தொல்காப்பிய உரைத்தொகை - 6 சொல்லதிகாரம் சேனாவரையம்-1 சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1938,1955 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 6 சொல்லதிகாரம் - சேனாவரையம் - 1 முதற்பதிப்பு - 1938 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+352 =384 விலை : 600/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 384  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் “வாழிய வாழியவே” 1. வாழிய வாழியவே வாழிய வாழியவே எங்கள் இன்னுயிர் ஈழத் தமிழகம் - வாழிய 2. சூழும் கடலகம் வாழும் வளநிலம் ஈழத் தமிழகம் இன்னுயிர்த் தாயகம்-வாழிய 3. ஏழெழு நாடுகள் ஆழியுள் தாழினும் ஊழையும் வென்றஎம் ஈழத் தமிழகம் - வாழிய 4. இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தவள் மன்னுயிர் காத்துள மாண்புலிச் செவ்வியர் - வாழிய 5. செங்களம் செல்வதைப் பொங்கலாய்க் கொண்டெமைக் காந்தளம் பூவெனக் காக்கும் பெருமையர் - வாழிய 6. கொள்ளை கொள்ளையாய்த் துள்ளும் இயற்கையை அள்ளிக் கொழித்துயர் வள்ளல் தாயவள் - வாழிய 7. ஞாலப் பழமொழி சாலத் திகழ்மொழி மேனலத் தமிழ்மொழி மூலப் புகழ்நிலம் - வாழிய - இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலம்பு. சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நன்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பா. பெரும்பாணாற்றுப்படை மணி. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 இயலமைதி ....... 26 வாழ்வியல் விளக்கம் ....... 30 சேனாவரையர் ....... 61 முதற் பதிப்பின் முகவுரை ....... 77 (சி. கணேசைய்யர் உரைவிளக்கக் குறிப்புகள்) இரண்டாம் பதிப்பின் முகவுரை ....... 83 சிறப்பு முகவுரை ...... 85 சொல்லதிகாரம் ....... 106 1. கிளவியாக்கம் ....... 110 2. வேற்றுமையியல் ....... 212 3. வேற்றுமை மயங்கியல் ....... 253 3. விளிமரபு ....... 294 4. பெயரியல் ....... 313 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல் காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல் காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடிவழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257), தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3), தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெய ரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலா யினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பது மேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லு லகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும். (1006) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும் (1336) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே (385) எனத் தமிழமைதியையும், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்தி ரண்ட னுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டி லுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமைய வில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற்றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளையடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடை வெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரை பசையை வேறு எவ்விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளை யடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல் காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கை பாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விரு வகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டு யாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி, நாய், நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக் கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டு களுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடை மலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல் காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல் களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங் கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப் பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப் பாலோ, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தி யாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல்வழிப் பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக் கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப் பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே. என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந்திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில்தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப் பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தி யன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெரு வழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்ப வற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையள விலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர் நிலை யில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணை யியல், களவியல், கற்பியல், பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும். என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரி விருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. என்றும் (1034), புறநிலை வாழ்த்து, வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின். என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொது நெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந் தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத் தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன், மாயோன், வேந்தன், வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச் சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வது போல் எடுத்துக் கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றதிகாரங் களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத் திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார். என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண் பா. ஆனால், உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லிய தோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற் பா எல்லையில் கணக் கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுரு பேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவி யாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணை யியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம் மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதை யும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழி வளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபு நிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர். (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர் (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல் காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல் கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். எழுத்தெனப் படுவ, அகர முதலா னகர இறுவாய் முப்பஃ தென்ப. மழவும் குழவும் இளமைப் பொருள. ஓதல் பகையே தூதிவை பிரிவே. வண்ணந் தானே நாலைந் தென்ப. ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். வல்லெழுத் தென்ப கசட தபற மெல்லெழுத் தென்ப ஙஞண நமன இடையெழுத் தென்ப யரல வழள சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ் விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே. என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற் பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறை யிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாள லாம். அளபெடைப் பெயரே அளபெடை இயல தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை மோனை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடி களுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல் காப்பியத்துக் கண்டு கொள்க. மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் இவை அடி எதுகைகள். விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. வயவலி யாகும் வாள்ஒளி யாகும் உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப் படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. இழுமென் மொழியால் விழுமியது பயிலல் எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்து கொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே. ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கு மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். வகரக் கிளவி நான்மொழி ஈற்றது அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். தாமென் கிளவி பன்மைக் குரித்தே தானென் கிளவி ஒருமைக் குரித்தே ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை. இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத் தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால், அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவை யே. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல் என்னும் புறத்திணை இயல் நூற்பாதானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ் வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாக லாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத் தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங் கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப் படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக, மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப் படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பிய னார், தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ் செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வட மொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று; என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத்திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம் மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரனார். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின் கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனி யற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும், படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பா வைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. உருவுட் காகும்; புரைஉயர் வாகும் மல்லல் வளனே; ஏபெற் றாகும் உகப்பே உயர்தல்; உவப்பே உவகை என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி நன்று பெரிதாகும் என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலி லேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப் பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கிறோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தை அடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவையும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்த லால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ் வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரி போல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது - பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக்கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன் மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல் போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக் களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத்தாரை அரிசி யாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பலஎன்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் - விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் ஐந்தாம் இயல் - பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் - வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை அஃறிணைவினை, விரவு வினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் - இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி எட்டாவது இயல் - உயிரியல் என்பது . இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உயிரியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது இயல் - எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம், உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டே னும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதை யும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர் திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணையாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப்படு வர்” என்பதை, மாவும் மாக்களும் ஐயறி வினவே என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உலகத்தியற்கையாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர் திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக்காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண் பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்க தாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல் ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல் என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங் காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித் தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல் களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப்படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில் வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவுதற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவே விடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக்கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, வினாவும் செப்பே வினாஎதிர் வரினே என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக் கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பன வெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை முன் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும் வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது; கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால். ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமை யானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் - காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது? எவன்? யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மை வேண்டும். என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறை யில் காண்பதேயாம். இதனை, எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல் என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ் வழிப்பட்டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஒளவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்னும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், வேற்றுமை தாமே ஏழென மொழிப என்று கூறி, விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகன். முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். முருகன் வாழ்த்தினான் முருகனை வாழ்த்தினான் என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமை யாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம்; அடையாளம். அரசுத் தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமை யாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ்களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படுவதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப் படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப் பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினை புரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப் பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத் தான் பயன் கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப் பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித்தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள் புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக்கட்டு எண்ணுவது போன்றதாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப. என்பார் (644). பெண் மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண் பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்குவனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், பெண்மை அடுத்த மகன் என் கிளவி. என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளை யாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தியிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவிய பேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப்படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்துபடுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவுதானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்தவில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப் படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே. என்பது தொல்காப்பியம் (654). பலவின்பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகி விட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக்கொண்டு பரப்பாளரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கணமே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதி யை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர். என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத் திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும். என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதியாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத்திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. (252) என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச் சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகை யறிந்த தூய்மையவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச் சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப் பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் கருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்ற முற்றன. அந் நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். சால உறு தவ நனி கூர் கழிமிகல். (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல், பொருள் வெளிப்பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவனவற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக்கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. என்கிறார் (349) தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் - துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சான்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலை போல், தொல்காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், வெம்மை வேண்டல் என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல்காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் - இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல்போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலையிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் ழூ நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஒளவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப. என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். எறுழ் வலியாகும் என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, யாணுக் கவினாம் என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர் வோர்க்கும் உடனே வெளிப்படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப் பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும் என்றார் பொய்யாமொழியார். (எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு). ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப்பாக வும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் என்ற நிலை இருந்தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும்போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல்போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றினர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப் பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக் கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்துகளை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங்களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டுகிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான், ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல்போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல் காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந் தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப் படாததுமாம் காலநிலை தொல்காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது; கன்னி வரை செல்கிறது என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும் (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக்காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார்; விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழி யறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல். நாட்காட்டி, எழுது கோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புது வரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது சேனாவரையர் சேனாவரையர் என்பது பட்டப்பெயர். எட்டி, காவிதி என்னும் பட்டங்கள்போல் படைத்தலைவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டப்பெயர் அது. அதனால் சேனாவரையரின் முன்னோருள் ஒருவர் அப்பட்டப்பெயர் பெற்று விளங்கி அது குடிப்பெயராகப் பின்னர் விளங்கியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். அரையர் = அரசர்; ‘சேனை அரையர்’ என்பது சேனாவரை யர் ஆயது. சேனைமுதலி, தளவாய் முதலி, நாயகர், தலைவர் படை யாச்சி (ஆட்சி) என்னும் குடிவழிப் பெயர்களின் வரலாற்றை அறிந்தால் சேனா வரையர் என்பதன் பொருள் தெளிவாகும். ஊரும் காலமும் தூத்துக்குடி திருச்செந்தூர்ப் பெருவழியில் ஆற்றூர் என்றோர் ஊர் உள்ளது. அவ்வூர் பொருநையாற்றின் கரையில் அமைந்தது. அவ்வூரி லுள்ள சோமநாதர் கோயிலில் மாறவர்மன் குலசேகரனின் ஏழாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுள்ளது. அதில் ஆற்றூர்ச் சேனாவரையர் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலங்களைச் சோமநாதர் கோயிலுக்கு வழங்கிய செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1276 என்பர். அதனால் சேனாவரையர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம். ஆற்றூர் - ஏரல், கொற்கை சார்ந்த ஊர். கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. அக்கொற்கையில் நாணயம் அடிக்கும் அக்க சாலை இருந்தது. இன்றும் அவ்விடம் ‘அக்கா சாலை’ என வழங்குகின்றது. ஆங்கிருந்த கோயில் ‘அக்கசாலை ஈசுவரர் கோயில்’ என்பதை அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. செழிய நங்கை கோயில் என்பதொன்றும் ஆங்குண்டு. அப்பெயர் நெடுஞ்செழியன், வெற்றிவேற்செழியன் பெயர்களை நினைவூட்டுகின்றது. கொற்கை சூழ்ந்த பகுதியில் படைகள் தங்கி யிருந்த சான்று காட்டும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆதலால் அப்படைத் தலைவர் ஒருவர் குடிவழிப் பெயரே சேனாவரையர் என்பதற்குக் கிட்டும் சான்றுகள் இவை எனக் கொள்ளலாம். ஆற்றூர்க் கல்வெட்டு மற்றொன்றில் சேனாவரையர்க்கு ‘அழகப் பிரான் இடைக்கரையாழ்வான்’ என்றொரு பெயருண்மை கொண்டு அப்பெயரே சேனாவரையரின் இயற்பெயராக இருக்கக் கூடும் என்பர். சேனாவரையர், உரையாசிரியர் இளம்பூரணர் உரையைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர், நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் ஆகியோர் கொள்கைகளை மறுத்துரைக்கும் இடங்களும் இவர் நூலில் உள. ஆதலால், அவர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது உறுதியாகும். ‘மாறோகம்’ என்பது பழமையானதோர் ஊர். அவ்வூர்ப் புலவர் ‘மாறோகத்து நப்பசலையார்’ என்பார் சங்கச் சான்றோர் வரிசையைச் சார்ந்தவர். அம் மாறோகம் கொற்கை சூழ்ந்த பகுதியாகும். அதன் வழக்கம் ஒன்றைச் சேனாவரையர் தம் உரையுள் எடுத்தாள்கிறார். அதிலும் ‘இக்காலத்தும்’ என நிகழ் காலத்தால் சுட்டுகிறார். தம் ஊர்ச்சார்புச் செய்தியாக விளங்குகின்ற அது, “புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப” என்பது (164). “தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத் ‘தந்துவை’ என்றும் வழங்குப” என்றும் (400), நாட்டைச் சுட்டி எடுத்துக்காட்டுக் காட்டும் இப்பகுதியும் இவர்தம் நாட்டுச் சார்புக்குரிய சான்றாகக் கொள்ள வாய்க்கின்றது. சமயம் ஆற்றூர்ச் சேனாவரையர் அவ்வூர்ச் சோமநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தியால் அவர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாம். மேலும் பிறர் உரைகளின் முகப்பில் இறை வணக்கப் பாடல்கள் இல்லாதிருக்கவும் இவருரை முகப்பில் பிள்ளையார், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோ ரைப் பற்றிய வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளமை இவர்தம் சமயச்சார்பை விளக்கும். இளம்பூரணர் தொல்பொருள். ஐம்பதாம் நூற்பாவில் மேற்கோள் காட்டும், “தன்தோள் நான்கின்” என்னும் மூத்த பிள்ளையார் பாடலை இவர்தம் உரை நூன் முகப்புப் பாடலாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம். சேனாவரையர் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. மற்றை அதிகாரங்களுக்கு இவர் உரை எழுதினார் என்பதற்குரிய சான்று இவர் உரையிலோ பிற வகைகளிலோ கிட்டிற்றில்லை. ஆனால் எழுத்து, பொருள் அதிகாரங்களில் இவர் கொண்டிருந்த புலமை நலம் சொல் லதிகார உரையால் விளக்கமாகின்றது. நூலாசிரியரைச் சிறப்பித்தல் நூலாசிரியர் தொல்காப்பியர் இலக்கண நூற்பா யாத்தனர் எனினும், அந் நூற்பா இலக்கிய நயமுடையது என்பதை உட்கொண்டவராய்ச் “செய்யுளின்பம் நோக்கி அளபெழுந்து நின்றது” என்றும் (210), “செய்யுளின்பம் நோக்கி வினையொடும் பெயரொடும் என்றார்” என்றும் (295), “தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது” என்றும் (398) இன்னவாறு நயம் உரைக்கும் பகுதிகளால் சேனாவரையர் நூலாசிரியரைச் சிறப்பித்தலை நிலைப்படுத்துகிறார். “அகத்திய முதலாயின எல்லா இலக்கணமும் கூறலிற் பல்வேறு செய்தியின் நூலென்றார்” என்று சொல்லதிகார இறுதி நூற்பா விளக்கத்தில் சேனாவரையர் வரையும் உரை, தொல்காப்பியர் புலமைப் பரப்பை நோக்கிக் கூறியதாம் (463). விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமையுள் அடக்குத லும், தனியே பிரித்து எண்ணலும் என இருமுறைகளும் வடமொழியில் உண்டு என்றும், ஐந்திர நூலார் தனியே பிரித்து எண்ணுபவர் என்றும், தொல்காப்பியர் அம்மதத்தைக் கொண்டவர் ஆகலின் வேற்றுமை எட்டெனக் கொண்டார் என்றும் சேனாவரையர் விளக்கிக் கூறுகிறார். இக்கருத்தை விளக்குதற்கே “பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறப்பட்டது என்பதையும் சுட்டுகிறார் (74). பொருள் விளங்கா நிலையில் ‘அகப்படச் சூத்திரம் செய்யார் (குன்றக் கூறலாக அமையார்) என்றும் ‘பொருள் விளங்க விதந்து கூறுவார்’ (விளக்கித் தெளிவுறக் கூறுவார்) என்றும் இவர் கூறுவன நூலாசிரியர் நூற்ற திறத்தை நயமுறக் கூறுவதாய் அமைகின்றன (35, 36). பலபொருள் ஒருசொல் அமையும் வகைகளைக் கூறி அவ்வகைகளின் இலக்கணத்தைத் தனித்தனியே குறிக்கிறார் தொல்காப்பியர். அந்நூன் முறையை நயக்கும் சேனாவரையர், “இலக்கணச் சூத்திரங்களே அமையும்; இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், இருவகைய என்னும் வரையறை அவற்றால் பெறப் படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணம் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது” என்கிறார். இதனால், தொல்காப்பியர் நூலியற்றிய சிறப்பைச் சுட்டும் அளவுடன் நில்லாமல், இந்நெறியைப் போற்றுதல் சிறப்பு எனப் பின்வருவார்க்கு எடுத்துக்காட்டும் தேர்ச்சியாளராகவும் சேனாவரையர் அமைதல் புலப்படுகின்றது. ஆசிரியர் தொடுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர். வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என்னும் நூற்பா விளக்கத்தில் (198), “ `வேற்றுமை கொள்ளாது’ என்னாது காலமொடு தோன்றுமெனின் தொழில் நிலை ஒட்டும் தொழிற் பெயரும் வினைச் சொல்லாவான் செல்லுமாகலானும், `காலமொடு தோன்றும்’ என்னாது வேற்றுமை கொள்ளாது எனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச் சொல்லெனப்படும் ஆகலானும் அவ்விரு திறமும் நீக்குதற்கு `வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்” என்றார். வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடைய என்றற்கு `நினையுங் காலை’ என்றார்” என்பது அத்தகையவற்றுள் ஒன்று. இடையியலில் ‘எல்லே இலக்கம்’ என்றொரு நூற்பா அமைந்திருத்தலைக் காண்கிறார் சேனாவரையர். அஃது உரிச்சொல் ஆதலால் உரியியலில் இடம் பெறவேண்டும் என்று நினைக்கிறார். ஆயின் நூற்பா இடையியலில் அன்றோ கிடக்கின்றது! அதனை மாற்றியமைத்தல் நூன்முறையாகாது என்று எண்ணியவராய், “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தா யினும் ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான் இடைச் சொல் என்று கோடும்” என்கிறார். இதனால் நூலாசிரியர், நுவற்சியைத் தலைமேல் தாங்கிச் செயற்பட வேண்டும் என்னும் உரையாசிரிய மரபை உணர்த்தி விடுகிறார் அவர். அதற்கு அவரே சான்றாக விளங்குவதைத் தம் எழுத்தாலேயே புரிவிக்கவும் செய்கிறார் (269). இக்கருத்தை 399ஆம் நூற்பா விளக்கத்திலும் தெளிவிக்கிறார். இடைச்சொல், உரிச்சொல் முதலியவற்றை இடைச் சொற் கிளவி, உரிச்சொற் கிளவி என ஆள்கிறார் ஆசிரியர். இவற்றுள் கிளவி என்பது மிகை என்று கருதுவார் உளராகலாம் என எண்ணிய சேனாவரையர், “கிளவி என்பது மிகையெனின்; மிகை யாயினும் இன்னோரன்ன அமைவுடைய என்பதுணர்த்துதற்கு அவ்வாறோதினார் என்பது” என அமைதி கூறுகின்றார். இன்னவை நூலாசிரியர் ஆணைவழிச் செல்லும் உரைமரபு காட்டுவன என்க. நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று ‘உய்த்துணர வைத்தல்’ என்பது. எனினும், சில இடங்களில் உய்த்துணர வேண்டாமல் வெளிப்பட நூல் இயற்றுவதும் வழக்கே. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனாவரையர் நயம்பட உரை வரைகின்றார். ‘வழாஅல் ஓம்பல்’ என்று வழுவாமல் காத்த ஆசிரியர் (13), செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே என விளக்குகிறார் (16). இந்நூற்பா விளக்கத்தில் சேனாவரையர், “நுண்ணுணர் வுடையார்க் கல்லது அதனால் உணர்தலாகாமை யின் விரித்துக் கூறியவாறு” என நூலாசிரியர் பேரியலை வெளிப் படுத்துகிறார். இவ்வாறே, “ஆக்கந் தானே காரண முதற்றே” என்னும் நூற்பா விளக்கத்திலும் (21) நுண்ணுணர் வுடையார்க்குத் தம்மரபினவே (11) என அடங்குவ ஆயினும் ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாமையின் விரித்துக் கூறினார்” என்கிறார். ஆசிரியர் வெளிப்பட விளக்கும் இடங்களில், வேறொரு வாய்பாட்டானும் சேனாவரையர் கூறுகிறார்: இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே என்னும் நூற்பாவில், “ஒன்றனதாற்றலான் ஒன்று பெறப்படுதலின் வழக்காறல்ல என்றானும், செய்யுளாறு என்றானும் கூற அமையுமெனின், `உய்த்துணர்வது சொல் இல்வழி’ எனமறுக்க” என்கிறார். வேண்டும் சொல் இல்லாக்கால்தான் உய்த்துணர வேண்டும் என்னும் நெறியை இவ்வாறே மேலும் கூறுவார் (43, 133). வேறுரைகள் சேனாவரையர்க்கு முன்னரே சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையெழுதியிருந்தார். அவருரை சேனாவரையர் உரைத் தெளிவுக்கு மிக உதவியிருக்கும். இளம்பூரணரின் ஆய்வின் மேல் ஆய்வு சேனாவரையர் செய்தலால், உரைச்செப்பங்களும், விளக்கங்களும் கிடைத்தல் இயற்கை. ஆதலால், முதல் நூற்பாவி லேயே உரையாசிரியரைச் சுட்டுகிறார் சேனாவரையர். “சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமை யுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார் `எழுத்தொடு புணர்ந்து’ என்றாராகலின், ஒருபுடை ஒற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால் ஓரெழுத் தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க” என்று கூறி உரையாசிரியரைப் பாராட்டுகிறார். உரையாசிரியரை ஐம்பத்திரண்டிடங்களில் சுட்டிச் செல்கிறார் சேனாவரையர். ‘அவர்க்கு அது கருத்தன்று என்க’ என்னும் வாய்பாட்டால் 27 இடங்களிலும், ‘அவ்வுரை போலியுரை என்க’ என்னும் வாய்பாட்டால் 18 இடங்களிலும், ‘உரையாசிரியர் கருத்து இதுவேயாம்’ என ஓரிடத்தும், ‘உரை யாசிரியர் பிறர் மதம் உணர்த்திய கூறினார்’ என மூன்றிடத்தும் ‘மறுக்க’ என ஓரிடத்தும், ‘ஆண்டு அடங்காது’ என ஓரிடத்தும் பாராட்டுதல் ஓரிடத்துமாக அவரைச் சுட்டுதல் 52 இடங்களாம். இனி உரையாசிரியர் பெயர் சுட்டாமல் ‘ஓருரை’ என்றும் (249, 428), என்பாரும் உளர் என்றும் (186, 285,316, 368, 450, 451), ஒரு சாரார் என்றும் (394, 441, 449, 452, 453, 457, 463), ‘மற்றொரு சாரார்’ என்றும் (412) உரைக்கின்றவற்றை நோக்கச் சொல்லதி காரத்திற்கு இளம்பூரணர் உரையை யன்றிச் சேனாவரையர் காலத்திற்கு முன்னரே மற்றோர் உரை இருந்த தென்றும், வாய் வழியாக உலவிய உரை மரபுகளும் விளங்கின என்றும் அறியலாம். அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே என்னும் நூற்பா விளக்கத்தில் (407) ‘நிரனிறை தானே’ ‘சுண்ணந் தானே’, ‘மொழிமாற் றியற்கை’ என்பனபோல ஈண்டும் ‘அடிமறிச் செய்தி’ என்பதனைக் குறளடியாக்கி, ‘அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருள்தெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரும் உளர்” என்கிறார் சேனாவரையர். இவ்வாறு இளம்பூரணர் அறுத்தார் அல்லர். சேனாவரையர் கொண்ட பாடமே, அவர் பாடமுமாம். ஆதலால் சேனாவரையரால் சுட்டப் பட்டவர் வேறொருவர் என்பது தெளிவான செய்தி. இவர்க்குப் பின்னர் உரைகண்ட தெய்வச் சிலையார் பாடமும் இளம்பூரணர் கொண்ட பாடமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உரையாசிரியர் பெயர் சுட்டிச் சேனாவரையர் மறுக்கும் இடங்கள் சிலவற்றில் அவ்வுரை, உரையாசிரியர் உரையில் காணப்படாமை கொண்டு உரையாசிரியர் இளம்பூரணரின் வேறொருவர் என்று கருதுவாரும் உளர். உரையைப் படியெடுத் தோர் ‘விழ எழுதுதல்’ உண்டு என்றும், சில இடங்களில் ‘இடைச் செறிப்பு’ உண்டு என்றும் பட்டாங்கு அறிவோர் ஐம்பத்திரண்டு இடங்களில் ஒரு நான்கு இடங்களில் மட்டும் உரையாசிரியர் உரையின்மை கொண்டு வேறொருவராகக் கருதார். உரை யாசிரியரும் இளம்பூரணரும் ஒருவரே என்பதைத் தொல் காப்பியச் சொல்லதிகார இளம்பூரண ஆராய்ச்சி முன்னுரைக் கண் பேரா. திரு. கு. சுந்தரமூர்த்தி தெளிவுறுத்துதல் கண்டு கொள்க. (சை.சி.க. பதிப்பு) உரைமரபு இலக்கண உரையாசிரியர்களின் உரைப் போக்கைப் பொதுவகையில் நோக்கினால், அவர்கள் பயிற்றாசிரியர்களாக (போதக ஆசிரியர்களாக) இருந்தவர்கள் என்பது விளங்கும். அவ்வகையில் சேனாவரையர் உரையில் ‘வினவி’ ‘விடை’ கூறும் பகுதிகள் மிகவுண்மை தெளிவிக்கும். ‘இச்சூத்திரம் என்ன நுதலிற்றோ?’ எனின், ‘இன்னது நுத லிற்று’ என நூற்பாக்கள் தோறும் சொல்லிச் செல்லுதல் இளம் பூரணர் உரை மரபு. சேனாவரையர் இம்மரபைக் கொண்டா ரல்லர். அது கூறாக்காலும் நூற்பாவுக்குப் பொருள் கொள்ளத் தடையொன்றின்மை கண்டு அவர் விலக்கியிருத்தல் கூடும். அவர்தம் உரைச் செறிவு அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது. ஓ ஓ என வழங்கும் ஒலிக் குறிப்பை அறிவோம். “ஓ ஓ, அப்படியா செய்தி”, “ஓ ஓ என்று வாழ்கிறான்” (ஓகோ), “ஓ ஓ என்று கத்தியும் கேட்கவில்லை” இப்படியெல்லாம் இந்நாள் வழங்கும் வழக்கு சேனாவரையர் காலத்திலும் இருந்தமை அவருரையால் அறிய வருகின்றது. அது தொல்காப்பியர் காலத்தில் `ஒள ஒள’ என்று இருந்து மாறியதை அவர் சுட்டுகிறார். `ஒளகாரத்தைச் சுட்டும் அவர், “இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப” என்கிறார். (281). ‘கண்டீரே கண்டீரே’ என்பன போலவரும் அசை நிலை யடுக்கும், ‘நின்றை காத்தை’ என்பன போலவரும் அசைநிலையும் இக்காலத்து அரிய என்றும், இக்காலத்துப் பயின்று வாரா என்றும் கூறுகிறார் (425, 426). ஏ என்னும் உரிச்சொல், ‘பெற்று’ என்னும் பொருளது என்கிறார் தொல்காப்பியர் (304). அதனை விளக்கும் சேனாவரையர் “பெற்று - பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றது போலும்” என்கிறார். இத்தகைய குறிப்புகள் மொழி வரலாற்றுக்கு வாய்க்கும் அரிய கருவிகளாம். சில சிறப்புப் பெயர்கள், சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைச் சுட்டுவதால் பல்வேறு வரலாற்றுத் துணைகளை வழங்குதல் உரைவல்லார் மரபு. அம்மரபில் தக்க பங்கு பற்றிக் கொள்கிறார் சேனாவரையர். அகத்தியனாரால் தமிழுரைக்கப்பட்டது (73) உறையூர்க்கண் நின்ற சிராப்பள்ளிக்குன்று (82) சீத்தலைச் சாத்தன் (174) தெய்வப் புலவன் திருவள்ளுவன் (41) பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் (165) பரணரது பாட்டியல் (80) பெருந்தலைச் சாத்தனார் (26) பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (26) முடத்தாமக் கண்ணியார் (270) இன்னவை இதற்கு எடுத்துக்காட்டுகள். ‘பெண்’ என்னும் சொல் ‘பெண்டு’ என்றும் வழங்கும். ‘பெண்டாட்டி’ என்றும் வழங்கும். இவ்வழக்கு சேனாவரையரால் பெரிதும் ஆளப்படுகின்றது (24, 25, 161, 163). பொத்தகம் என்பது பழவடிவம். அதனைப் ‘புத்தகம்’ என்பது பின்வழக்கு. சாத்தன் புத்தகம், சாத்தனது புத்தகம் என வழங்குகிறார் சேனாவரையர் (413). நாடகம் அல்லது கலை நிகழ்ச்சி நடத்தும் அரங்கு ‘ஆடரங்கு’ என வழங்குதலும், செயற்கை மலை உருவாக்கி வைத்தலும் (செய்குன்று) சுட்டுகிறார் (415). நிலத்தை ஒற்றி வைக்கும் உறுதியோலை ‘ஒற்றிக்கலம்’ எனவும், விலைக்கு விற்று எழுதிய எழுத்தை ‘விலைத்தீட்டு’ எனவும் வழங்கும் வழக்கைக் குறிக்கிறார் (80). இவை அரிய கலைச் சொற்களாவன. நூலின் இடையும் கடையும் தலையும் மங்கலம் அமைய நூலியற்றும் வழக்கைக் குறிப்பிடுகிறார் (82). கெட்டது என்பது காணாமற் போனது என்னும் பொருள் தருதலை “நம் மெருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?” என்பதால் அறிய வைக்கிறார் (32). “வினை என்பது அறத்தெய்வம். சொல் என்பது நாமகளா கிய தெய்வம்” என்று இவர் கூறுவது ஆழ்ந்த கருத்தினது (57). “உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்னும் தொடக் கத்தன” என்பதால் ஒரு பொருட் பன்மொழிகளை அமைக்கிறார் (24). இனியது என்பதைத் ‘தீவிது’ என்பது நயமாக உள்ளது (78). தொண்டு தொண்டன் என்பவை மதிப்புப் பொருளாக வழங்காமை அவர் காலத்திருந்தது என்பதை, “தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக் கிளவி இழித்தற் கண்ணும் வந்ததால் எனின், ஆண்டு உயர் சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது” என்பதால் அறியச் செய்கிறார் (27). “முன்தேற்று - புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல்” (383). “எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப் படாமையின் ஈண்டு அறியாப் பொருள் என்றது பொது வகையான் அறியப் பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாத பொருளையாம்” (31). - இன்னவை தெளிவுறுத்த வல்ல தேர்ச்சிச் சான்றுகள். “உலக வழக்கு நடை இத்தகைத்து என்பதை அருமையாகக் குறிக்கிறார் சேனாவரையர் (416). “உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச்சொற் படாமைச் சொல்லப்படுவதொன்றன்றி, மேற்றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது” உலக வழக்கை விளக்கும்போதே, சூத்திர யாப்பு இத்தகைத் தெனவும் சொல்லி இரு வழக்கையும் விளக்கும் அருமையது இது. இரண்டன் வேறுபாடுகளை விளக்கிக் காட்டலிலும் விழிப்போடு இருக்கிறார் சேனாவரையர். “இனத்தொடு சார்பிடை வேற்றுமை என்னை எனின், ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமெனப்படும். அணைந்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பெனப்படும் என்பது.” (53) “குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது; பண்பு - பொறியான் உணரப்படும் குணம்” (297) - இத்தகையவை அவை. “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது மக்களிரட்டை விலங் கிரட்டை போல வேற்றுமையுடையவற்றையன்றி இலை யிரட்டை யும் பூவிரட்டை யும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையன வற்றை”, என்பது போன்ற இடங்களில் இலக்கணத்தை இலக்கியச் சுவைபடச் செய்யும் நேர்த்தியராகச் சேனாவரையர் விளங்குகின்றார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் சேனாவரையரை மிக மிகப் போற்றியவர் சிவஞானமுனிவர். “வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்” எனப்பாராட்டும் முனிவர், “எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார் ஆயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர்” என்றும் தொடர்ந்து எழுதுகின்றார் (தொல்காப்பிய சூத்திர விருத்தி). மொழி என்பதாம் ‘பாஷை’ யைப் பாடையென வழங்குகிறார் சேனாவரையர் (397); வடபாடை என்றும் சொல்கிறார் (401). தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாது என்னும் கொள்கை யுடைய இவர் (401), ‘குமரி வடமொழிச் சிதைவு என்றும் (196) நீர் ஆரியச் சிதைவு என்றும் (398) கூறுவது வியப்பாகாது. செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களுள், “திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும் செய்யுட்குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரியவாகா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க” என்னும் செய்தி சங்க நூற் பரப்பை முழுதுறக்கண்டு கூறிய முடிவுடையதாம். ஞாபகம், அநுவாதம், யோகவிபாகம், நேயம், காரகம், தாது இன்னவற்றை ஆங்காங்குரைத்து விளக்குகிறார். பதினைந்து இடங்களுக்கு மேல் சேனாவரையரின் வடமொழிப் புலமை அறியும் வண்ணம் உரை விளக்கம் அமைந்துள்ளது. தொல்காப்பியர் வடநூலொடு மாறு கொள்ளாமல் நூலியற்றியவர் என்பதை முடிந்த முடிவாகக் கொண்டு உரை வரைந்தவர் சேனாவரையர் என்பது, “வடநூலுள் பொருள் வேற்றுமையான் அல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமை யும் ஓதப்படாமையானும் ஈண்டும் எல்லா ஆசிரியரும் ஒரு வேற்றுமையாகவே ஓதினார் என்க. வடநூலொடு மாறு கொள்ளாமைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின் விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர். அவ்வாறடக்கலிலார் எனின், அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தன்று” என்பதால் (74) புலப்படும். சேனாவரையரின் கல்வி யாழத்தையும் உரைச்செறிவையும் நூன்முழுவதும் கண்டு மகிழ்வார், அவர்தம் பண்புச் செறிவையும் ஓரிடத்தில் அறிய வாய்க்கின்றது. அது, “வினைச் சொற் காலமுணர்த்துங்காற் சில நெறிப்பா டுடைய வென்பது விளக்கிய, `நெறிப்படத்தோன்றி’ என்றார். நெறிப் பாடாவது அவ்வீற்று மிசைநிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்ற உணர்த்த லாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும்” என்பதாம் (201). ‘உரையாசிரியர்க்கு அது கருத்தன்று’ என்று கூறும் அளவில் நாம் அமைகின்ற நிலையும், ‘போலியுரை’ என்று கூறும் இடங்களிலெல்லாம் நாம் அடைகின்ற புண்பாடும், ‘முற்ற உணர்த்தலாகா வாயினும், சிறிது சொல்லுதும்’ என்பதைக் காணும்போது மாறி ஒரு மயக்க நிலைக்கும் ஆட்படுகின்றோம். தாம் காணும் உண்மைப் பொருள் காட்டலில் சேனாவரையர்க் குள்ள தணியா வேட்கையே ‘போலிக் காய்வை’ உண்டாக் கிற்றுப் போலும். ‘பெயர் நிலைக் கிளவியும்’ என்னும் எச்சவியல் நூற்பாவில் வரும் ‘தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும்’ என்பதற்கு, “முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்று உரை கூறி, “யாற்றுட் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் என்பதுமுதலாயின” என்கிறார் சேனாவரையர். ஆற்றிற் செத்த எருமைக்கும் ஊர்க்குயவர்க்கும் என்ன தொடர்பு? அதுதான், ‘இயைபு இல்லாததை இயையக் காட்டுவது’; அது வருமாறு: மாட்டு வணிகன் ஒருவன், எருதுகள் (மாடுகள்) சில பிடித்தான். அவற்றைத் தன் ஊர்க்கு ஓட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. தன் எருதுகளை நீர் குடிக்கவிட்டுக் காலாறச் சிறிது பொழுது தங்கிப் புறப்பட்டான். அப்போது எதிர்பாராமல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. அவ்வெள்ளத்தால் சில எருதுகள் அடித்துச் செல்ல அவை இறந்துபட்டன. ஆற்றில் இறந்து கிடந்த எருதுகள் நாற லாயின. அடுத்திருந்த ஊரவர்க்கு நாற்றம் தாங்கமுடிய வில்லை. இறந்த எருதுகளை எடுக்கவும் ஊரவர் எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் ஊரவர் இவ்வெருதுகளை அகற்றுதல் எவர் பொறுப்பு என ஊர்க் கணக்கனை வினவ, அவன் தனக்கு வழக்கப்படி தரவேண்டிய தொகையைத் தராத குயவனைப் பழிவாங்க நினைத்துப் பழைய ஏடு ஒன்றை எடுத்து ஒரு பாடலை எழுதி ‘ஊரடங்கல்’ ஏட்டுள் ஊடுவைத்து ஊரவர் முன் படித்துக் காட்டினான். அப்பாட்டு இது: காட்டெரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகையான் மேற்கே மேகம் தோன்றி மின்னி இடித்து மழைபொழிந்து யாற்றில் நீத்தம் பெருகி அடித்துக் கொல்லும் எருமைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல் இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடனே மட்கலங்கள் எருவால் சுடப்படுதலால் எழுந்த புகையே, வான் முகிலாகி மழைபெய்ய அந்நீர்ப் பெருக்கால், எருது இறந்ததால், அதனைக் கரையேற்றல் குயவர் கடன் என்று தீர்மானித்தது, பொருந்தாததைப் பொருத்திக் காட்டிய புனைவு தானே. அதிகாரம் என ஒன்று வாய்க்கப் பெற்றால் தன்னலத்தார் எப்படி நடந்து கொள்வர் என்பதும், எப்படியெல்லாம் பொய்ப்புனைவு செய்து அறத்தின் கழுத்தை அறுத்து விடுவர் என்பதும், ஏமாந்தவர்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை கிட்டும் என்பதும் இந்நாள் வரை காட்சிச் செயலாகத் தானே உள்ளது! சேனாவரையர் காலத்தில் அவர் கேட்ட செய்தி, காலமெல்லாமா தொடர வேண்டும்? இதனால், ஏட்டறிவோடு நாட்டறிவும் அருமையாகப் பெற்றுப்பதிவு செய்தவராகிறார் சேனா வரையர் என்பது விளக்கமாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுள வாயினும் அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்க முறையாகத் தெரித்துணர்த்துவதினாலும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையையுடையமையானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இருமொழி வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழி வழக்கினையுங் கொண்டு பொருளுரைத்தலினாலும் தலை சிறந்து விளங்குவது சேனாவரைய ருரையே. பிறருரைகளினும் சிற்சில நயங்கள் காணப்படினும் இதுவே பற்பல நயம் படைத்துள்ளது. ஆதலாற்றான் அக்காலந்தொட்டு இதனைப் பலரும் போற்றிப் படித்து வந்தனர். சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள், அச்சுவேலி -கணேசையர் நினைவு மலர் பக். சொல்லதிகாரம் சேனாவரையம் - 1 சி. கணேசையர் - 1938, 1955) முதற் பதிப்பு 1938லும், இரண்டாம் பதிப்பு 1955லும் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. முதற் பதிப்பின் முகவுரை (சி. கணேசையர் - உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுள வாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறை யாகத் தெரிந்துணர்த்துவ தினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையையுடைமை யானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இருமொழி வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடா வண்ணம் வடமொழி வழக்கினையுங்கொண்டு பொரு ளுரைத்தலினானும் தலைசிறந்து விளங்குவது சேனாவரையருரை யே. பிறருரைகளிலும் சிற்சில நயங்கள் காணப்படினும் இதுவே பற்பல நயம் படைத்துள்ளது. ஆதலாற்றான் அக் காலந்தொட்டு இதனைப் பலரும் போற்றிப் படித்து வந்தனர். யாம் நல்லூர் வித்துவ சிரோமணி, ஸ்ரீமான் ச. பொன்னம்பலப் பிள்ளை யவர்களிடம் பாடங்கேட்ட காலத்தில் இதன் கண்ணேயே எமக்கு அதிகம் உள்ளஞ் சென்றது. இவ்வுரையை, திரிபாஷா விற்பன்னரும், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்க ஸ்தாபகரும், வித்தியாதரிசியுமாகிய பிரமஸ்ரீ. தி. சதாசிவ ஐயரவர்களால் சுன்னாகத்திலே தாபிக்கப்பட்ட பிராசீன பாடசாலையிலே பண்டிதவகுப்பு மாணவர்களுக்குப் பதினைந்து வருடகாலம் படிப்பித்து வந்துள் ளோம். படிப்பிக்கும்போதே பலர்க்கும் பயனாகுமென்று கருதி இவ்வுரைவிளக்கம் குறிப்புக்களை ஆராய்ந்து எழுதிவைத்தேம். எழுதுங்காலத்து நேர்ந்த சில சந்தேகங்களை, சுன்னாகம் ஸ்ரீமான் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடங் கேட்டறிந்துள்ளேம். 1937ஆம் ஆண்டில், எழுத்ததிகார நச்சினார்க்கினியருரை விளக்கக் குறிப்புகளை யச்சிட்டபின், "ஈழகேசரி"ப் பத்திராதிபர் ஸ்ரீமான் நா. பொன்னைய பிள்ளையவர்கள் சேனாவரைய ருரையையும் விளக்கக் குறிப்புக்களோடு தாங்களே யச்சிட்டு வெளிப்படுத்தின் அது படிப்போர்க்குப் பெருநன்மை ஆகும் என்றும், அச்சிடுதற்கு யாம் பேருதவி செய்வேமென்றுங் கூறினார்கள். அவர்கள் கருத்தின்படி அச்சிடவிரும்பி யாம் முன் எழுதிவைத்த அக்குறிப்புக்களை மீளவும் ஆராய்ந்து திருத்தி அவர்களிடம் பதிப்பிக்கும்படி கொடுத்தேம். இப்பதிப்புக்குரிய மூலமும் உரையும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களால் பரிசோதிக்கப் பெற்று, ராவ்பகதூர் ஸ்ரீமான் சி.வை. தாமோதரம்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப் பெற்ற பதிப்பைப் பெரும்பாலுந் தழுவிப் பதிப்பிக்கப்பட்டன. பதிப்பிக்கும்போது சில பாடங்கள் பிரதிகள் நோக்கித் திருத்தப்பட்டுள்ளன. பெயரியல் 18ஆம் சூத்திரத்துள், `வினையோடல்ல' தென்ற தலையையுடைய வாக்கியத்தினும், வினையியல், 37ஆம் சூத்திரத் துள், `அஃறிணை வினைக்குறிப்பு' என்ற தலையையுடைய வாக்கியத்தினும், எச்சவியல் 18ஆம் சூத்திரத்துள், `உவம உருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச் சொல்லாகலான்' என்ற வாக்கியத்தினும் எங்கருத்தின்படி சில திருத்தங்கள் குறிப்புள் காட்டியுள்ளேம். அவைகளுந் திருத்த முற்றனவோ? அல்லவோ? என்பதை அறிஞர்கள் நாடியுணர்வார்களாக. குறிப்புள் விளக்கப்படாதன சில `அரும்பத விளக்கம்' முதலியன என்பதன் கண்ணும் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டு நோக்கி உணர்க. இன்னும், "பெயரி னாகிய தொகையுமா ருளவே" என்னுந் தலையையுடைய சூத்திரத்துள் `தொகையும்' என்பதிலுள்ள உம்மைக்குச், சேனாவரையர் கொண்ட பொருளே பொருத்த முடையதெனவும், "ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவி" என்னுஞ் சூத்திர உரையுள், `தாம் வந்தார் தொண்டனார்' என்னும் உதாரணத்தில் `தாம் வந்தார்' என்பதே ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவிக் குதாரணமெனவும், `தொண்டனார்' என்பது இயற்பெயர் ஆரைக்கிளவி பெற்றுவந்ததெனவும், ஆசிரியர், "இரண்டா குவதே, - ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி" என அநுவதித்தது, பெற்றதன் பெயர்த்துரைக்குரிய பொருள் களிரண்டனுள் நியமித்தலில் வாராது பிறிதொன்றுபெறுதலில் வந்ததெனவும், "இறுதியுமிடையும்" என்னுந் தலையையுடைய சூத்திரத்துக்கும், "ஐயுங் கண்ணும்" என்னுந் தலையையுடைய சூத்திரத்துக்கும், "பிறிது பிறிதேற்றலும்" என்னுந் தலையை யுடைய சூத்திரத்துக்கும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூவரும் ஒரே கருத்தாகக் கொண்டபொருளே பொருத்தமுடைய தெனவும், நும் என்பது நீயிர் எனத் திரிந்தது என எழுத்ததிகாரத்திற் கூறிய ஆசிரியர், இவ்வதிகாரத்தில் `எல்லாம் நீயிர் நீ' என இயற்கைப் பெயரோடு நீயிரையுஞ் சேர்த்துக் கூறினமையின் நீயிர் என்பதே நும் எனத் திரிந்தது எனக் கோடலும் அவர்க்குக் கருத்து எனச் சேனாவரையர் கூறியதுபோல, யாமும் வினையியல் 19ஆம் சூத்திரக் குறிப்புள் உண்குவ என்னும் உதாரணத்தில் அகரம் விகுதி யெனக் கொள்ளாது, வகர அகரத்தை விகுதி யெனக் கொண்ட ஆசிரியர் `உண்குவம்' என்பதில் வம் என்பதை விகுதி எனக் கொள்ளாது அம் என்பதை விகுதி யெனக் கொண்டமை யின் உண்குவ என்பதிலும் அகரமாகவுங் கொண்டு அகர வீற்றினுள் அடக்கலாமென்பதும் கருத்தாகும் எனவும் கூறியுள்ளாம். இவற்றின் பொருத்தங்களையும் ஆராய்ந்து உணர்ந்து கொள்க. சேனாவரையர் உண்குவ என்பது அன்பெறாமையால் வகரமாகக் கொள்ளப்பட்டது என்றனர். உண்குவம் என்பதும் உண்குவனம் என அன் பெறுதற் கேலாமை காண்க. யாம் இவற்றை அச்சிடக்கொடுக்குமுன் எமக்குத் துணையா யிருந்து மிக நுட்பமாக இவற்றைப் படித்துப் பார்த்து நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்துஞ் சில திருத்தியும், அவசியமன்றென எம்மால் விளக்காது விடப்பட்டவற்றுள் மாணாக்கருக்கு விளங்காவென்று கண்டன சில தாமும் விளக்கியும் பலவாறு துணை புரிந்த திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைத் தமிழாசிரியரும், எம் ஆசிரியருளொருவராகிய சுன்னாகம், அ. குமார சுவாமிப் புலவரவர்களிடங் கற்று விற்பத்திமானாய் விளங்குபவருமாகிய, பண்டிதர் ஸ்ரீமான் சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு யாஞ் செய்யக்கிடந்த கடப்பாடு யாதென அறியேம். அவர்களுடைய நற்சிந்தையும் நுண்ணறிவும் எம்மால் என்றும் பாராட்டப்படத் தக்கன. இன்னும் பிள்ளையவர்கள் இவ்வுரை விளக்கக் குறிப்பை யச்சிட்டு வெளிப்படுத்துவிக்கவேண்டுமென்னும் அவாவினால் தமது நண்பர்களானும், மாணாக்கர்களானும் அவரவர்க்கியன்ற பொருளும் உபகரிப்பித்தார்கள். உபகரிப்பித்த அவர்களுடைய தமிழ்ப்பற்றும் நற்சிந்தனையும் எவர்க்கும் பெறலரியவாகும். இவ்வுரை விளக்கக் குறிப்பை அச்சிடுதற்கு உதவியாக வட மொழி தென்மொழிப் பயிற்சியுடையவரும், சைவாகம போதகரும், திருநெல்வேலிச் சிவன் கோயிலர்ச்சகரும் தமிழ்ப் பற்றுடையவருமாய் விளங்கும் பிரமஸ்ரீ. சி. சபாபதிக் குருக்களவர்களும் அதிக உவப்போடும் ரூபா ஐம்பது உபகரித்தார்கள். குருக்களவர்கள் செய்த பேருபகாரம் என்றும் எம்மாற் போற்றற்பாலதாகும். இன்னும் இக்குறிப்பை யான் அச்சிடற் குதவியாக யாழ்ப் பாணத்திலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தர் சிலரும் ஆசிரியர்கள் பலரும் தத்தமக்கியன்ற பொருளை உபகரித்தார்கள். அவர்களுள்ளும் விசேடமாக, தென்மயிலை, `சேவையர்' ஸ்ரீமான் க. சின்னப்பு அவர்கள் ரூபா இருபத்தைந்தும், அளவெட்டி ஸ்ரீமான் பொ. அருணாசல ஆசிரியர் அவர்கள் ரூபா இருபத்தைந்தும் உதவி புரிந்தார்கள். பொருளுதவி செய்த ஏனையோர் பெயர்கள் பின்னர்க் காட்டப்படும். இவர்களுக்கெல்லாம் எம் நன்றி உரியதாகுக. இக்குறிப்பை அச்சிடற்கு மேலே காட்டப்பட்டவர் களுதவிய பொருளொழிய ஒழிந்தபொருளெல்லாம் `ஈழகேசரி' ப் பத்திராதிபர் ஸ்ரீமான் நா. பொன்னையபிள்ளை அவர்களே உதவிப் பதிப்பித்தார்கள். அவர்கள் செய்த பேருதவி எவர்களாலும் பாராட்டப் படத்தக்கதேயாம். இன்னும் அச்சிட்டபின் இக்குறிப்புகளைப் படித்துப் பார்த்துச் சில திருத்தமுங் காட்டி அன்போடு சிறப்புப்பாயிர முதவியவர்களாகிய, `உயிரிளங்குமரன் நாடக' ஆசிரியரும் கலாவிற்பன்னரும் கவிஞருமாய் விளங்கும் நவாலியூர் ஸ்ரீமான் க. சோமசுந்தரப்புலவரவர்களுக்கும், சுன்னாகம் அ. குமார சுவாமிப் புலவரவர்களிடம் கற்று விற்பத்திமானாய் விளங்குபவ ரும், கொழும்புநகர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியராயிருந்தவ ரும், உண்மை முத்திநிலை இதுவெனக் காட்டும் `வித்தக'ப் பத்திராசிரியருமாகிய பண்டிதர் ஸ்ரீமான் ச. கந்தையபிள்ளை அவர்களுக்கும், மட்டுவில் உரையாசிரியர் ஸ்ரீமான் க. வேற்பிள்ளையவர்களுக்குப் புதல்வரும், மாணாக்கரும், விற்பத்திமானும், கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரித் தமிழாசிரியருமாகிய பண்டிதர் ஸ்ரீமான் மகாலிங்கசிவம் அவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகும். இன்னும், திருநெல்வேலிப் பரமேசுவரக் கல்லூரிச் சமஸ் கிருத பண்டிதரும், வேதவிசாரதருமாகிய பிரமஸ்ரீ வி. சிதம்பர சாஸ்திரிகளும், யாழ்ப்பாணம் மத்தியகல்லூரித் தமிழ்ப் பண்டிதரும், வியாகரண மகோபாத்தியாயருமாகிய பிரமஸ்ரீ வை. இராமசாமிசர்மா அவர்களும் இவற்றுள் வரும் ஆராய்ச்சிகளின் பொருட்டு வடமொழியில் அறியவேண்டிய வற்றிற்கு உதவி செய்ததுமன்றிச் சர்மா அவர்கள் சில திருத்தமுங் காண்பித்தனர். அவ்விருவர்க்கும் எமது அன்பார்ந்த வணக்கம் உரியதாகுக. இவ்விளக்கவுரைக் குறிப்புகளைப் பிழைகள் நேரா வண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு நன்கிதாக எழுதியும், உதாரண அகராதி, விஷய அகராதி முதலியவற்றை எழுதியுமுதவிய எம் மாணவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக. யாமெழுதிய இக்குறிப்புகளெல்லாந் திருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகத் தோன்றுகின்றதாகலின். ஆதலால் இவற்றுள் வரும் பிழைகளைப் பேரறிஞர்கள் திருத்திக்கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை நோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பதிப்பில் வெளியிடுவோம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டேம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாகவுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின். இன்னும் பிழைகளை யறிவிக்குங்கால் இக்குறிப்புத் திருத்தமுற்றுத் தமிழ் மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுமென்பதற்கு ஐயமேயில்லை. யாம் எழுதிய வாக்கியங்களிலே எமது தேக அசௌக்கியங் காரணமாகச் சில பிழைகள் நேர்ந்தன. அவற்றைப் பிழை திருத்தத் திற் காண்பித்துள்ளேன். அத்திருத்தங்களை நோக்கித் திருத்திப் படித்துக் கொள்ளுமாறும் இன்னும் வரும் பிழைகளைத் திருத்திப் படித்துக் கொள்ளுமாறும் அறிஞர்களை வேண்டிக் கொள்கிறோம். குணம்நாடிக் குற்றமும் நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல் இக்கருமத்தைக் குறையின்றி முற்றுமாறு அருள்செய்த எங் குருபரனாக விளங்கும் விநாயகப்பெருமான் திருவடியை மனத்துள் நிறுவி வாழ்த்தி வணங்கும். இங்ஙனம், சி. கணேசையர். இரண்டாம் பதிப்பின் முகவுரை இச்சொல்லதிகாரத்தின் முதற் பதிப்பு யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் பரிசோதிக்கப் பெற்று, ராவ்பகதூர் ஸ்ரீமான் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களாற் பதிக்கப்பெற்ற பதிப்பைப் பெரும்பாலும தழுவி, யாமெழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும், ஏட்டுப் பிரதிகளை நோக்கி யாம் திருத்திய பல திருத்தங்களுடனும், `ஈழகேசரி' அதிபதி ஸ்ரீமான் நா. பொன்னையபிள்ளை அவர்களால் 1938ஆம் ஆண்டிலே பதிப்பிக்கப்பட்டது. பொன்னையபிள்ளை அவர்கள் விகிர்தி ஆண்டு பங்குனி மாதத்தில் தேகவியோகமடைந்த படியால், இதன் இரண்டாம் பதிப்பு, பொன்னையபிள்ளையின் பாரியாராகிய திருமதி மீனாட்சியம்மையாராற் பதிப்பிக்கப்பட்டது. இவ்விரண்டாம் பதிப்பிலே முன் திருத்திய திருத்தங்களை விட, பின்னுஞ் சில திருத்தங்கள் கீழ்க் குறிப்பாகக் காட்டப்பட்டும் சில உரைவிளக்கக் குறிப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு முள்ளன. அவற்றை அங்கங்கே கண்டுகொள்க. இன்னும், முன் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்ட அளபெடை முதலிய ஆராய்ச்சி யுரைகளோடு இப்போது பொருட்புடை பெயர்ச்சி என்னும் ஆராய்ச்சியுரை சேர்க்கப்பட்டுள்ளது. அதனையும் அறிஞர்கள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வார்களாக. முதற்பதிப்பிலே நேர்ந்த பல பிழைகள் இப்பதிப்பிலே திருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் அச்சுப்பிழைகள் வாரா வண்ணம் அச்சுத்தாள்களைப் பார்த்து உதவிய பண்டிதர், ஸ்ரீமான் வ. நடராசபிள்ளை அவர்களுக்கும், ஸ்ரீமான் மு. சபாரத்தினம் பிள்ளை அவர்களுக்கும் எமது அன்பும் நன்றியும் உரியதாகுக. இந்நூல் தொல்காப்பியனாராற் செய்யப்பட்டு, இடைச் சங்கத்திலும் கடைச்சங்கத்திலும் நூலாக வழங்கியதென இறையனார் களவியலுரை கூறவும், அதனை விடுத்து, சங்கஞ் சார்ந்த நூலென்றும், கிறிஸ்துவுக்கு முன் 300 ஆண்டு வரையிற் செய்யப்பட்டதென்றும், கிறிஸ்துவுக்குப் பின் 200 ஆண்டு வரையிற் செய்யப்பட்டதென்றும், ஆங்கிலங் கற்ற நிபுணர்களும், ஆங்கிலமும் ஆரியமுங் கற்ற டாக்டர் ஞ.ளு. சுப்பிரமணிய சாஸ்திரியாரும் தத்தமாராய்ச்சியிற் கூறுகின்றனர். இராமாயண நூல்களானே ஸ்ரீராமன் காலத்திலே இடைச்சங்கமிருந்ததாக அறியப்படுதலினாலும், முத்தமிழ் நூல்களும் சங்கப்புலவர்கள் செய்தார்கள் என்பது, இறையனார் களவியலுரையானும், சிலப்பதிகார உரை முதலியவற்றானும் அறியப்படுதலினானும், கிறிஸ்துவுக்குமுன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தென்பதும், பின் செய்யப்பட்டதென்பதும், எவ்வாறு பொருந்தும். அன்றியும் "ஐந்திர நிறைந்த தொல்காப்பியனெனத்" தொல்காப்பியப் பாயிரங் கூறலின் ஐந்திரம் வழங்கிய காலத்திலேயே, வடமொழியிலேயே, இசை நூல்களும் நாடக நூல்களும் இருந்து இறந்து பட்டிருக்கலா மாதலானும் பின்னுள்ள வடமொழி நூல்களைக் கொண்டு கால நிச்சயஞ் செய்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. இனித் தொல்காப்பியத்திலும் அதனுரையிலும் காணப்படும் தான், பேன், கோன், அழான், புழான் முதலிய இயற்பெயர்களும், "சுட்டுச்சினை நீடிய இகரவிறுதிக் குரிய" அதோளி, இதோளி, உதோளி முதலிய உதாரணச் சொற்களும் பிற்காலத்தில் வீழ்ந்தமைகொண்டும், இது மிகப் பழைய நூலென்பதறியப்படும். கடைச்சங்க நூலாகிய கலித்தொகையிலே இதோளி என்னுஞ் சொன்மாத்திரம் ஈதோளி என நீட்டல் விகாரத்துடன் காணப்படுகின்றது. அதனாலும்இதன் தொன்மை யறியப்படும். இங்ஙனம், சி. கணேசையர். சிறப்பு முகவுரை வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ்கூறு நல்லுலகின் வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொகுக்கப்பட்டது தொல் காப்பியம் என்று பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது. தமிழகத்தின் எல்லைகள் பற்றிய குறிப்புகளைத் தரும் தொன்மை மிக்க ஆதாரமாகவும் பனம்பாரனார் பாயிரம் திகழ்கிறது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாய்ப்பினைப் பெற்றோர் அல்லது வரையறுக்கப்பட்ட எல்லை களுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதோர் என்று வரலாற்றில் துறவிகள், புலவர்கள், வணிகர்கள் காணப்படு கின்றனர். துறவிக்கு வேந்தனும் துரும்பு; கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. துறவியும் புலவரும் வணிகரால் போற்றப்படுகின்றனர். துறவிகளுக்குப் படுக்கைகளை வணிகர்களே அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதைத் தொல்லியல் மற்றும் கல் வெட்டியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புலவர்களுக்குப் புரவலராக அரசர்கள் இருந்துள்ளனர். இன்னொரு நாட்டிற்குள்ளும் சென்று மக்களைச் சந்திக்கும் உரிமை துறவிகளுக்கு உண்டு. அதியமானுக்காக ஒளவையார் இன்னொரு நாட்டரசனிடம் தூது சென்றிருக்கின்றார். வணிகர்கள், வாணிகத்தின் பொருட்டுத் தம் நாட்டின் எல்லையைக் கடக்கிறார்கள். இன்னொரு நாட்டுடன் வாணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்குத் துறவிகளின் உதவியையும் புலவர்களின் அனுபவத்தையும் வணிகர்கள் பயன்படுத்திக் கொள்வர். வணிகத்திற்கு, வணிகர்களுக்கு இடம் தராமல் இடையூறாக இருக்கும் நாடுகளைக் கைப்பற்றித் தம் நாட்டு எல்லைகளை அரசுகள் விரிவுபடுத்திக் கொள்ளும் போலும். போர்களுக்குரிய காரணங்களில் வாணிகப்போட்டியும் ஒன்றாக இருந்துவருகிறது. கனகவிசயர் தமிழ் அரசர்களைக் குறைத்துக்கூறிய செய்தி புலவர்களாலேயே சேரன் செங்குட்டுவனுக்குத் தெரியவந்திருக் கிறது. எனவே நாடுகளும் ஆட்சி எல்லைகளும் வணிகத்திற்காகவும் செயற்கையாகவே கட்டமைக்கப்படுதலையும், செயற்கைக் கட்டமைப்புகள் அரசியல் வணிகக் காரணங்களாலேயே சிதைக்கப் பெறுவதையும் வரலாற்றில் காணலாம். ஆனால் மொழிவழி அமைவன இயற்கையான எல்லைகள். இயற்கையான எல்லைகளையும் அரசியல் வணிகக் காரணங்கள் மாற்றியமைக்கவே விரும்பும். அத்தகைய விருப்பம் நிறைவேற மேற்கொள்ளப்பெறும் நடவடிக்கைகள் மக்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கும் வரலாற்றின் பெரும்பகுதி மன அழுத்தம் மிக்க நிகழ்வுகளின் பதிவுகளே. பனம்பாரனார் குறிப்பிடும் எல்லைகள் மொழிவழியானவை. மக்களின் சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் வணிக நோக்கச் செயற்பாடுகளின் வேர்களே வெளிப்படுகின்றன. அவற்றின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் கூட வணிக நோக்கங்களே வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்கூறு நல்லுலகத்தின் எழுத்தும் சொல்லும் பொருளும் அடங்கிய வழக்கும் செய்யுளும் தொகுக்கப்பட்டு, ஆய்ந்து தமிழ் இலக்கணமாகத் தொல்காப்பியம் உருவாக்கப் பட்டுள்ளதிலும் இத்தகைய கூறுகளைக் காணும் ஆய்வுகள் வர வேண்டும். தெளிவு உணர்த்திட உரையாசிரியர்களும், கால மாற்றத் திற்கேற்பக் கைவரப்பெறும் ஊடகத்திற்கேற்பப் பதிப்பாசிரியர் களும் தொல்காப்பியம் தொடர்ந்து கற்கப்பட உதவிவருகின்றனர். தமிழின் தொன்மையும் சிறப்பும் பெருமையும் தெரிந்திடத் தொல்காப்பியம் உதவுகிறது. மேலும் இன்றைய மொழியியல் ஆய்வாளர்களுக்கும் வியப்பைத் தருகிற மொழிசார் கூறுகளை நுட்பமாகவும் கொண்டிருக்கிறது என்பதும் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறது என்பதும் இனியும் வரும் கொள்கைகளுக்கு இடம் தருகிற வகைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதும் தொல்காப்பியத்தின் தனிப் பெருமைகளாகும். ஏடுகளிலிருந்த தொல்காப்பியத்தை மீட்டெடுத்து அச்சிட்ட பெருமை மழவை மகாலிங்கையருக்கு உரியது. அவர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் முதன்முதலில் வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு 1848இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தின் ஏனைய அதிகாரங்களும் அவற்றின் உரைகளும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தே வெளிவந்துள்ளன. சேனாவரையர் உரையுடன் சொல்லதிகாரத்தை 1868இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தார். 