தொல்காப்பிய உரைத்தொகை - 17 சொல்லதிகாரம் பேராசிரியம் - 1 பின்னான்கியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1943 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 17 பொருளதிகாரம் - பேராசிரியம் - 1 பின்னான்கியல் முதற்பதிப்பு - 1943 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+480 = 512 விலை : 800/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 512  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு உயிர். உயிர்மயங்கியல் உரு. உருபியல் எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலித். கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குற். குற்றியலுகரப் புணரியல் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப்படலம் சிலப். சிலப்பதிகாரம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தொல். தொல்காப்பியம் நாலடி. நாலடியார் நூன். நூன்மரபு பட்டினப். பட்டினப் பாலை பிற். பிற்சேர்க்கை புள்ளி. புள்ளிமயங்கியல் புணர். புணரியல் புறம். புறநானூறு பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மர. மரபியல் மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. (திரு)முருகாற்றுப்படை யா.வி. யாப்பருங்கல விருத்தி உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 இயலமைதி ....... 26 வாழ்வியல் விளக்கம் ....... 30 பேராசிரியர் ....... 181 கடவுள் வாழ்த்து ...... 197 பதிப்பாசிரியர் முகவுரை ....... 199 சிறப்பு முகவுரை ....... 210 உரையாசிரியர் வரலாறு ....... 211 சிறப்புப்பாயிரம் ....... 213 மெய்ப்பாட்டியல் ....... 216 மெய்ப்பாட்டியற் சுருக்கம் ...... 234 உவமவியல் ...... 361 உவமையியற் சுருக்கம் ...... 375 குறிப்புகள் ...... 480 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல் காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல் காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்ப வும்,பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது என்னும் கருத்தால், பழைய காப்பியக்குடியில் உள்ளான் என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு விருத்த காவ்யக்குடி என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி காவ்ய மாதா எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளை யும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெய ரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் பல்காயம் என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லு லகத்து வழக்கும் செய்யுளும் ஆய்ந்து, தமிழியற்படி எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும் (1006) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும் (1336) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே (385) எனத் தமிழமைதியையும், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல் காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வட நாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக்கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்தி ரண்டனுள் ஆயிரம் விரித்த என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்பு களை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்று தானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களை யுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களை யுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் எத்துணையோ பரிபாடல்களின் அமைதி யைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களை யடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளையடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல் காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் சேமமட நடைப் பாட்டி என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் பாட்டி என்பது பன்றியும் நாயும் என்றும் நரியும் அற்றே நாடினர் கொளினே என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ பாட்டி என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக் கிறந்தது என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாரா யினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல் காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் பூரியர்கள் மற்றைய வர்கள் எனவும் கலித்தொகையில் ஐவர்கள் எனவும் வழங்கு கின்றது. அன் ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட மார், தோழிமார் எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, அடுக்கியகோடி என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டி யிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற் பட்டதாகாது. இக் கருத்துகளைப் பேரா. க. வெள்ளை வாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப் பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், தண்டமிழ் ஆசான் சாத்தன் என இளங்கோவடி களாரால் பாராட்டப் பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும், திருக்குறளைப் பொருளுரை என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். அறமுதலாகிய மும்முதற் பொருள் என்பது தொல்காப்பியம். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத் திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் அறம் என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக் கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன் மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ஓரை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ஹோரா என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். யவனர் தந்த வினைமாண் நன்கலம் இவண் வந்ததும், அது பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு) பெயர்ந்ததும், யவன வீரர் அரண்மனை காத்ததும் முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் தோகை அரி முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ஓரை என்பது. அச் சொல்லை அவர்கள் அங்கு ஹோரா என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. âUkz¤ij KG¤j« v‹gJ«, âUkz ehŸ gh®¤jiy KG¤j« gh®¤jš v‹gJ«, âUkz¡ fhšnfhis ‘KG¤j¡fhš’ v‹gJ«, ‘v‹d ïªj X£l«; KG¤j« jt¿¥nghFkh? என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, நாள்மீன் விரவிய கோள் மீனுக்கு உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து மாலியரோ எனின், குறிஞ்சி முதலா உரிப் பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடு பட்ட செய்தி யன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெரு வழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமண சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமண சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையள விலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. மாவும் மாக்களும் ஐயறிவினவே என்னும் தொல்காப்பியர், மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமண சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், நில்லா உலகம் புல்லிய நெறித்தே என உலகம் நிலையாமை பொருந்தியது என்ற அளவிலேயே அமைகிறார். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணை யியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் புரைதீர்காமம் என்றும் (1027) காமப் பகுதி கடவுளும் வரையார் என்றும் (1029) கூறியிரார். ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும் என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதை யும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்றும் (1034), புறநிலை வாழ்த்து, வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் வழிபடு தெய்வம் என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் தெய்வம் உணாவே என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை, அருளொடு புணர்ந்த அகற்சி, காமம் நீத்தபால் என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந் தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும் படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச் சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பிய ரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வது போல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்ததாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார். என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லிய தோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம் என்று வாய் மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமை யுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணை யியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப் படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ் வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டி ருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர் நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர். (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல் காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல் கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப. மழவும் குழவும் இளமைப் பொருள. ஓதல் பகையே தூதிவை பிரிவே. வண்ணந் தானே நாலைந் தென்ப. ஓரியல் யாப்புரவு ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல் என்பது தொல்காப்பியர் வழக்கம். வல்லெழுத் தென்ப கசட தபற மெல்லெழுத் தென்ப ஙஞண நமன இடையெழுத் தென்ப யரல வழள சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே. என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற் பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையி லேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற் றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். அளபெடைப் பெயரே அளபெடை இயல. தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல. என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடி களுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத் துக் கண்டு கொள்க. மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையு இவை அடி எதுகைகள். விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. வயவலி யாகும் வாள்ஒளி யாகும் உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடை மொழிகளால் சுவைப் படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. இழுமென் மொழியால் விழுமியது பயிலல் எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பா வாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். வகரக் கிளவி நான்மொழி ஈற்றது அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். தாமென் கிளவி பன்மைக் குரித்தே தானென் கிளவி ஒருமைக் குரித்தே ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி இளையர் உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்ட னைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா கைக்கிளை முதலா எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றி லக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத் திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. ஏறிய மடல் திறம் என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். மறம் எனப்படும் துறையும் கண்ணப்பர் திருமறம் முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. உண்டாட்டு என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. தேரோர் களவழி களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ஏரோர் களவழி என்பது பள்ளுப்பாடலாகவும், குழவி மருங்கினும் என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்த வையே. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல். என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ் வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவ தாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத் துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றா யாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ஒலியன் ஆய்வுக்கும் தொல் காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்த வர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? தொல் காப்பியன் ஆணை என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச் சிதைவுக்கும் திரிபு களுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்க ணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, யாப் பருங்கலம் முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணை யொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப் படுவது புலமை இலக்கணம் என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வன வற்றுள் ஒன்று, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத் திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் விண்ணவர் கோமான் விழுநூல், கப்பத் திந்திரன் காட்டிய நூல் என்பவற்றையும் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர் என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்னல் இயலாதே. இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண் என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப் பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு? என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்றார். mt® nfŸÉí‰wJ ‘É©Qyf Iªâu«! அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம் மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும் என்பதை அறியாதவர் அல்லரே பனம் பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ஐந்திரம் என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு படிமையோன் என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ஐந்திறம் என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பிய மே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ஐந்திரம் எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்கு கின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டு தலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன என்னும் நூற்பாவை அடுத்துப் பறழ்எனப் படினும் உறழாண் டில்லை என்னும் நூற்பா அமைந் திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. இக்காலத்து இறந்தன என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் கொல்லே ஐயம் என்பதை அடுத்த நூற்பா எல்லே இலக்கம் என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. உருவுட் காகும்; புரைஉயர் வாகும் மல்லல் வளனே; ஏபெற் றாகும் உகப்பே உயர்தல்; உவப்பே உவகை என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி நன்று பெரிதாகும் என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான் றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, அவற்றுள் என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்கதொரு சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலி லேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப் பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற் றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே. என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான. என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர் நிலையைக் காண்கிறோம். எப்படி? நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க்குரிய வையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவை யென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், மரபியல் செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடி யும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் கிழமை என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டி யிருந்த புறக்காழ் அகக்காழ் இலை முறி காய்பழம் இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள நூலின் மரபு பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. அவற்றுள், சூத்திரந் தானே என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்த லால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் வாழ்வியல் விளக்கத்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் இயலமைதி எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொருளதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறையாகும். எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப்படுத்துவர். அவற்றை வாழ் வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும். அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, கள வொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன. நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள. கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத் தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப் பட்டுள்ளன. ஆறாவதாக அமைந்தது மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடு என்பதன் பொருள், மெய்ப்பாடுகளின் வகை, அவை தோன்றும் நிலைக்களங்கள், அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், கைக்கிளை பெருந்திணை மெய்ப்பாடுகள், வாழ்நலத்திற்கு ஆகாக் குறிப்புகள், மெய்ப்பாட்டு நுட்பம் என்பவை முறையே இதில் கூறப்பட்டுள. பொருள் விளக்கச் சிறப்பமைந்த உவமை இயல் ஏழாவதாக இடம் பெறுகிறது. உவமையின் வகை, உவம உருபு, உவமையை உணருமுறை, உள்ளுறை உவமம், உவமை பற்றிய புறனடை என்பவை இவ்வியலில் பேசப்படுகின்றன. எட்டாம் இயல் தொல்காப்பியத்துவரும் இயல்கள் இருபத்து ஏழிலும் விரிவுடையதாகிய செய்யுள் இயல். ஈதொன்று மட்டுமே 240 நூற்பாக்களைக் கொண்டது. நூலில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்காக அமைந்தது. இதனை அடுத்ததாக 112 நூற்பாக்களையுடையது இதனை அடுத்த மரபியல் ஆகும். இச் செய்யுளியல், மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ எனத் தொடங்கி முப்பத்து நான்கு வகையில் செய்யுள் உறுப்புகள் அமைதலை முதல் நூற்பாவிலேயே தொகுத்துக் கூறி, அவற்றை முறையே கூறி முடிக்கிறார். எல்லா இயல்களிலும் வைப்பு முறைச் சிறப்புண்டு எனினும் இவ்வியல் கொண்ட வைப்பு முறை நனிபெரும் சிறப்புடையதாம். பொருள் வைப்புமுறை மாத்திரை, எழுத்தியல், அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களம், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை அவை. தொல்காப்பிய நிறைவில் வருவது மரபியல். தொல் காப்பியர் முறை திறம்பா வைப்புமுறை, முறை மாற்றி வைக்கப் பட்டதில் தலைமை கொண்டது இவ்வியலாயிற்று. மாற்றரும் சிறப்பின் மரபு என மரபுமாண்பு கிளப்பதுடன் தொடங்குவது இது (1500). இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவை இவை எனச் சுட்டி முறைமுறையே கூறி, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என்று நிறைவு செய்கிறார் (1525). பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என முடிபும் கூறுகிறார் (1568). இது காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமை யன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை. இது கூறுவேம் என்று தொடங்கி, இது கூறினேம் என முடித்தபின், அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 - 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585 - 1588) கூறி, இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590 - 1610) இடம் பெற்று நூல் நிறைகின்றது. ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக் காழ், புறக்காழ், தோடு மடல் இலை முறி காய்பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே நூலே கரகம் முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை. மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடையவையா? கவச குண்டலத் தொடு பிறத்தல் கதைக்க உதவும் நடைக்கு ஆகுமா? மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் வாழ்வியல் விளக்கம் தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பியத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல் காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய் யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற் கியலாக் காலநிலையில் அவற்றின் முழுமையான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றி னுள்ளும் தனிப்பெரும் பேறு, தொல்காப்பியப் பொருளதி காரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு அக் காலத்தையே, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம் என்று சொல்லா நிற்ப என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம். வெளிப்பாடு இந் நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெரு மக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகிய தாம். பொருள் வளம் இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளி லேயே வாழ்வியல் இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம். தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள், பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை. தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வரவாகிய நூல்களும், தொல் காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே. இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல் காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே. தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீச லாய்ப் புறப்பட்டவையேயாம். ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம். பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. அகத்திணை இயல் என்பது அது. அகவொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம். அகம் அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு! புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம். அறம் அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்! தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு அறம் எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல்காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனா லேயே வள்ளுவம் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என இல்வாழ்வில் முழங்கியது. அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார். தமிழர் கண்ட அகவொழுக்கம் கைகோள் எனப் பட்டது. கை என்பதன் பொருள், ஒழுக்கம். கோள், கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள். கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, கைக்கிளை எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க. (கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் கைம்மை என வழங்கியமை கட்டமை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.) ஏழு திணை கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந் திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது, கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (947) என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், நடுவண் ஐந்திணை உண்மையைக் குறிக்கிறார் (948). நிலம் தமிழ் நிலம் நானிலம் என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத் திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை அந் நிலைத்திணை யின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவு மிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத்திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின. நடுவண் ஐந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே, முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும். என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும். நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்டவை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங் களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப் பட்டன. பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப் பொருள் என மூவகைப்படுத்திக் கூறினர் (950). முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப் பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள். உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள். இம் முப் பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே - ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக் கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழு தும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப் பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற்பொருளி னும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப்பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, பாடலுள் பயின்றவை நாடுங் காலை என்பது (949). நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார். கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது மக்கள் உள்ளத்தே கருக்கொண்டு விளங்கிய பொருள் என்பதைச் சொல்லியே பிற கருப்பொருள்களைக் கூறுகிறார் (964). மேல், கீழ் கடல் கொண்ட குமரிக் கண்டமும் சரி, எஞ்சியுள்ள தமிழகமும் சரி, இவை மேல் மலைதொட்டுக் கீழ் கடல் எனப் படிப்படியே அமைந்த வையே. மலை நிலம் உயர்ந்தது ஆதலால், மேல், மேற்கு என உயரப் பொருளால் அத் திசை குறிக்கப்பட்டது. கடல் நிலம் தாழ்வுடையது ஆதலால், கீழ், கிழக்கு எனத் தணிவுப் பொருளால் அத்திசை குறிக்கப்பட்டது. முல்லை முதல் இந் நிலையில், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என அமையும் நில அமைப்பின் படியே திணை வைப்புச் செய்யாமல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என முறைப்படுத்திக் கூறுகிறார். அம் முறையே பலரும் சொல்லிய முறை எனவும் உறுதி மொழிகிறார். அது, மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. என்பது (951). இனிக் காலம் சொல்லும் போதும், காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் (952) பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப (953) வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் (954) நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (955) பின்பனி தானும் உரித்தென மொழிப (956) என்றே வரிசைப் படுத்துகிறார். இருத்தல் உணவின் சுவை நாவிலே இல்லை; வயிற்றிலே இருக்கிறது என்றால், மறுதலையாகத் தோன்றும் அல்லவா. ஆனால், உண்மை அது தானே! பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் உணர்வுக்கும், பசியின்றி உண்ண வேண்டுமே என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி! அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல்காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக, ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது. என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது. நிலம், பொழுது வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ் வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை. மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கடல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா? முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்த வையா? பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா? இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன! குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா? இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார். நாடக உயிர்ப்பு, உரையாட்டு நடிப்பு தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே! கருப்பொருள் கரு என்பது கர் என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும். கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு? மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை. என்பது குறிப்பு. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு. வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது. ஆறு ஒழுக்கு நெறி வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதையும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர், தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா = விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள் கிறார் களவியல் உரைகாரர். வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க. தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் தெய்வம் உணாவே என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறி யாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார். உரிப்பொருள் முல்லை நிலமும், முல்லைக்குரிய கார் காலமும் முன்வைத்த ஆசிரியர், உரிப்பொருள் சொல்லும் போது குறிஞ்சியை முதற் கண் வைத்துள்ளார். அது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. என்பது (960). முல்லைக்குத் தந்த நில கால முதன்மையை, உரிப் பொருளுக்கும் தருதல் ஆகாது என்பது ஆராய்வார் எவர்க்கும் புலப்படும். ஏனெனில், முல்லை என்பது புணர்தலின் பின்னாக ஏற்படும், எதிப்பார்த்திருக்கும் இருத்தல் ஒழுக்கம்; அது கூடுதல் இல்லாமல் நிகழாது; ஆதலால், குறிஞ்சி முல்லை என முறை வைத்தல் மேற் கொள்ளப்பட்டது என்பதற்காகவே, தேருங் காலை என்றார். தேருங் காலையாவது ஆராயும் பொழுது. கண்டாராகிய ஆடவரும் பெண்டிரும் காட்சியால் ஒருப்பட்டுக் கருத்தாலும் ஒருப்பட்டு ஒருவரை இன்றி ஒருவர் இல்லை என்னும் அறவுணர்வு ஓங்கிய நிலையிலேயே ஒருவரை ஒருவர் மீளவும் காண எதிர்பார்த்திருத்தல் இயற்கை. ஆதலின், நடைமுறை வாழ்வறிந்த நன்முறை மாற்றமே குறிஞ்சி (புணர்தல்) முல்லை (இருத்தல்) என்னும் வைப்பு முறையாம். பிரிதல் கூடினார் இருவர் எதிர்பார்த்து இருப்பார் என்னின், நிகழ்ந்தது என்ன என எண்ணின் தெளிவு கிட்டும். அது பிரிதல் என்பது. ஆதலால், குறிஞ்சி முல்லை என்னும் இரண்டன் இடையே பாலையை (பிரிவை) வைத்தல் முறைமையாயிற்றாம். பிரிவு என்பது வேளைப் பிரிவும், நாளைப் பிரிவும், திங்கள் முதலாம் பிரிவும் எனப் பலவகைத்தாம். இவற்றுள் வேளைப் பிரிவே முல்லைப் பிரிவு ஆகும். கூடு துறந்து செல்லும் பறவை போலவும் தொழுவம் பிரிந்து செல்லும் கால்நடை போலவும் வீடு துறந்து சென்று, வேலை முடித்து மாலையில் மீளும் வேளைப் பிரிவே இம் முல்லைப் பிரிவு. கணவன் பிரிந்து சென்றால் அவன் மீள வரும் வரை மனைவிக்குக் கதவே காது என்னும் பாவேந்தர் படைப்பு முல்லைப் பிரிவாகும். இந் நாளில் வேலை நிமித்தமாக வெளியே சென்று மாலையில் திரும்பி வரும் மனைவியைக் கணவன் நோக்கி யிருத்தலும் இருவரும் காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல் எனத் தகும். ஓதல் பகையே தூது இவை பிரிவே என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து, கடற் பரப்பு வரை நீண்டு நெய்தல் எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம் இரங்கல். வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது. கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். கெஞ்சும் கொஞ்சும் என்பது திருப்புகழ். கொஞ்சுத லாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப் படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும். கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம். ஊடல் இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன? உடலுக்கு ஒரு பெயர் கூடு என்பது. கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே! கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூடல். கூடும் கூடும் கூடாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊடல். ஆதலால் உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம். இவ் வகையால், உரிப் பொருள் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என முறைப்படுத்தப்பட்டன. நிமித்தம் புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது சார்பாவது. பெயர் இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சோழன் கரிகால் பெருவளத்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் வல்வில் ஓரி வையாவிக் கோப் பெரும் பேகன் பெருங்கோப் பெண்டு கண்ணகி -இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும் பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடையவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள். பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டொழுகும் உணர்வுப் பொருள். அதனை உடையார் இவரெனக் கூறின் என்னாம்; புறப்பொருள் ஆகிவிடுமே! ஆதலால், மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர். என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின், புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. என்பது வரையறையான விடையாயிற்று (1001). இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுக மாகவோ குறிப்பாகவோ கூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன் இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும். இனி, அகப்பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும் பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே. எனச் சுட்டுகிறார் (966). அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர் அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பினும் தன்னோடு தன்னை யடுத்தவரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர். ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள், அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம். ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா? ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாத வரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார் ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணை யைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத் திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர். ஏனெனில் பாடு பொருட் சிறப்புப் போலவே, பாடப் படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு. அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக்கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத் திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூடாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டியுளது. அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர். என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை. இதனை, புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001). பிரிவார் தகவு இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகையால் ஏற்படும், அப் பிரிவிற் குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடுகிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137). பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக் கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகையால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார். ஓதல் பகையே தூதிவை பிரிவே என்றும் (971) பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே என்றும் (979) வருவன அவை. ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது. பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு. தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப் பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகை யால் சொல்லி நலம் செய்தலாகும். பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ? அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே! தெரிவு இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது. பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே செல்வர்! தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே! அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வாரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர். மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் ஆதலாலும், அறி வுடையோன் ஆறு அரசும் செல்லும் ஆதலாலும், ஆள்வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத்தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின், வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் (665) என்பது வள்ளுவம். ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல் பாகும். மற்றும், ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581). ஓதற் சிறப்பாலும் தூதுத்திற மாண்பாலும் உயர்ந்து விளங்குவார் எவரோ அவரே அதற்குரியராக விடுக்கப்படுவர். இதனால் தொல்காப்பியர், அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன (972) என்றார். இனிப் பகைதணிவினையாம் படைக்குத் தெரிவும் பயிற்சி யும் முதன்மையாகக் கருதிப் பேணப்பட்டமையாலும், அவர் அணி அணியாகச் செல்வார் ஆதலாலும், அவரை இவரோடு எண்ணினார் அல்லர். அன்றியும் அவர் செல்லுதலும், தான் தேர்ந்த தலைவரொடு அவர் செல்லுதலும் தான் செல்வதாகவே ஆகும் ஆதலால் அவரைத் தனித்துக் கூறினார் அல்லர் (978). இனிப் பொருட் பிரிவுக்குரியர் இருவகையார். அவர் அரசின் சார்பில் பொருட் பொறுப்பினராய் வரிதண்டுவாரும் அறங்காப்பாருமாக இருப்பார் ஒருவகையர். மற்றொரு வகையர் குடிமை நலம் காத்தற்குப் பொருட் பிரிவு மேற்கொள்வார் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் குடிமை நலம் காக்கும் பொருட் பிரிவேயாம். இவருள் முன்னவர் முல்லை குறிஞ்சி முதலாகிய நானிலத் தலைவரும் ஆவர். ஆதலால், மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே (975) என்றார். அவர் மன்னர் கடமை என்னவோ அதனை அவர் சார்பாக இருந்து செய்கின்ற செயல் வீறு உடையவராம். அதனால் அவர், மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. எனச் சொல்லப்பட்டார் (976). ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாடைங்காப் பேதையிற் பேதையார் இல். எனப்படுபவர் போன்றாராக இல்லாமல் ஓதி உணர்ந்து ஓதவல்லாராகத் திகழ்ந்த உயர்ந்தவர் வழியிலே நெறிமுறைகள் வகுத்துப் பரப்பப்பட்டன. அதனால் உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. (977) என்றார் தொல்காப்பியர். வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான. (1592) என்று மரபியலில் கூறுவது இவண் நோக்கத்தக்கதாகும். கடற்பிரிவு இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை, முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. (980) என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு. ஆடவர் மகளிரோடு கடல் கடந்து சென்றால், சென்ற நாட்டி லேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். மடலேறுதல் உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப் படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந் துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே மடலேறுதல் என்னும் முறையாயிற்று. பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும். அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும். இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை, எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான. என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் என்பதை இவண் எண்ணலாம் (குறள். 1137). ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவு மிக்காராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை, செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான என்று ஆசிரியர் கூறுவதால் அறியலாம் (1155). எண்ணிப் பார்ப்பின், கால இட தொழில் நிலைகள் மாறுபட்ட இக் கால நிலையிலும், இவ்வுளவியல் மாறிற்றில்லை என்பதை உணர முடியும். ஆடவர் வலிந்து மணங் கோடலை அன்றி, மகளிர் வலிந்து மணங்கோடல் செய்தி நடைமுறையில் இல்லாமை எவரும் அறிந்ததே. கூற்று அகவாழ்வில் இடம்பெறுவார் பேசும் இடம், பேச்சு என்பவற்றை முறையாகக் கூறும் ஆசிரியர், நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன், பிறர் என வகுத்துக் கொள்கிறார். அவர்கள் பேசுவது கூற்று எனப்படும். கூற்று = கூறுவது. கூற்று நிகழும் சூழல் ஒன்று வேண்டுமே. அச் சூழல், கொண்டு தலைக்கழிதல், உடன் போக்கு எனப்படுகிறது. அது இந் நாளில், கூட்டிக் கொண்டு போதல் எனப்படுகிறது. ஓடிப் போதல் எனப் பழிக்கவும் படுகிறது. முன்னாள் வாழ்வொடு எண்ணின், பழித்தற்கு இடமில்லை என்பதொடு, அந் நாள் மாந்தர் இதனை ஏற்றுப் போற்றிய சிறப்பும் படிப்பினையாக நமக்கு அமையும். ஒரு தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொண்ட நிலையில், தலைவியைப் பெற்றவளாகிய நற்றாய் தனித்து வருந்துதலும் பேசுதலும் முதன்மை இடம் பெறுகின்றன. தாய் தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொள்ளும் போது, நற்றாய், தன்னையும் தலைவனையும் தன் மகளையும் எண்ணிப் புலம்புவாள், குறிபார்த்தல் தெய்வம் வேண்டல் என்பன புரிவாள், நன்மையாவதும், தீமையாவதும் அஞ்சத் தக்கதும் ஆகியவற்றைக் கூறிவருந்துவாள். தோழி யிடத்திலும் கண்டோர் இடத்திலும் வினாவுவாள் (982). செவிலி தாய் ஊரின் எல்லை வரை சென்று தேடுவாள். செவிலித் தாய் ஊரைத் தாண்டியும், வழிநடந்தும் தேடுவாள் (983). ஊரைவிட்டுத் தலைவன் தலைவியர் போகவிடாமல் ஊரின் அயலிடத்தே இருப்பினும், அதுவும் பிரிவாகவே கொள்ளப்படும். இதனையும் இவ்விடத்தே குறிப்பிடுகிறார் (984) ஆசிரியர். தோழி தான் வேறு தலைவி வேறு என்றில்லாமல் ஒன்றியவள் தோழி. தலைவியைத் தலைவன் உடன் கொண்டு போதலே நலம் என்பதைத் தான் உணர்தலால் தலைவனிடம் எடுத்துரைப்பாள்; உடன்போக்கு ஏற்ற போது தலைவிக்கு நல்லுரை சொல்லு வாள்; உறவைப் பிரிதலால் உண்டாகும் தன் வருத்தமும் உரைப்பாள்; உடன் போக்கினரை மீட்டு அழைக்கச் செல்லும் தன் தாயைத் தடுத்து மீளுமாறு சொல்வாள்; மகளின் பிரிவை அறிந்து வருந்தும் பெற்ற தாய்க்குத், தலைவி மாறா அன்பால் பிரிந்தமை உரைத்துத் தேற்றுவாள் (985). இவை அவள் கூற்று நிகழும் இடங்கள். கண்டோர் வழிச் செல்வாரைக் கண்டோர், வாளா பார்த்துக் கொண்டு செல்லாமல் உரையாடும் வகையையும் எடுத்துரைக் கிறார் ஆசிரியர். பொழுது போனமை, வழியின் தொலைவு, இடையே உண்டாம் அச்சம் என்பவற்றைக் கண்டோர், உடன் போக்கினர்க்கு உரைப்பர்; செல்லும் ஊர்த் தொலைவும் தம் ஊர் நெருக்கமும் கூறித் தம் ஊர்க்கு அழைப்பர்; உடன் போவோர் நிலைக்காக வருந்தியுரைத்து அவரூர்க்குத் திரும்பிச் செல்லு மாறும் சொல்லுவர்; அவரைத் தேடிவரும் செவிலியைக் கண்டு தேற்றித் திரும்புமாறு வேண்டுவர்; இவ்வாறு கண்டோர் உரை அமையும் (986). தலைவன் கூற்றுகளை மேலும் விரிவாகச் சொல்கிறார் (987). உள்பொருள் நிகழ்ச்சி; அந் நிகழ்ச்சி உறுப்பினர்; உறுப்பினர் உரைக்கும் உரை - இவற்றை இவ்வகத்திணையியலில் மட்டுமன்றிப் பின்னே வரும் களவியல், கற்பியல் ஆகியவற்றிலும் விரிவாகக் கூறுகிறார். இவை நாடகக் காட்சிகள் போன்றவை அல்லவா! நாடகம் என்பது நாட்டில் நிகழாததா? நிகழாத ஒன்று அல்லது இட்டுக் கட்டிய ஒன்று ஏற்றுக் கொள்ளவும் படாது; பயன் படவும் படாது. ஓரிடத்து ஒருகாலத்து ஒருசிலரிடத்து நிகழப் பெறு வனவே ஏற்ற புனைவுவகையால் நாடகமாகவும் காப்பிய மாகவும் அமை கின்றனவாம். எங்கும் என்றும் எவரிடத்தும் காணலாகாப் பொருள் பற்றிப் பேசின், இல்பொருளாக ஏற்பாரின்றி ஒழியும். தொல்காப்பியர்க்கு முற்பட விளங்கிய இலக்கிய இலக்கண நூல் வழக்குகளும், அவர் கண்ட உலகியல் வழக்கு களும், ஒருங்கே தொகுக்கப் பட்டுத் தொகையாக்கியதே அவர் வழங்கிய வாழ்வியல் இலக்கணமாகும். சான்றுகள் உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது. மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்தஎன், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. (ஐங். 371) மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம் என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது இல்லையா? தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி, இவளே நின்னலது இலளே; யாயும் குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே; மாமலை நாட மறவா தீமே! என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை! இதுநும் ஊரே; யாவரும் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது! இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக என்னும் இவ்வுரை தாய்மை யுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ! உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டு கின்றதே: எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து. (கிளவித்தெளிவு) தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம். அகவலும் வெண்பாவும் கட்டளைக் கலியும் பாவினமும் இக் கூற்றுவகையை விளக்குவனவாகப் பிற்காலத்தில் விளங் கினும், தொல்காப்பியர் நாளில் கலிப்பாவும் பரிபாவும் பெருவர வாகக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் வடித்தெடுத்த பாகாக, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர். என நூற்பா கிளர்ந்ததாம் (999). நினைத்தல் பிரிவு, பிரிவு வகைக் கூற்று என்பவற்றை உரைத்த ஆசிரியர் அது தொடர்பான வேறு சில குறிப்புகளையும் வழங்குகிறார். நினைத்தலும் செய்தலொடு ஒக்கும் என்பது ஓர் உயர்ந்த உளவியல் ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளங்கும் வகையால், நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் என்று கூறி, நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே என்கிறார். பிரிவுக்காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள், தலைவன் தலைவியால் நினைத்தற்கு உரியவையும் ஆகும் என்பதுடன், நிகழ்ந்த அது நெஞ்சில் நிலைபெற்றிருத்தலும் அப் பிரிவாகிய பாலைத் திணையே ஆகும் என்பதும் இவற்றின் பொருள். இவ்வகத்திணையில் இணைக்கத் தக்கவை எவையும் இல்லையோ எனின், மரபு நிலை நீங்கா மாட்சியொடு இணைக்கும் பொருளை இணைத்தலும் ஏற்கக் கூடியதே என்கிறார் (991). உள்ளுறை சிந்திக்க வைக்கும் செய்தி எதுவோ அது செயலூக்கியாகத் திகழுதல் உறுதி. அதனால், அகத்திணை உரையாடல்களில் ஓர் அரிய உத்தியை வகுத்து, நூன் மரபாகப் போற்றினர். அஃது உள்ளுறை உவமை என்பது. இயல்பாக வழங்கும் உவமையொடு, இவ்வுள்ளுறை உவமையும் வரச் செய்யுள் இயற்றல் சிறக்கும் அகப்பொருளுக்கு என்று கூறும் அவர், அதன் இலக்கணத்தை, உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிகென உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை. என்கிறார் (994). அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப் போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து காலம் நீட்டாது உடனே மணந்து கொள் என்று ஏவுதலாகும். இதனை, முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப. என்கிறாள் (நற். 15). உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர். கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் தெய்வம் என்னும் கருப் பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார். புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்ட முடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம். எழுதிணை ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார். மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப மக்கள் எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை. இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம். கைக்கிளை காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. என்பது முன்னதன் இலக்கணம் (996). பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப்பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது என்பது இதன்பொருள். இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளி களிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்டலால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர். பெருந்திணை இனிப் பெருந்திணை என்பதை எண்ணுவோம். ஆசிரியர் பெருந்திணையை, ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. என்கிறார். மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம். இத் திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப. மாணிக்கனார், ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப் பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக என்பது இவண் கொள்ளத் தக்கது. களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமை யின் (ஏறியமடல் திறம்) ஐந்திணைப் படாது பெருந்திணைப் பட்டது என்றும், இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று என்றும், கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக்கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண் விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று என்றும், களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல் எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257). அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். முற்படக் கிளந்த எழுதிணை (947) என்றவர், அவ் வெழுதிணைகளுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார். நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய பொருளியலையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும். களவு ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து கள்ளாமை (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர், உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். என்பார். உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்துவார் உரையாசிரியர் பரிமேலழகர். அத்தகைய பழிக் களவல்லாமல் உயிர் தளிர்க்கச் செய்யும் உள்ளங் கவர் களவு ஈதாகும். ஆதலால், வாழ்வியல் நெறிவகுத்த சான்றோர், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவர்ந்து ஒன்றுபடும் இயற்கை இயைபை, இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, ஒன்றிய பாலது ஆணை, காமக் கூட்டம், ஊழால் கூடும் கூட்டம் என்றெல்லாம் பெயரீடு செய்து பாராட்டினர். அன்றியும் களவு பிறர் அறியாவகையில் நிகழும் நிகழ்வு ஆதலால் மறை எனவும், மறைநெறி எனவும், மறையோர் ஆறு எனவும் குறியீடு செய்து நம் முந்தையர் வழங்கினர். இக் களவின் முதல் நிலையாம் காட்சியை, ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே என்கிறார் தொல்காப்பியர் (1039). உலகியலில் ஒருவரோடு ஒருவரை இணைக்கின்ற சூழல் என ஒன்று உண்டு. அன்றி அவரை அவ்வாறு இணையச் செய்யாத சூழல் என்பதொன்றும் உண்டு. இவ் விரண்டனுள் இணையச் செய்யும் உயர்ந்த சூழல் வலிமையால், ஒத்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காணுதற்கு வாய்க்கும். அக் காட்சியால் ஏற்படும் உள்ளப் பதிவே, பால் ஒன்றுதலாகிச் சிறக்கும். ஒத்த என்னும் நிலையில், சற்றே மிக்கோன் கிழவன் எனினும் நீக்குதற் குரியது இல்லை; ஏற்கத் தக்கதேயாம் என்கிறார் (1039). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதன் ஒப்பு எவை எனின், பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. என்னும் பத்துவகை ஒப்புமாம் (1219). இவ் வொப்புகளின் அருமை போற்றின் இல்லற வாழ்வு இனிதின் அமையும். உள்ளப் பொருத்தம் இருவருக்கும் உண்டா என்பதை முதற்கண் காண வேண்டியிருக்க, இறுதிவரைகூடக் காண்பதும் கேட்பதும் இல்லை! ஆனால், பெயர் என்றும் நாள் கோள் என்றும் பார்க்க வேண்டாதன பொருத்தமெனப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் அறியாமல் தாமே மணந்து கொள்ளலும், வேற்றிடம் சென்று விடலும், தம்மைத் தாமே முடித்துக் கொள்ளலும் பெருக்கமாகி வருதல் கண்கூடு. மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர். போராடிப் பெற முடியாராய் அவர் முடிந்த பின்னர் இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா? தொல்காப்பியர் கூறிய பத்துப் பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப்பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்டாக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம். களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. என்கிறார் (1038) இதற்கு, உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தவர்) மணத்தினை ஒப்பதாம் எனல் பொருளாம். களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம். தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் கூறுவாரை, உவமை காட்டுதல் ஏற்புடையதன்றாம். உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என்னும் தம் உவமை இலக்கணத்திற்கு மாறாம். மேலும் கண்டறியா ஒன்றைக் காட்டுதற்குக் கண்டறிந்த ஒன்றை ஒப்புக் காட்டுதலை யன்றிக் கண்டறிந்த ஒன்றை விளக்கக் காணா ஒன்றைக் காட்டுதல், ஆகாயப் பூ நாறிற்று என்புழிச் சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும் என்னும் உரைக்கே அது எடுத்துக்காட்டாகிவிடும். அயல்நெறி ஒன்றனை விளக்குவார், தமிழ் நெறியுள் இன்னது போல்வது என்பதே நூன்முறையாம். இந்நூற்பாவின் நான்காம் அடியாகிய, மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்னும் ஓரடியை விலக்கிக் காணின், எப்பொருள் குறைதலும் இன்றிக் கண்ணேர் சான்றும் வாய்த்துச் சிறத்தல் கண் கூடு. ஆதலால், இவ் வோரடி உரைகண்டார் காலத்திற்கு முற்படவே மூலத்தின் இடையே சேர்க்கப்பட்ட பொருந்தாச் சேர்ப்பு என்பது புலப்படும். இப்படிச் சேர்ப்பு உண்டோ எனின், இடைச் சேர்ப்பு, இடமாற்றம், நூற்பாச் செறிப்பு, நூற்பா விடுப்பு என்பனவும் தொல்காப்பியத்துள் உளவாதல் ஆய்வார் இயல்பாகக் காணக் கூடியவையாம். வைசியன் என்னும் ஒரு சொல் பழந்தமிழ் நூல்கள் எவற்றிலும் இடம் பெறாதது. பின்னூலார் தாமும் அயற் சொல் லென வெளிப்பட அறிந்தது. அச்சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமை (1578) மேற்போக்காக நோக்குவார்க்கும் சேர்மானத்தைக் காட்டிவிடத் தவறாது. இவ்வாறாயின் இவ்வடி நீக்கிய நூற்பாவின் பொருள் என்ன? பொருந்தும் வகை என்ன? என்பவை தெளிவு பெறல் வேண்டும். காமக் கூட்டம் என்பது, பாடுதுறைவல்லாரும் யாழ்த்திற வோருமாகிய பாணர்தம் இணைப்பை ஒப்பது. அது பிரிவு என்பது அறியா வாழ்வினது என்பதாம். பாணர் கூட்டம் என்றும் பிரிவறியாப் பெருமையது என்பது, பாணன் பாடினி அவர்தம் சுற்றம் என்பவை மண் குடிசையில் இருப்பினும் காடுகரைகளில் திரியினும் மன்னர் மாளிகைக்குச் செல்லினும் ஒன்றாகவே இருந்ததைச் சங்கச் சான்றோர் பாடல்கள் தவறாமல் சொல்கின்றன. எந்தப் புலவரும் அப்படித் துணையொடும் சுற்றத்தொடும் சென்றமை அறியுமாறு இல்லை. தள்ளமுடியாச் சான்றைத் தள்ளி, இல்லாத அயற்சான்றைத் தேடி அலைதல் தேவை அற்றதாம். தலைவன் தலைவியை யாழ என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது. இனி இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற்பாக்களுக்குப் பொருந்த வுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்டாகின்றதாம். அதனை மேலே காணலாம். இனி இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் அறம் முதலாகிய மும்முதற் பொருள் என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க. மேலும், வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து அடுவது போலும் துயர். என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது மும்முதல் என்ற குறியீட்டால் விளங்கும். சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால் தான் மும் முதல் என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம். காட்சி தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது ஆகலின், இவர் தக்காரே என ïUtU« v©Qjš Ia« MF«; bjËî« MF« (1040). ïUt® fண்ணும்கருத்Jம்ஒன்றுgட்டமையால், mJ beŠr¡ fy¥gh»¢ áw¡F« (1042). இவை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் இயற்கைப் புணர்ச்சி எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை. இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்க லாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில் ஒரு சூழலில் ஒருவரும் எண்ணாமல் நிகழ்வதே இஃதெனத் தெளியலாம். பிரிவு நெஞ்சங்கலந்த அவர்கள் பிரிந்த பின் ஏற்படும் உளப்பாடு களை ஒன்பதாக எண்ணுகிறார் தொல்காப்பியர்: இடையீடு படாது விரும்புதல், அவ்வாறே இடையீடு இல்லாமல் எண்ணு தல், இவற்றால் உடல் மெலிவடைதல், எண்ணம் நிறைவேறுதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுதல், அடங்கிக் கிடந்த நாணம் எல்லை கடத்தல், நினைப்பவை - காண்பவை - எல்லாமும் தம் எண்ண வெளிப்பாடாகவே தோன்றல், தம்மை மறத்தல், மயக்கம் கொள்ளல், வாழ்வை வெறுத்துக் கூறல் என்பவை தலைவன் தலைவியர் இருவர் பாலும் நிகழ்வன (1046). இடம் தலைப்படல் அழைத்துப் பேசாதவற்றை அழைத்துப் பேசுதல், பேசாதன பேசுவனவாகக் கொள்ளுதல், அவற்றின் நலம் உரைத்துப் பாராட்டல், தலைவன் தான் மகிழ்வுறாமை காட்டித் தலைவி இருக்கும் நிலை அறிதல், தலைவன் தனக்குப் பிரிவால் உண்டாகும் மெலிவினை விளக்குதல், தம் இருவர்க்கும் உண்டாகிய தொடர்பு நிலை உரைத்தல், தன்னைப் பற்றிய தெளிவு தலைவிக்கு உண்டாகுமாறு தலைவன் கூறுதல் என்பவை இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தோன்றுவன (1047). தலைவன், தன் குடிவரவால் அமைந்த பெருமையும் தன் அறிவாற்றலும் பெருகி நிற்றலாலும், தலைவி, தன் குடிவரவாய பெருமையுடன் இயல்பான அச்சம் நாணம் உறுதிப்பாடு ஆயவை கொண்டு இருத்தலாலும் இருவர் தகுதியும் பேணிக் காக்கும் வகையில் உள்ளுறுதி காத்து நிற்பார் (1044, 1045). தாம் முந்துறக் கண்ட இடத்துக் காணற்கும் முந்துவர். கண்ட அவ் விடத்தில் மீளக் காணுதல் இடந்தலைப்பாடு எனப்படும். தலைப் பாடாவது கூடுதல். ஏதாவது ஒன்றை முன்னிட்டுத் தலைவியின் உடலைத் தொடுதல், புனைந்துரை வகையால் பாராட்டுதல், தக்க இடம் பார்த்து நெருங்குதல், தலைவி நழுவிச் செல்லுதல் கண்டு வருந்துதல், அதுபற்றி நெடிது நினைத்து நைதல், நெருங்குதல், தொடுதலுறப் பெறுதல், பெற்றபின் உன்னை எவ் வகையாலும் மறவேன் என உறுதி கூறுதல் என்பவை இடந்தலைப் பாட்டில் நிகழ்வன. மெய்தொட்டுப் பயிறல்; பொய்பா ராட்டல்; இடம் பெற்றுத் தழாஅல்; இடையூறு கிளத்தல்; நீடு நினைந் திரங்கல்; கூடுதல் உறுதல்; சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்; உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும். என்பது இதன் தொல்காப்பிய நடை (1048). மெய் தொடல் இதில், மெய் தொட்டுப் பயிறல் முதலியவை வறிதே கூறுவனவா? வாழ்வில் நடைபெறுவனவா? காதல் உரிமையர் சந்திக்கும் படம் - கதை - காட்சி இன்னவற்றை மின்வெட்டென நொடிப் பொழுது இதுகால் நாம் பார்ப்பினும், இவற்றுள் ஒன்று புலப்படுதல் தவறாதே! மெய் தொட்டுப் பயிறல், கூடுதல், நுகர்ச்சி, புணர்ச்சி என்பன வெல்லாம், பழிப்புக்குரியவையாகவோ உடல் கலக்கும் கூட்டமாகவோ கொள்ளக் கூடியவை அல்ல. தலைவி கூந்தலில் பூ இருக்க, அப்பூவை அடுத்துவரும் வண்டை ஓட்டுதல் வழியாகத் தொடுதல் வண்டோச்சி மருங்கணைதல் என்னும் மெய்தொட்டுப் பயிறல். இந் நாளில் இக் காட்சி அருமை அல்லது புனைவு எனத் தோன்றின், ஆலையில் வேலை பார்த்துவரும் ஒருத்தி தலையில், பஞ்சுத் துகளோ நூலோ இருப்பதாக மெய் தொட்டுப் பயிறல் கண்கூடு. புணர்ச்சி ஈராறுகள் கூடுதல் கூடுதுறை; கடலொடு ஆறு கூடுதல் கொண்டு புணரி; இரண்டு சொற்கள் கூடல் புணர்ச்சி; பூவை மணத்தல் என்பது முகர்தல்; நுகர்தல். இன்னவகையில், மெய்தொட்டுப் பயிறல் முதலியவற்றைக் கொள்ளவே பண்டை அகப்பொருள் புலனெறி வழக்காகும். காதலித்தான் ஒருவன் ஊரறிய மனங்கொண்டு வாழாக்கால் சென்ற ஊரே முன்னின்று அறங்காட்டிய நெறி, அந்நெறி. பெற்றோரால் கரணம் முடித்தோ கரணம் பிறரால் முடிக்கப்பட்டோ ஓரிற்படுத்தல் என்னும் நிகழ்வு நேரிட்ட பின்னன்றிக் கூடுதலை ஒப்பாதது புலனெறி வழக்கம். அத்தகு மெய்யுறு கூட்டம் முன்னுற நிகழ்தலும் மகப்பேறு பெறுதலும் என்பவை, சங்கப் பாடல்களில் சான்றுக்கும் இல்லாதவை. அகப் பொருளும் சரி, புறப் பொருளும் சரி கறையிலாத் தூயதாகக் கொள்ளப்பட்ட தன் விளக்கமே பொருளதிகாரச் சுருக்கச் செய்தியாம். உதவலும் தடையும் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன், பிரிந்த போது கவலைப் படுதலுடன் அமையான். தலைவியை மீளவும் கண்டு அவளைத் துணையாகக் கொண்டு மனையறம் நடத்தும் வேட்கையனாக இருப்பான். தலைவியைக் காணற்கு வாயிலாக, அவள் உயிர்த் தோழியின் உதவியைப் பலவகையாலும் நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும். தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன். பாங்கன் நிமித்தம் தோழனால் உண்டாகும் கூட்டத்தைப், பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப. என்பார் தொல்காப்பியர் (1050). அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன. இவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் பெருந்திணை. இவற்றை, முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. (1051) என்றும், முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே. (1052) என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார். மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள். என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமை யால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051-2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038). மறையோர் மணவகை இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது. பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல். ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணி கலம் பூட்டி இவற்றைப் போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது. கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது. அசுரம்: கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற் குரியன்; வில்லேற்றினான் இவளை மணத்தற்குரியன் எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது. இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது. பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடையாள் ஆயோரைக் கூடுதல். - இவை தமிழர் மணமல்ல என்பது, மறையோர் தேஎத்து மன்றல் என்பதால் புலப்படும். மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் - பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப் பட்டியலாக அமைகின்றதாம். பெண்ணடிமை என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்! காதல் அறம்! என்னும் ஔவையுரைக்கு இவ்வெண்வகை மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ? கந்தருவம் இடம் பெறாதோ எனின், கண்டதும் கூடுதல் என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம். தலைவன் கூற்று பகலில் சந்திக்கும் இடம் இரவில் சந்திக்கும் இடம் என்னும் ஈரிடங்களிலும் சந்திக்கத் தவறிவிட்ட போதும், பார்க்க முடியாத வகையில் நெடும் பொழுது கடந்த போதும், காணவேண்டி நின்று காணா நிலையில் வேட்கை மிகுந்து மயங்கிய போதும், தான் புகுதற்குக் கூடாத காலத்துப் புகுதலால் விருந்தினனாகிய போதும், தலைவியே விரும்பி ஏற்கும் விருந்தின் போதும், முயற்சி யை முன்னிட்டுப் பிரிய நேரும் போதும், நாணத்தால் தலைவி விலக்கி நிற்கும் போதும், வரைந்து (மணந்து) கொள்ளுமாறு தோழி சொல்லும் உயர்ந்த சொல்லைக் கேட்கும் போதும், வரைதலை உடம்பட்டு ஏற்கும் போதும், வரைதலை அவர்கள் மறுக்கும் போதும், தலைவன் கூற்று உண்டாகும். இந்நூற்பாவைத் தலைவி கூற்று வகையாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், தலைவன் கூற்று வகையாகக், கொண்டார். தலைவியைப் பற்றிய சில குறிப்புகளை அடுத்துக் கூறி, அவள் கூற்றுகள் எவை என அடைவு மேலே செய்தலால், இது தலைவன் கூற்றெனலே தகுதியாம் (1055). தலைவி இயல்பு இன்ப ஒழுக்கில் நிலை பெற்றுவரும் நாணம் மடம் என்னும் உயரிய பண்புகள் தலைவிக்கு உரியவை; ஆதலால், குறிப்பினால் கருத்தை வெளிப்படுத்துவாள்; தக்க இடத்தில் மட்டுமே சொல்லால் வெளிப்படுத்துவாள்; அல்லாமல் அவள் விருப்பை வெளிப்பட உணர்த்தமாட்டாள் (1054). விருப்பத்தை வெளியிடாத கண் இல்லாமையால், அதுவே கருத்தை வெளிப்படுத்திவிடும் (1055). தலைவன் விருப்பினை ஏற்றுக் கொள்ளும் தலைவியே எனினும், (உடம்பாட்டினள் எனினும்) உடம்பாடில்லாள் போலக் கூறுதலும் உண்டு (1056). - என்பவை, ஆசிரியர் தலைவியின் நாணம் மடம் குறித்த இயற்கைச் செய்தி அறிந்து கூறும் தெளி வினவையாம். இந்நாளிலும், அன்பின் ஐந்திணைப் படும் வாழ்வினர் இத்தகையராகவே இருத்தல் வெளிப்படை. நாணம் மகளிர் நாணுதல் நயம் திருநுதல் நாணு என்னும் இயற்கையான நாணமாகும். கற்பித்துவருவது அன்று; நாணுதல் ஆகாது எனத் தம் முனைப்புக் கொண்டாரும், நாணாமல் இருக்க முடியாத இயற்கை நாணுதல் அஃதாதலின், கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. என்பது வள்ளுவம். மடம் மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப் பிடியாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் மடம் எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், சமையல் கூடம் - சாப்பாடு என்பவை தழுவிய மடைப்பள்ளி நிலை யத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கியதாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி காவடி. காவினேம் கலமே புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல். கூற்று தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங் களையும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057, 1060, 1061). இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். தலைவி கூற்று தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறு கின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங் களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார். திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யா மல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058). உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தி னும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப் படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059). குறிப்புகள் சில அகவாழ்வியல் அறியார் போலத் தான் கொண்ட வேட் கையைத் தலைவன் முன் கூறுதல் பெரிதும் தலைவிக்கு உண்டாதல் இல்லை; புதிய மண்கலத்தில் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிவது போல அவள் மெய்ப்பாட்டால் புலப்பட்டு விடும் (1064). இயற்கைப் புணர்ச்சி, தாமே கொண்டது ஆதலால் தோழன், தோழி என்பார் தூதர்களாக இருத்தல் அன்றித், தமக்குத் தாமே தூதாதலும் தலைவன் தலைவியர்க்கு உண்டு (1065). தலைவி தலைவனைச் சந்திக்கக் கூடும் இடத்தை அவளே கூறுவாள். அவள் வருதற்குத் தக்க இடமாக அமைய வேண்டும் ஆதலால் (1066). தலைவியை அன்றித் தான் வேறாக இல்லாத தோழி குறிக்கும் இடமும் உண்டு (1067). தலைவியைக் காணவரும் தலைவனுக்குத் தோழன் மூன்றுநாள் அளவே உடனாவன் (1068). தலைவனைப் பற்றித் தெளிந்த கருத்து வேண்டுதலால் அவன் தோழனைச் சுட்டிக் கேட்கும் முறையைத் தலைவி கொள்வாள். அவள் கேட்டல் துணைச் சுட்டுக் கிளவி எனப்படும் (1069). தலைவி அறிந்துகொள்ள வேண்டிய நற்பொருள் பல வற்றையும் அறியச் செய்பவள் தாய் ஆவாள். தாய் எனப்படுவாள் செவிலி ஆவள் (1070). தலைவிக்குத் தோழியாக இருப்பவள் அச் செவிலியின் மகளே ஆவள். அத் தலைவியின் தாய்க்குத் தோழியாயவள், தோழியின் தாயாகிய தன் செவிலித்தாயே என்பதால் அவள் வழிவழி உரிமை புலப்படும் (1071). தலைவிக்கு வழிகாட்டும் அறிவுத் துணையாகத் தோழி இருத்தலால், அவள் தலைவியை நன்கு ஆராய்தலும் சிறப்பேயாம் (1072). தலைவியை அடைவதற்குத் தலைவன் தன்னிடம் வேண்டி நிற்றலாலும், தலைவியின் குறிப்புணர்ந்து கொள்ளலாலும், இருவரும் ஓரிடத்து இருத்தலை அறிதலாலும் அவர்கள் இருவருக்கும் உள்ள அன்புணர்வைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதற்கு, மதியுடம் படுதல் என்பது பெயர் (1073). தோழி மதியுடம்பட்டு உணர்ந்தால் அல்லாமல், அதன்பின் நிகழ்தற்குரிய கடமைகள் நடைபெற மாட்டா என்பர் (1074). தலைவன் தலைவியர் கூடுதல் முயற்சிக்கும் வரைதல் நிகழ்வுக்கும் அவளே பொறுப்பாளியாக இருத்தலால், அவர் களைப் பற்றி அறிந்திருத்தல் கட்டாயமாம் (1075). தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் குறி எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076). இரவுக் குறி மனைக்கண் உள்ளார் பேசும் ஒலி கேட்கும் அளவுள்ள மலை சார்ந்த இடமாகும். ஆனால், அது மனைக் குள்ளிடம் ஆகாது (1077). மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இட மாகவும் இருப்பதே பகற்குறி இடமாகும் (1078). தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079). மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080). களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081). வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்பவற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082). தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலி யோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083). தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084). களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085). களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்டாகும் (1086). வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய ஓதல் தூது பகை வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள். சிறு விளக்கம் கண்டதும் காதல் என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது, எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல் என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம். தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர். தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு - தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது. தோழியின் ஆய்வு - மறைப்பு - மறுப்பு - புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது. தலைவற்குத் தோழன் இடிக்கும் கேளிராகவே இருந்தான். தலைவிக்குத் தோழி இணையில்லா அறிவுத் துணை யாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன்போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள். இத் தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித் திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பா வார் எவர்? நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது. தோழி தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம் உணர்த்துவதேயாம். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்வ தாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர். கற்பினில் வரும் மழலைமகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது என்கிறது தமிழ்க் காதல். மேலும் சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள், இன்றியமையாதவள் என்பதும் தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம் என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப்பகுதியில் நாற்பத்து ஏழு; கற்புப்பகுதியில் இருபத்தொன்று; ஆக அறுபத் தெட்டு எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியர். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கும் போது, பெண்ணியல்பு என்று சொல்லப்படும் பெருமைக் குணங்கள் எல்லாமும் ஓருருக் கொண்டு விளங்கும் உயரிய படைப்பே அவள் என்பது விளக்கமாகும். தலைவிக்கும் தோழிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை. அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள், இவளைத் தோழி என்கிறாள். இவள், அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக் களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை. தோழி தலைவியை அன்னை என்பாள். தலைவி தோழியை அன்னை என்று உரிமையாய் அழைப்பாள். நம் தாய், நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை, ஒரு தோழி சொல்கிறாள்: தாயோ, தன் கண்ணைவிட மேலாக இவளை விரும்புகிறாள். தந்தையோ, இவள் கால் நிலத்தில் படுவதையும் பொறுக்காதவனாய் உன் சிற்றடி சிவக்க எங்கே செல்கிறாய் என்று தடுப்பான். நானும் இவளுமோ, பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால் இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! என்கிறாள். எத்தகைய அரிய உவமை! தலைவன் தன் தலைவிக்கு வாய்த்த தோழியைப் பற்றிச் சொல்கிறான்: தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி. மிதப்பின் தலைப்பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத் தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பின் அடிப்பக்கத்தைத் தோழி பிடித்தால், அவ் வடிப்பக்கத்தையே தலைவியும் பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும் என்பது அவன் நெஞ்சார்ந்த உரை. இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், தாங்கரும் சிறப்பின் தோழி என்றார் போலும் (1060) ! கற்புமணம் கற்பு மணம் என்பது என்ன? எனின், கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. என்பது (1088). கரணமாவது சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற் குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற் றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் தாதா எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. தாத்தா என்பது அது. முழுத்தம் திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமையால் அதனை முழுத்தம் என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா நடத்திவருவதுமாம். திருமணக்கரணம் மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்க ளைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே முகூர்த்தம் எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதா யிற்று. திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். ஓமத்தீ வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை. மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானால் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் அரை கல்லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா? மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், மணமகளை மணக்க மாட்டேன் எனக் காசிச் செலவு மேற்கொள்ளலும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மண மேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்தலும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், மூக்கறுத்துப் புள்ளி குத்துவது அல்லவா! உலகம் தட்டை என்பதே இறைமொழி என்ற உறுதிப் போக்கினரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித் தனத்தில் உருண்டு புரளல்தான் கனமதிப்பு என எண்ணு வாரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ? தமிழன் தன்மானங் கெட்டுப் போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளையும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம். உடன்போக்கு என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. என்றார் தொல்காப்பியர் (1089). மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர் மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர் என ஆசிரியரால் கூறப் பட்டவர். முத்தமிழ், முப்பால் என்பவை போல, மூவர் என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம் முதற்கண் நிகழ்ந்தது. அக் கரணம் பின்னர் அவர்க்கு உட்பட்ட நானிலத் தலைவர், அரசியல் அலுவலர், ஊர்த் தலைமையர், ஊரவர் என்பார்க்கும் படிப்படியே நிகழலாயிற்று. மன்னர் குடியில் உண்டாகிய மரபுகளே பிறந்தநாள் விழா, சிறந்த நாள் விழா, பள்ளி எழுச்சி, திருவுலா, திருநீராட்டு, திருவூசல் முதலியன வாகக் கோயில் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் வழங்கின என்பதை அறியின், அடிப்படை விளங்கும். மன்னன் எப்படி மக்கள் அப்படி என்பது இதன் சுருக்கக் குறிப்பு. இம் மூவரை வருணப் பிரிவிற்குத் தொடர்புபடுத்திக் கீழோர் என்பதற்கு வேளாண்குடியினர் எனப் பொருள் காணற்கு இடமில்லை! பொருள், பதவி, தலைமை எனச் சிக்கல் ஏற்படும் இடங்களிலேதான், சிக்கல் தீர்வுக்கு வழியும் காணப்படும் என்பது எண்ணத்தக்கது. பல மனைவியருள் முதன் மனைவியே ஆளுரிமை வாய்ந்தவள் கோப்பெருந் தேவி எனப்படுவதும், அவள் மக்களே ஆளுரிமையர் என்பதும் எண்ணின் இது தெளிவாம். ஐயர் இனி, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. என்பது அடுத்த நூற்பா (1091). ஐயர் யாத்தனர் என்னும் சொல் வந்ததும் இந் நாள் ஐயர் அந் நாளே யாம் தாம் அறநெறி அமைத்துத் தந்த மூலவர் என்று மேடையில் மட்டுமல்லாமல் நூலிலும் முழக்கமிடுகின்றனர். சாதிமைக் கொடி பிடித்தலை, மேற்கொண்டவர்கள் வெறியை அன்றி, இந் நூற்பாவில் எள்ளளவும் அப் பொருளுக்கு இடமில்லை. சங்கப் புலவர்கள் பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பு உண்டு. அப் பெயர்களில் ஒன்றில் தானும் இன்ன ஐயர் என ஒரு பெயரைக் காட்ட முடியுமா? ஐயர் என்பது சாதிப் பெயராயின், வேடர் கண்ணப்பரும், பாணர் திருநீலகண்டரும் உழவர் நந்தனாரும் சேக்கிழாரால் ஐயர் எனப்பட்டிருப்பரா? போப்பையர், கால்டுவெல் ஐயர் ஐயர்சாதி யினரா? இக் குடி எனப்பார்த்தலில்லா வீரசைவர் ஐயர் என்பது சாதியா? ஐயன் - ஐயர் - ஐயா - ஐயை - ஐயாம்மா - ஐயாப்பா என்னும் முறைப் பெயர்கள் எக் குடியினர்க்காவது தனியுரிமைப் பட்டயம் கொண்டதா? தம் ஐயன் என்பதுதானே தமையன். தமையன் என்பாரெல்லாம் ஐயன் சாதிதானா? இளமாஎயிற்றி இவைகாண் நின்ஐயர் என எயிற்றிக்குச் சுட்டுதல் அப்பாவா, சாதிப் பெயரா? ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் ஆசறு காட்சி ஐயர் சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய். என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? இவர் அவர் எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க. களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய் வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே கரணம் ஆகும். பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று என்பது இளம்பூரணர் உரை. நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கி னார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் பாடலையே எடுத்துக் காட்டினார் (136). எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட் டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக் காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்! கரணம் என்ப, என்னும் தொடர்க்கு, ஈண்டு என்ப என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது என, ஆடுகளம் அமைத்துக் கொண்டு ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சினார்க்கினியர். ஒருவர் சுட்டாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம் என்று மேற்குறிப்பும் காட்டுகிறார். நெஞ்சுதளை கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும். என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092). கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்! என்பது இதற்கு வெளிப் படையான பொருள். திருமணம் முடிந்து விட்டமையால் மனம் திறந்த மகிழ்வு டையன் ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு. இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணி யாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல் என உரை கூறுகிறார் இளம்பூரணர். ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து, ஆன்றோராவார், மதியும் கந்தருவரும் அங்கியும். களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம் என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்! ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன் என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! ‘அவர் அறியாத் தமிழ்நூற் கடற்பரப்பு ஏதேனும் இருந்திருக்க முடியுமா? என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! ‘இவரைப் போல உரை காணற் கெனவே பிறந்தார் எவரே? என ஏங்க வைக்கும் அவர் ஏன், இப்படி எழுதுகிறார். இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது இன்னான் எனப்படும் சொல் என்பது போலும்!கற்பில் கூற்றுவகை கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன் றனைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளை யும் கூறுகிறார் (1092 - 1101). ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கெனத் தலைவன் தலைவியைப் பாராட்டலும், அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும். எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமை யாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092). உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093). பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096). காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்த தால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர் தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயி லோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் அகம்புகல் மரபின் வாயில் எனப்படுவர் (1098). இனிய ஓரியல் இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால், காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணும் காலை கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான. என்றும் (1100) அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. என்றும் (1101) கூறினார். அலர் முதலியன களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் அலர் உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109). தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110). தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவது போல வாயில்கள் கூறல் உண்டு. அது முன்னிலைப் புறமொழி எனப்படும் (1113). வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவ னுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115) தாய் போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119). பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121). புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122). தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன் முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987). தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127). ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129). பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130). பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத் தடுத்தல் இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131). தலைவன் மேற் கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்த போது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132). பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின் (1133). ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134). காவல் பிரிவு, தூதுப் பிரிவு பொருள் தேடும் பிரிவு என்பவை எல்லாம் ஓராண்டிற்கு மேல் ஆகாது (1135, 1136) தலைவன் தலைவியுடன் ஊரைக் கடந்து ஆறு குளம் கா என்பவற்றுக்குச் சென்று மகிழ்தலும் உரியவை என்பர் (1137). வினை கருதிப் பிரிந்த தலைவன், அவ்வினை முடித்ததும் இடை வழியில் தங்குதல் இல்லை; மனம் போல உரிய இடத்து உதவும் குதிரையாகிய பறக்கும் விலங்கைக் கொண்டிருத்தலால் (1140). இன்ன செய்திகளை அடைவு செய்து கற்பியலை முடிக்கும் ஆசிரியர் தமிழர் அறநெறியை அருமைப்பட மொழிகிறார். அது, காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்பது (1138). சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் = முதுமையடைந்ததன் பயன். இறத்தல் = கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவற்றில் வரும் இறந்த என்பதைக் கருதுக. குடிநலம் சிறக்க வாழ்ந்த முதுமையின் பயன் யாதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவிப்பது இந் நூற்பா. அப்பயன் சிறந்தது பயிற்றல் என்பதாம். கமம் நிறைந்து இயலும் என்பது, கமம் என்னும் சொல்லின் பொருள். பிறைமதி எனத் திகழ்வது கமம். பிறைமதி - வளர் மதியாய் - நிறைமதியாய் விளங்குவது போலக் கமம் என்னும் காமம் விளக்கமுறும். இன்பம் என்பது, எல்லா உயிர்க்கும் பொதுமை யது என்பது ஆசிரியன் உரை (1169). ஆனால், காமம் மாந்தர்க்கே சிறப்பின் அமைந்த உணர்வு - அதனாலேயே வள்ளுவ மூன்றாம் பால், இன்பத்துப் பால் எனக் குறியீடு பெறாமல் காமத்துப் பால் எனக்குறியீடு பெற்றதும் அச் சொல்லையே 39 இடங் களில் பயன்படுத்தியதுமாம். காமம் வரும் ஈரிடங்களில் மட்டுமே இன்பமும் வந்து, அமைவுற்றமையும் அறிக. இக் காமம் நிறைவுற்ற முதுமைக் காலம், காமம் சான்ற கடைக் கோட்காலை ஆகும். அக் காலத்தில் அவர்களுக்கும் குடிவழிக்கும் பாதுகாப்பான நன்மக்கள் தோன்றிச் சிறந்து விளங்குவர்; அவர்களை அன்றி இல்லறச் சுற்றமாகவும் உரிமை உறவுச் சுற்றமாகவும் பலர் இருப்பர்; குடும்பத் தலைவர்களால் அறவாழ்வின் அருமை அவர்கள் அறிந்து திகழ்வர்; மக்கள், சுற்றம் ஆகிய இவர்களுக்குத் தம் பிறவிப்பயனாகச் சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138). சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு - செம்பொருள் என்பதாம். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில். என்பது வீடுறு வழியும், ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். என்பது வீடுபேறுமாம். தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற் கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் அறம் என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம். மணிவிழா இனி, மணிவிழா என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற் கொள்வதற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் இரண் டாம் திருமணம் அறுபதாம் கலியாணம் என்னும் பெயர் களைக் கொள்ளாதாம். பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகிய மை அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகி விட்டதல்லவா! பொருளியல் இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், எச்ச இயல் என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம். அசைமாறல் ஒரு தொடர் மொழியில், ஒலிமாறி ஒலிப்பினும் பொருள் பொருந்தியே வரும்; ஆனால் அசை மாறுபடுதல் கூடாது; அது வழுவாகி விடும். ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள் என்னும் குறள் ஊறொமை உற்றபின் ஒல்காமை என வருதல் வேண்டும். அவ்வாறு வாராக்காலும் பொருள் அவ்வாறே கொள்ளுதல் வேண்டும். ஆனால் அசையாகிய உறுப்பு மாறின் யாப்பு வழுவாகவே அமைந்து விடும். முன்னது பொருள்காண் நெறி; பின்னது இலக்கண நெறி. முன்னதில் பொருள் போற்று தலும் பின்னதில் யாப்புப் போற்றுதலும் வேண்டும் என்பதாம் (1141). தனிமொழி நாடக உத்தியில் தனிமொழி என்பதொன்று உண்டு. தானே பேசும் பேச்சு அது. பக்கச் சொல், பாற்கிளவி, தனிமொழி என்பவை அது. நெஞ்சொடு கிளத்தல் என்னும் வகையால் தன்நெஞ்சுக்குத் தானே கூறுவது, இதில் ஒருவகை. உறுப்பு உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுத்துக் கூறுவது போலவும் கற்பித்துக் கொண்டு கூறுதல் இது. இனிச் சொல்லாடுதல் இல்லாதவற்றைச் சுட்டி அவை செய்யாதனவற்றைச் செய்தன வாகக் கூறுதலும், பிறர் கொண்ட துயரைத் தான் கொண்ட பிணி போலச் சார்த்திக் கூறுதலும் தலைவன் தலைவியர் ஒருபாற் சொற்களாகும் (1142). நற்றாய் செவிலித்தாய் ஆயோர்க் கும் தனிச் சொல் வழக்குண்டு (1145). தலைவன் தலைவியர் காணுதற்கு அரிய நிலை உண்டாகிய காலத்து அவர்களுக்குள் கனவுக் காட்சியும் உண்டு. உடன்போக்கு நேரிட்ட காலத்து நற்றாய் செவிலித்தாய், கனவு காணலும் உண்டு (1143, 1144). வாழ்வின் உயிர் நிலையாம் அன்பு நாணம் மடம் ஆகிய மூன்றும் தலைவன் தலைவி நற்றாய் செவிலி என்னும் நால் வர்க்கும் உரியவை (1147). தன் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையடைந்து வருந்தும் போது தன் உறுப்புகளும் தலைவன் பிரிந்ததை அறிந்தன போலக் கூறலும் வழக்கம் (1148). பிரிவால் மெலிந்த போதும் இவற்றுக்கு என்ன ஆயின என்பாளே அன்றித் தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தேடி அடைவது இல்லை (1149). தலைவன் ஒரு பக்கமாக வருங்கால் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல் தலைவன் கேட்கக் கூறுவதும் உண்டு (1150). தலைவன் உண்மையை மறைக்கும் போதும், தலைவிக்கு விருப்பு மிகுந்த போதும் அல்லாமல் மற்றைப் போதுகளில், கண்டு கொள்ளாதவளாகவே தலைவி அமைவாள் (1151). தலைவன் தலைவியர் காதலை உணர்த்தத் தக்க பொழுது இது என அறிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலை (காதல் வெளிப்படுத் துதலை) மேற்கொள்வாள் (1152). தலைவனுக்குள்ள எளிமை, பெருமை, விருப்பமிகுதி ஆகியவற்றை உரைத்தல், பிறர் கூறுவது கேட்டு அது பற்றிக் கருத்துரைத்தல், இடையூறு உண்டாகிய போது இடைவந்து தீர்த்தல், தாமே எதிர்ப்பட்டுக் காணல், மெய்யாக நிகழ்ந்தது இதுவெனல் என்னும் ஏழுவகையாலும் தோழி களவொழுக்கத் தை வெளிப்படுத்துவாள் என்று புலமையர் கூறுவர் என்பார் தொல்காப்பியர் (1153). தக்க இடம் வாய்த்தால் அல்லாமல் தோழி சொல்ல மாட்டாள் ஆதலால், செவிலி, தலைவி நிலையை உணர்ந்து கொள்ளலும் உண்டு. ஏனெனில், அடக்கம், நிலைப்பாடு, நேர்மை, கூறுவது கூறல், அறிவு, அரியதன்மை என்பவை பெண்டிர்க்கு இயல்பு என்பதால் (1154, 1155). தலைவன் தலைவியர் களவொழுக்கத்திற்கு இசைந்த தோழி, அதனைக் கற்பொழுக்கமாக்கத் திட்டமிட்டே துணி வான சில செயல்களைச் செய்வாள். தலைமகன் வரும்பொழுது, வழி, காவல்மிகுதி ஆகியவற்றைக் கூறி அவற்றால் நேரும் தீமையைச் சுட்டுவாள்; அவற்றை நோக்கித் தான் மனங்கலங்கி வருந்துதலை உரைப்பாள்; சந்திக்கும் இடத்தில் உண்டாகும் இடையூற்றை உரைப்பாள்; இரவில் வருக என்பாள்; பகலில் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வாராதே என்றும் கூறுவாள்; நன்மை யாகவும் தீமையாகவும் புலப்படப் பிறிதொன்றனைக் கூறுவாள்; இவையெல்லாம் தலைவன் மேல் கொண்ட வெறுப்பாலோ காதலைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணத் தாலோ செய்வன அல்ல! காதல் வேட்கையைப் பெருக்கிக் கடி மணத்தை விரைந்து முடிக்குமாறு தூண்டுதல் குறிப்புகளே யாம் (1156). தேர் யானை குதிரை முதலியவற்றில் ஊர்ந்து வந்து தலைவன் தலைவியைக் காணலும் உண்டு (1158). உண்ணுதல் இல்லாத ஒன்று உண்டதாகக் கூறுதலும் அகத் தொழுக்க வழக்கமாகும். அது, பசலை பரவுதலைப் பசலை உண்டது என்பது போல்வது (1159). தலைவி வீட்டை விட்டு வெளியேற முடியாத காவல் மிக்க பொழுதில் (இற்சிறை) தலைவனிடம் தோழி, எங்கள் இல்லத்தார் பெரும்பொருளைப் பரிசமாக வேண்டியுளர் என்பது உண்டு. ஏனெனில், அவன் அவளைத் தேடி வராமல் இருக்கவும், மண முடித்து மனையறம் காக்க வேண்டும் பொருள் தேடி வருதற்குத் தூண்டுதலாக இருக்கவும் ஆகும் (1160). ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லும் வழித்துயர் பற்றிச் சொல்லவும் தவறாள் (1162). வீட்டுக் காவற்பட்ட தலைவி உயிர்நிலையாகிய அன்பு, அன்பு வழிப்பட்ட அறம், அறத்தால் அடையும் இன்பம், பெண்மைக்கு இயல்பாகிய நாணம் என்பவற்றை நீங்கி ஒடுங்கிய நிலை பழிக்கப்படுவதில்லை. ஏனெனில், அவள் செயலும் உணர் வும் ஒடுக்கப்பட்டுள்ள சூழல் அஃதாதலால் அவ்வக் காலத்து வாழும் சான்றோர் தக்கநெறி என ஏற்றுக் கொண்ட (1161)வற்றைத் தழுவிச் செய்யுள் செய்தல் முறையையாம் (1163). உலக வழக்கில் பொருந்தாதது போல் தோன்றும் ஒன்று, அகப்பொருட்கு அமைவுடையதாக இருப்பின் அதனை வழக்காக ஏற்றுக் கொள்ளல் பழியாகாது (1164). ஆனால் அப் பொருள் நாணத்தக்கதாக இல்லாத நற்பொருளாக அமைதல் வேண்டும் (1165). முற்பட்ட இலக்கிய இலக்கணங்களிலும் கைம்மை கைம்மைத் துயர் என்பவை இடம் பெற்றுள. மகளிராகவே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும் போற்றப்பட்டது. கடுவனாம் ஆண்குரங்கு இறந்ததாக அதனைத் தாங்காத மந்தி, தன் இளங்குட்டியைச் சுற்றத்திடையே விட்டுவந்து பாறையில் மோதி இறக்க அதனைக் கைம்மை உய்யாக் காமர் மந்தி என்று புனைவு வகையாற் பாராட்டியதும் உண்டு. ஆனால், இந் நாளில் கைம்மை மணம் வரவேற்புக் குரியதாயிற்று. மனைவியை இழந்தான் கணவனை இழந்தாளை மணமுடித்துக் கொண்டு வாழ்வு தருதல் உயரறம் எனப் பாராட்டப்படுத லாயிற்று. இது காலங்கண்ட அறநெறி. இதனைப் போற்றுதல் - செய்யுள் செய்தல் (புலனெறி வழக்கம் ஆக்குதல்) புலமையாளர் கடன்! இவ் வகையில் பாவேந்தர் படைப்பும், அதன் பின்வரவாம் படைப்புகளும் பெருக்கமிக்கவை அல்லவா! ஆசிரியர் தொல் காப்பியர் வாழ்வியல் காப்புள்ளம் இத்தகைய எதிரது போற்று தலை ஆணையாக்கிச் சிறப்பிக்கின்றது என்க. அன்புப்பெருக்கால் அழைக்கும் சொல் எல்லா என்பது. அச் சொல் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் உரிய பொதுச் சொல் ஆகும். இச் சொல்லே ஏலா, ஏலே, ஏழா, ஏடா என வழங்குவதாம். எல்லே இளங்கிளியே எனப் பறவைக்கும் ஆயது! எல்லா ஒப்புரிமை இதுகால் பெரிதும் ஆண்பால் தழுவி நிற்கின்றது. யாழ என்னும் சொல் இருபாற் குரியதாக இருந்து ஏழா ஆயது என்பதும் கருதத்தக்கது (1166). பங்குரிமைச் சொத்தாக வாராதது; கொடை புரிந்தாலும் கொடுத்தவரை விட்டுச் செல்லாதது; செயல் திறனால் தங்கவைக்க முடியாதது; பிறரால் கையகப் படுத்திக் கொள்ள வும் முடியாதது; அத்தகு பொருளை ஒருவர் உரிமைப் பொருளாகக் கொள்வது போன்றது, தலைவியின் உறுப்புகளைத் தோழி தன் உறுப்புகளாகக் கொண்டு உரைப்பது; உரிமையில்லாதது அது எனினும், பொருந்திவருதல் அக நூல்களில் உண்டு. ஆதலால், அதனைப் போற்றிக் கொள்ளல் கடன் என்கிறார் (1167). என்தோள் எழுதிய தொய்யில் என்பது தலைவி தோளைத் தன் தோளாகக் கருதித் தோழி சொல்வதாம் (கலித். 18). ஓரிடத்துக் கூறும் தலைவி தலைவன் என்னும் சொற்கள், அவ்விடத்துள்ளாரை அன்றி, எவ்விடத்துள்ளார்க்கும் உரியவை யாய் வருதலே வழக்கமாகும். இன்னான்தான், இன்னாள்தான் என்று குறித்துக் கூறப்படாமல் உலகத்துள்ள ஒருவன் ஒருத்தி என்பார் எவர்க்கும் உரிமையுடையது எனத் தெளிவித்தார் (1168). உயிர்க்கெல்லாம் பொதுப் பொருளாய் அமைந்தது இன்பம் என்பதை, எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். என்கிறார் (1169). அமர்தல் = தங்குதல்; நெஞ்சத்துத் தங்குதல்; மேவற்று = விருப்பமுடையது. இதனால் இன்பம் உயிர்ப்பொது என்றார். ஏனை அறம் பொருள் என்பவை மாந்தர்க்குரியவை என்பது குறிப்பாகக் கூறப்பட்டது. மற்றும் காதல் காமம் என்பவையோ எனின் உயிர்ப் பொதுமை விலக்கி ஆடவர் பெண்டிர்க்கே உரிமைப் படுத்தப் பட்டது. குறிஞ்சி புணர்தல்; முல்லை இருத்தல் என்பன முதலாக ஒழுக்கம் சொல்லப்படும் என்றாலும், அவை அந் நிலத்திற்குச் சிறப்பேயன்றி, மற்றை நிலத்து நிகழாதவை அல்ல. நானிலத்திற்கும் பொதுவாக அமைந்தவையே யாம். ஆதலால், ஊடல் என்னும் உரிப்பொருள் மருதம் ஒன்றனுக்கே அமைந்தது இல்லை; மற்றை நிலத்தவர்க்கும் உண்டு; அவ்வூடல் தீர்ப்பாரும் அவண் உண்டு என்பாராய், பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர். என்றார். நால்வர் = நானிலத்தவர். நால் வருணத்தவர்க்கும் என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரை யாசிரியர்கள் (1170). நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால் வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார். தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை ஒருதலை உரிமை வேண்டியும் என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171). உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலை யிலும், அம்பல் அலர் என்பவற்றால் களவொழுக்கம் வெளிப் பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்டாம் எண்ணங்கள் செயலூக்கியாகத் திகழும் அடிப்படை யை விளக்கியது இது. எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி. வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண் டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், வருத்த மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம். என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்டலினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன் என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல். கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப்பாம் என்றது இது (1174). முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. பொருட்புறத்ததுவே என்பதற்கு உரிப்புறத் ததுவே என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க் கினியர் பாடம். இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே என்பார் (1176). அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப்பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும் போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் வன்புறை எனப்படும் (1177). தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகை யில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படு வனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற்கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178). தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊடல் உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179). பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின், அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180). தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181). குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்ட தாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய்யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் படைத்து மொழி களாலும் நலம் பேணிக் காப்பாள் (1183). புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள் ளாள்) (1184). துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186). ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187). முன்னே கூறிய உள்ளுறை என்பது, உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொருளாகவும் உள்ளுறை வரும் (1189). மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்) தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத் தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191). தோழி தலைவியை அன்னை எனலும், தலைவி தோழியை அன்னை எனலும் இருவரும் தலைவனை என்னை எனலும் பழமையான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப் படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவதை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்ட இயலாதவையாகும். நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப. என்பது இதன் முடிநிலை (1193). இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம். மக்கள் மொழி சொற்களாக இவை இருப்பதால் எவரும் தாம் கேட்டுணர்ந்த வகையால் பொருள் கண்டு கொள்வர். வழக்குச் சொல்லாக இருப்பவற்றை விளக்க வேண்டுவதில்லை என்பதால் ஒரு சொல் வழக்கிழந்தால் பொருள் விளக்கமும் இழந்துபோம் என்னும் மொழியியல் முறையால் இப்பொருளியலை நிறைவித்தார் ஆசிரியர். அது, இமையோர் தேஎத்தும் எறிகடல் வைப்பினும் அவையில் காலம் இன்மை யான. என்பது (1194). புறத்திணை அகத்திணையை அடுத்து ஆசிரியரால் வைக்கப்பட்ட புறத் திணை பற்றி நாம் கருதலாம். அகம் புறம் என்பவை முரண் பட்டவை அல்ல. வாழ்வின் இருபக்கங்கள் அவை. அகங்கை ஏழு எனின், புறங்கையும் ஏழு என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் நற்கிழமை காட்டி உரைத்த விளக்கம் இதனைத் தெளிவாக்கும். பிறவிப் பேறு அக வாழ்வால் அமைந்தது; அதனைச் சிறப்பிக்கவே இல்வாழ்வு கொண்டது; அவ் வாழ்வுக்கு, இன்றி யமையாத் துணைப் பொருளாக அமைவது புறவாழ்வு. இன்னும் எண்ணினால், அகவாழ்வு அமைந்து திகழ, அவ்வப்போது மேற்கொள்ளும் முயற்சி வாழ்வே, புறவாழ்வாகும் என்னலாம். அகவாழ்வு சிறக்க வேண்டுவதாம் பொருள் தேடல், அறம்புரிதல், காவல் கடன்புரிதல், சந்து செய்தல், கலைமேம் படுதல், துறவுமேற்கொள்ளல் என்பன வெல்லாம் புறவாழ்வுப் பகுதியேயாம். போரும் கொடையும் புகழும் போற்றலும் எதற்காக, அகவாழ்வு சிறக்கவே. அகச் சிறப்பே பாரகச் சிறப்பின் அடிமூலம் - நிலைக்களம் - எனக் கண்ட நம் முந்தையர் வகுப்பு இது. அகத்திற்கு, (வெளிப்பட அறியும் வகையில்) நான்கியல் களை (அகத்திணை களவு கற்பு பொருள்) வகுத்த ஆசிரியர், புறத்திணை என ஒன்றனை வகுத்ததை எண்ணல் சாலும். மேலும், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு என்னும் நான்கியல்களும், அகம், புறம் ஆகிய இரு பொருள்களுக்கும் பொதுமையாய வையே என்பதையும் எண்ணலாம். ஏழுதிணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணை ஏழுக்கும் முறையே, வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்னும் ஏழும் புறத்திணைகளாகும். குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. பாடாண் என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப் படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் பூப்பு எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் அரும்புதல் எனவும் வழங்கும் மாறா வழக்குக் கொண்டும் உணரலாம். மலரினும் மெல்லிது காமம் என்பதும், மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத் தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத் தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது, பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, ஆதந்து ஓம்பல் என்பார். வெட்சியின் இலக்கணம், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும் என்பது (1003). வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், வேந்து விடு முனைஞர் என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், ஆதந்து ஓம்பல் என்றார். ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேய விட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்திவருதல் என்பது விளங்க, ஆதந்து ஓம்பல் என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக. ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப்புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். மாடு என்பது, பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும் கொண்டமை இதனா லேயே ஆம். தொழுகைக்கு உரியதாக இருந்தமையால்தான், ஆன் உறைவிடம் தொழு தொழுவம் என்னும் பெயர்களையும் கொண்டதாம். தமிழர் வாழ்வொடு இரண்டறக் கலந்த அப்பண்பாடே பொங்கல் விழாவெனப் பொலிவுற்றுப் போற்றப்படுவதாம் மாட்டுப் பொங்கல் என்பது நாடறி செய்தி. ஆக்கள் உடலை உராய்வதற்காகவே, வழியில் ஆவுருஞ்சு குற்றி நட்ட செய்தி நயமிக்கது! ஆக்களைக் கவர்ந்து வருதல் போர்க்கு அடையாளமாவ தொடு, அதனைப் பேணும் அறமுமாம் என்பதனால், போர்க் களத்தில் இருந்து அகற்றப்படுவனவற்றுள் தலையிடம் பெற்றது ஆவேயாம் (புறம். 9). ஆநிரை கவரச் செல்லும் படைகள் ஆரவாரித்தல், புறப்பட்டவர் ஊர்ப் பக்கத்தே கேட்ட விரிச்சி என்னும் சொல், பகைநாட்டு ஒற்றர் அறியாவாறு புகுதல், அயலார் அறியாவாறு அவர் நாட்டு நிலையைத் தம் ஒற்றரால் அறிதல், பகைவர் ஊரைச் சுற்றி வளைத்துத் தங்குதல், தம்மைத் தடுக்கவந்த பகைவரை அழித்தல், ஆநிரையைக் கவர்தல், அதனைத் தடுத்ததற்கு வந்தாரை விலக்கி மீள்தல், கவர்ந்த ஆக்களைக் கவலையின்றிக் கொண்டு வருதல், தம்மை எதிர்பார்த்திருக்கும் தம்மவர் மகிழத் தோன்றுதல், ஆக்களை ஊர்க்குக் கொண்டு சென்று நிறுத்துதல், அப் பணியில் ஈடுபட்டவர்க்குப் பங்களிப்புச் செய்தல், செயல்முடித்த மகிழ்வில் களிப்புறுதல், கலைவல்லார்க்குப் பரிசு வழங்குதல் என்னும் பதினான்கு துறைகளை உடையது வெட்சித் திணை என்பார் ஆசிரியர் (1004). மேலும் எடுத்த செயலை முடிக்கவல்ல வீரர்தம் குடிச் சிறப்பு, வெற்றித் தெய்வமாகப் போற்றப்படும் கொற்றவை வழிபாடு என்பனவும் வெட்சி சார்ந்தனவே. வேலன் வேடம் பூண்டு ஆடும் மருளாடி, காந்தள் மாலை சூடி ஆடும் வெறியாடல், இன்னாரைச் சேர்ந்த வீரர் இவர் என அறிதற்குப் பனை, வேம்பு, ஆத்தி என்னும் (சேரர் பாண்டியர் சோழர்) மாலை சூடி ஆடிய கூத்து, வள்ளி என்னும் கூத்து, புகழ்மிக்க வீரக் கழல் அணிதல், எதிரிட்டு நின்று போரிடும் வேந்தனை உன்னமரத்தொடு ஒப்பிட்டுக் கூறும் உன்னநிலை, மன்னனை மாயோனொடு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை, போரில் பகைவரை ஓட்டல், பசுக்களை மீட்டித்தருதல், வேந்தன் சிறப்பு உரைத்தல், தன்வீறு தோன்ற வஞ்சினம் கூறல் என்பவை பசுக்களை மீட்டிச் செல்வார் செயல்கள். மற்றும், வரும் படையைத் தடுத்தல், வாட்புண்பட்டு வீழ்தல் எனப்படும் பிள்ளை நிலை; வாட் போரிட்டு வென்ற வனுக்குப் பறை முழங்கப் பரிசு வழங்கிய பிள்ளையாட்டு, களப்போரில் இறந்துபட்டார்க்கு நினைவாகக் கல்லெடுத்தல், அதனை நீராட்டுதல், கல் நடுதல், அதனைச் சூழக் கோயில் எடுத்தல், வழிபடுதல் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை என்பனவும் வெட்சியே. பசுக்களைக் கவர்தல் போன்றதே, மீட்டுக் கவர்ந்து செல்லலும் ஆதலால், இரண்டையும் வெட்சியாகக் கொண்டார் தொல்காப்பியர். ஆனால், பசுக்களை மீட்டுச் செல்லுதலைக் கரந்தை எனத் தனித் திணை ஆக்கி மொழிந்தனர் பின் நூலினர் (பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை). வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தை யாம் எனக் கொண்டனர் அவர். ஆனால், எழுதிணை என்னும் வரம்புகடத்தலும், அகப்புறம், புறப்புறம் எனப் பொருந்தாப் பிரிவுவகை காட்டலும் நேரிட்டனவாம். நிரை கவர்வார்க்கும் மீட்டுவார்க்கும் அடையாளம் வேறு காட்டவே முன்னவர் வெட்சியும், பின்னவர் கரந்தையும் (கருநிறப் பூ) - சூடியதென்க. காதல் ஒழுக்கம் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போலப் புறத்திணைக் கெல்லாம் முதலாவது வெட்சி என்றும், இரண்டு திணைகளும் களவில் நிகழ்வன என்றும், வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்பதற்கு ஒப்புக் காட்டுவார் நாவலர் பாரதியார். இப் பகுதியில் கூறப்பட்ட வெட்சிப் போரில் இறந்து சிறப்புற்றவர் நடுகல் இந்நாளும் பலவாகக் காணலும், அவற்றில் அவர் பெயரும் பெருமையுமாகிய எழுத்துப் பொறித்திருத் தலும், ஆவட்டி என ஊர்ப் பெயர் இருத்தலும் எண்ணத் தக்கவை. இதில் வரும் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல். என்பனவே காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக் காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை எனச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டமாக உருக்கொண்டதாம். வஞ்சி முல்லை என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்தது வஞ்சித் திணையாகும். ஆடவர் பிரிதலும், மகளிர் அவரை எதிர் நோக்கி இல்லில் இருத்தலும் இரு திணைக்கும் பொதுவாத லால், முல்லைக்கு வஞ்சி புறனாயிற்றாம் (1007). மண்ணைக் கவரும் எண்ணமிக்குடைய வேந்தன் ஒருவனை, அவன் அஞ்சுமாறு மற்றொரு வேந்தன் படை யெடுத்துச் சென்று வென்றடக்குவதே வஞ்சித்திணையாகும். எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே. என்பது நூற்பா (1008). துறை போரிடச் செல்லும் படையின் எழுச்சி, பகைவர் நாட்டைச் சூழ்ந்து தீயிடல், விளங்கிய படையின் பெருமை, வேந்தன் கொடுக்கும் கொடைச் சிறப்பு, பகையை நெருங்கி அழித்த வெற்றி, பெற்ற பரிசு விருது (மாராயம்) பற்றிய பெருமை, தம்மைப் பொருட்டாக எண்ணாமல் போரிட்ட திறம், பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கற்சிறை போல (அணை போல) எதிரிட்டு வரும் படையைத் தனித்து நின்று தடுக்கும் பெருமிதம், படைஞர்க்கு விரும்பும் வகையால் உணவு வழங்கும் பெருஞ்சோற்று நிலை, வெற்றி பெற்றவரிடத்துத் தோன்றும் பொலிவு, தோற்றவர்க்கு உண்டாகிய அழிவு, பகைவர் நாட்டின் அழிவுக்கு வருந்திப் பாடும் சிறந்த வள்ளைப் பாட்டு, அழிக்க வரும் படையைத் தடுத்து நிறுத்திய வீரரைத் தழுவுதல் ஆகிய தழிஞ்சி என்னும் பதின் மூன்று துறைகளை யுடையது வஞ்சித் திணை (1009). குறிப்பு காலம் மாறியது; கருவி மாறியது; கருத்தும் மாறியது; எனினும், இற்றைப் போர்களிலும் இத்துறைகள் சொல்லும் முறைகள் நிகழவே செய்கின்றன. மாராயம் என்பது வேந்தனால் பெற்ற விருது. அவ்விருதுப் பெயரே பெயராக விளங்கும் குடும்பங்கள் இன்றும் உண்டு. கற்சிறையாவது அணை. கல்லால் தடுத்து நிறுத்துதல் வழக்கமே அணைக்கட்டு; கல்லணை கரிகாலன் வைத்துச் சென்ற புகழ் எச்சம். வள்ளை என்பது உலக்கைப் பாட்டு. வேந்தனைப் பாடும் புகழ்ப்பாட்டு; மகளிர் பாடிக் கொண்டு உலக்கை குற்றும் பாடல்; சிலம்பில் வள்ளைப் பாட்டு உண்டு. தழுஞ்சி என்பது தழுவுதல். நல்லதும் அல்லதும் நேர்ந்தபோதில் உரிமையுடை யார் தழுவிக் கொள்ளுதல், ஆடல் களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் பார்வையர், ஓடிவந்து தழுவுதல் என்பன எண்ணலாம். உழிஞை உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாகும் (1012). அரணை முற்றுகை இடுதலும் பற்றுதலும் என்பவை உழிஞைத் திணை. ஊடல் கொண்ட இல்லாள் கதவடைத்து ஊடியிருத்தலும், வாயில்கள் வேண்டிநின்று கதவைத் திறக்கச் செய்து உட்புகுதலும் ஆகியவை உழிஞையொடு ஒப்பதாகலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயது. உழிஞைத் திணை எட்டுவகை யுடையது. பகைவர் நாட்டைப் பற்றிக் கொள்ளுமுன்னரே வெற்றி யுறுதியால் விரும்பியவர்க்கு விரும்பியதைத் தருதல், சொல்லிய வண்ணமே செய்து முடிக்கும் வேந்தன் திறம், வலிய மதில்மேல் ஏறிப் போரிடல், பகைவர் ஏவும் அம்புகளைத் தடுக்கும் தோற் படை (கேடயம்) மிகுதி, அரணின் உள்ளே உள்ளவன் செல்வச் சிறப்பு, அதனால் தன்னொடு போரிட வந்த புறத்தோனை வருந்தச் செய்தல், தான் ஒருவனாக வெளிப்பட்டு வந்து போர் அடர்த்தல், புறத்தோன் தாக்குதற்குக் கலங்க வேண்டாத மதில் வன்மை என்பவை அவை (1013). இவ்வெட்டனுள் முன்னவை நான்கும் மதிலை முற்று வோன் பற்றியவை. பின்னவை நான்கும் மதிலைக் காப்போன் பெற்றியவை. முற்றுவோனும் காப்போனும் கொள்ளும் போர் நிலை பன்னிரு துறைகளாகக் கூறுவார் ஆசிரியர் (1014). தும்பை தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத் திணைக்குப் புறனாகும் (1015). இரங்குதல் இருதிணைக்கும் பொதுமையானது. களப் போர் அழிவு அத்தகையது ஆகும். வீரத்தை வெளிப்படுத்துதலே நோக்கமாகக் கொண்டு போரிட வந்தவன் திறத்தை அழிக்கும் சிறப்பினது தும்பை (1016). நிலம் கவர்தலோ, மதில் பற்றுதலோ கருத்தாகக் கொள்ளாமல் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்றே நோக்கமெனக் கொண்டு போரிட வந்தவன் ஆதலின் அவனை, மைந்து பொருளாக வந்த வேந்தன். என்றார் ஆசிரியர் (1016). மகனுக்கு மைந்தன் எனப் பெயரிட்ட நோக்கு நாம் எண்ணத்தக்கது. மைந்து = வீரம். நெருங்கிச் செல்ல இயலாத வீரன்மேல் பகைவர் அயலே நின்று ஏவிய கணைகளும் வேல்களும் உடலைச் சூழ்ந்து மொய்த்துக் கிடத்தலும், உயிர் பிரிந்த பின்னரும் அவ்வுடல் நிலத்தில் படாமல் துள்ளி நிற்றலும் என்னும் இரு திறப்பட்ட சிறப்புகளையுடையது தும்பை (1017). தும்பைத் திணை பன்னிரு துறைகளை உடையது. இவற்றுள், தாக்குவானும் தாக்கப்படுவானுமாகிய தலைவர் இருவரும் களத்தில் ஒருங்கே இறந்து படுதல் என்பது ஒருதுறை. அது, இருவர் தபுதி. எருமை மறம் என்பது ஒருதுறை. அது, மறவன் ஒருவன், தன் தலைவன் படை உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் எருமை மறம் எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான். எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப் பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது. ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக் கொழிவே காரணமாம். இத்துறையை, ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை. என்கிறார். கூழையாவது பின்னணிப்படை. தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது, இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை. எனப்படுகிறது. எவரும் வாழாமல் ஒழிவது தான் வாழப் பிறந்ததன் நோக்கமா? என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்! வாகை வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத் திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல் போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமையானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது, தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப என்பது. தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட - மிகுதிப்பட. தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத்திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும். வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக அமைந்துளது. அது, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் என்பது (1012). அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன என்றார் இளம்பூரணர். வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் பார்ப்பனப் பக்கம் இடம் தரவில்லை. ஓதலாவது கல்வி என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண்பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? இரவலர் புரவலை நீயும் அல்லை என்ற புறப்பாட்டைப் பார்ப்பன பக்கம் என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ? ஆனால், நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா! பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக் கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்: ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியா கரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய சடங்கு கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமே யன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின், அவற்றோடு கூறப்படா தாயிற்று. ஆறங்கமாவன, உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ் விரண்டையும் உடனாயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பார்த்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம், வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சத்தமுமாம். தரும நூலாவன உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும். இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப் பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஓத்தாம் என்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்திய னாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பும் சிறப்பின்மையும் அறிவித்தற்கு பார்ப்பனப்பக்கத்து ஓதுதலுக்குத்தான், இவை யெல்லாம் எழுதினார். மேலும், இனிப் பார்ப்பனப் பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்தே கற்பு நிகழ்வதற்கு முன்னே, களவில் தோன்றினானும், அவள் பிறர்க்கு உரியவள் ஆகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்து இருந்துழித் தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும் அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினா ருமாகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை இனியர் வழங்கிய படையலாக்கல் தகும்தானே! இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப் பெருமை கொண்டாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா? சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய இனப் பிரிவு என்பது மரபியல் செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர். பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை. புலவர் ஆசிரியர் கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல், பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார். செம்பொருட் சிவம் ருத்ரா ஆவர். அம்மை அம்பா ஆவார். முருகன் சுப்பிரமணியன் ஆவான்; (சுப்பிரமணியன் - பிராமணனுக்கு நன்மை செய்பவன்) முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானை யையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை! விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கடமை செய்தல் வேண்டும்! அஃதறம்! அந்தண்மை! ஆனால், விழித்தலே ஆகாது எனத் திட்டமிட்டுத் தமிழே தீட்டு தமிழினம் தீண்டக் கூடாத இனம் என்று கண்மூடித்தனத்தைக் காலமெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட்படாத வணங்கத்தக்க பெருமையர்! அவர் என்றும் தமிழரால் போற்றப் படுபவரே அன்றிப் புறக்கணிக்கப்பட்டார் அல்லர் என்பது வரலாற்றுண்மை. இனிப் பார்ப்பனப் பக்கம் யாதெனப் பார்க்கலாம். பார்ப்பனர் என்னும் பெயரை எண்ணுதல் வேண்டும். பார்த்தார் - பார்க்கிறார் - பார்ப்பார். பார்த்தனர் - பார்க்கின்றனர் - பார்ப்பனர். பார்த்தல் வழியாக ஏற்பட்ட முக்காலப் பெயர்கள் இவை. இவற்றுள் பார்ப்பார், பார்ப்பனர் பெயர்களாக வழக்கூன்றின. கணியம் பார்ப்பார், குறிபார்ப்பார், ஏடு பார்ப்பார், ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்ப்பார், நாடி பார்ப்பார், கணக்குப் பார்ப்பார், சகுனம் பார்ப்பார் எனப்படுவார் வழக்கில் இல்லாமல் போய்விடவில்லையே! இப் பார்ப்பார், அறுவகைத் தொழில் பார்ப்பாராகத் தொல்காப்பியர் காலம் தொட்டே வாழ்ந்த தமிழர். அவர்கள் குருக்கள், ஓதுவார், பூசகர் (பூசாரி) பண்டாரம், பூக்கட்டி, வேளார் என்பார். குருக்கள், பூசகர் - வழிபாட்டாளர். ஓதுவார் - தேவபாணி இசைப்பார். பண்டாரம் - கோயில் பொருட்காவலர். பூக்கட்டி - நந்தவனம் பேணி, மலர் பறித்துத் தருவார்; மாலை தொடுப்பார். வேளார் - தெய்வப் படிவம் செய்வார், மண்ணீட்டாளர்; குயவர் என்பாரும் அவர். குயவர் - பார்ப்பார்; குயம் - குசம் ஆகிப் புல்லாகி, பார்ப்பாரும் ஆகியது. குசம் - தருப்பைப்புல் (அறுகு) தருப்பைப் புல்லால் வந்தவன் குசன் (லவன் குசன்). இனி, இவரையன்றித் தலைவன் களவுக்குத் துணையாய பார்ப்பனப் பாங்கன், வேள்வி செய்யாத வேளாப்பார்ப்பான், வானியல் நுணுக்கம் அறிந்த முதுகண்ணன் அல்லது கணியன் என்பாரும் அறிய வருகின்றனர். இவர்கள் எத் தொழில் செய் தாரோ, அத் தொழில் செய்த பார்ப்பார். இவருள் தொல்காப்பியர் நாளில் வாழ்ந்தவர் அறுவகைப் பார்ப்பார் ஆகலின் அவர்தம் தொழில் கருதி எண்ணினார். ஆசாரிய (கம்ம)த் தொழிலர் ஐவர் பகுப்பு இன்னும் உளதாதல் ஒப்பிட்டுக் காணத்தக்கது. ஐவகை மரபின் அரசர் பக்கம் என்பது ஐவகைக் குடிவழியினராகிய அரசர் பகுதி என்பது. சேரர் சோழர் பாண்டியர் என்பார் மூவேந்தரும், வேளிரும், குறுநில மன்னரும் என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப் பட்ட ஐவர், தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார். ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், பதினெண்குடி வேளிர் எனல் அறிக. இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம் என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப் பட்ட பிற குடியினர் பகுதி. அவர் அறுதொழிலோர் எனத் திருக் குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர், உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி (கரும பூமி = தொழில் உலகம்) என்று கூறும் திவாகர நிகண்டு. மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற் பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடையாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை. வாகைத்திணையின் துறைகளைக் கூதிர் வேனில் என்றிரு பாசறை எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார். அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும். குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல்இன் பத்துள் தங்கித் தீதறு நடுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை. என்று அவ்வவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை, உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே. என்று கூறி முடிக்கின்றது. குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக் காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றை யுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந் நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும். இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை, தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறு ளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப்படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம். நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க்குத் தானும் உரிமையன் ஆவனா? இதில் கூறப்படும் இன்னொருதுறை, கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை என்பது. கட்டாவது உறுதிப்பாடு. உரன் என்பதும் அது. உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பொருந்தி நிற்கும் தன்மை. இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலை மை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்கா றாமை, பொறையுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர். வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம். வாகையாவது வெற்றி: வாழ்வின் வெற்றியாவது அருள் கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறு தலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார். இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட, காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும். ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப. என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றி யுறுதல் கூறும் வள்ளுவமும் எண்ணல் வேண்டும். காஞ்சி காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலைபெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள். பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல். நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா? உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற்குமேயாம். மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே என்னும் புறமும், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்னும் அறமும் தெளிவிக்கும். காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந் திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடுவாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளை யுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன. மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் சிறப்பு என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர். மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை, மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை. என்றார் ஆசிரியர். அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க் களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவ ராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக, நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு. எனவரும் குறளை எண்ணினால் பெருமை ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும். நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு. பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையாமை வைக்கப் பட்டதாம். நாலடியார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்திய மை உணர்ந்து போற்றத்தக்கது. கணவன் இறக்க மனைவியும் உணர்வொன்றி இறத்தல் மூதானந்தம். காதலியை இழந்தமை தபுதாரம் காதலனை இழந்தமை தாபதம் கணவனொடு மனைவி தீப்புகுதல் முதுபாலை அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை தலைப்பெயல் நிலை எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து காடு வாழ்த்து இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில. பாடாண் திணை பாடாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போன்றதே, புரவலர்ப் புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று. அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி. அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப் பட்டது. அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம் போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ் வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத் திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோம சுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும் என்பார் வெள்ளைவாரணர் (தொல்காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக். 108-9). பாடாண் துறையில் இயற்பாவொடு இசைப்பாவும் (வண்ணமும்) வரப்பெறல் உண்டு. தலைவனை முற்படுத்திப் பாடாண்பாடும் புலவர் தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, வண்ணம் பாடுவம் என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும் என்பதை, காமப் பகுதி கடவுளும் வரையார். என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய் மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல் களிலும் இக்காதல் பாக்களைக் காணலாம். குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப்பாடலில் அவ் வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, வழக்கொடு சிவணிய வகைமை யான என்றார் (1032, 1033). கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமை யாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார். கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. என்பது அது (1034). கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள். கொடி என்பது வளைவுப் பொருளது. ஆதலால், படர் கொடி, ஆடு கொடி, பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும். கந்தழி என்பது கந்து அழி என்னும் இருசொல் இணைவு. கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி. வள்ளி என்பது வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடையாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள். கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ள மை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம். தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை. இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத் தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்த லாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது. கொடி நிலை என்பது மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு எனலாம். கந்தழி என்பது பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம். வள்ளி, வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம். இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர் என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே என்பது; எம் நூல். ஒரே ஒரு குறிப்புச் சான்று அறம் முதலாகிய மும்முதற்பொருள் என்னும் தொல்காப்பியமே, முப்பால் முன்னோடி. ஒரு தெளிவு புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப் பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க. உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம். முடிபுனைவிழா, மண்ணுமங்கலம். பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை. வாழ்த்துக் கூறுதல், ஓம்படை. பாடாண் திணையின் துறைகளுள் சில இவை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப்பார்க்கலாமே. மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளியலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் ஆற்றுப்படை என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றேயாம். அது, ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம். என்பது (1037). செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப் படை யாகும். பத்துப் பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் பட்ட வகை புலப்படும். அந் நாள் நிலநூல், சுற்றுலா நூல், வரலாற்று நூல், வழிகாட்டி நூல், மக்கள் தொடர்பு நூல், மாந்த நேய நூல் என்பனவாக ஆற்றுப் படை விளங்கியமை புலப்படும். மேலும் கலையே வாழ்வாக இருந்தவர் நிலை, அவர்தம் கருவி அமைப்பு, கலைத் திறம், வளம்பெற்றபின் வைத்து வாழத் தெரியாமை, நிலைப்பிலா வாழ்விலும் நிலைத்த குடும்பமும் சுற்றமுமாக வாழ்ந்த வாழ்வு என்பனவும் புலப்படும். சான்றாகத் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப் படை (மலைபடு கடாம்) என்பவற்றை நோக்குக. பாடுபுகழ்பெற்ற மன்னரும் தாம் பாணரும் கூத்தருமாகப் பாடினர் எனின், அவ் வாற்றுப் படையின் செல்வாக்கு தானே விளங்கும். போக்குக் கற்றவன் போலீசுக்காரன் (போக்கற்றவன்) வாக்குக் கற்றவன் வாத்தியாயன் (வக்கற்றவன்) என்பது புது வழங்குமொழி. இப் போக்குக் கற்றவனும் வாக்குக் கற்றவனுமாகத் திகழ்ந்தவன் ஆற்றுப்படைக் கலைவல்லான் எனல் சாலும்! மெய்ப்பாடு மெய்யின்கண் உண்டாகிய உணர்வு, பிறர்க்குப் புலப்படும் வகையால் வெளிப்படுவது, மெய்ப்பாடு ஆகும். மெய்ப்பாடாவது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவ தோர் ஆற்றான் வெளிப்படுதல் என்பார் பேராசிரியர். உள்ளத்து நிகழ்வது, கருத்துப் பொருள்; அது முகம், கண், காது, கால், கை, வாய், மெய் (உடல்) முதலியவற்றின் அசைவு, துடிப்பு, நடுக்கம், நிறமாற்றம், தடுமாற்றம், மயக்கம், மகிழ்வு, கிளர்ச்சி, துள்ளல் - இன்னவற்றால் பிறர் அறியத் தோன்றும். இத் தோற்றமே அகவுணர்வின் வெளிப்பாடு ஆகும். குறிப்பறிதல், குறிப்புணர்தல், குறி கூறுதல், கோள் தாங்கி (கோடாங்கி) கூறல் என்பன வெல்லாம், மெய்ப்பாடு உணர வல்லார் தம் தேர்ச்சியினால், பிறரை ஒப்புக்கொள்ள வைப்பன வாம். காப்பியக் கவின், மெய்ப்பாட்டில் தங்கியுளது எனலாம். இயலினும் இசையும், இசையினும் கூத்தும், பொது மக்களையன்றிப் புல மக்களையும், இளையர் முதுவர் ஆகியோரையும் ஒருங்கே கவர்தல் மெய்ப்படக் காட்டும் சிறப்பாலேயாம். நாடகமே உலகம் என்பது மாறித் திரையே உலகம் காட்சியே உலகம் என ஆகிய காலம் இது. ஆடுநர்க் கழியும் உலகம் என மெய்யியல் காட்டியது பழந்தமிழ்ப் புறநானூறு. ஆடிச் செல்வாரைப் போல-வேடமிட்டு ஆடிச் செல்வாரைப் போல-போவது உலகியல் என்பது அது. கூனியாக நடித்தவன் மீது, செருப்பை எடுத்து எறிந்தான் பார்வை யன் ஒருவன். இதுவரை எனக்குக் கிடைத்த எப் பரிசும், இப் பரிசு போலாகாது என்று பாராட்டி, அடையாளப் பொருளாக்கிக் கொண் டான் கூனியாக நடித்தவன். அவன் மெய்யாக உணர்ந்து நடித்ததுமன்றிப் பார்ப்பவன் தன்னையும் தன்னை மறந்துபோகச் செய்து விட்டான் அல்லவா! மெய்ம் மறந்து நோக்கச் செய்து விடுவது, மெய்ப்பாடு ஆகும் நிலை இது. மெய்ப்பாடு கலையாக இல்லாமல், வாழ்வாகி விடும் போது, எத்தனை பேரை நம்பி ஏமாறச் செய்ய - இழப்புக்கு ஆளாக்க முடிகின்றது என்பதை நாம் கேளாமலும் காணாம லும் இல்லையே. துறவர் போலிமை, கூடா ஒழுக்கமாவது இது. மெய்ப்பாட்டு விளக்கம், உயர்கலை விளக்கம்! ஆனால், அவன் வாழ்வில் மெய்யனாக இல்லாவிடில், பெருந் தீமையாம் என்க. தொல்காப்பியர், மெய்ப்பாடுகள், அவை தோன்றும் நிலைக்களங்கள், அகவாழ்வு புறவாழ்வு இரண்டிலும் மெய்ப்பாட்டின் பங்களிப்பு, ஆகாதமெய்ப்பாடுகள் இன்னவை பற்றி ஆழமாக எண்ணிக் கூறுகிறார். அவர்தம் நுண்மாண் நுழைபுலமும், கலைத் துறைக் கவினும், கட்டமை கோப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இயற்றியுள்ளார். சுவைப் பொருள், அதனை நுகரும் பொறியுணர்வு, அது உள்ளத்துப்பட்ட போது தோன்றும் குறிப்பு, அக் குறிப்பு மெய்யில் தோற்றமுறும் காட்சி என ஒரு மெய்ப்பாடு நான்காகும். மெய்ப்பாடு நூலோரால் எண்வகையாக உரைக்கப்படும். அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இவ் வெட்டையும், மெய்ப்பாட்டு நிலைக்களம் நான் கொடும் பெருக்கிக் காணின் முப்பத்து இரண்டாம்; இவற்றைச் சுவையும் சுவைப் பொருளும் ஒன்றாக்கிப் பதினாறு எனவும், உள்ளக் குறிப்பும் உடற் குறிப்பும் ஒன்றாக்கி எட்டு எனவும் கொள்வதும் உண்டு. இவற்றைக் கூறி மெய்ப்பாட்டியலை விளக்குகிறார் தொல்காப்பியர் (1195 - 1197). முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும் இறுதி மெய்ப் பாடாக உவகைச் சுவையையும் தொல்காப்பியர் கூறுதல், அவரின் பழுத்த உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் நகையும் உவகையும் கொல்லும் சினம் என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம். ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர். எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப. என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198). எள்ளலாவது இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல். இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு நீ முட்டாளா, மடையனா? என்றான் இருந்த ஒருவன். இருவருக்கும் இடையே இருப்பவன் யான் என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க. பேதைமை பேதைமைத் தன்மை; அறியாத்தனம். அதனைக் காணும் போது நகைச் சுவை உண்டாகும். ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்டால்... யான் கண்டது இது. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், ஏதோ தோன்றியது போல் மூவரும் நகைத்தனர்.. மடமை மடமை என்பது அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானை யும் அறியாதவனாகக் கருதுதல், காணாதாற் காட்டுவான் தான் காணான்; காணாதான், கண்டா னாம் தான்கண்ட வாறு என்பது போன்ற தன்மை (குறள். 849) அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் மடம் ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரிய தாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம். இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல்காப்பியத் தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல்காப்பி யர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங்களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள் களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மை யும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும். நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாகவும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்கு வர். உரிய சான்றும் காட்டுவர். அழுகை அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னி ருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு - இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு - இழப்பின் வழிவரு வது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை; பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு இளிவின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, ஒப்பாரி; கையறுநிலைப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு! அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே. என்பது அது (புறம். 112). வறுமை அழுகைப்பிழிவு, இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம். விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர். நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்றுதலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர். இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். இழிவே என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. இளிவரின் வாழாத மானமுடையார் எனவும் இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார். இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்பவற்றால் உண்டாகும் (1200). முற்றத் தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவி யும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக்காட்டும் ஒரு பாட்டு (புறம். 159). இளிவரல் விளைவு விளக்கம்: குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. என்னும் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டும் (புறம். 74). சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணா னோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு என்னும் குறிப்புமாம். மருட்கை புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. என்பது மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களங்கள் பற்றியது (1201). மருட்கையாவது மயக்கம். பாராதன ஒன்றைப் பார்த்தல் மயக்கமாக்கும். எறும்பு ஒன்று எட்டடி நீளம் ஈரடி உயரத்தில் வரக் கண்டால், பூனை வடிவில் யானை ஒன்று நம் முன்வந்தால், இறந்து போனான் எனப்பட்ட ஒருவன் நம்முன் நடந்து வரக்கண்டால் மருட்கை தோன்றாமல் இராதே. பறழுக்கு (குட்டிக்கு) வயிற்றில் பையையுடைய கங்காரு, பறக்கு மீன், சிற்றுயிர் உற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, இருதலை, முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக் கிறந்த உறுப்புடைய உயிர்கள் போல்வன என்பார் நாவலர். அச்சம் அணங்கு விலங்கு கள்வர் தம் இறை என்பன நான்கும் அச்சச் சுவை நிலைக் களங்கள் (1202). ஒரு மரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட அதனை அறிந்தான், அவ்விடத்தை இரவில் போய்க் காண அஞ்சுதலும், சுடுகாட்டுக்குத் தனியே இரவில் சென்று மீள்வதற்கு அஞ்சுதலும், பேய் பிசாசு என்று கற்பிக்கப்பட்ட வற்றை நினைத்து அஞ்சுதலும் அணங்குவழி அச்சம். மயக்கும் பெண்பேய் பற்றிய புனைவு பழமை மிக்கது; நீலி கதையோ நெடுங்கதை. இவை நூல்வல்லார் சுட்டும் அளவுக்கும் பெருக்கமாக மக்கள் வழக்கில் இருந்தமை புலப்படும். பேய் பிடித்தல் பேயோட்டல் உடுக்கடி என்பன இன்றும் மறைந்து விடவில்லையே! புலி விலங்கு ஒன்று நம்முன் நிற்பதாகக் கனவில் காணினும் உண்டாகும் அச்சத்தை நோக்கும் போது நேரில் கண்டால்! கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், இன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது. இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல். கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது. ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; கழிந்ததும் உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க்கேனும் நினைவில் நிற்கும். பெருமிதம் பெருமிதம் வேறு செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள். பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம், கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என்பது (1203). கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கேயன்றி அவர் பெற் றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும். கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே! ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு. மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப் புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே என்னும் புறப்பாட்டு (66). வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர் வீறு நாடறியலாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர் களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே! கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் படாம் வழங்கினானே பேகன்! ஏன்? வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமிதமாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே! வெகுளி உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே. என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204). காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் உறுப்பறை. குடிகோள் ஒருகுடியையே முற்றாக அழித்தல். ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல். அலை - அலைக்களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல். கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவுதல் கலித்தொகைச் செய்தி. உவகை உவகைச் சுவை நான்கும், செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே. என்பது (1205) உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம். அவன் உவகை இவன் அல்லல் ஆதல் ஆகாது என்பாராய் உவகையை அல்லல் நீத்த உவகை என்றார். உவகை இருபாலும் இல்லை யேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே உருவு, நிறுத்த காமவாயில் என்றவர் தொல்காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219). செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம். புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு?. என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103). உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள் என்று உவந்து வினாவியதும் அது (குறள். 1106). உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே புணர்வு தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும். புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள என்பது வள்ளுவம். விளையாட்டும் இருபாற் பொது. கடலாட்டு, புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம். அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம். சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவன வற்றாலும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல், உள்ளப் பட்ட நகைநான் கென்ப விளிவில் கொள்கை அழுகை நான்கே யாப்புற வந்த இளிவரல் நான்கே மதிமை சாலா மருட்கை நான்கே பிணங்கல் சாலா அச்சம் நான்கே சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே வெறுப்ப வந்த வெகுளி நான்கே அல்லல் நீத்த உவகை நான்கே என முதலடியோடு எதுகை வருவது கருதியது அன்றி, அப் பொருள்களின் உயிர்நாடியாம் அடைமொழிகளை நடைப் படுத்தியுள்ள நயம், நினைப்பவர் நெஞ்சம் நிலைக்கவைக்கும் நீர்மை யுடையதாம். மேலும் 32 மெய்ப்பாடு மெய்ப்பாட்டு நிலைக்களங்கள் முப்பத்திரண்டு கூறிய அவர், அவை அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பானவை என வைத்து, அகத்துக்கே அவ்வாறு முப்பத்திரண்டு நிலைக் களங்கள் உண்மை யைத் தொகுத்துச் சொல்கிறார். ஆங்கவை ஒருபா லாக ஒருபால் எனத் தொடர்கிறார். உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என்றும், கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு என்றும், முனிதல், நினைதல், வெருவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு என்றும், கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்றும், நாலெட்டாகப் பகுத்து உரைக்கும் அவற்றை முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு மெய்ப்பாடுகள் என்று கூறுவார் நாவலர். களவு மெய்ப்பாடு களவிற்குச் சிறந்த மெய்ப்பாடுகள் இவை என்பதை நான்கு நான்காக அறுவகைப்படுத்தி முறையாக அடுத்து ஓதுவார் ஆசிரியர். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் விரும்பி நோக்குதல், தலைவிக்கு நெற்றியில் வியர்வை உண்டாதல், காட்சி இன்பத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்தல், தமக்கு உண்டாகிய மாற்றத்தைப் பிறர்க்குப் புலப்படாவாறு மறைத்தல் என்பவை நான்கும் முதற்பகுதி. இவைமுறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நடுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை எனப்படும். உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன் றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர். ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமை யை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்பனவாம். தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடை முதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன. நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப்படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம் பகுதி. இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத் தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்ய மாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கை யறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்திணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே. தனிமை மெய்ப்பாடு தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடு களாக இருபதை எண்ணுவார் ஆசிரியர். இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன் றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கி யிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவை யெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம். களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித் துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற் குரிய மெய்ப்பாடுகள். மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, பிறப்பே குடிமை முதலியன. ஆகாமெய்ப்பாடு காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை, நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி, வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை, என்றிவை இன்மை என்மனார் புலவர். என்றார் (1220). நிம்பிரி - பிழையைப் பொறுத்துக் கொள்ளாமை; கொடுமை அறனெறி அழிப்பு. வியப்பு - தன்னைப் பெருமை யாகப் பாராட்டல்; புறமொழி - புறங்கூறுதல்; வன்சொல் - வடுவாக்கும் சொல்; பொச்சாப்பு - மறதி; மடிமை - சோம்பல்; குடிமை இன்புறல் - குடிப் பெருமை பேசி இன்புறுதல்; ஏழைமை மறப்பு - நிலையில் தாழ்வெனக் கருதாமை; ஒப்புமை - ஒப்பிட்டுக் காட்டிக் கூறுதல்; இன்மை என்பது இவையெல் லாம் இல்லாமை என்னும் பொருளதாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காது வீம்பு காட்டும் குடும்பம் கெட்டுத் தொலைதல் மிகுதியாதலால் அது தலைப்பட வைக்கப்பட்டது போலும். அவ்வொன்று கைவரின் மற்ற தீயவை பலவும் ஒழிதல் உண்மையாம். தற்பெருமை கொள்வார், தம்மைச் சிறுமைப்படுத்தத் தாமே கட்டியங் கூறுபவர் ஆவர். பொதுவாழ்வுக்கே தற்பெருமை ஆகாது எனின் குடும்ப வாழ்வுக்கு அதன் வாடை யும் அடித்தல் ஆகாது. புறமொழியாவது புறங் கூறுதல் இழிவுமிக்கது. குடும்ப இழிவை ஊரிழிவாக ஆக்கும் கொடுமைப் பழிவழியது அது. அதனைத் துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. என வினாவும் குறள் (188). வன்சொல் சுடுசொல், நாகாத்தல்; குடும்ப நலங்காத்தல். தீயினால் சுட்டது ஆறினும் ஆறாதது வாயினால் சுட்டது! குடிப் பெருமை கூறுவது - பிறந்த குடிப்பெருமை கூறுவது, புகுந்த குடிப் பழியாகக் கொள்ளப்பட்டுக் கேடாதல் பெருவழக்கு. பிறந்த குடிப்பெருமை, புகுந்த குடியில் நடந்து கொள்ளும் நடை யாலேயே சிறக்கப் பெற வேண்டுமேயன்றித் தான் கூறுதலால் இல்லை என்பதை உணர்தல் இல்லறச் சீர்மை. ஏழைமையாகிய நிலை சூழலால் ஏற்படுவது. நிலையில் தாழ்வு வறுமை ஏற்படல் பொதுவானது. அது குறித்து எங்கள் குடும்பம் இப்படிப் பட்டது எனத் தாழ்த்திக் கொண்டு ஒடுங்கி இருப்பதும் ஒப்புரிமை இல்லறச் சிறப்புக்கு உதவாது. மனைவியைக் கணவன் இன்னவள் போல என்று ஒப்புக் காட்டி உரைப்பதோ, கணவனை மனைவி இன்னவன் போல என ஒப்புமை காட்டி உரைப்பதோ தீமையைத்தாமே கை கூப்பி வரவேற்பது ஒப்பதாம். இவையெல்லாம் நீங்கிய ஒத்த உரிமை வாழ்வே உயர்வாழ்வு, வாழ்வாங்கு வாழும் வாழ்வு எனத் தெளிவித்தா ராம். ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பா வினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள் ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கெடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்! தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்துகிறார்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்பதும் அவர் உரை (876). உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது வள்ளுவர் உரை (குறள். 718). உவமை முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் பழமொழியாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது. மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு - இப்படிப் படைக்கப்பட்டவை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல உழைத்தல் - இன்னவையும் அப்படியே. குதிரைவாலி, காடைக்கண்ணி, வாளவரை - இவையெல்லாம் பொதுமக்கள் வழங்கியவையே. அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல - என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை. மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை. உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும். கிளிப்பச்சையில் வண்ணம் உவமை. குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை. மழைக் கொடையில் பயன் உவமை. சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால், ஓஒ உமன் உறழ் வின்றி ஒத்ததே. எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு. புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானதுமாகிய நாரையின் அலகைப் புலவர், பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய். என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது. புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது. மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். பிரசங்கம் என்றும், பெருஞ்சொல் விளக்கம் என்றும் வழங்கி வந்தவரிடையே சொற்பொழிவு என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், சொற்பொழிவாற்றுப் படை என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை. உவமை வகை வினை பயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம். என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு. வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம். ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தி யிருக்கலாம். உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததிலும் உயர்ந்த தன்மையே உவமையாக்கப் படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு, நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும் என்று உவமைப்படுத்துவது இல்லையா! அதுபோல். முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற் பொருளும், முதற் பொருளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு. மலை போன்ற யானை -முதலுக்கு முதல் உவமை தாமரை அன்ன தண்குடை -முதலுக்குச் சினை உவமை பனை நெடுங்கை -சினைக்கு முதல் உவமை ஆடுகை கடுப்பத் திரிமருப்பு (கடுப்ப - போல; மருப்பு - கொம்பு) சினைக்குச் சினை உவமை பவழச் செவ்வாய் என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது. எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் உவமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் பவழவாய் எனினும் உவமையே. இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப் படாமல் மறைந்துள்ளது. ஆதலால் முன்னது சுட்டிக் கூறிய உவமை; பின்னது சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர். சுட்டிக் கூறா உவமை யாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே என்பது அது (1228). புணர்த்து - பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229). பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர். உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர். முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும். இதில், பல் பொருள்; முத்து உவமை. ஆனால், இவ்வாறு அன்றிப் பல் முத்து எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை, பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும் என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு. பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231). உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு அன்னவை பிறவும் எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232). அவன் கணக்காக இவன் உள்ளான் அவள் கணக்காக இவள் பேசுகிறாள் இவண் கணக்காக என்னும் பொருள்தரும் உவமை உருபு. இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் செத்து என்பது உவமை உருபாயிற்று. புலி செத்து என்றால் புலிபோல என்பதே பொருள். செத்து > செத்திரம் > சித்திரம் ஆயது ஒவ்வியம் > ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு. செத்து என்பது பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது. சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில. புது நூல் ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன் படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழி வளர்ச்சி சேர வேண்டின், காலந்தோறும் அப்பணி நிகழ வேண்டும் என்பதாம். இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று. இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே (1243) என்கிறார். இணை மாலை போலும் மணமக்கள் திருக்குறள் ஈரடி என்னிருமக்கள் பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு உள்ளுறை முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றி யும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார். (உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35-37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48) உவமை இயலில் உள்ளுறை உவமைப் போலி எனவும், இறைச்சி உடனுறை எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன. உள்ளுறை இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழி களாக உள. ஆனால், தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை. ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே. உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடுபொருளில் கொள்ளும் திறம் இல்லாராகி விட்டனர். ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது. உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையுமாம். உள்ளுறை என்பது என்ன? 1. உள்ளுறை உவமை சார்ந்தது. 2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது. 3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது. 4. வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும். 5. தெய்வம் தவிர்ந்த கருப் பொருள்களை இடமாகக் கொண்டு வரும். 6. இதன் இலக்கணம்; உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். என்பது (எடுத்துக் கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக்கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்). அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி, தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர். தலைவி, அவள் அறிந்த இடம், பொருள் கொண்டு சொல்வாள். தோழி, அவள் வாழும் நிலப்பரப்பளவும் கொண்டு சொல்வாள். தலைவன், அவன் அறிந்த விரிவாலும் அறிவாலும் சொல்வான். மற்றவர்க்கு இன்ன இடமென்னும் வரையறை இல்லை. உள்ளுறை இன்பந்தழுவியதாகவும் துன்பந்தழுவிய தாகவும் உவமை வழியில் வெளிப்படும். உள்ளுறை கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலில் இருந்து முகிழ்ப்பது. வெளிப் பார்வைக்குச் செடி கொடி மரம் பறவை விலங்குகளின் இயல் செயல்களைப் புனைவதுபோல் தோன்றும். இவற்றைக் கூறுவது தாம் கூறப்புகுந்த அகப் பொருளுக்கு நயமும் நலனும் சேர்ப்பதற்கே என்பதை உட் கொண்டே துய்க்க வேண்டும். பொருளும் காணவேண்டும். இல்லாக்கால் இயற்கைப் புனைவு என்று மட்டுமே கொள்ளலாகி விடும். அது பாடுபுலவன் கருதிய பொருளுணர்ந்து ஓதுவதாக அமையாமல் வாளா அமைந்துவிடும். உள் ஒன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்று கூறுவர். கூறினும் அத் தொடர்பான உட்கருத்து மெய்யுள் உயிர் போல விளங்கிக் கிடக்கும் என்பார் வ. சுப. மாணிக்கனார். உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு என்னும் உடலுயிர்க் காதல் (குறள். 1122) உள்ளுறையாக, உள்ளுறை இலக்கணம் அமைந்தது என்க. பொதுமக்கள் வழக்குப் போல நேரிடையாக இடித்துக் கூறாமல், அறவோர் உரைபோல் வலியுறுத்து நேராகக் கூறாமல், கனிவொடு கூறிக் காதலும் கற்பும் வாழ்வும் வளமும் சிறக்கக் கூறுவது உள்ளுறை அடிப்படையாம். ஒரு சான்று: யாரினும் இனியன்; பேரன் பினனே; உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்; சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே. இது, குறுந்தொகை 85. தலைவனுக்குப் பரிந்து கூறவந்த பாணனை நோக்கித் தோழி கூறியது இது. இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே! பெட்டைக் குருவி கருக்கொண்டு முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது என்பது இப்பாடல் திரட்டுப் பொருள். முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக் கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை. குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி இறைச்சி பற்றிக் காணலாம்: இறைச்சி தானே பொருட்புறத் ததுவே. இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176). பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது. இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன. இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே. ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை உடனுறை என்றது அறிந்தோம். மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம். உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை, உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெறவைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது இறைச்சி. குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமை போல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் கூடாது; இயலாது என்பார் பெருமுனைவர் தமிழண்ணல். இறைச்சி தானே உரிப்புறத் ததுவே என்பது இளம் பூரணர் பாடம். இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்த தாகித் தோன்றும் பொருள் என்பது அவர் உரை. ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி எனத் தெளியலாம். அம்ம வாழி தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே; அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குபிரிந் துறைதி என்னா தவ்வே என்னும் இது, ஐங்குறுநூறு (333). பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடைய இப்பாட்டு, பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ் கிறாய் என்று கேட்கமாட் டாவோ? என்று தலைவி கூறிய இறைச்சி. இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை. கதையர் இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா? இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் அவருள் எவர் என்னவர் என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாத போது நீதானா கண்டு கொள்வாய் என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம். வேறுவகை உவமை பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா. விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்கு கிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254). கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! தட்டுத் தடுமாறி என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச் சொல், இற்றை வழக்குச் சொல்லாவது இது. மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது. ஆதலால் அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே என்றார். இனி, கலகவான் விழி வேலோ சேலோ மதுரவாய் மொழி தேனோ பாலோ (திருப்புகழ்) என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும். உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் மயங்கா மரபின் நூல் யாத்த தொல்காப்பியர், உவமை இயல் என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன. அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிட மாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் செய்யுளியல் என்று வகுத்தார் ஆசிரியர். செய்யுள் உறுப்பு செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார். செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கி வரப் பெறுவன. செய்யுள் செய் - விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன் செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல். பா - பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல், பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல். தூக்கு - தூக்கிப் பார்க்கும் எடை, எடைக்கல், ஆராய்தல், உயர்த்துதல், எடுத்தல் இன்னவற்றின் ஏவல். பனுவல் - பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். பஞ்சிதன் சொல்லா பனுவல் இழை யாக -நன். தொடை - தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு - நட்பு; தொடுக்கும் - தொடர்பு. ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யாப்பு - யா - கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடையது; யாக்கை - உடல்; யாத்தல் - கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி, பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு. செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும். நாட்டுப் பாட்டு பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழி கள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. முது மொழி என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று. ஆடிப் பட்டம் தேடி விதை சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது எதுகை! தைப்பனி தரையைப் பிளக்கும் மாசிப்பனி மச்சைப் பிளக்கும் இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை மோனை எனப்படும். முதலெழுத்து ஒத்தல் மோனை முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்! மோனை பார்ப்பவர் முழுமூடர்; எதுகை பார்ப்பவர் ஏதுமறியார் இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்டனவே! மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே. இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன? மாமி அடித்தாளோ மல்லிகைப்பூச் செண்டாலே! பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே! - துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு! கத்தரிக் காய் எங்களுக்குக் கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு. - இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே. தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! - இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது இயைபு. பின்னே வரும் பெட்டியும் குட்டியும் இயைபே! நாலு மூலைப் பெட்டி நந்த வனத்துப் பெட்டி ஓடும் குதிரைக் குட்டி வீசும் புளிய ஆக்கை இது விடுகதை; கிணறு - கமலை - ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை). கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்: வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம் இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, மேற் கதுவாய், கதுவாய் இப்பொழுது எப்படி வழங்குகின்றது. கொறுவாய், உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய், இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது. இன்னும் பாருங்களேன்: பள்ளம் மேடு பார்த்துப்போ, அவனுக்கு நல்லது கெட்டது புரியாது, எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும், பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே இவையெல்லாம் முரண்கள்; எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை. ஆ ஓ என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ, ஓஒ என வரும். பாலோ ஒஒ பால் தயிரோ ஒஒ தயிர் இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! காயாத கானகத்தே-எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது! எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும் பாணன் துணைவிக்குப் பாட்டி என்று பெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. பாட்டாங்கால் எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே -பாருங்க ளேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரையாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து விட்டது. அதனால், எடுத்துக்காட்டுத்தர அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பாட்டு அளவு பாட்டு என்றால் பெரிதாக - நீளமாக - இருக்க வேண்டுமா? அரும்பாடு பட்டு அமைக்க வேண்டுமா? இல்லை! இல்லை! என்கிறார் தொல்காப்பியர். ஓர் அடி சிறப்பாக அமைந்தால் போதும்; அது பாட்டு! சரி, அடி என்றால் 16-சீர், 32-சீர், 64-சீர் என நீண்டிருக்க வேண்டுமா? வேண்டாவே! இருசீர் அடி குறளடி; குறளடி ஒன்று அருமையாக அமைந்து விட்டால் அது பாட்டுத்தான். குறள் அடி என்றால் இரண்டடியுடைய குறட் பாவை அன்று; இரண்டு சீர்களையுடையது. அதனை உலகறியக் காட்டிய பாட்டி ஔவையார்: அறஞ்செய விரும்பு ஆறுவது சினம் என்றார். அரிய பாட்டுகள்தாமே இவை. செய்யுள் இனிச் செய்யுள் பற்றித் தொல்காப்பியர் சொல்வதை அறியலாம். செய்யுள் முதல் உறுப்பு மாத்திரை; அடுத்தது எழுத்து. மாத்தல் என்பது அளத்தல். மாத்தம் அளவு. பா என்றால், அளவுக்கு முதலிடம் தருதல் வேண்டும். அவ், அளவும் எழுத்திலேயே தொடக்கமாகிவிட வேண்டும். மற்றை மற்றை உறுப்புகளிலும் அளவு பேணப்பட வேண்டும் என்னும் முற் குறிப்பினது மாத்திரை என்பதாம். அளவுடன் அமைந்தனவே எழுத்தொலிகள். நா எழுந்து ஒலி செய்ய வேண்டும் எனின், அசையாமல் இயலாது. நா, இதழ், வாய் இன்னவை அசையும். அசையின், இசையாம். அவ் வசைகள் சில சீராக அமைவது சீர்; அச் சீர்களைக் கொண்டு அல்லது சீர்களால் அமைவது அடி; அடி தனித்து நிற்பினும் பிற அடிகளொடு கட்டுற்று நிற்பினும் யாப்பு ஆகும். இதுவரை சொல்லப்பட்ட மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு என்னும் ஆறும் செய்யுள் மாளிகையின் அடிப் படைக் கட்டுமானப் பொருள்களாவன. பா - பாவு ஆடை நெய்யும் தறியைப் பாருங்கள்; அங்கே அசை, சீர், அடி, பா என்பவையும் தளை, தொடை என்பவையும் உண்டு. அவர்கள் நெய்வதும், இவர்கள் செய்வதும் ஒப்பது! நூற்றல் என்பது நூல் இழைத்தலையும் நூல் இயற்றலையும் குறிக்கும் சொல்லாயிற்று. இவை, தமிழர் வாழ்வியல் தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். கலை என்பது ஆடைக்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக. அடி ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி மட்டுமா? இரயிலடி எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத் திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே. அடி ஒன்றுடையது இயக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலை யாக - இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்டன. மாந்தனும் ஒருகாலம் நான்கு அடிகள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்! வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக - அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை! ஈரடி ஈரடிப் பெருமை என்ன? தனித்தனியே நின்றால் - தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை - தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது. ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும். மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும். இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த கதை. வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தா லும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம் என்றார். பாரடி யெல்லாம் சுற்றிவரப் படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்! படர்ந்த அடிகள் எத்தனை? ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள், ஈரடி தானே குழந்தாய்! என ஈரடியால் உலகளந்த - அளக்கும் - விளக்கம் அறியலாம். இவையெல்லாம் அடியும் தொடையும் பாவியக்கமாகும் வாழ்வியல் அடிக் களங்களாம். சும்மா v‹d ntiy brŒ»whŒ?-R«kh இருக்கிறேன். vj‰F¥ ngh»whŒ?-R«kh போகிறேன்! v‹d ngR»Ö®?-R«kh பேசுகிறோம்! உயர் பொருட் சும்மா, உற்ற தாழ்நிலை இது. சும்மா என்றால், நோக்க மற்ற - குறிக் கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந் நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், சும்மா கிளம்பக் கூடாது. நோக்கு நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, குறிக்கோள் இலாது கெட்டது என வாக்கும் அமைதல் ஆகாது. நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள் என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் மரபு என்றார். மரபு ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி நடைக்குச் சாலை விதிகள் சட்டமாக்கப் பட்டமை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, மாற்றருஞ் சிறப்பின் மரபு என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல். மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் பாடுவோன் அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்! தூக்கு பாடுவோன், தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத்தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் - என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் தூக்கு என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது தூக்கு என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = பாட்டு). தொடை சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால் தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கடப்பாடாம். கேட்கும் சுவை செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் எனப் பாராட்டப் படும். அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டே பாவின் நயத்திற்குத் தொடை என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, செந்தொடை என்பன வாம். அளவு எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் - அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், அளவியல் என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார். கட்டடக் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட ஆறு உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட கட்டு மான உறுப்புகள் இந்த ஆறும் எனலாம். யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு? தளமென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே ஏராரு மாளிகையாய் ஏற்றம் பெறும்! இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர். திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும். கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண்டாகப் புலவனால் படைக்கப் படும் புதுமைப் பொருள், கூறப்படும் பொருளின் துறை, ஒன்ற னோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும். இவையெல்லாம் எண்ணின், உறுப்புகள் இருபத்து ஆறாம், செய்யுள் வனப்பு எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்). பாடுவது எளிது இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை என்கிறீர் களா? இல்லை! இல்லவே இல்லை! முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும் என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதைமுதலிய வற்றில் எல்லாம் யாப்பியல் இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப் பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று எளிதாகப் பாடலாம் என்னும் யாப்பியல் நூல். மிக எளிது மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! ஆச்சு என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்: ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன் என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன், கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட... என்கிறான். தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம். என்கிறான் ஒரு பெரும்புலவன். சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா. என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று. வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளுக்கு? ஏகபாதம் என்னும் ஓரடி பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு? பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார மூவர்! பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்! பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்! வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமை யெல்லாம், எவ்வளவு எளிமை! ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்! அசையும் இசையும் அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை! அசையும் சீரும் இசையொடு சேர்த்தி இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர். அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார். புதுப்பா இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. ஐக்கூ எனப்படுகிறது. வசனகவிதை எனவும் தோன்றியது. இளங்கோவடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றையெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா? தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது, தமிழ்வழக்கு; தள்ளுவது அயல்வழக்கு; தொல்காப்பியம் கொள்ளுவது மொழிக்காவல் - பண் பாட்டுக் காவல். தொல்காப்பியம் தள்ளுவது மொழிக்கேடு, பண்பாட்டுக் கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது மொழித் தூய்மை. தொல்காப்பியம் தள்ளுவது மொழிக் கலப்பு. ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது. வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம். இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் - மறைநூல் - தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம். எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாது காத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப் பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்டளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. தடையா? மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக் குரிய ஆக்கங்களையெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப்பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க. உரைப்பா செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டி ருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக் களைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவி லேயே, வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர். என்றார் (1336). பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, முதுசொல்யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது புதிர் (விடுகதை). அங்கதம் வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம் மேலேகாண்போம். சொல்மரபு சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று. என்கிறார் (1337). நாற் சொல்லாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை. ஓசைவகை அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் ஆசிரியப்பா எனவும் பட்டது. நூல் இயற்றப் பயன்படுத்தியமையால் நூற்பா எனப்பட்டது. இரண்டற்கும் வேறுபாடு, அகவற் பாவிற்குரிய அடிவரையறை, முடிநிலை என்பவை நூற்பாவிற்குக் கொள்ளுதல் வேண்டுவது இல்லை. ஓர் அடியாலும் வரலாம்; குறைந்தும் வரலாம். மிக்குப் பெருகிவரினும் அகவல் முடிவுபோல் முடியவேண்டும் என்பது இல்லை என்பவை இவற்றின் வேறுபாடாம். ஆசான், நுவல்வது - நூல் ஆயது; அதன்பா, நூற்பா எனப்பட்டது. நூல், மறை என்பன இலக்கணம் குறித்துநின்று பின்னர்ப் பொருள் விரிவும், திரிபும் கொண்டன. மறை என்பதன் பழம்பொருள் பாதுகாப்பு, களவு என்பவையாம். எ-டு: மெய்ம்மறை (கவசம்) ; மறையோர் - களவொழுக்கக் காதலர் (1442). அகவல் ஓசை இருவகையாம். அவை நேர் ஒன்றல், நிரை ஒன்றல் மா முன் நேர், விளமுன் நிரை என்பன. செப்பல் ஆசிரியர் உரைப்பது போல் ஒரு போக்காக இல்லாமல், கூற்றும் மாற்றமும் - செப்பும் வினாவும் - போல வரும் யாப்பு வெண்பா யாப்பு. அஃதான் றென்ப வெண்பா யாப்பே (அஃது + அன்று = அஃதான்று) வெண்பா ஓசை செப்பல். காய்முன் நேர்வரல் செப்பல். துள்ளல் கலிப்பாவின் ஓசை துள்ளல். நின்று மேலேறிக் கீழேவீழ்தல் துள்ளல் துள்ளல் ஆட்டம் (துள்ளாட்டம்) ஆட்டங்களுள் ஒன்று. தத்து வாய்மடை, கலிங்கல் என்பவை நீர் துள்ளிவீழும் இடங்களாம். துள்ளி வீழும் நீர் துள்ளி - துளி ஆயது. மீன் துள்ளி, துள்ளம் என்பவை ஊர்ப் பெயர்கள். தனதனனா தனதனனா தனதனனா தனதனனா நீர் துள்ளி வீழ்தல்போல் சீர் இறுதி நெடிலாகவும் அடுத்த சீர்முதல் குறிலாகவும் இருத்தல் காண்க. காய்முன் நிரைவரல் கலித்தளை என்க. எ-டு. அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால் தூங்கல் இனி தனதனதன தனதனதன என்னும் ஓசையுடன் வரின் வஞ்சித் தளை. அது தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் என்பது யானை. அதன் கையை இப்பாலும் அப்பாலும் அசைப்பது போலவும், தொங்கும் ஊசல், காதணி, கடிகையாரத் தொங்கல் என்பன இயங்கும் இயக்கம் போலவும் இப்பாலும் அப்பாலும் செல்வது. தூங்கல் ஓசை வஞ்சிப்பாவின் ஓசை. கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது ஒன்றிய வஞ்சி; பின்னது ஒன்றா வஞ்சி. எ-டு : முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தது. என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை அம்மையப்பன் போலவும் நரமடங்கல் (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட யாளி என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342). செந்தொடை தொடை பற்றி முன்னரே கண்டோம் தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் செந்தொடை என்பது (1357). செம்மையாவது இயல்பு. இருபா அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து ஐங்குறு நூல் வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது. வாழி யாதன் வாழி யவினி என்பதே அம் முதலடி பத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறுதலைக் காட்டும். கடவுள் வாழ்த்தி லேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பாக்குத் தும்முதலைச் சுட்டினார். வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப்பகம் தொல்காப்பியம். அது, வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே (1366) என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவு றூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363). புறநிலை வாழ்த்து நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக! வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக! - என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367). எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமேயன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம் என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது. புறம் புறம் திரிந்த செல்வமே என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. தெய்வம் நின்புறம் நிற்பதாக என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம். வாயுறை வாழ்த்து வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சிகளும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம். வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை, அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே என்னும் இந் நூற்பாவிற்கு (1369), முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடை யின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து எனப்படும் என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல் தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியா மல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும். அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. என்றும் பணியுமாம் பெருமை என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க்கும் பொதுமையது ஆகலின். அடங்கிப் போதல், அடக்கும் கருவி என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம். செவியுறை செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது. இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், இடிக்கும் கேளிர் என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை. செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே. என்பது நூற்பா (1371). பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல். எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகு வார். என்பது வள்ளுவம் (896). புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்? வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367, 1417). சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல் அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு. அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, சீ! சீ! என்ன பிறவி இது என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால், கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. என்றார் வள்ளுவர் (819, 820). வண்ணம் வளமான இசையமைந்த பா, வண்ணப்பா, வள் - வண். வண் + அம் = வண்ணம். வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய் யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும். ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித் தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூ றாகப் பாடியவரும் உளர். பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர். அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470) தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுகை யுடையது தாஅ வண்ணம். எ-டு: உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை (782) வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம். எ-டு: மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை (1025) மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல் மெல்லிசை வண்ணம். எ-டு: வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் (420) இயைபு வண்ணம்: இடையெழுத்துப் பலவாக வருதல் இயைபு வண்ணம். எ-டு: தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும் (985) அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம். எ-டு: ஓரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும் 1483) கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும் நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். எ-டு: கேடும் பீடும் கூறலும் தோழி (1048) குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். எ-டு: புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ (1053) சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம். எ-டு: காமம் நீத்த பாலி னானும் (1022) நலிவு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு: னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு (123) அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும். எ-டு: மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின் (1593) (நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க) புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம். இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினையே முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே -ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா). ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு வண்ணம். உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் (106) ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனை யும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது. சிறப்பொடு வருவழி யியற்கை யாகும் (349) எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை பொருந்தி வருவது எண்ணுவண்ணம். எ-டு: நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் (1589) அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு வண்ணம். அகைத்தல் = அறுத்தல். ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே..... (1526) தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது. முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை (சிலம்பு) ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப்பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம். பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் (குறள். 751) உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும். எ-டு: எரியுரு வுறழ விலவ மலர (கலி.33) முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற்சீரடி யின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம். எ-டு: நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (கலித். 39) வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து நிறைவில், வண்ணந் தாமே இவையென மொழிப என முடித்தார் (1490). வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங்கணக்கு என்னும் அரிவரி வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம். பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் - இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப்பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை. இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப் பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல் காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும் என்பதும் (131) உருட்டு வண்ணத்திற்கு, உளவென மொழிப இசையொடு சிவணிய என்பதும் (33) எடுத்துக்காட்டு ஆகலாம். அவ்வா றாயின், நான்கு வண்ணங்களுக்கு மட்டுமே எடுத்துக்காட்டுக் காட்ட இயலாதாயிற்று. ஏன்? ஒற்றளபெடை வருதல் இலக்கிய வழக்கிலும் அரிதானது. புறப்பாட்டு வண்ணம் நூற்பாவிற்கு ஏலாதது. தூங்கல் வண்ணம் வஞ்சியடி யுடையது; நூற்பாவோ அகவலடி யுடையது. இனி முடுகு வண்ணமோ நாற்சீர் அடியின் மிக்க அடிக்கண் வருவது; நூற்பா அடிக்குப் பொருந்தாதது. இன்னவற்றாலேயே, இவ் வண்ணங்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியத்திலே இலக்கியமும் காட்ட இயலாததாயிற்று. வண்ணம் பாடிய இசை நூலும் அன்று; காப்பியமும் அன்று; தொல்காப்பியம். இலக்கணம் கூற வந்தநூல் இவ்வளவும் கூறியது செயற்கரிய சீர்மையது அன்றோ! ஓர் இலக்கணத்தை இத்தகு சுவையும் நயமும் கமழ இயற்றல் எளிமையாமா என்பதை உணர்ந்து போற்றுவதற்கே நாம் எடுத்துக் கூறுவதிதுவாம். தொல்காப்பியர் அரிய படைப்பாளி மட்டுமல்லர்; மிக இனிய துய்ப்பாளியுமாவர் என்பதன் சான்றுகளுள் ஈதொன்று என்க. வனப்பு வனப்பு எனச் சொல்லப்பட்ட செய்யுள் உறுப்புக் கூறும் ஆசிரியர், அம்மை முதலாகக் கூறுகிறார். வனப்பு = இயற்கை எழில் (வனம் - வனப்பு). கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு என்பது முருகு. அம்மை: அம்மை தானே அடிநிமிர்வு இன்றே (1491) என்கிறார். நிமிர்தல் = மிகுதல். அடிமிகாமல் சுருங்கச் சொல்வதே அம்மை என்னும் அழகாகும். பத்துவகை அழகுகளில் சுருங்கச் சொல்லல் என்பதே முதல் அழகு (நன்). அம்ம கேட்பிக்கும் (61) என்பது போதுமே. அழகு : செய்யுட் சொல்லாகிய உரிச்சொல் மிகுதியாக வர இயற்றுவது அழகு என்னும் வனப்பாகும். எ-டு : ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (813) தொன்மை : இடை இடையே உரைநடை வரப் பழமையாக வழங்கிவரும் பொருளைக் கூறும் செய்யுள்களை யுடையது தொன்மை. இதற்குத் தகடூர் யாத்திரையைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது. பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது. தோல் : இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு. விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர். இயைபு: ஞ் என்னும் எழுத்து முதல் ன் என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துக்களைக் கொண்டு முடியும் பாடல் களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ் வகையின. என் என முடிந்தவை. புலன் :எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட் டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ-டு : குடும்ப விளக்கு; இருண்ட வீடு; பாஞ்சாலி சபதம். இழைபு : வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும். எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர். வனப்பு அமைக. இனிப் பா பற்றிச் சில காணலாம். பா, உரைப்பா பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள் வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக் காணலாம். ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம். நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை. அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் வரையறை அடிவரையறை முடிநிலை வரையறை என்பவையும் உண்டு. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலை மண்டிலம், அடிமறிமண்டலம், இணைக்குறள் என்பன. இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற்சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம். முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள். ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக்குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவை யே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது. மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப் பட்டது. வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத்திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகை யில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண் பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண் பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பா வுக்குப் புறப்பொருள் வெண்பா மாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட்ட வெண்பாவுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட்டுளது. அது பிற்காலத்தே உரையிடை யிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்! வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால் வருவது சிந்தியல். இரண்டாமடியில் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை; பன்னீரடி வரையுடையது பஃறொடை (பல தொடை); அதனின் நீண்டது கலிவெண்பா. கலிப்பா : கலிப்பா பல உறுப்புகளையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம், வண்ணகம் என்பன அதன் உறுப்புகள். கொச்சகம் சிலவாகவும், பலவாகவும் வரும். பின்வந்த தாழிசை, துறை, விருத்தம் என்னும் இனப்பாவிற்குத் தாய்ப்பா கலிப்பா. தரவு - முற்படத் தந்து நிறுத்துவது. தாழிசை-தாழமமைந்த ஓசையுடையது; ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது. சுரிதகம் - முடிநிலை. அம்போத ரங்கம் - நீரலை போல்வது; கரைசாரச்சாரச் சுருங்கி வரும் அலைபோலச் சுருங்கிவரும் அடிகளையுடையது. கொச்சகம் என்பது கொய்சகம். மகளிர் உடுத்தும் உடை இடையில் மடிப்புடன் வருவதுபோல் வருவது. இன்றும் கொசுவம் என வழங்கப் படுவது. விரிவுமிக்கதும் கூற்றும் மாற்றமுமாகத் தொடர வாய்த்ததும், இசை கூட்டிப் பாட வாய்ப்பதும் இது. காலப்போக் கில் அருகி வருவது இப்பா. வண்ணகம் இசை நலம்மிக்கது. வஞ்சிப்பா : வஞ்சிப்பா குறளடி வஞ்சி, சிந்தியல் வஞ்சி என இருவகையது. முன்னது இரு சீராலும் பின்னது முச்சீராலும் வருவது. வஞ்சிப்பாவும் பாடுதல் அரிதாயிற்று. அன்றியும் அப் பாவால் அமைந்த நூல் ஒன்றுதானும் இல்லை. கிடைத்தவை தனித்த பாடல்களேயாம். பரிபா : பரிபா என்பது கலிப்பாவைப் போல் பல உறுப்பு களை யுடையது (1377). 140 அடி வரை நீள்வது; 25 அடிச் சிறுமை யது; அருவியும் ஆறும் பரியும் கரியும் கீரியும் முயலும் நடை யிடுவது போன்ற நடையது. பண்வகுத்துப் பாடப்பட்ட பெருமைக்குரியது. இந் நாளில் அதனைப் பாடுவார் அரியர் ஆயினர். அந் நாளில் ஒரு நூலாவது கிளர்ந்தது. அதன் பெயர் பரிபாடல். 70 பரிபாடல்களில் முற்றாகக் கிடைத்தவை 22 மட்டுமே. மருட்பா : மருட்பா வெண்பாமுன்னாகவும் அகவல் பின்னாகவும் கொண்ட மயக்கப்பா என்பது முன்னரே கண்டுளோம். தனிநூலாக்கம் மருட்பா பெற்றதில்லை. அங்கதம் : அங்கதப்பாவும், தேவபாணிப் பாவும் பொருள் வழியால் பெயர் பெற்றவை. தனியாப்புப் பெற்றவை அல்ல. அங்கு = வளைவு. சொல்வதை உள்ளது உள்ளபடி நேருக்குநேர் உள்ளவாறு கூறாமல், புகழாகவும் வசையாகவும் பாடுவது அங்கதமாகும். அங்கதம், செம்பொருள் பழிகரப்பு (பழியை மறைத்துக் கூறல்) என இருவகைப்படும் (1381). செம்பொருள் என்பது வசையை வெளிப்படக் கூறும். வசையை மறைத்துக் கூறுதல் பழிகரப்பு. தேவபாணி என்பது, இறை வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது. பாடுபுகழ் : சங்க நாளில் இன்னது பாட இவர் என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் கபிலன்; முல்லைக்கு நப்பூதன்; மருதம் மருதனிலநாகன்; நெய்தல் நல்லந்துவன்; பாலை பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் இது பாட இவர் வல்லார் எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது. இனி, அடி வரையறை இல்லாத உரை முதலியவற்றை எண்ணு வோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும். உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை, பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பா இன்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிப என்பார் ஆசிரியர் (1429). இதில் வரும் உரைவகை நடை என்பதே உரைநடை என்னும் வழக்குக்கு மூலமாகும். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை, பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட உரை, பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை, பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை உரைநடை வழக்குக்குன்றி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம். மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது நகைச் சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம். பிசி : பிசி என்பது புதிர் என இந் நாளில் வழங்குகின்றது. விடுகதை எனவும் படுகிறது. ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும். அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய் காய்க்கும். இது, உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர். பிறை கவ்வி மலை நடக்கும் என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர். நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரிற்காக் கை என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு. முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழி யாகும். கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான் என்பதும் பழிஓரிடம்; பாவம் ஓரிடம் என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் : நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்பது இதன் இலக்கணம் (1434). சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். தானே என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்: ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா எனவும், முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்க சுவா எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது. குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந் தாது, புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது. பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது. குடத்தலையார் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம் என்பது பேராசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு. இது, யானை. பண்ணத்தி : பாட்டிடையே அமைந்ததாய்ப் பாட்டாகி வருவது பண்ணத்தி (1436). நத்துதல் விரும்புதல். பண் நத்தி என்பது பண்ணத்தி. சிலம்பில் பாட்டின் இடையே பாட்டென எதுகை மோனை இயைய நடையிடும் உரைப்பாட்டு மடை இஃதாகும். இசைநய எடுப்பொடும் பாடற்கும் ஏற்றதாம். நிறைவு சொல்லப்பட்ட இலக்கணம் பிழைத்தது போலத் தோன்றி னும், தோன்றக்கூடும். அதனை வந்ததொன்றைக் கொண்டு மாறுபாடு இல்லாமல் அமைத்துக் கொள்ளுதல் தெளிந்த அறிவினர் கடமை என்று இச் செய்யுளியலை நிறைவிக்கிறார் ஆசிரியர் (1499). மரபியல் வழக்கு : வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லானே (1592) என வழக்கு என்பதைக் கூறுகிறார். பண்புடையார்ப் பட்டுண் டுலகம் என்பது இது. சட்டத்தின் ஆளுகையினும் சான்றோர் காட்டும் சால்பு ஆளுகையே உலகை - உலகியலைக் காக்கும் என்பதன் குறிப்பு இதுவாம். மரபு : சான்றோரும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபு ஆகும். மரபு மாற்றருஞ் சிறப்பினது என்கிறார். ஏனெனில், மரபுமாறின் பிறிது பிறிதாகிப் போகும் (1500, 1591). மரபு என்னும் சொல்லே, அதன் பொருள் விளக்கமாக உள்ளது. ஒரு மரத்தின் வித்து மீண்டும் மரமாகி வித்துத் தந்து, வழிவழி மாறாமை போல, மரபு என்பது மாறாதது; மாற்றக் கூடாதது; மாற்றின் பொருட்கேடாகும் என்பவற்றை எண்ணல் நலம். இளமை : மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு முறையே அவற்றை விளக்குகிறார். தொல்காப்பியர் கூறும் இளமைப் பெயர்கள் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்பவை. ஆண்மை : ஆண்பாற் பெயர்களாக ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பவற்றைக் குறிக்கிறார். பெண்மை : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார். இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும் பார்ப்பு - பறவை, தவழ்பவை, குரங்கு. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). மக - குரங்கு, மக்கள். மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). போத்து - ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது : ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல என்றும் கூறுகிறார். ஆய்வு பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப் பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. பிள்ளைத் தமிழ் இலக்கியம் பெருவரவினது. பிள்ளை யாண்டான் என்பதும் வழக்கு. இவ்வாறு வழக்கு உள்ளமையால், முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568). குழந்தை என்னும் பொருளில் பாப்பா என்பது பெருவழக் காக உள்ளது. பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்பாவை எனப் பெற்றோரால் பேணப் படுவதால் பாவை எனப்பட்டது. பார்வை > பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன. இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் பாவை என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை. குருளை சிங்கக் குருளை எனக் கம்பரால் ஆளப்படு கின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. குட்டி என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அது போல் குட்டன் ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. என் மாணிக்கக் குட்டன் என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெருவழக் காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு. இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடைப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம். சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில், செடி கொடிகளுக்கு உயிர் உண்டு என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாம லும் அடங்கிக் கிடப்பதாயிற்று. அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்ட லும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் தமிழில் அறிவியல் என்றோர் சுவடி வெளிப்படுத்தப் பட்டுளதாம். அறிவுவகை அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயி ரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே; இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே; ஆறறி வதுவே அவற்றொடு மனனே; நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (1526) இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக் காட்டுகிறார். புல்லும் மரனும் ஓரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே சிதலும் எறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மக்கள் தாமே ஆறறி வுயிரே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (1527 - 1532) எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க. ஆய்வு ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க. மக்கள் தாமே ஆறறி வுயிரே என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லை யா? ஐந்து நூற்பாக்களிலும் பிறவும் உளவே என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா? மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப் படுத்தியமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்ட வேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப் பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர் என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன? மக்கள் தேவர் நரகர் உயர்திணை என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க. தேவரும் நரகரும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா? காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக் காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூற வேண்டு மானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார். வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் கட்டமைதி அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர். 1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை இடைப் பிற வர நூல் யாப்பாரா? அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா? எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும் என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம். ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் ஏறு - பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது. ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை. களிறு - வேழம், கேழல். சே - எருது. சேவல் - மயிலலாப் பறவை, குதிரை. இரலை - புல்வாய். கலை - புல்வாய், உழை, முசு. மோத்தை - ஆடு. தகர் - ஆடு. உதன் - ஆடு. அப்பர் - ஆடு. போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன, மயில், எழால். கண்டி - எருமை. கடுவன் - குரங்கு. பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் பேடை - கோழி பெடை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெண் - மக்கள். பிணா - மக்கள். மூடு - ஆடு. நாகு - எருமை, மரை, பெற்றம், நந்து. கடமை - ஆடு. அளகு - கோழி, கூகை, மயில். மந்தி - குரங்கு, முசு, ஊகம். பாட்டி - பன்றி, நாய், நரி. பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி. பிணவு - பன்றி, புல்வாய், நாய். பிணவல் - பன்றி, புல்வாய், நாய். பிடி - யானை. ஆ - பெற்றம், எருமை, மரை. இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின், பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569) ஒட்டுவேலை இதன் மேலே தொடர்கிறது நூற்பா: நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (1570) மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். இழிந்தோர் என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, புறக்காழ் தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர். இவ் வியலிலேயே மாற்றருஞ் சிறப்பின் மரபு என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503 - 1524) உரைத்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே என முடித்தார் (1525). அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், மக்கள் தாமே ஆறறிவுயிரே என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 - 1549) நிறைத்து, ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய; பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய; காண்ப அவைஅவை அப்பா லான என்றார் (1550). அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி, பிடியென் பெண்பெயர் யானை மேற்றே (1551) எனக்கொண்டு பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என முடித்தார் (1569). கூறிய இவை மாற்றருஞ் சிறப்பின் மரபுகள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணி யும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா? மாறுவது மரபா? இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை - தன் பிறப்புரிமை - கொண்டவை. பின்னே கூறியவையோ எடுத்தால் உண்டு. விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ, ஆண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு வந்தவையா? எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங் காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை - பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப் பிக்கலாம். நடைமுறை ஆகுமா? இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ! மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆக வேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆக வேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந் துள்ளமை கண்கூடாம் அல்லவோ! இனி, இடையொட்டுப் போகக் கடையொட்டையும் விட்டுவிட வில்லை. நூலின் மரபாக, மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும் வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் வழிஎனப் படுவது அதன்வழித் தாகும் வழியின் நெறியே நால்வகைத் தாகும் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே இவ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது, நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும் என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல்காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர். பின்னொட்டு இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக் களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன். உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை. செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற்றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன. தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் : சூத்திரம் தானே, ஆடி நிழலில் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது, மேற்கிளந் தெடுத்த யாப்பின் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகி துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகையானும் பயன்தெரி வுடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் என்பது (1600). இரண்டு நூற்பாக்களும் ஒருவர் நூற்றவை தாமா? முன்னே கூறியதைப் பின்னேயும் கூறியதும் ஏன்? கூறவேண்டி யிருப்பின், மேற் கிளந்தன்ன, முற்கிளந்தன்ன என்று கூறுதல் அன்றோ, அவர் நூன் முறை. ஆய்ஞர் முடிபு இத் தொல்காப்பிய ஆய்வில் தலைப்பட்ட புலமைச் செல்வர் இருவர் கருத்துகளை நாம் அறிதல் இம் மரபியல் ஒட்டின் தெளிவுக்கு உதவும். மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தால் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந் நாட்டில் பிற்றை நாளில் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப்பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற்காலத்தவரால் நுழைத்து உரைக்கப் பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் இவ் வியலில் 1 முதல் 70 வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன. ஒன்றற்கு ஒன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களின் இடையே, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதல், அந்த ணாளர்க் கரசுவரை வின்றே என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும், சிறிதும் தொடர்பற்ற நிலையிற் பின்வந்தவர் ஒருவரால் நுழைக்கப் பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடை யார்க்கும் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ் வியலில் சேர்க்கப்பட்டனவாக ஐயுறுதற் குரியனவும் சில உள என்பது முதுநூற் புலமையர் க. வெள்ளைவாரணனார் எழுத்து (தொல்காப்பியம் - தமிழிலக்கிய வரலாறு பக். 16). தமிழ்நெறிக் காவல் நூலாக எழுந்த தொல்காப்பியத்தை, ஆரிய வழி நூலாகக் காட்டி மாசு ஏற்றினோர் தம், மாசு துடைக்க என்றே தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தும், விரிந்த ஆய்வுரை வரைந்தும், அதனாலேயே முனைவர் பட்டம் பெற்றும் தமிழ்ப் பெருங்காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. இலக்குவனார், மரபுகளை விளக்கும் இம் மரபியல், ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக் கோப்புக்கு உட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறை பிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச்செருகல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றது என்கிறார் (தொல்காப்பிய ஆராய்ச்சி. 249). மெய்ம்மை காண இப் பெருமக்கள் மேலாய்வு துணை யாம் என்பதால் இவண் எடுத்துக்காட்டலாயிற்று. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் தமிழர் வாழ்வியலே யன்றி அயலவர் வாழ்வியல் பற்றியதுமன்று; ஒட்டியதுமன்று என உறுதிப்படுத்துவோமாக. - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பேராசிரியர் தொல்காப்பியப் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை கிடைத்துள்ளது. பேராசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்பது வெளிப்படை. அவர் இயற்பெயர் தெரிந்திலது. பேராசிரியர் பலர் சிறப்புப் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருதல் வேண்டும் என இலக்கணம் கண்டது தொல்காப்பியம். அதன்படி பேராசிரியர் இன்னவர் என்பதில் `இன்னவர்' என்பது குறியாமல், சிறப்புப் பெயராலேயே உலகு விளங்கும் நிலைமை உண்டாயிற்று எனக் கொள்ளலாம். பாலாசிரியர், இளம்பாலாசிரியர், ஆசிரியர், கணக்காயனார் என்னும் சிறப்புப் பெயர்களை அடுத்துள்ள இயற்பெயர்கள் பல, சங்கச் சான்றோர் பெயர் வரிசையில் இடம் பெற்றிருப்பதை அறிவார், இதனைத் தெளிவார். பேராசிரியர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் தமிழ்ப் பரப்பில் பலருளர். ஒருவர், பேராசிரியரால் சுட்டப்படும் ஆத்திரையன் பேராசிரியர். அவரை, "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்" என்கிறார் (தொல். மர. 98) தொல். உரை கண்ட பேராசிரியர். இப்பாயிரத்தை முழுமையாகச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் காட்டியுள்ளார். இவ்வாத் திரையன் பேராசிரியரே பேராசிரியப் பெயருடையாருள் பழையர் எனலாம். திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் மற்றொருவர். அவர் தொல்காப்பிய உரை கண்ட பேராசிரியரின் வேறானவர் என்பது கோவையைப் பற்றி எழுதுமிடத்தும், திருக்கோவையாரைச் சுட்டாமை யாலும், எடுத்துக்காட்டாக எங்கும் காட்டாமையாலும் விளங்கும். மயேச்சுரர் என்பாரும் பேராசிரியர் என்னும் பெயருடன் விளங்கு கின்றார். யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் பாராட்டப்படுபவர் அவர். இவ்வாறே நேமிநாதரும் பேராசிரியர் எனப்படுவார். குறுந்தொகைக்கு உரை கண்ட பேராசிரியர் ஒருவர் அறியப்படு கிறார். அவருரை கிடைத்திலது. கிடையாத உரை கொண்டு ஆய்வு செய்து `அவர் இவர்' எனல் தீர்வு ஆகாது. பேராசிரியர் உரை முதற்கண், நச்சினார்க்கினியர் உரை என்றே தொல்காப்பியப் பதிப்பாளர் சி.வை. தாமோதரனாரால் குறிக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் எழுதிய அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் இயல்களுடன் இணைத்துப் பதிப்பிக்கவும் பட்டது. அவ் வுரையுள் மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு ஆகிய நான்கு இயல்களும் பேராசிரியருரை என்பதைச் செந்தமிழ் ஆசிரியர் இரா. இராகவ ஐயங்கார் ஆய்ந்து செந்தமிழ் இதழில் வெளிப்படுத்தினார். நச்சினார்க்கினி யரின் செய்யுளியலுரைப் பதிப்பிலும் விளக்கினார். இவ்வாறு உரையாசிரியர் பெயரை அறிதலிலும் சிக்கலுண்டாயிற்று. பேராசிரியர் உரை பேராசிரியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை கண்டவர் என்பது புலப்படுகின்றது. மெய்ப்பாட்டியல் 18ஆம் நூற்பா உரையில் `களவியலுட் கூறினாம்' என்கிறார். அடுத்த நூற்பா உரையிலும், செய்யுளியல் முதல் நூற்பா உரையிலும் முறையே `அகத்திணையியலுட் கூறினாம்' என்றும், `அகத் திணையியலுட் கூறிவந்தாம்' என்றும் கூறுகிறார். இவ்வாறே கற்பியல், புறத்திணையியல் ஆகியவற்றைச் சுட்டிய இடங்களும் உள. இவற்றால் பொருளதிகாரம் முழுமைக்கும் இவர் உரை கண்டார் என்பதை அறிந்து கொள்ள வாய்க்கின்றது. பேராசிரியர் வரைந்த முதலைந்து இயல்களின் உரையும் கிடையாமல் போகவே, கிடைத்த உரைப்பகுதியின் முகப்பில் உரை கண்டவர் பெயர் இல்லாது போய்விடுதல் இயல்பு. ஆனால், வியப்புடைய சிலர் ஒவ்வோர் இயல் முகப்பிலும் `இன்னவர் உரை' என்று வரைவதுண்டு. அவ்வகையில் மெய்ப்பாட்டியல் முகப்பேட்டில் `பேராசிரியர் உரை' என்னும் குறிப்பு இருந்தமை நல்வாய்ப்பாக அறிஞர் இரா. இராகவ ஐயங்கார்க்கு வாய்த்தமை பேரறிய வைத்தது. மற்றொரு குறிப்பும் அவர்க்குத் துணையாயிற்று. மெய்ப்பாட்டியல் முதலாய நான்கு இயல்களின் தொடக்கத்திலும், இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின்? என்று உள்ளமை நச்சினார்க்கினியர் உரையிலிருந்து வேறு படுத்திக் காட்டுதலைக் கண்டு கொண்டார். நச்சினார்க்கினியர் உரை இவ்வாறு இயலாமை அவருரையால் தெளிவாதலைச் சுட்டிக் காட்டி நிறுவினார். காலம் பேராசிரியர் இளம்பூரணர், இறையனார் களவியலுரை காரர், யாப்பருங்கல விருத்தியார், தண்டியலங்காரர் ஆயோர்க் குப் பிற்பட்டவர் என்பதற்கு நூற்சான்றுகள் பலவுள்ளன (மெய்ப். 25; உவம. 37.). நச்சினார்க்கினியர் இவரைச் சுட்டிக் காட்டி வரைதலானும், பரிமேலழகர் பேராசிரியர் உரையை மறுத்து எழுதுதலானும் (திருக். 632) அவர்கட்கு இவர் காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாம். ஆகலின் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் பேராசிரியர் என்க. சமயம் பேராசிரியர் கொண்டிருந்த சமயம் இன்னதென வெளிப்பட அறிய வாய்ப்பில்லை; எனினும், இவர் சிவவழி பாட்டினர் என்பது அறிய வாய்க்கின்றது. அச் சிவ வழிபாடும் நெகிழ்வுடையதாய் அமைந்துள்ள நிலைமையும் புரிகின்றது. "வாழ்த்தியல் வகையே" என்னும் செய்யுளியல் நூற்பாவில் (109) வாழ்த்தப்படும் பொருளாவன, கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன; அவற்றுட் கடவுளை வாழ்த்தும் செய்யுள் கடவுள் வாழ்த் தெனப்படும்" என்று கூறி நற்றிணையிலும் அகநானூற்றிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை எடுத்துக் காட்டு கிறார். இவற்றுள் முன்னது திருமாலைப் பற்றியது; பின்னது சிவனைப் பற்றியது. அடுத்துவரும் "வழிபடு தெய்வம்" என்னும் புறநிலை வாழ்த்து நூற்பாவுரையில் காட்டிய "இமையா முக்கண்", "திங்கள் இளங்கதிர்" என்பன சிவனைப் பற்றியவை. இவ் விரண்டும் இவர் இயற்றியவை என்று அறியத்தக்க பாடல்கள். மேலும், கொச்சக ஒரு போகில் (செய். 149) இவர் காட்டும் எடுத்துக் காட்டுகள் பெரும்பாலும் இவர் பாடியனவே என்று அறியக் கிடக்கின்றன. அவற்றுள் பலவும் சிவபெருமான் பற்றியவை. திருமால், மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார் பற்றியும் பாடியுள்ளார். இதே நூற்பாவுரையில் இளம்பூரணர் கலித்தொகைப்பாக் களையே எடுத்தாண்டமைகிறார் என்பது ஒப்பிட்டுக் காணற்குரியது. கடவுளை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஆவை வாழ்த்து தல், பார்ப்பாரை வாழ்த்துதல், அரசரை வாழ்த்துதல், மழையை வாழ்த்துதல், நாட்டை வாழ்த்துதல் என்பன பழந்தமிழர் வழிவழிக் கொண் டொழுகிய வழிபாட்டியல் பினவே என்பதைச் சங்கச் சான்றோர் நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய வற்றின் வழியே அறிந்து கொள்ளலாம். `பார்ப்பார் வழிபாடும்' அத்தகைத்தோ எனின், "பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்" என்னும் பேராசிரியர் உரையே தெளிவிக்கும் (செய். 189). `அறிவன் தேயம்' (புறத். 16) என்பதில் வரும் `அறிவன்' என்பதற்குக் `கணியன்' என உரையாசிரியர் வரைந்ததையும் அறிந்து கொள்க. ஆகலின் அறிவன் வழிபாடு அஃது என்றும், பார்ப்பான் என்னும் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதலை யும், அவ்வாறே `அந்தணன்' என்னும் சொல் இருத்தலையும் எண்ணின் இவை தமிழ் நெறிய வழிபாடுகளே என்பது விளங்கும். விளங்கவே பேராசிரியர் தமிழ் நெறி வழி பாட்டாளர் என்பது உறுதியாம். ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டாக இவர் கூறுதலால் இவர் ஆரியரல்லர்; இப் பார்ப்பார் ஆரியரில் வேறாவர் என்பது தெளிவாம். மேலும் "வினையின் நீங்கி" என்னும் நூற்பாவுரையில் (மர. 94), "பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவ தென்பது" என்று இவர் வரைவதும், `சேவற் பெயர்க்கொடை' என்னும் நூற்பா (மர. 48) உரையில், "மாயிருந்தூவி மயில் என்றதனால் அவை தோகை யுடையனவாகிப் பெண்பால் போலும் சாயல் ஆகலான் ஆண் பாற்றன்மை இலவென்பது கொள்க; எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது" என்று வரைவதும் கருதத் தக்கன. இவை கட்டாயமாக நூற்பாப் பொருள் கூறும் வகையிலோ, அந்நூற்பாத்தொடரை விளக்கும் வகையிலோ அமைந்தவை அல்ல; உரையாசிரியர் தம் பற்றுமைச் சான்றாக வெளிப்பட்டு நிற்பனவாம். `இறையனார்' என்பது நூல்யாத்தவர் பெயராகக் குறிக்கப்பட்டிருக்கவும் `பெருமா னடிகள்' என்றது இவர் தம் உணர்வு வெளிப்பாடேயாம். இவையும் பேராசிரியர் சமய உட்கிடைப் பொருளாவனவாம். நூலாசிரியரை மதித்தல் ஆசிரியர் தொல்காப்பியர் குறித்தும் அவர்தம் நூல்வழி குறித்தும் சில குறிப்புகளைப் போராசிரியர் சுட்டுகிறார். `எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது (தொல்காப்பியம்) முன்னூலாதலின் இவரோடு (தொல்காப்பிய ரோடு) மாறுபடுதல் மரபன் றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடுதல் அஃது அவர்க்கும் மரபன்று என்பது' என்னும் உரைப்பகுதி தொல்காப்பியர் ஆணை வழிநிற்கும் இவர்தம் செவ்வியைப் புலப்படுத்தும் (செய். 140). மேலும், "நண்டிற்கு மூக்குண்டோ எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென் பது பெற்றாம்" என்னும் இவருரை (மர. 31) அவர்தம் ஆணைய ஆணையெனக் கொண்டு உரை எழுதியமை காட்டும். அகத்தியமே முதனூல் என்றும், அதன் வழிநூல் தொல்காப்பியமே எறும் அதனை மறுத்துக் கூறுவது வேதவழிப்படாத இக்காலத்தார் கூற்று என்றும், இறந்த காலத்துப் பிற பாசாண்டிகளும் (வேத வழக்கொடு மாறுபட்ட சமயத்தார்) நான்கு வருணத்தொடு பட்ட சங்கச் சான்றோரும் அது கூறார் என்றும் கூறுகிறார். மேலும் இக்கூற்றுக்குச் சான்றானவற்றை விரித்து விளக்கும் பேராசிரியர், "கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச் சங்கத் தார்க்கும் கடைச் சங்கத் தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார் ஆகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோகினார் (சான்றுரைத்தார்) ஆகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராகலாற் பொய் கூறார் ஆகலானும் என்பது" என்கிறார். பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுச் சான்றுகளை யும் இவ்விடத்தே வரிசைப்படுத்திக் காட்டித் தம் கருத்தை நிறுவுகிறார் (மர. 94). தொல்காப்பியம் முன்னூல் எனக் கூறும் பேராசிரியர், "மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ எனின், அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றின என்பது" என்றுரைத்துப் பல்காப்பியம் காக்கைபாடினியம் இவைபற்றி யெல்லாம் நிறுத்தி ஆய்ந்து கருத்துரைக்கிறார் (95). இத்தகைய அருமைப்பாடு களையும், உரைநயங்களையும், தமிழ்நடை நலங்களையும் கண்ட பட்டறிவால், "பிறர்தம் உரை நெறிகளிலும் இவர்தம் உரைநெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமை யெய்தியிருக்கும்" என முனைவர் வ.சுப. மாணிக்கனார் பாராட்டுகிறார் (தொல்காப்பியத்திறன், பக். 23). செய்யுளியல் இடமாற்றம் செய்யுளியல், பொருளதிகாரத்தின் எட்டாம் இயல். இறுதியியல் மரபியல். சிலர் செய்யுளியலை இறுதியியலாகக் கொண்ட முறையும் பேராசிரியர் காலத்தில் இருந்தது என்பதை அவருரையால் அறிய வாய்க்கின்றது. "இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்கும் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண் டிலக்கணமும் முடித் தல்லது அவற்றைக் கூறும் இலக்கணம் கூறலாகாமையின் என்பது. இக்கருத்தறியாதார் செய்யுளிய லினை ஒன்பதாம் ஓத்தென்ப" என்கிறார் (மர. 93). இக்குறிப்பால், செய்யுளியல் ஒன்பதாம் இயலாக இருந்ததென்றும், அதனொடு நூல், நூல்வகை, உரை பற்றிய நூற்பாக்கள் அதன் நிறைவில் இருந்தன என்றும் எண்ணுதற்கு இடனுள்ளது. இதனை மேலாய்வு செய்தல் வேண்டத்தக்கதாம். முறை வைப்பு பேராசிரியர் ஓரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்து வரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறை வைப்பையும் உன்னிப் பாக எண்ணி எழுதுகிறார். `மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னை யோ எனின்' என்று மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் விளக்குகிறார். `நகையே அழுகை' எனத் தொடங்கும் மெய்ப்பாட்டியல் நூற்பா விளக்கத்தில் மேல் வரும் எட்டு வகை மெய்ப்பாடுகளும் முறைமுறையே வைக்கப்படுதலின் அமைதியை விரித்துரைக் கிறார். ஒரு நூற்பாவொடு தொடரும் மஃறொரு நூற்பாவின் தொடர்பு காட்டுவதாக இவை அமைகின்றன. "பாராட் டெடுத்தல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 16), "புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரோடு கூற்று நிகழாமையானும், அக் கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றம் கோடலின்மை யானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளாம் ஆகலானும் அம்முறையான் வைத்தான் என்பது" என்கிறார். இவ்வாறு முறை வைப்புக் கூறுதலால், நூற்சிறப்பை நன்கு வெளிப்படுத்துகிறார் பேராசிரியர். வரையறை ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் வரையறைப்படுத்திக் கூறும் நெறியை மேற்கொள்கிறார் பேராசிரியர். அச்சச் சுவையைக் கூறும் பேராசிரியர், "தன்கட்டோன்ற லும் பிறன்கட்டோன்றலும் என்னும் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும்" என்பதும் (மெய்ப். 7), சமனிலை என்பது, "உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் ஈண்டு உலகியல் வழக்கினுட் சொல்லிய திலன்" என்பதும் போல்வன வரையறைச் சான்றுகள். வகைப்படுத்துதல் வகைப்படுத்திக் கூறுதலும் பேராசிரியர் மேற்கொண்ட நெறிகளுள் ஒன்று. "நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப'' என்றும் (மெய்ப். 3), "முன்னம் என்பது உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்" என்றும் (செய். 1) வரும் இன்னவை வகைப்படுத்திக் கூறற் சான்றுகள். நூற்பா அமைதி காட்டல் ஒரு நூற்பாவின் யாப்புறவை மற்றொரு நூற்பாவின் யாப் புறவுடன் இயைத்துக் கூறுதலையும் பேராசிரியர் மேற்கொள்கிறார். "தெய்வமஞ்சல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 24) "பதினொன்றனை எண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை, `ஒன்பதும் குழவியோடிளமைப் பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றி யுரைக்கப்படும்" என்கிறார். உரை நூற்பா தாமே உரை நூற்பா வகுத்துக் கூறுவதுபோல் கூறும் இடங்களும் பேராசிரியர் உரையில் உள. அவற்றுள் ஒன்று: இருவகை நிலனென்பன, `உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்' அன்றோ எனின், என்று அமைத்துக் கொண்டு, அதனை விளக்குதலால் அவர் உரை நூற்பா யாத்து விளக்குதல் அறியப் பெறும் (மெய்ப். 1). இவ்வாறே `நிரனிறுத் தமைத்தல்' என்னும் நூற்பா உரையில் (உவம. 37) `அகனமர் கேள்வன்' என்றோர் நூற்பா வகுத்து `அதன்மேல்' என்றோர் சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது" என்பார். அதுவும் அது. பாடம் கூறுதல் `கூற்று வகை' என்பதற்குக் `கூற்றிவை' எனப் பாட முண்மையைச் சுட்டும் பேராசிரியர், "இவை என்பது பாடமாயின் எண்ணிய மூன்றனையும் தொகுத்தவாறே பிறிதில்லை" என்கிறார் (செய். 1). இவ்வாறு பாடம் கூறலும் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்றாம். வேற்றுமை கூறுதல் வேற்றுமை கூறுதலையும் ஒரு நெறியாகப் பேராசிரியர் கொண் டுள்ளார். அவற்றுள் ஒன்று: "குடிமையொடு பிறப் பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பென்பது குடிப் பிறத்தல்; அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்" என்கிறார் (மெய்ப். 25). மறுப்புரை மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச்சிறப்புடை யது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலைநாட்டல் அவர்தம் முறைமை. தளை என்பதோர் உறுப்புக் கொள்வாரை மறுத்துரைத்தல் அதற்கொரு சான்றாம் (செய். 1). பிறருரை தாம் உரைக்கும் மரபுவழி உரைக்கு வேறுவகையாலும் உரை கூறுவாரை `இன்னொரு சாரார் இவ்வாறுரைப்ப' என்பார் பேராசிரியர் (செய். 11). ஆசிரியர் கூறும் இவ்விலக்கணம் பிறரால் இப்பெயரால் கூறப்படும் என்பதையும் சுட்டுதல் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்று. வடநூலாசிரியர் வழிமுறை இன்ன தெனக் காட்டலும் உண்டு. அசையும் சீரும் இசையொடு சேர்த்துதல் என்பதை வகையுளி என்று பிறர் கூறுவதைச் சுட்டுதல் முன்னதற்கு எடுத்துக்காட்டாகும் (செய். 11). குரு, இலகு என்பவற்றைச் சுட்டிப் பிரத்தாரம் முதலாக எடுத்துக் காட்டுவது பின்னதற்குச் சான்று (செய். 51). சொற்பொருள் விளக்கம் சொற்பொருள் விளக்கம் தருதலில் பேராசிரியர் தனிச்சிறப் புடையவர். இவர் தரும் சொல் விளக்கத் தூண்டல் வழியாகவே "உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்" என்றொரு நூல் எம்மால் தொகுக்கப்பட்டது. அதன் முன்னுரையில் "மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப்பேராசிரியர் தரும் சொற்பொருள் விளக்கம் `நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து' தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே (ஆண்டு 1951) சொற்பொருள் விளக்கவித்து என் நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது" என்பது அது. அப்பேராசிரியர் உரையால் நாம் முதற்கண் பெறவாய்த்தது `மெய்ப்பாடு' என்னும் சொல்லின் விளக்கம். "மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவ தோ ராற்றான் வெளிப்படுதல்" என்பது (மெய்ப். 1). "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" என்னும் நூற்பாவில் (மெய்ப். 9), "வீரத்தைப் பெருமிதம் என்றெண்ணினான். என்னை? எல்லா ரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கென்பது. கல்வி என்பது, தவமுதலாகிய விச்சை. தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமை. இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடை என்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல்" இவ்வாறு பன்னூறு சொற்களுக்கு விளக்கம் வரைகிறார் பேராசிரியர். பேராசிரியர் சால்பு நூலாசிரியர் எண்ணத்தைத் திட்டமாகத் தெளிய முடியாத இடத்தில் தாம் பொருள் கொள்ளும் முறையால் அவர்க்குக் குறை நேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சத்தால், `நாம் பகுத்து எண்ணிக் கொண்டாம்' எனத் தம்மேல் அக்கருத்துடைமையை அள்ளிப் போட்டுக் கொள்ளுதல் பேராசிரியர், `பேராசிரியரே' என்பதை மெய்ப்பிக்கும் சான்றாம். `பிறப்பே குடிமை' என்னும் நூற்பா, ஒன்பது பொருள் களை எண்ணுகின்றது. அதனைப் பத்தாக்கிக் கொள்கிறார் பேராசிரியர். அதனால், "இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமாறு என்னை எனின், காமவாயில் எனப் பட்ட இயற்கையன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையானும் குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினான் ஆயினும், உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்து எண்ணிக்கை கொண்டாம் என்பது. என்னை? வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு என்புழி, `கற்றறிதல்' என்பதனை இரண்டாக்கி ஐந்தென்ப வாகலின்" என்கிறார். (மெய்ப். 24). சிறப்புப் பெயர்கள் பேராசிரியரின் பரந்த புலமை பெரிது. அதனை இவர் சுட்டும் நூற்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் காட்டும். அகத்தியர், அம்மானைப்பாடல், அவ்வையார், ஆனந்தவு வமை, இசைக்கூத்து, எழுகூற்றிருக்கை, ஏகபாதம், ஏழிற் கோவை, ஐயனாரிதனார், கட்டளைக் கலி, கடகண்டு, கடைச் சங்கத்தார், கலம்பகம், கலித்தொகை (நூற்றைம்பது கலி), களவியல், காக்கை பாடினியார், கானப்பேர், குறிஞ்சிப் பாட்டு, கைக்கிளைப் படலம், கொங்குவேளிர், கோவை, சக்கரம், சகரர், சங்கச்சான்றோர், சாய்க் காடு, சிற்றிசை, சிறுகாக்கை பாடினியார், சீத்தலைச் சாத்தனார், சுழிகுளம், தகடூர் யாத்திரை, நக்கீரர், நரிவெரூ உத்தலையார், நாடகச் செய்யுள், பட்டிமண்டபம், பதினெண் கீழ்க்கணக்கு, பரணி, பரிபாடல் (பரிபாடல் எழுபது), பாட்டும் தொகையும், பாட்டு மடை, பாவைப்பாடல், பெருந்தேவனார் பாரதம், பெருமானடிகள் (இறையனார்), பேரிசை, பொய்கையார், மாலை,. மிறைக்கவி, முத்தொள்ளாயிரம், மூவடி முப்பது, மோதிரப் பாட்டு, யாப்பதிகாரம், வஞ்சி, வசைக்கூத்து, வரி, விளக்கத்தார் கூத்து என்பனவும் பிறவும் இவர் சுட்டிச் சொல்லும் சிறப்புப் பெயர்கள். உலகியலறிவு பேராசிரியர் கொண்டிருந்த உலகியலறிவு ஆங்காங்கு அறியக் கிடக்கின்றது. ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டுகிறார் (மெய்ப். 1). சாதித்தருமம் போற்றுதலைக் குறிக்கிறார் (மெய்ப். 12). காடுகெழு செல்வி (காளி) வழிபாட் டைப் பல இடங்களில் கூறுகிறார் (மெய்ப். 12; செய். 149). நான்கு வருணங்களைக் குறிக்கிறார் (மெய்ப். 25). தமிழில் மந்திரப்பாட்டு இருந்ததைச் சுட்டுகிறார் `(செய். 158; 178). `ஆரியம் நன்று தமிழ் தீது' என்றவன் சாவவும், உயிர்த்தெழவும் பாடிய பாட்டுகளை யுரைத்து, இவை "தெற்கண் வாயில் திறவாதபட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்" என்று குறிப்பு வரைகிறார் (செய். 178). சீட்டுக்கவி வரைதல் வழக்கை `ஓலைப்பாயி (சு)ரம்' என்கிறார் (செய். 149). அவ்விடத்திலேயே களம்பாடு பொருநர் கட்டுரை, தச்சு வினை மாக்கள் சொற்றொடர் என்பவற்றையும் குறிப்பிடுகிறார். "ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடியது", "சிறுகுரீஇ யுரை", "தந்திரவாக்கியம்" என்பவற்றையும் (செய். 173), யானை, கமுகு, நெருப்பு என்னும் பொருள் தரும் விடுகதைகளையும் (செய். 176), குறிப்பு மொழிக்கு `யானை' என்பதையும் (செய். 179) இவர் எடுத்துக் காட்டுப் பாடல்களால் கூறுதல் அக்காலத்து மக்களிடை வழங்கிய வழக்கின் தொகுப்பு எனற் பாலன. புலவுத் துறந்த துறவோர் பொய் கூறார் என்று கூறுவதால் அக்காலத் துறவோர் சிறப்பும் (மர. 94), புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம் என்னும் உளவியல் செய்தியும் (மெய்ப். 12) கூறும் பேராசிரியர் உலகியல் திறம் பெரிதென அறியலாம். இலக்கிய வன்மை `புகுமுகம் புரிதல்' முதலாக வரும் மெய்ப்பாடுகள் அனைத்துக்கும் முறையாய் அமைந்த எடுத்துக்காட்டுப் பாடல்கள் பேராசிரியர் இயற்றியன என்றே கொள்ள வாய்க்கின்றன; இவர்தம் இலக்கியப் படைப்புச் சீர்மையை விளக்குவனவாக அமைகின்றன. அன்றியும் இவர் சில இடங்களில் வரையும் உரையே பாவாக இயலுதல் காணக் கூடியனவாம். மெய்ப்பாட்டியல் பன்னிரண்டாம் நூற்பாவில், பார்ப்பா ராயிற், குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின், எடுத்த கழுத்தொடும் அடுத்தமார்பொடும் நடந்து, சேறலும், இடைய ராயிற், கோற்கையும் கொடுமடி யுடையும் விளித்த வீளையும் வெண்பல்லு மாகித் தோன்றலும் என்பதும், அடக்கம் என்பது, ........ பணிந்த மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும் வாய் புதைத்தலும் முதலாயின வரைதல் என்பது, காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம் என்பதும் ஆகிய இவற்றைப் பார்த்த அளவான் எதுகை மோனைத் தொடை நலம் கெழும நடைபயிலுதல் தெளிவாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் பேராசிரியம்-1 பின்னான்கியல் சி. கணேசையர் - 1943 முதற் பதிப்பு 1943இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. கணபதி துணை விநாயகக் கடவுள் வணக்கம் தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே. குரவர் வணக்கம் இமிழ்பெரும் பாற்கட லெழுமமு தனதீந் தமிழ்கெழு நிலத்தினோர் தவத்தனி யுருவாய் யாழ்ப்பாண மெனுநாட் டெழில்பெறு நல்லைத் தனிநகர்த் தோன்றித் தமிழ்த்தொன் மொழிக்குஞ் சைவ சமயந் தனக்குமோ ரரணாய்க் காவலர் பாவலர் கணித்துநன் கேத்தப் பலநூ றெளிவுகொளப் பதித்து மாக்கியு முரைமணி பிறக்குமோ ருயரா கரமாய்ச் சொன்மழை யெனப்பொழி வன்மையிற் சிறந்தும் பெருநீர் வைப்பிடை யிரும்புகழ் நிறீஇய ஆறு முகப்பெரு நாவலன் றனக்கு நன்மரு மகனா யின்புறத் தோன்றித் தொல்காப் பியமுந் தொகைநூ லாதியும் பல்காப் பியமும் பயின்று மேம்படீஇ வித்துவ சிரோமணி யாகி விளங்கிய பொன்னம் பலப்பெயர் மன்னுசெம் மற்கு மாரிய மொடுதமிழ்ச் சீரிய மொழிகளிற் பேரியற் கலையும் பிறவுநன் குணருபு பலநூ லியற்றி யிலகுபுக ழுறீஇய கன்னைக் குமார சுவாமிப் புலவனாம் வித்துவ மணிக்கும் விருப்பொடு மெமக்கினி தருந்தமி ழுணர்த்திப் பொருந்துமறி வளித்த விருஞ்செய லதன்பொருட் டீண்டுபெருந் துதிதனை அன்பொடுஞ் செய்திங் கின்புறு குவனே. பதிப்பாசிரியர் முகவுரை தென்மலை யிருந்த சீரிசால் முனிவராகிய அகத்தியரின் முதன் மாணாக்கராகிய ஒல்காப் பெருமைத் தொல்காப்பிய னாரியற்றிய தொல்காப்பியத்துக்கு உரைசெய்தார், இளம் பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடனார் எனப் பலராவர். அவருள் சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடனார் எனும் மூவருஞ் செய்தவுரைகள் சொல்லதிகாரம் ஒன்றற்கேயுள்ளன. நச்சினார்க்கினியருரை எழுத்ததிகாரத்திற்கும், சொல்லதிகாரத் திற்கும், பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் நீங்கலாக ஏனை ஆறியல்களுக்கும் இப்போது காணப்படுகின்றது. பேராசிரியருரை பொருளதிகாரத்தின் பின்நான்கியல்களுக்குமே இப்போது காணப்படுகின்றது. நூல் முழுவதற்குங் காணப்படும் உரை இளம்பூரணருரையே. அவ்வுரைகளுள், நச்சினார்க்கினியர் செய்த எழுத்ததிகாரவுரை யும் சேனாவரையர் செய்த சொல்லதிகாரவுரையும் சில திருத்தங்களோடும் உரைவிளக்கக் குறிப்புக்க ளோடும் முன் எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. அடுத்த பொருளதிகாரத்துப் பின்நான்கியல்களுக்குமுள்ள பேரா சிரியருரையே பல திருத்தங்களோடும் உரைவிளக்கக் குறிப்புக்க ளோடும் இப்போது எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்படு கின்றது. பொருளதிகாரத்து முன் ஐந்தியல்களுக்குமுள்ள உரையே இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்தப்பட வேண்டியது முறை யாமாயினும், பின் நான்கியல்களுக்குமுள்ள பேராசிரியருரை, மதுரைத் தமிழ்ச் சங்கத்தாராலும் இந்நாட்டு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாராலும் நடாத்தப்படும் பண்டித பரீக்ஷைப் பாடநூல்களுளொன்றாக இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கின்றமை யானும், அவ்வியல் களினுரையே படிப்போர் எளிதில் விளங்கிக் கொள்ள முடியா திருத்தலானும், அதனையே முன் அச்சிட்டு வெளிப்படுத்துவது நலமென்று பலரும் வேண்டிக் கொண்டமையானே அதனை முன்னர் வெளிப்படுத்த எண்ணினோம். முன்னியல்களினுரையும் பின்னர் அச்சிட்டு வெளிப் படுத்தப்படும். பொருளதிகாரத்துப் பின் நான்கியற்குமுள்ள இப் பேராசிரியருரையே, நச்சினார்க்கினியராலெழுதப்பட்ட முன்னியல்களினுரையோடுஞ் சேர்ந்து முதலில் அச்சிட்டு உதவினவர்கள், யாழ்ப்பாணம் - ராவ்பகதூர் ஸ்ரீமான் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களே. அவர்கள் தாம் அச்சிட்ட போது முழுவுரையையும் நச்சினர்க்கினியருரை யென்றே கருதி, அச்சிட்டு, புத்தகத்தின் முகப்பில், பொருளதிகாரம் நச்சினார்க்கினயருரையென எழுதி வெளியிட்டார்கள். அங்ஙனம் அவர்கள் எழுதி வெளியிட்ட தற்குக் காரணம், இது பேராசிரியருரையெனத் தெரித்தெழுதாத பிரதிகள் கிடைப்ப, அவற்றைமாத்திரம் நோக்கி அச்சிட்டமையே போலும். சிதலரித்தும் பாணந்தின்றும் எழுதுவோராற் பிறழ்வுற்றுங் கிடந்த ஏட்டுப்பிரதிகளை நோக்கி ஒருவாறு திருத்தி முதலில் அச்சிட்டுப் பாதுகாத்துதவிய பிள்ளையவர்களுடைய அரிய நன்றி தமிழுலகத்தாரால் என்றும் பாராட்டப் படத்தக்கதேயாம். பிள்ளையவர்களால் அச்சிடப்பட்ட இப் பொருளதி காரம் வெளிவந்த சில காலத்தின்பின் அப்பொருளதிகாரத்தின் பின் நான்கியல்களினுரையும் நச்சினார்க்கினியருரையன்று பேராசிரியருரையே எனத் தக்க காரணங்களாற் றெரித்துச் சேதுசம்தான மகாவித்துவானும், சிறந்த ஆராய்ச்சியாளரு மாகிய பாஷா கவிசேகரர் ஸ்ரீமத் ரா. ராகவையங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்று வெளிவரும் செந்தமிழ்ப் பத்திரிகையிலும், அச்சங்கத்துப் பிரசுரமாகிய, தொல். செய்யுளியல் - நச்சினார்க்கினி யருரை முகவுரையிலும் எழுதி வெளிப்படுத்தினார்கள். பொருளதிகாரத்து முன்னைய வைந்தியல்களுக்குமுள்ள நச்சினார்க்கினியருரையையும், பின் நான்கியல்களுக்குமுள்ள இப் பேராசிரியருரையையும் ஏட்டுப் பிரதிகளோடும் ஒப்பு நோக்கித் திருத்தி இரண்டாவதாக, ராவ்பஹதூர் ஸ்ரீமான் ச. பவானந்தம் பிள்ளையவர்கள் வெவ்வேறாகப் பதித்து வெளிப் படுத்தினார்கள். அவர்கள் பதிப்பானும் அவ்வுரைகள் சில திருத்த மடைந்தன. அதன்பின் மூன்றாவதாக, அவ்வுரை களிரண்டனையும் முறையே, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதிப் பதிப்பாசிரியர் ராவ் சாஹிப், ஸ்ரீமாந் S. வையாபுரிப்பிள்ளை (B.A.,B.L.,) அவர்களும், மயிலாப்பூர் உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழரிசிரியர் பிரம்மஸ்ரீ வே. துரைசாமி ஐயரவர்களும், ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்தி உதவ, ஸ்ரீமான் S.fdf சபாபதிப்பிள்ளை யவர்கள் வெவ்வேறாகப் பதித்து வெளிப்படுத்தினார்கள். அப்பதிப்பானும் சில திருத்தம் பெற்றன. இம் முப்பதிப்பாளர்களாலும் பதிக்கப்பட்ட உரைகளுள் பிற்பாகமாகிய இப்பேராசிரியருரையை உடன்வைத்து ஒப்பு நோக்கிய போது முற்பதிப்புகள் இரண்டன்கண்ணுமுள்ள பாடங்களினும் பிற்பதிப்பிலுள்ள பாடங்கள் சில, திருத்த முடையனவாகவும், பிற்பதிப்பிலுள்ள பாடங்களினும் முற் பதிப்புக்களிலுள்ள பாடங்கள் சில திருத்தமுடையனவாகவும், சில பாடங்கள் மூன்றினுந் திருத்தமில்லனவாகவுங் காணப் பட்டன. இம் முப்பதிப்புக்களானுந் திருந்தியவற்றைவிட இன்னும் மிகப் பல இவ்வுரையுள் திருந்தவேண்டியனவாகக் காணப்பட்ட மையானே, அவற்றை ஏட்டுப்பிரதிகளோடும் ஒப்புநோக்கித் திருத்தலாமென முயன்றும் திருத்தமான பழைய பிரதிகள் அகப்படாமையினாலே பூரணமாகத் திருத்திக்கொள்ளுதல் கூடாதாயிற்று. அதனால், திருத்தமான பழைய ஏட்டுப் பிரதியைப் பெற விரும்பி அவ் விருப்பத்தை, தமிழ்நாட்டின்றவப் பயனாய்த் தோன்றிப் பழைய பல நூல்களைப் பதித்தும் புதிய பல உரை நூல்களை ஆக்கியு முதவிய மஹாமஹோபாத் யாய - தக்ஷிணாத்ய கலாநிதி - டாக்டர், பிரம்மஸ்ரீ உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு எழுதினோம். அவர்கள் மனமுவந்து, செய்யுளியன் மாத்திர மமைந்த பேராசிரியருரை ஏட்டுப் பிரதியொன்றும், மற்றை மூன்றியலுமமைந்த கையெழுத்துப் பிரதியொன்றும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தேகவியோக மடைந்தார் களாயினும் அவர்களுக்கு எமது பேரன்பு உரியதாகுக. அவர்களனுப்பிய பிரதிகளோடு அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கியபோது, அப் பிரதிகளிற் சில திருத்தங்கள் கிடைத்தன. அவற்றினு மனமமையாது மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புத்தக சாலையிலே பழைய நல்ல பிரதிகள் இருக்குமெனக்கருதி அங்குச் சென்று, வித்துவமணியாய் விளங்கும் செந்தமிழ்ப் பத்திராதிபர் ஸ்ரீமத் திரு. நாராயணையங்கார் அவர்கள் அப்போது அங்கு இல்லாமை யினாலே, செந்தமிழ் உதவிப் பத்திராசிரியரும், வித்துவானு மாகிய ஸ்ரீமத் T.K. இராமானுஜ ஐயங்காரவர்களிடம் உசாவினோம். அவர்கள் சில பிரதிகள் இருப்பதாகச் சொல்லி மன மகிழ்ச்சியோடும், அவற்றை எடுத்து உதவியதுமன்றி யாமிருந்து அவற்றைப் படித்துப் பார்த்தற் கேற்ற வசதிகளும் செய்தார்கள். அவர்கள் செய்த பெருந்தகைமைச் செயல் எம்மால் என்றும் மறக்கற்பாலதன்று நிற்க: யாம் பிழையுடையனவென்று குறித்து வைத்திருந்த உரைப்பகுதிகளை அப்பிரதிகளோடு ஒப்புநோக்கியபோது சில திருத்தங்கள் காணப்பட்டன. அத்திருத்தங்களை எழுதிக் கொண்டு மீண்டும் ஊர்க்கு வந்தபின், இந்தியாவில் வேறு சிலர் ஏட்டுப் பிரதிகள் வைத்திருக்கிறார்களெனவறிந்து அவர்களுக்கு எங் கருத்தை எழுதித் தெரிவித்தோம். அவர்கள் தமிழ்மகளிடம் கொண்ட வெறுப் பாற்போலும் தங்களிடம் ஏட்டுப் பிரதிகள் கிடையாவென மறுத்துவிட்டார்கள். பின், கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியராய் இருக்கும் வித்துவான் ஸ்ரீமாந் கா.பொ. இரத்தினம் B.O.L. அவர்கள் ஓர் ஏட்டுப்பிரதி தந்து உதவினார்கள். அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக. அவர்களுதவிய பிரதியினும் சில திருத்தங்கள் கிடைத்தன. ஏட்டுப்பிரதிகள் யாவும் பெரும்பாலும் அச்சுப் பிரதிக ளோடு ஒத்திருந்தமையானே பின் ஏட்டுப் பிரதிகள் தேடுவதை யாம் ஒழித்து, கிடைத்த திருத்தங்களோடும் இப்பதிப்பைப் பதிப்பித்தோம். ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திய திருத்தங் களை விட பல்லாண்டாகப் பண்டித வகுப்பு மாணவர்களுக்கு யாம் படிப்பித்த அனுபவத்தினாலே அறிந்து வைத்திருந்த சில திருத்தங்களையும் கீழ்க்குறிப்பிற் காண்பித்துள்ளோம். அவை பின்னாளில் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்தஞ் செய்பவர் களுக்கு உபயோகமாகுமென எண்ணுகின்றோம். அவற்றுட் பொருந்துவன கொள்க. ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக்கொள்வது மிகவரி தான செயலாகும். யாது காரணத்தாலெனின்; ஒரு பிரதியைப் பார்த்து வேறு பிரதி எழுதுவோர் சிதலும் பாணமுந் தின்ற இடங்களுக்குப் புள்ளியிட்டெழுதாது சேர்த்து எழுதி விட்டமையானும், சிலவிடங்களிற் றங்கருத்திற்கேற்பச் சில சொற்களையும் வாக்கியங்களையும் பெய்து எழுதிவிட்டமை யானும், பொருள் விளங்காத இடங்களைப் பிழைபட வுணர்ந்து திருத்திவிட்டமை யானும், வரிகளை மாறி எழுதிவிட்டமை யானும், உண்மைப் பொருள் இதுவென உணரமுடியாமையான் என்க. சொற்களும் வாக்கியங்களுஞ் சிதைந்த இடங்களையும், வரிகள் மாறியுள்ள விடங்களையும், அங்கங்கே (சிறப்பாக 300ம், 302ம், 307ம், 313ம், 369ம், 416ம், 448ம், 460ம், 461ம் சூத்திர உரைகளை) நோக்கி யுணர்ந்து கொள்க. சில சூத்திரவுரையுள் முன்வந்த வரிகள் பின்னும் வந்துள்ளன. அவற்றை 300ம் சூத்திரவுரை முதலிய நோக்கியுணர்க. இன்னும் யாம் இப்படியிருந்திருக்கலா மென்று காண்பித்த இடத்திற்றிருத்தம் வேறுவிதமாகவு மிருந்திருக்கலாம். எங்ஙனமிருப்பினும், அப் பிழை அவ்விடத்திற் றிருத்தமுற வேண்டும் என்பதே எமது கருத்தாம். மேலும், எளிதில் விளங்கற்கரிய விடங்களையும், செய்யுளி யலில் வருந் தொடைக்கணக்குகளையும் எளிதிலறிய விரித்து விளக்கியும், தொடைக்கணக்குப் பாக்களில் வரும் பிழைகளைத் திருத்தியுங் காண்பித்துள்ளோம். அவற்றை 341ஆம், 369ஆம் சூத்திர உரை முதலியவற்றை நோக்கி உணர்ந்துகொள்க. மேலும் யாம் திருத்தமென்று கண்ட விடங்களிலுஞ் சில சொற்களும், வாக்கியங்களும், எம் நோக்கிற்குத் தப்பிப் பிழையாகவு மிருக்கலாம். அவற்றையும் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக் கொள்வார்களாக. பேராசிரியர் எழுதிய உரை தானென்று கூற முடியாமல் அத்துணைப் பிறழ்ச்சியடைந் திருக்கும் இவ்வுரையை யாம் பூரணமாகத் திருத்திவிட்டோ மென்று கூறுவது எமக்கே பெரும் அவமானமாகும். நிற்க: யாமிப்போது அச்சிட்ட இப் பதிப்புப் பூரணமாகத் திருந்திய தென்பது எமது கருத்தன்றாதலால், பழைய ஏட்டுப் பிரதிகள் வைத்திருப்பவர்கள் தமிழ்மகளின் நலம் கருதி அவற்றை அனுப்பி வைப்பின், இரண்டாம் பதிப்பில் இன்னுந் திருத்தஞ் செய்யலாமென்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொள்ளு கின்றோம். மேலும் யாம் திருத்திய திருத்தங்களிலும், எழுதிய உரை விளக்கக் குறிப்புக்களிலும் எமது முதுமை, மறதி முதலியவற்றால் நேர்ந்த பிழைகளைத் திருத்திக்கொள்ளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். அன்றியும், உண்மையான பிழைகளை அறிஞர்கள் எமக்கு அறிவிப்பின், அவற்றை அவர்கள் பெயரோடும் இரண்டாம் பதிப்பில் வெளிப்படுத்துவோம். அன்றி, நன்னூல் சின்னூல் முதலிய சிற்றிலக்கணங்களைத்தானும் முறையுறக் கல்லாதும், ஆழ்ந்து நோக்காதும் பேர்வேண்டிப் பிழைகூறி ஆரவாரிக்கும் அவல மாக்கள் செயலை யாம் ஒரு பொருட்படுத்தோம். அவர்கள் தாமே கூறித் தாமே மகிழ்ந்து கொள்வார்களாக. குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல். இவ்வுரையுள், மெய்ப்பாட்டியற் பொருள்களையும், உவம இயற் பொருள்களையும் எளிதினறிந்து கோடற்குபகாரமாக, அவ் வியல்களின் பொருள்களைச் சுருக்கி எழுதி, எழுதிய அச்சுருக்கங் களை அவ்வியல்களின் முகப்பிலே தந்துள்ளோம். அன்றியும், அவ் வியல்களின் பொருள்களை எளிதின் விளங்கிக் கோடற்குப காரமாக, அவ்வியல்களில் வருமுதாரணச் செய்யுள் களுக்குப் பொருளு மெழுதி அவ்வியல்களின் பின்னாற் சேர்த்துள்ளோம். ஏனைய வியல்களுக்கு விரிவஞ்சி அவை எழுதாது விடப்பட்டன. அவற்றில் வரும் அரும்பதங்களின் பொருள்களைப் பின்னாற் சேர்க்கப்பட்டிருக்கும் அரும்பதவக ராதி நோக்கியறிந்து கொள்க. யாம் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களைப் பலமுறை நுண்ணிதாகப் படித்துப் பார்த்து, இன்றியமையாத சில திருத்தங்கள் செய்து துணைபுரிந்த, திருநெல்வேலி ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும், எமது ஆசிரியருளொரு வராகிய சுன்னாகம் வித்துவமணி ஸ்ரீமான் அ. குமார சுவாமிப் புலவரவர்களிடம் முறையாகக் கற்று, விற்பன்னராய் விளங்கு பவருமாகிய பண்டிதர் ஸ்ரீமான் சி. கணபதிப்பிள்ளை யவர் களுக்கு யாஞ் செய்யக்கிடந்த கடப்பாடு யாதென அறியோம். அவர்கள் செய்த நன்றியும், அவர்கள் நுண்மதியும் என்று மெம் மாற் பாராட்டப் படத்தக்கனவே. இன்னும், வடமொழி நூல்களுட் கூறிய மெய்ப்பாட்டிற் குரிய சில இலக்கண விதிகளை யாம் அறிதற்குத் துணைபுரிந்த, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும், வியகரண மஹோபாத்தியாயருமாகிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கும் எமது நன்றியுரியதாகுக. மேலும், இவ்வுரைப் பதிப்பிலுள்ள உரைக்குறிப்பு முதலிய வற்றைப் படித்துப்பார்த்து அன்போடு சிறப்புப்பாயிரமளித்த, அரிய கற்றாசற்றவராகிய இரு பெரும் புலவருக்கும் எமது அன்பு உரியதாகுக. இதனை யாம் அச்சிட்டபோது அச்சுத்தாள்களை நோக்கிப் பிழைகள் வாராவண்ணம் திருத்தியும், அரும்பதவகராதி, சூத்திரவகராதி முதலியவற்றை எழுதியும், எமது மாணவர்கள் செய்த உதவியும் எம்மான் மறக்கற்பாலதன்று. மேலும், தொல்காப்பியத்து ஏனையதிகாரங்களைப் போலவே, பொருளதிகாரத்தையும் பதித்துத் தமிழுலகிற்குதவ வேண்டுமெனக் கருதி, அவ்வதிகாரத்துப் பின் நான்கியற்குமுள்ள இப்பேராசிரியருரையையும், உரைவிளக்கக் குறிப்புக்களையும் தாமே விரும்பியேற்றுப் பதித்துதவிய, ஈழகேசரிப் பத்திராதி பரும், நெடுங்காலந் தமிழ்த்தொண்டி லீடுபட்டு உழைத்து வருபவரும், பரோபகார சிந்தை யுடையவருமாகிய ஸ்ரீமான் நா. பொன்னையா பிள்ளையவர்களுக்கும் எமது நன்றியுரியதாகுக. ஐரோப்பியர்களுடைய பெரும்போரினாலே உலகம் முழுவதும் இடர்ப்பட்டு மயங்கு மிக்காலத்திலே எத்துணைப் பெருஞ் செல்வரும் நினைத்தற்குமரிய இப்பெருஞ் செயலைப் பிள்ளையவர்கள் தமக்குவரு மெவ்வகையிடரையு நோக்காது மனமுவந்து செய்த பேருதவியானது, எம்மாலன்றி இத் தமிழுல கானும் என்றும் போற்றப்படத் தக்கதேயாம். இப் பதிப்பினை யாம் இடையூறின்றி முற்றுவித்தற்கு உயிர்த் துணையாகி அகத்தும் புறத்தும் நின்றுதவிய எமது குலதெய்வ மாகிய விநாயகக் கடவுளுடைய திருவடிகளை, மனமொழி மெய் களால் சிந்தித்துத் துதித்து வணங்குதும். சி. கணேசையர் சிறப்பு முகவுரை வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ்கூறு நல்லுலகின் வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொகுக்கப்பட்டது தொல் காப்பியம் என்று பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது. தமிழகத்தின் எல்லைகள் பற்றிய குறிப்புகளைத் தரும் தொன்மை மிக்க ஆதாரமாகவும் பனம்பாரனார் பாயிரம் திகழ்கிறது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாய்ப்பினைப் பெற்றோர் அல்லது வரையறுக்கப்பட்ட எல்லை களுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதோர் என்று வரலாற்றில் துறவிகள், புலவர்கள், வணிகர்கள் காணப்படு கின்றனர். துறவிக்கு வேந்தனும் துரும்பு; கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. துறவியும் புலவரும் வணிகரால் போற்றப்படுகின்றனர். துறவிகளுக்குப் படுக்கைகளை வணிகர்களே அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதைத் தொல்லியல் மற்றும் கல் வெட்டியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புலவர்களுக்குப் புரவலராக அரசர்கள் இருந்துள்ளனர். இன்னொரு நாட்டிற்குள்ளும் சென்று மக்களைச் சந்திக்கும் உரிமை துறவிகளுக்கு உண்டு. அதியமானுக்காக ஔவையார் இன்னொரு நாட்டரசனிடம் தூது சென்றிருக்கின்றார். வணிகர்கள், வாணிகத்தின் பொருட்டுத் தம் நாட்டின் எல்லையைக் கடக்கிறார்கள். இன்னொரு நாட்டுடன் வாணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்குத் துறவிகளின் உதவியையும் புலவர்களின் அனுபவத்தையும் வணிகர்கள் பயன்படுத்திக் கொள்வர். வணிகத்திற்கு, வணிகர்களுக்கு இடம் தராமல் இடையூறாக இருக்கும் நாடுகளைக் கைப்பற்றித் தம் நாட்டு எல்லைகளை அரசுகள் விரிவுபடுத்திக் கொள்ளும் போலும். போர்களுக்குரிய காரணங்களில் வாணிகப் போட்டியும் ஒன்றாக இருந்துவருகிறது. கனகவிசயர் தமிழ் அரசர்களைக் குறைத்துக்கூறிய செய்தி புலவர்களாலேயே சேரன் செங்குட்டுவனுக்குத் தெரியவந்திருக் கிறது. எனவே நாடுகளும் ஆட்சி எல்லைகளும் வணிகத்திற்காகவும் செயற்கையாகவே கட்டமைக்கப்படுதலையும், செயற்கைக் கட்டமைப்புகள் அரசியல் வணிகக் காரணங்களாலேயே சிதைக்கப் பெறுவதையும் வரலாற்றில் காணலாம். ஆனால் மொழிவழி அமைவன இயற்கையான எல்லைகள். இயற்கையான எல்லைகளையும் அரசியல் வணிகக் காரணங்கள் மாற்றியமைக்கவே விரும்பும். அத்தகைய விருப்பம் நிறைவேற மேற்கொள்ளப்பெறும் நடவடிக்கைகள் மக்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கும் வரலாற்றின் பெரும்பகுதி மன அழுத்தம் மிக்க நிகழ்வுகளின் பதிவுகளே. பனம்பாரனார் குறிப்பிடும் எல்லைகள் மொழிவழியானவை. மக்களின் சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் வணிக நோக்கச் செயற்பாடுகளின் வேர்களே வெளிப்படுகின்றன. அவற்றின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் கூட வணிக நோக்கங்களே வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்கூறு நல்லுலகத்தின் எழுத்தும் சொல்லும் பொருளும் அடங்கிய வழக்கும் செய்யுளும் தொகுக்கப்பட்டு, ஆய்ந்து தமிழ் இலக்கணமாகத் தொல்காப்பியம் உருவாக்கப் பட்டுள்ளதிலும் இத்தகைய கூறுகளைக் காணும் ஆய்வுகள் வர வேண்டும். தெளிவு உணர்த்திட உரையாசிரியர்களும், கால மாற்றத் திற்கேற்பக் கைவரப்பெறும் ஊடகத்திற்கேற்பப் பதிப்பாசிரியர் களும் தொல்காப்பியம் தொடர்ந்து கற்கப்பட உதவிவருகின்றனர். தமிழின் தொன்மையும் சிறப்பும் பெருமையும் தெரிந்திடத் தொல்காப்பியம் உதவுகிறது. மேலும் இன்றைய மொழியியல் ஆய்வாளர்களுக்கும் வியப்பைத் தருகிற மொழிசார் கூறுகளை நுட்பமாகவும் கொண்டிருக்கிறது என்பதும் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறது என்பதும் இனியும் வரும் கொள்கைகளுக்கு இடம் தருகிற வகைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதும் தொல்காப்பியத்தின் தனிப் பெருமைகளாகும். ஏடுகளிலிருந்த தொல்காப்பியத்தை மீட்டெடுத்து அச்சிட்ட பெருமை மழவை மகாலிங்கையருக்கு உரியது. அவர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் முதன்முதலில் வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு 1848இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தின் ஏனைய அதிகாரங்களும் அவற்றின் உரைகளும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தே வெளி வந்துள்ளன. சேனாவரையர் உரையுடன் சொல்லதிகாரத்தை 1868இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தார். 1882இல் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல் களுக்கு நச்சினார்கினியர் உரையும். அதன் எஞ்சிய நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு 1885இல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இவர் பதிப்பித்துள்ளார். பின்னர், தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் இவர் 1891இல் பதிப்பித்துள்ளார். அதன் பின்னர் மூலம் மட்டும் தனியாகவும் வந்துள்ளது. மூலமும் உரைகளும் தனித்தனியே வெளியிடப் பெற்றும் வந்துள்ளன. கையடக்க அளவிலும் தொல்காப்பியம் அச்சிடப் பெற்றுள்ளது. கூடவே தெளிவுரை, குறிப்புரை, எளிய உரை, மாணவர்க்கான உரை, பாடபேத ஆய்வு என இதுவரை நூற்றுக்கும் அதிகமான பதிப்புகள் தொல்காப்பியத்திற்கு வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளுக்குப் பின்பும் கூட, தொல்காப்பியத்தை முழுமையாக, முறையாக, இன்னும் அறிந்து கொள்வதில் இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. இவை தொல்காப்பியத்தின் சிறப்புப் பண்புகளாகவும் நோக்குதற் குரியன. தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியர் உரை மற்றும் அவருரை கிடைக்காத இயல்களுக்குப் பேராசிரியருரைகளை முழுமையாக வெளியிட்ட சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் பொருட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா பிள்ளை 1937இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டுவர விரும்பினார். அப்பதிப்பிற்கு அப்போது தமிழ் இலக்கண அறிவு மிகவும் கைவரப்பெற்றவராக இருந்த யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த சி. கணேசையர் உதவவேண்டும் என அவரை அணுகியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைக்கு மேலுமொரு விளக்கமாக உரையொன்றைச் செய்ய உடல் நலமின்மை காரணமாகச் சி. கணேசையரால் அப்போது இயலவில்லை. அந்நிலையில் அவர் கற்ற காலத்தும் கற்பித்த காலத்தும் குறித்தும் வைத்திருந்த குறிப்புகளை அப்பதிப்பில் சேர்க்க அனுமதித்துள்ளார். மேலும் அப்பதிப்பில் தொல்காப்பியர் வரலாறு, நச்சினார்க்கினியர் வராறு, உதாரண அகராதி, அரும்பத விளக்கம் முதலியவற்றின் அகராதி, தொல்காப்பிய முற்பதிப்புகளில் இடம் பெறாத மேற்கோள்விளக்கம், மற்றும் இணைப்பாக இடம் பெறக் கூடிய சில இலக்கணக் குறிப்புகள் போன்வற்றைத் தாம் எழுதியும் தம் மாணவர்களைக்கொண்டு எழுதுவித்தும் சேர்த்துள்ளார். இப்பதிப்பில் தொல்காப்பியம் ஏட்டுப்பிரதிகளை ஒப்புநோக்கி சி. கணேசையர் திருத்திய பல திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றால் இப்பதிப்பு "கணேசையர் பதிப்பு" என்றே சிறப்புடன் அழைக்கப்படுகிறது. உரையாசிரியர் காட்டியுள்ள மேற்கோள் பாடல்களின் அருஞ் சொற்களுக்கும் கணேசையர் பொருள் தந்துள்ளார். மூலபாடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவற்றை மதிப்பிட்டும் இவர்தம் உரை விளக்கக் குறிப்புகளில் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணேசையர் பதிப்புகளாகிய, தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றின் மறுபதிப்புகளை இப்போது வெளியிடுகிறது. இந்நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்நிறுவனத்தின் தோற்றம் முதல் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிறுவனத்தை வளர்த்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இத்தகைய பணிகளால் நிறுவனம் நன்றி செலுத்துகிறது. நிறுவனப் பணிகள் விரைவாகவும் நிறைவாகவும் அமைய ஒல்லும் வகையான் உதவி நல்கி ஆற்றுப்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செயலாளர், முனைவர் கி. இராச மாணிக்கம் (இ.ஆ.ப - ஓய்வு) அவர்களுக்கு நன்றி. நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து வரும் சிறப்பு ஆணையர் மற்றும் தமிழ் வளர்ச்சி இந்து சமய அற நிலையத்துறை மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திருமிகு து. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கும், இவ்வெளியீட்டிற்கு அரிய நூல் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அச்சிட நிதி நல்கிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கும், இந்நூலின் ஒளி அச்சுக் கோப்பைச் செய்தும் அச்சிட்டும் அளித்த தி பார்க்கர் நிறுவனத் தார்க்கும் நன்றி. முனைவர் ம. இராசேந்திரன் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007) தரமணி, சென்னை - 600 113 உரையாசிரியர் வரலாறு இவ்வுரையாசிரியர் பெயர் பேராசிரியர் என்பதாகும். இவரே, மரபியல் 98ம் சூத்திரவுரையுள், வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனக் கூறலானே, அப்பேராசிரியர் இவர்க்கு முந்தியவரென்பதும், இவரவரின் வேறாவரென்பதும் பெறப்படும். இனி, யாப்பருங்கலவிருத்தியுரையுள் பிறை நெடு முடிக் கறைமிடற்றரனார் பேர்மகிழ்ந்த பேராசிரியன் எனவும், நீர் மலிந்த வார்சடையோன் பேர்மகிழ்ந்த பேராசிரியன் எனவும், சிவன்பெயராற் பலவிடங்களிற் புகழ்ந்து கூறப்படும் பேராசிரியரும் ஒருவருளர். அவர் செய்த யாப்பிலக்கணச் சூத்திரங்கள் அவ்வுரையுட் பலவிடங்களிற் பிரமாணமாக எடுத்துக்காட்டப் படுதலினாலும், அவ்வுரைக் கொள்கைகளை இவர் எடுத்து மறுத்தலானும் இவர் அவர்க்கும் அவ்வுரை காரருக்கும் பிந்தியுள்ளவர் என்பது பெறப்படும். இனித் திருக்கோவையாருரை யாசிரியரும் பேராசிரியர் எனப்படுத லின் அவரும் இவரின் வேறாவரென்பது அவருரைப்போக் கானே அறியப்படும். ஆயினும், சில சொல்லாட்சி ஒப்புமை கொண்டு அவரும் இவரும் ஒருவரேயாவர் என்பாரும், சில சொல்லாட்சி யளவில் இருவரையும் ஒருவரெனல் கூடாதெனக் காரணங்காட்டி மறுப்பாருமுளர். சிலர் திருக்கோவை யாருரையாசிரியரும், ஆத்திரையன் பேராசிரியனும் ஒருவரே யாவர் என்பர். உண்மையை ஆராய்ந்து கொள்க. இனி நேமிநாத நூலாசிரியரும் பேராசிரியர் எனப்படுகின்றார். அவர் அருக மதத்தினராதலானும் நன்னூலாசிரியருக்கு முந்தியவராதலினா லும், நன்னூற் கொள்கைகளை இவரெடுத்து மறுத்தும் உடன்பட்டுஞ் சேரலானும் அவர் இவரின் முந்தியவராவர். இனி, இவ்வுரையாசிரியர் தொல்காப்பியத்துக்கு உரை செய்த இளம்பூரணருக்குப் பிந்தியவரென்பது, இவர் தமதுரை யுள் அவர் கொள்கைகளை எடுத்துக்காட்டி மறுத்தலானும், நச்சினார்க்கினியர்க்கு முந்தியவர் என்பது, இவர் கொள்கை களை நச்சினார்க்கினியர் தமதுரையுள் எடுத்து மறுத்தும் உடன்பட்டுச் சேரலானும், தமதுரையுள் இவர் பெயரையே எடுத்துக் கூறலானும் பெறப்படும். இவர், இளம்பூரணர் கருத்தை மறுப்பது 268ம், 281ம், 434ம், 440ம் சூத்திரவுரை முதலியவற்றாலும், நச்சினார்க்கினியர் இவருரையை மறுப்பது முதலியன செய்யுளியலுரையானும், இவர் பெயரை எடுத்துக்கூறுவது களவியல் 5ம் சூத்திரவுரை முதலிய வற்றானுமறியப்படும். வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இவர்க்கு முந்தியவ ரென்பது, அவர் பெயரை 649ம் சூத்திரவுரையுள் எடுத்துக் கூறலானும், பாட்டியன் மரபுநூலாரும் இவர்க்கு முந்தியவ ரென்பது அந்நூற் பெயரை 663ம் சூத்திரவுரையுள் எடுத்துக் கூற லானும் பெறப்படும். நன்னூலாருக்கும் இவர் பிந்தியவர் என்பது, அவர் கொண்ட பகுபதமுடிவை இவர் 665-ம் சூத்திரவுரை யள் எடுத்துக்காட்டி மறுத்தலானும், அவர் சூத்திர அடிகளை எடுத்துத் தொடுத்து 660ம் சூத்திரவுரையுட் கூறலானும் பிற வற்றானும் அறியப்படும். இன்னும், இவர் பொருளதிகாரத்து ஏனையவியல் களுக்கும் உரைசெய்துள்ளாரென்பது 266ம் சூத்திரவுரையுள் களவியலுட் கூறினோமென்றும் 267ம் சூத்திர உரையுள் அகத்திணையியலுட் கூறினோமென்றுங் கூறலானும், வேறு சூத்திரவுரைகளினுங் குறிப்பாக உணரக்கிடத்தலானும் அறியப் படும். அன்றியும், இவர் முன்னையவதிகாரங்கட்கும் உரை செய்திருக்கலாமென்பது சிற்சில சூத்திரவுரைகளானே ஒரு வாறு ஊகிக்கலாம். இவர், ஊர் கால முதலியன அறியமுடியவில்லை. ஆயினும் இவர் காலம் 14ம் நூற்றாண்டளவில் இருக்கலாமெனச் சிலர் கருதுவர். ஆராய்ந்துணர்க. சிறப்புப்பாயிரம் உயிரிளங்குமரன் நாடக நூலாசிரியரும், கலாவிற்பன்னரும், கவிஞருமாகிய நவாலியூர், ஸ்ரீமாந் க. சோமசுந்தரப் புலவரவர்கள் இயற்றியது ஆசிரியப்பா விண்டொடு நெடுவரை மந்தரந் நிறுவி அண்டரும் பிறரும் பண்டைநாட் கடையப் புண்ணியப் பாற்கட லீன்ற தண்ணிய விண்ணவ ரமுதம் வெள்கி வாயூற 5. நூற்பய னாகிய நாற்பய னுடனே நாச்சுவை யென்றா செவிச்சுவை யென்றா மேற்படு மொன்பது விதச்சுவை யென்றா பல்வகைச் சுவையு மெல்லவர் தமக்கும் 10. செந்தமிழ்த் தெய்வத் திருமொழிக் கடறருஞ் சந்தனப் பொதியத் தவமுனி தனாது சுந்தரச் சேவடி தொழுதுகற் றுயர்ந்த பல்காப் பியமுணர் தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியநூல் 15. எழுத்துஞ் சொல்லும் பொருளு மென்ன வழுத்திய மூன்று வகுப்பிற் றாங்கதன் எழுத்தும் சொல்லும் பழுத்தநூற் புலவர் உரையுடன் வைத்துப் புரைதப வாய்ந்து கற்போர் முட்டறப் பொற்புடன் வெளியிட் 20. டந்நா ளருளின னங்காது போல வன்னமும் பதமும் மாசறக் கற்ற பின்னரா ராயும் பெரும்பொருள் கற்புழிக் கொள்வோ ருள்ளமுங் கொடுப்போ ரறிவும் ஒள்ளிய வுணர்வுபெற் றுவகை பூப்பக் 25. கண்ணிய வுரையொடு நுண்ணிதி னாய்ந்து பொருத்தமும் விருத்தமும் திருத்தமுங் காட்டுங் குறிப்பும் விளக்கமு நெறிப்பட வமைத்துப் பேரா சிரியப் பொருநா வலன்றன் உரை தனைத் தெளிவுற வுணர்த்துமோ ருரைதனை 30. திருவருள் கூட்டச் செய்தனன், யாரெனின்; பொன்னிலங் காபுரிப் பொற்கொடி தனாது சென்னியி லணிந்த திருமணி முடிபோல் மன்னுயாழ்ப் பாண வளநக ரதனில் நன்னா வலர்புகழ் புன்னாலைக் கட்டுவன் 35. வளமிகு பதியுதி யிளவள ஞாயிறு; கடவுட் கற்பிற் காசிபன் மரபு புடவியில் விளக்கப் புகுந்த புதுமதி; முந்நூல் மந்திர முதுமறை யாளன்; சிந்நயக் குரிசில் செய்த மாதவம்; 40. தூவமர் தண்டமிழ்ப் பூவலயந் தொழும் நாவலர் பெருமான் நயந்திடு மருமான் தத்துவ நெறியறி வித்துவ சிரோமணி பொன்னம் பலப்பெயர்ப் புண்ணிய னிடத்தும் மன்னிய வளம்பெறு சுன்னைமா நகரான் 45. குறுமுனி யென்ன வறிவினி லுயர்ந்தோன் மறுகூறு குமார சுவாமியென் றோதும் வரமுறு புலவன் மாட்டும் பெறுமிறை தொன்னூற் கல்வித் துறையெலா மொருங்கே பன்னாட் பயின்று பழகிய பண்டிதன்; 50. இலக்கியப் பொன்மலை; இலக்கண வரநதி; நலத்தகு சைவ நன்னூற் பாற்கடல்; புண்ணிய நீறு சண்ணித்த மேனியன் அண்ணலைந் தெழுத்து மெண்ணுநன் னாவினன்; முன்னவன் சேவடி மன்னிய வுளத்தன்; 55. கற்றவர் விழையுங் கணேசைய னென்னும் அற்புத நாமத் தருந்தவ; னதனைக் கடும்போ ரேதுவிற் காகிதம் முட்டி இடம்பைமீக் கூர விரங்குமிந் நாளிற் கண்கவர் வனப்பு மெண்பெறு சிறப்பும் 60 நன்கொருங் கமைய வின்புடன் முயன்றே எழுதா வெழுத்திற் பழுதறப் பதிப்பித் துழுவ லன்புட னுலகினுக் களித்தனன், மன்னிய சிறப்பிற் சுன்னையம் பதியிற் றிருமகள் நிலையத் தொருதனி யதிபதி 65. ஈழ கேசரித் தாளினைப் பரப்புந் தாழாச் சிறப்பிற் றண்டமி ழறிஞன் நன்னய மிகுந்த பொன்னைய நாமம் மண்ணகம் விளங்கிட வந்த புண்ணிய முயற்சிப் புகழ்ப்பெரி யோனே. கொழும்பு அரசினர் கல்லூரித் தமிழாசிரியராயிருந்தவரும், வித்தகப் பத்திராசிரியரும், சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடங் கற்று விற்பன்னராகி விளங்குபவருமாகிய தென்கோவை, பண்டிதர் ஸ்ரீமாந் ச. கந்தையபிள்ளை அவர்கள் இயற்றியது. ஆசிரியப்பா அமிர்தமா ருருவா மருணிலை யளிக்குந் தொல்காப் பியனெறி தோன்றத் தெரிக்குந் தொல்காப் பியமெனுந் தொல்லிய னூலின் மெய்ப்பாடு முதலாச் செப்புநான் கியலையும் 5. பேரா சிரியராம் புலவர் பெருந்தகை உலகிய னாடி யுஞற்றுபே ருரையுடன் பிரதிபல கொண்டு வழுவற நாடிக் கற்றோர் மற்றோர் யாவருங் கையுறு கனியெனச் செம்பொருள் கண்டுநனி மகிழக் 10. குறிப்புரைவிரிவா னெறிப்பட நிகழ்த்தினன்; பண்மான் புறுவளம் பழுநிய தொன்மா இலங்கைப் பெயரிய வீழநன் னாட்டின் பொருளதிகாரம் மேல் எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் உணர்த்திய ஆசிரியர், அவ்விருவகை யிலக்கணங்களையுங் கருவியாகக் கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளுதற்குரிய பொருள்நெறி மரபினை இவ்வதிகாரத்தில் வகுத்து விளக்கு கின்றார். அதனால் இது பொருளதிகாரமென்னும் பெயர்த் தாயிற்று. இவ்வுலகிலுள்ள காட்சிப்பொருள் கருத்துப்பொருள் ஆகிய எல்லாவற்றையும் நன்காராய்ந்து அவற்றை முதல், கரு, உரி யென மூவகைப்படுத்துணர்த்தி, இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறையினை வகுத்துரைப்பது பொரு ளிலக்கண மெனப்படும் இப்பகுதி தமிழுக்கே சிறப்புரிமை யுடையதாகும். நிலமுங் காலமும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப்படைப் பொருள்கள். எனவே அவை முதற் பொருளெனப் பட்டன. நிலமெனவே நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றுக்குக் காரணமாகிய ஆகாயமும் அடங்கும். காலமாவது உலக நிகழ்ச்சிக்குத் துணையாய் முன்னும் பின்னும் நடுவுமாகி என்றுமுள்ளதோர் அருவப்பொருள் அது ஞாயிறு, திங்கள் முதலிய அளவைகளால் காலை, நண்பகல், எற்பாடு, யாமம், வைகறையென அறுவகைச் சிறு பொழுது களாகவும்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும் பொழுதுகளாகவும்; மாத்திரை, நாழிகை, நாள், திங்கள், ஆண்டு முதலிய கூறுகளாகவும் பகுக்கப்படும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின் சார்பினாலுண்டாகும் புல் முதல் மக்களீறாக வுள்ள உயிர்ப் பொருள்களும் ஏனை உயிரல் பொருள்களும் கருப்பொருள்களாம். இவை முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலின் கருப்பொருளெனப் பட்டன. அறஞ்செய்தலும் பொருளீட்டலும் இன்பம் நுகர்தலுமாகிய ஒழுகலாறுகள் உரிப் பொருள்களாம் இவை மக்களுக்கே யுரிய பொருள்களாதலின் உரிப்பொருளெனப் பட்டன. கணவனும் மனைவியும் அன்பினாற் கலந்து வாழுங் குடும்ப வாழ்வினை அகமென்றும், இவ்வாறு பல்லாயிரங் குடும்பங்கள் இகலின்றி ஒத்து வாழ்வதற்கு அரணாகிய அரசியல் வாழ்வினைப் புறமென்றும் கூறுதல் தமிழ்மரபாகும். அகமாவது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடி நுகரும் போக நுகர்ச்சியாகலான் அதனாலாய பயன் அதனைத் துய்த்த அவ்விருவர் உள்ளத்திற்கே புலனாதலின் அதனை அகம் என்றார். புறப் பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாதலால் அவற்றாலாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறமென்றார். இவ்வாறு உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல், கரு, உரி யென மூன்றாகப் பகுத்து அவற்றை அகம், புறமென இருவகையாக வகுத்து விளக்குதல் பண்டைத் தமிழர் கண்டுணர்ந்த பொருள்நூற் றுணிபாதலின் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய ஆசிரியர் தொல்காப்பியனாரும் முன்னைத் தமிழாசிரியர் கூறிய முறையே பொருளிலக்கண வரம்பினை இவ்வதிகாரத்து விரித்துணர்த்துகின்றார். அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத் தோருங் கூறுகின்ற பொருள்கள் யாவும் முதல், கரு, உரியென்னும் இம்மூன்றனுள் உரிப்பொருளாய் அடங்கு மென்றும், தொல் காப்பியமாகிய இந்நூலகத்துக் காமப்பகுதியும், வீரப்பகுதியும் விரித்துக் கூறப்பட்டன, ஏனைய தொகுத்துரைக்கப்பட்டன வென்றும், இன்பங் காரணமாகப் பொருள் தேடுவராதலானும் பொருளாலே அறஞ் செய்வராகலானும் இந்நூலாசிரியர் (தொல்காப்பியனார்) இன்பமும் பொருளும் அறமுமென ஓதினாரென்றும் இளம்பூரணர் கூறுகின்றார். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 226-227 மெய்ப்பாட்டியல் மனத்தினால் உய்த்துணரினல்லது ஐம்பொறிகளால் உணர்ந்துகொள்ள முடியாத பொருள்கள் சிலவற்றை மேல் பொருளியலில் இறுதியில் தொகுத்தோதினார். வடிவமில்லா தனவாகிய அப்பொருள்களையும் பொறி வாயிலாக மனங்கொள்ளுதற்கு ஏதுவாவன மெய்ப்பாடுகளாகும். உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந்தன்மை மெய்ப்பாடெனப்படும். ஒருவன் புலி முதலிய கொடிய விலங்குகளைக்கண்டு அஞ்சிய நிலையில், அவனுள்ளத்திலே இன்னது செய்வரென்று ஒன்றுந் தோன்றாது கலங்கும் கலக்கமும், பின் எவ்வாறேனும் தப்பி மறைதல் வேண்டுமென்ற கருத்தும், அவனது உடம்பின் கண்ணே நடுக்கமும், வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலி முதலியன சுவைப்படு பொருள் எனப்படும். அவற்றைக் கண்டதுமுதல் அவனுள்ளத்திலே நீங்காது நின்ற அச்சம் சுவையெப்படும். அதுகாரணமாக அவனுள்ளத்திலே தோன்றும் கலக்கமும் மறைதற்கருத்தும் குறிப்பெனப்படும், அக்குறிப்பின்வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப்படும். விறலை வடநூலார் சத்துவம் என வழங்குவார். நடுக்கமும் வியர்ப்பும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்றானாகிய அவனுக்கேயன்றி, அஞ்சி ஓடி வரும் அவனைக்கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகிய ஏனையவை அவன் மன நிகழ்ச்சிகளாகும். அச்சமுற்றான் மனத்தே நிகழும் அச்சம், அவனுடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்பர் இளம் பூரணர். மெய் - உடம்பு. படுதல் - தோன்றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது. இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை எனப் பொருள்கொண்டு,1 மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப் பொருள் விரித்தலும் உண்டு. மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படு வதோராற்றான் வெளிப்படுதல் அதனது இலக்கணங்கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டிய லென்றாயிற்று எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். மக்களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம்மெய்ப்பாடுகளைப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கிற்கும் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக்கொள்ளுதல் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம் மரபினை உளங்கொண்ட தொல்காப்பியனார், இம் மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டு இவ்வியலில் விரித்து விளக்குகின்றார். இவ்வியல் இருபத்தேழு சூத்திரங்களால் இயன்றதாகும். பண்ணைத்தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதினாறென்று சொல்லுவர். மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டாகியடங்கும் பகுதியும் உண்டு என மெய்ப்பாடுகளைக் குறித்து நாடக நூலார் கொண்ட பாகுபாட்டினை இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறிப் பிட்டுள்ளார், பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச் சொல்லாகும்.2 அச்சொல் விளையாட்டினை யுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றுள்ளது. பண்ணையையுடையது பண்ணை யென்றாயிற்று என்பர் இளம்பூரணர். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப விளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப்படு பொருள்களும், அவற்றை நுகர்ந்தவழி உளவாம் சுவையும், அச்சுவை பற்றித் தோன்றும் மனக்குறிப்பும், அக்குறிப்பின்வழி மெய்யின்கண் வெளிப்படும் சத்துவமும் ஆகிய இவை சிறந்து தோன்றுதல் இயல்பாதலின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் எனக் குறித்தார் ஆசிரியர். விளையாட்டாயத்தின் கண் தோன்றிய முப்பத்திரண்டாவன, நகை முதலிய சுவைகளுக்கு எதுவாகப் பின்னர்க் கூறப்படும் எள்ளல் முதல் விளையாட் டீறாகவுள்ள சுவைப்படு பொருள்கள் எனவும், அவற்றைக் குறித்த புறனாவன வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவு நிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக்குறிப்பு, இழிப்புக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக் குறிப்பு, உருத்திரக்குறிப்பு, நகைக்குறிப்பு, நடுவுநிலைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவு நிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம் எனவும், இவை பதினாறினையும் சுவையுள் அடக்கிச் சுவையெட்டும் ஆக்கி நிகழ்தல் உண்டு எனவும் கூறுவர் இளம்பூரணர்.3 ஒன்பது சுவையுள் உருத்திரம்4 ஒழித்து எட்டனையுங் கூறுங்கால், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறு பாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச் சுவை யெட்டோடுங் கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்தி ரண்டாம் என்பதும், எனவே சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலும் என நான்கு வகைப்பட்டு நிகழும் இம்முப்பத்திரண்டு பொருள்களையே பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் என இச்சூத்திரத்தில் தொல்காப்பியனார் குறித்தனர் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். இனி, சூத்திரத்திலுள்ள பண்ணை என்ற சொல்லுக்குத் தொகுதி எனப் பொருள்கொண்டு, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்றாற்போல நந்நான்காய்ப் பண்ணைகூடி வரும் முப்பத்திரண்டு பொருளும் என விளக்கங் கூறுதலும் உண்டு.5 நகை, அழுகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள்களை நாடக அரங்கிலே நிறுத்தி, அவற்றைக் கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுத்தி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப் பாட்டினை அவையிலுள்ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமை யெல்லாம் நாடக வழக்கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதியெல்லாம் இயற்றமிழ் நூலில் உணர்த்தத்தக்கன அல்ல எனக் கருதிய தொல்காப்பியனார் மெய்ப்பாடு பற்றிய நாடகநூற்கோட்பாடு களைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொகுத்துச் சுட்டினார்.6 நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடுதற்கமைந்த புலனெறி வழக்குப் பற்றித் தாம் உணர்த்த எடுத்துக்கொண்ட மெய்ப்பாடுகளை இவ் வியலிலுள்ள ஏனைய சூத்திரங்களால் விரித்து விளக்குகின்றார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் ஆசிரியர். இங்கே கூற எடுத்துக்கொண்ட எண்வகை மெய்ப்பாடுகளும் முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் முதலியோர் நிகழ்த்தும் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒருவாற்றால் தொடர்புடையானவை? என்பார், விளையாட்டுப் பொருளின தாகிய நகையென்னும் மெய்ப்பாட்டை முதற்கண்வைத்தார். நகைக்கு மறுதலையாவது அழுகை யாதலின் அதனை அதன்பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத்தார். தாம் இளிவந்த நிலையில் தம்மினும் உயர்ந்தவற்றை யெண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின்பின் மருட்கை வைத்தார். வியப்பாகிய மருட்கை பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தார். அச்சத்திற்கு மறுதலை வீரமாதலின் அச்சத்தின்பின் வீரத்தை வைத்தார். வீரத்தின் பயனாகப் பிறப்பது வெகுளியாதலின் வீரத்தின்பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லாச் சுவைகளினும் சிறந்ததாதலானும் முதலிற் கூறிய நகையுடன் தொடர்புடை யதாதலானும் உவகையை இறுதிக்கண் வைத்தார் என நகைமுதல் உவகையீறகவுள்ள எண்வகை மெய்ப்பாடுகளின் வைப்பு முறைக்குப் பேராசிரியர் கூறும் காரணங்கள் நினைக்கத் தக்கனவாகும். எண்வகை மெய்ப்பாடுகளுள் நகையென்பது எள்ளல், இளமை, பேதமை, மடன் என இந் நான்கும் பற்றி நிகழும் என்பர் ஆசிரியர். எள்ளல்-இகழ்தற் குறிப்பு. இளமை-விளைவறியாத இளம்பருவ இயல்பு. பேதமை அறிவின்மை. மடன்- பெரும் பான்மையும் பிறர் அறிவிக்க அறிந்து அறிந்தவற்றை நெகிழ விடாமை. மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல் என்றும், பேதமை என்பது பொருண்மை யறியாது திரியக்கோடல் என்றும், பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாக் கோடல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறுவர் இனம்பூரணர். மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகையொன்றே, தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக் குறிப்புக்களும் புலப்படுதற் குரிய நிலையில் நால்வகைப் பட்டுத்தோன்றும் என்பார், உள்ளப்பட்ட நகை நான்கென்ப என்றார் ஆசிரியர். இவ்வாறே அழகை முதல் உவகை யீறாகவுள்ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத்தம் தோற்றத் திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப்பொருள்களுக் கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழும் என்ற நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப்படுத்தி யுள்ளார். இனி, எள்ளல் பற்றிய நகையென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் இகழப்பட்ட நிலையில் தான் நகுதலும் என இரண்டாம். இளமை பற்றிய நகையென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக்கண்டு நகுதலும் பிறரது இளமைகண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். தன் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் பிறர் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் எனப் பேதைமை பற்றிய நகை இருவகைப்படும். இவ்வாறே தன்கண் தோன்றிய மடமை காரணமாகவும் பிறர் கண்தோன்றிய மடமை காரணமாகவும் நகை தோன்றுமாதலின் மடமை பற்றிய நகையும் இருவகைப் படும் என்பர். இளிவு, இழவு. அசைவு, வறுமை என இந்நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றும். இவற்றுள் இளிவு என்பது பிறரால் இகழப்படடு எளியராதல். இழவு என்பது தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை யென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம் ஆதலின் இவையும் எட்டாயின என்பர் பேராசிரியர். தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகையென்றும் பிறர்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணை யென்றும் கூறுதல் மரபு.7 மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இந்நான்கு பொருள் பற்றி இளிவரல் தோன்றும். மூப்பு-முதுமை காரணமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி-நோய். வருத்தம்-பயன் விளையாத வீண் முயற்சி. மென்மை-ஆற்றலும் பொருளும் இன்றி எளியராம் நிலைமை. இவை நான்கும் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாதலுடைய. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என இந்நான்கு பொருள்பற்றி மருட்கை தோன்றும். புதுமை-புதிதாகக் கண்டது. பெருமை-மிகப் பெரியது. சிறுமை-மிக நுண்ணியது. ஆக்கம்- ஒன்று திரிந்து ஒன்றாகியது. இந்நான்கும் முற்கூறியன போலத் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டா வன. உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் அறிவினைத் திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் மெய்ப்பாடாதலின் அதனை மதிமை சாலா மருட்கை என அடைபுணர்த்தோனார் ஆசிரியர். எனவே திரிபின்றி இயல்பாகிய அறிவுடன் கூடிய நிலையில் மருட்கை தோன்றுதற்கு இடமில்லை யென்பது புலனாம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என இந்நான்கு பொருள் பற்றி அச்சம் தோன்றும். அணங்காவன எதிர்ப் பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய் பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முதலாகவுள்ள கொடிய விலங்குகள். கள்வராவார் சோர்வு பார்த்து வஞ்சித்துக் கொடுந்தொழில் புரிவோர். தம் இறையென்றது தந்தை ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற் பணிகொண்டு தம்மை ஆளும் தலைவரை அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இங்ஙனம் நடுங்காது பிணங்கி நிற்பாரது மனத்தில் அச்சம் தோன்றுவதில்லை யென்பார் பிணங்கல் சாலா அச்சம் என்றார். அச்சத்திற்குக் காரணமாகிய இவை நான்கும் தன்கண் தோன்றுவன பிறர்கண் தோன்றுவன என இருபாற்படாது பிறிது பொருளென ஒருபாற்பட்டே நிற்பனவாம். கல்வி, தறுகண், இசைமை கொடை என்ற இந் நான்கும் காரணமாகப் பெருமிதம் தோன்றும். பெருமிதமாவது எல்லா ரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் என்பர் பேராசிரியர். எனவே அறிவு ஆண்மை பொருள் முதலிய சிறப்புக்களால் மக்கள் எல்லாரோடும் ஒப்பநில்லாது உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக் கொள்ளுதல் பொருந்தும். கல்வி என்பது தவம் முதலாகிய செயலின் திறம். தறுகண் என்பது உள்ளத்து உறுதியாகிய வீரம். இசைமை என்பது எக்காலத்தும் பழியொடு வருவன செய்யாமையாகிய புகழ்த்திறம். கொடை என்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளுங் கொடுத்தலாகிய வண்மைத் திறம். இவைநான்கும் ஒருவர்பால் அமைந்த நிலையில் அவரிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்றார் பேராசிரியர். உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற இந்நான்கும் பற்றி வெகுளி தோன்றும். உறுப்பறையாவது கையை வெட்டுதலும் கண்ணைத் தோண்டுதலும் போன்ற கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் உயர்வுக்கும் அவருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல். அலை என்பது அரசியல் நெறிக்கு மாறாகக் கோல்கொண்டு அலைத்தல் முதலிய தீத்தொழில்கள். கொலை என்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைளை அழித்துப் பேசுதல். இங்ஙனம் நால்வகைப்படக் கூறப்பெற்ற இக் கொடுந்தொழில்கள் காரணமாக மக்களது மனத்தே வெகுளி தோன்றுதல் இயல்பு. இவ்வெகுளி பிறர்கண் தோன்றிய பொருள்பற்றி வருவதாகும். செல்வம், புலன், புணர்வு விளையாட்டு என்ற இந்நான்கும் காரணமாக உவகை தோன்றும், செல்வம் என்றது செல்வத்தால் உண்டாகும் நுகர்ச்சியினை. புலன் என்றது கல்விப் பயனாகிய அறிவுடைமை. புணர்வு என்றது அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமப் புணர்ச்சியினை. விளையாட் டென்றது யாறும் குளமும் சோலையும் முதலாகிய வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணையொடு விளையாடி மகிழும் விளையாட்டினை. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை பிறக்கும். உலகியல் வாழ்விற் பிறரது துன்பத்தினைக் கண்டு கீழ் மக்களடையும் போலி மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது என அறிவுறுத்தும் நோக்கத்துடன் அல்லல் நீத்த உவகை என அடைபுணர்த்தோதிய ஆசிரியரது புலமைத்திறன் உணர்த்து பாராட்டத் தகுவதாகும். மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டும் ஒரு பக்கமாக, மற்றொருபக்கம் உடைமை, இன்புறல், நடுவுநிலை அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என வரும் இம் முப்பத்திரண்டும் உளவாவன. இவை மேற்கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளுள் அடங்காத நிலையிலேதான் தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர்.8 இங்ஙனம் இவ்வியலில் 3 முதல் 12 வரையுள்ள சூத்திரங் களால் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடுகளை வகுத்துரைத்த ஆசிரியர் 13 முதல் 25 முடிய வுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கே சிறப்புரிமையுடைய மெய்ப்பாடுகளை விரித்து விளக்குகின்றார். அகத்திணையுள் களவெண்ணும் ஒழுகலாற்றிற்குச் சிறந்துவரும் மெய்ப் பாடுகளைக் கூறத் தொடங்கிய தொல்காப்பியனார், புணர்க்கும் பாலாகிய நல்லூழின் ஆணையால் அன்பிற் சிறந்தாராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழி, அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சியளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும், அவ்விருவரும் மெய்யுற்றுக் கூடிய புணர்ச்சிக்குப் பின் மறைவில் நிகழும் ஒழுகலாறாகிய அக்களவு வெளிப்படுமளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளா மெனவும், இவையாறும் ஒவ்வொன்றும் நந்நான்கு பகுதிகளை யுடையவாகி ஒன்றன்பின் ஒன்றாய முறையே தோன்றுமெனவும் விரித்துரைக்கின்றார். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குதற்கண் தலைவி மாறுபடாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி புகுமுகம் புரிதல் எனப்படும். இவ்வாறு தலைவன் தன்னை நோக்கிய நிலையில் அச்சமும் நாணும் ஒருங்கு வந்தடைதலால் வியர்வை யரும்பிய நெற்றியையுடையளாதல் பொறிநுதல் வியர்த்தல் என்னும் மெய்ப்பாடாம். அதன் பின்னர்த் தலைவனிடத்தே தோன்றிய குறிப்புக்களால் அவனுடன் அளவளாவி மகிழவேண்டு மென்ற விருப்பம் தன்னுள்ளத்தே தோன்றிய நிலையிலும் அவ்விருப்பம் புறத்தே வெளிப்படாதபடி மறைத்தல் நகுநய மறைத்தல் எனப்படும். இங்ஙனம் தலைமகள் தனது விருப்பத்தினை மறைத் தாளாயினும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாதலால் தன் சிதைவு புறத்தார்க்குப் புலனாகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயல்பாம். அத்தகையமுயற்சி சிதைவு பிறர்க்கின்மை, என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட இந்நான்கு மெய்ப்பாடுகளும் களவிற்குரிய முதற்கூறாகும் என்பர் ஆசிரியர். மேற்குறித்த வண்ணம் தலைமகள் தனது மனச்சிதை வினைப் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்த வழியும், உள்ள நெழ்ச்சியாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன் வயத்ததன்றி நெகிழ்ந்து தாழ்தல் கூழை விரித்தல், எனப்படும். கூந்தலைப்போலன்றிக் காதிடைப் பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல் காதொன்று களைதல் என்னும் மெய்ப்பாடாகும். தனது உடம்பின் வேறுபாடுணர்ந்த தலைமகள் தோடுபோல நெகிழப் பெய்யப்படு முறைமையின வன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய கைவளை, மோதிரம் முதலிய அணிகலன்களைக் கழன்று விழாதபடி இறுகச் செறித்துக் கொள்ளுதல் ஊழணிதைவரல் எனப்படும். தனது உடம்பின் நெகிழ்ச்சியையுணர்ந்த தலைமகள் தான் உடுத்த உடையினைப் பல முறையும் இறுக உடுத்துக் கொள்ளுதல் உடைபெயர்த்துடுத்தல் என்னும் மெய்ப்பாடாம். இம் மெய்ப்பாடுகள் நான்கும் களவிற்குரிய இரண்டாங் கூறென்பர் ஆசிரியர். தலைவியின் உள்ளச் சிதைவறிந்து தலைவன் அவளை மெய்யுற அணுகிய நிலையில் நிகழ்வன இம்மெய்ப்பாடுகளாத லின் இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப் பட்டன. முற்கூறியவாறு உடை பெயர்த்துடுத்த தலைமகள், உடை பெரிதும் நெகிழ்ந்த நிலையில் தன்கையால் அற்றம் மறைத்தல் அல்குல் தைவரல் எனப்படும். அதனைச்சார இடையில் அணிந்த கடி சூத்தர முதலியவற்றை நெகிழாது திருத்திப் போற்றிக் கொள்ளுதல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறுதன் வலியற்ற நிலையிலும் தலைமகள் தான் புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மையை மேற்கொண்டு நிற்றல் இல்வலியுறுத்தல் எனப்படும். (இல்லாத வன்மையை மிகுத்தல் என்பது இத்தொடரின் பொருளாகும்.) இங்ஙனம் தலைமகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் தடுக்கப்படாது நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இருகைகளும் தலைவனை முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவன போல்வதோர் குறிப்புடையளாதல் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இவை நான்கும் களவின் மூன்றாம் கூறென்பர் ஆசிரியர். மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டும் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்திற்கு முன்னே நிகழ்வனவாம். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி தனது மனக்கருத்தினை நாணும் நிறையுமாகிய குணங்களால் புறத்தார்க்குப் புலனாகாது மறைக்கும் நிகழ்ச்சி பெண்மையின் இயல்பாதலால் இங்கே கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெரும்பான்மையும் தலைமகள் கண்ணே சிறந்து நிகழும் என்பர் பேராசிரியர். புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையை நினைந்து தலைவி பாராட்டும் உள்ளக் குறிப்பினளாதல் பாராட் டெடுத்தல் எனப்படும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடமை நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்ற உரையாடுங் குறிப்பினளாதல் மடந்தப வுரைத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவ்வொழுக்கம் சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறும் கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக் கொண்டு இது புறத்தார்க்குப் புலனாகுமோ என நாணும் உள்ளக் குறிப்பினளாதல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் எனப்படும். தலைமகன் அன்பினாற் கொடுத்த கையுறைப் பொருள்களை மறுக்காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ளமுடையளாதல் கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடாம். இங்ஙனம் முறையே ஒன்றன்பினொன் றாகத் தோன்றுதற்குரிய இவை நான்கும் களவின் நான்காம் கூறென்பர் ஆசிரியர். உயிரினுஞ் சிறந்த நாணுடையளாகிய தலைமகள், தன்னைக் குறித்து அயலார் கூறும் பழிச்சொற்களுக்கு நாணி, இவ்வொழுகலாற்றினை நம் பெற்றோர்க்குத் தெரிவிப்போமா அன்றித் தெரிவியாதிருப்போமா எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து, தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்தன்மைக்கும் ஏற்றவகையால் சொல்ல வேண்டுவன வற்றைத் தெரிந்து கொண்டு இன்னவாறு நிகழ்ந்ததென்று தன்தோழிக்கு உடம்படுதலும் அவள் வழியாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் தெரிந்துடம்படுதல் எனப்படும். தலைவனுடன் முன்னர்ப் பலநாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாறு போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பாகிய அச்சமும் நாணமும் மடனும் காரணமாக மறுக்கும் குறிப்பினளாதல் திளைப்பு வினை மறுத்தல் என்னும் மெய்ப்பாடாம். தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவன் முன்னர் வெளிப்படாது மனையகத்தே மறைந்தொழுகுங் கருத்துடையளாதல் கரந்திடத் தொழிதல் எனப்படும். இங்ஙனம் தலைவன் முன்னர்த் தோன்றாது மறைந்தொழுகுவாள் ஒருநாள் எதிர்பாராத நிலையில் அவனைக் காணலுற்றபொழுது எல்லையற்ற பெருமகிழ்ச்சி யுடைளாதல் கண்டவழி யுவத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவை நான்கும் களவினது ஐந்தாங் கூறெனப்படும். பூவுஞ் சாந்தும் பூணுந் துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அலங்கரித்த நிலையிலும் தலைமகள் தன் அன் பிற்கினிய தலைவனைக் கூடப் பெறாமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோர்தல் புறஞ் செயச் சிதைதல் எனப்படும். சுற்றத்தார் பலரும் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணையின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தினளாதல் புலம்பித் தோன்றல் எனப்படும். தனிமை யுள்ளத்தளாகிய தலைவி கையுங்களவுமாகப் பிடிப்பட்ட கள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத் தடுமாற்றந்தோன்றச் சொல்லுதல் கலங்கி மொழிதல் எனப்படும். தனது மனக் கலக்கத்தை யடக்கிக் கொண்டு பேசும் நிலையிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் கையறவுரைத்தல் எனப்படும். தனிமை விகற்பமாகிய இவை நான்கும் களவின் ஆறாம் கூறென்பர் ஆசிரியர். கையறவுரை தோன்றியதன் பின்னர் நிகழ்வன ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருந் திணைக்கும் மெய்ப்பாடாவனவன்றி நடுவணைந் திணை யெனப்பட்ட நற் காமத்துக்கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் கையறவுரைத்தல் என்ற எல்லையின் மீறிய மெய்ப்பாடுகள் கூறப் படாவெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், கையறவுரைத்தல் என்ற மெய்ப்பாட்டினைக் களவொழுக்கத்தின் இறுதிக்கண் வைத்தார். தலைமகன்பால் தோன்றும் குறிப்புச் சில பற்றித் தலைமகள்பால் பல குறிப்புத் தோன்றுமாதலால் தலைமகளிடத்துத் தோன்றும் மெய்ப் பாடுகளே சிறந்தனவென்று இங்கு வரையறுத்துரைக்கப் பட்டன. மேற்சொல்லப்பட்ட அறுவகைக் கூற்றினவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும் நிலைப்பட்ட அவை தமது உட்பகுதியாகி வருவன பிறவும் நிலைபெற்ற ஒழுகலாறாகிய நடுவணைந் திணைக்கேயுரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகளாகும் என்பர் ஆசிரியர். மன்னிய வினை எனப்பட்ட புணர்ச்சி, தலைமகளுக்கு ஆற்றாமை நேர்ந்தவிடத்து மேல் அறுவகைப்படக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளை முறையே நிமித்தமாகக் கொண்டு வாராமை யும் உரித்து என்பர் ஆசிரியர். களவிற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலாங்கூறு முதல் ஆறாங்கூறு முடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் எனவும், அவற்றின் பின் உளவாம் உன்மத்தம், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு எட்டு ஒன்பது பத்தாம் அவத்தைகள் எனவும் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பிற்கூறிய நான்கும் அகனைந் திணை யின்பத்திற்கு உரியன அன்மையில் இவற்றையுஞ் சேர்த்துப் பத்தவத்தைகளென ஆசிரியர் வரையறை கூறாதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாகும். மேற்கூறிய இருபத்து நான்கு அல்லாதவழி இனிக் கூறு கின்ற மெய்ப்பாடுகளும் உளவாம். இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்களைக் கண்டநிலையில் அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதலும், தானொருத்தியே துன்புறுகின்றாளாகச் சொல்லுதலும், தலைவனும் அவனுடைய தேர் முதலாயினவும் தன்னெதிர் தோன்றுவனவாக முன்னிறுத்திக்கொண்டு வருந்துதலும், கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவற்றையும் ஆராய்தலும், பசிநோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உணவூட்டிய பொழுதும் முன்போலாது உணவினைக் குறைத்துக் கொள்ளுதலும், உணவின்மை காரணமாக உடம்பு பெரிதும் இளைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உறக்கத்தை மேற்கொள்ளாமையும், சிறிது உறக்கம் வந்த நிலையில் தலைவனைக் கனவிற்கண்டு மயங்குதலும், மெய்யைப் பொய்யாகக் கொள்ளுதலும், பொய்யை மெய்யென்று துணிதலும், தலைவர் நம்மைத் துறப்பரோ என ஐயுறுதலும், தலைவனுக்கு உறவாயினாரைக் கண்டு மகிழ்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றிப் பரவுதலும், அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்து கூறுதலும், யாதாயினும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத் தலைமகனோடு ஒப்புமை கொள்ளுதலும், அவ்வழி ஒப்புமையுண்டாகிய நிலையில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழ்தலும் கலக்க முற்றுரைத்தலும் என வரும் இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகா தன போன்று காட்டினும் இவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சி நிமித்தமேயாகும் என்பர் ஆசிரியர். இவை யெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவர் உள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி யுணரப்படுமென்றும், இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள்ளத்து நிகழ்ந்தவற்றை வெளிப்படுப்பன ஆகலான் மெய்ப்பாடெனப்பட்டன என்றும் கூறுவர் பேராசிரியர். களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடாகியவழி இடித்துரைத் தலும், மனத்திலே வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமையும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனாம் என்ற அச்சம் காரணமாகத் தலைவன் நீங்கியொழுகலும், இரவும் பகலும் தலைவனொடு அளவளாவுதலை மறுக்குங் குறிப்புடை யளாதலும், புள்ளும், மேகமும் போல்வனவற்றை நோக்கித் தலைவர்பால் என் பொருட்டுத் தூது சொல்லுமின் என இரந்துரைத்தலும், மனையகத்திற் பொய்த்துயிலொடு மடிந்துவைகுதலும், காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பும், உரையாடாது வாளா இருத்தலும் என எண்ணப்பட்ட இவை எட்டும் திருமணம் முடித்து எய்துதலால் என்றும் அழியா நிலைமைத்தாகிய கற்புக் கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப் பாடுகளாகும். தலைமகனுக்குத் தொழுகுலமாகிய தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சியொழுகும் ஒழுக்கமும், தனக்கு ஒத்த இல்லறம் இன்னதென்று தலைமகளது உள்ளத்தே படுதலும், களவொழுக் கத்திற் போலன்றித் தலைமகன்பால் இல்லாத குற்றத்தை ஏறிட்டுக் கொண்டு வெகுளலும், தலைமகனாற் பெற்ற தலையளி உண்மையேயாயினும் அதனை உண்மை யென்று தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சியும், புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சியும், களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் என வரையறுத்தாற் போல்வதோர் வரையறை கற்புக்கு வேண்டாமையால் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமும், களவுக்காலத்துத் துன்பமுற்றாற் போலன்றி அருள்மிகத் தோன்றிய நெஞ்சினளாதலும், களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் மனையறத்தின்மேற் பெருகிய விருப்பினாலே ஒருசேரத் தொகநிற்றலும், களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமையும், தலைவனது மறைந்த ஒழுக்கத்தைப்பற்றி அயலார் கூறிய புறஞ்சொல்லின் தீமை குறித்து எழுந்த சொல்லுடன் சேர இங்கு எடுத்துரைத்த பத்தும் ஆழிவில் கூட்டம் என மேற்கூறிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடுகளாகும். காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதற்குரிய தலைவனும் தலைவியும் ஆகிய இவ்விருவர்பாலும் குடிப்பிறப்பு, அதற்குத்தக்க நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம் வடிவம், வடிவ வனப்பினை வாயிலக்கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதல், எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராதல், அறிவு, எக்காலத்தும் திருத்தகவிற்றாகிய உள்ளம் உடைமை என இப்பத்தும் ஒத்திருத்தல் வேண்டும் என்பர் ஆசிரியர். எனவே இவையெல்லாம் தலைவன் தலைவி இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைக் குணங்க ளெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவும் உணர்த்தினாராயிற்று. பொறாமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத்தல் புறங்கூறுதல், கடுஞ்சொற்கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந் திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினால் தம்மை உயர்ந்தாராக நினைத்தல், ஒருவர் ஒருவரைவிட இன்புறுவதாக நினைத்தல், நுண்ணுணர்வின்றி வரும் வெள்ளறிவு, மறதி, இன்னாரை யொப்பர் இன்னார் என்றெண்ணி ஒருவரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் தலைமக்கள் பால் இல்லா தொழிதல் வேண்டுமென விலக்குவர் பெரியோர். இக்குற்றங்கள்யாவும் இன்றித் தலைமகன்பால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைவன்பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இவையிவையென வரையறுத்துக் கூறாது, அவன்பால் நிகழத்தகாதன இவையென இச்சூத்திரத்தால் ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரெனவும் கருதுவர் பேராசிரியர். இங்குக் கூறப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடு களின் நுட்பமனைத்தும், கண்ணாலும், செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கல்லது ஏனை யோர்க்கு ஆராய்ந்துணர்தற்கரியது என்பர் ஆசிரியர். மனத் தளவில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணாலும் செவியாலும் அறிந்துகொள்ளுதல் எவ்வா றெனின், ஒருவரது மனக்குறிப்பின்வழி அவர்தம் முகம் வேறுபடுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலால் அவ்வேறுபாடுகளுக்கு ஏதுவாயமைந்த அவற்றை முறையே கண்ணாலுஞ் செவியாலும் உணர்ந்துகொள்ளுதல் அவ்வத் துறைபோயினாரது ஆற்றல் என இதனால் ஆசிரியர் உய்த்துணர வைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக்.293-308 மெய்ப்பாட்டியற் சுருக்கம் மெய்ப்பாடாவது; உலகத்தாருள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தாக்குப் புலப்படுவதொருவழியால் வெளிப் படுதல் என்றும், மெய்ப்பாடு - பொருட்பாடு என்றுங் கூறுவர் பேராசிரியர். பொருள் - உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு)). பாடு - வெளிப்படுதல். படுதல் - தோன்றல் - வெளிப்படுதல். உலகத்தாருள்ள நிகழ்ச்சி என்றது, உலகத்திலுள்ளானொருவன் ஒரு பொருளைத் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப் பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக் குறிப்பு) என்றபடி. புலப்படுவதொருவழி என்றது சத்துவத் தினை. ஒருவனுள்ளத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்டால் தோன்றுமென்பது, அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்று தேவர் கூறுதலானும் அறியப்படும். இனி இளம்பூரணர், உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே. என்று செயிற்றியனார் கூறலின், அச்சமு (தலியனவு) ற்றான் மாட்டு நிகழும் அச்சம் (முதலியன) அவன்மாட்டு நிகழுஞ் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாந்தன்மை மெய்ப்பாடு என்றும், மெய்யின்கட்பட்டுத் தோன்றலின் மெய்ப்பாடாயிற்று என்றுங் கூறுவர். உய்ப்போன் - அநுபவிப் போன் (- சுவைப்போன்) என்றபடி. காதல காத லறியாமை யுக்கிற்பின் ஏதில வேதிலார் நூல். (அதி. 44-செய். 10) என்னும் குறளுரையில் உய்க்கிற்பின் - அநுபவிக்கவல்லனா யின் என்று பரிமேலழகர் கூறலுங் காண்க. உய்த்தல் - செலுத்தல். அஃது ஈண்டு மனத்தைச் செலுத்தி அநுபவித்தன்மேனின்றது. உய்த்தாடித் திரியாதே உள்ளமே என்பது தேவாரம். மெய்ப்பாடு - மெய்க்கட்பட்டு விளங்குந் தோற்றம் என்பர் வீரசோழியகாரரும். சொற்பொருளால் வேறுபடினும் வரைவிலக்கணங்களை உற்று நோக்கும்போது யாவர் கருத்தும் ஒன்றாகும். இனி, நாடகநூலார் கூறிய மெய்ப்பாட்டுப் பொருள்கள் முப்பத்திரண்டென்றும், அவை பதினாறாயும், அப்பதினாறும் எட்டாயும் அடங்குமென்றுந் தொல்காப்பியனார் கூறுவர். மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டாவன: சுவைக்கப்படு பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும் அது மனத்துப் பட்ட வழி உள்ளத்து நிகழுங் குறிப்பும், அக்குறிப்புக்கள் தோன்றிய உள்ளங் காரணமாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் என்னும் நான்கனோடும் மெய்ப்பாடு எட்டையும் உறழ முப்பத்திரண்டு பொருளாம். சுவைப்பொருளாவன: நகை முதலிய சுவைக்குக் காரண மாகிய பொருள்கள். சுவையாவது: நகை முதலிய சுவைக்குரிய பொருள்களும் சுவைப்போனுடைய பொறியுங் கூடியவழி நிகழு மனவுணர்ச்சி. இதுபற்றியே, இருவகை நிலத்தி னியல்வது சுவையே. என்றார் பிறரும். இச்சுவையைக்குறித்துப் பேராசிரியர் உரைக்கு மிடத்து, இருவகை நிலத்தி னியல்வது சுவையே என்னுஞ் சூத்திரத்துள் இருநிலமென்பன உய்ப்போன் செயலுங் காண்போ னறிவும் என்னும் இரண்டிடமும் என்று பொருள் கூறுவார் கருத்தை மறுத்து, இருநிலமென்பன சுவைக்கப்படு பொருளுஞ் சுவைப்போனுமென்னும் இரண்டிடமுமே என்று நாட்டி யுரைத்தலின் அவருரையையும் விளங்குதற்பொருட்டு ஈண்டுக் காட்டுதும். அது வருமாறு:- இனி இருவகை நிலமென்பன உய்ப்போன் செய்தது காண்போற்கெய்துதலன்றோவெனின், சுவையென்பது ஒப்பி னானாய பெயராகலான் வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறி வினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத் தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி. அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய ஒருபொருள் கண்டு அஞ்சி ஓடி வருகின்றானொருவனை மற்றொருவன் கண்டவழி, இவன் வள்ளெயிற்றரிமா முதலாயின கண்டு அஞ்சினானென்றறிவ தல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல்வேண்டுவ தன்று. தான் கண்டானாயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும், கருணைசெய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப் போன் செய்தது காண்போனுய்த்த அறிவின்பெற்றியாற் செல் லாதாகலின், இருவகை நிலமெனப்படுவன சுவைப்பொருளும் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொரு ளாகல்வேண்டுமென்பது. கண்டோர்க்குச் சுவை பிறவா தென்று பேராசிரியர் மறுத்துக் கூறிய அதனால் கண்டோர்க்கும் சுவை பிறக்குமென்று கூத்த நூலாருட் சிலர் கூறுவரென்பது பெறப்படும். குறிப்பாவது: பொறியுணர்வு மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுஞ் சுவைக்குறிப்பு. சத்துவமாவது: அவ்வுள்ளநிகழ்ச்சி பிறந்தவழி உடம்பின் கண் தாமே தோன்றும் வேறுபாடு. அவையாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர்வார்தல், நடுங்கல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னும் பத்துமாம். இளம்பூரணர்க்கும் இதுவே கருத்தென்பது, பேயா னும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி (அவன் கண்) மயக்கமும் காப்பும் நடுக்கமும் வியர்ப்பு முளவா மன்றே, அவற்றின் அச்சத்திற்கேதுவாகிய புவியும் பேயும் சுவைக்கப் படுபொருள். அவற்றைக்கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் அச்சக்குறிப்பு. நடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவன என்று கொள்க. ஏனைய மனநிகழ்ச்சி. பிறவுமன்ன, இவற்றின் விரிவை நாடக நூலிற் காண்க. என்று கூறுதலான் அறியப்படும். இங்ஙனம் பேராசிரியரும் இளம்பூரணரும் மனத்து நிகழ்வன சுவையும் குறிப்பும் என்றும், அச்சுவை உடம்பின் வழியாகப் பிறர்க்குப் புலனாவது சத்துவம் என்றும் கூறுத லானே, சுவையும் குறிப்பும் அகத்து நிகழும் மெய்ப்பாடுகள் என்பதும், சத்துவம் புறத்து நிகழும் மெய்ப்பாடு என்பதும் பெறப்படும். இதுபற்றியே, உண்ணிகழ் தன்மை புறம்பொழிந் தோங்க எண்மெய்ப் பாட்டி னியல்வது சுவையே. என்றார் தண்டியாசிரியரும் என்க. இனி, பேராசிரியர் கருத்தின்படி தொல்காப்பியரும் புறத்து நிகழுஞ் சத்துவத்தையும் அகத்து நிகழுங் குறிப்பையும் சுவையுளடக்கி அகத்து நிகழுஞ் சுவை மெய்ப்பாட்டையே கூறினாரென்பது, அவர் பொருளுஞ் சுவையுமாகப் பகுத்துக் கூறும் மெய்ப்பாட்டுச் சிறப்புச் சூத்திரங்களாலே யறியப்படும். படவே, அகத்துக்கண், சுவையானே சுவைக்குறிப்பும் அதனாற் சத்துவமாகிய புறதது நிழும் மெய்ப்பாடுகளும் தோன்றும் என்பதும், புறத்து நிகழும் மெய்ப்பாட்டானே அகத்து நிகழுஞ் சுவை அறியப்படுமென்பதும் பெறப்படும். ஆகவே, ஒருவனுள் ளத்து நிகழுஞ் சுவையை அறிதற்குக் கருவி அச்சுவையாற் றோன்றும் சத்துவங்களென்பதும், அவற்றை அறிதற்குக் கருவி அறிவோனுடைய கண்ணும் செவியுமென்பதும், சுவைக்குக் காரணமாகிய சுவைக்கப்படுபொருளை யறிதற்குக் கருவி சுவைப்போனுடைய ஐம்பொறிகளென்பதும் அறிந்து கொள்ளப்படுமென்க. சத்துவங்களை அறிதற்குக் கருவி அறிவோனுடைய கண்ணும் செவியுமென்பது, கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. என்று தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலினிறுதியிற் கூறுத லானும், சுவைக்கப்படு பொருளை அறிதற்குக் கருவி சுவைப்போனுடைய ஐம்பொறியென்பது தொல்காப்பியர் பொருளும் சுவையுமாகப் பகுத்துக் கூறலானும், பொறியுணர் வொடுமொரு பொருளினை யெதிர்ந்த நெறியுடை மனத்து நிகழ்தரு பான்மை அயலவ குறப்புறத் தாய்ப்பொரு ளெட்டின் இயல்வது சுவையென் றியம்பினர் புலவர். என்னும் மாறனலங்கார சூத்திரத்தானும் அறிந்துகொள்க. சுவைக்கப்படு பொருள்களை ஐம்பொறிகளாலுணர்ந்து சுவைக்குமாற்றிற் குதாரணம் வருமாறு:- இவள் மேனி அணைபோலும்; இது பரிசத்தாலறிந்து சுவைத்தது. இக்கனி அமிழ்தம்போலும்; இது நாவாலுணர்ந்து சுவைத்தது. இவள் மேனி மாந்தளிர்போலும்; இது கண்ணா லுணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூவின் நாற்றமுடையது; இது மூக்காலுணர்ந்து சுவைத்தது. இவள் மொழி யாழிசை போலும் இனிமையுடையது; இது செவியாலுணர்ந்து சுவைத்தது. புறத்து நிகழும் மெய்ப்பாட்டை யுணருங் கருவிக்குதார ணம் பின்னர்க் காட்டுதும், இனித் தண்டியலங்காரசாரநூலார், மெய்ப்பாடாவது, (ஒருபொருளை) நேராகக் கண்டதுபோலத் தோன்றுங் கருத்து என்றும், இவை நாட்டியத்திலும் காப்பியத்திலும் செய்கைத் திறத்தினாலும் சொற்றிறத்தினாலும் தூண்டப்பட்ட வாசனை யின் திண்மையால் தம்மவையேபோல அநுபவநிலையில் வந்து ஆநந்தமாகவே நிற்பன என்றும் கூறுவர். செய்கைத்திறம் என்றது அவிநயத்தை. அவிநயம் எட்டுச் சுவையோடுங் கூடலானே எட்டுவகையாம். அவற்றுள் வீரச்சுவை யவிநயமாவது:- வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும் பிடித்த வாளுங் கடித்த வெயிறும் மடிந்த வுதடுஞ் சுருட்டிய நுதலும் திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும் நண்ணு மென்ப நன்குணர்ந் தோரே. என்பதாம். ஏனைச் சுவைக்குரிய அவிநயங்களையும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை நோக்கி அறிக. இவ்வபிநயத்தைப்பற்றிக் கம்பரும் ஒரு செய்யுளிற் கூறியுள்ளார். அது, கூற்றுறழ் நயனங்கள் சிவப்பக் கூனுத லேற்றிவர ளெயிறுக ளதுக்கி யின்றளிர் மாற்றருங் கரதல மறிக்கு மாதொரு சீற்றமா மபிநயந் தெரிக்கின் றாரினே. (கம்பரா. பால. உண். 25) என்பது. மாது மறிக்கும் என இயைக்க. இன் உவமவுருபு. சொற்றிறமாவது: வன்சொல் மென்சொல் முதலியன. அவ்வச் சுவைக்கேற்ப வன்மையும் மென்மையுமான சொற்கள் தொடர்ந்திருப்பதே சுவைக்குக் காரணமாம். வன்மையு மென்மையுமான எழுத்துக்கள் அவ்வச் சுவைக்கேற்பத் தொடர் தலைச் சுவைக்குக் காரணமாகக் கூறுவாருமுளர். சிருங்காரம் (உவகை), கருணை (அழுகை), சாந்தம் (சமநிலை): இவை மூன்றும் மென்மையான சுவை. ரவுத்திரம் (கோபம்), பீபற்சம் (இளிவரல்), வீரம்: இவை மூன்றும் வன்மை யான சுவை. ஆசியம் (நகை), பயானகம் (அச்சம்), அற்புதம் (அதிசயம்): இவை மூன்றும் நடுநிலைச் சுவை என்பது ஒருசாரார் பாகுபாடு. சிருங்காரமும் (உவகையும்), கருணையும் (அழுகையும்) மிகுமென்மை. ரவுத்திரமும் (கோபமும்), பீபற்சமும் (இளி வரலும்) மிகுவன்மை. ஆசியமும் (நகையும்), சாந்தமும் (சம நிலையும்), அற்புதமும் (வியப்பும்) சற்றுமென்மை. வீரமும், பயானகமும் (அச்சமும்) சற்றுவன்மை என்பது ஒருசாரார் பாகுபாடு. இவைகளெல்லாம் அவ்வச் சுவைக்கேற்ப வன்மை மென்மை இடைமைச் சொற்களாலே ஆக்கப்படும் என்க. மென்மைக்கும் வன்மைக்கும் முறையே உதாரணம் வருமாறு:- கன்று குணிலாக் கணியுகுந்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையத் தீங்குழல் கேளாமோ தோழீ. பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் சங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ. கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையத் தீங்குழல் கேளாமோ தோழீ. இது சிருங்காரம் (உவகை). மென்மை. இடித்து ரப்பி வந்து போரெ திர்த்தி யேல டர்ப்பனென் றடித்த லங்கள் கொட்டி வாய்ம டித்த டுத்த லங்குதோள் புடைத்து நின்று ளைத்த பூசல் புக்க தென்ப மிக்கிடந் துடிப்ப வங்கு றங்கு வாலி திண்செ வித்தொ ளைக்கணே. இது ரவுத்திரம் (கோபம்). வன்மை, சொற்றிறம் என்ப தற்குப் பிறவாறு கருத்துக் கூறுவாருமுளர். இனி வடநூலார், ஒருவன் ஒருபொருளைக் கண்ட விடத்து அப்பொருள் காரணமாக அவன் மனத்துக்கண் சூக்குமமாகத் தோன்றுங் காதன்முதலிய சுவைத் தோற்றத்தை (அஃதாவது சுவையின் முளையை) தாயிபாவம் (நிலையான மனக்கருத்து) என்றும், அச் சுவைத்தோற்றத்திற்குக் காரணமான பொருளை விபாவம் என்றும், அச் சுவைத்தோற்றத்தை வெளியே வெளிப்படுத்தும் உள்ளநிகழ்ச்சியை (க் குறிப்பை) அநுபாவம் என்றும், அச் சுவைத்தோற்றத்தின் விரிவாய் உடம்பின்வழியாக வெளிப்படும் மனவிகாரங்களை (விறலை)ச் சாத்துவிகபாவம் என்றும், அதன் வளர்வுக்குக் காரணமாய் அதனை நிறைவுபடுத்தி நிற்பனவற்றை (துணைமெய்ப்பாட் டை)ச் சஞ்சாரிபாவம் என்றும், அச் சுவைத் தோற்றமானது வளர்ந்து அவனாலே சுவைக்கப்படுதலினாலே, சுவையை இரசம் என்றுங் கூறுவர். எனவே ஒருவனிடத்துச் சுவைத் தோற்றமானது விபாவங்களாற் றோன்றி அநுபாவங்களான் வளர்ந்து சஞ்சாரிபாவங்களாற் புஷ்டியடைந்து அவனாற் சுவைக்கப்படுதலினாலே சுவை ஆகின்றது என்றபடி. தாயி பாவம் எனப்படும் சுவைத் தோற்றம் (சுவைமுளை) ஒன்பது வகைப்படும். அவையாவன: காதல், சிரிப்பு, துன்பம், கோபம், எழுச்சி (முயற்சி), பயம், அருவருப்பு, ஆச்சரியம், அடக்கம் என்பன. காதலன்றி உவப்பும் உவகைக்கு ஏதுவாம். இவை ஒருவனுள்ளத்திற் றோன்றியபோது, நிலையாய்த் தடைப் படாமல் வளர்ந்து பால் தயிரானாற் போலச் சுவையாக மாற்ற மடைகின்றன. சுவையும் ஒன்பது வகைப்படும். அவையாவன: உவகை (சிருங்காரம்), நகை (ஹாயம்), அவலம் (கருணை), வெகுளி (உருத்திரம்), பெருமிதம் (வீரம்), அச்சம் (பயானகம்), இளிவரல் (பீபற்சம்), மருட்கை (அற்புதம்), நடுநிலை (சாந்தம்) என்பன. இவற்றுள், சாந்தம் உலகியல் நீங்கினார் பெற்றியாக லின் அஃதொன்று மொழித்து ஏனைய எட்டுமே நூல்களாற் கூறப்படுகின்றன. அவலம், தனக்கு வருந் துன்பம் பற்றியது அவலம் என்றும் பிறர்க்கு வருந் துன்பம் பற்றியது கருணை யென்றும் இரு வகைப்படும் என அறிந்துகொள்க. இனி விபாவமும் ஆலம்பந விபாவமும் உத்தீபந விபாவமும் என இருவகைப்படும். ஆலம்பந விபாவமாவது: ஒருவனுள்ளத்திற் றோன்றும் சுவைத் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள பொருள். உத்தீபந விபாவமாவது: அப்பொருளைச் சார்ந்தும் சாராமலும் பொருந்திச் சூக்குமமான சுவைத்தோற்றத்தை வளர்க்கும் பொருள். இளம்பூரணரும் பேராசிரியரும் உள்ளத்தில் நிகழ்வது குறிப்பு என்றும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் உடம்பின்க ணுண்டாகும் வேறுபாடு சத்துவமென்றுங் கூறுவர். வட நூலாருட் சிலர் உடம்பினுருவிலிருந்து தோன்றும் மனோதர் மத்தைக் குறிப்பு (அநுபாவம்) என்றும், உடம்பின்வழியாக வெளிப்படும் மன விகாரங்களைச் சாத்துவிகம் என்றுங் கூறுவர். சாத்துவிகபாவம் அநுபாவத்தினின்றும் வேறுபட்டதும் வேறு படாததுமா யிருத்தலினாலே அநுபாவத்துட் சாத்துவிகம் அடங்குமென்பாருமுளர். இவற்றின் வேறுபாடுகளை ஆராய்ந் துணர்ந்துகொள்க. இனித் தொல்காப்பியர் கூறியவாறு, மெய்ப்பாடுகளையும். அவை உண்டாதற்குக் காரணமான பொருள்களையும் இங்கே காட்டுதும். மெய்ப்பாடுகள் எட்டாகும். அவையாவன: நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்பன. இவற்றுள் நகைச்சுவைக்குக் காரணமான பொருள்களா வன : இகழ்ச்சியும் இளமையும், அறிவின்மையும், மடமும் என் பன. இவை காரணமாக நகை தோன்றும். அவலச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- இகழ்ச்சியும், இழத்தலும், நிலை வேறுபடலும், வறுமையும் என்பன. இவை காரணமாக அவலம் (அழுகை) தோன்றும். இளிவரற்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையும் என்பன. இவை காரணமாக இளிவரல் தோன்றும். இளிவரலெனினும், இழிபு எனினும், அருவருப்பு எனினு மொக்கும். வியப்புச்சுவைக்குக் காரணமாகிய பொருள்களாவன :- புதுமையும், பெருமையும், சிறுமையும், ஆக்கமுமென்பன. இவை காரணமாக வியப்புத் தோன்றும். அச்சச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- வருத்துந் தெய்வமும், விலங்கும், கள்வரும், இறைவரும் என்பன. இவை காரணமாக அச்சந் தோன்றும். வீரச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- கல்வி யும், தறுகண்மை (அஞ்சாமை) யும், புகழும், கொடையும் என்பன. இவை காரணமாக வீரம் பிறக்கும். வெகுளிச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- தன்னுறுப்பைச் சிதைத்தலும், தன்குடிக்குக் கேடுசூழ்தலும், தன்னறிவையும் புகழையுங் கொன்றுரைத்தலும், தன்னை அலைவு செய்தலும் என்பன. இவை காரணமாக வெகுளி பிறக்கும். உவகைச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன :- செல்வநுகர்ச்சியும், அறிவுரையும், புணர்ச்சியும், விளையாட்டும் என்பன. இவை காரணமாக உவகை பிறக்கும். இவற்றுள் நகை முதலிய நான்கும் தன்கண் தோன்றும் பொருள் காரணமாகவும் பிறன்கண் தோன்றும் பொருள் காரணமாகவுந் தோன்றுவனவாம். அச்சமும் வெகுளியும் பிறன் கண் தோன்றும் பொருள் காரணமாகத் தோன்றும். வீரமும் உவகையும் தன்கண் தோன்றும் பொருள்காரணமாகத் தோன்றும். உவகை பிறரின்பம்பற்றியும் தோன்றும். நகை முதலிய இச்சுவைகள் எட்டனையும் பேராசிரியர் காட்டிய உதாரணங்களை நோக்கி அறிந்துகொள்க. இனி, நகை முதலிய சுவைகளெட்டனையும் எளிதினறிந்து கொள்ளுதற்கு உதாரணமாக பிற்கால இலக்கியங்களுள் ஒவ் வொரு செய்யுள் எடுத்துக்காட்டி வடமொழி நூலின் விதியை யுந் தழுவி முறையே விளக்குதும். நகை நிருநர்ந மருளும் பெற்றே னின்னலம் பெற்றே னின்னோ டொருவருஞ் செல்வத் தியாண்டு முறையவும் பெற்றே னன்றோ திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்த தென்னா வரிசிலை பிடித்த தோளான் வாளெயி றிலங்க நக்கான். இதன்கண், சூர்ப்பநகை கூற்றைக் கேட்டு இராமனுக்கு மனத்திற்றோன்றிய சிரிப்பு - தாயிபாவம். சூர்ப்பநகையின் கூற்று-பொருள் (ஆலம்பநவிபாவம்). அவள் பேதைமையான கருத்தைப் பலதரமும் நினைத்தல் - உத்தீபநவிபாவம். வெறுப்பு, எள்ளலுரை முதலியன-குறிப்பு (அநுபாவம்). இராமன் கடிவன கடிதல் (வரைவு) - துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). அவள் பேதைமைபற்றி வந்த நகை-சுவை (இரசம்) ஆகும். அவலம் உரளெரிந்து விழவென்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த நரனிருந்து தோள்பார்க்க நானிருந்து புலம்புவதோ கரனிருந்த வனமன்றோ வினவபடவுங் கடவேனோ அரனிருந்த மலையெடுத்த வண்ணாவோ வண்ணாவோ இதன்கண், சூர்ப்பநகைக்குத் தன்னுறுப்பை யிழத்தலா லுண்டான துன்பம் - தாயிபாவம். உறுப்பையிழத்தல் - பொருள் (ஆலம்பநவிபாவம்). அற்றவுறுப்புக்களா லுண்டாகும் வருத்தமும், இரத்தஞ் சொரிதலும், பிறர்க்கு நாணலும் முதலி யன - உத்தீபநவிபாவம். உறுப்பையிழத்தலாலுண்டான மயக்கம், அரற்றுரை முதலியன-குறிப்பு (அநுபாவம்). கண்ணீர் வார்தல், அழுகைக்குரல் முதலியன-விறல் (சாத்துவிகம்). உறுப்பறுதலா லுண்டான மனக்கலக்கம், சோர்வு முதலியன - துணை மெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). தன் உறுப்பையிழத்தலா லுடான அழுகை-சுவை (இரசம்) ஆகும். இளிவரல் காசொடு மணியும் பூணுங் கரியதாங் கனகம் போன்றும் தூசொடு மணியு முந்நூ றோறரு தோற்றம் போன்றும் மாசொடு கருகி மேனி வனப்பழிந் திடவூர் வந்தான் சீசியென் றாரு மெள்ளத் திகைப்பொடு பழுவஞ் சேர்ந்தாள். இதன்கண் திரிசங்குவின் தோற்றத்தை (உடம்பு வேறு பாட்டை)க் கண்டு ஊரவர்களுக்கு உண்டான அருவருப்பு - தாயிபாவம். திரிசங்குவின் தோற்றம்-பொருள் (ஆலம்பந விபாவம்). அவனணிந்திருந்த வதிரம், அணி, பூணூல் முதலிய வற்றின் வேறுபாடு-உத்தீபநவிபாவம். அவனுடம்பின்கண் வைத்த வெறுப்பு, மயக்கம், எள்ளலுரை முதலியன-குறிப்பு (அநுபாவம்). அருவருப்பாலுண்டான நடுக்கம், புளகம் முதலி யன-சாத்துவிகபாவம். மனத்தடுமாற்றம் முதலியன - துணை மெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). இளிவரல் - சுவை (இரசம்). வியப்பு பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால் என்பிறங் கழகிற் கெல்லை யில்லையா மென்று நின்றாள் கண்பிற பொருளிற் செல்லா கருத்தெளி னஃதே கண்ட பெண்பிறந் தேனுக் கென்றா லென்படும் பிறருக் கென்றாள். இதன்கண், சீதையினழகைக்கண்டு சூர்ப்பநகைக்கு உண்டான ஆச்சரியம்-தாயிபாவம். சீதையினழகு-பொருள் (ஆலம்பநவிபாவம்). அழகின் மிகுதி-உத்தீபநவிபாவம். அழகின் மயங்கலும், அதனைப் பலமுறை நோக்கலும், வியப்புரையும் - குறிப்பு (அநுபாவம்). பெண்பிறந்தேனுக்கென்றமை யானே பெண்களைக்கண்டு பெண்களுக்குக் காதலுண்டாகாமை யாகிய பெண்டன்மை பெறப்படலின் அது தன்மையென்னும் துணைமெய்ப்பாட்டுளடங்கும். என்படும் பிறருக்கென்பதுமது, என்னை? ஆண்டன்மை பெறப்படலின். மயங்கிநிற்றல், களிப்பு முதலியன-விறல் (சாத்துவிகபாவம்). அழகின் புதுமைபற்றி உண்டான வியப்பு-சுவை (இரசம்) ஆகும். அச்சம் கைத்தல மொன்று நீண்ட காய்ப்புடை வெரிநிற் போட்ட பைந்தலை பிடிப்ப வொன்று புகாத்தலைப் பாகு பற்ற மொய்த்தலை வெய்திப் பின்முன் பார்த்திடு முகத்த ராகி யெய்த்தலி னிருநாள் சோர வேகுவார் வணிக ரெல்லாம். இதன்கண், யாற்றினெழுந்த யானையைக்கண்டு வணிகருக் குண்டான பயம்-தாயிபாவம். யானை-பொருள் (ஆலம்பநவி பாவம்). அதன் பெருமையும், வருகையும், தம்மைக் கொல்லும் என்ற நினைவும் தடுப்பாரின்மையும் - உத்தீபநவிபாவம். அடிக்கடி பின்பக்க நோக்கலும், ஓடலும்-குறிப்பு (அநுபாவம்). பயத்தாலுண்டான நடுக்கம், வியர்வை முதலியன-விறல் (சாத்துவிகபாவம்). வெரூஉதல், இடுக்கண் முதலியன-துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). களிற்றாலுண் டான அச்சம்-சுவை (இரசம்) ஆகும். இது விலங்குபற்றிய அச்சம். வெகுளி தடுத்து மற்றிவை யுரைத்தலும் வெய்யசூர் தடக்கை புடைத்து வெய்துயிர்த் துரப்பியே நகைநிலாப் பொடிப்பக் கடிந்து மெல்லித ழதுக்கிமெய் பொறித்திடக் கனன்று முடித்த னித்தலை துளக்கியே யின்னன மொழிவான். இதன்கண், சிங்கனுடைய வார்த்தையைக்கேட்டு சூரனுக் குண்டான கோபம்-தாயிபாவம். சிங்கனுடைய வார்த்தை-பொருள் (ஆலம்பநவிபாவம்). அவைக்களமும், பகைவரை வியத் தலும் முதலியன - உத்தீபநவிபாவம். கைபுடைத்தல், வெய் துயிர்த்தல், உரப்பல், நகைத்தல், இதழதுக்கல், கனலல், தலை துளக்கல்-குறிப்பு (அநுபாவம்). கோபத்தாலுண்டான நடுக்கம், வெயர்வை முதலியன-விறல் (சாத்துவிகபாவம்). முனிவு, மனத்தடுமாற்றம், நடுக்கம் முதலியன - துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). தன் பெருமையைக் கொன்றுரைத்தலால் வந்த வெகுளி - சுவை (இரசம்) ஆகும். வீரம் ஆளை யாவனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை யின்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினான் நாகிளங் கமுகிள் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். இதன்கண், இராமன் போரிலே சேனையிழந்து தனித்து நின்ற இராவணனைக் கொல்லாது நாளைவாவென நல்க எண்ணி யது-தாயிபாவம். இராவணன் - பொருள் (ஆலம்பந விபாவம்). அவன் தனிமை-உத்தீபநவிபாவம். நாளைவாவென் றல் - குறிப்பு (அநுபாவம்). இரக்கம் - விறல் (சாத்துவிக பாவம்). தன்வலி மிகுதியும், தனித்தவனைக் கொல்லுதல் முறையன்று என்னு நீதியை ஆராய்ந்த ஆராய்ச்சியும்-துணைமெய்ப்பாடு (சஞ்சாரி பாவம்). உயிர்க் கொடைபற்றி வந்த வீரம் - சுவை (இரசம்) ஆகும். உவகை நல்லியன் மகர வீணைத் தேனுக நகையுந் தோடும் வில்லிட வாளும் வீச வேல்கிடந் தனைய நாட்டத் தெல்லியன் மதிய மன்ன முகத்திய ரெழிலி தோன்றச் சொல்லிய பருவ நோக்குந் தோகையி னாடி னாரே. இதன்கண், இராமன் வில்வளைத்தமை பற்றி மகளிருந் குண்டான உவகைத்தோற்றம் தாயிபாவம். இராமன் வில் வளைத்தமை-பொருள் (ஆலம்பநவிபாவம்). அதனால் சீதை கல்யாணம் நிறைவேறுமென்ற கருத்து - உத்தீபநவிபாவம். பாடலும் ஆடலும்-குறிப்பு (அநுபாவம்). உவகையாலுண்டான புளகம் களிப்பு முதலியன - விறல் (சாத்துவிகபாவம்). உள்ளமகிழ்ச்சி - துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). உவகை - சுவை (இரசம்) ஆகும். இச்செய்யுளிலும் முற்செய்யுள்களிலும் வந்த குறிப்புக்கள் வடமொழி நூல்களின் விதிப்படி எழுதப் பட்டன. மெய்ப்பாட்டியலுக்கு உரைகூறிய உரைகாரர் சொல்லிய சில முறைக்கும் வடமொழி நூல்களிற் சிலர் கூறிய முறைக்கும் சில வேறுபாடுகள் காணப்படலின் அவற்றை உணர்ந்துகொள் ளற்பொருட்டு வடமொழி நூல்களிற் கூறும் மெய்ப்பாடுபற்றிய விதிகளை இங்கே எடுத்துக்காட்டினாம். வடநூல்களுள்ளும் வேறுபாடுகள் காணப்படலின் அவ் வேறுபாடுகளையும் ஆராய்ந்துணர்ந்துகொள்க. தொல்காப்பியர் கூறிய உடமை யின்புறன் முதலிய துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டாவன :- உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்றுதல், கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பன. இவை தனித்தும் நிகழும். இப்பொது மெய்ப்பாடுகளையன்றி அகத்திணையுள் களவின்கண் நிகழும் மெய்ப்பாடுகளையுங் கூறுவான் தொடங்கிய ஆசிரியர் தொல்காப்பியர், முதலில் ஒத்த கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்பட்ட வழிப் பெரும்பாலுந் தலைவிபால் நிகழும் மெய்ப்பாடு கூறுவான்றொடங்கிப், புணர்ச்சிக்குமுன் அவள்கண் நிகழும் மெய்ப்பாடுகளை மூன்றுபகுதியாகவும், பின் நிகழும் மெய்ப்பாடுகளை மூன்று பகுதியாகவும் பிரித்துக் கூறினார். இது பேராசிரியர் கருத்து. புணர்ச்சிக்குமுன் ஒன்றன்பின்னொன்றாக நிகழும் மூன்றுவகை மெய்ப்பாடுகளுள் முதற்கண் நிகழும் மெய்ப்பாடுகளாவன :- புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவு பிறர்க்கின்மை. என்னும் நான்குமாம். இரண்டாவது நிகழும் மெய்ப்பாடுகளாவன :- கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தல். என்னும் நான்குமாம். மூன்றாவது நிகழும் மெய்ப்பாடுகளாவன :- அல்கு றைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையு மெடுத்தல் என்னும் நான்குமாம், புணர்ச்சிக்குப்பின் ஒன்றன்பின்னொன்றாக நிகழும் மூன்று வகை மெய்ப்பாடு களுள் முதற்கண் நிகழும் மெய்ப்பாடு களாவன :- பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் கொடுப்பவை கோடல் என்னும் நான்குமாம். இரண்டாவதாக நிகழும் மெய்ப்பாடுகளாவன :- தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தல். என்னும் நான்குமாம். மூன்றாவதாக நிகழும் மெய்ப்பாடுகளாவன :- புறஞ்செயக் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைதல். என்னும் நான்குமாம். இளம்பூரணர் இவைகளைப் புணர்ச்சி நிகழாதவழி நிகழும் பத்தவத்தைக்கண் உண்டாகும் மெய்ப்பாடு என்றும், அப்பத் துள் ஆறும் அகத்திணைக்கேயுரியவாதலின் அவற்றையே கூறி னார் என்றுங் கூறுவர். மேற்கூறிய அறுவகை மெய்ப்பாடுங் களவுக்கேயுரியன. சில கற்பினும் வரும். சில கைக்கிளை பெருந் திணைக்கண்ணும் வரும். ஆற்றாமை மிக்கவிடத்து மெய்ப்பா டின்றியும் புணர்ச்சி நிகழும் என்க. இவையன்றி புணர்ச்சிக்கு நிமித்தமாய் களவு கற்பு என் னும் இரண்டற்கும் பொதுவான வேறுசில மெய்ப்பாடுகளுமுள. அவை இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் முதலாயினவாகும். இவையன்றி வரைந்தெய்தும் கூட்டத்திற்கு நிமித்தமான மெய்ப்பாடுகளுமுள. அவை முட்டுவயிற் கழறன் முதலியன. இன்னும் வரைந்தெய்தியபின் நிகழும் மெய்ப்பாடு களுமுள. அவை தெய்வமஞ்சன் முதலிய பத்துமாம். இனி ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்னுஞ் சூத்திரத்துட் கூறிய ஒப்புமைக்குரிய மெய்ப்பாடுகள் பிறப்பு குடிமையாதியன. இவை மெய்ப்பாட்டால் உணரப்படுமென்பர் பேராசிரியர். இளம் பூரணர் தலைவன் தலைவி என்னும் இருவர்க்குரிய ஒப்புப்பகுதி என்பர். நிம்புரி கொடுமை முதலியனவற்றைத் தலைவனுக்கா காத மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். இளம்பூரணர் தலைவிகண் நிகழாத மெய்ப்பாடு என்பர். சிலர் இருவருக்கும் பொது என்பர். பொருத்தம் நோக்கிக்கொள்க. இம் மெய்ப்பாடுகளெல்லாவற்றையும், பிறர் உணருங் கருவி கண்ணுஞ் செவியுமென்பர் தொல்காப்பியர். அது முன்னுங் கூறியுள்ளாம். புற மெய்ப்பாடுகள் கண்ணுஞ் செவியு மென்னு மிரண்டானுமுணர்தற்கு உதாரணம் வருமாறு :- இரண்டறி கள்விநங் காத லோளோ முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளுர்க் காள நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்த்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312) என்பதனுள், அமராமுகத்தளாதலும் தமரோரன்னளாதலும் தலைமகன் தன் கண்ணா னோக்கியறிதலின் அது கண்ணுணர் வெனப்படும். ஒழிகோ யானென வழிதகக் கூறி (அகம் 110) என்புழித் தலைமகன் மனத்து நிகழ்ந்த வழிவெல்லாம், ஒழிகோ யான் என்ற உரையானே தோழி உணர்ந்தமையின் அது செவி யுணர்வெனப்படும். ஆறாவது மெய்ப்பாட்டியல் (மெய்ப்பாடு இத்துணைய எனலும் அவை இத்துணையவாய் அடங்குமெனலும்) 249. பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் மெய்ப் பாட்டியலென்னும் பெயர்த்து, 1மெய்ப்பாடென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த்தாயிற்று. இதனானே ஓத்து நுதலியதூஉம் மெய்ப்பாடு உணர்த்துதலென்பது பெற்றாம். 2மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது, உலகத்தார் 3உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங் கூறிய ஓத்தும் 4ஆகுபெயரான் மெய்ப்பாட்டிய லென்றாயிற்று. மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயை பென்னையோ வெனின், 5மேலை ஓத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாற்றிற்கும் 6காட்டலாகாப் பொருள (தொல். பொருள். 53) என்றவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வேறோரோத்தாக வைத்தமையானே 7எல்லா வற்றோடும் இயைபுடைத்தென்பது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அம் மெய்ப்பாடு 8பிறர் வேண்டு மாற்றான் இத்துணைப்பகுதிப்படுமென்றுணர்த்துத னுதலிற்று. இ-ள்: 9பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும்- முடியுடைவேந்தருங் குறுநிலமன்னரு முதலானோர் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங்கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்;, கண்ணியபுறனே நானான்கு என்ப- அவை கருதிய பொருட் பகுதி பதினாறாகி அடங்கும், நாடக நூலாசிரியர்க்கு என்றவாறு. 10அது முதனூலை நோக்கிக் கூறியவாறுபோலும். முப்பத்திரண்டாவன யாவையெனின்,- ஒன்பது சுவை யெனப்பட்டவற்றுள் 11உருத்திரமொழிந்த எட்டனையுங் கூறுங் காற், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறி யுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் 12குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலு முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய 13சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யெட் டோடுங் கூட்டி, ஒன்று நான்குசெய்து உறழ, முப்பத்திரண்டா மென்பது. எனவே, சுவைப்பொருளுஞ் சுவையுணர்வும், குறிப்பும் விறலுமென நான்காயின. விறலெனினுஞ் சத்துவமெனினும் ஒக்கும். சுவைப்பொருளென்பன:- அறுசுவைக்கு முதலாகிய வேம் புங் 14கடுவும் உப்பும் புளியும் (மிளகும்) கரும்பும் போல்வன; அவையாமாறு:- நகைச்சுவைக்குப் பொருளாவன 15ஆரியர் கூறுந் தமிழும், குருடரும் முடவருஞ் செல்லும் 16செலவும், 17பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்தாரும், குழவி கூறும் மழலையும் போல்வன. அச்சப்பொருளாவன:- 18வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ யீற்றா மதமா வேக பாதங் 19கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம் என்று சொல்லப்பட்டனவே போல்வன. இவற்றைச் சுவைகோடலென்பதென்னையெனின், நகை யும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச் சுவை யெனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென்பொறியுந் 20தலைப்பெய்த வழியல்லது கைப்புச் சுவை பிறவாததுபோல, அப்பொருள் கண்டவழியல்லது நகையும் அச்சமும் தோன்றா. ஒழிந்த காம முதலியனவும் அன்ன. இக்கருத்தேபற்றிப் பிற் காலத்து நாடகநூல் செய்த ஆசிரியரும், இருவகை நிலத்தி னியல்வது சுவையே (செயிற்றியம்) என்றாரென்பது. இனி, இருவகை நிலனென்பன 21உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதலன்றோவெனின், சுவையென்பது 22ஒப்பி னானாய பெயராகலான், வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப் பறிவினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடிவரு கின்றானொருவனை மற்றொருவன் கண்டவழி இவன் வள்ளெயிற் றரிமா முதலாயின கண்டு அஞ்சினானென்றறிவ தல்லது, வள்ளெயிற் றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவ தன்று; தான் கண்டானாயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி, அச்சம்பிறவாதாகலான் 23உய்ப் போன் செய்தது 24காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின், 25இருவகை நிலமெனப்படுமென, சுவைப் பொருளுஞ் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொருளாதல் வேண்டுமென்பது. குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ளநிகழ்ச்சிபோல, அஞ்சுதக்கன கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ளநிகழ்ச்சி. விறலென்பன, அவ்வுள்ளநிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின் றார்க்குத் தலை நடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்க முதலாயின. இவ்வகையால் இந்நான்கினையும் எட்டோடும் உறழவே முப்பத்திரண்டாயின. இனி, அவை பதினாறாயினவாறென்னையெனின், -வேம்பு முதலாயின பொருளும் அதனோடு நா முதலாயின பொறியும் வேறு வேறு நின்றவழிச் சுவை பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவை பிறத்தலானும், 26அவை பதினாறும் எட்டெனப்படும்; இனிக் குறிப்புஞ் சத்துவ மென்பனவும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடு மென்பராகலின் அவ்வுள்ளநிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவ மாகலின் அவை பதினாறும் எட்டாயடங்குமாகலின், 27அவை ஈரெட்டுப் பதினாறாகுமென்பது. மற்றிவை பண்ணைத் தோன்றுவனவாயின், 28இது பொருளோத்தினுள் ஆராய்வ தென்னை? 29நாடக வழக்கத்தானே, ஒருவன் செய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக்கொண்டு பின்னர்ச் செய்கின்றதாகலானும், வழக்கெனப் படாதாகலானும், ஈண்டு ஆராய்வது பிறிதெடுத்துரைத்தல் என்னுங் குற்றமாமென்பது கடா. அதுவன்றே, 30இச்சூத்திரம் 31பிறன்கோட் கூறல் என்னும் உத்திவகையாற் கூறி அதுதானே மரபாயிற்றென்பது. (1) (பதினாறாயடங்கியவை எட்டாயுமடங்குமெனல்) 250. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. இது, மெய்ப்பாட்டின் அடக்கங் கூறுகின்றது. (இ-ள்.) முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலே யன்றி எட்டாதலும் உண்டு என்றவாறு. அவை: வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை நடுவுநிலை யென்பன. இவற்றின் விகாரமாகிய சத்துவங்க ளெட் டனையும் இவற்றுளடக்கி எட்டாக்கிக் கூறியவாறிதுவென்பது. நாலிரண்டாதலு முண்டென்னாது பாலென்றதனான் எட்டா தலேயன்றி அவை ஒன்பதாதற்குப் பகுதியுமுடையவென்பது; என்னை? உருத்திரந் தன்னோ டொன்ப தாகும் என்பவாகலின். 32உம்மை, இறந்தது தழீஇயிற்றாதலான் இவை யும் பண்ணைத்தோன்றிய எண்ணான்கெனப்பட்டனவற்றுப் பகுதியென இதுவும் பிறன்கோட் கூறியவாறாயிற்று. மற்றிவற்றது பயனென்னையெனின், பொருளதிகாரத்துக் கூறுகின்ற வழக்கியலே 33அவையுமென்பது 34கூறி, அச்சுவைக்கு ஏதுவாய பொருளினை அரங்கினுள்நிறீஇ, அதுகண்டு குறிப்புஞ் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங் கிற்றந்து, பின்னர் 35அவையரங்கினோர் அவன்செய்கின்ற மெய்ப்பாட்டி னை உணர்வாராக வருகின்ற முறைமையெல்லாம் நாடகவழக் கிற்கே உரிய பகுதியெனவும், அப்பகுதி யெல்லாம் ஈண்டுணர்த்தல் வேண்டுவதன்றெனவுங் கூறியவாறு. இங்ஙனம் அடங்கு மென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுப வோவெனின், சொல்லுபவாகலினன்றே 36அதன்வழி நூல் செய்த ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாக வடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென மூன்றாக்கி வேறுவேறு இலக்கணங் 37கூறி அவற்றை, எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப என்றோதினாராயிற்றென்பது. (2) (எண்வகை மெய்ப்பாடு இவை எனல்) 251. நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப. இது, 38பிறர்வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் 39இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப. அழுகையென்பது அவலம்; அஃது இருவகைப்படும்; 40தானே அவலித்தலும், பிறாவவலங்கண்டு அவலித்தலுமென; இவற்றுள் ஒன்று கருணையெனவும் ஒன்று அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலுமுடைய வென்பது. இளிவர லென்பது இழிபு. மருட்கையென்பது வியப்பு; அற்புதமெனினும் அமையும். அச்சமென்பது பயம். பெருமிதமென்பது வீரம். வெகுளியென்பது உருத்திரம். உவகையென்பது காம முதலிய மகிழ்ச்சி. இவை அவ்வெட்டு மாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும் வழங்கினும் அமையும். 41மற்று நகையை முன்வைத்ததென்னையெனின், பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருட்கும் (249) இவை 42என்னும் இயைபில்லனவல்ல என்றற்கு/ விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரல் அதன்பின் வைத்தான்; அழுகையும் இளிவரலோடு இயைபுடை மையின். தானிளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின்பின் வியப்பை வைத்தான். வியப்புப்பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின் வைத்தான். அவ்வீரத்தின் பயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன் பின்னே வைத்தான். வெகுளிக்கு மறுதலையாகலானும் எல்லா வற்றினும் 43ஈண்டு ஓதுதற்குச் சிறந்ததாகலானும் முதற்க ணோதிய நகைக்கு இயைபுடைத்தாகலானும் உவகையை அவ்வீற்றுக்கண் வைத்தா னென்பது. இவ்வெட்டனுள் முதனின்ற நான்கும் முற்கூறுதற்கும் இறுதிநின்ற நான்கும் பிற்கூறுதற்கும் காரணம் வருகின்ற சூத்திரங்களானும் பெறுதும். மற்றிவ் வெட்டனோடுஞ் சமநிலை கூட்டி ஒன்ப தென்னாமோ நாடகநூலிற்போலவெனின், அதற்கு ஓர் விகார மின்மையின் ஈண்டுக்கூறியதிலனென்பது; 44அதற்கு விகார முண்டெனின் முன்னையெட்டனுள்ளுஞ் சார்த்திக்கொள்ளப் படும். அல்லதூஉம், அஃது 45உலகியல் நீங்கினார் பெற்றி யாகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லியதிலனென்பது. ஒழிந்த எட்டும் 46உலகிய லாகலிற் கூறினான், வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (பாயிரம்) என்று புகுந்தமையி னென்பது. அவை எட்டுமாமாறு இனிக் 47கூறுதும். (3) (பொருள்பற்றி நகைச்சுவை இத்துணைய எனல்) 252. எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. இது, நிறுத்தமுறையானே நகைக்குறிப்பு நான்கென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனுமெனக் கருதப்பட்ட நகை நான்கு என்றவாறு. 48இவை நான்கும் பொருளாகிச் 49சத்துவமுங், குறிப்பும், சுவையும் என்னும் மூன்றற்கும் முதற்கண்ணவாகலான் மூன் றனையும் 50அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறுகின்ற வாறு இதுவென்பது. இவை நான்கும் ஒன்றிரண்டாகி எட் டாதலும் உடைய. எள்ளலென்பது, தான் பிறரை எள்ளி நகுதலும், பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலுமென இரண்டாம். இளமை யென்பது தான் இளமையாற் பிறரை நகுதலும், பிறரிளமை கண்டு தான் நகுதலுமென இரண்டு. 51பேதைமையென்பது, அறிவின்மை. மடமையென்பது பெரும்பான்மையுங் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. இவையுந் தன் பேதைமையா னகுதலும், பிறன் பேதைமையா னகுதலும், தன் மடமையான் நகுதலும், பிறன்மடமையான் நகுதலுமென இவ்விரண்டாம். எள்ளலென்பது இகழ்ச்சி. 52எள்ளி நகினும் வரூஉம் (கலி. 61) என்பது, தன்கண் நிகழ்ந்த எள்ளல்பொருளாக நகை பிறந்தது. 53நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே (அகம். 248) என்பது பிறரெள்ளியது பொருளாகத் தன்கண் நகைபிறந்தது; என்னை? தன்மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்க வாறு. இது வெகுளிப் பொருளாக நக்கதன்றோவெனின், அது வீரர்க்கே உரித்தாகல் வேண்டும்; இவள் அவளை வெகுண்டு தண்டஞ்செய்வாளல்லள், அதற்கே உவப்பினல்லதென்பது. அல்லதூஉம், 54நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறம். 72) என்றாற்போல வீரத்தெழுந்த வெகுளிநகையும் எள்ளல்நகை யென்றே அடக்கவேண்டும் ஈண்டென்பது. 55நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே. (கலி. 13) என்புழித் தன் இளமை பொருளாக நகை பிறந்தது. திறனல்ல யாங்கழற யாரை 56நகுமிம் மகனல்லான் பெற்ற மகன். (கலி. 86) என்பதுமது. அங்ஙனம் மகன் சிரித்தவழித் தாய்க்கு நகை தோன்றிற் றேல் அது பிறரிளமை பொருளாக நகை தோன்றிற்றாம். 57நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் (அகம். 16) என்பது பிறரிளமை பொருளாக நகைபிறந்தது. நகைநீ கேளாய் தோழி (அகம். 248) என்பது, 58தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது; என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின். நகையா கின்றே தோழி. . . . . . . . . . . . . . . . . மம்மர் நெஞ்சினன் 59றொழுதுநின் றதுவே (அகம். 56) என்பது பிறன் பேதைமை பொருளாக நக்கது. 60நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே (குறுந். 168) என்பது/ தன்மடத்தான் நகை தோன்றிற்று; என்னை? நீயிர் கூறியதனையே மெய்யெனக்கொண்டு மகிழ்ந்து நக்கனமென் றமையின். 61குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும் (குறள். 1095) என்பதும் அது, நாநகை யுடைய நெஞ்சே நம்மொடு 62தான்வரு மென்ப தடமென் றோளி. (அகம். 121) எனப் 63பிறர்மடம் பொருளாக நகை தோன்றிற்று, பிறவும் அன்ன. இவ்வோதப்பட்டவற்றுக்கெல்லாம் உவகை உரித்து. உள் ளப் பட்ட நகை நான்கு என்றதனான் உள்ளத்தொடு பிறவாத நகையுமுள; அவை/ வறிதகத் தெழுந்த 64வாயல் முறுவலள் (அகம். 5) என்றாற்போல வருவனவெனக் கொள்க. (4) (அழுகைச்சுவை இத்துணைய எனல்) 253. இளிவே யிழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே. இது, முறையானே அழுகையென்னுஞ் சுவையினைப் பொருள்பற்றி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இளிவும், இழத்தலும் அசைதலும் வறுமையு மென இந்நான்கு பொருள்பற்றித் தோன்றும் அவலம் என்ற வாறு. இளிவென்பது, பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன் பம் பயக்கும் 65நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசை வென்பது, 66பண்டை நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்துதல். வறுமையென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள் ளம். இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றி னும் அவலமாமென்பது; எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை - கேடில் கொள்கை. அங்ஙனங் கூறிய மிகை யானே அழுகைக் கண்ணீர்போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு; அதனையும் அழுகைப்பாற் சார்த்தி உணரப்படும். எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென வுருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலுநிற் காணிய சென்மே. (அகம். 176) என்பது, பரத்தையை நீ யெள்ளினையென்று அழுதுவருகின்றா ளென்று தலைமகற்குச் சொல்லியதாகலின் இது 67தன்கட் டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. கயமல ருண் கண்ணாய் காணா யொருவன் (கலி. 37) என்னும் பாட்டினுள், தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் எனத் தலைமகன் இளிவந் தொழுகுவது காரணமாக, சேயேன்மன் யானுந் துயருழப்பேன் என்றமையின் இது 68பிறன்கட்டோன்றிய இளிவரல் பொரு ளாக அவலச் சுவை பிறந்தது. இது கருணையெனவும்படும். மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே. (புறம். 249) என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத்தற்கு மெழுகுகின்றாளை, கண்ணீரே நீராக மெழுகு கின்றாளென்றமையின் இது 69தன்கட்டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச் சுவையாயிற்று, 70ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே. (புறம். 255) என்பதும் அது. பின்னொடு முடித்த மண்ணா முச்சி என்னும் பாட்டினுள், அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்னோய்த் தலையையு மல்லை தெறுவர வென்னா குவள்கொ லளிய டானென வென்னழி பிரங்கும் நின்னொ டியானும் (அகம். 73) என்றவழி, தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாளெனச் சொல்லினமையின், அது பிறன்கட்டோன்றிய 71இழவுபற்றி அவலம் பிறந்ததாம். துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் 72னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சேன். (கலி. 139) எனத் தன்கட்டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே (புறம். 252) என்பது, 73பிறன்கட்டோன்றிய அசைவுபற்றிய அவலம்; என்னை? `அள்ளிலைத்தாளி கொய்யாநின்றான் இதுபொழுது' என அவலித்துச் சொல்லினமையின். 74இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றுழூஉந்தன் மகத்துமுக னோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண (புறம். 164) என்புழி, முலைப்பசை காணாது அழுகின்றது குழவியென்பது, 75தன்கட்டோன்றிய வறுமைபற்றி அவலம் பிறந்தது. மகமுக னோக்கி அழுகின்றாள் என் மனைவியென்பது பிறன்கட் டோன்றிய வறுமையவலம். இன்ன விறலு முளகொ னமக்கென மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை (புறம். 19) என்புழி மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதாராயிற் கூற்றுக் 76கண்ணோடாதாகலின் அவர் உவந்தனரென்பது பெற்றாம்; அதனானே 77அஃது உவகைக்கலுழ்ச்சியாமென்பது. (5) (இளிவரற்சுவை இத்துணைய எனல்) 254. மூப்பே பிணியே வருத்த மென்மையோ டியாப்புற வந்த விளிவர னான்கே. இது, மூன்றாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற 78இளிவரல் கூறுகின்றது. ï-Ÿ.: மூப்பும் பிணியும் வருத்தமும் 79மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல் என்றவாறு. வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். யாப்புற வந்த என்பது திட்பமுறவந்த என்றவாறு; அங்ஙனங் கூறிய மிகையானே, வீரமுதலாயினபற்றியும் இளிவரல் பிறக்கும் என்ற வாறு. இவையும் முன்னையபோலத் தன்கட்டோன் றுவனவும் பிறன்கட்டோன்றுவனவும் பற்றி எட்டாதலுடைய வென்பது கொள்க. 80தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் 81றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறம். 243) என்பது தன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது, என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்ய மாட் டாது இளிவந்தனம் இக்காலத்து என்றமையின். மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் 82முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல. (அகம். 6) என்பதும் அது. மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோ டியானே போர்த்தொழி றொடங்க நாணுவ லதனான். என்பது, பிறன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது. இமயமுந் துளக்கும் பண்பினை 83துணையில ரளியர் பெண்டிரிஃ தெவனோ. (குறுந். 158) என்பது தன்கட்டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது; என்னை? மலையைத் துளக்கும் ஆற்றலையுடையாய் காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவது அன்றென இளிவந்து வாடைக்குக் கூறினமையின். குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. (குறுந். 128) என்பது, நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் 84பிறன்கட் டோன்றிய பிணியெனப்படும். இதனுள், சேய ளரியோட் 85படர்தி என்றமையின் இது பிறன்கட்டோன்றிய வருத்தமும் வந்த தாயிற்று. 86யான்ற னறிவ றானறி யலளே (குறுந். 337) என்பது, தன்கட்டோன்றிய வருத்தம்பற்றி வந்த இளிவரல்; என்னை? அது பின்னின்ற தலைமகன் கூறியதாகலின். ஒன் றிரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லும் (கலி. 47) என்பது பிறன்கட்டோன்றிய 87வருத்தம்பற்றி வந்தது; என்னை? அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரலாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறை நயப்பித்தமையின். வலியரென 88வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன். (புறம். 239) எனத் தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றிய மென்மைபற்றி இளிவரல் பிறந்தது; என்னை? மெலியார் இளிவந்தன கூறுவ ராயினும் வலியார் மீக்கூறுவராயினும் இவன் அவை செய்யா னென்றலின். 89ஒருகை யுடைய தெறிவலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன். என்பது வீரம்பற்றிய இளிவரல் பிறந்தது; 90இது/ தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றாமையின் இலேசினாற் கொண்டா மென்பது. (6) (மருட்கைசுவை இத்துணையது எனல்) 255. புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. இது, வியப்புணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: புதிதாகக் கண்டனவும், கழியப் பெரியனவாயின வும், இறப்பச் சிறியனவும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும் பற்றி வியப்புத்தோன்றும் என்றவாறு. மதிமை சாலா மருட்கை என்பது, அறிவினை உலக வழக் கினுள் நின்றவாறு நில்லாமற் றிரித்து வேறுபடுத்து வருவ தென்றவாறு, இவையுமெல்லாம் மேலனபோலத் தன்கட் டோன்றினவும் பிறன்கட்டோன்றினவுமென எட்டாதலுடைய. மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோரியா னாகுவ தெவன்கொ 91னீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம். 82) என்பது தன்கட்டோன்றிய புதுமைபற்றி வியப்புப் பிறந்தது; என்னை? தன் கருத்து வெளிப்படாது தன்மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள்போலத் தோழிக்கு அறத்தொடு நின்றமையின். மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன். (அகம். 82) என்றவழிப் பண்டு ஒருகாலுங் கண்டறியாதபடி ஆடிற்று மயி லென்றமையிற் பிறபொருட்கட்டோன்றிய புதுமையாயிற்று. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந். 3) என்பது பெருமை பற்றிய வியப்பு; என்னை? கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை முறையாற் பெருகற்பாலதாகிய நட்பு மற்றவனைக் கண்ணுற்ற ஞான்றே நிலத்தின தகலம் போலவும், விசும்பி னோக்கம் போலவுங், கடலி னாழம்போலவும் ஒருகாலே பெருகிற் றென்றமையின்; இது தன்கட்டோன்றிய 92பெருமை வியப்பு; இது தலைமகன் கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறன் கட்டோன்றிய பெருமை வியப்பாமென்பது கொள்க. மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன் கொம்மை வரிமுலை யேந்தினு - மம்ம கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதை 93யீடையிற் சிறியதொன் றில் என்பது, பிறன்கட்டோன்றிய சிறுமை வியப்பு. தன்கட்டோன் றிய சிறுமை வந்துழிக் காண்க. எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும. (புறம். 5) என்பது நரிவெரூஉத்தலையார் தம்முடம்புபெற்று வியந்து கூறிய பாட்டாகலின், 94இது தன்கட்டோன்றிய ஆக்கம்பற்றி வியப்புப் பிறந்ததாயிற்று. உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங்கு. (நாலடி. 28) என்பது 95பிறபொரு ளாக்கம்பற்றிய வியப்பு. இனி, மதிமை சாலா மருட்கையானே சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தலும், பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தலும் வியப்பாமெனக் கொள்க. 96கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு. (புறம். 7) என்னும் பாட்டுச் சிறியோர் பெருந்தொழிலைச் செய்தது. அன்னா னொருவன்றன் னாண்டகைவீட் 97டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய். (கலி. 47) என்பது, பெரியோன் சிறு தொழில் கூறலின் வியப்பாயிற்று. புதுமையை ஆக்கத்துளடக்கி முதுமையென்பது பாட மாகவும் உரைப்ப; அன்னதோர் வழக்கின்மையானும் புதுமை 98ஒன்று ஒன்றாய்த் திரியுமெனப்பட்டு அவ்வாக்கத்துள் அடங் காமையானும் அஃதமையாதென்பது. இங்ஙனம் இவை நான்கு சூத்திரப்பொருளும், நானான்கு பதினாறாகியும் முப்பத்திரண்டாகியும் விரியுமாகலின் இவற்றை ஓரினமாக்கி முதற் சூத்திரத்து முன் வைத்தானென்பது. இனிவருஞ் சூத்திரநான்கினும் எண்ணப்படும் பொருள், ஒன்று இரண்டாகாமையின் அவை பதினாறேயாமென்பது; அஃதேயெனின், இத்துணையுங் கூறிவந்த முப்பத்திரண்டனை யும் இனிக் கூறும் பதினாறனையும் நோக்கி முதற் சூத்திரத்துள், பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப. (தொல். மெய்ப். 1) என்றானென்னாமோவெனின், என்னாமன்றே; பதினாறு பொருளும் மேற்கூறிய முப்பத்திரண்டு99மென்று படாமையி னென்பது. என்றார்க்குத் தன்கட்டோன்றுதல் பிறன்கட்டோன் றுதலெனப் பகுத்துப் பொருளுரையாது, 100மேலனவும் இனி வருகின்றனவும் நானான்கேயாகலாற் பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருள் (249) என்றானாமெனின்/ அங்ஙனங் கூறின் அவை கண்ணிய புறனே நானான் கென்ப (249) என்றும், நாலிரண் டாகும் பாலுமா ருண்டே (பொ. 250) என்றும் மடங்கக் கூறல் வேண்டாவாம்; வேண்டவே, இச்சூத்திரம் எட்டுவகை யாகியேசெல்லுமெனமறுக்க. அல்லதூஉம் இஃதுஉலகவழக்காதலிற் பண்ணைத் தோன்றிய பொருள் ஈண்டு ஆராயானென்பது. அன்றியும் இவற்றைப் பண்ணைத் தோன்றிய பொருளெனின் 101ஒன்றொன்றாக்கிக் கூறாது கூத்தன் அரங்கினுள் இயற்றும் வகையானே சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென வேறு வேறு செய்வான் ஆசிரிய னென்பது. (7) (அச்சச்சுவை இத்துணையது எனல்) 256. அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப் பிணங்கல் சாலா வச்ச நான்கே. இது, முறையானே அச்சமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தெய்வமும் விலங்குங் கள்வரும் தமக்கு இறைவ ராயினாருமென நான்கு பகுதியான் அச்சம் பிறக்கும் என்றவாறு. அணங்கென்பன: பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய 102பதினெண் கணனும் 103நிரயப்பாலரும், பிறரும் 104அணங்குதற் றொழிலராகிய சவந்தின்பெண்டிர் முதலாயினாரும், 105உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன: அரிமா முதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார்: தீத்தொழில் புரிவார். இறையெனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரச ரும் முதலாயினார். பிணங்கல் சாலா அச்சம் என்றதனான், முன்னைய போல இவை தன்கட்டோன்றலும் பிறன்கட் டோன்றலுமென்னுந் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வருமென்பது. உதாரணம். யானை தாக்கினு மரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் 106சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை. (பெரும்பா. 134 - 6) என்பதனுள் அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று. ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை 107வெரூஉதுங் காணுங் கடை. (கலி. 87) இது கள்வர் பொருளாக அச்சம் பிறந்தது; என்னை? அவனைக் கள்வர்பாற் சார்த்தியுரைத்தமையின். 108எருத்துமே னோக்குறின் வாழலே மென்னுங் கருத்திற்கை கூப்பிப் பழகி - யெருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறியா வேந்து. (இ - வி - ப - 124) இஃது, 109இறைபொருளாக அச்சம் பிறந்தது. பிணங்காத அச்சமென்னாது சாலா அச்சம் என்ற மிகை யான், இந் நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க. சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் 110ணை கடக்கிற்பா ரியார். (கலி. 