் பிரசாரத் திலும் நாளடையில் இறங்கிவிட்டது. இதுவே இயக்கத்தின் குறிக்கோள் என்பதை ஈ.வெ.ரா. பல தடவைகளில் கூறியுள்ளார். ஈரோட்டு மாநாட்டு முடிவில் ஈ.வெ.ரா. எழுந்து நன்றி கூறும்போது வெளியிட்ட கருத்தைக் கீழே பாருங்கள்: இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் கண்டித்துக் கொண்டு, மூடப் பழக்கவழக்கங்களையும் எடுத்துக்காட்டிக் கொண்டு, மூடமக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவை ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதிவிடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேற்சொன்னவற்றின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்ற தன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டுச் சாயுமான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வயிற்றைத் தடவிக்கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும் பணக்காரர்களெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக்கொண்டிருக்கின்ற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். இக்கொள்கையுடன் இப்பொழுது சுயமரியாதை இயக்கம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. சுயமரியாதை இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல என்று சொல்லிக் கொண்டாலும், அது அடிக்கடி அரசியல் திட்டங்களைப்பற்றிப் பேசிக்கொண்டு தான் வந்தது. இந்திய மக்களின் வறுமையைப் போக்கவேண்டும் என்று கூறிற்று. சட்டப்படி பொருளாதார ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும் என்று சொல்லிற்று. இக்காலத்தில் உப்புப் போரும் நிறுத்தப்பட்டுவிட்டது. சமதர்ம நோக்குடைய பலர் சுயமரியாதை இயக்கத்திற் புதிதாகச் சேர்ந்தனர். இந்நிலையில் ஈ.வெ.ரா. மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் புறப்பட விரும்பினர். மேல்நாடுகளில் அரசியல் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? சமுதாய இயக்கங்கள் எவ்வாறு இயங்குகின்றன? அவர்களின் பழக்கவழக்கங்கள் யாவை? அவர்கள் அரசியல் பொருளாதாரம், சமுதாயம் முதலியவற்றில் எவ்வாறு முன்னேற்ற மடைந்தனர்? பொது இயக்கங்களை எவ்வாறு நடத்துகின்றனர்? என்பவற்றை நேரிற் கண்டறிய விரும்பினார். இச்சமயம் இவருக்கு உடல்நலமில்லை. டாக்டர்கள் நீண்ட ஓய்வு வேண்டும் என்று கூறினார். ஆயினும் அஞ்சவில்லை. சுற்றுப் பிரயாணம் புறப்படுவது என்றே முடிவு செய்தார். 1931 டிசம்பர் 13ல் சென்னையில் கப்பலேறினார். தோழர் S.ராமநாதன் அவர்களும், ஈரோடு ராமு அவர்களும் உடன் சென்றனர். ஈஜிப்ட், கிரீ, துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பெயின், ஃபிரான்சு, போர்சுகல், கொழும்பு முதலிய பல நாடுகளுக்குஞ் சென்றனர். ஒரு வருடம் போய்ச் சுற்றி ஆங்காங்கேயுள்ள பல பொது இயக்கங்களையும் கண்டறிந்தனர். அவ்வியக்கத் தலைவர் களுடன் அளவளாவினர். பல உண்மைகளை உணர்ந்தனர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் (Berlin) ஈ.வெ.ரா.வும், இவர் தோழர்களும் பல தினங்கள் தங்கியிருந்தனர். அப்பொழுது அது குடிஅரசு அரசாங்கமாக இருந்தது; ஹிட்லர் ஆட்சிக்கு வரவில்லை. அங்கே பல சமதர்மச் சங்கங்கள் இருந்தன. பல சமதர்மப் பத்திரிகைகள் நடைபெற்று வந்தன. இவர்கள் பல சமதர்மச் சங்கங்களுக்கும் சென்றார்கள். அரசாங்கத்தார்களுடன் கலந்து பழகினார்கள். அவர்கள் கொள்கைகளைத் தெரிந்து கொண்டார்கள். நிர்வாணச் சங்கங்களுக்கும் (Nude Soceities) சென்று அவர்களுடைய உண்மை நோக்கங்களையும் உணர்ந்தார்கள். அக்காலத்தில் பெயின் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் இல்லை; அமைதியாகவேயிருந்தது. அதன் தலைநகரமாகிய மாட்ரிட் நகரிலும் பல தினங்கள் தங்கியிருந்தனர். அந்நாட்டு சமதர்மிகளுடனும் பழகினர். அந்நாட்டில் உள்ள பொது இயக்கங்களைப்பற்றியும் உணர்ந்தனர். ஈ.வெ.ரா.வும், அவர் தோழர்களும் நீண்ட நாள் - (3 மாதங்கள்) சுற்றுப்பிரயாணம் செய்த நாடு ரஷ்யாதான். அங்கே சமதர்ம ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? அவ்வாட்சியால் அந்நாடு அடைந்த பயன் என்ன? அந்நாட்டு மக்களின் நிலை எவ்வாறுள்ளது? அவர்கள் தங்கள் அரசாங்கத்தைப்பற்றி என்ன நினைக்கின்றனர்? என்பனவற்றைத் தெரிந்துகொள்ளவே நீண்டநாள் தங்கி, அரசாங்க விருந்தினராக இருந்து, அந்நாடு முழுவதும் - சுமார் 15, 20 பிரபல நகரங்கள் உட்பட சுற்றிப் பார்த்தனர். அரசாங்க காரியாலயங்களையெல்லாம் பார்வையிட்டனர். பெரிய தொழிற் சாலைகளுக்கெல்லாம் சென்றனர். கல்வி நிலையங்களை யெல்லாம் கண்டனர். நாடக அரங்குகள், சுவடி நிலையங்கள், படிப்பிடங்கள் ஆகியவற்றையெல்லாம் பார்த்தனர். தொழிலாளர் சங்கங்களைப் பார்வையிட்டனர். விவசாயப் பண்ணைகளுக்கும் சென்றார்கள். அவை விஞ்ஞான முறையில் எவ்வாறு நடைபெறுகின்றன வென்று அறிந்து கொண்டனர். அந்நாட்டு அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்கள் வாயிலாகப் பல உண்மை களையும் கேட்டறிந்தனர். இவர்கள் அந்நாட்டுப் பொது மக்களாலும், தொழிலாளர்களாலும், அரசாங்கத்தார்களாலும் அரசாங்க விருந்தினர்களாகவே நன்கு வரவேற்கப்பட்டனர். பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன. பல பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அவற்றில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப்பற்றிக் கூறினார்கள். இவ்வியக்கத்தை அந்நாட்டினரும் கொண்டாடினர். ஈ.வெ.ரா. இங்கிலாந்து சென்றபோதும் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். காலஞ்சென்ற தோழர் சக்லத் வாலாவைக் கண்டு உரையாடினார். அந்நாட்டு தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்தார். 20.06.1932ல் இங்கிலாந்தில் மெக்பரோ லேக்பார்க்கில் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் தலைவர், தோழர் லான்பரி ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்கு விடைகூறும் முறையில் ஈ.வெ.ரா. பேசியது இது:- இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் கருதுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தியச் சுரங்கங்களில் 10 மணிநேர வேலைக்கு 8 அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினமும் 5 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது? அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியாவானது - இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்கு பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம், நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள். ஆதலால், யார்க்ஷையர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக்கொண்டிருங்கள். ஈ.வெ.ரா. தமது சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வழியாக இந்தியாவுக்கு வந்தார். அப்பொழுது இலங்கை யிலிருந்த பெருந் தலைவர்களெல்லாம் இவரை வரவேற்றனர். இலங்கை சட்டசபையினர் ஒரு விருந்தளித்தனர். இவர் இலங்கை வந்தவுடன் திரு.நாகம்மையாரும், மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களும் இலங்கை சென்று அவருடன் கலந்து கொண்டனர். இலங்கைச் சுயமரியாதைக்காரர்கள் அனைவரும் இவர் வருகையால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பல சங்கங்கள் இவரை வரவேற்றன. இவர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். பல பொதுக்கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். பல தொழிலாளர் கூட்டங்களிலும் பேசினார். இப்பேச்சுகளில் தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம், மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் அடைந்துள்ள நிலைமை, அவர்கள் ஒன்றுபட்டுழைத்து நன்மை பெறும் வழி, முதலாளிமார்களால் தொழிலாளிகளுக்கு உண்டாகும் துன்பங்கள், அத்துன்பங்களை நீக்கி முன்னேறும் வழிகள் ஆகியவைப்பற்றிப் பேசினார். இவரது இலங்கைச் சொற்பொழிவு என்னும் ஒரு சிறு புத்தகப் பிரசுரம் 19 ஆயிரக் கணக்கில் 6 பை வீதம் விற்பனை ஆயிற்று. இலங்கையில் சில தினங்கள் சுற்றுப்பிரயாணம் செய்தபின் அவரும், அவர் தோழர்களும் 11.11.1932ல் ஈரோடு வந்து சேர்ந்தனர். ஈ.வெ.ரா. மேல்நாடு சென்றிருந்த காலத்திலும் சுயமரியாதை இயக்கம் சிறிதும் தளர்ச்சியடையவில்லை. நாகம்மையாரும், ஈ.வெ.கிருஷ்ணசாமியும் இயக்கத்திற்கு உழைத்து வந்தனர். தோழர் M. சிங்காரவேலு, B.A.B.L., அவர்கள் குடி அரசில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தன. குடி அரசு ஆசிரியர் சம்பந்தமான பொறுப்பின் மேற்பார்வையைச் சாமி சிதம்பரனார் பார்த்து வந்தார். தோழர்கள் அ.பொன்னம்பலனார், பட்டுக் கோட்டை அழகர்சாமி, பண்டித் திரு.ஞானசம்பந்தம், புதுக் கோட்டை முத்துசாமி, வல்லத்தரசு B.A.B.L., ப.ஜீவானந்தம், S. லெட்சுமிரதன் பாரதியார் M.A.B.L., S. குருசாமி, B.A., புரபசர் லெட்சுமிநரசு, B.A., N.B. காளியப்பன், S.V. லிங்கம், சேலம் சித்தையன், ஆர்.நடேசன், ராமசுப்பையா, அ.ரெத்தினசபாபதி, T.V. சோமசுந்தரம், B.A., B.L., போன்ற பலர் நாடெங்கும் இயக்கத்தைப் பரவச் செய்து வந்தனர். தோழியர்கள் டி.எஸ்.குஞ்சிதம் B.A., L.T., மூவலூர் ராமாமிர்தம்மாள், திருச்சி நீலாவதி, R. அன்னபூரணி, இந்திராணி பாலசுப்ரமண்யம், காரைக்குடி S. விசாலாட்சி போன்ற பல பெண்மக்களும் இயக்கத்திற்காக உழைத்து வந்தனர். இச்சமயத்தில், சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் சிலர் இயக்கம் பிரசாரத்தில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றனர். ஆயினும் மற்றவர்கள் இதனால் சிறிதும் தளர்ச்சியடையவில்லை. நாடெங்கும் பொதுக் கூட்டங் களும், மாநாடுகளும் அடிக்கடி நடைபெற்று வந்தன. இக்காலத்தில் சென்னை மந்திரி சபையில் மாறுதல் உண்டாயிற்று. நீதிக்கட்சியின் தலைவராயிருந்த திரு B. முனுசாமி நாயுடு அவர்கள் மீது கட்சியிலிருந்தவர்கள் வெறுப்புக்கொண்டனர். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். இதன் பொருட்டுத் தஞ்சையில் 1932 அக்டோபரில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மாநாடு, எதிரிகள் எள்ளி நகையாடும்படி குழப்பத்தில் முடிந்தது. பின்னர், திரு.முனுசாமி நாயுடு அவர்கள் தமது மந்திரி பதவி யிலிருந்தும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டார். இவருக்குப் பின் பொப்பிலி அரசர் நீதிக்கட்சித் தலைவரானார். முதன்மந்திரியாகவும் ஆனார். இந்த முயற்சியில் சுயமரியாதைக் காரர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். தஞ்சையில் நடந்த மாநாட்டில் சுயமரியாதைக்காரார்கள் அத்தனை பேரும் பொப்பிலி அரசரையே முழு மனத்துடன் ஆதரித்தார்கள். காரணம் - முனுசாமி நாயுடு காங்கிரசில் அனுதாபமுடையவரென்பதைப் பல வழிகளிலும் காட்டிக் கொண்டதோடு, சுயமரியாதை இயக்கத்தை வெறுத்ததுமேயாகும். சமதர்ம இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணத்திலிருந்து திரும்பியதும் சுயமரியாதை இயக்கத்தில் மாறுதல் செய்ய விரும்பினார். இதுவரை இவ்வியக்கம் வெறும் சமுதாயச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக்கொண்டு வந்தது. இதை மாற்றி அரசியல் கொள்கையுடைய இயக்கமாக்கவும் எண்ணினார். உடனே தோழர் ஆ. சிங்காரவேலு அவர்களைக் கலந்து ஒரு திட்டத்தை எழுதினார். இதில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் இன்னதென்று குறிக்கப்பட்டது. வேலைத்திட்டம் வேறு குறிக்கப்பட்டது. இப்புதிய திட்டத்தைப்பற்றி முடிவு செய்ய 1932 டிசம்பர் 28-29ம் நாட்களில் ஈரோட்டில் ஈ.வெ.ரா. வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இம்மாகாணத்திலிருந்த சுயமரியாதைத் தொண்டர்கள் அனைவரும் வந்திருந்தனர். தோழர் சிங்காரவேலு அவர்களும் வந்திருந்தார். கூட்டம் தொடங்கியவுடன் அச்சிடப்பட்ட புதிய திட்டம் படிக்கப்பட்டது. திட்டத்தின் கருத்தைப்பற்றித் தோழர் சிங்காரவேலு விளக்கிக் கூறினார். அத்திட்டத்தைத் தோழர் சாமி சிதம்பரனாரும், இன்னும் சிலரும் எதிர்த்தனர். சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கை வேண்டாம்; சமூக இயக்கமாகவே இருந்து வேலை செய்தால் போதும்; அரசியல் இயக்கமானால் நீதிக் கட்சியைப் போல இதுவும் சமூகச் சீர்திருத்த வேலையைச் சரியாக செய்வதற்கு முடியாத நிலையை அடைந்துவிடும் என்று காரணங்கூறினார். இவ்வெதிர்ப்புக் கூட்டத்திற்கு ஆதரவில்லை. எல்லோரும் புதிய திட்டத்தில் ஆவல் கொண்டனர். எந்தச் சீர்திருத்தங்களையும் அரசியலைக் கைப்பற்றுவதன் வழியாக நிறைவேற்றிக்கொள்ளலாம். அரசியலில் நுழைய விரும்புவோர்க்கும் நமது இயக்கத்தில் இடமிருக்கவேண்டும். சுயமரியாதை இயக்கம் எப்பொழுதும்போல் சமூக இயக்கமாக இருந்து வரலாம். அரசியலுக்காக அதற்குள் சமதர்ம கட்சி என்று ஒரு தனிப்பிரிவை அமைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்தவர்களுக்கு விடையளிக்கப்பட்டது. பிறகு எதிர்த்தவர்களும் புதிய திட்டத்தை ஒப்புக்கொண்டனர். ஈரோட்டில் செய்த முடிவுகளை ஒரு மாகாண மாநாடு கூட்டி, இதன் மூலம் நடவடிக்கைக்குக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இம்முடிவுகள் பத்திரிகைகளில் வெளியானவுடன் பிற்போக்கான அரசியல்வாதிகள் அனைவரும் அஞ்சினார்கள். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகிவிட்டதென்று கூச்சலிட்டனர். ஈ.வெ.ரா. ரஷ்யா சென்று வந்ததன் பலன் இது. இத்திட்டம் ரஷ்ய அரசாங்கத்தின் தூண்டுதலினாலேயே முளைத்தது என்று திரித்துக் கூறினர். ஆனால், இத்திட்டம் பொதுமக்கள் மனத்தைக் கவர்ந்தது, பழைய சுயமரியாதைக்காரர்கள் பலர் கட்சியின் போக்குப் பிடிக்க வில்லையென்று கூறி ஒதுங்கினர். சிலர் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சி மறைந்தனர். ஆனால், புதியவர்கள் பலர் இயக்கத்தில் சேர்ந்து கொண்டே இருந்தனர். காங்கிரசின் பலம் குன்றியது. தென்னாட்டு காங்கிரசை சுயமரியாதை இயக்கம் விழுங்கிவிட்டது. சுயமரியாதை சமதர்ம சங்கம் என்னும் பேரால் தமிழ்நாட்டிலும், மலையாளத்திலும் பல நூற்றுக் கணக்கான சங்கங்கள் ஏற்பட்டுவிட்டன. வாரந்தோறும் மாநாடுகள் நடந்தன. இதனால், காங்கிரகாரர்கள் இவ்வியக்கத்தைப்பற்றித் தவறாகப் பொதுமக்களிடம் கூற முன்வந்தனர். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகிவிட்டது. அதை அடக்கா விட்டால் நாட்டிற்கு இன்னல்கள் நேரும் என்று கூறிவந்தனர். அரசாங்கத்தார்க்கும் அடக்குமுறை துப்பாக்கியை நீட்டும்படி அறிவுறுத்தினர். ஈரோட்டுத் திட்டத்தைப் பாராட்டுவதற்காகவும், பொது மக்களுக்கு அறிவிப்பதற்காகவும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும் பல மாநாடுகள் நடைபெற்றன. அவற்றில் ஈரோட்டுத் திட்டம் ஆதரிக்கப்பட்டது. அத்திட்டத்தை மாகாண மாநாட்டுக்கு சிபார்சு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலந்தல் கூடாது. சமூக இயக்கமாகவே இருந்து வேலைசெய்து வரவேண்டும்; சட்டசபை நுழைவதால் சமதர்மத் திட்டம் வெற்றிபெற முடியாது என்று தோழர் எ.ராமநாதன் அவர்கள் கூறி, இத்திட்டத்தை எதிர்த்து வந்தார். இவருடைய எதிர்ப்புக்கு ஆதரவு மிகுதியாக இல்லை. ஈ.வெ.ரா.வும் அவர் தோழர்களும் ஈரோட்டுத் திட்டத்தை நாடெங்கும் பரவச் செய்வதில் முனைந்து நின்றனர். 1933ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈ.வெ.ரா. மனைவி நாகம்மையாருக்குத் தீராத உடல் நோய் கண்டது. ஈரோடு மிஷன் மருத்துவ நிலையத்தில் சேர்க்கப்பட்டார். ஈ.வெ.ரா. அல்லும் பகலும் உடனிருந்தார். இச்சமயம் திருப்பத்தூரில் வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதற்கு ஈ.வெ.ரா. புறப்பட்டார். நாகம்மையாரின் உடல்நிலை மிக்க மோசமாகிவிட்டது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூருக்குப் புறப்பட்டுவிட்டார். போக வேண்டாம் என்று சிலர் தடுத்தனர். இதை அவர் கேட்கவில்லை. மாநாட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டிலுள்ளவர்களின் காயலாவுக்காகவோ, சாவுக்காகவோ இவர் காத்திருப்பதில்லை. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இவர்கள் குடும்பத்திற்கு ஒரே பையன். அவன் 10 வயதில் லண்டனுக்குப் படிப்புக்காக அனுப்பப் பட்டான். அவன் திரும்பி வந்து க்ஷயரோகத்தில் இறந்துவிட்டான். அவன் இறக்கும் போது ஈ.வெ.ரா. சுற்றுப் பிரயாணத்தில் இருந்தார். தமது மாமனார் இவர் வீட்டில் காயலாவாயிருந்தார். அவர் இறக்கும்போது சென்னையில் இருக்கிறார். இவர் தமையனார் மனைவி இறந்த அன்றே வெளியூருக்குப் புறப்பட்டு விட்டார். இவரது தாயார் இறப்பதற்கு 1.00 மணிக்குமுன் சுற்றுப்பிரயாணம் சென்றுவிட்டார். இறந்தவுடன் 130 மைல் கார் சென்று அழைத்து வந்தது. அன்று மாலையே நாகம்மையார் சாவுப்படுக்கையில் இருக்கும்போது திருப்பத்தூர் மாநாட்டுக்குச் சென்றுவிட்டார். வந்ததும் மனைவி இறந்து போனார். இறந்த அன்றே திருச்சிக்குச் சென்று அங்கு ஒரு 144 - அய் மீறி அரெடு செய்யப்பட்டுவிட்டார். திருப்பத்தூர் மாநாட்டில் ஈரோட்டு வேலைத் திட்டத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிவிட்டுத்தான் திரும்பினார். பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும், அரசியலும் அவசியமானது அல்லவா? இந்த இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவை இல்லை. சும்மா அலங்காரமாக - வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக்காலங்கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன். வருணாச்சிரமம் இருக்கவேண்டும். சாதி இருக்கவேண்டும்; ராஜாக்கள் இருக்கவேண்டும்; மதம் இருக்கவேண்டும்; வேதம், புராணம், இதிகாசம் இருக்கவேண்டும்; இன்றைக்கு இருக்கிற வைகள் எல்லாம் இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டு, இவற்றை எல்லாம் பலப்படுத்த - நிலைக்க வைக்க வேண்டி வெள்ளைக்காரன் மாத்திரம் போகவேண்டும் என்கிற காங்கிரசோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ, சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும். ஆகையால், சுயமரியாதை இயக்கத்தாரால் அழிக்கப்பட வேண்டியவற்றில் இந்தக் காங்கிரசும், காந்தீயமும் முதன்மையானவையாகும் என்று திருப்பத்தூர் மாநாட்டில் பேசினார். இவ்வுண்மையை எல்லோரும் ஒப்புக் கொண்டனர். பின்னர் 11.05.1933ல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12.05.1933ல் ஈ.வெ.ரா. திருச்சி சென்று அங்கு ஒரு கிறிதவ விவாகரத்தை 144வது செக்ஷனை மீறி நடத்திவைத்து அரெடு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாப பெற்றுக்கொள்ளப்பட்டது. இக்காலத்தில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் செய்துவந்த வேலை சுயமரியாதை இயக்கத்திற்குப் பெருந்துணையாயிருந்தது. இக்கழகம், தோழர் அ.இராகவன் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டது. ஈ.வெ.ரா.வே இக் கழகத்தின் தலைவர். இதன் வாயிலாகப் பல புத்தகங்கள் வெளியாயின. இவை பகுத்தறிவுக் கொள்கையுடையன. சுயமரியாதைக் கொள்கைகளை மக்கள் எளிதிலுணரும்படிச் செய்தன. இதற்குமுன்பே குடிஅரசுப் பதிப்பக வாயிலாகப் பல புத்தகங்கள் வெளியாகியிருந்தன. இவையெல்லால் சமதர்மக் கொள்கைகள் பரவுவதற்குப் பெரிதும் துணை நின்றன. சுயமரியாதை இயக்கம் நாளுக்கு நாள் பலம் பெற்று, கிளைச் சங்கங்கள் ஏராளமாக ஏற்பட்டு வருவதை அரசாங்கத்தார் கண்டனர். அவர்கள் கண்கள் இயக்கத்தை நோக்கின. இயக்கத்தை எப்படி ஒடுக்குவதென்று காலங்கருதியிருந்தனர். குடி அரசுப் பத்திரிகை யின் மீது அம்பு தொடுக்கத் தொடங்கினர். அதில் வெளியான ஒரு தலையங்கத்துக்காக அரசாங்கத்தாரால் ஜாமீன் கேட்கப்பட்டது. அதன் பதிப்பகமாகிய உண்மை விளக்கம் அச்சுக்கூடத்துக்கும் ஜாமீன் கேட்கப்பட்டது. இதனால் குடி அரசு நின்றது. புரட்சி என்னும் பெயருடன் வேறு பத்திரிகை தோன்றிற்று. இதன் பதிப்பாளர் ஈ.வெ.ரா.வின் தங்கை S.R. கண்ணம்மாள், ஆசிரியர் ஈ.வெ.ரா. இதுவும் குடி அரசு வேலை நிலையத்திலிருந்தே வெளிவந்தது. 26.11.1933ல் கோவை ஜில்லா மாநாடு என்னும் பெயருடன் ஈரோட்டில் ஒரு சுயமரியாதைச் சமதர்ம மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டின் தலைவர் மலையாள நாட்டைச் சோந்த தோழர் K. அய்யப்பன்B.A., அவர்கள். இவர் வைக்கம் சத்தியாக் கிரகத்தில் ஈ.வெ.ரா.வுடன் உழைத்தவர். ஈழவர் புகலிடமாகிய எ.என்.டி.பி. யோகத்தின் தலைவராகவும் இருந்தவர். ஈழவர்கள் தங்களுக்கு மதமே வேண்டாம் என்று தீர்மானிக்கக் காரணமா யிருந்தவர் இவர். ஈரோடு டாக்டர் எம்.கிருஷ்ணசாமி அவர்கள் இம்மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவர். இம்மாநாட்டில் லெனின், நாகம்மை யார் ஆகியவர்களின் படங்கள் திறக்கப்பட்டன. திரு.வி.க. முதலியார் இவற்றைத் திறந்து வைத்தார். டாக்டர் நாயுடு இவ்விழாக்களுக்குத் தலைவர். நாயக்கர் அவர்கள் நாட்டிற்குப் புரிந்த சேவையை நான் மறுக்க முடியாது. நானும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் நாயக்கரும் ஒரே சமயத்தில் இரவும், பகலும் இடைவிடாமல் ஒன்றித்துப் பிரசாரம் புரிந்து வந்திருக்கிறோம். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப் பரந்த நோக்கமுடைய உலக அபிமான இயக்கத்தை (International Movement) ஆதரித்து பிரசாரம் செய்கிறார். என்று டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் அச்சமயம் கூறினார். சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார்; நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்று திரு.வி.க.முதலியார் கூறினார். ஈ.வெ.ரா. காங்கிரசை விட்டபின், நாயுடு, நாயக்கர், முதலியார் மூவரும் முதலில் கோவையில் ஒன்று கூடினர். பிறகு பிரிந்தனர். மீண்டும் இம் மாநாட்டில்தான் ஒன்று கூடினர். ஆகையால், இம்மாநாடு அரசாங்கத்தாரையும் தட்டியெழுப்பி விட்டது. எதிரிகளையும் கலங்கச் செய்துவிட்டது! இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழியவேண்டும்? என்னும் தலைப் பெயருடன் குடி அரசில் மேலே கூறியபடி ஒரு தலையங்கம் வெளியாயிற்று. இதற்காக 1933 டிசம்பர் 30ல் ஈ.வெ.ரா. சிறை பிடிக்கப்பட்டார். குடிஅரசின் பதிப்பாளர், திரு.கண்ணம்மாளும் கைதியானார். இவர்களின் மீது அரசு வெறுப்புக் குற்றம் சுமத்தப் பட்டது. இவர்கள் வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஈ.வெ.ரா. வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை. எழுத்துமூலமாக ஒரு வாக்குமூலம் மட்டிலும் கொடுத்தார். நான் ஏழெட்டு வருட காலமாய், சுயமரியாதைச் சமதர்மப் பிரசாரம் செய்துவருகிறேன். சமூக வாழ்விலும், பொருளாதாரத் திலும் மக்கள் யாவரும் சமத்துவமாக வாழவேண்டும் என்பது அப்பிரசாரத்தின் முக்கிய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும், அதற்காகப் பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவை இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி, அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று, நியாயத்தையும், சட்டத்தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப் பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இவை அவர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள பகுதிகள். ஆனால், வழக்குத் தள்ளப்படவில்லை. ஈ.வெ.ரா.வுக்கு ஒன்பது மாத தண்டனை; 300 ரூபாய் அபராதம்; செலுத்தாவிடில் மீண்டும் ஒரு மாதம் காவல். திரு.கண்ணம்மாளுக்கு 6 மாதம் தண்டனை. 300 ரூபாய் அபராதம். செலுத்தத் தவறினால் மீண்டும் 1 மாதம் காவல். இதுவே வழக்கின் முடிவு. ஈ.வெ.ரா. கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டார். அப்பொழுது அச்சிறையில் திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரும் இருந்தார். கட்சி வேற்றுமையால் நெடுநாள் பிரிந்திருந்த இரு நண்பர்களும் இப்பொழுது சிறைத் தோழர்களாயினர். இருவரும் கலந்து வேலைசெய்ய ஒரு பொது வேலைத்திட்டம் போட்டனர். அது காந்தியாருக்கு அனுப்பப்பட்டது. அதில் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அரசியல் பிரதிநிதித்துவமும், உத்தியோகமும் கொடுக்கப் பட வேண்டுமென்று இருந்ததால், காந்தியார் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார் என்று பிறகு திரு.ராஜகோபாலாச் சாரியார் சொல்லிவிட்டார். என்றாலும் இவரைக் காங்கிரசில் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தார். இக்காலத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறை மேலும் மேலும் வலுத்தது. பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகப் புத்தகங்கள் பல பறிமுதலாயின. குடி அரசுப் பதிப்பகப் புத்தகங்கள் சிலவும் பறிமுதலாயின. இரகசியப் போலீசார் சுயமரியாதைக் கூட்டங் களுக்கெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்தனர். சொற்பொழிவு களெல்லாம் சுருக்கெழுத்தில் குறிக்கப்பட்டன; அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தினர் சிலரையும் அரசாங்க ஒற்றர்கள் கண்காணித்து வந்தனர். புரட்சிப் பத்திரி கையும் அரசாங்கத்தாரின் அடக்குமுறைவாளுக்கு இலக்காயிற்று. இதற்குப்பதில் பகுத்தறிவுப் பத்திரிகை (வார வெளியீடு) தோன்றிற்று! இச்சமயம் திரு.காந்தியார் ஹரிஜனம் என்ற பெயரால் செல்வந் திரட்ட தென்னாட்டிற்கு வந்தார். சுயமரியாதைக்காரர்கள் ஒவ்வொரு ஊரிலும் கருப்புக்கொடி காட்டி வரவேற்றனர். சிலவிடங்களில் காந்தியாரை நேரிற்கண்டு உரையாடினர். அவர் சிலவிடங்களில் சுயமரியாதைக் கொள்கை களைத் தாம் ஒத்துக் கொள்வதாகவும் கூறினார். ஈ.வெ.ரா. சிறையிலிருந்து விடுதலையான பின், காங்கிர காரர்கள் பலர் இவரைக் காங்கிரசில் சேர வேண்டினர். தோழர் ஜெயப்பிரகாச நாராயணர் போன்ற சமதர்மவாதிகள் ஈரோட்டுக்கு வந்து இவரைக் கண்டு பேசினர். நீதிக்கட்சியினர் தங்களுடன் சேர வேண்டினர். நீதிக்கட்சித் தலைவரான பொப்பிலி அரசர் இவருடைய செல்வாக்கையும், திறமையையும் நன்கு தெரிந்தார். இவர் இன்றேல் பார்ப்பனரல்லாத இயக்கம் தழைத்தோங்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, இவரைக் கட்சியின் முதன்மையாளராகச் செய்ய விரும்பினார். ஈ.வெ.ரா.வின் ஆற்றலைப் பொப்பிலி அரசர் உணர்ந்ததுபோல் வேறு எந்த நீதிக்கட்சித் தலைவரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. 29.09.1934ல் கோவையில் தமிழ் மாகாணக் காங்கிர மாநாடு நடைபெற்றது. இதன் தலைவர் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஈ.வெ.ரா.வின் திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு, இதுவரை நமக்குப் பரம எதிரிகளாயிருந்த சுயமரியாதைக் காரர்கள் என்ற கோஷ்டியாருக்கு இப்போது மனமாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டு நான் சந்தோஷிக்கிறேன். கடவுளிடம் நம்பிக்கையில்லை என்று சொல்லுகிறவர்களுக்குத்தான் அதிகமான தெய்வ பக்தியிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களில் அநேகர் - அதிலும் குறிப்பாக இளைஞர்கள், இப்பொழுது காங்கிரசில் சேர வேண்டும் என்று முன்வருகிறார்கள். அவர்களை நாம் வரவேற்க வேண்டும். பழைய தகராறுகளையும், எதிர்ப்புகளையும் காட்டி அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். என்று பேசினார். சுயமரியாதைக்காரர்களில் சிலர் இத் திட்டங்களைக் காங்கிர ஒப்புக்கொண்டால், அதில் சேர்ந்து காங்கிரசைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணியதுண்டு. காங்கிரசில் உள்ள பல பார்ப்பனரல்லாதார்களும் இந்நோக்கத்திற்கு ஆதரவளித்தனர். காங்கிரசில் சேரும்படி வேண்டி நின்றனர். இக்கருத்தை அறிந்தே திரு.ஆச்சாரியார் இங்ஙனம் கூறினார். இதே சமயத்தில் சென்னையில் நீதிக்கட்சி மாகாண மாநாடு நடைபெற்றது. இதன் தலைவர் பொப்பிலி அரசர். இவர் தமது தலைமையுரையில்: எனக்குத் தெரிந்தவரையில் சுயமரியாதை இயக்கம் பல பெருங் கொள்கைகளைத் தாங்கி நிற்கின்றது. இந்துமதத்தை முன்னிருந்ததை விடப் பெரிதாகவும் பெருமையுடையதாகவும் ஆக்க முயலுகின்றது. துரதிர்ஷ்டவசமாகச் சென்ற சில காலங்களில் இந்துமதத்தில் நுழைந்திருக்கும் ஆபாசங்களை ஒழித்து, இந்துக்கள் என்று சொல்லும் அனைவரும் தாங்கள் உலகிலேயே புகழ்பெற்று விளங்கும் ஒரு பெரிய கட்டுப்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், உண்மை மனப்பான்மை கொண்ட உயர்ந்த சகோதரர்கள் என்றும் உணரும்படி செய்கின்றது... அவர்களை நம்மோடு சேர்த்து, அவர்களுடைய கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதே அறிவாளிகளின் கடமையாகும். என்று கூறினார். இவ்விரு தலைவர்களும் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி உணர்ந்தது சரியா ,தவறா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். சுயமரியாதை இயக்கம் இப்பொழுது செல்வாக்குப் பெற்று விளங்குகிறது; மக்கள் பலர் அதைப் போற்றி நிற்கின்றனர். அதன் தலைவருக்குப் பெருமதிப்பு நிலவுகின்றது; அவ்வியக்கத்தின் துணையும், தலைவரின் உதவியும் நமக்கு இன்றியமையாதது என்ற கருத்துடன் இருவரும் இவ் வியக்கத்தை வரவேற்றனர் என்பதில் அய்யமில்லை. இச்சமயம் ஈ.வெ.ரா. தமது வேலைத் திட்டத்தை வெளி யிட்டார். அது பெரும்பாலும் ஈரோட்டு வேலைத் திட்டத்தையும், ஆச்சாரியாரிடம் ஜெயிலில் கொடுத்த வேலைத் திட்டத்தையும் ஒட்டியதே. இதை இரு கட்சியினர்க்கும் அனுப்பினார். அதை யார் ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து வேலைசெய்வ தாக உறுதி கூறினார். திரு.ஆச்சாரி யாருக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் இத்திட்டத்தைப் பற்றி ஜெயிலில் பேச்சு நடந்ததும், திரு.ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள் அவ்வேலைத் திட்டத்தைப் பார்த்து, அதைத் திரு.காந்தியாருக்கு அனுப்பி ஒத்துக் கொள்ளு மாறு செய்வதாகவும், அப்படி ஒத்துக் கொண்டால் பிறகு ஈ.வெ.ரா.வும், அவர் தோழர்களும் காங்கிரசில் சேராவிட்டாலும் ஒத்து வேலை செய்வதாக ஒத்துக்கொண்டதும், பிறகு அது காந்தியாரால் ஒப்புக் கொள்ளப்படாமல் போய் விட்டதும் முன்னால் கூறியுள்ளோம். இந்த நிலையில் இது நீதிக்கட்சிக்கு அனுப்பப்பட்டது. நீதிக் கட்சியினர் ஈரோட்டுத் திட்டத்தை ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினர். சென்னை மாநாட்டில் இதற்காக ஒரு கமிட்டியையும் தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா.வும் நீதிக்கட்சியையே ஆதரித்தார். இச்சமயம் காங்கிரகாரர்கள் சட்டசபை நுழைவுப் பிரசாரம் புரிந்துவந்தனர். 1934ம் ஆண்டு நவம்பரில் இந்தியா சட்டசபைக்குத் தேர்தல் நடை பெற்றது. இதில் நீதிக்கட்சி படுதோல்வியடைந்தது. இந்திய சட்டசபைத் தலைவராயிருந்த சர்.சண்முகம் தோற்றார். சென்னையில் சர்.ஏ.ராமசாமி முதலியார் தோற்றார். இன்னும் நீதிக்கட்சியின் பேரால் நின்றவர் அனைவரும் தோற்றனர். இச்சமயத்திலும் சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் மேல் வெறுப்புற்றனர். காங்கிரசோடு சேர்வதே மேல் என்று கூறினர். சிலர் சேர்ந்தும்விட்டனர். ஆயினும் தலைவர் ஈ.வெ.ரா. சிறிதும் இதைப் பொருட்படுத்தவேயில்லை. தோல்வியை மனமார ஒப்புக்கொண்டார். தோல்வியால் தளர்ச்சியடைதல் வீரர்க்கு அழகன்று; இனி அத்தகைய தோல்விக்கு இடந்தராமலிருப்பதே ஆண்மையென்பதை எடுத்துக் காட்டினார். நல்ல தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தக்க தைரியம் நம் எல்லோருக்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தேர்தல் சூதாட்டத்திற்கு ஒப்பானது. அதில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் மனிதனுடைய பெருமையையோ, புத்திசாலித்தனத் தையோ, சக்தியையோ பொறுத்ததல்ல. வெற்றியா? தோல்வியா? என்கின்ற வெறும் உச்சரிப்பை மாத்திரம் பொறுத்ததேயாகும். ஆதலால், இந்தத் தோல்விக்காக ஏன் விசனப்பட வேண்டும்? ஓட்டத்தில் களைத்துப் போனவன் பந்தயத்தில் தோற்றவனா வானேயொழிய வாழ்க்கைக்கு உதவாதவனாகிவிட மாட்டான். எனவே, பார்ப்பனரல்லாத வாலிபர்களே! உங்கள் வீரத்தையும் ஊக்கத்தையும் இந்தத் தோல்வியென்னும் உலையில் வைத்துக் காய்ச்சித் தட்டித்தீட்டிக் கூர்மையாக்குங்கள்! வகுப்பு வாதத்தால் தான் சமதர்மம் அடையமுடியும் என்று நினையுங்கள்! இத் தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு, பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள்! எல்லாம் நன்மைக்கே என்றெண்ணுங்கள்! எல்லாவற்றையும் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஜெயம்! ஜெயம்!! ஜெயம்!!! (18.11.1934, பகுத்தறிவு தலையங்கம்) இதுவே தோல்வியைப்பற்றி அது வெளியிட்ட கருத்து. காங்கிர சின் வாயிலாகச் சமூகச் சீர்திருத்தம் செய்யமுடியாது; அதைச் சமதர்ம நோக்கத்திற்கும் திருப்பமுடியாது; நீதிக்கட்சியின் மூலமே சமூகச் சீர்திருத்தம் செய்யமுடியும். அதைச் சமதர்மக் கட்சியாகவும் ஆக்கிவிட முடியும் என்பது ஈ.வெ.ரா.வின் நம்பிக்கை ஆதலால், அவர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையே உறுதியாகப் பின்பற்றி நின்றார். இவ்வுண்மையைப் பலர் உணரவில்லை. இவர்களே ஈ.வெ.ரா.வைப்பற்றி மனம்போன போக்கில் பிதற்றித் திரிவர். ஈ.வெ.ரா.வின் வேலைத்திட்டம் நீதிக்கட்சியின் ஆராய்ச்சி யிலிருந்தது. 1935ல் அரசாங்கத்தார் மீண்டும் பத்திரிகைக்கு ஜாமீன் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளில் நான் ஏன் நாதிகன் ஆனேன்? என்பது ஒன்று. இது காலஞ் சென்ற புரட்சி வீரர் பகவத்சிங் அவர்களால், அவர் தந்தைக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு. இதன் மொழி பெயர்ப்பாளர் தோழர் பி.ஜீவானந்தம் அவர்கள். இது உண்மை விளக்கம் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இப்புத்தகத்தை அரசாங்கத்தார் பறிமுதல் பண்ணினர். தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களையும் பி.ஜீவானந்தம் அவர்களையும் கைது செய்தனர். மற்றும் சில புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சமயத்தில் ஜடி கட்சியினர் மந்திரிகளாய் இருந்தும், பன்னீர் செல்வம் ஹோம் மெம்பராயிருந்தும், சர். V.K.ரெட்டி நாயுடு சட்ட மெம்பராயிருந்தும், இக்காலத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு பெரும் நெருக்கடி நேர்ந்தது. இதற்கு நீதிக்கட்சியினர் காரணம் என்று சிலர் கூறுவர். இது அறியாதார் கூற்று. இந்திய அரசாங்கமே இந்நெருக்கடிக்குக் காரணம். சுயமரியாதை இயக்கத்தை பொது வுடைமை இயக்கம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டனர். சுயமரியாதைக்காரர்களில் முதன்மையானவர்களையெல்லாம் அடியோடு அடக்கிவிடுவது; அவ்வியக்க வளர்ச்சிக்கான கருவி களையெல்லாம் இல்லாமல் ஒழித்து விடுவது என்பது இந்திய அரசாங்கத்தின் முடிந்த கருத்தாகத் தெரிந்தது. ஈரோட்டில் வேலைத்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றிய முடிவுகளில் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான நோக்கம் என்று குறிக்கப்பட்டதானது, பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவியதாகவிருந்தது. நெடுங்காலப் பொதுவுடைமைக்காரராகிய தோழர் எம்.சிங்காரவேலு பி.ஏ., பி.எல்., அவர்கள் சுயமரியாதை இயக்கத் தோடு ஒன்றுபட்டுப் பணியாற்றி வந்தார். இயக்க அன்பர்களும், ஊழியர்களும் அறிந்தோ, அறியாமலோ பொது வுடைமைபற்றியே பத்திரிகைகளில் எழுதி வந்தார்கள். கூட்டங்களில் விரிவுரையாற்றி வந்தார்கள். இக்காரணங்களே இந்திய அரசாங்கத்தார் அடக்கு முறையைத் தொடங்குவதற்குத் துணை செய்தன. நமது நாட்டுக் காங்கிரகாரர்களும், வைதீகர்களும், பணக்காரர்களும் மறைந்திருந்து அரசாங்கத்துக்கு இவ்வியக்கத்தைக் காட்டிக் கொடுத்தனர். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் நாட்டில் குழப்பத்தையுண்டாக்கும் கொள்கையுடைய பொதுவுடைமை இயக்கம் அல்ல என்று அரசாங்கத்தார் நம்பும்படி ஏதாவது செய்ய வேண்டிய தாயிற்று. இன்றேல், இவ்வியக்கம் இது வரை யிலும் செய்துவந்த வேலை முழுதும் பாழாகிவிடும் போலிருந்தது. இந்திய அரசாங்கத்தின் உண்மை நோக்கத்தை அறிந்த உற்ற நண்பர்கள் பலரும் இயக்கம் உயிரோடிருக்க ஏதாவது செய்யும்படி ஈ.வெ.ரா.வுக்குக் கூறினர். ஈ.வெ.ரா.வும் வேறு வழியில்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 1935 மார்ச் 10ம் நாள் வெளிவந்த குடி அரசில் இவ்வறிக்கை வெளியாகியிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப் பட்டாலும் அவ்வளவு - அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாய இயலில் ஜாதிமத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வருவதுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால், காங்கிர ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயமாகும். இது இவ்வறிக்கையின் இறுதிப் பகுதி. இவ்வறிக்கை யிலிருந்து அவருடைய திட்டத்திலோ, கொள்கையிலோ எவ்வித மாற்றமும் இல்லை யென்பது விளங்கும். ஆனால் சில அரசியல் வாதிகள் இவ்வவிக்கையை ஊன்றிப் படிக்காமையாலோ, அல்லது இதில் கருத்தைச் செலுத்தாமல் வாயளவிற் படித்தனாலோ உண்மையை உணராதராயினர். ஈ.வெ.ரா. சமதர்மத் திட்டத்தைக் கைவிட்டார்; சுயமரியாதை இயக்கத்தை அழித்து விட்டார். என்று சொல்லிக்கொண்டு சிலர் காங்கிரசோடு கலந்தனர். ஈ.வெ.ரா. எக்காலத்திலும் தமது கொள்கையை விட்டுக் கொடுப்பவரல்லர் என்ற உண்மையை இவர்கள் உணரவில்லை. வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையோவே தோன்றுகிறார். உலகத்தில் எந்தெந்த தேசங்கள் முன்னேறியிருக் கின்றனவோ அந்தந்த தேசங்களில் இவரது கொள்கை நிலவக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் சுதந்திரப் போராட்டம் புரிகின்றனரோ, அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம். (கனம் S. ராமநாதன் M.A., B.L.,) இது 09.03.1930ல் தென்மாப்பட்டு வைக்கம்வீரர் வாசகசாலை ஆண்டுவிழாவில் தோழர் எ.ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கிய போது ஈ.வெ.ரா.வைப் பற்றிக் கூறியது. ஈ.வெ.ரா.வால் கொடுக்கப்பட்டு, நீதிக்கட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தைக் காண்பவர்க்கு இவ்வுண்மை விளங்கும். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது அவ்வேலைத் திட்டம். அத்திட்டம் கீழ்வருமாறு:- 1. பயிரிடுவோர்களைக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மீண்டும் கடன்காரர்களாகித் தொல்லைப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை - கடன்காரர்கள், கடனுக்காக நிலங்களைக் கைப்பற்ற முடியாமற் செய்வது முதலிய வழிகளைக் கொண்டு சட்ட வழியாகவும், வேறு முறைகளின் வாயிலாகவும் கூடுமான வற்றையெல்லாம் செய்ய வேண்டும். 2. அநியாய வட்டிக்கார லேவாதேவிக்காரர்களால் பயிரிடு வோர் அழிந்து போகாம லிருக்கும்படி, கூட்டுறவு நாணயச் சங்கங்களையும், பல அடமான பாங்குகளையும் தாராள மாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்குகளை மாகாண முழுவதும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி, அதை அரசாங்கத்தாரே நடத்த வேண்டும். 3. சொத்துரிமை சம்பந்தமான வழக்குகளைக் குறைப்பதற்காக, சொத்துரிமைகளை, குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை அரசாங்கத்தார் வைத்திருக்க வேண்டும். அன்றியும், காரணார்த்தமாகவும், போலியாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்காடும் (Benami) முறையை இல்லாமற் செய்ய வேண்டியதோடு, அத்தகைய வழக்குகளை நீதிமன்றங்களில் ஒப்புக்கொள்ளாமலிருக்கும் படியும் செய்துவிட வேண்டும். 4. பயிரிடுவோர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர், இடைநடு வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளைபொருள் பண்டங்களை வாங்கு பவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க தாபனங் களை ஏற்படுத்தி, நல்ல விலையைப் பயிரிடுபவர்களே பெறும்படி செய்யவேண்டும். 5. பொதுமக்களின் நன்மைக்காக இருந்துவரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் படைப்பு, மின்சாரம் முதலிய வற்றை எவ்வாறு அரசாங்கத்தாரே நடத்தி வருகிறார்களோ; அந்த முறையை இன்னும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப் படுத்தி, எப்போதும் அவை அரசாங்கத் தாராலேயே நடந்து வருமாறு செய்யவேண்டும். 6. இன்யூரன் விஷயத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கத்தார் செய்து கொடுத்திருக்கும் வசதியை (அதாவது போடாஃபீசைப் போல்) மற்ற மக்களும் பெறும்படி செய்து இன்யூரன்சை அரசாங்கத்தாரே நடத்தவேண்டும். 7. நாட்டுப் பொதுமக்களின் வாழ்க்கை நிலையையும், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்தவும், அதற்கேற்ற வருவாய் கிடைக்குமாறு வருவாய் விகிதத்தைத் தீர்மானிக்கவும் முயற்சியெடுத்து அதற்கேற்றபடி சட்டம் செய்யவேண்டும். 8. குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா மக்களுக்கும் ஆரம்பக் கல்வி யுண்டாகும்படி செய்து விடவேண்டும். 9. குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானக்கேடு அழிந்து விடும்படி கூடிய முயற்சிகளையும் சட்டங்களையும் செய்துவிட வேண்டும். 10. மனித சமூகத்தில் இருந்துவரும் தீண்டாமையையும், பிறவிக் காரணமாக உள்ள வேறுபாட்டுக் கொடுமை களையும், மூட நம்பிக்கைகளையும் அடியோடு ஒழித்து விட வேண்டும். 11. அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் அவரவர்கள் ஜனத்தொகைக்குத் தக்கபடியும், அரசியல் நோக்கத்திற்குத் தக்கபடியும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். 12. நிலவரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப்பளுவாய் இருக்கும்படியாகவும், அவசியமான இடங்களில் விலக்குச் செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்கவேண்டும். (அதாவது சிறிய நிலக்காரர்களுக்குக் குறைந்த நிலவரியும், பெரிய நிலக்காரர்களுக்குப் படிப்படி யாக உயர்ந்த வரியும் இருக்க வேண்டும்). 13. முனிசிபாலிட்டிகளுக்கும், ஜில்லா போர்டுகளுக்கும், கூட்டுறவு தாபனங்களுக்கும், மக்களுக்கு இன்னும் அதிக மான காரியங்களைச் செய்யும்படியான வசதிகளையும், உரிமை களையும் கொடுத்து, அவை அரசாங்க ஊழியர்களின் மேற்பார்வையில் நடைபெறும்படி செய்ய வேண்டும். 14. தற்கால ஆட்சி முறையானது, மக்களுக்கு மிகவும் சுமையாக இருப்பதால், அளவான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயலவேண்டுவதோடு, இந்தியர் சராசரி வாழ்க்கையையும், இந்தியப் பொருளாதார நிலையையும் கவனித்துச் சம்பளங்களை ஏற்படுத்த வேண்டும். 15. இவ்வேலைகள் நடைபெறும் பொருட்டு, அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு, இக்கொள்கைகளைப் பொதுமக்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்யவும் வேண்டும். காங்கிர திட்டத்தையும், இதையும் ஒத்திட்டுப் பார்ப்பவர்கள் இதன் உயர்வை ஒப்புக்கொள்வார்கள். காங்கிர திட்டத்தைவிட இது முற்போக்குடைதாயிருப்பதை உணர்வார்கள். இத்திட்டத்தை நீதிக்கட்சியினர் ஒப்புக்கொண்டவுடன் அக் கட்சியையும் எதிரிகள் அளவுக்குமேல் தூற்றினர். நீதிக்கட்சி சமதர்மக் கொள்கையில் வீழ்ந்துவிட்டது. நாத்திகராகிய நாயக்கரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது என்று பழி சுமத்தினர். அக்கட்சி வைதீகர்கள் சிலரும், பணக்காரர்கள் சிலரும் வெறுப் புற்றார்கள். ஆங்கிலேயர்களுக்கும் நீதிக்கட்சியின் மீது சிறிது வெறுப்பேற்பட்டது; காங்கிரசார் கண்டு, ஒப்புக்கொள்ளப் பின்வாங்கிய முற்போக்குடைய இத்திட்டத்தை நீதிக்கட்சியினர் ஒப்புக்கொண்டது ஒன்றே, அக்கட்சியின் உண்மைத் தன்மையைக் காட்டுவதாகும். நம் நாட்டு மக்களின் நன்மைக்கு உண்மையாக உழைக்கும் இயக்கம் அது ஒன்றே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? தோல்வியும் நன்மையும் இப்பொழுதுள்ள சட்டசபைக்குப் புதிய தேர்தல் நெருங்கிற்று. ஈ.வெ.