1882இல் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல் களுக்கு நச்சினார்கினியர் உரையும். அதன் எஞ்சிய நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு 1885இல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இவர் பதிப்பித்துள்ளார். பின்னர், தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் இவர் 1891இல் பதிப்பித்துள்ளார். அதன் பின்னர் மூலம் மட்டும் தனியாகவும் வந்துள்ளது. மூலமும் உரைகளும் தனித்தனியே வெளியிடப் பெற்றும் வந்துள்ளன. கையடக்க அளவிலும் தொல்காப்பியம் அச்சிடப் பெற்றுள்ளது. கூடவே தெளிவுரை, குறிப்புரை, எளிய உரை, மாணவர்க்கான உரை, பாடபேத ஆய்வு என இதுவரை நூற்றுக்கும் அதிகமான பதிப்புகள் தொல்காப்பியத்திற்கு வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளுக்குப் பின்பும் கூட, தொல்காப்பியத்தை முழுமையாக, முறையாக, இன்னும் அறிந்து கொள்வதில் இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. இவை தொல்காப்பியத்தின் சிறப்புப் பண்புகளாகவும் நோக்குதற்குரியன. தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியர் உரை மற்றும் அவருரை கிடைக்காத இயல்களுக்குப் பேராசிரியருரைகளை முழுமையாக வெளியிட்ட சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் பொருட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா பிள்ளை 1937இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டுவர விரும்பினார். அப்பதிப்பிற்கு அப்போது தமிழ் இலக்கண அறிவு மிகவும் கைவரப்பெற்றவராக இருந்த யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த சி. கணேசையர் உதவவேண்டும் என அவரை அணுகியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைக்கு மேலுமொரு விளக்கமாக உரையொன்றைச் செய்ய உடல் நலமின்மை காரணமாகச் சி. கணேசையரால் அப்போது இயலவில்லை. அந்நிலையில் அவர் கற்ற காலத்தும் கற்பித்த காலத்தும் குறித்தும் வைத்திருந்த குறிப்புகளை அப்பதிப்பில் சேர்க்க அனுமதித்துள்ளார். மேலும் அப்பதிப்பில் தொல்காப்பியர் வரலாறு, நச்சினார்க்கினியர் வரவாறு, உதாரண அகராதி, அரும்பத விளக்கம் முதலியவற்றின் அகராதி, தொல்காப்பிய முற்பதிப்புகளில் இடம் பெறாத மேற்கோள்விளக்கம், மற்றும் இணைப்பாக இடம் பெறக் கூடிய சில இலக்கணக் குறிப்புகள் போன்வற்றைத் தாம் எழுதியும் தம் மாணவர்களைக்கொண்டு எழுதுவித்தும் சேர்த்துள்ளார். இப்பதிப்பில் தொல்காப்பியம் ஏட்டுப்பிரதிகளை ஒப்புநோக்கி சி. கணேசையர் திருத்திய பல திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றால் இப்பதிப்பு "கணேசையர் பதிப்பு" என்றே சிறப்புடன் அழைக்கப்படுகிறது. உரையாசிரியர் காட்டியுள்ள மேற்கோள் பாடல்களின் அருஞ் சொற்களுக்கும் கணேசையர் பொருள் தந்துள்ளார். மூலபாடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவற்றை மதிப்பிட்டும் இவர்தம் உரை விளக்கக் குறிப்புகளில் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணேசையர் பதிப்புகளாகிய, தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றின் மறுபதிப்புகளை இப்போது வெளியிடுகிறது. இந்நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்நிறுவனத்தின் தோற்றம் முதல் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிறுவனத்தை வளர்த்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இத்தகைய பணிகளால் நிறுவனம் நன்றி செலுத்துகிறது. நிறுவனப் பணிகள் விரைவாகவும் நிறைவாகவும் அமைய ஒல்லும் வகையான் உதவி நல்கி ஆற்றுப்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செயலாளர், முனைவர் கி. இராச மாணிக்கம் (இ.ஆ.ப - ஓய்வு) அவர்களுக்கு நன்றி. நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் சிறப்பு ஆணையர் மற்றும் தமிழ் வளர்ச்சி இந்து சமய அற நிலையத்துறை மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திருமிகு து. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கும், இவ்வெளியீட்டிற்கு அரிய நூல் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அச்சிட நிதி நல்கிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கும், இந்நூலின் ஒளி அச்சுக் கோப்பைச் செய்தும் அச்சிட்டும் அளித்த தி பார்க்கர் நிறுவனத் தார்க்கும் நன்றி. - முனைவர் ம. இராசேந்திரன், இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007) தரமணி, சென்னை - 600 113 சிறப்புப்பாயிரம் ("உயிரிளங்குமரன்" நாடக நூலாசிரியர் நவாலியூர், திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்கள் இயற்றியது) நேரிசையாசிரியப்பா தேன்முகம் பிலிற்றுஞ் செய்யபங் கயத்து நான்முக னறியா நளிர்மதிச் செஞ்சடை வானக மகளிர் மங்கலங் காத்த போனகம் பொதிந்த புதுமணிக் களத்துத் 5. திரிபுர மெரித்த வருடவழ் சிறுநகை பெருமால் கொண்டு நெடுநில மகழ்ந்துந் திருமால் காணாத் திருந்திய சேவடித் திலக வாணுதற் சேயிழை பகிர்ந்த வுலகுபொதி யுருவத் துயர்ந்தோ னொருகால் 10. கடுக்கை மாற்றிக் கடிப்பகை சூடி யானே றகற்றி மீனே றுயர்த்திச் சடைமுடி மறைத்து மணிமுடி தாங்கி யிடப்பாற் பிரிந்த மடக்கொடி யுடனே யறப்பாற் றனியர சாண்டது மன்றி 15. யிருவினை துடைக்கு மெண்ணான் கிரட்டி திருவிளை யாடல் செய்தருள் சிறப்பிற் றிங்கட் டிருக்குலத் தென்னவன் சீர்பொலி மங்கலப் பாண்டி வளநா டதனிடைத் தொன்னாள் நிறுவிய துறைமலி சங்கத் 20. தந்நாள் வீற்றிருந் தாய்ந்திடு முதல்வன் விந்தமுங் கடலு மேதக வொடுங்கச் சுந்தரச் செங்கை துளக்கிய வாய்மைச் சந்தனப் பொதியத் தவமுனி தனாது சாயா வாணை தலைத்தலை தாங்கிய 25. தேயா நல்லிசைச் சீடர்பன் னிருவருட் பல்காப் பியக்கலை பழுநிய முதன்மைத் தொல்காப் பியரருள் தொன்மைநன் னூற்கு முற்படு ஞான முதுமொழி மெய்ந்நூல் கற்பவை யெவையவை கற்றுணர்ந் தடங்கி 30. வளம்பூ ரித்த விளம்பூ ரணருங் கச்சங் கடந்த கலைமலி காட்சி நச்சினார்க் கினியரு நானில மருங்கி னெழுத்துக் களித்த விழுப்பொரு ளவற்றுட் பின்னவ ரெழுதிய பேருரை கற்புழி 35. மன்னிய குறிச்சி மானென மாணவர் நின்றிடர் கூரு நிலைமையை நோக்கிக் கன்றினுக் கிரங்குந் தாயினிற் கசிந்து நன்றவர் புலங்கொள நன்கன நாடி யுரைக்குரை காட்டி நெறிப்பட விளக்கி 40. முன்னா ளுதவிய முறைபோ லிந்நா ளானாச் செந்தமி ழாரிய நூற்கடல் சேனா வரையர் செய்தசொல் லுரைக்குப் பொய்யாப் புலமைப் பூரணர் நச்சரும் ஐயமில் காட்சித் தெய்வச் சிலையரும் 45. பல்லோர் பழிச்சுங் கல்லாட னாரு மருளிய நல்லுரைப் பொருளொடு பொருந்த முன்னூ னவின்ற முறையினா ராய்ந்தே யிடர்ப்பா டகற்றிப் புலப்படு நீர்மையின் மன்னிய தமிழக வடதென் மருங்கிற் 50. பன்னூ னுனித்துப் பயனறி புலவரு மிந்நாட் பிணங்கு மிலக்கண நுண்பொரு ளொருதலை துணிய விரிவுற விளக்குழித் தன்கோ ணிறுத்திப் பிறன்கோண் மறுத்துக் `கடலமு தெடுத்துக் கரையியல்வைத் ததுபோ' ற் 55. சங்கச் செய்யுள் மேற்கோள் காட்டி அன்பா லறிஞர்க ளனைவரு மியாண்டும் பொன்போற் போற்றும் புத்துரை யாத்ததை யெழுதா வெழுத்தி லெழிலுற வேற்றுவித் தழியாப் பெருநிதி யாருயிர்க் கீந்தனன் 60. மணிநீ ரிலங்கை யணியிழை தனாது முழுமதி முகமென விழுமியோ ருரைக்குஞ் சீரியாழ்ப் பாணத்துச் செந்தமிழ் மொழியு மாரிய மொழியு மழகுடன் வாழ வன்னக் கதலியு மாவும் பலாவுஞ் 65. செந்நெற் கழனியுஞ் சேர்ந்துதலை மயங்கிய புன்னைமா நகரம் பொலியவங் குரித்தோன் ஆசுக ளறுத்த வருந்தவக் காட்சிக் காசிப முனிவன் கால்வழி வந்தோன் முந்நூல் மார்பன் முதுமறை யந்தணன் 70. சின்னையக் குரிசில் செய்தவப் புதல்வன் சைவமுந் தெய்வத் தமிழுநன் கோங்க மெய்வளர் நல்லை மேவிய கலைக்கடல் நாவலர் பெருமான் பாலுணர் மருமான் பொன்னம் பலமெனும் புலவர் சிகாமணி 75. தன்னன் பகத்துத் தழைத்தமா ணாக்கன் தண்டாப் புலமை வண்டமி ழாசான் சுன்னைக் குமார சுவாமிதன் பாலு மன்னிநின் றாய்ந்து வளர்ந்த மாமணி அரச கேசரி யாக்கிய செந்தமிழ் 80. இரகு வமிசத் தின்னுரை கண்டோன் கோதிலா ஞானக் குசேலர்தங் காதையு மோதிய புலவ ருயர்வர லாறு முரைநடை காட்டிப் புரைதப வகுத்தோன் ஆடகக் குடுமி மாடம துரையி 85. னான்காஞ் சங்கத் தோங்கிய புலவன் திங்க டோறு மங்கண் வெளிவரு நந்தாச் சீர்த்திச் செந்தமிழ்த் தாளிற் கூறிய சிறுபொழு தாறென நிறுவியு மாறனு ருபுரு பேற்குமென் றமைத்து 90. மாகு பெயரு மன்மொழித் தொகையும் பாகுபா டறிகுபு பாரித்து விளக்கியு நல்லுரை பலவரை சொல்லுரை யாளன் எறியாழ் நகரி லிந்நா ளிலங்கிடு மாரிய திராவிட வவைக்களத் தறிஞன் 95. மேவுமைம் மூன்று வற்சரம் விரிந்த காவியக் கழகக் கலைத்தலை யாசான் அவநெறி யகற்றுஞ் சிவநெறி யொழுக்கமு மரனடிப் பற்று மடியவர்க் கன்பும் புலனெறி யடக்கமும் பொருந்திய புண்ணியன் 100. பூவல யத்துப் பொருளறி புலவர் நாவினும் பாவினு நாடொறு நவிலுங் கற்புறு கணேசைய னென்னு மற்புத நாமத் தருந்தவத் தோனே. ("வித்தக"ப் பத்திராசிரியர் தென்கோவை, பண்டிதர் ச. கந்தையபிள்ளையவர்கள் இயற்றியது) ஆசிரியப்பா பூநீர் தீவளி வானெனப் புகலும் ஐந்திணை மயக்கா னமைந்ததிவ் வுலகே! ஓங்காரி யான வுமையவ ளன்றோ ஆங்காரி யாகி ஐவரைப் பெற்றனள்! 5. "அந்தணர் மறை" யெனு மரியதத் துவமாய் வியாப்பிய மாகி மேவுமா ரியமாம் மகாரத்து நின்று விசர்க்கமென மரீஇ மாவென விரிந்து மலர்ந்தவிப் பவஞ்சம் சொற்பொருள் வடிவாய்த் துலங்கிடு மன்றோ! 10. வியாப்பிய ஆரியங் கௌணமாய் மேவிட வியாபக மாகி மிளிருமற் றிதுவே தமிழ்எனச் சாற்றினர் தத்துவப் பெரியார் இயற்கைநன் னெறியா வியம்புகுரு நெறியால் நிறைமுறை தழீஇ நின்றுழி யிதுவே! 15. அமிழ்த மாகி யமைதரு மன்றோ! தமிழ்அமிழ் தேயெனச் சாற்றுபொரு ளிதுவே ஒலிகட் கெல்லா மொருபிறப் பிடமாய் நாத பீடமெனும் வேத வந்தமாய் அன்னதை யணவு மாரிடர் தம்மால் 20. அறிந்திடு மறையாய்ச் செறிந்துள தடமாம் "அந்தணர் மறை" யை யநுபவத் துணர்ந்து வேத வந்தமாய் விளங்குமெய் யீறும் சித்தி னந்தமெனத் திகழுயி ரீறும் சமரச மாகத் தமிழை யமிழ்தாக்கி 25. வேதாந்த சித்தாந்த சமரச மிளர்தர அமிழ்த வடிவென வருமறை முழங்கும் முன்னிலைப் பிரமந் தன்னிலை யாக நித்தியம் பெறீஇய தத்துவப் பெரியராம் அகத்தியர் அனைய வருந்தவச் சித்தரே! 30. வியாப்பியம் பிரதம கலையென மேவ உபய கலையா யொலிவரி வடிவாய் வியாபக மாகி விளங்குதமிழ் கண்டு எழுத்துச் சொற்பொரு ளியலுற வுணர்ந்தோர்! ஆதலி னன்றோ மேதகு புலவனாம் 35. ஒல்காப் பெரும்புகழ் தொல்காப் பியனும் எழுத்தி னிலக்கணம் வழுத்தப வுணர்த்துதல் தனக்கிய லாதெனத் தன்மதிப் பொலிவால் "அந்தணர் மறைத்தே" யென் றமைந்தனன் மன்னோ! "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" வென 40. உரைத்தது மீங்கிதற் குறுசான் றாமே! எல்லாச் சொல்லும் பொருளுடைத் தெனினும் வாய்மையே போலி யாகிமன் னிடலால் வாய்மையின் பெயரே போலியும் பெறலால் மாயையி னீர்மையு மதுவா தலினால் 45. மாவெனப் பூத்த ஐயெனு மாயையின் மாழாந்து நாளும் வருந்துபு மாளும் சீவர்கள் வாய்மையின் றிறன் றெரிகிலரே! எழுத்திய லதனிற் பழுத்தநல் லறிவால் மெய்யுயி ரொருமை கைவரத் தெரித்தே 50. ஏனைய வோத்தினும் யாமினி துணர இந்துமத வுண்மை யியல்பெற வுணர்த்திய புலவன் மாண்பு புகலவும் படுமோ! இன்னன `வேத' வுண்மைகள் மலிந்தவித் தொல்காப் பியமெனுந் தொல்லிய னூலுக் 55. குலகியற் கொப்பக் குலவுநல் லுரைகள் கண்டனர் பலரே! பண்டைய விந்நூற் சொல்லதி காரக் கொல்லும் வகையால் சேனா வரையனார் செய்திடு முரையே திட்ப நுட்பந் திகழுநன் னடையான் 60. இயன்றதெனப் போற்றுவ ரியற்றமிழ் வாணர்! அன்னபே ருரையி லமைந்தநுண் பொருளை மயக்கமற விளக்கி மற்றையோ ருரைகளும் ஒப்பு நோக்கி விகற்பமு முணர்த்தி ஒருதலை துணிந்துந் தன்மத நிறுவியும் 65. குறிப்புரை யறிஞர் குறிக்கொள வரைந்தே மாணவர் குழாமு மருவுமா சிரியரும் யாவரு மெளிதி னுணர்தர விரிவான் உதவிய புலவ னுவன்யா ரெனினே! புனிதஐ இலங்கும் புகலிடந் தெரிக்கும். 70. இலங்கைப் பெயரிய வீழமண் டலத்தின் சிரமெனத் திகழ்ந்து பரவுசெந் தமிழின் யாணர றாதயாழ்ப் பாணமாந் தேயத்துப் புன்னையம் பதியினன்; மன்னிய காசிப கோத்திரத் துதித்த குலநல முடையோன்; 75. இத்தலம் புகழும் வித்துவன் மணிகளாம் நல்லூர் ஆறுமுக நாவலன் மருகன் பொன்னம் பலவனாம் புலவன் பாங்கரும் என்போல் வார்பலர்க் கியற்றமிழ் தெரித்த சுன்னைக் குமார சுவாமிப் புலவனும் 80. தோன்றறன் பாங்கருந் தொன்மைசா லிலக்கண இலக்கிய நூல்பல வினிதுகற் றுணர்ந்தோன்; தொல்காப் பியமுந் தொல்காப் பியங்களும் மாணவர் பலர்க்கு வரன்முறை பயிற்றிய பீடுசா லநுபவப் பெற்றிகை வந்தோன்; 85. இலக்கண வுணர்ச்சிய னித்தமி ழகத்தே இணையிலா துயர்ந்த வியற்றமிழ்க் குரிசில்; தமிழொடு சமக்கிருத சாகரங் கடந்த புரசை மால்களிற் றரசகே சரியெனும் அரசிளங் குமர னமைத்தகாப் பியமாம் இரகுவம் மிசத்துக் குரைகண்ட விபுதன்; 90 மதுரைச் சங்க மருவுசஞ் சிகையாம் "செந்தமிழ் " இதழிலுந் திருநந்தி யாணையால் புதுவையிற் றோன்றிப் புராதன சைவ முத்திநிலை நாட்டும் "வித்தக" விதழிலும் தமிழறி வோங்கத் தன்மதிப் பொலிவால் 95. கட்டுரை வரைந்த கல்வி யாளன்; என்பா னண்பு பண்புறக் கொண்டோன்; விழுப்பமார் குணனு மொழுக்கமு மமைந்து முத்தி வாயிலென வேதநூன் முழங்கும் விக்கிந விநாயக விழுப்பே றளிக்கும் 100. கணேச னடிமலர் கனவினு மறவாக் கணேசையப் பெயர்கொளுங் கவிஞ ரேறெ இன்னகுறிப் புரையோ டிந்நூ லுரையினை எழிலுற வச்சிட் டியாவர்க்கு முதவும் "ஈழ கேசரி" யிதழுக் கதிபனாம் 105. பொன்னைய நாமன் புகழுமருங் குரைத்தே! (கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் மட்டுவில் பண்டிதர், திரு.வே. மகாலிங்கசிவம் அவர்கள் இயற்றியது) பதினான்குசீராசிரியவிருத்தம் மணிவளர் மிடற்றுக் கடவுள்பொன் னடியை மறக்கலாக் காசிப முனிவன் வழிவரு புனிதச் சின்னைய சுகுணன் வளர்தவத் தருள்புரி மறையோன் அணிவளர் தமிழ்நூற் பரப்பெலாங் குசைநுண் மதியினா னாய்ந்தமிழ் தெனவே அருந்தமிழ்ப் புலவோர் விருந்தென நுகர வளவிலாப் பொருளுரை வரைந்தோன் நணிவளர் புலமை யீழநாட் டறிஞர் நமக்கொரு நாயக மெனவே நயந்தினி தேத்தும் பருணித கணேச ஞானசூ ரியனிலக் கணநூற் றுணிவளர் தருதொல் காப்பிய வுரையிற் றுறுமுநுண் பொருளிரு ளகன்று துலங்குற விளங்கிச் செம்மைசெய் தனன்பொன் னையனாந் தோன்றல்வேண் டிடவே. தொல்காப்பியத்தின் றொன்மை தொல்காப்பியமெனப் பெயரிய இவ்விலக்கணநூல் தமிழிலே மிகப் பழைமை பொருந்தியதொரு நூலாகும். இது முதற்சங்கத் திறுதியிலே செய்யப்பட்டு இடைச் சங்கத்திற்கும் கடைச் சங்கத்திற்கும் இலக்கணமாக வமைந்தது என்பர். இடைச் சங்ககால நூல்களாய்க் கடல்கொள்ளாது எஞ்சிக் கிடந்தவற்றுள் இஃதொன்றுமே இப்பொழுதும் வழங்குவது இந்நூலை இயற்றி னார் அகத்தியரின் முதன் மாணாக்கராகிய தொல்காப்பியனா ராவர். தொல்காப்பியனார் அகத்தியரின் முதன் மாணாக்க ரென்பது, பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகட லடக்கி மலயத் திருந்த இருந்தவன் றன்பா லியற்றமி ழுணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவ னாகிய தொல் காப்பியன் என அகப்பொருள் விளக்க நூலார் கூறுமாற்றானும், அகத்தியர் தென்றிசைக்கு வரும்போதே தொல்காப்பியரை (திரணதூ மாக்கினியாரை)ச் சமதக்கினிமுனிபாற் பெற்றுவந்தாரென்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினார்க்கினியர் கூறுதலானும் அறியப்படும். இராமபிரானாலே சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட அனுமன் முதலிய குரக்குவீரர் தென்றிசை நோக்கிச் செல்லுங்கால் பாண்டி நாட்டில் இடைச்சங்க மிருந்த கபாட புரத்தையுங் கண்டு போனாரென்று வான்மீக ராமாயணங் கூறுதலானும், இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் முதலாயினார் என்று நூல்கள் கூறுதலினானும், இராமர் காலத்துக்கு முன்னுமிருந்த பரசுராமர் சமதக்கினியின் புதல்வரென்று நூல்கள் கூறுதலானும், தொல்காப்பியரும் சமதக்கினி புதல்வரென்று தொல்காப்பியப் பாயிரங் கூறுதலினானும் தொல்காப்பியர் இராமர் காலத்திற்கு முந்தியே யிருந்தவர் என்பது துணிபாகும். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் தமது சண்முக விருத்தியுள் "இந்நூலை அதங்கோட் டாசிரியற்குக் காட்டிய காலம் வரையறையா னித்துணைத்தென வறியப்படாவிடினும் பாண்டிய நாட்டைக் கடல்கொள்ளு முன்னர்த் தென் மதுரையில் அரங்கேற்றப்பட்டமையானும் அந்நாட்டைக் கடல் கொண்ட பின்னர்க் கபாடபுரத்துச் சங்கமிருந்த காலத்தே இராம னிலங்கை சென்றமையானும் அதன் காலத்துக்கு முன் என்பது தேற்றமாகலின்" என்று கூறிப்போதல் காண்க. இதனால், தமிழர்களுடைய கணிதப்படி தொல்காப்பியஞ் செய்யப்பட்டுப் பல ஆயிரமாண்டுகள் சென்றன என்று சொல்லலாம். தொல்காப்பியரைப் பற்றிய உண்மைச் சரித்திரங்கள் கிடை யாமையினால் அவர் காலத்தை வரையறுக்க முடியவில்லை. இக்காலத்தில் சரித்திர ஆராய்ச்சியாளர் தமிழர்களுடைய கணிதங்களை ஒப்புக்கொள்கின்றிலர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தாமே முதலில் அச்சிட்ட ராவ்பகதூர், சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தாமெழுதிய தொல்காப்பியப் பொருளதிகார முகவுரையுள் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் பன்னீராயிரமாண்டுகள் வரை ஆகும் என்று எழுதியுள்ளார்கள். மானிப்பாய் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் தமது அபிதானகோச மென்னு நூலுள் "இதுவே தலைச்சங்கமாக நெடுங்காலம் நிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிருந்த தென்மதுரை கடல் கொள்ளப் பட்டழிந்தது. இதுமாத்திரமன்று, குமரியாற்றின் தெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற் கொள்ளப்பட்டன. இப்பெரும் பிரளயம் வந்தகாலத்தை ஆராயுமிடத்து அது துவாபர கலியுக சந்தியாதல் வேண்டும். யுக சந்தியாவது, யுக முடிவுக்கு ஐயாயிர மாறாயிரம் வருஷ முண்டென்னு மளவிலுள்ள காலம். ஒவ்வோர் யுக சந்தியிலும் பிரளயமொன் றுண்டாகுமென்பது புராண சம்மதம். ஆகவே, தென்மதுரை அழிந்தகாலம் இற்றைக்குப் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன்னராதல் வேண்டும். இற்றைக்கு 11481 வருஷங்களுக்கு முன்னர் ஒரு பிரளயம் வந்து போயதென்றும் அப் பிரளயத்தால் இப் பூமுகத்திலே சமுத்திர தீரஞ் சார்ந்த நாடு களெல்லாம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூபம் பேதித்துத் தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும், "போசிடோனிஸ்" முதலிய தீவுகள் சமுத்திர வாய்ப்பட்டழிந்ததும் அப் பிரளயத் தாலேயாம் என்றும் "அத்திலாந்தி" சரித்திரமெழுதிய `எல்லியட்' என்னும் பண்டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம்" என்று கூறினர். இவர்கள் கூறுவதும் உண்மையன்றென மறுத்து இப்பொழு துள்ள ஆராய்ச்சியாளர் சிலர் தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுவரையாகும் என்பாரும் நாலாயிரம் ஆண்டு வரை ஆகும் என்பாரும் இன்னும் பலபடக் கூறுவாருமாயினர். அவர்கள் அங்ஙனம் வரையறுத்தற்குக் காரணம், ஆரியருள் அகத்தியரே முதலில் தென்னாடு வந்தாரென்றும், அவர் வருதற்கு முன் ஒரு பூகம்பம் நடந்ததினால் கடல் வற்றியும் விந்தமலை கீழடங்கியும் விட்டமையினால் பூமி இப்போதிருக்கு நிலைக்கு வந்ததென்றும், அக்காலத்தேதான் அகத்தியர் தென்னாடு வந்தா ரென்றும், கடல் வற்றியதையும் விந்தமலை கீழடங்கியதையுமே, அகத்தியர் கடலைக் குடித்தாரென்றும், விந்தமலையை அடக்கித் தென்னாடு வந்தாரென்றும் புராணகாரர் கூறியதென்றும் கருதினமையே. ஆரியரும் தமிழரும் ஆகாயவிரதத்திற் சென்றார்கள் என்று புராணங் கூறியதை நம்பாத ஐரோப்பியர் இப்போது பல ஆகாய விமானங்களில் செல்கிறார்களல்லவா? ஆகையால் புராணங் கூறும் ஏனைய சரிதங்களின் உண்மைகளையும் அவர்கள் நம்புங் காலத்தை நாம் எதிர்பார்த்திருப்போமாக. இனிச் சிலர் `ஐந்திர முணர்ந்த தொல்காப்பியன்' எனத் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், வியாகரண காலத்தை அடுத்தே தொல்காப்பியஞ் செய்திருக்க வேண்டுமென்பர். வியாகரண காலமென்று அவர் கருதுங் காலம், பாணினி வியாகரணமும் அதனுரைகளுமெழுந்து பிரசித்திபெற்ற காலத்தையே குறிக்குமன்றி ஐந்திர வியாகரண காலத்தைக் குறியாது. ஐந்திர வியாகரணத்தை இராமன் காலத்திருந்த அனுமன் சூரியனிடம் கேட்டறிந்தானென்று இராமாயணங் கூறுதலின், ஐந்திர வியாகரணம் மிகப் பழைமையுற்றது என்பது அறியப்படும். வேதமொரு நாலுடன் விளங்கிய சடங்கமும் விரிந்தகலையும் ஓதநிலை வீதிமிசை யேழுபரி பூணருண னூரவிரைதேர் மீதுசெலும் வெங்கதிர வன்றனொ டயிந்திரவி யாகரணமும் ஓதியொரு நாளினி லுணர்ந்தனனிம் மாருதி யுயர்ந்தபுகழோய் என்பது இராமாயணம். அத்தகைய ஐந்திர வியாகரணத்தையே இராமனுக்கு முன்னிருந்த தொல்காப்பியரு முணர்ந்தாராதலின், அது கொண்டு தொல்காப்பியர் வியாகரண காலத்தவராதலின் அவர் காலமும் அக்காலமேயென்று உரைத்தல் கூடாது. *பாணினி காலம் கி.மு. 900 ஆண்டுகளுக்குமுன் என்று சி.வி. வைத்தியர் (எம்.ஏ; எம்.எல்.பி.) என்பார் தமது வேதகால சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலில் கூறியிருக்கிறார். "ஐந்திரமுணர்ந்த தொல்காப்பியன்" என்பதே பாணினி காலத்துக்கு மிக முந்தியிருந்தார் தொல்காப்பியர் என்பதை உணர்த்தும். ஆதலினாலும் தொல்காப்பியர் வியாகரண காலத்தவரல்ல ரென்பது துணியப்படும் என்க. கடைச்சங்கம் இருந்தே நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்று கூறுவாருமுண்டு. இவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்து துணிதல் முடியாதெனினும் தொல்காப்பியம் கடைச் சங்க காலத்துக்கு மிக முற்பட்ட பழையதொரு நூலாகும் என்பதை மாத்திரம் துணிந்து கூறலாம். என்னையெனின்? தொல்காப்பியர் நூல்செய்த காலத்து வேதங்கள் இருக்கு முதலியனவல்ல. அவை வியாசராற் பிற்காலத்துப் பகுக்கப்பட்டன என்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினார்க்கினியர் கூறுவதினானும், தொல் காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற்களும் பொருள்களும் கடைச்சங்க நூல்களுக்கு முன்னேயே வழக்கில் வீழ்ந்தன என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுதலினானும் என்க. தொல் காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற்களும் பொருள்களும் வீழ்ந்தமையை இங்கே எடுத்துக்காட்டுதும்:- எழுத்ததிகாரம் தொகைமரபில் வரும் சுட்டுமுத லாகிய விகர விறுதியும் எகர வினாவி னிகர விறுதியும் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் என்னுஞ் சூத்திரத்து சுட்டுமுத லிகர விறுதிக்குக் காட்டிய அதோளி இதோளி உதோளி என்னுமுதாரணங்களுள் இதோளி (ஈதோளி) ஒழிந்தன கடைச்சங்க நூல்களுட் காணப்படாமை யானும், சுட்டுச்சினை நீடியவையெ னிறுதிக்குரிய உதாரணங் களும், "அழனே புழனே" என்னுஞ் சூத்திர உதாரணங்களும்; இறந்தன என்று "கடிசொல் லில்லைக் காலத்துப் படினே" என்னுஞ் சூத்திரத்து இளம்பூரணரும் மற்றைய உரையாசிரியர் களும் உரைத்தமையானும், பொருளதிகாரத்துக் களவியலில் வரும் 116-ம் 117-ம் சூத்திரங்களுள்ளும் சிலதுறைப் பொருள் களுக்கும், கற்பியலில் 146-ம், 165-ம், 179-ம் சூத்திரங்களுள்ளும் சில துறைப் பொருள்களுக்கும், உவம இயல் 31-ம் சூத்திரத்துக்கும் உதாரண மில்லை என்று நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தலினாலும் உணரப்படும். இன்னும் செய்யுளியலுள், "வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா" என்னுஞ் சூத்திர உரையுள் தேமா புளிமா என்னும் நேரீற்று இயற்சீர் இரண்டும் வஞ்சிப் பாவினும் அடியீற்றினில்லா என்னு முரையாசிரியருரையே சூத்திரப் போக்கிற்கேற்ற உரையாகவும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இறுதி என்பதற்கு இறுதல் என்று பொருளுரைத்து, முதற்கண் தூங்கலோசைப்பட்டு நில்லா என்று கருத்துக் கொண்டு, `கொற்றக் கொடி உயரிய' `களிறுங் கதவெறிந்தனவே' என உதாரணங் காட்டி, இவை தூங்க லோசைப் பட்டு நில்லாமை கண்டுகொள்க என்றும், இறுதியிலே "மண்டிணிந்த நிலனு, நிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும்" என அவ்விருசீரும் பெரும்பான்மை வருதலின் இறுதியில் நில்லா என்று பொருள் கூறல் பொருந்தா என்றும் கூறுவர். ஆயின், கடைச்சங்க நூல்களுள் இறுதியில் வருதல்பற்றி இறுதி நில்லா என்பதற்கு அவ்வாறு பொருள் கூறலினும் உதாரணமில்லை என்றலே பொருத்தமாம். கடைச்சங்க நூலுள் இறுதியில் வருதலைக் காலத்துட்பட்ட தெனலாம். ஆதலினாலும், செய்யுளியல் 80-ம் சூத்திர உரையுள் பேராசிரியர், "ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒருகாலத்து வராதாகலும் பொருள் வேறுபடுதலு முடைய. அதொளி இதொளி உதொளி எனவுங் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை முற்காலத்துளவென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல்செய்த காலத்துளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர்; அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலி னென்பது" என்றும், நச்சினார்க்கினியரும் அச்சூத்திர உரையுள் - "அதோளி, இதோளி, உதோளி, குயின் என்றாற் போல்வன இடைச் சங்கத்திற் காகாவாயின. `அட்டானானே குட்டுவன்' (பதிற்றுப்பத்து ரு, எ) `உச்சிக் கூப்பிய கையினர்' (திருமுருகாற்றுப்படை) என்றாற் போல்வன கடைச்சங்கத்திற் காயின சொற்கள் இக்காலத்திற் காகாவாயின" என்றும் உரைத்துள்ளார்கள். ஆதலினாலும் உணரப்படும். (பேராசிரியர் கடைச்சங்கத்திற் காகா வாயின என்று கூறலின் நச்சினார்க் கினியரும் அவ்வாறே கூறியிருப்பர் என்பது எமது கருத்து.) "கடைச் சங்கத்திற்காயின இக்காலத்திற் காகாவாயின" என்று கூறலானும் "கடைச் சங்கத்திற் காகாவாயின" என்றே கூறியிருக்க வேண்டுமென்பது பெறப்படும். இன்னும் மரபியலில், மூங்கா முதலியன: `பறழெனப் படினு முறழாண்டில்லை' என்னுஞ் சூத்திரத்தின் கண்ணும் அவை இக்காலத்து வீழ்ந்தன என்று பேராசிரியர் கூறலானும் உணரப்படும். இங்ஙனம் ஒருகாலத்து வழங்கிய சொற்கள் ஒருகாலத்து வீழ்தற்கு எத்துணைக்காலஞ் செல்லும் என்பதை நாம் உற்றுணருவோ மாயின் அதன் றொன்மையும் நம்மாலுணரப்பெறும் என்க. சி. கணேசையர் கணேசையர் அடிக்குறிப்புகள் * இதனை, ஆங்கிலத்தினின்றும் பெயர்த்து உதவினார் வண்ணார் பண்ணை, `கலா நிலையம்' ஸ்ரீமான் மு. நவரத்தினம்பிள்ளையவர்கள். விசேடக்குறிப்பு (சிறப்புக் குறிப்பு) இவ்வுரையை அச்சிட்டபின், சென்னை ஓரியண்டல் லைப்ரரியில் உள்ள கல்லாடனாருரைக் கையெழுத்துப் பிரதியில் "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற சூத்திரவுரை யை இப்போது அங்கு வசிக்கும் எம்முடைய மாணவ ரொருவரால் எழுதுவித்துப் பார்த்தபோது, அவ்வுரையுள், "மற்றசை நிலையிடைச் சொற்கள் பொருளுணர்த்தாவா லெனின், அவையு மொருவாற்றாற் சிறுபான்மை பொருளுணர்த்து மெனவுணர்க. அல்லதூஉம் இது பெரும்பான்மை" எனக் காணப்படுகின்றது. பெரும்பான்மை என்றலால், அவை பொருளு ணர்த்தா என்பதும் கல்லாடனார் கருத்தென்பது பெறப்படினும், இச்சொல்லதிகார முதற் சூத்திரத்துக்கு இவருரைத்த உரையுள் வரும். `எழுத்தலோசையும்... ஆராயப்படுகின்றது என்ற வாக்கியத்துள் வரும் `பின்னின்றவிரண்டும் இவ்வதிகாரத்தாராயப் படுகின்றது' என்பது `பின்னின்ற விரண்டனுள் முன்னையதே இவ்வதிகாரத் தாராயப்படுகின்றது' என்றிருப்பின் மிகப் பொருத்தமாகு மென்பது எமது கருத்து. இன்னும், எச்சவியல் 414ஆம் சூத்திர உரையுள் `போல' என்பது குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும், "குறிப்பு" என்பது, `அவைபற்றி (வினையும் வினைக்குறிப்பும் பற்றி)... விரித்தற்கேற்புடைமை அறிக' எனப் பின்வருதலை நோக்கும் போது, இல்லாம லிருப்பது பொருத்தமாகும் என்பதும் எமது கருத்து. சி. கணேசையர் சொல்லதிகாரம் ‘எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என மேற்பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய ஆசிரியர் இப்படலத்தால் சொல்லிலக்கணங் கூறுகின்றார். அதனால் இது சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது முற்கூடிய எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாம். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினாலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடியொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாம் இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தினாலாக்கப்பட்டு இருதிணைப் பொருள்களையும் அறிவிக்கும் ஓசை யென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிறபொருளை யுணர்த்தியவழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் உரையாசிரியர் கூறுவர். ஒருவர் பொருளை உணர்தற்கும் உணர்த்தாற்கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதியுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளையுணர்த்துவானொருவன் சொல்லின் துணைகொண்டன்றிப் பொருளை யறிவுறுத்தலா காமையின் அவனது தொழிலைச் சொல்லாகிய கருவிமேலேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தாவாகக் கூறுவர் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர் இருதிணை, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறு வகைத் தொகை, மூன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்தினாரென்பர் இளம்பூரணர். இவ்வெட்டினோடு சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள் கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங்கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந் துணர்த்தினா ரென்பர் நச்சினார்க்கினியர். சொல் தனிமொழி, தொடர்மொழி என இரு வகைப்படும். மொழிகள் யாங்கணுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக்கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்துநிற்றலுண்டு. அதனால் தனிமொழி யென்ற பிரிவும் கொள்ளப்படுவ தாயிற்று. தனிமொழி பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கு ஒரு பயன்பட நிற்பதன்றாம். கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர்மொழிகளேயாம். ஆகவே தொடர்மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம் முறையினை யுளத்துட்கொண்டு இப்படலத்துள் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி அத்தொடர்மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக்கணங்களைப் பின்னர் உணர்த்துவர் ஆசிரியர். சொற்கள் ஒன்றோடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும், தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகை யானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்றாற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது ‘பயனிலைவகை’ யெனப்படும். வேற்றுமை யுருபும் உவம வுருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச்சொல்லீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல்லும் மறைந்து நிற்கத்தொடரும் சொல்லினது தொடர்ச்சி ‘தொகை நிலைவகை, யெனப்படும். பொருள்களை ஒன்றோடொன்று சேர்த்து எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி ‘எண்ணுநிலைவகை’ யெனப்படும். இவ்வாறு மூவகையால் தொடரும் தொடர்மொழிகளெல்லா வற்றையும் பொருள்நிலைமை நோக்கி அல்வழித் தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இரு வகையாகப் பகுத்துரைப்பார் தொல்லாசிரியர். பொருளையிடமாகக்கொண்டு நிகழ்வது சொல்லாகும் சொல்லிலக்கணங்கூறக் கருதிய ஆசிரியர் அச்சொல் நிகழ்ச்சிக்கு நிலைக்களனாகிய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை யெனவும் அஃறிணையெனவும் இருதிறனாக வரையறுத்து, அப்பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திணைச் சொல்லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இரு வகையாகப் பகுத்துரைத்தார். திணையென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனாயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் மக்கட் குலத்தாரை உயர்திணையெனச் சிறப்பித்துஉயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சி யடைதற்குக் காரணமாகிய இவ்வொழுக்க வுணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களை உயர்திணையெனத் தனிச் சிறப்புடைய தொகுதியாகவும், நன்றுந்தீதும் பகுத்துணர்ந்தொழுகும் நல்லறிவு வாய்க்கப்பெறாத மற்றைய வுயிர்களையும் உயிரல் பொருள் களையும் ஒழுக்க வுணர்ச்சிக்குரியவல்லாத அஃறிணை யெனச் சிறப்பில்தொகுதியாகவும் முன்னைத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ஙனம் உலகப் பொருள்களெல்லா வற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள் வேறுபாட்டினை விளங்க அறிந்து கொள்ளுதற்குரிய சொல்லமைப் பினையுடையதாக நம் முன்னோர் தம் தாய்மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத் திணைபால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 188-190 சொல்லதிகாரம் சேனாவரையருரை தன்றோ ணான்கின் னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே. ஆதியிற் றமிழ்நூ லகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே. தவளத் தாமரைத் தாதார் கோயி லவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே. சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமா சாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே. கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாரென்றும், மக்களல்லாத உயிரு டையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்றரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே “இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே” என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ஙனம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்க வென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப் படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுக வென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் 11-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 191-194 முதலாவது கிளவியாக்கம் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே யஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே. நிறுத்தமுறையானே சொல்லுணர்த்திய எடுத்துக் கொண் டார்; அதனான் இவ்வதிகாரஞ் சொல்லதிகார மென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமை யுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்தென்பார், ‘எழுத்தொடு புணர்ந்து’ என்றாராகலின், ஒருபுடை யொற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்ததென்னாக்கால், ஒரெழுத்தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தாதென்க. பொருள் குறித்து வாராமையின் அசை நிலை சொல்லாகா எனின், ‘ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்’ (சொல். 274) என்றும், ‘வியங்கோ ளசைச்சொல்’ (சொல். 273) என்றும் ஓதுதலான், அவையும், இடம் முதலாகிய பொருள் குறித்து வந்தன என்க. ‘யாகா பிற பிறக்கு’ (சொல். 279) என்னுந் தொடக்கத்தனவோ வெனின், அவையும் மூன்றிடத்திற்கும் உரியவாய்க் கட்டுரைச் சுவைபட வருதலிற் பொருள் குறித்தனவே யாம். இக் கருத்தே பற்றியன்றே ஆசிரியர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல். 155) என்றோ துவாராயிற் றென்க. சொற்றான் இரண்டு வகைப்படும், தனிமொழியும் தொடர் மொழியும் என. அவற்றுள், தனிமொழியாவது, சமய வாற்ற லான் பொருள் விளக்குவது. தொடர்மொழியாவது, அவாய் நிலையானும் தகுதியானும் அண்மைநிலையானும் இயைந்து பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம். பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச் சொல் லும், உரிச்சொல்லுமெனத் தனிமொழி நான்கு வகைப்படும். ‘மரம்’ என்பது பெயர்ச் சொல். ‘உண்டான்’ என்பது வினைச் சொல். ‘மற்று’ என்பது இடைச் சொல். ‘நனி’ என்பது உரிச்சொல். இருமொழித் தொடரும் பன்மொழித் தொடரும் எனத் தொடர் மொழி இரண்டு வகைப்படும். ‘சாத்தன் வந்தான்’ என்பது இருமொழித் தொடர். ‘அறம் வேண்டி அரசன் உலகம் புரந்தான்’ என்பது பன்மொழித் தொடர். அதிகாரம் என்னும் சொற்குப் பொருள் பலவுளவேனும், ஈண்டதிகாரம் என்றது ஒரு பொருணுதலி வரும் பல வோத்தினது தொகுதியை என்க. வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றியைதலையும், ஒன்றன திலக்கணம் பற்றி வரும் பல சூத்திரத் தொகுதியையும் ‘அதிகாரம்’ என்ப. சொல்லதி காரம், சொல்லையுணர்த்திய அதிகாரம் என விரியும். அச் சொல்லை யாங்ஙனம் உணர்த்தினானோ எனின்; தம்மையே எடுத்தோதியும், இலக்கணங் கூறியும் உணர்த்தினான் என்பது. வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான், இவ் வோத்துக் ‘கிளவியாக்க’ மாயிற்று. ஆக்கம் -அமைத்துக் கோடல்; நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசி யமைத்தாரை, அரிசியாக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள்மேல் ஆமாறு உணர்த்தினமையான், கிளவியாக்க மாயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் ‘கிளவி’ என்றமையால், தனிமொழி யுந் தொடர் மொழியுங் கொள்ளப் படும். கிளவி, சொல், மொழி என்னுந் தொடக்கத்தனவெல்லாம் ஒரு பொருட்கிளவி. இ-ள்: மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணையென்று சொல்லுவர்; மக்களென்று கருதப் படாத பிற பொருளை அஃறிணையென்று சொல்லுவர்; அவ்விரு திணைமேலும் சொற்கள் நிகழும் என்றவாறு. எனவே, உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எனச் சொல் இரண்டு என்றவாறாம். மக்கட்சாதி சிறந்தமையான், ‘உயர்திணை’ என்றார். என்மனார் என்பது செய்யுள் முடிபெய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச் சொல். என்றிசினோர், கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச்சொல். என்ப என்னும் முற்றுச் சொல்லினது பகரம் குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச்சொல் பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின், ‘என்மனார்’ என்பது இடர்ப்பட் டுழிச் சிறுபான்மை வாராது, இந் நூலுள்ளுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், ‘இசை நிறை’ என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார், பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாகலானும், அவர்க்கது கருத்தன்றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலான் செய்யுள் முடிபென்பது கூறாராயினார். என்மனார் ஆசிரியர் எனவே, உயர்திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாம். ஆசிரியர் என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது ‘மக்கட்சுட்டு’ எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை. எனவே, மக்களேயாயினும், மக்க ளென்று சுட்டாது பொருளென்று சுட்டியவழி, உயர்திணை எனப்படா வென்பதாம். இனி ‘அவரல’ என்னாது ‘பிற’ என்றே விடின் யாதல்லாத பிற என்று அவாய் நிற்குமாகலின், ‘அவரல’ என்றார். மக்கட் சுட்டே என்று மேல் நின்றமையின் மக்களல்லாத பிற என்று உணரலாம் எனின், ஆற்றல் முதலாயினவற்றாற் கொள்வது சொல் இல்வழி என மறுக்க. இனி ‘அவரல’ என்றே ஒழியின், அவற்றது பகுதியெல்லாம் எஞ்சாமல் தழுவாமையின் எஞ்சாமல் தழுவுதற்கு ‘அவரல பிற’ என்றார். செய்யுளாகலான் ஆயிருதிணை எனச் சுட்டு நீண்டது. வரையறை யின்மையின் ஈண்டு யகரம் உடம்படுமெய் யாயிற்று. சொன்னிகழ்ச்சிக்குப் பொருள் இடமாகலின், ஆயிரு திணையின்கண் என ஏழாவது விரிக்க. இன் சாரியை வேற்றுமை யுருபு பற்றியும் பற்றாதும் நிற்கும் என்று உரையாசிரியர் இரண்டாவது விரித்தாரா லெனின்:-‘சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும், சாரியை உள்வழித் தன் உருபு நிலையலும்’ (எழுத். 157) என்று இரண்டாவதற்குத் திரிபு ஓதினமை யானும் ‘செலவினும் வரவினும் தரவினுங் கொடையினும்’ (சொல். 128) என்புழியும் பிறாண்டு மெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தமையானும், அவ்வுரை போலியுரை யென்க. ஆயிரு திணையினும் என்னும் உம்மை விகார வகையால் தொக்குநின்றது. இசைக்கும் என்பது செய்யும் என்னும் முற்றுச்சொல். மன் என்னும் இடைச்சொல் மன என ஈறு திரிந்து நின்றது. மன் என்று பாடம் ஓதுவாரு முளர். ஏகாரம் ஈற்றசை. சொல் வரையறுத்தலே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின், ‘ஆடூஉ அறி சொல் மகடூஉ அறிசொல்’ என்றாற்போல ‘உயர் திணைச்சொல்’ ‘அஃறிணைச் சொல்’ என அமையும்; உயர் திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டா எனின்: உயர் திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறி யாகலான், ஆடூஉ மகடூஉப் போல வழக்கொடு படுத்துப் பொருள் உணரலாகாமையின், உயர்திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டும் என்பது. இவ்வாறு ஒரு பொருணுதலிற்றாக உரையாக்கால், சூத்திரம் ஒன்றாமா றில்லை என்க. (1) கணேசையர் உரைவிளக்கக் குறிப்பு: நிறுத்தமுறையென்பது பாயிரத்துள் நிறுத்த முறையை, பாயிரத்துள் நிறுத்தினார் பனம்பாரனா ரன்றோவெனின், அஃதொக்குமன்; ஆயினும், தொல்காப்பியர் நூல்செய்த முறை யைத் தானே அநுவதித்துப் பனம்பாரனார் பாயிரத்துள் நிறுத்து வைத்தாராகலின், அதுபற்றிப் பாயிரத்துள் நிறுத்த முறையைத் தொல்காப்பியனார் நிறுத்ததாக வைத்து நிறுத்த முறையானே யென்று சேனாவரையர் கூறினார் அன்றிப் பாயிரத்துள் பனம்பாரனார் நிறுத்தமுறையை நோக்கித் தொல்காப்பியனார் உணர்த்திய எடுத்துக்கொண்டார் என்று கூறினாரென்பது கருத்தன்று. இக்கருத்துப் பற்றியே நச்சினார்க்கினியரும் "மேற்பாயிரத் துள் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி' என நிறுத்த முறை யானே, எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்து கின்றாராதலிற் சொல்லதிகார மென்னும் பெயர்த்து" என்று கூறினார். இவ்வாறே கல்லாடனாரும் கூறுவர். ஆசிரியர் நூல் செய்த முறையைத்தானே பாயிரம் அநுவதித்துக் கூறியவியல்புபற்றிப், பேராசிரியரும் "மேற்பாயிரத் துள் `வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்வ லென்று புகுந்தமையால்" (தொல்-செய்-1ஆம் சூத்திர உரை) என்று அப்பாயிரத்தைத் தொல்காப்பியனார் கூறியதாக வைத்துக் கூறுதல் காண்க. இனித் தம்மனத்துள் நிறுத்த முறை என்பாருமுளர். சொல் எழுத்தொடு ஒருபுடை யொற்றுமை யுடைத் தென்றது. எழுத்தாதற் றன்மையொடு கூடியிருத்தலை. எழுத்தாதற்றன்மையாவது; எழுத்துக்கள் தனித்தும் தொடர்ந்தும் பொருளு ணர்த்திச் சொல்லாய போதும் தம்மை யுணர்த்து மிடத்து எழுத்தாதலாகிய வியல்பு. அவ்வியல்போடு சொற் கூடியிருத்தலையே ஒருபுடை ஒற்றுமையென்றார். ஒருபுடை - ஏகதேசம் (சிறுபான்மை) தம்மை யுணர்த்தின் எழுத்தாமாற்றை, "தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிற பொருளைச் சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்" என்பதனானுமறிக. `எழுத்து, சுண்ணத்தின்கண் அரிசன முதலியபோலாது மாலையின் கண் மலர்போல் அவற்றின் நிற்றலின்' (எழு-72) என்றும், "எழுத்தானாய பதம் அரிசன முதலியவற்றாற் சமைந்த சுண்ணம் போலாது மலராற் சமைந்த மாலைபோனிற்றலின்" (பதம்-1) என்றும் நன்னூலுரையுள் சங்கர நமச்சிவாயப் புலவர் கூறுதலானும் ஒருபுடையொற்றுமை யின்னதென்பது அறியப்படும். ஓரெழுத்தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தலின்மை யின் என்றது, தானே மொழியாதலன்றி இரண்டு முதலிய எழுத்துக்களோடு கூடி மொழியாய் நில்லாமையின் என்றபடி. எனவே தனி யெழுத்தே பொருளுணர்த்தி ஓரெழுத் தொரு மொழியாய் நிற்கு மென்றவாறு. எழுத்தொடு புணர்ந்து என்பதற்கு எழுத்தொடு கூடி என்று பொருள் கூறின் அவ்விலக்கணம் தனியெழுத்து மொழிக்கட் செல்லாது. ஆதலின், அதன் கண்ணுஞ் செல்லுமாறு எழுத்தாதற் றன்மையொடு கூடி என்று பொருள் கூறுக. அங்ஙனங் கூறின் எழுத்தாதற்றன்மை தனிமொழிக்கு முண்மையின் அதனையுந் தழுவிக்கொள்ளுமென்பது சேனாவரையர் கருத்து. உதாரணமாக, மான் என்னுஞ் சொல் மா, ன் என்னும் இரண்டெழுத்தோடுகூடி மான் என்னும் பொருளை யுணர்த்தலின் எழுத்தொடு புணர்ந்து என்பது அதற்கெய்தும் ஓரெழுத்தொரு மொழியாகிய மா என்னுஞ்சொல் எழுத்தே மொழியாய் நிற்றலின் (மான் என்னுஞ் சொற்போல முதலுஞ் சினையுமாக வின்மையின்) அதற் கவ்விலக்கணம் எய்தா தென்றபடி எழுத்தாதற்றன்மை என்பதற்கு எழுத்துத் தன்மை என்பாருமுளர்; அது கருத்தாயிற் சேனாவரையரே அங்ஙனங் கூறியிருப்பர்; கூறியிராமையி னது பொருந்தாதென்பது. கல்லாடனார் ஓசை, எழுத்தல்லோசையும், (கடலொலி, சங் கொலி போல்வன) எழுத்தொடு புணராது பொருளை யறிவுறுக்கு மோசையும், (முற்கு, வீளை, இலதை போல்வன) எழுத்தொடு புணர்ந்து பொருளை யறிவுறுக்கு மோசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளை யறிவுறுத்தாது வருமோசையும் (இறிஞி, மிறிஞி என்றாற்போல்வன) என நான்குவகைப் படுமென்றும், அந் நான்கினுள்ளும் பின்னின்ற விரண்டுமே இவ் வதிகாரத்தானா ராயப்படுகின்றனவென்றுங் கூறுவர். இங்கே எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவுறுத்தாது வருமோசை என்று கல்லாடனார் கூறியது எல்லாச்சொல்லும் பொருள் குறிக்குமென்ற ஆசிரியர் கருத்துக்கு மாறாயினும், இசைநிறையும் அசைநிலையு முதலாயின பற்றி வருமொழிகள் வேறு பொருளுணர்த்தாது, இசை நிறைத்தலும் அசைத்து நிற்றலும் முதலாயின பற்றியே வருதலின் அவ்வாறு கூறினர்போலும். இசைநிறை அசைநிலை முதலியன வற்றையே பொருளுணர்த்தா ஓசை என்று கல்லாடனார் கருதி யிருக்க வேண்டுமென்பது "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னுஞ் சூத்திரத்துக்குத் தெய்வச்சிலையார் உரைத்த உரையானு மூகிக்கக் கிடக்கின்றது. உரையாசிரியர் `சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து பொருளறிவிக்கு மோசை' என்ற கருத்தை நோக்கியே கல்லாடனார் இவ்வாறு விரித்துரைத்தனர். இசைநிறை அசைநிலை முதலாயினவும், பொருளுணர்த்துவன என்பதே ஏனைய உரையாசிரியர்கள் யாவர்க்குங் கருத்தாகும். கல்லாடர் கூறிய எழுத்தல்லோசையும் - ஆராயப்படுகின்றது என்ற வாக்கியத்துள் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றது என்பது பின்னின்ற விரண்டனுள் முன்னையதே இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றது என்றிருப்பின் மிகப் பொருத்தமாகு மென்பது எமது கருத்து. இனி, நச்சினார்க்கினியர் "சேனாவரையர் சொல் பொருள் குறித்து வருமென்றாராலெனின், ஒருவன் பொருட்டன்மை யுணர்த்துதற்குச் சொல் கருவியாய் நிற்றலன்றித் தனக்கோ ருணர்வின்மையிற் றானொரு பொருளைக் கருதிநிற்றலின்றென மறுக்க" என்று சேனாவரையரை மறுத்தனர். சேனாவரையர் சொல் கருவியாய் நில்லாதென்று கூறாமையின் அவர் கருத்து பொருந்தாது. சொல்லுவானது கருதுதற் றொழிலைச் சொன் மேலேற்றி சொல்பொருள் குறித்து வருவதென்றார். `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' எனத் தொல்காப்பியரு மங்ஙனங் கூறுவர். நச்சினார்க்கினியரும் இச்சூத்திர உரையின்கண், `திணை யினை இசைக்கும்' என்னும் பொருளை விளக்குமிடத்துப் "பொருளையுணர்த்துவான் ஒரு சாத்தனே யெனினும், அவற்கது கருவியாக வல்லது உணர்த்தலாகாமையின் அக்கருவிமேற் றொழிலேற்றிச் சொல் உணர்த்து மென்று கருவிக் கருத்தாவாகக் கூறினார். இவ்வாசிரியர் எவ்விடத்துஞ் சொல்லைக் கருவிக் கருத்தாவாகக் கூறுமாறு மேலே காண்க. அஃது, `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்றாற்போல்வன" என்றதூஉம் ஈண்டு நோக்கத்தக்கது. சமயவாற்றல் - சங்கேதவாற்றல். அஃதாவது இச்சொல் இப்பொருளுணர்த்துக என்னும் இறைவனுடைய சங்கேதத்தா லுண்டாய சக்தி. சங்கேதம் - நியமம், உடன்பாடு. "சமௌ சமய சங்கேதௌ" என்று வடமொழியிலுள்ள அமரமென்னு நூலுட் கூறப்படுதலாற் சமயம் என்னுஞ் சொல் சங்கேதம் என்னும் பொருளுணர்த்தல் அறியப்படும். சமயம் சங்கேதமென்று இலக்கணவிளக்க நூலாருங் கூறுவர். சங்கேதமே ஆற்றல் என்பாருமுளர். அவாய்நிலையாவது; ஒரு சொல் தன்னொடு சேர்ந்து பொருண் முடித்தற்குரிய மற்றொரு சொல்லை அவாவிநிற்றல். ஆ நடக்கின்றது என்புழி, ஆ என்பது நடக்கின்றது என்பதை அவாவி நின்று தன் பொருளை முடித்து நிற்றல் காண்க. தகுதியாவது; பொருள் விளக்கற்கேற்ற சொற்கள் சேர்ந்து நிற்றல், நீரானனை என்புழி, நனைத்தற்கு நீர் ஏற்றதாதலும், நெருப்பானனை என்புழி நெருப்பு நனைத்தற்கு ஏற்றதல்லாமையும் உணர்க. அண்மைநிலையாவது; தொடராய்நிற்கும் மொழிகளை இடையீடின்றிச் சொல்லுதல், அஃதாவது காலதாமதமின்றிச் சொல்லுதல், அங்ஙனம் சொல்லுதலாற்றான் அத்தொடரின் பொருள் விளங்கும் என்க. அவாய்நிலை, தகுதி, அண்மை என்பவற்றை வடநூலார் முறையே ஆகாங்iக்ஷ, யோக்கியதை, சந்நிதி என்பர். தம்மையெடுத்தோதலாவது; சொற் (களாகிய பொருள்) களை `ஆடூஉவறிசொல்' என்றாற்போலப் பெயர்மாத்திரையானே எடுத்துக் கூறல். இதனை உத்தேசமென்பர் தருக்கநூலார். உத்தேச மாவது, பொருள்களைப் பெயர்மாத்திரையானே எடுத்துக்கூறல். இலக்கணங் கூறலாவது: `னஃகானொற்றே ஆடூஉவறி சொல்' என்றாற் போல அவற்றிற்கிலக்கணங் கூறல். நொய் - தவிடு. நுறுங்கு - குறுணி உயர்திணை - உயர்வாகிய சாதி நூல் என்றது இலக்கணநூலை `என்மனார்' என்பதில் மன் எதிர்காலங்காட்டிவந்த இடைச் சொல். ர் பலர்பால் விகுதி. இதனை `என்ப' என்பதன் திரிபென்று கொண்டனர் உரையாசிரியர். களவியலுரைகாரரும் அவ்வாறே கூறுப. இடர்ப்படல் - செய்யுள் யாத்தற் கிடர்ப்படல். `இசைநிறையென்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறை யென்றல் மேற்கோண் மலைவு' என்னும் பகுதி பற்றிய கருத்து இளம்பூரணருரையுட் காணப்படவில்லை. அங்ஙனமே உரையாசிரியர் கருத்தென்று வைத்துச் சேனாவரையர் மறுத்த இடங்கள் பல அச்சிட்ட இளம்பூரண ருரையுட் காணப்படவில்லை. அஃதாராயத்தக்கது. உரையாசிரியர் வேறொருவர் என்பாருமுளர். வெளிப்படாது நின்றதென்றது, மறைந்துநின்றதென்றபடி, எழுவாய் மறைந்துநிற்குமென்றதை. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்விய னிலையல் செவ்வி தென்ப என்பத னுரையுட் காண்க. ஈண்டு மக்களென்றது மக்களென்னும் உணர்வை. மக்கட் சுட்டென்று ஆசிரியர் கூறினமையின் மக்களென்னுஞ் சொல், மக்கட் பொருளைக் குறியாது மக்களென்னு முணர்ச்சியைக் குறித்து நின்ற தென்ற படி. இங்ஙனம் கூறியதனால், யாதன்கணிகழு மென்பதற்கு விபரீதமாகவன்றி இயல்பாக மக்களென்னுங் கருத்து எப்பொருட்கண் நிகழுமோ என்பதே சேனாவரையர் கருத்தாதல் பெறப்படும். அதுவே கருத்தாதல், பின்னர் 57-ம் சூத்திரவுரையுள் "உயிரே உடம்பே எனப் பொதுவகையாற் கூறினாரேனும் மக்களுயிரு முடம்புமே கொள்ளப்படும். என்னை? உயர் திணை முடிபு கொள்ளாவென விலக்கப்படுவன அவையேயாகலி னென்பது. `அஃறிணை யென்மனா ரவரல பிறவே' என்புழி அஃறி ணையாயடங்கி உயர்திணை முடிபெய்தாமையின் அவையும் விலக்கற்பாட்டிற் கேலாவெனின், அற்றன்று; மக்கட் சுட்டுடைமை யான் அவை உயர்திணையேயா மென்பது யாதோ மக்கட்சுட்டு டையவா றெனின், `அறஞ் செய்து துறக்கம் புக்கான்' எனவும், `உயிர்நீத் தொருமகன் கிடந்தான்' எனவும், உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக உணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கொண்டு நிற்றலின் மக்கட் சுட்டுடைய வென்பது. ஓராவை எம்மன்னை வந்தாளென்றும், ஓரெருத்தை எந்தை வந்தா னென்னும் உயர்திணை வாய்பாட்டாற் கூறியவாறுபோல உயிரு முடம்பும் அவ்வாறு கூறப்பட்டனவென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம். அவற்றான் வரும்பயனோக்கிக் காதலால் எம்மன்னை எந்தை என்றான் ஆண்டு, ஈண்டுக் காதன் முதலாயின வின்மையின் மக்கட் சுட்டுடைய வென்பது" என்று கூறுதலானு முணர்க. அற்றேல், உயர்திணை மக்கள் என வமையும்; சுட்டென்றன் மிகை யாம் பிறவெனின், - காதன் முதலிய பற்றி, ஓராவை எம்மன்னை வந்தாள் என்பதுபோல அஃறிணைப்பொருள் குறித்து உயர்திணை வாய்பாட்டான் வருவனவற்றை நீக்குதற்கும், உலகம் பசித்தது என்பதுபோல உயர்திணைப்பொருள் குறித்து அஃறிணை வாய்பாட்டான் வருவனவற்றைத் தழுவுதற்கும் அவ்வாறு கூறினாராகலின் மிகையாகா தென்க. மக்களென்னுங் கருத்து இயல்பாக எப்பொருட்கண் நிகழுமோ அது மக்கட் சுட்டென்பதே ஆசிரியர்க்குங் கருத்தாதல் `அவரென்று' உயர் திணைப் பாலாற் சுட்டி மக்களையே குறித்தமை யானறியப்படும். ஒரு மரத்தைக் கண்டபோது இயல்பாக மரமென்னும் உணர்ச்சியே உண்டாதலானும், ஒரு மகனைக் கண்டபோது இயல்பாக மகனென்னும் உணர்ச்சியே உண்டாதலானும் `இயல்பாக நிகழும்' என்பதே பொருத்தமாதல் காண்க. மாறி நிகழின் அது மயக்கவுணர்ச்சியாகிப் பின் தெளிவு பெறும் என்க. ஆற்றல் முதலாயினவற்றாற் கொள்வது சொல்லில் வழியென மறுக்க என்றது. சொல்லில்லாதவிடத்தேயே ஆற்றலாற் கொள்ளப்படும்; சூத்திரத்துள் அவரென்னுஞ் சொல் உளதாக நாம் ஆற்றலாற் கொள்ள வேண்டிய தில்லையென மறுக்க என்றபடி, இங்ஙனமே `உய்த்துணர்ந் திடர்ப்படுவது எடுத்தோத்தில் வழியென' மறுக்க என்று சேனாவரையர் பின்னும் (கிளவி - 47) கூறுதல் காண்க. அவற்றதுபகுதி யென்றது அஃறிணையின் பகுதியை. அவற்றின் பகுதியாவன, உயிருள்ளனவும், அவற்றின் உயிருமுடம்பும், உயிரில்லாதனவுமாம். அவரல எனின்; உயிருள்ளனவே யமையும், ஏனையவற்றையுந் தழுவற்குப் பிற என்றார் என்றபடி. வரையறை யின்மையின் என்றது. "எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே - உடம்படு மெய்யி னுருவு கொளல் வரையார்" (எழு-புணரி-38) என்று பொதுப்படக் கூறியதன்றி இன்ன இன்ன வெழுத்திற்கு இன்ன இன்ன உடம்படு மெய்யென்று ஆசிரியர் வரையறை கூறாமையின் என்றபடி. ஆயிருதிணையினிசைக்கும் என்பதற்குத் திணையின்கண் இசைக்கு மென்று ஏழாவது விரித்தல் வேண்டுமென்பது சேனா வரையர் கருத்து. இரண்டாவது விரித்தல் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் கல்லாடர் என்னும் மூவருரையிலும் காணப்படுகிறது. இன்சாரியை வேற்றுமையுருபுபற்றியும் பற்றாதும் நிற்கும் என்றது, இன்சாரியை, தானிற்றற்கு வேற்றுமையுருபைக் காரண மாகக் கொண்டும் நிற்கும்; வேற்றுமையுருபைக் காரணமாகக் கொள்ளாதும் நிற்கும் என்றபடி. பற்றுதல் - காரணமாகக் கோடல், குறித்தல். சாரியை உருபு விரிந்துநின்ற வழி வந்து நிற்றல், அதனை இயைவிக்க வந்து நிற்பதாகலின் உருபுகாரண மாகவும் நிற்கும் என்றும், உருபுதொக்குநின்றவழி வந்துநிற்றல், அதனை இயைவிக்க வந்து நிற்பதன்றாகலின் உருபு காரணமாகாதும் நிற்கும் என்றுங் கூறினார் என்க. ஆசிரியர் இரண்டாவதற்குத் திரிபோதிய சூத்திரத்தின்கண், இரண்டாவதனுருபு சாரியை நின்றவிடத்துத் தானும் நிற்குமன்றிச் சாரியை நிற்பத் தொக்குநில்லாது என்று கூறினமையானும், "செல வினும் தரவினும்" என்பன போல வரும் வேறு சூத்திரங்களின் கணெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தமையானும், உரையாசிரியர் "திணையின் இசைக்கும்" என்பதற்குத் திணையினையிசைக்கும்மென்று ஐயுருபுவிரித்துப் பொருள் கோடல் பொருந்தாது என்பது சேனாவரையர் கருத்து. ஆயிருதிணையினு மென்னுமும்மை விகாரவகையாற் றொக்குநின்ற தென்பது, இருதிணை இனைத்தெனவறியப்பட்ட பொருளாதலின் அது முற்றும்மைபெற்று வருதல்வேண்டும். வாராமையின் தொகுக்கும் வழித் தொகுத்தல் என்னும் விகாரவகையாற் றொக்குநின்றதென்றபடி. ஒன்றை விதிக்குமிடத்து ஒரு சூத்திரத்துள் ஒருபொருளே கூறல் வேண்டும். இரண்டு பொருள் கூறலாகாது. கூறின் அது ஒரு சூத்திரமாகாது இரண்டாகுமென்பார். ஒரு பொருள் நுதலிற்றாக உரையாக்கால் சூத்திர மொன்றாமாறில்லை என்றார். இருபொருள் நுதலிற்றாகக் கூறினார் இளம்பூரணர். அவரைப் பின்பற்றி நச்சினார்க்கினியரும் அவ்வாறே கூறுவர். 2. ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொ லுயர்திணை யவ்வே. இ - ள்: ஆடூஉவறிசொல்லும் மகடூஉவறி சொல்லும், பல்லோரறியுஞ் சொல்லொடு பொருந்தி, அம்மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையனவாம் என்றவாறு. ஆண்மகனை ‘ஆடூஉ’ என்றலும், பெண்டாட்டியை ‘மகடூஉ’ என்றலும் பண்டையார் வழக்கு. அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ‘ஆடூஉவறிசொல்’ முற்கூறப்பட்டது. பன்மை இருபாலும் பற்றி வருதலின் ‘பல்லோரறிசொல்’ பிற்கூறப்பட்டது. 1இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கட் சிறுபான்மை தொகப் பெறுதலிற் றொக்கு நின்றது. 2திரிந்த புணர்ச்சி யன்மையின் விகார வகையான் தொக்க தென்பாரும் உளர். ‘சிவணி’ என்னும் வினையெச்சம், உயர்திணைவென்னும் வினைக் குறிப்புக் கொண்டது; 3ஆறாம் வேற்றுமை ஏற்று நின்ற சொல் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்குமாகலான். உயர் திணையவாம் என்னும் முப்பாற் சொல்லின் வினை, ‘ஆடூஉ வறி சொல்’ ‘மகடூஉ வறிசொல்’ என்னும் இரண்டன் வினையாகிய 4சிவணி என்னுஞ் செய்தென் எச்சத்திற்கு வினை முதல்வினையா யினவாறு என்னையெனின், உயர்திணை யவாதல், ஆடூஉவறி சொல் மகடூஉவறிசொல் என்பன வற்றிற்கும் எய்துதலான், வினை முதல் வினையா மென்க; ‘முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின’ (சொல். 230) என்புழி, வினைமுதல்வினை யென்னுந் துணையல்லது, பிறிதொன்றற்குப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல் வேண்டும் என்னும் வரையறை யின்மையின். அல்லாக்கால், ‘இவளும் இவனும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப’ என்பன போல்வன அமையாவா மென்க. 5ஆடூஉவறிசொன் முதலாயினவற்றை உணர்த்தியல்லது அவற்றது இலக்கணம் உணர்த்தலாகாமையின், “6பால் உணர்த்தும் எழுத்து வகுப்பவே அவை தாமும் பெறப்படும்; இச்சூத்திரம் வேண்டா” என்பது கடா வன்மை உணர்க. உயர்திணைச் சொல்லுணர்த்தி அதனது பாகுபாடு கூறுகின்றா ராகலின், ‘7அம் முப்பாற்சொல் உயர்திணைய’ என்றா ராயினும், உயர் திணைச் சொல் மூன்று பாகுபாடு படுமென்பது கருத்தாகக் கொள்க. 8இக் கருத்தானன்றே, ஆசிரியர் அம் முப்பாற் சொல்லும் என ‘இனைத்தென அறிந்த பொருள் தொகுதிக்குக்’ (சொல். 33) கொடுக்கும். 9உம்மை கொடா ராயினும், * உரையாசிரியரும் உயர்திணை யெனப்பட்ட பகுப்பை விரிப்புழி இத்துணை யல்லது விரிபடாதென்பது ஈண்டுக் கூறியது என்றுரைத்ததூஉம் என்க. ‘ஆயிரு பாற்சொல ஃறிணை யவ்வே’ (சொல். 3) என்பதற்கும் ஈதொக்கும். (2) ம் (பாடம்) கொடாராயினதூஉம். 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இ - ள்: 10ஒன்றனை அறியுஞ் சொல்லும், 11பலவற்றை அறியுஞ் சொல்லும் என அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் என்றவாறு. (3) 4. பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென அறியுமந் தந்தமக் கிலவே யுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். இ - ள்: உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மை குறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த பெயர்ச் சொல்லும், இவையெனத் தம் பொருளை வேறு அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்குடைய வல்ல; உயர்திணை யிடத்து அதற் குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும் என்றவாறு. பால் வேறுபட்டு இசைத்தலாவது, தாம் உயர்திணைப் பெயராய் 12ஆடூஉவறிசொல் முதலாயினவற்றிற்குரிய ஈற்றெழுத்தே தம் வினைக்கீறாக இசைத்தல். உதாரணம்: பேடி வந்தாள், பேடர் வந்தார், 13பேடியர் வந்தார் எனவும்; தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார் எனவும் வரும். 14அலிப்பெயரின் நீக்குதற்குப் ‘பெண்மை சுட்டிய’ என்றும், மகடூஉப் பெயரின் நீக்குதற்கு ‘ஆண்மை திரிந்த’ என்றுங் கூறினார். 15பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாப் பேடு என்பதும் ஒழிக்கப்பட்டதாம். பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர்நிலைக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது 16இடைநிலை. ‘17தன்மை திரிபெயர்’ (சொல். 56) என்றாற்போலச் சொல் லொடு பொருட்கொற்றுமை கருதி ‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ என்றார். உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் எனவே, தமக்கென வேறு ஈறு இன்மை பெறப்படுதலின், ‘இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே’ எனல் வேண்டா எனின், தமக்கென வேறு ஈறு உடையவாய் ஆடூஉவறிசொல் முதலாயின வற்றிற்குரிய ஈற்றானும் இசைக்குங்கொல் என்னும் ஐயம் நீக்குதற்கு, ‘அந்தம் தமக்கிலவே’ எனல் வேண்டுமென்பது. 18பெண்மை திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மையாகலான் ‘ஆண்மை திரிந்த’ என்றார். பேடியர் பேடிமார் பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடி யென்னும் பெயர்நிலைக் கிளவி யென்னாது ‘பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ என்றார். 19பாலுள் அடங்காத பேடியையும்; திணையுள் அடங்காத தெய்வத்தையும்; பாலுள்ளும் திணையுள்ளும் அடக்கியவாறு. 20சுட்டிய வென்பது செய்யிய என்னும் வினையெச்ச மென்றும், ஆண்மை திரிதல் சொற்கின்மையின் பெயர்நிலைக் கிளவி என்பது ஆகுபெயராய்ப் பொருண்மேல் நின்றதென்றும் உரையாசிரியர் கூறினாராலெனின்: ஆண்மை திரிதல் பெண்மைத்தன்மை எய்துதற் பொருட்டன்றிப் பேடிக்கு இயல்பாகலின், பெண்மை சுட்ட வேண்டி ஆண்மை திரிந்த என்றல் பொருந்தாமையானும், பொருளே கூறலுற்றாராயின் ஆசிரியர் பேடியும் தெய்வமும் என்று தாம் கருதிய பொருள் இனிது விளங்கச் சுருங்கிய வாய்பாட்டாற் சூத்திரிப்பராகலானும், அவர்க்கது கருத்தன்மையான், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. (4) 5. னஃகா னொற்றே யாடூஉ வறிசொல். இ - ள்: னஃகா னாகிய வொற்று ஆடூஉவறி சொல்லாம் என்றவாறு. உதாரணம்: உண்டனன், உண்டான்; உண்ணாநின்றனன், உண்ணா நின்றான்; உண்பன், உண்பான்; 21கரியன், கரியான் என வரும். ஆடூஉவறிசொல்லாவது னகார ஈற்றுச் சொல்லாயினும், பால் உணர்த்துதற் சிறப்பு நோக்கி ‘னஃகான் ஒற்றே’ என்றார். ‘அறமாவது அழுக்காறின்மை’ என்றாற்போல, னஃகான் ஒற்று ஆடூஉ வறிசொல் என்றாராயினும், ஆடூஉவறிசொல்லாவது னஃகான் ஒற்றென்பது கருத்தாகக் கொள்க. ‘ளஃகான் ஒற்று’ முதலாயினவற்றிற்கும் இவை யொக்கும். ஏகாரம் அசைநிலை. 22உரையாசிரியர் பிரிநிலை யென்றாராலெனின், பிரிநிலை யாயின் ஆடூஉ வறிசொற்கு இலக்கணங் கூறுதலன்றிப் பிரித்ததன் சிறப்புணர்த்துதலே கருத்தாமாகலின் அவ்வுரை போலியுரை என்க. (5) 6. ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல். இதன் பொருள்: ளஃகானாகிய வொற்று மகடூஉவறி சொல் லாம் என்றவாறு. உதாரணம் உண்டனள், உண்டாள்; உண்ணாநின்றனள், உண்ணா நின்றாள்; உண்பள், உண்பாள்; கரியள், கரியாள் என வரும். (6) 7. ரஃகா னொற்றும் பகர விறுதியு மாரைக் கிளவி யுளப்பட மூன்று நேரத் தோன்றும் பலரறி சொல்லே. இ - ள்: ரஃகானாகிய வொற்றும், பகரமாகிய விறுதியும், மார் என்னு மிடைச்சொல்லும் இம்மூன்றும் பலரறி சொல்லாம் என்றவாறு ஏ யென்பது ஈற்றசை. உதாரணம்: உண்டனர், உண்டார்; உண்ணாநின்றனர், உண்ணா நின்றார்; உண்பர், உண்பார்; கரியர், கரியார் எனவும்; கூறுப, வருப எனவும்; கொண்மார், சென்மார் எனவும் வரும். 23மார் எதிர்காலம் பற்றிவந்த ஆரேயாம்; ரஃகான் ஒற்றென வடங்கு மெனின், அற்றன்று. ஆரேயாயின் கொண்மார் என்புழி மகரம் காலம் பற்றி வந்ததோர் எழுத்தாகல் வேண்டும். உண்பார் வருவார் எனக் காலம் பற்றி வரும் எழுத்து முதனிலைக்கேற்ற வாற்றான் வேறுபட்டு வருமன்றே? அவ்வாறன்றி உண்மார் வருமார் என எல்லா முதனிலைமேலும் மகரத்தொடு கூடி வருதலானும், வினைகொண்டு முடிதற்கேற்பதொரு பொருள் வேறுபாடுடைமையானும் ஆர் ஈறன்று, வேறெனவேபடு மென்பது. மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் ஒப்புமை நோக்கி அர் ஆர் என்னும் இரண்டு ஈற்றையும் ‘ரஃகான்’ என அடக்கி யோதினார். அன் ஆன் அள் ஆள் என்பனவற்றையும் இவ் வொப்புமை பற்றி ‘னஃகான், ளஃகான்’ என அடக்கி யோதினார். `ரகாரம்' மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றிப் பெருவழக் கிற்றாய் வருதலின், முன் வைத்தார்; `மார்' பகரவிறுதியின் சிறுவழக்கிற் றாகலின், பின்வைத்தார். 24உண்கும், உண்டும், வருதும், சேறும் என்னுந் தொடக்கத் தனவும் பலரறி சொல்லாயினும், அவை ‘எண்ணியல் மருங்கின் திரி’ (சொல். 209) தலின் நேரத் தோன்றாவாகலான், இவற்றை ‘நேரத் தோன்றும் பலரறி சொல்’ என்றார். மூன்றும் பலரறி சொல் என்றாராயினும், பலரறி சொல் லாவது இம்மூன்றும் என்பது கருத்தாகக் கொள்க. (7) 8. ஒன்றறி கிளவி த ற ட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இதன் பொருள்: ஒன்றறி சொல்லாவது த ற ட என்னு மொற்றை ஊர்ந்த குற்றியலுகரத்தை இறுதியாகவுடைய சொல்லாம் என்றவாறு. உதாரணம்: வந்தது, வாராநின்றது, வருவது, கரிது எனவும்; கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவும்; குண்டுகட்டு, கொடுந்தாட்டு, குறுந்தாட்டு எனவும் வரும். 25கிடக்கை முறையாற் கூறாது ‘த ற ட’ எனச் சிறப்பு முறை யாற் கூறினார். 26குன்றியலுகரம் என மெலிந்து நின்றது. தகர உகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும்பற்றி வருதலும், றகர உகரம் இறந்தகாலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும், டகர உகரம் வினைக்குறிப்பே பற்றி வருதலுமாகிய 27வேறுபாடுடைமையான், குற்றியலுகரமென ஒன்றாகாது மூன்றாயின. (8) 9. அ ஆ வ என வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவறி சொல்லே. இதன் பொருள்: பலவறி சொல்லாவன அ ஆ வ என வருமிறுதியையுடைய அக்கூற்று மூன்று சொல்லாம் என்றவாறு. உதாரணம்: உண்டன, உண்ணாநின்றன, உண்பன, கரியன எனவும்; உண்ணா, தின்னா எனவும்; உண்குவ, தின்குவ எனவும் வரும். உண்ட, உண்ணாநின்ற, உண்ப, கோட்ட என்னுந் தொடக் கத்தனவும் அகரவீற்றுப் பலவறிசொல். அவற்றுள் 28உண்ப என்பது பகர வீற்றுப் பலரறி சொல்லன்றே? அஃறிணைக் காயினவா றென்னை யெனின், பகர இறுதியாயி னன்றே உயர்திணைக்காவது? ஈண்டுக் காட்டப்பட்டது ‘கானந் தகைப்ப செலவு’ (கலி. 