தேவநேயம் – 1 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 1 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 312 = 328 படிகள் : 1000 விலை : உரு. 305/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 24339030 தேவநேயம்-உருவாக்கம் ‘தேவநேயஉருவாக்கம்அவர்இயற்iகஎய்தியநள்தொட்டேஎன்னுள்அரும்பியது. அஃது அவர் வரலாற்றிலும், அவர் பெயரால் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனஅறக்கட்டளைப்பொழிவாகியதேவநேயப்பாவணரின்சொல்லாய்வுகள் என்னும்bபாழிவு நூலிலும்வெளிப்பட்டது. அதன் பின்னர்த் தமிழ்நாட்டு அரசு, பாவாணர் அகரமுதலித் திட்ட மேலாய்வுக்கென அமைத்த ஐவர் குழுவின் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டது. தேவநேய உருவாக்க முன்வரைவுகள் இவை. தேவநேய உருவாக்க வகையாக அவ்வரைவுகளில் இடம் பெற்ற குறிப்புகள் வருமாறு: தேவநேயர் படைப்பாக்கங்களை எல்லாம் ஒருங்கு திரட்டி ஓரடைவு செய்தால் அது தேவநேயமாகத் திகழும். ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்காப்பியத்தால் நம்முடன் ஒன்றி உறைந்து உடனாகித் திகழுமாப் போலத் தேவநேயத்தால் தேவநேய ரும் நம்மொடும் ஒன்றி உறைந்து உடனாகித் திகழ்வார். தேவநேயரின் அகரமுதலி அவராலேயே முற்றுற முடிக்கப் பெற்றிருப்பின், மற்றொன்று வேண்டா என்னும் நிலையில் அஃதொன்றே தேவநேயமாகத் திகழ்ந்திருக்கும்! அதனைப் பெரும்பேறு தமிழ்மண்ணுக்கு வாய்க்காமையால் கிடைத்த - கிடைக்கின்ற - அளவிலேனும் தேவநேயத்தை உருவாக்கி விடுதல் வேண்டும். அதனை உருவாக்குதல் எவ்வண்ணம்? தேவநேயப் படைப்பெல்லாம் சொல்லாய்வாகவே வெளிப் பட்டவை. அவர், எப்பொருளை எடுத்துக் கொண்டு பேசினாலும் எழுதினாலும் அவர்க்கு முந்துற நிற்பது சொல்லாய்வே! சொல் லாய்வு இல்லாத உரையாட்டும் கூட அவர்மாட்டு அமைந்தது இல்லை! ஆகலின், அவர்தம் படைப்புகளில் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகளை எல்லாம் அகர முறையில் தொகுக்க வேண்டும். அவர் வேர்கண்ட சொற்களுக்கு வேர், விளக்கம் கண்ட சொற்களுக்கு விளக்கம், ஒப்புமை கண்ட சொற்களுக்கு ஒப்புமை, பொருள் மட்டும் கூறிய சொற்களுக்குப் பொருள், சொல்லாக மட்டும் சொல்லியிருப்பினும் அச்சொல் ஆகிய எல்லாவற்றையும் தொகுத்து அகர முறையில் அமைத்தல் வேண்டும்.வடமொழியைத் தென்மொழி ஆக்கமாக்கிய தாயினும் சரி, ஆங்கிலத்தைத் தமிழாகப் பெயர்த்ததாயினும் சரி, புதிதாகப் படைத்த கலைச் சொல்லாயினும் சரி, அவ்வகரமுதலியில் விடுபாடு இல்லாமல் இணைத்துவிடவேண்டும். அவ்வாறு அமைந்துவிடு மானால் சொல்லாய்வாளர்க்குத் தேடிவைத்த திருவாகத் திகழ்தல் உறுதியாம். அவர்வழியில் ஆயத்தலைப் படுவார்க்குக் கிடைத்தற் கரிய கருவிநூலாம். அத்தலைப்பாடே தலைப்பாடாக வேறெவர் ஊன்றினாலும் சரி, ஊன்றா தொழியினும் சரி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கக மேனும் முந்து நிற்றல் வேண்டும். அது தலையாய கடமையாம். திருவாசகம் இன்றில்லையேல் சாழல், தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காணமுடியும்? என ஏங்குபவர் பாவாணர். ஆயிரம் ஆயிரம் சொற்களை மணிமொழியார் தம் நூலில் படைத்திருந்தாலும் சாழலும் தெள்ளேணமும் தனித்துயர்ந்து தலைதூக்கி நிற்பானேன்? அவ்வாட்சி பிறர்மாட்டுக் காண இயலாப் பெற்றியவை. பத்தோடு பதினொன்று என்று இல்லாமல், அவருக்கே உரிமை பூண்ட ஆட்சிச் சொற்கள் அவை. ஆதலால் அவையே மணிவாசகனார்க்குத் தனிவீறும் தனிப்பேறும் அருளிக் கொண் டுள்ளனவாம். சாழலும் தெள்ளேணமும் நினைவில் வருவார்க்கு, இளங்கோ வடிகளோ, திருத்தக்கதேவரோ, தேவாரம் பாடிய மூவரோ பிறர்பிறரோ தோன்றாமல் மணிவாசகப் பெருந்தகையே தண்ணா ரும் எழில்முகம் காட்ட வாய்க்கின்றதாம். அவ்வாறு பாவாணர்க்கே உரிய-பாவாணரையே அடையாளம் காட்டக் கூடிய-சொற்கள் ஒன்றா? இரண்டா? பண்டாரகரா1 பண்டுவரா2 பாவாணரை நினைவு கூராமல் முடியுமா? குளம்பி3 வேண்டுமா? கொழுந்துநீர்4 வேண்டுமா? என்று வினவுவாரிடைப் பாவாணர் அன்றோ மென்னகை புரிகிறார். நான் அணியமாக5 இருந்தேன்; நீங்கள் இப்பொழுது வந்தது ஏந்தாக6 இருந்தது என்பாரிடைப் பாவாணர் இரண்டறக் கலந்து திகழ்கிறார். இந்த மொட்டான்7தான் அந்த மேடைக்கு8 அமைவாக இருக்கும் என்பவர் இன்றமிழ் உள்ளத்தில் பாவாணர் வீற்றிருக் கிறார். பழக்கூட்டும்9 பனிக்கூழும்10 எனக்கு ஏற்றுவருவதில்லை வெதுப்பமாகப் பருக வேண்டும் என்பார் மாட்டுப் பழக்கூட்டும் பனிக் கூழுமாக அல்லவோ பாவாணர் குளிர்கிறார். பொந்திகை11 யாக உண்டு சடுத்தமாக12 வருவாருடனே பாவாணரும் அன்றோ பொந்திகையாக வருகின்றார். பிறப்பியம்13 எழுதி ஐந்திறம்14 அறிவாரிடத்தும், தொன்மம்15 படித்துத் தோற்றரவை16 நம்புவாரிடத்தும் கூடத் தமிழால் ஒன்றியுள்ளார் பாவாணர். அறிவன்17 காரி18 பார்த்து நீராடுவாரிடத்தும் செந்தணப்பில்19 வீற்றிருப்பாரிடத்தும் பாவாணர் உறைகின்றார். தூவல்20 கொண்டு எழுதுவாரிடத்தும் பாடகராகிய21 பாடுவாரிடத்தும் பாவாணர் ஒன்றியுள்ளார். குமுகாய22 மேம்பாட்டுக்கு எடுப்பை23 அகற்றி அடிப்பைப்24 பயன்படுத்த வேண்டும் என்று சூளிட்டுக் கொள்வாரிடத்தே பாவாணர் சுடர்விடுகின்றார். அரத்தம்25 படைச்சால்26 வைத்தூற்றி27 மணிப்பவழம்28 இன்ன வற்றை அகரமுதலியில் இணைப்பாரிடத்தே பாவாணர் இணைந் திருக்கிறார். அழகனார்29 அழகமதியர்30 அருட்செல்வர்31, ஆமலையழகர்32, மதியழகர்33, மணவழகர்34 அருளர்35, மனங்கவர்ந்தார்36 சின்னாண் டார்37, மகிழ்நர்38-இன்ன பெயராளர்களிடத்தில் பேராளராகப் பாவாணர் திருக்கோலம் கொண்டுள்ளார். வெங்காலூர்39 வேம்பாய்40, எருதந்துறை41 பைந்திரம்42 அமைதிவாரி43 என்று எண்ணுவாரிடத்தும் வேம்பா(கொதிகலத்) தொழிற்சாலை44 தடிவழிவிரைவான்45 நாட்சரி46, மாதிகை47 என்று பெயரிடுவாரிடத்தும் பாவாணர் அமைந்திருக்கிறார். காட்டு விலங்காண்டி48 என்றாலும் பட்டந்தாங்கி49 என்றாலும் நேரி50யைப் பயன்படுத்தும் அளவில் மொழியாக்க நோக்குக் கொண்டிருத்தல் வேண்டும் என்று கருதின் அவரிடத்தே பாவாணர் அகமலர்ந்து முகமலர்ந்து அழகுக் காட்சி வழங்குகிறார். இங்குச் சுட்டிக் காட்டிய ஐம்பது சொற்கள்தாமோ, தேவ நேயம். இப்படி எத்துணை எத்துணை ஐம்பதுகள்! அவற்றை யெல்லாம் ஒருங்கே தொகுத்துக் காட்டும் வேர் விளக்கம்-பொருள் விளக்கம்-எடுத்துக் காட்டுவிளக்கம் இன்னவையெல்லாம் ஒருங்கே ஒரு தொகுப்பாகத் தொகுத்துக் காட்டும் சொற்களஞ்சியமே (சொற்பொருள் விளக்கக் களஞ்சியமே) தேவநேயமாகத் திகழுமாக. அதற்கு அரசும் அமைப்புகளும் ஆர்வலர்களும் முந்து நின்று பணி செய்வார்களாக என்பது எம் வேண்டுகையாக இருந்தது. (1. டாக்டர், 2. மருத்துவர் 3. காபி, 4. தேநீர், 5. தயார், 6. வசதி, 7. டூல், 8. மேசை, 9. புரூட் சாலிட், 10. ஐகிரீம், 11. திருப்தி, 12. விரைவு, 13. சாதகம், 14. பஞ்சாங்கம், 15. புராணம், 16. அவதாரம், 17. புதன், 18. சனி, 19, ஏர்கண்டிசன், 20. பேனா, 21. பாகவதர், 22. சமுதாயம், 23. எடுப்புமலக்கூடம், 24. பிளஅவுட், 25. இரத்தம், 26. பர்லாங், 27. புனல், 28. மணிப்பிரவாளம், 29. சுந்தரம், 30. இராமச்சந்திரன், 31. கருணாநிதி, 32. பசுமலை சுந்தரம், 33. சோம சுந்தரம், 34. கலியாணசுந்தரம், 35. கருணை, 36. மனோகரன், 37. சின்னசாமி, 38. சந்தோசம், 39. பெங்களூர், 40. மும்பை, 41. ஆக்சு போர்டு, 42. கிரீன்லாண்ட், 43. பசிபிக் கடல், 44. பாய்லர் தொழிற்சாலை, 45. கிரேண்ட் டிரங்கு எக்சுபிரசு, 46. தினசரி, 47. மாத இதழ், 48. மிருகாண்டி (மிராண்டி) , 49. பட்டதாரி, 50. ஓட்டு) பாவாணர் துறைக்கு விடுத்த இந்த அறிக்கை, எம்மறு மொழியும் இன்றிக் கிடப்பில் போடப்பட்டமையாலும், அவர்கள் தம் நோக்கில் அகரமுதலியை முடிக்கத் திட்டமிட்டதாலும், அரசையோ, துறையையோ நம்புவதில் பயனில்லை என்னும் பட்டறிவு உண்டாயிற்று. பாவாணர் நூல்களையெல்லாம் வாரமுறையில் ஐம்பான் ஆண்டுகளாக வெளியிட்டு வந்த தெ.இ.சை.சி. கழகமோ, மணிவாச கர் பதிப்பகமோ நாம் இப்பணியை முடித்துக் கொடுத்தால், வெளியிடும் என்னும் உறுதியால் பணியைத் தொடங்கினேம். இடையே தவச்சாலை நிறுவி நூல்வெளியீடும் மேற் கொண்டமை யால், அதன்வழி வெளியிடலும் வாய்க்கும் எனக் கிளர்ந்தேம். அந்நிலையில் கருவூர் அருள்நிறை சாரதா அன்னை அறிவியல் கலைக்கல்லூரி நிறுவனரும், தமிழன்னைக்கும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் கம்பருக்கும் பொற்சிலை எடுத்துப் போற்றுபவ ரும், திருக்குறள் திருவாசகம் தாயுமானம் முற்றோதலுற்றவருமாகிய தவத்திரு ஆருயிர்க்கின்ப அடிகளார் (தவத்திரு ஆத்மானந்தர்) அத்தொகுப்புப் பணி, வெளியீட்டுப் பணி என்பவற்றைத் தாம் ஏற்றுக் கொள்வதாக நெஞ்சார்ந்த நேயவுரை வழங்கினர்; தொகுத்து விரைவில் முடிக்குமாறும் தூண்டினர்; இயல்பாகவே ஊன்றியிருந்த யாம், இனிய தோன்றலின் தூண்டலால், மேலும் ஈடுபட்டு ஆழ்ந்தேம். இந்நிலையில், பாவாணர் நூற்றாண்டு விழா எய்தியது. முன் வரவாக 2001ஆம் ஆண்டு தொட்டே பாவாணர் தமிழியக்கத் திங்கள் பொழிவுகள் நிகழ்ந்தன. அரசும் பாவாணர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கல், நூற்றாண்டு விழா எடுத்தல் என்பவற்றை மேற்கொண்டது. பள்ளிகள், அமைப்புகள்- பல்கலைக்கழகங்கள் எனப் பாவாணர் புகழ் நாடளாவிய அளவில் நிகழ்ந்தது. தமிழாக்கம் கருதி நிறுவப்பட்ட தமிழ்மண் பதிப்பகம் ஒரு மாப்பெருந் திட்டம் மேற்கொண்டது. பாவாணர் நூல்கள் நாட் டுடைமை யாக்கப்பட்ட ஏந்தால், அவர்தம் எழுத்துகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக வெளியிடத் திட்டம் மேற் கொண்டது. நூல் வடிவுற்றவற்றை அன்றிக் கட்டுரை-பொழிவு-துண்டு வெளியீடு - இதழ் வெளியீடு - என்பனவற்றையும் முன்வெளி யீட்டுத் திட்டம் உருவாக்கி வெளியிட்டது. சென்னையில் 01.12.2001இல் நூல் வெளியீட்டு விழாப் பொழிவுக்கெனச் சென்ற காலை, சிங்கபுரி செந்தமிழ்க்காவலர் கோவலங்கண்ணனாரைக் கண்டேம். எம் குண்டலகேசி வெளி யீட்டுப் புரவலர் அவர். நெட்ட நெடுந் தொடர்பினர். மலையகச் சுற்றுலாவில் உடனாகிச் சிங்கைச் சுற்றுலாவில் புரவாண்மை மேற்கொண்டவர். அவர்க்கும் எமக்கும் ஊடகம் எது? இருவர்க்கும் உயிர்ப்பாகி விட்ட தேவநேயக் காதலேயாம்! விழாவுக்கு முதல் நாள் இரவு கோவலங்கண்ணனார் தாம் தங்கியிருந்த மாளிகைக்கு அழைத்தார். இனிய அன்பர் பாவாணர் தமிழியக்கச் செயலர் - முனைவர் கு. திருமாறனார் உடனாகச் சென்று, உரையாடியும் உறைந்தும் மகிழ்ந்தோம். உரையாட்டின்போது, தேவநேயத் தொகை குறித்த எம் உள்ளார்ந்த வேட்கையை, எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்தியளவில் வெளியிடக், கோவலங்கண்ணனார் உள்ளப் பளிச்சீடு முகத்தில் பொலியப் பாவாணர் அறக்கட்டளை ஒன்று தொடங்குவோம். அதன் வழியாகத் தேவநேயம் வெளியிடுவோம். அமைப்புப் பொறுப்பும், அறக்கொடைப் பொறுப்பும் முழுவதாக ஏற்றுக் கொள்வேம்; எவர் எவரைத் தக்காராகத் தாங்கள் கருதுகிறீர்களோ அவர்களைக் குழுவில் இணைக்கலாம்; தொகுப்புக்குப் பயன்படுத்த லாம்; தொகுப்பை முடித்ததும் வெளியீட்டுப் பொறுப்பை முற்றாகப் பாவாணர் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். அதன் மேலும், மொழி இன ஆக்கப் பணிகளுக்கு அறக்கட்டளை வேண்டுவ புரியும் எனச் சில மணித்துளிகளில், தேன்மழைப் பொழிவெனப் பொழிந்தார். மெய்யாகவே அவரியல்பை அறிந்திருந்த எமக்கும் எடுத்த எடுப்பிலே-பல இலக்கப் பணிப்பொறுப்பை இப்படி எவரே ஏற்று மொழிவர்? என்னும் வியப்பே கிளர்ந்தது. அன்று இரவு முகிழ்த்த பாவாணர் அறக்கட்டளை, விடியலிலேயே, அறக்கட்டளை முன்வைப்பாக முளைத்தது. அந்நாள் 01.12.2001. 2002 சனவரித் திங்கள் பணியைத் தொடங்கி 2003 திசம்பர்த் திங்கள் இறுதிக்குள் நிறைவு செய்தல் என்னும் உறுதியுடன் கிளர்ந்த பணி, நாளை என்பது, தள்ளிப்போடும் தடை; இன்னே என்பதே என்றும் வேண்டுவது என்னும் தெளிவால் 02.12.2001 ஆம் நாளே, தேவநேயப் பணித் திட்டம், திட்டமுறையோடு தொடங்கப் பட்டது. திருவள்ளுவர் தவச்சாலையே பணிக்களமும் ஆயது. தவச்சாலையின் நூலகம், பாவாணர் ஆராய்ச்சி நூலகம் என்பது. பாவாணர் பெரும்பிரிவுற்ற அணிமை நாளிலேயே, அவர் பெயரால் மதுரைத் திருநகரில் உருவாயது. அதன் முன்னரே ஏழாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்டிருந்தது. இல்லத்திலே இருந்த நூலகம் இடம் பெயர்ந்து தமிழ்ச் செல்வப் பெயருடன் பாவாணர் ஆராய்ச்சி நூலகமாக மாடிக் கட்டடத் துடன் ஆய்வுக் களமாகத் திகழ்ந்தது. 1994இல் யாம் காவிரித் தென் கரையில் திருவள்ளுவர் தவச்சாலை உருவாக்கிய நிலையில் அப்பெயருடன் நூலகமும் எய்தியது. அக்காலத்திருந்த நூல்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிய வளர்வில் ஆய்வுப் பயன் செய்கின்றது. ஆதலால், பாவாணர் அறிவுக் கொடை என்பவை எல்லாமும் ஒருங்கே ஆய்வுப் பொருளாக அமைந்து சிறக்கும் இடத்தில், தேவநேய அடைவுப் பணி செய்தல் அருமையை, எளிமைப்படுத்திவிட்ட பெருமையதாம். ஏன்? நூலுக்கெனத் தேடியோட வேண்டுவதில்லையே! பாவாணர் தொடர்புடைய இதழ்கள்-மலர்கள்-இயல்பாகவே இருந்தன. பிறருக்கு வாய்க்காத எழுத்துப் படிகள் அருநூல்கள் சில இருந்தன. செந்தமிழ்ச் செல்வி முற்றாக உண்டு. பாவாணர் வரைந்த கடிதம்-படிகள்- ஈராயிரத்திற்கு மேல் அவர்தம் வரலாற்றுக்காகத் தொகுக்கப்பட்டவை கைவயமிருந்தன. இன்னவை எல்லாம் இத்தொகைக்கு உதவின. இவற்றுக்கு மேலே, மேலும் ஓர் அரிய வாய்ப்புத் தேடி வந்தது. தமிழ்மண் பதிப்பகம், பாவாணர் கட்டுரைகளென வெளிப்பட்டவற்றையெல்லாம் அரிதின் முயன்று பல்வேறு அடைவுகளில் நூலாக்கம் செய்து தமிழுலகம் கூட்டுண்ண வெளி யிட்டது. அதனால், அதன்முன் கிட்டாத சில மலர்கள் - இதழ்கள்- தாங்கிய கட்டுரைகளும் வாய்த்தன. இவ்வகையால் இடையறவின்றி இத்தொகையாக்கம் நடைபெறுவதாயிற்று. புலவர் இரா. இளங்குமரன், முனைவர் கு. திருமாறன், முனை வர் கு. பூங்காவனம், புலவர் மு. படிக்கராமு, முனைவர் ப. கங்கை என்பாரை அடைவுப் பணியாளராகக் கொண்டு திங்கள் மதிப் பூதியமாக ஒவ்வொருவருக்கும் ஈராயிரம் வழங்குவது என முதற்கண் திட்டப்படுத்தப்பட்டது. பின்னர்ப் பணியை மேலும் சிலர் வழியே செய்யப் பெறின் விரைந்து இயல வாய்க்குமெனக் கொண்டோம். அதனால் தக்கார் சிலரை இக்குழுவில் மேலும் இணைத்துக் கொள்வதென முடிவு செய்தோம். முன்னே தீர்மானித்தவர்களுடன் முனைவர் திருஞானம், முனைவர்.சக்திவேல், முனைவர்.நாராயணன், புலவர் தமிழகன், புலவர் குறளன்பன், பாவலர் மு.வ. பரமசிவம், பாவலர் அருள்செல்லத்துரை ஆகியோரையும் இணைத்து அகர வரிசையில் தேவநேயம் அடைவு செய்தலை ஆய்ந்தோம். சிலர் தாங்கள் அடைவுக்கு உதவுவதாகக் கூறித் தனித்தனி நூல்களைக் குறித்தனர். தாம் ஏற்றுக் கொண்டவாறு முன்னவரும் பின்னவருமாகிய எவரும் மதிப்பூதியமாவது மாண்பணியே எனத்தொகை விழையாது வினை விழைவாராயினர். ஆகலின் ஒளியச்சு எழுதுதாள் இன்னசெலவன்றி என்ன செலவும் ஏற்படாது தொகை உருவாக்கம் கிளர்ந்தது. பாவலர் பரணனார், முனைவர் நாராயணன், புலவர் தமிழகன், புலவர் குறளன்பன், புலவர் படிக்கராமு, முனைவர் கங்கை ஆகியோர் அடைவு செய்தும் வழங்கினர். முனைவர் திருமாறனார் முனைவர் இளவரசு ஆகியோர் பாவாணர் சொல்வளம் - தனிச் சொற்பொருள்- அடைவு செய்து கணினிப் படுத்தி உதவினர். நெடுங்காலமாக யாம் அடைவு செய்தவற்றையும் பிறர் இணைப்புகளில் தக்க சிலவற்றையும் அகர முதலாக வரிசைப் படுத்தும் பணி யாம் கொண்டேம். அவற்றுள் ஐம்பான் ஆண்டுப் பல்துறையாக்கச் செய்திகள் மீளவருதலும் முன்னிற் பின்சிறத்தலும் திருத்தம் பெறலும் இயற்கை ஆகலின் அவற்றைக் கண்டு கருத்துருவாக்கம், பொருள்நோக்கு, சொல்லாக்கக் கட்டுக்கோப்பு, என்பவற்றை எண்ணி ஒழுங்குறுத்தலும், கூறியது கூறல் கூடியவரை வாராமல் பேணலும், நிகழ்காலம் மட்டுமே கருதாமல், காலமெல்லாம் கைக்கொள்ளத் தக்கன ஏற்றலும் என்பவற்றை உட்கொண்டே தொகையாக்கம் செய்யப்பட்டதேம். சொற்பொருள் விளக்கம், சொற்பொருள் என்பனவற்றுடன் ஆங்கிலப் பகுதி தனிமடலமாக்குதல் வேண்டும் என்றும் கருதினேம். பாவாணர் நூல்களின் அடைவு, கட்டுரை அடைவு, தேவ நேயம், சொல்லியல் நெறிமுறை என்பன முன் இணைப்புகளாக எம்மால் எழுதிச் சேர்க்கப்பட்டன. பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் திருமலி கோவலங் கண்ணனார் பதிப்புரை வரைந்து உதவினார். தேவநேயம் அச்சீடு தொடர்பான கருத்து எழுந்தபோது திருக்குறள் திறவோரும் பொறிஞருமாகிய திரு. பாலகங்காதரனார் தாமே தவச்சாலையில் கணினி அமைப்புச் செய்து தர முன்னுரைத் தார். தவத்திரு கருவூர் அடிகளாரும், புதுவை இயற்கைக் காவலர் ஆசிரியர் வை.வேலாயுதனாரும் தம்மிடம் (கைவயமாக) உள்ள கணினியை வழங்க இசைந்தனர். சிங்கைப் புரவலர் கோவலங் கண்ணனார் தாமே தக்க கருவி விடுப்பதாக உரைத்தார். பேரா. திருஞானம் அவர்கள் அச்சிடுதலுடன் முதல் மெய்ப்புப் பார்க்கவும் நேர்ந்தார். எனினும், தவச்சாலையில் கணினி அமைத்தல், பணி நிறைவேற்றல், மெய்ப்பு முழுவதாகப் பார்த்தல், அச்சீடு- அட்டை கட்டல் ஆகியவை புரிதல் முழு நிறைவாகாது என்னும் எம் பட் டறிவால், இத்தகு பணியிலேயே ஆழங்கால் பட்டவரும், பாவாணர் அடங்கல் அனைத்தையும் ஒருங்கே வெளியிட்டவரும், கருவிநூல் வெளியிடல் தம் பணியெனக் கொண்டவரும் ஆகிய தமிழ்மண் பதிப்பக நிறுவனர் திரு. கோ. இளவழகனாரிடம் அச்சீட்டுப் பணியை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. புரவலரும் அது பொருந்துமென ஏற்றுப் பொறுப்பை ஒப்படைக்க இசைந்தார். திருவள்ளுவராண்டு 2034 ஆடித்திங்கள் 11ஆம் நாள் (கி.பி.24.04.2003 ஞாயிறு) திரு.இளவழகனாரிடம் அச்சுப்பணி ஒப்படைக்கப்பட்டது. உடனே பணி தொடங்கப் பட்டது. முதற் பதினாறு பக்கங்கள் அச்சிட்டுப் பார்வைப்படியாகப் பலர் கருத்துக்கு வைக்கப்பட்டது. அச்சு அமைப்பு, எழுத்து அமைப்பு பற்றிய முன்னோட்ட ஆய்வு அது. அறக்கட்டளை அமைப்புக் குழுவினரொடு தக்கார் சிலரும் கருதப்பெற்றனர். கழக அமைச்சர் இரா. முத்துக்குமாரசாமி, பேரா.முனைவர் பொற்கோ, பொறிஞர் பாலகங்காதரனார், தவத்திரு. சூசைமாணிக்க அடிகள் ஆயோர் தக்க கருத்துதவினர். முனைவர் தமிழண்ணல் உவந்து ஊக்கினார். முனைவர் அரண முறுவல் அமைப்பு முறையை முறைப்படுத்துதலில் அழுத்தமாக ஈடுபட்டு உடனாகித் திட்டப்படுத்தினார். மெய்ப்புப் பார்க்க முனைவர் திருமாறன், முனைவர் அரணமுறுவல், முனைவர் இளங்கோ, முனைவர் ப.கங்கை, திரு. மதிவாணன் ஆகியோர் இசைந்தனர். திசம்பர் 2003 நிறைவுக்குள் அச்சுப் பணி நிறைவுற வேண்டும் என்னும் திட்டம் சுணக்கமாகா வகையில் நிறைந்தது. தமிழ்மண் பதிப்பக நிறுவனர் திரு.இளவழகனார் தமிழ்க் காவலர் கோவலங் கண்ணனார் ஆகிய இருவர் ஒத்துழைப்பும் எண்ணுதோறும் இனிப்பதாம். பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள் 07.02.1902 சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர் பரிபூரணத் தம்மையார் ஆகிய பெற்றோர்க்குப் பத்தாம் மகவாகப் பிறந்தார். 