தேவநேயம் 8 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 8 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செல விட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர் களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளி யிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை திரு என்னும் சொல் தென்சொல்லே 1 திருக்குறட் சிறப்பு 6 திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும் 22 திருக்குறட் பொதுக்கூறுகள் 27 திருக்குறள் அரசியல் 27 திருக்குறளிற் குறிக்கப்பட்ட தொல் (புராணக்) கதைகள் 28 திருக்குறளின் தன்னேரின்மை 28 திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் 30 திருக்கோவை 34 திருத்தக்கல் 34 திருநான் மறை ஆராய்ச்சி 34 திருப்பணிகள் 41 திருப்புகழ் 45 திரும்பு 45 திருமண நிகழ்ச்சி நிரல் 49 திருமணம் 50 திருமண வகை 50 திருமாலின் ஆமைத் திருவிறக்கம் 50 திருவள்ளுவர் எம் மதத்தார்? 51 திருவள்ளுவர் காலக் குமுகாய (சமுதாய) நிலை 52 திருவள்ளுவர் காலம் 53 திருவள்ளுவர் காலச் சமயநிலை 58 திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம் 58 திருவள்ளுவர் திருவுள்ளம் 59 திருவள்ளுவர் பெருமை 59 திருவள்ளுவர் வரலாறு 75 திருவள்ளுவர் மெய்ப்பொருள் மேம்பாடு 82 தியூத்தானியத்திற்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கம் 84 தீ 88 தீமை 88 தீய் 88 தீயார் 88 தீவு 89 துச்சில் 89 துணைவினைகள் 89 துந்தி 89 துருத்தி 90 துருவு 90 துரை 90 துல்1 (பொருந்தற் கருத்துவேர்) 90 துல்2 (வளைதற் கருத்துவேர்) 105 துல்3 (துளைத்தற் கருத்துவேர்) 109 துல4 (தெளிவுக் கருத்துவேர்) 122 துலை 129 துவரம் 129 துவரை 130 துவரை - த்வாரக 130 துவள் 130 துவை 130 துளசி 130 துளு 131 துறட்டி 140 துறவியர் 140 தூண் 140 தூணம் 141 தூணம் - தூண 141 தூதர் வகை 141 தூது 141 தூரி 142 தூளி 142 தெய்வம் 142 தெருவகை 148 தெல் விளையாட்டு 148 தெலுங்கு 149 தெளிதேனும் களி மதுவும் 167 தென்சொல் மூலத் திரிசொற்கள் 171 தென்மொழி 175 தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்கள் 177 தேயம் 180 தேவநேயன் 180 தேவன் 184 தேவாரம் 184 தொகுதிப்பெயர் 185 தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை 185 தொல்காப்பியத்தினின்று அறியும் பாக்களும் நூல்களும் 191 தொல்காப்பியம் 201 தொல்காப்பியர் சொல்லாதஇளமைப்பெயர்கள் 256 தொல்காப்பிய வழுக்கள் 256 தொழில் வகை 279 தொழிற் பொருத்தம் 279 தோட்டி (1) 280 தோடு 280 தோணி 280 தோரணம் 280 தோள் 280 நகரம் 281 நசி 281 நடத்தை 281 நடனம் 281 நடி 281 நடிகன் 282 நடுநிலை 282 நடுவுநிலை 282 நம்பற்கரிய செய்திகள் 282 நம்பா மதமும் ஒரு மதமே 283 நயன் 284 நரவலி 284 நல்குருவு 285 நல்குருவுண்டாகும் வழிகள் 285 நல்லார் இயல்பு 285 நன்கொடை 285 நன்செய்வகை 285 நன்னூல் நன்னூலா? 286 நாகம் 296 நாகர் 296 நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு 298 நாகரிகம் என்னும் சொல் விளக்கம் 300 நாகரிக மாந்தன் பிறந்தகம் 304 நாகரிகவகை 305 நாகன் 306 நாட்டியம் 306 நாடகம் 306 நாடி 306 நாடுரி 307 நாணல் 307 நால்வரணத் தோற்றமும் விளக்கமும் 307 திரு என்னும் சொல் தென்சொல்லே மருவ லர்கொள மன்பொரு ளற்றபன் மரபி னாருளர் மைந்திலர் வாயிரு திருவி ழந்தபின் றிருவெனுஞ் சொல்லையு மொருவ நின்றவன் தமிழ னொருவனே! மிகமிகச் சிறுபான்மையரான வடமொழியாளர் பன்னூற்றுக் கணக்கான தென்மொழிச் சொற்களை வடமொழியில் திரித்துக் கொண்டது மன்றி, சொல்லாராய்ச்சியும் கலைமுறை யறிவும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் அவற்றை வடசொற்களே யென்று வலிப்பதும், வடசொல் வடிவங்களையே தமிழ்நாட்டில் வழங்க நெஞ்சழுத்தங் கொள்வதும் விந்தையினும் விந்தையே! திருவென்னுஞ் சொல் ஆரியரான வடமொழியாளர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே தமிழகத்தில் வழங்கிவந்த தமிழ்ச் சொல்லென்பதற்கு, தொன்முது சார்பு நூலான தொல்காப்பியத் திலேயே அது ஆட்சி பெற்றிருப்பதும் மேலை யாரியமொழிகளுள் ஒன்றிலேனும் அது எவ் வடிவினும் காணப்படாமையும், அதன் வேர்ப்பொருள் வடமொழியிலில்லாது தமிழிலேயே யிருப்பதும் போதிய சான்றுகளாம். திருவென்னுஞ் சொல் தமிழில், 1. செல்வம், 2. திருமகள், 3. சிறப்பு, 4. அழகு, 5. காந்தி, 6. பொலிவு, 7. பேறு(பாக்கியம்), 8. தூய்மை அல்லது தெய்வத்தன்மை, 9. நல்வினை, 10. கணியன் (சோதிடங் கூறுவோன்), 11. மாங்கலியம், 12. பழைய தலையணி வகை, 13. மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம், 14. தூய்மை அல்லது பெருமை குறிக்கும் அடைமொழி முதலிய பல பொருள்களில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது: அழகு என்னும் பொருளில் திருமை எனப் பண்புப் பெயர் விகுதி பெற்றும், செல்வம் பெருமை தூய்மை முதலிய பொருள்களில் திருவம் என அம்மீறு பெற்றும், அக் குணங்களைக் குறித்துத் திருவன், திருவாளன், திருவாட்டி, திருவத்தவர், திருவினாள் என உயர்திணைப் பெயராகியும் வழங்கி யிருக்கின்றது. ஸ்ரீ என்னும் அதன் வடசொல் வடிவமோ கடைக்கழகத்திற்குப் பிற்காலத்ததாய், அதுவும் உரைநூல்களில், 1. செல்வம், 2. திருமகள், 3. பேறு, 4. அழகு, 5. தூய்மையடைமொழி என்னும் ஐம்பொருள்களிலே வடமொழியாளர் தொடங்கிவிட, அவராலும் மொழி நூலறிவும் தாய்மொழிப் பற்றும் அற்ற தமிழராலும் வழங்கப்பட்டு வந்திருக் கின்றது. ஸ்ரீ என்பதிலுள்ள சகரம் தமிழ்ச் சகரத்தை யொத்த ஒலியினதா யிருப்பது கவனிக்கத்தக்கது. திருவென்னுஞ் சொல்லுக்கு மேற்கூறப்பட்டுள்ள பொருள்களுள் செல்வம், அழகு, தூய்மை யென்னு மூன்றே முக்கியமும் பிறவற்றுக்கு அடிப்படையுமாகும். அம் மூன்றனுள்ளும், செல்வம் என்பதே முதலதாகும். செல்வத்தினால் ஒருவர் சிறக்கவுண்டு இன்பமாய் வாழ்வதால் உடல் மொழுமொழுவென அழகு பெறுகின்றது: வறுமையினால் வயிறு காய்ந்து மனங்கவன்று வெயிலில் வாடி மேனி கெடுகின்றது. இதனாலேயே, செல்வமுள்ள இனத்தாரை வெள்ளொக்க லென்றும் வறுமையுற்ற இனத்தாரைக் காரொக்க லென்றுங் கூறினர் நம் முன்னோர். செல்வ மிகுதியினால் ஒருவர்க்குப் பெருமையும் தெய்வத்தன்மையும் உண்டாகின்றது: உலகிற் செல்வமிக்க அரசன் தெய்வத் தன்மையுடையவனாகக் கருதப்படு கின்றான். கடவுள் உலகெலாமுடைய செல்வர். அளவிறந்த மதிப்பே தெய்வ வணக்கமாகும். மதிப்புச் செல்வத்தால் வருவது. அறிவும் ஒருவகைச் செல்வமே. தெய்வத்தன்மையுள்ள விட மெல்லாம் தூய்மை கருதப்படும். ஆழ்ந்து நோக்கின், திருவென்னுஞ் சொல்லுக்குரிய பொருள் களெல்லாம் மேற்கூறிய மூன்றனுள் அடங்கும்: நோக்கிக் காண்க. திருவென்னுஞ் சொல் இப்போதுள்ளபடி முதன்முதலாகத் தொல்காப்பியத்தில், பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்.மெய்ப்.25) என்னும் நூற்பாவில், செல்வம் என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. பின்னர்த் திருக்குறளில், அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும், (குறள்.168) அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு, (குறள். 179) ஊருணி நீர் நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு, (குறள்.215) இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு, (குறள்.374) நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு, (குறள். 408) வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு, (குறள்.519) இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு, (குறள்.568) முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும், (குறள்.616) இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு, (குறள்.920) கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம் (குறள்.1123) எனச் செல்வம், (செல்வத்திற்குத் தலைவியான) திருமகள், அழகு என்னும் முப்பொருள்களில் வழங்கியுள்ளது: பிற பொருள்களில் பிற நூல்களில் வழங்கி யுள்ளது. இனி, இருவகை வழக்கிலும், தேவியல் மகவியல் என்னும் இரு வகைச் சார்பில், திரு என்னும் சொல் தூய்மை, செல்வம், அழகு, மங்கலம், கண்ணியம் என்னும் பொருள்களுள் ஒன்றில் அடைமொழியாகத் தொன்றுதொட்டு வழங்கி வருவதைப் பின்வருங் காட்டுகளா லறிக. 1. தேவியல் (1) தெய்வம்: திருமகன், திருமகள், திருமால், திருமடந்தை. நூல் : திருக்கடைக்காப்பு, திருக்குறள், திருக்குறுந்தாண் டகம், திருக்கோவை, திருநெடுந்தாண்டகம், திருப் பதிகம், திருப் பல்லாண்டு, திருப்பாட்டு, திருப்பாவை, திருப்புகழ், திருமந்திரம், திருமுறை, திருமொழி, திருவகுப்பு, திருவாசகம், திருவாய்மொழி, திரு வெழுத்து. ஊண் : திருக்கன்னலமுது, திருப்படிமாற்று, திருமதுரம், திருமாலைவடை, திருவமுது. அணி : திருச்சுண்ணம், திருநீறு, திருப்பட்டம், திருப் பாவாடை, திருமண், திருவாத்தி. பொருள்: திருச்சின்னம், திருமரம், திருமலர், திருமுட்டு, திரு முளைப்பாலிகை, திருவலகு, திருவாசிகை, திருவாடு தண்டு, திருவிளக்கு. இடம் : திருச்செந்தூர், திருநகர், திருநாடு, திருநெல்வேலி, திருப்பதி, திருமலை, திருவரங்கம், திருவிதாங்கூர், திருவேங்கடம், திருக்கண், திருக்களிற்றுப்படி, திருக்கற்றளி, திருச்சுற்று, திருப்பாற்கடல், திரு மடம், திருமாளிகை, திருமுற்றம், திருமுன், திரு வுண்ணாழிகை, திருவோலக்கம். காலம் : திருநாள், திருவாதிரை, திருவோணம். சினை : திருக்கண்(சாத்துதல்), திருச்செவி, திருமுடி, திருமேனி, திருவடி, திருவாய்(மலர்தல்), திருவுள்ளம். குணம் : திருக்குறிப்பு, திருவருள், திருக்கோலம். தொழில் : திருக்கலியாணம், திருக்கார்த்திகை, திருவிழா, திருவூறல், திருக்காப்பு, திருக்கூத்து, திருத்தொண்டு, திருப்பணி, திருப்பள்ளி, திருமுழுக்கு, திருவிளை யாடல். (2) அடியார் : திருக்கூட்டம், திருச்சுற்று, திருத்தக்கதேவர், திருத் தொண்டர், திருமூலர், திருவடிமார், திருவள்ளுவர், திருவோடு. 2. மகவியல் (1) வேத்தியல் : திருமறு, திருமுகம், திருமுத்து, திருமூப்பு, திருமந்திரம், திருவாணை, திருவாய்க்கேள்வி, திருவோலை. (2) பொதுவியல் : திருநிலைக்கால், திருநிலைமகளிர், திருப்பூட்டு, திருமகன், திருமகள், திருமங்கலியம், திருமணம், திருவாங்குதல், திருவில், திருவினை, திருவுழுத்து (அணி). இவற்றுள், திருநெல்வேலி, திருவரங்கம் முதலிய இடப்பெயர்கள் தொன்றுதொட்டு உலகவழக்கில் திருவென்னும் அடைபெற்றே வழங்குவதையும், ஸ்ரீரங்கம் என்னும் வடிவம் இருவகை வழக்கிலும் பிற்காலத்ததாதலையும் நோக்குக. இதனால், திருவில்லிபுத்தூர் என்பதே ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதன் பண்டை வடிவமும் என அறிக. திருமகன் என்னும் பெயர் திருமான் என மருவிச் செல்வம் அல்லது பெருமை குறிக்கும் அடைமொழியாகும். பெருமகன் என்னும் பெயர் பெருமான் என மருவுதல் காண்க. திரு என்பதை ஸ்ரீ என்று திரித்ததனால், திருமான் என்னும் அடையை ஸ்ரீமான் என்று திரிப்பர் வடமொழியாளர். அதனுள், மான் என்னும் ஈற்றை மத் என மற்றும் திரித்து, ஸ்ரீமத், ஸ்ரீமதி என்பவற்றை முறையே ஆண்பால் பெண்பா லடைமொழிகளாக முழு வடவடிவில் வழங்குவர். திருமகன், திருமான் என்னும் ஆண்பாற் சொற்கட்குத் திருமகள், திருமாட்டி என்பவை தமிழில் முறையே பெண்பாலாகும். பெருமான் என்னும் ஆண்பாற் சொற்குப் பெருமாட்டி என்பது பெண்பாலாதல் காண்க. ஸ்ரீ என்னும் வடசொல் வடிவைத் தமிழில் சீ எனச் சிதைத்துத் திருமான் திருமாட்டி என்பவற்றைச் சீமான் சீமாட்டியென எழுதுவது, கோழிக்கோடு என்பதை Calicut என்னும் ஆங்கிலவடிவு வாயி லாய்க் கள்ளிக்கோட்டை யென்றெழுதுவதும், காளிக்கோட்டம் என்பதை Calcutta என்னும் ஆங்கில வடிவு வாயிலாய்க் கல்கத்தா என்றெழுதுவதும் போன்ற அறியாமையேயாகும். இதனால், சீகாளத்தி என்னும் வடிவினும் திருக்காளத்தி என்னும் வடிவே தக்கதாகும் என அறிக. இனி, திருவென்னுஞ் சொல்லையன்றிச் சிறுவென்னுஞ் சொல்லையும் ஸ்ரீ எனத் திரித்துள்ளனர் வடமொழியாளர். பெண்டிர்க்குச் சொந்தமாகவுள்ள சிறுசெல்வத்திற்கு அல்லது செல்வத்திற்குச் சிறுபாடு என்றும் சிறுதனம் என்றும் பெயர். சிறுதனந் தேடுவள் (தண்டலை. 95) வீட்டுச் செலவில் மீத்துவைக்கும் சிறு தொகைக்குச் சில்வானம் என்று பெயர். சிறுதனம் என்பது பிற்காலத்தில் தனி வேற்று (Private) நிதி எனப் பொதுப்படவும் பொருள் பெற்றது. உடையார்ஸ்ரீ ராஜராஜ தேவர் சிறுதனத்துக் கொடுத்த (S.I.I.ii,3) சிறுதனம் என்பது ஸ்ரீதனம், சீதனம் எனத் தவறாய் வழங்கின்றது. ஸ்ரீ என்பதைத் திருவென்றும், ஸ்ரீலஸ்ரீ என்பதைத் திருப்பெருந்திரு அல்லது திருமிகுதிரு என்றும், மகாராஜராஜஸ்ரீ என்பதை மகவரசவரசத்திரு அல்லது மாவரச வரசத்திரு என்றும், ராஜஸ்ரீ என்பதை அரசத்திரு என்றும் தமிழில் வழங்கல் வேண்டும். k.(uh).(uh).ஸ்ரீ என்னும் முகவரியடையில், ஸ்ரீ என்பது தவிர மற்ற மூவெழுத்துகளும் தமிழ்ச் சொற்களின் முதலெழுத்துகளாயே யிருத்தலைக் காண்க. இதனால், ஸ்ரீ என்பது பின்னை வடிவ மென்பதை யோர்க. சீர்காழி என்பதன் முதல் வடிவம் சீகாழி என்பர். சீர் என்னுஞ் சொல் செந்தமிழாயிருத்தலின், சீர்காழி யென்றே வழங்குவது நல்லது. இதற்கிசையாதார் திருக்காழி யென்றே வழங்குதல் வேண்டும். இனி, திருவென்னுந் தமிழ்ச்சொற்கு வேர்ப்பொருள்: திருவென்பது தில் என்னும் வேரடியாய்ப் பிறந்து திரட்டப்படுவது அல்லது ஈட்டப்படுவது என்னும் பொருளது. ஒ.நோ: தேட்டு (தேடப்படுவது) = செல்வம். தில் > திர் > திரள் > திரளை > திரணை தில் > திர் > திரு. தில் > திர் > திரம் > திறம் > திறன் > திறல் தில் > திள் > திட்டு > திட்டை > திறம் > திறமை. திள் > திண் > திண்ணை > திணை. திண் > திண்ணம். திண் > திண்டு. திட்டு > திட்டம் > திடம். திட்டு > திட்டல் > திடல். தில்லுமுல்லு > திண்டுமுண்டு. தில் என்னும் வேர் முறையே திரட்சி, கட்டி, மேடு என்னும் பொருள்களையும் திரட்சிப் பொருளினின்று உறுதி, குழு, குளிர், வலிமை, அணை(மெத்தை) முதலிய பொருள்களையும் தருதலை மேற்காட்டிய திரிசொற்களாற் (Derivatives) காண்க. இதுகாறும் கூறியவற்றால், திரு என்பது தென்சொல்லே யென்றும், அதுவே வடமொழியில் ஸ்ரீ எனத் திரிக்கப்பட்டுள்ள தென்றும் தெள்ளத்தெளிய அறிக. ஸ்ரீ என்பதே செவிக் கினிய தென்று வடமொழியாளரின் அடியார் சிலர் கூறுவாராயின், ..............................-நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு எனக் கூறி விடுக்க. (செந்தமிழ்ச் செல்வி விடை 1943.) திருக்குறட் சிறப்பு உலகியல் இனிது நடைபெறுதற்கு இன்றியமையாத நால் நிலைமையும் இல்லறமுந் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காமவின்பமும் பற்றி, உண்மையாகவும் நடுநிலைமை யாகவும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி இருவகை யணிகளுடன், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே. இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள் வெண்பாவாற் பாடியிருப்பது, பன்மணிபதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவையுண்டியைப் படைத்தாற் போலும். குறள் வெண்பாவால் ஆனதினாலும், வீடுபேற்று வழியைக் கூறி மறைத்தன்மை பெற்றதினாலும், திருக்குறள் என அடையடுத்த ஆகு பெயர் பெற்றது. இருவகை மொழி நடையுட் சிறந்தது செய்யுள். இருவகைச் செட்யுளுட் சிறந்தது பா. நால்வகைப் பாவுட் சிறந்தது வெண்பா. காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பை புலி - ஆசு வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி. (தனிப்பாடல்) ஐவகை வெண்பாவுட் குறுகியது குறள் வெண்பா. பயனில் சொல் பகர்வானைப் பதடியென்னும் திருவள்ளுவர், சொற்சுருக்கம் பற்றிக் குறள் வெண்பாவையே தம் நூற்குத் தெரிந்து கொண்டார். திருவள்ளுவரின் பாச்சிறப்பை, பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம் ஆவிற் கருமுனியா யானைக் கமரரும்பல் தேவிற் றிருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா. என்னும் திருவள்ளுவ மாலைப் பாவும்; நூற்சிறப்பை, நிழலருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போய். (ஔவையார் தனிப்பாடல்) பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ. (பரிமேலழகருரைச் சிறப்புப் பாயிரம்) ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி. (பழமொழி) என்பனவும்;புலமைச் சிறப்பை, புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர். என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; கருத்துப் பரப்பை, மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாமளந்தாரொர்ந்து என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; சுருங்கச் சொல்லலை, தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி. என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; விளங்கவைத்தலை, பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால். என்னும் திருவள்ளுவ மாலைப் பாவும்; உணர்த்தும். இங்ஙனம் திருக்குறள் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற உலகத் தமிழ் நூலாம். அதனால், முப்பொருண்மை பற்றி முப்பால், முப்பால் நூல் என்றும்; ஆசிரியனை நோக்கி வள்ளுவம், வள்ளுவ நூல், வள்ளுவப்பயன் என்றும்; உண்மை யுரைத்தல் பற்றிப் பொய்யாமொழி என்றும்; மந்திரத்தன்மைபற்றி வள்ளுவர் வாய் மொழியென்றும் மறைத்தன்மை பற்றித் தமிழ்மறை, பொதுமறை என்றும், தெய்வத்தன்மை பற்றித் தெய்வநூல் என்றும்; வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதலின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத்தல் பற்றி வாயுறைவாழ்த்து என்றும்; பெயர் பெற்றுள்ள தென்க. முதனூன்மை: திருக்குறள் எல்லாவகையிலும் தூய முதனூலாகும். அறம் பொருளின்பம் என்னும் முப்பொருளையும் பற்றித் திருக்குறள் முறையிற் கூறும் வடநூல் ஒன்று மில்லை. நான்முகன் (பிரமன்) முதலில் திரிவர்க்கம் என்னும் பெருநூலைச் செய்தா னென்றும், அதை வியாழனும் (பிருகற்பதி) வெள்ளியும் (சுக்கிரன்) சுருக்கி முறையே பார்கற்பத்தியம் சுக்கிரநீதி என்னும் நூல்களை இயற்றினரென்றும், திருவள்ளுவர் திரிவர்க்கம் போல் அறம் பொருளின்பம் பற்றி நூல் செய்ததனாலேயே நான்முகனின் தோற்றரவு (அவதாரம்) எனக்கருதப் பெற்றாரென்றும், தமிழ்ப் பற்றில்லாத பிராமணத் தமிழ்ப் புலவர் கூறுவர். ஒருவரோ பலரோ கட்டிப்பாடிய திருவள்ளுவமாலையில், நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறை என்று உக்கிரப்பெருவழுதி பெயரிலுள்ள பாவும், மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி யந்தா மரைமே லயன். என்று காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெயரிலுள்ள பாவும், எல்லா அறநூல்களையும் மறைநூல்களையும் ஆரியவேத வழி நூலாகக் கொள்ளும் பண்டை மரபு பற்றிக் கூறியதைக் கொண்டு, அவர் அங்ஙனங் கூறுகின்றார் போலும்! மேற்காட்டிய பாப் பகுதிகளில் நான்மறையென்றும் வேதமென்றும் குறித்திருக் கின்றதே யொழிய, திரிவர்க்கமென்று குறிக்கப்பட வில்லை. இதற்கு முற்றும் மாறாக, தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா வறமுதலா வந்நான்கும் - ஏனோருக் கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று. எனவுள்ளது நக்கீரர் பெயரிலுள்ள பாட்டு. நான்முகன் தேவியாகச் சொல்லப்படும் நாமகள் பெயரிலுள்ள பாட்டு, நாடா முதனான் மறைநான் முகனாவிற் பாடாவிடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு. என்பது. இதிலும் திரிவர்க்கக் குறிப்பில்லை. மேலும், திருவள்ளுவர் முப்பாலால் நாற்பொருளுங் கூறினாரே யன்றி, முதல் முப்பொருளை மட்டும் கூறினாரல்லர். மக்களால் இயற்றப்பட்ட முப்பானூல் வடமொழியில் இல்லாததினாலேயே. திரிவர்க்கம் என்பது நான்முகனால் இயற்றப் பெற்றதென்றும், ஓடிப்போன முயல் பெரிய முயல். என்பதற்கொப்ப அது மகாசாதிரம் என்றும், கூறுவாராயினர் என்க. இனி, கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியரும் அவர் மாணவ ராகிய காமந்தகரும் எழுதிய பொருள்நூற் கருத்துக்கள் திருக்குறளிற் பயின்று வருவதால், அதன் பொருட்பாலுக்கு வடமொழி அருத்த சாத்திரம் முதனூலென்பர் தமிழ்ப் பகைவரும் போலித்தமிழரும். தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று பரிமேலழகராலும் பழைமை கூறப்படும் மூவேந்தர்குடிகளும், அவற்றுள்ளும் சிறப்பாகப் பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் குடி, வரலாற்றிற் கெட்டாத தொன்றுதொட்டுத் தென்னாட்டை யாண்டு வருவ தாலும், ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு. என்று திருக்குறள் பல்துறை நூல்களையுஞ் சுட்டுவதாலும், இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் (1945) என்னுந் தொல்காப்பிய நூற்பா கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட அறம்பொருளின்ப வீட்டு நூல்களைக் குறிப்பதாலும், மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங்கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள. என்று ஒரு பழந்தனிச் செய்யுள் கூறுவதாலும், திருவள்ளுவர் வேந்தர்க்கு உள்படுகருமத் தலைவராயிருந்ததாகத் தெரிவ தனாலும், அவர் திருக்குறள் இயற்றியதற்கு வடநூற்றுணை எத்துணையும் வேண்டிய தாயிருந்ததில்லையென, அவர்நூலை வழி நூலென்பார் கூற்றை மறுக்க. முழுநிறைவு: அறம்பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளையும் பற்றி விளக்கமாகக் கூறுவதனாலும், ஒவ்வோர் அதிகாரத்திலும் அததற்குரிய பொருளைப் பற்றிய எல்லாக் கருத்துக்களையும் கொண்டிருப்பதனாலும், திருக்குறள் முழுநிறைவான நூலாகும். அகரமுதல என்று தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்தில் தொடங்கி முயங்கப் பெறின் என்று அதன் இறுதியெழுத்தில் முடிந்திருப்பதும், திருக்குறளின் முழுநிறை வைக் காட்டும். ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் - திருவள்ளுவமாலை. உலகப் பொதுமை: திருக்குறள் தமிழ்நாட்டிற்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் ஒத்ததென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே. இதுபற்றியே வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடினார் பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும். வாழ்க்கைத்துறையிலும் ஆட்சித்துறையிலும் மட்டுமன்றிச் சமயத் துறையிலும் பொதுவாயிருப்பதால் பொதுமறை யெனப்பட்டது. ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி - திருவள்ளுவமாலை. காலவரம்பின்மை: திருக்குறள் இத்துணைக்காலந்தான் அல்லது இன்ன நூற்றாண்டு வரைதான் பயன்படுமென்று எவருஞ் சொல்லுதற்கிடமின்றி, எக்காலத்திற்கும் ஏற்றதாயி ருப்பதும் அதன் ஏற்றங்களுள் ஒன்றாம். கோவரசும் (Monarchy) குடியரசும் (Democracy) மக்களாட்சியும் (Republic) கூட்டுடை மையும் (Socialism) நீங்கி உலகெங்கும் பொதுவுடைமை (Communism) வரினும், அதற்கும், பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான். என்னுங் குறள்கள் இடந்தரும் என்க. மறையியல்: திருக்குறள் இம்மைக்குரிய ஒழுக்க வரம்பு கூறும் அறநூலாக மட்டுமன்றி, மறுமையில் உயர் பிறப்போ விண்ணின்பமோ வீட்டின்பமோ பெறுதற்குரிய வழி காட்டும் மறைநூலாகவுமிருப் பதால், தமிழ்மறை, பொதுமறை, வள்ளுவர் வாய் மொழி, தெய்வநூல் எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ் செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின் வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடின ரின்குறள்வெண் பா. - திருவள்ளுவமாலை. இயல்வரையறைச் சிறப்பு: பொருள்கட்கும் பண்புகட்கும் வினைகட்கும் இயல்வரையறை (Definition) கூறுவதில் திருக்குறள் தலைசிறந்ததாகும். எ-டு: அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. நவில்தொறும் நயமுடைமை: இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்க மாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும், அது மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும், ஆகும். ஆயினும், இன்னும் அச்சுரங்கத்தினின்று கருத்துமணிகள் தோண்டத்தோண்ட மேன்மேலும் வந்து கொண்டேயிருக்கின்றன. எ-டு: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு நாடு என்ப - சிறந்த நாடென்று சொல்லப்படுவன; நாடா வளத்தன – பிறநாடு களின் உதவியை வேண்டாது தமக்கு வேண்டிய பொருள் வளங்களை யெல்லாம் தம்மகத்தே கொண்டனவாகும்; நாடவளந்தரு நாடு - பிற நாட்டுதவியை நாடுமாறு குன்றிய வளங்கொண்ட நாடுகள்; நாடு அல்ல - சிறந்த நாடாகா. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க் காய்தொறு மூறு மறிவு. - திருவள்ளுவமாலை. நடுவு நிலைமை: எல்லாரும் வாழவேண்டுமென்பதும், குற்றத்திற்கேற்ப எல்லாரையும் ஒப்பத் தண்டிக்க வேண்டுமென்பதும், திருக்குறளின் நடுநிலைக் கொள்கைகளாம். இவை ஆரியக் கொள்கைகட்கு நேர்மாறானவை. வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி. என்று மனோன்மணீய ஆசிரியர் கூறுதல் காண்க. உயர்நிலையறம்: எல்லா அறநூல்களுள்ளும் உயர்ந்த ஒழுக்க வரம்புகளைக் கூறுவது திருக்குறளே. எ-டு: பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல். உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல் ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயனபலவுஞ் செய்தாயினும் புறந்தருக. என்பது ஆரிய அறநூல் நெறியீடு. நடைமுறையறிவு: திருவள்ளுவர் மக்கட்கு உயர்ந்த ஒழுக்கத்தை வகுத்தாரேனும், உலகியலறிந்து அதன் ஒழுங்கான நடப்பிற்குத் தோதாகவே சில விலக்குகளையும் அமைத் திருக்கின்றார். அருளுடைமை, புலான்மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் அற வினைகளை அரசியலில் முற்றக் கடைப் பிடிப்பது அரிதாதலின், அவற்றை இல்லறவியலிற் கூறாது துறவறவியலிலேயே கூறியுள்ளார். தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் என்று சொன்ன வள்ளுவரே, புலத்தலிற் புத்தேணாடுண்டோ என்றும், ஊடுதல் காமத்திற் கின்பம் என்றும் உடன்பட்டுள்ளார். உண்மைக்கூற்று: இறைவனே நால்வகை வருணத்தாரையும், முறையே தன் முகத்தினின்றும் மார்பினின்றும் தொடையினின்றும் பாதத் தினின்றும் படைத்தானென்றும், அவருட் பிராமணனே உயர்ந்தவ னென்றும், மற்ற மூவரும் அவனுக்குத் தாழ்ந்தவரென்றும் அவனுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டவரென்றும், ஆரிய நூல்கள் துணிந்து பொய்யுரைப்பது போல, திருக்குறள் ஓரிடத்தும் கட்புலனான உண்மைகளைத் திரித்துக் கூறுவதில்லை. எங்கேனும் ஓரிடத்தில் உயர்வு நவிற்சி அளவிறந் திருப்பினும், அது அணிதழுவியதும் உண்மை எல்லாராலும் அறியப்படத்தக்கது மாகவே யிருக்கும். எ-டு: அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - திருவள்ளுவமாலை. அதிகாரவொழுங்கு: நூன் முழுதும் 133 அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொன்றும் பப்பத்துக் குறள் கொண்டிருப்பதும், ஒவ்வோரிய லிலும் அதிகாரங்கள் ஒன்றோ டொன்று கோவையாகத் தொடர்பு கொண்டிருப்பதும், பிறநூல்களிற் காணற்கரிய ஒழுங்காகும். சொற்பொருள் தூய்மை: அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ் வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும் புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை: அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), கவரி, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினாறே, ஆரிய வெறியர் கூறுவது போல் ஐம்பதல்ல. அப்பதினாறனுள்ளும், அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே. அல் - அ. மடி - மரி - மரர். கரணம் - காரணம் (வ.) கரு + அணம் = கரணம் = செய்கை, செய்கைக் கருவி. கருத்தல் செய்தல். இது ஒரு வழக்கற்றவினை. பகு - பக்கு-பாக்கு=பகுதி. பாக்கு- பாக்கியம்= நற்பகுதி, நற்பால், நற்பேறு. விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி- விடி- விதி - வித் (வ.) - வித்தக. கவரி என்பது சவரி என்னும் வடநாட்டுச் சொல்லின் திரிபு. அதி என்பது அதை என்னும் சொல்லிற்கினமான வழக்கற்ற தமிழ் வினைச்சொல். ஆயம் என்னுஞ் சொல்லின் முதனிலையான ஆ என்பது வா என்பதன் திரிபு. குணம், நிச்சம் என்னும் இரண்டும் தென்சொல்லே. கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல். கொள் - கொள்கை = இயல்பு. கொள் - கோள் = தன்மை. கொள் - கொண் - (கொணம்) - குணம் = கொண்டதன்மை, தன்மை. இச்சொற்கு வடவர் காட்டும் மூலம் க்ரஹ் (பற்று) என்பதே. நில் - நிற்றல் = நிலைப்பு. குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி (சூடா: 7: 76). நிற்றல் - நிச்சல். ஒ.நோ: முறம் - முற்றில் - முச்சில். நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய (திவ். திருவாய். (1:6:11) நிச்சல் - நித்தல். நித்தல் விழாவணி (சிலப். உரைபெறு கட்டுரை). நில் - நிற்றம். ஒ.நோ: வெல் -வெற்றம். நிற்றம் - நிச்சம் - நித்தம் - நித்ய (வ.) திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள பொருள்களெல்லாம் தூய தமிழ்ச் செய்திகளே. ஆரியத்தைக் கண்டித்தற்கென்றே நூலியற் றியவர் எங்ஙனம் ஆரியச் செய்திகளைத் தழுவ முடியும்? இயன்ற விடமெல்லாம் வலிந்தும் நலிந்தும் ஆரிய மூலங்காட்டும் பரிமேலழகரும், இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல் என்னுங் குறட் சிறப்புரையில், இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்கவென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மை யையும் மானத்தினது நிலையுடைமை யையுந் தூக்கி அவை செய்யற்க வென்பதாம். என்று வரைந்திருத்தல் காண்க. செய்யுட் சிறப்பு: திருக்குறள்போற் குறள்வெண்பாவிற்குச் சிறந்தநூல் முன்னு மில்லை; பின்னுமில்லை. ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு வகையில் ஒளிவிடும் மணிபோல்வதாம். எ-டு: தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு. என்பன இன்னோசை யுள்ளன. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள. என்பன பொருட் சிறப்புள்ளன. நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது. என்பது சொற்சுருக்க முள்ளது. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (உவமை) வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு. (உவமை) உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (உவமை) நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங் கெடுநீரார் காமக் கலன். (உருவகம்) நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும் (பிறிதுமொழிதல்) தீயினாற் சுட்டபு ணுள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு (வேற்றுமை) நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர் (வஞ்சகப்புகழ்ச்சி) கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் (முரண்) நெருந லுளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு (எதிர்பொருள்) காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு (சொற்பொருட் பின்வருநிலை) என்பன பல்வேறு அணியுடையன. கடைக்கழகச் செய்யுட்கள் அல்லது நூல்கள் என்று முதலில் வழங்கியவை பத்துப் பாட்டும் எட்டுத்தொகையுமே. திருவள்ளுவர் கழகப்புலவரன்மையாலும், அவர் நூல் கழகத்திலுள்ள பிராமணப் புலவரால் ஒப்புக் கொள்ளப் பெறாமையால் அரங்கேறாதிருந்த தினாலும், அது கழக நூலும் கழக மருவிய நூலுமல்லாது தனியாகவேயிருந்து வந்தது. பிற்காலத்திற் கடைக்கழகங் கலைக் கப்பட்ட பின், சமணத் தமிழக் கழகத்தைத் சேர்ந்த அறநூலாசி ரியர் சிலர் தம் நூல் கட்குக் கடைக்கழக நூல் நிலைமை யூட்டல் வேண்டி, கழகக் காலத்தனவும் பிற்காலத்தனவுமான பதினெண் நூல்களை ஒரு தொகுதியாக்கி, அவற்றைப் பதினெண் கீழ்க்கணக் கென்றும் பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் பதினெண் மேற்கணக்கென்றும் வழங்கினதாகத் தெரிகின்றது. திருக்குறள் கழக நூலன்மையாலும், அதற்கு நால் நூற்றாண் டிற்குப் பிற்பட்ட கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கே கழகக்காலத்தனவாத லாலும், ஏனையவெல்லாம் வச்சிரநந்தி 5ஆம் நூற்றாண்டில் மதுரையில் சமணத் தமிழ்க்கழகம் நிறுவிய பின்னரே எழுந்தவை யாதலாலும், அவற்றுள் ஆசாரக்கோவை திருக்குறட்கு நேர்மாறாக வடசொல்லும் ஆரியக் கொள்கையும் மிகுந்திருப்பதுடன், இழிதகு நிலையில் தமிழரைப் பிராமணர்க்கு அடிமைப் படுத்தி யிருப்பதாலும், பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதிமுறை மிகத்தவறானதென்றும், திருக்குறளை அதிற் சேர்த்தது அதினும் மிகத் தவறானதென்றும் அறிந்துகொள்க. திருக்குறளைக் கடைக்கழகக் காலத்து அம்மை வனப்பு நூலென்று கொள்வதே தக்கதாம். 10. பாயிரவிளக்கம் ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும். பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைப்படும். இலக்கண நூற்கு இவ்விரண்டும் வேண்டும்; இலக்கிய நூற்குச் சிறப்பொன்றே போதும். அச்சிறப்பும், பிறர் ஆசிரியனையும் நூலையும் சிறப்பித்துக் கூறுவதும் ஆசிரியன் நூற்பொருளைச் சுருக்கிக் கூறுவதும் என இருவகையாம். ஆசிரியன் கூறுவது தற்சிறப்புப்பாயிரம் எனப்படும். அது கடவுள்வழுத்தொடு கூடியும் கூடாதும் இருக்கும். மக்களெல்லாரும் இம்மையிலும் மறுமையிலும் இன்புற்று வாழ வேண்டுமென்பதே, திருவள்ளுவர் திருக்குறளியற்றியதன் நோக்கம். இல்லறத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றவாறு எங்ஙனம் ஒழுக வேண்டுமென்பது இல்லறவியலிலும், இறந்தபின் வீடு பெறுவதற்கு எவ்வெவ்வறங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பது துறவறவியலிலும், எல்லாரும் தத்தம் தொழிலைச் செய்து பொருளீட்டி வாழ்வதற்கு அரசன் எங்ஙனம் பாது காப்பளிக்க வேண்டுமென்பது பொருட்பாலிலும், கணவனும் மனைவியும் காம வின்பத்தை எங்ஙனம் நுகரவேண்டு மென்பது இன்பத்துப் பாலிலும், கூறப்பட்டுள்ளன. இங்ஙனம் மக்களெல்லாரும் இடையூறின்றி இனிது வாழ்தற்கு, முதற்படியாக வேண்டிய ஏதுக்கள் நான்கெனத் திருவள்ளுவர் கண்டார். அவை கடவுள்வழிபாடு, மழைபெயல், துறவியர் உறைவு, அறவொழுக்கம் என்பன. இவற்றையே ஆதிபகவன் வழுத்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் பாயிர வதிகாரங்கள் நான்கும் எடுத்தோதுகின்றன. ஆதலால், திருக்குறட்குப் பாயிரந் தேவையில்லை யென்பதும், அது இடைச் செருகலென்பதும், ஆராய்ச்சியில்லார் கூற்றேயென அறிக. பாயிரம் என்னும் சொல், முதற்கண் போர்மறவர் போர்க்களத்திற் பகைவரை விளித்துக்கூறும் நெடுமொழியென்னும் மறவியல் முகவுரையைக் குறித்துப் பின்பு நூன் முகவுரையைக் குறித்தது. பயிர்தல் = (க) ஊரி விலங்கு பறவைகள் ஒன்றையொன்று அழைத்தல். செங்காற் பல்லி தன்றுணை பயிரும் (குறுந். 16). கடுவன்... மந்தியைக் கையிடூ உப் பயிரும் (புறம்.158) புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் (குறுந். 79) (2) மக்களை அழைத்தல். நாட்டிறை பயிருங்காலை முரசம் (சிலப்.26:52) பயிர் - பயிரம் - பாயிரம் = அழைப்பு, போருக்கழைப்பு, போருக் கழைக்கும் முகவுரை, முகவுரை. ஒ.நோ: அகவுதல் = அழைத்தல். அகவு -ஆகவம் = போர். மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்த னாகி யொழுகின் - செறுமனத்தார் பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப ஆயிரங் காக்கைக்கோர் கல். (பழமொழி.246) பாயிரங் கூறி என்பதற்கு வீரத்திற்கு வேண்டும் முகவுரைகள் சொல்லி என்று பழைய வுரையாசியர் பொருள் வரைந்திருப்பதை நோக்குக. 11. நூற்பகுப்பு திருக்குறள், பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும், இயல் என்னும் எண் சிறு பிரிவுகளையும், அதிகாரம் என்னும் 133 உட்சிறு பிரிவுகளையும் உடையது. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள்களைக் கொண்டது. ஆக, மொத்தம் 1330 குறளாம். பாயிரமும் ஊழும் நூல் முழுமைக்கும் பொதுவாம். அதிகாரக் கணக்கு பால் இயல் அதிகாரத் தொகை அறத்துப்பால் பாயிரவியல் 4 இல்லறவியல் 20 துறவறவியல் 13 ஊழியல் 1 பொருட்பால் அரசியல் 25 உறுப்பியல் 45 இன்பத்துப்பால் களவியல் 7 கற்பியல் 18 மொத்தம் 133 உறுப்பியல் அமைச்சு (10), நாடு (1), அரண் (1) பொருள் (கூழ்,1), படை (2), நட்பு (17), குடி (13) என ஏழு பகுதிகளையும் 45 அதி காரங்களையும் உடையது. நட்பிற்பகை யும் (14) அடங்கியுள்ளது. அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துரைநா டரண்பொரு ளொவ்வொன் -றுரைசால் படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று குடியெழுபான் றொக்கபொருட் கூறு. என்பது திருவள்ளுவமாலை. 12. பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாதொழுகுதல். அதுதான் (அறம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்பு களொழித்து ...... கூறப்பட்டது (உரைப்பாயிரம்) இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யெனவறிக; என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு, அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரெனவுணர்க (கடவுள் வாழ்த்து அதிகார முகவுரை). தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி எழுத்தெல்லா மென்றார். (1) தத்துவமிருபத்தைந்தினையுந் தெரிதலாவது,...... .சாங்கிய நூலுளோதியவாற்றான் ஆராய்தல் (27). ஏனை மூவராவார், ஆசாரியனிடத்தினின் றோதுதலும் விரதங் காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின் கட்டீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யுமொழுக் கத்தானும், முற்றத்துறந்த யோகவொழுக் கத்தானுமென இவர். (41) பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி: அவர்க்கிடம் தென்றிசையாதலின், தென்புலத்தா ரென்றார். (43) புதல்வரைப் பெறுதல் - அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக விறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானு மல்லது இறுக்கப் படாமையின், அக்கடனிறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். (மக்கட் பேற்றதிகார முகவுரை) மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது (41) பெண்ணியல்பாற் றானாக வறியாமையிற் கேட்டதா யெனவுங் கூறினார் (46) தீயசொற்களாவன.....................tUz¤â‰F உரியவல்லனவுமாம். (139). இனி மனு முதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்களெல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற்றுள்nள அடங்கும். (240) வேதமும் அறமும் அநாதி. (543) பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற் குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று. (560). தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளி களது துணிவு தொகுத்துப் பின் நூலுடையார்கூறியவாறுகூறுகின்றமையின்,ஈண்டுவினைத்தூய்மையும்உடன்கூறினார். (660). வேந்தன் மேய தீம்புன லுலகமும் என்றார் பிறரும்.நகுடனென் பான் இந்திரபதம் பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழைசெய, அதனாற் சாப மெய்தி அப்பதம் இடையே இழந்தானென்பதனை யுட்கொண்டு இவ்வாறு கூறினார். (899). பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. (624) வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும் ...... கூறினார். (972). வடநூலார் அங்கமென்றமையின் உறுப் பென்றார். (993) காமத்துப்பால் - இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊட லென்பனவோவெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருளின்பமென வடநூல் வழக்குப் பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின் கணடக்கினாரென்க. இனி, அவை தம்மையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பு மொவ்வாமையு முடையவாக்கிக் கூறுகின்றார். (காமத்துப்பால் முகவுரை). ஈண்டுப் பிரிவினை வடநூன்மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவியென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமை யுள்ளும், ஆற்றாமை படர்மெலிந்திரங்கன் முதல் நிறையழித லீறாயவற்றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற்றுள்ளுங் கண்டு கொள்க. அஃதேல், வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றாராலெனின், அஃது அறம்பொருளின்ப மென்னும் பயன்களுள் ஒன்று பற்றிய பிரிவன்மையானும், முனிவராணை யான் ஒருகாலத் தோர்குற்றத் துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும், ஈண்டொழிக்கப் பட்டதென்க. (காமத்துப்பால் முடிவுரை). ஏனைக் கருத்துக்களை ஆங்காங்கு உரையிற் காண்க. (தி.த.ம.) திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும் ஒவ்வொரு பெருநூலிலும் ஓரிரு அல்லது ஒருசில சொற்களையும் சொல்லாட்சியையும் சிறப்பாகக் காண்கின்றோம். திருக்குறளி லுள்ள சிறப்புச் சொற்களையும் சொல்லாட்சியையும் எடுத்துக் கூறுவது இது. நிகண்டு என்னும் வடசொற் பெயராற் குறிக்கப்படும். உரிச்சொற் றொகுதிகளும், உரையாசிரியன்மார் உரைகளும், பிற நூல்களி லுள்ள சொற்களை யெல்லாம் தொகுத்தும் எடுத்தும் கூறும் இயல்புடையன வாதலின், திருக்குறட் சிறப்புச் சொல்வராதன வென்று விலக்கப்பட்டவை. அவ் விருவகை யொழிந்த ஏனைய நூல்களும் பனுவல்களுமே. 1. சிறப்புத் தனிச்சொற்கள். கஃசு = காற்பலம் தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (1037) கூழ் = செல்வம், பொருள், பொன். படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு. (381) கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு (554) உணவைக் குறிக்கும் கூழ் என்னுஞ் சொல் குழை என்னும் முதனிலைத் திரிபாதலாலும், உணவு என்னுஞ் சொற்குச் செல்வம் என்னும் பொருளின்மை யாலும், பல்வகை யுணவும் பயிரும் பொன்னும் கொள்ப மாதோ கூழென் கிளவி என்று திவாகரங் கூறவதாலும், செல்வத்தைக் குறிக்கும் சொல் உணவுப் பெயரின் வேறு என்று கொள்ளவும் இடமுண்டு. இனி குழைவான (ductile) தாது (உலோகம்) பொன் என்றுமாம்: அல்லது இன்றியமையாத அடிப்படைச் செல்வம் உணவே எனினும் ஒக்கும். கொட்குதல் = வெளிப்படுதல். கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைகொட்கின் எற்றா விழுமந் தரும் (663) தவ்வெனல் = தாழ்தல், சுருங்குதல். கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னுந் தன்மை யிழந்து (1144) ஓசை வகையைக் குறிக்கும் தவ் என்னும் குறிப்புச்சொல் வேறு. ஆதலால், தவ்வென்னும் என்பது குறிப்பு மொழி: நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்ப என்புழியும் அது,என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தவ்வல் என்னும் பெயர் இருதிணையிலும் இளமை குறித்தலாலும், தவ்வுதல் என்னும் வினைக்குக் குறைதல், குவிதல், தவறுதல், கெடுதல் என்னும் பொருள்களிருத்தலாலும், நெல்லை வட்டத்தில் ஒரு பாடத்தில் தாழ்வாயிருக்கும் மாணவனை அப் பாடத்தில் தவ்வலென்று கூறும் வழக்குண்மையாலும், தவ் என்பதை இங்கு ஒரு வினைப் பண்புக் குறிப்பென்று கொள்வதே பொருத்தமாம். தோல் = பழமையான புகழ், பெருமை, தொல் - தோல், தொன்மை = பழைமை. தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னும் நசை. (1043) இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் (1494) என்னும் தொல்காப்பிய நூற்பா ஒரு வகை வனப்பின் (காவியத்தின்) இலக்கணத்தைக் கூறுவதால், அதனொடு திருக்குறட் சொல்லைத் தொடர்பு படுத்துதல் தவறாம். முகடி = மூதேவி (சேட்டை). மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் (617) அதி = மிகு, மிக. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை (636) அதியென்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோரிடைச் சொல்: அது திரிந்து நுட்பமென்பதனோடு தொக்கது என்றார் பரிமேலழகர். மிகுதிப் பொருள் தரும் வடமொழி முன்னொட்டு (உபசர்க்கம் - (Prefix) ati, adhi என்று இரு வடிவி லிருப்ப தனாலும், மிகுதலைக் குறிக்கும் அதிகரித்தல் என்னும் வினைச்சொல் வடமொழி யிலின்மையாலும், அதிகம் என்பதற் கினமான அதனம் (அதி +அனம்) என்னும் தொழிற்பெயர் தமிழிலேயேயிருத்தலானும், அதிகன் என்னும் தமிழச் சிற்றரசர் குடிப்பெயர் மிக்கோன் அல்லது பெரியோன் என்று பொருள் கொண்டிருக்க லாமாதலானும், அதி என்பதைப் பெரும்பாலும் ஒத்த அதை என்னும் தமிழ் வினைச்சொல் வீங்குதல் (பருத்தல்), மிகுதல் என்னும் பொருள் தருதலானும், அதி என்னும் சொல் ஒருகால் ஒரு வழக்கற்ற பழந்தமிழ் வினையாயிருக்குமோ என்னும் ஐயம் நிகழ்கின்றது. இனி,அதினுட்பம் என்று பாடங் கொண்டு, மேற்கூறிய நூற் கல்வியோடு கூட நுண்ணிதாகிய மதியினையும் உடையார்க்கு, அதனினும் நுண்ணியவாய் மாற்றாரா லெண்ணப்பட்டு எதிர்நிற்கும் வினைகள் யாவுள? என்னும் மணக்குடவர் உரை, சொல்வகை யிலும் பொருள் வகையிலும் பரிமேழகருரையினுஞ் சாலச் சிறந்ததாம். இப் பொருளில் அதி என்னும் முன்னொட்டிற்கே இடமில்லை. பரிமேலழகர் ஒரு தென்சொல்லை வடசொல்லாக்கு வான் வேண்டி, இனி, அதினுட்பமென்று பாடமோதி, அதனி னுட்பம் யாவென்றுரைப்பாருமுளர். அவர் சூழ்ச்சிக்கினமாய் முன் சுட்டப்படுவ தொன்றில்லாமையும், சுட்டுப் பெயர் ஐந்தா முருபேற்றவழி அவ்வாறு நில்லாமையு மறிந்திலர். என்று மணக்குடவ ருரையை மறுத்திருப்பது, அவரையுந் தாக்குதல் காண்க. 2. சிறப்புத் தொடர்ச் சொற்கள் அசையியல் = நுடங்கிய இயல்பினையுடையாள். இது அன்மொழித் தொகையாயினும் அரியஅமைப்புடையது. அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும் (1098) அறன்கடை = கரிசு (பாவம்) அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் (142) உயிர்நிலை = உடம்பு. உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு (255) கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு (290) ஊருணி = ஊரார் குடிக்கவோ குளிக்கவோ உதவும் குளம். இது பாண்டி நாட்டு வழக்கு. முதற் காலத்தில் இது குடிநீர் நிலையையே குறித்திருத்தல் வேண்டும். ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகலாம் பேரறி வாளன் திரு (215) குறியெதிர்ப்பை = கைம்மாறு தருதல். வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து (221) தொல்வரவு = தொன்றுதொட்டு வரும் குடிப் பண்பு தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னும் நசை (1043) மலர்மிசை யேகினான் = கடவுள் அடியார் நெஞ்சத்தாமரையின் கண் அமர்ந்தவன் மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (3) வாலறிவன் = கடவுள் (தூய அறிவினை யுடையவன்) கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின் (2) வாழ்க்கைத்துணை = மனைவி. இது இல்லறவியலில் 2ஆம் அதிகாரத் தலைப்பு, வாழ்க்கைப் படுதல் (மனைவியாதல்) என்னும் பாண்டி நாட்டு வழக்கு இங்குக் கவனிக்கத்தக்கது. 3. சிறப்புச் சொல்வடிவம் அறி = அறிவு. இஃது முதனிலைத் தொழிற்பெயர். அறிகொன் றறியா னெனினு முறுதி உழையிருந்தான் கூறல் கடன் (638) ஒப்பாரி = ஒப்பு, உவமை. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் (1071) இழவிற்கழும் ஒப்பாரியையும் ஒப்பென்பர். ஒருவந்தம் = ஒருதலை. தலை = அந்தம். வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும் (583) ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் (593) கெடு = கேடு (வறுமை) இதுவும் முதனிலைத் தொழிற்பெயர். கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கட் டங்கியான் தாழ்வு (117) பீழி = பீடி. பீழித்தல்= துன்புறுத்தல். பிள் - பீள் - பீழ் -பீழி. பிடுங்கல் என்னும் வழக்கை நோக்குக. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது (843) நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது (1217) முயற்று = முயற்சி. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (616) வரன் = பரம் (மேலுலகம்). புரம் - பரம் - வரம் - வரன். புரம் = மேலிடம். கோபுரம் = அரசனிருக்கும் உயர்ந்த இடம் புரை யுயர் பாகும் (தொல்.785) உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24) 4. சிறப்புப் பொருளாட்சி இடம் = செல்வம். இடம் - இடன். இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு (1064) இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் (218) என்பு = உடம்பு. இது சினையாகுபெயர் அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு (72) அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (73) குடங்கர் = குடில் உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று (890) குதித்தல் = தாண்டுதல், கடத்தல், மேற் கொள்ளுதல், வெல்லுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (269) சிமிழ்த்தல் = வலையுள் அகப்படுத்துதல். தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (274) மாடு = செல்வம். இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை = பொன், பொற்கட்டி, மாழை - மாடை- மாஷ (வடசொல்). பண்டைக் காலத்தில் உலகமெங்கும் கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் விலங்குப் பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். ஒ.நோ: ïy¤Ô‹ (L.): pecu (=cattle)-pecunia (=money)- ஆங்கிலம் (நு): pecuniary = consisting of money. L. caput (=head)-capitalis -E. capital -cattle-chattel=movalle possessions. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (400) மையாத்தல் = மயங்குதல். மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று (1112) நாகரிகம் = பண்பாடு. இச் சொல்லை இப் பொருளிலேயே திருவள்ளுவர் ஆண்டிருக் கின்றார். கண்ணோட்டம் ஒரு பண்பாட்டியல் யென்பதை யறிக. நாகரிகம் என்னுஞ் சொற்குக் கண்ணோட்டம் என்பது நேர்ப் பொருளன்று. (திருவள்ளுவர் நினைவு மலர்.) திருக்குறட் பொதுக்கூறுகள் பாயிரத்தில் வான்சிறப்பு, அறத்துப்பாலில் இல்லறவியல், பொருட்பாவில் அரசியலொழிந்த பகுதிகள், இன்பத்துப்பாலிற் சில கற்பியலதிகாரங்கள் ஆகியவை எல்லார்க்கும் பொதுவாம். திருக்குறள் அரசியல் இக்காலத்தரசியல் அரசுள்ள ஒரு நாட்டை State முதலாகவும் ஆள்நிலம் Territory, குடிகள் Population அரசு Government,nfh‹ik Sovereignty, ஒற்றுமை Unity என்னும் ஐந்தையும் சினையாகவும் கொண்டுள்ளது. அக்காலத் தரசியலோ அரசனையே முதலாகவும், குடி பொருள் (கூழ்) படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஆறையும் சினையாகவுங் கொண்டிருந்தது. ஆள்நிலம் குடியுள் அடக்கப்பட்டது. செங்கோலோ கொடுங்கோலோ ஓச்சும் அமைச்சுக் கோவரசே அற்றையரசு வகையாம். செங்கோலரசன், அமைச்சன் படைத்தலைவன் தூதன் ஒற்றன் ஆகியோரை அறம்பொருளின்ப வுயிரச்சமென்னும் நால்வகைத் தேர்திறங்களால் தேர்ந்தெடுத்து, நாட்டுவளத்தையும் வருவாயையும் பெருக்கி வந்த பொருள்களை அறம் பொருளின் பங்கட்குச் செலவிட்டு, சிறந்த படையரண் அமைத்து, காட்சிக் கெளியனாய்க் கடுஞ்சொல்லனல்லனாய் நடுநிலையாகக் குற்றவாளியைத் தண்டித்து முறைசெய்து, சிற்றினஞ்சேராது பெரியாரைத் துணைக்கொண்டு சுற்றந்தழுவி நட்பிற் பிழைபொறுத்து, நால்வகை ஆம்புடைகளைக் கையாண்டு பிறவரசரொடு பழகி, பேதைப் பெண்வழிச் செல்லாது பொதுமகளிரொடு கூடாது, கள்ளுண்ணாது, சூதாடாது, அளவறிந்துண்டு நோய்வராமற் காத்து, தளர்ந்த குடிகளைக் கைதூக்கிச் சிறந்த அமைச்சர்க்கும் படைத்தலைவர்க்கும் பெருஞ்சிறப்புச் செய்து, ஐவகைத் துன்பமும் வராமல் அன்பாகக் குடிகளைக் காத்தல் வேண்டுமென்பதே திருக்குறள் அரசியலாம். இற்றை யரசு எல்வெவ்வகையாயிருப்பினும், செங்கோன்மை யைப் பொறுத்த மட்டில் திருக்குறள்முறையே எல்லாவற்றிற்கும் ஏற்பதாம். இனி, நட்பு என்பது புறத்துறுப்பாயினும், ஈராயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வற்புறுத்தியவாறே இன்றும் அது வல்லரசு கட்கும் இன்றியமை யாததாயிருப்பதை, அமெரிக்க ஒன்றிய நாடுகளும் இரசியாவும் ஏனை நாடுகளைத் தம்வயப்படுத்து வதற்கு எல்லா முயற்சிகளும் இடைவிடாது செய்துவருதலால் அறிக. திருக்குறளிற் குறிக்கப்பட்ட தொல் (புராணக்) கதைகள் அருகன் பூமேல் நடந்தது. வேந்தன் (இந்திரன்) முனிவனது ஆற்றலுக்குச் சான்றானது. திருமால் மூவுலகும் ஈரடியா லளந்தது(?) திருக்குறளின் தன்னேரின்மை எல்லா நாட்டார்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றவாறு, இல்லற வாழ்க்கையும் செங்கோலாட்சியும் எடுத்துக் கூறவது திருக்குறள் ஒன்றே. நால்வேதமும் பாரதமும் மனுதரும சாத்திரமும் திருக்குறட்கு ஒப்பாகுமென்று திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள் கூறுவது அவற்றைப் பாடியவரின் அறியாமை, அடிமைத்தனம், ஒப்பு நோக்குந் திறமின்மை ஆகியவற்றையே ஒருங்கே காட்டும். இனி, இக்காலத்தும், ஆரியருந் தமிழருமான பலர் பகவற்கீதையைத் திருக்குறட்கு ஒப்பாகக் கூறத் துணிகின்றனர். கண்ணபிரான் அருச்சுனனுக்கு அறிவுறுத்தியதெல்லாம், போர்க் களத்திற் பொருமறவன் பகைப்படையிலுள்ள உறவினரை நோக்காது ஊக்கமாகப் பொருது தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றவேண்டுமென்பதே. இதைப் பிற்காலத்து ஆரிய இன வெறியனொருவன் பெரிதும் பயன்படுத்திக்கொண்டு, பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால் வரணத்தையும் இறைவனே படைத்தானென்னும் நச்சுக் கருத்தை, அதிற் சூழ்ச்சியாகப் புகுத்தியிருக்கின்றான். நால்வருணம் இறைவன் படைப்பன்மைக்குச் சான்றுகள் (1) முதற்கால அநாகரிக மாந்தர் வகுப்பு வேறுபாடின்றியே யிருந்தமை. (2) இயற்கையான வகுப்புவேறுபாடு நிறத்தாலன்றித் தொழிலா லேயே ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ளமை. (3) தொழிலுக்குப் பிறப்பொடு தொடர்பின்மை. (4) தொழில் விருப்பப்படியும் திறமைப்படியும் மாற்றக் கூடியதா யிருத்தல். (5) கல்வி ஒரே குலத்திற்குச் சிறப்புரிமையாகாது எல்லா வகுப் பார்க்கும் பொதுவாயிருத்தல். (6) ஆரிய நால்வரணப் பகுப்பு உலகில் பிராமணருள்ள இந்தியாவில் மட்டு மிருத்தல். (7) ஆரிய நால்வரணத்திற்கு மூலமான (அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும்) தமிழ நாற்பாற் பகுப்புத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டிருந்தமை. (8) அறிவு வளர்ச்சியினால் நால்வரணப் பகுப்புப் படிப்படியாகச் சிதையுண்டு வருதல். இங்ஙனமிருப்பதால், கண்ணபிரான் கடவுளின் தோற்றரவாயின் (அவதார மாயின்), நானே நால்வரணத்தையும் படைத்தேனென்று கூறியிருக்க முடியாது; கூறியிருப்பின் கடவுளின் தோற்றரவா யிருந்திருக்க முடியாது. பகவற்கீதை பதினெண்ணதிகாரங்களையும் எழுநூறு சொலவங் களையும் (சுலோகங்களையும்) உடையது. இதிலடங்கியுள்ள விரிவான செய்தியை ஒரு மெய்ப்பொருளியல் மாநாட்டுத்தலைவர் கூடச் சொல்லியிருக்க முடியாது. ஒரு மாபெரும் போர்க்களத்தில் இருதிறத்தும் நால்வகைப் படைகளும் அணியமாகிப் போருக்கு முனைந்து நிற்கும் வேளையில், இத்தகைய ஓதுவம் (உபதேசம்) ஒருபக்கப் படையின் முன்னணியில் நடைபெற்றதெனின் அதை நம்புபவன் பரமார்த்தகுரு மாணவனாகவே யிருத்தல் வேண்டும். மேலும், அருச்சுனனுக்கும் கண்ணபிரானுக்கும் இடையே நடை பெற்ற உரை யாட்டைச் சஞ்சயன் கேட்டுத் திருதராட்டிரனுக்கு அவ்வப்போது அறிவித்தா னென்றிருப்பது, இக்காலத்து ஒலி பெருக்கியும் (Microphone) உரத்தொலிப்பான்களும் (Loudspeakers) நிறைந்த மாநாட்டுச் சொற்பொழிவொன்றை, அவைக்கோடி யிலுள்ள ஒருவன் கேட்டு அருகிலுள்ள குடுட்டுச் செவிடனுக்கு எடுத்துச் சொல்வது போன்றே இருக்கின்றது. தமிழகத்து இருபெருமதங்களுள் மூத்ததான சிவனியம் (சைவம்) கண்ணபிரானின் தோற்றரவுத் தன்மையை ஒப்புக்கொள்ளவு மில்லை. பகவற்கீதையின் செய்தி அமைப்பு நடை முதலியவற்றை நோக்கின், கார்பு (Garbe) கூறியுள்ளவாறு, அந்நூல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிக் கி.பி.2ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப் பெற்றதென்று கொள்வதே பொருத்தமாம். அன்றி, கி.மு.5ஆம் நூற்றாண்டில் தோன்றியதெனக் கொள்வாரும், அதன்பின் மேன்மேலும் விரிவும் திருத்தமும் பெற்று வந்துள்ளமையை மறுக்க முடியாது. கி.மு.10ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு போரின் சிறு நிகழ்ச்சியைப் பிற்காலத்துப் பிராமணனொருவன் பயன்படுத்திக்கொண்டு, நால்வரணத்தை நிலைநாட்ட ஒரு பெருமுயற்சி செய்துள்ளான் என்பதே உண்மையான செய்தியாம். பகவற்கீதையிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கநெறிகளும் மெய்ப்பொருள் விளக்கங்களும், இறந்துபட்ட தமிழ் ஓத்துக்களினின்று எடுத் தாண்டவையே என அறிக. (தி.த.ம.) திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் தேவதானம் - தேவகம்,திருக்கோவில் உற்சவங்கள் - திருவிழாக்கள், விழாக்கள் நிர்வாக அதிகாரி - செயல் அலுவலர், ஆள்வினைஞர், கருமத்தலைவர் கர்ப்பகிரகம் - கருவறை, உண்ணாழிகை பூர்த்தி - நிறைவு ஆலய நிர்வாகிகள் - கோவில் கருமத் தலைவர்கள் பசலி - பயிராண்டு பஞ்சாங்கம் - ஐந்திறம் பிரதோஷம் - மசண்டை அமாவாசை - காருவா கார்த்திகை - ஆரல், அறுமீன் ஷஷ்டி - அறமி வசந்தோற்சவம் - இளவேனில் விழா மிதுன லக்னம் - ஆடவையோரை சித்திரா பௌர்ணமி - மேழ மதியம், மேழ வெள்ளுவா அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் - கத்தரித் துவக்கம், எரிநாள் தொடக்கம் சீதகும்பம் - குளிர் கும்பம், தண்குடம் நடராஜர் அபிஷேகம் - நடவரசு திருமுழுக்கு, ஆடலரசு திருமுழுக்கு சுவாமி தீர்த்தம் - இறை தூநீர் வசந்தோற்சவத்வஜ - இளவேனில் விழாக் ஆரோஹணம் - கொடியேற்றம் ஸ்ரீ தேவசேனா அம்மன் திருக்கல்யாணம் - திருத்தெய்வயானை திருமணம் விருச்சிக லக்னம் - நளியோரை ஸ்ரீவள்ளி - திருவள்ளி ரதாரோஹணம் - தேர் ஏற்றம் த்வஜஅவரோஹணம் - கொடி இறக்கம் கும்பாபிஷேகம் - குடமுழுக்கு வருஷாபிஷேகம் - ஆட்டைத் திருமுழுக்கு அன்னாபிஷேகம் - சோற்றுத் திருமுழுக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம் - இலக்க வழிபாட்டுத் தொடக்கம் சனி ப்ரதோஷம் - காரி மசண்டை கன்னிமார் பூஜை - கன்னிமார் பூசை மஹாபிஷேகம் - பெருமுழுக்கு விநாயக சதுர்த்தி - மூத்த பிள்ளையார் நலமி போதாயன மஹாளய அமாவாசை - போதாயன மூதிரைக் காருவா கேதரகௌரி விரதம் - மலைமகள் நோன்பு நவராத்திரி ஆரம்பம் - தொள்ளிரவுத் தொடக்கம் சரவதி பூஜை - கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு ஆயுத பூஜை - கருவிப் பூசை நாக சதுர்த்தசி நானம் - நாகநலமிக் குளிப்பு சூரசம்ஹார உற்சவக் காப்புக் கட்டு - சூர்தடி விழா காப்புக்கட்டு கந்த ஷஷ்டி - கந்தர் அறமி திருக்கல்யாணம் - திருமணம் திருக்கார்த்திகை உற்சவக்காப்புக் கட்டு - திருஆரல் விழாக் காப்புக்கட்டு பரணிதீபம் - முக்கூட்டு விளக்கு போதாயன அமாவாசை - போதாயனக் காருவா சுப்ரமண்ய ஷஷ்டி - முருக அறமி சம்பா ஷஷ்டி - சம்பா அறமி தனுர்பூஜை ஆரம்பம் - சிலைப்பூசைத் தொடக்கம் நடராஜர் ஆருத்தரா அபிஷேகம் - அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு போகிப் பண்டிகை - வேந்தன் திருநாள் இரவு தனுர் பூசை பூர்த்தி - இரவு சிலைப் பூசை நிறைவு சங்கராந்தி - பொங்கல் பண்டிகை கிராமசாந்தி - ஊர்ச் சமந்தி த்வஜஆரோஹணம் - கொடி ஏற்றம் மேஷ லக்னம் - மேழ ஓரை முகூர்த்தம் - முழுத்தம் மகாசிவராத்திரி - சிவனார் பேரிரவு உற்சவ த்வஜ ஆரோஹணம் - விழாக்கொடி ஏற்றம் ரிஷப லக்னம் - விடையோரை யுகாதி பண்டிகை - தெலுங்கு ஆண்டுப் பிறப்பு சாதாரண வருஷப் பிறப்பு - நாற்பானாலாம் ஆண்டுப் பிறப்பு ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி - திருமாலியப் பதினொரமை சைத்ரோற்சவம் கிராமசாந்தி - மேழவிழா ஊர்ச்சமந்தி துவஜாரோஹணம் - கொடி ஏற்றம் சர்வ ஏகாதசி - அனைத்துப் பதினொரமை சித்ராபௌர்ணமி - மேழமதியம் சர்வசமயன ஏகாதசி - அனைத்துப்பள்ளிப் பதினொரமை பாஞ்சராத்ர ஸ்ரீ - பாஞ்சராத்திரக் கண்ணன் பிறப்புத் கண்ணபிரான் திருநாள் ஜயந்தி நவராத்திரி பூஜை ஆரம்பம் - தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் விஜயதசமி - வெற்றிப் பதமி உத்தான ஏகாதசி - ஆரல் வெண்பக்கப் பதினொரமை விஷ்ணுதீபம் - திருமால் விளக்கு பரமபத சொர்க்க வாசல் திறப்பு - பரமபத உவணை வாயில் திறப்பு கஜேந்திர மோஷம் - வேழவேந்த வீடு ஜல்லிக்கட்டு - சல்லிக்கட்டு சர்வபீஷ்வ ஏகாதசி - அனைத்து வீடுமப் பதினொரமை பிரம்மோற்சவ கிராமசாந்தி - பெருவிழா ஊர்ச்சமந்தி பாரிவேட்டை - பரிவேட்டை பேஷ்கார், மணியம், காரியதர் - செயல்பணியர், பெருங்கேள்வி, மணியம், கருமத் தலைவர் மூலதானம் - கருஇடம், மூலத்தாவு சந்நிதி - திருமுன் பிரகாரம் - திருச்சுற்று யாத்ரிகர் - திருவழிப்போக்கர் உபநயனம் - பூணூல் சடங்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - ஐயமுதத் திருமுழுக்கு தீர்த்த அபிஷேகம் - திருப்புனலாட்டு பால் அபிஷேகம் - பால் முழுக்கு அஷ்டோத்தர அர்ச்சனை - நூற்றெட்டு வழிபாடு சகரநாமம் - ஆயிரப் பெயர் கௌபீனம் - நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை தீபாராதனை - விளக்கு வழிபாடு ராஜஅலங்காரம் - அரசக்கோலம், அரசப்புனைவு நைவேத்தியம் - காணிக்கை, படைப்பு சாயரட்சை - மாலைப்பூசை அர்ச்சகர் - வழிபாட்டாசான் தரிசனம் - காண்பு, காட்சி பிரசாதம் - அருட்கொடை, திருச்சோறு திருக்கோவை திருச்சிறம்பலக் கோவை பிற கோவைகள் போன்றே அகப்பொருட் கோவையாகத் தோன்றினும் அகநோக்கில் பழுத்த ஆதனையும் (ஆன்மாவையும்) அதற்குப் பேரின்பம் தரும் இறைவனையும் முறையே கிளவித்தலைவன் தலைவியராகக் கொண்ட உருவக நாடகமே (Allegory). (த. இ.வ:77) திருத்தக்கல் தென்னாட்டில் யாரேனும் ஒருவர் இலக்கண வழுப்படப் பேசியதை வேறொருவர் திருத்தினால் திருத்தப்பட்டவர் திருத்தியவரை இவர் திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவர் என்று நகையாடுவது வழக்கம். இதனால், பண்டைத் தமிழகத்தில் செந்தமிழ் வழங்கும் எல்லை குறிக்கக் கல்நட்டப்பட்டிருந்த தென்பதும் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் சிறந்திருந்த தென்பதும் வெளியாகும். (சொல்.27). திருநான் மறை ஆராய்ச்சி சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ மதங்களினின்றும் ஆரியக் கூறுகளை நீக்கும் முயற்சி, திருவள்ளுவர் காலத்தினின்று தொடர்ந்து வருகின்றது. பல்லவபுரம் தவத்திரு. மறைமலையடிகள், திருவாசகப் போற்றித் திரு வகவலுக்குத் தாங்கள் வரைந்த விரிவுரையில், மூவா நான்மறை முதல்வா போற்றி என்னும் அடியிலுள்ள மூவா நான்மறை என்னுந் தொடர்ச்சொல், தொல்காப்பியம், இறையனாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிக்காதென்றும், கூறினார்கள். அதைத் திருச்சி மா. சாம்பசிவப் பிள்ளை எதிர்த்து ஒரு மறுப்புரை வெளியிட்டார். அதன்பின், பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை செந்தமிழ்ச் செல்வி முதற் சிலம்பில்,திரு நான்மறை விளக்கம் என்னும் தலைப்பில், நான்மறை என்பன தமிழ் நூல்களே யென்று ஒரு தொடர் கட்டுரை வெளியிடு வித்தார். அதன் கருத்து: சிவபெருமான், நம் தமிழ்நாட்டில், ஒரு கல்லால மரத்தின் கீழ்த் தமிழ்மக்கள் நால்வர்க்கு அறம்பொருளின்பம் வீடென்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்தினார். அத் தமிழறிஞர், திருக்குறள் போன்ற நான்மறை நூல்களையும், அவற்றிற்குத் துணையாக அறுவகை உறுப்பு நூல்களையும், இயற்றினர். அவை தலைக்கழகக் காலத்துக் கடல் கோளில், கழக நூல்களுடன் அழிந்து போயின. நம் சிவனியக் குரவர் கருத்தும் இதுவே. - என்பதேயாம். இதையும் சாம்பசிவப் பிள்ளை மறுத்து, திரு நான்மறை விளக்க ஆராய்ச்சிஎன்னும் 236 பக்க எதிர் நூலொன்று வெளியிட்டார். அந்நூற்கு, அவர் கருத்திற்கிணங்கிப் பல பிராமண அறிஞரும், நெல்லைச் சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, தச்சநல்லுர் இலக்குமணப் போற்றி ஐயா, அம்பாசமுத்திரம் காந்திமதி நாதப்பிள்ளை, திருச்சி ஆ. சுப்பிரமணியப் பிள்ளை, உறந்தைப் புலவர் பெரியசாமிப் பிள்ளை, கோவை (C.K)R¥ãukÂa முதலியார், தஞ்சை அராவ ஆண்டகை (ராவ் பஹதூர்) (K.S) சீநிவாசப் பிள்ளை, சீகாழிப் புலவர் முத்துத் தாண்ட வராயப் பிள்ளை, உயிர் நூலாசிரியர் ப.மு. சோமசுந்தரம்பிள்ளை, ச.சதாசிவமுதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, கைலாச பிள்ளை, வைத்திய லிங்கம் பிள்ளை, அருளம்பலம், ஆறுமுகம் பிள்ளை, கணேச பண்டிதர், சுவாமிநாத பண்டிதர் ஆகிய தமிழ அறிஞரும், நன் மதிப்புரையும் பாராட்டுரையும் வழங்கியுள்ளனர். நால்வேதம் அல்லது நான்மறை, ஆறங்கம், ஆகமம் என்பன ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இதுபோதுள்ள மற்றைப் பண்டை நூல்களிலெல்லாம் அந்தணர் என்பது பிராமணரையே குறிக்கும் என்பதும், சரியே. ஆயின், ஆரியச் சார் பான இற்றைப் பண்டை நூல்க ளெல்லாம், ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத் தேவரென்றும் தம் மொழியைத் தேவ மொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, தம் மேபாட்டை நாட்டி மதத்தை யும் வரலாற்றையும் திரித்த பின்னரே இயற்றப் பட்டவையாத லால், அவற்றை முதனூல்களென மயங்கி, அவற்றிற்குமுன் தமிழ் நூல்கள் இருந்ததில்லை யென்று கொள்வது, வரலாற் றறிவும் மொழி யாராய்ச்சியும் இன்மையால் நேர்ந்த விளைவாம். இவ்விரண்டும் போதிய அளவு இன்மையாலேயே, ஆரிய ஏமாற்றை யும் அதனால் தமிழர் அடைந்து வரும் பெருங் கேட்டையும் கண்ட அடிகளும் பேராசிரியரும், இனநல நன்னோக்கமாகவே, நான்மறை தமிழர்க் குரியவையல்லவென்றும், இறந்துபட்ட தமிழ் நூல்களென்றும், கூறலாயினர். திருமந்திரம் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய 6-ஆம் நூற்றாண்டு நூலாதலால், மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து வாரிய முந்தமி ழும்முட னேசொல்லிக் காரிகை யார்க்குங் கருணைசெய் தானே அவிழ்க்கின்ற வாறும் அதுகிட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும் உணர்த்து மவனை யுணரலு மாமே அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழ லோம்பிமுப் போது நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச் சந்தியு மோதிச் சடங்கறுப் பார்களே பெருநெறி யான பிரணவ மோர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான திருகை யிருத்திச் சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே. என்பவற்றைக் கணேச பண்டிதரும், சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேச ருருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற நவவா கமமெங்கள் நந்திபெற் றானே. என்பதைச் சுவாமிநாத பண்டிதரும், திருவாசகம் தேவாரம் முதலிய பிற பனுவற் செய்யுட்களைப் பிறரும், தம் கொள்கைக்குச் சான்று காட்டிப் பயனில்லை. மூலன் உரை செய்த மூவா யிரந்தமிழ் என்று சிறப்புப்பாயிரம் கூறுவதால், திருமந்திர மண்டிலங்கள் (விருத்தங்கள்) மொத்தம் மூவாயிரமே. வே.விசுவநாதப் பிள்ளை பதிப்பில் 3047 மந்திரங்கள் உள்ளன. சை.சி.நூ.ப.கழகப் பதிப்பில் மூவாயிரமே உள்ளன. அவற்றுள், அவிழ்க்கின்ற வாறும், அந்தண ராவோர் என்னுமிரண்டும் இடம் பெறவில்லை. அவை இடைச் செருகல் போலும்! வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் ... ... இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்... ... ... ... என்னும் சிவஞான முனிவர் கூற்றுக்கள் இக்காலத்திற் கேற்கா. மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் என்று பாடினார், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிறுதியிற் பாண்டி நாட்டிற் பிறந்து வளர்ந்து, தமிழை முற்றக் கற்று, வரகுண பாண்டியனின் தலைமை மந்திரியாரா யிருந்து, சிறந்த சிவனடியாராக மாறிய மாணிக்க வாசகர். மகேந்திரமலை தெற்கே மூழ்கிப்போன குமரிமலைத் தொடரின் வடபகுதி யென்பது, துங்கமலி பொதியத்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின் அங்கனக இலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம் என்னும் சிவ தருமோத்திர (கோபுர. 48) அடிகளால் அறியப்படும். மிகவும் உயர்ந் திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய மயேந்திரகிரியின் அடிவாரத்தில், அழகிய பொன்மய மாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும். என்னும் அவ்வடி களில் உரையை நோக்குக. கி.பி.2-ஆம் நூற்றாண்டிடை வரை இருந்ததாகத் தெரிகின்ற குமரியாறு, மகேந்திரம் என வடவர் வழங்கும் குமரிமலைப் பகுதியி னின்றே எழுந்தோடி, இலங்கைத் தீவு பிரியாது பெரு நிலத்தோடு சேர்ந்திருந்த காலத்தில், அதனூடு பாய்ந்து கடலிற் கலந்திருத்தல் வேண்டும். குமரி யாற்றின் ஒரு பகுதி ஓடிக் கொண்டிருந்த காலத்திலேயே ஆரியர் ஒரு சிலர் தென்னாட்டிற்கு வந்து விட்டாரேனும், மகேந்திரம் என்னும் குமரிமலையிற் சிவ பெருமானிடம் அல்லது அவரருள் பெற்ற நந்தி போன்ற குரவனிடம், கொள்கை மறையும் தொழுகை மறையும் பற்றிப் பாடங் கேட்டவர் தனித் தமிழ்ப் பெயர் தாங்கிய தமிழராகவே யிருந்திருத்தல் வேண்டும். இன்றுள்ள வடமொழிச் சிவாகமங்கள் கி.பி.5-ஆம் நூற்றாண் டிற்குப் பின்னரே தோன்றின. அவற்றுள் மூலமானவை தொண்டு (ஒன்பது) என்பதும், ஏனைப் பதின் றொண்டும் (பத்தொன்பதும்) அவற்றின் வழிப் பின்னர்த் தோன்றின என்பதும், பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே (73) ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே (74) என்னுந் திருந்திரங்களான் அறியப்படும். முன்பேதம் - மூ வேறுபாடு. அவை கருமக் காண்டம், வழிபாட்டுக் காண்டம், அறிவக் காண்டம் என்பன. சிவனியம் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே குமரிநாட்டில் தோன்றிய மதமாதலால், குமரிமலைத் தொடரின் வடமுடி யொன்றாகிய மகேந்திர மலையில், இறைவ னருள் பெற்ற குரவனிடம், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன் பாடங்கேட்டவர் தமிழராகவே யிருந்தது மட்டுமன்றி, அவர் பாடங் கேட்டதும் அதை நூலாக வரைந்ததும் தனித் தமிழ் வாயிலாகவே நிகழ்ந் திருத்தல் வேண்டும். அந்நூல் அல்லது நூல்களே, பிற்காலத்து வடமொழி யாகமங் கட்கு மூலமாயிருந் திருத்தல் வேண்டும். அம்மூல நூல்கள் யாவும் ஆரியரால் அழிக்கப்பட்டு விட்டன. பிராமணரே ஓதவும் ஓதுவிக்கவும், இரு வகைச் சடங்கும் கோவில் வழிபாடும் நடத்தவும், இவ்வகையில் தமிழரை என்றும் அடிமைப் படுத்தவும், வேண்டுமென்னுங் குறிக்கோளுடனேயே, வடமொழி யாகமங்கள் தோற்றுவிக்கப் பட்டன. ஆகமம் என்னும் வடசொற்குத் தோன்றியது என்றே பொருள். தோன்றற் புணர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்று கூறுதல் காண்க. குறியீட்டு முறையில் ஆகமத்தைத் தோன்றியம் என்னலாம். தோன்றியது என்னும் பொருளாலேயே, ஆகமங்கள் வடநாட்டு ஆரியர் தென்னாடு வந்தபின் புதிதாகத் தோன்றியவை என்பதை, ஆகமம் என்னுஞ் சொல் உணர்த்துதல் காண்க. இனி, ஆகமம் என்னும் வடசொல்லும் தென்சொல் அடி வேரி னின்றே தோன்றிய தென்பதை, கீழ் வருஞ் சொல் வரலாற்றால் தேர்ந்து தெளிக. உய்தல் = செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல். உய் - இய்-இய-இயவு = (1) செலவு. இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங் கில் (சிலப்.11:168). (2) வழி. இயவிடை வருவோன் (மணி. 13:16). இய-இயல். இயலுதல் = (1) செல்லுதல். (2) நடத்தல். அரிவை யொடு மெல வியலி (ஐங்.175. (3). கூடியதாதல். இயவு - (இயகு) - இயங்கு. இயங்குதல் = செல்லுதல். இயங்கு - இயக்கு - இயக்கம் = செலவு. இயவு - இயவுள் = (1) வழி. (2) நடத்துவோன், தலைவன், இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் (திருமுரு. 274) இயவு - எய் - எய்து. எய்துதல் = நடத்தல், நிகழ்தல், சென்றடைதல், அடைதல். எய்-ஏ. ஏதல் = போதல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஏ- ஏவு. ஏவுதல்= செலுத்துதல், தூண்டுதல், தூண்டிக்கட்டளை யிடுதல். ஏ- ஏவு - ஏகு. ஏகுதல் = போதல் ஒ.நோ: போ - போவு - போகு. ஏ-யா-யாத்திரை = செலவு. தகடூர் யாத்திரை = தகடூர்ச் செலவு. ஒ.நோ: மா- மாத்திரை. மாத்தல் = அளத்தல். இதுவும் ஒரு வழக்கற்ற வினை. ஏகாரம் யாவாகத் திரிதலை, ஏன் - யான், ஏ-யா, ஏது-யாது, ஏனை - யானை, ஏமை - யாமை, ஏமம் - யாமம் - சாமம் முதலிய சொற்றிரிபுக ளான் அறிக. யா-ஜா (மராட்டி, குசராத்தி, இந்தி, வங்கம்.) யாத்திரை -யாத்ரா- ஜாத்ரா மராட்டியும் குசராத்தியும் பழம் பஞ்ச திரவிடம்; இந்தியும் வங்கமும் வடதிரவிடமாகிய முன் வடமொழி (பிராகிருதம்). ய - ஜ, போலித் திரிபு. எ-டு: யோகி (வ.) -n#h» (ï.), யுவன் (வ.) - #th‹ (ï.), யௌவனம் (வ.) - juvenis L. ஜா - ga#. O.E, OS. ga#n, OHG. ga#n,ge#n, E.go, Skt. ga# (to go), ga#tu (going). சகரம் ககரமாகத் திரிதலால், ஜகரம் ககரத்தின் எடுப்பொலியாக ப என்று திரியும். வட திரவிட வழிப்பட்ட இந்தியிலேயே, போதலைக் குறிக்கும் வினைச் சொல்லின் ஜகரம், இறந்த காலத்திற் ககர எடுப்பொலி (ப)ஆகி விடுகின்றது. எ-டு: ஜா = போ, ஜாத்தா ஹை = போகின்றான், ஜாவேகா (ja#ve#ga#) = போவான். கயா (gaya#) = போனான். வடமொழி என்னும் சமற் கிருதத்தில், ga என்னும் முதனிலை ga என்று குறுகியும் gam என்று திரிந்தும், gati,gama, gamana என்னும் வினைப் பெயர்களைப் பிறப்பிக்கும். கம் (gam) என்னும் முதனிலை ஆஎன்னும் எதிர்மறை முன்னொட்டொடு சேர்ந்து, செல்கைக்கு எதிரான வருகையைக் குறிக்கும் ஆகம (aÝgama) என்னும் வினைப் பெயரையும் வினையாகு பெயரையும் தோற்றுவிக்கும். ஆகம என்னும் வடசொல், தமிழில் ஆகமம் என்று மகரமெய் யீறு கொடுத்துக் குறிக்கப்படும். ஆ என்னும் எதிர்மறை முன்னொட்டு, அகர எதிர்மறை முன்னொட்டின் நீட்டமே. அல் - அ - ஆ. ஒ.