12) ‘‘சினையவுஞ் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்துதாங் கொடுப்பபோல்’’ (கலி. 28) என நின்றன போல. எதிர்காலத்து வரும் பகர மூர்ந்து நின்ற அகர ஈறாதலின், அஃறிணைச் சொல்லேயா மென்பது. செய்யுளாகலின், தகைப்பன கொடுப்பன என்னுஞ் சொற்கள் தகைப்ப கொடுப்ப என விகாரவகையான் அவ்வாறு நின்றன வாகலான், வழக்கு முடிவிற்கு அவை காட்டல் நிரம்பா தெனின், தகைத்தன, தகையாநின்றன; தகைத்த, தகையாநின்ற எனவும்; கொடுத்தன, கொடா நின்றன; கொடுத்த, கொடாநின்ற எனவும் இறந்தகாலத்தும் நிகழ்காலத்தும் அகர ஈறு முதனிலைக் கேற்றவாற்றான் அவ்வக்காலத்திற்குரிய எழுத்துப் பெற்று அன் பெற்றும் பெறாதும் முடியுமாறுபோல, எதிர்காலத்தும் முதனிலைக்கேற்ற வாற்றான் அக்காலத்திற்குரிய எழுத்துப் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடியும். எதிர்காலத்துக்குரிய எழுத்தாவன பகரமும் வகரமுமாம். அவற்றுட் பகரம் பெற்று அன் பெற்றும் பெறாதும் முடிவுழி, தகைப்பன தகைப்ப, கொடுப்பன கொடுப்ப எனவும்; வகரம்பெற்று அவ்வாறு முடிவுழி, வருவன வருவ; செல்வன செல்வ எனவும் இவ்வாறு முடியுமாகலின், தகைப்ப கொடுப்ப என்பன விகார மெனப்படா, இயல்பேயாம் என்பது. கொடுப்பன யாவை அவைபோல என உவமை கருதாது, அவை தம்மையே சுட்டி நிற்றலின் கொடுப்ப என்பது பெயரன்மையறிக. அன் பெறாது எதிர்காலத்து வரும் வகரஒற்றூர்ந்து நின்ற அகரமாய் வகர ஈறு அடங்கும் எனின், வினை கொண்டு முடிதல் ஒழித்து மார் ஈற்றிற்குரைத்தது உரைக்க. அவ்வாறு உரைக்கவே, குகரம் பெற்றவழி அன்பெறற்கேலாமை யின், 29உண்குவ தின்குவ என்னுந் தொடக்கத்தன வகர ஈறேயாம். வருவ செல்வ எனக் குகரம் பெறாதவழி வகர ஈறாதலும் அகர ஈறாதலும் என இரு நிலைமையும் உடையவாம்; என்னை? எல்லா வினைக் கண்ணும் சேறன் மாலைத்தாகிய வகரஈறு ஆண்டு விலக்கப்படாமை யானும், அத் தன்மைத்தாகிய அகர ஈறும் ஆண்டு வந்து அன் பெறாதவழிக் கால வகரம் ஊர்ந்து அவ்வாறு நிற்றலு டைமையானுமென்பது. 30வரும் என்னும் உகரம் விகாரவகையான் நீண்டு நின்றது. ஈற்று வகையான் மூன்றாகிய சொல் என்பார் ‘அப்பால் மூன்று’ என்றார். (9) 10. இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்துந் தோற்றந் தாமே வினையொடு வருமே. இதன் பொருள்: உயர்திணை அஃறிணையென்னும் இரண்டு திணைக்கண்ணும் உளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்துபாலுமறிய அவ்வச்சொல்லி னிறுதிக்கணின் றொலிக்கும் பதினோரெழுத்தும் புலப்படுதற்கண் வினைச் சொற்கு உறுப்பாய்ப் புலப்படும் என்றவாறு. திணை இரண்டே, பால் ஐந்தே என வரையறுத்தற்கு ‘இருதிணை மருங்கின் ஐம்பால்’ என்றார். னகாரமும் ளகாரமும் ரகாரமும் மாரும் இறுதி நின் றுணர்த்துமென்பதற்கு ‘ஈற்றினின் றிசைக்கும் பதினோரெழுத் தும்’ என்பது 31ஞாபக மாயிற்று. அல்லனவற்றிற்கு 32அநுவாத மாத்திரமென்றார். தாமே என்பது 33கட்டுரைச்சுவைபட நின்றது. வினை யெனப் பொதுப்படக் கூறினாராயினும், ஏற்புழிக் கோட லென்பதனாற் படர்க்கை வினை யென்று கொள்ளப்படும். இவை பெயரொடு வருவழித் திரிபின்றிப் பால் விளக்காமை யின் ‘வினையொடு வரும்’ என்றார். (10) 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியு மயங்கல் கூடா தம்மர பினவே. ஒரு திணைச்சொல் ஏனைத் திணைச்சொல்லொடு முடியுந் திணை வழுவும், ஒருபாற்சொல் அத்திணைக்கண் ஏனைப் பாற் சொல்லொடு முடியும் பால்வழுவும், பிறிதொரு காரணம் பற்றாது ஒரு பொருட்குரிய வழக்கு ஒரு பொருண்மேற் சென்ற தெனப்படும் மரபுவழுவும், வினாயதற் கிறையாகாச் செப்பு வழுவும், வினாவப் படாத பொருளைப் பற்றி வரும் வினாவழுவும், ஓரிடச்சொல் ஓரிடத்துச் சொல்லொடு முடியும் இடவழுவும், காலக் கிளவி தன்னோடியையாக் காலமொடு புணருங் கால வழுவும் என வழு எழுவகைப்படும். வழுவற்க என்றலும் வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இரு வகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருட்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றான் அப்பொருள் விளக்குதலின் அமைக என்றல் வழுவமைத்தலாம். இச் சூத்திரம் முதலாக இவ் வோத்து வழுக் காக்கின்றது. இதன் பொருள்: கூறப்பட்ட பதினோரீற்றவாய் வினை பற்றி வரும் பால் அறி சொல்லும், அவன் இவன் உவன் என்பன முதலாகப் பெயர்பற்றி வரும் பாலறி சொல்லும், தம்முள் தொடருங்கால், ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு மயங்கா, தம்பாற் சொல்லொடு தொடரும் என்றவாறு. எனவே, பிற பாற்சொல்லொடு தொடர்வன வழுவென்ப தாம். 34ஈண்டுப் பெயரென்றது பொருளை. திணையுணராக்கால் அதன் உட் பகுதியாகிய பால் உணர்தலாகாமையின், பாலறி கிளவி எனவே திணையறிதலும் பெறப்படும்; படவே , மயங்கல் கூடா என்றது திணையும் பாலும் மயங்கற்க என்றவாறாம். இன்னும் ‘மயங்கல்கூடா’ என்றதனான், வினைப் பாலறி சொல்லும் பெயர்ப் பாலறி சொல்லும் 35பாலறிசொல்லுள் ஒரு சாரனவும் இடமுங் காலமும் உணர்த்துமாகலின், அவ்வாறு உணர்த்துவனவற்றானும் மயங்கற்க என்றவாறாம்; ஆகவே, இடமும் காலமும் மயங்காது வருதலுங் கூறப்பட்டதாம். உதாரணம்: அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன எனவும்; யான்வந்தேன், நெருநல் வந்தான் எனவும், திணையும் பாலும் இடமும் காலமும் வழுவாது முடிந்தவாறு. அவ்வாறன்றி அவன் வந்தது, அவன் வந்தாள், யான் வந்தான், நாளை வந்தான் என மயங்கி வருவன வெல்லாம் வழுவாம். ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னான் ஐம்பால் உணர்த்துதற் சிறப்புடைய படர்க்கை வினைபற்றி ஓதினாரேனும், ‘தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ (சொல். 43) என்றும், ‘முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி’ (சொல். 462) என்றும் முன்னர் வழுவமைப்பா ராகலின், தன்மை முன்னிலைப் பாலறி கிளவியும் மயங்கற்க என்பது ஈண்டைக் கொள்ளப்படும். உதாரணம்: யான் வந்தேன், யாம் வந்தேம் எனவும்; நீ வந்தாய், நீயிர் வந்தீர் எனவும் வரும். யான் வந்தேம். நீயிர் வந்தாய் என்னுந் தொடக்கத்தன வழுவாம். ‘மயங்கல் கூடா’ என்றது மயங்குதலைப் பொருந்தா என்ற வாறு. மயங்கல்கூடா தம்மரபினவே என்பனவற்றுள் ஒன்றனது ஆற்றலான் ஏனையதன் பொருளும் உணரப்படுதலின் ஒன்றே அமையுமெனின், சொல் இல்வழியது உய்த்துணர்வ தென்க. தம் மரபினவே என்பதனைப் பிரித்து வேறொரு தொட ராக்கிச் சொற்கண் மரபு பிறழா தம் மரபினவே என மரபுவழுக் காத்ததாக உரைக்க. 36இது யோகவிபாகம் என்னும் 37நூற் புணர்ப்பு. முன் இரு பொருள்பட உரைப்பனவெல்லாம் இந் நூற்புணர்ப்பாகக் கொள்க. யானை மேய்ப்பானைப் பாகன் என்றலும், யாடு மேய்ப்பானை இடையன் என்றலும் மரபு. மேய்த்தல் ஒப்புமையான் யானை மேய்ப்பானை இடையன் என்றலும், யாடு மேய்ப்பானைப் பாகன் என்றலும் மரபுவழு. செப்புவழாநிலையும், வினாவழாநிலையும், சிறப்பு வகையா னோதப்படும் இடவழாநிலையும், இவ்வாறு ஓதப்படும் மரபுவழா நிலையும் ஒழித்து, 38ஒழிந்தன இச் சூத்திரத்தாற் காத்தார். (11) 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி யாண்மை றறிசொற் காகிட னின்றே. இதன் பொருள்: ‘உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்’ (சொல். 4) என்று மேற் கூறப்பட்ட ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆடூஉவறிசொல்லொடு புணர்தற்குப் பொருந்தும் இடனுடைத்தன்று என்றவாறு. 39ஆண்மையறிசொற் காகிடனின்றென்ற விலக்கு ஆண்மையறி சொல்லொடு புணர்த லெய்திநின்ற பேடிக்கல்லது ஏலாமையின், அலிமேற் செல்லா தென்க. இச் சூத்திரத்தைப் ‘பெண்மை சுட்டிய’ என்னுஞ் சூத் திரத்தின் பின் வையாது ஈண்டு வைத்தார், இது வழுவற்க வென்கின்ற தாகலான். (12) 13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். இதன் பொருள்: செப்பினையும் வினாவினையும் வழுவாமற் போற்றுக என்றவாறு. செப்பென்பது வினாய பொருளை யறிவுறுப்பது. அஃது இரண்டு வகைப்படும், 40செவ்வனிறையும் 41இறை பயப்பதும் என. உயிரெத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தற்றன்மைத்து என்றல் செவ்வனிறையாம். உண்டியோ என்று வினாயவழி வயிறு குத்திற்று என்றல், உண்ணேன் என்பது பயந்தமையின், இறை பயப்பதாம். ‘கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா’ எனப் ‘பருநூல் பன்னிரு தொடி’ என்பது செப்புவழுவாம். ‘சொல் எப்பொருளு ணர்த்தும்’ என்று வினாயவழிச் ‘சொல் ஒரு பொருளு முணர்த்தாது’ என்பதும் அது; வினாய பொருளை வினாவான் உணர்ந்து வினாய பொருளையன்றித் தான் குறித்த பொருளைச் செப்பான் உணர்த்து கிறானாகலினென்பது. வினா வின்றியுஞ் செப்பு நிகழ்தலின், வினாய பொருளை யெனல் வேண்டா எனின், வினாய பொருளை யென்னாது 42அறிவுறுப்பது செப்பு எனின், 43அறியலுறவினை அறிவுறுத்த லின் வினாவும் செப்பாய் அடங்குதலானும், செப்பென்பது 44உத்தர மென்பதனோடு ஒருபொருட் கிளவியாகலானும், வினாய பொருளை யறிவுறுத்தலே இலக்கணமா மென்பது. ‘45குமரியாடிப் போந்தேன்; சோறு தம்மின்’ என வினாவின்றி நிகழ்ந்த சொல் யாண்டடங்கு மெனின், அறியலுறுதலை யுணர்த்தாது ஒன்றனை யறிவுறுத்து நிற்றலிற் செப்பின்பாற்படும். வினாஎதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், உடம்படுதல் எனச் செப்பு அறுவகைப்படு மென்று உரையாசிரியர் கூறினாராலெனின், உயிரெத்தன்மைத் தென்ற வழி உணர்தற்றன்மைத் தென்றல் முதலாயின 46அவற்றுளடங்கா மையானும், 47மறுத்தலும் உடம்படுதலும் வினாவப்பட்டார் கண்ணன்றி ஏவப்பட்டார் கண்ணவாக லானும், அறுவகைப் படுமென்று பிறர்மதம் மேற்கொண்டு கூறினாரென்பது. வினாவாவது அறியலுறவு வெளிப்படுப்பது. அது மூவகைப் படும்; அறியான் வினாவும், ஐயவினாவும், அறிபொருள் வினாவு மென. அறியான் வினா, உயிர் எத்தன்மைத் தென்பது. ஒருபுடை யானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையின், பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாமை நோக்கி அறியான் வினாவாயிற்று. ஐயவினா, குற்றியோ மகனோ தோன்றுகின்ற உரு வென்பது. அறிபொருள் வினா அறியப்பட்ட பொருளையே ஒரு பயன் நோக்கி அவ்வாய்பாட்டினொன்றான் வினாவுவது. பயன், வேறறிதலும் அறிவுறுத்தலும் முதலாயின. கறக்கின்ற எருமை பாலோ சினையோ என்பது வினாவழுவாம். 48ஒரு பொருள் காட்டி இது நெடிதோ குறிதோ என்பதுமது. உரையாசிரியர் அறிபொருள் வினாவை அறிவொப்புக் காண்டலும், அவனறிவு தான் காண்டலும், மெய்யவற்குக் காட்டலும் என விரித்து ஏனைய கூட்டி ஐந்தென்றார். இருவகைச் செப்பினும் மூவகை வினாவினும், செவ்வனி றையும், அறியான் வினாவும், ஐயவினாவும் வழாநிலை யாகலின், வழாஅ லோம்பல் என்பதனாற் கொள்ளப்படும். ஏனைய வழு வமைப்புழிக் காணப்படும். வினா வழீஇயினவிடத்து அமையா தென்று உரையாசிரியர் கூறினாரா லெனின், அற்றன்று; ‘யாதென வரூஉம் வினாவின் கிளவி’ (சொல். 32) எனவும் ‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’ (சொல். 244) எனவும் முன்னர் வழுவமைப்பர் ஆகலான், அது போலியுரை யென்க. (13) 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. இதன் பொருள்: வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்து வினாவிற்கு மறுமொழியாய் வரின், வினாவுஞ் செப்பாம் என்றவாறு. சாத்தா உண்டியோ வென்று வினாயவழி, உண்ணேனோ என வரும். வினாவாய்பாட்டான் வந்ததாயினும், உண்பல் என்பது கருத்துப் பொரு ளாகலின் செப்பெனப்படும். உண்டியோ என்று வினாயவழி, உண்பல் உண்ணேன் என்று இறாது தானொன்றை வினாவுவான்போலக் கூறலின், வழுவமைதி யாயிற்று. இது செப்புவழுவமைதியேல் ‘செப்பே வழீஇயினும்’ என்புழி யடங்கு மெனின், 49ஒன்றன் செப்பு ஒன்றற்காவதன்றி வினாச் செப்பாயினமையின், வேறு கூறினார். (14) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே யப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதன் பொருள்: செவ்வனிறையாகாது செப்பு வழுவி வரினுங் கடியப் படாது, ஒருவாற்றான் வினாய பொருட்கு இயைபுபட்ட கிளவி யாதற்கண் என்றவாறு. 50சாத்தா உண்டியோ என்று வினாயவழி, நீ உண் என்றும், வயிறு குத்தும் என்றும், பசித்தேன் என்றும், பொழுதாயிற்று என்றும் வரும். இவை செவ்வனிறை அல்லவேனும், வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்தலின், அமைந்தவாறு கண்டு கொள்க. அஃதேல், இவை ‘தெரிபு வேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும்’ (சொல். 157) என்புழிக் குறிப்பின் தோன்றலாய் அடங்குமாகலின், ஈண்டுக் கூறல் வேண்டா எனின், அவ்வாறு அடங்குமாயினும், ‘செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ (சொல். 13) என்றதனான் இவையெல்லாம் வழுவாதலெய்திற்று; அதனான் அமைக்கல் வேண்டுமென்பது. (15) 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. இதன் பொருள்: செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளுந் துணைப் பொருளும் அவ்வப்பொருளுக்கு அவ்வப்பொருளேயாம் என்ற வாறு. எனவே, சினையும் முதலும் தம்முள் மயங்கி வருதல் வழு என்பதாம். உறழ்பொருளாவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப் படுவது. துணைப்பொருளாவது ஒப்புமை கூறப்படுவது. உதாரணம்: ‘51இவள் கண்ணின் இவள் கண் பெரிய, நும் அரசரின் எம் அரசன் முறை செய்யும் எனவும்; 52இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ, எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ எனவும்; 53இவள் கண் ணொக்கும் இவள் கண், எம் அரசனை யொக்கும் நும் அரசன் எனவும்; 54இவள் கண் ணொக்குமோ இவள் கண், எம் அரசனை யொக்குமோ நும் அரசன் எனவும் வரும். ‘55அவன் தோளினுந் தண்ணிய தடமென் றோளே’ (பட்டினப். 300-1) எனவும், ‘துளிதலைத் தலைஇய தளிரன் னோளே’ (குறுந். 222) எனவும் மயங்கி வந்தன வழுவாம் பிறவெனின், அவை செய்யுள் பற்றி வரும் உவம வழு வாகலின் ஈண்டைக்கெய்தா, அணியியலுள் பெறப்படும். இம்மகள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வழக்கின்கண்ணும் மயங்கி வருமாக லெனின், உண்மை உணர்தற்கு வினாயதன்றி ஐயவுவமை வாய்பாட்டாற் கண்ணைப் 56புனைந் துரைத்தல் கருத்தாகலின், அன்னவை யெல்லாம் உரை என்னுஞ் செய்யுளாம் என்பது. இந்நங்கை முலையின் இந்நங்கை கண் நல்ல என்னுந் தொடக்கத்தன மயக்கமின்மையின் இலக்கண வழக்காம் பிறவெனின், அற்றன்று; 57ஒத்த பண்பு பற்றியன்றே பொருவுவது? கண்ணொடு முலைக்கு ஒத்த பண்பின்மையான் பொருவுதல் யாண்டையது? ஒத்த பண்பு பற்றிய பொருவுதற்கண்ணது இவ்வாராய்ச்சி யென்பது. காக்கப்பட்டன செப்பு வழாநிலையும் வினா வழாநிலையு மென்பார் ‘செப்பினும் வினாவினும்’ என்றார். ‘வழாஅ லோம்பல் (சொல். 13) என்புழி யடங்குமாயினும், நுண்ணுணர்வு டையார்க் கல்லது அதனான் உணர்தலாகாமையின், விரித்துக் கூறியவாறு. தன்னினமுடித்தல் என்பதனால் ‘58பொன்னுந் துகிரும் முத்தும் மணியும்’ (புறம். 218) என எண்ணுங்காலும் இனமாய பொருளே எண்ணப்படு மென்பது கொள்க. (16) 17. தகுதியும் வழக்கு தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. இதன் பொருள்: தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் நடக்கும் இலக்கணத்தின் பக்கச் சொற் கடியப்படா என்றவாறு. தகுதியென்பது அப்பொருட்குரிய சொல்லாற் சொல்லுத னீர்மையன்றென்று அது களைந்து தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினாரென்றலும், சுடுகாட்டை நன்காடென்றலும், ஓலையைத் திருமுகமென்றலும், கெட்ட தனைப் பெருகிற்று என்றலுமென இத் தொடக்கத்தன. வழக்கென்பது காரணமின்றி வழங்கற்பாடேபற்றி வருவது. பண்புகொள் பெயராயினும் பண்பு குறியாது சாதிப்பெயராய் 59வெள்யாடு வெண்களமர் கருங்களமரென வருவனவும், குடத் துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சில என்றலும், 60அடுப்பின் கீழ்ப் புடையை மீயடுப்பென்றலும், பிறவும் வழக்காறாம். பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் முதலாகிய குழுவின் வந்த குறிநிலை வழக்கும், கண்கழீஇ வருதும், கான்மேல் நீர்பெய்து வருதும் என்னுந் தொடக்கத்து இடக்கரடக்கும் தகுதி என்றும், மரூஉ முடிபை வழக்காறு என்றும் உரையாசிரியர் அமைத்தாரா லெனின், குழுவின் வந்த குறிநிலை வழக்குச் சான்றோர் வழக்கின் கண்ணும் அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப் படாவாகலானும், 61இடக்கரடக்கு ‘அவையல் கிளவி’ (சொல். 442) எனவும், ‘மறைக்குங்காலை’ (சொல். 443) எனவும் முன்னர் அமைக்கப்படுதலானும், மரூஉமுடிபு எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டமையானும், அவர்க்கது கருத்தன்றென்பது. கருமை முதலாயின 62ஒருநிகரன வன்மையிற் காக்கை யொடு சார்த்திக் களம்பழத்தை விதந்த துணையல்லது காக்கைக்கு வெண்மை நேராமையின் காக்கையிற் கரிது களம்பழம் என்புழிக் கரிது வெளிதாயிற்றன்று. ஆதலால் வழுவன்று. கிழக்கு மேற்கென்பன வரையறையின்றி ஒன்றனொடு சார்த்திப் பெறப்படுவனவாதலின் ஒன்றற்குக் கீழ்ப் பாலதனைப் பிறிதொன்றற்கு மேற்பால தென்றலும் வழுவன்று. சிறுவெள் வாயென்பது இடுகுறி. கருவாடு என்பதும் அது. அதனான் இவை வழக்காறு என அமைக்கப்படா வாயினும், உரையாசிரியர் பிறர்மதம் உணர்த்திய கூறினா ரென்பது. தத்தமக்குரிய வாய்பாட்டானன்றிப் பிறவாய்பாட்டாற் கூறுதல் வழுவாயினும், அமைக என மரபுவழு வமைத்தவாறு.(17) 18. இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. இதன் பொருள்: இனப்பொருளைச் சுட்டுதலின்றிப் பண்படுத்து வழங்கப்படும் பெயர் வழக்குநெறியல்ல, செய்யுள்நெறி என்றவாறு. உதாரணம்: ‘செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் டிங்களுள் வெயில் வேண்டினும்’ (புறம். 38) என வரும். பலபொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒரு பொருட்குச் சிறந்த பண்பான் விசேடிக்கப்படுவது: ஞாயிறு திங்களென்பன பொதுச்சொல்லன்மையிற் செஞ்ஞாயிறென்றும் வெண்டிங்களென்றும் விசேடிக்கப்படாவாயினும், செய்யுட்கண் அணியாய் நிற்றலின், அமைக்கவென்றார். பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என 63இல்குணமடுத்து வழக்கின் கண்ணும் இனஞ்சுட்டாது வருதலின் செய்யுளா றென்றல் நிரம்பாதெனின், அவை இனஞ்சுட்டாமையின் வழுவாயின அல்ல, இல்குணமடுத்தலின் வழுவாயின. இனஞ் சுட்டலாவது இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படு தல். வெண்மை முதலாயின விசேடித்தலாவது 64அக்குணமில்லா இனப் பொருளி னீக்கி 65அக்குண முடையதனை வரைந்து சுட்டுவித்தலன்றே? 66சுட்டப்படுவதன்கண் அக்குணமில்லை யாயின் வரைந்து சுட்டுவிக்குமாறென்னை! அதனால் விசேடிக்கற் பாலது விசேடியாது நின்றதன்றாகலின் ஈண்டைக்கெய்தா; ‘வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி’ (சொல். 27) என்புழி ஒன்றென முடித்தல் என்பதனான் அமைக்கப்படும். 67குறுஞ்சூலி, குறுந்தடி என்னுந் தொடக்கத்தன சூலி தடி யெனப் பிரிந்து நில்லாமையிற் பண்புகொள் பெயரெனப்படா. பண்பு அடாது, வட வேங்கடந் தென்குமரி, முட்டாழை, கோட்சுறா எனத் திசையும் உறுப்புந் தொழிலும் முதலாய அடையடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றென முடித்தல் என்பதனான் செய்யுளாறென அமைத்துக் கொள்ளப்படும். ஒன்றனதாற்றலான் ஒன்று பெறப்படுதலின், வழக்காறல்ல வென்றானுஞ் செய்யுளாறென்றானும் கூறவமையுமெனின், உய்த்துணர்வது சொல்லில்வழியென மறுக்க. பண்புகொள் பெயர் இனங்குறித்து வருதல் மரபு; அம்மரபு வழக்கின்கண் வழுவற்க என்றும், செய்யுட்கண் வழுவமைக்க என்றுங் காத்த வாறாயிற்று. (18) 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். இதன் பொருள்: தன்னியல்பிற் றிரியாது நின்ற பொருளை, அதனியல்பு கூறுங்கால் ஆக்கமுங் காரணமுங் கொடாது. இற் றெனச் சொல்லுக என்றவாறு. இயல்பாவது பொருட்குப் பின்றோன்றாது உடன் நிகழுந் தன்மை. உதாரணம்: நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி 68உளரும், உயிர் உணரும் என வரும். இற்றென்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும், உளரும், உணரும் என்னுந் தெரிநிலை வினையும், இற்றென்னும் பொருள் பட நிற்றலின், இற்றெனக் கிளத்தலேயாம். நிலம் வலிதாயிற்று என இயற்கைப்பொருள் ஆக்கம்பெற்று வருமாலெனின், கல்லும் 69இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப் பட்ட நிலத்தை வலிதாயிற் றெனின், அது செயற்கைப் பொருளே யாம். நீர் நிலமும் சேற்று நிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான், நிலம் வலிதாயிற்று என்றவழி, மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின், இயற்கைப்பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது நிலத்திற்குன்மை விகாரமென்றேர்ந்து நிலம் வலிதாயிற்று என்னுமாயின், திங்கள் கரிது என்பது போலப் 70பிறழவுணர்ந்தார் வழக்காய் ஆராயப்படா தென்க. (19) 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். இதன் பொருள்: காரணத்தாற் றன்மை திரிந்த பொருளை, அத்திரிபு கூறுங்கால், ஆக்கங் கொடுத்துச் சொல்லுக என்றவாறு. 71ஆக்கமொடு கூறல் என்பதனான் திரிபு கூறுதல் பெற்றாம்; என்னை? அதன்கணல்லது வாராமையின். இயற்கைப்பொருள் செயற்கைப்பொருள் என்பன, இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (20) 21. ஆக்கந் தானே காரண முதற்றே. இதன் பொருள்: செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுங்கால், காரணத்தை முற்கூறி அதன்வழி ஆக்கங் கூறுக என்றவாறு. தானேயென்பது செய்யுட்சுவை குறித்து நின்றது. உதாரணம்: 72கடுக்கலந்த கைபிழியெண்ணெய் பெற்றமை யான், மயிர் நல்லவாயின; எருப்பெய் திளங்களை கட்டு நீர்க்கால் யாத்தமையாற், பைங்கூழ் நல்லவாயின; நீர் கலத்தலால் நிலம் மெலிதாயிற்று; தீச்சார்தலான் நீர் வெய்தாயிற்று என வரும். மயிர் நல்ல, பயிர் நல்ல எனச் செயற்கைப் பொருள் ஆக்கம் பெறாது வந்தனவா லெனின், அந்நன்மை பொருட்குப் பின்தோன் றாது உடன் தோன்றிற்றேல் இயற்கையேயாம்; அவ்வாறன்றி, 73முன் றீயவாய்ப் பின் நல்லவாயினவேனும். தீயநிலைமை காணாதான் மயிர் நல்ல பயிர் நல்ல என்றாற் படுமிழுக்கென்னை? அது செயற்கையாவது உணர்ந்தான் ஆக்கங் கொடாது சொல்லினன்றே வழுவாவ தென்க. செயற்கைப் பொருளை ஆக்கமுங் காரணமுங் கொடுத்துச் சொல்லுக என்பதே கருத்தாயின் சூத்திரம் ஒன்றாகற் பாற் றெனின்.... அவ்வாறோதின், 74ஆக்கமுங் காரணமுஞ் செயற்கைப் பொருட் கண்ணொத்தவாயின என்பது பட்டுக் ‘காரணமின்றி யும் போக்கின்று’ (சொல். 22) என்பதனொடு மாறுகோடலானும், காரணஞ் செயற்கைப் பொருளதோ ஆக்கத்ததோ என ஐயுறப்படுதலானும், ஆக்கந் தானே காரண முதற்றெனப் பிரித்துக் கூறினாரென்பது. இயற்கைப்பொருள் ஆக்கமுங் காரணமும் பெறாது வருதலும் செயற்கைப்பொருள் அவைபெற்று வருதலும் இலக்கண மெனவே, இவ்வாறின்றி வருவன மரபு வழு வென்பதாம். நுண்ணுணர்வுடையார்க்குத் ‘தம்மரபினவே’ (சொல். 11) என அடங்குவ வாயினும், ஏனையுணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணர லாகாமையின் விரித்துக் கூறினார். (21) 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. இதன் பொருள்: காரண முதற்றெனப்பட்ட ஆக்கச்சொல் காரணமின்றி வரினுங் குற்றமின்று வழக்கினுள் என்றவாறு. உதாரணம்: மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின என வரும். வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே, செய்யுளுட் காரணம் பெற்றே வருமென்பதாம். உதாரணம்: பரிசிலர்க் கருங்கலம் 75நல்கவுங் குரிசில் வலிய வாகு நின் றாடோய் தடக்கை (புறம். 14) எனவும், தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாம் குருதி 76படிந்துண்ட காக முருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. (களவழி நாற்பது 5) வருமழைய வாய்க்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக் கருமுருகன் சூடிய கண்ணி - திருநுதா லின்றென் குரற்கூந்தல் பெய்தமையான் பண்டைத்தன் சாயல வாயின தோள். எனவும் காரணம் பெற்று வந்தவாறு கண்டுகொள்க. குக்கிற் புறத்த, சிரல்வாய என ஆக்கமின்றி வந்தனவாலெனின், தொகுக்கும் வழித்தொகுத்தல் என்பதனான் ஆண்டாக்கந் தொக்கு நின்றதென்பது. அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் றோளே. (குறுந். 77) எனவும், நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு (குறள். 305) எனவும், செயற்கைப் பொருள் செய்யுளுட் காரணமின்றி வந்தன வாலெனின்:- களவுக்காலத் தரியன 77இக்காலத்து எளியவாயின என்பது கருத்தாகலான், இக்காலங் காரணமென்பது பெறப்படுத லானும், ஊழானென்பது அதிகாரத்தான் வருமாகலானும், அவை காரணமின்றி வந்தன வெனப்படா வென்பது. (22) 23. பான்மயக் குற்ற வையக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். இதன் பொருள்: திணை துணிந்து பாறுணியாத ஐயப் பொருளை அவ்வத் திணைப் பன்மையாற் கூறுக என்றவாறு. 78கிளவியென்றது ஈண்டுப் பொருளை. ஐயப்பொருளாவது 79சிறப்பியல்பாற் றோன்றாது பொது வியல்பாற் றோன்றிய பொருள். உதாரணம்: ‘ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இஃதோ தோன்றுவார்’ எனவும், ‘ஒன்றோ பலவோ செய் புக்கன’ எனவும் வரும். திணைவயினென்னாது தானறிபொருள்வயி னெனப் பொதுப்படக் கூறியவதனான், ஒருவன்கொல்லோ பலர் கொல்லோ கறவையுய்த்த கள்வர் எனவும், ஒருத்திகொல்லோ பலர் கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டலயர்ந்தார் எனவும், திணையோடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மை யொருமைப் பால் ஐயமுங் கொள்ளப்படும். ஒருமையாற்கூறின் வழுப்படுதல் நோக்கிப் ‘பன்மை கூறல்’ என வழா நிலை போலக் கூறினாரேனும், 80ஒருமையைப் பன்மை யாற் கூறுதலும் வழு வாதலின், ஐயப்பொருண்மேல் சொல் நிகழு மாறு உணர்த்திய முகத்தான் பால் வழு வமைத்தவாறாம். (23) 24. உருபென மொழியினு மஃறிணைப் பிரிப்பினு மிருவீற்று முரித்தே சுட்டுங் காலை. இதன் பொருள்: உருபெனச் சொல்லுமிடத்தும், ஒருமை யும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணைப் பொதுச் சொற் கண்ணும், இவ்விரு கூற்றினும் ஐயப்புலப் பொதுச் சொல்லாதல் 81உரித்து என்றவாறு. எனவே, ‘ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ தோன்றா நின்ற உருபு’ எனவும், ‘ஒன்றுகொல்லோ பலகொல் லோ செய்புக்க உருபு’ எனவும், ‘குற்றிகொல்லோ மகன்கொல் லோ தோன்றா நின்ற உருபு’ எனவும், ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம்’ எனவும் சொல்லுக வென்பதாம். ஐயக்கிளவி யென்பது அதிகாரத்தாற் பெற்றாம். 82உருபினுமென்னாது உருபென மொழியினும் என்றத னான், உருபின் பொருளவாகிய வடிவு பிழம்பு பிண்டமென்னுந் தொடக்கத்தனவும் கொள்க. பன்மை கூறல் உயர்திணைப்பால் ஐயத்திற்கு உரித் தென்றும், உருபென மொழிதல் திணை ஐயத்திற்கு உரித் தென்றும் உரையாசிரியர் கூறினாராலெனின், அவை அவற்றிற்கே உரியவாயின், அஃறிணைப் பிரிப்பென்றாற்போல 83உயர்திணைப்பால் மயக்குற்ற என்றும், திணை ஐயத்து என்றும் விதந்தோதுவர் ஆசிரியர்; அவ்வாறு ஓதாமையானும், நடையுள் அவை பொதுவாய் வருதலானும், அவை போலியுரை யென்க. ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ என்றற் றொடக்கத்து உயர் திணைப் பன்மை யொருமைப் பால்ஐயத்திற்கு உருபு முதலாயின ஏலாமையும், திணை ஐந்திற்கும் ஏனைப் பால் ஐயத்திற்கும் ஏற்புடைமையும் சுட்டி யுணர்க என்பது போதரச் ‘சுட்டுங்காலை’ யென்றார். சுட்டுதல் - கருதுதல். (24) 25. தன்மை சுட்டலு முரித்தென மொழிப வன்மைக் கிளவி வேறிடத் தான. இதன் பொருள்: ஐயுற்றுத் துணியும்வழி அன்மைக் கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலு முரித்து என்று சொல்லுவர், துணிந்து தழீஇக் கொள்ளப்பட்ட பொருளின் வேறாய பொருளிடத்து என்றவாறு. என்றது, குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்றானும், ஒருவன் கொல்லோ ஒருத்திகொல்லோ என்றானும், ஒன்று கொல்லோ பல கொல்லோ என்றானும் ஐயம் நிகழ்ந்தவழித் துணிதலுமுண்டு; 84பிற நடையுள் துணிந்தவழி மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைத் தன்மை யேற்றினும் அமையு மென்றவாறு. மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகனெனவும், குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றியெனவும், ஆண்மக னென்று துணிந்த வழிப் பெண்டாட்டி யல்லள் ஆண்மகனெ னவும், பெண்டாட்டி யென்று துணிந்த வழி ஆண்மகனல்லன் பெண்டாட்டியெனவும், ஒன்றென்று துணிந்தவழிப் பலவல்ல ஒன்றெனவும், பலவென்று துணிந்த வழி ஒன்றன்று பல எனவும் மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைக்கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றவாறு. உம்மை எதிர்மறையாகலான், வேறிடத்துச் சுட்டாமையே பெரும்பான்மை யென்பதாம். ஆகவே, இவ்வுருபு குற்றியன்று மகனென ஐயப் புலமாகிய 85பொதுப்பொருண் மேலானும், குற்றி யல்லன் மகனெனத் துணி பொருள் மேலானும், அன்மைக்கிளவி அன்மை சுட்டி நிற்றல் பெரும்பான்மை யென்பதாம்; என்னை? வேறிடத்துச் சுட்டாமை யாவது 86ஈண்டுச் சுட்டலே யாகலான். குற்றியன்று மகன் என்றவழி மகனென்பது நின்று வற்று மெனின், எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப (சொல். 68) என்பதனான் எழுவாய் வெளிப்படாது நிற்றலுமுண்மையான், வெளிப்படாது நின்ற இவனென்னும் எழுவாய்க்கு அது பயனிலையாகலின், நின்று வற்றுதல் யாண்டைய தென்க. அல்லன வற்றிற்குமீதொக்கும். குற்றியல்லன் என்புழிக் குற்றியென்பது அல்லனென்னுஞ் சொல்லோ டியைந்தவாறு என்னை யெனின், 87இவ்வுருபு குற்றி யாம் என்றவழி, ஆமென்பதனொடு குற்றியென்பதூஉம் எழுவா யாய் நின்றே இயைந்தாற் போல, இவன் குற்றியல்லன் என்புழி ஆமென்பதன் எதிர்மறையாகிய அன்மைக் கிளவியொடும் குற்றி யென்பது எழுவாயாய் நின்றேயியையு மென்பது. எழுவாயா யியைதலினன்றே, யான் நீயல்லென் என்புழி, நீயென்பது வேற்றுமைக்கேற்ற செய்கை பெறாது நின்ற தென்க. (25) 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். இதன் பொருள்: பண்புச்சொல்லும், சினைச்சொல்லும், முதற் சொல்லும் என மூன்றுங் கூறப்பட்ட முறை மயங்காமல், வழக்கைப் பொருந்தி நடக்கும், வண்ணச்சொல்லொடு தொடர்ந்த சினைச் சொல்லையுடைய முதற்சொல் என்றவாறு. வடிவு முதலாகிய பிற பண்புமுளவேனும், வண்ணப் பண்பினது வழக்குப்பயிற்சி நோக்கி ‘வண்ணச் சினைச் சொல்’ என்றார். உதாரணம்: செங்கானாரை, பெருந்தலைச் சாத்தன் என வரும். கால் செந்நாரை, தலைப்பெருஞ் சாத்தன் என முறை மயங்கி வரின், மரபு வழுவா மென்க. வழக்கினுண் மயங்காது வருமெனவே, "கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி" (புறம். 238) எனச் செய்யுளுள் மயங்கியும் வரப்பெறு மென்றவாறாம். செவி செஞ்சேவல், வாய்வன் காக்கை என்பன, செஞ்செவிச் சேவல், வல்வாய்க் காக்கை என்னும் பொருள்பட நின்றமையின், வண்ணச் சினைச்சொல் மயக்கமாயின. அஃதேல், சினையடை யாகிய செம்மையும் வன்மையும் முதலடை யாயினவாறு என்னை யெனின், சினையொடு முதற்கு ஒற்றுமை யுண்மையான் அவை முதலொடுமியைபுடைய வென்பது. ‘88பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கண் பேதை’ என்புழி மூன்றாம் வழி முதல் கிடவாது பின்னும் அடையுஞ் சினையும் புணர்த்தமையான் வண்ணச் சினைச்சொல் செய்யுளுள் மயங்கி வந்ததென்று உரையாசிரியர் கூறினாரா லெனின், மூன்றாம் வழிப் புணர்க்கப்படும் பேதை யென்னும் முதற்சொல் பேரமர்க்கண் என்னுந் தொகையொடு வேற்றுமைப் பொருள்படத் தொக்கு, அத் தொகை சிறுநுசுப்பு என்னுந் தொகையோடும் அப்பொருள்படத் தொக்கு, ஒரு சொல்லாய், ‘பெருந் தோட் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி’ என்றாற் போல மூன்றாம் வழிப் பிற சொல் அடுத்துப் பேதையென்னும் முதல் கிடந்த தெனவே படுதலின், மயக்க மின்மையான், அவர்க்கது கருத்தன்றென்க. அன்றிப் பெருந்தோண் முதலாகிய மூன்றும் 89பலபெயர் உம்மைத்தொகை படத் தம்முள் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதை யென்பதனொடு வேற்றுமைத் தொகைபடத் தொக்கன வெனினும், அவை உம்மைத் தொகைபடத் தொகாது நின்று பேதை யென்பதனொடு வேற் றுமைத் தொகைபட ஒருங்கு தொக்கன வெனினும், தம்முள் இயையாது பேதை யென்பதனோடு இயைதலின், ஆண்டும் மயக்க மின்மை யறிக. அஃதேல், இவ்வாறு வருதல் வழக்கிற்கும் உரித்தோ எனின், அடுக்கிய அடையும் சினையும் பொதுமை நீக்குதற்கன்றி அணி குறித்து நிற்றலின் செய்யுட்கே உரித்தென்பது. ‘சிறுபைந் தூவி’ (அகம். 57) எனச் 90சினையொடு குணம் இரண்டடுக்கி வருதல் செய்யுட்குரித்து என்றும், ‘இளம் பெருங் கூத்தன்’ என முதலொடு குணம் இரண்டடுக்கி வருதல் வழக்கிற் குரித்து என்றும், பிறர்மத மேற்கொண்டு கூறினார். ஒன்றாக பலவாக இனஞ் சுட்டாதன செய்யுட்கு உரியவாம்; இனஞ்சுட்டி நின்றன வழக்கிற்கு உரியவாம் என்பதே உரையாசிரியர் கருத்தென்க. அன்றிப் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் என்பதனான் சினையொடு குணம் இரண்டடுக் கல் செய்யுளாறென்று கொள்ளினும் அமையும்; முதலொடு குணமிரண் டடுக்கல் வழக்கியல் சினையோ டடுக்கல் செய்யு ளாறே என்றாராகலின். வண்ணச் சினைச்சொல் என்றதனான் வண்ணமும் சினையும் முதலுங் கூறுதற்கண்ணது இவ்வாராய்ச்சி யென்பதாம். ஆகவே இளம் பெருங்கூத்தன், பெரும்பலாக்கோடு என்னுந் தொடக்கத்தன வேண்டியவாறு வரப்பெறு மென்றவாறு. மயங்காது வருகவென மரபுவழுக் காத்தவாறு. (26) 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியு மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. இதன் பொருள்: ஒருவனையும் ஒருத்தியையுஞ் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றனைச் சொல்லும் பன்மைச்சொல்லும், வழக்கின் கண் உயர்த்துச் சொல்லுஞ் சொல்லாம்; இலக்கண முறைமையாற் சொல்லும் நெறியல்ல என்றவாறு. உதாரணம்: 91யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என வரும். உயர்சொல் உயர்க்குஞ் சொல். உயர்சொற் கிளவி யென்புழிக் கூறியது கூறலன்மை பண்புத் தொகை யாராய்ச்சிக்கட் சொல்லுதும். 92தாம் வந்தார் (தொண்டனார்) எனப் பன்மைக்கிளவி இழித்தற் கண்ணும் வந்ததாலெனின், ஆண்டு உயர்சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது. ‘இலக்கண மருங்கின் சொல்லாறல்ல’ என்றதனான் இலக்கண மன்மையும், ‘வழக்கினாகிய உயர்சொற் கிளவி’ யென்றத னான் வழுவன்மையுங் கூறினார்; கூறவே, வழுவமைதி யென்றவாறாம். அஃதேல், ‘93வழக்கினாகிய உயர்சொற் கிளவி’ யெனவே வழுவமைதி யென்பது பெறுதும்; ‘இலக்கண மருங்கின் சொல்லாறல்ல’ வெனல் வேண்டாவெனின், அங்ஙனங் கூறிற் செய்யுள் வரைந்தவாறோ வழுவமைத்தவாறோ வென ஐயமாக்க லின், அவ்வாறு கூறல் வேண்டுமென்பது. பன்மைக் கிளவியுமெனப் பொதுவகையான் கூறினா ரேனும், உயர்த்தற்கண் வழங்கப்பட்டு வரும் உயர்திணைப் பன்மையும் விரவுப் பன்மையுமே கொள்ளப்படும் என்றற்கு ‘வழக்கினாகிய’ வென்றார். 94தன்னின முடித்தல் என்பதனான் எருத்தையும் ஆவையும், எந்தை வந்தான், எம்மன்னை வந்தாள் என உயர்திணையாய் உயர்த்து வழங்கலும், ஒன்றென முடித்தல் என்பதனான் ‘கன்னி ஞாழல்,’ (சிலப். கானல் வரி. 18) கன்னியெயில் என வஃறிணை யாய் நின்று உயர்திணை வாய்பாட்டாற் கூறப்படுதலும், 95பண்பு கொள் பெயர்க்கொடை வழக்கினகத்தும் பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் என இல்குணமடுத்து உயர்சொல்லாய் வருதலுங் கொள்க. (27) 28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்து முரிய என்ப. இதன் பொருள்: செலவு முதலாகிய நான்கு தொழிற் கண்ணும் நிலை பெறப் புலப்படாநின்ற அந்நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூவிடத்திற்கும் உரியவாய் வரும் என்றவாறு. செலவு முதலாகிய தொழிற்கண் சிறப்பு வகையான் நிலை பெறாது பொதுவாய் வரும் 96இயங்குதல் ஈதல் என்னுந் தொடக்கத்தனவற்றினீக்குதற்கு ‘நிலைபெறத் தோன்றும்’ என்றார். முற்றும் எச்சமும் தொழிற்பெயருமாகி அத்தொழில்பற்றி வரும் வாய்பாடு பலவாயினும், அவையெல்லாம் இந்நான்கு தொழிலும் பற்றித் தோன்றுதலின் ‘நான்கு சொல்’ லென்றார். 97பொருள் வகையான் முன்னறியப்பட்டமையான் ‘அந்நாற் சொல்லும்’ என்றார். இச் சூத்திரத்துள் 98ஈங்கு முதலாயின தன்மைக்கண்ணும், ஆங்கு முதலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன. வினைச்சொல் மூன்றிடத்திற்கும் உரியவாதல் வினையிய லுள் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல்வேண்டா எனின், ஆண்டுப் பாலு ணர்த்துமீற்றான் இடத்திற்குரிமை கூறினார்; ஈண்டு ஈற்றா னன்றிச் செலவு முதலாயின முதனிலைதாமே இடங்குறித்து நிற்றல் உடைமையான் இவ் வேறுபாடு ஆண்டுப் பெறப்படா மையின் ஈண்டுக் கூறினாரென்பது. அஃதேல், “தருசொல் வருசொல் ஆயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த, படர்க்கையிடத்த கொடைச்சொல்லுஞ் செலவுச் சொல்லும்” என வோதுக; இச் சூத்திரம் வேண்டா வெனின், அங்ஙன மோதின், இடஞ் சுட்டும் முதனிலை இந்நான்குமே யென்னும் வரையறை பெறப்படாமையின், இது வேண்டுமென்பது. அஃதேல், போதல் புகுதல் என்னுந் தொடக்கத்தனவும் இடஞ் சுட்டுதலின் நான்கென்னும் வரையறை அமையா தெனின், அவை இக்காலத்துச் சிலவிடத்துப் பயின்று வருமாயினும், மூன்றிடத் திற்கும் பொதுவாகலினன்றே, ஆசிரியர் அந்நாற் சொல்லுமென இவற்றையே வரைந்தோதுவாராயிற் றென்பது. (28) 29. அவற்றுள் தருசொல் வருசொல் லாயிரு கிளவியுந் தன்மை முன்னிலை யாயீ ரிடத்த. இதன் பொருள்: கூறப்பட்ட நான்கு சொல்லுள், தரு சொல்லும் வரு சொல்லுமாகிய இரண்டும் தன்மை முன்னிலையாகிய இரண் டிடத்திற்குமுரிய என்றவாறு. உதாரணம்: எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான், என்னுழை வந்தான், நின்னுழை வந்தான் எனவும்; ஈங்கு வந்தான் எனவும் வரும். தரப்படும் பொருளை யேற்பான் தானும் முன்னின்றானும் ஆகலானும், வரவுத்தொழில் தன்கண்ணும் முன்னின்றான் கண்ணும் சென்று முடிதலானும், ஈற்றானன்றி இவ்விரு சொல்லும் தன்மை முன்னிலைக்குரியவாயினவாறு கண்டு கொள்க. நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்து முரிய." (சொல். 28) என்று மூன்றிடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவுங் கொள்ள வைத்தமை யான், பெருவிற 99லமரர்க்கு வென்றி தந்த (புறம். 55) எனவும், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது (அகம். 36) எனவும், மயங்கி வருவனவும் அமைக்கப்படும். அஃதேல், படர்க்கைச் சொல் மயக்கமும் எய்துமா லெனின், அஃதெச்சவியலுள் பெறப்படுதலின், (448) ஈண்டுக் கொள்ளப்படாதென்க. 100ஒருவன் சேய்நிலத்துநின்றும் அணிநிலத்துப் புகுந்தா னாயின் சேய்நிலம் நோக்க அணிநிலம் ஈங்கெனப் படுதலின், அவன்கண் வந்தான், ஆங்கு வந்தான் என்பன இலக்கணமேயாம். இந் நான்கும், கொடைப் பொருளன என்று உரையாசிரியர் கூறினா ராலெனின், ‘101தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கது கருத்தன் றென்க. 102தரவு வரவை யுணர்த்துவனவற்றைத் தருவதும் வருவதும் போலத் தருசொல், வருசொலென்றார். (29) 30. ஏனை யிரண்டு மேனை யிடத்த. இதன் பொருள்: செலவுச்சொல்லும், கொடைச் சொல் லும், படர்க்கைக்குரிய என்றவாறு. உதாரணம்: அவன்கட் சென்றான், ஆங்குச் சென்றான், அவற்குக் கொடுத்தான் என வரும். செலவுத் தொழில் படர்க்கையான்கட் சென்றுறுத லானும், கொடைப் பொருளேற்பான் படர்க்கையானாகலானும், 103ஈற்றானன்றி இவ்விரு சொல்லும் படர்க்கை யிடத்திற்குரிய வாயினவாறு கண்டு கொள்க. (30) 31. யாதெவ னென்னு மாயிரு கிளவியு மறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். இதன் பொருள்: யாது எவனென்னும் இரண்டுசொல்லும் அறியாப் பொருளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: இச்சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப் பொருள் எவன் என வரும். எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமை யின், ஈண்டறியாப் பொருள் என்றது, பொதுவகையான் அறியப்பட்டுச் 104சிறப்பு வகையான் அறியப்படாத பொருளை யாம். யா, யாவை, யாவன், யாவள், யாவர், யார், யாண்டு, யாங்கு என்னும் தொடக்கத்தன திணையும் பாலும் இடமு முதலாகிய சிறப்பு வகையானுஞ் சிறிதறியப்பட்ட பொருளனவாகலின், அறியாப்பொருள்வயிற் செறியத் தோன்றாமையான், இவற்றை யே விதந்து ‘அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்’ என்றார். இவையும் திணையும் பாலும் குறித்து வருதலின் சிறப்பு வகையானும் அறியப்பட்ட பொருளனவே யன்றோ வெனின், அற்றன்று; 105இச்சொற்குப் பொருள் யாது எவன் என்று வினாய வழி, இறுப்பானும், அஃறிணை யொருமையும் பொதுமையும் துணிந்து அவற்றுள் பகுதியறிதற்கு வினாவுகின்றானல்லன், பொதுவகையான் வினாவுகின்றானென்று உணருமாகலின். அவ்வாறாதல், வழக்கினகத்து வினாவுவானதும் இறுப்பானதுங் குறிப்பொடு படுத்துணர்க. முன்னர் வழுவமைத்தற்கு அவை இன்ன பொருட்கு உரிய என அவற்றது இலக்கணங் கூறியவாறு. (31) 32. அவற்றுள் யாதென வரூஉம் வினாவின் கிளவி யறிந்த பொருள்வயி னையந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே. இதன் பொருள்: கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினாச் சொல் அறியாப்பொருள்வயின் வினாவாதலேயன்றி அறிந்த பொருட்கண் 106ஐய நீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து என்றவாறு. உதாரணம்: இம்மரங்களுட் கருங்காலி யாது, நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது என வரும். நமருள் யாவர் போயினார், அவற்றுள் எவ்வெருது கெட்டது எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின், அவையும் ஈண்டமைக்கற்பால லெனின், அவை அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்கல்லது யாண்டும் வாராமையின், ஈண்டமைக்கப் படாவென்பது. இதனான் வினாவழு அமைத்தார். (32) 33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும். இதன் பொருள்: கேட்போரான் இத்துணை யென்றறியப் பட்ட சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் 107வினைப்படு தொகுதிக் கண் உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு. உதாரணம்: ‘பன்னிரு கையும் பாற்பட வியற்றி’ (திருமுருகா - திருச்சீரலைவாய்) எனவும், ‘முரசு முழங்குதானை மூவருங் கூடி’ (பொருந. 54) எனவும் வரும். அறிந்த சினைமுதற்கிளவி யெனவே, முன்னறியப்படாக் கால், முருகற்குக் கை பன்னிரண்டு, தமிழ்நாட்டிற்கு வேந்தர் மூவர் என உம்மை பெறாது வருமென்பதாம். ஐந்தலைநாகமுடன்றது, நான்மறைமுதல்வர் வந்தார் என் புழி, இனைத்தென அறிந்த சினைமுதற்கிளவியாயினும், 108வினைப்படுதொகுதி யன்மையின், உம்மை பெறாவாயின. அஃதேல், 109பன்னிருகையுமென்புழியும் தொகுதிப் பெயர் வினை யொடு தொடராது கையென்பதனோடொட்டி நிற்றலின், வினைப்படு தொகுதியன்றாம் பிறவெனின், ஒட்டி நின்ற தாயினும், ஐந்தலை நாகம், நான்மறை முதல்வர் என்பனபோலாது இரு சொல்லும் ஒருபொருண்மேல் வருதலிற், கையென்பத னோடியைந்த இயற்றி என்னும் வினை தொகுதிப் பெயரோடு மியைந்ததாம், அதனான் அது வினைப்படு தொகுதியாமென்பது. அஃதேல், கண்ணிரண்டும் குருடு, எருதிரண்டும் மூரி எனப் பெயர் கொண்ட வழி உம்மை பெறுமாறு என்னை யெனின், பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப் படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியா மென்க. ஐந்தலை, நான்மறை என்பனவற்றிற்கு நாகம், முதல்வர் என்பன முடிக்குஞ் சொல்லன்மையின், வினைப்படு தொகுதி யாகாமை யுணர்க. ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னாற் சினை முதற் கிளவி யென்றாராயினும், சிறவாத பண்பு முதலாயினவுங் கொள்ளப்படும். உதாரணம்: சுவையாறுமுடைத்திவ்வடிசில், கதியைந்து முடைத்திக் குதிரை என வரும். ‘இருதோடோழர்பற்ற’ எனவும், ‘ஒண்குழையொன் றொல்கி யெருத் தலைப்ப’ எனவும் உம்மையின்றி வந்தனவா லெனின், ஆண்டு உம்மை செய்யுள் விகாரத்தான் தொக்கு நின்றன வென்பது. (33) 34. மன்னாப் பொருளு மன்ன வியற்றே. இதன் பொருள்: இல்லாப்பொருட்கும் இடமுங் காலமும் பொருளு முதலாயினவற்றொடு படுத்து இன்மை கூறுதற்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு. உதாரணம்: பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளுமில்லையெனவும், குருடு காண்டல் பகலுமில்லை எனவும், ‘உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா’ (நாலடி. 104) எனவும் வரும். 110இல்லாப் பொருட்கு ஒருகாலும் நிலையுறுதலின்மையின், ‘மன்னாப் பொருள்’ என்றார். இடம் முதலாயினவற்றொடு படுத்தற்கண் என்பது ஏற்புழிக் கோடலென்பதனாற் பெற்றாம். அவற்றொடு படாதவழிப் பவளக் கோட்டு நீலயானை யில்லை என உம்மையின்றி வருமென்பதாம். முற்றும்மையும் எச்ச உம்மையுமாகிய வேறுபாடுடைய வேனும், உம்மை பெறுதலொப்புமையான், ‘அன்ன இயற்று’ என்றார். இரண்டு சூத்திரத்தானும் மரபுவழுக் காத்தவாறு. (34) 35. எப்பொரு ளாயினு மல்ல தில்லெனி னப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். இதன் பொருள்: யாதாயினுமொரு பொருளையாயினும் ஒருவன் அல்லதில்லென்னும் வாய்பாட்டான் இல்லையென லுறின், அப் பொருடன்னையே கூறாது அப்பொருளல்லாத பிறிது பொருள் கூறுக என்றவாறு. உதாரணம்: பயறுளவோ வணிகீர் என்று வினாயவழி, உழுந்தல்லதில்லை; கொள்ளல்லதில்லை என அல்லதில்லென் பான் பிறிது பொருள் கூறியவாறு கண்டுகொள்க. அல்லதில்லெனினெனப் பொருள்பற்றி யோதினாராக லின், அல்லதில்லென்னும் வாய்பாடே யன்றி, உழுந்தன்றி யில்லை உழுந்தேயுள்ளது என அப் பொருள்படுவன எல்லாம் கொள்க. உழுந்தல்லதில்லை எனப் பிறிது பொருள் கூறாது பயறல்லதில்லை யென அப்பொருள் கூறின், ‘பயறுள; அல்லன இல்லை’யென மறுதலைப் பொருள்பட்டுச் செப்பு வழுவா மாறறிக. யாதானுமாக அல்லதில்லெனின் பிறிதுபொருள் கூறுக என எஞ்சாமல் தழீஇ யாப்புறுத்தற்கு எப்பொருளாயினும் என்றார். அல்லது இல்லென்பதற்குத் 111தன்னுழையுள்ளதல்லது என்றும், அப் பொருளல்லாப் 112பிறிதுபொருள் கூறல் என்பதற்கு இனப்பொருள் கூறுவென்றும் உரைத்தாரால் உரையாசிரிய ரெனின், 113பயறுளவோவென்று வினாயவழிப் பயறில்லையென் றாற் படும் வழுவின்மையானும், உள்ளதல்ல தென்றல் கருத்தா யின் ஆசிரியர் அல்லதெனக் குறித்த பொருள் விளங்காமையின் அகப்படச் சூத்திரியா ராகலானும், பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பா னொருவனுழைச் சென்று பயறுளவோ என்றவழிப் பாம்புணிக் கருங்கலல்லதில்லை யென்றால் இனப்பொருள் கூறாமையாற் பட்ட இழுக்கின்மை யானும், அவை போலியுரை யென்க. அல்லதூஉம், இனப் பொருள் கூறுக என்பதே கருத்தாயின், அப்பொருளல்லா இனப் பொருள் கூறல் என்னாது பிறிது பொருள் கூறலென்னார் ஆசிரியர், அதனானும் அஃதுரையன்மை யுணர்க. (35) 36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். இதன் பொருள்: அல்லதிலென்பான், பிறிதுபொருள் கூறாது அப்பொருடன்னையே கூறுமாயின், இப்பயறல்ல தில்லை எனச் சுட்டிக் கூறுக என்றவாறு. பயறுளவோ என்றவழிச் சுட்டாது பயறல்லதில்லை எனின் “பயறுள உழுந்து முதலாயின வில்லை” எனப் பிறிது பொருளேற் பித்துச் செப்பு வழுவா மென்பது. 114அல்லதில் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். தன்னினமுடித்தலென்பதனான், பசும்பயறல்லதில்லை, பெரும் பயறல்லதில்லை எனக் கிளந்து கூறுதலுங் கொள்க. ‘செப்பும் வினாவும்’ (சொல். 13) என்றதனான் இவ்வேறுபாடு இனிது விளங்காமையானும், ‘பொருளொடு புணராச்சுட்டு’ (சொல். 37) என வழுவமைக்கின்றா ராகலானும், இவற்றை விதந்து கூறினார். (36) 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. இதன் பொருள்: சுட்டானன்றிப் பொருள் வரையறுத்து உணர்த்தாச் சுட்டுப் பெயராற் கூறினும், பொருள் வேறாகாது இப்பயறெனச் சுட்டிக் கூறிய பொருளேயாம் என்றவாறு. என் சொல்லியவாறோவெனின், இவையல்லதில்லை யென்றவழி, இவை என்பது பயற்றையே சுட்டாது உழுந்து முதலாயின வற்றிற்கும் பொதுவாய் நிற்றலின் வழுவாமன்றே? ஆயினும், முன் கிடந்த பயறு காட்டி இவை யென்றானாகலின், அவற்றையே 115சுட்டு முதலானமைக்கவெனச் செப்புவழு வமைத்தவாறு. 116சாதியும் பண்புந் தொழிலும் முதலாயின பற்றி ஒரு பொருளை வரைந்துணர்த்தாது எல்லாப் பொருள்மேலுஞ் சேறலின் ‘‘பொருளொடு புணராச் சுட்டுப்பெயர்’’ என்றார். வேறுபடாது, ஒன்றாகும் என்பனவற்றுள் ஒன்றே அமையு மெனின், பொருள் வரைந்துணர்த்தும் பெயரொடு பொருள் வரைந்துணர்த்தாச் சுட்டுப் பெயர் வேறுபாடுடைத்தேனும், ஒரு பொருள்மேல் முடிதலின் ஒரு பொருட்டாமென்பது விளக்கிய பொருள் வேறுபடாதொன்றாகுமென்றார். அப்பொருள் கூறுதற்கண் என்னாது பொதுப்படக் கூறியவதனான், பிறிது பொருள் கூறும்வழியும் இவையல்ல தில்லையெனச் சிறுபான்மை சுட்டுப்பெயரான் கூறினுமமையு மென்பதாம். யானைநூல் வல்லானொருவன் காட்டுட் போவுழி ஓர் 117யானை அடிச்சுவடு கண்டு ‘இஃதரசுவாவாதற்கேற்ற இலக்கண முடைத்து’ என்ற வழியும், இஃதோர் ம் செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே என்புழியும், சுட்டுப்பெயர் பொருளொடு புணராது நிற்றலின், அவற்றையே அமைக்கின்றது இச்சூத்திரமென்பாருமுளர். (37) 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா ரியற்பெயர் வழிய வென்மனார் புலவர். இதன் பொருள்: இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிதுவினை கோடற்கு ஒருங்கு நிகழுங் காலம் தோன்றுமாயின், உலகத்தார் சுட்டுப்பெயரை முற்படக் கூறார், இயற் பெயர்க்கு வழியவாகக் கூறுவரென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. வினைக் கொருங்கியலுங்கால், 118அப்பெயர் எழுவாயாயும் உரு பேற்றும் நின்றன எல்லாங் கொள்ளப்படும். வினைக்கென்புழி அவ்விரு பெயரும் ஒருவினைகோடலும் தனித்தனி வினைகோடலுங் கொள்க. ஒருங்கியலும் என்றதனான் அவை ஒரு பொருள்மேல் வருதல் கொள்க. உதாரணம்: சாத்தன்அவன் வந்தான், சாத்தன் வந்தான் அவன் போயினான் எனவும், சாத்தி வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவும் வரும். அவன்றான் வந்தான், அவனொருவனுமறங்கூறும், ஈதொன்று குருடு என இயற்பெயரல்லா விரவுப்பெயர்க்கும் உயர் திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் வரையறை யின்றிச் சுட்டுப்பெயர் முற்கிளக்கவும் படுதலின், இயற்பெயர்க் கிளவி யென்றார். அவ்வாறு அவை முற்கிளக்கப்படுவது ஒருவினை கோடற்கண்ணே யென்பது. அற்றேல், அவை முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, நங்கை வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க, குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க எனத் தனித்தனி வினை கோடற்கண் சுட்டுப்பெயர் பிற்கிளக்கப்படுதல், முன்னையதற்குத் தன்னின முடித்தலினானும் ஏனையிரண்டற்கும் இயற்பெயரென்ற மிகையானுங் கொள்க. பிறிதுவினை கோடற்கண்ணெனவே, அவன் சாத்தன், சாத்தனவன் என ஒன்றற் கொன்று பயனிலையாதற்கண்ணும், ஒரு பொருண்மேல் நிகழுமெனவே, அவனுஞ் சாத்தனும் வந்தார். சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருளவாய் வருதற் கண்ணும், யாது முற்கூறினும் அமையுமென்பதாம். வினை யென்றது முடிக்குஞ் சொல்லை. சுட்டுப்பெயர் யாண்டும் இயற்பெயர்வழிக் கிளக்கப்படு மென யாப்புறுத்தற்கு, முற்படக் கிளவாரென்றும், இயற்பெயர் வழியவென்றுங் கூறினார். சுட்டுப்பெயரென்றாராயினும், அகர இகரச் சுட்டுப் பெயரேகொள்க. இதுவோர் மரபு வழாநிலை. (38) 39. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. இதன் பொருள்: இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும் வினைக் கொருங் கியலும் வழிச் சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளு ளுரித்து என்றவாறு. உதாரணம்: 119அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல் பின்னை யதன்கண் விழைவு. எனவரும். இதனுட் சேந்தன் என்பது இயற்பெயர். ஒருவினை கொள்வழிச் சுட்டுப்பெயர் முற்கிளத்தல் வந்த வழிக் கண்டு கொள்க. இது செய்யுளிடத்து மரபுவழு வமைத்தவாறு. (39) 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். இதன் பொருள்: சுட்டை முதலாகவுடைய காரணப் பொருண்மையை உணர்த்துஞ் சொல்லுஞ் சுட்டுப்பெயர் போலத் தன்னாற் சுட்டப் படும் பொருளை உணர்த்துஞ் சொற்குப் பின் கிளக்கப்படும் என்றவாறு. ஈண்டுச் சுட்டப்படும் பொருள் தொடர்மொழிப் பொருள். உதாரணம்: சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனாற் றந்தை யுவக்கும், சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டானுவக்கும் எனவரும். 120சுட்டுமுதலாய காரணக்கிளவி உருபேற்று நின்ற சுட்டு முதற்பெயரோ டொப்பதோ ரிடைச்சொல்லாகலின், ‘சுட்டுப் பெயரியற்கையிற் செறியத் தோன்றும்’ என்றார். 121செயற் கென்னும் வினை யெச்சம், உருபேற்று நின்ற தொழிற் பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும், உருபும் பெயரும் ஒன்றாகாது பகுப்பப் பிளவுபட்டிசை யாது ஒன்றுபட் டிசைத்தலான், அதனின் வேறாயினாற் போல, இதுவும், உருபேற்ற சுட்டுப்பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும் பிளவுபட்டிசையாது ஒன்றுபட் டிசைத்தலான், வேறாகவே கொள்ளப்படு மென்பது. அஃதேல், சாத்தன் வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று எனத் 122தொடர்மொழிப் பொருளையும் சுட்டி வருஞ் சுட்டுப்பெயர் கூறாது காரணக்கிளவியே கூறியதென்னை யெனின், 123அவ்வாறு வருவன தன்னினமுடித்தல் என்பதனான் அடங்கும். ஈண்டுச் சுட்டப்படும் பொருளையுணர்த்துவது பெயரன்மையின், சுட்டுப் பெயரியற்கை என்றது, வழக்கினகத்துச் சுட்டப்படும் பொருளை யுணர்த்தும் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளகத்து முன்னிற்றலு மாகிய அத்துணை யேயாம். செய்யுட்கண் முன்னிற்றல் வந்த வழிக் கண்டுகொள்க. 124பொருள் பற்றாது பண்பு முதலாயின பற்றிவந்த சுட்டாதலின் வேறு ஓதப்பட்ட தென்று உரை யாசிரியர் கூறினாராலெனின், சாத்தன் வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று எனவும், கிழவன் பிரிந்தான் அதனைக் கிழத்தி யுணர்ந்திலள் எனவும், எழுவாயாயும் ஏனை வேற்றுமையேற்றும் அச் சுட்டுப் பயின்று வருதலான், பண்பு முதலாயினவற்றைச் சுட்டும் சுட்டெனப் பொது வகையான் கூறாது, ‘காரணக் கிளவி’ என ஒருசார் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றி யோதுதல் குன்றக்கூறலாகலானும், சுட்டுப் பெயராயின் ‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ என்றும் ‘சுட்டுப் பெயரியற்கையிற் செறியத் தோன்றும்’ என்றுங் கூறுதல் பொருந்தாமையானும், அது போலியுரை யென்க. இதனான் வழக்கின்கண் மரபு வழாநிலையுஞ் செய்யுட்கண் மரபு வழுவமைதியுமுணர்த்தினார். (40) 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதன் பொருள்: வினைக்கொருங்கியலும்வழிச் சிறப்பினாகிய பெயர்க்கும் இயற்பெயரை உலகத்தார் முற்படக் கிளவார்; பிற்படக் கிளப்பர் என்றவாறு. வினைக்கொருங்கியலுமென்பது ஏற்புழிக்கோடலென்ப தனாற் பெற்றாம். ஈண்டுச் சிறப்பாவது மன்னர் முதலாயினாராற் பெறும் 125வரிசை. உதாரணம்: ஏனாதி நல்லுதடன், காவிதி கண்ணந்தை என வரும். உம்மையான், தவம், கல்வி, குடி, உறுப்பு முதலாயின வற்றானாகிய பெயரும் கொள்ளப்படும். அவை முனிவன் அகத்தியன் எனவும், தெய்வப் புலவன் திருவள்ளுவன் எனவும், சேரமான் சேரலாதன் எனவும், குருடன் கொற்றன் எனவும் வரும். திருவீரவாசிரியன், மாந்தக்கொங்கேனாதி என இயற்பெயர் முன்வந்தனவாலெனின், அவை தொகைச் சொல்லாகலான், அவற்றின் கண்ணதன்று இவ்வாராய்ச்சி யென்பது. ஆண்டியற் பெயர் முன்னிற்றல் பண்புத்தொகை யாராய்ச்சிக்கட் பெறுதும். (41) 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே. இதன் பொருள்: ஒரு பொருளைக் குறித்து வந்த பல பெயர்ச்சொற்கள், ஒரு தொழிலே முடிபாகக் கூறாது பெயர் தோறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒரு பொருளவாய் ஒன்றா என்றவாறு. ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்னாது ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றான் என வேறு வேறு தொழில் கிளந்தவழி, வந்தானும் உண்டானுஞ் சென்றானும் ஒருவனாகாது வேறு வேறாய்த் தோன்றியவாறு கண்டு கொள்க. ‘எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன் வருக’ என்புழிக் காதல் முதலாயின பற்றி ஒரு தொழில் பலகால் வந்தமையல்லது வேற்றுத் தொழிலன்மையான், ஒரு தொழில் கிளத்தலேயாமென்பது. ஈண்டுத் தொழிலென்றது முடிக்குஞ் சொல்லை. ஆசிரியன் வந்தானென்று ஒருகாற்கூறி, இடையிட்டு அவனையே பின்னொருகால் பேரூர்கிழான் சென்றானென்று கூறியவழி, ஒரு தொடரன்மையான் ஆண்டாராய்ச்சி யில்லை யென்பது. அஃதேல், ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றான் என 126இடையீடின்றி நின்றனவும் ஒரு தொடரன்மையின், ஆராய்ச்சியின்றாம் பிறவெனின், அற்றன்று; உட்டொடர் பலவாயினும், அவற்றின் றொகுதியாய் அவன் தொழில் பலவுங் கூறுதற் பொருண்மைத்தாகிய பெருந்தொடர் ஒன்றெனவே படுமென்பது. ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றிய னிளங்கண்ணன் சாத்தன் வந்துண்டு சென்றானென்னாது, ஆசிரியன் வந்தான் பேரூர்கிழானுண்டான் செயிற்றியன் சென்றான் எனப் பெயர் தொறும் வேறு தொழில் கிளத்தல் மரபன்மையின், மரபுவழுக் காத்தவாறாயிற்று. (42) 43. 127தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். இதன் பொருள்: தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல் லும் எண்ணுதற்கண் விராய் வரப்பெறும் என்றவாறு. என் சொல்லியவாறோ வெனின், உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விராய் வந்து, உயர்திணை முடிபு கொள்ளினும் அஃறிணைமுடிபு கொள்ளினும் வழுவாமாகலின், ‘மயங்கல் கூடா தம்மரபின’ (சொல். 11) எனவே, அவை விராயெண்ணப்படாமையும் எய்தி நின்றது; தன்மைப்பன்மைச் சொல்லான் அஃறிணைச்சொல்லும் முடியுமாகலான், தன்மைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் விராய் வந்து உயர்திணைமுடிபு கொள்ளினும் அமையுமெனத் திணை வழுக் காத்தவாறு. உதாரணம்: யானுமென்னெஃகமுஞ் சாறும் என வரும். பன்மைத் தன்மை வினைகோடல் எற்றாற் பெறுதுமோ வெனின், ‘தன்மைச்சொல்லே’ யென்றதனானும், பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே (சொல். 209) என்பதனானும் பெறுது மென்பது. ‘அஃதேல், எண்ணியன் மருங்கின் திரிபவை உளவே’ என்பதனான் விராய்வந்து உயர் திணைமுடிபு கோடலும் பெறப்படுதலின், இச்சூத்திரம் வேண்டா எனின், உய்த்துணர்ந்திடர்ப்படுவது எடுத்தோத்தில்வழி என மறுக்க. (43) 44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் லொருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. இதன் பொருள்: ஒருமையெண்ணினை யுணர்த்தும் 128பொதுப்பிரி பாற்சொல்லாகிய ஒருவன் ஒருத்தியென்னுஞ் சொற்கள், ஒருமைக்கண்ணல்லது, இருமை முதலாகிய எண்ணுமுறைக் கண்ணில்லா என்றவாறு. எனவே, பொதுப் பிரியாப் பாற்சொல்லாகிய ஒருவர் என்னுஞ் சொல் இருவர் மூவரென எண்ணுமுறைக்கண்ணும் நிற்குமென்பதாம். பொதுப்பிரி பாற்சொலென்றாரேனும், ஒருவன் ஒருத்தி என்பன வற்றது பாலுணர்த்துமீறே கொள்ளப்படும்; என்னை? எண்ணுமுறை நில்லா வென்று விலக்கப்படுவன அவையே யாகலி னென்பது. மகன் மகளென்னுந்தொடக்கத்துப் பெயர்ப்பொதுப்பிரி பாற் சொல்லினீக்குதற்கு ‘129ஒருமை யெண்ணின்’ என்றும், ஒருவர் ஒன்று என்பனவற்றின் நீக்குதற்குப் ‘பொதுப்பிரி பாற்சொல்’ என்றுங் கூறினார். ஒருவரென்னும் ஆண்மைப்பெண்மைப் பொதுவிற் பிரி தலின் பொதுப்பிரி பாற்சொலென்றார். பொதுப்பிரி பாற்சொலென்னும் ஒற்றுமையான் நில்லா தென ஒருமையாற் கூறினார். ஒருவன் ஒருத்தியென ஒருமைக்கணிற்றலும், இருவன் மூவன் இருத்தி முத்தி என 130எண்ணு முறைமைக்கண் நில்லாமையுங் கண்டு கொள்க. ஒன்றென முடித்தலென்பதனான் ஒருவேன் ஒருவை யென்னும் தன்மை முன்னிலையீறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க. இது பால்வழுக் காத்தவாறு. (44) 45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். இதன் பொருள்: வியங்கோளொடு தொடருமெண்ணுப் பெயர் திணைவிராய் வருதல் வரையார் என்றவாறு. உதாரணம்: ஆவுமாயனுஞ் செல்க எனவரும். 131தன்மைப் பன்மை வினைபோலாது வியங்கோள் இரு திணைக்குமுரிய சொல்லாகலான் இருதிணைச் சொல்லையும் முடிக்குமன்றே? அதனான் ஆவு மாயனுஞ் செல்க என்புழி வழு வின்மையின், அமைக்கற் பாற்றன்று எனின், இருதிணைப் பொருட்குமுரித்தேனும் 132ஒருதிணைப் பொருளைச் சொல்லுதற் கண் இரு திணைப்பொருளும் உணர்த்தாமையின், ஒரு திணையே உணர்த்தல் வேண்டும்; ஒரு திணை உணர்த்தியவழி ஏனைத் திணைப் பெயரோடு இயையாமையின் திணைவழுவாம், அதனான் அமைக்கல் வேண்டுமென்பது. 133எண்ணென்றா வுறழென்றா வாயிரண்டுமினனொன்றல் வேண்டு மென்பது இலக்கணமாகலான், யானு மென்னெஃகமுஞ் சாறும் என்புழியும் ஆவுமாயனுஞ் செல்க என்புழியும் இனனல்லன உடனெண்ணப்படுதலின் வழுவென் றாரால் உரையாசிரியரெனின், திணை வேறுபாடுண்டேனும், யானுமென் எஃகமும் என்புழி வினைமுதலும் கருவியுமாகிய இயைபும், ஆவு மாயனும் என்புழி மேய்ப்பானும் மேய்க்கப் படுவனவுமாகிய இயைபும் உண்மையான் உடனெண்ணப்படுத லானும், 134யானை தேர் குதிரை காலாள் எறிந்தான் என முன்னர் உதாரணங் காட்டுபவாகலானும் பிறாண்டும் ‘எண்ணுத்திணை விரவுப் பெயரஃறிணை முடிபின’ (சொல். 51) என ஆசிரியர்க்கு ஆராய்ச்சி முடிபு கோடற் கண்ணதாகலானும், அவர்க்கது கருத்தன் றென்க. அல்லதூஉம், திணைவிராய்யெண்ணல் வழு வென்பதே கருத்தாயின், நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாம் (புறம். 72) எனவும், ‘இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்’ (குறள். 920) எனவும், படர்க்கைச் சொல்லும் யஃறிணைக்கிளவியும் விராயெண்ணுதல் வழக்குப்பயிற்சி யுடைமையான் அவையு மடங்கா உயர்திணைச் சொல்லே யஃறிணைக்கிளவி எனப் பொதுப்பட வோதாது ‘தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ (சொல். 43) எனத் தன்மைச் சொல்லையே விதந்தோதல் குன்றக் கூறலாமாகலானும், அவர்க்கது கருத்தன்மை யறிக. 135ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு மெம் மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின் (புறம். 9) எனத் திணைவிராய்வந்து முன்னிலைவினை கோடல் எற்றாற் பெறுதுமெனின், அந்நிகரன செய்யுண் முடிபெனப்படும். அவற்றை அதிகாரப் புறனடையாற் கொள்க. திணைவிராயெண் ணப்படும் பெயர் 136வியங்கோளல்லா விரவுவினையொடு தொடர்ந்து வருவன வழக்கினுள் உளவேல் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. (45) 46. வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார். இதன் பொருள்: வேறுபட்ட வினையையுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையாற் கிளவார் என்றவாறு. எனவே, பொதுவினையாற் கிளப்பரென்றவாறாம். அவை அடிசில் அணி இயம் படை யென்னும் தொடக்கத்தன. அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன வென்னும் நால்வகைக்கும், அணியென்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன வென்னும் தொடக்கத்தனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன ஊதுவன எழுப்புவன வென்னுந் தொடக்கத் தனவற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும் பொதுவாகலின், அடிசில் அயின்றார் மிசைந்தார் எனவும், அணி அணிந்தார் மெய்ப்படுத்தார் எனவும், இயம் இயம்பினார் படுத்தார் எனவும், படை வழங்கினார் தொட்டார் எனவும் பொதுவினையாற் சொல்லுக. அடிசில் தின்றார், பருகினார் எனவும்; அணி கவித்தார், பூண்டார் எனவும்; இயம் கொட்டி னார், ஊதினார் எனவும்; படை எறிந்தார், எய்தார் எனவும் ஒரு சார்க்குரிய வினையாற் சொல்லின் மரபு வழுவாமென்பது. 137பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றி வேறு வினைப் பொதுச்சொலென்றார். (46) 47. எண்ணுங் காலு மதுவதன் மரபே. இதன் பொருள்: வேறுவினைப் பொருள்களைப் பொதுச் சொல்லாற் கூறாது பிரித்தெண்ணுமிடத்தும் அதனிலக்கணம் ஒரு வினையாற் கிளவாது பொதுவினையாற் கிளத்தலேயாம் என்றவாறு. உதாரணம்: சோறுங்கறியுமயின்றார், யாழுங்குழலுமியம் பினார் எனவரும். சோறுங்கறியுந் தின்றார், யாழுங்குழலு மூதி னார் எனின் வழுவாம். அஃதேல், ‘ஊன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது’ (புறம். 16) என்புழி உண்டென்பது ஒன்றற்கேயுரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின், உண்ட லென்பது உண்பன தின்பனவெனப் பிரித்துக் கூறும்வழிச் சிறப்பு வினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும் பொருளெல்லாம் உண வெனப்படுமாகலிற் பொதுவினையுமாம். அதனால் அது வழுவன் றென்பது. கறியொழித்து 138ஏனையவற்றிற்கெல்லாம் உண்டற் றொழிலுரித்தாகலிற்பன்மைபற்றிக்கூறினாரெனினுமமையும்.(47) 48. இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா. இதன் பொருள்: இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலின் பிரிந்து நில்லா என்றவாறு. உதாரணம்: சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இசை பற்றியும், கொறுகொறுத்தார், மொறுமொறுத்தார் எனக் குறிப் புப்பற்றியும், 139குறுகுறுத்தது கறுகறுத்தது எனப் பண்புபற்றியும் இரட்டித்து வந்தன பிரிந்து நில்லாமை கண்டுகொள்க. அஃதேல், குறுத்தது குறுத்தது எனப் பிரிந்தும் வந்தனவா லெனின், அற்றன்று. குறுத்த தென்பதொரு சொல் குறுவென்பதொரு சொல்லடுத்துக் குறு குறுத்ததென நின்று குறுமை மிகுதி உணர்த்திற்றாயின், குறுத்த தென்பது குறுமையுணர்த்தக் குறுவென்பது மிகுதிஉணர்த்திற் றாதல் வேண்டும். குறுவென்பது மிகுதியுணர்த்தாமையின் குறு குறுத்த தென்பது ஒரு சொல்லாய் நின்று அப் பொருளுணர்த்திற் றெனவேபடும். அதனாற்றான் அக்குறுமை மாத்திரம் உணர்த்தி நிற்பது அதனின் வேறா மென்பது. கறுகறுத்த தென்பதுக்கும் ஈதொக்கும். கறுத்தது கறுத்தது, குறுத்தது குறுத்தது எனச் சொன் முழுவதும் இருமுறை வாராமையின், அடுக்கன்மை யறிக. ஈண்டிரட்டைக் கிளவி யென்றது, மக்களிரட்டை விலங் கிரட்டை போல வேற்றுமை யுடையனவற்றையன்றி, இலையிரட் டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை யென்றுணர்க. இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கன் மரபன்மையின், மரபுவழுக் காத்தவாறு. (48) 49. 140ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையு முயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும். இதன் பொருள்: உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் ஒரு பெயராய்ப் பலபொருட்குப் பொதுவாகிய சொல் லைப் பிற உள்பொரு ளொழியத் தெரிந்துகொண்டு பொதுமை யின் வேறாகச் சொல்லுக தலைமையானும் பன்மையானும் என்றவாறு. தெரிபென்பதற்குச் செயப்படுபொருள் தலைமையும் பன்மையுமே யாம். பிறரும் வாழ்வாருளரேனும் பார்ப்பனச்சேரியென்றல் உயர் திணைக்கட் டலைமை பற்றிய வழக்கு. எயினர் நாடென்பது அத் திணைக்கட் பன்மை பற்றிய வழக்கு. பிற புல்லு மரனு முளவேனும் கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. ஒடுவங்காடென்பது அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. பார்ப்பார் பலராயினும் கமுகு பலவாயினும் அவை தாமே பன்மை பற்றிய வழக்காம். பலபொருளொரு சொல்லின் நீக்குதற்கு ஒரு பெயரென்றார். ஒன்றென முடித்தலென்பதனான், 141அரசர் பெருந்தெரு, 142வயிரகடகம், 143ஆதீண்டுகுற்றி, 144ஆனதர், 145எருத்தில் எனப் பொதுச் சொல்லின்றி வருவனவுங் கொள்க. உள்பொருளெல்லாம் கூறாது ஒன்றனையெடுத்துக் கூறுதல் மரபன்றாகலின், பொதுச்சொல்மேற் சொன்னிகழுமாறு ணர்த்திய முகத்தான் மரபுவழுக் காத்தவாறு. (49) 50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. இதன் பொருள்: உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரினானும் வினையினானும் பொதுமையிற் பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கு முரியவாய் வருவன எல்லாம் வழுவாகா, வழக்குவழிப்பட்டன வாகலான் என்றவாறு. உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணுமென்பது அதிகாரத் தான் வந்தது. ‘தொடியோர் கொய்குழை யரும்பிய குமரிஞாழல்’ என்பது உயர்திணைக்கட் பெயரிற் றிரிந்த ஆணொழி மிகுசொல். வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். இவர் வாழ்க்கைப்பட்டார் என்பது தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இவர் கட்டிலேறினார் என்பது தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். நம்பி நூறெருமையுடையன் என்பது அஃறிணைக் கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். நம்மரசன் ஆயிரம் யானை யுடையன் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். தொடி செறித்தலும், மக்கட்டன்மையும், இல்வாழ்க்கைப்படுதலும், கட்டிலேறுதலும், எருமைத் தன்மையும், யானைத் தன்மையும் ஒழிக்கப்படும் பொருட்கு முண்மையாற் பொதுவாய் நிற்கற் பாலன ஒருபாற் குரியவாய் வருதலின், மரபுவழு வமைத்தவாறு. பிறசொல்லாற் பிரிவன ‘வேறுபடு வினையினும் இனத் தினுஞ் சார்பினும்’ (சொல். 53) எனவும், ‘தெரிநிலை யுடைய அஃறிணையியற் பெயர்’ (சொல். 171) எனவும், ‘நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே’ (சொல். 172) எனவும் முன்னோதப்படுதலானும், ஆண்டு வழுவின்மையானும், ஈண்டுத் தாமே பிரிவனவே கொள்க. 146தம்மாற்றாம் பிரியுமென்பார் ‘பெயரினுந் தொழிலினும்’ என்றார். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணுந் தாமே பிரிவன வெனினும் அமையும். அஃறிணைக்கட் டொழிலிற் பிரிந்தன வுளவேற் கண்டு கொள்க. இன்றிவ்வூர்ப் பெற்றமெல்லா மறங்கறக்கும், உழ வொழிந்தன என உரையாசிரியர் காட்டினாராலோ வெனின்:- பெற்ற மென்னும் பொதுப்பெயர் கறத்தலும் உழுதலுமாகிய சிறப்பு வினையான் பொதுமை நீங்குதல் வழுவன்மையான் ஈண்டைக் கெய்தாமையின், அவர்க்கது கருத்தன் றென்பது. (50) 51. பலவயி னானு மெண் ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. இதன் பொருள்: திணை விராயெண்ணப்பட்ட பெயர் செய்யுளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும் என்றவாறு. உதாரணம்: வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார் எனவும், கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவு நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவருமென நான்குடன் மாண்ட தாயினும் (புறம். 55) எனவும் வரும். எண்ணுத்திணை விரவுப்பெயர் பெரும்பான்மையும் அஃறிணைச் சொற்கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை, உயர்திணைச் சொற் கொண்டு முடியவும் பெறுமென்பதாம். உதாரணம்: பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு (சிலப். வஞ்சினமாலை) எனவும், பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட் காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார் (ஆசாரக்கோவை 64) எனவும் வரும். இருதிணைப்பெயரும் விராய்வந்து ஒரு திணைச்சொல் லான் முடிதல் வழுவாயினும், செய்யுளகத்தமைகவெனத் திணை வழு வமைத்தவாறு. பாணன் பறையன் றுடியன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை (புறம். 335) என விருதிணைப்பெயரும் விரவி வாராது உயர்திணைப்பெயரே வந்து செய்யுளுள் அஃறிணைமுடிபு கொண்டன என்று உரையா சிரியர் கூறினாராலெனின், பாணன் முதலாயினாரைக் 147குடி யென்று சுட்டிய வழிக் குடிக்கேற்ற தொகை கொடுத்தல் வழுவன் மையான், அவ்வுரை போலியுரை யென்க. குடியென்று சுட்டாத வழிப் பாணன் பறையன் துடியன் கடம்பனென்றிந்நால்வரு மல்லது குடியில்லை யென்றேயாம். தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரு மெம்மை நினையாது விட்டனரேல் விட்டகல்க எனவும், யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் எனவும் இவை யெவ்வாறு வந்தனவோவெனின்:-அவை தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப்பொருட்கு வினை கொடுப்பவே, தலைமையில் பொருளு முடிந்தனவாவதோர் முறைமைபற்றி வந்தன, ஈண்டைக்கெய்தாவென்பது. தானுந்தன் புரவியுந் தோன்றினா னென்பதுமது. (51) 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொருள் ளொருசொலென் றாயிரு வகைய பலபொரு ளொருசொல். இதன் பொருள்: வினைவேறுபடும் பலபொரு ளொரு சொல்லும், வினை வேறுபடாப் பலபொரு ளொருசொல்லும் என இரண்டு வகைப்படும் பலபொரு ளொருசொல் என்றவாறு. இனமுஞ் சார்புமுளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடை மையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டுகுற்றி யென்பது போல. 148இலக்கணச் சூத்திரங்களே யமையும், இச்சூத்திரம் வேண்டா பிறவெனின் இருவகைய வென்னும் வரையறை யவற்றான் பெறப்படாமை யானும், வகுத்துப் பின்னும் இலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும், இச்சூத்திரம் வேண்டுமென்பது. (52) 53. அவற்றுள் வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. இதன் பொருள்: அவ்விரண்டனுள்ளும், வினைவேறு படும் பல பொருளொருசொல், ஒருபொருட்கே சிறந்த வினையானும், இனத்தானும், சார்பானும், பொருள்தெரி நிலைக்கண் பொதுமை நீங்கித் தெளியத் தோன்றும் என்றவாறு. மா வென்பது ஒருசார் விலங்கிற்கும், ஒரு மரத்திற்கும், வண் டிற்கும், பிற பொருட்கும் பொது. குருகென்பது ஒரு பறவைக்கும், உலைமூக்கிற்கும், வளைக்கும், பிறவற்றிற்கும் பொது. நாகம் என்பது மலைக்கும், ஒருசார் மரத்திற்கும், யானைக்கும், பாம்பிற்கும், பிறவற்றிற்கும் பொது. சே என்பது ஒருசார்ப் பெற்றத்திற்கும், ஒரு மரத்திற்கும், பிறவற்றிற்கும் பொது. மாப்பூத்தது; மாவுமருது மோங்கின என வேறுபடு வினை யானும் இனத்தானும், மரமென்பது விளங்கிற்று. கவசம் புக்கு நின்று மாக்கொணா வென்றவழிக் குதிரை யென்பது சார்பினான் விளங்கிற்று. குருகு முதலாயினவுமன்ன. வேறுபடுவினையினு மென்றாரேனும், ஒன்றென முடித்த லென்பதனான் இம்மா வயிரம், வெளிறு என வேறுபடுக்கும் பெயருங் கொள்ளப்படும். இனத்தொடு சார்பிடை வேற்றுமை யென்னை யெனின், ஒரு 149சாதிக் கண்ணணைந்த சாதி இனமெனப்படும்; அணைந்த சாதியன்றி ஒருவாற்றா னியைபுடையது சார்பெனப்படு மென்பது. (53) 54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இதன் பொருள்: வேறுபடாத வினைகொண்டவழி வேறுபடாது தோன்றும் வினை வேறுபடாப் பலபொருளொருசொல், ஆராயுங் கால் கிளந்து சொல்லப்படும், என்றவாறு. உதாரணம்: மாமரம் வீழ்ந்தது, விலங்குமா வீழ்ந்தது என வரும். வினைவேறுபடாப் பலபொருளொரு சொல்லென வேறு நிற்பனவில்லை; வேறுபடுவினை முதலாயினவற்றான் வேறுபடு வனதாமே பொது வினை கொண்டவழி வினை வேறுபடாப் பல பொருளொரு சொல்லா மென்பது அறிவித்தற்கு ‘ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்’ என்றார். 150‘ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்’ என ஒரு சூத்திரமாக உரையாசிரியர் பிரித்தாராலெனின், அங்ஙனம் பிரிப்பின் ஒன்று வினை மருங்கி னொன்றித் தோன்றுதலும் வினைவேறுபடூஉம் பல பொரு ளொரு சொற்கே இலக்கணமாய் மாறுகோடலானும், வினை வேறுபடுவன தாமே பொதுவினை கொண்டவழி வினைவேறு படாதனவா மென்பது அதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. முன்னும் பின்னும் வருஞ் சார்பு முதலாயினவற்றான் குறித்த பொருள் விளங்காக்கால், கிளந்தே சொல்லுகவென யாப்புறுத் தற்கு ‘நினையுங்காலை’ என்றார். ஆங்கென்பது உரையசை. குறித்த பொருள் விளங்காமைக் கூறல் மரபன்மையின் மரபு வழுக் காத்தவாறு. (54) 55. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி. இதன் பொருள்: ஒருபொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலாயினவற்றான் விளங்காதாயின், அதனைத் தெரித்துச் சொல்லுக என்றவாறு. உதாரணம்: அரிதாரச் சாந்தங் கலந்தது போல வுருகெழத் தோன்றி வருமே - முருகுறழு மன்பன் மலைப்பெய்த நீர். எனவும், வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த நாண்மலரா னாறு மருவி நளிமலைநன் னாட எனவும் வரும். ‘கலந்தது போல வருமே யிலங்கருவி, யன்பன் மலைப்பெய்த நீர்’ எனவும், ‘நாறு மருவி நளிமலை நன்னாட’ எனவும் தெரித்து மொழி யாதவழிக் குறித்தது விளங்காது வழுப் படுதலின் மரபுவழுக்காத்தவாறு. 151வடநூலார் இதனை நேய மென்ப. ‘ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை’ (அகம். 68) என்புழி இன்னதனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிறவெனின், உவமையென்னும் அலங்கார மாயினன்றே இன்ன தொன்றனையெனல் வேண்டுவது? செயலையந் தளிரினது செய்யாத நிறத்தைச் செய்ததுபோலக் கூறுங் கருத்தினனாகலிற் பிறிதோ ரலங்காரமாம்; அதனான் அது கடாவன் றென்பது. படுத்துவைத் தன்ன பாறை மருங்கி னெடுத்துநிறுத்தன்ன விட்டருஞ் சிறுநெறி (மலைபடு. 15) என இன்னோரன்ன வெல்லாம் அவ்வலங்காரம் பற்றி வந்தன. ஒல்லேங் குவளைப் புலாஅன் மகன்மார்பிற் புல்லெருக்கங் கண்ணி நறிது என்புழிக் குவளை புலானாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணங் கூறாமையின் வழுவாம் பிறவெனின், புதல்வற் பயந்த பூங்குழன் மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்துரைக்கின்றா ளாகலின், குவளை புலால் நாறுதற்கு அவன் றவற்றோடு கூடிய அவள் காதல் காரண மென்பதூஉம், எருக்கங் கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனி கூர் வெப்பம் முகிழ்நகை முகத்தாற் தணிக்கும் புதல்வன்மேல் ஒரு காலைக் கொருகால் பெருகு மன்பு காரண மென்பதூஉம் பெறப்படுதலின், வழுவாகா தென்பது. 152மீக்கூற்ற மென்புழிப்போலக் கூற்றுக் கூற்றமென நின்றது. (55) 56. குடிமை யாண்மை யிளமை மூப்பே யடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் றாவறு மூன்று முளப்படத் தொகைஇ யன்ன பிறவு மவற்றொடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா முயர்திணை மருங்கி னிலையின வாயினு மஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். இதன் பொருள்: குடிமை முதலாக விறற்சொல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினெட்டுமுளப்பட அன்ன பிறவும் அவற் றொடு பொருந்தித் தொக்கு முன்னத்தினுணருங் கிளவிகளெல் லாம், உயர் திணைப் பொருண்மேல் நின்றனவாயினும், அஃறிணைப் பொருளையுணர்த்தி நின்றவழிப்போல, அஃறிணை முடிபே கொள்ளும் என்றவாறு. உதாரணம்: குடிமை நன்று, குடிமை தீது; ஆண்மை நன்று, ஆண்மை தீது என வரும். ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறு பொருந்தும் வினை தலைப் பெய்க. தன்மைதிரிபெயர் அலி. 153இதனோடு ஒருபொருட் கிளவி யாய் வருவனவுங் கொள்க. உறுப்பின் கிளவி குருடு முடம் என்னுந் தொடக்கத்தன. காதற் சொல் பாவை யானை யென ஒப்புமை கருதாது காதல்பற்றி வருவன. சிறப்புச் சொல் கண்போலச் சிறந்தானைக் கண்ணென்ற லும் உயிர்போலச் சிறந்தானை உயிரென்றலும் என இவை முதலாயின. 154செறற்சொல் செறுதலைப் புலப்படுக்கும் பொறி யறை கெழீஇயிலி யென்னுந் தொடக்கத்தன. விறற்சொல் விறலை யுணர்த்தும் பெருவிறல் அருந்திறல் என்னுந் தொடக்கத்தன. தன்மை திரிபெயர் முதலாயின பொருள்வகையான் ஆறாக வடக்கப்பட்டன. குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அடிமை, வன்மை, பெண்மை, உறுப்பின் கிளவி, சிறப்புச்சொல், விறற்சொல் என்பன உயர்திணைக்கண் ஆகுபெயராயல்லது வாரா; அல்லன இரு திணைக்கண்ணும் ஒத்தவுரிமையவெனக் கொள்க. காதல்பற்றிச் சிறுவனை யானையென்றலும் ஆகுபெயரா மன்றோ எனின்:-யாதானுமோர் இயைபுபற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காயது ஆகு பெயராம்; இயைபு கருதாது காதல் முதலாயினவற்றான் யானை யென்றவழி ஆகுபெயருள் அடங்காது என்பது. சிறுவனை யானை யென்றலும் ஒன்றன்பெயர் ஒன்றற்கு ஆதலொப்புமையான் ஆகுபெய ரென்பாருமுளர். சொல்லா னன்றித் திணைவேறுபாடு சொல்லுவான் குறிப் பொடு படுத்துணரப்படுதலின், ‘முன்னத் தினுணருங் கிளவி’ என்றார். அஃறிணை முடிபின வென்னாது அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் எனப் பொதுப்படக் கூறியவதனான், குடிமை நன்று, குடிமை நல்ல; அடிமை நன்று, அடிமை நல்ல என ஏற்புழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலுங் கொள்ளப்படும். அன்ன பிறவும் என்றதனான் வேந்து வேள் குரிசில் அமைச்சு 155புரோசு என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. குடிமை முதலியன உயர்திணை யுணர்த்தும்வழி அஃறி ணையான் முடிதல் வழுவாயினும் அமைகவெனத் திணைவழு வமைத்தவாறு. (56) 57. கால முலக முயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூத ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉ மாயீ ரைந்தொடு பிறவு மன்ன வாவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. இதன் பொருள்: காலமுதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத்தன்மைய பிறவுமாகிய அப் பகுதிக்கண் வருஞ் சொல்லெல் லாம், உயர்திணைச் சொல்லாயினும், உயர்திணைக்கட் பால் பிரிந்திசையா, அஃறிணைப்பாலா யிசைக்கும் என்றவாறு. உதாரணம்: இவற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது, உயிர் போயிற்று, உடம்பு நுணுகிற்று, தெய்வஞ் செய்தது, வினை விளைந்தது, பூதம் புடைத்தது, ஞாயிறு பட்டது, திங்க ளெழுந்தது, சொன் னன்று என வரும். ‘பிறவும்’ என்றதனான், பொழுது நன்று, யாக்கை தீது, விதி வலிது, கனலி கடுகிற்று, மதி நிறைந்தது, வெள்ளி யெழுந்தது, வியாழ நன்று என்பன போல்வன கொள்க. கால மென்பது காலக் கடவுளை. உலக மென்றது ஈண்டு மக்கட் டொகுதியை. உயிரே யுடம்பே யெனப் பொதுவகையாற் கூறினாரேனும், மக்களுயிரு முடம்புமே கொள்ளப்படும்; என்னை? உயர்திணை முடிபு கொள்ளா என விலக்கப்படுவன அவையேயாகலி னென்பது. ‘அஃறிணை யென்மனா ரவரல பிறவே’ என்புழி அஃறிணையா யடங்கி உயர்திணை முடிபெய்தாமையின், அவையும் விலக்கற் பாட்டிற் கேலாவெனின், அற்றன்று; மக்கட்சுட்டுடைமையான் அவை உயர்திணையேயா மென்பது. யாதோ மக்கட்சுட்டுடையவா றெனின், அறஞ்செய்து துறக்கம் புக்கான் எனவும், உயிர் நீத்தொரு மகன் கிடந்தான் எனவும், உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கொண்டு நிற்றலின் மக்கட் சுட்டுடையவென்பது. ஓராவை எம்அன்னை வந்தாளென்றும் ஓரெருத்தை எந்தை வந்தானென்றும் உயர்திணை வாய்பாட் டாற் கூறியவாறு போல, உயிருமுடம்பும் அவ்வாறு கூறப் பட்டனவென்று கொள்ளாமோ வெனின், கொள்ளலாம். அவற்றான் வரும் பயனோக்கிக் காதலால் எம்அன்னை எந்தை யென்றான் ஆண்டு; ஈண்டுக் காதல் முதலாயின இன்மையின் மக்கட் சுட்டுடைய வென்பது. பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்ப துன்பத் திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது. வினை யென்பது அறத் தெய்வம். சொல்லென்பது நாமகளாகிய தெய்வம். அஃதேல், குடிமை யாண்மை யென்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின், அவை இருதிணைப் பொருட்கண்ணுஞ் சேறன் மாலைய; இவை அன்னவல்ல வென்பது. உலகமென்பது இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருளாகிய மக்கட்டொகுதியையுமுணர்த்துமாகலான், இரு திணைக் கண்ணும் சென்றதன்றோவெனின், அற்றன்று; வட நூலுள் உலக மென்பது இருபொருட்கு முரித்தாக ஓதப்பட்ட மையின், மக்கட் டொகுதியை யுணர்த்தும்வழியும் உரிய பெயரேயாகலின் ஆகுபெயரன்று; அதனான் ஒருசொல் இருபொருட் கண்ணுஞ் சென்றதெனப் படாது, இருபொருட்கு முரிமையான் இரண்டு சொல்லெனவேபடு மென்பது. வேறு பொருளுணர்த்தலின் வேறு சொல்லாதலே துணிவாயினும், பல பொருளொரு சொலென்புழி 156எழுத்தொப்புமை பற்றி ஒரு சொல்லென்றார். மேலென்பது ஏழாம் வேற்றுமைப் பொருளுணர்த்துவ தோர் இடைச் சொல்லாகலின், ஈறு திரிந்து மேனவென நின்றது. இதுவுந் திணைவழுவமைதி. (57) 58. நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே. இதன் பொருள்: ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர்திணையா யிசைத்தல் ஈண்டியல்பின்று என்றவாறு. ஈண்டென்றது காலமுதலாகிய சொற்களை. அவை இடையீ டின்றி மேற்சொல்லப்பட்டு நிற்றலின் ‘இவண்’ என்றார். இவணியல்பின்றெனவே, குடிமை ஆண்மை முதலாயின சொல்லின்கண், குடிமை நல்லன், வேந்து செங்கோலன் என நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்புடைத் தென்பதாம். (58) 59. இசைத்தலு முரிய வேறிடத் தான. இதன் பொருள்: காலமுதலாகிய சொல் உயர்திணையா யிசைத்தலுமுரிய, ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி என்றவாறு. காலன்கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறுபட்ட வழி உயர்திணையாய் இசைத்தவாறு கண்டுகொள்க. (59) 60. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. இதன் பொருள்: இனமாகிய பலபொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறியவழி அச்சொல் தன் பொருட்கினமாகிய பிறபொருளைக் குறிப்பாலுணர்த்தலு முரித்து என்றவாறு. உம்மை எதிர்மறையாகலான் உணர்த்தாமையு முரித் தென்பதாம். உதாரணம்: அறஞ்செய்தான் றுறக்கம் புகும் எனவும், ‘இழிவறிந் துண்பான்கணின்பமெய்தும்’ (குறள். 946) எனவும் வரும். இவை சொல்லுவார்க்கு இனப்பொருளியல்புரைக்குங் குறிப்புள்வழி, மறஞ்செய்தான் றுறக்கம் புகான், கழிபேரிரையன் இன்பமெய்தான் என இனஞ் செப்புதலும், அக்குறிப்பு இல்வழி இனஞ் செப்பாமையுங் கண்டுகொள்க. எடுத்த பொருளை உணர்த்து மொழியை ‘எடுத்த மொழி’ என்றார். இன்னல் பொருளினீக்குதற்கு ‘இனம்’ என்றார். அஃதேல், மேற்சேரிக் கோழி யலைத்தது எனக் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டது எனவும், குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது எனவும் இவை இனஞ் செப்பு மென்றும், ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்பன இனஞ்செப்பா வென்றும் உரையாசிரியர் கூறினாரா லெனின், அற்றன்று; கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்தல் அமையாமையானும், குடம் வீழ்தலின்றிக் குடங் கொண் டான் வீழ்தலமையாமையானும், கீழ்ச்சேரிக்கோழி யலைப்புண்டலும் குடம் வீழ்தலும் சொல்லாற்றலானன்றி இன்றியமையாமை யாகிய பொருளாற்றலான் பெறப்படுமாகலான் ஈண்டைக் கெய்தா, இது சொல்லாராய்ச்சியாகலா னென்பது. இன்னோ ரன்ன சொல்லாற்றலாற் பெறப்பட்டனவெனின், 157புகை யுண்டென்றவழி எரியுண்மை பெறுதலுஞ் சொல்லாற்றலான் பெறப்பட்டதா மென்பது. இனி ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்புழிச் சொல்லுவான் ஒழிந்த விலங்கும் ஒழிந்த மக்களுஞ் சாகவென்னுங் கருத்தினனாயின் இவையுமினஞ் செப்புவன வன்றோ வென்பது. அதனான் அவை போலியுரையென்க. ஒருதொடர் ஒருபொருளுணர்த்தி யமையாது வேறொரு பொருளுங் குறித்து நிற்றல் வழுவாயினும் அமைக என மரபுவழுக் காத்தவாறு. (60) 61. கண்ணுந் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே. தம்வினைக் கியலுமெழுத்தான் முடிதலும் தம் முதல் வினைக்கியலு மெழுத்தான் முடிதலுமெனச் சினைநிலைக்கிளவி இரு முடிபுடைய வற்றுள், முதல்வினைக் கியலும் எழுத்தான் முடிவுழி யென்பார், ‘தம் வினைக் கியலு மெழுத்தலங்கடை’ யென்றார். இதன் பொருள்: கண் முதலாயவும் பிறவும் பன்மை குறித்துநின்ற சினை நிலைக்கிளவி; அவை தம்வினைக்கியலு மெழுத்தான் முடியாது தம் முதல் வினைக்கியலும் எழுத்தான் முடியும்வழிப் பன்மையாற் சொல்லப்படும் யாப்புறவுடைய வல்ல; முதலொன்றாயின் ஒருமையானும், பலவாயிற் பன்மையானுங் கூறப்படும் என்றவாறு. உதாரணம்: 158கண்ணல்லள், தோணல்லள், முலைநல்லள் எனவும்; கண்ணல்லர், தோணல்லர், முலைநல்லர் எனவும் வரும். பிறவுமென்றதனாற் புருவங் காதென்னுந் தொடக்கத் தனவுங் கொள்க. 159பன்மைகூறுங் கடப்பாடிலவே யென்றதனாற் பால் வழுவும், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்றதனாற் றிணை வழுவும் அமைத்தார். பன்மை கொண்டன, பன்மையொருமை மயக்கமில்லாத் திணைவழுவாகலின், 160தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்பதனான் அமைக்கப்படும். மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப் பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங்கரியள், கவவுக் கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்திணை கொண்டனவும் தன்னினமுடித்தல் என்பதனா னமைக்கப்படும். கோடு கூரிது களிறு, குளம்பு கூரிது குதிரை என வஃறிணைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல்வினையாகிய ஒருமையான் முடிந்தனவும் அமையுமா றென்னையெனின், ஆண்டுப் பன்மை யொருமை மயக்கமல்லது திணை வழுவின்மையின் ஈண்டைக் கெய்தா; அப்பன்மை யொருமை மயக்கம் ஒன்றென முடித்தல் என்பதனா னமைக்கப்படும். அஃதேல், இச் சூத்திரத்தான் திணை வழுவொடு கூடிய பால் வழு அமைக்கப்பட்ட தென்பது எற்றாற் பெறுதுமெனின், சினைக்கிளவிக்குத் தம் வினைக்கியலு மெழுத் தாவது அஃறிணை வினைக்குரிய வெழுத்தாம்; அஃதல்லாதது உயர் திணை வினைக்குரிய வெழுத்தேயாம். என்னை? அஃறிணைக்கு மறுதலை உயர்திணையேயாகலான். அதனால் திணை வழுவுதலும் பெறுதுமென்பது. அஃதேல், தம் வினைக்கியலும் எழுத்தாவன சினைவினைக்குரிய எழுத்தென்றும், அவையல்லாதனவாவன முதல் வினைக்குரிய வெழுத்தென்று முரைக்க; உரைக்கவே, உயர் திணைச்சினையும் அஃறிணைச்சினையு மெல்லாமடங்கு மெனின், அற்றன்று. 161அஃறிணைக்கட் சினைவினைக்குரிய எழுத்தொடு முதல்வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லாம் அஃறிணையெழுத்தேயாகலின், ‘தம்வினைக்கியலும் எழுத்தலங்கடை’ யென்பதற் கேலாதாகலான், கண் முதலாயின உயர்திணைச்சினையேயா மென்பது. (61) முதலாவது - கிளவியாக்கம் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கட் சிறுபான்மை தொகப் பெறுதலின் தொக்கு நின்றதென்றது. இரண்டாம் வேற்றுமைத் திரிபோதிய சூத்திரத்துள்வரும் `உயர்திணை மருங்கி னொழியாது வருதலும்' (எழுத்தொகை - 15) என்ற விதியின்கண் ஒழியாது வருதலென்றமையாற் சிறுபான்மை ஒழிந்தும் வருமென்று கொண்டு அதனாலிது தொக்குநின்றது என்றபடி. இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் எழுத்ததிகாரத்து அச்சூத்திரவுரையில் `ஆடூஉவறிசொல்' முதலியவற்றை உதாரணமாகக் காட்டுதல் காண்க. 2. திரிந்த புணர்ச்சியின்மையின் விகாரவகையாற் றொக்கதென்பாரு முளரென்றது. மகட் பெற்றான் என்பதுபோல ஆடூஉவறிசொல், திரிந்த புணர்ச்சி (விகாரப் புணர்ச்சி) யன்மையின் அதன்கட்டொகுதல் கூடாதென்றபடி. ஆடூஉவை யறிசொல் என்னும் இரண்டாம் வேற்றுமை விரி ஆடூஉவறிசொல்லெனத் தொகுமாயின் ஆடூஉவாலறியப்பட்ட சொல் எனவும், அத்தொகை விரிதற்கிடமாகலின், அதன்கட்டொகாது விரிந்தே நிற்கவேண்டும்; அங்ஙனம் விரிந்தே நிற்கவேண்டிய விடத்துத் தொக்கமையால் விகாரவகை யாற்றொக்கதென்பாரும் உளர் என்றார். 3. ஆறாம் வேற்றுமை யேற்றுநின்ற சொல் பெயராகவும் வினைக் குறிப் பாயும் நிற்குமாகலானென்றது. ஆறாம் வேற்றுமை யேற்றுநின்ற உயர் திணைய வென்னும் சொல் உயர்திணையினுடையன என்று பொருடருங்காற் குறிப்பு வினையாலணையும் பெயராயும், உயர் திணையி னுடைய வாயிருந்தன என்று பொருள் தருங்கால் வினைக் குறிப்பாயும் நிற்குமென்றபடி. உயர்திணைய சொற்கள் என்புழி ஆறாம் வேற்றுமையேற்றுநின்ற சொல் குறிப்புவினையாலணையும் பெயராயும், சொற்கள் உயர்திணைய வென்புழி வினைக்குறிப்பு முற்றாயும் நிற்குமென்க. நச்சினார்க் கினியரும், உயர்திணைய என்று ஆறாம் வேற்றுமையாய் நிற்குஞ்சொல் ஈண்டுப் பெயராகாது வினைக்குறிப்பாய் நின்றது என்று கூறுதல் காண்க. ஆறாம் வேற்றுமையேற்று நின்ற சொல் பெயராயும் வினைக் குறிப்பாயும் நிற்குமென்ற வாக்கியத்துள், ஆறாம் வேற்றுமையேற்று நின்ற சொல் பெயராய் நிற்குமென்று சேனாவரையர் கூறியதைச் சிவஞானமுனிவர் சூத்திர விருத்தியுள், ஆறாம் வேற்றுமை யேற்றுநின்ற சொற்பெயராகு மாயின் அப்பெயரீற்று நின்றன விகுதி முதலியனவாகுமன்றி வேற்றுமையுருபாகா என்னும் கருத்துப்படக் கூறி மறுத்துள்ளார். அதனை, `யாம் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிப்படுத்திய' `ஆறனுருபு பிறிதுருபேற்றல்' என்ற விஷயத்துள் மறுத்துக் கூறியுள்ளாம். ஆண்டுக் காண்க. அவ்விஷயம் இந்நூலில் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 4. இனி, சிவணியென்னும் செய்தென் வாய்பாட்டு வினையெச்சம் உயர் திணையவென்னும் வினைக்குறிப்போடு முடிந்ததைப்பற்றிச் சேனா வரையர் ஆராய்கின்றார். அது வருமாறு: செய்தெனெச்சம் தன்வினையோடன்றிப் பிறவினையான் முடியாது. அங்ஙனமாக, சிவணியென்னும் செய்தனெச்சம் ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல் என்பனவற்றின் வினையாகலின், அது முப்பாற் சொல்லின் வினையோடு எப்படி முடியுமெனின்? உயர்திணைய வென்னும் முற்று ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொற்களுக்கும் தன்வினையேயாகலின் தன்வினையோடு முடிந்ததேயாம். ஏனெனின்? ஆசிரியர் வினைமுதல் வினையோடு முடியவேண்டு மென்று கூறியதேயன்றி, அவ்வினை வேறொன்றற்குப் பொதுவாயிருத்தல் கூடாதென்று கூறாமையி னென்பது. இதுபோலவே `இவளும் இவனுஞ் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப' என்னும் முடிபுங் கொள்ளப்படும். ஏனெனின்? இவன் சிறுபறை யறைந்தும், இவள் சிற்றிலிழைத்தும் என்புழி. அறைதல் இவனின் வினையாயும் இழைத்தல் இவளின் வினையாயும் சிறப்பு வினைகளாய் நின்று இருவர்க்கும் பொதுவாகிய `விளையாடுப' என்பதனோடு தனித்தனி முடிதலின் என்க. நச்சினார்க்கினியரும், `இவ்வாறன்றிச் சிவணி உயர்திணையவாம் என்பார்க்கு முப்பாற் சொற்கும் பயனிலையாய் நின்ற உயர்திணையவாம் என்னும் வினைக்குறிப்பு. ஆடுஉவறிசொல் மகடூஉவறிசொல் என்னும் இரண்டன் வினையாகிய சிவணி என்னுஞ் செய்தெனெச்சத்திற்கு வினைமுதல் வினையாயிற்று. உயர்திணையவாகல் ஆடூஉவறி சொற்கும் மகடூஉவறி சொற்கும் எய்துதலின் என்று' சேனாவரையர் கருத்தை விளக்கியிருத்தல் காண்க. 5. ஆடூஉவறிசொல் முதலாயினவற்றை உணர்த்தியல்லது அவற்ற திலக்கணம் உணர்த்தலாகாமையின் என்றது, பொருளை முன்உணர்த்தி அவற்றது இலக்கணத்தைப் பின் உணர்த்துவதே முறை என்றபடி. 6. பாலுணர்த்துமெழுத்தென்றது, `னஃகா னொற்றே யாடூஉ வறிசொல், என்பது முதலிய இலக்கணச் சூத்திரங்களிற் கூறிய எழுத்துக்களை, அவைதாமும் என்றது. ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல் பல்லோரறியுஞ்சொல் என்பவற்றை. 7. முப்பாற்சொல்லும் உயர்திணைய என்ற முடிபினால், முப்பாற்சொல்லும் உயர்திணைச்சொல்லாகுமென்பது கருத்தாகுமன்றி, ஆசிரியர் கொண்ட உயர்திணைச்சொல் மூன்று பாகுபாடு படுமென்னுங் கருத்ததனுள் தோன் றாது. ஏனெனின்? ஆசிரியர் கூறிய சொல்முடிவு முப்பாற்சொன் மேலதாய் நிற்றலின். ஆதலால் மூன்று பாகுபாடு படுமென்னுங் கருத்துத்தோன்ற, மாற்றிக்கொண்டு கொள்கவென்றார். மாற்றிக்கொண்டு கொள்கவென்றதற்குக் காரணம், மேற்சூத்திரத்து உயர்திணைச் சொல்லென்று கூறி, அதன் பாகுபாடு இதனாற் கூறுகின்றமையே. 8. இக்கருத்து என்றது உயர்திணைச்சொல் மூன்று பாகுபாடு படுமென்னுங் கருத்தை, ஆசிரியர் கொடாராயினும் என இயைக்க. 9. உம்மை கொடாமை யாவது, சூத்திரத்துள் முப்பாற் சொல்லுமென்று உம்மை கொடாது, முப்பாற் சொல் என்றமையை. இக்கருத்தானன்றே உரையாசிரியரும் உரைத்ததூமென இயைக்க. எங்ஙனம் உரைத்த தெனின்? ஆசிரியர் முற்றும்மை கொடுத்தோதாராயினும், தாம் இத்துணையல்லது விரிவுபடாதென உரைத்ததூஉமென்க. "ஆசிரியர்.... கொடாராயினும்" என்னும் வாக்கியம் சேனாவரையர் தங்கருத்தாகக் கூறியதாகும். 10. ஒன்று - ஒரு பொருள். 11. பல - பலபொருள். அது என்றதனால் ஒரு பொருளும் அவை என்றதனால் பலபொருளும் அறியப்படுதல் காண்க. கூறு - பகுதி. 12. ஆடூஉ வறிசொல் முதலாயினவற்றிற்குரிய எழுத்தே தம்வினைக் கீறாக இசைத்தலாவது. ஆடூஉவறிசொல் முதலியவற்றிற்குரிய னகர முதலிய வொற்றுக்களே தம் வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பால் உணர்த்த, தாமும் அவ்வப்பாலை உணர்த்தல். உதாரணமாக, பேடி வந்தாள் என்புழி மகடூஉவறிசொல்லென்றுணர்த்துதற்குரிய ளகார வொற்றே. தனக்கு முடிக்குஞ் சொல்லாயமைந்த வந்தாளென்னும் வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பெண்பாலையுணர்த்தப் பேடி யாகிய தானும் அப் பெண்பாலையே உணர்த்தல் காண்க. இவ்வாறே தேவன் வந்தான். தேவி வந்தாள். தேவர் வந்தாரெனத் தெய்வம் என்பதும் வந்தான் முதலிய வினைகளைப் பெற்றுப் பாலுந் திணையும் உணரநிற்றல் காண்க. வந்தான் முதலிய வினைகளைப் பெறுங்கால் தெய்வம் தன்னீறு திரிந்து நிற்குமென்க. 13. பேடர் என்ற உதாரணம் மயிலைநாதர் உரையைப் படித்தோர் சேர்த்திருக்க வேண்டும், அல்லது பேடிமார் என்ற உதாரணத்தையே பிரதி எழுதுவோர் சில எழுத்தழிந்தமையிற் பேடர் என்றெழுதி யிருத்தல் வேண்டும். அன்றி, பேடர் வந்தார் என்பதையும் பெண்பாற் பன்மைக்கு உதாரணமாகச் சேனாவரையர் காட்டியிருப்பரேல், அதனை ஒழித்து "பேடியர், பேடிமார், பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடி யென்னும் பெயர்நிலைக்கிளவி யென்னாது பெண்மை காட்டிய ஆண்மைதிரிந்த பெயர்நிலைக்கிளவி யென்றார்." என்று கூறியிருக்க மாட்டார். ஆதலின் அஃது அவர் காட்டிய உதாரணமன்று. "உயர்திணை மருங்கின் ஆண்மைதிரிந்த பெயர்நிலைக் கிளவி யெனின் அலிப்பெயர் மேலுஞ் செல்லும்; அப்பெயர்மேற் செல்லாது நீக்குதற்குப் `பெண்மைசுட்டிய' என்றும் உயர்திணை மருங்கிற் பெண்மை சுட்டிய பெயர்நிலைக்கிளவியெனின் பெண்பாற் பெயர் மேலுஞ் செல்லும்; அவற்றின்மேற் செல்லாமனீக்குதற்கு `ஆண்மை திரிந்த' என்றுங் கூறினார். இதனால் அதிவியாத்திக் குற்றம் நீக்கியவாறு. 14. அலிப்பெயரி னீக்குதற்குப் பெண்மை சுட்டிய என்று கூறியதனாலும், `ஆண்மைதிரிந்த பெயர்நிலைக்கிளவி ஆண்மையறிசொற்கா கிடனின்றே' என்னும் 12ஆம் சூத்திர உரையுள் ஆண்மையறிசொற்கா கிடனின்று என்ற விலக்கு ஆண்மையறிசொல்லோடு புணர்தல் எய்தி நின்ற பேடிக்கல்லது ஏலாமையின் அலிமேற் செல்லாதென்க என்றத னாலும் ஆண்மைதிரிந்து பேடியும் அலியும் ஆகுமென்பது சேனா வரையர் கருத்தாதல் பெறப்படும். 15. பெண்மை சுட்டாப் பேடு என்பதற்கு ஆண்மை சுட்டிய பேடு என்று கொண்டு, பேடு என்பது பேடியைக் குறித்ததென்று சிலரும், அலியைக் குறித்ததென்று சிலரும் பொருள் கொள்வர். இளம்பூரணர் பேடியை யாதல் அலியையாதல் பேடு என்னுஞ் சொல்லால் வழங்காமையிற் பேடு என்னுஞ் சொல்லைக் கருதியே சேனாவரையர் பெண்மை சுட்டாப் பேடு என்பதும் ஒழிக்கப்பட்டது என்று கூறியிருத்தல் வேண்டுமென்பது எமது கருத்து. பேடு என்னுஞ்சொல் பேடு வந்தாள் என முடியாமையான் அவ்வாறு கூறினாரெனலாம். அலியே யன்றிப் பேடு என்பதூஉம் பெண்மை சுட்டாமையின் ஒழிக்கப்பட்டது என்பது கருத்து. உம்மை இறந்தது தழீஇயது. மயிலைநாதரும், இலக்கண விளக்க நூலாரும், பெண்மை திரிந்ததற்கு உதாரணமாகப் பேடன் வந்தான், பேடர் வந்தார், பேடன்மார் வந்தார் என உதாரணங் காட்டுவர். ஆயின் இவ்வுதாரணங்களை இளம்பூரணர் முதலியோர் எடுத்தாளாமையின் அவ்வழக்குப் பொருந்தா தெனவும், பெண்மை திரிந்தது அலியெனவும் சிவஞான முனிவர் கூறுவர். 16. இடைநிலை - இடைப்பிறவரல். 17. "தன்மைதிரிபெயர்" (சொல் - கிளவி - 56ஆம் சூ.) என்புழிப் பொருளுக்குரிய தன்மை திரிதலை ஒற்றுமைபற்றிச் சொன்மேலேற்றித் தன்மைதிரிபெயர் என்று கூறியதுபோல, ஈண்டும் ஆண்மை திரிதல் பொருளுக்கன்றிச் சொற்கின்றேனும் ஒற்றுமைபற்றி ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி யென்றார் என்க. 18. பெண்மை திரிதலு முண்டேனும் ஆண்மைதிரிதல் பெரும்பான்மை யாகலான் `ஆண்மை திரிந்த' என்றார்; எனவே, பெண்மை திரிதல் சிறுபான்மை யாகலின் அதனை ஆசிரியர் எடுத்துக்கூறாராயினார் என்றபடி, கூறாராயினும் அதுவும் கொள்ளப்படுமென்பது சேனா வரையர் கருத்து. 19. பாலுளடங்காத பேடி என்றது ஆண்பால் பெண்பால்களுள் ஒன்றிலடங்காத பேடி என்றபடி, திணையுளடங்காத தெய்வம் என்றது உயர்திணை அஃறிணைகளுள் ஒன்றுளடங்காத தெய்வம் என்றபடி. 20. சுட்டிய வென்பதனைச் சுட்டும்படி யென வினையெச்சமாகக் கொண்டு, திரிதலென்பதனோடு முடிப்பின் பேடித்தன்மை பேடிக்கியற் கையில் (பிறப்பில்) உள்ளதன்றென்று கருத்தாமாகலின் அது பொருளன் றென்க. ஆசிரியர்க்காராய்ச்சி சொல்லின்கண்ணதன்றிப் பொருளின் கண்ணதன்று; பொருளின் கண்ணதாயின் பேடியுந்தெய்வமுமென்று விளங்கச் சூத்திரிப்பார் என்பது சேனாவரையர் கருத்து. ஆண்மை திரிதலாவது இன்னதென்பதை, ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காம னாடிய பேடி யாடலும் (சில-கட-56-7) என்பதனுரைக்கண் அடியார்க்கு நல்லாரும், "ஆண்மைத் தன்மையிற் றிரிதலாவது, விகாரமும், வீரியமும், நுகரும் பெற்றியும் பக்தியும் பிறவுமின்றாதல். ஆண்மைதிரிந்த என்றதனால் தாடியும். பெண்மைக் கோலத்தென்பதனால் முலை முதலிய பெண்ணு றுப்புப் பலவும் உடையது ஆண்பேடு எனக் கொள்க" என்று கூறுவர். ஆண்பேடு என்றது ஆண்மை திரிந்த பேடியை. தெய்வச்சிலையார் "பேடியாவது பெண்பிறப்பிற்றோன்றிப் பெண்ணு றுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதெ"ன்று கூறுவர். இது பெண்மை திரிந்த பேடியாகும். இவர் பேடியும் அலியும் ஒன்றென்பர். அது பொருந்தாது. பேடி வேறு; அலிவேறு என்க. 21. கரியன், கரியான் என்பன குறிப்புவினைமுற்றுச் சொற்கள். 22. ஏகாரத்தைப் பிரிநிலையாகக்கொள்ளின், னகர வீற்றுச் சொல்லிலுள்ள ஏனை எழுத்துக்களினின்றும் னகரவொற்றை வேறுபிரித்து அவ் வொற்றிற்கே ஆண்பாலுணர்த்து மியல்புளதாமென அதன்பாலுணர்த்தற் சிறப்பை யுணர்த்துமேயன்றி ஆடூஉவறி சொல்லாவது னஃகானீற்றுச் சொல்லென்று பொருள் தராது; ஆகலின் அது பொருந்தாதென்க. அதன் என்றது னகர வொற்றை. இளம்பூரணருரையுள், `உண்டான் என்புழி நான்கெழுத்து உளவே யாயினும் னகரத்தை ஆடூஉவறியுஞ்சொல்லென்றார். அதன் கண் தலைமைநோக்கி, ஏகாரம் பிரிநிலை "என்று கூறப்பட்டிருத்தல் காண்க." 23. மகரத்தை இடைநிலையாக்கி மாரீற்றை ஆரீற்றுளடக்கினா லென்னை? என்று சேனாவரையர் ஆக்கேபித்து, அதற்குச் சமாதானமாக ஆரீறு வினை முதனிலைகளோடு வருங்கால் முதனிலைக்கேற்றவாறு காலங் காட்டும் பகர, வகரங்களைப் பெற்றுவரும். நடவென்னும் முதனிலை யோடு ஆரீறு வருங்கால் பகரத்தோடு வருமன்றி வகரத்தோடு வரமாட்டாது. வா என்னும் முதனிலையோடு வருங்கால் வகரத் தோடன்றிப் பகரத்தோடு வரமாட்டாது. அதுபோலன்றி மகரத்தோடு கூடி எல்லா முதனிலையோடும் வருதலின் ஆரீற்றின் வேறேயாம் என ஆசிரியர் வேறு கூறினார். ஆரீறு வினைகொண்டுமுடியாது. மாரீறு வினைகொண்டு முடியும். அதனாலும் ஆரீற்றுளடங்காதென்று கூறினார் என்க. ஆரீறு வினைகொண்டு முடியின் எச்சப்பொருளைத் தருமன்றி முற்றுப்பொருளைத் தாராது. மார்வினை கொண்டு முடியினும் முற்றுப் பொருளைத் தருமென்பதுபற்றிச் சேனாவரையர் `வினைகொண்டு முடித்தற்கேற்பதோர் பொருள் வேறுபாடு டைமையானு' மென்றார். 24. தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும் பலரறி சொல்லாயினும், பலர் பாலைத் தனித்துணர்த்தாது `யானுமென்னெஃகமுஞ்சாறும்' என்றாற் போல் இருதிணையும் விரவி எண்ணுமிடத்து உயர்திணையை யன்றி அஃறிணையையு முளப்படுத்து நிற்றலின் அஃறிணைக்கும் உரித்தா கின்றது. அன்னவன்றி இவ்விகுதிகள் உயர்திணைக்கே உரியவாகலின் `நேரத் தோன்றும் பலரறி சொல்' என்றார். 25. கிடக்கைமுறை என்றது நெடுங்கணக்கினுள் ஓதப்பட்டுக்கிடக்கும் முறையை, கிடக்கைமுறைப்படி கூறின் ட, த, ற எனக் கூறவேண்டும். சிறப்புமுறை என்றது காலமுணர்த்தும் சிறப்புமுறையை, அதனைப் பின்வரும் `தகரவுகரம்' என்னும் வாக்கியத்தானுணர்க. 26. குற்றியலுகரம் என்பது. குன்றியலுகரமென மெலிந்து நின்றது. 27. வேறுபாடின்றேல் ஒன்றாக ஓதலாமென்பது கருத்து. 28. உண்பவென்பதைப் பகரவீறாகப் பிரித்தால் உயர்திணைப்பலர் பாலாகும். அகரவீறாகப் பிரித்தால் அஃறிணைப் பலவின்பாலாகும். அதுபற்றியே பகர விறுதியாயினன்றே உயர்திணைக்காவது என்றார். `சினையுஞ் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்து தாங் கொடுப்பபோல்' என்பதில் தாம் கொடுப்பபோல் என்பது சினையும் சுனையுமாகிய அவைதாமே கொடுப்பனபோல எனப் பொருள் தந்து, தாம் என்பது சினையையும் சுனையையும் குறித்துநிற்க, அத்தாம் என்பதற்குக் கொடுப்ப என்பது முடிக்குஞ் சொல்லாய் நிற்றலின் முற்றன்றிப் பெயரன்மையறிக. கொடுப்பவைகளைப்போல என உவமை கருத்தினாற்றான் கொடுப்ப என்பது பெயராகும். அங்ஙனம் உவமை கருதாது நிற்றலின் கொடுப்ப என்பது பெயரன்மையறிக என்றார். பெயரன்மை யறிக வென்பதில் பெயரென்றது வினையால ணையும் பெயரை. போல் என்பது ஈண்டு உவமப்பொருளில்வந்த உருபன்று. தற்குறிப்பேற்றப் பொருளில் வந்ததோர் இடைச்சொல்லாம். `கொடுப்பன யாவை... அறிக' என்னும் இவ்வாக்கியம் `சினையவும் சுனையவும்' என்னும் செய்யுளடியை விளக்க வந்ததாகும். உண்ப வென்பது பகரவீறன்று; அகரவீறேயாம். ஏனெனின்; அகரவீறு அன்பெற்றுக் கொடுப்பன, தகைப்ப எனவும், அன்பெறாது கொடுப்ப. தகைப்ப எனவும் நின்றாற்போல இதுவும் அன்பெறாது உண்பவென நின்ற தாகலின் என்பது கருத்து. 29. உண்குவ எனக் குகரம் இடைவரின் வகரவீறாதலும் உகரம் வாராவழி (அஃதாவது வருவவென்புழி) வகர அகரவீறும், அகரவீறும் ஆதலும் உரியவெனக் கொள்க; ஏனெனின்? எல்லா வினைமுதனிலைகளோடும் வருமியல்புடைய வகரவீறும் வா என்னும் முதனிலையோடு வந்து `வருவ' என நிற்குமாகலானும் அகரவீறும் வா என்னும் முதனிலை யோடு வந்து அன்பெறாது `வருவ' என நிற்குமாகலானும் என்க. 30. சூத்திரத்துள் வரும் என்பது வரூஉம் என `நீட்டும்வழி நீட்டல்' என்னும் செய்யுள் விகாரத்தால் நீண்டது என்றபடி. ஈறு - விகுதி. 31. ஞாபகமென்றது:- `னஃகா னொற்றே யாடூஉ வறிசொல்' என்பது முதலிய சூத்திரங்களின் ஈற்றினின்றிசைக்குமென்று சொல்லாதனவற்றை ஈற்றினின் றிசைக்கு மென்று இதனால் ஞாபகப்படுத்திய தென்றபடி. 32. அநுவாதம்: முன்சொல்லியவற்றை அநுபவதித்தல், னஃகானொற்றும், ரஃகானொற்றும் மாரைக்கிளவியும் ஞாபகம். ஏனைய அனுவாதம். இவ் வீறுகள் பெயரொடு வரூவழித் திரிபின்றிப் பால்விளக்கா வென்பதை. 161ஆம் சூத்திரம் நோக்கியுணர்க. 33. கட்டுரைச் சுவையென்றது செய்யுளாக யாக்கப்பட்ட வாக்கியச் சுவையை, செய்யுட்சுவையென்பார் பின்னும். 34. பெயரென்றது ஈண்டுப் பொருளையென்றது. பெயர் என்ற சொல் பெயர் களையுங் குறிக்கும்; பொருள்களையும் குறிக்கும்; ஈண்டு பெயர்களைப் குறியாது பொருள்களைக் குறித்துவந்த தென்றபடி. இங்ஙனமே `பெயர் நிலைக்கிளவி' யென்னும் 9ஆம் சூத்திர உரையுள்ளும் பெயர் - பொருள் என்று கூறுதல் காண்க. பெயர் பொருள் என்பன ஒருபொருட் கிளவிகள் என்று சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியுட் கூறுவர். 35. பாலறி சொல்லுள் ஒருசாரன வென்றது. தன்மை முன்னிலைகளை, தன்மை முன்னிலை மயக்கம் பின் கூறப்படுகின்றனவெனின், ஆண்டுப் பால் மயக்கம்பற்றிக் கூறினார். ஈண்டு இடமுங்காலமும் மயங்குதல் பற்றிக் கூறினார். ஐம்பாலுணர்த்தாது ஒருமைப்பால் பன்மைப்பால் என்றவளவின் மாத்திரம் பாலுணர்த்துதல்பற்றிப் `பாலறி சொல்லுள் ஒருசாரன வென்றார்'. 36. யோகவிபாகம் - சூத்திரத்தை இரண்டாகப் பிரித்து வேறு ஒரு பொருள் கூறல், கூட்டிப் பிரித்தல் எனினுமாம். 37. நூற்புணர்ப்பு - தந்திரவுத்தி. 38. ஒழிந்தன என்றது, திணைவழாநிலை, பால்வழாநிலை, காலவழாநிலை, பொதுவாக ஓதப்படும் இடவழாநிலை. இவ்வாறோதப்படும் மரபுவழா நிலை என்பவற்றை. 39. ஆண்மையறி சொல்லோடு புணர்த்தலெய்தி நின்ற பேடிக்கல்லது என்பது. `உயர்திணைமருங்கிற் பால்பிரிந்திசைக்கும்' (கிளவி - 4ஆம்சூ) என்ற தனாற் பேடி என்னுஞ்சொல் ஆண்பாலோடு முடியுமென எய்திநின்ற விதியை ஞாபகப்படுத்தி நின்றது. 40. செவ்வனிறை - நேர்விடை 41. இறைபயப்பது - விடைபயப்பது. 42. அறிவுறுப்பது செப்பெனின். தான் நினைத்ததை மற்றொருவனுக் கறிவுறுத்தலின் வினாவும் அவ்விலக்கணத்துளடங்கிச் செப்பாகும். ஆதலின் வினாயபொருளை அறிவுறுப்பதே செப்பெனல் வேண்டு மென்பது கருத்து. 43. அறியலுறவு - அறியலுறுதல் 44. உத்தரம் - விடை 45. `குமரியாடிப்போந்தேன்' என்ற வாக்கியம் `சோறு தம்மின்' என்று கேட்கப் பட்டவன் வினாவாதிருக்க நிகழ்த்தியதாகலின் அதுயாண்ட டங்குமெனின், கேட்கப்பட்டான்கண் அறியலுறுதலை உணர்த்தாது. ஒன்றனை அறிவுறுத்தி நிற்றலின் செப்பின்பாற்படும். 46. அவற்றுளடங்காமை - அவ்வறுவகைச் செப்புளடங்காமை. 47. ஒருவன் நீ செய்யென்று ஒருவனை ஏவியவழிச் செய்கின்றேனென்றால் ஏவியதை உடன்படல், செய்யமாட்டேன் என்றால் ஏவியதை மறுத்த லாகும். நீ செய்கின்றாயா? என்றால் அது ஏவலன்று; அவன் கருத்தை யறிய வினாவியதாகும். அப்பொழுது அவன் செய்கின்றே னென்றாவது, செய்யமாட்டே னென்றாவது தன் கருத்தை அறிவுறுத்தி நிற்பானாகலின், அது தன் கருத்தை யறிவுறுத்ததன்றி, உடன்பட்டதும் மறுத்ததுமன்றாகலின் வினாவப்பட்டார் கண்ணன்றி ஏவப்பட்டார்கண்ணவாகலானும் என்றார். வேறறிதலென்றது, தானறிந்தபொருளன்றி வேறுமுண்டோ வென அறிதல். 48. இருபொருள்காட்டி எது நெடிது? எது குறிது? என்று வினாவாது, ஒரு பொருள் காட்டி நெடிது குறிது வினாதலின் வழுவென்றார். ஏனைய என்றது ஐயவினாவும் அறியான் வினாவும் ஆகிய இரண்டனையும். 49. உண்டியோ? என்று வினாவியவழி, வயிறு குத்திற்றென்று விடைகூறின் அவ்விடை, வயிறு குத்திற்றோ? என்னும் வினாவிற்கு விடையாவதன்றி உண்டியோ என்றற்கு விடையாகாது. ஆதலின் ஒன்றன் செப்பு என்றார். அதுவே உண்பேன் என்பதுபயந்து உண்டியோ என்பதற்கு விடை யாகலின் ஒன்றற்காவதென்றார். 50. சாத்தா உண்டியோ? என்று வினாவியவழி நீ உண் என்றும், வயிறு குத்தும் என்றும், பசித்தேன் என்றும், பொழுதாயிற்று என்றும் கூறும் இவை பொருள் குறிப்பிற்றோன்றிக் குறிப்பிற்றோன்றலாய் அடங்குமா யினும் வினாவியதற்கு விடையன்றாய் விடை வழுவாகலின் அமைக்க வேண்டிற்று என்றாரென்க. 51. இவள்கண்ணினிவள்கண் பெரிய; நும்மரசனினெம்மரசன் முறை செய்யும் என்பன உறழ்பொருளில்வரும் செப்புக்குக் காட்டிய சினையும் முதலும். 52. இவள்கண்ணினிவள்கண் பெரியவோ? எம்மரசனின் நும்மரசன் முறை செய்யுமோ? என்பன உறழ்பொருளில்வரும் வினாவிற்குக் காட்டிய சினையும் முதலும். 53. இவள்கண்ணொக்கும் இவள்கண்; எம்மரசனை யொக்கும் நும்மரசன் என்பன துணைப்பொருளில்வரும் செப்புக்குக் காட்டிய சினையும் முதலும். 54. இவள்கண்ணொக்குமோ இவள்கண்; எம்மரசனையொக்குமோ நும்மரசன் என்பன துணைப்பொருளில் வரும் வினாவுக்குக் காட்டிய சினையும் முதலும். துணை - ஒப்பு. 55. கோல் - முதல், தோள் - சினை, தளிர் - சினை, அன்னோள் - முதல். 56. புனைந்துரைத்தல் - புனைந்து சொல்லுதல். 57. ஒத்த பண்பு - ஒத்த குணம். கண்ணுக்கும் முலைக்கும் ஒத்தகுண மில்லை. ஆதலால் அவற்றின்கண் இவ்வாராய்ச்சியுமின்றென்பது கருத்து. 58. பொன்னுந் துகிரும் முத்தும் மணியும் விளைபொருள்களாகலானும் அணி பொருள்களாகலானும் ஓரினமாயின, புறநானூற்றிலே `பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய.... மணியும்' என (218ஆம் செய்யுள்) வருதல் காண்க. 59. வெள்ளாடு முதலியவற்றில் வரும் அடை பண்பு கருதாது சாதி குறித்து நின்றன என்றபடி, வெண்களமர் உழவரையும், கருங்களமர் பறைய ரையும் குறித்து நின்றன. 60. அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பென்றது என்பதில், புடை என்றது பக்க அடுப்பை. புடை - பக்கம். புடையடுப்பென்றும் பாடம். பக்க அடுப்பு - நெருப்பு மூட்டும் உள்ளடுப்பின் பக்க அடுப்புகள். அப்பக்க அடுப்புகளின் மேலே கலச முதலியன வைத்தற்குரியவாக மூன்று பிரிவாக (ஃ - போல) வைத்திருக்கும் சூட்டடுப்பையே ஈண்டு அடுப் பென்றதென்க. பக்க அடுப்பை இக்காலத்தும் மேலடுப்பென வழங்குப. வண்ணக்கர் - நாணக பரிசோதகர். வண்ணக்கஞ் சாத்தனார் முதலிய பெயர்களை நோக்குக. காணம் - பொற்காசு. 61. இடக்கரடக்கலை இங்கே வழுவமைதியென்று கூறிய சேனாவரையர் (சொல் 442-ம் சூத்திரத்தில்) இது வழுவமைதியன்மையாற் கிளவியாக் கத்துட் கூறாராயினார் என்று கூறியதாக அச்சூத்திரவுரையுட் காணப்படு கின்றது. ஆண்டடங்காது என்பதே கிளவியாக்கத்துட் கூறாமைககுக் காரணமாக இது வேண்டியது அன்மையின் இடையில் செருகப்பட்ட வாக்கியம் போலும். 62. ஒரு நிகரன அன்மை - பல வேறு வகை. `காக்கையிற் கரிது களம்பழம்' என்புழிக் காக்கையின் கருநிறத்திலும் பார்க்கக் களம்பழம் கரியது என்பது கருத்து. அன்றி, காக்கை வெண்மை யுடையது என்பது கருத்தன்று. சிறு வெள்வாய் என்பதன் பொருள் இக்கால வழக்கிற் காணப்படவில்லை. 63. இல்குணம் - இயற்கையிலுள்ளதல்லாத குணம். பெருங்கொற்றன் என்புழிப் பெருமை, கொற்றனுக்கு இயற்கையிலுள்ள குணமன்று. (உயர்த்தும் பொருட்டுச் சொன்ன குணமென்றபடி.) 64. அக்குணம் - வெண்மைக்குணம். அக்குணமில்லா இனப்பொருள் செந்தாமரை. 65. அக்குணமுடையது - வெண்மைக் குணமுடையது. 66. சுட்டப்படுவதன்கண் - இனஞ்சுட்டி விசேடிக்கப்படுவதன்கண். அக் குணம் - வெண்மை முதலிய குணம். இல்லையானால் அக்குணம். அக் குணமுடையதனை வரைந்து சுட்டுவிக்குமாறு எப்படி? (இல்லை என்றபடி). உதாரணமாக: பெருங்கொற்றன் என்புழிப் பெருமை கொற்றன்கணில்லாத குணமாதலின் அவனை, இல்லாத அக்குணம் வரைந்து சுட்டுவிக்குமாறு எப்படி? (வரைந்து சுட்டுவிக்கமாட்டா தென்றபடி) வரைந்து சுட்டுவிக்கமாட்டாத அதனால் விசேடிக்கற் பாலதாகிய குணம் விசேடியாது நின்றதன்று. (இனஞ்சுட்டாது நின்ற தன்று) என்றபடி. எனவே இல்குணமாய் நின்றதென்றபடி. செஞ்ஞாயிறு, வெண்டிங்களில் விசேடணங்களாகிய செம்மை, வெண்மை ஆகிய குணங்கள் ஞாயிற்றிற்கும் திங்கட்கும் இயற்கை யாதலின் அவை விசேடிக்கற்பாலவே யாயினும், பொதுச்சொல்லல்லன வாகிய, அஞ்ஞாயிறு திங்களை விசேடித்து, இனஞ் சுட்டாது நிற்றலானே, விசேடியாது நின்றனவாயின, பொதுச்சொல் - ஏனைய குணங்களுக்கும் பொதுவான சொல். அவைபோலப் பெருமையும் கொற்றனுக்கு இயற்கையாகாது செயற்கை யாதலின் (இல்குணமாதலின்) விசேடிக்கற் பாலது விசேடியாது நின்ற தென்று சொல்லமுடியாது என்றபடி. வரைதல் - எல்லைப்படுத்தல். வெண்டாமரையென்புழி, வெண்மையாகிய குணம், தன்னையுடைய தாமரையைச் செம்மையுடைய தாமரையினின்றும் நீக்கி வரைவு படுத்தும். பெருங்கொற்றன் என்புழிப் பெருமை கொற்றனுக்கு இல்குண மாகலின் அவனையது வரைவு படுத்தமாட்டாது. ஆதலின் அதற்கு இனஞ்சுட்டுதல் இல்லை. ஆதலால் அதனை இனஞ் சுட்டாது வந்த தென்று கொள்ளற்க; இல்குணமடுத்து வந்ததென்று கொள்க என்பது கருத்து. சேனாவரையர் கூறிய இக்கருத்தோடொப்பவே தெய்வச் சிலையாரும், `பெருவண்ணான், பெருங்கொல்லன்' என வழக்கின் கண்ணும் இனம் சுட்டாது வந்ததாலெனின்? பண்பாவது தமக்குள்ள தோரியல்பு; ஈண்டு அப்பெருமை இயல்பன்மையின் `அஃது உயர்த்துந் சொல்லுதற்கண் வந்ததென்க' என்று கூறுதல் காண்க. சேனாவரையர் கருத்தின்படி விசேடணத்தை, இனஞ்சுட்டும் விசேடணம், (விசேடிப்பது), இனஞ்சுட்டா விசேடணம் (விசேடியாதது), இரண்டு மல்லாத விசேடணம் (இல்குண விசேடணம்; அஃதாவது விசேடிப்பதும் விசேடியாதது மல்லாதது.) என மூன்றாகப் பகுக்கலாம். உதாரணம் :- முறையே வெண்டாமரை, செஞ்ஞாயிறு, பெருங்கொற்றன் என்பனவாம். வெண்டாமரை என்பதில் வெண்மை, வெண்மைக்குணமில்லாத தாமரை (செந்தாமரை) யினின்றும் நீக்கி, வெண்மைக் குணமுள்ள தாமரையையே வரைந்து சுட்டுதலின், இனஞ்சுட்டும் விசேடணம் (விசேடிப்பது) ஆயிற்று. செஞ்ஞாயிறு என்புழி. செம்மைக்குணமுள்ள ஞாயிறன்றி, வெண்மை முதலிய குணமுள்ள ஞாயிறு இல்லாமையினால் அவற்றினின்றும் நீக்குதலுமில்லாமையின் இனஞ்சுட்டாத விசேடணம் (விசேடியாதது) ஆயிற்று. பெருங்கொற்றன் என்புழிப் பெருமை யென்னுங் குணம், கொற்றனுக்கு இல்லாத (புனைந்து சொன்ன) குணமாதலின், (செஞ்ஞாயிற்றிற் போல இயற்கையாக உள்ள குணமல்ல வாதலின்) இரண்டுமல்லாத விசேடண மாயிற்று என்க. இன்னுமதனைச் சுருங்கக் கூறின் இனஞ்சுட்டுவது - விசேடிப்பது; இனஞ்சுட்டாதது - விசேடியாதது; இரண்டுமல்லாதது - விசேடிப்பதும் விசேடியாதது மல்லாதது என்னலாம். 67. குறுஞ்சூலி, குறுந்தடி என்பவற்றிற் சூலி, தடி என்பன பிரிந்து நின்றவழி அப்பொருளுணர்த்தாமையின் ஒருசொல் என்றபடி. 68. உளரும், உணரும் என்பனவும் உளருந்தன்மைத்து உணருந் தன்மைத்து என்னும் பொருள்பட நிற்றலின் இற்றெனக் கிளத்தலேயாம். 69. இட்டிகை - செங்கல். 70. பிறழஉணர்தல் - மாறுபடவுணர்தல். 71. ஆக்கமொடு கூறல் என்பதனால் திரிபுகூறல் பெற்றாம் என்றது; திரிபு கூறுதற்கண்ணல்லது ஆக்கங்கூறுதல் வாராமையின் அவ்வாக்கங் கொடுத்துக் கூறுகவெனவே திரிபுகூறுங்காலென்பது பெற்றோ மென்பது கருத்து. இதனால் "திரிபு கூறுங்காலென"த் தாம் வருவித்ததற்குக் காரணம் கூறியவாறு. 72. கடுக்கலந்த கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின; இதில் ஆயினவென்பது ஆக்கச்சொல். மயிருக்கு நன்மை இயற்கை யன்று செயற்கை என்றபடி. எனவே மயிர் நல்லவாதற்குக் காரணம் கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமை என்க. மயிருக்கு அத்தன்மை இவற்றாலாயின தென்றபடி. கடு-கடுக்காய். 73. முன் தீயவாய்ப் பின் நல்லவாயினவேனும் அத் தீயநிலை காணாதான் மயிர் நல்ல பயிர் நல்ல என ஆக்கங்கொடாது கூறிற் படுமிழுக் கென்னை யென இயைக்க. அது என்றது நன்மையை. 74. `ஆக்கமுங் காரணமும் செயற்கைப்பொருட்கண் ஒத்தவாயின என்பது பட்டு' என்றது. செயற்கைப் பொருட்கு எப்படி ஆக்கம் நியதியாய் வர வேண்டுமோ, அப்படியே காரணமும் நியதியாய் வரவேண்டுமென வரவில் ஒத்ததன்மை யுடையவாயின என்பது பட்டு என்றபடி. காரணம் ஆக்கம் பற்றி வருமென்பது இச்சூத்திரக் கருத்து. 75. நல்கவென்பதை நல்குதலால் என ஏதுவாக்குக. 76. படிந்துண்ட காகம் உருவிழந்து எனவே படிந்துண்டல் உருவிழத்தற்கு ஏதுவாமென்க. குக்கில் - செம்போத்து. சிரல் - சிச்சிலி. 77. இக்கால மென்றது கற்புக் காலத்தை. 78. கிளவி என்றது ஈண்டுப் பொருளை என்றது. `ஐயக்கிளவி' என்பதில் கிளவி என்பது சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள ஒற்றுமையாற் பொருளை யுணர்த்திநின்ற தென்றபடி. 79. சிறப்பியல்பு என்றது ஐயுற்றபொருளின் சிறப்பியல்பை. பொதுவியல் பென்றது அதன் பொதுவியல்பை. பான்மயக்குற்ற ஐயப்பொருளிலே பொதுவியல்பு திணை, சிறப்பியல்பு பால். எனவே திணையாற் றோன்றிப் பாலாற்றோன்றாத பொருளே ஈண்டு ஐயப்பொருளென்பது கருத்து. ஏனைப் பாலையத்திற்கும் ஏற்பக் கொள்க. 80. ஒருமையைப் பன்மையாற் கூறலென்றது. ஐயச்சொல்லை ஒருமை வாய்பாட்டால் நிகழ்த்திப் பொதுச்சொல்லைப் பன்மை வாய்பாட்டாற் கூறல் என்றபடி. 81. உருபென மொழிதற்கண்ணும் அஃறிணைப் பிரிப்பின்கண்ணும் உரித்தாமென்க. எது உரித்தாமெனின் ஐயப்புலப் பொதுச் சொல்லாய் வருதல் உரித்தாமென்க. எனவே உருபும் அஃறிணைப் பிரிப்பும் ஐயப் புலப் பொதுச் சொல்லாய் வருமென்றபடி. ஆதல் எழுவாய்; உரித்து பயனிலை. 82. உருபு என்றால் உருபு என்ற ஒரு சொல்லே வருமென்றுமாகும். என என்பதைக் கொடுத்து உருபென மொழியினுமென்றதனால் அதன் பொருள்பட வருவனவும் அதற்குப் பதிலாய் வரலாம் என்றபடி. 83. 23ஆம் சூத்திரத்தில் உயர்திணைப்பால் மயக்குற்ற என்றும் இச் சூத்திரத்தில் திணை ஐயத்தென்றும் ஆசிரியர் சூத்திரிப்பா ரென்பது கருத்து. நடை - வழக்கு. அவை; பன்மை கூறலும், உருபென மொழி தலும் ஏனைப் பால் ஐயம் என்றது உயர்திணை ஆண்மை பெண்மைப் பால் ஐயத்தையும், அஃறிணை ஒருமை பன்மைப் பால் ஐயத்தையும். பெற்ற மென்பது இயற்பெயராயினும் ஒருகாற் சொல்லுதற்கண் ஒருபால் மேல் நில்லாது இருபால்மேல் நிற்றலான் வழுவமைதியாயிற்று என்று நச்சினார்க்கினியர் கூறுதல் மிகப் பொருத்தமாதலின், பெற்றம் இயற் பெயராதலின் வழுவன்று என்று கூறுவார் கூற்றுப் பொருந்தாது என்க. 84. பிற என்றது வேறு என்ற பொருளில் நின்றது. நடை - வழக்கு. 85. பொதுப்பொருள் என்றது இவ்வுருபு என்பதை. வேறிடமென்றது மறுக்கப்படும் பொருளை. இவ்வுருபு குற்றியன்று மகன் என ஐயப்புலமாகிய பொதுப் பொருண் மேல் அன்மைக் கிளவி அன்மை சுட்டிநிற்றல் என்றது. குற்றி என்பது இடைப் பிறவரலாய் நிற்ப, அன்று என்பது உருபு என்பதற்குப் பயனிலையாய் அதன்மேற் குற்றியல்லாத தன்மையைக் குறித்து நின்ற தென்றபடி. குற்றியல்லன் மகன் என்புழி அன்மைக் கிளவி துணி பொருண்மேல் அன்மை சுட்டி நின்ற தென்றது. அல்லன் என்பது தனக்கு எழுவாயாய் வரும் இவன் என்பதற்குப் பயனிலையாய், இவன் அல்லன் என நின்று, இவன்மேல் குற்றியல்லாத தன்மையைக் குறித்து நின்ற தென்றபடி. 86. ஈண்டுச் சுட்டல் என்றது ஐயப்புலமாகிய பொதுப் பொருளையுந் துணி பொருளையும்; அல்லன் என்றது ஏனைய உதாரணங்களை; ஈதொக்கும் என்றது இதுபோல எழுவாய் ஏற்ப வருவித்துக் கொள்ளப்படும் என்பது கருத்து. 87. இவ்வுருக் குற்றியாம் என்புழிக், குற்றியென்பது எழுவாயாய் நின்று `ஆம்' என்பதனோடு இயைந்தாற் போலவே, இவன் குற்றியல்லன் என்புழியும் ஆம் என்பதன் எதிர்மறையாகிய அன்மைக் கிளவி யோடும் குற்றியென்பது எழுவாயாய் நின்றே இயையும், நான் நீயல்லன் என்புழி நீ என்பது எழுவாயாய் நின்று அன்மையோடு முடிந்தாற்போல வென்பது. ஆம் என்பதன் எதிர்மறையாகிய அன்மைக்கிளவி என்ற வாக்கியத்தில் எதிர்மறையென்பது மறுதலை யென்றிருக்கவேண்டும். ஏனெனின் உண்டான் உண்டிலன் என்பனபோல ஒரே யடியில் வருவதே எதிர்மறை யாகலின் என்று சிலர் கூறுவர். அஃதுண்மையே; ஆயினும் எதிர்மறைப் பொருள் தருதல் பற்றி மறுதலையையும் எதிர்மறை என்றனர்போலும். மறுதலைவினைகளுட் சிலவற்றை எதிர்மறை என்று உரையாசிரியர் பலரும் வழங்கினர். 88. சினையொடு முதற்கு ஒற்றுமை யுண்மையான் அவை முதலொடுமியை புடைய வென்பது; என்றதனாற், செவிசெஞ்சேவல் வாய்வன்காக்கை என்பவற்றைச் செவியாற்சிவந்தசேவல் வாயான்வலியகாக்கை என விரிக்கலாமென்பது சேனாவரையர் கருத்தாயிற்று. 89. பல பெயரும்மைத் தொகைபடத் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதை என்பதனோடு வேற்றுமைத் தொகைபடத் தொகுதலாவது:- பெருந் தோளும் சிறுநுசுப்பும் பேரமர்க்கண்ணுமென விரித்துக் கொள்ளுமாறு உம்மைத் தொகைபடத் தொக்கு ஒரு சொல்லாகிப் பின் பெருந்தோளும் சிறுநுசுப்பும் பேரமர்க்கண்ணுமாகிய இவற்றையுடைய பேதை என விரித்துக்கொள்ளுமாறு வேற்றுமைத் தொகையாகத் தொகுமென்றபடி. பேதையென்பதனோடு வேற்றுமைத் தொகைபட (மூன்றும்) ஒருங்கு தொக்கன வெனினுமமையு மென்றது:- பெருந்தோட் பேதை. சிறு நுசுப்பிற்பேதை, பேரமர்க் கட்பேதை எனத் தனித்தனி பேதை யென்பத னோடு சென்றியைந்து வேற்றுமைத் தொகைப்பொருள் படும்படி. அம் மூன்றும் பேதை என்பதனோடு ஒருங்கு தொக்கன வெனினு மமையு மென்றபடி. 90. சினையொடு குணமிரண்டடுக்கலையும், முதலொடு குணமிரண்டடுக் கலையும் உரையாசிரியர் தமதுரைக்கண்ணே பிறர்மத மேற்கொண்டு கூறினாரே யன்றி இந்நூலாசிரியர் கொள்கையைக் கொண்டு கூறினா ரல்லர் என்பார் `பிறர்மத மேற்கொண்டு' கூறினார் என்றார். அங்ஙனங் கூறினாரேனும் அவ்விரண்டனுள் சினையொடு குணமிரண்டடுக்கி வருதலை (சிறுபைந்தூவி என வருவதை)ச் செய்யுளாறெனப் `பிறர்நூன் முடிந்தது தானுடம் படுதல்' என்னு முத்தியால் இந்நூற் கண்ணும் கொள்ளினுமமையும். ஏனெனின்? ஈரடை சினையை விசேடித்து வருதல் வழக்காறன்மையின் என்றபடி. எனவே இளம்பெருங்கூத்தன் என்பதுபோல முதலொடு குணமிரண்டடுக்கி வரும் வழக்காற்றைப்பற்றி ஈண்டாராய்ச்சி யில்லையென்பது சேனாவரையர் கருத்து. ஏனெனின்? வண்ணமும் சினையும் முதலுமாகி வரும் வண்ணச் சினைச் சொற்கண்ணேயே ஈண்டு ஆசிரியர்க்கு ஆராய்ச்சியாகலின். எனவே இளம் பெருங்கூத்தன், பெரும்பலாக்கோடு என்பன போல்வன வண்ணமுஞ் சினையு முதலுமென்ற நியதியின்றி வேண்டியவாறு வரலாமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. 91. ஒருவர் என்பது உயர்திணையில் ஆண், பெண் என்னும் இரு பாலையும் ஒன்றென்பது அஃறிணை ஒன்றன்பாலையுங் குறித்து நின்றன. உதாரணம்:- யாம் வந்தேமென்பது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. என்னை? ஒருவனும் யாம்வந்தேம் என்பான்; ஒருத்தியும் யாம் வந்தேம் என்பாளாகலின். நீயிர் வந்தீர் என்பது ஒருவனையும் ஒன்றனையுங் கூறும் பன்மைக் கிளவி. என்னை? ஒருவனையும் நீயிர் வந்தீர் என்ப; ஒருத்தியையும் நீயிர் வந்தீர் என்ப; ஒன்றனையும் நீயிர் வந்தீர் என்பவாகலின். இவர் வந்தார் என்பதும் ஒருவரையும் ஒன்றனையுங் கூறும் பன்மைக் கிளவி. என்னை? ஒருவனையும் இவர் வந்தார் என்ப; ஒருத்தியையும் இவர் வந்தார் என்ப; ஒன்றனையும் இவர் வந்தார் என்ப வாகலின். 92. தான் வந்தான் தொண்டன் என்பது தாம் வந்தார் தொண்டனார் என உயர்த்திக் கூறப்பட்டது. இங்கே `தாம் வந்தார்' என்பதளவில் உதாரண மாம். அதனை, `ஒருவனையும் தாம் வந்தார் என்ப' என நச்சினார்க் கினியர் கூறுதலானு முணர்ந்துகொள்க. தொண்டனார் என்பதற்கு விதி "இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி" என்னும் (சொல் - 270) சூத்திரமாகும். 93. `வழக்கி னாகிய உயர்சொற் கிளவி' யென்றே யொழியின் செய்யுளுள் வாரா தென்று வரைந்தவாறாம்; அக்கருத்துத் தோன்றாமலே `இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல' என்றாரென்பது. எனவே இலக்கணச் சொல்லல்ல வாயினும் வழக்கினாகிய உயர்சொற்கிளவி யென்றதனால், அமைத்துக் கொள்ளப்படும் என்பது கருத்து. எனவே வழுவமைதி யாயிற்று. இவ்வழுவமைதிகள் வழக்கினும் செய்யுளினும் வருமென்பது கருத்து. இவர், யாம் என்பன - உயர்திணைப் பன்மை. நீயிர் என்பது - விரவுப் பன்மை. இப்பன்மையே கொள்ளவேண்டும் என்றபடி. 94. அஃறிணை ஒன்றனை உயர்திணையாய் உயர்த்து வழங்குதல்போல ஓரெருத்தை எந்தை வந்தான் என்பதும், ஓராவை, `எம்மன்னை வந்தாள்' என்பதும் அஃறிணையை உயர்திணையாய் உயர்த்து வழங்கினும், அவ்வொன்றனைப்போல ஒருமையைப் பன்மையாற் கூறாமை பற்றி அதற்கு இனமாகக் கொள்ளப்படுதலின் தன்னின முடித்தலாற் கொள்க என்றார். அன்னவன்றி, கன்னிஞாழல், கன்னியெயில் என்பனவும், பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என்பனவும் முறையே, வாய்பாட் டானும், அடையானும் உயர்த்துக் கூறல் பற்றி ஒன்றென முடித்தலாற் கொள்கவென்றார். கன்னிஞாழல் கன்னியெயில் என அஃறிணையாய் நின்று, உயர்திணை வாய்பாட்டாற் கூறப்படுதலென்றது; ஞாழல், எயில் என்ற அஃறிணைப் பொருளை யுணர்த்துஞ் சொற்களை, கன்னி என்ற உயர்திணைப் பொருளை யுணர்த்துஞ் சொல்லை அடையாகக் கொடுத்துக் கன்னி ஞாழல் கன்னியெயில் என வழங்குதலை. 95. பண்புகொள் பெயர்க்கொடை வழக்கினகத்தும் இல்குணமடுத்து உயர் சொல்லாய் வருதலுங் கொள்க எனவியைக்க. எப்படியெனில்? பெருங் கொற்றன் பெருஞ்சாத்தன் என, இவை இனஞ்சுட்டாது இல்குண மடுத்து வந்தன. உள்குணமடுத்து இனஞ்சுட்டாது வருவன (செஞ்ஞாயிறு போல்வன) செய்யுட்கே உரியவென்க. 96. இயங்குதல், ஈதல் என்பன செலவு முதலிய தொழிற்கண் சிறப்புவகையா னிலைபெறாது பொதுவாய் வருமென்றது செலவு வரவின்கண் இயங்குதலும் தரவு கொடைக்கண் ஈதலும் பொதுவாய் வருதல். நான்கு சொல்லும் பற்றி வரும் வாய்பாடு பலவென்றது. சென்றான், வந்தான், தந்தான், கொடுத்தான் என முற்றாயும்; சென்று, வந்து, தந்து, கொடுத்து என வினையெச்சமாயும்; சென்ற, வந்த, தந்த, கொடுத்த எனப் பெயரெச்சமாயும்; செல்லல், வருதல், தருதல், கொடுத்தல் எனத் தொழிற்பெயராயும் வருவனவற்றை. தொழிற்பெயர் வினையா லணையும் பெயருமாம். 97. பொருள்வகையான் முன் அறியப்பட்டதென்றது. பொருள் வகையானே இத்துணையென (நான்கென) முன் அறியப் பட்டமையை. ஆதலின் அந்நாற் சொல்லும் என முற்றும்மை கொடுத்தார் என்பது. 98. வரவு தன்மைக்கண் வருமென்று மேற்கூறுதலால், அவ்வரவு `என்கண் வந்தான்' என்பதுபோல, ஈங்கு வந்தான் என ஈங்கினோடும் இயைதலின் ஈங்கு - தன்மைக்கண்ணும், செலவு - படர்க்கைக்கண் வருமென்று கூறுதலின், அச்செலவு `அவன்கட் சென்றான்' என்பதுபோல ஆங்குச் சென்றானென ஆங்கினோடும் இயைதலின் ஆங்குப் படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. எனவே ஈங்கு - தன்மையிடத்தையும், ஆங்கு - படர்க்கையிடத்தையும் உணர்த்து மென்றபடி. இவற்றைச் சிறப்புச் சூத்திரங்களில் வைத்து உணர்ந்து கொள்க. 99. அமரர்க்குத் தந்த என்புழி அமரர் என்னும் படர்க்கைச் சொல்லோடு தருதல் என்பதும் வேட்டுவன் வாங்க வாராது என்புழி (அவன்கண் வாராது) என வேட்டுவன் என்னும் படர்க்கைச் சொல்லோடு வருதல் என்பதும் இயைதல் வழுவமைதி. அஃதேல் படர்க்கைச்சொல் மயக்கமு மெய்துமாலெனின்? அஃதெச்சவியலுட் பெறப்படு மென்றது. படர்க் கைக்குரிய செலல் கொடைகளும் தன்மை முன்னிலைகளொடு மயங்கு மெனின்; அஃது, "கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் - தன்னைப் பிறன்போற்கூறுங் குறிப்பிற் றன்னிடத்தியலு மென்மனார் புலவர்" என்று எச்சவியலுட்கூறிய (52ஆம்) சூத்திரத்தாற் பெறப்படும் என்றபடி. இங்ஙனங் கொடுவென் கிளவியை மாத்திரம் ஆசிரியர் விதந்து கூறினமையால் ஏனைய படர்க்கைச் சொற்கள் தன்மை முன்னிலைகளோடு மயங்காமை ஆசிரியர் கருத்தென்பது சேனாவரையருக்குக் கருத்துப் போலும். பராமுகமாகக் கூறியவிடத்து மயங்குமென்பர் நன்னூலுரையுள் மயிலைநாதர். 100. ஆங்குவந்தான் என்புழி வருதல் படர்க்கையோடு வருதல் இலக்கண மாகாதெனின்? ஆங்கு என்று சுட்டப்படுமிடமே அதற்குத் தூரமான இடத்தை நோக்க ஈங்கெனப்படுதலின் வருதல் ஆங்கு என்பதனோடும் வருமென்றபடி. சேய் நிலத்திற்குத் தனக்கு மிடைநிலத்தில் நிற்பானொரு வனிடை ஒருவன் வந்தால் தன்னை நோக்க இடைநிலம் ஆங்காயினும் அவ் ஆங்கு என்று சுட்டப்பட்டவிடமே அதற்குச் சேய்நிலம் நோக்க ஈங்கெனப்படுதலின் அவ் ஆங்கினோடும் ஈங்கிற்குரிய வந்தான் என்பது வருமாதலின் இலக்கணமாமென்பது கருத்து. 101. இந்நான்கும் கொடைப்பொருளனவென்று உரையாசிரியர் கூறியதன் விளக்கமாவது:- தருதலும், கொடுத்தலுமாகிய இரண்டும் கொடைப் பொருளை யுணர்த்தி நின்றனபோலவே, வருதலும் செல்லுதலுமாகிய இரண்டும் கொடைப் பொருளையுணர்த்தி நின்றன என்பதே. "தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது" என்னும் உதாரணத்தில் வருதல் என்னுஞ் சொல் கொடைப் பொருளை யுணர்த்தாது வருதற்றொழிலையே உணர்த்தி வரவும் அதனையுங் கொண்டு வழு வமைத்தாராதலின் கொடைப்பொருளில் வருமென்பது அவர்க்குக் கருத்தன்மை பெறப்படும் என்பதே சேனாவரையர் கருத்தாம். இளம்பூரணர் இந் நான்கு சொல்லுக்கும் உதாரணமாக; எனக்குத் தருங் காணம், எனக்கு வருங்காணம், நினக்குத் தருங்காணம், நினக்கு வருங்காணம். அவற்குச் செலுங்காணம், அவற்குக் கொடுக்குங்காணம் எனக் காட்டினமையை நோக்கும்போது நான்கு சொல்லுங் கொடைப் பொருளனவாய் நிற்றலும் நிலைமொழிகள் கோடற்பொருளில் நிற்றலும் அறியப்படுகின்றன. அன்றியும் இந்நான்கு சொல்லும் மூன்றிடத்திற்கும் கொடைப் பொருளில் வருமென்றமையானும், ஏனையிரண்டும் ஏனை யிடத்த என்னுஞ் சூத்திர விரிவுரையில் `செலவினும்... அம் மூவிடத்து முரிய வென்க' என்னும் சூத்திரத்தான் மயக்கங் கூறிவந்து. `இனிக் கொடுத்தல் கோடற் பொருண்மை மூன்றிடத்துஞ் சொல் நிகழுமாறு கூறியது என்பாருமுளர்' என்று கூறியதனாலும், மூன்றிடத்திற்கும் இந்நான்கு சொல்லும் கொடைப்பொருளில் வழக்குப்பற்றி மரபாக உரியவாம் என்பதே அவர் கருத்தாகும். சேனாவரையரோ அவர் கருத்துக்கு மாறாக, நினக்குத் தந்தான், நின்னுழை வந்தான், எனக்குத் தந்தான், என்னுழை வந்தான், அவன்கட் சென்றான், அவற்குக் கொடுத்தான் என உதாரணங் காட்டி இந்நான்கு சொல்லும் மூன்றிடத் திற்கும் சிறப்புச் சூத்திரத்து நியமிக்கப்பட்டவாறே முதனிலைபற்றி உரிய வாயின என்பர். முதனிலைபற்றி உரியவாயின என்ற கருத்தாற்றான், உரையாசிரியர் கொடைப் பொருளன என்றாராலெனின். `தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது' என்றதை அமைத்தாராதலின் அவர்க்கது கருத்தன்றென்க என்றார். வேட்டுவன் வாங்கவாராது என்பது அவன்கண் வாராது என்று பொருடந்து வருதற்றொழில் அவன்கண் சென்று முடிவதாகவே கொள்ளப்படுதலின் ஆண்டு முதனிலைபற்றியே உரித்தாகு மென்பது பொருத்தமாகுமன்றி, வருதல் கொடைப் பொருளில் வாராமையின் மரபுபற்றி அவ்வவ்விடத்திற் குரியவாயின என்று கொள்ளும் உரையாசிரியர் கருத்துப் பொருந்தாதென்பதே சேனாவரையர் கருத்தாம். நச்சினார்க்கினியரும் சேனாவரையர் கருத்தையே பின்பற்றியுள்ளார். தெய்வச்சிலையார் இளம்பூரணர் கருத்தையே பின்பற்றியுள்ளார். நன்னூற்குரை உரைத்த மயிலை நாதரும் இளம்பூரணரையே பின்பற்றியுள்ளார். சங்கர நமச் சிவாயப் புலவர் நன்னூலுரைக்கண் சேனாவரையரைப் பின்பற்றி உதாரணங் காட்டிவிட்டு இளம்பூரணரைப் பின்பற்றி இவை முதனிலைபற்றி உரியவாகாது மரபுபற்றி உரியவாயின எனக் கூறிச் சேனாவரையர் கருத்தையும் நச்சினார்க்கினியர் கருத்தை யும் மறுத்துள்ளார். ஆயின் சேனாவரையர் கருத்தே பொருத்த மாகும். 102. தருசொல் வருசொல் என்பனவற்றிற்கு, தரவை யுணர்த்துஞ்சொல் வரவை யுணர்த்துஞ்சொல் என்பன பொருள். அவ்வாறு பொருள் படுவனவற்றையே தருவதும் வருவதும் போல வைத்துக் கூறினாரன்றி அவற்றிற்குத் தருதலும் வருதலும் இல்லை என்றபடி. தருசொல் வருசொல் என்பனவற்றை இளம்பூரணர் தரும்சொல், வரும்சொல் எனக் கொடைப்பொருள் தோன்ற விரிப்பர். 103. ஈற்றானன்றி - விகுதியானன்றி. எனவே முதனிலையானே இவ்விரு சொல்லும் படர்க்கைக் குரிய என்றபடி. 104. சிறப்புவகையா னறியப்படாமை - திணை, பால், இடம், பெயர் முதலிய வற்றானறியப்படாமை. 105. வினாவுவோன் மரம் என்ற சொற்குப் பொருள் யாதென்புழி, யாது என்ற சொல் அஃறிணை யொருமை உணர்த்தலின். அதனால்தான் வினாவும் பொருளின் ஒருமை துணிந்து அவ்வொருமைப் பொருளெதுவென் றறிதற்கு வினாவுகின்றானல்லன். தானறியாத அச்சொல்லின் பொருளை யறிதற்கு வினாவுகின்றானென்று உணருமன்றி, யாது என்னும் ஒருமைச் சொல்லால் வினாவினமையாலேதான் வினாவிய பொருள் அஃறிணை யொருமைப் பொருளென்று துணிந்து அப்பொரு ளெதுவென் றறிதற்கு வினாவுகின்றானென்று உணரானென்று அறிந்து கொள்க என்பார் வழக்கினகத்து வினாவுவோனதும் இறுப்போனதும் குறிப்பொடு படுத்துணர்க என்றார். பொதுமை என்றது; எவன் என்பது அஃறிணை யொருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலை. இச் சூத்திரக் கருத்தின்படி யாது எவன் என்பன திணைபால் முதலிய வொன்றுந் துணியாத வினாவின்கண் பொதுவாய் வருமென்பதும், வருஞ் சூத்திரக் கருத்தின்படி யாது என்பது திணைபான் முதலிய துணிந்த வினாவின் கண்ணும் வரும் என்பதும், திணைபான் முதலிய துணியாத வினாவின்கண் யாது என்பது வருங்கால் ஐயந் தீர்தற்கு வருமென்பதும் கருத்து. யாது எவன் என்பன திணைபால் முதலிய துணியாத வினாவின்கண் வருமென்பது பற்றியே இளம்பூரணரும் ஐம்பாலுமறியலுற்று வாரா; வினாமாத்திர முணர்தற்கு வருமென்றார். இம்மரம் யாது? என்றால், யாது? என்றதனால் அஃறிணை யொருமை என்பது துணிந்து வினாவுகின்றானல்லன்; பொதுவாக என்னமரம் என்றறிதற்கு வினாவுகின்றான் என்பது அவர் கருத்து. 