1906 தந்தையார் இயற்கை எய்துதல்; அடுத்தே அன்னையா ரும் இயற்கை எய்துதல். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன் மலை என்னும் முறம்பில் யங்துரை என்பார் காப்பில் தொடக்கக் கல்வி பயிலல். 1912 வடார்க்காடு மாவட்டம் ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில் பயிலல். 1916 பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (C.M.S) உயர்நிலைப்பள்ளி. 1919 முறம்பில் ஆசிரியப் பணி; ஆறாம் வகுப்பு ஆசிரியர் (ஈராண்டு) 1921 ஆம்பூர் பள்ளியில் தமிழாசிரியர் (மூன்றாண்டு) 1924 மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வில் தாம் ஒருவ ராக வெற்றி பெறல். ஞா.தேவநேசக் கவிவாணன், மிஷன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர், வடார்க்காடு ஜில்லா என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22) 1924 சென்னை, பிரம்பூர் கலவல கண்ணன் உயர்நிலைப் பள்ளி 1925 சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப் பள்ளி 1926 சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளி (மூன்றாண்டு) திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித் தமிழ்ப் புலவர் தேர்ச்சி. (செந்.செல். 4:336) பெறல், வித்துவான், கீ.க,தேர்வு (B.O.L) தேர்ச்சி எசுந்தர் அம்மை யார் திருமணம். ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல். 1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி (ஆறாண்டு). 1930 தேவநேயர் -நேசமணியார் திருமணம். 1931 மொழியாராய்ச்சி - ஒப்பியன் மொழி நூல் என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளி வருதல். 1934 திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி (ஒன்பதாண்டு). 1935 திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு. (M.O.L.) பட்டத்திற்காக இடுநூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வழங்குதல். 1936 இடுநூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். இனி எனது நூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடு வேன் என உறுதி கொள்ளல். 1940 ஒப்பியன் மொழி நூல் வெளியிடுதல். 1943 சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு) தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10.43) தொல்காப்பியக் குறிப்புரை வரைவு. 1944 சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் (பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல். 1947 பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல் 1952 தமிழ் முதுகலைப் பட்டம் (எம்.ஏ) பெறுதல். 12.07.1956 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திரவிட மொழி யாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு). 24.09.1961 காட்டுப்பாடியில் வாழ்வு. 27.10.1963 மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல். 12.01.1964 தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம், மதுரை 06.10.1966 உ.த.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி 08.09.1967 மணிவிழா, மதுரை 28.12.1969 உ.த.க. முதலாண்டு விழா, பறம்புக்குடி 09.01.1971 உ.த.க.இரண்டாம் விழா, மதுரை 05.05.1971 குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்குதல் 31.12.1972 தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, தஞ்சை 12.02.1971 தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம் 08.05.1974 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக அமர்த்தம் 15.01.1979 தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்குதல் 05.01.1981 மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத் தரங்கில், மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல். 14.01.1981 மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம் 15.01.1981 இரவு 12.30க்கு இயற்கை எய்துதல் 16.01.1981 சென்னை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் மக்கள் நச்சினார்க்கினிய நம்பி சிலுவையை வென்ற செல்வராசன் அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான் மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி மணிமன்ற வாணன் (பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் என்னும் பெயர்கொண்ட குழமகன் 24.12.39இல் இயற்கை எய்துதல்) பாவாணர் நூற் சுருக்கம் (அகரநிரற்படி) 1. இசைத் தமிழ்க் கலம்பகம் மேடையில் பயன்படுத்தத் தக்க பல்வகை இசைத் தமிழ்ப் பாக்களையுடைய இந்நூல் வழக்கம்போல் பாவாணர் எழுதும் முன்னுரையை உடையதாய் இல்லை. பதிப்புரையும் இல்லை. பிழை திருத்தப்பட்டி நான்கு பக்கங்கள் முகப்பில் உண்டு. நேசமணி யம்மையார் நினைவு வெளியீடு-1 என மூன்று உருபா விலையில் 248 பக்க அளவில் வெளி வந்துளது. இதில் இடம் பெற்றுள்ள இசைப் பாடல்கள் 303 ஆகும். வெளிவந்த ஆண்டு 1966. குறியீட்டு விளக்கம், பாட்டுறுப்புப் பெயர்கள், தாளப் பெயர்கள் பற்றிக் கூறுகின்றது. பல்லவி, துணைப்பல்லவி, உருவடி (சரணம்) உரைப்பாட்டு (தொகையரா) என்பவை பாட்டுறுப்பு. ஒற்றை (ஏகம்), முன்னை (ஆதி), ஈரொற்று (ரூபகம்) மூவொற்று (சம்பை) முப்புடை (திரிபுடை) இணையொற்று (சாப்பு) என்பன தாளப் பெயர்கள். இவற்றை முறையே மூன்றெண்தாளம், எட்டெண்தாளம், ஈரொற்றுவாரம், ஐந்தெண்சார்பு, ஏழெண்சார்பு, எனக் குறிப்பார் இசையறிஞர் குடந்தை சுந்தரேசனார் என்னும் அழகவுடையார் என்கிறார். ஓராணை மொழியைப் பாவாணர் பாயிரத்தில் கூறுகிறார். அது, பாடற்குழாம் ஒன்றேற் படுத்துக ஊர் தொறும்: குறித்த நாட்களில் தெருவெலாம் பாடிப் பராவுக என்பது. ஆரிய ஞாட்பின் (போரின்) அருந்தமிழ் மீட்க ஒரு மீட்பன் துணை எனக் காப்பும், இன்னிசை யாழ்வல்லான், மன்னார்குடி இராசகோபாலனுக்கு இசையாசிரிய வணக்கமும் பாடி, கடவுள் வணக்கம் முதலாக இசைப்பா இசைக்கிறார். நூல் தொடங்கியும் கடவுள் தொடர்பாக நான்கு பாடல் களை இசைக்கிறார். பின்னர் இசையின்பம், தமிழன் பள்ளி எழுச்சி, பழந்தமிழன் சிறப்பு முதலாகத் தொடர்கிறார். ஒவ்வொரு பாடற்கும் மெட்டு, பண், தாளம் என்பவற்றைப் பெரும்பாலும் சுட்டுகிறார். இசைந்த பண்ணிற் பாடுக என்றும் வைக்கிறார். பொதுவகையாலும் சிறப்பு வகையாலும் இசைபாடுவார் அனைவர்க்கும் தகுமாறு இவ்விசைப் பாக்கள் இருக்கவேண்டும் என்பதால் மொழிவிலக்கின்றி, பசனை செய்வோம் கண்ணன் நாமம் மாசில் வீணையும் லம்போதரா லகுமிகரா ரகுபதி ராகவராசாராம் என்பன போல மெட்டுகள் சுட்டிக்காட்டுகிறார். பாவாணர் இசைப்புலமை விளக்கமாவதொடு, அவ்விசை பரப்புதல் வேட்கையையும் வெளிப்படுத்துகிறது இது. பாவாணர் ஆய்வுத் திறத்தால் நூல்களாகவும் கட்டுரைக ளாகவும் வடித்தவற்றையெல்லாம் இன்னிசையால் தெருத்தோறும் பரவச் செய்ய முயன்ற முயற்சி இசைப்பாத் தலைப்புகளாலும், அவற்றின் பொருளாலும் தெள்ளிதின் விளங்கும். தமிழ் வரலாறு, முதல்தாய்மொழி, வடமொழி தமிழினின்று கடன் கொண்டவை, தமிழன் தானே கெட்டமை, தமிழ்த் திருமணம், பழந்தமிழே திரவிடத்தாய், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு, தமிழ்கடன் கொண்டு வளராது, வண்ணனை மொழியியலின் வழுநிலை, என் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணி; இத் தலைப்புகளைப் பார்த்த அளவிலேயே பாவாணர் படைத்த நூற்பெயர்கள் பளிச்சிடும். பிறதலைப்புகளோ பாவாணர் நூல்களில் தேங்கிக் கிடக்கும் ஆய்பொருள் வளம் எளிதில் கையில் கனிபோல் விளங்கிக் கிடக்கும்வகை புலப்படும். தென்சொல் வளம் (20) தமிழின் பதினாறு தன்மை (16) என்பன போல்வன அடைமொழி பயிலா அடுக்கின் அருமை வாய்ந்தவை. யார் யார் எவ்வெப்பா வல்லார்? என்பது (30) பழமையொடு புதுமை நலம் செறிந்த புகழ்மையது. வடமொழியால் தமிழுக்கு வந்த கேடு (44) வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள் (45) என்பன வடமொழி வரலாறு மட்டுமன்றிப் பாவாணர் தம் நூல்களை யெல்லாம் ஒட்டு மொத்தமாகத் தழுவியுரைக்கும் பிழிவிசையாகும். தமிழ் அயன்மொழியால் கெடும் வகையை, நோய் இருக்கையில் வியாதி வந்தது வியாதி வந்தபின் சீக்கு வந்தது சீக்கிருக்கிவே பீமார் வந்திடும் பீமார் வந்திட ஏமாறாதீர் எனப் பளிச்சிடக் காட்டுகிறார் பாவாணர் (51). இயல் இசை நாடகத் தமிழின் இயற்கையமைதியைக் கிளி, குயில், மயில் இயலால் காட்டுதல் சிறந்து விளங்குகின்றது(69). யானை தன்னைக் கட்டும் தொடரியை (சங்கிலியை)த் தானே எடுத்துத் தருதல் போல் மானங்கெட்ட தமிழன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டான் என்பது எள்ளல் அன்று நோவு (94). ஆங்கிலம் தீயதே அன்று என்பது உண்மை. ஆனால் தமிழ்த்தாயைக் கொல்லியாக ஆங்கில வழிப்பள்ளிளை உருவாக்கிய கொள்ளையர் உள்ளம் தீமையே உருவாயது தானே (98). அன்று வந்ததும் அதே நிலா என்ற மெட்டில் அன்றிருந்ததும் அயன்மொழி இன்று வந்ததும் அயன்மொழி என்றுதான் இங்குத் தமிழ்மொழி ஏத்துநாட்டினை வாழ்த்து மொழி என மொழி விடுதலை இன்மையை எளிமையாய்ச் சிந்திக்க வைக்கிறார் (150). தொண்டர் படைச் செலவு நடைக்கு இடம்வலம் இடம் வலம் என்று தடம் காட்டுகிறார் (205). தமிழரென் றிருப்போரெல்லாரும் - நல்ல தமிழன்பரோ நெஞ்சைத் தடவிப்பாரும் நல்லவினா இல்லையா? (246) பிராமணர் தமிழன்பராதல் நாட்டு நலம் என்பதை, தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு தமிழையே தாங்க வேண்டும் - நல்ல தங்கமே தமிழகம் ஓங்க வேண்டும் என்கிறார். பாவாணர் ஒப்புரவுள்ளமும் மாந்த நேயமும் இருதாளாய் நடையிடும் மாட்சி இது (248, 249) எளிதாகப் பேசுமொழி தமிழ்பாப்பா-மூச் சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு பாப்பா - தமிழ் பேசுபாப்பா என்பது மழலைப் பாவாணர் மொழி (251). எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம் பொல்லாப் பகையும் பசியும் பிணியும் இல்லாமல் எங்கும் நன்கனம். (303) என உலகநேயராக இசைத்தமிழ்க் கலம்பகத்தை இனிக்க முடிக்கிறார் தேவநேயர். 2. இசையரங்கு இன்னிசைக் கோவை பாவாணரால் இயற்றப்பட்டதும், முகவை மாவட்டம் பறம்புக் குடியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் வேழத்திருமகள் என்னும் கசலட்சுமியாரால் பாடப்பட்டதும் ஆகிய இசைப்பாடல் சுவடியே இசையரங்கு இன்னிசைக் கோவை என்பதாம். 31 பக்கங்களையுடைய இச்சுவடியில் 34 இசைப் பாடல்கள் இடம்பெற்றுள. அந்நாள் விலை 50 காசுகள். இருபது பாடல்களுக்கு இசைமெட்டுகள் சுட்டப்பட்டுள. ஒரே ஒரு பாடலை (21) இசைந்த மெட்டில் பாடுக என்ற குறிப்புளது. எஞ்சிய பாடல்களுக்குப் பண்ணும் தாளமும் குறிக்கப்பட்டுள. ஆதி முன்னை எனவும், மோகனம், முல்லை எனவும் சாப்பு இரட்டை எனவும் ரூபகம் ஈரொற்று எனவும் பண்ணும் தாளமும் தமிழாக்கம் பெற்றுள. தமிழே முதல் தாய்மொழி என்பதைப் பெற்றோர் பெயர் (அம்மா, அப்பா) உலகமுழுவதும் தமிழ்வழிப்பட்டதாகவே இருப்பது கொண்டு நிறுவுதல் இணையற்ற சான்றாம் (2). தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே என்றும் பாடல் முற்றும் இயைபு நயம் சொட்டச் சொட்டப் பழந்தமிழன் பெருமை சொல்கின்றது (4) திருக்குறளின் சிறப்பு முப்பாடல்களில் முழங்குகின்றது (5-7) நக்கீரன், பரிதிமாற்கலைஞன், மறைமலையடிகள் எனத் தமிழ்க் காவலர் புகழ் தொடர்கின்றது (8-10) தமிழ்ப்பெயர் தாங்காதவரைத் தமிழரெனவும் தகுமோ என்றும் (11) தமிழ் என்பதே தனித்தமிழ்தான், பால் தருபவர் தண்ணீரொடு கலந்ததால்தான் கலப்புப் பால் ஆயது என்றும் (12) குறிக்கிறார். சுரையாழ அம்மி மிதப்ப என்னும் மொழிமாற்றுப் பொருள்கோள் எடுத்துக் காட்டைத் தமிழ்நாட்டின் நிலைமைக்கு எடுத்துக்காட்டாக்கி, சிறிது கற்றோர் பெருகி வாழ, பெரிது கற்றோர் சிறுகி வீழலை நிறுவுகிறார் (15). இத்தமிழகத்தில் இருந்துகொண்டே இதற்குக் கேடு செய்யும் இழிமையரைத் தமிழ்ப் பகைவராகச் சுட்டுகிறார் (17) இங்கே என்னென்ன வளவாய்ப்புகளைச் செய்தாலும் இந்தியொடு நாகரி எய்தின் நன்றோ என வினாப் பதிகமாக இசைப் பது தமிழ்கெட வரும் வளர்ச்சித் திட்டம் தீங்கு விளைப்பது என்பது. தமிழனுக்கு இணையில்லை உலகில் தாய்மொழி பேணாமைக்கு என்பது சுவையான முரண் (19). தமிழன் உடமை தமிழ் ஒன்றே (20) செந்தமிழே தமிழன் செல்வம் (21) எது தமிழ்? (22) தமிழன் குலம் தமிழன் (23) தமிழ்ப்பற்று (24) தமிழைக் காட்டிக் கொடாமை (25) தமிழ்த் தொண்டர் படைச்செலவு (27) தமிழுக்கு நற்கால அண்மை (28) தமிழ்வெற்றி முரசு (29) தமிழ்வாழ்த்து (30) என்பனவெல்லாம் தமிழ்நேயரின் தமிழுள்ள வீறாம். கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் கல்லாத பேரே தமிழ்க் காவலராகி வென்றார் என்பது எத்தகை வெப்பின் விளைவு என எண்ண வைக்கிறது (24) பெரியார் வாழ்த்து (13) சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக்கவுண்டர் (26) இரா.முத்துக்கிருட்டிணன் (33) என்பவை நன்றிப்பாக்கள் உலகத் தமிழ்க் கழகம் (31) பறம்புக்குடி (32) என்பவை அமைப்பும் விழாக்கோளும் பற்றியன. தமிழன் உள்ளம் எத்தகையது என்பதை விளக்குவது மங்களம். எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம் என்பது குறைவிலா நிறைவின் முன் வேண்டத் தக்க குறைவிலா நிறைவு வெளிப்பாடு தானே. பாடல்கள் மேடைக்கென்றே இயற்றப் பட்டவை. அவ்வாறே இசைக்கவும் பட்டவை. எளியவை! இனியவை! உணர்வு மிக்கவை! உயிரோட்டமாம் உயர்வில் கிளர்ந்தவை! அயற்சொல் விரவா அருமையும் பெருமையும் அமைந்தவை. 3. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் காட்டுப்பாடி விரிவில் பாவாணர் இருந்த நாளில் வெளியிடப்பட்ட நூல் இது. ஆண்டு 1968. முகவுரை நிறைவில், இமிழ்கடல் உலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவும் சான்ற தமிழினை இழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை ஒத்த வாழ்வே குலவிய மாநி லத்தே என்று பாடுதல் தமிழை இழந்து பெறும் பேறு எதுவாயினும் பேறாகாது என்னும் அவருட்கிடை காட்டும். தம்மை அடிமைப் படுத்துவாரினும் மிகுதீயர் தம்மொழி அடிமைக்கு ஒப்பி நிற்பார் என்பது வரலாற்று உண்மை. முற்படை, இந்தி வரலாறு, இந்தியால் விளையும் கேடு, இந்திப் போராட்டம், பல்வேறு செய்திகள், முடிபு என்னும் ஆறு பகுதிகளும், முப்பின்னிணைப்புகளும் கொண்ட இச்சுவடி 90 பக்க அளவில் உருபா 1-இல் புன்செய்ப் புளியம்பட்டி மறைமறையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளியா யிற்று. இந்தியின் தோற்றம், வளர்ச்சி, இந்திக் கிளைகள், பிரிவுகள், இந்தி இலக்கியம், இந்திப் பன்மை, இந்தி தமிழ்நாட்டில் புகுந்த வகை, இந்தி பொதுமொழி என்றானவகை, இந்தி பற்றிய ஏமாற்று என்பவை முற்படையை அடுத்து எழுதப்பட்டவை. இந்தியால் தமிழ் கெடும் வகைகளை, கவனக்குறைவும் புலமைக் குறைவும், கலப்பட மிகையும் சொன்மறைவும், சொற்சிதைவு, ஒலிமாற்றம், அயற்சொற்சேர்ப்பு, இந்தி மூலப்புணர்ப்பு, மதிப்புக் குறைவும் பற்றுக் குறைவும், பேச்சுக் குறைவு, எழுத்துமொழி வரலாற்றழிவு, என எண்வகையால் தமிழ் கெடும் வகையை விளக்குகிறார். இந்தியால் தமிழன் கெடும் வகையை, தமிழ மாணவர்க்கு வீண் கடுஞ்சுமை, தமிழர் குடிமைத் தாழ்வு, தமிழர் பண்பாட்டுக் கேடு, தமிழ்ச் சான்றோர்க்கு வாழ் வின்மை, தமிழின மறைவு என ஐவகையால் விளக்குகிறார். இந்திப்போராட்டம் மூன்றனையும் (1937, 1965, 1967) உரைக் கிறார். அரசியல் வாணர் இந்தியால் தமிழுக்குக் கேடில்லை என்பதை, ஓர் உணவுப் பொருள் உடலுக்குக் கேடானது என்று மருத்துவர் கூற, அதனை விற்கும் கடைக் காரன் அல்லது வேலைக் காரன் அவ்வுணவு உடலுக்கு நல்லது என்பது போல்வது என்கிறார். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை; பற்றும் புலமையும் அற்றமற்றவருக்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை என நடை நலம் பயிலக் கூறுகிறார் (43). இந்தியப் பொதுமொழியாதற்கு இந்திக்குத் தகுதியின்மையை இருபது காரணங்கள் காட்டி நிறுவுகிறார் பாவாணர் 51-53 இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் 1951 குடிமதிப் பின் (Census) படி 81 பிரிவு ஆதலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் (60-61) இந்தியா இந்தியர் எல்லார்க்கும் பொதுவாம். இந்தியார்க்கு மட்டுமே உரியதன்று என்னும் பாவாணர், உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி என முடிக்கிறார். பாவாணரால் 1937ல் வெளியிடப்பட்டது. கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல். 35 பாடல்களைக் கொண்டது. விலை அணா 2. ஒவ்வொரு பாடல் முகப்பிலும் இன்ன மெட்டு என்னும் குறிப்புடையது. 4. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை இது தென்மொழி மாதிகையில் 2 : 6 முதல் 2 : 12 வரை தொடர் கட்டுரையாக வெளிப்பட்டுப் பின்னர் 1988இல் பாவாணர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பாவாணர் தம் வரலாற்றின் ஒரு பகுதியாகிய அண்ணாமலை நகர் வாழ்க்கை பற்றி எழுதிய நூல் ஆதலால் அதனொடு அவர் வரலாற்றுக் குறிப்புகளும் இடம் பெறுதல் முறையெனக் கொண்டு நூன் முகப்பில் பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு என்னும் தொகுப்பு ஏழுபக்க அளவில் பதிப்பாளரால் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னும் பின்னுமாய அவர்தம் வரலாற்றை அறிந்துகொள்ள உதவியாவது இது. பாவாணர் நூற்பட்டியும் உண்டு. நூல் முயற்சிப் படலம், அமர்த்தப்படலம் பணி செயற்படலம் (முதற்பகுதி, இரண்டாம் பகுதி) துறைமாற்றுப்படலம், நிலைமை தெரிபடலம், நீக்கப்படலம் என ஆறுபடலங்களையுடையதாய் நூல் 60 பக்க அளவில் அமை கின்றது. விலை உருபா. ஐந்து. jÄÊ‹ c©ik¤ j‹ikia vL¤ Jiu¤j‰F« fh¤j‰F« E©kâ, jÄœ M§»y¥ òyik, MŒî¤ âw‹, eLÃiy, mŠrhik, j‹dyÄ‹ik M»a mWâw« ï‹¿aikahJ nt©L« v‹»wh® ghthz®.