நோ நல் - ந. இங்ஙனம், ஆகார எதிர்மறை முன்னொட்டுச் சேர்க்கையால் எதிர்வினைச் சொற்களைப் படைப்பது, சமற்கிருத இயல்பே. கம் = போ. ஆகம் = வா தா = கொடு ஆதா = கொள், வாங்கு சமற்கிருதம், தன்னில் ஐந்திலிரு பகுதியை முழுச் சொற் கடனாகவும், வேறோர் ஐந்திலிரு பகுதியை வேர்ச்சொற் கடனாகவும், தமிழினின்று கொண் டுள்ளது. திரு நான்மறை விளக்க ஆராய்ச்சிக்கு மதிப்புரை வழங்கிய வருள் ஒருவரான, தஞ்சைச் சீனிவாசப் பிள்ளை, ஸ்ரீமான் கா. சுப்பிரமணிய பிள்ளை யவர்கள், நல்ல குலத்தில் பிறந்தவரா யிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதியிருப்பது, கலியுகக் கூத்துக்களில் ஒன்றென்று தோன்றுகிறது. அசஞ்சல சிவ பக்தியில் சிறந்த குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளை யவர்கள், மேலே கண்ட ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. என்று வரைந்திருப்பது, ஆரியர்க்கு அடிமையரா யிருப்பவரே நல்ல குலத்தாரென்றும் நல்ல சிவனிய ரென்றும் பொருள்படுவதா யுள்ளது. இதை அவர்தம் தமிழ் வரலாறு மறு பதிப்பில் வெளியிடாது போயினர். இத்தகைய நல்ல குலத்தாரும் நல்ல சிவனியரும் இருந்ததனால் தான், சின்னமனூர்த் தேவார ஊர்வலம் பிராமணத் தெருவில் தடுக்கப் பட்டதும், அது பற்றித் தொடர்ந்த வழக்கில் பிராமண முறையாளி பிராமணச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதும், ஆகும். மகேந்திரம் என்னும் முடியைக் கொண்ட குமரிமலைத் தொடரின் வடபகுதி மூழ்கிய பின்னரே, கஞ்சம் மாவட்டத்திற் சிவன் கோவில் கொண்டுள்ள மலை மகேந்திரம் என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். மந்திர மாமலை மகேந்திர வெற்பன் என்னும் திருவாசகத் தொடரில் (2:100) மாணிக்கவாசகர் குறித்துள்ள மலை, கஞ்சம் மாவட்ட மலையே யென்று, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி தன் இயல்பிற்கேற்பக் குறித்துள்ளது. திருப்பணிகள் இம்மை மறுமை வீடென்னும் மும்மையின்பத்திற்கும் இறைவழிபாடு இன்றிய மையாததாகக் கருதப்பட்டமையின், பண்டைத் தமிழகத்தில் இங்கிலாந்திற்போல் மதத்துறையும் ஓர் அரசியல் திணைக்களமாக இருந்து வந்தது. பிற மதக் கோயில்கட்கும் இடையிடை மானியம் விடப்பட்டதேனும், சைவவைணவக் கோயில்களே பெரும்பாலும் அரசரின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. பேரரசரெல்லாரும் ஒன்றும் பலவுமாகப் பெருங்கோயில்கள் கட்டி வைத்தனர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டி லிருந்த கோச்செங்கட் சோழன் எழுபது சிவன்கோயில்கள் கட்டினான். கி.பி.10 ஆம் 11ம் நூற்றாண்டிலிருந்த முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடை யார் கோயிலைக் கட்டி விலையேறப்பெற்ற அணிகலங்கள் ஊர்திகள் தட்டுமுட்டுக் களுடன், 35 ஊர்களைத் தேவதானமாக விட்டான். கோயில் கட்டாத அரசர் இறையிலி யும் அணிகலங்களும் பிறவும் அளித்தனர். கோயிற்கு, கோட்டம், குடிகை, தேவகுலம், தளி, நகரம், பள்ளி, மந்திரம், மாளிகை, அம்பலம் முதலிய பல பெயர்கள் வழங்கின. கோயில்கள் சிறுகோயில் பெருங்கோயில் என இருதிறத்தன. சிறுகோயில்களை ஊரவையாரும் பெருங் கோயில்களைத் தனிக் குழுவாரும் கவனித்து வந்தனர். பெருங்கோயிலை மேற்பார்ப் பவர்க்குக் கோயில் வாரியத்தார் என்றும் ஸ்ரீகாரியம் பார்ப்பார் என்றும், அவருள் தலைவனுக்கு ஸ்ரீகாரியக் கண்காணி நாயகம் என்றும், பெயர். சிவின்கோயிலை மேற்பார்ப்பவர் மகேசுவரர் என்றும், திருமால் கோயிலை மேற்பார்ப்பவர் மகா வைணவர் அல்லது தானத்தார் என்றும், பொதுவாகக் கூறப்பெறுவர்.கோயிற் காரியங்களை நடத்திவைப்பதற்கு ஆள்வான் என்றோர் அரசியல் வினைஞனும் இருந்தான். கோயிற் பூசாரிக்குத் திருவடி பிடிப்பான் என்றும், போற்றி என்றும், நம்பியான் என்றும், அவன் துணைவனுக்கு எடுத்துக் கைநீட்டி என்றும், பெயருண்டு. உவச்சன் (ஒச்சன்) என்பது காளிகோயிற் பூசாரியின் பெயர். குருக்கள் பண்டாரம் புலவன் என்றும் பூசாரிக்குப் பெயருண்டு. இவர் அணுக்கத் தொண்டராவர். இவரல்லாது திருக்கைக்கோட்டி யோதுவார், தேவரடியார் (பதியிலார், சாக்கையன், பண்டாரி, அறைகாரன், தேவகன்மிகள், மெழுக்கடிகள், திருவிளக்கிடுவார், திருமெய்க் காப்பு (திருமெய்க் காப்போன், திருமேனி காவல்) முதலிய எத்துணையோ வினைஞர் கோயிலைச் சேர்ந்திருந்தனர். பெருநாடு முழுதுமிருந்த திருக்கைக் கோட்டி யோதுவார்க்குத் தேவாரநாயகம் என்றொரு தலைவனி ருந்ததாகத் தெரிகின்றது. இறையிலி(தேவதானம்,) நன்கொடை, நேர்த்திக்கடன், காணிக்கை, வரி, தண்டம், பறிமுதல் ஆகிய எழுவகையில் கோயிற்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. கோயிற் செலவிற்கெல்லாம் பொதுப்பட விடப்பட்டிருந்த இறையிலியுடன், வெவ்வேறு செலவிற்குத் தனித்தனி அவ்வப் போது அரசராலும் பெருமக்களாலும் விடப்பட்டு வந்த இறையிலிகளும் உள. அவை திருவிழாப்புறம், கற்றளிப்புறம், நந்த வனப்புறம், அடுக்களைப்புறம், அவலமுதுப்புறம், அக்காரவடிசி லமுதுப்புறம், மெழுக்கடிப்புறம், திருவனந்தற்கட்டளை முதலியன. கோயிற் பணியாளர்க்குப் பகிரப்படும் திருச்சோற்றிற் காக விடப்படும் கட்டளை அட்டிற்பேறு எனப்பட்டது. ஒருவர் சிறிதுகாலம் நுகர்ந்தபின் கோயிற்கு விடுமாறு அளிக்கப்படும் நிலத்திற்கு இறைக்கட்டளை என்று பெயர். கோயியில் விளக்கேற்றுதற்கும் பிற திருப்பணிகட்கும் பார்ப்பனரை உண்பிப்பதற்கும், வேறு வேறாக, அரசராலும் பெருமக்களாலும் பொதுமக்களாலும் கோயிலில் நிதிகளும் தொகைகளும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வட்டியைக்கொண்டே அப்பணிகள் செய்யப்பட்டு வந்தமையின், அம்முதல்கள் அழியாதிருந்தன. வட்டி பொலிசை எனப்பட்டது. தாம் குறித்த திருப்பணிகளும் அறங்களும் நாள்தோறும் அல்லது நிலையாக நடைபெறற் பொருட்டு, அவற்றைப் பொலிசையைக் கொண்டே நடத்த வேண்டுமென்று, கொடையாளரே குறித்துவிடுவது மரபு. பறிமுதலான குற்றவாளிகளின் சொத்துக்கள் கோயிற்கு விற்கப்பட்டு, அரசிறை நிலுவை போக எஞ்சியதெல்லாம், கோயிலோடு சேர்க்கப்பட்டது. கோயில் வருமானத்தில் செலவுபோக எச்சமெல்லாம் அறமுங் கல்வியுமாகிய பொதுநலப் பணிக்குச் செலவிடப்பட்டது. அக்காலத்துக் கோயில்கள் பின் வருமாறு பல துறையில் பொதுநலத் தொண்டாற்றி வந்தன. (1) தொழிற் றுறை: கோயில் நிலங்கள் ஏழையுழவரிடத்தும், கோயிற் கன்றுகாலிகள் ஏழையிடையரிடத்தும், வாரச் சாகுபடிக்கும் வளர்ப்பிற்கும் விடப் பட்டன. சுந்தரபாண்டியன் காலத்தில், சூரலூரையடுத்திருந்த கோயிற் குளமும் வாய்க்காலும் அணையும், பிள்ளையான் என்னும்செம் படவன் பார்வையிலும், அவற்றின் பழுதுபார்ப்பு சூரலூர் வெட்டியாளிடத்தும், விடப்பட்டிருந்தன. பிள்ளை யானுக்குக் கோயிற்குடிகள் செலுத்தும் வாய்க்கால்பாட்டமும் பாசிப் பாட்டமும், வெட்டியாளுக்குச் சம்பளமும் உம்பளமும், கைம்மாறாக அளிக்கப்பட்டன. P.K., pp. 222-223. கண்காணிப்பு, வழிபாடு, மடைத்தொழில், துப்புரவாக்கம், அலங்கரிப்பு, கணக்கு, காவல் முதலிய பல்துறை பற்றிய அலுவலாளரோடு; இசைவாணரும் கூத்தரும் கம்மியரும் பணிமக்களும் குடிமக்களுமாக; எத்துணையோ பேர் கோயிலில் நிலையாக அமர்த்தப்பெற்றுத் தக்க சம்பளம் பெற்று வந்தனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், தேவார ஓதுவார் நாற்பத் தெண்மரும் பதியிலார் நானூற்றுவரும், இசைக்கருவி யியக்குவார் பற்பலரும், சாக்கையரும், கணியரும், ஐவகைக் கொல்லரும், குயவரும், தையற்காரரும், வண்ணாரும், முடியலங் கார வினைஞரும், உட்பட; ஏறத்தாழ ஆயிரவர் நிலையான வினைஞராக அமர்த்தப் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. பஞ்சகாலத்தும் பிறகாலத்தும், உணவிற்கு வழியற்ற ஆடவரும் பெண்டிரும் கோயிற்கடிமை புக்குக் கோயிற்பணியாற் பிழைத்து வந்தனர். அவருக்கு மணக்கவும் குடும்பவாழ்க்கை நடத்தவும் உரிமையிருந்தது. (2) பணத்துறை: பணம் வேண்டியவர்க்கு, வட்டிக் கீடாகக் கோயிலில் குறிப்பிட்ட விளகேற்றுமாறு, கோயிற் பண்டாரத் தினின்று கடன் கொடுக்கப்பட்டது. வரகுணபாண்டியனால், திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற் காக 1400 பொற்காசு பன்னீரூராரிடைப் பகிர்ந்து கொடுக்கப் பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இருகலம் நெல் என்றும், வட்டியைக்கொண்டு வழிபாட்டை நடப்பிக்க வேண்டுமென்றும், வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இறுக்க வேண்டுமென்றும், விதிக்கப்பட்டது. P.K. pp 90-91. அறத்திற்கும் கட்டளைக்கும் கோயிற்குக் கொடுக்கப்படும் பணத் தொகைகள், கோயிலதிகாரிகளிடமாவது, ஊரவையாரிடமாவது, நகரத்தாரிடமாவது, தனிப் பட்டவரிடமாவது ஒப்படைக்கப் படுவதுண்டு. (3) கல்வித்துறை: எண்ணாயிரம் என்ற இடத்தில் ஒரு மறை நூல் (வேத) விடுதிக் கல்லூரியும், திருமுக்கூடல் என்னும் இடத்தில் ஒரு வடமொழி விடுதிக் கல்லூரியும்; திருவொற்றியூரில் வியாகரண தான மண்டபம் என்னும் வடமொழிப் பாணினியிலக்கணக் கல்லூரியும், கோயிலோடு சேர்க்கப்பட்டிருந்தன. எண்ணா யிரத்தில் 300 மாணவரும் 10 ஆசிரியரும் இருந்தனர். சில இடங்களில் வான நூலும் தகுக்கமும் பிரபாகரம் என்னும் மீமாஞ்சை நூலும் வடமொழியிற் கற்பிக்கப்பட்டன. மாணவர்க்குக் கல்வியும் ஊணுடை யுறையுளும் இலவசமாய் அளிக்கப்பட்டன. அதற்குப் போதிய இறையிலிகள் விடப்பட்டிருந்தன. பல இடங்களில் இதிகாச புராணங்கள் பொது மக்கட்குத் தமிழில் விரித்துரைக்கப்பட்டன. அதற்கும் இறையிலி விடப் பட்டிருந்தது. (4) கலைத்துறை: இறை கூத்து ஓவியம் சிற்பம் வண்ணம் முதலிய பல கலைகள், கோயில் வாயிலாய் வளர்க்கப்பெற்றன. (5) வரலாற்றுத் துறை: கட்வெட்டுக்கள், கோயில், மண்டபம், பாறை, வெற்றித்தூண், மலைக்குகை, படிமை, நடுகல் முதலிய பலவிடங்களில் வெட்டப் பட்டனவேனும், பெரும்பான்மையாகக் கோயில்களிலேயே அவை இடம் பெற்றன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழரசர் வரலாற்றை அறிதற்கு உறுது ணையானவை கல்வெட்டுக்களே. அரசருடைய போர்ச் செயல்களையும் வெற்றியை யுங் கூறும் மெய்க்கீர்த்தி களும், ஊரவையாருக்கும் நாட்டதிகாரிகட்கும் பிறர்க்கும் விடுக்கப்பட்ட அரசவாணைகளும், ஊரவையாரால் அன்றன்று செய்யப்பட்ட புதுத் தீர்மானங்களும், அரசராலும் அதிகாரி களாலும் பெருமக்களாலும் கொடுக்கப்பட்ட தானப் பட்டயங்களும், கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் எல்லாருங் காணு மிடத்திற் பதிக்கப்பெறுவது, தவிரா வழக்கமாயிருந்தது. ஒரு சிதைந்த கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஊரவையார் நாட்டதிகாரி வாயிலாய் அரசனுக்கறிவித்து அவனது இசைவு பெற்றபின், கோயிலிலுள்ள கல் வெட்டுக்களை இச்சிரி விமானமிடத்துக் கட்டுங்கால் கண்ட சிலா லேகைப்படி என்று தொடங்கி ஓலைப்படி யெடுத்து, புதுக் கல்வெட்டுப் பொறித்து, கோயில் கட்டி முடிந்தபின், அப்புதுக் கல்வெட்டுக்களை அதிகாரிகள் காட்டுமிடத்தில் பதிப்பது வழக்கம். கல்வெட்டுப் படியெடுப்பு கற்படிமாற்று எனப்பட்டது. சிதைந்துபோன கல்வெட்டுக்களைப் புதுப்பிக்கும்போதும் இம்முறையே கையாளப்பெறும். (6) அறத்துறை: பார்ப்பனரை யுண்பிக்கும் அக்கிரசாலையும், அடியாரை யுண்பிக்கும் மடமும், இரப்போரையுண்பிக்கும் அடிசிற்சாலையும்,ஆகிய மூன்றனுள் ஒன்றோ பலவோ, பலவூர்களிற் கோயிலோடிணைக்கப்பட்டிருந்தன. பெரும்பற்றப் புலியூரில் இருந்த அறச்சாலை அறப்பெருஞ் செல்வி என்றும், திருமுக்கூடலில் சாத்திரர் என்னும் பார்ப்பன வடமொழி மாணவர்க்கு மருத்தகமாகவும் மருத்துவக் கல்லூரியாகவுமிருந்த ஆயுர்வேத மருத்துவசாலை (ஆதுல சாலை) வீரசோழன் என்றும் பெயர் பெற்றிருந்தன. (7) அரசியற் றுறை: அரசிறை யிறுக்காத நிலங்களும் ஊர்களும் கோயிற்கு விற்கப்பட்டு, அவ்விலைத் தொகையினின்று அவற்றிற்கு அரசிறை யிறுக்கப்பட்டது. ஊர் மண்டபமில்லாத வூர்களிலெல்லாம், அரசியற் கூட்டங்கள் கோயில் மண்டபத்திலேயே கூட்டப்பட்டன. சில அரசர் கோயிற்பணியோடு திரு நூற்பணியும் செய்து வந்தனர். முதலாம் இராசராசன் திருமுறை கண்டதும், மூன்றாம் குலோத்துங்கன் பெரிய புராணம் இயற்றுவித்ததும், நூற் பணியாம். கோயிற் கணக்குகள் ஆண்டுதோறும் நாட்டதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர். (த.ம.) திருப்புகழ்: பதினைந்தாம் நூற்றாண்டில் வேறு எம்மொழியிலும் என்றும் எவராலும் பாட இயலாத நூற்றுக் கணக்கான வண்ணக்குழிப்பு களில் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற தமிழ்ப்பனுவல் அருணகிரி நாதரின் திருப்புகழ்த் திரட்டே. அது தேவாரம் போன்று இசைத்தமிழ் இலக்கிய மாகவும் உள்ளது. (த.இ.வ.46) திரும்பு உல் - உல - உலம் = உருட்சி, திரட்சி. உலம்வருதல் - உலமருதல் = கழலுதல். உலம் - உலக்கை = உருண்டு நீண்ட தடி. உல - உலவு. உலவுதல் = திரிதல், சுற்றுதல். உலவு - உறவு. உல - உலா - சுற்றித்திரிகை, நகர்சுற்றிவருகை. உலவு - உலகு = சுற்றிவரும் அல்லது உருண்ட கோள். உலகு - உலகம் = பேருலகு. அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. உலவு - உலாவு - உராவு. உல் - உள் - உழி. உழிதல் = அலைதல். உள் - உழல்.உழல்தல் = சுழல்தல். உழல் - உழலை = 1. செக்குலக்கை 2. சுழலும் குறுக்குமரம். உழற்றி = சுழற்றி. உழன்றி = மாட்டின் கழுத்திற் கட்டும் சுழல்தடி. உல் - துல் - துலம் - துளம் - துடம் - தடம் = வளைவு. தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும் (தொல்.உரி.23). துல் - துர் - துறு - (துறள்) - துறடு = பற்றுக்குறடு, வளைகோல். துறடு - துறட்டி = இடையன் அலகு (அலக்கு). துறட்டி - தோட்டி = அங்குசம். துற - திற - திறம்பு = திறம்புதல் = மாறுபடுதல். துர் - திர் - திரி. திரிதல் = வேறுபடுதல், ஒன்று இன்னொன்றாக மாறுதல், சுற்றுதல், அலைதல். திரித்தல் = வேறுபடுத்தல், வேறுபடு சொல்லமைத்தல், முறுக்குதல், சுழற்றுதல். திரி = விளக்கெரிக்கத் திரிக்கப்படும் துணிக்கிழிசல் அல்லது முறுக்கு நூற்கயிறு. திரிசொல் = வேறுபடுத்தியமைத்த சொல். திரிபன்றி = சுழலும் சக்கரப் பன்றியுரு. திரிகல் = சுற்றி மாவரைக்குங் கல். திரி - திரிகை = திரிகல். திரி - திரிகு - திரிகி (யாழ்.அக,) = குயவன் சக்கரம். திரிகி - திகிரி = வட்டவடிவு, சக்கரம், வண்டி, தேர், சக்கரப் படைக்கலம், உருளை, கதிரவன், அரசன்கட்டளை. திரிசடை = முறுக்குண்ட சடை. திரிதாடி = முறக்குண்ட தாடி. திரிதரவு = சாய்வு, அசைவு. திரி - திரிபு = வேறுபாடு, சொற்புணர்ச்சி வேறுபாடு, முதலெழுத்து வேறுபடும் மடக்கு, வீடுபேற்றிற் கிடையூறான மாறுபாட்டுணர்வு. திரிபுக்காட்சி = மாறுபாட்டுணர்வு. திரி - திரிய (நி. கா. வி. எ.) = திரும்ப. திரியக்கோடல் = ஒன்றை மற்றொன்றாக மாறிக்கருதுகை. திரியவிடுதல் = சொத்து முதலியவற்றைப் பிறர்பேரில் மாற்றுதல். திரியவும் = திரும்பவும். திரிசில்(?) - திரில் = குயவன் சக்கரம். தித்திரிப்பு = புனைசுருட்டு. திர் - திரு - திருகு. திருகுதல் (செ.கு.வி.) = கோணுதல், முறுகுதல், பின்னுதல், மாறுபடுதல். (செ. குன்றாவி.) = கோணுவித்தல், முறுக்குதல், பின்னுதல், பறித்தல். திருகு = கோணல், முறுக்கு. திருகணி, சுரி, திருகுமரை, மாறுபாடு, புரட்டு, ஏமாற்று. திருகல் முறுகல் = திருகலும் முறுகலும். திருகணை = புரிமணை. திருகுமணி = திருகரிவாள்மணை. திருகல் - திருகலி = நுனி வளைந்த பனை. திருகாணி = அணியின் திருகுமரை, முறுக்காணி. திருகு கம்மல், திருகுகள்ளி, திருகுகொம்பு, திருகுப்பூ, (கொண்டைத் திருகு) திருகுமரம், திருகுமரை, திருகுவட்டம் (நூல் சுற்றும் கருவி வகை) திருகுவில்லை, திருகுளி என்பன திருகிய நிலையை அல்லது திருகும் செயலைக் குறிக்கும் பொருட்பெயர்கள். திருகுசொல்லி = கரவாகப் பேசுபவள். திருகுதாளம் = புரட்டு. திருகுமுகம் = கோணிய முகம், சினமுகம், பாராமுகம், திருகு - திருகி. தேங்காய் திருகி = தேங்காய் திருகும் கருவி. திருகு - திருக்க (பெ) கோணல், வளைவு முறுக்கு, அணித்திருகு, மாறுபாடு, வஞ்சனை, வலக்காரம். தித்திருக்கு = பெரும்புரட்டு. திருக்குதல் = முறுக்குதல். திருக்கி = முறுக்கி. திருகு, திருக்கு - L. torquere, to twist. E. torque, n. Neckiace of twisted metal, esp. of ancient gauls and Britons. E. torquate, a. with ring of peculiar colour or texture of hair or plumage round neck.(of animals) E. trick, n. Fraudulent device or stratagem, ME. f. of dial trique , OF triche, trichier, decieve. திர் - திரு - திரும் - திருமு. திரும் - திரும்பு. திருமுதல் = திரும்புதல். திரும்புதல் = சாய்தல், விலகுதல், வளைதல், மீளுதல், மாறுதல், திரும்புகால் = மீளுஞ்சமையம். திரும்ப (நி. கா. வி. எ.) = சாய, மீள, மறுபடி. திரும்பத் திரும்ப = மேன்மேலும். திரும்பவும் = மீண்டும். திரும்பி = சாய்வது, மீள்வது. ஞாயிறு திரும்பி = கதிரவனை நோக்கிச் சாயும் பூ (சூரிய காந்தி). âU«ò - âU¥ò (ã.É.,). திருப்புதல் = சாய்த்தல், வளைத்தல், மறுபுறங் காட்டுதல், ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல், புரட்டுதல், திரும்பக் கொடுத்தல், திரும்பி வரச் செய்தல், திரும்பிப் போகச் செய்தல், மறுமுறை படித்தல் அல்லது படிப்பித்தல், முறுக்குதல், மாற்றுதல், மொழிபெயர்த்தல்; திருப்பு - திருப்பம் = திரும்புகை, திசை மாறுகை, நிலைமை மாறுகை, திருப்பு - திருப்பி = புரட்டி, முறுக்காணி திருப்பி. திரும். - E. turn, move round from a centre or axis, change from one side to another, take new direction, more to other side of, cause to go, change in nature, translate. OE. tyrnan, turnian, OF. turner, torner. f L. tornare f. Gk. tornos E. attorney, n. ME. f. OF. atorne p.p. of atorner (a) to, torner turn.) E. return, ME. retorner, returner f. Rom. re (tornare, turn). ம் -ன், போலி. x.neh.: கடம் - கடன். இரும் (இரும்பு) -iron. E. tornado, n. Violent storm of small extent with whirling winds Sp. tornada, thunder, storm, tornar, to turn. E. tourney, ME f. OF. tornei, torneier f. Rom. tornidiare f. L. tornus, a turn. E. tournament, ME. f. OF. torneiement, torneier, tourney. E. tourniquet. n. Bandage etc. for stopping flow of blood through artery by compression effected with screw of twisted bar,(?) âU¥ò - âU¥ã -E. trope, n. figurative use of a word. L.F. Gk. tropos, turn, way, trope, trepo, turn. E. trophy, 1. Arms etc. of vanquished enemy set up on field of battle or elsewhere to commemorate victory. F. trophee f. L. trop(h)aeum f. Gk. tropaion (trope, rout f. trepo, turn) வெற்றியரசன் தோற்ற அரசனைப் போர்க்களத்தினின்று திருப்பியடித்தல் அல்லது துரத்துதல் என்னும் அடிப்படைக் கருத்துக் கொண்டதே trophy என்னுஞ் சொல். இதே கருத்தை விளையாட்டுப் போருக்கும் ஏற்றிக் கூறுவனவே tourney tournament என்னுஞ் சொற்களும் என அறிக. E. Trophy. 2. Thing made or kept or awarded as memorial of victory in tournament. E. tropic, n. “Parallel of iatitude 23 27’ north (Tropic of Cancer) or south (Tropic of Capricorn) of the equator (the Tropics, region between these);; each of the two corresponding circles on celestial sphere where sun appears to turn after reaching greatest destination.” M.E. f. L. f. Gk. tropikos (trope, turning f. trepo, turn.) E. tropical, a. OF, peculiar to, suggestive of the tropics. E. tropism, n. (Biol,) Turning of (part of) organism in particular direction in response to external stimulus. (f. second element of heliotropism) E. heliotrope n. Herb or shrub of genus Heliotropium with fragrant purple flowers;; f. L.f. Gk. heliotropion, plant turning flowers to the sun; helios, sun, tropos f. trepo, turn. ஒ.நோ : ஞாயிறு திரும்பி = சூரியகாந்தி. E. tropology, n. Figurative use of words; figurative interpretation esp. of the Scriptures; f. LL. f. Gk. tropologia, tropos f. trepo turn, logy, suffix forming nouns denoting sciences. அணியியலில், சொற்களின் பொருள்கள் பல்வேறு வகையில் திரிக்கவும் திருப்பவும் படுதல் காண்க. E. tropopause n. Interface between troposphere and stratosphere. E. troposphere, n. Layer of atmospheric air extending about seven miles upwards from earth’s surface, in which temperature falls with increasing height. Gk. tropos,turning + sphere. E. strophanthin. n. White crystaline poisonous glucoside extracted from various species of the genus Strophanthus of tropical plants and used as a heart - tonic; f. mod. L. strophanthus f. Gk. strophos, twisted cord + anthos, flower. E. strophe, n. (Lines recited during) turn made in dancing by ancient Greek chorus; strophe, lit. turning, strepho, turn. E. antistrophe, f. Gk. antistropho, turn against. E. apostrophe, n.f. Gk. apo, away from, strepho, to turn away. E catastrophe, n. Sudden or widespread or noteworthy disaster; even subverting system of things; disastrous end, ruin; denouement of drama; f. L. catastropha f. Gk. cata, down, strophe, turning, strepho, turn. para tort (twist), tortus (crooked), tortum (wrong)/ tortor (twister) முதலிய இலத்தீனச் சொற்களும், இலத்தீனத்தினின்று கொண்ட கடன் சொல்லாகக் கூறப்படும் வடிசவ என்னும் ஆங்கிலச் சொல்லும், அதினின்று திரிந்த tortion, tortuous, torture, tortrix முதலிய தனிச் சொற்களும், torticollis என்னும் கூட்டுச் சொல்லும், contort, distort, extort, retort முதலிய முன்னொட்டுப் பெற்ற திரிசொற்களும், திரித்தல் அல்லது திருகற் பொருளையே அடிப்படையாகக் கொண்டுள்ளமையின், திரி என்னும் வேர்ச் சொல்லினின்று திரிந்தனவாகக் கொள்ளத் தக்கனவே. (த.த.நா.த.) திருமண நிகழ்ச்சி நிரல் (1) கடவுள் வணக்கம் (2) கரணம் (3) சொற்பொழிவு (4) வாழ்த்திதழ்படித்தல் (5) பாகடைப் பகிர்பு (தாம்பூலம் கொடுத்தல்) (6) பரிசளிப்பு (7) நன்றிகூறல் (த.தி.73) திருமணம் ஆயிரங் காலத்துப் பயிர் ஆகையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின் முன் அல்லது தெய்வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுதலாலும் மணம் தெய்வத் தன்மை பெற்றுத் திருமணம் எனப்பெற்றது. இப்பெயர் பின்னர் திருமணத் தொடர்பான விழாவையுங் குறித்தது. (த.தி.முன் ஏ) திருமண வகை: கரணச் சடங்கு அவரவர் பொருளாட்சி நிலைமைக்கேற்ப விழாவொடு கூடியதும் கூடாததுமாக இருக்கும். இவற்றுள் முன்னது கொட்டுத்திருமணம் என்றும் பின்னது கட்டுத்தாலி என்றும் சொல்லப் பெறும். (தி.ம. அதி.116). திருமாலின் ஆமைத் திருவிறக்கம் பாண்டி நாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்க்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஒட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும் என்று மெகதனி கூறகிறார். Foreign Notices of South India. p. 42 இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே. தென்கடலில் நிலநடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது. இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே. சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வமாக்கி வணங்குவது பண்டை வழக்கம். திருமலை நாய்க்கர் இறந்தபின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர். Historyof the Navaks of Madura. p.146. திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலை யுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, பூவை நிலை என்பதாலறி யலாம். முச்சக்கரமும் என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர் நாடும் வெற்றியும் அடை வதை நிலமகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், திருவுடை யரசரைக் காணின் திருமாலைக் கண்டேன் என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக. இராமன் தவஞ் செய்துகொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயென்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. இக்காலத்தில் வரணாசிர மத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மாவென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க. கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றையவெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே. பஞ்சந்திரக் கதைகளிற் பல தென்னாட்டில் வழங்கியவை. ஹாலாய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலியவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்திகளைக் கூறுபவை. அடிமுடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது. முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையி லிருந்த முக்கோட்டைகள் நில நடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்துபோயின. ஒரழிவு பௌத்தமதம் இலங்கையிற் புகுந்தபின் நிகழ்ந்தது. அதுவரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவுகொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவபெருமானால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதைகட்டப்பட்டது. (கதிரைமலைப் பள்ளைக் காண்க.) ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது. Illustrated Weekly of India Oct. 33, 1938. p.22 பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாக விருந்தன. அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர். கங்கைநாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வந்தனர். இராவணன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்தி லுள்ளதே. பதினெண்கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கே யுரியவர். சோழமரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தியில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வடநாட்டுச் சூரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது. திருவள்ளுவர் எம் மதத்தார்? ஆரியத் தெய்வமாகிய நான்முகனை யுட்கொண்ட முத்திருமேனிக் கொள்கையைத் தழுவாமையின், திருவள்ளுவர் வைதிகரல்லர். கடவுளில்லை யென்றும், பூதங்கள் நான்கேயென்றும், ஒருவர் கொன்ற வுயிரியின் ஊனை இன்னொருவர் உண்ணின் கரிசன் றென்றும், கூறும் பவுத்தக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளா மையால் திருவள்ளுவர் பவுத்தரல்லர். உலகிற்கு ஒரு முதல்வன் வேண்டுவதில்லையென்றும், இல்லறத் தினும் துறவறம் சிறந்ததென்றும், மகளிர்க்கு வீடுபேறில்லை யென்றும், மெய்யுணர்விற்கு இன்றியமையாத சுக்கிலத் தியானம் என்னும் பரமவூழ்கம் இக்காலத்தில் நிகழ்வதில்லையென்றும், கூறும் சமணக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாமையால் திருவள்ளுவர் சைனரல்லர். கடவுளில்லையென்றும், மெய்ப்பொருள் இருபத்தைந்தே யென்றும், கூறும் சாங்கியக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளா மையால் திருவள்ளுவர் சாங்கியரல்லர். கடவுள் தோற்றரவு கொள்வாரென்பதையும் உருவ வழிபாட்டையும் ஒப்புக் கொள்ளாமையால், திருவள்ளுவர் மாலியர் (வைணவர்) அல்லர். மெய்ப்பொருள் முப்பதாறு என்பதையும் உருவ வழிபாட்டையும் ஆரியச் சார்பையும் ஒப்புக்கொள்ளாமையால், திருவள்ளுவர் சிவனியர் (சைவர்) அல்லர். ஓது மெழுத்தோ டுயிர்க்கலை மூவஞ்சு மாதி யெழுத்தவை யைம்பத்தோ டொன்றென்பர். (திருமந்.963) என்னும் ஒன்றே சிவனிய ஆரியச் சார்பைக் காட்டப் போதிய சான்றாம். இற்றைச் சிவனியம் மாலியத்தினும் ஆரியம் மிகுந்துள்ளமை. இனி, திருவள்ளுவர் எம்மதத்தார்தானெனின், தாயுமானவர் அங்கிங் கெனாதபடி யென்னும் கடவுள் வணக்கச் செய்யுளிற் கூறியுள்ளவாறு, கடவுள் மதத்தினர் என்று கூறிவிடுக்க. (தி.த.ம) திருவள்ளுவர் காலக் குமுகாய (சமுதாய) நிலை திருவள்ளுவர் காலத்தில் ஆரியம் வேரூன்றிவிட்டது.நிறம் பற்றிய நால்வகை வரணப்பாகுபாடும் புகுத்தப்பட்டுவிட்டது. தமிழ ரெல்லாரும் பிராமணருக்குத் தாழ்ந்தவராயினர். பார்ப்பாரென்று சொல்லப்பட்டஇல்வாழ்க்கைப் பிராமணரும் தம்மை அந்தண ரென்று கூறிக்கொண்டனர். தொழில்பற்றி யேற்பட்ட குலங்களும் பிறப்புப் பற்றிப் பெயர்பெறலாயின. புலவருள்ளும் பிராமணர் உயர்ந்தவர் என்னுங் கருத்தெழுந்தது, அறங்களெல்லாம் பொதுவாகப் பிராமணர்க்கே செய்யப் பட்டன. தமிழருக்கு உறவுக்கலப்பும் ஒற்றுமையும் வரவரக் குறைந்துவந்தன. மூவேந்தரும் மன்னர் சிலரும் ஆரியச்சார்பா யிருந்ததினால், பிராமணியத்தைக் கண்டிக்க எவருக்கும் வாயில்லாமற் போயிற்று. அதனாற் புலவரும் அடிமையராயினர். பிராமணர் தெய்வப் பிறப்பினர் என்னுங் கருத்து தமிழருக்குள் வளர்ந்து வந்தது. அதனால் வடசொற்கள் தமிழில் தாராளமாகக் கலக்கவும் தமிழ்ச்சொற்கள் மறையவும் புதுத் தமிழ்ச் சொற்கள் தோன்றாதிருக்கவும், வழிவகுக்கப்பட்டுவிட்டது. (தி.த.ம.) திருவள்ளுவர் காலம் முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம். இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டு வரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற் கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி.பி. 3ஆம் நூற்றாண் டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற் கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும். திருவள்ளுவர் காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தினதென் பதற்குச் சான்றுகள்: 1. தொல்காப்பிய நூற்பாக்களையும் மாந்தர்ப் பகுப்பையும் திருவள்ளுவர் தழுவியிருத்தல். திருவள்ளுவர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (1434) என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (28) என்னுங் குறளிலும், எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான (981) என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (1137) என்னுங் குறளிலுந் தழுவியிருத்தலும். மாவும் மாக்களும் ஐயறி வினவே (1531) மக்கள் தாமே ஆறறி வுயிரே (1532) என்று ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு அல்லது பண்பாடு உள்ள வரை மக்கள் என்றும் அஃதில்லாதவரை மாக்கள் என்றும், மாந்தரை இரு வகுப்பினராகத் தொல்காப்பியர் வகுத்தவாறே, விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (410) அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர், (997) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் (1071) என்னுங் குறள்களிற் பண்பட்ட மாந்தரை மக்கள் என்றும், கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து (329) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென் (420) என்னுங் குறள்களிற் பண்படா மாந்தரை மாக்கள் என்றும், கூறியிருத்தலுங் காண்க. 2. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (53) என்னுங் குறளிலுள்ள ஆனால் என்னுஞ் சொல்வடிவம் தொல்காப்பியர் கால நடைக்கு ஏற்காமை. ஆயின் என்பதே அற்றைக்கேற்ற வடிவமாம். 3. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல (510) என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலுங் கைக்கொள்ளப் பெறாமை. எ-டு: உள்ளார் கொல்லோ தோழி கள்வர் தம் ... ... ... .... அங்காற் கள்ளியங் காடிறந் தோரே (குறுந். 16) சென்றோர் மன்றநங் காதலர் என்றும் (நற்.226) முந்துவந் தனர்நங் காத லோரே (ஐங்.223) சொல்வரைத் தங்கினர் காத லோரே (கலித்.2) மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் ...... .... .... அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே. (அகம்.211) இங்ஙனமே, நெருநற்றுச் சென்றார் எங் காதலர் யாமும் எழுநாளெம் மேனி பசந்து (1278) என்று குறளிலும் உலகவழக்கிற்குரிய உயர்வுப் பன்மை வந்திருத்தல் காண்க. 4. எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (1008) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (1336) வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே (1582) என்று தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்ட முழுநிறைவான மூவேந்தர் தலைமை, பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (735) என்று குறைவுறக் குறிக்கப்பட்டமை. 5. தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில் (256) என்னுங் குறள் புத்தமதக் கொள்கையைக் கண்டிப்பதாயிருத்தல். புத்தர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு. புத்த மதம் உலகிற் பரப்பப் பட்ட காலம் கி.மு. 273-236. அசோகன் மகன் (அல்லது உடன்பிறந்தான்) நால்வருடன் இலங்கை சென்று அங்குப் புத்த மதத்தைப் பரப்பிய காலம் கி.மு.247 -07. அதன் பின்னரே அம் மதம் தமிழகத்திற் புகுந்திருத்தல் வேண்டும். 6. மலர்மிசை யேகினான் (பூமேல் நடந்தான்), பொறிவாயி லைந்தவித்தான் முதலிய அருகன் பெயர்கள், கடவுட் பெயர் களாகத் திருக்குறள் முதலதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளமை. புத்த மதத்தின் பின்னரே ஆருகதம் தமிழகம் வந்ததாகத் தெரிகின்றது. திருவள்ளுவர் காலம் கடைக்கழக முடிவிற்கு முந்தியதென் பதற்குச் சான்றுகள்: 1. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் (319) என்னுங் குறள். முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண் (21:3-4) என்று கி.பி.2ஆம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாக இளங்கோவடிகளால் அமைக்கப் பட்டிருத்தல். 2. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (55) என்னுந் திருக்குறள், தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் என்று பெரும்பாலும் சொன்மாறாதும் திருவள்ளுவரின் சிறப்புப்பெயர் குறிக்கப்பெற்றும், சிலப்பதிகாரக் காலத்ததான மணிமேகலையில் (22:59-62) சதுக்கப்பூதத்தின் கூற்றாகச் சீத்தலைச் சாத்தனாரால் எடுத்தாளப் பெற்றிருத்தல். 3. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்னுந் திருக்குறட் கருத்து ஆலத்தூர்கிழார் பாடிய, ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ (புறம்.34) என்னும் புறப்பாட்டிலும், ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய் (69) என்னுங் குறட்கருத்து, காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடிய செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம்.278) என்னும் புறப்பாட்டிலும், அமைந்திருத்தல். அறம்பாடிற்றே என்று நூலின் சிறப்புப் பெயரைக் குறியாது அதன் பொருள் வகையையே பொதுப்படக் குறித்தமையால், ஆலத்தூர்கிழார் காலத்தில் திருக்குறள் மிகப் பழைமையான தாகவும் அளவை நூலாகவும் இருந்திருத்தல் வேண்டும். சான்றோன் என்னுஞ் சொல், சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்.312) என்பதிற்போல் கல்வியறிவொழுக்கத்தாற் சிறந்தவனை மட்டுமன்றி, தேர்தர வந்த சான்றோ லெல்லாம், (புறம்.63) என்பதிற்போல் போர் மறவனையுங் குறிப்பது கருதத்தக்கது. 4. கி.பி. 3ஆம் நூற்றாண்டினதான திருக்கோவை 25 கிளவிக் கொத்துகளையும் 400 துறைகளையும் கொண்டிருக்க, இன்பத்துப் பால் என்னுந் திருக்குறட்கோவை கிளவிக்கொத்தின்றி 135 துறைகளே கொண்டிருத்தல். தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள துறைகள் ஏறத்தாழ நானூறு. அவற்றுட் சில திருக்கோவையில் இல்லாதன: சில பெயர் குறிக்கப்பெறாதன: சில, நுண் வேறுபாடுகளுடையன. திருக் கோவைக்குப் பிந்தின கோவைகளில் 45 வரை துறைகள் கூடியுள்ளன. திருக்குறள் அறநூலாதல் பற்றி அறமல்லாத துறைகள் விலக்கப்பட்டிருப்பினும், 135 என்பது மிகக் குறைவான தொகையாதலால், அது திருக்கோவைக்குப் பல நூற்றாண்டுகள் முந்தினதா யிருத்தல் வேண்டும். 5. திருவள்ளுவர் மயிலையில் வாழ்ந்த ஏலேலசிங்கன் என்னும் கடல்வாணி கரிடம் நூல் வாங்கி நெசவுத்தொழில் செய்ததாகச் செவி மரபுக்கதை கூறுதல், ஏலேலசிங்கன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு. 6. கிறித்துவிற்குப் பிற்பட்ட சிறப்பு நிகழ்ச்சி எதுவும் திருக்குறளில் குறிப்பாகவேனுங் கூறப்படாமை. கடைக்கழகச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது. இச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண் டென்று கொள்வது மிகப் பொருத்தமென்றும், எவ்வகையிலும் அது கிறித்துவிற்குப் பிற்பட்டதாகா தென்றும், ஒருகால் புத் தாராய்ச்சியால் இம் முடிபு மாற்றப்பெறினும் திருவள்ளுவர் காலம் இதினும் முற்படுமே யன்றிப் பிற்படாதென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. கடைக்கழக முடிவு கி.பி. 5ஆம் நூற்றாண்டென்பது, காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் (ஏ.சு.) இராமச்சந்திர தீட்சிதரின் முடிபாம். தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு. (திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா மலர், சேலம் 1969) திருவள்ளுவர் காலச் சமநிலை ஆயிரமாண்டாக ஆரியம் தமிழகத்தில் இருந்துவந்ததினால், சமயத்துறை பெரும்பாலும் ஆரியவண்ணமாக மாறிவிட்டது. அரண்மனைகளிலும் கோயில் களிலும் செல்வர் மாளிகை களிலும், வழிபாடும் சடங்குகளும் பிராமணராற் சமற்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. அரசர் ஆரியவேள்விகளை வேட்கத் தலைப்பட்டுவிட்டனர். துறவினால் மட்டும் வீடுபேறு கூடுமென்றும், அத்துறவு பிராமணனுக்கேயுரியதென்றும், ஆதன்கள் (ஆன்மாக்கள்) பல அஃறிணைப்பிறப்புப் பிறந்து அதன்பின் உயர்திணைப் பிறப்படைவதுபோல் உயர்திணைப் பிறப்பிலும் பல பிறப்பின்பின்னரே பிராமணனாகப் பிறக்க முடியுமென்றும் இறைவன் என்றும் பிராமண வடிவிலேயே காட்சியளிப்பானென்றும், ஆரியக்கருத்துக்கள் தமி ழருள்ளத்திற் பதிக்கப்பட்டன. தமிழத் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாக மாற்றுதற்கும் தமிழரை அடிமடையராக்குதற்கும் பலபுராணங்கள் இயற்றப்பட்டன. தமிழர் கொண்முடிபு (சித்தாந்த) நூல்களிலும் ஆரியக் கருத்துக்களும் சொற்களும் சேர்க்கப்பட்டன. இங்ஙனம் ஆரியத்தால் ஏற்பட்ட அவலங்கள் போதாவென்று, புத்தம் சமணம் முதலிய துன்பமதங்களும் உலகாயதம் பூதம் முதலிய சிற்றின்ப மதங்களும், தமிழகத்தை அளவிறந்து அலைக் கழித்தன. திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம் ஆரியத்தாலும் நம்பா (நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக்கேடு களும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டுமென்னும் இன்னருள் நோக்கங்கொண்டே, தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்க. அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும். திருவள்ளுவர் திருவுள்ளம் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்குமுன்பு தமிழகத்துப் பிறந்து வாழ்ந்தவரே யாயினும், இவ்வுலக மெங்குமுள்ள அறுவகையு யிரியும் எக்காலத்தும் இன்புற்று நீடுவாழவேண்டுமென்பதே அவர் திருவுள்ளமாம். திருவள்ளுவர் பெருமை (1) தமிழர் மீட்பர் பிராமணர் தமிழரை நால்வரணக் கூண்டுகட்குள் அடைத்தபின், அவர் என்றும் அவற்றினின்று வெளியேறா திருத்தற்பொருட்டு, நால்வரணப் பூத வடிவங்களை, மதுரைக் கோட்டை மதில் வாயில் நான்கிலும், நாடக வரங்குகளிலும், கல்லறைகளிலும், எழுதி வைத்தனர். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் (புறம். 183) பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (சிலப்.22:109) நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ......................................................................................... ஆதிப்பூதத் ததிபதிக் கடவுளும் .......................................................................................... பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் அரைச பூதத் தருந்திறந் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் .......................................................................................................... விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையும் மேனியன்............................... மண்ணுறு திருமணி புரையு மேனியன் ....................................................................................................................... கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றி .......................................................................................................... நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர (சிலப். 22:16-108) தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்து (சிலப்.3:106-7) இதன் (அடியார்க்கு நல்லார்) உரை: அந்தணர் அரசர் வணிகர் சூத்திரரென்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி, மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்கவைத்தென்க. என்னை? கூறிய வுறுப்பிற் குறியோடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை வழுவில் பூத நான்கும் முறைப்பட எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே என்றாராகலின், அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் (மணி.6:54-59) இப் பாடல்கள் திருவள்ளுவர் காலத்திற்குப் பிந்தினவாயினும், இவற்றுட் சொல்லப்பட்டுள்ள நிலைமை அவர் காலத்திற்கு முந்தியதே. இங்ஙனம் தமிழரைத் தாழ்த்தி அவரொற்றுமையைக் குலைத்த கொடுமை யைக் கண்ட திருவள்ளுவர், அதைக் கண்டித்து, பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லால் கீழல் லவர் (குறள் 973) பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து (குறள்.978) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள். 133) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள். 134) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (குறள்.1033) இரவா ரிரப்பார்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் (குறள்.1035) என்றும், பிராமணரே துறவிற்குரியவர் என்றதை மறுத்து, அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்.30) என்றும், துறவறத்தால் மட்டும் வீடு பெறலா மென்றதை மறுத்து, அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் (குறள்.46) அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று (குறள்.49) என்றும், பிராமணன் வேதம் ஓதுவதனாலேயே மற்ற மூவருணத்தாரும் வாழ்கின்றனர் என்றதை மறுத்து, உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து (குறள்.1032) இல்வாழ்வ னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை (குறள்.41) துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு யில்வாழ்வா னென்பான் றுணை. (குறள்.42) என்றும், பிராமணன் வேள்வி செய்வதனாலேயே உலகில் மழை பெய்கின்ற தென்றதை மறுத்து, இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள்.545) முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல் (குறள்.559) என்றும், திருக்குறளியற்றித் தமிழரை மீட்டார். 2. வாழ்க்கை வழிகாட்டியார் கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள்.9) எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு (குறள்.392) கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை (குறள்.414) மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு (குறள். 60) மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று (குறள்.904) இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள்.920) பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண் (குறள். 146) தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (குறள்.67) மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல் (குறள்.70) ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டு மொருங்கு (குறள். 760) முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும் (குறள். 616) பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர வெண்ணிச் செயல் (குறள். 675) எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு (குறள்.467) அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும் (குறள். 625) ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் (குறள்.33) ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு (குறள்.642) தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் (குறள்.293) உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல் (குறள்.282) இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல் (குறள்.314) செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது (குறள்.101) நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில் (குறள்.460) ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள்.792) அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள்.523) அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் (குறள்.443) மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின் (குறள்.942) தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று (குறள்.236) இக் குறள்களும் இவை போன்ற பிறவும், ஒருவன் உலகிற் செம்மையாகவும் சிறப்பாகவும் இன்பமாகவும் வாழச் சிறந்த வழிகாட்டுவனவாகும். 3. திருமறை யாசிரியர் திருக்குறள், வீடுபேற்றிற் கின்றியமையாத எல்லாம் வல்ல இறைவன் வழிபாட்டையும், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும், துறவு நெறிக்குரிய அறவொழுக்கங்களையும், நிறைவாகக் கூறி, இன்பத்துப் பாலால் திருக்கோவை போல் உவமை வாயிலாகப் பேரின்பத்தை யுணர்த்தும் திருமறையாகும். 4. மெய்ப்பொருளறிஞர் தன்வயத்தம், தூய்மை, இயற்கை முற்றறிவு, இயல்பாகக் கட் டின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலின்பம், எங்கு முண்மை, பகாமை என்னும் தொண்குணத்தனாய், தனக்குவமை யில்லாத முழுமுதற் கடவுள், எல்லாம் வல்லனாதலின், அவனை எழு கூறாகப் பகுக்கும் ஆரிய முறையை மறுத்து, ஐம்பூதமும் ஐம்பூதத் தன்மையும் அறிவுப் பொறியைந்தும் கருமப்பொறி யைந்தும், அவற்றையறியும் ஆதனும் (புருடனும்), அவன் அறிதற் கருவியாகிய மதியுள்ள மன னுணர்வுகளும் ஆகிய இருபத் தைந்தொடு, காலம் இறைவன் என்னும் இரண்டையுங் கூட்ட, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தேழேயெனும் கருத்துப்பட, சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு (குறள். 27) எனத் திருவள்ளுவர் கூறியிருப்பது, அவர் ஒருவரே உண்மையான தெளிந்த மெய்ப்பொருளறிஞர் என்பதைக் காட்டும். ஊழ் என்பது வினையுள் அடங்கும். 5. செந்தண்மை அந்தணர். தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்? (குறள்.251) இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள்.1062) என்னுங் குறள்கள் உணர்த்தும் ஆசிரியருணர்ச்சியை ஊன்றி நோக்கின், அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்னுங் குறட்குத் திருவள்ளுவரே சிறந்த எடுத்துக்காட்டெனத் தோன்றுகின்றது. 6. தெய்வப் புலவர் திருவள்ளுவ மாலையில், நக்கீரர் பெயரிலுள்ள தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோகுக் கூழி னுரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்றும் மற்று. என்னும் பாவும், மாமூலனார் பெயரிலுள்ள அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார். என்னும் பாவும், கல்லாடர் பெயரிலுள்ள ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. என்னும் பாவும், உருத்திரசன்ம கண்ணர் பெயரிலுள்ள மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்- பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க் காய்தொறும் ஊறும் அறிவு. என்னும் பாவும், மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் பெயரிலுள்ள புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர் என்னும் பாவும், திருவள்ளுவரின் தெய்வப் புலமையை ஒருவாறுணர்த்தும். 7. முதற் பாவலர் காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பைபுலி -ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி என்பது, ஔவையார் ஒருவர் பெயரிலுள்ள பழம்பாட்டு பாவிற்குச் சிறந்த வெண்பாலிலுங் குறுகிய வகையான குறட் பாவில், திருவள்ளுவர் விரிந்த பொருளை யமைத்திருப்பது, அவரின் முதற்பா வன்மையைச் சிறப்பக் காட்டும். எ-டு: நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடுஞ் வித்தகர்க் கல்லா லரிது. (குறள்.235) இதனைக் கபிலர் பெயரிலுள்ள தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி என்னும் வள்ளுவமாலைப் பாவுந் தெரிவிக்கும். 8. தமிழ்நாட்டுத் திருப்புரவலர் (Patron Saint). ஒவ்வொரு நாட்டிற்கும் திருப்புரவலர் அல்லது காவல் தூயர் ஒருவர் உளர். தமிழ்நாட்டுத் திருப்புரவலர் திருவள்ளுவரே. அவர் முக்கால அரசியல் அறிஞராதலால், இக்காலத்திற்கும் ஏற்றவாறு அரசியலமைப்பைத் தம் நூலிற் கூறியேயுள்ளார். முதல் மாந்தன் குடும்பம் தோன்றியதிலிருந்து, அரசும் தோன்றி, குடும்பத் தலைவன், ஊரன்(கிழவன்), நாடன், வேள், மன்னன், கோ(கோன்), வேந்தன் எனப் படிப்படியாக வளர்ந்து, செங்கோலன், கொடுங்கோலன், முற்றதிகாரி, மட்டதிகாரி என இடையிடையே மாறி, இன்று பெரும்பாலும் பாராளுமன்றக் கோவரசு, பாராளுமன்றக் குடியரசு, மக்களாட்சிக் குடியரசு, கூட்டுடைமைக் குடியரசு என நால்வகைப் பொறுப்பாட்சிப் பொது மக்களரசாகத் திருந்தியுள்ளது. மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்குப் பொதுவாக ஏற்றது கூட்டுடைமை யாட்சியே. கார்ல்மார்க்கசும் இலெனினும் போன்றவர் இந் நூற்றாண்டில் வகுத்த கூட்டுடைமை சிறப்பாக ஆலைத் தொழிலாளர் நிலைமை நோக்கியதே: திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகட்கு முன்னரே வகுத்த கூட்டுடைமையோ, எல்லாத் தொழிலாளர்க்கும் அலுவலர்க்கும் பொதுவானதாகும். பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். (குறள்.44) பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது (குறள்.227) பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை (குறள்.322) தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு (குறள்.1107) இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள்.1062) என்னுங் குறள்கள் கூட்டுடைமை பற்றியனவே. இனி, பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள்.633) என்னுங் குறளும் எக் காலத்திற்கும் ஏற்றதே. 9. திருக்குறள் ஒப்புயர்வற்ற நூல் ஆரிய வேதத்தையும் பகவற்கீதையையும் மனுதரும சாத்திரத்தையும், பலரும் சிலரும் திருக்குறளுக்கு இணையாகக் கூறுவர். அவர் அறியார். வேதம் பிள்ளைத்தனமான எளிய கருத்துகளுள்ள சிறு தெய்வ வழுத்துத் திரட்டு, திருக்குறளோ, எல்லாம் வல்ல முத்தொழி லிறைவன் வழுத்தொடு கூடிய தலைசிறந்த அறநூல். கட்குடி திருக்குறளில் மிக வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளது. இருக்கு வேதத்திற் சோமம் என்னும் கட்சாறோ, 110 மந்திரப் பதிகங்களில் சிறு தெய்வமாக வழுத்தப்பட்டுள்ளது. திருக்குறள் பிறப்பாற் சிறப்பில்லை என்பதை வற்புறுத்திக் கூறுகின்றது; பகவற்கீதையோ, மிக நுட்ப வலக்காரமாக, நால் வரணப் பாகுபாட்டை இறைவன் படைத்த பிறவிக்குலமெனக் காட்டுகின்றது. மனு தரும சாத்திரம் உலகிற் கடைப்பட்ட அறக்கேடான நஞ்சு நூல். அது பிராமணரைத் தெய்வமாக உயர்த்தியும் சிறந்து வாழவைத்தும், பிறரை விலங்காகத் தாழ்த்தியும், அடிமைத்தனத் திலும் அறியாமையிலும் வறுமையிலும் வருந்தவைத்தும், மகிழ்ந்து பெருமை கொள்வது. அதிலுள்ள பொருளாட்சிக் கொள்கைகளும் கருத்துகளும், இறப்ப இழிந்தவை; அறக் கொடியவை. எ-கா: சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று கருதுகின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோரால் இகழப்பட்டது. ஏனெனின், இரும்பை முகத்திற்கொண்ட ஏரும் மண்வெட்டியும் நிலத்தையும் நிலத் திலுள்ள பற்பல பூச்சி புழுக்களையும் வெட்டுகின்றன வன்றோ! (மனுதருமசாத்திரம்,10:84) 10. திருக்குறள் தமிழ்மறையே திருக்குறள் பொதுமறையெனப் பெயர் பெற்றிருப்பினும், அது தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று மீட்கும் தமிழ்மறை யாகவே இயற்றப்பட்டது. தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் தலைசிறந்திருந்ததனால், திருவள்ளுவர் நடுநிலை யாக இயற்றிய தமிழ்மறை தானாக உலகப் பொதுமறையாயிற்று. அதனாலேயே, பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச்-சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால் இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும் மன்பதைக் கெல்லாம் மனமகிழ - அன்பொழியா துள்ளி யுணர வுரைத்தாரே ஓதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து அறந்தகளி ஆன்ற பொருள்திரி யின்பு சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து என்னும் வள்ளுவமாலைப் பாக்கள் எழுந்தன. வள்ளுவன் தன்னை யுலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று, பாவலர் சுப்பிரமணிய பாரதியார் பாடியதும் அவ் வகையிலேயே. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள்.656) என்னுங் குறளுரையில், இறந்த மூப்பினராய இரு முதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொதுவிதி, பொருணூல் வழியொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்குமதிக்கற் பாடுமுடைய அமைச்சர்க் கெய்தாமைபற்றி, இவ்வாறு கூறினார், என்று, ஆரிய முறைப்படி உரைகூறும் பரிமேலழகரும் சிறப்புக் குறிப்பு வரைந்திருப்பதால், திருவள்ளுவர், சமையம் வாய்க்கும்போதெல்லாம், ஆரியக் கொள்கையைக் கண்டித்துத் தமிழ் மரபை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் என்பது, தெள்ளத் தெளிவாம். பரிமேலழகர் அறநூல் என்றது மனுதரும சாத்திரத்தை, தரும நூலென்று ஆரியர் கூறுவனவெல்லாம் அதரும நூல்களாதலின், அவற்றை அறநூல் என்பது தமிழர்க்கு எதிர்மறைக் குறிப்பாம். 11. நாற் பொருட் பாகுபாடு ஆரியர் சிந்துவெளியில் தங்கியிருந்தபோது, இயற்கைத் தோற்றங் களையும் ஐம்பூதங்களையும் உணவுப் பொருள் களையுமே தெய்வங்களாக வணங்கிவந்தனர். சோமம் என்னும் ஒரு கொடிச் சாற்று மதுவும் தெய்வமாக வணங்கப்பட்டது. விடியற்கால ஒளியை உஷா என்றும், கதிரவன் எழுமுன் அதை ஸவிதா (ஸாவித்ரீ) என்றும், எழுஞ் செங்கதிரவனை அருண என்றும், எழுந்த கதிரவனைச் சூர்ய என்றும், எழுகை உச்சிச் செலவு விழுகை ஆகிய முந்நிலை இயக்கங் கொண்ட கதிரவனை விஷ்ணு என்றும், பின்னர்ப் பன்னிரு மாதம் அல்லது ஓரைபற்றிச் சூரியனைப் பன்னிருவர் ஆதித்தர் என்றும், இங்ஙனம் ஒரே சுடரை அறு தெய்வமாக வணங்கியது, அவரின் மதிவளர்ச்சி யில்லா நிலையைக் காட்டும். அவருக்குக் கோயிலுமில்லை; குளமுமில்லை. விலங்கைக் காவு கொடுக்கும் வேள்வித் தூணே கோயில். இறந்தபின் உயிர்கள் கூற்றுவன் உலகத்தையும் கதிரவன் உலகத்தையும் திங்கள் உலகத்தையும், அடையும் என்பதே, அவர் மறுமைக் கொள்கை. கடவுளை அறியாததனால், வீடுபேற்றுக் கருத்தே அவருக்கிருந்ததில்லை. தமிழரோ முதல் மாந்தனினத்தாராய்க் கி.மு. ஓரிலக்கம் ஆண்டு கட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி, கி.மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் வளர்த்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்துறை நாகரிகமும் முத்தமிழிலக் கியமும் முழுமுதற் கடவுள் வணக்கமுங் கண்டவர். அதனால், அறம் பொருளின்பம் வீடென்னும் நாற் பொருட்பேற்றை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர். பொருள்கள் அறிவியல்தொறும் வெவ்வேறு பாகுபாடு கொள்ளும். அறம் பொருளின்பம் வீடென்பது அறநூற் பாகுபாடு: அகம் புறம் என்பது பொருளிலக்கண நூற்பாகுபாடு: பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என்பது, ஏரணநூற் பாகுபாடு: சித்து (செத்து) சடம் (சட்டம்) என்பது கொண்முடிவு (சித்தாந்த) நூற் பாகுபாடு. இங்ஙனமே ஏனையவும். ஒரே அறிவியற்குள்ளும், அவ்வந்நிலைக்கு அல்லது பிரிவுக்கேற்ற வாறு பொருட்பாகுபாடு வேறுபடுவதுமுண்டு. இலக்கண நூலுள், எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்றும், சொல்லதி காரத்தில் உயர்திணை அஃறிணையென்றும், பொருள திகாரத்தில் அகம் புறம் என்றும்,இனிச் சொல்லதிகாரத்துள்ளும் பெயரியலில் பொருளிடங் காலம் சினை குணம் தொழிலென் றும், வேறுபடல் காண்க. அகப் பொருளிலக்கணத்தில், தலைவன், பொருள்வயிற் பிரியுங்காற் கூறும் கூற்றுக்களுள் ஒன்று மூன்றன் பகுதி (தொல். அகத்.41) எனப்படும். அது அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளாற் காமம் நுகர்வேன் என்பது. இதனால், அறம் பொருளின்பம் என்னும் பாகுபாடும் அகம்புறம் என்னும் பாகுபாடும் வெவ்வேறென்பதும், இரண்டும் தமிழே யென்பதும் பெறப்படும். இதில் இன்பம் என்றது இம்மைக்குரிய தாதலால், வீடு விடப்பட்டது. தமிழரின் உயர்ந்த மதங்கள், சிவமதம் திருமால்மதம் இவ்விரண் டிற்கும் பொதுவான கடவுள் மதம் என மூன்றாம். இவற்றுள் முந்தியது சிவமதம். பாண்டி நாடே பழம்பதி யாகவும் தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதனாலும், பனிமலைக்கும் குமரிமலைக்கும் இடைநடுப்பட்ட தில்லைச் சிற்றம்பலம் பேருலக நெஞ்சத்தாவாக, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளு முன்பே, பாண்டியனால் அமைக்கப்பட்டதனாலும், ஆரியர் சிவநெறியைத் தழுவு முன்பு, வடநாட்டில் திருக்குறி (லிங்க) வழிபாடு செய்து வந்த தமிழரைச் சிசின தேவர் என்று பழித்ததனாலும், உருத்திரன் கடுங்காற்றுத் தெய்வமே யாதலாலும், சிவன் வேதத் தெய்வ மன்மையாலும், சிவமதம் தமிழ மதமே யென்பது வெள்ளிடைமலை. வீடுபேறு இறைவனிடம் பெறுவ தேயன்றிச் சிறு தெய்வங்களிடம் பெறுவதன்று. வடபாற் சென்ற தமிழரே திரவிடராகத் திரிந்தும், வடமேற்கிற் சென்ற திரவிடரே ஆரியராக மாறியும் இருப்பதால், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம். ஆதலால், ஆரியரே நாற்பொருட் பாகுபாட்டைத் தமிழர்க் கறிவித்தனரென்பது, பேரன் தன் பாட்டன் திருமணத்திற்குப் பாட்டியற்றினான் என்பது போன்றதே. 12. திருக்குறளைப் பயன்படுத்தல் ஒரு கொடிய நோய்க்கு ஒரு மருத்துவர் சிறந்த மருந்து காணின், அதை நோயாளி உண்டாலொழியக் கண்டாலுங் கொண்டாலும் பயனில்லை. அதுபோன்றே, ஆரிய ஏமாற்றினின்று தப்புவதற்குத் திருவள்ளுவர் வகுத்த சிறந்த முறையைக் கையாளாது ஆண்டு தோறும் அவர் பெருமையையோ அவர் நூற் சிறப்பையோ அவையோர் மகிழ அடுக்கிக் கூறிப் பயனில்லை. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள். 423) என்பது ஓர் அறிவுத் துணுக்கு. வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக் காலத்தில், தென்னாடு வந்த ஆரியரான பிராமணர், தம்மை நிலத்தேவரென்று மூவேந்தரையும் ஏமாற்றினர். அவ் வேந்தரும் அதை நம்பி அவர் ஏவியதை இயற்றினர். அதைப் பொது மக்களும் பின்பற்றினர். ஆயின், ஆங்கிலராட்சியும் அறிவியற் கல்வியும் கண் திறந்த பின்னும், நயன்மைக் கட்சித் தலைவர் கால் நூற்றாண்டு இன முன்னேற்றத்தொண்டு செய்தபின்னும், மறைமலையடிகள் தனித் தமிழியக்கங் கண்ட பின்னும், ஆரிய மொழியாராய்ச்சி யுண்மைகள் வெளிப்பட்டபின்னும், தி.மு.க. ஆட்சியும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் அருள்நெறித் திருக்கூட்டமும் ஏற்பட்ட பின்னும், மருத்துவமும் ஏரணமும் வரலாறும் ஞாலநூலும் கற்றபின்னும், பிறநாடு சென்று மீண்டபின்னும், பிராமணரை நிலத்தேவரென்று கொள்ளாவிடினும் பிறப்பா லுயர்ந்தவரென்று நம்பியும், மறுமையிற் பிராமணக் குலத்திற் பிறக்கவேண்டு மென்று விரும்பியும், பகுத்தறிவிற்குச் சிறிதும் ஒவ்வாத பிராமணர் நடிப்பை எண்ணிப்பாராதும், மானமழிந்து மதி கெட்டுத் தாம் மக்கட்டன்மை யிழப்பதுடன், தம் முன்னோர்க்கு இழிவும் பின்னோர்க்கு அழிவுந் தேடும் தமிழர், மக்கட் பெருக்கமும் உணவுத் தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், இருப்பதினும் இல்லாமையே மேலாம். தமிழன் எத்துணை நாகரிகமுங் கல்வியுந் துப்புரவும் ஒழுக்கமும் தோற்றப் பொலிவும் செல்வமும் அதிகாரமும் உயர்வும் உடைய வனாயினும், பிராமணனொடு தன் இல்லத்திலோ அவனில்லத் திலோ உண்டாட்டிற் கலந்து கொள்ள முற்றுந் தகுதியற்றவன் போல் இருக்கின்றான். பிராமணன் உண்டிச் சாலையில் அல்லது ஒரு பொதுவிடத்தில், பிராமணருந் தமிழரும் கூடி யுண்ணலாம்; ஆயின், பிராமணன் இல்லத்தில் அங்ஙனம் உண்பதில்லை. தமிழருள் உயர்ந்த மரக்கறி வெள்ளாளன் இல்லத்தில், பொற் கலத்தில் நீர் அல்லது பால் அன்பளிப்பாகக் கொடுப்பினும் பிராமணன் குடியான். ஆயின், அவரினும் மிகத் தாழ்வாகக் கருதப்படும் இடைச்சி, அல்லது தன்னை இடைச்சியென்று சொல்லிக் கொள்பவள், தன் பழைய மட்கலத்தில் தன் வீட்டுத் தண்ணீரைக் கலந்து கொடுக்கும் தயிரையோ, வானமுதம் போற் கடுவிலைக்கும் வாங்கிக் குடிப்பான், அதையும் அவள் வீட்டிற் குள்ளிருந்து குடிக்க மறுப்பான். தாழ்த்தப்பட்டவர் தவிர மற்றத் தமிழர் யாராயினும், அவல், கடலை, பொரி, அப்பம் (ரொட்டி) விற்பின், பிராமணன் தன் இனத்தான் விற்பது போன்றே கருதி வாங்குவான். இன்குடிப்பும் தண்குடிப்பும் தாழ்த்தப்பட்டவன் புட்டியில் அடைப்பினும், பிராமணன் வாங்கத் தவறான். ஒரு தமிழனும் ஒரு பிராமணனும் இளமை முதல் முதுமைவரை எத்துணை நெருங்கி நட்பாடினும், உண்டிவேளையில் மட்டும் அந் நட்பு முற்றும் நீங்கிவிடும். இதை இக் காலத்தும் பிராமணன் உயர் வாகக் கருதலாம். ஆயின், இது அநாகரிகமேயன்றி உயர்வாகாது. பிராமணன் தமிழன் இல்லத்தில் ஒருமுறை யுண்ணினும் அவன் உயர்பு போய்விடுமென்பதும், அதன்பின் விலைக்கன்றி இலவச மாகத் தமிழன் உணவளியான் என்பதும், பிராமணனுக்குத் தெரி யும். அதனால்தான், நிலையாகப் பிராமணன் வாழவும் தமிழன் தாழவும் தன் குலக்கட்டுப்பாட்டை இறுகக் கடைப் பிடிக்கின் றான். இதனால், பிராமணன் உண்டிச் சாலையில் திருப்பதியிற் போற் பணங் குவிகின்றது: பிராமணன் இல்லாத வூரில், ஒரு பிராமணனுக்கு இலவச வீடும் நிலமும் வாழ்க்கைப் பொருளுங் கிடைக்கின்றன. இதை ஈகை அல்லது ஒப்புரவொழுகல் எனச் சிலர் கருதலாம். இதனால் தமிழ இனத்திற்கு நிலையாக நேரும் மானக் கேட்டையும் அடிமைத்தனத்தையும் அகக் கரண வளர்ச்சித் தடையையும் நோக்குதல் வேண்டும். தமிழன் முதன்முதல் உலகில் நாகரிக விளக்கேற்றி வைத்தவன்: பகுத்தறி வடிப்படையில் மொழியை வளர்த்துப் பொருளுக்கும் இலக்கணங்கண்டவன்: கண் காணாததைக் காணவும் காது கேளாததைக் கேட்கவும் நெற்றிக் கண்ணை வளர்த்துக் கொண்ட வன்: இறப்பு நாளை முன்னரே அறிந்து பணிமுடித்து அணிய மாகி, மகிழ்ச்சியொடு உறவினரிடம் விடைபெற்றுச் சென்றவன். கடந்த மூவாயிரம் ஆண்டாக, தமிழன் பிறப்பில் தாழ்ந்தவன் என்று சொல்லிச் சொல்லி அஃறிணை யாக்கப்பட்டு விட்டத னால், மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழருள் நூற்றிற் கெழுபத் தைவர் பகுத்தறிவை யிழந்து விட்டனர். பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் (குறள்.505) நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம் (நாலடி.195) செல்வன், தவஞ் செய்தோன்: கற்றோன், உழைப்பாளி, அதிகாரி என்று பெயர் பெறுவதனா லன்றி, பிறப்பாற் சிறப்பில்லை யென்பது இதன் பொருள். ஒருவர் அல்லது ஓரினத்தார் தம் முன்னோராலும் பெருமை பெறலாம். தமிழரின் முன்னோர் புரப்போராகவும், ஆரியரின் முன்னோர் இரப்போராகவும் இருந்ததனால், தமிழரே ஆரியரினும் உயர்ந்தோராவர். இற்றையுலகில், தூய வெள்ளையர் ஐரோப்பியரும் அவர் வழியினருமாவர். அவருக்கு நேர்மாறாக இருண்ட கறுப்பர் ஆப்பிரிக்கர். ஆயினும், ஆப்பிரிக்கர் வெண்ணிறம்பற்றியோ, தம்மை நாகரிகப் படுத்தினவர் என்பது பற்றியோ, ஐரோப்பியரை உயர்வாகவும் தம்மைத் தாழ்வாகவுங் கருதுவதில்லை. எல்லா வகையிலும் ஆப்பிரிக்கரினும் உயர்வான தமிழர் ஏன் கையுங் காலுமாக வந்து தம்மையிரந்தவரும் தம்மாற் புரக்கப்பட்டவரும் நாகரிகப்படுத்தப்பட்டவரும் சின்னஞ் சிறுபான்மை யருமான அயலாருக்குத் தாழ்ந்து நிற்றல் வேண்டும்? இங்கிலாந்தில், பொதுமக்கள் (Commons) பெருமக்கள் (Lords) என இருவகுப்பார் இருப்பினும், பதவியினாலும் அரச னதிகாரத் தினாலும் பொதுமக்களும் பெருமக்களாகின்றனர். இங்கே இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் தமிழ ரனைவரும் கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் பிராமணனுக்குத் தாழ்ந்தவரென்பது, பகுத்தறிவிற் கொவ்வாததும் வாழ்நாட்சிறை போன்ற கடுந்தண்டனைக் கேற்றதுமான குற்றமேயாகும். நெற்றிக் கண்ணைத் திறந்தாலுங் குற்றம் குற்றமேயென்று நக்கீரர் போன்று, இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள்.1062) என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், அவர் போன்று திடநெஞ்சும் நடுநிலையும் உள்ளவரேயன்றி, தொடை நடுங்கிகளும் வையாபுரிகளும் திருக்குறளை ஆராயவோ பயன்படுத்தவோ முடியாது. ஆதலால், வையாபுரிகளையும் வாய்மைத் தமிழரையும் பிரித்தறிதல் வேண்டும். 13. தமிழாரியப் போராட்டம் செங்குட்டுவ கனகவிசயர் போர் பதினெண் நாழிகையும், பாண்டவர் கௌரவர் போர் பதினெண் நாளும், இராம இராவணர் போர் பதினெண் மாதமும், தேவரசுரர் போர் பதினெண் ஆண்டும் நடந்தனவென்று சொல்லப்படும். ஆயின், தமிழாரியப் போரோ பதினெண் நூற்றாண்டு நடந்து வந்தும் இன்னும் முடிந்த பாடில்லை. ஆரியம் நன்று: தமிழ் தீது எனவுரைத்து, நக்கீரராற் சாவவும் எழவும் பாடப்பட்ட குயக்கோடன் காலத்திலிருந்து தமிழாரியப் போர் நடந்து வருகின்றது. கடவுள் மக்களெல்லாருக்குந் தந்தை எல்லாரும் அணுகி தத்தம் தாய் மொழியிற் போற்றி வழிபடலாம். திருத்தமாகப் பேசும் மக்கள் மொழியை விட திருந்தாத மழலை பேசும் குழந்தைகள் மொழியே பெற்றோர்க் கின்பம் பயக்கும். அங்ஙனமே, கற்றோர் புகழும் புலமைச் செய்யுளைவிட, கல்லார் புகலும் எளிய உரை நடையே இறைவனுக்கு இன்பமாம். இந்திய மதங்களுட் சிறந்த சிவமதம் திருமால் மதமும், தமிழர் கண்டவை. குறிஞ்சி நில முருகன் வணக்கத்தினின்று சிவமதமும், முல்லைநில மாயோன் வணக்கத் தினின்று திருமால் மதமும், தோன்றின. உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வமும் சிவன் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு: அங்ஙனமே, விஷ்ணு என்னும் ஆரியத் தெய்வமும் திருமால் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு. சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுத் தமிழிலேயே நடைபெற்று வந்தன. பிராமணர் முதுகுடுமிப் பெருவழுதி போன்ற பேதை வேந்தரை ஏமாற்றி, தமிழ்ப் போற்றி நூல்களை ஆரிய ஆகமங்களாக மொழி பெயர்த்துக் கொண்டு, தமிழை வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளி, பிராமணரே சமற்கிருதத்தில் கோவில் வழிபாடு நடத்தி வருமாறு செய்துவிட்டனர். மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் என்று மாணிக்கவாசகர் பாடியிருத்தல் காண்க. மகேந்திரம் என்பது, இலங்கைக்கு மேற்கில் பொதிய மலைக்குத் தென்பால் இந்துமாவாரியில் மூழ்கிப்போன ஒரு மலைத் தீவு. அதிற் சிவபெருமான் போற்றி நூல் தோற்றுவித்தது ஆரியர் வருகைக்கு முந்திய நிகழ்ச்சி. அத் தீவின் தமிழ்ப்பெயர் இறந்து பட்டது. ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் கிறித்துவ மதத்தைப் பரப்பியவர் உரோமா புரிக் கிறித்தவக் குரவராதலால், அவர் தம் இலக்கிய மொழியாகிய இலத்தீனிலேயே வழிபாடு நடத்தினர். ஆயின் இத்தாலிய ரல்லாதவரெல்லாரும் நாளடைவில் தத்தம் தாய்மொழியிலேயே வழிபாட்டை நடத்தி வருவாராயினர். இங்கோ, நாடு தமிழ்நாடு: மக்கள் தமிழ் மக்கள்: மதம் தமிழ மதம்: கோவில் தமிழர் கட்டியவை: தெய்வப் படிமை தமிழர் சமைத் தவை: தெய்வம் தமிழர் தெய்வம்: திருக்கோவில் உடைமைக ளெல்லாம் தமிழர் தந்தவை: மக்கள் பேசும் மொழி தமிழ். இங்ஙனமிருந்தும், பிராமணர் தமிழ்வழிபாட்டைத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழருள் திரவிடரும் அடங்குவர். இனி, மராட்டிய மன்னரும் பிறரும் கட்டிய இரண்டொரு கோவில்களிருப்பினும், அவையும் தமிழர் தந்த வரிப்பணங் கொண்டே கட்டியவை யென்றறிதல் வேண்டும். இது கோவரசு நீங்கிய குடியரசுக் காலம். அரசு எல்லா நிலைமை களையும் தீர ஆய்ந்து, தமிழ்த் திருமணத்தைச் சட்டப்படி செல்லவைத்தது போன்றே, தமிழ் வழிபாட்டையும் திருக் கோவில்களிற் புகுத்திலது. இது தமிழ் நாட்டரசு செய்ய வேண்டிய தலையாய கடமையே. எந்நாட்டிலும் எக்காலத்திலும் வழிபாட்டிற்குத் தகுந்தமொழி தாய்மொழியே. ஒருவன் தன் உள்ளத்திலுள்ளவற்றைத் தன் தாய் மொழியிலேயே உணர்த்தமுடியும். தேவமொழியென்று ஒரு மொழியுமில்லை.