106. கருங்காலிமரம் இதுவென்பது வினாவுவோனுக்குத் தெரிந்தும் துணிவு பிறவாமையினாலே, தான் அறிந்த அதனை, நன்கு துணிந்து தன் ஐயத்தை நீக்கற்பொருட்டு இம்மரங்களுள் கருங்காலி யாது என்று வினாவுகின்றான் என்பார் ஐயந்தீர்தற்கு என்றார். தெய்வச் சிலையாரும், ஐயமறுத்தலாவது:- இச்சொற்குப் பொருள் இது என உணர்ந்தான் ஒரு தலையாகத் துணிதலாற்றாது அஃ தறிவான் ஒருவனை வினாதல் எனக் கூறுதல் காண்க. அறிந்த பொருட்கண் வினாவாய் வருதற்குரியது அறியாப் பொருட் கண்ணும் வருதல் வழுவென்பது சேனாவரையர் கருத்து. தெய்வச் சிலையார் கருத்து மதுவே. அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற்கு வருதலின் வழுவன்று என்பர் நச்சினார்க்கினியர். ஐயந்தீர்தற்கண் வருதலும் மரபென்பது அவர் கருத்து. 107. வினைப்படல் - முடிக்குஞ் சொல்லைக் கொள்ளல். தொகுதி - இத்துணை யென்னுந்தொகை. 108. ஐந்தலை என்பது நாகத்துக்கும் நான்மறை என்பது முதல்வர்க்கும் அடையாய் நின்றனவன்றி உடலுதலும் வருதலுமாகிய வினைகளைக் கொண்டு முடியாமையின் அவை உம்மை பெறா என்பது கருத்து. 109. பன்னிருகையும் பாற்படவியற்றி என்பதன்கண் பன்னிரண்டு என்பது இயற்றி என்பதனோடு முடியாது கையென்பதனோடு முடிந்ததன்றோ வெனின்? அவை யிரண்டுஞ் சேர்ந்து ஒரு பொருண்மேல் வருதலின் கையோடு இயைந்த இயற்றியென்பது பன்னிரண்டு என்னுந் தொகுதிப் பெயரோடும் இயைந்ததேயாம். பன்னிரண்டுகை என்பது இருபெய ரொட்டி (பன்னிரண்டாகிய கை என) ஒரு பொருண்மேல் வருதலும், ஐந்தலைநாகம் என்பது அங்ஙனம் வாராமை யுமுணர்க. ஐந்தலைநாகம் என்பது ஐந்தலையையுடைய நாகம் என விரியும். பன்னிரண்டு என்னும் எண், கையை இத்துணையெனத் தொகுத்து வந்தது. நான்மறை முதல்வர் என்புழி நான்கு என்னும் எண், மறையைத் தொகுத்து வந்ததன்றி, முதல்வரைத் தொகுத்து வந்ததன்று. ஆதலின் நான்கும் முதல் வரும் ஒரு பொருண்மேல் வந்தனவாகா. 110. மன்னாப்பொருள் என்பதற்கு என்றுமில்லாப் பொருள் என்பது கருத்து. இதற்கு நிலையாப் பொருள் என்றும் பொருள் கூறுவாருமுளர். கோயிலுள்ளும் இல்லை என்பது இடத்தொடுபடுத்துக் கூறியது. கோயில் - இடம். பகலுமில்லையென்பது காலத்தொடுபடுத்துக் கூறியது. பகல் - காலம். உறுவர்க்குமாகா என்பது பொருளொடு படுத்துக் கூறியது. உறுவர் - பொருள். அன்னவியற்று என்று மாட்டியது உம்மை பெறுத லாகிய அவ்வளவிற்கே எனக் கொள்க என்பது சேனாவரையர் கருத்து. 111. தன்னுழை உள்ளதல்ல என்றது தன்னிடத்துள்ளதல்லாததை என்றபடி. உள்ளதல்லாதது - இல்லாதது எனவே இல்லாததை இல்லை என்று சொல்ல விரும்பினால் இனப்பொருள் கூறுக என்று உரையாசிரியர் கருத்து. 112. உரையாசிரியர் பிறிது பொருள் என்பதற்கு இனப்பொருள் என்று கூறினர். சேனாவரையர், யாதானுமாக; பிறிதுபொருள் என்பர். 113. ஒருவன் பயறுளதோ என்று வினாவினால் அப்பயறு தன்னிடத்துள்ள தல்ல தாயின் (இல்லையாயின்) பயறில்லை என்று சொல்வதனால் வரும் வழுவின்மையான் உழுந்தன்றி இல்லை என அதற்கு இனப்பொருள் கூறல்வேண்டா வாதலானும், ஆசிரியர்க்கு உள்ளதல்லதென்றல் கருத்தாயின் உள்ளதல்ல தென்றே விளங்கச் சூத்திரிப்பாரன்றி, விளங் காமையினுட்பட அல்லதென்று சூத்திரியாராகலானும் அது பொருந்தா தென்பது கருத்து. 114. அதிகாரத்தாற் பெற்றாம் என்றது முற் சூத்திரத்துள் `அல்லதில்' என்பது கூறப்பட்டு அதிகரித்து நிற்றலின், அதுபற்றி ஈண்டும் அதனை வரு வித்தாம் என்றபடி. அதிகாரம் - தலைமை. `அதிகாரமுறைமை' என்னும் உத்தியும் இது பற்றி எழுந்ததேயாம். அதிகாரமுறைமை என்பதற்கு இட முறைமை என்பர் பேராசிரியர். வடநூலார் முன்னின்ற ஒருசொல் பின்னும் (வருஞ் சூத்திரங்களிலும்) சென்றியைதலையும் அதிகார மென்ப. கிளந்து கூறல் - இன்னதென எடுத்து சொல்லல். விதந்து கூறல் - சிறப்பாகப் பிரித்தெடுத்துச் சொல்லல். 115. சுட்டும் முதல் - சுட்டுகின்ற காரணத்தால். முதல் - காரணம். "இரண்டாகு வதே - ஐயெனப் பெரிய வேற்றுமைக் கிளவி" என்னுஞ் சூத்திரத்து `அவ்விரு முதல்' என்ற பகுதியையும், அதன் விசேடவுரையையும் நோக்குக. முதல், முதனிலை, காரகம், காரணம் என்பன ஒரு பொருட் கிளவிகள். இவை என்னும் சுட்டு அவற்றையே சுட்டுங் காரணத்தான் அமைக்கவென வழுவமைத்தவாறு என்க. அவற்றை என்றது முன் கிடந்த பயற்றை. பொருள் வரையறுக்காத சுட்டுப் பெயரென்றது. இவை என்னுஞ் சுட்டுப்பெயரை. இவை என்னுஞ் சுட்டு, பயறு முதலிய பொருள்களுள் ஒன்றை இதுதானென்று வரையறுக்காது யாவற்றிற்கும் பொதுவாய் நிற்றல் காண்க. 116. சாதியும் பண்புந் தொழிலு முதலாயின பற்றிப் பொருளை வரைந்து ணர்த்தலாவது; பெரும்பயறு, சிறுபயறு எனச் சாதிபற்றியும், பசும்பயறு காராமணிப் பயறு எனப் பண்புபற்றியும், வறையற் கடலை, சுண்டற் கடலை எனத் தொழில்பற்றியும் பொருள்களை வரைந்துணர்த்தலை. 117. யானை அடிச்சுவடு கண்டு இஃது அரசுவாவாதற்கேற்ற விலக்கண முடைத்து என்புழி, யானை ஆண்டு (சுட்டியஇடத்து) இல்லையாயினும் இஃது என்பது அதனையே சுட்டி நிற்றலினாலும். `இஃதோர் - செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென், மகன்வயிற் பெயர்தந் தேனே' (அகம் - 26) என்ற வழி. (இஃதோர் செல்வன்) இந்தச் செல்வன் என்பது சுட்டிய இடத்தில் மகன் இல்லையேனும் அவனையே சுட்டி நிற்றலானும் இவற்றையே பொருளொடு புணராச் சுட்டு என்றார் என்பாருமுளர் என்பது கருத்து. இக்கருத்து யார் கருத்தென்பது தெரியவில்லை. சேனா வரையர் மறுக்காமையால் இதுவும் அவர்க்குக் கருத்தேயாம். மேற்காட்டிய உதாரணச் செய்யுளடிகளின் பொருள், `இந்தச் செல்வனுக்கு யாம் இயைந்தேமென்று மெல்ல என்மகனிடம் சென்றேன்' என்பது. இது தலைவி தோழிக்குக் கூறியது. `பொருளொடு புணராச் சுட்டு' என்பதற்கு, சுட்டுத் தான் உணர்த்துதற்குரிய அஃறிணைப் பொருளைக் குறிக்காது உயர்திணைப் பொருளைக் குறிக்குமாயினும் என்று பொருள்கூறி, "இஃதோர் செல்வற்கு" என்புழி இஃது என்னுஞ் சுட்டுப்பெயர் அஃறிணைப் பொருளைக் குறியாது இவன் என்று உயர்திணைப் பொருளைக்குறித்து நின்றதென்பர் நச்சினார்க்கினியர். சேனாவரையர் கருத்து அஃதன்று என்பது "இஃது அரசுவாவாதற்கேற்ற இலக்கணமுடைத்து என்று முன்கூறிய உதாரணத்தால் அறியப்படுகின்றது. இஃதோர் செல்வன் என்புழி இ என்னுஞ் சுட்டு இஃதெனத் திரிந்து நின்றதாகக் கொள்க. `அவ் வனைத்தும்' என்பது `அன்றியனைத்தும்' (தொல் - சொல் - 66) எனத் திரிந்து நின்றதுபோல. 118. அப்பெயரென்று சுட்டுப்பெயரை. அவை - இயற்பெயரும் சுட்டுப் பெயரும். இயற்பெயராவது:- காரணமின்றிப் பொருளையே குறித்து இட்டு வழங்கும் பெயர். சேனாவரையரும் "இயற்பெயர் சினைப் பெயர்" (சொல் - 174) என்னுஞ் சூத்திர உரையுள், இயற்பெயராவன சாத்தன், கொற்றன் என வழங்குதற்பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளே பற்றிவரு மிடுபெயர் எனக் கூறுதலானு மறிந்து கொள்க. தான் - விரவுப் பெயர் முன்னையதென்றது விரவுப் பெயரை. விரவுப் பெயராவது - உயர்திணை அஃறிணை என்னும் இரு திணையினும் விரவுதலையுடைய பெயர். இயற்பெயரும் விரவுப்பெயராதலின் அதற்கு இன மென்றார். சேனாவரையரும் மேற்காட்டிய சூத்திர உரையுள் "இயற் பெயரும் விரவுப்பெயரு மொக்குமாயின், அவற்றுள் ஒரு "சாரன வற்றிற்கு அப்பெயர் கொடுத்த தென்னையெனின், அவற்றது சிறப்பு நோக்கி அப்பெயர் கொடுத்தார். பாணியும் தாளமும் ஒரு பொருளன வாயினும் இசை நூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணி யென்னும் பெயர் கொடுத்தாற்போல் என்பது" என்று கூறுதல் காண்க. நன்னூலார் இதனை முதற் பெயர் என்ப. விரவுப்பெயரை முதற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் எனப் பகுத்துக் கோடற்கேற்ப அங்ஙனங் கூறுவர். `அவ்வாறவை' என்புழி அவை என்றது விரவுப் பெயர், உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர் என்னு மூன்றையும், முன்னையதென்றது விரவுப்பெயரை. மிகை என்றது இயற்பெயரை இரண்டாம் முறையுங் கூறினமையை. யாண்டும் என்றது ஒருவினை கோடற்கண்ணும் தனித்தனி வினை கோடற்கண்ணும் என்றபடி. உகரச் சுட்டுக் கொள்ளாமைக்குக் காரணம், வழக்கின்மை போலும். 119. அவன் என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்வந்தது. இச்செய்யுளில் சுட்டுப்பெயரும் இயற்பெயரும் தனித்தனி வினைகொண்டன. வினை என்றது ஈண்டுப் பயனிலையை. சேந்தன் - இயற்பெயர்; ஓருபகாரி என நன்னூல் நமச்சிவாயருரையிற் கீழ்க்குறிப்பாக டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் காண்பித்திருக்கிறார்கள். அஃதுண்மையேயாதல் நன்னூல் 397ஆம் சூத்திர உரையுள் "கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ் சேந்தன்" என வரும் வெண்பாவாலறியலாம். 120. சுட்டுமுதலாகிய காரணக்கிளவியென்றது. ஈண்டு அதனால் என்னுஞ் சுட்டிடைச் சொல்லை. ஆலுருபேற்ற சுட்டுப்பெயரன்றென்க. 121. செயற்கு என்னும் வினையெச்சம் பிளவுபடாது ஒன்றுபட்டிசைக்கும்; உருபேற்ற சுட்டுப்பெயர், செயல் என்னுந் தொழிற்பெயர்க்கும் குவ்வுரு புக்கு மிடையிற் பிளவுபட்டிசைக்கும்; இதுவே அவ்விரண்டற்குமுள்ள வேறுபாடாகும். அவைபோலவே, அதனால் என்னும் சுட்டு முதலாகிய காரணச் சொல் பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைக்கும். அதனால் என்னும் உருபேற்ற சுட்டுப்பெயர் அதன் + ஆல் எனச் சாரியையோடு கூடிய சுட்டுப் பெயர்க்கும் உருபிற்குமிடையிற் பிளவுபட்டிசைக்கும் என்றபடி. 122. தொடர்மொழிபொருள் என்றது. சாத்தன் கையெழுதுமாறு வல்லன் என்ற தொடர்மொழிப் பொருளை. அத் தொடர்மொழிப் பொருளை அதனால் என்பது சுட்டிவந்ததென்றபடி. உருபும் பெயரு மொன்றாகாது என்னும் வாக்கியத்தொடர் பின்வரும் தொடரோடு தொடர்புள்ளதாகக் காணப்படவில்லை. உருபும் பெயரு மொன்றாகாது என்றிருப்பிற் பொருத்தமாகும். ஆயின் பிளவுபட்டிசையாது ஒற்றுமைப்பட்டிசைத்த லான் என்ற வாக்கியமே, செயற்கு என்னும் வினை யெச்சத்திற்கும், செயற்கு என்னும் உருபேற்ற தொழிற்பெயருக்கு முள்ள வேறுபாட்டை யுணர்த்த அமையுமாதலின், `உருபும் பெயருமொன்றாகாது பகுப்ப' என்றவரையும் அத்தொடரை நீக்கிவிடலாம். பின்னும், உருபேற்ற சுட்டுப்பெயர்க்கும் சுட்டுமுதலாகிய காரணக்கிளவிக்கும் வேறுபாடு கூறுங்காலும் `பிளவுபட்டிசையாது ஒன்று பட்டிசைத்தலான்' என்றே கூறுதல் காண்க. 123. அவ்வாறு வருவன என்றது. தொடர்மொழிப் பொருளைச் சுட்டி எழுவாயாயும் உருபேற்றும் வரும் சுட்டுப்பெயர்களை. 124. உரையாசிரியர் சுட்டு முதலாகிய காரணக்கிளவி என்பதை, இடைச் சொல்லாகக் கொள்ளாது. உருபேற்றுநின்ற சுட்டுப்பெயராகக் கொண்டு பண்பு முதலியவற்றைச் சுட்டிவந்த சுட்டாதலின் வேறோதப்பட்ட தென்று கூறினாராலெனின், சுட்டுப்பெயர் எழுவாயாயும், மூன்ற னுருபேயன்றியும் ஏனை யுருபுகளையும் ஏற்றும் பயின்று வருதலின் அவையுமடங்கப் பண்பு முதலாயினவற்றைச் சுட்டும் சுட்டெனப் பொதுவகையான் ஆசிரியர் கூறாது மூன்றாம் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றிக் காரணக்கிளவி எனக் கூறுதல் குன்றக் கூறலா மாகலானும், உருபேற்ற சுட்டுப் பெயரென்றே கூறுவரன்றி. `சுட்டு முதலாகிய காரணக் கிளவி' என்றும், `சுட்டுப்பெயரியற்கையின்' என்றும் கூறாராகலானும், அவர் கருத்துப் பொருந்தாது என்பது கருத்து. `சுட்டுப் பெயரியற்கையின்' என்று கூறியதனால் சுட்டு முதலாகிய காரணக்கிளவி என்றது உருபேற்ற சுட்டுப்பெயரன்றென்பது பெறப்படுமென்பது சேனா வரையர் கருத்து. 125. வரிசைப்பெயர் - பட்டப்பெயர். ஏனாதி, காவிதி என்பன பட்டப் பெயர்கள். தொகைச் சொல் என்றது ஈண்டு ஈறு கெட்டு இரு சொல்லு மொன்றி நிற்றலை. திருவீரன் ஆசிரியன் என ஈறுகெடாது இருசொல்லுந் தனித்தனி வருதற்கண்ணேயே இவ்வாராய்ச்சி என்பது கருத்து. முன்வரல் பிற்கால வழக்கென்பர் நச்சினார்க்கினியர். முன் என்றது ஈண்டு இடமுன்னை. 126. இடையீடின்றி நின்றன என்றது. சேர்ந்து (அண்மைப்பட்டு) நின்றன என்றபடி. அண்மைப்பட்டு நிற்றல் - காலதாமதமின்றிச் சொல்லப்பட்டு நிற்றல். காலதாமதமின்றிச் சொல்லப்பட்டு நிற்பினும் (ஒரு தொடரன் மையின்) பல தொடராயிருத்தலின் அதன் கண்ணும் ஆராய்ச்சி இல்லையெனின் தொடர் பலவாயினும் அத்தொடர்கள் ஒருவனுடைய தொழிலையே உணர்த்தி வருதலின் பெருந்தொடர் ஒன்றெனவேபடும். ஆதலின் ஆராய்ச்சியுண்டென்பது கருத்து. 127. இச்சூத்திரம் திணைவிராய்வருதலை அமைக்க எழுந்ததென உரை யாசிரியர் கூறியதே. பொருத்தம் என்பர் சிலர். உரையாசிரியர் எண்ணுங்கால் தன்மைச் சொல்லும் (உயர்திணைச் சொல்லும்) அஃறிணைச் சொல்லும் விரவிவரினும் அமைக்கப்படு மென்பது இச் சூத்திரக் கருத்தென்பர். சேனாவரையர், தன்மைச்சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய் வந்து தன்மைப்பன்மை வினை கொள்ளினும் அமைக்கப்படும் என்பது இச்சூத்திரக் கருத்து என்பர். தன்மைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் விரவித் தன்மைப் பன்மை வினை கொள்ளும் என்பதைச் சேனாவரையர் எப்படிப் பெற்றாரெனின்? தன்மைச்சொல்லே என ஆசிரியர் கூறியதனால், அத்தன்மைச்சொல் முடிபு கொள்ளுங்கால் தனக்குரிய தன்மை வினையொடு முடியு மென்பது பெறப்படுத லினாலும், "அவற்றுள் - பன்மை யுரைக்கும் தன்மைக்கிளவி எண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே" என்ற (சொல் - 209) சூத்திரத்துக்குத் தன்மைப் பன்மை வினைமுற்று அஃறிணையை யுளப்படுத்த லினாற் றன்றிணை திரிவது. தன்மைச் சொல்லையும் அஃறிணைக் கிளவியையும் எண்ணுமிடத்து அவ்விரு சொல்லுக்கும் முடிபாய் வருமிடத்தென்பதே கருத்தாகலானும் பெற்றார் என்பது. அஃதேல், அச்சூத்திரத்தானேயே முடிபு கோடலும் பெறப்படும்; ஆதலால் ஈண்டுக் கூற வேண்டாவெனின், - ஆண்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுத் தன்மைச்சொல்லையும் அஃறிணைச் சொல்லையும் விரவி எண்ணு மிடத்து, அவற்றிற்கு முடிபாய் வருங்கால் அஃறிணையை யுளப் படுத்துத் திணைதிரியும் என்று கூறியதன்றி, அவ்விரண்டற்கும் முடிபாய் வருமென்று கூறாமையின் அதனால் அது பெறப்படாதாம். ஆதலின் முடிபு கோடல் இதனாற் கூறவேண்டு மென்பது உய்த்துணரலா மெனின், - உய்த்துணர்ந் திடர்ப்படுவது எடுத்தோத்து இல்லாதவிடத் தன்றோ வென்க. அற்றேல் ஆசிரியர் தன்மைச்சொல்லும் அஃறிணைக் கிளவியும் எண்ணுமிடத்து அமைக்கப்படும் என்று கூறச் சேனாவரையர் இருதிணையும் விரவி உயர்திணை முடிபுகொள்ளினும் அமைக்கப்படுமென்று கூறல் பொருந்துமோ எனின்? அங்ஙனம் தாம் பொருள்கொண்டதற்கு அவர் கூறுங் காரணங்கள் இரண்டு. ஒன்று:- "பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர் - அஃறிணை முடிபின் செய்யு ளுள்ளே" (சொல் - 51) என்று பிறாண்டும் முடிபு கோடலைப் பற்றியே ஆசிரியர் விதி கூறுவது. (அஃதாவது:- உயர் திணைப் பெயரும். அஃறிணைப்பெயரும் எண்ணுதற்கண் விரவி வருமென்னாது விரவிவந்து அஃறிணை முடிபுபெறும் என்று முடிபு பெறுதலைக்குறித்தே ஆசிரியர் அச் சூத்திரத்து விதி கூறலான். ஆசிரியர்க்கு ஆராய்ச்சி திணைவிராய் வருதற் கண்ணதன்று முடிபுகோடற்கண்ணதே என்பது). ஒன்று, உயர்திணைப் படர்க்கைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் பெரும்பாலும் மயங்கலின் அவையு மடங்க. இச்சூத்திரத்தை `உயர்திணைச் சொல்லும் அஃறிணைக் கிளவியும்' என்று சூத்திரியாது. `தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி' (எதிரது நோக்கி) சூத்திரித்தமையால் தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய் வந்து ஒரு முடிபெய்தும் என்பதே ஆசிரியர்க்குக் கருத்தாம் என்பது. உயர்திணைப் படர்க்கைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய் எண்ணலை இச்சூத்திரத்துத் தன்னின முடித்தலாற் கொள்ளலாமெனின்? பெரும்பான்மையான வழக்கைக் கூறிச் சிறுபான்மையான வழக்கைத் தழுவலாமேயன்றிச், சிறுபான்மையான வழக்கைக் கூறிப் பெரும் பான்மையான வழக்கைத் தழுவுதல் பொருந்தாதென்பதே சேனா வரையர் கருத்தாதலால் `படர்க்கைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய் எண்ணல் வழக்குப்பயிற்சி உடைமையால்' என்று கூறினமை யானே அறியப்படும். அற்றேல் வருஞ் சூத்திரத்து ஒரு தொடரின்கண் விராய் எண்ணலையே கூறலின், இதனையு மங்ஙனமே கூறினாரென்றா லென்னை யெனின்? அஃதொக்குமன்னாயினும், ஒருவர் என்பது ஒருவர், இருவர், மூவர் என எண்ணுமுறைக்கணிற்கும் ஒருவனென்பது அன்விகுதி பற்றி எண்ணு முறைமைக்கணில்லாது என்று ஆசிரியர் கூறும் விதியை உற்றுநோக்கின் அதுவும் விகுதிபற்றிய முடிபேயாம் என்பது சேனாவரையர் கருத்தாம். இரண்டு முதலிய பன்மைகளோடு அவ்விகுதி (ஒருமைவிகுதி) வராமை இயல்பே யாதலின் இருவன் மூவன் என வராதென விலக்கலாற் பயனில்லை யெனின்? அற்றன்று; இரண்டு முதலியவற்றோடு ஒருமை விகுதி வாராமை இயல்பே யாயினும் ஒருவனோடு மற்றொருவனைச் சேர்த்து எண்ணுதற்கண் (அஃதாவது நால்வர் நிற்புழி அவரை எண்ணுங்கால்) ஒருவன், இருவன், மூவன், நால்வன் என எண்ணலாமோ என்று மாணாக்கனுக்கு ஐயம் நிகழுதலுங் கூடும்; அவ் ஐயம் நிகழாமற் கூறினார் என்பதே சேனாவரையர் கருத்தாம். இக்காலத்தும் சிறுவர் சிலர் எண்ணுமாறு ஒருவன் என்று ஆசிரியன் தொடக்கிவிட, ஒருவன், இருவன், மூவன் என எண்ணிவிடுவது வழக்கு. அவ்வழக்கு ஈண்டு நோக்கத்தக்கது. `பொதுப்பிரிபாற் சொல் ஒருமைக்கல்லது எண்ணுமுறை நில்லாது' எனவே பொதுப்பிரியாப் பாற்சொல் ஒருமைக்கும், இருமை முதலிய வற்றிற்கும் எண்ணுமுறைக்கண் நிற்குமென்பதாம். இனி, பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யு ளுள்ளே என்னுஞ் சூத்திரத்துத் திணைவிரவி அஃறிணை முடிபைப்பெறும் என ஆசிரியர் கூறிய கருத்தை நோக்கும்போது, திணைவிரவிவரும் என்பதும் அதனால் பெறவைத்தமை தோன்றலின் அவ்விதியை அநுவாதமாகக் கொண்டு, சூத்திரக் கருத்தான் முடிபுகோடற்பொருளும் அநுவாதத்தாற் றிணைவிரவுதற்பொருளும் தோன்ற அச்சூத்திரஞ் செய்யப்பட்டதென்று கொள்ளுதலே பொருத்தமாகுமென்பது எமது கருத்து. அங்ஙனங் கொள்ளின், இச்சூத்திரத்திற்கும், "வியங்கோள் எண்ணுப் பெயர் திணைவிரவு வரையார்" என்ற சூத்திரத்திற்கும் அவ்வாறே கொண்டுவிடலாம். அங்ஙனங் கொள்ளின் உரையாசிரியர் கருத்தும், சேனாவரையர் கருத்துமாகிய இரண்டும் இச்சூத்திர முதலிய வற்றிற்குக் (41-45-51) கருத்தாகும் என்பது திணைவிராய் வருமெனப் புரோவாதமுன் கூறப்படாதிருக்க அநுவதிக்கப்பட்டதென்றல் பொருந்துமோ வெனின், விதந்துகூறாது ஒரோவோரிடங்களில், முன்னோர் கூறிய இலக்கணங்களையும் பழைய வழக்குகளையும் தங்கருத்துள் வைத்து அநுவதித்துக் கூறலும் இவ்வாசிரியர்க்கு இயல்பேயாதலிற் பொருந்து மென்க. அவ்வாறாதல் இவ்வதிகாரத்து வரும் 83ஆம், 125ஆம் சூத்திர முதலியவற்றை நோக்கியுணர்க. எடுத்தோத்து - சூத்திரம். 128. பொதுவென்பது ஆண் பெண் இரண்டற்கும் பொதுவாகிய ஒருவர் என்பதை, அதனிற் பிரிந்தது எனவே ஒருவன் ஒருத்தி என்பனவாம். பாற்சொல்லென்றது பாலுணர்த்துமீற்றை, அவை அன்விகுதியும் இகரவிகுதியும். 129. ஒருமை எண்ணின் என்று கூறாது பொதுப்பிரி பாற்சொல் என்று மாத்திரங் கூறின் மகன் மகள் என்றற்றொடக்கத்துப் பெயர்ப் பொதுப்பிரி பாற் சொல்லையு முணர்த்துமாகலின் அவற்றை நீக்குதற்கு ஒருமை யெண்ணி னென்றும் பொதுப்பிரி பாற் சொல்லென்னாது ஒருமை எண்ணின் பாற்சொல் என்றால் ஒருவர், ஒன்று என்பவற்றையு முணர்த்துமாகலின், அவற்றின் நீக்குதற்குப் பொதுப்பிரி பாற்சொல் லென்றுங் கூறினார். மகன் மகள் என்பன மக என்னும் பொதுமையிற் பிரிந்தன. சொல் என்பதற்கேற்ப நில்லாது என ஒருமையாற் கூறினார். 130. எண்ணுமுறை நில்லாமை - இருவேன், இருவை என எண்ணுமுறை நில்லாமை. ஏனையனவுமன்ன. ஒருமை எண்ணின் பொதுவாகிய ஒருவர் என்னுஞ் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன் ஒருத்தி என்பன எண்ணுமுறைக்கண் ஒருவன் இருவர் மூவர் என ஓடா, ஒருவர் என்பது ஒருவர் இருவர் மூவர் என எண்ணு முறைக்கண் ஓடும் என இளம்பூரணரும் தெய்வச்சிலையாரும் கூறுவர். 131. வியங்கோள் இருதிணைக்கண்ணும் சேறலின் இருதிணைச் சொற்கு முடிபாகுமாதலின் முடிபுகோடற்கண்ணதன்று வழு. இனனல்லன விராய் எண்ணுதற்கண்ணதே வழு என்பது உரையாசிரியர் கருத்து. சேனாவரையர், வியங்கோள் இருதிணைக்கண்ணும் வருமெனினும் ஒரு திணைப்பொருளைச் சொல்லற்கண் இருதிணைப்பொருளு முணர்த்தா மையின் ஒருதிணைப் பொருளையே உணர்த்தல் வேண்டும்; ஒரு திணைப்பொருளை யுணர்த்திய வழி ஏனைத் திணைப் பொருளோடு மியையாமையின் திணைவழுவாமாதலான் முடிவின்கண்ணதே வழுவென்றார். 132. ஒருதிணைப் பொருளுணர்த்தும்வழி இருதிணைப் பொருளு முணர்த் தாமை என்றது. ஆ செல்க என்றால் செல்க என்னும் வியங்கோள் வினைமுற்று அஃறிணைப் பொருட்கு முடிபாயினமையின் அஃறிணைப்பொருளையே உணர்த்துமன்றி உயர்திணைப்பொருளை யுணர்த்தாது; ஆதலின் அதனோடு ஆயன் முடிதல் திணைவழு வென்றபடி. 133. எண் - எண்ணுதல், உறழ் - உறழ்ந்துகூறல். அவ்விரண்டன் கண்ணும் இனப் பொருளே ஒன்றிவரல்வேண்டும். எண்ணும் உறழும் இன னொன்றல் வேண்டுமென்பதை, கிளவியாக்கம் 16ஆம் சூத்திரத்தையும் அதன் உரையையும் நோக்கி அறிக. 134. யானை, தேர், காலாள், என்புழிக் காலாள் இனமல்லாதது பிறாண்டும் - பிறவிடத்தும். ஆசிரியர்க்கு ஆராய்ச்சி முடிபு கோடற்கண்ணது என்றது. ஆசிரியர்க்கு ஆராய்வு திணைவிராய் வருதற்கண்ணதன்று. முடிபு கோடற்கண்ணதே ஆகலானும் என்றபடி முடிபுகோடல் - ஒருசொல் மற்றொருசொல்லைத் தனக்கு முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளுதல். 135. ஆவும், பார்ப்பன மக்களும், பிணியுடையீரும் பெறாதீரும் சேர்மின் எனத் திணைவிரவிவந்து முன்னிலைவினை கோடல், சொல்லதிகாரப் புறனடையால் (எச்.67) கொள்ளப்படும். 136. வியங்கோளல்லா விரவுவினை என்றது - செய்யும் என்னும் முற்று. வேறு. இல்லை, உண்டு முதலியவற்றை இச்சூத்திரமுடிபு அஃறிணை முடிபின செய்யுளுள்ளே என்ற முடிபிலடங்காமையின் வேறு கூறப்பட்டது. 137. பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றி வேறு வினைப் பொதுச் சொல் என்றார், என்றது; வெவ்வேறு வினைக்குப் பொதுவாய் வருவது சொல்லன்று பொருள்; அப்பொருளின் பொதுமையை ஒற்றுமைபற்றிச் சொன்மேலேற்றிப் பொதுச் சொல்லென்றார் என்றபடி. பொது, அடிசில் என்னுஞ் சொல்லன்று; அதனானுணர்த்தப்படும் உணவு என்றபடி. 138. ஏனையவென்றது - ஊன், துவை, சோறு, கறி என்பவற்றுள் கறி ஒழிந்த வற்றை. உண்டு என்பது உண்பனவற்றிற்குச் சிறப்புவினையாயும் நிற்கும். நுகரப்படுவன வெல்லாவற்றிற்கும் பொதுவாயும் நிற்கு மென்றபடி. 139. குறுகுறுத்தது என்பது குறுத்தது, குறுத்தது எனப் பிரிந்தும் வந்ததா லெனின் அங்ஙனம் வாராது. ஏனெனில் குறுகுறுத்தது என்பது மிகக் குறுத்தது என்னும் பொருளில் வருதலின் குறு. மிகுதியுணர்த்தக் குறுத்தது என்பது குறுமையை யுடையது என்னும் பொருளில் வருதல் வேண்டும். குறு மிகுதிப்பொரு ளுணர்த்தாமையின் குறுகுறுத்தது என இரட்டையாய் நின்றே மிகக் குறுத்தது என்னும் பொருளை உணர்த்து மென்றபடி. அக்குறுமை மாத்திரம் உணர்த்தி நிற்பது என்பது குறுத்தது குறுத்தது எனவரும் அடுக்கை. அது குறுமை என ஒரு பொருளை மாத்திரம் உணர்த்து மென்றபடி. குறுத்தது குறுத்தது என்பதிற் போலக் குறுகுறுத்தது என்பதில் முதற்சொல் முழுதும் வாராமையின் அடுக்கன்மையறிக. ஒருசொல் முழுதும் இருமுறை வாராமையின் அடுக்கன் றென்பர் நச்சினார்க்கினியர். 140. ஒரு பெயர்ப் பொதுச்சொல் - ஒருபொருட்கு இடப்பட்ட பெயராய்ப் பல பொருட்கு உரியதாயுள்ள சொல். ஈண்டு ஒற்றுமை பற்றிப் பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றிப் பொதுச்சொல் என்றார் என்க. அவை, சேரி தோட்டம் முதலியன. `சேரி - பலரிருப்பது' என்பர் இளம்பூரணர். `பலகுடி சேர்ந்தது சேரி; பல பொருள் தொக்கது தோட்டம்' என்பர் நச்சினார்க்கினியர். தெரு முதலியன அன்னவன்றி ஒரு பொருட்கே யுரியன. அரசர் பெருந்தெரு அரசருக்கே யுரியது. பொதுச் சொல் என்றால், வாரணம்போன்ற பல பொருளைத்தருஞ் சொல்லையுங் குறிக்குமாதலின் அப்பலபொருளொருசொல்லைத்தருஞ் சொல்லையுங் குறிக்குமாதலின் அப்பலபொருளொரு சொல்லைக் குறியாமனீக்கு தற்கு ஒருபெயர்ப் பொதுச் சொல் என்றார் என்பது கருத்து பலபொருளொருசொல் - பல பொருளை யுணர்த்தி வருவது. அன்னதன்றி இது பல பொருட்குரியதாய் வருவது என்றபடி. பெயர் - ஈண்டு நாமம். பலபொருளொருசொல். ஒவ்வொரு பொருட்கும் வேறுவேறு சொல்லாகும் என்பதும், எழுத்தொப்புமைபற்றி ஒருசொல் என்பர் என்பதும் சேனாவரையர் கருத்து. கிளவி - 57ஆம் சூத்திர உரை நோக்குக. 141. அரசர் பெருந்தெரு - அரசர் செல்வதற்கெனச் சமைக்கப்பட்ட பெருந் தெரு. ஆதலின் ஒரு பொருட்கே யுரியதாயிற்று. பிறருஞ் செல்லலா மென்றபடி. 142. வயிரகடகம் - வயிரத்தாற் செய்த கடகம் (பிறமணிகளுமிருக்கலாம்) 143. ஆ தீண்டு குற்றி என்புழிக் குற்றி ஆ தீண்டற்கென்றே நடப்பட்டது. ஆயினும் பிறவுந் தீண்டு மென்றபடி. 144. ஆனதர் - ஆன் செல்லுகின்ற வழி; பிறவுஞ் செல்லலாம். 145. எருத்தில் - எருத்துமாடு கட்டற்கியற்றிய கொட்டில்; பிறவு நிற்கலாம். 146. தம்மாற் பிரிவதென்றது. பிறிதொன்றாற் பிரியாது தாமே பிரிவ தென்றபடி. காரணங் கூறாது வாளா, பெயரினும், வினையினும், பிரிபவை யென்றதனால் தாமே பிரியுமென்பது பெறப்பட்டது என்றபடி. 147. குடி என்று சுட்டுதலாவது, பாணன் முதலிய பெயர்கள் தத்தம் பொருளைச் சுட்டாது தத்தம் குடியைச் சுட்டி நிற்றல் என்றது பாணன் குடி பறையன் குடி என நிற்றலை. ஈண்டுக் காட்டிய இரு செய்யுளுக்கும் தலைமைப் பொருள் தலைவனாகும். 148. இலக்கணச் சூத்திரமென்றது. வினை வேறுபடுஞ் சொல்லிது; வினை வேறு படாச் சொல்லிது என அவற்றின் இலக்கணங் கூறுஞ் சூத்திரங் களை, (அவை 53,54ஆம் சூத்திரங்கள்) 149. ஒரு சாதிக்கண் அணைந்தசாதி யென்றது. ஒரு சாதிக்கண் சேர்ந்த சாதிகளை, மாவும், மருதுமோங்கின என்புழி மாவும் மருதும் மரச்சாதி என்றற்கண் இரண்டுஞ் சேர்ந்த சாதியாதல் காண்க. அங்ஙனமன்றிக் கவசமும் பாய்மாவும் ஒருவாற்றானியைபுடைமை காண்க. மாச் செலுத்துவோன் சாட்டையிட்டுக் கொண்டே செலுத்தல் வழக்காதலின் ஒருவாற்றானியைபு என்றார். இதனைச் சந்தர்ப்ப மென்னலாம். 150. ஒன்று வினைமருங்கி னொன்றித் தோன்று மென்பதை வேறாகப் பிரிக்கின் முதற் சூத்திரத்திற்கே இலக்கணமாகி முடியுமாதலானும், வினைவேறு படாப் பல பொருளென ஒருசொல் உள்ளதெனவும் படுமாதலானும் அது பொருந்தாதென்பது கருத்து. வினையால் வேறுபடுஞ் சொற்களே பொதுவினை கொண்ட வழி வினைவேறுபடாச் சொல்லாகு மென்க. மாவேறினான் என்பதுபோல, முதற் சூத்திரத்திற்கே இலக்கணமாதல் - வினை வேறுபடும் பலபொருளொருசொல் வேறுபடு வினையைக் கொண்டு வேறுபடுதலன்றிப் பொது வினையைக் கொண்டும் வேறுபடுமென்றாதல். இப்பொருள்மேற் சூத்திரப் பொருளோடு மாறுகோடலின் "மாறுகோடலானும்" என்றார். 151. தெரித்து மொழியாமையை (குறித்த பொருளை விளக்கற்கேற்ற சொற்களில்லாமற் கூறலை) வடநூலார் நேயம் என்னுங் குற்றமென்ப. 152. "மீக்கூற்றம் என்பதுபோலக் கூற்றுக் கூற்றம் என நின்றது" என்ற உரை யால் குறித்தோன் கூற்றம் என்பதில் கூற்றம் என்பது சொல்லை என்பது பெறப்படும். படவே, சொற்கும் பொருட்குமுள்ள வொற்றுமைபற்றிப் பொருள் என்று பொருள் கூறினார் என்பது பெறப்படும். தெரித்து மொழி கிளவி என்றதனால் வேறுபாடு என்னுஞ் சொல் வருவிக்கப் பட்டது. நச்சினார்க்கினியர் தெரிவித்துச் சொல்லும் சொல்லாகச் சொல்லுக என்று கூறிய பொருளை நோக்கும்போது சேனாவரையரும் தெரிவித்து மொழியும் மொழிகளாற் சொல்லுக என்பதையே சுருங்கிய வாய் பாட்டால் தெரித்துச் சொல்லுக எனக் கூறியிருக்கவேண்டும். இப் பொருட்குச் சொல்லுகவென்பது அவாய் நிலையான் வருவிக்கப்பட்ட தாகும். மொழிக என்றதன் ஈறு தொக்குநின்ற தென்பாரு முளர். பிரயோக விவேக நூலார் கிளவி என்பதை வியங்கோள் என்பர். கிளவி - கிளக்குக. செய்யாதநிறம் - இயற்கை நிறம். பிறிதோரலங்காரம் - தற்குறிப்பேற்றம். 153. இதனோ டொருபொருட்கிளவியாய் வருவனவென்றது அழிதூ முதலியவற்றை. 154. செறுதல் - அறிதல். பொறியறை - பொறியற்றது. காதறை, மூக்கறை என்பனவுமன்ன, கெழீஇயிலி - நட்பில்லாதது. ஒன்றன் பெயர் ஒன்றுக்காதலென்றது யானையின்பெயர் மகனுக்காதலை. 155. புரோசு - புரோகிதன். "மடியாவுள்ளமொடு.... புரோகமயக்கி" என்னும் பதிற்றுப்பத்து (ஏழாம்பத்து)ப் பதிக உரை நோக்குக. 156. எழுத்தொப்புமை யென்றது. உலகமென்புழி, உயர்திணைப் பொருளை உணர்த்தும் வழியும் அஃறிணைப் பொருளை உணர்த்தும் வழியும் சொல்லான் வேறாயினும் எழுத்தான் ஒன்றாயிருத்தலை. 157. புகையாகிய பொருள் தன்னோடியைபுடைய நெருப்பென்னும் பொருளை இயைபான் உணர்த்தல் போல்வனவே பொருளாற்றல் என்பதும், அறஞ் செய்தான் துறக்கம் புகுமென்ற தொடர்மொழிப் பொருள், மறஞ்செய்தான் நரகம் புகுமென்னும் தனக்கு இனமான தொடர் மொழிப் பொருளைக் குறிப்பாலுணர்த்தல் போல்வனவே சொல்லாற்ற லென்பதும் சேனாவரையர் கருத்து. ஆதலாற் சேனாவரையர் புகையால் அனல் பெறல் போலவே. குடங் கொண்டான் வீழ்ந்தமையின் அவனோடு இயைபுபட்ட குடமும் வீழ்ந்தது என்பதும், மேலைச்சேரிக் கோழி அலைத்தது என்றதனானே அத்தொழிற் கியைபுடைய மற்றொன்று அலைப்புண்டதென்பதும் ஒரு பொருளோடு மற்றொரு பொருட்குள்ள இயைபுபற்றி அறியப்படுதலின் பொருளாற்ற லான் என்றார் என்க. 158. கண் முதலிய சினைகள் தமக்குரிய அஃறிணைப்பன்மை விகுதியான் முடியாது தம் முதலாகிய உயர்திணைக்குரிய விகுதியான் முடியுங்கால், முதல் (கருத்தா) ஒன்றாயின் ஒருமை விகுதியானும், முதல் (கருத்தா) பலவாயிற்பன்மை விகுதியானும் முடியுமென்பது இச்சூத்திரக் கருத்து. உதாரணம்:- சாத்தி கண்நல்லள், சாத்திகள் கண்நல்லர் என வரும். இவ்வுதாரணங்களுள், கண்ணாகிய சினை தன் வினை விகுதியான் முடியுங்கால். கண்நல்லன என (அகரவிகுதியான்) முடிதல் வேண்டும். அங்ஙனம் முடியாமல் தன் முதலுக்குரிய விகுதியான் முடியுங்கால், எழுவாய் சாத்திஎன ஒருமையாயவழி அதற்கேற்பக் கண்ணல்லள் என (அள் என்னும்) ஒருமை விகுதியானும், சாத்திகள் எனப் பன்மையாயவழி, அதற்கேற்பகண் நல்லர் என அர் என்னும் பன்மை விகுதியானும் முடிந்து நிற்கும் என்றபடி. ஏனைய தோள் முதலியவற்றிற்கும் இவ்வாறே கொள்க. இங்கே நல்லன என்னும் அஃறிணை வினையிற் பகுதியே தம் முதலுக் குரிய அள், அர் என்னும் விகுதிகளைப்பெற்று நல்லள், நல்லர் என நின்ற தெனக் கொள்க. ஆதலின், "உயர்திணை, தொடர்ந்த பொருண் முத லாறும் - அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின" என்னும் நன்னூற் சூத்திரத்தில், `அதனொடு சார்த்தின்' என்பதற்கு. அதனொடு தம் வினை யைச் சார்த்திச் சொல்லுமிடத்து என்று பொருள் கோடலே பொருத்த மாகும். இக்கருத்து இலக்கண விளக்க நூலாசிரியர்க்கும் உண்டு என்பதை அவருரை நோக்கித் தெளிந்து கொள்க. சங்கரநமச்சிவாயப் புலவருக்கும் இக்கருத்து உண்டு என்பதை வினையியல் 26ஆம் சூத்திரத்துள் உரைத்த விரிவுரை நோக்கித் தெளிக. 159. பன்மை கூறுங் கடப்பாடிலவே என்றதனாற் பால்வழுவமைத்தார் என்றது. பன்மை கூறுங் கடப்பாடிலவே என்றதனால் ஒருமையாலுங் கூறலாம் என்பதைப் பெறப்பட வைத்து அவ்வொருமையொடு கண் முதலிய பன்மைச் சினைகள் முடியினும் அமையுமெனப் பால் வழுவமைத்தமையை. 160. தம் வினைக்கியலு மெழுத்தலங்கடை என்றதனாற் றிணை வழுவமைத்தார் என்றது. தம் வினைக்கியலு மெழுத்தல்லாதது உயர்திணை வினைக்கியலும் எழுத்தேயாகலின் அவ்வுயர்திணை வினைக்கியலும் எழுத்துத் தம் வினைக்கியலு மெழுத்தன்றாகலின் அதனொடு முடிதல் திணை வழுவாமென வழுவமைத் தமையை. இவற்றுள் ஒருமைவிகுதி கொண்டதைப் பால்வழுவென்றமையாற் றிணை வழுவன்று என்றார் என்பது கருத்தன்று. தம்வினைக்கியலு மெழுத்தலங் கடையெனவே திணைவழுவென்பதும், பெறப்படும். ஏனெனின்? ஒருமை விகுதியும் உயர்திணை விகுதியேயாதலின். 161. ஆகோடு கூரிது என்புழிக் கூரிது என்னுஞ் சினை வினையிலுள்ள துவ்விகுதியோடு, சினையாகிய கோடும், கோடுகூரிது என முடியும்; முதலாகிய ஆவும் ஆகூரிது என முடியும். ஏனெனின்? அஃறிணைக் குரிய எழுத்து முதல் சினை இரண்டற்கும் ஒன்றேயாகலின், ஆ வந்தது என்புழி, ஆவுக்குரிய வந்தது என்னும் வினையிலுள்ளது என்னும் ஒருமை விகுதியே கூரிது என்னும் சினை வினைக்கும் விகுதியாய் நிற்றலின் இரண்டற்கும் ஒன்றேயாமாறு காண்க. நம்பி கண் நல்லன் என்புழி அன்விகுதி முதலாகிய நம்பிக்கு அன்றி. கண்ணுக்கு ஏற்புடைத் தாகாமை காண்க. கண் தனக்குரிய வினை பெறின் நம்பிக்குக் கண் நல்லன என முடியும் என்க. ஆதலினாற்றான் `தம்வினைக்கியலும் எழுத்தலங் கடை' என்றார். நல்லன் என்ற வினையோடு முடிந்தபின் நல்லன என்ற வினையோடு முடியாது என்று விதிப்பது பொருந்தாது என்று உரையாசிரியர் முதலிய மூவரையும் மறுத்துரைப்பாரு முளர். அவ்வாறு, சேனாவரையர் கூற வில்லை. இளம்பூரணரும், நச்சினார்க்கினியருமே கூறுகின்றனர். ஆதலின் சேனாவரையருரையையுங் கூட்டி அவர் மறுத்தல் பொருந்தா தென்க. இன்னுமவர் நால்வருரையையு மறுத்துத் தாம் சினைக்கிளவி பன்மை கூறுங் கடப்பாடில என்பதற்குச் சினைச்சொற்கள் தாம் பன்மையைக் குறிக்குங் கடப்பாடில என்று பொருள்கூறி இடத்திற்கேற்றவாறு பன்மை யையுங் குறிக்கும் ஒருமையையுங் குறிக்குமென்றுங் கூறுகின்றனர். அவ்வாறு பொருள் கோடற்குப் `பன்மை குறிக்கும்' என்று சூத்திரமிருப்பிற் பொருந்துமேயன்றிப் `பன்மை கூறும்' என்றிருத்தலாற் பொருந்தாது. கூறும் என்பதும் அப்பொருடருமெனின் அது மயங்க வைத்தலா மென்க. வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். “பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச் சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், ‘வேற்றுமைதாமே ஏழெனமொழிப’ ‘விளிகொள்வதன்கண் விளியோடெட்டே’ என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன்னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றுமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 194-197 இரண்டாவது வேற்றுமையியல் 62. வேற்றுமை தாமே யேழென மொழிப. நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார், அதற் 1கிடையீடின்றி அவற்றது சிறப்பிலக்கணமுணர்த்துதல் முறைமை யாயினும், வேற்றுமை யிலக்கணமுணர்த்துதற்கு வேறிடமின்மை யானும், 2பொது விலக்கணமாதலொப்புமையானும், உருபேற்றல் பெயர்க்கிலக்கணமாகலின் வேற்றுமை யுணர்த்திப் பெயரு ணர்த்தல் முறையாகாலானும், கிளவி யாக்கத்திற்கும் பெயரியற்கு மிடை வேற்றுமையிலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார். வேற்றுமையாவன பெயரும் ஓரிடைச் சொல்லுமாகலின், அவற்ற திலக்கணமும் பொதுவிலக்கணமே யாம். வேற்றுமையிலக்கணமென ஒன்றாயினும் சிறப்புடைய எழு வகை வேற்றுமையும் அவற்றது மயக்கமும் விளிவேற்றுமையுந் தனித்தனி யுணர்த்தத் தகும் வேறுபாடு 3யாப்புடைமையான், மூன் றோத்தா னுணர்த்தினார். பொது விலக்கணமுணர்த்திச் சிறப்பிலக்கண முணர்த்துவன முறையாகலின், முதற்கண்ணதாகிய பெயர்ச் சொற்குப் 4பயனிலை கோடலும் உருபேற்றலும் 5காலந் தோன்றாமை யுமாகிய இலக்கண முணர்த்துவார் இயைபு பட்டமையான் வேற்றுமையிலக்கணம் உணர்த்தினா ரென மேலோத்தினோடு இவ்வோத்திடையியைபு கூறினாரால் உரை யாசிரியரெனின், அற்றன்று. இவ்வோத்துப் பெயரிலக்கணம் நுதலியெடுத்துக் கொள்ளப்பட்டதாயின், உரு பேற்றலும் பயனிலைகோடலும் காலந்தோன்றாமையுமாகிய பெய ரிலக்கணம் முன்னோதி, இயைபு படுதலான் வேற்றுமை யுணர்த்துங் கருத்தினராயின் அவற்றையும் இன்னவிலக்கணத்த என உணர்த்திப் பின்னும் எடுத்துக் கொண்ட பெயரிலக்கணமே பற்றி யோதிப் பெயரியலென ஓரோத்தான் முடியற்பாற்றன்றே? அவ்வாறன்றி, வேற்றுமை யிலக்கணமே முன்கூறி, ‘அன்றியனைத் தும் பெயர்ப் பயனிலையே’ (சொல். 66) எனவும், ‘ஈறு பெயர்க்காகு மியற்கைய வென்ப’ (சொல். 69) எனவும் வேற்றுமை யிலக்கணம் கூறி, அச்சூத்திரத்தாற் பயனிலை கோடலும் உருபேற்றலும் பெயர்க் கிலக்கண மென்பது உய்த்துணரவைத்துப் பின்னும் வேற்றுமை யிலக்கணமே யுணர்த்தி, இதனை வேற்றுமையோத் தென்றும், அவற்றது மயக்கமுணர்த்திய ஓத்தை வேற்றுமை மயங்கிய லென்றும், சிறப்பில்லா விளிவேற்றுமை யுணர்த்திய ஓத்தை விளி மரபென்றும், நுதலியதனாற் பெயர் கொடுத்து, மூன் றோத்தாக வைத்து, பெயரியலென வேறோரோத்திற்குப் பெயர் கொடுத்தமையானும், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல்.155) என்பது முதலாகிய ஐந்து சூத்திரமும் பெயரிலக்கண முணர்த்தும் ஓத்தின் முன் வையாது இடை வைத்தல் பொருந்தா மையானும், இவ்வோத்துப் பெயரிலக்கணம் நுதலி யெடுத்துக் கொள்ளப் பட்டதன்று, வேற்றுமையிலக்கணமே நுதலி யெழுந்த தெனவே படும்; அதனான் அவர்க்கது கருத்தன் றென்க. அஃதேல், ‘பெயர் நிலைக் கிளவி காலந் தோன்றா’ (சொல். 70) எனப் பெயரிலக் கணம் ஈண்டுக் கூறியது என்னை யெனின், பயனிலை கோடலும் உரு பேற்றலும் பெயரிலக்கண மென்பது ஈண்டுப் பெறப்பட்டமை யான், அவற்றோடியையக் காலந்தோன்றாமையும் ஈண்டே கூறினார், பெயரிலக்கணமாத லொப்புமையானென்பது. இதன் பொருள் : வேற்றுமையாவன ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர் என்றவாறு. 6செயப்படுபொருள் முதலாயினவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின், வேற்றுமையாயின. செயப்படு பொருண் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருண் மாத்திர முணர்த்தலின், எழுவாயும் வேற்றுமையாயிற்று. அல்லதூஉம், வேற்றுமை யென்பது 7பன்மை பற்றிய வழக்கெனினுமையும். தாமே யென்பது கட்டுரைச்சுவைபட நின்றது. (1) 63. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இதன் பொருள் : விளிகொள்வதன்கண்ணதாகிய விளியொடு தலைப் பெய்ய வேற்றுமை யெட்டாம் என்றவாறு. வேற்றுமை யென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர், விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (சொல். 118) என்பவாகலின், விளிகொள்வ தென்றது விளிகொள்ளும் பெயரை. அதன்கண் விளியென்றதனான், பெயருமன்று, பெயரின் வேறுமன்று, விளி வேற்றுமையாவது திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி யென்பதாம். ‘வேற்றுமை தாமே யேழென மொழிப’ (சொல். 62) எனப் 8பிறர் மதங் கூறி இச்சூத்திரத்தான் தந்துணி புரைத்தார். (2) 64. அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன்அது கண்விளி யென்னு மீற்ற. இதன் பொருள் : எட்டெனப்பட்ட வேற்றுமையாவன விளிவேற்று மையை இறுதியாகவுடைய பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண்ணாம் என்றவாறு. பெயர் ஐ ஒடு கு இன் அது கண் என்பன 9பலபெயர் உம்மைத் தொகை. அஃது ஒரு சொல்லாய் 10விளியென்னு மீற்ற என்பதனான் விசேடிக்கப்பட்டது. பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் என விரியும். சிறப்புடைப்பொருளைத் தானினிது கிளத்த லென்பதனான், ஒடுவென்றும் அது வென்றும் ஓதினாராகலின், ஆனுருபும் அகர வுருபுங் கொள்ளப்படும். விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளி யென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார். (3) 65. அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. இதன் பொருள் : மேற் சொல்லப்பட்ட வேற்றுமையுள், முதற்கட் பெய ரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் என்றவாறு. பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது, உருபும் விளியு மேலாது 11பிறிதொன்றனொடு தொகாதும் நிற்கு நிலைமை. எனவே, உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனொடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமையாகா தென்றவா றாம். உதாரணம்: ஆ, அவன் என வரும். (4) 66. 12பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. இதன் பொருள் : பொருண்மை சுட்டல்-ஆ வுண்டு என்பது. வியங் கொள வருதல்-ஆ செல்க என்பது. வினைநிலை யுரைத்தல்-ஆ கிடந்தது என்பது. வினாவிற் கேற்றல்-அஃதியாது, அஃதெவன் என வினாச்சொல்லொடு தொடர்தல். பண்பு கொள வருதல்-ஆ கரிது என்பது; தன்னின முடித்த லென்பதனான், ஆ இல்லை, ஆ அல்ல என்னுந் தொடக்கத்துக் குணப் பொருள் அல்லா வினைக் குறிப்பொடு தொடர்தலுங் கொள்க. பெயர் கொள வருதல்-ஆ பல என்பது. அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே யென்பது - அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலையாம் என்றவாறு. முடிக்குஞ் சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பயனா கலின் பயனிலை யென்றார். உண்டென்பது பண்பு முதலாயின சுட்டாது உண்மையே சுட்டலின் வேறு கூறினார். பொய்ப்பொருளின் மெய்ப்பொருட்கு வேற்றுமை யுண்மையாகலின், அவ்வுண்மையைப் பொருண்மை யென்றார். வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தற்கண்ணும், வினாவிற் கேற்றல் பெயர்கொள வருதற்கண்ணும், வினைக் குறிப்பாயவழிப் பண்பு கொள வருதற்கண்ணும் அடங்கு மாயினும் வினையும் பெயரும் பண்பும் முடிக்குஞ் சொல்லாதலே யன்றி 13முடிக்கப்படுஞ் சொல்லாதலுமுடைய; வியங்கோளும் வினாவும் முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லாமையின், அவ் வேறுபா டறிவித்தற்கு வேறு கூறினா ரென்பது. ‘பெயர்தோன்று நிலை’ (சொல். 65) என்பதனானும், ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ யென்பதனானும், பெயர் தோன்றிய துணையாய் நின்று பயனிலைத்தாதல் எழுவாய் வேற்றுமைய திலக்கணமென்பது பெற்றாம். ஆ பல என்புழிப் பலவென்பதற்குப் பயனிலை யாதெனின், அது பயனிலையாய் ஆவென்பதனை முடித்தற்கு வந்ததாகலின், தான் பிறிதொரு சொன்னோக்காது ஆவென்பதனொடு தொ டர்ந்து அதனை முடித்தமைந்து மாறுமென்பது. அஃதேல், பயனிலை கொள்ளாதது எழுவாய் வேற்றுமை யாமா றென்னையெனின், உருபேற்றல் பெயர்க்கிலக்கண மாயினும் உருபேலாத வழியும் பெயராமாறு போல, எழுவாய் வேற்றுமை பயனிலை கொள்ளாத வழியும் எழுவாய்வேற்றுமையே யாமென்பது. இலக்கிய மெங்குஞ் செல்லாதன இலக்கணமாமா றென்னை யெனின், 14ஆண்டிலக்கண மாவன உருபேற்றற்கேற்ற தன்மையும் பயனிலையும் பயனிலை கோடற்கேற்ற தன்மையு மாகலின், அத்தன்மை 15எல்லாவற்றிற்கு முண்மையின் இலக்கணமா மென்பது. அகரச்சுட்டு அன்றி யென ஈறு திரிந்து நின்றது. ‘அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலை’ யெனவே, பயனிலை கோடல் பெயர்க்கிலக்கண மென்பதூஉம் பெற்றாம். (5) 67. பெயரி னாகிய தொகையுமா ருளவே யவ்வு முரிய வப்பா லான. இதன் பொருள் : பெயரும் பெயருந் தொக்க தொகையு முள; அவையு முரிய எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு என்றவாறு. உதாரணம்: யானைக்கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது, கொல் யானை நின்றது, கருங்குதிரை யோடிற்று, உவாப் பதினான்கு கழிந்தன, பொற் றொடி வந்தாள் என வரும். பெயரினாகிய தொகையு மென்னும் 16உம்மையான், பெய ரொடு பெயர் தொக்கனவே யன்றி, நிலங்கிடந்தான், மாக்கொணர்ந்தான் எனப் பெயரொடு வினை வந்து தொக்க வினையினாகிய தொகையுமுள என்பதாம். ஆகவே பெயரொடு பெயரும் பெயரொடு தொழிலுந் தொக்கன தொகை யென்பது பெற்றாம். அவ்வுமுரிய எனப் பொதுவகையாற் கூறினாரேனும், ஏற் புழிக் கோடலென்பதனான் எழுவாய் வேற்றுமையாதற்கேற்பு டைய பெயரி னாகிய தொகையே கொள்ளப்படும். இரு தொடர்படச் சூத்திரித் திடர்ப்படுவ தென்னை? பெயரி னாகிய தொகையும் எழுவாய்வேற்றுமையாமென்றோத அமையாதோ எனின், அங்ஙனமோதின் பெயரொடு பெயரும், பெயரொடு வினையுந் தொக்கன தொகைச்சொல்லாமென்னுந் தொகையிலக்கணம் பெறப்படாதாம்; அவ் விலக்கண முணர்த்துதற்கு இவ்வாறு பிரித்தோதினாரென்பது. பெயரினாகிய தொகையுமென்ற உம்மையான் வினையி னாகிய வினைத்தொகை தழுவப்பட்ட தென்றும், ‘எல்லாத் தொகையு மொரு சொன்னடைய’ (சொல். 420) என்பதனான் தொகைச்சொல்லெல்லாம் எழுவாய் வேற்றுமையாதல் பெறப்படு தலின், ஈண்டு அவ்வுமுரிய வப்பாலான என்றது தொகைச் சொற்குப் பயனிலை கோடன்மாத்திர மெய்துவித்தற் கென்றும், உரையாசிரியர் கூறினாராலெனின், அற்றன்று. வினைத் தொகைக்கு நிலைமொழி வினையென்பது உரையாசிரியர்க்குக் கருத்தன்மை ‘வினையின் றொகுதி காலத் தியலும்’ (சொல். 415) என்னுஞ் சூத்திரத்திற் சொல்லுதும். இனி ‘எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ (சொல். 420) என்பதற்கு ஒரு சொன்ன டையவா மென்பதல்லது எழுவாய் வேற்றுமையா மென்னுங் கருத்தின்மையானும், அக்கருத்துண் டாயின் அவையும் எழுவாய் வேற்றுமையாய் நின்று ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ (சொல். 66) என்றதனான் பயனிலை யெய்து மாகலின் ‘அவ் வுமுரிய அப்பாலான வென்றல்’ கூறியது கூறிற்றாமாகலானும், அதுவும் உரையாசிரியர் கருத்தன்றென்க. அஃதேல், தொகையும் எழுவாய்வேற்றுமையா மென்பதே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின் ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ (சொல். 65) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்க எனின், பெயர் தோன்றிய துணையாய் நிற்றலும் பயனிலை கோடலு மாகிய எழுவாய் வேற்றுமை யிலக்கண மிரண்டுந் தொகைச் சொற்கு மெய்துவித்தற்கு அவ்விரண்டு சூத்திரத்திற்குப் பின் வைத்தாரென்பது. ஆண்டு வைப்பின், ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ (சொல். 66) என்றதனாற் பயனிலை கோடல் பெயர்க் கேயாய்த் தொகைக் கெய்தாதா மென்பது. (6) 68. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. இதன் பொருள் : மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விதென்ப ஆசிரியர் என்றவாறு. எனவே, அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலு முண்டு; அது செவ்விதன்று என்ற வாறாம். பெயரென்றது ஈண்17டெழுவாயை. கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான் யாது செய்வல் என்றவழி இது செய் எனவும், இவன் யார் என்றவழிப் படைத்தலைவன் எனவும் செப்பியவழி, யான் நீ இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று, செல்வல், இது செய், படைத்தலைவன் என்னும் பயனிலை கொண்டவாறு கண்டு கொள்க. 18எவ்வயிற் பெயருமென்றதைன்னையெனின்:-செல்வல், இது செய் என்னுந் தன்மை முன்னிலை வினைகளான் யான் நீ யென்பனவற்றின் பொருளு முணரப்படுதலின், யான் செல்வல், நீ யிது செய் யெனப் பெயர் வெளிப்படுதல் பயமின்றாயினும் வழக்கு வலியுடைத் தாகலின், அவ்வாறு வருதல் பயமின்றெனப்படா தென்பது விளக்கிய எவ்வயிற் பெயரு மென்றா ரென்பது. அவ்வியலானிலையலென விரியும். பயனிலைக்கு இருநிலைமையு மோதாது எழுவாய்க்கே யோதுதலாற் பயனிலை வெளிப்பட்டே நிற்கும். எவ்வயிற் பெயரும் பயனிலை கோடல் செவ்விதென, உரு பேற்றல் செவ்விதன்றா மென வுரைத்து 19அவ்வாய் நீயி ரென்பன உருபேலாவென்று காட்டினாரால் உரையாசிரிய ரெனின்:-அவ்வாயென்பது இடைச் சொல்லாய் ஆண்டென்னும் பொருள் பட நின்றவழி உருபேயன்றிப் பயனிலையும் ஏலாதாம். இனி அல்வழிக்கண் (எழுத்து. 326, சொல். 143) நும்மென்பது திரிந்து நீயிரென நின்ற திரிபைப் பெயரெனக் கொண்டு உருபேலா தென்றாராயின், நீயென்பதன் திரிபாகிய நின் என்பதனையும் பெயராகக்கொண்டு பயனிலை கொள்ளா தென்றுங் கூறல் வேண்டும் (எழுத்து. 179). அன்றி நும்மின் திரிபாகிய நீயி ரென்ப தனை ‘எல்லாம் நீயிர் நீயெனக் கிளந்து’ (சொல். 174) என இயற்கைப் பெயரோடு ஒருங்கு வைத்தது நீயிரென்னுந் திரிபே இயல்பாக வேற்றுமைக் கண் நும்மெனத் திரியினுமமையு மென்னுங் கருத்தின ராயன்றே? அதனான் இயல்பாகக் கொள்ளப்பட்ட நிலைமைக்கண் நீயி ரென்பதனை உருபேலா தென்றாராயின் நும்மெனத் திரிந்து உருபேற்பதனை உருபேலாதென்றல் பொருந்தாதாம். அதனானது போலியுரை யென்க. (7) 69. கூறிய முறையி னுருபுநிலை திரியா தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப. எழுவாய் வேற்றுமை யுணர்த்தி ஏனை யறுவகை வேற்றுமை யிலக்கணமு முணர்த்திய வெடுத்துக் கொண்டார். இதன் பொருள் : பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறப்பட்ட முறைமையையுடைய உருபு தந்நிலை திரியாது பெயர்க்கீறா மியல்பையுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். அம்முறைபற்றி அவை 20யெண்ணுப்பெயரான் வழங்கப்படு தலின் ‘கூறிய முறையி னுருபு’ என்றார். 21வினைச்சொ லிறுதி நிற்குமிடைச்சொற்றாமென வேறு உணரப்படாது அச்சொற்குறுப்பாய் நிற்குமன்றே? இவையவ் வாறு பெயர்க்குறுப்பாகாது தாமென வேறுணரப்பட்டிறுதி நிற்கு மென்பார் ‘நிலை திரியாது’ என்றார். உருபு பெயர் சார்ந்துவரு மெனவே, உருபேற்றலாகிய பெய ரிலக்கணமும் பெறப்பட்டது. (8) 70. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா 22தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே. இதன் பொருள் : பெயர்ச்சொற் காலந் தோன்றா, வினைச்சொல்லோ டொக்கும் ஒரு கூறல்லாத விடத்து என்றவாறு. சாத்தன், கொற்றன், உண்டல், தின்றல் எனக் காலந் தோன்றாது நிற்றலும், உண்டான், தின்றான் எனத் தொழில் நிலை யொட்டுவன காலந் தோன்றி நிற்றலுங் கண்டுகொள்க. உண்டான், தின்றான் என்னுந் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர் வினைச்சொற்போலத் திணையும் பாலுங் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன் ஆன் முதலாகிய ஈற்றவாய் வருதலின், ‘தொழினிலை யொட்டும்’ என்றார். ஒட்டு மென்பது உவமைச் சொல். பெயராகிய நிலையை யுடையது பெயர்நிலை யென அன் மொழித் தொகை. 23பெயர் - பொருள். 24தொழில்நிலையுமது. ‘காலந் தோன்றா’ என்பன ஒரு சொல்லாய்ப் ‘பெயர்நிலைக் கிளவி’யென்பதற்கு முடிபாயின. பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் ஈண்டுப் பெறப்படுதலின், அவற்றோடியையக் காலந்தோன்றாமை யாகிய பெயரிலக்கணமும் ஈண்டே கூறினார். பெரும்பான்மை பற்றிக் காலந்தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று. (9) 71. இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்றும் அதுவே. இதன் பொருள் : ‘பெயர் ஐ ஒடு கு’ என்னுஞ் சூத்திரத்து ஐ எனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவதாம். அஃதி யாண்டு வரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய அவ்விரண்டு முதற் கண்ணுந் தோன்றுமவை பொருளாக வரும் என்றவாறு. உதாரணம்: குடத்தை வனைந்தான், குழையையுடையன் என வரும். எண்ணுமுறையான் இரண்டாவதென்பது பெறப்படுமா யினும், இக்குறி தொல்லாசிரியர் வழக்கென்பதறிவித்தற்கு ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிரண்டாவ தென்றார். இது மூன்றாவது முதலாயின வற்றிற்குமொக்கும். 25பெயரிய வென்பது பெயரென்பது முதலாக முடிந்த தொரு பெயரெச்சம். தம்மை யுணர்த்துவனவும் பெயரெனப்படுதலின் ‘ஐயெனப் பெயரிய’ வென்றார். வினையே வினைக்குறிப் பென்றாராயினும் அவற்றின் செயப்படு பொருளே கொள்ளப்படும்; அவ்விருமுதலிற் றோன்று மென்றமையான், முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் மேற்பன 26அவையே யாகலின். என்னை அவை முதலாதற் கேற்றவா றெனின், செயப்படுபொருள் முதலாயின தொழிற்குக் காரணமாகலானும், ‘ஆயெட்டென்ப தொழின் முதனிலையே’ (சொல். 112) என அவற்றை முதனிலையென்று கூறுபவாகலானு மென்பது. அஃதேல், செயப்படுபொருளாவது வினைமுதற் றொழிற் பயனுறுவ தாதலான், குழை முதலாயினவற்றிற்கு அவ்விலக்கணம் ஏலாமையின் செயப்படுபொருளன்மையான் வினைக்குறிப்பெனல் வேண்டா வெனின், அற்றன்று; ‘அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு, மெய்ந்நிலையுடைய’ (சொல். 200) என்றாராகலின், குறிப்புச்சொற் காலமொடு தோன்றித் தொழிற் சொல்லாதலும் குழை முதலாயின தொழிற்பய னுறுதலும் ஆசிரியர் துணிபாகலின், அவையுஞ் செயப்படு பொருளா மென்பது. ஆயின், செயப்படு பொருட்கட் டோன்று மென வமையும், ‘வினையே வினைக்குறிப்’ பெனல் வேண்டா வெனின், அங்ஙனங் கூறின், செயப்பாடினிது விளங்குஞ் சிறப்புடைத் தெரிநிலைவினைச் செயப்படு பொருளையே கூறினாரோ, குறிப்புப்பொருளு மடங்கப் பொதுவகையாற் கூறினாரோ வென்றையமாம்; ஐயம் நீங்க, ‘வினையே வினைக் குறிப்’பென்றா ரென்பது. 27வினை வினைக்குறிப்பு என்பன ஈண் டாகுபெயர். புகழை நிறுத்தான், புகழை நிறுத்தல், புகழை யுடையான், புகழை யுடைமை என இரண்டாவது பெயரொடு தொடர்ந்த வழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படு பொருளும் பற்றியே நிற்குமென்பார், எவ்வழி வரினுமென்று யாப்புறுத்தார். இயற்றப்படுவதும், வேறுபடுக்கப்படுவதும், எய்தப் படுவது மெனச் செயப்படுபொருள் மூன்றாம். இயற்று தலாவது முன் இல்லதனை யுண்டாக்குதல். வேறுபடுத்தலாவது முன்னுள்ள தனைத் திரித்தல். எய்தப் படுதலாவது இயற்றுதலும் வேறுபடுத்தலு மின்றித் தொழிற்பயனுறுந் துணையாய் நிற்றல் .(10) 72. காப்பி னொப்பி னூர்தியி னிழையி னோப்பிற் புகழிற் பழியி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா வறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா வன்ன பிறவு மம்முதற் பொருள வென்ன கிளவியு மதன்பால வென்மனார். 28செயப்படுபொருண் மூன்றனையும் பற்றி வரும் வாய்பாடு களை விரிக்கின்றார். இதன் பொருள் : காப்பு முதலாகச் சிதைப்பீறாகச் சொல்லப்பட்ட இருபத் தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம் முதற்பொருள்மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப் பால என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. என்றா வென்பது எண்ணிடைச் சொல். இன்னெல்லாம் புணரியனிலையிடைப் பொருணி லைக்குத வாது (சொல். 250) எண்ணின்கண் வந்தன. முன்னர் வருவன வற்றிற்கும் ஈதொக்கும். ‘அம்முதல்’ என்றது கூறப்பட்ட செயப்படுபொருள் என்றவாறு. (எ-டு) எயிலை யிழைத்தான் என்பது இயற்றப்படுவது, கிளியை யோப்பும், பொருளை யிழக்கும், நாணை யறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை யாக்கும், நாட்டைச் சிதைக்கும் என்பன வேறுபடுக்கப் படுவன. குறைத்தல், சுருக்குதலும் சிறிதிழக்கச் சிதைத்தலுமாம். அறுத்தல், சிறிதும் இழவாமல் சினையை யாயினும் முதலையா யினும் இருகூறு செய்தல். ஊரைக் காக்கும், தந்தையை யொக்கும், தேரை யூரும், குரிசிலைப் புகழும், நாட்டைப் பழிக்கும், புதல்வரைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை யுவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை யளக்கும், அடைக்காயை யெண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கணையை நோக்கும், கள்வரை யஞ்சும் என்பன எய்தப்படுவன. வெகுளலுஞ் செறலும் கொலைப் பொருளவாயவழி, வேறுபடுக்கப்படுவனவாம். செறல் வெகுளியது காரியம். இயற்றப்படுவது ஒருதன்மைத்தாகலின், அதற்கொரு வாய்பாடே கூறினார். ஏனைய பல இலக்கணத்த வாகலிற் பல வாய்பாட்டான் விரித்துக் கூறினார். அன்னபிறவு மென்றதனான், பகைவரைப் பணித்தான், சோற்றை யட்டான், குழையை யுடையான், பொருளை யிலன் என்னுந் தொடக்கத்தன கொள்க. காப்பு முதலாயின பொருள்பற்றி யோதப்பட்டமையான், ஊரைப் புரக்கும், ஊரையளிக்கும், தந்தையை நிகர்க்கும், தந்தையை யொட்டும், தேரைச் செலுத்தும், தேரைக் கடாவும் என்பன போல்வன வெல்லாங் கொள்க. இயற்றப்படுதல் முதலாகிய வேறுபாடு, குறிப்புவினைச் செயப்படு பொருட்கண் ஏற்பன கொள்க. (11) 73. மூன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. இதன் பொருள் : மேல் ஒடுவெனப் பெயர்கொடுத் தோதிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலுங் கருவியு மாகிய இரண்டு 29முதலையும் பொருளாக வுடைத்து என்றவாறு. மேல் ஐயொடு குவ்வென்றோதியவழி ஆனுருபுந் தழுவப் பட்ட மையான், ஈண்டும் அவ்வாறே கொள்ளப்படும்; படவே மூன்றாவதாதலும் வினைமுதல் கருவிப் பொருட்டாதலும் ஆனுரு பிற்கு மெய்தும். வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழிற் படுத்துவது. கருவியாவது வினைமுதற் றொழிற்பயனைச் செயப்படு பொருட்க ணுய்ப்பது. அனை யென்பது அத்தன்மையவாகிய முதலென அவற்றி லக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. முதலென்பதற்கு மேலே யுரைத்தாம். உதாரணம்: கொடியொடு துவக்குண்டான், ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் எனவும், அகத்தியனாற் தமிழுரைக்கப்பட்டது, வேலானெறிந்தான் எனவும் வரும். பிறபொருளு முளவேனும் வினைமுதல் கருவி சிறந்தமை யான் ‘வினைமுதல் கருவி யனைமுதற்று’ என்றார். வினைமுதல் கருவிக்கண் ஒடுவெனுருபு இக்காலத் தருகி யல்லது வாராது. (12) 74. 30அதனி னியற லதற்றகு கிளவி யதன்வினைப் படுத லதனி னாத லதனிற் கோட லதனொடு மயங்க லதனோ டியைந்த வொருவினைக் கிளவி யதனோ டியைந்த வேறுவினைக் கிளவி யதனோ டியைந்த லொப்ப லொப்புரை யின்னா னேது வீங்கென வரூஉ மன்ன பிறவு மதன்பால என்மனார். உதாரணம்: அதனின் இயறல்-மண்ணானியன்ற குடம் என்பது; மண் முதற்காரணம். முதற்காரணமாவது காரியத்தோடொற் றுமை யுடையது. அதன் தகு கிளவி - வாயால் தக்கது வாய்ச்சி, அறிவானமைந்த சான்றோர் என்பன. இவை கருவிப்பாற்படும். அதன் வினைப்படுதல்-சாத்தனான் முடியுமிக் கருமம் என்பது. இது வினைமுதற்பாற்படும். அதனின் ஆதல்-வாணிகத்தானாயி னான் என்பது. அதனின் கோடல் - காணத்தாற் கொண்ட வரிசி என்பது. இவையுங் கருவிப்பாற்பாடும். இவையைந்து பொருளும் ஒடுவுருபிற்குஞ் சிறுபான்மை யுரியவாயினும், பெரும்பான்மை பற்றி ஆனுருபிற்கே யுரிய போலக் கூறினார். அதனொடு மயங்கல்-எண் ணொடு விராய வரிசி என்பது. அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி-ஆசிரியனொடு வந்த மாணாக்கன் என்பது. வருதற்றொழில் இருவர்க்கு மொத்தலின், ஒருவினைக் கிளவியாயிற்று. அதனோடியைந்த வேறு வினைக் கிளவி-மலையொடு பொருத மால்யானை என்பது. பொருதல் யானைக் கல்ல தின்மையின் வேறுவினைக் கிளவியாயிற்று. அதனோடி யைந்த லொப்ப லொப்புரை - பொன் னோடிரும்பனையர் நின்னொடு பிறரே என்பது. ஒப்பல்லதனை யொப்பாகக் கூறலின் ஒப்பலொப்புரை யாயிற்று. இம் மூன்றற்கும் உடனிகழ்தல் பொது வென்பதூஉம், அவை ஒடுவெனு ருபிற்கே யுரிய வென்பதூஉ முணர்த்திய, அதனோடியைதல் மூன்றற்குங் கூறினார். அதனொடு மயங்கற்கும் ஈதொக்கும். எல்லாப் பொருட் கண்ணும் அது வென்றது உருபேற்கும் பெயர்ப்பொருளை. ‘அதற்கு வினை யுடைமையின்’ (சொல். 76) என்பதற்கும் ஈதொக்கும். 31இன்னா னேது வென்பது முயற்சியிற் பிறத்தலா னொலி நிலையாது என்பது. அதனினாதலெனக் காரக ஏது முற் கூறப்பட்டமையான், இது ஞாபக ஏதுவாம். இப் பொருள் ஆனுருபிற்கும் இன்னுருபிற்கு முரித்தென்பது விளக்கிய ஏது என்னாது ‘இன்னானேது’ என்றார். இன்னானென்பது உம்மைத்தொகை; அவற்றதேதுப் பொருண்மை என்றவாறு. என வென்பதனை மாற்றி ஏது வென்பதன் பின் கொடுத்து,‘ஈங்கு வரூஉ மன்ன பிறவு’மென வியைக்க. ஈங்கனமென்று பாட மோதுவாரு முளர். அதனினியற லென்பதற்குத் 'தச்சன் செய்த சிறுமாவைய' மென்றும், இன்னானென்பதற்குக் 'கண்ணாற் கொத்தை காலான் முடவ'னென்றும், உதாரணங்காட்டினாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று; 32தச்சன் செய்த சிறுமா வைய மென்பது ‘வினைமுதல் கருவி யனைமுதற்று’ (சொல். 73) என்புழியடங்கு தலான் ஈண்டுப் பாற்படுக்க வேண்டாமையானும், சினை விகாரத்தை முதன்மேலேற்றிக் கூறும் பொருண்மை இன்னா னென்பதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமையாகற்பால வெனின், அற்றன்று; வேற்றுமை மயக்கமாவது ஒரு வேற்றுமையது ஒரு பொருட் கண்ணாக, சில பொருட் கண்ணாக ஏனை வேற்று மையுஞ் சேறலன்றே? அவ்வாறன்றிச் சிறிதொழித்து எல்லாப் பொருட்கண்ணும் இரண்டுருபுஞ் சேறலானும், வடநூலுள் 33பொருள் வேற்றுமையானல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையாக ஓதப்படாமையானும், ஈண்டும் எல்லா வாசிரியரும் ஒரு வேற்றுமையாகவே யோதினாரென்க. வட நூலொடுமாறு கொள்ளாமைக் கூறல் ஆசிரியருக்கு மேற்கோளா யின், விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர்; அவ்வாறடக்கலில ரெனின், அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததன்று; ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்பவாகலின் ஐந்திரநூலார் விளி வேற்றுமையை எட்டாம் வேற்றுமையாக நேர்ந்தாரென்பது பெறப்படும்; ஆசிரியர் அவர் மதம் பற்றிக் கூறினாராகலின் அதனொடு மாறுகொள்ளா தென்பது. இக்கருத்து விளக்கிய வன்றே, பாயிரத்துள் ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனக் கூறிற் றென்க. அன்னபிறவு மென்றதனான், கண்ணாற்கொத்தை, தூங்கு கையான் ஓங்கு நடைய (புறம். 22), மதியோடொக்குமுகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது என்பன போல்வன கொள்க. (13) 75. நான்கா குவதே குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. இதன் பொருள் : மேல் கு எனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்று மைச் சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை யேற்று நிற்கும் என்றவாறு. உதாரணம்: அந்தணற் காவைக் கொடுத்தான் என வரும். மாணாக்கற்கு நூற்பொருளுரைத்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் 34பிற வாய்பட்டாற் கூறப்படு வனவும், மாணாக்கற்கு அறிவு கொடுத்தானெனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண் செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளுமெல்லா மடங்குதற்கு ‘எப்பொரு ளாயினும்’ என்றார். பிறபொருளு முளவாயினும், கோடற்பொருள் சிறந்த மையின், ‘எப்பொருளாயினுங் கொள்ளு’ மென்றார். (14) 76. அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி னதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியி னதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலி னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார். உதாரணம்: அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு வேலி என்பது. வினை- 35ஈண்டு உபகாரம். அதற்குடம்படுதல் - சாத்தற்கு மகளுடம் பட்டார் என்பது. சான்றோர் கொலைக்குடம்பட்டார் என்பதுமது. அதற்குப் படுபொருளாவது பொதுவாகிய பொருளைப் பகுக்குங் கால் ஒரு பங்கிற்படும் பொருள்; அது சாத்தற்குக் கூறு கொற்றன் என்பது. அதுவாகு கிளவி - கடிசூத்திரத்திற்குப் பொன் என்பது. பொன் கடிசூத்திரமாய்த் திரியுமாகலின் அதுவாகு கிளவியென் றார். கிளவி - பொருள். அதற்கு யாப்புடைமை-கைக்கு யாப்புடை யது கடகம் என்பது. அதற்பொருட் டாதல் - கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது. நட்பு - அவற்கு நட்டான், அவற்குத் தமன் என்பன. பகை-அவற்குப் பகை, அவற்கு மாற்றான் என்பன. காதல் - நட்டார்க்குக் காதலன், புதல்வற் கன்புறும் என்பன. சிறப்பு - வடுகர சர்க்குச் சிறந்தார் சோழியவரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன. 36அப்பொருளென்றது அன்னபொருளை; இவ்வாடையு மந்நூலானி யன்ற தென்றதுபோல. எனவே, அன்னபிறவு மென்ற வாறாம். அப்பொருட்கிளவியு மென்றதனான், பிணிக்கு மருந்து, நட்டார்க்குத் தோற்கும், அவற்குத் தக்காளிவள், உற்றார்க் குரியர். பொற்றொடி மகளிர் என்பன போல்வன வெல்லாங் கொள்க.(15) 77. ஐந்தா குவதே இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யதனி னிற்றிது என்னு மதுவே. இதன் பொருள் : மேல் இன் னெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம். அஃது இப் பொருளினித்தன்மைத்து இப்பொருளென்னும் பொருண்மை யை உணர்த்தும் என்றவாறு. ஐந்தாவது நான்கு பொருண்மையுடைத்து; பொருவும், எல்லையும், நீக்கமும், ஏதுவுமென. அவற்றுட் பொரு இருவகைப் படும்; உறழ் பொருவும், உவமப் பொருவுமென. ஏதுவும் இருவகைப் படும்; ஞாபக ஏதுவும், காரக ஏதுவுமென. அவற்றுள் ஞாபகவேதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரக ஏதுப் பொருண்மை அச்சமாக்க மென்பனவற்றாற் பெறப்படும். நீக்கப்பொருண்மை தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றான் பெறப்படும். 37ஏனை யிரண்டும் இதனினிற்றிது என்பதனாற் கொள்ளப் படும், அவ்விரண்டனையும் அஃதிருமுறையா னுணர்த்துமாக லான். எல்லைப் பொருள் - 38கருவூரின் கிழக்கு, இதனினூங்கு என வரும். கிழக்கு ஊங்கு என்பன, வினைக்குறிப் பல்லவேனும் இற்றென்னும் பொருள்பட நிற்றலின், இற் றென்றலேயாம். பொரூஉப் பொருட் குதாரணம் முன்னர்ப் பெறப்படும். (16) 78. வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை யச்ச மென்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்த விழித்தல் புதுமை பழமை யாக்க மென்றா லின்மை உடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவு மதன்பால வென்மனார். இதன் பொருள் : வண்ணமுதலாகப் பற்றுவிடுதலீறாகச் சொல்லப்பட்டனவும் அவைபோல்வன பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தனவாம் என்றவாறு. வண்ணம் வெண்மை கருமை முதலாயின. வடிவு வட்டஞ் சதுர முதலாயின. அளவு நெடுமை குறுமை முதலாயின. சுவை கைப்புப் புளிப்பு முதலாயின. நாற்றம் நறுநாற்றந் தீநாற்றம் முதலாயின. உதாரணம்: காக்கையிற்கரிது களம்பழம், இதனின் வட்டமிது, இதனி னெடிதிது, இதனிற் றீதிது, இதனிற் றண்ணிதிது, இதனின் வெய்திது, இதனி னன்றிது, இதனிற் றீதிது, இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனி னிளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவனி னிலனிவன், இவனி னுடையனிவன், இதனி னாறுமிது, இதனிற் பல இவை, இதனிற் சில இவை எனவும்; அச்சம் கள்ளரி னஞ்சும் எனவும், ஆக்கம் - வாணிகத்தினாயினான் எனவும், தீர்தல்-ஊரிற் றீர்ந்தான் எனவும், பற்றுவிடுதல் - காமத்திற் பற்றுவிட்டான் எனவும் வரும். 39அச்சமுதலிய நான்கு மொழித்து ஒழிந்த இருபத்து நான்கும் ஒத்த பண்பு வேறுபாடு பற்றிப் பொரூஉப்பொருள் விரித்தவாறு. அன்னபிறவுமென்றதனான், அவனி னளிய னிவன், அதனிற் சேய்த்திது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான் என்பன போல்வன கொள்க. பல வாய்பாட்டொடு வழக்கின்கட் பயின்று வருதலுடை மையாற் பொரூஉப் பொருள் இதற்குச் சிறப்புடைத்தாகலின், பெரும்பான்மையும் அதனையே விரித்தார். (17) 79. ஆறா குவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவெனும் மன்ன கிளவிக் கிழமைத் ததுவே. இதன் பொருள் : அதுவெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஆறாவதாம். அது உடையதாய் நிற்குந் தன்னானும் பிறிதொன்றானும் இதனதிதுவென்பதுபட நிற்குங் கிளவியிற் றோன்றுங் கிழமையைப் பொருளாக வுடைத்து என்றவாறு. எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின்கிழமையுமென இரண்டென்றுங் கூறியவாறாம். தன்னென்றது தன்னோ டொற்றுமையுடைய பொருளை; பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை. அஃதேல், தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்தென்னாது இதனதிது வெனு மன்ன கிளவிக் கிழமைத்தென்ற தென்னை யெனின்:- பொருட் கிழமையும், பண்புக்கிழமையும், தொழிற் கிழமையும் அவை போல்வனவுமெனக் கிழமைதாம் பல, 40அவற்று ளொன்று சுட்டாது இதனதிது வென்னுஞ் சொல்லாற் றோன்றும் கிழமைமாத்திரம் சுட்டுமென்றற்கு ‘இதனதிது வெனுமன்ன கிளவிக் கிழமைத்து’ என்றார். இதன விவையென்னும் பன்மையுருபுத் தொடரு மடங்குதற்கு ‘அன்ன கிளவி’யென்றார். ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறு பல குழீஇய தற்கிழ மையும் ஒன்றியற்கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாய தற்கிழமையு மெனத் தற்கிழமை ஐந்து வகைப்படும். பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையு மெனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். அவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (18) 80. இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையி னென்றா கருவியிற் றுணையிற் கலத்திற் முதலி னொருவழி யுறுப்பிற் குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற் றிரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி யாறன் பால வென்மனார் புலவர். இதன் பொருள் : இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாகச் சொல்லப் பட்டனவும் திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமாகிய மேற் கூறப்பட்ட கிழமைப் பொருட்கட் டோன்றுஞ் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைத் திறத்தனவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமென்றாரேனும், திரிந்து வேறு படுதல் அன்ன பிறவுமென்றதனான் தழுவப்படுவனவற்றுள் ஒரு சாரன வற்றிற்கே கொள்க. உதாரணம்: எள்ளது குப்பை, படையது குழாம் என்பன குழூஉக் கிழமை; அவை முறையானே ஒன்று பல குழீஇயதும் வேறு பல குழீஇயதுமாம். சாத்தனதியற்கை, நிலத்ததகலம் என்பன இயற்கைக் கிழமை. சாத்தனது நிலைமை, சாத்தனதில்லாமை என்பன நிலைக் கிழமை. 41இவை யொன்றியற் கிழமை. யானையது கோடு, புலி யதுகிர் என்பன உறுப்பின்கிழமை; உறுப்பாவது பொருளின் ஏகதேசமென்ப தறிவித்தற்கு ஒருவழி யுறுப்பென்றார். சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செயற்கைக் கிழமை. அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக் கிழமை; முதுமை யென்பது பிறிதொரு காரணம் பற்றாது காலம் பற்றி ஒரு தலையாக அப்பொருட்கட் டோன்றும் பருவமாகலின் செயற்கையு ளடக்காது வேறு கூறினார். சாத்தனது தொழில், சாத்தனது செலவு என்பன வினைக்கிழமை. இவை மெய்திரிந்தாய தற்கிழமை. சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் என்பன உடைமைக் கிழமை. மறியது தாய், மறியது தந்தை என்பன முறைமைக்கிழமை. இசையது கருவி, வனைகலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை. அவனது துணை, அவனதிணங்கு என்பன துணைக்கிழமை. நிலத்த தொற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக்கிழமை. ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற்கிழமை. கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல் என்பன செய்யுட்கிழமை; தெரிந்து மொழியாற் செய்யப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தியாயின. இவை பொருட்பிறிதின்கிழமை. முருகனது குறிஞ்சி நிலம், வெள்ளிய தாட்சி என்பன கிழமைக் கிழமை. காட்டதியானை, யானையது காடு என்பன வாழ்ச்சிக் கிழமை. அவற்றுள் முருகனது குறிஞ்சிநிலம், யானையது காடு என்பன நிலப்பிறிதின் கிழமை. காட்டதி யானை என்பது பொருட்பிறிதின் கிழமை. 42ஏனையது காலப்பிறிதின் கிழமை. திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவு மென்றதனான், எட்சாந்து, கோட்டு நூறு; சாத்தனதொப்பு, தொகையதுவிரி, பொருளது கேடு, சொல்லது பொருள் என்னுந் தொடக்கத்தன கொள்க. அவற்றுள் எட்சாந்து, கோட்டு நூறு என்பன முதலாயின முழுவதூஉந் திரிதலின், வேறு கூறினார். மேற்சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின்கிழமை யென்பன வற்றை விரித்தவாறு. (19) 81. ஏழா குவதே கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே. இதன் பொருள் : கண்ணெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஏழாவதாம். அது வினைசெய்யா நிற்றலாகிய இடத்தின்கண்ணும், நிலமாகிய இடத்தின்கண்ணும், காலமாகிய இடத்தின்கண்ணுமென அம்மூவகைக் குறிப்பின்கண்ணுந் தோன்றும் என்றவாறு. எனவே, ஏழாவது இடப்பொருண்மைத் தென்றவாறாம். குறிப்பிற் றோன்றுமது என்றது அவற்றை யிடமாகக் குறித்தவழி அவ்வேற்றுமை தோன்றுமென்றவாறு. எனவே, இடமாகக் குறிக்கப்படாதவழி அப்பெயர்க்கண் வேற்றுமை தோன்றா தென்பதாம். தன்னின முடித்த லென்பதனான் ஏனை 43வேற்றுமைச் சொற்களும் அவ்வப்பொருட்கட் குறிப்பில்வழி அவ்வப்பெயர்க் கண் வாராமை கொள்க. உதாரணம்: தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கணிருந் தான், கூதிர்க்கண் வந்தான் என வரும். (20) 82. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ வன்ன பிறவு மதன்பால வென்மனார். இதன் பொருள் : கண் முதலாக இடமீறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பது பொருளும் அவைபோல்வன பிறவும் ஏழாவதன் றிறத்தன என்றவாறு. 44கண்ணென்னும் பொருளாவது ‘கண்ணின்று கூறுத லாற்றானவ னாயின்’ (கலி. 37) எனவும், ‘கண்ணகன் ஞாலம்’ எனவும், கண் ணென்னு மிடைச்சொல்லா னுணர்த்தப்படும் இடப் பொருண்மை. தேவகை யென்பது திசைக் கூறு. கண்கால் புறமகமுள் ளென்பன முதலா யினவற்றது பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. கண்ணின்று சொல்லியானை என் கண்ணின்றிவை சொல்லற் பாலையல்லை என்றும், ஊர்க்காற் செய்யை ஊர்க்கட் செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க் கண்மரம் என்றும், எயிலகத்துப் புக்கானை எயிற்கட்புக்கான் என்றும், இல்லுளிருந்தானை இற்கணிருந் தான் என்றும், அரசனுழை யிருந் தானை அரசன்கணிருந்தான் என்றும், ஆலின் கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கட்கிடந்தது என்றும், மரத்தின்மேலிருந்த குரங்கை மரத்தின்கணிருந்தது என்றும், ஏர்ப்பின் சென்றானை ஏர்க்கட் சென்றான் என்றும், காட்டுச் சாரோடுவதனைக் காட்டின் கணோடும் என்றும், உறையூர்க்கயனின்ற சிராப்பள்ளிக் குன்றை உறையூர்க்கட்குன்று என்றும், எயிற்புடை நின்றாரை எயிற்கண் நின்றார் என்றும், வடபால் வேங்கடம் தென்பாற்குமரி என்பன வற்றை வடக்கண் வேங்கடம் தெற்கட்குமரி என்றும், புலிமுன் பட்டானைப் புலிக்கட்பட்டான் என்றும், நூலினிடையுங் கடையுந் தலையு நின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும், கைவலத் துள்ளதனைக் கைக்கணுள்ளது என்றும், தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது என்றும் அவ் விடப் பொருள்பற்றி ஏழாம்வேற்றுமை வந்தவாறு கண்டு கொள்க. எனாஅவென்பது எண்ணிடைச்சொல். கண்முதலாயினவெல்லாம் உருபென்றாரால் உரை யாசிரிய ரெனின், உருபாயின், ஏழாவதற்குக் கண்ணென்பது உருபாதல் மேலே பெறப்பட்டமையாற் பெயர்த்துங் கண்கா லென்றல் கூறியது கூறிற்றாமாகலானும், ஊர்ப்புறத்திருந்தான், ஊரகத்திருந்தான், கைவலத்துள்ளது கொடுக்கும் எனப் புறம் அகம் வலமென்பன வற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணங் காட்டினமை யானும், அவர்க்கது கருத்தன்றென்க. உருபல்லவேல், என்னுழை, என்முன் என நிலைமொழி உருபிற்கோதிய செய்கை பெற்றவா றென்னை யெனின்:- ‘அதற் பொருட்டாகலின்’ (சொல். 76) எனவும், ‘தம்முடைய தண்ணளியுந் தாமும்’ எனவும் உருபின் பொருள் பட வரும் பிறமொழி வந்துழியும் நிலைமொழி அச் செய்கை பெற்று நிற்ற லின், அச் செய்கை உருபுபுணர்ச்சிக்கே யென்னும் யாப்புறவின் றென்க. அன்னபிறவு மென்றதனான், பொருட்கண் உணர்வு, என்கணன்புடையன், மலர்க்கணாற்றம், ஆகாயத்துக்கட் பருந்து என்னுந் தொடக்கத்தன கொள்க. (21) 83. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை யீற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்குமு மெல்லாச் சொல்லு முரிய வென்ப: இதன் பொருள் : வேற்றுமைத்தொகையை விரிக்கு மிடத்து, வேற்று மையே யன்றி, அன்மொழித்தொகையை விரிப்புழிப் பல்லாற்றான் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச் சொல்லும் விரிக்கப்படும் என்றவாறு. உருபுதொகப் பொருணிற்றலின், வேற்றுமைத்தொகையை வேற்றுமைப் பொருளென்றார். தொகையை வேற்றுமைப் பொரு ளென்றும் பொருளென்றும் யாண்டுமாள்ப. 45அன்மொழித்தொகை பண்புத்தொகை முதலாகிய தொகை இறுதி நின்றியறலின், ‘ஈற்றுநின் றியலுந்தொகை’ யென்றார். தாழ்குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன் மொழித் தொகைகளை விரிப்புழி, தாழ்குழலை யுடையாள், பொற்றொடியை யணிந்தாள், மண்ணாகிய காரணத்தா னியன்றது என வரும் உடைமையும், அணிதலும், இயறலும், கருங்குழற் பேதை. பொற்றொடி யரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகையை விரிப்புழியும் கருங்குழலையுடைய பேதை, பொற்றொடியை யணிந்த அரிவை, மண்ணானியன்ற குடம் என வந்தவாறு கண்டுகொள்க. பொருள் புணர்ந்திசைக்கு மெனவே, இருதொகைக் கண்ணும் ஒரு வாய்பாட்டா னன்றிப் பொருள் சிதையாம லுணர்த்துதற்கேற்ற வாய்பா டெல்லாவற்றானும் வருமென்ப தாம். அவ்வாறாதல் மேற்காட்டப்பட்டனவற்றுட் கண்டு கொள்க. அன்மொழித் தொகையிற் சொற்பெய்து விரித்தல் யாண்டுப் பெற்றாமெனின், அதுவும் அநுவாதமுகத்தான் ஈண்டே பெற்றா மென்க. பெறவே, இரண்டு தொகையும் விரிப்புழி வரும் வேறுபாடு கூறியவாறாம். இதனை ‘வேற்றுமைத் தொகையே யுவமைத்தொகையே’ (சொல். 412) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின், அதுவு முறையாயினும், இனி வருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத் தொகை விரிபற்றிய மயக்க முணர்த்துதலான், ஆண்டுப்படு முறைமை யுணர்த்துதல் ஈண்டும் இயை புடைத்தென்க. உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து, ஆசிரியர் மத விகற்பங்கூறித் தம்மத மிது வென்பது போதர ஒன்றாக வுரைப்பாரு முளரென்றார். இரண்டாய் ஒன்றாயவழிப் பிறிதுரையின்மையின், உரையாசிரியர் கருத்து இதுவேயாம்.(22) இரண்டாவது - வேற்றுமையியல் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. இடையீடு - இடையிலிடுவது; தடை. இடையீடின்றி - கிளவி யாக்கத்தின் பின் வேறிலக்கணமோதாது என்க. 2. பொது இலக்கணமாத லொப்புமையான் என்றது. வேற்றுமை இலக்கணமும் பொதுவிலக்கண மாதலாகிய ஒப்புமையுடைமையான் என்றபடி. ஒப்புமை - ஒத்ததன்மை. அஃது ஈண்டு இயைபைக் காட்டி நின்றது. எதனோடு ஒத்த தன்மையெனின்? கிளவியாக்கத்தோ டொத்த தன்மை என்க. கிளவியாக்கம் நான்கு சொற்கும் பொதுவிலக்கண முணர்த்திற்று. இதுவும் அதுபோலவே பொதுவிலக்கண முணர்த்தலின். அதன் பின் வைத்தார் என்பது கருத்து. வேற்றுமை யிலக்கணமும் பொது விலக்கணமாதலை விளக்குவாராயே; வேற்றுமையாவன பெயரும் ஓர் இடைச் சொல்லுமா கலின் அவற்றிலக்கணமும் பொது விலக்கணமே யாமென்றார். வேற்றுமையாவன வெல்லாம் பெயரும் அப்பெயரேற்று வரும் ஓரிடைச் சொல்லுமே யாதலின் பெயர்ச் சொல் இடைச் சொல் என்னும் இரண்டற்கும் பொதுவிலக்கணங் கூறுவதே வேற்றுமை யியலும் என்பது கருத்தாயிற்று. பெயரும் என்பது பகுத்துக் கொண்டமை யானே எழு வாயும் அதனுளடங்கும். பெயரின் திரிபே விளியாதலின் அதுவும் அதனுளடங்கும் என்க. பன்மைபற்றிக் கூறினாரெனினு மமையும் `வேற்றுமையாவன பெயரும் ஓரிடைச் சொல்லுமே யாகலின்' என்றது உருபும் உருபேற்றதுவும் வேற்றுமை என்றபடி. 3. யாப்பு - பொருத்தம்; நியமம். 4. இச்சூத்திர உரைக்கண் இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்னும் மூவரும் பயனிலைகோடலையும் பெயர்க்கு இலக்கணமாகக் கூறல் எவ்வாறு பொருந்தும்? எழுவாயுரு பேற்ற பெயர் ஏனை வேற்றுமை உருபுகளை ஏற்காது. ஆதலால் எழுவாயுருபேற்ற பெயரும் வேறு. ஏற்காத பெயரும் வேறு என்க. மயிலைநாதரும் நன்னூலுரையுள் (பெய - 39) பெயர் வேற்றுமையும் ஏனையுருபுகளை ஏற்குமால் அஃதொழித்ததென்னையோ வெனின்? பெயர் எழுவாயுருபாவது தன் பயனிலைதோன்ற நின்றகாலையன்றே. ஆண்டுப் பிறவுருபுகளை ஏலாது. ஏற்பின் தன்பொருண்மையும். ஏற்கும் உருபின் பொருண் மையும் ஒருங்குடைத்தாதல் வேண்டும். அதனாற் பயனிலைகொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்குமெனக் கொள்க எனக் கூறல் காண்க. சங்கரநமச்சிவாயரும் இவ்வாறே கூறுவர். 5. இவ்வோத்துப் பெயரிலக்கணம் நுதலி எடுத்துக்கொள்ளப்பட்ட தாயின் பெயரிலக்கணம் முன்னோதிப் பின் வேற்றுமையிலக்கணமோதிப் பின்னும் பெயரிலக்கணமே ஓதிப் பெயரியலென ஓரியலாய் முடித்தல் வேண்டும். அவ்வாறன்றி, வேற்றுமையிலக்கணமோதி அவ்வேற்றுமை இலக்கணமோதுமுகத்தான் உருபேற்றலும் பயனிலைகோடலும் பெயருக்கிலக்கண மென்பது உய்த்துணர வைத்துப், பின்னும் வேற்றுமையிலக்கணமும் அதன் மயக்கமும் விளியிலக்கணமும் உணர்த்தி அதன் பின் பெயரியலென வேறோரோத்திற்குப் பெயர் கொடுத்தமையானும்... இவ்வோத்துப் பெயரிலக்கண நுதலி எடுத்துக் கொள்ளப்பட்டதன்று என்க. 6. உருபுகள் தம்மையேற்ற பெயர்ச்சொற்களின் பொருளை வேற்றுமைப் படுத்து உணர்த்தலின் வேற்றுமை என்று பெயர் பெற்றன. அங்ஙனமே பெயர் வேற்றுமையும் (எழுவாயும்) தன்பொருளை மாத்திரம் உணர்த்தி. தன்னைச் செயப்படுபொருள் முதலியவற்றினின்றும் வேறுபடுத்தலின் தானும் வேற்றுமையாயிற்று. உதாரணமாக - கந்தன் என்ற பெயர்ச்சொல் தான் எழுவாய்ப்பட்டு நிற்குங்கால், ஐ முதலிய உருபுகளை ஏற்று அவற்றால் செயப்படுபொருள் முதலியவாக வேறுபடுக்கப்படாமல் தன்பொருளாகிய கந்தனென்ற பொருளை மாத்திரம் உணர்த்தித் தன்னை அவற்றினின்றும் வேறுபடுத்திக் காண்பித்தலால் தானும் வேற்றுமையா யிற்று என்க. மயிலை நாதரும் நன்னூலுரையுள் (பெய-34) `முதலாவது' சாத்தன் என அப்பெயர் தான் தன்பொருண்மையிற் றிரிபின்றி ஏனைய வற்றின் வேறுபடுத்தது என்பர். 7. பன்மைபற்றிய வழக்கென்றது: வேற்றுமைசெய்தல் எழுவாய்க் கின்றேனும். மற்றவையெல்லாம் வேற்றுமைசெய்தலாகிய பன்மை பற்றி வேற்றுமை என்று பெயர்கொடுக்கப்பட்டமையை. பன்மை பற்றிப் பெயர்கொடுத்தற்கு விதி கிளவியாக்கம் 49ஆம் சூத்திரத்துள் ஓதப்பட்டது; ஆண்டுக் காண்க. கட்டுரைச் சுவை என்றது - அச்சூத்திரத் தொடரைச் சுவைபடச்செய்து நிற்றலை. 8. பிறர்மதமென்றது; வடநூலுள் ஒருவர் மதத்தை. பாணினி தொல்காப்பியருக்குப் பிந்தியவரென்று ஆராய்ச்சிக்காரர் கூறலின். 9. பெயரும் ஐயும்ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் உண்ணும் என விரியும் பலபெயர் உம்மைப் பொருள்படத் தொக்குநிற்றலின் பலபெயர் உம்மைத் தொகை யென்றார். 10. விளி என்னும் ஈற்ற என்பது பெயர் முதலியவற்றை விசேடித்து வருதலால் அது விசேடணம். பெயர் முதலிய விசேடியமென்க. பிரித்துக்கூறிய தென்றது அவற்றோடொருங் கெண்ணாது அடையாகக் கூறியதை. விசேடணம் என்பது வடமொழி. அதற்குப் பதிலான தமிழ்ச் சொல் அடை என்பது. 11. பிறிதொன்றனோடு தொகாது என்றது; முடிக்குஞ்சொல்லோடு தொகாமையை. தொகாமை - சேராமை. முடிக்குஞ்சொல்லோடு தொகின் அது எழுவாய்த் தொடரெனப்படும். வேற்றுமை என்றது ஈண்டு உருபை. எனவே பெயர் மாத்திரையாய் நிற்றலே முதல் வேற்றுமைக்கு உருபு என்றபடி, `எழுவா யுருபு திரிபில் பெயரே' என்றார் நன்னூலாரும். `இச் சூத்திரத்தும், வருஞ் சூத்திரத்தும் முதல் வேற்றுமைக்குப் பொருள் கருத்தா என்பது கூறப்படவில்லை. ஆதலால் உரைகாரர் இச் சூத்திரத்துக்குக் கூறும் பொருள் ஏற்புடைத்தன்று' என்று சிலர் கூறுவர். ஆயின் வருஞ்சூத்திரத்துப் பெயர்ப்பயனிலையே என்று கூறுவதை நோக்கும்போது முதல் வேற்றுமைக்குப் பொருள் கருத்தா முதலிய வென்பது கூறப்பட்டதே யாம். எங்ஙனமெனில் பெயர் பயனிலை கொள்ளுமெனவே யாகிய வினைபயனிலைக்குத்தான் கருத்தாவாக நிற்குமென்பது பெறப்படுமாதலின், அங்ஙனேல் மற்றைய வேற்றுமை களுக்குப்போல இதற்கும் பொருளை வெளிப்படையாகக் கூறாத தென்னையெனின், மற்றைய வேற்றுமைகளுக்குருபுகளுண்மையின் அவ்வுருபுகளைக் கூறி அவற்றின் பொருளையும் அவ்வவ் வேற்றுமை கூறும்வழிக் கூறினார். இது அன்னதோர் உருபைப் பெறாது பயனிலை கொள்ளு முகத்தானேயே தன்பொருளை உணர நிற்றலின் அம்முகத் தானே கூறினாரென்பது. ஏனைய வேற்றுமைகளின் பொருள், உரு பாலும் பயனிலையாலு மறியப்படும். இதன் பொருள் பயனிலை கொண்டே உணரப்படுமென்க. இதுபற்றியே நன்னூலுரையுள் (பெய-38) சங்கரநமச்சிவாயரும் "எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும்" என்னுஞ் சூத்திரத்து இதன் பயனிலையும் உடன் கூறாது ஈண்டே கூறிய தென்னையெனின் அவிகாரியாய்நின்ற பெயர் இப்பயனிலைகளை அவாவிய காலத்தன்றி அவிகாரியினின்றும் விகாரியாகத் தன்னைத் தானே வேற்றுமை செய்தல் தோன்றாமையி னென்க. தன்னைத்தானே வேற்றுமைசெய்தல். நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மே லுயர்த்தி நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் என்பதனானும் உணர்க. இரண்டாவது முதலிய வேற்றுமைக்கு உருபும் பொருளும் கூறிப் போந்து பயனிலையும் கூறினார். இதற்கு உருபும் பயனிலையும் கூறிப் பொருள் கூறாதது என்னையெனின் `எழுவா யுருபு திரிபில் பெயரே' என்ற துணையானே அதன் பொருளும் திரிபில் பெயர்ப்பொருளே யென்பது தானேபோதரு மென்க. அஃதாவது `அவிகாரியாய் நின்ற தன்னைத்தானே விகாரியாக வேற்றுமை செய்தல்' எனக் கூறுதல் காண்க. இனிச் சிலர் `எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' என்பதற்கு `வேற்றுமைப்பெயர்' எனப் பாடங்கொண்டு எழுவாயென்பதற்கு வாக்கியத்தின் முதற்கண் நிற்பது (வினைமுதல்) என்றால். கருத்தா வென்றாதல் பொருள்கொள்ளின் பெயராகியவேற்றுமை, வாக்கியத்தின் முதற்கட்டோன்று நிலையுடையது என்றாயினும் பெயர் வேற்றுமை கருத்தாப் பொருளில் தோன்றுநிலையுடையது என்றாயினும் பொருள் கொண்டுவிடலாம் என்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது சூத்திரப் போக்கிற்குப் பொருத்தமின்மையொடு சூத்திரமும் இசையிற் பிறழு கின்றது. இசையிற் பிறழுமாற்றைச் செவி கருவியாக உணர்ந்து கொள்க. அன்றியும், ஆசிரியர் வேற்றுமைகூறுங்கால் `அவைதாம் பெயர் - ஐ - ஒடு - கு - இன் - அது - கண் - விளி என்னுமீற்ற' என்று முதற்கண்ணதாகிய பெயரை உருபுகளோடெண்ணி விட்டமை யானே. பெயர் என்னும் சொல்லும் ஓர் உருபோ என்று மாணாக்கர்க்கையம் நிகழுமாதலின் அதனை நீக்கற்கும். வடமொழியுள் எழுவாய்க்கு உருபு இருத்தல் போலத் தமிழ்மொழியுள் எழுவாய்க்கு உருபு இல்லை என்பதை உணர்த்தவுமே `எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே' என்று கூறினாராதலின் அக்கருத்துக்கு மாறாக இவ்வாறு வலிந்து பொருள் கோடல் பொருந்தாமென்க. அன்றியும் `இரண்டாகுவதே ஐ எனப் பெயரிய வேற்றுமைக்கிளவி' என்றற் றொடக்கமாக ஏனையவேற்றுமை களுக்குக் கூறியது போலவே, இதற்கும் குறியீடும் உருபும் கூறவேண்டு மாதலின் எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே என்று கூறினாரதலானும், எழுவாய்வேற்றுமை என்பதற்கு முதல்வேற்றுமை என்று பொருள்கோடல் பொருத்தமாம். நச்சினார்க்கினியரும் `மேல் இரண்டாவது மூன்றாவது என்று ஆளுமிடத்து இதனை முதல் வேற்றுமை என்றே ஆளவேண்டு மாதலின் எழுவாய் என்றார்' என்று கூறுதலும் ஈண்டு நோக்கத்தக்கது. நச்சினார்க்கினியர் வினை முதலாகிய எழுவாய் என்று கூறுதலின் எழுவாயென்பதற்கு வினை முதல் என்று பொருள் கூறலும் அவர்க்குக் கருத்தெனின், அற்றன்று; எழுவாயே வினைமுதலாகியும் நிற்றல்பற்றி அங்ஙனம் கூறினாரென்க. அதுவே அவர்க்குக் கருத்தாதல் "இதனை (எழுவாயை) முற்கூறிய தென்னை யெனின்? சாத்தன் குடந்தைக் கையால் வனைந்து கொற்றனுக்குக் கொடுத்தான் என வினைமுதல்நின்று ஏனையவற்றை நிகழ்த்த வேண்டுதலின்" என்று கூறும் வாக்கியத்தான் இனிதுணரப்படும். வினைமுதல் என்பது வினைமுதலாய் என்றும் பாடமிருக்கலாம். சங்கரநமச்சிவாயரும், "இதனை முதல்வேற்றுமை என்றதென்னை எனின், பெயராயே நிற்றலானும் வினை முதலாய் நடத்தலானும்" எனக் கூறுதல் காண்க. சூத்திரத்துக்குப் பொருள் கூறுங்காலும் எழுவாய் வேற்றுமை - முதல் வேற்றுமை என்று கூறியதும் ஈண்டு நோக்கத்தக்கது. பெயர் என்று கூறியமையானும் பெயரின் விகாரம் விளி என்று கூறியமையானும் முதல் வேற்றுமையின் உருவம் உணர்த்தல் வேண்டுவ தவசியமன்றெனின்? யாம் முன்னர்க்கூறிய காரணங் களோடு உய்த்துணர்ந்திடர்ப்படாமை காரணமாகவும் ஆசிரியர் முதல் வேற்றுமையின் உருவத்தைக் கூறினாரென்றலே பொருத்தமாம். அன்றியும், முதல் வேற்றுமைக்குக் கருத்தா மாத்திரம் பொருளன்று. அடுத்து வரும் `பொருண்மை சுட்டன்' முதலிய ஆறும் பொருளாம். அங்ஙனமாதலை இளம்பூரணருரை நோக்கியுந் தெளிக. 12. பொருண்மை என்றது உண்மையை. உண்மை உளதாந்தன்மை. பயனிலை - பொருள் நிற்பது. அத்தொடர் மொழிக்கு முடிக்குஞ் சொல்லின் பொருள் பயனாகலின் என்றது. சாத்தன் உண்டான் என்புழி, சாத்தன் என்னும் நிலை மொழி உண்டானென்னும் முடிக்குஞ் சொல் லோடு தொடர்ந்த வழியே அத் தொடர்மொழிப்பொருள் இஃது என்பது அறியப்படு மென்பது முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார் தொடர் மொழிப் பொருள் அதன் கண்ணதாகலின் என்று பிறாண்டும் கூறல் காண்க. இலக்கணவிளக்க நூலாரும் முடிக்குஞ் சொற்பொருள் அத் தொடர்மொழிக்குப் பொருள் நிலையாகலின் பயனிலை என்றார் என்று பெயரியல் 39ஆம் சூத்திர உரையுள் கூறுதல் காண்க. 13. முடிக்கப்படுஞ் சொல்லாத லென்றது - தான் வேறிடத்துப் பயனிலை ஏற்று முடிக்கப்படுஞ் சொல்லாதலை, முடிக்குஞ்சொல் - பயனிலை, முடிக்கப்படுஞ் சொல் - எழுவாய், மாறும் - ஒழியும்; நீங்கும். 14. ஆண்டு என்பது - பெயரையும் எழுவாயையும் சுட்டிநின்றது. பயனிலையும் என்றது - பெயர்ப் பயனிலையாயும் நிற்றலை. அன்றியனைத்தும் என்றது அவ்வனைத்துமென்றபடி. 15. எல்லாவற்றிற்கு முண்மையின் என்றது - எல்லாப் பெயருக்கும் எல்லா எழுவாய்க்கு முண்மையின் என்றபடி. உருபேற்றற்கேற்ற தன்மையும் பயனிலையாதலும் எல்லாப் பெயருக்குமுரிய இலக்கணம். பயனிலை கோடற்கேற்ற தன்மை எழுவாயாய் நிற்கும் எல்லாப் பெயருக்கு முரிய இலக்கணம். அகரச் சுட்டு `கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநதவும்' என்னும் எழுத்ததிகாரப் புறனடைச் சூத்திர விதியால் அன்றி எனத் திரிந்து நின்றது. பெயர் என்றது ஈண்டு எழுவாயை. வருஞ் சூத்திரத்துப் `பெயரென்றது எழுவாயை' என்று சேனாவரையரும் கூறுதல் காண்க. 16. உம்மையினாலே வினையினாகிய தொகையும் கொள்ளப்படுதலின் அத் தொகைகளிரண்டையும் `அவ்வுமுரிய' என்றது சுட்டி வருதலின் வினையினாகிய தொகையும் எழுவாய் வேற்றுமையாவான் செல்லும். அதனை விலக்கி ஏற்புழிக் கோடலால் பெயரினாகிய தொகையே கொள்க என்பது `அவ்வு முரிய.... கொள்ளப்படும்' என்னுந் தொடரின் கருத்தாகும். வினைத் தொகைக்கு நிலைமொழி வினையன்று பெயரே என்பது சேனாவரையர் கருத்து. ஆசிரியர்க்குமதுவே கருத்தாதல் `ஞகாரை யொற்றிய தொழிற் பெயர்' (எழு-புள்-1ஆம் சூ) எனக் கூறுமாற்றான் அறியப்படும். அதனை `வினையின் றொகுதி காலத்தி யலும்' என்னும் சூத்திர உரையுள் சேனாவரையர் கூறுமாற்றா னறிக. `எல்லாத் தொகையு மொருசொன் னடைய' என்பதற்கு எழுவாய் வேற்று மையாம் என்னும் கருத்துண்டாயின் அவை `எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' என்பதனால் எழுவாய் வேற்றுமையாகிப் பொருண்மை சுட்டலும் என்னுஞ் சூத்திரத்தினாலே பயனிலையும் கொண்டு முடியும். முடியவே `அவ்வுமுரியவப்பாலன' என்றது, கூறியது கூறிற்றாம். ஆதலால் அது பொருந்தாதென்பது கருத்து. இச்சூத்திரத்துப் `பெயரினாகிய தொகையுமா ருளவே' என்பதை வேறு தொடராக வைத்தற்குக் காரணம் தொகையிலக்கணம் பெறவைத்தற்கே என்று சேனாவரையர் கூறினர். அங்ஙனம் கூறினமையானே தொகையிலக் கணமும் இச் சூத்திரப் பொருளாகக் கூறப்பட்டதென்பது கருத்தன்று. பெயரினாகிய தொகையும் எழுவாய் வேற்றுமையாமெனின் பெயரேயன்றித் தொகையும் எழுவாய் வேற்றுமையாமென்பதே பெறப்படுமன்றித் தொகையாவது இது என்பதும் அது இரண்டென் பதும் பெறப்படாதாம். அதுபற்றிப் பெயரினாகிய தொகை யுமாருளவே என வேறு தொடராக வைத்து உம்மையினாலே பெயரும் வினையும் தொக்க தொகையையும் தழுவித் தொகையிலக்கணம் பெற வைத்தா ரென்பதே கருத்தாம். உம்மையினால் தழுவுவதெற்றுக்கு? பெயரினாகிய தொகையும் வினையினாகிய தொகையும் உள என்று கூறவமையு மெனின்? அங்ஙனம் கூறிற் பெயரும் வினையும் தொக்கதும் எழுவாய் வேற்றுமையாதலும் பயனிலை கோடலுமாகிய இரண்டிலக்கணமு மெய்துவான் செல்லும். அதனையொழித்தற்காகவும் சுருங்கிய வாய் பாட்டாற் கூறுதற்காகவும் உம்மையினாற்றழுவினா ரென்பது. எனவே உம்மையாற் றழுவியதே ஈண்டு அதன் பிரதான மின்மையைக் காட்டும் என்க. உம்மையாற்றழுவுங்காலும் அவையும் என்று சுட்டு இரு தொகை யையும் சுட்டும் என்பது கருதியே சேனாவரையர் ஏற்புழிக்கோடலால் பெயரினாகிய தொகையே ஈண்டு கொள்ளப்படுமென்றார். அங்ஙனேல் இதன்கண் வாக்கியபேதம் என்னும் குற்றம் வருமே எனின் வாராது; ஏனெனின்? பெயர் எழுவாயாய்ப் பயனிலை கோடலைத் தாங் கூறல் அதிகாரப்பட்ட மையினான் அவற்றோடு தொகைப் பெயர் எழுவாய்ப் பயனிலை கோடலையும் ஒருங்கு முடிக்கக் கருதிய ஆசிரியர், இயைபும் சுருக்கமும் நோக்கித் தொகையிலக்கணத்தையும் ஈண்டே பெறவைக்க விரும்பி, அதனை; அநுவதித்துக் கூறினாராகலான் என்பது. அன்றியும் அவ்வுமென்று சுட்டிக்கூறவே அத்தொடர்ப் பொருளும் இத்தொடர்ப் பொருளை நோக்கியே வந்தாயிற்று. அதனானும் அக்குற்றம் வராதென்க. எனவே இது `உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனாரவரல பிறவே, ஆயிருதிணையி னிசைக்குமன சொல்லே' என்புழியும் முதலிரண்டு தொடரையும் அநுவாதமாகக் கூறியதுபோல இதுவும் கூறப்பட்டதென்பது பெறப்படும். இங்கே வாக்கியபேதம் என்னுங் குற்றம் வருமென்று கருதியே சேனாவரையர் அதனை ஒழித்தற்காக, முதலாஞ் சூத்திரத்து முதலிருதொடரையும் ஆசிரியர் வேறுவைத்தது விளங்க வைத்தற்கு எனக் காரணங் கூறிப் பரிகரித்ததுபோல, உம்மையினாந் தொகை யிலக்கணம் பெறுவித்தற்காக வேறு தொடராக வைத்தார் எனக் காரணங் கூறி அக்குற்றத்தைப் பரிகரித்தார் என்க. இன்னும் சிலர் "இச்சூத்திரத்தில் சேனாவரையர் `உம்மையாற் பெயரொடு வினைவந்து தொக்க வினையினாகிய தொகையுமுள என்பதாம்' என்று கூறுகின்றனர். எழுவாய் வேற்றுமைபற்றிக் கூறுமிவ்விடத்தில் உம்மை யாற் பெயரும் வினையும் தொக்க தொகையும் உண்டு என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்; நிலங்கடந்தான் என்பதைத் தொகைச் சொல் என்று கருதி, அதற்குப் பிரமாணம் யாண்டுமின்மையின் உம்மைக்கு இவ் விடத்திற்கு ஏற்புடைத்தாகாத பொருளைக் கொண்டனர்" என்று சேனா வரையரை மறுக்கின்றனர். இங்கே தொகையுமாருளவே என்று பயனிலை கொடுத்து முடித்தமையினாலே தொகையும் என்றதிலுள்ள உம்மை ஏனைத்தொகையைத் தழுவுமேயன்றித் தனிப்பெயரைத் தழுவாது என்றுகொண்டே சேனாவரையர் அவ்வாறு பொருளு ரைத்தனர். பெயரேயன்றி `அவையும் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும் அப்பகுதிக்கண் உரிய' எனப் பின் வருமும்மை யையே எச்சவும்மையாகச் சேனாவரையர் கொண்டனர். பெயரும் பெயருமன்றிப் பெயரும் வினையும் சேர்ந்திசைக்கும் என்பது `பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப - வேற்றுமை உருபு நிலைபெறு வழியுந் - தோற்றம் வேண்டாத தொகுதிக் கண்ணும்' (எழு-புண-30) என்னுஞ் சூத்திரத்தால் நன்கு பெறப்படுதலினாலும் பெயரும் வினையும் தொக்கு வருதல் தமிழ் மொழிக்குச் சிறப்பாக உரியதோர் இலக்கணமாதலானும் தமிழுக்கே உரிய அச்சிறப்பு விதியை வடநூல் விதிகொண்டு தொகையன்றென்றேனையோர் கூறல் பொருந்தா தாகலானும் அதற்குப் பிரமாணம் யாண்டுமின்மையின் என்று அவர் கூறியது பொருந்தாது. இன்னும் பெயரினாகிய தொகையும் என்ற உம்மையினாலே வினையினாகிய தொகையுமென்று கொள்ளுங்கால் வினையும் வினையும் தொக்க தொகை என்று பொருள்படுமேயன்றி வினைபெயரொடு தொக்க தொகை `வினைத்தொகை' யென்று பொருள் படாமையானும் வினைத்தொகையின் முதனிலை பெயரென்பதே சேனாவரையர் கருத்தாகலானும், ஆசிரியர்க்கும் அதுவே கருத்தென்பது முன்னர்க் காட்டினாமாகலானும், சேனாவரையர் கருத்தே பொருத்தமாம். அங்ஙனேல் பெயரும் வினையும் தொக்க தொகையை வினையினாகிய தொகை என்று சேனாவரையர் கூறுவதும் பொருந்தாதேயெனின் நிலைமொழி பெயராய் நிற்ப அதனோடுவருமொழி பெயராய் வந்து பொருந்துவதே பெயரினாகிய தொகை எனப்படுதல் போலவே நிலை மொழி பெயராய் நிற்ப அதனோடு வினைவந்து பொருந்துவதே வினையினாகிய தொகை எனப்படும். ஆதலின் சேனாவரையர் கூறியதே பொருத்தமா மென்பது வினைச்சொல் நிலைமொழியாக நிற்குந் தொகை தமிழ் மொழியில் இல்லை என்பது சேனாவரையர் கருத்து. வினைத் தொகையில் வினை நிலைமொழியாக வருகின்ற தன்றோவெனின்? ஆண்டு வினை என்றது முதனிலைத் தொழிற் பெயரை என்பது சேனா வரையர்க்குக் கருத்தாதல் மேலேயுரைத் தாமாதலின் அது கடாவன் றென்க. 17. எழுவாய் - முதல் வேற்றுமை 18. எவ்வயின் - எவ்விடம்; என்றது. எல்லா இடமு மென்றதை; மூன்றி டமும் என்றபடி. இருநிலைமை என்றது வெளிப்பட்டு நிற்றலையும் வெளிப் படாது நிற்றலையும். அவ்வியலான் என்றது முன் சொன்ன அப் பயனிலை கோடலான் என்றபடி. 19. அவ்வாய் என்பது இடைச் சொல்லாதலின் உருபும் பயனிலையும் ஏலாது. என்னை? சாத்தன் அவ்வாய்ச் சென்றான் என்புழி அவ்வாய் என்பது ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வருதலின் பயனிலையும் ஏலாதென்க. சென்றான் என்பது சாத்தனுக்குப் பயனிலையாக வந்தது. நும்மின் திரிபாகிய நீயிர் என்னுஞ் செயற்கைப் பெயரை இயற்கைப் பெயராகக் கொண்டு உருபேலாதெனின், நீ என்பதன் திரிபாகிய நின் என்பதனையும் இயற்கைப் பெயராகக் கொண்டு பயனிலை கொள்ளா தென்று கூறல் வேண்டும். ஆதலின் செயற்கைப் பெயரை உருபேலாது என்றல் பொருந்தாது. நும்மை இயற்கைப் பெயராகக் கொள்ளாது நீயிர் என்பதை இயற்கைப் பெயராகக் கொள்ளினும் நீயிர் என்பது நும் எனத் திரிந்து உருபேற்றலின் ஆண்டும் உருபேலாதென்றல் பொருந்தாது. ஆகையால் இரு வழியானு முரையாசிரியர் கருத்துப் பொருந்தாமை அறிக. 20. எண்ணுப் பெயராய் வழங்குவதாவது - முதலாவது இரண்டாவது என வழங்குதலை. 21. வினைச்சொல்லிறுதி நிற்குமிடைச்சொல் என்றது - நடந்தான் என்புழி ஆன் என்னும் விகுதி யிடைச்சொல்லை. இஃது அச்சொற்குறுப்பாய் நின்றது. உருபிடைச் சொல் பெயருக் குறுப்பாகாது தாமென வேறுணரப் பட்டு நிற்குமென்றது; சாத்தனை என்புழிச் சாத்தன் என்னும் பெயருக்கு ஐ உறுப்பாகாது உருபென வேறுணரப்பட்டு நிற்றலை. வினைச் சொற் களில், விகுதி இடைச் சொற்கள் அவற்றிற் குறுப்பாய் நிற்கும். இவை யவை போலாகாது வேறாய் நிற்கு மென்பது கருத்து. 22. தொழினிலை யொட்டும் ஒன்று என்றது - வினையாலணையும் பெயரை. 23. பெயரென்றது ஈண்டுப் பெயர்களைக் குறியாது பொருள்களைக் குறித்து நின்றது. கிளவியாக்கம் 11ஆம் சூத்திரக் குறிப்பு நோக்குக. 24. தொழினிலை தொழிலாகிய நிலையுடையது. அது என்றது அன்மொழித் தொகையை, பெரும்பான்மை பற்றி என்றார்; சிறுபான்மை காலம் விளக்குவனவு முளவாதலின். அவை வினையாலணையும்பெயர். 25. பெயரிய என்பது பெயர் என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம். தம்மை உணர்த்துவனவு மென்றது - எழுத்தாகிய தம்மை உணர்த்து வனவு மென்றபடி. முதலென்றது - காரணத்தை. அவ்விரு முதலிற் றோன்றும் என்றது - வினைச் செயப்படு பொருளும் வினைக் குறிப்புச் செயப்படுபொருளும் ஆகிய அவ்விரு காரணத்தின்கண்ணும் தோன்றலை. செயப்படுபொருளும் வினைக்கு முதலாதல் பற்றிச் செயப் படுபொருளை முதல் என்றார். சூத்திர உரையுள் அஃது என்றது உருபை. 26. சோற்றை உண்டான் என்புழி ஐயுருபேற்ற சோறாகிய செயப்படு பொருள் உண்ணுதற்றொழில் நிகழ்தற்குத் தான் காரணமாயும் அத் தொழிற் பயனை உற்று அவ்வுருபிற்குப் பொருளாயும் நிற்றலின் முதலா தற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையே யாகலின் என்றார். அவையே என்றது வினைச் செயப்படுபொருளையும் குறிப்புச் செயப்படுபொருளையும். செயப்படுபொருள் காரணமாதலை வினையியல் 29ஆம் சூத்திரம் நோக்குக. குழை முதலாயினவற்றிற்கு அவ் விலக்கணமேலாமையினென்றது குழை முதலிய குறிப்புச் செயப்படு பொருள்களுக்கு, தொழிலுக்குக் காரணமாதல் ஏலாமையின் என்றபடி. பண்டு குழையையுடையன் என்புழி உடையன் என்பது உடையனா யிருந்தான் எனக் காலம் பெற்று நிற்குங்கால் குழையும் உடைமை யாக்கப்பட்டமை யாகிய தொழிற்பயனுற்றே நின்றமையிற் குறிப்பு வினையும் செயப்படு பொருளேயாம் என்பது. ஆதலின் அவையுந் தொழிற்குக் காரணமாதல் காண்க. 27. வினை, வினைக்குறிப்பு ஆகுபெயரென்றது வினையும் வினைக் குறிப்பும் அவற்றின் செயப்படு பொருளுக்கு ஆதலை. இச்சூத்திரத்துள் வரும் இரண்டாவது என்னும் பெயரும் பொருளும் ஐயுருபிற்கே உரியவாகலின் ஒரு பொருளையே நுதலி வந்ததாம். அதனால் ஒரு சூத்திரமாயிற்று. இங்ஙனம் வருவது வாக்கிய பேதமா காது. பெயரியல் 21ஆம் சூத்திரம் நோக்குக. ஐ இரண்டாவது என்பது மேலே பெறப்பட்டதாதலின் ஈண்டுக் கூறல் வேண்டாமெனின், தொல்லாசிரியர் குறியென்பதறிவித்தற்கு மீளவுங் கூறினார். பெற்றதன் பெயர்த்துரை நியமித்தற்கன்றி, மீளவும் ஒன்று அதனாற் பெறுதற்குமே யாதலின், விளியியல் 7ஆம் சூத்திர உரைநோக்குக. நிறுத்தான் - உடையான் வினையாலணையும் பெயர்; நிறுத்தல் - உடைமை தொழிற்பெயர். 28. செயப்படுபொருள் மூன்றென்றது - இயற்றப்படுவது முதலாக முற்கூறிய மூன்றினையும், புணரிய னிலையிடைப் பொருள் நிலைக்குதவா தென்றது - சாரியையாகாதென்றதை, குறைத்தல் - முன் இருந்ததிற் சுருக்குதலும், சிறிதிழக்கும்படி துணித்தலுமாம். சுருக்குதல் - செதுக்கிச் சுருக்குதல், செறல் - கடுங்கோபம். பொருள்பற்றிஓதல் - பொருள்குறித்து ஒதல். காப்பு முதலாயின பொருள் பற்றி ஓதப்பட்டதென்றது - காப்பு முதலாயினவற்றைச் சொற் பற்றிக் கூறாது காவல் முதலிய பொருள் பற்றிக் கூறியதை. சொற் பற்றிக் கூறல் - சொல்லாகிய தன்னை உணர்த் துதல் கருதிச் சொல்லல். அஃதாவது; கடி என் கிளவி தஞ்சக்கிளவி என்பனபோலக் கிளந்து ஓதல். காப்பென் கிளவி என்றோதாது காப்பு என வாளா ஓதுதலின் காப்பு முதலாயின பொருண்மேனின்றன். சார்பென் கிளவி (வேற்றுமை மயங் - 1) முதலியன பொருள்பற்றி ஓதப் பட்டன அல்லவெனின் அற்றன்று; ஆண்டுப் பொருட்கும் சொற்கு முள்ள ஒற்றுமைபற்றிச் சார்பு பொருளையே சார்பென் கிளவி என்றார். 29. முதல் - காரணம். இரண்டாம் வேற்றுமைச் சூத்திரக் குறிப்புக் காட்டப் பட்டது. கொடியொடு துவக்குண்டான் - கொடியாற் கட்டப்பட்டான். ஈண்டு கட்டுதற்குக் கொடி கருத்தா. கொடியாற் கட்டினான் என்புழிக் கொடி கருவியாகும். மேல் என்பது வேற்றுமையியல் 3ஆம் சூத்திர உரையைக் குறித்து நின்றது. அவற்றது என்றது வினைமுதலையும் கருவியையும், தோற்றுவாய் - தோற்றுமிடம். அத்தன்மை என்றமை யால், வினைக்கு முதலாதற் றன்மை யுடையது வினைமுதல்; வினை செய்தற்குக் கருவியாய் நிற்குமியல்பினது கருவி என்றபடி. கருவி, காரகக்கருவி (இயற்றுதற்கருவி) ஞாபகக்கருவி (அறிதற்கருவி) என இருவகைப்படும். காரகம் - இயற்றுவிப்பது. (துணையாய் நின்று தொழிலை இயற்றச் செய்வது.) ஞாபகம் - அறிவிப்பது (துணையாய் நின்று பொருளை அறியச் செய்வது) என்பர் நச்சினார்க்கினியர். பிறபொருள் - உடனிகழ்ச்சி; ஏது என்பன. 30. அது என்றது - உருபேற்கும் பெயர்ப் பொருளை. என்றது மண்ணா னியன்ற குடம் என்புழி உருபேற்ற மண் என்னும் பொருளை. இவ்வாறு பிறவு முணர்ந்து கொள்க. ஒப்பலொப்பு - இரும்பு. பொன்னுக்கு இரும்பு ஒப்பாகாமையின் ஒப்பலொப்பாயிற்று. 31. இன்னானேது வென்பது - இன்னும் ஆனும் ஒரு தொடரின்கண் ஏதுப் பொருளில் வருவது. இன் ஐந்தாம்வேற்றுமை உருபு. ஆன் மூன்றாம் வேற்றுமை உருபு. அதற்கு முயற்சியிற் பிறத்தலான் ஒலிநிலையாது என்பது உதாரணம். முயற்சியிற் பிறத்தல் என்பதில் இன் காரக ஏதுப் பொருளில் நின்றது; பிறத்தலை முயற்சி செய்விப்பதாகலின் சொல்லு வான் எழுத்தைப் பிறப்பித்தற்கு அவன் முயற்சி செய்தற் காரணம் என்றபடி. பிறத்தலான் ஒலி நிலையாதென்பது ஞாபக ஏது; ஒலியின் நிலையாமையைப் பிறத்தல் அறிவித்தலின், பிறப்பது எதுவோ அது நிலையாதாகலின் ஒலியின் நிலையாமையும் பிறத்தலால் அறியப்படும் என்றபடி. 32. தச்சன் செய்த சிறுமாவையம் என்புழி செய்யப்பட்டதற்குக் கருத்தா வையமாயவழி தச்சன் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவாம். வையம் செயப்படு பொருளாகியக்கால் தச்சன் முதலாம் வேற்றுமைக் கருத்தாவாகும். இவற்றை முறையே தச்சனால் வையம் செய்யப்பட்டது. வையத்தைத் தச்சன் செய்தான் என மாறிக் கூறிக்காண்க. தச்சன் செய்த சிறுமாவையம் என்பது மூன்றாம் வேற்றுமையாங்கால் தச்சனால் செய்யப்பட்ட சிறுமாவையம் என விரியும். ஈண்டுச் செய்த வென்னும் பெயரெச்சம் செயப்பாட்டு வினைப் பொருளில் நின்றது. தச்சன் செய்த சிறுமாவையம் என்பது `மூன்றாகுவதே வினை முதல் கருவி' என்பதில், வினை முதலுள் அடங்குதலானும் இச் சூத்திரத்தால் `அதனினியறல்' என்று பகுதிப்படுத்தல் வேண்டாமையானும் இன்னான் என்பதற்கு இதனான் என்று பொருள் கூறல் பொருந்தாமையின் கண்ணாற் கொத்தை எனச் சினை விகாரத்தை முதன்மேலேற்றிக் கூறுவது இன்னான் என்பதற்குப் பொருந்தாமையானும் அவ்வுரை பொருந்தாது. சிலர் இன்னான் என்பதற்கு இவ்வாறுள்ளவன் என்று பொருள் கொண்டு அதற்குதாரணமாகக் கண்ணாற் கொத்தை; காலால் முடவன் என்னுமிவற்றை உரையாசிரியர் கூறியது பொருத்தமானதே யென்கின்றனர். அங்ஙனமாயின் ஐம்பாலுமடங்குதற்கேற்ற ஒரு சொல்லாற் கூறாது ஒரு பாலாற் கூறுதல் சிறப்பாகுமா? 33. பொருள் வேற்றுமை யல்லது என்பதைப் பொருள் வேற்றுமை யானல்லது எனத் திருத்திக்கொள்க. வடநூலார் பொருள் வேறுபட்ட விடத்து வேற்றுமையை வேறாகக் கொள்வர். பொருள் வேறுபடாது உருபு வேறுபட்டால் ஒன்றாகவே கொள்வர் என்பது கருத்து. 34. பிற வாய்பாடென்றது, கொடுத்தான் என்பதன்றி, உரைத்தான் என்பது போல வருவனவற்றை; அவையுங் கொடைப் பொருளே, பிறபொரு ளென்றது வினையுடைமை முதலியவற்றை. 35. உபகாரமென்றது - கரும்பைக் காத்தற்கு உபகாரமாய்ச் செய்த வேலி என்பது. படுதல் - ஒரு பங்கிற் படுதல். 36. அப்பொருள் என்றது - அதுபோன்ற பொருளை; இவ்வாடையுமந் நூலானியன்றது என்புழி அந்நூலென்பது அதுபோன்ற நூல் என்னும் பொருளை உணர்த்திநின்றது. எனவே அந்நூலானியன்றதன்று என்றபடி. 37. ஏனைய இரண்டுமென்றது - எல்லையும் பொருவும். அவை இதனி னிற்றிது என்பதனாற் கொள்ளப்படும். எங்ஙனம் கொள்ளப்படு மெனின்? இதனின் இத்தன்மைத்து இது என்பதனான் எல்லைப் பொருளும்; இதனினும் இத்தன்மைத்து இது என்பதனான் உறழ் பொருவும். இதுபோல இத்தன்மைத்து இது என்பதனான் உவமப் பொருவும் ஆகிய பொருவுப் பொருளும் கொள்ளப்படும். 38. கருவூரின் கிழக்கு என்றதில் நீக்கப்பொருளை வைத்து உணர்த்துங்கால் கருவூரின் என்பது இதனின் எனவும். கிழக்கு (கிழக்குள்ளது) என்பது இற்று எனவும், மருவூர் என்பது இது எனவும் உணரப்படும். மருவூர் - வருவிக்கப்பட்டது. காக்கையிற் கரிது களம் பழம் என்பதைக் காக்கை யினும் கரிது என விரித்து உறழ் பொருவுக்கும், காக்கைபோலக் கரிது என விரித்து உவமப் பொருவுக்கும் உதாரணமாகக் கொள்க. 39. அச்சம் முதலிய நான்குமென்றது : அச்சம் - ஆக்கம் - தீர்தல் - பற்றுவிடுதல் என்பனவற்றை. பண்பு - குணம். அச்சமும் ஆக்கமும் ஏதுவும்; தீர்தலும் பற்று விடுதலும் நீக்கமும் பற்றி வந்தன. ஏனையவெல்லாம் பொருவு (ஒப்பு). 40. அவற்றுளொன்று சுட்டாது... சுட்டும் என்றது; இது பொருட் கிழமை இது பண்பின்கிழமை என்று அவற்றுள் ஒன்றைச் சுட்டாது இதனுடையது இது என்கிற சொல்லாற் பெறப்படுங் கிழமை (உரிமை) மாத்திரஞ் சுட்டி வருவது ஆறாம் வேற்றுமை என்றபடி. சாத்தனது ஆடை என்புழி ஆடை என்பது பொருளாதலின் அப்பொருளைச் சுட்டாது. அப் பொருள் சாத்தனுடையதென அவனுடைய பொருளென்னும் உரிமை மாத்திரங் குறித்துவரும் என அறிக. எனவே இதனுடையது இது என்னும் உரிமைமாத்திரங் காட்டுவதன்றிக் கிழமையின் பேதங் காட்டாது அப்பேதம் உணர்வோரால் இன்ன கிழமை என உணரப்படு மென்பதாம். 41. ஒன்றியற்கிழமை என்றது - பண்புக்கிழமையை. இது தொழிற்பண்பு குணப்பண்பு என இருவகைப்படும். சாத்தனது இயற்கை, நிலத்ததகலம் என்பன குணப்பண்பு. சாத்தனதுநிலைமை சாத்தனது இல்லாமை - தொழிற் பண்பு. செய்யுட்கிழமை எனினும் செய்தற்கிழமையெனினும் ஒக்கும். 42. ஏனையது என்றது - வெள்ளிய தாட்சியை. 43. வேற்றுமைச் சொல் என்றது உருபை. தட்டுப் புடைக்கண் வந்தான் என்பது வினைசெய்யிடத்தின்கண் வந்தது. ஏனையவை முறையே இடத்தின் கண்ணும் காலத்தின் கண்ணும் வந்தன. நிலம் - இடம். 44. கண் கால் முதலியவெல்லாம் இடவிசேடத்தைக் காட்டி வந்த இடைச் சொற்கள் என்பது சேனாவரையர் கருத்து. இவற்றை இடைச்சொலென் றாரேனும் பெயர்த்தன்மை யடைந்து நின்ற இடைச்சொற்கள் என்று கொள்க; ஏனெனின், இடவிசேடத்தையுணர்த்தலானும், சாரியை ஏற்ப தானும் என்க. கண்ணுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடமாகக் குறிக்கும். இவையே இடவிசேடமுணர்த்துங் கண் முதலியவற்றிற்கும் கண்ணுருபுக்கு முள்ள வேறுபாடாகும். ஊர்ப்புறத்திருந்தான் என்புழிப் புறம் என்பது உருபாயின் அத்துச்சாரியை பெறாது வரும்; இது போல்வன பெற்று வருதலின் கண்கால் முதலிய இவைகள் உருபன்று; பெயர்த்தன்மைப்பட்டு நின்ற தோரிடைச்சொல் என்பதாம். பெயர் சாரியை ஏற்றுவரும். உருபு ஏலாது என்றபடி. இதன் விரிவை இலக்கண விளக்கம் பெயரியல் 46ஆம் சூத்திர உரை நோக்கி உணர்க. அதற் பொருட்டு என்பதில் பொருட்டு என்பது நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு தம்முடைய என்புழி உடைய என்பது ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு. யாப்புறவு - நிச்சயம். ஏழு வேற்றுமைகளையும் வைத்த முறையைப்பற்றித் தெய்வச் சிலையார் கூறியவற்றை இங்கே தருகின்றாம். "யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழியல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன்வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இதுவெனக் குறிக்கவேண்டு தலின் செயப்படுபொருள் இரண்டாவதாயிற்று. அவ்வாறு அப் பொருளைச் செய்துமுடிக்குங்கால் அதற்காங்கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு, செய்துமுடித்த பொருளைத் தான் பயன் கோடலேயன்றிப் பிறர்க்குங் கொடுக்குமாதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவதாயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப் பொருள் நீங்கிநிற்பது ஐந்தாவதாயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனதென்று கிழமைசெய்தலின் அக்கிழமை ஆறாவதாயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும், காலமும் பொதுவாகிநிற்றலின் அவை ஏழாவதாயின." 45. அன்மொழித்தொகை இறுதி நின்றியறலின் என இயைக்க. இச்சூத்திரத் துக்குச் சேனாவரையர் உரைத்த உரையைச் சிவஞான முனிவர் மறுத்துள்ளார். சேனாவரையர் உரையே பொருத்தமென ஓராராய்ச்சி எழுதி யாம் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிப் படுத்தியுள்ளாம். அவ்வாராய்ச்சி இந்நூற்கு அனுபந்தமாகச் சேர்க்கப்படும். அதனுட் காண்க. வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்றாயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ (1) என்பது முதல் ‘அச்சக் கிளவிக்கு’ (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி ‘அன்னபிறவும்’ (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட ‘காப்பின் ஒப்பின்’ எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற் போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல்காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், ‘ யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்’ என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின் கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச் சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத் தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலைகளைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடையவேறொரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினை யுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர் களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர் களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சினார்க்கினியரும், “முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத் தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் ‘பொற்றொடி’ யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு “அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். ‘பொற்றொடி’ யென்பது அன்மொழித் தொகை யாவதன்றி ஆகுபெயராகா தெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெய ரொட்டென்பதற்கு ‘அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு’ எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி ‘பொற்றொடி’ என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, ‘இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது’ எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங் காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டு வரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகை யென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 197-202 மூன்றாவது வேற்றுமை மயங்கியல் 84. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. மேற்கூறப்பட்ட வேற்றுமை தம்முள் மயங்குமா றுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அம்மயக்கம் இருவகைப் படும், பொருண் மயக்கமும் உருபு மயக்கமுமென. பொருள் மயக்கமாவது - தன் பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருட்கண் சேறல். உருபு மயக்க மாவது - தன் பொருளிற் றீர்ந்து சேறல். ‘யாத னுருபிற் கூறிற்றா யினும்’ (சொல். 106) என்பதனான் உருபு மயக்க முணர்த்தினார்; அல்லனவற்றா னெல்லாம் பொருண் மயக்க முணர்த்தினார். இவ் விருவகை மயக்கமு முணர்த்துதலான், இவ்வோத்து வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மயக்கமே யன்றி வேற்றுமைக் கோதிய இலக்கணத்திற் பிறழ்ந்து 1வழீஇ யமைவனவும் பிறவும் இயைபுடையன ஈண்டுணர்த்துதலான், 2இக்குறி பன்மை நோக்கிச் சென்ற குறியென வுணர்க. இதன் பொருள்: இரண்டாவதற் கோதப்பட்ட சார்பு பொருண்மை கருமச் சார்புங் கருமமல்லாச் சார்புமென இரண்டு வகைப்படும். அவற்றுள், கருமச்சார்பு தூணைச் சார்ந்தான் என வொன்றனை யொன்று மெய்யுறுதலாம். கருமமல்லாச் சார்பு மெய்யுறுதலின்றி அரசரைச் சார்ந்தான் என வருவதாம். கருமமல்லாத சார்பு பொருண்மைக்கு உரித்தாய் வருதலு முடைத்து ஏழாவது என்றவாறு. உதாரணம்: அரசர்கட் சார்ந்தான் என வரும். கருமமாவது ஈண்டு மெய்யுறுதலாதலின், அரசர்கட் சார்ந் தான் என்புழி உறுதலின்மையின், சார்பாமாறென்னை யெனின், தூண் பற்றாக ஒரு சாத்தன் சார்ந்தாற்போல அரசர் பற்றாக அச் சார்ந்தானொழுகுதலின் சார்பாயிற் றென்பது. உம்மை எதிர்மறை. தூணின்கட் சார்ந்தான் எனக் கருமச்சார்ச்சிக்கண் ஏழாவது சென்றாற் படுமிழுக்கென்னையெனின், அன்னதொரு வழக்கின்மையே அன்றிப் பிறிதில்லை யென்க. இக்காலத்து அவ்வாறு வழங்குபவாலெனின், கருமமல்லாச் சார்ச்சிக்கண் வருமுருபைச் சார்தலொப்புமையாற் கருமச் சார்ச்சிக்கண்ணுங் கொடுத்து உலகத்தார் 3இடைத்தெரிவின்றி வழங்குகின்றா ரெனவேபடும்; ஆசிரியர் ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’யென விதந்து கூறினமையா னென்பது. (1) 85. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினைநிலை யொக்கு மென்மனார் புலவர். இதன் பொருள் : சினைமே னிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் 4வினைநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் எனவரும். வினைக்குறிப்பை நீக்குதற்கு வினையென்றார். வினைநிலையொக்கு மென்றாரேனும், புகழ்தல் பழித்த லென்னுந் தொடக்கத்தன வொழித்து மயங்குதற்கேற்கும் அறுத்தல் குறைத்தன் முதலாயின வினையே கொள்ளப்படும். இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது சென்றதாயினும், சிறுவரவிற்றன்றி இரண்டாவதுபோல ஏழாவது வழக்கின்கட் பயின்று வருதலின், ஒக்குமென்றார்; 5அது காரணத்தான், கரும மல்லாச் சார்ச்சிக்குஞ் சினைக் கிளவிக்கும் ஏழாவது உரிமையுடைத் தென உடன்கூறாது, வேறு கூறினா ரென்பது. (2) 86. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. இதன் பொருள்: கன்றற் பொருண்மேல் வருஞ் சொல்லும், செலவு பொருண் மேல் வருஞ் சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில் என்றவாறு. உதாரணம்: சூதினைக்கன்றினான், சூதின்கட்கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கட்சென்றான் என வரும். 6பொருள்பற்றி யோதினமையான், சூதினையிவறினான், சூதின்கணி வறினான்; நெறியை நடந்தான், நெறிக்கணடந்தான் என வருவனவுங் கொள்க. இரண்டாவதற்கு இப்பொருள் 7மேலே கூறப்பட்டமை யான், கன்றல் செலவென்னும் பொருட்கு ஏழாவதும் உரித்தென்றோத வமையுமெனின், அங்ஙனமோதின் ஏழாவதன் வரவு சிறுபான்மை யென்பதுபடும்; ஆகலின் உடனோதினா ரென்பது. 8சினைநிலைக்கிளவி நிலைமொழிவரையறை யாக லானும், இது வருமொழிவரையறை யாகலானும், வேறு கூறினா ரென்பது. (3) 87. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. இதன் பொருள்: முதற் சொல்லொடு தொடர்ந்த சினைச் சொல்லிற்கு ஆறாம் வேற்றுமை முதற்கண் வருமாயின், சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும் என்றவாறு. உதாரணம்: யானையது கோட்டைக் குறைத்தான் என வரும். ‘சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்’ (சொல். 85) என்றதனான் முதற்சினைக் கிளவிக்கு இரண்டு வேற்றுமையு மெய்துவதனை 9நியமித்தவாறு. இது வருஞ் சூத்திரத்திற்கு மொக்கும். (4) 88. முதல்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருத றெள்ளி தென்ப. இதன் பொருள்: அம் முதற்சினைக் கிளவிக்கண், முதற்சொல் முன் ஐகார வேற்றுமை வரின், சினைச்சொல்முன் கண்ணென்னும் வேற்றுமை வருதறெள்ளிது என்றவாறு. உதாரணம்: யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும். ‘தெள்ளிது’ என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான் எனச் சிறுபான்மை ஐகார வேற்றுமையும் வருமென்பதாம். சினைக்கிளவிக்கண் மயக்க முணர்த்துகின்ற சூத்திரத் திடைக் ‘கன்றலுஞ் செலவும்’ என்னுஞ் சூத்திரம் வைத்ததென்னை யெனின், ஐயுங் கண்ணுமென்பது அதிகாரத்தான் வரச் சூத்திரஞ் 10சுருங்கு மாகலின், ‘சினை நிலைக் கிளவிக்கு’ என்னுஞ் சூத்திரத்தின் பின் அதனை வைத்தா ரென்பது. (5) 89. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. இதன் பொருள் : முதலுஞ் சினையும் முதலாயது முதலே11யாய்ச் சினை யாயது சினையேயாய்த் தம்முள் வேறு பொருளாகா; சொல்லுங்கால், சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினான் முதலென்றுஞ் சினையென்றும் வழங்கப்படும் என்றவாறு. ‘சொற்குறிப்பின’ வென்றது, முதலெனப்பட்டது தானே தன்னைப் பிறி தொன்றற்கு 12ஏகதேசமாகக் குறித்தவழிச் சினையு மாம்; சினையெனப் பட்டது தானே தன்கண் ஏகதேசத்தை நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாம் என்றவாறு. கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் என முதற்கோதப் பட்ட உருபு சினைக்கண்ணும் வந்ததாலென்று ஐயுற்றார்க்கு, கருத்து வகையாற் கோடென்பது ஆண்டு முதலாய் நிற்றலின், 13முதலிற் கோதிய உருபே முதற்கண் வந்ததென ஐயமகற்றியவாறு. (6) 90. பிண்டப் பெயரு மாயியல் றிரியா பண்டியன் மருங்கின் மரீஇய மரபே. இதன் பொருள் : பிண்டத்தை யுணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயரியல் பிற்றிரியா; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் மேற்றொட்டு வழங்கி வாராநின்ற கூற்றான் மருவிய முறை என்றவாறு. பிண்டம் பலபொருட்டொகுதி. ஈண்டு ‘ஆயிய றிரியா’வென மாட்டெறிந்தது, முதற்சினைக் கிளவிக்குப் போலப் பிண்டப் பெயர்க்கும் முதற்கண் ஆறாவது வரின் சினைக்கு இரண்டாவது வருதலும், முதற்கு இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதலும், சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம். உதாரணம்: குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கட் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும். பிண்டமும் முதலுஞ் சினையுமேயாகலின் வேறு கூறல் வேண்டா எனின், 14குப்பை யென்புழி, தொக்க பல பொருளல்லது, அவற்றின் வேறாய் அவற்றானியன்று தானொன் றெனப்படும் பொருளின்மையின், தொல்லாசிரியர் அதனை முதலென்று வேண்டார்; அதனான் வேறு கூறினா ரென்பது. படை காடு கா முதலாயினவுமன்ன. (7) 91. ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே. இதன் பொருள் : 15அதனோடியைந்த ஒருவினைக் கிளவியென மூன்றாவதற் கோதிய ஒருவினை யொடுச்சொல் உயர்பொருளை யுணர்த்தும் பெயர்வழித் தோன்றும் என்றவாறு. உதாரணம்: அரசனோடிளையர் வந்தார், ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் என வரும். உயர்பொருட் பெயர்வழி ஒடுக்கொடுக்க எனவே, உயர்பில் வழிச் சாத்தனுங் கொற்றனும் வந்தார் என இரு பெயரும் எழுவா யாய் நிற்குமென்பதாம். நாயொடு நம்பி வந்தான் என இழிபெயர்க் கண்ணும் ஒரு வினை யொடுச்சொல் வந்ததா லெனின், யாதானு மோராற்றான் அதற்குயர்புண்டாயி னல்லது அவ்வாறு கூறார்; கூறுபவாயின், அஃது ஒரு வினையொடுச் சொலெனப் படாது; கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்குண்டாக வந்தானெனப் 16பிறிது பொருள் படுவதோ ரொடு வுருபா மென்க. இதனை 17வேற்றுமையோத்தின்கண் ‘அதனினியறல்’ (சொல். 74) என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது ஈண்டுவைத்த தென்னையெனின், வேற்றுமையது பெயரும் முறையுந் தொகை யும் பொதுவகையான் அவற்ற திலக்கணமும் உணர்த்தியதல்லது, இன்ன வேற்றுமை இன்னபொருட்கண் இன்னவாறாமென்னும் விசேட விலக்கணம் அதிகாரம் பட்டின்றாகலான், ஆண்டு வையாது மூன்றாவது இப் பொருட்கண் இவ்வாறாமென விசேட விலக்கணம் ‘மூன்றனு மைந்தனும்’ (சொல். 92) எனக் கூறுகின்றாராகலின், அதனோடியைய ஈண்டு வைத்தார்; இதுவும் ஒரு பொருள் பற்றி யோதுகின்ற விசேட இலக்கண மாகலானென்பது. (8) 92. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். இதன் பொருள் : மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக் கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல் அவ்வேதுப் பொருண்மையை நோக்கு நோக்கு ஒரு தன்மைய என்றவாறு. உதாரணம்: வாணிகத்தானாயினான், வாணிகத்தானாய பொருள் எனவும், வாணிகத்தினாயினான், வாணிகத்தினாய பொருள் எனவும் வரும். வாணிகத்தான், வாணிகத்தின் என வுருபொடு தொடர்ந்து நின்ற சொல்லை ஏதுக்கிளவி யென்றார். ‘அதன்வினைப் படுத லதனி னாதல்’ (சொல். 74) என்றும் ‘புதுமை பழமையாக்கம்’ (சொல். 78) என்றும் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் ஏதுப் பொருண் மேற்கூறப்பட்டமையான் இச் சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று; பிரிநிலையேகார முதலாகிய இடைச்சொல்லும் 18ஒருசார் வினைச் சொல்லும் முன்னோதப்பட்டனவேனும், எச்சமாதலொப்புமை யான் எச்ச ஆராய்ச்சிக்கண் அவைதம்மையே, பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே. (சொல். 430) எனப் பின்னுங் கூறினாற்போல, ஏதுப்பொருண்மை மூன்றாவ தற்கும் ஐந்தாவதற்கும் மேற்கூறப்பட்டதாயினும் மயக்கமாத லொப்புமையான் மயக்க வாராய்ச்சிக்கண் ஈண்டுங் கூறினாரா கலின், கூறியது கூறலென்னுங் குற்றமின் றென்பது. இஃது ‘அச்சக் கிளவி’ (சொல். 100) என்பதற்குமொக்கும். அஃதேல், மயக்கமாவது ஒரு வேற்றுமை பிறிதொன்றன் பொருட்கட் சேறலன்றே; ஏதுவின்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் தம் பொருளே பற்றி நிற்றலின் மயங்கின வெனப்படா வெனின், நன்று சொன்னாய்! ஏதுப் பொருண்மை தனக்குரிய வாற்றான் 19அவற்றிற்குத் தன் பொருளாயினவாறு போலப் பிறி தொன்றற் குரியவாற்றாற் பிறிதொன்றன் பொருளாதலு முடைமையின், அம்முகத்தான் மயங்கிற்றெனவே படுமென்பது. அல்லதூஉம் ஒரு பொருட்கண் இரண்டுருபு சென்ற துணையான் மயக்கமாயிற் றெனினு மமையும். 20ஆக்கமொடு புணர்ந்த வேதுக்கிளவி யெனவே, ஆக்க மொடு புணராது ஞாபகவேதுப் பொருண்மைக்கண் வரும் இன்னும் ஆனும் ஒத்த வரவினவல்ல என்பதாம். ஆண்டைந் தாவது பெருவர விற்றெனக் கொள்க. (9) 93. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் விரண்டன் மருங்கி னேதுவு மாகும். இதன் பொருள் : ‘நோக்கலி னஞ்சலின்’ (சொல். 72) என இரண்டாவதற் கோதிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும் நோக்கல் நோக்கமு மென இரண்டு வகைப்படும். நோக்கிய நோக்கம் கண்ணானோக்குதல். நோக்கல் நோக்கம் மனத்தா னொன்றனை நோக்குதல். அந் நோக்கல் நோக்க மாகிய பொருள் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்குமுரிய ஏதுப் பொருண்மையுமாம் என்றவாறு. நோக்கல் நோக்கத்தான் நோக்கப்படும் பொருளை, நோக்க நோக்க மென்றார். நோக்கல நோக்கம் அவ்விரண்டன் மருங்கி னேதுவுமாகு மெனவே, அவ்வேதுப் பொருண்மைக்குரிய இரண்டுருபும் அவ்வேதுப் பொருண்மையிற் றீராது இரண்டாவதன் பொருட்கண் வருமென்பதாம். ஓம்படைப்பொருட்கண் வருவனவற்றிற்கும் மீதொக்கும். உதாரணம்: வானோக்கி வாழு முயிரெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி (குறள். 542) என்புழி, வானை நோக்கி வாழும், கோலை நோக்கி வாழும் என இரண்டாவது வருதலேயன்றி, வானானோக்கி வாழும், வானி னோக்கி வாழும், கோலானோக்கி வாழும், கோலினோக்கி வாழும் என மூன்றாவதும் ஐந்தாவதும் வந்தவாறு கண்டுகொள்க. ஏதுவாயினவாறென்னை யெனின், உயிருங் குடியும் வானையுங் கோலையு நோக்குவது அவற்றானாய பயன்பற்றி அவற்றைத் தாமின்றியமையாமை யன்றே? அதனான் 21அவ்வாறு பயன்படுவன அவற்ற22தின்றியமையாமைக்கு ஏதுவாதலு முடைய வென்பது. அஃதேல், வானுங் கோலும் ஏதுவாயவழி நோக்கப் படுவன பிறவாவான் செல்லுமெனின், அற்றன்று. கண்ணுட் குத்தினான் என்றவழிக் கண்ணே செயப்படுபொரு ளாதலும் பெறப்பட்டாற்போல, வானானோக்கும், கோலா னோக்கும் என்புழியும் அவைதாமே செயப்படுபொருளாதலும் பெறப்பட்ட மையான், நோக்கப் படுவன பிறவாவான் செல்லா வென்பது. (10) 94. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின் னதுவென் உருபுகெடக் குகரம் வருமே. இதன் பொருள் : ஆறாம் வேற்றுமைப் பொருண்மேல் வரும் உயர் திணைத் தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னுமுருபு கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் என்றவாறு. ஈண்டு அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபாண்டு வாராமை. நம்பி மகன், நங்கை கணவன் என்னுந் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன், நங்கைக்குக் கணவன் என நான்கனுருபு வந்தவாறு கண்டுகொள்க. உயர்திணைத் தொகைவயி னதுவெனுருபு கெடக் குகரம் வருமென்றதனான், 23ஆறனுருபு அஃறிணைப்பாறோன்ற நிற்றல் பெற்றாம். உயர்திணைத் தொகைவயின் ஆறாவதனை விலக்கி நான்காவதே சேறலின், 24‘இதன திதுவிற்று’ (சொல். 110) என்னுஞ் சூத்திரத்தாற் கூறப்படும் பொருளோடு உடன் வையாது இதனை வேறு கூறினார். (11) 95. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. இதன் பொருள் : தனக்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப் பெயரொடுஞ் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்றாவதுங் கடியப்படா, அவ்வேற்றுமை தொக அவற்றின் பொருள் நிற்குந் தொகையிடத்து என்றவாறு. உதாரணம்: புலிகொன்ற யானை, புலிகொல் யானை என்புழிப் புலியைக் கொன்ற யானை எனவும், புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும், இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கியவாறு கண்டு கொள்க. கொன்ற, கொல்லென்பன வினைமுதற் பொருட்குரிய வாகப் புலியென்பது செயப்படு பொருளாயவழியல்லது இரண்டாவது வாராமையானும், அச்சொற்கள் செயப்படு பொருட்குரியவாகப் புலி வினைமுதலாயவழியல்லது மூன்றா வது வாராமையானும், இவை ஒருபொருட்கண் வந்தன வன்மையின் மயக்கம் ஆமாறு என்னை யெனின், ஒரு பொருட் கண் வாராமையின் மயக்கமெனப் படாவாயினும், தடுமாறு தொழிற் றொகைக்கண் இரண்டும் வந்து நிற்றலின் மயக்கப்பாற்படு மென்பது. (12) 96. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. இதன் பொருள் : தடுமாறு தொழிலொடு புணர்ந்த பெயருள், இறுதிப் பெயர் முன்னர்ப் பொருள் வேறுபாடுணர்த்துஞ் சொல்வரின், அச் சொல்லான் அப் பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர் என்றவாறு. உதாரணம்: புலிகொல்யானை யோடாநின்றது, புலிகொல் யானைக் கோடு வந்தன என வரும். 25பிறமயக்கம் போலாது ஈண்டுப் பொருள் வேறுபாடு ணர்ந்தல்லது உருபு விரிக்கலாகாமையின், ‘மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப’ வென்றார். 26முன் புலியைக் கொன்ற யானை, பின் பிறிதொன்றனான் இறந்துழியும் புலிகொல்யானைக்கோடு வந்தனவென்ப; அவ்வழிக் கொன்றது, கொல்லப்பட்டதென்னும் வேறுபாடு குறிப்பானு ணரப்படு மென்பார் ‘உணருமோர்’ என்றார். பிறவுமன்ன. (13) 97. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. இதன் பொருள்: ஓம்படைப் பொருண்மைக்கு ஐகார வுருபும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கவழி என்றவாறு. ஓம்படுத்தல் - பாதுகாத்தல். புலிபோற்றி வா என்புழி, ஓம்படைக்கிளவி இரண்டாவதற் கோதிய காப்பின்கணடங்குதலின், 27புலியைப் போற்றி வாவென ஐகார வுருபும், புலி அவன் போற்றி வருதற்கு ஏதுவாதலு முடைமையான் புலியாற் போற்றி வாவென ஆனுருபும், ஒத்தவுரிமையவாய் வந்தவாறு கண்டு கொள்க. புலியேதுவாதலு முடைத்தாயின், ‘‘இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமும் ஓம்படைக் கிளவியு மேதுவுமாகும்’’ என வமையும் இச் சூத்திரம் வேண்டாவெனின், அங்ஙனமோதின் ஓம்படைப் பொருண்மைக்கு ஐந்தாமுருபுமெய்தும்; அதனை விலக்குதற்கு ‘ஐயுமானுந் தாம் பிரிவில’ வென வேறு கூறினார். இவை பிரிவிலவெனவே, இன்னுருபு பிரிவுடைத்தாய், புலியிற் போற்றிவாவெனச் சிறுபான்மை வருமென்பதாம். இரண்டு வேற்றுமைக்கும் 28ஓம்படைப் பொருண்மை இச்சூத்திரத்தா னெய்துவித்தா ரெனினு மமையும். தாமென்பது செய்யுட் சுவைபட நின்றது. (14) 98. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு கேழு மாகு முறைநிலத் தான. இதன் பொருள்: ஆறாம் வேற்றுமைக் கண்ணோதிய வாழ்ச்சிக் கிழமைக்கு உறைநிலத்தின்கண் ஏழாவதும் வரும் என்றவாறு. உதாரணம்: காட்டியானை என்பது காட்டதியானையென விரிதலே யன்றிக் காட்டின்கண் யானையெனச் சிறுபான்மை ஏழாவது விரியினு மமையு மென்றவாறு. 29யானைக்காடு, நம்பியூர் என்பன வாழ்ச்சிக்கிழமைப் பொருள வாயினும், ஆண்டேழாவது மயங்காதென்றற்கு ‘உறை நிலத்தான’ வென்றார். எனவே, உறைநிலப் பெயர் பின்மொழியாய வழியது இம்மயக்க மென்பதாம். (15) 99. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி யப்பொரு ளாறற் குரித்து மாகும். இதன் பொருள்: குவ்வென்னு முருபு தொகவருங் கொடையெதிர் கிளவியாகிய தொகையினது கொடை யெதிர்தலாகிய அப் பொருண்மை ஆறாம் வேற்றுமைக் குரித்துமாம் என்றவாறு. உதாரணம்: நாகர்பலி என்பது நாகர்க்கு நேர்ந்த பலியென விரிதலேயன்றி நாகரது பலியென விரியினு மமையு மென்றவாறு. 30கொடையெதிர் கிளவி யென்பதற்குத் தருசொல் வருசொற்குரைத்ததுரைக்க. கொடை யெதிர்தல் 31கொடையை விரும்பி மேற்கோடல். நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழித் திரிபின்றி அவர்க் 32கஃதுடைமையாதலின், கிழமைப் பொருட் குரிய உருபாற் கூறினு மமையு மென்றவாறு. (16) 100. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான. இதன் பொருள்: அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருணின்றவழி என்றவாறு. உதாரணம்: பழியஞ்சும் என்புழி, பழியினஞ்சும், பழியையஞ்சும் என இரண்டும், ஒத்த கிழமையவாய் நின்றவா றறிக. அஃதேல், 33ஒரு பொருட்கண் வரினன்றே மயக்கமாவது; இவை செயப்படுபொருளும் ஏதுவுமாகிய பொருள் வேறுபாடு உடையவாகலின் மயக்கமா மாறென்னையெனின், அற்றன்று; ஈண்டேது வாதலே அஞ்சப் படுதலாய் வேறன்றி நிற்றலின், ஒரு பொருட்கண் வந்தனவேயாம்; அதனான் மயக்கமா மென்பது.(17) 101. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினு மெய்தடு மாறி யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. இதன் பொருள் : மேன் மயக்கங் கூறப்பட்ட வேற்றுமையே யன்றி, அவை போல்வன பிறவும், தொன்றுதொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபானும் பொருளானும் ஒன்றனிலைக் களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளுந்தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமை யெல்லாந் திரிபுடைய வல்ல தெரிந்துணர் வோர்க்கு என்றவாறு. பொதுவகையான் இருவயினிலையு மென்றாரேனும், வழி போயினா ரெல்லாங் கூறை கோட்பட்டார் என்றவழிக் கூறை கோட் படுதல் 34கடவுளரை யொழித்து ஏனையோர்க்கே யாயினவாறு போல, ஏதுப் பொருட்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஒரு பொருளேபற்றி நிற்றலின் இருவயினிலையற் கேலாமையான், அவற்றை யொழித்து அஃதேனையவற் றிற்கேயாம். என்னை? ஏனைய தன் பொருளிற் றீராது பிறி தொன்றன் பொருட்கட் சேறலுடைமை யான் இருவயினிலையற் கேற்றவா றறிக. அன்ன பிறவாவன - நோயினீங்கினான் நோயை நீங்கினான் எனவும், சாத்தனை வெகுண்டான் 35சாத்தனொடு வெகுண்டான் எனவும், முறையாற் குத்துங்குத்து முறையிற் குத்துங்குத்து எனவும், 36கடலொடு காட்டொட்டாது கடலைக் காட்டொட்டாது எனவும் வருவனவும் பிறவுமாம். இக்காலத்துச் 37சிதைந்து வழங்கும் மயக்கமு முண்மை யான், தொன்னெறி பிழையாதன ஆராய்ந் துணரப்படுமென்பார் ‘தெரியு மோர்க்கு’ என்றார். (18) 102. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே. இதன் பொருள் : பலவுருபுந் தம்முட்டொடர்ந் தடுக்கிவந்த வேற்றுமைச் சொற்களெல்லாம் முடிக்குஞ் சொல்லொன்றனான் முற்றுப்பெற்று நடக்கும், அவ்வொன்றனாற் பொருள் செல்லு மிடத்து என்றவாறு. ஈண்டு வேற்றுமைக் கிளவியென்றது வேற்றுமை யுருபை யிறுதியாக வுடைய சொல்லை. உதாரணம்: என்னொடும் நின்னொடுஞ் சூழாது (அகம். 128-7) எனவும், அந்தணர் நூற்கும் அறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல். (குறள். 543) எனவும் வரும். சாத்தன் றாயைக்காதலன், நாய் தேவனாயிற்று என்புழி, தாயை, தேவன் என்பன, காதலன் ஆயிற்றென்னும் பயனிலைக்கு அடையாய் இடைநின்றாற் போல, கோட்டை நுனிக்கட் குறைத் தான், தினையிற் கிளியைக் கடியும் என்புழி, நுனிக்கண் கிளியை யென்பன, குறைத்தான் கடியுமென்னும் முடிக்குஞ் சொல்லிற்கு அடையாய் இடைநின்றவாகலான், அவையடுக் கன்மையின், அவை யுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன் றென்க. 38குழையைச் சாத்தனது கள்ளரின் என இவ்வாறு தொட ராது வருவனவற்றை நீக்குதற்கு உருபு தொடர்ந் தடுக்கிய வென்றும், நீ தந்த 39சோற்றையுங் கூறையையு முண்டுடுத்திருந் தேம் என இன்னோரன்னுழி, ஒரு சொல்லாற் பொருள் செல்லாமையின், அவற்றை நீக்குதற்குப் ‘பொருள் சென்மருங்’ கென்றுங் கூறினார். பிறவுமன்ன, (19) 103. 40இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார். இதன் பொருள்: வேற்றுமைத்தொடரி றுதிக்கண்ணும் அதனிடை நிலத்தும் ஆறுருபுந் தத்தமக்கோதிய பொருட்கண் நிற்றலை வரையார் என்றவாறு. உதாரணம்: கடந்தானிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், இருந்தான் குன்றத்துக் கண் எனவும்; நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக் கணிருந்தான் எனவும் வரும். ‘நெறிபடு பொருள்வயினிலவுதல் வரையா’ ரெனவே, அப்பொருளுணர்த்தாக்கால் நிலவுதல் வரையப்படு மென்பதாம். அங்ஙனம் வரையப்படுவன யாவையெனின், ஆறாவதும் ஏழா வதும், சாத்தனதாடை, குன்றத்துக்கட் கூகை என இடை நின்று தம் பொருளுணர்த்தினாற் போல, ஆடை சாத்தனது கூகை குன்றத்துக் கண் என இறுதி நின்ற வழி, அப்பொரு ளுணர்த்தாமையான், 41அவ் வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுரு பேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடை மையான், 42அந்நிலைமைக்கண் ஆடைசாத்தனது என இறுதிக் கண்ணும் நிற்குமென்பது. 