(16) தமிழ்வேர்ச்சொல் அகரமுதலி என்னையன்றி வேறெவராலும் தொகுக்கமுடியாது என்னும் துணிவு பாவாணர்க்கு எழுந்ததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு விண்ணப்பம் விடுத்தார். அதற்குத் தடையும் காலக்கடப்புமாகி ஒருவாறு ஆணை எய்தியது. அதனைக் கண்ட பாவாணர் பசி யடங்கினவன் பெற்ற உணவு போல் ஆணையைப் பெற்றுக் கொண்டதாக உரைக்கிறார் (22). ஆணையை அடுத்தே பாவாணர் ஆய்வை மேற்பார்வையிடும் குழுவினர் ஒன்பதின்மர் பெயர்கள் எய்துகின்றன. அதனைக் கண்ட பாவாணர், என்னளவு தமிழாராய்ந்தவரேனும் என் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவரும் அப்பட்டியில் இலர் என்பதைக் கண்டுகொண்ட பாவாணர், தம்மை வெளியேற்ற அமைத்த தள்ளிவெட்டி இது என்பதை உடனே கண்டு கொள்கிறார். கால்டுவெலும் மார்க்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப் பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாய் இருந்திருப்பின் அவர் மனநிலை எங்ஙனம் இருந்திருக்கும் என்று வினாவும் வினாவிலேயே அவர் மனநிலை புலப்படுகின்றது. பாவாணர் தொகுத்தற்குரிய அகரமுதலியின் போலிகையாக ஐம்பது சொற்களுக்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதத் தொடங்கினார். அந்நிலையில் தேராதூனில் நிகழவிருந்த வண்ணனை மொழிநூல் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டார். அப்பயிற்சி பற்றிப் பாவாணர், அஃது எனக்கும் உண்மை யான மொழி நூற்கும் பயன்படுவதன்று. வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழிவழக்கும் ஆக்ரா, தில்லிக் காட்சிகளும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே இவ்வுலகில் எனக்கு என்றும் பயன்தரும். இதுபற்றி என் எதிரிகட்கும் நன்றி கூறும் கடப்பாடுடையேன்11 என்கிறார் (35). பாவாணர் வரைந்து தந்த ஐம்பான் சொற்களையும் ஏற்க மறுத்தார் சட்டர்சி. ஆரியச் சார்பினர் கருங்காக்கையை வெண் காக்கை என்று எத்தனை துணிச்சலோடும், திடாரிக்கத்தோடும் கூறி வருகின்றனர் என்கிறார் பாவாணர் (48). இதன்விளைவு மொழி நூல் துறையினின்று பொதுத்துறைக்கு மாற்றப்பட்டார். வட நாட்டுப் புகலிலி போன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநாள் இருந்து வந்தது என்கிறார் பாவாணர் (49). இந்நிலையில் ஐந்தாண் டாயிற்று! கண்காணகர் மாறினார். வேலைநீக்க ஓலைவந்தது. ஆண்டி எப்பொழுது சாவான் மடம் எப்பொழுது ஒழியும் என்று என் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட் காத்திருந்தவரும் உண்டு என்னும் பாவாணர், 1961-ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23ஆம் பக்கல் அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினேன்; என்னோடு தமிழும் வெளியேறியது என்கிறார் (56). 5. ஒப்பியன் மொழிநூல் தமிழுலகில் பாவாணருக்குச் சிறந்ததோர் இடத்தை முதற்கண் வழங்கியது இவ்வொப்பியன் மொழி நூலேயாம். 1940இல் விலை உருபா 3-க்கு வெளிவந்த நூல் அது. ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம். திராவிடம் முதற்பாகம் (தமிழ்) என்னும் முகப்புடனும், பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேசன் எழுதியது என்னும் குறிப்புடனும் வெளிவந்தது. பாவாணர் திருச்சி ஈபர்மேற்காணியார் பள்ளியில் பணிசெய்த காலம் இஃதாகும். டாக்ற்றர் B. ஸ்ரீநிவாச மல்லையா அவர்கள் எனக்கு உற்றிடத்துதவிய நன்றிக் குறியாகப் படைக்கப்பட்டுள்ளது என்று நூலைப் படைக்கிறார். மொழிநூற் பயிற்சி 1930 முதலே தமக்குப் பற்றாட்டாக இருந்துள்ளமையை முகவுரையில் சுட்டுகிறார். தாம் மொழிநூல் துறையில் ஈடுபட்டது, அதில் ஆழ இறங்கி ஆய்ந்தது, கால்டுவெலார் கூறியதை மெய்ப்பித்தது என்பவற்றை அம்முகவுரையில் தெளிவிக்கிறார். பள்ளியிறுதி, இடைநடுவு, கலை இளைஞர் முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்கு, தொடர்ந்து உரை அச்சிட்டுவரும் சில உரையாசிரியர், தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை எழுந்தனவோ என்று தனித்தமிழர் ஐயுறுமாறு, கலை - கலா; ஆவீறு ஐயான வடசொல்; கற்பு - கற்ப என்னும் வடசொல்; சேறு - ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோகம் என்னும் வடசொல்லின் திரிபு; முனிவன் - மோனம் என்னும் வடசொல்லடியாகப் பிறந்தது; முகம் - வடசொல்: காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு - திரியக் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தமது உரைகளில் காட்டி வருவது பத்தாண்டுகட்கு முன் என் கவனத்தை இழுத்தது. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும் வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவையாவும் தென் சொல்லென்றே பட்டன என்று கூறிய அவர் ஆழமாக ஆய்வில் இறங்கியதை உரைக்கிறார். இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆதி ரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்க ளாகத் தொடர்வது என்று தம் திட்டத்தையும் எழுதுகிறார். மொழிநூல், பண்டைத் தமிழகம், திராவிடம் தெற்கில் சிறத்தல் தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள், பண்டைத் தமிழர் மலையாள நாட்டில் தெற்கு வழியாய்ப் புகுந்தமை, பண்டைத் தமிழ் நூல்களில் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை, தமிழ்த் தோற்றம், உலக முதன்மொழிக் கொள்கை என்பவை 476 பக்கங்களில் விளக்கமாகக் கூறப்படுகின்றன. பாளையங்கோட்டையில் பாவாணர் பயின்றபோது ஆசிரிய ராக இருந்தவரும் யாழ்ப்பாண நல்லூர் வாழ்வினருமாகிய துரைசாமிப்பிள்ளை என்பார் வழங்கிய மதிப்புரை எண்ணத்தக்கது. ஆசிரியர் திருவாளர் ஞா.தேவநேசன் அவர்கள் அன்புடன் உதவிய ஒப்பியன் மொழிநூல் கிடைத்து வாசித்து மகிழ்ந்தேன். இந்நூல் ஏடுதொறும் இன்பம் பயப்பது. தமிழின் தொல்சிறப்பு தமிழ்மக்களின் பண்டை மேனிலை, தமிழ்மொழியின் வரலாறு முதலியவற்றைத் தெள்ளிதின்விளக்குவது. ஆசிரியரின் ஆராய்ச்சி வன்மை சொல்லிறந்து நிற்பது. இப்பேரறிவாளர் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள பேருதவியைத் தமிழ்உரிமை மிக்குடைய தமிழ்மக்கள் யாவரும் பாராட்டும் கடப்பாடுடையர். தமது நலத்தைக் கருதாது உழைக்கும் இத்தகைய கலை வல்லாரைத் தமிழ்நாடு பொன்னே போல் போற்றுதல் வேண்டும். தமிழ்மொழிக்குத் தாழ்வு நேர்ந்து விடுமோ எனக் கலங்கி நின்ற இக் காலத்தினாற் செய்த நன்றியை ஞாலத்தின் மாணப் பெரிதாகத் தமிழ்மக்கள் போற்றுவாராக. தமிழுரிமை மிக்குடையேம் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்மக்கள் சொல்லளவில் நின்றுவிடாது இந்நூலை வாங்கிக் கற்றுப் பயன் பெறுவாராக என்பது அது. தமிழின் தகவை நிலைநாட்டிய தனிப் பேராவணம் ஒப்பியன் மொழி நூல் என்பது எண்ணத்தக்கதாம். 6. கட்டுரை இலக்கண நூல்கள் உயர்தரக் கட்டுரை இலக்கணம் இருபாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 1950ஆம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 1951ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இரண்டும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளே. முதற்பாகம் பக்கம் 284. இரண்டாம் பாகம் பக்கம் 251 ஆங்கில உரைநடையைப் பின்பற்றியே தமிழ் உரைநடை வளர்க்கப்பட்டு வருவதாலும், ரென்னும் மார்ட்டினும் இணைந் தியற்றிய ஆங்கில இலக்கண நூலைத் தழுவியே சென்னை அரசிய லார் தமிழ்க் கட்டுரை இலக்கணப்பாடத்திட்டம் வகுத்திருத்த லானும் அந்நூலைத் தழுவியே இந் நூலும் வரையப்பட்டுளது.11 என்று முகவுரையில் பாவாணர் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்நூல் தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல் களையுடையது. விரிவுபாடு கருதி இருபாகமாக வெளியிடப்பட் டுள்ளது. முதற்பாகம் முதல் இயலையும் இரண்டாம் பாகம் ஏனை இயல்களையும் கொண்டவை என்று நூலமைதி சுட்டுகிறார். சொற்றொடர், தொடர்மொழி (Phrase) கிளவியம் (Clause), வாக்கியம் (Sentence) என பொருள் முடிவுபற்றி மூவகைப்படும் என்கிறார். இதனால் இலக்கணம் கற்பிப்பதோடு மொழியாக்கம் செய்வதையும் கற்பிக்கிறார் பாவாணர் என்பது விளங்கும். தமிழ் இலக்கணம் கற்கும்போதே ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ளச் செய்வதோடு மொழிபெயர்ப்புக்கு வேண்டும் திறத்தை உண்டாக்க வும், கலைச் சொல் உருவாக்கவும் வழிகாட்டுகிறார். அவர்தம் எல்லா நூல்களிலும் இவ்வாய்ப்புகள் உண்டெனினும் உயர்தரக் கட்டுரை இலக்கணம், கட்டுரை வரைவியல், கட்டுரைக் கசடறை ஆகிய நூல்களில் மிகுதியாம். இலக்கணத்தை விளக்குவதற்குத் தருவதே எடுத்துக்காட்டு. ஆனால் பாவாணர் காட்டும் எடுத்துக் காட்டுகள் வெவ்வேறு பயன்களை ஆக்குவன. நான்காம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் ஏழாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் வரும் எழுவாய்களின் பயனிலை தொகும் என்பதை எடுத்துக் காட்டி விளக்குகிறார். வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி கொடைக்குக் குமணன், நடைக்கு நக்கீரன் (சிறந்தவர்) வில், சொல்; கொடை நடை- எதுகை நயம். தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்ப் பெருமக்கள் சிறப்பு என்பனவும் புலப்படச் செய்கிறார். ஒரு தன்மைப்பட்ட பலபொருள்களைச் சேர்த்துக் கூறும் பழமொழிகளில் பயனிலை தொகும் என்பதற்கு, மாங்காயிற் பெரியதும் தேங்காயிற் சிறியதும் (நல்லவை) பிரிட்டிசு நீதியும் பிரஞ்சு வீதியும் (நேர்மையானவை) என்னும் இவ்வெடுத்துக் காட்டுகளால், இலக்கணத்தொடு பொது அறிவும் உலகியலறிவும் வளர வழி செய்கிறார். எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களைக் குறிப்பிட 25 வாக்கியங்களை எடுத்துக் காட்டுகிறார். அவற்றுள், திராவிட மொழிகள் மொத்தம் பதின்மூன்று. தனித் தமிழை வளர்த்த பெருமை பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் தெய்வத் திரு மறைமலையடிகட்குரியது. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எண்வகை வனப்புள் இயைபு வகைப்பட்டவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும். பழந்தமிழ்நாட்டின் பெரும் பகுதியாகிய குமரி நாடு கடலுள் முழுகிக் கிடக்கின்றது. தமிழ் இந்திய மொழிகளுக்குள் மிக முந்தியது. இத்தகையவை மாணவர் அறிவை விரிவு செய்வதுடன், ஆய்வாளருக்குப் பாவாணர் 1950 இல் கொண்டிருந்த கொள்கையும் 1981 வரை அவை வளர்ந்தோங்கிய சீர்மையும் அறிந்திட உதவும். வடமொழி தேவமொழி என்னும் கொள்கையினாலும் பிறப்பொடு தொடர்பு டைய குலப்பிரிவினாலும் தமிழுக்கு நேர்ந்த தீங்கு கொஞ்சநஞ்சமன்று. உலகிலேயே தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு ஒன்றுதான் (பக்.55) -பாவாணர் கொண்ட தெளிவும், உணர்வும் இளையர் நெஞ்சில் பதியும் அல்லவோ! பின்னதன் விளக்கத்தைப் பின்னுமோர் இடத்தில் எடுத்துக் காட்டாகக் கூறுகிறார். (பக்.65) ஆற்றுநீர் நடைக்கு எடுத்துக்காட் டாவது அது. பிற நாடுகளில் எல்லாம் அரசியற் கட்சி பல இருப்பினும் நாட்டுமொழி அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப்பாழாய்ப் போன தமிழ்நாட்டிலோ, ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படுகிறது. அதிலும் கேடாக, நாட்டு மொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி? தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டோ? என்பது அது. தமிழ் நாகரிகம் எகிப்திய நாகரிகத்திற்கும் முந்திய தென்று நான் உண்மையைச் சொல்லும் போது தமிழரும் எள்ளி நகையாடுகின்றனர் என்பது பட்ட புண்ணின் படுவெளிப்பாடு இல்லையா? (44). காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையார் பாட்டுப் பாடினார். நெல்லை அழகநம்பியார் மதங்கம் (மிருதங்கம்) இசைத்தார். புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார் கஞ்சுரா அடித்தார். மதுரை வேணுச் செட்டியார் டோலக்குத் தட்டினார். தில்லைக் கோவிந்த சாமிப்பிள்ளையார் கின்னரி (Fiddle) எழுவினார். மன்னார்குடிப் பக்கிரிசாமிப் பிள்ளையார் குணக்குரல் ஒலித்தார். இன்னிசையரங்கு நள்ளிரவு வரை நடந்தது(201) இது பாவாணரின் இசைக் காதல் வெளியீடுதானே! இரண்டாம் பகுதி மரபியல் கட்டுரைஇயல்பற்றியது. மரபியலை வழக்கியல் வகை, பெயர்ச்சொல், வினைச்சொல், ஒருபொருட்பல சொற்கள், இணைமொழிகள், மரபுத்தொடர் மொழிகள் என ஆறாகப் பகுத்து விளக்குகிறார். வழக்கு என்பதை இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்பவற் றுடன் திசை வழக்கு, இழிவழக்கு, அயல் வழக்கு என விரிக்கிறார். பெயர்ச்சொற் பகுதியில் பண்புப் பெயர்கள் கருமை,செம்மை, நீலம், பசுமை, பொன்மை, வெண்மை என்பவற்றின் அடியாக 152 சொற்களைக் காட்டுகிறார். மரபுப் பெயர்கள் என்னும் பகுதியில் ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர், இளமைப்பெயர் என்னும் முப்பகுதியொடு சினைப்பெயர் ஆடையணிப்பெயர், மேய்ப்பன் பெயர் என்பவற்றையும் இணைக்கிறார். இவை தொல்காப்பியம் கற்றார்க்கும் அதிற்காணாப் பெருவரவாகத் திகழ்கிறது. மாணவர்க் காகச் செய்யும் நூல் என்பது கருதாமல் கூறவேண்டுவன வெல்லாம் கூறியாக வேண்டும் என்னும் வேட்கையில் கூறியுள்ளதை எவரும் உணரமுடியும். சினைப்பெயர் என்பதில் இலைப்பெயர், பிஞ்சுப் பெயர், வித்துப் பெயர், உள்ளீட்டுப் பெயர், குலைப்பெயர் எனப் பகுத்து விரிப்பது பாவாணர்க்கே உரியதாம். மரபியலில் ஒரு பொருட் பல சொற்களைப் பற்றிக் கூறும் போது, அவை பருப்பொருளில் ஒத்தனவேயன்றி நுண்பொருளில் ஒத்தன அல்ல என்கிறார். கொசு என்பது, கட்டுக்கடை நீரிலும் இனிப்புப் பொருள்களி லும் மொய்த்துக் கொண்டிருந்து மக்களைக் கடிக்காத ஒரு சிற்றீ வகை. ஒலுங்கு என்பது, சாக்கடையிலும் சதுப்பு நிலங்களிலும் இருப்பதாய், கொசுவினும் நீண்டு பருத்ததாய் மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு சிற்றீ வகை என வேறுபாடு காட்டுகிறார். வௌவால் துரிஞ்சில் என்பவை வேறுபடும் வகையைக் காட்டுகிறார். வாவல் (வௌவால்) என்பது மரங்களில் தொங்கிக் கொண் டிருந்து கனிகளை யுண்டுவாழும் பெருவௌவால். துரிஞ்சில் என்பது, சந்து பொந்துகளிற் புகுந்திருந்து, இரவில் ஊருக்குள் பறந்து திரிந்து சிறுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும் சிறு வௌவால் என்கிறார். சொல்லுதல் குறிக்கும் சொற்கள் 23 காட்டி அவற்றின் நுண்ணிய வேறுபாடும் சுட்டுகிறார்.இணைமொழிகள் அக்கம் பக்கம் எனத் தொடங்கி வேலைவெட்டி ஈறாகத் தொடரமைப்பில் 403 சொற்றொடர்களை எடுத்துக் காட்டுகிறார். அவர்தம் உழைப்பின் அருமையும் நினைவின் பெருமையும் வெளிப்படுத்து வன இன்னன. இவ்வாறே மரபுத் தொடர் மொழிகளையும் அகரப்படுத்து கிறார். எதனையும் அகரமுதலி முறையில் நோக்கி வரைதல் பாவாணர் ஆழங்கால் பட்டுப்போன திறமாகும். கட்டுரை இயல் குற்றங்களும் குணங்களும் முதலாக, செய்யுட் கதையை உரைநடையில் வரைதல் ஈறாகப் பதினொரு பகுப்புகளை யுடையது. கடிதவரைவு உறவாடற் கடிதங்கள், தொழின் முறைக் கடிதங்கள் என இருபாற்பட்டு விரிவாக எழுதப்படுகின்றது. கதைவரைவு, தன்வரலாறு, உரையாடல் என்பனவும் இடம் பெறுகின்றன. கட்டுரை வரைவு எண்பது பக்க அளவு சிறக்கின்றது. தமிழன் பிறந்தகம் ஆய்வுக் கட்டுரைத் தலைப்பில் இடம் பெறுகின்றது. பாவாணர் நகைச்சுவை நால்வர் செவிடர் கதையால் விளக்கமுறு கிறது. பாவாணர் சால்பும் நன்றியுணர்வும் சாமிநாதையர் தமிழ்த் தொண்டு என்னும் 41 அடி அகவலால் புலப்படும். இசைப்பற்றுமை கருணாமிருத சாகரம் கண்ட ஆபிரகாம் பண்டிதர் வரலாற்றால் விளங்கும். பாவாணர் எடுத்துக்காட்டும் புலமையர் பெருமக்கள் நூற்று வர்க்கு மேற்பட்டவர். தமிழகம் மறந்த பலரை அவர் நினைவு கூர்கிறார். அவர் கையாளும் பழமொழிகள் பன்னூற்றுக் கணக்கின. மாணவர் நூலுக்கு இவ்வளவு உழைப்பா எனக் கற்பார் கருதாதிரார். 7. கிறித்தவக் கீர்த்தனம் கிறித்தவக் கீர்த்தனம் 1932 இல் வெளியிடப்பட்டுள்ளது. பாவாணர் அதன் ஒரு படியை முனைவர் வீ.ஞானசிகாமணி அவர்களிடம், பின்னாள் சந்திப்பு ஒன்றில் வழங்கியுள்ளார். சில பாடல்களைப் பாவாணர் பாடிக் காட்டியுள்ளார். கிறித்து பெருமா னிடத்தில் பாவாணர்க்கு இருந்த பற்றுமையையும் திருப்பணி நாட்டத்தையும் அதுகால் தெரிவித்துள்ளார். அன்றியும் கிறித்த வர்கள் தமிழின் தூய்மை போற்றுதல் பற்றியும், விவிலியத்தைத் தூய தமிழில் மொழியாக்கம் செய்தற்கு மேற்கொண்ட முயற்சிக்கு வரவேற்பு இல்லாமை பற்றியும் உரைத்திருக்கிறார். பின்னர் முற்றாகத் தமிழாய்விலேயே பாவாணர் ஈடுபட்டதையும் உரைத்திருக்கிறார். (1969) கிறித்துவக் கீர்த்தனத்தில் ஞானசிகாமணியார் கொண்ட ஆர்வம் கண்டு அதனை வெளியிட்டுப் பயன்படுத்திக் கொள்ள இசைவும் தந்திருக்கிறார். எனினும் பாவாணர் வாழ்ந்த நாளில் மீள்பதிப்பு வந்திலது. அவர் இயற்கை எய்தி முத்திங்கள் கழிந்தபின் மீள்பதிப்பு எய்தியது (ஏப்பிரல் 1981) கடவுள் வாழ்த்து முதல் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் ஈறாக 28 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பக்திப் பாடல்கள் உள்ளன. இன்றைய திருச் சபை பெரிதும் தமிழிசையை மறந்திருக்கும் நிலையில் இப் பாடல்களை விரும்பிப் போற்றுதல் வேண்டும் என்கிறார் பதிப் பாசிரியர். முகவுரை வரைந்த பேரா.பொன்னு ஆ.சத்திய சாட்சி இந்த நூலினை மேற்போக்காகப் பார்த்தால்கூட பாவாணரின் இசை யறிவும், அது பரந்து பரவிக் கொண்டிருந்த எல்லைகளின் விரிவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன என்கிறார். இந்நூலில் உள்ள எல்லாப்பாடல்களும் இராகம், தாளம், மெட்டு ஆகியவற்றைக் கொண்டுள. கருநாடக இசை தியாகராச கீர்த்தனை, தேவார திருவாசகப் பண், நாட்டுப்புற இசை நலம் ஆகிய எல்லாமும் அமைந்த தொகை இதுவாம். மரபுப் பாவாக அறுசீர்க்கழிநெடிலடி விருத்தம் எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம் கொச்சகக்கலி இன்னவற்றை இசைத் துள்ளார். இளங்கோவடிகள் இசைப்பா, அருணகிரியார் வண்ணப்பா, வள்ளலார் இசைப்பா, அண்ணாமலையார் காவடிச் சிந்துப்பா என்பனவற்றையும் இனிமை மிக யாத்துள்ளார். பழநாள் மரபில் பாட்டொடு உரையிடை யிட்டுவரத் தகடூர் யாத்திரை பெருந்தேவனார் பாரதம் சிலப்பதிகாரம் என்பவை அமைந்தாற் போல, இந் நூலிடை உரைநடை அமைத்துள்ளார். அவ்வுரைநடையில் கிறித்துவின் பாடுகள் தனிச் சிறப்பாக எடுத்தோதப் படுகின்றன. பாடில்லாமல் பயனில்லை என்னும் பொதுமக்கள் மொழியைச் சிறப்பு மொழிச் சீர்த்தியாக்கிச் சிலுவைப்பாடு இல்லாமல் பிறப்பு இறப்பு உயிர்த்தெழுதல் என்பவற்றால் பயனில்லை என்பதை நயமாகத் தருக்கமுறையுடன் விளக்குகிறார். ஒரு சிந்தனையாளி எதனைச் சிந்திப்பினும் பிறரினும் தனியோங்கிய நுண்மைகளைக் காண்பார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாகின்றது இது. அன்பு, ஊழியம், தியாகம் என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே திரண்டு கிடக்கின்றன என்று கூறும் தேவநேயர் கிறித்து மார்க்க சாரம் இதுவே என்கிறார். ஒவ்வொரு கிறித்தவனும் கிறித்தவர்களை அல்ல, கிறித்து வையே பின்பற்ற வேண்டும். இதுவே மீட்பின் வழி என்று ஒப்பிலாச் சிலுவைப் பாட்டை எடுத்துரைக்கும்போது அவர்தம் மெய்ம்ம மதிப்பீடு புலப்படும். பழந்தமிழ் ஆற்றுப்படை போல், கிறித்துவின் பாடுகளைப் பற்றி வேதநாயக சாத்திரியாரும், இரத்தினப் பரதேசியாரும், பண்டிதர் சத்திய வாசகம் பிள்ளை அவர்களும் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் அருமையானவை. அவற்றையும் படிப்பின் ஆத்துமாவிற்கு ஆனந்தமுண்டாகும் என்று கூறுவது பயனுடை யார் பண்பு பாராட்டலாகும். அன்புறு பதிகம் என்பதைத் திருநேரிசைப் பண்ணில் இயற்றியுள்ளார் பாவாணர். அப்பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தத்தால் ஆயது. அதன் ஈற்றடிகள் எல்லாமும் அன்பெனக் கில்லாவிட்டால் ஆவதொன்றில்லை காணே என்னும் முடிநிலை கொள்ளவே அமைத்துள்ளார். அதனால், அன்பு மென்னடை எதுகையில் இயலுமாறே பதிகம் இயற்றியுள்ளார் என்பது வெளிப்பட்டுப் பொருட்சிறப்பும் ஒருங்கே விளக்கமுறல் தெளிவாம். நண்பெனும் சிறப்புக் கொண்ட நவையறும் ஆர்வ மாந்தர் புன்கணீர் பூசல் செய்யப் புதவுடை வெள்ளமாகி என்புயிர் பொருள்க ளெல்லாம் ஏனையோர்க்குரிமை செய்யும் அன்பெனக் கில்லாவிட்டால் ஆவதொன்றில்லை காணே என்னும் பாடலில் அன்புடைமை வள்ளுவம் ததும்பி வழிகின்றமை அன்பே இறைமை யாகக் காணும் களிவுறு காட்சியாம். அன்பீனும் ஆர்வ முடைமை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்னும் மூன்று குறள்மணிகளும் செறிந்தது இப்பாட்டு. அன்றியும் புன்கணீர் பூசல் என்பதைப் புதவுடை வெள்ளத் திற்கு - மதகினை உடைத்துத் தாவிச் செல்லும் வெள்ளத்திற்கு- உவமை காட்டுதல் அருமைமிக்கது. புதவு-புதவக்கதவம் எனப்படும். மடைநீரைக் காத்து நிறுத்தவும் வெளிப்படுத்தவும் அமைந்தது புதவம் என்பதாம். மடைதிறந்த வெள்ளம் போல என்பது பழமொழி. மன்னுயிர் என்பதை நிலைபேறாம் இறைமைக்கும், குமரனாக வந்த கிறித்துவுக்கும் இரட்டுறலாக்கி இறைமை எய்துதலே மாந்தப் பிறவி நோக்கு என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டுதல் பாவாணர் நுண்ணோக்கை வெளிப்படுத்தும் (2). அவையடக்கம் தொன்று தொட்டது. பாவாணர் காட்டுறப் பிழைகள் தோன்றாக் கல்விநூல் உலகத்துண்டோ? என்னும் முறையால் பிழை இருத்தல் எந்நூற்கும் இயற்கை; இந்நூற்கும் தகும் அது எனச் சொல்லுதல் புதுவரவாகும். உலகெலாம் ஆளும் ஒருவனே எனினும் அவன் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அவனுக்கு ஆகும் ஆதாயம் யாது என்பது இழக்கக் கூடாதது இன்னது என்னும் பேரறை கூவலாகும். நான் சுத்தம் உயிர் மெய் என்பதால் நானே வழியும் சீவனும் சத்தியமாயும் இருக்கிறேன் என்பதைக் கூறுவது நூற்பா அமைவினதாம். நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நசரேய நமவென்னா நாவென்ன நாவே என்பவை ஐந்தும் சிலம்பின் நடைமட்டுமோ இம்மண்ணின் மணம் கமழும் சீர்மையே அல்லவோ! குமரவணக்கம் என்னும் தலைப்பிட்ட பாடல் கானடா-ஆதி என்பது. இப்பாட் டொன்றும் என் உடனாசிரியர் ஏ.