ரா. நீதிக்கட்சியையே ஆதரித்து நின்றார். காங்கிரசைத் தமது முழுவன்மையுடன் எதிர்த்து நின்றார். இவர் செய்கையால் தோழர்கள் பலருக்குள் கருத்து வேற்றுமைகள் தோன்றின. அவர்கள் சுயமரியாதை இயக்கம் தற்சமயம் எந்த அரசியல் இயக்கத்தோடும் சேர்தல்கூடாது. தனித்து நின்றே சமுதாயச் சீர்திருத்த வேலை செய்தல் வேண்டும். சமுதாய மாறுதலுக்கு ஆதரவாகப் பொதுமக்களின் கருத்தைத் திருப்ப வேண்டும். இதுவே சுயமரியாதை இயக்கம் செய்யவேண்டிய பணி. தேர்தல் பிரசாரம் அதன் வேலையல்ல என்று கூறினார்கள். ஈ.வெ.ரா. இக்கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை. ஜடி கட்சி சமதர்மக் கட்சியென்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான், இன்று பறையனும், பார்ப்பனும் ஒரு தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்காலப் பேச்சு. ஆனால், அது இன்று சர்க்க கொட்டகையில் நடைபெறுகின்றது. அதனாலேயே நாம் அதைச் சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பனும், சாதிரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமருகிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். ஜடி கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப் பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிர கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜடி கட்சி சமதர்மக் கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா? (1937 ஜனவரி, சென்னை கோடம்பாக்கம் பிரசங்கம்) இவ்வாறு எதிரிகளுக்குப் பதில் கூறிவந்தார். காங்கிரகாரர்கள் கேட்கும் சுயராஜ்யந்தான் ஜடி கட்சியாரும் கேட்கின்றார்கள். காங்கிரகாரர்கள் போக விரும்பும் சட்டசபைக்குத்தான் ஜடிகாரரும் போக விரும்புகிறார்கள். காங்கிரகாரர் ஏற்படுத்திய சம்பளந்தான் ஜடிகாரர்களும் வாங்குகிறார்கள். ஆனால், காங்கிரகாரர் சட்டசபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்பதா, இல்லையா? என்பதை வெளியிற் சொல்லாமற் ரகசியமாய் வைத்திருக்கிறார்கள். ஜடி கட்சிக்காரர்கள் வெளிப்படையாகப் பதவி ஏற்போம் என்று சொல்லுகிறார்கள். (1937 ஜனவரி, அருப்புக்கோட்டை பிரசங்கம்) ஜடி கட்சிக்காரர்கள், எல்லா சமூகத்தார்களுக்கும் அவரவர்கள் ஜனத்தொகைக்குத் தக்கபடி, அதிகாரம், பதவி ஆகியவற்றில் விகிதாச்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் காங்கிர காரர்கள் தேசத் துரோகம் என்கிறார்களே தவிர, மற்றபடி வெள்ளைக்காரர்களிடம் நடந்து கொள்வதில், அவர்கள் இரகசியத்தில் கும்பிடு போடுகிறார்கள். நாம் வெளிப்படையாய் அவசியத்திற்கு ஏற்ற அளவு ஒத்துழைக்கிறோம். (1936 அக்டோபர், திண்டுக்கல் பிரசங்கம்) இந்த நிலையில் காங்கிர ஒருசமயம் வெற்றிபெற்று விடுமானால், நமது நாடும், நமது சமூகமும், அரசியலிலும், சமுதாய இயலிலும் குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டு நிலையாவது பின் தள்ளிப்போக வேண்டிதாய்விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் என்பதன் கருத்தோ, மக்களைப் பழைய கால நிலைக்குக் கொண்டுபோய் பழைய முறைகள் காப்பாற்றப்பட்ட, பார்ப்பனீய ஆதிக்கத்தை எல்லாத் துறைகளிலும் நிலைநிறுத்த வேண்டும் என்பதேயாகும். ஆதலால், தோழர்களே! நாம் மிக்க கவலையுடனும், ஜாக்கிரதையுடனும் வேலைசெய்ய வேண்டிய வர்களாயிருக்கிறோம். இவ்வாறு இடைவிடாது நாடெங்கும் சென்று தேர்தல் வேலை செய்து வந்தார். பல ஆண்டுகள் - அதாவது இரட்டை ஆட்சி தோன்றியது முதல் நீதிக்கட்சியே அதிகாரம் பெற்றிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த பதவி வேட்டைக்காரர்கள் பலருக்குக் கட்சியின்மேல் வெறுப்பேற்பட்டிருந்தது. பலர் காங்கிர காரர்களின் கணக்கற்ற வாக்குறுதிகளை - அதாவது, நாங்கள் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மந்திரிப் பதவி ஏற்ற மாட்டோம் என்றும், சீர்திருத்தங்களைத் தகர்ப்போம் என்றும், ஏகாதிபத்தியத்தை ஒழித்துவிடுவோம் என்றும், வரிகளைக் குறைத்துவிடுவோம் என்றும், உத்தியோகங்களைக் குறைத்து விடுவோம் என்றும் இன்னும் பலவிதமாகச் சொன்ன வாக்குறுதி களை நம்பினர். அவர்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்குப் பெருநலம் விளையும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் சட்டசபைக்குச் சென்றால் தங்கள் வறுமை பறந்து விடும்; வரிச்சுமை குறைந்து விடும் என்று நம்பினர். அன்றியும் 17 வருஷங்களாக அரசாங்கத்தை எதிர்த்து நின்று பலமுறை சிறைசென்ற காங்கிரகாரர்கள் தேர்தலில் முதல்முதலாகத் தலையிட்டவுடன் பொதுமக்களுக்கும் அவர்கள் மேல் கட்டுக்கடங்காத காதல் பிறந்து விட்டது. பழமையில் வெறுப்பும், புதுமையில் விருப்பும் தோன்றுவது மக்களிடம் உள்ள இயற்கைத் தன்மையல்லவா? இக்காரணங் களாலும் வடநாட்டாரின் பணம், வடநாட்டுத் தலைவர்களின் பிரசாரம், காந்தியார் மீதுள்ள மூடநம்பிக்கை ஆகியவற்றாலும், 1937 ஜனவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிர எதிர்பாராத பெரும் வெற்றியைக் கண்டது. நீதிக்கட்சியும் இதற்கு முன் நினைத்திராத அவ்வளவு பெருந்தோல்வியைக் கண்டது. இத்தேர்தலில் நீதிக்கட்சியின் தூண்களெல்லாம் சாய்ந்தன. கட்சியின் தலைவராகிய பொப்பிலி அரசரும் தமது தொகுதியில் தோல்வியுற்றார். சர்.P.T. ராஜனும் தோல்வியுற்றார். லட்சக்கணக்கில் செலவு செய்த பெத்தாபுரம் ராஜா தோல்வியுற்றார். வெற்றிபெற்ற காங்கிரவாதிகள் நாடெங்கும் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தினர். அவர்களுக்குத் தலைகால் புரியவில்லை. அக்கொண்டாட்டங்களில் நீதிக்கட்சியை நாக்கில் நரம்பின்றிக் குறை கூறினர். நீதிக்கட்சி படுபாதாளத்தில் புதைக்கப் பட்டுவிட்டது. உலகுள்ள வரையிலும் காங்கிரசுதான் ஆட்சி மனையில் அமர்ந்திருக்கும். சுயமரியாதைக் கட்சிக்கும் இறுதிக்கடன் செய்யப்பட்டுவிட்டது. இனி ஈ.வெ.ரா.வுக்கு இந்நாட்டில் வேலையில்லை. அவர் காங்கிரசில் சரணடைய வேண்டும். இன்றேல் மூலையில் ஒதுங்கிட வேண்டும் என்று வாய்க்கு வந்தவாறு உளறிக்கொண்டு திரிந்தனர். ஈ.வெ.ரா.வின் தோழர்களிற்கூடச் சிலர், அவர் தேர்தலில் தலையிட்டது தவறு என்று பிழைபட உணர்ந்து வெறுப்புற்றனர். கோழைத் தனத்தாலும், மனமில்லாமலும், பதவிகளை எதிர் பார்த்தும், ராமசாமியாரின் மேலுள்ள தனிப்பட்ட குரோதத் தாலும் இரண்டொரு சுயமரியாதைக்காரர்கள் இச்சமயம் காங்கிரசில் சேர்ந்தனர். எதிரிகள் அனைவரும் அவருடைய அரசியல் கொள்கைகளையும் (இதுதான் சமயம் என்று) சமுதாயக் கொள்கைகளையும் கண்டித்து வந்தனர். தன்னல வாதிகள் பலரும் அவரைக் கடுமையாக இழித்துரைத்தனர். இவற்றை ஈ.வெ.ரா. ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன:- 1. அவரைப்பற்றி உலகத்தார் தப்பபிப் பிராயம் கொள்ளவேண்டும். 2. அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்பட வேண்டும். 3. அவர் கடுமையாக வையவும், சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர். என்பது திரு.டி.கே.சிதம்பரநாத முதலியார் B.A., B.L., M.L.C., அவர்களால் ஈ.வெ.ரா.வைப் பற்றி கூறப்பட்டதாகும். 1928 ஜூலை 20ல் திருநெல்வேலியில், ஈ.வெ.ரா.வின் உருவப்படத்தைத் திறந்து வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் கூற்று இச் சந்தர்ப்பத்தில் உண்மையாகவே இருந்தது. ஈ.வெ.ரா. தமது தோல்வியைக் கண்டு திகைப்புறவில்லை. தேர்தலுக்கு முன்பேயே வெற்றியைக் காட்டிலும் தோல்வியே நன்மை தரும் என்று கூறிவந்தார். ஜடி கட்சி தோல்வியடைந்தால் நான் மகிழ்ச்சி யடைவதோடு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்துக்குப் பார்ப்பனரல்லாதார் மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கின்ற தன்மையால் இயக்கப் பிரசாரம் பலமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜடி கட்சி ஜெயித்தால், தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அநாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறிக் கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய, படுதோல்வி ஒரு சாதனமாகும். (1937 ஜனவரி, கோடம்பாக்கம் பிரசங்கம்) இவ்வாறு தேர்தல் முடிவுக்கு அவர் கூறியுள்ளார். ஆதலால், அவர் மனத்தில் எத்தகைய சோர்வும் உண்டாகவில்லை. முன்னிலும் ஊக்கமாக இயக்க வேலை செய்வதற்குத் திட்டங்கள் வகுக்கத் தொடங்கிவிட்டார். காங்கிர வெற்றி பெற்றபின், அதைக் குறித்து அவர் வெளியிட்ட கருத்தும், நீதிக்கட்சியின் தோல்வியைக் குறித்து வெளியிட்ட கருத்தும் எப்பொழுதும் மறக்கக்கூடாதவை. காங்கிரசும், பார்ப்பனரும் நல்ல நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டிய தில்லை. அவர்களது கட்டுப்பாடானதும், தொடர்ச்சியானதுமான விஷமப் பிரசாரத்துக்கு எப்போதாவது ஒரு அழிவுகாலம் வரவேண்டுமானால், அது இப்போது வந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் என்பதுபோல், பார்ப்பனர்களது புளுகுகளும், பித்தலாட்டங்களும், புராணப் பிரசாரங்களும் வெட்ட வெளிச்சமாகி, கொஞ்சநஞ்சம் பாக்கியிருந்த பாமர மக்களும் உணர்ந்து, ஜாக்கிரதையாகிக் கொள்ளத்தகும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை அறிவாளிகள் வரேற்பார்கள் என்று கருதுகிறோம். இனிமேல்தான் மந்திரிகளின் சீர்திருத்தத்தைத் தகர்க்கும் வீரமும் வரிகளைக் குறைத்துவிடும் தயாள குணமும், பாரதத் தாயின் விலங்கை உடைத்துச் சிறையிலிருந்து வெளியாக்கும் தேசபக்தியும் நன்றாய் விளங்கப் போகின்றன. ஆதலால் இன்றைய நிலைமை பார்ப்பனரல்லாத மக்கள் நலனுக்குச் - சிறப்பாக ஜடி கட்சிக்கு ஒரு மதிப்பிற்குரிய, மகத்தான, அநுகூலமான நன்மையென்றே சொல்லவேண்டும்... சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கும் பாதை வழி திறக்கப் பட்டதுபோல், முன்னிலும் தீவிரமாய்ச் செய்ய வசதி ஏற்பட்டிருப் பதை வீணாக்கிவிடாமல்... தோழர்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யவேண்டியது. (28.02.1937 குடி அரசு தலையங்கம்) காங்கிர வெற்றி பெற்றவுடன் மந்திரிப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கவர்னர்கள் சீர்திருத்த சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் மந்திரிகள் அன்றாட வேலைகளில் தலையிடுவதில்லை என்று உறுதிகூறவேண்டும் என்று காங்கிர காரர்கள் கேட்டனர். அரசாங்கத்தார் இதற்கு ஒருப்படவில்லை. தேர்தல் காலத்தில், நாங்கள் மந்திரிப் பதவி ஏற்று அரசியல் நடத்தப்போகிறோம் என்று இவர்கள் சொல்லவில்லை. சீர்திருத்தத்தை உடைப்பதற்காகவே சட்டசபைக்கு செல்கிறோம் என்று கூறினர். ஆதலால், இப்பொழுது மந்திரிப்பதவி ஏற்றால், அதற்கு பொதுமக்களிடம் ஏதாவது சாக்குபோக்கு கூறியாக வேண்டும். இதன் பொருட்டே நிபந்தனை கேட்டனர். இதனால் காங்கிர வெற்றிபெற்ற ஒவ்வொரு மாகாணத் திலும் இடைக்கால மந்திரிசபைகளைக் கவர்னர்கள் அமைத்தார்கள். சென்னை கவர்னரும் இடைக்கால மந்திரிசபை அமைக்க முன்வந்தார். அப்பொழுது ஈ.வெ.ரா. இடைக்கால மந்திரி சபையில் நீதிக்கட்சியின் பெயரால் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்சித் தலைவருக்குத் தந்தி கொடுத்தார். நீதிக் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. மூன்று மாதங்கள் கழிந்தன. காங்கிரகாரர்கள் பதவியேற்பதென்ற முடிவுக்கு வந்தனர். சென்னையிலும் கனம் ராஜகோபாலாச்சாரியாரின் மந்திரிசபை தோன்றிற்று. இப்பொழுதுதான் ஈ.வெ.ரா. மிக்க ஊக்கங்கொண்டார். இவர்களை எப்படியாவது ஒழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக்கொண்டார். காங்கிர மந்திரிகளுக்குச் சரணாகதி மந்திரிகள் என்று பெயரிட்டார். இனி எத்தனை நாள் என்று நாள் கணக்கிட்டார். காங்கிரகாரர்களின் முன்னுக்குப் பின் முரணாக நடத்தைகளைப்பற்றிப் பேசிவந்தார். இச்சமயம் சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக நடை பெற்றுவந்த தினசரிப் பத்திரிகையாகிய விடுதலை ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது. அதைத் தம் சொந்த நிர்வாகத்தில், கட்சிக் கொள்கைக்காக ஈ.வெ.ரா.வே நடத்தி வந்தார் - வருகிறார். அதில், சரணாகதி மந்திரிசபை இன்னும் எத்தனை நாளைக்கு? என்று தினமும் இன்றைக்கு இத்தனையாவது நாள் என்று நாள் கணக்கு போட்டு வந்தார். இக்காலத்தில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கே வெற்றி. நகரசபை, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை ஆகிய எல்லாவற்றையும் அவர்களே கைப்பற்றினர். காங்கிரசை எதிர்த்து நின்ற பெரிய மனிதர்கள் என்ற எல்லோரும் தோற்றனர். இதனால், பலர் பொதுவாழ்வே நமக்கு வேண்டாம் என்று விலகினர். சிலர் காங்கிரசோடு கலந்து ஒன்றாயினர். இந்நிகழ்ச்சியைக் கண்டு ஈ.வெ.ரா. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தம் கட்சியில் உள்ளவர்கள் எதிர்க்கட்சியில் சேருவதைப் பற்றி அவர் எப்பொழுதும் கவலைப் படுவதேயில்லை. இதுபற்றி அவர் எழுதியிருப்பதைக் கீழே பாருங்கள்:- இப்போது பலர் கட்சிவிட்டுக் கட்சி மாறுகிறார்கள். உத்தியோகம், பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால் தான் கிடைக்கும் என்ற எண்ணத்தைச் சிலருக்குச் சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல் காட்டிவிட்டதால், அவசரத்தில் யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும், பதவிகள் இல்லா விட்டால் யார் யாருக்கு மதிப்பும், மரியாதையும் இருக்காதோ அவர்களும், தங்களது வாழ்வுக்கு வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது வேகமாக காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். இதைப்பற்றி நாம் வருந்துவதா? மகிழ்ச்சி அடைவதா? என்பது ஒரு பிரச்சனைதான். நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியது தான் கிரமம் என்பது நமது அபிப்பிராயம். யார் யார் ஜடி கட்சியில் இருந்தாலும், அவர்கள் பட்டம் பதவி பெற்று நிர்வாகம் நடத்தியதாலும், கட்சிக்கு கெட்ட பெயரும், தேர்தலில் தோல்வியும் ஏற்படுவதற்குக் காரணதர்களா யிருந்தார்களோ, அவர்களை நாம் தள்ளுவதற்கு முடியாமல் இருக்கிற காலத்தில், அவர்களாக நம்மைவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஜடி கட்சி சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? மற்றும் - நன்மை என்பதற்கு, நம்மைப் பிடித்த பொல்லாத கிரகங்கள் மாறிக் காங்கிரசைப் பற்றுகின்றன என்றால், நாம் இரண்டு விதத்தில் மகிழ்ச்சியடையக் கடமைப் பட்டிருக்கிறோம். என்னவென்றால், ஒன்று - நம்மை விட்டுப் பிரிந்தது; மற்றொன்று - இந்த உபத்திரவங்கள் நம் எதிரிகளைப் போய்ப் பற்றியது. இன்னும் சிலர் நம்மைவிட்டுப் போக வேண்டியவர்கள் நமக்குள்ளிருக்கிறார்கள். அவர்களும் போய் விடுவார்களானால் ஜடி கட்சிக்கு மிகவும் நன்மை செய்தவர் களாவதோடு, கட்சியின் நன்றிக்கும் பாத்திமானவர்களாவார்கள். இம்மாதிரியான குடியிருந்த வீட்டுக்குத் தீ வைத்துக் கொண்டிருக்கும் குணமுள்ள ஆட்களுக்கு, ஒரு போக்கிட மில்லாமல் சதா ஒரே வீடு வெந்து கொண்டேயிருக்கும். ஆகையால், அப்படிப்பட்டவர்கள் வேறு வீட்டுக்குப் போகச் சவுகரியமிருந்தால், பழைய வீடுகள் வெந்துபோக மீதியாவது வேகாமல் இருக்கும். ஆகையால், இப்படிப்பட்ட ஆட்களுக்குப் புகலிடமாய் காங்கிர இருப்பதுபற்றி, இதற்காகவும் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்த வேண்டியது கடமை ஆகும். இது 1937 ஏப்ரல் 25ல் வெளியான குடி அரசுவில் கட்சி மாறுதல் என்னும் தலைப்பின்கீழ் எழுதப்பட்டதாகும். காங்கிர காரர்கள் பதவியேற்றபின் சிறிதுசிறிதாக அவர்களுடைய கொள்கைகள் மாறின; தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை மறந்தனர்; அதிகார மோகம் பிடித்தவர்களாகிவிட்டனர். பொதுமக்கள் எதிர்பார்த்த அளவு அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஈ.வெ.ரா.வும் சொற்பொழிவுகள் மூலமும், குடிஅரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகள் மூலமும் காங்கிரசின் தவறுகளைப் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி வந்தார். தேர்தல் காலத்தில் ஈ.வெ.ரா. கூறிய பல உண்மைகளை இப்பொழுது பொதுமக்கள் உணர்ந்தனர். தமிழ்நாடு தமிழருக்கே! சென்னை முதல்மந்திரியார், கனம் சி.ராஜகோபாலாச்சாரி யாரின் அரசியல் நிர்வாகம் தமிழர் பலருக்குப் பிடிக்கவில்லை. அவர் சர்வாதிகார மனப்பான்மை படைத்தவராயிருக்கிறார் என்பதே இதற்குக் காரணம். இவர் அதிகாரத்திற்கு வந்தவுடனே, இந்திமொழியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாகக் கூறினார். இக்கருத்து வெளிவந்தவுடனேயே தமிழர் பலர் எதிர்த்தனர். ஈ.வெ.ரா.வும் இதை எதிர்த்தார். இந்திமொழி கட்டாயமானால் தமிழ் வளர்ச்சி குறையும்; தமிழர் நலம் குன்றும்; தமிழர் நாகரிகம் அழியும் என்பது எதிர்ப்பவர் கருத்து. ஈ.வெ.ரா. வீட்டு மொழி கன்னடமாயினும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப் பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ்மொழியைப் பேணவேண்டுமென்பதில் அவருக்கிணை வேறு எவருமிலர். ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்று களுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப் பற்றிராதாரிடத்துத் தேசப்பற்றிராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருகவேண்டு மென்பது எனது பிரார்த்தனை. தமிழ்மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத் தையும், பழந்தமிழ் நூல்களிற் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், ரோமாபுரி, பாலதீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும், அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்தும், பிறவும் அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது.... தமிழ் நாட்டிற் பிறந்தவர் களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்கிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மகாராஷ்டிரனுக்கு மகாராஷ்டிரா மொழியில் பற்றுண்டு. ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப்போகும். தாய் மொழியில் பற்றுச் செலுத்தா திருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30வது காங்கிர மாநாட்டில் ஈ.வெ.ரா. தலைமை தாங்கினார். அவரது முன்னுரையில் இவ்வாறு கூறினார். அவருடைய தமிழ்ப்பற்றுக்கு இவ்வெடுத்துக் காட்டுத் தக்க அரணாகும். ஈ.வெ.ரா. இந்தியை எதிர்க்கத் தொடங்கியவுடன் இந்தியை ஒரு கருவியாக கொண்டு மந்திரிசபையைக் கவிழ்க்க முயல்கிறார். நீதிக்கட்சிக்கு ஆக்கந்தேடுகிறார். வகுப்புவாதத்தை வளர்க்க முந்துகிறார் என்றெல்லாம் எதிரிகள் புகன்றனர். அவர் இந்தியை இப்போது புதிதாக எதிர்க்கவில்லையென்ற உண்மையை அவர்கள் உணரவில்லை. அல்லது உணர்ந்தும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் கூறினர் என்றுதான் சொல்லவேண்டும். 1926ஆம் ஆண்டு முதலே ஈ.வெ.ரா. தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப் படுவதை எதிர்த்து வருகிறார். இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை யில்லை. அதனால் தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை யுண்டாகும்; தமிழ்மொழியின் வளர்ச்சியும் குன்றும். என்று கூறிவந்திருக்கிறார். 7-3-1926 குடி அரசில் இது பற்றிய கட்டுரையொன்றை வரைந்துள்ளார். அதன் தலைப்பெயர் தமிழிற்குத் துரோகமும், ஹிந்தி மொழியின் இரகசியமும் என்பது. இது சித்திர புத்திரன் என்னும் புனைப்பெயருடன் அவரால் எழுதப்பட்டது. அதன் பகுதிகள் சிலவற்றைக் கீழே தருகிறோம். இதுவரை இந்திக்காகச் செலவாயிருக்கும் பணத்தின் பெரும் பாகம் பிராமணரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களின் 100க்கு 97 பேர் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்தத் தொகையில் 100க்கு 97 பேர் பிராமணரல்லாதாயிருந்தும், 100க்கு 3 வீதம் உள்ள பிராமணர்கள்தான், இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயிருந்தார்கள். பிராமணரல்லாதார் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்திருக்கிறார்களா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றி அதிகக் கவலை ஒன்றுமில்லை. ஆனால், இதில் 100ல் ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பிராமணர்களால் நமக்கு ஏற்படும் கெடுதியையும் நினைக்கும்போது, இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப் படாமலும் இருக்க முடியவில்லை. இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல், தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பிராமணர்கள் பேசுவதும், அதைச் சர்க்கார் பள்ளிக்கூடம் முதலிய பலவிடங்களில் கட்டாய பாடமாக்கப் பிரயத்தனப் படுவதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்சம் காலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துக்களில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது. பொதுவாய் இந்தி என்பது வெளிமாகாணங்களில் பிராமண மதப் பிரசாரஞ் செய்யக் கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகி விட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாமர ஜனங்கள் அறிவதே யில்லை. இரண்டொருவருக்கும் அதன் இரகசியம் தெரிந்தாலும் பிராமணர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடி விடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியிற் சொன்னால் இவர்களைத் தேசத் துரோகியென்று சொல்லி விடுகிறார்கள். இக்கட்டுரையில் இன்னும் பல உண்மைகள் காணப்படு கின்றன. ஆரம்பமுதல் சுயமரியாதை இயக்கமும் இந்தியைக் கண்டித்து வருகின்றது. 1930ல் நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியைக் கண்டித்து முடிவு செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தை எழுதினவர், தோழர் எ.ராமநாதன் அவர்கள். இத்தீர்மானத்தை முன் மொழிந்தவர், தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள். இம்முடிவு எதிர்ப்பின்றி நிறைவேற்றப் பட்டது. இன்னும் பல மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இந்தி எதிர்ப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 10.05.1931 குடி அரசுவிலும் இந்தியைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியுள்ளார். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, வடமொழிக்கு உயர்வு கொடுக்கப் பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து, உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத மொழியாகிய அவ்வடமொழிக்கு (இந்தி) எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்துவரும் சங்கதியாகும். பல ஆண்டுகளுக்கு முன்னரே உயர்திரு. மறைமலையடி களும் இந்தி பொதுமொழியாவதற்கு தகுதியுடையதன்று; இந்தி நுழைப்பால் தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் என்பனவற்றை விளக்கிக் கட்டுரை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு இருக்கும் செய்தியைக் கனம் ஆச்சார்யார் அறிவார். ஆயினும், கட்டாயப் பாடமாக்கு வேன் என்று உறுதி கூறினார். காங்கிரகாரர்கள் பலரும் எதிர்த்தனர். தோழர் எ.சோமசுந்தர பாரதியார் அவர்கள் அதைக் கண்டித்து முதலமைச்சருக்குக் கடிதம் வரைந்தார். தமிழ்நாடெங்கும் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் முதன்மந்திரியாரின் கருத்து கண்டிக்கப்பட்டது. 1937 டிசம்பர் 26ல், திருச்சியில் தமிழர் மாநாடு கூட்டப் பட்டது. தோழர்கள் கி.ஆ.பெ. விசுவநாதம், டி.பி. வேதாசலம் ஆகியவர்கள் இதைக் கூட்ட முனைந்து நின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் காங்கிரசுக் கட்சியினர்; நீதிக் கட்சியினர்; முலீம் லீக்கினர்; கிறிதவ சபையினர்; வைதீகர்கள்; பண்டிதர்கள்; தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே.. இம்மாநாட்டின் தலைவர் தோழர் சோமசுந்தர பாரதியார். கட்டாய இந்தி நுழைப்புக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டைத் தனி மாகாணமாகப் பிரித்தல் - போன்ற பல தீர்மானங்கள் நிறைவேறின. இம்மாநாட்டைப் பார்த்தோர் தோழர் ஈ.வெ.ரா.வையே புகழ்ந்தனர். அவருடைய உண்மைக் கொள்கையே இம்மாநாடாக உருக்கொண்டதென வியந்தனர். இதுமுதல் தமிழர் கிளர்ச்சி வலுத்தது. நகரெங்கும் பொதுக் கூட்டங்கள்; மாநாடுகள்; தமிழர் உரிமைப் போர்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஈ.வெ.ரா. புத்துணர்ச்சி பெற்றார். புதுவன்மை பெற்றார். இளைஞராகத் திகழ்ந்தார். ஆயினும், முதலமைச்சர் இந்தியை விட்டுக்கொடுக்க வில்லை. கட்டாயப் பாடமாக்கவே உறுதி கொண்டார். அவ் வுறுதியில் சில மாற்றங்கள் நுழைந்தன. எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் என்றிருந்தது 125 பள்ளிக் கூடங்கள் என்று ஆயின. படிக்கவேண்டியதும் முதல் மூன்று பாரங்களில் தான். இதற்கும் பரீட்சையில் தேர்ச்சிபெற வேண்டும் என்ற அவசியமில்லை. இவையே அம்மாற்றம். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மேலும் மேலும் தழைத்து வளர்ந்தது; வளர்ந்து வருகிறது. 1938 பிப்ரவரி 27ல் காஞ்சி மாநகரில் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. இம்மாநாட்டைக் கூட்டுவதற்கு முதற் காரணமாயிருந்தவர்கள், தோழர்கள் அ.க.தங்கவேலு முதலியாரும், எ.வி.லிங்கமும் ஆவர். இதற்குத் தலைவர் சர்.கே.வி.ரெட்டி நாயுடு அவர்கள். மாநாட்டைத் திறந்து வைத்தவர். மாஜி லா மெம்பர் காலஞ் சென்ற சர்.எம்.கிருஷ்ண நாயர். இவ்வளவு எதிர்த்தும் முதலமைச்சரால் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது. இதைத் தமிழர்கள் பொறுக்கவில்லை. போர் முழக்கஞ் செய்தனர். சென்னையில் இந்து தியாலாஜிகல் உயர்தரப் பள்ளி முன்பும், முதல்மந்திரியார் வீட்டு முன்னும் மறியல் செய்யத் தொடங்கினர் தமிழர்கள். பல்லடம் தோழர் பொன்னுசாமி என்னும் வீரர் முதல்மந்திரியார் வீட்டுமுன் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார். டாலின் ஜெகதீசன் என்ற ஒருவர் இச்சமயம் இந்தியை ஒழிக்காவிட்டால், சாகும்வரை பட்டினி கிடப்பேன் என்று உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் இந்தி எதிர்ப்பு வலுவடைந்தது. இறுதியில் இவர் எதிரிகளின் சூழ்ச்சியாலும், இரண்டொரு கோடரிக் காம்புகளின் தூண்டுதலாலும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார். மறியல் செய்த தொண்டர்கள் தண்டனை பெற்றனர். சட்ட மறுப்புக் காலத்தில் வைசிராய் பிரபுவால் பிறப்பிக்கப்பட்ட கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் காங்கிர அரசாங்கம் இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் மீது தாராளமாய்க் கையாண்டது. இது குறித்துப் பலர் கண்டித்தனர். இந்தியன் எக்பிர போன்ற தேசீய பார்ப்பன பத்திரிகைகள்கூட காங்கிர அரசாங்கத்தின் இச்செயலைக் கண்டித்தன. தமிழர் கிளர்ச்சிக்குப் பெருந்துணை செய்துவருவது விடுதலைப் பத்திரிகை. ஆதலால் அதை அடக்கவேண்டும் என்று அரசாங்கத்தார் எண்ணினர். சென்னை நகரசபைத் தேர்தலுக்காக, வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்; ஒரு எச்சரிக்கை விடுதலையில் வெளிவந்தது. இதன்மேல் அரசாங்கத்தார் வகுப்பு வெறுப்பு, அரச வெறுப்புக் குற்றங்கள சுமத்தினர். விடுதலைப் பதிப்பாசிரியர், தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மேலும், ஆசிரியர், பண்டிதர் முத்துசாமி பிள்ளை அவர்கள் மேலும் வழக்குத் தொடுத்தனர். வழக்குக் கோவையில் நடைபெற்றது. ராமசாமியார் சிறை சென்ற பின்பே இவ்வழக்கு விசாரணை முடிந்து முடிவு கூறப்பட்டது. அரச வெறுப்புக் குற்றம் தள்ளப் பட்டது. வகுப்பு வெறுப்புக் குற்றத்திற்கு மட்டிலும் ஒவ்வொரு வருக்கும் ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டது. தமிழர் இயக்கம் இன்னும் வீறுகொண்டெழுந்தது. நாடெங்கும் தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்னும் ஓசை. ‘தமிழன் தன் மொழியைக் காப்பாற்ற முயல்வதற்குச் சிறையா? என்ற கேள்வி. இந்தி எதிர்ப்புக்காகத் தண்டனையில்லை; தொண்டர்கள் முதல் மந்திரியார் வீட்டு வாயிலில் கூடுகின்றனர், அவரையும், அவர் குடும்பத்தினரையும் நிந்தனை செய்கின்றனர். இதற்கே தண்டனை என்று மந்திரிகளும், அவர்கள் வழிச்செல்வோரும் கூறினர். ஆகையால், ஈ.வெ.ரா. மந்திரி வீட்டுமுன் மறியல் செய்யாதிருப்பது நலம் என்றோர் அறிக்கை விடுத்தார். அதன்படியே தொண்டர்கள் இம்மறியலை நிறுத்திவிட்டார்கள். ஆயினும் அரசாங்க அடக்குமுறை ஓயவில்லை. இந்நிலையில் திருச்சியிலிருந்து ஒரு இந்தி எதிர்ப்புப்படை புறப்பட்டது. இதில் 100 போர் வீரர்கள் இருந்தனர். இப்படையைத் திருச்சியிலிருந்து தோழர்கள் ஈ.வெ.ரா., கலிபுல்லா சாகிப் ஏம்.ஏ., பி.எல்., முதலியவர்கள் நல்லுரை கூறி வழியனுப்பி வைத்தனர். பரவது ராஜ கோபாலாச்சாரியார் என்னும் காஞ்சீபுரத்துப் பார்ப்பனர் ஒருவரும் இந்திப் போரில் ஈடுபட்டுழைத்தார். திருச்சி தமிழர் படைத்தலைவர், ராவ்சாகிப் அய்.குமாரசாமி பிள்ளை அவர்கள், யுத்த மந்திரி மணவை ரெ.திருமலை சாமி, அணித் தலைவர் கே.வி.அழகர்சாமி, மற்றும் தோழியர் இராமாமிர்தத் தம்மாள், தோழர் முகைதீன் போன்ற பலர் இப்படையிற் சென்றனர். இதனாலும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி முதிர்ச்சியுற்றது. இப்படை சென்னையை அடைந்ததும் இப்படைக்கு வரவேற்பளிக்க சென்னை கடற்கரையில் ஒரு மாபெருங்கூட்டம் கூடிற்று. அக்கூட்டத்திற்குச் சென்னை கடற்கரை என்றும் கண்டிராத அளவு சுமார் 70,000 பேர்கள் கூடினார்கள். அன்று அக்கூட்டத்தில் பேசும் போதுதான் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன்முதல் கோஷமிட்டு, அதனை விளக்கிக் கூறினார். அன்றுமுதல் அதுவே தமிழரின் கொள்கையாகவும், ஜடி கட்சியின் கொள்கையாகவும் ஆயிற்று. இப்படை வீரர்களில் பலர் சென்னையில் மறியல் செய்து சிறைப்பட்டனர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் பேரால் தோழர் களான கூட்டுறவு இயக்க மாஜி டிப்டி ரிஜிஸ்திரார் சி.டி.நாயகம், கே.எம்.பாலசுப்ரமணியம், பி.ஏ., பி.எல்., ஈழத்து சிவானந்த அடிகள், பி.ஏ., சி.என்.அண்ணாதுரை, எம்.ஏ., டி.ஏ.வி.நாதன், பி.ஏ., பி.எல்., சாமி அருணகிரிநாதர், சாமி ஷண்முகானந்தா, கே.ராமய்யா, மறை. திருநாவுக்கரசு, திருவாரூர் பாலசுந்தரப் பாவலர், தோழர் எ.சம்பந்தம் போன்ற 1500 பேர்கள் சிறைப்பட்டனர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு பெண்கள் மனதையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 13.11.1938ல் சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூடிற்று. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகள் திருமகள்) இதன் தலைவர். இம்மாநாட்டின் பயனாகப் பெண்களும் மறியல் செய்யப் புகுந்தனர். தோழியர்கள் டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் முதலிய வீராங்கனைகள் மறியல் செய்தனர்; சிறை புகுந்தனர். இம் மாநாட்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சிற் பாய்ந்தது. உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில் ஈ.வெ.ரா.வின் பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டுமென முடிவு செய்தனர். இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல் செய்து சிறை புகுந்தனர். இவ்வீராங்கனைகளைப் பாராட்டும் கூட்டங்கள் பல நடைபெற்றன. சில கூட்டங்களில் நமது பெரியாரும் சொற்பொழி வாற்றினார். பெண் மக்களின் வீரச்செயலைப் பாராட்டினார். தமிழ் மக்களின் உண்மை உணர்ச்சியை எடுத்துக் காட்டினார். இந்த எதிர்ப்புக்குப் பெரியாரே காரணம் என்பது அரசாங்கத்தார் கருத்து. ஆதலின் அவரைச் சிறையிடக் காலங் கருதியிருந்தனர். இவர்கள் பெரியாரின் இரு விரிவுரை யாளர்களைக் கொண்டு அவர் மீது குற்றங்கற்பித்தனர், பெண்களை மறியல் செய்யத் தூண்டினார் என்பதே அப்பழி. பெரியாருக்கும் அரசாங்க அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில் நீதிக்கட்சியினர் சென்னை மாகாணப் பார்ப்பன ரல்லாதார் ஜடி மாநாட்டைக் கூட்ட முடிவு செய்தனர். அவர்கள் ஒரே மனதாகப் பெரியாரையே தன் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இப்பொழுது பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆகிவிட்டார். பெரியார் வழக்கு சென்னையில் 1938 டிசம்பர் 5, 6ம் நாட்களில் நடந்தது. அவர் வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை. சர்.பன்னீர் செல்வம், குமாரராஜா முத்தையா செட்டியார் போன்றவர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று வலியுறுத்தியும் மறுத்துவிட்டார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது அரசியல், கொள்கை ஆகியவற்றை விளக்கும் அறிக்கை ஒன்றை எழுத்துமூலம் நீதிபதி யிடம் கொடுத்ததோடு நிறுத்திக்கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் சில பகுதிகளைக் கீழே தருகின்றோம். இந்தக் கோர்ட்டு காங்கிர மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்கவேண்டும் என்பதில் காங்கிர மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக் கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லையென்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதல் மந்திரியார் கடற்கரைக் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எனவே, இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஒரு டெமான்ட்ரேஷன் (Demonstration) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன் - இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தாபனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய காரியமாகும். நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜடி இயக்கமும் - எதுவும் சட்டப்படி, சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப் படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும்... ஆகவே, கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம், அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம், எவ்வளவு அதிக தண்டனை கொடுக்கமுடியுமா, அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புக் கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடையவேண்டுமானாலும் அதற்காகக் கஷ்டநஷ்டங்களடைதல் என்னும் விலைகொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் போலீ கோர்ட்டில் 4வது நீதிபதி திரு.மாதவராவ் அவர்கள் முன்னிலையில் நடந்தது. நீதிபதி வழக்கில் முடிவு கூறினார்: இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை. இரண்டு தண்டனை களையும் இரண்டு தனித்தனி காலத்தில் அடையவேண்டும் இதுவே தீர்ப்பின் கருத்து. பின்னர், அரசாங்கத்தாரால் கடுங்காவல் வெறுங்காவலாக மாற்றப்பட்டது. பெரியார் தண்டனை ஏற்றது பற்றி, அவர்தம் பழம்பெருந் தோழர் திரு.வி.க. முதலியார் எழுதியது இது: திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்றுச் சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் திரு.நாயக்கர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் அய்யமில்லை. முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந் நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. திரு.நாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் கசிந்தேயிருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும். (நவசக்தி 09.12.1938 - தலையங்கம்) இதுபோலவே நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டவுடன் பெரியார் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றார். அன்றலர்ந்த செந்தாமரையினை நிகர்த்தது அவர் முகம். ஆனால், அன்பர் பலரும் கண்ணீர்விட்டனர். சர்.பன்னீர் செல்வம் போன்ற கலங்கா நெஞ்சினரும் கலங்கி விட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியில், மழையையும், காற்றையும், கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் கூடிக்காத்திருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும் பரிதவித்தனர். பல்லாண்டுகளாக அரசியல் நடத்தியது நீதிக்கட்சி. அதன் மாபெருந் தலைவர் பெரியார். தமிழ்நாட்டுத் தனிப்பெருந் தலைவர். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர், அறுபதாண்டு நிரம்பிய ஆண்டகை. எதிர்க்கட்சியின் தலைவர். எதிர்காலத்தில் அரசாங்கத்தை நடத்தும் உரிமை பெற்றவர். இவ்வொப்பற்ற பெரியார்க்குக் கடுந்தண்டனை கிடைத்தது கேட்டு நாடெல்லாம் அழுதன. நடுநிலை தவறாப் பத்திரிகைகள் அரசாங்கத்தின் போக்கைக் கண்டித்தன. அவ்வமயம் திரு.வி.க.முதலியார் அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதியது எவரும் ஒப்புதற்குரியதாகும். நண்பர் நாயக்கருக்குச் சிறைவாசம் பழையது; மிகப் பழையது; புதியதன்று. முன்னே அவர் ஒத்துழையாமையில் ஈடுபட்டும், தீண்டாமையை முன்னிட்டும், சமதர்மத்தைக் குறிக்கொண்டும் பலமுறை சென்றுள்ளார். இம்முறை அவர் இந்தி எதிர்ப்புக் காரணமாகச் சிறை நுழைந்திருக்கின்றார். சிறைக்கோட்டம் நாயக்கருக்கு ஒருவிதத் தவக்கோட்டம் ஆனதுபோலும்! சிறைப் பறவையாகிய இராமசாமி நாயக்கர் வரலாற்றை விரித்துக் கூறவேண்டியதில்லை. அவர்தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் நுட்பங்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத் தக்கன. இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்குந்திறன், கரவு - சூழ்ச்சி யின்மை முதலியன. இவை அவர்தம் வாழ்வாக அரும்பி, மலர்ந்து, காய்ந்து, கனிந்து நிற்கின்றன. இந்நீர்மைகள் திரு.நாயக்கரை அடிக்கடி சிறைபுகச் செய்கின்றன போலும். முதுமைப் பருவத்திலும் திரு.நாயக்கர் தலைசாய்ந்துப் படுக்கையில் கிடந்து காலங்கழித் தாரில்லை. அவர், தமிழ்நாட்டின் நாலா பக்கமும் சுழன்று சுழன்று இரவு பகல் ஓயாது கர்ச்சனை செய்துவந்தார். ஓய்வு என்பதை அறியாது வீர கர்ச்சனை புரிந்துவந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலைநிமிர்ந்து கிடக்கிறது. (09.12.1938 நவசக்தி தலையங்கம்) பெரியாரைச் சிறையில் வைத்தால் தமிழர் கிளர்ச்சி அடங்கி விடும் என்று அரசாங்கத்தினர் நினைத்தனர். அவர்தம் நினைப்புப் பாழ்த்தது. பெரியாரின் வீரவுரைகள் ஒவ்வொரு தமிழர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவர்கள் நெஞ்சகத்தில் வீரக்கனலை எழுப்பிக்கொண்டேயிருந்தன. பெரியார் தெளித்த விதைகள் எங்கும் செழித்து வளர்ந்தன. ஒன்றேனும் பழுதுபட வில்லை. எங்கும் பெரியாரின் மூலமந்திரம் வீறிட்டெழுந்தது. தமிழ்நாடு தமிழருக்கே என்பது அவர்தம் மந்திரம். இம்மந்திரத்தின் வல்லோசை வானைப் பிளந்தது. நாமிருக்கும் நாடுநம தென்பதறிந்தோம் - இது நமன்கே யுரிமையாம் என்பதுணர்ந்தோம். என்னும் பாரதியார் கவியின் கருத்துக் குதித்தெழுந்தது. தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு தமிழருக்கே!!! என்று தமிழ் மக்கள் வீரகர்ச்சனை செய்தனர். பெரியார் சிறைப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், 1938 டிசம்பர் 18ல் அவருடைய அறுபதாம் ஆண்டுவிழா நாடெங்கும் நடைபெற்றது. பெரியார் பெயரால் அன்னதானங்கள், பட ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், அவருடைய கொள்கைக்கு மாறாகப் பலவிடங்களில், அவர் படத்திற்குத் தூபதீப ஆராதனை களும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும், மூலை முடுக்குகளிலும் பெரியார் விழாக் கொண்டாடப்பட்டது. அவர் புகழ் பேசப்பட்டது. அவர் தியாகத்தை மக்கள் உணர்ந்தனர். அவர்தம் உயர்ந்த கொள்கைகளை அறிந்தனர். இதன் மூலம் பெரியார் தொடங்கிய இயக்கத்திற்குப் பேராதரவு பெருகிற்று. இந்தி எதிர்ப்பியக்கம் உரம் பெற்றது. எங்கும், இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! பெரியார் வாழ்க! அடக்கு முறை ஒழிக! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற ஒலி தமிழர்கள் உள்ளத்தினின்றும் எழுந்தன. ஓங்கி முழங்கி பெரியாரின் எதிரிகளது நெஞ்சத்திற் பாய்ந்தன. சுருக்கெனத் தைத்தன. செய்வறிதயாது திகைத்தனர் அன்னார். ஆனால், ஆராவாரித்தனர் தமிழர். நீதிக்கட்சித் தலைவர் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி நீதிக்கட்சித் தலைவர் களுக்கு இதற்குமுன் நல்லெண்ணமில்லை. இப்போதுங்கூட பலருக்கு அப்படித் தான். அவர்கள் இப்பெயரைக் கேட்டாலே வெறுப்புற்றனர். மதத்தைக் கெடுப்பது, வகுப்பை ஒழிப்பது, செல்வர்களைச் சிதைப்பது, கட்டுப் பாட்டைக் குலைப்பது - இவைகளே சுயமரியாதைக் கொள்கைகள். இக்கொள்கைகள் நலந்தரா, என்று அவர்கள் எண்ணி வந்தனர். ஆனால், சுயமரியாதைக்காரர் அனைவரும் நீதிக்கட்சியை ஆதி முதல் ஆதரித்தே வந்தனர், இவர்களை விட்டால் நீதிக்கட்சியின் பெயர் சொல்வதற்குக்கூட நாட்டில் வேறொவரும் இல்லை. தலைவர்கள் மட்டிலுந்தான் நீதிக்கட்சி, நீதிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இது அத்தலைவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை வெளிப்படையாக எதிர்க்காமல் இருந்தனர். ஓரளவு இவ்வியக்கத்தை ஆதரிப்பது போலக்கூடக் காட்டிக் கொண்டிருந்தனர். சைவர்களெல்லாம் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வகை தேடினர். வைணவர்களுக்கு அவர்களோடு ஒத்துழைத்தனர். மற்ற மதக்காரர்களும் சுயமரியாதை இயக்கத்தில் வெறுப்புக் கொண்டிருந்தனர். பெரியார், சைவ சமயத்தில் உள்ள குற்றங் குறைகளையும், அடிமை மனப்பான்மையையும், பார்ப்பனீய முறைகளையும் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசியும், எழுதியும் வருவதைக்கண்டு ஆத்திரங்கொண்ட ஒரு பெரிய சைவத்தலைவர், மற்றொரு பட்டதாரியாகிய சைவப் பெரியாரிடம் ஒரு சமயம், இந்த நாயக்கன் நமது சைவத்தைத் தூற்றுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமது சைவமே அழிந்து விடாதா? என்றாராம். அதற்கு அந்தப் பட்டதாரி - சைவம் போனாலும் போகட்டும்; பிறகு உயிர்ப் பித்துக் கொள்ளலாம். ஆனால் நம் நாட்டைப் பிடித்திருக்கும் பார்ப்பனீயக் குஷ்ட நோயை அடியோடு ஒழிப்பதென்றால், அந்த வேலை இந்த நாயக்கனால் தவிர, வேறு யாராலும் முடியாது. ஆதலால், நாம் அவன் முயற்சிக்கு எந்தவித இடைஞ்சலும் செய்யக்கூடாது. என்றாராம். இது ஏறக்குறைய இன்றைக்குப் பத்தாண்டுகட்கு முன் நடந்த ஒரு ரகசியப் பேச்சு. இவ்வுண்மையை 1938ல் தான் நீதிக் கட்சியினர் முற்றும் உணர்ந்தனர். அவர்-மதம், சமுதாயம் சார்பாக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; பார்ப்பனரல்லாதார் நலம் பாதுகாக்கப் பட்டால் போதும். அதற்கேற்ற தலைவர் பெரியாரே என்று கருதி, அவரிடம் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைத்தனர். இவர் கட்சித் தலைவராவதற்கு முன்பே, இவர்தாம் பார்ப்பனரல்லாதாருக்குத் தலைவராக விளங்கினார். இவருடைய இடைவிடாத உழைப்பினாலேயே பொதுத் தேர்தலுக்குப்பின் தமிழ்நாடு விழிப்படைந்தது. 20 ஆண்டுகளுக்குமுன் நமது மாபெரும் தலைவர் களான தியாகராயர், நாயர், பனகல் அரசர் ஆகியோர் நமது தமிழ் மக்களின் நன்மைக்காக நமது நீதி இயக்கத்தை ஆரம்பித்தனர். நமது கட்சியின் உழைப்பால் தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும் மற்ற மக்களுடன் சமநிலையுடன் வாழ வசதியேற்பட்டது. அவர்கள் உழைப்பால் பார்ப்பன ரல்லாதார் அளவிறந்த நன்மைகள் பெற்றனர். இடையில் நமது தலைவர்களின் மன வேறுபாட்டால் சென்ற தேர்தலில் தோல்வி பெற்றோம். ஆனால், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் எந்தத் தலைவர் களின் தூண்டுதலுமில்லாது, தாமே தனியாகத் தமது தோழர்களுடன் நமது கட்சியின் சார்பாகச் சென்ற ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுமையும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, சொற்பொழிவாற்றித் தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார். என்று செட்டிநாட்டுக் குமாரராஜா திரு.