81) என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது, அணிகிளர் சாத்தி னம்பட் டிமைப்பக் கொடுங்குழை மகளிரி 111னொடுங்கிய விருக்கை. (அகம். 236) எனவும், அச்சா றாக வுணரிய வருபவன் 112பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல். (கலி. 75) என வருவனவும் அவை. பிறவும் அன்ன. (8) (பெருமிதச்சுவை இத்துணையது எனல்) 257. கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே இஃது ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கல்வியும் 113தறுகண்மையும் புகழுங் கொடையு மென்னும் நான்கும்பற்றி வீரம் பிறக்கும் என்றவாறு. இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணி னான்; என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லை யாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற்கென்பது. கல்வியென்பது, தவமுதலாகிய விச்சை. தறுகணென்பது, அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமையென்பது இன்பமும் பொருளும் இறப்பப்பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல். உதாரணம். 114வல்லார்முற் சொல்வல்லே ளென்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டி யவள். (கலி. 141) என்பது கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கல் லாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின். 115அடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன் மன்றம் படர்வித் தவள். (கலி. 141) என்பது தறுகண். கழியாக் காதல ராயினுஞ் சான்றோர் 116பழியொடு வரூஉ மின்பம் வெஃகார். (அகம். 112) என்பது புகழ். வையம், புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள், (கலி. 141) என்பது கொடை.. தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் 117சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக. (புறம். 43) என்பதுமது. சொல்லப்பட்ட பெருமிதம் என்றதனாற் காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க. பல்லிருங் கூந்தன் மகளிர் பல்லிருங் கூந்தன் மகளி ரொல்லா 118முயக்கிடைக் குழைகவென் றாரே. (புறம். 73) என்பது, காமம்பற்றிய பெருமிதம். பிறவும் வருவன உளவேற் கொள்க. இது தன்கட்டோன்றிய பொருள்பற்றி வரும். என்னை? கல்வியும் தறுகண்மையும் 119இசைமையும் வேட்கையுங் கொடைத் தொழிலுந் தன்கண்ணவாகலின். (9) (வெகுளிச்சுவை இத்துணையது எனல்) 258. உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. இஃது, ஏழாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வெகுளி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உறுப்பறையென்பது, கை குறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்; அலையென்பது, கோல்கொண்டலைத்தன் முதலாயின; கொலையென்பது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்; இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும் என்றவாறு. வெறுப்பின் என்றதனான் ஊடற்கண் தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க. 120முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று. (கலி. 52) என்பது, உறுப்பறையான் வந்த வெகுளி. நின்மகன், படையழிந்து மாறின னென்றுபலர் கூற, மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇ. (புறம். 278) என்பது, குடிகோள்பற்றி வந்த வெகுளி; என்னை? தன்மகன் மறக் குடிக்குக் கேடு சூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின். 121நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி யகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன். (புறம். 300) என்பதும் அது, 122வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே. (புறம். 100) என்பதனுள், அலைபற்றிச் சினம் பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப் புண்டலை நினைந்து சினங்கொள்ளா நின்ற தென்றமையின். உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை. (புறம். 72) என்பது, கொலைபொருளாக வெகுளிச்சுவை பிறந்தது; என்னை? சிறு சொற் சொல்லுதலென்பது புகழ்கொன்றுரைத் தலாகலின். செய்தவ றில்வழி யாங்குச் 123சினவுவாய் (கலி. 87) என்பது, ஊடற்கண் 124தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவு மன்ன. இன்னும் அவ்விலேசானே, நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை. (புறம். 125) என்றாற்போலச் சினமில்லதனை உள்ளதுபோலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படா வென்பது. 125ïJ ãw‹f£ nlh‹¿a bghUŸg‰¿ tU«.(10) (உவகைச்சுவை இத்துணையது எனல்) 259. செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்ல னீத்த வுவகை நான்கே. இஃது, ஈற்றுக்கண்ணின்ற 126உவகை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செல்வமென்பது, நுகர்ச்சி; புலனென்பது கல்விப் பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது காமப்புணர்ச்சி முத லாயின; விளையாட்டென்பது யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதன் (191) முதலாயின. இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் என்றவாறு. உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும். உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய வளமையா னாகும் பொருளிது வென்பாய். (கலி. 12) என்புழி, வளமையா னாகும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறின மையின், இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம். நன்கலம் பெற்ற வுவகையர். என்பதும் அது. பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற் 127றாதுண்ணும் வண்டிற் றுறப்பான் மலை. (கலி. 40) என்பது, அறிவு பொருளாக உவகை பிறந்தது; என்னை? முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப் பதம் பார்க்கும் அறிவுடைமை காமத்திற்கு ஏதுவாமாகலின். 128இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பாம். - அகல்வானத் தும்ப ருறைவார் பதி (நாலடி. 137) என்பதும் அது. இலமல ரன்ன வஞ்செந் நாவின். என்னும் மணிமிடை பவளத்துள், தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பிற் றீவிய மொழிந்தே (அகம். 142) என்பது, புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? அவள் இவ்வாறு முயங்கினமையான், உவவினி வாழியென் னெஞ்சே. (அகம். 142) என்றமையின், துயிலின்றி யானீந்தத் தொழுநையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ. (கலி.30) என்புழி, ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறைந் தமைகுவான்மன் என்றமையின் இது விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது. அல்லல் நீத்த வுவகை என்றதனாற் பிறர் துன்பங் கண்டு வரும் உவகையும் உவகை யெனப்படாதென்பது. இதுவுந் தன்கட்டோன்றிய பொருள் பற்றி வரும் என்றார்க்குப் பிறன்கட்டோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்குமன்றே! அஃதெப்பாற்படுமெனின், அதுவும் அல்லல் நீத்த வுவகை என்றதனான் உவகையெனப்படும். இனித் தன்கட்டோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது பிறன்கட்டோன்றிய அச்சம் முற்கூறி, இதனை ஈற்றுக்கண் வைத்தமையான், 129எடுத்தோதிய நான்கும்போலாது இது பிறன்கட்டோன்றிய இன்பம் 130பொருளாக வருமென்பது கொள்க. (11) (மேற்கூறியவன்றி இவையு மெய்ப்பாடு முப்பத்திரண்டு உள எனல்) 260. ஆங்கவை யொருபா லாக வொருபா லுடைமை யின்புற னடுவுநிலை யருள றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅக் கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த னாணுத றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ முனித னினைதல் வெரூஉதன் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ விவையு முளவே யவையலங் கடையே. இச்சூத்திரம் முற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப் பத்திரண்டும் அவைபோல மெய்ப்பாடெனப்படுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஆங்கவை ஒருபாலாக -எள்ளன் (252) முதலாக, விளையாட் (259) டிறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத் திரண்டும் ஒருகூறாக; ஒருபாலென்பது, இனிச் சொல்லுகின்ற ஒரு கூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி இவையு முளவே யவையலங் கடையே (260) என்றான். ஈண் டெண்ணப்பட்டவையே ஆண்டு அடங்குவனவும் உள. அப் பொருண்மைய வல்லாதவிடத்து, இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் என்றவாறு. இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனா லெனின், ஆங்கவை யொருபாலாக வொருபால் என்றானாக லின் இருகூறெனப்படுவன 131தம்மினொத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை முப்பத்திரண்டெனவே இவையும் முப்பத்திரண்டு என்பது 132எண்ணி உணரவைத்தானென்பது. உடைமையென்பது, செல்வம்; செல்வம் நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்! இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந் தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது 133நிதிமேனின்ற மனம் போலச் செல்வமுடைமையான் வரும் மெய் வேறுபாடு. 134இன்புற லென்பது, அவ்வுடைமையை நினையுந்தோறும் 135இடை யிட்டுப் பிறக்கும் மனமகிழ்ச்சி. நடுவுநிலையென்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது, 136செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந் தோடா நிலைமை. அது, காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறுவரவிற்றாகலான் 137இவற்றொடு கூறினான். அருளலென்பது, மக்கண் முதலிய சுற்றத்தாரை அருளுதல்; அஃது, அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும். (கலி. 11) என்றாற்போல வருவது. ஆண்டைக் கருணையினை அழுகை யென்றமையின் இஃது அதனோ டடங்காது. தன்மையென்பது, சாதித் தன்மை; அவையாவன: பார்ப்பாராயிற் 138குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் 139எடுத்த கழுத்தொடும். அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடைய ராயிற் 140கோற்கையுங் 141கொடுமடியுடையும் விளித்த 142வீளை யும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க. அடக்கமென்பது, உயர்ந்தோர்முன் அடங்கி யொழுகும் ஒழுக்கம்; அவை: பணிந்த மொழியுந் தணிந்த நடையுந் 143தானை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின. வரைதலென்பது, காப்பன காத்துக் கடிவன கடிந் தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயின், முத்தீ வேட்டலும் புலவுங் கள்ளும் முதலாயின கடிதலுமென் றின்னோரன்ன கொள்க. வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது. அன்பென்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழு நேயம். அஃதுடையார்க்குப் பிறர்கட் டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தி னிகழ்ச்சியை வெளிப்படுப்பன வாகலின் மெய்ப்பாடெனப் பட்டன. இனி வருகின்றனவற்றிற்கும் இஃதொக்கும். கைம்மிக லென்பது, ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல். நலிதலென்பது, பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினை மாக்கட்கண் நிகழும். அவரைக்கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்திள் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது. 144சூழ்ச்சியென்பது சுழற்சி; சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவ தோர் குறிப்பின் அவன்கட் டோன்றலின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம். 145வாழ்த்தலென்பது, பிறரால் வாழ்த்தப் படுதல்; இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும், அவன் வாழ்விக்கப்படுத லின் அவன் அவ்வாறுகூறல் அமையுமென்பது. நாணுத லென்பது, நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி. துஞ்சலென்பது, உறக்கம்; அது நடந்துவருகின்றான் கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப் பட்டது. அரற்றென்பது, அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன் குறை கூறுதல்; அது 146காடுகெழு செல்விக்குப் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன. கனவென்பது, வாய் வெருவுதல். அதனானும் அவனுள்ளத்துக் நிகழ்கின்ற தொன்று உண்டென்று அறியப்படும். முனிதலென்பது, வெறுத் தல்; அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல்; வாழ்க்கை முனிந்தான் எனவும், 147 உறையுண் முனியுமவன் செல்லு மூரே. (புறம். 96) எனவுஞ் சொல்லுபவாகலின். நினைதலென்பது விருப்புற்று நினைத்தல்; நின்னை மிகவும் நினைத்தேன் என்பது வழக் காதலின்; அந் நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பா டாயிற்று. வெரூஉதலென்பது விலங்கும் புள்ளும்போல வெருவி நிகழும் உள்ளநிகழ்ச்சி; அஃது, அஞ்சவேண்டாதன கண்ட வழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி. மடிமையென்பது, சோம்பு. கருதலென்பது, மறந்ததனை நினைத்தல். ஆராய்ச்சி யென்பது, ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல். விரை வென்பது, இயற்கை வகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ளநிகழுங் கருத்து. உயிர்ப்பென்பது, வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றா னென்பது. கையாறென்பது, அவ்வுயிர்ப்புமின்றி வினை யொழிந்தயர்தல். இடுக்கணென்பது, மலர்ந்த நோக்கமின்றி 148மைய னோக்கம்படவரும் இரக்கம். பொச்சாப்பென்பது, அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட் கண் யாதானும் ஓர் 149இகழ்ச்சியான் இடையறவுபடுதல். பொறாமையென்பது, அழுக்காறு; அஃதாவது, பிறர் செல்வங் கண்டவழி வேண்டா திருத்தல். வியர்த்தலென்பது. பொறாமை முதலாயினபற்றி மனம் புழுங்குதல். ஐயமென்பது, ஒரு பொருண்மேல் இரு 150பொருட்டன்மை கருதிவரும் மனத் தடுமாற்றம். மிகையென்பது, கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதி. நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளநடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங் கொலென்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம். அச்ச மென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன்வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்கமா மென்பது. இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப் பாடெனக்கொள்க. இவையெல்லாம் உலகவழக்காகலான் இவ் வழக்கேபற்றி நாடக வழக்குள்ளுங் கடியப்படா வென்றவாறு. மற்றிவற்றை எண்ணிய மாத்திரை யல்லது இலக்கணங் கூறுகின்றிலனாலெனின், 151சொல்லின் முடியும் இலக்கணத்த வாகலின் சொல்லானாயினா னென்பது. உதாரணம் இக் கூறியவாற்றான் வழக்குநோக்கியுஞ் செய்யுணோக்கியுங் கண்டுணரப்படும். (12) (ஒரு தலைவனும் ஒரு தலைவியும் எதிர்ப்பட்டவழி அவ்திர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் நிகழும் முப்பகுதி மெய்ப்பாடுகளுள் முதற்பகுதி இத்துணையது எனல்) 261. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்த னகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே யொன்றென மொழிப. இதன்மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி வரும் மெய்ப்பாடு கூறினான்; இனி அகத்திணை யுட் பெரும்பான்மையாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி, அவற்றுள்ளுங் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப் பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பாடெனவும், புணர்ச்சிப்பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் மூன்று பகுதியவாம் அவையெனவும், அவையாறும் ஒரோ வொன்று நந்நான்கு பகுதியான் ஒன்றன் பினொன்று பிறக்கு மெனவுங் கூறுகின்றான். அவற்றுண் முதலன மூன்றினும் முன்னர்நின்ற ஒரு கூற்றினை இந்நாற் பகுதித்தென்கின்றது இச்சூத்திரமென உணர்க. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள்கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது. இ-ள்: 152புகுமுகம் புரிதல் என்பது, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சியும்; புகுதலென்பது, தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான்சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக் கெதிர்நோக்குதலை முக நோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றா னென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம். மற்றிது தலைமகற்கு உரித்தன்றோவெனின், அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான்; அது தலைமையன்றா கலினென்பது; அது, 153யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். (குறள். 1094) என வரும், பொறிநுதல் வியர்த்தல் என்பது, தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்குவந்தடைதலின் வியர் பொறித்த நுதலளாதலும்;. அது, 154பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவிய றாறுவளி யாற்றச் சிறுவரை திறவென. (அகம். 186) என வரும். இம்மெய்ப்பாடுந் தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின். நகுநய மறைத்தல் என்பது, அதன்பின்னர்த் தலைமகன்கட் டோன்றிய குறிப்புக்களான் நகுதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்தவழியும், நகாது நிற்றலும்; அது, முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை 155நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு (குறள். 1274) என வரும். மடமையால் தோன்றிய நகையாகலான் இது மறைத் தலுந் 156தலைமகற்குரித்தன்று; எனவே, அவற்காயின் நகை தோன்றப்பெறுமென்பது; மற்று, சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் (குறுந். 169) என்னும் பாட்டினுள் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே என நகை 157கூறிற்றாலெனின், அங்ஙனம் மறைக்கப்பட்ட நகை தலைமகன் அறிந்தது மெய்ப்பாடாமாகலான் 158அவ்வாறு கூறினானென்பது. சிதைவுபிறர்க்கின்மை என்பது, அங்ஙனம் நகுநய மறைத்த வழியும், உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் என்றவாறு; அது, அகமலி யுவகைய ளாகி முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே. (அகம். 86) எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது. இதுவுந் தலை மகற் குரித்தன்று; 159தன்சிதைவுணர்த்தினல்லது மறைக்குந் துணைச் சிதைவின்மையின்; என்னை? பெருமையு முரனு மாடூஉ மேன (தொல். பொருள். 98) என்பவாகலின். இவை களவிற் சிறந்தனவாவதல்லது கற்பினுள் வருவன வல்ல என்றுணர்க. சிதைவு பிறர்க்கின்மை எனவே, சிதைவு தலைமக னுணருமென்றானாம். தகுமுறை நான்கு என்பது, இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்றுதற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த அந் நான்கும் என்றவாறு; ஒன்றென மொழிப- களவிற்கு முதற் கூறென்ப என்றவாறு. இனி, இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் வருமாறு: யான்றற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள் வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த நன்னுத லரிவை தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையா னெஞ்சே யானறிந் தேனது வாயா குதலே. இஃது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இதனுள், தான்பெரிது மகி ழாள் என்புழிச் சிறிது மகிழுமென்றமையான் இது புகுமுகம் புரிதலா யிற்று. வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி என் பது பொறிநுதல் வியர்த்தல். நகைமுகங் கரந்த என்பது நகுநய மறைத்தல். மிகை வெளிப்படாது என்புழி, மேல் அன்ன பிறவு மவற்றொடு சிவணி (267) என்னும் புறனடையாற் றழீஇயின 160நகை மொக்குளும் பெற்றாம். தன்மனம் சிதைந்ததை நீயறிந் திலையால் என்பது சிதைவு பிறர்க்கின்மை. ãwî« m‹d.(13) (இரண்டாம் பகுதி இத்துணையது எனல்) 262. கூழை விரித்தல் காதொன்று களைத லூழணி தைவர லுடைபெயர்த் துடுத்தலோ டூழி நான்கே யிரண்டென மொழிப. இஃது, இரண்டாம் பகுதி மெய்ப்பாடுணர்த்துதல் நுதலிற்று; என்னை? உள்ளத்துச் சிதைவறிந்த வழியன்றித் தலை மகளிடைத் தலைமகன் சென்று கையுங் காலும் மெய்யுறத் தீண்டிக் கண்ணுறானாகலின். அங்ஙனஞ் சிதைவு பிறந்தது எழுவாயாகப் பின்னர்த் தலைமகன் மெய்யுற்றவழி நிகழ்ந்த உள்ளநிகழ்ச்சியை இரண்டாவதென்றானென்பது. இ-ள்: கூழை விரித்தன் முதலாகிய நான்கும் முறையானே இரண்டாவதெனப்படும் என்றவாறு. இவற்றுக்குத் 161தலைமகன் ஏதுவாவதல்லது இவைதாம் அவற்கு நிகழாவென்பது. கூழைவிரித்தலென்பது, மெய்யு மெய்யுந் தீண்டியவழி மெல்லியன் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுண் முதற்கண்ண தெனப்படும்; என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறுபாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறையுடையளா தலாற் கரந் தொழுகுதற்பாலளே; அங்ஙனங் கரக்குங்கால் தன் வயத்த தாகிய உடம்புபற்றிவரும் வேறுபாட்டினைத் 162தாங்கும். அங்ஙனந் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையவாகி வேறுபட்ட தலைமயிரினது முடி, உள்ள நெகிழ்ச்சியானே தன்வயத்ததன்றி ஞெகிழும்; ஆகலின் இது முற்கூறப்பட்டது. 163பிறசுவைபற்றியும் உலகினுண் மயிர்க்குவந்த வேறுபாட்டி னைக் கூறுப; என்னை? ஒன்றன் மதுரச்சுவைக்கு அதிசயங் கூறுவார் மயிரினைச் 164செவ்வனின்றனவென்பது165போலக் கொள்க. அக்கூழை 166விரித்தற்கு ஏதுவாயினாள் இவளாகலின் அதனைச் சினைவினையானன்றி முதல்வினையாற் கூறினானென்பது. காதொன்று களைதலென்பது, உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது 167பெய்து வைத்தனவாதலால், தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாயின; 168மற்று 169அவை வீழ்தற்கு ஏதுவாய நெகிழ்ச்சி நிரம்பத்தோன்றாது இடைநிகர்த்ததாதலின் ஒன்று நிற்ப வொன்று வீழ்தலென்றா னென்பது. இது கூழைபோலாது, 170ஊறுணர்வுடைய உறுப்பாகலிற் காதின் வேறுபாட்டினைக் கூழை வேறுபாட்டின்பின் வைத்தான்; என்னை? கூழையிற் காது தனக்கு 171உறவுடைமையின். ஊழணிதைவரலென்பது, அக்172கூழையுந் 173தோடும் போலப் பெய்யப்படு முறைமையவாகிய வளைகளை முன்கை மேல் இறுகச் செறித்தலும் 174விரற் செறியினைத் திருத்தலும் முதலாயின. இவை தோடுபோலச் 175செறிவில்லன அன்மையின் அவற்றுப் பின்வைத்தான். உடைபெயர்த் துடுத்தலென்பது, உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல்; அது கழ றொடிபோலாது செறிவுடைமையின் அவ்வுடை நெகிழ்ச்சி யைத் தொடி நெகிழ்ச்சிக்குப்பின் வைத்தானென்பது. மற்று, தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே. (குறுந். 239) எனப் பிரிவின்கண் வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறாரோ வெனின், அவை இன்னதன்பின்னர் இன்னது தோன்று மென்னும் முறைமைய வல்லவாகலின் ஈண்டுக் கூறார்;. அவை, வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே (தொல். பொருள். 268) என்புழிச் சொல்லப்படுமென்பது. இவற்றிற்குச் செய்யுள்: விண்ணுயர் விறல்வரைக் 176கவாஅ னொருவன் கண்ணி னோக்கிய தல்லது தண்ணென வுரைத்தலு மில்லை மாதோ வவனே வரைப்பாற் கடவுளு மல்ல னதற்கே யோதி முந்துறக் காதொன்று ஞெகிழ நிழலவிர் மணிப்பூ ணெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே நீயறி குவையதன் முதலே யாதோ தோழியது கூறுமா றெமக்கே. (இ.வி.ப. 532) என்றது, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; இதனுள் ஓதி முந்துற ஞெகிழ என்பது கூழை விரித்தல்; காதொன்று ஞெகிழ என்பது காதொன்று களைதல்; நிழலவிர் மணிப்பூ, ணெஞ்சொடு கழல என்பது ஊழணி தைவரல்; நெடிது நிமிர்ந்தன துகிலும் பன்முறை என்பது உடை பெயர்த் துடுத்த லாயிற்று. இவை 177பாடாண்கைக்கிளையுள் இக் காலத்துப் பயின்றன. பிறவும் அன்ன. (14) மூன்றாம் பகுதி மெய்ப்பாடுகளாவன 263. அல்கு றைவர லணிந்தவை திருத்த லில்வலி யுறுத்த லிருகையு மெடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. இது, முறையானே மூன்றாவது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அல்குறைவரல் முதலாகக் கூறப்பட்டன நான்கும் மூன்றாவதெனப்படும் என்றவாறு. மேலது உடைபெயர்த் துடுத்தலாகலான் அதன்வழித் தோன்றுவது உடை பெரிதும் ஞெகிழ்ந்து காட்டுதலாயிற்று; 178அதனைப் பாதுகாத்தலான், அவ் 179வற்றம் மறைக்குங் கையினை `அல்குறைவரல்' என்றானென்பது. அணிந்தவை திருத்தலென்பது, 180கடிசூத்திரமுதலாயின திருத்தல்; அஃது உடை ஞெகிழ்ச்சிபோலப் போற்றிச் செய்வ தாகலான், அதனை அல்குறைவரலின்பின் வைத்தான். இல்வலியுறுத்தலென்பது, புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மை படைத்துக்கொண்டு செய்தல்; என்னை? இல்லாத வலியை மிகுத்தலென்றமையின் அப்பொருட்டா யிற்று. அல்குறைவரலும் அணிந்தவை திருத்தலுந் தன் வலியின்மை காட்டவும், வலி தோற்றிக்கொண்டு செய்வதாகலின் அதனை இல் வலியுறுத்தலென்று மூன்றா முறைமைக் கண் வைத்தானென்பது. இனி 181இற்பிறத்தலான் 182அதன் வலி தோற்றுவதெனவுஞ் சொல்லுப; அஃதாவது, 183முற்பிறந்த வற்றிற்கு முன்னே கூறினென்பது. இருகையு மெடுத்தலென்பது, அங்ஙனம் 184படைத்துக் கொண்ட வலியானுந் தடுக்கப்படாது நிறையழிதலிற் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன போல்வதோர் குறிப்பு. இந்நான்கும் மேலனவுமெனப் பன்னிரண்டுபகுதியும் புணர்ச் சிக்குமுன் நிகழ்வனவாம். 185சொல்லிய என்றதனான் இவையெல்லாஞ்சொல்லப் படுவதல்லது, ஈண்டுச் சொல் நிகழ்தல் வேண்டிலவென்பது. எண்ணு நிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழு வாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது. இவை நான்குந் தலைமகற்குரியவல்ல; தான் அவற்றுக்கு ஏதுவாவ தல்ல தென உணர்க. ஓதியு நுதலு நீவி யான்றன் மாதர் மென்முலை வருடலிற் கலங்கி யுள்ளத் துகுநள் போல வல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலி னிம்மை யுலகத் தன்றியு நம்மை நீளரி நெடுங்கட் பேதையொடு கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே. (இ.வி.ப.532) இஃது இயற்கைப் புணர்ச்சிக்கட் டலைவன் தன்னிலை யுரைத்தது. இதனுள் உடம்பும் உள்ளத்துகுவன போன்றன வென்பது அல்குறைவரல்; என்னை? 186அவ்வேறுபாட்டானே 187அற்றப்படுதலின். அல்குலின் ஞெகிழ் 188நூற் கலிங்கம். என்பது அணிந்தவை திருத்தல்; அல்குலின் யாத்த நூலிற்கு ஞெகிழ்ச்சி கூறினமையின். மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும். v‹gJ, ïštÈíW¤jš.; யாமெடுத் தணைத்தொறுந் 189தாமியைந் தெழுதல் என்பது, இருகையுமெடுத்தல்; அங்ஙனம் ஒடுங்கிய வழியும் உயிர்ப்பினளல்லள்போலத் தோள்களைத் 190தன்வயத்தவாயின என்றமையின். இம்மை யுலகத் தன்றியு நம்மைக் கேளறிந்தன. என்றமையின், இருவர் அன்பும் எழுமையுந் தொடர்ந்த 191உழுவ லன்பெனச் சொல்லித் தன்னிலையுரைத்தானாம். பிறவும் அன்ன. (15) (புணர்ச்சிப்பின்னர் களவு வெளிப்படுந்துணையு நிகழும் முப்பகுதியுள் முதற்பகுதியாகும் நான்காம்பகுதி இத்துணையது எனல்) 264. பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்த லீரமில் கூற்ற மேற்றலர் நாணல் கொடுப்பவை கோட லுளப்படத் தொகைஇ யெடுத்த நான்கே நான்கென மொழிப. இது, நான்காம் பகுதி கூறுகின்றது. இ-ள்: பாராட்டெடுத்தல்- புணர்ச்சி நிகழ்ந்தபின்னர்த் தலைமகளை 192இயற்பட நினையுங் குறிப்பு; இது பாராட்டென் னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன்மேற் கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும். மடந்தபவுரைத்தல்- விளையாடும் பருவத்து நிகழ்ந்த 193அறிமட நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்றுதலும்; உரைத்தலென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை 194மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தப வுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல்- அங்ஙனம் அறிமடங் கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ் சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும். கொடுப்பவை கோடல்- தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுந் தாருங் கண்ணியுந் தோண்மாலையு முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதலும்; உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப- கொடுப்பவை கோடலகப்படத் தொகுத்தோதிய நான்கும் நான்காவது என்றவாறு. எடுத்தஎன்றதனாற் கொடுப்பவை கொள்ளாது 195மறுத்தன் முதலியனவுங் கொள்க. புணர்ச்சிப்பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமை யானும், அதன்பின்னரல்லது பிறரொடு கூற்று நிகழாமை யானும், அக்கூற்றுக் கேட்டல்லது தமரான் 196ஈரமில் கூற்றங் கோடலின்மை யானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன்மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற் குறிப்பினளா மாகலானும் அம்முறையான் வைத்தானென்பது. இவற்றுக்குச் செய்யுள், ஒருநாள் வந்து பலநாள் வருத்து நின்னேயே போலுநின் றழையே யென்வயி னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும் யாயெதிர் கழறலிற் போலர் நாணியு மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு நோய்செய் தன்றற் றானே நீதொடக் கரிதலி னேரிடத் தானே. (இ.வி.ப.533) இது கையுறை மறுத்தது; இதனுள், நிற்பாராட்டி என்பது பாராட்டெடுத்தல்; 197சொற்கொளலின்றி என்பது மடந்தப வுரைத்தல்; என்னை? கொளுத்தக்கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின். யாயெதிர் கழறலிற் பேரலர் நாணி என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல்; 198துயர் மருந்தா யினும் என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப் பட்டவழிக் கரிந்து காட்டி நின்மெய் வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் 199பின்னொரு காலத்து மறுத்தாளென்பது. (16) (ஐந்தாம்பகுதி இத்துணையது எனல்) 265. தெரிந்துடம் படுத றிளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு பொருந்திய நான்கே யைந்தென மொழிப. இஃது, ஐந்தாங்காலத்து மெய்ப்பாடுணர்த்துகின்றது. இ-ள்: மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்தவழி அவ் வொழுகலாறு புறத்தார்க்கெல்லாம் ஐயமாகலின், அதன்வழித் தோன்றுவது தெரிந்துடம்படுதலென்றானென்பது. தெரிந்துடம்படுதல்- 200தலைமகனைத் தலைமகள் இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றைப் 201பட்டாங்குணராதார் 202தலைமை செய்தன ளிவளெனவுந், தகாத வொழுக்கினளிவ ளெனவும் பல்லாற்றானும் இவள்கண்ணே 203ஏதமிட்டுத் 204துணிந்துந் துணியாதும் உரைப்பாராகலான் அதற்கு நாணி, இனி யாதுகொல்லோ செயற்பாலதென்று ஆராய்ந்து, இவ்வொழுகலாற்றினை அறிவிப்பேங்கொல் அறிவியேங்கொல் லெனத் தடுமாறிப், பின்னொருவகையான் ஆராய்ந்து, முழுவதூஉஞ் சொல்லாது தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் வேண்டுவன தெரிந்து கொண்டு, இன்னவாறு 205பட்டதென்று தோழிக்கு உடம்படுத லுந், தோழியாற் செவிலிக்கு உடம்படுதலுமென இன்னோ ரன்ன 206குறிப்பினைத் தெரிந்து உடன்படுதலும். திளைப்புவினை மறுத்தல்- அங்ஙனம் தமர்க்குத் தானுடம் பட்டதன்பின்னர்த் தலைமகனோடு பகலு மிரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமு நாணு மடனுங் காரணமாக மறுத்தலும்; உடம்பாட்டின் பின்னர் மறுக்கு மாதலின் அதனைத் 207திளைப்புவினை மறுத்தலென்று இரண்டாவது வைத்தானென்பது. கரந்திடத்தொழிதல்- அக்காலத்து இற்செறிக்கப்படுத லால் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படா தொழுகுதலை உடையளாதலும்: 208தன்னிடத்தே தங்குதலை இடத்தொழிதல் என்றான். கண்டவழியுவத்தல்-அங்ஙனம் கரந்தொழுகுங் காலத்து அவனை ஒரு 209ஞான்று கண்டவழிக் கழியுவகைமீதூர்தலும். இது தலைமகற்கும் உரித்து. 210பொருந்திய நான்கே ஐந்தென மொழிப- இவை நான்கும் ஐந்தாங் கூறெனப்படும் என்றவாறு. பொருந்திய நான்கு என்றது, இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடையவென்பது. இதனானே, இவை 211நந்நான்கினோடு 212வருகின்றதற்குச் சிறிது இடையறவும் படுமென்பது கொள்க. புகுமுகம் புரிதன் முதலாயின நான்குந் தலைமகளனவே யாகி ஓரினத்தவாயின. அவற்றுப் பின்னர்த் தலைமகன் அவளைப் பொருந்தியவழிக் கூழை விரித்தன் முதலாயின நான்கும் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றோடு சிறிது இடையறவு பட்டன. அல்குல்றைவரன் முதலாயின நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோ டொன்றாது வேறாயின. பாராட்டெடுத்தன் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற் சிறிது வேற்றுமையுடைய. தெரிந்துடம் படுதன் முதலாயின களவுவெளிப்படுத்தற் குறிப்பினவாகலின் மேலனவற்றோடு தழுவாது வேறாயின வென்பது. இவற்றொடும் வருகின்ற நான்கன் வேறுபாடு ஆண்டுச் சொல்லுதும். அவ்வாறு நோக்கியன்றே இவ்வாறு சூத்திரப் பொருளினையும் இருபத்துநான்காக உடனோதாது வேறுபடுத் தோதிய கருத்தென்பது. இங்ஙனம் பொருத்தமின்றி வருவனவல்ல நந்நான்கு பகுதியாற் கூறியவை தம்முட்டாமென்பான் பொருந்திய நான்கு என்றானென்பது. இவற்றுக்குச் செய்யுள்:- அறியாய் கொல்லோ நீயே தெறுவர நோக்குதொறும் பனிக்கும் நெஞ்சமோ டிவளே யாய்க்கறி வுறாலின் நின்னெதிர் நாணி மனைவயிற் பிரியலள் மன்னே யதற்கே நினைவிலள் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியோ வதுவே (இ. வி ப. 534) என்பது, பகற்குறிக்கட் டலைமகளை இடத்துய்த்து, வந்த தலை மகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவுகடாயது. இதனுள் யாய்க்கறி வுறாலின் என்பது, தெரிந்துடம்படுதலென்பது; என்னை? அவள் நோக்குந்தொறும் 213பனித்தலென் றறிவுறுத்தா ளென்றமையின். நின்னெதிர் நாணி என்பது திளைப்புவினை மறுத்தல்; என்னை? தமர்க்கு மறைத்தாள் இம்மறையினை யென்று தலைமகன் குறிக்குமென நாணி எதிர்ப்படாமையின். மனைவயிற் பிரியலள் என்பது கரந்திடத்தொழிதல். புனை தார் மார்ப காண்டியோ வதுவே என்பது, கண்டவழி உவத்தல்; என்னை? நிற்கண்டவழி நுதலுந் தோளும் பசலை நீங்கியவாறு கண்டிலையோ வென்னுங் 214குறிப்பினாற் 215கூறினமையின். பிறவும் அன்ன. (17) (ஆறாம்பகுதி இத்துணையது எனல்) 266. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே யாறென மொழிப. இஃது ஆறாவது கூறுகின்றது. இ-ள்: புறஞ்செயச் சிதைதல் - பூவுஞ் சாந்தும் பூணுந்துகி லும் முதலாயின கொண்டு 216புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவுண்டாதலும்: மேல்நின்றது கண்டவழி உவத்தலாகலானும், இது 217காணாதவழி நிகழ்கின்றதாகலானும், அதற்கினமின்றியும் அதன்வழித் தோன்றியதெனப்படுமாகலான் இதனை இச் சூத்திரத்தின்முன் வைத்தானென்பது. புலம்பித்தோன்றல் - அங்ஙனம் புனைந்தகோலந் 218துணை யொடு கழியப் பெறாமையிற் புல்லென்றழிந்த நெஞ்சினளாக லான், எல்லாச் சுற்றத்தார்க்கும் இடைநின்றேயுந் 219தனிய ளென்பது அறிவியாநிற்றலும். கலங்கி மொழிதல் - கையொடுபட்ட கள்வரைப்போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றந் தோன்றச் சொல்லுதலும்: அஃதாவது, தன்மனத்து நிகழாநின்றன தன்னையறியாமற் சில புலப்படச் சொல்லுதலாயிற்று. கையறவுரைத்தல் - கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதலும்; அஃதாவது 220வன்புறை யெதிரழிந்து சொல்லுவனபோல்வன. புலம்பிய நான்கே ஆறென மொழிப- இவை நான்குந் தனிமை விகற்பமாகிய ஆறாங்கூற்று என்றவாறு. கையறவுரைத்தலென்பதனை ஈற்றுக்கண் வைத்தான், களவொழுக்கத்தினுள் 221இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படா தென்றற்கு. என்னை காரணமெனின், கையறவுரை தோன்றியதற் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப் பாடாவதன்றி 222நற்காமத்துக்கு ஆகாவென்பது கருத்து. என்னை? 223கையறவுரைத்தலென்பது சொல்லாமரபி னவற் றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்குதலை (196) எல்லையாகவுடைமையின், அதனினும் இறப்பத் தோன்றுவன 224மன்றத்திருந்த சான்றவரறியத் தன் துணைவன் பெயரும்பெற்றியுங் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியுந் நிகழும் மெய்ப்பாடாக லான், அவை நடுவ ணைந்திணை எனப்பட்ட நற்காமத்திற்கு இலக்கணவகையான் ஏலாவாகலினென்பது. கையறவு உரைத்தலென்றதனான் இம் மெய்ப்பாடு மனத்தளவேயன்றி 225மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படுமென்பது கொள்க. இவை எல்லாம் முறையானே நிகழ்ந்தமைநோக்கி 226யாழோர் கூட்டத்தினைத் தொன்மையுந் (546) தோலும் (550) போலப் 227பொருட்டொடர் நிலையாக்கி உரைப்பாருமுளர். அஃது ஆகாமைக்குக் காரணங் களவியலுட் (101) கூறினா மென்பது. இவற்றுக்குச் செய்யுள்: இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇப் பல்கிளை நாப்ப ணில்கிளை போல மொழிவகை யறியாள் பொழிகண் நீர்துடைத் தியானே கையற வலம்வருங் கூறாய் பெருமநிற் றேறு மாறே (இ. வி. ப. 535) என்பது, வரைவு கடாயது; இதனுள் அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ என்பது புறஞ்செயச் சிதைதல். பல்கிளை நாப்ப ணில்கிளை போல என்பது புலம்பித் தோன்றல்; மொழி வகை யறியாள் என்பது கலங்கி மொழிதல். யானே கையற 228வலம்வரும் என்பது கையறவுரைத்தல்; என்னை? தன் கண் ணீர்துடைத்தலும் ஆற்றாளென்றமையின். பிறவும் அன்ன. (18) (மேற்கூறியவும் பிறவும் நடுவணைந்திணைக் காமவொழுக்கத்துக்குக் காரணம் எனல்) 267. அன்ன பிறவு மவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப. இது, மேலனவற்றுக்கு ஓர் புறனடை. இ-ள்: அன்ன பிறவும்- மேற்சொல்லப்பட்ட இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும், அவற்றொடு சிவணி- அவற்றின் வேறன்றி அவை தம்முட் பகுதியாகி வருவன பிறவும்; மன்னிய வினைய நிமித்தம் என்ப- நிலைபெறத் தோன்றுங் காமவொழுக்கத்து நிமித்தமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. மன்னிய 229வினைய என்பது நடுவணைந்திணைக்கே யுரிய மெய்ப்பாட்டினவை என்றவாறு; என்னை? கந்தருவ வழக்க மல்லனவற்றை மன்னிய காம மென்னான்றே, 230அஃது இடை யறவு படாதாகலின். எனவே, கைக்கிளைக்கும் பெருந் திணைக்கும் வரையறையின்றி வேண்டியவாறு வரப்பெறு மென்பதாம்; அவை 231மன்னிய வினையல்லாமையின்; என்னை? காமஞ் சாலா விளமையோள்வயி - னேமஞ் சாலா விடும்பை யெய்துதலும் (50), நாற்பத்தெட்டியாண்டையானோடு பன்னீ ராட் டையாள் கூட்டஞ் சொல்லுதலும் ஒத்த காமமெனப்படா வாகலி னென்பது. இவ்வாறு கூறவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் இவை வைத்த முறையான் வரையறுத்துக் கூறப்படாவெனவும், அவை வருவன வந்துழிக் கொள்ளப்படூஉ மென்பதும் பெற்றாம். இது 232புலனெறி வழக்கமல்லாத கந்தருவ மணத்திற்கும் ஒக்கும். அன்ன பிறவு மவற்றொடு சிவணி (267) வருவன யாவை யெனின், புகுமுகம் புரிதற்கட் டலைமகன் நோக்கியவழி ஒரு வல்லிப் பொதும்பரானும் மற்றொன்றானுஞ் சார்புபெற்று மறைதலும், அவையில்லாதவழி இடர்ப்படுதலு மென்றாற் போல்வன புகுமுகம் புரிதலாயடங்கும். நகுநயமறைக்குங்கால் தலைமகன்கட் டோன்றிய நகை முதலாகிய குறிப் பேதுவாக, நகை தோன்றியதனை மறைக்குங் கால் 233இதழ் மொக்குளுள் தோன்றுவது நகையெனப்படாது நகுநய மறைத்தலின்பாற் படுமென்பது. இனிச் சிதைவு பிறர்க்கின்மையின்கண்ணும், நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும் என்றமையாற் கண்ணின் வேறுபாடுளவாமன்றே, அவை சிதைவு பிறர்க்கறிவிக்குமாயினும் ஆண்டுத் தானது மறைத்தா ளென்னுங் கருத்தினளாகலின் அதுவுஞ் சிதைவு பிறர்க்கின்மை யாமென்பது; அவை யாவையெனின், 234அமர்த்து நோக்காது அலமர நோக்குதலும் 235நிலங் கிளைத்தலும் போல்வன. மற்றுப் பொறிநுதல் வியர்த்தற்குப் புறனடையாற் கொள் வன யாவையெனின், - புறனடையாற் கோடல் 236ஆணை யன்றாகலான் 237உள்ளனவற்றிற்குக் கொண்டொழிக வென்ற வாறு. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வருவன அறிந்து அடக்கங் கூறுக. மற்றும், பிறவு மவற்றொடு சிவணி எனவே, மேற்கூறிய வற்றொடு பொருந்த வருவன கோடுமன்றே? அன்ன என்ற தென்னையெனின்; அதனானே தலைமகற்குரிய மெய்ப்பாடு வேறுளவாயினுங் கொள்க. அவை 238ஐயப்படுதலும் ஆராய்தலுந் துணிதலு முதலாயின. மற்றுத் தலைமகட்குரிய மெய்ப்பாடுபோலத் தலைமகற் குரியனவும் இன்னமுறையனவென்று வரையறுத்துக் கூறாரோ வெனின்; அற்றன்று; தலைமகன் குறிப்புச் சிலபற்றித் தலைமகள் குறிப்புப் பல பிறக்குமாகலானும், ஐய முதலாயின மெய்ப்பாடு காமப் புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானுந், தலைமகட்குரிய மெய்ப்பாடே சிறந்தனவென்று அவற்றை வரை யறுத்துக் கூறினானென்பது. மற்றிவற்றை நிமித்தம் என்ற தென்னையெனின், இவை முறையானே நிகழ்ந்து புணர்ச்சி நிகழுமாகலினென்பது. வினைய என்பதன் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு. இம்மெய்ப்பாட்டினுட் கைக்கிளை பெருந்திணைக்கு வருவன வருமாறு: ஒருக்குநா மாடுங் குரவையு ணம்மை யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல் குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ வாயர் மகன். (கலி. 104) எனப் புகுமுகம் புரிதல் கைக்கிளைக்கண் வந்தது. 239முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே. (105) என்பதனான் இது கைக்கிளையெனப்பட்டது. மற்றிது முல்லைத் திணைப்பாட்டன்றோவெனின், அது 240நிலத்தான் முல்லையாயிற்றென்பது அகத்திணை யியலுட் கூறினாம். இனித் தொன்மையுந் (549) தோலும் (550) முதலாயின வனப்புக்களுட் புகுமுகம் புரிதல் முதலாயின பெருந்திணைப் பொருள்பற்றி வருவன வருமாறு அறிந்துகொள்க. மற்றிவ்விருபத்துநான்கு மெய்ப்பாடுங் கற்பினுள் இம் முறையானே வரப்பெறாவோவெனின், அதற்கு இம்முறையான் இவையனைத்தும் வரல் வேண்டுவதின்மையிற் களவிற்கே விதந்து கூறினானென்பது. அஃதென்னைபெறுமாறெனின், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் (665) என்னும் உத்திவகை. இனிக் கற்பினுள் வருவன வருமாறு: இனிதெனக் கணவ னுண்டலி 241னுண்ணிதின் மகிழ்ந்தன் றெண்ணுதன் முகனே (குறுந். 167) என்பதனுள் நகுநய மறைத்தல் வந்தது. மாணமறந் துள்ளா நாணிலிக் கிப்போர் 242புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் பொய்ப்ப வீடேஎ மெனநெருங்கிற் றப்பினே னென்றடி சேர்தலு முண்டு. (கலி. 89) இதனுட், சிதைவு பிறர்க்கின்மை வந்தவாறு; ஒழிந்தனவும் அன்ன. 243நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராற் பெறுகற்பின். (கலி. 77) என்பது 244மடந்தபவுரைத்தல். இவையெல்லாங் கற்பின்கண் வந்தன. அன்னை சொல்லு முய்க மென்னதூஉ மீரஞ்சேரா வியல்பிற் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையு மொழிகம். (அகம். 65) என்பதோவெனின், அது 245பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத் தல் (264) என்புழி அடங்குமென்பது. (19) (மேற்கூறிய நிமித்தங்களின்றியும் புணர்ச்சி நிகழும் எனல்) 268. வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே. இது, மேலனவற்றுக்கே ஆவதோர் விதி கூறுகின்றது. (இ-ள்.) மன்னிய வினைய (267) எனப்பட்ட புணர்ச்சி, மேல் அறுவகையான் இருபத்துநான்கெனக் கூறப்பட்ட மெய்ப் பாட்டினை அம்முறையானே நிமித்தமாகக் கொண்டு வருதலின் மையும் உரித்தெனப்படும்; ஆற்றாமை வந்தவிடத்து என்றவாறு. மேற்கூறிய இருபத்துநான்கினையின்மை உரித்தென்பது 246அதிகாரத்தாற் கொள்க. தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப வின்னுயிர் குழைய 247முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கென னல்லனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே, (அகம். 22) வனைந்துவர லிளமுலை ஞெழுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி ளினிதா கின்றே. (அகம். 58) என இவை, களவியலுள் (111) உயிர்மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டவையின்றியும் புணர்ச்சி நிகழ்ந்த வாறு. என்னை? முயங்குதொறு நகைதோன்றிற்றெனவே, பாராட் டெடுத்தன் முதலாயினவின்றியும் புணர்ச்சி நிகழ்ந்த தாம். ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை கண்டவழி யுவத்தலாகா வோவெனின், ஆண்டுத் தன்னுவகை கூறாளன்றே, 248கரந்திடத் தொழிந்தாளாகலினென்பது. தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய வறிவி னேற்கே. (அகம். 26) என்புழி, பாராட்டெடுத்தன் முதலாகிய பன்னிரண்டு நிமித்தமு மின்றி ஆற்றாமை 249நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. உம்மை, எதிர்மறை. உயிர் மெலிவிடத்து உடைமை யுடைத்துமாம் அவ்வினையென்பது. 250தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே (குறுந். 239) என்பதனுள், ஊழணிதைவரலென்னும் மெய்ப்பாடு வந்தது. பிறவும் அன்ன. ïÅ nk‰T¿a MWnka‹¿ ï‹D« ït‰bwhL eh‹F T£o¥ 251g¤bj‹ghUKs®; mit 252ï‹gkhj‰ FÇad t‹ikÆ‹, tiuaiwTwhbjhʪjhbd‹gJ.(20) (புணர்ச்சிக்கு நிமித்தமான வேறும் மெய்ப்பாடுகள் உள எனல்) 269. 253இவையு முளவே யவையலங் கடையே. இஃது எதிரது போற்றி இறந்தது காத்தது. இ-ள்: அவையுமுளவே- எதிர்வருகின்றனவும் உளவாவது; அவையலங்கடையே- இறந்தனவற்றுக்கு இடனல்லாத விடத்தே என்றவாறு. இதனது கருத்து: மேற்கூறிய இருபத்துநான்கு மல்லாத வழி இன்பத்தை வெறுத்தன் (270) முதலாக இனிக் கூறுகின்ற மெய்ப்பாடும் உளவாம் என்றவாறு. அவையல்லாத விடத்து இவையும் உளவாமெனவே, வருகின்ற மெய்ப்பாடுங் களவிற்குங் கற்பிற்கு முரியவெனவும், களவிற்கு வருங்கான் முதற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே இவை பெரும்பான்மையான் வருமெனவும், கற்பிற்காயிற் பயின்று வருமெனவுங் கூறியவாறு. அவை இனிக் கூறுகின்றான். (21) (களவுக்குங் கற்பிற்குமுரிய மெய்ப்பாடுகள்) 270. இன்பத்தை வெறுத்த றுன்பத்துப் புலம்ப லெதிர்பெய்து பரித லேத மாய்தல் பசியட நிற்றல் பசலை பாய்த லுண்டியிற் குறைத லுடம்புநனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடன் மெய்யே யென்ற லையஞ் செய்த லவன்றம ருவத்த லறனளித் துரைத்த லாங்குநெஞ் சழித லெம்மெய் யாயினு மொப்புமை கோட லொப்புவழி யுவத்த லுறுபெயர் கேட்ட னலத்தக நாடிற் கலக்கமு மதுவே. இது, மேல் இவையுமுள (269) எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது. இ-ள்: எண்ணப்பட்ட இருபதும் மன்னிய வினைய நிமித்தம் (267) என்பான் 254நலத்தகநாடின் அதுவே யாமென்றா னென்பது, இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டினும் அவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சி நிமித்தமேயாம் என்றவாறு. இன்பத்தை வெறுத்தலென்பது, யாழுங் குழலும் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். 255அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் மன்னிய வினைய நிமித்தம் (217) எனப்படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக்கேது வாகாதன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் நலத்தக நாடி னதுவே என்றானென்பது. கலக்கமும் என நின்ற உம்மை மேற்கூறிய பத்தொன் பானையுந் தழுவலின் இறந்தது தழீஇயிற்றாம். நின்வலித்த மைவென் மன்னோ வல்கற் புன்கண் மதலையொடு பொருந்திக் கொடுங்கோற் கல்லாக் கோவல ரூதும் வல்வாய்ச் சிறுகுழல் 256வருத்தாக் காலே (அகம். 74) என்புழி, இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக் கேதுவா மென்பது கருத்து. மனைசேர் பெண்ணை மடிவா யன்றி றுணையொன்று பிரியினுந் 257துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு 258கரக்கு மொண்ணுத லரிவையா னென்செய்கோ வெனவே (அகம். 50) என்பதும் அது. துன்பத்துப் புலம்பல் என்பது பிரிவாற்றாது துன்புறுங் காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந் துணரினென்றவாறு; அவை, நின்னுறு விழுமங் களைந்தோ டன்னுறு விழும 259நீந்துமோ வெனவே (அகம். 170) என வரும், எதிர்பெய்து பரிதலென்பது, உருவுவெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர் முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல்; அது, வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயின்மறந் தனவாற் றோழியென் கண்ணே. (குறுந். 301) என்புழி, வாராதென்றுணர்ந்தது 260இக்காலத்தாகலான், அதற்கு முன் 261இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. ஏதமாய்தலென்பது, கூட்டத்திற்குவரும் இடையூறுண் டென்று பலவும் ஆராய்தல்; அது, 262நொதுமலர் வரையக் கருது வர்கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார்கொல் லெனவுந் தோன்றும் உள்ளநிகழ்ச்சி; அது, வாரார் கொல்லெனப் 263பருவருந் தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. (அகம். 150) என வரும். பசியடநிற்றலென்பது. பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் 264பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி. (அகம். 48) எனவும், இனியான், 265உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன் (கலி. 23) எனவும் வரும். பசலைபாய்தலென்பது, பசலை பரத்தல்; அது கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா 266தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டுந் 267திதலை யல்கு 268லென் மாமைக் கவினே. (குறுந். 27) என வரும். உண்டியிற் குறைதலென்பது, பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டியூட்டியவழிப் பண்டுபோலாது, கழியவுஞ் சிறி துண்டல்; அது, 269தீம்பா லூட்டி னும் வேம்பி னுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கு நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ லென்னிதற் படலே. (இ. வி. ப. 537) என வரும். உடம்புநனி சுருங்கலென்பது, அவ்வுண்மை உயிரிற்செல் லாது உடம்பிற் காட்டுதல்; அது, தொடிநிலை நெகிழச் 270சாஅய்த் தோளவர் கொடுமை கூறிய வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழியென் நெஞ்சிற் பிரிந்தது மிலரே தங்குறை நோக்கங் கடிந்தது மிலரே. (இ. வி. ப. 466) என வரும். கண்டுயின் மறுத்தலென்பது, இரவும் பகலுந் துஞ்சாமை;. அது, புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோர்யா னாகுவ தெவன்கொ னீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம். 82) என வரும். கனவொடு மயங்கலென்பது, 271அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற் கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம். அலந்தாங் கமையலே னென்றானைப் பற்றியென் னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும். (கலி. 128) என்பது கனவொடு மயங்கிற்று. பொய்யாக்கோடலென்பது, மெய்யைப் பொய்யாக் கோடல்; அது, 272கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெமக்குநின் மார்பு. (கலி. 68) எனவும், வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை. (கலி. 41) எனவும், வருது மென்ற நாளும் பொய்த்தன வரியே ருண்க ணீரு நில்லா. (அகம். 144) எனவும் வரும். 273மெய்யேயென்றலென்பது, பொய்யை மெய்யென்று துணிதல்; அது, கழங்கா டாயத் தன்றுநம் மருளிய பழங்க ணோட்டமு னலிய 274வழுங்கின னல்லனோ 275வயர்ந்ததன் மணனே. (அகம். 66) என்பது, தானே தன்மகனை வாயில்கொண்டு புக்கானாயினும் அதனைப் பழங்கண்ணோட்டம் முன் நலிதரப்பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்துகோடலின் அப்பெயர்த் தாயிற்று. ஐயஞ்செய்தலென்பது, தூதவர் விடுதரார் துறப்பார்கொ னோதக விருங்குயி லாலு மரோ (கலி. 33) என்புழி, நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென வாழாதே ஐயஞ்செய்தமையின் ஐயமாயிற்று. 276அவன் றம ருவத்தலென்பது: ஊர னூரன் போலுந் தேரும் பாணன் றெருவி னானே (இ. வி. ப. 537) என்பது, 277அவன்றமரைக்கண்டு உவந்தது. இது முனிவெனப் படாதோவெனின், அது தலைமகனைப் புலந்தாற் போல்வதோர் முனிவாயினல்லது பகைபட நிகழாக் குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டன்மையன்றாமாகலின். அவர் நாட்டு, மாலைப் பெய்த மணங்கம 278ழுந்தியொடு காலை வந்த 279காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலு மயீல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே. (குறுந். 361) என்பதும் அது. அறனளித்துரைத்தலென்பது, அறக்கிழவனை அன்பு செய்தல்; அது, பாங்கர்ப் பல்லி படுதொறும் 280பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி (அகம். 9) என வரும். ஆங்குநெஞ்சழிதலென்பது, அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்; எனவே, அறனளித்துரைத்தல் அழி வின்றென்றாமென்பது சொல்லினானாம்; அது, பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தே னென்னெஞ்ச மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை யொழிய விடாதீமோ வென்று. (கலி. 143) என வரும். எம் 281மெய்யாயினு மொப்புமை கோடலென்பது, யாதா னும் ஒருபொருள் கண்டவிடத்துத் தலைமகனோ டொப்புமை கோடல்; அது, கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப் பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே (கலி. 20) என, எம்மெய்யாயினும் ஒப்புமை கொண்டவாறு. எம்மெய் யாயினும் என்றமையாற் கண்டபொருளும் கேட்டபொருளும் ஒப்புமைகொள்ளப்பெறுமென்றவாறு. ஒப்புவழியுவத்தலென்பது, ஒப்புமையுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகைதோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று; என்னை? எம் மெய்யாயினுமென்றமையின். காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின் றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே. (கலி. 80) என்பது, ஒப்புவழியுவந்தது; என்னை? 282காமரு நோக்கினை யென்றமையின். 283பால்கொள லின்றிப் 284பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை யொத்தி பெரும285மற் றொவ்வாதி. (கலி. 86) என வருவதூஉஞ் சொல்லுப. உறுபெயர் கேட்டலென்பது, தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்; அது, பலவின் பழத்துட்டங்கும் மலைகெழு 286வெற்பனைப் பாடுகம் வா. (கலி. 41) எனவும், மென்றோ ணெகிழ்த்தான் 287றிறமல்லால் யான்காணே னன்றுதீ தென்று பிற (கலி. 142) எனவும் வரும். கலக்கமென்பது, சொல்லத்தகாதன சொல்லுதல்; அது, பையெனக் 288காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே 289மாய்ந்தான் கரந்து. (கலி. 142) எனவும். பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப் புறங்காலிற் போக விறைப்பேன் முயலி னறம்புணை யாகலு முண்டு. (கலி. 144) எனவும் வரும். கலக்கமு நலத்தக நாடி னதுவே (270) என்னாது, கலக்கமென்பதனை 290வேறு பெயர்த்து வைத்ததென்னை யெனின், 291இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே, தலைமகற்காயின் அதனினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தன; அது, மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே. (குறுந். 17) இதனுள் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டுகொள்க. இவ்வாறு கூறவே, இச்சூத்திரத்துளோதிய இருபது மெய்ப்பாடுந் தலைமகற்கும் ஏற்ற வகையானே கொள்ளப்படு மென்பது; அது, 292எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் 293யாரளோ நமக்கே. (குறுந். 19) என்பது, துன்பத்துப் புலம்பலாம்; என்னை? தானே துன்புறு கின்றானாகத் தலைமகன் உரைத்தமையின். அந்தீங் கிளவி யாயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்க நெடுஞ்சே ணாரிடை 294விலங்கு ஞான்றே. (அகம். 3) என்பது, எதிர்பெய்து பரிதல்; என்னை? 295முற்காலத்து எதிர்ப் பட்டமை பிற்காலத்துச் சொல்லினமையின். ஒழிந்தனவுந் தலைமகற்குரியனவாகி வருவன வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாம் அறனும் பொருளுமன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவருள்ளத்து நிகழ்வனவாதல் 296வழக்கு நோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாயவற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டன வெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப்படுப்பன வாகலான் மெய்ப்பாடெனப்பட்டன. மேல்வருவனவற்றுக்கும் இஃது ஒக்கும். (22) வரைந்தெய்தும் கூட்டத்திற்கு ஏதுவாம் மெய்ப்பாடுகள் 271. முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்த லச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்த றுதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே யழிவில் கூட்டம். இது, 297வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப் பாடு இவை எட்டுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முட்டுவயிற் கழறல் - தலைவன் கூட்டத்திற்கு முட்டுப்பாடாகியவழிக் கழறியுரைத்தலும்: அது, நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன 298பன்முட் டின்றாற் றோழிநங் களவே. (அகம். 122) என்பது; இது, தலைமகன் கேட்பக் 299கழறியுரைத்தது, 300முனிவு மெய்ந் நிறுத்தல் - தலைமக ளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கு நிலைமையும்; அது, 301இன்னுயிர் கழிவ தாயினு நின்மக ளாய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே. (அகம். 52) என்புழி, 302வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது. அச்சத்தினகறல் - தலைமகன்கண்வரும் 303ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பும்: மன்றுபா டவிந்து . . . . . மயங்கி இன்ன மாகவு நன்னர் நெஞ்ச மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவி னிருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம். 128) என்னும் பாட்டினை முழுதுங் கொள்க; அதன் கருத்தாவது; நாம் அவர் இருளிடை வருத லேதமஞ்சி அகன்று 304வலித் திருப்பவும், என்னையும் நின்னையுங் கேளாது என்னெஞ்சு போவானே னென்றவாறாயிற்று. அவன் புணர்வு மறுத்தல் - இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சியும்; 305அது தமரையஞ்சி மறுத்தமையானும், 306இது வரைவு 307கடாவுதற்குக் கருத்தாக லானுந் திளைப்பு வினைமறுத்தலோடு (265) இது வேற்றுமை யுடைத்து. நல்வரை நாட நீவரின் 308மெல்லிய லோருந் தான்வா ழலளே. (அகம். 12) என்பது, தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன்புணர்வு மறுத்தலெனப்படும். இஃது ஒன்றித் தோன்றுந் தோழி மேன (39) என்னும் இலக்கணத்தால் தோழி குறிப்பாயினுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது கொள்க. தூது 309முனிவின்மை - புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறை யானுஞ் சொல்லுதலும்;. அது, கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா தொருநின் னல்லது பிறிதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெநய்தற் கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறவை கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா 310லலவ. (அகம். 170) என்புழி, கூறப்பட்டனவெல்லாந் தூதாகலின், தூதுவிடுதலை வெறாததன்மை கூறியதாம் இப்பாட்டென்பது. புல்வீ 311ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் 312நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாமணந் தனையமென விடுகந் தூதே. (குறுந். 106) என்பதேதோவெனின், அது கற்பிற்கல்லது ஏலாது; என்னை? களவினுள் நெய்பெய் தீயின்வந்து எதிர்கொளலாகாமையின். துஞ்சிச்சேர்தல் - மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும். துஞ்சுதலெனினும் மடியெனினும் ஒக்கும். வேண்டிய வாறு கூட்டம் நிகழப்பெறாமையின் தலைமகனொடு புலந்தாள் போல, மடிந்தொன்றுமாதலின் அதனைத் துஞ்சிச்சேர்தலென்றா னென்பது. எங்ஙனமோவெனின், 313என்மலைந் தனன்கொ றானே தன்மலை யார நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. (குறுந். 161) என்புழி, என்னகாரியம் மேற்கொண்டுவந்தானென்றமையின் இது துஞ்சிச் சேர்தலாயிற்று. அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும். ஆமிழி யணிவரை (கலி. 48) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுட், பின்னீதல் வேண்டும்நீ பிரிந்தோணட் பெனநீவிப் 314பூங்கண் படுதலு மஞ்சுவ றாங்கிய வருந்துய ரவலந் தூக்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே. (கலி. 48) என்னுஞ் சுரிதகமும் அது. காதல்கைம்மிகல் - காமங் கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும்: அது, உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தின் வான்றோய் வற்றே காமஞ் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே. (குறுந். 102) என வரும். கட்டுரையின்மை - உரைமறுத்திருத்தலும்; அதனானே அதற்குத் தோழிகண்ணாயினுந் தலைமகன்கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாளென்பது பெற்றாம்; அது, 315யான்ற னறிவ றானறி யலளே யாங்கா குவள்கொ றானே பெருமுது செல்வ ரொருமட மகளே. (குறுந். 337) என்பது, தலைமகள் கட்டுரையாதிருத்தலின், தலைமகன் தமரி னெய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவு கடாவுதலாயிற்றென்பது,. ஒழிந்தனவும் அவ்வாறே வரைவுகடா தற்கு ஏற்றவாறு 316உரையிற்கொள்க. என்றாயிருநான்கே அழிவில்கூட்டம்- என்றெண்ணப் பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய்துங் கூட்டமென உணர்க. (23) (வரைந்தெய்தியபின் தலைமகள்கண் நிகழு மெய்ப்பாடுகள்) 272. தெய்வ மஞ்சல் புரையறந் தெளித லில்லது காய்த லுள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாக்க மருண்மிக வுடைமை யன்புதொக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. இஃது, அழிவில்கூட்டம் நிகழ்ந்தபின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவையென்கின்றது. (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய 317அழிவில் கூட்டமெனப்படும் என்றவாறு. செப்பியபொருள் என்பது அழிவில்கூட்டமன்றே; அதற்கு முற்படும் மெய்ப்பாடெட்டனையும் அழிவில் கூட்ட மென்றதுபோல, பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்டமென்பான் மேற்கூறிய அழிவில்கூட்டமே இவையு மெனக் கூறியவாறு. எனவே, வரைந்தெய்தியபின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவையென்பது கூறினானாம். தெய்வமஞ்சலென்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னோ ரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத் தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள் கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ளநிகழ்ச்சியைத் தெய்வமஞ்சல் என்றானென்பது. மற்றுத் தனக்குத் தெய்வந் தன் கணவனாதலான் அத்தெய்வத் தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சப்படுந் தெய்வந்தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூ உந் தலைவற்கு 318ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது. சினைவாடச் சிறக்கும்நின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் 319கனலியைக் காமுற லியைவதோ. (கலி. 16) என்பது, தெய்வத்திறநோக்கித் தெருமந்ததாம்; என்னை? 320அவற்கிலவெனவும் அன்னவெனவுந் தாம்வேண்டிய குறை முடியாது பிரிந்தார்மாட்டு ஏதஞ் செய்யுங்கொ லென்றஞ்சி உரைத்தவாறு. 321அச்சா றாக 322வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல். (கலி. 75) என்பதும் அது. இது, ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண். (தொல். கற். 5) தலைமகள் கருத்தின்கண் நிகழுங் குறிப்பென்பது. 323புரையறந்தெளிதலென்பது, தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல்;. அது, விரியுளைக் கலிமான் றேரொடும் வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும். (கலி. 75) என வரும். இஃது அவனொடு சொல்லப்படாது ஊடியிருப்பே னாயின், விருந்துகொண்டு புகுதரும்; அதனான் ஊடலை மறப்பே னென்றமையிற் புரையறந்தெளிதலாயிற்று. இல்லது காய்தலென்பது, களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல்; அது, நற்றா ரகலத்துக் கோச்சார் மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கு முட்டுப்பா டாகலு முண்டு. (கலி. 93) என வரும்; இது கடவுளரையே கண்டு தங்கினானாயினும், நெட்டிருங் 324கூந்தற் கடவுளரையே கண்டாயென்று இல்லது சொல்லிக் காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று. உள்ளதுவர்த்தலென்பது, தலைமகனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அரு வருத்துநிற்கும் உள்ள நிகழ்ச்சி; அது, கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் (அகம் 176) என்னும் பாட்டினுள், வேப்புநனை யன்ன நெடுங்கண் ணீர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற் றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் னீர்மலி மண்ணளைச் செறியு மூர. (அகம். 176) என்புழி, தலைமகன் வாயில்வேண்டச் சென்றானைப் 325பிறர் கூறும் பழிக்கு வந்தாயென்றமையின் இஃது உள்ள துவர்த்தலா யிற்று. பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும் வீட்326டவள் வரனோக்கி 327விருந்தேற்றுக் கொளநின்றாய். (கலி. 69) என்பதும் 328அது. புணர்ந்துழியுண்மையென்பது, முற்கூறிய இல்லது காய்த லும் உள்ள துவர்த்தலுமாகிய 329விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் 330செய்வன சென்ற உள்ளநிகழ்ச்சி; அது, குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதா - மொளியிழா யூடி யிருப்பினு மூர னறுமேனி கூட லினிதா மெனக்கு. (ஐந். ஐம். 30) என்பது; என்னை? புணர்ந்துழியுண்மை கூறினாள், விகாரமின்றி யாதலின். 331பொழுது மறுப்பாக்கமென்பது, களவின்கட் பகற் குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற்போல்வதோர் வரையறையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்க மென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்து பட்ட இடர்ப்பாட்டினீங்கிய மனமகிழ்ச்சி ஆக்கமெனப்படும்; அது, அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கா லாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ ளிடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் 332பிறையிற் றோன்றி யாநுமக் கரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே. (குறுந். 178) என்பதனுள், தொழுதுகாண் பிறையில் தோன்றினமென்பது, களவுக்காலத்து இடையீடு பெருகிற்றெனக்கூறி, அங்ஙனம் வரைந்தபொழுதினை மறுத்தகாலத்து நடுங்கலானீரென்றமை யின் இஃது அப்பொருட்டாயிற்று. அருண்மிகவுடைமையென்பது, களவுக்காலத்துப் போலத் துன்பமிகுதலின்றி, அருண்மிகத்தோன்றிய நெஞ்சின ளாதல்; அது, நின்ற சொல்லர் நீடுதோன் 333றினிய ரென்று மென்றோள் பிரிபறி யலரே. (நற்றி.1) என வரும். அன்புதொக நிற்றலென்பது, களவுக்காலத்து விரிந்த அன் பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல்; எம்போற், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய 334வென்ன கடத்தளோ மற்றே. (அகம். 176) என்புழி, புதல்வற்பயந்து நின்னின்றுறையுங் கடத்தினம் யாமென்றமையின் இஃது அன்புதொக நிற்றலாயிற்று. பிரிவாற்றாமையென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டு மாறுபோலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை; என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலினென்பது. இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிளிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினா டடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை. (கலி. 2) என்புழி, இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத் தாவது: பிரிவாற்றாமையின் இவள் இறந்துபடுவள், பின்னை அப்பொருள்கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையதெனத் தலைமகள் பிரிவாற்றாமை கூறியவாறாயிற்று. 335மறைந்தவை யுரைத்தலென்பது, களவுக்காலத்து நிகழ்ந் தனவற்றைக் கற்புக்காலத்துக் கூறுதல்; அவை, களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ளமொ டளவிய விடத்தும். (தொல். 146) என்புழித் தோன்றிய மனக்குறிப்பு; அது, முயங்கல் விடாஅ லிவையென மயங்கி யானோ மென்னவு மொல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே யினியே; புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத் திதலை யணிந்த தேங்கொண் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுத றாமஞ் சினரே. (அகம். 26) என்பது. 336முன்னிலைப் புறமொழியாகலான் 337மறைந்த ஒழுக் கத்துக் கண் நிகழ்ந்த பொருளைக் கற்பினுள் உரைத்தவாறா யிற்று. புறஞ்சொன்மாணாக்கிளவியென்பது, தலைமகற்குவந்த புறஞ் சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி; அவற்கு வரும் பழிகாத்தலுந் தனக்கு அறமாதலின் அதுவுங் கற்பின் கண்ணே நிகழுமென்பது; அது, களிறு கவர் கம்பலை போல 338வலரா கின்றது பலர்வாய்ப் பட்டே (அகம். 96) என்றாற் போல்வன. கிளவியொடுதொகைஇயென்பது, இதனோடுந் தொகுத் தென்றவாறு; சிறந்த பத்தும் என்பது, விதந்தோதிய பத்தும் செப்பிய பொருள் என்பது, அழிவில் கூட்டமெனச் செப்பிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடெனப்படும் இவையும் என்பது. மற்றுப் பதினொன்றனை யெண்ணிச் சிறந்த பத்து இவை என்றதென்னையெனின், - அதனை, ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே (556) என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றி யுரைக்கப்படும். அங்ஙனஞ் சிறந்த பத்தும் புறஞ்சொன்மாணாக் கிளவியொடு 339தொகைஇயெனக் கூட்டியுரைக்க. சிறந்தபத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப்பாடு பிறவுமுளவேற் கொள்க. (24) (ஒப்பினுக்குரிய மெய்ப்பாடுகள்) 273. பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயி னிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே. இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது; மேற் களவியலுள், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப. (90) என்றான், அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத் தென்ப துணர்த்தினமையின். இ-ள்: ஒத்த பிறப்பும் ஒத்த ஒழுக்கமும் ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும் ஒத்த உருவும் ஒத்த அன்பும் ஒத்த நிறையும் ஒத்த அருளும் ஒத்த அறிவும் ஒத்த செல்வமுமெனப் பத்துவகைய தலைமகளொப்பினது பகுதி என்றவாறு. இவை தலைமகற்கு மெய்ப்பாடெனப்படாவோவெனின், படுமாயினும் அஃது ஒப்பினது வகையென்றதனானே தலை மகட்கே உரிமைகொளப்படும். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை யென்னை யெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமை யென்றா னென்பது; அதனை 340ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது 341ஆள்வினை யெனப்படும். இது தலைமகட் கொப்பதன்றாலெனின், 342குடியாண்மை யென்புழி ஆண்மையென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையு மென்பது. யாண்டென்பது ஒத்தவா றென்னையெனின், பன்னீரி யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஓத்தினுள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும். உருவு நிறுத்த காம வாயில்என்பது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு. இங்ஙனம் ஓதியவகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமா றென்னையெனின், காமவாயிலெனப்பட்ட இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும், குணம்பற்றித் தோன்றுவன செயற்கையன்பாகலானும், உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினானாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்தெண்ணிக்கொண்டாமென்பது; என்னை? வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. (குறள். 632) என்புழிக் 343கற்றறிதலென்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாக லின். அஃதேல், உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப் பாடாமாறென்னையெனின், அவ்வுருவுபற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே? அதனான் அது மெய்ப்பா டெனப்படும். நிறையென்பது மறைபிறரறியாமை (கலி. 133) நெஞ்சினை நிறுத்தல். அருளென்பது, எல்லாவுயிர்க்கும் இடுக் கண் செய்யாத அருளுடையராயிருத்தல்; அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு. உணர்வென்பது அறிவுடைமை; அஃதாவது, உலகியலாற் செய்யத்தகுவது அறிதல். திருவென் பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலு மின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி. அது 344வினையுளுடைமை யெனவும்படும். இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப் பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு. வகை என்றதனான், ஆண்மை பெண்மை என்பது பிறப் பொப்புமையெனவும், குடிமை வகையென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை யென்பது அந்தணர்க்கு 345நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ஏவன் மரபினேனோர் பாங்கினும் (24) அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினும் (23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடை யார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது. அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினும் (23) வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினாற் கொண்டான்; அவை பிறழ்ந்து வருமாகலி னென்பது. உதாரணம்: அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன் (கலி. 39) என்பது 346பிறப்பொப்புமை. உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன வினியோண் 347மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே (நற். 3) என்பது, தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையிற் குடிமையாயிற்று. கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து. (அகம். 93) என்புழி, இன்ன காரணத்திற் பிரிந்துபோந்து வினைமுடித்தன மாயினும் அவளை முயங்குகஞ் சென்மோ என்றமையின் தன் ஆள்வினைக்குத்தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉம் கருதிய கருத்தினாற் காமக்குறிப்புப் பிறந்தமை யின், அஃது ஆண்மையாயிற்று. என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண். (கலி. 18) என்பது, 348யாண்டு. முல்லை முகையு முருந்துநிரைத் தன்ன பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணும் 349நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பாரியார். (கலி. 108) என்பது, உருவு. நின்மக ளுண்கண் 350பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள். (அகம். 48) என்பது/ உருவுநிறுத்த காமவாயில். கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற; பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந்து. (கலி. 37) என்புழி/ முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையானென்பது தலைமகனிறையுடைமை கூறியவாறு. அவன்வயிற் 351சேயேன்மன் யானுந் துயருழப்பேன். (கலி. 37) என, தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு நிகழ்ந்த வாறு. 352பெண்ணன் றுரைத்த னமக்காயின். (கலி. 37) என்பதும் அது. இது, தோழி கூற்றன்றோவெனின், அதுவும் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்க் (273) கூறினா மென்பது. 353தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன். (அகம். 4) என்பது அருள்பற்றிப் பிறந்த காமக்குறிப்பு. அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதரும். (அகம். 22) என்னும் பாட்டினுள், 354தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப. என்பது, இருவருணர்வும் ஒத்தவாறு; தலைமகள் குறிப்பு உணர்ந்து வந்தனனென்றமையின். இது, செல்வம் புலன் (259) என்புழிப் 355புலனெனப்படாது காமத்திற்கே உரித்தாகிய உணர்வாகி வேறு கூறப்பட்டது. நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட் பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற் சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல பலவல்லன் றோளாள் பவன். (கலி. 143) என்பது, திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு; என்னை? இனையனவல்லனாதல் செல்வக்குடிப் பிறந்தாரை அறிவிக்கு மாகலின் அது காமக்குறிப்பினை நிகழ்த்துமென்பது. இது தலை மகட்கும் ஒக்கும். 356உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு. (கலி. 94) என்பது 357பிறப்புவகையின்பாற்படும். பிறவும் இவ்வாறே கொள்க. (25) (தலைமகன்கண் நிகழாத மெய்ப்பாடுகள்) 274. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை யின்புற லேழைமை மறப்போ டொப்புமை யென்றிவை யின்மை யென்மனார் புலவர். இது காமக்குறிப்பாகாதன கூறுகின்றது. இ-ள்: நிம்பிரி- 358பொறாமை - தோன்றுங் குறிப்பும்; அவை இந்நாட் சிறிதுபொறுத்தாய் என்றாற்போல்வன. கொடுமை- கேடுசூழ நினையுந் தீவினையுள்ளமும்; வியப்பு- தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந் தொழுகுதலும்; இனிக் குணத்தின்மேற்கொண்டு தன்னை வியத்தலெனினும் அமையும். புறமொழி- புறங்கூற்றும்; வன்சொல்- கண்ணோட்டமின்றிச் சொல்லுஞ் சொற்களும்; பொச்சாப்பு- 359கடைப்பிடியின்றி ஞெகிழ்ந்திருத்தலும்; மடிமை- சோம்புள்ளமும்; குடிமை - இவள் இழிந்த பிறப்பினளெனத் தன்னை நன்கு மதித்தொகுழுதலும்; இன் புறல்- ஒருவரொருவரிற்றாமே இன்புறுகின்றாராக நினைத்த லும்; ஏழைமை- நுழைந்த வுணர்வினரன்றி வரும் வெண்மை யும்; மறப்பு- மறவியும்; ஒப்புமை- இன்னாளையொக்கும் இவளென்று அன்புசெய்தலும்; என்றிவை இன்மை என்மனார் புலவர் -இவையெல்லாம் 360இன்றி வருந் தலைமகன்கண் நிகழும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. எனவே, அவைதம்மை வரையறுத்துக் கூறாது அவற்றுக்கு ஆகாதன வரையறுத்துக் கூறினானென்பது. தலைமகட்குரிய மெய்ப்பாடாயின வரையறுத்துக் கூறினமையின் அவற்றுக்கு ஆகாதன கூறல்வேண்டுவதன்றென்பது. ஆகாதவற்றுக்கு உதாரணங் காட்டலாவ தில்லை. (26) (மெய்ப்பாடுகளை அறிதற்குக் கருவி இவை எனல்) 275. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. இது, மேற்கூறிய மெய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை. எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான்கு. (252) என்புழி, நகைக்கேதுவாகிய பொருள் கூறியதல்லது அப் பொருள்பற்றிப் பிறந்த நகையுணர்வு புலப்படுமாறு இன்னவாறென்றிலன். இனி உடைமை யின்புறல் (260) என்றற்றொடக்கத்தனவினும் அவ்வாறு எண்ணியதல்லது அவை உணரு மாற்றுக்குக் கருவி கூறியதிலன். அங்ஙனமே பிறவுங் கூறிய திலனாகலான் அதனை ஒருவாற்றாற் கூறுகின்றான். இ-ள்: கண்ணானுஞ் செவியானும் யாப்புற அறியும் அறிவுடையார்க்கல்லது (251) மெய்ப்பாட்டுப் பொருள் கோடல் ஆராய்தற்கு அருமையுடைத்து என்றவாறு. மற்று மனத்து நிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானுஞ் செவியானு முணர்தலென்பதென்னையெனின், - மெய்ப்பாடு பிறந்தவழி, உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும், உரை வேறுபடு தலுமுடைமையின் அவை கண்ணானுஞ் செவியானு முணர்ந்து கோடல் அவ்வத்துறை போயினாரது ஆற்றலென்பது கருத்து. 361இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312) என்பதனுள், அமராமுகத்தளாகுதலும் தமரோரன்னளாகு தலும் தலைமகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர் வெனப்படும். ஒழிகோ யானென வழிதகக் கூறி. (அகம். 110) என்புழி, தலைமகன்மனத்து நிகழ்ந்தவழிவெல்லாம் ஒழிகோ யானென்ற உரையானே உணர்ந்தமையின் அது செவி யுணர்வெனப்படும். இங்ஙனம் உணர்தலும் உணர்வுடை யார்க்கன்றிப் பெரிதும் அரிதென்பான் எண்ணருங்குரைத்து என்றானென்பது. (27) மெய்ப்பாட்டியல் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. மெய்ப்பாடென்பனவாகிய சிலபொருள் என்க. 2. மெய் - பொருள். பொருள் உள்ளதாகலின் அதனை மெய் என்றார்; ஆகுபெயரான். 3. உள்ளநிகழ்ச்சி என்றது உள்ளத்தின்கண் நிகழும் நகை முதலிய குறிப்புக்களை. அவையே ஈண்டுப் பொருள் (மெய்) எனப்பட்டன. குணமும் பொருள் எனப்படுதலின் நகை முதலியன பொருள் எனப்பட்டன. படுதல் - வெளிப்படுதல். எனவே ஒருவன் உள்ளத்தே நிகழ்ந்த நகை முதலிய குறிப்புப் புறத்தார்க்கு அவன் உடம்பு வேறுபாட்டால் வெளிப்படுதல் மெய்ப்பாடு என்பது பேராசிரியர் கருத்தாம். இனி, இளம்பூரணர் அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந்தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப் படும் என்றும், மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்றுங் கூறுவர். இது சிறந்த கருத்தேயாகும். சத்துவம் - விறல். அது:- சத்துவ மென்பது சாற்றுங் காலை - மெய்ம்மயிர் - குளிர்த்தல் கண்ணீர் வார்தல் - நடுங்கல் கடுத்தல் வியர்த்த றேற்றங் - கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த - பத்தென மொழிப சத்துவந் தானே என்பதனாலறிக. குளிர்த்தல் - குற்சிதங் கொள்ளல் - சிலிர்த்தல். 4. மெய்ப்பாட்டியல் - மெய்ப்பாட்டி னிலக்கணங் கூறுவதென அவ்வோத்தின்மேனிற்றலின் ஆகுபெயர். இதுபோன்றன தொல்காப்பியர் கூறிய இருபெயரொட்டு என்பது சேனாவரையர் முதலியோர் கருத்தாம். 5. மேலையோத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாறென்றது அகத்தொழுக்கம் புறத்தொழுக்கங்களை. அவை முன்னுள்ள ஐந்தியல்களானும் கூறப்படுவனவாதலின் மேலையோத்துக்க ளென்றார். கூறப்படும் - கூறப்பட்ட என்றிருப்பது நலம். 6. ஒப்புமுருவும் பொருளியல் 53-ம் சூத்திரம். 7. எல்லாவற்றோடும் - மேற்கூறிய எல்லாவியல்களோடும். 8. பிறர் - நாடக நூலார். 9. பண்ணை - விளையாட்டு. பண்ணை - விளையாட்டாயம் என்றும். பண்ணையுடையது பண்ணை என்றும் இளம்பூரணர் கூறுவர். 10. அது - அவ்வாறு அடங்கல். முதனூல் - அகத்தியம். 11. உருத்திரம் - வெகுளி. உருத்திரமொழிந்த எட்டாவன: நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், உவகை, சமநிலை என்பன. உருத்திரமொழித்து ஒழிந்த எனவும் பாடம். 12. குறிப்பு - நகை முதலிய சுவைக்குறிப்பு. 13. சத்துவம் - விறல்; உடம்பின்கணுண்டாகும் வேறுபாடு அவை முற்கூறப்பட்டன. 14. கடு - கடுக்காய். அது துவர்ப்புக்குக் காட்டப்பட்டது. உறைப்புக் குரியமுதலே சொல்லப்படவில்லை. அது மிளகு என்று கூறலாம். அது தப்பிற்றுப்போலும். 15. ஆரியர் - வடமொழியாளராகிய ஆரிய தேசத்தவர். அவர் தமிழை எழுத்து நிரம்பக் கூறமாட்டாராதலின் அதுவும் நகைக்கேதுவா யிற்று. 16. செலவு - நடை. 17. பித்தர் முதலியோர் சொற்களும் நகைக்கேதுவாகலின் அவர்களை யுங் கூறினார். நகைச்சுவைப் பொருள்களிவையெனச் செயிற்றியங் கூறுமாறு:- உடனிலை தோன்றுமிடம் யாதெனினே - முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்....... தோன்றுமென்ப துணிந்திசி னோரே என்பது இதனை இளம்பூரணம் நோக்கியறிக. 18. அரிமா - சிங்கம். வேங்கை - புலி. அரவு - பாம்பு. தீ - நெருப்பு. ஈற்றா - ஈன்றணிமையான பசு. புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம். 56) என்பதனாலறிக. மதமா - யானை. ஏகபாதம் - ஒற்றைக்கால். அது, பூதங்களுளொற்றைக் காலுடை யனவு மிருப்பதாகச் சில புராணங்கூறலின் அவற்றை உணர்த்தும். ஒற்றைத் தாளின மூன்றுடைத் தாளின வுரைசால் பொற்றைத் தாள்பல வுடையன பொருந்துதா ளொழிந்த கற்றைச் செம்மயி ருடையன கணங்கணக் கிறந்த மற்றைக் கைகளு மன்னதன் மையவென வழங்கும். என்பது உபதேச காண்டம். கைலைமான்மியச் சருக்கம். 36-ம் செய்யுள்; சேது புராணமும் பூதங்களுள் ஒற்றைக்காலுடையன விருப்பதாகக் கூறுகின்றது. தேவர்களு ளொருபகுதியார்க்கும் ஒற்றைக்காலிருப்ப தாகத் தேவாரமுங் கூறுகின்றது. உள்ளமிக்கார் பரிமுகத்தின ரொற்றைக்காலர்க ளெள்ளவில்லா விமையோர்கள் எனத் திருக்கேதாரப் பதிகத்து (4) வருதல் காண்க. இவை அணங்குள் அடங்கும். 19. கூற்றம் - இயமன். இறப்போர் இயமனைக்கண்டஞ்சுவதாக நூல்கள் கூறுவது வழக்கு. அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் என்று கூறுதலுங் காண்க. கோண்மா - (இங்கே விதந்து சொல்லப்பட்டன வொழிந்த) கொலைத் தொழிலையுடைய மிருகங்கள். ஊறுசெய்யுங் கோண்மாக்களை எனக் கற்பியல் 26-ம் சூத்திரவுரையுள் நச்சினார்க்கினியர் கூறலுங் காண்க. அகணம் - அகணப்பறவை. இதனை அகணமா என்றுங் கூறுப. ஏகபாதம், கூற்றம், கோண்மா என்பன முன்னிருந்து அழிந்துபோன விலங்கின் சாதிகள் என்று கூறுவாருமுளர். அவர் கருத்துப் பொருந்துமாயினுங் கொள்க. 20. தலைப்பெய்தல் - கூடல். தலைப்பெய்துழியல்லது எனவும் பாடம். 21. உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் என்றது. - சுவைப்போன் நிகழ்த்திய சுவை அவன்மாட்டு நிகழும் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாதல் என்றவாறு. உய்த்தல் - அநுபவித்தல் - காதலகாத லறியாமையுய்க்கிற்பின் - ஏதில வேதிலார் நூல் என்னுங் குறளுரை நோக்குக. அன்றியும்,, சமநிலை என்னுஞ் சுவையை - உய்ப்போர் சமணர் சாரணர் என்று செயிற்றியங் கூறுகின்றதனாலு மறியப்படும். 22. ஒப்பினானாய பொருளென்றது அறுவகைச் சுவைபோலச் சுவைக்கப்படுவது பற்றி நகை முதலிய சுவைக்கும் சுவையென்று பெயராயிற்று என்றபடி. எனவே சுவைபோன்றது சுவை என்பது கருத்தாம். 23. உய்ப்போன் செய்தது - சுவைப்போன் நிகழ்த்திய சுவை. 24. காண்போன் உய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் என்றது. சுவைத்தோனுடைய மெய்ப்பாட்டைக்கண்டு இவன் சுவைத்தான் என்று அறிந்தோன் செலுத்திய அறிவின்றன்மையால் அவனுக்கு அச்சுவை நிகழாது என்றபடி. காண்போர்க்குஞ் சுவைபிறக்கும் என்பது கூத்த நூலாருட் சிலர் கருத்து. அவர் கருத்தையே ஈண்டுப் பேராசிரியர் மறுத்தனர் என்க. 25. இருவகை நிலமென்பன சுவைக்கப்படுபொருளும் சுவைக் கின்றவனும் என்பது பேராசிரியர் கருத்து. 26. அவை - பொருளும் பொறியும். 27. அவை - முப்பத்திரண்டும் 28. இது - மெய்ப்பாடு. 29. நாடக வழக்கத்தானே செய்கின்றதாகலானும் என இயைக்க. 30. இச்சூத்திரம் - இச் சூத்திரப் பொருள்கள். 31. பிறன்கோட்கூறல் - பிறன் மதமெடுத்துரைத்தல். எனவே கூத்தநூலார்க்குரியதை இப்பொருளியலுள் தாமும் எடுத்துரைத்தார் என்றபடி. உத்திவகையாற் கூறி அதுதானே இதற்கும் (பொருளோத்திற்கும்) மரபாயிற்று என்க. கூறி - கூறப்பட்டு. அதுதானே - அங்ஙனங் கூறப்பட்ட அப்பொருடானே. கூறியது தானே என ஒரு சொல்லாகக் கொள்ளின் கூறப்பட்டது தானே எனப் பொருள் கொள்க. 32. பாலும் என்பதிலுள்ள உம்மை முப்பத்திரண்டு பதினாறாதலேயன்றி எட்டாதலும் உடைய என நிற்றலால் இறந்தது தழீஇயிற்று. 33. அவையென்றது எட்டு மெய்ப்பாட்டினையும். 34. கூறிக் கூறியவாறு என இயைக்க. 35. அவை அரங்கு - அவையாகிய அரங்கு. 36. அதன்வழி - நாடக நூலின் வழி. 37. கூறி ஓதினாரென இயைக்க. 38. பிறர் - நாடகநூலார். 39. இவ்வாறு - (சூத்திரத்துட் கூறும்) இத்தன்மையாக. 40. தானே அவலித்தல் அவலம். ஏனையது கருணை. 41. மற்றுநகையை........ முன்வைத்தானென்பது என்றது. பண்ணைத் தோன்றிய பொருளோடு இவையும் இயைபுடையனவே வேறல்ல என்பதை உணர்த்தவே விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்றபடி. விளையாட்டுக்கண் தோன்றும் எண்ணான்கு பொருளைக் கூறிய சூத்திரத்தோடு இயைபு காட்டவே இச்சூத்திரத்து விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது கருத்து. பண்ணை - விளையாட்டு. 42. என்னும் - சிறிதும். 43. ஈண்டு என்றது ஈற்றினை. சிறந்தபொருளை முதலில் வைத்தலன்றி ஈற்றிற் கூறுதலுமுண்டு. அது - சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல் என்பதனாலறிக. 44. அதற்கு - சமநிலைக்கு. சமநிலை - சமமாக நிற்றல். அஃதாவது மனம் விகாரமின்றிச் சாந்தமடைந்து நிற்றல். 45. உலகியல் நீங்கினார் - துறந்தோர். 46. உலகியல் - உலகவழக்கு. 47. கூறும் - கூறுவான். என்றது ஆசிரியனை. 48. இவை நான்கென்றது எள்ளன் முதலிய நான்கை. பொருள் - சுவை பிறத்தற்குக் காரணமாகிய பொருள். 49. இவை சுவையும் குறிப்பும் சத்துவமும் என்று மாறியிருப்பது நலம். தலைதடுமாற்றமென்னும் உத்தியாற் கூறினாரெனினுமாம். சுவைக்கு முதற்கண்ணது பொருளாதலின். 50. அடக்கல் - பொருளுளடக்கல். 51. இளம்பூரணர், பேதைமை என்பதற்கும் மடமை என்பதற்கும் வேறுபாடென்னையெனின், பேதைமை என்பது உய்த்துணர்ந்து திரியக்கோடல்; மடமை என்பது பொருண்மையறியாது திரியக்கோடல் என்பர். 52. எள்ளி நகினும் வரூஉம் என்பது தலைவிக்குக் குறை நயப்பித்த தோழி கூற்று. தலைவியே! அவன் குறையுற்று நிற்கின்ற காலத்து யான் இகழ்ந்து சிரித்தாலும் அவன் பலகாலும் வருவான் என்பது கருத்து. தன்கண் நிகழ்ந்த எள்ளல் பொருளாகத் தோழிக்கு நகை பிறந்தது. 53. தன் மகளை நோக்கி நீ மிகவும் நல்லை எனச் சிரித்துச் சென்றாள் என்றது. செவிலித்தாய் தன் மகள் தன்னை மதியாமை குறித்துச் சிரித்துச்சென்றாள் என்றபடி. 54. நகுதக்கனர் - சிரிக்கத்தக்கார். இவனது நாட்டை உயர்த்திச் சொல்வார் எம்மாற் சிரிக்கத்தக்கார் என்றமையின் வெகுளிபற்றிய நகையாயிற்று. இது எள்ளல் நகையுள் அடங்காது என்பது பேராசிரியர் கருத்து. 55. நடுங்குதல் காண்மார் நகை குறித்தனர் - தலைவியே உனது மெய்ந்நடுக்கத்தைக் காண்டற்கு ஒரு விளையாட்டைக் குறித்துச் சொன்னார். இது தலைவன் இளமைபொருளாக அவற்கு நகை பிறந்தது. 56. நகும் என்றது தன் மகனை. தன் மகன் தன்னியல்பானே நக அதனைத் தன்னை நகுதலாகக்கொண்டு தலைவி யாரை நகும் என்றாள். 57. பிறரிளமை பொருளாக நகை தோன்றியதென்றது குழவியின் நாவொடு பழகாத இளைய மழலைத் தீஞ்சொற்கேட்டு நகை தோன்றிற்று என்றபடி. 58. தான் செய்த தவற்றை ஓராமை பேதைமை என்க. 59. தொழுதுநின்ற பேதைமை கருதி நகையாகின்று என்றாள். இது தோழி கூற்று. பிறன் என்றது தலைவனை. 60. இது தலைவி கூற்று. தோழி கூற்றுமாம். நீயிர் கூறியதனை யாம்மெய்யெனக் கொண்டு நும்மொடு நக்கது மடமை என்றாள். 61. ஒரு கண் சிறங்கணித்தாள்போல என்னை நோக்கிப் பின் றன்னுள்ளே நகும். சிறங்கணித்தல் - சுருங்குதல்.. தலைவ னோக்குதலைக் கண்டு தானும் விடாது நோக்கி நக்கது மடமை என்பது இவ்வுரையாசிரியர் கருத்துப்போலும். இவ் வுதாரணம் அத்துணைப் பொருத்தமாய்க் காணவில்லை. 62. தான்வருமென்றது மடம்பற்றியது. கொளுத்திய இன்பத்தைக் கொண்டு அதனை விடாமல் தானும் வருவேனென்று தலைவி கூறியது மடமை. கொளுத்தல் - அறிவித்தல். 63. பிறர் என்றது தலைவியை. இது பொருள்வயிற் பிரியுந் தலைவன் கூற்று. 64. வாயண் முறுவல் - வாயிற் பொருந்திய நகை. இப்பாடமே பொருத்தமானது. 65. நுகர்ச்சி - அனுபவித்த பொருள். 66. பண்டை நிலைமை - தான் முன்னிருந்த நிலைமை. 67. தன் என்றது பரத்தையை. பரத்தை தன்னைத் தலைவ னிகழ்ந்தமையின் தான் அவனால் இகழப்பட்டு எளியனாயினேன் என்று கருதியதனால் அவளுக்கு அழுகை பிறந்தது. இளிவரல் - இழிவு. 