வி.சீநிவா சையர் அவர்கள் தெரிவித்தது என்னும் குறிப்பைப் பாவாணர் வரைந்திருப்பது நூல்நூலாகப் படியெடுத்துக் கொண்டு தாமே படைத்தார்போலக் காட்டும். பொய்ம்முகங்களைக் கீறிக் கிழித்த தகைமையதாம். மீள்பதிப்பு இல்லையேல் முதல்பதிப்பு வாய்த்திராது. அதனை மீட்டளித்த வேதாகம மாணவர் பதிப்பகம் பாராட்டுக்குரியது. 8. சிறுவர் பாடல் திரட்டு Songs of Children என ஆங்கிலத் தலைப்பிலும், சிறுவர் பாடல் திரட்டு எனத் தமிழிலும் தலைப்பிட்டு வெளிவந்த சுவடி இது. 1924 இல் வெளிவந்துளது. ஞா. தேவநேசப் பாவாணன் என்று ஆசிரியர் பெயர் உள்ளது. சிறுவர் உள்ளங்களைப் பாட்டு, விளையாட்டு, கதை, கைவேலை என்பவற்றின் வழியாகக் கவர்ந்து கற்பித்தல் பயன் செய்யும் என முகவுரையில் கூறுகிறார். அந்நோக்கில் செய்யப் பட்டது இச் சுவடி என்பதையும் சுட்டுகிறார். ஒன்றாம் பாடம் என்பது முதலாக இருபத்தொன்பதாம் பாடம் ஈறாகக் குறிப்பிட்டுப் பாடல்களை அமைக்கிறார். ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு பாடலாக இசை மெட்டுடன் உள்ளது. கடவுள் வணக்கத்தில், அன்னை தந்தைநீ அண்ணன் தம்பிநீ முன்னும் பின்னும்நீ மூவா மருந்து நீ என்பது ஒரு கண்ணி. கலகம் நீங்கியோர் கட்டாய் இருக்கவே உலகம் யாவையும் ஒருமைப் படுத்துவாய் என வேண்டுகிறார். வாசுதேவனே வந்தாளும் என்ற மெட்டு கப்பலைப் பார்! கப்பலைப்பார்! கடலுள்ளே கப்பலைப்பார்! தெப்பத்தேர் ஓட்டம் போல் தெரிகின்ற கப்பலைப்பார்1 இக் கப்பல் பாட்டு, முத்திநெறி அறியாத என்ற மெட்டு. அலைமேலே தொட்டில்போல் ஆடியாடிப் போகிறதே உலைமேலே புகைபோலே உயரத்தான் புகைகிறதே என்பது அதன் மற்றொரு கண்ணி. வண்ணத்துப்பூச்சியைப் பற்ற, அதன் சிறகு ஒடிய, ஐயையோ நான் என் செய்வேன் என வருந்தி பதைக்குதே என் உள்ளமும் பாவம் பூச்சிகளை இனி வதைக்க மாட்டேன் அன்னையும் வந்தால் சொல்வேன் உண்மையே எனத் திருந்துவதாக முடிக்கிறார். இது யாரம்மா வண்டியிலே என்ற மெட்டு. கடைசிப் பாடம் வாசிக்கும் முறை என்பது. கரிவதனா ஈசன் என்ற மெட்டு. எழுந்து நின்றதும் நூலை இடக்கையில் பிடிப்பாய் அழுந்த ஒலித்துப் பொருள் அறியவே படிப்பாய். நேராக நின்று கைகால் நெகிழ விடாதே மார்பு முன் நூலைப்பிடி முகம்ம றைக்காதே என்பவை முதலிரு கண்ணிகள் பாட்டி ஊட்டும் பாற்சோற்றுப் பதம் இப்பாடல்கள்! 9. சுட்டு விளக்கம் சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து என்பது இதன் பெயர். ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம் 2ஆம் பாகம் முற்பகுதி என்னும் தலைப்புக் குறிப்பு இந்நூற்கு உண்டு. 1943இல் வெளிவந்த இந்நூலின் முதல் நான்கு படிவங்கள் திருச்சி இம்பீரியல் அச்சகத்திலும், எஞ்சியவை செங்குந்தமித்திரன் அச்சகத்திலும் அச்சிடப்பட்டுள்ளன என்பது அறிய வருகின்றது (104) சுட்டு விளக்கம் அச்சிடும் காலத்தில் பாவாணர் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராக இருந்துள்ளமையும் அப்பொழுதே பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளராக இருந்தார் என்பதும் பெயர்க் குறிப்புகளால் புலப்படுகின்றன. இவ்வாசிரியர் எழுதிய நூல்கள் தி.தெ.சை.சி. கழகத்தில் கிடைக்குமென அறிவித்துள்ளார். முன்னுரை, சுட்டுத் தோற்றம், சுட்டுப் பெயர்ச் சொற்கள், மூவிடப் பெயர்கள், வினாப்பெயர் என்னும் ஐம்பகுப்பில் நூல் விளங்கு கின்றது. பக்கங்கள் 104. பின்னிணைப்பு இப்பக்கங்களுள் 6 பக்கம் உள்ளது. விலை. %.1¼ என்றுளது. மொழிநூல் சொல்லியல் நூல் என்னும் இரண்டன் வேறுபாட்டை முகவுரையில் முன்வைக்கிறார். மொழிகள் தோன்றிய வகை, அவை வளர்ந்த முறை, அவற்றுள் ஒன்றோடொன்றுக்குள்ள தொடர்பு முதலியவற்றை விளக்கும் நூல் மொழி நூலாம் (Philology). ஒரே மொழியிலுள்ள சொற்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பிறப்பு, பொருளுணர்த்துமுறை, திரிபு முதலியவற்றை ஆளும் நெறிமுறைகளை விளக்கும் நூல் சொல்லியல் நூலாம். (Etymology)Mfnt சொல்லியல் நூல், மொழி நூலின் உட்கூறாம். இவற்றுள் முன்னது பின்னதனுள் அடங்கும். பின்னது முன்னதனுள் அடங்காது என்பது அது. இயல்பான மொழிகளும் சொற்களும் ஒருநெறிப்பட்டே தோன்றி இயங்கு கின்றமையின், முறைப்படி ஆராயின் அவற்றின் நெறிமுறைகளையெல்லாம் கண்டு கொள்ளலாம் என்பது இச்சுட்டு விளக்கத்தை நடுநிலையாய் நுணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம் என நூலின் பயன்பாட்டை உரைக்கிறார். தமிழ் தோன்றிய வகை, தமிழ் தனி இயற்கை மொழியாதல் தமிழில் சொல் தோன்றிய வகைகள், தமிழ்ச் சொற்களின் காரணக் குறித்தன்மை, தமிழில் நெடில் முன்னர்த் தோன்றியமை என்பவற்றை விரித்து முன்னுரையாக வரையும் பாவாணர் சுட்டுத் தோற்றத்தில் ஐவகைச் சுட்டுகளை முன் வைக்கிறார். சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையில் அகலித்தபோது ஆ என்னும் ஒலியும், அண்மைச் சுட்டாக வாயைக் கீழ் நோக்கி விரித்தபோது ஈ என்னும் ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன்னோக்கிக் குவித்தபோது ஊ என்னும் ஒலியும் உயரச் சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது ஓ என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச் சைகை ஒலிகள். பின்னர் வயிறார உண்டபின் அடிவயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட்டதினின்று ஏ என்னும் ஒலி எழுகைச் சுட்டாகக் கொள்ளப்பட்டது எனத் தெளிவிக்கிறார். பாவாணர் விளக்கும் சுட்டு மேலும் விரிவுற்றே 1953 இல் முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கமாகியது எனலாம். கத்தொலிகளும் ஒலியடிச்சொற்களும், உம் என்னும் சொல், குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் என்பவை பின் இணைப்பாக விரிக்கப்படுகின்றன. 10. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு இப்பெயரிய சுவடி 1961 இல் வெளிவந்தது. பக்கங்கள் 56. விலை 75 புதுச்சல்லி. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தூய தமிழ்ப் பணிக்கு இடமில்லாமையை உரைக்கும் பாவாணர், புக்கில் அமைந்தின்று கொல்லோ சிலரிடைத் துச்சில் இருந்த தமிழ்க்கு என மாற்றுக் குறள் ஒன்று யாத்து முகவுரையை நிறைவு செய்கிறார். சொல்வழு, பொருள் வழு, வேர்வழு, இலக்கணவழு, மரபு வழு, அகராதி அமைப்பு வழு, அகராதி ஆசிரியர் குறை, சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக்குறை என எண்வகைப் பகுப்பொடு ஆய்வுப் பொருளாக்கி அறுதியிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் நோக்கங்கள் சிறந்தவை என்பதை முகப்பிலேயே பாராட்டுகிறார். அந்நோக் கங்கள் மேனாட்டறிஞர்களால் வகுக்கப்பட்டமையே காரணம் என்கிறார். 1. இவ்வகராதி, சமயம் மருத்துவம் கணியம் முதலிய பல்துறை இலக்கியங்களில் வரும் கலையியற் சொற்கட்கும், அருகிய வழக்குச் சொற்கட்கும் கவனமாகப் பொருள்விளக்கியும் நெருடான சொற்களை விரிவாக ஆராய்ந்தும், மரபு நெறிப் பட்ட தமிழ்ப் புலவரின் கருத்திற்கு ஒத்ததாய் இருத்தல் வேண்டும் 2. இது தமிழுக்கும் பிற மொழிகட்கும் இடைப்பட்ட மொழியியல் உறவை எடுத்துக் காட்டி மேலையறிஞரின் சிறந்த கருத்தை நிறைவேற்றுவதாய் இருத்தல் வேண்டும். 3. இது, உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் வழங்கும் சொற்களை ஆங்கிலச் சொற்களையும் மரபையும் கொண்டு தெளிவாக விளக்கி, தமிழ்மக்களுட் பெரும்பாலார்க்கும் ஆங்கிலம் அறிந்தோர்க்கும் பயன்படுமாறு, துல்லியமும் நிறைவும் இக் காலத்திற்கு ஏற்றதுமான அகராதியாய் இருத்தல் வேண்டும் என்பன. சொல்வழுக்கள் என்னும் பகுதியில் சொல்லின்மை என்பதைப் பெருங்குறையாகக் கூறி, 1. தனிச்சொல், கூட்டுச் சொல், மரபுவினைச் சொல், இணைமொழி ஆயவைஇன்மை, 2. சொல்லின் மறுவடிவின்மை , 3. சொல்லின் இலக்கண வடிவின்மை, 4 கூட்டுச் சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை 5. மிகைபடு சொற்கள், 6. விளக்க மேற்கோளில் வரும் சொல்லைக் குறியாமை, 7. சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையில் சேர்த்தல் 8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல் 9. குறிக்கவேண்டாத சொல்லைக் குறித்தல், 10. தமிழுக்கு வேண்டாத வேற்றுச் சொல்லைக் குறித்தல், 11. இனச்சொல் இன்மை, 12. திசைச் சொல் இன்மை, 13. எழுத்துக் கூட்டல் வழு, 14. ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு முறைத்தவறு எனப் பதினான்கு வகைக் குறைகளையும் நூற்றுக்கணக்கான சொற்களைச் சுட்டிக் காட்டி நிறுவுகிறார். பொருள்வழுக்கள் என இயல்விளக்கம் அல்லது சொற் பொருள் தமிழிற் கூறப்பெறாமை, குன்றக் கூறல், மிகைபடக் கூறல், வழுப்படக் கூறல், சிலபொருள் கூறப்படாமை , பொருள் வரிசை இன்மை, வடமொழியிற் பொருள் கூறல், ஒரு பொருட் பல சொற்களின் வேறுபாடு காட்டாமை, எதிர்ச்சொற்களின் வேறுபாடு காட்டாமை, எடுத்துக் காட்டின்மை, கூறியது கூறல், எனப் பதினொருவகை காட்டுகிறார். வேர் வழுக்கள் என்னும் பகுதியில் தென்சொல்லை வடசொல் லாகக் காட்டல், சொல்வேர் காட்டாமை, வழுவேர் காட்டல், ஐயுற்றுக் கூறல், தலைமாற்றிக் கூறல், கூட்டுச் சொல்லை வழுப்படப் பிரித்தல், ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல், பலசொல்லை ஒரு சொல்லாகக் காட்டல், தொழிற் பெயரின் திரிபே முதனிலை எனல், என்பவற்றை விளக்குகிறார். இவ்வாறு பிற வழுக்களையும் குறிப்பிடும் பாவாணர், சென்னைப் பல்கலைக்கழகம் அது வெளியிட்ட அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப்பல்கலைக் கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும் என முடிக்கிறார். தமிழுக்கெனத் தனிப்பல்கலைக் கழகம் தோன்றினால் அது நிறைவேறும் என்னும் அவர் நம்பிக்கை 1961இல் ஏற்பட்டுளது. பல்கலைக் கழகம் தோன்றினாலும் நிறைவேற வழி..? 11. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் சேலம் கல்லூரியில் பாவாணர் பணிசெய்த நாளில் வெளிப் பட்ட நூல் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்பது. ஆண்டு 1949. என்னைப் பல்லாற்றானும் ஊக்கி இந்நூல் விரைந்து இயல்வதற்குக் காரணமாயிருந்த சேலம் நகராண்மைக் கல்லூரித் தலைவர் திரு. அ. இராமசாமிக் கவுண்டர், எம்.ஏ.. எல்.டி,. அவர்கட்கு யான் என்றுங் கடப்பாடுடையன் என முகவுரையில் வரைந்துள்ளார். தம் பெயரை ஞா.தே. எனச் சுருக்கியுள்ளார். கழகத்தின் 484ஆம் வெளியீடாக வந்தது இந்நூல். ஒருபக்க அளவில் முகவுரை இருப்பினும் செறிவுமிக்கது. ஒரு மொழிக்கு உட்பட்ட சொற்களை ஆராய்வது சொல் ஆராய்ச்சி. பலமொழி களை ஒப்பு நோக்கி ஆராய்வது மொழியாராய்ச்சி என வரம்பிட்டுச் சுட்டுகிறார். தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் ஓரளவு தமிழ்நாட்டில் இருந்ததேனும் விரிவான முறையிலும் நெறிப்பட்ட வகையிலும் சொன்னூலும் மொழி நூலும் நாம்பெற்றது மேலையரிடமிருந்தே என்கிறார். சொன்னூலும் அதை அடிப்படையாகக் கொண்ட மொழி நூலும் மாந்தநூல், உளநூல், வரலாற்று நூல் ஆகிய மூன்றற்கும் உறுதுணையாதலின் பண்பட்ட மக்கள் யாவரும் அவற்றைக் கற்றல் வேண்டும் என்று கடமை சுட்டுகிறார். எந்நோக்கத்தோடு இந்நூல் வெளிவருகிறது என்பதைத் தெள்ளிதின் விளக்குகிறார் பாவாணர். எல்லா மொழிகளும் இயற்கையாய் எழுந்தவை என்றும், கடவுளைப் போல் தொடக்கமற்றவை என்றும், ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவை என்றும், சிலமொழிகள் தேவமொழி என்றும், தேவமொழியில் வழிபாட்டை நடத்துவது கடவுட்கு உகந்தது என்றும், தமிழ் வடமொழியினின்று வந்தது அல்லது அதனால் வளம் பெற்றது என்றும் பல பேதைமைக் கருத்துக்கள் பல தமிழர் உள்ளத்தில் வேரூன்றியிருப்பதால் அவற்றைப் பெயர்த்து அவர்களை மொழிநூற் கல்விக்குப் பண்படுத்தும் வண்ணம் இச்சொல்லாராய்ச்சி நூல் வெளிவருகின்றது என்கிறார். இந்நூலின் அமைதியை, ஆங்கிலத்தில் திரெஞ்சுக் கண்காணியார் (Trench) எழுதியுள்ள சொற்படிப்பு (On the Study of words) என்னும் கட்டுரைத் தொகுதியின் போக்கைத் தழுவி எழுதப் பெற்றவை என்கிறார். சுருங்கிய வகையால் நூல், நூற்பொருள், அதன் தேவை, நூலாக்க வகை, ஆக்க உதவி என்பவற்றைச் செய்நேர்த்திச் செம்மணி மாலையெனக் கொண்டது சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளின் முகவுரை. முகவுரை இவ்வகைத் தெனின் நூல் தகவுரையும் இவ்வகைத் தேயாம் என்பதை அணியியற் சொற்கள் என்பது தொடங்கி சொற் குடும்பமும் குலமும் என்னும் நிறைவுக் கட்டுரை ஈறாக அமைந்த நூற்றிருபது பக்கங்களின் ஒவ்வொரு பக்கமும் இத்தகைத்தேயாம். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல்காப்பியம். அதன் துலக்கமும் விளக்கமும் அறிய மலைமேல் விளக்காக வாய்த்தவை பாவாணர் நூல்கள். அவற்றுள் ஒன்றே ஒன்றைக் கற்று உண்மை உணர வேண்டும் என்னின் சொல் லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் இச்சுவடி சாலும். அத்தகு எளிமையும் விளக்கமும் வெளிப்பாடும் அமைந்த நூல் அது. செய்யுட்கு அழகும் பொருள் விளக்கமாம் அணி உரை நடைக்கும் உரியதே என்றும், ஒரு தொடர்க்குரிய அணி நயம் ஒரு சொல்லளவிலும் ஆவதே என்றும் அணியியற் சொற்களில் நாட்டுகிறார். வித்தும் வேரும் அடியும் கிளையும் குச்சும் கொழுந்துமாகத் தொடர்ந்தோங்கும் மரம்போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத்தொடர்ச்சி மரபு என்றும், தொடர்ந்து வரும் பழக்க வழக்கங் களையும் சொல்வழக்காற்றையும் மரபு என்றும் தொல்காப்பிய மரபியல் இப்பொருள் பற்றியதே என்றும் மரபு பொருள் பொதி சொல்லாகிப் பண்டுதொட்டு இன்றுவரை இயல்வகையை நிறுவும் மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. சொல்லிலே வரலாறு அமைந்து கிடத்தலைப் பல சான்று களால் நிறுவுகிறார் பாவாணர். அவற்றுள் ஒன்று சம்பளம். கூலம் தந்து வாங்கிய வேலை கூலி. கூலத்தில் சிறந்தது சம்பு ஆகிய சம்பா நெல். சுவையில் உயர்ந்தது அளம் ஆகிய உப்பு. சம்பும் அளமும் வழங்கி வேலை வாங்கிய வழக்கைக் காட்டும் வரலாற்றுச் சொல் சம்பளம் என்பது நம்மை நயந்து பாராட்ட வைக்கும். அதற்கும் மேல் ‘Salary’ v‹D« ஆங்கிலச்சொšலும்அப்bபாருள்கh£Ljiy¡ fh£L«nghJ Éa¥ng M»‹wJ. உயிர், மெய், உயிர்மெய் முதலிய இலக்கணக் குறியீடுகளைக் காட்டி மெய்ப்பொருட் சொற்கள் எனப் பெயர் சூட்டுச் செய்கிறார். ஒருபொருட் பல சொற்களுக்கு அறுபது எடுத்துக் காட்டுகள் காட்டுகிறார். நுண்சிறு பொருள் வேறுபாடுகளை எளிதில் விளக்கிச் செல்கிறார். ஓரோ ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்: கண்ணி- இருவிரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை. தார் - கட்டியமாலை தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை கதம்பம் அல்லது கத்திகை - பலவகைப் பூக்களால் தொடுத்த மாலை படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை தெரியல் - தெரிந்தெடுத்த மலராலாய மாலை அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை தொடலை - தொடுத்த மாலை பிணையல் - பின்னிய மாலை கோவை - கோத்த மாலை கோதை - கொண்டை மாலை சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை சூட்டு - நெற்றி மாலை ஆரம் - முத்துமாலை தமிழ்ச் சொல்வளம் என்பது ஐந்தாம் கட்டுரை. அதில் வித்துவகை முதலாகக் காட்டுவகை ஈறாக 38 வகைகளைக் காட்டுகிறார். அதன்மேல் பலபொருள் ஒருசொற்கள், வழக்கற்ற சொற்கள், பொருள் திரி சொற்கள், ஒழுக்கவியற் சொற்கள், சொற்குடும்பமும் குலமும் எனத் தனித்தனி நூலாக விரிவனவற்றைக் கட்டுரையாய் வடிக்கின்றார். வழக்கற்ற சொற்களையெல்லாம் ஒரு தனிச் சுவடியாக வெளியிட இந்நூலாசிரியன் கருதுதலின், ஈண்டு மிக வேண்டிய சொற்களே காட்டப் பெறும் என்பதால் இது புலப்படும். இது காறுங் கூறியவற்றால், தமிழ் சொல் வளமுடைய தென்றும், தமிழர் மதிவளமுடையர் என்றும், தமிழ்நாடு பொருள் வளமுடைய தென்றும் தெள்ளிதின் விளங்கும் என்று தமிழ்ச் சொல் வளத்தில் எழுதுவது நூல் வளத்தையெல்லாம் திரட்டி வைத்த முடிவினதாகும் (73). 12. தமிழ் இலக்கிய வரலாறு நேசமணி பதிப்பக வெளியீடாக 1979இல் வெளிவந்த இந்நூல், என் தந்தையார் ஓர் அரசினர் அலுவலராயிருப்பதால் இதைத் தாமாக வெளியிட இயலவில்லை. ஆதலால், நான் இதை வெளியிடுகிறேன் என்று பாவாணர் இளைய மகன் தே.