ஒரு மொழியைத் தேவமொழியென்று சொல்லும் பூசகன், தெற்வத்திரு முன்பு நின்று தெய்வத்தையே துணிந்து ஏமாற்றித் தீராத் தீவினை செய்கின்றான். மன்றாட்டின் வலிமை மன்றாடுவானின் உள்ளத் தூய்மையையும் திண்மையையும் பொறுத்ததேயன்றி, அவர் ஒலிக்கும் ஒலியின் வன்மையைப் பொறுத்ததன்று. ஒலிக்கே வலிமை யுண்டெனின், நூற்றுக்கணக் கான கழுதைகளைக் கூட்டிஒருங்கே கத்தும்படி செய்யலாம். ஏனெனில், கழுதை கத்துதல் போன்ற மூச்சொலி மிக்க வல்லொலி, எந்த மாந்தர் மொழியிலுமில்லை. திருவள்ளுவர் வரலாறு பெயர்: இவர் பெயர் வள்ளுவன் என்பதே. வள்ளுவர் என்பது உயர்வுப் பன்மை. இவரது இறைப்பற்றொடு கூடிய ஒழுக்கத்தின் உயர்வும் இவர் நூலின் மறைத் தன்மையும், இவருக்குத் திருமை (தெய்வத்தன்மை) யுண்டாக்கியதினால், இவர் பெயர்க்கு முன் திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்றது. தேவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், செந்நாப்போ தார், நாயனார் முதலிய பிற பெயர்களெல்லாம், இவரைப் பாராட்டிக்கூறிய புலவர் ஆண்ட புகழ்ச் சொற்களேயன்றி வேறல்ல. வள்ளுவன் என்பது இயற்பெயராகவுமிருக்கலாம்; தொழில் பற்றிய பெயராகவுமிருக்கலாம். திருவள்ளுவர் பெயர் இவற்றுட் பின்னதென்பதே பெரும் பான்மைப் பொருத்தமாம். வள்ளுவன் என்பான், அரசன் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பெருங்கதையும், அரசர்க்கு உள்படு கருமத் தலைவன் என்று பிங்கல நிகண்டும், புள்ளுவன் (நிமித்திகன்) என்று சீவகசிந்தாமணியும், கூறுகின்றன. வள் என்னும் அடிச்சொற்குள்ள பலபொருள்களுள் மூன்று, கூர்மை வலிமை வண்மை என்பன. ஆதலால், வள்ளுவன் என்னும் சொற்கு, கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று முப் பொருள் கொள்ளலாம். திருநாள் படைநாள் கடிநா ளென்றிப் பெருநாட் கல்லது பிறநாட் கறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன் என்று பெருங்கதை (2:31-33) கூறுவதால், வேத்தியல் விளம்பர அதிகாரியான வள்ளுவன் பெருமை விளங்கும். (முதுமகன் முப்பதாண்டிற்கு மேற்பட்டவன்.) இவனையே பிங்கல நிகண்டு, வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க் குள்படு கருமத் தலைவர்க் கொன்றும் (5:118) என்று உள்படுகருமத் தலைவருள் ஒருவனாகக் குறிக்கும். வள்ளுவன் அரசன் கட்டளையையே முரசறைந் தறிவிப்பவன்; சாக்கையன் அரசர்க்கே நாடகம் நடிப்பவன். ஆதலால் இவ்விரு வரும் அரசர் தொடர்பே கொண்ட அரண்மனைப் பணியாளராவர். சிலர் கருதுகின்றவாறு, வள்ளுவன் அரசன் பள்ளியறைக் கண் காணிப்பாளனான மாளிகை நாயகம் (Chamberlain) அல்லன். பெருங்கணி குறித்த நன்னாளிலேயே வள்ளுவன் பறையறைய வேண்டி யிருந்ததினாலும், வள்ளுவனைப் புள் (நிமித்தம்) அறிவிப்பவன் என்றும் சிந்தாமணி கூறுவதனாலும், வள்ளுவர் என்பார் இன்றும் கணியராயிருந்து வருவதனாலும், பண்டை வள்ளுவனும் கணியம் அறிந்தவனே என்று கருத இடமுண்டு. நாள்கோள்களின் இயக்கத்தை யறிந்து ஐந்திறம் (பஞ்சாங்கம்) வகுத்தற்கும் அரசர்க்குப் பிறப்பியம் (சாதகம்) எழுதுதற்கும் நுண்மாண் நுழைமதி வேண்டியிருத்தலின், கணியருள் ஒரு பிரிவார் வள்ளுவர் எனப்பட்டதாகத் தெரிகின்றது. நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஒருசிறைப்பெரியனார், மருதனிள நாகனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் அவனை நாஞ்சிற் பொருநன் என்றே குறிக்கின்றனர். பொருநன் போர்மறவன் அல்லது படைத்தலைவன். பொருந ரென்ப பெரும்போர்த் தலைவர் என்பது பிங்கலம் (5:119) பாண்டிநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை யாண்டதினால், ஒருகாற் பாண்டியனுக்கும் மற்றொருகாற் ரேசனுக்கும் படைத்தலைவனாக இருந்ததாகத் தெரிகின்ற நாஞ்சில் வள்ளுவனை, வலிமையிலும் வண்மையிலும் சிறந்தவனாக மருதனிள நாகனாரும் ஔவையாரும் கதப்பிள்ளையும் பாடியிருத்தலால், அவன் பெயர் வலிமையாலோ வண்மை யாலோ வந்ததாகவுமிருக்கலாம்; இயற்பெயராகவுமிருக்கலாம். வல்லப என்னும் வடசொல், வேரில்லாததாகவும் காதலன், நண்பன், கணவன், மேலோன், கண்காணி என்றே பொருள் படுவதாகவும் இருத்தலால், அது வள்ளுவன் என்னும் தென்சொற்கு மூலமாயிருத்தல் முடியாது. கல்வெட்டுக்களில் வரும் வள்ளுவன் வல்லுவன் என்னும் சொற்களும், தூய தென்சொற்களேயன்றி வல்லப என்னும் வடசொல்லின் திரிபாகா. உண்மை யெதுவெனின்., வல்லவன் என்னும் தென்சொல் வடமொழியில் வல்லப என்று திரிந்துள்ளது என்பதே. வகரம் பகரமாவது வடமொழிக் கியல்பே. ஆண்மகன் என்னும் சொல் கணவனையும் ஆண்டகை யென்னுஞ் சொல் சிறந்த தலைவனையுங் குறித்தல் போன்றே, வல்லவன் என்பதன் திரிபான வல்லப என்பதும் வடமொழியில் கண்காணிப்புத் தலைவனையும் கணவனையும் காதலனையும் நண்பனையும் முறையே குறித்ததென்க. குடி: திருவள்ளுவர் அரசனின் முரசறை விளம்பரத் தலைவரா யிருந்தாரெனின், அவர் பிறந்த குடி வள்ளுவக் குடியென்றே கொள்ளலாம். கடைக் கழகக் காலத்திற் பிராமணர் தம்மை மேன் மேலுயர்த்தத் தமிழரைப் படிப்படியாய்த் தாழ்த்தி வந்தாரெ னினும், கடைப்பட்ட வகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு இக்காலத்திற்போல் அக்காலத்தில் இழிவு இருந்ததில்லை. அதனால், இக்கால நிலைமைபற்றித் திருவள்ளுவரை வள்ளுவக் குடியினரென்று கொள்வது அவருக் கிழுக்காகும் என்று கருதுவது, அறியாமையின் விளைவேயாம். அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். என்று மாமூலர் பெயரிலுள்ள திருவள்ளுவமாலைப்பாவும், திருவள்ளுவரைத் தெய்வப் பிறப்பினரென்றே கொள்ளவேண்டு மென்றும், மறந்தும் மக்கட் பிறப்பினராகக் கொள்ளக் கூடாதென்றும், கூறுகின்றதேயன்றி, அவர் குடி எள்ளளவேனும் இழிவுள்ளதாகக் கருதுவதன்று. காலம்: திருவள்ளுவர் காலம் இன்ன நூற்றாண்டென்று திட்டமாய்த் தெரியாவிடினும், தொல்காப்பியர் காலமான ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவான மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதென்று கொள்வது, எவ்வகை யினும் இழுக்காகாது. பிறந்தவூர்: இது இன்னதென்று தெரியவில்லை. பெற்றோர்: இவர் இன்னாரென்று தெரியவில்லை. திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானமிர்தமும், பகவன் என்னும் பிராமண னுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற் காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக் கதைகளாகும். திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக்கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதற்குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன் படுத்திக்கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்த வராகவும் அதேசமையத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக்கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க. முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல்பிற் காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப் பட்டுத் தன் முதற் பொருள் குன்றி யமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர். ஆதிபகவன் என்பது, ஆதியாகிய பகவன் என்றாவது ஆதிப்பகவன் என்றாவது விரியும். யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப்பெண் என்றும்,பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக்கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத் தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானா மிர்தவுரை கூறும். கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதி யென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டா ளென்று குறிப்பினும், பலநாட்பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந் தெரியாமல் அவளைத் தானே மனைவி யாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறு பாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க. உடன்பிறந்தார்: இவருக்கு உடன் பிறந்தார் இருந்ததாகத் தெரியவில்லை. யாளிதத்தனின் மனைவி பிராமணத்தியாயிருந்து பிள்ளைகளைப் பெற்றா ளென்று ஞானாமிர்தவுரையும், ஆதியென்னும் புலைச்சி மறுநாட்பகலில் அடையாளங்கண்டுபிடிக்கப்பட்ட பின், பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உடனுடன் விட்டுவிட்டு வரவேண்டுமென்னும் நிலைப்பாடு பற்றியே நிலையான மனைவி யாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாளென்று கபிலரகவல் பற்றிய கதையும் வேறுபட்டுக் கூறினும், பிறந்த பிள்ளைகள் வள்ளுவருள் ளிட்ட கபிலர் முதலிய எழுவர் என்பதில் மட்டும் ஒன்றுபடுகின்றன. கபில ரதிகமான் கான்குறவர் பாவை முகிலனைய கூந்தன் முறுவை - நிகரில்லா வள்ளுவ ரெளவை வயலூற்றுக் காட்டிலுப்பை யெள்ளி லெழுவ ரிவர். என்பது ஞானாமிர்தவுரை யடிக்குறிப்பு. யாளி - கூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற் காசனி யாகி மேதினி யின்னிசை எழுவர்ப் பயந்தோ ளீண்டே என்பதே ஞானமிர்த மூலம். அருந்தவ மாமுனி யாம்பக வற்குக் கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி ஆதி வயிற்றினி லன்றவ தரித்த கான்முளை யாகிய கபிலனும் யானே என்னுடன் பிறந்தவ ரெத்தனை பேரெனில் ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர் ................................................................................................. ஊற்றுக் காடெனும் ஊர் தனிற் றங்கியே வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள் காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில் சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள் நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியில் பாணரகத்தில் ஔவை வளர்ந்தனள் குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள் தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப் பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர் அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி அதிக னில்லிடை அதிகமான் வளர்ந்தனன் பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில் அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன் என்பது கபிலர் அகவல் (99 - 119) இதன் புரைமையையும் பொருந்தாமையையும் அறிஞர் அறிந்து கொள்க. மனைவியார்: திருவள்ளுவர் மனைவியார் வாசுகி யென்னும் பெயர்கொண்ட கற்பரசியார் என்றும், மார்க்க சகாயர் என்னும் வேளாளரின் மகளார் என்றும், அவ்வேளாளர் செய்த பயிர்பச்சை களைத் தாக்கிய நோயைத் திருவள்ளுவர் நீக்கியதால் அவர் தம் மகட்கொடையைப் பெற்றாரென்றும், அவ்வம்மையாரை மணக்குமுன்பே அவர் செய்த ஓர் இறும்பூதுச் செயலால் அவர் கற்பைத் திருவள்ளுவர் கண்டாரென்றும், நீண்ட கால வரலாறு வழங்கிவருகின்றது. இதில் நம்பத்தகாதது ஒன்றுமில்லை. இறும்பூதுச் செயல் கற்பினாலும் நிகழலாம்; இறைவன் அருளிய ஈவினாலும் நிகழலாம்; இன்றும் சோழநாட்டு மருதூரிலுள்ள நெசவுத்தொழில் செய்யும் தெய்வயானையம்மையார் பற்பல இறும்பூதுகள் செய்துவரு வதாக, புலவர் மறைத்திருநாவுக்கரசர் எழுதிய மறைமலையடிகள் வரலாற்றில் வரையப்பெற்றிருத்தல் காண்க. நல்கூர்வேள்வியார் என்னும் புலவர் பெயரிலுள்ள திருவள்ளுவ மாலைப்பாவில் மாதாநுபங்கி யென்றிருக்குஞ்சொல், தாய்போ லொழுகுபவள் என்று பொருள்படலாமேயன்றி, வள்ளுவரின் மனைவியார் பேராயிருந்திருக்க முடியாது. மக்கள்: திருவள்ளுவர்க்கு மக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. தொழில்: திருவள்ளுவர் தம் நூலியற்றுமுன் பாண்டியனின் முரசறை விளம்பர அதிகாரியாய் இருந்திருக்கலாம். பல்துறைப் பன்னூல்களைக் கற்கவும் அரசியல் வினைகள் நெருங்கியறியவும் அது மிகுந்த வாய்ப்பளித்திருக்கும். அவர் நூல் ஆரியத்தை வன்மையாகக் கண்டிப்பதால், அது இயற்றப்பெற்றபின் பிராமணர் கிளர்ச்சியாலும் அரண்மனைப் பிராமணப் பூசாரியின் தூண்டு தலாலும் அவர் தம் பதவியை இழந்திருக்க வேண்டும்.. அதன்பின், அவர் நெடுந்தொலைவிலுள்ள மயிலை சென்று நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கலாம். அல்லாக்கால் ஏலேலசிங்கன் தொடர்பிற்கும், பட்டப்பகலில் நெசவுக்குழலைத் தேட வாசுகியம்மையார் தம் கணவர் சொற்படி விளக்குக் கொண்டு வந்தார் என்னும் கதைக்கும் இடமில்லை. வாழ்ந்த இடம்: திருவள்ளுவர் முன்பு மதுரையிலும் பின்பு மயிலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. அவர் பாண்டி நாட்டில் நீண்டகாலம் வாழ்ந்திராவிடின், ஊருணி, பைய, வாழ்க்கைத்துணை என்னுஞ் சொற்களை ஆண்டிருக்கவும் அண்மையிலுள்ள சேரநாடு சென்று அக்காலத்து நம்பூதிரிப் பிராமணக் கன்னிகையர் சவச்சடங் கையறிந்து, பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ யற்று (913) என்னும் உவமையை அமைத்திருக்கவும் முடியாது. இப்பக்க - மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு என்பதும் ஒருவகையில் திருவள்ளுவரின் மதுரை வாழ்க்கையை உணர்த்தும். சமயம்: ஆரியர் வருமுன்னரே, தமிழர் சமயத்துறையில் தத்தம் அறிவு நிலைக்கேற்ப, சிறு தெய்வ வணக்கத்தாரும் பெருந்தேவ வழிபாட்டாரும் கடவுள் மதத்தாரும் ஆக முந்நிலைப்பட்டி ருந்தனர். இம்மைப்பயனையே அளிப்பனவாகக் கருதப்பெறும் இடத் தெய்வங்களும் பூதத்தெய்வங்களும் நடுகல்தெய்வங்களும் சிறு தெய்வங்களாம். இம்மையில் மழையையும் மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் அளிப்பவனாகக் கருதப் பெற்ற வேந்தன் பெருந்தேவனாம். இம்மையில் இவ்வுலக இன்பத்தோடு மறுமை யில் பிறவி நீக்கப்பேரின்பவீட்டையும் அருள்பவனாகக் கருதப்பெற்ற இறைவன் எல்லாவற்றையுங் கடந்துநிற்கும் கடவுளாம். முதற்கண் சிறு தெய்வ வணக்கமாகவிருந்து பின்பு பெருந்தேவ வழிபாடாகவுயர்ந்த சேயியமும் மாலியமும் இறுதியில் முறையே சிவனியம் திருமாலியம் என்னும், வீடுபேற்று மதங்களாக வளர்ந்துவிட்டன. ஆயின், கடவுள் மதத்தார் கடவுள் என்னுஞ் சொற்கேற்ப அவ்விரண்டிற்கும் பொதுவாயிருக்க வேண்டிய தாயிற்று. அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாய், பண்ணேனுனக் கான பூசை என்னும் தாயுமானவர் பாட்டுக்களும், உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும், சொல்லிலும் சொல்லின் முடிவிலும், எட்டுத்திசையும் பதினாறு கோணமும் என்னும் பட்டினத்தார் பாட்டுக்களும் கடவுளியல்பைத் தெளிவாகக் காட்டும். சிவனியமும் திருமாலியமும் முறையே சிவன் என்னும் பெயரா லும் திருமால் என்னும் பெயராலும் கடவுளையே வணங்கும் வீடு பேற்று மதங்களாம். ஆதலால் கிறித்துவமும் இசலாமும் போலக் கொள்கையால் வேறுபடினும் தெய்வத்தால் ஒன்றாம். எனினும், உருவ வணக்கங் கொள்வதால் வீடுபேற்று மதங்களேயன்றிக் கடவுள் மதமாகா. கடவுட் கொள்கையும் கோயில் அல்லது உருவவழிபாடுமில்லாத ஆரியர், சிவனியம், திருமாலியம் என்னும் இரு தமிழ மதங்களை யும் ஆரியப்படுத்தற்கும், தம்மினு முயர்ந்த தமிழரை அடிமைப் படுத்தற்கும் கடவுள் முத்தொழிலோன் என்னுங் கொள்கையைப் பயன்படுத்திகொண்டு, பிரமன் என்னும் ஒரு தெய்வத்தைப் புதிதாகப் படைத்து, அப்பிரமன்படைப் போனென்றும் திருமால் காப்போனென்றும் சிவன் அழிப்போ னென்றும் முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்து விட்டனர். சிவனையும் திருமாலையும் சிவனியரும் திருமாலியரும் முத் தொழில் இறைவனென்றே கொள்வதாலும், முத்திருமேனியர்க்கு முதல்வனொருவன் வேண்டியிருப்பதினாலும், தமிழ அறிஞரும் கடவுள்மதத்தாரும் முத்திருமேனிக் கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. கடவுள் மதமாவது, காலமும் இடமும்போல முதலும் முடிவும் உருவமும் நிறமுமின்றி, இயல்பாகவே எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும், எல்லாம் உடையவனாகவும், முற்றின்பனாகவும், முழுத்தூயனாகவும், எல்லையில்லா அருளனாகவும், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தழிப்பவனாகவு மிருந்து ஒப்புயர்வற்று மனமொழி கடந்த கடவுளை, உள்ளத்தில் எங்கும் என்றும் தொழுது, எல்லாவுயிர் களிடத்தும் அன்பும் அருளும் பூண்டொழுகுதலேயாம். திருவள்ளுவர் சமயமும் அதுவே. இதனாலேயே அவர் எச்சமயத்தையுந் தழுவாது எல்லாச் சமயங் கட்கும் பொதுவாகக் கூறியதும், எல்லாச் சமயங்களும் கூறும். இறைவன் பெயர்களையும் கடவுட்குப் பொருத்தியதும் என்க. வேறுநூல்: திருவள்ளுவர் வேறுநூல் செய்ததாகத் தெரியவில்லை. இவர் பெயரால் வழங்கும் ஒரு சில இவர் பெயரைத் திருட்டுத்தன மாகக் கொண்டனவே. திருவள்ளுவரின் மெய்ப்பொருள் மேம்பாடு திருவள்ளுவர் அறிவியலிலும் அரசியலிலும் மட்டுமன்றி, மெய்ப் பொருளியலிலும் மேம்பட்டவராவர், ஆயினும், தமிழர் அவரை அறியாதும் புறக்கணித்தும், இவ்விருபதாம் நூற்றாண்டிலும் அயலாரும் தமிழ்ப் பகைவரும் இறப்ப இழிந்தாருமான ஆசிரியரைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். உலகத்தில் ஒப்புயர்வற்றவரென ஆரியர் பறைசாற்றிவரும் ஆதிசங்கராச் சாரியார், சிவனியம், மாலியம். குமரம், மூத்த பிள்ளையம் (காணபத்தியம்), காளியம், கதிரவம், என்னும் அறுமத நிறுவனராகப் பாராட்டப்படுகின்றார். திருவள்ளுவரின் கடவுள் மதத்தொடு அதை ஒப்புநோக்கின், விண்ணிற்கும் மண்ணிற்கு மிடைப்பட்ட வேற்றுமையாம். சங்கராச்சாரியாரின் இரண்டன்மை (அத்துவித)க் கொள்கையில் பல்வேறு முரண் பாடுகளைக் கொண்டுள்ளமையின், பேதையரே போற்றத் தக்கதாம். திருவள்ளுவரின் இருபத்தாறு மெய்ப்பொருட் கொள்கையும், அவர் உயர்வை விளக்கிக்காட்டும். திருவள்ளுவர் தமிழரின் கண்திறப்பிப்பு (தோரா. கி.மு. 2ஆம் நூ.) அந்தண ரென்போ ரறவோர் மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் (குறள். 46) இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81) சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள். 118) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (குறள். 133) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள்.134) அவிசொரிந் தாயிரம் வேட்டவி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள். 259) அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் (குறள். 543) ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (குறள். 560) உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து (குறள். 1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் (குறள். 1033) இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் (குறள். 1035) ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்(கு) இரவி னிழிவந்த தில் (குறள். 1066). (தி.த.ம.) தியூத்தானியத்திற்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கம் கத்தொலிகள் : கூ - கூவு - coo, கரை - cry, crow, ஊள் (வி.) - howl, ஊளை (பெ.) - howl, கனை - neigh, பிளிறு - blare, உரறு - roar, இமிர் - hum, கலி - call. விளிகள் : ஏ, ஏய் - hey, ஒ - O, oh, ஓய் - hoy, எல்ல - எல்லா - hallo. குறிப்பொலிகள் : ஆ (வருத்தம்) - ah, ஆகா (வியப்பு) - aha, ஏ (வினா) - ch, (உ) ம் (தயக்கம், வெறுப்பு) - hum, சீ - சே, சை - shaw, pshaw. சுட்டுச்சொற்கள் : ஆன் (அங்கு) - you, ஆண்டு - yond, அதோள் - thider, இதோள் - hider, எதோள் - whider, இதா, இதோ - lo. இளமைப்பெயர்கள் : பையன் - ME boi, E boy, சிறுக்கன் - சிக்கன் - OE cicen, E chicken, குழந்தை - OE cild, E child, குட்டி - kid, kiddy, குரு - கரு - LG gor (child), குருளை - ME gurle, E girl, சிட்டு - chit. முறைப்பெயர்கள் : அம்மை - அம்மா - mamma, ma, அப்பன் - அப்பா - papa, pa, தா (தந்தை) - da, தாதா - தாத்தா, தாதை - dada, daddy, dad, மகன் - Gael. magus (son), E. mac. அஃறிணை யுயிரிப் பெயர்கள் : உதள் (ஆட்டுக்கடா) - OHG widar, E wether, புல்லம் - bull, பூசை - pussy, கொத்தி - cat, ஏழகம் - clke, elk, மறி - mare, குருகு - crane, நாகம் - OEsnaca E snake, களவன் (நண்டு) - கடப்பான் - OE crabha, E crab, சுறவு - shark. முதன்மை வினைகள் : இன் - can, yean, உருள் - whirl, ஒழுகு - walk, கரை - carry, காண் (அறி) - kon, ken, con, குந்து - squat, கொல் - ME culle, kille, E kill, OE cuell, E quell, சப்பு - sup, sip, தின் - dine, துப்பு - spit, துருத்து - thrust, தொள் - till, நாடு - OE neod, E need, பொள் - பொளி - bore, பொறு - OE, OS, OHG ber, E bear, முன்(னு) - mun (to think), விக்கு - விக்கல் - hiccup. துணைவினைகள் : இரு - are (வடசெருமானியம்), arem - (இருக்கிறேன்), = இருத்தி (இருக்கின்றாய்). இரு - is (தென்செருமானியம்). பூ - be, பூத்தல் - தோன்றுதல், உண்டாதல், இருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று (நீதிநெறி. 9). புகு - பொகு - பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு. பொகு - போ - போத்து = புதிதாகத் தோன்றுங் கிளை. போத்து வெடித்தல் என்பது மரபு. மலரைத் குறிக்கும் பூ என்னும் சொல் வேறு. அது பொல் என்னும் வேரினின்று திரிந்தது; பொலிதற் பொருளது. பொலிதல் விளங்குதல். பூ - வ. bbu#. பதி - வதி - வசி - வ. வ - E was. இரிச்சார்டு மாரிசு (Richard Morris) தம் Historical Outlines of English Accidence என்னும் ஆங்கில இலக்கண வாராய்ச்சி நூலில், என்னும் ஆங்கிலத் துணை வினைச் சொல்லை வ (to dwell) என்னும் வடசொல்லினின்றே திரிப்பர். (பச். 299). பிள் - பெள். பெட்டல் விரும்புதல். பிள் - விள் - விரு - விரும் - விரும்பு. விள் - வெள் - வெண்டு. வெண்டுதல் விரும்புதல். வெள் - வேண் = விருப்பம். வேட்டல் விரும்புதல். விள் - will (விருப்பத் தீர்மானத்தைக் குறிக்கும் ஆங்கில எதிர்காலத் துணை வினைச்சொல்). மைந்து (வலிமை) - might. இயல்வைக் குறிக்கும் may என்னும் ஆங்கிலத் துணை வினைச்சொல்லை might என் பதினின்றே திரிப்பர். இயல்வு - possibility. Can என்னும் ஆங்கிலத் துணை வினைச்சொல்லை, அறிதற் பொருள் கொண்ட என்னும் வினைச்சொல்லினின்று திரிப்பர் இரிச்சார்டு மாரிசு (H.O.E.A., பக். 298). காணுதல் அறிதல். காட்சி அறிவு. காண் - con-can. பொதுச்சொற்கள் : எ.டு : இல் - inn, எல்லாம் - OE eal, all, ஏர் - AS ear (to plough), குரல் (தொண்டை) - ME craw, E crawe, தாங்கல் (குளம்) - tank, துளை (வாயில்) - door, பக்கு (பை) - bag, படி (உடம்பு) - body, பார் (கம்பி) - bar, பிறந்தை - birth, புதல் (அரும்பு) - ME boddle, budde, E bud, புருவம் - brow, புழுதி - mould, மூளை - marrow, மெது - OE Smoth, E smooth, விசுக்கு (விரைவுக்குறிப்பு) - whisk. முன்னொட்டுக்கள் (Prefixes): அல் - அன் - un, இல் (உ-ஆம் வேற்றுமையுருபு) - in, அண் (மேல்) - on, உம்பர் - up, over. பின்னொட்டுக்கள் : அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுணுகுதல், அஃகு - ok (dim. suf.). இட்டிது = சிறியது. இட்டு - et, ete, ette (dim. suf.). குன்னுதல் = குறுகுதல், சிறுத்தல், குன் - குன்னி (சிறுத்தது) - kin (dim. suf). ஏர்தல் எழுதல், ஏர் - cr (comp. adj. suf.). எட்டுதல் உயர்தல், எட்டு - cst (sup. adj. suf.). வினையீறுகள் : வான் - ஆன் - அன் - an (inf. suf.). கொண்டு - கிண்டு (கொச்சை) - இண்டு (கொச்சை) - inde (pres. part. suf.). (2) இலக்கண வொப்புமை புணர்ச்சி தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் (நன். 205) எ.டு. கண் + அழகன் = கண்ணழகன், சொல் + இனிமை = சொல்லினிமை. இந்நெறியீடு ஆங்கிலத்திற்கும் ஏற்கும். எ.டு. thin + er = thinner, sit + ing = sitting. இருமொழியிலும் ஒருமை பன்மையென்னும் ஈரெண்களே யுண்டு. தனிநிலையமைப்பு (Absolute Construction). எ.டு. தமிழ் - கூட்டம் முடிந்து, எல்லாரும் போய்விட்டனர். ஆங்கிலம் - The meeting having ended, all went away. 3. ஆங்கிலத்திற் சொன்மூல மின்மை Bag, broad, kill, spread முதலிய பல சொற்கு மூலந்தெரிய வில்லை யென்று, எருதந்துறை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றிற் கெல்லாம் மூலம் தமிழிலேயே உள்ளது. பக்கு(பை) - bag, பரந்த - broad, கொல் - kill, பரத்து - spread. அவ்வகர முதலியில், சில ஆங்கிலச் சொற்கட்கு மூலந் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. எ.டு. “bury ..... burg - st. Gme bergan shelter, protect,” இதுசொருந்தப் புகலல் என்னும் உத்தி பற்றியது. புதை - bury, புதையல் - burial, ஒ.நோ. விதை - விரை. “lo, int ..... combining OE la# int. ME to = loke, LOOK.” இதுவும் பொருந்தப் புகலலே. இதா - In, இதோ - lo. ஒ.நோ. மது - L. mel. ஆரிய மொழிகள் ஐரோப்பாவின் மேற்கினின்று கிழக்காகத் திரிந்த படிமுறைத் திரிபைக் காட்டும். சொற்பட்டி தமிழ் தியூத்தானியம் இலத்தீன் கிரேக்கம் கீழையாரியம் அல் அன் - அன் ந(ந்+அ) (எதிர்மறை முன்னொட்டு) இதோள் ஹிதர் கித்ர - அத்ர (இங்கு) இரு இ எ எ அ இரும்பு ஐரன் இரி - அய அயெண் இலக்கம் லைற்(று) லுக் லியூக்கோ ருச் (வெளிச்சம்) உகை-அகை அக mnfh(g) mnfh(g) அஜ் (செலுத்து) கணு க்னீ bfD(g) bfhD(g) ஜானு (முட்டு) கத்து கட் - - க்ருத் (வெட்டு) காண் கான்- ¡ndh(g) ¡ndh(g) ஜ்ஞா (அறி) க்னா-க்னோ -னோ கிழம் -(கம்) - bfbuh©(g) ஜரா குந்து குவாத் b[¤(d) - [¤(d) கும்(கூடு) - கும் ஸிம் ஸம் துளை தோர் - துர ¤th®(d) (வாயில்) துருத்து த்ரற்(று) த்ருடொ - ö¤(d) நாவி, நாவாய் - நாவி நெள நௌ பார் - பரெ - ப பிறங்கு பிரைற்(று) - - ¥u{(bh) பொறு bg®(b) bg®(fer) bg®(ph) g®(bh) பொர்த் மன் மெஅன் - - மநு முழுகு - bk®bfh(g) - மஜ்ஜ் முன்(னு) முன் - - மன் (கருது) மூளை மேரோ - - மஜ்ஜா மெது மூத் - - ம்ருது வலி,வலம் - வலி,வலர் - gy(b) விடலை வெலெ விதுல இதலொ வத்ஸ (மாட்டுக்கன்று) க.பேக்கு(b) நெப - - பிக்ஷ்(bh)தீ தீ - தீ (இ.வே.) - ஒளிர். தீதல் = எரிதல், கருகுதல். தீத்தல் = எரித்தல். கருக்குதல். க.சீ. தீ-தீய். தீய்தல் = தீதல். தீய்த்தல் = தீத்தல். தீ - தீவு - தீவம் = விளக்கு. இனி, தேய் - தீய் - தீ என்றுமாம். தேய் - தேயு = நெருப்பு (பிங்.). தேய் - தேய்வு - தேவு = 1. தெய்வம் (பிங்.). நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696 : 2). 2. தெய்வத் தன்மை. தேவு - தேவன் = கடவுள், அரசன், கணவன், தலைவன். தேவி = தெய்வ மகள், அரசி, தலைவி. தேய்வு - தெய்வு - தெய்வம். தெய்வ முணாவே மாமரம் புட்பறை (தொல். பொ. 18) ம. தெய்வம், தெய்யம், தெ. தேவுடு. பண்டை யுலகில் நெருப்பே தெய்வமாகவும் தெய்வ வடிவாகவுங் கொள்ளப் பெற்றது. ஒ.நோ. சுள் - சுர் - சுரன் = தேவன். குறிஞ்சி மக்கள் முருகனைச் சேயோன் (சிவந்தவன்) என்றது நெருப்பு வடிவம் பற்றியே. Gk theos, L deus. (வ.வ.185) தீமை தீயைப்போல் தீங்கு செய்யும் தன்மை தீமை என்றும், நீரைப் போல் நன்மை செய்யும் தன்மை நீர்மை என்றும், புல்லைப்போல் இழிந்த நிலை புன்மை என்றும் சொல்லப்படும். முதலாவது இனிய தன்மையைக் குறிக்க எழுந்த நீர்மை என்னும் சொல் இன்று நன்மை என்னும் பொதுப் பொருளையே குறிக்கின்றது. (சொல்.6) தீய் தீய் - தீ (d) இ.வே. தீய்தல் = எரிதல், விளங்குதல். தீய் - தீய்வு - தீவு - தீவம் = விளக்கு. (வ.வ.179) தீயார் ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (கொன்றை வேந்தன்) என்னும் ஔவையார் கூற்றில், ஈயார் என்பது ஈயாதவர் என்றும், தேனீக்கள் அல்லது தேனீயைப் போன்றவர் என்றும் தீயார் என்பது கொடியவர் என்றும், தீப்பந்தம் பிடித்தவர் என்றும் உவமை அணியோடு இரட்டுறல் அணியும் கொண்டிருத்தல் காண்க. எ.டு. நாலடியார் 10. தீவு தீவு - த்வீப (இ.வே.) தீர்தல் = நீங்குதல். தீர் - தீர்வு - தீவு = பெருநிலத்தினின்று நீங்கியிருக்கம் சிறுநிலம், ஒரு நிலத்தினின்று நீங்கியிருக்கும் இன்னொரு நிலம் ஒ.நோ. கோர்வை - கோவை. தீவு - தீவம் - வ. த்வீப. வடவர் த்வி + அப் என்று பகுத்து, இருபுறமும் நீராற் சூழப் பெற்றதென்று பொருட் காரணங் கூறுவர். நாற்புறமும் நீராற் சூழப் பெற்ற தீவிற்கு இவ்விலக்கணம் பொருந்தாமை காண்க. (வ.வ. 179). துச்சில் துஞ்சு + இல் = துச்சில் = ஒதுக்கிடம். புகு + இல் = புக்கில் = புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம். (தி.ம. 195). துணைவினைகள் (நிகழ்கால வினையெச்சத்தின் பின் வருவன) முடியும் என்பது வினைமுற்றுப் பெறுவதையும், இயலும் என்பது வினை நடத்தலையும், கூடும் என்பது வினைக்குரீய இடம் பொருளேவல் கூடி வருதலையும், ஒண்ணும் என்பது உளப் பொருத்தத்தையும், தகும் என்பது வினைத்தகுதியையும், வேண்டும் என்பது வினைக் கட்டாயத்தையும், மாட்டுவேன் என்பது வினை செய்வான் வலிமையையும், சிறப்பாக வுணர்த்தும். (சொல். 58). துந்தி துந்தி - துந்த, துந்தி உந்துதல் = முன்தள்ளுதல், உந்து - உந்தி = கொப்பூழ். உந்து - துந்து - துந்தி = முன்தள்ளிய வயிறு, கொப்பூர். துந்தி - தொந்தி = முன்தள்ளிய வயிறு. ம. தொத்தி. வடவர் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன் திரிபே. (வ.வ. 179) து(ப்பு) - து1 (இ.வே.) = வலியுறு. துப்பு = வலிமை. கெடலருந் துப்பின் (அகம். 105). துத்தல் = உண்ணுதல். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள். 12). உண்டவுடல் உரஞ்செய்யும். ஆதலால், உண்டற் கருத்தினின்று வலிமைக் கருத்துத் தோன்றியிருக்கலாம். து - துவ்வு. துவ்வுதல் = 1. நுகர்தல். துவ்வா நறவின் (பதிற்றுப் 60:12). 2. வலியுறுதல். தான்றுவ்வான் (குறள். 862). து - தூ = வலிமை. தூவெதிர்ந்து பெறாஅ (பதிற்றுப். 81இ34). (வ.வ. 180). துருத்தி ஆற்றிடைக் குறை, கொல்லன் துருத்திபோல முன் குவிந்தும் பின்விரிந்தும் இருப்பதால் அதைத் துருத்தி என்பர் புலவர். (சொல். 13). துருவு துருவு - த்ரு (இ.வே.) துள் - துரு - துருவு. E. through. OS thurh. துர - த்வர் = விரை, முடுகு. துரை - த்வரா = வேகம், விரைவு. (வ.வ.160). துரை துரை என்னும் தமிழ் அல்லது தெலுங்குச் சொல் நம் நாட்டில் தங்கும் மேனாட்டார்க்கு வரையறுக்கப்பட்டது. (த.தி.2) துல் (பொருந்தற் கருத்துவேர்) துல் - துல்லியம் = ஒப்பு. அவனுக்கு இவன் துல்லியம் (தத்துவப்.) அளவை. 3, உரை). 2. சரி. துல்லியமாய்ச் சொன்னான் (உ.வ.) 3. ஒப்பக் கையெழுத்து அரசரின் துல்லியஞ் சார்த்தின நீட்டு (நாஞ். வ.). துல் - துலம் = 1. ஒப்பு 2 இருபுறமும் ஒத்த நிறைகோல். 3. துலாநிறை. 4. கனம். துல் - துலா = 1. நிறைகோல். 2. ஏற்றம். 3. வண்டியின் ஏர்க்கால். 4. துலாக்கட்டை. 5. துலாவோரை. 6. தூண் மேலுள்ள போதிகை யின் கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு. வ. துலா. கைத்துலா = கையினால் ஒருவனே ஓலைப்பட்டையில் நீரிறைக்கும் சிறிய ஏற்றம். ஆளேறுந்துலா = பலர் குறுக்கு மரத்தில் ஏறிநின்று முன்னும் பின்னும்உலவ, கூந்தற் பனையடியிற் குடைந்த சாலில் ஒருவன் நீரிறைக்கும் பெரிய ஏற்றம். துலா - துலாம் = 1. நிறைகோல். 2. நாஞ்சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66). 3. துலாவோரை, (பிங்.). 4. துலா (ஐப்பசி) மாதம், 5. உத்தரக் கட்டை. செந்தனி மணித்துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா, றகரப். 30). 6. துலாக் கட்டை. 7. தூண் மேலுள்ள பொதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு. (பெருங். உஞ்சைக். 37 : 102. உரை). 8. ஏற்றம். 9. நூறு பலம் அல்லது ஐந்து வீசை கொண்ட நிறை. ம. துலாம். வ. துலா. துல் - துலை = 1. ஒப்பு. தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (குறள். 986). 2. நிறைகோல். ஞானமாத்துலை (ஞானா. 31:11), 3. துலையோரை. இடபமரிதுலை வான் கடகம் (சிலப். 3: 123, உரை. 4. துலைநிறைத் தானம் மருவுந் துலையாதி யாமே வருகொடை (சேதுபு. அனு மகுண். 8). 5. ஏற்றம். 6. நூறுபலங் கொண்ட நிறை. 7. களம், துலை - வ. துலா. துல் - துன். துன்னுதல் = 1. பொருந்துதல் 2. அணுகுதல். யாவருந் துன்னல் போகிய துணிவினோன் (புறம். 23). 3. செறிதல். துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் (நாலடி. 167). 4. அடைதல். துன்னருஞ் சீர் (நாலடி. 226). 5. மேவுதல். துன்னாமை வேண்டும் பிறன்கட்செயல் (குறள். 316). 6 தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவா ரிலையோ (அருட்பா, i, காட்சிப்பெரு 4). துன்னார் = பகைவர், தொல்லமருட் டுன்னாரைச் செற்றும் (கம்பரா. சரபங்க, 26). துன்னியார் = நண்பர். மன்னர் திருவு மகளிர் எழினலமுந் துன்னியார் துய்ப்பர் (நாலடி. 167). துன்னு = உடம்பிற் பொருந்திய தசை. துன்னல் = தையல். துன்னற் சிதாஅர் துவர நீக்கி (பொருந. 81) துன்னம் = தையல். இழைவலந்த பஃறுன்னத்து (புறம். 136). துன்னர் = தையற்காரர். (பிங்). துன்னகாரர் = தையற்காரர். துன்ன காரருந் தோலின் றுன்னரும் (சிலப். 5: 32). துன் - துன்று. துன்றுதல் = 1. பொருந்துதல். கொன்றை மதியமுங் கூவிள மத்தமுந் துன்றிய சென்னியர் (திருவாச. 17:10). 2. நெருங்குதல். துன்றுகரு நறுங்குஞ்சி (கம்பரா. குகப். 28). 3. கிட்டுதல். துன் - தும் - துமல் - துவல். துவலுதல் = நிறைதல். துவல் - துவன்று. துவன்றுதல் = 1. நெருங்குதல். வானம் வெளியறத் துவன்றி (கம்பரா. நாகபா. 97) 2. கூடியிருத்தல். ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி (தொல். பொ. 192) 3. குவிதல். அகன்கட் பாறைத் துவன்றி (மலைபடு. 276). துவன்று = நிறைவு. துவன்று நிறைவாகும் (தொல். 815). துல் - துறு. துறுதல் = 1. நெருங்குதல். துறு மலரவிழ் குழலாய் (சிலப். 7:42). 2. அடைதல். சோர் பொழுதணிநகர் துறுவர் (கம்பரா. திருவவ. 132). 3. குவிதல். 4. கூடுதல். க. துறுகு (g). துறு - துறுமு. துறுமுதல் = நெருங்கதல். நறுமலர் துறுமி (பெருங். இலாவாண. 15:6). துறுமு - துறும்பு. துறும்புதல் = நெருங்குதல். கொன்றையு நாகமுந் துறும்பு செஞ்சடை (தேவா. 370 : 5). துறு-துறை = 1. பலர் கூடுமிடம். 2. பலர் கூடிக்குளிக்கும் நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி. 1:65). 3. வண்ணார் கூடித் துவைக்கும் வண்ணான் துறை. துறைச் செல்லா ளூரவராடைகொண்டொலிக்கு நின் புலைத்தி (கலித். 72:13). 4. கடற்றுறை. துறைவளர் நாட்டொடு (சீவக. 1618). 5. துறைநகர். 6. கல்விக் கடலின் துறைபோன்ற கலை அல்லது அறிவியல். 7. கலைப் பிரிவு அல்லது கல்விப் பகுதி. 8. பகுதி. வீரராயவர் புரிவ தாண்மைத் துறையென லாயிற்றன்றே (கம்பரா.) 9. தமிழ்ப் பொருளிலக்கணத்தில் அகமும் புறமும் பற்றிய பொருட்கூறு. ஒண்டீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20). 10. பொருட்டுறை பற்றி வரும் செய்யுள் வகை. 11. மூவகைப் பாவினத்துள் ஒன்று. துறைபோதல் = 1. ஒரு கல்வித் துறையில் முழுத் தேர்ச்சி பெறுதல். 2. எடுத்த கருமத்தில் வெற்றி பெறுதல், எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ (கலித். 67). துறுகல் = 1. திரண்டகல், பாறை, வேழமிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழுஉம் (ஐங். 239) 2. குன்று. துறுகலேறி (ஐங். 210). துறு - துறுத்து (பி.வி.) துறுத்தல் = திணித்தல். வாயிலே சீரையைத் துறுத்து (ஈடு : 9 : 9 : 1). ம. துறு, துறுகு, தெ. துறுகு (g). துல் - துள் = துண் - துணர் = 1. கொத்து. 2. பூங்கொத்து. பொற்றுணர்த் தாமம் (கல்லா. 10). 3. குலை. சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம் (ஐங். 214). துணர்த்தல் = கொத்துடையதாதல். துணர்த்த பூந்தொடைய லான் (கம்பரா. வேள்வி. 53). துணர்தல் = திணிதல், திரளுதல், கொத்தாதல். இருடுணர்ந் தனைய குஞ்சியன் (குளா. குமார. 6) துணர் - துணரி = பூங்கொத்து. துணரி ஞாழல் நறும் போது நஞ்சூழ் குழற்பெய்து (திவ். பெரியதி. 9 : 3: 5). துண் = துணை = 1. ஒப்பு. துணை யற வறுத்துத் தூங்க நாற்றி (திருமுரு. 237). 2. கூட்டு. 3. புணர்ச்சி. முந்நாளல்லது துணையின்று கழியாது (தொல். பொ. 122). 4. கூட்டாயிருப்ப - வன் - வள் - து. நறுநுதலான் நன்மைத் துணை (நாலடி. 381). 5. இரட்டை. துணைமீன் காட்சியின் (கல்லா. 5:27). 6. இரண்டு. துணையடி. 7. உதவி புரிவோன். நானோர் துணைகாணேன் (திருவாச. 25:10). 8. உதவி. தங்கமா பொருளுந் தருமமுந் துணையா (கம்பரா. பால. நகரப். 6). 9. நண்பன். தந்துணைக் குரைத்து நிற்பார் (சீவக. 465). 10. கணவன் தாழ்துணை துறந்தோர் (சிலப். 4:13). 11. மனைவி. துணையொடு வதிந்த தாதுண் பறவை (அகம். 4). 12. உடன் பிறப்பு. துணையின்றிச் சேறல் நன்றோ (கம்பரா. கும்பகர்ண. 158). 13. அளவு. விருந்தின் றுணைத் துணை (குறள். 87). 14. வரை (இடைச்சொல்). தங்கரும முற்றந்துணை (நாலடி. 231). துணங்கை = முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக் கொண்டு, அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. பிணந்தின் வாயன் துணங்கை தூங்க (திருமுரு. 56). துண் - தூண் - திரண்ட கம்பம். சிற்றில் நற்றூண் பற்றி (புறம். 86). 2. பற்றுக்கோடு. துன்பந் துடைத் தூன்றுந் தூண் (குறள். 615) ம. தூண். பலபொருள்கள் அல்லது கூறுகள் ஒன்றாகப் பொருந்தும் போது அல்லது சேரும்போது திரட்சியுண்டாவதால், பொருந்தற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றிற்று. சேரே திரட்சி என்னுந் தொல்காப்பிய நூற்பாவை (346) நோக்குக. தூண் - தூணம் = 1. பெருந்தூண். பசும்பொற் றூணத்து (மணி. 1:48). 2. பற்றுக்கோடு. அம் பருமைப் பொருட் பின்னொட்டு. எ.டு. நிலை - நிலையம், மதி - மதியம் - முழுநிலா. தூணம் - வ. தூணா. தூண் - (தீண்) - தீண்டு. தீண்டுதல் = 1. தொடுதல். எங்கோலத் தீண்ட விளி (பு.வெ. 9:50) 2. பாம்பு கடித்தல். பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் (சீவக. 1273). 4. பற்றுதல். தீப்பிணி தீண்ட லரிது (குறள். 227). ம. தீண்டுக. தீண்டு - சீண்டு. சீண்டுதல் = ஒரு பெண்ணைத் தீண்டிக் குறும்பு செய்தல். தீண்டு - தீட்டு = 1. தாழ்ந்தவன் உயர்ந்தவனைத் தொடுவதால் ஏற்படும் தூய்மைக் குலைச்சல். 2. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் முதலியவற்றால் ஏற்படும் தூய்மைக்கேடு. தீண் - தீட்பு = பிறரைத் தொட்டுத் தூய்மை குலைக்கத் தக்க இழிவு. தீட்பு -தீழ்ப்பு = இழிவு. தீட்டு. துண் - துடு - துடவை = தோட்டம். தோன்றாத் துடவையி னிட்டனள் நீங்க (மணி. 13:10). 2. சோலை (சூடா.) 3. விளைநிலம். ஆத்தொழு வோடை துடவையுங் கிணறும் (திவ். பெரியாழ். 5:1:5). துள் - தொள் - தோள் = 1. திரண்ட மேற்கை. சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (பெரும்பாண். 145). 2. கை. தோளுற்றொர் தெய்வந் துணையாய் (சீவக. 10). குன்றன்ன குலவுத் தோளான், எழுவுறழ் திணிதோளான் என்னும் உவமைகளாலும்; தோள் கொட்டுதல், தோள் கொடுத்தல், தோள்மாற்றுதல் என்னும் வினைகளாலும்; தோட்கடகம், தோட்பட்டை என்னும் பெயர்களாலும்; தோள் என்பது மேற்கையே யென்றும், புயம் என்னும் வடசொல் ஓரளவு வழக்கூன்றவே தோள் என்னும் தென்சொல் ஒரு சிறிது வழக்கு வீழ்ந்த தென்றும், அறிந்து கொள்க. தொள் - தொழு = 1. மாட்டு மந்தை, 2. மாட்டுக் கொட்டில். ஏறு தொழூஉப் புகுத்தனர் (கலித். 101). 3. பட்டி மாடுகளை அடைக்கும் இடம். 4. காட்டு விலங்குகளை அடைக்குங் கூடு. தொழுவினிற் புலியனான் (கம்பரா. மூலபல. 181). தொழு - தொழுகு = மாட்டுத்தொழு (பிங்). தொழுதல் = கூடுதல். தொழு - தொழுதி = கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறம். 44). 2. திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன. (சீவக. 1187). தொழு - தொகு. ழ-க. போலித்திரிபு. ஒ.நோ : மழவு - மகவு, முழை - முகை. தொகுதல் = 1. கூடுதல். 2. நெருங்குதல். 3. அடுக்கி வருதல். உம்மை தொக்க எனாவென் கிளவியும் (தொல். சொல். 201). 4. ஒன்றாதல். 5. மொத்த மாதல். 6. சுருங்குதல். தொகுபீலி கோலின (கம்பரா. வனம்பு. 1). 7. ஒடுங்குதல். அசுத்த தத்துவங்கள் தொகும் முதலில் (கோயிற்பு. இரணிய வன்ம. 2). 8. மறைதல். மெய்யுருபு தொகாஅ இறுதியான (தொல். சொல். 105). தொழுதி - தொகுதி = 1. சேர்க்கை. வினைப்படுதொகுதியினும்மை வேண்டும் (தொல். சொல். 33). 2. வட்டம். தெய்வப் பெயர்த் தொகுதி (திவா.) வினையின் றொகுதி பொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6 : 6). 3. சவை. (பிங்.). 4. மந்தை. 5. மொத்த வெண். உம்மை யெண்ணு மெனவே னெண்ணும் - தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே (தொல். சொல். 289). 6. சொல்லின் அல்லது சொல்லுறுப்பின் மறைவு. தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (தொல். எழுத். 132, உரை). தொகு - தொகுப்பு = 1. கூட்டம். தொகுப்புறு சிறுவர் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 32). 2. தொகை. தொகுப்பு - தோப்பு = சோலை. (பிங்.) k., bj., f., து. தோப்பு. தொகு - தொகை = 1. சேர்க்கை. உயர்திணைத் தொகை வயின் (தொல். சொல். 90). 2. கூட்டம். உன்னடியவர் தொகை நடுவே (திருவாச. 44 : 1). 3. புலவர் கழகம். மதுரைத் தொகையாக்கினானும் (தேவா. 1179 : 11). 4. உயிரிகளின் திரள். புள்ளின் றொகை யொப்ப (பு. வெ. 6 : 20). 5. கொத்து. தொகைப் பிச்சம் (கம்பரா. எதிர் கோட். 7). 6. மொத்தம். 7. எண். ஏயினாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினும் தொகையின் றியலா (தொல். சொல். 292) 8. தொகுத்துக் கூறுகை தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே (தொல். 1597) 9. சொல்லும் சொல்லுறுப்பும் மறைகை. ஈற்று நின்றியலுந் தொகைவயிற் பிரிந்தே (தொல். சொல். 78). 10. அறுவகைத் தொகைநிலைத் தொடர். எல்லாத் தொகையு மொருசொன் னடைய (தொல். சொல். 420). 11. பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை. அது தொகை களினுங் கீழ்க்கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க (தொல். பொ. 5. உரை). தொள் - தொண் - தொண்ணை - பருமன் தொண்ணைத் தடி = பருந்தடி. தொள் - தொடு. தொடுதல் = 1. தீண்டுதல். தொடிற் சுடினல்லது (குறள். 1159). 2. பொருந்துதல். 3. பிடித்தல். தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார் (கந்தபு. வீரபத். 38). 4. எடுத்தல். பதுமுகன் சிலை தொட்டானே (சீவக. 1862). 5. செலுத்துதல். கடுங்கணைக டம்மைத் தொட்டனன் (கந்தபு. சூரபன்மன்வ. 191). 6. தொடங்குதல். அன்றுதொட்டனங்கனே யாயினான் (கம்பரா. தாடகை. 1). தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலுந் தெரியாது (பழமொழி). 7. உண்டாதல். பழிபாவமுந் தொடுமே (விநாயகபு. 77:35). 8. அடித்தல். 9. இயம் (பறை) இயக்குதல். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304). 10. உள்ளத்தில் தொடு தல், நினைத்தல். நின்பெரு முலை மூழ்கவென் னுளத்தினிற் றொடா முன் (கல்லா. 52:9). 11. தொட்டுச் சூளிடுதல். தொட்ட விடுத்தே னவனை (சீவக. 1876). 12. தொடுத்தல், செருப்பணிதல். பாதஞ் சேரத்தொடு நீடுசெருப்பு (பெரியபு. கண்ணப்ப. 62). 13. கட்டுதல். 14. மனைவிய ரல்லாரொடு கூடுதல். ம. தொடுக. து. துடுகு. தொடு - தொடுப்பு = 1. தொடர்ந்திருக்கை, தொடர்ச்சி, 2. கட்டுகை, கட்டு. 3. கூட்டுறவு. 4. தொடுக. 5. வைப்பாளன் அல்லது வைப்பாட்டி. 6. தொடக்கம். 7. பழக்கம். 8. கட்டுக்கதை. 9. குறளை. 10. செருப்பு. தொடு - தொடல் = தொடரி (சங்கிலி). தொடல் - தொடலி = தொடரி. தொடல் - தொடலை = 1. மாலை. தொடலைக் குறுந்தொடி (குறள். 1135). 2. மணிமேகலை. தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர் (புறம். 339). தொடு - தொடவு - தொடவல் = மாலை. தொடு - தொடை = 1. பூமாலை. (பிங்.). 2. முத்துமாலை. முத்துத் தொடை (பரிபா. 6 : 16). 3. பின்னுகை. தொடையுறு வற்கலை யாடை (கம்பரா. முதற்போ. 109). 4. கட்டு. 5. வில்லின் நாண். தொடையை நிரம்ப வாங்கி விடாத முன்பே (சீவக. 2320). யாழ் நரம்பு. 6. அம்பெய்கை. செந்தொடை பிழையா வன்க ணாடவர் (புறம். 3). 7. சந்து. வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள். 8. காலின் மேற்பகுதி. 9. மோனை யெதுகை முரணியைபளபெடை யென்னும் ஐவகைச் செய்யுள் தொடுப்பு. மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப (தொல். 1345) அளபெடை தலைப்பெய ஐந்து மாகும் ( 1346) 10. பாட்டு. 11. தொடர்ச்சி. தாபதர் தொடைமறை முழக்கும் (கல்லா. 39 : 10). 12. இடையறாமை. தொடையிழி யிறாலின் றேனும் (கம்பரா. நாட்டுப். 9). தொடு - தொடர். தொடர்தல் = 1. பின்பற்றுதல். அவரை ... அரக்கியர் தொடர்குவர் (கம்பரா. ஊர்தேடு. 26). 2. இடையறாது வருதல். தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி (பதிற்றுப். 27:2). 3. வித்தும் மரமும் போல ஒன்றனையொன்று இடையறாது மாறிமாறிப் பின் பற்றுதல் 4. வழக்குத் தொடர்தல். க. தொடர். தெ. தொடரு. தொடர் = 1. தொடர்ச்சி. 2. தொடரி (சங்கிலி). தொடர்ப்படு ஞமலியின் (புறம். 74), 3. கைகால் விலங்கு. தொடர் சங்கிலிகை (திவ். பெரியாழ். 1:7:1). 4. வரிசை. 5. சொற்றொடர். தழுவு தொடரடுக் கெனவீ ரேழே (நன். 152). 6. நட்பு. நல்லோர் தொடர்கை விடல் (குறள். 450). 7. உறவு. 8. கொடிவழி. k., க. தொடர். தொடர் - தொடர்ச்சி. தொடர் - தொடர்பு = 1. தொடர்ச்சி, 2. நட்பு. கேள் போற் பகைவர் தொடர்பு (குறள். 882). 3. உறவு. 4. இணைப்பு. 5. செய்யுள் (பிங்.). தொடர் - தொடரி = 1. மாழைவளையத் தொடர். 2. புலி தொடக்கி. 3. ஒருவகை முட்செடி. தொடு - தொடங்கு. தொடங்குதல் = துவங்குதல். ம. துடங்ஙுக, க. தொடங்(க்)கு, து. தொடகுறி (g). தொடங்கு - தொடக்கு. தொடக்குதல் = 1. கட்டுதல். நினைத் துன்பத்தாற் றொடக்கினேன் (சீவக. 579). 2. அகப்படுத்துதல். விளைபொருள் மங்கையர் முகத்தினும் ... சொல்லினுந் தொடக்கும் (கல்லா. 62 : 28). 3. பொருத்துதல் 4. சிக்கிக் கொள்ளுதல். சங்கந் துங்க விலைக்கதலிப் புதன்மீது தொடக்கி (பெரியபு. ஆனாய 4). 5. செருப்பணிதல். பாதுகை திருவடி தொடக்கி (விநாயகவு. 80: 278). தொடங்கு - துடங்கு. தொடக்கு - துடக்கு. தொடக்கு = 1. கட்டு. படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங் மகத. 2:13). 2. ஆதனைக் கட்டும் பாசம் தொடக்கெலா மறுத்தநற் சோதீ (திருவாச. 37:10). 3. பற்று. தொடக்கறுத்தோர் சுற்றமே (கம்பரா. சரபங். 27). 4. மாதவிடாய்த் தீட்டு. 5. குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343). க. தொடக்கு. தொடு-தொடுக்கு. தொடுக்குதல் = எளிதாக விலகுமாறு தொட்டுக் கொண்டிருத்தல். மரத்திற் கிளை தொடுக்கிக் கொண்டிருக்கிறது (உ.வ.). தொடுக்கு - தொசுக்கு = தகாப் புணர்ச்சி, வைப்பு. தொடு - தொடுசு = 1. தொடர்ச்சி. 2. கூத்திவைப்பு. தெ. தொடுக. தொடுக - தொடிக. துடக்கு - துயக்கு. துயக்குதல் = கட்டுதல். துயக்குமவ் வினையின் கழிவும் (தணிகைப்பு. நந்தியுப. 110). ம. துயக்குக. துயக்கு = 1. கட்டு. துயக்கறாத மயக்கிவை (தேவா. 260 : 10). 2. ஆசை. தொண்டையங் கனிவாய்ச் சீதை துயக்கினா லென்னைச் சுட்டாய் (கம்பரா. பொழிலிறுத். 40). தொள் - தொழு - தோழன் = கூட்டாளி, நண்பன். தோழம் - தோழமை = உடன்கூட்டு நட்பு. தொழு - தொடு - தொட்ட = பெரிய. க. தொட்ட. தொடு - தோடு = 1. திரட்சி. 2. திண்ணமான இலையாகிய ஓலை. வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 353). 3. ஓலைச்சுருள். 4. காதணி. வெளிவெண்டோட்டு (மணி. 3டு118). 5. விளாம்பழத்தின் ஓடு. விட்டதடா ஆசை விளாம்பழத் தோட்டோடே, (பழமொழி). 6. தொகுதி, தோடுகொள் வேலின் தோற்றம் போல (புறம். 35). தோடு - தோட்டம் = வளர்ப்புச் செடிகளின் தொகுதி. ம. தோட்டம். bj., f., து. தோட்ட. தோள் - தோய், தோய்தல் = 1. படுதல். கால்நிலந் தோயாக் கடவுளை (நாலடி. கட. வாழ்.). 2. தொடுதல் விண்டோயு மிளைகடந்து (பு. வெ. 6:16), 3.. செறிதல். 4. கலத்தல். தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது (கம்பரா. சரபங். 27). 5. அணைதல். நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் (குறள். 917). 6. பொருந்துதல். தாடோய் தடக்கை (புறம். 14). 7. உறைதல். தோயும் வெண்டயிர் (கம்பரா. நாட்டுப். 28). 8. ஒத்தல். விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558). 9. நட்டல். தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப்படுதல் (திரிகடு. 81). துறு - தொறு = 1. கூட்டம். படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து (கந்தபு. யுத்த. முதனாட். 15). 2. ஆமந்தை. தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474). 3. தொழு. 4. இடைக்குலம். நலத்தகு தொறுவினுள்ளேன் (சீவக. 477). தொறு - தொறுவு. தொறு - தொறுவன் = இடையன். தொறு - உம்மீறு பெற்றுப் பொருளிடங் காலம் ஒவ்வொன்றும் என்னும் பொருள்படவரும் இடைச்சொல். நவில்தொறும் நூல்நயம் போலும் (குறள். 783) தொறு - தோறு. காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச. 10:3). தொறு - தொற்று. தொற்றுதல் = 1. கை கால்களாற் பற்றுதல். 2. பற்றியேறுதல் அல்லது படர்தல். புரைநீர் தவந்தொற்று கொள்கொம்பெனுந் தெய்வமுளி (உபதேச. சிவபுண்ணிய. 93). 3. ஒட்டிக் கொள்ளுதல். தொற்று நோய் = ஒட்டிக் கொள்ளும் நோய். தொற்று - தொத்து. தொத்துதல் = 1. பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொ. திருத்தொண். 48). 2. ஒட்டுதல். உடுமீன் தொத்த புலி கனகக்கிரி வெயில் சுற்றிய தொத்தான் (கம்பரா. பிரமாத். 117). 3. பற்றியேறுதல். நரருமினித் தொத்துவர் (திருவாலவா. 29:1) தொற்றுநோய் - தொத்துநோய். தொத்து = 1. பற்று. சித்தந் தொத்தற (ஞானவா. காகு. 23). 2. தொடர்பு. தொத்தற விட்டிட (திருமந். 2245). 3. திரள். தொத்தொளி முத்துத் தாமம் (சீவக. 2653). 4. பூ இலைகாய் முதலியவற்றின் கொத்து. தொத்தீன் மலர்ப் பொழிற்றில்லை (திருக்கோ. 121). 5. அடிமை. 6. வைப்பாட்டி. தொத்து - தொத்தன் = அடிமையாள். தொத்துவான் = தொத்துநோய். தொத்துக் குட்டி = 1. உடன்பற்றித் திரிபவன். 2. குரங்குக் குட்டிபோல் தாயைப் பற்றிக் கொண்டிருக்கும் குட்டி அல்லது பிள்ளை. தொத்து - தொத்தாய் = சிறிய தாய். (சென்னை வழக்கு). தொத்து - தொத்தை - தத்தை = இலையைப் பற்றிக் கொண்டு தொங்கும் கிளி. இ. தோத்தா. தொத்து - தொந்து - தொந்தம் = 1. தொடர்பு. தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா. 4:4). 2. உறவு, உறவாடல், 3. தொடுப்பு. 4. புணர்ச்சி. 5. இரட்டை. வ. த்வந்த்வ. துறு - துற்று. துற்றுதல் = நெருங்குதல். மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற (தேவா. 83:1). க. துத்து. துற்று = கூட்டம் (பிங்.). தெ, துத்த. துற்று - துத்து - துது - துதை. துதைதல் = 1. செறிதல். தோடமை முழவின் துதைகுர லாக (அகம். 82). 2. மிகுதல். துதை - ததை. ததைதல் = நெருங்குதல். ததையிலை வாழை (ஐங். 460). துது - தொது - தொதி = பப்பரப்புளி. தொது - தோது = 1. தொடர்பு. அதற்கும் இதற்கும் என்ன தோது? (உ.வ.) 2. பொருத்தம். மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் தோதில்லை. (உ.வ.). 3. ஒப்பு. அவனுக்குந் தோது எவனுமில்லை. (உ.வ.). bj., க. தோது. தும் - திம் - திம்மை = 1. பருமன், 2. கண்டை (சரிகை) முதலியவற்றின் பந்து. திம் - திம்மன் = 1. தடித்தவன். 2. ஆண் குரங்கு. க. â«k., தெ. திம்மடு. திம்மலி = தடித்தவள் (யாழ்.). திம்மலி - திமிலி. திமி = பெருமீன். (திவா.). வ. திமி. திமி - திமிசு = தளத்தைக் கெட்டியாக்குங் கட்டை. தெ. திமிச. திமிதம் = 1. பேரொலி. 2. உறுதி (யா அக.). திமிர் = 1. மரத்துப்போகை. 2. உணர்ச்சியறும் நோய். 3. மனக் கொழுப்பு. ம. திமிர். தெ. திமிரி. திமில் = 1. திரண்ட எருதின் முரிப்பு. 2. திண்ணிய மீன் படகு. திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) திமில் - திமிலம் = 1. பேரொலி. திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில் (திருவாச. 29:4) 2. பெருமீன் வகை (பிங்). திமுதிமு வெனல் = மக்கள் திரளாக வந்து கூடுதற் குறிப்பு. திமுக்கு திமுக்கெனல் = தடித்த ஆள், சிறப்பாகப் பெண், நடந்து போதற் குறிப்பு. துல் - தில் - திர் - திரள். திரளுதல் = 1. கூடுதல். மக்கள் திரளு கிறார்கள். (உ.வ.). 2. மிகுதல். அவலுமிசையு நீர்த்திரள் பீண்டி (மதுரைக். 240). 3. இறுகுதல். பால் திரண்டுவிட்டது. 4. பருத்தல். தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி (நாலடி. 199) 5. வீங்குதல். ம. திரளுக. திரள = முழுதும். திரள ஒப்பில்லையாகில் ஒருவகை யாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1 : 1 : 2). திரளை = 1. கூட்டம். 2. கட்டி. சோறுவெண்டயிரினாற் றிரளை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2:1:7). 3. நூலுருண்டை. திரளை - திரணை = 1. திண்ணை. 2. எழுதக வேலை. 3. வைக் கோற்புரிக் கற்றை. 4. மாலைவகை. ஒட்டிய திரணை யோடு (சிலப். 22:43). 5. உருண்டை. திரட்சி = 1. கூட்டம். திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தை யிருத்திய (பு.வெ. 3:5, உரை). 2. உருண்டை வடிவம். 3. முத்து. திரட்டு = தொகுப்பு. எ.டு. பட்டினத்தார் பாடற் றிரட்டு. திரள் - திரடு = மேடு (நெல்லை வழக்கு). திரம் = 1. உரம். 2. வலிமை. 3. உறுதி. 4. நிலைபேறு. உலகைத் திரமென வுட்கொண்டு (தாயு. பராபர. 274). 5. மலை 6. பேரின்ப வீடு. 7. ஒரு தொழிற் பெயரீறு. திரம் - வ. திர. திரம் = திறம் = 1. உறுதி. 2. வலிமை. 3. நிலைபேறு. 4. கற்பு. தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் (சிலப். மங்கல. 27). 5. சமர்த்து. ‘c‹ âw¤ij¡ fh£L, gh®¡fyh«’ (c.t.); 6. கூட்டம். 7. ஆடு மாடு எருமை எவ்வெண்பது கூடின கூட்டம். 8. மிகுதி. 9. இயல்பு. ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன் (மணி. 4: 96). 10. வகை. 11. கூறுபாடு. நிற்றிறஞ் சிறக்க (புறம் 6). 12. சார்பு. 13. கிளைப் பண். குறைந்த நரம்பு திறமெனக் கொள்க (பிங். 6: 325) 14. செயல் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய (சிலப். 21:54). 15. கோலம். தவத்திறம் பூண்டு தருமங் கேட்டு (மணி. பதி. 93). 16. கொள்கை. சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும் (மணி. பதி. 88). 17. இடையாட்டம் (விஷயம்). பதைக்கின்ற மாதின் திறத்து (திவ். இயற். திருவிருத். 34). 18. செய்தி. அத்திறங் கேட்ட (காஞ்சிப்பு வாணீச. 27). 19. ஆம்புடை (உபாயம்). உய்திறமில்லை (கம்பரா. திருவவ. 18). 20. திருவம் (பாக்கியம்). திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை (கம்பரா. திருவவ. 104). 21. பக்கம் 22. படித்தரம். திறம் - திறன் = 1. உறுதி. 2. கூறுபாடு. திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய் (நாலடி, 158). 3. பக்கம். பெண்ணுரு வொருதிற னாகின்று (புறம். 1). க. தெற. திறன் - திறல் = 1. வலிமை. துன்னருந் திறல் (புறம். 3:8). 2. திடாரிக்கம். 3. வெற்றி. திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9:31), கொளு). 4. ஒளி. திறல் விடு திருமணி யிலங்கு மார்பின் (பதிற்றுப். 46 : 3). திறம் - திறவு = 1. உறுதி. திறவதிற் றீர்ந்த பொருள். (திரிகடு. 72). 2. செவ்வை. திறவதி னாடி (தொல். பொ 521). 3. தகுதி. 4. ஆம்புடை. திறக்க = திறமையாக (நாஞ். வ.). திறவு - (திறகு) - திறக்கு = கருமம். அவன் திறக்கிலே போகக் படாது. (யாழ்.). தில் - (திர்) - திரு = 1. திரண்ட செல்வம், செல்வம். (ஒ. நோ. வெறு - வெறுக்கை செல்வம். வெறுத்தல் செறிதல்). சீறிற் சிறுகுந் திரு (குறள் 568). 2. திருவம் (பாக்கியம்). நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் (குறள். 1072). 3. சிறப்பு. 4. அழகு. ஒளிகெழு திருமுகம் (மதுரைக். 448). 5. பொலிவு. (திருக்கோ. 114). 6. காந்தி. திரு என்று காந்தி (ஈடு, 3:5:10). 7. நல்வினை. சேர்ந்தெழு நங்கைமாரே திருநங்கைமார்கள் (சீவக. 2552). 8.தாலி. திருவொன்றுட்படப் பட்டைக் காறை (S. I. I. ii, 157). 9. ஒருவகைத் தலையணி. செந்திருவிற் கேற்கத் திருவும் பிறையுமிட்டு (கூளப்ப. 140). 10. கணியன். திரு ஒருவனுக்கும் கீழாள் இரண்டுக்கும் (S. I. I. ii, 294). 11. தெய்வத் தன்மை. திருச்சிற்றம்பலம், திருமூலர், திருமந்திரம், திருப்பணி. 12. திருமகள். நினைப்பானை நீங்குந் திரு (குறள். 519) 13. kfË® k., bj., க. திரு. வ. ச்ரீ (ஸ்ரீ). திருவன் = 1. செல்வன், 2. திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2:84). திருவாளன் = 1. செல்வன். 2. ஒரு மதிப்படைச் சொல் எ.டு. : திருவாளர் மாணிக்கவேல் செட்டியார் (காசிமேடு, சென்னை). 3. திருமால். ஒலி திரை நீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் (திவ். பெரியதி. 5:5:1). திருமகன் - திருமான் - வ. ஸ்ரீமான் - சீமான். தில் - திள் - திண் - திண்மை = 1. பருமன். 2. வலிமை சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் (குறள். 988). 3. செறிவு. மண்ணிற் றிண்மை வைத்தோன் (திருவாச. 3:26). 4. உறுதி. 5. உண்மை. 6. கலங்கா நிலைமை. கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் (குறள். 54). திண் - திண்ணம் = 1. வலிமை. 2. இறுக்கம். திண்ணமாத் தொளிர் செவ்விளநீர் (கம்பரா. எழுச்சி. 50). 3. தேற்றம். பரகதி திண்ண நண்ணுவர் (தேவா. 1111 : 10). திண்ணன் = வலியன். உரிமைப் பேருந் திண்ணனென்றியம்பு மென்ன (பெரியபு. கண்ண. 17). திண்ணிமை = மனவுறுதி. திண்ணிமையோடு மெல்லச் சார்த்தநின் (திருவாலவா. 29:17). திண்ணியன் = 1. வலியவன். 2. மனவுறுதியுள்ளவன். திண்ணிய ராகப் பெறின் (குறள். 666). திண் - திண்ணகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. தட்டார் மெருகிடுங் கருவி வகை. திண்ணகத்தாற் செய்யுந் தொழில்களை வல்ல பணித்தட்டார் (சிலப். 6: 136, உரை). திண்ணகம் - திண்ணக்கம் = நெஞ்சுரம், நெஞ்சழுத்தம். திண் - திண்ணை = 1. மேடு தேனயாம் பூம்பொழிற் றிண்ணை (சீவக. 1822). 2. வீட்டுத் திரணை. ஆய்மணிப் பவளத் திண்ணை (சீவக. 1126). திண் - திண்ணம் - திணம் = வலிமை. திணமணி மாடத்திரு விடைக் கழியில் (திருவிசை. சேந். திருவிடை. 5). திணம் - திணர். திணர்த்தல் = செறிதல். வண்டு திணர்த்த வயல் (திவ். திருப்பள்ளி. தனியன்). 2. கனமாகப் படிந்திருத்தல். திணர்த்த வண்டல்கண்மேல் (திவ். திருவாய். 6:1:5). திண் - திணி. திணிதல் = 1. செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறம். 2). 2. இறுகுதல். திணித்தல் = 1. செறிய உட்புகுத்துதல். சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4:4:5). 2. பதித்தல். பொன்றிணி மணிமான (கம்பரா. வனம்பு. 3). திணி - திணிகம் = செறிவு. இருளின் கருந்திணிம்பை (திவ். இயற். திருவிருத். 72). திணியன் = பயனற்ற தடியன். திண் - திணுரு - திணுங்கு. திணுங்குதல் = 1. செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2:1:7:பன்னீ.)இ 2. உறைதல். நெய்திணுங் கினாற்போல (திவ். திருமாலை). 2. வியா. பக். 15). திணுங்கு - திணுக்கம் 1. செறிவு. 2. கட்டி. திண் - (திண்ணை) - திணை = 1. கூட்டம். 2. வகுப்பு. 3. இலக்கணப் பொருள் வகுப்பு. உயர்திணை. அஃறிணை. ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (தொல். சொல். 1). 4. அகப் பொருளிலக் கண ஐந்நிலப் பகுப்புள் ஒன்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை 5. ஐந்நில மக்கள் காதலொழுக்கம். 6. அகப்பொருளின் எழுவகுப்புள் ஒன்று. கைக்கிளை, mன்பின்Iந்திணை,bபருந்திணை,7.புw¥bghUË‹ எழு வகுப்புள் ஒன்று. வட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண். திண் - திண்பு = 1. செறிவு. 2. இறுக்கம். 3. வலிமை. 4. உறுதி. க. திண்பு. திண்பு - திட்பு = 1. செறிவு. 2. இறுக்கம். 3. வலிமை. 4. உறுதி. திட்பு = திட்பம் = 1. செறிவு. 2. சொற்பொருள்களின் உறுதி. திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 3. வலிமை. உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திரு நாட். 97). 4. மனவுறுதி. வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள். 661). 5. தேற்றம். திண் - திண்டு = 1. பருமன். 2. சிறுமேடை. 3. அரை வட்டமான பஞ்சணை, திண்டருகு போட்டான் (விறலிவிடு. 176). ம. திண்டு, தெ. திண்டு (d). திண்டு - திண்டி = 1. பருமன். திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா. 1225 : 7). 2. தடித்தவள். 3 யானை, 4 அரசமரம். திண்டு - திட்டு = 1. மேட்டுநிலம். 2. மண் வெட்டிய இடத்தில் வெட்டாது விடப்பட்ட சிறுதுண்டு 3. ஆற்றிடைக் குறை புளினத் திட்டிற் கண்ணகன் வாரிக் கடல் பூத்த (கம்பரா. வானர. 8). 4. யானைகளைப் பிரித்து வைப்பதற்காகக் கட்டப்பட்ட இடைச்சுவர். 5. சிறு குன்று 6. நூறு குதிரை காலாள் முதலியன கொண்ட படைத் தொகைப் பிரிவு. எ.டு. ஒரு திட்டுக் குதிரை. k., க. திட்டு. திட்டு - திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை. சத்திரச் சாலையு மொத்த திட்டாணியும் (இராமநா. சுந். 4). திட்டு - திட்டம் = 1. நிலைபேறு. மயிலைக்கட் டிட்டங் கொண் டார் (தேவா. 1118:1). 2. தேற்றம் (நிச்சயம்). திட்டமாப் பரகதி சேர வேண்டிடில் (செல்வந்திப்பு. பிரம தேவ. 25). 3. உறுதியான ஏற்பாடு. அவர்தந் திராணிக்குத் தக்க திட்டஞ் செய்வதுவும் (பணவிடு. 26). 4. ஒரு வினையைச் செய்யும் வழிவகுப்பு. 5. ஒரு வினைக்குரிய வரவு செலவுக் கணக்கு. திட்டவட்டம் = முழுத் தேற்றமான வரையறை. திட்டு - திட்டை = 1. திண்ணை. (திவா.) 2. மேட்டு நிலம். மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514). 3. உரல் (பிங்.). k., திட்ட. திட்டம் - திடம் = 1. உறுதி. இன்றைக் கிருந்தாரை நாளைக் கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை (தாயு). 2. வலிமை. தாண்டுபரி தூண்டு திடசாலி (தனிப்பா.). 3. தேற்றம். வார்த்தை திடம்படக் கேட்டு (தேவா. 171 : 4). 4. திடாரிக்கம். பொறைதிட ஞானம் (காசிகண். தீர்த். 7). 5. நிலை தவறாமை. திடவிகம் பெரிவெளி (திவ். திருவாய். 1 : 1 : 7). 6. உண்மை. உயர்கதி பெறுவது திடனே (தேவா. 617 : 2). திடம் - வ. த்ருட. (drdha). திடம் - திடன் - திடல் = 1. மேட்டுநிலம். திடலிடைச் செய்த கோயில் (தேவா. 893 : 3). 2. பொட்டல் (திறந்த வெளிநிலம்). திடலடங்கச் செழுங்கழனி (தேவா. 562 : 3). திடல் - திடர் = 1. மேட்டு நிலம். திடர் விளங்கு கரைப் பொன்னி (தில். பெருமாள். 1 : 11). 2. குப்பைமேடு. (பிங்.) 3. சிறு தீவு. திடர் - திடறு. திடம் - திடாரி = அஞ்சா மனத்தான். திடாரி - திடாரிக்கம் = நெஞ்சுரம், அஞ்சா நெஞ்சம். துல் - தெல் - தெறு - தெற்று. தெற்றுதல் = 1. செறிதல். கற்றவர் தெற்றிவா (திவ். பெரியாழ். 1:5:8). 2. தொடுத்தல். ஆய்பூந் தட்டத் தகத்தோடு தெற்றிய தாம் (பெருங். வத்தவ. 7:26). 3. பின்னுதல். குடம்பை நூல் தெற்றி (கல்லா. கணபதி.). தெற்று - தெற்றி = 1. திண்ணை, இலங்குவளை மகளிர் தெற்றியாடும் (புறம். 53). 2. மாடம். (பிங்.). 3. மேட்டிடம். புற்றும் தெற்றியும் காடும் (S.I.I. iii, 410).. 4. தெற்றியம்பலம். கோயிலில் மேட்டிடமாக அமைந்த சித்திர கூடம். துல் (வளைதற் கருத்துவேர்) துல் - துலம் - துளம் - துளங்கு. துளங்குதுல் = சாய்தல், அசைதல், வருந்துதல். தெ. தொளங்கு, ம. துலகு. துளம் - துடம் - தடம் = வளைவு. தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். (தொல். சொல். 321) தடமருப் பெருமை (நற். 120) துல் - (துறு) - துறள் - துறடு = வளைந்த கத்தி அல்லது கருவி. க. தொறடு. துறடு - துறட்டு = 1. முண்மரவகை. 2. சிக்கல். 3. ஏதம் (அபாயம்). ஆங்கோர் துறட்டுண்டதனை யான் சொல்வேன் (விறலிவிடு. 150). துறடு - துறட்டி = 1. அங்குசம். 2. காய் பறிக்கும் துறட்டுக் கோல். 3. சிக்கு. 4. துறட்டிச் செடி. ப.க. தொறடு. வ. த்ரோட்டி. துறட்டுமுள் = 1. செடில், 2. துறட்டிச்செடி. துறட்டி - தோட்டி = 1. அங்குசம். உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் (குறள். 24). 2. கொக்கி. 3. பகைவர் பாதத்தைக் குத்த நிலத்திற் பதிக்கப்படும் கூரிய படைக்கருவி. தோட்டி முன் முதலியன பதித்த காவற்காடு (தொல். பொ. 65. உரை), க. தோட்டி (d), ம. தோட்டி. துல் - தில் - (திர்) - திரி. திரிதல் = 1. வளைதல். 2. திரும்புதல், திரும்பிவருதல், ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான் (கம்பரா. அங்கத. 10). 3. திசை திரும்புதல். நாராசத் திரிவிற் கொள்ளத்தருவது காந்தம் (மணி. 27 : 55-6). 4. சுற்றுதல். 5. சுழலுதல். வலந்திரியாப் பொங்கி (பு. வெ. 9 : 12). 6. அலைதல். வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி. 284.) 7. திருகுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 8. வேறுபடுதல். நாஅல் வேத நெறி திரியினும் (புறம். 2). 9. எழுத்து மாறுதல். தோன்றல் திரிதல் கெடுதல் (நன். 154). 10. சொல் மாறியமைதல். சொற்றிரி யினும் பொருள் திரியா வினைக்குறை (நன் 346). 11. மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பசிபா. 3:54). 12. கெடுதல். (திவா). க. திரி. தெ. திருகு. ம. திரிக்க. திரித்தல் = 1. சுழற்றுதல். எஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). 2. முறுக்குதல். கயிறு திரிக்கிறான் (உ.வ.). 3. திரும்பச் செய்தல். சென்று சென் றழியு மாவி திரிக்குமால் (கம்பரா. மாயாசனக. 23). 4. அலைவித்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1:10:2) 5. வேறுபடுத்துதல். அறிவு திரித்து (மணி. 23:39). துயவென் கிளவி அறிவின் திரிபே (தொல். 851). 6. திரிகையில் மா வாக்குதல். 7. பொருள் மாற்றுதல். 8. சொல் வடிவு மாற்றுதல். 9. மொழி பெயர்த்தல். 10. மடக்கின் முதலெழுத்தை மாற்றுதல். 11. சேதித்தல். அவனுருவு திரித்திட்டோன் (பரிபா. 5: 35). ம. திரிக்க. க. திருகிசு. திரி - திரிவு = 1. வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மென மொழிதி (பு. வெ. 12 : 15). 2. திரிபுக்காட்சி. ஐயமே திரிவே யென்னு மவையற (விநாயகபு. 2:46). க. திரிவு. திரிவு - திரிபு = 1. வேறுபாடு. குறிதிரி பறியாவறிவனை (கலித். 39 : 46). 2. (வீடுபேற்றிற்கு இடையூறாய் நிற்கும்) மயக்க அறிவு. 3. முதலெழுத்தல்லாத தொடர்கள் எழுத்தொத்து வரும் மடக்கு. திரிசொல் = 1. வேறுபட்ட சொல். 2. இயற்சொல்லினின்று வேறுபடுத்தி யமைக்கப்பட்ட சொல். இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று (தொல். 880). திரிகல் = மாவரைக்குங் கல். திரிக லொப் புடைத்தாய ... தொண்டகம் (கல்லா. 24 : 13). திரிமரம் = கூலம் அரைக்கும் மரம். களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண். 187). திரி - திரிகை = 1. திரிகல். 2.. குயவன் சக்கரம். குயவர் திரிகையென (கம்பரா. மூல பல. 165). 3. கூத்தின் சைகை வகை. (சிலப். பக். 81). திரி - திகிரி = 1. வட்டவடிவு (பிங்.) 2. குயவன் சக்கரம். அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரம். 76). 3. சக்கரப்படை. காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர 40). 4. கதிரவன். விசும்புடன் விளங்கும் விரை செலற்றிகிரி (அகம். 53). 5. வண்டிச்சக்கரம். 6. வண்டி. 7. தேர். சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7:17). 8. அரசாணை. தீதின்றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22:16). 9. உருளை, ஒரு தனித் திகிரி யுரவோன் (சிலப். 4:2). திர் - திரு - திருகு. திருகுதல் = செ. குன்றியவினை - 1. முறுகுதல். பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3). 2. மாறுபடுதல். திருகு சிந்தையைத் தீர்த்து (தேவா. 338 : 2). செ. குன்றாவினை - 1. முறுக்குதல். யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக (கம்பரா. பாசப். 58). 2. பின்னுதல். திருகு குழலுமை நங்கை (தேவா. 657 : 3) 3. திருகிப் பறித்தல் தெ. திருகு (g) க. திருகு (h). திருகுவலி = உடம்பை முறுக்கும் நோவு. திருகு - திருகி. தேங்காய் திருகி = ஒரு கருவி. திருகாணி = 1. முறுக்காணி (Screw) 2. அணியின் திருகு மரை. 3. ஒரு வகைக்காது மூக்கணி. க. திருகாணி (g). கொண்டைத் திருகு = கொண்டையி லணியும் ஓர் அணி. திருகு - திருக்கு - 1. முறுக்கு. 2. முடக்கம். மதிற்றிருக்காற் ....... பெயர் திரு முடங்கலென்றார் (திருவாலவா 47:14) 3. மாறுபாடு. பெருந்திருக் குளத்துளான் (திருவாலவா. 16:34). 4. வஞ்சனை. தித்திருக்கு = பெருவஞ்சனை. திரு - திரும். திருமல் = திரும்புதல். உண்பொருந்திரும்தின் (நன். 137). திரும் - திரும்பு. திரும்புதல் = 1. வளைதல். 2. கதிரவன் சாய்தல். 3. விலகுதல். 4. மாறுதல். 5. மீளுதல். 6. பிசகுதல். திரும்ப = மறுபடி, அடுத்து, மீள. திரும்பவும் = மறுபடியும், மேலும், மீண்டும் மீண்டும், திரும்பி = திரும்ப. திரும்பியும் = திரும்பவும் (உ.வ.). திரும்பு - திருப்பு, திருப்புதல் = 1. திரும்புவித்தல், மடக்குதல். “M£L kªijia¤ âU¥ãdh‹” (c.t.), 2. மாற்றுதல். கயவர் குணமட்டுந் திருப்ப வசமோ (குமரே. சத. 39). 3. முறுக்குதல். 4. நடை பெயர்த்தல். இது விவிலியத்தின் புதிய திருப்புதல், (கிறித்தவ வழக்கு). 5. மொழி பெயர்த்தல். திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (உ.வ.) 6. பாடத்தை மறுமுறை ஓதுதல். 7. கை பை கலம் முதலியவற்றை மேல் கீழாக அல்லது தலை கீழாகக் கவிழ்த்தல். 8. அடகு வைத்ததை மீட்டல். 9. வாங்கினதைத் திரும்பக் கொடுத்தல். 10. ஒருவர் அனுப்பினதை ஏற்றுக்கொள்ளாது திரும்புவித்தல். 11. பொத்தக ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல். 12. செய்வினையைச் செய்தவர் மேல் ஏவுதல். 13. நஞ்சை மாற்றுதல். க. திருகிசு. தெ. திப்பு. திருப்பு = ஒரு முறை போய் வருகை (trip). திருப்பு - திருப்பம் = 1. திரும்புகை. வடபத்திரசாயி முகத்திருப் பங்கொண்டு (குருபரம் 77). 2. திரும்புகோடி. 3. வாழ்க்கையில் அல்லது கதையில் நேரும் பெருமாற்றம் (Turning point). திரும்பு - திறம்பு. திறம்புதல் = மாறுபடுதல், மீறுதல், விலகுதல். திரு - தெரு - தெரும். தெரும்வரல் - தெருமரல் = 1. மனச்சுழற்சி. அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311). 2. அச்சம். (திவா.) தெரும் வருதல் - தெருமருதல் = மனஞ்சுழலுதல். வளை முன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு (கலித். 51). தில் - தெல் - தென். தென்னுதல் = (செ. குன்றிய வினை) - 1. கோணுதல். 2. சாய்தல். (செ. குன்றாவினை) - நெம்புதல். பல் தென்னிக்கொண்டிருக்கிறது என்பது உலக வழக்கு. தென் - தென்னை = பெரும்பாலும் கோணி வளரும் மரம். பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே (நன். 85) தென் - தென்கு - தெங்கு = 1. தென்னை. தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு (புறம். 29). 2. தெங்கந்தீவு. 3. போர்ச்சேவலின் திறங்குறிக்கும் குழூஉக் குறிகளுள் ஒன்று. தெங்குக்குத் தெங்குவெல்லும் எனக் கோழிகளின் நிறமறிந்து விடுதல் (பு. வெ. 12, வென்றிப். 6, உரை). க. தெங்கு. ம. தெங்ஙு. தெங்கு - தெங்கம். தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா. 846 : 3). தெங்கங்காய் - தேங்காய். தெங்கங்காய்போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் (யாப். வி. 95, பக். 373). தெ. தெங்(க்) காய. ம. தேங்ஙா. தென் - தென்று - தெண்டு. தெண்டுதல் = நெம்புதல், கிளப்புதல். தெண்டுதடி = நெம்புதடி. தெண்டு - தெண்டில் = தலையை நெம்புவதுபோல் மேலுங் கீழுமாக அலைக்கும் ஓணான். தென் - தெறு - தெற்று. தெற்றுதல் = 1. மாறுபடுதல். 2. முறுக்கிக்கொள்ளுதல். தெற்றுகொடி முல்லையொடு (தேவா. 622 : 6). 3. இடறுதல். தெற்றகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139). 4. தடைப்படுதல். இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி 158). 5. பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3). 6. மாற்றுதல். இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ. அலங். 8, உரை) 7. இகலுதல். மருட்டி யெங்குந் தெற்றிய விவனை (திருவாலவா. 30:23). 8. கொன்னுதல். 9. முட்டி தட்டுதல். 10. பின்னுதல். தெற்றல் = மாறுபாடுடையவன். தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன் (தேவா. 680 : 8). தெற்றுக்கால் = முட்டி தட்டுங்கால். தெற்றிக்காளை = பின்கால் முட்டிதட்டுங்காளை. தெற்றிக்காளை கழுத்தால் நெரிக்க (பறாளை. பள்ளு.) தெற்றுப்பல் = தென்னிக்கொண்டு அல்லது ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கும் பல். தெற்றுமாற்று = ஏமாற்று. தெற்றுவாய் = கொன்னைவாய். தென் = தென்னைமரம் இயற்கையாக வளர்ந்த தென்றிசை. குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையையும், தென் கண்டத்திலும் அதனையடுத்த தீவுகளிலும் இன்றும் தென்னை செழித்து வளர்தலையும், நோக்குக. தென் - தெற்கு = தென்றிசை. தென்மொழி = குமரிக்கண்டத்தின் தெற்கில் தோன்றிய தமிழ்மொழி. தென்புலம் = தமிழகத்தின் தெற்கிலிருந்த பாண்டி நாடு, தென்னவன் = தென்புலத்தை யாண்ட பாண்டியன். துல்3 (துளைத்தற் கருத்துவேர்) துல் - துன் = துளை, வளை, எலித்துன் = எலிவளை. துன்னெலி = வளைதோண்டும் எலி. துன் - துன்னு. துன்னுதல் - துளைத்தல், உழுதல். துன்னூசி = கலப்பைக் குத்தி. கொழுச் சென்ற வழி துன்னூசி இனிது செல்லுமாறு போல (தொல். சி. பாயி. நச். உரை). துன் - துன்னம் = உழவு. ஊசித்துளை (பிங்). தெ . துன்னு (dunnu), to Plough. தெ. துன்ன போத்து = உழவெருமை துள் - துன்னல் = துளை. ஒ. நோ. : E. tunnel. “tunnel = 1. Artificial Subterranean Passage through hill etc. or under river etc. Subterranean Passage dug by burrowing animal; (Mining) adit or level open at one end; main flue of chimney”. (ME, f. OF tonel & tonnelle, dim of tonne TUN) - எருதந்துறைச் சிற்றகர முதலி (C.O.D). J‹ - bjh‹ - bjh‹id = JisíŸsJ ngh‹w ïiy¡fy« “if¡nf Æiybfh©L bjh‹idí§ bfh©L” (jÅ¥gh.), 2. எச்சிற் கல்லை போன்ற இழிந்தோன். (w). bj., க. தொன்னெ (donne). ஒ.நோ. E. tun. “tun = 1 Large cask for wine, beer, etc., esp. formerly as measure of capacity (252 wine gallons); brewer’s fermenting - vat”. [OE tunne = OHG, ON tunna, f. Gaulish tunna. தொன்னைக்காது = தொன்னைபோல் மடங்கிய காது. துள் - துள - துளவை = தொளை. (யாழ். அக.). துள் - துளை. துளைதல் = 1. நீரில் விளையாடுதல் ஆனந்த வெள்ளத் துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து (தாயு. வம்பனேன். 2). 2. அழுந்திக் கிடத்தல். குடும்பக் கூத்துட்டுளைந்து (தாயு. சொல்லற். 7). துளைத்தல் = 1. துளையிடுதல். 2. ஊடுருவுதல் 3. துன்புறுத்தல், தொல்லை கொடுத்தல். ஓயாமல் அவனைத் துளைக்கிறான். (உ.வ.) 4. கிண்டிக் கேட்டல், கரும விளத்தம் வினவுதல். விழாவின் வரவு செலவுக் கணக்குப் பற்றி அவனைத் துளைத்துக் கொண்டிருக் கிறான். (உ.வ.). ம. Jis¡f., தெ. தொளுக்சு. துளை = 1. ஓட்டை, குழி, (பிங்.). 2. வாயில். 3. உட்டொளை. 4. உட்டொளையுள்ள மூங்கில் (பிங்.). 5. துளையுள்ளது போன்ற மயிர்ச் சுருட்சி. துளையார் கருமென்குழலாய்ச்சியர் (திவ். பெரியதி 3:8:8). 6 வயிரக் குற்றங்களுள் ஒன்று. துளைகரி விந்து காக பாதம் (சிலப். 14 : 180, உரை.) ம. துள, தெ. தொள, க. தொளெ, து. தொளு. துளைக்கருவி = துளையுள்ள இசைக்கருவி. துளைக்கை = தும்பிக்கை. (யாழ். அக.). துளைச்செவி = 1. செவியுட்புறம். 2. உட் செவியுள்ள உயிரிவகை. துளைப்பு 1. துளையிடுகை. 2. தொந்தரவு செய்கை. துளைப்பொன் = தூய்மைக்கு அடையாளமாகத் துளையிடப்பட்ட மாற்றுயர்ந்த தங்கம். (I.M.P.TJ. 138) (பெருங். இலாவாண. 6:63). துளையம் = நீரிற் குடைந்து விளையாடுகை. வெள்ள நீர்த் துளையமாடி குமர. பிர. முத்துக். பிள். 52). துளை - திளை - திளைத்தல் = 1. நீரில் முழுகுதல். 2. நீரிற் குடைந்து விளையாடுதல். 3. இன்புறுதல் 4. ஒரு வினை முயற்சியில், அமிழ்தல். துள் - துள - துழ. துழத்தல் = துளைத்துக் கிண்டுதல். துழாவுதல். தொடித்தோள் துடுப்பிற் றுழந்த வல்சியின் (புறம். 26). இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் (புறம். 188). க. தொளசு. துழ - துழதி = துன்பம். பிறவித் துழதி நீங்க (திவ். திருவாய். 2:7:7). துழ - துழவு. துழவுதல் = 1. கிண்டுதல், துழாவுதல். வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு. 181). 2. துழாவுதல்போற் சூழ வருதல், மாதிரந் துழவுங் கவலை நெஞ்சத்து (புறம். 174). துழவு - துழவை = துழாவியட்ட (கிண்டிச் சமைத்த) கூழ். அவையா வரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 2. சிறு படகைச் சுக்கான்போல் திருப்ப உதவும் மூங்கிற் பற்றை. (யாழ்ப்.). துழவை தொடுத்தல் = தண்டு வலித்தல். (w.). துழனி = கிண்டுவது போல் நோட்டஞ் செய்து கூறும் குற்றம். அவன் ஓயாமல் துழனி பேசுவான். (நெ.வ.). துழ - துழா. துழாதல் = துழவுதல், சூழ்ந்து வீசுதல். பனிவாடை துழாகின்றதே (திவ். இயற். திருவிருத். 35). துழாவாரம் = பலர் கூடிப் பிறர் செய்திகளைக் கிண்டிப் பேசும் வம்புப் பேச்சு. துழா - துழாவு. துழாவுதல் = 1. கையால் அளைதல். 2. கிளறுதல். 3. தண்டு வலித்தல். துளிபடத் துழாவு திண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60). 4. தடவுதல். துழாநெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36). 5. தடுமாறுதல். எண்ணந் துழாவு மிடத்து (திவ். இயற். திருவிருத். 28). 6. நாடுதல். வானு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145 : 43). 7. ஆராய்தல். 8. அளவளாவுதல். (பிங்.). துழ - துழை. துழைதல் = துழாவுதல், வள்ளத் துடுப்பால் துழாவிப் படகைச் செலுத்துதல். (நாஞ். வ.). துள் - துளு - துளுப்பு. துளுப்பிடுதல் = கலக்குதல். குன்றிற் கருங்கடல் துளுப்பிட் டாங்கு (சீவக. 1112). துளுப்பு - துடுப்பு = 1. சட்டுவம். இட்டார் தொடு கழலார் மூழை துடுப்பு (பு. வெ. 6 : 23). 2. அகப்பை, துடுப்பிற் றுழந்த வல்சி (புறம். 26). 3. துழாவுமனை. வலங்குகுலைக் காந்தள் (அகம். 108). 5. வலிப்புத்தண்டு. 6. பூங்கொத்து (யாழ். அக.). ம. துடுப்பு, க. துடுப்பு, தெ. துடுப்பு (d). துளு - துடு - துடுவை = நெய்த் துடுப்பு. துடுவையா னறுநெ யார்த்தி (திருவிளை. திருமணப் 184). துழை - துடை. துடைத்தல் = 1. தடவி நீக்குதல். வான்றுடைக்கும் வகைய போல (புறம். 38). 2. பெருக்கித் தள்ளுதல். தூளி ... ஆர்ப்பது துடைப்பது போன்ற (கம்பரா. கும்பகர்ண. 101). 3. கைவிடுதல். 4. அறுவாக்குதல். 5. நீக்குதல். தன்கேளிர் துன்பந் துடைத் தூன்றுந் தூண். (குறள். 615). 6. கொல்லுதல். துடைத்த காலன்றனை (ஞானவா. சுக்கி. 18) 7. அழித்தல். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி (திருவாச. 4:100). ம. துடெக்க, க. தொடெ, தெ. துடுத்சு. துடை - துடைப்பு - துடைப்பம் = விளக்குமாறு. உரோமநீள் வால்களற்றன துடைப்ப மொத்தலின் (உத்தரரா. இலங்கையழி. 31). துடைகாலன் = தன் குடும்பத்திற்குக் கேடுவிளைக்கும் ஆக்கங் கெட்டவன். துடைகாலி = தன் குடும்பத்திற்குக் கேடுவிளைக்கும் ஆக்கங் கெட்டவன். துடைகாலி = தன் பிறந்தகத்திற்கு அல்லது புகுந்தகத்திற்குக் கேடுவிளைக்கும் ஆக்கங் கெட்டவள். துழவு - துடவு = ஒரு முகத்தலளவு. ஒரு துடவு நெய்யும் (T.A.S. ii. 86). துடவு - தடவு. தடவுதல் = 1. துழாவுதல்போற் கையால் தேய்த்தல், பூசுதல், தலைக்கு எண்ணெய் தடவு. (உ.வ.). 2. வருடுதல். தந்நெஞ்சந் தாமே தடவாரோ தானவர்கள் (கம்பரா. மாயாசனக. 80). 3. தகட்டுப் பணிகாரஞ் செய்தல் (யாழ்ப்). 4. படியால் தலைதட்டி யளத்தல்.தலைதடவ மூன்றுபடி கொடுத்தாள். (உ.வ.). 5. யாழ் போன்ற நரப்புக் கருவியை இயக்குதல். 6. இருட்டிற் கைகால் முதலியவற்றால் துழாவுதல். காலினாற் றடவிச் சென்று (பெரியபு. இளையான் குடி. 18). 7. திருகுதல். 8. இருட்டில் உரிமை யல்லா தவளைப் புணர்தல். 9. தேடுதல். பிலந்தடவி (கம்பரா. நட்புக்கோ. 