முத்தையா செட்டியார் அவர்கள் சென்னையில், தென்னிந்திய நலவுரிமைச்சங்க மாநாட்டில் கொடியேற்றியபோது கூறினார். பெரியார் செய்த பிரசாரத்தால் வெற்றியில் உச்சியில் நின்ற காங்கிர வழுக்கி விழத் தொடங்கி விட்டது. பல நகர சபைகளில் காங்கிரகாரர்கள் தோல்வியுற்றனர். சென்னை நகர சபைத் தேர்தலிலும் தோற்றனர். பஞ்சாயத்துச்சபை, பஞ்சாயத்துக் கோர்ட்டு முதலியவைகளிலும் தோல்வியுற்றனர். தமிழ் மக்கள் மிக்க உணர்ச்சி பெற்றிருந்ததன் காரணமாகவே வேலூரில் 1938 டிசம்பர் 26-27 ம் நாட்களில்சென்னை மாகாணத் தமிழர் மாநாடும், பெண்கள் மாநாடும் நடைபெற்றன. தமிழர் மாநாட்டுத் தலைவர், சர்.பன்னீர் செல்வம் அவர்கள். பெண்கள் மாநாட்டுத் தலைவர், பண்டிகை நாராயணி அம்மையார் அவர்கள். இம்மாநாடுகளில், பெரியாரைத் தலைவராகக் கொள்வதாகவும், அவர் மொழிவழி நின்று பணிபுரிவதாகவும் தமிழ் மக்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதி கூறினர். தமிழர் உரிமை நலம் பேணும் பல முடிவுகள் செய்யப்பட்டன. இதன்பின், 1938 டிசம்பர் 29, 30, 31 ஆம் நாட்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14வது மாநாடு கூடிற்று. இதன் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், இவர் தேர்ந்தெடுக்கப்படும்போது சிறைக்குள் இருக்கிறார். அரசியல் மரியாதையைக் குறிக்கொண்டு கூட அவரை அரசாங்கத்தார் விடுதலை செய்யவில்லை. இக்காரணத்தால் மாநாட்டின் புகழ் மேலோங்கிற்று. மாகாணம் எங்கும் உள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூடியிருந்தனர். 50 ஆயிரத்திற்கு மேலான மக்கள் கூட்டம். நீதிக்கட்சியின் வரலாற்றில் இதுவே தலைசிறந்த மாநாடு. தமிழர் உரிமைப்போர் பற்றிய கிளர்ச்சி; பெரியார் சிறைக்கோட்ட வாழ்வைப் பற்றிய நினைவு; காங்கிர அடக்குமுறையில் வெறுப்பு; இந்தியை எவ்வாற்றலாலும் ஒழித்தே தீர்வதென்னும் உறுதி; - இவைகள் ஒவ்வொரு தமிழர் நெஞ்சத்திலும் பொங்கிக்கொண்டிருந்தன. மாநாட்டுத் தலைவர் பெரியார்சிறைக்குள் இருந்தார். ஆயினும், தமிழர்கள் ஒவ்வொருவரும் பெரியார் போன்ற உறுதி கொண்டிருந்தனர். உணர்ச்சி பெற்றிருந்தனர். பெரியாரின் உருவச்சிலையைத் தேரில் வைத்துச் சிறையில் உறைவதுபோல் ஒப்பனை செய்யப்பட்டது. இது ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குக் கொண்டுவரப்பட்டது. மாநாட்டுப் பந்தலில் பெரியார் உருவம் நாற்காலியில் வைக்கப்பட்டது. முறைப்படி தலைவரை முன் மொழிந்து, வழிமொழிந்து நடக்கவேண்டிய சடங்குகள் நடந்தன. சர்.பன்னீர்செல்வம் அவர்கள் பெரியாரால் சிறை செல்லுமுன்னமே எழுதப்பட்டிருந்த மாநாட்டு விரிவுரையைப் படித்தார். அதற்காகத் தோழர் பன்னீர்செல்வம் அவர்களுக்குப் போடப்பட்ட மாலையை அவர் பெரியாரின் உருவச் சிலையின் பாதத்தில் வைத்தார். இக்காட்சியின் போது யாவரும் கண்ணீர் விட்டனர். பின்னர், மாநாட்டில் கூடியிருந்த மக்களனைவரும் எழுந்துநின்று, பெரியாரே எங்கள் மாபெருந்தலைவர் என்று கடலோசை பின்னடைய ஒரே குரலில் உரத்துக் கூறினர். பின்னர் கீழ்வரும் சொற்றொடர்களை முறையே தெலுங்கிலும், தமிழிலும் எல்லோரும் உறுதிமொழியாகக் கூறினர். எங்கள் மாபெருந் தலைவரே! உங்கள் உடல் சிறைப் படுத்தப் பட்டிருந்தாலும், உங்கள் வீரத்திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்துநின்று ஒன்று பட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம். இவ்வுறுதிமொழி இன்றும் எல்லாத் தமிழர் உள்ளத்திலும் உரமாகப் பாய்ந்து ஊடுருவி நிற்கின்றது. பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானதன் பலனாக நீதிக்கட்சியின் அடிப்படைக் கொள்கையில் மாற்றம் நிகழ்ந்தது. இதற்குமுன் அக்கட்சியின் அரசியல் நோக்கம், குடியேற்ற நாட்டு நிலை பெறுவது என்பதாகும். இது இப்பொழுது: முழுத் தன்னாட்சி பெறுவதே நோக்கம் (Full Independence) என்று திருத்தப்பட்டது. வரப்போகும் கூட்டுறவு அரசியலை (Federation) ஏற்பது என்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்ததாலும், இப்பொழுது அதன் தலைவராகவே வந்து விட்டதாலும் அவரைச் சிலர் கொள்கையற்றவர் என்று பழிக்கின்றனர். தொழிலாளர் நலம் பேணாதவர்; சமதர்மக் கொள்கையை நழுவவிட்டுவிட்டார்; பணக்காரர்களுடன் சேர்ந்துவிட்டார். ஜமீன்தார்களைப் பாதுகாக்க முன்வந்துவிட்டார் என்று எதிரிகள் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். இவர்கள் பெரியார்மீது கொண்ட தனிப்பட்ட சினத்தால் இத்தகைய கருத்தைக் கக்குகிறார்களேயன்றி, உண்மை யுணர்ந்து கூறுகின்றனர் என்று அறிவாளிகள் நலவுரிமைச்ச் சங்க மாநாட்டுத் தலைமையுரையை தக்க விடை கூறுகின்றது. அதில் உள்ள சிறந்த பகுதிகள் கீழ்வருபவை:- உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டா மென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும், தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், தேசீயம் என்றும், தேச சேவை என்றும், தேச பக்தி என்றும், தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி, மெய்வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொதுமக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார் வஞ்சித்து ஏமாற்றி வயிறு வளர்ப்பதை - ஏன்? உழைப்பாளி களைவிட அதிக சுகமான வாழ்வு வாழ்வதை - அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன். சுயமரியாதை இயக்கத்தில் பணக்காரன், ஜமீன்தாரன், முதலாளி ஒழியவேண்டுமென்று சொன்னோம். புரோகிதர்களே அதற்கு எதிரிடையாக இருந்தார்கள். நாம் அப்படிச் சொன்னது இன்று புரோகித ஆட்சிக்கு இடந்தந்தது. புரோகித ஆட்சி ஒழிய வேண்டுமானால், நம் மக்களுக்குள் அபார ஒற்றுமையும், அபார பகுத்தறிவு ஆராய்ச்சியும் வேண்டும். ஏனெனில், நம் நாட்டிலுள்ள புரோகித ஆதிக்கம், நம்மையும், முலீம்களையும், கிறிதவர் களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒன்றுபோலவேதான் கருதி நடத்தி வருகிறது... இந்த நாட்டைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள், நாம் யாவரும் திராவிடர்கள். நம் நாட்டுத் தொழிலாளர்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கம் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று கருதிக் கொண்டிருக் கிறார்கள். இக்கருத்து மாறி இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையான எண்ணமும், உணர்ச்சியும் ஏற்படும்வரை, இரண்டும் உருப்படா என்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனரல்லாதவர்கள் என்கின்ற வார்த்தையும், மக்களும், தொழிலாளர் என்ற வார்த்தையும், மக்களும் ஒன்றேயென்பதை நாம் மறக்கவே கூடாது. பார்ப்பனரல்லாதார்க்குப் பெயர் இந்து மதப்படி சூத்திரர்கள் என்பதாகும். சூத்திரர்கள் என்றால் வேலைக்காரன், அடிமை என்று பொருள். ஆகவே, சூத்திரன் என்பது தொழிலாளி என்பதைவிட மிகவும் தாழ்ந்த கருத்திலிருப்பதோடு, காரியத்திலும், உடலுழைப்பு வேலைகள் பூராவும் பார்ப்பனரல்லாதாருக்கு இருந்து வருகிறது. இது காரியத்தில் மாத்திரம் இல்லாமல் புரோகிதக் கோட்பாட்டின் படியும் பார்ப்பனர்கள் உடலுழைப்புச் செய்யக்கூடாதென்றும், பார்ப்பனரல்லாதார் உழைக்கின்றவர் களேயாவார்களென்றும் இருக்கின்றது... ஆகவே, தொழிலாளத் தோழர்கள் ஏமாற்றப்பட்டு, புரோகிதர்கள் காலடியில் தங்கள் பாதுகாப்புச் சங்கங்களையும், மீட்புச் சங்கங்களையும் ஒப்பு வித்திருப்பதை மீட்டுக் கொண்டு வந்து, பார்ப்பனரல்லாதார் சங்கத்தில் இரண்டறக் கலந்து விடும்படி கேட்டுக் கொள்வதைத் தவிர, வேறு விண்ணப்பம் இல்லையென்று கருதுகிறேன். பெரியார் இளம்பருவத்தின் கொள்கைகளும், பொது வாழ்வில் அவர் செய்து செயல்களும், அரசியலில் அவர் ஈடுபட்டுச் செய்த வேலைகளும், சுயமரியாதை இயக்கம் தொடங்கிய கருத்தும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஆதரித்து நிற்பதும், தமிழர் உரிமைகளுக்குப் போராடுவதும் ஆகிய எல்லாம் ஒரே குறிக்கோளுடையதாயிருப்பதை அவர் வாழ்க்கையை உற்று நோக்குவோர் காணலாம். அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்போர் உணரலாம். அவர் விரிவுரைகளைக் கேட்டு வருவோர் அறியலாம். தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுத் தமிழர் தலைவராய் சிறைக்குட் சென்றார். நீதிக்கட்சித் தலைவராய் வெளிவந்தார். காங்கிர சர்க்காரின் அடக்குமுறைகளுக்காளாகி, சிறையில் வயிற்று நோயால் மிகவும் துன்புற்று, 167 நாட்களுக்குப்பின் 1939 மே மாதம் 22ம் நாளில் விடுதலையானார். கட்டாய இந்தியை எடுக்காமலே சர்க்கார் திடீரென்று இவ்விதம் அவரை விடுதலை செய்த காரணம் இன்னதென இதுவரையில் எவராலும் அறிய முடியவில்லை. ஆனால், அவர் சிறைக்குப் போகுமுன் 190 பவுண்டு நிறையிருந்தாரென்பதும், விடுதலை யான அன்று 166 பவுண்டு மட்டுமே இருந்தாரென்பதும் உண்மை. பெரியார் விடுதலையான செய்தி தமிழ்மக்களுக்கு அளவிலா மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில், சிறையில் அவருடைய உடல் நிலை மிகக் கேவலமாயிருந்தபடியாலும், அதற்கு முன்இந்தி எதிர்ப்புக் கைதிகளில் இரு இளைஞர்கள் சிறையிலேயே உயிர் நீத்துவிட்ட படியாலும் பெரியாரை உயிருடனாவது வெளியில் பார்க்க முடியுமா என்றே தமிழர்கள் அய்யுற்று ஏங்கியிருந்தனர். எனவே, அவர் வெளியில் வந்ததும் பல ஊர்களிலும், முக்கியமாகச் சென்னை நகரத்திலும் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எப்படியிருந்திருக்க வேண்டும் என்பதை வாசகர்களே சிந்தித்துக் கொள்ள வேண்டும். சிறையினின்றும் வெளிவந்த மறுநாள் மாலை ஈரோட்டில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசியவற்றுள் சில வாக்கியங்களைப் பாருங்கள் :- மீண்டும் சிறை செல்வதற்காகவே நான் விடுதலை செய்யப் பட்டிருப்பதாக எண்ணுகிறேன். நான் இங்கு எதைப் பார்க்கிறேன்? என்னுடன் சிறைசென்ற தமிழர்களைப் பார்க்க முடியவில்லையே... நான் சிறையிலேயே இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன். அப்படி நான் இருந்திருப்பேனேயானால், நமது இயக்கம் மிகவும் ஓங்கி உச்சநிலை அடைய வழி ஏற்பட்டிருக்கும். பெரியார் சென்னையில் பெருத்த ஆடம்பரத்துடன் வரவேற்கப் பட்டார். அவர் சிறையிலிருந்த காலத்தில் விற்பனை வரி போடப்பட்டதால், சென்னை நகரத்திலுள்ள ஆயிரக் கணக்கான வணிகர்களும் இவ்வரவேற்பில் மிக மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். சென்னையில் பத்திரிகை நிருபர்கட்குப் பெரியார் பேட்டியளித்தபோது, இந்தியை மேலும் 100 பள்ளிகளில் சர்க்கார் கட்டாயமாய் வைத்திருப்பதால், இந்தி எதிர்ப்பு இயக்கம் இனியும் நூறு மடங்கு அதிக வேகமாக நடத்தப்படும் என்றும், காங்கிர அரசின் விற்பனை வரி விதித்திருப்பது அக்கிரமம் என்றும், நீதிக்கட்சியின் எதிர்கால வேலை தம்முடைய சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்குமென்றும், ஆந்திரர்களுக்குத் தனி மாகாணம் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமென்றும் வற்புறுத்திக் கூறினார். உடல்நிலை மிகக் கேவலமாயிருந்தபடியால் மருத்துவரின் யோசனைப்படி, பெரியார் கொடைக்கானலில் ஒரு வாரம் தங்கியிருந்தார். இச்சமயத்தில் 07.06.1939 திடீரென எவ்வித அறிக்கையுமின்றி யாது காரணமுமின்றிக் காங்கிர சர்க்கார் எஞ்சியுள்ள எல்லா இந்தி எதிர்ப்புக் கைதிகளையும் விடுதலை செய்து விட்டது. ஆயினும், பள்ளிக்கூடம் கோடை கால விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டதும் இந்தி எதிர்ப்பு மறியல் மிக மும்முரமாக ஆரம்பித்தது. பெரியார் மறுமுறையும் சென்னை வரவேற்கப் பட்டார். சென்னைப் பொதுமக்களால் 1001 ரூபாய்கள் கொண்ட பணமுடிப்பு (1001 பேர் இந்தி எதிர்ப்பில் அதுவரையில் சிறை சென்றிருந்தபடியால் அதைக் குறிக்கும் பொருட்டு) தமிழரின் இயக்க வளர்ச்சிக்காக, அதாவது நீதிக்கட்சியைப் பரப்பு வதற்காகப் பெரியாருக்கு அளிக்கப்பட்டது. இதைப் பின்பற்றி, வட ஆற்காடு, கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, சேலம் முதலிய ஜில்லாக்களிலும் இதேமாதிரி பண முடிப்புக்கள் அளிக்கப்பட்டன. பெரியார் மறுபடியும் அவருடைய இயற்கை வேலையாகிய பிரசாரத்தில் இறங்கி விட்டார். இடைவிடாமல் மறுபடியும் சொற்பொழிவுகள், பிரயாணங்கள். தமிழர் இயக்கம் புதிய உணர்ச்சியோடும், புதிய வீரத்தோடும் வளர ஆரம்பித்து விட்டது. பெரியாருக்கு எங்கு சென்றாலும் அமோகமான வரவேற்பு, பல்லாயிரக்கணக்கான மக்களின் கூட்டம். எங்கும் பணமுடிப்பு முயற்சி. நீதிக்கட்சிக்கு என்றுமில்லாத ஆதரவு. பார்ப்பனரல்லாதார் என்ற பழைய பெயர் இப்போது தமிழர் என்ற அழகிய சிறு பெயரில் அடங்கிவிட்டது. பிராமணர்கள் ஆரியர் என்றும், மற்றவர் யாவரும் தமிழர் என்றும், நியாயமான பிரிவாக ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாய் ஈரோட்டிலுள்ள விடுதலை அச்சுக்கூடமும், சென்னையிலுள்ள இந்தி எதிர்ப்பு நிலையமும் சர்க்காரால் சோதனை போடப்பட்டுப் பல கடிதங்கள், கணக்குகள் பறிமுதலாயின. 1939 ஆகட் 10ஆம் தேதியில் ஈரோட்டில் பெரியாருடைய மாளிகையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் நிலையைப் பற்றியும், இந்தி நுழைப்பைப் பற்றியும், வரப்போகும் ஜில்லா போர்டு முதலிய தேர்தல்களைப் பற்றியும், ஆந்திர மாகாணத்தின் அவசியத்தைப் பற்றியும் சில முக்கிய முடிவுகள் செய்யப்பட்டன. *** இன்று பெரியார் கொள்கையைப் பின்பற்றிச்செல்லப் பல தலைவர்கள் முன்வந்து விட்டனர். தொண்டர் கூட்டம் குழுமி நிற்கின்றது. வீரத்தாய்மார்கள் முன்தானையை வரிந்துகட்டிப் போர் முனையில் முன்னிற்கின்றனர். நாடெங்கும் தமிழ்மக்களின் வெற்றிச் சங்கு முழங்குகின்றது. சூழ்ச்சித் திரை தூள்தூளாகக் கிழிந்துவிட்டது. தமிழர் உரிமைப்போர் வெள்ளம் புரண்டோடு கின்றது. இவ்வெள்ளத்தை அணையிட்டுத் தடுத்தல் அரிது! அரிது! பெரியாரே தடுக்க முன்வரினும் அவரையும் அடித்துச் செல்லும். இது தமிழர் உரிமைக் கடலுக்குள் புகுந்துதான் அடங்கும். இவ் வெள்ளத்திற்குக் காரணம் என்ன? தன்னலக்காரரின் கொடுந் தீ. அதை அணைக்கப் பெரியார் மேகம் பொழிந்த மழை. ஆகவே தமிழர் உரிமைப் போருக்குத் தலைவர் பெரியார்! பெரியார்!! பெரியார் தான்!! பெரியார் நீடூழி வாழ்க! பெரியார் உலகெங்கும் பரவுக! *** பெரியார் இன்று நீதிக்கட்சித் தலைவர் மட்டுமல்ல. தமிழர்க்கே தலைவர். இன்று மட்டுமல்ல, என்றுமே தமிழர்க்கு அவரேதான் தலைவர். ஏன்? எதிர்காலமே! நீயே சொல். சொல்லும் செயலும் இவர் கூற்றுக்களை இக்கால மக்கள் எல்லோரும் உடன் பட்டு ஏற்பாரென நம்புதற்கில்லை. பெரியாரோடு நெருங்கிப் பழகும் பேறு பெற்றோர்க்கு மட்டுந்தான் பெரியாரின் பண்புகளை உள்ளவாறறிந்து பாராட்டுதல் கூடும். எனினும், பெரியார் தன் புறப் பொது வாழ்வில் தன்னலம் பேணாமல் தமிழர் பொதுநலம் நாடிப் புரியும் தொண்டளவில் தன்னிகரற்ற தலைவர் என்பதில் யாரும் வேறுபடமுடியாது. உண்மையை அஞ்சாது உரைக்கும் உரனுடைய நெஞ்சச் செவ்வி மிகப் படைத்தவர் பெரியார் என்பது எல்லோருக்கும் ஒப்ப முடிந்ததாகும். கருத்து வேறுபாடுகளை உண்மை பிறழாதொழுகும் யாரிடமும் பெரியார் நன்கு மதிப்பவராவர். தமிழிளைஞர் முழு உணர்வையும் திறை கொள்ளுந்திறனும், உற்ற சுற்றத்தாரும் சூழுமாறு நடக்கும் பெற்றியும் இப் பெரியார்பால் இருப்பதனால் இவரிடம் பல அரும்பெரும் சால்புகள் இருத்தல் வேண்டுமென்பதொருதலை. என திருவாளர் S.சோமசுந்தர பாரதியார் M.A.,B.L, அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதியுள்ளார். பெரியார் தம் மனத்தில் நினைத்ததை மறைப்பதில்லை. அப்படியே வெளியிடுவார். அதன் பலனைப் பற்றிய கவலை அவருக்கில்லை. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்னும் தமிழ் மறைக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எவர் சொல்வதையும் உற்றுக்கேட்பார். உண்மையுணர்வார். எந்தெந்தச் செயல்கள் நன்மையாகக் காணப்படுகின்றனவோ அச்செயல்களை நடத்துவதற்குப்பின்வாங்கார். பெரியார் தமது மனைவியார் இறந்ததும் அவரை அடக்கஞ்செய்த முறையே இவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் சான்றாகும். அம்மையார் இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்து விட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்ட விதம் பலருக்கும் வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன், வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம். அழுவதாயிருந்தால் உள்ளே செல்ல வேண்டாம். இப்படியே திரும்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்துகொண்டனர். பிணம் பெட்டியில் வைக்கப் பட்டது, வண்டியில் ஏற்றி மாடுகட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முலீம் மத வழக்கம். வண்டியிற் கொண்டு செல்லுதல் கிறிதவ மதத்திற்கு உடன்பாடு - சுடுவது இந்து மதக் கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக் காட்டிய நன்முறையாகும். *** திருவண்ணாமலை காங்கிர மாநாட்டில் பெரியார் செய்த முன்னுரைச் சொற்பொழிவைப் பெரியார் தாமாகவே எழுதவில்லை. பெரியார் சொல்ல திரு.வி.க. முதலியார் எழுதினார். சென்னை இராயப் பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணிய பக்த ஸ்ரீன சபையில்தான் பெரியாரும், முதலியாரும் விரிவுரையை எழுதத் தொடங்கினர். எழுதத் தொடங்குமுன்னரே பெரியார் ஒரு நிபந்தனை போட்டார். உங்கள் செந்தமிழில் எழுதக்கூடாது. எல்லோருக்கும் விளங்கக்கூடிய தமிழில் இருக்க வேண்டும். நான் பேசுவது போலவே எழுத வேண்டும். எழுதுவது முழுவதும் என் கருத்தாகவே இருக்க வேண்டும். உங்கள் கருத்தை நுழைக்கக் கூடாது என்று கூறினார். முதலியாரும் இதற்கு ஒருப்பட்டு எழுதினார். பெரியார் தம் விரிவுரையைச் சொல்லிக்கொண்டே வந்தார். முதலியாரும் எழுதிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் முதலியார் பெரியாரின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளாமல், இது தவறு, அது தவறு; இது இப்படியிருக்க வேண்டும். அது அப்படி யிருக்க வேண்டும் என்று திருத்தங்கள் கூறத் தொடங்கினார். பெரியாரோ முதலியார் திருத்தங்களுக்கு இடங்கொடுக்கவில்லை. தம் கருத்தையே வலியுறுத்திக் கொண்டு வந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு முதிர்ந்து, இடைநடுவில் எழுதுவதை நிறுத்திவிட்டு எழுந்து போய் விட்டார்கள். பின்னர், இருவரும் சேர்ந்து எழுதி முடித்தார்கள். இறுதியில் திரு.வி.க. முதலியாரே பெரியாருக்கு இணங்க வேண்டியிருந்தது. பெரியார் எப்பொழுதும் தம் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர், நமது செய்கையால் கிடைக்கும் பலனைப் பற்றிநாம் கவலைப்படக்கூடாதென்று அடிக்கடி கூறுவார். இதற்கு இவரே உதாரணம். இச்செய்தி, திரு.வி.க. முதலியார் அவர்களால் ஒரு தோழரிடம் சொல்லப்பட்டது. அதை அப்படியே நாமும் கூறுகிறோம். 1924-ல் நாயக்கர் மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு பிரசங்கம் புரிந்தார். அதற்காக அவர்மேல் 124-ஏ பிரிவின்படி அரச வெறுப்பு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் பொருட்டு அவர் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். நாளை வழக்கு விசாரணை. எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப் போகிறார்களோ என்ற கவலை எனக்கு. இரவு உண்டிக்குப்பின்,பாலசுப்பிரமணிய பக்தஸ்ரீன சபையின் வெளித் திண்ணையில் நானும், நாயக்கரும் படுத்திருந்தோம் - இரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை. நாயக்கர் கவலை யின்றிக் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறார். நடு இரவில் விடா மழை பெய்தது. குளிர்காற்றும் வீசிற்று. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். நாயக்கர் அப்பொழுதும் கவலையின்றி உறங்குவதைக் கண்டேன். அவருடைய மனம் இரும்பு மனம் என்று நினைத்தேன். காலையில் எழுந்ததும் இரவு மழை பெய்தது தெரியுமா? என்றேன். தெரியாது; நன்றாய்த் தூங்கி விட்டேன் என்றார். இப்பொழுதுதான் நாயக்கரின் அஞ்சா நெஞ்சத்தையும் அறிந்தேன். துன்பத்தைப் பற்றி கவலைப்படாத வீரத்தையும் உணர்ந்தேன். என்று திரு.வி.க. முதலியார் கூறினார். *** ஆராய்ச்சியாளர்களிடத்தும், சீர்திருத்தக்காரர்களிடத்தும், உண்மை ஒழுக்கமுள்ளவர்களிடத்தும் இவருக்கு அதிக அன்புண்டு. தமிழ்ப்பெரியார் மறைமலையடிகளிடம் இவருக்கு எப்பொழுதும் பெருமதிப்பு உண்டு. அவருடைய ஆராய்ச்சிகளிலும், கொள்கை களிலும் பல இவருக்கு உடன்பாடு. இதற்கு பின்வரும் நிகழ்ச்சி ஒரு சான்றாகும். 1927-ல் உயர்திரு மறைமலையடிகள், தமது திருமகள் நீலாம்பிகை அம்மையாருக்கும், திருவாளர் திருவரங்கம் பிள்ளை யவர்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தார். இத்திருமணம் மயிலாப்பூர் கபாலீச்சுரர் கோயிலில் நடைபெற்றது. கோயில் குருக்கள் இதில் கலந்து கொண்டார். இச்சமயம் அங்கிருந்த தோழர் என். தண்டபாணி பிள்ளை ஒரு சண்டையைக் கிளப்பி விட்டார். கோயிற் குருக்கள் பார்ப்பனரல்லவா? அவரை வைத்துத் திருமணம் செய்யலாமா? என்றார். திரு. மறைமலையடிகள், அவர் பார்ப்பனரல்லர், ஆதி சைவர், அவரை ஆதரிப்பது என் கொள்கைக்கு முரண் அல்ல என்று ஏதோ கூறினாராம். பிறகு இது சம்பந்தமாகக் குடி அரசுப் பத்திரிகையில் எழுத்துப் போர் நடைபெற்று வந்தது. அப்பொழுது பெரியார், அடிகள் செய்தது தவறு என்பதை எழுதிவிட்டு, மேலும் எழுதியது இதுவாகும் :- உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும், திருவாளர் கா.சுப்பிர மணிய பிள்ளை அவர்களும் தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களின் நாகரிக விஷயமாய்த் தக்க ஆராய்ச்சியுள்ளவர்கள். ஏனையவர்களை இவர்களுக்குச் சமமானவர்கள், அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல், இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். (11.09.1927 குடி அரசு) என்று எழுதினார். இதன்பிறகும், திரு.மறைமலையடிகளின் செயல் குற்றமுள்ளதென்றும், குற்றமற்றதென்றும் கூறிப் பலர் கட்டுரைகள் வரைந்தனர். கோயில் குருக்கள் பார்ப்பனரல்லர் என்பது ஒரு சாரார் கொள்கை. அவர்கள் இப்பொழுதுள்ள முறையில் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்பது மற்றொரு சாரார் கொள்கை. முன்னைய கொள்கையை ஆதரிப்பவர் திரு.மறைமலையடிகள். பின்னைய கொள்கையை ஆதரிப்பவர் பெரியார். இதில் இருவருக்கும் முரண்பாடு. இதனாலேயே திரு. நீலாம்பிகையார் திருமணம் பற்றிய வழக்கு நீடித்தது. இறுதியில் பெரியார் அப்பொழுது எழுதியது இது:- உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும், திருவாளர் களான கா.சுப்பிரமணிய பிள்ளை, - திரு வி.கலியாணசுந்தர முதலியார் இவர்கள் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர் என்றும், மத, சமய ஆராய்ச்சி விஷயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்யவந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப்போவ தில்லையானாலும், அப்பேர்பட்ட இடையூறுகளுக்கும், அம் முறையிலுங்கூட நமக்கு இப்பெரியார்கள் பின்பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலைபோல் நம்பி வருகிறோம். (03.10.1927 குடி அரசு) இது பெரியாருடைய உண்மைத்தன்மையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகும். இக்காலத்தில் விளம்பரத் தலைவர்கள் பலருளர். நாயக்கர் விளம்பரத்தில் விருப்பம் செலுத்தாதவர். தன் பெயரைப் பரப்புந்துறையில் அவர் இறங்கி உழைப்பதே இல்லை. உண்மைத் தொண்டர். எவர் புகழ்ச்சி கண்டும் இறும்பூதெய்தமாட்டார். இகழ்ச்சி கண்டும் துயருற்றடைய மாட்டார். நாயக்கரிடத்தில் இவ்வரும் பெருங்குணம் அமைந்து கிடந்தது. (24.05.1924 நவசக்தி) என்று முதலியார் கூறியிருப்பது முற்றும் உண்மை. இத்தகைய எளிய வாழ்வே ஏற்றதென்று பெரியார் அடிக்கடி கூறுவார். ஆடம்பரத்தை விரும்பும் தோழர்களுக்கு எளிய வாழ்வின் சிறப்பை எடுத்துக்காட்டுவார். அவர் ஒரு நண்பருக்கு 14.05.1931ல் எழுதிய கடிதத்தைப் பார்த்தால் இவ்வுண்மையைக் காணலாம். அக்கடிதம் வருமாறு: தம்மைத்தாம் பெரிதாகவும், தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும், வருவாயும் வந்தாலும், ஆசையால் மனம்வாடி, சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன் காரர்களாகவுந்தானிருப்பார்கள். ஆதலால், வருவாய் போதாமல் இருப்பதற்கும், கடன்காரர்களாயிருப்பதற்கும் காரணம், தமது பலவீனத்தின் பயனான பேராசையும், அவசரமுமே யாகும். என்னை நான் சின்னவன் என்றும், குறைந்த செலவில் வாழ்வதற்குத் தகுதியுடையவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின மிகப் பெருமை யுடைவனாவும், தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக் கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில், பாரத்தினால் கஷ்டப் பட்டிருப்பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப் பட்ட தில்லை. அதுபோல மனத்தைக் கட்டுப்படுத்தச் சக்தியிருந்தால் எல்லாம் தானாகவே சரிபட்டுவிடும். இக்கடிதம் அவருடைய உண்மை மனப்பான்மையைக் காட்டுகிற தல்லவா? அவருடைய எளிய தன்மையைப் பலமுறை நாம் நேரே பார்த்துள்ளோம். அவற்றில் ஒரு நிகழ்ச்சி வருமாறு: 1928-ல் மதுரை ஜில்லா தருமத்தம்பட்டியில் ஒரு பார்கவகுல மாநாடு நடைபெற்றது. அதற்கு நானும், பெரியாரும், தோழர் எ.வி. லிங்கம் அவர்களும், திருக்கோவிலூர் ம.ரா.குமாரசாமி பிள்ளை அவர்களும் சென்றிருந்தோம். இரண்டு நாள் மாநாடு. அவ்வூரில் மோர் கிடையாது. நீராடத் தண்ணீர் இல்லை. இவைகள் இன்றி எங்களால் தாங்க முடியவில்லை. பெரியார் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள் மாநாடும் முடிந்து மூன்றாம் நாள் ஊருக்குப் புறப்பட்டோம். நானும், பெரியாரும், லிங்கமும் திண்டுக்கல்லுக்கு வரவேண்டும். எங்களை அனுப்புவதற்கு மாநாட்டினர், ஒரு குதிரை வண்டியைப் பூட்டி அனுப்பினார்கள். அது கல்யாண ஊர்வலத்துக்காக உள்ள கோச் வண்டி. அதில் பூட்டப்பட்ட குதிரையோ முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்கப், பின்னிருந்திரண்டு பேர் தள்ள... மாதம்போம் காதவழி. குதிரையைப் பார்த்தவுடனே நான் இதைக் கூறினேன். பெரியார் என்ன செய்வது? இந்த ஊரில் இவ்வளவு பெரிய மாநாட்டைக் கூட்டி, நம்மை அழைத்ததே வியப்பு. இத்தகைய மக்களிடந்தான் நம்முடைய சொற்பொழிவு நல்ல பலன் தரும். நமது கொள்கை பரவும். இந்த வண்டியாவது கிடைத்ததே! இந்தமட்டிலும் அவர்களை நாம் பாராட்ட வேண்டும் என்று கூறினார். நாங்கள் மூவரும் வண்டியேறினோம். வண்டிக்காரனும் ஏறி உட்கார்ந்தான். மெதுவாக வண்டி ஊர் தாண்டிற்று. குதிரை நடக்கவில்லை. அதனிடம் பலமில்லை. அங்கிருந்து திண்டுக்கல் ஏறக்குறைய 9 கல். நானும் பெரியாரும் கீழே இறங்கிக்கொண்டோம். வண்டிக்காரன் மட்டிலும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான். நாங்கள் இருவரும் குதிரையின் இரு பக்கமும் நடந்து குதிரையை ஓட்டி வந்தோம். எ.வி.லிங்கம் சட்டமாக வண்டியில் உட்கார்ந்து கொண்டார். வண்டி நின்ற இடங்களில் மட்டிலும் இறங்கிக் கொண்டார். வழியில் கிடைத்த வேர்க்கடலை, செங்கரும்பு முதலியவைகளை வாங்கித் தின்று கொண்டு வந்தோம். பெரியார் அப்பொழுது நடந்துகொண்டவிதம் மிகவும் வேடிக்கை. தலையில் முண்டாசு, கையில் தடி, சில சமயங்களில் தெம்மாங்குப் பாட்டு, நக்கலான பேச்சு, இவைகள் வழிநடை வருத்தத்தை மறைத்தன. இவ்வாறே பெரும்பாலும் நடந்தும், சில இடங்களில் உட்கார்ந்தும், ஒரு சில இடங்களில் வண்டியில் ஏறியும் இரவு 8 மணிக்குத் திண்டுக்கல் எல்லையை அடைந்தோம். நாங்கள் புறப்பட்டபோது மாலை இரண்டரை மணி. எல்லையை அடைந்ததும் மூவரும் கூடி யோசனை செய்தோம். நகருக்குள் வண்டியை ஓட்டிக்கொண்டு நடந்து செல்வது நன்றல்ல; வண்டியில் உட்கார்ந்து கொள்வோம். மெதுவாக ஊர்வலம் போல் போகட்டும். யாராவது பெண்ணும், மாப்பிள்ளையும் போகிறது என்று பரிகசித்தால் பரிகசித்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்து கொண்டோம். வண்டியிலேறி உட்கார்ந்தோம். நல்ல நிலவு. வண்டி ஊர்ந்து கொண்டு போயிற்று. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் எங்களைப் பார்த்து, ஓகோ! பொண்ணு மாப்பிள்ளை போறதுடா என்று கைகொட்டிச் சிரித்துக்கொண்டு பின் தொடர்ந்தனர். நாங்கள் அவர்களை விரட்டிவிட்டுச் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைந்தோம். இந்நிகழ்ச்சி இன்னும் எனது கண்முன் நிற்கின்றது. இதுபோல் அவருடைய வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் உண்டு. *** தான் சொல்லுவதன்படி நடக்கும் தன்மை இவரிடம் எப்பொழுதும் உண்டு. இதுவே இவர் பெருமைக்குக் காரணம். பலர் இவரைப் பின்பற்றுவதற்கும் காரணம். சென்ற 25 ஆண்டுகளாக, மற்ற சமூகச் சீர்திருத்தக் காரர்களால் சாதிக்க முடியாத காரியங்களைவிட அதிகமாகத் திரு.நாயக்கர் அவர்கள் சென்ற அய்ந்தாறு ஆண்டுகளுக்குள் செய்து முடித்திருக்கிறார்... சீர்திருத்தக் காரர்களுக்குள்ளேயே திரு.நாயக்கர் அவர்களின் கருத்துக்கள் தான் கடைசி எழுத்து வரையிலும் நான் ஒப்புக்கொள்ளக் கூடியதா யிருக்கிறது. (சர்.ஆர்.கே.ஷண்முகம், 1928 நவம்பர்) என்று கூறியிருப்பது உண்மை. சொல்லும் செயலும் ஒத்திருப்பதுவே பெரியாரின் வெற்றிக்குக் காரணம். இதனாலேயே ஒப்பற்ற சீர்திருத்தக்காரராக விளங்குகிறார். சிறிதும் சலிப்பற்ற இளைஞராகவும் திகழ்கிறார். சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்து வரும் நண்பர் நாயக்கர் அவர்கள் தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞராவார். (ரெவரெண்டு பிட்மென், 1928 நவம்பர்) இவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத உறுதி ஒன்றினாலேயே பலமுறை சிறைப்பட்டார். 1928ல் நமது நாட்டில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தைப் பற்றி உலகமறியும். அவ்வேலை நிறுத்தம் பற்றிய உண்மைகளை வெளியிட நம் நாட்டுப் பத்திரிகைகள் அஞ்சின். அத்தொழிலாளர் களின் விருப்பங்கள் நீதியானவை என்று கூற எந்த அரசியல் தலைவர்களும் முன்வரவில்லை. அப்பொழுது குடிஅரசும் பெரியார் மேற்பார்வையில் நடைபெற்று வந்த திராவிடனுமே வேலைநிறுத்தத்தை ஆதரித்தன. பெரியாரே தொழிலாளர்கள் கேட்கும் உரிமைகள் ஒப்புக்கொள்ளத் தக்கவை என்று பேசினார். இதற்காக 05.08.1928ல் இவர் ஈரோட்டில் கைதியாக்கப்பட்டார். இவருடன் திரு.ஜே.எ.கண்ணப்பரும் கைதியானார். இதன் முழுவிவரம் முன்னால் குறிப்பிடப் பட்டிருக்கிறது. *** இதன்பின் ஒரு சமயம் கடன்களுக்காக மக்களைச் சிறைப் படுத்தக் கூடாதென்றும், அது தவறு என்றும் கூறி, அதற்கு ஆக யாவரும் கடன் சிறைக்குச் செல்லவேண்டும் என்றும் கூறி, அக்கொள்கையைப் பல தடவை ஆதரித்துப் பேசினார்; எழுதினார்; மாநாடுகளில் பல தீர்மானங்கள் செய்தார். இச்சமயத்தில் திராவிடன் பத்திரிகை சம்பந்தமாக இவர்மீது கடன்வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவ்வாரண்டுக்கு இவர் அஞ்சவில்லை. திராவிடன் சம்பந்தமான கடன் தனக்குரியதல்ல என்பது இவருடைய முடிவான கருத்து. இது நீதியானதுங்கூட. அதனால் 02.06.1933ல் சிறைத்தண்டனை பெற்றார். சிறையில் இருந்து வந்த பிறகு உடனே அக்கடன்களைக் கொடுத்துவிட்டார். இப்படியும் அரசாங்கக் குற்றப்படியும் இன்னும் பல முறையும் சிறைப் பட்டதற்கும் காரணம், இவர்தம் சொற்படி நடந்து கொள்வதே யாகும். பேச்சும் எழுத்தும்! ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் பெரிய நூற்புலமை உடைய வரல்லர் ஆனால், பெரிய நூற்புலவர் அவர்போல பேசமாட்டார். நாயக்கர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுங் கூட்டத்தில் இடையறாது காற்றும் மழையும் கலந்து வீசுவது போல், நான்கு மணிநேரம், அய்ந்துமணிநேரம் பேசுவார். ஏழை மக்களுக்கு உணர்ச்சியுண்டாக்குமாறு அவரைப் போல் பேசுபவர் தமிழ் நாட்டில் அரியர் என்றே கூறலாம். மலையினின்றும் அருவி இடையூறின்றிப் பெருக்கெடுத்தோடுவதுபோல, ஸ்ரீநாயக்கர் வாயினின்றும் சொற்கள் பெருக்கெடுத்தோடும். (திரு.வி.க.முதலியார், 24.05.1924 நவசக்தி) இவர் பேச்சு கற்றாரையும், கல்லாதவரையும் மகிழச் செய்யும். எத்தனை மணிநேரமானாலும் கேட்போருக்குச் சோர்விராது. இவரது எழுத்து வன்மையையும், கருத்து மேன்மையையும் உணரவேண்டு மானால், இவரால் பிரசுரிக்கப் பட்ட பகுத்தறிவு - குடிஅரசு பதிப்பக பிரசுரங்களை வாங்கிப் படித்தால் நன்றாய் உணரலாம். எண்பொருள் வாகச்செலச் சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப(து) அறிவு. என்னும் தமிழ்மறை இவருக்கே பொருந்தும். எந்த அரிய செய்தி களையும் கேட்போர் மனத்தில் பதியும்படி கூறுவார். எந்த அரிய செய்திகளையும் புரிந்து கொள்ளுவார். தனக்குத் தெரியாத செய்திகளில் இவர் தலையிடுவதேயில்லை. இவர் பேச்சில் அடிக்கடி பழமொழிகளும், உபமானங்களும் கலந்திருக்கும். புதிய புதிய உபமானங்கள் பொருத்தமுடையனவாகக் காணப்படும். தோட்டத்தில் பகுதி கிணறு, தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதுபோல், வௌவால் வீட்டிற்கு உறவு முறையார் வந்தால் ஆளுக்கொரு கிளையில்தானே தொங்கவேண்டும்? “காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி விழும்?”, “பட்டுச் சீலையை இரவல் கொடுத்து மணையைத் தூக்கிக்கொண்டே திரிவதா?”, “பூசணிக்காய் அளவு முத்தை எதில் தொங்க வைப்பது?”, முதலியவை அவருடைய பழமொழிகளிற் சில. சாதாரணமாக அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, திடீர் திடீரெனப் பதில் கூறுவது மிக ஆச்சரியமாயிருக்கும். பெரியாரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு அவரது நகைச் சுவையும், கிண்டல்களும் நன்கு தெரியும். ஒரு சமயம் இவர் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறைகூறுவது தவறு என்றும், கலையுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்றவேண்டும் என்றும் கூறினார். அதற்கு இவர் கூறிய பதில்:- நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்றார். கொசு வலை உபயோகிப்பதால், நாம் கொசுக்களுக்குத் துவேஷிகளாகி விடுவோமா? மூட்டைப்பூச்சி பிடிக்காமலிருப் பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தஞ்செய்வதால், நாம் மூட்டைப் பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத் திற்கும், துரோகத்திற்கும் நாம் ஆளாகக்கூடாது என்று பயந்து பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியில் எடுத்துச் சொல்வதற்கும், அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளி களாக ஆகிவிட்டோம். இவ்வுதாரணம் எவ்வளவு பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது பாருங்கள்! *** 1928 நவம்பரில் சென்னையில் ஒரு சீர்திருத்தக்காரர்கள் மாநாடு கூடிற்று. அதன் தலைவர் பெரியார். அப்பொழுது இவர் நிகழ்த்திய முன்னுரைச் சொற்பொழிவு மிகவும் சிறந்தது. அதில் நமது சமூக முற்போக்குக்குத் தடையாயுள்ளவற்றை - அவை எவ்வளவு புனிதமானவை, தெய்வீகத் தன்மை அமைந்தவை என்றாலும் அவற்றை அழித்தால்தான் முன்னேற முடியும் என்பதற்கு அவர்கூறிய உதாரணம் பாராட்டக்கூடியது. அவ் வுதாரணம் வருமாறு:- ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும், விசேஷமானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒருதுளி தண்ணீரைச் சாப்பிடு வதனாலோ அல்லது மேலே தெளித்துக்கொள்வதனாலோ நம் எல்லாப் பாவமும், மகாபாதகமான காரியம் என்று சொல்லப் பட்ட செய்கைகளைச் செய்தாலும் மன்னிக்கப் படுவதுடன், மோட்ச லோகம் என்பது கிடைக்கும் என்று எழுதியிருப்ப தாகவே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இப்போது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது சாப்பிட்டால் விஷ பேதி காணக் கூடியதாகவும், நானம் செய்தால் சரீரமெல்லாம் சொறி, சிரங்கு வரக்கூடியதாகவும் இருந்தால், அதற்காக நாம் செய்யவேண்டிய வேலையென்ன? அந்தத் தண்ணீரில் விஷப் பூச்சிகள் உண்டாகித் தண்ணீரைக் கெடுத்துவிட்டது என்று கருதி, அந்த விஷப் பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்தக் கிணற்றுக்குள் போடுவோம். அப்படிப் போட்டபிறகும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே முன்போலவே இருக்குமானால் மேற்கொண்டு என்ன செய்வோம்? மருந்துக்குக் கட்டுப்படாத அளவு கெடுதி அந்தத் தண்ணீரில் உண்டாய் விட்டதாகக் கருதி, அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்து வெளியில் ஊற்றி, அந்தக் கிணற்றையும் நன்றாகக் கழுவிவிடுவோம். அந்தப்படி செய்தபிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே இருக்குமானால், அதன் காரணம் என்ன? அந்தக் கிணற்றுக்குத் தண்ணீர்வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது; அதாவது விஷநீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும்? அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக் கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும், அதில் உள்ள அந்தக் கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து அந்த நீரையே சாப்பிட்டு, விஷ பேதியையும், சொறி சிரங்கையும் அடைந்து கொண்டிருப்பீர்களா? அல்லது அந்தக் கிணற்றை மண்ணைக் கொட்டி மூடிவிடுவீர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். இவ்வுதாரணம் எவ்வளவு சிறந்தது? இன்னும் சிலர் நீங்கள் கூறும், மதசமுதாயச் சீர்திருத்தங்கள் நிறைவேறுமா? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் செயல்களை உங்களால் மாற்றிவிட முடியுமா? என்று கேட்பதுண்டு. அதற்கு இவர் கூறும் விடை ஒரு பெரிய மலையை நகர்த்தவேண்டும் என்று நினைக்கின்றோம். ஒரு மயிரை அதன் மீது முடிந்து இழுக்கிறோம். மலை நகர்ந்தால் இலாபம். மயிர் அறுந்தால் நஷ்டம் ஒன்றுமில்லை என்பார். நாங்கள் சிறிய முயற்சிதான் செய்கிறோம், அதனால் பலனேற்பட்டால் நன்மை தான். ஏற்படாவிட்டால் எங்களுக்கு ஒரு தீமையும் இல்லை என்பதே இதன் கருத்து. இதுபோல் அவர் கூறும் உவமைகள் மிகவும் அழகாகவும், வேடிக்கையாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காகக் கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள்களை விளக்க வேண்டுவார். எவராவது அவரிடம் சொல் வழங்கிடும்போது, அவர் கேள்விகள் திகைப்பையளிக்கும்; பழக்கத்தில் வழங்கும் சொற்களுக்கும் அதற்கென்ன அர்த்தம்? அப்படியென்றால் என்ன? கர்மபலன் என்றால் என்ன? நரகம் என்றால் யாருடைய நரகம்? எல்லோருக்கும் ஒரு நரகந்தானா? தேசபக்தன் என்றால் யார்? கடவுள் என்றால் எந்தக் கடவுள் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்பார். எதிரிகள் கேள்விகள் கேட்டால் அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கிவிடுவார். எத்தகையரும் இவரிடம் அகப்பட்டுக் கொண்டு திக்குமுக்காடுவார்கள். இத்தகைய வாத வல்லமை கண்டு ஒரு சமயம், கனம் சி.ராஜகோபாலாச் சாரியார், நல்ல வேளையாக நீங்கள் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமற் போனீர்கள். நீங்கள் வழக்கறிஞராக வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமா யிருக்கும் என்று பெரியாரை நோக்கிக் கூறினார். இவ்வாறு வாதமிடும் தன்மை கிரீ தேசத்துத் தத்துவ ஞானி சாக்ரட்டீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. ஆதலால், இந்தத் துறையில் இவரைத் தமிழ்நாட்டுச் சாக்ரட்டீ என்று கூறலாம். பெரியார், சமுதாய ஒற்றுமைக்குத் தடையாயுள்ள எல்லா வற்றையும் எந்தக் கூட்டத்திலும் கண்டித்துப் பேசுவார். நமது நாட்டுப் பழம்பெரும் வள்ளல் புத்தர் எந்தெந்தக் காரியங்களைச் செய்தாரோ, அவற்றையே பெரியாரும் செய்துவருகிறார். புத்தர் வேதங்களைக் கண்டித்தார். புத்தர் சாதி பேதங்களைக் கண்டித்தார்; இவரும் அப்படியே. புத்தர் புரோகிதத்தையும், யாகம் போன்ற சடங்குகளையும் ஒழிக்க முயன்றார்; இவரும் அப்படியே. புத்தரும் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முயன்றார்; இவரும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதிலேயே கருத்தைச் செலுத்தி வருகின்றார். ஆதலால், இவரைத் தமிழ்நாட்டுப் புத்தர் என்றே கூறிவிடலாம். பர்னாட்ஷா தம் மனத்திற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார். அறிவுக்குச் சரியென்று தோன்றியதை வெளிப் படையாய்க் கூறுவார். எவருடைய போற்றுதலையும், தூற்றுதலையும் பொருட்படுத்தாமல் பேசிவிடுவார். இத்தன்மை பெரியார் ஈ.வெ.ரா.விடமும் உண்டு. இதற்கோர் உதாரணம் கூறுவோம். வருணாச்சிரமம் இருக்கும் வரையிலும், இந்துமதம் இருக்கும் வரையிலும் தீண்டாமை ஒழியாது என்பது இவர் கருத்து. ஆதலால், தீண்டாதவர்கள் விரைவில் சமத்துவம் பெற விரும்பினால், இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்பது இவர் எண்ணம். இதைப் பலமுறைகள் தாழ்த்தப்பட்டோர் மாநாடுகளில் கூறியுள்ளார். உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் - இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியா விட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிடவேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால், இம்மாதிரிக் கொடுமையான (இந்து) மதத்தை உதறித் தள்ளிவிட்டுச் சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விடவேண்டும். அதுவும் முடியாவிட்டால், வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விடவேண்டும். இம்மாதிரி உறுதியான முறைகளைக் கையாளத் துணிவில்லையானால், உங்கள்மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன். கஷ்டப்படவும், கட்டுப்பாட்டை உடைத்தெறியவும், உயிரை விடவும் தயாராயில்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இது, 1928-ல் பெரியார் ஒரு தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பேசிய பேச்சு. அவர் மனத்தில் தோன்றிய உண்மையை எவ்வளவு வெளிப் படையாகக் கூறியிருக்கிறார், பார்த்தீர்களா? இவரைப் போல் இவ்வளவு உறுதியாகத் தீண்டாதவர்கள் என்பவர் களுக்கு வழிகாட்டுகிறவர் வேறு எவரேனும் உளரோ? தனக்குச் சரியென்று தோன்றும் எவ்விதப் புதுக் கருத்தாயிருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்குமென்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரை, தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என்றே கூறலாம். *** இவரது பேச்சுத்திறனைப்பற்றி கல்கி என்பவர் ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:- சாதாரணமாக இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலை யைப்பற்றிய தீர்மானத்தின் மேல் பேசவேண்டுமென்றால் பண்டிதர், சுராஜ் உடௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885ம் வருஷத்தில் காங்கிர மகாசபை தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால், ராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் ராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். *** அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்து விடுவேன்... அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேக மில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ - நான் அறியேன். *** தாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் சொந்தத் தமிழ்ப் பதங்கள்தாமா என்று நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை, பன்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவை பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்ல வேண்டுவதில்லை. *** ராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந் தவறாகும். என்னைப்போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்ளேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளும்கூட, அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள், அவருடைய விவாதத் திறமை அபாரமானது. இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்று ஒரு பிரபல வக்கீல் மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒருசமயம் கேட்டேன். *** உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்தக் காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதாராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று, சட்டசபை பிரவேசத்தினால் வீண் பணச் செலவு நேரும் என்பது. விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று. சட்டசபை பிரவேசத்தினால் வீண் பணச் செலவு நேரும் என்பது. ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர் இந்த 30,000 பேருக்கும் 30,000 கார்டாவது போட வேண்டும். சர்க்கார் தபால் இலாகாவுக்கு லாபம். இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய்விட்டார் என்பதாக எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். நான் செத்துப் போகவில்லை. உயிருடன் இருக்கிறேன் என்று மறுபடியும் 30,000 கார்டு போட வேண்டும். நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமேயில்லையென்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகின்றது. ஆனால், அப்போது, ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது நானும், இன்னும் 4,000 ஜனங்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை கொல்லென்று சிரித்து மகிழ்ந்தோம். *** தாய்நாடு, தாய்மொழி என்று சொல்லளவில் மிக பக்தியுடை யுடைவர்களாகப் பேசுவதும், எழுதுவதும் பலருக்கு நம் நாட்டில் வழக்கமாய்ப் போய்விட்டது. அதில் ஒரு பெருமையும், ஒருவிதச் செல்வாக்கும் மிக எளிதில் கிடைக்கக் கூடியதாயிருப் பதால், ஒவ்வொரு மூச்சுக்கும் இவ்வார்த்தைகளைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றுவது மிகச் சாதாரணமாயிருக்கிறது தமிழ்நாட்டில். ஆனால், பெரியார் அவர்கள் எதையும் வீண் பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் மட்டுமே அர்த்தமின்றி உபயோகிக்கமாட்டார். உதாரணமாகத் தமிழ் மொழியைப் பற்றி அவர் 21.07.1939ல் கோயம்புத்தூர் கல்லூரி மாணவர்கட்குச் சொன்ன கருத்துக்களில் இரண்டொன்றைத் தருகிறோம். தாய் மொழி என்பதற்காகவோ, நாட்டு மொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ் மொழியிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனி மொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி, சிவபெருமான் பேசிய மொழி என்பதற்காகவோ, அகதியரால் உண்டாக்கப்பட்ட மொழி என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. வதுவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று, மூட பக்தியே ஆகும். குணத்திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற் பயனுக்காகவும்தான் நான் எதினிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது மொழி, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது மொழி பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை. எனது நாடு, எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அதுபோலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபார முறையில் லாப - நஷ்டக் கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது, தனது பெரியார் களுடையது என்பதற்கு ஆகவல்ல. அதுபோல்தான் நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டமேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன். அப்படியேதான் மற்றொரு மொழி (இந்தி) நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து, சகிக்க முடியாமல்தான் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை. ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பயன்தான் காரணம் என்பதை உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இந்த நாட்டு மக்களுக்குச் சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப் பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லை என்றாலும் மற்ற அநேக இந்திய மொழிகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாகும் எனச் சந்தேகப்படத் தக்க வேறு எந்த மொழியும் விரும்பத்தகாததேயாகும். இனி, அவருடைய எழுதுந் திறமையைப்பற்றிப் பார்ப்போம். பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தை உபயோகிப்பது போல், திரு.நாயக்கர் தனது பேனாவைப் பயமின்றி எங்கும் செலுத்துகிறவர். (சர்.கே.வி.ரெட்டி நாயுடு, 1928) இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும். சொற்பிழைகள் நிறைந்திருக்கும். ஒரு வாக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில், காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிகளுக்கு வேலையில்லை. கிணர், வயிர், சுவற்றில், ஆஷி, குஷி, ஆருதல், பொருமை போன்ற பிழைகள் தாராளமாகக் காணப்படும். சாதரணமாகப் பேசுந்தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்றது. பயனிலை எங்கே இருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம், அய்ந்து முழம் நீண்டிருக்கும். இவ்வளவு பிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரைத் தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டிலும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்ல முடியாது. குடிஅரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்களுக்குத் தெரியும். அதில் மக்கள் மனத்தைக் கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக் காரணம், அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்னர் எது? அவர் உள்ளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துச் சொல்வது. அதுவும் மிகச் சாதாரண தமிழிலேயே தானிருக்கிறது. நாயக்கர் படிப்பில் பட்டதாரியல்ல. எத்தகையக் கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்கத்தக்க வன்மையுடைய பத்திரிகையை இவர் கொடுத்தது நமது பூர்வ புண்ணியமேயாகும். என்று T.K. சிதம்பரநாத முதலியார், B.A., B.L., அவர்கள் 1927 நவம்பரில் திருநெல்வேலி சுயமரியாதை மாநாட்டில் கூறினார். இது உண்மை. இவருடைய எழுத்துக்கள் இவர் பேசுவது போலவே இருக்கும். எப்பொழுது திங்கட்கிழமை வருகிறது என்று வாசகர்கள் காத்திருப்பார்கள். குடிஅரசு வந்தவுடன் முதலில் தலையங்கத்தைத்தான் படிப்பார்கள். பெரியார் குடிஅரசின் ஆசிரியராக இருந்தவரையிலும் இந்நிலையிலிருந்து வந்தது. இவருடைய எழுத்தில் மொழிவளம் இல்லாவிட்டாலும் பொருள் வளம் மிகவும் உண்டு. தம் கருத்தை அப்படியே வெளியிடுவதில் இவருக்கு இணை எவரும் இல்லை. இவருடைய எழுத்திலிருந்து இவர் கருத்துக்கு மாறான பொருள் கொள்ள முடியாது. தம் கருத்துக்கு மாறான பொருள்படாமலிருக்க வேண்டுமென்பதற்காகவே பல சொற்களைப் புகுத்தி எழுதுவார். அதற்காகவேதான், மற்றபடி, அதுவும் அல்லாமல், அதனோடுங்கூட, என்றுதான் சொல்லுகிறோம், என்றுதான் கேட்கிறோம் என்பன போன்ற சொற்களை மிகுதியாகப் புகுத்துவார். இது தம் கருத்தை வலியுறுத்துவதற்காகவே. எந்தச் சிறு கருத்தையும் மிகவும் அழுத்தமான முறையில் - புதிய முறையில் - மனத்தில் சுருக்கென்று தைக்குமாறு வெளிப்படையாக - எல்லோருக்கும் விளங்கக்கூடிய நடையில் எழுதுவதில் இவர் ஒரு நிகரற்ற தனி எழுத்தாளர். இதற்கு ஒரு உதாரணம் வருமாறு:- செத்துபோன ஜெனரல் டயர் துரையைவிடக் கொடுமை யானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்துகொண்டு, பிள்ளைகுட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழுகிறார்கள். பாவி டயராவது அவரது வகுப்புப் பெண்மீது கல்லுப் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டு போ, மூக்கினால் உரைத்துக் கொண்டு போ என்பதான நிபந்தனை போட்டாவது அவர்களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடங்கொடுத்தார். ஆனால், நமது நாட்டிலிருக்கும் படுபாவி டயர்கள், நாம் ஒரு குற்றமும் செய்யாமல், ஒருவன் மீதும் கல்லுப்போடாமல் இருப்பதுடன், அவர்களுடைய கூட்டத்திற்கும் நாம் நன்றாகச் சோறுபோட்டும், பணம் கொடுத்தும் வரும்போதே, அடியோடு, தெருவிலேயே போகக்கூடாது; கிட்டத்திலேயே வரக்கூடாது என்கிறார்களே! இதைப்பற்றி யாருக்காவது உறைக்கிறதா? இதனால் நமக்கு அவமானமாய் இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகளைப் படுபாவி டயர்த் தன்மை என்று எழுதுகிறதா? என்று பார்த்தால், இல்லவே இல்லை என்று எழுதினார். இன்னும் அஞ்சாமல் உண்மையை அப்படியே எழுதுவார். ஒருவருடைய தியாகத்தை மனதார ஒப்புக்கொண்டு பாராட்டு வதற்குப் பின்வாங்கமாட்டார். காலஞ்சென்ற வீரர் பகவத்சிங் அவர்களைத் தூக்கிலிட்டது பற்றி நமது நாட்டுப் பத்திரிகைகள் ஒன்றேனும் வெளிப்படையாக ஒன்றுங் கூறவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறைக்குப் பயந்து வாய்மூடி இருந்தன. அச்சமயம், அவருடைய தியாகத்தைப் புகழ்ந்து எழுதிய பத்திரிகை குடி அரசு ஒன்றே. அதில் சில பகுதிகளைப் பாருங்கள்: ஒரு மனிதன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது? என்பது இங்கு நமது கேள்வியல்ல. என்றாலும் அக்கடமைகளைக் காலமறிந்து, இடமறிந்து செலுத்தவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோமெனினும், பகவத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும், நடப்பும் விரோதமா யில்லையென்றும், பொருத்தமாய் உள்ளதென்றும் சொல்லுவோம். உண்மையிலேயே பகத்வசிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரியென்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு, அதை நிறைவேற்ற அவர் நடந்துகொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருந்திருப்பாரேயானால், கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்திருக்கவேண்டிய தென்று நாம் சொல்லுவதோடு, அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கிய மான மனிதர் என்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். (29.03.1931 குடி அரசு தலையங்கம்) பெண்கள் விடுதலை ஆண்களால் உண்டாகாது; - பெண்களே தங்கள் விடுதலைக்குப் பாடுபடவேண்டும். ஆண்கள் தன்னலக் குறியுடன் பெண்கள் உரிமைக்குத் தடையாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்தை எவ்வளவு அழுத்தமாக எழுதியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்: ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பன ரல்லாதார்க்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலுங்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்; ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களே இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றதென்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ஆண்மை உலகில் உள்ளவரையிலும் பெண்மைக்கு மதிப்பில்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் ஆண்மை நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதலை இல்லையென்பது உறுதி. ஆண்மையால்தான் பெண்கள் அடிமைப்பட்டிருக்கின்றார்கள். பலர் முரண்படும் ஒரு செய்தியைப்பற்றி இவ்வளவு அழுத் தந்திருத்தமாக எழுதும் எழுத்தாளர் எவரேனும் உண்டோ? கடிதம் எழுதுவதிலும் இவர் மிகச் சிறந்தவர். ஒன்றிலும் அகப் படாமல் சிக்கலாக எழுதவும் தெரியும். தெளிவாக எழுதவும் முடியும். மனக்குறையுடையவர்களுக்கு இவர் எழுதும் கடிதங்களில் நல்ல உறுதி மொழிகள் அடங்கியிருக்கும். அக் கடிதங்களைப் படித்தவுடனேயே மன அமைதி பெறுவர். பிறருக்குச் சமாதானங் கூறும் முறையில் கடிதம் எழுதுவதில் இவர் ஒரு ஒப்பற்ற எழுத்தாளர் என்று கூறலாம். இவர் எழுதிய கடிதங்கள் இரண்டொன்றின் ருசிகரமான பகுதிகளைக் கீழே தருகிறோம். 23.10.1930ல் அரசாங்க உத்தியோகத்தில் உள்ள ஒரு நண்பருக்குப் பெரியார் எழுதியது:- பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டிய தில்லை என்பதோடு, இவை உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றிபெறவும் முடியாது. 21.04.1930ல், உப்புச் சத்தியாகிரகத்தைப்பற்றிக் குடி அரசும், சுயமரியாதை இயக்கமும் நடுநிலைமை வகிக்கவேண்டுமென்றும், அதைக் கண்டிப்பதுபற்றி நம்மவர் சிலர் வருந்துகிறார்கள் என்றும் எழுதிய தோழருக்குப் பெரியார் எழுதிய விடைக் கடிதம்:- உப்புச் சத்தியாக்கிரக விஷயத்தில் எதற்காக நான் மவுனஞ் சாதிக்க வேண்டுமென்பது எனக்கு விளங்கவில்லை. நம்மவர்கள் யார் என்பதும் எனக்கு விளங்கவில்லை. எனது கொள்கையை, அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்பவர்கள்தான் நம்மவர்கள் என்று நான் கருதியிருக்கிறேன். மற்றவர்களை, லட்சியம் செய்ய வேண்டிய அவசிய மில்லாதவர்கள் - சாதாரணமானவர்கள் - எதிரிகள் - என மூன்று பிரிவாகத் தான் கருதவேண்டியவனாக இருக்கிறேன். இதற்குமுன் நம்மைவிட்டுப் பிரிந்து, நமக்கு எதிரியானவர்கள் எல்லாம் நமக்கு ஜென்ம விரோதிகளா? இல்லையே, நம்முடன் கூடவே ஒத்துழைத்து, அபிப்பிராய வேறுபாட்டால் நமக்குள் பிளவு ஏற்பட்டு வேறுபட்டவர்களே ஒழிய வேறு யார்? அதுபோலவே, இப்போதும் அபிப்பிராய வேறுபாட்டால் பிளவு ஏற்பட்டு, விரோதியாகவோ, சாதாரண நண்பர்களாகவோ, லட்சியஞ் செய்ய வேண்டியவர்களல்லாதவர்களாகவோ ஆவதில் நாம் ஏன் கவலைப் படவேண்டும்? அப்படிப்பட்டவர்கள் எதிர்ப்பையோ, ஒத்துழைப்பு மறுப்பையோ, அலட்சியத்தையோ, அபிமான மின்மையையோ சமாளிக்க நமக்குச் சக்தியிருந்தால் தான் நாம் ஏதாவது செய்யமுடியும்? ஏனெனில், எப்படியானாலும் இப்படி ஒரு கூட்டம் நிரந்தரமாய் இருந்துகொண்டுதான் இருக்கும். மற்றொரு கூட்டம் ஒருபுறம் நம்மைவிட்டுப் போய்க் கொண்டும், நம்முடன் புதிதாக வந்து சேர்ந்து கொண்டும்தான் இருக்கும். இதைப் பர்த்திபண்ணிச் சரிப்படுத்திக் கொண்டும், எதிர்ப்புக்குச் சமாளிப்பு செய்துகொண்டும் இருக்கத்தான் வேண்டும். ஆதலால், இந்த நெருக்கடியான சமயத்தில் மௌனம் சாதிப்பதென்பது சற்று கஷ்டமான காரிய மல்லவா என்று கருதுகிறேன். ஆனபோதிலும், தங்கள் யோசனையை எவ்வளவு தூரம் நமது கொள்கைக்கு இடையூறு இல்லாமல் பின்பற்றக்கூடுமோ அவ்வளவு தூரம் பின்பற்றுகிறேன்; பின்பற்றிக்கொண்டும் இருக்கிறேன். இக்கடிதம் அவருடைய கொள்கை உறுதியையும், எதிர்ப்புக்கு அஞ்சாமையையும் விளக்குகின்றது. இவர் எழுத்து கடிதம் பெற்ற தோழருக்குத் தக்க சமாதானத்தை அளித்திருக்கும் என்பதில் அய்யம் உண்டோ? 07.01.1935ல் தொழிலிலும், வாழ்க்கையிலும் சலிப்புற்ற ஒரு தோழருக்கு இவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:- இவ்வித மனச் சலிப்பு வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது சகஜமேயாகும். உற்சாகம் என்பது இயற்கையிலேயே உள்ள மக்களுக்கு அது (மனச்சலிப்பு) உடனுக்குடன் மாறிவிடும். சோம்பேறியாயிருந்து வாழும் இயற்கையைக் கொண்ட மக்களுக்கு, அது கவலையையும், பொறாமையையுமே கொடுத்துக் கொண்டிருக்கும். ஜீவசுபாவமானது, மனிதன் உயிருடன் இயங்குவதற்குத் தகுதியுடன் இருக்கும் வரையில், எப்படியும் ஒரு வேலை செய்து கொண்டுதான் இருக்கவேண்டும். அந்த வேலை வெறும் ஜீவனத்தைப் பொறுத்ததாகவே - ஜீவனத்துக்காகவே என்று சொல்வதற்கில்லை. ஆதலால், தாங்கள் லாப - நஷ்டத்தைப் பிரதானமாய்க் கருதாமல் - சிறுமை, பெருமையையும் பிரதானமாய்க் கருதாமல், என்ன வேலை செய்வது தங்களுக்கு மனப் பூர்வமாய் உகந்தது என்பதை முடிவு செய்துகொண்டு அதில் இறங்கிவிட வேண்டும். அது நம்மால் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதைத் தவிர, வீண் மனோராஜ்யம் செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. இன்னும் இவர் வேடிக்கையாக எழுதுவதில் நிபுணர். பல செய்திகளைப்பற்றி இருவர், மூவர் சேர்ந்து உரையாடுவது போல், சொல்லாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். குடி அரசில் சித்திர புத்திரன் என்னும் புனை பெயருடன் இவர் எழுதிய சம்பாஷணைகளைப் படித்தோர்க்கு இவ்வுண்மை விளங்கும். அய்ந்துக்கு இரண்டு பழுதில்லை, வெள்ளிக்கிழமை; விளக்கு வைத்த நேரம் என்பவை போல் மனத்தைக் கவரும் தலைப் பெயர்கள் கொடுப்பார். இவற்றைச் சித்திரபுத்திரன் சம்பாஷணைகளில் காணலாம். பெரியார் இன்று ஒப்பற்ற தலைவராய் விளங்கக் காரணம், அவரிடம் உள்ள அஞ்சாமையே ஆகும். தன் கருத்தை அஞ்சாமல் வெளியிடுதல், தெளிவாக வெளியிடுதல், கொள்கைகளை விட்டுக் கொடா திருத்தல், எதிர்ப்பைப் பொருட்படுத்தாமை, எதையும் தானே முழுதுணர்ந்து சிந்திக்கும் தன்மை, உண்மையாளர்களுக்கு மதிப்புக் கொடுத்தல் ஆகிய தன்மைகள் அவரிடம் இயற்கையிலேயே அமைந்துள்ளன. சீர்திருத்தத் தலைவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளில் இவை தலைசிறந்தவை. இப்பண்பினரே தமது செயல்களில் வெற்றி காணுவர். இத்தகைய மாண்புடைய இப்பெரியார் கொள்கைகள் உலகிற் பரவும் நாளே அமைதி நிலவும் நாள்; மக்கள் இன்புறும் நாள். பெரியார் வாழ்க! பெரியார் கொள்கைகள் வாழ்க!! பெரியார் சிவந்தமேனி; தடித்த உடல்; பெருத்த தொந்தி; நல்ல உயரம்; வெளுத்த தலை மயிர்; நரைத்த மீசை; நடுத்தரமான தாடி; திரண்டு நீண்ட மூக்கு; அகன்ற நெற்றி; உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள்; ஆழமான கண்கள்; மெதுவான உதடுகள்; செயற்கைப் பற்கள்; ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி. பெசண்ட் அம்மையாரின் தலைமயிர்; பர்னாட்ஷாவின் தாடி; தாகூரை விட அழகான மூக்கு; இவர்கள் மூவரையும்விட அழகான உருண்டை முகம்; ஒரு தனியான முகவெட்டு; என்னமோ ஒருவிதமான கவர்ச்சி. இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையாக நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் கோட்டுக்கும், இக்காலத்து ஷர்ட்டுக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு. வெளிப்புறத்தில் மூன்று பாக்கெட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கெட். வெளிப் பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்கள். இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி - ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக் கொண்டேயிருக்கும். இவற்றில் பல வெகு மாதங்களுக்கு முந்தியவையாகவும், குப்பை தொட்டிக்குப் போயிருக்க வேண்டியவையாகவும் இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு ஃபவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புற பையில் ஒரு மணிபர். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம். இவ்விதமான சட்டைக்குமேல் போர்த்தியிருப்பது ஒரு அய்ந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில் இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப் பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும். கையில் ஒரு தோற்பெட்டி. அதற்குப் பூட்டுமில்லை; சாவியு மில்லை. மிக அந்தரங்கமான சொந்தக் கடிதங்கள் முதல், பழைய செய்தித் தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிகப் பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத் தாள், உறைகள் வரையில் எல்லாம் இப் பெட்டிக்குள்தான். சட்டைப் பைகளிலுள்ள குப்பைகள், அதாவது ரிக்கார்டுகள் மிகுந்து விட்டால், அவைகளிற் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டுமூன்று மாதங்கட்கு ஒருமுறை, பெட்டி மூடமுடியாமலே முட்டிக் கொண்டால் இப்பெட்டி காலி செய்யப்படுவ துண்டு. *** இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும், கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர்தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு ராமசாமியார். *** ஒருவருடைய ஆயுட்காலத்தில் அவருடைய பண்புகளைப் பற்றி எழுதுவதென்பது மிகக் கஷ்டமான காரியம். நல்ல குணங்களை எழுதினால், முகதுதி என்ற குற்றம். கெட்ட குணங்களைக் குறிப்பிட்டால் மனக் கசப்பு. படிப்பவர்களுக்கு வெறுப்பு. மிகவும் தொல்லையான வேலைதான் இது. *** பெரியாரின் பொறுமை யாவராலும் போற்றக்கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, எதிர்பாராத சம்பவங்களிலுஞ் சரி, பொறுமையை மட்டும் இழக்கமாட்டார். கடுஞ்சொற்களைப் பயன்படுத்தமாட்டார். சுமார் பத்தாண்டுகட்கு முன்பு ஒரு சமயம் மன்னார் குடியில் மிகப் பெரிய ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். பார்ப்பனீயத்தால் மக்களுக்கு நேர்ந்துள்ள கேடுகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். அவர் பேசும் மேடைக்குக் கீழே ஒரு பிராமணர் உட்கார்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்விகளை எழுதி, அவரிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். கூட்டத் திலுள்ள பொதுமக்கள் கடுங்கோபங்கொண்டு அப் பிராமணரைச் சீறிக்கொண்டே இருந்தனர். பெரியார் அவர்களை அடக்கிக் கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறி வந்தார். பல கேள்விகள் ஆகிவிட்டன. எழுதிக்கொண்டே இருக்கும் போது பென்சில் முனை ஒடிந்துவிட்டது. பேசிக்கொண்டிருந்த பெரியார் அதைக் கவனித்து விட்டார். தம் பேனாவை எடுத்து, உறையை அதன் பின்புறம் போட்டார். அய்யா! இதனால் எழுதுங்கள் என்று கொடுத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். பிராமணர் வெட்கிப்போய்விட்டார். மேலே எழுத முடியவில்லை. கூட்டம் முடிந்தது. மோட்டாரில் ஏறியிருந்த பெரியாரிடம் கூட்டத்தை நெருங்கித் தள்ளிக்கொண்டு அப்பிராமணர் வந்தார். நாயக்கர்வாள்! என்னை மன்னிக்கவேண்டும். எதிரிகள் தங்களைப்பற்றிக் கூறுவது முற்றும் தவறு. நீங்கள் மகா பெரியவர். நமகாரம் என்று கூறிவிட்டுப் போனார். மற்றொரு சமயம் பெரியாரும், தோழர் கண்ணப்பரும் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பு வண்டியில் இவர்களோடு பிரயாணஞ்செய்த ஒரு பிராமணர் கண்ணப்பரோடு வாதம்புரிந்து கொண்டிருந்தார். கண்ணப்பர் சில கடுமையான சொற்களைச் சொல்லி விட்டார். உடனே, பெரியார் இடைமறித்து, அவரை நோக்கி, ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? பொறுமையாய்ப் பதில் கூறினால் தானே அவருடைய தப்பெண்ணங்களை மாற்றி, நம் பக்கம் அவரைத் திருப்பலாம்? சந்தேகங்களை விளக்கி, உண்மையை உணர்த்த வேண்டிய இம்மாதிரியான நல்ல சந்தர்ப்பங்களை வீணாக் கலாமா? என்றார். அதற்கு அப்பிராமணர் பெரியாரைப் பார்த்து, பெரியவரே, நீங்கள் சொல்வதை இவர் கேட்கமாட்டார். இவர்களெல்லாம் அந்த ராமசாமி நாயக்கன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; இப்படித்தான் பேசவார்கள் என்றார். இருவருக்கும் உண்டான சிரிப்பை மறைத்துக் கொண்டார்கள். பிறகு கண்ணப்பர் அடுத்த வண்டியில் ஏறிவிட்டார். பெரியார், வண்டியிலுள்ள கக்கூசுக்குள் சென்றிருந்தார். இந்நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த அய்யரை நோக்கி, இவர் யார் தெரியுமா? இவர்தான் ராமசாமி நாயக்கர்; நீங்கள் என்ன அப்படிப் பேசிவிட்டீர்களே என்று சொல்லிவிட்டார். பெரியார் வெளியில் வந்தார். அய்யர் எழுந்து நின்று வணங்கிய படியே, அய்யா! தங்களை யாரென்று தெரியாமல் பேசி விட்டேன்; மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களைப்பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் அனைவரும் பொய்யர்கள். தங்களுடைய நற்குணமும், பொறுமையும் எவர்க்கும் வராது. தாங்கள் அவசியம் ஒரு தடவை என் வீட்டிற்கு வரவேண்டும். நான் காரைக்குடியில் இன்ஷ்யூரன் ஏஜெண்ட்டாக இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். *** உலகத்திலே ஒரே ஒரு அரக்கன் இருக்கிறான். அவன் தான் சோம்பேறி என்றார். மேல்நாட்டுப் பேரறிஞர் தாம கார்லைல். சோம்பல் என்பதே பெரியாருக்குத் தெரியாது. இந்நோய் அவரது இரத்தத்திலேயே கிடையாது. இரவில் 11 மணிக்குத் தூங்க ஆரம்பித்து, காலை 5 மணிக்கு எழுந்து விடுவார். இந்த ஆறுமணி நேரத்திலும் மிக அயர்ந்து உறங்குவார். எந்த நிலையிலும் இந்த அயர்ந்த தூக்கம் அவருக்கு வந்துவிடும். பிரயணத்தின்போது புகைவண்டியில் படுக்க இடமில்லா விட்டால், சாய்ந்த படியே அயர்ந்து தூங்கிவிடுவார். தடியைக் கீழே ஊன்றிக் கொண்டு, தலையை அதன்மேல் சாய்த்தபடியே தூங்கிவிடுவார். புகைவண்டி நிலையத்தின் பிளாட்ஃபாரத்தில் தோற்பெட்டியைத் தலைக்கு வைத்துக் கொண்டு கரடுமுரடான தரையில்கூட நன்றாக உறங்கி விடுவார். ஆனால், பெரும்பாலும் பகலில் மட்டும் தூங்க மாட்டார். அவர் விழித்திருக்கும் நேரங்களில் எதையேனும் படித்துக் கொண்டே இருப்பார். மற்ற நேரங்களில் சிந்தனை. தனிமை யாயிருக்கும்போது எழுதிக் கொண்டிருப்பார். எஞ்சிய நேரங்களில் நண்பர்களுடன் பேசிக்கொண்டும், வாதம் புரிந்து கொண்டு மிருப்பார். இவை மாறி மாறி நடந்துகொண்டேயிருக்கும். பிரயாணம் போவதற்குப் பெரியாரைப் போன்ற துணைவர் கிடைப்பது மிக அருமை. விகடமான பேச்சு; கிண்டலான பதில்கள்; அறிவு முதிர்ந்த கருத்துக்கள் கொட்டிக் கொண்டே யிருக்கும், வயது முதிர்ந்தவர்கள், பண்டிதர்கள், பணக்காரர்கள், பட்டதாரிகள் முதலியவர்களின் கூட்டங்களை விட சாதாரண இளைஞர்கள் கூட்டங்களி லிருப்பதுமே பெரியாருக்கு விருப்பம். இது அவரது இயற்கைக் குணம். *** பெரியாரை எவரேனும் அவருக்கெதிரில் புகழ்ந்தால், ஏமாற்றப் பார்க்கிறார்; நாம் முன்னெச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்று உடனே நினைத்துவிடுவார். அவர் செய்த தவறுகளை நேரில் அவரிடம் கூறுபவர்கள் எவ்வளவு சிறுவர்களா யிருந்தபோதிலும், ஏழைகளாயிருந்த போதிலும் மிகுந்த ஊக்கத்துடன் கேட்பார். அக்குற்றங்கள் தம்மிட மிருப்பதாகத் தோன்றினால் அவற்றை திருத்திக் கொள்ளவே முயற்சிப்பார். சுயநல எண்ணத்துடனும் வீண் குரோதத்துடனும் அவரைத் திட்டியவராயிருந்தாலும் சரி, அவரைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்தவராயிருந்தாலுஞ் சரி, அப்பேர்ப்பட்டவரை நேரிற் கண்டுவிட்டால், அவரிடம் எவ்வித சினமுங்கொள்ள மாட்டார். மிகச் சாதாரண முறையில் பேசுவார். அவருடைய வெற்றியிலுள்ள இரகசியங்களில் இதுவும் ஒன்று. முகதாட்சண்யம் இவருக்கு அதிகம் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பண விஷயத்தில் மட்டும் பெரியாரிடம் ஜாக்கிரதையாக நடந்துகொண்டால், மற்றக் காரியங்களில் எவ்விதமான பெரிய குற்றத்தையுங்கூட மன்னித்துவிடுவார். இவர் பகைமையென்பதைப் பொருட்படுத்துவதே கிடையாது. நீண்டகாலப் பகைவர்களோடுங்கூட வெகு விரைவில் தாமாகவே வலிந்து நட்புக்கொண்டு விடுவார். பெரியாரை, வயதில் அறிவில், முதியோர் - நாட்டின் வாய்மைப் போருக்கென்றும் இளையார்! உயர் எண்ணங்கள மலரும் சோலை! என்று சித்திரிக்கிறார், கவி. பாரதிதாசன் அவர்கள். *** உரிய காலத்தில் எதையும் செய்யவேண்டுமென்பதில் (Punctuaity) பெரியாருக்கு மிகமிகக் கவலை. இதுவே அவருடைய மதம் என்று கூடச் சொல்லலாம். ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போகவோ, அல்லது ஒருவரைக் காணுவதற்கோ காலங்குறித் திருந்தால், அந்நேரத்திற்கு கால் மணி முன்பே சென்று தயாராய்க் காத்துக் கொண்டிருப்பார். காலஞ்சென்று ஒரு காரியத்திற்குச் சென்றுவிட்டு பிறகு மன்னிப்புக் கேட்பதென்பதைப் போன்ற வெறுப்பான செய்கை அவருக்கு வேறேதுவுமே இல்லை. குறித்த காலத்திற்குப் புறப்பட முடியாமல் அதற்கு யாரேனும் இடையூறாகவோ, பொறுப்பாளியாகவோ இருந்தால், அவர்மீது அடங்காச் சினங்கொள்வார். அவர் யாராயினுஞ் சரி, காய்ந்து விழுவார். நொந்து கொள்வார். அவசர அவசரமாகக் கைத்தடியை எடுத்துக்கொண்டு தம் வேலையை நோக்கிப் புறப்பட்டுவிடுவார். *** தம் உணவு, உடை இவைகளைப்பற்றிப் பெரியாருக்குச் சிறிதும் கவலையே இல்லை. உடல்நலத்தைப்பற்றிப் பொருட் படுத்துவதே கிடையாது. கிடைத்த உணவைத் தின்றுவிடுவார். மருத்துவர் கட்டளைகளை மீறி நாக்கு ருசியின் பொருட்டுப் பிரியப்பட்டதை உண்டு, அதிகத் தொல்லையை வருவித்துக் கொண்டு அடிக்கடி துன்புறுவார். சிற்சில சமயங்களில் இக் காரணமாய் ஆபத்தான நிலைக்குக்கூட ஆளாகியிருக்கிறார். தமது உடல் வளர்ச்சிக்காக நேரத்தை செலவிடுவதில் அவருக்கு விருப்பமேயில்லை. உதாரணமாக அவர் தாடி வளர்க்கும் காரணம் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். பத்தாண்டுகளாகத் தான் தாடி வளர்த்து வருகிறார். வாரத்திற்கு மூன்று தடவையாவது சிறிது நேரத்தை அதற்காக வீணாக்க வேண்டுமே என்பது முதற்காரணம். அவசரமான வேலைக்கிடையில் பிறரை எதிர்பார்க்க வேண்டிய கஷ்டம் மற்றொரு காரணம். சுத்தம், சுகாதாரம் இவைப்பற்றிப் பெரியாருக்கு அதிக அக்கறை யுண்டு. ஆனால், தம்மைப் பொறுத்தவரையில் இவற்றைப் பின்பற்றுவதற்கு நேரமிருப்பதில்லை; அவசரத்தை முன்னிட்டுச் சில சமயங்களில் பல் துலக்காமல்கூட உணவருந்திவிடுவார். மிகக் களைத்துப் போய் வேர்த்திருந்தால்தான் சாதாரணமாய்க் குளிப்பார். பெரியாருடைய சிக்கனத்தைப்பற்றி எவ்வளவு எழுதினாலும் பொருத்தமாகவே இருக்கும். வீண் டம்பச் செலவை அறவே வெறுப்பார் பெரியார். நல்ல உயர்வான உணவை அருந்தவோ, பிற நலன்களை அனுபவிக்கவோ சமயங் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளமாட்டார். ஆப்பிள் மிகச் சொற்ப விலையானதென்றே வெகுநாள் கருதிக் கொண்டிருந்தேன். அதனுடைய உண்மை விலையை அறிந்தது முதல், இனாமாகக் கிடைத்தால்கூட என்னால் ஆப்பிள் சாப்பிட முடிவதே இல்லை என்று ஒருமுறை பெரியாரே கூறியுள்ளார். செல்வ நிலையிலும், பிற தகுதிகளிலும் அவரைவிட எவ்வளவோ குறைந்தவர்கள் பலர் இன்றும் புகை வண்டியில் முதலாவது, இரண்டாவது வகுப்புகளில் பிரயாணம் செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், பெரியாரோ உடல் வலிமை குன்றி, அதிக நோயுற்று இருந்த இரண்டொரு தடவைகள் தவிர, அன்றுமுதல் இன்றுவரை - அறுபது வயதாகி நோய்வாய்ப்பட்ட நிலையிலுங்கூட மூன்றாவது வகுப்பிலேயே பிரயாணஞ் செய்து வருகிறார். எந்தப் பொருளையும் உடனே, இதன் விலை என்ன? என்று முதலில் கேட்டுவிடுவார். விலையைத் தெரிந்து கொண்டதும் கணக்கு போட ஆரம்பித்துவிடுவார். விலை ஒரு ரூபாயானால், தரகருக்கு எவ்வளவு கிடைக்கும்? சில்லறை வணிகருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதற்கு கழிவு (கமிஷன்) எவ்வளவிருக்கும்? எல்லாம் போக அடக்கம் இரண்டரையணாத்தானிருக்கும். அப்பா! அநியாய விலை! என்று சொல்லிவிடுவார். ஒரு புத்தகத்தை முதன்முதல் கையிலெடுத்ததும், அதில் எத்தனை அடுக்குகள் (ஃபாரங்கள்) இருக்கின்றன வென்பதையே முதலில் கவனிப்பார். பிறகு அக்காகிதத்தின் விலை, அட்டையின் விலை, அச்சுக்கூலி, பயிண்ட் கூலி முதலியவற்றைக் கூட்டி, வகுத்து அதன் விலை மிகவும் அக்கிரமமாகப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்வார். சாக்ரடீசைப் போல ஒரு பொருளின் அழகைவிட அதன் பலன் என்ன என்பதில்தான் பெரியாருடைய முழு எண்ணமும் செல்லும். பெரியார் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறவர் என்பதும், ஆடம்பரங்களை அறவே வெறுப்பவர் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அவருடைய சாதாரண ஆடம்பற்ற தன்மைக்கு இரண்டொரு உதாரணம் கூறுவோம். தோழர் சி.விஜயராகவாச்சாரியார் பெரியாருக்கு உண்மையான நண்பர். அவர் ஒரு சந்தர்ப்பத்தில், சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்குப் போகும்போது, ஈரோட்டில் இறங்கிப் பெரியாருடன் ஒருநாள் தங்கி இருந்தார். அப்போது அன்றைய இரவு பர்த் (இடம்) ரிசர்வ் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். பெரியார் தமது சத்திரம் மணியக்காரரைக் கூப்பிட்டு உத்தரவு செய்தார். அவர் ரயிலுக்குச் சென்று டேஷன் மாடரிடம், நாயக்கர் ஒரு பர்த் ரிசர்வ் செய்ய என்னை அனுப்பினார் என்று சொன்னவுடன், அவர் சரி என்று சொல்லி விட்டார். இரவு 10 மணிக்குப் பெரியாரும், தோழர் விஜயராகவாச் சாரியாரும் ரயிலுக்குச் சென்று, பிளாட்ஃபாரத்தில் இருந்த இரண்டாவது வகுப்பு வண்டியில் உள்ள ஒரு பர்த்தில் ஆச்சாரியாரின் சாமான்களை வைக்கச் சொன்னார்கள். போர்ட்டர் சாமான்களை வண்டிக்குள் வைத்ததும் பிளாட்ஃபாரம் ஃபோர்மென் ஒருவர் ஓடிவந்து, போர்ட்டரை வைத்து, சாமான்களை வெளியில் எடுக்கும்படிச் சொன்னார். உடனே நாயக்கர் போர்மெனிடம், தோழர் விஜயராகவாச்சாரியாருக்கு ஆக ஒரு பர்த் ரிசர்வ் செய்திருக்கிறது என்று சொன்னார். ஃபோர்மென் அது எனக்குத் தெரியாது, இன்று பர்த் கிடையாது. எல்லாம் ரிசர்வாகிவிட்டது! என்றார். உடனே நாயக்கர், இந்த பர்த்துக்கு ரிசர்வ் டிக்கட் போட வில்லையே! அதில்தானே சாமான் வைத்திருக்கிறது என்று சொன்னார். ஃபோர்மென், அதைப்பற்றி நீங்கள் கேட்கவேண்டியதில்லை என்று சாமானை இறக்க ஆரம்பித்தார். உடனே நாயக்கர் கோபித்துக்கொண்டு, சாமானை இறக்கிவிடவேண்டாம் என்று தமது ஆளுக்குச் சொல்லி விட்டு, கலகம் செய்யத் துணிந்துகொண்டு உடனே புக்கிங் ஆஃபீசுக்குப் போய் ஒரு இரண்டாவது வகுப்பு டிக்கெட் வாங்கி வரும்படி ஆள் அனுப்பினார். புக்கிங் கிளார்க், இரண்டாவது வகுப்பு டிக்கட் இல்லை; பர்த் கிடையாது என்று சொல்லிவிட்டார். பிளாட்ஃ பாரத்தில் கூட்டம் சேர்ந்து விட்டது. நாயக்கர் உடனே தமது சத்திரத்துக்குப் போய் மணியக் காரனைக் கூட்டி வரும்படி ஆள் அனுப்பினார்; மணியக்காரர் வந்தார். அவரை நாயக்கர் கோபித்தார். மணியக்காரர் தாம் டேஷன் மாடரிடம் சொன்னதையும், டேஷன் மாடர் ஃபோர்மெனிடமும், புக்கிங் கிளார்க்கிடமும் சொன்னதையும் சொல்லிவிட்டு, உடனே பணம் வாங்கிக் கொண்டு டேஷன் மாடரிடம் ஓடினார். டேஷன் மாடர், சீக்கிரம் போய் பர்த் ஆக்பை செய்துகொள்ளுங்கள். யாரோ விஜயராகவாச்சாரியாம்! அவர்கூட வந்த ஒருவர் கம்கார்ட்மெண்டில் சாமான் வைத்துக் கொண்டு கலகம் செய்கிறாராம். டிக்கெட் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நீங்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு போங்கள் என்றார். பிறகு மணியக்காரர், அவர்தான் நாயக்கர் என்றார். உடனே டேஷன் மாடர் அந்தப் பிளாட்ஃபாரத்துக்கு வந்து, தாங்கள்தான் நாயக்கர் என்று தெரியாது, மன்னிக்க வேண்டும் என்றார். டேஷன் மாடருக்கு நாயக்கர் விஜயராகவாச்சாரியாரை அறிமுகம் செய்து வைத்தார். உடனே ஆச்சாரியார் நாயக்கரைப் பார்த்து, நான் அப்போதே உம்மை ஒரு ஷர்ட்டும், ஒரு மேல் வேஷ்டியும் போட்டுக்கொண்டு வாரும் என்று சொன்னேன் என்று சொல்லிப் பரிகாசம் செய்தார். யாவரும் சிரித்தார்கள். மற்றொரு சம்பவம் ஈரோட்டில் மஜிலி உலமா மாநாடு நடந்தபோது, பெரியார் அதன் பொறுப்புள்ள காரியதரிசியாய் இருந்து காரியம் பார்த்தார். பல ஊர்களில் இருந்து வாலண்டியர்கள் வந்து, செண்ட்ரி மாதிரி டூட்டி போட்டுக் கொண்டு வேலை பார்த்தார்கள். கொட்டகை அலங்காரம் நடந்துகொண்டு இருந்தது. உள்ளூர் டிடிரிக்ட் முன்சீஃப் தோழர் பி.ஜி.ராமய்யரும், டிப்டி சூப்ரண்டெண்ட் தோழர் வெங்கிட்டப்பா அவர்களும் கொட்டகையைப் பார்க்க வந்தார்கள். வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த பெரியார் இவர்களை அழைத்துக் கொண்டு கொட்டகையின் பின்புறக் கேட்டின் வழியாக உள்ளே பிரவேசித்தார். கேட்டில் இருந்த வாலண்டியர், இவர்கள் மூவரையும், ஒரு பியூனையும், ஒரு கான்டபிளையும் உள்ளே போகக்கூடாது என்று தடுத்தான். உடனே நாயக்கர், இவர் முன்சீஃப், இவர் டிப்டி சூப்ரண்டெண்ட் நம்ம கொட்டகையைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்; உள்ளே விடு என்று நயமாய்க் கேட்டார். அதற்கு வாலண்டியர், அதெல்லாம் முடியாது; யாராயிருந்தாலும் விடக்கூடாது என்று நாயக்கர் உத்தரவு செய்திருக்கிறார் என்று சொன்னான். டிப்டி சூப்ரெண்டெண்ட் வெங்கிட்டப்பா அவர்கள் சிரித்துக்கொண்டே நாயக்கரைத் தொட்டுக்காட்டி, இவர்தான் நாயக்கர், இதுகூடத் தெரியாத நீ என்ன வாலண்டியர்? இப்படியெல்லாம் என்னை ஏமாற்ற முடியாது. நாயக்கர் உத்தரவில்லாமல் யாரும் உள்ளே போகக்கூடாது என்றான் அந்த வாலண்டியர். பிறகு, நாயக்கர் மற்றொரு சாயபு ஒருவரைக் கூப்பிட்டு, வாலண்டியருக்குச் சொல்லும்படிச் செய்து, அதிகாரிகளை உள்ளே அழைத்துப் போனார். இப்படிப் பல சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரணமாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கட்கு அடிக்கடி வெறுப்புத் தோன்றுவதுண்டு. மிகப்பெரிய பணக்காரர்களுக்குத் தோன்றும். உடனே தங்கள் தொழிலைக் கவனிக்கச் சென்று விடுவார்கள். பொதுவாழ்விலேயே தலையிடுவதில்லை யென்று சத்தியஞ் செய்து விடுவார்கள். பெரிய படிப்பாளிகள், பட்டதாரிகள் கூட இப்படித்தான். திடீரென்று ஒருவிதமான விரக்தி ஏற்பட்டு விடும். பொதுவாழ்வையே தலை முழுகிவிட்ட தாக உறுதி செய்து கொள்வார்கள். நம்நாட்டுப் பொருளாதார நிலைமையும், பொது வாழ்க்கையைப் பற்றி மக்களுக்கு நல்லெண்ணம் இல்லாமலிருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். பெரியார் தமது பொது வேலையை விட்டுவிட்டு, மறு படியும் ஒரு வணிகராக இன்று தொழில் நடத்த ஆரம்பிப் பாரானால், சில ஆண்டுகட்குள் பல ஆயிரக்கணக்கான ரூபாய் களைத் திரட்டிவிடுவார் என்பதை எவரும் மறுக்கமாட்டார். அல்லது, வெளியிற் சொல்லாமல், பத்திரிகைத் தொல்லையு மில்லாமல், ஒரே ஒரு ஆண்டு ஈரோட்டில் தொடர்ந்து தங்குவாரானால், இப்போதுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மேல் பல நூறு வீடுகளைப் புதிதாகக் கட்டிவிடுவார். சிக்கன மென்பதைத் தமது இயற்கைப் பண்பாகவுள்ள பெரியார் இத்துறைகளில் எவ்வளவு விரைவில் செல்வராகக் கூடும் என்பதை ஈரோட்டுக்காரர்கள் நன்கறிவர். எனவே, பெரியாரைத் தியாகத்தின் சிகரம் என்று சொல்வதில் என்ன தடையிருக்கிறது? *** லட்சியத்தில் தோல்வியடைந்ததும் வெறுப்படைவது மனித இயற்கை. அதாவது கோழைத்தனம் என்பதே மனித இயற்கை தான். சதா வெற்றியையே எதிர்பார்ப்பவன் பேராசைக்காரன். தோல்வியைக் கண்டு ஓடி ஒளிகிறவன் கடைந்தெடுத்த கோழை. ஆனால், பெரியாரோ - இதில் இவர் இந்தியாவிலேயே பெரியார் தான் - மனித இயற்கைக்கே மாறுபட்டவர். தோல்வி என்பது அவருடைய வீரத்தையும், அறிவையும் போட்டுக் காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்ச காய்ச்ச அவருடைய இவ்விரண்டு பண்புகளும் ருசியில் அதிகப்பட்டுக் கொண்டே யிருக்கும். இதைப் போலவே, வெற்றி கிடைத்தாலும் அதற்குமேல் செய்ய வேண்டியதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப்பற்றியும்தான் கவலைப்படுவார். சில இழி மக்களைப்போல் வெற்றி மயக்கத்தால் கூத்தாடுஞ் சிறுமைக் குணம் அவரிடமில்லை. சுருங்கக் கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர் வீரர் (A Born Soldier). உலகத்தில் ஒரே ஒரு சாக்ரட்டீ; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின்லூதர்; ஒரே ஒரு அமானுல்லா; ஒரே ஒரு கெமால் பாட்சா; ஒரே ஒரு பர்னாட்ஷா; ஒரே ஒரு ராமசாமிப் பெரியார் தான் தோன்றுவார்கள். தோன்ற முடியும். ஏன்? *** குத்து, வெட்டு வழக்குத் தீர்ப்பின் சில பகுதிகள் 05.10.1957 குளித்தலையிலும், 13.10.1957 பசுபதிபாளையத் திலும், 20.10.1957 திருச்சி யிலும் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சுக்களுக்காக இ.பி.கோ. 302, 436, 117 ஆகிய பிரிவுகளின் கீழ்த் தொடரப்பட்ட வழக்கில், திருச்சி ஜில்லா நீதிபதி உயர்திரு. S.சிவசுப்பிரமணிய நாடார் அவர்கள் மூன்று பேச்சுகட்கும் முறையே ஆறு ஆறு மாதத்தண்டனை விதித்து, இதை ஏககாலத்தில் அனுபவிக்கும்படி 14-12-57ல் தீர்ப்பளித்தார். தலைவர் பெரியார் அவர்களின் இலட்சியத்தை விளக்கிக் காட்டும் வகையில் அத்தீர்ப்பில் காணப்படும் சில முக்கிய பகுதிகள்: எதிரி (பெரியார்) உண்மையிலேயே பார்ப்பனர்களை உதைக்கச் சொல்லியும், குத்தச் சொல்லியும், கொல்லும்படியும், அவர்களது வீடுகளுக்குத் தீ வைக்கும்படியும் பொது மக்களைத் தூண்டினாரா? அல்லது அவர் கோர்ட்டாரிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் காட்டியிருக்கிறபடி அவை வெறும் பயமுறுத்தல்தானா என முடிவு செய்யும் முன்பு, அவருடைய இம்மூன்று பேச்சுக்களையும் சேர்த்துப் படித்தால், அதிலிருந்து தெரியும் அவரது மனப் போக்கும், அதையொட்டி எழுந்துள்ள திட்டங்களும். அவை எப்படிப்பட்டவை என்று அறியவேண்டியது அவசியமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிட பெருங் குடிமக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின்கீழ் வதிகிறார்கள். பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பொருளையுடைய சூத்திரன் என்ற இழிபட்டத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்யப்பட்டதுடன், அதை அம்மக்கள் நம்பும் படியும் செய்யப்பட்டுள்ளனர். வேத சாதிர, இதிகாச புராணங்கள் அத்தனையும் திராவிடர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்து வதற்காகவே பார்ப்பனர்களால் எழுதப்பட்டனவாகும். பார்ப்பனர்கள் திராவிடர்களிடையே பல்வேறு சாதிகளை உண்டாக்கி, அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளார்கள். திராவிடர்கள் கீழே அமிழ்ந்து கிடந்து உழலும் நிலையில், பார்ப்பனர்கள் மாத்திரம் உயர்ந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் சாதி முறையேயாகும். திராவிடர்கள் மிகக்குறைந்த ஊதியம் பெறும் சாதாரண ஊழியர்களாக இருக்கும்போது, பார்ப்பனர்கள் உத்தியோக மண்டலம் முழுவதையும் தங்கள் ஏகபோகமாக அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள். அதுவும் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போனபிறகு, நிலைமை இன்னும் மோசமாயிற்று. சாதிமுறை ஒழிந்தாலொழிய, திராவிடர்களின் இழிநிலை மாறாது. சாதி முறையைப் பலப் படுத்தியும், அதன்மூலம் பார்ப்பன ஆதிக்கம் என்றென்றும் நீடித்து நிலை பெறும் வண்ணம் செய்வதற்கே இந்திய அரசியல் சட்டம் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. பிரதம மந்திரி திரு.நேரு பார்ப்பனரும், குடியாட்சித் தலைவர் திரு.இராசேந்திர பிரசாத் பார்ப்பனரும் ஆட்சிப் பொறுப்பைப் பலமாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இராஜ்ய அரசாங்கமோ சாதியை ஒழிக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கச் சக்தியில்லாத, அதிகாரமில்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே, சட்ட வரம்புகளுக்குட்பட்ட முறைகளைக் கையாண்டு, சமூக பேதங்களைப் போக்க, சாதியை ஒழிப்பதற்குச் சரியான வழிவகை கண்டுபிடிப்பதென்பது இயலாத காரியம். திரு.ஜின்னா அவர்கள் இலாமியர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்றார். ஆரம்பத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் அதைக் கிண்டல் செய்தார். ஆனால், ஜின்னா அவர்களை கத்தியைக் காட்டிப் பாகிதானைப் பெற்றார். திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன், பள்ளிப் பிள்ளைகளை அவரவர் குலத் தொழிலைக் கற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டார். எதிரி (பெரியார்) இதைக் கண்டித்து, பல கிராமங்களில் சென்று பேசி, பலமான எதிர்ப்பைத் திரட்டினார். ஆனால், திரு.ஆச்சாரியார் அவர்கள் 30 நாட்களில் அக்குலக் கல்வித் திட்டத்தை வாப வாங்கவிட்டால், பார்ப்பனர்களைக் குத்தும்படி எதிரி பொதுமக்களைப் பார்த்துச் சொன்னார். 30 நாட்கள் முடிவதற்கு முன்பே திரு.