மணியால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. இதற்கு முழுவதாகப் பொருளுதவி புரிந்தவர் சிங்கபுரித் தமிழரும் சீரிய தனித்தமிழ் அன்பரும் ஆகிய கோவலங்கண்ணனார். பாவாணர் தம் ஆழிய நன்றியால் நன்றியுரை அன்றிக் கோவலங்கண்ணனார் மேல் பாடாண் பதிகம் ஒன்றும் பாடி முற்பட இணைத்துள்ளார். நன்றியுரை அகவலில், மொழிநூல் மாணவன் முதுதேவ நேயன் எனத் தம்மைச் சுட்டுதல் எண்பான் அகவைகாறும் மெய்ப்பிக்கப்பட்ட வாழ்வு மெய்ம்மமாம். மற்றை எந்நூலிலும் இடம் பெறாவகையில்,தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப்பட்டி ஒன்று நூன்முகப் பில் இணைக்கப்பட்டுள்ளது. முன்னுரை 64 பக்கங்களில் இயல்கின்றது. மறைந்த குமரிக் கண்டம், குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம், குமரிநாடே தமிழன் பிறந்தகம், குமரிக்கண்டப் பரப்பு, குமரிக் கண்டத் தமிழ், குமரி நாட்டுத் தமிழர், குமரி நாட்டு நாகரிகம், குமரிநாட்டு இலக்கியம், தமிழர் பரவல், ஆரியர் திரும்பல் எனப் பதின்தலைப்புகளில் முன்னுரை ஆய்வை நிகழ்த்தி நூலுள் புகுகிறார். நூல், பின்னிணைப்பொடு 327 பக்கங்களில் செல்கின்றது. அந்நாள் அதன் விலை, உருபா பன்னிரண்டு. பாவாணர் மகனார் மணியின் தென்குமரி அச்சகத்தில் பதிப்பிக்கப் பட்ட நூல் இது. நூல், தலைக்காலம் இடைக்காலம் இக்காலம் எதிர்காலம் என நாற்கால வைப்பில் பின்னிணைப்பு என்னும் சேர்ப்பொடு ஐம்பகுதிகளாய் அமைந்துள்ளது. பாவாணர், இலக்கிய வரலாறு எழுதத் தக்கார் எவர் என வரைந்துள்ளது, அவர் வரைந்த இலக்கிய வரலாற்று அடிப் படையை வெளிப்படுத்தும். அது, தமிழ் வேர்ச்சொல் ஆராய்ச்சியும் பிராமணீயத்தையும் இந்தித் திணிப்பையும் எதிர்க்கும் நெஞ்சுரமும், உள்ளவரேயன்றி, அவை இல்லாது தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகள், எத்துணை இலக்கியம் கற்றும், பண்டாரகர் பட்டம் பெற்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியும் தமிழ்வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் எழுத எட்டுணையும் தகுதியுள்ளவர் ஆகார் என்பது திண்ணம் என்பது. குமரிநாடே பழம்பாண்டிநாடு, பழம் பாண்டிநாடே செந் தமிழ்நாடு, முக்கழகவுண்மை, தலைக்கழகம், இடைக்கழகம் என ஐம்பகுப்பில் தலைக்காலத்தை வரைந்து, முதலிருகழகமும் முற்றும் ஆரியத் தொடர்பு அற்றன என்று அறியல் வேண்டும் என முடிக்கிறார். ஆரியர் குடியமர்வுக்காலம், இடைக்கால இலக்கியம் மூவேந்தர் குடியுஞ் செய்த இனமொழிக்கேடு, சமற்கிருத இலக்கிய வளர்ச்சியும் தமிழிலக்கியத் தளர்ச்சியும், ஆரியத்தால் ஏற்பட்ட இலக்கண இலக்கிய மாற்றமும் கேடும், இறந்துபட்ட தமிழ் நூல்கள், ஆங்கிலச் சார்புக் காலம் என ஏழு பகுப்பில் இடைக் காலத்தை நிறைவு செய்கிறார். இடைக்கால இலக்கியங்களை மதவிலக்கியம், பொது விலக்கியம் என இரண்டாக்கி எழுதுகிறார். மதவிலக்கியங்களைச் சிவனிய இலக்கியம், மாலிய இலக்கியம், கடவுள்மத இலக்கியம், இரண்டன்மை அல்லது ஓராதன்மை இலக்கியம், சமண இலக்கியம், புத்த இலக்கியம், கிறித்தவ இலக்கியம், இசுலாமிய இலக்கியம், நம்பாமத இலக்கியம் என ஒன்பான் வகுப்புகளில் ஆய்ந்தெழுதுகிறார். இவற்றுள் கடவுள் மதம், ஓராதன்மை மதம், நம்பா மதம் என்னும் அமைப்புகள் பாவாணக் கொடையாகும். காலம், இடம், பெயர், தோற்றம், தோற்றரவு, இயல்வரை யறை முதலிய வரம்பீடின்றி ஒன்றாய் நிற்றமாய்த் திரிபின்றி எங்கும் நிறைந்திருக்கும் கருத்துப் பொருளாய், இயல்பாகவே எல்லா அறிவும் எல்லா வல்லமையும் கொண்டு மனம் மொழி மெய்யாகிய முக்கரணமும் கடந்து நிற்கும் முழுமுதல் இறைவனான அறவாழி அந்தணனே கடவுள்; அம்மதத்தினர் பெற்றியர் என்னும் சித்தர் என்கிறார் பாவாணர். அணிமா முதலாக எண்சித்திகளை வகுத்துக் கூறிய மட்டில் அவர் பெற்றியர் ஆகார். பிறப்பில் ஏற்றத்தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் தூய்மையும் இல்லார், உலகத் துறவும் கொள்ளார் ஒருவகைப் பெற்றியும் ஒல்லார் என்று மெய்ப் பெற்றியர் இலக்கணம் வகுக்கிறார் (94-95) இரண்டன்மை அல்லது ஓராதன் கொள்கையை, இரு பொருளுக்கு இடைப்பட்ட உறவு, ஒருமை இருமை சிறப் பொருமை என மூவகையாகத் தான் இருக்க முடியும். கதிரவனும் வெயிலும் போன்றது ஒருமை; கதிரவனும் கலங்கரை விளக்கமும் போன்றது இருமை; கதிரொளியும் நிலவொளியும் போன்றது சிறப்பொருமை. இறைவனுக்கும் ஆதனுக்கும் (ஆன்மாவிற்கும்) இடைப்பட்ட உறவு சிறப்பொருமையாகத்தான் இருக்கமுடியும். அதுவே இயற்கைக்கும் உத்திக்கும் ஒத்தது என்று கூறும் பாவாணர், ஒவ்வாத் தன்மையையும் விளக்குகிறார். இறைவனும் ஆதனும் ஒரே பொருளாயின் ஆதன் இறைவ னால் இன்பம் நுகர இடமில்லை. மேலும் அமலனாகிய இறைவனும் மலனாகிய ஆதனும் ஒளியும் இருளும் போல வேறுபட்டிருப்பதால் ஒரே பொருளாய் இருத்தல் இயலாது. இறைவனும் ஆதனும் முற்றும் தொடர்பற்ற இருவேறு பொருளாயின், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கும் எல்லாம்வன்மைக்கும் இழுக்காகும். ஆதலால், இருநிலைமைக்கும் இடைப்பட்டு ஒட்டியும் ஒட்டா மலும் இருக்கும் சிறப்பொருமையே இறையாதன் உறவாம். இது இயற்கைக்கும் உத்திக்கும் முற்றும் ஒத்திருப்பதால் இதுவே தொன்றுதொட்டுத் தமிழர் கொள்கையாயிற்று இதிற் கருத்து வேறுபாடின்மையால் இதுபற்றிய ஆராய்ச்சியும் என்றேனும் எழுந்ததில்லை என உறுதி செய்கிறார் (114). புத்தமதம் கடவுள் கொள்கை இன்மையால் நம்பா மதத்தின் பாற்படும் என்கிறார் (131). பொது இலக்கியப் பகுதியில் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு ஆகிய 36 நூல்களைப் பற்றியும் பன்னிரு பக்கங்களே வரைந் துள்ளார் பாவாணர் (150-162). நிகண்டு என்னும் நூல்வகையை உரிச்சொல் சுவடி என்கிறார் (163). தொல்காப்பியர் ஆரிய இனத்தார் என்கிறார் பாவாணர் (133). புறத்திரட்டு பாவாணர் பார்வைக்குக் கிட்டவில்லை போலும். அதனால் இன்றில்லை என்கிறார் (174) பல நூல்களுக்கு ஆசிரியர் பெயர் சுட்டிய அளவில் அமைகிறார். ஆரியப்பூசாரியரை முற்றிலும் நம்பி மூவேந்தரும் அடிமைப் பட்டுப் போனதை விரிவாக வரைந்துளார் (179-223). இக்காலம் மூன்றாம் பகுதியில் செய்யுள் உரைநடை இலக்கி யம், ஆங்கிலராட்சியால் விளைந்த நன்மைகள், அல்பிராமணர் கட்சி, தமிழாரியப் போராட்டம், தனித்தமிழ் இயக்கம், பேராயக் கட்சியால் விளைந்த தீங்கு, பெரியார் தன்மான இயக்கம், தமிழர் ஆட்சித் தொடக்கம், இற்றைத்தமிழர் நிலைமை, தமிழுக்கு ஆகாத நூல்கள் என்பவற்றை விளக்குகிறார் (225-286). எதிர்காலம் என்னும் நிறைவுப் பகுதியில் தமிழின் தலைமை, தமிழ்விடுதலையே தமிழினவிடுதலை, தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல், தமிழர் ஒற்றுமை, வரிசையறிதல், இந்து மதத்தினின்று தமிழ மதத்தைப் பிரித்தல், வண்ணனை மொழி நூல் விலக்கு, இந்தி எதிர்ப்பு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி எனப் பதின் பிரிவுகளில் வரைகின்றார். பின்னிணைப்பை ஐந்தாம் பகுதியாக்கி புரட்சி இலக்கியப் பாகுபாடு, மொழி பற்றிய சிலவுண்மைகள் தமிழ் எழுத்து மாற்றம், பகுத்தறிவு விளக்கம் தமிழ் திராவிட வேறுபாடு, உலகத் தமிழ் மாநாடுகள் என்பவற்றை உரைக்கின்றார். எழுத்து மாற்றத்தால் தமிழன் முன்னேற முடியாது, ஈகார வடிவை இகரத்தின் மேல் சுழித்தல், ஔகார வடிவின் உறுப்பான ள என்னும் குறியைச் சிறிதாக எழுதுதல் என்னும் இரண்டே தமிழுக்கு வேண்டும். கூ என்பதற்குக் குகரத்தின் மேற்சுழிக்கலாம் என்று விலக்களிக்கிறார். பகுத்தறிவின் பயன் குலப்பட்டங்களை விடுத்துப் பகுத்தறிவு ஒழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் என்கிறார். பிற இலக்கிய வரலாறுகளில் காணவியலா விரிவில் குமரிக்கண்ட ஆய்வு கொண்டது பாவாணர், இலக்கிய வரலாறே. 13. தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? இச்சிறு சுவடி முடிக்கல (கிரௌன்) அளவில் 21 பக்க அமைவில் முதல் உ.த.க. மாநாட்டில் (1969) வெளியிடப்பட்டது. ஆனால் அது, தென்மொழி மாதிகையில் (1959) வெளிவந்த ஒரு கட்டுரையேயாகும். உ.த.க. உயிர்க்கொள்கை தனித்தமிழ் என்பதால் தொண் டர்கள் கைக்கொள்ளும் காப்பு நூலாக மாநாட்டில் 35 காசு விலையில் வெளியிடப்பட்டது. மாநாடு நிகழ்விடம் பறம்புக்குடி. பாவாணர் இந்த நூலில் கடன்கோடல் தன்மைகளையும் சொற்கடன் கொள்வது தமிழைப் பொறுத்த வரையில் எவ்வளவு பெரிய கேட்டினை விளைக்கும் என்பதையும் மிகப் பல எடுத்துக் காட்டுகளால் நிறுவியுள்ளார் என்று முகவை மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்க்குடிமகனார் தம் முன்னுரையில் குறிப்பிடல் நூற் சுருக்கமாம். தமிழில் புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற் சொற்க ளெல்லாம் அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமாய் இருந்தவையே தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற் கென்றே புகுத்தப் பட்டவையாம். இது, ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்வதற்கு ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டிமேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே - இவை ஆழமான செய்திகள். சன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல். இதன் வரவால் பலகணி, சாளரம், காலதர், காற்றுவாரி என்னும் நாற்பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கில் இருந்து ஒழிந்தன அல்லவா! அடுக்களை, அட்டில், ஆக்குப்புரை, சமையலறை, மடைப் பள்ளி முதலிய சொற்கள் எப்படி வழக்கு வீழ்ந்தன? குசினி என்னும் பிரஞ்சுச் சொல்லும் கிச்சன் என்னும் ஆங்கிலச் சொல்லும் புகுந்ததால்தானே. முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவதுபோல், முன்னோர் ஆக்கிய மொழியை வளப்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும். இங்ஙனம் செய்யாது பிறமொழிச் சொற்களையே வேண்டாது கடன் கொள்பவர், தாமும் தேடாது முன்னோர் தேட்டையும் கடனால் இழக்கும் முழுச் சோம்பேறியே யாவர் என்கிறார் பாவாணர். பொதுச் சொற்களே அல்லாமல் ஊர்ப்பெயர் தெய்வப்பெயர் முதலியவற்றுக்கும் வடசொற்கள் புகுத்தப்பட்டதையும் எளிய சொற்களும் பெருவழக்குச் சொற்களும் இருப்பவும் கடிய சொற்களும் வழங்கற்கரிய சொற்களும் புகுத்தப்பட்டதையும் எடுத்துக் காட்டுடன் விளக்குகிறார். உருதுச்சொல், ஆங்கிலச் சொல் கலப்பின் கேட்டையும் சான்று காட்டி நிறுவுகிறார். இச்சிறு சுவடியில் ஏறத்தாழ 300 வேற்றுச் சொற்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கேற்ற தமிழ்ச் சொற்களையும் சுட்டுகிறார். வேற்றுச் சொற்களின் வேண்டாத் தன்மையைப் புரிந்து கொள்ள வைக்கிறார். புதுச் சொற் புனைந்தும் நேர் தென் சொல் அமைக்க இயலாத ஒரு சில அயற் சொற்களை அங்ஙனமே ஆளலாம். ஆயின் அவற்றை அயன் மொழி ஒலிப்படி வழங்காது தமிழ் ஒலிக்கு ஏற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். அல்லாக்கால் வேற்றொலி விரவித் தமிழ்த் தன்மை கெட்டு விடும் என மொழிக் காவல் கடனைக் குறிப் பிடுகிறார். மேலும், சிலர் கார் ப ரோடு முதலிய ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்து விட்டதனால் அவற்றை விலக்குதல் கூடாது என்பர். அவர் அறியார். அவை இன்னும் தமிழிற் கலக்கவில்லை. .. உயர்ந்த புலவர் வழக்கு நோக்கியே ஒரு மொழியின் இயல்பை அறிதல் வேண்டும். மொழி திருந்தாதார் வழங்கும் கார், ப முதலிய சொற்களைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வது, கீழ்மக்களின் ஐம்பெருங் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக் கொள்வது போன்றதே என்கிறார். இவ்வாறு தெளிவிக்கும் பாவாணர் இக்கட்டுரையின் தொகுப்பாக நிறைவுரை வரைந்துள்ளார். பிறரிடம் கடன் கொள்ள வேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு, பிர்லா முதலிய பெருஞ்செல்வர் போல், தமிழும் பிறமொழிகளின்று சொல்லைக் கடன் கொள்ளா தென்றும், அயற் சொற்களையெல்லாம் இயன்றவரை மொழிபெயர்த்தல் வேண்டும் என்றும், மொழி பெயர்க்க முடியாதவற்றிற்குப் புதுச்சொற்களைப் புனைந்து கோடல் வேண்டும் என்றும், அதுவும் இயலாத ஒரு சில இன்றியமையாத சொற்களைத் தமிழ் எழுத்திற் கேற்பத் திரித்து வழங்குதல் வேண்டும் என்றும், பிறமொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளம்படுத்தத் தலைசிறந்த வழி என்றும், பிறமொழிச் சொற்களைக் கட்டுமட்டு இன்றித் தமிழில் கலப்பது அதன் கேட்டிற்கே வழிகோல்வதாகும் என்றும், இதுவரை தமிழிற் புகுத்தப்பட்ட எல்லாச் சொற்களும் தமிழதிகாரி களால் ஒப்புக் கொள்ளப்பட்டன அல்ல என்றும், அவற்றை இயன்றவரை விலக்கித் தமிழின் தூய்மையைக் காப்பது தமிழறிஞர் களின் தலையாய கடன் என்றும், நேர்நின்று காக்கை வெளி தென்பாரும் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரும் தமிழை ஒழிக்கத் தயங்கார் ஆதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற்றென்றே கொள்ளுதல் வேண்டும் என்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க என முடிக்கிறார். சுருங்கிய, எளிய இனிய மொழிக் காவல் சுவடி தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? என்பது. 14. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ஒரு சொல்லைச் சொல்லி ஒருவரை வருந்தச் செய்த ஒருவர், நான் விளையாட்டாகச் சொன்னதை இப்படி வினையமாக எடுத்துக் கொண்டாயே என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளதே. இதனால், விளையாட்டு பொருட்டாக எண்ணக் கூடிய தன்று என்பது கருத்தாம். இருவர் இகலுதல் போர், சண்டை எனப்படும் ஆனால், விளையாட்டுச் சண்டை மக்களிடத்தேயன்றி பறவை விலங்கு முதலியவற்றுள்ளும் உள்ளமை கருதத் தக்கது. ஒருநாட்டின் பண்பாடு, நாகரிகம், கலைத்திறம் என்பனவும் விளையாட்டால் புலப்படும். நம் மண்ணின் வளம் விளையாட்டு களாலும் புலப்படும் என்பதால் அதனைக் காக்கக் கருதிய பாவாணர் தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என எழுதினார். செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகளாக வந்து 1962இல் கழக வெளியீடு 752 ஆக நூலாக்கம் பெற்றது. நூலின் பக்கங்கள் 144. ஆண்பாற் பகுதி, பெண்பாற் பகுதி, இருபாற்பகுதி என முப்பகுதிகளைக் கொண்ட இது, பகலாட்டு, இரவாட்டு, இருபொழுதாட்டு என்ப வற்றுடன் வழக்கற்ற விளை யாட்டுக்கள், பள்ளிக்கூட விளையாட்டுக்கள், பண்டை விளை யாட்டு விழாக்கள் என்னும் பின்னிணைப்பையும் கொண்டது. விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. விளை = விருப்பு, ஆட்டு = ஆட்டம். விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக் கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத் திறம் வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, கரும்பு தின்னக் கூலி போல் விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. இவை - பாவாணர் முகவுரையில் சில குறிப்புகள். இளைஞர் பக்கம் என்பது 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் ஆட்டம் என வரையறை செய்கிறார். அதில் பகலாட்டு எனக் கோலி, தெல், சில்லாங்குச்சு, பந்து, மரக்குரங்கு, காயா பழமா? பஞ்சு வெட்டுங் கம்படோ, குச்சு விளையாட்டு ,பம்பரம், பட்டம் எனப் பத்தையும், இரவாட்டு எனக் குதிரைக்குக் காணங்கட்டல், வண்ணான்தாழி, சூ விளையாட்டு என மூன்றை யும், இருபொழுதாட்டு எனக் கிளித்திட்டு பாரிக்கோடு அணிற் பிள்ளை, சடுகுடு, கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை, பூக்குதிரை, பச்சைக் குதிரை, குதிரைச் சில்லி, என எட்டையும் எழுதுகிறார். இவை ஆண்பாற் பகுதி. பெண்பாற் பகுதிப் பகலாட்டு தட்டாங்கல், கிச்சுக் கிச்சுத் தம்பலம், குறிஞ்சி (குஞ்சி) என்னும் மூன்றும், இரவாட்டு பாக்குவெட்டியைக் காணோமே, நிலாக் குப்பல், பன்னீர்க்குளத்தில் முழுகுதல் என்னும் மூன்றும் இருபொழுதாட்டு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, என் உலக்கை குத்துக் குத்து, ஊதாமணி, பூப்பறித்து வருகிறோம், தண்ணீர் சேந்துகிறது என்னும் ஐந்தும் காட்டுகிறார். இருபாற் பகுதிப் பகலாட்டு பண்ணாங்குழி, பாண்டி கம்ப விளையாட்டு, கச்சக்காய்ச்சில்லி, குஞ்சு என்பனவும் இரவாட்டு கண்ணாம்பொத்தி, புகையிலைக் கட்டை யுருட்டல், புகையிலைக் கட்டையெடுத்தல், பூச்சி, அரசனும் தோட்டமும், குலைகுலையாய் முந்திரிக்காய் என்பனவும், இருபொழுதாட்டு நொண்டி, நின்றால் பிடித்துக்கொள், பருப்புச் சட்டி, மோதிரம் வைத்தல், புலியும் ஆடும், இதென்ன மூட்டை, கும்மி என்பனவும் கூறப்படுகின்றன. இவ்வாறே குழந்தைப் பக்கம், பெரியோர் பக்கம் என்பனவும் சொல்லப் படுகின்றன. விளையாட்டே எனினும் பருவம், நேரம், இடம் என்பன கொண்டு வகுத்துக் காட்டும் முறை சிறக்க அமைந்துள்ளது. ஒவ்வோராட்டமும் இன்ன நாட்டு அல்லது வட்டாரத்து முறை என்றும் ஒரே ஆட்டம் பல்வேறு வகையாய் ஆடப்படின் அவை ஆடும் வகையும் வட்டாரமும் இவை என்றும் சுட்டப்படுகின்றன. ஆட்டத்தில் தாமே புகுந்து விளையாடும் ஆட்டக்காரராகத் தம்மைக் கொண்டே இதனை எழுதினார் என்பது ஆடல் முறையைச் சொல்லும் வகையால் புலப்படுகின்றது. ஆட்டின் பெயர், ஆடுவார் தொகை, ஆடுகருவி, ஆடிடம், ஆடுமுறை, ஆட்டுத் தோற்றம் என்னும் இவ்வுட்பகுப்பே பாவாணர் இவ்விளையாட்டுகளில் எவ்வாறு ஊன்றுதலுடன் எழுதினார் என்பதை விளக்கும். நூலின் முன்னுரையில் கட்சி பிரித்தல், தொடங்கும் கட்சியைத் துணிதல், இடைநிறுத்தல், தோல்வித் தண்டனை, ஆடைதொடல் கணக்கன்மை, தவற்றால் ஆடகர் மாறல், வென்றவர்க்கு மறு ஆட்டவசதி, இடத்திற்கு ஏற்ப வேறுபடல், ஆட்டைத் தொகை வரம்பின்மை, நடுநிலை என்னும் பதின்வகை விளக்கங்களை எழுதுதல், ஆடுமுறை பற்றிய ஐயம் அகற்றும் அருமையதாம். பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும், சோழநாட்டுக் கில்லித் தண்டும், கிட்டிப்புள் என்பதொன்றும் மூன்றும் ஒன்றாதலையும், கிரிக்கட்டு ஆட்டத்தொடு உவமை காட்டுதலையும் படிக்கும்போது பாவாணர் இளந்தைப் பருவம் இவற்றில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதே புலப்படுகின்றது. ஏனெனில், அவ்வரலாறு அவரால் கூறப்பட்டிலது; எழுதப்படவும் இல்லை ஆதலால் (24-24). ஒருவன் ஆடினால் பட்டம், அது பொழுது போக்கு. இருவர் ஆடினால் அது, விளையாட்டு என வேறுபாடு காட்டுகிறார் (39). இடுக்கண் வருங்கால் நகுகஎன்னும் குறளும் (14) நாடு கண்டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்னும் பதிற்றுப்பத்தும், கிளிமரீஇய வியன்புனம் என்னும் புறப்பாட்டும் (50) நாயும் பலகையும் என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (136) இவ்விளை யாட்டு நூலில் மேற்கோளாதல் பாவாணர் எழுதியதால் அமைந்த பேறாம். அறியப்படாதவை என்னும் வகையில் சாழல், தெள்ளேணம் என்பவற்றைச் சுட்டும் பாவாணர், அச்சுப்பூட்டி ஆடுதல் என ராட்டிலர் அகராதி குறித்தலையும் கூறுகிறார். இவற்றுக்கு விளக்கம் இல்லை. சாழலும் தெள்ளேணமும் மகளிர் பாடி ஆடுவதாக மணிவாச கர் குறித்தார். சாழல் ஒருவர் கூற்றை ஒருவர் மறுத்துரைத்தல். அவரை அவர் சாடு சாடு எனச் சாடிவிட்டார் என்னும் வழக்கில் வரும் சாடல் சாழலை நினைவூட்டுதல் காண்க. தெள்ளுதல் நாவுதல் புடைத்தல் கொழித்தல் முதலியன அரிசி ஆக்கும் மகளிர் முறச் செயல்கள் ஆகும். குறுநொய்யையும் மணியையும் பிரிக்கத் தெள்ளுவர். தெள்ளுங்கால் முறத்தின் முகப்பு மேலே தூக்கியிருக்கும். அஃது ஏணம் (உயர்வு) ஆகும். பாடிச் செய்யும் செயல் ஆடலாக எண்ணப்பட்டது போலும். இலக்கிய வாழ்வு பெற்ற புனல் விளையாட்டும் பொழில் விளையாட்டும் பண்டை விளையாட்டு விழாக்களாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ் என்பது ஆடல் பாடல் பண்பாடு ஆகிய எல்லாமும் தழுவிய பொருளது என்பதை அறியச் செய்கிறார் பாவாணர். 