43இவ் வரையறை யுணர்த்துதற்கும், ‘மெய்யுருபு தொகாஅ இறுதியான’ (சொல். 105) என முன்னரு ணர்த்தப்படும் வரையறைக்கு இடம் படுத்தற்கும் ‘ஈறுபெயர்க் காகும்’ (சொல். 99) என்றோதப்பட்ட உருபு தம்மையே இறுதியு மிடையும் நிற்குமென வகுத்துக் கூறினாரென்பது. (20) 104. 44பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இதன் பொருள்: பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும், ஆறுருபுந் தொக்கு நிற்றலும், நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான் வழுவாகா என்றவாறு. ஏற்புழிக் கோட லென்பதனான், பிறிதோருருபேற்பது ஆறாவதே யாம். பிறிதேற்றலு மென்றமையான், தானல்லாப் பிறவுரு பேற்றல் கொள்க. உதாரணம்: சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதன்கண் என உருபு உருபேற்றவாறும்; நிலங் கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை, குன்றக்கூகை எனவும்; கடந்தானிலம், இருந்தான் குன்றத்து எனவும் உருபு தொக்கு நின்றவாறுங் கண்டுகொள்க. ‘இறுதியு மிடையு’ மென்பதனை அதிகாரத்தான் வருவித்து இரண்டிடத்துங் கூட்டி யுரைக்க. சாத்தனதனது எனச் சிறுபான்மை தன்னையுமேற்றல் உரையிற் கோட லென்பதனாற் கொள்க. பெயரிறுதி நின்ற உருபு தன்பொருளொடு தொடராது பிறி தோருருபை யேற்றலும், தாம் நின்று தம்பொருளுணர்த்தற் பாலன தொக்கு நிற்றலும் இலக்கணமன்மையின், வழுவமைத்த வாறு. (21) 105. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ இறுதி யான. இதன் பொருள்: ஐகார வேற்றுமைப் பொருளுங் கண்ணென் வேற்றுமைப் பொருளுமல்லாத பிற பொருளின் மேனின்ற உருபு தொடர்மொழி யிறுதிக்கட் டொக்கு நில்லா என்றவாறு. இறுதியுமிடையுமென்பது அதிகரிக்க உருபு தொக வருதலு மென்றமையான் வரைவின்றி எல்லாவுருபும் இறுதிக் கண்ணுந் தொகுமென்பது பட்டதனை விலக்கி, இவ்விரு பொருட் கண் வருவனவே இறுதிக்கட் டொகுவன, அல்லன தொகாவென வரை யறுத்தவாறு. அறங்கறக்கும் என இடைக்கட் டொக்கு நின்ற நான்காவது கறக்கு மறம் என இறுதிக்கட் டொக்கு நில்லாமை கண்டு கொள்க. பிறவுமன்ன. (22) 106. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். இதன் பொருள்: ஒரு தொடர் யாதானுமொரு வேற்றுமையதுருபு கொடுத்துச் சொல்லப்பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளான் அத்தொடர்ப் பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும் என்றவாறு. பொருள் செல்லாமையாவது உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லுந் தம்மு ளியையாமை. அவ்வேற்றுமையைச் சார்தலாவது அதன் பொருட்டாதல். உதாரணம்: கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் (அகம். 212) என்றவழி, நான்காவதன் பொருளான் அவ்வுருபேற்ற சொல்லும் அவ்வுருபு நோக்கிய சொல்லும் தம்மு ளியையாமையின், அவற்றை யியைக்கும் ஏழாவதன் பொருட்டாயினவாறு கண்டு கொள்க. உருபு தன் பொருளிற் றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்கு மென உருபுமயக்கங் கூறியவாறாயிற்று. அஃதேல், அரசர்கட்சார்ந்தான் என்புழியும் இரண்டாவ தன் பொருட்கண் ஏழாவது சென்றதென்றமையான், அதனோடி தனிடை வேற்றுமை யென்னையெனின்:- அரசர்கட்சார்ந்தான் என்புழி, அரசரது சார்தற்கிட மாதலே சாரப்படுதலுமாய் இரு பொருண்மையும் ஒற்றுமைப் பட்டு நிற்றலின், தத்தம்பொருள் வயிற் றம்மொடு சிவணு மாகுபெயர் போல, இடப் பொருண் மைக்குரிய கண்ணெனுருபு அவ்விடப் பொருண்மையோடு ஒற்றுமையுடைத்தாகிய செயப்படு பொருட்கும் ஆண்டுரித்தே யாம். மணற்கீன்ற என்புழி, நான்காவதன் பொருளோடு ஏழாவதன் பொருட் 45கென்னு மியைபின்மையான், ஒப்பில்வழி யாற் பிறிது பொருள் சுட்டும் ஆகு பெயர்போல, அப்பொருட் குரித்தன்றி வந்ததெனப் படும். அன்ன பிறவற்றுள்ளும் இவ்வேறு பாடு தெரிந்துணர்க. தன்பொருளிற் றீர்தல் இலக்கணமன்மையின், இதனை யிலக்கணத் தோடுறழ்ந்து வருவனவற்றொடு வைத்தார். (23) 107. எதிர்மறுத்து மொழியினுந் தத்தம் மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. இதன் பொருள்: விதிமுகத்தாற்கூறாது எதிர்மறுத்துக் கூறினும், தத்தமிலக்கணத்தான் வரும் பொருணிலைமை திரியா வேற்றுமை யுருபு என்றவாறு. உதாரணம்: மரத்தைக் குறையான், வேலா னெறியான் என வரும். என்சொல்லியவாறோவெனின், குறையான் எறியான் என்றவழி வினை நிகழாமையின், மரமும் வேலுஞ் செய்யப்படு பொருளுங் கருவியு மெனப்படாவாயினும், எதிர்மறை வினையும் விதிவினையோடொக்கு மென்பது நூன்முடி பாகலான், ஆண்டு வந்த உருபுஞ் செயப்படு பொருண் முதலாயினவற்றுமேல் வந்தன வெனப்படுமென வழுவமைத்தவாறு. பிறவுமன்ன. (24) 108. கு ஐ ஆனென வரூஉ மிறுதி அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே. இதன் பொருள்: கு ஐ ஆனென வரூஉம் மூன்றுருபும் தொடரிறுதிக் கண்ணின்ற வழி, அகரத்தொடு பொருந்தி நிற்றலுமுடைய செய்யுளுள் என்றவாறு. உதாரணம்: ‘கடிநிலை யின்றே யாசிரி யற்க’ எனவுங், ‘காவ லோனக் களிறஞ் சும்மே’ ‘களிறு மஞ்சுமக் காவ லோன’ எனவும், ‘புரைதீர் கேள்விப் புலவரான’ எனவும், ‘உள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான’ (கற். 53) எனவும் வரும். 46குகரமும் ஐகாரமும் ஈறு கெட அகரத்தொடு சிவணலுடை மை யான், ஐ ஆன் கு என முறையிற் கூறாது, கு ஐ என அவற்றை இயைய வைத்தார். இயைய வைக்கின்றவர் ஐகாரம் முன்வைக்க வெனின், முறை அதுவாயினுஞ் செய்யுளின்பம் நோக்கிக் குகரம் முன்வைத்தா ரென்பது. அஃதேல், இத்திரிபு ‘தம்மீறு திரிதல்’ (சொல். 251) என இடைச் சொற்கோதிய பொதுவிலக்கணத்தாற் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின், அப் பொது விலக்கணத்தான் எய்துவன, உருபிற்கு மெய்துமேல், ‘பிறிது பிறி தேற்றலும்’, ‘பிறிதவணிலையலாய்’ (சொல். 251) அடங்குதலான், ஈண்டுக் கூறல் வேண்டாவாம்; அதனான் அன்ன பொது விலக்கணம் உருபிற் கெய்தாதென மறுக்க. (25) 109. அ எனப் பிறத்த லஃறிணை மருங்கிற் குவ்வும் ஐயு மில்லென மொழிப. இதன் பொருள் : அஃறிணைப் பெயர்க்கண் அகரத்தொடு சிவணி ஈறுதிரிதல் குவ்வும் ஐயுமில்லென எய்தியது விலக்கிய வாறு. அ எனத் திரிதலை, ‘அ எனப் பிறத்த’ லென்றார். (26) 110. இதன திதுவிற் றென்னுங் கிளவியு மதனைக் கொள்ளும் பொருள்வயி னானு மதனாற் செயற்படற் கொத்த கிளவியு முறைக்கொண் டெழுந்த பெயர்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியு மன்ன பிறவும் நான்க னுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே. இதன் பொருள்: இதனதிது இத்தன்மைத் தென்னும் ஆறாவதன் பொருண்மையும், ஒன்றனையொன்று கொள்ளு மென்னும் இரண்டாவதன் பொருண்மையும், ஒன்றனானொன்று தொழிற்படற் கொக்கு மென்னும் மூன்றாவதன் பொருண்மை யும், முறைப் பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச்சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருண்மையும், நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும், பண்பின்கணாம் பொருவு மாகிய ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின்கண் ணறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், பற்றுவிடு பொருண்மையும், தீர்ந்து மொழிப் பொருண்மையுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், அவை போல்வன பிறவும், நான்கனுருபாற் றோன்றுதற்கட் டொன்னெறி மரபின என்றவாறு. உதாரணம்: யானைக்குக்கோடு கூரிது எனவும், இவட்குக் கொள்ளு மிவ்வணி எனவும், அவற்குச் செய்யத்தகு மக்காரியம் எனவும், ஆவிற்குக் கன்று எனவும், கருவூர்க்குக் கிழக்கு எனவும், சாத்தற்கு நெடியன் எனவும், காலைக்கு வரும் எனவும், மனை வாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் எனவும், ஊர்க்குத் தீர்ந்தான் எனவும், அப்பொருளெல்லாவற்றின்கண்ணும் நான்காமுருபு வந்தவாறு கண்டு கொள்க. வன்பால் மென்பால் என்பவாகலின் நிலத்தைப் பாலென்றார். சிறப்பே நலனே காதல் வலியோ டந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப (பொருள். 279) என, 47உவமை நிலைக்களத்தைப் பண்பென்ப வாகலின், ‘பண்பி னாக்கம்’ என்றார். இதுவும் வேற்றுமை மயக்கமாகலின் மேற்கூறப்பட்ட வற்றொடு வையாது இத்துணையும் போதந்து வைத்த தென்னை யெனின், அது தொகை விரிப்ப மயங்குமதிகாரம்; இது தொகையல் வழி யானையது கோடு கூரிது என்னுந் தொடர்மொழிப்பொருள் சிதையாமல் யானைக்குக் கோடு கூரிது என நான்காவது ஆண்டுச் சென்று நின்றதாகலான், அவற்றொடு வையாராயினா ரென்பது. 48அஃதேல், ஆவின்கன்று எனவும் கருவூர்க்கிழக்கு எனவுந் தொகை யாயும் வருதலின், அப்பொருட்கண் நான்காவது வருதல் ஈண்டுக் கூறற் பாற்றன்றெனின், அஃதொக்குமன்னாயினும், பிற வேற்றுமைப் பொருட் கண் நான்காவது சேறலொப்புமையான் அவற்றிற்கு வேறொரு சூத்திரஞ் செய்யாது இவற்றோ டொருங் கோதினாரென்பது. அன்னபிறவுமென்றதனான், ஊர்க்கட்சென்றான், ஊர்க் கணுற்றது செய்வான் என்னு மேழாவதன்பொருட்கண்ணும், ஊரிற் சேயன் என்னும் ஐந்தாவதன் பொருட்கண்ணும், ஊர்க்குச் சென்றான், ஊர்க்குற்றது செய்வான், ஊர்க்குச் சேயன் என நான் காவது வருதல் கொள்க. பிறவுமன்ன. (27) 111. ஏனை யுருபு மன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. இதன் பொருள்: நான்கனுருபல்லாத பிறவுருபுந் தொகை யல்லாத தொடர் மொழிக்கண் ஒன்றன்பொருள் சிதையாமை ஒன்று மயங்குதற்கட் குற்றமில, வழங்கு முறைமையான் என்றவாறு. உதாரணம்: நூலது குற்றங்கூறினான் என்னுந் தொடர் மொழிக் கண் நூலைக் குற்றங்கூறினான் எனவும், அவட்குக் குற்றேவல் செய்யும் என்னுந் தொடர்மொழிக்கண் அவளது குற்றேவல் செய்யும் எனவும் வருவன கொள்க. பிறவுமன்ன. (28) 112. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே. இதன் பொருள் : வினையும், வினைமுதலும், செயப்படு பொருளும், நிலமும், காலமும், கருவியுமாகிய ஆறும், இன்னதற்கு, இது பயனாக என்று சொல்லப்படும் இரண்டொடுந் தொக்குத் தொழிலது முதனிலை யெட்டா மென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. ஈண்டேதுப் பொருண்மை கருவிக்க ணடக்கப்பட்டது. தொழின்முதனிலை யென்றது தொழிலது காரணத்தை. காரியத்தின் முன்னிற்றலின் முதனிலையாயிற்று. காரண மெனினும் காரக மெனினு மொக்கும். வனைந்தான் என்றவழி, வனைதற்றொழிலும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கிடமாகிய நிலமும், அத்தொழி னிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரிமுதலா யினவும், 49வனையப் பட்ட குடத்தைக் கொள் வானும், வனைந்த தனானாய பயனுமாகிய எட்டும்பற்றி அத் தொழி னிகழ்ந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், தொழிலின் வேறாயது காரகமாகலின், வனைதற் றொழிற்கு அத்தொழில்தான் காரகமாமா றென்னை யெனின், வனைந்தானென்பது வனைதலைச் செய்தா னென்னும் பொருட்டாகலின், செய்தற்கு வனைதல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரகமா மென்பது. அற்றாக லினன்றே, 50கொள லோ கொண்டானென்பது இரண்டாம் வேற்றுமைத் தொடராயிற்றென்பது. இன்னதற்கு, இதுபயனாக என்னும் இரண்டும் அருகியல்லது வாராமையின், ‘அன்னமரபி னிரண்டொடு’ மெனப் பிரித்துக் கூறினார். அஃதேல், 51செய்வது முதலாகிய முதனிலை வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டமையின் இச்சூத்திரம் வேண்டா வெனின்:- அற்றன்று; இரண்டாவதற்கோதிய பொருளெல்லா வற்றையுஞ் செயப்படுபொரு ளெனத் தொகுத்து, ஏதுவைக் கருவிக்கண்ணும் வினைசெய்யிடத்தைக் காலத்தின் கண்ணும் அடக்கி, ஏழாகச் செய்து, அவற்றோடு ஆண்டுப் பெறப்படாத வினை யென்னு முதனிலை கூட்டி எட்டென்றா ராகலின், இப்பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையான், இச்சூத்திரம் வேண்டு மென்பது. இதனாற் பயன் ‘நிலனும் பொருளுங் காலமும் கருவியும்’ (சொல். 234) எனவும் ‘செயப்படுபொருளைச் செய்தது போல’ (சொல். 246) எனவும் வினைக் கிலக்கணங் கூறுதலும் பிறவுமாம். (29) 113. அவைதாம் வழங்கியன் மருங்கின் குன்றுவ குன்றும். இதன் பொருள்: மேற்கூறப்பட்ட தொழில் முதனிலை தாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வருமென்னும் யாப்புற வில்லை; வழக்கின்கட் சில தொழிற்கட் குன்றத்தகுவன குன்றிவரும் என்றவாறு. குன்றத் தகுவனவாவன செயப்படுபொருளும் ஏற்பதும் பயனுமாம். உதாரணம்: 52கொடியாடிற்று, வளிவழங்கிற்று என்புழிச் செயப்படு பொருளும் ஏற்பதும் பயனுமாகிய முதனிலை யில்லையாயினும், ஒழிந்தன வற்றான் ஆடுதலும் வழங்கலுமாகிய தொழினி கழ்ந்தவாறு கண்டுகொள்க. இதனாற்பயன், எல்லாத்தொழிற்கும் முதனிலையெட்டுங் குன்றாது வருமோ சிலதொழிற்குச் சில குன்றிவருமோ வென்னும் ஐயம் நீங்குதலும், செயப்படுபொருள் குன்றிய வினையை யுணர்த்துஞ்சொல் இரண்டாவதனோடியையாதென்பது பெறுதலுமாம். (30) 114 முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ யனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி. இதன் பொருள் : முதற்சொல் வாய்பாட்டாற் கூறப்படுஞ் சினையறி கிளவியும், சினைச்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் முதலறி கிளவியும், நிலத்துப் பிறந்த பொருண்மேல் அந்நிலப்பெயர் கூறலும், பண்புப்பெயர் அப் பண்புடை யதனை யுணர்த்திப் பண்பு கொள் பெயராய் நின்றதூஉம், முதற் காரணப் பெயரான் அக் காரணத்தானியன்ற காரியத்தைச் சொல்லுதலும் அன்மொழிப் பொருண்மேனின்ற இருபெயரொட்டும், செயப் பட்ட பொருண் மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லுஞ் சொல்லுமென அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தை யுடையன ஆகுபெயர் என்றவாறு. உதாரணம்: கடுத்தின்றான் தெங்குதின்றான் என முதற்பெயர் சினை மேலும், இலை நட்டு வாழும் பூ நட்டு வாழும் எனச் சினைப் பெயர் முதன் மேலும், குழிப்பாடி நேரிது என நிலப்பெயர் அந் நிலத்துப் பிறந்த ஆடை மேலும், இம் மணி நீலம் எனப் பண்புப் பெயர் அப் பண்புடையதன் மேலும், இக்குடம் பொன் எனக் காரணப்பெயர் அதனானியன்ற காரியத் தின்மேலும், பொற்றொடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப் பொருள்மேலும், இவ்வாடை கோலிகன் எனச் செய்தான் பெயர் செயப்பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டா வெனின், அன்மொழித் தொகை தொகை யாதலுடைமை யான் ஆண்டுக் கூறினார். இயற்கைப் பெயர் ஆகு பெயர் எனப் பெயர் இரண்டாயடங்கும்வழி 53ஒரு பெயர்ப் பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித் தொகை எச்சவியலுளுணர்த்தப்படும்; அதனான் 54அது ஆகுபெய ராதலுடைமை பற்றி ஈண்டுக் கூறினார். எச்சவியலுட் கூறப்பட்ட வாயினும் 55வினையெச்ச முதலாயின வினைச்சொல்லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான் அவற்றை வினையிய லுள்ளும் இடையியலுள்ளுங் கூறியவாறு போல வென்பது. தொல்காப்பியனானுங் கபிலனானுஞ் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியங் கபிலமென்றல் வினைமுதலுரைக்குங் கிளவியென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று; ஒரு மொழி யிலக்கணம் ஈண்டுக் கூறாராயினும், வெற்பு சேர்ப்பு என்னும் பெயரிறுதி இதனையுடையா னென்னும் பொருள் தோன்ற அன்னென்பதோ ரிடைச்சொல் வந்து வெற்பன் சேர்ப்பன் என நின்றாற்போல, தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி இவனாற் செய்யப்பட்டதென்னும் பொருள் தோன்ற அம்மென்ப தோரிடைச்சொல் வந்து அன் கெடத் தொல் காப்பியம் கபிலம் என நின்றனவென்பது ஆசிரியர் கருத்தாம்; அதனான் அவையுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க. ‘அனை(ய)மரபின’ வென்றது அவ்வாறியாதானு மோரியைபு பற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காதலென ஆகுபெயரிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு, ஒன்றன் பொருட்கண் ஒன்று சேறலென்னு மொப்புமையான் இவற்றை யீண்டுக் கூறினார். அஃதேல் ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்க மாதலான் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரிய ரெனின், ஆகுபெயர் ஏனைவேற்றுமையு மேற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமை யாய் நின்றவழியும் அது பிறிதொரு வேற்றுமைப் பொருட்கட் சென்று மயங்காமையின் வேற்றுமை மயக்கமெனப்படாமையானும் அது போலியுரை என்க. (31) 115. அவைதாம் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை 56வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இதன் பொருள் : மேற்கூறப்பட்ட ஆகுபெயர்தாந், தத்தம் பொருளி னீங்காது தம்பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்தலும், தம் பொருட்கியைபில்லாத பிறிது பொருளைச் சுட்டி நிற்றலுமென இரண்டியல்புடைய வேறுபாடு போற்றி யுணரப்படும் என்றவாறு. கடுவென்னு முதற்பெயர் முதலோடொற்றுமையுடைய சினை மேனிற்றல் தத்தம்பொருள்வயிற் றம்மொடு சிவணலாம். குழிப்பாடி யென்னு மிடப்பெயர் இடத்தின் வேறாய ஆடை மேனிற்றல் ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாம். அஃதேல், குழிப்பாடியும் ஆடையும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய இயைபுடைய வாகலினன்றே அதன் பெயர் அதற்காயிற்று; அதனான் அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாமா றென்னையெனின், நன்று சொன்னாய்! அவ்வியைபுடைய வேனும், முதலுஞ்சினையும் பண்பும் பண்புடையதுமாதல் முதலாகிய ஒற்றுமையாகிய இயைபில வாகலின், அவை தம்முள் வேறெனவே படும்; அதனாற் குழிப்பாடியென்பது ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டலே யாமென்பது. ஒற்றுமையாகிய இயைபுள்வழி அது தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணிற்றென்றும், அவ் வியைபின்றி இடமும் இடத்துநிகழ் பொருளுமாதன் முதலாகிய இயைபே யாயவழி அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டிற்றென்றும், வேறுபடுத்துணரப்படுமென்பார், ‘வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டு’மென்றார் என்பது. அஃதேல், இதனைப் பிரித்து ஒரு சூத்திரமாக உரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அங்ஙனம் பிரிப்பின், தம்மொடு சிவணலும் பிறிது பொருள் சுட்டலுமாகிய இவற்றது வேறு பாட்டின்கணென்பது இனிது பெறப்படாமை யானும், எழுத்தோத்தினுள் ‘புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்’ (எழுத். 156) என்னுஞ் சூத்திரத்து இந்நிகர்ப் பாதுகாவலைப் பிரியாது ஒன்றாகவே யுரைத்த லானும், அவர்க்கது கருத்தன் றென்க. (32) 116. அளவும் நிறையு மவற்றொடு கொள்வழி யுளவென மொழிப வுணர்ந்திசி னோரே. இதன் பொருள் : அளவுப்பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளுமிடமு முடையவென்று சொல்லுவர் உணர்ந்தோர் என்றவாறு. உதாரணம்: பதக்கு தூணி யென்னும் அளவுப்பெயர் இந்நெற் பதக்கு இப்பயறு தூணி எனவும், தொடிதுலாமென்னும் நிறைப் பெயர் இப்பொன் றொடி இவ் வெள்ளி துலாம் எனவும், அளக்கப் பட்ட பொருண் மேலும் நிறுக்கப்பட்ட பொருண்மேலும் ஆகுபெய ராய் நின்றவாறு கண்டு கொள்க. 57ஒன்று இரண்டென்னுந் தொடக்கத்து எண்ணுப் பெயரும் எண்ணப் பட்ட பொருண்மேனின்றவழி ஆகுபெயரேயாகலின் அவற்றை யொழித்த தென்னையெனின் அவை எண்ணப்படு பொருட்கு முரியவாகலின் ஆகுபெயரெனப்படா; அதனான் அவற்றை யொழித்தா ரென்பது. (33) 117. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இதன் பொருள் : சொல்லப்பட்டனவேயன்றி வேறு பிறவும் ஆகு பெயருள வேல், அவையெல்லாஞ் சொல்லப்பட்ட வற்றதியல் பானுணர்ந்து கொள்க என்றவாறு. சொல்லப்பட்டவற்ற தியல்பாவது யாதானுமோ ரியைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றன்மேல் வழங்கப்படுதல். உதாரணம்: யாழ் குழல் என்னுங் கருவிப்பெயர் யாழ் கேட்டான், குழல் கேட்டான் என அவற்றானாகிய ஓசைமேலும் ஆகுபெயராய் நின்றன. யானை பாவை என்னுமுவமைப்பெயர் யானை வந்தான், பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருண் மேலும், 58ஏறு குத்து என்னுந் தொழிற்பெயர் இஃதோரேறு, இஃதொருகுத்து என அத்தொழிலானாம் வடுவின் மேலும், வருவனவெல்லாங் கொள்க. பிறவு மன்ன. இயைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காங்கால், அவ்வியைபு ஒரிலக் கணத்ததன்றி வேறுவேறுபட்ட இலக்கணத்தை யுடைத்து; அவ்விலக்கண மெல்லாம் கடைப்பிடித்துணர்க என்பார், ‘வேறு பிற தோன்றினும்’ என்றார். (34) வேற்றுமை மயங்கியல் முற்றிற்று கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. வழீ இ யமைவனவென்றது - பிறிது பிறிதேற்றலும், உருபு தொக வருதலும், வேற்றுமைச்சொல் எதிர்மறுத்து மொழிதலும் என்பவற்றை. பிற என்றது வினைமுதலும் ஆகுபெயரும் ஆகியவற்றை. 2. இக்குறி என்பது - வேற்றுமைமயங்கியல் என்னுங் குறியை. குறி - பெயர். கருமச்சார்ச்சி என்றது மெய்யுறுதலாகிய தொழிலை. மயக்கமேயன்றி வழீ இயமைவனவும் பிறவுமுணர்த்துதலான் பன்மை நோக்கிச் சென்றகுறி யென்றார். பன்மை - மிகுதி. மிகுதியென்றது மயக்கமே பெரிதும் உணர்த்தலை. உம்மையெதிர்மறையென்றது உரிமையைமறுத்து உரித்தாய் வாராமையையுமுணர்த்தல் பற்றி. 3. இடைத்தெரிவின்றி வழங்குகின்றாரென்றது - இது இவ்விடத்து வழங்குவ தென்று இடந்தெரியாது வழங்குகின்றாரென்றபடி; என்றது கருமமல்லாச் சார்ச்சி இது. கருமச்சார்ச்சி இது என்ற வேறுபாடு தெரியாது. கருமமல்லாச் சார்ச்சிக்கண் வழங்குவதைக் கருமச் சார்ச்சிக்கண்ணுங் கொடுத்து வழங்குகின்றார் என்றபடி. இடை - இடம். 4. வினை - தெரிநிலைவினை. வினைநிலைக்கண் - வினையைக்கொண்டு முடிந்து நிற்றற்கண். புகழ்தல், பழித்தல் போன்றவினைகள் மயங்குதற் கேற்றவல்ல என்றபடி. 5. கருமமல்லாச் சார்ச்சிக்கண் இரண்டாவது வழங்குவதுபோல் ஏழாவது வழங்குதல் பயில்வுடையதன்று; சினைநிலைக்கிளவிக்கண் இரண்டா வதும் ஏழாவதும் ஒப்பப் பயின்றுவரும்; அக்காரணத்தான் இரண்டையு முடன் கூறாது வேறு கூறினார். அதுகாரணம் - பயின்றுவருங்காரணம். 6. கன்றலுஞ் செலவுமெனப் பொருள்பற்றி ஓதினமையால் கன்றற்பொருள் பற்றிவரும் இவறன் முதலிய சொற்களும், செலவுப் பொருள்பற்றிவரும் நடத்தல் முதலிய சொற்களும், கொள்ளப்படுமென்க. கன்றல் - அடிப் படல். 7. மேல் என்றது. வேற்றுமையியல் 11ஆம் சூத்திரத்தை, வேறோதினார் என்றது. அதனோ டொருங்கோதாது வேறு கூறினார் என்றபடி. 8. சினைநிலைக்கிளவி என்ற சூத்திரம் நிலைமொழி வரையறை பற்றிய விதியாகலானும், இச்சூத்திரம் வருமொழி வரையறைபற்றிய விதியாக லானும், இரண்டையும் ஒரு சூத்திரமாக்காது வெவ்வேறாகக் கூறினா ரென்பது கருத்து. 9. நியமித்ததென்றது. சினைநிலைக்கிளவி என்னுஞ் சூத்திரத்தானே சினைக்கு ஐயுங் கண்ணும் வருமென்று கூறியதனானே, முதலோடு சேர்ந்த சினைக்கண்ணும் இரண்டும் வரும் என எண்ணியதை. முதற்கு அது வந்தால் சினைக்கு (கண்வாராது) ஐ மாத்திரம் வரும் என நியமித்ததென்றபடி. ஆதலின் இது நியமச் சூத்திரமாகும். 10. சுருங்கும் என்றதனால் அங்ஙனம் வையாதொழிந்தால், ஐயையும் கண்ணையும் அதனோடு சேர்த்துச் சூத்திரஞ் செய்யவேண்டும்; அதனால் சூத்திரம் விரியுமென்பது பெறப்படும். 11. ஆய் என்னும் வினையெச்சம் ஆகாவென்பதனோடு முடியும். எனவே சொல்லுவான் குறிப்பின்படி முதல்சினையாயும், சினைமுதலாயும் வரும் என்றபடி. அங்ஙனம் மாறிவருங்காலும் முன்னிரு சூத்திரங்களுட் கூறியபடி முதற்குக்கூறிய உருபு முதற்கும், சினைக்குக்கூறிய உருபு சினைக்குமே வரும். அஃதாவது, யானையது கோட்டைக் குறைத்தான் என்றவழி முதற்கண்வந்த அவ்வுருபே. கோட்டை முதலாகக்கருதிக் கோட்டது நுனியைக் குறைத்தான் என்றவழியும் வருதல். 12. ஏகதேசம் - ஓரிடம். இங்கே உறுப்பைக் குறித்துநின்றது. முன் (வேற்று-19) ஒருவழியுறுப்பென்றார் ஆசிரியர். 13. முதற்கோதிய உருபு - முன்னிரு சூத்திரங்களானும் முதற்கோதிய உருபு என்றபடி. 14. குப்பையென்பது தொக்க பல பொருளல்லது. தொக்கபல பொருளின் வேறாய் அப்பொருளானியன்று தானொரு பொருளாய் இருப்பதில் லாமையால் அதனை முதலெனவேண்டார்; அதனால் வேறு கூறினா ரென்க. அல்லது இன்மையின் என வியைக்க. குப்பையென்பது பல பொருட் கூட்டமாவதன்றிப் பலபொருளானியன்றதொரு பொருளா காமை யறிக. எனவே குப்பை பலபொருளானியன்றதொரு பொருளா யிருப்பின் அதனை முதலுஞ் சினையுமாகப் பிரிக்கலாம். அங்ஙன மில்லாமையின் ஆகாதென்றபடி. 15. `அதனோடியைந்த ஒருவினைக்கிளவி' (வேற்றுமை இயல் 13-ம் சூத்திரப்பகுதி) 16. பிறிதுபொருள் என்பதற்கு வேறுவினையொடு என்று கூறலாம். 17. வேற்றுமையோத்தின்கண் விசேடவிலக்கணவதிகாரம்பட்டின்று என்றது-ஆண்டு விசேடவிலக்கணத்தைச் சொல்லுமதிகாரம் பொருந்தி வரவில்லை என்றபடி, பொருந்திவரின் ஆண்டும் வைக்கலா மென்பதாம். `ஒரு பொருள்' என்றது அதனோடியைதல் என்னும் பொருளை. இப்பொருட்கண் விசேடவிலக்கணமாவது ஒடுச்சொல் உயர்பின்வழித்தாதல். 18. ஒரு சார்வினைச் சொல் என்றது வினையெச்சத்தையும் பெயரெச்சத் தையும், அவை வினையியற்கண் முன் ஓதப்பட்டனவேனும் என்றபடி. 19. அவற்றிற்கு என்றது மூன்றையும் ஐந்தையும். தன்னென்று ஒருமையாற் கூறியது ஒவ்வொன்றையும் நோக்கி, மூன்றாம் வேற்றுமைக்கு ஏதுப் பொருள் தனக்குரியவாற்றாற் றன்பொருளாயினவாறு போலப் பிறி தொன்றாகிய ஐந்தாம் வேற்றுமைக்குரியவாற்றால் அதன் பொருளா தலும் உடைய ஐந்தாம் வேற்றுமைக்கும் அவ்வாறே கொள்ளுங்கால் அவ்வாயிலான் ஒன்றுடனொன்று மயங்கினவெனவே படும். அன்றி, ஒருபொருட்கண்ணே இரு உருபுஞ்சென்று மயங்குதலின் மயக்க மெனினுமமையம். புணராது வரும் இன்னும் ஆனுமென்க. புணராது வரும் என்னும் வினைகளுக்குக் கருத்தா இன்னும் ஆனும். 20. ஆக்கமொடுபுணர்ந்த ஏதுக்கிளவி என்பது காரகவேதுவைக் குறிக்கு மன்றி, ஞாபகவேதுவைக் குறியாமையின் ஞாபகவேதுக்கண் இன்னும். ஆனும் ஒத்தவரவினவல்ல என்பது கருத்தாகும். 21. அவ்வாறு பயன்படுவன வென்றது, வானையும், கோலையும்; அவ் விரண்டும் உயிரும் குடியுமாகிய அவ்விரண்டினது இன்றியமை யாமைக்கு ஏதுவாதலுடைமையினென்க. 22. இன்றியமையாமை - இல்லாமல் முடியாமை. எனவே வானாகிய மழையை இன்றியமையாமையுடையது உயிரும், கோலாகிய நீதியை இன்றியமையாமையுடையது குடியும் என்க. அவையின்றி வாழமாட்டா வென்பது கருத்து. கண்ணுட்குத்தினானென்புழிக் கண் குத்துதற்கு இடமாதலன்றிக் குத்தப்படுதலிற் செயப்படுபொருளாதலும் பெறப் பட்டாற்போலவென்க. வானும் கோலும் நோக்குதற்குத் தாம் காரணமாவ தோடு நோக்கப்படுதலுமுடைமையிற் செயப்படு பொருளா தலுமுடைய வென்றபடி. 23. ஆறனுருபு அஃறிணைப்பா றோன்றல் - சாத்தனது சாத்தன என்பன. சாத்தனுடையது சாத்தனுடையன என்று குறிப்புவினைப் பெயராகி நின்றவழி அஃறிணை ஒருமைப்பாலும் பன்மைப்பாலுந் தோன்றுதல். 24. `இதனது இதுவிற்று' என்னும் பொருள் அஃறிணைப் பொருளில் வருதலால் அதற்காரணமாகிய யானையது கோடு கூரிது என்பதன்கண் யானைக்குக் கோடு கூரிது என நான்காவதும் ஒப்பச் செல்லும்; உயர்திணைத் தொகையின்கண் நான்காவது மாத்திரமே சேறலின் இதனை வேறுகூறினாரென்பது. 25. புலிகொல்யானை என்புழிப் புலியைக்கொன்ற யானையோ, புலியாற் கொல்லப்பட்ட யானையோ என அறிவது பின்வருஞ் சொல்லா லென்பது இச் சூத்திரத்தின் கருத்து. பனுவலென்றது ஈண்டுச் சொல்லை. 26. கொன்றது கொல்லப்பட்டது என்னும் வேறுபாடென்றது. புலிகொல் யானைக்கோடு என்புழிப் புலியைக் கொன்ற யானையோ புலியாற் கொல்லப்பட்ட யானையோ என்னும் பொருள் வேறுபாட்டை. அது சொல்லுவான் குறிப்பான் அறியப்படுமென்பதாம். 27. புலியைப்போற்றிவா என்றது உன்னைக் கொல்லாமற் புலியைப் போற்றி வா என்றபடி. இது இரண்டாவதற்கோதிய `காப்பின் ஒப்பின்' என்னுஞ் சூத்திரத்துக் காப்பின் கண்ணடங்கும். இனி, தன்னையவன் போற்றிவருதற்குக் காரணம் புலியாதலிற் புலி ஏதுப்பொருளுமாம். 28. இனிக் காப்பின்கண் அடக்காது ஓம்படைப்பொருண்மையை இரண்டு உருபிற்கும் எய்துவித்தாரெனினுமமையும். 29. யானைக்காடு என்பதும் காட்டுயானையென்பதும் வாழ்ச்சிக்கிழமை யில் வந்தாலும், உறைநிலத்தோடு ஆறாவது வந்தவழியே ஏழாவது விரியுமென்றபடி. காட்டதியானையென்புழி உறைநிலமாகிய காட்டோடு ஆறாவது வருதல் நோக்குக. உறைநிலம் - வாழுமிடம். பின் - ஈண்டு இடப்பின். 30. கொடை எதிர் கிளவி - கொடையெதிர் பொருளையுணர்த்துஞ் சொல். `தருசொல் வருசொல்' (கிளவி 29). 31. கொடையை விரும்பி மேற்கோடல் என்றது நேர்தலை. நேர்ந்த பொருள் அவர்க்குரிமையாதலின் ஆறாவதும் வருமென்பதாம். 32. அஃது - மேற்கொள்ளப்பட்ட அப்பொருள். திரிபின்றி - தப்பாமல். 33. பழியினஞ்சும், பழியை அஞ்சும் என்புழி இரண்டும் வெவ்வேறு பொருளில் வந்தனவாதலின் மயக்கமாமாறு இல்லையெனின், அற்றன்று; ஈண்டு ஏதுப் பொருளாய் நின்றபழியே அஞ்சப்படுவதுமாய் நிற்றலின் இரண்டும் ஒரு பொருட்கண்வந்த மயக்கமேயாம். 34. கடவுளருக்குக் கூறையின்மையின் கோட்படுதலு மில்லையென்க. ஏதுப் பொருட்கண்வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் என்றது 9ஆம் சூத்திரப் பொருளை. 35. சாத்தனொடுவெகுண்டான் ஏதுப்பொருள். இது மூன்றாவதற்கோதிய ஏதுப்பொருள். 36. கடலொடு காடொட்டாது - அதனொடு மயங்கலாயடங்கும். 37. சிதைந்து - தொன்னெறி குலைந்து. 38. உருபு தொடர்ந்துவருங்காலு மடுக்கிவரவேண்டுமென்பார் உருபு தொடர்ந்தடுக்கியவென்றும், ஒருசொல்லாற் பொருண்முடிக்கக் கூடிய னவே அடுக்கல் வேண்டுமென்பார் பொருள் சென்மருங்கி னென்றுங் கூறினார். 39. சோற்றையுங் கூறையையு முண்டுடுத்தி என்பது. சோற்றையுண்டுங் கூறையை யுடுத்தும் என நிரனிறையாய் முடிதலின் அவை அடுக்கி முடியாதன என்றபடி. 40. இறுதியு மிடையும் எல்லா உருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் என்பதற்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் மூவரும். `வேற்றுமைத்தொடர் இறுதிக்கண்ணும் இடைநிலத்தும் ஆறுருபும் தத் தமக்கு ஓதியபொருட்கண் நிற்கு' மென்று பொருள்கூற, தெய்வச்சிலையார் `முதற்கணின்ற வேற்றுமையுருபே பொருளொடு முடிதலன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லாவுருபும் விரவிவந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார்' என்று பொருள்கூறி, குயவன் குடத்தைத் திரிகையால் அரங்கின்கண் வனைந் தான் என உதாரணங் காட்டுவர். ஒருவாக்கியத்தின்கண் முதலில் நிற்கு மெழுவாயும் இறுதியில்நிற்கும் பயனிலையுமொழிய மற்றைய வெல்லாம் இடைநிற்பனவாகவும், அவற்றின்கண் முதலுமிடையும் இறுதியும் வகுத்துக்கோடல் மரபன்மையின் அஃதெவ்வாறு பொருந்தும்? பல உருபு விரவி இடைநின்று ஒருமுடிபுகோடலை இச் சூத்திரத்தாற் கூறுதலே ஆசிரியர்க்குக் கருத்தாயின், `விரவிநின்று எல்லா உருபும் ஒருவினைகொள்ளு'மென்று கூறுவாரன்றி இங்ஙனம் கூறார். ஆதலின் மூவருங்கூறிய உரையே பொருத்தமாகும். அங்ஙனேல் பல உருபும், இடைவிரவற்கு விதிகூறவேண்டாமோ எனின்? உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள்சொன் மருங்கே என்னும் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கொண்டவாறு பொருள் கொள்ளின் அதுவுமடங்கும். அடுக்கென்பது ஒரு சொல் அடுக்கி வருதலே யாதலின், ஓருருபே அடுக்கிவரல் வேண்டுமெனின்? பல வகைப் புத்தகங்களை யடுக்கினும் அவ்வடுக்குப் புத்தகவடுக்கே யாமாறு போலப் பலவகை உருபடுக்கினும் அதுவும் உருபடுக்கென்றே சொல்லப்படுமாகலின் பலவுருபு அடுக்குதலும் அடுக்கென்றே கொள்ளப்படுமென்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். இளம்பூரணர் கருத்துமதுவே. சேனாவரையர் கோட்டைநுனிக்கட் குறைத்தான் என்பனபோல் வருனவற்றில் நுனிக்கண் என்பது குறைத்தான் என்பதற்கடையாய் ஒரு சொல்லாய் நிற்குமென்று கூறினரன்றி, பலஉருபு அடுக்கிவாராது என மறுத்துக் கூறாமையால், அங்ஙனம் கோடலும் ஒருவாறு பொருந்து மென்பதும் அவர்க்குக் கருத்தேயாம். அன்றிச் சேனாவரையர் அடையென்று கூறின மையானே. அவை அடுக்கி ஒருமுடிபுபெறும் என்பதும் மறுக்கப்பட்ட தென்றே கொண்டாலும் மறுக்கப்பட்ட அதற்கு விதியும் வேண்டிய தில்லை. அடை என்றே கொள்ளப்படும். ஆதலினானும் தெய்வச் சிலையார் கருத்துப் பொருந்தா தென்க. இனித் தெய்வச்சிலையார் இறுதியுமிடையும் முதலும் உருபுவிரவி ஒருமுடிபு கோடற்கு இச்சூத்திரத்தால் விதிகூறினமையானே, அவ் வுருபுகள் தனித்தனி வினைகொண்டு முடிதலும் கூறவேண்டுமென்பது பற்றிப் பிறிதுபிறிதேற்றலும் என்று வருஞ் சூத்திரத்தா லதனைக் கூறினாரென்று கூறுவர். பொருள் சென்மருங்கின் ஒருவினைகொண்டு முடியும் எனவே பொருள்செல்லாவிடத்துத் தனித்தனிவினையான் முடியுமென்பது பெறுதுமாகலின் அதனை விதந்து கூறல்வேண்டா என்க. ஒருவினைகொண்டு முடிதல் கூறினமையின், தனித்தனி வினை கொண்டு முடிதலும் மாணாக்கர்க்கையம் நிகழாமைக் கூறவேண்டு மெனின்? தனித்தனி வினையொடுமுடிதலே அதற்கு இயல்பென்பது அவரியல்பாகவே அறிந்ததாகலான் அதன்கண் அவர்க்கு ஐயம் நிகழாமையான் அது பொருந்தாதென்க. இனித் தொடரிறுதிக்கண் உருபு விரிந்துநிற்றல் எதனாற் பெறப்படு மெனின்? ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான என்ற சூத்திரத்தாற் பெறுதுமென்றார். அது பொருந்தாது. ஏனெனின் அச்சூத்திரம் இறுதியிற்றொகுமென்று விதித்தவற்றுள் இவை தொகும் இவை தொகவென்று வரையறுக்க வந்ததேயன்றி விரியை உணர்த்த வந்ததன்றாகலின். இறுதியிற்றொகா என்றதனானே விரிந்து நிற்றலும் பெறப்படுமெனின்? இறுதியிற்றொகா என்ற விலக்கினாலேயே உருபு மாறி இறுதியிலு நிற்குமென்பது பெறப்படவைத்து, அங்ஙன நிற்கு முருபுகளுள் இவைதொகும் இவை தொகா என்று வரையறை கூறினா ரெனறல் சூத்திரஞ் செய்யும் வன்மையற்றவர் ஆசிரியர் என்பதைப் புலப்படுத்தி அவரை இழிவுபடுத்தலானும், முன்னர்த் தொகுமெனக் கூறியவற்றிற்கே பின்னர் இவை தொகும்; இவை தொகா என வரையறை கூறல் வழக்காறாதலானும், இறுதியிற் றொகா என்றதனானே தொகுதலும் முன்னர் ஆசிரியர் கூறியுள்ளார் என்பதும், அதுமுதற் சூத்திரத்துட் கூறிய `உருபுதொக வருதல்' என்றதே என்பதும் பெறப்படுதலினாலும், இறுதியு மிடையு மென்பன அதிகாரத்தான் வர உருபு தொகுதல் இறுதி யிலும் இடையிலும் என்பது பெறப்படுமாதலானும், அவர் கருத்துப் பொருந்தாதென்க. ஆதலால் `இறுதியுமிடையும்' என்னும் சூத்திரத் திற்கும், `பிறிது பிறிதேற்றலும்' என்னுஞ் சூத்திரத்திற்கும் மூவருங் கூறிய பொருளே பொருத்தமாமென்பது நன்கு துணியப்படும். 41. ஆடை சாத்தனது என்புழி முற்றாயும். கூகை குன்றத்தின்கண் என்புழி. கூகையானது குன்றத்துக்கண் உள்ளது என்றும் பொருள் படுமாகலின் அவை இறுதியில் வாரா. 42. அந்நிலைமைக்கண் என்றது முற்றாய அந்நிலைமைக்கண் என்றபடி. 43. இவ்வரையறை என்றது - ஆறாவதும். ஏழாவதும் இறுதியில் நில்லா என்ற வரையறையை. இறுதியுமிடையும் உருபுகள் விரிந்து நிற்கும் என்றமை யினானே அவ்வுருபுகள் இரண்டிடத்தும் தொக்கும் வரு மெனத் தொகைக் கிடம்படுத்தலானே இறுதியிற்றொகாதவற்றிற்கு மிடம்படுத்தற்கும் வகுத்துக் கூறினாரென்பது கருத்து. 44. இச்சூத்திரத்துப் பிறிது பிறிதேற்றல் இயைபின்றிக் கூறுப்பட்டதெனின், உருபுகளின் விரி ஓதப்பட்ட அதிகாரமாதலினாலே அதன்கண் பிறிதோருருபு பிறிதோருருபை ஏற்றலும் விரி இலக்கணமாதலோடு மயக்க விலக்கணமுமாதலின் இயைபுடைத்தேயாமென்க. இனி, "`பிறிதுபிறிதேற்றல்' என்பதனை ஆறனுருபு ஏனை உருபேற்குமெனப் பொருளுரைத்துச் சாத்தனதனை......... என உதாரணங்காட்டுபவா வெனின். அவ்வாறு வரும் அதுவென்பது உருபு நிலையொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்புழி. இடைநின்ற அதுவென்பது உருபாயிற் சாத்தனைக் கொணர்ந்தான் என்று பொருள் படவேண்டும்; அவ்வாறு பொருள்படாது (அதனை என) உடைமைப் பொருளையே காட்டலானும் அஃறிணை ஒருமை அது என்னும் பெயர்க்காகலானும் சாத்தனதனைக் கொணர்ந்தான் என்பது சாத்தன் புத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற்போல்வதல்லது உருபு உருபினை யேற்றல் என்றல் அமையாதென்க" என்ற சொற்றொடரால் உரை யாசிரியர் முதலியோர் கொள்கையைத் தெய்வச்சிலையார் மறுத்தனர். அது பொருந்தாது. என்னை? சாத்தனதனை என்றவிடத்துச் சாத்தனதனை என்பது. சாத்தனடையதனை என்று பொருள்படுதலின், சாத்தனுடையது என்பது ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளையும், ஐ இரண்டாம் வேற்றுமைப் பொருளையும் தருதலின் ஆறாம் வேற்றுமை இரண்டாமுருபு முதலியவற்றை ஏற்குமென்றார். ஆதலின் பிறிது பிறிதேற்றலை விளங்காது சாத்தனதனை யென்பதைச் சாத்தன் அதனை என்று பிரித்துச் சாத்தன் புத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற்போல நின்றது எனக் கூறி மறுத்தல் எவ்வாறு பொருந்தும்? ஆறாம் வேற்றுமை யதிலக்கணம் விளங்காமையே இங்ஙனம் மறுத்தற்குக் காரணம் என்க. இதன் விரிவைப் `பிறிது பிறிதேற்றல்' என்னுந் தலைப்பெயரோடு எம்மாற் `செந்தமி'ழில் எழுதி வெளிப்படுத்தப்பட்ட பொருளுரை பின்னர் அநுபந்தமாகச் சேர்க்கப்படும். அது நோக்கி அறிந்து கொள்க. 45. என்னும் - சிறிதும் "என்னும் பனியாயிரவெல்லாம் வைகினை" (பரி-6ஆம் பாடல் 81ஆம் அடி) என்பதிலும் அப்பொருளில் என்னும் என்பது வருதல் காண்க. மணற்கீன்ற முளை என்புழி ஈனுதற்றொழிலை மணல் ஏற்பதன்றாகலான் இடமாயிற்று. எனவே மணலின் கண்ணெனத் திரிக்கவேண்டு மென்பதாம். 46. குகரமும் ஐகாரமும் ஈறுகெட வென்றது - அவற்றையுடைய சொல் ஈறுகெட வென்றபடி. எனவே ஆசிரியற்கு என்பதில் `உ' கெட அகரம் வரும். காவலோனை என்பதில் `ஐ' கெட அகரம் வருமென்றபடி. 47. உவமை நிலைக்களமென்றது - உவமை பிறக்குமிடமென்றபடி. உவமை பிறக்குமிடம்: சிறப்பு, நலன், காதல், வலி என்பன. (உவமவியல் சூ-ம் 4) 48. நான்காவது தொடர்மொழிக்கண். பிறவேற்றுமைப் பொருளோடு மயங்குவதைச் சொல்லவந்த ஆசிரியர் அந்நான்காவது ஆறாவதோடு தொகைமொழிக் கண்ணும் மயங்குமாதலின் அதனையும் சுருங்கச் சொல்லல்பற்றித் தொடர்மொழிக்கண் மயங்கும் மயக்கத்தோடு வைத்தாரென்க. 49. வனையப்பட்ட குடத்தைக் கொள்வானென்றது இன்னதற்கு என்பதுபட வந்தது. வனைந்ததனானாயபயனென்றது. இதுபயன் என்பதுபடவந்தது. வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் என விரியுமிடத்து வனைதலாகிய செயல் செயப்படுபொருளின் தன்மைத்தாய்க் காரக மாயிற்று. எனவே வனைதல் சிறப்புத்தொழிலும், செய்தல் பொதுத் தொழிலுமாம். 50. கொளலோகொண்டான் என்பது கொள்ளுதலையோ செய்தான் என விரிதலின் கொண்டான் என்பதிலுள்ள கொள்ளுதல் பொதுத் தொழிலாகிய செய்தல் என்னும் பொருட்டாய் நின்றது. "உண்ணலு முண்ணேன்; வாழலும் வாழேன்" (கலி-பாலை-23) என்பனவும் இப்பொருள். 51. செய்வது முதலிய முதனிலை, வேற்றுமையோத்திற் கூறப்பட்ட தென்ற தென்னையெனின்? செய்வது எழுவாயாயும் மூன்றாவதாயும், வினையும் செயப்படுபொருளும் இரண்டாவதாயும், கருவி மூன்றாவதாயும், இன்னதற்கு இதுபயன் நான்காவதாயும், நிலமும் காலமும் ஏழாவ தாயும் சேர்ந்தன. இன்னும் வனைந்தவன் கொடுத்த குடம் அவனினின்றும் நீங்குதல் ஐந்தாவதாயும், ஒருவன் அதை ஏற்றுக்கொண்ட வழி அஃது அவனுடைமையாதல் ஆறாவதாயும் சேருமாறும் உணர்க. கருவிக்கண் அடங்குமேதுவும் ஐந்தாவதற்கும் வரும். "ஒருவன் ஒன்றை ஒன்றானியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனதாக்கி ஓரிடத்து வைத்தான்" எனத் தெய்வச் சிலையார் கூறிய வாக்கியம் ஈண்டு நோக்கத்தக்கது. வேற்றுமை யுருபுகளின் பொருள் வினைநிகழ்ச்சிக்குக் காரணமாதல்பற்றி அவற்றை இச்சூத்திரத்தாற் றொகுத்துக் கூறினார். 52. கொடி ஆடிற்று என்புழி, ஆடுதல்வினைக்குச் செயப்படுபொருளும், ஆடுதலை ஏற்பதும், ஆடுதலால் வரும் பயனுமாகிய காரணங்க ளில்லை. 53. ஒருபெயர்ப்பட்டதென மேலும் வந்தவாறு கண்டுகொள்க என்பது. "ஆகு பெயர்ப்பட்டு அதன்மேலும் வந்தவாறு கண்டுகொள்க" எனப் பழைய ஏட்டுப் பிரதியை நோக்கி எழுதிய ஒரு கையெழுத்துப் பிரதியிற் காணப்படுகிறது. அதுவே பொருத்தமாம். ஏனெனின்? மேல் வந்தமை காணப்படாமையின். 54. அவ்வென்றது - அவை என்னும் பொருட்டு; என்றது அன்மொழித் தொகையை. 55. வினையெச்சம் முதலாயினவென்றது - வினையெச்சமும், என வெனெச்சமும், ஒழியிசை யெச்சமும், உம்மை யெச்சமும் முதலாயின வற்றை, வினையெச்சத்தை வினையியலுள்ளும். எனவெனெச்சம் முதலிய வற்றை இடையியலுள்ளுங் கூறியவாறு போலவென்க. ஈண்டு என்றது வேற்றுமை மயங்கியலுள் என்றபடி ஆகுபெயர் ஏனைய வேற்று மையை ஏற்றிநிற்றல்; கடுத்தின்றான் முதலியன. குழிப்பாடி நேரிது என்பது எழுவாய்வேற்றுமை. ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் வேறென்பதற்குத் தெய்வச் சிலையார் காட்டிய காரணத்தை. நாம் செந்தமிழில் வெளிப்படுத்திய ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் என்னும் பொருளுரையின் கண் மறுத்துக் கூறி உள்ளோம். அப்பொருளுரை இந்நூலுக்கு அனுபந்த மாகத் தரப்படும். அதனைப் படித்து அறிந்துகொள்க. 56. இச்சூத்திரத்துள் `வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்' என்பதை வேறாகப்பிரித்து ஒரு சூத்திரமாகக் கொண்டு, இது விட்டும் விடாத ஆகுபெயரைக் குறித்ததென்று சிலர் கூறுவர். வடமொழி விதிகளைக் கொண்டு வந்து புகுத்தற்குத் தொல்காப்பியச் சூத்திரங்களைச் சிதைத்துப் பொருள் கோடல் பொருந்தாமையிற் சேனாவரையர் கருத்தே பொருத்தமாம். விட்டும் விடாத ஆகுபெயர் `கிளந்த வல்ல வேறுபிற தோன் றினும்' (வே-மய-34) என்னும் புறனடையாற் கொள்ளப்படும் என்க. 57. ஒன்று இரண்டு முதலியன எண்ணுப் பெயர் எண்ணப்படுபொருளையும் உணர்த்துமாகலின் ஆகுபெயரன்றென்பது கருத்து. பெயரியல் 14ஆம் சூத்திரத்துள் எண்ணுப்பெயரையும் பொருளைக் குறிக்கும் பெயர் களோடு வைத்து எண்ணினமையாற்றான் ஆசிரியர் எண்ணை விலக்கி ஈண்டு அளவும், நிறையும் என்று ஓதியிருக்க வேண்டுமென்று கருதியே, சேனாவரையர் எண்ணுப்பெயர் எண்ணப்படும் பொருட்கு முரியவாக லின் ஆகுபெயர் எனப்படா என்றார். 58. ஏறு, குத்து என்பன நன்னூலார் கூறிய தொழிலாகு பெயருளடங்கும். விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவை யெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினாப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல் இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல் லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல் ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல் இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாக வுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன் வென்றும் கூறுவர் ஆசிரியர்.நான்காவது - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 203-204 நான்காவது விளிமரபு 118. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. நிறுத்த முறையானே விளிவேற்றுமை யுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து விளிமரபென் னும் பெயர்த் தாயிற்று. இதன் பொருள்: விளியென்று சொல்லப்படுவன தம்மையேற்கும் பெயரொடு விளங்கத் தோன்று மியல்பையுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. 1விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருட்டாதல் பெயரானே விளங்குதலிற் கூறாராயினார். 2ஈறுதிரிதலும், ஈற்றயனீடலும், பிறிது வந்தடைதலும், இயல் பாதலு மென்னும் வேறுபாடுடைமையான் ‘விளியெனப் படுப’ வென்றார். கொள்ளும் பெயரோ டெனவே, கொள்ளாப் பெயருமுள வென்பதாம். இயல்பு விளிக்கண் திரியாது நின்ற பெயரீறே விளியெனப் படுதலின், 3ஆண்டுந் தெற்றென விளங்கு மென்பார் ‘தெளியத் தோன்றும்’ என்றார். (1) 119. அவ்வே இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப. இதன் பொருள் : விளி கொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவையென மாணாக்கனுணர்தற்பொருட்டு அவை யிவ்வோத் தினகத்துப் பொருள்படக் கிளக்கப்படும் என்றவாறு. இது கூறுவாமென்னுந் தந்திரவுத்தி. 4அவ்வே’யெனக் ‘கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் (சொல். 118) எனப் பெயரா னுணர்த்தப்படுவதாய் நின்ற விளியைச் சுட்டிய பெயரைச் சுட்டுதல் இடருடைத் தெனின், விளிவேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின், அப்பெயரைச் சுட்டவே விளியுஞ் சுட்டப் பட்டனவேயாம்; அதனான் இடரின் றென்பது. இவ்வாறுரையாது அவ்வேயெனச் சுட்டப்பட்டன விளி வேற்றுமை யெனின்:- வருஞ் சூத்திரத்தின் அவைதா மெனப்பட்டனவும் விளி வேற்றுமை யேயாய் ‘மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர்’ (சொல். 120) என்பதனோடு இயையாவாமென்பது. விளி கொள்ளும் பெயரும், கொள்ளாப் பெயரும், உயர்திணை விரவுப்பெயர் ஈண்டுயர் திணைப் பெயருள்ளு மடங்குதலும், நுண்ணுணர்வினார்க் கல்லது அறியலாகாமையின், ஏனோரும் அறிதற்கு அவை கிளக்கப்படு மென்பார் ‘இவ்வென வறிதற்கு’ என்றார். (2) 120. அவைதாம் இ உ ஐ ஓ வென்னு மிறுதி யப்பா னான்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. இதன் பொருள்: கிளக்கப்படுவனவாகிய பெயர்தாம் இ உ ஐ ஓ என்னு மிறுதியையுடைய அக்கூற்று நான்கு பெயரும் உயர்திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர் என்றவாறு. அஃறிணைப்பெயர் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழியும், விரவுப்பெயர் உயர்திணைக்கண் வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராமென்றற்கு ‘உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய’ வென்றார். உதாரணம்: ‘சுடர்த்5தொடீ கேளாய்’ (கலி. 51) எனவும், சாத்தீ எனவும், அவை உயர்திணைப் பெயராய் விளியேற்றவாறு கண்டு கொள்க. 6மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர் அப்பால் நான் கென்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து, ஒரு சொன்னீர் மையவாய், அவைதாமென்னும் எழுவாய்க்குப் பயனிலையாயின. அஃதேல், 7உயர்திணை விரவுப்பெயரைப் பொருள்பற்றி உயர்திணைப் பெயர்க்கண் அடக்கினாரா லெனின், முன்னர் ‘விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (சொல். 150) எனல் வேண்டாவாம் பிறவெனின், நன்று சொன்னாய்! ‘விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ என்புழி, விரவுப்பெய ரென்னாது அஃறிணை விரவுப்பெயரென அஃறிணைக்கண் வருவனவற்றை விதந்தோதுதலான், உயர்திணைக்கண் வருவன உயர்திணைப் பெயருள் அடங்கு மென்பதற்கு அச்சூத்திரமே கரியாயிற் றென்பது. அல்லதூஉம், புள்ளியீற்றுயர்திணைப் பெயர்க்கண் அவ்வீற்றுயர்திணை விரவுப் பெயருமடங்கி விளிகோட லெய்துதலானன்றே, தாம் நீயிரென்பன விளி கொள்ளாவென எய்தியது விலக்குவாராயிற்று; அதனானு மடங்குதல் பெறுது மென்பது. அல்லதூஉம், உயர் திணையதிகாரத்து முறைப்பெயர் விளியேற்குமாறு கூறினமையானும் பெறப்படும். விரவுப்பெயரை உயர்திணைப் பெயரொடு மாட்டெறிபவாகலின், மாட்டேற் றான் முறைப் பெயர் ஆகாரமும் ஏகாரமும் பெற்று விளியேற்ற லெய்தாமையின் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரிய ரெனின், அக் கருத்தினராயின் அஃறிணை யென்னுஞ் சொல் லொழித்துக், ‘கிளந்த விறுதி அஃறிணை விரவுப் பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (சொல். 150) எனவும், இதன் பின் ‘முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே’ (சொல். 126) எனவும், இதன்பின்னகார ளகார வீற் றிருவகை முறைப்பெயரு மடங்கப் ‘புள்ளி யிறுதி யேயொடு வருமே’ (சொல். 151) எனவும் ஓதுவார்மன் னாசிரியர்; என்னை? மயங்கக் கூற லென்னுங் குற்றமும் நீங்கிச் சூத்திரமுஞ் சுருங்குமாதலான். அவ்வாறோ தாமையானும், முறைப் பெயரே யன்றித் தான் நீயி ரென்பனவும் ஈண்டுக் கூறப்பட்டமையானும், உரையா சிரியர்க்கு அது கருத்தன்றென்க. (3) 121. அவற்றுள் இ ஈ யாகும் ஐயா யாகும். மேற்கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு கூறுகின்றார். இதன் பொருள்: அவற்றுள் என்பது அந் நான்கீற்றினுள் என்றவாறு. நம்பி, நம்பீ என இகரம் ஈகாரமாயும், நங்கை, நங்காய் என ஐகாரம் ஆயாயும் ஈறு திரிந்து விளியேற்கும் என்றவாறு. (4) 122. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். இதன் பொருள் : கோ, கோவே எனவும், வேந்து, வேந்தே எனவும், ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு. (5) 123. உகரந் தானே குற்றிய லுகரம். இதன் பொருள்: மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம் என்றவாறு. திரு, திருவே எனச் சிறுபான்மை முற்றுகரவீறு முளவேனும், 8ஓதியமுறையானே விளியேற்பன குற்றுகரவீறே யாகலின் குற்றியலுகர மென்றார். (6) 124. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற் தாம்விளி கொள்ளா வென்மனார் புலவர். இதன் பொருள் : மேற்கூறப்பட்ட நான்கீறுமல்லா உயிரீறு உயர் திணைக்கண் விளி கொள்ளாவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. கொள்வன விவையென வரையறுத் துணர்த்தவே, ஏனைய கொள்ளா வென்பதுணரப்படும், வரையறைக்குப் பயன் அதுவாக லான்; அதனானிச் சூத்திரம் வேண்டாவெனின், அஃதொக்கும்; வரையறையாற் பெறப் படுவதனையே ஒருபயன் நோக்கிக் கூறினார். யாதோ பயனெனின், ஏனையுயிர் விளிகொள்ளா வென, மேற்கூறப் பட்ட உயிர் கூறியவாறன்றிப் பிறவாற்றானும் விளி கொள்வனவு முளவென்ப துணர்த்துதற் கென்பது. உதாரணம்: கணி, கணியே; கரி, கரியே என வரும். பிறவுமன்ன. தாமென்றதனான் ஏனையுயிர் தம்மியல்பாற் கொள்ளாவா யினுஞ் சொல்லுவான் குறிப்புவகையாற் கொள்வனவுமுள வென்பதாம். மகவென்பது விளி பெறாதாயினுஞ் சொல்லுவான் குறிப்பான் மகவேயென விளியேற்றவாறு கண்டுகொள்க. (7) 125. அளபெடை மிகூஉ மிகர விறுபெயர் ரியற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இதன் பொருள்: அளபெடை தன்னியல்புமாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர் இ ஈ யாகாது இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையை யுடைய வாம் என்றவாறு. அளபெடைமிக் கியற்கையவாகுஞ் செயற்கைய வென்னாது ‘மிகூஉ மிகர விறுபெயரென’ 9அநுவதித்தாரேனும், மாத்திரைமிக் கியல்பா மென்பது அதனாற் பெறப்படும். உதாரணம்: தொழீஇஇ எனவும், தொழீஇஇஇ எனவும் வரும். இ ஈ யாகாமையின் ‘இயற்கைவாகு’மென்றும், மாத்திரை மிகுத லாகிய செயற்கையுடைமையாற் ‘செயற்கைய’ வென்றுங் கூறினார். இகர விறுபெயரென்பது இகரத்தானிற்ற பெயரென விரியும். (8) 126. முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே. இதன் பொருள்: முறைப்பெயரிடத்து ஐயென்னு முடிபு ஆயாகாது ஆவொடு வருதற்கு முரியனவுள என்றவாறு. உதாரணம்: அன்னை, அன்னா எனவும்; அத்தை, அத்தா எனவும் வரும். உம்மையான் அன்னாய் அத்தாய் என ஆய் ஆதலுமுடைய வென்பதாம். 10உம்மை பிரிந்து நின்றது. (9) 127. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். இதன் பொருள்: நான்கீற் றண்மைச்சொல்லும் இயற்கையாய் விளி யேற்கும் என்றவாறு. அண்மைக்கண் விளி கொள்வதனை ‘அண்மைச்சொல்’ என்றார். உதாரணம்: நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி என வரும். (10) 128. னரலள வென்னு மந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. உயிரீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்தி, இனிப் புள்ளியீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்து கின்றார். இதன் பொருள்: புள்ளியீற்றுயர் திணைப்பெயர் ன ர ல ள வென்னும் அந்நான்கீற்ற வென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. ன ர ல ள வென்னுமொற்றை ஈறாகவுடைய சொல்லை ‘னரலள’ வென்றார். (11) 129. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. இதன் பொருள் : அந்நான்குமல்லாத புள்ளியீற்றுப் பெயர் விளி கொள்ளா என்றவாறு. ஈண்டும் விளிகொள்ளா வென்றதனாற் பயன், கூறப்பட்ட புள்ளியீறு பிறவாற்றான் விளி கொள்வனவுளவென்ப துணர்த்த லாம். உதாரணம்: பெண்டிர், பெண்டிரோ எனவும், தம்முன், தம்முனா எனவும் வரும். பிறவுமன்ன. ‘விளங்குமணிக் கொடும்பூ11ணாஅய்’ (புறம். 130) என வேனைப் புள்ளி சிறுபான்மை விளியேற்றலுங் கொள்க. (12) 130.அவற்றுள் அன்னெ னிறுதி யாவா கும்மே. இதன் பொருள் : அவற்றுள் அன்னென்னும் னகர வீறு ஆவாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: சோழன், சோழா; சேர்ப்பன், சேர்ப்பா என வரும். (13) 131. அண்மைச் சொல்லிற் ககர மாகும். இதன் பொருள் : அண்மைவிளிக்கண் அன்னீறு அகரமாம் என்றவாறு. உதாரணம்: துறைவன், துறைவ; ஊரன், ஊர என வரும். (14) 132.ஆனெ னிறுதி யியற்கை யாகும். இதன் பொருள்: ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு. சேரமான், மலையமான் என்பன கூவுதற்கண்ணும் அவ்வாறு நிற்றல் கண்டுகொள்க. (15) 133.தொழிலிற் கூறு மானென் இறுதி யாயா கும்மே விளிவயி னான. இதன் பொருள்: தொழிலா னொருபொருளைச் சொல்லும் ஆனீற்றுப் பெயர் விளிக்கண் ஆயாம் என்றவாறு. உதாரணம்: வந்தான், வந்தாய்; சென்றான், சென்றாய் என வரும். விளியதிகாரமாகலான் விளிவயினான எனல் வேண்டா எனின், சொல்லில்வழி உய்த்துணர்வதென்று மறுக்க. (16) 134. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இதன் பொருள்: ஆனீற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர்போல ஆயாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: கரியான், கரியாய்; செய்யான், செய்யாய் என வரும். (17) 135. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இதன் பொருள்: ஆனீற்றளபெடைப்பெயர் இகரவீற்றள பெடைப் பெயரேபோல மூன்று மாத்திரையி னீண்டு இயல்பாய் விளி யேற்கும் என்றவாறு. உதாரணம்: 12,13உழாஅஅன், கிழாஅஅஅன் என வரும். அளபெடை மூன்றுமாத்திரையின் நீண்டிசைத்தலாகிய விகாரமுடைமையான் ‘ஆனெ னிறுதி யியற்கை யாகும்’ (சொல். 132) என்புழி அடங்காமை யறிக. (18) 136. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. இதன் பொருள் : னகரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: மகன், மகனே; மருமகன், மருமகனே என வரும். (19) 137. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. இதன் பொருள்: தானென்னும் பெயரும், அவன் இவன் உவனென்னும் சுட்டு முதற்பெயரும், யானென்னும் பெயரும், யாவனென்னும் வினாப்பெயரு மாகிய அவ்வனைத்தும், னகர வீறேயாயினும், விளிகொள்ளா என்றவாறு. (20) 138. ஆரு மருவு மீரொடு சிவணும். நிறுத்த முறையானே ரகாரவீறு விளியேற்குமா றுணர்த்து கின்றார். இதன் பொருள்: ரகாரவீற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: பார்ப்பார், பார்ப்பீர்; கூத்தர், கூத்தீர் என வரும். (21) 139. 14தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. இதன் பொருள்: மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற் பெயர்க்கும் ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமன்று என்றவாறு. உதாரணம்: வந்தார், வந்தீரே; சென்றார், சென்றீரே என வரும். அர் ஈற்றுத் தொழிற்பெயர் வந்தவழிக் கண்டுகொள்க. ஏகாரம் வருதலும் வழுக்கின்றென்றதனான், ஏகாரம் பெறாது ஈரொடு சிவணலே பெரும்பான்மை யென்பதாம். (22) 140. 15பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இதன் பொருள் : அவ் விரண்டீற்றுப் பண்புகொள் பெயரும், அவ் வீற்றுத் தொழிற்பெயர் போல, ஈரொடு சிவணியும், சிறுபான்மை ஈரோ டேகாரம் பெற்றும் விளியேற்கும் என்றவாறு. கரியார், கரியீர்; இளையர், இளையீர் எனவும்; கரியீரே, இளையீரே எனவும் வரும். (23) 141. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இதன் பொருள் : ரகாரவீற் றளபெடைப்பெயர், முற்கூறிய அளபெடைப் பெயரேபோல, மூன்று மாத்திரையின் மிக்கியல்பாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: சிறாஅஅர்; மகாஅஅஅர் என வரும். (24) 142. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. இதன் பொருள்: அவர், இவர், உவர் என வரும் ரகார வீற்றுச் சுட்டு முதற் பெயர், னகாரவீற்றுச் சுட்டுமுதற்பெயரே போல விளி கொள்ளா என்றவாறு. (25) 143. நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும். இதன் பொருள் : நும்மின் றிரிபாகிய நீயிரும், வினாவின் பெயராகிய யாவரும் என்னும் இரண்டும், மேற்கூறிய சுட்டுப்பெயரே போல, விளியேலா என்றவாறு. நீயிரென்பதனை நும்மெனத் திரியாது நும்மென்பதனை நீயிரெனத் திரிப்பினும் இழுக்காகாதென்னுங் 16கருத்தான் எழுத் தோத்தினுள் நும்மென நிறுத்தித் திரித்தா ராகலான், அதுபற்றி நீயிரென்பதனை ‘நும்மின் றிரிபெய’ ரென்றார். (26) 144. எஞ்சிய விரண்டன் இறுதிப் பெயரே நின்ற வீற்றய னீட்டம் வேண்டும். நிறுத்த முறையானே லகார ளகாரவீற்றுப்பெயர் விளியேற்குமா றுணர்த்திய வெடுத்துக்கொண்டார். இதன் பொருள்: உணர்த்தாது நின்ற லகார ளகார மென்னும் இரண்டு புள்ளியையும் இறுதியாகவுடைய பெயர்கள் ஈற்றய லெழுத்து நீண்டு விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: குரிசில், குரிசீல்; மக்கள், மக்காள் என வரும். (27) 145. அயனெடி தாயி னியற்கை யாகும். இதன் பொருள் : ஈற்றயலெழுத்து, நெட்டெழுத்தாயின் இயல்பாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: பெண்பால், கோமாள் என வரும். (28) 146. வினையினும் பண்பினு நினையத் தோன்று மாளெ னிறுதி யாயா கும்மே விளிவயி னான. இதன் பொருள்: 17வினையின்கண்ணும் 18பண்பின் கண்ணும் வரும் ஆளீற்றுப் பெயர் இயல்பாகாது, ஆயாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: நின்றாள், நின்றாய் எனவும்; கரியாள். கரியாய் எனவும் வரும். ‘விளிவயினான’ வென்பதனை முன்னும் பின்னுந் தகுவன வற்றொடு கூட்டுக. (29) 147. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. இதன் பொருள்: ளகாரவீற்று முறைப்பெயர், னகாரவீற்று முறைப் பெயர் போல, ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: மகள், மகளே; மருமகள், மருமகளே என வரும். (30) 148. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரு முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இதன் பொருள்: அவள், இவள், உவளென்னும் ளகார ஈற்றுச் சுட்டு முதற் பெயரும், யாவளென்னும் வினாப்பெயரும், மேற்கூறிய சுட்டு முதற்பெயரும் வினாப்பெயரும்போல, விளிகொள்ளா என்றவாறு. (31) 149. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இதன் பொருள் : லகார ளகார வீற்றளபெடைப்பெயர், மேற்கூறிய அளபெடைப்பெயரே போல, அளபு நீண்டு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: மாஅஅல், கோஒஒள் என வரும். இவை அளபெடைப் பெயராயின், மால் கோளென அளபெடை யின்றி வருவன செய்யுணோக்கி அளபு சுருங்கி வந்தனவாம்; இவை அளபெடைப் பெயரல்லவாயின், அளபெடைப்பெயர் வந்தவழிக் கண்டு கொள்க. (32) 150. கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. உயர்திணைப் பெயரும் உயர்திணை விரவுப்பெயரும் விளிகொள் ளுமாறுணர்த்தி, இனி யஃறிணை விரவுப்பெயர் விளிகொள்ளுமா றுணர்த்துகின்றார். இதன் பொருள் : கிளந்த விறுதியாவன உயிரீறு நான்கும் புள்ளியீறு நான்குமாம். அவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைக்கண் வரும் விரவுப்பெயர் மேற்கூறிய நெறியான் விளியேற்கும் என்றவாறு. உதாரணம்: சாத்தி, சாத்தீ; பூண்டு, பூண்டே; தந்தை, தந்தாய் எனவும் சாத்தன், சாத்தா; கூந்தல், கூந்தால்; மக்கள், மக்காள் எனவும் வரும். சாத்தி, பூண்டு, தந்தை, சாத்த என அண்மை விளியாய் வருவனவுங் கொள்க. ஓகாரவீறும் ரகாரவீறுமாய் வருவன விரவுப்பெய ருளவேற் கொள்க. பிறவுமன்ன. (33) 151.புள்ளியு முயிரு மிறுதி யாகிய வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றிற் றெளிநிலை யுடைய வேகாரம் வரலே. இதன் பொருள் : புள்ளியீறும் உயிரீறுமாகிய அஃறிணைப் பெய ரெல்லாம், விளி கொள்ளுங் காலந்தோன்றின், ஏகாரம் பெறுதலைத் தெற்றென வுடைய என்றவாறு. உதாரணம்: மரம், மரமே, அணில், அணிலே; நரி, நரியே; புலி புலியே என வரும். அஃறிணைப்பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும், விளி கேளாதனவற்றைக் கேட்பனவாகச் சொல்லுவார் கருதியவாற்றான் விளியேற்பனவுமல்லது, ஒழிந்த பெயரெல்லாம் விளி யேலாமையின், ‘விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்’ என்றார். அதனானே சுட்டுப் பெயர் முதலாயின விளி யேலாமையுங் கொள்க. ‘தெளிநிலையுடைய வேகாரம் வரலே’ என ஏகாரம் பெற்று விளி யேற்றலை யாப்புறுப்பவே, யாப்புறவின்றிச் சிறுபான்மை பிறவாற்றான் விளியேற்பனவு முளவென்பதாம். அவை ‘வருந்தினை வாழியென் னெஞ்சம்’ (அகம். 16) ‘கருங்கால் வெண்குரு கொன்று கேண்மதி’ (நற். 24) ‘காட்டுச் சாரோடுங் குறுமுயால்’ ‘ஒண்டூவி நாராய்’ என்னுந் தொடக் கத்தன. (34) 152. உளவெனப் பட்ட எல்லாப் பெயரு மளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. இதன் பொருள்: உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் விளியேற்பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்கு மிடத்து, தத்தம் மாத்திரையி னிறந்திசைத் தனவாம், சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கத்தின்கண் என்றவாறு. உதாரணம்: நம்பீஇ, சாத்தாஅ என வரும். 19‘அளபெடை மிகூஉம்’ என்றமையான், அளபெடைப் பெய ரொழித்து நின்ற பெயர் கொள்க. அளபிறந்தன வென்றது, நெட்டெழுத்து அளபெடை யாயும், அளபெடை மூன்று மாத்திரையி னிறந்தும், சேய்மைக்குத் தக்கவாறு நீண்டிசைக்கு மென்றவாறு. சேரமான், மலையமான் என்னும் ஈற்றயல் அளபிறந்தவழி இயல்பு விளியென்னாது ஈற்றய னீண்டதாகக் கொள்க. அள பிறப்பன எழுத்தாகலின், ஒற்றுமை நயத்தாற் பெயரளபிறந்தன என்றார். (35) 153. அம்ம வென்னு மசைச்சொல் னீட்ட மம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இதன் பொருள் : அம்மவென்னும் அசைச்சொல்லினது நீட்டம், விளி கொள்ளும் பெயரொடு தோன்றாது, இடைச்சொல்லொடு தோன்றிற் றாயினும், விளியாகக் கொள்வர் தெளிவோர் என்றவாறு. உதாரணம்: அம்மா சாத்தா என வரும். சாத்தா என்பதே எதிர்முகமாக்குமாயினும், அம்மா வென்பதும் அவ் வெதிர்முகமாக்குதலே குறித்து நிற்றலின், விளி யாகக் கொள்ளப்படு மென்பார் ‘விளியொடு கொள்ப’ வென்றார். (36) 154. தநநு எஎன வவைமுத லாகித் தன்மை குறித்த னரளவெ னிறுதியு மன்ன பிறவும் பெயர்நிலை வரினே யின்மை வேண்டும் விளியொடு கொளலே. இதன் பொருள் : த ந நு என்னு முயிர்மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற ன ர ள என்னும் மூன்று புள்ளியை இறுதி யாகவுடைய சொல்லும் அவை போல்வன பிறவுமாகிய பெயர்ச் சொல் வருமாயின், விளியொடு பொருந்துதலில என்றவாறு. உதாரணம்: தமன் தமர் தமள், நமன் நமர் நமள், நுமன் நுமர் நுமள், எமன் எமர் எமள் எனவும்; தம்மான் தம்மார் தம்மாள், நம்மான் நம்மார் நம்மாள், நும்மான் நும்மார் நும்மாள், எம்மான் எம்மார் எம்மாள் எனவும் வரும். அன்னபிறவுமென்றதனான், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என வருவன கொள்க. அஃதேல், இவற்றைத் தத்தமீற்றகத் துணர்த்தாது ஈண்டுக் கூறியதென்னை யெனின், இவற்றை யீற்றகத் துணர்த்தின் மூன்று சூத்திரத் தானுணர்த்தல் வேண்டுதலிற் சூத்திரம் பல்கும்; அதனானாண்டுணர்த்தாராயினார். அஃதேல், உயர்திணை யதி காரத்துக்குப் பின்வைக்கவெனின், ஆண்டு வைப்பின் 20‘விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (சொல். 150) என்னும் மாட்டேற்று இனிது பொருள் கொள்ளாதாம்; அதனான் பிறிதிடமின்மையின் ஈண்டு வைத்தாரென்பது. (37) விளிமரபு முற்றிற்று கணேசையர் அடிக்குறிப்புகள் 1. விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருளை உடையதாதல் விளியென்ற பெயரானே விளங்குதலிற் கூறாராயினாரென்க. ஏனை வேற்றுமைகளைப் போல இதற்கும் பொருள் கூறாததென்னை யென்று ஆnக்ஷபம் நிகழாவண்ணம் பெயரானே விளங்குதலின் என அதற்குச் சமாதானங் கூறியவாறு. 2. ஈறுதிரிதல் முதலாக வேறுபாடு பலவாகலின் விளியெனப் படுப என்று பன்மை யாற் கூறினார். 3. ஆண்டு என்றது - இயல்பாய் பெயரீற்றை. 4. அவ்வென்று சுட்டப்பட்டன. விளிகொள் பெயரன்றி விளி வேற்றுமையே யெனின்; வருஞ் சூத்திரத்தில் அவைதாமென்பதுவும் விளிவேற்றுமையென்ற பொருளாகி விளிகொள் பெயரென்றதனோடு இயையாது மாறுபடுமாகலின் அவ்வென்பது ஈண்டு விளிகொள் பெயரைச் சுட்டி நின்றதென்க. 5. தொடி - அஃறிணைப் பெயர்; உயர்திணைப் பெயராய் விளியேற்றது. தொடி யென்பது தொடியுடையாளை உணர்த்தலின் ஆகுபெயர். சாத்தி - பொதுப் பெயர்; உயர்திணைப் பெயராய் விளியேற்றது. 6. விளிகொள்பெயர் எழுவாய்; அப்பானான்கு பயனிலை; இவை ஒருங்கியைந்து அவைதாமென்பதற்குப் பயனிலையாம்; அவைதா மென்பது எழுவாயும் விளிகொள்பெயர் அப்பானான்கு என்பது பயனிலையாயும் வரும் என்பது கருத்து. 7. அஃறிணை விரவுப் பெயரென்பதற்கு உரையாசிரியர் முதலியோர் உயர் திணையோடு அஃறிணை சென்று விரவும் விரவுப் பெயரெனப் பொருள்கூறி உயர்திணை அஃறிணை என்னும் இரண்டற்கும் பொதுவாய் வரும் பெயரென்பர். சேனாவரையர் விரவுப் பெயருள் உயர்திணை விரவுப்பெயரை உயர்திணைப் பெயரோடு சேர்த்து விளியேற்குமாறு கூறி, அஃறிணை விரவுப் பெயரையே `கிளந்த விறுதி அஃறிணை விரவுப்பெயர்' என்னும் சூத்திரத்தாற் கூறினார் என்பர். உயர்திணைப் பெயரோடு உயர்திணை விரவுப்பெயரையும் பொரு ளொப்புமை பற்றிச் சேர்த்து விதி கூறினாரென்பதற்குச் சேனாவரையர் காட்டும் காரணம் இரண்டு. ஒன்று முறைப்பெயர் விதியையும் விரவுப் பெயர் விதியையும் உயர்திணை அதிகாரத்துக் கொண்டுவந்து கூறினமை, மற்றொன்று மாட்டேற்றுச் சூத்திரத்தில் விரவுப் பெய ரென்னாது அஃறிணை விரவுப் பெயரென்று ஆசிரியர் கூறினமை. உயர்திணைப்பெயர்க்கண் ஆகாரமும் ஓகாரமும் பெற்று விளியேற்பன வின்மையின். பின்னர் உயர்திணைப் பெயரோடு விரவுப் பெயரை மாட்டெறியும் மாட்டேற்றால் விரவுப் பெயரின் பிரிவாகிய முறைப் பெயருக்கு ஆகாரமும் ஓகாரமும் பெறுதல் எய்தாமையின் உயர்திணை அதிகாரத்திலே முறைப் பெயரையும் கொண்டு வந்து கூறினாரென்பது உரையாசிரியர் கருத்து. அது பொருந்தாதென்பதற்குச் சேனாவரையர் சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று, உயர் திணைப் பெயரோடு விரவுப்பெயரை மாட்டெறிந்ததெனின் ஆசிரியர் அஃறிணை என்ற சொல்லை ஒழித்து விரவுப்பெயரென்று கூறியிருப்பாரென்பது. மற்றொன்று, மாட்டேற்றுக்குப் பின்னே முறைப்பெயர்கள் விளி பெறுதலையும், விரவுப் பெயர்கள் விளி ஏலா என்ற விலக்கையும் கூறியிருத்தல் வேண்டும் என்பது. 8. ஓதிய முறையானே விளியேற்பனவென்றது. `ஏயொடு சிவணும்' என்று தாம் சொன்ன விதியான் விளியேற்பன என்றபடி. முற்றியலுகரம் `திருவேபுகுதக' என விளியேற்குமாற்றைச் சிந்தாமணி 2121ஆஞ் செய்யுளுட் காண்க. இது பிற்கால வழக்குப் போலும். 9. அநுவதித்ததென்றது - அளபெடை மிகூஉமிகர விறுபெயரென்று அனுவதித்துக் கூறியதை. முன் மிகுமென்று கூறாதிருக்கக் கூறியது போல வைத்து, அளபெடையில் மிக்க இகரவிறு பெயர் என்று கூறியதே அனுவாதம். தோழீஇ தொழிஇ என்றிருத்தல் வேண்டும். இச் சூத்திரத்துக்கு இளம்பூரணர், அளபெடை இகரம் ஈறாயின் இயல்பாய் விளியேற்கும் எனப் பொருள் கூறித் `தொழிலீஇ' என உதாரணங் காட்டி, பெயர் நிலையும் விளி நிலையும் அதுவே நிற்குமாறு எனக் கூறி, ஐந்து மாத்திரை பெறுதலைப் பிறர் கருத்துள் ஒன்றாகக் காட்டியுள்ளார். 10. உம்மை பிரிந்து நின்ற தென்றது. வருதற்கும் என்றதில் வரவேண்டிய உம்மை, உரியவும் என்பதனோடு பிரிந்து நின்ற தென்றபடி. எனவே பிரித்துக் கூட்டப்படும் என்பது கருத்து. 