68. பிறன் என்றது தலைவனை. தலைவன் பலநாளும் இளிவந்து ஒழுகல்பற்றித் தோழி. யானுந் துயருழப்பேன் என்றமையின். இது பிறந்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலம் பிறந்தது. இவ்வவலம் அவன்மீதுகொண்ட கருணையாற் பிறந்தமையின் இது கருணை எனப்படுமென்றார். கருணையாற் பிறந்த அழுகையைக் கருணையென்றதுபசாரம். 69. தன் என்றது கணவனை யிழந்தாளை. அவளுக்குக் கண்கலுழ்நீர் கணவனையிழந்தமைபற்றி வந்ததாகலின் இழிவுபற்றிய அவலமென்றார். 70. ஐயோவெனின் - ஐயோவென் றரற்றுவேனாயின். இது கணவனை யிழந்தாள் கூற்றாதலின் தன்கட்டோன்றிய இழவுபற்றி வந்த அவலமாயிற்று. 71. இழவு ஈண்டுப் பிரிவு. தலைவன் பிரிவுபற்றி வந்த அவலமாகலின் பிறன் கட்டோன்றியதாயிற்று. 72. தன் நெஞ்சாறு கொண்டாள் என்றமையானே தான் முன்னிலைமை கெட்டனனென்றா னாகலின். தன்கட் டோன்றிய அசைவுபற்றி வந்த அவலமாயிற்று. 73. பிறன் என்றது ஈண்டுத் தாபதனாயினானை. முன் மடமயிலைப் பிணிக்கும் வேட்டுவனாயிருந்தவன். இப்பொழுது அந்நிலைவிட்டு அள்ளிலைத் தாளிகொய்தலின். இது பிறன்கட்டோன்றிய அசைவாயிற்று. 74. இல்லி - துவாரம். 75. தன் என்றது குழவியை. குழவி தனக்குப் பாலின்றி வறுமையுற்று அழுதமையின் தன்கண்வந்த வறுமைபற்றிய அவலமாயிற்று. தன் மகமுகநோக்கித் தாயழுதாள் என்றது தன் மகவுக்குப் பாலில்லாமையால் அதன் முகநோக்கி அழுதாள் என்றபடி. ஆகலின் பிறன்கட்டோன்றிய வறுமைப்பற்றிய அவலமாயிற்று. பிறன் என்றது மகவை. 76. கண்ணோடல் - இரங்கல். 77. அஃது - அம்மூதிற் பெண்டிரழுகை. 78. இளிவரல் - எளிமை; இழிவு 79. மென்மை - வலியின்மை. 80. தொடி - பூண் 81. இரும் - இருமல் 82. முதுமையெள்ளல் என்றது தன்கட்டோன்றிய மூப்புக் காரணமாகப் பிறந்த இளிவரல். 83. துணையிலர் பெண்டிர் என்றது தலைவரைப் பிரிந்து காம நோயுழக்கும் பெண்டிர் என்றபடி. அதனால் பிணிபற்றிவந்த இளிவரல் என்றார். 84. பிறன் என்றது நெஞ்சினை. 85. படர்தி என்றது விரும்புகின்றாய் என்றபடி. விரும்புதல் பற்றி முயற்சிபற்றி வந்ததென்றார். 86. யான். அவள் வருத்தும் பருவமுடையள் என்பதை அறிவேன். எனவே இளையள் விளைவிலள் என்னாதி; என்னை வருத்தும் பருவம் உடையள் என இரந்து பின்னின்ற தலைமகன் கூறினமையின் தன்கட்டோன்றிய வருத்தமாயிற்று. இரந்து பின்னிற்றல் - வருத்தம் (முயற்சி); இதனால் அவற்கு இளிவரல் பிறந்தது. 87. இரப்பான்போல் இளிவந்து கூறல் - வருத்தம் (முயற்சி). 88. வழிமொழியலன் என்பது - தன் மென்மைதோன்ற நின்றது. மெலியர் என்பது பிறர் மென்மைதோன்ற நின்றது. 89. ஒரு கையுடையது - யானை. எறிவலோ என்றமையான். எறிதல் வீரத்திற்கு இழுக்காகும் என்றபடி. 90. இவ்விளிவரல் தன்கண் பிறந்ததுமன்று; பிறன்கண் பிறந்ததுமன்று. வீரத்தின்கண் பிறந்தது என்றபடி. என்றது தனக்கும் இகழ்ச்சியாகாது யானைக்கும் இகழ்ச்சியாகாது வீரத்திற் கிகழ்ச்சியாமென்றபடி. இவ்விளிவு இரண்டிடத்தும் இல்லை. வீரத்திலுண்டு என்பது கருத்து. செயலால் வந்ததாகலின் வீரத்தில் இழிவுதோன்றும் என்க. விலங்காமென மதவேழமு மெறியான் என்பது சிந்தாமணி. 91. கண்டோர் பலருள் தனக்குமாத்திரம் நீர்வரா கண்ணொடு நெகிழ்தோளானமை. புதுமை, ஆதலிற் புதுமைபற்றிய வியப்பு. புதுமை - முன்னில்லாதன தோன்றினமை. 92. தலைவி தலைவனொடுபட்ட தன் நட்பின் பெருமையைக் குறித்து வியந்தமையின் தன்கட்டோன்றிய பெருமை வியப்பாயிற்று. தலைவன் தன்னிடத்து வைத்த நட்பின் பெருமையைத் தலைவி வியந்ததாகக் கொள்ளுங்கால் பிறன்கட்டோன்றிய பெருமை வியப்பாமென்றபடி. 93. இது பேதையினது இடையின் சிறுமையை வியத்தலின் சிறுமை பற்றிய வியப்பாயிற்று. 94. இது தன்கட்டோன்றிய ஆக்கம் என்றது நரிவெரூஉத்தலையார் சேரமான் ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறையைக் கண்டபொழுதே சாபம்நீங்கித் தமக்கியல்பான உடம்பைப்பெற்று ஆக்கம் அடைந்தமையை (புறம் - 5). 95. சிறிது வித்துப் பெரிய மரமானது ஆக்கம். 96. கிண்கிணி களைந்தகால் என்றமையின் குழவிப் பருவமுடையான் என்பதூஉம் அவன் போர்செய்யக் காலில் கழல்கட்டி என்றமையின் அவன் பொருந்தொழில்செய்ய முயன்றமையும் பெறப்பட்டன. 97. என்னைச் சொல்லுஞ் சொல் என்பது பின்னின்றிரத்தலைக் குறித்தலின் சிறுதொழிலாயிற்று. 98. ஆக்கம் ஒன்று ஒன்றாய்த் திரிவது; புதுமை அவ்வாறு திரியா தாகலின் அதனுள் அடங்காது என்றபடி. 99. என்று படாமையின் - என்று சூத்திரப்பொருள் படாமையின். 100. மேலனவற்றையும் இனி வருவனவற்றையும் (8ஒ4 - 32) முப்பத்திரண்டா மென்றானெனின். முப்பத்திரண்டு பதினாறா மென்றும். பதினாறெட்டா மென்றும். ஒன்று ஒன்றுளடங்கக் கூறவேண்டாவாம் என்றபடி. அடங்கக்கூறல் வேண்டினமையானே இச்சூத்திரம் நான்கு வகையாகாது எட்டுவகையாம் என்றபடி. எனவே இதன் முதற் சூத்திரங்களும் எவ்வெட்டுவகையாம் என்றபடி. ஆகவே இந்நான்கு சூத்திரத்தானாய முப்பத்திரண்டும் வேறு பண்ணைத் தோன்றிய முப்பத்திரண்டும் வேறு என்றபடி. 101. ஒன்றொன்றாக்கி - ஒன்றை யொன்று ளடக்கி. ஆக்கி அடக்கி. அடக்கி என்று பாடமிருப்பினு மமையும். 102. பதினெண் கணங்களாவன; தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் பூதமும் வேதாளமும் தாராகணமும் போகபூமியினரும் ஆகாயவாசிகளும் என இவர். 103. நிரயப்பாலர் - நிரயத் தலைவர் என்றது காலன் முதலியோரை நிரயபாலகர் என்றும் பாடம். 104. அணங்கல் - வருத்தல். 105. உரும் - இடி 106. சூல் - கரு. 107. வெரூஉதும் - அஞ்சுதும். 108. எருத்து மேனோக்குறின் - கழுத்தை நிமிர்த்தி நோக்கின். வேந்து கண்டறியா என்க. அச்சத்தாற் கழுத்தை நிமிர்த்திப் பாரார் என்றமையின் அச்சச் சுவையாயிற்று. 109. இறை - அரசன். 110. ஆணை கடக்கிற்பார் யார் என்றமையின் அச்சமாயிற்று. புலவி - ஊடல். 111. ஒடுங்கிய இருக்கை என்றது. ஊடற்கஞ்சி மகளிர்போல் அவன் ஒடுங்கியிருக்கின்ற இருக்கை. 112. பொய்ச்சூள் - பொய்ச் சத்தியம். 113. தறுகண்மை - அஞ்சாமை. 114. வல்லார் முற் சொல்வல்லேனாகிய என்னை என்றது கல்வி பற்றிய பெருமிதம். 115. அடன்மாமேலாற்றுவேன் என்றது தறுகண் பற்றிய பெருமிதம். 116. பழியொடு வரூஉ மின்பம் வெஃகாமை - புகழ்பற்றிய பெருமிதம் 117. சீரை - துலைக்கோற்றட்டு. சீரைபுக்கது - கொடைபற்றிய வீரம். 118. முயக்கிடைக்குழைகவென்றமையின் முயக்கிடைக்குழையாமை வீரம் என்க. 119. இசைமையும் வேட்கையும் என்பது இசைவேட்கையும் எனவும் பாடம். சூத்திரக்கருத்திற்கதுபொருத்தம். உரைகாரர் காமமுங் கூறலின் அங்ஙனமுமிருக்கலாம். அங்ஙனேல் வேட்கை பின்வருதல் நலம். 120. முறஞ்செவி... புலிசெற்று - முறம்போலும் செவியாகிய மறைப்பு இடமாக வந்து பாய்ந்து மாறுபாட்டைச் செய்த புலியை வெகுண்டு எனவே புலி பாய்ந்து தன் உறுப்பைக் கடித்தலால் வெகுடலின் உறுப்பறையான் வந்த வெகுளியாயிற்று. 121. நேற்றுப் பகல் நீ யெறிந்தவனுடைய தம்பி. தமது குடியிலுள்ள தமையனைக் கொன்றமையின் குன்றிபோலச் சிவந்து சுழலுங் கண்ணனாயினான் என்றமையின் இது குடிகோள்பற்றி வந்த வெகுளி. குன்றி - குன்றுமணி. அகல் - மண்ணலாயினும் உலோகங்களினாலாயினுஞ் செய்யப்படும் ஒருவகைச் சிறிய பாத்திரம். அது கண்ணின்வடிவிற் குவமை. 122. வரிவயம் - வரி பொருந்திய புலி. 123. சினவல் - வெகுளல் 124. தலைமகள் வெகுட்சி - ஆறாம் வேற்றுமைத் தொகை. 125. இது - வெகுளி. 126. உவகைப் பொருள்களை ஒத்தகாமத்தொருவனும்... ஏக்கழுத் தம்மே என்னுஞ் செயிற்றியனார் சூத்திரம் நோக்கியறிக. (இளம்பூரணருரை). 127. தாதுண்ணும் வண்டினென்றமையான் நகைப்பதம் பார்த்தல் பெறப் பட்டது. நகைப்பதம் - தன்னொடு நகும் பருவம். 128. கல்வியாளர் தம்முட் கூடி மகிழ்தல் அறிவுடைமைபற்றி வந்த உவகை. 129. எடுத்தோதிய நான்கு - இச் சூத்திரத்தா லெடுத்தோதிய நான்கு. இது - இவ்வகை. 130. பொருளாகவும் வருமென்றிருப்பது நலம். போலாது என்றது; அவை நான்குந் தன்கட்டோன்றிய பொருள்பற்றி வருவதாகலின். 131. தம்மின் - தம்முள்; ஒன்றோடொன்று. 132. எண்ணியுணர - எண்ணுமுறையாக எண்ணியுணர. 133. நிதிமேல் நின்றமனம் - பொன்னின்மேல் நின்ற மனம். மனம்போல என்றமையான் மனம் வேறுபடுதல்போல என்பது கருத்தாம். மரம் போல என்னும் பாடம் பொருத்தமாகக் காணப்படவில்லை. பொருந்துமேற் கொள்க. 134. இன்புறல் - நட்டாராகிப் பிரிந்து வந்தாரைக் கண்டுழி வருவதோர் மனமகிழ்ச்சி என்பர் இளம்பூரணர். 135. நினையுந்தோறும் என்றமையின் நினைதலும் இடையிட்டு நினைதல் என்பது பெறப்படும். 136. சிவந்த சாந்தை அப்பினும் தன்னுடம்பைத் துணிப்பினும் பிளப்பினும் அதன் கண் மனம் அறிந்து செல்லாத நிலை என்றது சமாதி நிலையை. அப்பினும் துணிப்பினும் அறியா நிலை என்றதனால் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலை பெறப்படும். சமநிலை - ஒருமருங்கோடாத மன நிகழ்ச்சி என்பர் இளம்பூரணர். செத்தல் - செதுக்கலுமாம். 137. இவற்றொடு - இம் முப்பத்திரண்டோடு. 138. குந்தி மிதித்தல் - அழுந்த மிதியாது மெல்ல மிதித்தல். குந்திய நடையினர் என்பர் கம்பரும். 139. எடுத்த கழுத்து - நிமிர்த்திய கழுத்து. 140. கோல் - மூங்கிற்றண்டு. 141. கொடு மடி - வளைந்த மடி. இக்காலத்து கொடுக்கு என்பர். இலை முதலிய இடற்கு விடும் வளைந்த மடி என்பர் அகநானூற்றுரைகாரர். 142. வீளை - சீழ்க்கை. 143. தானை மடக்கல் - உடையை ஒதுக்கல். 144. சூழ்ச்சி - எண்ணம் (சிந்தித்தல்) என்பர் இளம்பூரணர். 145. வாழ்த்தல் - வாழ்த்தப்படுதல். வாழ்த்தல் - பிறரை வாழ்த்தல் என்றும் மனநிகழ்ச்சியாதலின் மெய்ப்பாடாயிற்று என்றும் இளம்பூரணர் கூறுவர். 146. இதனைக் கலிங்கத்துப்பரணி நோக்கியறிக. 147. உறையுள் முனியும் - உறைதலை வெறுக்கும். உறைதல் - இருத்தல். 148. மையல் - மயக்கம். 149. இகழ்ச்சி - சோர்வு 150. பொருள் தன்மை எனப் பிரிக்க. 151. சொல்லின் முடியு மிலக்கணமென்றது அவ்வச் சொல்லானே அவ்வவற்றி னிலக்கண முடிந்து கிடத்தலை. 152. தலைவன்நோக்கெதிர் தானும்நோக்கித் தன்னைப்பார்த்தலை விரும்பல். 153. நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் என்றதனுள் நகும் என்றதனால் தன்னை நோக்கலை விரும்பினாள் என்பது பெறப்படும். 154. இவ்வுதாரணம் பொறிநுதல் வியர்த்தற்குணம் அவட்குண்டென்ற அத்துணைக்கே யுதாரணம். 155. நகை மொக்குள்:- நகை முகிழ்ப்பு. வெளிப்படாத நகை. தனக்குண்டாய நகையைத் தலைவி நாணத்தாலும் உட்காலும் மறைத்தாளாகலின் அது பிறர்க்கு வெளிப்படாதாயிற்று. அந்நகை தலைவற்குச் சிறிது தோன்றினமையின் மெய்ப்பாடாயிற்று. 156. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலுள்ள தலைமகட்குரித்தன்று என்னும் பாடமும் அவட்காயின் என்னும் பாடமும் பொருத்த மில்லை. தலைமகற்குரித்து என்னும் பாடமும் அவற்காயின் என்னும் பாடமுமே பொருத்தம். இது. சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம். 157. கூறிற்றாலெனின் என்றிருப்பதே நலம். 158. அவ்வாறு கூறுதல் - மெய்ப்பாடு எனக் கூறல். கூறினான் என்றது இந் நூலாசிரியனை. கூறினாள் என்று பாடங் கொண்டு அவ்வாறு என்பது நக்க என்பதைச் சுட்டிற்றாகக் கோடல் நலம். 159. தலைவன் தன் மனச்சிதைவு உணர்த்தினல்லது தலைவி போல மறைக்குமளவு சிதைவு நிகழாமையின் என்றபடி. எனவே இவற்குச் சிதைவு பெரிதுண்டாகுமென்பது கருத்து. 160. நகைமொக்குளும் நகுநய மறைத்தலில் அடங்குமென்றபடி. என்னை? புறத்தார்க்குப் புலனாகாது அரும்பிய நகையாதலின், அது தலைவற்குப் புலனாமென்றபடி. 161. தலைமகன் ஏதுவாவதல்லது என்பதே பொருத்தமான பாடம். கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலுள்ள தலைமகள் என்பது பொருந் தாது. அவட்கு என்பதும் பொருந்தாது. என்னை? தலைவிகண் கூழைவிரித்தல் முதலியன நிகழ்தற்குத் தலைமகன் காரணமாவ தன்றி இவை அவன்கண் நிகழா என்பது கருத்தாகலின். இக்கருத்தே பொருத்தமென்பதைப் பதினைந்தாஞ் சூத்திர விரிவுரைநோக்கி அறிக. 162. தாங்கும் - அடக்கும். மறைக்கும் 163. பிறசுவை என்றது மதுரச்சுவையை. 164. செவ்வனிற்றல் - நேர்நிற்றல். 165. போலக் கொள்கை என்பதை, போல இதனையுங் கொள்க என விரித்துக் கொள்க. யாழிசை முதலிய மதுரச் சுவைபற்றி உடம்பு குற்சிதங்கொள்ளும். அதனால் மயிர் நேர்நிற்குமென்க. இதனை இக்காலத்து மயிர் கூச்செறிதல் என்ப. 166. விரித்தல் என்பது விரிதல் என்றிருத்தல் வேண்டும். விரிதல் - சினைவினை. விரித்தல் - முதல்வினை. 167. பெய்துவைத்தல் - இட்டுவைத்தல். 168. மற்று அசை. 169. அவை - அத்தோடு முதலியவை நிரம்பத் தோன்றாமையின் ஒன்று வீழ்ந்தது என முடிக்க. 170. ஊறு - பரிசம். 171. உறவு - பரிச உணர்ச்சியின் மிகுதியாலான தொடர்பு. 172. கூழை - பெய்துகட்டுவது; சொருகிக்கட்டுவது என்றபடி. 173. தோடு - காதிற் பெய்வது. அதுபற்றியே போலப் பெய்யப்படு மென்றார். 174. விரற்செறி - மோதிரம். 175. செறிவில்லன அன்மையின் எனவே அதினுஞ் செறிவுடையன என்றபடி. 176. கவாஅன் - மலைப்பக்கம். 177. பாடாண்கைக்கிளை - ஒரு ஆண்மகனது வீரம் அழகு முத லியவற்றைப் புகழ்ந்து பாடுவது. 178. அதனை - அவ்வுடையின் சோர்வை. 179. அற்றம் - இரகசியத்தானம். அஃது அற்றமறைத்தலோ புல்லறிவு என்னுந் தேவர் குறளின் அடியின் உரை நோக்குக. சோர்வுமாம். 180. கடிசூத்திரம் என்பது அரைப்பட்டிகை என்று இக்காலத்து வழங்குவதுபோலும். முதலாயின என்றதனால் மேகலை முதலியன வுங் கொள்ளப்படும். 181. இற்பிறத்தல் - உயர்குடிப் பிறத்தல். 182. அதன்வலி - அவ் விற்பிறப்பின்வலி. இஃது இளம்பூரணர் கருத்தாகலின் அவர் கருத்தையே ஈண்டும் பேராசிரியர் சொல் லுப எனக் குறித்திருத்தல் வேண்டும். ஆதலின் இற்பிறத்தலான் அதன்வலி எனக் கண்ணழித்தலே பொருத்தமாம். ஏனைப் பாடம் சிறப்பின்று. 183. முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறின் என்பதில் யாதோ பிழையிருத்தல் வேண்டும். 184. படைத்தல் - உண்டாக்கல். என்றது உள்ளதை இல்லது போலக்காட்டல். 185. சொல்லிய - இங்கே சொல்லப்பட்ட என்பது கருத்து. இவை யெல்லாம் தலைவிகண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படுவதல்லது இவற்றின்கண் தலைவிக்குச் சொன்னிகழ்தல் வேண்டிலவென்பது. எனவே இவை தலைவிகண் நிகழ்ந்தனவாகச் சொல்வதல்லது இவை குறித்துத் தலைவிக்குச் சொன்னிகழ்ச்சி இல்லை என்றபடி. 186. அவ்வேறுபாடு - உடம்பின் வேறுபாடு. 187. அற்றப்படுதல் - உடை சோர்வுபடுதல். இஃது அற்றம் படுதலின் என்று மிகுந்திருக்கலாம். 188. நூல் - ஞாண் (கயிறு) கலிங்கம் - வதிரம். இக்காலத்து உடுக்கும் பாவாடை போன்றதுபோலும். 189. தாமியைந் தெழுதல் - தோள்கள் தாமாக வயைந் தெழுதல் என்க. இயைதல் - உடன்படல். 190. தன்வயத்தவாதல் - தோள்கள் தாமே எழுதல். 191. உழுவலன்பு - பேரன்பு. 192. இயல் - ஒழுக்கம். 193. அறிமடம் - விளையாட்டையே அறியு மடமை. என்றது அதனையே பற்றிநிற்கும் அறிவுடையளாதலை. 194. மேலையோத்து - களவு கற்பு முதலியன. ஆண்டுக் காட்டிய சூத்திர உதாரணங்களுள் தோழிக்கு அறிமடம் நீங்க உரைத்தமை காண்க என்றபடி. 195. கையுறை மறுத்தன் முதலியன. 196. ஈரமில் கூற்றம் - அன்பில்லா மொழி. 197. சொற்கொளலின்றி - தோழி தன்சொல்லைத் தலைவி கொள்ளுதலின்றியென்றமையினாலே. தன் மடமை நீங்கத் தலைவி சிலசொற் கூறினாளென்பது பெறப்படும். அதனால் மடந்தப உரைத்தலாயிற்று. 198. துயர்மருந்தென்றதனால் அவள் கொள்ளத்தக்கது என்பது பெறப்படும். 199. பின்னொருகாலத்து மறுத்தாள் என்பது பின்னொருகால் அதனை மறுத்தாள் என்றிருப்பது நலம். 200. தலைமகனொடு என்றும் பாடமுளது. அதுவே பொருத்தம். தலைமகள் என்பதும் தலைமகளிடை என்றிருத்தல் வேண்டும். 201. பட்டாங்கு - உண்மை. 202. தலைமைசெய்தல் - தன்னெண்ணங்கொண்டு நடத்தல். 203. ஏதமிட்டு - குற்றமேற்றி. 204. துணிந்தும் துணியாதும்; அவள் ஏதத்தை (களவினை)த் துணிந்தும் துணியாதும். 205. பட்டது - நிகழ்ந்தது. 206. குறிப்பு - சொல்லவேண்டிய குறிப்பு. தெரிந்து - ஆராய்ந்து. உடன்படல் - அறத்தொடு நிற்றல். 207. திளைப்புவினை - கூட்டம். 208. தன் இடம் - தனக்குரிய இடம் 209. ஞான்று - நாள். 210. பொருந்திய நான்கு - தம்முட்டாம் இயைபுடைய நான்கு. இடையறவு - இடைவிடல். ஒவ்வொரு கூறாகச் செய்யப்பட்ட நந்நான்கும் தம்முட்டா மியைபுடைய என்பான் பொருந்திய நான்கென்றான் என்பது பொருந்திய நான்கு என்பது சிங்க நோக்காக முன்னும் பின்னும் இயையுமென்க. 211. இவை நந்நான்கு என்றது முற்கூறிய நான்கன் கூட்டங்களையுஞ் சேர்த்துக் கூறியதாகும். 212. வருகின்றதற்கு என்றது நான்கு நான்காகக் கூறிய ஒவ் வொன்றற்கும் பின் வருவன. அது பின்னர்ப் பேராசிரியரால் விளக்கப்படுகின்றது. 213. பனித்தலென் றறிவுறுத்தாள் என்பது பனித்தலின் அறிவுறுத்தாள் என்றும் பாடமுள்ளது. அதுவே பொருத்தம்; என்னை? பனித்தல் அறிவுறுத்தற்கேதுவாகலின். 214. குறிப்பு - உவகையையுணர்த்துங் குறிப்பு. 215. கூறியது - தோழி என்க. 216. புறத்தே கோலஞ்செய்வோர் - செவிலி முதலாயினோர். அகத்தே தலைவிக்குச் சிதைவுண்டாயதற்குக் காரணம் அக்கோலத்தைத் தலைவன் காண்டலை நினைத்தமை என்க. 217. காணாதவழி - தலைவனைக் காணாத வழி. 218. துணை - தலைவன். கழிய - காலங்கழிய. 219. தனிமை - தலைவன்பால் அறிவு கிடந்தமையானுண்டாயது. எனவே சுற்றத்தாரிடை நின்றும் அவரிடை நில்லாதவள் போல அவரை மறந்து நிற்றல். 220. வன்புறை - வற்புறுத்தல். எதிரழிந்து கூறல் - தோழி வற்புறுத்தவுங் கேளாது எதிரழிந்து சொல்லல். 221. இதனினூங்கு - இதனின் மேற்பட. 222. நற்காமம் - அன்புடைக் காமம். 223. கையறவுரைத்தல் என்பது உடைமையின் இறப்பத் தோன்றுவன மெய்ப்பாடாகலான் அவை ஏலா என இயைக்க. உடைமையின் ஏலா என முடியும். 224. மன்றத்திருந்த சான்றவரறியக் கூறுவதை. கலி. 142ம் செய்யுள் நோக்கியறிக. 225. மாற்றம் - சொல். 226. யாழோர் கூட்டம் - கந்தருவ மணம். யாழோர் கூட்டத்தினை என்ற பாடமே பொருத்தமாதல் காண்க. 227. பொருட்டொடர்நிலை என்பது கோவை என்னும் பிரபந்தத்தைக் குறித்ததுபோலும். 228. அலம்வரல் - கழற்சியுறல். 229. வினை - காம ஒழுக்கம்; வினைய நிமித்தம் - காம ஒழுக்கத் திற்குரிய நிமித்தங்கள். நிமித்தம் - ஏதுவான மெய்ப்பாடுகள். 230. அஃது - கந்தருவ ஒழுக்கமாகிய அஃது. இடையறவு படாமை - அன்பு இடையில் அற்றுப்போகாமை. எனவே ஏனைய இடையறவு படும் என்றபடி. 231. மன்னியவினை - அன்பு நிலைபெற்ற காம ஒழுக்கம். எனவே ஒத்தகாமம் என்றவாறு. 232. புலனெறி வழக்கம் - செய்யுள் வழக்கம். அஃது அல்லாத கந்தருவமணம் - உலகியலான கந்தருவ மணம். 233. இதழ் மொக்குளுட்டோன்றுவது - உதட்டினுட் டோன்றுவது. என்றது இதழ்க்குவிவுட் டோன்றுவது என்றபடி. 234. அமர்த்துநோக்கல் - விரும்பி நோக்கல். மாறுபடநோக்கல். கண்டாருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் - பேதைக் கமர்த்தன கண் (குறள் - 1084) என்பத னுரை நோக்குக. 235. நிலங்கிளைத்தல் - காற் பெருவிரலால் நிலத்தைக் கிளைத்தல். கிளைத்தல் - தோண்டுதல்; கீறலுமாம். 236. ஆணை - ஆசிரியன் கட்டளை. 237. உள்ளனவற்றிற்குக் கொண்டு எனவே, இல்லாதனவற்றிற்குக் கொள்ள வேண்டுவதில்லை என்றபடி. பொறிநுதல் வியர்த்தற்கண் அடங்குவன இல்லை. ஆதலால் உள்ளவற்றிற்கே கொள்க என்பது கருத்து. 238. ஐயம் - தலைமகளை ஐயஞ்செய்தல். ஐயம் முதலிய மூன்றும் கந்தருவ மணத்தின் முன்னிகழும் காட்சிக்குப் பின் னிகழ்வன. 239. முன்னைய மூன்று - ஆகரம். இராக்கதம், பைசாசம். 240. நிலத்தான் முல்லையெனவே ஒழுக்கத்தாற் கைக்கிளை என்றபடி. ஏறும். ஆயரும் முல்லைக் கருப்பொருள்கள். குரவையாடல் அந்நிலத்தார் தொழில். 241. நுண்ணிதின் மகிழ்ந்தன்று என்றதனால் நகுநயம் மறைத்தலாயிற்று. நுண்மை - நுட்பம். 242. புறஞ்சாய்ந்து காண்டைப்பாய். நெஞ்சே என்பது சிதைவு பிறர்க்கின்மை. என்னை? தன் நெஞ்சிற்குச் சொல்லினமையின். 243. நோய் சேர்ந்த திறம் - நோவு சேர்ந்த திறம் என்பது நச்சினார்க் கினியருரை. நோதிறம் என்று பரிபாடலும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. சிலப்பதிகார உரையாசிரியர் நொந்த திறம் என்பர். சிலர் நோ திறம் வேறு. நோய்திறம் வேறு என்பர். ஆராய்ந்துணர்க. நோதிறம். பாலைப்பண் ஐந்தனுளொன்று. அது, - தக்கராகம் நோதிறம் காந்தாரம் பஞ்சமமே, துக்கங் கழிசோம ராகமே - மிக்கதிறற். காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார். பூந்தா ரகத்தியனார் போந்து என்பதனாலறியப்படும். 244. பெண்களுக்குரிய மடமை தீர்ந்து அறிவொடு கூடிச் சொன்னதனால் மடந்தப வுரைத்தலாயிற்று. 245. தலைவி உடன்போவதைப் பாராட்டியதனால் பாராட் டெடுத்தலுள்ளும். உய்கம் ஒழிகம் என்றதனால் மடந்தப வுரைத் தலுள்ளும் அடங்கும் என்க. 246. மேற்கூறிய 24 மெய்ப்பாடும் அதிகாரப்பட்டு நின்றமையின் இன்மையுமுரித்து என்பதற்கு அவை செயப்படுபொருளாக வருவிக்கப்படும் என்பது கருத்து. 247. முயங்குதொறு நகை தோன்றிற்றெனவே முன்னுயிர் மெலிவாகிய ஆற்றாமை யுடையளாயினாள் என்பது பெறப்படும். நோய் தணி காதலர் என்பதனானும் அது பெறப்படும். 248. அவன் காணாதவிடத்திருத்தலின் ஆண்டு உவகை கொள்வ தன்றிக் கூறாள் என்பது கருத்து. 249. நிமித்தம் - காரணம். 250. தொடி - நெகிழ்ந்தன என்பது ஊழணி தைவரல். 251. பத்துக்கூறு இவை என்பதை இளம்பூரணருரையில் 262ம் சூத்திர உரை நோக்கியறிக. 252. இன்பமாதற்குரிய வன்மையின் - நடுவணைந்திணைக்குரிய வன்மையின். 253. அவையும் என்னும் பாடம். இவையுமென்றிருப்பதே பொருத்தம். அவை யல்லாதவிடத்து இவையுமுள எனப் பின்வரு முரையையு நோக்குக. அன்றியும் வருஞ் சூத்திரத்து அவதாரிகையையு நோக்குக. அவையு முளவே யவையலங்கடையே என்பது இளம்பூரணர் தம்முரைக்கேற்பக் கொண்ட பாடம். அவர் இதற்குக் கொண்ட வுரையாவது:- அவையலங்கடை - நடுவணைந் திணையல்லாத கைக்கிளைப் பொருட்கண் - அவையுமுள - மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதன் முதலாயினவுமுள என்பது. இவ்வுரையில், அவை என்றது மேற்கூறிய மெய்ப்பாடுகளைக் குறிக்கின்றது. பேராசிரியருரையில் அவை மேல்வருஞ் சூத்திரப் பொருளைச் சுட்டுவதாகக் கொள்ளவேண்டும். மேல் வருவன வற்றை அவை என்று சுட்டல் வழக்காறன்மையின் இவை என்ற பாடமே பொருத்தம் என்க. இவை என்பது அவை என வேறு பாடுணராதோரால் திருத்தி எழுதப்பட்டது. 254. நலத்தகநாடல் - நன்மைதக ஆராய்தல். நன்றாக ஆராய்தல். 255. அவை - யாழ் குழன் முதலியன. இவை இன்பத்திற்கேதுவாய பொருள்கள். 256. வருத்தாக்கால் நீ சொன்னவாற்றை நிச்சயித்திருப்பேன்; வருத்துவதால் அவ்வாறு இருக்கமாட்டேனாயினேன் என்றமையின் குழலை வெறுத்துக் கூறியதாயிற்று. ஆதலின் இன்பத்தை வெறுத்தலாம். 257. துஞசாகாணென என்றமையான் அன்றிலிசையை வெறுத்தமை தோன்றிற்று. அது காமத்தை மிகுத்தலான் பின் புணர்ச்சிக் கேதுவாதலுங் காண்க. 258. கரக்கும் - அழித்து மறைக்கும். 259. நீந்துமோ எனவே நீந்தமாட்டாமை பெறப்பட்டமையின் துன்பத்துப் புலம்பலாயிற்று. 260. இக்காலம் - வரவில்லையென்று உணர்ந்த இக்காலம் (விடியற் காலம்) என்க. பிற்காலத்தாகலான் எனவும் பாடம். அது நன்கு பொருந்தும். 261. இன்னவாறு பட்டதன்று - இவ்வாறு வாராதென்று பட்டதன்று. வருவதுபோலவே பட்டது என்றபடி. 262. நொதுமலர் - அயலார். 263. பருவரல் - துன்பப்படல். 264. பழங்கண் - துன்பம். 265. உண்ணலுஞ் செய்யேன் வாழலுஞ் செய்யேன் என்பது பொருள். 266. என்னை - எனது தலைவன். 267. திதலை - தேமல். 268. என் மாமைக் கவின் பசலையுணீயர் வேண்டும் என்பது பசலை பரத்தலைக் கருதிநின்றது. மாமை - மாந்தளிர்போலும் நிறம்; அது பசலையாலுண்ணப்படவேண்டும் என்று கூறினமையின் பசலை பரத்தலைக் கருதியதாயிற்று. 269. தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும் என்றமை உணவின் வெறுப்பைக்காட்டலின் உண்டியிற் குறைதல் பெறப்பட்டது கைக்கும் - வெறுக்கும். 270. சாய்தல் என்பது உடம்பு நனி சுருங்கலைக் காட்டிற்று. 271. அரிதினில் துயிலெய்தல் - அரிதாக உறங்கல். பொய்யுறக்கம். 272. கனவினெய்திய செல்வம் பொய்யாதல்போல நின்மார்பும் பொய்யாயிற்று என்பது மெய்யைப் பொய்யாகக் கோடல். அவன் மார்பை மெய்யாகப்பெற்றும் அரிதாதல் நோக்கிக் கனவின்கண் எய்திய செல்வமாயிற்றென்பது பொய்யாகக் கோடல். 273. மெய்யேயென்றல் என்பது தன் பொய்யான கருத்தை மெய்யென்று துணிதல். 274 . அழுங்கல் - தவிர்த்தல். 275. அயர்ந்ததன்மணன் - செய்ததன்மணம்; என்றது பரத்தை மணத்தை. பழங்கண்ணோட்டம் என்றதனானும், நலிதா என்றதனானும் பொய்யே புகுந்தான் என்று கருதினாள் என்பது பெறப்படும். பழங் கண்ணோட்டமும் என்பதும் பாடம். அதிலுள்ள உம்மை இழிவு சிறப்பு. 276. அவன் றமர் என்றது பாணன் முதலியோரை. 277. அவன்தமர் என்றது ஈண்டுப் பாணனை. 278. உந்தி - ஆற்று வெள்ளம். 279. அவன் நாட்டு ஆற்றுவெள்ளத்தோடுவருங் காந்தட்கிழங்கை உவந்தமையின் அவன்றமர் உவத்தலாயிற்று. அவன் நாட்டுக் காந்தளாதலின் தமராயிற்று. 280. பல்லியைப் பரவினமையின் அறனளித்துரைத்தலாயிற்று. பல்லியில் அதிட்டித்து நின்று சொன்னது தரும தெய்வமென்று கொண்டு அன்புசெய்து அதனைப் பரவினாள் என்க. அதிட்டித்து நின்று சொல்லுவித்தமையின் அத்தெய்வத்தைப் பரவினாள் எனினுமாம். 281. மெய் - பொருள். 282. காமருநோக்கு - விரும்பப்படும் அழகு. தந்தையேபோல்வான் மகனாதலின் காமருநோக்கென்றாள். பெரும என்றது மகனை. மகனைத் தந்தையொடு ஒப்புமைகண்டு உவத்தலின் ஒப்புவழியுவத்தலாயிற்று. 283. பால்கொளல் - ஒருபக்கஞ் சாய்தல். 284. பகல் - நுகத்து நடுவாணி. 285. மற்று - கோலின் செம்மையல்லாத பிறகுணம். 286. வெற்பனைப் பாடுகம்வா என்றது பெயர்கேட்டு மகிழ்தலைக் குறித்து நின்றது. 287. திறமென்றது - அவனழகு முதலியவற்றை. அதுவும் அவன் புகழ்குறித்து நின்றது. 288. காண்கு - காண்பேன். 289. மாய்ந்தான் - மறைந்தான். கனவிலே கணவனைக் கையாற் பற்றிக் கொண்டவளாக் கண்டு பின் விழித்துப்பார்த்துக் காணாமையின் கலக்கமுற்றாள். கனவிற் காணப்பட்டுப் பின் மறைந்தான். என்றதும் முந்நீர் இறைப்பேன் என்றதுஞ் சொல்லத்தகாதன. 290. வேறு பெயர்த்து வைத்ததென்றது - முன்னையவற்றோடு ஒருங்குவைத்தெண்ணாமையை. 291. இக்காலத்து - களவுக்காலத்து. 292. எவ்வி - ஒரு வள்ளல். 293. யாரள் - எத்தன்மையள். 294. விலங்கல் - குறுக்கிட்டுத் தடுத்தல். 295. முற்காலத்துப் பாலைநிலத்தெதிர்ப்பட்டு வருந்தினமையைப் பின்னும் போக்குவலித்த நெஞ்சிற்குக் கூறினமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. 296. வழக்கு - உலகவழக்கு. 297. வரைந்தெய்துகூட்டம் - மணச்சடங்குசெய்து புணரும் புணர்ச்சி. 298. பன்முட்டின்று - பல முட்டுப்பாட்டையுடைத்து. முட்டுப்பாடு - தடை. இது முட்டுவயிற் கழறல். 299. கழறல் - இடித்துக்கூறல். 300. முனிவுமெய்ந் நிறுத்தல் - தலைமகள் தன் வெறுப்பை வெளிப்படக் காட்டிநிற்றல். 301. இன்னுயிர் கழிவதாயினுஞ் சொல்லாதீம் என்றதனால் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூறியதாயிற்று. இச்செய்யுள் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 302. வாழ்க்கை - உயிர்வாழ்க்கை. 303. ஏதம் - தீங்கு; என்றது வரும்வழியின்கட் டீங்கை. நீங்கல் - பிரிந்திருத்தல். 304. வலித்திருத்தல் - நெஞ்சைத் திடப்படுத்தியிருத்தல். 305. அது - திளைப்பு வினைமறுத்தல். 306. இது - அவன் புணர்வு மறுத்தல். 307. கடாவுதற் கருத்தென்றிருப்பதே பொருத்தம். 308. மெல்லி யாளொரு நாள்வா ழலளே எனவும் பாடம். 309. முனிவின்மை - வெறாமை. 310. அலவன் - ஞெண்டு. 311. இற்றி - ஒருமரம். 312. நெய்பெய்தீ சுவாலித்தெழின் யார்க்குந் தெரியும். அதுபோல வெளிப்படவந்தெதிர்கொள்ளல். கற்பிற்கல்லது களவிற்கின்று என்றபடி. 313. என்மலைந்தனன் - என்ன காரிய மேற்கொண்டு வந்தான். 314. பூங்கண்படுதலு மஞ்சுவல் - கனவிலடையுந் துயரத்தாலான கேடு மலையினும் பெரிதாகலின் கண்படுதற்கும் அஞ்சுவேன் என்பது கருத்தாகலின் இதுவுந் துஞ்சிச்சேர்தற் கருத்துளடங்கும் என்றபடி. இது தோழி கூற்று. தலைவி கண்படுதற்கும் அஞ்சுவேன் என்றதனால் பிரிவையாற்றாது துயிலின்றி மடிந்து கிடக்கின்றாள் என்பது பெறப்படும். ஆதலிற் றுஞ்சிச்சேர்தல் ஆயிற்று. * நயந்தன்று எனவும் பாடம். 315. இச்செய்யுள் குறுந்தொகையுள் வேறுதுறைக்கு உதாரணமாகின்றது. பேராசிரியர் வரைவுகடாதற் கருத்தென்று கூறலின் இவர் வேறுதுறையாகக் கொண்டனர் போலும். வரைவு கடாதல் என்பது வரைவு வேண்டல் என்ற கருத்துப்போலும். வரைவுகடாவல் தோழிகூற்றாகலின். இளம்பூரணரும் வரைவுவேண்டலென்று கொள்ளுகின்றார். என்று உ.வே. சாமிநாதையரவர்கள் தமது குறுந்தொகையுரையுட் கூறியுள்ளார். ஆயின் வெளிவந்த இளம்பூரணர் உரையுள் அவ்வாறு காணப்படவில்லை. உரைகளையும் பின்னுள்ளார் ஏட்டுப்பிரதிகளில் திருத்தி எழுதி யுள்ளார்கள் போலக் காணப்படுகின்றது. 316. உரை - அவ்வவ்வாக்கியம். 317. அழிவில்கூட்டம் - இடையறவுபடாத கூட்டம். என்றது கற்பினை. மனமழிவில்லாத கூட்டம் என்பர் இளம்பூரணர். 318. ஏதம் - தீங்கு. 319. கனலி - ஞாயிறு. இது தெய்வம். 320. அவற்கில எனவும். அன்ன எனவும் என்னும் பாடங்களிற் சிதைவு இருத்தல்வேண்டும். அவற்கிவளென வினவுவளென்று தாம் வேண்டிய என்றும் பாடம். கேள்கேடூன்றவும் (அகம். 93) என்றும், இல்லோர்க்கில்லென எனவும் வருதலின், அவற்கிவளென என்பது தமர்க்கிலவென என்றாதல். இரவலர்க்கிலவென என்றாதல் இருந்திருக்கலாம்போலும். 321. அச்சு - அச்சம். 322. உணரிய - உணர்த்த 323. புரைதல் - ஒத்தல் - இயைதல். 324. கூந்தற்கடவுளரென்று - பரத்தையரை. 325. பிறர்கூறும் பழிக்கு அஞ்சிவந்தாயென்றது இச் செய்யுளில் வெண்குருகஞ்சி என்ற இறைச்சியாற் பெறப்பட்டது. 326. அவள் - பரத்தை. 327. விருந்தேற்றுக்கொள - அவள் உன்னை விருந்தாக ஏற்றுக்கொள்ள. 328. அது என்றது உள்ளதுவர்த்தலை. அவன் தன்பால்வந்த துண்மையாகவும் பரத்தை வரக்காணாமையின் வந்தாய் என்றமை யின் அன்னதாயிற்று. 329. இல்லதை யுள்ளதாக்கிக் கூறலும் விகாரம். உள்ளதை இல்லதாக்கி வெறுத்துக் கூறலும் விகாரம். 330. செய்வனசென்ற - செய்வனவற்றிற் சென்ற. செய்வன - மேனி கூடல். கரணமுமாம். 331. பொழுதை மறுத்தலாய ஆக்கம். மறுத்தல் - நீக்கப்பெறல். மறுத்தகாலம் - கற்புக்காலம். 332. பிறை - மாதப்பிறை; கார்த்திகைப் பிறையுமாம். 333. இனியர், பிரிபறியலர் என்றமையின். அன்பின்மிக்க அருளாயிற்று. 334. என்ன கடத்தள் - என்ன கடமையினள். எனவே யாம் கடமையே மென்பது பெறப்பட்டது. 335. மறைந்தவை - களவினிகழ்ந்தவை. மறைவு - களவு. 336. முன்னிலைப்புறமொழி - முன்னிலையில்வைத்துப் பிறரைக் கூறுவதுபோலக் கூறுமொழி. 337. மறைந்த ஒழுக்கம் - களவொழுக்கம். 338. அலர் - பரத்தைவீடு சேறலால் வரும் பழிமொழி. 339. பத்தும்தொகைஇயெனவே பதினொன்றென்பது பெறப்படும். 340. ஊராண்மை - உபகாரியாந்தன்மை. பேராண்மையென்ப என்னு முதலையுடைய குறளுரை நோக்குக. 341. ஆள்வினை - முயற்சி. 342. குடியாண்மை - குடியையாளுதல். 343. இவ்வுரையால் பரிமேலழகர் பிந்தியவர் என்பது புலனாகின்றது. பரிமேலழகர் வேறுரை கூறி இதனை அநுவதித்துக் கூறலின். 344. வினையுளுடைமை - தீவினைக்காலத்தும் செல்வம் உடையர் போலிருத்தல். 345. நான்கு - நான்குவருணத்தும் பெண்கோடல் உரித்தாதல். ஏனையவுமன்ன. 346. இருவரும் வேடசாதியிற் பிறந்தமைபற்றிப் பிறப்பொப்புமை என்றார். நச்சினார்க்கினியர் இதனைக் குலத்திற் சிறிதுயர்ந்தானா யினும் ஒப்பாமென்றது கானகநாடன் என வந்தமையிற்போலும். கலி-39 உரை நோக்குக. 347. மனைமாண் சுடரொடு என்றமையான் இல்லற நிகழ்ச்சி பெறப்பட்டது. 348. யாண்டு - பருவம். என்தோள் எழுதிய என்றதனானும், மைந்துடை மார்பு என்றதனானும் பருவம் பெறப்படும். எழு தற்குக்காரணம் தோளிற்கொண்ட விருப்பமாதலின் பருவம் பெறப்படும். மைந்துடைமார்பு என்றதனால் தலைவ னிளமை பெறப்படும். 349. நல்லேன் என்று தருக்கிய என்றதனால் உருவாலாகிய மெய்ப்பாடு பெறப்படும். 350. பன்மாணோக்கி என்றதனானும். அவன் மறைதேஎம் நோக்கி என்றதனானும் உருவுநிறுத்த காமவாயில் என்பது பெறப்படும். 351. சேயேன் - தூரியேன். உறவில்லாதேன். அவன் துயர்கண்டு துயருழப்பேன் என்றதனால் தோழியின் நிறையுடைமை பெறப்பட்டது. என்னை? அவன் துயருக்கிரங்கித் துயருழந் தமையைப் பிறரறியாமை மறைத்தமையின் இதுவும் முன்னதுந் தோழி கூற்றாதலின் இவ்வுதாரணங்கள் சிறப்பின்று. 352. நமக்காயின் நின்வருத்தத்திற்கு நானும் வருந்தினேனென்று கூறல் பெண்டன்மையன்று என்றமையின் இதுவும் நிறையாயிற்று. என்னை? தன்வருத்தத்தை மறைத்தமையின். 353. தாதுண்பறவை - வண்டு. அதன் வருத்தத்திற்கஞ்சினானெனவே அருள் பற்றியதாயிற்று. 354. இது தலைவி கூற்று. தனது வேட்கையையுடைய உள்ளத்தில் நமது வேட்கையும் வாய்ப்ப, என்றதனால் இருவர் வேட்கையு மொத்தவாறு காண்க. இது பேராசிரியர் கருத்து. அகநானூற்றுக் குறிப்புரைகாரர் வேறுபொருள் கூறுவர். 355. புலன் என்பது கல்வி பற்றிய அறிவாதலின் அது வேறு என்றபடி. 356. உழுந்து - உழுத்தம் பணியாரம். துவ்வா - அநுபவிக்கப்பட்டு இருக்கிற இருக்கிற என்பது சொல்லெச்சத்தான் வருவிக்கப்பட்டது. கலி - உரை நோக்குக. 357. கூனுங் குறளுமாதலின் பிறப்புவகையுளடங்கின. * இளம்பூரணர் இவை தலைமகன்மாட்டு நிகழாத மெய்ப்பாடுகள் என்பர். இருவர்கண்ணு நிகழாதன என்று கூறுவாரு முளர். எது பொருத்தமென்பது சங்க இலக்கியநோக்கி ஆராய்ந்து கொள்ளத்தக்கது. 358. பொறாமை - பொறுத்திராமை. அது சிறிது பொறுத்தாய் என்றதனால். பொறுத்திராமை தோன்றிற்றுப்போலும். 359. கடைப்பிடி - உறுதி. 360. இன்றிவரும் மெய்ப்பாடு எனவே இவை தலைமகன்கண் நிகழா என்றபடி. 361. இரண்டறிகளவி என்னும் பாடத்திற்கு இருவேறொழு கலாற்றை அறிந்த கள்ளத்தன்மையுடையாள் என்பது பொருள். இரண்டறிகளவின் என்னும் பாடத்திற்கு இரண்டாந்தன்மையள்;; அறியப்படுங் களவின்கண் என்பது பொருள். இரண்டாந்தன்மை - நம்மோ ரன்னளாதலும், தமரோரன்ன ளாதலும். மெய்ப்பாட்டியல் உதாரணச் செய்யுளுரை 252-ம் சூத்திரம் 1. (அவன்றான் குறையுற்று நிற்கின்ற காலத்து) யான் தன்னை இகழ்ந்து சிரித்தாலும் பலகாலும் வருவான். இது தோழி தலைவிக்குக் குறை நயப்பித்தது. (கலி. 61) 2. (மனைப்புறத்தே வந்துநின்ற எந் தலைவனைக் கண்ட அன்னையானவள்) என்னை நோக்கி நீ மிகவும் நல்ல எனக் கூறி நக்குச் சென்றாள். இங்கே அன்னைக்குத் தன்னைத் தன்மகள் இகழ்ந்தாள் (மதித்திலள்) என்பது காரணமாக நகை பிறந்தது. இங்கே தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கூறினாள் என்க. (அகம். 248) 3. நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவார். சிரிக்கத்தக்கார் என்பது வெகுளிபற்றி வந்த சிரிப்பு. (புறம். 72) 4. நினது மெய்ந்நடுக்கத்தைக் காணும்படி ஒரு விளையாட்டைக் குறித்துக் கூறினார் அன்றி, உண்மையாகக் கூறினா ரல்லர் என்றபடி நகை - விளையாட்டு. இது தோழி கூற்று. (கலி. 13) (தன் இளமை என்றதில் தன் என்றது தலைவனை) (தொல் - உரை.) 5. (இது தனக்குப் பின்புறம் வந்து நின்ற தலைவனைக் கண்டு நக்குபுதல்வனை நோக்கித் தலைவி கூறியது) இந்த நன்கு மதிக்கும் மகனல்லாதவன் பெற்ற மகன், நற்குணங்களல் லாதவற்றை நீ யொவ்வாதேகொள் என்று யாங் கோபிக்க யாரை நோக்கி நகும். இது தலைவி கூற்று. இது தன் இளமை பொருளாக நகை பிறந்தது. தன் என்றது புதல்வனை. (கலி. 86) 6. நாவாற் பழகாத (பிறர்) நகைக்கத்தக்க இனிய சொல். இது பிறரிளமை பொருளாக நகை பிறந்ததற்குதாரணம். தொல் - உரையுள் பிறர் என்றது புதல்வனை. புதல்வன் இளமைச் சொல் காரணமாக நகை பிறந்தது என்றபடி. நாவொடு பயிலாத தீஞ்சொல் - மழலை. நகை - மகிழ்ச்சிநகை. (அகம். 16) 7. ஒரு சிரிப்பு வார்த்தையைத் தோழியே நீ கேள். இது தோழி கூற்று. (அகம். 248) 8. பாணன் மயக்கம் பொருந்திய மனத்தை யுடையோனாய்த் தொழுது நின்றது எனக்குச் சிரிப்பாகின்றது. இது தலைவி கூற்று. பிறன்பேதைமை - பாணனாகிய பிறனது பேதைமை. (அகம். 56) 9. யாம் உம்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள். இது தலைவி கூறியது (குறுந். 169) 10. நேரே குறிக்கொண்டு நோக்காத துணையல்லது ஒரு கண்ணை சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். சிறங்கணித்தல் - சுருக்குதல்; போல என்றதனால் வெளிப்படாமல் நோக்கினாள் என்பது பெறப்படும். இது பரிமேலழகர் கருத்து. (குறள். 1095) 11. பெருமை பொருந்திய மெல்லிய தோளையுடை யாள் (தலைவி) நம்மொடு தாம் வருமென்ப. அது குறித்து நாம் நகையுடையேம். நாணகையுடையேம் என்னும் பாடத் திற்கு நாளும் நகையுடையம் என்க. (அகம். 121) (தலைவியின் மடத்தை நினைத்துச் சிரித்தமையின் பிறர்மடமென்றார். (தொல்.உரை.) 12. சிறிது உள்ளத்தெழுந்த வாய்மையல்லாத சிரிப்பை யுடை யவள். (உண்மையல்லாத சிரிப்பாதலின் உள்ளத்தோடு பிறவாத நகையென்றார்.) (அகம். 5) 253-ம் சூத்திரம் 1. சந்தனக்குழம்பாலெழுதிய தொய்யிற்கோலஞ் சிதைய அழுதனளாய் ஏங்கி அழுத்திவிட்டது போல உருவு கொண்டதே மலையும் பலமுறை நொடித்தலாற் சிவந்த மெல்லிய விரலையும் பலமுறை திருகுதலாற் கூரிய நுதி மழுங்கிய எயிற்றையு முடையளாய் ஊர் முற்றும் நின்னியல்பைச் சொல்லி வருவாள். (அகம். 176) அத்தகைய அவள் நின்னைக் காணும்படி செல்வாய். இது தோழி சொல்லியது. தன் என்றது பரத்தையை. (தொல் - உரை) 2. கயம்-குளம். உன்கண் -மையுண்ட கண். உரைக்கல்லான் - உரையான். பெயரும் - வந்துசெல்லும். அவனுக்கு உறவில் லாதவளாகிய யானும் வருத்தத்திலே வீழ்ந்து அழுந்துவேன். (கலி. 37) இளிவரல் - எளிமை. அவலம் - அழுகை (தொல் - உரை) இவ்வவலம் கருணைபற்றி வந்தது; என்னை? தலைவன் இளிவந்தொழுகல்பற்றிப் பாங்கி இரங்கினமையின். 3. கண்ணினின்றுஞ் சொரிகின்ற நீரே நீராகக் கொண்டு சாணகத்தான் மெழுகுவாள். (புறம் 249) இழவு - கணவனை இழத்தல் (தொல் - உரை) 4. ஐயோ என்று யான் அரற்றின் அவ்வுரைவழி வந்து புலி தாக்குமென்று புலிக்கு அஞ்சுவேன். இது கணவனையிழந் தாள் காட்டிற் கணவனுடம்பைத் தழீஇநின்று கூறியது. (புறம். 255) 5. தெய்வத்தை ஒத்த கற்பொடு மடம்பொருந்த மெலிந்து நின் வருத்தத்தினிடத்தாயுமல்லை. அச்சம் வர எத்தன்மையாகு வாளோ? இவள் அளிக்கத்தக்காள் என்று என் வருத்தத்திற்கு இரங்கும் நின்னொடு யானும். இது தோழி கூற்று. என் பொருட்டு வருந்தினாளென்று தோழியழிவிற்குத் தலைவி இரங்கினாள். ஆதலின், அதனை உட்கொண்டு என்னழி பிரங்கும் நின் என்றாள் என்க. (அகம். 73) 6. இது, மடலேறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது. ஒருத்தி மயங்கினமழைக்கு நடுவில் மின்னுப்போல வந்து தோன்றி தன்னொளியோடே தன்னுருவையும் என்னைக் காணப்பண்ணி என்னை அளிக்குந்தன்மையளாய் அளித்துப் பின்னர் என்னெஞ்சைத் தான் வரும் வழியாகக் கொண்டு விட்டாள். அதனை முதலாகக்கொண்டு துயிலேன். (கலி. 139) 7. மனையின்கணியங்கும் மடப்பத்தையுடைய மயிலை அகப் படுத்திக் கொள்ளும் சொல்லாகிய வலையுடைய வேட்டைக் காரனாயினான் முன்பு; இதுபொழுது அள்ளிலைத் - தாளி கொய்யாநின்றான். இது தாபதவாகை என்னுந் துறை. (புறம் 252) 8. பாலின்மையின் தோலாகித்திரங்கி துலை தூர்ந்த பொல்லாத வறிய முலையை வறிதே சுவைக்குந்தொறும் அழு கின்ற தனது பிள்ளையினது முகத்தைப் பார்த்து நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய என் மனைவியது வருத்தத்தைப் பார்த்து (இந்த வருத்தந் தீர்த்ததற்குரியாய் நீயென) நினைந்து நின்பால் வந்தேன் நல்ல போரையுடைய குமண! இது காடுபற்றியிருந்த குமணனைப் பெருந் தலைச்சாத்தனார் சென்று பரிசில் கடாயது. (புறம். 164) 9. (யானையை வெட்டி வீழ்த்திய வாள்வெற்றியராய் எந்தலைவரொடு கிடந்தார் எம் புதல்வர்.) இப்பெற்றிப் பட்ட வென்றியும் உளவோ நமக்கென்று சொல்லி முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ அதுகண்டு நாணிக் கூற்றம் இரங்கிய போர்க்களம் (புறம். 19) 254-ம் சூத்திரம் 1. பூண்செறிந்த தலையையுடைய பரிய தண்டுக்கோலை ஊன்றித் தளர்ந்து இருமல் இடையே நெருங்கின சில வார்த்தையையுடைய பெரிய முதுமையை யுடையேமாகிய எங்களுக்கு. (புறம். 243) 2. புதல்வன் தாயேயென்று வஞ்சனையமைந்த பொய்ம் மொழிகளை அவர்தம்மிடத்திற் சாய்ந்து எம்பாற் பலகாற் சொல்லி எம்முதுமையை யொள்ளாதேகொள். அம் முதுமைக்கு நாங்கள் பொருந்துவோம். இது தலைவி கூற்று. (அகம். 6) 3. முதுமையுற்றுத் தலைவணங்கிய நின்னோடு யானும் போர்த்தொழிலைச் செய்தற்கு நாணுவேன், அதனால். 4. வாடையே நீ இமயத்தையும் துளக்கும் இயல்பினை யுடை யாய். துணையில்லாதவர்; இரங்கத்தக்கார்; பெண்கள்; அவர்களோடு மாறுபடுமிஃது என்ன பயனைத் தரும். (குறுந். 158) 5. கிழக்குக் கடலின் அலையிடத்தான பறத்தல் வலி கெட்ட நாரை வலிய தேரையுடைய சேரனது தொண்டி யென்னு மூரின் முன்னுரையிடத்துள்ள அயிரைமீனாகிய அரிய இரையை விரும்பினாற்போல சேயளும் அரியளுமாயி னாளை உள்ளினை; கிட்டாமையின் நோயையுடையை யாயினாய் நெஞ்சே நோயைத் தரும் ஊழினையுடையாய். (அணவரல் - தலையை எடுத்தல் என்பது சாமிநாதையர் உரை.) இது அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகள் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. (குறுந். 128) 6. வருத்துதலால் வருத்துந்தகையளென யான் அவளை அறிவேன். அவள் தன்னை அத்தகையளென அறிந்திலள். (குறுந். 337) இது, இரந்து பின்னின்ற தலைவன் கூற்றாதலின் தன்கட் டோன்றிய உயர்ச்சிபற்றி வந்த இளிவரலென்றார். 7. என்னிடத்து, ஒரு காரியத்தை இரந்து நிற்பான் போல தன்னைப் பிறராலிகழப்பட்டு எளியனாந்தன்மை தோன்ற வும் சிலமொழி கூறும். இது தோழி கூற்று. (கலி. 47) 8. இவர், நம்மில் வலியரென்று கருதி அவர்க்கு வழிபாடு கூறியறியான். இவர் நம்மில் எளியரென்று கருதி அவரின் கண் மிகுத்துச் சொல்லியறியான். (புறம். 239) 9. ஒரு கையையுடைய யானையை எறிவேனோ? யானும் இரு கையினைச் சுமந்து வாழ்வேன். 255-ம் சூத்திரம் 1. தினைப்புனத்தில் ஒருபால் நின்றோனாகிய மலர்தார் மார்பனைக் கண்டோர் பலர். தோழியே! அவருள் அரிய இருட்கங்குலில் படுக்கையொடு பொருந்தி நீர்வாருங் கண்ணோடு நெகிழ் தோளினையுடையேன் யானொருத்தி யுமே. அங்ஙனமாதற்குக் காரணம் என்னையோ? (அகம். 82) 2. நல்ல மந்தித்திரள் ஆச்சரியப்பட்டு நோக்க மூங்கில் வளரா நின்ற மலைப்பக்கத்து உலாவியாடும் மயில் விழவுக்களத் திற்குப் புக்கு நடிக்கின்ற விறலிபோலத் தோன்றுகின்ற நாட்டை யுடையவன். (அகம். 82) 3. நிலத்தினும் அகலமுடையது; வானினும் உயர்ந்தது; கடலி னும் அளவிடற்கரிய ஆழமுடையது; சாரலிடத்து வலிய தண்டையுடைய குறிஞ்சிமரத்தினது மலர்களைக் கொண்டு பெரிய தேனைச் செய்யும் (மலை) நாட்டை யுடையவனான தலைவனோடு நட்பு. (குறுந். 3) 4. குவளைமலரையணிந்த ஓதியையும் முத்துமணி போலும் நகையையுமுடைய பேதைத்தன்மையையுடையாளது திரண்ட கச்சினையுடைய முலையினை ஏந்தினாலும் கடை விழியிற் சிறந்த கருமையையுடைய நெடிய கண் களையுடைய அப்பேதையினது இடையினும் சிறிய தொன்று இல்லை. இது, இடையின் சிறுமையை வியத்தலின் பிறன்கட் டோன்றிய சிறுமை வியப்பு. 5. எருமைபோலும் வடிவையுடைய கரியகற் பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப் பரக்கும் யானை யை யுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டி னையுடையாய்! நீயோ பெரும! (புறம். 5) 6. கிள்ளியெடுக்கும் அளவினையுடையதொரு ஆலம் வித்து முளைத்துக் கொம்பர்களால் நெருங்கி மிகநிழலைப் பயந்தாற் போல. (நாலடி. 28) 7. சதங்கை களைந்த காலிலே ஒள்ளிய வீரக்கழலைக் கட்டி இது சிறியோன் தொழில். (புறம். 77) 8. அவ்வியல்பினையுடையானொருவன் தன்னாண் டகைமையைக் கைவிட்டுச், சுடரிழாய்! என்னை நோக்கிக் கூறும் பல காரியங்களும் மாட்சிமைப்படுஞ் சொல்லைக் கேட்பாயாக. (கலி. 47) 256-ம் சூத்திரம் 1. யானைவந்து தாக்கினும் பாம்பு தன்மேல் வரினும் வலிய இடியேறு ஒலிப்பினும் தன்கருமாறாத மறத்தன்மை பூண்ட வாழ்வையுடைய. (பெரும்பாண்.134) 2. யாம் நின்னைக் காணுமிடத்து வெருவுவோம். ஆதலால், எங் கூந்தலைத் தீண்டாதேகொள். நீ நீங்கென்றாள் தலைவி. தலைவனைக் கள்வர்போலச் சார்த்தியுரைத்தமை யின் கள் வர் பொருட்டுத் தோன்றிய அச்சமென்றார். நச்சினார்க் கினியர் வெருவுதலென்னும் மெய்ப்பாடென்பர். (கலி. 87) 3. கழுத்தையெடுத்து மேல்நோக்கின் வாழமாட்டே மென்னுங் கருத்தினாலே கைகூப்பி வணங்கிப் பழகிக் கழுத்தை வளைத்துத் தலையிறைஞ்சிக் கடுமான்றேர்க்கோதையின் கால் வண்ணமேயன்றி மேல்வண்ணம் கண்டறியமாட்டா அரசுகள். கோதை - சேரன். (இ.வி.ப. 124) 4. தூரநின்று நான் செய்யாதவற்றைச் சொல்லிச் சினவாதே. நின்னாணையைக் கடப்பார் யார்? ஆணை - கட்டளை. (கலி. 81) 5. அழகு விளங்குகின்ற சாந்தினோடு அழகிய பட்டிமைப்ப வளைந்த குழையையணிந்த மகளிரைப்போல ஒடுங்கி யிருக்கின்ற இருக்கை. (அகம். 236) 6. அச்சமே வழியாக உணர்த்தும்படி வருபவனுடைய பொய்ச் சூளுக்கு அஞ்சிப் புலவேனாகுவேன். (கலி. 75) 257-ம் சூத்திரம் 1. நாவினாலே வார்த்தைசொல்ல வல்லார் முன்னே சொல்லுதல் வல்லேனாகிய என்னைப் பிறர்முன்னே ஒன்றையுங் கல்லாத தன்மையேனாகக் காட்டியவள். வல்லோர் முற் சொல் வல்லேன் என்றது தன் பெருமிதங் கூறியது. (கலி. 141) 2. போரிடத்து வெற்றியையுடைய குதிரைமீதேயிருந்து போர்த்தொழிலை நடத்துவேனாகிய என்னை அம்மாவல் லாத மடன்மாவிலே ஏறி, அக் களத்தேயன்றி, மன்றின் கண்ணே தன்னை உள்ளுவித்தவள். அடன்மாமேலாற்றுவேன் என்றது தறுகண்பற்றிவந்த பெருமிதம். (கலி. 141) 3. நீங்காத காதலையுடையராயினுஞ் சான்றோர் பழியொடு வரும் இன்பம் விரும்பார். எனவே புகழொடு வருமின்பத்தை விரும்புவர் என்றமை யால் புகழ்பற்றிவந்த பெருமிதங் கூறியவாறு. (அகம். 112) 4. உலகத்தையெல்லாம் பாதுகாத்தலை முயலும் உள்ளத்தை யுடையேனாகிய என்னை ஒருவர்பால் ஒன்றை யிரத்தலை முயலும் இன்னாதாகிய வருத்தத்தைச் செய்தவள். புரவூக் கும் உள்ளத்தேன் என்றமையின் கொடைபற்றிய பெரு மிதம். (கலி. 141) 5. தன்னகம் புக்க குறிய நடையையுடைய புறாவின் அழி விற்கு அஞ்சித் துலைபுக்க, வரையாத ஈகையையுடைய வலியோனது வலியிலுள்ளாய், இதுவுமது. (புறம். 43) 6. பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப் பெண் டிரது பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வ தாக. தார்குழைக என்றது துவளாமை குறித்தலின் காமம் பற்றிய பெருமிதம். (புறம். 73) 258-ம் சூத்திரம் 1. முறம்போலுஞ் செவியாகிய மறைப்பிடமாக வந்து பாய்ந்து மாறுபாட்டைச்செய்த புலியைக் கோபித்து. (கலி. 52) எனவே, புலி பாய்ந்து தன்னுறுப்பைக் கடித்தலால் உறுப் பறையான் வந்த வெகுளி என்றார். 2. நின்மகன், படைக்குத் தோற்றுப் புறங்கொடுத்தான் என்று பலர் கூறக்கேட்டு, என்மகன் மண்டியபோரிற் புறங் கொடுத்தானாயின் அவன் பாலுண்ட முலையையறுத்திடு வேன் யானென்று கோபித்து. (புறம். 278) 3. நேற்றுப் பகல் நின்னால் எறியப்பட்டவனுடைய தம்பி அகலினிடத்துப்பெய்த குன்றிமணியைப்போலக் கோபத்தாற் சுழலுங் கண்களையுடையனாகி. (புறம். 300) 4. புலியைப் பொருத வலிய களிற்றின் சினம்போல இன்னு மாறாது கோபம். (புறம். 100) 5. எனது மிக்கவலிக்கு அஞ்சாதே மாறுபடுஞ்சினம் பெருகிப் புல்லிய வார்த்தைகளைக்கூறிய சினம்பொருந்திய அரசரை. (புறம். 72) 6. யான்செய்த தவறில்லாதவிடத்து எங்ஙனஞ் சினப்பாய். (கலி. 87) 7. நெருப்புத் தன் வெம்மையாறுதற் கேதுவாகிய நிண மடைந்த கொழுவியதடி (இறைச்சி). எரியாது பூத்துக் கிடக்கும் தழல் போலும் நிணந்தங்கு கொழுங்குறை எனினு மமையும். (புறம். 125) 259 -ம் சூத்திரம் 1. நீதான் வலியுடைத்தாகிய மனத்தையுடையை. தேடும் பொருளைத் தேடிமுடித்த செல்வத்தான் உண்டாகும் பொருடான் இவ்வின்பமென்று கூறுகின்றவனே! (கலி. 12) 2. நல்ல கலங்களைப்பெற்ற மகிழ்ச்சியை யுடையார். கலம் - ஆபரணம். என்பது வண்மையானாகும் மகிழ்ச்சி. 3. பெண்டிரது நலத்தை நுகர்ந்து தண்ணியமலைச் சாரலிடத்துத் தாதையுண்ணும் வண்டு அப் பூவைத் துறக்குமாறு போல அவளைத் துறக்கின்றவனுடைய மலை. முகைப் பதம் - அலரும் பருவம். நகைப்பதம் - தன்னொடு நகையாடி இன்பம் நுகர்தற்கேற்ற பருவம். (கலி. 40) 4. தம்முட் பகையில்லாரும் கூரிய அறிவுடையாரு மாகிய கல்விப்பெரியார் தம்முட்கூடி மகிழ்தலினும் இன்ப முடைத் தாயின் தேவருலகை யாம் பார்ப்போம். (நாலடி. 14-7) 5. வடித்த நரம்பையுடைய யாழைப்போல இனிய மொழி களைக்கூறி வளையினது மூட்டுவாயின் வடுப்பொருந்த எம்மைக் கூடினாள். (அகம். 142) 6. யாம் துயிலின்றி யாமக்கடலை நீந்தத் தான் மயில் போலும் இயலினையுடைய பரத்தையர் மருவுதலை நுகர்ந்து அவ ருடனேயழகிய புனலையுடைய மடுக்களையாடி நம்மை மறந்து அவரிடத்தே யமைந்திருப்பன். (நச்சினார்க்கினியரால் புனல் தொழுவை என மாற்றிப் பொருள்கொள்ளப்பட்டது. மடுவிலுள்ள நீரிலாடி என்று நேரேயும்பொருள்கொள்ளலாம்.) (கலி. 30) 261-ம் சூத்திரம் 1. யான், தன்னை நோக்குங்கால் (நாணி) நிலத்தை நோக்கு வாள்; யானோக்காக்கால் தான் என்னை நோக்கி மெல்ல நகுவாள். (குற. 1094) 2. பெரிய புழுக்கத்தையடைந்த பிறைபோலும் நெற்றியின் கண் எழுந்த புள்ளியமைந்த வியர்வையைச் சிறிய காற்று ஆற்றச் சிறிதுபொழுது திறப்பாய் என்று தலைவன் கூற. (அகம். 136) 3. முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகா நாற் றம் போல நின்பேதை என்னொடு நக்க நகையது மகிழ்ப்பி னுள தாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்புண்டு. (குறள். 1274) 4. நும்மொடு நகைத்த வெள்ளிய எயிறு, இது தலைவி கூறியது. (குறு. 169) 5. அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைய வணங்கினாள் (தாழ்த்தாள்). (அகம். 86) யான் தன்னைக் காணுந்தோறும் தான் பெரிது மகிழாளாய் (சிறிது மகிழ்ந்தவளாய்) ஒளிபொருந்திய நுதல் வியர்ப்ப நாணித் தலை வணங்கி அதிகம் வெளிப்படாது நகுதலை யுடைய முகத்தை மறைத்த நல்ல நெற்றியையுடைய பெண் ணின் மனஞ் சிதைவுற்றமையை நெஞ்சேயறிந்திலை; அது உண்மையாதலை யானறிவேன். (இலக்கண. பக். 592). 262-ம் சூத்திரம் 1. விண்ணின்கணுயர்ந்த வலியமலையின் பக்கத்தே ஒருவன் கண்ணானோக்கியதன்றி என்னொடு குளிர உரையாடியது மில்லை. அவன் மலையுறை தெய்வமுமல்லன். அவன் கண்ணானோக்கிய அதற்கே ஓதிக்கு முற்பட்டுகாது ஒருகுழை நெகிழ. ஒளிவிளங்குகின்ற மணியாற்செய்த பூண்கள் நெஞ்சொடுங்கழல, உடையும் பலதரம் நெடிது சோர்வுற்றன. அதன் காரணம் நீயறிகுவாய். அந்நோக்கினியல்பு கூறுமாறு எமக்கு எத்தன்மையது. 263-ம் சூத்திரம் 1. யான் தனது கூந்தலையும் நுதலையும் நீவி அழகிய மெல்லிய முலையை வருடலினால் மனங்கலங்கி உடம்பும் உள்ளம் போல உகுபவள்போல அல்குலின் மேலணிந்த நெகிழ்ந்த நூலையுடைய வதிரத்தோடு சாருமிடமறியாது மெலியாதவள்போல் வாளாய் வலிந்து பொய்ம்மை செய்து ஒடுங்கவும் யாமெடுத்து அணைக்குந்தோறும் தாமே உடன் பட்டெழுதலின் வேய்போலும் மென்றோள் நீண்ட அரிபரந்த கண்களையுடைய பேதையோடு நம்மை இம்மை யுலகத்தன்றி உம்மையினும் கேளாந்தன்மையை அறிந்தனபோலும். 264-ம் சூத்திரம் 1. ஒருநாள்போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக் கொள்ளாதும், தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்க மடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலி னாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய் செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க. (இ.வி.ப. 533) 265-ம் சூத்திரம் 1. தாய் இவளை வருந்த நோக்குந்தோறும் நடுங்கும் நெஞ்சி னால் அவட்கு அறிவுறுத்தலின் நின்னெதிர் வருதற்கு நாணி மனைவயிற்பிரியலானாள். அதனை நீயறியாய் போலும். அவள் மனையிடத்தினின்று பிரியாத அதனால் புனைதார் மார்ப! என் நினைவிலள் அவள் என்று கூறுகின்றாய். உன்னைக் கண்ட இப்பொழுது அவள் பசலை நீங்கி உவகை யடைந்த வாற்றைக் காண்பாய். (இ.வி.ப. 534) 266-ம் சூத்திரம் 1. இவள் யான் அணியினும் பூசினும் பிணியுழந்து வருந்திப் பல சுற்றத்தின் நடுநிற்பினும் நில்லாதவள்போல (தனிமை யுற்று) சொல்லும் வகையறியாளாய்ப் பொழிகின்ற கண்ணீரைத் துடைத்து யானே செயலற மனஞ்சுழல்வாள் நின்னைத் தெளியுமாற்றை இறைவனே சொல்வாய். 267-ம் சூத்திரம் 1. ஆயர்மகன் ஆயத்தோடே நாமாடுங் குரவைக் கூத்திலே நம்மை அருமை செய்தான்போலே நோக்கி நமக்கு வருந்தத்தகும் நோயைச் செய்தல், நிறத்தையுடைய கண்ணையுடைய கொலை யேற்றை யான்கொண்டேன் என்னு மனச் செருக்கன்றோ? அது வேறொன்றல்லவே என்றாள். இது புகு முகம் புரிதல். எமக்கு வருத்தத்தைச் செய்தல் என்ற தனால் இவளும் எதிர்நோக்கினாள் என்பது பெறப்படும். (கலி. 104) 2. தானட்ட புளிப்பாகரை இனிதென்று கணவனுண்ட லின் ஒள்ளிய நுதலையுடையாளது முகம் நுட்பமாக மகிழ்ந்தது. (குறு. 167) 3. நெஞ்சே, இவனைப் பொய்சொல்ல விடேமென்று மாறு பட்டுக் கோபிக்கின் தப்பினேனென்று வணக்கஞ்செய்த லும் இவனுக்குப் பரிகாரமுண்டு. ஆதலான், நம்மை மறந்து ஒரு காலமும் நாம் மாட்சிமைப்பட்டிருக்க நினையாத நாணமில்லா தவனுக்கு இவ்வூடற் போரைத் தோற்று அதனாலுள்ள பயனைக் காண்பாய் என்று ஊடல் தீர்ந்தாள். (கலி. 89) 4. நின்னுடைய பாணன் நோவுசேர்ந்த திறப்பண்ணைப் பண்ணி எம்முடைய மனையிடத்தே நீசென்று சேர்ந்த பரத்தையர் மனையை என்னைக்கேட்டு வராதிருத்தலை யான்பெறின். (கலி. 77) 5. எமது அன்னையின் கழற்றுரைக்கும் உய்வேம்; சிறிதும் இரக்கம் பொருந்தாத வியல்போடுங்கூடிய பொய்ம் மொழியைக் கூறுகின்ற சேரிப்பெண்டிரின் அலரையு நீங்குவேம். (அகம். 65) 270-ம் சூத்திரம் 1. ஊதிப் பழகாத கோவலர்கள் (சிறுவர்) ஊதுகின்ற வலிய வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால். (அகம். 74). கல்லா - என்னை வருத்துமென்றறியாத எனினுமாம். 2. இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலாகிய ஒன்றுபிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாதுசெய்வே னென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாள். (அகம். 50) 3. நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ. (அகம். 170) 4. எந்தலைவர் தேர் வாராதாயினும் வந்ததுபோலக் காதினிடத்து ஒலிக்கும் ஒலியானே தோழி எங் கண் துயிலை மறந்தன. (குறுந். 302) 5. தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள். (அகம். 150) 6. அன்னாய் வாழி. நான் சொல்வதை விரும்பு. அன்னை யாகிய நின்மகள் பாலுமுண்ணுகின்றிலள். துன்பங் கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள் என்று வினாவுகின்றாய். (அகம். 48) 7. இப்பொழுது உண்ணுதலுஞ் செய்யேன்; வாழு தலுஞ் செய்யேன். (கலி. 23) 8. கன்றுமுண்ணாமலும் கறக்கும் பாத்திரத்தினும் பொருந்தாது நல்ல பசுவின் பால் நிலத்திலே சொரிந்து (பய னின்றிக் கழிந்ததுபோல்) என்றலைவற்கும் பயன்படா மலும் எனக்கு மாகாமலும் தேமல் பரந்த அல்குலையு டைய மாந்தளிர் போலும் நிறம் பசலை பரத்தல்வேண்டும். (குறுந். 27) 9. இனிய பாலையூட்டினும் அதனை வேம்பினுங் கைத்து வெறுப்பாள். நீ வாராதொழிவாயாயினும் உன்வரு கையை விருப்போடு நோக்குவாள். எந்தலைவி நின்னினுஞ் சிறந்த தொன்றிலள். எனது சொல்லினும் அமைகின்றிலள் - இதனைப் படுதலெப்படி? (இலக். பக். 537) 10. வளைநிலை நெகிழ மெலிந்து என தோள்கள் அவர் கொடு மையை கூறியவாயினும், தோழீ! கொடுமையோ நல்வரை நாடன்கண் இல்லை. அவர் என்நெஞ்சிற் பிரிந்ததுமிலர்; யாம் மெலிய எமது நோக்கத்திருத்தலை நீக்கியதுமிலர். (இல. ப. 466) 11. தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒரு பக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார் பனைக் கண்டோர் பலர்தில். அவருள் அரிய இருட் கங்கு லிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகு தல் என்னையோ! (அகம். 82) 12. நின்னைப் பிரிந்தவிடத்து வருந்தி உயிர்வாழே னென்று கூறினவனைப் பிடித்துக்கொண்டு நீகொண்ட என் நலத்தை இனித் தாராயென்று வளைத்துக்கொள்வேன் போலவும், அவ்விடத்தே என்னுடைய கழிந்த அழகையான் பெறும்படி புல்லிக்கூடி இனி வருந்தாதேகொள் என்று என்னையும் அளிப்பான் போலவும் (கனவிற் கண்டேன்). (கலி. 128) 13. ஐய, நின் மார்பினிடத்து நீ விரும்பாத முயக்கம் கனவின் கண் வரப்பெற்ற செல்வத்தனையதொன்றாயிருக்கும். (பயனில்லை என்றபடி) (கலி. 68) 14. தான் சூளுற்ற சூளுறவினைப் பாதுகாத்தவனாய்ப் பொய்த்தவனுடைய மலையாயிருந்தும் மழைபெய்தலால் விளங்கும் அருவியையுடைத்தாயிரா நின்றது. (இஃது என்ன வியப்போ) (கலி. 41) 15. தலைவர் வருவேமென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந் தியமையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில. (அக. 144) 16. கழங் காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்ந்தானல்லனோ. (அகம். 66) 17. ஒரு தூதாயினும் அவர் வரவிடாராய்த் துறப்பாரோ? துறவாரோ கூறாய். குயிலும் நோவுதரும்படியாகக் கூவும். குயில் கூவும் என்றதனால் அவர் குறித்த வேனில் வந்த தெனக் குறிப்பித்தாள். 18. தலைவன் பரத்தையர் ஊரினிடத்தான்போலும். அவனைத் தேரும் பாணன் நந்தெருவின்கண் நிற்கின்றான். (இல.ப.537) 19. தலைவர் நாட்டு மலையிலே நேற்று மாலையிற் பெய்த வெள்ளத்தாரையாலாகிய மணங்கமழாநின்ற ஆற்றோடு இன்று வைகறையில் வந்த காந்தளின் முழுக்கொடியை மெல்லிய இலைகள் குழையத் தழுவலையும் இல்லிற் கொணர்ந்து நடுதலையும் நீக்காதாள்மாட்டு. (குறுந். 361) 20. பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக்காலத்தே நின்றோளை யடைந்து, வணங்கி நின்றோளையெய்தி என்க. (அக. 9) 21. பழிநீங்கும் ஞாயிறே! உலகியலறியாதாரிடத்துக் கழியச் சீறுதற்கு விரைந்து செல்வையென்று (என் வருத்தங் கண் டார்) கூறக்கேட்டு நின்னை வழிபட்டு நீ அவரைமிகச் சீறாதபடி இரந்துகொள்வேனாக வந்தேன். நீ என்னெஞ்சங் கெடும்படி என்னைக் கைவிட்டவனைக் கண்டு சீறும் பொழுது என்னை நீங்கவிடாதே கொள் என்று. (கலி. 143) 22. பெருங்கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெருமையையுடைய கழுத்தினையும் அழகை யுமுடைய ஏற்றின்பின் நீங்காமற்றிரியும் பிணையையும் காணாதிருக்கின்றீரோ! அவை நீர் அறியப் பிரியாவே! (ஆதலால் எம்மையும் உடன்கொண்டு சென்மின்.) (கலி. 20) 23. ஐயனே! விருப்பம் மருவுகின்ற அழகினையுடை யாய்! அத்தா! அத்தா! என்று கூறும் நினது இனிய மொழியைக் கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது. அஃதொழிந்து நுந்தை யால் நலனுண்ணப்பட்டு மெலிந்து நின்றவரது எவ்வ நோய் காணுங்கால் அஃது இன்னாது. (கலி. 80) 24. பெருமா! நுகத்துப் பகலாணிபோல் ஒரு பக்கத்தைக் கொள்ளுதலின்றி முறைமை செய்தற்குச் சாயாத கோல் செவ்விதாக நிகழ்த்துதலின் அவனை ஒப்பாய், மற்றுள்ள குணங்களில் அவனையொவ்வாதே கொள். (கலி. 86) 25. காவலன் யானைக்கெறிந்த கவண்கல் பலவின் பழத்துட் டங்கும் சிறிய மலைகள் பொருந்திய பெரிய மலையினை யுடையவனைப் பாடுகம் வா! (கலி. 41) 26. வெயிலே என்றோளை மெலிவித்தானது வடி வழகின் தன்மையை யான் விரும்பிக் காண்பதல்லது அவன் செய்த நன்று தீதென்று சொல்லுகின்ற பிறவற்றைக் காணேன். (கலி. 141) 27. யான் அவனைப் பிடித்துக்கொண்டு காண்பே னாகப் பையென விழிப்ப யான் பிடித்த கையுள்ளே மறைந்து தோன்றா னாயினான். (கலி. 142) 28. கடற்றெய்வமே என்னைப் பாதுகாவனாய்த் துறந்தவனை யான் தேடிக் காணுமிடத்தை நீ விட்டுப்போகாமல் ஏறு வாயாயின், நின்னிடமெல்லாம் வெறு மணலாகும்படி என்காற் புறத்தாலே நின்னுடைய நீரெல்லாம் போம்படி இறைப்பேன். அது முடியுமோ என்னின், அங்ஙனம் முயலின் அதற்கு அறக்கடவுள் உதவியாதலு முண்டா யிருக்கும் என்றுங் கூறினாள். (கலி. 144) 29. ஆடவர், தமக்குக் காமங்காழ்க் கொள்ளிற் குதிரை யாகப் பனைமடலையும் ஊர்ப; பூவாகத் திரண்ட கரும்பையு டைய எருக்கம் பூமாலையையுஞ் சூடுப; மடலூர்ந்து வீதி யிலே செல்லும்போது பிறர் தம்மைக்கண்டு ஆரவாரிக்க வும் படுவர். தங்கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரை பாய் தன் முதலிய வேறு செயலையும் உடையராவர். (குறு. 17) 30. நெஞ்சே! எவ்வியென்னும் வள்ளலையிழந்த வறுமையை யுடைய யாழ்ப்பாணரது பொற்றாமரைப் பூவில்லாத வறிய தலையைப்போலப் பொலிவிழந்து வருந்துவாய். மனைப் படப்பையிலுள்ள மரத்தே படர்ந்த ஒளிபொருந் திய முல்லை மலர் நாறுகின்ற பலவாகிய கரிய கூந்தலை யுடையாள் நமக்கு எத்தகைய உறவினையுடையளா வளோ (அயலாள் போலும்) (குறு. 19) 31. அழகிய இனிய சொல்லையும் அழகிய இழையையு முடைய மடந்தையின் வளைந்த குழையோடு மாறுபடு கின்ற நோக்கம் நெடிய தூரிய அரிய (காட்டு) வழியில் (நின்னைத்) தடுக்கும்பொழுது. (அகம். 3) 271-ம் சூத்திரம் 1. நொச்சி வேலியாகச் சூழ்ந்துநிற்கின்ற தித்தனது உறந்தை யிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டி னையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி. நொச்சி வேலிப் புறங்காடு என்க. òw§fhL CÇ‹ òw¤njíŸs fhL.(mf«. 122) 2. இனிய உயிர் நீங்குவதாயினும் நின்மகளது அழகிய குவளை மலர்போலும் மையுண்ட கண்ணின் பசலை காம நோயால் உண்டானதென்று சொல்லாதீம். (அகம். 52) தலைவி கூற்று. இன்னுயிர் கழிவதாயினும் என்பது வாழ்க்கை முனிந்தது. 3. யாம் இத்தன்மையாகவும் எமது நல்ல நெஞ்சமானது என்னொடும் நின்னொடும் ஆலோசியாது கைகடந்து சிறு மலைகள் பொருந்தி இருண்ட வழி நுணுகிய வருதற்கரிய மலையின் கண் மழையையுடைய மேகம் நீர்வடிந்து (நிறையப் பெற்ற) நுணுகிய அரிய கண்ணையுடைய யானைப் படுகுழியை வழியில் இரவின்கண் மிதிப்புழி (அக்குழியின் மிதித்தலை நோக்கி) மிதியாமல் அவர் தளிரடியைத் தாங்கும்படி இன்று சென்றது. (அகம். 128) 4. நல்லவரை நாடனே! நீ இரவில் வரின் மெல்லியறான் உயிர் வாழாள். ஒரும் - அசைநிலை. (அகம். 12) 5. கடற்கரைச் சோலையும் எமது தலைவரிடம் எமக்காகச் சென்று தூது கூறாது; தேன் மொய்த்த நறுமலர் களை யுடைய புன்னையுஞ் சொல்லாது; அலவ! ஒருவனாகிய நின்னை யல்லது தூது போக்குதற்கு வேறொன்றையு மிலேன். கரிய கழியின் கண் மலர்ந்த கண்போலும் நெய்தற் பூவின் கமழா நின்ற இதழ் நாற்றத்தை அமிழ்தாக விரும்பி அதன் தண்ணிய தாதை யூதிய வண்டுக் கூட்டங்கள் களிப் பாற் சிறந்து சிறகைக் கிளர்த்துகின்ற துறையை யுடைய னாகிய நீயே (சென்று) அத்தூதைச் சொல்ல வேண்டும்! (அகம். 170) 6. புல்லிய வீழையுடைய இற்றியினுடைய கல்லிற் படர்ந்த வெள்ளிய வேர் வரையினின்றும் கீழிழிகின்ற அருவி போலத் தோன்றும் நாட்டையுடைய தலைவனது குற்றமற்ற நெஞ்சிற் றோன்றிய சொற்களை உரைக்குந் தூது நம்மாட்டு நயப்பைத் தந்தது. தோழியே! ஆதலால் நாமும் நெய்பெய் தீயைப்போலக் கிளர்ச்சியோடு அத்தூதை எதிர்கொண்டு அவன் மணந்தகாலத் தன்பையொத்த அன்பையுள்ளேம் என்று சொல்லித் தூதுவிடுவேம். (குறுந். 106) 7. தன் மலையின்கணுள்ள சந்தன நாறும் மார்பன், மழைக் கண் நனைந்த யானை போல வந்துநின்றான். என்ன காரியம் மேற்கொண்டு வந்தானோ? (குறுந். 161) 8. அவள் அங்ஙனமான இடத்து அவள் பூப்போலுங் கண்பாடின்மையை நீவிப் படுதற்கும் யானஞ்சுவேன்; அதற்குக் காரணமென்னெனில் அத்துயிலிடை நினைத்து வருந்தத் தக்க கனவாற் பின்னர்த்தாங்கிய அரிய வருத்தத்தால் உற்ற கேட்டைத் தூக்கிப்பார்க்கில் அஃது எல்லையறிய வொண்ணாத மலை யினும் பெரிதாயிரா நின்றது. இனி இவ்வருத்தம் உறாதபடி நீ வரையாமற் பிரியப்பட்டாளோடு கொண்ட உறவு பின்னு தலைக் கொடுத்தல் வேண்டும். (கலி. 48) 9. தலைவரை நினைப்பின் மனம் வேகும். அங்ஙனம் நினையா திருப்பேமாயின் அவ்விருத்தல் எம்மளவின் அடங்குந் தன்மையதன்று. காமநோயோ எம்மைவருத்தி வானத்தைத் தோய்வதுபோன்ற பெருக்கத்தையுடையது. எம்மால் மருவப் பட்ட அத்தலைவர் சான்றோரல்லர். (குறுந். 102) 10. யான் அவளை வருத்துந் தன்மையனென்பதை யறிவேன்; தான் என்னை வருத்துந் தன்மையளென்பதை அவள் அறியாள்; தான் எத்தன்மையள் ஆவளோ? பெரிய முதிய செல்வத்தை உடையோரது ஒப்பற்ற மடைமையையுடைய மகள். (குறுந். 337) 272-ம் சூத்திரம் 1. காதலர் செல்லும் அரிய வழியிடத்தில்சினைக் கொம்புகள் வாடும்படியாகச் சிறக்கும் நின் சினந்தணிவதாக என்று பரவிச் செறிந்த கதிரையுடைய ஞாயிற்றை யாம் வேண்டிக் கோடலும் நங்கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவே. (கலி. 16) 2. தன் பொய்ச்சூளுக்கு நாம் அஞ்சும் அச்சமே தான் ஊடலுணர்த்தும் வழியாக என்புலவியை உணர்த்த வருபவனது பொய்ச்சூளுக்கு அஞ்சியான் ஊடேனாயிருப்பேன். (கலி. 75) 3. விரிந்த தலையாட்டத்தையுடைய மனச்செருக்குற்ற குதிரை பூண்ட தேரில் ஏற்றிக்கொண்டுவந்த விருந்தினரை ஏற்றுக் கோடலால் ஊடலை மறந்திருப்பேன் என்றும். (கலி. 75) 4. நல்ல தாரையணிந்த மார்பிற்கு ஒரு சார்பாகப் பொருந்திய நெடிய கரிய கூந்தலையுடைய கடவுளரெல் லாருக்கும் முட்டுப்பாடு ஆகுதலும் உண்டு. (கலி. 93) நச்சினார்க்கினியர் மார்பிற்கும் கடவுளர்க்கும் முட்டுப் பாடாகுதலும் உண்டு என்பதைத் தனித்தனி கூட்டி யுரைப்பர். 5. வேம்பின் அரும்பையொத்த நீண்ட கண்களை யுடைய நீர் வாழ ஞெண்டு இரையைத் தேடுகின்ற வெள்ளிய குருகுக் கஞ்சி அயலிலுள்ளதாகிய தழைத்த பகன்றையையுடைய அரிய அள்ளலாகிய சேற்று நிலத்தின்கண் தேமலைப் போல வரிபொருந்த ஓடி விரைந்து தன்னுடைய நீர்மலிந்த மண்ணிற் கிண்டிய புற்றின்கண் அடங்கியிருக்கு முரனே! (அகம். 176) 6. அகப்பட்ட பரத்தையரது நெஞ்சு வலிதென்றறி யாது பாகனைத் தேரொடும் போகவிட்டு அவள் உன்னை விருந்தாக எதிர்கொள்ள அவள் வரவினைக் கருதிநின்ற நீ. (கலி. 69) 7. குளிரான மாரிக்காலத்தேயாயினும் தென்றற் காற்று வீசின் உடம்பிற்கினிதாகும். (அதுபோல) தோழீஇ! ஊடியிருப் பினும் ஊரனுடைய நல்ல மேனியைக் கூடுதல் எமக்கு இன்பமாகும். (ஐங். 32) 8. அயிரைமீன் பரந்த அழகிய வயலிடத்தே தாங்கு கின்ற அழகுமலர்ந்த உட்டுளையமைந்த திரண்ட தண்டை யுடைய ஆம்பற்பூவைப் பறிப்போர் புனல் வேட்கையை அடைந்தாற் போல இவள் முலையிடைக் கிடந்தும் நடுங்கலுறு கின்றீராயினீர். தொழுதுகாணும் மூன்றாம் பிறைபோல யாமுமக்கு அரியேமாகித் தோன்றிய களவுக்காலத்து மிகவும் பொறுத்தீர் இதற்கு நோவேன் யான். (குறுந். 178) 9. நிலைதவறாத வாய்மையையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையையுடையவர். (நற். 1) 10. எம்மைப்போலப் புல்லிய உளைபோன்ற மயிரினை யுடைய புதல்வனைப் பயந்து நெல்லையுடைய நெடுநகர்க் கண் நின்னையின்றியிருப்ப என்ன கடமையையுடையவள். (அகம். 176) இது தோழி கூற்று. 11. தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருளில்லை யென்று கூறி வந்திரந்தவர்க்குச் சிறிதுங் கொடாதிருத்தல் இழிவாமென்றுகருதிக் காட்டைக் கடந்து போய்த் தேடுதலைக் கருதின பொருள் நன்கு மதிக்கும் பொருளா யினும் அருந்ததி போலே எல்லோருக்குந் தொழுது வாழ்த்தும்படி விளங்கிய கற்பினையுடையவளுடைய காமச் செவ்வியாற் பெருமையை யுடையவாய மெல்லிய வாகிய தோள்களைப் பிரியாதிருத்தல் நின்மனத்திற்குப் பொருளா யிருக்குமாயின் அதுவே பொருளாவ தல்லது பிரிகின்றது பொருளா குமோ? (கலி.2) 12. இவற்றை முயங்கலை விடுகவென்று சொல்லத் தாம் மயங்கியாம் ஒழியுமென்னவும் உடன்படாராய் இம்முலை களைப் பாராட்டிய பருவமுமுள. இப்பொழுது புதல் வனைத் தடுத்த பாலொடு சாய்ந்து தேமலையணிந்த இனிய மென்முலை களை அகலம் பொலிய முயங்கலையாம் வேண்டினேம். தாம் தீம்பால் படுதலை அஞ்சினர். பருவம் என்றது களவுக் காலத்தைக் குறித்ததென்பர் பேராசிரியர். 272ஞ் சூத்திர உரையுள் மறைந்தவையுரைத்தல் என்பதனுரை நோக்குக. (அகம். 26) 13. குறுமகளைக் கொண்டனை என்ப. அது, களிற்றைப் பிடித்த காலத்துப் பேரொலிபோலப் பலர்வாய்ப்பட்டு அலராகின்றது. (அகம். 96) 273-ம் சூத்திரம் 1. இவளேயன்றி, அவன்றானும் தினைப்புனத்திலிட்ட பரணிடத்து எரிந்த அகிலின் புகையாலுண்ணப்பட்டு ஒளி மழுங்கித் திரியும் மதியம் வானிடத்தே சென்று அம்மலைத் தலையிலே தங்கிற்றாயின் அதனை அந்த மலையிலே வைத்த தேனினது இறாலென்று கருதி அதனை அழித்தற்குக் கண்ணேணி முதலியன சமைத்திருக்கும் காடு அகன்ற நாட்டை யுடையவன் மகன். (கலி. 39) 2. யான் நினைத்த வினையை முடித்தாலொத்த இன்பத்தைத் தருவோள் மனையின்கண் மாட்சிமைப்பட்ட தீபத்தை ஏற்றி அதனொடு வருந்துகின்ற மாலைப்பொழுது என்று. (நற். 3) 3. தஞ் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர் களுண்ணவும் சுற்றமல்லாத சுற்றத்தாரை (என்றது நண்பர்களை) நண்புசெய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தோடு விரும்பி. (அகம். 93) 4. நீ விரும்பித் தலைவி தோளிலெழுதிய தொய்யில் தருகின்ற அழகினையும் இவள் மார்பில் நின்னை வலியாக வுடைய சுணங்கின் அழகையும் கைவிடல் ஒல்லுமாயின் நினைத்துப்பார். (கலி. 18) 5. அது கேட்டவன் நீ இங்ஙனம் இகழ்ந்து கூறுதலால் நின்னோடு ஒன்றுங் கூறேன்; முல்லையினது முகையையும் பீலி முருந்தையும் நிரைத்தாலொத்த பல்லும் பணை போலுந் தோளும் பெரிய அமர்செய்யும் உண்கண்ணும் யான் நல்லே னென்று நின்னுடைய தகுதியைப் பிறர் நச்சுத லின்றி நீதானே நச்சியிருக்கின்ற சொல்லையுடையவளே! நின்னொடு மறுமாற் றஞ் சொல்லுதலை யார் நிகழ்த்துவா ரென்றான். (கலி. 108) 6. நின்மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப் படநோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல் நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து (மாலைக் காலத்து) அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு புருஷனே என்று வியந்து கூறினாள். (அகம். 48) 7. சுட்டுதல் மாட்சிமைப்பட்ட கண்ணியை யுடையனாய் வில்லையுடையனாய் வரும்; அங்ஙனம் வந்து என்னைப் பார்த்துத் தானுற்ற நோயை மிகவுங் குறிப்பாலே யானுணரக் காட்டுவதன்றிக் கூற்றாற் கூறானாய்ப் பலகாலும் மீண்டுபோம்; அது கண்டு அவனேயன்றி அவனிடத்து மிகவும் உறவில்லாத யானும் அவன் என்செய்கின்றானென்னும் நினைவு மிக்குத் துயில்பெறேனாய் வருத்தத்திலே விழுந்து அழுந்து வேன். (கலி. 37) 8. நமக்காயின் நின் வருத்தத்திற்கு யாமும் வருந்தினோ மென்று கூறுதல் பெண்டன்மையன்று. (கலி. 37) 9. தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்து தலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலியாவண்ணங் கட்டிய மாட்சிமைப் பட்ட தொழிலமைந்த தேரையுடையோன். (அகம். 4) 10. தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறி யாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானூற்றுக் குறிப்புரைகாரர் கருத்து. 11. என்றோளைத் தொழில்கொள்கின்ற அவன் நெய்தற் பூவைப் புறவிதழொடித்து மாலைகட்டிச் சூடவும் வல்லன். நெடிதாகிய மென்றோளிலே காமன் சிலையாகிய எழுது கரும்பை எழுதவும் வல்லன்; இளமுலைமேற் றொய்யிற் குழம் பாற் கொடி எழுதவும் வல்லன்; இவையொழிந்து நீங்கியிருந்து மனம் வேட்கையடக்கி யிருக்குமிடத்துத் தன்கையில் வில்லைத் தொழில்கொள்ளவல்ல காமனை ஒக்கும்; அதுவன்றி வேட்கை நிகழ்ந்து கூடுங்காலத்து ஆண்டு நிகழ்த்தும் நல்ல தொழில்கள் பலவற்றையும் வல்லன். (கலி. 143) 12. பலவுங் கூடின உழுத்தம் பணியாரத்திலுங் காட்டில் துய்க்கப் பட்டிருக்கின்ற கூன் சாதியினுடைய பிறப்பு நின்னிற் றாழ்ந்ததோவென்றாள். (கலி. 94) உவமவியல் உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். காட்டகத்தே திரியும் ஆமா என்ற விலங்கினைக் கண்டறியாதா னொருவன், அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினானாயின, ஆவினைப் போன்றது ஆமா என அவனுக்குத் தெரிந்த பசுவை ஒப்புமை யாகக் காட்டி உணர்த்துதல் மரபு. அவ் வொப்புமையைக் கேட்டறிந்த அவன், பின்னொரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை நேரிற் கண்டானாயின் ஆமா இதுவே என உணர்ந்து கொள்வான். இவ்வாறு பிறிதொன்றை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக் கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமையெனப்படும். இவ்வுவமை யினைக் கருவியாகக் கொண்டே இரு திணைப் பொருள்களும் வழக்கினுள் நன்கறியப்படுவன. ஆதலால் இருவகை வழக்கினும் நிலைபெற்று வழங்கும் உவமையின் இலக்கணத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விரித்துக் கூறுகின்றார். அதனால் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று. மேல், குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந்தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது என இளம்பூரணரும், உவமத்தாலும் பொருள் புலப்பாடே யுணர்த்துகின்றாராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபு உடைத்தாயிற்று எனப் பேராசிரியரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பத்தெட்டாக இளம்பூரணரும் முப்பத்தேழாகப் பேராசிரியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். மேல், அகத்திணையியலுள் உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஓதிய ஆசிரியர், அவ்விரண்டனுள் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனையுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யுளுக்கேயுரிய உள்ளுறை யுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யுளியலுடன் இயையும்படி இவ்வியலின் இறுதிக்கண்ணும் வைத்து விளக்குகின்றார் இதன்கண் 1 முதல் 22 வரையுள்ள சூத்திரங்களால் ஏனையுவமத்தின் இலக்கணமும். 23 முதல் 31 வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், 32 முதல் 37 முடியவுள்ள சூத்திரங்களால் உள்ளுறை யுவமம் போன்று மனத்தாற் கருதியுணர்தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும், அதனது இயல்பினை விளக்க வேண்டி ஒப்புமையாக எடுத்துக் காட்டப்படும் பிறபொருளை உவமையென்றும் கூறுவர் தொல்காப்பியர். இவ்விரண்டினையும் முறையே உபமேயம் என்றும் உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவமையும் பொருளும் ஆகிய இவ்விரு பொருளின்கண்ணும் ஒத்தமைந்த வண்ணம் வடிவு, தொழில், பயன் என்பன பற்றியமைந்தத ஒப்புமைத்தன்மை பொதுத்தன்மை யெனப்படும். அத்தன்மையினை விளக்குதற் பொருட்டு அன்ன, ஆங்கு, போல, புரைய என்பன முதலாக அவற்றைச் சார்ந்துவரும் இடைச் சொற்கள் உவமவுருபெனப்படும். இங்ஙனம் உவமையும் பொருளும் அவற்றிடையே அமைந்த பொதுத்தன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப்படை யாக உணர்தற்கேற்ற சொல் நடையினை உடையது ஏனையுவமம் எனப்படும். ஒருபொருட்கு ஒருபொருளை உவமையாகக் கூறுமிடத்து, அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரணமாகவும், அத்தொழிலாற்பெறும் பயன் காரணமாகவும், மெய்யாகிய வடிவு காரணமாகவும், மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய வண்ணங் காரணமாகவும் ஒப்பித்துரைக்கப்படுமா தலின், உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்பர் ஆசிரியர். வினையாற் கிடைப்பது பயனாதலின் வினையின் பின்னர்ப் பயனும், மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின் பின்னர் உருவும் முறையே வைக்கப்பட்டன. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். மெய்யாகிய வடிவினை இருட்பொழுதிலும் கையினால் தொட்டறிதல் கூடும். வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்து கொள்ளுதல் இயலாது. புலியன்ன மறவன் என்பது, புலி பாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின், வினை உவமம் எனப்படும். மாரியன்ன வண்கை என்பது, மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும். துடியிடை என்பது, மேலுங்கீழும் அகன்ற பரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கி வடிவொத்தமையின், மெய்யுவமம் எனப்படும். பொன்மேனி என்பது, பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் எனப்படும். வினை, பயன், மெய், உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்குமாதலின், உவமப்பகுதி இந்நான்கே என வரையறுத்தார் ஆசிரியர். ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை சொல்லுங்கால் வினை முதலிய இந்நான்கனுள் ஒரோ வொன்றே யன்றி இரண்டும் மூன்றும் பொருந்தி ஒத்துவருதலும் உவமையின் இலக்கணம் என்பர் அறிஞர். செவ்வான் அன்ன மேனி என்பது நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. அவ்வான்-இலங்கு பிறை அன்னவிலங்கு வால் வையெயிற்று என்புழி வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் ஒத்து வந்தன. காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி, கையாடு வட்டிற்றொன்றும் என்புழி, ஆடுதற்றொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும வண்டிற்கு வட்டுக்காய் உவமையாய் வந்தமை காணலாம். உள்ளத்தாற் கருதியுணருமிடத்து, உவமிக்கப்படும் பொரு ளாகிய உபமேயத்தைவிட அதனியல்பினைப் புலப்படுத்தற் பொருட்டு எடுத்துக் கூறப்பெறும் உவமை, உயர்ந்த பொருளாக அமைதல் வேண்டும் என்பர் ஆசிரியர். இங்கு உயர்ச்சியென்றது வினை பயன் மெய் உரு எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மை களால் உபமேயத்தினும் உபமானம் உயர்வுடையதாதலை இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளுக்கும் இழிந்த தொன்றினை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உபமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதனோடு ஒரு பகுதியொத்தலாகிய பொதுத் தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்படும் பொருளை உவமையாக எடுத்தாளவேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த வழியும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக் கொண்டு உயர்ந்த குறிப்புப்பட உவமஞ் செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம். மேற்கூறியவாறு ஒரு பொருட்கு அதனின் உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறினும் அவ்வுவமையானது, சிறப்பு நலன், காதல், வலி என்ற இந்நான்கனுள் ஒன்றை நிலைக்களமாகக்கொண்டு தோற்றுதல் வேண்டும் என்பர் அறிஞர். அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது ஒருபொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளனவாகக் கொண்டு கூறுவது. வலி என்பது ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். முரசு முழங்குதானை மூவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியர் தலைவ (பொருந-54-7) என்புழி, பெருமைமிக்க தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தம்மிற் பகைமை நீங்கி ஒன்றுகூடி அரசவை யில் வீற்றிருந்த தோற்றம்போல நிருத்த கீதவாத்தியம் என்னும் இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி பேசப்படுதலால் இவ்வுவமைச் சிறப்பினை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். ஓவத்தன இடனுடை வரைப்பின் (புறம்-251) என்புழி, சித்திரம் போலும் வனப்பமைந்த இடத்தினையுடைய நகரம் என அதன் நலம்தோன்ற உவமை கூறினமையின் இவ் வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். பாவையன்ன பலராய் மாண்கவின் (அகம்-98) என்பது பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பு அமைந்த என்மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலக்களம் காதல் என்பது நன்கு புலனாம். அரிமா வன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் (பட்டினப்-298, 299) என்பது, திருமாவளவனாகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறிய தாகலின் இவ்வுமைக்கு நிலைக்களம் வலி என்பது இனிது விளங்கும். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறவே, இவற்றை ஆதாரமாகக் கொண்டன்றி எத்தகைய உவமும் பிறவாதென்பது கருத்தாயிற்று. ஒரு பொருளின் இழிபு கூறுவார், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடு பொருள் எனப்படும் அவ்விழிபும் உவமத்தின் நிலைக் களங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். கிழக்கிடு பொருள்-கீழ்ப்படுக்கப்படும் பொருள். அரவு நுங்கு மதியின் நுதலொளி கரப்ப (அகம்-313) என்புழி, பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலைமகளது நுதல் ஒளியிழந்த நிலையினைக் கூறுவார், இராகு வென்னும் பாம்பினால் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறினமையின், இது கிழக்கிடுபொருள் நிலைக் களமாகப் பிறந்த உவமையாகும். சிறப்பு, நலன், காதல், வலி என் முற்கூறிய நான்கினோடு கிழக்கிடு பொருளாகிய இதனையும் சேர்த்து, உமவத்தின் நிலைக்களம் ஐந்தெனக் கொள்ளுதலும் பொருந்தும் என்பர் ஆசிரியர். முதலும் சினையும் எனக்கூறப்படும் இருவகைப் பொருள் களுக்கும் கருதிய மரபினால் அவற்றிற்கு ஏற்றவை உவமையாய் வருவதற்கு உரியன. எனவே, வரை புரையும் மழகளிற்றின் மிசை (புறம்-38) என முதற் பொருளோடு முதற்பொருளும், தாமரை புரையுங்காமர் சேவடி (குறுந்-கடவுள்) எனச் சினைப்பொருளோடு சினைப்பொருளும், அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடை நிழற் றோன்றுநின் செம்மல் (கலித்-84) என முதற்பொருளோடு சினைப்பொருளும், நெருப்பி னன்ன சிறுகட்பன்றி (அகம்-84) எனச் சினைப்பொருளோடு முதற்பொருளும் வேண்டியவாறு உவமஞ் செய்தற்குரியன எனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். பவளம்போற் செந்துவர்வாய் என்பது உவமையும் பொருளும் ஆகிய அவ்விரண்டிற்கும் பொதுவாயமைந்த செம்மைக் குணத்தினைச் சுட்டிக்கூறி உவமஞ் செய்தமையால் சுட்டிக்கூறிய உவமம் எனப்படும். இங்ஙனம் உவமையுடன் பொருளுக்கு அமைந்த ஒப்புமைக் குணத்தினைச் சுட்டிக்கூறாது பவளவாய் என்றாற் போன்று வரும் உவமம் எனப்படும். இங்ஙனம் சுட்டிக் கூறாவுவமம் வருமாயின், அதன்கண் அமைந்த உவமத்தினையும் பொருளினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைக் குணம் பற்றி வினை பயன் மெய் உரு என்னும் நான்கினுள் இஃது இன்ன உவமையென்று துணியப்படும் என்பர் ஆசிரியர். பவளவாய் என உவமை கூறிய நிலையில், வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மை பற்றி இங்கு உவமை கொள்ளுதல் பொருந்தாது, அவ்விரண்டினும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்பு நோக்கியறிந்து கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இவண் நினைக்கத் தகுவதாகும். உவமானமும் பொருளும் தம்மின் ஒத்துள்ளன என உலகத் தார் ஏற்று மகிழும் வகையில் உவமை யமைதல் வேண்டு மென்றும், இனி, உபமேயமாகிய பொருளினை உவமையாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுமிடத்தும் அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படு மென்றும், பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால் உலக வழக்கினைக் கடந்து இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் நீங்காது கேட்டோர் மனங்கொள்ளும்படி செய்தல் வேண்டு மென்றும் இவ்வியல் 8முதல் 10வரையுள்ள சூத்திரங்களில் உணர்த்தப்பட்டன. உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றின் இடையே வருஞ் சொல்லாகிய உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய எனவரும் முப்பத் தாறும் அவை போல்வன பிறவுமாகிய பல்வேறு குறிப்பினவாய் வரும் என்பது இவ்வியல் 11-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இதன்கண், அன்னபிறவும் என்றதனால், இங்குச் சொல்லப் படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும் ஆகிய உவமவுருபுக ளெல்லாம் தழுவிக்கொள்ளப்பட்டன. புலி போன்ற சாத்தன் எனப் பெயரெச்சமாகவும், புலி போலப் பாய்ந்தான் என வினை யெச்சமாகவும், சாத்தன் புலி போலும் என வினைமுற்றாகவும், அன்ன, இன்ன என இடைச் சொல்லாகவும் இங்ஙனம், பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் கூறுங் காலைப் பல்குறிப்பின என அவ்வுருபுகள் குறிக்கப்பட்டன. அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க என்னும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபுகளாகும். இவற்றுள் அன்ன என்பது ஏனைய உவமைகளுக்கும் உரியதாய் வருதல் உண்டு. எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ என்னும் எட்டுருபுகளும் பயனிலை யுவமைக்குச் சிறந்தனவாகும். கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்ற எட்டும் மெய்யுவமத்திற்குரிய உருபுகளாகும். போல, மறுப்ப, ஒப்ப, காய்ந்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்னும் எட்டுருபுகளும் உருவுவமத்திற்குச் சிறந்துரியனவாகும். இவ்வாறு நால்வகை உவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமை யுடையன எனத் தொல்காப் பியனார் வரையறுத்துக் கூறுதலால் இக்காலத்துப்போல அவர் காலத்தில் எல்லாவுருபுகளும் எல்லாவுவமைகட்கும் வழங்கவில்லை யென்பதும், ஆசிரியர் மேற்குறித்தவாறு நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்த உருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை முதலிய பொருகள்மேற் பயின்று வழங்கினமையே காரணமென்பதும் நன்கு புலனாம். மேற்குறித்த வண்ணம் இவ்வுருபுகள் வினையுவமம் முதலாகத் தத்தமக்குரிய பொருள்கள் மேற்பயின்று வழங்குந்திறத்தைத் தொன்று தொட்டுவரும் சொற்பொருள் மரபு பற்றி யுணர்தல் வேண்டுமென்பது தத்த மரபிற்றோன்றுமன் பொருளே எனவரும் சூத்திரத்தால் நன்கறியப்படும். மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு என்பர் ஆசிரியர். வினையுவமம் வினையும் குறிப்பும் எனஇருவகையாகவும், பயனுவமம் நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம் நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகையுவமமும் உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினை முதலிய நான்குவமை களுக்கும் எவ்வெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் இரண்டு கூறாகி நாலிரண்டும் எட்டுப் பகுதிகளாக வரும் எனக் கருத்துரைத்தலும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர். பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமைகள், மேல் நகை முதல் உவகையீறாகச் சொல்லப் பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்று மென்று கூறுவர் அறிஞர் எனவே எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படு மென்பதாயிற்று. உவமை யெனப்பட்ட பொருளால் உபமேயமாகிய பொருளுக்கு ஒத்தனவெல்லாம் அறிந்து துணியும் பொருட் பகுதியும் உள்ளன; பலவாகி வரும் அப்பொருட் பகுதிகளின் இலக்கண வகையைக் கருவியாகக்கொண்டு அவை நன்கு துணியப்படும். இவ்வாறு உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே அவை அறியப்படுவனவாம். அடையும் அடையடுத்த பொருளும் என இரண்டாய் ஒன்றிய உவமேயப் பொருள், அடையும் அடையடுத்த பொருளும் என இவ்வாறு இரண்டாய் நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப்படும் என்பர் ஆசிரியர். பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாண்-220-1) என்புழிச் சண்பங்கோரையின் பூந்துகள் படிந்த செஞ் சுவட்டினையும் அச்சுவட்டினைப் பொருந்திய உழவர் சிறாரது கரிய மார்பினையும் இணைத்து ஒன்றாக உவமிக்கக் கருதிய புலவர், அவ்விரண்டினையும் முறையே பொன்னின் உரையோடும் அதனைப்பொருந்திய உரைகல்லோடும் இணைத்து உவமை கூறினமையின், இரட்டைக் கிளவியாகிய உவமேயம் இரட்டைக் கிளவியாகிய உவமானத்தின் பின் வந்தமை காண்க. புலவன் தான் வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன், அதனை உவமையாகக் கொண்டு உய்த்துணரப் படும் உவமேயப் பொருள் இதுவென வேறு நிறுத்திக் கூறாமல், உவம நிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக் கருத்தினால் இதற்கு இது உவமையென்று கொள்ளவைத்த முறையினால், இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்ற நல்லுணர்வுடை யோர் துணிந்து கொள்ள வருவது மேற்கூறிய உள்ளுறையுவமமாகும் என்பர் ஆசிரியர். எனவே இது நல்லுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா தென்பதும், உணர்வுடையோர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இஃது அமைதல் வேண்டுமென்பதும், இதனால் இவ்வுவமை செய்யுளுட் பயின்று வருமென்பதும் கூறினாராயிற்று. உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக ஒருங்கு வைத்துக் கூறப்படாத நிலையிலும் உள்ளுறையாகிய இஃது உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின் இதனை உவமையென்றார். உவமை என்பது ஒப்பினாலாய பெயர். உவமம் போலப் பொருள் கொள்ளப்படுதலின் இதனை உவமப் போலியென வழங்குவர் ஆசிரியர். உவமைப் போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்துவகைப்படு மென்பர். அவையாவன வினை, பயன், மெய், உரு பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றி வருவனவாம். பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர எந்நலந் தொலைவ தாயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே (ஐங்குறு-63) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன்கண், பொய்கை யாகிய தூய இடத்திற் பிறந்த நீர் நாயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் பின்னை நாளிலும் அதனையே விரும்பிப்பெறும் ஊரனே எனத் தலைவனை அழைக்கு முகமாக, அத்தலைவன் நல்ல குலத்திற் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப்பற்றி வந்த உள்ளுறையுவமமாகும். இவையெல்லாம் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாதலும், இக்கருத்தின்றி நீர் நாய் வாளை பெறூ உம் ஊரன் என வறிதே கூறின் ஒருபயனும் இல்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் இவ்வுள்ளுறை யுவமத்தால் திணையுணரு முறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும் உள்ளுறைகளும் இவ்வாறே கருதியுணரப்படும். தலைமகள் உள்ளுறை யுவமங் கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும் எனவும், தோழி கூறுவாளாயின் தான்பயின்ற நிலத்துள்ளன அன்றிப் பிறநிலத்துள்ளன உவமை கூறப்பெறாள் எனவும் கூறுவர் ஆசிரியர். எனவே, தலைவி தான் வாழும் நிலத்துள்ளன எல்லாம் அறியுமளவுக்குப் பயிற்சி யில்லாதவள் எனவும், அவளுடைய தோழி முதலிய ஆயத்தாராயின் தம் நிலத்துள்ளன எல்லாம் அறிந்திருத்தலால் எத்தகைய தவறுமில்லை யெனவும் கூறியவாறு. தலைமகன் உள்ளுறை யுவமை கூறுங்கால் தனது உரனுடைமை தோன்றச் சொல்லப்படும். பாங்கன், பாணன் முதலிய ஏனையோர் கூறுங் கால் இடம் வரையப்படாது தாம் தாம் அறிந்த சொல்லாலும் நிலம் பெயர்ந்துரையாத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறையுவமை சொல்லுதற் குரியர். மகிழ்ச்சி விளைக்குஞ் சொல்லும் புலவியாகிய துன்பத் தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமை யிடத்தே தோன்றுமென்றும், மேற்கூறிய மகிழ்ச்சி, புலவி என்னும் இரண்டிடத்தும் தலைமகள் உள்ளுறை கூறுதற்கு உரியள் என்றும் கூறுவர் ஆசிரியர். எனவே இவ்விரண்டு மல்லாத ஏனைய இடங்களில் தலைமகள் உள்ளுறை கூறப்பெறாள் என்றவாறு. இத்தகைய இடவரையறை யெதுவும் தலைமகனுக்கு இல்லை. ஆகவே அவன் கூறும் உள்ளுறை எப்பொருட் கண்ணும் வரும் என்பது கருத்து. தோழியும் செவிலியும் உள்ளுறையுவமம் கூறுங்கால், காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு நோக்கிக் கேட்டோர் எளிதில் உய்த்துணர்ந்து கொள்ளுதற்குரிய நெறியால் கூறுதற்குரியராவர். இவ்வாறு அகத்திணை யொழுக லாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற் குரியார் இன்னின்னார் என விதந்து கூறவே, இவர்களல்லாத தலைமகளது நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்பெறார் என்பதும், இங்ஙனம் உள்ளுறை கொள்ளுதல் அகத்திணை யொழுகலாற்றிற் போலப் புறத்திணை யொழுக லாற்றில் அத்துணை இன்றியமையாத தன்றாதலின் இவ் வுள்ளுறை யுவமத்தினை அகத்திணைக்கே சிறப்புரிமை யுடைய தாக ஆசிரியர் எடுத்தோதினாரென்பதும் நன்கு பெறப்படும். எடுத்தோதப்பட்ட இலக்கணங்களில் வேறுபாடு தோன்ற வந்த உவமப் பகுதிகளை அங்ஙனம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியால் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருத்துக என்பர் ஆசிரியர். உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர் முதலியன கூறும் அளவால் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமை நாட்டுதலும், உவமை யும் பொருளும் முற்கூறி நிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வா வென்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்து வறிதே கூறுமிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை மொழி ஒன்றற்குக் கூறாது கூறுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினால் ஒப்புமை கொள்ளுதலும், உவமத்திற் கன்றி உவமத் திற்கேதுவாகிய பொருள்களுக்குச் சில அடைகூறி அவ் அடை மொழியானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதலும், இரண்டு பொருளாலே வேறுவேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்துலும் ஆகிய இவைபோல்வன வெல்லாம் வேறுபட வந்த உவமப் பகுதிகள் என்றும், இவற்றைவினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் பற்றி ஏனையுவமத்தின்பாலும், உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்கவாராது குறிப்பினாற் கொள்ள வருதல் பற்றி உள்ளுறை யுவமத்தின் பாலும்படுத்து உணரப்படுமென்றும் கூறுவர் பேராசிரியர். உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் மரபாகும் என்றும், உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி உவமையது தன்மை கூறுதலும் உவமையாதற்கு உரியதென்றும் உவமையும் பொருளும் வேறு வேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூறாது அவ்விரண்டினையும் ஐயுறச் சொல்லுதலும் உவமையைப் பொருளாக்கிப் பொருளை உவமையாக்கிச் சொல்லுதலும் என இங்ஙனம் தடுமாறி வரும் உவமம் தவறென்று விலக்கப்படாதென்றும், ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறுத்தி அப்பொருளோடு பிறிதொரு பொருளை உவமித்தலும் உவமையெனப்படுமாயினும் அதனாற் பொருள் விளங்காமையின் அடுக்கிவரலுவமையாகிய அது கொள்ளப்படாதென்றும், சுண்ணமாகிய துகள்போலச் செய்யுளிற் பலவிடங்களிலும் சிதர்ந்து கிடக்கும் பொருள் கோள் வகையாகிய சுண்ணம், அடிமறி, மொழிமாற்றும் என்னும் மூன்றுமல்லாத நிலையில் உவமையையும் நிரலே நிறுத்திப் பொருளையும் நிரலே நிறுத்தி ஒப்புமை கூறின் அது நிரல் நிறையுவமம் என ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இவ்வியலின் இறுதிக்கண் உவமை பற்றிய சில மரபுகள் தொகுத்துரைக்கப் பட்டன. ஆசிரியர் தொல்காப்பியனார், பொருள் புலப் பாட்டினைச் செய்யும் கருவியென்ற முறையிலேயே உவமையின் பகுதிகளை இவ்வியலில் விரித்துக் கூறியுள்ளார். பிற்காலத்தில் வந்த தண்டியாசிரியர் முதலியோர் உவமையாகிய இதனைச் செய்யுட்கு அலங்காரமாகக் கொண்டு தாம் இயற்றிய அணி யிலக்கண நூலில் இதனையும் ஓரலங்காரமாக்கி இலக்கணங் கூறியுள்ளார்கள் தாமரை போலும் முகம் எனவரும் உவமத்தொடர் முகம் போலுந் தாமரை என மாறி இடைநின்ற உவமவுருபு தொக்கு முகத்தாமரை எனவரின் அஃது உருவகம் எனவேறோர் அணியாய் விடும் என்பது அன்னோர் துணிபாகும். இவ்வாறே தன்மை, வேற்றுமை, வேற்றுப்பொருள் வைப்பு, ஒட்டு முதலிய அலங்காரங்கள் பலவும் தொல்காப்பியனார் கூறிய உவமப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றன என்பது நுண்ணுணர்வினாற் கூர்ந்து நோக்கும் வழி இனிது புலனாகும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டியாசிரியர் வடமொழியில் இயற்றிய காவியா தரிசம் என்னும் அலங்கார நூலிலும் அதன் தமிழ்மொழி பெயர்ப்பாகிய தண்டி யலங்காரம், மாறனலங்காரம் முதலிய பிற்கால நூல்களிலும் வகுத்துரைக் கப்படும் அணிவிகற்பங்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் வெவ்வேறணிகளாக வழங்கின அல்ல என்பதும், தொல்காப்பியனார் கூறும் உவமப் பகுதிகளைச் செய்யுளிற் பிரிப்பின்றி ஒன்றாகிய பொருளுறுப்பெனக் கொள்வதன்றிச் செய்யுளுக்கு வேறாகி நின்று அதற்கு அழகு செய்யும் வேறோர் அலங்காரமாகக் கூறுதல் பொருந்தாதென்பதும் தொல்காப்பிய வுரையாசிரியராகிய பேராசிரியர் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் துணிபாகும். இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுங் கூறுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட் கண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணி யென்று இலக்கணம் கூறப்படா; என்னை? தாம் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியும் வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன் றாகியும் வரும். அல்லதூஉம் பொருளதிகாரத்துட் பொருட்பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான்... அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறுசிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாம்.... அவற்றைப் பொருளுறுப்பு என்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல, அவ்வணியுஞ் செய்யுட்கு வேறாதல் வேண்டும். செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலாம். எனவரும் பேராசிரியர் உரைப்பகுதி, ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய உவமப் பகுதிகளின் நுட்பத்தையும் அந்நுட்பம் இனிது விளங்காத பிற்காலத்தில் வேறு காரணமுணரப்பெறாது இடர்ப்பட்டுச் செய்தனவாகிய அணியிலக்கணங்களின் அமைதியையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 308-322 உவமையியற் சுருக்கம் ஒரு பொருளை அறியாத ஒருவனுக்கு அதனை அறிவிக்குங் கால் அதனோடொத்த வேறொரு பொருளைக் காட்டி இதுபோலும் இது என்று கூறுவதே உவமையாம். ஆதலின், அவ்வுவமையும் பொருளைப் புலப்படுத்த வந்ததே யாம். பேராசிரியரும், உவமவியலிற்கு அதற்கு முதலிலுள்ள ஒத்தினோடு இயைபு கூறுங்கால். மற்றிதுமே லெவ்வோத் தினோ டியைபுடைத்தோவெனின், மேற்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப் பாட்டியலோ டியைபுடைத்து; என்னை? உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றானாகலின். எங்ஙனமெனின்? ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட்சென்ற வழி, அதனைக் கண்டுழி ஆபோலும் என்னும் உவமைபற்றி ஆமாவிது வென்று அறியுமாகலான் என்று கூறுதலானே உவமை பொருளைப் புலப்படுத்தற்பொருட்டே புலவர்களாலெடுத்தாளப் படுவ தென்பது பெறப்படும். பொருளைப் புலப்படுத்தற் கேயன்றி, அப்பொருளைப் புனைந்துரைத்தல் காரணமாகவும் உவமை கூறப்படும். அங்ஙனமாதல், கண் பிறழ்ந்ததோ கயல் பிறழ்ந்ததோ என்புழிக், கண்ணின் பிறழ்ச்சியை ஐயவுவமை வாய்பாட்டாற் புனைந்துரைத்தல் காரணமாகக் கயலின் பிறழ்ச்சி இங்கு எடுத்துக் காட்டப்பட்டதன்றிப், பொருளைத் தெரிக்கக் காட்டப்பட்ட தன்றாதலானுணரப்படும். அன்றிக் கண்ணின் பிறழ்ச்சி தெரியா தானுக்கு அப்பிறழ்ச்சியை உணர்த்துமாறு கயலின் பிறழ்ச்சியை எடுத்துக்காட்டி இதுபோலும் இது என்று காட்டின் அதுவும் பொருள் புலப்படுக்க வந்ததேயாம். ஒரு பொருளுக்கு ஒரு பொருளை உவமிக்குங்கால், தொழி லும், பயனும், வடிவும், நிறமும் என்னும் நான்கனுள் ஒன்றானே உவமிக்கப்படும் எங்ஙனமெனின்? புலிபோலும் மறவன் என்புழி மறவனுடைய பாய்தற்றொழிலிற்குப் புலியின் பாய்தற்றொழிலை எடுத்துக்காட்டி, புலிபாய்வதுபோலப் பாயும் மறவன் என உவமித்தமையின் இது வினையுவமையாம். மாரியன்னகை என்புழிக் கையின் கொடைப்பயனை யுணர்த்தற்கு மழையை எடுத்துக்காட்டி மழைபோல மிகக்கொடுக்குங் கையென அதன் பயன்பற்றி உவமித்தமையின் இது பயனுவமையாம். துடிபோலு மிடை என்புழி மேலுங்கீழும் அகன்று நடுவே ஒடுங்கியிருக்கு மிடைக்கு, அங்ஙனமொடுங்கியிருக்கும் துடியை எடுத்துக் காட்டித், துடிபோலும் இடையென உவமித்தமையான் இது வடிவுவமையாம். பவளம் போலும் வாய் என்புழி வாயின் செந் நிறத்தை உணர்த்துதற்குச் சிவந்த பவளத்தை எடுத்துக்காட்டிப் பவளம் போலும் வாயென உவமித்தமையின் இது நிறவுவமை யாம். இங்ஙனம் நான்குவகையாக உவமித்தல்பற்றியே தொல் காப்பியரும் வினை பயன் மெய் உரு என்ற நான்கே - வகை பெறவந்த உவமத் தோற்றம் என்றார். உவமைகள் வினை பயன் மெய் யுரு என்ற நான்கனுள் ஒவ்வொன்றேபற்றி வருதலன்றி இரண்டும் மூன்றும் நான்கும் பற்றியும் வரும். அங்ஙனமாதலை பிறையெயிறு, அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி - கையாடு வட்டிற் றோன்றும் என்னுமுதாரணங்களில் வைத்து உணர்ந்து கொள்க. பிறை, எயிற்றுக்கு நிறமும் வடிவும்பற்றி உவமஞ் செய்யப் பட்டது. பிறவும் இங்ஙனம் வரும் உவமைகளை இன்னதின்னது பற்றி வந்ததென உய்த்துணர்ந்துகொள்க. இனி, ஒன்றை உவமிக்குங்கால் உவமேயப் பொருளிலும் உவமைப்பொரு ளுயர்ந்ததாக விருத்தல்வேண்டும். ஏனெனின்? உவமைப்பொரு ளிழிந்ததாயிற் கேட்போனுக்குப் பொருட்கண் மனஞ்செல்லாதாகலான். உயர்ந்ததாயின் அவ்வுயர்ச்சி பற்றிக் கேட்போனுக்குப் பொருட்கண் மனஞ்சென்று அதனையும் அதன் மேன்மையையும் அறிந்துகொள்வான் என்றபடி. பொன் மேனி என்புழி பொன்னி னுயர்ச்சிபற்றிப் பொருளாகிய மேனிக் கண்ணே கருத்துச் சென்று அதனையும் அதன் சிறப்பையுங் கேட்போன் உணர்ந்துகொள்ளும் என்பது கருத்தாம். அது பற்றியே, உயர்ந்த தன்மேற்றே உள்ளுங்காலை என்றார் தொல்காப்பியரும். உவமையையும் பொருளையும் பேதமாகக் கூறாது ஒன்றாக்கி வாயே பவளம், வாய் பவளமாக, வாயாகிய பவளம் என்பன போல அபேதமாகக் கூறுவதுமுண்டு. இவற்றை இக்காலத்தார் உருவகமென்பார். இனி, வினை முதலிய நான்கும்பற்றி ஒன்றை உவமிக்குங் கால் அவ்வுவமை பொருளின்கணுள்ள சிறப்பும், அழகும், காதலும், வலியும், இழிவும் என்னும் ஐந்தையும் இடமாகக் கொண்டு தோன்றும். அங்ஙனந் தோன்றுமாற்றை, முரசு முழங்குதானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல்பற்றிய பயனுடைய எழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிஞ. என்புழி, நிருத்த கீத வாக்கியம் என்னும் மூன்றோடுங் கூடிப் பாட்டுத் தோற்றம்பெற்றுச் சிறப்படைந்ததற்கு அரசர் மூவருங் கூடி அரசவையிருந்த தோற்றம் அவ் வவைக்குச் சிறப்பளித் தமையை உவமை கூறுதலானே, சிறப்பையிடமாகக்கொண்டு பிறந்த தெனப்படுதலானும், ஓவத்தன்ன விடனுடை வரைப் பின் என்புழி, ஓவம்போன்ற செயற்கை யழகையுடைய இட மென்றமையான், அந்நகரினது செயற்கையழகையே இடமாகக் கொண்டு பிறந்த தெனப்படுதலானும், பாவையன்ன பலராய் மாண்கவின் என்புழி, மகளிரிடத்துள்ள காதலை யிடமாகக் கொண்டு பாவை யன்ன வென்று கூறுதலின், இவ்வுவமை காதல் நிலைக்களமாகப் பிறந்த தெனப்படுத லானும், அரிமாவன்ன அணங்குடைத்துப் பின் என்புழி, பகைவரைக் கொல்லுதற்கு வலியே காரணமாக லின் அது காரணமாக அரிமாவை உவமை கூறுதலின், வலியை நிலைக் களமாகக் கொண்டு பிறந்ததெனப் படுதலானும், அரவு நுங்கு மதியின் நுதலொளிகரப்ப என்புழி, நுதலொளி குறைந்த மைக்கு அரவு நுங்குமதியை உவமை கூறினமையின் இது இழிபை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததெனப் படுதலானும் அறிந்துகொள்க. இன்னும் உவமை, சுட்டிக்கூறும் உவமையும் சுட்டிக் கூறாவு வமையுமென இரண்டு வகைப்படும். சுட்டிக்கூறும் உவமை யாவது பொதுத்தன்மையை வெளிப்படையாகச் சுட்டிக்கூறும் உவமை. அங்ஙனம் கூறாதது சுட்டிக்கூறா வுவமை யாகும். பவளம் போற் செந்துவர்வாய் என்புழி உவமானம் உவமேயம் என்னும் இரண்டற்கும் பொதுத்தன்மையாகிய செம்மையை யிதுவென்று இங்கே சுட்டிக் கூறினமையின் இது சுட்டிக்கூறிய வுவமை யாகும். பவளவா யென்புழி அங்ஙனங் கூறாமையிற் சுட்டிக் கூறா வுவமையாகும். சுட்டிக்கூறும் உவமை விரியுவமையென்றும், சுட்டிக்கூறா வுவமை தொகையுவமை யென்றுங் கூறப்படும். உவமை கூறுங்கால் உவமேயத்தோடு ஒத்த குணமுடையவற்றையே எடுத்து ஒப்புமை கூறவேண்டும். ஒவ்வாதவற்றை எடுத்து உவமை கூறின் அது வழுவாம். ஆமாவெதுபோலுமெனின் ஆப்போலுமென அதனோடொத்த குணமுடையதையே ஒப்புமை கூறுவதன்றி அதனோடொவ் வாதவொன்றை உவமை கூறுதலாகாது. இதுபற்றியே தொல்காப்பியரும் உவமையும் பொருளும் ஒத்தல்வேண்டும் (சூ. 283) என்றார். இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கூறுதலே பொருத்தமென்பது எமது கருத்து. பேராசிரியரும் இளம்பூரணரும் வேறு வேறு கருத்துக் கூறுவர். சூத்திரப் போக்குநோக்கிப் பொருந்துவதை ஆராய்ந்து கொள்க. இனி, உவமையை உவமேயமாகவும், உவமேயத்தை உவமை யாகவும் மாறிக் கூறினும் அஃது உவமையாம். எங்ஙன மெனில், பவளம்போலும் வா யென்பதை வாய்போலும் பவள மென்று மாறி உவமஞ் செய்யினும், அஃதும் உவமையாகக் கொள்ளப்படும். அங்ஙனம் மாறிக் கூறுங்கால் ஆண்டும் உவமையாக நின்ற உவமேயப் பொருளே உயர்ந்ததாகக் கருதப்படும். இவ்வாறு மாறிக் கூறுவனவற்றை விபரீத உவமை யென்பர் தண்டியா சிரியர். இன்னும் மிகப் பெரிய பொருளையெடுத்தும் மிகச் சிறிய பொருளையெடுத்தும் உவமிக்குங்காலும் இன்பமுறும் சிறப்பிற்றீராதவாய்க் கேட்டார் மனங்கொள்ளுமாறு (விரும்பு மாறு) வரும் உவமைகளையே எடுத்துக் கூறல்வேண்டும். ஏனெனின்? அவ்வாறு கூறலே ஆன்றோர் மரபாதலின். மாக்கட னடுவ னெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல். என்றவழி சிறிய கூந்தலுக்கு மிகப் பெரிய பரப்பையுடைய கடலையும் சிறிய நுதலுக்கு மிகப் பெரிய பரப்பையுடைய மதியையும் உவமை கூறலாமோவெனின்? அவ்வுவமைகள் பெருமை யுடையனவாயினும் சிறப்புடைமையிற்றீராது கேட் டார் மனங் கொள்ளுமாறு நிற்றலான் அவை கூறத்தக்கனவே யாம். இனி, உவமையைக் காட்டும் உருபுகள் அன்ன முதலாக முப்பத்தாறும், பிறவும் தொல்காப்பியனாராற் கூறப்பட்டுள்ளன. அவையன்றி உவமான உவமேயங்களுக்கு இடை வருஞ் சொல் லெல்லாம் உவமை உருபாகு மென்பாருமுளர். அன்ன முதலிய உருபுகளுள் வினைமுதலிய நான்கற்கும் உரியவாகவரும் உருபு களிவை யிவையென்றும் அவை உரியவாதற்குக் காரணம் மரபு பற்றி யறியப்படும் என்றுந் தொல்காப்பியர் கூறுவர். அவற்றைப் பின்வரும் உவமையியலிற் காண்க. உவம வுருபுகள் தொக்கு வருதலும் விரிந்துநிற்றலும் பற்றி வினைமுதலிய உவமப் பகுதி நான்கும் எட்டாதலுமுள. இன்னும் உவமை பெருமையுஞ் சிறுமையும்பற்றி மெய்ப் பாடுகள் எட்டோடுங் கூடிவரும். பெருமையுஞ் சிறுமையும் பற்றி வாராது மெய்ப்பாடெட்டோடு மாத்திரம் வருதலே சிறப் பென்பர் பேராசிரியர். உவமையானே உவமேயத்துக்குற்ற பொருள்கள் அறியப்படும். அறியுங்கால் மரபுபற்றி அறியப் படும். அடையும் பொருளுமாய்வரும் உவமேயத்திற்கு அடை யும் பொருளுமாயே உவமையும் வருதல் வேண்டும். சிறு பான்மை அடையின்றியும் உவமை வருமென்க. இனி, உவமேயப் பொருள்களை உள்ளுறுத்து வைக்கப்படும் உள்ளுறை உவமைகளும் செய்யுளிடத்து வரும். அவைகளை ஓர்ந்துணர்க. அவ்வுள்ளுறை வினை பயன் மெய் உரு பிறப்பு எனவரும் பொதுத்தன்மை களானே ஐந்து வகைப்படும் என்க. உள்ளுறையு வமைகளைத் தலைவி சொல்லுங்கால் தந்நிலப் பொருளானே சொல்லுவள். தலைவன் உள்ளுறை சொல்லுங்கால் தன்னறிவுடைமை தோன்றச் சொல்லுவான். அவன் எந்நிலப் பொருளானுஞ் சொல்லுவான். இவர்களல்லாத கூற்றுக்குரிய ஏனையோர் சொல்லுங்காலும் எந்நிலப் பொருளானுஞ் சொல்வர். தோழியுஞ் செவிலியும் உள்ளுறை சொல்லுங்கால் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்பக் கூறுவர். உவமைகள் இன்பமுந் துன்பமுந் தோன்றச் சொல்லப்படும் என்க. இன்னும் முற்கூறிய இலக்கணங்களின் வேறுபட வரும் உவமைகளும், ஒவ்வா தெனக் கூறி ஒப்பாகக் கொள்ளும் உவமைகளும், பெருமையுஞ் சிறுமை யுந் தோன்றக் கூறாமல் இயற்கைபடக் கூறும் உவமைகளும், உவமேயத்தை உவமை யாக்கிக் கூறும் உவமைகளும் உளவென்க. உவமைக்குவமை கூறலாகாது. கூறிற் குற்றமாகும். நிரனிறை யாகவும் உவமைகள் கூறப்படும். இவற்றை யெல்லாம் ஆன்றோர் செய்யுள் நோக்கியும் பின்வரும் உவமவியல் நோக்கியுமறிந்து கொள்க. ஏழாவது உவமவியல் (உவமையின் பொதுவிலக்கணமும் அவற்றின் பெயராதியவும் உணர்த்தல்) 276. வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே வகைபெற வந்த வுவமத் தோற்றம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உவமவியல் என்னும் பெயர்த்து. உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். இதனானே இவ்வோத்து நுதலியதூஉம் உவமப்பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம் புறம் என்பனவற்றுள், இஃது என்ன பொருளெனப்படுமோ வெனின், 1அவ்விரண்டுமெனப்படும்; மெய்ப்பாடுபோல என்பது; என்னை? உவமப் பொருளி 2னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான (295) என மேல் வருகின்றதாகலின். மற்றிவ் விருதிணைப் பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலானும், உவமம்பற்றியும் பொருள் கூறுகின்றா னென்பது. மேல் அகத்திணையியலுள் (49) உவமத்தினை இரண்டாக்கி ஓதினான், உள்ளுறையுவமம் ஏனையுவமமென; அவ்விரண்டனையும் ஈண்டு விரித்துக் கூறுகின்றவாறு; அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற் கூறினான்; அஃது அகத்திணைக்கே 3சிறந்ததன்றாயினும் 4யாப்புடைமை நோக்கி; உலக வழக்கினுஞ் செய்யுள் வழக்கினும் வருமாகலானுமென்பது. அஃதேல் உள்ளுறையுவமஞ் செய்யுட் கே உரிமையின் அதனைச் செய்யுளியலுட் கூறுகவெனின், உவமப் பகுதியாத லொப்புமை நோக்கி ஓரினப் பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும், வருகின்ற செய்யுளியற்கும் இயையு மாற்றான் 5அதனை ஈற்றுக்கண் வைத்தான், அது செய்யுட்குரித் தென்னுங் கருத்தானென்பது,. எனவே, எழுத்தினுஞ் சொல்லி னும்போலச் செய்யுட்குரியன செய்யுட்கென்றே ஓதலும் 6ஒருவகையாற் பெற்றாம். மற்று, பாடல் சான்ற புலனெறி வழக்கம் (53) 7அல்லாத வழக்கு, ஆராயப் பயந்ததென்னையெனின், - அப்புலனெறி வழக் கிற்கு உறுப்பாகிய வழக்கினை ஆராய்தலும் அதற்கு உபகார முடைத்தாதலா லென்றவாறு. மற்றிது, மேல் எவ்வோத்தி னோடு இயைபுடைத்தோவெனின், மேற் பொருள்புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடைத்து; என்னை? 8உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றானாகலின். எங்ஙனமோவெனின், - ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையேபற்றி ஆமா இதுவென்று அறியுமாகலா னென்பது, இவ்வோத்தின் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறி அவற்றது பெய ரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்: தொழிலும், பயனும், வடிவும், வண்ண மும் என்னும் நான்கெனப்படும் கூறுபட வரும் உவமத்தோற்றம் என்றவாறு. 9உவமம் என்பதனை வினைமுதலாகிய நான்கினொடுங் கூட்டி வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவம மெனப் பெயர் கூறப்படும். வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்கு முன் வினை கூறப்பட்டது. அதுபோலப் 10பிழம்பினான் தோன்றும் நிறத் தினை 11அதற்குப்பின் வைத்தான்; பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் 12அதனுடன் வைத்தானென்பது. மற்று மெய் யெனப்படுவது பொருளாதலின், அதன் புடைபெயர்ச்சியாகிய வினை பிற்கூறுக வெனின், வினையுவமந் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாக நோக்கி அது முற்கூறினானென்பது. அது புலிமறவன் எனத் தொகாது புலியன்ன மறவன் என விரிந்தே நிற்றலும், புலிப்பாய்த்துள் எனத் தொக்குவருதலும் உடைத்தென்பது. தொகை நான்கென எண்ணிக்கொடுத்தான். வரலாறு:- புலியன்ன மறவன்என்பது வினையுவமம்; அது பாயுமாறே பாய்வனென்னுந் தொழில்பற்றி ஒப்பித்தமை யின்; அற்றன்றித் தோலும் வாலுங் காலும் முதலாகிய வடிவும் ஏனை வண்ணமும் பயனும் ஒவ்வாவென்பது; ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். மாரி யன்ன வண்கைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே (புறம். 133) என்பது பயவுவமம்; என்னை? மாரியான் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்குமென்றவாறு. துடியிடையென்பது மெய்யுவமம்; அல்குலும் ஆகமும் அகன்றுகாட்ட 13அஃகித் தோன்றும் 14மருங்குலால் துடி அத னோடு ஒத்தது. பொன்மேனிஎன்பது உருவுவமம்; பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணுங் கிடந்த நிறமே ஒத்தன; பிற ஒத்தில வென்பது. இந்நான்கும்பற்றி உவமந் தோன்றுமென்பது கருத்து. உவமத்தோற்றம் என்பது மூன்றாவதன் தொகை, உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றமென்றவாறு. மற்று அடைசினைமுதல் (தொல். சொல். 26) என்றாற் போல, அடையெனவே 15இந்நாற்பகுதியும் அடங்கக் கூறிப் பண்புத்தொகை என்புழி வண்ணம் வடிவு முதலாயின அடக்கியவாறுபோலப் 16பண்பென்று அடக்குதல் செய்யாது ஈண்டு நான்கெனப் பகுத்ததென்னையெனின், - இது பொருளா ராய்ச்சியாகலான் 17கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் வேறாக நோக்கி வடிவினையும் உருவினையும் வேறுபடுத்தான்; என்னை? வடிவுபற்றிய பண்பு இரவின்கண் 18உற்றுணரப்படும்; வண்ணமாயின் அவ்வாறு உற்றுணரப்படாதென்பது. 19அல் லாக்காற் பகற்குறிக்கட் கூறப்படும் வண்ணம் முதலாயினவும் இரவுக்குறிக்கண் எய்துவான் 20சொல்லும், வடிவும் பண்பும் ஒன்றாகக் 21கூறினானென்பது. அல்லதூஉம், உணர்த்துகின்ற திணைப் பொருளினை எளிதிற் புலப்படுத்த லுபகாரம் நோக்கியும் அவ்வாறு பகுத்தானென்பது. களிற்றிரை தேரிய பார்வ லொதுக்கி னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல (அகம். 22) என்புழிப் பார்வலொதுக்கமாகிய வினை, பண்பெனப்படாது; என்னை? பண்பென்பது 22குறிப்பின்றி நிகழுங் குணமாகலி னென்பது. 23அடையெனினும் அதுவேயெனக் கூறி மறுக்க. எனவே, பார்வலொதுக்கமெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழை யாமற் கோடற்குப் 24பார்வலொதுங்கி நின்றானென்பதும், பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்குகி நின்றானல்லனென்பதுஞ் சொல்லி, அவன் தலைமைக்கேற்ற உவமையாதலின், அது 25பொருட் டோற்றமாயிற்று. மாரியன்ன வண்கை (புறம். 133) என்பதூஉம் பண்பாயின், அதன் நிறத்து மேற்கொண்டு வண்கையுங் கரிதெனல் வேண்டுமாகலின் அது பண்பென அடங்காது. அணைத்தோள் (கலி. 87) என்பதும் அது. உருவுகிள ரேர்வினைப் பொலிந்த பாவை யியல்கற் றன்ன வொதுக்கினள் (அகம். 142) என்றக்கால், வடிவுபற்றி உவமங்கொள்ளவே, உயிரில்லாதாள் போல, அச்சமின்றி, இரவிடை வந்தாளென்னும் பொருள் தோன்றும். வடிவு பண்பெனப்படாது; 26பண்பு இழிபாகலின். மாரிப் பீரத் தலர்சில கொண்டே (குறுந். 98) காட்டி, 27இன்ன ளாயின ணன்னுதல் (குறுந். 98) என்றவழிக், குறித்த பருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று. இது உருவுவமம். 28இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதிநோக்கி உவமப் பகுதி என்றானென்பது; என்றார்க்கு, இந்நான்கு பகுதியேயன்றி அளவுஞ் சுவையுந் தண்மையும் வெம்மையும் நன்மையுந் தீமையுஞ் சிறுமையும் பெருமையும் முதலாயினபற்றியும் உவமப்பகுதி கூறாரோவெனின், - அவையெல்லாம் இந்நான்கனுள் அடங்குமென்றற்கும் அந்நான்கும் இன்ன பொருட்பகுதி உடைய வென்றற்குமன்றே அவற்றை வகைபெற வந்த என்பானாயிற் றென்பது. பறைக்குர லெழிலி (அகம். 23) என்றக்காற் பறையும் எழிலியும் 29ஒத்தல் வினைபற்றி உவமை கொள்வான் ஒன்றற்குக் குரல்கூறி ஒன்றனை வாளாது கூறினா னாயினும் வினையுமவத்தின் வகையெனப்படும். கடைக்கண்ணாற் கொல்வான் போனோக்கி (கலி. 51) என்பதூஉம் அதன் வகை. வந்த என்றதனான் இல்லாத வினை வருவித்துஞ் சொல் லப்படும். அவை, விசும்புரி வதுபோல் (அகம். 24) எனவும், மணிவாழ் பாவை நடைகற் றன்ன (நற். 184) எனவும், வான்றோய் வன்ன குடிமையும் (நற். 234) எனவும் வரும். இவை, 30உவமையும் பொருளுமாகிய வினைபற்றி வந்திலவாகலின் அதன் வகையெனப்பட்டன. அன்ன 31ஆங்க என்பன இடைச்சொல்லாகலின் வினைப்பின்னும் வந்தன. நடை கற்றன்ன என்புழிக் கற்று என்னும் வினையெச்சந் 32தன்னெச்ச வினை இகந்ததாயினும் அஃது உவமப் பகுதியாக லான் அங்ஙனம் வருதலும் வகை என்றதனானே கொள்ளப் படும். கொன்றன்ன வின்னா செயினும் (குறள். 109) என்பதும் அது. இணரெரி 33தோய்வன்ன வின்னா செயினும் (குறள். 308) என்பது, வினைப்பெயர்பற்றி உவமஞ் சென்றது. 34பொன்மரம் போலக் கொடுக்கும் என்பது, பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும்; என்னை? 35மழைத்தொழிலாகிய பெயலாற் பயந்த விளையுளுடன் இடை யிட்டுப் போய் உவமங்கொள்ளாது கொடைப்பொருள் இரண் டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்படாது, கொள்வார்க்குப் பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகையாயிற்று. நிலம் போலுங் கொடை என்பதும் அது. தெம்முனை யிடத்திற் சேயகொல் என்னும் எல்லைப் பொருண்மை மெய்யுவமத்திற்கு வகை யெனப்படும்; அஃது 36அளவாகலினென்பது. 37இடைக்கிடந்த நிலம் இரண்டனையும் வடிவுபற்றி உவமஞ்செய்தானென்பது. மற்றுச் சேய்மை அண்மை குணமாம் பிறவெனின், - அற்றன்று; துடியிடை என்றவழி அதன் இடை நுணுக்கமுங் குணனாகும், அவ்வாறு கொள்வார்க்கு என்பது; எனவே நிறப்பண்பு அல்லன வெல்லாம் மெய்யுவமத்தின் வகையெனப்படுவனவாயின. குணமாதலொப்புமையான் அவை நிறப் பண்பிற்கு இனமென வும்படும். அவ்வாறு திரிபுடைமையின் அவற்றை விதந்தோதாது வகை என்றதனாற் கொண்டானென்பது. தளிர்சிவந் தாங்குச் சிவந்த மேனி என்பது, உருவுவமத்தின் வகையெனப்படும்; என்னை? உவமத் தாற் கொள்ளப்பட்ட பொருள் 38நிறமாயினும் அதனை வினை விரித்தாங்கு விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி வகை யெனப்பட்டது. பிறவும் அவ்வாறே கொள்க. இப்பகுதி யுடைமை நோக்கி வகைபெற வந்த என்றானென்பது. (1) (வினை முதலிய நான்கும் கலந்தும் வருமென்று எய்திய திகந்துபடாமற் காத்தல்) 277. விரவியும் வரூஉ மரபின வென்ப. இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது; நான்கென மேல் (276) தொகை கொடுத்தமையின் அவை வேறு வருத லெய்தியதனை அவ்வாறேயன்றி விரவியும் வரும் என்றமையின். இ-ள்: அந்நான்கும் ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமஞ் செய்யும்வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும். அதன் மரபு என்றவாறு. செவ்வா னன்ன மேனி (அகம். கடவுள் வாழ்த்து) என வண்ணம் ஒன்றுமேபற்றி உவமஞ் சென்றது. அவ்வா னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று. (அகம் .கடவுள்.) என்றவழி, 39வண்ணத்தோடு வடிவுபற்றி உவமஞ் சென்றது. காயா மென்சினை தோய நீடிப் பஃ40றுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்த ளணிமலர் நறுந்தா தூதுந் தும்பி கையாடு வட்டிற் றோன்று மையாடு சென்னிய மலைகிழ வோனே. (அகம். 108) என்புழி, ஆடுதற்றொழில்பற்றியும் 41வடிவுபற்றியும் வண்ணம் பற்றியும் வந்தது. பிறவுமன்ன. மரபின என்றதனான் அவை அவ்வாறு விராய்வருத லும் மரபே; 42வேறுவேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க. (2) பொருளினும் உவமம் உயர்ந்துவரல் வேண்டும் எனல் 278. உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை. இஃது, எய்தாதது எய்துவித்தது. இ-ள்: உவமமெனப்பட்டது உயர்ந்த பொருளாகல் வேண்டும் என்றவாறு. எனவே, உவமிக்கப்படும் பொருள் 43இழிந்துவரல் வேண்டுமென்பது, அரிமா வன்ன 44வணங்குடைத் துப்பின் (பட்டின. 298) எனவும், 45மாரி யம்பின் மழைத்தோற் சோழர் (அகம். 336) எனவும், 46கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் (அகம். 176) எனவும், பொன் மேனி எனவும் வரும். இவற்றுள், உவமையுயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பெய்துவித்தவாறு கண்டுகொள்க. உள்ளுங்காலை என்றதனான், முன்னத்தி னுணருங் கிளவி (தொல். சொல். 459) யான் உவமங் கோடலும், இழிந்த பொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச் செயல் வேண்டு மெனவுங் கொள்க. அவை: என்47யானை, என்பாவை என்றவழி, அவைபோலும் என்னுங் குறிப்புடையான், பொருள் கூறிற்றிலனாயினும், அவன் குறிப்பினான் அவை வினையுவமை யெனவும் மெய்யுவமையெனவும்படும். 48இவற்றுக்கு நிலைக் களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லும்; அவை பற் றாது சொல்லுதல் குற்றமாகலின். அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (குறள். 1081) என்பது ஐயுற்று 49முன்னத்தான் உவமஞ்செய்தது. 50தாமரையன்று முகமேயெனத் துணிந்தவழியும், 51மழையன்று வண்டிருத்தலிற் குழலேயெனப் பொருட்குக் காரணங் கொடுத்தவழியும், 52மதியங்கொல்லோ மறுவில்லையென்று உவமைக் குறைபாடு கூறுதலும், நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ யை53தேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயுமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று (கலி. 55) என்பனவுமெல்லாம் அவை. இவற்றுண் 54மலையுஞ் சுனையும் உவமையின்மையின் அவற்றைப் பிறையோடும் மதியோடும் உடன் வைத்து உவமைபோலக் கூறி எதிர்மறுத்தது என்னை யெனின், அவையாமாறு முதலுஞ் சினையும் (281) என்புழிச் சொல்லுதும். என்ற வியப்ப வென்றவை யெனாஅ (தொல். பொருள். 286) என மேல்வருஞ் சூத்திரத்துள் என்றவென்பதோர் உவமவுருபு கூறினமையின், வாயென்ற பவளம் எனவும், வாய் பவளமாக எனவும், வாய் பவளம் எனவும் வருவனவும் அக்குறிப் புவமையின் பகுதியெனவே படும். இவற்றை வேறுவேறு பெயர் கொடுத்து விரித்துக் கூறாது முன்னத்தி னுணர்வனவே 55இவை யெல்லாமென்னுந் துணையே இலேசினாற் கூறி ஒழிந்த தென்னை யெனின், - இவற்றாற் செய்யுள் செய்வார் செய்யும் 56பொருட்படைப் பகுதி எண்ணிறந்தனவாகலின், அப்பகுதி யெல்லாங் கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறி யொழிந்தானென்பது. வாயென்ற பவளம் எனவும் வாய் பவளமாக எனவும் வாய் பவளம் எனவும் வந்த 57பவளக் குறிப்புவமைகளை இக்காலத்தார் உருவகமென்றே வழங்குப. இனி, வாய் பவளம் எனவும், கண்ண் கருவிளை (யா. வி. மேற்.) எனவும் பெயர்ப் பயனிலை வரின் அவற்றை ஒற்றுமை காட்டி உருவகம் என்றா 58ராகலின் அதுவும் உவமையெனவே படுமென்பது. (3) (உவமை பிறக்குமிடம் இவை எனல்) 279. சிறப்பே நலனே காதல் வலியோ டந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப. இதுவும், எய்தாதது எய்துவித்தது. இ-ள்: வினை பயன் மெய் உரு என்பனபற்றி உவமை கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமை என்றவாறு. நிலைக்களம் என்பது, அவை அவ்வாறு உவமை செய்தற்கு முதலாகிய நிலைக்களமென்றவாறு. முரசுமுழங்கு தானை மூவருங் கூடி 59யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிஞ. (பொருந. 54-57) என்பது, சிறப்பினாற் பெற்ற உவமமாகலிற் சிறப்பு நிலைக் களனாகப் பிறந்தது. 60ஓவத் தன்ன விடனுடை வரைப்பின் (புறம். 251) என்புழி, அந்நகரினது செயற்கை நலந் தோன்றக் கூறினமையின் அதற்கு நிலைக்களன் நலனாயிற்று, 61பாவை யன்ன பலராய் மாண்கவின் (அகம். 98) என்புழி மகள்கட் காதல் காரணமாக உவமை பிறந்தது; என்யானை என்பதும் அது. அரிமா வன்ன வணங்குடைத் துப்பின் (பட்டின. 298) என ஒருவன் வலிகாரணமாக உவமம்பிறந்தமையின் அதற்கு நிலைக்களம் அவன் வலியாயிற்று. இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப் பட்ட பொருள் யாதேனும் இயைபில்லதொன்று கூறலாகா தெனவும், உவமையொடு முழுதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோ 62டொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட் கண்ணும் உளவாகல் வேண்டுமெனவுங் கூறி, அவைதாமும் 63பிறர் கொடுப்பப் பெறுவனவும், ஒரு பொருட்கண் தோன்றிய 64நன்மை பற்றியவும், காதன் மிகுதியான் உளவாகக் கொண்டு உரைப்பனவும், தன்றன்மையால் 65உளவாயின வலிபற்றினவு மென நான்காமென்றவாறு. இவற்றுக்கெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்குந் 66தலைப்பெய்யுமென்பது. சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகார வகையாற் பெறுஞ் சிறப்பு. நலனென்றது அழகு. காதலென்பது அந்நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கியுரைப்பது. வலியென்பது தன்றன்மையானே உள்ளதோர் வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களமெனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். தன்மேல் வருகின்ற பகைவனைப், பகைவன் புலிபோலும் என்று 67அவன் வீரக் குறிப்பு அறியாமற் கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டில்லை; 68தன் வினையுவமமாகலிற் றிரியாதாயினுமென்பது. (4) (இதுவுமது) 280. கிழக்கிடு பொருளோ டைந்து மாகும். இது, மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஓர் புறனடை. இ-ள்: அந்நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொரு ளோடு ஐந்தெனவும்படும் என்றவாறு. கிழக்கிடு பொருளென்பது, கீழ்ப்படுக்கப்படும் பொருள். 69கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே (குறுந். 337) என்புழி, கீழ் வீழ்ந்தன என்பதனைக் கிழக்கு வீழ்ந்தன என்பவாக லின். ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமா மென்றவாறு. 70உள்ளு தாவியிற் பைப்பய 71நுணுகி (அகம். 71) எனவும், 72அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப எனவும் வரும். இவை பொருளன்றி உவமையுங் கிழக்கிடப்பட்டனவா லெனின், அங்ஙனமாயினும் அவை பொருளோடு சார்த்தி நோக்க உயர்ந்தனவெனப்படும். (5) (முதல் சினைபற்றி உவமை வருங்கால் இவ்வாறு வரல்வேண்டும் எனல்) 281. முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு நுதலிய மரபி னுரியவை யுரிய. இது, மேற்கூறி வருகின்ற உவமை, முதல்சினைபற்றி வருங் கால் இன்னவாறாகவென்கின்றது. இ-ள்: முதற்பொருளுஞ் சினைப்பொருளும் என்னும் அவ் விரண்டு பொருட்குங் குறித்தவகையான் மரபுபடவரின் உரி யவை உரியவாம் என்றவாறு. இதன் கருத்து: முதலொடு முதலும், சினையொடு சினை யும், முதலொடு சினையும், சினையொடு முதலும் வேண்டிய வாற்றான் உவமஞ் செய்தற்கு உரியவெனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படுமெனவுங் கூறியவாறு. 73வரைபுரையு மழகளிற்றின் மிசை (புறம். 38) என்பது, முதற்குமுதலே வந்து உவமையாயிற்று; 74தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள்.) என்பது, சினைக்குச் சினையே வந்து உவமையாயிற்று. நெருப்பி னன்ன சிறுகட் பன்றி (அகம். 84) என்பது, முதல் உவமமாகப் பொருள் சினையாகி வந்தது. அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ. (கலி. 84) என்பது, சினையுவமமாக உவமிக்கப்படும் பொருண்முதலா யிற்று. நுதலிய மரபு என்றதனால், விசும்பி னன்ன 75சூழ்ச்சி (புறம். 2) என்றக்கால், விசும்பென்பது முதலாதல் கருதி யுணர்தல் வேண்டும், முதற் சினைப்பகுதி அதற்கு இன்மையினென்பது. இனி, வேயமன் றன்று மலையு மன்று (கலி. 55) என்றவழியும், மலைநோக்காது மலையுள்வேயெழும் இடங் கருதி அவ்விடமன்றென்றவாறெனக் கொள்க பூவமன் றன்று சுனையு மன்று (கலி. 55) என்பதற்கும் ஒக்கும். உரிய என்னாது உரியவை என்றதனால் திணையும் பாலும் மயங்கிவரும் உவமையுங் கொள்ளப்படும். அவை, மாரி யானையின் வந்துநின் றனனே (குறுந். 161) என்பது, திணை மயங்கிற்று. 76கூவற், குராலான் படுதுய ரிரவிற் கண்ட வுயர்திணை 77யூமன் போலத் துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே (குறுந். 224) என்பது உயர்திணைப்பான் மயங்கிற்று. கடம்பமர் நெடுவே ளன்ன மீளி யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர் (பெரும்பாண்.75) என்பது, ஒருமை பன்மை மயங்கிற்று. இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று (அகம். கடவுள்.) என்பது, 78அஃறிணைப்பான் மயங்கிற்று; பிறவுமன்ன. இக்கருத்து அறியார் இவற்றையும், செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு (தொல். சொல். 16) என்புழி/ இலேசுகொண்டு உரைப்ப. (6) (தொகையுவமையிற் பொதுத்தன்மையை அறியுமாறு இவ்வாறெனல்) 282. 79சுட்டிக் கூறா வுவம மாயிற் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே. இஃது, எய்தாதது எய்துவித்தது. இ-ள்: உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்பு மைக் குணம் நான்கினையும் விதந்து சொல்லி உரையாதவழி, அவ்விரண்டனையும் எதிர்பெய்து கூட்டி ஆண்டுப் பொருந்திய தொன்று பொருந்தியதுபற்றி வினை பயன் மெய் உருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப்படும் என்றவாறு. பவளம்போற் செந்துவர்வாய் என்பது, சுட்டிக்கூறிய வுவமம்; என்னை? இரண்டிற்கும் பொதுவாகிய செம்மைக் குணத்தினைச் சொல்லியே உவமஞ் சொல்லினமையின். அது பவளவாய் என்கின்றவழிச் சுட்டிக்கூறா வுவமமாம். ஆண்டுப் பவளத் தினையும் வாயினையுங் கூட்டிப்பார்த்துச் செம்மைக் குணம்பற்றி உவமஞ் செய்ததென்று அறியப்படும்; அல்லாக்கால், வல்லென்ற கல்லிற்கும், மெல்லென்ற இதழிற்கும் உள்ளதோர் ஒப்புமை ஆண்டில்லையென்பது; பிறவுமன்ன. (7) (உவமையும் பொருளும் ஒத்துவரல் வேண்டுமெனல்) 283. 80உவமையும் பொருளு மொத்தல் வேண்டும். இதுவும் அது. இ-ள்: உவமானமும் பொருளுந் தம்மின் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல்வேண்டும் என்றவாறு. மயிற்றோகை போலுங் கூந்தல் என்பதன்றிக், காக்கைச் சிறகன்ன கருமயிர் என்று சொல்லின், அஃதொத்ததெனப்படாதென்றவாறு. புலிபோலப் பாய்ந்தான் என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதேபற்றிப் பூசைபோலப் பாய்ந்தான் எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகமென்றவாறு. ஈண்டு ஒத்தவென்பதனை, 81ஒத்த தறிவான் (குறள். 214) என்பதுபோலக் கொள்க. (8) (உவமேயமும் உவமமாகக் கூறப்படுமெனல்) 284. பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு மருளறு சிறப்பினஃ துவம மாகும். இது மேற்கூறியவாறன்றி வருவதோர் உவமை விகற்பங் கூறுகின்றது. இ-ள்: உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை (278) என்புழி, உவமம் உயர்ந்துவரல் வேண்டுமென்றான்; இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப்படும் பொரு ளாக்கி மயங்கக் கூறுங்காலும் 82அஃது உவமம்போல உயர்ந்த தாக்கி வைக்கப்படும் என்றவாறு. வருமுலை யன்ன வண்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை (சிறுபாண். 72, 73) என்றவழி, வருமுலையும் திருமுகமும் ஈண்டு உவமையாகி முகை யும் பூவும் பொருளாயின; 83ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின. இவை உவமத்தொகையாங்கால் முலைக்கோங்கம், முகத் தாமரை எனப்படும். இவற்றை வேறு உருவகமென்றும் பிறர் மயங்குப. சிறப்பென்றதனான், ஒப்புமை மாத்திரையன்றித் தான் புனைந்துரைக்கக் கருதிய முலையினையும் முகத்தினையும் உயர்ந்த பொருளாகிய உவமத்தினும் உயர்ந்தவாகச் சிறப்பித் துரைத்தானென்பது. மருளறு சிறப்பின் என்றதனான், அங் ஙனஞ் சிறப்பிக்குங்கால் மயக்கந்தீரச் சிறப்பித்தல்வேண்டும். 84அஃது உலகினுள் உயர்ந்ததென்று 85ஒப்ப முடித்த பொரு ளினையுஞ் சிறப்பித்தற்கு உவமஞ் செய்பவோவெனிற் செய்யாரென்பது; என்னை? முகமொக்குந் தாமரை என்றால் முகத்திற்குந் தாமரைக்குஞ் சிறப்புடைமை மயங்கி வாராது; பின் னும் முகத்திற்கே சிறப்பாமென்பது கருத்து. அஃதெனப்பட்டது 86பொருளாகலான் உயர்ந்ததன்மேற்று (278) என்னும் விதி அப்பொருட்கு எய்துவிக்க. (9) (பெருமையும் சிறுமையுமாய உவமைகளும் சிறப்பிற் றீராவாயிற் கொள்ளப்படுமெனல்) 285. பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய. இஃது, உவமத்திற்கு ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளுமாற்றான் வருதலை வழக்கு வலியாக வுடைய என்றவாறு. அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோ ருசாஅப் போல வுண்டே நுசுப்பு. என்றவழி, உலகத்தார் அவாப்போலப் பெரிதாகிய அல்குலெனக் கழிபெரும் பரப்பிற்றாகக் கூறினும் அது சிறப்பிற் றீராக் குறிப்பிற்றாதல் வழக்குண்டாகலின் உடம்படப்படும் என்றவாறு. மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் 87கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல். (குறுந். 129) என்றவழி, கடல்போன்றது கூந்தலெனவும், கடனடு எழுந்த எண்ணாட் பக்கத்து மதிபோன்றது நுதலெனவுங் கூறினான். அதனாற் கடல்போலும் மயிரென்றதும், பல காவதப் பரப் புடைய மதிபோன்றது நுதலென்றதுங் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்றீராது மனங்கொள வந்ததெனவே படும். சுரும்பு 88மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (முருகு. 43) என்பதும் அது. சான்றோ 89ருசாஅப் போல வுண்டே நுசுப்பு என்றவழியும், நுண்ணுணர்வின் ஆராய்ச்சி ஒருவர்க்கும் புல னாகாததனை ஒக்கும் இடையென்றமையின் அதுவுங் கழியச் சிறிதாக உவமித்தார். யானை யனையவர் நண்பொரீஇ 90நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் (நாலடி. 213) என்பதும் அது, இவையுஞ் (சிறுமையுஞ்) சிறப்பிற்றீராக் குறிப்பின் வந்த 91வழக்காதல் அமைந்தனவென்பது. பிறவுமன்ன. இவ்வாறன்றி மேரு மால்வரை காம்பொத்து விண்முகடு குடை யொத்து விண்மீன் கணம் முத்துப்போன்றன என வடிவு பற்றி உவமங் கூறுதல் 92தமிழ் வழக்காகின்றதென்பது. இனி, 93வள்ளத்தி னீர்கொண் டுமிழ்ந்த முலைச்சாந்து மறுகிற்பரந் தள்ளல் யானையெல்லா மடிவழுக் கினவே. என்பதோவெனின், அவ்வாற்றானும் இன்பங் கொள்வார்க்கு அவையும் இழுக்கில என்பது. சோறு வாக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரந்தொழுகி. (பட்டின. 44, 45) என்பதோவெனின், யாறென்ற துணையானே பேர்யாறெனக் கொண்டு உலகிறந்தனவாகாமைக்கன்றே, 94ஏறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி. (பட்டினப். 46-47) என்பதாயிற்றென்பது. (10) (உவம உருபுக ளிவையெனல்) 286. அவைதாம், அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப வென்ன மான வென்றவை யெனாஅ வொன்ற வொடுங்க வொட்ட வாங்க வென்ற வியப்ப வென்றவை யெனாஅ வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த வோடப் புரைய வென்றவை யெனாஅ வறா றவையு மன்ன பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ் சொல் இனைத்தென்கின்றது. அவைதாம் என் பது, வினை பயன் மெய் உருவென்னு நான்குவகையு மென்ற வாறு. இ-ள்: இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையேபோல்வன பிறவும் வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் என்றவாறு. ஆறாறவையும் என்பது அவை முப்பத்தாறு மென்ற வாறு. பல்குறிப்பின என்பது அவை இடைச்சொல்லாகித் தொக்கு வருவனவுந் தொகாதே நிற்பனவும் வினைச்சொல்லாகி வேறுபட நிற்பனவுமெனப் பலவாமென்றவாறு. இவ்வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொதுவென்பது ஈண்டுக்கூறி, இனி அவை 95சிறப்புவகையான் உரியவாறு இதுவென்பது மேற்கூறுகின்றான். பிறவும் என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர, நோக்க, துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ என்றற்றொடக்கத்தன பலவும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும், எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும், பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத் தோதியவற்றுள் 96வரையறை வகையவென மேற் கூறப்படுவன பொது வகையான் வருமாற்றுக்கும் உதாரணம், அவற்றை 97உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும்; அவை ஒன்ற, என்ற, மாற்ற பொற்ப நாட நடுங்க என்பன. அஃதேல் ஆண்டு வரை யறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயினவா றென்னை, - முப்பதேயாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றோடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது. அவை; பொதுவகையான் வருமாறு:- வே98லொன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ கோலொன்று கண்ணொன்று கொண்டு. என்பது வினையுவமம். மழையொன்று வண்டடக்கை வள்ளியோற் பாடி. என்பது பயனுவமம். வேயொன்று தோளொருபால் வெற்பொன்று தோளொருபால். என்பது மெய்யுவமம். குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை. என்பது உருவுவமம். ஒழிந்தனவும் இவ்வாறே நான்கு பகுதியும்பற்றி வருமாறு கண்டுகொள்க. வாயென்ற பவளம் என்றது பண்புவமைபற்றி வந்தது.. இது வாயாகிய பவளம் என்று ஆக்கச் சொல்லானும் வரும். மணிநிற 99மாற்றிய மாமேனி. என்பது உருவுவமம். மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம். என்பது மெய்யுவமம். வேயொடு 100நாடிய தோள். என்பது, நாடவென்பது வந்த மெய்யுவமம். படங்கெழு நாக 101நடுங்கு மல்குல். என்புழி, நடுங்கவென்பது மெய்யுவமம்பற்றி வந்தவாறு. இவ் வோதிய வாய்பாட்டோடு பொருந்தவருஞ் சொல்லெல்லாம் பல்குறிப்பின என்பதனாற் கொள்ளப்படும். இப்பகுதியெல் லாம் புறனடையாற் கொள்வனவற்றிற்கும் ஒக்கும். இச்சொற் பரப்பெல்லாம் நோக்கி, உவமச் சொல்லே வரம்பிகந் தனவே என்று ஓதி உரைப்ப; அவை அவ்வச் சொல்லுள் அடங்கு மாற்றான் வரம்பிகந்தனவாகா வென்பது. இனி, பிறவும் என்றதனால் ஓதப்பட்டன வருமாறு: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று (குறள். 22) என்பதனுள், துணைப்பவென்பதூஉம் அற்றென்பதூஉம் வந்தன. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின் (குறள். 965) என்று அனையவென்பது வந்தது. பிறவுமன்ன. கயமூழ்கு மகளிர் 102கண்ணின் மானும் (குறுந். 9) என, இன்வேற்றுமையும் உவமவுருபோடு வந்தது. குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க என்பது உவமவுருபின்றி இன்னுருபு 103தன்பொருட்கண்ணும் வந்தது. தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் (கலி. 56) என்பது எனவெனெச்சத்தால் உவமம் வந்தது. 104பிறவுமன்ன. இவை எல்லாம் வரைவின்றி நான்குவமமும்பற்றி வரு மாறு கண்டுகொள்க. ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வந்த உவமங்களும் பிறவும் உவமத்தொகையெனப்படா; தொகைப் படாமையி 105னென்பது. அங்ஙனந் தொகைப்பட்ட வழியும் மற்று 106மேலுரிமை கூறுகின்றதாமென்பது. மதியொத்தது மாசற்ற திருமுகம் என்றவழி, உவமமாயினும் உவமத்தொகை யெனப்படாது 107தொகைப்பாடின்மையினென்பது. (11) (வினைஉவம உருபுக ளிவையெனல்) 287. அன்ன வாங்க மான விறப்ப வென்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம். இது, மேற் பொதுவகையாற் கூறியவாறன்றி வினையு வமைக்கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது. இ-ள்: இவ்வெட்டும் வினையுவமம் என்றவாறு. எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து (அகம். 106) எனவும், கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு (அகம். 6) எனவும், கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) எனவும், புலிவிறப்ப வொலி தோற்றலின் எனவும், புலியென்னக் 108கலிசிறந் துராஅய் எனவும், மின்னுற 109ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுருகு. 85) எனவும், பொருகளிற் 110றெருத்திற் புலித்தகைப் பாய்த்துள் எனவும், மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார் எனவும் வரும், இனிக், கார்மழை முழக்கிசை கடுக்கும். (அகம். 14) எனவும், யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகம். கடவுள்.) எனவும், ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல (அகம். 22) எனவும், 111ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ (அகம். 30) எனவும், குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு 112திவவின் ( பெரும். 13) எனவும், பிறவாய்பாட்டாற் சிறுபான்மை வரும் வினையுவமம் பொது விதியாற் கொள்ளப்படும். பிறவுமன்ன. (12) 288. அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும். இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது. இ-ள்: வினைக்கே உரிமையெய்தியதாகக் கூறிய அன்ன வென்பது நான்குவமைக்கும் உரிமையொக்கவரும் என்றவாறு. அவை:- மாரியன்ன வண்கை. (புறம். 133) எனவும், இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று (அகம். கடவுள்.) எனவும், செவ்வா னன்ன மேனி (அகம். கடவுள்.) எனவும் 113ஒழிந்த மூன்றற்கும் பெருவரவினான் வந்தவாறு வழக்கு நோக்கி உணர்க. (13) (பயவுவம உருபுக ளிவையெனல்) 289. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ வென்றாங் கெட்டே பயனிலை யுவமம். இது, முறையானே பயனிலை யுவமைக்குச் சிறந்த வாய்பாடு இவையென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவை எட்டும் பயனிலையுவமம் என்றவாறு. 114எழிலி வான மெள்ளினன் றரூஉங் 115கவிகை வண்மைக் கடுமான் றோன்றல் எனவும், மழைவிழை தடக்கை வாய்வா 116ளெவ்வி. எனவும், புத்தே ளுலகிற் 117பொன்மரம் புல்ல. எனவும், விண்பொரு புகழ் விறல் வஞ்சி. (புறம்.11) எனவும், கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி. எனவும், 118இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை. எனவும், வீங்கு 119சுரை நல்லான் வென்ற வீகை. எனவும், விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கு முரைசா றோன்றல். எனவும் இவை ஓதியமுறையானே பயவுவமைபற்றி வந்தன. இவை எட்டும் பெருவரவின எனவே, சிறுவரவினான், அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின். (அகம். 1) எனவும், மகன்றா யாதல் புரைவதா லெனவே. (அகம். 16) எனவும், ஊறுநீ ரமிழ் தேய்க்கு மெயிற்றாய். (கலி. 20) எனவும், பல்லோ ருவந்த வுவகை யெல்லா மென்னுட் பெய்தந் தற்றே. (அகம். 42) எனவும், யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம். (கலி. 29) எனவும், உருமெனச் 120சிலைக்கு மூக்கமொடு. (அகம். 61) எனவும், யாழ் 121செத் திருங்கல் விடரளை யசுண மோர்க்கும். (அகம். 88) எனவும், செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை. (முரு. 5) எனவும், விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்து. (பத். மலை. 2) எனவும் வரும்; பிறவுமன்ன. மேலைச் சூத்திரத்திற் சொல்லிய வாறே இதற்கும் வேண்டுவன உரைத்துக்கொள்க. (14) (மெய்யுவம உருபுக ளிவையெனல்) 290. கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென் றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். இது, முறையானே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறு கின்றது. இ-ள்: இவ்வெட்டும் மெய்யுவமம் என்றவாறு. நீர்வார் 122நிகர்மலர் கடுப்ப. (அகம். 11) எனவும், மோட்டிரும் பாறை யீட்டு 123வட் டேய்ப்ப. (அகம். 5) எனவும், வேய்மருள் பணைத்தோள் ஞெகிழ. (குறு. 318) எனவும், உரல் புரை பாவடி. (கலி. 21) எனவும், முத்துடை 124வான்கோ டொட்டிய முலைமிசை. எனவும், பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின். எனவும், செந்தீ யொட்டிய வெஞ்சுடர்ப் பரிதி. எனவும், கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை. எனவும், இவை ஓதிய முறையானே மெய்யுவமத்துக்கண் வந்த வாறு. இவற்றை உரிமை கூறிப் பெருவரவினவெனவே, ஒழிந் தனவுஞ் சிறுபான்மை வருமென்பதூஉம் அவை பொதுச் சூத் திரத்தான் (286) அடங்குமென்பதூஉங் கொள்க. அவை:- கடல்போற் றோன்றல கா 125டிறந் தோரே. (அகம். 1) எனவும், அஞ்126சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி (அகம். 11) எனவும், புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம். (அகம். 12) எனவுஞ், சேயித ழனைய வாகி. (அகம். 19) எனவும், மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கும். (கலி. 20) எனவுங், கண்போன் மலர்ந்த சுனையும். எனவும், நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த. (கலி. 22) எனவும், முழவுறழ் தடக்கையி னியல வேந்தி. (முருகு. 215) எனவும் வரும். இவை புறனடையாற் கொண்டனவும் எடுத் தோதியனவும் பொதுவிதியான் வந்தவாறு. (15) (உரு(நிற) வுவம உருபுக ளிவையெனல்) 291. போல மறுப்ப வொப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி யுருவி னுவமம். இது, நான்காம் எண்ணு முறைமைக்கண் நின்ற உருவுவ மத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது. இ-ள்: இவ்வெட்டும் உருவுவமம் என்றவாறு. அவை:- தன்சொல் லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே. (ஐங்குறு. 41) எனவும், 127மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா. எனவும், ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம். எனவும், வெயிலொளி 128காய்த்த விளங்குமணி யழுத்தின. எனவும், 129கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர். (அகம். கடவுள்.) எனவும், தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி. எனவும் வரும். நளிய நந்த என்பன இக்காலத்து அரியபோலும்; அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச் சூத்திரத்தான் (286) வருமெனப்பட்ட வாய்பாடு சிறு வரவின வருமாறு. துளிதலைத் 130தலைஇய மழையே ரைம்பால். (அகம். 8) எனவும், நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம். (அகம். 31) எனவும், 131செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம். (கலி. 15) எனவும் மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை. (அகம். 19) எனவும், பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி. (கலி. 21) எனவும், 132எரியுரு வுறழ விலவ மலர. (கலி. 33) எனவும், பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு. (முருகு. 2) எனவும், பொன்னுரை கடுக்குந் 133திதலையர். (முருகு. 145) எனவும், தீயி னன்ன வொண்செங் காந்தட் டூவற் 134கலித்த புதுமுகை 135யூன்செத்து. (மலைபடு. 145, 146) எனவும் வரும்; பிறவுமன்ன. (16) (இன்ன உவமைக்கு இன்ன வாய்பாடு உரியவென்றற்குக் காரணம் வரலாற்று முறையா னறியப்படுமெனல்) 292. தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. இது, நான்கு உவமைக்கும் ஒரோவொன்று எட்டாகக் கூறிய வாய்பாட்டிற்கெல்லாம் புறனடை. இ-ள்: இன்னதற்கு இன்ன வாய்பாடு உரியதென்றற்குக் காரணம் என்னையென்றார்க்கு, அவை தத்தம் 136வரலாற்று முறைமையானே அவ்வவ பொருடோன்ற நிற்கும் என்றவாறு. புலிபாய்ந்தாங்குப் பாய்ந்தான் என வினையுவமத்திற்கு வந்த ஆங்கென் கிளவி தளி 137ராங்குச் சிவந்தமேனி எனிற் பொருந்தாது. இனி, எள்ளவென்பது பயவுவமைக்கு ஏற்குமென்றான்; அது புலி யெள்ளும் பாய்த்துள் எனலாகாது; என்னை? புலிக்கு வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகா தாகலானென்பது. ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக்கண்டு எதிர்நிற்கலாற் றாது புறங்கொடுத்ததெனலும், நடுங்கிற்றெனலும், கண் 138சிம் புளித்ததெனலும், அவற்குப் புகழாமென்பதே கருதிக் கூறின், கூறின உவம 139வெளிப்பாடுமின்றி அவற்கது புகழுமாகா தென்பது கருத்து. இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுபவன்றே; அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின். விழைய வீழ புல்ல மதிப்ப வெல்ல என்பனவும், உவமை தான் பொருளையொத்தற் கவாவினவென்று பொருள் தோன்ற நிற்குமென்றவாறு. கள்ளவென்பதூஉம் அதன் குணம் அதன் கண் இல்லாமற் கதுவிற்றென்னும்பொருட்டு. பொருவவென் பதூஉம் மழையினையும் ஒருவனையும் 140உறழுந்துணைச் சிறந்தானெனச் சொல்லுதல். இவ்வாற்றான் இவை உரிமை கூறப்பட்டன. இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ் வாறே ஒரு காரணமுடையபோலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத்திற்கும் ஏலாது; என்னை? கடுத்தலென்பது ஐயுறுதல். 141புலியோடு மறவனை ஐயுறவேண்டுவதோர் காரண மின்மையானும், மழையின் விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ்செய்தல் வேண்டுவதின்மை யானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமாகலானும், உரு வென்பது குணமாகலாற் 142பொருள் வேற்றுமை அறிந்தவழி ஐயஞ் செல்லாதாகலானும், மெய்க்குரிமை கூறினானென்பது. ஏய்த்தலென்பதூஉம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும். மருள புரைய ஒட்ட ஒடுங்க என்பனவும் கடுத்தல்போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரையுணர்வுங் கவர்த் தலைக் காட்டுதலானும், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண் டனையும் 143ஒன்றென்னும் பொருண்மையவாகலானுமென் பது, நிகர்த்தலும் அவ்வினப் பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற்கேற்றது. ஓடவென்பதும் ஓடுதற்றொழில் வடிவிற் கல்லதின்மையின் அவ்வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு ஓடிற்றெனலாகாமையின். இனி, உருவுவம வாய்பாட்டிற்குங் காரணங் கூறுங்கால் போலுமென்பது இடைச்சொல்லாகலானும், 144மரீஇவந்த வினைப்பாற்பட்டதாகலானும், அதற்குக் காரணம் கூறப்படா தென்பது; அஃதேல், அதனை இவ்வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, பொருளுடையவற்றைப் பிற்கூறியெனின், அதுவும் அன்னவென்பதுபோல மற்றை மூன்று உவமத்தும் பயின்று வருமென்பது எய்துவித்தற்கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருவரவினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் மரபிற்றோன்றும் என்றதனான் இவையெல்லாம் மரபுபற்றி அறியல்வேண்டும் எனவே தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலானென்பது. (17) (உவமை எட்டாகுமெனல்) 293. *நாலிரண் டாகும் பாலுமா ருண்டே இதுவும், மேலனவற்றையே பகுக்கின்றது. இ-ள்: வினை பயன் மெய் உரு எனப்பட்ட நான்கும் எட்டாம் பகுதியும் உண்டு என்றவாறு. அவை : உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாதலும் உடையவென்றவாறு. அவை:- புலியன்ன பாய்த்துள் புலிப்பாய்த்துள் எனவும், மழையன்ன வண்கை மழை வண்கை எனவும், வேயன்ன தோள் வேய்த்தோள் எனவும், பவளத்தன்ன வாய் பவளவாய் எனவுந் தொகை விரிபற்றி நான்கும் எட்டாயினவாறு. 145சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான்; அவ்வுவமத்தான் ஈண்டுக் கூறப்படுதல் 146பொருளின வாகலானும், இடைச்சொல்லே யன்றிப் 147பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலானும், அதன் விரிவினை ஈண்டுப் பெயர்தந்து கூறி அதன்றொகையொடு படுப்ப இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகை யுவமமும் என்றானென்பது. இதுவுமொரு கருத்து:- முன்னர் எவ்வெட்டாகக் கூறி யவை ஒவ்வொன்றும் இரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய வென்றவாறு. யாங்ஙனமெனின், - அன்ன என்னுஞ் சொன் முதலாகிய எட்டனுள் அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் 148வேறொரு பொருளை உணர்த்தாமையின் ஓரினமாகி ஒன்றாகவும், 149விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் 150ஒரு பொருளுடைமையின் 151ஒரு பொருளாகவும், இவ்வாறே இன நோக்குதற் குறிப்பின 152வாயிற்று;. 153இவ்வாற்றான் இரண் டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச்சொல்எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியுமென்னும் பொருட்டு. உறழ்ச்சியுந் தன் இனமாகக்கொண்டு - மாறுதற் பொருட்டே யாம். தகுதி அதுவெனப்படுவது என்னும் பொருண்மைத் தாகலின் அவற்றோடொக்கும், நோக்கென்பதூஉம் அவ்வாறே இனமாக்கி நோக்குதற்பொருட்டு. இவ்வாற்றான் இரண் டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன்:- ஓதிய வாய்பாடு எண்ணான்கற்கும் இன்ன வாய்பாடும் இன்ன வாய்பாடும் ஒரு பொருளவென்று அறிதலுந் தத்தம் மரபிற் பொருள்தோன்ற வருமென்பதும் இடைச்சொல்லென்றலும், ஒப்பில் வழியாற் பொருள்செய்யினும் 154இசைச்சொல்லாகா; 155தெரிநிலைவினை உருபாயினும் என்பதறிவித்தலுமெனக் கொள்க. மேல்வருகின்றனவற்றிற்கும் இஃதொக்குமென்பது. இனிப், பயவுவமை வாய்பாடு எட்டனுள்ளும் எள்ள பொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித் தற் பொருளவாகி ஒன்றாயடங்கும்; என்னை? மழையைப் பொரீஇச் சொல்லுதலும் அதனது தன்மைக்குணங் கொள்ளப் படுதலும் வெல்கையும் 156அதனை எள்ளுதல் 157போல்வான் இழித்துவினையே காட்டுதலின். இனி, விழைய புல்ல மதிப்ப வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தாமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருளெனப்பட்டன. இவ்வாற்றாற் பயவுவமையெட்டும் (289) இரண்டாயினவென்பது. மெய்யுவமை இரண்டாங்கால்,- ஐயப் பொருட்கண் நான்கும் துணிபொருட்கண் நான்குமென இரண்டாம். கடுப்ப மருள புரைய ஓட என்னும் நான்கும் ஐயப் பொருளவாகி ஒன்றாம். ஓடவென்பது உவமத்தின்கண்ணும் பொருளின் கண்ணும் உணர்வு கவர்ந்தோடிற்று என்னும் பொருள் தோன்றவும் சொல்லின் அதுவும் ஐயமெனப்பட்டதுபோலும். இனி, ஏய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமையும் பொருளும் ஒன்றென உணர்வு தோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவை யெட்டும் (290) இரண்டாயின. இனி, உருவின் (291) கண்ணும், போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனவென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவையும் ஒன்றெனப் பட்டன. நளியென் கிளவி செறிவு மாகும் (தொ. சொ. 323) என்றதனால், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டேயா யிற்று. இனி, மறுப்ப காய்த்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவையும் இரண்டாயின. நந்துத லென்பது கேடு. வியத்தலென்பது உவமையான் வியக்கத்தக்கது பொருளெனவே அதன்கண் அக்குணமின்றென மறுத்த வாறாம். காய்த்தலென்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலா கலின் அதுவும் மறுத்தலென்பதன் பொருளெனப்பட்டது. இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண்டென்பது இதன் கருத்து. 158இவற்றுட் பலவற்றையுஞ் செயவெனெச்ச வாய் பாட்டால் ஓதியது என்னையெனின், அஃது, உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனான். இடைச்சொல்லும் உரிச் சொல்லும் வினைச்சொற்போல நிற்குமெனவும், அவையுந் தெரிநிலைவினை யுவமையாய் வருமெனவும் அறிவித்தற் கென்க. 159இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர்விற்றெனவுணர்க. (18) (மெய்ப்பாடு எட்டன்வழிப் பெருமையும் சிறுமையுந் தோன்றுமெனல்) 294. பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்று மென்ப. இது, மேற்கூறிய உவமை இன்னுமொருவாற்றான் எட் டெனப்படுமென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமை மேற்கூறிய மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. மெய்ப்பாடு எட்டென்பன:- நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை (தொ மெய். 5) என மெய்ப்பாட்டியலுண் மேற்கூறப்பட்டன. களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா (அகம். 16) என்பது, நகையுவமம்; என்னை? தலைமகனைக் கண்டறியா தாள் போலக் கரந்தொழுகுகின்ற பரத்தை அவனோடு ஒப்புமை கண்டு தனிநின்று விளையாடும் புதல்வனைக்கொண்டு மகிழ்கின்றாளை, வாயிற்கதவம் மறைந்துநின்ற தலைமகள் நீயும் அம்மக விற்குத் தாயே காண் என்றவழிக், களவு கண்ட பொருளோடு கையகப்பட்ட கள்வர்போலச் செய்வதறியாது தடுமாறி முகம் வேறுபட்ட நிலைமையை உவமித்துச் 159சிரித்தமையின் நகை யுவமமாயிற்று. 161கலங்கவிழ்ந்த 162நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால் (யா. வி. ப.318) என்பது அவலவுவமை;. கலங்கவிழ்ந்த நீகாமன்போலப் புலம் பினாளென்றமையின் 163அப்பெயர்த்தாயிற்று. பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு (முத்தொ. 88) என்பது, இளிவரலுவமம்; என்னை? தலைமகன்மாட்டு இன்ப விளையாட்டெய்துவார் பலரையுங் கண்டு நெஞ்சு தீரப் புன்க ணெய்தித் தனிநின்றும் புகப்பெறாது இளிவந்தமையின் அப் பெயர்த்தாயிற்று. ஈரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்துள் 164நீருட் குவளைவெந் தற்று. (கலி. 41) என்பது, மருட்கையுவமம்; என்னை? நிழற்கயத்தின் குவளை வேவனவின்மையின் இஃது அற்புதமாயிற்று. சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் 165பாம்பகத்துக் கண்ட துடைத்து. (நால.136) என்பது, அச்சமாகலின் அச்சவுவமை. மல்லரை 166மறஞ்சாய்த்த மால்போற்றன் கிளைநாப்பட் கல்லுயர் நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள் (கலி. 52) என்பது, பெருமிதவுவமை. கூற்று வெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே (புறம். 42) என்பது 167வெகுளியுவமம். பாடிச் சென்ற பரிசிலர் போல வுவவினி வாழி தோழி (அகம். 65) என்பது உவகையுவமை; பிறவுமன்ன. இவற்றான் எண்வகை மெய்ப்பாடும்பற்றி உவமை எட் டெனப்படுமென்று அறிந்து கூறினான்; பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீரா (தொ.உவ. 10) என்புழிப் 168பெற்றாமாகலின். மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென்னாது மருங்கறிய என்றதனாற் பெருமையுஞ் சிறுமையும்பற்றி வருதல் வழிமருங்கெனவும், அவை பற்றாது மெய்ப்பாடெட்டும்பற்றி 169வாளாது உவமை வருதல் செவ்வி தெனவுங் கொள்ளப்படும். நீருட் குவளைவெந் தற்று (கலி. 41) என்பது, பெருமைபற்றியது; என்னை? உலகநடை யிறந்ததோர் உவமைகூறி அதனோடு தலைமகன் 170ஈரத்தினை ஒப்பித்தமை யின். களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா (அகம். 16) என்பது, 171தனக்கு நிகராமல் இழித்துரைத்தமையிற் சிறுமை பற்றி வந்ததாம். உவமையும் மெய்ப்பாடும் பொருள்களை அறிவிப்பன வாகி அவை வேறு வேறு பொருள் அறிவித்தலின் 172ஓத்து வேறுடையனவாயினுஞ் சிறுபான்மை மயங்கியும் வரு மென்றற்கு இது கூறவேண்டியதென்பது. (19) (உவமையானே உவமேயப் பொருட்கேற்றன அறிந்து துணியப்படுவனவு முளவெனல்) 295. உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் கு ளவே திறத்திய லான. இஃது, எய்தாததெய்துவித்த னுதலிற்று. உவமையோடு பொருள் 173ஒவ்வாதெனவும் ஒப்புமை சார்த்திக்கொள்ளுமாறு ணர்த்தினமையின். இ-ள்: உவமப் பொருளின். - உவமையெனப்பட்ட பொரு ளான்; இன் உருபு ஆன் உருபின்கண் வந்தது; உற்றதுணருந் தெளிமருங்குள - உவமிக்க வரும் பொருட்குற்றதெல்லாம் அறிந்து துணியும் பகுதியுமுள; திறத்தியலான - அங்ஙனந் துணியப்படும் பொருட்டிறம் பலவாகி வரும் இலக்கண வகை யான் என்றவாறு. 174அப்பகுதி பலவும் உற்றுணராமற் சொல்லியவழியும், அஃது உணர வருமென்பது கருத்து. திறத்தியலான எனப்பட்ட பகுதியாவன: மேற்கூறப் பட்ட மெய்ப்பாடெட்டும் பற்றி உவமங் கொள்ளுங்கால், 175உற்றதுணருந் தெளிமருங்கென உவமான வடைக்கு உவமேயவடை குறைந்து வருவனவும், யாதும் அடை யின்றி வருவனவுமென்று இவ்விரண்டும் உற்றுணராமற் சொல்லியவழி, அவற்றுக்கும் உவமைப் பொருளே தெளி மருங்காமெனவும், 176வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த் தாதவழியும் 177அதுவே தெளிமருங்காமெனவும் இன்னோரன்ன கொள்க. உதாரணம்: களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா (அகம். 16) என்றவழிக், கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் 178களவுண் டாகப்படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையாவென உற்றதுணரக் கூறியதிலனாயினுங் கையொடுபட்ட களவுடையார்போல நின்றாளென்னும் உவமைப் பொருளானே எள்ளுதற் பொருள் தோன்றி நகை புலப்படுவதாயிற்று. சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றென பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கு மிழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனோடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே. (புறம். 82) என்னும் பாட்டினுள் உவமப் பொருளாகிய 179போழ்தூண்டூசிக் குப் பல அடை கூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த்தொழி லினை யாதுமோர் அடையின்றி வாளாது கூறினானாயினும், உவமப் பொருளானே போர்த்தொழிற் குற்றதும் உணரக் கூறினானாம். என்னை? உண்டாட்டும் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக் கருத்தினான், ஒரு கணத்துள்ளே பல வேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளியப்பட்டமையின். 180உழுத நோன்பக டழிதின் றாங்கு (நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே.) (புறம். 125) என்வும், 181மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி. (புறம். 180) என்றாற்போல்வனவும் அவை. இனி, வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாதவழித் தெளியுமாறு; உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் 182கச்சாணி யன்னா ருடைத்து (குறள். 577) என்பதனுள், அவர் செய்கை வன்மை கூறாராயினும் அச்சாணி யென்ற உவமப் பொருள் தானே அச்செய்கை வன்மை கூறிற்று. 183வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார் (கலி. 84) என்பதும் அது. ஒழிந்தனவுமன்ன. இனி. உவமத்தின் உற்ற துணர்கவென்னாது பொரு ளென்றதனால் பொருட்கு அடுத்த அடையும் உவமவடைக் 184கேற்றது உணரப்படாதன களையப் படுமென்பது. அது, பாசடை சிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருக்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) என்றவழிப், பாசடை நிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்கு வந்த அடையிரண்டுங் கண்ணெனப்பட்ட உவமத்திற்கேற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்துகொள்க. ஒழிந்தனவுமன்ன. மற்றுப், புறமதி யன்ன திருமுக மிறைஞ்சி. என்றவழி, அகத்துத் தோன்றும் மறுப்போலப் புறத்து மறு மதிக்கில்லையென்பதூஉம், புறமதிபோலக் கறைதீர்ந்த முக மென்பதூஉம், உவமப் பொருளின் உற்றதுணருந் தெளிமருங் கென்றதனாற் கோடுமோவெனின், அங்ஙனங் கொள்ளாமைக் கன்றே வருகின்ற சூத்திரமென்பது. (20) (உவமப் பொருள் மரபுபற்றி யறியப்படுமெனல்) 296. உவமப் பொருளை உணருங் காலை மரீஇய மரபின் வழக்கொடு படுமே. இது, மேலதற்கோர் புறனடை; மேல் உவமப்பொரு ளானே உற்றதுணரச்செயல்வேண்டு மென்றான்; இனி அங்ஙனம் உணருமாறு இது கூறினானாதலின். இ-ள்: உவமப்பொருளான் உற்றதுணருங்காலை மரீஇ வந்த வழக்கொடுபடுத்து அறியப்படும் என்றவாறு. அவை வருமாறு:- களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா (அகம். 16) என்பது, களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக்காதலான், 185அஃது ஏதுவாக அதனையும் அறிந்து கொள்ளப்படு மென்றவாறு. எனவே, உலகத்து வழக்கினுள் அடிப்படத் தோன்றும் உவமையாயிற்றாயினும் உவமப் பொருள் புலப்பாடு செய்யாது, புறமதி போலு முகம் என்றது 186போலவென்பது இதன் கருத்து. (21) (அடையும் பொருளுமாக வரும் உபமேயத்திற்கு அடையும் பொருளுமாகவே உவமையுங் கூறல் வேண்டுமெனல்) 297. இரட்டைக் கிளவி யிரட்டை வழித்தே. இஃது, எய்தாததெய்துவித்தது; அடையொடு வந்த பொரு ளொடு புணர்க்குமாறு கூறினமையின். இ-ள்: இரட்டைக் கிளவி - அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி; இரட்டை வழித்தே - அடையும் அடையடுத்த பொருளுமென இரண் டாக்கி நிறுத்தப்படும் உவமையின் வழித்து என்றவாறு. அது, பொன்காண் கட்டளை கடுப்பத் 187தன்ன பைம்பூண் சுண்ணம் புடைத்த மார்பினள். (பெரும்பாண். 220) என வரும். தன் பைம்பூண் புடைத்த செஞ்சுவட்டினையும் மார் பினையும் பொன்னுரையோடுங் கல்லோடும் உவமித்தமையின், இரட்டைக் கிளவி இரட்டை வழித்தாயிற்று. இரட்டைக் கிளவி யெனப் 188பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொரு ளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமத்தினை யும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்குமென்பது கருத்து. உம்மை யான், 189ஒற்றைக் கிளவியும் இரட்டைவழித்தாகி வருவன கொள்க. அது, கருங்கால் வேங்கை வீயுகு துறுக விரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை. (குறுந். 47) என வரும். இரும்புலிக் குருளை 190யொன்றனையே துறுகல் லோடும் வேங்கைவீயோடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தா யிற்று. (22) (உள்ளுறை உவமம் இவ்வாறு வருமெனல்) 298. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்னை மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே. இது மேலெல்லாம் ஏனையுவமங் கூறி உள்ளுறையுவமம் உணர்த்துதல் நுதலிற்று. 191மேல் இசைதிரிந் திசைக்குமெனப் பட்டவற்றின் பகுதியாயினும் இதனை ஆண்டுக் கூறாது ஈண்டுக் கூறினான் உள்ளுறை யுவமமாகலானும் இவ்வோத்து உவம வியலாகலானுமென்பது. இ-ள்: பிறிதொடு படாது- உவமையோடு உவமிக்கப்படும் பொருள் பிறிதொன்று தாராது, பிறப்பொடு நோக்கி- உவம நிலங்களுட் பிறந்த 192பிறவிகளோடு 193சார்த்தி நோக்கி, முன்னை மரபிற் கூறுங்காலை- கருத்தினான் இதற்கு இஃது உவமை யென்று சொன்ன மரபினாற் கூறுங்காலை; துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே- இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்பது துணிந்து கொள்ளத் தோன்றும், அவ் வாறு துணிந்து கொள்ளும் உணர்வுடையோர் கொள்ளின் என்றவாறு. எனவே, அஃது எல்லார்க்கும் புலனன்று, நல்லுணர்வுடை யோர்க்கே புலனென்பதூஉம், அவர் 194கொள்ளச் செய்ய வேண்டுமென்பதூஉங் கூறியவாறு. இதனானே செய்யுளுட் பயின்று வருமென்பது கூறினானாம். அவற்றிற்கு உதாரணம் மேற் காட்டுதும். மற்றிதனை உவமையென்றதென்னை? உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக நிறீஇக் கூறானாயினானெனின்? அங்ஙனங் கூறானாயினும் உவமம்போன்று பொருள் கொள்ளப் படுதலின் அதனை உவமையென்றான். 195அஃது ஒப்பினாகிய பெயரென்பது; என்னை? இவற்றை உவமப் போலியென்பது கூறுமாகலின். (23) (உள்ளுறை உவமையின் வகை) 299. உவமப் போலி யைந்தென மொழிப. இது, மேற்கூறிய உள்ளுறையுவமை ஐவகைப்படுமென் கின்றது. இ-ள்: உள்ளுறையுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் என்றவாறு. அவையைந்துமாமாறு 196முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம் ஏனையுவமத்திற்கு நிலைக்களம் ஐந்து ஓதினான், அவ் வாறே இதற்கு நிலைக்களம் ஓதாது அவைபோறலின் அவையே நிலைக்களமாமென்றலும் ஏனையுவமத்துள் 197ஒரு சாதியோடு ஒரு சாதியினைஉவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறையுவ மத்திற்கு அமையுமென்றலுமென்பது. (24) (மேற்கூறிய உள்ளுறை ஐந்து இவையெனல்) 300. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினு முறுப்பினு முருவினும் பிறப்பினும் வரூஉந் திறத்திய லென்ப. இது, மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது. இ-ள்: வினை பயன் மெய் உருவென்கின்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும் என்றவாறு. உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பென்ப வாகலானும் மெய்யுவமமெல்லாம் உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மையவென்றற்கும் அவ்வாறு கூறினானென்பது. தவலருஞ் சிறப்பினத்தன்மை நாடின் என்றதனான் ஏனை யுவமத்தினும் உள்ளுறையுவமமே செய்யுட்கும் பொருளிலக் கணத்திற்குஞ் சிறந்ததென்பது. அவை வருமாறு:- கரும்புநடு பாத்தியிற் 198கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வ னீன்றவெம் 199முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே. (ஐங்குறு. 65) என்பது வினையுமவப் போலி. என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுட் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்குமூரனென்றான். இதன் கருத்து, 200அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்றமைக்கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றனம், அதுபோலவென்பதாகலான், உவமைக்குப் பிறிதொரு பொருள் 201எதிர்ந்து உவமஞ்செய்யாது ஆண்டுப் 202பிறந்தனவற்றொடு 203நோக்கிக் 204கருத்தினாற் கொள்ளவைத் தலின் இஃது உள்ளுறை யுவமமாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசிகளையுந் தொழிலோடு விருந்தோம்பு தற்றொழில் உவமங்கொள்ள நின்றமையின் வினையுவமப் போலியாயிற்று. இங்ஙனங் கூறவே 205இதனை இப்பொருண் மைத்தென்ப தெல்லாம் உணருமா 206றென்னையெனின், முன்னர், துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே (298) எனல்வேண்டியது இதன் அருமை நோக்கியன்றேயென்பது. அல்லாக்காற் கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை - சுரும்புபசி களையும் பெரும்புன லூர என்பது 207பயமிலவென்பது கூறலா மென்பது. கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே. (ஐங்குறு. 12) என்பது, பயவுவமப் போலி. இதனுட் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக் கேதுவாகியதொன்று விளங்கக் கூறியதிலளாயினும், இழிந்தவேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கு மெனவே, 208அவற்றிற்கும் இழிபுயர்வாமென்பதொன்றில்லை; 209எல்லாரும் இன்பங் கோடற்குரியர் தலைமகற்கென்றமையின், யாமும் பரத்தையரும் அவற்கு ஒத்தனமென்றமையின் அவை கூறினாளென்பது. நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை 210வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்றுநின் மலர்ந்த மார்பிவள் 211வயவு நோய்க்கே (ஐங்குறு. 51) என்பதும் அது. நீருறை கோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப் பெடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும், அதுபோல நின்மார்பு நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளுமென்றவாறு. புளிங்காய் வேட்கைத்தென்பது, நின் மார்புதான் இவளை நயவாதாயினும் இவடானே நின்மார்பை நயந்து பயம்பெற்றாள்போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற் பயத்தளாகும்; புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாறு போல என்பது. ஒன்றே னல்லெ னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொ டொன்றேன் றோழி 212யொன்றி னானே. (குறுந். 208) என்பது மெய்யுவமப் போலி; என்னை? மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரொடு மலர்ந்தாற்போல யானும் உளேனா யினேனென்றமையின். வண்ண வொண்டழை நுடங்க வாலிழை யொண்ணுத லரிவை 213பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே. (ஐங்குறு. 73) இஃது உருவுவமம். நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந் தாடிய புனலெல்லாந் தண்ணென்றதெனக் கூறியவழி, அத்தடம் போல இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாளென்பது கருதியுணரப்பட்டது; அவளொடு புனல்பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாளென்பது கருத்து. 214இது நிற மன்றாலெனின், நிறமும் பண்பாகலின் அந்நிறத்தோடு நிறமல் லாத பண்புக் கொள்ளப்படுமென்பது வகைபெற வந்த உவமத் தோற்றம் (276) என்புழிக் 215கூறினாமென்பது. 216பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர வெந்நலந் தொலைவ தாயினுந் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. (ஐங்குறு. 63) என்பது, பிறப்புவமப்போலி. நல்ல குலத்திற் பிறந்தும் இழிந் தாரைத் தோய்ந் தமையான் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டலென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப்பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாடின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடு பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையிற், பரத்தையர் பிறப்பு இழிந்தமையுந் தலைவி பிறப்பு உயர்ந்தமை யுங் கூறி அவன் பிறப்பின் உயர்வுங் கூறினமையின் இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாங் கருதிக் கூறிற் செய்யுட்குச் *சிறப்பாமெனவும், வாளாது நீர்நாய் வாளை பெறூஉமூரனென்றதனான் ஒரு பயமின்றெனவுங் கொள்க. 217பிறப்பொடு வரூஉந் திறத்த தென்றது. தலைமகனால் இவ்வாறு திறப்பாடு வேறுமுளவென்பதூஉங் கொள்க. அவை:- தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப, அதனாற், றன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே (ஐங்குறு. 41) என்றவழித் தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை யென்பது 218(இன்னுந்) தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று. வெண்பூம் பொய்கைத்து அவனூரென்பது தலைமகள் பசப்பு நிறம்பற்றி உவமையாயிற்று. ஆதலான் வினையுவமமும் உருவு வமமும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்கு வருதலும் உடையவென்பது. 219 (அவை தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு ............. பொன்போற் செய்யு மூர்கிழ வோனே என்றவழி) 220இன்ன திறத்தனென்றதனானே, இத் தன்மைத் தாகிய ஊரனையாளெனச் சொல்லுதலுந், தலைவ னூரின் கணுள்ளன சொல்லத் தலைவற்கேயன்றித் தலைவிக் கேற்ற உவமை தோன்றச் செய்தலு 221மென உவமங் கூறியவழி உள்ளு றையுவமங் கோடலும், பிறவாறு வருவன வுளவாயினும் எல்லாங் கொள்க. தேர்வண் கோமான் றேனூரன்ன விவள். (ஐங்குறு. 55) என்பது அவனூரனையாளென வந்தது. வெண்பூம் பொய் கைத்து அவனூர் எனத் தலைவனூரின் உள்ளதொன்றனாற் தலைவிக்குவமையே பிறப்பித்தவாறாயிற்று. அல்லாக்கால், 222வெள்ளை யாம்பலடை கரை. (ஐங்குறு. 41) என்றதனாற் பயமின்றென்பது. (25) (கிழவியுந் தோழியும் உள்ளுறை சொல்லுங்கால் இவ்வாறு சொல்லவேண்டுமெனல்) 301. கிழவி சொல்லி னவளறி கிளவி தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது. இது மேற்கூறிய உள்ளுறையுவமைக்காவதோர் இலக்கணம். இ-ள்: ஐந்துவகைப்பட்ட உவமப்போலியும் பிறிதொடு படாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி, அக்கூற்றுத் தலை மகட் குந் தோழிக்கும் உரித்தாங்காற், தலைவிக்காயின் அவளறி யுங் கருப்பொருளானே செய்யல்வேண்டுந், தோழிக்காயின் அந் நிலத்துள்ளனவெல்லாஞ் சொல்லவும்பெறும்; பிறநிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப்பெற ரென்றவாறு. இதனது பயம்: தலைமகள், அந்நிலத்துள்ளனவெல்லாம் அறியுந்துணைப் பயிற்சியிலளெனவும் அவளாயத்தாராயின் அந்நிலத்துள்ளன அறியச் 223சிதைந்ததின்றெனவுங் கூறியவாறு. ஒன்றே னல்லெ னொன்று வென் (குறுந். 208) என்னும் பாட்டினுட், பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை மரம் 224படப்பையிலுள்ளதாகலானுந் தன்னாற் பூக்கொய்யப் படு மாகலானும் அஃது அவளறி கிளவியெனப்பட்டது. தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை. (ஐங்குறு. 41) என்பது தோழி கூற்று. என்னை? அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே தலைமகள், பெரும் பேதையாதலினென்பது. 225அதிகாரத்தானின்ற உள்ளுறை யுவமையென்பதனை அவளறி கிளவியென்றதற்குப் பெயர்ப் பயனிலையாகவும் நிலம் பெயர்ந் துரையாதென்னும் முற்று வினைக்குப் 226பெயராகவும் வேறு வேறு சொல்லிக் கொள்க. (26) (தலைவன் உள்ளுறையை இவ்வாறு சொல்லுவனெனலும் ஒழிந்தோர்க்கு இடம் வரைவின்றெனலும்) 302. கிழவோற் காயி னுரனொடு கிளக்கு மேனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே. இதுவும் அது. இ-ள்: கிழவோன் சொல்லும் உள்ளுறையுவமந் தன் 227னுடைமை தோன்றச் சொல்லப்படும். ஏனோரெனப்பட்ட பாங்கனும் பாணனு முதலாயினோர் சொல்லுங்காலை மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது, 228தாந்தாம் அறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத பொருளானும் அந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமை சொல்லப் பெறுப. என்றவாறு. கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு நுந்தை நும்மூர் வருது மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே (ஐங்குறு. 92) என்றவழித், தாய் போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலை மகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க. 229ஒழிந்தோராயின் வரையறையின்மையிற் காட்டாமாயினாம். அவை வந்துழிக் காண்க. (27) (இன்பமுந் துன்பமுந் தோன்ற உவமை சொல்லப்படும் எனல்) 303. இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப. இதுவும் மேலதற்கே யாவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற்கூறப்பட்ட உள்ளுறையுவமம் இன்ப துன் பங்கள் தோன்றச் சொல்லவும்படும் என்றவாறு. கழனி 230மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன். (குறுந். 8) என்பது பலவகையின்பமும் வருந்தாது பெறுவரென்பதற்கு உவமையாகி வருதலின் இனிதுறு கிளவியெனப்பட்டது. தாய் 231சாப் பிறக்கும் புள்ளிக் 232கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத்து (ஐங்குறு. 24) என்பது தலைமகன் 233கொடுமை கூறினமையின் துனியுறு கிளவியாயிற்று. இவ்விரு பகுதியும்படச் செய்யப்படும் மேற்கூறிய உள்ளுறையுவமமென்பது இதன் கருத்து. மருங் கென்னும் மிகையானே, ஏனையுவமத்தின்கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும். அவை:- மருந்தெனின் மருந்தே 234வைப்பெனின் வைப்பே. (குறுந். 71) என்பது இனிதுறு கிளவி; 235காரத்தின் வெய்யவெந் தோள். (ஐந். ஐம். 24) என்பது துனியுறு கிளவி. (28) (தலைவி உள்ளுறை கூறும் நிலம் இவை எனல்) 304. கிழவோட் குவம மீரிடத் துரித்தே. இஃது, அவ்வுள்ளுறையுவமையை வரையறுத்துணர்த்து தல் நுதலிற்று. இ-ள்: தலைமகள் இரண்டிடத்தல்லது உள்ளுறையுவமை சொல்லப்பெறாள் என்றவாறு. இரண்டிடமென்பன மருதமும் நெய்தலும்; அந்நிலத்துப் பிறந்த பொருள்பற்றியல்லது உள்ளுறையுவமஞ் சொல்லுதல் கிழத்திக்குரித்தன்றென்பது கருத்து. இவ்விடத்து உரிமை யுடைத்தெனவே குறிஞ்சிக்கண் அத்துணை யுரித்தன்றென்ற வாறு. தாமரை வண்டூது பனிமல ராரு மூர யாரை யோநிற் புலக்கேம் (அகம். 46) என்றவழி, வண்டூது பனிமலரெனப் பிறர்க்குரிய மகளிரெனவும் அவரை நயப்பாயெனவும் உள்ளுறையுவமம் மருதத்துக்கண் வந்தது. அன்னை வாழிவேண் டன்னை கழிய முண்டக மலருந் தண்கடற் சேர்ப்ப னெந்தோ டுறந்தன னாயீ னென்னாங் கொல்லவ னயந்த தோளே. (ஐங்குறு. 108) என்பது நெய்தல். இதனுட் கழிய முண்டக மலருமென முள்ளு டையதனைப் பூமலருமென்று உள்ளுறுத்ததனான், 236இருவர் காமத்துறைக்கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென் றாளென்பது. என்றோடுறந்தனனென்பது, முள்ளுடைமையோ டொக்க, என்னாங்கொல் அவனயந்தோடோளென்றவழி 237அவன் அன்பிற்றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சி யோடொப்பிக்கப்படும். பிறவும் அன்ன, குன்றக் குறவர் புல்வேய் குரம்பை மன்றா டிளமழை மறைக்கு நாடன் புரைவன வாழி தோழி விரைபெய லரும்பனி யசைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே (ஐங்குறு. 252) என்னுங் 238குறிஞ்சிப் பாட்டினுள், வறுமைகூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல, வாடைசெய்யும் நோய்தீர்க்க வந்தானென்று உள்ளுறையுவமஞ் செய்தவாறு கண்டு கொள்க. இனிக் கிழவோட்குவமம் பிரிவிடத்துரித்தென் பது பாடமாக உரைப்பாருமுளர். யாதானுமொரு நிலத்தாயி னும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறப்பெறுங் கிழத்தி என்பது 239இதன் கருத்து. பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே என்பது 240பிரிவன்றாகலின், ஈரிடமென்றலே வலி தென்பது. (29) (தலைவன்உள்ளுறை கூறுதற்கு வரையறையில்லை எனல்) 305. கிழவோற் காயி னிடம்வரை வின்றே. மேல் உரனொடு கிளக்கும் என்றதல்லது இன்னவழிச் சொல்லப்பெறுந் தலைமகனென்றிலன், அதனான் அவற்கு எல்லா நிலனும் உரியவாமென்கின்றானென்பது. இ-ள்: தலைமகற்கு இடவரையறை இல்லை என்றவாறு. வரையறை யில்லனவற்றுக்கு வரையறை கூறாமே முடியா வோவெனின் அங்ஙனமாயினுங் கிழத்திக்குந் தோழிக்கும் இடம் வரையறுத்ததனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலை மகற்கும் இடம் வரையறையுண்டுகொலென்று கருதிற் கருதற்க வென்றற்கு இது கூறினானென்பது. (30) (தோழியும் செவிலியும் உள்ளுறை கூறுமாறு இவ்வாறெனல்) 306. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. இது தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுமிட முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறையுவமங் கூறப்பெறுப தோழியுஞ் செவிலியும் என்றவாறு. காலமுமிடனும் பொருந்துதலென்பது வெளிப்படக் கிள வாது 241முன்னத்தான் மறைத்துச் சொல்லவேண்டியவழி அவ் வாறு சொல்லப்பெறும் அவருமென்றவாறு, இங்ஙனங் கூறவே, ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்று (302) என்றவழி எல்லாரும் உள்ளுறையுவமஞ் சொல்லப்பெறுவ ரென்பது பட்டது; அதனை நற்றாயும் ஆயத்தாருந் தந்தையுந் தன்னையரும் உள்ளுறையுவமை கூறப்பெறாரெனவுந், தோழி கூறின் நிலம் பெயர்ந்துரையாத பொருளான் ஒருவழிக் கூறு மெனவுஞ், செவிலிக்காயின் இடம் வரைவின்றெனப்பட்ட வகையாற் பொருந்தும்வழிக் கூறுதற்குரியளெனவுங் கூறினா னாம் இச்சூத்திரத்தானென்பது. கொள்வழியென்றதனாற், தோழிக்குப்போல நிலம் பெயர்ந்துரையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கு முரித்தென்பது கொள்க. மற்242றிவையெல்லாம் அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதியதென்னை? புறப்பொருட்கு வாராதனபோல வெனின் ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினானென்பது. வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரு மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந (புறம். 42) என்றக்காற், பகை வேந்தரை வென்றிகொள்ளுங்கால் 243அவர் தாமே தத்தம் பொருள் பிறர்க்களிப்பாரென்னும் பொருள் தோன்றினும் தோன்றுமென்பதல்லது ஒரு தலையாக உள்ளுறை யுவமங் கோடல்வேண்டுவதன்று. என்னை? தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர் (ஐங்குறு. 24) என்றாற்போலக் கூறாது, அந்நாட்டுக் 244கருங்களமர் முதலாயி னார் வருந்தாமற் பெறும்பொருள் பிறநாட்டார்க்கு விருந்து செய்யத்தகுமென்று அந்நாட்டினது வளமை கூறினமையி னென்பது. தோழி பொருந்தியவழிக் கூறுமாறு முன் காட்டப் பட்டன. செவிலி பொருந்துவழிக் கூறுவனவுங் கண்டுகொள்க. இலக்கணமுண்மையின் 245அவையும் உளவென்பது கருத்து. (31) (வேறுபட வரு முவமைக ளிவையெனல்) 307. வேறுபட வந்த வுவமத் தோற்றங் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல். இது, மேலெல்லாம் இருவகை யுவமமுங் கூறி இன்னும் ஏனையுவமப்பகுதியே கூறுவான் எய்தாததெய்துவித்தது. இ-ள்: வேறுபட வந்த உவமத் தோற்றம்- வேறுபாடு தோன்றவந்த உவமைச்சாதி; தோற்றமெனினும் பிறப்பெனினுஞ் சாதியெனினும் ஒக்கும்; கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்- அங்ஙனம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியானே கொள்ளுமிடனறிந்து கொளுத்துக என்றவாறு. கொளுவுதலென்பது கொளாஅல் என்பதாயிற்று. வேறுபடவருதலென்பது:- உவமத்துக்கும் பொருட்கும் 246ஒப்புமை மாறுபடக் கூறுதலும்; ஒப்புமை கூறாது 247பெயர் போல்வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும், 248ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், 249ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோருவமை நாட்டுதலும், 250உவமையும் பொருளும் முற்கூறி நிறீஇப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், 251உவமைக்கு இருகுணங் கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறுதலும், 252ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், 253ஒவ்வாக்கருத்தினான் ஒப்புமை கோடலும், 254உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாகிய பொருட்குச் சில அடைகூறி அவ்வடையானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், 255உவமானத்தினை உவமேய மாக்கியும் அது விலக்கியுங் கூறுதலும், 256இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்தலும், இன்னோரன்னவெல்லாம் வேறுபடவந்த உவமத் தோற்றமெனப்படும். இவற்றைக் கூறிய மருங்கிற் கொளுத்துதலென்பது, முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறையுவ மத்தின்பாலும் படுத்துணரப்படுமென்பது. ஏனையுவமத்தின் பாற்படுத்தலென்பது, வினை பயன் மெய் உரு என்ற நான்கும்பற்றி வருதலும் அவற்றுக்கு ஓதிய ஐவகை நிலைக் களனும்பற்றி வருதலுமெனக் கொள்க. உள்ளுறையுவமத் தின்பாற்படுத்தலென்பது, இவ்வேனையுவமம்போல உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்கவாராது குறிப்பினாற் கொள்ள 257வருதலின். இக்கருத்தினானே 258இதனை 259ஈண்டு வைப்பானாயிற்று. வரலாறு:- வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு _க்கந்Jரப்பbthL§fh வுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் bபாழுதென வரைதி புறங்கொடுத் திறத்தி மh¿ வருதி மலைமறைந் தொளித்தி யகலிரு விசும்பி னானும் பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே (புறம். 