15. தமிழ் வரலாறு 1967இல் தமிழ் வரலாறு வெளிவந்தது. பாவாணர் காட்டுப் பாடியில் உறைந்த காலம்; திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவினர் உதவிகொண்டு வெளியிட்டது. தாம் இயற்றிய தமிழ் வரலாற்றின் தன்மையை முகவுரையில் பாவாணர் குறிப்பிடுகிறார். தமிழ் வரலாறு என்னும் பெயரில் இதுவரை வெளிவந்தவை யெல்லாம், பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாறும் மொழி பற்றிய பொதுவான செய்திகளை எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும் மொழி நூலையும் தழுவி முதன் முதலாக வெளிவரும் தமிழ்மொழி வரலாறு இதுவே என்பது அது. ஆர்வலர் இந்நூலைக் கருத்தூன்றிக் கற்றுச் செந்தமிழின் உயர் தனிச் செம்மையையும், குமரிக் கண்டத் தமிழரின் கூர்மதியையும் உணர்ந்து தம்மை உயர்த்துவதுடன் தமிழையும் உயர்த்த வேண்டுகிறார். விரிவான முன்னுரையுடைய நூல் இயனிலைப் படலம் திரிநிலைப் படலம் சிதைநிலைப் படலம் மறைநிலைப் படலம் கிளர்நிலைப் படலம் பெருநிலைப் படலம் என அறுபடலங்களைக் கொண்டுள்ளது. தமிழ் குமரிக் கண்டத்தே தோன்றியது என்பதைப் பத்தொன்பது காரணம் காட்டி நிறுவும் பாவாணர் இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் இவ்விந் நூல்களைக் கற்க என ஆங்கில நூல்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். தனிச் சொல்லாகவே மொழி தோற்ற முற்றதென்றும், மாந்தன் அமைப்பே மொழி என்றும் தமிழ்த் தோற்றப் பகுதியில் குறிக்கிறார் (69) மொழி இன்றியும் கருத்து நிகழும் என்பதைத் தெளிவிக்கிறார். முன்மைச் சுட்டினின்றே தோன்றல், முன்மை, முற்செலவு, நெருங்கல், பொருந்தல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துக்களும் இவற்றுக்கு இடைப்பட்டனவும் இவற்றிற் கிளைத்தனவுமாகிய எத்துணையோ நுண்கருத்துக்கள் பிறக்கின்றன என்பதனைக் கூறி அதனை நிறுவுவதே நூல் விரிவாக்க மாக வளர்கின்றது. திரிநிலை, சிதைநிலைகளை விளக்கிய பாவாணர், மறைநிலையைத் தமிழ் மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு , தமிழின மறைப்பு, தமிழ் நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதனூல் மறைப்பு, தமிழ்த் தெய்வமறைப்பு, தமிழர் சமய மறைப்பு, தேவார மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, தமிழ்ச்சொன் மறைப்பு, தமிழ்ச் சொற்பொருள் மறைப்பு, தமிழ் எழுத்து மறைப்பு, முக்கழக மறைப்பு, தமிழ் வரலாற்று மறைப்பு எனப் பதினாறுவகை மறைப்புகளைக் கூறி விளக்குகிறார். திருவள்ளுவர் தொட்டுக் கிளர்நிலை தொடங்கியதைத் தக்க வகையில் உரைத்து, வருநிலைப் படலத்தில் உள்நாட்டில் அரசும் மக்களும் செய்ய வேண்டியவை இவை எனவும், வெளிநாட்டில் செய்ய வேண்டியவை இவை எனவும் நாற்பத்து நான்கு கருத்துகளை வைத்து நிறைவு செய்கிறார். சொல்லாக்க நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வழிகாட்டும் நூல்களுள் ஒன்று தம் தமிழ் வரலாறு என்பது பாவாணர் உரை. அம்முறையைக் கொண்டே புதுச்சொல் படைத்துக் கொள்ளமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஊகாரச் சுட்டு, தோன்றுதல், முன்மை, முற்செலவு முன்தள்ளல் நெருங்குதல் செறிதல் கூடுதல் பொருந்துதல் ஒத்தல் வளைதல் துளைத்தல் துருவுதல் ஆகிய இயல்புகளால் சொல்லாக்கம் பெறுதலை நூற்றுக் கணக்கான சொற்களை எடுத்துக் காட்டி நிறுவுதல் காட்டிக் காட்டிக் கற்பித்தல் போல்வதாம். 16. தமிழர் சரித்திரச் சுருக்கம் தமிழக இளைஞர் மன்றம் திரிசிராப்பள்ளி பதிப்புரிமை கொண்டு அடக்க விலை அணா ஒன்று என 1941இல் வெளியிட் டுள்ளது. பண்டித புலவ வித்துவ ஞா.தேவநேசன் இயற்றியது என முகப்பட்டையில் நூலாசிரியர் பெயர் உள்ளது. நூல் 16 பக்கங்களை யுடையது. சைவப்புலவர் கு.சுப்பிரமணியம், தலைவர், தமிழக இளைஞர் மன்றம் 33 மல்லி சாகிப் தெரு திரிசிரபுரம் 20.12.41 எனப் பதிப்புரை யில் குறிக்கப்பட்டுளது. நூலாசிரியர் ஆராய்ச்சித் திறன் வாய்ந்தவரும் மொழி நூற் பண்புணர்ந்தாரும் எனப் பாராட்டப் படுகிறார் பதிப்புரையில். கைம்மாறு கருதாது இளைஞர் மன்றத்திற்காக எழுதித் தந்தமை யையும் சுட்டுகிறார். இதுவே மன்றத்தின் முதல் வெளியீடு. நூற்பெயரில் சரித்திரம் இருப்பினும் சங்கப் பெயர் கழகம் என்றே ஆளப்பட்டுள்ளது. குமரிக் கண்டத்தில் இருந்தே தமிழர் வரலாற்றைத் தொடங்கி வரலாற்றை மீட்டெடுப்புச் செய்கிறார். கழகத்திற்கு முற்காலம், கழகக் காலம், இடைக்காலம், தற்காலம், தமிழரசர் மரபுகள் திரவிடப் பிரிவு, இந்தியமக்கள் நாகரிகப் பகுப்பு என்னும் பகுப்புகளைக் கொண்டது இச்சுவடி. தமிழர், ஆரியர் துருக்கியர் போல் அயல் நாட்டில் இருந்து வந்தவர் அல்லர். குமரிக் கண்டமே தமிழரின் பிறப்பிடம் என்று சொல்லி நூலைத் தொடங்குகிறார். இந்தியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா என்னும் முக்கண்டங்களையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு இந்துமாக்கடலில் இருந்த பெருநிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதைச் சுட்டுகிறார். குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களையும், ஐந்நாகரிக நிலைகளையும் இப்பகுதியிலே விளக்குகிறார். கழகக் காலம் என்பதில் இலங்கை இந்தியாவோடு இணைந் திருந்ததையும் பொருநை, இந்தியா இலங்கை ஊடு சென்றது என்பதையும் கூறுகிறார். கடைக்கழகக் காலத்திலேயே ஆரியர் தமிழில் நூல் இயற்றவும் வடசொற்களைத் தமிழில் புகுத்தவும் தொடங்கிவிட்டனர் என்கிறார். இடைக்காலம் என்னும் மூன்றாம் தலைப்பில், தமிழர் ஆரியர்க்கு முற்றிலும் அடிமையாயினர் என்றும், கல்வியை இழந்தனர் என்றும், பல்லவர் தெலுங்கர் மராட்டியர் முதலியோர் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர் என்றும் குறிக்கிறார். தமிழர் வரலாற்றில் மிகமிக இருண்டகாலம் 15ஆம் நூற்றாண்டென்று சொல்லலாம் என்கிறார். தற்காலம் என்பதைக் கி.பி. 1600 முதல் எனக் கொள்கிறார் பாவாணர். ஆங்கிலர் வரவால் புத்தூழி தோன்றியது என்று கூறும் அவர், அனைவர்க்கும் கல்வி, அலுவல், நீதி ஒப்ப வழங்கப்பட் டதையும், தமிழ் தனிமொழி, தமிழநாகரிகம் தனி நாகரிகம்; தமிழரிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றனர் என்பவை வெளிப் பட்டதையும் சுருக்கமாகச் சொல்கிறார். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவர் பிற்பட்டவர் என மூவேந்தரையும் இறையனார் களவியல், அடியார்க்கு நல்லார் உரை என்பவற்றை மேற்கொண்டு எழுதுகிறார், திரவிடப் பிரிவு என்பது ஆறாம் பகுதி. அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம் எனத் தமிழ் திரிந்த வகையையும், தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம் > திரமிடம் > திரவிடம் எனத் திரிக்கப்பட்ட வகையையும் தெளிவிக்கிறார். இந்தியமக்கள் நாகரிகப் பகுப்பில், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாவகையிலும் ஆரிய திரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம் என்றும், பிராமணர் வருமுன் தமிழ்நாட்டில் முனிவர் அந்தணர் எனவும், நூல்தொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பனர் எனவும் வழங்கப்பட்டனர் என்றும் சுட்டும் பாவாணர், ஆரியரால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர்தான் எல்லா வகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக்கொண்டு இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர். இதன் விரிவை ஒப்பியன் மொழிநூலில் கண்டு கொள்க எனச் சுவடியை முடிக்கிறார். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழ்க நிரந்தரம் வாழிய தமிழ்த் திருநாடு! என்பது வாழ்த்து இச்சுவடியை நோக்கி, பாவாணர் பின்னே இயற்றிய தமிழ் வரலாறு, தமிழர் வரலாறுகளைக் காணும்போதுதான் பாவாணர் வளர்நிலை தெள்ளத் தெளிவாக விளங்கும். 17. தமிழர் திருமணம் சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பாவாணர் இருந்தபோது அவரால் வெளியிடப்பட்ட நூல் இது. ஆண்டு 1956. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் உருவாக்கம் பெற்றது. விலை உருபா 1. உரிமையைத் திருவாட்டியார் நேசமணி தேவநேய னுக்கு வழங்கியுள்ளார். வாழ்க்கை நோக்கம், வாழ்க்கை வகை, இல்லறச் சிறப்பு திருமணமும் கரணமும், மணமக்கள் பெயர், அன்பும் காதலும் என்னும் ஆறு பொருள் பற்றிய முன்னுரையொடு நூல் உள்ளது. மணவகையை உலகியற்பாகுபாடு, இலக்கணப் பாகுபாடு என்னும் இருவகையால் விளக்குகிறார். மணத்தொகை என்பதில் பன்மனைவியர் மணம் அரசர் வழிகளிலும் பின் பிறர் வழிகளிலும் இருத்தலைச் சுட்டுகிறார். மணநடைமுறை என்பதில் மணப்பேச்சு, மணவுறுதி, மணவிழா மனையறம் என்பவற்றைக் கூறும் பாவாணர், பழங்கால மணமுறையாக மகளிர் மணவினை நடத்தியதையும், ஓரிற் கூட்டிய தையும் அகப்பாடல்களைக் கொண்டு நிறுவுகிறார் (அகம் 86,136) அடுத்த பகுதியில் இடைக்கால மாறுதலாகப் பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும் தொடங்கிய வகையை உரைத்து அக்கரணத்தால் விளைந்த தீமைகள் இவையென அறு வகைக் குறைகளைக் குறிப்பிடுகிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தாழ்வு, தமிழப் பார்ப்பார்க்குப் பிழைப்பின்மை, சிறுதெய்வவழி பாடு, கற்பிழுக்கக் கூற்று, வீண்சடங்கு, கரணம் விளங்காமை என்பவை அவை. பொருந்தாமணம் வீண்சடங்கு என்பவற்றை விளக்கும் ஆசிரியர் திருமணச்சீர்திருத்தம் பற்றியும், வேண்டத்தக்க பொருத் தங்கள் இவை என்பதையும் விளக்குகிறார். மேலும் குலவெறி கொள்ளாமை, நாளும் வேளையும் பாராமை, பிறப்பியம் பாராமை, மணம் பற்றிய செய்திகளைத் திட்டமாக முடிவு செய்து கொள்ளுதல், தாய்மொழியிற் கரணம் செய்வித்தல், வீண்சடங்கு விலக்கல், செல்வநிலைக் கேற்பச் செலவு செய்தல், மணநாளன்றே மணமக்களைக் கூட்டுதல், மணமக்களின் நல்வாழ்வை விரும்பல் என்பவற்றைத் தெளிவிக்கிறார். மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டியவை, அரசியலார் கவனிக்க வேண்டியவை, புதியன புகுதல், போலிச் சீர்திருத்த மணங்கள், பெண்டிர் சமன்மை இன்னவற்றையும் எடுத்துரைக்கிறார். திருமண அழைப்பிதழ் போலிகை (மாதிரி) ஏழனைக் காட்டு கிறார். திருமண நிகழ்நிரல், தமிழ்க்கரணம், கரணத் தொடர்பான சில சீர்திருத்தங்கள், திருமண வாழ்த்திதழ் என்பவற்றையும் விளக்குகிறார். தமிழர்க்குத் தாலிகட்டும் வழக்கம் உண்மையைச் சான்றுடன் நிறுவுகிறார். மலையாள நாட்டுமணமுறை என்பதையும் சம்பந்தம் முன்னுகர்ச்சி என்பவற்றையும் குறிக்கிறார். 96 பக்கங்களையுடைய இந்நூலின் பின்னட்டையில் இந் நூலாசிரியரின் ஏனை நூல்கள் (வெளிவர இருப்பவை) என்னும் தலைப்பில் இருபது நூல்கள் இடம் பெற்றுள. அவற்றின் பெயரை அறிதல் சில குறிப்புகளுக்கு உதவும். 1. தமிழர் குலமரபு, 2. தமிழர் மதம், 3. தமிழநாகரிகமும் பண்பாடும், 4. தமிழர் வரலாறு, 5 தமிழ் மரபு, 6. தமிழ் இயல்பும் திரிபும், 7. பழமொழி பதின்மூவாயிரம், 8. திருக்குறளும் தமிழ் மரபுரையும், 9. தொல்காப்பியம் தேவநேயம், 10. சொல்லின் செல்வம், 11. செந்தமிழ்ச் சொற்களஞ்சியம், 12. முறைச்சுவடி, 13. திருமண வரலாறு, 14. மணவாழ்க்கை, 15. மாணவர் கட்டுரை (2 பாகம்), 16. ஆங்கிலம் தமிழ் அகராதி, 17. Origin of culture or the lenurian language 18 . Dravidian Civilication, 19. Unit of Spech, 20. The Cradlo of man என்பவை அவை. 18. தமிழர் மதம் தமிழர் மதம் 1972 இல் வெளிவந்த நூல். இந்நூல் வெளி யீட்டுக்குத் திருமுல்லைவாயில், முல்லைவாணன் பொருட்கொடை புரிந்துள்ளார். அதற்கு நன்றியாக வெண்பாக்கள் ஆறு பாடி யுள்ளார். இதன் முகவுரையில் நூல் தொகை ஒரு பத்தியில் உரைத் துளார் பாவாணர்; அது,பல் சிறு தெய்வக் கொலை வேள்வி வளர்ப்பையே மதமாகக் கடைப்பிடித்துக் கடவுள் இயல்பை அறியாத, ஆரியருள் ஒரு சிறு குழுவார் தென்னாடு வந்து, பழங்குடிப் பேதைமை, கொடைமடம், மதப்பித்தம் ஆகிய குற்றங்களைக் கொண்ட முத்தமிழ் வேந்தர் குடிகளையும், தாம் நிலத் தேவரென் றும் தம் இலக்கிய மொழி தேவமொழி என்றும் சொல்லி ஏமாற்றி வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொதுமக்களையும் அடிப்படுத்தி, தம் வேதமொழியைத் தமிழால் வளப்படுத்திச் சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைத் தோற்றுவித்து, அதில் மறைநூலும் மந்திரநூலும் உட்படப் பழந்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்தபின் மூலநூல்களையெல்லாம் ஒருங்கே அழித்துவிட்டு, தமிழர் மதங்களில் ஆரியத் தெய்வங்களைப் புகுத்தி இந்துமதம் என்னும் கலவை மதத்தை உண்டாக்கி, தமிழையும் தமிழரையும் மதத்துறையினின்று விலக்கி, சமற்கிருதத்தையே மதவியல் மொழி யாக்கி அதிற் பிராமணரே இருவகை வழிபாடும் இருவகைச் சடங்கும் நடத்தி வைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டனர். அவ்வேற் பாடே இன்றும் நடைபெற்று வருகின்றது என்பது. கில்பர்ட்டு சிலேட்டர் என்பார் ஆரியர் நாகரிகத் துறையில் திரவிடராக மாறியபோது, திராவிடர் மொழித் துறையில் ஆரிய ராகத் திரிந்து விட்டனர் என்று கூறுவதைப் பாவாணர் மேற்கோள் காட்டுகிறார். முன்னுரையில் மதம், சமயம் ஆகிய சொற்களின் வரலாற்றையும் மதம் தோன்றிய வகையையும் கூறி, மதங்கள் சிறு தெய்வவணக்கம், பெருந்தேவமதம், கடவுள் சமயம் என மூவகை யாதலையும், குமரிநாட்டு மதநிலையையும் பன்னிருபக்க அளவில் வரைந்துளார். நூலைக் குமரி நிலை இயல், இடைநிலை இயல், நிகழ்நிலை இயல், வருநிலை இயல், முடிபுரை இயல் என ஐந்திய லாகக் கூறுகிறார் (13-193). பின்னிணைப்பாக, தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழி பாட்டுச் சீர்திருத்தம், மதச்சமநோக்கு என்பவற்றை வைக்கிறார் (194-198) தெய்வம் உண்டென்பது போன்றே இல்லை என்பதும் மதம் என்னும் பாவாணர் மதத்தை நம்பு மதம், நம்பா மதம் என இரண் டாகப் பகுக்கிறார் (3). மதம், சமயம் என்பவற்றை, இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவ தற்குச் சமைவது சமயம் என்னும் பாவாணர், மதத்தினும் சமயத் திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம் என்கிறார் (3) அச்சம், முற்காப்பு, நன்றியறிவு, பாராட்டு, அன்பு, கருது கோள், அறிவுவளர்ச்சி என்பவை மதம் தோன்றுவதற்கு அடிப்படை என விளக்குகிறார் (7-10) கடவுள் மதமென மூவகை மதங்களுள் ஒன்றாகக் குறிப்பதன் இலக்கணத்தை, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமும் தூய்மையாகி, இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்து இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற ஒழுகுவது என்கிறார் (10-11). குமரி நிலையிலேயே தமிழர் மூவகை மத வளர்ச்சியும் பெற்றமையையும், தமிழர் மதம் ஆகிய சிவமதம், திருமால் மதம் என்பவற்றையும் விளக்கிக் கடவுள் மதத்தையும் எடுத்துக் காட்டால் விரிக்கிறார் (13-53) ஆரியத் தெய்வங்கள், ஆரியர் தமிழரை அடிமைப்படுத்திய வகைகள், ஆரியத்தால் விளைந்த கேடுகள், சிவனியர் ஆரியச் சார்பும், திருமாலியர் தமிழச் சார்பும் என்னும் நான்கு உட்பிரிவில் இடைநிலை இயலை இயக்குகிறார் பாவாணர் (59-120) ஆரியர் தமிழரை அடிமைப் படுத்தியவகையை, ஆரியர் தமிழத் தெய்வ வணக்கத்தை மேற்கொள்ளல் முதலாக கடவுட் சமய மறைப்பு ஈறாகப் பதினெண் காரணங்களைக் காட்டி விளக்குகிறார் (69-108). நிகழ்நிலை இயல் 18 பக்கங்களையுடையது. திருநான்மறை ஆராய்ச்சி, தமிழ்நாட்டுச் சிவமடங்கள், சைவ சித்தாந்த மகாசமரசத் தொண்டு, காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு, அகோபிலம் சீயர் ஆணவம், தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சிவ தமிழ்த்தொண்டு, தி.மு.க. அரசின் திருக்கோயில் தொண்டு என்பவை இதில் அடங்கியுள. வருநிலையியல் ஏழே பக்கங்களில் நிறைகின்றது (139-145). இதில், திருக்கோயில் தமிழ்வழிபாடு, பல்வகுப்புக் கோயில் பூசகர், வழிபாட்டில் வீண்செலவு நிறுத்தம், உருவிலா வழிபாடு, இந்துமதம் என்னாது தென்மதம் என்னல், எல்லாமதமும் தனித்தமிழ் போற்றல், தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை என்பன ஆராயப்படுகின்றன. முடிபுரை இயல் பதின் உட்பிரிவுகளையுடையது. எது தேவமொழி, பிராமணன் நிலத்தேவனா, பிராமணனுக்கு உரியது எவ்வறம்? சிவ மதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே. தமிழ ஆரிய மத வேறுபாடு, கொண்முடிபுக் குறியீடுகள், மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக் கட்டையா? கடவுள் உண்டா? மதத்தை அழிக்க முடியுமா? நம்பா மதமும் ஒரு மதமே என்பவை அவை. இவற்றுள் ஆறு உட்பிரிவுத் தலைப்புகள் வினாக்களாய் அமைவன. அவற்றுக்குத் தக்க விடைகளைத் திறமாகத் தருகிறார் தேவநேயர். தமிழே தேவமொழி; பிராமணன் நிலத்தேவன் அல்லன்; பிராமணனுக்கு நாடும் பேச்சு மொழியும் போன்றே அற வாழ்க்கை யும் இல்லை; மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை இல்லை; நம்பா மதத்தினரும் நம்பு மதத்தைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்தது; மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாது என்பவை பாவாணர் தரும் விடைகள். வழக்கம்போல ஆங்காங்குச் சொல்லாய்வு வேர்விளக்கம் காட்டும் பாவாணர் பேரா.உ.வே.சாமிநாதையர் குறுந்தொகை நூலாராய்ச்சியில் 44 சொற்களை வடசொற்கள் எனக்காட்டி முதலியன என்கிறார். இவற்றுள் 37 சொற்கள் தென் சொற்கள் என்று விளக்குகிறார் (154). பணிலம் என்பது வடமொழி அகரமுதலியிலும் இடம் பெறாத சொல்; தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொல்லெனக் காட்டும் பல்கலைக் கழக அகரமுதலி யிலும் வடசொல்லெனக் காட்டப்படாத சொல் எனச் சுட்டுகிறார் பாவாணர். மதங்களெல்லாம் தேவியம் (அ) உள்ளியம் (ஆதிகம்) தேவிலியம் (அ) இல்லியம் (நாதிகம்) என இருவகைப்பட்டிருப்ப தால் மதவியல் வாயிலாக மக்களை ஒன்றுபடுத்தல் இயலாது. அதனாலேயே இந்திய ஒன்றியமும் மதவியலைத் தழுவாது உலகிய லையே தழுவியுள்ளது என்றும், பிறவியில் அமையும் தீயநிலைமைகட்கும் இயற்கையில் நேரும் துன்பநேர்ச்சிகட்கும் இறைவனே கரணியம் ஆகான் என்றும் இணைப்புப் பகுதியில் கூறுவன அரசும் மக்களும் ஆழமாக எண்ணிப் போற்றத் தக்கனவாகும். தமிழர் மதம் 1972இல் நேசமணி பதிப்பக வெளியீடாக ஆறேகால் உருவா விலையில் வெளிவந்ததாகும். 