ஆச்சாரியார் அவர்கள் பதவியை விட்டு விலகினார். ஆகவே, சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே வழி, இந் நாட்டில் உள்ள பார்ப்பனர்களைப் பலாத்தாரத்தைப் பயன் படுத்தித் தமிழ் நாட்டைவிட்டு விரட்டுவதாகும். ஆனால், இந்த அதி தீவிர நடை முறையைக் கையாளுமுன்பு, இந்தி அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும். அதன்மூலம் சாதியை ஒழிப்பதற்குப் பலன் ஏற்படவில்லையானால், காந்தியாருடைய சிலைகளை உடைத்து நொறுக்கவேண்டும். இவை அத்தனையும் செய்தும் ஒன்றும் வழிபிறக்கவில்லையானால், நேருவின் கொடும் பாவியைக் கட்டி இழுக்க வேண்டும். அதற்கடுத்த காரியமாக நேருவின் படத்தைத் தீயிட்டுப் பொசுக்கவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்குமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெற வேண்டும். இந்தமாதிரி இரண்டொரு நிகழ்ச்சிகள் நடந்தால் போதும்; அதுவே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை வெளியேறச் செய்து, தமிழர்களின் நீண்ட நாள் அடிமை வாழ்வு அகல அடிகோலும், எதிரிக்கு வயது 78 ஆகிறது; அவர் இன்னும் நீண்டநாள் தாம் வாழ்வோம் என்று நினைக்கவில்லை. பொதுவாழ்வில் இருக்கும் அவருக்கு வயது ஏற ஏற, விரைவில் இலட்சியத்தை அடையத் துடிக்கும் அவரது உணர்ச்சியும் பெருகிக் கொண்டே வருகிறதென உணர்கிறார். இந்த 79ம் வயதில் இலட்சியத்தைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை அடைந்தே தீரவேண்டுமென்றும், அதில் வெற்றி - தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், இறுதிக் கட்டத்தை அடைந்து இரண்டிலொன்று பார்த்தே ஆக வேண்டு மெனவும் நினைக்கிறார். மேலே காட்டப்பட்ட முறையில் அவரது மனப்போக்கும், எண்ணங்களும், அதையொட்டிய அவருடைய திட்டங்களும் அமைந்துள்ளன. *** இவரை (பெரியாரை)ப் பின்பற்றுகிறவர்கள் நாட்டில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருப்பதால், இவருடைய இத்தகைய மனப்போக்கு, எண்ணங்கள், செயல்முறைத் திட்டங்கள் ஆகியவற்றால் பயங்கர விளைவுகள் ஏற்படாமற் போகாது என்பது உறுதி. *** கண்ணை மூடிக்கொண்டும், வெறியுணர்ச்சியோடும் உள்ள எதிரியைப் பின்பற்றும் பலர், அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும், வேத வாக்காக எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதில் தவறில்லை. *** எதிரி (பெரியார்) கோர்ட்டுக்குத் தந்த அறிக்கையில் நான் (நீதிபதி) பிரதமர் நேருவின் பேச்சினால், நீதி பாதிக்கப்படும் வகையில் நடந்துகொள்ளுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைப்பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் நேரு எதிரியினுடைய பேச்சுக்களைப்பற்றி வன்மையாகக் கண்டித்துப் பேசியுள்ளதற்கு 8 பத்திரிகை ஆதாரங்களை, தனது அறிக்கையோடு அவர் சமர்ப்பித்துள்ளார். அது குறித்து நான் கூறுவதை அவர் நம்பத் தயாராக இருக்கும் பட்சத்தில் நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில், இத்தீர்ப்பு நீதியுணர்வோடும், நல்ல மனசாட்சி யோடும்தான் எழுதப்பட்டுள்ளது; பிரதமர் நேருவின் பேச்சால் இத்தீர்ப்பு சிறிதுகூட பாதிக்கப்படவில்லை என்பதே. பெரியார் அவர்களைக் குறித்துக் கரண்ட் பம்பாயிலிருந்து வெளிவரும் கரண்ட் என்ற ஆங்கில வார ஏடு தனது 07.02.1958 இதழில் திராவிடர் கழகத்தைப் பற்றியும், தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும் குறிப்பிட்டிருப்பதாவது: திராவிடர் கழகத்தின் ஆதரவில்லாமல் எந்த ஒரு கொள் கையும், எந்த இயக்கமும், எந்த அபேட்சகரும்கூட வெற்றியடைய முடியாது என்பதுதான் தற்போதைய நிலைமையாய் அங்குள்ளது. இதைச் சாதுர்யமிக்க கம்யூனிட்கள்கூட முன்பே உணர்ந்துள்ள தோடு, கடந்த தேர்தலில் தங்கள் தோல்விக்குக் காரணம் அபரிமிதமாக வளர்ந்துள்ள கழகத்தின் செல்வாக்கே என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இருந்தும் காங்கிரகாரர்களும், குறிப்பாக நேருவும் உணர ஒத்துக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்... 77 வயதான, கம்பீரமான தோற்றம் படைத்த ஈ.வெ.ரா. வெளி உலகிற்கு சிலை உடைப்புக்காரர் - சட்ட எதிர்ப்புக்காரர் என்றே அறிமுக மானவராயிருந்தும் - தமிழ்நாட்டில் மற்றவர்களுக்குத் தலைவலியாக இருக்கும் மாபெரும் அரசியல்வாதி - பல போராட்டத்தலைவராவார். சி.ஆரைப் போன்ற ஒரு பார்ப்பனர் நாட்டை ஆள்வதைத் தவிர்த்துக் காமராசரைப் போன்ற ஒரு தமிழர் நாட்டை ஆள சந்தர்ப்ப மளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், சென்ற பொதுத் தேர்தலில் காமராஜரால் நிறுத்தப்பட்ட காங்கிர காரர்களுக்குத் தம் கட்சியின் ஆதரவைத் தரச் செய்தார். தமிழர்களைத் தட்டியெழுப்பித் தமிழர்களுக்காகப் போராடும் ஈ.வெ.ரா. ஓர் தமிழரல்லர். அவர் ஒரு கன்னடியர். அவர் அதை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்கிறார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈரோட்டில், பணக்காரக் குடும்பத்தில் தோன்றியவர் நாயக்கர். ஒரு காலத்தில் அவர் தமிழ்நாடு காங்கிரசில் புயற் சின்னமாக விளங்கி, தலைவராகவும், செயலாளராகவும் இருந்தார். குருகுலச் சம்பவத்தில் மனக்கசப்பேற்பட முடிவில் அவர் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்ற பிரச்னை எழுந்த காஞ்சீபுரம் மாநாட்டில் 1925ல் காங்கிரசைவிட்டு வெளியேறினார். தம் கட்சிக்கு மாறுபட்ட பல பெயர்களை வைத்தும், மாற்றியும் இருக்கிறார். ஆனால், அவரது குறிக்கோள் மாறியதோ, மங்கியதோ இல்லை. அதாவது: அ. பார்ப்பனீயத்தைத் தொலைப்பதும், ஆ. மத்திய ஆட்சியினின்றும் தனித்த திராவிட நாட்டை அமைப்பதும் அவர் கனவு காணும் திராவிடதான் என்பது ஏறத்தாழ செத்துப்போன தட்சிணப் பிரதேச அளவு உள்ள பிரதேசமாகும். இப்போது நாயக்கர் குறைந்தபட்சம் சென்னையைத் திராவிடநாடு எனப் பெயரிட்டு தந்தால் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கிறார். இதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரும்பான்மை யோரிடமிருந்தோ அல்லது காங்கிரசிடமிருந்தோ எந்த நடவடிக்கையும் இல்லை. அரசியலில் தனித் தன்மை வாய்ந்த வராயும், அதிலும் தீவிரமானவராயும் காணப்படுகிறார் ஈ.வெ.ரா. எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துகளை தமக்கிருக்கும் இயற் கையான உற்றுணர்வால் முன்கூட்டியே அறிவிக்கும் இவரது தீர்க்க தரிசனமான அறிவோடு சி.ஆர்.அய்க்கூட ஒப்பிடுவதற் கில்லை. தென்னாட்டை வடநாடு ஆதிக்கம் கொள்ள வழிசெய்யும், தமிழுக்கு இழுக்கு வரும் என்ற அடிப்படையில் 1937லேயே இந்தியை எதிர்க்கத் தமிழ்நாட்டை ஒன்று திரட்டிய முதல் அரசியல்வாதி ஈ.வெ.ரா. இன்னும் அவர்தான் ரயில்வே போர்டு களிலும், மணியார்டர் ஃபாரங்களிலும் இந்தி நுழைவதையும், வடநாட்டு வியாபாரிகள் தென்னாட்டில் நுழைவதையும் முழுக்க முழுக்க எதிர்த்த முதல் அரசியல்வாதி. இதிலிருந்தெல்லாம் ஈ.வெ.ரா. எவ்வளவு முன்னோக்கு உள்ளவரென்பதையும், அவரது போராட்டங்கள் எவ்வளவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததென்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தந்தை பெரியாரின் வடநாட்டுச் சுற்றுப்பயணம் தந்தை பெரியார் அவர்கள் 1959 பிப்ரவரி மாதம் 1ந் தேதி முதல் 28ந் தேதி முடிய வடநாட்டின் பல முக்கிய நகரங்களில், அகில இந்திய ரிபப்ளிகன் கட்சியின் சார்பாக அழைக்கப்பட்டு, சாதியொழிப்புப் பிரசாரம் புரிந்தார். பெரியார் அவர்கள் இதற்கு முன்பு, அதாவது, 29, 30, 31.12.1944ல் கான்பூரில் கூடிய அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு, அங்கு சென்றதும் - அம் மாநாட்டிற்குத் தலைமைதாங்கி, சாதி ஒழிப்புத் திட்டம் தரும்படி வேண்டப்பட்டார். சாதியொழிப்பு என்பது புண்ணுக்குப் புனுகு பூசுவது போன்ற லேசான காரியத்தால் ஆகாது. அது அறுவை சிகிக்சையின் மூலம் தான் சாத்தியம் என்பதை தந்தை பெரியார் அவர்கள், அங்குக் கூடிய பத்தாயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் தெள்ளத்தெளிய எடுத்துரைத்தார்கள். சாதியின் ஆணி வேர் இந்து மதம், இந்துமத சாதிரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவைதான். ஆகவே, சாதி ஒழியவேண்டு மென்றால், சாதிக்கு ஆதாரமான இந்து மதம், இந்துமதக் கடவுள்கள், இந்து மத சாதிர, வேத, இதிகாச புராணங்கள், இந்துமதப் பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்பதை அவர் களுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்டு உணர்ந்த அப்பொதுமக்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆயிரக்கணக்காகக் குழுமியிருந்த பிரதிநிதிகளும் இக்கருத்துக்களை மனதார ஒப்புக்கொண்ட தோடல்லாமல், மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், இரா வணாக்கி ஜே, சம்புகிக்கி ஜே, இராமன் நாதி, சீதே நாதி (சீதை ஒழிக, இராமன் ஒழிக) என்று இடிமுழக்கஞ் செய்தனர். (குடி அரசு, 13.01.1945) இம்முறை தந்தை பெரியார் அவர்கள் ஜான்ஸி, கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் போன்ற பல பெரிய நகரங்களில் மேற்கூறிய கருத்துக்களை எடுத்துக்கூறியதோடு அல்லாமல், புத்த நெறி ஒன்றுதான் நமது ஆத்திரத் தன்மையைப் போக்கும் வழி என்பதையும், டாக்டர் அம்பேத்கர் தொண்டினையும், அவரை ஆரிய இந்துமதம் ஒழித்துக் கட்டியதையும், உண்மையான பவுத்தம் என்றால் என்னவென்றும் எடுத்துரைத்தார்கள். கான்பூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, இதுவரை அந்நகரமே கண்டிராத முறையில் இருந்தது. பெரியார் இராமசாமி ஜிந்தாபாத்! பம்மன் பாரத் சோடுதோ (பார்ப்பானே இந்தியாவைவிட்டு வெளியேறு) நேரு சாதி நை சலேகி, நை சலேகி (நேருவின் ஜம்பம் இனி பலிக்காது; இனி பலிக்காது) என்று முழக்கமிட்டுக் கொண்டு வந்தனர். ரிபப்ளிகன் கட்சியின் தொண்டர் படையாளர் உருவிய வாளுடன் தந்தை பெரியார் அவர்களைச் சுற்றி நின்று முழக்கம் எழுப்பியதை நினைத்தாலும் மயிர்க்கூச்சு எடுக்கும் சம்பவமாகும். கான்பூரிலும், லக்னோவிலும் இன்னும் அலிகார் போன்ற பல இடங்களிலிருந்தும் தந்தை பெரியார் அவர்களைக் காணவந்த முலீம் தலைவர்கள், தாங்கள் இந்த பார்ப்பனக் கொடுமை ஆட்சியில் சிக்கிச் சீரழிவதைக் குறித்தும், எல்லாப் பதவிகளும் பார்ப்பானுக்கே இந்திய ஆட்சியில் தரப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் கொண்ட புத்தகங்கள் (இந்தியிலும், உருது மொழியிலும் அச்சிடப்பட்டவை) தந்து, உங்கள் பணியினால் தான் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டுள்ள நாங்கள் விடுதலை அடையவேண்டும் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்கள். லக்னோவில் தந்தை பெரியார் அவர்களுக்கு லோகியா சோஷியலிட் கட்சித் தலைவரான திரு.பிரிஜ் நாராயண்சிங் M.L.A., அவர்கள் (உ.பி.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவர்) சட்டசபைக் கட்டடத்திற்குள் இருக்கும் M.L.A., க்கள் விருந்தினர் விடுதியில் பிரபலமான முறையில் தேநீர் விருந்து அளித்ததுடன், சுமார் 30க்கு மேற்பட்ட M.L.A., க்கள் வந்து குழுமி, சாதியொழிப்பைப்பற்றிப் பெரியார் அவர்களின் கருத்துரையைக் கேட்டு முழுதும் சரியே என்று ஒப்புக்கொண்டனர். லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்கள், சாதி ஒழிப்புக் குறித்து ஆற்றிய சொற்பொழிவு அந்நாட்டு மாணவர் உள்ளங்களில் மாபெரும் விழிப்புணர்ச்சியை உண்டாக் கியது. இந்து மகாசபை, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம், ஜனசங்கம் போன்ற பார்ப்பன தாபனங்களின் எதிர்ப்பு பிசுபிசுத்தது. டெல்லியில் தந்தை பெரியார் அவர்களுக்குச் சுமார் 40க்கு மேற்பட்ட பார்லிமெண்டு மெம்பர்கள் (பெரும்பாலோர் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள்) சிறப்பான முறையில் தேனீர் விருந்தளித்து வரவேற்பு நடத்தினார்கள். அங்கு தந்தை பெரியார் அவர்கள், சட்டசபையின் மூலமோ, பார்லிமெண்ட் மூலமோ சாதியை ஒழிக்க முடியாது. சாதியை ஒழிக்கப் பெருங் கிளர்ச்சியால்தான் முடியும் என்பதை வெகு தெளிவாக எடுத்துரைத்ததோடு, அக்கருத்தை அப்பார்லிமெண்ட் மெம்பர் களில் பலரும் ஒப்புக்கொள்ளும்படிச் செய்தார்கள். டாக்டர் அம்பேத்கர் பவனத்தில், புத்த மதத்தைப் பற்றிய பெரியார் அவர்களது பேச்சு, புத்த நெறிக்கே ஒரு சிறப்பான விளக்கமாக அமைந்தது. பம்பாயில் பல இடங்களில், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் சாதி, மதம், கடவுள் பற்றிய மூட நம்பிக்கைப்பற்றி விரிவாக விளக்கி, மனித சமுதாயம் உய்ய ஒரே வழி, உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற அமைப்பும், அவ் வமைப்பைப் பலப்படுத்தும் பல்வேறு சாதனங்களும் ஒழியவேண்டு மென்றார். 1. கடவுள், மதம், 2. சாதி, 3. ஜனநாயகம் - இம்மூன்றும் இந்நாட்டு மக்களைப் பிடித்துள்ள பேய்கள். அதேபோல சட்டசபை, பத்திரிகை, பார்ப்பான், தேர்தல், சினிமா - இவை இந்நாட்டைப் பிடித்துள்ள அய் வகை நோய்களாகும் என்ற கருத்தை விளக்கி பல மணி நேரம் விளக்கவுரையாற்றி, அவர்களுக்குப் புதியதோர் உணர்வூட்டினார். தந்தை பெரியார் அவர்களது வடநாட்டுச் சுற்றுப் பயணத் தினால் ஏற்பட்ட விளைவுகள் - பலன்கள் - மிக அதிகமானவை. இங்குத் தங்களைப் போன்ற தலைவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை. ஆகவே நீங்கள் இங்கேயே தங்கி விடுங்களேன் என்று உண்மையான ஆர்வத்துடனும், அன்புடனும் கேட்ட அம்மக்களின் உணர்ச்சிப் பிரவாகத்தை எவ்வாறு அளவிட்டுக் கூறமுடியும்? உதாரணத்துக்கு ஒரு சில: 1. சாதி ஒழியவேண்டுமானால் நீங்கள் யாரும் உச்சிக் குடுமி, (சோட்டி) பூணூல் முதலியன வைக்கக்கூடாது என்ற பெரியார் அவர்களது கருத்தை உடனே ஏற்றுக் கொண்டு செயலில் காட்டவும் முனைந்தனர் அந்நாட்டு மக்கள். 2. உ.பி. ரிபப்ளிகன் கட்சித் தலைவரான திரு.சத்திலால்சாடி B.A., L.L.B., அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு எழுதிய நன்றியறிவிப்புக் கடிதத்தில், தங்கள் கருத்தை நாங்கள் முழுக்க முழுக்க ஏற்பதுடன், தேர்தலில் ஈடுபடுவது சம்பந்தமாகத் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கைதான் சிறந்தது என நாங்கள் நம்புகிறோம். அதையொட்டியே வர இருக்கும் ரிபப்ளிகன் கட்சிக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கட்சியின் திட்டத்தில் தேர்தல் சம்பந்தமாகக் கொள்கையைப் பொறுத்து மாறுதல் ஏற்படுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டதானது, எத்தகைய மகத்தான மாறுதல் என்று வாசகர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 3. தந்தை பெரியார் அவர்களது இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘Ramayana - a true reading’ - என்ற தலைப்பில் சுமார் 3000 பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் இராமாயணப் புரட்டை வடநாட்டினர் நல்லவண்ணம் உணர்ந்தனர். அதன் பிரதிபலிப்பு இதோ: உ.பி.சட்ட மன்றத்தில் ரிப்பப்ளிகன் கட்சி உறுப்பினர் ஒருவர் இராமாயணத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்ததோடு, சூத்திரனுக்கு ஒரு நீதியும், பார்ப்பானுக்கு ஒரு நீதியும் தரும் இத்தகைய அநீதி நூல்கள் நாட்டில் இருக்கக்கூடாது என்று முழங்கினார். 4. தந்தை பெரியார் அவர்களது இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை இந்தியில் மொழிபெயர்த்து லக்னோவில் வெளியிட்டு உள்ளனர். 5. டெல்லி பார்லிமெண்டில் சென்ற மாதம் திரு.கெயிக்குவாட் என்ற உறுப்பினர், ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியைக் கிழித்தெறிந்து வன்மையாகக் கண்டித்துப் பேசி, பார்ப்பனர்களது சாதித் திமிரின் முதுகெலும்பை முறித்தார். இவைபோன்று நேரிடையாகவும், மறைமுகமாகவும் பெரியாரது பிரசாரம் விளைத்த பயன் ஏராளம். தமிழ்நாட்டில் 40 ஆண்டுக்காலம் தந்தை பெரியார் அவர்கள் உழைத்த உழைப்பு, வடநாட்டில் 10 ஆண்டுகள் உழைத்திருந்தால், இந்திய துணைக் கண்டத்தையே தமது காலடியின் கீழ்க் கொண்ட அரும்பெரும் தலைவராக விளங்குவார் என்பதில் சிறிதும் அய்யப்பாடு இல்லை. இது மிகைப்படுத்திக் கூறுவதும் ஆகாது. தந்தை பெரியாரும் அய்க்கோர்ட் அவதூறு வழக்கும் தந்தை பெரியார் அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ சுவையான சம்பவங்களும், வருங்கால வரலாற்றுக்குத் துணை புரியும் தீரச் செயல்களும் ஏராளம் உண்டு. என்றாலும், மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று, தந்தை பெரியார் அவர்கள்மீது 1957ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அய்க்கோர்ட் அவதூறு (Contempt of Courtcase) வழக்காகும். திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டராக இருந்த - சுமார் 30 ஆண்டு பழுத்த அனுபவம் வாய்ந்த திரு. R.S. மலையப்பன், I.A.S. அவர்கள் குளித்தலை தாலுகாவில், நிலம் பயிரிடுவது (நிலச்சுவான்தார் - குடியானவர் தகராறு) சம்பந்தமாகப் பிறப்பித்த இரண்டொரு உத்தரவுகளை எதிர்த்துப் பாதிக்கப் பட்டவர்கள் சென்னை அய்க்கோர்ட்டுக்கு அப்பீல் செய்ததுடன், அவ் விசாரணையில் ஈடுபட்ட இரண்டு பார்ப்பன நீதிபதிகள், இந்தக் கலெக்டர் தமிழர் என்ற காரணத்தால் எவ்வளவு தாக்கித் தமது தீர்ப்பில் எழுதமுடியுமோ அவ்வளவும் எழுதி, உடனே இவரை அவ்வேலையைவிட்டே நீக்கி அனுப்பவேண்டியது சர்க்காரது கடமையாகும் என்ற கருத்துப்பட எழுதினார்கள். இத்தகைய ஒரு குலத்துக்கொரு நீதியான அநீதித் தீர்ப்பைக் கண்டித்து மாபெரும் கண்டனம் எழுப்பினர், திருச்சிவாழ் பொதுமக்கள். இத்தீர்ப்புக் கண்டு மனம் மகிழ்ந்த அய்யங்கார் இந்து பத்திரிகை, முன்னேற்பாடு செய்தபடி சர்க்கார் உடனே இதில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே வீட்டுக்கனுப்பி, நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும் ஓலமிட்டது. இந்தப் பச்சைப் பார்ப்பன உணர்ச்சியைக் கண்டித்து, அந்த இந்து பத்திரிகையைச் சுமார் 50,000க்கு மேற்கூடிய திருச்சி பொதுமக்கள் தீயிட்டுப் பொசுக்கினர். தற்போதைய காங்கிர பார்லிமெண்ட் உறுப்பினர் திரு.பழனியாண்டிM.P. அவர்கள்தாம் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சிகளும், தந்தை பெரியார் அவர்களது பேச்சும் விடுதலை ஏட்டில் வெளிவந்தன. அதைக்காட்டி, அது அய்க்கோர்ட்டை அவமதித்ததாகும் என்று தந்தை பெரியார் அவர்கள்மீதும், அன்னை மணியம்மையார் அவர்கள் மீதும் (ஆசிரியர், விடுதலை என்ற காரணத்தால்) அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது. இரண்டு பார்ப்பன நீதிபதிகள், ஒரு தமிழர் கலெக்டரைப் பற்றி எல்லை மீறிய கடுஞ்சொற்களடங்கிய தீர்ப்பை வெளியிட்டு இருக்கின்றனர் என்றும், மற்றொரு அய்யங்கார் அட்வகேட் ஜெனரல் (சர்க்கார் வக்கீல்) கலெக்டர் சார்பில் வாதாடவேண்டிய கடமையைத் தவறச் செய்துவிட்டாரென்றும், இன்னொரு அய்யங்கார் ஏடு - இந்து - இத் தீர்ப்பை ஆதரித்து குதூகலப் பட்டிருக்கின்றது என்றும், இது ஆரியர் - தமிழர் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, நீதியையோ, நிர்வாகத் தையோ, சட்டத்தையோ அடிப்படையாகக் கொண்ட பிரச்சனை யல்லவென்றும் தந்தை பெரியார் அவர்கள் 04.11.1956 அன்று திருச்சியில் கூடிய பொதுக்கூட்டத்தில் விளக்கமாகப் பேசினார்கள். தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்துக்கள் இதுவரை இந்தியாவிலேயே யாரும் கூறாத கருத்துக்கள். ஏன்? உலகிலேயே இதுவரை எந்தத் தலைவனும் துணிந்து கூறிவிடாத கருத்துக் களாகும். துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை என்ற குறள் கருத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தது, தந்தை பெரியார் அவர்களது அத்தகைய கண்டன முழக்கம்! தந்தை பெரியார் அவர்கள்மீதும், அன்னை மணியம்மையார் அவர்கள் மீதும் தொடரப்பட்ட அய்கோர்ட் அவதூறு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளான பிரதம நீதிபதி கனம் ஞ.ஏ. இராஜமன்னார், நீதிபதி கனம் ஹ.ளு.ஞ. அய்யர் ஐ.ஊ.ளு. ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தவுடன், நீதிபதிகள் தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, ‘எதிர் வழக்காடுகிறீர்களா? என்றும், ‘குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என்றும் கேட்டார்கள். அதற்கு தந்தை பெரியார் அவர்கள், இது சட்டக் கோர்ட்டே யொழிய நியாய கோர்ட் அல்ல; நான் இதன்படி ஒருவேளை குற்றவாளியாகலாம். ஆனால் நியாயத்தின்படி அல்ல; நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. தகுந்த அவகாசம் கொடுத்தால் ஒரு டேட்மெண்ட்டை - எனது கருத்துக்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்கிறேன் என்றார்கள். 15 நாள் அவகாசம் தரப்பட்டது. 23.04.1957ந் தேதி தந்தை பெரியார் அவர்கள் அய்க்கோர்ட்டை நோக்கிப் படுக்கை சகிதமாகப் புறப்பட்டார்கள். சிறைப் பறவையான தந்தை பெரியார் அவர்கள் தத்துவமே, இலட்சியம் என்பதை அடைய தக்க விலை - கஷ்டநஷ்டங்கள், சிறைத் தண்டனை, கொடுமை இவற்றை அனுபவிப்பதன் மூலம் கொடுத்தாக வேண்டும் என்பதுதானே! தாம் கொணர்ந்த டேட்மெண்டை, நீதிபதிகளின் அனுமதியின் பேரில் உரக்க வாசித்தார்கள். கிரவுன் சை 30 பக்கங்கள் கொண்ட அந்த டேட்மெண்டைப் படித்து முடிக்க சுமார் 1 மணிநேரம் ஆயிற்று. தந்தை பெரியார் அவர்கள் தந்த அந்த டேட்மெண்ட், தமிழர் போராட்டத்தின் சாசனம் என்றே கூறலாம். செயற்கரிய செய்துவரும் செம்மலாம் அவர்தம் 50 ஆண்டுகால உழைப்பின் குறிக்கோள் என்ன என்பதும், தமிழர் சமுதாயத்திற்கு இருக்கும் தீராத வியாதி பார்ப்பனக் கொடுமை என்பதும், நீதி அதன் காரணமாக எவ்வாறு சாய்கிறது என்பதையும், தமது தொண்டின் குறிக்கோள் இத்தகைய மாசை அகற்றவே என்பதையும் மறுக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்துரைத்தார். கண்ணை இமை காப்பதுபோல, அருமைக் குழந்தையைக் காக்க ஆவியையும் தியாகம் செய்யக் காத்திருக்கும் அன்பு அன்னையைப் போல, தமிழர் சமுதாயத்தைக் காப்பதற்கு ஒரே ஒரு காவலர் தந்தை பெரியார் அவர்கள்தாம் என்பதைத் தெளிவாக்குகிறது. அவர் தந்த அய்க்கோர்ட் டேட்மெண்ட். (முழு விவரத்திற்கு நீதி கெட்டது யாரால்? என்ற 128 பக்கங்கள் கொண்ட நூலை வாசகர்கள் படிக்கவும்.) பார்ப்பன நஞ்சு எவ்வளவு கொடியது; எத்தகைய கொல்லும் சக்தியை தன்னகத்தே கொண்டது என்பதை விளக்குவதுதான் அவரது டேட்மெண்டாகும். நன்றியறிதல் என்ற பண்பை மறந்து நிற்கும் தமிழர் சமுதாயம், இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் அதை நினைத்து நினைத்து நெக்குருகத் தான் போகிறது! சென்னை அய்க்கோர்ட் மண்டபத்தில் ஒலித்த பெரியாரின் மணிமொழிகள் இதோ: நான் ஏறக்குறைய சுமார் 50 ஆண்டுகாலமாகவே, பார்ப்பன - மேல்சாதி மக்கள் என்பவர்கள் சட்டப்படி, சாதிரத்தின்படி, மதத்தின்படி என்று தாங்கள் அடைந்திருக்கும் வசதியையும், உயர்நிலையையும், பார்ப்பனரல்லாத கீழ்மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஒழிக்கவேண்டு மென்று பாடுபட்டு வருகின்றேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இதுதான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டு இதுதான். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர், இருவர் கடிபட வேண்டியதுதான். வாயில் - நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய, வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய, புலி புல்லைத் தின்னாது. அதுபோலவாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை மனுதர்ம சாதிரத்தின்படி ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்கள் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது பார்ப்பனர் தர்மமாகும். இந்த மனு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இந்த நாட்டில் சாமி முறை, பிரிவு, கீழ்சாதி, மேல்சாதி இருந்து வருகிறது. ஆட்சியும், ஆதிக்கமும் பெரிதும் மேல்சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும், அவதியும் படுவது கீழ் சாதிக்காரர்களுக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாதிரப்படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த நாட்டில் இருந்து வருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாகவேண்டும். ஆகையால், நீங்கள் - கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை கோடுங்கள். அய்க்கோர்ட் ஆதிக்கம் பார்ப்பனர்களிடமே இருந்து வந்திருக்கிறது. கீழ்சாதிக் காரர்கள் 100க்கு 90 பேர்கள் உள்ள இந்த நாட்டில், மேல்ஜாதி ஜட்ஜூகள் ஏன் 100க்கு 50, 60, 70 பேர்கள்? கீழ்ஜாதி ஜட்ஜூகள் ஏன் 100க்கு 25 பேர்கள்? இவைகளை எல்லாம் கேட்டால், கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் குற்றமா? இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தந்தை பெரியார் அவர்களுக்கு ரூ.100 அபராதமும், அன்னை மணியம்மையார் அவர்களை எச்சரித்தும் விடுதலை செய்தனர். தமிழர் சமுதாயத்தின் பன்னெடுங்கால குறைபாடு என்ன என்பதைச் சட்டபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நல் வாய்ப்பைப் பெரியார் அவர்கள்மீது வழக்கு தொடர்ந்ததன் மூலம் அளித்த அரசாங்கத்தாரை நாம் பாராட்டத்தான் வேண்டும். இல்லை யெனில், தந்தை பெரியார் அவர்களது மணிவாசகக் கருத்துக்கள் - இலட்சியத் தொகுப்பு - ஒரு சாசனம் (document) அளவில் வருங்கால சந்ததிக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்கே கிட்டப் போகிறது? மேற்கூறிய கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதற்கு வைர நெஞ்சம் கொண்ட வைக்கம் வீரராம் நம் தமிழர் தலைவரைத் தவிர, தமிழர் சமுதாயத்தில் வேறு யார் இருக்கிறார்கள்? பதவியையும், பணத்தையும், போலிப் புகழையும் குறிக்கோளாகக் கொண்டு, சுயநலத்தையும், சுகபோக வாழ்வையுமே எண்ணிப், பொதுவாழ்க்கைப் போர்வையில் சதிராடும் பன்னாடைகள் நிறைந்துள்ள தமிழர் சமுதாயத்தில் வேறு யார் இருக்கிறார்கள்? தமிழா! சிந்தித்துப் பார்! பெரியாரின் மருந்தே பிணி போக்கும் அரிய மருந்து என்பதை இப்போதாவது உணருகிறாயா? படம் சேர்க்கவும் *** தந்தை பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள் எங்கள் நட்பு என்றும் குறையாது கவர்னர் - ஜெனரல்,திரு.சி.இராஜகோபாலாச்சாரியார் எழுபதாவது தில்லி ஆண்டு விழாவுக்கு, 22011.48 சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது. இராஜகோபாலாச்சாரி பெரியார் நீடு வாழ்க! தமிழ்ப் பேராசிரியர், உயர்திரு. மறைமலை அடிகளார் அவர்கள் சாதி, சமயப் பூசல்களை யொழித்து, எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்குமுன், சொற் பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும், என்னைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக் குதவியாய் நிற்றற்கு எவருமில்லை. பின்னர், பெரியார் திரு.ஈ.வெ. இராமசாமி அவர்கள், யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந் திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும், எழுதவுந் துவக்கிய காலந்தொட்டு, ஆரியச் சேர்க்கையால் தமிழ்மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குந், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வாராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வாராயினர். ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த் தொண்டைப் பெரிதும் பாராட்டி, அவர்கள் நீடு இனிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வழுத்துகின்றேன். மறைமலையடிகள், 05.12.1948 கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்! தமிழ்ப் பெரியார், திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள் ஈரோட்டில், சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மாநாடு (11, 12.10.1919)ல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததா; வரவேற்புத் தலைவர் திரு.ஈ.வெ.இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன். ... ... நாயக்கர், சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர்; யான் அமைச்சருள் ஒருவன். டாக்டர். வரதராஜூலு நாயுடுவும், யானும், நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும், பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன்வண்ணமாகப் பொலிந் தது. அவர் ஜமீன்தாராகவும், அவர் ஜமீன்தாரணியாகவும் காணப்பட்டனர். நாயக்கர், பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்துச் செலுத்திய பின்னர், தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கன மழையாகும்; கல் மழையாகும்; மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும். முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிர தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால், முதற் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிர, நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறிகொண்டு நாலா பக்கமும் பறந்து பறந்து உழைத்ததை, யான் நன்கு அறிவேன். நாயக்ரும், யானும் சேர்ந்து, சேர்ந்து, எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்; காடு, மலையேறியும் பணி புரிந்தோம். நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதிகொண்டு, பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சி. சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிர சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது. நாயக்கருக்கு எரியூட்டிற்று... ... நாயக்கர், சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும் என்பார். தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீங்கிப் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும் என்று யான் சொல்வேன். மீண்டும் ஒத்துழையாமை எழுமா? என்று அவர் கேட்பார். அஃது எழுந்தே தீரும்; வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும், மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராமசாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன். .. .நாயக்கர் ஜடி கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங் கண்டு பிரசாரம் செய்தார். அதனால், தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு, யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரிகையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம்; என் உடல் நலம் குன்றும் வரை, யான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டிற்கு யான் செல்வேன்; என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக் குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார்; என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம்; நட்புமுறையில் உறவாடுவோம். நாயக்கர் சுயமரியாதை, எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணுறு பங்கு ஒற்றுமை; பத்துப் பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும், எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம். இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் குடி அரசு எய்த சொல்லம்புகள், பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே... நாயக்கர், சாதி வேற்றுமையை ஒழித்தவர்; அதை நாட்டினின்றுள் களைந்தெறிய முயல்பவர். வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று. இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில், இவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்தி விதை யிட்டவர் நாயக்கரே. காங்கிர ஆட்சிக் காலத்தில், அது செடியாகி நின்றது. காங்கிர ஆட்சி, அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. அஃது இஷ்டப் படி வளரலாமே என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர், கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜ கோபாலாச்சாரியார், காங்கிர ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் நவசக்தி வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு, நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று. வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (8-3-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப் பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே, நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார்; யான் மற்றொரு திண்ணை யில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. திரு.ஈ.வெ.இராமசாமிப் என்று நண்பரைக் கேட்டேன். ‘மழையா? என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம், நாயக்கர் மனத்தின்மீது சென்றது. அவர் மனம் பொன்னா? சஞ்சல முடையதா? என்ற ஆராய்சியில் இறங்கினேன். 1942ம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆபத் திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்தசாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமை யுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோ டாருவர் பேசியது, என் காதுக்கு எட்டியது. அழுகைக்குக் காரணம் என்ன? அஞ்சாமையும், உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும். கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம், ஈரோடு செல்வேன். *** இராமசாமிப் பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ, தென்னாட்டிலும், வடநாட்டிலும், பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா.வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும். ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்ன? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் வேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும். உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை. பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கை யறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார். ... இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கை யறிவில் உதித்திடக் காண்கின்றேன். ... தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் இது பெரியாருக்குத் தான் பொருந்தும். பிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்! சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் (1928) சென்ற நாற்பதாண்டுகளாகத் திரு.ஈ.வெ.ரா. அவர்கள், இத் தென்னாட்டில் பிரம்மாண்டமான பணியாற்றி வருகின்றவர். இன்றைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஈ.வெ.ரா. அவர்களின் பெயர் சொந்தப் பெயராகவே உரிமையுடன் வழங்கப்படுகிறது. அவருடைய பெயரும், புகழும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திர தேசத்திலும், பம்பாயிலும், மத்திய மாகாணங்களிலும், பிற இடங்களிலும் பரவி இருக்கின்றன என்பதைப் பெருமிதத்தோடு நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாய சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ - அங்கெங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் பெயர் ஒளிவீசித் திகழ்கின்றது. ஒருசில ஆண்டுகளுக்குள் இத்தகைய பரந்த செல்வாக்கு அவருக்கு எப்படி ஏற்பட்டு விட்டது? அவருடைய வாழ்க்கை முறையில், நடை முறைத் திட்டத்தில், இடையறாத பெருந்தொண்டில், பேச்சில், எழுத்தில், பொதுமக்களை எல்லாம் தன்பால் ஈர்க்கத்தக்க அத்தகைய தனிச்சிறப்பு என்னதான் பொதிந்து கிடக்கின்றது? சென்ற முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் வேறு யாரும் செய்து முடிக்காத அரும்பணியை அவர் ஒருவரே ஆற்றி இருக்கின்றார் என்று எல்லாராலும் சொல்லப்படுகின்றதே, அதற்கென்ன காரணம்? பொதுநலத் தொண்டு புரிவதில் அவர் அப்படி என்ன புதை பொருளைக் கண்டுபிடித்துவிட்டார்? இதைத் தான் நாம் சிந்தித்தறியவேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே நாங்களெல்லாம் கூடத்தான், சமூக சீர்திருத்தத்தைப்பற்றிப் பேசி வந்தோம். சமூக சீர்திருத்தத்தைத் தேசீய முறையில் கையாளுவதா, அல்லது ஆராய்ச்சி முறையில் கையாளுவதா என்று நாங்கள் அக்காலத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தோம். நான் அந்த நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன்; இந்த நாட்களையும் பார்க்கிறேன். வியக்கத்தக்க பேராற்றலைப் பொது மக்களிடத்தெல்லாம் நண்பர் நாயக்கர் எழுப்பிவிட்டதைத்தான் பார்க்கிறேன். அந்தக் காலத்தையும், இந்த காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; மக்களிடத்தே புது எழுச்சியைப் பார்க்கிறேன். நண்பர் ஈ.வெ.ரா. காலத்தையே மாற்றிவிட்டாரா என்ன? அந்தக் காலத்தில் நாங்கள் படித்த கூட்டத்தாரைக் கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம். ஆனால் இராமசாமி நாயக்கரவர்கள், படித்த கூட்டத்தாரைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. என்ன ஆனாலும் சரி, சீர்திருத்தம் மட்டும் கூடவே கூடாது என்று சூள் உரைத்துவிட்ட (படித்த) கூட்டத்தாரிடம், சீர்திருத்தப் பணியாற்று வதில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது; ஆம்! படிப்பு வாசனை அறியாத பாமர மக்களிடம் தம் முழுச் சக்தியையும் அவர் செலவிட்டுப் பணியாற்றி வருகிறாரே, அதிலேதான் அவருடைய வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. பரிதாபத்திற்குரிய வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களை, அவர்களுடைய நீண்ட உறக்கத்தினின்றும் தட்டி எழுப்புவது, அவர்களுடைய உள்ளத்தில் தம் கருத்துக்கள் நேரே சென்று பதியக்கூடிய வண்ணம் பேசுவது; எழுதுவது; - இவற்றின் தொகுப்புத்தான், நண்பர் இராமசாமி நாயக்கரின் பெருந்தொண்டு. தங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை உணர வழியின்றி, எங்கும் நிறைத்த அந்தகாரத்தில் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒளி ஒன்று கிடைக்குமா என்று வாடி வருந்திக்கொண்டு ஆயிர மாயிரம் மக்கள் வதைவதை அவர் கண்டார். சோர்ந்து போன அவர்களுடைய உள்ளங்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டினார்; மங்கி மறைந்துபோன பகுத்தறி வுணர்ச்சியைத் தட்டி எழுப்பினார்; எதனையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் சிந்தனா சக்தியை அவர்களுக்கு அளித்தார். இதைவிடச் சிறந்த தொண்டு வேறு என்னதான் இருக்க முடியும்? எந்தக் கருத்தையும் பகுத்தறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து காரணகாரியத் தத்துவங்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று எண்ணிப் பார்த்து, அதன் பின்னரே ஒப்புக்கொள்ள வேண்டும் என்னும் உணர்ச்சியை, அவர் பாமர மக்களுக் கெல்லாம் ஊட்டி விட்டார். உண்மை விடுதலைக்கு. இதைவிட விரைவாக நம்மைச் செலுத்தும் பாதை வேறு இருக்க முடியுமா? சமுதாய சீர்திருத்தத் துறையில் அவர் ஆற்றிய பெரும்பணி, சிந்தனா சக்தியை மக்கள் உள்ளத்திலெல்லாம் எழுப்பிவிட்டதே. சீர்திருத்த எண்ணங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்கே இப்பணி மிகமிக இன்றியமையாதது என்பதை யார் மறுக்க முடியும்? தம்முடைய அச்சம், தயை, தாட்சண்யமற்ற - ஆணித் தரமான கண்டனங்களால், யார் யார் மனம் புண்படும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது. தாம் எடுத்துக்கூறும் கருத்துக்கள், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்துவனதாமா என்பதைத்தான் அவர் எண்ணிப் பார்ப்பார். மற்றபடி தம்முடைய தொண்டு யார் யார் உள்ளத்தில் என்னென்ன எதிரொலிகளைக் கிளப்பும் என்பதைப் பற்றி அவர் சிறிதும் எண்ணமாட்டார். சமுதாய சீர்திருத்தவாதி ஒருவருக்கு அமைந்திருக்க வேண்டிய சிறப்பான பண்பு - இந்த அஞ்சாத நெஞ்சந்தான். இது, என்னுடைய நண்பர் இராமசாமி நாயக்கர் அவர்களிடம் பூரணமாய் அமைந்திருக்கிறது. நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்து விட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந்தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணிவிட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று, முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சிபெற்றுவிட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்டு ஒவ்வொரு வரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள். *** பிரெஞ்சு தேசத்தில் ரூசோ என்பவர் (1712 - 1778) அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்ததுபோல், நம் நாட்டின் சுயமரியாதையைக் காக்க உழைக்கும் நமது நாயக்கர், தமிழ்நாட்டின் ரூசோ ஆவார் (1926). சிறந்த மனிதர்களில் ஒருவர்! சர். ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் (1939) இராமசாமிப் பெரியார் அவர்களுடைய பொதுநலத் தொண்டுகள் பலவற்றில், நான் நெருங்கிக் கலந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அவர்களோடு கால் நூற்றாண்டுக்குமேல் அந்நியோன்யமாகப் பழகக்கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் இன்று பொது வாழ்வில் உள்ள மிக முக்கியமான பிரபலதர்களில் பெரியார் அவர்களும் ஒருவர் என்பதைத் தயங்காமல் கூறுவேன். சென்ற 25 ஆண்டுகளாக இந்நாட்டின் பொதுவாழ்வில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களில் மிகப் பேர்பெற்ற தலைவர்கள் அனேகருடன் நெருங்கிப் பழகியுள்ள காரணத்தைக் கொண்டே, நான் மேற்கண்ட கருத்தை அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன். செய்கையில் உண்மை - நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம் - சிறிதும் தன்னலமென்பதே இல்லாத வாழ்க்கை - இவைகளே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக்கூடியன வென்றால், உண்மையிலேயே பெரியார், நம்முடைய மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராவார். நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகவே தம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதிலுள்ள அவரது ஆர்வமும், இந்திய சமுதாயத்திலுள்ள கேடுகளை ஒழிப்பதற்காக அவைகளுக் கெதிராய்ச் செய்து வரும் பிரசார முறைகளும், அவற்றின்மீது அவருக்குள்ள நியாயமான கோபாவேசமும், இக்காரணங்களுக்காக அவர் செய்துள்ள மகத்தான தியாகங்களும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் பெரியாருக்கு ஒரு நிரந்தரமான இடங்கிடைக்குமாறு செய்துவிட்டன. நமது நாட்டைப் போன்ற பெரும் பரப்பான ஒருநாட்டில், குறிப்பிட்ட அளவான துறைகளில், உண்மையான தேசத் தொண்டு செய்வதற்கு இடமிருக்கிறது. பெரியார் அவர்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமது வேலையைச் செய்வதென்று நிர்ணயித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இக்குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் செய்யும் தொண்டானது அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகிய பொது வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மிகமிகத் தீவிரமான முறையென்றே சொல்ல வேண்டும். தாம் மேற்போட்டுக்கொண்ட இவ்வேலையினின்றும், அகில இந்தியத் தலைமையென்னும் பேராசைகளால் அவர் எக்காலத்திலும் இழுக்கப்பட்டதேயில்லை. தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர்! ரெவரண்ட் ஜான் பிட்மன் (1928) சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்து வரும் இராமசாமி நாயக்கர் அவர்கள், தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர் ஆவார்! கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்! முன்னாள் முதல் மந்திரி, பனகல் அரசர், சர். பி. ராமராய நிங்கவாரு அவர்கள் (1928) மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூக சீர்திருத்தக் காரராவார். அவர், சமூக சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில், அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையான தாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய, இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார். தோழர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் தெரிவித்ததுபோல், சமூக சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன் பெறாமற் போன வேலையைச் சில வருஷத்தில் அவர் பயனளிக்கு மாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத்தை விடச் சமூக சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை அவரே முதலில் கண்டவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், சமுதாய சீர்திருத்தத் துறையில் பெரும்பணி ஆற்றியாக வேண்டு மென்பது அவருடைய முடிந்த முடிவு. வ.உ.சி. கடிதம் ஓர் உண்மையான சிங்கம்! முன்னாள் கவர்னர், சர்.கே.வி.