53). 10. தடுமாறுதல். 11. குடிகாரன்போல் தள்ளாடுதல். களிப்பட்டா னிலையேபோற் றடவுபு (கலித். 101). 12. பன்னாங்குழி விளையாட்டிற் குழியைத் தடவிக் காயெடுத்தல். 13. குருடன் எழும்ப லெழுத்தைக் கையாலறிதல். 14. பயிற்சிக் குறைவால் அல்லது பார்வைக் குறைவால் கைவைத்துப் படித்தல். 15. முட்டுப் படுதல். ம. தடவுக, தெ. தடவு. துல் - துர் - துர. துரத்தல் = 1. துளைத்தல். (நாஞ். வ). 2. உட்செலுத்துதல். துரப்பமை யாணி (பொருந. 10). துர - துரவு = 1. பாசனத்திற்கு உதவும் பெருங்கிணறு. துரவுகிணறு இழித்தப் பெறுவதாகவும் n2. மணற்கேணி. 3. துருவியாராயும் வேவு. துப்புத் துரவு. (இணைமொழி). ம. துரவு, தெ. தொருவு (பெருங் கிணறு). துர - துரப்பு = 1. மலையிற் குடையப்பட்ட பாதை. (நாஞ். வ.). 2. உள் முடுக்குகை. துரப்பமை யாணி (பொருந. 10). துரப்புதல் = துருவித் தேடுதல், தேடுதல், எனதொரு வாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவேனே (தனிப்பா. i, 181:3) துரப்பு - துரப்பணம் = துளையிடகருவி. ம. துரப்பணம். துரப்பு - துரப்பை = துழாவித் தூர்க்கும் வார்கோல். (நாஞ். வ.). துர - துரக்கு - திரக்கு. திரக்குதல் = தேடுதல். ஊரெங்குந் திரக்கியும் திருட்டுப்பயல் அகப்படவில்லை. (நாஞ். வ.). துர - துற. துறத்தல் = துளைத்தல், துளைத்து உள்ளிருப்பதை வெளிப்படுத்துதல். துற - துறவு 1. மருமம், மறைபொருள். உறவு கொண்டவரவர் துறவு கண்டேன் (சீதக். 41). 2. வாய்ப்பான நிலை. சோடாய் மரத்திற் புறவிரண்டிருந்திடத் துறவு கண்டே வேடுவன் (குமரே. சத. 85). 3. வெளியிடம். துற - துறவை = 1. வெளியிடம். 2. வெளிப்படை யானது. துற - துறப்பு = 1. துளைத்துத் திறத்தல். 2. திறக்கும் திறவுகோல். 3. திறக்கப்படும் பூட்டு. (பிங்.). துறப்புக் குச்சு = திறவுகோல். துரப்பணம் - துறப்பணம். துற - திற. திறத்தல் 1. கதவு திறத்தல். அறவையாயின் நினதெனத் திறத்தல். (புறம். 44). 2. பூட்டைத் திறத்தல். 3. சுவர் நடுவே யிடித்து வழியமைத்தல். 4. வானத்தை மூடியிருந்த முகில் நீங்குதல். 5. துன்பம் நீங்க வழியுண்டாதல். வாளால் வழிதிறந்தான் பணம் என்பது ஒரு பழங்காசு (Pudu. Insc. 767). 6. குடை, பொத்தகம், ஆடை முதலியவற்றை விரித்தல். 7. திரையை நீக்குதல். 8. மண்டை வெடித்தல் அல்லது பிளத்தல். தடியடியால் தலை திறந்து விட்டது. (உ.வ.). 9. மனத்திலுள்ள மருமத்தை வெளிப்படுத்துதல். 10. துளைத்தல். ம. துறக்க, தெ. தொ, க. தெறெ. திறந்த மடம் = நாற்புறமும் அடைப்பில்லாக் கூடம். திறந்தமனம் = மறைவாக உள்ளொன்றும் இல்லாத உள்ளம். திறந்தவெளி = கட்டிடம் மரம் குன்று முதலியன இல்லாத வெட்டவெளி. திற - திறப்பு = 1. பிளப்பு. மண்டிறப் பெய்த வீழ்ந்தான் (கம்பரா. கும்பக. 195). 2. திறவுகோல். (ahœ¥.), 3. வெளியிடம். க. தெறப்பு, தெ. தெரப்பி. துள் = துளை. துன்னுதல் = துளை போன்ற வாய்க்குட் செலுத்துதல், உண்ணுதல். ஒ.நோ. உள் - உண். இவ்வினை (துன்) இன்று வழக்கற்றது. துன் - துற்ற. துற்றுதல் = 1. உண்ணுதல். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி (அகம். 36). 2. கவ்வுதல். இகலன்வாய்த் துற்றிய தோற்றம். (களவழி. 28). க. துத்து. துற்று = உணவு. பற்றின்று துற்றின்று (பு. வெ. 10:4). 2. கவளம். முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190). துற்றர் = உண்பவர். விரைந்தால முண்ணுந் துற்றரை தேவா, 204:9). துற்றவை - நுகர் பொருள். துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை (திருவாச. 3:137). துற்றி = உணவு, உண்பவை. (திவா.). துன் - தின். தின்னுதல் = 1. உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின் (புறம். 150). 2. சிற்றுண்டி யருந்துதல் 3. மெல்லுதல். 4. மிகுதியாய் உண்ணுதல். 5. அரித்தல். ஏட்டுச் சுவடியைக் கறையான் தின்றுவிட்டது. (உ.வ.) 6. வருந்துதல், பிணிதன்னைத் தின்னுங்கால் (திரிகடு. 88). கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காண லுற்று (குறள். 1244) 7. சொறிவெடுத்தல். தின்றவிடஞ் சொறிந்தாற் போல (திவ் திருவாய். 4 : 8 : 9). 8. பிறர் பொருளை நுகர்தல். என் சொத்தை யெல்லாந் தின்றுவிட்டான். (உ.வ.) 9. அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6). 10. வெட்டுதல். கோணந்தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592). 11. அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் (திரிகடு. 95) 12. பெறுதல். கானகம் போய்க் குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4 : 1 : 2). நன்றாய் அடி தின்றான் என்பது உலக வழக்கு. ம. தின்னுக, க. தின், தினு. தின்னு; தெ. தினு, கோத். தின், துட. தின். தின் - தின்றி = தின்பண்டம், உணவு (திவா.). க. திண்டி. தின்றிப் போத்து = பேருண்டியான். க. திண்டிப்போத்த. தின்னி = அடிக்கடி யுண்பவன், பேருணவினன் தின் - தீன் = உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன. 28). ம. தீன். தீன் - தீனி = 1. சிற்றுண்டி. 2. விலங்குணவு. 3. இன்சுவை யுண்டி. தீனியிலாசை தெவிட்டாது தேவர்க்கும் (திருமந்.). ம. தீன். f., து. தீனி. தின் - திற்று - தீற்ற. தீற்றுதல் = 1. ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343). 2. சுண்ணம் சுதை முதலியவற்றாற் சுவரைப் பூசுதல். 3. நிற மூட்டுதல். வெண்மை தீற்றிய ... மாளிகை (கம்பரா. நகரப். 27). 4. சாம்பல் முதலியவற்றால் பல்விளக்குதல். துல் = துள் - துண்பு - தும்பு = உட்டுளை, துளையுள்ள உறுப்பு, உறிஞ்சி. தும்பு - தும்பா = 1. உட்டுளையுள்ள சுரைக் குடுக்கை. 2. குடுக்கைக் கலம். 3. குடிகலவகை. தும்பா - வ. தும்ப. தும்பு - தும்பாலை = சுரைக்காய், சுரைக்குடுக்கை. தும்பு - தும்பி = 1. சுரை. (பிங்). கமுகு மாத் தும்பி (சைவச. பொது. 277). 2. குடிகல வகை. தும்பி - வ. தும்பீ. 3. தேனுறிஞ்சும் உறப்புள்ள வண்டு. (பிங்.). துவைத்தெழு தும்பி (அகம். 317). ம. J«ã, f., து. தும்பி. தும்பிப் பதக்கம் = வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட பதக்கம். தும்பிப் பதக்க விலை சொற்பமோ (விறலிவிடு. 698). 4. உட்டுளையுள்ளதும் கைபோல் உதவுவதுமான நீண்ட மூக்கையுடைய யானை. (பிங்.). தும்பியை யரிதொலைத்தென்ன (கம்பரா. வாலிவதை. 51). தும்பிக்கை = யானைக்கை, துளையுள்ள கை. தும்பிமா = வண்டு துளைத்த மாம்பழம். தும்பு - துப்பு = 1. துருவியாராய்தல். 2. உளவு 3. உளவடையாளம். f., து. துப்பு (Tubbu). தும்பு - தூம்பு = 1. உட்டுளை. தூம்புடைத் தடக்கை (புறம். 19). 2. உட்டுளைப் பொருள். (பிங்.). 3. மதகு. குளந் தூம்பு விட்டு (சீவக. 2760). 4. மூங்கில். (திவா.) 5. மூங்கிற் குழாய். தூம்பகம் பழுநிய தீம்பிழி மாந்தி (பதிற்றுப். 81 : 21). 6. மூங்கிலால் ஆகிய இசைக்கருவி. கழைவளர் தூம்பின் கண்ணிட மிளிர (மலைபடு. 533). 7. மரக்கால். 8. இடுக்குவழி. (யாழ். அக.). 9. மனைவாயில். 10. வாய்க்கால். (பிங்.) 11. சாய்கடை. சுருங்கைத் தூம்பின் மனை (மணி. 28:5). 12. தோற்கூனை. 13. மேனிலையிலிருந்து மழைநீர் விழுங்குழாய். k., க. தூமு. தூம்புக்கை = தும்பிக்கை (உ.வ.). தூம்புவாய் = சாய்கடை (திவா.). தூம்பு - தூம் = 1. முகத்தலளவை வகை. எ.டு. குப்பத்தூம், தேவதூம் (W). 2. ஒரு நிறை. தூம்பு - ஒ.நோ. L. tubus, E. tube. தூம்பு - தூம்பல் = சுரை. (மலை.). தூம்பு - தூம்பா. தூம்பா மடை = சாய்கடை (நெ.வ.). தும்பு - தொம்பு - தொம்பை = மூங்கிலா லான நெற்குதிர். அழ கான ரம்பை, அரிசி கொட்டுந் தொம்பை (உ.வ.). க. தொம்பெ. தொம்பை - தொப்பை = 1. தொந்தி. தொப்பை யொரு பெரு வயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே. (தக்கயாகப். 229). 2. கொப்புளம். (யா.). தொப்பை (வயிறு) - தெ. தொப்ப (dobba). துள் - துய். துய்த்தல் = 1. உண்ணுதல் (துளை போன்ற வாய்க்குட் செலுத்துதல்). ஒ.நோ: துல் - துன் - தின். புதுப்பூத் துய்த்த வாய (அகம். 15). 2. புலன்களால் நுகர்தல். கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள். 1005). 3. இன்ப துன்பம் நுகர்தல். தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118). துய் = உணவு. துய்தா னுறும் வாயினை (கந்தபு. தாரக. 159). துய் - து. துத்தல் = 1. உண்ணுதல். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள். 12. நுகர்தல்.). து = 1. உணவு. (இலக். அக.). 2. நுகர்வு. (யாழ். அக.). து - துப்பு = 1. உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள். 12). 2. நுகர்ச்சி. துப்புமிழ்ந் தல மருங் காமவல்லி (சீவக. 197). 3. நுகர்ச்சிப் பொருள், வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 4. வலிமை. கெடலருந் துப்பின் (அகம். 105). 5. திறமை. ஆழ்கடலைக் கடைந்த துப்பனே (திவ். திருவாய். 4:7:5). து - துவ்வு. துவ்வுதல் = 1. உண்ணுதல். 2. நுகர்தல். (திவா.). துவ்வா நறவின் சாயினத் தானே (பதிற்றுப். 60 : 12). 3. வலியுறுதல். ஆன்ற துணையிலன் தான்றுவ் வான் (குறள். 862). துவ்வு = 1. உணவு (யாழ். அக.). 2. ஐம்பொறி நுகர்ச்சி, (சூடா.) 3. வினைப்பயன் நுகர்ச்சி. (யாழ். அக.). துவ்வு - துவ்வை = பருகுதற் குரியது. துவ்வாமை = 1. உண்ணாமை. 2. நுகராமை. துவ்வாமை வந்தக் கடை (கலித். 22). 3. வறமை. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் (குறள். 94). 4. வெறுப்பு. துள் - துன் - தூண் - தூணி = 1. அம்புக் கூடு. தூணி - வ. தூண. 2. நான் மரக்கால். கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று (நாலடி. 387). தூணி - வ. தூணா. துள் - தொள் - தொள்கு = பள்ளம். (W). தொள் - தொள்ளல் = துளை. (உ.வ.). தொள் - தொள்ளை = 1. துளை. தொள்ளைப் புலாற்பை (திருப்பு. 289). 2. குழி. தொள்ளை மன்றத் தாங்கண் (புறம். 333). 3. துளையுடைப் பொருள். (யாழ். அக.). 4. மரக்கலம் (திவா.). 5. மரக்கால். (தைலவ. தைல 135 : 17). 6. குற்றம். தொள்ளை யுணர்வின் னவர்கள் சொல்லின் (சீவக. 496). 7. அறியாமை. தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன் (கூர்மபு. தக்கன்வே. 6). ம. தொள்ள, க. தொள்ளெ. தொள்ளைக்காது = 1. துளையிட்ட காது. 2. பெருந் துளைக்காது. 3. அணி நீங்கிய துளைக்காது. தொள்ளுதல் = 1. துளைத்தல். (திவா.) செந்நீத் தொட்ட கருந்துளைக் குழலின் (பெரும்பாண். 179). 2. நெகிழ்தல் (W). தொள் - தொள்கு. தொள்கல் = துளைத்தல். (பிங்). தொள்ளை - தொளை. தொளைத்தல் = 1. துளையிடுதல். மணித் தோளையுந் தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை 123). 2. தொந்தரவு செய்தல். (உ.வ.). 3. புலனம் (விஷயம்) தெரிய ஆழம் பார்த்தல். (உ.வ.). தொள் = தொழு = சிறு குற்றவாளிகட்குத் தண்டனையாகக் கால்களை மாட்டி வைக்கும் குட்டை யென்னும் மரச்சட்டம். தொளை = 1. துளை. தொளைகொடாழ் தடக்கை (கம்பரா. சித்திர. 29). 2. மூங்கில். (பிங்.). தொள் - தொழு = 1. தொழில். 2. பயிர்த்தொழில். தொழு - தொழுவன் = 1. தொழிலாளி. 2. பயிரிடுவோன். தொழுவர் = 1. தொழில் செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89). 2. உழவர். நெல்லரி தொழுவர் (புறம். 209). தொழு - தொழில் = 1. செயல். பிறிது தொழி லறியாவாகலின் (புறம். 14). 2. உழவு. கைத்தொழில், வரைவு, வாணிகம், கல்வி, கம்மியம் என்னும் அறு தொழில்களுள் ஒன்று. (திவா.) 3. படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இறைவன் முத்தொழில் களுள் ஒன்று. தோற்றுவித்தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் (சி.சி. 1:33). 4. அலுவல். 5. தொழில்திறம். 6. வேலை 7. ஏவல். தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரைக். 72). 8. வினைச்சொல். பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப (தொல். எழுத். 132). உலகில் முதன் முதல் தோன்றிய விளைப்பு அல்லது உண்டாச்சுத் தொழில், நிலத்தைத் தோண்டி அல்லது கொத்தி அல்லது உழுது வித்திய பயிர்த்தொழிலாதலின், தோண்டுதலைக் குறிக்கும் தொள் என்னும் மூலத்தினின்று திரிந்த தொழில் என்னும் பெயர்ச்சொல், முதற்கண் உழவுத்தொழிலையும் பின்னர்ப் பிறதொழிற் பொதுவையும் குறித்தது. தொள் என்னும் தென் சொல்லொடு till என்னும் ஆங்கிலச் சொல்லை ஒப்புநோக்க. E. till - to prepare and use soil for crops. tiller = ploughman, tillage = ploughing. தொள் - தொய். தொய்தல் = 1. உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு. 122). 2. வினைசெய்தல். தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் (புறம். 214). தொள் - தொண்டு = 1. துளை. 2. ஒன்பது, தொண்டு படு திவவின் (மலைபடு. 21). 3. ஒடுக்கவழி. (உ.வ.). 4. உருவாஞ் சுருக்கு (அக. நி.). ம. தொண்டு. மாந்தன் உடம்பில் ஒன்பான் துளைகள் இருப்பதால், துளையின் பெயர் அதன் தொகைக் காயிற்று. தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ் (ஆசிரியமாலை). தொண்டு + பத்து = தொண்பது - ஒண்பது - ஒண்பது. தொண்டு = 9. தொண்பது = 90. தொண்டு + நூறு = தொண்நூறு (900). தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் (9000). தொண்டு என்னும் முதலாம் இடத்து எண்ணுப் பெயர் வழக்கு வீழவே, அதற்கு மேற்பட்ட இடத்து எண்ணுப் பெயர்களெல்லாம் ஒவ்வோரிடம் முறையே தாழ்ந்துவிட்டன என அறிக. தொண்டுதலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 100) என ஒரே தொல்காப்பிய நூற்பாவில், பண்டைப் பெயரும் பின்றைப் பெயரும் வந்திருத்தல் காண்க. தொண்டு - தொண்டி = துளை. தெ. தொண்டி. தொண்டு - தொண்டலம் = 1. நீண்ட துளையுள்ள யானைத் துதிக்கை. சூர்மக னுந்து தொண்டலம் பற்றி (கந்தபு. அமரர்சி. 83). 2. யானைத் துதிக்கை போன்ற கம்மாலை இறைவைக் கூனைத் தோல் வால். தொண்டலக்குழி = இறைவைக் கூனைநீர் வால் வழியாக விழும் பள்ளம். தொண்டலம் - ப. க. தொண்டில் = யானைக்கை. வ. சுண்டா (cunda). தொண்டு - தொண்டை = 1. மிடறு (பிங்); throat, gullet. 2. குரல்வளை; windpipe, larynx. 3. குரல்; voice, singing voice. அவனுக்கு நல்ல தொண்டை, கந்தனுக்குக் கீச்சுத் தொண்டை (உ.வ.). 4. யானைத் துதிக்கை. (பிங்.). கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள் (திருப்போ. சந். அலங்கா. 18). ம. தொண்ட, து. தொண்டெ. தொள் - தொட்டி = 1. நீர்த்தாழி. 2. பூஞ்செடிக்கலம். 3. நீர்த் தொட்டி. துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி(பரிபா. 20 : 51). 4. மாட்டிற்குத் தீனிவைக்குங்காடி. 5. குப்பைத் தொட்டி. 6. பிடிகை (அம்பாரி). 7. வீட்டு நடுவிலுள்ள திறந்த வெளி. நடுவில் வானவெளியுள்ளது தொட்டிக்கட்டு வீடெனப்படும். ம., தெ., க, து. தொட்டி. தொட்டி - தொட்டில் = குழந்தைகட்குத் தொட்டி வடிவில் மரத்தாற் செய்த சிறு தொங்கு கட்டில். இல் ஒரு சிறுமைப் பொருளீறு. எ.டு. புட்டி - புட்டில், விட்டி - விட்டில். குழந்தைகள் தூங்குவதற்குச் சேலையாற் கட்டியது ஏணை எனப்படும். இன்று ஏணைக்குத் தொட்டில் என்னும் பெயர் தவறாக வழங்குகின்றது. தொள் - தொடு. தொடுதல் = 1. தோண்டுதல் தொட்டனைத் தூறம் மணற்கேணி (குறள். 396). 2. துளைத்தல். உழலை மரத்தைப் போற் றொட்டன வேறு (கலித். 106). 3. வளைய லணிதல். ப.க. தொடு. சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84:23). தொடு - தொடி = 1. வளையல், கைவளை. குறுந்தொடி கழித்தகை (புறம். 77). 2. தோள்வளை. தொடியொடு தோணகிழ (குறள் 1236). 3 மறவளை. தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் (மணி. 1:4) தெ. தொடி. 5. கிணறுகளிற் படியாக உதவுமாறு வெட்டப்படும் அல்லது கட்டப்படும் சுற்று வட்டம். தொள் - தோள். தோட்டல் = 1. துளைத்தல். கேள்வியாற் றோட்கப் படாத செவி (குறள். 418). 2. தோண்டுதல். தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய் (கம்பரா. குல முறை 8). தோள் = தொளை. (அக. நி.). தோள் - தோண் - தோணி = 1. மரத்திற் குடைந்து செய்யப்பட்ட அல்லது குடைந்ததுபோற் பலகையாற் பொருத்தப்பட்ட மரக்கலம். புனைகலம் பெய்த தோணி (சீவக. 967). 2. சிறு கப்பல். கடன்மண்டு தோணி கடாரங்கள் (அரிச். பு. விவாக. 293). 4.. இருபத்தேழாம் உடு (இரேவதி). ம. njhÂ, f., து. தோணி (d), தெ. தோனி (d) வ. த்ரோணி (d), dhoney. தோள் - தோண்டு. தோண்டுதல் = 1 அகழ்தல். 2. குடைதல். 3. முகத்தல். நெடுங்கிணற்று வல்லூற்றுவரி தோண்டி (பெரும் பாண். 98) 4. கப்பற்சரக் கிறக்குதல். மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறம். 30). ம. njh©Lf, bj., க, தோடு, து. தோடுனி. தோண்டு - தேண்டு. தேண்டுதல் = தோண்டிப் பார்த்தாற்போல் தேடிப் பார்த்தல். தோண்டி நேர் கண்டேன் வாழி (கம்பரா. உருக்காட்டு. 77). தேண்டு - தேடு. ஒ. நோ: நோண்டு - நேண்டு - நேடு. நேடுதல் = தேடுதல். நோண்டுதல் = தோண்டுதல். தேடுதல் = 1. துருவி யலைந்து பார்த்தல். தேடினேனாடிக் கண்டேன் (தேவா. 1189 : 3). 2. துருவி யாய்தல். 3. பொருள் ஈட்டுதல். பாடுபட்டுத் தேடி (நல்வழி 22). 4. போற்றுதல், விரும்புதல் அவனைத் தேடுவார் ஒருவருமில்லை. (உ.வ.) ம. தேடுக. தேடு - தேட்டு = தேட்டம். ஒ.நோ : நோண்டு - நோடு - நோட்டம். தேட்டம் = 1. துருவித் தேடுகை. 2. பொருள் ஈட்டுகை. 3. ஈட்டப்பட்ட பொருள். தேட்டற்ற தேட்டமே (தாயு. தேரோ. 5) 4. விருப்பம். தேட்டந் தான் வாளெயிற்றிற்றின்னவோ (கம்பரா. சூர்ப். 121). அவனுக்கு அதில் தேட்டமில்லை. (உ.வ.). தேட்டாளன் = 1. முயற்சியாற் பெரும்பொருள் ஈட்டியவன். தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i. 238). 2. தேட்டிற்குரிய புதல்வன் (இ.வ.). தேட்டு - தேட்டை = தேட்டம். தோண்டு - தோண்டான் = ஓநாய். (சது.). கழுத்து, மார்பு, வயிறு ஆகியவற்றைக் கடித்துச் சதையைத் தோண்டித் தின்றுவிடுவதால், ஓநாய் தோண்டான் என்று பெயர் பெற்றது போலும்! தோண்டு தோண்டி = மரத்தைக் குடைந்து தோண்டிச் செய்யப்பட்ட சிறுகுடம், அதுபோன்ற மாழைக் கலம். துள் - துர் - துரு - துருவு. துருவுதல் = 1. துளைத்தல். 2. தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று (குறள். 929), 3. குடைதல். 4. கடைதல். க. துருவு, தெ. துருமு. OE, OS. thurh, OHG, duruh, Goth, thairh. துரு - தூர். தூர்த்தல் = 1. உட்செலுத்துதல். பழுக்கும் பழத்தைத் தூர்த்து (தைலவ. தைல. 134). துரிசு. 2. அடைதல். கடறூர்த்தன் மலையகழ்தல். (சீவக. 2165). 3. மறைத்தல். விண்ணவர் விசும்பு தூர்த்தார் (கம்பரா கைகேயி. 74). 4. எல்லாவற்றையும் மறைத்துப் பொழிதல் தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய் (கம்பரா. இராவணன் வதை. 199). தூர்தல் = 1. புகுதல். வீட்டிற்குள் தூர்ந்து விட்டான் (வ.ஆ.வ.). 2. அடைபடுதல். துளவாய் தூர்ந்த துரப்பமை யாணி (பொருந. 10). 3. மறைதல். வள்ளி நடந்த வழி தூர்ந்திடாது (வெங்கைக்கோ. 345). ம. தூளிறாக. தூர் = கிணற்றை யடைக்கும் சேறு செத்தை. தூர் = தூர்வை. தானே வந்தாலுந் தூர்வை யெடுக்க வொண்ணாது (திவ். இயற். திருவிருத். 12, வியா. 85). தூர் - தோர் - தோரணம் = தெருவில் துருவக் (குறுக்காகக்) கட்டும் சுவடிப்புத் தொங்கல். தொள் - தொள, தொளதொளத்தல் = துளையுண்டது போல் நெகிழ்தல். தொள - தொளர் - தளர். தளர்தல் = 1. நெகிழ்தல். 2. கட்டுக்குலைதல். தாழாத் தளராத் தலைநடுங்கா (நாலடி 14). 3. சோர்தல். தளர்ந்தே னெம்பிரா னென்னைத் தாங்கிக் கொள்ளே (திருவாச. 6 : 1). 4. நுடங்குதல். 5. மனங் கலங்குதல். 6. உயிரொடுங்குதல். தகை பாடவலாய் தளர்கோ தளர்கோ (சீவக. 1379). தொள் - தொய். தொய்தல் = 1. தளர்தல். 2. சோர்தல். தொய்யுமான் போலத் துவக்குண்டேன் (விறலிவிடு 10). 3. துவளுதல். தொய்யு மரவணைக்குள் (திருப்பு. 1173). 4. இளைத்தல். 5. வாடுதல். 6. தொங்குதல். 7. கெடுதல். தொய்யா வெறுக்கையொடு (பெரும்பாண். 434). தொய் - தொய்யகம் = தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. தொய்யகந் தாழ்ந்த கதுப்பு (கலித். 28). துல் - துன் - துன்பு = துளைத்தாற்போல் வருத்தும் நிலைமை. துன்பு - துன்பம். துன்பு - தும்பு = வரம்பு கடந்த நடத்தை, கடுஞ்சொல், ஒ.நோ : வன்பு - வம்பு. வம்பு தும்பு என்பது மரபிணை மொழி. துல் - தொல் - தொல்லை = துன்பம், இடர்ப்பாடு. தொண்டு = தொழில், பணிவிடை, அடிமை வேலை. தொண்டு - தொண்டன் = பணிவிடைக்காரன், திருவடியான். தொழீஇ = 1. தொழில் செய்பவள். (கலித். 103). 2. பணிப்பெண். தொழீஇயுட னுண்ணார் (சிறுபஞ். 38). Serve, servant, service, servitude, servility, serf என்னும் உயர் சொல்லும் இழி சொல்லும், Servus (L.) என்னும் ஒரே சொல்லினின்று தோன்றியிருத்தலை நோக்குக. துல்4 (தெளிவுக் கருத்துவேர்) துல் - துலங்கு. துலங்குதல் = 1. ஒளிர்தல். (சூடா.). 2. விளக்கமாகத் தோன்றுதல். (w.). 3. தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5). க. தொலகு. தெ. துலகிஞ்சு. துலங்கு - துலக்கு = மினுக்கு. (w.). க. தொலகு. துலக்கு - துலக்கம் = 1. ஒளிர்வு. துலக்க மெய்தினன்றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன் களங். 1). 2. மெருகு. (w.). 3. தெளிவு. துலக்கமாய்த் தெரிகிறது. (உ.வ.). துல் - துல்லியம் = தூய்மை. துல்லியமான ஆடை. (உ.வ.). துல் - தெல். ஒ.நோ. குழு - கெழு. உ - எ (சொல்லாக்கத் திரிபுகளுள் ஒன்று). தெல் - தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு = 1. தெளிவு. 2. உள்ளத் தெளிவு, ஊக்கம். இந்த வேலை செய்ய எனக்குத் தெம்பா யிருக்கிறது. (உ.வ.). 3. உடல் வலிமை. உடம்பில் ஒன்றுந் தெம்பில்லையே! (உ.வ.). 4. திடாரிக்கம். தெம்பை நானென்று காண்பேனோ (இராமநா. உயுத். 81). தெ. தெம்பு. இச் சொல்லைத் தெலுங்கினின்று தமிழுக்கு வந்ததாகச் செ. ப. க. க. த. அகரமுதலி காட்டியுள்ளது. தென் - தேன் = 1. பிழிந்தெடுத்துத் தெளிந்த மது. பாலொடு தேன்கலந் தற்றே (குறள். 1121). 2. இனிமை. தேனுறை தமிழும் (கல்லா. 9). 3. இனிய கள். (சூடா.). 4. இனிய மணம். அகிற்புகை யளைந்து தேனளாய்ப் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன் (சூளா. குமர. 17). 5. தேன் கூடு. தீந்தே னெடுப்பி (ஐங்குறு. 272). 6. தேன் வண்டு. (திவா.). ம. தேன், தெ. தேனெ, க. ஜேனு. தேன் - தேம் = 1. தேன். தேம்படு நல்வரை நாட (நாலடி. 239). 2. இனிமை. தேம்பூங் கட்டி (குறுந். 196). தேங்குழல் (உ.வ.). 3. கள். (சூடா.) 4. இனிய மணம். தேங்கமழ் கோதை (பு. வெ. 12 : 7). 5. இனிய ஒலி. தேம்பிழி மகர யாழின் (கம்பரா. நாட்டுப். 4). 6. ஒளி மண வூற்றினிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக. 12). 7. தேன் வண்டு. தேம்பாய் கூந்தல் (குறுந். 116). 8. தேன்போன்ற எண்ணெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் (குறிஞ்சிப். 111). 9. வண்டிற்குத் தேன்போன்ற மண முள்ள யானைமதம். தேம்படு கவுள ... யானை (முல்லைப். 31). தேம் - தீம் = 1. இனிமை. 2. இனிய, இன்சுவையுள்ள. தீந்தேன். (குறுந். 179), தீங்கனி ( 277), தீம்பால் ( 27), தீம்புளி நெல்லி ( 317), தீம்புனல் (149). 3. ஒலியால் இனிய. தீம்பாலை (சிலப். 7:48). 4. ஒலியாலும் சொல்லாலும் பொருளாலும் செய்யுளாலும் இலக்கண விலக்கியத்தாலும் இனிய. ஒண்டீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20). தீம் - தீவு = இனிமை. தீவுதல் = இனித்தல். தீவு - தீவிய = 1. இனிய. 2. இனியவை. செவ்விய தீவிய சொல்லி (கலித். 19). தீம்தீம் - தீந்தீம் - தீந்தீ - திந்தி - தித்தி. ஒ.நோ : சீச்சீ - சிச்சீ - சிச்சி. தம்தம் - தந்தம் - தம்தம். தீந்தி, திந்தி என்னும் இணைப் பண்டுகள் இறந்துபட்டன. தித்தித்தல் = இனித்தல். திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ (திவ். நாய்ச். 7 : 1). தித்தி = 1. தித்திப்பு (w.). 2. பேரீந்து. (w.). 3. இன்பம். இது செ. ப. க. க. த. அகர முதலி குறிக்கின்றவாறு, ஒலிக் குறிப்புச் சொல்லன்று. தித்திப்பு = 1. இனிப்பு. தித்திக்கு மோர் தித்திப் பெலாங் கூட்டியுண்டாலும் (அருட்பா, vi, நடராஜ. 10). 2. இனிப்புள்ள பண்டம். தேன் - தேனி. தேனித்தல் = 1. இனித்தல். 2. இன்புறதல், மகிழ்தல். கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ (திவ். பெரியாழ். 4 : 6 : 1). தேன் - தென் = இனிமை. தென்னிசை பாடும் பாணன் (திருவாலவா. 56 : 7). தென் - தின் - இன் = 1. இனிமை. இன்வள ரிளம் பிறை (சீவக. 1008). 2. இனிய. இன்சொ லினிதீன்றல் காண்பான். (குறள். 99). க. இன். ஒ. நோ. தொண்பது - தொன்பது - ஒன்பது. இன் - இன்பு = இனிய நுகர்ச்சி. வளநக ரம்பரின்பொடு புரியவர் (தேவா. 553 : 8). தெ. இம்பு, க. இம்பு (p). இன்பு - இன்பம் = 1. இனிமை. கண்டு தண்டாக் கட்கின் பத்து (மதுரைக். 16) 2. இனிய காம நுகர்ச்சி. அறம் பொரு ளின்பம் (குறள். 501). 3. திருமணம். கொம்பனையாளையும் ..... குன்றனையானையும் ..... இன்பமியற்றினார் (சீவக. 1980). 4. அகமகிழ்ச்சி. (திவா.) 5. சொல்லும் பொருளும் சுவைபடுங் குணம். சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம். (தண்டி. 18). இன் - இனி. இனித்தல் = 1. தித்தித்தல். 2 செவிக்கின்பந் தருதல். இனி - இனிமை = 1. தித்திப்பு. (பிங்.) 2. இன்பம். இனிமை கூர்ந்து (திருவாலவா. 1 : 18). தெல் - தெர் - தெரி. தெரிதல் = செ. குன்றிய வி - 1. கண் காணுதல். அவனுக்குக் கண் தெரிகிறது. (உ.வ.). 2. பொருள் தோன்றுதல், தொலைவில் ஓர் உருவம் தெரிகின்றது 9உ.வ.) 3. தெளிவாதல், விளக்கமாதல். தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள் (கம்பரா. நகர்நீ. 37). 4. மனமறிதல். தெரிந்து செய்த தீவினை. (உ.வ.). செ. குன்றா வி : 1. அறிதல் எல்லாந் தெரிந்த இறைவா (தாயு. காண்பேனோ. 33). 2. செவியுற்றறிதல், தெரிதல் நினைத லெண்ண லாகாத் திருமாலுக்கு (திவ். திருவாய். 6 : 9 : 11). 3. ஆராய்தல். திறந்தெரிந்து தேறப்படும். (குறள் 501). 4. தெரிந்தெடுத்தல். புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே (கலித். 7), 5. அரித்தெடுத்தல். (திவா.). ம. தெரி(யுக). தெ. தெலியு. தெரித்தல் = 1. வெளிப்படுத்துதல். தெய்வ மாக்கவிமாட்சி தெரிக்கவே (கம்பரா. சிறப். 6). 2. சொல்லுதல். (திவா.). 3. குறிப்பிட்டு விளக்குதல். தெரித்து மொழி கிளவி (தொல். சொல். 56). 4. கொழித்தல். (யாழ். அக.). 5. தெரிந்தெடுத்தல் தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்க (தேவா. 10: 7). தெரிக்கல் = விளத்தமாய்ச் சொல்லுதல். சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம் (சி.சி. பாயி. 2). தெரியல் = 1. தெரிந்தெடுத்தல். தேங்கமழ் தெரியற் றீம்பூந் தாரவன் (சீவக. 2253). 2. தெரிந்தெடுத்த பூவால் தொடுத்த மாலை. புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் (புறநா. 29). தெரிவை = 1. 25 முதல் 31 வரைப்பட்ட அகவையுள்ள பெண். (திவா.). தெர் - தெருள். தெருள்தல் = 1. தெளிதல். தெருண்ட வறிவினர் (நாலடி. 301). 2. மெய்யறிவுறுதல். தெருளாதான் மெய்ப்பொருள். கண்டற்றால் (குறள். 249). 3. உண்மை விளங்குதல். வளமலை நாடனைத் தெருள .... நீயொன்று பாடித்தை (கலித். 43). 4. பெண் பூப்படைதல். பிள்ளை தெருண்டு விட்டாள். (உ.வ.) 5. பெயர் பரவி விளங்குதல். தெருளு மும்மதில் (திருவாச 26 : 10). தெருள் = 1. தெள்ளுணர்வு. தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித். 144). 2. தெள்ளறிவு (ஞானம்). தெருளு மருளு மாய்த்து (திவ். திருவாய். 8 : 8 : 11). மயக்கத்தையும் அறியாமையையும் குறிக்கும் மருள் என்னும் சொல்லும், அதற்கு மறுதலையான தெருள் என்னும் சொல்லும், எதுகையா யிருத்தலை நோக்குக. தெர் - தேர். தேர்தல் = 1. உள்குதல் (சிந்தித்தல்.) 2. ஆராய்தல். தேர்ந்து செய்வஃதே முறை (குறள். 541). 3. தேடுதல். சிறுவெண் காக்கை ... யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 4. தேற்ற முறுதல். (நிச்சயித்தல்). பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராண வர. 8). 5. தெளிவாக அறிதல். தேர்ந்தனன் முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 6. தெரிந் தெடுத்தல். (செ. குன்றிய வி.) பயின்று திறமை பெறுதல். ம. தேருக. தேர்ச்சி = 1. ஆராய்ச்சி. 2. தெளிவு. 3. பயிற்சி யாற்பெறும் பெருந் திறமை. ம. தேர்ச்ச. தேர்வு = 1. ஆராய்ச்சி. 2. திறமை யறிகை. தேர்தல் = பொதுமக்கள் ஆட்சித் தலைவனைத் தேர்ந் தெடுக்கை (இக்கால வழக்கு). தெல் - தெள். தெள்ளுதல் = 1. கொழித்தல். வன்னத் தினைமாவைத் தெள்ளியே (அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து). 2. ஆராய்தல். தெள்ளி யறிந்த விடத்தும் (நாலடி. 380). 3. நீர் தெளிதல். தெள்ளுநீர்க் காவிரி (மணி. 22:40). 4. அறிவு தெளிதல். புள்ளுணர் முதுமகன் தெள்ளிதிற் றேறி (பெருங். 56 :7). 5. விளங்குதல். தெள்ளுங் கழலுக்கே (திருவாச. 10:19). தெள்ளிமை = 1. தெளிவு. 2. அறிவு நுட்பம். சொன்ன தென்ன தெள்ளிமையோ (விறலிவிடு.). தெண்மை = 1. தெளிவு. 2. அறிவின் தெளிவு. தெண்மை யுடையார் (பு. வெ. 8 : 12, உரை). தெள்ளியர் = தெளிந்த இசை. கோவல ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப். 222). 2. தெளிந்த சொல். வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடை பயிற்றி (குறிஞ்சிப். 100). தெள் - தெள்கு. தெள்குதல் = தெளிவாதல். தெள் - தெட்பு = தெளிவு. தெட்பு - தெட்பம் = 1. தெளிவு. 2. தேற்றம், திடம். சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி (கந்தபு. இந்திரன் கரந். 37). 3. மூதறிவு (திவா.). 4. முதிர்ச்சி. தெட்ட = 1. தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8). 2. முற்றிய. தெட்ட பழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3 : 4 : 8). தெட்டவர் = தெளிந்த அறிவினர். பரம ஞானம் போய்த் தெட்டவ ரல்லரேல் (கம்பரா. மந்திர. 20). தெள் - தெளி = 1. ஒளி. தெளிவளர் வான்சிலை (திருக்கோ. 16, உரை). 2. தெளிவு. தெளிகொண்ட வெங்கள் (பு. வெ. 1 : 15). 3. தெளிந்த சாறு. கரும்பின் றெளி (பு.வெ. 1 : 15). 3. தெளிந்த சாறு. கரும்பின் றெளி (தேவா. 280 : 5). தெளிதல் = செ. குன்றிய வி. - 1. ஒளிர்தல். 2. வெண்மையாதல். 3. அமைதி யுறுதல். தெளியா நோக்க முள்ளினை (அகநா. 33). 4. தெளிவாதல். 5. ஐயம் நீங்குதல். 6. முடிவிற்கு வருதல். 7. நோய் நீங்குதல். நோய் தெளிந்து விட்டது. (உ.வ.). 8. ஆள் செழிம்பாதல். ஆள் இன்று நன்றாய்த் தெளிந்து விட்டான். (உ.வ.). 9. பஞ்சம் நீங்குதல். பஞ்சந் தெளிந்தது. (உ.வ.). செ. குன்றா வி. - 1. ஆராய்தல். 2. தெளிவாக அறிதல். பிரியலேந் தெளிமே (குறுந். 273). 3. நம்புதல். தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் (குறள். 510). ம. தெளியுக, க. திளி. தெளிவு = 1. ஒளிர்வு, விளக்கம். 2. துலக்கம். 3. பொருள் வெளிப்படையாகத் தோன்றும் செய்யுட்குணம். தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே (தண்டி. 16). 4. உடற் செழிம்பு. 5. தெளிந்த சாறு. கரும்பின் தெளிவே (திருவாச. 5:55). 6. தெளிந்த பனஞ்சாறு, பதநீர் (கொங். வ.). 7. கஞ்சித் தெளிவு. 8. தெள்ளறிவு. (பிங்.). நறுமா மலர் கொண்டு நின்றேத்தத் தெளிவாமே (தேவா. 1114 : 6). 9. நனவு. (திவா.). 10. மனத்தெளிவு. (திவா.). 11. ஆராய்ந்து கொண்ட முடிபு. தெளிவி லதனைத் தொடங்கார் (குறள். 464). 12. நம்பிக்கை. தெளிவிலார் நட்பிற் பகை நன்று (நாலடி. 219). 13. மனவமைதி. 14. நற்காட்சி. அறத்துளார்க் கெலாமினியராத லதுதெளிவே (சீவக. 2810). 15. தூக்க நீக்கம், தூக்கந் தெளிந்துவிட்டது (உ.வ.) 16. மெய்ப்பு. தக்க தெளிவில்லாததால் வழக்குத் தள்ளுபடி யாயிற்று. (நாஞ்.). ம. தெளிவு, க. திளி. தெளியக் கடைந்தவன் = ஏமாறாதவன், எவரையும் எளிதாய் நம்பாதவன். (உ.வ.). தெளிச்சல் = உடற்செழிம்பு. வேலை முடிந்தபின் அவனுக்கு உடம்பில் தெளிச்சல் காணுகிறது (நாஞ்). தெளிஞன் = அறிஞன். (w). தெளி - தெளிர். தெளிர்தல் = 1. ஒளிபெறுதல். வண்ணந் தெளிர (பரிபா. 10 : 95). தெளிர்த்தல் = 1. தெளிவா யொலித்தல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197). 2. செழித்தல். வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசி (ஐங்குறு, 452). 3. மகிழ்ச்சியுறுதல். சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51). தெள் - தெறு - தெற்று = தேற்றம். (w). தெற்றென்னுதல் = தெளிதல். தெற்றென்க மன்னவன் கண். (குறள். 581). தெள்றெனவு = 1. தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54). 2. வெட்கமின்மை. (தவறான தெளிவு). சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் (திவ். இயற். பெரியதிரு. 141). தெற்று - தெற்றல் = அறிவில் தெள்ளியவன். இணைமருதிற்று வீழ நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி. 11 : 4 : 9). தெறு - தேறு. தேறுதல் = (செ. குன்றிய வி.) - 1. நீர் தெளிதல். தேறுநீர் சடைக்கரந்து (கலித். கட. வாழ்.). 2. மயக்கந் தெளிதல். 3. மனந்தெளிதல், அறிவு தெளிதல். உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள். 589). 4. செழிம்புறுதல். நோய் நீங்கி உடல்தேறி வருகிறான். (உ.வ.) 5. ஆறுதலடைதல். 6. திடங்கொள்ளுதல். 7. தேர்ச்சி யடைதல். 8. தேர்வில் வெற்றி பெறுதல். 9. முதிர்தல். தேறின காய் (உ.வ.). 10. உருப்படியாதல். எல்லாம் புடைத்தெடுத்தால் ஒருபடி தேறும். (உ.வ.). 11. கூடுதல். ஒரு காசு பேணின் இரு காசு தேறும். (பழமொழி). செ. குன்றாவி - 1. நம்புதல். தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வி தன்றால் (கம்பரா. வாலிவ. 33). 2. துணிதல். தேறுவ தரிது (கம்பரா. மாயா சீதை. 89). 3. சேருதல். அழிவின்கட் டேறான் பகாஅன் விடல், (குறள். 876). தெ. தேரு, க. தேரு. தேறு = 1. தெளிவு. 2. தேற்றம். (சூடா.) 3. தேற்றாங் கொட்டை. தேறுபடு சின்னீர் போல (மணி. 23 : 142). கலங்கிய நீரைத் தெளியச் செய்வதால், இல்லம் (தேற்றாங் கொட்டை) தேறு எனப் பட்டது. இல்லின் - படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக் கலுழி நீக்குங் கம்மியர் போல (பெருங். 35 : 215-17). இல் = இல்லம். கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித். 142, சுரிதகம்). இதன் நச். உரை : தேய்க்குங் காலத்தே சிதைக்கின்ற தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறு போல ..... பெற்றாள். தேறுகடை = தீர்மானம். அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான். (உ.வ.) - (w). தேறுசூடு = ஆடு மாடுகள் தேறுவதற்கு இடுஞ் சூடு. தேறுதலை = 1. ஊக்குவிப்பு. 2. ஆறுதல். தேறுமுகம் = பற்றுக் கோடு. தேறுமுக மின்றித் திரிந்தேமை யாள (கந்தபு. தேவர்கள் போற். 4). தேறல் = 1. தெளிவு. (பிங்.) 2. தெளிந்த கண். தேக்கட் டேறல். (புறநா. 115). 3. தேன். மலர்த்தேற லூறலின் (தேவா. 9413). 4. தெளிந்த சாறு. ஆனெயைக் கரும்பினின் றேறலை (திருவாச. 5 : 38). ம. தேறல், தெ. தேர. தேறு - தேற்று = 1. தெளிவிக்கை. 2. தெளிவு. சொற் பொருளின் றேற்றறிந் தேனே (சிவப். நால்வர். 28). 3. தேற்றாங் கொட்டை. தேற்றின் கலங்குநீர் தெளிவ தென்ன (ஞானவா.). தேற்று - தேற்றம் = 1. தெளிவு. தேற்றச் சொற் றேர்வு (நாலடி. 259). 2. உறுதி. தேற்றம் வினாவே (தொல். சொல். 259). 3. மனங் கலங்காமை. தேற்ற மவாவின்மை (குறள். 513). 4. ஆறுதல். 5. செழிம்பு. 6. சூளுறவு. தீராத் தேற்றம். (தொல். பொ. 102). ம. தேற்றம், தெ. தேட்ட, க. தேட்டெ. தேற்றம் - தேற்றன் = மெய்யறிவன். தேற்றனே தேற்றத் தெளிவே (திருவாச. 1 : 82). தேற்று - தேற்றரவு = 1. தேற்றம். 2. ஆறுதல். தேற்றரவாளன் = 1. திடநெஞ்சன். 2. ஆறுதல் சொல்வோன். 3. தூய ஆவி (கிறித்தவ வழக்கு). தேற்றரவாளி = தேற்றரவாளன். தேற்ற - தேற்றா = 1. தேற்றா மரம். 2. தேற்றாங் கொட்டை. ம. தேற்றா. தேற்றா - தேற்றான் (தைலவ. தைல.). தெள் - தெடு. தெடுதெடுவெனல் = (தெளிந்து) 1. நீர்ப் பதமா யிருத்தல் (நெல்லை வழக்கு). தெடு - தெடாரி = தெளிந்த கண்ணையுடைய பறைவகை. கடாஅ யானைக் கால்வழி யன்னவென் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றி (புறநா. 368) தெடாரி - தடாரி. சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி யூன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி (புறநா. 381) (வே.க.) துலை துலை - துலா துல் - துன். துன்னுதல் = பொருந்துதல். துல் - துல்லியம் = ஒப்பு, சரிமை, ஒப்பக் கையெழுத்து. துல்லியம் - துல்லிபம். துல் - துலம் = நிறைகோல், துலாநிறை. துல் - துலா = நிறைகோல், துலாவோரை, ஏற்றமரம், வண்டியின் ஏர்க்கால், துலாக் கட்டை. துவா - துலாந்து = துலாக்கட்டை. துலா - துலாம் = நிறைகோல், துலாவோரை, துலாமாதம் (ஐப்பசி), 5 வீசை கொண்ட நிறை, எற்றமரம், உத்தரக்கட்டை, துலாக்கட்டை, தூணுறுப்பு. துலாம் - துலான். ம. துலாம். துலாக்கோல், துலாக்கடைக் கூரை, கைத்துலா, ஆளேறுந் துலா, துலாப்பட்டை என்பன பெருவழக்குச் சொற்கள். ஐயவித்துலாம் = ஒரு மதிற்பொறி (சிலப். 15 : 213). துலா - துலை = நிறைகோல், துலாவோரை, 100 பல நிறை, ஒப்பு. தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள். 986). வடவர் காட்டும் துல் என்னும் அடியே தமிழ்ச்சொற்கும் உரியதாம். ஆயின், மா. வி. அ. தூக்கற் கருத்தை முற்படக் கூறும். ஒப்பாதற் கருத்தே அடிப்படையாம். ஒ.நோ : ஒப்பு = நிறைகோல். ஒப்பராவுதல் = நிறைகோல் செய்தல். ஒப்பராவி = நிறைகோல் செய்பவன். குமரிக் கண்டத்தில் வழங்கிய துல் (நிறு) என்னும் வினை இக் காலத்து வழக்கற்றது. (வ.வ. 160-161) துவரம் துவரம் - துவர, துபர. தும் - துமர் - துவர் = 1. சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6: 26.) தெ. தொகரு. 2. பவழம் (திவா.). துவர் - துகிர். க. தொகர். 3. காவி. துவருறுகின்ற வாடை (தேவா. 608 : 10). 4. துவரை. துவர்ங்கோடு (தொல். எழுத் 863, உரை). 5. துவர்ப்பு (காசுக்கட்டி). 6. துவர்ப்புச் சுவை. துவர்மருவப் புளிப்பேற்றி (தைலவ தைல.) 7. துவர்ப்புப்பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சிவக. 623). துவர்த்தல் = 1. சிவப்பாதல். துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை 13.). 2. துவர்ப்பாதல். துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்). துவர் - துவரை = துவரம் பயறு. தெ. துவரி, க. தொவரி. (வ.வ.181) துவரை துவரை - துவரிகா துவரை = உருக்கிய செம்பைச் சாந்தாக வார்த்துக் கட்டிய கோட்டை நகர். செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201 : 19-20) துவரை - த்வாரக வடவர் த்வார + க என்று பகுத்து, பல புறவாயில் களையுடையது (“many-gated”) என்று பொருளுரைப்பர். த்வார = வாயில். (வ.வ. 181). துவள் துவள் - த்வ்ரு (dh) - இ.வே. துவளுதல் = வளைதல். (வ.வ. 181) துவை துவை - த்வன்2 (dh) துவைத்தல் = ஒலித்தல். (வ.வ. 182) துளசி துளசி - துலசி துளவு = துளசி. கள்ளணி பசுந்துளவினவை (பரிபா. 75:54). துளவு - துளவம். துளவமுங் கூடையும் (திவ். திருப்பள்ளி. 10). துளவம் - துளபம். துளபத் தொண்டாய (திங். திருமாலை. 45). துளவு - (துளசு) - துளசி. துழாய் = துளசி. துழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31 : 8). துளவு - துளவன் = மாயோன். மாயோன் தமிழக முல்லை நிலத் தெய்வம் என்றும், துளவு அவனுக்குரிய முல்லைநிலப் பூவென்றும், அறிக. (வ.வ. 182). துளு துளு வியல்பு : குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும் மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திரவிட மொழிகளுள் ஒன்றாய், தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என்னும் நான்கிற் கடுத்தாற்போற் சொல்லத்தக்கது துளுவாகும். துளுவிற்குத் தனியெழுத்தும் தனி அல்லது பழைய இலக்கியமுமில்லை. மங்களூர்ப் பேசெல் (Basel) விடைத் தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டு வருகின்றது. துளு வழங்கெல்லை : மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில், சந்திரகிரி கல்யாணபுரி ஆறுகட்கிடையில், பெரும் பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது துளு. துளுவநாட்டு வரலாறு : கொடுந்தமிழ் நாடுகளைப்பற்றிய, சிங்களஞ் சோனகஞ் சராவகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணத் துளுவங் குடகம் கன்னடம் (நன். மயிலை) என்னும் பழஞ் செய்யுளில் துளுவுங் கூறப்பட்டிருப்பதால், கொங்கணம் கன்னடம் குடகு முதலிய நாடுகளைப்போன்றே, துளுவநாடும் பழைமையான தென்றறியலாம். ஆயினும், துளுவ நாட்டுக் கொடுந்தமிழ் கிளைமொழியாய்ப் பிரிந்து போனது 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே யென்பதை உணர்தல் வேண்டும். துளுவநாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டை மண்டலத்திற் குடி வந்தனர். அவர் தொண்டை மண்டலம் துளுவவேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத் தமிழே. பெயர்ச்சொல் 1. மூவிடப் பெயர் தன்மை முன்னிலை தற்கட்டு ஒருமை யானு ச தானு பன்மை எங்குளு, ஈரு தனுகுளு நம நிகுளு சுட்டுப்பெயர் ஆண் பெண் பலர் ஒன்று பல அண்மை : இம்பெ மோளுமேரு(ஆ.) இந்து ,உந்தெகுS மோகுளு(பெ.) உந்து சேய்மை :ஆயெஆளுஆரு(ஆ.) அவு ஐகுளு ஆகுளு(பெ.) குறிப்பு : 1. நம (தாம்) - உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர். எங்குளு (யாங்கள்) - தனித்தன்மைப் பெயர். 2. ஈரு (நிர்), ஆரு (அவர்) என்பவை உயர்வுப் பன்மை (Honorific plural) யாக வழங்கும். 2. Éனாப் பெயர் யேரு = யார்? தாதவு = aவது,ahது?தனெ = என்ன? 3. மக்கட் பெயர் ஆள், ஒண்ட்டிகெ (ஒண்டிக்காரன்), கள்வெ (கள்வன்), குசவெ (குசவன்), செம்பு குட்டி (செம்பு கொட்டி), சோமாரி (சோம்பேறி), தோட்டி, நஞ்சுண்டெ (நஞ்சுண்டவன்), பிள்ளே (பிள்ளை), வேட்ட (வேடன்), குருக்குளு (குருக்கள்). 4. முறைப் பெயர் அஜ்ஜெ (அச்சன்), அம்ம (அம்மை), அத்தெ (அத்தை), அக்க. 5. விலங்குப் பெயர் ஏடு (ஆடு), ஆனெ (ஆனை), பஞ்சி (பன்றி), எயிபஞ்சி (எய்ப்பன்றி), எர்மெ (எருமை), கடம (கடமை), காடி, கத்தெ (கழுதை), குதுரெ (குதிரை), குரு (குருளை), குறி (கொறி), நறி, நாய், பில்லி (புலி), மறி, மான், கஞ்சி (கன்று). 6. பறவைப் பெயர் கொர்ங்கு (கொக்கு), கோரி (கோழி), பாவலி (வாவல்), காடெ (காடை). 7. ஊர்வனவற்றின் பெயர் உடு (உடும்பு), எலி, ஒந்தி, சுண்டெலி, தேள், பாவு (பாம்பு). 8. மரஞ்செடிப் பெயர் அடும்பு (அடம்பு), அர்த்தி (அத்தி), ஆம்பல், எண்மெ (எள்), கரும்பு, கொடி, ஜோள் (சோளம்), பாஜெ (பாசி), மஞ்சள், மர (மரம்), பாகெ (வாகை), வாரெ (வாழை), பேவு (வேம்பு). 9. தட்டுமுட்டுப் பெயர் அடப்ப (அடைப்பம்), கர (கலம்), குப்பி, கூடெ (கூடை), சட்டி, ஜாடி (சாடி), செம்பு, ஜோனிகெ (சோனிகை), தொட்டி, தொட்டில், மேஜி (மேசை). 10. உணவுப் பெயர் அப்ப (அப்பம்), அரி (அரிசி), உப்பு, ஊட்ட (ஊட்டம்), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கலி (கள்), கூளு (கூழ்), சாரு (சாறு), தீனி, நஞ்சு, புண்டி (பிண்டி), மர்து (மருந்து). 11. ஆடையணிப் பெயர் கொப்பு, பாசி, வக்கி (வங்கி), சல்லண (சல்லடம்). 12. ஊர்திப் பெயர் அம்பாரி, உஜ்ஜாலு (ஊஞ்சல்), ஒட (ஓடம்), கப்பல், தேரு (தேர்), தோணி. 13. கருவிப் பெயர் அம்பு, அர (அரம்), இக்குளி (இடுக்கி), உளி, கத்தி, கம்பி, கவணெ (கவணை), கொக்கெ (கொக்கி), கோலு (கோல்), கோளி (கோலி), சட்டுக (சட்டுவம்), செண்டு (பந்து), செண்டெ (செண்டை = ஓர் இசைக்கருவி), தித்தி, பகட (பகடை தாயக்கருவி), பாரெங்கி (பாரை), பிர் (வில்). 14. இடப் பெயர் அம்பில (அம்பலம்), அரு (அருகு), இடெ (இடம்), ஊட்டி ஊற்று), கடலு, கடெ (கடை), காணி, கட்ட (குன்றம்), கொட்ய (கொட்டகை), கொட்டார, கொனெ (கொனை), சுடலெ (சுடலை), சுடுகாடு, தொளு (தொளை), தோட்ட, நடு, நாடு, பயல் (வயல்), பின்னு (விண்), கணி (கேணி), பட்ண (பட்டினம்), ஊரு (ஊர்), இல்லு (இல்), காடு. 15. காலப் பெயர் கடு (கெடு), பொர்து (பொழுது). 16. சினைப் பெயர் அடி, இமெ (இமை), எலெ (இலை), உகுரு (உகிர்), உமி, ஏலு (எலும்பு), ஒடு, ஒலெ (ஒலை), கண்ணு, கடெக்கண்ணு, கவ (கவை), காவு (காம்பு), காயி (காய்), காலு, கொரலு (குரல் = கதிர்). கை கொட்டாஞ்சி (கொட்டாங்கச்சி), கொட்டெ (கொட்டை), கொண்டெ (கொண்டை) கொம்பு, கெவி (செவி), தொண்டே (தொண்டை), தோகெ (தோகை), நாலாயி (நாக்கு), நாரு (நார்), நெசலு (நுதல்), நெத்தி (நெற்றி), பீலி, மட்டெ (மட்டை), முரெய் (மூலை), முள், மூக்கு, மோரே (முசரை), வித்து, பெதெ (விதை), பெரெல் (விரல்), கொம்மெ (கொழுப்பு), தோளு (தோள்). 17. பண்புப் பெயர் அல (அளவு), இக்கட்டு, ஒகர் (உவர்), எதுரு (எதிர்), ஹேரள (ஏராளம்), ஒய்யார, கார், கார (காரம்), காவி, குருடி (குருடு) க்ஷனு, கொந்த்ர (கொஞ்சம்), சிட்டு, கட்டி, உளுக்கு, சுருக்கு (விரைவு), செடி (தீயநாற்றம்), சேரு (சேர்), சொட்டு (குற்றம்), சொத்த (சொத்தை), தப்பு, நய (நயம்), நரெ (நரை), நாத்த (நாற்றம்), நேரே (நேர்), நோவு, முழம், மெருகு, மெலியுணி, வரடெ (வறடு), வேசெ (வீசை), பெப்பு (வெப்பு), தாள்மெ (மென்மை), மேரே (மேரை), பண்டவால் (வண்டவாளம்), (தாழ்மை), நம்பிகெ (நம்பிக்கை), பேனெ (பையுள்), கத்தலெ (கருக்கல்), பொர்லு (பொற்பு). எண்ணுப் பெயர் 1 - ஒஞ்சி 50 - ஐவ 2 - ரட்டு 60 - அஜிப 3 - மூஜி 70 - யெள்ப 4 - நாலு 80 - யெண்ப 5 - ஐனு 90 - சொண்ப 6 - ஆஜி 100 - நூது 7 - ஏளு 101 - நூத்த வொஞ்சி 8 - எண்ம 102 - நூத்தரட்டு 9 - ஒம்பத்து 200 - இர்நூது 10 - பத்து 300 - முந்நூது 11 - பத்தொஞ்சி 400 - நாலுநூது, நானூது 12 - பதுராடு 500 - ஐநூது 13 - பதுமூஜி 600 - ஆஜிநூது 14 - பதுநாலு 700 - ஏளுநூது 15 - பதினைனு 800 - எண்மநூது 16 - பதுனாஜி 900 - வொர்ம்பநூது 17 - பதுனேளு 1000 - சார 18 - பதுனெண்ம 1001 - சாரத்த வொஞ்சி 19 - பதுனொர்ம்ப 1100 - சாரத்த நூது 20 - இர்வ 10000 - பத்து சார 21 - இர்வத்தொஞ்சி 11000 - பத்தொஞ்சி சார 22 - இர்வத்து ரட்டு 100000 - லக்ஷ 30 - முப்ப 10000000 - கோட்டி 40 - நால்ப எண்ணடி உயர்திணைப் பெயர் தமிழ் துளு தமிழ் துளு ஒருவன் வொரி நால்வர் நாலவெரு ஒருத்தி வொர்த்தி ஐவர் ஐவெரு இருவர் இர்வெரு அறுவர் ஆஜ்வெரு மூவர் மூவெரு எழுவர் யேள்வரு எண்மர் யெண்மமந்தெ பதின்மர் பத்துமந்தெ ஒன்பதின்மர் வொர்மபமந்தெ பதினொருவர் பத்தொஞ்சி மந்தெ ஏழுக்கு மேற்பட்ட எண்ணடி உயர்திணைப் பெயரெல்லாம், எண்ணுப்பெயரொடு மந்தெ என்னும் தொகுதிப் பெயர் கூடியமையும். முறையெண்ணுப் பெயர் தமிழ் துளு தமிழ் துளு ஒன்றாம் வெஞ்சனே நாலாம் நானெல இரண்டாம் ரட்டனெ ஐந்தாம் ஐனனெ மூன்றாம் மூஜனெ பத்தாம் பத்தனெ 18. தொழிற் பெயர் 1. முதனிலைத் தொழிற்பெயர் எ.டு. சுருள். 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் எ.டு. ஈடு, கேடு. 3. முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ.டு. ஆட்ட (ஆட்டம்), ஓட்ட (ஓட்டம்). 4. விகுதிபெற்ற தொழிற்பெயர் எ.டு. கொலெ (கொலை), சாவு, தீர்ப்பு. சில தொழிற்பெயர்கள் : ஒணகெலு (உணங்கல்), உணவு, எலமு (ஏலம்), ஒப்பந்த, நகலி (நகல்), நடப்பு, நட்டி (நட்டல் = நடுகை), நெனப்பு (நினைப்பு), பக (பகை), புகர (புகழ்), காப்பு, பேலெ (வேலை), மதுமெ (வதுவை). 19. பல்பொருட் பெயர் அலெ (அலை), உக்கி (உக்கம்), உண்டெ (உண்டை), உசுரு (உயிர்), இர்ளு (இருள்), ஒலக (ஒலக்கம்), கரி, காணிக்கே (காணிக்கை), குத்த (குத்தகை), கூட்டு, கூவே (கூம்பு), கூலி, கொள்ளி, சிட்டிக்கி (சிட்டிக்கை), சில்லெர (சில்லறை), சில்லு, சீட்டு, சூடி (சூடு = அரிக்கட்டுக் குவியல்), பொள்ளி (வெள்ளி), தீவட்டி, நூலு, படி, ஹனி (பனி), புண (பிணம்), புதேரு (பெயர்), புடி (பொடி), பொர்லு (பொருள்), மயெ (மயம்), மூரி, முரி (மூரி), வகெ (வகை), மிடெ (விடை), வெள்ளம், பை (வை = வைக்கோல்), ஆமெ (ஆமை), கல்லு, கின்னி (குன்னி), குட்டு. ஆணு, பொண்ணு, மாதெர (மாற்றம்). 20. வேற்றுமையேற்ற பெயர்கள் 1. யானு அம்ம மர மேஜி 2. யென்னு அம்மனு மரொனு மேஜினு 3. யெனட அம்மட மரட்ட மேஜிட 4. யெங்கு அம்மகு மரொக்கு மேஜிகு 5. யெனடுது அம்மடுது மரொடுது மேஜிடுது 6. யென அம்ம மரத மேஜித 7. யெனடு அம்மடு மரொட்டு மேஜிட 8. அம்மா மரா மேஜியே வினைச்சொல் 1. முக்கிய வினைகள் அண்ட்டு (அண்டு), அண்ணா, அபய் (அவை), அலம்புனி (அலம்பு), அவர், அர்பிணி (அழு), ஆடு, ஆய், ஆர்க்குணி (ஆர் = ஒலி), ஆரு (ஆறு), இடு, இழி, (இறங்கு), உடெ (உடை), உதுர் (உதிர்), உப்ப, உப்பி (உமிழ்), ஒதெ (உதை), உரி (ஒலி), உரெ (உரை), உள்கு (உளுக்கு), ஊட் (உழு), ஊது, எக்கு, எதுருந்து (எதிர்), எய், எரி, ஏறு, ஒட்டு, ஒடி, ஒடு, ஓது. கக்கு, கட்டு, கடப்பு, கடெ (கடி), கப்பு, கரகு (கரை), கல், கல, கலங்கு, கபி (கவி), காதுணி (காது), காயி (காய்), குட்டு, குத்து, குரி (குறி), கூடு, கேண் (கேள்), கொணுனி (கொள்), கொதி, சாய் (சா), சுடு, கொன் (கொல்), சுத்து 9சுற்று), சேரு (சேர்), ஞாந்த (நீந்து), தப்புனி (தப்பு), தாளுனி (தாளு), தித்துனி (திருத்து0, துலுக்கு (தளும்பு), தெரி, தொடகுனி (தொடங்கு), தோடுனி (தோண்டு), தோல்கு (தொலை), நல்குனி (நக்கு), நடப்புனி (நட), நட்பினி (நடு), குனி (நடுங்கு), நம்பு, நாடுனி (நாடு), நூக்குனி (நூக்கு), படிப்புனி (படி), பர்பு (பருகு), புட்டு (பிற), பூரு (வீழ்), பெதரு (விதறு), பெரசு (விரவு), பொதெ (புதை), போடு (வேண்டும்), மாய், முகி (முடி), முளெ (முளை), மெச்சுனி (மெச்சு), மெசெலு (மேய்), வரு (வற்று), வாழு, வெதரு (விதிர்). 2. புணர்வினை காத்தொனுனி (காத்திரு), செண்டாடுனி (செண்டாடு) முதலியன. 3. துணைவினை ஆயினி (ஆகு), உப்புனி (உள்), இப்புணி (இரு), தீர், தெரி, கூடு, கொணு (கொள்), உண்டு முதலியன. 4. வினைப்புடைப்பெயர்ச்சி கேணு (கேள) என்னும் வினை ஏவல் ஒருமை கேண்ல (கேணு) பன்மை கேணுலெ (கேண்லெ) முற்றுஇ.கா. நி.கா. எ.கா. யான் கேண்டெ கேணுவெ கேணும்பெ யாம் கேண்ட கேணுவ் கேணும்ப நீ கேண்ட கேணுவ கேணும்ப நீர் கேண்டரு கேணுவரு கேணும்பரு இறந்தகால நிறைவு (யான்)கேட்டிருக்கிறேன் - கேணுடித்தெ (யாம்) - கேணுடித்த (நீ) - கேணுடித்த (நீர்) - கோணுடித்தரு தொழிற்பெயர் கேணொண்டு வினையாலணையும் பெயர்- இ.கா.கேண்டிஈயெ (கேட்டவன்) நி.கா. கேணுனாயெ (கேட்கிறவன்) எ.கா. கேணுனாயெ (கேட்பவன்) இடைச்சொல் வியப்பு : ஆஹா, ஒ, ஒஹோ, அப்ப இரக்கம் : அய்யோ, அய்யப்ப வெறுப்பு : ஹே, சீ, சீச்சி வினா : ஆ, னா, ஏ, யேனி ? (என்று?) சுட்டு : ஆ, ஆது, ஆனி (அன்று) அடெ (ஆண்டு), அவுளு (அவண்). இடம் : கைதளு (கிட்ட), முட்ட (கிட்ட), மித்து (மேல்), உளயி (உள்), பிடயி (வெளி), சுத்த (சுற்றும்), யெதுரு, பிரவு (பிறகு). காலம் : கடெச (கடந்து), பேக (வேகம்). படி : மெல்ல, நிடுப (நெடுக்க), வொட்டுகு (கூட), ஒப்ப, தேற்றம் - ஏ (ஈயெ). தொடர்ச்சொல் : அக்கக்க (அக்கக்காய்), சுத்த முத்த (சுற்று முற்றும்), ஆணுபிலி, நீருகுட்ட (dropsy), அடி மேலு முதலியன. சொற்றொடர் அரசு ஆளுவெ = அரசன் ஆள்கிறான். கடலு மல்லெ ஆதுண்டு = கடல் பெரிதாயிருக்கின்றது. யென குதுரெகு நினகுதுரெ மல்லெ = என் குதிரைக்கு நின் குதிரை பெரிது. ஆயெ தனனு தானெ ஹாக்கொண்டே = அவன் தன்னைத் தானே அடித்துக் கொண்டான். பழமொழிகள் உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ = உப்புத் தின்றவன் நீர் பருகுகிறான். கர்ம்பு சீபெ அந்துது பேரு முட்ட அக்கியட = கரும்பு தீவிய தென்று வேர்முட்டத் தின்னக்கூடாது. கரும்பு இனிக்கிறதென்று வேரொடு தின்னலாமா? (தமிழ்). தானு களுவ ஆண்ட ஊரு களுவெகெ = தான் கள்ளனானால் ஊருங் கள்வனாம். தான் திருடி அசலை நம்பான் (தமிழ்). பஜெ இத்தினாது காரு நீனொடு = பாயிருக்கிற அளவு கால் நீட்டவேண்டும். பல்லடு குள்ளுது பரண்டு பத்தியெ = பள்ளத்திற் குந்திக் குட்டி (அரை)த் தவளையைப் பிடித்தான். பறழ் - பரண்டு (?). மல்ல புதெ மெல்ல ஜாவொடு = மல்ல (பெரிய) பொதியை மெல்ல இறக்க வேண்டும். தன தரெகு தன கை - தன்கையே தனக்குதவி (தமிழ்). காலொகு தக்க கோல, தேசொகு தக்க பாஷெ, தாளொகு தக்க மேள = காலத்துக்குத் தக்க கோலம், தேசத்துக்குத் தக்க பாசை, தாளத்துக்குத் தக்க மேளம். ஆண்டெதபாயி கட்டொலி தூண்டெத பாயிகட்டேல்யா? = அண்டாவாயைக் கட்டலாம் தொண்டை வாயைக் கட்டலாமா? உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது (தமிழ்). காடு சொர்க்கினவுளு ஏடுனு புடொடு, ஊரு சொர்சு கினவுளு கொங்கணனு புடொடு = காடுசொக்கினவுழி (தழைத்தவிடத்து) ஆட்டை விடவேண்டும். ஊர் சொக்கின வழி கொங்கணனை விட வேண்டும். சொக்குதல் : அழகாயிருத்தல், மயக்குதல். நலிபெரெ திரியந்தினாயகு ஜாலு வோரெகெ = நடஞ் செய்யத் தெரியாத வனுக்கு நிலஞ் சமனில்லை. ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம் (தமிழ்). நாயித பீல வோண்டெடு பாடுண்ட சம ஆவா? = நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா? நாயின் வாலை மட்டைவைத்துக் கட்டினாலும் நேராகுமா? (தமிழ்). பிஜினுகு தாயெகு கர்பத பேலெ? = எறும்புக்கு எதற்கு இரும்பு வேலை? இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? (தமிழ்). பாயிடு மக மக பஞ்சிடு பக பக = வாயில் மகன் மகன் வயிற்றில் பகை பகை. உதட்டில் உறவும் உள்ளே பகையும் (தமிழ்). பெரிகு பூரி பெட்டுலா கர்பொகு கொரி நீருலா பிர பருவா? = பிறக்கு (முதுகு) விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் பிறகு (திரும்ப) வருமா? மாதிக இல்லுடு உணசு ஆண்ட ப்ராணகு தானெ? = பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு (பிராமணனுக்கு) என்ன? துளுத் திரித்த வகைகள் 1. ஒலித்திரிபு எ.டு. ழ-ள, கூழ்-கூளு, ச-ஐ, பாசி-பாஜி 2. போலி எ.டு. ஐ-எ, காடை-காடெ; ழ-ர, கோழி-கோரி; வ-ப, வேலை-பேலெ. 3. சொற்றிரிபு எ.டு. பன்றி - பஞ்சி, ஆறு - ஆஜி. 4. ஈறுகேடு எ.டு. (குசவன்) குசவெ - இருபது - இர்வ. 5. இலக்கணப் போலி எ.டு. யாவது - தாதவு. 6. ஈறுமிகை எ.டு. குருக்கள் - குருக்குளு, வாவல் - பாவலி. 7. தொகுத்தல் திரிபு எ.டு. திருத்து - தித்து, கரும்பு - கர்ம்பு. 8. கொச்சை எ.டு. சுற்றும் - சுத்த, பற்று - பத்து, புது - பொசெ. 9. புணர்ச்சியின்மை எ.டு. நீரு குட்ட. 10. வழக்கற்ற சொல் வழங்கல் எ.டு. உணங்கு - ஒணகு, மல்ல = பெரிய. 11. புதுச்சொல் லாக்கம் எ.டு. ஹொட்டகச்சி = பொறாமை. 12. சொல்வடிவ வேறுபாடு எ.டு. இங்கு - இஞ்சி. 13. வடசொல் வழக்கு எ.டு. பாஷெ, பாபி (பாவி), சங்கட, மார்க. 14. றகர னகரங்கள் வழங்காமை 15. நெடுஞ்சுட்டு வழக்கு விழாமை எ.டு. ஈ நரமானி = இந் நரன். (தி.தா.) துறட்டி துறட்டி - த்ரோட்டி, த்ரோத்ர. துறடு - துறட்டு - தோட்டி, ம. தோட்டி. க. தொறடு, தோட்டி (d). உரனென்னுந் தோட்டியான் ஒரைந்துங் காப்பான் (குறள். 24) (வ.வ. 182) துறவியர் துறவிகளைக் கடவுளர் என்றும் பகவர் என்றும் அடிகள் என்றும் அழைப்பர். (சொல். 36). தூண் தூண் : துன்னுதல் = பொருந்துதல், சேர்தல். துணை = சேர்க்கை, இரண்டு. ஒப்பு. துணர் = கொத்து. துன் - (துண்) - தூண் = பருத்த கம்பம், மண்டகக்கால். தூண் - தூணி. தூணித்தல் = பருத்தல். துண் - (தொண்) - தொண்ணை = பருத்தது. தூண் = தூணம் = பொருந்தூண். தூணம் - தூண, தூணா (வ.). தூணம் தூணம் - தூண, தூணா (இ.வே.) துல் - துலை = ஒப்பு. துல் - துன். துன்னுதல் = பொருந்துதல். துல் - துள் - துண் - துணர் = கொத்து. துண் - துணை = சேர்க்கை, இரண்டு, ஒப்பு. துள் - (துடு) - துடவை = தோட்டம். துடு - துடை = தொடை. துடு - துடர் = தொடர். துடு - தொடு - தொடை, தொடர். துண் - தூண் = 1. திரண்ட கம்பம். சிற்றில் நற்றூண் பற்றி (புறம். 86). 2. தாங்கல். துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள். 615). தூண் - தூணம் = 1. பெருந்தூண். பசும்பொற் றூணத்து (மணி. 1:48). 2. பற்றுக்கோடு (அக.நி.). தூண் - தூணி. தூணித்தல் = பருத்தல். வடவர் காட்டும் தா (நில்) என்னும் சொற்கும், தூண் என்பதனொடு யாதொரு தொடர்புமில்லை. (வ.வ. 182-183) தூணம் - தூண தூணி1 தூணி1 - தூணீ துள் - (தூள்) - (தூளம்) - தூணம் = துளைக்கப்பட்ட கூடு, அம்புப் புட்டில். துள் - (தூள்) = (துளி) - தூணி = அம்புப் புட்டில். பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணி பதிற்றுப் ஒ.நோ. தோள் - தோணி. வடவர் காட்டும் துல் (நிறு) என்னும் மூலமும், மா. வி. அ. கூறும் பொறுப்பது (“bearer”) என்னும் பொருளும், பொருந்தா. தூணி2 - த்ரோண - இ.வே. மேற்கூறியதே இதற்கும். தூணி = 4 மரக்கால் கொண்ட முகத்தலளவு. வடவர் த்ரு4 (தரு. தாரு = மரம்) என்பதை மூலமாகக் காட்டுவர். (வ.வ.) தூதர் வகை வகுத்துரைப்பார், வழியுரைப்பார் எனத்தூதர் இருவகையர். வேற்றரசன் வினாக்கட்கெல்லாம் விடையிறுக்கும். அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார். அவ்வாறன்றிச் சொல்லி விடுத்த செய்தியைமட்டும் சொல்பவர் வழியுரைப்பார். (திருக். தூது). தூது தூது - தூத தூது = 1. தூதுமொழி. தூதுரைப்பான் பண்பு (குறள். 681). 2. öJ - öj‹ (M.g.), தூதி (பெ. பா.). தூது என்னுஞ் சொற்கு, முன்சென்றுரைப்பது என்பது வேர்ப் பொருளாகும். ஒ.நோ. உது - (உதழ்) - உதடு = வாயின் முன்னிருப்பது. உதழ் - இதழ். குது - தெ. கொத்த = புதிய. த. கோடி = புதுமை, புத்தாடை, ம. கோடி. புதுமை என்பது, ஒரு பொருள் தோன்றுவதின் அல்லது பயன்படுவதின் முன் நிலைமையே. துது - தூது = ஓர் அரசனின் வருகையை அல்லது போர்ச் செய்தியை, மற்றோ ரரசனிடம் முன்சென்றறிவிப்பது. பிற்காலத்தில் செய்தியறிவிப்பது என்று மட்டும் பொருள்பட்டது. நுது - நுதல் = மண்டையின் முன்னுள்ள நெற்றி. நுதலுதல் = முன்சொல்லித் தொடங்குதல். புது - இது வெளிப்படை. மா. வி. அ. து (செல்) என்பதை மூலமாக ஐயுற்றுக் காட்டும். (வ.வ. 189-184) தூரி தூரி-தூலி, தூரிகை - தூலிகா தூர் = குத்துச் செடியின் வேர்த்தொகுதி. தூர் - தூரி = தூர் போன்ற வட்டிகை (painter's brush). தூரி - தூரிகை. (வ.வ. 184). தூளி தூளி - தூலி (dh) துவைத்தல் = இடித்தல், துவை - துகை. துகைத்தல் = இடித்தல். துகை - துகள் = இடித்த தூள். துகள் - தூள் - தூளி - தூசி. தூளித்தல் = தூளாக்குதல். இச்சொல் மா. வி. அகர முதலியில் இல்லை. ஆயின், சென்ப் பல்கலைக் கழகம் அகர முதலியில் வடசொல்லாகக் காட்டப் பட்டுளது. தூளித்தல் என்னும் வினைக்குத் தூளைப் பூசுதல் என்று பொருள் கொண்டுள்ளனர் வடவர். தூலன, உத்தூலன - தொ. பெ. (வ.) (வ.வ.184). தெய்வம் நன்மை செய்யும் பொருள்களை நன்றியறிவு பற்றியும், தீமை செய்யும் பொருட்களை அச்சம்பற்றியும், மாந்தன் தொன்று தொட்டு வணங்கி வந்திருக்கின்றான். ஆவும் மரமும் போல்வன நன்மை செய்வன; பாம்பும் பேயும் போல்வன தீமை செய்வன; நீரும் நெருப்பும் போல்வன நன்மையுந் தீமையுஞ் செய்வன. பேயும் ஒரோவழி நன்மை செய்ததாகக் கதைகளுண்டு. ஐம்பூதச் சேர்க்கையான உடம்பிற்கு ஐம்பூத உதவியும் வேண்டியுள்ளது. ஆயினும், தோட்டமட்டிற் சுடவுங் கொல்லவும் வல்ல தீ வெளியொழிந்த ஏனையவற்றிற் கொடியதாதலால், தீமையைக் குறிக்குஞ் சொல்லே தீப்பெயரினின்று தோன்றியுள்ளது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் (குறள். 202) என்னும் திருவள்ளுவர் வாய்மொழிச் சொற்பின்வருநிலையும் அதைத் தெளிவாய்க் காட்டும். இனி,. இருளும் ஒரு பொறுக்கொணாத துன்பமாகி, தீயகம் என்னும் எரிநரகிற்கு இருளுலகம் என்றொரு பெயரும் ஏற்பட்டி ருப்பதால், கதிரவ வடிவிற் பகலிருளையும் விளக்கு வடிவில் இரவிருளையும் போக்கும் தீயும், கண்ணிற்கு இன்றியமையாத ஒளியைத் தருவதுடன், உடம்பிற்கும் உணவிற்கும் வேண்டிய வெம்மையையும் உதவுகின்றது பற்றி, தெய்வம் எனப் போற்றத்தக்க பூதமுந் தீயேயாகி, தெய்வம் என்னும் பெயரும் தீயின் பெயரினின்றே தோன்றியுள்ளது. நிலவுலகத்தில் இயற்கையாகவும் செயற்கையாகவும் தோன்றுந் தீ, பெரும்பாலும் பொருள்கள் ஒன்றோடொன்று உரசுவதினா லேயே ஏற்படுகின்றது. அதனால், உரசுதலைக் குறிக்குஞ் சொல்லினின்றே நெருப்பின் பெயர்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று தீ என்பது. உல் - உர் - உரு. உருத்தல் = அழலுதல். உல் - உர் - உரி - எரி = நெருப்பு. உல் - உள் - ஒள் - ஒளி. உல் - துல் - துள் - தொள் - தோள் - தோய் - தேய். உரசுதல் என்பது, பொருள்கள் ஒன்றோடொன்று பொருந்தி, முன்னும் பின்னும் அல்லது மேலுங் கீழுமாகத் தொடர்ந்து இயங்குதல். உல்லுதல் = பொருந்துதல். உல் - ஒல். உல் - உர் - உரை - உரைசு - உரசு. உரை - உராய். உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு. தேய்தல் = உரைசுதல், உரைசிக் குறைதல். குறைதல்,மெலிதல், வலிகுன்றுதல், கழிதல், அழிதல், சாதல். ம. தேயுக. க. தே. தேய்த்தல் = உரைசச் செய்தல், குறைத்தல், அழித்தல்: தேய்த்துத் துலக்குதல், தேய்த்துத் துடைத்தல். ம. தேயிக்க. தேய்ப்புத்தாள் = உப்புத்தாள். தேய்ப்புப் பலகை = சாணைக்கல். தேய்கல் = உரைகல். தேய்மானம் = தேய்வு. தேய்வு - தேய்வடை - தேய்கடை = தேய்ந்த காசு, தேய்ந்த பொருள். எ-டு: தெய்வமாடுதல், தெய்வாவி (தெய்வ ஆவி), தெய்வ வுத்தி (திருமுரு. 23), தெய்வவுலகம், தெய்வ முறுதல் (சிலப். 19: 26, அரும்.), தெய்வ ஏற்பாடு, தெய்வமேறுதல், தெய்வமே யென்று, தெய்வக் கண்ணோர் (மணி. 27: 146), தெய்வக் கம்மியன் (திருவாலவா. 26: 11), தெய்வக்கல் (மணி. 26 : 89), தெய்வக் காப்பி (திவா.), தெய்வக்கிளவி (மணி. 7:97), தெய்வக் குற்றம், தெய்வக்குறை (று.), தெய்வக்கணம் (மணி. 21: 130), தெய்வக்களை, தெய்வக் கற்பனை (கட்டளை), தெய்வங் கொண்டாடி (நாஞ்.) தெய்வங் கொள்கை (நன். பாயி.26), தெய்வச்சாயல் (று.) தெய்வச் சிலை, தெய்வச்சிலையார், தெய்வச் சிலையான், (திவ். பெரியதி. 9 : 4 :3), தெய்வச் செயல் (கம்பரா. அதிகாய. 194), தெய்வஞ் செப்புதல் (பதிற்றுப். 82 :1), தெய்வத்தச்சன் (கம்பரா.ஊர்தேடு.18), தெய்வத்தன்மை, தெய்வத் தீர்ப்பு, தெய்வத் தீர்வை, தெய்வப்பகை (சீவக. 364), தெய்வப்படை (கம்பரா. அதிகாயன். 50), தெய்வப்பலகை (திருவாலவா. 15:4), தெய்வப்பாடல் (சிலப். 3: 135, உரை), தெய்வப்பாவை (சீவக. 657), தெய்வப்பிறப்பு, தெய்வப் பிறவி, தெய்வப் புணர்ச்சி (திருக்கோ, 7,கொளு.), தெய்வப் பலகை (குறள், சிறப்புப் பாயிரம்), தெய்வப்புள் (திவ். பெரியதி. 3 : 3 :6), தெய்வப் பெண் (திருவாச. 19 :6), தெய்வபத்தி, தெய்வமணம், தெய்வமணி (பிங்.) (கம்பரா. உருக்காட்டு. 68), தெய்வ மயக்கம் (சிலப். 12 :51, உரை), தெய்வ மயக்கு (மணி. 21 :109), தெய்வமரம் (பிங்.), தெய்வமாடம் (பெருங். இலாவண. 7: 143), தெய்வமுனி, தெய்வ வணக்கம் (காரிகை. பாயி. 1, உரை), தெய்வ வீடு (கம்பரா. நகரப்.32). தேய் - தேய்வை = தேய்த்த சந்தனத் துவை. நறுங்குறடுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு.33). தேய்ப்புப்பெட்டி= ironing box. தேய் - தேயு = தீ, நெருப்பு (பிங்.). தேயு - தேசு = 1. ஒளி. 2. பொன். (சது.) 3. அழகு. திருமா மணிவண்ணன் தேசு (திவ். இயற். 3 : 9) 4. புகழ். நும்முடைத் திருவுந் தேசும் (சீவக. 771). 5. அறிவை (ஞானம்). தேசுறு முண்பார்க்கென்றே தேறு (சைவச. பொது. 561). 6. பெருமை. வலிச்சினமு மானமுந் தேசும் (பு.வெ. 2 : 4). வீரியம் (W.) தேசு - வ. தேஜ. தேசு - தேசி = அழகி. தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4). தேய் - தேயம் = ஒளி. அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39). தேய் - தேய்வு - தேவு = 1. தெய்வம் (பிங்.). நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696 :2). தேவிற் றிருமா லெனச் சிறந்த தென்பவே (திரு.வெ.) 2. தெய்வத் தன்மை அயன் றிருமால் செல்வமு மொன்றோ வென்னச் செய்யுந் தேவை (ச.சி. காப்பு. ஞானப். உரை). தேவில் = திருக்கோவில். கருவுடைத் தேவில்களெல்லாம் (திவ். திருவாய். 4 : 4 :8). தேவு - தேவன் = 1. கடவுள். தேருங்காள்றேவ னொருவனே (திவ். இயற். நான்மு.2). 2. அரசன் தேவ நின் கழல் சேவிக்க வந்தனன் (கம்பரா. கங்கை. 39). 3. முக்குலத்தோர் பட்டப்பெயர். ம. தேவன், க. தேவ, தெ. தேவுடு, வ. தேவ (d) இந். தேவ். (d). தேவன் - தேவி = இறைவி. வ. தேவீ (d). தேவு - தே = 1. தெய்வம் (பிங்), தேபூசை செய்யுஞ் சித்திரசாலை (சிவரக. நைமிச.20). 2. நாயகன் (இலக். அக.). 3. தெய்வம் போன்ற தலைவன். நாயன்தே - நயிந்தை. தேய்வு - தெய்வு - தெய்வம் = 1. கடவுள். 2. திணை நிலைத் தெய்வம், சிறுதெய்வம். தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (தொல். அகத். 18). 3. தெய்வத் தன்மை. தெய்வமே கமழு மேனி (சீவக. 1718). 4. தெய்வத்தன்மை யுள்ளது. தெய்வத் தாற் கூறாயோ (திணைமாலை. 90). 5. தெய்வமணம், இயற்கைப் புணர்ச்சி. 6. ஊழ். தெய்வத்தா லாகா தெனினும் (குறள். 619). தெய்வம் என்ற சொல்லிலுள்ள யகரம் அடிப்படை மெய்யெழுத் தென்பதை அறிதல் வேண்டும். இச் சொல் பெருவழக்கான பெருந்தொகைக் கூட்டுச்சொற்களில் நிலையுறுப்பாக வுள்ளது. தெய்விகம் = தெய்வத் தன்மை. இகம் பண்புப் பெயரீறு. தெய்வு - தெய் = தெய்வம் (பிங்.). தேய் - தீய். தீய்தல் = 1. எரிந்துபோதல். 2. சோறு முதலிய பற்றிக் கருகுதல், பயிர் முதலியன வாடிக் காய்தல். தீய்த்தல் = தீய் என்பதன் பிறவினை. தீய் - தீயல் = காய்ச்சும் குழம்புவகை. எ-டு: உப்புத் தீயல். தீய்வு - தீவு - தீவம் = விளக்கு. தீவம் - வ. தீப (p). தீவு - தீவனம் = 1. எரிவு. 2. எரியும் பசி. 3. பசியைத் தணிக்கும் உணவு. 4. கால்நடைக்கு உணவாக இடும் கூளம். தீவனம் - வ. தீபந. தீய் - தீ. தீதல் = 1. எரிந்து போதல். 2. சோறு கறி பற்றிக் கருகுதல். 3. பயிர் வாடிச் சருகாதல். 4. சினத்தல். 5. அழிதல். தீத்தல் = தீ என்பதன் பிறவினை. தீ = 1. நெருப்பு. 2. ஒளி விளக்கு. 3. செரிமான வெப்பம். 4. கடும்பசி. 5. எரிநரகம். 6. தீமை. 7. சினம். தீ - தீங்கு = 1. தீமை 2. துன்பம். 3. குற்றம். தீ - தீமை = நன்மைக்கு எதிரானது. தீ - தீம்பு = 1. தீமை. 2. கேடு. 3. குறும்பு. தீய = (பெ.எ.) 1. கெட்ட. 2. கேடு செய்யும். தெய்வம் - Gk. theos, L. deus, S. dyaus, god, deity. E. deism, F. deisme, f. L. deus + ism. E. deity, ME. deite, f. LL. deitatem f. deus, god. E. divine, ME. f. OF. devin, f. L. divinus, f. divus, god like. E. theism, f. Gk. theos + ism. தேவன் - S. deva, a deity, god, R.V. heavenly, divine, RV. devaka, divine, celestial; a god, deity. devakiya, divine, belonging or relating to a divinity. devata, godhead, dlvinity. RV, AV. devatya, having as one’s deity, sacred to a deity. devaya, loving or serving the gods, religious. devala, an attendant upon an idol (who subsists on the offerings made to it). devika, appertaining to or deived from a deity. devila, righteious, virtuous, appertaining to a deity, divine. devi, a female deity, goddess. RV. devya, divine power, godhead. RV. daiva, belonging to or coming from the gods, divine,celestial. AV div (2) to shine, be bright. Zd. div, Lit. dyvas. div (3) heaven, sky, day. ஒளிதரும் கதிரவனும் திங்களும் வானத்தில் தோன்றுவதனாலும், திங்கள் தோன்றாத வேளையிலும் வெள்ளிகளால் வானம் சற்று விளக்கம் பெறுவதனாலும், வானமும்; பகல் ஒளி வேளையாத லாற் பகலும்; ஒளியைக் குறிக்கும் தேயு என்னும் சொல்லினின்று திரிந்த திவ் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டன. பகலும் இரவும் சேர்ந்தே ஒரு நாளாயினும், இரவு தொழில் செய்யாது உணர்ச்சியற்று உறங்கும் வேளை யாதலால், அதைக் கணக்கிற் சேர்க்காது பகலையே நாளென வழங்குவது பெரும் பான்மை உலக வழக்காகும். இருநாள் வேலையென்பது பொதுவாக இருபகல் வேலையையே உணர்த்துதல் காண்க. divan, a day. divas, sky, heaven. divas - pati, sky - lord. divasa, daytime, day. diva, by day. diva - kara, day maker, the sun. divi, heaven - dwelling. divo, born or descended from heaven. divya, divine, heavenly, celestial. dyo, Guna form of dyu in comp. dyo - kara, maker of brightness, builder of splendid edifices dyau, Vriddhi form of dyu in comp; dyau - toka, the heavenly world. dyaur, heaven, sky, day, RV, AV. dyaush - pitri, Heaven - Father X dyava - pritivi, Earth - Mother. 2. dyut, shining, splendour, ray of light, RV. dyuti, splendour, brightness, lustre, majesty, dignity. dyutita, enlightened, illuminated, shining. dyota, light, briliiance. DYAS and PRITHVI Dyaus Says Max Muller, is one of the oldest gods, not only of the Vedic Aryans, but of the whole Aryan race. He was worshipped before a word of Sanskrit was spoken in India, or a wood of Greek in Greece. - Hibbert Lectures, pp. 276, 288. “If I were asked what I consider the most important discovery which has been made during the nineteenth century with respect to the ancient history of mankind, I should answer by the following short line. “Sanskrit DYAUSH-PITAR-Greek ZEUS PATER-Latine JUPITER-Old Norse TYR. “ Think what this equation implies! It implies not only that our own ancestors and the ancestors of Homer and Cicero (the Greeks and Romans) spoke the same languageas the people of India - this is a discovery which, however incredible it sounded at first, has long clased to cause any surprise - but it implies and proves that they all had once the same faith, and worshipped for a time the same supreme Deity under exactly the same name a name which meant Heaven Father.” - Nineteenth Century, Oct. 1885. மாக்கசு முல்லர் இவ்வாறு கூறியது, சமற்கிருதம் ஒரு காலத்தில் வழங்குமொழியாக இந்திய - ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் தாயாகவிருந்தது என்னும் தவறான கருத்துக்கொண்ட ஒப்பியன் மொழிநூல் தொடக்கக் காலமாதலால், ஆராய்ச்சி மிக்க இக் காலத்திற்கு முற்றும் ஒவ்வாது. ஆயின், தீ வணக்கம் முதற்காலத்தில் உலகப் பொதுவாயிருந்த தென்பதும், அதனின்றே தெய்வ வணக்கந் தோன்றிற்றென்பதும், குமரி நாட்டினின்றே மக்கள் உலக முழுவதும் பரவியிருப்பதால் தேயு, தேவன், தெய்வம் என்னும் குமரித் தமிழ்ச்சொற்கள் இந்திய - ஐரோப்பிய மொழி களிலெல்லாம் பரவிக் கிடக்கின்றன என்பதும், மறுக்க வொண்ணாத உண்மைகளாகும். தேவ என்பதை நிலைச்சொல்லாகக் கொண்ட கூட்டுச் சொற்கள் சமற்கிருதத்தில் நிரம்பவுள. எ-டு: தேவகணம், தேவகணிகை, தேவ கம்மி (கன்மி), தேவ குண்டம், தேவ குரு, தேவகுலம், தேவகோட்டம், தேவகோடி, தேவசபை, தேவடியாள், தேவதாயம், தேவதாளி, தேவதானம், தேவதீபம், தேவதூதன், தேவதேவன், தேவநகர், தேவநாகரம், தேவநாகரி, தேவநாயகன், தேவநிலம், தேவப்புள், தேவபாணி, தேவபூசை, தேவமாசம், தேவமாது, தேவமானம், தேவயாத்திரை, தேவயானை. (த.த.நா.த) தெருவகை முடுக்கு சிறுசந்து: சந்து தெருவின்கிளை; தெரு சிறுவீதி; மறுகு போக்குவரத்து மிகுந்த பெருந்தெரு அல்லது வீதி; ஆவணம் கடைத்தெரு: அகலுள் அகன்ற மறுகு; சாலை, பெருவழி (Road). சந்திமூன்று தெருக்கள் கூடுமிடம்; சதுக்கம் நான்கு தெருக்கள் கூடுமிடம். (சொல்:50). தெல் விளையாட்டு தெல்லைத் தெரித்து விளையாடுவது தெல். கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி ஆட்டு வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன் படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம், இடக்கைச் சுட்டு விரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக் கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும். தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு. தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது. தெலுங்கு தெலுங்குநாட் டெல்லை தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற் காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், கொடுக்கப்பட்ட கோட்டங்கள் (Ceded districs) கர்நூல் ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு. தெலுங்குப் பெயர் தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆரியராலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. இது முதலாவது தெலுங்குநாட்டுப் பெயராயிருந்து பின்பு அந் நாட்டு மொழியைக் குறித்தது. ஆந்திரம் என்பதும் இங்ஙனமே. தாலமி என்னும் ஞால நூலாசிரியர் த்ரிக்ளுப் தொன் த்ரிக்ளுப்தொன், ‘Triglupton’ ‘Triglupton’ என ஒரு கங்கைக் கரை நாட்டையும், பிளினி என்னும் சரித்திராசிரியர் மெர் டொகலிகம் (மூன்று கலிங்கம்) என ஓர் இந்திய நாட்டையும் குறித்திருப்பதனாலும், ஒரு பண்டை இந்திய அரச மரபினர் திரிகலிங்கத் தலைவர் என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்ட தாக ஒரு கல்வெட்டுக் கூறுவதாலும், புராணங்களிலும் ஒரு செப்புப் பட்டயத்திலும் திரிகலிங்கம் என்னும் பெயர் காணப் படுவதாலும், பிளினி என்பவர் கலிங்கத்தினும் (Calingae) வேறாக மக்கோ-கலிங்கே (Macco - Calingae), கங்கரிதெசு - கலிங்கே (Gangaridas - Calingae) என இரு நாடுகளைக் குறிப்பதாலும், பாரதத்துள் கலிங்கர் மும்முறை குறிக்கப்படு வதாலும் கலிங்கம் (ஒரிசா மாகாணமும் கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்கு நாடிருந்தாலும், பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப் பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்த தென்றும், அதனால் திரிகலிங்கம் எனப்பட்ட தென்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது, முறையே திரியீலங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று. தாரநாதன் என்னும் திபேத்தச் சரித்திராசிரியர் தெலுங்கு நாட்டைத் திரிலிங்கம் என்றும், அதன் ஒரு பகுதியைக் கலிங்கம் என்றும், அதன் தலை நகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு தெனுகு என்னும் வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கிவருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக்கொண்டு அதற்குத் தேன் போன்றது என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம். (இது தென்மொழி என்னும் தமிழ்ப் பெயர்க்குத் தேன்மொழி என்று தமிழ்ப்புலவருட் சிலர், பொருள் கூறுவதை ஒக்கும்). முதன் முதல் தெலுங்குநாட்டைப் பற்றிக் குறிப்பாகத் தெரிவிப் பது தொல்காப்பியம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தாலும், செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையாலும், வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் (வடுகு - வடவெல்லையிலுள்ள வடுக நாடு) என்னும் சிறுகாக்கைபாடினியார் கூற்றாலும், தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கில் கொடுந் தமிழ் வழங்கிற்றென்றும், அது பின்பு திரிந்து வடுகு (தெலுங்கு) என்னும் கிளைமொழி யாயிற்றென்றும் அறியலாம். கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம் (திருகலிங்கத்துள் அடங்காது ஆந்திரம் என ஒரு தெலுங்கு நாடும் இருந்ததேனும் திரிகலிங்கப் பெயர் பொதுப் பெயராவதற்கு இழுக்கில்லை (ஆங்கிலர் சாக்சனியர் சூட்டர் ஆகிய மும்மரபினர் குலநாடும் மொழியும் ஆங்கிலம் என்னும் பெயரால் வழங்குதல் காண்க.) என ஒரு தெலுங்கு நாடிருந்ததென்றும், ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும், வடமொழி இருக்கு வேத ஐத்திரேய பிராமணத்தாலும் இதிகாச புராணங்களாலும் அறியக் கிடக்கின்றது. ஆந்திரரை ஐத்திரேய பிரமாணம் அநாகரிகராகக் குறிப்பிடினும் பிளினி, ஒரு வலிமைமிக்க நாட்டாராகக் கூறியுள்ளார். பியூட்டிங்கர் பட்டிகை களிலும் (Pautinger Tables) ஆந்திரர் குறிக்கப்படுகின்றனர். சேரன் செங் குட்டுவனுக்கு வடநாட்டுச் செலவில் துணைவரான நூற்றுவர் கன்னர் ஆந்திர மன்னரா யிருந்திருக்கலாம். ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மன்பதையராக இருந்து வந்திருக்கின்றனர்; எனினும், அவரது மொழி கடைக் கழகக் காலம் வரையில் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயுமிருந்து அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் இனமொழியாய்ப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளலுக் குரியதாயிருந்தது. புல்லிய - வேங்கட விறல்வரைப் பட்ட (புறம். 385) கடுமான் புல்லிய காடிறந் தோரே (அகம்.) தொண்டை மண்டலத்து வேங்கடக் கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான பொத்தப்பி நாடு கண்ணப்ப நாயனார் திருநாடாகும். கண்ணப்பர் திருநா டென்பர்.....பொத்தப்பி நாடு (பெரிய கண்.1) வேங்கடமலை தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்தது. பல்குன்றக்கோட்டமென்பது தொண்டை நாட்டின் பெரும் பிரிவாகிய 24 கோட்டங்களுள் ஒன்று..... பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் சிலாசாசன (கல்வெட்டு) வக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல் குன்றக்nகாட்டத்திலுள்ள தென்று bதரிகிறது. குன்றுசூ ழிருக்கை நடுகிழnவானே (மலைபடு.583) என்பது இதனை வலியுறுத்தும் (பத். சாமிதா. ப. 57) தெலுங்கு மொழியை முதன் முதலாகக் குறிப்பிட்ட அயலார் 7ஆம் நூற்றாண்டினரான ஹூவென் த்சாங் (Hwen Thsang) என்னும் சீனத் திருப்போக்கர் (யாத்திரிகர்). கரஞ்செல் கோடுயர் கதுமென விசைக்கு நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்தி (நற். 212) என்று குடவாயிற் கீரத்தனாரும், குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே (குறுந். 11) என்று மாமூலனாரும், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு (சிலப். 8:1-2) என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், கடைக்கழகக் காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தெலுங்கு வழங்கவில்லை யென்பது வெளிப்படை. நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தியடிகள்) சேரநாடு சென்று மீண்ட போது, அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பொருளைத் திருமுருகன் பூண்டியில் சில வடுகர் (அல்லது வடுக வடிவில் வந்த சிவபூதங்கள்) வழிப்பறித்ததால், 9ஆம் நூற்றாண்டி லேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறிவிட்டனர் என்பது போதரும். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொ டாறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமா நகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீரெம் பிரானிரே என்பது நம்பியாரூரரின் திருமுருகன் பூண்டிப்பதிக முதற் செய்யுள். வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார் (தொல். சொல். சேனா. மேற். 91) என்பது ஒரு பழஞ் செய்யுள். இவற்றினாலும், யாழ்ப்பாண அகராதியில் வடுகன் என்னும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும், முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடராயிருந்தன ரென்றும், தமிழர் அவரொடு உறவாடவில்லை யென்றும் அறியலாம். நீரெலாம் சேற்று நாற்றம் நிலமெலாங் கல்லும் முள்ளும் ஊரெலாம் பட்டி தொட்டி உண்பதோ கம்பஞ் சோறு பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும் காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொ ணாதே வடகலை தென்கலை வடுகு கன்னடம் இடமுள பாடையா தொன்றி னாயினும் திடமுள ரகுகுலத் திராமன் றன்கதை அடை வுடன் கேட்பவ ரமர ராவரே என்று கம்பர் பாடியிருப்பதால், 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வடுகர் நிலைத்துவிட்டனர் என்பதை அறியலாம். கோதாவரி, கிருட்டிணா கோட்டங்களைச் சேர்ந்ததும் கீழைச் சாளுக்கியம் எனப்பட்டதுமான வேங்கைநாட்டை 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிற் சோழமன்னர் ஆண்டு வந்தனர்; கீழைச் சாளுக்கியருடன் மணவுறவும் பூண்டனர். முதலாம் இராசேந்திர சோழன் வடக்கிற் படையெடுத்துச் சென்று கங்கை நாடு வரை அடிப்படுத்தினான். கி.பி. 1115-ல் முதற் குலோத்துங்கன் தனக்குக் கலிங்க நாட்டுத் தெலுங்க மன்னன் திறை கொடுக்க மறுத்தமை காரணமாகத் தன் படைத் தலைவனான கருணாகரத் தொண்டை மானை ஏவி அவனொடு பொருதுவென்றான். மெய்க்கூத்தாவது, தேசி வடுகு சிங்களமென மூவகைப் படும், சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும், ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக்கிரட்டையும் வடுகிற் கூறாகலானும், வடுகும் மட்டதாள முதலாக ஏக தாள மீறாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னரென்க. என்னை? வைசாக நிலையே வடுகிற்கும் வரையார் என்றாராகலின் என்று (சிலப்.3 உரை) அடியார்க்கு நல்லார் கூறியிருப்பதால், கடைக்கழகக் காலத்திலேயே வடுகக் கூத்தும் தமிழக் கூத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டிருந் தமை புலனாம். இதனால், வடுகு தோன்றாத முதற் காலத்திலேயே நாடகத்தமிழ் தோன்றிற்றென்றும், வடுக நாட்டுப் பகுதிக்குரிய தமிழக் கூத்தே பின்பு வடுகு என்னும் தனிப் பெயரால் வழங்கத் தலைப்பட்டதென்றும் உய்த்துணரலாம். மாற்றம் (மாட்ட), செப்பு முதலிய தமிழ்ச்சொற்களே பிற்காலத்தில் சிறிது பொருள் திரிந்து தெலுங்குச் சொற்கள் என்று சொல்லப்படுவதை இதனுடன் ஒப்பு நோக்குக. வடுகரச ராயிரவர் மக்களை உடையர், வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர் என்னுந் தொடர்களைச் சேனா வரையர் எடுத்துக்காட்டாகக் கூறியிருப்பதால், இடைக்காலத்தில் வடுக வரசர்க்கும் சோழர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு புலனாம். 15ஆம் நூற்றாண்டில் வீரசேகர பாண்டியனுக்கும் சந்திரசேகர சோழனுக்கும் பகைமை நேர்ந்தபோது, முந்தியவன் வேண்டு கோட்கிணங்கி விசயநகரத் தரசராகிய கிருட்டின தேவராயர் தம் படைத் தலைவராகிய நாகம நாயக்கரை அனுப்ப, அவர் சென்று சோழனை வென்றார். அதிலிருந்து சோழ பாண்டி நாடுகள் நாயக்க மன்னர் கைப்பட்டன. தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறினர். அவருள் நாய்க்கர் (நாயுடு), இரெட்டியார் என்பவர் தலைமையானவர். கம்பளத்தாரும் சக்கிலியருமாகிய தெலுங்கர் 9ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டிற் குடியேறிவிட்டனர். அவரே முதன்முதல் வடுகர் எனப்பட்டவர். 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் பாண்டியர் வலி குன்றியதாலும், தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறிவிட்டதாலும், பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குறுநில மன்னரும் தோன்றினர். அங்ஙனத் தோன்றிய வேளகங்களுள் எட்டயபுரமும், பாஞ்சாலங் குறிச்சியும் தலைமையானவை. தெலுங்கர் தமிழ்நாட்டிற் குடியேறவே, தனித்தமிழ் நிலையங்களா யிருந்த திருவேங்கடம், திருக்களாத்தி, திருத்தணிகை முதலிய வடபாற் சிவநகரங்கள் இருமொழி நிலையங்களாக மாறிவிட்டன; தெலுங்குநாட்டை யடுத்த தமிழரும் தெலுங்கைக் கற்றுத் தெலுங்கராக மாறிவருகின்றனர். தெலுங்கு தற்போது மிகுந்த வடமொழிக் கலப்புள்ளதாயிருந் தாலும், ஒரு காலத்தில் வடமொழி மணமேயில்லாத கொடுந் தமிழ் வகையாயிருந்ததே. இன்றும் தெலுங்கு நாட்டூர்ப் பெயர்கள் பல ஊர் (பாலுரு), புரம் (அனந்தபுரம்), மலை (அனிமலை), குடி (தேவகுடி), கோடு (முனுகோடு), கோட்டை (கண்டிகோட்ட), பேட்டை (நேக்குணாம்பேட்ட), பள்ளி (கொத்தபல்லி), குன்றம் (பெல்லம் கொண்ட), கல் (மின்னக்கல்லு), பாலம் (நாயனிப் பாலம்), கூடம் (நடிகூடெம்), குளம் (ஸ்ரீகாகுளம்), வீடு (பட்லவீடு), மந்தை (எல்லமந்த), புரி (நெமலிபுரி), சாலை (கண்ட்டசால), பட்டினம் (விசாகப்பட்ணம்), பாடு (தாவிப்பாடு), தலை (குர்னூதல) எனத் தனித்தமிழ் ஈற்றனவாயே யுள்ளன. தெலுங்கு திரியக் காரணங்கள் 1. தட்பவெப்ப நிலையும் நிலத்தியல்பும். 2. மக்கட்பெருக்கம். 3. பண்டையிலக்கிய விலக்கணமின்மை. 4. தமிழரொடு உறவு கொள்ளாமை. 5. தமிழ் நூல்களைக் கல்லாமை. 6. ஒலிமுறைச் சோம்பல். 7. வடசொற் கலப்பு. தெலுங்குச்சொல் வரிசைகள் 1. பெயர்ச் சொற்கள் 1. மூவிடப் பெயர் (இடம் தமிழும் வலம் தெலுங்கும்) யான், நான் - நேனு; யாம் - மேமு; நாம் - மனமு; நீன், நீ - நீவு; நீர் - மீரு; அவன் - வாடு; அவர் - வாரு; அது - அதி (அவள், அது); அவை - அவி; தான் - தானு; தாம் - தாமு தமரு. 2. வினாப் பெயர் எவன் - எவடு; எவர் - எவரு; ஏது > எது; ஏதி (எவன் எது); எவை - ஏவி. 3. முறைப் பெயர் தாத்தா - தாத்த; தந்தை - தண்ட்ரி; அண்ணன் - அன்ன; தம்பின், தம்பி - தம்முடு; மாமன் - மாம; பிள்ளை - பிட்ட, பில்ல; அவ்வை - அவ்வ; தள்ளை - தல்லி; அக்கை - அக்க; அத்தை - அத்த; பிடுகு - கொடுக்கு, அப்பன் - அப்ப. 4. விலங்குப் பெயர் ஆ - ஆவு; எருது - எத்து; எருமை - எனுகு; குக்கல் - குக்க; கழுதை - காடிதெ; குதிரை - குர்ரமு; கிடாரி - கேதெ; பன்றி - பந்தி; ஏழகம் - ஏலிக்க; கொறி - கொர்ரெ ; புலி - புலி; எண்கு - எலுகு; யானை - ஏனுக; நரி - (நரிக) நக்க; சிவிங்கி - சிவங்கி. 5. பறவைப் பெயர் கோழி - கோடி; ஈ - ஈக; வாத்து - பாத்து; மயில் - நெமலி; காக்கை - காக்கி; மின்வெட்டும் பூச்சி - மினுகுருப்பூச்சி; புறவம் - பாவுரமு; தேனீ - தேனெட்டீக; கொக்கு - கொங்க்க; கூகை - கூப; உள்ளான் - உள்ளங்கி. 6. ஊர்வனவற்றின் பெயர் பாம்பு - பாமு; பேன் - பேனு; பல்லி - பல்லி; புழு - புருகு, புருவு; தேள் - தேலு; மூங்கா - முங்கீசு; எலி - எலுக; சுண்டு (எலி) -சுஞ்சு. 7. நீர்வாழ்வனவற்றின் பெயர் மீன் - மீனு; சுறா - சோர: முதலை - மொசலி; நண்டு - எண்ட்ரி; சிப்பி - சிப்பி; நத்தை - நத்த; நீர்நாய் - நீருக்குக்க. 8. மரஞ்செடிப் பெயர் மரம் - ம்ரானு; செடி - செட்டு; சீத்தா - சீத்தா; வேம்பு; வேமு; அத்தி - அத்தி; அரசு - ராய்; பலா - பனச; அன்னாசி; அன்னாச; மா - மாமிடி; தாளி - தாட்டி; அரம்பை - அரட்டி; தெங்கு - தெங்காயச்செட்டு; வாதுமை - பாதமு; வெதிர் (மூங்கில்) - வெதுரு; மல்லிகை - மல்லிக்க; தாமரை - தாமர; நாற்று - நாறு; புதர் - பொத; புல் - புல்லு; பாசி - பாச்சி, அகில் - அகிரு. 9. கருவிப் பெயர் ஆணி - ஆணி; காறு - கர்ரு; கத்தி - கத்தி; கத்தரி - கத்திரி; கோடாலி - கொட்டலி; கரண்டி - கரிட்டெ; ஈட்டி - ஈட்டெ; அலகு - அலுகு, ஆக்கு; கறுழ் - கற்ளெமு; முள் - முள்ளு; துப்பாக்கி - துப்பாக்கி; அகப்பை - அப்பக்க; கேடகம் - கேடெமூ; சல்லடை - சல்லெட; நிறுவை (தராசு) - நிலுவ; கதிர் - கதுரு; வில் - வில்லு; கோல் - கோல; கம்பி - கம்மி ; கட்டை - கட்டே; அம்பு - அம்மு; வாணம் - பாணமு; பீரங்கி - பிரங்கி; வல்லயம் - பல்லெமு; செக்கு - செக்கு; உரல் - ரோலு; நாஞ்சில் - நாகேலு; திரிகல் - திருகல்லு; முசலம் (உலக்கை) - முசலமு; கொடுவாள் - கொடவலி; ஆரம்பம் - ரம்பமு; உளி - உலி ; கட்டாரி - கட்டாரி, வாள் - வாலு, அங்குசம் - அங்குசமு. 10. ஐம்பூதப்பெயர் நிலம் - நெல; நீர் - நீரு; நெருப்பு - நிப்பு; கால் - காலி, ஆவி - ஆவி; விண் - வின்னு, வினு. 11. உலோகப் பெயர் இரும்பு - இனுமு; உருக்கு - உக்கு; வெள்ளி - வெண்டி; வங்காரம் - பங்காரு; பித்தளை - இத்தடி ; (எர்) இராகி - ராகி (செம்பு), தகரம் - தகரமு. 12. ஊர்திப் பெயர் வண்டி, பண்டி - பண்டி; ஓடம் - ஓட; படகு - படவ; நாவாய் - நாவ; தோணி - தோனெ; சிவிகை - சிபுக்க; பாடை - பாட; தேர் - தேரு. 13. உணவுப்பெயர் தோசை - தோச; இட்டலி - இட்டென; பச்சடி - பச்சடி; இரை - எர; தீனி - தீனி; தின்றி - திண்டி ; உப்பு - உப்பு, பால் - பாலு; வெண்ணைய் - வென்ன; அப்பம் - அப்பமு; கஞ்சி - கஞ்சி; நெய் - நேயி; தேன் - தெனெ; தவிடு - தவுடு; பருப்பு - பப்பு; பொட்டு - பொட்டு; உமி - உமக்க; சாமை - சாமலு; கள் - கள்ளு; மிளகு - மிரியமு; மிளகாய் - மிரப்பக்காய; உள்ளி - உல்லிகட்ட; வெள்ளுள்ளி - வெல்லுல்லி; பயறு - பெசலு; இறைச்சி - எறச்சி; அட்டு - அட்டு; அப்பளம் - அப்பளமு; ஆமைவடை - ஆமவட. 14. ஆடையணிப் பெயர் பட்டம் - பட்ட(துணி); பட்டு - பட்டு; கம்பளி - கம்படி; நடுக்கட்டு - நடிக்கட்டு (அரைக்கச்சை); கச்சை - கச்ச; பாகை - பாக; கடிகை - கடியமு; பாசி - பூச; மணி - மணி; பவழம் - பகடமு; செருப்பு - செப்பு; அட்டிகை - அட்டிகலு; சட்டை - சட்ட; உடுப்பு. 15. தட்டுமுட்டுப் பெயர் பெட்டி - பெட்ட; குடை - கொடுகு; தொட்டி - தொட்டி; படுக்கை - படக்க; சாய்மை - சாய்ய; மெத்தை - மெத்த; படுப்பு - பருப்பு; புட்டி - புட்டி. 16. இடப்பெயர் நாடு - நாடு; தீவு - தீவ; வைப்பு - வைப்பு; இடம் - எடமு; தாவு- தாவு; இல் - இல்லு; குடிசை - குடிசெ; அறை - அர; தெரு - தெருவு; ஊர் - ஊரு; சந்து - சந்து; தோட்டம் - தோட்ட; கோட்டை - கோட்ட; சாலை - சால; புறக்கடை - பெறடு; பந்தல் - பந்தலி; தோப்பு - தோப்பு; கடல் - கடலி; குன்று - கொண்டெ; கணவாய் - கணம; களஞ்சியம் - கணஜமு; ஆறு - ஏரு; புலம் - பொலமு; களம் - கள்ளமு; செறு(வயல்) - சேனு; வயல் - பயலு; மண் - மன்னு; குகை - குஹ; குண்டு - குண்ட்ட; பள்ளி - படி ; அகழி - அகட்த; அண்டை - அண்ட; அங்கணம் - அங்கணமு; அணைக்கட்டு - அட்டகட்ட. 17. காலப் பெயர் காலம் - காலமு; நிலா - நெல (மாதம்); பகல் - பகலு; ஆண்டு - ஏடு; வேளை - வேள; நெருநெல் - நின்ன; முன்னாள் - மொன்ன; இன்றைக்கு - நேட்டிக்கு; இராத்திரி - ராத்ரி; சாயுங்காலம் - சாயங்காலமு; பொழுது - ப்ரொத்து; பருவம் - பருவமு; சமையம் - சமயமு; நாள் - நாடு. 18. சினைப்பெயர் தலை - தல; நுதல் - நுதரு; கண் - கன்னு; கண் புருவம்- கனுபொம; கண்ணீர் - கன்னீரு; மூக்கு - மூக்கு; பல் - பல்லு; நாக்கு - நாலுக; செவி - செவி; தாடி - தாடி; தவடை - தவட; முகம் - முகமு; மீசை - மீசமு; எச்சில் - எங்கிலி; மிடறு - மெட; கை - சேயி; முட்டி - முஷ்டி. முழங்கை - மோச்கெயி; விரல் - வேலு, வ்ரேலு; உகிர் - கோரு; உரம் - உரமு; உள்ளம் - உல்லமு; நடுவ - நடுமு; கொடை - கொட; முழங்கால் - மோக்காலு; குதிங்கால் - குதிகாலு; தோல் - தோலு; அகடு - கடுப்பு; அரந்தம் - ரத்தமு; நரம்பு - நரமு; நாடி - நாடி; கொழுப்பு - கொவ்வு; கொம்பு - கொம்மு; வேர் - வேரு; அலக்கு - ஆக்கு; கொம்பு (கிளை)- கொம்ம; நார் - நார; முள் - முல்லு; வார் - வாரு; மூளை - மூளுக (marrow); நெய்த்தோர் - நெத்துரு; பித்தம் - பித்தமு; எலும்பு - எமுக்க; மூளை - மூலுக; தோகை - தோக; இறகு - ஈக்க; காய் - காய; மொக்கு - மொக்க; பூ - புவ்வு; பின்பு - வீப்பு; பட்டை - பட்ட; முளை - மொலக்க (shoot); அடி - அடுகு; மருமம் - ரொம்மு. 19. உறுப்பறைப்பெயர் கூன் - கூனு; குருடு - குட்டு; மூங்கை, மூகு - மூக; நொண்டி - மொண்டி; செவிடு - செவுடு; மூடன் - மூடுகு. 20. வண்ணப் பெயர். வெள்ளை - வெல்ல; தெள் - தெளுப்பு (வெள்ளை); நீலம் - நீலமு; மால் - நலுப்பு (கருப்பு); எர் - எருப்பு (சிவப்பு); காவி - வாவி; பச்சை - பச்ச; பழுப்பு - பசுப்பு (மஞ்சள்) ; செம்பு - கெம்ப்பு. 21. எண்ணுப் பெயர் ஒன்று - ஒகட்டி; இரண்டு - இரடு; மூன்று - மூடு; நால்கு - நால்கு; ஐந்து - அயிது; ஆறு - ஆறு; ஏழு - ஏடு, எட்டு - எனிமிதி; ஒன்பது - தொம்மிதி; பத்து - பதி; பதினொன்று - பதகொண்டு, பதுனோகட்டி; பன்னிரண்டு - பன்னெண்டு, பண்ட்ரெண்டு; பதின்மூன்று - பதமூடு, பதுமூண்டு; பதினான்கு - பத்னாலுகு, பது நாலுகு; பதினைந்து - பதிஹேனு, பதுனயிது; பதினாறு - பதஹாரு, ப்துனாறு; பதினேழு - பதிஹேடு, பதுனேடு; பதினெட்டு - பத்தெனிமிதி, பதுனெனிமிதி; பத்தொன்பது - பந்தொம்மிதி; இருபது - இருவை, இருவதி; முப்பது - முப்பை, முப்பதி; நாற்பது - நலுபை, நலுவதி; ஐம்பது - யாபை, ஏம்பதி; அறுபது - அருவை, அறுவதி; எழுபது - டெப்பை, டெப்பதி, எண்பது - யெனவை, எனுபதி; தொண்பது - தொம்பை, தொம்பதி; நூறு- நூரு, நூறு; முதல் - மொதட்டி; நாலா - நானா. 22. சுவைப் பெயர் தீம் - தீப்பு; கைது - சேது; காரம் - காரமு; உப்பு - உப்பு; புளிப்பு - புலுசு; துவர் - வகரு. 23. நிறைப் பெயர் பலம் - பலமு; சேர் - சேரு; வீசை - வீச; மணங்கு - மணுகு. 24. நோய்ப் பெயர் தலைநோவு - தலநொப்பி; புண் - புண்ட்டி; குரு - குருப்பு; கட்டி - கட்ட; பெரியம்மை - பெத்தம்மவாரு; சின்னம்மை - சின்ம்மவாரு; திமிர் - திமுரு; காயம் - காயமு; நமை - நவ; காமாலை - காமால; மூலம் - மூலமு; சொறி - சொரி. 2. வினைச்சொற்கள் 1. சில முக்கிய வினைகள் - எண் - எஞ்ச்சு, என்; எரி - எரியு. வா -(வ்)ரா; போ - போ, போவு; நி;ல - நிலுச்சு; பரி (ஒடு) - பரு, பருகெத்து; வணங்கு (வளை) - வங்கு; எடு - எத்து; தின் - தின்னு; படு - படு; எழு - லெய்; ஈ - இச்சு; கொள் - கொனு; தும்மு - தும்மு; உமி, உமிழ் - உமியு; ஊது - ஊது; திருமு - திருகு; அடி - அடிச்சு; போடு - பெட்டு; நகு - நகு, நவ்வு; அழு - ஏடுச்சு; நக்கு - நாக்கு; கூவு - கூயு; விளி - பிலுச்சு; இழு - ஈடுச்சு; தூக்கு - தூக்கு; தட்டு - தட்டு; அதிர் - அதரு; நறுக்கு - நருக்கு; தொளை - தொளச்சு; முழுகு - முணுகு; சா - சச்சு; மாற்றமாடு - மாட்லாடு; நட - நடுச்சு; துடை - துடுச்சு; ஏற்று - எத்து; முடி - முகிஞ்சு; வை - வெய்; பிடி - பெட்டு; வாடு - வாடு; மேய் - மேயு; மற - மருச்சு; ஆள் - ஏலு; முனங்கு - மூலுகு; பாடு - பாடு; பிசை - பிசக்கு; அறி - எருகு; ஒடுங்கு - ஒருகு; பற - பாறு; முதிர் - முதுரு; கரை - கருகு; துண்டி - துண்டிஞ்சு; விழுங்கு - ம்ரிங்கு; பிடுங்கு - பீக்கு; முக்கு - முஞ்சு; பொழி - போயு; நம்பு - நம்மு; தூங்கு - தூகு; வதி - வதிஞ்சு, நீந்து - ஈது; புதை - பூடுச்சு; பூசு - பூயு; கல - கலியு; ஈன் - ஈனு; சிலுப்பு - சிலுக்கு; என் - அனு; சேர் - சேரு; விடு - விடுச்சு; கழுவு - கடுகு; அண்டு - அண்டு; மெச்ச - மெச்சு; புகழ - பொகடு; கலி - கலுகு; பிற - புட்டு; கிள்ளு - கிள்ளு; ஆடு - ஆடு; நெட்டு - நெட்டு; பொரு - பொரு; வித்து - வித்து; தப்பு - தப்பு; கீறு - கீறு; உடம்படி - ஒடம்படு; முட்டு - முட்டு; மோது - மோது; ஒப்பு - ஒப்பு; கட்டு - கட்டு; திட்டு - திட்டு; முத்தமிடு - முத்துப் பெட்டு; மதி - மதி; நீடு - நீடு; விசிறு - விசரு. விசுரு; பரவு - பருச்சு; மொத்து - மொத்து; வேண்டு - வேடு; கூடு - கூடு; அகப்படு - அக்கப்படு, அடங்கு - அடகு; அடுக்கு - அடுக்கு; அனுப்பு - அனப்பு; அமர் - அமரு; ஆறு - ஆறு; ஆராய் - ஆரயு; ஏற்படு - ஏர்ப்படு; உப்பு - உப்பு. 2. வினைச்சொல்வடிவங்கள் செய் என்னும் வினை தமிழ் செலுங்கு பகுதி - செய் சேசு, சேயு ஏவல் ஒருமை செய் சேயி, செய்யி, சேயுமு ஏவல் பன்மை 1. (செய்யுள்) சேயண்டி செய்யுங்கள் செய்யண்டி 2. செய்ம்மின் (படர்க்கை ஆண்பால்) இ.கா. வினைமுற்று செய்தான் சேசினாடு நி.கா. வினைமுற்று செய்கிறான் சேநாடு எ.கா.வினைமுற்று 1. செய்வான் 1. - 2. செய்யும் 2. சேசுனு, சேயினு இ.கா. பெயரெச்சம் செய்த சேசின நி.கா. பெயரெச்சம் செய்கிற சேசே எ.கா. பெயரெச்சம் செய்யும் சேசே நி.கா. பெயரெச்சம் 1. செய்து 1. சேசுகொனி கொண்டுள்ள யுள்ள 2. - 2. சேதுன்ன இ.கா. வினையெச்சம் செய்து சேசி நி.கா. வினையெச்சம் செய்ய சேய, செய்ய எ.கா. வினையெச்சம் செய்யின் சேதே தொடர்ச்சி செய்தல் வினையெச்சம் 1. செய்து 1. சேசுகொனி கொண்டு 2. செய்து 2. சேது கொண்டு தொழிற்பெயர் செய்தல் சேயுட்ட, சேசுட்ட செய்கை சேயடமு செயல் செய்யடமு செயப்பாட்டு செய்யப்படு சேயபடு வினைப்பகுதி தற்பொருட்டு வினைப்பகுதி செய்துகொள் சேசுகொனு பிறவினைப்பகுதி செய்வி சேயிஞ்ச்சு குறிப்பு: 1. செய் என்னும் வினையின் தெலுங்கு வடிவங்களிலெல் லாம் முதல் சகரத்தை ச்சு என்றாற்போல வலிதாய் உச்சரிக்க. 2. அடம் என்னும் தொழிற்பெயர் விகுதி தமிழுக்கு முண்டு. ஆகு என்னும் துணைவினைத் திரிவு தமிழ் தெலுங்கு பகுதி ஆ, ஆகு அவு ஏவல் ஒருமை ஆகு கா, கம்மு ஏவல் பன்மை (ஆகும்) (படர்க்கை ஆண்பால்) ஆகுங்கள் கண்டி இ.கா. வினைமுற்று ஆயினான் அயினாடு நி.கா. வினைமுற்று ஆகிறான் அவுத்தாடு எ.கா. வினைமுற்று 1. ஆவான் 1. - 2. ஆகும் 2. அவுனு இ.கா. பெயரெச்சம் ஆயின அயின நி.கா. பெயரெச்சம் ஆகிற அய்யே எ.கா. வினையெச்சம் ஆகும் அய்யே இ.கா. வினையெச்சம் ஆய், ஆகி அயி நி.கா. வினையெச்சம் ஆக கா எ.கா. வினையெச்சம் ஆயின், ஆனால் அயித்த தொடர் வினையெச்சம் 1. ஆய்க் அயிக்கோனி கொண்டு 2. ........... 2. அவுத்து தொழிற்பெயர் ஆதல், ஆகைஅவுட்ட, காவடமு கட்டளைவினை ஆகவேளும் காவாலh (ஆகவேண்டும்) எதிர்மறைவினை ஆகாது காது விலக்கிணைப்புச் சொல் ஆயினும் அயின்து இணக்கவிடைச்சொல் ஆம்(ஆகும் அவுனு கவனிப்பு: ஆகு என்பது தெலுங்கில் க்+ஆ என்று பிரிந்து முன்பின்னாய் மாறி, ‘காvனïலக்கணப்போலி(Metathesis) aதல்fண்க.MF§fŸ என்பதில் ங்கள் என்னும் கூறு ண்டி என்றாதலையும் கவனிக்க. பெயரெச்சங்கள் சின்ன - சின்ன; பெரிய - bபத்த;bகட்ட- bசட்ட;nவறு,nவறே- nவரே;bவற்று- tட்டி;Úள,Úடிய- Úடுத;Fறு- Fருச்ச;உள்ள- cன்ன;ïலாத- nலனி;òது- bகாத்த;gழைய- gத்த;mரு- mருது,ïள- vல;vல்லா- vல்ல;xண்டி- xண்ட்டி.Éidba¢r§fŸ மெள்ள - மெல்லகா; சரியாய் - சரிகா; முற்றிலும் - பொட்டிகா; முந்தி - முத்துகா; கெட்டியாய் - கட்டிகா; மிகுதியாய் - மிக்கிலிகா. இடைச்சொற்கள் ஏ - ஏ; ஒ- ஓ; ஆவா, ஆகா - ஆஹா, ஓகோ - ஓஹோ; அடே - அரே; அக்கடா - அக்கடா; அப்பா - அப்பா; ஐயோ - அய்யோ; மற்றும் - மறியு; மறித்தும் - மரல; சரி - சரி; குறித்து - குரிஞ்சி; முந்தி - முந்து; அதோ - அதிகோ. உம் - உன்னு, னு னி யு; கள் - லு;ங்கள் - ண்டி. கூட - கூடா; கு - கு, கி; மீது - மீத; கீழ் - கிடந்த; மேன - பயின; பின்னுக்கு - வெனுக்க; உள் - லோ; உள்ளுக்கு - லோக்கி; உளுப்பட - லோபல. கடு (மிகு); வடி (கூர்) - வாடி; சால் - சாலு; சீர்த்தி, கீர்த்தி - கீர்த்தி குறிப்பு: தமிழில் உரிச்சொல்லாயிருப்பவை தெலுங்கிலும் உரிச்சொல்லா யிருக்கவேண்டும் என்னும் யாப்புறவில்லை. உலகவழக்கற்ற செய்யுட் சொல்லே அல்லது செய்யுட் பொருள் பட்ட சொல்லே உரிச்சொல்லென் றறிக. சொற்றொடர் தனித்திரவிடச் சொற்றொடர் ஆ சின்னவாடு இப்புடு வ்ராதுன்னாடு = அச் சிறுவன் இப்போது வரைந்து (எழுதிக்) கொண்டிருக்கின்றான். எல்லுண்டி ஆவுலு ஆ பொலமுலோ மேற்தவி = நாளை நின்று ஆக்கள் அப் புலத்தில் மேயும். இதிவரக்கு செப்பின பனி நீவு சேயக போகா இங்க்கா பனி எட்ல இதானு = இதுவரைக்கும் சொன்ன பணி நீ செய்யாமலிக்க (செய்யாது போக) இன்னும் பணி எப்படிக் கொடுக்கிறது (கொடுப்பேன்)? நேனு அதனிக்கி ஆ புதகமு இச்சினானனி மீத்தோ எவரு செப்பினாரு? நான் அவனுக்கு அப் பொத்தகத்தைக் கொடுத்தே னென்று உனக்கு எவர் சொன்னார்? ஆரியங் கலந்த சொற்றொடர் நேனு ஆ பனி சேயலேக்க போயினந்துன, ஜீதமு இவ்வகுண்டா வெள்ளகொட்டினாடு = நான் அப்பணி (வேலை)யைச் செய்யாது போனதினால், எனக்குச் சம்பளம் ஈயாமல் (கொடாமல்) துரத்திவிட்டான். வெள்ளகொட்டு = போகடி. ஆயன பாக்யவந்துடை உன்னப்பட்டிக்கி, தரித்துருனிவலெ ப்ரவர்த்திதுன்னாடு = அவர் செல்வராயிருந்தாலும் வறியவர் போல நடக்கிறார். ஈரோஜு படவலு ரெண்டு கண்ட்டலதாகா உண்டக, த்வரகா வெள்ளிப் போயினவி = இன்றைக்குப் படகுகள் இரண்டு மணி வரைக்கும் இராமல் சுருக்காய்ப் போய் விட்டான். வர்த்தகமுவல்ல மீக்கு சாலா லாபமு கலுகுத்துன்னதா? வாணிகத்தால் உமக்குச் சாலவும் ஊதியம் பெருகுகிறதா? ஒரு கதை (பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும்) ஒக்க ஊரிலோ ஒக்க ப்ராஹ்மணுடு கலடு. அதனிவத்த ஒக்க முங்கி உண்டெனு. அதடு தான்னி பஹுஜாக்ரதகா பெஞ்ச்சுதூ உண்டெ. ஒக்கநாடு அதனிகி ஒக்க ஊரிகி போவலசின பனி வச்சினதி, கனுக, ஆ முங்கினிதனபாந்யக்கு ஒப்பகிஞ்சி போயெனு, மருநாடு மெதன பிட்டனு தொட்லலோ நித்ரபுச்சி, ஆ முங்கினி தொட்லதகிர காவலி உஞ்ச்சி. நீள்லு தோடுகொனி ராவடானக்கு வெள்ளிதி. அந்தலோ பிட்ட நித்ரிதூ உண்டே தொட்லவத் திக்கி ஒக்க பாமு வச்செனு, ஆ முங்கி ஆ பாமுனு பட்டி துண்டெமுலு சேசி பாரவேசி, ஜரிகின சங்கதி தல்லிக்கி தெலியச் சேயடானக்கு ஆமெவத்திக்கி வெள்ளினதி. அப்புடு ஆமெ முங்கி மூத்திக்கி அண்டுக்கொனி உன்ன நெத்துரு சூச்சி, அதி தன பிட்டனு கரிச்சி சம்பினதி அனி தலஞ்ச்சுகொனி, ஆ முங்கினி கொட்டி சம்பெனு, தருவாத்த இண்டிக்கி போயி, தொட்லலோ சுகமுகா நித்ரபோத்தூ உன்ன பிட்டனுன்னு தொட்லவத்த முங்கி பட்டி சம்பின பாமுனுன்னு சூச்சி, சாலா துக்கப்ப்படெனு. இதன் மொழிபெயர்ப்பு - ஓர் ஊரிலே ஒரு பார்ப்பனன் இருந்தான். அவனிடம் ஒரு மூங்கா (கீரி) இருந்தது. அவன் அதை மிக விழிப்பாய் வளர்த்திருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஓர் ஊருக்குப் போகவேண்டிய பணி (வேலை) வந்தது. ஆகையால் அம் மூங்காவைத் தன் மனைவியிடம் ஒப்புவித்துப் போயினான். மறுநாள் அவள் தன் பிள்ளையைத் தொட்டிலிலே தூங்க வைத்து, அம் மூங்காவைத் தொட்டிற் பக்கம் காவல் வைத்து நீர் (தண்ணீர்) இறைத்துக்கொண்டு வருவதற்குப் போனாள். அதற்குள், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தபோது தொட்டிற் பக்கம் ஒரு பாம்பு வந்தது. அம் மூங்கா அப் பாம்பைப் பற்றி (பிடித்து)த் துண்டஞ்செய்து போட்டுவிட்டு நடந்த செய்தியைத் தாய்க்குத் தெரியப்படுத்துவதற்கு அவளிடம் போனது. அப்போது அவள் மூங்காவின் மூஞ்சியில் ஒட்டிக்கொண்டிருந்த நெய்த்தோரை (அரத்தத்தை)ப் பார்த்து, அது தன் பிள்ளையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டு, அம் மூங்காவை அடித்துக் கொன்றுவிட்டாள். பிறகு. இல்லத்திற்குள் போய்த் தொட்டி லிலே நலமாய்த் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையையும், தொட்டிற் பக்கம் மூங்கா பற்றிக்கொன்ற பாம்பையும் பார்த்துச் சாலவும் வருந்தினாள். (உஞ்ச - உண்டு என்பதன் பிறவினை. உன்ன = உள்ள). தெலுங்குத்திரிபு விளக்கம் தமிழுக்கும் தெலுங்குக்கும் பல சொற்கள் பொதுவாயிருப்பினும், அவற்றுள் எது எதினின்று வந்ததென்று ஆராய்ச்சியில்லாத தார்க்குத் தோன்றாதிருக்கலாம். ஒரு சொல்லின் இருமொழி வடிவங்களின் பொருளையும் வேரையும் ஆராயின், எது இயற் (Primitive) சொல் எது திரி (Derivative) சொல் என்று அறிந்து கொள்ளவும். வெண்ணெய் (வெள்+நெய்) என்பது தமிழில் வெள்ளையான நெய் என்று பொருள்படுவது. இதன் திரிபான வென்ன என்னும் தெலுங்குச் சொல் இப்பொருளைத் தருவதன்று. தம்முன் (அண்ணன்) என்பதற்கு எதிராகத் தமக்குப்பின் பிறந்தவனைத் தம்பி என்றனர். அது தம்பி என உலக வழக்கில் கடைக்குறையாய் வழங்குகின்றது. ஆனால், தெலுங்கிலோ தம்முடு எனத் திரிந்து வேர்ப்பொருளிழந்துவிட்டது. தமிழ்ச் சொற்கள் தெலுங்கில் திரிந்துள்ள முறைகள் 1. எழுத்துத் திரிபு இ-எ : கோணி - கோனெ; விலை - வெல; திரை- தெர. உ-அ : ஊற்று - ஊட்ட; பாட்டு - பாட்ட: தட்டு - தட்ட; போக்கு - போக்க. உ-ஒ : புகை - பொக; உடல் - ஒடலு; குழி - கோயி; முனை - மொன; குனை - கொன; முளை - மொலி; உரை-ஒர. ஐ-அ : பொம்ம, உவம, குளிக, குப்ப, பக, மந்த, ஒட்ட, நட, மகிம, தீர்வ, கட, குத்தக, வல, மூல, கொள்ள, மாத்ர, அமரிக்க, போலிக்க (போலுகை) தொல, அல, நடத்த, வாடுக்க, வேதன, நிலுவ, சால, சேரிக்க (சேர்க்கை), விடுதல, ஒடம்படிக்க, நம்மிக்க, இட்டிக, தார, மூட்ட, வேடுக்க, தண்டன, வேட்ட, தெர்ரவ (தெரிவை), முதலிய ஏராளமான தெலுங்குச் சொற்கள் தமிழில் ஐகார வீற்றன. ஐ-எ : கட்டை - கட்டெ; திண்ணை - தின்னெ. ண-ன : எண்ணிக்கை - என்னுக்க: துணிக்கை - துனக்க: காணிக்கை - கானுக்க ந-ம : நீர் - மீரு: நாம் - மேமு. ய-ச : உயிர்-உசுரு; பயறு - பெசலு. ழ-ட : நீழல் - நீட; பாழ் - பாடு; மேழி - மேடி; ஊழியம் - ஊடிகமு; நாழி - நாடி. ற-ர : வேறு - வேரு; மீறு - மீரு. ற்ற-ட்ட : ஊற்று - ஊட்ட; புற்று - புட்ட; மாற்றம் - மாட்ட; சுற்று - சுட்டு; பற்று - பட்டு; தேற்றம் - தேட்ட. ன்ற-ண்ட : என்று (வெயில்) - எண்ட; ஒன்றி - ஒண்டி. சில சொற்கள் முதல் வேற்றுமையில் றகரமும் திரி வேற்றுமையில் இரட்டித்த டகரமும் பெறும். எ-டு : நூறு - நூறு;நூற்று - நூட்ட. 2. சொல் திரிபு 1. ஈறுகேடு : ஒரம் - ஒர; தெப்பம் - தெப்ப; சாயம் - சாய, மாயம் - மாய; பொத்தல் - பொத்த; அஞ்சல் - அஞ்செ. 2. ஈறுமிகை : தெய்வமு, கோணமு, ஏலமு, பக்கமு, பாகமு,சுங்கமு, மேனமு, கீலு, காரு, மதமு, கொட்டமு, நூலு, சமமு, கனமு, கூட்டமு, வேகமு, பட்டமு, தீபமு, பாடமு, கொஞ்சமு, பேரு, கோபுரமு, குலமு, நாளமு, களங்கமு, உருமு (இடி), பிசினி, பள்ளமு, சின்னமு, பந்தாரமு, கலகமு, கடினமு, மயிக்கமு, மொத்தமு, நாடகமு, குடும்பமு, ஒப்பந்தமு, காவலி, மந்தமு முதலிய எண்ணிறந்த சொற்கள் தமிழில் மெய்யீறாய் வழங்குவன. 3. தொகுத்தல் : திருப்பு - திப்பு; திருத்து - தித்து; உருண்டை - உண்ட; விருந்து - விந்து; சுருட்டு - சுட்ட; மருந்து - மந்து; வணக்கு (வளை) -வாங்கு; காய்ச்சு - காச்சு. 4. இலக்கணப்போலி (Transposition or Metathesis) : அவன் - வாடு; அவர் - வாரு, காரு; இவன் - வீடு; இவர் - வீரு; இலது - லேது; நாம் - மனமு; அறை (கல்) - ராய்; உள் - லோ; ஆக - கா. எழுதி - டெப்பதி; அரசு - ராஜு; எழு - லெய். அவன் என்பதிலுள்ள அவ் என்னும் பகுதி வ் + அ என்று மாறிப் பின்பு னகர வீறு டகர வீறாய் வாடு என்னும் வடிவம் பிறந்தது. இங்ஙனமே பிறவும். சில தெலுங்குச் சொற்கள் முதல் வேற்றுமையில் திரியாதிருந்து பிற வேற்றுமையில் திரியும். எ-டு: மு.வே. பி.வே. மு.வே. பி.வே. அதி தானி அவி வாட்டி இதி தீனி இவி வீட்டி ஏதி தேனி ஏவி வேட்டி 5. உயிரிசைவு மாற்றம் (Harmonious Sequence of Vewels): சொற்களிலுள்ள உயிர்கள் முன் பின் வரும் உயிர்களுக்கேற்றபடி மாறுதல் உயிரிசைவுமாற்றம் எனப்படும். தமிழில் இ ஈ ஏ ஐ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகக்கொண்ட பெயர்களின் 4ஆம் வேற்றுமை உருபு கி எனத் திரிந்தும், பிறவீற்றைக் கொண்ட பெயர்களில் கு எனத் திரியாதும், உலக வழக்கில் வழங்குகின்றன. எ-டு: கிளிக்கி, கடைக்கி, வீட்டுக்கு, பலாவுக்கு. இங்ஙனமே தெலுங்கில் கத்தி என்பது பன்மையில் கத்துலு என்று திரியும். பதில் திகில் என்பன முறையே பதுலு திகுலு என்று திரியும். சிறியிலை, பொதியில், அடிசில், கோயில் என்னும் தமிழ்ச்சொற்களும் இம் முறை பற்றியனவே. 3. பொருள் திரிபு சொல் தமிழ்ப் பொருள் தெலுங்குப் பொருள் செப்பு விடை சொல் சொல் ஈ தாழ்ந்தவனுக்குக் கொடு கொடு கொட்டு மேளம் அடி அடி உண்டு உள்ளது இரு குக்கல் குள்ள நாய் நாய் 4. இயற்கைத் தெரிப்பு (Natural Selection) வீடு, மனை, இல், குடி, அகம், பள்ளி முதலிய பல விட்டுப் பெயர்களில் இல் என்பதையும், மூங்கில், கழை, பணை, வேய், அமை, வெதிர், வேழம் முதலிய பல மூங்கிற் பெயர்களில் வெதிர் என்பதையும் தெலுங்கு தெரிந்துகொண்டது இயற்கைத் தெரிப்பாகும். 5. விதப்புச் சொற்கள் 1. மறைந்த வேரின : சதுவு, அம்மு (Sell) முதலியன. 2. மறையா வேரின : திகு (இறங்கு), வம்பு (வளைவு) முதலியன. இ > திரு. வள் < வம்பு. 6. மொழிபெயர்ப்புச் சொற்கள் புகையிலை - பொகாக்கு; நாய்க்குடை (காளான்) - குக்க கொடுகு. 7. தொடர்ச் சொற்கள் கட்டுக்கத, கட்டுமானு, கட்டுமூட்ட,தூக்குமானு, இதிவரக்கு, தப்பிஞ்சுக்கொனிப்பரு, தெலியப்பருச்சு, வென்னெலெ (வெண்ணிலா), வெலுப்பலகா (வெளிப் படையாய்), குண்டுச் சூதிவிடி கத, நிட்டூர்ப்பு (நெட்டுயிர்ப்பு), சரியயின, சோமாரி, (சோம்பேறி), ஊனுகோல, திட்டி வாக்கிலி (திட்டிவாசல்), தேனெ கூடு, கோக்கிரி, கட்டக்கட்டு, கொனியாடு (கொண்டாடு), நெலமாளிகா, கட்டெநிப்பு, ஒடச்சரக்கு, ஏற்பரச்சு, பட்டங்கட்டுமு, செல்லுச்சீட்டி, இட்டகுமுந்து, ஒண்டுவிடிச்சின, யொகட்டி, மிக்கிவிகானுண்டு, கூடப்போ, நிலிப்பிப்பெட்டு, கனிப்பெட்டு (கண்டுபிடி), முந்துப்போயின, தப்புலேதனுட்ட, நெரவேர்ச்சு, மூக்குப்பொடி, முளுகோல, ஏற்பாடு, சேயு முதலிய எண்ணிறந்த தொடர்மொழிகள் தமிழ் முறையின. 8. வாக்கியங்கள் தெலுங்கு எவ்வளவு திரிந்திருப்பினும், இன்றும் பல வாக்கியங்கள் தமிழ்ச்சொற்களாலேயே அமைவன. தமிழ் : அவருக்கு இருவர் பிள்ளைகள். தெலுங்கு : வாரிக்கு இத்தரு பில்லகாயலு. தமிழ் : அப் பணி செய்கிறதற்கு உனக்குப் பத்து உருபா ஈகிறேன். தெலுங்கு : ஆ பனி சேசேதானிக்கு நீக்கு பது ரூபாயிலு இதானு. 9. திரியாச் சொற்கள் முனி, மஞ்சு, கணக்கு, ஒட்டு (oath), சேக்கு, அச்சு, மதி, தொட்டி, பொடி, சாக்கு, எதிரி, துண்டு, வித்து, பட்டி (list), தப்பு, பொட்டு, வெறி, கூலி, சக்கிமுக்கி, கொக்கி, கொண்டி, முடி, காந்தி, மட்டுப்படு, போராடு, பாசி, கொடி, மப்பு, தீர்ப்பு, வசதி, கருக்கு முதலிய எண்ணிறந்த சொற்கள் இன்றும் இருமொழியிலும் ஒரே வடிவாய் வழங்குகின்றன. 10. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) தெலுங்கில் ஆ, ஈ முதலிய நெடுஞ்சுட்டும் ஏ என்னும் நெடுவினாவும் ஏடு (ஆண்டு), சச்சி (செத்து) முதலிய சில சொற்களும் தொன்னிலையி லுள்ளன. இங்ஙனம் ஒரு சில சொற்கள் மட்டும் தெலுங்கில் தமிழினும் இயற்கை நிலையிலுள்ளன. இந்நிலை குடியேற்றச் சொற்காப்பின் பாற்படும். (தி.தா.) தெளிதேனும் களி மதுவும் உண்டற்குரிய நீரும் நீர்ப்பொருளும்; கல் மண் தூசி துப்பட்டை ஈ யெறும்பு முதலிய பிற பொருள்களோடு கலந்திருப்பின், அவற்றை நீக்கித் தெளிந்த நிலையில் உண்ணுவது வழக்கம். பாண்டிநாட்டில் பதநீர் என்றும் சோழ கொங்கு நாடுகளில் தெளிவு என்றும் சென்னையில் பனஞ்சாறு என்றும் சொல்லப் படும். இனிய பனைநீரை இங்ஙனம் வடித்தெடுப்பது இன்றும் கண்கூடு. தேனையும் இங்ஙனம் தெளிவிப்பதால் தெளிதேன் என்னும் வழக்கெழுந்தது. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிலை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் என்றார் ஔவையாரும். தேனும் தேன்வகையுமான இன்னீர்களும் மயங்கத் தருவதும் தராததுமாக இருவகையுள. கள்ளும் மதுவும் மயக்கந் தருவன; தேனும் தெளிவும் மயக்கந் தராதன. ஒரே பொருளான பனஞ்சாற்றின் இரு நிலைகளுள்: கள் மயக்கந் தருவதையும் தெளிவு அதைத் தராமையையும் நோக்குக. ஆகவே, தேனும் தெளிவும் பொருட்டெளிவால் மட்டுமன்றி அவை விளைக்கும் புலத் தெளிவாலும் அப் பெயர் பெற்றன. கள் = புலனைக் களவு செய்வது, கள் - களி. களித்தல் = வெறித்தல். மது = மதப்பை உண்டுபண்ணுவது மதப்பு - மயக்கம். மத = மதம் = மதுக்களிப்பு, வெறி, தேன். மதம் = மதர். மதர்வு = மயக்கம், களிப்பு மதர்வை = மயக்கம், களிப்பு, செருக்கு. மதம் = மதன் = செருக்கு, காமம், மதனம் - மதனன் = காமுகன். மதம் - மதார் = செருக்கு மதம் - மதத்து = வெறி தரும் கூட்டு மருந்து. மது - மத்து = மயக்கம் தருவது, ஊமத்தை. மத்து - மட்டு = கள், தேன். மது - மதுர் - மதுரம் = இனிமை. மதுர் - மதுரி. மதுரித்தல் = இனித்தல். மது என்பது வெறிதரும் தேனேயாதலாலும், வெறி தரும் குடிப்புகள் சில இனிமையூட்டப்படுவதினாலும், கள், மது, தேன், தேறல் (தெளிவு) முதலிய சொற்கள் தம் பொதுவான இயல்பிற்கு மாறாகவும் பொரு ளுணர்த்தும். கள் = தேன். மது = தேன். தேன் = கள். தேறல் = கள். இங்ஙனம் உணர்த்தினும் இச் சொற்கள் தம் வேர்ப்பொருள் மாறா. கள், மது என்னும் சொற்களின் வேர்ப்பொருள்கள் மேற்காட்டப்பட்டது. இனி, தேன், தெளிவு, தேறல் என்னும் சொற்களின் சொல்லியல் வரலாறு வருமாறு: தெல் - தென் - இனிமை. ஒ.நோ: வெல் - வென் - வெற்றி. தென்னிசை பாடும் பாணன் (திருலாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். 56 : 7) தென் என்னும் சொல் முதலாவது தெளிவு என்று பொருள்பட்டு, பின்பு தெளிவான தேனையும், தேனின் சுவையான இனிமை யையும் உணர்த்திற்று. தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு = தெளிவு. தெளிவு என்பது முற்கூறிய வாறு பொருட்டெளிவு, மனத்தெளிவு ஆகிய இரண்டிற்கும் பொதுவாதலால், தெம்பு என்பது உலகவழக்கில் மனத்தெளிவை உணர்த்திற்று. ஒ.நோ: நல் + பு = நன்பு (நன்மை) தெல் - தெள் - தெளி - தெளிவு. தெல் - (தெர்) - தெரி. தெரிதல் = தெளிவாய்த் தோன்றுதல், புலனாதல். (தெர்) - தெருள். தெருள்தல் = தெளிதல். சொல்லாக்கத்தில், லகர ளகர மெய்கள் ரகர மெய்யாகத் திரிவது பெரும்பான்மை. எ-கா: சாம்பல் - சாம்பர், கள் - (கர்) - கரு - கருப்பு. தெள் - தெறு - தெற்று. ஒ.நோ: வெள் - வெறு - வெற்று, வெள்ளிலை - வெற்றிலை தெற்று = தெளிவு, தேற்றம். தெற்றென = தெளிவாக யானுந் தெற்றென வுணரேன் (அகம்.48). தெற்றெனவு = தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54). தெற்றென்னுதல் = தெளிதல். தெற்றென்க மன்னவன் கண் (குறள் 581). தெற்றல் = அறிவில் தெள்ளியவன். இனையரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல் (திவ். பெயீய திருமொழி 11:4:9) தெரு - தேறு, தேறுதல் = தெளிதல். தேறு = தெளிவு, தேற்றம், தேற்றாங்கொட்டை. தேறு - தேறல் = தெளிவு, தேன், தெளிந்த கள். தேறு - தேற்று = தெளிவு, தெளிவிக்கை, நீரைத் தெளிவிக்கும் தேற்றாங் கொட்டை. தேற்றுதல் = தெளிவித்தல். தேற்று - தேற்றன்மை = தெளிவு. தேற்று - தேற்றம் = தெளிவு, உறுதி. தேற்று - தேற்றரவு = தேற்றுகை. தேற்று - தேற்றன் = தெளிந்த (உண்மையான) அறிவுள்ளவன். தேற்றனே தேற்றத் தெளிவே (திருவாச. 1:82) தென் - தேன் = மது, கள், இனிமை. தேன் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் தெளிவு (தெளிந்தது) என்பதே. தேம் - தேம் =1. தேன். தேம்படு நல்வரை நாட (நாலடி. 239) 2. கள் (சூடா.). 3. இனிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக.12) ஒ.நோ: மேன்பாடு - மேம்பாடு. தேம் - தீம். 1. இனிமை (பெயர்). தீங்கதிர்த் தோற்ற மென்னவே (சீவக.2419) 2. இனிய (பெயரெச்சம்) நெருநலும் தீம்பல மொழிந்து (அகம். 239) ஒ.நோ: தேய் - தே - தீ (நெருப்பு) தீம் - தீமு - தீவு, தீவுதல் = இனித்தல், இனிமையாதல். ம-வ. போலி, ஒ.நோ: தாமணி - தாவணி. நாம் - நாவு (கன்னடம்). தீவிய = இனிய (செ.எ) இனியவை (பெ.) செவ்விய தீவிய சொல்லி (கலித்.19) தீவியது - தீயது = இனியது (யாழ். அக.) தீவம் - தீயம் = இனிமை (யாழ். அக.) ஒ.நோ: தீவர் - தீயர். இனி, தீவியம் - தீவம் - தீயம் என்றுமாம். ஒ.நோ: ஓவியம் - ஓவம். தீவு - தீ. தீப்பு = இனிப்பு (தீ + தீ) - (தீத்தீ) - தித்தி, தித்தித்தல் = இனிமை. ஒ.நோ: (சீ + சீ) - சீச்சீ - சிச்சி சிச்சி யெனத்தன் மெய்ச்செவி பொத்தி (கம்பரா. மாரீசன்.76) நெடின்முதற் சொல்லும் தனிநெடிற் சொல்லும் நிலைமொழி வருமொழியாக நின்றும் வந்தும் புணரும்போது, அந் நெடில்கள் ஒரோவிடத்துக் குறுகும். எ-கா. மேன் + மேலும் = மென்மேலும். ஆ + பீ = ஆப்பி தனி நெடிற்சொற்கள் இரட்டிப்பின், அதாவது தம்முன் தாம்வரின், இரண்டும் ஒரோவிடத்துக் குறுகும் என்பது. சிச்சி, தித்தி முதலிய புணர்ச்சொல்லில் நிலைமொழி மட்டுங் குறுகிற்று. இதுகாறும் கூறியவற்றால், தேன் என்னும் சொல் தெளிவு என்னும் வேர்ப்பொருள் கொண்ட, தென்சொல்லென்றும்; அது முறையே தேம் - தீம் - தீவு எனத் திரியுமென்றும்; தீ என்னும் பகுதி இரட்டிக்குமிடத்து தித்தி என மருவிப் புணரு மென்றும்; தமிழ்ச்சொற்களைத் தமிழடிப்படையாகவே ஆய்தல் வேண்டு மென்றும்; பண்டைத் தனித்தமிழ் நூல்களும் பல்லாயிரக்கணக் கான தென்சொற்களும் மறைந்து, இன்றுள்ள இலக்கண நூல்களும் விளங்காதவிடத்து, மொழித்திறத்தின் முட்டறுப்பது மொழி நூலேயென்றும்;கள், மது என்னும் சொற்கள் மயக்குவது என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட தென்சொற்களென் றும்: தமிழே திரவிடமாகத் திரிந்துள்ளதென்றும்; வடமொழியில் வழங்குந் துணையானே ஒரு சொல் வடசொல்லாகி விடாதென் றும்; தெற்றெனத் தெளிந்துகொள்க. தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் (புறம். 392) பாம்பு வெகுண்டன்ன தேறல் (சிறுபா. 237) என வருமிடமெல்லாம், பெரு மயக்கஞ் செய்யும் கடும் புளிப்பான மதுக்கள் குறிக்கப்படின், ஆண்டுத் தேறல் என்பது தெளிவாக அரித்தெடுக்கப்படும் பொருட் டெளிவைக் குறிக்குமாதலின் தெளிவுக்கருத்து அங்கும் பொருந்துவ தென்றே தெளிக. அரித் தெடுக்கப்படுவதனாலேயே அரியல் எனப் பெயர்பெறும். சாலி என்னும் செந்நெல்லரிசியினின்று இறக்கப்படும் கள் சான்று எனப்பட்டது என்பது அறிஞர் கருத்து. (குயில் 25.8.1959) தென்சொல் மூலத் திரிசொற்கள் 1. குறிப்பொலிச் சொல் எ-டு: தமிழ் வடமொழி திருதிரு த்ருச் (இ.வே) =பார் பசபச பச் (இ.வே.) = ,, 2. மருஉ எ-டு: தமிழ் வடமொழி அருந்து அத்(d) - இ.வே. 3. சிதைவு எ-டு: தமிழ் வடமொழி செவியுறு ச்ரு (இ.வே.) 4. மேற்படை வளர்ச்சி எ-டு: தமிழ் வடமொழி கரணம் கரண - காரண, கார்ய முகம் முக - முக்ய (அ.வே.) 5. விரிப்பு எ-டு: தமிழ் வடமொழி கரு கர்ப்ப (garbha) - இ.வே. வரி(நெல்) வ்ரீஹி (வ.வ.) தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள் எ-டு. தமிழ் வடமொழி உ+தூளி+ உத் (d) + தூலன (dh) = உத்தூலன கும்+பிண்டம்+சரணம் ஸபிண்டீகரணம் கும்ம - L கும் - Gk சிம் - (sym) - Skt ஸம் -ஸ (வ.வ). 6. தொழிற் பெயர் வினைமுதலாதல் எ-டு. தமிழ் வடமொழி வள்-வட்டு-வட்டம் வ்ருத் = திரும்பு, வளை. குரு-குருத்தல்=சினத்தல் க்ருத் (dh)=ád. இவ்வியல்பு மேலையாரியத்திலும் அமைந்துள்ளது. வ்ருத் - L vertere, Slav vruteti, vratite, Lith vartyti, Goth wairthen, Ger werden E-ward. 6. மொழிபெயர்ப்புச் சொற்கள் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி அங்குற்றை தத்ரபவத் நிலை தாய் ஆனைத் ஹதிப்பிப் நூற்றுவரைக் சதக்நீ திப்பிலி பலி கொல்லி இங்குற்றை அத்ரபவத் புள் சகுந இடையினம் அந்தத பூப்பு புஷ்ப உடனே ஸகயா காண்வரு தர்சநீய பொறாமை அக்ஷமா காலதர் வாதாயந மன்பதை ஜனபத கேள்வி ச்ருதி (இசையலகு) மான்றலை ம்ருக சீர்ஷ கைம்மா ஹதிந் விலங்கு த்ரியக் (வ.வ) அறுபருவப் பெயர் வேத ஆரியரின் முன்னோர் இருந்த வடமேலை நாடுகட்கு, இளவேனில் (Spring), கோடை (Summer), வறளை (Autumn) மாரி (Winter) என்னும் நாற் பெரும்பொழுதே, உரியன. தென்னாடு வந்து தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, தமிழகத்திற் குரிய அறுபெரும் பொழுதுகளையும் ஆரியர் மொழிபெயர்த்துக் கொண்டனர். தமிழ் வடமொழி தமிழ் வடமொழி இளவேனில் வஸந்த்த கூதர் சரத் முதுவேனில் ¡ßZk(g) முன்பனி அச்சிர கார் வர்ஷ பின்பனி ஹேமந்த்த (வ.வ.) எழுகிழமைப் பெயர் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி ஞாயிறு ஆதித்ய வியாழன் ப்ருஹபதி திங்கள் ஸோம வெள்ளி சுக்ர செவ்வாய் அங்கார, அங்காரக காரி (சநி) அறிவன் புத (b, dh) (வ.வ.) பன்னீரோரைப் பெயர் தமிழ் வடமொழி இலத்தீனம் வேழம்(மேடம்) மேஷ Aries விடை வ்ருஷப Taurus இரட்டை(ஆடவை) மிதுன Gemini கடகம் கர்க்கடக Cancer ஆளி(மடங்கல்) ஸிம்ஹ Leo கன்னி கன்ய Virgo துலை துல Libra நளி வ்ருச்சிக Scorpio சிலை தநு (dh) Sagittarius சுறவம் மகர Capricorn கும்பம் கும்ப (bh) Acquarius மீனம் மீன Pisces (வ.வ.) இன்று தமிழ்நாட்டில் வழங்கும் கணித (ஜோதிட) நூல், குமரிநாட்டிலேயே தமிழரால் முற்றும் அறியப்பட்டுவிட்டது. அதை வழிவழி கையாண்டுவந்த வள்ளு வரைத் தீண்டாதவ ரென்று தாழ்த்தி, ஆரியர் பெரும்பாலும் தமக்கே அந்நூலாட்சியை உரிமையாக்கிக் கொண்டனர். எழுகோள்களும் இருபத்தேழு நாண்மீன்களும் ஓர் ஆண்டு வட்டத்தை யமைக்கும் பன்னிரு திங்கட்குரிய பன்னீரோரை களும், தமிழர் கண்டவையே. இன்று உலக முழுவதும் வழங்கி வரும் எழுகோட் பெயர்களைக் கொண்ட எழுநாட் கிழமை யமைப்பு, தமிழரதே. ஆரியர் வந்தபின் அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இருகிழமைப் பெயர்கள் வழக்கு வீழ்த்தப்பட்ட தால், பண்டைத் தமிழர் ஐங்கோளே அறிந்திருந்தனர் என்று கால்டுவெலார் பிறழ்ந்துணரவும், அதனால் உலக முழுவதும் தமிழ் நாகரிகத்தைத் தாழ்வாகக் கருதவும், நேர்ந்துவிட்டது. பன்னீரோரைப் பெயர்களுள், மிதுன, ஸிம்ஹ, வ்ருச்சிக, தநு, மகர என்னும் ஐந்தே மொழிபெயர்ப்பாகும்; ஏனையவெல்லாம் எழுத்துப் பெயர்ப்பே. குமரிக் கண்டத்தில் பன்னீரோரைப் பெயர்களே பன்னிருமாதப் பெயர்களாய் வழங்கி வந்தன. ஆரியர் வந்தபின் அவை நாட்பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. 7. இரு பிறப்பிச் சொற்கள் (Hybrids) எ-டு: அல்(த.) + சிசிர (வ.) = அச்சிர (முன்பனி) கடா(த.) + அக்ஷ(வ.) = கடாக்ஷ (கடைக்கண்) கடை என்பது கட அல்லது கடா (t) எனத் திரிந்தது. கடாக்ஷி = கடைக்கணி. கட (t) என்னும் தனிச் சொல்லையும், கடைக்கண் பார்வை என்னும்பொருளில் பாகவத புராணம் ஆண்டுள்ளது. (வ.வ.) 8. மயக்கச் சொற்கள் (1) மருளற் குரியவை ஆசை - ஆசா (அ.வே.) ஆசு = பற்று. ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ (புறம்.235). ஆசு - ஆசை = பற்று, விருப்பம், அவா. ஒ.நோ: பூசு - பூசை (பூனை). பொற்கொல்லர் பொன்னணி கலத்திடையே இடும் பற்றும் ஆசெனப்படுதல் காண்க. (வ.வ). ஆசிடையிட்ட எதுகை என்னும் செய்யுள் தொடையமைப் பையும் நோக்குக. பற்று என்னுஞ் சொல் பற்றும் அல்லது பற்றப்பெறும் பொருளைக் குறித்தல் போன்றே, ஆசு என்னும் சொல்லும் ஆசிற்குரிய பொருளைக் குறிக்கும் என்க. அள் - அண் - அடு - (அசு). அள் = பற்றிரும்பு. ஆக - ஆசி. ஆசித்தல் = அவாவுதல். வடவர் ஆசா என்னும் சொல்லை ஆ - சா எனப் பகுத்து, ஆ - சம் என்பதன் வழிப்பட்டதாகவும் ஆ - ச என்பதன் திரிபாகவுங் காட்டி, விரும்பு, எதிர்பார் என்று பொருள் கூறுவது பொருந்தாது. சம் = ஒப்பி, புகழ், சொல், முன்விரும்பு, சூளிடு (வ.வ.). தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள்: 1. எழுத்துத் திரிப்பு. எ-டு: சுள் - சுஷ், பகு - பஜ். 2. திரிசொல் எழுத்து மாற்று. எ-டு: சாய் - சயன, ஸாயம், caya. 2. சொற்றிரிப்பு. எ-டு. அப்பம் - ஆபூப, பேசு - பாஷ். 3. எழுத்துக் குறைப்பு. எ-டு: மண்டலம் - மண்டல. 4. எழுத்துச் சேர்ப்பு. எ-டு: மயிர் - மசிர் - ச்மச்ரு (வ.). 5. முன்னொட்டுச் சேர்ப்பு. எ-டு: காயம் - ஆகாச, ஆயிரம் -ஸகர. 6. பின்னொட்டுச் சேர்ப்பு: எ-டு: - தாமரை - தாமரஸ (எழுத்து) சதுரம் - சதுரய (அசை) வடவை - வடவாமுக (சொல்) 7. இடைச்செருகல். எ-டு: திடம் - த்ருட, மெது - ம்ருது சொம் - வாம். (வ.வ). 8. முறைமாற்று (Metathesis). எ-டு: கதவம் - கபாடம் 9. தவற்று மூலம் 1. பொருள்மாற்று. v-L.: இஞ்சிவேர் - ச்ருங்கவேர, முத்தம் - முக்தா. 2. தவற்றுப் பிரிப்பு. எ-டு: குமரன் - கு+மார சுவணம் - ஸு+பர்ண 10. இடுகுறியெனல். 11. தேவமொழியெனல். 12. கதைகட்டல். எ-டு: சொலவம் - ச்லோக. சோக - ச்லோக (கதை) வான்மீக ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு துயருற்றபோது முதற்செய்யுளை யியற்றியதினால், செய்யுள் சுலோகம் எனப் பெயர் பெற்றதென்பது கதை கட்டல் (வ.வ) தென்மொழி சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள். கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே என்று தமிழின் திரவிடத் தாய்மையையும், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திலங்கிய சிவஞான முனிவர், இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ? என்று தமிழின் சமற்கிருதத்திற்கொத்த தன்மையையும், பதினேழாம் நூற்றாண்டில் வதிந்திருந்த கருணைப்பிரகாசர். மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரைநாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம் என்று தமிழ் ஆரியத்திற் கொப்பாயிருப்பதோடு அதனொடு மாறுபட்டு உயர்விற்குப் போராடு நிலையையும், பதினாறாம் நூற்றாண்டில் திகழ்ந்திருந்த திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர், கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்பல கிடந்ததா எண்ணவும் படுமோ! என்று தமிழுக்கு வடமொழிக்கில்லாத இலக்கண வரம்புண்மை யையும், ஒரு பழந்தமிழ்ப்புலவர், ஓங்க லிடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளக்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்று தமிழின் உலக முதன்மையையும் இலக்கிய முன்மையையும், பலபடப் பாராட்டிச் சென்றனர். இங்கிலாந்தினின்று தென்னாடு வந்து வாழ்நாள்முழுதும் தமிழையும் திராவிட மொழிகளையும் கற்றாய்ந்த கால்டுவெல் கண்காணியாரும், தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவும், தழைத்தோங்கவும் வல்லதென்றும், திராவிட மொழிக்குடும்பம் உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும் மக்களின் முதற் பெற்றோர் மொழியினின்று வழிவழி வந்து வழங்கும் ஒரு சொற்றொகுதியைத் தன்னகத்துக் கொண்டுள்ள தென்றும், தெளிவாகக் கூறியுள்ளார். இங்ஙனமிருந்தும் சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஒரு புன்சிறு புதுக்கலவை மொழியினும் தாழ்வாகக் கருதப்பட்டுவருகின்றது: இலக்கண விலக்கியச் செம்மை நிரம்பி எண்டிசையும் பரவு என்றுமுள தென்றமிழ்க்கு இவ் விழிதகவைப் போக்கி, அதனை மீண்டும் அரியணையில் அமர்த்துதற்கே எழுந்தது இவ்விதழ். (தென்மொழி) குல மத கட்சி நிலச் சார்பின்றித் தூய மொழித்தொண்டே இவ் இதழ் மேற் கொண்டுள்ளமையின், அகம், நாடு, புலம், பொழில், வரைப்பு முதலிய இடப்பொரு ளீறின்றித் தூய மொழிப் பெயரே இதற்கு இடப்பெற்றுள்ளது. தயிர் பாலினின்று திரிந்துள்ளதுபோல் திரவிட மொழிகள் தமிழி னின்று திரிந்து ஓரளவு ஆரியத் தன்மை அடைந்து விட்டமை யாலும், வடவேங்கடந் தென்குமரி யிடைப்பட்ட பண்டைத் தமிழ்ச் சொற்களே, தென்னாட்டுத் திரவிட மொழிகளில் சிறப்பாகப் பழஞ் சேரநாட்டு மொழியாகிய மலையாளத்தில் அடிப்படையாக மண்டிக்கிடப்பதாலும், இற்றைச் சோழ பாண்டி நாட்டு மொழியையும் தென்னாட்டுத் திரவிடத்தின் தமிழ்ப் பகுதியையும் ஒருங்கே தழுவுதற்கே தென்மொழி யென்னும் பெயர் இவ்விதழிற்கு இடப்பெற்றதென்க. ஆகவே தமிழ் என்பது தமிழை மட்டும் குறிக்குமென்றும், திரவிடம் என்பது தமிழினின்று திரிந்த பிறமொழிகளையே குறிக்குமென்றும், தென்மொழி, என்பது அவ்விரண்டையும் குறிக்குமென்றும் வேறுபாடறிந்து கொள்க. (தென்மொழி (1.8.1959.) தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள் ஆங்கிலம் தமிழ் இந்தி (ஆங்கில(உரோம எழுத்தில்) 1. Attention கவனம் Savdhan 2. Stand-at-ease ஏந்தாய்நிற்க Vishram 3. About turn - சுற்றித்திரும்ப Pichhemur 4. Right(or left) turn வலம்(அல்லது) Dahine(Ya baen mur) இடம் திரும்ப 5. Squad will move to சதளம் வலம் Squad hine(Ya baen) the right (or left) (அல்லது இடம்) chal 6. Squad will advance சதளம் முன்செல்க Squad age barhega (mšyJã‹th§f) (Ya ichhe lautege) 7. Dress up நேராக (அல்லது Sajje செம்மையாக 8.. Right - dress வலம் - நேராக Dahine Saj 9. Left - dress இடம் நேராக Baen Saj 10. Centre -dress நடுவம் - நேராக Madya Saj 11. Front rank steady முன்னணி Agli line - hilo mat அசையல் 12. Centre rank steady நடுவணி அசையல் Madya line - hilo mate 13. Rear rank steady பின்னணி அசையல் Pichhli line - hilo mate 14. Form up in three முவணியமைத்து Tin line banae - tez chal ranks-quick march முடுகிச்செல்க 15. Number எண்ண Ginti-kar 16. As you were முன்போல Jaise the 17. Open order march திறந்த வொழுங்கிற் Koule line chal செல்க. 18. Close order march செறிந்த Nikat line chal வொழுங்கிற் செல்க 19. Break off கலைக Swasthan 20. Dismiss விலக Visarjau 21. Fall-in வரிசை படுக Line ban 22. Fall-out வரிசை விடுக Line tor 23. Form three ranks மூவணியமைக Tin line ban 24. Form up in three ranks மூவணியமைந்து Tin line banae-tezchal quick march முடுகிச் செல்க 25. Right-marker வலம் - நோக்கி Dahine darshsk 26. Slow march மெள்ளச் செல்க Dhire chal 27. Double march ஓடிச்செல்க Daur ke-chal 28. Quick march முடுகிச் செல்க Tez chal 29. Halt நிற்க Tham 30. Step out நீளெட்டு (வைக்க) Lamba qadam 31. Step short குற்றெட்டு (வைக்க) Chaota qadam 32. Wheel right/left வலம்/இடம் Dahine/baen ghoom வளைக 33. Marktime அடியிரட்ட Qudam tal 34. Salute கையெடுக்க Siloot 35. General salute பொதுக் General siloot கையெடுப்பு .36. National salute தேசியக் Rashtriya siloot கையெடுப்பு 37. Salute to the front- முன்கையெடுப்பு Samne siloot-siloot salute -கையெடுக்க 38. Salute to the right வலம்கையெடுப்பு- Dahine siloot siloot Salute கையெடுக்க 39. Salute to the left- இடம்கையெடுப்பு Baen siloot-siloot salute 40. Saluting by number எண்முறைக் Ginti se siloot கையெடுப்பு 41. Eyes right(or left) வலம்பார்க்க Dahine(Ya baen)dekth 42. Eyes front முன்பார்க்க Samne dekh 43. Slope-arms படைக்கலம்சாய்க்க Kandhe shast(r) 44. Order-arms படைக்கலம் நிறுத்த Bazu shast(r) 45. For inspection உண்ணோட்டத் Nirikashan ke lie திற்காக 46. Examine arms படைக்கலம் தேர்க Janch shast(r) 47. Trail arms படைக்கலம் துலவ Tol shast(r) 48. On-guard காவல்மேல் Ton shast(r) 49. Squad will fix bayonets- சதளம் ஈட்டிசெருக Squad sangin lagao-lagao fix bayonets ஈட்டிசெருக sangin 50. Squad will unfiz- சதளம் ஈட்டி உருவ Squadsangin uthare(g) bayonets-unfix -ஈட்டி உருவ uthar sangin bayonets விளக்கம்: 2. ஏந்து - வசதி. 5. சிறு கூட்டத்தைக் குறிக்கும் Squad என்னும் ஆங்கிலச் சொல் சதுரத்தைக் குறிக்கும் Squadra என்னும் இத்தாலியச் சொல்லின் திரிபாகும். சதளம் என்னும் தமிழ்ச்சொல்லும் அங்ஙனமே. சட்டம் - சடம் - சடல் - சடலம் - சதுரம் (சதுரம்); சதளம் - கூட்டம். சதளக்காரன் - பெருங்குடும்பக்காரன். 7. Dress என்னும் ஆங்கிலச்சொல் dresser என்னும் பழம் பிரெஞ்சுச் சொல் வாயிலாக directus என்னும் இலத்தின் சொல்லி னின்று திரிந்ததாகும். Direct, to put straight. 10. நடு - நடுவு - நடுவம். இம்மூன்றையும் பெயராகவும் குறிப்புப் பெய ரெச்சமாகவும் பயன்படுத்தலாம். நடுவம் என்பது பெயரெச்ச வடிவில் நடுவ என்று ஈறு கெடும். 11. அசையல் என்பது எதிர்மறை வியங்கோள்; ஈரெண் பொது. 21. வரிசையாக, வரிசையமைக என்றும் சொல்லலாம். 30. 31 நீட்டெட்டு, குற்றெட்டு என்றாலும் போதும். வைக்க என்றும் இடுக என்றும் சொல்லலாம். எட்டு நீள்க, எட்டுக் குறுக என்றும் சொல்லலாம். 33. அடியிரட்டுதல் - இட்ட அடியின்மேல் அடியிடுதல்: To step without advancing, to mark time. அடியிரட்டித் திட்டாடுமாட்டு (புறப்பொருள் வெண்பா மாலை. 2.8). 34. ஒரு வகை வணக்கத்திற்குக் கையெடுத்தல் என்னும் சொல் மிகப் பொருத்தமானதாம். 45. நோடு - to test - உண்ணோடு - to inspect. 47. துலவுதல் - துலாக்கோல் போல் தொங்கப் பிடித்தல், to let rifles hang balanced in one hand. இது வழக்கற்றுப் போன பழஞ்சொல். துல்- துலா - துலாம். துல் - துலை - ஒப்பு. துலாக்கோல் (தராசு). தோல் என்னும் இந்திச்சொல் துல் என்பதன் திரிபே. 43. படைக்கலம் என்பது arm என்பதுபோல பொதுச்சொல், துப்பாக்கி என்பது துபக் என்னும் துருக்கிச் சொல். துமுக்கி என்பது தமிழ்ச்சொல். 44. காவல்மேல் என்பது வேலைமேல் என்பது போன்ற வழக்கு. ஏவல்வினைகள் செய்ய, செய்க என்னும் இருவடிவில் உள்ளன. இவை ஈரெண் பொது. சதளம் என்னும் தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு செய் என்னும் ஒருமை வடிவிலும் ஏவலாம். பயிற்சியாசிரியர் வேண்டிய திருத்தமும் செய்து கொள்ளலாம். தேயம் தேயம்: திகைதல் = முடிதல், திகை = முடிவு, எல்லை, திசை. திகை - திசை - தேசம் = ஒரு திசையிலுள்ள நாடு. தேசம் - தேயம் = நாடு, இடம், இடப்பொருளுருபு, தேயம் - தேம் = இடப்பொருளுருபு, தேம் - தே - தேவகை = இடப்பொருளுருபு, திசை - திசா (வ.) திகை - திக் (வ.) வடமொழியில் திசா என்னும் சொற்குத் திச் என்பதை மூலமாகக் காட்டுவர். திச் - காட்டு. Gk. deikmumi (to show). இந்தியில் திக்கா என்னுஞ்சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு - தேக்கு (த.வி.) - திக்கா (பி.வி.) - இதற்கு மூலமான சூர சேனிச்சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்க லாம். வடமொழியிலுள்ள திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின், தென்சொல்லும் வடசொல் லும் வெவ்வேறு வழியில் தோன்றினவாகும். (தி.ம:745). தேவநேயன் 1. தேவன் எக்காலத்தும் மாந்தர் தெய்வ வழிபாடாற்றுதற்குக் காரணம், நன்மை செய்யும் பொருளிடத்து அன்பும், தீமைசெய்யும் பொரு ளிடத்து அச்சமுமே. எல்லாம் எல்ல இறைவன் வழிபாட்டில் இவ் விரு மெய்ப்பாடுகளும் கலந்துள்ளன. இறைவன் இறுதியில் பேரின்பந் தருவான் என்பது நன்மையும், எரிநிரயத்தில் இடுவான் என்பது தீமையும் பற்றிய உணர்ச்சிகளாகும். வெளியொழிந்த நாற்பூதங்களுள் ஒவ்வொன்றும் நன்மையும் தீமையுஞ் செய்யுமேனும், அவற்றுள் தீயே அவற்றைச் சிறப்பாக அல்லது தெளிவாகச் செய்வதாம். அதனால், முதற்கால மாந்தர் அதனையே சிறந்த தெய்வமாகக் போற்றிவந்தனர். அதுபற்றித் தெய்வப் பொதுப்பெயரும், முழுமுதற் கடவுட்பெயரும் தீப்பெயரினின்று தோன்றியுள்ளன. கட்புலனைப் பயன்படுவிக்கும் ஒளியும், சமையற்கு வேண்டும் சூடும், குளிரைப் போக்கும் வெம்மையும், உணவுப் பயிர்க்கு வேண்டும் வெப்பமும், தீயினால் உண்டாகும் நன்மைகளாம்; தீண்டினாற் சுடுவதும், அகப்படின் எரித்துக் கொல்வதும், அதனால் விளையும் தீமைகளாம். நாற்பூதங்களுள்ளும், சிற்றள விலிருப்பினும் தீமை செய்வது தீயேயாதலின், தீமைப்பெயர் அதனின்றே தோன்றிற்று. மரத்தொடு மரமும் கல்லொடு கல்லும் உரசும்போதும் நெரியும் போதும் நெருப்புண்டாவதைக் கண்ட முதற்கால மாந்தர், அவ்வகையிலேயே நெருப்புண்டாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால், உரசல், நெரிசல், தேய்தல் முதலிய உராய்தற் கருத்துச் சொற்களினின்று, தீயைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியுள்ளன. உரசு, உராய், உராய்ஞ்சு, உரிஞ், உரிஞூ, உரிஞ்சு, உரை, உரைசு, உரைஞ்சு, உரோசு, உரோஞ்சு என்பன ஒரு வேர்ப் பிறந்த ஒரு பொருட் சொற்கள். உர்: உர் - உரு. உருத்தல் = அழலுதல். ஆகம் உருப்ப நூறி (புறம். 25:10) உரு - உரும் - உரும்பு = கொதிப்பு. உரும்பில் கூற்றத் தன்ன (பதிற்றுப். 26 : 13). உரு - உருமம் = வெப்பம். நண்பகல். உருமகாலம் = கோடைகாலம். உருமித்தல் = புழுங்குதல். உரு - உருப்பு = வெப்பம். கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென (கலித். 16:7) உருப்பு - உருப்பம் = வெப்பம். கனலும் ............ உருப்பமெழ (அரிச். பு.விவா.104) உரு - உருகு - உருக்கு - உருக்கம். உருகுதல் = வெப்பத்தினால் இளகுதல், மனம் இளகுதல் (இறங்குதல்), உருக்க = உருகின இரும்பு (எஃகு). உருக்கங்கல் = உருகிப்போன செங்கல். உர் - உரி = நெருப்பு (கன்னடம், துளுவம்). உரி என்னும் வடிவம் தமிழில் வழக்கற்று மறைந்தது. உரி - எரி = நெருப்பு. நெருப்பைக் குறிக்கும்உரு வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழி களிலும் சென்று வழங்குகின்றன. இலத்தீன் (Latin ) - உர். (to burn) அர்மீனியம் (Armenian) ஓர் = நெருப்பு. ஆபுக்கானியம் (Afghan) - ஓர், வுர் = நெருப்பு. எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி. நெர்: நெர் - நெரி - நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நொறுங்குதல், நெர் - நெரு - நெருப்பு. நெருப்பு - நிப்பு (தெலுங்கு) அரபியம் (Arabic) - நார் = நெருப்பு, நூர் = ஒளி. தேய்: தேய்தல் = உரசுதல். தேய் - தீய் - தீ = நெருப்பு. விளக்கு, நரகம். தீ - தீமை = தீயின்தன்மை. தீ. தீய = கொடிய. தீய்தல் = எரிந்துபோதல். கருகுதல், பற்றிப்போதல், தீதல் = தீய்தல். ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை, தேன் - தேம் - தீம் என்னும் திரிபி லும் கண்டுகொள்க. தேய் - தேயு (சமற்கிருதம்) = நெருப்பு. இத் தேய் அடியினின்றே தெய்வப்பெயர் தோன்றிற்று. தேய் - தேய்வு - தேவு - தேவன். தேய்வு - தெய்வு - தெய்வம். தேவு - தே = தெய்வம், தலைவன். பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல்.541) தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (தொல்.964). தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல் (தொல். 1218) வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப (தொல். 1367) யகரவொற்றுள்ள தெய்வப் பெயரே பெரும்பான்மையாகவும். தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே (தொல். 1395) என வகரவொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள தமிழ்நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க. சமற்கிருதம் - deva, daiva இலத்தீன் - dues = god. கிரேக்கம் (Grrek) - theos = god. தேவ என்னும் சொற்குச் சமற்கிருதத்திற் காட்டப்படும் div (to be bright) di, dip (to shine) என்னும் வேர்ச்சொற்கள் முதற் பொருளன்றி வழிப்பொருளே கொண்டுள்ளமை யின் பொருந் தாமை காண்க. பின்வரும் சித்திய (Scythian) ஆரியச் சொற்கள். தீ (நெருப்பு) என்னும் தமிழ்ச்சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் காண்காணியார் காட்டுவார். சித்தியம் சாமாயிதே (Samoiede) - tu, tui, ti, ty. மஞ்சு (Manchu) - tua. அங்கேரியம் (Hungarian) - tuz. ஓசுத்தியக்கு (Ostiak) - tut. துங்கசு (Tungus) - togo. இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zie. ஆரியம்: கேலிக்கம் (Gaelic) - teire வேலிசு (Welsh) - tan பாரசீகம் (Persian) - tigh 2. நேயன் நள் : நன் - நண் - நண்பு - நட்பு. நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல், செறிதல். நள்ளார் = பகைவர். நள்ளி = உறவு (சூடா). நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ. 156. சிலப்.15 : 105). நள்ளுநர் = நண்பர் (திவா). நள் - நளி. நளிதல் = செறிதல். நள் - நெள் - நெய் = ஒட்டும் நீர்ப்பொருள் (oild, ghee). கருப்புக்கட்டிச் சாந்து. நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாக நெய்தல். நெய் = குருதி, நெய்த்தோர் (நெய்த்துவர்?) = குருதி. அகரம் எகரமாதலை, பரு - பெரு, சத்தான் - செத்தான் என்னும் திரிபுகளிற் காண்க. ளகர மெய்யீறு யகர மெய்யீறாவதை, கொள் - கொய், தொள் - தொய், பொள் - பொய் முதலிய திரிபுகளிற் காண்க. நெய் - (நெய்ஞ்சு) - நெஞ்சு - நெஞ்சம் = விலாவெலும்புகள் இணைக்கப்பட்ட இடம் அல்லது அன்பிற்கிடமாகக் கருதப் படும் நெஞ்சாங்குலை (Heart) உள்ள இடம். நெய் - நேய் - நேயம் = அன்பு. ஈரம், பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும் அன்பையும் குறித்தல் காண்க. அன்பு, இருவரை அல்லது பலரை இணைப்பது. நேய் - நே = அன்பு. நேயம் - நேசம். ய - ச. ஒ.நோ: நெயவு - நெசவு. நேசம் - நேசி. நேசித்தல் = அன்பு கடாத்தல் விரும்புதல். நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயுமானவர்) நேயன் - நேயன். நேசம் - நேயன். நேயம் என்னும் தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்ப் பிராகிருதத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து நேஹ என்று வழங்குகின்றது. இவ் வரலாற்றுமுறை அறியாதார், பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல், நேஹ (சமற்) - நேயம் (பிராகிருதம்) - நேயம் (தமிழ்) எனத் தலைகீழாய்த் திரிப்பர். இங்ஙனமே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியிலும், உண்மைக்கு மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவும் நடுவுநிலைமையுமுள்ள அறிஞர் உண்மை கண்டுகொள்வாராக. நேயம் வடசொல்லாயின் நெய் என்பதும் அதன் அடிவேரான நள் என்பதும் வட சொல் லாதல் வேண்டும். அங்ஙனமாகாமை வெள்ளிடை மலை போல் தெள்ளியதே. (தென்மொழி நவம்பர் 1959) தேவன் தேவன் - தேவ (இ.வே.) தேய்தல் = உரசுதல். தேய் - தே= 1. (உரசிப் பற்றும்) நெருப்பு 2. (நெருப்பாகிய) தெய்வம். தேபூசை செய்யுஞ் சித்திரசாலை (சிவரக. நைமிச.20) 3. (தெய்வம் போன்ற) தலைவன். தே - தீ = நெருப்பு, விளக்கு, சினம், தீமை, எரியகம் (நரகம்), தீமை = தீயின் தன்மை. ம,க.தீ. ஒ.நோ: தேன் - தேம் - தீம் (வ.வ:184). தேவாரம் தேவாரம் என்பது, இறைவனைப் பற்றிய இசைப்பாடல் என்று பொருள்படும். தே = தேவன். வாரம் = சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உள்ள பாடல். தேவாரம் பொதுவான கீர்த்தனை போலானது செந்தமிழ்ப் பாவும் பாவினமு மாக இருப்பது கவனிக்கத் தக்கது. தனியர் மட்டுமன்றி அவையோரும் சேர்ந்து பாடக்கூடியனவாகவும் எவரும் இன்புறும் இனிய இசையொடு கூடியனவாகவும் தேவாரப் பாடல்கள் அமைந்திருப்பது மிகப் போற்றத்தக்க தாகும். (த.இ.வ. 75). தொகுதிப்பெயர் அம்பலம் (Village Assembly); அவை (Audience), அவையம் (Jury) ஆசிடை (Association);Ma« (Assembly); இல் அல்லது இல்லம் (House), கடிகை (Village council);fz« (Society, host, body); கழகம் (Academy); களம் (Field); களரி (Institute); குழு (Faction, Committee); குழூஉ (Class); குழுமம் (Guild); குழாம் (Group);FG«ò (Company); கும்பு (Gang); கும்பல் (Croud); குறி (Village Council); பெருங்குறி (Village assembly); கூளி (Multitude); கூட்டம் (Meeting, gathering); திரள் (Mass); தொழுதி (Herd, Flock); தொகுதி (Set, Aggregation); தொகை (Collection, SUM); நெருள் (Big Croud); பண்ணை (Farm, a hevy of ladies); பொதியில் (Public Hall);k¡fŸ (People); மந்தை ஆனிரை: மானிரை; மன்று, மன்றம், பொதுவிடம், அம்பலம், அறங்கூறவையம்: மாந்தர் (Human beings); மன்பதை (Humanity Mankind) வகுப்பு (Class). (சொல்:47) தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை தொல்காப்பியத்திற்கும் அகத்தியத்திற்கும் பெரிதும் வேறு பாடுண்டு. மக்களுக்கு அறிவும் ஆற்றலும் ஆயுளும் மிக்கிருந்த அகத்தியர் காலத்து நூல்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட பல இலக்கணங்கள், அவை குறைந்த தொல்காப்பியர் காலத்தில் விரிவாகக் கூறப்பட வேண்டியவாயின. அதற்கென்றே தொல் காப்பியர், தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்நூல் கண்டு முறைப்பட எண்ண வேண்டியதாயிற்று. அல்லாக்கால் அகத்திய முள்ளிட்ட முதனூ லாராய்ச்சியே அமைந்திருக்கும். இதுபோதுள்ள இலக்கண நூல்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் முழுமதி போன்ற ஒரு தனிச் சிறப்பினதேனும் அதனிடத்துள்ள களங்கங்களையும் உண்மை யுரைத்தல் என்னுமோர் மதம் பற்றி ஈண்டெடுத்துக் கூறுதல் இழுக்காகாது. இஃதோர் அடக்க வழுவமைதி யென்றே கொள்க. குறிப்புகள் வருமாறு: 1. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூறலங் கடையே (தொல்.எழுத்து.62). சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை. என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். (நன்.51). தமிழில் இதுபோதுள்ள சகரமுதற் சொற்கள் நூற்றுக்கு மேற் படுகின்றன. சொற்களெல்லாம் ஆதியிலேயே அமைந்துள்ளன. ஒலிக்குறிப்புச் சொற்களும் பிற குறிப்புச் சொற்களுமே புதிது புதிதாய்த் தோன்றுவனவாம். சங்கிலி, சந்தம், சலி, சடுதி, துப்பாக்கி, குடாக்கு, கிண்கிணி, சதங்கை, மிருதங்கம் போல்வன ஒலிக்குறிப்புச் சொற்கள் (onomatopoeia). சடை, சருச்சரை, சப்பாணி, பச்சை, மதர்ப்பு, மெத்தை முதலியன பிற குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில் சொற்கள் புதிது புதிதாய்த் தோன்று கின்றனவே யெனின், அவை பிற மொழிகளினின்றும் கடன் கொண்ட திசைச்சொற்களே யன்றிப் புதுச் சொற்க ளாகாவென மறுக்க. ஒருசார் திரிசொற்களும் (Derivatives) புதிதாய்த் திரிக்கப்படுவனவாம். சட்டி, சக்கை, சண்டை, சதை, சப்பு, சமை, சரி, சற்று முதலிய செந்தமிழ்ப் பழஞ் சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழிலில்லை யென்று சொல்லுதல் எள்ளளவும் பொருந்தாதென்பது அவற்றின் பொருளை ஆராய்வார்க்கு எளிதிற் புலனாகும். 2. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல்.எழுத்து.67) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோ வெனின், நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று. இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க என்பது நன்னூல் மயிலைநாத ருரை. (நன்.51). 3. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (தொல். எழுத்து.82) என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் என்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன்.67). 4. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும் (தொல்.எழுத்து.445) ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. ஒன்பது = 90. எழுபது எண்பது ஒன்பது என்று ஒப்புநோக்குக. தொண்டு + நூறு = தொண்ணூறு = 900. எழுநூறு. எண்ணூறு. தொண்ணூறு என்று ஒப்புநோக்குக. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் = 9000. ஏழாயிரம், எண்ணாயிரம், தொள்ளாயிரம் என்று ஒப்புநோக்குக. தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ தொல்காப்பியர் காலத்தில் உலக வழக்கற்றது. ஆயினும் செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றோடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (தொல்.1358) என்று கூறியுள்ளார். தொண்டு என்னும் ஒன்றாம் தானப்பெயர் மறையவே பத்தாம் தானப்பெயர் ஒன்றாம் தானத்திற்கும் நூறாம் தானப்பெயர் பத்தாம் தானத்திற்கும், ஆயிரத்தாம் தானப்பெயர் நூறாம் தானத்திற்கும் கீழிறங்கி வழங்கத் தலைப்பட்டன. பின்பு ஆயிரத்தாம் தானத்திற்கு ஒன்பதாயிரம் என்ன வேண்டிய தாயிற்று. சொற்படி பார்ப்பின் ஒன்பதினாயிரம் 90 x 1000 = 90000 ஆகும். ஒன்று முதல் பத்துவரை ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் தனி மொழிகளாகவும் ஒன்பதுமட்டும் தொடர்மொழியாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயரே முதன்மெய் நீங்கி ஒன்பது என வழங்கும். தெலுங்கில் முதன்மெய் நிங்காது தொனுமிதி எனவே வழங்குகின்றது. சொற்கள் எங்ஙனம் நிலைமாறினும் புணர்ச்சி செய்யுங்கால் சொற்றொடர்ப்படியே செய்யவேண்டும். அஃதன்றி ஒன்பது + பத்து = தொண்ணூறு. ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் எனப் புணர்த்து விகார விதியுங் கூறுதல் புணரியலொடு மாறுபடுவ தொன்றாம். 5. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒன்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ ஆகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும் (தொல். எழுத்து.463) இதுவுமது. 6. நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே (தொல். எழுத்து.325) அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியோடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை ஆகும் (தொல். எழுத்து.326) இவற்றைப் பிரயோகவிவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு, இனித் தொல்காப்பியரும், தமிழில் எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வா றிருக்குமென் றறிதற்கு நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிக மாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமை யாக்கினாற் போல, அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய்வேற்றுமை யென்னும் பிரதமா விபத்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றின் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய்வேற்றுமை யாக்காமையானும், ஏல்லா நீயிர் நீ எ-ம். நீயிர் நீயென வரூஉங் கிளவி எ-ம் பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலைஎன்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய்வேற்றுமை இவ்வாறிருக்கு மென்று தமிழ்நூலார் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமை யானாற்போல நும்மென்னு நிலைமொழி விகாரம் முதற் வேற்றுமையா மென்க எனக் கூறியுள்ளார் (பிர.சூ.7,உரை) நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமைப் படும்போது நும் என்று திரியுமேயன்றி, நும்மென்னும் வேற்றுமைத் திரிபுப் பெயர் நீயிரென்று திரியாது. முன்னிலைப் பெயர்கள் வேற்றுமைத் திரிபு நீன் - நீ நின் - நுன் - உன் நீம் நும் - உம் நீம் + கள் = நீங்கள் நுங்கள்- உங்கள் நீ + இர் = நீயிர்,நீவிர்-நீர் நும் - உம் நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்னும் தென்னாட்டுலகவழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல, நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. நீவிர் என்பது இலக்கணப்போலி. நீயிர் என்னும் சொல்லே நீர் என இடைக்குறைந்து நின்றது. இங்ஙனமன்றி நும் என்பது நீயிர் எனத் திரியுமென்றல் ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றதனோ டொக்குமென்க. 7. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.சொல்.397) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (தொல்.சொல்.401) இச் சூத்திரங்களால் மொழியாராய்ச்சி சிறிது முட்டுப்படுகின்றது. வடசொற்கள் தொல்காப்பியர் காலத்து நூல்களில் வழங்கினவாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் வடசொல்லென் றையுறக் கிடக்கும் சில சொற்கள் செந்தமிழ்ச் சொற்களே. இடப்பெயரும் இயற்பெயருமான சில வடசொற்களே வடவெழுத் தொருவியும் ஒருவாதும் வழங்கியிருத்தல் வேண்டும். அல்லாக்கால் தென் சொற்களே வடசொற்களாகத் திரிபுணர்ச்சியாற் கருதப்பட்டி ருத்தல் வேண்டும். தொல்காப்பியர் சுருக்கமாகக் குறித்துள்ள வடசொல்லைப் பவணந்தியார் விரிவாகக் கூறிவிட்டனர். வடசொல்லாகாத் தென்சொற்கள் ஐயன் : தந்தையைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்: அரசன், ஆசிரியன், தந்தை, அண்ணன் என்னும் நாற்குரவரையுங் கடவுளையும் அந்தணனையும் முனிவனையும் பெரியோனையும் பொதுவா யுணர்த்துவது; ஆரியன் என்பதின் சிதைவன்று. பெண்பால் ஐயை. ஆசிரியன் : ஆசு + இரியன். ஆசு = குற்றம், இரிதல் = போக்குதல். அந்தணன் : அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்.30) இராவணன் : இராவண்ணன். இரா = இருள் = கருமை. இருள்நிறப் பன்றியை ஏன மென்றலும் (தொல்.பொருள்.613) கும்பகர்ணன் : கும்பகன்னன். கன்னம் = காது. இராக்கதன் : இரா + கதன்: கதி + அன் = கதன். கதி = செலவு; இரவில் செல்லுபவன்; இதே பொருளில் நிசாசரன் என்பர் வடமொழியில். நிசி = இரவு; சரம் = செலவு, இராக்கதன் - இராக்கன் - அரக்கன், ராக்ஷஸன் என்பதன் திரிபன்று. அரக்கன் என்பதற்கு அழிப்பவன் என்றும் பொருள் கூறலாம். 1. உச்ச காரம் இருமொழிக் குரித்தே. (தொல். எழுத்து.42) உசு, முசு என்ற இரு சொற்களே யன்றி, பசு, கொசு முதலிய பிறவும் உச்சகார வீற்றுச் சொற்களாதல் காண்க. பசுவென்பதை ஆரியச் சிதை வென்பர் நச்சினார்க்கினியர். அது அஃதன்று. 2. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் (தொல்.சொல்.491) து ஒன்றுமே அஃறிணை ஒருமை விகுதியாம். ஏனைய அதன் புணர்ச்சித் திரிபாம். எ-டு: போ + இன் + து = போயிற்று. போ + இன் + அ + து = போயினது. பால் + து = பாற்று. தாள் + து = தாட்டு, குறுந்தாட்டு, கண் + து = கட்டு, குண்டுகட்டு. 3. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. (தொல்.சொல். 153) அம்ம என்பது முறைப்பெயரோடு சிவணாமைக்கு எத்துணையோ காலஞ் சென்றிருத்தல் வேண்டும். அம்ம என்னும் முறைப்பெயர் விளியே கேட்பிக்கும் பொருளில் வரும். அம்மையும் அப்பனுமாகிய இருமுதுகுரவரும் ஒருவர்க்கு முன்னறி தெய்வமும் இன்றியமை யாதவரு மாதலின், அவர் பெயரே பெரும்பாலும் விளி, வியப்பு, முறையீடு முதலிய பொருள்களில் வரும். எ-டு: அம்மை - அம்மே! அம்மா! ஐயன் - ஐய! ஐயோ! அன்னை - அன்னே! அன்னோ! அப்பன் - அப்பா! அச்சன் - அச்சோ! அத்தன் - அத்தோ! அந்தோ! (மெலித்தல்) 4. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் (தொல்.சொல்.217) 5. ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ (தொல். எழுத்து.32) இதில் எ, யா கூறப்படவில்லை. எ. ஏகாரத்தினும், யா, ஆகாரத் தினும் அடங்குமெனக் கொண்டார் போலும், நச்சினார்க்கினியர் உரையும் அஃதே. 6. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (தொல். எழுத்து. 72) இதில் நொ பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நோ என்பதே பகுதியாகி நொ எனக் குறுகி நிற்கும். ஏவல் இ.காலம் நி. காலம் எ. காலம் பெயர் நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய் காண் கண்டான் காண்கிறான் கான்பான் காட்சி (செந்தமிழ்ச் செல்வி துலை 1931) தொல்காப்பியத்தினின்று அறியும் பாக்களும் நூல்களும் அறுவகைப்பாக்கள் (Poetic Metres) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல் என்பன. இருபான் வண்ணங்கள் (Poetice Rhythms) பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர (ஓவிய) வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம். எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன. பொருளீடுகளும் நூல்வகைகளும் (Different Themes and Kinds of Poetry) காமப் பொருளீடுகள் (Amatory Themes) கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை, மடல் முதலியன. வரணனைப் பொருளீடுகள் (Descriptive Themes) குறிஞ்சி, முல்லை (Pastoral),kUj«, நெய்தல், பாலை என்பன. போர்ப் பொருளீடுகள் (Martial Themes) வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை முதலியன. கருதற் பொருளீடுகள் (Reflective Themes) பெருங்காஞ்சி, முதுகாஞ்சி, மறக்காஞ்சி, வஞ்சினக் காஞ்சி, மகட்பாற்காஞ்சி, கையறுநிலை (Elegy) முதலியன. பாடாண் பொருளீடுகள் (Euology and Doxology) உலா, கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால்வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன. வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ (Didactic.) புறநிலை வாழ்த்து (Benedictory) செய்யுளின் எழுநிலம் (Bases of Poetical Composition) பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன. இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளோடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால்வகைப்படும். நூல்வகை (Different Kinds of Poems) பண்ணத்தி - பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல். எண் வனப்பு அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic), விருந்து (Novel Composition), இயைபு (Epic whose sections end in any of the nasals or liquids), புலன் (Dramatic), இழைபு (Lyrical) என்பன. மறைநூல் (Scripture) ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது தோன்றக்கூடிய சிறந்த நூல் மறை நூலாகும். அதனால் அதன் பெயர் அறிவு அல்லது புத்தகம் என்று பொருள் படுவதாயிருந்து, பிற்காலத்தில் பிற நூல்களுக்கும் கலைகளுக்கும் பொதுப் பெயராவதுண்டு. ஆங்கிலத்தில் கிறித்துவ மறைநூலுக்கு Bible என்று பெயர். இது புத்தகம் என்று பொருள்படும் biblos என்னும் கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. Bible என்னும் சொல் இன்றும் புத்தகம் என்று பொருள்படுவதை, bibliography, bibliomania முதலிய சொற்களா லறியலாம். Scripture என்பதும் முதலாவது எழுத்து (எழுதப்பட்ட நூல்) என்றே பொருள்படும். Script - எழுத்து. வடமொழியில் வேதமே முதலாவது நூல். வேதம் என்னும் பெயர், வித் (அறி) என்னும் வேரினின்று பிறந்து, அறிவு என்று பொருள்படுவதொரு சொல். பிற்காலத்தில் ஆயுர்வேதம், காந்தருவ வேதம், தனுர்வேதம் என்று பிற கலைகட்கும் வேதம் என்னும் சொல் பொதுப்பெயராயிற்று. இங்ஙனமே தமிழிலும் முதலாவதெழுந்த நூல் மறை நூலாகும். மறை என்னும் சொல் மறைவான (Esoteric) பொருளுள்ளது என்று பொருள்படுவது. பின்பு அது பிற கலைகட்கும் பொதுப் பெயரானதை, நரம்பின் மறை என்றும், காமப் புணர்ச்சியும் ..... மறையென மொழிதல் மறையோர் ஆறே (தொல்.செய்.178) என்றும், முறையே, இசைநூலையும் இலக்கண நூலையும் குறிக்க அச் சொல்லைத் தொல்காப்பியர் வழங்கியதினின் றறியலாம். தமிழர்க்குத் தனிமறையிருந்த தென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே (75) மறைமொழி கிளந்த மந்திரத் தான (158) நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (171) என்று கூறியிருப்பதா லறியப்படும். மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளு வரும் கூறுகின்றார். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) நக்கீரர் பாடிய முரணில் பொதியில் என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய், குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது (குறள். 29) என்று கூறியிருப்பதாலும், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண்டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும். பக்குவான் மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப்படாமல் மறைக்கப் பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது. மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பனவாகும். நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்துகொண்டனர். வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல் லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென் றும் பொருள்படும். மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் - நினைத்தல். முன் + அம் = முன்னம் - முனம். A.S. munan, to thinks. Ger. meinen, to think. முனம் - மனம் (முன் - மன்) ஒ.நோ: முடங்கு - மடங்கு. முறுமுறு - மர்மர் (murmaur), E. மனம் – மணஸ் (Skt.), mens(L.), menos(Gk.), mind (E.). திரம் = உறுதி. திரம் - திறம். ர- ற. ஒ.நோ: ஒளிர் - ஒளிறு; கரு(ப்பு) - கரு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ: நாகம் - snake(E). முன் - மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ: தேன் + தட்டு = தேந்தட்டு. வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுள் வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும். எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொல்.பிறப்பு.20) என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் கூறியது தமிழ் மறையையே யன்றி ஆரிய மறையையன்று. முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தென்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும். இரண்டாவது,அஃதிவண் நுவலாது......... அளவுநுவன் றிசினே என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாததாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்ததில்லை. அகத்தெழு வளியிசை - நுவலாது புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை.... நுவன்றிசினே என்று கூறுவதால், வாயினின்றும் வெளிப்பட் டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றா ரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது. வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய்(வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல்காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம். பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியரு மிருந்தமையும் அவர் யோகு பயின்றமையும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும், நிறைமொழி மாந்தர், என்று தொல்காப்பியர் கூறுவதாலறியலாம். யோகம் தமிழில் தபம் அல்லது தவம் எனப்படும். தபுத்தல் (பிறப்பைக்) கெடுத்தல். தபு + அம் = தபம் - தவம். ஒ.நோ: தபல் - தவல். திருவள்ளுவர் தவம் என்னுஞ் சொல்லை யோகம் என்னும் பொருளிலேயே வழங்கியிருக்கிறார். தொல்காப்பியரும் அதே பொருளில் அதன் மறுவடிவான தபம் என்பதை வழங்கியிருக் கிறார். தபம் செய்வார் தபத்தோர் அல்லது தாபதர் எனப்படுவர். தபத்தில், எண்ணம் இறைவன்மேலேயேயிருப்பதால், வினைக்குக் காரணமாக அவாவும், அதன் காரியமாகிய வினையும், அதன் பயனான பிறப்பும் தபுகின்றன. இதுவே தபம். துறவொழுக்கத்தின் முக்கிய நிலை தவமே. தவமில்லாவிடின் துறத்தலரிது. இதனாலேயே, துறவறவியலில், தவத்தை முன்னும் துறவு அவாவறுத் தல்களைப் பின்னும் வைத்துக் கூறினார் திருவள்ளுவர். இல்லறத்தினின்றும் துறவறத்தை வேறுபடுத்திக் காட்டுவதும் தவநிலையே. தபம் என்னுஞ் சொல் முதலாவது துறவுநிலை முழுவதையுங் குறித்துப் பின்பு அதில் முக்கியப் பகுதியான யோகுநிலையை மட்டுங் குறித்தது. துறவறத்தைப் பற்றிய பகுதி முழுமைக்கும் துறவறவியல் என்று பெயரிட்டு, அதில் துறவு என ஒரு தனியதிகாரமும் அமைத்திருக்கிறார் திருவள்ளுவர். இங்ஙனமே தவம் என்னும் பெயரும் என்க. தபம் - தப (வ.) ஒ.நோ: மனம் - மன (வ.) தவத்திற்குரிய எண்கூறுகள் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி எனக் கூறுவார் நச்சினார்க்கினியர். இவற்றுள் முதல் மூன்றுங் கடையொன்றும் வடசொற்கள். இவற்றுக்குப் பதிலாகக் கடிவு, நோன்பு, இருக்கை, கலத்தல் என்பவற்றை முறையே வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தார் எண்ணுறுப்புகளையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட் டொகைகளை முதலிலிருந்து கவனித்துக்கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வடசொற்களே தோன்றிப்பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட் பாகுபாடு களெல்லாம் ஆரியமோ என்று மயங்கும்படியா யிருப்பது தோன்றும். தவத்திற்குரிய எண்ணுறுப்புகளில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார். உண்மூச்சு, வெளிமூச்ச என்னும் இருவகை மூச்சுகளில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்குமாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுகளையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்து களையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும் படியான முறையை யும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக் கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலு மாகவுள்ள சிவா என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும், அவற்றைச் சிவ என்னும் விளிவடிவை யொக்குமாறு சமப் படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சு களையும் சிவ என்னும் ஈரெழுத் தொலிகளாகக் கருதுவதுடன், அவ் வொலிகளாகவே அம் மூச்சுகளைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டு மென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை, கூடமெடுத்துக் குடிபுக்க மங்கைய ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்போல வஞ்செழுத் தாமே (திருமந். 576) வளியினை வாங்கி வயத்தி லடக்கிற் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளும் சிவசிவ வென்றிடத் தேவரு மாவர் சிவசிவ வென்னச் சிவகதி தானே (திருமந். 2716) என்னும் திருந்திரங்களான் உணர்க. இதன் விளக்கத்தைத் திருவாளர் சி.எ. சுந்தரமுதலியார் எழுதிய திருமந்திர உபதேசப் பகுதியுரையிற் கண்டுகொள்க (பக். 52 -4). சிவன் அல்லது சேயோன் (முருகன்) என்பது பண்டைத் தமிழ்த்தெய்வம் என்பதும், ஆரிய தேவதங்களிலுள்ள ருத்திரன் என்னும் தெய்வமும் தமிழர் தெய்வமாகிய சிவம் என்பதும் வேறு. சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் சிவ என்னும் ஈரெழுத்துகளே தமிழர்க்குரியன. ஆய என்னும் நான்காம் வேற்றுமையுருபும், நம என்னும் வணக்கங்குறித்த சொல்லும், வடமொழியாகும், தமிழர்க்குத் திருவைந்தெழுத் திருந்திருப்பின், அது சிவபோற்றி என்பது போன்றிருக்குமேயன்றிச் சிவாய நம வென்றிருக்கவே யிருக்காது. ஆரியர் தமிழ மதத்தலைவரான பிற்காலத்தில், வடமொழி தேவமொழி யெனப்பட்டு, தமிழிற் புகுந்த ஒவ்வொரு வடசொல்லும் வடவெழுத்தும் தெய்வத் தன்மை யேற்றிக் கூறப்பட்டது. சரித்திரமும் மொழி நூலுமறி யாத தமிழர்க்கு இன்றும் விளங்காதென்றே நினைக்கின்றேன். ஆங்கிலவறிஞரும் சூழ்ச்சியப்புலவரு (Engineer) மான மாணிக்க நாயகரே மயங்கின ரென்றால் பிறரை யென்சொல்வது? மூச்சுக்கள் இரண்டேயாதலும், சிவ என்னும் சொல் ஈரெழுத்துச் சொல்லேயாதலும் அதனால் வளிநிலை அஞ்செழுத்தெண்ண லாகாமையும் அறிந்துகொள்க. எல்லா வெழுத்தும் என்னும் தொல்காப்பிய நூற்பாவில், உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் என்பதைச் சிவ என்னும் திருவிரண்டெழுத்துப் போன்ற வொலிகளைத் தவத்தோர் ஒலித்தலாகவே கொள்ள வேண்டும் என்க. தொல்காப்பியப் பாயிரத்தில், நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு என்னும் பகுதியில், நான்மறையென்றது தமிழ் மறையையே. நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென்னும் கீழ்க் கணக்கு நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளிலுள்ள நான்மறை என்னுந் தொடர்க்கும் இங்ஙனமே பொருள் கூறப் பட்டுள்ளது. மற்றப்படி, சமணர்க்கு நான்கு மறைகளின்மை யறிக. பதினான்கு சுரமுள்ள கோவையைப் பதினாற்கோவை யென்பதுங் காண்க. ஆரியர்க்குத் தொல்காப்பியர் காலத்தில் ஒரே மறைதானிருந்தது. இப்போதும் உண்மையானபடி ஆரிய மறைகள் ருக்கு, அதர்வணம் என இரண்டேயாகும். யசுர், சாமம் என்பன பெரும்பாலு;ம ருக்வேத மந்திரங்களைக் கொண்டவையே. ருக் வேதத்திலுள்ள மூலமந்திரங்கள் 1028 (Vedic India, p.114) என்று சொல்லப்படுகிறது. ருக்வேத மந்திரங்களுள் வேள்விக்குரிய வற்றைப் பிரித்து யஜுர் வேதமென்றும், பாடுவதற்கேற்றவற்றைப் பிரித்து இசைவகுத்துச் சாமவேத மென்றும் பெயரிட்டனர். அதர்வண வேதம் பெரும் பாலும் மாந்திரீக முறையான மந்திரங்களைக் கொண்டது; அது பிற்காலத்தது. திராவிடர் ஆரியர் வருமுன்னமே மாந்திரீகத்தில் தேர்ந்திருந்ததினாலும், ஆரியர் முதலாவது திராவிட மந்திரீ கத்தைப் பழித்தமை ருக்வேத மந்திரங்கா லறியக்கிடப்பதாலும் அதர்வணம் மற்ற மூன்று வேதங்கட்கும் பிற்பட்டதினாலும், ஆரியர் திராவிடரிடமிருந்து மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்ட பின்பே அதர்வண வேதம் தோன்றினதாகத் தெரிகின்றது. இதன் மந்திரங்களிலும் ஏறத்தாழ ஆறிலொரு பாகம் ருக்வேதத்தி லுள்ளவை என்று சொல்லப்படுகிறது. ஆரிய வேதங்களை நான்காக வகுத்தது வியாசர் என்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும் சொல்லப்படுவ தினால், தொல்காப்பியர் காலத்தில் ஆரிய வேதம் ஒன்றாகவே யிருந்தது என்பது தேற்றம். ஆகையால், தொல்காப்பியப் பாயிரத்திலுள்ள நான்மறை என்பது நான்கான ஆரிய வேதங்களைக் குறிக்கமுடியாது. தொல்காப்பியத்திற் சுட்டப்பட்ட தமிழ்மறைகள் இதுபோது இறந்துபட்டன. இப்போது தமிழ்மறையாக வுள்ளன, பன்னிரு திருமுறைகளுள் முதற் பதினொன்றும், நாலாயிர திவ்வியப் பனுவலும், திருக்குறளுமே. தேவர் குறளும் திருநான் மறைமுடியும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் என்று ஔவை கூறியதுங் காண்க. சில தமிழ்ப்பகைவர், திருக்குறள் மறையாவ தெங்ஙனம் என் கின்றார். திருக்குறள் தமிழ்மறை, பொதுமறை, உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி என்று கடைக்காலப் புலவ ராலேயே மறையாகக் கொள்ளப்பட்டிருக்க, இப்போது அதன் மறைத்தன்மையைப் பற்றி ஐயங்கொள்வானேன்? கடவுள், அவரை ஆன்மாக்கள் அடையும்வழி, அங்ஙனம் அடைவதால் உண்டாகும் பயன், அடையாமையால் நேரும் கேடு என்றிவற்றைக் கூறுவதே மறைநூ லிலக்கணமாகும். திருக்குறள் இவ்வனைத்தும் கூறுவதால் மறைநூலா வதற்குத் தடையென்னை யென்க. கடவுட்பற்றில்லாத சிலர், திருக்குறளில் வீட்டைப்பற்றிச் சொல்லவில்லையே என்கின்றனர். வீட்டைக் கண்டு வந்தவன் இங்கொருவனு மில்லையென்றும், வீட்டையடையும் வழி அறத்துப் பாலில் ஈரியல்களிலும் சொல்லப்பட்டுள்ளதென்றும், அங்ஙனம் காரண வகையானன்றி, வரணனை வகையான் வீட்டைக் கூறமுடியாதென்றும் அவர் அறிந்துகொள்க. எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும் என்பது ஒரு பழைய வெண்பா. இதனாலும், தமிழர்க்கு மறை யிருந்தமை யுணரப்படும். தமிழர்க்கு மறையிருப்பவும், ஆரியரை மறையோர், வேதியர் என்றது, புதுமைபற்றி யென்க. கிறித்தவ மறையை வேதமென்றும் கிறித்தவரை வேதக்காரரென்றும் தமிழர் கூறுதல் காண்க. செங்கோன் றரைச்செலவின் ஒரு பகுதி தவிர, தொல்காப் பியத்தின்படி, பாக்கள் முதல் மறையீறாகச் சொல்லப்பட்ட வற்றுள் ஒன்றுக்காயினும் இலக்கியம் இப்போதில்லை. தவநூல் வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது (கற்பு.47) என்றும், காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பு. 51) என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், பண்டைக் காலத்தில், தமிழரசர் பட்டாங்கு நூலறிந்து இறுதிக் காலத்தில் துறவு புகுந்தமை யறியப்படும். பட்டாங்குநூல் (Philosophy) தமிழ் இலக்கணக் குறியீடுகளிலிருந்தே, பண்டைத் தமிழர்க்குப் பட்டாங்குநூல் தெரிந்தமை யுணரப்படும். பொருள்களெல்லாம் உயிர், மெய் (body), உயிர்மெய் (பிராணி) என மூவகைப்படும். இவை, முறையே, தனியுயிரும் தனியுடம்பும் உயிரோடு கூடிய உடம்புமாகும். பிராணனை யுடையது பிராணி யெனப்பட்டாற்போல, உயிரையுடைய மெய் உயிர்மெய் எனப் பட்டது. (இது 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.) பிராணி என்னும் வடசொல் வழங்கவே, உயிர்மெய் என்னும் சொல் வழக்கற்றுத் தன் பொருளையும் இழந்து, இலக் கணநூல் வழக்கிலும், உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து என்று உம்மைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகத் தவறாகக் கருதப்படுகின்றது. இச் சொல்லுக்குப் பதிலாக உயிர் என்னும் சொல்லும், உயிர்ப்பிராணி என்னுஞ் சொல்லும், முறையே, குன்றக் கூறலாகவும் மிகைபடக் கூறலாகவும் வழங்கி வருகின்றன. எழுத்துகளில், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் போல்வன. அவற் றின் பெயர்களாலேயே கூறப்பட்டன. இப் பெயர்கள் எழுத்தைக் குறிக்கும்போது உவமையாகு பெயர். எழுத்திற்கு உயிராவது ஒலி. பொய்யான உடம்பை மெய்யென்றது மெய்ப்பொருள் நூலுக்கு முரணென்று கூறுவது சிலர். உடம்பு பொய்யான தென்று முன்னைத் தமிழர் அறிந்திருந்தாலும், உடம்போடு வடிய நிலையே உயிர்வாழ்க்கையாதலின், உடம்பை மெய்யென்று மங்கல வழக்காய்க் கூறினர் என்க. சாவைப் பெரும்பிறிது என்றும் சுடுகாட்டை நன்காடு என்றும் அவர் கூறியதுங் காண்க. ஓர் ஆளில், அல்லது உயிர்ப்பொருளில், உயிர் உடம்பு என இரு பொருள் கலந்திருப்பினும், காண்பார்க்கு உடம்பே முற்பட்டுத் தோன்றும்; அதன் பின்னரே அதற்குள் உயிரிருப்பது அறியப்படும், அதுபோல, உயிர்மெய்யெழுத்திலும் மெய்யெழுத்தே முன் ஒலிக்கும்; அதன் பின்னரே உயிர் ஒலிக்கும். இதை, மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே (தொல்.நூன்.18) என்றனர் இலக்கணிகள். எல்லா மொழிகளிலும் மெய்யும் உயிருமாய் வரும் எழுத்துக்கள் இணைந்தே ஒலிக்கும். இதை மேனாட்டார் நோக்காததினால், உயிர்மெய்க்குத் தனிவடிவம் வகுக்காமல், மெய்யையும் உயிரையும் அடுத்தடுத்து வெவ்வேறா யெழுதுவா ராயினர்.இது மாண வர்க்கு எளிதாயினும், ஆங்கில தமிழ் இலக்கணிகளின் மெய்ப் பொருளுணர்ச்சித் தாழ்வேற்றங்களைக் குறிக்கத் தவறாதென்க. சொற்களுக்கு இலக்கணத்தில் பெயர் வினை என்று மக்கள் தொடர்பான பெயர்களே இடப்பட்டிருக்கின்றன. பெயர் = ஆள். பெயர் = பேர். எத்தனை பேர் என்னும் வழக்கை நோக்குக. வினை = செய்கை. பொருள்களைப் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி, உயர் திணை, அஃறிணை என இரண்டாக வகுத்தனர் தமிழர். இ.வ. தொல்காப்பியம் (கி.மு. 7-ஆம் நூற்றாண்டு) தொல்காப்பியம் இன்றுள்ள முதல் தொன்னூல் மட்டுமன்றி, பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் ஒரு பெருந் தூணாகும். அஃதின்றேல், கடைக் கழகத்திற்கு முந்திய தமிழும் தமிழ்வரலாறும் அதனால் தமிழர் வரலாறும் அறவே இல்லாமற் போம்; தமிழன் உலகுள்ள வளவும் ஆரியனுக் கடிமையாகவே இருந்துழல்வான். குமரிநாட்டுத் தமிழன் தன் நுண்மாண் நுழைபுலத்தால் வகுத்த பொருளி லக்கணம், அதற்கு அச்சிறப்பைத் தந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்ததேனும், முக மண்டபமும் கூட கோபு ரமுங் கொண்ட மணிமாட மாளிகைகள் நிறைந்த ஒரு மாநகரம், ஆழ்கடலில் மூழ்கிப்போனபின், அதற் கற்கள் சிலவற்றை யெடுத்துக் கட்டிய ஒரு சிற்றில் போன்றதே தொல்காப்பியம். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம்: இலக்கியத்திற்கு முந்தியது மொழி. தொல்காப்பியத்திற்று முந்தின இலக்கணங் களே நூற்றுக்கணக்கின; இலக்கிய நூல்கள் ஆயிரக்கணக்கின; ஏனைப்பனுவல்கள் எண்ணிறந்தன. தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பாடிய பனம்பாரனார் என்னும் உடன் மாணவர், செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று கூறியிருப்பது 2- ஆம் கடல்கோட்குப்பின், நீண்ட காலமாகக் கழகந் தோன்றாமையால் பண்டை நூல்களெல்லாம் ஆரியரால் அழியுண்டும் மறையுண்டும் போனநிலைமையில், உ.வே. சாமி நாதையர் திருவாவடுதுறை மடத்தில் அழிவிற்குத் தப்பிக் கிடந்த கடைக்கழகப் பனுவல்களையும் தொகை நூல்களையும் கண் டெடுத்தது போல், தொல்காப்பியனாரும் பல தொன்னூல் களைக் கண்டெடுத்தாரோ எனக் கருத இடந்தருகின்றது. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று பனம்பாரனாரும், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.880) நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ( 1570) என்று தொல்காப்பியனாரும், கூறியிருப்பதால், தொல்காப்பியக் காலத்திலேயே ஆரியம் தமிழகத்தில் ஓரளவு வேரூன்றி விட்டதை அறியலாம். ஆரியர் கூறும் படைப்புத் தெய்வமாகிய பிரமனைத் தமிழர் ஒத்துக்கொள்ளா மையால், முத் திருமேனியரும் சேர்ந்தவரே முதற்கடவுள் என்பதை யுணர்த்தற்கு, ஆரியப் போலித் துறவியர் சென்றவிடமெல்லாம் முக்கவர்க் கோலை ஏந்திச் சென்றனர். எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறொரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் என்னும்பாலைக்கலித்தரவையும்(9),உறியிலேதங்கினகமண்டலத்தையும்,அரிஅயன்அரனென்னும்மூவரும்ஒருவரென்றுசொல்லுதல்தன்னிடத்தேஅமைந்தமுக்கோலையும்,முறைமைபடத்தோளில்வைத்து................போதலை. இmnghjnghnghjiyயல்பாக வுடைய ஒழுக்கத்தினை யுடையீர் என்னும் அதன் உரையையும், நோக்குக. புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ’ என்றதற் கேற்ப, எழுத்தெனப் படுப ..................................................... முப்பஃ தென்ப (1) என்று எழுத்ததிகாரத்தையும், உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே mஃறிணைbaன்மனார்அtரலபிwவே(484) என்று சொல்லதிகாரத்தையும், கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை bயன்ப (947)v‹W பொருளதிகாரத்தையும், அதனுள்ளும், அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (1002) என்று புறத்திணை யியலையும், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நால்நான் கென்ப (1195) என்று மெய்ப் பாட்டியலையும், நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே (1259) என்று செய்யுளியலையும், தொடங்கியதுடன், இடையிடை நெடுகலும் என்மனார் புலவர், நுண்ணிதின் உணர்ந்தோர், மொழிப, என்றிசி னோரே, என்றும் பிறவாறும் முன்னூ லாரைப் பன்மையிற் சுட்டி, இறுதியில் நூலையும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. என்று தொல்காப்பியனார் முடித்திருப் பதால், ஒரோவிடத்துள்ள ஒருசில ஆரியக் கருத்துக்கள் தவிர ஏனைய இலக்கணச் செய்திகளெல்லாம், முந்து நூல்களிற் கண்டவையே என்பது தெளிவாம். தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள (அகமும் புறமும் பற்றிய) பாட்டு, உரை, நூல் (இலக்கணமும் பல்வேறு அறிவியலும்), வாய்மொழி (மந்திரம்), பிசி (விடுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்னும் எழுநில யாப்பிற்கும்; வெள்ளை, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள், பரிபாடல் என்னும் அறுவகைப் பாவிற்கும்; புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியுறை என்னும் நால்வகை வாழ்த்திற்கும்; பாவண்ணம், தாவண்ணம் முதலிய இருபது வகை வண்ணத் திற்கும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பிற்கும்; இலக்கியமா யிருந்தவற்றுள் ஒன்றுகூட இன்றில்லை. இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியமும் இலக்கியத்திற்கு முந்தியது மொழியுமாதலாலும், சொல்லிலும் சொல்வடிவிலும் உலக வழக்கினின்று வேறுபட்ட செய்யுள் வழக்கே பண்டை யிலக்கண நூல்களிற் பெரும்பாலும் எடுத்துவிளக்கப் பட்டமை யாலும், உலகவழக்கு பொதுமக்களுடைய தாதலாலும், பொது மக்களொடு தொடர்புகொள்ளாத புலவர் சிலரும் இலக்கண நூல் இயற்றியுள்ளமையாலும், எல்லாத் தமிழ்ச்சொற்களையும் எடுத்துக் கூறும் மேலைமுறைச் சொற்களஞ்சியம் இதுவரை தொகுக்கப் பெறாமையாலும், தமிழின் சொல்வளத்தை மொழியாராய்ச்சி வாயிலாகவே அறிதல் கூடும். சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஔ எனும் மூன்றலங் கடையே (எழுத். 62) என்னும் தொல்காப்பிய நூற்பா உண்மைக்கு மாறானது. இந் நூற்பாவின் 2-ஆம் அடியின் அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே என்னும் பாட வேறுபாடு மிகப் பொருத்தமாம். ஆயின், தொல்காப்பியரைப் பெருமைப் படுத்துவதாகக் கருதிக் கொண்டு இப்பாட வேறுபாட்டை ஏற்க மறுப்பவர், உண்மையில் தொல்காப்பி யரை யும் தமிழையும் சிறுமைப்படுத்து பவரேயாவர். தொல்காப்பியத்திற் சகரமுதற்சொல் ஆளப்பெறாமை, அச்சொல் தமிழில் இன்மைக்குச் சான்றாகாது. சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி-சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை. என்று, பண்டை நாளிலேயே ஓர் இலக்கண நூலாசிரியனால் சகர முதலின்மைக் கொள்கை மறுக்கப்பட்டுள்ளமை, நன்னூல் மயிலை நாதருரை யால் அறியக்கிடக்கின்றது. (எழுத்.51) சகரமுதற் சொற்கள் சக்கட்டி, சக்கல், சக்கு, சக்கை, சகடம் (சகடை), சகண்டை, சகதி, சகோடம், சங்கங்குப்பி, சங்கு (சங்கம்), சச்சரவு, சச்சு, சட்டம் (சட்டகம்), சட்டன் (சட்டநம்பி, சட்டநம்பிப்பிள்ளை - சட்டாம்பிள்ளை), சட்டி, சட்டு, சட்டுவம் (சட்டுகம்),சட்டை, சடக்கன், சடக்கு, சடங்கம், சடங்கு, சடசட (சடபுட), சடார், சடுகுடு, சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணம், சண்ணி, சண்ணு, சண்பு (சம்பு), சணம் (சணல்), சணாய், சணவு, சணை, சத்தவி, சத்தான் (செத்தான்), சதக்கு, சதுப்பு, சதை, சந்தனம், சந்தி, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பளி (சப்பளம் - சப்பணம் - சம்மணம்), சப்பரம், சப்பம், சப்பாணி, சப்பு (சவறு), சப்பு (சப்பிடு - சாப்பிடு), சப்பை, சம், சம்பளம், சம்பா, சமட்டு (சமட்டி - சம்மட்டி, சவட்டு - சவட்டி- சாட்டி, சவட்டை - சாட்டை), சமம் (சமன்), சமர் (சமர்த்து), சமை (சமையல், சமைதல், சமையம், சமயம்), சர், சர (சரசர), சரக்கு, சரக்குப்புரக்கு, சரட்டு, சரடு, சரப்பளி (சரப்பணி), சரவடி, சரவை, சரி, சருக்கரை (சக்கரை), சருக்காரம் (சக்காரம் - சக்கரம், செக்கு), சருக்குக் கட்டை, சருகம், சருகு, சருச்சரை, சருவு (சருவம்), சரேல், சல் (செல்), சல்லரி, சல்லி, சல்லிகை, சலக்கு, சலங்கு, சலங்கை (சதங்கை), சல (சலசல), சலகு (சலகன் - சலவன்), சலகை, சலம், சலம்பு, சலவை, சலாகை, சலாங்கு, சலி (சலியடை - சல்லடை), சலுக்குமொலுக்க, சலுகை, சவ்வு, சவ(சவு), சவக்கு, சவடி, சவடு, சவம், சவர், சவர்க்களி, சவலை, சவள், சவளம், சவளி, சவளை, சவறு, சவை, சழக்க, சழங்கு, சழி, சள், சள்ளு, சள்ளை, சள (சளசள), சளப்பு, சளம்பம், சளார், சளி, சற்று, சறாம்பு, சறுக்கு, சறை, சறைமணி, சன்னம். இச்சொற்களெல்லாம் தொல்காப்பியர் காலத்திற்குப் பின் றோன்றியவை என்பர் சிலர். அவர் தமிழியல்பையும் தமிழ் வரலாற்றையும் அறியார். தொல் காப்பியர்க்குப் பின் தமிழ் தளர்ந்ததே யன்றி வளர்ந்த தின்று. சக்கணி (கூத்து வகை), சடங்கடி (வஞ்சனை),சடரி (சிதைவு), சடலை (வீண்செயல்), சக்கத்து (முத்து வகை), சக்கட்டம் (சக்கந்தம்), சட்டறம் (அறவுரை), சப்படி (வயிரக்குற்றம்), சராய் (காற் சட்டை), சல்லடம் (அரைக்காற் சட்டை), சல்ல வட்டம் (கேடகவகை), சமனை (ஓகவகை), சவதரி (தேடு) என்பனவும், இவை போன்ற பிறவுமே, தொல்காப்பியருக்குப் பின் தோன்றி யிருக்கலாம். தொல்காப்பியர் உலகவழக்கைச் செவ்வையாக ஆராயவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள. 1. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்என்(று) ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே (மர.க) என்றதோ டமையாது, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே. (. 29) என்று வரையறையும் இட்டார் தொல்காப்பியர். கசளி, கயந்தலை, கரு, கருந்து, குஞ்சு, குருமன், செள், சேய், நாகு, புதல்வு (புதல்வன், புதல்வி), பொடி, முனி (யானைக் கன்று) முதலிய இளமைப் பெயர்கள் விடப்பட்டுப் போயின. இங்ஙனமே சில ஆண்பாற் பெயர்களும் பெண்பாற் பெயர்களும். (2) நீன் நீம் என்பன முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். இவற்றின் முந்தின நிலை நூன் நூம். என்பதன் வேற்றுமையடி நும். நீம் என்பதன் கடைக்குறை நீ, நீ என்பது இர் என்னும் பலர் பாலீற்றொடு சேர்ந்து நீயிர் நீவிர் என்றாகும். ஆயின், தொல்காப் பியரோ, நும் என்பதி னின்று நீயிர் என்பதைத் திரித்தார். அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் இவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை யாகும் (தொல். 326) (3) ஒன்பது + பத்து என நிறுத்தித் தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு என நிறுத்தித் தொள்ளாயிரம் என்றும், புணர்த்தார் தொல்காப்பியர். (தொல். எழுத்.குற்.40, 58). இது நாளிகேரம் என்னும் சொல்லினின்று கேரளம் என்னும் சொல்லைத் திரிக்கும் வடமொழி வழக்கொத்ததே. இவற்றை இடைச்செருகல் என்பார் இடைச்செருகலின் இயல்பை அறியார். இவை இடைச்செருகலாயின் நன்னூலார் இவற்றைப் பின்பற்றியிரார். இவை போன்ற தவற்றுப் புணர்ப்பும் பிரிப்பும் இன்னும் பலவுள. (4) உரியியலில், தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது என்னும் பெரு வழக்கான உலகவழக்குச் சொற்களும், அருஞ் செய்யுட்சொற்கள் போல் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. (5) புணரியல் 17-ஆம் நூற்பாவிற் சாரியை என்று கூறப்பட்டுள்ள வற்றுள், ஆன் அக்கு இக்கு என்பன சாரியை யல்ல. இற்றுச் சாரியை குறிக்கப்பெறவில்லை. அற்றுச்சாரியை வற்றுச்சாரியை எனக் குறிக்கப்பட்டுள்ளது. பிள்ளையாட்டு தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள பல புறத்துறைகள், பண்டைத் தமிழரின் மறத்தை மட்டுமன்றி, அக்காலத்துக் கோவரசிலுள்ள குடியாட்சி யுரிமை யையுங் காட்டுவனவாயுள. வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும் (புறத். 60) என்னும் கரந்தைத்துறையும், அதன் உரையில் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர. என்னும் வெண்பாவும், பாராட்டி மகிழத்தக்கன. இது புறப்பொருள் வெண்பா மாலையில் முற்றும் மாற்றப்பட்டுச் சிறப்பிழந்துள்ளது. தொல்காப்பிய நால்வகுப்பு நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல். 1570). அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்(கு) ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே (தொல். 1572). அந்த ணாளர்க் கரசுவரை வின்றே (தொல். 1574) படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய (தொல். 1571) வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல். 1578) வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல். 1581) ஆரிய நால்வரணப் பாகுபாடு தமிழகத்தில் மெள்ளமெள்ளப் புகுத்தப்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பிராமணரே அந்தண ராயினர். அவர்க்கு, அரசுரிமையும் கொள்ளப்பட்டது. மற்ற மூவகுப்பும் முன்போலிருந்தன. வாணிகர்க்கு வைசியர் என்னும் வடசொல் வழங்கத் தொடங்கிற்று. வேளாண் தலைவரான வேளிர்க்கு அல்லது குறுநில மன்னர்க்கு வேந்தர்க் குற்றுழிப் பிரிவுண்டு. அதனால், வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே ( 1582) வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் ஆரமுந் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய ( 1583) என்று கூறப்பட்டது. இச்சிறப்பு பொதுமக்களான உழுதூண் வேளாளர்க் கில்லை யென்பது, அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை ( 1584) என்பதனாற் பெறப்படும். தொல்காப்பிய அரங்கேற்றம் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர். மாணவராயின் அகத்தியரை அல்லது அகத்தியத்தைத் தம் நூலிற் குறித்திருப்பார். அகத்தியர் தலைமையிலேயே தொல்காப்பியமும் அரங்கேற்றப் பட்டிருக்கும். முந்துநூல் கண்டு என்றதற்கேற்ப, என்மனார் புலவர் என்று பலர்பாலிலேயே முன்னூலாசிரியரைத் தம் நூல்முழுதும் குறித்திருக்கின்றார். அகத்தியர்க்கும் தொல்காப் பியர்க்கும் இடைப்பட்ட காலம் ஏறத்தாழ ஐந்நூறாண்டாகும். முன்னவரின் மாணவரே பின்னவர் என்று கொண்டவர், அகத்தியரைப் பற்றித் தொல்காப்பியத்தில் ஒரு குறிப்புமின்மை யால், அதற்குங் கரணியங் காட்டுவார் போல் ஒரு கதையைக் கட்டிவிட்டனர். தொல்காப்பியர் காலத்தில் கழகமும் ஏற்படவில்லை. பாண்டியன் பெரும் பாலும் மணவூரில் வதிந்திருத்தல் வேண்டும். அற்றைப் பாண்டியன் பெயர் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று, பனம் பாரனார் குறித்துள்ளார். அவன் இரண்டாம் கடல்கோட்குத் தப்பின இடைக்கழகப் பாண்டியன் அல்லன். நிலமில்லாத தன் குடிகள் சிலர்க்கு நிலம் ஒதுக்கியதனால், அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும். அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து என்று சிறப்புப் பாயிரங் கூறுவதால், அரங்கேற்ற அவையில் தலைமை தாங்கினவன் நால்வேதமும் வல்ல ஒரு பிராமணத் தமிழ்ப்புலவன் என்பது தெளிவாகின்றது. தொல்காப்பியத்திலுள்ள ஆரியக் கருத்துக்களும் ஒரு சில வட சொற்களும் பற்றி நாம் வருந்த வேண்டியதில்லை. அது அக்காலத்து நிலைமை. ஆரியக் கருத்தும் சொல்லும் கொண்டிருந்ததனா லேயே, அது இதுவரை அழிவுறாமல் தப்பி வந்துள்ளதென்று நாம் உணர்ந்து மகிழவேண்டும். கிறித்துவிற்கு முற்பட்ட கடைக்கழகக் காலத்து நூல்களுள், நமக்குக் கிடைத்துள்ளது திருக்குறள் ஒன்றே. அதுவும், ஆதி பகவன் கதையாலும் திரிவர்க்க வழிநூலென்னும் இசைப்பாலும் திருவள்ளுவ வெண்பாமாலையாலுமே, தப்பி யிருத்தல் வேண்டும். திருக்குறட்கு ஐந்நூறாண்டு முற்பட்டதும், இயற்ற மிழிலக்கணம் முழுவதும் குமரிநாட்டு முறைப்படி எடுத்தியம் புவதுமான தொல்காப்பியம், நம் முன்னோரின் பெருமையை அறியவும், மீண்டும் தமிழை அரியணை யேற்றவும் நாமும் முன்னேறி நம் உரிமையை முற்றும் பெறவும், இன்று நம் கையில் உள்ளதெனின், இது நம் நற்காலத்திற் கேதுவான இறைவன் திருவருளே என்று தெரிந்து கொள்க. தொல்காப்பியத் தொழிற்குலங்களும் தொழில்களும் அகவர் (வ.சூதர்.) - அரசன் பள்ளியெழுச்சி பாடுவோர். சூத ரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ. 91) நாளீண்டிய நல்லகவர் (மதுரைக். 223) தொல்காப்பியத்தில் வடசொல்லே ஆளப்பட்டுள்ளது. அடியோர் - அடித்தொழில் செய்பவர், அடிமையர். அந்தணர் - துறவியர் அரசர் - நாடாள்வார் அறிவர் - முக்கால அறிவினர், முதற்காணியர் (Prophets) ஆயர் - ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடையர். இளையர் - வேளைக்காரர் ஏரோர் - உழவர் ஐயர் - முனிவர் செவிலி - அரசர் செல்வர் முதலிய பெருமக்கள் பிள்ளைகளின் வளர்ப்புத் தாய். கூத்தர் - கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர். துடியர் - உடுக்கை யடிப்பவர் தேரோர் - தேர்ப் பாகர் படைஞர் - படைமறவர் பரத்தையர் - விலைமகளிர், பொதுமகளிர். பாகர் - குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர். பாங்கன் - அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன். பாங்கி - அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி. பாணர் - இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய இசைத் தொழிலார். பார்ப்பார் - ஆசிரியர் புலவர் உவச்சர் குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித்தொழிலார். பொருநர் - ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் மறவர் - போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர். வாணிகர் - சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்டமாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல்கடந்து வெளிநாட்டொடு வணிகஞ்செய்யும் நீர்வாணிகரும். விரிச்சி - விரிச்சி (Oracle) கூறுபவர். விள் - விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல். வினைவலர் - ஏவிய தொழில் செய்வதில் வல்லவர். விறலி - விறல் (சத்துவம் ) பட ஆடும் பாண்மகள். வேட்டுவர் - வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி முல்லை பாலை வாணர். வேந்தர் - சேரசோழபாண்டியர் வேயர் - ஒற்றர் வேலன் - முருகன் என்னும் தெய்வமேறி யாடுபவன். வேளாளர் - உழுதுண்போரும் உழுவித்துண்போரும். இனி, பல்வகைக் கட்டிடங்களும் கருவிகளும் கலங்களும் செய்பொருட்களும் தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டிருப் பதால், அவற்றை உருவாக்கிய கொல்லர், தச்சர், கற்றச்சர், தட்டார், கன்னார் என்னும் ஐவகைக் கம்மியரும், கொத்தர் நெசவர் குயவர் முதலிய தொழிலாளரும், அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத் தமிழக எல்லை வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (தொல். 1336) என்று, தொல்காப்பியம் தம் காலத் தமிழ்யாப்பிற்குக் கூறிய எல்லையே, அவர் காலத் தமிழக எல்லையுமாகும். ஒரு நாட்டிற்கு நாற்றிசையிருப்பின், நாலெல்லையும் இருக்கத்தான் செய்யும். அதைச் சொல்ல வேண்டுவதில்லை. ஆயின், எல்லைப் பெயரைக் குறியாது நாற்பெயர் எல்லை என்று மட்டும் சொல்லி யிருத்தலால், அந் நாலெல்லையும் வேறுபட்ட வகையினவா யிருத்தல் வேண்டும். வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும் தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எது எல்லையெனின், அது குடமலைத் தொடரே. அக்காலத்தில் சேரநாடு திருச்சி மாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு, பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது. அம்மலைத் தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிக வொடுங்கித் துறை நகர்களுக்கன்றி ஒரு நாட்டு மக்கள் அனைவரும் வதியத்தக்க பரப்புள்ளதா யிருந்ததில்லை. பிற்காலத் திலேயே மேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத் தெரிகின்றது. இதையே, பரசுராமர் தாம் தவஞ்செய்தற்கு இடம் வேண்டிக் கடல்மீது அம்பெய்ய, அது சற்றுப் பின்வாங்கி இடந்தந்தது என்னுங் கதை குறிக்கும். பரசுராமர் அங்குச் சென்றபின், இயற்கையாகக் கடல் ஒதுங்கி நிலம் விரிவடைந்தது என்பதே உண்மை. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் என்னுந் தொடர், தொல்காப்பியர் காலத்தில் மூவேந்தரும் ஒற்றுமைப்பட்டு உயர்வா யிருந்ததையும், குடிகள் கொள்ளையும் போருமின்றி இன்பமாக வாழ்ந்ததையும், குறிப்பாக வுணர்த்தும். தொல்காப்பியருக்குப் பின் ஆரியச் சூழ்ச்சியாலும் தன்னலப் பற்றாலும் மூவேந்தரிடையும் அடிக்கடி போர் மூண்டதனாலும், துணையரசரும் குறுநில மன்னரும் தம் வேந்தர்க் கடங்காது முடிசூடி முழுவுரிமை யரசரானதனாலும், சோழ நாட்டின் வடபகுதி தொண்டைநாடென்றும், சேரநாட்டின் கீழ்ப்பகுதி கொங்கு நாடென்றும் பிரிந்து போயின. தொண்டைநாடு தொண்டடைநாடு ஆர்க்காடு போல் நிலைத்திணையாற் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. தொண்டை என்பது கோவைக் கொடியையும் ஆதொண்டையையும் குறிக்கும். ஆதொண்டை என்பது காற்றோட்டிச் செடிக்கும் காற்றோட்டிக் கொடிக்கும் பொதுப்பெயர். இம்மூன்றனுள் ஒன்று மிகுந்திருந்த நிலப்பகுதி தொண்டை நாடெனப் பெயர் பெற்றது. திரையன் என்பது நெய்தல் நிலத் தலைவன் பெயர். ஆர்க்காடு செங்கழுநீர்ப்பட்டு நெல்லுர் ஆகிய மும் மாவட்டப்பகுதிகளைக் கொண்டது தொண்டை நாடு. ஒருகால் நெய்தல் நிலச் சிறப்புப்பற்றி, அந்நாட்டரசன் திரையன் எனப் பெயர் கொண்டிருக்கலாம். நாகப்பட்டினத்துச் சோழன் நாக கன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்று நச்சினார்க்கினியர் கூறுங் கதையும், கிள்ளிவளவன் பீலிவளை என்னும் நாக கன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்று சீத்தலைச் சாத்தனார் கூறுங் கதையும், பல செய்திகளில் வேறுபட்டனவும் வெவ்வேறு காலத்தனவும் ஆகும். சோழன் கரிகாற் பெருவளத்தான்மேற் பட்டினப்பாலை பாடிய கடியலுர் உருத்திரங் கண்ணனாரே, பெரும்பாணாற்றுப் படையில், கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக என்று இளந்திரையனைப் பல தலைமுறைப்பட்ட ஓர் ஆள்குடி யினனாகக் கூறியிருப்பதால், மேற்கூறிய கதையிரண்டும் பிற்காலத்தனவென்றும் பெரும்பாலுங் கட்டுச்செய்தி யென்றும் அறிக. அஃதாயின், அந்நீர்த் திரைதரு மரபின் உரவோ னும்பன் என்று பாடியதை இளந்திரையன் எங்ஙனம் ஒத்துக் கொண்டானெனின், ஆரியச் சார்பால் அக்காலத் தமிழர் பகுத்தறிவை யிழந்து விட்டதனால், நீயே, வடபான் முனிவன் தடவினுள் தோன்றி .................................................................................................................................... நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறம். 201) என்று கபிலர் பாடியதை இருங்கோவேள் ஏற்றுக்கொண்டது போன்றே, இளந்திரையனும் உருத்திரங் கண்ணனார் பாடியதை ஏற்றுக்கொண்டான் என்று கூறி விடுக்க. கொங்கு நாடு கொங்கு என்பது, மணம், பூந்தாது, தேன், கள், கருஞ்சுரை, சொங்கு (உமி அல்லது புறத்தோல்), குவிவு என எண்பொருள் படும் பலபொரு ளொருசொல். கொங்கு நாட்டில் தேன் மிகுதியாக அல்லது சிறந்ததாகக் கிடைப்பதால், அந்நாடு கொங்கு நாடெனப் பட்டது என்று பலர் கூறுவர். தேன் கொங்கு நாட்டிற்கே சிறப்பாக வுரிய தன்று. சோலைகள், சிறப்பாக இயற்கைச் சோலைகள், உள்ள இடமெல்லாம் தேன்கூடு கட்டப்படும். அத்தகைய சோலைகளாற் போர்க்கப் பட்டிருப்பவை பெரு மலைகள் அல்லது உயர்மலைத்தொடர்கள். கொங்குநாட்டு மறைகளிற் போன்றே பிறநாட்டு மலைகளிலும் தேன்கூடு கட்டும். அணி நிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரியும் பறம்புமலை, முற்காலச் சோழ நாட்டை அல்லது பிற்காலப் பாண்டிநாட்டைச் சேர்ந்ததாகும். பறம்புமலைத் தேன் எவ் வகையிலும் திறக்கேடுள்ள தன்று. கொங்கு நாட்டு ஆனை மலையை ஒரு கூறாகக்கொண்ட குடமலைத்தொடர், நெல்லை மாவட்டத் தென்கோடிவரை செல்கின்றது. அங்கும் தேன்கூடு கட்டத்தான் செய்கின்றது. கொங்குநாட்டின் பண்டைக்காலப் பரப்பைப் பலர் சரியாக அறியவில்லை. குடகமும் எருமையூர் (மைசூர்) நாடும் சேலம் மாவட்டங்களும் சேர்ந்ததே முதற்காலக் கொங்கு நாடாம். அதில் உடல்போல் மிகுந்திருந்தது எருமையூர் நாடே. மூவேந்தர் நாடுகளுள்ளும் உயர்ந்து குவிந்திருக்கும் நிலப்பகுதி எருமையூர் நாடென்பதை, புறணிப் படத்தையும் (relief map) மட்டக் கோட்டுப் படத்தையும் (contour map) பார்த்துத் தெளிக. சேரநாட்டின் கீழைப்பகுதி, மலைகளாலும் உயர்நில மட்டத் தாலும் குவிந்திருப்பதனாலேயே கொங்கு நாடெனப் பட்டது. கும் - கும்மல் = குவியல். கும்மி = கை குவித்தடித்து விளையாடும் விளையாட்டு. கும்மி - கொம்மி. கும் - கொம் - கொம்மை = 1. மேடு. 2. அடுப்புக் குமிழ். 3. கதவுக் குடுமி. 4. கொம்மட்டிக்காய் (கும்மட்டிக்காய்). 5. கை குவித்துக் கொட்டுகை. 6. இளமுலை. வாரணி கொம்மை (பரிபா.22:30). கும் - கும்பு. கும்புதல் = குவிதல், கூடுதல். கும்பு - கும்பம் = 1. குவியல். 2. குடம். 3. யானை மத்தகம். 4. கும்ப வோரை. 5. கும்ப மாதம் (மாசி). கும்பம் - வ. கும்ப (kumbha) கும்பு - கும்பளம் = பூசணிக்காய். கும்பு - கூம்பு - கூப்பு. கூப்புதல் குவித்தல். கும்பு - கும்பிடு. கும்பிடுதல் கை குவித்தல். கும்பு - குப்பு - குப்பல். குப்பு - குப்பி - கொப்பி = கும்மி. குப்பு - குப்பை = குவியல், மேடு, கழிவுப்பொருட் குவியல். கும் - குமி - குமிழ் - குமிழி. குமி - குவி - குவியல், குவியம், குவால், குவை. கும் - குங்கு. குங்குதல் = 1. குவிதல். 2. சுருங்குதல். 3. குன்றுதல். குங்கு - கொங்கு = குவிந்த பொருள் அல்லது இடம். கொங்கு - கொங்கை = 1. குவிந்த முலை. 2. மரத்தின் புடைப்பு (protuberances or knobs of a tree). கொங்க - கோங்கு = கொங்கை போற் குவிந்த மொட்டு, அதன் மலர், அது பூக்கும் மரம். வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா விளமுலை என்பது, (புறம். 336:9 - 10) கோங்கமொட்டு கொங்கை போற் குவிந்ததென்பதைத் தெரிவித்தல் காண்க. கொங்கு நாடு பிற்காலத்திற் குடகொங்கு குணகொங்கு என இரண்டாகப் பிரிந்தது. பின்னர்க் குணகொங்கும் வடகொங்கு தென்கொங்கு என இரண்டாகப் பிரிந்தது. எருமையூர் நாட்டின் மேற்பகுதி குடகொங்கு; குடகக் கொங்கரும் (30:159) என்று சிலப்பதிகாரம் கூறுவதால், குடகப் பகுதியே முதற் காலக் குடகொங்காகும். அதன் கீழ்ப்பகுதியும் சேலம், கோவை மாவட்டங்களும் குண கொங்கு. அது இரண்டாகப் பிரிந்தபின், எருமையூர் நாட்டின் கீழ்ப்பகுதி வடகொங்கு; சேலங் கோவை மாவட்டங்கள் தென்கொங்கு. வடகொங்கின் தென்பகுதி கங்கநாடென மாறிற்று. இன்று கொங்கு நாடெனப் படுவது சேலங் கோவை மாவட்ட நிலப்பகுதியே. அதுவே தென்கொங்கு வடகொங்கு மேல் கொங்கு (மீகொங்கு) என மூன்றாகப் பிரிந்தும்உள்ளது. கொங்கு நாடு தொடர்ந்த போர் நிகழ்ச்சியாற் செங்களமாகி அமைதி குலைந்ததனால், சேரன் தன் தலைநகரைக் கருவூரி னின்று மேல்கடற்கரையிலுள்ள கொடுங்கோளூர்க்கு மாற்றிக் கொண்டான்.அது பின்னர்க் கருவூர் வஞ்சி என்னும் பெயர்களும் பெற்றது. பழைய கருவூர் சோழர் வயப்பட்டது. சேரநாட்டு மக்கள் குடமலைக்குக் கிழக்கிலுள்ள கொங்கு நாட்டினின்று சென்று குடியேறியதனாலேயே, அவர் வழியினர் மொழியிலும், கதிரவன்எழுந்திசை கிழக்கு என்றும் விழுந்திசை மேற்கு என்றும், சோழ பாண்டி நாடுகளிற் போன்றே சொல்லப் படுகின்றன. குடமலைக்குக் கிழக்கிலுள்ள நிலப்பகுதியில், கடலடுத்த கீழ்ப்பாகம் தாழ்ந்தும் மலையடுத்த மேற்பாகம் உயர்ந்தும் இருப்பதால், கதிரவன் எழுந்திசையும் விழுந்திசையும் கிழக்கு மேற்கு எனப்பட்டன. கீழ் - கீழ்க்கு - கிழக்கு. மேல் - மேற்கு. குடமலைக்கு மேற்கிலுள்ள நிலப்பகுதி கிழக்கில் உயர்ந்தும் மேற்கில் தாழ்ந்தும் இருப்பதால், கிழக்கை மேற்கென் றும் மேற்கைக் கிழக்கென்றும் சொல்லவேண்டும். அவ்வழக்கின் மையால், சேரநாட்டாரின் முன்னோர் தமிழகத்தின் கீழைப் பகுதி யினின்றே மேலைப்பகுதிக்குச் சென்றனர் என்பது தெளிவாம். மேற்றிசையைக் குறிக்க படுஞாயிறு (படுஞாயிற்றுத் திசை) என்னும் சொல்வழக்கும் சேரநாட்டில் அல்லது மலையாள நாட்டில் உண்டேனும், அதுவும் சோழ பாண்டி நாட்டிற் பொழுதடைவைக் குறிக்கும் கீழைத் தமிழ்ச்சொல்லே யென்றும், மேற்கு என்னும் சொல் அதனால் அங்குத் தன் பொருளை இழந்து விடவில்லை யென்றும், கீழ்த்திசையைக் குறிக்கக் கிழக்கு என்பது தவிர வேறொரு சொல்லுமில்லை யென்றும், அறிந்து கொள்க. கிழக்கிந்தியத் தீவினின்று கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கிய முது பழங்காலச் சேரனை, அதிகமானின் முன்னோனென்று ஔவையார் கூறியிருப்பதும், சேரநாட்டு மக்களின் முன்னோர் கொங்கு நாட்டினின்று சென்றவர் என்பதை, வலியுறுத்தல் காண்க. குமரிமலைத்தொடர் மூழ்கியபின், நிலமட்டத்தில் வடநாடு உயர்ந்தும் தென்னாடு தாழ்ந்தும் போனதனால், வடதென் திசைகட்கு உத்தரம் தக்கணம் என்னும் பெயர்கள் ஏற்பட்டுள்ளமையையும் நோக்குக. உ = உயர்வு. தக்கு = தாழ்வு. உத்தரம் - வ. உத்தர. தக்கணம் - வ. தக்ஷிண. எழுங்கதிரவனை நோக்கும் போது தென்றிசை வலப்புறத்தி லிருப்பதனால், கதிரவ வணக்கங் கொண்ட ஆரியர் தக்ஷிண என்னுஞ் சொல்லிற்கு வலம் (right) என்றும் பொருள் கொண்டனர். ப்ரதக்ஷிண = வலமாகச் சுற்றிவருதல். L. dexter = right. தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும் தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களு மிருந்தன வேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழக் கலைகளைப்பற்றி விரிவா யெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனை யடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத் தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று அறியலாம். (1) இலக்கணம் தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந்தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம். பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவே யுடையன. ஆனால், தமிழோ அவற் றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக் கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை யுணர்தற்குக் கருவிகளாதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பதை, தொல்காப்பியத்திற் கூறப்படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனி நூல்களாயெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று. தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியா யுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியே. பல கருத்துகளையும் தெரி விப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக் கியமும் ஒரு மொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே. ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும். பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை, பாண்டிய அரசனும் புடைபடக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம்... (இறை(ப),ப,8,9) எனக் கூறியதால் அறியலாம். பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல்லிலக் கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருத்தலால் வாயிலும் நடையும் போல்வன. பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என இரண்டாகவும், அவற்றுள், அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுக்கப்படும். ஒழுக்கநூற் பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்கள் இன்பம் இன்னவாறிருந்ததென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாதவாறு, அகத்தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அகமெனப்பட்ட தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப்படக் கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப்பட்டதென்றும் கூறப்படுகின்றது. சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவியிருவரிடையே யாதலாலும், அன்பிற்கெதிரான பகையா லேயே போர் நிகழ்வதாலும் இவ்வுரைகோளும் ஒருவாறு பொருந்துவதே. மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனை யிரண்டையும் பற்றியேயிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழியால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்துகொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இது பெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவனான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு, புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்று பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர். இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ் விருபால்பற்றிய தொழில்கள் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர்திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத்தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத் தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணை யாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று. பெள் - பெண். பெட்பு = விருப்பம். பெண் - பேண். பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல், பெண்- பிணா. பிணவு - பிணவல். பெள் + தை = பெட்டை - பெடை - பேடை - பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனாலேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவியையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப்பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் - ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் - (ஆடு) - ஆடவன் -. (ஆடு) - ஆடூஉ. ஆண்மைத்தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள். பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லா கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கையையே, அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந்தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழிபாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின், அகப்பொரு ளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண்டனர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்கு முரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலை களையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகை களையும் அடக்கினர் முன்னை யிலக்கணிகள். வாகைத்திணையின் இலக்கணமாவது: வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்ளைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப (தொல்.புறத்.15) என்பது. வாகைத்திணையின் பாகுபாடாவது: அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையான் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் (தொல்.புறத்.16) என்பது. பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்டதாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற் குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த்தொழில் பொருளிலக் கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க. சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்புநோக்குக. இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை அனைநிலை வகை யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த) ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் அறிவன் தேயமாய் அடங்கும். செய்யுளிலக்கணம்: செய்யுளுறுப்புகளில் அடிப்படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு அசையழுத்தத்தைப் (Accentuation of syllables) பொறுத்தது. அங்கு அசைகள் (Thesis - unaccented syllable) இரண்டாக வகுக்கப் பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறையொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள் தனித்தொலிப்பதும் இணைந்தொலிப்பதும்பற்றி, நேரசை நிரையசையென்றும், அவை குற்றிய லுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை. செய்யுள்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை. செப்பலோசைக்கு வெண்பாவும், அகவலோசைக்கு ஆசிரியமும் துள்ள லோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டுபிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாடலையும் அகப் பொருட்கும், அம்போதரங்க வொத்தாழிசைக் கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பன வாகும். செப்பல் - விளையிறுத்தல். அகவல் - ஒருவரை விளித்துக் கூறல். எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங் களிற் பாடுவதும், சொற்செறிவும், தமிழுக்கே சிறப் பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது. தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். தமிழ்ச்செய்யுள்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள், பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற் காலத்தார் விருத்தம் என்னும் வடசொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். ஒரு மொழியின் வடிவம் உரைநடை. ஒய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்டெல்லாம் செய்யுளாக வேயிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப் பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யுளியற்றுந் திறமை யுடையவராயிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம். செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தனர்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகையாவன: மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ ...................................................................... ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும் ............................................................................ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே (தொல்.செய்.1) 1) மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் செய்யுள் விராய்க் கிடக்கும் அளவையென்றவாறு.... 2) எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக் கொள்ளுங் கூறுபாடு. 3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு;அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். 4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு. 5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு. 6) யாப்பு என்பது, அவ் வடிதொறும் பொருள்பெறச் செய்வ தொரு செய்கை. 7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக்காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை. 8) தூக்கு என்பது, பாக்களைத் துணிந்து நிறுத்தல் 9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவுமென்றவாறு 10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். 11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லு கின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. 12) அளவியல் என்பது, அப்பா வரையறை. 13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச்செய்தல் 14) கைகோள் என்பது, அவ்வத் திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல் 15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்..... 16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல். 17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்... 18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும்பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின. 19) பயன் என்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். 20) மெய்ப்பாடு என்பது, சொற்கேட்டோர்க்குப் பொருள் கண் கூடாதல். 21) எச்சவகை யென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல். 22) முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். 23) பொருள் என்பது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப் படுவதோர் பொருண்மை. 24) துறைவகை என்பது, முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படு மென்று ஒரு துறைப்படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்குளதாகச் செய்தல். 25) மாட்டு என்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (26) வண்ணம் என்பது. ஒரு பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம் (தொல்.சே.1 பேராசிரியர் உரை) இவற்றுள் கூற்று, கேட்போர், களன் முதலிய சில வுறுப்புகள் எல்லா மொழிகட்கும் பொதுவேனும், அவை செய்யுளுறுப்பு களிற் சேர்க்கப்பட்டதும், நோக்கு, திணை, துறை முதலிய பிறவுறுப்புகளில் சேர்க்கப்பட்டதும் தமிழுக்குச் சிறப்பாகும். மேற்கூறிய 26 உறுப்புகளையும் தொல்காப்பியத்திற் கண்டு கொள்க. இங்கு நோக்கு என்பதற்கு மட்டும் ஒரு காட்டுத் தருகின்றேன். முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெரு கானங் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேர னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே (அகம்.4) முல்லையென்னாது வைந்நுனை என்றதனான், அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னு மாகலின். இல்லமும் கொன் றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றான், முல்லைக் கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை, இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந்தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்ட வழி வெப்பம் மாறாவிட்டவாறுபோல வெம்பா நின்றன வின்னுமென்றவாறு. பரலவ லடைய விரலை தெறிப்ப எனவே, பரல்படு குழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர்பருகியும் அப் பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. கருவி வானங் கதழுறை சிதறி என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுத லின் விரைந்து துளி சிதறின வென்றவற்றையும் புதுமை கூறி னாள்; எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்ற மையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென் வாறு; எனவே, தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு, அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான்றோ னாதலானென்றவாறு. அதற்கென்னை காரண மெனின், துணை யோடு வதியுந் தாதுண் பறவை எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணி நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாமைமணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தேரனாகி வாராநின்றா னென இவையெல்லாந் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள். தெய்வமலை ஆகலான் அதனுளமன்ற காந்தளைத் தெய்வப் பூவெனக் கூறி, அவை போத விழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மனங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மை யினென, இதுவும் வன்புறைக்கே உறுப் பாயிற்று (தொல்.செய்.103 பேராசிரியர் உரை.) அணியிலக்கணம்: அணியை முற்காலத் தமிழர் யாப்பினின்றும் பிரிக்க வில்லை. உவமையின் வேறுபாடுகளையும், எழுத்திலக் கணத்திலும் சொல்லிலக் கணத்திலுமுள்ள பல அமைதிகளை யுமே பிற்காலத்தார் அணியிலக்கணமாகப் பிரித்துக் காட்டினர். உவமை யென்னுந் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவ ரிதய நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே (மாறனலங்காரம்; வரலாறு.பக்.10.) இனி, இவ் வோத்தினிற் (உவமவியல்) கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றை யும், சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளிய லுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணி யென்று இலக்கணங் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந்தாங் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது.... இனி, இரண்டும்பொரு ளெண்ணியவற்றை வினைப்படுக்குங் கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென்பது அவர் கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள்கூறி, எனவாங்கு என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் எனவாங்குஎன்பதோர் மொழி எனவென்பது ஒரலங்கார மெனல் வேண்டு மாகலான், அவ்வாறு வரையறுத்துக் கூறலமை யாதென்பது. பிறவும் அன்ன. இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்ப வாயிற் சாத்தனையுஞ் சாத்தனா லணியப்பட்ட முடியுந்தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது. இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது. (தொல்.உவ.37, பேரா. உரை.) உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப் பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறையுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள் களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதாயமைந்து, அந் நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப் பதாகும். இது மன்ன னெப்படி மன்னுயி ரப்படி என்னும் நெறி முறை பற்றியது. உள்ளுறுத் தியற்றப்படும் உவமம் உள்ளுறை யுவமம். வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட ஞாங்கர் பலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பின ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர (கலித்.66) இதனுள், வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக் கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலை வனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள். வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப் பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர்வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க. இலக்கியம் தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகையாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர். இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனோடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட்டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ். முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமிழிலக்கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக்கவிராயர் இயற்றிய இராமயாண நாடகம் போன்றது (ஆனால் உரையிடை யிட்டது) நாடக இலக்கியம். அகத்தியம் முத்தமிழிலக்கணம்; சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம். தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளிலுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித்தற்கேற்ற நிலையிலுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும். இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவையாகும். இலக்கு இலை, இலக்கித்தல் எழுதுதல் (சீவக.180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம் லக்ஷியம் என்னும் வடசொற்கள். வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம் என்பது. இலக்கணத்தைக் குறிக்க இலக்கணம் என்ற சொல்லன்றி வேறு சொல் தமிழில் இல்லை. இங்ஙனமே இலக்கியத்திற்கும், சிறந்த இலக்கணமும் இலக்கியமு முடைய தென்மொழிக்கு அவற்றைக் குறிக்கும் சொல் இல்லை யென்றால், அறிஞர் நம்ப முடியுமா? இசைத்தமிழ் - (Musical Literature) இசையாவது ஒசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி). தமிழ் தலைக்கழகக் காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன: அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (எழுத்து.33) …….செய்தி யாழின் பகுதியொடுதொகைஇa அவ்வகை பிறவும் கருவென மொழிப (அகத்.20) துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவு.1) பாணன் பாடி....... னி வாயில்கள் என்ப (கற்பு.52) பாட்டின் இயல பண்ணத்தியியல்g (செய். 173) என்பன. இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேனும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமை பற்றி அதை மொழிப்பகுதியாக்கினர். இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கம். அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப்படுவர். இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் பாகுபாடு வேறு மொழியில் இல்லை. சொற்களையும் அவை குறிக்கும் பொருள்கள்பற்றி இருதிணையாக வகுத்தனர். தமிழில். சொற்கள் அவை குறிக்கும் பொருள்கள் பதறியே பாலுணர்த்தும் ஆரிய மொழிகளிலோ, அவை ஈறுபற்றியேபொருளுணர்த்தும். வடமொழியில் மனைவியைக் குறிக்கும் சொற்களும். தரம், பரியை, களத்திரம் என்னும் மூன்றும் முறையே ஆண் பாலும், பெண்பாலும் அலிப்பாலுமாம் உயில்களை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயி ரீறாக அறுவகையாகப் பகுத்தனர் தமிழர். ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபு.27) என்று முன்னோர் உயிர்களைப் பகுத்தமையைக் கூறி, அதற்கடுத்த நூற்பாக்களில், அவ் வுயிர்கட்குப் புல்லும் மரனும், நந்தும் முரளும், சீதலும் எறும்பும் நண்டும் தும்பியும் மாவு மாக்களும், மக்களும் பிறவும் என முறையே காட்டுத் தந்தனர் தொல்காப்பியர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் (தொல். மரபு.86) என்பதனால், ஐம்பூத வுணர்ச்சியும் தமிழர்க்கிருந்தமை யறியப்படும். மறுவில் செய்தி ... அறிவன் தேயமும் என்று தொல்காப்பியர் கூறுவதினாலும், தமிழர் மெய்ப்பொருளுணர்ச்சியை ஒருவா றுணரலாம். ஒழுக்க நூல் (Ethics) தொல்காப்பியத்தில், புறத்திணையியலில் 44ஆம் நூற்பாவில் மூன்றன் பகுதி என்று கூறியிருப்பதால், ஒழுக்கநூல் அக் காலத்தில் தமிழிலிருந்தமை உணரப்படும். மூன்றன் பகுதியாவது அறத்தினால் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தல் என்றல். அறம்பொரு ளின்பம் என்பது ஒழுக்க நூற்பாகுபாடு. அறம் எனவே, இல்லறம் துறவறம் இரண்டும் அடங்கும். துறவறம் - வீட்டுநெறி. அறம்பொரு ளின்பம் வீடென்னும் பாகுபாடு தமிழரதே. ஆரியரே அவற்றைத் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டனர். தமிழர் அறத்திற் சிறந்திருந்தமை, தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் அறவொழுக்கங்களா லறியப்படும். பொருள்களை அகம் புறம் என்று பகுப்பதே தமிழ முறை யென்றும், அறம்பொரு ளின்பம் வீடென்று பகுப்பது ஆரிய முறையென்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு மொழியிலேயே நூலுக்கும் கலைக்கும் எற்றபடி, வெவ்வேறு வகையாய்ப் பொருள்கள் பகுக்கப்படும். இலக்கணநூல் ஒன்றிலேயே, எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்று மூன்று வகையாகவும், சொல்லதிகாரத்தில் பொருள் இடங் காலம் சினை குணம் தொழில் என்று ஆறு வகையாகவும், மற்றோர் முறையில் உயர்திணை அஃறிணை என்று இருவகையாகவும் பொருள்கள் பகுக்கப்படுகின்றன. தருக்கநூலில் ஏழாகவும் பதினாறாகவும் பகுக்கப்படுகின்றன. ஆகையால், அகம் புறம் என்பது பொருள திகாரப் பாகுபாடென்றும், அற்ம் பொரு ளின்பம் வீடென்பது ஒழுக்கநூற் பாகுபாடென்றும் அறிந்துகொள்க. சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை யிடை யுரியென் றும், சொல்லியல் முறையில், இயல் திரி திசை வட சொற்களென் றும், ஒழுக்கநூலிற் பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென்றும், கொண்முடிபு(சித்தாந்த) நூலில் வேறுவகையாகவும் பகுக்கப்படுகின்றன. இங்ஙனமே பொருளகளு மென்க. ஐந்திணையும் தனித்தனி கூறப்படும்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை யென்று பெயர் பெறுமென்றும், கோவையாய்க் கூறப்படும் போது களவு, கற்பு என இரு கை கோள்களாகக் கூறப்படுமென்றும் கோவை யிலும்,முன்னைய நான்கும் முன்னதற் கென்ப என்பதால் கைக்கிளை முன்னும், கூட்டத் தினால் ஐந்திணை இடையும், கூட்டம் நீடிக்காது மடலேற்றம் நிகழின் பெருந்திணை பின்னும் அமைந்திருத் தலும், முறையே நிகழ்கின்ற புணர்தல் பிரிதல் இருத்தல் அல்லது இரங்கல், ஊடல் என்பவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைகளா யமைதலும் அறிக. உளநூல் (Psychology) தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப (4) இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே (5) மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ டியாப்புற வந்த இளிவரல் நான்கே (6) புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே (7) அணங்கே விலங்கே கல்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே (8) சல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் சொல்லப் பட் பெருமிதம் நான்கே (9) உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே (10) செல்வம் புலவே புணர்வுவினை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே (11) என்றும் பிறவாறு நுட்பமாய் இவற்றை விரித்தும் கூறியிருப் பதால், தமிழர்க்கு உளநூலுணர்ச்சி யிருந்தமை யறியப்படும். கணிதநூல் (Arithmetic) கண் + இதம் = கணிதம். கண் = கருது, மதி, அள. கண் + இயம் = கண்ணியம் (மதிப்பு). கண் - கணி, to calculate.f + கை = கணிகை (தாளங்கணித்தாடும் கூத்தி). கணி + அன் = கணியன் (ஜோதிடன்). கண் + அக்கு = கணக்கு. அக்கு என்பது ஓர் ஈறு. கா. இலக்கு இலை, பதக்கு, கணி - குணி - அளவிடு. கண், கணி என்னும் தென்சொற்களையே gan, gani என உரப்பி யொலித்து வடசொல்லாகக் காட்டுவர். கண்ணுதல் என்னுஞ் சொல், அகக்கண்ணின் தொழிலைக் குறித்தலால் வடமொழி வடிவங்கள் தென்சொற்களின் திரிபே என்பது தெற்றென விளங்கும். கண்படை கண்ணிய, கபிலை கண்ணிய என்று தொல்காப் பியத்திலேயே வருதல் காண்க. அரை, குறை, கலம் பனை, கா, பதக்கு, தூணி, உரி நாழி என்னும் அளவுப் பெயர்களும் நிறைப்பெயர்களும், தொல்காப்பியத்தில், தொகைமரபு, உயிர்மயங்கியல் என்னும் இயல்களிற் கூறப்பட்டுள்ளன. தொகைமரபில், 28ஆம் நூற்பாவில், அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும் க ச த ப ந ம அ உ என்னும் ஒன்பதெழுத்துகளில் தொடங்குமென்று கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியர் அதற்கு, எடுத்துக்காட்டும்: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மாவரை அந்தை இவைநிறை....