19. தமிழர் வரலாறு நேசமணி பதிப்பக வெளியீடாக 1972இல் வெளிவந்த நூல் தமிழர் வரலாறு. அதன் விலை உருபா 12.50. இது மதுரை மணிவிழாக்குழுவார் 1967இல் தொகுத்தளித்த நன்கொடைப் பயனாக வெளிவருகின்றது என முகவுரையில் வரைகிறார் பாவாணர்; பாவாணர் மணிவிழாக் குழுவைப் பற்றி 7 வெண்பாக்கள் இடம் பெற்றுள. முன்னுரை ஞாலமுந்திய நிலை, ஏழு தீவகம், நாவலந் தீவின் முந்நிலைகள், குமரிக்கண்டம்,மாந்தன் பிறந்தகம், நாகரிக மாந்தன் பிறந்தகம், தமிழன் பிறந்தகம், தமிழ் வரலாற்றடிப்படை, தமிழர் வரலாறு அமையும் வகை என்னும் ஒன்பது உட்டலைப்புகளில் இயல்கின்றது. தமிழர் தோன்றிய இடமும், தமிழ் தோன்றிய இடமும் குமரிக்கண்டம் என்பதாலும், அத்தமிழரே உலக முதன்மாந்தர், அத் தமிழே உலகமுதன் மொழி என்பதாலும், தமிழாய்வின் அடி மணையாகக் குமரிக்கண்ட ஆய்வு இருப்பது கொண்டு பாவாணர் தம் பலநூல்களிலும் குமரிக்கண்டம் பற்றியே ஆய்கிறார் எனல் குறிப்பிடத் தக்கதாம். தனிநிலைக் காண்டம், கலவுநிலைக் காண்டம் தெளிநிலைக் காண்டம் என முக்காண்டங்களைக் கொண்டதாகின்றது தமிழர் வரலாறு. பின்னிணைப்பும் உண்டு. மொத்தப் பக்கம் 370. தனிநிலைக் காண்டத்தைக் கற்காலம், பொற்காலம், செம்புக்காலம், உறைக்காலம் இரும்புக் காலம் எனப் பகுத்தாய்கிறார். பின்னர்த் தலைக்கழகம் இடைக்கழகம் கடல்கோள் ஆகியவை பற்றி விரிவாக ஆய்கின்றார் (27-156). கலவுநிலைக் காண்டம் என்னும் இரண்டாம் பகுதியில் ஆரியர் இந்தியாவிற்குட் புகவு தொடங்கி, ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்கு விளைந்த கேடுகள் ஈறாக இருபது குறுந்தலைப்புகளில் ஆய்வு நடாத்துகின்றார் (159-305). தொல்காப்பியம், கடைக்கழகக் காலவேந்தர், நால்வரணப் பகுப்பு, இற்றைப் பிறவிக் குலங்கள் என்பனவெல்லாம் இப்பகுதியில் ஆயப்படுகின்றன. தெளிநிலைக் காண்டம் என்னும் இறுதிக் காண்டம் திருவள்ளுவர் தமிழரின் கண்திறப்பிப்பு, ஆங்கிலர் ஆட்சி, கால்டுவெல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மறைமலையடிகள் முதலோர் தொண்டு, தமிழ்நாடு முன்னேறும் வழி, தமிழ்நாட் டெல்லை வரவரக் குறைதல் என்பன எண்ணப்படுகின்றன (319-359). குமரிக்கண்ட முதல் மாந்தன் மொழியின்,அசைநிலைக் காலத்தில் சீனரின் முன்னோரும், கொளுவு நிலைக் காலத்தில் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத் தொடக்கத்தில் சுமேரியரின் முன்னோரும் பிரிந்து போயிருத்தல் வேண்டும் என்கிறார் (35). பொற்காலம் என ஒன்று தமிழகம் தவிர வேறு எந் நாட்டிற்கும் இருந்ததில்லை. அது மாழை (பொன்) பயன்கொண்ட காலம் என விரிவாக விளக்குகிறார் (37-44). இயற்கை வளம் நிறைந்த பொற்காலத்தில் கோடை மழை, காலமழை, அடைமழை, படை மழை ஆகிய நால்வகை மழையும் காலம் தப்பாது பெய்தது எனச் சுட்டுகிறார். இவற்றுள் படைமழை பாவாணர் ஆக்கச் சொல் (44). கற்கால மொழி இயற்கை அல்லது முழைத்தல் மொழி என்றும் (30) பொற்கால மொழி தொகுநிலை மொழி என்றும் (50) சுட்டி விளக்குகிறார். செம்பு என்பதை எடுத்துக்கொண்டு வேர் விளக்கமாகப் பற்பல காட்டி, நூற்றுக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் இனம் மறைந்து வழங்குகின்றன என்றும், தமிழ் உண்மையில் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும் என்றும் அறிந்து கொள்க என்பது தம்கோள் நிறுவுதலாய்ச் சிறக்கின்றது (58). பாண்டியன், சாத்து, தீவு, மண்டலம், தேயு, தாமரை, வடவை, நரன், ஐந்திணை இன்னபல சொற்கள் தனிநிலைக் காண்டத்தில் ஆய்ந்து தெளிவிக்கப்படுகின்றன. கலவுநிலைக் காண்டத்தில் அகத்தியர், இராமாயணம், பாரதம், நால்வரணப் பகுப்பு, முத்திருமேனிப் புணர்ப்பு, தொல் காப்பியம், கடைக்கழகக் காலமன்னர்கள், மொழி கலை இலக்கியத் துறைகளில் ஆரியக் கலப்பு என்பவை விரிவாக ஆராயப்படுகின்றன. முகமண்டபமும் கூடகோபுரமும் கொண்ட மணிமாட மாளிகைகள் நிறைந்த ஒரு மாநகரம், ஆழ்கடலில் மூழ்கிப்போன பின் அதன் கற்கள் சிலவற்றை எடுத்துக் கட்டிய ஒரு சிற்றில் போன்றதே தொல்காப்பியம் என்று பாவாணர் கூறுவதை நோக்க, அதற்குமுற்பட்ட தமிழ்வளம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பது அவர் ஆய்ந்து கண்ட வெளிப்பாடாம் (205). சகர முதற் சொற்களாக நூற்றுக்கு மேற்காட்டி, அவற்றுள் தொல்காப்பியர்க்கு முன்னவை, பின்னவை என வகுப்பது தனிப் பேராய்வாகும் (208-210). தமிழர் தம் கலவாணிகச் சிறப்பு அரிசி, இஞ்சி முதலாய சொற்களைக் கொண்டும், கலம் தொடர்பான பெயர்கள் உலக வழக்கில் உள்ளமை கொண்டும் உறுதி செய்கிறார். ஆரியர் பொருள் கவர்வு வகைகட்குத் தமிழக அரசர் ஏமாந்து நின்ற நிலை, குமுகாயக் கேடு, மொழிக்கேடு என்பவற்றை எடுத்துக் காட்டுடன் விளக்கி, இந்நாளிலும் அவற்றைப் போக்கக் கருதாமல், தமிழர் தமக்குள்ளே கலாமும் கலகமும் செய்து வருதலை நொந் துரைக்கிறார் (309). காட்டிக் கொடுக்கும் போலித் தமிழர் உதவியின்றிப் பிராமணர் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாக எதுவும் செய்ய முடியாது என்று அழுத்தமாகக் கூறுகிறார். பாவாணர் (240) நம்மைத் திருத்தாமல் நாம் திருந்தாமல் பிறரைப் பழித்தலால் என்ன பயன்? என்பதை எண்ணச் செய்கிறார் எனலாம். எதிர்காலத்திலேனும் பிராமணர் தமிழரோடு ஒன்றி வாழ்ந்து கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்றும் (358) படிப்படியே தமிழ்க் குடியினர் எவ்வெம்முறைகளை மேற்கொண்டு ஓரினமாதல் வேண்டும் என்றும் (367-68) கூறுவன மறுப்பற்ற பெருநலப் பார்வையாம். உலகத் தமிழ் மாநாடு பற்றிய பாவாணர் கருத்துகளை ஆளும் அரசு எண்ணிச் செயல்படின் மொழிக்கு ஆக்கமாம். 20. தமிழன் எப்படிக் கெட்டான்? தமிழ்த் தடைகளை யெல்லாம் சல்லி சல்லியாகத் தகர்த் தெறியவேண்டும் என்பதற்காகச் சில சிறு சுவடிகள் அச்சாவதாக 23.10.41இல் திருச்சிப் புத்தூரில் இருந்து கடிதம் எழுதியுள்ளார் பாவாணர். அச்சுவடிகள் 9. mt‰WŸ jiy¢ Rto ‘jÄH‹ v¥go¡ bf£lh‹? என்பது அது 40 பக்கம் 2 அணா என்று குறிப்பிடுகிறார் பாவாணர். அப்பதிப்புக் கிடையாமல் இருந்து திரு.தி.மா. சரவணன் வழியாகத் திரு.அரிமாவளவனார்க்குக் கிடைத்து மீள் பதிப்புப் பெற்றுள்ளது. திருச்சி பாலக்கரை இசுலாமிய அச்சு எந்திர சாலையில் சமரசம் வெளியீடு 1 ஆக 1941இல் வெளிவந்துள்ளது முதற்பதிப்பு என்பது அதனால் அறியப்படுகிறது. உள்ளடக்கம் என்னும் தலைப்பில் தமிழன் கெட்ட வழிகள் என்னும் குறிப்பில், மதப்பைத்தியம், கொடைமடம், இனநலம் பொறாமை அல்லது தன்னினப் பகைமை, குறிபார்த்தல், துறவியைப் பின்பற்றல், ஆரியம், அரசியற் கட்சிகள் என்னும் முறை வைப்பில் அமைக்கிறார். முறை முறையே விளக்கமும் புரிகிறார். முகவுரையில் வெள்ளைக்காரன் உடுத்திக் கெட்டான்; துலுக்கன் தின்று கெட்டான். தமிழன் வைத்துக் கெட்டான் என்னும் பழமொழியைச் சுட்டிக் காட்டி கல்வி செல்வம் என்னும் இருவகையையும் தமிழன் வைத்துக் கெட்டவனாய் இருக்கிறான் என்கிறார். ஒருவன் கெடுவது மூவகை என்னும் பாவாணர் ஒன்று அறிவோ பொருளோ அவையிரண்டுமோ இல்லாமை; அவை இருந்தும் பயன்படுத்தாமை; அவற்றைத் தவறாய் ஆளுதல் என்கிறார். முகவுரை நிறைவில், தமிழன் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே உலகத்தில் பலதுறைகளிலும் தலைசிறந்தவனாயிருந்தும் பிற்காலத்தில் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாது வைத்துக் கெட்டமை இச்சுவடியில் விரிவாய்க் கூறப்படும் என்று நுதலிப் புகுகிறார். தமிழர் மதம் தமிழர் வரலாறு முதலிய நூல்களில் பாவாணர் தமிழன் கெட்டவகைகளை எழுதியுள்ளார். அவற்றினும் இது விரிவுடையதாகும். இந்நூலை எழுதிய பின்னரும் நாற்பான் ஆண்டுகள் பாவாணர் வாழ்ந்தார். அதன் பின்னரும் இருபான் ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் பாவாணர் சுட்டிய குறைகள் ஏழும் மிகுதிப் பட்டுள்ளனவே அன்றிக் குறையும் பாடில்லை. அறவே தீரும்பாடு அரும்பவும் இல்லை. தமிழர் நலம் பேசி - புகழ் பேசி வந்தவர் தந்நலம் பெருக்கு வாராய், கூட்டுக் கொள்ளைக்கும் அதிகாரக் களத்திற்கும் பயன்படுத்துவாராய்த் தமிழர் தலைவர் என்பார் ஆகிவிட்டமையால் குறை களையும் குறிக்கோள் இல்லாராகிவிட்டனர். கரட்டு நிலத்தில் கார்சம்பா நட்டால் என்னாம்? பண்படுத்தம் இல்லாப் பயன்படுத்தம் அவ்வாறேயாம்! சில திருப்பதிகளில் தேரோட்டக்காலத்தில் தேர்க்காலின் கீழ்த் தலையைக் கொடுத்திறப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பழிவிப்பதும் அல்லது இழப்பதும் கோயில் வழிபாட்டிற்குச் சென்றவிடத்தும் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகை யராக விட்டுவிட்டு வருவதும் பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும் என்றும், தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி வேண்டாத வடசொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளை யும் தழுவுகின்றனர் என்றும் மதப்பித்தர் நிலையைக் குறிப்பிடு கிறார். தமிழன் கொடை மடம் எத்தகையது? இக்காலத்திலும் ஒருவன் பிறக்கு முன்பே தொடங்கி அவன் இறந்த பின்பும் ஒரு குலத்தாருக்கே தானம் செய்வது தமிழரின் பேதைமையாம். இதனால் வடநாட்டினின்று கையுங் காலுமாய் வந்த ஒரு சிறு கூட்டத்தினர் செல்வத்தால் சிறந்து வாழ, தமிழருட் பெரும்பாலார் வறியராய் வருந்துகின்றனர். ஒரு பார்ப்பனர் ஒரு கொடையாளியொடு பழகப் பெறின் அவர் கொடையைப் பெரும்பாலும் பிறகுலத்தார் பெறாதபடி, தங்குலத்தார்க்கே இயன்றவரை வரையறுத்துக்கொள்வது அவர் இயல்பு11. என்னும் பாவாணர் ஆங்கிலக் கல்விக்கே கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பவர் தமிழை இழிவு படுத்துபவராயும் இருத்தலைச் சுட்டிக் காட்டுகிறார். தன்னின நலம் காணப் பொறாமல் அயலின நலம் நாடும் தமிழர், நலங்கொல்லும் நச்சுக் காய்ச்சல்; வலிமையை அறுத் தெறியும் கூர்வாள் என்கிறார். வானியல் மருத்துவம் முதலாய கலைகளை வெளிப்படுத்தாமலே இனக்கேடு செய்த வகையையும் விளக்குகிறார். குறிபார்க்கும் கேடுகளை விரித்துரைக்கும் பாவாணர், ஒரு காரியம் செய்வதற்குக் காலம் பற்றிக் கவனிக்கக் கூடியவை யெல்லாம், தட்பவெப்ப நிலையும் செல்வ வறுமைநிலையும் தூக்க ஊக்க வேளையும் ஒளி இருட்காலமுமேயன்றி வேறன்று என்கிறார். துறவியரைப் பின்பற்றல் என்னும் பகுதியில் இல்லறம் துறவறம் ஆகிய இரண்டிற்கும் தனித்தனி சில சிறப்பியல்புகள் உண்டு. அவற்றில் அவை ஒன்றையொன்று பின்பற்றுதல் தவறாம் என்கிறார். பொருளில்லா விட்டால் ஒருவன் உயிர் வாழ முடியாது. பெண்டிர் இல்லாவிட்டால் இல்லறம் நடவாது. மக்கள் குலம் அழியும்; உடம்பைப் பேணாவிட்டால் நோய்ப்பட்டு ஒருவினையும் செய்ய முடியாது. பிறர்க்குப் பாரமாய் இருக்க நேரும். அதோடு வீடு பேற்று முயற்சியும் கெடும். பின்பு சாவும் வரும் என்று போலித் துறவியர் கொண்ட நிலையாமைக் கொள்கையைக் கொள்வதன் கேட்டை வரிசைப்படுத்துகிறார். துறவறத்திற்குரிய அருள் இல்லறத்தார்க்கு இருக்க முடியாது. அதனாலேயே அருளுடைமை, புலால் மறுத்தல், கொல்லாமை என்ற மூன்றதிகாரங்களையும் துறவறத்தில் வைத்துக் கூறினார். திருவள்ளுவர் எனத் தம் கருத்துக்குத் திருவள்ளுவச் சார்பை நாடுகிறார் பாவாணர். தமிழன் கெட்ட வழிகளில் மிகக் கொடியது ஆரியமே என்னும் பாவாணர், ஆரியர் தம்மைத் தாங்கிய தமிழரைக் கெடுக் கின்ற நன்றிக்கேடு பொறுக்குந் தரத்த தன்று என்று வருந்துகிறார். குலப்பிரிவுக் கேடு, கல்வியிழப்புக் கேடு என இருபகுப்பாய் ஆரியக் கேட்டை உரைக்கிறார் பாவாணர். பாணரின் இசை, வள்ளுவ இனக் கணியம், மருத்துவக் குடியினரின் மருத்துவம் ஆயவை ஆரியத்தால் அழிந்தமை முதலியவற்றைத் தெளிவிக்கிறார். மதியை விளைக்காதனவும் அடிமைத்தனத்தில் ஆழ்த்துவன வும் கலையிலக்கியங்களில் பொய்யும் புனைந்துரையுமானவுமான பல தீமைகள் தமிழர்க்குப் புகட்டப்பட்டன. இன்றும் ஆங்கிலேயரி னின்று விடுதலை யாவதினும் ஆரியரினின்று விடுதலை அடைவதே தமிழர்க்கு அரிதாகின்றது என்று முடிக்கிறார். அரசியல் கட்சிகள் என்னும் நிறைவுப் பகுதியில், நீதிக்கட்சித் தலைவர்கள் தெலுங்கரும் மலையாளியரும் தமிழறியாதவருமாக இருந்ததனால் தமிழ்வளர்ச்சிக்கோ தமிழ்ப்புலவர் முன்னேற்றத் திற்கோ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். காங்கிரசாட்சியில் தமிழர்க்கு விளைந்த தீமைகளுள் முக்கிய மானவை ஐந்து. அவை கட்டாய இந்தி, வகுப்புரிமையின்மை, பார்ப்பன ஆதிக்கம், பள்ளிகளை மூடல், பகுத்தறிவாளாமை என்பன என விளக்குகிறார். வடநாட்டுத் தலைவர்கள் தேசியத்திற்காகப் பாடுபட்டத னால் தமிழர் தமிழ்நாட்டையும் மொழியையும் இழக்கமுடியாது. தமயந்தியைப் பாம்பினின்றும் தப்புவித்த வேடன் அவளுக்குக் கணவனாக முடியாதே என நூலை முடிக்கிறார் பாவாணர். இந்நூலின் மீள்பதிப்பு 2001இல் தமிழர் களத்தின் பொருநை வெளியீடாக அரிமாவளவனாரால் கொண்டு வரப்பட்டது. 21. தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் செந்தமிழ்ச் செல்வியில் வேர்ச்சொற்கட்டுரைகள் வெளிவந்து நிறைந்தபின் தொடங்கப்பட்ட தொடர்கட்டுரை ஈதாகும். பாவாணர் வாழ்ந்த நாளில் நூலுருக் கொள்ளாதது மட்டுமன்றி அதன்மேல் இருபது ஆண்டு அளவும் கூட நூலுருக் கொள்ளாதது இது. இக்கட்டுரைகளுள் 22 தனிச்சொற்கள் பற்றியவை. இரண்டே இரண்டு மட்டும் தொகுதிச் சொற்கள் பற்றியவை. செந்தமிழ்ச் செல்வி 52 முதல் 55 வரை (1977 முதல் 1981 வரை) வெளிவந்தவை இவை. மகன் என்னும் ஒரு கட்டுரை மட்டும் இரண்டாகப் பகுத்து வெளியிடப்பட்டது. மற்றவை எல்லாம் தனித் தனிக் கட்டுரைகளே. உம்பர், உய், உருளை, அரத்தம், கண், காந்து, காலம், கும்மல், அந்தி, எல்லா, கலித்தல், மகன், மன், தெய்வம், புகா, பள்ளி, பாதம், புரி, பொது, பகு, பேசு, திரும்பு என்பவை தனிச்சொற்கள். பூனைப் பெயர்கள், சுள் என்பவை தொகுதிச் சொற்கள். உம்பர் என்னும் சொல்லை முதற்கண் கொண்டு சொல்வதால் அச் சொல் முகப்பு முன்னுரை போலவே அமைந்துள்ளது. இந்நூலுக்கு நூல் ஆசிரியன் முன்னுரை வாயாமையால் இதனை நினைவு கூரலாம். சமற்கிருதத்தின் தனியுடைமை யல்லாத நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் அதற்கும் தமிழுக்கும் பொதுவாக உள்ளன. அவற்றுள் பெரும்பாலன தமிழ் என்பது, அறிவியற் சொல்லியலால் இன்று வெட்ட வெளியாகின்றது என்னும் பாவாணர் ஆரிய மொழிச் சுட்டுகட் கெல்லாம் தமிழ்ச் சுட்டுகளே அடிப்படை என்கிறார். உம்பர் என்னும் சுட்டுச் சொல்லை முதற்கண் கொண்ட கரணியம் விளங்கச் செய்கிறார். ஊ முன்மைச் சுட்டு, மாந்தன் இயக்கம் அல்லது செலவு நிலத்தின் மேலும் மலையின் மேலும் நிகழ்வதால் முன்மைச் சுட்டு இடம் நோக்கி உயர்ச்சிச் சுட்டும் ஆகும் எனத் தெளிவிக்கிறார். உவன் - முன்னால் இருப்பவன் உம்பர் - மேலிடம் ஊப்பர், உப்பரிகை, சூப்பர் என இந்தி வடமொழி கிரேக்கம் முதலியவற்றில் இடம் பெற்றிருத்தலைச் சுட்டுகிறார். உகர முன்மைச் சுட்டு முற்செலுத்தும் வினைகளைக் குறிக்கும் என்பதை உய் என்னும் அடிச்சொல்லால் காட்டுகிறார். உகைத்தல், உந்துதல், ஊக்குதல், ஊதுதல், உய்த்தல், இய், இயல், இயவுள் என விரிதலை விளக்குகிறார். உருளை என்னும் சொல் மூலம் உல். அது, உலம் உலவு, உலகு, உழல், உருள் முதலாக விரிவாக்கம் பெறுவதையும் திரிவதையும் தெளிவிக்கிறார். அரத்தம் என்பது சிவப்பு என்னும் பொருளது. செங் கதிர், நெருப்பு, உருமம், உருக்கு: ஒள், ஒளி , அழல், அரி, அனல், அலத்தகம், இலங்கு, எல் எனத் திரிபாக்கம் பெற்று வண்ணவியல் தொடர்ந்தமைதலை நிறுவுகிறார். எடுத்துக்காட்டும் அடுத்த முதன்மைச் சொல் கண் என்பது. அது கருமைப் பொருளது. கண் என்பது மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு, துடவம், கோத்தம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கொண்டி, கொண்டா, குய், குவி, குருக்கு, மாலத்தோ, பிராகுவி ஆகிய மொழிகளிலும் இப்பொருளில் விளங்குதலைப் பட்டியலிட்டுக் காட்டுவது தனிச் சிறப்பாகும். மேலை மொழிகளிலும் வடமொழியிலும் இதன் திரிபு வடிவுகளே இருப்பதையும் விரிய எடுத்துக்காட்டி காண் என்பது ஞான் ஆகி வடசொல் பெருக்கத்திற்கு உதவியதையும் விளக்கும் பாவாணர், சமற் கிருதத்திற்கு ஞானத்தைத் தந்தது தமிழே என்னும் புகழ் நிலைத்து நிற்கும் என்கிறார். காந்து: கல், கள், கனல்; கும் கும்பு கும்மாயம்; குள் கொள் கொள்ளி; குர் குரு குருந்தம்; கள் கடு கடுகம்; கார் கால் காய் காந்து எனப் பலவும் வெப்பப் பொருளதாதலை விளக்குகிறார். காலம்: தமிழுக்கு அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆன சொற்களுள் ஒன்றாய காலம் என்பதையும் வடசொல்லாகக் காட்டுதலை மறுத்துத் தென் சொல்லே அது என்பதை ஆட்சி முறையொடு அறிவியல் முறையில் காட்டுவதாக முன்வைத்து வேர் விளக்கம் காட்டுகிறார் பாவாணர். கால் என்பதற்கு 39 பொருள்களை வரிசைப்படுத்துகிறார். கால், தோன்றல், காலம் என்னும் பொருள் தருதலை விரிவாக விளக்குகிறார். கும்மல் என்பதில், கூடுதற் கருத்தினின்று குவிதற் கருத்தும், குவிதல் கருத்தினின்று கூம்புதல் மூடுதல் மறைதல் அடக்கமாதல் அமைதியாதல் குறைதல் முதலிய கருத்துகளும் பிறக்கும் என முறை வைப்புச் செய்து அம்முறையில் நிறைக்கிறார் கட்டுரையை. எல்லா என்னும் விளிச்சொல் ஒத்த ஹல்லோ என்னும் விளிச்சொல் ஆறாயிரம் கல்தொலைவிலுள்ள ஆங்கில நாட்டில் தொன்று தொட்டு வழங்குதல், நூற்றுக் கணக்கான தென்சொல்லும் தென்சொல் திரி சொல்லுமாதலை ஐயுறுதற்கு இடமின்றிக் காட்டுமென உறுதிப்படுத்துகிறார். கலித்தல் என்னும் பிறப்புக் கருத்துவேர், குழ, குழவு; குட்டு குட்டி; குருத்து குருளை; கரு கருப்பம்; குன்னி கன்னி; கன், கன்று சன், ஜந் என மேலையாரியம் கீழையாரியச் சொல்லாதலை ஒருநூற்றுக்கு மேற்பட்ட எடுத்துக் காட்டால் நிறுவுகிறார். உன் - முன் - மன் - மன்திரம் - மந்திரம் என வரும் விரிவாக்கம் வியப்பு மிக்கது. தேய்த்தல் - தேய் - தேயு - தீ இயற்கை அறிவு கூர்ந்த எவரும் உணர்ந்து ஒப்பும் தகையது. இவ்வாறே பள்ளி, பாதம் புரி முதலிய சொற்களின் தனிப்பெரும் தன்மைகளும் விளக்கம் பெறுகின்றன. தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் தனிச் சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் இருவகைய. இவை முறையே தனியடியாரும் தொகையடியாரும் போல்வன என்று பூனைப்பெயர்கள் என்னும் தொகைச் சொல் எழுதும் பாவாணர் முகப்பில் பொறிக்கிறார். தனிச் சொற்கள் மொத்தம் ஐம்பது; தொகைச் சொற்கள் இருபது என்று சுட்டும் பாவாணர் தனிச் சொற்களாக எழுதியவை 22. தொகைச் சொற்களாக எழுதியவை 2. ஆக 70 சொற்களில் 24 சொற்களே எழுதியமைந்தது. அவர் புகழுடல் எய்திய திங்கள் அளவும் (1981 சனவரி) வந்து குறையளவில் நின்றுவிட்ட தொகுதி ஈதாம். பூசை, பிள்ளை, விடரகன், கொத்தி என்னும் பூனைத் தொகுதிப் பெயர்களையும், நெருப்புப் பற்றிய சுள் அடிச் சொற்களையும் (ஒள், அழல், உண்ணம், உருமம், சுள்ளம், சுண்டு, சூடு, சூர் சொல்) இணைத்துக் கொள்ளல் முறையாம். தமிழ்மொழி அமைப்பை விளக்கும் தனிவகுப்பு நடாத்தவும் பாவாணர் திட்டமிட்டார் (செ.