ரெட்டிநாயுடு அவர்கள் (1928) தமக்கு ஒன்றை உரியதாக்கிக்கொண்டு, அதையே தம் முழு வேலையாகவுங்கொண்டு, நடந்த 20 அல்லது 25 ஆண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு, இரண்டு அல்லது மூன்று விசேஷ குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்களமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும், நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டு பிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக் கொண்டு வருவது என்பது. தோழர் இராமசாமி நாயக்கர் அவர்களின் தைரியத்தைப் பற்றி அதிகம் விவரிக்கவேண்டியதில்லை. அவர் ஓர் உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார்! வாழ்க்கையில் பயமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய பயமின்மை இருந்தாலொழிய, இத்தகைய (சமுதாய சீர்திருத்தக்) காரியங்களில் யாரும் வேலை செய்ய முடியாது. அவசியம் நேர்ந்தால், அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தை உபயோகிப்பதுபோல், தோழர் நாயக்கர் தமது பேனாவைப் பயமின்றி எங்கும் செலுத்துகிறவர். பெரிய தியாகி! கப்பலோட்டிய தமிழர்,வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் (1928) திரு.இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப்பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது? திரு.நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்துவந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிர) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்துபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப் பெறும் சுயமரியாதை இயக்கத் தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமா யிருப்பதால், நானும் என்னலான உதவியை அவ் வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ் நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும். எங்களால் மறக்க முடியாதவர்! ராவ்சாகிப் சூ.சிவராஜ் B.A., B.L., M.L.C. அவர்கள் (1928) தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு.நாயக்கர் அவர்களை, எங்கள் சமூகத்தாரால் என்றும் மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை, அளவிடற் பாலது அன்று. அவர் ஒரு காலத்தில் தேசீய போராட்டத்தில் அமிதவாதக் கொள்கையுடையவராக இருந்தார். சமூக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவார். ஒரு கொள்கையாகவே தோன்றுவார்! முன்னாள் அமைச்சர்திரு.எ.இராமநாதன் M.A., B.L., (1930) வைக்கம் வீரர் ஒரு மனிதரல்லர்; அவர் எனக்கு ஒரு மனிதராக தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். உலகத்தில் எந்தெந்தத் தேசங்கள் முன்னேறியிருக் கின்றனவோ, அந்தந்தத் தேசங்களில் இவரது கொள்கை நிலவக் காணலாம், மற்றும், தீவிரமாக எந்த மக்கள் சுதந்திரப் போராட்டம் செய்கின்றனரோ, அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம். சரியென்று பட்டதை வலியுறுத்துபவர்! முன்னாள் முதன்மந்திரி திரு.எ.இராமநாதன் M.A., B.L., (1928) நான் காங்கிரசிலிருந்த காலம் முதற்கொண்டு நாயக்கர் அவர்களை அறிவேன். அவர் - மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை கொஞ்சமும் மதியாது, தமக்குச் சரியென்று பட்டதை வலியுறுத்திவந்த ஒரு காரணத் தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன். அத்தகைய ஒரு சிறந்த குணமே, இப்போது நம் மக்களின் முற்போக்குக் அவசியமாயிருக்கிறது. நம்மால் கற்பிக்கப்பட்ட - மனிதனுக்கு மனிதன் உள்ள வேற்றுமையே, நமது தேசத்தை நாம் ஆள்வதற்குத் தகுதியற்றவர் களாகச் செய்திருக்கிறது... அந்த அர்த்தத்தோடுதான், இன்று இராமசாமி நாயக்கர் அவர்கள், பிராமணரல்லாதார் இயக்கத்தின் தலைவராய் விளங்குகிறார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சத்தை அவர் அறிந்துவிட்டார். காலஞ்சென்ற எனது நண்பர் நாயர் பெருமான் இவ்வியக்கத்தைத் துவக்கும்போது, சமூக சீர்திருத் தத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அத்தகைய கொள்கையே, தோழர் நாயக்கர் அவர்களும் கொண்டிருந்தார். *** (1929) எனது நண்பர் திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த (சுயமரியாதை) இயக்கம், நன்றாக வேரூன்றி அசைக்கமுடியாத நிலையோடு நிற்பதல்லாமல், அது பெரும் பான்மையான மக்களைத் தன்னுள் கவர்ந்துகொண்டு வருவதைக் காணக்காண, நான் அளவிட முடியாத மகிழ்ச்சி யடைகிறேன். நாயக்கர் சேவையை நாடு மறவாது! டாக்டர். பி.வரதராஜூலு நாயுடு அவர்கள் (1934) ... ஸ்ரீநாயக்கர் தமிழ்த் தேசத்திற்குச் செய்துள்ள ஊழியத்தை, ஒருவரும் மறந்திருக்க முடியாது. பெரும் தனவந்தராகவும், ஈரோட்டு முனிசிபல் சேர்மன், தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் ஆகிய பதவிகளையும் வகித்து உல்லாச மாயிருந்து ஸ்ரீராமசாமி நாயக்கர், 1915ம் வருடம் முதற்கொண்டு தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார். கோயமுத்தூர் ஜில்லா மாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மாநாட்டிற்கும் 1915, 1917 ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாவரும் அறிவார்கள். பிறகு காங்கிரசில் சேர்ந்து, ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றியதை, நாம் எடுத்துக்காட்டவேண்டியதே இல்லை. 1924ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிர கமிட்டிக்குத் தலைவ ராகவும், அகிய இந்திய காங்கிர கமிட்டியில் மெம்பராகவும் இருந்து, நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க, வைக்கத்தில் சத்தியாகிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர், நாயக்கர் ஒருவரேயாவர். அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு, கோயமுத்தூர் சிறையில் 1922ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி, (ஸ்ரீவரத ராஜூலு நாயுடு உட்பட) எல்லாத் தேசியவாதிகளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்ததும், சுயமரியாதை இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்து விஷயமேயாகும். அய்ரோப்பாவில் யாத்திரை செய்து ரஷியாவைத் தரிசித்ததன் பயனாகப், பொது உடைமைக் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார். அவருக்கும் நமக்கும் மாறுபட்ட கருத்துக்கள் என்னவிருப்பினும், தமக்கு நியாய மென்று பட்ட கருத்துக்களை அஞ்சாது வெளியிடுவதில் ஸ்ரீநாயக்கர் முதல் தானம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய - சமூக - அரசியல் துறைகளில் ஸ்ரீநாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும், அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத் தேசத்தினர் ஒருநாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும் ... (தமிழ்நாடு தலையங்கம், 1933) *** நாயக்கர் அவர்கள் நாட்டிற்குப் புரிந்த சேவையை நான் மறுக்க முடியாது. நானும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரும், நாயக்கரும் ஒரே சமயத்தில் இரவும் பகலும் இடைவிடாமல் ஒன்றித்துப் பிரசாரம் புரிந்து வந்திருக்கிறோம். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள், மிகப் பரந்த நோக்கமுடைய உலக அபிமான இயக்கத்தை (International Movement) ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். உண்மைக் களஞ்சியம்! சர். ஏ.டி. பன்னீர்செல்வம், பார் - அட்லா (1938) நமது மாபெரும் தலைவர் பெரியாருக்குச் சத்தியாக்கிரகம், அகிம்சை, சாகும்வரை உண்ணாவிரதம் முதலிய வித்தைகளில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர் தமக்குச் சரியெனப் பட்டதை, எவருடைய தயவு தாட்சணியத்திற்கும் கட்டுப்படாது. பட்டவர்த் தனமாகச் சொல்லுவார். அது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அதைப் பற்றி அவருக்குக் கவலையே கிடையாது. தம் கருத்தைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுவார் களோ என்ற பயம் அவருக்கு இருப்பதே இல்லை. நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப் பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக் காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும்வரை உண்ணாவிரத மிருப்ப தில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிர காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவதுபோல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்! முதலமைச்சராயிருக்க உரிமையுடையவர்! திருவாங்கூர் முன்னாள் திவான்,சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள் (1945) ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப் படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ் நாட்டைத் தனியாக பிரித்துவிட வேண்டுமென்பதைப் பகிங்கரமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜடி மாநாட்டில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. பாக்கிதானைப் போலவே தமிழ்நாடும் ஒரு சுதந்திர அரசாங்கத்தைக் கொண்ட தனி நாடாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. இன்றைய நிலையை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால், பாகிதானத்தில் முதல் அமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு. பெரியார் இராமசாமி! முன்னாள் அமைச்சர், அட்வகேட், S. முத்தையா முதலியார் அவர்கள் பெரியார் இராமசாமிக்குக் கருத்துரை தர, திருவாளர் சிவப்பிரகாசத்தின் வேண்டுகோளை உவப்புடன் ஏற்கிறேன். மகாத்மா வெனுஞ் சொல் காந்தியாருக்கே சிறப்புப் பெயராக உரித்தாய்விட்டது போல், பெரியார் எனும் சொல் ஈ.வெ.ரா. வுக்கே இந்நாட்டில் உரித்தாய்விட்டது. பத்தாண்டு களுக்குமுன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. சிறை சென்று, காங்கிரசு கவர்ன்மெண்டின் காருண்யத்தினால் பெல்லாரி ஜெயிலில் வதியும் பொழுது, கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை மகாத்மாவென்று அழைப்பதுபோல், தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான பெரியார் என்றே அழைக்க வேணும்; அச்சொல் அவருக்கே தனிச் சொல்லாக வழங்கவேணுமென்று சொன்னது, இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்ததுபற்றி மகிழ்ச்சி. அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது, மேலும் மகிழ்ச்சி. இவ்விருவர்களுக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொதுநல ஊழியத்தில் ஈடுபட்டார். அப்படியே பெரியாரும், தம் பெரிய லாபகரமான வியாபாரத்தையும், பல பொது தாபனங் களில், தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார். அன்னிய ஆங்கிலேய ஆட்சியை ஒழிக்க, இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளார்கள். மகாத்மாவின் மனைவி ஸ்ரீமதி கதூரியம்மையாரும், மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி ஸ்ரீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியாரும் கதர் நூல் நூற்றார். பெரியார் நூலும் நூற்றார்; மூட்டை தலையில் தாங்கி கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தையும், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியார் அக்கொள்கையை ஏற்று, அவ்விதமே நடக்க அறிவுரை செய்கிறார். இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்லுகிறேன். மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக்கொண்டு மன்னரும் மகிழக்கூடிய சுகவாழ்வு வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில், நிமிஷம் தவறாமல் நானம், உணவு, பானம், நடை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப் பால் என்றால், ஆடே உடன் பிரயாணம் செய்யவேண்டும். பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலுமுண்டு. பணி விடையாட்கள் பல பேர். டாக்டர் எப்பொழுதும் கூடவே - பிரயாண மென்றால் தகுந்து முன்னேற்பாடு, பரிவாரங்கள், வேலையாட்கள், காரியதரிசிகள் உட்பட எவரும். 3வது வகுப்பு வண்டி பிரயாண மென்றால் வண்டி முழுமையும்; சில சமயங்களில் தனி இரயில்கள்கூட. சென்ற இடங்களிலெல்லாம் அரண்மனையை யொத்த விடுதிகள். பங்கி காலனியானாலும் முன்னதாகவே லட்ச ரூபாய் செலவில் வசதிகள் செய்தபிறகு! நடக்கும் பொழுது கைலாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்டவிருந்து பழகுபவர்கள் சொல்வது பலவிருக்கலாம். பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக்கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. நானம் 4, 5 நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போகவேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால்கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3வது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காத கூட்டம். தப்பித் தவறி மேல் வகுப்புக்குப் போனால், அங்கும், அப் பொழுதும் அதே அவதைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக்கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர், இருவர் - இவ்வளவு தான். சென்ற விடங்களில் அனேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை, சௌகரிய மிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம்; உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுதுதான், தன்னுடம்பும் தசை, நரம்புகளா லானதுதான் என்ற எண்ணமுண்டாகியது. காங்கிரசில் முழுமையும் ஈடுபட்டு நடந்துவரும் பொழுது. காஞ்சீபுரம் மாநாட்டில் இந்த தாபனத்தினால் தமிழருக்கு நலன் கிடைக்காது; திராவிடனுக்குத் தாழ்மையும், தீமையுந்தான் உண்டாகுமென்று இவரும், திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் கண்டு கொண்டார்கள். பெரியார் அதைவிட்டு அப்பொழுதே விலகினார். திரு.வி.க. - திருத்தலாமென்ற எண்ணங்கொண்டு அங்கே இருந்தார். அவருக்கும், பின்பு நினைவெல்லாம் கனவாகி விட்டது. இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். திராவிடதான் பிரிவினையிலும், இந்தியெதிர்ப்பிலும் இருவரும் ஒத்துழைக்கிறார்கள். வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கை அதிகரிக்கிறது. தென்னாடு தனிநாடாகி, தமிழும், தமிழனும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொரு வரும் உணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்புரிய வேண்டும். (20.11.1948) *** நம் மதிப்பிற்குரிய தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தலைமையேற்று, உயிர் நாடியாயிருந்து வேலை செய்துவரும் திராவிடர் கழகத்துக்குத் திராவிட நாட்டுப் பிரிவினையையே அதன் முக்கியக் கொள்கையாக அமைத்துவிட்டார். அதற்குப் பெருத்த ஆதரவு கிடைத்துவிட்டதென்பதோடு, அதன் கொள்கையும் நன்கு பரவி, பொதுமக்களுடையவும், இதர அரசியல் தாபனங் களைச் சேர்ந்தவர்களுடையவும் ஒருமித்த ஆமோதிப்பைப் பெற்றுவிட்டது, மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். *** சுதந்திரத் திராவிடத் தனியரசுக்குப் பெரியார் இராமசாமி யவர்கள், பெரும் போராட்டம் துவக்கி நடத்தி வருகிறார்கள். பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு நிற்போர்கூட, இந்த நிலையில் வினயமாக ஆலோசித்து சுதந்திரத் திராவிடத் தனியரசு பெற அவருடன் ஒத்துழைக்க முன்வர வேண்டியது அவசியம். (1947) நீண்ட காலம் வாழ்வாராக! முன்னாள் உயர்மன்ற நீதிபதி மலையாளம், ஆ.கோவிந்தன் B.A., B.L., (1929) உலகத்திலுள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்த காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீநாராயண குருசாமி அவர்களால், இவ் வுண்மை மலையாளம் என வழங்கப்படும் நாட்டில் நன்கு உணரப்பட்டது. மக்கள் அனைவரும் சகோதரர் களென்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்த திரு.கே.அய்யப்பன் என்னும் பிறர்க்கென வாழும் வாலிபர், இவ்வுபதேசத்தைப் பரப்பி வருகின்றார். மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு.ஈ.வே.இராமசாமியார், மற்றெவரையும்விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து, ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன்வந்துள்ளனர். திரு.இராமசாமியார், பலசாலி என்பது உங்கட்குத் தெரியும். சுதந்திரத்திற்காக நன்றாகப் போராடுவார். வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவருடன் முதன் முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற்படும் படியான முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டுத் திரு.இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். ஏனைய நடவடிக்கை களையும் அவர் நடத்தி வைத்தார். இவர் அழுத்தமான காங்கிர வாதியாகவும், ஒத்துழையாமையி லீடுபட்டவராகவும் இருந்தார். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவையைப்பற்றி, யாங்கள் அவ்வளவு தெரிந்தவர்களல்ல. அவரது மனம், இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத் துறையிலீடு பட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைபெற்ற எ.என்.டி.பி. மாநாட்டில் 10,000க்கு அதிகப்பட்ட மக்கட்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப்பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிகக் கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்ததானது. இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும். நல்ல காலத்திலேயே இவர் இங்குச் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். செல்வாக்குடையவர்கள் இவரைப் பின்பற்று கின்றன ரென்பதை, யான் பார்க்கின்றேன்... இந்நாட்டிலே களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற்ற மடையச் சமயமும், வசதியுமளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாக விருக்கும் தாழ்ந்த நிலைமை யிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும் திரு.இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். முன்னரே அவ்வியக்கம் பரவி, இம் மாகாணத்தின் பல பாகங்களில் வேரூன்றி விட்டது. இப்போதிருக்கும் பொதுஜன இயக்கமெதையும்விட, இவ்வியக்கம் நன்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களைப் பிளவு படுத்தும் தடைகளையொழித்துச் சித்தி பெறுமென்பதும், மக்களை அய்க்கியப்படுத்துமென்பதும் திண்ணம். இயக்கத்தைச் சித்தியான முடிவுக்குக் கொணரப் பணியாற்றவும், ஒற்றுமைப்பட்ட இந்திய மக்களின் உன்னத நிலையைக் கண்டு களிக்கவும், திரு.ராமசாமியார் நீண்ட காலம் உடல் நலத்துடனும், வன்மையுடனும் வாழ்வாராக! எதிர்ப்பைக் கண்டு மகிழ்பவர்! சிங்கப்பூர், பாரிடர்,கே.பி.கேசவமேனன் அவர்கள் (1939) நானும், தோழர் நாயக்கரும் ஒரே அரசியல் கட்சியில் சேர்ந்து, ஒரே மாதிரி கொள்கைகளைப் பின்பற்றி, ஒரே மாதிரி போராட்டங்களில் ஈடுபட்டு, ஒரே துறையில் பங்கெடுத்துக் கொண்டு, ஒரே விதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த காலமும் ஒன்றிருந்தது. அதாவது, இந்திய சரித்திரத்திலேயே முன்பு எப்பொழுதும் இருந்திராத அத்துணை பலத்துடனும், வேகத்துடனும் தேசீயமெனும் பேரலையானது, இந்தியா வெங்கணும் திரண்டு எழுந்த காலம் 15 ஆண்டுகளுக்கு முன்பாகும். இந்திய அரசியல் நிலைமையைச் சிக்கற்படுத்திப் பல காரியங்கள் அதிலிருந்து நடந்து வந்திருக்கின்றன. காங்கிரசுடன் முற்றிலுமே நேச பாவத்துடனில்லாத ஒரு பிரசாரத்தை நடத்திவரும் இக்கட்சிகளில் ஒன்றின் தாபகரும், தலைவருமாய் இருந்து, தோழர் நாயக்கர் சென்ற 20 வருஷ காலமாகத் தமது பொதுவாழ்விற்குச் சிறப்பளித்த அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும், சக்தியுடனும் இன்றும் வேலை செய்து வருகிறார். தோழர் நாயக்கர் பெயருடன் தொடர்புகொண்டுள்ள கட்சியின் கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும்பற்றி ஆதரித்தோ அல்லது குறைவுபடுத்தியோ கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. அவருடைய அபிப்பிராயங்களுடன் நான் பூரண உடன்பாடு கொள்ளுவ தென்பது அசாத்தியமாயிருக் கலாம். நாங்கள் துரதிர்ஷ்டவசமாக, தற்சமயம் வேறுபாடான - எதிரியாயுங்கூட உள்ள அரசியல் கோஷ்டியைச் சேர்ந்தவர்களாய் இருந்து வருகிறோம். ஆனால், நான் தற்சமயம் ஏற்றிருக்கும் (பெரியாரின் 61வது ஆண்டு விழாக் கூட்டத்திற்குத் தலைமை) தானத்தை ஏற்காதபடி அது என்னைத் தடை செய்யவில்லை. பின்வாங்காத வீரத்தையும், கொள்கைகளில் வழுவாத நம்பிக்கையையும், தாபன சம்பந்தமான ஓர் அபூர்வ நிபுணத்து வத்தையும், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நன்மையில் ஓயாதொழியாது நாட்டத்தையும் கொண்டுள்ள ஒருவருக்கும், அவரது குணத்திற்கும் நான் எனது தாழ்மையான பாராட்டுதலைச் செலுத்துகிறேன். இத்தகைய குணாகுணங்களே தென்னிந்தியாவில் அவரது பொதுவாழ்விற்கு ஒரு பெரிய செல்வாக்கான தானத்தை அளித்துள்ளது. 20 வருஷ காலத்திற்கதிகமாக எனக்குத் தோழர் இராமசாமி நாயக்கரைத் தெரியும். அரசியல் தோழர் என்று மாத்திரமல்ல, ஓர் அந்தரங்க நண்பர் என்ற முறையிலும் நான் அவரை அறிவேன். இத்தகைய நீண்ட காலத்திலும் - 20 வருஷத்திற்கதிகமானதொரு காலத்திற்குமுன், அவரை நான் ஈரோடு இரயில்வே டேஷனில் முதன்முதலாகச் சந்தித்ததையும் நான் நினைவிற்குக்கொண்டு வரக்கூடும். அடர்ந்து சுருண்டு அடங்காது நிற்கும் அவரது கூந்தலும், தடித்துப் பருத்த மீசையும், தன்னம்பிக்கை நிரம்பித் ததும்பும் ஒரு வதனமுங் கொண்ட தோழர் நாயக்கர் என்னை வரவேற்க வந்தார். இன்று அவர் பொதுவாழ்வில் விளங்குவது போல், அன்று அத்துணை பிரதான புருடராய் இல்லை. அன்று நாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கொண்ட பரிச்சயமானது, இன்று பழுத்து கனிந்து நேசமாகிவிட்டது. அந்நேசமானது அரசியலில் எங்களுக்குள்ள வேற்றுமைகளையும் பொருட்படுத்தாது, இன்றுங்கூட உறுதியுடன் இருந்து வருகிறது. நான் இந்தியாவில் இருந்தபோது, நானும் அவரும் ஈடுபட்டிருந்த சில பொதுநல அலுவல்களை முன்னிட்டு அவருடன் நெருங்கிய நேசத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. நான் இந்தியாவைவிட்டுப் புறப்பட்டு இந்நாட்டிற்கு வந்த பிறகு, அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டமாருதங்களையும், பெருஞ்சுழல்களையும் வெகு ஊக்கத்துடன் கவனித்து வருகிறேன். வெகு ஆச்சரியத்துடனும் கூட கவனித்து வருகிறேன். உணர்ச்சி ததும்ப ஒரு வேகத்தை யூட்டும் மாபெருந் தலைவராக இன்று அவர் விளங்குகிறார். ஆயிரக்கணக்கானோர், அவரையும் அவரது கட்சியையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால் இப்பொழுது ஒருவரும் அவரை நிராகரித்துவிட முடியாது. தென்னிந்தியாவின் அரசியல் அரங்கத்தில், பிரதான நடிகர்களில் ஒருவராய், அவரது பொது வாழ்வானது தெளிவும், அங்கீகாரமும் பெற்ற ஒரு தானத்தை இன்று பெற்று விளங்குகிறது. இத்தகைய அவரது அரும்பெரும் சிறப்பின் ரகசியம் என்ன? இத்தகைய விடாப்பிடியான ஒரு சக்தி பொருந்திய தன்மையை அவர் எப்படி அடைய முடிந்தது? அவர் ஓர் இணையற்ற தலைவராய் எப்படித் தம்மைத்தாமே செய்து கொண்டார்? இன்று அரசியலில் குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒரு சக்தியுள்ள தோழர் நாயக்கராக அவரைச் செய்த அபூர்வ குணங்களின் சேர்க்கையைப் பற்றி எனக்கு ஏற்பட்ட இக்குறுகிய கால அளவிற்குள் நான் எடுத்துக் கூறுவது அசாத்தியமாகும். ஆனால், ஒரு பொதுஜன சேவையாளர் என்ற முறையில், தோழர் இராமசாமி நாயக்கரின் சிறப்பு வாய்ந்த அருங்குணங்கள் என எனக்குத் தோன்றுவன வற்றை, நான் உங்களுக்கு ஒரு நிமிஷத்தில் எடுத்துக் கூறி விடமுடியும். தமது கொள்கையில் அசைக்கமுடியா ஒரு நம்பிக்கை யில்லாமல் ஒருவரும் ஒரு கட்சியை நடத்திச் செல்ல முடியாது. மனித சமாஜத்தைச் சீர்திருத்தப் பிரயத்தனப்படுவோர்கள், தாங்கள் தேடுவது தங்களது நாட்டார்களின் நன்மைக்கும், இன்பத்திற்கும், அவசியமும், துணைபுரியக் கூடியவையுமாகும் என்பதை உணரவேண்டும். தோழர் நாயக்கருக்கு இந்த உணர்ச்சி ஏராளம் உண்டு. நீங்கள் அவர் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால், அவர் முன்னிலையில் நீங்கள் இருக்கும்போது, தமது கொள்கையின் நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை மாத்திரம் உங்களால் மறுக்க முடியாது. அவரது சேவைகள் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அவரது திருத்தூதின் பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கையும் இதுதான். அவரது சொந்த வீரத்தின் துணை ஆதரவில்லா மலிருந்தால், இதுமாத்திரம் அவரை வெகுதூரம் எடுத்துச் சென்றிருக்க முடியாது. தாம், சிரமமும், விரும்பத்தக்கதுமெனக் கருதிய கொள்கை களுக்காக, ஒருமுறைக்கதிகமாகவே சிறைக் கோட்டம் நண்ணும்படி அவரைச் செய்ததும் அந்த வீரந்தான். தமது பொதுமக்களின் இரட்சண்யத்திற்காக வேறுபாடான மற்றொரு வழியில் வேலை செய்யவேண்டியிருக்கிறது என அவர் கண்டபொழுது பழைய தொடர்புகளையெல்லாம் உதறித்தள்ளி, ஒரு புதுக்கட்சியைச் சிருஷ்டிக்கச் செய்ததும் அந்த வீரந்தான். ஒரு கோழை மனிதன், ஒரு பொழுதும் தலைவனாக விளங்க முடியாது. தனது ராணுவத்தை வெற்றிகரமாய் நடத்திச் செல்வோன், பயமற்ற ஒரு தளகர்த்தன்தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமானால், தோழர் நாயக்கர் சண்டையைக் கண்டு பயப்படுபவரல்ல என்பதை, ஒருவர் அவருடைய முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அவரது வெற்றிக்கு மிகுதியும் துணைபுரிந்த மற்றொரு குணா குணங்களும் அவரிடம் உண்டு. அதாவது, அடக்கி ஒடுக்க முடியாதபடி அவருக்கு வாய்த்துள்ள சர்வானுகூல மனோ பாவந்தான். இது ஒரு தலைவருக்குள்ள மகாபிரதானமான குணமாகும். தோழர் நாயக்கர், மனச்சோர்வோ, அல்லது அதைரியமோ அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பது வெகு அருமை. அவர் இன்பம் ததும்ப விளங்குபவர். உற்சாகத்துடன் விளங்குபவர். நம்பிக்கை ஜோதியுடன் விளங்குபவர். தமது சிஷ்யர்களிடையில் உற்சாகத்தை எழுப்பிவிடக் கூடியவர். அதிக எதிர்ப்பு இருப்பினும், அவர்கள் செயல்களில் இறங்கும் படித்தூண்டக்கூடியவர். இதற்குத் துணைபுரிவது, தமிழ்மொழிமீது அவர் செலுத்தும் ஆச்சரியகரமான ஆக்கினையாகும். தமது நாவன்மையினால் அம்மொழிமீது அவர் ஆக்கினை செலுத்துவதைப் போன்றே. தமது பேனாவினாலும், அதன்மீது தமது அதிகாரத்தைச் செலுத்தி வருகிறார். தமக்கு எதிர்ப்பேற்பட்டால், அவர் மகிழ்வுறுகிறார். தமக்கு எதிரிகளுக்கு ஆத்திரமூளும்படிச் செய்ய, அவருக்கு விபரீதமான சக்தியொன்று முண்டு. ஒரு பூரண குணம்வாய்ந்த பிரசாரகருக்குரிய ஒவ்வொரு சாத்தியமான ஆயுதத்தையும் அவர் பிரயோகிப்பார். வேடிக்கை, வினோதம், ஏளனம், வாக்குச் சாதுர்யம் அனைத்தும் அவருடைய பேச்சில் நிரம்பியுள்ளன. விஷயத்திற்குத் தகுந்த சொந்தமான கற்பனை அலங்காரங்களால், அவரது விரோதியை முறியடித்து விரட்டிவிடும் சக்தியும் அவரிடமுண்டு. சண்டையில் தோற்று விட்டாலுங்கூட உடனே எழுந்து வெற்றியினது பக்கமே இருப்பதாக வெற்றிக்குறி தோன்றும் முகத்துடன் தோழர் நாயக்கர் தமது எதிரியை எதிர்ப்பார். அவரது குணங்களிலெல்லாம் மகா பெரியதும், கண்ணியம் வாய்ந்ததும் என நான் கருதும் ஒன்றை, உங்களுக்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதாவது, அவரது அந்தரங்க சத்தியும், தன்னல மறுப்புமாகும். மற்றத்தேசங்களில் இருப்பதைப்போல், நாமும் நமது தேசத்தில் பற்பல நோக்கங்களுடன் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களைப் பெற்றிருக்கிறோம். தங்களது சுய விளம்பரத்தில் அளவு கடந்த மோகமுள்ளதால், சிலர் பொதுவாழ்வில் இறங்குகின்றனர். அல்லது அதிகாரத்திலுள்ள கண்ணியமற்ற ஆர்வத்தினாலும் சிலர் ஈடுபடுகின்றனர். சிலர் பொதுவாழ்வில் ஈடுபட்டிருத்தலின்றித் தனித்திருக்க முடியாததால், அதில் ஈடுபடுகின்றனர். அவர்களது உணர்ச்சியானது, அவர்களை அப்படிச் சேரும்படிச் செய்கிறது. அவர்களது மனோ வேகமானது. அதில் இழுக்கிறது. மனித சமூகத்தின் ஒவ்வொரு தவறும், நீதியும் அவர்களை நேரிலேயே தூண்டி, செய்கையில் ஈடுபடும்படிச் செய்கிறது. எங்குப் பார்த்தாலும் கஷ்டங்களையும் ஆக்கிரமிப்பு களையும் காணும் அவர்களால், செயலற்றுக் கிடக்கவோ, சோம்பித் திரியவோ அசாத்தியமாகி விடுகிறது. உலகமே தனது விடுதலைக்காகவும், அபிவிருத்திக்காகவும் இத்தகைய மனிதர் களிடம் கடன்பட்டிருக்கிறது. தன்னலமற்ற பணியாளர்களாகிய இக்கண்ணியமான கூட்டத்தையே தோழர் நாயக்கரும் சேர்ந்தவராவார். அதிகாரஞ் செலுத்த அவரிடம் ஒன்றுமில்லை. ஆனால், பணிசெய்து கிடக்கவே அவர் விரும்பியுள்ளார். தோழர் இராமசாமி நாயக்கரின் அருங்குணங்களைப் பற்றிய பூரணமானதொரு ஜாபிதாவை, உங்களுக்குக் கொடுத்து விட்டதாக நான் பாவனை காட்டவில்லை. இப்பொழுது நான் கூறியதெல்லாம் சில குறிப்புகள்தாம். விவரமானவையல்ல. தோழர் நாயக்கருடைய வாழ்க்கையில் வீரம், சுயேச்சை, தன்னலமற்ற வேலை ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகள் நிறைந்திருக்கின்றன. தீமைக்குத் தலை குனியாதவர்! பினாங்கு தேசநேசன் ஆசிரியர், அ.ந.பு. ஹமீதுக் களஞ்சியம் அவர்கள் (1939) தமிழர்களிலே, நம் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைத் தெரியாதார் இல்லை எனவே கூறிவிடலாம். தியாகத்தின் அருட்கனியாய், உழைப்புக்கு ஓர் உதாரணமாய், மக்கட்குச் சுயநலமோ, ஆடம்பரமோ அற்ற பணி புரிதலையே தம் வாழ்க்கை யின் லட்சியமாய்க் கொண்டு உழைத்துவரும் ஈரோட்டு இராமசாமிப் பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை, எவ்வித வித்தியாசமுமின்றிக் கொண்டாடி மகிழ்வது மிகவும் பொருத்த மானது - அத்யாவசியமானதுகூட என்பதே எனது அபிப்பிராயம். பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், இம்மலேயாவுக்கு விஜயம் செய்திருக்கிறாரென்பதை உங்களில் அநேகர் மறந்திருக்க மாட்டீர்கள். சமத்துவ வாழ்வு, உலகில் பரிணமித்துப் பெருகி வளர வேண்டும் என்ற நோக்கத்தைச் சமாதானத்திலிறுத்தி உழைத்துவரும் அன்பர்களுக்கு. அப்பெரியார் இந்நாட்டுக்கு விஜயம் செய்த அந்நன்னாள், ஒரு சுபதினமாக என்றும் ஞாபகத் திலிருந்து வரும். பெரியாரின் இந்நாட்டு விஜயம் இங்குள்ள தமிழர்களிடையே ஒரு புதிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், சொல்ல முடியாத அளவு விழிப்பையும் ஏற்படுத்திற்று. இங்குள்ள தமிழர்கள், தங்களது சக்தியை உணர்ந்தனர்; கடமையை அறிந்தனர். தங்கள் சமூக வாழ்வில் அட்டைபோல் கவ்விப் பிடித்துக் கொண்டு, தங்களை முன்னேற விடாது தடுத்துக் கொண்டிருக்கும் கோரமான குறைகள் இன்னதென்பதை யுணர்ந்து, அவைகளைக் களைந்தெறிய வீறுகொண்டு உழைக்க முன்வந்தனர். இங்குப் பெரியார் செய்த வீர கர்ஜனைப் பிரசங்கங்கள், மின்சாரம் போல், உயர்ந்தோர் முதல், சமூகத்தில் தாழ்ந்தோர் எனக் கருதப்பட்டவர்கள் வரையில் அனைவரது உள்ளத்திலும் தாக்கி, அவர்களைத் தன் நிலையுணரச் செய்து, சமுதாய முன்னேற்றத்திற்குரிய சரியான பாதையில் செல்லுமாறு அவர்களை ஊக்கியது என்பதை யாராவது மறுக்க முடியுமா? 1928-29 ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்நாட்டிற்கு வந்தார். பேரா மாகாணத்திற் சிறந்த நகரான ஈப்போவில் அவ்வமயம் நடந்த அகில மலேயா தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்ததோடு, பின்னர் இந்நாட்டின் பல இடங்களுக்குச் சென்று, ஆங்காங்கு அரும்பெரும் சொற்பொழிவு களை நிகழ்த்தித் திருப்பிச் சென்றார். இவர் தமிழ்நாட்டையே தமது உடலாகவும், தமிழர் பணியையே தம் சுவாசமாகவும் கொண்டு, தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழகத் துக்கும், தமிழ் மொழிக்கும் அர்ப்பணம் செய்துள்ளார். உடல் தளர்ந்து, நரை மிகுந்து, கம்பளிப் போர்த்து, கைத்தடி தாங்கிய இன்றைய நிலையிலும் அளப்பருந் தொண்டுகள் செய்த கர்ம வீரராய் விளங்கிவரும் இவரைக் கண்டு உலகமே பிரமிப்பதில் வியப்பில்லை. பெரியாரின் வாழ்க்கை நெடுகப் பெரும் போராட்டங் களுக்கே நிலைக்களனாக உள்ளதாகும். எவ்வகையில் போராட்டம்? தீமையிலிருந்து நன்மையைக் காப்பாற்றலும், பொய்மையிலிருந்து உண்மையைப் பாதுகாத்தலும், கொடிய பழக்கங்களை யொழித்து நல்வழக்கங்களை ஏற்படுத்தலும், சுயநலக் கும்பல்களின் திருவிளையாடல்களிலிருந்து - அவற்றிற்கிலக்கான மக்களைத் தற்காத்தலும், சமுதாயத்தின் காலில் அகப்பட்டு நசிந்து போய்க் கிடக்கும் ஜனங்களைக் கைத்தூக்கிவிடலு மாகிய மகா பயங்கரமான போராட்டங்களே, நம் பெரியாரின் வாழ் நாட்களை அலங்கரித்து வந்திருக்கிறது. அறியாமையாலும், கொடிய வழக்கங்களாலும் பலவித இன்னல் களுக்காளாகி, இந்த இன்னல்களுக்கெல்லாம் தங்கள் விதிதான் காரணம் என, அந்த விதி என்ற ஒன்றைச் சிருஷ்டித்து, அதன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு - தன் நிலையுணராது காலத்தைக் கடத்தி வந்த நம் இந்திய நாட்டின் ஒரு பெரும் பிரிவு மக்களை, அதீதமான விழிப்படையச் செய்தது யார்? பெரியார் ஈ.வெ.ரா. அவர்களல்லவா? இது என்ன சாமான்யமான காரியமா? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பெரியாரவர்களின் தொண்டின் திறன் இன்னதென்பது விளங்கும். இன்று தமிழ்நாட்டில் சுதந்திரம், சமத்துவம், தாழ்த்தப் பட்டோருக்கு ஆலயப்பிரவேசம் என்றெல்லாம், முழங்கப்படு கிறதே, அவைகள் இன்றையதினம் அசையாத உரம் பெற்று மிளிர அக்காலத்தில் பேருழைப்புக் கொண்ட மூலபுருடர் யார் என்பது பற்றிச் சரித்திரக்காரர்கள் எழுதுகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையே திட்டவட்டமாகக் குறிப்பிடுவார்கள். அரசியல் வாழ்விலே வெளிவேஷங்களை போட்டுப் படா டோபமாய் வாய்ப்பந்தல்கள் இட்டு நடிப்பதற்கும், பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும் வெகுதூரம். தன்னடக்கமும், வைரம் பாய்ந்த நெஞ்சும், கலக்கமற்ற உள்ளமுங்கொண்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், மேற்கண்டவிதம் நடக்கும் கோஷ்டியைக் கட்டோடு வெறுக்கிறார். இவைகளால் நாட்டு மக்கள், உண்மை நிலை யுணராது செய்யப்பட்டு விடுவதைக் கண்டு மனம் புழுங்குகிறார். ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை, போக்கு ஆகியவைகளைப் பற்றி, அவரது எதிரிகளால் பலவாறு கூறப்படுகிறது. அவைகளை யெல்லாம் இங்கு விவரித்துக் கொண்டிருப்பது உசிதமில்லை. ஆனால், ஒன்றைமட்டும் நான் இங்குக் கூறுவது, என் சம்பந்தப் பட்டவரையில் என் கடமையென நான் உணர்கிறேன். நோய்க்குத் தகுந்த மருந்து கொடுத்தால்தான், நோய் சொதமாகு மென்பதை நீங்கள் அறிவீர்கள். பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், பொது வாழ்வு என்னுந்துறையில் பழுத்த அனுபவமிக்க ஒரு வைத்தியர். எனவே எந்தெந்த விஷயத்துக்கு எவ்வளவு கடுமையான முறையில் ஔடதப் பிரயோகம் செய்ய வேண்டுமென்பது, அவருக்கு நன்கு தெரியும். நீண்ட நாட் கொடிய நோயை நீக்குவதற்கு, கடுமையான ஔடதப் பிரயோகம் செய்தால்தானே குணமேற்படும்? இந்த நிலையில் அவர் தம் காரியங்களை அயராது செய்துகொண்டு போவதால்தான், அவரை நன்கு உணர்ந்து கொள்ளத் திறமையற்ற அவரது எதிரிகள், பலவாறு கூற முற்படுகின்றனர் என் எண்ணுகிறேன். நல்லது எங்கு உண்டோ, அதைப் போற்றும் அருங்குணம் அவர்பால் அமைந்து கிடக்கிறது. சத்தியமார்க்கமாம் இலாத்தைப்பற்றி அவர் போற்றுவதற்குக் காரணம், அதன் உயர்ந்த தத்துவங்களும், நற்போக்கும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வசீகரித்திருப்பதால்தான். தீமைக்குத் தலைகுனியும் பலஹீன குணம், பெரியார் ஈவெ.ரா. அவர்களிடம் சிறிதளவும் காணமுடியாது. இப்பெரும் போக்கு, அவரது இளமை முதலே அவரது உதிரத்தில் கலந்து போய் நிற்கிறதென்பதை, அவரது வாழ்க்கைச் சரிதையிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். தோழர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், 1879ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ந் தேரி ஈரோட்டில் பிறந்தார். இவர் 6 வயதில் திண்ணைப் பள்ளிக்கூடம் சேர்ந்து, 10 வயதில் வெளிப்பட்டு விட்டார். தம் தந்தையின் மளிகைக் கடையில் சேர்ந்துழைத்தார். இதில் வளர்ந்தவர் பொதுத் தொண்டில் ஈடுபட முற்பட்டுக் காங்கிரசில் சேர்ந்தார். சிறு வயதிலேயே சமூகக் கட்டுப்பாடுகளை மூட வழக்கங்களென வெறுத்து வந்ததனால், இவருக்குத் திருமணம் செய்துவிட்டனர். இவர் இதிலும் படியாதவராகிக் காங்கிர தொண்டில் முற்பட்டுப் பெரும் பணிகள் ஆற்ற முற்பட்டதனால், இன்று சென்னை மாகாணக் காங்கிரவாதி களில் மிகப் பழைய காங்கிரசினர் எனக் கருதப்படவும் இடமேற்பட்டுள்ளது. முதன் முதலாக, இவர் மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுழைக்க முற்பட்டதில், சிறை வாசத்திற் குள்ளானார். வெளிவந்ததும், தீண்டாமை ஒழிப்பிற்காக வைக்கம், சுசீந்திரம் என்னும் மலையாள வைதீக நகரங்களிற் சென்று, தீண்டாதாருக்கு அங்குத் தெருப்பிரவேச உரிமை பெறச் சத்தியாக்கிரகம் செய்ய முற்படவே, திருவாங்கூர் சமதானம் சிறைவாசம் அளித்தது. அதை அனுபவித்து, சென்னைக்கு வந்து கதர்ப்பிரச்சாரத்திலீடுபட்டு ஆற்றிய சொற்பொழிவுகளில், இராஜத்து வேஷம் இருந்ததெனக் குற்றம் சாட்டப் பட்டுச் சிறைவாசம் செய்யச் சென்றார். அதிலிருந்து வெளிவந்ததும் நாகை தென்இந்திய இருப்புப் பாதைத் தொழிலாளர் ஊதியக் குறைவிற்கென வேலைநிறுத்தம் செய்ய முற்பட்ட சமயம், அரசாங்க உத்தரவை மீறியதற்காகச் சிறைக் கோட்டம் சென்றார். வெளிவந்ததும், சமூக சீர்திருத்தத்தையும் நாட்டு உரிமையையும், காங்கிரசின் வாயிலாக அடையலா மென்ற நம்பிக்கையில் உழைத்தார். இதில் மன விகற்பங்களும், வேறுபாடுகளும் சிறிதுசிறிதாக வளர ஆரம்பித்தன; முடிவாகக் காங்கிரசை விட்டு விலக நேர்ந்தது. காங்கிரசிலிருந்து விலகியதும் 1925ம் ஆண்டில் குடி அரசு வாரப் பத்திரிகையைத் துவக்கிச் சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்தார். 1929 பிப்ரவரி 18ல் செங்கற்பட்டில், முதலாவது சுயமரியாதை மாநாட்டை நிறுவினார். இவ்வியக்கத்தை எதிர்க்கச் சென்னை ஆதிக சங்கம் என்று ஒன்று ஏற்பட்டது. இது சிறிதுகாலம் எதிர்த்து நின்று மறைந்தது. இவர் 1931 டிசம்பரில் மேல்நாடுகளுக்கேகி, ருஷ்யா, ஃபிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பிரயாணம் செய்து, 1932ல் இந்தியா திரும்பி, 1933ல் தம் மனைவியாரை இழந்து, 1936ல் தம் அன்னையையும் இழந்து, தமிழ்நாட்டில் உழைப்பிற் கஞ்சாதுழைத்து, வருங்காலத்தில், கட்டாய இந்திக் கல்வியைக் காங்கிர கவர்ன்மெண்ட்டார் ஏற்படுத்த, அதைத் தமிழகப் பெருமக்களுடன் சேர்ந்து எதிர்த்துப் போராடி, தமிழ் மக்களில் ஓர் மாபெரும் எழுச்சியை உண்டாக்கி, அடக்குமுறை ஆட்சிக்குட் பட்டு, நோய்வாய்ப்பட்டுப் பல பரிதாப நிலைகளுக்குள்ளாகி விடுதலையடைந்து, மறுபடியும் இன்று அஞ்சாதுழைத்து வருகிறார். இத்தகைய இணையற்ற தொண்டுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கிழவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில், தமிழர்களாகிய நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரி ஆக்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர், திரு.பெசில் மாத்யூ அவர்கள் அந்த ஈரோட்டுத் தாழ்வாரத்தில், தோழர் ஈ.வெ. ராமசாமியைக் கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்தேன். நரைத்த தலையும், அழகிய தாடியும், அழுத்தமான மூக்கும், மொத்தமான உதடு களும், ஒளிவீசும் கண்களும் படைத்த அந்தப் புரட்சிக்காரரைக் கண்டதும், என் தந்தையார் நான் பள்ளி மாணவனாயிருந்த போது வில்லியம்மாரிசின் பொதுவுடைமைச் சொற்பொழிவைக் கேட்பதற்காக என்னை அழைத்துச் சென்ற அந்தக்காட்சி, நினைவிற்கு வந்தது. புறத்தோற்றத்தில் மட்டுமல்ல, உள்ளுணர்ச்சி யிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரி போன்றவரே என்பதை, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் கண்டுகொண்டேன். அர்த்தமற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களையும், பழமைப் பாசி படர்ந்துவிட்ட கருத்துக்களையும் துடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், புதியதோர் உலகு செய்வோம் என்னும் அந்த உறுதிப்பாடு - இவை அத்தனையிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரிஸேதான். ஆம்! அவர் இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரி! மாரிசைப் போலவே, ஈ.வெ.ரா.வும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். புள்ளியிட்டஒரு நீலச்சட்டை, சாதாரணமான ஒரு கால்சட்டை. அழுத்தந் திருத்தமான ஒரு கடிகாரச் சங்கிலி என்ற இவ்வளவில் வில்லியம் மாரிஸின் ஆடை அணிகலன்கள் அடங்கி விடுகின்றன. அது போலத்தான் இந்தி இந்திய நாட்டுச் சிந்தனைச் சிற்பியும், பருத்தி நூலால் செய்யப்பட்ட சர்வசாதாரணமான வேட்டியும், சட்டையுமே அணிந்து கொண்டிருக்கிறார். தோழர் ஈ.வெ.ரா. நடத்துகின்ற ஆங்கில வாரஇதழ் இருக்கிறதே - அதன் பெயராகிய (Revolt) புரட்சி என்பதை, அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும். செல்வாக்குள்ள ஒரு குடும்பத்திலே பிறந்த கட்டுங் கடங்காத இளங்காளை அவர்! பல புரட்சி வீரர்களைச் சாதுக்களாக மாற்றி அமைத்த தோழர் காந்தி இருக்கிறாரே, அவரிடமிருந்துதான் பொது வாழ்க்கைப் பைத்தியம் இவருக்கு முதலில் தொத்திக் கொண்டது. ஈரோடு நகரசபைத் தலைவரானார். காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் சீடரானார். தமிழ்நாடு காங்கிர கமிட்டி தலைவரானார். 1921ல் சட்டமறுப்பு இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டு சிறை புகுந்தார். காங்கிர இயக்கத்தில் உள்ளீடாய்ப் பரவிவிட்ட பார்ப்பன ஆட்சியை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறினார். ஜடி கட்சியில் ஓர் இடதுசாரித் தலைவ ரானார். ஆனால், அந்தக் காலத்தில், ஜடி கட்சி மிகமிக மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்த கட்சி. ஆகவே துடிதுடிக்கும் வாலிபர்களையும், அதி தீவிரக் கொள்கைகளையும் கொண்ட சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். பிராமண ஏகாதி பத்தியத்தை வீழ்த்துவதில் அவருக்கு ஏற்பட்ட ஊக்கம், பிறகு கிறித்தவ, இலாம் மதங்களையும், அதற்குப் பிறகு எல்லா மதங்களையும் எதிர்க்கும் உணர்ச்சியை அவருக்குத் தந்து விட்டது. அய்ரோப்பாவில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது, மாகோ வில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரஷ்யப் பொதுவுடமைத் திட்டத்தில் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கை கொண்டவராகவும், மதஎதிர்ப்புத் தத்துவத்தில் மேலும் பல மடங்கு ஈடுபாடு கொண்டவராகவுமே அவர் இரஷ்யாவினின்றும் திரும்பி வந்தார். மதங்களை அழிப்பதில் அவர் காட்டிய வீரா வேசமும், அவருடைய பொதுவுடைமைப் பிரசாரத்தின் வேகமும், பலமும், அவரை மீண்டும் சிறைக்கோட்டம் புகச் செய்தன. அடுத்தநாள் நான் அவரை அவருடைய அலுவலகத்தில் கண்டேன். அங்கே அவருடைய படம் ஒன்று மாட்டப்பட்டிருக்க கண்டேன். அதன் ஒரு பக்கத்தில் படமும், மறுபக்கத்தில் பெர்னாட்ஷாவின் படமும் இருக்கக் கண்டேன். சொந்த அச்ச கத்தின் வாயிலாக சொந்தக் கருத்துக்களைப் பொது மக்களுக்கு உணர்த்துவது வில்லியம் மாரிசுக்கும், தோழர் இராமசாமி நாயக்கருக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன். கன்பூசியசுக்கு ஒப்பானவர்! சீனப் பேராசிரியர், சி.எ.ஸீ. அவர்கள் (1939) இன்று தமிழகத்தில், சமுதாயத் துறையில் சிறந்த பணியாற்றி வரும் ஒருவர் உண்டானால், அவர் பெரியார் இராமசாமிதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் பெரிது; மிகப்பெரிது! சீன தேசத்துச் சன்-யாட்-சென் என்பவரைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசிய என்னும் பேரறிஞருடன், பெரியார் இராமசாமி அவர்களை ஒப்பிடலாம். மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்துகிடந்த சீனத்தை, மறுமலர்ச்சி பெறச் செய்த டாக்டர் சன்-யாட்-சென்னுக்கு வழிகாட்டிய பெம்மான் கன்பூசிய அவர்களைப்போல, உங்கள் தலைவர் பெரியாரும், தமிழ்நாட்டிலிருந்து சாதி வேறு பாட்டை அடியோடு தொலைக்க மிகவும் பாடுபட்டு வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள், அதிதீவிர முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு முதலில் வியப்படைந்தேன். பிறகு, அதற்கு காரணம் பெரியார் தான் என்று அறிந்தேன்; மகிழ்ந்தேன். 