இம்மிஒரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க.... தேயவழக்காய் ஒருஞார் ஒருதுவலி என்பனவுங் கொள்க என்று உiர கூறியுள்ளார். புள்ளிமயங்கியல் 98ஆம்நூற்பாவில், ஐ,அம்,பல்’ எனமுடியும் சில பேரெண்ணுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள. அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில்நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும் என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடி யென்றும் சொல்லப்படுகின்றது. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப் பேரெண்கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்து நூறாயிரமென்றும், கோடியை நூறூ நூறாயிர மென்றும் கூறினர் என்றே கொள்ளப் படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப்பட் டுள்ளது. ஆங்கிலத்தில், hundred thousand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க. இலக்கம் (லக்ஷம், Skt,. lakh, Eng.), எ கோடி (கோட்டி, Skt., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவா யிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்து தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க. இலக்கம் கோடி யென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், நூறாயிரப்பத்து பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம். பண்டைத்தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் சான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் காண்க. கீழ்வாயிலக்க வாய்பாடு 1/2, 3238245,3022720,0000000 - தேர்த்துகள் 61/2 = 1 நுண்மணல் 1/3575114,6618880,0000000 - நுண்மணல் 100 = 1 வெள்ளம் 1/357551,1466188,8000000 - வெள்ளம் 60 = 1 குரல்வளைப்பிடி 1/595,8524436,4800000 - குரல்வளைப்பிடி 40 = 1 கதிர்முனை 1/14,8963110,9120000 - கதிர்முனை- 20 = 1 சிந்தை 1/7448155,5456000 - சிந்தை 14 = 1 நாகவிந்தம் 1/532011,1104000 - நாகவிந்தம் 17 = 1 விந்தம் 1/31294,771200 - விந்தம் 7 = 1 பாகம் 1/4470,6816000 - பாகம் 6 = 1 பந்தம் 1/745,1136000 - பந்தம் 5 = 1 குணம் 1/149,0227200 - குணம் 9 = 1 அணு 1/16,5580800 - அணு 7 = 1 மும்மி 1/2,3654400 - மும்மி 11 = 1 இம்மி 1/2150400 - இம்மி 21 = 1 கீழ் முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 320 = 1 மேல்முந்திரி 1/320 - மேல்முந்திரி 320 = 1 (ஒன்று) கீழ்வாயிலக்கம். அடையாளம் அளவு பெயர் இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு நிகரலு முரித்தே (76) என்று தொல்காப்பியக் குற்றிய லுகரப் புணரியல் நூற்பாவில் மா என்னும் அளவு கூறப்பட்டிருப்பதால், கீழ்வாயிலக்கத்தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின வென்ற கொள்ளப்படும். நீட்டலளவை வாய்பாடு 8 அணு = 1 தேர்த்துகள் 8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை 8 பஞ்சிழை = 1 மயிர் 8 மயிர் = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 கடுகு 8 கடுகு = 1 நெல் 8 நெல் = 1 பெருவிரல் 12 பெருவிரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 கோல் அல்லது பாகம் 500 கோல் = 1 கூப்பிடு 4 கூப்பிடு = 1 காதம் சிலப்பதிகாரத்தில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றுக்கு மிடை யிலிருந்த சேய்மை எழுநூற்றுக் காவதம் என்று அடியார்க்கு நல்லார் கூறியது, இவ் வளவு பற்றியதாயின், அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றுக்குத் தெற்கும் குமரியாற்றுக்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின், அழிந்து போன தமிழ்நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தென்னலாம். அங்ஙனமாயின், இற்றை யிந்தியா அளவு ஒரு பெருநிலம் தென்கடலில் மூழ்கியதாகும். சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், முதல் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது. இவை முறையே, கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளாகும். நிலம் அளந்த கோலை உலகளந்த கோல் என்று வழங்குவர். இக்கோல் பதினாறு சாண் நீளமுடையது... நிலங்கள் நூறு குழி கொண்டது ஒரு மாவாகவும் இருபது மாகொண்டது ஒரு வேலி யாகவும் அளக்கப்பெற்றன.... அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறு பகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் என்பதனால் விளங்கும். (முதற் குலோத்துங்க சோழன், பக்.84,85. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 58) இங்குக் குறிக்கப்பட்ட அளவு 1/52428500000 வெளியாகும். வானநூல் (Astronomy) நாள்கோள் (புறத்.11) எனவே நாண்மீனும், (Lunar asterism), ஞாயிறு திங்கள் (கிளவி.58) எனவே, எழுகோளும் (Planets) அவற்றாற் பெயர் பெறும் ஏழு கிழமைகளும் (days), ஓரையும் (Signs of the Zodiac) (கள.45) எனவே இராசியும், காரும் மாலை யும் (அகத்.6.). கூதிர் யாமம் (அகத்.7). பனியெதிர் பருவமும் (அகத். 8),வைகறை விடியல் (அகத்.9.9), எற்பாடு 9அகத்.10), நண்பகல் வேனிலொடு (அகத்.10). பின்பனி (அகத்.12) எனவே பெரும்பொழுதும் (seasons) சிறுபொழுதும் (Divisions of the day) தொல்காப்பபியர் காலத் தமிழர்க்குத் தெரிந்தும் வழக்கிலு மிருந்தமை யறியப்படும். (அசுவினி முதல் ரேவதியீறான) இருபத்தேழு நாள்மீன் (நட்சத்திரம்) கட்கும் பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள், முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடை குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றுக்கு வேறு பெயர்களு முண்டு. அவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க. வெள்ளி, உடு, விண்மீன் என்பவை பொதுவான நட்சத்திரப் பெயர்களாகும். கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட் கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக் காட்ட வேண்டுமென்று, கதிரவன் மறையும் திங்கள் மறைவு மாகியவற்றைத் தம் திரிபுணர்ச்சியால் இருகோள்களாகக் கருதி அவற்றுக்கு ராகு கேது என்று பெயரிட்டு, அவற்றை எழுகோள்களோடு கூட்டி நவக்கிரகமென்றனர். புதன் சனி என்னும் இரு பெயர்கட்கும், பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள் அறிவன் காரி என்பன. பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் வடமொழிப் பெயர்கட்குப் பதிலாக, பன்னீர் ஓரை(ராசி)யின் பெயர்களே மலையாள நாட்டிற்போலப் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் ஓரைப்பெயர்களில் மேடம், இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம், என்னும் ஏழும் தமிழ்ச் சொற்களே. இவற்றுள் முதலாறுக்கு முறையே, தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்று பெயருண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில், முறையே, இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும். பன்னிரு மாதங்களும் ஒரைப்பெயர் பெறுமாறு 1. சித்திரை - மேடம் 2. வைகாசி - இடபம் 3. ஆனி - இரட்டை 4. ஆடி - கடகம் 5. ஆவணி - ஆளி 6. புரட்டாசி - கன்னி 7. ஐப்பசி - துலை 8. கார்த்திகை - தேள் 9. மார்கழி - வில் 10. தை - மகரம் 11. மாசி - கும்பம் 12. பங்குனி – மீனம் மாதம் என்பது மதி என்பதினின்றும் பிறந்த தமிழ்ச் சொல்லே. மதி -மாதம்(த.)மாஸம் (வ.) மதி =சந்திரன். காலத்தை மதிப்பதற்குக் கருவியாயிருப்பது மதி. மதித்தல் அளவிடுதல். ஒ.நோ: moon - month. மதி என்பதினின்று மாதம் என்னும் வடிவம் தோன்று மேயன்றி மாஸம் என்னும் வடிவந் தோன்றாது. த-ஸ, போலி. திங்கள் என்னும் சொல் ஒரு கிழமைப் பெயராதலின், மாதம் என்னும் சொல்லே மாதத்தைக் குறிப்பதாகும். ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம். மதியாலுண்டாகும் கால அளவு மாதமெனப்பட்டது. மதி என்னும் பெயரும் மாதத்தைக் குறிக்கும். வளர்பிறைக்காலத்தை ஒளிப்பக்கமென்றும், தேய்பிறைக் காலத்தை இருட்பக்கமென்றும் (சிலப்.23:133) முன்னோர் கூறினர். இவற்றையே, முறையே, சுக்கிலபக்ஷமென்றும் கிருஷ்ணபக்ஷ மென்றம், நிலைமொழிகளை மொழிபெயர்த்தும் வருமொழிகளை எழுத்துப் பெயர்த்துங் கொண்டனர் ஆரியர். ஓரைப்பெயர்களின் மூலங்களாவன: மேழகம் - மேடகம் - மேடம் - மேஷம் (வ. ) ஒ.நோ: புழலை - புடலை, நாழுரி - நாடுரி, விடை - விடபம் (வ்ருஷபம், வ.) - இடபம், கும் - கும்பு - கும்பம். கும்பு + அம் = கும்பம். கும்புதல் - குவிதல். மின் - மீன் - மீனம். ஒ.நோ: தின் - தீன். கடகம் (நண்டு) என்பது வட்டமானது என்னும் பொருளது. தோட்கடகம், கடகப்பெட்டி என்னும் வழக்குகளை நோக்குக. நாழிகை வட்டிலைக் குறிக்கும் கடிகை என்னுஞ் சொல்லும் கடகம் என்பதன்மறுவடிவமே. வட்டமானது வட்டில். கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். தோட்கடகம் தோள்வளைவி என்றும் கடிகை என்றும் வழங்குதல் காண்க. கடகம் ஒரு பருமைப் பெயருமாகும் (Augmentative) துலை என்னும் சொற்குப் பகுதி, தோல் என்று இந்தியில் வழங்குகின்றது. வடநாட்டில், ஆரியர் வருமுன் திராவிட மொழிகளே வழங்கி வந்தமையால் சிந்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளில் பல திராவிடச் சொற்கள் கலந்துள்ளன. மேலும், ஒரு மொழியின் தாய்வழக்கில், ஒரு பொருட்குரிய பல சொற்களில், வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில்தான் வழங்கும். இதுவே வழக் கற்றசொல் வழங்கல் இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது. தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க. துல்லிபம், துலை, துலைநா, துலா, துலாம், துலான், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந்துலா என்று இருவழக்கிலும், துலை என்னும் சொல்லும் அதன் பிற வடிவங்களும் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவருகின்றன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்னும் அறுளவகைப் பருவங்களையும், முறையே, வசந்தம் கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர் ஆரியர். வசந்தம் (Sáing), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நால்வகைப் பருவங்கள்தாம் ஆரியநாடு என்னும் வடநாட்டிற்கேற்கும். இளவேனில் முதலிய அறுவகைப் பருவங்கள் தமிழ்நாட்டிற்கே யுரியன. இதனால், மூலம் எவையென்றும் மொழிபெயர்ப்பு எவையென்றும் அறிந்துகொள்ளலாம். இங்ஙனமே ஆரிய மொழி பெயர்ப்புகள் சிலவிடங்களில் மறைந்திருப்பினும் சிலவிடங்களில் வெளியாய் விடுமென்க. நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் என்று தொல்காப்பியத்தில் (புறத்.30) கூறியிருப்பதால் குறி நூலும் (Astrology) தொல்காப்பியர் காலத்திலிருந்த மையறியப்படும். வானநூலறிஞனுக்குத் தமிழில் கணியன் என்று பெயர். கணியன் காலத்தைக் கணிப்பவன். பண்டைத் தமிழ்நாட்டில் வள்ளுவரே பெரும்பாலும் கணியராயிருந்தனர். தமிழர் கணிதத்தில் வல்லவராயிருந்ததினால் வான நூலிலும் வல்லவராயிருந்தனர். இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலி வாகனன் என்பவனால், அல்லது கனிஷ்கனால் (The Hindu, March 10, 1940, p. 7.) கி.பி. 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாயுள்ளன. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதினாலும், மிகக் குறுகியதினாலும், சரித்திர நூற்குப் பயன்படாது. ருத்ரோத்காரி என்று கூறினால், எந்த ருத்ரோத்காரி யென்று அறியப்படாமையால், இவ் வளவின்மைபற்றித் தமிழுக்கொரு குறையுமில்லை யென்க. சொல்லியல் நூல் (Etymoloy) தொல்காப்பியத்தில், எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (பெயர. 1.) இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே (எச்ச.1) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (எச்ச.4) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (எச்ச. 5) என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைகளும் (எச்ச.57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வே றுருபுகளும் (உவ. 12-6) கூறியிருப்பதாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லியலுணர்ச்சி யிருந்தமையறியப் படும். ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகு மென்றறிக. தருக்கநூல் (Logic) தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து என்று தொல்காப்பியத் திலேயே (அகத்.53) வந்திருத்தல் காண்க. தருக்கு - செருக்கு. த - ச, அ - எ, போலிகள். (ஒ.நோ: ஓதை - ஒசை, சத்தான் - செத்தான்.) தருக்கு = அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல் லாகக் காட்டுவர் ஆரியர். தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள்கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமானது, தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் (தொல். புறத்.15) அகத்தியத் தருக்க நூற்பாக்கள் கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல்செட்டியார் பதிப்பித்த தர்க்க பரிபாஷை என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல் காப்பியர் காலத்தில் தருக்கநூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும். 1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை யின்மை யுடன் பொரு ளேழென மொழிப. 2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை யான்மா மனதோ டொன்பதும் பொருளே. 3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண் ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி யறமறம் வாதனையொடு குணமறு நான்கே. 4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த னடத்த லுடனே கருமமை வகைத்தே. 5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே. 6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே 7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. 8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே 9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந் தட்பம் வெப்ப மூற்ற மாகி மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க. 10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள் பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருணிலை யில்லாது காரியம் 11. அதுவே: உடல்பொறி விடய மூவகைப் படுமே தம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியி னுனியே மண்கல் முதலிய விடய மாகும். 12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு சுவைதிறங் கவர்வது நாவி னுனியே கடல்யா றாதி விடய மாகும். 13. கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே யுருவங் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரநால் விடயம். 14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே யூற்றங் கவர்வது மீந்தோ லென்க விடய மரமுத லசைதற் கேதுவே பிராண னுடலகத் தியங்குங் காற்றே. 15. விசும்பே காலந் திசையோ டான்மா மனமிவை யைந்து நித்தியப் பொருளே. 16. ஒசைப் பண்பிற் றாகா யம்மே. 17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. அறிவுப் பண்பிற் றான்மா வென்க விறையே யீசன்முற் றறிவனோர் முதலே யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும். 20. மனமணு வடிவாய் வருமின் பாதி யறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவா யழிவின் றுறுமே. இந் நூற்பாக்களையே, நுண்ணறிவுள்ள ஒருவர் ஒரு நூலாக விரித்துவிடலாம். இந் நூற்பாக்கள் சிறப்பிக முறையைச் சேர்ந்தவை. சிறப்பிகம் (வைசேடிகம்), முறையிகம் (நியாயம்) என்னும் இருவகைத் தருக்க முறைகளுள், முன்னதே சிறந்ததென்க. தொழிற்கலைகள் (Arts) சிற்பம் (Architecture) முழுமுதல் அரணம் (புறத்.8), ஆரெயில் (புறத்.10), மதிற்குடுமி (புறத்.10) முதலிய குறிப்புகளால், தொல்காப்பியர் காலத்தில் சிற்பத்தொழில் தமிழ்நாட்டிற் சிறந்திருந்தமை யுணரப்படும். சுவர், மதில், பதணம், இஞ்சி, அகப்பா, புரிசை, எயில், சோ முதலிய மதில்வகைகளும், ஞாயில், சூட்டு, ஏப்புழை முதலிய மதிலுறுப்புகளும், எழுநிலை மாடமும் பண்டைத் தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பை உணர்த்துவனவாகும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க. பண்டைத் தமிழர் நாடகவரங்கு அமைத்த நுட்பம் (சிலப்.113-3:6) மிக வியக்கத்தக்கது. வளைவிற்பொறி, கருவிரலுகம், கல்லுமிழ்கவண், பாகடு குழிசி, காய்பொன்னுலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு, ஆண் டலையடுப்பு, கவை, கழு, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறி சிரல், பன்றி, பனை, நூற்று வரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும்பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி (சிலப். பக். 413-415) முதலிய மதிற்பொறி வகைகள், பண்டைத் தமிழரின் படிமைக்கலையையும் (Sculpture) சூழ்ச்சியக் கலையையும் (Engi-neering) தெரிவிப்பனவாகும். படிமை - பதுமை, பாவைவிளக்கு கந்திற்பாவை முதலிய பெயர்களையும் நோக்குக. சிற்பம் படிமைக்கலை முதலியவற்றாலும், நாடகவரங்கின் எழினி யாலும் ஓவியநூலும் (Drawing) பண்டைத் தமிழர்க்குத் தெரிந் திருந்தமை சொல்லாமே யுணரப்படும். சிற்பநூல் ஒவியநூல் என்று இருநூல்கள் கடைக்கழகக் காலத்திலிருந்தனவாக, அடி யார்க்கு நல்லார் அரங்கேற்று காதையுரையிற் குறிப்பிடுகின்றார். உழவு (Agriculture) உழவு பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமையை ஒருவரும் ஐயுறார். ஆயினும், அதைப்பற்றிய சில குறிப்புகள் அறியத் தக்கன. ஏரோர் களவழி என்பது தொல்காப்பியம் (புறத்.16). Agriculture என்னும் ஆங்கிலப்பெயர் தமிழ் மூலத்ததாகவே தெரிகின்றது. Agriculture, L. agricultura - ager, a field, cultura, cultivation - colo, to cultivate. அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக் கிராகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிராகரம். அக்கிரம் = நுனி, முதல், தலைமை. அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென் என்றார் திருமூலர். E. acre, A.S. aceer, Ger. acker, Gk. agros, L. ager, Skt. ajra. கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் - colo, to till. தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இல் = தொளில் - தொழில். ஒ.நோ: பொள் + இல் = பொளில் - பொழில். பொள் - பொளி. பொளிதல் வெட்டுதல். (பொள் - பொழ்) பொள்ள (வெட்ட)ப் படுவது தொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயிருந்தது. காடு வெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந் தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தமிழகம் முழுவதும் ஒரு பெருஞ்சோலையா யிருந்ததினாலேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. நாவலந் தண்பொழில் வண்புகழ் மூவர் தண் பொழில், ஏழ்பொழில் என்னும் வழக்குகளை நோக்குக. தொள் = தோண்டு. தொள் - தொடு = தோண்டு. தொள் - till, to cultivate.bjhŸStJ தொழில். மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில் கட்கும் பொதுப்பெயராயிற்று. செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர் களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல். முதலாவது கையினாற் செய்யப்பட்ட தொழில் உழவு என்னுங் கருத்துப்பற்றியே, உழவரைக் கைசெய்தூண் மாலையவர் என்றார் திருவள்ளுவர். முதலாவது தோன்றிய ஒரு பொருளின் அல்லது தொழிலின் பெயர், பிற்காலத்தில் அதன் இனத்திற்குப் பொதுப்பெயராய் வழங்குதல் இயல்பே. தோடு என்னும் ஓலைப் பெயர், பிற்காலத்தில் அதற்குப் பதிலாயணிப்படும் கம்மல் (கமலம்) வகைக்குப் பொதுப் பெயராய் வழங்குவதையும்; வில்லேருழவர், சொல் லேருழவர், தேரோர் களவழி யென்னும் வழக்குகளையும் நோக்குக. பழ நார்வீஜியம் (Old Norse), ஆங்கிலோ சாக்ஸன் என்ற மொழி களில், முறையே, erfidhi, earfodh என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு உழைப்பைக் குறித்தன வென்றும். லத்தீனில் ars, artis என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு கலைப் பொதுப்பெய ராயிற்றென்றும், அச் சொற்கட்கு மூலம் ar(to plough) என்பது என்றும் முதலாவது கற்பிக்கப்பட்ட கலை உழவேயென்றும் மாக்கசு முல்லர் கூறியிருத்தல் காண்க. (L.S.L. p.294) ஏர் = கலப்பை. ஏர்த்தொழில் = உழவு. E. ear(V®.), to plough. A.S. erian, L. aro, Gk. aroo - root ar. to plough. E. arable, adj. E. share - கொழு. M.E. schar, A.S. scear, Ger. schar, schaar. காறு = கொழு. க-ச, போலி. ஒ.நோ: திகை - திசை (தேவா. 308:1), இகல் - இசல். சேம்பர் அகராதியில் shear (to cut) என்பது share என்பதன் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், shear என்பது சிறை என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்திருத்தல் காண்க. கைத்தொழில் (Industries) தாழ், வாள், வேல், கழல், தோல் (கேடகம்), குடை, கணை, தேர், யாழ், இழை, துடி, பொன் முதலிய பெயர்களும், ஊழணிதை வரல் (மெய்.14) என்னுந் தொடரும் தொல்காப்பியத்தில் கூறப்பட் டிருப்பதால், அது இயற்றப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டிற் கைத்தொழில் சிறந்திருந்ததை யுணரப்படும். அக் கைத்தொழில் பல திறத்தன. அவற்றுள் நெசவு பற்றிக் காண்க. நெசவு (Weaving) உடைபெயர்த் துடுத்தல் என்பது தொல்காப்பியம் (மெய். 14). பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப பரவியதென்றும் வயவர் சாண் மார்சல் கூறுகிறார். பண்டைக்காலச் சரித்திராசிரியரெல்லாம், மேனாடுகள் இந்தியா வினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணி ஒன்றாகத் தவறாது குறிப்பிடுகின்றனர். 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவினின்றே மேனாடுகட்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினா லறியலாம். தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங்காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத் தொழில் வேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர் களுக்கே விதப்பா யுரியவுமான கைத்தொழில்களிலும் செய் பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்ட தினால், உண்மையில் இனி யொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறி விட்டன. இவ் வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்து விடுவதாக அச்சுறுத்துகின்றது. ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறை களெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும் இலக்கக் கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண் டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டதன்றிப் பிற தொழிலையும் மேற் கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும் பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டி ரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன. யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது (Hindu Manners, Customs and Ceremonies, Ch.VI.) என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய் (Abbe Dubois) கூறுகின்றார். பண்டைக் காலத்திற் பெண்டிர் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோருங் கூறியுள்ளனர். பருத்திப் பெண்டு என்று புறநானூறு (125,326) கூறும். நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த வறுகை வீதியும் (சிலப்.14:205-7) என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும். மயிரினும் என்பதற்கு எலிமயிரினாலும் என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டி லிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப் பட்ட தென்பதும், புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி (1898) செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம் (2686) என்று சிந்தாமணி கூறுவதா லறியப்படும். பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை, துகில் (ஆடை): கோசியம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டு கில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, சுரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்;காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி (சிலப்.பக்.379) என 36 வகையென்று அடியார்க்குநல்லார் கூறுவதினின் றறியலாம். ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம் (பத்.4:169) என்பதினாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப் பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும். நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்கு கின்றன. பன்னல் = பருத்தி. L. punnus, cotton, It. Panno, cloth. கொட்டை = பஞ்சு. Ar. qutun, It. cotone, Fr. coton, E. cotton. கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை. வேட்டி = ஆடை. L. vestis, Skt. வத்ர, E. vesture. வெட்டுவது வேட்டி. ஒ.நோ: துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை. தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு என்று பட்டினத்தார் கூறுதல் காண்க. (திருத்தில்லை,17) சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி. A.S.segel, E. sail. தச்சு = L. texoï E. texture, anything woven. தை + சு = தைச்சு - தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்கரிய தேனும், மரக்கொல்வேலைக்கு வழங்கிவருகின்றது, அதிலும் தைப்புத் தொழிலுள்ளமையின். வண்டியைத் தைக்க வேண்டும் என்று தச்சர் கூறும் வழக்கை நோக்குக. தைத்தல் பல வுறுப்பு களை ஒன்றாயிணைத்தல். நெசவில் நூல்கள் ஒன்றாயிணைக்கப் படலும், தச்சில் வண்டியாயின் குறடு ஆரை சூட்டு என்னும் உறுப்புகளும், பெட்டி நாற்காலியாயின் பலகைகளும் கால்களும் ஒன்றாயிணைக்கப்படலும் காண்க. வாணிகம் (Commerce) வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப் படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது கொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. சொள்ளுப் பெருத்தால் சொல்லுப் பெருக்கும் என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு - சொல். வாய்நீர் - வாணீர் - வாணி = நீர், சொல். வாணி - பாணி. கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா - (கொண்டா) - கொணா - கொணர், பழம் - பயம். வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங்காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க. வாணி + இகம் = வாணிகம். வாணி = சொல். சொல்லுதல் என்று பொருள்படும் வாணிகம் என்னும் சொல், விலை சொல்லுதல் என்னும் பொருளில் பண்டமாற்றைக் குறிப்பதாகும். ஒ.நோ: பகர்தல் = சொல்லுதல், விற்றல். நொடுத்தல் = சொல்லுதல், விற்றல். நொடி = கதை. நொடை = விற்பனை. வாணி என்னும் சொல் வழக்கிலில்லாமையினாலேயே வடசொல்லாகக் கருதப்படுகின்றது, பாணி என்னுஞ் சொல் போல, வர்த்தகம், வியாபாரம், வைசியம் என்னும் சொற்களே வட சொற்கள். வானி (வான் + இ) என்னுஞ் சொல் வாணியென்று திரிந்திருக்கலாம். ஒலியை வானத்தின் பண்பாக முன்னோர் கருதினர். வாணிகம் என்பது வணிகம் என்று குறுகியும் வழங்கும். வாணிகம் முதலாவது உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இருதிறப்படும். அவற்றுள் அயல்நாட்டு வணிகமே சிறந்தது. அதுவும் நிலவாணிகம் நீர்வாணிகம் என இருதிறப்படும். அவற்றுள் நீர்வாணிகமே சிறந்தது. தமிழர் பண்டைக்காலத்தில் நீர்வாணிகத்திற் சிறந்திருந்தமைக்கு அகச்சான்றும் புறச்சான்றும் நிரம்பவுள. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதான ஊர் என்னும் கல்தேயநகர் அகழ்வில், இந்தியத் தேக்கு மரத்துண்டு கண்டு பிடிக்கப்பட்டதென்றும், தேக்குமரம் இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே வளர்வதே யில்லையென்றும், மலினுக்குப் பாபிலோனிய பழம்பெயர் சிந்துவென்றும், அது இந்தியாவினின் றும் ஏற்றுமதியானதினால் அப் பெயர் பெற்றதென்றும் ராகொஸின் கூறுகிறார். (Vedic India, pp. 305, 306.) எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மலினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்துவுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற்குள் புகுந்த மையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியாவிற் கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மலின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது என்று திருவாளர் ஏ. கோ (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார். (The Madras Mail dated 2nd Dec.1915) கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோனுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்ற தொல்காப்பியத்திற் (அகத்.37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்தமை யறியப்படும். தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன. கலஞ்செய் கம்மியர் கலம்புணர் கம்மியர் என்று மணி மேகலையிலும், நீரினின்று நிலத்தேற்றவு நிலத்தினின்று நீர்பரப்பவு மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போர் (பட்டினப். 1130 -7) என்றும், நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் என்று பட்டினப்பாலையிலும், இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் (கலங்கரை விளக்கம் - Light House.) என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப் பதால், பண்டைத்தமிழரின் கலஞ் செய்வினையும் (Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும். வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன: வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (உரி. 21) என்பது தொல்காப்பியம், நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது. நீள் - நீர். ஒ.நோ: கள் - கரு (நிறம்). தெள் - தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம். வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர் நிலையும் பிற நீர் நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன. வாரி - L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger. and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake. வாரணம் - L. marinus, E. marina, n. marine, maritime, adj. வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என் னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தையொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலை யாசியாவினின் றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறை யறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லியிருப்பது, வானத்திலுள்ள மேகப்படலத்தை. (Vedic India, p.107). நால்வாய் - L. navis, O.Fr. navis, Gr. naus, Skt. nau, E. navy, n. nautical, adj. நால்வாய் (யானை) - நாவாய், நால்வாய்போல் அசைவதால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகு பெயர்). நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப என்றார் முன்றுறையரையனார். களி - மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம். வெளி விளக்குங் களிறுபோலத் தீம்புகார் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை (பட்டினப். 172-3) என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க. நால்வாய் - நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது. படகு - Low. L. bargia, GK. baris, O.Fr. barge, a boat. Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size. படகு - barge - bark. ட-ர,போலி. ஒ.நோ: முகடி - முகரி, குடகு - Coorg. Galleon (Sp. galeon - Low. L. galea), galley (O.Fr.galee - Low. L., galea)v‹D« பெயர்கள் கலம் என்னும் பெயரையும், ship (L. scapha, Gk. skaphos, Ger. schiff, Ice. skip, Goth. skip, A.S. scip, E. skiff)v‹D« பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன. கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மையிலாகும். Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது. நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor. நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப்பெயர் பெற்றது. நாங்கூழ். நாகேல (தெ), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் - நங்கூரம் - anchor. ஆங்கிலப் பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஒ.நோ: நாரந்தம் - naranj (pers.) - arancio (Fr.-It.); E. orange. கவடி - cowry. கவடி - (பலகறை) ஒரு கடற்பொருள். பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது. மண் + தலம் = மண்டலம்(பூமி) - மண்டிலம் = வட்டம். மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறிவாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்தவர்க்கு வானநூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டிகளும் கடிகாரமும். இதை மாக்கசு முல்லரும் கூறுகின்றார். நாலம் - ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றபடி, அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் ............................................................................................ நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய சிறிய வாகப் பெரியோன் (திருவி. 3:1-6) என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது. ந-ஞ, போலி. கா: நயம் - ஞயம். நண்டு - ஞண்டு. உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம் தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப்பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின். அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பெற்றதும், பண்டைத்தமிழரின் வாரித்துறைத் தேர்ச்சியைக் காட்டுவதாகும். அம், ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள். அம் - அம்பு. ஒ.நோ: கும் - கும்பு, திரும் - திரும்பு. அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச் செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச் சொல்லே, வடமொழி அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல, தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா: கம்பு - கப்பு, கொம்பு - கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி. வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச் சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள் களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு = வளையல். அம்பி - ஆம்பி = காளான். L. amb, ambi, Gk, ambhi, round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த கே (Ke)¤ தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினை போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலே. (The Malay Archipelago, pp. 321 - 2.). உலகத்திலேயே முதன்முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத்தக்கதா யிருக்கின்றது. உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. இசைத் தமிழ் அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க. தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் - தாளம். பாடும்போது ஆடும்போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய் - (சை) - கை (த.) (செய்கை - சைகை.) பாணி. கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளை யுடையது. கொட்டு அமுக்குதல்; அதற்கு மாத்திரை 1/2. அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1. தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை. 2. அளவு தாக்கினவோசை 3. மாத்திரை பெறுமளவும் வருதல். அரை மாத்திரையுடைய ஏகதாள முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என முப்பிரிவையுடையது. சுரம் மொத்தம் ஏழு, அவை ஏழிசை யெனப்படும். ஏழிசைகளாவன: தென்மொழிப் வடமொழிப் அடையாள பெயர் பெயர் வெழுத்து (1) குரல் ஷட்ஜமம் ச (2) துத்தம் ரிஷபம் ரி (3) கைக்கிளை காந்தாரம் க (4) உழை மத்திமம் ம (5) இளி பஞ்சமம் ப (6) விளரி தைவதம் த (7) தாரம் நிஷாதம் நி ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ் விரண்டாகப் பகுக்கப்படுவன. இவ்விருசார் சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதிவரம்), பகுவிசை (விக்ருதிவரம்) எனக் கூறப்படும். எழுசுரங்களும் நுட்பப் பிரிவால் 12 ஆவதும் 24 ஆவதும் 48 ஆவதும் 96 ஆவதும் ஓர் இசையை நான்காகக் கருணாமிர்த சாகரத்துட் (பக்.860 -62) கண்டுகொள்க. தமிழர் பகுத்துணர்ந்தது அவரது நுண்ணிய செவிப்புலனைக் காட்டும். ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு நிலை (octave) யெனப்படும். இதை தாய் என்று மொழிபெயர்த்தனர் வடநூலார். தா = நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.) மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன. பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும்போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இசை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள், கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல்களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கிறார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடியாழாசிரியர் இராஜகோபாலை யரவர்களும், தமிழ்நூற் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள். ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துக்களான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங்காட்டிக் கூறு கின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.(கருணாமிர்த சாகரம் பக்.11.2-5) இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம். ச ரி க ம ப த நி என்பற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்து களையே, கு து க உ இ தி என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக்கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை. பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் ( 5சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றை, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஔடவம், சுவராந்தம் என வட சொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை. பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலை யெனப்படும். mJ Ma¥ghiy., வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப்பாலை என நால்வகை. இந் நால்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம்பாலைப்பண் (தீர சங்கராபரணம்) படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும். பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ் - யாழ் = ஏழிசையுடையது. இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க. பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. நரப்படைவாலுரைக்கப்பட்ட பதினோரா யிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம். குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலியவாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடு குறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர். இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர். எண்ணைப் பாடும்போது. ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில். ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக. ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன. பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையோடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை. சீர்த்தி- கீர்த்தி. சீர்த்தி மிகுபுகழ் என்பது தொல்காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என்றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றி னின்றும் பிறந்ததாகும். தோற்கருவிகள் பேரிகை, பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிசை, கரடிகை, திமிலை, குடமுழா தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை முதலியன. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நடமுழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர். துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டியின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப்பட்டது. நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக் கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்டியாழ் ( 7 நரம்பு), சுரையாழ் (1நரம்பு) என்பன. நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ்என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டியாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டி. செங்கோல் என்பதை இதனொடு ஒப்புநோக்குக. கணைகொடி தியாழ்கோடு செவ்விது (குறள்.279) என்று கூறியது, வளைந்த பிற யாழ்களை நோக்கியேயன்றிச் செங் கோட்டியாழை நோக்கியன்று. இசைத்தமிழ் வழக்கற்றுப்போன பிற்காலத்தில், கம்பர் முதலி யோர் யாழும் வீணையும் வேறாகக் கருதினர். யாழ் என்னும் தென்சொற்குப் பதிலாகவே, வீணையென்னும் சொல் வழங்கி வருகின்றதென்க. இப்போது பிடில் (Fiddle) என்று சொல்லப்படும் மேனாட்டி சைக்கருவி, பண்டு கீழ்நாட்டிலிருந்தே சென்றதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் அதற்கு வழங்கும் பெயர் கின்னரி அல்லது கின்னரம் என்பது. கின்னரி வாசிக்குங் கிளி என்றார் காளமேகரும், தென்னாட்டில், யாழ்பயின்ற ஒரு வகுப்பார் யாழோர் எனப்பட்டது போல, கின்னரம் பயின்ற ஒரு வகுப்பார் கின்னரர் எனப்பட்டனர்போலும்! யாழோரும் (கந்தருவர்) கின்னரரும் பதினெண்கணத்தைச் சேர்ந்தவராகப் புராணங் கூறும். யாழுறுப்புகள் வாய், கவைக்கடை, கோடு, மாடகம், நரம்பு, திவவு, பத்தர், போர்வை, ஒற்று, தந்திரிகரம், ஆணி முதலியன. இவற்றுள், மாடகம், ஒற்று, தந்திரிகரம், ஆணி என்பவற்றால் வீணை போன்றிருந்த ஒரு யாழ் அனுமானித்தறியப் படும். யாழில் இசையமைக்கும் வகை பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என எட்டு. யாழை இயக்கும் (வாசிக்கும்) வகை வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என எட்டு. நின்ற நரம்பு(ச), இணை நரம்பு (ப), கிளை நரம்பு (ம),நட்பு நரம்பு(க), பகை நரம்பு என்பன நரம்புகட்கிடையுள்ள தொடர்பைக் காட்டும் குறியீடுகள். செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள். யாழ்நரம்பின் குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க. இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர். மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித்திட்டத்தை (Scale)í« குறிக்கும் செந்தமிழ்ச்சொல். பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர்.பாண்சேரிப் பற்கிளக்கு மாறு என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும். ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக் கிருந்தது. மனுதர்ம சாதிரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது .... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தி னின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஒர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதி காரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89), வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி (சிலப்.13:28-9) என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது. சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்புநாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார். (சாம வேதம்: முகவுரை, ப.19). வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது. பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன்களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின்றனர்; ஆயினும், புல்லாங் குழல் மிருதங்கம் போன்ற மதிப்பான கருவிகளையே பயில்வர். பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையாலேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல்வேண்டும். நாடகத்தமிழ் (Dramatic Literature) நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். அகத்.56) கூத்தர் விறலியர் .......... வாயில்கள் என்ப (தொல். கற்பு.52) என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப்படும். நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற் பெயர். நடி + அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் = நடம் - நட்டம். நட்டம் - நிருத்தம் (வ).ஒ.நோ: வட்டம் - விருத்தம் (வ.). (வள்+தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்றுபவன் நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடு பவள் நாடகக் கணிகை. தாளத்தைக் கணித்தாடுவதால் கணிகையென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர். தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர். தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் - குதித்தல். நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே அம்ஈறுபெற்று நடம் என்றானது எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று சொல்லும் வழக்கை நோக்குக. நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங் குறிக்கும். நடக்கை. நன்னடக்கை முதலிய வழக்கு களை நோக்குக. நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய் வகுக்கலாம். நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத் தையும் உணர்த்துகின்றது. குதித்தாடுவது கூத்து. கூத்தாடுகிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான் என்னும் வழக்குகளை நோக்குக. நாடகத்தை முன்னோர் 1. வசைக்கூத்து, புகழ்க்கூத்து, 2. வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, 3. வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, 4. சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் வத்து, 5. ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, 6. இயல்புக்கூத்து, தேசிகக்கூத்து, 7. அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர். இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை: 1. சொக்கம் - தனிநடம் (சுத்தநிருத்தம்). 2. மெய் - தேசி, வடுகு, சிங்களம். 3. அவிநயம் - கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ் செய்வது. 4. நாடகம் - கதை தழுவிவருவது. அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி. விநோதக்கூத்தின் வகை 1. குரவை 2. கலிநடம் - கழாய்க்கூத்து 3. குடக்கூத்து 4. கரணம் 5. நோக்கு - மாயம், கண்கட்டு முதலியன. 6. தோற்பாவை 7. நகைத்திறச்சுவை. சிலர் நகைத்திறச்சுவைக்குப் பதிலாக வெறியாட்டைக் கூறுவர். வரிக்கூத்து கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டுவகைப் படும். அவிநயம் வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற் றோன், தெய்வமுற்றோன், ஞஞ்ஞை யுற்றோன், உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழைபெய்யப் பட்டோன், பனித்தலைப்பட்டோன், வெயிற்றலைப்பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணோவுற்றோன், தலைநோவுற்றோன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன்,நஞ்சுண்டோன் என 24 வகைகளையுடையது. இவற்றை இன்னும் மலையாள நாட்டுக் கதகளியிற் காணலாம். அவிநயத்திற்குரிய கை இணையாவினைக்கை (பிண்டி, ஒற்றைக்கை), இணைக்கை (இரட்டைக்கை, பிணையல்) என இருவகை. இவற்றோடு ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என நான்கைக் கூட்டுவாருமுளர். இணையாவினைக்கை பதாகை முதல் வலம்புரியீறாக 33 வகைப் படும். இணைக்கை அஞ்சலி முதல் வருத்தமானம் ஈறாக 15 வகைப்படும். இனி, அவிநயக்கை எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என மூன்றாகவும் வகுக்கப்படும். நாடகமாடும் சாலை அரங்கு எனப்படும். இச் சொல் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து, அறை என்னும் பொருளையுடை யது. அறையை அரங்கு என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. அரங்கிற் கட்டும் திரை எழினி யெனப்படும். மேல் எழுந்து செல்வதால் எழினி யெனப்பட்டது. அது ஒருமுக வெழினி (ஒரு புறத்தினின்று இழுப்பது), பொருமுக வெழினி (இருபுறத்தினின்றும் இழுக்கும்), இரட்டைத்திரை. கரந்துவரல் எழினி (மேனின்று கீழிறங்கி வருவது) என மூவகைப்படும். வடநூல்களில் ஒரே யொருவகைத் திரைமட்டும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. நாடகம்பற்றிய பிற விலக்கணங்களை யெல்லாம், அடியார்க்கு நல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரையினின்றும் அறிந்து கொள்க. இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க. இவற்றை ஆரியக்கலைகளாகக் காட்டவேண்டியே, தென்சொற் கட்குப் பதிலாக வடசொற்களைப் புகுத்திவிட்டனர் ஆரியர் என்க. குரல் என்பதைக்கூடச் சாரீரம் என்று சொன்னால் பிறவற்றைப் பற்றி என் சொல்வது?. இசைத்தமிழும் நாடகத்தமிழும் மறைந்துபோனமைக்கு ஆரியமும் சமணமும் பெரிதுங் காரணமாகும். தொல்காப்பியர் சொல்லாத இளமைப்பெயர்கள் அணங்கு, கசளி, கயந்தலை, கரு, கருந்து, குஞ்சு, குருமன், குழந்தை, குன்னி, செள், சேய், நன்னி,நாகு, பொடி, முனி எனப்பல இளமைப் பெயர்கள் தொல்காப்பியர் சொல்லாதன. இவையெல்லாம் பிற்காலத்தன என்று சொல்லமுடியாது (த.இ.வ.138). தொல்காப்பிய வழுக்கள் 1. சகரக்கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூன்றலங் கடையே (தொல். மொழி.29) சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்ககை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை (எழுத்.51) என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற் களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே. இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந் தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசைகிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு: க த ந ப ம எனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே (தொல். மொழி.28) சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ, ஐ, ஔவெனும் மூன்றலங் கடையே (தொல். மொழி.29) இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன. சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்: க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற்றாய் மொழிக்கு முதலாக வரும். ச் என்ற மெய்யெழுத்தும் அவ் வைந்து மெய்யெழுத்துகளைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெழுத்துகளோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும். ஆனால், க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஔ என்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாய் வரா என்பதாம். (எ-டு:) நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது) (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15, பரல் 2, பக், 67, 69) என்பது. இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித் துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்றுகின்றது. இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், பண்டைத் தமிழிலக் கணங்க ளெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற்பட்டவை யென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் காக்கும் அல்லது தப்பிவிக்கும் முகமாக, அவர் காலத்திற்குமுன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்கு வதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பி யம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலி யன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லை யென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மையையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலகவழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதனவாகவும் அதன் சொல்வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவு மிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு: சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சரகர், சரி, சருகு, சருவம், சல்லடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி - சாட்டி), சவட்டை - சாட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு - சறுக்கு, சன்னம். மேலும், தனித்தும் இரட்டியும் வரும் பல குறிப்புச் சொற்களும் சகர முதலவாய் உள. எ-டு: சக்கு, சகசக, சட்டு, சடக்கு, சடசட, சடார், சதக்கு, சம், சர், சரசர, சரட்டு, சரேல், சல்சல், சலசல, சள், சள்சள், சளசள, சளப்பு, சளார், சறுக்கு. இனி, இற்றைச் செகர முதற் சொற்கள் சில பண்டு சகர முதலவா யிருந்தன வென்றும் அறிதல் வேண்டும். எ-டு: சத்தான் - செத்தான், சக்கு - செக்கு. இவற்றை யெல்லாம் நோக்காது, தொல்காப் பியரைக் காத்தற் பொருட்டுத் தொல்பெருந் தமிழின் பெருமையைக் குலைப்பது அறிஞர்க்கு அழகன்று. சவதலி, சம்பளி, சமாளி என்பன போன்ற திராவிடச் சொற்கள் பிற்காலத்தனவா யிருக்கலாம், ஆயின், மேற்காட்டிய தூய தென்சொற்களெல்லாம் தொன்று தொட்டவையே. சம்பு என்பது சண்பு என்னும் இலக்கியச் சொல்லின் திரிபா யிருப்பினும், சம்பங்கோரை, சம்பங்கோழி என்பன தொன்று தொட்ட உலக வழக்கே. 2. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல். மொழி. 34) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோவெனின், நுந்தை யுகரங் குறுகி மொழி முதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க என்பது நன்னூல் மயிலை நாதருரை (நன்.எழு.51) 3. வகரக் கிளவி நான்மொழி யீற்றது (தொல்.மொழி.48) அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க. 4. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (தொல். மொழி. 49) என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் என்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான்,அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை. 5. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும் (தொல்.குற்.40) ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக. தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக. தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு + ஆயிரம் = தொள்ளா யிரம் - தொளாயிரம். இதை ஆறாயிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு நோக்குக. தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101) என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். தொண்டுபடு திவவின் (மலைபடு கடாம், 21) என்றார் பெருங்கௌசிகனாரும். எண்ணுப் பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வொரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று. எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர் 9 தொண்டு ஒன்பது (தொன்பது) 90 தொண்பது தொண்ணூறு 900 தொண்ணூறு தொள்ளாயிரம் 9000 தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம் (ஒன்பது + ஆயிரம்) ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 x 9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும். ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனை யெண்ணுப்பெயர்களெல் லாம் தனிமொழிகளா யிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப்பத்தாம் இடப்பெயர் வழங்கிவருகின்றது. ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, பொருந்தப் புகலல் என்னும் உத்திபற்றியது. இக்கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீ (19), உன்தீறு (29), உன்சாலி (39), உன்சா (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையிலமைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம். தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது - ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயுமிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கை யாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப் பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப் பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக் கணத்தின் தொன்மையும் அறியப்படும். தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார். கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார். 6. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும் (தொல். குற்.58) இந் நூற்பாவில், இயற்கைத் தென்ப என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோரது என்பது புலனாகும். 7. நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே (தொல்.புண.30) அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை யாகும் (தொல். புண.31) என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு, இனித் தொல்காப்பியரும், தமிழில் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென் றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிக மாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமையென்னும் பிரதமாவிபக்தி யாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பன வற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமை யாலும், எல்லா நீயிர் நீ எ-ம், நீயிர் நீயென வரூஉங் கிளவி எ-ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலை என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகார மொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும்மென்னு நிலை மொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க எனக் கூறி யுள்ளார். (பிரயோக விவேகம், நூ.7,உரை) பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும். இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர், .........Éfhu¥பெயu பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன் அனவன்ஆவா‹ஆகி‹றவன்முj லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே என்று நூற்பா வியற்றி, தன், தம், நம், என், எம், நின், நும், என்னுந் திரிபில் பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழி களையும் ஏற்றுநிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங் காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க. இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாள மர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக. இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாலால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக என்று உரையும் கூறி, இறுதியில், இவ் வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று என்று அதன் புன்மையை யும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன்றுஞ் சில மாணவரிலக் கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் ஆ என்னும் பகுதி யடியாய்ப் பிறந்த வினையாலணையும் பெயர் களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவனால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்ட வேண்டிய விடத்து வருவனவேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்ல வென்பதை யும் அறியாமல், தமிழிலக்கணத் திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர். இனி, ஆயவன், ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ்வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வேறாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்பதையும்; ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியினின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்கு மென்பதையும் அவர் நோக்கிற்றிலர். நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடி யென்றும். நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றா யிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்பதையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தியென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறையாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின. நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு. கா: பிறம் - புறம் நூ.வ. பிட்டு - புட்டு உ.வ. பீளை - பூளை பீடை - பூடை (கொச்சை) நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ்வேறு வடிவங்களி னின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம். நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்ததாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன்றிற்று என்று கூறுவதையே ஒக்கும். 8. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (தொல். மொழி.39) இதில், நொ, என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும், நொ என்பது அதன் குறுக்கமே. ஏவல் இ.கா. நி.கா எ.கா. பெயர் நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய் காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவ மாயின், அது து என்னும் வினை துக்கிறான், துப்பான் என்றாவதுபோல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க. இனி, உச்ச காரம் இருமொழிக் குரித்தே என்ற வரையறை கூட வழுவோவென் றையுறக் கிடக்கின்றது. இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க. காலம்: தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை நான்மறை முற்றிய என்றும், தொல் காப்பியரை ஐந்திரம் நிறைந்த என்றும், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடைகொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட அஷ்டாத்யாயீயை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல்காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே. தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது. கடைக்கழகக் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ்நாட்டு வரலாற்றா ராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல். 1336) என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித்திருப் பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியுடையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரது என்பது அறியப்படும். மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்த மையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல (தொல்.510) என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக் கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும். இனி, மேற்குறித்த 1336 ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் நாற்பெய ரெல்லையகம் என்றொரு தொடர்மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத்தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள். நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன: வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும். முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடாயிருந்தது. சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில் என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க. பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்களமாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக்கடற் கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அகநாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது. மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது. நாற்பெய ரெல்லை என்றது நாற்றிசை எல்லைகளையே யன்றி நால்வேறு மண்டலங்களை யன்று. மேலும், பிற்காலத்துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்குமண்டலம் என்பன வாகும். சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம். இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். இனி, முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப்பியனார், வியங்கோள் தன்மை முன்னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது முடிநாகராயர் செய்யுளிற் காணப்படுகின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங்கோள், பிற்காலத்தே முன்னிலையிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல்காப் பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்? (bjhš. எழுத்ததிகாரம் முகவுரை பக்.12) என்கிறார் பி.சா.சு. சாத்திரியார். .........K‹Åiyதன்kஆpரிடத்தொL மன்னாதாகு«வியங்கோ£கிளÉ (தொல்.வினை.29) என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொருளையே சாத்திரியார் நன்றா யறியவில்லை. மன்னா தாகும் என்னும் வினைக்குப் பெரும்பாலும் வராது என்பதே நூற்பாவிற் குறித்த பொருள். ஒருவேளை, கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே (தொல்.இடை.4) என்னும் நூற்பாவில் மிகுதிப் பொருள்மன்னைச் சொற்குக் குறிக்கப்பட வில்லையே என்று அவர் கூறலாம். தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படாமையானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்)களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப்பியத்தில் ஒன்றைப் பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது. நன்னூலார் பிற்காலத்தவராதலின்,தொல்காப்பியரினும்விரிவாaராய்ந்து,k‹nd mசைநிலைxழியிசைM¡கம் கÊî மிகுதி நிலைபே றாகும் (நன்.432) என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர். இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள மன்னா தாகும் என்னுஞ் சொல் வினைச் சொல்லாதலின், இடைச்சொல் லாகாதெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரினாயது, வினையினாயது என மூவகையென்றும், அவற்றுள் மன் என்னும் சொல் வினையி னாயதென்றும் கூறிவிடுக்க. கா: இயற்கை பெயர் வினை ஆவா! ஐயோ! (என்றான்) என்று சீ (பாவம்) (போன்றான்) போல சலசல முறையோ! (கொண்டான்) கொண்டு (3ம் வே.உ) கசதப மிகும்வித வாதன மன்னே (நன்.165) என்று, மன்னையிடைச் சொல்லை, நன்னூலார் மிகுதிப் பொருளில் வழங்கியதுங் காண்க. வியங்கோள் வினை வாழ்த்து, சாவிப்பு, ஏவல், வேண்டுகோள், வஞ்சினம், விருப்பம், சொல்லளிப்பு முதலிய பல பொருள்களில் வரும். இவற்றுள், வாழ்த்து முதல் வேண்டுகோள் வரையுள்ள பொருள்கள் தன்மைக்கும், வஞ்சினம் சொல்லளிப்பு என்னும் பொருள்கள் முன்னிலைக்கும் படர்க்கைக்கும் ஏற்கா. வியங்கோள் வினைக்குச் சிறந்த பொருள்களான வாழ்த்து, வேண்டுகொள் என்னு மிரண்டும் அவற்றின் மறுதலைகளான, சாவிப்பு, ஏவல் என்பனவும் தன்மைக்கு ஏற்காமையின், வியங்கோள் பெரும் பாலும் தன்மையில் வராது எனக் கூறப்பட்டது. ஆனால் முன்னி லைக்கு இவ் வரையறை கூறினது தவறேயாகும். ஆகையால், முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில் நிலீயர் என்னும் வியங் கோள் வினை வந் திருப்பது கொண்டு, அவரைத் தொல்காப் பியருக்குப் பிந்தியவராகக் கூறமுடியாது. மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே அதோடு தொல்காப்பியத்திலேயே, தொல் காப்பிய இலக்கணங்கட்கு மாறான சில சொல்வடிவங்களைக் காணலாம். இதுவரை, தனித்தமிழ்க் கருத்துகளையே தழுவின முழு நிறை வான தமிழ் இலக்கணமாவது, இலக்கண உரையாவது இயற்றப் படவே யில்லை. ஆதலின், மொழிநூலைத் துணைக் கொண்ட தமிழ் முறையான நடுநிலை யாராய்ச்சியாலன்றி, உண்மையான தமிழிலக்கணத்தை யறியமுடியாததென்பது தேற்றம். தொல் காப்பியம் ஒன்றையே தழுவுவார் தமிழியல்பை அறியமுடியா தென்பதற்கு ஒரு காட்டுக் கூறுகின்றேன். கள் என்னும் ஈறு பலர்பாலுக்குரியதாகத் தொல்காப்பியத்தில் விதிமுறையிற் கூறப்படவில்லை. ஆயினும்,உயர் திணை யென் மனார் மக்கட் சுட்டே என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கிருக் கிறார். இதை யறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர். இனி, பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீய சுக்லயஜூர் வேதீயப்ராதி சாக்கிய சூத்திரங்களுக்கும் ஒற்றுமையிருத்த லானும்... ஆசிரியர் தொல்காப்பி யனார்க்கு வேதங்கள், ப்ராதி சாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாக நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், அந் நூல்கள் தற்போதுள்ள ஆராய்ச்சி யாளர்களால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்கு முன்னருள்ளன எனக் கூறப்படுகின்ற மையான தொல்காப்பியம் கி.பி. இரண்டாவது நூற்றாண்ட தாகும் என்று சாத்திரியார் கூறியுள்ளது, நெப்வீல்டு (J.C. Nesfield) ஆங்கிலத்தில் எழுதிய இலக்கண நூல்களிற் சொல்லப்பட்டவற்றிற்கும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டவற்றிற்கும், சில பொருட்களில் ஒற்றுமையிருப்பதால், நெப்வீல்டு இலக்கணத்தைப் படித்துத் தான் தொல்காப்பியர் தம் இலக்கணநூல் இயற்றினார் என்றும், போப் (G.U. Pope) ஆங்கிலத்தில் எழுதிய திருவாசகத்தைத்தான் மாணிக்கவாசகர் தமிழில் மொழிபெயர்த்தாரென்றும் கூறுவது போன்றதேயன்றி வேறன்று. தொல்காப்பியத்தின் செந்தமிழ் நடையொன்றே, அந் நூலின் தொன்மையைக் காட்டற்குப் போதுமானது. தொல்காப்பியத் திற் பயின்று வரும்அலங்கடையே, இவணையான சிவணும் ஓரன்ன முதலிய சொற்றொடர்களும், தொல்காப்பியத்தின் வட சொல்லருகிய தனித்தமிழ்க் கால நிலையை உணர்த்துவனவாகும். பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள படிமையோன் என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுப் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், தொல்காப்பியர் சமணரென்று முடிவுசெய்ததுடன், படிமை என்ற சொல் தமிழ்ச்சொல்லாகத் தோன்றவில்லை என்று தம் தமிழறியாமையையும் புலப்படுத்தி யிருக்கின்றார்கள். படிமை என்ற சொல் படி என்னுஞ் சொல்லடியாகப் பிறந்தது. படு - படி - பதி. படுதல் - வீழ்தல். படு என்னுஞ் சொல்லே படி, பதி எனத் திரியும், படிதல் - பதிதல். ஒரு பொருள் இன்னொரு பொருள்மேற் படும்போது, மேற்பொருள் கீழ்ப்பொருள்மேற் படியும்; அப்போது, முன்னதன் வடிவம் பின்னதிற் பதியும், அவ் வடிவம், அப் படிந்த பொருளின் வடிவத்தையே போன்றிருக்கும்; (அடிச்சுவடு களையும் முத்திரைகளையும் நோக்குக) இதனால், படி என்னுஞ் சொல் போல அல்லது வகையில் என்னும் பொருளில் வழங்கும். கா: அப்படி, இப்படி, உப்படி, எப்படி. அப்படி = அவ் வடிவம், அம் முறை - In that form. அப்படிச் செய் = அம் முறையிற் செய், = அதுபோலச்செய் do so. போல இருப்பது போன்மை. அங்ஙனமே, படியிருப்பது படிமை. ஒ.