8) 260என்னும் பாட்டினுட், கடந்தடு தானைச் சேர லாதனை என் னுந்துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத் துக்கொள்ள வைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர் வழி என்னுந்துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது. இனிப் பொழுதென வரைதி என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக்கொள்ள வைத்தா னென்பது. என்னை? வெஞ்சுடர்வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு பழிப்பான் பொருளே உவமஞ் செய்தா னென்பது. (என்னும் பாட்டினுட் கடந்தடு தானைச் சேர லாதனை என்னுந் துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது, இனிப் பொழுதென வரைதி என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக்கொள்ள வைத்தா னென்பது என்னை? வெஞ்சுடர்வழித் தோன்றிய அரசனைத் தண்கடரோடு 261பழிப்பான் பொருளே உவமஞ் செய்தமையா னென்பது.) (பொருளே உவமஞ் செய்தனர்) மொழியினு (284) மென்றதனாற் பொருளினை உவமையாகக் கூறாது உள்ளுறை யுவமம் போலக் கொள்ளவைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாய வற்றுள், வையங் காவலர் வழிமொழிந் தொழுக என்றான். வழிமொழித லென்பது, வேற்றரசர்க்குத் தன்றன்மை யென வேறின்றித் 262தன்னகப்படுத்தல். ஆகலான் தத்தமொளி யொடு 263படுத்து ஒழிந்த கோளுஞ் செல்லத் தானுஞ் செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங் கூறுங் குறிப்புப்பட வைத்தானென்பது. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொ றாது எனவே இன்ப நுகர்வுமுற்றுச் சிறப்பில்லாக் 264கட்டுரை யெய்தானெனவும், அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர் மகளிரொடு போகந் துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர் மறுத்துக் கொள்ள வைத்தான். சிறப்பின்மை யென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ் செய்யாது, உரோகணிமேற் கழிபெருங் காதலனெனப்படுதல் போல்வன. இடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும், மதிமண் டிலமென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். ஒடுங்கா வுள்ளம் எனவே, அம்மதியந் தேய்ந்தொடுங்குமென்பது கொள்ளப்படும். ஓம்பா வீகை எனவே, நாடோறும் ஒரோவோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றாற் றருவதல்லாது தானுடையவெல்லாம் ஒருகாலே கொடாத மதியமெனப்படும்.கடந்தடு தானை எனவே, மதிக்குத் தானையாகிய தாரகையெல்லாம் பகைக் கதிராகிய பருதி மண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர்மறுத்துக் கொள்ளப்பட்டன. இனிப் பொருட்குரிய அடையும் அவ்வாறே எதிர்மறுத்துக் கொள்ளப்படுமென்றவாறு. விலங்குசெலன் மண்டிலமெனவே, கடையாயினார் 265கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத் தலைவன் தலையாயினார் கதியிற் செல்லுமென்றான். பொழு தென வரைதியெனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி யென்றதனான் இவன் 266பொழுது செய்யானெனவும், புறங் கொடுத் திறத்தியெனவே, தோற்றோர்போன்று ஒளி மழுங்கிச் செறிகின்றாயெ 267(னவும், விளங்கித் தோன்றவெ)ன்ற தனாற் 268(தொடர்கின்ற) சுடர்போல விளங்கிப் பிறர் தோற் றோடக் காயும் இவனெனவும், மாறி வருதியெனவே, திங்க டோறும் மாறிப் பிறத்தியென்றதனான் இவன் நிலைபெற்றா னெனவும், மலை மறைந் தொளித்தியெனவே, மலைசார்ந்த வழித் தோன்றா யென்ப தனான் இவன் தன்னாட்டு 269மலை மீக் கூறுமெனவும், அகல் விசும்பினானுமெனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடையனெனவும், பகல் விளங்காயெனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபடுதலின் வேறுபட வந்ததா யிற்று. மற்றவையும் அன்ன. இக்கூறிய அடையெல்லாம், வினை பயன் மெய் உரு வெனக் கூறிய மருங்கிற் கொள்வழிக் 270கொளுவுவதாகக் காட்டுவன வற்றிற்கும் இஃதொக்கும். உதாரணம்: கண்ண னவனிவன் மாறன் கமழ்துழாய்க் கண்ணி யவற்கிவற்கு வேம்புதார் - வண்ணமு மாய னவனிவன் சேயன் மரபொன்றே யாய னவனிவன் கோ என்பது, பெயருந் தாரு முதலாயினபற்றி மாயனோடு உவமங் கருதி மறுத்துரைத்தவாறு. 271பெயரென்பது பொருளு ணர்த்து தலின் அதனை வடிவின்பாற்படுத்துணர்க. அடிநோக்கி னாழ்கடல் வண்ணன்றன் மேனிப் படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன் - முடிநோக்கித் தேர்வளவ னாத றெளிந்தேன்றன் சென்னிமே லாரலங்க றோன்றிற்றுக் கண்டு. என்பதனுள், ஆழ்கடல் வண்ணனையுங் கொன்றைத்தாரோனை யும் உவமை 272கூறி அவற்றை மறுத்துத் தேர்வளவனெனத் தெளிந்தேனெனப் பொருளையே நாட்டுதலின் அஃது, உவமம் வேறுபட வந்ததாயிற்று. 273இந்திர னென்னி னிரண்டேகண் ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகமொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று. என்பதனுள், இந்திரனையும் இறையோனையும் முருகனையும் ஒப்பு மறுத்து, நெடியோனை உவமங் கூறலின், ஒப்புமை மறுத்துப் பிறிது நாட்டியது. சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமகனாய் கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார் - பொற்றொடீ 274யாழியுடை யான் மகன் மாயன் சேயனே கோழி யுடையான் மகன். என்பதனான், உவவையும் பொருளும் முன் ஒருங்கு நிறீஇப் பின்னர் ஒவ்வாமை கூறுதலின் இதுவும் பின்னும் வேறுபட வந்ததாயிற்று. புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையான் வேறு படுப - புனனாட 275னேற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவ ளேற்றிரந்து கொண்டமையா னின்று. என்பதுவும் அது. 276ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி னீர்த்துறை படியும் பெருங்களிறு போல வினியை பெரும வெமக்கே. (புறம். 94) என்னும் பாட்டினுள் உவமையாகிய பொருளினை யானையுங் கடாமுமென இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாலின் நீர்த்துறை படியுமென்னும் அடைகூறி 277ஊர்க்குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் 278கடாஅத் திற்குச் சொல்லாமையின் இதுவும் வேறுபட வந்த உவமத் தோற்ற மெனப்பட்டது. முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி 279முகிழெனப் பெருத்தநின் னிளமுலை. (கலி. 56) என்றவழி, முதிர்கோங்கும் முற்றிய குரும்பையும் பெரியவாக லின் அவைபோலப் பெருத்தநின் இளமுலையென்றல் ஒத்தது, பெயறுளிமுகுளஞ் சிறிதாக இவற்றோடு அதனை உடன் கூறி அப்பெயறுளி முகுளத்திற்கில்லாத பெருமைக்குணம் 280பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபட வந்த உவமையாயிற்று. மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பா ரியாங்கண்ட தில் (குறள். 1071) என்பது ஒவ்வாப் பொருளை ஒப்புமைகொண்டது. என்னை? மக்களைக் கயவர் ஒவ்வாரென்னுங் கருத்தினான் மக்கள் போல்வர் கயவரென்றமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. நெடுந் 281தோட் டிரும்பனை நீர்நிழல் புரையக் குறும் 282பல முரிந்த குன்றுசேர் சிறுநெறி என்பதனுள், உவமையாகிய நிழல் பொருட்கெய்தியது 283உவம வினையன்றே, அதற்கு நெடுந்தோடும் பெருமையும் அடையா கக் கூறினான்; கூறவே, பனைநிழலோடொக்குங் குன்றஞ்சேர் சிறுநெறி முடிந்தவழிச் சென்றுபுகும் ஊர்க்குவமை நெடுந்தோ டென்று கொள்ளவைத்தமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. மண்படுதோட் கிள்ளி மதவேழ மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉந் தேயுந் தெளிவிசும்பி னின்று என்பதனுள், 284உவமானத்தினை உவமேயமாக்கி அதனையே விலக்கினார்; என்னை? வெண்குடையென்று யானை குத்து மென்று மதியினைக் குடையுடனொப்பிப்பான், மதியினைக் குடையாகவே கூறித், தேயுந் தெளிவிசும்பினின்று என்பதனாற் குடையோடு உவமை கூறியதை விலக்கினமையின் அதுவும் வேறுபடவந்த உவமைத்தோற்றமாயிற்று. அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள். 1) என்றவழி, இரண்டு பொருள் வேறுவேறு கூறியதன்றி, அகர முதல எழுத்தெல்லாம் அதுபோல என்றானும், ஆதிபகவன் முதற்று உலகம் அதுபோல என்றானும் ஒன்றாகத் துணியு மாற்றான் உவமையும் பொருளுங் கூறாமையின், அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று. பிறவுமன்ன. இவை ஏனை யுவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம். (ஒவ்வாதெனக் கூறி உவமையாக்கலும் உளவெனல்) 308. ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே. இதுவும், ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்து தல் நுதலிற்று. இ-ள்: ஒரீஇக்கூறலும்- ஒக்குமெனக் கூறாது ஒவ்வாதெனக் கூறுதலும்; உம்மை இறந்தது தழீஇயிற்று; மரீஇய பண்பு-அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு என்றவாறு. உதாரணம்: யாங்ஙன மொத்தியோ விலங்குசெலன் மண்டிலம். (புறம். 8) எனவும், மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி. (குறள். 1118) எனவும் வரும். 285நின்னோ ரனையை நீ. (பரிபாடல் 1) என்பதும் அது. இவற்றுள் யாங்ஙனம் ஒத்தியோவென்பது ஒவ்வாயென் னும்பொருட்டு. காதலை வாழிமதி யென்றவழியும், யான் காதலி யாமையான் மதியமே! அவள் வாண்முக மொவ்வாயென்றலின் ஒரீஇக் கூறிற்று. 286இதுவும் 287மரீஇய பண்பாகலானும் உள்ளுறையுவமம்போலக் குறிப்பினான் உவமங்கோட லொப்புமையானும் ஈண்டு வைத்தானென்பது. பண்பென்றத னான் அதுவும் இலக்கணத்தோடொக்கும் என்றவாறு. இவற்றையும் வேறுபட வந்த உவமமென்னாமோவெனின், உவமையும் அவ்வழி மாறுபட வருமாறு உவமத்துக் கூறினான், உவமையின்மை கூறுதலும் உவமையெனப்படுமென்றற்கு இது கூறினானென்பது. இவற்றுள்ளும் வேறுபடவந்த இலக்கணம் மேலைச்சூத்திரத்துள் அடங்கும். (33) (உவமை பெருமையுஞ் சிறுமையுந் தோன்றாமலுங் கூறப்படுமெனல்) 309. உவமத் தன்மையு முரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. இஃது எய்தாதது எய்துவித்தது; மேல் ஏனையுவமங் கூறுங் கால் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பக் கூறல்வேண்டுமென்றான்; 288அவ்வாறன்றி உவமமுங் கொள்ளப்படுமென் றமையின். இ-ள்: உவமத்தன்மையும் உரித்தென மொழிப- விகார வகையாற் பெருமையுஞ் சிறுமையும் ஒருபொருட்குக் கூறாது 289பட்டாங்கு உவமங் கூறுதலும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர், பயனிலை புரிந்த வழக்கத்தான- அதனானும் ஒரு பயன் தோன்றச் சொல்லுத னெறிப்பாட்டின்கண் என்றவாறு. அது, பாரி பாரி யென்று பலவேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் (புறம். 107) என்னும் பாட்டினுள் உலகளித்தற்கு மாரியும் உண்டென, உவ மித்துச் சிறப்பித்துக் கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட் டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதான்போல இயல்பினான் உவமை கூறினானாம்; இது மாரிக்கும் பாரிக்கும் ஓரிழிவில்லையென்னுந் தன்மைபடக் கூறவே அவனுயர்வு கூறுதலிற் 290பயனிலைபுரிந்த வழக்கெனப்படுமென்பது. கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் 291புழுகின் வில்லோர் 292தூணி வீங்கப் பெய்த 293வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் 294செப்பட ரன்ன செங்குழை யகந்தோ 295றிழுதி னன்ன தீம்புழற் 296றுய்வா 297யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் 298டியவி னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும். (அகம். 9) எனவும், நீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு 299கருப்பை யாடா தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தோட் டீத்திலை வேய்ந்த 300எய்ப்புறக் குரம்பை (பெரும். 83) என்றாற் போல்வனவும் அது. கொல்வினைப் பொலிந்த (அகம். 9) என்பதனுள் இந்நிலத்தின் மக்கள் அம்பினை உவமையாக்கி ஆண்டையவாகிய இருப்பையின் பூங்கொத்தை உவமிக்கப்படும் பொருளாக்கியும், உவம நிலத்திற்கேற்ற வெண்ணெய்த் திர ளொடு, கழன்ற பூவினை உவமஞ்செய்தும், அந்நிலத்தியல்பு கூறினமையின், அது பயனிலை புரிந்த வழக்கெனப்பட்டது. பிறவும் அன்ன. உவமத்தன்மையுமென்ற உம்மையான் உவமத்தன்மையே யன்றி வாளாது தன்மை கூறுதலும், அந்நிலத்திற்கே பயனிலை யெனப்படுவனவுங் கொள்க. அவை:- மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி 301யீன்பிண வொழியப் போகி நோன்கா ழிரும்பு தலையாத்த திருந்து 302கணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் 303கரம்பைப் படுநீ றாடி நுண்புல் லடக்கிய வெண்பல் லெயிற்றியர் 304பார்வை யாத்த பறைதாழ் விளவி னீழன் முன்றி னிலவுரற் பெய்து (பெரும்பாண். 89-97) என்றவழி உவமஞ்செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயி னும், உவமத்தாற் 305பொருட்பெற்றி தோன்றச்செய்தார்போல அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவமவிலக்கணத்துள் 306இதனையும் இலேசினாற் கொண்டா மென்பது. அற்றன்று; மரபே தானும் (தொல். செய். 80) என்புழி, நாற்சொல்லியலெனச் சொற்றன்மையுங் கூறப் பட்டமையின் உவமையாராய்ச்சியுள் அது 307கூறானென்பது. 308உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? உயர்ந்ததன் மேற் றன்றி உயர்பிழிபுடைத்தல்லாத தன்மையுவமையுங் கொள்க வென்றமையின். (34) (தடுமாறு உவமமும் உளவெனல்) 310. தடுமா றுவமங் கடிவரை யின்றே. இதுவும். உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்து தல் நுதலிற்று. இ-ள்: தடுமாறுவமம்- உவமையும் பொருளும் வேறு நிறீஇ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டனையும் 309ஐயுறச் சொல்லுந் தடுமாறுவமம், இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியுந் தடுமாறச் சொல்லுதலும் தடுமாறுவமமெனப்படும்; கடிவரை இன்று- அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா என்றவாறு. அரிமல ராய்ந்தக ணம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் 310செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி யையத்து நின்ற தரா (பொய்கையார்) என்பதனுள் உவமையினையும் பொருளினையும் வேறுவேறு துணியாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது; அரா வென்றமையின் இது தடுமாறுவமமாயிற்று. தளிபெற்று வைகிய தண்சுனை நீல மளிபெற்றார் கண்போன் மலரு- மளிபெற்ற நல்லார் திருமுகத் தோற்றத் தளிபெற்ற கல்லாரம் போன்மலருங் கண். என்புழி, நீலத்தோடு கண்ணினையும் கண்ணினோடு நீலத்தினை யும் ஒன்றற்கொன்று உவமையாக்கியும் பொருளாக்கியும் ஒருங்கே தடுமாறக் கூறினமையின் இதுவுந் 311தடுமாறுவம மெனப்பட்டது. பிறவும் அன்ன. (35) (உவமைக்குவமை இல்லையெனல்) 311. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே. இஃது எய்தியது மறுத்தது; என்னை? வேறு ஒரு பொரு ளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ அப்பொருளொடு பிறி தொரு பொருளை உவமித்தலும் உவமையென்று கொள்ளுவா னாயினும் அது கொள்ளப்படாது, பொருள் விளங்காமையி னெனக் கூறி விலக்கியமையின். இ-ள்: அடுக்கிய தோற்றம் - உவமையும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம், விடுத்தல் பண்பு - சிறப்பினவாகக் கொள்ளப்படா என்றவாறு. 312மதியத் தன்ன வாண்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை என்றக்கான், மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரையென்ற மையின் அவை ஒன்று ஒன்றனொடு பொருந்தாவென்பது கருத்து. இலங்குவளை யன்ன நலங்கே ழாம்பற் போதி னன்ன தாதவிழ் கைதை. என்றக்கால், ஒன்று ஒன்றனோடு ஒரு 313வண்ணத்ததாய் உவ மைக்கேற்பினும் ஒன்றற்கொன்று உவமையாய் நின்றது. நின்றுற, 314மற்றும் அதனோடு உவமங்கொள்ளப்படாது; இது வரை யறையுடைமையின் விலக்கப்பட்டது. மற்று, - ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த 315குறங்கிற் குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த வோதி யோதி நெறிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி (சிறுபா. 19) என்பதூஉம் அடுக்கிய தோற்றமெனப்படாதோவெனின், படா தன்றே; யானைக்கைபோலுங் குறங்கு; குறங்குபோலும் வாழை யெனவடுக்கிச் சொல்லாது குறங்கினையுடையாளென்று துணித்துக் கூறியபின்னர்க் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை யென்றானாதலினென்பது. தோற்றமென்றதனான் உவமையும் பொருளுமாக நிறீஇ உவமவுருபு தோன்றக் கூறுங்கால் அடுக்கப்படுவதென்பது. (36) (உவமை நிரனிறையாகவும் வருமெனல்) 312. 316நிரனிறுத் தமைத்த னிரனிறை சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங் கடையே. இதுவும் எய்தாதன வரையறையுடைமையிற் கூறியவற் றோடு இனமாகலின் உவமத்திற்காவதொன் றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை- உவமையையும் நிரலே நிறுத்துப் பொருளினையும் நிரலே நிறுத்து ஒப்புமை கூறின் அது நிரனிறையெனப்படும்/ சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங் கடையே- சுண்ணத்தினை 317வரைந்த நிலைமையான் வந்த சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மென்னும் மூன்றுமல்லாத இடத்து என்றவாறு. சுண்ணத்தினை வரைந்தநிலைமையான் வந்தனவெனவே சுண்ணந்தவிர மூன்றுளவோவெனின், அதனை 318ஒருவரை விலக்க மூவரும் வந்திலரென்றாற்போலக் கொள்க. உதாரணம், கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் என வரும். நிரனிறுத்தலென்னாது அமைத்தலென்றதனான் நிரனிறையன்றி அமைத்துக்கொள்வதும் உண்டு; அது, 319களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே என வரும்; பிறவுமன்ன. என்றார்க்கு, நிரனிறுத்தமைத்த நிரனிறை ஏனைவரை நிலைவைத்த மூன்றலங்கடையே என்னாது, சுண்ணத்தினை வரைந்தோதியது என்னையெனின்? அவை மூன்றுஞ் சுண்ணம் போலச் சுண்ணஞ் செய்யப்படுதலின், அவ்வாற்றாற் சிதர்ந்து கிடப்ப உவமையுங் கூறின் அது பொருள் விளக்காதென்பது அறிவித்தற்கென்பது. என்னை? அடிமறியுள் ஓரடியுள் உவமங் கூறி ஓரடியுட் பொருள்வைத்தால் இனிது பொருள்கொள்ளாது அடிமறிக்குங்காலைப் 320பிறிது பிறிதாகலுடைத்து. இனி ஓரடி யுள் உவமங் கூறிப் பின்னர் எத்துணையுஞ் சென்று பொருள்கூறி மொழி மாற்றிக்கொள்ள வைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் தோன்றாது. சுண்ணத்திற்கும் அஃதொக்கும். இனி, 321இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற் றையுஞ் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்று அவை செய்யுட்கண்ணே அணியாமென, 322இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி யென்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும், 323தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையாவழியுமென்பது. என்னை? நாயகர்க்கு நாய்கள்போ னட்பிற் பிறழாது கூஉய்க் குழாஅ முடன்கொட்கு - மாய்படை பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு. என்றவழி, நாய்போலும் நட்புடையர் படையாளரென்பது வினையுவமம்; பன்றியனையர் பகைவேந்தரென்பது நாய்க்குப் பகையாகிய பன்றிபோல 324வென்பது.வேற்று வேந்தர் பகைவ ராதலால் அவ்வுவமை 325விலக்கரிது. அன்றாமாயினும் அஃதணி யெனப்படாது, உவமைதான் உயர்ந்ததின்மையின். அது குற்ற மன்றோவெனின்? பேரூ ரட்ட கள்ளிற்கு 326கோரிற் கோயிற் றேருமா னின்னே (புறம். 300) என்பது குற்றமன்றாகலின் 327அதுவுங் குற்றமன்றெனப்படும். இனிப் பொன்மாலையும் பூமாலையும்போலப் பொலிவு செய்தலின் 328இதுவுங் குற்றமாகாது; 329மேலதே குற்றமென்பது. அற்றன்று, இன்ன சொல்லும் இன்ன பொருளுமுடையன பொன்மாலையெனவும் பூமாலையெனவும் வரையறுத்துக் 330கூறலின்மையின் அதனானும் அதனைக் குற்றமென்று இலக்கணத்தார் கூறின் நிரம்பாது. அல்லதூஉம் பொருளதி காரத்துட் பொருட்பகுதிகளெல்லாம் செய்யுட்கு அணி யாகலான்; அவை, பாடலுட் பயின்றவை யெனப்பட்டன என்றதனான் அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றா மென்பது. இனி, இரண்டு பொருளெண்ணி, அவற்றை வினைப் படுக் குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணி யென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட் கணியாமென் பது அவர் கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுண் மூன்று பொருள்கூறி எனவாங்கென்பதொரு சொல்லான் முடிந்தவழியும் எனவாங்கு என்பதோர் மொழியில் எனவென்பது ஓரலங்கார மெனல்வேண்டுமாக லான் அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன. இனி, 331அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது, அணி யென்பவாயிற், சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல அவ்வணி யுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது. இனிச் செய்யுட் கணிசெய்யும் 332பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலா (663) மென்பது. 333அவை யாவையெனின், அகமனர் கேள்வ னகற்சி தீர்த்தற்கு மகனொடு புகுந்த மகவுநிலை யெனாஅ மறுக்குங் காலை மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளீஇய குறிப்புநிலை யெனாப் புலவிக் கண்ணும் போக்கின் கண்ணு மழுதலு மழாஅதலு முயங்கலு மென்றாங் கிருவகைப் பட்ட மங்கல மெனாஅப் புலம்புறு காலை யறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை யெனாஅ வின்னோ ரன்ன பல்பொருட் பகுதி நன்னெறிப் புலவர் நாட்டல்வகை யுடைய என்றோர் சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரமெனப்படு மென்பது; அவற்றுக்கு உதாரணம் : ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் (அகம். 5) என்பது மகவுநிலை. ஓவச் செய்தியி னென்றுநினைந் தொற்றி (அகம். 5) என்பது குறிப்புநிலை; என்னை? தலைமகன் 334போக்கினை உவக்குங் குறிப்பல்லாத குறிப்பாகலின் அஃதணியெனப்படும். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள். 1318) என்பது புலவியுளழுதமங்கலம். பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மோயின ளுயிர்த்த காலை (அகம். 5) என்பது, போக்கின்கண் அழாதமங்கல நிலை. விளிநிலை 335கொளாஅ டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலமிசை வடுக்கொளாஅக் குறுக வந்து கூரெயிறு தோன்ற (அகம். 5) என்பது, அறிவொடு படாது புலம்புகொளவந்த செய்வினை; என்னை? கேளாது கேட்டாள்போல் வந்தமையின். 336அதுவும் அலங்காரமெனப்படுமென்று சூத்திரஞ் செய்துகொள்ளல் வேண்டுஞ் செய்யுட்கு அணி வேறு கூறினென்பது. இனி, இங்ஙனங் கூறினவெல்லாங் குற்றமென்று கொள் ளப்படா; என்னை? 337வேறு காரணமுணரப்பெறாது பிறழ்ந்து இடையறவுபட்டகாலை இடர்ப்பட்டுச் செய்தனவாதலான் அவையும் அவ்வாற்றானமையுமென்பது. இனி ஆநந்தவுவமையென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் 338கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடு மெனின், அவைதாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள் ளும் வருதலிற் குற்றமாகா. அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை, வேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் 339செய்யுங் குற்றம் வேறுபடாவென்பது. அஃதேற், செய்யுட்கு இவை யணியென்பதூஉம் இவை குற்ற மென்பதூஉம் மூன்றதிகாரத்துள்ளும் இவ்வாசிரியர் யாண்டுங் கூறாரோவெனின், செய்யுளியலில் முப்பத்துநான் குறுப்புக் கூறி, அவற்றதியைபு நல்லிசைப்புலவர் செய்யுளுறுப்பெனவும், அவை தொடர்ந்த தொடர்நிலை எண்வகையாற், தொடர் நிலைச் செய்யுட்கு 340வனப்பெனவும் பகுத்தோதிய இலக்கணத் திற் பிறழ்ந்தவை எல்லாங் குற்றமென்பதுங் கொள்ளவைத்தா னென்பது. (37) உவமவியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. அவ்விரண்டும் என்றது அகம்புறம் என்னும் இரண்டையும், மெய்ப்பாடும் இரண்டற்கும் வருமென்றபடி. 2. ‘உற்றதுணரும்’ என்றதனால் அகம்புறமாகிய உவமிக்கப்படும் பொருளெல்லாங் கொள்ளப்படும் என்பதற்காக இச்சூத்திரங் காட்டப்பட்டது. 3. சிறந்ததின்றாயினும் எனவும் பாடம். அது சிறப்பு. 4. யாப்புடைமை - இயைபுடைமை. பரப்புடைமை எனவும் பாடம். ஏனையுவமத்தினை முற் கூறற்குப் பரப்புடைமையே நோக்கமாதல் காண்க. சேனாவரையரும் சொல்லதிகாரத்து உரியியலில் ‘குறிப்பும் பண்பும் இசையும் என்பவற்றுள் குறிப்புப் பரப்புடைமை நோக்கி முற் கூறினார்’ என்று கூறுதல் காண்க. உள்ளுறையுவமம் செய்யுட்குமாத்திரம் வரும். ஏனையுவமம் வழக்குச் செய்யுள் இரண்டற்கும் வரும் என்றபடி. 5. அதனை - உள்ளுறையுவமையை. ஈற்றுக்கண் வைத்தமையாலே அடுத்துவரும் செய்யுளியற்கு உரித்தென்பது பெறப்படும் என்றபடி. 6. ஒருவகையாற் பெற்றாம் என்றது சூத்திரத்தாற் கூறாது அதிகாரத்தாற் பெறவைத்தமையை. எழுத்ததிகாரத்தும் சொல்லதிகாரத்தும் சூத்திரங்களால் செய்யுட்குரியவற்றைச் செய்யுட்குரியவென எடுத்தோதுவர்; எடுத்தோதாதவற்றை அதிகாரத்தாற் பெறவைப்பர். அவ்வாறே ஈண்டும் உள்ளுறையுவமை யதிகாரத்தைச் சாரச் செய்யுளியலை வைத்தமையால் செய்யுளுக்கே உள்ளுறை உவமை உரித்தென்பது ஓதியதாயிற்று என்றபடி. 7. அல்லாத வழக்கு - உலகவழக்கு. 8. உவமை பொருள் புலப்பாடும் அலங்காரமும்பற்றி வருமென்பர் இளம்பூரணர். அவருரை நோக்குக. 9. உவமம் என்பது என்றிருப்பது நலம். கூறப்படும் என்பது பயனிலையாதலின் கூட்டி - கூட்டப்பட்டு. கூறப்படும் என்பதைக் கூறுதல்செய்யப்படும் எனவிரித்து எழுவாயும் பயனிலையு மாக்குவாருமுளர். (பிரயோகவிவேகம்) 10. பிழம்பு - திரட்சி. என்றது ஈண்டு வடிவினை. 11. அதற்கு - வடிவிற்கு. 12. அதனுடன் - பயனுடன். 13. அஃகி - சுருங்கி 14. மருங்குதல் - இடை 15. இந்நாற்பகுதி - வினை பயன் மெய் உரு. 16. வண்ணம் வடிவு முதலிய நான்கையும் அடையெனக் கொண்டு அவ்வடைதன்னையும் பண்பென்று அடக்கிக் கூறலாமே? இங்ஙனம் நான்கெனப் பகுத்ததென்னை? என்று வினாவி விடை கூறுகின்றார். 17. கட்புலனாம் பண்பு - நிறம் (25). உற்றுணரும் பண்பு - வடிவு. 18. உற்றுணரப்படும் என்பது (உருவாக) உற்றுணரப்படும் என்று ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் காணப்படுகின்றது. உரு என்பது நிறத்திற்கே முன்பின் வாக்கியங்களிற் காணப்படுதலின் வடிவையும் உரு என்று ஈண்டுக் கூறல் மயக்கமா மாதலின் ‘உருவாக’ என்பது ஈண்டு வேண்டியதின்று. உற்றுணர்தல் - பரிசித்தறிதல். பண்பினை என்பது பண்பு என்றும் இரவின்கண் என்பது இரவின்கண்ணும் என்றுந் திருத்தப்பட்டன. அவ்வாறி ருத்தலே பொருத்தமாதலின். 19. அல்லாக்கால் - உற்றுணரப்படுமாயின். 20. சொல்லும் என்பது செல்லும் என்றிருத்தல் வேண்டும். 21. கூறினானென்பது கூறின் என்றிருத்தல் வேண்டும். இப்படிப் பாடம் உள்ளது கூறின் செல்லும் என முடிக்க. கட்புலனாம் பண்பு வடிவு என்றும், உற்றுணரும் பண்பு உரு (நிறம்) என்றும் பவானந்தம்பிள்ளை பதிப்பிலும் ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலும் மாறி எழுதப்பட்டது. அது பொருத்தமில்லை என்பது பின் பேராசிரியரே, ‘வடிவுபற்றிய பண்பினை யிரவின்கண் உற்றுணரப்படும். வண்ணமாயி னவ்வாறுற்றுணரப்படாது என்று கூறலானும்’, தண்டியாசிரியர் ‘வடிவும் பண்பினு ளடங்குமென்று கொண்டாரேனும் இந்நூலுடையார் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் என வேறாகக் கொண்டார். அங்ஙனங் கோடல் வடிவுபற்றிய பண்பு இருளின் கண்ணு முற்றுணரப்படும்;; வண்ணமாகிய (கட்புலனாம்) பண்பு இரவின்கண் அவ்வாறுணரப் படாதாதலின் வடிவினைக் கூட்டி நாலென்றார்’ என்று வரும் மாறனலங்காரத்து உரையானு முணரப்படும். (உவமையலங்காரம் 1-ம் சூத்திரம்.) 22. குறிப்பின்றியெனவே, வினை மனத்தாற்குறித்துச் செய்யப்படுவ தென்றாயிற்று. 23. அடையெனினும் - அவ்வினையை அடையென்று சொன்னாலும்; அதுவேயென்றது குறிப்பின்றி நிகழும் குணமாகிய அப்பண்பே என்றபடி. 24. பார்வலொதுங்கி நிற்றல் - பார்வைக்கு மறைந்து நிற்றல். ஒதுங்கி நின்றான் என்பது ஒதுங்குகின்றான் என்றும் பாடம். 25. தலைமைக்கேற்ற உவமையாதலின் பொருட்டோற்றமாயிற்று என்றது - புலி தலைமகனுடைய தலைமைக்கேற்ற உவமை யாதலின், புலிபோலப் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுங் கினானன்றிப் பிறர்க்கஞ்சி ஒதுங்கினானல்லன்; என்னும் பொருள் தோற்றமாயிற்று என்றபடி. 26. பண்பு இழிபாகலின் என்பது பண்பியாகலின் என்றிருத்தல் வேண்டும். பண்பையுடையது பண்பி. என்னை? நிறைத்தை யுடையது வடிவாகலின். முன்னும் ‘பிழம்பினாற் றோன்றுவது நிறம்’ என்றும், ‘மெய்யெனப்படுவது பொருளாதலின்’ என்றுங் கூறுதலானும். பின்னும் ‘ஓடற்றொழில் வடிவிற்கல்ல தின்மையின் அவ்வடிவிற்கேற்றது பண்பாயின், பண்பு - நிறப்பண்பு ஒடிற்றெனவாகாமையின் (உவம. 17) என்று கூறுவதனாலும் அறியப்படும். வடிவு பண்புக்காதாரமாதல்பற்றிப் பண்பி என்றார். 27. இன்னள் - இத்தன்மையள். என்றது. இப்பூவினைப் போலப் பசப்புற்றாள் என்றபடி. பசந்தமைக்குக் காரணம் பருவங் கழிதல். 28. உருவுவமம் என்பது முன் வாக்கியத்தோடு சேரல் வேண்டும் இன்னள் என்பது உருவுவமங் குறித்து நின்றதென்றபடி. 29. ஒத்தல் - ஒலித்தல் என்றிருத்தல் வேண்டும். 30. உவமையும் பொருளுமாகிய வினைபற்றி வந்தில என்றது உவமையாயும் உவமேயமாயும் நிற்குந் தொழில்பற்றி வந்தில என்பது கருத்து. 31. ஆங்க என்பதற்கு உதாரணம் இறந்ததுபோலும். செய்யுள் வழக்கில் ஆங்கு என்றே காணப்படுகின்றது; ஆதலின் இது ஆராயத்தக்கது. 32. தன் எச்சவினை இகந்ததாயினும் என்றது தனக்குரிய முடிக்குஞ் சொல்லாகிய வினையை நீங்கியதாயினும் என்றபடி. சுற்று என்பது அன்ன என்னும் குறிப்பாகிய பிற கருத்தாவின் வினையொடு முடிதலின் அவ்வாறு கூறினார். அன்றி, இடைச்சொல்லாதல் நோக்கிக் கூறினார் எனினுமாம். 33. தோய்வு - தோய்தல். தொழிற்பெயர். வினைப்பெயர் தொழிற்பெயர். 34. பொன்மரம் - கற்பகமரம். அது பின் 14ம் சூத்திரத்துட் காட்டிய “புத்தேளுலகிற் பொன்மரம் புல்ல” என்பதனால் அறியப்படுகின்றது.. 35. ‘மழைத்தொழிலாகிய ......... கொள்ளாது’ என்பது ஈண்டியைபில்லாத வாக்கியம் மாறி எழுதப்பட்டதுபோலும். அன்றிபயனுவமையை வகையுளடக்கியதற்கு ஏதுக் கூறியதெனின் பயனுவமை கொள்ளுங்கால் இடையிட்டுத்தான் கொள்ளவேண்டும் என்பது ஒரு நியதியா? என்பது ஆராயத்தக்கது. 36. அன்னவாகலின் என்பது முன்னுள்ள பாடம். அது பொருத்தமில்லை. 37. இடைக்கிடந்த நிலம் - இடை கிடந்த நிலம் என்று பாடம் உள்ளது. அதுவே பொருத்தம். இடை - வெளி. இருபக்கத்துச் சேனைக்கும் நடுவே கிடந்த வெளி நிலம். இடத்திற்சேய - இடத்தினைப்போலத் தூரிய. இஃது அண்மைத் தூரம் “தெம்முனையிடத்திற் சேயகொல்” இ.வி. 639-ம் சூத்திர உரைப் பாடம். 38. நிறம் - செம்மை. அதனை - அச்செம்மை நிறத்தை. வினை - விரித்தாங்கு விரித்தது என்றது சிவந்தாங்குச் சிவந்த என விரித்தமையை. 39. வண்ணம் - வெண்மை. வடிவு - வளைவு. 40. துடுப்புப்போலும் பூவரும்பு. பூமடலுமாம். துடுப்பு - நெய்த்துடுப்பு. (அஃதாவது சுருக்கு சுருவம்) சூடாமணி நிகண்டு பார்க்க. 41. வடிவு - வட்டம். வண்ணம் (-நிறம்). நீலவட்டாயின் நீலம். செம்மைவட்டாயின், வண்டு காந்தட்டாதின் அளைதல்பற்றி யுவமையாம். காந்தள் கைக்கு வடிவும் நிறமும்பற்றி வந்த உவமையாகும். 42. வேறுவேறு வருதல்மாத்திரம் மரபென்று கொள்ளப்படாது. விரவி வருதலும் மரபாகும் என்பது கருத்து. 43. இழிந்துவரல் - உவமையினும் இழிந்துவரல். 44. அணங்கு - வருத்தம். இது வலிபற்றியது. வலியால் வருத்துதல்பற்றி வினையுவமையாகும். 45. மாரி - மேகம். அது மழையைப் பெய்து பயிர்களை வளர்த்துப் பயன்றரல்போல் அம்பும் பகைவரைக் கொன்று பொருட்பயன் விளைத்தலின் பயவுவமை என்பதற்கு உதாரணமாகக் காட்டினார். வென்வேல் என்று முன்னும், மழைத்தோல் என்று பின்னும் வருதலின். மாரியீகை என்னும் பாடம் பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. ‘மாரியீகை’ தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம். அவ்வாறே பேராசிரியர் பாடங்கொண்டு பயவுவமைக்குக் காட்டினாரோ என்பது ஆராயத்தக்கது. 46. கடல் - வடிவுவமை. 47. யானை - வினையுவமை. பாவை - வடிவுவமை. 48. இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும் என்பது. இவற்றுக்கு நிலைக்களம் சிறப்புங்காதலும் நலனும் வலியும் என்பது சொல்லும் என்றிருத்தல் வேண்டும். சொல்லும் என்றது ஆசிரியனை. அவன் சொல்லுதலை 279ம் 280ம் சூத்திரங்களானறிக. 49. முன்னம் - குறிப்பு. ஐயவாய்பாட்டாற் கூறினும் அவை குறிப்பால் உவமையாதல் பெறப்படும் என்றபடி. 50. இதனைத் தண்டியாசிரியர் உண்மை உவமை என்பர். 51. தேற்றவுவமை என்பர். 52. விலக்குவமையுளடங்கும். 53. தேய்ந்தன்று - தேய்ந்தது. ஏனையவுமன்ன. 54. மலை - மலையிடம். சுனை - சுனையிடம். வருஞ் சூத்திரத்து உரை நோக்குக. 55. இவையெல்லாம் - இம்முன்ன மாதியவெல்லாம். 56. பொருட்படை - பொருளடுக்கு. பொருட்டிரள் எனினுமாம். 57. பவளம் என்ற சொல் ஈண்டு வேண்டியதில்லை. 58. ஆகலின் என்பது ஆயினும் என்றிருப்பது நலம். 59. இப்பாட்டிற் போல என்பதைப் பாடல்பற்றிய என்பதனோடு முடிக்க. தோற்றம் அவைக்குச் சிறப்பளித்ததுபோலப் பாடலும் நிருத்தகீத வாச்சியத்தோடு கூடித் தோற்றம்பெற்றுப் பாட்டிற்குச் சிறப்பளித்த மையின், தோற்றம்போல என்பதைச் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்த வுவமை என்றார் என்க. சிறப்பாவது பிறர் கொடுக்கப் பெறுவது என்றும், இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுவது என்றும் பேராசிரியர் கூறுவர். இனி, போல என்பதை இப்பாட்டின் இறுதியில் வரும் இன்மைதீர வந்தனன் என்பதோடு முடித்துப் பயனுவமையாக நச்சினார்க் கினியர் கொள்வர். அம்முடிபின்படி. சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பயனுவமையாகக் கொள்ளுங்கால். தோற்றம் பெற்று அவை சிறப்புற்றதுபோல யானும் நின்பொருள் பெற்றுச் சிறப்படைய வந்தேன் என்பது கருத்தாகக் கொள்க. முந்திய முடிபே பேராசிரியர்க்குக் கருத்தென்பது. உதாரணங் காட்டுமிடத்து நான்கடியையுமே காட்டியதாலறியப்படுகின்றது. 60. ஓவம் - ஓவியம். வரைப்பு - நகர். 61. பாவை - வடிவுவமை. மகளிற்கொண்ட காதல்பற்றிப் பாவை என்றலின் காதல்பற்றி என்றார். யானை என்பதும் காதல் நிலைக்களனாகப் பிறந்த வினையுவமை. 62. ஒக்கும் பொருள் - பொதுத்தன்மை. 63. பிறர் கொடுக்கப் பெறுவன - சிறப்பு. 64. நன்மைபற்றிய - நலம்பற்றி வருவன. 65. உளவாயினவாகிய வலி பற்றின என்க. 66. தலைப்பெய்தல் - கூடல். நான்குந் தலைப்பெய்யுமெனவே பதினாறாம் என்றபடி. 67. ஒருவன் தன் பகைவனை. அவனுடைய வீரக் குறிப்பை அறிதற்குமுன் பகைவன் புலிபோலும் என்று கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டு இல்லை என்பது கருத்து. 68. தன் என்பது தான் என்றிருப்பது நலம். தான் என்றது உவமையை. தன்வினை உவமமாதலிற் றிரியாதாயினும் என்று கண்ணழித்துப் பொருள் கொள்ளினுமமையும். ஆகலின் - இன். நீக்கம். 69. கிழக்கு வீழ்ந்தன - கீழ் வீழ்ந்தன. என்றது தலையிற் கிளைத்த மெல்லிய மயிர் கீழே தாழ்ந்தன என்றபடி. 70. உள்ஊதுஆவி - கண்ணாடியின் உள்ளே (வாயான்) ஊதிய ஆவி. 71. நுணுகல் - சுருங்கல் (குறைதல்). நுணுகுதற்கு ஆவி இழிவுபற்றி வந்த உவமை. இழிபு - குறைவு. 72. அரவு - பாம்பு. அரவு நுங்குமதி ஒளிமறைதல்போல ஒளிமறைய என்றபடி. 73. வரையும் களிறும் முதற் பொருள்கள். 74. தாமரை - தாமரைப்பூ. இது சினை. 75. சூழ்ச்சி - ஆராய்ச்சி. 76. கூவற்குராலான் - கிணற்றில் வீழ்ந்த குராற்பசு. குராற்பசு - கபிலைப்பசு. 77. ஊமன் - ஆண்பால். 78. அஃறிணைப்பால் என்றது ஒருமை பன்மையை. எயிறு பன்றிக் கோடுகள். இவை பன்மை. 79. சுட்டிக்கூறா வுவமையைத் தொகையுவமை என்பர் தண்டி யாசிரியர். பொதுத்தன்மை தொகுவது தொகையுவமை என்றும் உருபு கூடத்தொகுவது தொகையுவமை என்றும் இருபாலாகக் கூறுவர் ஆசிரியர். 80. இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் இரட்டைக் கிளவியானும் நிரனிறை கண்ணமாய் வரினும் அடையடுத்து வரினும் தொழிற்பட்டு வரினும் ஒன்றும் பலவுமாகி வரினும் உபமேயமு மவ்வாறே வருதல் வேண்டும். அவ்வழியன்றி மிக்குங் குறைந்தும் வருவது குற்ற மென்றவாறாம் என்று பொருள்கொள்வர். அது பொருத்தமாகவே தோன்றுகின்றது. இதனை உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்; அன்றேல் வழுவாம் என்று அபவாதம் விதிக்க வந்ததாகக் கோடலுமாம். சரசுவதி கண்டாபரணம் என்னும் வடநூற் கருத்து மிதனோடொப்புடையது. அபவாதம் - வழு. 81. ஒத்தது - உலகத்தார் ஒப்புக்கொண்டது. 82. அஃது - உவமேயம். (பொருள்) 83. ஆண்டு - பொருள் உவமையாயவிடத்து. செய்தமையின் என்பதில் செய்தமைக்குக் கருத்தா கவி. 84. அஃது - அஃதேல் என்றிருப்பது நலம். 85. ஒப்ப முடிந்த பொருள் - ஏற்றுக்கொள்ள (அங்கீகரிக்க) முடிந்த பொருள். அஃது உவமை. முலையன்ன கோங்கம் என்றவழிக் கோங்கமுகை இயல்பாகச் சிறந்தது. அதனை முலையோடுவமித்த வழி முலைக்கே சிறப்பாகுமன்றி இயல்பாகச் சிறந்த கோங்கிற்குச் சிறப்பாகாது என்றபடி. முகமொக்குந் தாமரை என்பதற்கும் அவ்வாறே கொள்க. முடித்த - முடிந்த என்றிருப்பது நலம். மாறிக் கூறுங்கால் உவமையாக வரும் முலைக்குச் சிறப்பு ஆக்கிக் கொண்டதன்றி இயல்பன்று என்றபடி. 86. பொருள் - உவமேயம். 87. கதுப்பு - முற்பக்க மயிர். 88. மூசாத - மொய்யாத. 89. உசாஅ - ஆராய்ச்சி. நுண்மைபற்றிய உவமை. 90. நாய் இழிந்ததாயினும் நட்புபற்றிக் கூறலின் சிறப்பிற்றீராது என்றபடி. இவையும் அமைந்தன என இயையும். 91. வழக்காதலின் என்றிருப்பது நலம். 92. தமிழ் என்பது தழீஇ என்றும் பாடமுள்ளது. இதுவும் பெருமை பற்றியதாயினும் சிறப்பிற்றீராமையிற் றழுவப்பட்டு வழக்காகின்றது என்பது கருத்து. தமிழ் வழக்காகின்றது என்பதும் பொருந்துமேற் கொள்க. 93. வள்ளம் - சிறு கிண்ணம். மகளிரின் மிகுதி கூறலின் இதுவும் இழுக்கில என்றபடி. 94. பேராறு ஏறுழக்கச் சேறாகாது; தேரோடத் துகள் கெழுமாது; ஆதலால் சிற்றாறென்றபடி. 95. சிறப்புவகை என்றது வினை பயன் மெய் உரு என்பவற்றிற்குத் தனித்தனி உரியவாம் வகையை. 96. வரையறை வகையவென்றது. வினையுவமை இவை பயனுவமை இவை என்றாற்போல வரையறை செய்யப்பட்ட வகையை யுடையவற்றை. கூறப்படுவன வருமாற்றுக்கும் என இயைக்க. 97. உரிமைவகை என்றது வினைக்குரியன. இவை பயனுக்குரியன இவை என உரிமை கூறும் வகையை. என்றது சிறப்புச் சூத்திரத்துட் காட்டும் உதாரணங்களை. 98. ஒன்ற என்னும் உவம உருபிற்குதாரணம். 99. மாற்ற என்பதற் குதாரணம். 100. நாட என்பதற் குதாரணம். 101. நடுங்க என்பதற் குதாரணம். 102. கண்ணின் - இன்னைச் சாரியை என்றுகொண்டு செய்யுள் விகாரத்தால் இரண்டாவது தொகக்சாரியை நின்றதெனலாம். 103. தன்பொருள் - ஒப்புப் பொருள். ஐந்தாம் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருள் என்றபடி. 104. பிறவுமென்றது எனவென் னெச்ச முதலியவற்றை. 105. ‘என்பது’ என்றது வேண்டியதில்லை. 106. மேலுரிமை கூறுகின்றதாமென்பது என்றது 292-ம் சூத்திரம் நோக்கி கூறுகின்றது - கூறப்படுகின்றது கூறுகின்றானாமென்பது என்று மிருந்திருக்க லாம். தொகைப்படல் உருபுகள் தொகைப்பட்டுவரல். தொகை - தொகுதல். * ஈண்டு வாக்கியம் விடப்பட்டிருத்தல்வேண்டும். 107. தொகைப்பாடின்மையின் - தொகைப்படுதலின்மையின். ஒத்தது என்பது முற்றாய் நின்று முகத்திற்குப் பயனிலையாதலின் ; ஆண்டுத் தொகைப் பாடில்லை என்றபடி. மதிமுகம் என வரிற்றான் தொகையாகும். இஃது உவம உருபே பயனிலையாய் விரிந்து நிற்றலின் தொகுக்கமுடியாது என்றபடி. 108. கலி - ஒலி. 109. இமைப்பு - விளக்கம். 110. எருத்து - பிடர். 111. ஒழுகை - சகடம். பகடு - எருமையாண். 112. திவ்வு - நரம்புக்கட்டு. 113. ஒழிந்தமூன்று - வினையொழிந்த பயன் மெய் உரு என்ற மூன்று. 114. எழிலி - மேகம். 115. கவிகை - இடக்கவிந்த கை. 116. எவ்வி - ஒரு வள்ளல். 117. பொன்மரம் - கற்பகம். 118. இருநிதி - சங்கநிதி பதுமநிதி உடையவன். என்றது குபேரனை - இஃது ஆகுபெயர். 119. சுரை - முலைமடி. 120. சிலைத்தல் - ஒலித்தல். 121. செத்து - கருதி. 122. நிகர்மலர் - இணைமலர் (தம்முளொத்தமலர்). நிகர் - ஒளியுமாம். 123. வட்டு - உருண்டை. 124. வான்கோடு - வெண்கோடு 125. இறந்தோர் - கடந்தோர். 126. சுடர்நெடுங்கொடி - விளக்கின் நெடிய வரிசை. 127. மணி - நீலமணி. 128. காய்த்தமணி என்க. காய்த்த - காயச்செய்த. வெயில் வெப்பத்துக்கும் வெப்பமளித்த என்றபடி. இது உவமையாய் நின்றது. 129. கார் - கார்காலம். 130. தலைஇய - பெய்த. 131. செயலை - அசோகு. 132. எரி - நெருப்பு. 133. திதலை - தேமல். 134. கலித்தல் - தழைத்தல் 135. ஊன் செத்து - தசையென்று கருதி. 136. வரலாறு - மரபு. 137. ஆங்கு என்பது பாய்ந்தாங்கு எனச் செய்யுள் வழக்கில் வினை யோடியைந்தன்றி வராமையிற் பொருந்தாதென்றார். 138. சிம்புளித்தல் - சுருங்கல். 139. வெளிப்பாடு - வெளிப்படுதல் (தோற்றம்) 140. உறழ்தல் - மாறுபடல். 141. இது முதலாகக் கடுத்த என்னும் உவம உருபு வினை பயன் உரு என்னும் மூன்றற்கும் பொருந்தாமைக்குக் காரணங் கூறுகின்றார். புலியொடு மறவனை என்னும் வாக்கியத்தில் வினை பற்றி என்பது விடப்பட்டிருத் தல் வேண்டும். 142. பொன்கடுக்கு மேனி என்பதில் பொன்னும் மேனியுமாகிய பொருள் களின் வேற்றுமை அறிந்தவிடத்து அப்பொருள்களின் குணத்தில் ஐயஞ் செல்லாது. ஆகலின் ஐயம் பொருள்களின் கண்ணேயே (வடிவின் கண்ணேயே) தோன்றும் என்றபடி. 143. ஒன்று - அபேதம். 144. மரீஇவந்த - தொன்றுதொட்டு வந்த. உவமவியல் 21-ம் சூத்திரம் நோக்குக. * இதற்கு வேறு பொருள் கூறுவர். இளம்பூரணர். 145. சொல்லோத்து - சொல்லதிகாரம். 146. பொருளின் - பொருள்மாத்திரைய. 147. பொருள் - உவமப்பொருள். 148. வேறொரு பொருளை யுணர்த்தாமையினென்றது - உவமையும் உவமேயமும் வேறல்ல ஒன்றேயென்னும் ஒரேபொருளை உணர்த்தலின் என்றபடி. புலியன்ன மறவன் என்றவழி அன்ன வென்பது மறவன் புலியே வேறன்று என்பதை யுணர்த்திநிற்கு மென்றபடி. ஏனைய மூன்றுருபுமன்ன. இதுவே கருத்தாதல் விறத்தன் முதலியவற்றிற்குப் பின்னர்க் கூறும் பொருளான் உணர்க. 149. விறத்தன் முதலிய நான்கும் ஒரு பொருள் என்பதை விறத்தல் இனமாகச் செறிதல் என்று தொடங்கும் வாக்கியங்களானுணர்க. 150. ஒரு பொருளாக - ஓரினமாக என்றிருப்பது நலம். 151. ஆதலின் என்றிருப்பது நலம். 152. இவ்வாக்கியம் வேண்டியதில்லை. 153. இசை - இடை என்றிருத்தல்வேண்டும். 154. தெரிநிலைவினை உவமஉருபாயினும் என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தம். தெரிநிலைவினை உவம உருபாயினும் ஒப்பல்வழியாற் பொருள் செய்யினும் இடைச்சொல்லாகா என்றபடி. இடைச்சொல்லாகா என்பது பின்வரல்வேண்டும். இவ்வாக்கியங் களில் பல ஏடெழுதுவோரால் மாறியும் திருத்தியும் எழுதப்பட்டன. 155. அதனை - உவமையை. 156. போல்வான் - போலும்படி. இஃது எள்ளுதல்போல் வனவாய் இழிவினையே காட்டலின் என்று மிருந்திருக்கலாம். 157. இளம்பூரணரும் பல்குறிப்பின் என்றதனால் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மையவாய் வருவனவும். வினையெச்ச நீர்மையவாய் வருவனவும். முற்று நீர்மையவாய் வருவனவும். இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் உள எனக் கொள்க. புலிபோன்ற சாத்தன், புலிபோலுஞ் சாத்தன் என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான். புலிபோலப் பாய்ந்தான் என்பன வினையெச்சம். புலி போலும் புலிபோன்றனன் முற்று. அன்ன இன்ன இடைச்சொல் என இச்சூத்திர உரையுட் கூறுதல் காண்க. 158. இச்சூத்திரத்திற்கு எட்டாகும் பகுதியுமுள என்று பொருள்கொண்டு சிறப்புச்சூத்திர நான்கனுள்ளுங் கூறிய 32ம் எட்டாகும் என்று பொருள் கூறின் நலம். பேராசிரியர் கருத்தெல்லாம் இவற்று ளடங்கும். 159. சிரித்தது - தலைவி. 160. கலம் - தோணி. 161. நாய்கன் - மீகாமன். 162. அப்பெயர்த்தாயிற்று என்றது. அவல உவமை என்னும் அப்பெயரை யுடைத்தாயிற்று என்றபடி. 163. ஒன்றை நெருப்பு வேவச்செய்யுமன்றி நீர் வேவச்செய்யாது. செய்யு மாயின் அது அற்புதமாகும். ஆதலின் நீருட் குவளை வெந்தற்று என்றது அற்புதவுவமையாயிற்று என்றபடி. மருட்கையெனினும் அற்புதம் எனினும் அதிசயம் எனினு மொக்கும். முன்னையபோல இதுவும் ‘அப்பெயர்த்தாயிற்று’ என்று மிருந்திருக்கலாம். 164. பாம்பைக் காணுவார்க்கு அச்சமுண்டாதலின் அச்சமென்றார். 165. மறஞ் சாய்த்தமை வீரத்தாலாதலின் வீரம் என்றார். பெருமிதம் - வீரம். 166. வெகுளி - கோபம். 167. செயப்படு பொருள் - ‘பெருமையுஞ் சிறுமையும்பற்றி வருதல்’ எனப் பின் வரலின் முன் வாளா பெற்றாமாகலின் என்றார். 168. வாளாது என்பது ஈண்டு வேண்டியதில்லை. 169. ஈரம் - அன்பு. 170. தனக்கு என்றது தலைவியை. 171. ஒத்து - ஒத்து என்றிருத்தல் வேண்டும். ஒத்து - இயல். 172. ஒவ்வாதனவும் என்றிருப்பது நலம். 173. அப்பகுதி - உவமிக்கப்படும் பொருட்பகுதி. 174. உற்றதுணருந் தெளிமருங்கெனவே என்றிருத்தல்வேண்டும். இவ் வாக்கியம் இல்லாமலுமிருக்கலாம். 175. வாளாது - அடையின்றி 176. அது - வாளா கூறியது. 177. களவு உடம்படுநரின் என்றிருப்பது நலம். 178. போழ்தூண்டு ஊசி - வாரைச் செலுத்தும் ஊசி. போழ் - வார். தூண்டல் - செலுத்தல். போழ் தூண்டூசிக்கு அடைகள் சாறுதலைக் கோடலும் பெண்ணீனலும். இரண்டற்கும் போதற்பொருட்டுக் கட்டிலைப் பின்னி முடித்தற்காக இழிசனன் கையூசி விரைதல் போல இவனும் உண்டாட்டுக்கும் கொடைக்கும் உரனொடு நோக்கி மறுத்தற்கும் போதற்காக விரைந்து போர் செய்கின்றான் என்றபடி. உரனொடு நோக்கி மறுத்தல் என்பது எக்கருத்தில் வந்தது என்பது நன்கு புலப்படவில்லை. ஆயினும் அறிவொடு நோக்கி மறுத்தல் - வாதுசெய்தல் என்று கூறலாம். உரனோக்கி மறித்தல் எனவும் பாடமுள்ளது. உள்ளக் கருத்தினால் விரைகின்றது போர் என்க. 179. உழுத பகடு தான் விளைத்த நெல்லையுண்ணாது வைக்கோலை உண்ணுமாறுபோல நின் முயற்சியாற் செய்த பொருளை நீயுண்ணாது கள்ளை யுண்ணா நின்றாய்; அது உனக்கு அமிழ்தாகுக என்றபடி. 180. மருந்து கொண்மரம் என்றதனான் பலவடு விரவப்பெற்றமையும். மரம் அழியாமையும் பெறப்படும். 181. அச்சாணி சிறிதாயினும் பெரும் பாரத்தையுடைய பண்டியைக் கொண்டுய்க்குமாறுபோலப் பெரிய காரியங்களைக் கொண்டு செலுத்துபவர் என்றபடி. எனவே அதன் செயல்வன்மை கூறிற்று. 182. வேனிற்புனல் பலருமாடற் கிடங்கொடுத்தல்போலப் பல மகளிரும் புணர்ந்து விளையாடற்கிடமானவன் என்றபடி. 183. ஏற்றதுணரப்படாதன - ‘உற்றதுணரப்படாதன’ என்றிருத்தல் வேண்டும்; சூத்திரப்பகுதியாதலின். 184. அஃது - அடிப்பட வந்த வழக்கு. அதனையும் - உவமப் பொருளையும். 185. போல - போல்வது என்றிருப்பது நலம். மதியுவமையாயினும் புறமதியை உவமை கூறல் அடிப்பட வந்த வழக்கன்றென்றபடி. 186. ‘தன்ன - பைம்பூண்’ என்றே பேராசிரியர் பாடங்கொண்டார் என்பது ‘தன் பைம்பூண்’ என்ற அவர் உரையால் விளங்குகின்றது. ‘சண்பின் புன்காய்ச் சுண்ணம்’ என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். பெரும்பாண் 220-ம் அடி (டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு நோக்குக.) 187. பொருள் - உவமேயம். 188. ஒற்றைக் கிளவி - உவமேயம். புலிக்குருளை உவமேயம். புலிக்குருளைபோல வீயுகு துறுகல் தோன்றுமென்றதனால் வீயுகுதுறுகல் புலிக்குருளைக்கு உவமையாயிற்ற என்றபடி. ‘அடையொடு பொருட்கடை புணர்க்கு மஃதிரட்டை’ என்னுஞ் சூத் திரத்து (மாறனலங்காரம். 103) உரையுள்ளும் ஒன்றைக் கிளவி இரட்டை வழித்தாதற்கு இச்செய்யுளையும் உதாரணமாக எடுத் துக்காட்டுதல் காண்க. 189. இரும்புலிக் குருளை யென்றதனை என்பது இரும்புலிக் குருளை யொன் றனையே என்றிருப்பது நலம். என்று அதனையே எனவும் பிரித்தும் பொருள் கொள்ளலாம். 190. மேல் என்றது பொருளியல் 1-ம் சூத்திரத்தை. 191. பிறவி - உள்ளுறைப் பொருள். 192. சார்த்தி - உவமையைச் சார்த்தி. 193. கொள்ள - உள்ளுறைப் பொருளைக் கொள்ளத்தக்கதாக. 194. ஒப்பினாகிய பெயர் என்றது - உவமம்போன்று பொருள் கொள்ளப்படுதலின் இதனையும் உவமையென்றார் என்றபடி. 195. முன்னர் என்றது வருஞ் சூத்திரத்தை. 196. சாதி - பிறப்பு என்பது பேராசிரியர் கொண்ட கருத்து. என்னை? பின் பிறப்பென வருதலின் 307-ம் சூத்திர உரை நோக்குக. 197. கலித்த - முளைத்த. 198. முயங்கல் - தழுவற்க. 199.கரும்புபோல்வர் - பரத்தையர். பாத்திபோன்றது - கோயில். தாமரை போன்றவள் - தலைவி. கரும்புபோல்வர் - விருந்தினர் என உள்ளுறைப் பொருள் கொள்ளப்பட்டது. 200. பிறிதொரு பொருள் என்பதனைக், கொள்ள வைத்தலின் என்பதனோடு இயைக்க. எதிர்ந்து - எதிராக வைத்து. 201. பிறந்தன - உவம நிலங்களுட் பிறந்த உள்ளுறைகள். உள்ளுறை யாகிய உவமேயப் பொருள்கள் தோன்றற்கு இடம் உவமைகளாத லின் உவமநிலம் என்றார். 202. நோக்கல் - உள்ளுறையோடு உவமையைச் சார்த்தி நோக்கல். இதனை ‘பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி’ என்பதன் (298) உரை நோக்கி அறிக. 203. கருத்தினாற் கொள்ள வைத்தலின் என்பதற்குச் செயப்படுபொருள் - பிறிதொருபொருள் என்பது. 204. இதனை - இவ்வமையை. 205. என்னை - எவ்வாறு. 206. பயமில கூறலாம் என்றது - பயன்படாதவற்றைச் சொல்வதாக முடியுமென்றபடி. பயமிலவென்பது என்பதில் ‘என்பது’ என்றது வேண்டியதில்லை. பிரதி எழுதுவோராற் சேர்க்கப்பட்டதுபோலும். 207. அவற்றிற்கும் என்றது வேழத்தையும் கரும்பையும். இப்பாடத்திற்கு உம்மை வேண்டியதில்லை. அவற்கும் என்றும் பாடமுள்ளது. அவற்கு என்பது பின்வருந் தலைமகனைக் குறிக்கும். அப்பாடமே சிறந்தது. 208. எல்லாரும் என்றது உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாகிய எல்லா மகளிரும் என்றபடி. 209. வயாஅம் - கருப்பத்தா லுண்டான வேட்கை தீரும் என்றபடி. 210. வயவுநோய் - கருப்பத்தாலுண்டான வேட்கை நோய். 211. என்றிசினானே எனவும் பாடம். 212. பண்ணை - விளையாட்டு 213. இது என்றது தண்மையை. தண்மை நிறமல்லாத பண்பு. 214. கூறினான் என்பது கூறினாமென்றிருத்தல் வேண்டும். உவமவியல் 1-ம் சூத்திர விரிவுரை நோக்குக. இலேசினான் ஆசிரியன். கூறினா னென்றல் சிறப்பின்று. கூறினானெனின், ‘என்புழி’ என்பது என்பதனால் என்றிருத்தல் வேண்டும். 215. பொய்கைப்பள்ளி - உயர்குடிக்கும். நீர்நாய் - தலைவற்கும். வாளை - பரத்தையர்க்கும் உவமை என்க. பள்ளி - இடம் (படுக்கை) பொய்கைப்பள்ளி என்றதனால் தலைவியுயர்ச்சியுங் கூறியதாயிற்று. * சிறப்பின்று என்பது முற்பாடம். சிறப்பாம் எனப் பாடம் உள்ளது. அதுவே பொருத்தம். 216. பிறப்பொடு வரூஉந் திறத்த வென்றது தலைமகனால் என்பது. பிறப்பினும் வரூஉந் திறத்தியலென்றதனா லென்றிருத்தல் வேண்டும். என்றதனால் என்பதனோடு சில எழுத்துகள் சேர்த்து ‘என்றது தலைமகனால்’ என்றெழுதப்பட்டது. 217. இன்னும் என்பது தின்னும் என்பதைச் சிதைத்து மீட்டும் எழுதப் பட்டதுபோலும். அது வேண்டியதில்லை. திறம் - வகை. இது பின் கூறப்படுகின்றது. 218. பகரக் கோட்டில் அடைத்த வாக்கியம் முன்வந்ததையே திருப்பி யெழுதப்பட்டது. அது நீக்கப்படல் வேண்டும். 219. “இன்ன திறத்தன்” - இன்னுந் ‘திறத்தியல்’ என்றிருத்தல்வேண்டும். 220. மென - மேனை என்று பாடமுள்ளது. இது உவமத்தோடு சேர்த்து ஏனையுவமம் என்று பிரிக்கப்படும். அதுவே பொருத்தம். 221. வெள்ளையாம்பல் என்பது மேற்கூறிய செய்யுளில் வரும் வெண்பூ என்பதன் பொருள். அடைகரையையுடைய பொய்கை என்க. வெள்ளை யாம்பற்பூ என்றதனால் தலைவி பசப்புடையள் என்னும் உள்ளுறை பெறப்பட்டது. 222. சிதைதல் - அழிதல். சிதைந்ததின்று - குற்றமின்று. 223. படப்பை - தோட்டம். 224. ‘அதிகரித்து நின்ற’ என்றிருப்பது நலம். 225. பெயர் - எழுவாய். 226. உடைமை - அறிவுடைமை என்றிருப்பது நலம். உரன் என்பதற்கு அறிவு என்பது பொருளாதலின். இளம்பூரணரும் அறிவொடு என்று கூறல் காண்க. 227. தாந்தாம் அறிந்த கிளவியானும் என்பது தானறிந்த கிளவியானும் என்றிருத்தல் வேண்டும். தான் அறிந்தகிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத கிளவியானும் என்பனவற்றை மேலே ‘மேற்கூறிய வகையானே’ என்பதன்முன் வைத்து. அவற்றோடு என என்பதோர் சொற்சேர்த்து. “தானறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத கிளவியானும்” என மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது; எந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமஞ் சொல்லப்பெறும் எனத் திருத்தி எழுதிக்கொள்க. எந்நிலம் அந்நிலம் என மயங்கி எழுதப்பட்டது. ‘இடம் வரை வின்றே’ என்பதன் உண்மைக் கருத்தை நோக்குவோர்க்கு இது புலனாம். இங்ஙனம் மாறியும் மயங்கியும் எழுதப்பட்டன பல உள. அவற்றை ஆங்காங்குக் காட்டுதும். இதுவே பொருத்தமாதல் 30-ம் சூத்திர உரை நோக்கித் தெளிக. சூத்திர முறையை நோக்கும்போது இச்சூத்திரத்தில் யாதோ பிழை இருப்பதாகத் தோன்றுகிறது. 228. ஒழிந்தோர்க்காயின் என்றிருத்தல் நலம். 229. மாஅத்து - மாமரத்தினது. வாளை தனக்குரிய உணவன்றி உகுதீம் பழத்தை யுங் கதுவுமூர் என்றமையானே பலவகையின்பமென்றார். பல வகையின்பமும் என்று பொருள் கொண்டமையான் ‘மரத்து’ என்று பாடங் கொண்டாரோ என்பதும் ஆராயத்தக்கது. மரத்து என்பது சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்புப் பாடம். 230. சா - சாக. 231. கள்வன் - ஞெண்டு. 232. நண்டும் முதலையும் அன்பின்றித் தன் கிளைக்கே கொடுமை செய்தல் போலத் தலைமகனும் தன் கிளைக்கு அன்பின்றிக் கொடுமை செய்பவன் என்பதாம். 233. வைப்பு - வைப்புநிதி. 234. கராம் - முதலை. 235. இருவர் - தலைவனும் தலைவியும். ஒருதலை இன்னா என்றாள்; தன்றோளைத் துறந்தமைபற்றி. ஒருதலை இனிது என்றாள்; அவன் நயந்த தோளின்மையின் எந்தோள் வாடுமென்று விரைந்து வரைவான் என்பதுபற்றி முள்ளி முள்ளாற் றுன்பஞ் செய்தலும் பூவாலின்பஞ் செய்தலுமுடையதுபோல இவனும் ஒருபக்கத்தாற் (பிரிதலாற்) றுன்பமும் ஒருபக்கத்தால் வரைந்து (புணர்வானாதலின்) இன்பமுஞ் செய்த லுடையனென்பதாம். 236. அவள் என்றிருப்பது சிறப்பு. 237. குறிஞ்சிப்பாட்டு என்றது. குறிஞ்சி ஒழுக்கத்திற்குரிய பாட்டு என்பது கருத்து. 238. இதன் - இப்பாடத்தின். 239. வந்தது புணர்ச்சிப்பொருட்டாகலின் பிரிவன்றாமென்றபடி. 240. முன்னம் - குறிப்பு. 241. இவை - இவ்வுள்ளுறைதல். 242. வன்புலம் மென்புலம் என்றதனானே. வென்றோர் வலியர் என்பதும் தோற்றோர் மெலியர் என்பதும். மெலியார் வலியார்க்குத் திறை கொடுப்பர் என்பதும் உள்ளுறையாகத் தோன்றிற்றென்று கொண்டார்போலும். 243. கருங்களமர் - பறையர். சேனாவரையரும் வெண்களமர் கருங்களமர் என்பன பண்பு குறியாது சாதிகுறித்து வந்ததென்பர். (சொல். கிளவி. 17ம் சூத்திர உரை நோக்கு.) 244. அவை என்றது உதாரணங்களை. 245. ஒப்புமை மாறுபடக் கூறலும் என்ற பாடமே பொருத்தம். என்னை? “வையங் காவலர்” என்ற உதாரணம் அதற்கே காட்டப்படலின். 246. பெயர்போல்வனவற்றான் மறுத்துக்கூறற் குதாரணம் பின் காட்டும் “கண்ணனவ னிவன் மாறன்” என்பது. இது வேற்றுமையணியுள் அடங்கும். 247. இது தேற்றவுவமையுளடங்கும். 248. இது பிறிது பொருளுவமை. 249. இது வேற்றுமையணி. 250. மறு பொருளுவமையுளடங்கும். 251. பல பொருளுவமையுளடங்கும். 252. கருத்துவமையுளடங்கும். 253. மறுபொருள் உவமையுளடங்கும். 254. தற்குறிப்பேற்றம். 255. எடுத்துக்காட்டுவமை. 256. வருதலின் என்பது வருதல். என்றிருத்தல்வேண்டும். 257. இதனை - இவ்வேறுபட வந்த உவமத்தினை. 258. ஈண்டு - உள்ளுறையுவமை அதிகாரப்பட்ட இடத்து. 259. ‘என்னும் பாட்டினுள்’ என்றுதொடங்கு மிவ்வாக்கியம் பின் பகரக் கோட்டிலடைத்த வாக்கியம்போலிருப்பிற் பொருத்தமாகும். என்னை? ‘வெஞ்சுடர்வழி’ என்பது பாட்டிலுள்ள அடிகளுளொன் றாகக் காணப்படாமையானும். ஏனைய வாக்கியம் முன்வந்தமை யானும் ‘என்னை? வெஞ்சுடர்வழி’ எனப் பின்வரும் வாக்கியமே இங்குஞ் சேர்த்துப் பிழையாக எழுதப்பட்டிருத்தல் வேண்டுமென ஊகிக்கப்படுத லானுமென்பது. இப்பாட்டினுள் உவமம் - அரசன். உவமேயம் - சந்திரன் எனக் கொள்க. 260. பழிப்பான் - ‘உவமிப்பான்’ என்றிருத்தல் வேண்டும். அங்ஙனமே டாக்டர் உ.வே. சாமிநாதையரும் புறநானூற்றில் இப்பாட்டி னடிக்குறிப்பிற் கூறியுள்ளார். ஆண்டுக் காண்க. 261. தன்னகப்படுத்தல் - தன்னுட்படுத்தல். 262. படுத்து - பொருந்தச்செய்து பட்டு என்றிருப்பது நலம். ஒழிந்தகோள் - தன்னையொழிந்த கிரகங்கள். 263. கட்டுரை - வார்த்தை; பேச்சு. 264. கதி - செலவு. 265. பொழுது செய்யாமை - காலங்குறித்துத் தோன்றாமை. எனவே தான் விரும்பிய காலத்துத் தோன்றுவான் என்றபடி. 266-267. இப்பகரக் கோட்டினுள் அடைத்தலையும் வேண்டியதில்லை. 268. மலைமீக் கூறும் - மலையிலுள்ளாராலும் புகழப்படுவான் என்பது. இவன் மலைக்கண் மறையான் என்றபடி. 269. ‘கொளுவுவதாகக் காட்டுவனவற்றிற்கும்’ என்பது. ‘கொளுவுக இனிக் காட்டுவனவற்றிற்கும்’ என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தமாதல் காண்க. 270. பெயரும் வடிவுளடக்கப்படும் என்றபடி. 271. கூறி அவற்றை எனப் பிரிக்க. 272. கோதையாகிய இவனை இந்திரனென்னின் அவற்குக் கண் ஆயிரம்; இவற்கு இரண்டே. ஆதலால் அவனல்லன் எனப்பொருள் விரித்து ரைத்துக் கொள்க. ஏறூர்ந்த அந்தரத்தான். சிவன். கோழியான் - கோழிக்கொடியோன் - முருகன். 273. ஆழி - சக்கரம். மாயன் - கரியன். சேயன் - செந்நிறமுடையன். கோழி - உறையூர். 274. ஏற்று - எதிர்த்து. எறிந்து - கொன்று. ஏற்று - யாசித்து. 275. ஊர்க்குறுமாக்கள் என்னுஞ் செய்யுளில் அமைந்துள்ள வேறுபடவந்த உவமத் தோற்றம் என்பதன் விளக்கமாவது: யானை இனிமை செய்தற்கு ஊர்க்குறுமாக்களைச் சொல்லி அது மதம் பட்ட வழி இன்னா செய்தற்கு அவர்போல்வாரை இன்னாரென விதந்து சொல்லாமையின் வேறுபடவந்த உவமமாயிற்று என்பது. ஊர்க்குறுமாக்களுக்கு வெண்கோடு கழுவுமிடத்து களிறு இனியது. அவர்போல்வாருக்கு மதம் பட்டவழி இன்னாது என்பது செய்யுட்கருத்து. 276. போல்வாரை என்ற பாடமே பொருத்தம். போல் அவரை என்ற ளு. கனக சபாபதிப்பிள்ளை பதிப்பிற் பாடம் பொருத்தமில்லை. 277. கடாத்திற்கு - கடாமாகிய உவமைக்கு. 278. முகிழ் - குமிழி - முகுளம் என்பதும் குமிழிக்குப் பெயர். 279. பொருள் - உவமேயம். பின்னர் - பின். விதந்து - தெரித்து என்றது பொருத்தம் எனத் தெரித்துக் கூறினமையை. பெருமை, குமிழியாகிய உவமைக்கில்லாத படியாற்றான் பின் தெரித்துக் கூறினாரென்றபடி. 280. தோடு - இதழ். 281. பல - பலவாய். 282. உவமவினையன்றே என்பதற்கு வினையுவமமன்றே என்பது கருத்து. பனைநிழல் முடிந்தவழி நெடுந்தோட்டு நிழல் தோன்றுதல் சிறுவழி முடிந்தவழிச் சென்று புகும் ஊர் தோன்றுதற்குவமை யாதலின் வினையுவமம் எனப்பட்டது. 283. குடைக்கு உவமானம் - மதி. அதனை ஈண்டு உவமேயம் ஆக்கி என்றது குடைக்குவமானமாகிய மதியைப் பின் குடையாகிய உவமேயமாக்கி என்றபடி. தன்னையுங் குடையென்று தன்மேலும் பாயுமோவென்று கருதி அவ்வச்சத்தால் மதி தேயுமென்று மதியைக் குடையாகக் கூறினமையே உவமேயமாக்கியதாம். 284. நின்போல்வாரை யொப்பை நீயெனவே, நின்போல்வா ரில்லையென்று ஒவ்வாமை கூறியதாயிற்று. 285. இதுவும் என்றது இச்சூத்திரத்தை. 286. மரீஇய பண்பு - மரபாகவந்த தன்மை. 287. அவ்வாறன்றி உவமமும் என்பது அவ்வாறன்றியும் உவமம் என்றிருப்பது நலம். 288. பட்டாங்கு - உண்மை. உண்மை. இயல்பு தன்மை என்பன ஒருபொருளன. இளம்பூரணர் தன்மையென்பதற்கு உவமையது தன்மை என்பர். தன்மை - குணம். 289. பயன் - பிரயோசனம். 290. புழுகு - மொட்டு. எஃகின் எனவும் பாடம். 291. தூணி - அம்பறாத் துணி. 292. தூணி வீங்கப்பெய்த அப்புநுனை. இருப்பை அரும்புக்குவமை. 293. செப்படர் - செப்புத் தகடு. 294. இழுது - வெண்ணெய். 295. துய்வாய் - என்றது பூவை. உவம ஆகுபெயர். 296. உழுது காண்டல் - தாள்நீக்கிக் காண்டல். 297. இயவு - வழி. 298. கருப்பை - காரெலி 299. எய் - முட்பன்றி. 300. ஈன்பிணவு - ஈன்றபெண். ஈண்பிணா எனவும் பாடம். 301. கணை - திரட்சி. 302. கரம்பை - பாழ்நிலம் 303. பார்வை - பார்வைமிருகம். 304. பொருள் - உவமேயம். 305. இது தன்மையணியுளடங்கும். 306. கூறானாகலின் என்பது என்றிருப்பது நலம். 307. உம்மை - உவமத்தன்மையும் என்றதிலுள்ள உம்மை. 308. உவமையுற என்றும் பாடம்; அது சிறப்பின்று. 309. செத்து - (ஒன்றாக) நினைத்து. 310. இதனை இதரவிதரமென்பர் வடநூலார். 311. மதியத்தன்ன வாண்முகம் என்பது துணிக்கப்பட்டு வேறு முடிபுபெறின் உவமைக்குவமையாகுங் குற்ற மாகாது; பெறாது வருதலின் ஒன்று ஒன்றனோடு பொருந்தாது குற்றமாம் என்றபடி. 312. வண்ணம் - நிறம். 313. மற்றும் - மற்று என இருத்தல் வேண்டும். அதனோடு - உவமைக் குவமையாய் நின்றதனோடு. இவ்வாக்கியத்தில் பிழையிருத்தல் வேண்டும். 314. குறங்கின் என்பது குறங்கெனவரு மதற்கு உவமையாகாது தான் துணிக்கப்பட்டுநின்று பின்வரும் ஓதி முதலியவற்றோடும் எண்ணப்பட்டு உடைய என்னும் (தொக்குநின்ற பொருளாகிய) பெயரெச்சத்தோடு கூடி விறலியர் என்னும் பெயர்கோடலின் உவமைக் குவமையாகாது என்றபடி. 315. இளம்பூரணர் இச் சூத்திரத்தையும் இதற்கு முற் சூத்திரத்தையும் ஒன்றாக்கி. இச் சூத்திரத்து ‘வரைநிலைவைத்த’ என்பதை ‘வரைநிலை வந்த’ எனப் பாடங் கொண்டு இம் மூன்றுமல்லாதவிடத்து உவமை பல அடுக்கிவருதல் கொள்ளப்படாது என்பர். 316. வரைதல் - நீக்கல். வந்த என்று பொருள் கூறலின் ‘வைத்த’ என்பது ‘வந்த’ என்றிருத்தல் வேண்டும்போலும். 317. மூவருள் ஒருவரும் அடங்குதல்போல என்பது கருத்து. 318. எதிர் நிரனிறை. 319. பிறிதுபிறிதாகல் - உவமை வேறும் பொருள் வேறுமாகல். 320. இவ்வோத்தினிற் கூறுகின்ற சில என்பது உவமைகளையும் வேறுபட வந்த உவமங்களையும் ஒரீஇக் கூறுவனவற்றையும் தடுமாறுவமங் களையும் நிரனிறை உவமைகளையும் குறித்து நின்றது. சொல்லதிகாரத் தில் கூறுவன சில என்றது குறிப்புப் பொருள். ஏது, பண்புத்தொகை (உருவகம்). உவமத் தொகை. பொருள்கோள் முதலியவற்றை. குறிப்புப் பொருள் அணியில் ஒட்டணியாகின்றது. செய்யுளியலுட் கூறுவன சில என்றது. தொடைகளுட்சில, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு முதலியவற்றை. 321. இக்காலத்தாசிரியர் என்றது தமிழில் அணிநூல்கள் செய்த தண்டி முதலிய ஆசிரியர்களைக் குறிக்கும். அணிநூல் என ஒரு நூல் இருந்ததாகவுஞ் சிலர் கருதுவர். 322. தாம் என்றது அணிநூல் செய்தோரை. 323. என்பது என்னுஞ் சொல் ஈண்டு வேண்டியதில்லை. 324. விலக்கலரிது - விலக்கக்கூடாது. அன்றாமாயினும் என்பதற்கு விலக்குத லரிதன்றாமாயினும் என்பது பொருள். விலக்கலாமாயினும் என்பது கருத்து. 325. ஓரில் - ஒரு வீட்டின்கண் கோய் - கள்முகக்கும் பாத்திரம். அது இழிவுடைய தாகாததுபோல இதுவு மிழிவுடைத்தாகாதென்றபடி. 326. அதுவும் - அவ்வுவமையும். 327. இது - கோய் வருஞ்செய்யுள். கோய் என்னும் உவமை உயர்ந்த பொன்மாலைப் போலப் பொலிவு செய்யாதாயினும் அதிற்சிறிது குறைந்த பூமாலைபோலப் பொலிவுசெய்யுமென்றபடி. 328. மேலது - பன்றியனையர் பகைவேந்தர் என்னுஞ் செய்யுள். 329. கூறலன்மையின் - கூறல் கூடாமையின். 330 .அவற்றை என்பது உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத் துள்ளும் செய்யுளியலுள்ளுங் கூறிய சிலவற்றையுஞ் சுட்டிநின்றது. 331. பொருட்படை - பொருட்டிரள். 332. அவை - அப்பொருட்படை; 333. போக்கு - பிரிந்து போதல். உவக்குங் குறிப்பல்லாத குறிப்பு - வெறுப்பு. 334. கேளாள் எனவும் பாடம். 335. அதுவும் என்பது இன்னோரன்னவும் என்று பாடமுள்ளது. அது மிகப் பொருத்தமேயாம். என்னை? முன் சொன்னவற்றையெல்லாம் தொகுத்து நிற்றலின். 336. ‘வேறு காரண முணரப்பெறாது பிறழ்ந்து இடையறவு பட்டகாலை’ என்பது ‘பொருளதிகாரமுறை பெறாது பிறழ்ந்து இடையறவுபட்ட காலை’ எனறு பாடமுள்ளது. அதுவே பொருத்தமாம். என்னை? பின்னரும். ‘பகுத்தோதிய இலக்கணத்திற் பிறழ்ந்தவையெல்லாம் குற்ற’மென வருதலின். இங்ஙனமே செய்யுளில் 1-ம் சூத்திர விரிவுரையிலுங் கூறல் காண்க. “அவ்வாற்றான்.... இடையறவுபட்ட காலை இடர்ப்பட்டுச் செய்தமையான் குற்றமென்று கொள்ளப்படா” என்று இவர் கூறியது. தாங்கூறியவற்றையும் அணியெனக் கொள்ளலாம் என்பதற்கு நியாயங் காட்டியதன்றி, அஃதுண்மையென்பது இவர் கருத்தன்று. அணி கொள்ளும் பிறரை மறுத்துரைத்தற்கு இங்ஙனம் பழித்துரைத்தார் என்க. 337. யாப்பருங்கல விருத்தியுடையாரும். ஆளவந்தபிள்ளையாசிரி யரும் என்பர். ‘தீயி னன்ன வொண்செங் காந்தள்’ என்னும் மலைபடுகடாத்து 145-ம் அடியுரையில் நச்சினார்க்கினியரும் இதனை மறுத்தல் காண்க. 338. செய்யுங் குற்றம் - செய்யுட் குற்றமென்று பாடமுள்ளது. அதுவே பொருத்த மாதல் செய்யுளியல் 1-ம் சூத்திர விரிவுரை நோக்கியறிக. 339. வனப்பு - அம்மை முதலியனவாகச் செய்யுளியல் 1-ம் சூத்திரத்து ளோதியன. உவமவியல் உதாரணச் செய்யுளுரை 276-ம் சூத்திரம் 1. மேகம்போன்ற கொடைக்கையையுடைய தேரைக் கொண்ட வேளாயைக் காணச் செல்வாயாக. (புறம். 133). 2. களிறாகிய இரையைத் தேரும்படி பார்வைக்கு ஒதுங்குத லோடு மறைந்து செல்லுகின்ற தன்மையினையுடைய வலிய புலியைப் போல. (அகம். 22) 3. வடிவுவிளங்குகின்ற ஓவியத்தொழிலாற் பொலிந்த பாவை நடையைப் பயின்றாற் போன்ற நடையையுடையள். ஓவுவினை - ஓவினை என நின்றது. (அக - 141) ஓவு - சித்திரம். “ஓவு றழ் நெடுஞ்சுவர்” என்பது பதிற்றுப்பத்து (68 - 17) ஓ என்பதுஞ் சித்திரத்துக்குப் பெயராக வரும்போலும். (அகம். 142) 4. அணைத்தோள் - அணைபோன்ற தோள். (கலி. 86) 5. மழைக்காலத்தின் அலருகின்ற பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கைக்கொண்டுகாட்டி இப்பூவை யொத்தாள் நல்ல நுதலையுடையாள். என்றது இப்பூவினிறத்தை (பசப்பை) அடைந்தாள் என்றபடி. (குறுந். 98) 6. பறைக்குர லெழிலி பறைபோன்ற ஒலியையுடைய மேகம். (அகம். 23) 7. தன் கடைக்கண்ணாற்கொல்லுவான் போலப் பார்த்து - கொல்லுதல்போல எனினுமாம். (கலி. 51) 8. ஆகாயம் உரிவதுபோல். (அகம். 24) 9. மணிகள் பதிக்கப்பெற்ற பாவை நடை பயின்றாற் போல. (நற். 184) 10. வானந் தோய்ந்தால் ஒத்த விசாலமான குடிப் பிறப்பும். (பாயிரம்) 11 . கொன்றாலொத்த துன்பங்களைச் செய்யினும். (குறள். 109) 12. பல கடரையுடைய பெரிய நெருப்பு வந்து தோய்ந்தா லொத்த இன்னாதவற்றைச் செய்யினும். (குறள். 308) 13. கற்பகம்போலக் கொடுக்கும். 14. போர்முனையின் இடத்தினைப்போலத் தூரமோ! என்றது அண்மைத் தூரத்தினை. 15. தளிர் சிவந்தாள்போலச் சிவந்த மேனி. 277-ம் சூத்திரம் 1. செவ்வானத்தையொத்த மேனி. (அகம்கடவுள் வாழ்த்து) 2. அவ்வானத்தில் விளங்கும் பிறையையொத்த கூரிய பன்றிக் கோடுகள். (அகம். கடவுள் வாழ்த்து) 3. காயா மரத்தின் மெல்லிய கொம்பரிற் பொருந்தப் படர்ந்த பல துடுப்பினையொத்த பூங்கொத்துகளைத் தாங்கி விளங்குகின்ற குலைகளையுடைய காந்தளின் அழகிய மலர்களிலுள்ள நறிய தாதுக்களை (ப் படிந்தும் எழுந்தும்) ஊதும் வண்டுகள் கையினாலெறிந்து விளையாடும் வட்டைப் போலத் தோன்றும், மேகம் படிந்து அசைகின்ற சிகரத்தை யுடைய மலைக்குரியோனே. துடுப்பு - நெய்த் துடுப்பு (சுருக்கச்சுருவம் சூடாமணி நிகண்டு பார்க்க. (அகம். 108) 278-ம் சூத்திரம் 1. சிங்கத்தையொத்த வருத்துதலையுடைய வலியினை யுடைய (பட்டின. 298ம் அடி) 2. மழைபோற் சொரிகின்ற அம்பினையும் மேகம் போலும் கரிய பரிசையையுமுடைய சோழர். மாரியம்பு - பயவு வமை. மாரி பயிரை விளைத்துப் பயன்செய்தல் போல அம்பு பகைவரை அழித்துப் பயன்செய்வது பயம். (அகம். 136) 3. கடலைக் கண்டாலொத்த இடமகன்ற பரப்பினை யுடைய. (அகம். 76) 4. இக்கனவிய குழையையுடையாள் தெய்வ மகளோ? மயில் விசேடமோ? ஒரு மானுட மகளோ? இவளை இன்னள் என்று துணியமாட்டாது என்நெஞ்சு மயங்கும். (குறள். 1081) 5. நுதலையும் முகத்தையும் தோள்களையும் கண்களையும் சாயலையும் சொல்லையும் நோக்கி (உவமை கூற) நினைந்து நுதல் வியப்பையுடைத்தாய்த் தேய்ந்தது; ஆயினும் பிறையுமன்று. முகம் மறுவற்றது; ஆயினும் மதியமுமன்று. தோள் மூங்கிலின்றன்மை நெருங்கிற்று; ஆயினும் அது பிறக்கும் மலையிடமுமன்று. கண் பூவின் றன்மை நெருங்கிற்று; ஆயினும் அதுபிறக்கும் சுனையிடமு மன்று. சாயலிருந்தபடி மெத்தென நடக்கும். ஆயினும் மயிலுமன்று. சொல்லுச் சொல்லத் தளரும்; ஆயினும் கிளியுமன்று. (கலி. 55) 279-ம் சூத்திரம் 1. முரசொலிக்கின்ற சேனைகளையுடைய மூவரசரும் கூடி அரசின் அவையாக இருந்த தோற்றம் போலப் பாடல் பொருந்திய பயனையுடைய யாழைக்கொண்ட கூத்தர் தலைவ! பிறர் மனத்துட் கொண்டவற்றைக் குறிப்பால் அறிபவனே! (பொருந. 547) 2. ஓவியம்போன்ற அழகினையுடைத்தாகிய இட முடைய இல்லின்கண். (புறம். 251) 3. பாவையையொத்த பலராய்ந்து செய்த மாட்சிமைப்பட்ட அழகு. (அகம். 98) 4. சிங்கத்தையொத்த வருத்துதலைக் கொண்ட வலியினை யுடைய. (பட்டி. 298) 280-ம் சூத்திரம் 1. கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன. (குறுந். 337) 2. கண்ணாடியினுள்ளே ஊதிய ஆவிபோல மெல்ல மெல்ல நுணுகுதலுற்று. (அகம். 71) 3. பாம்பு மறைத்த மதிபோல நெற்றியினொளி மறைய. (அகம். 313) 281-ம் சூத்திரம் 1. மலையையொக்கும் இளைய களிற்றின்மேல். (புறம். 38) 2. செந்தாமரை மலரையொத்த அழகிய சிவந்த அடி. (குறுந். கடவுள்) 3. நெருப்பினையொத்த (சிவந்த) சிறிய கண்ணை யுடைய பன்றி. (அகம். 84) 4. தாமரையின் இலையின்கீழ் மறைந்து நின்ற அழகிய இதழ் களையுடைய தாமரைப் பூப்போலக் கையிற் கொண்ட பச்சைக் குடைநிழலிலே தோன்றும் நின்னுடைய புதல்வனைக் கண்டு. (கலி. 84) 5. ஆகாயத்தையொத்த அகன்ற சூழ்ச்சி. (புறம். 2) 6. மழைக்கண் நனைந்த யானைபோல வந்து நின்றான். (குறுந். 161) 7. கிணற்றில் வீழ்ந்த குராற்பசு படுந்துயரத்தை இரவிலே கண்ட உயர்திணையாகிய ஊமனைப்போல என் பொருட்டுத் தோழிபடும் வருத்தத்தினால் உண்டான என் துயரைப் பொறுக்க மாட்டேனாயினேன். ஊமன் - பேச மாட்டாதவன். (குறுந். 224) 8. கடம்பிடத்தேயிருந்த முருகனையொத்த கூற்று வனைப் போன்ற வேலையேந்திய பெரிய கையையுடைய புறங் கொடாத புதியோர். நெடுவேளன்ன வம்பலர் என இயைக்க. (பெரும்பாண். 75) 9. விளங்குகின்ற பறையையொத்த குறுக்கிட்டுக் கிடக்கின்ற வெள்ளிய பன்றிக்கோடுகள். 284-ம் சூத்திரம் 1. எழுகின்ற முலையையொத்த செழிப்பான முகை விண்டு அழகிய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய தாமரை. (சிறுபாண். 72-73). 285-ம் சூத்திரம் 1. உலகத்தார் அவாப்போல அகன்ற தன்னுடைய அல்குலின் மேல் சான்றோருடைய ஆராய்ச்சிபோல நுண்ணி தாகிய நுகப்பு. 2. பெரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளைய வெள்ளிய திங்கள் தோன்றியதைப்போல முன்பக்க மயிருக்கு அயலில் தோன்றும் சிறிய நெற்றி. (குறுந். 129) 3. தான் (முருகன்) விரும்பலால் வண்டுகள் மொய்யாத நெருப்புப்போலும் பூவையுடைய காந்தள். (முரு. 43) 4. பலகாற் பழகியுங் கொல்லுகின்ற யானையை அன்னாரது நண்பினை விட்டு நாயை ஒத்தாரது நண்பினைத் தழுவிக் கொள்ளுதல்வேண்டும். (நாலடி. 213) 5. வள்ளத்திலுள்ள நீராற் கழுவிய முலைச்சாந்து வீதியிலே பரந்து சேறாகி அதில் யானைகள் எல்லாம் அடிவழுக்கின. 6. சோற்றை வடித்தொழுக்கிய கொழுவிய கஞ்சி ஆறு போலப் பரந்தொழுக ஆனேறுகள் தம்மிற் பொரச் சேறாய்த் தேர்களோடலால் தூளியாய்ப் பொருந்தி. (பட்டி. 44-47) 286-ம் சூத்திரம் 1. வேலையொத்த கண்ணையுடைய மகளிர்மேற் கொண்ட வேட்கை நோயைத் தீர்ப்போம்; அவருடைய அம்பு போன்ற கண்ணொன்றினால். 2. மழைபோன்ற வளவிய தடக்கையையுடைய வள்ளி யோனைப் பாடி. 3. வேயையொத்த தோள் ஒருபக்கம்; வெற்பை ஒத்த புயம் ஒரு பக்கம். 4. குன்றிமணியையும் இந்திரகோபத்தையும் ஒத்த உடை. 5. நீலமணியின் நிறத்தை ஒத்த மாந்தளிர்போலும் மேனி. 6. மதியத்தைப்போல மலர்ந்த ஒளிபொருந்திய முகம். 7. வேயையொத்த தோள். 8. படம்பொருந்திய அரவையொத்த அல்குல். 9. இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமை யினை இவ்வளவென்று என்னாற் கூறி அறியலுறின் இவ்வுல கத்துப் பிறந்திறந்தாரை எண்ணி இத்துணையரென அறியலுற் றாற் போலும். இது பரிமேலழகர் கருத்து. இதனுள் துணை என்பதும் அற்று என்பதும் ஒப்புப் பொருளில்வந்தது என்பர் பேராசிரியர். (குறள். 22) 10. குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தாரும் தாழ்தற் கேதுவாகிய செயல்களை ஒரு குன்றியளவாயினும் செய்வாரா யிற் றாழ்வர். (குறள். 965) 11. குளத்தில் மூழ்கும் மகளிரது கண்ணை ஒக்கும். (குறுந்.9) 12. நீருட் குளித்துப் பொருகின்ற கயல்போலக் கண்ணீர் நீர்த் துளிகள் நிறைய. (அகம். 313) 13. கல்லை உண்கின்ற அழகிய புறவென்ன நெருங்கிய நின்னுடைய இவ்வெழில். (கலி. 56) 14. மதியத்தை ஒத்தது மறுவற்ற அழகிய முகம். 287-ம் சூத்திரம் 1. எரி செறிந்தாற்போன்ற தாமரைப் பூவையுடைய வயலின் கண். (அகம். 106) 2. குளத்தை நாடிச் சென்று முழுகிய யானையைப் போல முகம் மகிழ்ந்து அவ்விடத்து இதற்கு யானையின் முகம் மலர்ந்தாற் போல என்று பேராசிரியர் பொருள் கொண்டனர் போலும். (அகம். 6) 3. புலியை யொப்ப ஒலி தோற்றுதலின். 4. புலிபோல ஒலி சிறந்து உலாவி. 5. மின்னோடு மாறுபடுகின்ற விளக்கத்தோடே முடி யிலே பொலிவுபெற. (முருகு. 85) 6. பொருகின்ற களிற்றினது எருத்தின்கண் புலி பாய்ந் தாற் போன்ற பாய்ச்சல். 7. மானை ஒத்த நோக்கத்தினையும் மடநடையையும் உடைய ஆயத்தார். 8. கார்காலத்து மழையின் முழக்கொலியை யொக்கும். (அகம். 14) 9. யாழ்போலும் சாமவேத இசையைப் பாடின நீலமணி போலும் மிடற்றினையுடைய அந்தணன். (அகம். கடவுள்) 10. வண்டியிற் பூட்டிய வலிய எருமைக்கடாக்களைப் போலக் கூடி. (அகம். 30) 11. குறிய வளையலை ஒக்கும் நெகிழவேண்டிய இடத்து நெகிழ்ந்து இறுகவேண்டியவிடத்து இறுகிய வார்கட்டி னையும். (பெரும்பாண். 13) 289-ம் சூத்திரம் 1. எழிலியாகிய வானத்தை இகழ்ந்தவனாய்க் கொடுக்கும் இடக் கவிந்த கையையும் கொடையையும் வேகமான குதிரையை யுமுடைய தோன்றல். கவிகை - பொன்னுமாம். 2. மழையை யொத்த நீண்ட கையையும் வாளையு முடைய எவ்வீ. எவ்வீ - ஒரு வள்ளல். 3. தேவருலகத்திலுள்ள கற்பகத்தை ஒப்ப. 4. விண்ணை ஒத்த விசாலித்த புகழையும் வென்றியையு முடைய வஞ்சி. (புறம். 11) 5 . மேகத்தை ஒக்கும்படி பொருந்திய பெரிய இசையைக் கொடுத்து. 6. குபேரனை ஒக்கும் பெரிய வளவிய கொடை. 7. வீங்கிய முலை மடியையுடைய நல்ல பசுவை வென்ற கொடை. 8. விரிந்த புனலையுடைய பெரிய யாற்றை ஒப்ப எவற்றையும் வரையாது கொடுக்கும் புகழ் மிக்க தோன்றல். 9. நெருப்புப் போன்ற வெவ்விய கதிர்கள் பசையறக் காய்தலின். (அகம். 1) 10 . மகனுக்குத் தாயாதல் ஒப்பதென்று. (அகம். 16) 11 . ஊறுகின்ற நீர் அமிழ்தினை ஒக்கும் எயிற்றினை உடை யாய். (கலி. 20) 12. பலர் மகிழ்ந்த மகிழ்ச்சியை யெல்லாம் என்னுள்ளத் தே பெய்து விட்டாற் போலும். 13. யாழோசையை ஒத்து வழங்குகின்ற ஓசை நடக்கும் மாலைக் காலம் வந்து வருத்தத்தைத் தரும். (கலி. 29) 14. இடிபோல ஒலிக்கும் ஊக்கத்தோடு. (அகம். 61) 15. யாழ் என்று கருதி பெரிய கல்லையுடைய பிளப்பின் கண் அசுணப்பறவை செவியால் ஓர்க்கும். (அகம். 88) 16. அழித்தற்குரியாரை அழித்த இடியை மாறுபட்ட பெரிய கை. (முருகு. 5) 17. விண்ணில் முழங்குகின்ற முழக்கை ஒப்பப் பண்கள் தன் கண்களில் உண்டாக்கப்பட்டு. (மலைபடு. 2) 290-ம் சூத்திரம் 1. நீர் வடிகின்ற ஒளிபொருந்திய மலரை ஒப்ப. (அகம். 11) 2. உயர்ந்த பெரிய பாறையிலே குவிந்த வட்டை ஒப்ப. வட்டு - உண்டை. (அகம். 5) 3. மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த விளக்கம் பொருந்திய அணிகள் கழல. (ஐங்குறு. 318) 4. உரலையொத்த பரந்த அடி. (நிலத்தே பரவும் அடி என்பர் நச்சர்) (கலி. 31) 5. முத்தினையுடைய வெள்ளிய யானைக்கோட்டை ஒத்த முலைமேல். 6. பாம்பின் வடிவு ஒடுங்க வளைந்த இடை. 7. நெருப்பினியல்பை யோட்டிய வெப்பமான கதிர்களை யுடைய சூரியன். 8. கண்களோடு ஒத்த கழியின் முளைத்த குவளைப்பூ. 9. கடல்போலத் தோன்றுதலையுடைய காட்டக் கடந் தோர். (அகம். 1) 10 . அழகிய விளக்கின் ஒழுங்குபோலத் தோன்ற. (அகம். 11) 11. புலி என்று கருதி அஞ்சிய புள்ளி பொருந்திய முகத்தை யுடைய யானை. (அகம். 12) 12. சிவந்த இதழை யொத்தனவாகி. (அகம். 19) 13. மாட்சிமைப்பட்ட அழகிய மூங்கிலை வென்ற தோளை யுடையாய். நீ வந்தால் நின்னிளைப்பை ஆற்றும். (கலி. 20) 14. கண்ணைப்போல (க் குவளைப் பூக்களை) மலர்ந்த சுனைகளும். 15. நறிய முல்லையின் தம்முள் ஒத்த முகையை ஒப்ப நிரைத்த. 16. முழவையொத்த பெருமையையுடைய தனது கையி னாலே அவர்கள் கையினைப் பொருந்த எடுத்துக்கொண்டு. இதற்கு நச்சினார்க்கினியர், இயல என்பதை முன்கூட்டித் தழீஇ என்பதை இங்குக் கூட்டிப் பொருள் கொள்வர். 291-ம் சூத்திரம் 1. தன் சொல்லை மெய்யென்று உணர்ந்தார் மேனியை பொன் போலப் பசப்புறச்செய்வான் ஊரன். (ஐங்குறு. 41) 2. நீலமணின் நிறத்தை ஒத்த மலரையுடைய பொலிவான காயா. 3. ஒள்ளிய செங்காந்தட் பூவை யொக்கும் உன்னுடைய நிறம். 4. வெயிலொளியை (காயச்செய்த) ஒத்து விளங்குகின்ற மாணிக்க மணியழுத்தின. 5 . கார்காலத்து விரிந்த கொன்றையின் பொன் போலும் புதிய மலர். (அகம். கடவுள்) 6. தண்டளிரை ஒப்பத் தகைமை பெற்ற மேனி. 7. துளியை இடங்கடோறும் பெய்த மழையை யொத்த கூந்தல். இனித் துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் என் பதும் பாடம். இதற்குத் துளிகள் தன்னிடத்துப் பெய்யப் பெற்ற நீலமணியை ஒத்த கூந்தல் எனப் பொருள் கொள்க. (அகம். 8) 8. நெருப்புப்போலக் கோபித்த வெப்பம் விளங்குகின்ற ஞாயிற்று மண்டிலம். (அகம். 31) 9. அசோகின் றளிரை ஒக்கும் அழகையுடைய நிறம். அத் தன்மையாகிய நிறம். (கலி. 15) 10 குவளையின் நறிய இதழை ஒக்கும் நீர்த்துளியைக் கொண்ட குளிர்ந்த இமை. (அகம். 19) 11. பாலுமயங்கும் மருப்பினையும் உரைலையொத்த பரந்த அடியையும். (கலி. 21) 12. எரியினிறத்தை ஒப்ப இலவுமலர. (கலி. 33) 13. பலரும் புகழுகின்ற ஞாயிற்றைக் கடலின்கண் கண்டாற் போல. (முருகு. 2) 14. பொன்னுரை விளங்கினாற்போலும் தேமலையுடை யராய். (முருகு. 145) 15. தீயினை ஒத்த ஒள்ளிய செங்காந்தளின் மழையாலே செருக்கி வளர்ந்த புதுமுகையை ஊனாகக் கருதி. (மலைபடு. 145) 294ம் சூத்திரம் 1. தாஞ்செய்த களவினைத் தாமே உடன்படுவாரைப் போலத் தலைகவிழ்ந்து நிலத்தைக் காலாற் கிளைத்து. (அகம். 16) 2. தோணியைக் கடலிற் செல்லும்போது கவிழச்செய்த வணி கனைப்போல, துயரத்தைக்களையுந் துணை வேறின்றிப் புலம்பு மென்னிலையைக் கண்டும் போகமாட்டேன் என்று கூறுகின்றாய். (யா.வி.ப.318) 3. பெரிய செல்வரது வீட்டின்கண் (அதன் வாயிலை யடைந்த) வறியார்போல மீண்டுவரும் மீளச்செல்லும், திரும்பி வரும் என்னெஞ்சம். (முத்தொள்ளாயிரம் 88) 4. அருளினிடத்தே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றின் நிழலையுடைய குளத்துள் நீருள்நின்ற குவளை வெந்த தன்மைத்து. (கலி. 41) 5. சாந்தம் உள்ளிடத்தே உண்டென்று செப்பைத் திறந்து பாம்பை அவ்வுள்ளிடத்தே கண்ட தன்மையையுடைத்து. (நாலடி. 126) 6. மல்லரை மறத்தைக் கெடுத்த திருமால்போலே கல்லுயர்ந்த அகற்சியையுடைய சாரலிற்றன் சுற்றத்திற்கு நடுவே கூடித் திரியும் நாடனே! கேள். (கலி. 52) 7. இயமன் வெகுண்டாலொத்த வலியோடு பகையைக் கொண்ட இரு அரசரது மண்ணைக்கொள்ள நோக்கினாய். (புறம். 42) 8. உதியஞ்சேரலாதனைப் பாடிப்போன பரிசில் பெறு வாரைப் போல இப்பொழுது உவப்பாய் தோழி. (அகம். 65) 297ம் சூத்திரம் 1. பொன்னை உரைக்கும் (கட்டளைக்கல்) உரை கல்லை யொப்பத் தனது பசிய அணிகள் புடைத்ததாலுண்டான செஞ்சுட்டையுடைய மார்பு. (பெரும்பாண்.220) இதற்குரிய பாடம் இப்போது டாக்டர் உ.வே. சாமிநாதை யர் பதிப்பில் வேறுவிதமாக உள்ளது. அப்பாடம் இங்கே கொள்ளலாகாது. கொள்ளிற் பேராசிரியர் இங்கே கூறிய உரையோடு மாறுபடும். 2. கரிய காலையுடைய வேங்கையின் பூக்கள் சொரிந்த பாறைக் கல் கரிய புலிக்குட்டி போலத் தோன்றும் காட்டின்கண். (குறுந். 47) 300ம் சூத்திரம் 1. கரும்பு நட்ட பாத்தியில் தானே முளைத்த தாமரைப் பூ வண்டின் பசியை நீக்கும் பெரிய நீரையுடைய ஊரனே! புதல்வனையீன்ற என்னை முயங்காதே கொள். அம் முயங்கல் உன் மார்பினழகைச் சிதைப்பதாகும். (ஐங்குறு. 65) 2. கரையில் நின்ற வேழம் கரும்பைப்போலப் பூக்கும் நீர்த் துறை பொருந்திய ஊரன் கொடுமையை நாணி நாம் நல்லன் என்பேம். நல்லன் அல்லன் என்னும் எனது பெரிய மெல்லிய தோள்கள். இதன் பின்னடி வேறு விதமாக ஐங்குறு நூற்றுப் புத்தகப் பிரதியில் காணப்படுகின்றது. (ஐங்குறு. 12) 3. நீரினுறைகின்ற கோழியின் நீலநிறம் பொருந்திய சேவலைக், கூரிய உகிரையுடைய பேடை நினைந்து தன் வேட்கை தீரு மூரனே! இவள் வேட்கை நோய்க்கு நின் பரந்த மார்பு புளிங்காய் வேட்கை போன்ற தன்மைத்து. (ஐங்குறு. 51) 4. தோழீ! யான் தலைவனோடு பொருந்தாத இயல் பினை யுடையனல்லேன் பொருந்துமியல்பினேன். ஆயினும், நொதுமலர் வரைவொடு புகுமொரு காரணத்தினால் மலையினிடத்து ஒன்றோடொன்று பொருத களிறுகளால் மிதிக்கப்பட்ட நெரிந்த அடியையுடைய வேங்கைமரம் குற மகளிர் தங் கூந்தலின் கண் அணிந்துகொள்ளும் பொருட்டு ஏற வேண்டாமல் நின்றபடியே கொய்யும்படி தாழ்ந்து மலர் தற்கிடமாகிய நாட்டையுடைய தலைவ னொடு பொருந்தேன். (குறுந். 208) 5. அழகிய ஒள்ளிய தழையசையத் தூய அணியை யணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய பரத்தை விளையாட்டாகப் பாய்ந்தாளாகத் தேனைப் பொருந்திய நறிய குவளை மலர் படிந்து நாறலால் தண்ணென்றிருந்தது பெரிய துறைநீர். (ஐங்குறு. 73) 6. பொய்கையைத் தனக்குப் படுக்கையிடமாகக் கொண்ட புலான்மணங்க கமழும் நீர்நாயானது வாளைமீனை நாட் காலத்தே இரையாகப் பெறுகின்ற ஊரனே! எனது அழகு கெடினும் பிறபெண்டிராகிய பரத்தையரைத் தோய்ந்த மார்பைப் பெரும! பொருந்தேன். (ஐங்குறு. 63) 7. தனது பார்ப்பைத் தின்னும் அன்பில்லாத முதலையோடு வெள்ளிய ஆம்பற்பூவையுடைய பொய்கையையுடையது அவனூரென்று சொல்வர். அதனால் தன் சொல்லை மெய் யென்று கொண்டாரது மேனியைப் பொன்போற் பசப்புறச் செய்வான் ஊரன். (ஐங்குறு. 41) 302ம் சூத்திரம் 1. கரிய கோட்டினையும் சிவந்த கண்களையுமுடைய ஈன்றணி மையையுடைய எருமை ஆவானது தன் காதலை யுடைய குழவிக்கு. ஊறுகின்ற முலையை வாய்ப்பெய் தூட்டும் நுந்தையின் நுமதூர்க்கும் வருவேம். ஒள்ளிய வளையை யணிந்த மடந்தையே! நின்னையாம் வரையு மாட்சிமை பெற்றால். (ஐங்குறு. 92) 303ம் சூத்திரம் இச்சூத்திர உதாரணங்கள் முன்வந்துள்ளன. ஆதலால் உரை எழுதவில்லை. 304ம் சூத்திரம் 1. அன்னையே! கழியிடத்துள்ள முள்ளி மலருகின்ற குளிர்ந்த கடற் சேர்ப்பன் எனது தோள்களை விரும்பாது துறந் தானாயின் அவன் விரும்பிய தோள் வேறு யாதாம். எவன் என் என மருவிற்று. கொல் அசை. ‘எவன்கொல்’ என்றும் பாடமுள்ளது. (ஐங்குறு. 108) 2. குன்றக்குறவனது புல்லால் வேய்ந்த சிறுகுடிலாகிய மன்றை அசைகின்ற இளைய மேகங்கள் மறைக்கின்ற நாட்டை யுடையோன் உயர்ச்சியையுடையோன். வாழ்வாயாக, தோழி! விரைந்து பெய்கின்ற அரிய நீர்த்துளிகளை அளைந்த கூதிர்க் காலத்துப் பெரிய தண்ணிய வாடை யினும் முற்பட்டு வந்தான். (ஐங்குறு. 253) 306ம் சூத்திரம் 1. வன்னிலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்து செய்யும் மென்புலத்தூர்களையுடைய நல்ல நாட்டையுடைய வேந்தே! (புறம். 42) 2. தாய் சாவப் பிறக்கும் புள்ளியையுடைய நண்டி னோடு தன் பிள்ளையைத் தின்னும் முதலையையுடையது அவனூர்! (ஐங்குறு. 42) 307ம் சூத்திரம் 1. பூமியைக் காக்குமரசர் வழிபாடு சொல்லி நடக்க நுகரும் இன்பத்தை விரும்பிய பூமி பிறவேந்தருக்குப் பொது வென்னும் வார்த்தைக்கு பொறாது தன்னாடு இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த மடியாத உள்ளத்தை யும் பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை எவ்வாறொப்பை, தடைப்பட்டுச் செல்லும் கதியையுடைய மதிமண்டிலமே! காலத்தை நீ தோற்றுதற் கென வரைந்து கொள்கின்றாய் (இராப் பொழுதைநினக் கென வரைந்து கொள்கின்றாய் எனினுமாம்) தோற்றார் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்றாய் (வெஞ்சுடர் மண்டலத்திற்குப் புறங்கொடுத்துச் செல்கின்றாய் எனினுமாம்) திங்கடோறும் மாறிமாறித் தோன்றுவாய். (திசைமாறித் தோன்று வாய் எனினுமாம்) மலை சார்ந்த வழி அதன்கண் மறைந்து ஒளிப்பாய். அகன்ற பெரிய வானின்கண்ணும் பல கிரணங் களையும் பரப்பிப் பகலில் விளங்காய். இதனுட் சில பாடபேதங் கொண்டு வெங்கதிர் மண்டிலத்திற்கேற்பப் பொருளுரைப்பர் புறநானூற்று ரையாசிரியர். (புறம். 8) 2. அவன் கண்ணன் என்ற பெயருடையோன். இவன் மாறன் என்ற பெயருடையோன். அவற்கு மாலை கமழுந் துழாஅய் மாலை. இவற்கு மாலை வேப்பம் பூமாலை. நிறமும் அவன் கரியோன். இவன் செய்யன். ஒன்றாகிய மரபும் அவன் இடையன். இவன் அரசன். எனவே அவனினும் இவனுயர்ந்தவன் என்றபடி. இது உயர்ச்சிபற்றி வந்த பொருள் வேற்றுமை. பெயரும் பொரு ளாதலின். 3. அடியை நோக்கின் கடல்வண்ணனாகிய திருமாலை யொப்பன். மேனியியல்பை நோக்கின் பசிய கொன்றை மாலையை யணிந்தோனை (சிவனை) ஒப்பன். முடியை நோக்கி அவன் தலையின்மேல் ஆத்திப் பூமாலை தோன்றி யது கண்டு தேரையுடைய சோழனாதல் தெளிந்தேன். (தண்டி. ப. 39) 4 கோதையை இந்திரனென்னில் அவற்கு ஆயிரங்கண் இவனுக்கு கண் இரண்டே உள்ளன. ஆதலால் அவனல் லன். சிவனென்னின் அவனுக்குப் பிறையுண்டு. இவற் கில்லை. ஆதலால் அவனுமல்லன். வானிலுள்ள கோழிக் கொடியோன் (முருகன்) என்னில் அவற்கு முகமாறு இவற்கு ஒன்று ஆதலால்லவனுமல்லன். இவனை சக்கரத்தையுடைய திருமா லென்று உரைக்கற்பாற்று. (முத்தொள்ளாயிரம்) 5. பொற்றொடீஇ! வளைந்த வில்லையுடைய காமனும் சோழ வரசனாகிய வெற்றி பொருந்திய கிள்ளியும் நிறத்தா லொவ் வார். ஏனெனில், திருமாலின் மகன் (காமன்) கருநிறத்தன் உறையூரையடைய சோழன் மகன் செந்நிறத்தன். 6. சோழனுந் திருமாலும் தொழிலின் வகையான் வேறு படுவர். ஏனெனின்? சோழன் எதிர்த்துக் கொன்று பகைவர் பாலெய்திய பூமியை, மாயன் இன்று மாவலிபால் கையேற்று இரந்து பெற்றமையால். 7. ஊரின்கணுள்ள சிறுபிள்ளைகள் தன் கோட்டைக் கழுவு தல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும் பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு இனிதாம். அவ்வாறு பெறும! நீ எங்களுக் கினியை. மற்றதனுடைய மதம் பட்ட நிலைமை (அவர் போல் வார்க்கு) எவ்வாறு இன்னாதாம் அது போலப் பெரும! நீ நின் பகைவர்க்கு இன்னாய். (புறம். 94) 8. முதிர்ந்த கோங்கின் இளமுகை போலவும் அடி வரைந்து தோற்றின (தென்னையின்) குரும்பை போலவும் மழைத் துளியிலுண்டான குமிழி போலவும் பெருத்த நின்னிளைய முலை. (கலி. 56) 9. வடிவான் முழுது மக்களையொப்பர் கயவர். அக் கயவரை யொப்பாரை யாங் கண்டதில்லை. (குறள். 1071) 10. நெடிய இலைகளையுடைய கரிய பனையினது நீரின் கண் தோற்றும் நிழலை ஒப்பக் குறிய பலவாகி முரிவுபட்ட குன்றின் மீதுள்ள சிறிய வழி. 11. மண்ணுலகைச் சுமக்கின்ற தோளையுடைய கிள்ளி யின் மதயானை பகையரசரின் வெள்ளைக் குடையைத் தேய்த்த கோபத்தால் விண்ணிலும் புகுந்து பாயுமோ என்று குளிர்ந்த சந்திரன் அவ் விசும்பினின்று தேய்வான். (தண்டி. ப. 58) 12. எழுத்துகளெல்லாம் அகரமாகிய முதலையுடையன. அது போல, உலகம் ஆதிபகவனாகிய முதலையுடைத்து. (குறள். 1) 309ம் சூத்திரம் 1. பொருள் முன் எழுதப்பட்டது. 2. வில்வீரர் தம் தூணி நிறையப் பெய்த கொற்றொழி லாற் பொலிந்த கூரிய குறிய மொட்டம்பின் நுனையையொப்ப அரும்புகளை ஈன்ற இருப்பையின் செப்புத் தகட்டை யொத்த சிவந்த குழையின் அகந்தோறும் வெண்ணெய்த் திரளை யொத்த இனிய துளையையுடைய துய்போலும் வாயைக் கொண்ட பூக்கள் தாள்நீக்கிக் கண்ட துளையை யுடையன வாய் ஆர்க்கை விட்டுக் கழன்று வானினின்று விழும் ஆவி போலக் காற்றாற் சிதறி வீழப் பவளம் போன்ற சிவந்த மேட்டையுடைய வழியிடத்தே இரத்தத்தின் மேலுள்ள நிணம் போலத் தாங்கும் காடு என்க. இவற்றில் வரும் உவமைகளும் தன்மை தோன்றக் கூறியனவேயாம். (அகம். 9) 3. நீண்ட தாளினையுடைய இலவ மரத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த பஞ்சினையுடைய அழகினை உடைத்தாகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்சி தோன்றினா லொத்த வரியை முதுகிலேயுடைய அணிலோடே எலியுந் திரியாதபடி யாற்றினது அறலை யொக்கும் முதுகினையும் கொழுவிய மடலினையுமுடைய நெடிய மேட்டுநிலத்தில் நின்ற ஈந்தினது வேலின் முனையையொத்த கூர்மையினை யுடைய முனையினையுடைய இலையாலே வேய்ந்த எய்ப்பன்றி முதுகுபோலும் புறத்தினை யுடைய குடிலில். (பெரும்பாண். 83 - 8) 4. பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான்றோலாகிய படுக்கை யிலே அப்பிள்ளையோடே முடங்கிக் கிடக்க ஒழிந்தோர் போய், பூண் தலையிலே யழுத்தின நன்றாகிய திரட்சியை யும் வலியை யுடைத்தாகிய வயிரத்தினையு முடைய சீரிய கோல் செருகின ஊளிபோலும் வாயினையுடைய பாரை களாலே கட்டிகள் கீழ்மேலாகக் குத்துகையினாலே, கரு நிலமாகிய கரம்பை நிலத்திலுண்டாகிய புழுதியை யளைந்து நுண்ணிய புல்லரிசியை வாரியெடுத்துக் கொண்ட வெள்ளிய பல்லையுடைய எயின் குடியிற் பிறந்த மகளிர் பார்வை மான் கட்டி நின்ற தேய்ந்த தாளினை யுடைய விளைவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமாகிய உலக்கை யாலே குற்றி. (பெரும்பாண். 89 - 7) 310ம் சூத்திரம் 1. வரிபொருந்திய மலர்போலும் அழகிய கண்ணை யுடைய அழகினையுடைய மாமை நிறத்தைக்கொண்ட பரதவப் பெண்ணின் அழகிய முகத்தையும் சந்திரனையும் ஒன்றாகக் கருதி சுழற்சியுற்று பூமியிலும் ஆகாயத்திலுஞ் செல்லாமல் ஐயத்தின் கணின்றது (இராகு என்னும்) பாம்பு. இது ஐயவுவமைப் பாற்பாடும். (பொய்கையார்) 2. நீர்த்துளி பொருந்தித் தண்ணிய கனையில் வைகிய நீலமலர் அன்புடைய பெண்களது கண்போல மலர்ந்தன. அன்பு பெற்ற பெண்களது திருமுகத்தின் பொலிவிலே அவர்கள் கண்ணும் வண்டையுடைய நீலமலர்போல மலரும். 311ம் சூத்திரம் 1. இழுக்கப்பட்டு நிலத்தே செறியுங் கரிய பிடியினது பெரு மையையுடைய கைபோல (த் தாமும் அடியோடு தொடர்பு பட்டு) முறையாற் பருத்து பெருமையையுடைய மலை யிலே ஒழுங்குபட வளர்ந்த வாழையெனத் திரண்டு ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினை யும் வாழைப் பூவெனப் பொலிந்த பனிச்சையினையும் (பனிச்சை - முன்னுச்சி மயிர்). 312ம் சூத்திரம் 1. கொடியும் குவளைப் பூவும் தாமரைப் பொகுட்டும் (முறை யே) போலும் நுகப்பையும் மையுண்டகண்களையும் மேனியையும், மதியும் பவளமும் முத்தும் (முறையே) போலும் முகத்தையும் வாயையும் பல்லையும், பிடியும் மானும் மயிலும் (முறையே) போலும் நடையையும் நோக் கையும் சாயலையும் உடைய வடிவையுடையவளாவள் வஞ்சியிலுள்ள (மகள்) பெண். 2. யானையுந் தூணும் போல நீர் செறிந்த கடலிலே பாய் மரமும் தோணியுந் தோன்றும். தோன்றலை மறந்தோரது துறை பொருந்திய நாட்டின்கண். தோன்றல் - பெருமை. 3. நாயகர் - தலைவர். குழாம் - கூட்டம். படை - சேனை. 4. பெரிய ஊரிலே யட்ட கள்ளை முகத்தற்கு ஒரு வீட்டி லுள்ளே கட்கோயைத் தேடுவதுபோல நின்னைத் தேடுகிறான். கோய் - கள் முகக்கும் பாத்திரம். (புறம். 300)