1929ல் பெரியார் மலாய் நாட்டில் சுற்றுப்பயணஞ்செய்து, மலாய்த் தமிழர்களைத் தட்டி எழுப்பினார் என்பதையும், அவர் அப்போது ஆற்றிய சீர்திருத்த உரைகளால், மலாய்த் தமிழர்கள் பழைய பழக்க வழக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் என்பதையும் அவருடைய அரிய தொண்டின் விளைவாக மலாய்த் தமிழர்கள் கீழ்நாட்டின் சிறப்பை நிலைநாட்ட முன் வந்திருக் கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனிதன் மனிதனாக வாழச் சீர்திருத்துபவர்! புரோஃபசர், ரங்கா அவர்கள் இந்தியாவில் மும்மணிகளாய் மூவர் திகழ்கின்றனர். தேசீயக் கிளர்ச்சி உண்டுபண்ணி, மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டினவர் காந்தியடிகள். பொதுவுடைமைத் தத்துவத்தைத் தீர ஆராய்ந்து, அதன் உண்மையினை உணர்ந்து, அதன் நன்மையினை மக்கள் அடையவேண்டுமென்று கூறினவர் ஜவகர். மதத்தினை ஆராய்ந்து மூடக்கட்டுப்பாடுகளை அறுத்து, மனிதன் மனிதனாக உரிமையுடன் வாழச் சீர்திருத்த முயல்பவர், ஈரோட்டு வள்ளல் ஈ.வெ.இராமசாமிப் பெரியார் ஆவர். புரட்சிவாடை வீசச்செய்பவர்! டெல்லி, இந்தியத் தொழிலாளர் மன்றப் பொதுச் செயலாளர், வி.பி.கார்னிக் அவர்கள் (1944) பெரியாரிடத்தில் எனக்குப் பெருமதிப்புண்டு. தென்னிந் தியாவில் உள்ள பாட்டாளி மக்களைப் பிணைத்திருக்கும் அடிமைத்தளைகளை உடைத்தெறிவதற்காக, அவர் ஆற்றியுள்ள தொண்டின் திறத்தை நான் நன்கு அறிவேன். தென்னாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்காக பார்ப்பனரல்லாத மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்குத் தக்க பலம் பொருந்திய சிறந்த ஆயுதம் திராவிடம் கழகம் என்னும் பேரியக்கம். பெரியார் இராமசாமிதான், இந்த இயக்கத்தின் மாபெருந்தலைவர். என்னுடைய ஆசையெல்லாம், அந்த பலம் பொருந்திய இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கூடிய விரைவில் தன்னுடைய முழுச் சக்திகளையும் திரட்டி, உழைப்பாளி மக்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்குமாறு செய்துவிட வேண்டு மென்பதுதான். பெரியாரின் தலைமையில் பாடுபட்டுவரும் திராவிடர் கழகமானது, உள்ளபடியே தென்னிந்திய அரசியல் வானில் புரட்சிவாடை வீசச் செய்துவிட்டது. நான் கலந்து உழைத்துவரும் தீவிர ஜனநாயகக் கட்சியும், அதன் தலைவர்களும் பெரியார் இராமசாமியைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் மிக உயர்ந்த மதிப்புக் கொண்டிருக்கின்றனர். அஞ்சா நெஞ்சன்! திரு.நீல்கன் பெருமாள் அவர்கள் (1939) ஈரோடு இராமசாமி நாயக்கர் அவர்கள், மிக முக்கியமான ஒரு தலைவராவர். தமிழர் உள்ளத்தில் ஒரு சிறந்த தியாகியாக அவர் குடிபுகுந்திருக்கிறார். ஒத்துழையாமைக் காலத்தில் காந்தியாரின் படம் பல வீடுகளிலும் தொங்கவிடப்பட்டிருந்தது போலவே, இன்றைய தினம் ஈ.வெ.ரா. அவர்களின் படங்கள் மிக மதிப்போடு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள், காங்கிர பார்ப்பனரல்லாதாரை அடக்கி ஒடுக்கி அடிமை வாழ்வு வாழச் செய்கின்றனர் என்பதைத் தெளிவாக உணர்ந்த ஒரே காரணத்தாலேயே, அவர் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அது முதற்கொண்டு எல்லா வகுப்புகளுக்கும் ஒத்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் பெரும்போர் விளைத்திருக்கின்றார். தம் வாழ்க்கையில் சுயநல உணர்ச்சி யென்பதே சிறிதும் கலவாத ஓர் அஞ்சா நெஞ்சன் என்பதே, அவரைப் பற்றிய என்னுடைய கருத்தாகும். தம்முடைய மாகாணத்து முதல் அமைச்சராக வரவேண்டும் என்பது போன்ற ஆசைகள், அவருக்குச் சிறிதும் கிடையாது. அப்படிப் பட்ட பதவிப் போட்டிகளுக்கும், அவருக்கும் வெகுதூரம். ஓர் அரசியல்வாதி என்கின்ற முறையில், தென்னாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், வகுப்புகளுக்கும், பிரிவினருக்கும் ஒத்த நீதியும் அளிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய கொள்கை. இத்தகைய கண்ணியமான நோக்கங்களோடு, அவர் தம்முடைய சமுதாயம் - தமிழர் சமுதாயம் - முன்னேற, மிகவும் பாடுபட்டு வருகிறார். இப்போது மக்களெல்லாம், அந்த ஈரோட்டுப் போர்வீரரை மேலும் மேலும் பாராட்ட முன் வந்துவிட்டார்கள். தங்களைக் காப்பாற்ற வந்த ஒரு புண்ணிய புருஷராகவே, அவர்கள் அவரை எண்ணி வணங்குகிறார்கள். பெரியார் என்றே, அவரை அன்போடு அழைக்கிறார்கள். ஏழைமக்களுக்குத் தொண்டு செய்பவர்! திரு.ஆ.சு.ஜெயக்கர் அவர்கள் (1930) சுயமரியாதை இயக்கம் ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், அநீதிக்கு உட்படுத்தப் பட்டிருப்பவர்கள், சமத்துவத்தை அடையாதவர்கள் ஆகியோர்களை முன்னேற்றுவதற்காகவே ஏற்பட்டது. நமக்கு எதிரிகள் சர்க்காராயினுஞ்சரி, மேல் ஜாதியா ரெனப்படுவோராயினுஞ் சரி, அவர்கள் எதிர்ப்பை நாம் சிறிதும் பொருட்படுத்தக் கூடாது. திரு.ஈ.வெ.இராமசாமியார் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர். இவர் உங்கள் இயக்கத்திலிருக்கின்றார்! உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிதவர் களும், மகமதியர்களும் சேர்ந்திருப்பது விசேஷமாகும். மதத் தலைவர்களும், காங்கிர தலைவர்களும் செய்யமுடியாத காரியத்தை, நீங்கள் செய்து முடித்திருக்கிறீர்கள். சுயநலக் கூட்டத்தை எதிர்க்க அவதரித்தவர்! முதுபெரும் புலவர்,அ.வரதநஞ்சையபிள்ளை அவர்கள் (1944) நான் சைவ சித்தாந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். சுயமரியாதைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். இதனால் என்னைச் சிலர் கொள்கையற்றவன், பச்சோந்தி என்று கூடச் சொல்வார்கள். அது தவறு. எனக்கும் பெரியாருக்கும் கொள்கையில் சில வேறுபாடுகளுண்டு தான். எனினும், பொதுமக்களுக்கு அவர் செய்த தொண்டு மிகப்பெரியது. அதனை நான் மதிக்கிறேன்; போற்றுகிறேன். யாகத்தின் பெயரால் பசுக் கொலை முதலிய கேடுகளைச் செய்தவர்களை எதிர்க்கப் புத்தர் பெருமான் தோன்றினார்... தமிழையும், தமிழரையும் அடிமைப்படுத்திவரும் சுயநலக் கூட்டத்தை எதிர்க்கப் பெரியார் அவதரித்துள்ளார். பெரியார் தோன்றியிராவிடில், நாம் மிகக் கீழான நிலையில், நம்மை வெட்கமில்லாமல் சூத்திரன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் பேதமையில் இருந்திருப்போம். தமிழனின் தன்மானக் குரல், புத்துணர்ச்சி, உள்ளக் கொதிப்பு, முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் பெரியார்தான் காரணம். பெரியாருக்கு வயது 66. எனக்கு 67. இந்த முறையில், அவர் எனக்கு இளைய சகோதரர் தாம். எனினும், அவர் ஆற்றிவரும் அறிவுத் தொண்டினைப் பார்க்கும் பொழுது, அவரை எனக்கும் பெரியாரென்றே நான் மதிக்கின்றேன். கடவுளை மறுப்பது என் கொள்ளையல்ல. கடவுளின் பெயரால் அக் கிரமங்கள் நடப்பது கண்டுதான், கடவுளை மறுக்கிறார்கள். பாமர மக்கள் விழிப்புறவேண்டும். நான் சுயமரியாதைக்காரன். எனக்குச் சுயமரியாதை வேண்டாமா? ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும்! தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்! நாவலர்ச.சோமசுந்தர பாரதியார், M.A., B.L., (1942) பெரியார் இராமசாமி அவர்கள், திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்குச் சிறப்பாயும், உரிமையும் பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சி யுடையார். கிளைபகை கருதாமல், பொதுநல மொன்றையே பேணித் தம் உள்ளத்தாற் பொய்யாதொழுகும் நேர்மையாளர். புகழும், பழியுமிகந்து, அச்சமறியா உரனுடைய உள்ளத்தராய், என்றும் ஒன்றுபோல் நின்று, உற்றாரிடத்துக் குறைகாணில் மறையா துரைத்து, வலியார் மெலியாரை நலியாது எதிர்த்து, எளியவர் தோழராய்ப் போராடும் வீரர். தனக்கென வாழாப் பிறருக்குரியாளருள், தலையணி நிலையுடைத்தக்கார். அவரோடு கருத்து வேறுபாடுடையாரும், அவர் நேர்மையும், பகையற்ற உளப்பாங்கும், அஞ்சாமையும் பாராட்டும் தகவுடையார். வேடத்தால், விரகால் கடவுட் பெயரால் மக்களை மருட்டி வாழ்பவர் விரைந்து மறைய மெய்யுரைத்துத், தம் குற்றம் காண்கிற்கும் ஆள்வினையுடையார். தற்காலத் தமிழகத்தில் தலைநின்று, ஒல்லும்வகை ஓயாது உழைத்து, தமிழர்வாழ்வுயர்வளம் சிறக்க உரிமைப் போர்த் தலையணியில் பொருதுவரும் ஒப்புயர்வற்ற தலைவர், இராமசாமிப் பெரியார். காந்தியடிகளாலும் பாராட்டப்பெற்றுப் பொதுநலம் பேணும் அறம் திறம்பா அருண் மறவரிவர். கலாநிலையக் கல்விப் பட்டங்கள் பெறாமலும், மானமிழந்து பிறர் பின் நின்று பதவி முதலிய வீண் பெருமைதேட விரும்பாமலும், ஊக்கமும், வாய்மையும், ஆக்கமனைத்தும் தரும் என்பதை நாள்தோறும் தாம் வாழ்ந்து காட்டும் சால்புடையார். கல்வி வளம் செல்வம் போல் மிகுந்து மலிந்த ஆங்கில நாட்டில், கல்லூரிப் பயிற்சி மிக இல்லாமல், தன்னலமறந்து, பிறர் உரிமை பேண முயன்று, பெருமையும் புகழும் பெற்றுயர்ந்த பிராட்லாவைப் போலவே, நமது பெரியாரும், தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேணும் அறப்போருக்குதவி, நல்லோர் மதிப்பும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்குமியல்புடையார். *** என்றும் எதிரிகளாலும் மதிக்கப்படும் இயற் பெருமை வாய்ந்தவர். அதற்கு காந்தியடிகளின் சூழ்ச்சித் துணைவரும், கூர்த்த மதியும், கொண்டதை முடிக்கும் திறமும் மிகுந்த தமிழ் நாட்டுக் காந்தி எனப் புகழ்பெற்ற வருமானச் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் வலிய வீட்டுக்கு வந்து நட்புறவை நாடிப் பாராட்டப் பெற்றார் பெரியார் என்பதே போதிய சான்றாகும். கட்டாய இந்தித் திமிரை மட்டம் தட்டிய தமிழர் படைத்தலைவராய்ப் பொருது, வென்றி விளைவித்தவர் தீண்டாத தீமையை அறவே ஒழித்து, ஆலயங்களை அனைவருக்கும் திறக்கப் பண்ண அரும்பாடுபட்டவர். வைக்கம் சத்தியாக்கிரகட் போரில் தனிப்பெரும் வீரராய், நாடு கடத்தவும், சிறை புகுத்தவும் தளராத தறுகண்மையோடு அறப்போர் புரிந்த மறவர். இவரோடு சில பல துறைகளில் கருத்து வேறுபாடு உடையவரும், இவர்தம் பல சிறந்த பண்புகளையும், பொதுநல ஆர்வத்தையும், சமூக சேவையையும் பாராட்ட விரும்புமாறு அரும்பல செயலாற்றிய புகழ்க்குரியார். தமிழ் மக்களைத் தட்டியெழுப்பியவர்! செட்டிநாட்டுக் குமாரராஜா,திரு.ஏ.முத்தையச் செட்டியார் அவர்கள் (1938) இருபது ஆண்டுகளுக்கு முன் நமது மாபெருந் தலைவர் களான தியாகராயர், நாயர், பனகல் அரசர் ஆகியோர், நம் தமிழ் மக்களின் நன்மைக்காக, நமது நீதி இயக்கத்தை ஆரம்பித்தனர். நமது கட்சியின் உழைப்பால் தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும், மற்ற மக்களுடன் சம நிலையுடன் வாழ வசதியேற்பட்டது. அவர்கள் உழைப்பால் பார்ப்பனரல்லாதார்கள் அளவிறந்த நன்மைகள் பெற்றனர். இடையில் நமது தலைவர்களின் மன வேறுபாட்டால், சென்ற தேர்தலில் தோல்வி பெற்றோம். ஆனால், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், எந்தத் தலைவர்களின் தூண்டுதலு மில்லாது தாமே தனியாகத் தம்முடைய தோழர்களுடன், சென்ற ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுமையும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, சொற்பொழிவாற்றி, தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார். நாட்டுப் பிரிவினைக்கு வித்திட்டவர்! “லிபரேட்டர்” ஆசிரியர், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, எம்.ஏ., பி.எச்.டி., பார்-அட்-லா திரு.ஈ.வெ.இராமசாமி, அச்சம் என்பதையே அறியாத சமுதாய சீர்திருத்தவாதி. வர்க்கத்திற்கோர் வட்டாரம் என்ற முறையில் இனவாரியாக நாட்டைப் பிரிக்கும் கொள்கை கேலிக்கிடமானதாகக் கருதப்பட்ட அந்தக் காலத்திலேயே திராவிடநாடு திராவிடருக்கே என்று அவர் முழங்கி வந்தார். எல்லோரும் அந்தத் தத்துவத்தைக் குறைகூறிய காலத்தில், அவர் மட்டும் அழுத்தந் திருத்தமாய் அதை ஆதரித்துப் பேசினார். அவர்தம் இடைவிடாத பிரச்சாரத்தினால், தென் இந்தியா தனிநாடாய்ப் பிரிய வேண்டியதுதான் என்பதைப் பாமர மக்களெல்லாங்கூட உணர்ந்து ஒப்புக்கொள்ளும்படிச் செய்து விட்டார். அவருடைய தொண்டின் பயனாகத் திராவிட நாட்டிற்கு விடுதலை தேவை என்பதை, இன்று பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொண்டனர். நீடுழி வாழ்க காஞ்சி, பரவது இராஜகோபாலாச்சாரியார் B.A., (1939) தமக்கென வாழாது பிறர்க்கே வாழவேண்டுமென்பது, பண்டைத் தமிழரின் உயரிய கருத்தாகும். இச்சீரிய கருத்தைத் தம் வாழ்நாட்களில் கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி, மக்கள் அனைவரும் மாய வலையில் சிக்கா வண்ணம் அறிவு கொளுத்தி, பிறப்பொக்கும் என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள், நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால், வேறு கூறவேண்டுமா? இத்தகையார் வாழ்க்கையில், குறளில் கூறிய இயல்புகள் எல்லாம் தாமாகவே அமைதல் இயற்கையேயாகும். பெரியார் வாழ்க்கையும், தன்னலம் கருதாது பிறர்க்கே உழைத்து ஏழை யானதும், தாய் தந்தை, தாரம், தமர் அனைத்தும் நோயெனக் கருதி, அவர்கள் பிரிந்த காலத்தும் இன்ப துன்பமில்லாமல் மன அமைதி யோடு கருமமே கண்ணாயினர் என்பதற்கோர் இலக்கியமாகவும் விளங்கினார்கள். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றி, அறிவு கேடர்க்குத் தம் சான்றாண்மையால் பகுத்தறிவூட்டி, ஏனைய தமிழர் வாழ்வுகண்ட தெள்ளியராவார். அரசியல் போரிலே மூண்டு முன்னிலையில் நின்று, நாடு விடுதலைபெறச் சீரிய தவமியற்றும் சிங்கம் ஈ.வெ.ரா. அவர்கள், நீடுழி வாழ்க! என்று போற்றுவதல்லாமல், வேறு கூறுதல் மிகையெனக் கருதுவேன். உண்மையிலேயே பெரியார்! டி.கே.சிதம்பரநாத முதலியார் B.A., B.L., (1929) இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கும், ஒரு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பதற்கும் வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது ஓர் உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன :- 1. அவரைப்பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். 2. அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்பட வேண்டும். 3. அவர் கடுமையாக வையவும், சபிக்கவும்பட வேண்டும். எனவே, இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர், நமது பெரியாராவார். தேசீய இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டு மனப்பூர்வமாக உழைத்தவர். பல கஷ்டம் என்பதையும், அதற்காக நஷ்டங்கள் அடைந்தவர் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை... சமுதாயத் துறையில் இறங்கி, வைக்கம் முதலிய இடங்களில் தாழ்ந்த மக்களுக்காகச் சத்தியாக்கிரகம் முதலியவை செய்து, அதற்காகச் சிறையும் சென்று, தெருவில் நடக்கும் உரிமை முதலியவைகளை நிலைநாட்டியவர் நமது பெரியாராகும். *** சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கி விட்டவர் நாயக்கர் ஆவர். பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும், அவருக்கே உரித்தானது. இன்று, இம்மாகாணம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது இயக்கம் கொண்டாடப்படுகிறது. அம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே. இதைப்பற்றி மேலும் கூறுவது மிகையே. முதன் முறையில் அவர் பிரசங்கத்தைக் கேட்டபோது நான் பிரமித்துப் போனேன். அவருடைய பேச்சில் ஆற்றல் தொக்கி நிற்கிறது. குடி அரசின் பெருமை மிக ஆகும். ஆடாததையெல்லாம் ஆட்டி வைத்த பெருமை, குடி அரசுக்கே உரித்தானதாகும். இதற்குக் காரணம், பெரியாரின் சொல்லும், எழுத்தும் வன்மை கொண்டதாக இருந்ததே. அவருடைய குடி அரசு பத்திரிகையில், மக்கள் மனத்தைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம், அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. தன் உள்ளக் கிடக்கையில் உள்ளதை, அப்படியே எடுத்துச் சொல்வதுதான். உண்மையிலேயே, எத்தகைய கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்கத்தக்க பத்திரிகையை, இவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். பேசியவாறே செய்து காட்டுபவர்! முன்னாள் அமைச்சர்,திவான் பகதூர், எ.குமாரசாமி ரெட்டியார் (1928) எத்தகைய சமூக ஊழியம் நாயக்கர் அவர்கள் செய்திருக் கிறார் எனப் பேச முயல்வது பைத்தியக்காரத்தனமாகும். தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள், கபடமற்றவர். மனதில் நினைப்பதைப் பேசியும், பேசிவாறே செய்தும் காட்டுபவர். இத்தகைய பெருந்தலைவரைப் பாராட்டுகிறேன். உயரிய உதவி செய்துவருபவர்! கொச்சி, யுக்திவாதி ஆசிரியர், எம்.சி.ஜோசஃப் அவர்கள் (1933) உங்கள் இயக்கத்தின் முக்கிய வெற்றிகளைப்பற்றிய எதிரொலி மேல்காத் மலைத் தொடரைத் தாண்டிவந்து எங்களுக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்ததுண்டு. உங்களுடைய மாபெருந் தலைவரான தோழர் ஈ.வெ.இராமசாமியின் சேவை களுக்காக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வேளாவேளைகளில் அவர் எங்கள் நாட்டுக்கு வந்து, பல கூட்டங்களில் பேசி, எங்களுக்கு உரிய உதவி செய்து வருகிறார். இயற்கையின் புதல்வர்! வ.ரா. அவர்கள் தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாதிகன் வேறு எவருமே இருக்க முடியாது. பாதகன் என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பதைக் காட்டிலும், வீடு கட்டாமலே வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்று சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகி அழுகிப்போய் புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால், சாகச் சொல்கிறான் பாவி என்று திட்டுவதா? கண்டவர்க் கெல்லாம் குனிந்து சலாம் செய்து மண்ணோடு மண்ணாய் ஒட்டிக்கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், பாவி, நம காரத்தைக் கண்டிக்கிறான் என்று அபத்தம் பேசுவதா? மனச் சாட்சிக்கும், தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நாதிகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாதிகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன்... அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணணையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை... செய்யவேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு, அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்லமுடியும்?) ஆனால், மலைகளையும், மரங்களையும், வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது. (1933-ல் காந்தி இதழில் எழுதியது) முற்றுமுணர்ந்த பேராசிரியர்! கல்கி சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவாக கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை, அரை மணி நேரத்துக்குமேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேசவேண்டு மென்றால், பண்டிதர், சுராஜ்உத்டௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885ஆம் வருஷத்தில் காங்கிர மகாசபை தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும், அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியு மென்று தயங்காமல் கூறுவேன். அதிக நீளம் என்னும் ஒருகுறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை தானம் தயங்காமல் அளித்து விடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில், முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேக மில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்! தாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள் தானாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை - பன்மைகள், வேற்றுமை யுருபுகள் முதலியவைகளைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை, மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ, சொல்ல வேண்டுவதில்லை. இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும்விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத் தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியது தான்- என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன். உபயோகமற்ற வாதங்களும், அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்தக் காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண்பணச் செலவு நேரும் என்பது. ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர், இந்த 30,000 கார்டாவது போட வேண்டும். சர்க்கார் தபால் இலாகாவுக்கு லாபம். இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய்விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். நான் செத்துப் போகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன் என்று மறுபடியும் 30,000 கார்டு போடவேண்டும். நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும், எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது - ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும், இன்னும் 4,000 ஜனங்களும், ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒரு முறை கொல் என்று சிரித்து மகிழ்ந்தோம். (1931ல் ஆனந்தவிகடன் இதழில் எழுதப்பட்டது) புதிய சகாப்தத்திற்கு முதன்மையானவர்! நாரண - துரைக்கண்ணன் அவர்கள் (1939) சோம்பேறித் திண்ணை வேதாந்தமும், வாய் வேதாந்தமும் பேசி, வீண் பொழுதாக்கி, அர்த்தமற்ற சாதி, சமயப் பேதங்களாகிய சகதியில் அழுந்தி, ஊக்கமும் முயற்சியும் தன்மதிப்பும் இன்றி, உறங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பிய தமிழ்நாட்டுத் தலைவர்களுள் ஈரோடு பெரியார் ஈ.வெ.இராமசாமி தலைசிறந்தவராவார் எனில் மிகையாகாது. தமிழ்நாட்டில் முதன் முதலாக வந்தேமாதரக் கிளர்ச்சியை நடத்தித் தேசபக்தி யுண்டாகச் செய்த தமிழ்மகனார் வ.உ.சிதம்பரம்பிள்ளை, அவர் களுக்குப் பின்னர் தமிழ்நாடெங்கணும் காங்கிர செய்தியைப் பரப்பி, மக்களிடையே சுதந்திரதாகமுண்டாகச் செய்தவர்களில் திரு.வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜூலு நாயுடு, ஈ.வெ.ராமசாமிப் பெரியார் ஆகிய மூவரை முதலில் குறிப்பிட வேண்டும். இரவு - பகலெனப் பாராது, வெய்யில் - மழையெனக் கருதாது இடைவிடாமல் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அம் மும்மூர்த்திகள் செய்த வீரவுணர்ச்சி மிக்க பிரசங்கங்கள்தாம், பின்னர் நடந்த தேசீயப் போராட்டங்களில் எல்லாம் தமிழ் மக்களைப் பங்கெடுத்துக் கொள்ளும்படி தயார் செய்தன என்பதையும், இன்று காங்கிரகாரர்கள் அரசாங்கப் பொறுப் பேற்று ஆட்சி செலுத்துவதற்கு மக்களின் பேராதரவை வாங்கித் தந்தன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, இராமசாமிப் பெரியார், காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமைப் போராட்ட காலத்தில் செய்த தேச சேவையை யாரும் மறந்துவிட முடியாது. நன்றியுள்ளம் படைத்த தமிழ்மகன், அவருடைய சேவையை என்றும் மறக்கமாட்டான். அதன் பின்னரும், பெரியார் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிந்து வரும் தொண்டு அளவிடற்கரியது. அவர் காங்கிரசிலிருந்து கருத்து வேற்றுமை காரணமாக விலகியபின், பொதுஜனசேவை செய்யும் விஷயத்தில் கொண்டுள்ள கொள்கைகள், கையாண்டு வரும் வேலை முறைகள், பேசும் பிரசங்கங்கள் சிலருக்கும் பிடிக்கா மலிருக்கலாம். ஆனால், அவருடைய இலட்சியத்தைக் கவனிக்க வேண்டும். அவருடைய குறிக்கோள், மிகச் சிறந்தது; உயர்ந்தது. இலட்சியம் ஒன்றாயிருந்தால், அதை நிறைவேற்றி வைப்பதற்குரிய வேலைத் திட்டங்கள் பலவாயிருப்பதைப்பற்றி யாரும் கவலைப் படவேண்டியதில்லை. இலட்சியம் உயர்ந்த தாயிருப்பின், வேலைமுறை எவ்விதமாயினும் இருக்கலாம். சிலர் சொல்லுகிறார்கள், அவர் இலட்சியம் எப்படியா யினும் இருக்கட்டும், அவருடைய பேச்சும், செயலும், ஆக்க வேலையைச் செய்வதாயில்லையே! அழிவு வேலையையன்றோ செய்துவருகின்றன! இந்நிலையில் அவருடைய இலட்சியத்தை எப்படிப் பாராட்ட முடியும்? என்று! அவர்களுக்கு நான் ஒன்று கூறுவேன்; அழிவு வேலைதான் ஆக்கத்தை உண்டுபண்ணும். சம்மாரத்திலிருந்துதான் சிருஷ்டி வேலை ஆரம்பமாகிறதென்ற தத்துவத்தை உணரவேண்டும். பெரியார் அழிவு வேலையை மேற்கொண்டிருக்கிறார் என்பது உண்மை. அதை எதற்காகக் கொண்டிருக்கிறார்? நம் சமூக, சமயங்களிலுள்ள ஊழல்களையும், சீர்கேடுகளையும் போக்கி, ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திப் புதிய சகாப்தத்தை உண்டு பண்ணவேயாகும். அவருடைய குறிக் கோளின்படி, நம் நாட்டில் நவயுகம் ஏற்படப்போவது நிச்சயம். நாம் மாறுதல் அடைந்துவரும் ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்றுள்ள நிலைமை கூடிய சீக்கிரம் நாட்டில் சமுதாயப் புரட்சி ஏற்படக்கூடும் என்று உணர்த்தக் கூடியதா யிருக்கிறது. சமுதாயப் புரட்சிக்குப் பின், தமிழ் மக்கள் வாழ்வில் புதிய சகாப்தம் உண்டாகப்போகிறது. அப்புதிய சகாப்தத்தை ஏற்படுத்தப் போகிறவர்களில் இராமசாமிப் பெரியார் முதன்மை யானவராய் இருப்பார் என்பது என் நம்பிக்கை. அவர் தொண்டின் பயன்! மலையாளம் தோழர், கே.அய்யப்பன் அவர்கள் (1933) தோழர் இராமசாமி அவர்கள் அடிக்கடி எங்கள் பிரதேசத்திற்கு வந்து, சுயமரியாதை இயக்கத்தைப்பற்றிப் பிரசாரம் செய்திருக்கிறார். அதன் பயனாக அங்குள்ள புரோகிதர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும், மதப் பற்றுடையவர் களுக்குந்தான் காரமாகப் பட்டிருக்கிறது என்று கூறலாம். சுயமரியாதை இயக்கமானது, உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது... லெனின் செய்துவந்த வேலைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது நாட்டில் காரியங்களைச் செய்வதற்குச் சுயமரியாதை இயக்கமே சிறந்ததாகும். தமிழ்நாட்டுத் தலைமைக்குத் தகுதியுடைவர்! நாகர்கோயில், P.áj«gu« பிள்ளை, B.A., B.L., M.L.A., (1937) சுயமரியாதை இயக்கம், ஒரு தனித்தமிழ் இயக்கம். நான் ஆதிமுதற் கொண்டே இந்த இயக்கத்தில் கலந்திருப்பவன்; மலையாளத்திலுள்ள ஒரு தமிழன் நான். என் அனுபவத்தை யொட்டிக் கூறுவது என்னவென்றால், தமிழ் மொழிக்காக இந்த இயக்கத் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போலப் பாடுபட்டவர்கள் வேறு ஒருவரும் இல்லை என்பது ஒன்று. இதைத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் அனைவரும் உணர்ந்திருக் கிறார்கள். தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போன்று தமிழ்நாடு முழுவதிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் வேறு ஒருவரு மில்லையென்பது மற்றொன்று. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ் ஜில்லாவிலும் அநேகம் தலைவர்கள் உண்டு என்பதை, நான் மலையாளத்துக்காரனாக இருந்தாலும் அறிவேன். ஆனால், அந்நிய ஜில்லாக்களில் அவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருப்பதில்லை. ஆகையினால், தமிழ்நாடு முழுவதிலும் தலைமை வகிக்க உரியவர், தோழர் ஈ.வெ.ரா. அவர்களே. மேலும், வைக்கம் சத்தியாக்கிரகத்தை வெற்றிபெற நடத்தியதைக் கண்டிருப்பவர்கள், இந்த நெருக்கடியான காலத்தில், தமிழ்ப் பற்றுடையவர்கள்; தமிழ்நாட்டுத் தலைவராகத் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர, வேறு ஒருவரையும் நினைக்க முடியாது. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையும், பிரச்னைகளையும் சரிவர நடத்த வேண்டுமானால், அதில் அனுபவமும், அறிவும் பெற்றிருக்கும் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர, வேறு ஒருவரையும் காணோம். அன்றியும் இப்பொழுது இவ்வளவு சங்கடத்தில் தமிழர்களைக் கொண்டு வந்துவிட்ட தமிழ்ப் பற்றுடைய பார்ப்பனர் தோழர் இராஜ கோபாலாச் சாரியாரின் சூழ்ச்சி மனப்பான்மை, குறிக்கோள் இவற்றை அறியவும், முறியடிக்கவும் வல்லமையுடையவர், தோழர் ஈ.வெ.ரா. அவர்களேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கம் இன்று எஞ்சி நிற்பது தமிழ் நாட்டில் மட்டிலுந்தான்; அதுவும் சுயமரியாதை இயக்கத்தின் தான்; அதுவும் மிகச் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. கையில்தான் அடங்கியிருக்கிறது. சுயமரியாதை இயக்கமானது, தன் அனுபவத்தினாலும், பகுத்தறிவினாலும், தமிழ் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும்; தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்; தமிழ் மக்கள் சுயமரியாதை யுடைய வீரர்களாக ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தாமாகவே தனித்து நின்று, இவ்வியக்கத்தை தாபித்த பெருமை, தோழர் ஈ.வெ.ரா. அவர்களுக்கு மாத்திரம் உரியது. ஆகையினால், தமிழ் மக்கள் அனைவரும் அற்பசொற்ப அபிப்பிராய வித்தியாசங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஒன்று சேர்ந்து, தோழர் ஈ.வெ.ரா. அவர்களோடு ஒத்துழைப் பார்களேயானால், மேற்கண்ட லட்சியங்களில் வெற்றியடை வார்கள் என்பதற்கு யாதொரு தடையுமில்லை. பின் சரித்திரங்களில் எழுதப்படும் தீரபுருஷன்! கைவல்ய சுவாமியார் மதத்தாலும், மதகுருக்களின் போதனைக்குட்பட்ட கருணையற்ற ராஜாக்களின் கொடுமையாலும் முன்தோன்றின சீர்திருத்தக்காரர்கள் அழிந்தாலும், அவர்கள் சொன்னவை அழியவில்லை! அவற்றைச் சிறிது காலத்திற்கு முன்னிருந்த அறிவாளிகளும் சொன்னார்கள்; இப்பொழுதிருக்கும் அறிவாளிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். அவற்றையே, இராமசாமிப் பெரியாரும் பிரசாரம் செய்கிறார். இவ்விருபதாம் நூற்றாண்டில், தென்தேசத்தில் உண்டான அறிவின் பயனை யெல்லாம் அனுபவிக்கச் செய்த தீரபுருஷன் இராமசாமிப் பெரியாரே என்பது, பின் சரித்திரங்களில் எழுதப்படும்! பெரியார் எனது தலைவர்! W.P.A. சௌந்தரபாண்டியன் அவர்கள் (1929) சமதர்மக் கடனாற்ற ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றமடைந்து வருங்கால், அவ் வியக்கத்திற்குக் திடீரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடைச் செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அச்சந்தர்ப்பம் எது? அதுதான் தமிழ்நாட்டில் வீர கர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன் பல விளைந்து வருபவரான நமது மாபெருந் தலைவர் உயர்திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்களால் சுயமரியாதை இயக்கம் மக்களிடைப் பரவ ஆரம்பித்த புண்ணிய தினத்தையே, யான் இங்குக் குறிக்கின்றேன். எனது தலைவர் திரு.நாயக்கர் அவர்கள் அனுபவசாலி; ஆராய்ச்சியாளர். அவர் நாடெங்கும் சுற்றி, மக்களின் குணங்கள் யாவற்றையும் தீர உணர்ந்துள்ளார். இவ்விதப் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட நமது இயக்கத்தின் சிறப்பை, அதிகம் விவரித்துத் தற்பெருமை கொள்ள நான் விரும்பவில்லை. அஞ்சாமையைத் திறமையுடன் ஆள்பவர்! நகைச்சுவை அரசர், N.S.கிருஷ்ணன் அவர்கள் (1947) பகுற்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத பல கண்மூடி வழக்கங்கள், எப்படியோ நம் சமூகத்தில் வந்து புகுந்து, பல அக்கிரமங்களையும் புரிந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாழ்படுத்தின; பாழ்படுத்தி வருகின்றன. விதவா மணம் கூடாதாம்; சாதிரத்தில் இதற்கு இடமெல்லையாம்! ஆண்களுக்கொரு நீதி; பெண்களுக்கொரு நீதி. இன்னும் இம்மாதிரி எத்தனையோ மூடப் பழக்க வழங்கங்கள். தொட்ட இடத்திலெல்லாம் ஒரு தீய வழக்கம் வந்து குந்திக்கொண்டு, சமூக முன்னேற்றத்தைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கிறது. சில வேளை, இந்தப் பழமைப் பாம்பு படுத்துறங்குகிறது; பல வேளை படமெடுத்தாடுகிறது; விஷத்தைக் கக்குகிறது; பேதாபேதம் கற்பிக்கிறது; கூடி வாழும் மனித வர்க்கத்தைப் பிரித்துவைத்து, கொலைகளுக்கு ஏதுவாக நின்று, அது கண்டு மகிழ்கிறது. மதத்தின் பேரால் படுகொலைகள்! இந்த நாகப்பாம்பைத் தலையிலடித்துக் கொல்ல வேண்டும்! சீர்திருத்த வீரர்கள் வீறுகொண்டெழுந்து, இந்நற்றொண்டைச் செய்து வருகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு இது முதல் தொண்டு; முக்கியமான தொண்டுங்கூட. இதற்கு விதை போட்டு, வீறுகொண்டுழைத்தவர் நமது பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களென்பதை மறுக்கவோ - மறைக்கவோ எவராலும் இயராது. இதற்காகப் பெரியார் அடைந்த இன்னல்கள், இகழ்ச்சிகள்... ... அப்பப்பா, செப்புந் தரமன்று! பகுத்தறிவு இயக்கத் தந்தையின் நாவன்மையும், எழுத்து வன்மையும் அபாரம். அதுமட்டுமா, அஞ்சாமையை வெகு திறமையுடன் ஆளும் திறமை பெற்றவர்! பெரியார். எவ்வளவோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். தீண்டாமைக்கு-ஏன்-கண்ணாலும் பாராமைக்குப் பேர்பெற்ற தர்ம ராஜ்யம் மலையாளம். மக்களில் ஒரு வகுப்பாரைப் பார்த்தாலே தீட்டாம்! திட்டிவிடம் போலும். மலையாளத்தில் தீண்டாமையை முதன் முதலில் நீக்குவதற்கு உழைத்தவர் பெரியார்தான். வைக்கம் சத்தியாக்கிரகத்தைத் திறம்பட நடத்தி, வெற்றிகண்ட வீரர்! பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இதுதான் விதை. பெரியாரின் பகுத்தறிவுத் தீ, நாடெங்கும் பரவியது. இன்று இளைஞர்கள் உள்ளத்தில், அது வேரூன்றி விருட்சமாக வளர்ந்துவிட்டது! வாழ்க பெரியார்! உலகப் பெரியார்! தமிழ்ப்பண்டிதர், சாமி சிதம்பரனார் அவர்கள் (1939) பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப்பற்றி அறியாதவர்கள் ஒருவரும் இலர். ஒவ்வொரு முறையிலும், அவர் மிக முற்போக்கான கருத்துடையவர்... மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மிதவாதியாக இருந்து, பின்னர் மதப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூகவாதியாக இருந்து, பின்னர் சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து, பின்னர் சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப் புரட்சிக் காரராகப் பிறந்தார்! சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்! சமதர்ம வாதியாகப் பிறந்தார்! தம் கொள்கையை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தம் கொள்கைக்கு பிறர் இணங்கி வர வேண்டும்; பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவே மாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்கவேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரடீ, கன்பூஷிய, ஏசு கிறிது, முகம்மது நபி போன்ற பெரியார்கள், தங்கள் கொள்கைகளில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும், தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவர்களா யிருந்தனர். இன்றைய சீர்திருத்தவாதிகளில் இத்தகைய உறுதி யுடையவர் பெரியார் ஒருவரே. ஆதலால், இவர் உலகப் பெரியாராவார்! தோழர் ஈ.வெ.ரா. இன்று தமிழ்நாட்டில் இணையற்ற தலைவராக விளங்குகிறார். வழிகாட்டியாகப் போற்றப்படுகிறார்; தளராத உழைப்புடைய தொண்டராகக் காணப்படுகிறார். இவருடைய பழம் பகைவர்களுங்கூட இவருக்கு பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை மறுப்பதில்லை. பொது மக்களைத் தன் சார்பாக்கும் வல்லமை படைத்தவர் என்பதைத் தடுத்துச் சொல்வதில்லை. சில ஆண்டுகளுக்குமுன் தூற்றியவர்களும் இன்று போற்றுகின்றனர். தமிழ் மக்கள், இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றனர். விவாதத்தில் இவரை யாரும் வெல்லமுடியாது. அடுக்கடுக் காகக் கேள்விகளை போடுவார். சொற்களின் பொருள்களை விளக்க வேண்டுவார். எதிரிகள் கேள்விகள் கேட்டால், அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கிவிடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப்பட்டுக் கொண்டு திக்குமுக்காடுவார்கள். இவ்வாறு வாதமிடும் தன்மை கிரீ தேசத்துத் தத்துவஞானி சாக்ரடீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. நமது பெரியாருக்கும் இத்தன்மை இயற்கையில் அமைந்திருக்கிறது. ஆதலால், இந்தத் துறையில் இவரைத் தமிழ்நாட்டுச் சாக்ரடீ என்று கூறலாம். நம்நாட்டுப் பழம்பெரும் வள்ளல் புத்தர், எந்தெந்தக் காரியங்களைச் செய்தாரோ, அவைகளையே பெரியாரும் செய்து வருகிறார். புத்தர் வேதங்களைக் கண்டித்தார்; பெரியாரும் வேதங்களைக் கண்டிக்கிறார். புத்தர் சாதி பேதங்களைக் கண்டித்தார்; இவரும் அப்படியே. புத்தர் புரோகிதத்தையும், யாகம் போன்ற சடங்குகளையும் ஒழிக்க முயன்றார்; இவரும் அப்படியே, புத்தரும் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முயன்றார்; இவரும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதிலேயே கருத்தைச் செலுத்தி வருகிறார். ஆதலால், இவரைத் தமிழ்நட்டுப் புத்தர் என்றே கூறிவிடலாம். பர்னாட்ஷா, தம் மனதிற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார்; அறிவுக்குச் சரியென்று தோன்றியதை வெளிப் படையாகக் கூறுவார்; எவருடைய போற்றுதலையும், தூற்று தலையும் பொருட்படுத்தாமல் பேசிவிடுவார். இப்படித்தான் பெரியாரும், தமக்குச் சரியென்று தோன்றும் எவ்விதப் புதுக் கருத்தாயிருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்கு மென்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரைத் தமிழ்நாட்டுப் பர்னாட்ஷா என்று கூறலாம். *** சாதாரணமாகப் பொது வாழ்வில் இருப்பவர்கட்கு, அடிக்கடி வெறுப்புத் தோன்றுவதுண்டு. மிகப் பெரிய பணக்காரர் களுக்குத் தோன்றும். உடனே தங்கள் தொழிலைக் கவனிக்கச் சென்றுவிடுவார்கள். பொது வாழ்விலேயே தலையிடுவதில்லை என்று சத்தியஞ் செய்து விடுவார்கள். பெரிய படிப்பாளிகள், பட்டதாரிகள்கூட இப்படித்தான்; திடீரென்று ஒருவிதமான விரக்தி ஏற்பட்டுவிடும்; பொது வாழ்வையே தலை முழுகி விட்டதாக உறுதி செய்து கொள்ளுவார்கள். ஆனால், பெரியாரோ - இதில் இவர் இந்தியாவிலேயே பெரியார் தான் - மனித இயற்கைக்கே மாறுபட்டவர். தோல்வி என்பது, அவருடைய வீரத்தையும், அறிவையும் போட்டுக் காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்சக் காய்ச்சக், அவருடைய இவ்விரண்டு பண்புகளும் உருசியில் அதிகப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைப்போலவே வெற்றி கிடைத்தாலும், அதற்குமேல் செய்யவேண்டிதைப்பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப் பற்றியும்தான் கவலைப்படுவார். சில இழி மக்களைப்போல், வெற்றி மயக்கத்தால் கூத்தாடுஞ் சிறுமைக் குணம் அவரிடமில்லை. சுருங்கக் கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர் வீரர். (A Born Soldier). உலகத்திலேயே ஒரே ஒரு சாக்ரடீ; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின் லூதர்; ஒரே ஒரு அமானுல்லா;ஒரே ஒரு கெமால் பாட்சா; ஒரே ஒரு பர்னாட்ஷா; ஒரே ஒரு இராமசாமிப் பெரியார்தான் தோன்றுவார்கள்; தோன்ற முடியும். பிறப்புரிமை உணர்த்தியவர்! திருமதி. இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு காலத்தில் உன்னதமாய் வாழ்ந்துவந்த திராவிடர்கள் - தென்னாட்டிலுமல்லாமல், வடநாட்டிலும் சென்று பல அரசர்களை வென்று, நாடாண்ட திராவிடர்கள் - கிரேக், ரோம் ஈஜிப்ட், அபிசீனியா நாகரிகத்தைவிட மேலான நாகரிகம் படைத்த திராவிடர்கள் - ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று வாழ்ந்து வந்த திராவிடர்கள், இன்று சீர்குலைந்து, கட்டுடைந்து தம் நாட்டிலேயே தாசர்களாய் - அடிமைகளாய் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் இருப்பதென்றால், இதைவிட மானக்கேடான வாழ்க்கை வேறென்ன வேண்டியிருக்கிறது? அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி, அரும் பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதமின்றி வாழ்ந்து வந்த திராவிடரிடையே ஆரியம் புகுந்தபின், இந்துமதம் என்னும் நஞ்சால் மேல்பிறப்பு-கீழ்ப் பிறப்பு என்னும் பல்வேறு சாதிகளும், சமயங்களும் உண்டாக்கி, நாடும், நாட்டிலுள்ள மக்களும் அவ் வாரியத்திற்கடிமையாக்கப்பட்டனர். இதைக் கேட்க - காண - மனந் துணியாத திராவிடரும் உண்டா? மறப்பாலும், பிறப்பாலும் மதிப்பிழந்த திராவிடருக்குப் பிறப்புரிமை திராவிடதான் என்றுணர்த்திய நமது முடிசூடா மன்னராகிய பெரியார் இராமசாமியவர்கட்கு, நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டுச் சாக்ரடீ! கே.வி.அழகிரிசாமி அவர்கள் மேனாட்டில் அன்று பிறந்து வளர்ந்த சாக்ரடீ என்ற ஓர் அறிஞரைப்பற்றிக் கேட்டோம். ஆனால், கண்டோமில்லை. இவ்விந்தியாவிலேயே, அங்ஙனம் கண்டதாகக் கூறுவாருமில்லை. எனினும், இத்தமிழ்நாட்டில், இன்று அரும்பெரும் செயலாற்றும் ஒரு சாக்ரடீசைக் கண்டோம்; தடியோடு கண்டோம். அவர்தான், நம் ஈ.வெ.இராமசாமிப் பெரியார். அவரால் காணப்பட்ட நம் இயக்கமும், அவ்வியக்கத்தின் அழுத்தமான கொள்கைகளுந்தான், நான் மாற்றமையாததற்கும், தன் மதிப்போடு விளங்குவதற்கும் முதற்காரணம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அரிய பெரிய தொண்டு புரிந்தனர்! வழக்கறிஞர், தி.பொ. வேதாசலம் அவர்கள் உலகத்திலே பலப்பல காலங்களில், பெரியார்கள் சிலர் தோன்றிப் பல கருத்துக்களைச் சொன்னார்கள். அக்கருத்துக்கள் வளர்ந்து, நாளடையில் பெரிய மாறுதலை உண்டாக்கின. ஃபிரெஞ்சு நாட்டில் ரூசோ, பிறந்த போது மனிதன் சுதந்திரனாய் இருந்தவன், எங்கும் - பின் விலங்குடன் காணப்படுகிறான் என்றார். இந்த வாக்குப் பெரிய எண்ணங்களை எழுப்பி, அந்நாட்டு நிலையை முற்றிலும் மாற்றியது. அமெரிக்க நாட்டுத் தலைவரான லிங்கன், மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தும் அரசாங்கம் என்று சொன்னார். ஜனநாயகத்தின் அடிப்படையான தத்துவமாக, உலகமெங்கும் விளங்குவது அதுதான். 18ஆம் நூற்றாண்டில் பென்தாம் (Bentham) என்ற ஆங்கிலேயர், பெரும்பாலான மகிழ்ச்சியே வேண்டற் பாலதெனச் சொன்னார். அந்த வாசகங்கள் மக்கட்குப் பல நன்மைகளைத் தந்தன. இந்த வாசகங்கள் சில; உண்டுபண்ணும் பலன்கள் மிகப் பல. அவை அதிகம் சொல்லா விட்டாலும், எவ்வழி வாழ்க்கை நடக்க வேண்டுமெனக் கைகாட்டி போல் காட்டி நிற்கின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்குமுன், நம் அருமைத் தலைவரான பெரியார் சுயமரியாதையே சுகவாழ்வு என்று கூறினார். மனிதனை மனிதன் தொடக்கூடாதென்றும், தெருக்களிலும், குளங்களிலும், கோவில்களிலும், மடங்களிலும், வீடுகளிலும் மக்களைத் தொடக்கூடாதென்ற நிபந்தனைகளும்,பல மக்கள் சாதியின் காரணத்தால் படிப்பின்றிக் கடின வேலை செய்து கூலி பெறுவதும், சில உயர்சாதி மக்கள் பட்டாடைகளும், தங்க - வைர நகைகளும் அணிந்து உல்லாச வாழ்க்கை நடத்துவதும், பெருங் கூட்டமான மக்கள் நாயினும் கஷ்டப்பட்டு நடத்தப் படுவதும், கோவில்-கடவுள்-மடம் இவைகள் பேரால் பெரும் செல்வங்கள் வீணாக மக்களுக்குப் பயன்படாத வகையில் செலவழிக்கப் படுவதும், இவ்வாறான பல்வேறு நியாயமற்ற செய்கைகளைக் கண்டு மனங் கொதித்து, மக்களை நல்வழியில் திருப்ப எண்ணி, நம் பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். சுமார் 20 ஆண்டுகள் பத்திரிகை நடத்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், கிளர்ச்சிகள் பல செய்தும், பல சமயங்களில் சிறை சென்றும், தினந்தோறும் விடாமல் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், திருமணங்கள் பல நடத்தியும் இயக்கத்தை வளர்த்துத் தமிழ் மக்களிடையே பகுத்தறிவு புகட்டி, இளைஞர்கள் உள்ளத்தைச் செப்பனிட்டு, மூடவழக்கங்களை ஒழித்து, சாதிக் கொடுமை களைப் பல வகையிலும் குறைத்து சுயமரியாதைச் சுடரொளி நன்றாகத் தீப்பிடித்து எரியும் வண்ணம் செய்துள்ளார்... தமிழ் மக்கட்குக் குறிப்பாக அரிய பெரிய தொண்டு புரிந்திருப்பவர், நம் அருமைத் தலைவர் பெரியாரே யாவர்! கல்கத்தாவிற்குக் கிடைத்த பேறு! கல்கத்தா, பிரபல ஆங்கில இதழ், “Vanguard” (1944) எழுதியது இந்த மாநாட்டுக்கு வந்து, இதைச் சிறப்பிக்கப் போகும் மிக முக்கியமான பிரபலதர்களில் ஒருவர் தென்னாட்டுப் பழம்பெரும் கிழவனார் (The Grand Old Man of the South) பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆவார்கள். கீழ்சாதி மக்கள் தங்களை அடக்கி அழுத்திவரும் பார்ப்பனீய ஆட்சியை ஒழித்துக் கட்டுவ தற்காகச் செய்யும் முயற்சியும், பார்ப்பனரல்லாத சமுதாயம் புரோகிதக் கொடுமையை வேரோடு களைந்தெறிவதற்காக நிகழ்த்திவரும் புரட்சியுமே சுயமரியாதை இயக்கமாக உருக் கொண்டிருக்கிறது. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் சிருஷ்டிக்கர்த்தாவும், அதன் தலைவரும் பெரியார் இராமசாமி தான். அவர் அதிதீவிரமான புரோகித ஒழிப்புக் கொள்கை களையும், மத மறுப்புத் திட்டங்களையும் தென்னாட்டில் பிரசாரஞ் செய்து வருகின்றார். அவர் கல்கத்தாவிற்கு வருகிறார். தீப்பொறி பறக்கப் பேசும் ஒரு வெண் தாடி வேந்தரைக் காணும் பேறு, கல்கத்தாவிற்குக் கிடைக்கிறது. தனிப்பெரும் தர்க்கவாதி! சிங்கப்பூர், தமிழ்முரசு 30.09.1940ல் தீட்டிய தலையங்கக் குறிப்புகள் பன்னிரண்டு வயது பாலகன், கடைத்தெரு இராமநாத அய்யருடன் புரிந்த விதாண்டாவாதங்கள் எல்லாம் ஒன்று திரண்டு, இன்று ஓர் பிரமாண்டமான இயக்கமாகிவிட்டது! இந்திய சமூகங்களெல்லாம் மிரளும் படியாக அவ்வியக்கம், சமூகத்தையை தலைகீழாகப் புரட்டி வருகிறது. அன்று பேசிப்பேசி வம்பன் என்ற பட்டத்தைத் தேடிக் கொடுத்த அந்த நாவே, இன்று ஈடும், எடுப்புமில்லாப் பேச்சாளர் என்றும், தர்க்கத்தில் தலை சாய்க்காத ஒரு தனிப்பெருந் தர்க்கவாதியென்றும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது. இந்தியத் தலைவர்கள் எவருங் காணா வெற்றியைக் கண்ட வீரன், அந்த ஈ.வெ.ரா.வே எனின் மிகையாகாது. இந்திய நாட்டில் சத்தியாக் கிரகத்தை நடத்திய எத்தலைவரும் காணா வெற்றியை வைக்கத்திலும், இந்தி எதிர்ப்பிலுங் கண்ட வீரனே - ஈ.வெ.ரா. என்ற உத்தமன். செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியோர் போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு - பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்த பெரியாரின் பிறந்த நாள், மலாய் நாடெங்கணும் கொண்டாடப் படுகிறது. பெரியார் வாரம் மலாய் நாடெங்கும் கொண்டாடப் பட்டிருக்கும் சிறப்பைக் கவனித்தால், பெரியாரின் கொள்கைகள் இந்நாட்டுத் தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழம் வேரூன்றி விட்டதென்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. தன் மதிப்பியக்க ஆரம்பத்தில் அவரை நிந்தித்த வாய்களெல்லாம், இன்று புகழ் மாலைகளைச் சூட்டுகின்றன. அவரை அடிக்க நினைத்து ஓங்கிய கரங்களெல்லாம், இன்று கைகூப்பி நிற்கின்றன. தன்மதிப்பியக்கத் தந்தை இன்று தமிழரியக்கத் தளபதியாய் நிற்பதைக் கண்டு இந்நாட்டுத் தமிழகத் தோன்றல்கள் பெருமை பூண்டு உளம் பூரிக்கின்றார்கள். இந்தியை எதிர்ப்பவர் யார்! வங்காளத்திலிருந்து வெளிவரும் மாடர்ன் ரெவ்யூ ...தமிழ்நாட்டில் இந்திஎதிர்ப்புஇயக்கமொன்றுநடபெற்றுவருகிறது. அதன் தலைவர், தோழர் இராமசாமி ஆவார். இவர் தற்போதைய இந்திய கவர்னர் ஜெனரலின் ஒத்துழையாமை இயக்கக் காலத்திய தோழரும், சகாவும் ஆவார். மேற்படி இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு, ஆரியத்தை எதிர்த்து நிற்கும் திராவிடதான் இயக்கத்தின் முழு ஆதரவும் இருந்து வருகிறது. க்ஷப பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்  17.09.1879ல் ஈரோட்டில் பிறந்தார் பெரியார் ஈ.வெ.ராமசாமி.  10 வயதில் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார்.  12 வயதில் வியாபாரம் செய்யத் தொடங்கினார்.  19 வயதில் நாகம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.  25 வயதில் துறவு பூண்டு கல்கத்தா, காசி முதலிய வடநாட்டு ஊர்களுக்குச் சென்று வந்தார்.  ஈரோடு வட்டம் தேவதானக் கமிட்டித் தலைவராகப் பல ஆண்டுகளிருந்தார்.  ஈரோடு நகரசபைத் தலைவராகப் பல ஆண்டுகளிருந்தார்.  ஈரோடு நகரசபைத் தலைவராக இருந்தபொழுது குடிதண்ணீர்க் குழாய் அமைத்தார்.  ஈரோடு கவுரவ மாஜிடிரேட்டாக 12 வருடம் இருந்தார்.  1918ல் ஈரோடு சேர்மன் பெரியார். திரு.ராஜகோபாலாச் சாரியார் சேலம் சேர்மன்.  1919ல் ஈரோடு சேர்மன் பதவியை ராஜிநாமா செய்து காங்கிரசில் சேர்ந்தார் பெரியார்.  1920ல் காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டார்.  பொது நிலையங்களில் வகித்துவந்த 29 பதவிகளையும் ராஜிநாமா செய்தார்.  வருடத்திற்கு ரூ.20,000 வருமானமுள்ள வாணிபத்தை நிறுத்திக் காங்கிரசிற்கு உழைத்தார்.  திரு.காந்தியாரின் சீடரான பிறகு, ஆடம்பர ஆடையை விட்டுக் கதர் உடுத்தினார்.  80 வயது தாயார், மனைவி, மற்றுமுள்ளவர்களையும் கதர் உடுத்தச் செய்தார்.  திருச்செங்கோட்டுக் கதர் ஆசிரமத்தைத் திறந்து வைத்தார்.  கோர்ட்டுகளைப் பகிஷ்கரித்த காலத்தில் குடும்பத்துக்கு வர வேண்டிய ரூ.50,000த்தை இழந்தார்.  மது தரும் மரங்களை வெட்ட வேண்டுமென்று திரு.காந்தியார் சொன்னதும் சேலம் தாதம்பட்டியில் தன் தோட்டத்திலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டினார்.  1921ல் ஈரோட்டுக் கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்திச் சிறைப்பட்டார்.  1922ல் கள்ளுக்கடை மறியலில் தீவிரமாகக் குடும்பத்துடன் ஈடுபட்டார்.  போரின் முடிவு ஈரோட்டு ராமசாமி மனைவியின் கையில் இருக்கிறது என்று காந்தியாரே சொல்லும் நிலையை உண்டாக்கினார்.  1922-ல் திருப்பூர் காங்கிர மாகாண மாநாட்டில், மனுதர்ம சாதிரத்தையும், ராமாயணத்தையும் நெருப்பில் கொளுத்த வேண்டுமென்றார்.  1924ல் மலையாளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்காக மறியல் செய்து சிறைபுகுந்தார்.  22.05.1924ல் திருவாங்கூர் சர்க்காரால் தீண்டாமைக்காக இரண்டாவது முறை சிறைப்பட்டார்.  11.09.1924ல் கதர் பிரசாரம் செய்ததற்காகச் சிறைத் தண்டனை அடைந்தார்.  குருகுல ஆசிரமத்தில் உணவு சம்பந்தமாய்ப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரிவினை செய்ததற்குக் கண்டனமாகத் தமிழ்நாடு காங்கிர காரியதரிசி பதவியை உதறித் தள்ளினார்.  அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஜடி கட்சி கொண்டு வந்தபொழுது, காங்கிரசிலிருந்து கொண்டே அதை ஆதரித்தார்.  1924ல் தமிழ்நாடு காங்கிர 30வது திருவண்ணாமலை மாநாட்டிற்குத் தலைமை வகித்து உழைத்தார்.  1925ல் காஞ்சி காங்கிர மாநாட்டில், இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று சொல்லி, காங்கிரசிலிருந்து வெளியேறினார்.  கதர் போர்டு தலைவராகப் பல ஆண்டுகள் உழைத்தார்.  02.05.1925ல் குடி அரசு பத்திரிகையைத் துவக்கிச் சுயமரியாதைக் கொள்கையை விளம்பரப்படுத்தி எழுதினார்.  1926ல் சென்னை சட்டசபைக்குப் பொதுத் தேர்தல் நடந்த பொழுது ஒதுங்கி நின்றார்.  1926க்குப் பின் காங்கிரசை முழு வன்மையுடன் எதிர்த்தே வந்தார்.  1927ல் வருணாச்சிரமம் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியுமென்று காந்தியாரிடம் வாதிட்டார்.  காங்கிர, இந்துமதம், பார்ப்பன ஆதிக்கம் இவைகளை ஒழிக்க வேண்டுமென்று காந்தியாரிடம் சொன்னார்.  1927ல் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தினால் சிறைப்பட்டார்.  1927ல் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபொழுது முதலாவதாக வரவேற்கப்பட வேண்டுமென்று சொன்னவர் பெரியாரே!  1929ல் செங்கற்பட்டு முதல் மாகாண (மாநில) சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார்.  1929ல் நாட்டில் நாதிகர், தேசத்துரோகி, மதத்துரோகி என்ற வசை மொழிகளுக்கு ஆளானார்.  1929ல் மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் இவர்களைச் சிறைபுகச் செய்தார்.  திராவிடன் பத்திரிகைக்கு நிர்வாகியாக இருந்து தொண்டு பல செய்தார்.  கலப்புத் திருமணம், விதவைத் திருமணம், புரோகிதமற்ற திருமணங்களை ஏற்படுத்தி, பலரும் ஈடுபடச் செய்வித்தார்.  இராமாயண ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி மற்றும் பல ஆராய்ச்சிகளைக் குடி அரசு பத்திரிகை மூலம் வெளியிட்டார்.  1929ல் சுயமரியாதை இயக்கத்தைக் கண்ட வைதீகப் பார்ப்பனர்களும், சுயராஜ்யம் வேண்டாம்; வெள்ளைக் காரர்களே வேண்டுமென்று சொல்லும் நிலையை உண்டாக்கினார்.  1929ல் மலேயா நாட்டிற்குச் சென்று சுயமரியாதைக் கொள்கையைப் பரவச் செய்தார்.  1930ல் ஈரோட்டில் சுயமரியாதை மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடுகளைக் கூட்டினார்.  1931ல் விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைக் கூட்டி உழைத்தார்.  1931ல் கிறிதவர்களாலும், மகமதியர்களாலும், இந்து வைதீகர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டாலும், சமதர்மப் பிரசாரம் ஊர்தோறும் செய்தார்.  1932ல் ஈஜிப்ட், கிரீ, துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, பெயின், ஃப்ரான், போர்ச்சுகல் முதலிய நாடுகளின் அரசியல் நிலையைக் கண்டுவந்து 20-6-1932ல் இங்கிலாந்தில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசினார்.  11.11.1932ல் அய்ரோப்பா சுற்றுப்பிரயாணத்தை முடித்துக் கொண்டு ஈரோடு வந்து சேர்ந்தார்.  11.05.1933ல் நாகம்மையார் இயற்கை எய்தினார்கள். மறுநாளே - 12.05.1933ல் திருச்சி சென்று கிறிதவ திருமணத்திற்கு விதித்த 144 தடையை மீறி நடத்தினார்.  26.11.1933ல் ஈரோட்டில் சுயமரியாதை, சமதர்ம மாநாட்டைக் கூட்டினார்.  28.12.1933ல் ஈரோடு சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டில் சமதர்மத் திட்டம் தீட்டினார்.  தோழர் ஜெயப்பிரகாச நாராயண் பெரியார் வீட்டில் தங்கி, அவர் கட்சிக்கு அழைக்கப்பட்டார்.  30.12.1933ல் இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்? என்று எழுதியதற்காகச் சிறைப்பட்டார்.  1934ம் ஆண்டில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல் நடை பெற்றது. அதில் நீதிக்கட்சியினர் படுதோல்வி அடைந்தனர்.  இத்தோல்வியைப் பெரியார் மனமார ஒப்புக் கொண்டார்.  29.09.1934ல் கோவையில் நடந்த தமிழ் மாகாண காங்கிர மாநாட்டில் திரு.இராசகோபாலாச்சாரியார் பெரியார் திட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு காங்கிரசுக்காரர்கள் இதனை ஏற்கவேண்டுமென்று கூறினார்.  1934ல் கடனுக்குச் சிறைபிடிப்பது சரியல்ல என்று அச்சட்டத்தை எதிர்த்துச் சிறை சென்றார்.  10.03.1935ல் சுயமரியாதை இயக்கம் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் கொள்கையை உடைய பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தார் நம்பும்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  07.03.1936ல் குடி அரசு பத்திரிகையில் இந்தி பொதுமொழி யாக்குவதை எதிர்த்து எழுதினார்.  1937ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முதலில் எழுப்பினார்.  1937ல் காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தி மறியல் செய்யத் தீர்மானம் செய்தார்.  13.11.1938ல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னையில் நடந்தபோது பெரியார் என்ற சிறப்புப் பெயர் பெண் களால் கொடுக்கப்பட்டது.  06.12.1938ல் இந்தியை எதிர்த்து இரண்டு கடுங்காவல் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பெற்றார்.  29.12.1938ல் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பு அவர் சிறையிலுள்ளபோதே அவரிடம் வந்தது.  22.04.1939ல் காங்கிர சர்க்காரால் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டார். சர்.டாபோர்ட்கிரிப்சைச் சந்தித்துத் திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தினார்.  08.01.1940ல் பம்பாயில் ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர்களைச் சந்தித்து நாட்டுப் பிரிவினை குறித்தும், சமுதாய, மத இயல் குறித்தும் தம் கருத்துக்களை எழுதி விளக்கினார்கள்.  1941ம் ஆண்டில் தமது இளமைக் காலத்தில் சோவியத் ரஷ்யாவில் பொதுவுடைமை இயக்கத் தந்தையான லெனினுடன் இணைந்து பணியாற்றிய வங்க வீரர் எம்.என்.ராய் இந்தியா திரும்பிக் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், அதன் போக்குப் பிடிக்காமல் (Radical Democratic Party) ராடிக்கல் டெமாகிரேடிக் பார்ட்டியைத் தொடங்கி நடத்தினார். இவருடைய கொள்கைகள் பெரியாருக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய கருத்துக்களைக் குடி அரசு இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். 1941ல் பிப்ரவரித் திங்களில் அவர் தம் துணைவியார் செர்மானிய மாதரசி எல்.என்.ராயுடன் சென்னைக்கு வந்து பெரியாரின் விருந்தினராக இருந்தார். அகில இந்திய காங்கிரசு எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்கிக் காங்கிரசு அல்லாத மந்திரிசபை ஒன்றைச் சென்னையில் அமைத்து வழிகாட்ட வேண்டுமென்று எம்.என்.ராய் பெரியாரைக் கேட்டுக் கொண்டார்.  இவ்விடம் பிராமணாளுக்கு - இவரிடம் இதராளுக்கு என்று ரயில்வே நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் எழுதி வைத்து, அவ்வாறே பார்ப்பனர் உள்ளே வசதியாக உண்பதும், பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனர் போட்டதை வெளியே இருந்து உண்பதும் வழக்கமாக நெடுங்காலம் நடைபெற்று வந்தது. இது மிகவும் கொடுமை என்று பெரியார் ரயில்வே நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தி வந்தார். பெரியாரின் இந்த வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உணர்ந்த ரயில்வே நிர்வாகம் 20.03.1941ல் இந்த வேறுபாட்டை ஒழித்தது.  1942ம் ஆண்டில் குடி அரசு இதழ் இல்லாததால் அங்கிருந்து எழுத்துக்கள் - பெட்டிகள் - அலமாரி முதலியவைகளைப் பெரியார் தந்து உதவியதோடு நூறு ரூபாய் நன்கொடையும் உதவி 1942 மார்ச் 8ம் நாள் திராவிட நாடு வார இதழ் பேரறிஞர் அண்ணாவால் காஞ்சியில் தொடங்க வழி செய்தார். குடி அரசு இல்லாத குறையை இது போக்கு மென்றும், இதன் வளர்ச்சிக்கு இயக்க நண்பர்களும், மற்றவர்களும் உதவிசெய்ய வேண்டு மென்றும் பெரியார் அறிக்கை வெளியிட்டார்.  1942-மாணவராக இருந்த இளைஞரான கலைஞர் மு.கருணாநிதி காலணா விலையில் முரசொலி என்ற கையெழுத்தேட்டினை ஆகடு 10ம் நாள் தொடங்கிப் பெரியாரின் கருத்துக்களை இளமைத் துடிப்போடு வெளியிட்டு வந்தார்.  23.12.1942 முதல் 28.12.1942 வரை லட்சுமணபுரியில் நிகழ விருந்த அகில இந்திய தீவிர ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு தோழர் எம்.என்.ராய் அவர்கள் பெரியாருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். தம் கடிதத்தில் பின் வருமாறு எழுதினார்: ... நூற்றுக்கணக்கான தீவிர வாலிபர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் பெரியார் அவர்களைப் போன்ற அனுபவம் பெற்ற அறிஞர் களால்தான் மாநாட்டைத் தக்கபடி நடத்திச் செல்லமுடியும் என்றும், தற்கால நிலை பற்றியும், தென்னாட்டின் நிலைமை பற்றியும், பேசவேண்டு மென்றும் எழுதி இருந்தார். 21.12.1942 விடுதலை தரும் செய்தி.  24.03.1943ல் சோலையார் பேட்டையில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகத்திற்குத் தலைமை தாங்கிக் கலை என்பது பற்றிப் பேசினார். பல மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருந்த பெரியார் இந் நிகழ்ச்சிக்குத்தான் வந்து கலந்து கொண்டார்.  16.10.1943ம் ஆண்டு, 1941 ஜனவரி 4ம் நாள் நிறுத்தப்பட்ட குடி அரசு 16.10.1943ல் மீண்டும் தொடங்கப்பட்டது.  27.08.1944ல் சேலத்தில் கூடிய ஜடி கட்சி மாநாட்டில் தலைமைதாங்கி, ஜடி கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி, பட்டம், பதவி தேடிகளைக் கழகத்தினின்று வெளியேறும்படிச் செய்து, இயக்கத்திற்குப் புது வலிமை யூட்டினார்.  29.09.1944ல் திருச்சியில் இந்துமகா சபைத் தலைவர் மூஞ்சே - பெரியார் சந்திப்பு.  29, 30, 31.12.1944ல் கான்பூரில் நடந்த அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பார்ப்பனரல்லா தார் மாநாட்டிற்கு தலைமை தாங்கி, வடநாட்டிலும் கழகக் கருத்துக்களை ஏற்கும்படி பிரசாரம் செய்தார்.  1945ம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் 17வது நீதிக் கட்சி மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. அடுத்த நாள் டி.எம்.சண்முகம் தலைமையில் 4வது மாநிலச் சுயமரியாதை மாநாடு நடந்தது. இதன் வரவேற்புக் கழகத் தலைவராகப் பேரறிஞர் அண்ணா இருந்தார்.  1945ம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் குடி அரசு இதழில் கருப்புச் சட்டைப் படை அமைப்பு என்பதற்காக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். கருப்புச் சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.  11.05.1946ல் இயக்க வரலாற்றில் முக்கியம் வாய்ந்த மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாடு நடந்தபோது, பார்ப்பனரின் தூண்டுதலால் பந்தலுக்கு நெருப்பு வைத்தபோதும், தோழர்கள் தாக்கப்பட்ட போதும் உணர்ச்சிவயப்படாமல், கொதித்தெழுந்த தோழர்களை அமைதிப்படுத்திப் பல உயிர்ச் சேதங்களைத் தடுத்துத்-தான் ஒரு ஒப்பற்ற தலைவர் என்பதை நிலைநாட்டினார்.  1947 ஆகட் 15ம் நாள் சுதந்திரநாள் என்று எல்லோரும் - இயக்கத்திலிருந்த சிலரும் கூறியபோது, கும்மாளம் போட்ட போது, இல்லை; அது துக்க நாள்தான் என்று கூறி, துக்கநாளாகக் கொண்டாடச் செய்தார்.  சென்னைக்கு வடநாட்டுக் கவர்னர் நியமிக்கப்பட்டதை எதிர்த்துக் கருப்புக்கொடி பிடிக்கச் செய்தார்.  8, 09.05.1948ல் தூத்துக்குடியில் மாபெரும் திராவிடர் கழக மாநாடு.  17.07.1948ல் அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு.அவினாசி லிங்கனார் அவர்கள் - பள்ளியில் இந்தியைக் கட்டாயமாக்க முயற்சித்ததை எதிர்த்து சென்னையில் எல்லாத் தலைவர்களையும் அழைத்து மாநாடு கூட்டி, நாட்டில் எங்கும் போர்க்குரல் எழும்பச் செய்து அத்திட்டத்தை உடைத்தெறிந்தார்.  1948ல் குடந்தையில் பேச்சுரிமையை நிலைநாட்ட 144 தடை யுத்தரவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டார்.  1948ல் கவர்னர் ஜெனரலாக இருந்த திரு.சி.இராஜகோபா லாச்சாரியார் சென்னை வந்தபோது, அவரைப் பகிஷ்கரித்ததற்காக முக்கிய கழகத் தோழர்களுடன் கைது செய்யப்பட்டுச் சிறைப் பட்டார்.  09.07.1949ல் திருமதி மணியம்மையார் அவர்களைத் திருமணம் புரிந்து கொண்டதன் விளைவாக, இயக்கத்திற்கு ஒரு மாபெரும் ஏற்பாடு செய்தார்.  1950 ஜனவரி 26ந் தேதி இந்தியக் குடியரசு நாளை, தென்னாட்டாரை அடிமைப்படுத்தும் துக்கநாளாகக் கொண்டாடுக என அறிவுறுத்தினார்.  1950ல் பெரியார் அவர்கள்மீது பொன்மொழி புத்தகத்திற்காக 153A சட்டத்தின்கீழ், திருச்சியில் 6 மாதம் தண்டிக்கப்பட்டுப் பொதுமக்கள் கிளர்ச்சியினால் பத்தே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்.  1950ல் கைத்தறியாளர்கள் துயரைத் துடைக்க, வடநாட்டான் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படிச் செய்தார். ஆரியபவன் ஓட்டல் முன்பு பெரியார் அவர்களே முன்னின்று மறியல் செய்தார்.  1951ல் வகுப்புரிமைக்காக (கம்யூனல் ஜி.ஓ.) கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தச் செய்தார்.  1952ல் ஆகட் 1ந் தேதி ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போர் துவக்கிவைத்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இதை நடத்தினார். 1953ல் ஆபாச விநாயகர் உருவத்தை நாடெங்கும் உடைக்கச் செய்து, உருவ வணக்கக் கடவுள் - பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினார்.  1954ல் நவம்பர் திங்களில் உலக புத்தர் மாநாட்டில் கலந்துகொள்ளத் திருமதி மணியம்மையார் அவர்களுடன் பர்மா சென்றார்.  1954 டிசம்பரில் மலேயாவில் (இரண்டாம் முறையாக) சுற்றுப்பயணம் செய்து சுயமரியாதை பிரசாரம் புரிந்தார்.  1954ல் ஈரோட்டில் புத்தர் மாநாட்டையும், ஆச்சாரியார் கொண்டு வந்த வருணாச்சிரம குலக்கல்வித் திட்டத்தையும் ஒழிக்க மாநாடு கூட்டினார். ஆச்சாரியார் அரசாங்கத்திற்கு 3 மாத நோட்டீ கொடுத்தார்.  17.09.1954ல் நாகையில் தந்தை பெரியார் அவர்கள் 76வது பிறந்தநாள் விழாவன்று 76 பவுன்கள் தந்தனர்.  1955ல் தமிழ்நாடெங்கும் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பள்ளிகளில் மறியல் செய்தும், நாகையிலிருந்தும் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை ஒன்றை அனுப்பி, வழிநெடுகப் பிரசாரம் செய்துகொண்டே அப்படை சென்னை சென்றதும் மாபெரும் வெற்றி கண்டார்.  1955ல் பச்சைத் தமிழர் காமராஜர் ஆட்சி, தமிழர் நலனுக்காகக் கவலைப்படும் ஆட்சி எனக் கண்டு, அந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கோடு குடியாத்தம் உபதேர்தலில் திரு.காமராஜரை வெற்றி காணும்படிச் செய்தார்.  1955 ஆகடில் இந்தித் திணிப்பை எதிர்த்து, அரசாங்க கொடி கொளுத்தும் போராட்ட அறிவிப்புச் செய்து, மத்திய, சென்னை அரசாங்கங்கள் சார்பில் இந்தியைத் திணிப்பதில்லை என அறிக்கை விடச் செய்ததுடன், ரயில் நிலையப் பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் பெயர்களை மேலே பெரிதாக எழுதச் செய்து, இந்தியைக் கீழ் இறங்கும்படிச் செய்தார். 1956ல் இராமாயணப் புரட்டை அம்பலமாக்கி, இராமன் கடவுள் என்ற பித்தலாட்டத்தை உடைத்தெறிய, இராமன் படஎரிப்புப் போராட்டம் துவக்கி, நாடெங்கும் ஆயிரக்கணக்கில் இராமன் படத்தை எரிக்கச் செய்தார்.  12.09.1956ல் பொன்மலையில் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையில் பொன்னாடை போர்த்தினர்,  16.01.1957ல் திருச்சியில் பார்ப்பனர்களைக் குத்த, வெட்டச் சொன்னதாக வழக்குத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, உடன் விடுவிக்கப்பட்டார். வழக்கு நடந்து, செஷன்ஸூக்குக் கமிட் செய்யப்பட்டார்.  18.01.1957ல் திரு.வினோபாவே - பெரியார் சந்திப்புத் திருச்சியில் நிகழ்ந்தது.  திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (04.11.56ல்) கலெக்டர் திரு.மலையப்பன், I.A.S. அவர்களுக்கு, அவர் தமிழர் என்ற காரணத்தால் பழிவாங்கும் எண்ணத்தோடு இரு பார்ப்பன நீதிபதிகள் அய்க்கோர்ட்டில் தீர்ப்பு எழுதியமையைக் கண்டித்துப் பேசி, அதற்காகக் கோர்ட் அவமதிப்புக் குற்றத்திற்கு ஆளாகி, 23.04.1957ல் அபராதம் விதிக்கப்பட்டார். அப்போது பெரியார் அவர்கள் தந்த ஹைக்கோர்ட் டேட்மெண்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  1957ல் மே மாதத்தில் ஓட்டல் விளம்பரப் பலகைகளில் பிராமணாள் என்று இருப்பதை அழிக்க மாபெரும் கிளர்ச்சி செய்தார். தமிழ்நாடெங்கும் பெரும்பகுதி பிராமணாள் மறைந்தது. சென்னையில் அழிக்க மறுத்த ஒரு ஓட்டலில் மறியல் துவக்கி 9 மாதம் தொடர்ந்து நடத்தி, 1,023 பேரைச் சிறை புகச் செய்தார். 22.03.1958ல் அந்த ஓட்டலில் பிராமணாள் ஒழிந்தது.  10.08.1957ல் மத்திய திராவிடர் கழகச் செயற்குழுக் கூட்டத்தில் காந்தி கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார்.  03.11.1957ல் தமிழகத்தில் எந்தத் தலைவருக்கும் இதுவரை நடந்திராத முறையில் பெரியார் அவர்களின் 76ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டித் தஞ்சையில் அவருடைய எடைக்கு எடை வெள்ளிப் பணம் தந்து, நன்றியறிதலைத் தமிழர்கள் காட்டிக் கொண்டனர்.  அன்றே தஞ்சையில், சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை 4 லட்சம் மக்கள் கொண்ட மாநாட்டில் ஒரே மனதாக ஆமோதிக்கச் செய்தார்.  26.11.1957ல் தந்தை பெரியார் அவர்கள் ஆணைப்படி சுமார் 4,000 பேர்களுக்கு மேல் கழகத்தோழர்கள் இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தி, மே மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை (கடின காவல்) தண்டிக்கப்பட்டுச் சிறை புகுந்தனர்.  சுமார் 15 தோழர்களுக்குமேல் இந்த சாதி ஒழிப்புப் போரில் சிறைக் கொடுமையால் பலியானார்கள்.  14.12.1957 அன்று செஷன்சு கோர்ட்டில் மூன்று செக்ஷனுக்குள்ளாக ஆறு ஆறு மாதங்கள் வீதம் ஒன்றரை ஆண்டு தண்டனை தரப்பட்டு, ஏககாலத்தில் 6 மாதத்தில் அனுபவிக்கலாம் எனத் திருச்சியில் தீர்ப்பு அளிக்கப்பட்டுச் சிறை புகுந்தார்.  13.05.1958 ல் சென்னையில் விடுதலை அடைந்ததும் தமிழ் மக்கள் இதுவரை தமிழ்நாடே கண்டிராத முறையில் எல்லா ஊர்களிலும் வரவேற்பு அளித்துக் கொண்டாடினர்.  08.02.1959ல் வடநாட்டில் அகில இந்திய ரிப்பப்ளிகன் கட்சியினர் அழைப்பிற்கிணங்க கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் போன்ற பெருநகரங்களில் சாதி ஒழிப்புப் பிரசாரம் புரிந்தார். டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு, நீங்கள் எங்கள் தலைவர் என்று பெருமையுடனும், பூரிப்புடனும் அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.  59ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடநாட்டுச் சுற்றுப் பயணம் முடித்து வெற்றியுடன் திரும்பிய தந்தை பெரியார் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு தந்து தமிழர்கள் பெருமை பெற்றனர்.  சென்னையில் கழக இடத்தில் (சுமார் 2 லட்சம் பெறுமானமுள்ள) கழகக் கட்டடம் கட்ட நிதி ரூ.50,000 தேவை என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள். தமிழ்ப் பெருமக்கள் அதன் அருமையை உணர்ந்து சுமார் 1 லட்சத்து அய்ம்பதாயிரம் நிதி சில மாதங்களிலேயே தந்தனர்.  1960ல் தமிழ்நாட்டின் பிரிவினையை வலியுறுத்தி, இந்திய தேசப் படத்தை (தமிழ்நாடு நீங்கலாக) தமிழ் நாடெங்கும் எரிக்கச் செய்தார். தடுப்புக் காவல் சட்டம் 151ன் படி தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார்.  17.01.1961 அன்று தமிழர் தலைவர் என்ற பெயரில் பெரியாருடைய வாழ்க்கையை பெரியாருள்ள போதே மிகச் சிறப்பாக எழுதியவரும், சமூக சீர்திருத்தத்தில் மிகப் பல ஆண்டுகளாகப் பெரியாருடன் ஒத்துழைத்தவரும், விடுதலை இதழின் ஆசிரியர் திரு.குருசாமி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது விடுதலை இதழின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பார்த்தவரும், கலப்புத் திருமணமாக விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவரும், பல நூல்கட்கு ஆசிரியருமான சாமி. சிதம்பரனார் அவர்கள் காலமானார்.  13.03.1961ல் மதுரை தியாகராசர் கல்லூரியில் சிந்திக்கும் தன்மையில்லாததால் தமிழர் சமுதாயத்துக்கு வந்த கேடுகளை விவரித்து உரையாற்றினார்.  1962ல் பச்சைத் தமிழர் காமராசர் மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கச் செய்யத் தந்தை பெரியார் தேர்தல் களத்தில் அரும்பாடுபட்டார்.  19.05.1962ல் வாழப்பாடியில் பெரியார் பேசும்போது, மூன்று பேய்கள் பற்றியும், அய்ந்து நோய்கள் பற்றியும் முதன் முதலில் பேசினார். எல்லோருக்கும் புதுமையாய்த் தோன்றிற்று. பேய்கள் மூன்று : 1.கடவுள், 2.சாதி - மதம், 3. ஜனநாயகம்.  நோய்கள் அய்ந்து : 1.பார்ப்பான், 2.பத்திரிகை, 3.அரசியல் கட்சி, 4. தேர்தல், 5. சினிமா. ற 1963ல் தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பைவிட்டு விலகி, காமராசர் அகில இந்திய அரசியலுக்குச் சென்ற பொழுது, தந்தை பெரியார் அதை எதிர்த்துக் கீழ்க்காணும் தந்தியைக் கொடுத்தார் : “Either of your own accordance or on the advice of others, your resignation of chief ministership will be suicidal to you, to your party and Tamilnadu”  19.04.1964ல் சுப்ரீம் கோர்ட் கண்டனம்: ஏழை மக்களுக்கு வாழ்வளிக்கும் நில உச்சவரம்பு சட்டத்தைச் சொல்லா தெனத் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் அநீதியைச் சுட்டிக்காட்டி 19.04.1964 அன்று தமிழ்நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடக்கச் செய்தார்.  25.05.1964 அன்று காரைக்கால் அம்பகரத்தூரில் கிடா வெட்டு எதிர்ப்புக் கிளர்ச்சி : இவ்வூரில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் காளி கோயிலுக்கு எருமைக் கிடா வெட்டும் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து, தந்தை பெரியார் ஆணைப்படி கிளர்ச்சி நடைபெற்றது. அடுத்த ஆண்டு முதல் இதைத் தடுக்க அரசே சட்டம் செய்யும் என்று புதுவை அரசு வாக்குறுதி அளித்தது; அதன்படி நிறுத்தப்பட்டது.  15.06.1964ல் திருச்சியில் மாணவர் பயிற்சி முகாம் 20 நாட்கள் நடைபெற்றது. தந்தை பெரியார் அரிய உரைகள் நிகழ்த்தினார்.  10.04.1965ல் கம்பராமாயணத்துக்குத் தீ! நாடெங்கும் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைப்படி திராவிடர் கழகத் தினரால் கம்பராமாயணத்துக்குத் தீயிடப்பட்டு, விடுதலை அலுவலகத்திற்குச் சாம்பல் அனுப்பி வைக்கப்பட்டது.  24.08.1965; பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி : தந்தை பெரியார் அவர்கள் தமிழரினக் கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.5.5 லட்சம் பணம், கட்டடம் நிலமாக அளித்ததை ஏற்று, அரசினரால் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி என்ற பெயரில் திருச்சி காஜாமலைப் பகுதியில் கலெக்டர் கோ.சொக்க லிங்கம் தலைமையில் முதலமைச்சர் பக்தவசலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அழைப்பிற் கிணங்க தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.  07.11.1966 அன்று டில்லியில் அகில இந்திய காங்கிர தலைவர் காமராஜர் அவர்களை பசுவதைத் தடுப்பு என்னும் பெயரில் அவரைக் கொல்ல, அவர் வீட்டுக்குத் தீ வைத்ததைக் கண்டித்து, பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியை அம்பலப்படுத்தி, தமிழர்களே! கத்தி வைத்துக் கொள்ளுங்கள் - சீக்கியர் போல! என்று அறிக்கை விட்டார்கள்.  14.11.1966ல் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்! - தந்தை பெரியார் வேண்டுகோள்.  09.04.1967ல் திருச்சியில் திராவிடர் கழக மத்திய நிர்வாகி களின் தனிக்கூட்டம். 1967 பொதுத் தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய முறைகள் பற்றி தந்தை பெரியார் அவர்களின் ஆணையையேற்று இக்கூட்டம் கூடி, தந்தை பெரியார் அவர்களின் அறிவுரைகளை ஏற்று இறுதியாகக் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. நம் உயிர் போன்ற கொள்கைகளுக்கு இன்றைய ஆட்சியின் போக்கால் கேடுகள் நேராத வரையில் எவ்வித எதிர்ப்பும் காட்ட வேண்டிய அவசியமில்லையென்றும், இதுவே நமது தெளிவான நிலை என்றும் தந்தை பெரியார் அவர்கள் வழங்கிய அறிவுரையை இக்கமிட்டி கட்டளையாக ஏற்றுக் கொள்கிறது.  09.08.1967ல் திருச்சியில் திருமதி பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் விடுதி அடிக்கல் நாட்டு விழா.  தந்தை பெரியார் அவர்கள் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்த குழந்தைகள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா - முதலமைச்சர் அண்ணா அடிக்கல் நாட்டினார். அய்யா, அம்மா கலந்து கொண்டார்கள்.  06.10.1968ல் கரூர் நகரில் தந்தை பெரியார் அவர்களுக்கு புதிய வேன் - நகரும் குடில் - அன்பளிப்பு விழா நடைபெற்றது.  12.10.1968ல் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் பொதுச் செயலாளர் கி.வீரமணி ஆகியோர் உத்திரப் பிரதேச தலைநகரான லக்னோ போய்ச் சேர்ந்தனர். உ.பி. மாநில தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டு வரவேற்புக் குழு தந்தை பெரியார் அவர்களை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக வரவேற்றது.  13.10.1968ல் லக்னோ மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றினார். மாநாட்டு மண்டபத்திற்குள் தந்தை பெரியார் நுழைந்தபொழுது, ராமசாமி நாயக்கர்கி ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு வரவேற்றனர்.  சாதி இழிவு ஒழிய டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று மாநாட்டில் தந்தை பெரியார் முழக்கமிட்டார்.  03.02.1969 நள்ளிரவு 12.12 மணி, தந்தை பெரியார் அவர்கள் கண்டெடுத்த தளபதி அறிஞர் அண்ணா மறைவு. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது, எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது, நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவமாகும் என்று தந்தை பெரியார் அவர்கள், அறிஞர் அவர்களின் மறைவுகுறித்து கருத்துத் தெரிவித்தார்கள்.  08.02.1969 சென்னை கடற்கரையில் அறிஞர் அண்ணா மறைவு குறித்து சென்னை ஷெரீப் ஏற்பாடு செய்த பல கட்சிக் கூட்டத்திற்கு கவர்னர் உஜ்ஜல் சிங் தலைமை வகித்தார். தந்தை பெரியார், பிரதமர் இந்திராகாந்தி, சி.இராசகோபாலாச்சாரியார், கலைஞர் மு.கருணாநிதி முதலானோர் கலந்து கொண்டனர்.  25.04.1969ல் தர்மபுரியில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா. நிதி அமைச்சர் மதியழகன் தலைமையில் முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.  17.09.1969: தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா. மாண்புமிகு நாவலர் இரா.நெடுஞ் செழியன் தலைமையேற்க முதலமைச்சர் மாண்புமிகு மு.கருணாநிதி தந்தை பெரியார் சிலையைத் திறந்துவைத்தார். தந்தை பெரியார், விழாவில் கலந்து கொண்டார்கள்.  21.10.1969: தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டத்தில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவதெனத் தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப் பட்டது.  04.11.1969: கழக ஏடான விடுதலைக்கு கிழக்கு ஜெர்மனி யிலிருந்து லட்ச ரூபாய் செலவில் வரவழைக்கப்பட்ட விக்டோரியா 820 எனும் புதிய அச்சு இயந்திரம் இயங்கு விழா நடைபெற்றது.  16.11.1969: திருச்சியில் கூடிய மத்திய திராவிடர் கழகக் கமிட்டியில் ஜனவரி 26ம் நாள் (1970) தமிழகமெங்கும் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி துவக்குவதாகத் தந்தை பெரியார் அறிவித்தார். இக்கிளர்ச்சியில் வழக்காட உதவிபுரிய ஏராளமான வழக்கறிஞர்கள் தாமாக முன் வந்தனர்.  14.01.1970ல் உண்மை மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. 10,000 சந்தாக்கள் எடுத்த எடுப்பிலே குவிந்தன. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, இதழை வெளியிட்டார்.  22.01.1970ல் பிற்படுத்தப்பட்டோர் குழுவுக்கு தந்தை பெரியார் பேட்டி. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுத் தலைவர் ஏ.என். சட்டநாதன் குழுவினர், தந்தை பெரியார் அவர்களை 22.01.1970 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் பேட்டி கண்டனர். அரிய ஆலோசனைகளை அய்யா அள்ளி வழங்கினார்.  11, 12.04.1970: மாயூரம் நகரில் வட்ட மாநாடுகள், உணவுச்சாலைகளில் பிராமணாள் நீக்கக் கிளர்ச்சி அறிவிப்பு. பல ஊர்களில் வேண்டுகோள் அடிப்படை யிலும், சில ஊர்களில் கிளர்ச்சிகளின் அடிப்படையிலும் தமிழ்நாடெங்கும் பிராமணாள் ஒழிந்தது.  27.06.1970: தந்தை பெரியாருக்கு யுனெகோ விருது அய்.நா.பண்பாட்டு அமைப்பு மன்றத்தின் (யுனெகோ) சார்பில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், முதல்வர் கலைஞர் கருணாநிதி விருதை வழங்கினார். அவ்விருதுப் பட்டயத்தில், புது உலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீ சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்த மற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி இருந்தார்கள்.  20.09.1970ல் சேலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா. கோவையில் தொழில் மேதை ஜி.டி.நாயுடு அவர்கள் தலைமையில் டாக்டர் சந்திரசேகர் அய்யா சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.  25.09.1970ல் திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தார். தந்தை பெரியார், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.  01.11.1970: பம்பாயில் தந்தை பெரியார். பம்பாய் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தந்தை பெரியார், அறிஞர் ஆகியோரின் பிறந்தநாள் விழாக்களை சிறப்புடன் கொண்டாட தந்தை பெரியார் அவர்கட்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்று, தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார், பொதுச் செயலாளர் கி.வீரமணி ஆகியோருடன் 28.10.1970 பிற்பகல் 2.-15மணிக்கு வேன்மூலம் பம்பாய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பெங்களூர் வழியே தந்தை பெரியார் குழு 07.11.1970 அன்று திருச்சியை வந்து அடைந்தது.  02.12.1970ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கு சட்டஉருவம் கொடுக்கும் முறையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மசோதா எவ்வித எதிர்ப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  23, 24.01.1971ல் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, 24.01.1971ல் ஞாலம் புகழ் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம். அய்யா பவனி வந்தார். ஊர்வலத்தில் இந்துமதக் கடவுள்களின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தும் சித்திரங்கள் டிரக்குகளில் இடம் பெற்றன. இராமனுக்குச் செருப்படி வீழ்ந்ததும், இறுதியில் இராமனுக்குத் தீ மூட்டப் பட்டதும் இந்த மாநாட்டில்தான். ‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது! ‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது! என்ற சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டதும் இந்த மாநாட்டில்தான். இவைகளை வைத்துக் கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது பாதந்தாங்கிகளும் தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.  11.03.1971ல் தேர்தல் முடிவுகள். திராவிடர் கழகத்தின் சேலம் மாநாட்டையே மையமாக வைத்து நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் கொள்கைக்கு வெற்றியாக தி.மு.க. பெருவாரியான அளவில் வெற்றிபெற்றது. 138 ஆக இருந்த தி.மு.க. இத்தேர்தலில் 183 இடத்தைப் பிடித்தது.  12.03.1971ல் தேர்தல் முடிவு வெளியானதும், தந்தை பெரியார் அவர்களை தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் சந்தித்து, மலர் மாலை சூட்டி, மரியாதையையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள்.  15.03.1971ல் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள் பதவி ஏற்பு. தந்தை பெரியார் வருகை தந்திருந்தார்கள். அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொரு வரும் பதவிப் பொறுப்பேற்றவுடன் தந்தை பெரியார் அவர்களைக் கண்டு வாழ்த்து பெற்றனர்.  19.06.1971ல் மதுவிலக்கு ஒழிந்தது. தந்தை பெரியார் அவர்களின் அறிவுரையையேற்று தமிழ்நாடு அரசு மதுவிலக்கை ஒழித்தது.  28.07.1971 சூத்திரர்கள் அரசே கலைஞர் பிரகடனம். தமிழ்நாடு அரசு, நாலாஞ் சாதி மக்களான சூத்திரர் களுக்காக பாடுபடும் அரசுதான் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் பிரகடனம் செய்தார்.  17.09.1971ல் ஈரோட்டில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். தந்தை பெரியார் அவர்களும் கலந்துகொண்டு அரிய உரை நிகழ்த்தினார். விழாவில் நகர மக்கள் சார்பில் அய்யா அவர்களின் 93 வயதைக் குறிக்கும் வகையில் 93 நூறு ரூபாய் (ரூ.9300) நோட்களை அய்யா அவர்கட்கு வழங்கினார்.  அன்று மாலை 6 மணிக்கு ஈரோடு நகர மன்றம் தந்தை பெரியார் அவர்கட்கும், அமைச்சர் பெருமக்கட்கும் மாபெரும் வரவேற்பு அளித்து மகிழ்ந்தது.  23.09.1971ல் திராவிடர் மாணவர் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தவேண்டிய அவசியம் குறித்து விடுதலையில் தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார்.  04.11.1971ல் சேலத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளி சிம்மாசன அளிப்புவிழா நடைபெற்றது.  10.03.1972 முதல் 15.03.1972 வரை தஞ்சை மாவட்டம் வேளாங் கண்ணியில் சுயமரியாதைப் பிரசார பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 14, 15 தேதிகளில் தந்தை பெரியார் அவர்களே அங்குத் தங்கி மாணவர்கட்கு அறிவுரை வழங்கினார்கள்.  09.05.1972ல் தர்மபுரி மாவட்டம் தாதம்பட்டியில் சுய மரியாதைப் பிரசார பயிற்சி வகுப்பு 9-5-72 முதல் துவங்கி நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் அங்கேயே தங்கி மாணவர்களுக்கு நல்லுரைகள் புகன்றார்கள்.  15.06.1972ல் மயிலாப்பூர் கபாலீவரர் கோயில் முன் நடைபெற இருந்த கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியை ஒத்திவைத்துத் தந்தை பெரியார் அறிக்கைவிட்டார்.  16.06.1972 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை, மயிலாப்பூர் கபாலீவரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்கார கிளர்ச்சியைத் துவக்க 10.06.1972 அன்று சென்னை பெரியார் திடலில், பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட தி.க. கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.  13.08.1972ல் கடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா - மாபெரும் ஊர்வலம். தமிழ்நாடு மேலவைத்தலைவர் மாண்புமிகு சி.பி.சிற்றரசு அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தந்தை பெரியார் சிலையைத் திறந்துவைத்தார். உணவு அமைச்சர் ப.உ.சண்முகம் பகுத்தறிவுக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். விழாக் குழுவின் சார்பில் அமைச்சர் இராமச்சந்திரன், அய்யா அவர்கட்கு ரூபாய் பத்தாயிரம் கொண்ட பணமுடிப்பை வழங்கினார்.  19.08.1973ல் தஞ்சையில் பெரியாருக்கு வேன் அன்பளிப்பு.  16, 17.09.1973ல் அன்று சென்னையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்புடன் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் நேரில் கலந்துகொண்ட கடைசி பிறந்தநாள் விழா இதுதான்.  30.09.1973ல் மதுரையில் மாபெரும் கருப்புச்சட்டை மாநாடு, மாலை - தந்தை பெரியார் சிலை திறப்பு விழா. தலைவர்: அமைச்சர் எ.இராமச்சந்திரன். திறப்பாளர்: அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன். தந்தை பெரியார் அவர்களும் கலந்துகொண்டு சிறப் பித்தார்கள்.  08.12.1973ல் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாகக் கூட்டிய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  19.12.1973ல் சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றிய மரணசாசனம் - இறுதி சொற்பொழிவு.  20.12.1973ல் இரனியா நோய் (குடலிறக்கம்) தொல்லை காரணமாக சென்னை பொதுமருத்துவமனையில் தந்தை பெரியார் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.  21.12.1973ல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தந்தை பெரியார் விருப்பப்படி, அய்யா அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தீவிரமான சிகிச்சையை நம் இனத் தந்தைக்கு திறன்மிக்க மருத்துவக் குழு அளித்தது.  24.12.1973ல் தந்தை பெரியார் மறைந்தார். காலை 7-22 மணியளவில் மானிட உலகின் மாபெரும் சிற்பி - தமிழினத்தின் தனிப்பெருந் தந்தை - பகுத்தறிவு வாழ்வுக்கு உயிர் மூச்சாம் நம் அருமைத் தலைவர் தந்தை பெரியார், மானிட சமூகத்தை நீங்காத் துயரக் காட்டில் தள்ளிவிட்டுத் தன் இறுதி மூச்சைத் துறந்தார்.  அன்று பிற்பகல் அய்யா உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அனேகமாக தமிழின மக்கள் அனைவருமே இனத்தலைவரை இறுதியாக சந்திக்க சென்னைக்கே குடியேறிவிட்டனர்!  25.12.1973 பிற்பகல் 3 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு மாலை 4-15 மணிக்குச் சென்னை பெரியார் திடலில் வந்தடைந்தது. அரசு மரியாதையுடன் அய்யா உடல் தேக்கு மரப்பெட்டியில் வைத்து மாலை 4-57 மணிக்கு பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.  06.01.1974ல் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் திராவிடர் கழகத்திற்குத் தலைமை ஏற்றார்.  16.03.1978ல் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மறைந்தார்.  17.03.1978ல் திராவிடர் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராக கி.வீரமணி பொறுப்பேற்றார்.