நோ: like-likeness. வழிபடு வுருவமாவது, பொம்மையாவது, கடவுளைப் போல அல்லது மாந்தனைப்போலச் செய்யப்பட்டிருப்பதால் படிமை எனப்பட்டது. இஃதொரு பண்பாகு பெயர். படிமை என்னுஞ் சொல்லில், படி பகுதி; அமை பண்புப் பெயரீறு. மையீறு தமிழ்க்கே யுரியது. வடமொழியில் படிமை, மகிமை முதலிய சொற்களை யெல்லாம் பகாச்சொற்களாகவே கொள்வர். அம் மொழியில் மையீறில்லை. தமிழிலோ அச் சொற்கள் பண்புப்பெயர்களான பகுசொற்களாகும். படி - மை என்னுஞ் சொல்லை, அடி - மை, குடி - மை, மடி - மை, மிடி - மை முதலிய பண்புப்பெயர்களோடு ஒப்புநோக்குக. ஒரு மூலவோலையைப் பார்த்தெழுதினது, அல்லது அச்சிட்டது, அம் மூலத்தின்படி யிருப்பதால் படி (copy) யெனப்படும். படியோலை என்று பண்டை நூல்களில் வழங்குதல் காண்க. படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதி, ப்ரதிமா என வழங்குவர் வடநூலார். இப்போது, மூலச்சொற்களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ் நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப்படுகின்றன வென்க. தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில், கையாளப்பட்ட முறைகள் : 1. முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், 2. டகரத்தைத் தகரமாக்கல் 3. ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன. பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும், ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க. வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரியவென்று துணிதற்கு முக்கிய மானது, பகுதிப்பொருள்பற்றியது. ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற் றிற்குப் பொருந்தப் புளுகல் என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலாவிடின்இடு குறியென முத்திரை யிட்டு விடுவர். அவ் விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச்சொற்களே யென்பது ஐயமறத் துணியப்படும். ஒரு மூலத்தின் படி (copy), அம் மூலத்தின் அளவாயேயிருத் தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் சொல் வழங்குவதாகும். கா: காற்படி (அரிசி), பட்டணம்படி - முகத்தலளவு. படிக்கல் - நிறுத்தலளவு. படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப்பற்றியனவே. வரும்படி - வரும் பொருளளவு. படிமானம் = பதிவு. பண்டமாற்றிலும், ஈட்டுக்கடனிலும், ஒரு பொருளுக்கு அதன் மதிப்பளவுள்ள இன்னொரு பொருள் கொடுக்கப்படுகின்றது. ஓர் அலுவலாளர் விடுமுறையி லிருக்கும்போது, அறிவிலும் ஆற்ற லிலும், அவரளவுள்ள இன்னொருவர் அவருடைய இடத்தில் அமர்த்தப்படுகிறார். இதனால், பதில் என்னும் சொல் ஈடு, பதிலி (substitute) என்னும் பொருள்களில் வழங்கத் தலைப்பட்டது. பதி என்னும் சொல்லே லகரமெய்யீறு பெற்றுப் பதில் என்றாகும். இங்ஙனம் ஈறு பெறுவது பொருள் வேறுபடுத்தற்கென்க. படி - (படில்) - பதில். பண்டமாற்றில் ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாறித் தருவதுபோல, உரையாட்டில் அல்லது எழுத்துப் போக்குவரவில், ஒரு சொலவுக்கு இன்னொரு சொலவை மாறித்தருவது பதில் எனப்படும். மாற்றம் என்னுஞ் சொல்லை இதனுடன் ஒப்பு நோக்குக. மாறிச் சொல்வது அல்லது (இருவர்) மாறிமாறிச் சொல்வது மாற்றம். வழக்காளிகள் இருவருள், வழக்காடி வாதியென்றும், பதில் வழக்காடி ப்ரதிவாதியென்றும் வடசொற்களாற் கூறப்படுகின்றனர். வழக்காடியின் கூற்றுக்கு மாறிக்கூறுவதால், பதில் வழக்காடி ப்ரதிவாதியெனப்படுகின்றான். (பதில் வழக்காடி, வழக்காடியின் வழக்கிற்கு எதிராக, மற்றொரு வழக்குத் தொடுப்பது எதிர் வழக்காகும்.) ப்ரதியுபகாரம் - மாறிச்செய்யும் நன்றி. கைம்மாறு என்னுஞ் சொல்லை நோக்குக. ப்ரதிபிம்பம் - மாறித்தோன்றும் வடிவம். ஓரினத்தைச் சேர்ந்த எல்லாப் பொருள்களும், ஒரேபடி (வடிவு அல்லது வகை) யாயிருத்தலான், (படி அல்லது) ப்ரதி என்னும் சொல், ஒவ்வொரு என்னும் பொருளிலும் வழங்குவதாகும். படி + உ = படிவு + அம் = படிவம் படிவு - வடிவு. படிவம் - வடிவம். ப-வ போலி. எனக்கு ஒரு படி (வகை)யாய் வருகிறது என்பதை, எனக்கொரு வடியாய் வருகிறது என்பர் தென்னாட்டார். பகு-வகு, பகிர் - வகிர், தபம் - தவம், என்பவற்றில் பகரத்திற்கு வகரம் போலியாய் வருதல் காண்க. படிமை என்னும் சொல், ஒன்றன் வடிவத்தைக் குறிக்கும். நோன்பி (விரதி)கள் விதப்பான உடையும் அணியும் பூண்டிருப்பராதலின், அவரது வடிவம் அல்லது தோற்றம் சிறப்பாய்ப் படிமை யெனப்பட்டது விரதியரை வினாவல் என்னுந் துறை பற்றிய திருக்கோவைச் செய்யுளில், சுத்திய பொக்கணத் தென்பணிகட் டங்கஞ்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்... (242) என்றும், பாலைக்கலியில் (8), எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் என்றும் கூறியிருப்பதா லறியப்படும். படிமையுடையோன் படிமையோன். நோன்பைப் படிமை யென்றது ஆகுபெயர். படிமை என்னுஞ் சொல் படிமம் என்றும் நிற்கும். மம் என்பது பண்புப் பெயருக்கும் தொழிற்பெயருக்கும் பொதுவான ஓர் ஈறாகும். உருமம், கருமம், பருமம், (பருமன்), மருமம் என்னுஞ் சொற்களை நோக்குக. படிமத்திற்கு (நோன்பிற்கு) உணவுமுறை வேறுபட்டதாதலின், அது படிமவுண்டி யெனப்படும். படிம வுண்டிப் பார்ப்பன மகனே (குறுந். 156:4) என்று குறுந்தொகை யில் வந்திருத்தல் காண்க. உயிர்களை அறிவுபற்றி ஆறாகப் பகுப்பது தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டிலுள்ளது. இது ஒரு படிமுறைப் பகுப்பு. கிறித்துவ மறையில், ஆதியாகமம் முதலதிகாரத்தில், படைப்பைக் கூறும் போது, நிலைத்திணை, நீர்வாழி பறவை, விலங்கும் ஊர்வனவும் என்பன முறையே படைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இதுவும் ஒரு படிமுறைப் பகுப்பே. இதனால், கிறித்துவமறைக்கும் தொல்காப்பியத்திற்கும் ஓர் இயைபு கூறமுடியாது. சின்கிளேர் ற்றீவென்சன் அம்மையார் (Mrs. Sinclair Stevenson) தாம் எழுதிய ஜைன நெஞ்சம் (The Heart of Jainism) என்று நூலில், 7ஆம் அதிகாரத்தில் சமண முறைப்படி உயிர்களை 13 முறையிற் பலவாகப் பகுக்கின்றார். அவற்றுள், 4ஆம் முறையிற் புலன்பற்றி உயிர்களை ஐந்தாகப் பகுத்து, அவ் வைந்தனுள் ஐயறிவுயிரை மீட்டும் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி இரண்டாக வகுக்கின்றார். பின் 10ஆம் அதிகாரத்தில், பிரதிமா என்னும் பெயரால், ஒரு ஜைனன் மேற்கொள்ளவேண்டிய 11 சூளுறவுகளையுங் குறிக் கின்றார். ப்ரதிமா என்பதற்குப் படிமா என்னும் மறுவடிவமும், 221ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பிற் காட்டப்பட்டுள்ளது. இங்ஙனம் அவர் கூறியதால், வடநாட்டில் வழங்கும் தமிழ்ச்சொற்களையும் தமிழக் கொள்கைகளையும், சமணர் மேற்கொண்டு வழங்கினர் என்பதல்லது, தொல்காப்பியர் சமணர் என்பது எங்ஙனம் பெறப்படும்? தமிழின் தொன்மையைப் பற்றியே திருவாளர் வையாபுரிப்பிள்ளையவர்கட்கு ஒரு கருத்தில்லையென்பது, அவர்களெழுதிய ஆராய்ச்சியுரைத் தொகுதி யால் அறியக்கிடக் கின்றது. அவர்கள் முடிபெல்லாம், மகன் தந்தையை ஒத்திருப் பதால் மகனே தந்தையைப் பெற்றவன் என்பது போன்றவையே. வடமொழியுட்பட, வடநாட்டுமொழிகள் எல்லாவற்றிலும், தனித்தமிழ்ச் சொற்கள் நூற்றுக்கணக்காகக் கலந்துள்ளன என்பதை, அவர் அறியார்போலும்! வடநாட்டில் தோன்றிய, பௌத்த மறைக்குச் சிறப்புப் பெயராய் வழங்கும் பிடகம் என்னும் சொல்லுங்கூட, பெட்டகம் என்னும் தமிழ்ச் சொல்லாயிருக்கும்போது, வேறென்ன சொல்ல வேண்டுவது? பிடகம் (பெட்டகம்) = பெட்டி, கூடை, தட்டு. கி.மு.6ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண மதத்தோடு எங்ஙனம் தொடர் பிருந்திருக்க முடியும்? மகேந்திரமலை முழுகிக்கிடக்கின்றது என்று சுக்கிரீவன் அங்கதனுக்குக் கூறுவதாக வால்மீகி கூறியிருப்பதால், கபாடபுரம் இராமர்காலத்தது என்பது வலியுறும். ஒரு மொழியில் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும். இலக்கிய மின்றி யிலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம் (அகத்தியம்) தொல்காப்பியர் காலத்தில், ஆரியர்க்கு வேதமும் பிராமணமும் ஒருசில மிருதிகளும் இராமாயண பாரத இதிகாசங்களும் தமிழைப் பின்பற்றிய எழுத்து சொல் இலக்கணங்களும் மட்டுமிருந்தன. இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல்.பொருள். 89) என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை, ஆரிய மணங்கள் எட்டனுள் ஒன்றான கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதாலறிய லாகும். இதனால், ஆரிய தமிழ வழக்கங்களையும் நூல்களையும், ஒப்பிட்டுப் பார்ப்பதில் தொல்காப்பியர் விருப்பமுடையவர் என்பதும் வெளியாகும். புறத்திணையியலில் வாகைத்திணை பற்றிய நூற்பாவில், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று கூறியிருப் பதாலும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்க்கு வேதமிருந்தமை யறியப்படும். வேறேயொரு நூலாவது கலையாவது, ஆரியர்க் கிருந்ததாகத் தொல்காப்பியத்தில் எங்கேனும் குறிக்கப்படவே யில்லை. பிறப்பியலில், எல்லா எழுத்தும் அந்தணர் மறைத்தே என்று கூறியது, ஆரிய மறையை யன்று. களவியலுரையில், நச்சினார்க்கினியர், பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப (13) என்னும் நூற்பாவிற்கு, அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம் என்றவாறு. எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான், இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை, அவர் புணர்தற்கு நிமித்தமாதலின். அவை அவன் கண்ணவெனப்படும், இவனைப் பிரசாபதியென்ப.... அவ்வாற்றானே பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசுரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம் என்றும், முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (14) என்னும் நூற்பாவிற்கு, இதற்கு முன்னின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும் என்றும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (15) (இதுவும் முந்தின நூற்பாவும் நமச்சிவாய முதலியார் பதிப்பில் இரண்டாகவும், கனகசபாபதி பிள்ளை பதிப்பில் ஒன்றாகவும் காட்டப் பட்டுள்ளன.) பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வத மென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் என்றும், முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே (16) என்னும் நூற்பாவிற்கு, மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும், கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின், அவை ஐந்தெனப்படும் என்றும் தமிழ்முறைக்கு மாறாக உரை கூறினார். இவ் வுரை தவறென்பதற்குக் காரணங்களாவன: 1. தமிழ்முறைக்கு மாறானமை. இதை, நச்சினார்க்கினியரே, இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனி மித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற் பட்ட இருவகைக் கைகோளும் போலா இவை யென்பதூஉம் ... இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென் பதூஉங் கொள்க, என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம். 2. ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல். களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர். தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப்படலாம். ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச் சொற் பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல் கூடாது. 3. முறைமாற்று. ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், அசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையில மைந்திருக்கவும், இவற்றுள் முன்னைய நான்கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர். 4. தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை. இதை, இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்ததிலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும் என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. 5. பார்ப்பனத் தொடர்பு கூறல். பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக்கத்தையும் இல்லறத்தை யும் சிறப்பாய்க் கூறும் அகத்திணையியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப் படக் கூறும் பிற வியல்களி லேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். புறத்.16) என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்கு மேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா. பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன: கற்பியல்: காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (36) தோழி தாயே பார்ப்பான் பாங்கன் ...................................................................................................... யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (52) செய்யுளியல் பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி ................................................................................................. களவிற் கிளவிக் குரியர் என்ப. (181) பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். (182) பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே (189) மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலாரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்பேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர், அந்தணர், ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும். கற்பியலில், திருமண வினையைப் பற்றி நான்கு நூற்பாக்கள் உள்ளன. அவையாவன: கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே (1) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான (2) மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே (3) பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (4) இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையை மட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க் கினியர் திருமண வினைக்குக் காட்டாகக் கூறிய செய்யுள் வருமாறு: உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த வீரித ழலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றை ......... (அகம்.86) இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க. பொய்யும் வழுவும் என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை .ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்கவில்லை. என்ப என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வா யறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத் தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழரா லேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும் மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே. பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்பதற்கு, இளம் பூரணர் உரைத்த உரையாவது: பன்னிரண்டாவன: பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற்பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும் என்பது. இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத்தைக் கலந்துணர்ந் தமையாலேயே தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமையால், அவர்மீதும் குற்றஞ் சமத்தற்கிடமில்லை. இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு: கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந்திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டாம். காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தலும் நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும் சொல்லெதிர் பெறா அன் சொல்லி,ன் புறலும் (அகத்.53) (ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. இவையே, முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொடரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க. ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (அகம்.54) இவையே, பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்று சுட்டப்பட்டவை. முன்னைய, பின்னர் என்னும் முறையையும், மூன்றும் நான்கும் என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக. அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப்பாரை. யாழ் இசை, யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார். கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்பவை, முறையே, ஒரு தலைக் காமமென்றும், இருதலைக் காமமென்றும், பொருந்தாக் காமமென்றுங் கூறப்படுகின்றது. இவை தெளிவும் நிறைவுமான இலக்கணங்களல்ல. கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பாலும் (சிறிது) காலமே நிகழ்பவான காமக் குறிப்புகளும் புணர்ச்சிகளுமாகும். கைக்கிளைக் குறிப்பே, பெருந்திணைக் குறிப்பே என்று கூறுதல் காண்க. அன்பினைந்திணை அங்ஙனமன்றி, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுள்ள நீடித்த அன்பொத்த இன்பவாழ்க்கையாகும். நெறிதிறம்பிய காமம் ஒரு பெண்ணுக்கு எவ்வகையிலேனும் தீமை செய்யாவிடத்துக்கைக்கிளையாம்; தீமை செய்தவிடத்துப் பெருந்திணையாம். காமஞ்சாலாத ஒரு சிறு பிள்ளையோடு பேசிமட்டும் இன்புறுவது கைக்கிளை; வரம்பு கடப்பின் பெருந்திணை. இன்பநெறிக்கு மாறாக விலங்குத் தன்மையும் பேய்த்தன்மையுமான கூட்டமெல்லாம் பெருந்திணையே. கொடிய குட்டநோய் பெருநோய் எனப்பட்டதுபோல, கொடிய மணக் கூட்டம் பெருந்திணை யென்னப்பட்டது. இதையறியாமல், எண்வகை மணங்களில் நால்மணம் பெற்றதால் பெருந்திணை யெனப்பட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர். மேலும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்மணங் களும் பெருந்திணை யாகாமையு மறிக. பண்டைக்காலத்தில்,களவின் தொடர்ச்சியாகவே கற்பு நிகழ்ந்துவந்தது. இதுபோது, பெரும்பாலும் பெற்றோராலேயே புணர்க்கப்படும் மணங்களுள், பெண் மாப்பிள்ளை என்னும் இருவர்க்குள்ளும், ஒருவர்க்கே அன்பிருப்பின், கைக்கிளையின் பாற்படும்; இருவர்க்கும் அன்பிருப்பின் அன்பின் ஐந்திணையாம்; இருவர்க்கும் அன்பில்லாதிருப்பின் பெருந்திணையின் பாற்படும். தொழில்வகை செயல் சிறியதும் பெரியதுமாய் ஏதேனுமொரு செயல்; வினை பிறவிக்கேதுவான செயல்; தொழில் கைத்தொழில்; வேலை பிழைப்பிற்கேதுவான செயல்; அலுவல் உத்தியோகம்; கருமம் ஆள்வினைச் செயல்; கரணம் திருமணச் சடங்காகிய செயல்; கடமை கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல்; கடப்பாடு ஒப்புரவு அல்லது வேளாண்மைச் செயல்; காரியம் வாழ்க்கைச் செயல்; கம் அல்லது கம்மியம் ஐவகைக் கொல்லர் தொழில்; உழைப்பு மெய் வருத்தச் செயல்; ஊழியம் வாணாள் முழுதும் செய்யும் வேலை (Service); தொண்டு பொதுநலச்செயல்; தொழும்பு அடிமைவேலை; பணி பொருளாக்கச் செயல், பணிக் கப்பட்ட செயல்; பணிவிடை குரவர்க்குச் செய்யும் தொண்டு; புரிவு விருப்பச்செயல்; சோலி கவனிக்கவேண்டிய சொந்த வேலை; வெட்டி வீண்வேலை; அமஞ்சி கூலியில்லாக் கட்டாய வேலை; நிகழ்ச்சி எதிர்ப்ர்த்த நடப்பு; நேர்ச்சி எதிர்பாராத நடப்பு (சொல்.53) தொழிற் பொருத்தம் மணமக்கள் இருவரும் ஒரே தொழிலை அல்லது தொடர்புள்ள தொழில்களைச் செய்தல், தொழிற் பொருத்தமாம். தொழில் வேறுபடினும் மாறுபடல் கூடாது. (த.தி.48). தோட்டி (1) தோட்டி: துறடு - துறட்டி - தோட்டி. தோட்டி - த்ரோட்டி, த்ரோத்ர, தோத்ர (வ.). (தி.ம:746). தோட்டி (2) தோட்டி - தோத்ர (tottra). வடவர் இதற்குக் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன் திரிபே. (வ.வ: 182). தோடு தோடு சேரன் பனம் பூமாலையை அடையாள மாலையாகக் கொண்டி ருந்ததினாலும், ஓலையைக் குறிக்கும்தோடு என்னும் சொல் இன்றும் காதணிப் பெயராய் வழங்குதலாலும்.............(த.தி.81). தோணி தோணி: தொள்ளுதல் = தோண்டுதல், குடைதல். தொள் - தோள் - தோணி = குடையப்பட்ட மரக்கலம், அது போற் பலகைகளாற் பொருத்திச் செய்த கலம். தோணி - த்ரோண (வ.). (தி.ம:746). தோரணம் தோரணம் - தோரண துருவு - தூர் - தோர் - தோரணம் = தெருவிற் குறுக்காகக் கட்டும் சுவடிப்புத் தொங்கல். தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல். தோர் - தோரணை = கோர்வை, கோர்வையாகச் சொல்லும் முறை. (வ.வ:186). தோள் தோள் - தோ (d) தொள் - தொண் - தொண்ணை = பருமன். தொள் - தோள் - தோடு = திரட்சி, தொகுதி. தொள் - தொழு - தொழுதி = தொகுதி. தோள் = கையின் திரண்ட மேற்பகுதி. (புயம்). சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (பெரும்பாண். 145). k., க. தோள், து. தோளு. தோட்கடகம், தோள்வலி, தோள்வளை, தோளணி முதலிய சொற்களை நோக்குக. பிற்காலப் புலவர் இச்சொல்லைக் கை என்னும் பொதுப் பொருளிலும் ஆண்டுவிட்டனர். (வ.வ: 186). நகரம் நகரம் - வ. நகர நகுதல் = விளங்குதல். நகு-நகர் = விளங்கும் மாளிகை, மாளிகையுள்ள பேரூர். நகர்-நகரி = மாளிகையுள்ள பேரூர். நகர்-நகரம் = பெருநகர். (வ.வ:186) நசி நசி - வ. நச் (nasÝ) நொள்-நொய்-(நய்)-நை. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல்.56). நைதல் = நசுங்குதல், கெடுதல். நை-நசி-நசியல். நசி-நசுங்கு-நசுங்குணி. (வ.வ:186.) நடத்தை வாழ்க்கை ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழிப்போக்குப் போன்றது. நிலத்தின்மேற் காலால் நடந்து செல்வது போல, வாழ்க்கையில் ஒருவன் நினைவு சொல் செயல் ஆகிய முக்கரணத் தொழிலால் நடக்கின்றான். இதனால் முக்கரண ஒழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக் காரணம் பற்றியதே. ஒழுகுதல் நடத்தல். இப் பொருள் இன்று வழக்கற்றது. (ஆங்கிலத்திலுள்ள conduct என்ற சொல்லும் இக் காரணம் பற்றியதே. L.,con, together, duct, to lead. (சொல். 10) நடனம் நடி - நடனம் (வ.வ:186) நடி - நடிகன், நடிகை. நடி நடி - வ. நட், ந்ருத் நளிதல் = ஒத்தல். நளி-நடி. ஒ.நோ: களிறு-கடிறு. நடித்தல் = ஒத்து நடத்தல், நாடக நிகழ்த்தல், கூத்தாடுதல், பாசாங்கு செய்தல். நடி-நடம்-நட்டம். நடிகன் நடிகன் - வ. நடிக (t@), நடிகை - வ. நடிகா (t@) நட்டம் - நட்டணம், நட்டணை. நட்டணம் - நர்த்தன (வ.வ: 187) நடுநிலை நடுநிலை என்னும் சொல், சமன் செய்து சீர்தூக்கும் துலைக் கோலில் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலைமையினின்று எழுந்தது. (தி.ம. அதி. 12) நடுவுநிலை நிறைகோலின் நடுவு இருபுறமும் சமனாய் நிற்குமாறு நடுநிற்றல் போல, பகை நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்த நிலை நடுநிலை அல்லது நடுவு நிலை எனப்பட்டது. (சொல்.6) நம்பற்கரிய செய்திகள் பழந்தமிழாட்சியில் நிகழ்ந்தனவாகக் கூறப்பட்டுள்ள பல செய்திகள், இக்காலத்தார் நம்பற்கரியன. அவற்றுட் சில வருமாறு:- (1) கழுமலத்தில் அவிழ்த்துவிட்ட யானை, கரிகாலனைத் தேடிச் சென்று கருவூரிற் கண்டு தானே தன்மீது ஏற்றிக்கொண்டு வந்தது. (2) ஊர்க்கணக்கன் ஆண்டிறுதியில் காய்ச்சிய இரும்பேந்திக் கணக்கொப்புவித்தது. (3) கரிகாலன் முகரியென்னும் முக்கண்ணனின் மிகைக் கண்ணைப் படத்திலழிக்க, அந்நொடியே அம் முகரியின் கண் தானே மறைந்தது. (4) பாம்புக்குடமும் பழுக்கக் காய்ச்சிய இரும்பும், அறமன்றங் களில் தெய்வச்சான்றாக உண்மையுணர்த்தி வந்தது. (5) புகாரிலுள்ள சதுக்கப் பூதம், அறைபோகமைச்சரும் பொய்க் கரியாளரும் உள்ளிட்ட அறுவகைக் குற்றவாளிகளைப் புடைத்துண்டது. (6) வார்த்திகனை நெடுஞ்செழியன் அதிகாரிகள் சிறையிலிட்ட வுடன், மதுரைக் காளிகோயில் தானே சாத்திக்கொண்டது. (7) மூன்றாங் குலோத்துங்கன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை விதிக்க, அத் தண்டனை நிறைவேற்றப்பட்டபின், அப் பிராமணன் ஆவி இரவும் பகலும் அரசனைத் தொடர்ந்து துன்புறுத்தி, இறுதியில் திருவிடைமருதூரில் நீங்கினது. நம்பா மதமும் ஒரு மதமே கடவுளும் மறுமையும் இல்லை யெனும் கொள்கையும் ஒரு மதமாதலால், மதத்தை ஒழிக்க வேண்டுமென்பது, செருக்கை யடக்க வேண்டும் என்றே பொருள்படுவதாகும். உள் மதம் (ஆதிகம்), இல் மதம் (நாதிகம்) என்னும் வழக்கையும் நோக்குக. மக்களாட்சியும் குடியரசும் நடைபெறும் இக்காலத்தில், ஒவ்வொருவர்க்கும் தத்தம் மதத்தைப் பரப்ப முழுவுரிமையுண்டு. இற்றை அறிவியற் போக்கு இறைவனின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப்புனை வாராய்ச்சியாளர் பலர் கொண் டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினே தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தினதாகத் தெரிகின்றது. தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (uni-cellular being) எங்ஙனம் தானே தோன்றும்? சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே! ஆதலால், திரிபாக்கக் கொள்பு (evolution theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது. இனி, கதிரவனினின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதினின்று வீழ்ந்தது? இக் கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறிவிடுவது போல், தனக்கு நுண்மதியளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ! கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே (திருமந். 2251) காணப்பட்ட பொருள்களைப் பற்றியே கருத்து வேறுபாடிருக் கும்போது, காணப்படாத கடவுளையும் மறுமையையும் பற்றிக் கருத்து வேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால், கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரையொருவர் குறை கூறாதும் வெறுக்காதும், உயர்திணைக்குரிய உடன்பிறப்பன்பு பூண் டொழுகல் வேண்டும். கடவுள் ஒருவரேயாதலால், கடவுள் மதத்தாரும் பல்வேறு கொள்கை கொண்டிருப்பினும், பொது வாழ்வில் ஒரு தந்தை மக்கள் போல் ஒன்றுபடல் வேண்டும். மரக்கறியுணவே சிறந்ததாயினும், புலாலுண்ணா அஃறிணை யுயிரினங்களும் புலான் மறுத்த மக்களும், ஓரறிவுயிர்க்கொலை செய்தே உண்ண வேண்டி யிருப்பதனாலும், கண்ணப்பனார் ஊனுணவை இறைவன் கண்டிக்காமையாலும், முனை மண்டல (Polar region) வாணர்க்கு மரக்கறி யுணவு கிடையாமையாலும், புலாலுணவு பற்றியும் ஒரு சார் மக்களை வெறுக்காதிருப்பது நன்றாகும். மெய்ப்பொருள் இருபத்தெட்டே. மன மொழி மெய்க்கெட் டாது எங்கும் நிறைந்து நுண்ம வடிவிலிருக்கும் ஒரே கடவுளை, ஐங் கூறாகவும் தொண் கூறாகவும் பகுப்பதும், பாலற்று நினைத்த மட்டில் எல்லாம் நிகழ்த்த வல்ல மாபெரும் பரம்பொருளை மாந்தனைப் போற் கருதி, அவனுக்கு வாழ்க்கைத் துணையும் ஐம் புதல்வர் குடும்பமும் தொழிற்றுணைவரும் சேர்ப்பதும், கடவுட் கொள்கைக்கு மாறான தெய்வப் பழிப்பேயாம். ஆரிய வேதத்திற்கும் இரு தமிழ மதங்கட்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆரியக் கூண்டுள் அடைபட்டிருக்கும் தமிழனுக்கு, இம்மை விடுதலையும் மறுமை விடுதலையும் இல்லவேயில்லை. இறைவனுக்கு ஏற்றது, எங்கும் என்றும் உருவமின்றி நேரடியாய்ச் செய்யும் தாய்மொழி வழிபாடே. ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தனை சீரிய மொழிநூல் செவ்விதி னுணர்த்தலின் மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே. நயன் நயன்: நயம்-நயன்-நன்மை, நேர்த்தி, நேர்மை, நேர்பாடு வடவர் காட்டும் நீ என்னும் வேர் நீதி என்னும் வடசொற்குப் பொருந்துமே யன்றி, நயன் என்னும் தென்சொற்குப் பொருந்தாது. (தி.ம: 746) நரவலி நரம்புச் சிலந்தியைக் குறிக்கும் நரவலி என்னும் பெயர் அச்சிலந்தி போன்ற கல்விருசம் பழத்திற்கு அல்லது மூக்குச்சளிப் பழத்திற்கு வடார்க்காட்டுப் பாங்கரில் வழங்கி வருகிறது. (சொல். 13 - 14) நல்குரவு நுகர்வன யாவும் இல்லாமை, நல்கூர்வது நல்குரவு. நல் நன்மை; கூர்தல் மிகுதல். நன்மையின்மையை நன்மை மிகுதி என்றது மங்கல வழக்கு. வெறுமையாகிய வறுமையை நிரப்பு என்றது போல. இனி, நல்கு+ஊர்தல் என்று பகுத்து, பிறர் கொடுப்பதன்மேல் ஊர்ந்து செல்லுதல் என்று கூறினுமாம். (தி.ம.அதி. 105.) நல்குரவுண்டாகும் வழிகள் முன்னோர் தேட்டின்மை, பெற்றோர் இன்மை, உழைப்பின்மை, மதிநுட்ப மின்மை, பொருளாசையின்மை, தாயத்தாரும் கள்வரும் கொள்ளைக்காரரும் கவர்தல், குடியும் சூதும் விலைமகளிரும் ஆகிய தீயவொழுக்கம், இயற்கைப் பேரழிவு, நேர்மை என்பன வாம். (தி.ம.அதி.105.) நல்லார் இயல்பு பிறரிடத்தன்புள்ளவர் நல்லார் என்றும், அஃதில்லாதவர் தீயார் என்றும் சொல்லப்படுவர். அன்புள்ள ஒருவர் ஒரு சிலருக்கேனும் நன்மை செய்யாதிருத்தல் இயலாது. அன்பு எங்ஙனமும் வெளிப் படும். அவ்வெளிப்பாடு ஏதேனுமொரு பொருட் கொடை யாகவே யிருக்கும். அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள்-72) என்றார் திருவள்ளுவர். இவ்வுண்மையை உணர்த்துவது நல்கு என்னும் சொல், இது நன்மையை யுணர்த்தும் நல் என்னும் வேரினின்று பிறந்தது. நல்லவர் கட்டாயம் பிறர்க்கு ஏதேனும் நல்குவர் என்பது இதனாற் குறிக்கப்பெறும் கருத்தாகும். (சொல்: 103.) நன்கொடை அவந்தி வேந்தன் கரிகால் வளவனுக்கு உவந்தளித்த தோரண வாயில் போன்றது நன்கொடை. (குறள். 756) நன்செய்வகை வயல் - வைத்துப் போற்றப்படும் நிலம்; கழனி - போரடிக்கும் களமுள்ள வயல்; பழனம் - பழைமையான வயல்; பண்ணை - பள்ளமான வயல்; செறு - சேறு செய்யப்பட்ட வயல். (சொல்:72) நன்னூல் நன்னூலா? பவணந்தியார் தம் நூலுக்கு நன்னூல் எனப் பெயரிட்டிருப்பினும் சுவாமிநாத தேசிகர் அந்நூலைப்பற்றி, முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கெந்நூலாரு மிணையோ வென்னுந் துணிவே மன்னுக வெனக் கூறியிருப்பினும், தொல் காப்பியம் முதலிய நிறையிலக்கண நூலொடு ஒப்பு நோக்கியும் மொழிநூற்குப் பொருந்தவும் காணுங்கால், அது பெரும்பாலும் நன்னூலன்று என்பதே பெறப்படும். தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முப்பாற்றாதலின் எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் இலக்கண நூல்கள் எத்துணை விரிவுபட்டனவாயினும், நிறைவுடையனவாகா. ஒருகாலத் தொரு பாண்டியன், என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதி காரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனக் கவன்றதாக இறையனா ரகப்பொருளுரை கூறுதல் காண்க. பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் செய்யுள் வடிவில் இயற்றப் பட்டமை யானும், இருவகை யணிகளும் செய்யுளில் அடக்கப் பட்டமையாலும் தமிழிலக் கணத்தை எழுத்து, சொல், பொருள் என மூன்றாகப் பகுப்பதே பண்டை மரபாம். நன்னூல், நூற்பாவும் இயலும் அதிகாரமும் ஆகிய மூன்றுறுப்பு மடக்கிய பிண்டமேனும் தலையான பொருளதிகாரம் இல்லாமை யின் முண்டமே யென்க. அதோடு பல இலக்கணங்களில் வழுவியு முள்ளமை அதன் குறைபாட்டை மிகுத்துக் காட்டுவதாகும். நன்னூல் வழீஇயுள்ள இடங்களிற் சில வருமாறு: 1. எழுத்தியல் (1) சார்பெழுத்து வகை தொல்காப்பியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே (1) எனச் சார்பெழுத்தின் தொகையும். அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (2) என அதன் வகையும் உண்மைக்கொப்பவும் உத்தியொடு பொருந்தவும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பவும், நன்னூலார். உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றள பஃகிய இஉ ஐஔ மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும் (60) என அதன் வகையைப் பெருக்கி, உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஔகான் ஒன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப (61) என அவ் வகைகளின் தொகையை விரித்து விழுமிய பயனின்றி மாணவர்க்கு வீணான வெறுப்பை விளைத்துள்ளார். அவற்றை இக்காலத்தில் பொதுக்கல்வி மாணவர்க்கும் பாடமாக விதித்து அவரை வருத்துவது மேலும் வருந்தத்தக்க செய்தியாகும். இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன இடத்தில் குறுகியொலிக்கும் என, மாத்திரை குறிக்குமிடத்தும் புணரியலிலும் கூறினாற் போதுமானதாம். அஃதன்றி, குறுகியொலிக்குமிடமெல்லாம் வெவ்வேறெழுத்தெனக் கூறுவது பிள்ளைத் தன்மையேயன்றிப் புலமைத்தன்மை யாகாது. (2) ஆய்தப் பிறப்பு தொல்காப்பியர், சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும் (101) என்று சார்பெழுத்துகள் தத்தம் முதலெழுத்துகளைச் சார்ந்து பிறப்பதைக் கூறியிருப்பவும் நன்னூலார். ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி (87) எனப் புதுவது புணர்த்தலாக விதித்துள்ளார். ககரவொலியை யொட்டிய ஆய்தம் தலையை இடமாகக் கொண்டு பிறக்குமென்றும் மெய்த்தன்மையுடைய அது அங்காத் தலால் தோன்றுமென்றும் அவர் எங்ஙனம் அறிந்தனரோ அறிகிலம். ஒருகால் தொல்காப்பியர்க்கு முந்தியவராயோ தூய தமிழராயோ இருந்திருப்பின் அவர் கூற்றைக் கொள்ள ஒருசிறிது இடமுண்டு. அவர் ஆரியச் சார்பான பிராமணராதலாலும் 12ஆம் நூற்றாண்டினராதலாலும் தமிழிலக்கண விலக்கியங் களைக் கற்று இலக்கிய வதிகாரியாயினரே யன்றி, தமிழ் மொழிக்கும் ஒலிக்கும் அதிகாரியாயினரல்லர் என அறிக. (3) மொழிமுத லெழுத்துகள் ஆவோ டல்லது யகரமுத லாது (85) என்றார் தொல்காப்பியர். இவ்வியல்பையே கழக (சங்க) இலக்கியத்திற் காண்கின்றோம். ஆயின், இதற்கு மாறாக, அஆ உஊ ஓஔ யம்முதல் (104) என விதித்துள்ளார் நன்னூலார். இதற்குக் காரணம், அவர் வடசொற்கட்குத் தமிழில் தாராளமாய் வழிவகுத்துள்ளதே. தொல்காப்பியர் ஙகரத்தை மொழிமுதலெழுத்தாகக் கொண் டிலர் ஆயின் நன்னூலார். சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே (106) என நூற்பா யாத்தார். ஙகரம் இற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மூக்கொலி மிக்குள்ள மலையாள நாட்டிலும் ஒருவகை வழக்கிலும் வழங்குவதில்லை. ஙனம் என்னும் வடிவம் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம் எனச் சுட்டெழுத்தையும் வினாவெழுத்தையும் ஒட்டியல்லது தனித்து வருவதில்லை. அவ்வகை எவ்வகை என்பன அந்தவகை எந்தவகை என்றும், அவ்வண்ணம் எவ்வண்ணம் என்பன அந்தவண்ணம் எந்தவண்ணம் என்றும், வழங்குவதுபோல் அங்ஙனம் எங்ஙனம் என்பன அந்த ஙனம் எந்த ஙனம் என்று வழங்குவதை ஓரிடத்தும் காண்கின்றிலம். ஆகவே, ஙனம் என்னும் வடிவின் முதலெழுத்து மற்றொரெழுத்தின் திரிபாயே யிருத்தல் வேண்டும். ஆங்கு ஈங்கு என்னும் சுட்டுச் சொற்களும், எங்கு, யாங்கு என்னும் வினாச் சொற்களும் அனம் என்னும் ஈற்றை யேற்று வருவது இயல்பு. அவ்வீறேற்ற அச்சொற்களே குறுகியும் குறுகாதும் நின்று மூக்கொலிப்பாடு (nasalization) பெறுங்கால் அவற்றிடையேயுள்ள ககரம் ஙகரமாகத் திரியும். எ-டு: ஆங்கனம் - ஆங்ஙனம் ஈங்கனம் - ஈங்ஙனம் எங்கனம் - எங்ஙனம் யாங்கனம் - யாங்ஙனம் அங்கனம் - அங்ஙனம் இங்கனம் - இங்ஙனம் இக்காலத்து மொழியாராய்ச்சியும் ஒலியாராய்ச்சியும் அக்காலத் தில்லாமையும், நன்னூலார் வழுவியதற்குக் காரணமாகும். இனி, சுட்டையும் வினாவையும் ஒட்டி ஙகரமும் மொழிமுத லாகும் என்று நன்னூலார் கூறியது சரியே என்று வலிப்பார் உளரெனின் அந்த வண்ணம். இந்த வண்ணம், எந்த வண்ணம் என்பன, முறையே அன்னணம், இன்னணம், என்னணம் எனத் தொக்கும் திரிந்தும் வருமாதலின். சுட்டுட னெகர வினாவழி யவ்வை ஒட்டி னவ்வு முதலா கும்மே எனவும் விதித்தல் வேண்டும் எனக் கூறி விடுக்க. 2. பதவியல் (1) பண்புப் பெயர் செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே (135) என்னும் நூற்பாவால், பண்புப் பெயர்களெல்லாம் மையீறு பெற்றே நிற்கும் என்பது படவும் பண்புப் பகுதியின் திரிபுகளைக் கூறும் நூற்பாவில் (136) ஈறு போதல் என்னுந் தொடரால் பண்புத் தொகைச் சொற்களிலுள்ள நிலைமொழியெல்லாம் ஈறுகெட் டவையே யென்றும் குறிப்பாய்க் கூறியுள்ளார் நன்னூலார். அன்பு, அழகு, சினம், பச்சை முதலிய பண்புப் பெயர்கள் பிறவீறும் பெற்று வருவதால் பண்புப் பெயரீறு மையொன்றே யென்பது குன்றக் கூறலாம். செம்மை சிறுமை முதலிய மையீற்றுப் பண்புப் பெயர்க ளெல்லாம் சொல்நிலையாற் பகுசொல்லாயினும் பொருள் நிலையாற் பகாச்சொல்லாம் என்பது அறிவித்தற்குப் பண்பிற் பகா என்று ஆசிரியர் கூறியதாக உரையாசிரியர் சிலர் கூறுவர். மையீற்றுப் பண்புப் பெயர்கள் சொல்நிலையால் மட்டுமன்றிப் பொருள்நிலையாலும் பகுசொல்லே யென்பது நுணுகி நோக்குவார்க்குப் புலனாம். மையீறு தன்மை குறிக்குஞ் சொல்லாதலின் மையீற்றுப் பண்புப் பெயர்களெல்லாம் பண்பும் பண்புத் தன்மையுமாகிய இரு கருத்துகளை யுணர்த்தும் பகுசொல்லேயென வறிக. ஒன்று என்பது ஓர் எண்ணையும் ஒருமை என்பது ஒன்றாயிருக்குந் தன்மையையும் உணர்த்தும். இங்ஙனமே பச்சை என்பது ஒரு நிறத்தையும் பசுமை என்பது பச்சையாயிருக்கும் தன்மையையும் உணர்த்தும். மேலும் செந்தமிழ், சிறுநாவல் முதலிய பண்புத்தொகைச் சொற்களின் நிலைமொழிகள் செம், சிறு என இயல்பாக நின்றவையேயன்றி, செம்மை, சிறுமை, முதலியன ஈறுகெட்டு நின்றன வல்ல. சிறு, புது, மேல் முதலிய பண்புச் சொற்கள் இயல்பாக நின்று குறிப்புப் பெயரெச்சமாயிருக்குமென்றும் பண்புப் பெயராகும்போது மையீறு பெறுமென்றும், அறிதல் வேண்டும், செம், சேய், தீ, வெம், மெல், திண் முதலிய அடிச்சொற்கள் சிறு, புது முதலியனபோல, எளிதாய் அல்லது விளக்கமாய்ப் பொருளுணர்த்தாமைக்கு அவற்றின் வழக்கின்மை அல்லது அருகிய வழக்கே காரணம். red, small, remote முதலிய ஆங்கிலக் குறிப்புப் பெயரெச்சங்கள் ness என்னும் ஈறுபெற்ற பின்னரே redness, smallness, remoteness எனப் பண்புப் பெயராகும். அஃதன்றி redness என்னும் பண்புப் பெயரே ness என்னும் ஈறுகெட்டு red என நின்றது எனின் அதை ஆங்கில இலக்கணியரும் ஒப்புக்கொள்ளார். ஆகவே, ஈறு போதல் என்பது வழுப்படக் கூறலே என அறிக. அஃதாயின் பண்புத்தொகைச் சொல்லிடையே ஆகிய என்னும் பண்புருபு விரியுமா றெங்ஙனெனின் பண்புத்தொகைச் சொல் தொகையெனப் பெயர் பெற்றிருப்பினும் உண்மையில் ஒரு சொல்லுந் தொக்கதன்று என்றும் செம்மையான தமிழ், பனையாகிய மரம் என்று விளக்க நடையில் விரித்துக் கூறும் வழக்கு நோக்கி, செந்தமிழ், பனைமரம் என்பன பண்புத்தொகை யெனப்பட்டன வென்றும் மொழிநூலொட்டிய இலக்கணப்படி அது ஒரு மயக்கே என்றும் கூறி விடுக்க. சிவந்த நீர் என்னும் எளிய வழக்கில் எங்ஙனம் ஒரு சொல்லும் தொக்கிலதோ, அங்ஙனமே செந்நீர் என்னும் உயர்வழக்கிலும் என்க. (2) வினையிடைநிலை (1) இறந்தகால இடைநிலை தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை (142) என்றார் நன்னூலார். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல்.640) என்றும், தனித்து நின்று பொருள் தராத இடைச்சொற்களும் ஒரு காலத்துத் தனித்து நின்று பொருள் தந்த பெயர் வினைச் சொற்களின் சிதைவேயென்றும் அறிவார்க்கு த், ட், ற் என்னும் தனி மெய்கள் சொற்குறுப்பாய் நின்று பொருளுணர்த்தும் என்பது நகையாடத்தக்க செய்தியாம். இறந்த கால வினைமுற்றுகள் மலையாளத்திற் போன்றே முதற் காலத்தில் இற்றை இறந்தகால வினையெச்ச வடிவிலிருந்து பின்பு ஈரெண் ஐம்பாலீறுகளைப் பெற்றன வாதலின், அவற்றைப் பகுக்கும்போது முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும். எ-டு: செய்தான் = செய்து + ஆன் படித்தான் = படித்து + ஆன் உண்டான் = உண்டு + ஆன் கொண்டான் = கொண்டு + ஆன் கட்டான் = கட்டு + ஆன் தின்றான் = தின்று + ஆன் நின்றான் = நின்று + ஆன் கற்றான் = கற்று + ஆன் இங்ஙனம் பகுத்து நோக்குங்கால் எச்சத்தின் இறுதியில் நிற்பது அது என்பதன் முதற் குறையான துவ் விகுதியே என்பதும் அதுவே டுவ்வென்றும் றுவ்வென்றும் புணர்ச்சியால் திரிந்த தென்பதும் புலனாம். உள் + து = உண்டு என்பது போன்றதே கொள் + து = கொண்டு என்பதும். இல் + து = இன்று என்பது போன்றதே நில் + து = நின்று என்பதும். நிலைமொழி யீற்றிலுள்ள ணகர ளகர னகர லகர மெய்கள் அது என்னும் விகுதியோடு புணரின் இயல்பாகவும் துவ்விகுதியொடு புணரின் முறையே டகர றகர மெய்களாகத் திரிந்தும் புணரும். எ-டு: கண் + அது = கண்ணது தாள் + அது = தாளது அன் + அது = அன்னது பால் + அது = பாலது கண் + து = கட்டு தாள் + து = தாட்டு அன் + து = அற்று பால் + து = பாற்று புக்கான், சுட்டான், அற்றான் எனப் பகுதி யிரட்டித்து இறந்த காலங் காட்டிய வினைமுற்றுகளையும் புக்கு-ஆன், சுட்டு-ஆன், அற்று-ஆன் என எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும். புக்கான் என்பதில் க் எங்ஙனம் இறந்தகால இடைநிலை யன்றோ, அங்ஙனமே படித்தான் என்பதிலும் த் இறந்தகால இடைநிலையன்று என அறிக. இனி உறங்கினான், போனான் முதலியன எங்ஙனம் புணர்ந் தனவெனின் அவையும் மேற்கூறியவாறு எச்சமும் ஈறுமாகவே யென்றறிக. எ-டு: உறங்கி + ஆன் = உறங்கியான் - உறங்கினான். போயி + ஆன் = போயியான் - போயினான். போயி + போய் = ஆன் - போயான் - போனான். சொல்லாக்கத்தில் யகரம் நகரமாக (அல்லது னகரமாக)த் திரிதல் இயல்பு. எ-டு: யான்-நான், யாம் - நாம். சேரநாட்டுத் தமிழின் திரிபான மலையாளத்தில், ஆயி, போயி என்னும் இறந்தகால வினை வடிவுகளே இன்றும் வழங்குகின்றன. (3) நிகழ்கால இடைநிலை நன்னூலார் கூறிய நிகழ்கால யிடைநிலை மூன்றனுள், ஆநின்று என்பது சரியன்று. அது செய்யா என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சமும் அதனைத் தொடர்ந்த இறந்தகால வினை முற்றுமாகிய செய்யா நின்றான் என்னும் தொடரின் இடைநின்று தவறாய்ப் பிரித்துக்கொண்ட ஒரு சொற்பகுதியே. ஆநின்று என்பதும் ஓர் இடைநிலையேயெனக் கொள்ளின், உண்ணா கிடந்தான் என்னும் வழக்கினின்று ஆகிடந்தான் என்பதும் ஓர் இடைநிலையெனக் கோடல் வேண்டும். இனி, உண்ணாகிடந்தான் என்பது எச்சமும் முற்றுமாக இரு சொல்லாயின் உண்ணாக்கிடந்தான் என்றிருத்தல் வேண்டுமாத லின் உண்ணாகிடந்தான் என இயல்பாய் நிற்கும் சொல் உண்ணா நின்றான் என்பது போல் ஒருவகை நிகழ்கால வினைமுற்றே யெனின், அது ஆகிடந்து என ஓர் இடைநிலை வேண்டுவார் இடைக்காலத்துத் திரித்துக் கொண்ட வழக்கேயன்றித் தொன்று தொட்டு வந்த மரபன்று எனக் கூறிவிடுக்க. செய்யா என்னும் வாய்பாட்டு எவ்வினைச் சொல்லும் நின்றான் என்பதனொடு என்றும் இயல்பாகவே புணருமாதலின், அதனோ டொப்ப உண்ணாக்கிடந்தான் என்றிருக்க வேண்டுவதையும் உண்ணா கிடந்தான் என இயல்பாக்கிக் கொண்டனர் என்க. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், செய்யாநின்றான் செய்யாநிற்கின்றான், செய்யாநிற்பான் என முக்கால முற்றொடும் கூடிவருதலின், அவற்றுள் இறந்த கால முற்றொடு கூடியதை மட்டும் ஒரு சொல்லாகக் கொள்வது பொருந்தா தென்க. இனி, செய்யாநின்றான் என்பது செய்கின்றான் என நிகழ்காலப் பொருளன்றோ தருகின்றதெனின், அது ஒரு சாரார் ஆட்சி பற்றியதேயன்றிச் சொல்வகை பற்றியதன்றெனக் கூறி மறுக்க. (4) எதிர்கால இடைநிலை பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை (144) என்றார் நன்னூலார். முற்றும் எச்சமுமாகிய செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்காலப் பாற்பொது வினை, பால் பிரிந்திசைத்தற்கு வெவ்வேறு விகுதிகளுடன் கூடி நிற்கும் நிலையில் நிலைமொழியீற்று மகரம் வகரமாகவும் சிலவிடத்துப் பகரமாகவும் திரியும். அத்திரிபால் வந்த மெய்நிலையே எதிர்கால இடைநிலையென்றார் நன்னூலார். முற்றும் பாலீறும் எ-டு: செய்யும் + ஆன் = செய்யுமான் - செய்யுவான் - செய்வான். செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்யுவார் - செய்வார் செய்யும் + அ = செய்யும் - செய்யுவ - செய்வ உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்ணுவான் உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்மான் - உண்பான் தின்னும் + ஆன் = தின்னுமான் - தின்னுவான் தின்னும் + ஆன் = தின்னுமான் - தின்மான் - தின்பான் நடக்கும் + ஆன் = நடக்குமான் - நடக்குவான் - நடக்கான் - நடப்பான் படிக்கும் + ஆன் = படிக்குமான் - படிக்குவான் - (படிக்கான்) - படிப்பான். படிப்பான் என்பதைப் படிப்பு + ஆன் எனப் பிரிப்பின் நன்றெனத் தோன்றும், ஆயின். தருவான் வருவான் என்பன தருவு + ஆன், வருவு + ஆன் எனப் பிரியாமையின், தொழிற்பெயரும் ஈறுமாகப் பிரிப்பதினும் முற்றும் ஈறுமாகப் பிரிப்பதே நன்றென வறிக. மேலும், செய்து செய்கின்று என்னும் ஏனை யிருகாலப் பண்டை முற்றுகள் போன்றே, செய்யும் என்னும் எதிர்கால முற்றும் பாலீறொடு புணர்ந்ததெனக் கோடல் பொருத்த முடைத்தாம். பெயரெச்சமும் பாலீறும் எ-டு: செய்யும் + அவன் = செய்யுமவன் - செய்யுபவன் - செய்பவன் செய்யும் + அது = செய்யுமது - செய்யுவது - செய்வது செய்யும் + அவை = செய்யுமவை - செய்யுபவை - செய்பவை. (5) வடமொழி யாக்கம் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (880) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (885) எனத் தொல்காப்பியர் கூறியதே மிகையாயிருக்க நன்னூலார். பொதுவெழத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல். (276) இடையில் நான்கு மீற்றில் இரண்டும் அல்லா வச்சை வருக்கமுத லீறு யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும் (146) அவற்றுள் ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவீ றையு மீயீ றிகரமும் (147) ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் வ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே (148) இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற (149) என வடசொற்கள் கட்டுமட்டும் கங்குகரையுமின்றித் தமிழில் தாராளமாய் வந்து வழங்குமாறு வழிவகுத்துப் பாழ்படுத்தியது மன்றி, பல தென்சொற்களை வடசொற்களென மயங்கவும் வைத்தார். வடசொற்களால் தமிழ் வளம் பெற்றதெனக் கூறுவார். தம் அறியாமையையும் ஆராய்ச்சியின்மையையும் பகைமையையுமே வெளிப்படுத்துவர். வடமொழியால் தமிழடைந்த கேடு கொஞ்ச நஞ்சமன்று, வடசொற்கள், வேண்டாது தமிழிற் புகுத்தப்பட்டன என்பதற்கு, ஊசி (உதீச்சி - வடக்கு), பாசி (ப்ராச்சீ-கிழக்கு), என்ற புறநானூற்றுச் சொற்களே (229 ஆம் பாட்டு) போதுமானவை. சொன் மறைவு. வழக்கு வீழ்ச்சி, ஒலிமாற்றம், பொருட்கேடு ஆகிய நால்வகையிலும், வடசொல்லால் தமிழுக்கு நேர்ந்த தீங்கு வரம்பற்றதாம். நன்னூலார் செய்த வழுக்களுள் தலையானது வடமொழி யாக்கமே. (6) பெயரியல் தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (640) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (877) எனக் கூறியிருப்பவும் நன்னூலார். இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின (62) இடுகுறி காரண மரபோ டாக்கம் ..... ..... ..... ..... ..... ..... ..... ஏற்பவும் பொதுவு மாவன பெயரே (275) என வடநூற் கொள்கை தழுவி, தமிழிலும் இடுகுறி யுண்டென உண்மைக்கு மாறாகக் கூறினார். உரையாசிரியர் இடுகுறிக் கெடுத்துக்காட்டாகக் கூறுவன வெல்லாம், மரம், பனை, பலா, பரம், பொன், விள என்பவையே. இவையும் காரணக் குறியே என்பதைக் கீழ்வரும் மொழிப் பொருட் காரணத்தாலும் பொருள் விளக்கத்தாலும் கண்டு கொள்க. மரத்தல் = உணர்ச்சியறுதல். மரம், உணர்ச்சியற்றது. பல் - பன் - பனை. பல் = ஒரு கூரிய உறுப்பு, கூர்மை. பன் = அரி வாட்பல். பனை = பற்போல் கூரிய கருக்குமட்டையுடைய மரம். பல் - பரு - பெரு. பல் - பலா = பெரும்பழம், பெரும் பழத்தையுடைய மரம். புரம் = உயரம், உயரமானது, மேன்மாடம் புரை உயர்வாகும். (தொல்.785) புரம் - பரம் = மேல். மேலிடம், வானுலகம். உ-அ. ஒ.நோ:குடும்பு - கடும்பு, முடங்கு - மடங்கு. பொல் - பொன் = அழகு, அழகிய தாது (உலோகம்). பொல் + பு = பொற்பு = அழகு. பொற்ற = அழகிய (சீவக.885). பொற்றது = பொலிவுற்றது (சீவக. 2247). விள்-விள = வெள்ளையான தோட்டையுடைய பழம். அதனையுடைய மரம். விள் - வெள் - வெள்ளை. முடிபு தொல்காப்பியத்திற்கும் நன்னூற்கும் பொதுவான பல வழுக் களிருப்பினும், அவற்றை நீக்கி, நன்னூற்குச் சிறப்பானவையே ஈங்குக் கூறப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், நன்னூல் சில காரணம் பற்றி நன்னூலாயினும், பல காரணம் பற்றி நன்னூ லன்று என்பதே முடிபாகக் கொள்க. - சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர் 1957; தென்றல் 21.9.1957 நாகம் நாகம் - வ. நாக (g) நகர் - நாகம் = பாம்பு. நகர்தல் = ஊர்ந்து செல்லுதல். ஒ.நோ: E.snake f.snican, to creep. வடவர் நக (மலை) என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையிலுள்ள தென்று பொருட்காரணங் கூறுவர். (வ.வ:187) நாகர் நாகர் என்பார் முதன்முதல் நாகவணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ்நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை. கீழ்நில மருங்கி னாகநா டாளு மிருவர் மன்னவர் (9: 54-55) என்பது மணிமேகலை. நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடையவராயும். நாகவுருவை அல்லது படத்தைத் தலையிலணிந்தவராயுமிருந் தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்ததாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது. சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்தி லேயே யிருத்தல் காண்க. அனுமான் கடல் தாண்டும்போது நாகரைக் கண்டானென்றும், மைந்நாக மலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதன னால் கங்கையி லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென் றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென்று நாகக்கன்னியை மணந்தானென்றும் கூறியிருத்தல் காண்க. நாகர் அல்லது கீழ்த்திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தனர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவு களில் வாழ்பவராயும், அம்மணராயும், நரவூனுண்ணிகளாயு மிருந்தனர். சாதுவ னென்போன் தகவில னாகி... நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்... நக்க சாரணர் நயமிலர் தோன்றி... ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் (16:4-59) என்னும் மணிமேகலையடிகளைக் காண்க. நக்கம் - அம்மணம் சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநக ரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின்பங்கட்கும் சிறந்திருப்பது கவனிக் கத்தக்கது. நடுமாகாணத்தி (central provinces) லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்து போனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர் என்க. முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள் (1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன. (I.S.I. Intro. p. 1) (2) முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon-Khmer) மொழிகளும் ஒரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன. (I.S.I. Intro. p. 10, 15) மான்குமேர், முண்டா, திராவிடம் என்னும் முக்குடும்ப மொழி களும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன. i. சொன்முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை. ii. சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள். iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து கிழமைப் பொருள் தரல். iv. பல சொற்கள் முண்டா மான்குமேர் தமிழ் - தம் தமர் (துளை) மூ முஹ் மூக்கு புரு ப்ரி பொறை (மலை) பிர் ப்ரி மரம் ஜம் சௌ சப்பு (உண்) மரன் - முரண் (பெரிய) ஹா - ஆம் நி நெ இன் (இந்த) தொ நொ அன் (அந்த) தமிழில், சொற்களின் ஈற்றில் மெய்கள் அரையொலிப்பா யொலித்தல் கொச்சை வழக்கு. இன் என்னுஞ் சொல், இலக்கணப் போலியாய் எழுத்து முறை மாறி நி என்றாகும். அகர இகரங்கள் முறையே ஒகர எகரங்கட் கினம். குரங்கு, கொண்டை, பரவு (படவு), இரும் (கருப்பு), பெட்டி, மூக்க (முகம்), ஏகு, பொஹொ (புகை) முதலிய பல தமிழ்ச் சொற்கள் மலேயத் தீவுக்கூட்டத்தில் வழங்குகின்றன. கீழ்வருபவை முண்டா மொழியினத்தின் சிறப்பியல்புகளாகப் பண்டிதர் கிரையர்சன் குறிப்பிடுகின்றார்: (1) ஒரே சொல் பல சொல்வகை (parts of speech)ahf வழங்கல். (2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல். (3) 6ஆம் வேற்றுமை பெயரெச்சமா யிருத்தல். (4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப் பன்மைப் பெயர்களிருத்தல். (5) இருந்து என்று பொருள்படும் (5ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப்பொருளை யுணர்த்தல். (6) தொடர்புப் பதிற்பெயர்களும் (relative pronouns) தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை. இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க. மான்குமேர் மொழியினம் ஓரசை (monosyllabic) நிலையதாகவும், முண்டா மொழியினம் பல்லசை (polysyllabic) நிலையதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மையுணரப்படும். நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள் களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறு களாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடு வதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை விடுவதும், பண்பாட்டுக் கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும், ஆகும். ஆகவே, இவற்றை முறையே அகநாகரிகம், புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும். மாளிகையிற் குடியிருப்பதும், பட்டாடை யணிவதும், அறுசுவை யுண்டி யுண்பதும், இன்னியங்கியில் அல்லது புகைவண்டி முதல் வகுப்பிற் செல்வதும்; வேலைக்காரரை வைத்தாள்வதும், பொறி களைக் கொண்டு வினை செய்வதும், இன்பமாய்ப் பொழுது போக்குவதும், செல்வ வாழ்க்கையேயன்றி நாகரிக வாழ்க்கை யாகா. நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே. என்று நற்றிணையும் (210: 5-9) கூறுதல் காண்க. நெடிய மொழிதல்= அரசரால் மாராயம் பெறப்படுதல். கடிய ஊர்தல் = விரைந்த செலவினையுடைய குதிரை யானை தேர் முதலியவற்றின் மேல் ஏறிச் செல்லுதல். செல்வம் அன்று = நாகரிகம் அன்று. மென்கட் செல்வம் = கண்ணோட்டம் என்னும் பண்பாட்டுக் குணம். நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடாயினும், நாகரிக மின்றியும் பண்பாடுண்டு. காட்டில் தங்கும் முற்றத் துறந்த முழுமுனிவர் ஆடையின்றியும் நீராடாதும் மண்ணில் இருப்பர்; ஆயினும், அவர் பண்பாட்டில் தலைசிறந்தவராவர். கரவாது கரைந்து இனத்தோடு உண்ணும் காக்கையும், வேலாற் குத்திய விடத்தும் வாலாட்டும் நன்றியறிவுள்ள நாயும், ஒரு காலத்தில் ஒரே பெடையோடு கூடிவாழும் வானப் பறவையினமும் நாகரிக மில்லா அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சி யவையே. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (மரபியல். 33). கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட என்னும் குறுந்தொகைச் செய்யுட் பகுதியும் (69), இங்குக் கருதத்தக்கன. பண்டைக் காலத்தில், நாகரிகம் என்னும் சொல்லையே பண்பாடென்னும் பொருளிலும் ஆண்டனர். அதனாலேயே, பண்பாட்டுக் குணமான கண்ணோட்டத்தை நாகரிகம் என்றார் திருவள்ளுவர். பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (குறள். 580.) திருந்திய நிலை என்னும் பொதுக் கருத்தில், நாகரிகமும் பண்பாடும் ஒன்றாதல் காண்க. பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாயினும், நாட்டிலும் நகரிலும் கூட்டு வாழ்க்கையில் வாழ்பவர் நாகரிகமின்றி யிருத்தல் கூடாது. கூட்டு வாழ்க்கையில் நாகரிகமின்றியிருப்பவர்க்குப் பண்பாடும் இருந்தல் முடியாது. ஊரிலிருப்பவர் உலகப்பற்றை நீத்தவரேனும், உடல் நீங்கும்வரை நீர்ச்சீலையாவது அணிதல் வேண்டும். (த.நா.ப.) நாகரிகம் என்னும் சொல்விளக்கம் நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம்-நகரிகம்-நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல்முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந் துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பகுதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக. ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. L. civitas, city or city - state, civis citizen, L.civilis-E. civil-civilize. நகரங்கள் முதன் முதல் தோன்றியது உழவுத் தொழிற்குச் சிறந்த மருத நிலத்திலேயே. உழவுத் தொழிலும் நிலையான குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணை செய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதிணென் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதிய வுணவும், வாணிகமும், ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பத னால் உழவன் குடியானவன் என்னப் பெற்றான். இல்வாழ்வான் என்று திருவள்ளுவராற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே. இல் வாழ்வானைக் குறிக்கும் husbondi (house-dweller) என்னும் பழ நார்வேயச் சொல்லினின்று உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட husband என்னும் ஏவல் வினைச் சொல்லும், உழவனைக் குறிக்கும் husbandman என்னும் பெயர்ச் சொல்லும், உழவுத் தொழிலைக் குறிக்கும் husbandry என்னும் தொழிற் பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது. நிலையான குடியிருப்பால் ஒழுக்கப் பொறுப்பும், ஊர்ப் பெருக்கமும் ஆட்சியமைப்பும் ஏற்பட்டன. இதனால், மருத நிலமும் உழவுத்தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்பது தெளிவாகும். நகர் என்னும் சொல், முதன்முதல், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது. நகர் = 1. வளமனை. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறம்.70) 2. மாளிகை பாழி யன்ன கடியுடை வியனகர் (அகம்.15) மாளிகை அரசனுக்கே சிறப்பாகவுரியதாதலால், நகர் என்னும் சொல் அரண்மனையையும் அரசன் மனை போன்ற இறைவன் கோயிலையும் பின்பு குறிக்கலாயிற்று. நகர் = 1 அரண்மனை, முரைசுகெழு செல்வர் நகர் புறம்.127 நிதிதுஞ்சு வியனகர் சிலப்.27:200 2. கோயில். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறம்.6) உத்தர கோசமங்கை மின்னேறுமாட வியன்மாளிகைபாடி (திருவாசகம், 16, 3) என்பதால், கோயிலுக்கும் மாளிகைப் பெயருண்மை அறியலாம். சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம் மாளிகை போன் றிருத்தலால், திருத்தக்க தேவர்நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆண்டார். அணிநகர் முன்னி னானே (சீவக. 701) நகர் என்னும் சொல் மனையைக் குறித்தலாலேயே, மனை, இல், குடி என்னும் சொற்கள் போல் இடவாகுபெயராய் மனைவியை யும் குறிக்கலாயிற்று. நகர் = மனைவி வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக்கூடி (கலித்.8) சிறந்த ஓவிய வேலைப்பாடமைந்து சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட காரைச் சுவர்க்கட்டிடம், மண்சுவர்க் கூரை வீட்டோடு ஒப்பு நோக்கும் போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப் பட்டது. நகுதல் விளங்குதல். நகு-நகல்-நகர். வெண்பல்லையும் பொன்மணி யணிகலத்தையும் முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் உணர்த்தும், நகை என்னும் சொல்லை நோக்குக. நகு-நகை. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் என்னும் வள்ளுவர் கூற்றால், சிப்பிச்சுண்ணாம்புச் சாந்தின் வெண்மைச் சிறப்பு உணரப்படும். மாளிகை முதலில் அரசனுக்கே யுரியதாயிருந்ததினாலும், அரசன் வாழும் ஊர் பேரூராயிருந்ததினாலும், நகர் என்னும் சொல் சினையாகு பெயராய்க் கோநகரையும் பேரூரையுங் குறித்தது. இன்றும், கூரை வீடுகள் நிறைந்த ஒரு நாட்டுப்புறத்தூருடன் காரை வீடுகள் நிறைந்த ஒரு சிற்றூர் அல்லது பேரூரை ஒப்பு நோக்கினால், பின்னது விளங்கித் தோன்றுவது வெள்ளிடை மலையாம். பண்டைக் காலத்திற் பேரூர்களே காரை வீடுகளைக் கொண்டிருந்தன. நெடுநகர் வினைபுனை நல்லில் (புறம்.23) என்பதில், நகர் என்னும் சொல் பேரூரைக் குறித்தது. நகர் என்னும் சொல், தனி மாளிகையையும் அதனையுடைய பேரூரையுங் குறித்ததினால், இம் மயக்கை நீக்கும் பொருட்டு, பேரூரை மட்டும் குறித்தற்கு இகரவீறு கொண்ட நகரி என்னும் சொல் எழுந்தது. நகரை (மாளிகையை) யுடையது நகரி. இகரம் இங்குக் காடைக் கண்ணி, நாற்காலி என்பவற்றிற்போல் ஒன்றை உடைமையை உணர்த்தும் ஒன்றன் பாலீறு. இன்று நகர் என்னும் சொல் உலகவழக்கில் மாளிகையை அல்லது வளமனையை உணர்த்தாமையால், மேற்கூறிய மயக்கிற்கு இடமில்லை. பட்டி என்பது மாட்டுப் பட்டியிலுள்ள சிற்றூரைக் குறித்தது போன்றே, நகர் என்பதும், மாளிகையுள்ள பேரூரைக் குறித்தது. பதி, என்னும் சொல்லும் வீட்டையும் நகரையும் குறித்தல் காண்க. நகர் என்னும் சொல், அம் என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டுப் பெற்று நகரம் என்றாகும். அதுவும் தனி மாளிகையையும் பேரூரையும் குறிக்கும். அம் ஈறு பெருமைப் பொருளுணர்த்தலை, இல்லம், நிலையம், மதியம் (முழு நிலா), விளக்கம், முதலிய சொற்களிற் காண்க. நகரம் = 1. அரண்மனை (யாழ். அக.) 2. கோயில் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் (சிலப். 14:9) விண்டுநகரம் - விண்ணகரம் = திருமால் கோயில். 3. பேரூர் நகர், நகரி, நகரம் என்னும் முச்சொல்வடிவும், முதலில் அரசன் வாழும் தலைநகரையும் அவன் சென்று தங்கும் கோநகரையும் குறித்து, பின்பு எல்லாப் பேரூர்களையும் பொதுப்படச் சுட்ட லாயின. அதனால், அரசன் இருக்கும் அல்லது தங்கும் நகரைத் தலை அல்லது கோ என்னும் அடை கொடுத்துக் கூற வேண்டிய தாயிற்று. கோநகர் எதிர்கொள (சிலப். 27:255) அரசனுக்கும் தெய்வத்திற்கும் ஒருபுடை யொப்புமை யிருத்த லால், கோயில் என்னும் சொற்போன்றே கோநகர் என்னும் சொல்லும் இருவர் இருக்கையையும் குறிக்கும். கோயில் = 1. அரண்மனை. கோயில் மன்னனைக் குறுகினள் (சிலப். 20:47) (கோ = அரசன், இல் = வீடு) 2. தெய்வப் படிமையிருக்கை. கோநகர் = கோயில். மாயோன் கோநகர் எட்டும் (கந்தபு. திருநகரப். 88.) பெருநகரை நகரம் என்று சொல்லினும் போதும். ஆயின், அவ் விலக்கணம் இன்று அறியப்படாமையால், மாநகர் என்று சொல்ல வேண்டியதாகின்றது. இங்ஙனம் நாகரிகம் என்னும் சொற்கு மூலமான நகர் என்னும் சொல் தூய தமிழாயிருப்பினும், நகர (nagara) என்னும் வட சொல்லின் திரிவாகச் சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் (அகராதியில்) காட்டப்பட்டுள்ளது. நகர் என்னும் மூல வடிவம் வடமொழியி லில்லை. அதன் திரிவான நகரம் என்னும் வடிவே, வேருந்தூரும் மொழிப்பொருட் கரணியமு மின்றி வடமொழியில் வழங்கி வருகின்றது. நகரி என்னும் வடிவம் வடமொழியில் (நகரீ என்று ஈறு நீண்டு) வழங்கினும், அதன் ஈற்றிற்கு அங்குத் தனிப்பொரு ளில்லை. நகர் என்னும் சொல்லிற்கு விளங்கிய வெண்மையென்பதே வேர்ப்பொருளென்பதை, வெண்பல்லைக் குறிக்கும் நகார் என்னும் சொல்லையும்; மாளிகையின் விளங்கிய தோற்றம் அதன் வெண்சாந்தினால் ஏற்பட்டதென்பதை, புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து என்னும் புறநானூற்றடியையும் (378); வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாணர் இளங்கொடி யேயிடர் எய்தலெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே. (15) என்னும் திருக்கோவைச் செய்யுளையும்; நோக்கித் தெளிக இனி, நகை என்னும் சொல் பல்லையும் முத்தையும் குறித்தலையும் நோக்குக. நகரம் என்னும் தென் சொல்லைப் போன்றே அதனின்றும் திரிந்தமைந்த நாகரிகம் என்னும் தென்சொல்லையும், வடவர் கடன்கொண்டு வடமொழியில் வழங்கி வருவதுடன், கடுகளவும் உண்மையும் நன்றியறிவுமின்றி அவற்றை வடசொல்லேயென்று வலித்தும் வருகின்றனர். (த.நா.ப.) நாகரிக மாந்தன் பிறந்தகம் மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலை சார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; நாடும்; நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர்பெற்றன. இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்தபடியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்து வதற்கு ஏற்ற இடம் நெய்தல். இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக்கேற்றவாறு அடுத்தடுத்திருந்தது, அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே. இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத் தொடரிருந் தது. அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமை பற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும், பெயர்பெற்றன. ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத் திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிறநாடுகளிற் காண்டல் அரிது. வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ்வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான். முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர் நிலையையுமே சார்ந்திருந்ததனாலும். மரஞ்செடிகொடியடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறுவழி அவனுக்கின்மை யாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோர மாகவே இடம் பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது. (த.வ) நாகரிகவகை இவ்வுலகில் எத்தனையோ நாகரிகங்கள் சொல்லப்படினும், அவையெல்லாம் கீழை நாகரிகம், மேலை நாகரிகம் என இரண்டாய் அடங்கும். இவ்விரண்டுள், முன்னது முந்தியது; தமிழரது; பின்னது பிந்தியது; ஆங்கிலரது. சேம்சு வாட்டு (James Watt) என்னும் ஆங்கிலேயர் 1765-ஆம் ஆண்டு நீராவிச் சூழ்ச்சியத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து, தற்கால நாகரிகம் தொடங்குகின்றது. அதற்கு முந்தியதெல்லாம் முற்கால நாகரிகமாகும். இன்று புகைவண்டி பல நாடுகளிற் செய்யப்படி னும், முதன் முதலாய்ச் செய்யப்பெற்ற ஆங்கில நாட்டு வண்டியே அவற்றிற்கெல்லாம் மூலமாகும். அதுபோன்றே, நாற்றிசையிலும் பல்வேறு நாடுகளில் பழங்கால நாகரிகம் இருந்திருப்பினும், அவற்றிற்கெல்லாம் தமிழ் நாகரிகமே மூலமாகும். நீராவியும் மின்னாற்றலுங் கொண்டு செய்யப்பெறும் பொறி (machine) வினையும் சூழ்ச்சிய (engine) வினையும் இக்கால நாகரிகமென்றும்; கையாலும் விலங்காலுமே செய்யப்பட்ட வேலைப்பாடு முற்கால நாகரிகம் என்றும், வேறுபாடறிதல் வேண்டும். சிலர், தற்புகழ்ச்சி பற்றி, நாகரிகம் என்னும் சொல்லை எளிதாகவும் குறுகிய நோக்கோடும் ஆள்வர். இட வேறுபாடும் மொழி வேறுபாடும் பற்றி நாகரிகம் பல்வேறு வகைப்பட்டு விடாது. ஒவ்வொரு நாட்டரசாட்சியும் ஒரு தனி நாகரிகமன்று. மேனாடுகளுள் முதன் முதல் நாகரிகமடைந்தது எகிபது (Egypt) அதன் தொடக்கம் கி.மு. 4000 ஆண்டு கட்குமுன். அதற்கும் முந்தியது தமிழ நாகரிகம். அதன் தோற்றம் கி.மு.10,000 ஆண்டு கட்குமுன். ஆகவே, தமிழ நாகரிகமே உலகில் முதன் முதல் தோன்றியதாகும். தமிழின் முது பழந்தொன்மையும், தமிழன் பிறந்தகம் குமரிக் கண்டம் என்னும் உண்மையும் இதை வலியுறுத்தும். இங்ஙனமிருப்பவும், ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. (ப.நா.ப) நாகன் நாகன், நாகி என்பன ஆண்பாற் பெண்பாற் பெயர்கள் தமிழர்க்குத் தொன்றுதொட்டு இடப்பட்டு வருவன. தி.ம.பின். நாட்டியம் நடம் - வ நாட்ய - நாட்டியம். தமிழில் நடமும் நாடகத்துள் அடங்கும். வடமொழியில் நாடகம் வேறு; நடம்வேறு. தோரா. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக் கழக இலக்கணமே முத்தமிழாயிருந்தது. பரதம் என்னும் பெயரால் முதன்முதல் தோன்றிய நாடக நூல் தமிழ் நூலேயென்று, அடியார்க்கு நல்லார் கூறியிருத்தலைக் காண்க. மதிவாணர் நாடகத் தமிழ்நூல் கி.மு. சில நூற்றாண்டு கட்கு முற்பட்டது. வடமொழிப் பரத சாத்திரம் இயற்றப்பட்ட காலம் கி.பி.500. வ.வ. நாடகம் நாடகம் - வ. நாடக (t@) நடி + அகம் = நாடகம். (வ.வ: 187) நாடி நாடி - வ. நாடி நாள்-நாளி-நாழி-நாடி = அரத்த அல்லது மூச்சுக்குழாய், ஊதை (வாத) பித்துக் கோழை நாடி, நாடித்துடிப்பு. வ.வ:187. நாடுரி நாழி+உரி = நாழுரி-நாடுரி நாழுரி என்னும் வடிவம் இன்றும் வழக்கில் உள்ளது. தி.இ.வ.136 நாணல் நாணல் - வ. நாட நாளம்-நாணம்-நாணல் = உட்டுளையுள்ள தட்டை. வ.வ:187. நால்வரணத் தோற்றமும் விளக்கமும் குலங்கள் இயற்கையாகத் தொழில் பற்றியே தோன்றின. மாந்தன் வாழ்க்கைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டியிருப்பதால், அவற்றையெல்லாம் விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறு குலங்கள் ஏற்பட்டன. அப்பொருள்களுள், இன்றி யமையாதவற்றிற்கு முன்னும், தேவையானவற்றிற்குப் பின்னும், இன்புறுத்துவனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச் சிறப்புப் பற்றியவற்றிற்கு இறுதியிலும், குலங்கள் எழுந்தன. பல்வேறு பொருள்களையும் ஒருவழித் தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும், அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவை தோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும், நோயும் துன்பமும் இன்றிக் காக்கும் காவல் பற்றித் தோன்றியதே. மகனறிவு தந்தையறிவு. என்ற முறைப்படி, தந்தையின் தொழில் திறமையும் மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமை வதாலும், மக்கள் தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலை யில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந் தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும் தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன. தலைமுறை மிகமிகத் தொல் வரவுத் தொழில் திறமை மிகுவதனாலும், அத்தொடர்ச்சி மேன்மேலும் போற்றப் பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும் தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமை அக்காலத்தில் ஏற்படவில்லை. துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், அதிகாரம் முதலியன பற்றி யன்றி, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப்பட வில்லை. எல்லார் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலைநிறுத்து வதனாலும், போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருது வெற்றி யுண்டாக்குவதனாலும், இரப்போர்க் கீந்து துறப்போர்க்குத் துணையாயிருப்பத னாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வா னாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப் பக்கத் துணைவராகவே கருதப்பட்டனர். உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து, (குறள்.1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (குறள். 1033) பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். (குறள். 1034) இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (குறள். 1035) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. (குறள். 41) துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (குறள். 42) வெளிநாட்டு அரும்பொருள்களையெல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக்கவ்வப்போது பண முதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன், உழவனுக்கடுத்தபடியாகப் போற்றப்பட்டான். கள்வராலும் கொள்ளைக்காரராலும் பகைவராலும் அதிகாரி களாலும் கடுவிலங்குகளாலும், உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமற் காக்கும் அரசன், பணி வகையில் வணிகனுக்கு அடுத்த படியாகவும், அதிகார வகையிற் கண்கண்ட கடவுளாக வும், கருதப்பட்டான். ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணி புரிப வனும், ஆக்கவழிப்பாற்ற லுள்ளவனுமான அந்தணன், இறைவனுக் கடுத்தபடி தெய்வத்தன்மையுள்ளவனாகக் கருதப் பட்டான். இங்ஙனம் உழவு வாணிகம் காவல் கல்வி என்னும் நாற்றொழிலே தலைமையாகக் கொள்ளப்பட்டு, எல்லாக் கைத்தொழில்களும் உழவுள் அடக்கப்பட்டன. பொருளிலக்கண நூலார், அகப்பொருளின்பத்தைச் சிறப்பித்தற் பொருட்டுத் தலைமக்களையே கிளவித் தலைவராகக் கொண்டத னால், வேந்தர்க்குற்றுழிப் பிரியும் (உழுவித்துண்ணும் வேளாளர் தலைவனாகிய) வேளையும், பொருள்வயிற் பிரியும் இரு வகை வணிகர் தலைவரையும், போருக்குப் பிரியும் இருவகை யரசரையும், தூதிற்குப் பிரியும் (கீழ்நிலை அந்தணனாகிய தமிழப் பார்ப்பனத் தலைவனையும், காதலராகக் குறித்தனர். வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்பதே வரலாற்று முறையாயினும், அந்தணர்க்கும் அரசர்க்கும் சிறப்புக் கொடுத்தற் பொருட்டு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எதிர்முறையிற் கூறினர். இந் நாற்பாற் பகுப்பையே, பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத் திரித்தனர் ஆரியப் பூசாரியர். தமிழ நூல் வகுப்பிற்கும் ஆரிய நால்வரணத்திற்கும் வேறுபாடு. தமிழம் ஆரியம் தமிழப் பாகுபாடு தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டது. இங்ஙனம் எல்லாத் தொழிலாளரும் நான்குபிறவி வகுப்பிற்குட் புகுத்தப்பட்டுவிட்டனர். பிராமணர் வந்த புதிதில் வெண்ணிறமா யிருந்ததனாலும்; வெப்ப நாடாகிய தமிழகத்தில் வெயிலிற் காய்ந்து வேலை செய்பவர் கருநிறமாயும், வீட்டிலும் நிழலிலும் இருந்து வேலை செய்பவர் பொன்னிறமாயும், இவ்விருசாரார்க்கும் இடைப் பட்டவர் செந்நிறமாயும், இருப்பதனாலும்; நிறம்பற்றி மக்களை நால் வகுப்பாக வகுப்பதற்குத் தோதாக விருந்தது. ஆயின், வேளா ளருள் ஒரு சாராரான வெள்ளாளர் சூத்திர வகுப்புள் அடக்கப் பட்டது, நாலாம் வகுப்பென்னும் வரிசை பற்றியே. தொழில் பற்றிக் குலங்கள் ஏற்கெனவே ஏற்பட்டிருந்தனவேனும், அவற்றையெல்லாம் நால்வகைப் பிறவி வகுப்புக்களாக வகுத்தவர் பிராமணர். அதனையே, முற்படைப் பதனில்வே றாகிய முறைமைபோல் நால்வகைச் சாதியிந் நாட்டில்நீர் நாட்டினீர் என்று, குலவிளக்க அகவல் பாடிய கபிலர் கூறினார். பிராமணர் கல்விக் களத்தைத் தமக்கே யுரியதாகக் கூறியதனால், கல்வித்துறையில் முன்பு தமிழர்க்கு வழங்கிய பார்ப்பார், அந்தணர், ஐயர் என்னும் பெயர்களுள் முன்னது முற்றும், பின்னவை ஓரளவும், பிராமணர்க்கு வரையறுக்கப்பட்டு விட்டன. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொல்காப்பியரும், பற்பலர் நாட்டிலும் பார்ப்பா ரிலையால் என்று அகவற் கபிலரும், குறித்தது ஆரியப் பார்ப்பனரான பிராமணரையே. (த.வ.) 