11. ஆய் என்றது - ஆய் என்னும் குறுநிலமன்னனை. இவன் ஒருவள்ளல். இங்கே ஆயென்பது இயல்பு விளி. இது ன,ள,ர,ல, அல்லாத ஏனைப் புள்ளி விளி ஏற்றது. 12. இச்சூத்திரத்துக்குக் காட்டிய உழாஅன், கிழா அன் என்பனவற்றிக்குப் பதிலாக, `அழாஅன், புழாஅன்' என்று உரையாசிரியரைப் பின்பற்றிச் சேனாவரையரும் காட்டியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. ஏனெனின்? "ஆவோ வாகும் பெயருமா ருளவே - யாயிடனறிதல் செய்யு ளுள்ளே" (பெய.41) என்னுஞ் சூத்திரத்தில் உழாஅன், கிழாஅன் என்றே அளபெடைப் பெயருக்குச் சேனாவரையர் உதாரணம் காட்டினாரென்று கொள்ளலாம். 13. அழன், புழன், வேறு, அவை `அழனே புழனே' என்று ஆசிரியரால் எழுத்ததிகாரத்துட் கூறப்பட்டவை. அழாஅன், புழாஅன் என்பன உரை யாசிரியரால் காட்டப்பட்ட உதாரணங்கள். இவை எப்படி வழக்கில் வந்தனவென்பது ஆராயத்தக்கது. இன்னும் `அழான், புழான்' என இருபெயர்கள் விரவுப் பெயர்களுக்கு உதாரணமாக உரையாசிரிய ராலும், நச்சினார்க்கியராலும் காட்டப்பட்டுள்ளன. இவ்வளவெடைப் பெயருக்கு உதாரணமாக இளம்பூரணர் காட்டிய அழாஅன், புழாஅன் என்பனவே இவர்களுக்கெல்லாம் பிந்திய உரையாசிரியராகிய கல்லாடனாராலும் காட்டப்பட்டுள்ளன. 14. தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர். 15. பண்புகொள் பெயர் - பண்புப்பெயர். 16. கருத்தான் நிறுத்தித் திரித்தாராகலின் என வியைக்க. 17. வினை - வினையாலணையும் பெயர். 18. பண்பு - பண்புகொள் பெயர்; பண்பி. 19. அளபெடை மிகூஉம் என்றமையான் என்பது `அளபெடை மிகூஉ மிகர விறு பெயர்' என்ற சூத்திரத்தை நோக்கியது. ஆண்டு அளபெடை மிகூஉம் என்றமையினால் அளபெடைப் பெயர் அளபெடுத்தல் பெறுதலின் ஈண்டு அளபெடுத்தல் அதற்குக் கூறவேண்டாமையான் அதனை ஒழித்து, நின்ற பெயர் கொள்க என்றார். சேய்மைக்குத் தக்கபடி நீண்டும் இசைக்கு மென்றது அண்மைச் சேய்மை. சேய்மை, அதிசேய்மை என்னும் பகுதிக்குத் தக்கபடி நீண்டிசைக்கு மென்றபடி. 20. இச் சூத்திரத்தைக் `கிளந்த விறுதி' என்னும் மாட்டேற்றுச் சூத்திரத்தின் முன் வைப்பின் இச்சூத்திரம் இடை நின்று விலக்குமாகலின் அஃது இனிது பொருள் கொள்ளாதென்று கருதி ஈண்டு வைத்தாரென்றார். பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலையென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித் துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச் சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்ட தென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால்களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழுவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை ‘அஃறிணையியற்பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற் போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோ டொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங்கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்கமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையும் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலுமாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர்திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களையுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக் குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ‘ பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனையொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக்கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 204-208 ஐந்தாவது பெயரியல் 155. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. நான்கு சொல்லும் பொதுவகையா னுணர்த்தி, பொது விலக்கண மாத லொப்புமையானும் வேற்றுமை பெயரோடியை புடைமையானும் பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத் திற்கும் இடைவேற்றுமையிலக் கணமுணர்த்தி, இனிச் சிறப்பு வகையான் நான்குசொல்லு முணர்த்துவா னெடுத்துக் கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற்கண்ணதாகிய பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனானிது பெயரிய லென்னும் பெயர்த் தாயிற்று. இதன் பொருள் : பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; பொருள் குறியாது நில்லா என்றவாறு. ‘ஆயிரு திணையி னிசைக்கும்’ (சொல். 1) என்றதனான் இது பெறப்படுதலின் இச்சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று. சொல்லிசைக்கும் பொருளாவன இவ்விரண்டு திணையுமே பிறிதில்லையென்பதல்லது, சொல்லெல்லாம் பொருளுணர்த்து தன் மாலையவே; உணர்த்தாதன வில்லையென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின், அசைநிலை முதலாயினவும் பொருள்குறித்து நிற்குமென ஐய மறுத்தற்கு இச்சூத்திரம் வேண்டு மென்பது. அசைநிலை முதலாயின பொருளுணர்த்து மாறு 1மேலே கூறிப் போந்தாம். முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்பன பொருளு ணர்த்தாவாலெனின், அவை தொடர்மொழியாகலான் ஈண்டைக் கெய்தா வென்பது. அஃதேல், தொடர்மொழிதான் பொருள் குறியாது வருமோவெனின், வாரா. அவை மெய்ப் பொருள் குறிப்பனவும் பொய்ப்பொருள் குறிப்பனவு மென இருவகைப்படும். அவற்றுள், பொய்ப்பொருள் குறிப்பனவும் பொருளுணர்த் துவனவேயாம்; அல்லாக்கால், இல்லோன் றலைவனாக வருந் தொடர் நிலைச் செய்யுள் பொருளுணர்த்தா மையின், அவை புலவராற் கொள்ளப் படாவென்பது. அஃதேல், இச் சூத்திரம் முதலாக ஐந்து சூத்திரத்தாற் கூறப்பட்டன பொதுவிலக்கண மாகலான், இவற்றை ஈண்டு வையாது கிளவியாக்கத்துள் வைக்கவெனின்:- இவை பொது விலக்கணமே யெனினும், ஆண்டுக் கூறப் பட்டன வழூஉக் காத்தலும் வழுஉக்காத்தற்கு உபகாரமுடையனவு மன்றே? ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தன’ என ஐயமகற்றலும் சொற் பொருள் இனைத்துப் பாகுபடுமென்றலும், சொல் லினைத்தென்றலு மென்பன வழூஉக் காத்தலும், வழூஉக்காத்தற் குபகாரமுடையனவு மன்மையான், ஆண்டுணர்த்தாது, பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்புவகையான் நான்கு சொல்லு முணர்த்துங்கால் அவை யுணர்த்தியல்லது உணர்த்தலாகா மையின், அவற்றையீண்டுணர்த்தினாரென்பது. பொருள் வேறுபாடு பற்றிச் சொல்லுணர்த்துமாறு முன்னர்க் காணப்படும். (1) 156. பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகு மென்மனார் புலவர். இதன் பொருள்: தன்னின் வேறாகிய பொருளறியப் படுதலும் பொரு ளறியப்படாது அச் சொற்றானே யறியப் படுதலும் இரண்டுஞ் சொல்லானா மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: சாத்தன், வந்தான், பண்டு காடு மன், உறு கால் என்பன வற்றான் பொருளுணரப்பட்டவாறும், நீயென்கிளவி, செய்தெ னெச்சம், தஞ்சக் கிளவி, கடியென் கிளவி என்பன வற்றாற் பொருளுணரப்படாது அச் சொற்றாமே யுணரப்பட்ட வாறுங் கண்டு கொள்க. ‘ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே’ (சொல். 1) ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல். 155) ‘ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப’ (சொல். 69) என்புழிச் சொல்லென்னுஞ் சொல்லும் பெயரென்னும் பெயரும் அறியப்படுதற்கண் சொன்மை தெரிதலாம்; ஏனைச் சொல்லும் ஏனைப் பெயரு மறியப்படுதற்கண் பொருண்மை தெரிதலாம்; அதனான் ஆண்டுச் சொன்மை தெரிதலும் பொருண்மை தெரிதலும் ஒருங்கு வந்தன வெனப்படும். 2அல்லாக்கால், சொல் லென்னுஞ் சொல் பொருளுணர்த்துதலும் பெயரென்னும் பெயரி றுதியுருபு வருதலும் பெறப்படாவா மென்பது. மேலைச் சூத்திரத்தாற் சொற்கள் பொருளுணர்த்து மென்பது பெறப்பட்டமையான், தானும் பிறிதுமெனப் பொருள் இரண்டு வகைப் படுமென அதனது பாகுபாடு உணர்த்தியவாறு. இதனாற் பயன், சொற் றன்னையுணர நின்றவழியுஞ் சொல்லே யாமென ஐயமறுத்தலாம். (2) 157. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் மிருபாற் றென்ப பொருண்மை நிலையே. இதன் பொருள்: மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன் மாத்திரத்தான் விளங்கி வேறுநிற்றலுஞ் சொன்மாத்திரத் தாற் றோன்றாது சொல்லொடு கூடிய குறிப்பாற் றோன்றலு மென, இரண்டு கூற்றை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: அவன், இவன், உவன்; வந்தான், சென்றான் என்ற வழிப் பொருடெரிபு வேறு நின்றன. ஒருவர் வந்தார் என்றவழி ஆண்பால் பெண்பாலென்பதூஉம், சோறுண்ணா நின்றான் கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்றவழித் தீங்கட்டாய் என்பதூஉம், குறிப்பாற் றோன்றின. 3கடுத்தின்றான், தெங்குதின்றான் என ஒன்றன் பெயராற் பிறிது பொருள் தோன்றலுங் குறிப்பிற் றோன்றலாம். தின்றானென்னுந் தொழிலொடு முதற்பொருள் இயையாமையின் அதனோ டியையுஞ் சினைப்பொருள் அத்தொட ராற்றலாற் பெறப்பட்டமையான் குறிப்பிற்றோன்ற லாகாதெனின், அற்றன்று; அவ்வியையாமை சொல்லுவான் குறிப்புணர்தற் கேதுவாவ தல்லது முதற்பெயரைச் சினைப் பொருட்டாக்கு மாற்றலின்றாகலான், அதுவுங் குறிப்பிற் றோன்றலேயாமென்க. பிறவுமன்ன. இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து (குறள். 879) என்னுந் தொடர்மொழியான், “நிலைபெற்றபின் களையலுறிற் களைய லுற்றாரை அவர்தாங் கொல்வர்; அதனாற் றீயாரை அவர் நிலைபெறாக் காலத்தே களைக” என்னும் பொருள் விளங்குதலுங் குறிப்பிற் றோன்றலாம். அணியிலக்கணங் கூறுவார் இன்னோரன்னவற்றைப் பிறிது மொழித லென்பதோ ரணி யென்ப. (3) 158. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே. இதன் பொருள்: சொல்லாவன பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமென இரண்டென்று சொல்லுவர் அறிந்தோர் என்றவாறு. பெயர்ச்சொற் கிலக்கணம் வேற்றுமையோத்தினுட் கூறினார்; வினைச்சொற் கிலக்கணம் வினையியலுட் கூறுப. பிற சொல்லு முளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப் ‘பெயரே வினையென் றாயிரண் டென்ப’ வென்றார். இவற் றுள்ளும் பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழில்பற்றாது அப்பொருள் பற்றி வருஞ் சிறப்புடைமையாற் பெயரை முற்கூறினார். (4) 159. இடைச்சொற் கிளவியு முரிச்சொல் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. இதன் பொருள்: இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் என்றவாறு. ‘அவற்றுவழி மருங்கிற்’ றோன்று மென்றாரேனும், பெயரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் இவ்விரண்டை யும் அவற்றொடு தலைப் பெய்யச் சொல் நான்காமென்பது கருத்தாகக் கொள்க. சார்ந்து தோன்றுமெனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும். வழக்குப் பயிற்சி நோக்கி இடைச் சொல் முற்கூறினார். (5) 160.அவற்றுள் பெயரெனப் படுபவை தெரியுங் காலை யுயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்கு மோரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துதற்கு உபகாரமுடைய பொதுவிலக்கண முணர்த்தி, நிறுத்த முறையானே இனிப் பெயர்ச்சொல் உணர்த்து கின்றார். இதன் பொருள்: மேற்கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப்படுவன உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறி ணைக்குரியவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்தவுரிமை யவாய் வருவனவுமென, மூன்று வேறுபாட்டனவாம், தோன்று நெறிக்கண் என்றவாறு. (6) 161. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு முரியவை யுரிய பெயர்வயி னான. இதன் பொருள்: இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாம் என்றவாறு. அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறு ஆடூவிற்கும் மகடூ விற்கும், அஃறிணை யாண்பாற்கும் உரித்தாய் வருதலானும், அவள், மக்கள், மகள் என ளகரவீறு மகடூவிற்கும், பல்லோர்க்கும், அஃறிணைப் பெண் பாற்கும் உரித்தாய் வருதலானும், பெண் டாட்டி நம்பி எனவும், ஆடூ மகடூ எனவும் இகரவீறும் ஊகார வீறும் இருபாற்கு முரியவாய் வருதலானும், வினைச்சொற்போல இன்னவீறு இன்னபாற் குரித்தெனப் பெயர்ச்சொல் ஈறுபற்றி உணர்தலாகாமையின், ‘உரியவையுரிய’ என்றார். பிறவுமன்ன. பல்குமென் றஞ்சி இன்ன பெயர் இன்ன பாற் குரித்தெனக் கிளந் தோதாராயினார். அஃதேல், இவற்றது பாற்குரிமை யெற்றாற் பெறுதுமோ வெனின், ‘உரியவை’யென்றது வழக்கின்கட் பாலுணர்த்துதற்குரியவாய் வழங்கப்படுவன வென்றவாறன்றே? அதனான் வழக்கு நோக்கிக் கொள்ளப் படுமென்பது. மற்றும், நஞ்சுண்டான் சாம் என்பது ஒருபாற்குரிய சொல் லாயினும், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ் சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப் பாற்கு முரித்தாம் அச் சொல்லென இப்பொருண்மை யுணர்த்துகின்றது இச்சூத்திர மென்றாரால் உரையாசிரியரெனின், நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான் ஒரு பால்மேல் வைத்து நஞ்சுண்டான் சாமென்றதல்லது, ஆண்டுத் தோன்றும் ஆண்மையும் ஒருமையுஞ் சாதற்குக் காரணமென்னுங் கருத்தினனல்லன்; அதனாற் சொல்லுவான் கருத்தொடு கூடிய 4பொருளாற்றலாற் சாதல் ஏனைப்பாற்கு மொக்குமெனச் சேறல் சொல்லிலக்கணத்திற் கூறப்படாமையான், ஆசிரியர், ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவன தாமே வழக்கென மொழிப (பொருளியல். 28) என இப்பொருண்மை பொருளியலிற் கூறினாராகலின், இச் சூத்திரத்திற்கு அஃதுரையாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க. அல்லதூஉம் பார்ப்பான் கள்ளுண்ணான் என்றவழிக் கள்ளுண் ணாமை சாதிபற்றிச் செல்வ தொன்றாகலின் பார்ப்பனிக்கும் பார்ப்பார்க்குமல்லது பிற சாதியார்க்கும் அஃறிணைக்குஞ் செல்லாமையின், ஐம்பாற்கிளவிக்குமுரிய வென்றல் பொருந்தா மையானும் அவர்க்கது கருத்தன்மை யறிக. (7) 162.அவ்வழி அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவ ருவரென வரூஉம் பெயரு யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே. இதன் பொருள்: மூவகையாக மேற்சொல்லப்பட்ட பெயருள், அவனென்பது முதலாக யாவரென்பதீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர் என்றவாறு. 5யானென்பது, ஒருவன் ஒருத்தி யென்னும் பகுதி யுணர்த்தா தாயினும், அத்திணை யொருமை யுணர்த்தலின் பாலறிவந்த பெயராம். அல்லதூஉம், பாலறி வந்தவெனப் பன்மைபற்றிக் கூறினாரெனினுமமையும். (8) 163. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியு 6நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமு முறைமை சுட்டா மகனு மகளு மாந்தர் மக்க ளென்னும் பெயரு மாடூ மகடூ வாயிரு பெயருஞ் சுட்டுமுத லாகிய வன்னு மானு மவைமுத லாகிய பெண்டென் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பதி னைந்து மவற்றோ ரன்ன. இதன் பொருள்: இப்பெயர் பதினைந்தும் மேற்கூறப் பட்டன போலப் பாலறிவந்த உயர்திணைப்பெயராம் என்றவாறு. ஆண்மையடுத்த மகனென் கிளவி ஆண்மக னென்பது. ஒற்றுமை நயத்தான் ஆண்மை யுணர்த்துஞ் சொல்லை ஆண்மை யென்றார். இது பெண்மையடுத்த வென்புழியு மொக்கும், பெண்மையடுத்த மகளென் கிளவியும் பெண்மையடுத்த இகர விறுதியுமாவன பெண்மகள், பெண்டாட்டி என்பன. நம்மூர்ந்து வரூஉ மிகரமும் ஐகாரமுமாவன நம்பி, நங்கை என்பன. நமக்கின்னா ரென்னும் பொருள்பட வருதலின் நம்மூர்ந்துவரூஉ மென்றார். அவை நம்மென்பது முதனிலையாக அப்பொருளு ணர்த்தா வாயின், நம்மூர்ந்து வரூஉம் இகரமும் நம்மூர்ந்து வரூஉம் ஐகாரமு மெனப் பிரித்துக் கூறல் வேண்டுமென்பது. இவை யுயர்சொல். முறைமை சுட்டா மகனு மகளுமாவன முறைப் பெயரன்றி மகன் மகளென ஆடூ மகடூ வென்னுந் துணையாய் வருவன. மாந்தர் மக்களென்பன பன்மைப் பெயர். ஆடூ மகடூ வென்பன மேற் சொல்லப் பட்டன. சுட்டு முதலாகிய அன்னும் ஆனுமாவன அவ்வாளன், இவ் வாளன், உவ்வாளன்; அம் மாட்டான், இம்மாட்டான், உம் மாட்டான் என்பன. இவற்றுள் ஆனீறு இக் காலத்துப் பயின்று வாரா. அவை முதலாகிய பெண்டென் கிளவி இக்காலத்து விழுந்தனபோலும். 7பெண்டன் கிளவி யென்று பாடமோதி, அவை யாவன அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பாருமுளர். ஒப் பொடு வரூஉங் கிளவியாவன பொன்னன்னான்; பொன்னன்னாள் என்னுந் தொடக்கத்தன. இவை மேலனபோலப் பயின்று வாராமையின், அவற்றோடொருங்கு வையாது வேறு கூறினார். (9) 164. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியு மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியு மன்ன இயல வென்மனார் புலவர். இதன் பொருள் : எல்லாரு மெனவும், எல்லீரு மெனவும், பெண்மக னெனவும் வரும் மூன்றும் மேற் கூறப்பட்டனபோலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் என்றவாறு. புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார்ம் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப. எல்லாரும் எல்லீரும் என்புழிப் படர்க்கைப் பன்மை யுணர்த்தும் ஆரும் முன்னிலைப் பன்மை யுணர்த்தும் ஈரும் உம்மை யடுத்து வருதலானும், பெண்மகனெனப் பால் திரிதலானும், இவற்றை வேறு கூறினார். (10) ம் மாறோக்கம்-கொற்கை சூழ்ந்த நாடு. மாறோகம் எனவும் பாடம். 165. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெய ருடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. இதன் பொருள்: நிலப்பெயர் முதலாகச் சொல்லப் பட்டனவும் மேலன போலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் என்றவாறு. நிலப்பெயர் - அருவாளன், சோழியன் என்பன. குடிப்பெயர் - மலையமான், சேரமான் என்பன. குழுவின் பெயர் - அவையத்தார், 8அத்தி கோசத்தார் என்பன. வினைப்பெயர் - வருவார், செல்வார் என்பன; தச்சன், கொல்லன் என்பனவு மவை. உடைப்பெயர் - அம்பர் கிழான், பேரூர்கிழான் என்பன; வெற்பன், சேர்ப்பன் என்பனவு மவை. பண்புகொள் பெயர்-கரியான், செய்யான் என்பன. பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயர்-தந்தையர், தாயர் என்பன. பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்-பெருங்காலர், பெருந் தோளர் என்பன. பல்லோர்க் குறித்த திணை நிலைப்பெயர் - பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன. பல் லோர்க் குறித்தவென்று விசேடித்தலான், இம்மூவகைப் பெயருள் 9ஒருமைப் பெயர் இரண்டு திணைக்கு முரியவாம். கூடிவரு வழக்கினாடியற் பெயர்- பட்டிபுத்திரர், கங்கைமாத்திரர் என்பன. இவை ஆடல்குறித் திளையார் பகுதிபடக் கூடியவழி யல்லது வழங்கப் படாமையிற் குழுவின் பெயரின் வேறாயின. அக் குழுவின் பெயர் ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழ்வன. இன்றிவரென்னு மெண்ணியற் பெயராவன: ஒருவர், இருவர், முப்பத்துமூவர் என்பன. இன்றிவ ரென்பது இத் துணையரென்னும் பொருட்டுப்போலும். எண்ணாகிய வியல்பு பற்றிப் பொருளுணர்த்துதலான் ‘எண்ணியற் பெயர்’ என்றார். 10ஒருநிமித்தம்பற்றிச் சேறலிற் பல்பெயர் ஒரு பெயராக அடக்கப் பட்டமையான், நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினார். அஃதேல், ஒப்பொடு வருங்கிளவியும் அன்னதாகலின் இவற்றொடு வைக்கற் பாற்றெனின்? அற்றேனும், வழக்குப்பயிற்சி யின்மையான் அவற்றொடு வைத்தா ரென்க. (11) 166. அன்ன பிறவு முயர்திணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்திணை யவ்வே. இதன் பொருள்: மேற்சொல்லப்பட்ட பெயர்போல்வன பிறவும், உயர் திணைக்கண் பன்மையும் ஒருமையுமாகிய பாலறிவந்த எல்லாப் பெயரும், உயர்திணைப் பெயராம் என்றவாறு. ம்11முப்பாலறிவந்த வென்னாது, ஒருமைப்பாலுணர்த்துவன வும் அடங்கு தற்குப் ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த’ வென்றார். அன்னபிறவுமாவன-ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றை யாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தன.(12) ம் (பாடம்) முப்பாலறிவந்த 167.அதுவிது வுதுவென வரூஉம் பெயரு 12மவைமுத லாகிய வாய்தப் பெயரு மவைஇவை யுவையென வரூஉம் பெயரு மவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே. நிறுத்த முறையானே உயர்திணைப் பெயருணர்த்தி, இனி யஃறிணைப் பெயருணர்த்துகின்றார். இதன் பொருள் : அது, இது, உதுவென வரூஉம் பெயரும், அப் பெயர்க்கு முதலாகிய சுட்டே முதலாக ஆய்தத்தொடு கூடி அஃது, இஃது, உஃது என வரூஉம் பெயரும், அவை, இவை, உவையென வரூஉம் பெயரும், அச்சுட்டே முதலாக அவ், இவ், உவ் என வரூஉம் வகரவீற்றுப் பெயரும், யாது, யா, யாவை என்னும் வினாப்பெயரு மென இப்பதினைந்து பெயரும், பால் விளங்க வரூஉம் அஃறிணைப் பெயராம் என்றவாறு. சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும் அவை முதலாகிய வகர வீற்றுப் பெயரும் அவையல்லதின்மையின், அவ்வாறு கூறினார். (13) 168.பல்ல பலசில வென்னும் பெயரு முள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு மினைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரு மொப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட வப்பா லொன்பது மவற்றோ ரன்ன. இதன் பொருள் : பல்லவென்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும் மேற்கூறப்பட்ட அஃறிணைப் பெயர்போலப் பாலுணர நிற்கும் என்றவாறு. பல்ல, பல, சில, உள்ள, இல்ல வென்னும் ஐந்து பெயரும் தம்மை யுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. 13வினைப்பெயர்க் கிளவியாவன வருவது, செல்வது என்பன; பண்பு கொள் பெயராவன கரியது, செய்யது என்பன; இனைத்தெனக் கிளக்கு மெண்ணுக் குறிப் பெயர் ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருண்மேனின்றன. ஒப்பினாகிய பெயர்நிலையாவன பொன்னன்னது, பொன்னன்னவை என்பன. முன்னையவைபோலப் பல்ல முதலாயின வழக்கின்கட் பயின்று வாராமையின், வேறு கூறினார். பல சில வென்பன பயின்ற வாயினும், பல்ல இல்ல உள்ள என்பனவற்றோடு ஒப்புமையுடைய வாகலின், இவற்றொடு கூறினார். (14) 169. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. இதன் பொருள் : கள்ளென்னு மீற்றொடு பொருந்தும் அஃறிணை யியற்பெயர் கள்ளீற்றொடு பொருந்துதற்கட் பலவறி சொல்லாம் என்றவாறு. அஃறிணை யியற்பெயராவன ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர். ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இயற்பெய ரென்றார். இவை கள்ளென்னு மீற்றவாய், ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலின் பலவறி சொல்லாயினவாறு கண்டுகொள்க. 14அஃறிணையியற்பெய ரெனவே, பாலறிபெயரேயன்றி அஃறிணைப் பொதுப்பெயரு முளவென்பது பெற்றாம். 15பாற்குரிமை சுட்டாது அஃறிணைக்குரிமை சுட்டிய, ‘அவ்வியற் பெயர்’ என்றார். (15) 170.அன்ன பிறவு மஃறிணை மருங்கின் பன்மையு மொருமையு பாலறி வந்த வென்ன பெயரு மத்திணை யவ்வே. இதன் பொருள் : மேற்கூறப்பட்ட பெயர்போல்வன பிறவும், அஃறி ணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்குரிய என்றவாறு. அன்னபிறவு மென்றதனாற் கொள்ளப்படுவன பிறிது, பிற; மற்றையது, மற்றையன; பல்லவை, சில்லவை; உள்ளது, இல்லது; உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன. (16) 171. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர் ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே. இதன் பொருள் : கள்ளொடு சிவணாத அஃறிணை யியற்பெயர் ஒருமையும் பன்மையும் விளங்கும் நிலையுடைய, அதற்கேற்ற வினையொடு தொடர்ந்தவழி என்றவாறு. உதாரணம்: ஆ வந்தது, ஆ வந்தன; குதிரை வந்தது, குதிரை வந்தன என வினையாற் பால் விளங்கியவாறு கண்டுகொள்க. இஃது அஃறிணைப் பெயரிலக்கணமாயினும், பொதுப் பெயர் வினையொடு வந்து பால் விளங்குத லொப்புமை நோக்கி ஈண்டு வைத்தா ரென்பது, அஃதேல், 16கள்ளொடு சிவணுமென்பத னையும் ஈண்டு வைக்க வெனின், இயற்பெயர் முன்னராரைக் கிளவி போலக் கள்ளென்பது அஃறிணை யியற்பெயர்க்கு ஈறாய் ஒன்றுபட்டு நிற்றலின், வினையாலன்றிப் பெயர்தாமே பன்மை யுணர்த்தியவாம்; அதனால் அதனைப் பாலறி வந்த பொரு ளுணர்த்துமதிகாரத்து வைத்தார். (17) 172.இருதிணைச் சொற்கு மோரன்ன வுரிமையின் றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரு நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. இதன் பொருள் : இருதிணைச் சொல்லாதற்குமொத்த உரிமைய வாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடும் விரவுப்பெயரெல்லாம், ஆராயுங்கால், தத்தம் மரபின் வினையோடி யைந்தல்லது, திணைவிளங்க நில்லா என்றவாறு. வினையோடல்லதெனவே, திணைக்கேற்றவாற்றான் ஈறு வேறுபடாது ஓரீற்றவாய் நிற்றலின் பெயர் தாமே 17நின்று தத்தமரபி னென்றதனாற் பொதுவினையொடு வந்தும் திணை விளக்கா வென்பது பெறப்படும். இனி அவை தத்தம் மரபின் வினையொடு பால் விளக்கு மாறு:- சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முடவன் வந்தது என வந்தவாறு கண்டுகொள்க. தத்தம் மரபின் வினையாவன: உயர்திணைக்கும் அஃறி ணைக்கு முரிய பதினோரீற்றுப் படர்க்கை வினை. 18எல்லாப் பெயரு மென்பதனை ஆறு போயினா ரெல்லாருங் கூறை கோட்பட்டார் என்பது போலக் கொள்க. இருதிணைக்கும் பொதுவாகிய சொல், வினையாற் பொதுமை நீங்கி ஒருதிணைச்சொல்லா மென்பது கருத்தாகலின், ஈண்டுப் பாலெனப் பட்டது திணையேயாம். ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னான் தத்தம் மரபின் வினையோடல்லது பாறெரிபில என்றா ரேனும், சாத்தனொருவன் சாத்தனொன்று எனத் தத்தம் மரபின் பெயரொடு வந்து பால்விளக்குதலுங் கொள்க. (18) 173.நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியி னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே யன்ன மரபின் வினைவயி னான. இதன் பொருள் : நிகழ்காலம்பற்றி வரும் பலர்வரை கிளவியான் உயர்திணை யொருமைப்பா றோன்றுதலு முரித்து, அவ் வொருமைப்பா றோன்றுதற் கேற்ற வினையிடத்து என்றவாறு. பலர்வரை கிளவியென்றது செய்யுமென்னு முற்றுச் சொல்லை. உதாரணம்: சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலுமாகிய வினை அஃறிணைக் கேலாது ஒருவற்கும் ஒருத்திக்கு மேற்றலின், உயர்திணையொரு மைப்பால் விளங்கிய வாறு கண்டுகொள்க. 19நிகழூஉநின்ற தொழிலையுணர்த்துஞ் சொல்லை ஒற்றுமை நயத்தான் ‘நிகழூஉநின்ற பலர்வரைகிளவி’ யென்றார். நிகழூஉநின்ற வென்றது நிகழா நின்ற வென்றவாறு. நடத்தல் கிடத்தல் முதலாகிய பிறதொழில்பற்றி வரும் பலர்வரை கிளவியான் உயர்திணையொருமை தோன்றாமையின், ‘அன்னமரபின் வினைவயி னான’ வென்றார். தோன்றலு முரித்தென்னும் எதிர்மறை யும்மையான், அன்ன மரபின் வினைக்கட் டோன்றாமையு முரித்தென்னாது, பலர்வரை கிளவியாற் றோன்றாமையு முரித்தென்று கொள்க. அஃதேல், யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலும் முதலாகிய தொழில் வேறுபாடு பற்றி வரும் முன்னிலை வினையானும் வியங்கோளானும் இருவகை யெச்சத்தானு மெல்லாம் உயர் திணைப்பா றோன்றுதலான் பலர்வரை கிளவியி னென வரைந்து கூறல் பொருந்தாதெனின், அற்றன்று. 20‘முன்னஞ் சேர்த்தி முறை யின் உணர்தல்’ (சொல். 193) என முன்னிலைப் பெயராற் பாலுணருமாறு முன்ன ருணர்த்தப்படுதலானும், அன்னமரபின் வினைபற்றி வரும் வியங்கோள் ஏவற் பொருண்மைத்தாகலின் ஏயதுணர்ந்து செய்யு முயர்திணை சுட்டியல்லது பெரும் பான்மையும் வாராமையான் ஆண்டன்ன மரபின் வினையாற் பாலுணர்தல் ஒருதலை யன்றாகலானும் பெயரெச்சத்திற்கு முடிவாகிய பெயரும், வினை யெச்சமும் சிறுபான்மை பொதுவினை கொண்ட வழியல்லது தத்தம் மரபின் வினை கொண்டவழி அவ்வினையே பால் விளக்கலான் ஆண்டெச்சம் பால் விளக்கல் வேண்டாமையானும், அவையொ ழித்துப் பலர் வரை கிளவியே விதந்து கூறினார், இருவகை யெச்சத்தானும் வியங்கோளானுஞ் சிறுபான்மை உயர்திணைப் பால் தோன்றல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. 21நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்குப் ‘பலர்வரை கிளவி’ யென்றார். பன்மைவிரவுப்பெயரை நீக்குதற்கு ‘நிகழூஉநின்ற’ வென்றார். மேல் விரவுப்பெயர் தத்தமரபின் வினையோடல்லது பாறெரிபில வென்றார்; இனி அவற்றானன்றிப் பொதுவினை யானும் பாறெரிய நிற்கு மென்பது உணர்த்தியவாறு. அஃதேல், சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும் எனச் செய்யுமென்னுஞ் சொல்லான் அஃறிணைப் பாலுந் தோன்றுதலின், அது கூறாராயிற் றென்னை யெனின்:-எழூதலும் அரைத்தலும் அஃறிணைக் 22கென்னும் இயை பில்லாதவாறு போலப் புற்றின்றல் உயர் திணைக்கு எவ்வாற்றானு மியை பின்றெனப் படாமையானும், கன்றீனும் என்புழி ஈனு மென்னும் வினை யானன்றிக் கன்றென்னுஞ் சார்பான் அஃறிணைப் பால் தோன்றுதலானும், ஒருமை வினையான் ஒரோவழி அஃறி ணைப்பால் தோன்றினும் அது சிறுபான்மை யாகலானும், கூறாரா யினா ரென்பது. (19) 174. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே வெல்லாம் நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. விரவுப்பெயர் பாறெரிய நிற்குமா றுணர்த்தி, இனி அவை தம்மை யுணர்த்துவா னெடுத்துக் கொண்டார். இதன் பொருள் : இயற்பெயர் முதலாக நீ யென்ப தீறாக எடுத்துச் சொல்லப் பட்டனவல்லாத அன்னபிறவும் ஆண்டு வருமாயிற் சொல்லப்பட்ட வற்றொடுங் கூட்டுக என்றவாறு. இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளேபற்றி வரும் இடுபெயர். இயற் பெயரெனினும் விரவுப்பெயரெனினு மொக்குமாயினும், அவற்றுள் ஒருசாரனவற்றிற்கு அப் பெயர் கொடுத்த தென்னை யெனின்,அவற்றது சிறப்பு நோக்கி அப் பெயர் கொடுத்தார்; பாணியுந் தாளமும் ஒருபொருளவாயினும் இசை நூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணியென்னும் பெயர் கொடுத்தாற் போல வென்பது. சினைப்பெயராவன பெருங்காலன், முடவன் என அச்சினை யுடைமையாகிய 23நிமித்தம்பற்றி முதன்மேல் வரும் பெயர். சினைமுதற் பெயராவன சீத்தலைச்சாத்தன், கொடும்புற மருதி எனச் சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர். சாத்தன், மருதி யென்னு முதற்பெயர் சினைப் பெயரொடு தொடர்ந்தல்லது குறித்த பொருளுணர்த்தாமையிற் சினை முதற் பெயராயின. முறைப் பெயராவன தந்தை தாயென முறைபற்றி முறையுடைப் பொருண் மேல் வருவன. முறையாவது பிறவியான் ஒருவனோ டொருவற்கு வருமியைபு. அல்லன வைந்துந் தம்மை யுணர்த்தி நின்றவாகலான், தாமென்பது முதலாகிய சொல்லே யாம். பிறவுமென்றதனான், மக, குழவி போல்வன கொள்க. இவற்றை உயர்திணைப் பெயரென்றாரால் உரையாசிரிய ரெனின், மரபியலுள், ‘மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு மவையு மன்ன வப்பா லான’ (மர. 14) எனவும், ‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை’ (மர. 19) எனவும், அவை அஃறிணைக்காதல் கூறி, ‘குழவியு மகவு மாயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே’ (மர. 23) என வுயர்திணைக்கு மோதிவைத்தாராகலின், அவை விரவுப் பெயரேயாம்; அதனான் அது போலியுரை யென்க. 24ஒரு நிமித்தத்தான் இரண்டுதிணைப் பொருளுமுணர்த்து தலின் விரவுப் பெயர் பொருடோறு நிமித்த வேறுபாடுடைய பலபொருளொரு சொலன்மை யறிக. (20) 175.அவற்றுள் நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே யேனைப் பெயரே தத்த மரபின. இதன் பொருள் : மேற்கூறிய விரவுப்பெயருள் இயற் பெயருஞ் சினைப் பெயருஞ் சினைமுதற்பெயரும் ஓரொன்று நந்நான்காம்; முறைப் பெயர் இரண்டாம்; ஒழிந்தன ஐந்து பெயருந் தத்தமிலக்கணத் தனவாம் என்றவாறு. 25தத்தமிலக்கணத்தன வென்றது பொதுவிலக்கணத்தன வல்ல, சிறப்பிலக்கணத்தனவேயா மென்றவாறு. எனவே, அவை ஓரொன்றாகி நிற்கு மென்றவாறாம். ஈண்டுத் தத்தமென்பது, அந் நிகரன வெனப் பொதுமை சுட்டாது, ஓரொன்றாய் நின்ற பெயரைச் சுட்டி நின்றது. தனிப்பெயரைந்தும் விரிப்பெயர் பதினான்குமாகப் பத்தொன்பதென்றவாறாம். கூறப்பட்ட பெயரது பாகுபாடாகிய ஒருபொரு ணுதலுதல் பற்றி ஒரு சூத்திரமாயிற்று. நான்காய் விரிதலும் இரண்டாய் விரிதலுந் தாமே யாதலு மாகிய பொருள்வேற்றுமையான் மூன்று சூத்திரமெனினு மமையும். (21) 176.அவைதாம் பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென் றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. 177.பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெய ரொருமைச் சினைப்பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. 178. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. 179. பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. இயற்பெயர் முதலிய நான்கன் விரியாகிய பதினான்கும் இவையென வுணர்த்தியவாறு. இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். இயற்பெயர் முதன்மூன்றும் ஓரொன்று நந்நான்காய் விரிதலும், முறைப் பெயர் இரண்டாதலும், மேலைச் சூத்திரத்தாற் பெறப்பட்டமையான் அந் நான்கும் இரண்டுமாவன இவை யென்பது இச்சூத்திரங்கட்குக் கருத்தாகக் கொள்க. இவ்வாறிடர்ப் படாது தொகைச்சொற்களைப் பயனிலையாகக் கொள்ளவே, இச் சூத்திரங்களான் அவையின்ன வென்றலும் இத்துணைய வென்றலும் பெறப்படுமாகலின், மேலைச் சூத்திரம் வேண்டா வெனின்; அற்றன்று; இவற்றான் விரவுப்பெயர் பத்தொன்பதென்னும் வரையறை பெறப்படாமை யானும், வகுத்துக்கூறல் தந்திர வுத்தியாக லானும் அது வேண்டு மென்பது. (22-25) 180. பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே. மேற்கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும்பற்றிப் பாலுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அவை பெண்மைப் பெயர் நான்கும், ஆண்மைப் பெயர் நான்கும், பன்மைப்பெயர் மூன்றும், ஒருமைப்பெயர் மூன்றுமாம். இதன் பொருள் : பெண்மை பற்றி வரும் நான்கு பெயரும் அஃறிணைப் பெண்ணொன்றற்கும் உயர்திணை யொருத்திக்கும் உரிய என்றவாறு. அந்நான்குமாவன:- பெண்மையியற்பெயரும். பெண்மைச் சினைப் பெயரும், பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை முறைப் பெயருமே யாம். உதாரணம்: சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும்; முடக்கொற்றி வந்தது, முடக் கொற்றி வந்தாள் எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும்; அவை முறையானே அஃறிணைப் பெண்மைக்கும், உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. முடமென்பது சினையது விகாரமாகலிற் சினையாயிற்று. 26ஒன்றற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், பெண்மை சுட்டிய பெயரென்றமையான் அஃறிணைப் பெண்ணென்றேயாம். இஃது ‘ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்’ (சொல். 181) என்புழியு மொக்கும். ஒன்றிய நிலையுடையவற்றை ‘ஒன்றிய நிலை’ யென்றார். (26) 181.ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. இதன் பொருள் : ஆண்மை பற்றி வரும் நான்கு பெயரும் அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை ஒருவனுக்கும் உரிய என்றவாறு. அந்நான்குமாவன: ஆண்மை யியற்பெயரும், ஆண்மைச் சினைப் பெயரும், ஆண்மைச் சினைமுதற்பெயரும், ஆண்மை முறைப் பெயருமே யாம். உதாரணம்: சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது, முடக் கொற்றன் வந்தான் எனவும்; தந்தைவந்தது, தந்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை யாண்பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (27) 182.பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றே பலவே யொருவ ரென்னு மென்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. இதன் பொருள் : பன்மை சுட்டி வரும் மூன்று பெயரும் அஃறிணை யொருமையும் அஃதிணைப் பன்மையும் உயர்திணை யொருமையு மெனச் சொல்லப்பட்ட அம்மூன்று பாற்கும் உரிய என்றவாறு. அம்மூன்றுமாவன: பன்மை யியற்பெயரும், பன்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைமுதற்பெயருமாம். உதாரணம்: யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங் கழுத்தல் வந்தன, நெடுங் கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும்; பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங் கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணை யொருமைக்கும், அத்திணைப் பன் மைக்கும், உயர்திணை யொருமைக்கு உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பன்மைக்கேயன்றி ஒருமைக்குமுரியவாய் வருவனவற்றைப் பன்மைப் பெயரென்ற தென்னையெனின் நன்று சொன்னாய்: 27பெண்மைப் பெயர் முதலாயின பிறபெயரா னுணர்த்தப்படாத பெண்மை முதலாயினவற்றை உணர்த்தலானன்றே அப்பெயர வாயின. என்னை? பெண்மை முதலாயின பிறபெயரா னுணர்த்தப் படுமாயின், அப்பெண்மை முதலாயினவற்றான் அப் பெயர் வரைந்து சுட்டலாகாமையின். பன்மைப்பெயர் ஒருமை யுணர்த்து மாயினும், 28பிறவற்றா னுணர்த்தப்படாத பன்மையை ஒருகா லுணர்த்தலின் அப்பன்மையான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப் பெயரவாயின. அற்றேனும், பன்மை சுட்டிய பெயரென்ற மையாற் பன்மையே யுணர்த்தல் வேண்டுமெனின், அற்றன்று. 29இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலுமென விசேடித்தல் இருவகைத்து. வெண்குடைப் பெருவிறல் என்றவழி, செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடை யோடு இயைபின்மை மாத்திரை நீக்கி வெண்குடையா னென்பதுபட நிற்றலின் அஃதியைபின்மை நீக்கலாம். கருங்குவளை என்றவழிச் செம்மை முதலாயினவற்றோடு இயைபு நீக்கலின், இது பிறிதினியைபு நீக்கலாம். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண் குடைப் பெருவிறல் என்பதுபோல, ஒருமையியைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டு மென்பது படநின்றது. அதனான் விசேடிக்குங்காற் பிறிதினியைபு நீக்கல் ஒருதலையன்றென்க. அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை யொருமையுமாகிய பலவற்றையும் உணர்த்தலாற் பன்மை சுட்டிய பெயரென்பாரு முளர். அஃது உரையாசிரியர் கருத்தன்மை அவ் வுரையான் விளங்கும். 30என்றிப்பாற்கு மென்னு மும்மை, இம்மூன்றுபாற்கு மென்பது படநிற்றலின், முற்றும்மை. (28) 183.ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவர்க்கு மொன்றிய நிலையே. இதன் பொருள் : ஒருமை சுட்டிவரு மூன்று பெயரும் அஃறிணை யொருமைக்கும், உயர்திணை யொருமைக்கும் உரிய என்றவாறு. அம்மூன்றுமாவன: ஒருமையியற்பெயரும், ஒருமைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைமுதற்பெயருமாம். உதாரணம்: கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும்; செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும்; கொடும்புறமருது வந்தது, கொடும்புறமருதி வந்தான், கொடும்புறமருதி வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணை யொருமைக்கும், உயர்திணை யொருமைக்கும் வந்தவாறு கண்டு கொள்க. 31பெண்மைப் பெயரும் ஆண்மைப் பெயரும் ஒருமை யுணர்த்துமாயினும், இவை பெண்மை ஆண்மையென்னும் வேறுபாடுணர்த்தாது ஒருமையுணர்த்தலான், இவற்றை ஒருமைப் பெயரென்றார். (29) 184.தாமென் கிளவி பன்மைக் குரித்தே. தத்தம் மரபினவெனப்பட்ட பெயர் பாற்குரியவாய் வருமா றுணர்த்துகின்றார். இதன் பொருள் : தாமென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மைப் பாற்குரித்து என்றவாறு. உதாரணம்: தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (30) 185. தானென் கிளவி யொருமைக் குரித்தே. இதன் பொருள்: தானென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமைப் பாற்குரித்து என்றவாறு. உதாரணம்: தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது எனவரும். (31) 186. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. இதன் பொருள் : எல்லாமென்னும் பெயர் இரண்டு திணைக்கண்ணும் பன்மை குறித்து வரும் என்றவாறு. வழியென்றது இடம். பொருள் சொன்னிகழ்தற் கிடமாக லிற் பல்பொருளைப் ‘பல்வழி’ என்றார். உதாரணம்: எல்லாம் வந்தேம், 32எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன என வரும். எல்லாமென்னும் பெயர் இரண்டுதிணைக்கண்ணும் பன்மை குறித்து வருமென்னாது ‘பல்வழி’யென்றது, 33மேனி யெல் லாம் பசலை யாயிற்று என ஒரு பொருளின் பலவிடங்குறித்து நிற்றலும் உடைத்தென்பதூஉம் கோடற்கும் போலும். அஃது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல்லென்பாரு முளர். (32) 187.தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல துயர்திணை மருங்கி னாக்க மில்லை. இதன் பொருள்: எல்லாமென்னுஞ் சொல் உயர்திணைக் காங்கால், தன்மைப் பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது என்றவாறு. ‘நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாம்’ (கலி. 97) எனப் படர்க்கைக்கண்ணும் வந்ததாலெனின், எழுத்ததிகாரத்துள் ‘உயர் திணை யாயி னம்மிடை வருமே’ (எழுத். 190) எனத் தன்மைக்கேற்ற சாரியை கூறினமையானும், ஈண்டு நியமித்த லானும், அஃது இட வழுவமைதியா மென்பது. தன்மைச்சொல் அஃறிணைக்கின்மையின், எல்லா மென்பது 34பொதுமையிற் பிரிந்து தன்னுள்ளுறுத்த பன்மைக்கண் வந்துழி உயர்திணை யீற்றுப் பெயரெனப்படினும், இருதிணைப் பன்மையு முணர்த்துதற் கேற்றுப் பொதுப் பிரியாது நின்றவழி விரவுப் பெய ராதற் கிழுக்கின்மை யறிக. எல்லாப் பார்ப்பாரும், எல்லாச் சான்றாரும் எனப் படர்க்கைக்கண் வருதலும் கோடற்குத் தன்னுள்ளுறுத்த பன்மைக் காங்கால் உயர்திணை மருங்கி னல்லதாகாதென மொழிமாற்றி யுரைத்தாரால் உரையாசிரிய ரெனின், படர்க்கைக்கண் வருதல் இடவழுவமைதியென்ற வழிப்படு மிழுக் கின்மையானும், ‘தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ (சொல். 43) எனவும், ‘யான் யாம் நாமென வரூஉம் பெயர்’ (சொல். 162) எனவும் பிறாண்டு மோதியவாற்றான், தன்மைச்சொல் அஃறிணைக் கின்மை பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாமையானும், எழுத்ததிகாரத்துள் ‘உயர்திணை யாயி னம்மிடை வருமே’ (190) எனத் தன்மைக்குரிய சாரியையே கூறலானும், அது போலியுரை யென்க. ஈண்டு ஆக்கம் பெருக்கம். பெருக்கமில்லையெனவே, சிறு பான்மை ஏனையிடத்திற்கு முரித்தா மென்பாருமுளர். (33) 188.நீயிர் நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. இதன் பொருள் : நீயிர் நீயென்னு மிரண்டு பெயர்ச் சொல்லும் திணைப்பகுதி தெரியநில்லா, இருதிணையு முடன் றோன்றும் பொருள என்றவாறு. உடன்மொழிப்பொருள வென்றது, இருதிணைப்பொரு ளும் ஒருங்கு வரத்தோன்று மென்றவாறு. பிரித்தொருதிணை விளக்கா வென்றவாறு. உதாரணம்: நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருதிணைக்கு முரிய பெயரெல்லாந் தத்தமரபின் வினை யொடு வந்து திணை விளக்குமன்றே? இவற்றிற்கு அன்ன வினை யின்மையின் ஒருவாற்றானுந் திணை விளக்காமையின், ‘பாறெரிபிலவே யுடன்மொழிப் பொருள’ வென்றார். (34) 189.அவற்றுள் நீயென் கிளவி யொருமைக் குரித்தே. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட இரண்டு பெயருள் நீயென்னும் பெயர் ஒருமைக்குரித்து என்றவாறு. ஒருமையாவது, ஒருவன் ஒருத்தி ஒன்றென்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை. உதாரணம்: நீ வந்தாய் என வந்தவாறு கண்டுகொள்க. (35) 190.ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. இதன் பொருள் : நீயிரென்னும் பெயர் பன்மைக்குரித்து என்றவாறு. பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொதுவாகிய பன்மை. உதாரணம்: நீயிர் வந்தீர் என வந்தவாறு கண்டுகொள்க. ‘எல்லாம் நீயிர் நீ’ (சொல். 174) எனவோதியவாறன்றி, ஒருமை பன்மை யென்னும் முறைபற்றி ஈண்டு நீ யென்பதனை முற் கூறினார். அன்றி, முந்து மொழிந்ததன்றலை தடுமாற்ற மென்னுந் தந்திரவுத்தி யெனினு மமையும். நீயிர் நீயென இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந் துணர்த்தா வாயினும், ஒருமை பன்மையென்னும் பொருள் வேறுபாடுடையவென வரையறைப்படுவழி, வரையறுத்தவாறு. (36) 191. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை. இதன் பொருள் : மேல் இன்றிவரென்னு மெண்ணியற் பெயரென் றோதப் பட்டவற்றுள், ஒருவரென்னும் பெயர்ச்சொல், உயர்திணை முப்பாலுள் ஒருபால் விளக்காது, ஒருவன் ஒருத்தியென்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு. உதாரணம்: ஒருவர் வந்தார் எனப் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருபாற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், 35ஒருவ ரென்னும் ஒருமைப்பெயரா னுணர்த்தப் படுதற்கேற்பன ஒருவன் ஒருத்தி யென்பனவே யாகலான், அவையே கொள்ளப்படும். உயர்திணை யொருமைப்பால் இரண்டென் றறியப்பட்ட மையான் இருபாற்குமுரித் தென்னும் உம்மை முற்றும்மை. உயர் திணைப் பெயராயினும், பாலுணர்த்தாமையும் முன்னத்தானு ணர்த்தலும் இதற்கும் ஒக்குமாகலின், ஈண்டுக் கூறினா ரென்பது. (37) 192. 36தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும். இதன் பொருள் : ஒருவரென்னும் பெயரதியல்பு கருதின், அஃது ஒருமைப் பெயராயினும், பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர் தற்கேற்கும் என்றவாறு. உதாரணம்: ஒருவர் வந்தார், ஒருவரவர் என வரும். ஒருமைப்பெயர் பன்மை கொள்ளாதாயினும், இது வழுவமைதி யிலக்கணமென்ப தறிவித்தற்குத் ‘தன்மைசுட்டி’ னென்றார். (38) 193. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். இதன் பொருள் : நீயிர் - நீ - ஒருவன் என்பனவற்றை இன்னபாற் பெயரென் றறியலுறின், சொல்லுவான் குறிப்பொடு கூட்டி முறையானுணர்க என்றவாறு. 37ஒருசாத்தன், ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானுந் தன்னுழைச் சென்றவழி, ‘நீ வந்தாய், நீயிர் வந்தீர்’ என்னுமன்றே; ஆண்டது கேட்டான் இவனின்னபால் கருதிக் கூறினான் என்பதுணரும். இனி ‘ஒருவ ரொருவரைச் சார்ந் தொழுக லாற்றின்’ என்றவழிச் சொல்லு வானொடு கேட்டான் இவன் ஆடூஉ ஒருமை குறித்தானென உணரும். பிறவுமன்ன. இனி இடமுங் காலமும் பற்றிப் பால் விளங்கும்வழியும் அறிந்து கொள்க. ஏகாரம் - தேற்றேகாரம். முறையினுணர்தலென்பது - பாதுகாவல். (39) 194. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி மகடூஉ வியற்கை தொழில்வயி னான. இனியொருசா ருயர்திணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க் கும் எஞ்சி நின்ற இலக்கணங் கூறுகின்றார். இதன் பொருள் : மகடூஉப் பொருண்மைக்கண் பாறிரிந்து வரும் பெண்மக னென்னும் பெயர், வினைகொள்ளுமிடத்து மகடூஉவிற் குரிய வினை கொள்ளும் என்றவாறு. உதாரணம்: பெண்மகன் வந்தாள் என வரும். பொருண்மைபற்றி மகடூஉ வினைகொள்ளுமோ, ஈறுபற்றி ஆடூஉ வினைகொள்ளுமோ என்று ஐயுற்றார்க்கு ஐய மகற்றிய வாறு. ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னான் தொழில்வயினான வென்றாராகலின், சிறப்பில்லாப் பெயர்வயினானும் பெண்மகனிவள் என மகடூஉ வியற்கையா மென்பதாம். (40) 195.ஆவோ வாகும் பெயருமா ருளவே யாயிட னறிதல் செய்யு ளுள்ளே. இதன் பொருள் : ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயர்களுமுள; அத் திரியுமிட மறிக செய்யுளுள் என்றவாறு. உதாரணம்: வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் பழுவ முன்னி யோரே’ (குறுந். 7) எனவும், கழனி நல்லூர் மகிழ்நர்க் கென் னிழைநெகிழ் பருவரல் செப்பா தோயே (நற். 70) எனவும் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. ஆன், ஆள், ஆர், ஆய் என்னுமீற்றவாகிய பெயரல்லது, சேரமான், மலையமான் என்னுந் தொடக்கத்தன அவ்வாறு திரியா மையின், ‘ஆயிட னறிதல்’ என்றார். உழாஅன், கிழாஅன் என்பன வோவெனின், அவை அன்னீற்றுப்பெயர் 38ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றன வென்பது. ஆனீறாயவழி (சொல். 135), உழவோன், கிழவோன் எனத் திரியுமாறறிக. (41) 196. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. இதன் பொருள் : செய்யுளுட் கருப்பொருண்மேற் கிளக்கப்படும் இரு திணைக்குமுரிய பெயர் உயர்திணை யுணர்த்தா; அவ்வந் நிலத்து வழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருதலான் என்றவாறு. உதாரணம்: 39கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி என்புழி, கடுவன், மூலன், குமரியென்பன அஃறிணைப் பொருள வாயல்லது நிலத்துவழி மருங்கிற் றோன்றாமையின், உயர்திணை சுட்டாதவாறு கண்டுகொள்க. நிலமாவது, முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தல் என்பன. அஃதேல், இவை உயர்திணை யுணர்த்தாவாயின் அஃறி ணைப் பெயரேயாம்; ஆகவே, இச்சூத்திரம் வேண்டா பிற வெனின், அற்றன்று. கடுவன் மூலனென்பன அன்னீறு ஆண்மை யுணர்த்து மன்றே? அஃறிணைப் பெயர் அவ்வீற்றான் அப்பொருளுணர்த்தா மையின், அவை விரவுப் பெயரேயா மென்பது. அலவன் கள்வ னென்பனவோ வெனின்:-அவை சாதிப்பெய ரெனப்படுவ தல்லது ஆண்மைப்பெயரெனப்படா வென்க. குமரியென்பது, வடமொழிச் சிதைவாய் வடமொழிப் பொருளே உணர்த்தலின், விரவுப் பெயரேயாம். (42) 197. திணையொடு பழகிய பெயரலங் கடையே. இதன் பொருள் : கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர் திணை சுட்டாது அஃறிணை சுட்டுவது, அவ்வத்திணைக் குரியவாய் வழங்கப்பட்டு வரும் பெயரல்லாதவிடத்து என்றவாறு. எனவே, திணைக்குரியவாய் வழங்கப்பட்டுவரும் பெயர் இரு திணையுஞ் சுட்டிவரு மென்பதாம். திணையொடு பழகிய விரவுப்பெயராவன காளை விடலை யென்னுந் தொடக்கத்தன. உதாரணம்: ‘செருமிகு முன்பிற் கூர்வேற் காளை’ (நற். 184) எனவும், ‘திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே’ (அகம். 195) எனவும், உயர்திணை சுட்டி வந்தவாறு கண்டுகொள்க. இவை உயர் திணைப்பொரு ளன்றோ வெனின், ஓரெருத்தையும் காளை விடலை யென்பவாகலின், விரவுப்பெயரெனவே படுமென்பது. கடுவன், மூலன், குமரியென்பனவும் கருப்பொருளுணர்த் தலின் திணையொடு பழகிய பெயராம் பிறவெனின், அற்றன்று. விலங்கும் புள்ளு முதலாகிய பொருள்வழி யெல்லாம் அவற்றிற்குரிய பெயர் சொல்வதல்லது, பொருளுண்டாயினும், இந்நிலத்து இப்பொருள் இப்பெயரான் வழங்கப் படா வென்னும் வரையறையில்லை. தலைமக்கள் எந்நிலத்து முளராயினும், பாலை நிலத்துக் காளை மீளியென்னும் பெயர் செல்லா மருதநிலத்து; மருத நிலத்து மகிழ்நன் ஊரனென்னும் பெயர் செல்லா பாலைநிலத்து. அதனாற் பொருள்வகையானன்றிப் பெயர் தம் திணைக்கு உரிமை பூண்டு நிற்றலின், அவற்றைத் 40திணையொடு பழகிய பெயரென்றா ரென்பது. (43) பெயரியல் முற்றிற்று கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. மேல் என்றது கிளவியாக்கத்து 1ஆம் சூத்திர உரையுள் என்றபடி. என அன்மையான் என இயைக்க. இவை கிளவியாக்கத்துட் கூறிய சூத்திரங்களைப் போல வழுக்காத்தலும் வழுக்காத்தற்குப் பகார முடையனவும் அன்மையான் ஈண்டுக் கூறினார் என்பது கருத்து. 2. அல்லாக்கால் என்றது - ஒருங்கு வந்தன அல்லாவாயின் என்றபடி. எனவே இரண்டும் வாராது ஒன்றுமாத்திரம் வந்ததென்றால் என்பது கருத்து. `ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே' என்பதில் சொல் என்பது தன்னை யுணர்த்திச் சொன்மை தெரிதன் மாத்திரமாய் வந்த தென்றால் (பொருண்மை தெரிதல் இல்லை என்றால்) ஏனைச் சொற் களாகிய பொருளையுணர்த்துதல் பெறப்படாதாம். ஆதலானும், "ஈறு பெயர்க்காகும்" என்பதில் பெயர் என்பது ஏனைப் பெயர்களை மாத்திர முணர்த்திப் பொருண்மை தெரிதன் மாத்திரமாய் வந்ததென்றால் (சொன்மை தெரிதல் இல்லை யென்றால் - பெயர் என்பது தானும் ஒரு பெயர்ச்சொல் எனத் தன்னை உணர நில்லாதொழிந்தால்) அப்பெயர் என்ற சொல்லின் பின்னர் உருபு வருதல் பெறப்படாது. என்னை? பெயர்ச்சொல்லின் பின்னேயே உருபு வருமென்பது விதியாதலின். ஆதலானும் இரண்டும் ஒருங்கு வந்தனவேயாம் என்ப. இங்ஙனம் கூறியது பொருண்மை தெரிவன சொன்மையுங் தெரிய நிற்கும் என்பது பெறவைத்தற் கென்க. 3. கடுத்தின்றான் என்றவழி, தின்னுதல் வினை கடுவிற்கியை யாமையின் அதற்கு இயையுங் காயென்னுஞ் சினைப்பொருள் அத்தொடராற்றலாற் பெறப்படுதலின் குறிப்பிற் றோன்றலாகாதெனின்? அவ்வியையாமை குறிப்புப் பொருளை உணர்த்தற் கேதுவாவதல்லது முதற்பொருளைச் சினைப்பொருளாக்க மாட்டாது. அச் சினைப் பொருள் இயையாமை யான் உணர்ந்து ஆக்கப்படும். ஆதலாற் குறிப்பிற்றோன்றலாமென்க. பிறிது மொழிதல் - ஒட்டு என்னும் அணி. 4. பொருளாற்றல் என்றது, நஞ்சுண்டல் சாதற்குக் காரண மென்னும் பொருளால் ஏனைப்பால்களும் கொள்ளப்படுவன வன்றி நஞ்சுண்டான் என்னும் சொல்லாற் பெறப்படும் ஆண்மையும் ஒருமையும் பற்றிக் கொள்ளப்படாதென்பது கருத்து. 5. யான் என்பது ஆண்பால் பெண்பால் உணர்த்தாதாயினும் ஒருமைப் பாலுணர்த்தலின் அதுவும் பாலறிவந்ததேயாம். அன்றி இது முப்பாலு ளொன்றை உணர்த்தாதாயினும் ஏனையவெல்லாம் முப்பாலுள் ஒன்றை உணர்த்தலின் அப்பன்மைபற்றி பாலறிவந்த என்று கூறினாரெனினு மமையு மென்றபடி. 6. நம்மூர்ந்து வரூஉம் இகரம், ஐகாரம் என்றதனால் நம் என்னும் அடியையே நம்பி நங்கை என்னும் இரண்டுங் கொள்ளுமென்பதும், அவை நமக்கு இன்னாரென்னும் பொருள்பட வரூஉமென்பதும் பெறப்படும். அவை அவ்வடியவாய் அப்பொருளுணர்த்தாவாயின் நம்மூர்ந்து வரூஉம் இகரமும் நம்மூர்ந்து வரூஉம் ஐகாரமும் எனத்தனித்தனி கூறுவாரென்க. (தனித்தனி கூறுவாரென்றது முறையே ஆடூஉக்களுள் சிறந்தவன் என்றும் மகடூஉக்களுள் சிறந்தவள் என்றும் முறையே பொருடரும் நம்பி நங்கை என்னும் பெயர்களைக் குறித்து நின்றது போலும்.) இவை என்றது நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரங்களை, என் தம்பி என்பதை நம்பி என்றும் என் தங்கை என்பதை நங்கை என்றும் சொல்லுதலின் உயர்சொல் என்றார். நம்பி என்பதில் நம் என்பதே உயர்சொல். நச்சினார்க்கினியரும் இவற்றை உயர்சொல் என்பர். 7. பெண்டென் கிளவியெனின் பெண்டென்ற சொல்லை உணர்த்தும். பெண்டன் கிளவியெனின் பெண் என்னும் பொருளையுணர்த்துங் கிளவி என விரியும். அவ்வாட்டி யென்னும் உதாரணம் பெண்பாலைக் குறித்து நின்றது. "பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்" என்னும் விதிப்படி பெண்டு அன்சாரியை பெற்றது. தெய்வச்சிலையார் காட்டும் உதாரணங்களை நோக்கும்போது அவரும் இப்பாடமே கொண்டிருக்க வேண்டுமென்பது பெறப்படும். 8. அத்தி கோசத்தார் - யானை மேலேற்று மளவான நிதிக்குவையை யுடையோர் (குழூஉவால் வரு பெயர்.) அம்பர் - ஓரூர். 9. தந்தை, பெருங்காலன், பார்ப்பான் என்பன முதலிய ஒருமைப் பெயர்கள் இருதிணைக்கும் பொது. 10. ஒரு நிமித்த மென்றது - நிலம் என்னும் ஒரே காரணம் பற்றி வருதலை. அக் காரணம்பற்றி வரும் பல பெயர் நிலப்பெயரென ஒரு பெயராக அடக்கப்பட்டதென்க. இது குடி முதலியவற்றிற்கு மொக்கும். 11. முப்பால் எனின் ஆண், பெண், பலர் என்னும் முப்பாலையு முணர்த்துமே யன்றித் தன்மை யொருமையை யுணர்த்தாது. அது பற்றி பன்மையுமொருமையு மென்றார். 12. இரண்டாம் அடியில், அவை - அது, இது, உது என்பனவற்றையும் நான்காம் அடியில் அவை - அவை, இவை, உவை என்பன வற்றையும் சுட்டி வந்தன. அவை முதலாகிய ஆய்தப்பெயர்:- அது, இது, உது என்னும் அவைக்கு முதலாகவுள்ள சுட்டெழுத்துத் தமக்கு முதலாகவுள்ள ஆய்தத்தோடு கூடிய அஃது, இஃது, உஃது என்னும் பெயர். அவை முதலாகிய வகரப் பெயர்:- அவை, இவை, உவை என்னும் அவைக்கு முதலாகிய சுட்டெழுத்துத் தமக்கு முதலாகவுள்ள அவ், இவ், உவ் என்னும் பெயர். அவை முதலாகிய ஆய்தப் பெயர் அது, இது, உதுவென வரூஉம் பெயரின் வேறன்று. அங்ஙனமே அவை முதலாகிய வகரப் பெயரும் அவை இவை உவையென வரூஉம் பெயரின் வேறன்று. சிறிதே உருவ வேற்றுமை யன்றிப் பொருள் வேற்றுமையின்று என்றபடி. இங்ஙனமாதலின் "அவையல்ல தின்மையின்" எனப்பட்டது. அவையல்லதின்மையின் என்பதற்கு அது இது உது என வரூஉம் பெயரும். அவை இவை உவை என வரூஉம் பெயருமாகிய அவை யல்லது வேறாகாமையின் என்பது பொருள். 13. வினைப்பெயர் - வினையாலணையும் பெயர். இங்கே ஒன்று முதலிய வற்றையும் பொருளைக் குறிப்பனவாக ஆசிரியர் கூறினமையின் "அளவும் நிறையும்" என்னும் ஆகுபெயர்ச் சூத்திரத்து எண்ணையும் உடனெண்ணாது ஆசிரியர் விலக்கினாரென்று சேனாவரையர் கூறுதல் பொருத்தமானதே. 14. அஃறிணையிற் பாலறி பெயர்களை முற்கூறிப் பின்னர் இயற்பெயர் என்றதனாலே இயற்பெயர்கள் பாலறியப்படாதனவாய் அவ்விரு பாற்கும் பொதுவாமென்பது பெற்றாமென்பார். `அஃறிணை இயற்பெய ரெனவே பாலறி பெயரேயன்றி அஃறிணைப் பொதுப் பெயருமுள' வென்பது பெற்றாமென்றார். 15. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயர் என்றதனால் கள்ளொடு சிவணுமுன் பாலைச் சுட்டாது திணையை மாத்திரஞ்சுட்டி நின்ற தென்பது பெறப்படுமாகலின். பாற்குரிமை சுட்டாது திணைமைக் குரிமை சுட்டிய அவ்வியற் பெயர் என்றார் என்பது என்று கூறினார் என்க. 16. `கள்ளொடு சிவணும்' என்றது பெயரியல் 15ஆம் சூத்திரத்தை, கள்ளொடு சிவணும் அஃறிணைப் பெயர்கள். தாமே பாலுணர்த்தும். அதனால், அவற்றைப் பெயரதிகாரத்து வைத்தார். கள்ளொடு சிவணாதன, தாமே பாலுணர்த்தா; வினையானே உணரப்படும். அதனான் அதனை ஈண்டு வைத்தார் என்றபடி. 17. வினையோடல்லதென்ற வாக்கியத்துள், நின்று என்பது நின்றும் என்றும், வந்து என்பது வந்தும் என்றும் இருப்பதே பொருத்தமாகும். 18. எல்லாப் பெயரு மென்பதனைக் கூறைகோட்பட்டார் என்பது போலக் கொள்க என்றது. எல்லாப்பெயரும் தத்தமரபின் வினையால் பால் விளங்குமென்றாரேனும் இப்பொதுப் பெயருள் முன்னிலைப் பெயர்க்குத் தத்தம் மரபின் வினையில்லாமையினாலே அதனாற் பால் விளங்காமையின் அப்பெயரை யொழித்து ஏனைப்பெயர்களே வினையாற் பால் விளங்குதலின் அவற்றையே கொள்க என்றபடி. 19. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவி யென்றது நிகழுகின்ற தொழிலை உணர்த்தும் பலர்வரை கிளவியை என்றபடி. நிகழ்காலத்தொழிலுக்கும் அச்சொற்குமுள்ள ஒற்றுமை நயத்தால் நிகழூஉ நின்ற கிளவியென்றார். எழுப்புதல் அரைத்தல் முதலிய வினைகள் அஃறிணைக் கேலாமையின் அன்ன மரபின் வினையென்றார். எனவே நடத்தல் கிடத்தல் முதலிய வினைகள் இரண்டற்கும் பொதுவாதலின் அவற்றால் உயர்திணைப்பால் தோன்றாதென்றபடி. தோன்றலும் என்றதிலுள்ள உம்மையை அன்ன மரபின் வினையொடு கூட்டாது பலர்வரை கிளவியாற் றோன்றாமையு முரித்தென்று கூட்டிக் கொள்க என்றபடி. 20. முன்னிலைப் பெயர் பாலுணர்த்துதல் பின்னர் `முன்னஞ் சேர்த்தி முறையினுணர்த்தல்' என்ற 36ஆம் சூத்திரத்தாற் கூறப்படுதலினால் ஈண்டுக் கூறவேண்டுவதில்லை. (நீ வந்தாய் என்றவழி நீ எனச் சுட்டிய பொருள் உயர்திணையோ அஃறிணையோ வென்பது சொல்லுவான் குறிப்பா னறியப்படுமெனமேற் கூறப்படுதலின் ஈண்டு எழுப்புதன் முதலிய சிறப்பு வினையான் அறியப்படுமெனக் கூறல் வேண்டாமை யின் முன்னிலை வினையைக் கூறாதொழிந்தார் என்பது கருத்து.) சாத்தன் யாழெழூஉக என்புழி வியங்கோள் உயர்திணை சுட்டி யல்லது பெரும்பான்மையும் வாராமையின் எழுப்புதல் வினையாற் பாலுணர்த்தல் வேண்டாமையானும் யாழ் எழுப்பிய சாத்தன் வந்தான் என்னும் பெயரெச்சத்துள் வந்தான் என்பதே உயர்திணைப் பாலைக் காட்டுதலின் ஆங்கு எழுப்புதல் பால்காட்ட வேண்டாமையானும். யாழெழுப்பி வந்தான் என்னும் வினையெச்சத்துள் வந்தானென்பதே பால் காட்டுதலின் ஆண்டும் எழுப்புதல் பால் காட்டவேண்டாமை யானும் அவை யொழித்துப் பலர்வரை கிளவியே கூறினாரென்க. 21. நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்கென்றது. நிகழ்கால எழுத்துப் பெற்று வருபவைகளை. பன்மை விரவுப்பெயரென்றது 182ஆம் சூத்திரத்திற் கூறும் யானை முதலிய பெயர்களை. 22. என்னுமியைபின்மை - சிறிது மியைபின்மை. ஒருமை வினையான் ஒருவழி அஃறிணைப்பாறோன்றினுமென்றது, குரைக்கும் கறக்கும் முதலிய வினைகளை. உ-ம்: சாத்தன் குரைக்கும். சாத்தி கறக்கும். 23. நிமித்தம் - காரணம். அல்லன ஐந்தென்றது. தாம் முதலாகிய சொற்களை அவை சொல்லாகிய தம்மை உணர்த்தி நின்றனவாதலால் அவ்வச் சொல்லே கொள்ளப்படுமென்பது கருத்து. 24. ஒரு நிமித்தமென்றது - இயற்பெயராதன் முதலிய ஒரு காரணத்தா னிரண்டு திணைப்பொருளையு முணர்ததுதலை. வெவ்வேறு காரண முடைய பல பொரு ளொருசொல்லின் இது வேறு எனவுணர்க. வாரணம் என்னுஞ் சொல் கோழியும் சங்கும் யானையும் எனப் பல பொருளை யுணர்த்துமாயினும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு காரணத்தானு ணர்த்தும். விரவுப்பெயர் இரண்டு திணைப் பொருளையும் ஒரேகாரணத் தானுணர்த்து மென்றபடி. இரண்டு திணைப்பொருளும் சாத்தன் என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணம் வெவ்வேறன்று. இயற்பெயராதலாகிய ஒன்று என்றபடி. முடவன் என்ற சொல்லின் முடமே இரண்டு திணைப் பெயர்கட்கும் காரணமாம். 25. தத்தமிலக்கணத்தவென்றது. ஒவ்வொன்றும் தன்தன் இலக்கணத்தை உடையவாய் நடக்குமன்றி எல்லாம் ஒரு நிகரவாய இலக்கணம் உடைய வல்ல என்றபடி. அந் நிகரன என்றது. ஒன்று போல ஒன்று இலக்கணம் பெறுவதன்று என்றபடி. 26. ஒன்றற்குமெனப் பொதுபடக் கூறினாரேனும் என்றது. ஒன்றற்கு என அஃறிணை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய சொல்லாற் கூறியதை. அஃது ஈண்டு ஆணையொழித்துப் பெண்ணையே காட்டுதல் பெண்மை சுட்டிய பெயரென்றதனாற் பெறப்படுமென்பது. 27. இங்குப் பெண்மைப்பெய ரென்றது - உயர்திணைப் பெண்மைப் பெயரையே யன்றி அஃறிணைப் பெண்மைப் பெயரையும் உணர்த்தி நிற்கும் பெயரை. இப் பெண்மைப் பெயர்கள் உயர்திணைப் பெண்மையே யன்றி, அஃறிணைப் பெண்மையையும் உணர்த்தல் போல ஏனைப் பெண்பாற் பெயர்கள் அஃறிணைப் பெண்மையையும் உணர்த்தமாட்டா. அதுபற்றியே பிறபெயராலுணர்த்தப் படாத பெண்மை என்றார். பிறபெயரால் உணர்த்தப்படு மாயின் பெண்மை முதலாயின வற்றால் அவ் விரவுப் பெயர்கள் வரைந்து சுட்டப்படமாட்டா என்க. அவள், நங்கை முதலிய பெண்பாற் பெயர்கள் அஃறிணைப் பெண்மையை யுணர்த்தாமை காண்க. எனவே இவை அஃறிணைப் பெண்மை முதலிய வற்றையு முணர்த்தலாற் தன்னோடியைபின்மை நீக்கிய விசேடணம் அடுத்து நின்றனவாம். ஆண்மைப் பெயர் முதலியனவு மன்ன. பெண்மைப் பெயர் என்பதில் பெண்மை என்ற விசேடணம் ஆண்மைப் பெயரி னீக்குதற்கு வந்த பிறிதினியைபு நீக்கிய விசேடணமன்று; ஏனைப் பெயர்கள் இருதிணைப் பெண்மை யையும் உணர்த்துதற்குரியவல்ல; இவையே இருதிணைப் பெண் மையையும் உணர்த்துதற்குரியவென வரைந்து சுட்டி நின்ற தென்றபடி. வரைதல் - எல்லைப்படுத்தல் - உரிமையாக்கல். 28. பிறவாற்றா லுணர்த்தப்படாத பன்மை என்றது, பிறசொற்களின் வழியால் உணர்த்தப்படாத பன்மை என்றபடி. அப்பன்மையை இவை ஒருதர முணர்த்துதலினால் அப்பன்மையால் இவை வரைந்து சுட்டப்படும். எனவே பன்மைப் பெயரென்பது தன்னோடியைபின்மை நீக்கிய விசேடணமடுத்து நின்றதென்பது பெறப்படும். 29. சுருங்குவளை முதலியன பிறிதினியைபு நீக்குவன. வெண்குடைப் பெருவிறல் முதலியன தன்னோடியைபின்மை நீக்கிய விசேடணம். வெண்குடைப் பெருவிறல் என்புழி வெண்குடையொடு தான் அவனியைபுடையனென்பதை அவ்விசேடண முணர்த்தித் தன்னோடியைபின்மை நீக்கிய விசேடணமாய் நின்றதன்றி ஏனைக் குடை யினியைபை நீக்க வந்ததன்று. ஏனைக்குடைகள் அவனுக்கு உளவாயினும் உளவாகலாம்; இலவாயினும் இலவாகலாம். அது போலவே பன்மைப் பெயர் என்புழியும் பன்மையொடுதான் அப்பெயர் இயைபுடைய தென்பதை அவ்விசேடண முணர்த்தித் தன்னோடியை பின்மை நீக்கிய விசேடணமாய் நின்றதன்றி, ஒருமை முதலியவற்றி னியைபை நீக்க வந்ததன்று. ஆதலின் அஃது ஒருமையோடு மியையலாம். ஆயினும் பன்மையொடுதான் அஃது இயைபுடைய தென்றபடி. பெண்மைப் பெயர். ஆண்மைப் பெயர். ஒருமைப் பெயர் என்பன; பெண்மையை உணர்த்துதற்குரிய பெயர். ஆண்மையை உணர்த்து தற்குரிய பெயர். ஒருமையை உணர்த்துதற்குரிய பெயர் என்ற பொருளில் வருமாறு கூறி, பன்மைப்பெயர் என்பதை மாத்திரம் பல பாலையு முணர்த்துதற்குரிய பெயர் என்ற பொருளில் ஆசிரியர் கூறினர் என்றல் பொருந்தாமையின் பல பாலையு முணர்த்துதலாற் பன்மைப் பெயர் என்று கூறிச் சேனாவரையரை மறுப்பார் கருத்துப் பொருந்தாதென்க. நன்னூலிற் கூறும் பன்மைப்பெயர் வேறு. அஃது உயர்திணைப் பன்மைக்கும் அஃறிணைப் பன்மைக்கும் பொதுவாய் வரும். 30. என்றிப்பாற்கும் என்னும் உம்மை எச்சமன்று. முற்றும்மை என்றபடி இப்பால் - ஒன்று. பல, ஒருவர். 31. 26ஆம், 27ஆம் சூத்திரங்களிற் கூறிய ஆண்மைப் பெயரும், பெண்மைப் பெயரும் முறையே உயர்திணை ஆணொருமையையும் அஃறிணை ஆணொருமையையும் உயர்திணைப் பெண்மை யொருமையையும் அஃறிணைப் பெண்மையொருமையையும் உணர்த்துகின்றனவன்றோ? இவற்றை ஒருமைப் பெயரென்றதென்னை யெனின், இருதிணையினும் ஆண்மை, பெண்மைப் பகுப்பை உணர்த்தலின் அவற்றை ஆண்மைப் பெயர் பெண்மைப் பெயரென்றும், இவை இருதிணையினும் ஆண்மை பெண்மையென்னும் வேறுபாட்டை உணர்த்தாது. ஒருமை என்ற பகுப்பை மாத்திரம் உணர்த்தலின் ஒருமைப் பெயர் என்றுங் கூறினார் என்பது கருத்து. கோதை வந்தது என்பது ஆண் பெண் என்ற பகுப்பின்றி அஃறிணை ஒருமை என்ற பகுப்பை மாத்திரமும், கோதை வந்தான் கோதை வந்தாள் என்பன ஆண் பெண் என்ற பகுப்பை உணர்த்தாது இரண்டும் உயர்திணை யொருமை என்ற பகுப்பை மாத்திரமும் உணர்த்தி நின்றன என்றபடி. 32. பின் விலக்கலின் எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார் என்பன இங்கே காட்டவேண்டியதில்லை. அடுத்த சூத்திரத்தில் ஆக்கமில்லையென்ற தனாற் காட்டினுமமையும். 33. மேனி எல்லாம் பசலை என்புழி எல்லாம் என்பது மேனியின் பலவிடத்தைக் குறித்து நின்றது. அம்மேனியெல்லாம் என்பதினுள்ள எல்லாம் என்பதை உரிச் சொல்லாகக் கொள்வாருமுளர். 34. பொதுமையிற் பிரிந்து என்றது இருதிணைக்கும் பொதுவாய் நிற்கும் தன்மையிற் பிரிந்து என்றபடி. பொதுமையிற் பிரிந்து உயர்திணைக்கண் வந்துழி, தன்மையிடத்திற்கே உரியதாகும். ஏனையிடத்திற்கு வராது என்பது இச்சூத்திரக் கருத்து. எனவே பொதுமையிற் பிரியாது நின்றவழி இருதிணைக்கும் பொது வாகும் என்பது கருத்து. 35. பலர்பாற் பெயரை ஒருவர் என்னும் ஒருமைப்பெயர் உணர்த்த மாட்டா மையின் ஒருமையில் வரும் ஒருவனையும் ஒருத்தியையுமே உணர்த்து மென்பதாம். 36. தன்மை சுட்டின் என்றார். சொல்லினுள்ள விகுதியைக் குறிக்கின் பன்மைக்கேற்கும் என்பது தோன்ற. எனவே பொருளை நோக்கின் ஒருமை குறிக்குமென்றபடி. தன்மை - சொற்றன்மை. 37. நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்பன முன்னிலைப் பெயர்க்கும் ஒருவர் ஒரு வரை என்பது ஒருவர் என்னும் பெயர்க்கும் பாலுணர்த்துமாற்றிற்கு உதாரணமாகக் காட்டப்பட்டன. இரண்டும் சொல்லுவான் குறிப்பாற் பாலுணரப்படும் என்றபடி. சொல்வானொடு - சொல்லுவானால். ஒருமை குறித்து என்பது ஆடூஉ ஒருமை குறித்து என ஏனையோருரைகளுட் காணப்படுகின்றது. அங்ஙனம் இதன் கண்ணுமிருப்பது நலமே. 38. ஒருமொழிப் புணர்ச்சி என்றது விகுதிப் புணர்ச்சியை. விளிமரபின்கண் இவற்றை ஆனீற்றுக்கு உதாரணமாகக் காட்டிய சேனாவரையர் இங்கே அன்னீறு என்று கூறுகின்றார். இதனை நச்சினார்க்கினியர் `அளபெடுத்தால் ஆ, ஓவாகா' என்று மறுத்தலின் இடைச்செருகலெனக் கூறல் முடியாது. ஆயினும், நச்சினார்க்கினியருக்கு முன் யாராயினும் செருகியிருக்கலாம். 39. கடுவன், மூலன் என்பன ஈறுபற்றி உயர்திணைக்குரிய பெயராயினும் அஃது அஃறிணைப் பெயராயே வழங்குமென்றபடி. அலவன் கள்வன் என்பன னகரவீறாயினும் சாதிப் பெயராய் நண்டையே உணர்த்தலின் ஆண்மைப் பெயராகா. குமாரீ என்னும் வடமொழி குமரி என மருவிற்று. அதுவும் அம்மொழிக்குரிய உயர்திணைப் பொருளையே உணர்த்தலின் உயர்திணைக்குரித்தாதல் பெறப்படலின் இரு திணைக்கும் பொதுவாகும். ஆயினும் ஈண்டு உயர்திணையை யுணர்த்தாது என்றபடி. 40. திணையொடு பழகிய பெயரென்றது அவ்வத் திணைக்குரிய மக்கட்பெயரை, ஒரு நிலத்து மக்கட்பெயர் ஒரு நிலத்து மக்கட் பெயராற் கூறப்படாமையின் 'பழகிய' என்றார்.