செ.54:254) அத்திட்டத்திற்குச் சொல்லாய்வாளர், மொழிப்பற்று மிக்கார், தமிழுலா வந்த பெரியவர்கள் எனப் பலரை வகுப்புக் கேள்வியராகத் திட்டப் படுத்தினார். அத்திட்டம் தமிழகப் பரப்புத் தழுவியதாக இருந்தமை யால் அவர்கள் சென்னையில் கூடுதலும் கூட்டுதலும் அரிதாக அமைந்து போயது. இவ்வாறே பர்.தெ.பொ.மீ. அவர்கள் எழுதிய தமிழ் இலக்கணத்தில் அயன் மொழியமைப்புகள் என்னும் 330 பக்கத் திரிபாராய்ச்சி நூலைச் சிறு சிறு பகுதியாகச் செந்தமிழ்ச் செல்வியில் மறுத்து எழுதினார் பாவாணர். அதனை முற்றும் மறுக்க மூவாண் டாகும் ஆதலாலும், அதனால் தொகுப்பு நோக்குக் கெடும் ஆதலாலும், தமிழுக்குப் பெருந் தீங்கு விளைக்கும் கடுநச்சுப் பகுதிகள் இறுதியில் இருப்பதனாலும், அவற்றை விரைந்து மறுத்தொழிக்க வேண்டும் ஆதலாலும் மெய்யன்பர் சிலர் விருப்பிற் கிணங்கியும் மறுப்பு முழுதும் ஓர் எதிர் நூலாகவே வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று செந்தமிழ்ச் செல்வியில் ஓர் அறிவிப்புச் செய்து தொடர் கட்டுரை நிறுத்தப்பட்டது. நூலுரு வாக்கம் செய்யப் பெறாமல் நின்றும் போயிற்று. இவ்வாறு பாவாணர் திட்டமிட்டு நிறைவேறாது நின்ற சுவடிகளும் நூல்களும் பலவாம். 22. திராவிடத் தாய் 1944 இல் வெளிவந்த நூல் இது. முதற் பதிப்பு பாவாணர் தம் பதிப்பாக வந்தது. பின்னர் 1956இல் கழகப்பதிப்பாக வெளிப்பட்டது. 112 பக்கம் உடைய இந்நூலின் முன்னுரை 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. முகவுரை நான்கு பக்கங்கள் உண்டு. ஆய்வாளர்கள் பிற நாட்டுச் செய்திகளாயின் மறைந்த உண்மையை வெளிப்படுத்து வதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட உண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுளர் என்று வருந்தும் பாவாணர், கார்காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒரு நாள் திகழ்ந்து தோன்றுவது போல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று என்கிறார். தமிழையும் பிற திரவிட மொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையும் அறிவதுடன், உலக முழுதும் தழுவிய குலநூல், வரலாற்று நூல், மொழி நூல் ஆகிய முக்கலைகளின் திறவு கோலையும் காணலாம் எனத் தெளிந் துரைக்கிறார். முன்னுரையில், மொழி என்றால் என்ன, தமிழ் மொழி எது, தமிழ் என்னும் பெயர், குமரிநாடே தமிழ் தோன்றிய இடம், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது, தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந்தமை, தமிழினின்று பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள், திரவிடத்திற்கு ஆரியக் கலப்பால் வந்த கேடு, திரவிட மொழிகளெல்லாம் சேர்ந்தே முழுத்திரவிடம் ஆகும் என்பது, தமிழ்ப் பண்படுத்தம் கால்டுவெல் தமிழைச் சிறப்பித்துக் கூறுவன. கால்டுவெல் கண்ட மொழிநூல் முடிபுகள் என்பவை முன்னுரையில் விளக்கம் பெறுகின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய திரவிட மொழிகளின் வரலாறு, திரிபுற்றவகை, ஒப்பீடு என்பவற்றைத் தனித்தனிப் பகுதியாக ஆய்கிறார். ஒவ்வொரு மொழியிலும் வழங்கும் சொற்கள், பழமொழிகள் கதைகள் என்பவற்றையும் இலக்கண மரபையும் இனிதாக விளக்குகிறார். முடிவாக, இதுகாறும் கூறியவற்றால் தமிழல் - திரவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையும் முக்கியமு மான பகுதிகள் எல்லாம் தமிழே என்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புற வணியில் மட்டும் ஆரியம் தழுவின என்றும் அவ்வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே என்றும் வடமொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றமென்றும் தெரிந்து கொள்க என்கிறார். ஆன, ஆடு, எரும, ஒட்டகம், கழுத, வெருகு, கரடி, கன்னு, காள, குதிர, குரங்ஙு, நரி, நாய், பன்னி, புலி, பூச், மான், முயலு, மூரி, குறுக்கன் (குறுநரி) இவை மலையாளத்தில் வழங்கும் விலங்குப் பெயர்கள் சில. தந்த்த, அப்ப, அய்ய, தந்தெ, அண்ண, நம்ம, மாவ, அச்ச, அம்ம, அவ்வே, தாயி, அக்க, தங்கி, அத்தெ இவை கன்னடத்தில் வழங்கும் முறைப்பெயர்களுள் சில. தல, நுதரு, கன்னு, கன்னீரு, முக்கு, பல்லு, நாலுக, செவி, தாடி, தவட, முகமு, மீசமு, மெட, சேயி, உல்லமு, தொட, குதிகாலு, தோலு, ரத்தமு, நரமு இவை தெலுங்கில் வழங்கும் உறுப்புப் பெயர்களுள் சில. அப்ப, அரி, உப்பு, எண்ணெ, கஞ்சி, களி, கூளு, சாறு, தீனி, மந்து - இவை துளுவில் வழங்கும் உணவுப் பொருட் பெயர்களுள் சில. விளக்கச் சொல் இல்லாமலே காணத்தக்கவை தாமே இச்சொற்கள். பாவாணர் விளக்கச் சொல் தந்துளார். 23. திருக்குறள் தமிழ்மரபுரை திருக்குறளுக்கு உரைகண்ட பாவாணர், அவ்வுரை தமிழ் மரபு காக்கும் உரையென்பதை, நூற்பெயர் அறிந்த அளவால் அறியுமாறு இப்பெயர் சூட்டினார். அதற்குக் கரணியம், திருக்குறளின் முந்து நூல்கள் எனப்பட்டனவும், அதற்கு எழுதப்பட்ட உரைகளும் வடமொழி வழிப்பட்டனவாகக் காட்டப்பட்ட முரணை அகற்றி அரண் சேர்த்தற்கே ஆகும். பெறுதற்கரிய அறுசுவை அரச உண்டியில் அங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப உண்மைக்கு மாறானதும் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடுபயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு பரிமேலழகர் புகுத்தியிருப்பதை விலக்கவே இவ்வுரை எழுதியதாகப் பாவாணர் சுட்டுவது நூல்வரு நோக்கத்தைப் புலப்படுத்தும். நேசமணி பதிப்பக வெளியீடாக 1969இல் 15 உருபா விலையில் வெளிவந்தது தமிழ் மரபுரை. பக்கங்கள் 832 முகவுரை, நன்றியுரை, உள்ளடக்கம், முன்னுரை, ஆகியவை முற்பகுதியாக நூல் தொடர்ந்து, 24 பின்னிணைப்புகள், அருஞ்சொல் அகரமுதலி, பாட்டு முதற்குறிப்பு அகரமுதலி என்பவற்றொடு நூல் நிறைகின்றது. இவற்றுள், திருக்குறளிலுள்ள வடமொழிச் சென்ற தென்சொற்கள் என்னும் பகுதி, அங்கணம் தொடங்கி, வேலை முடிய 124 சொற்களின் வேர் விளக்கம், பொருள் விளக்கம், எடுத்துக்காட்டு என்பவற்றையுடைய தாகும். இவற்றை அகரநிரலில் அமைத்துள்ளமை மேலும் சிறப்பாம். திருக்குறட் சிறப்புச் சொற்கள் என அதிநுட்பம், அளறு அறன்கடை, கஃசு , குறியெதிர்ப்பை , கோட்டி கொளல், சோகா, தீயுழி, தோல், நெடுநீர், வரன் என்பவற்றைச் சுட்டுவதும், திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்துப் பிறந்து வாழ்ந்தவரேயாயினும், இவ்வுலகம் எங்குமுள்ள அறுவகை யுயிரிகளும் எக்காலத்தும் இன்புற்று நீடு வாழ வேண்டும் என்பதே அவர் திருவுள்ளமாகும் என்பதும் அரிய இனிய தொகைச் செய்திகள் (இணைப்பு 6; 23) தமிழ ஆரியக் கருத்து வேறுபாடுகள் என இருபத் தொன்றனைப் பட்டியலிட்டுக் காட்டுவது பாவாணர் தம் கூர்ந்தாய்வு முத்திரையாகும். (இணைப்பு 18) தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை, தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள், தமிழிலக்கியப் பொருட் பாகுபாடு, திருவள்ளுவர் வரலாறு, திருவள்ளுவர் காலக் குமுகாய நிலை, திருவள்ளுவர் காலச் சமயநிலை, திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம், திருக்குறட் சிறப்பு, பாயிர விளக்கம், பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள் என்னும் பன்னிரு தலைப்புகளில் முன்னுரை வழங்கியுள்ளார். (1-34). திருவள்ளுவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் பற்றியவற்றைக் கட்டுக்கதை என்னும் பாவாணர் வாசுகியார் மனைவி என்பதில் நம்பத்தகாதது ஒன்றுமில்லை என்கிறார். இவர் பெயரால் வழங்கும் சில நூல்கள் இவர் பெயரைத் திருட்டுத் தனமாகக் கொண்டனவே என்கிறார். திருக்குறளில் 16 சொற்களே வடசொற்கள் என்றும் அவற் றுள்ளும் அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே என்றும் கூறுகிறார். திருவள்ளுவர் பாண்டி நாட்டவர் என்பதை ஊருணி, பைய, வாழ்க்கைத்துணை என்னும் சொற்களைக் கொண்டு நிலைப்படுத்துகிறார். தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் என்பதும், இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள் வெண்பாவால் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப் பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவை யுண்டியைப் படைத்தாற் போலும் என்று திருக்குறளை நயப்பதும் பாவாணர் உள்ளச் சுரப்பாம். நூலில் கடவுள் வாழ்த்து என்பதை முதற்பகவன் வழுத்து என்கிறார். அதிகாரப் பெயரை விளக்கி, அடுத்து வரும் அதிகார இயைபு காட்டி முகப்பு, அதிகாரம் தோறும் அமைக்கிறார். இதன் தொடருரை (இ-ரை) என்றே சொல்லுரை (பதவுரை) வரைகின்றார். பெரும்பாலும் சொல்விளக்கம் பொருள் விளக்கம் இலக்கணக் குறிப்பு பிறருரை மறுப்பு, ஏற்பன ஏற்பு, மேற்கோள் ஒப்புமை என்பனவெல்லாம் விரிவாகவே வழங்குகிறார். கடவுளை வணங்காவிடின் கல்வியால் பயனில்லை என்பது இக்குறட் கருத்து எனக் கருத்துரையும் கருதுமாறு உரைக்கிறார். (2) இந்நான்கு குறளாலும், இம்மூன்று குறளாலும் எனத் தொடர்புரை வழங்கிச் செல்கிறார். வடநூற்சார்பு வேதவழக்கு எனப் பரிமேலழகர் கூறுவன வற்றை முற்றாக மறுத்து தென்னூற்சார்பு, தென்வழக்கு என்ப வற்றின் வழிப்பட்டது திருக்குறள் என்பதை நிலைநாட்டுதற்கே திருக்குறள் தமிழ் மரபுரை பாவாணர் வரைந்தார் என்பது நுனித்து நோக்குவார்க்கு எளிதில் விளங்கும். மேலும் நம்பா மதத்தார் உரைவழியில் பாவாணர் செல்லாமையும் புலப்படும். பெரும் பாலும் வழிமாறும் இடங்களில் அன்றிப் பரிமேலழகர் உரை, விளக்கம் ஆயவற்றை ஏற்றுக் கொண்டே பாவாணர் நடையிடு கிறார். வடசொல் என்றோ வடநூல் வழக்கு என்றோ அவர் கூறும் இடங்களில் திட்டவட்டமாக மறுக்காமல் பாவாணர் சென்றா ரல்லர். அவர்கூறும் பொருளைப் பொருளாகக் கொண்டாலும் விளக்க வகையாலேயே பாவாணர் அவர்க்குப் பெரிதும் முரண் பட்டுச் செல்கிறார். பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள் என்று முன்னுரையில் (32-34) குறிப்பிடுவனவற்றை நோக்கிய அளவால் இவ்வுண்மை புலப்படும். பாவாணர் உரைவரைந்து அதன்மேலும் கொள்ளத்தக்க வகையில் ஒருபொருள் கிட்டுமாயின் அதனைச் சுட்டிக் காட்டி இவ்வாறு உரைக்கினும் பொருந்தும் என்கிறார். எ-டு: 24. செயற்கரிய செய்வார் என்னும் குறளில் பெரியர் சிறியர் என்னும் இருவகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரை (உரியர்) உரைத்தல் சிறப்பன்று எனப் பாடவேறு காட்டுவாரை மறுப்பார். சுவை ஒளி என்னும் குறளில் மெய்யியல் கருத்துக்கள் மிகப்பல உரைக்கிறார். பூசனை என்பதற்கு மரபு விளக்கமும், பொருட்பெண்டிர் என்னும் குறளில் வரும் பொய்ம்மை முயக்கம் என்பதற்கு நாட்டு வழக்கமும் கூறிக் கருத்து விளக்கம் செய்கிறார். அறத்தாறிதுவென வேண்டா என்னும் குறளில் (38) பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையும் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே என்பதை இக்குறளுரை யாகக் கூறுவது இக் காலத்திற்கேற்குமேயன்றி ஆசிரியர் கருத் தாகாது என்கிறார். தெய்வம் தொழாஅள் என்னும் குறளில், ஒழுகால் வள்ளுவர் குறள் பண்டைக் காலத்து ஒரு பத்தினிப்பெண் செய்த இறும்பூதை (அற்புதத்தை) அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்கலாம் என்னும் பாவாணர் உயர்வு நவிற்சியாகக் கொள்ளின் ஒரு குற்றத்திற்கும் இடமில்லை என்பார். மேலும் புரட்சிப் பாவலர் பாரதிதாசனார் பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என்று பொருள் கூறிப்பொருத்தமாக்குவர் என்றும் குறிப்பிடுகிறார். (55) அடியளந்தான் தாயது என்பதற்கு (610) கதிரவன் மூவெட்டால் கடந்த மாநிலம் முழுவதையும் எனப்புதுப் பொருள் காண்கிறார். வேத ஆரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததைக் காட்டுகிறார். மருந்து என்னும் அதிகாரப் பத்துப் பாட்டுக்கும் பதினைந்து பக்கம் உரைவரைகிறார் பாவாணர். அத்தகு விரிவுரை அனைத்திற் கும் எழுதியிருப்பின் ஈராயிரம் பக்கங்களுக்கு மேலும் உரை வளர்ந்திருக்கும். நாட்டுமருத்துவத் தோய்வு நன்கு வெளிப்பட விளக்கும் உரை அது. (அதி. 95) இன்பத்துப்பால், களவியல் முகப்பு விரிவு மிக்கது. இன்பத்துப் பால் குறள்களுக்கு நிகழ்ச்சி விளக்கம் (கிளவி விளக்கம்) காட்டி நாடக நடைப்படுத்துகிறார். உற்றுழி உதவினோர் உறுபொருள் கொடுத்தோர் பற்றிய செய்திகள் கட்டளைக் கலித்துறைப் பாவாகக் கிளர்ந்தன. உலகத் தமிழ்க்கழக முதல் மாநாடு பறம்புக் குடியில் (1969) நிகழ்ந்த போது அம் மாநாட்டில் வெளியிடப் பட்டது திருக்குறள் மரபுரை. உரிமை ஞானமுத்து தேவநேயன் (1902) என்பது. 24. துவாரகை மன்னன் அல்லது பூபாரந் தீர்த்த புண்ணியன் இச்சுவடி பாவாணர் மன்னார்குடியில் பணியாற்றிய காலத்தில் வெளிப்பட்டது. ஆண்டு 1945 . ஸ்ரீ ஷண்முகா பப்ளிஷிங் ஹவு வெளியிட்டுள்ளது. விலை அணா 12. இதற்குக் கா.சுப்பிர மணியப்பிள்ளை முன்னுரை வழங்கியுள்ளார். அவர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய fhy¤ânyna K‹Diu tH§»íŸsh®. நாள்: 18.9.29. முன்னுரை வழங்கிய காலத்திற்கும் பதிப்பிற்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி அப்பதிப்பு மீள்பதிப்பு என்பதை உணர்த்துகிறது. பக்கம் 89. செவ்விதிற் சுருக்கி வரையப்பட்ட நூல் என்றும் . இனிய உரைநடையும் இடைஇடை எளிய அழகிய பாடல்களும், கொண்ட நூல் என்றும் மாணவர் செந்தமிழ் உரைநடை பயில வழிகாட்டி என்றும் கூறுகிறார் கா.சு. மாணவர் பயன்பாடு கருதி எழுதப்பட்ட நூல் இது என்னும் பாவாணர், இதில் பாகவதப் பகுதியும் பாரதப் பகுதியும் கலந்துள்ளன. இதுவே இந்நூற்குச் சிறப்பாகும். வேண்டாப்பகுதிகள் விலக்கப்பட்டன என்கிறார். திருவவதாரம் தொடங்கி வைகுந்த வைபவம் இறுதியாக 29 குறுந்தலைப்பில் கதை வரையப்பட்டுள்ளது. முதற்கண் தோற்றுவாயுடன் 30 பகுதி. நிறைவில் தசாவதார நோக்கம் என்பதொன்றும் உண்டு. பதின் திருப்பிறப்புகளைப் பற்றியும் சுருங்கக் கூறி வில்லியார் பாடலொன்றை எடுத்துக் காட்டுகிறார். தசாவதார நோக்கம் கொடியரை நீக்கி அடியரைக் காத்தல் (துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்) என்கிறார். அன்றே மொழியாக்க நோக்கு அரும்பியமை இப்பெயர்ப்பாலே புலப்படும். ஒருவனுக்குத் தன் உயிரே மிகவும் அருமையானது ஆயினும் அறிவுள்ளவன் எப்போதும் மன்னுயிரையே kâ¥gh‹”(4) கல்வியினால் அறிவும், அறிவினால் ஒழுக்கமும், ஒழுக்கத்தி னால் உயர்வும் உண்டாகும் (28) உலகத்தில் ஒருவர்க்கு உடன்பிறப்பு மிகவும் அருமையாம். அதிலும் உடன்பிறந்தார் ஒற்றுமையால் உடன் வாழ்தல் மிகவும் பெருமையாம். கண்ணி ருந்தால் கைபடும். நாவிருந்தால் பல்படும். அதுபோல உடன்பிறந்தார்க்குள்ளும் தவறுண்டாதல் உலக வழக்கம். அதுபற்றி ஒருவரை ஒருவர் பகைத்தல் ஒவ்வாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை (58) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; அதுபோலப் பிள்ளைகளும் அளவாய்ப் பிறக்கவேண்டும் (75) உழவர் பயிரை வளர்ப்பதற்குக் களைகளைக் களைவார்; களைகள் இல்லாத விடத்துப் பயிர் அடர்த்தியாயிருப்பின் பயிரையும் களைவார் (81) இன்னவை இடை இடையே வரும் அருமை உரைகள். சூதும், தாயம் சீட்டு கவறு கட்டம் சொக்கட்டான் எனப்பல. இது பாவாணர் இளமையிலேயே கொண்ட தொகை (தொகுப்பு) நிலை. (55) குறை யறை என்பது குறைநீக்குதல் (74) அறிவறை என்பது சிலம்பு. கட்டுரைக் கசடறை என்பது பாவாணர் நூல்களுள் ஒன்று. குடிப்பது கூழ்; உடுப்பது கந்தை (76) ஆட்டத்தைக் காட்டி நாட்டத்தைக் கவர்ந்தான் (55) கண்ணபிரான் ஒருவரே திருக்குழந்தை, மற்றவை கருக்குழந்தை (77) பற்றறுத் தார்க்கெல்லாம் பரமபதப் பேறு திண்ணம் (87) - இன்னவை பாவாணர்க்கு அந்நாளே கைவந்த எதுகை, மோனை, இயைபு நடை வனப்புகள். கிட்டுதற்கு அரிதாகிவிட்ட இந்நூல் சிங்கபுரி வாழ் சீர்மையர் கோவலங் கண்ணனார் வழியாகக் கிடைத்தது (16.4.2002) 25. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் தமிழ நாகரிகம் மேலை நாட்டார்க்குத் தெரிந்த அளவு கூடத் தமிழர்க்குத் தெரியாது. மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருத்தலால் இதை நீக்குதற் பொருட்டு இந்நூலை எழுதத் துணிந்தேன் என்கிறார் பாவாணர். இந்நூல் 1966 இல் நேசமணி பதிப்பக வாயிலாகக் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டச் செட்டிக்குளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் உதவி கொண்டு வெளியிடப்பட்டது. நாகரிகம் என்னும் சொல்விளக்கம் பண்பாடு என்னும் சொல்விளக்கம், இரண்டற்கும் உள்ள வேறுபாடு, இந்திய நாகரிகம் தமிழரதேயாதல், இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள், குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும் என்பவை முன்னுரையாய் 23 பக்கங்களில் அமைகின்றன. பண்டைத் தமிழ நாகரிகம், பண்டைத் தமிழப் பண்பாடு என்பவை இருபகுதியாய் நூல் 240 பக்க அளவில் அமைகின்றது. விலை உருபா 6.25 நாகரிகம் என்பது நகரமக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே என்று விளக்குகிறார் பாவாணர். பண்படுவது பண்பாடு, பண்படுதல் சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப் பட்ட நிலமென்றும் திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும் திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம் என்கிறார் (6) இரண்டற்கும் உள்ள வேறுபாட்டை, நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது என்று தெளிவாக்குகிறார். நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடு, நாகரிகம் இன்றியும் பண்பாடு உண்டு. அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சியவை உண்டு என்று காக்கை, புறா முதலிய வற்றைக் காட்டிக் கூறுகிறார். (9) தமிழ நாகரிகப் பகுதியை மொழி துப்புரவு, ஊண், உடை, அணி, உறையுள், ஊர்தி, வாழ்க்கை, சமயம், தொழில், வாணிகம், அரசியல், கல்வி, கலை, அறிவியல் பொழுது போக்கு எனப் பகுத்துக் கொண்டு வரைகிறார். கலைகள் இருபத்து மூன்றும் அறிவியல்கள் இருபத்து நான்கும் இடம் பெற்றுள. இந்நூலுள் நாகரிகப் பகுதியே மிகுதி (24-195) பண்பாடு என்னும் பகுதியில் மாவலி தனக்கு இறுதி நேரும் என்று அறிந்தும் வாய்ச் சொல் தப்பாமையையும். அந்தணர் பண்பாடு அருள் என்றும், மூலன் என்னும் ஆயன் இறக்க அவன் ஆக்களின் கவலையைத் தீர்த்த திருமூலர் அருண்மையையும் சுட்டுகிறார். புலவர் ஆசிரியர் பூசாரியர் கணியர் ஓதுவார் கணக்கர் எனப் பல பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும் இல்லறத்தார் பார்ப்பார் எனத் தெளிவிக்கிறார். (204) அறத்திற்காகக் காசிலா ஓடம் விடுவாரையும், எளியரிடம் களவு செய்யாக் கள்வர் பண்பாட்டையும் எடுத்துரைக்கிறார். மந்திரம் என்னும் சொல் வரலாற்றை இணைப்பாகக் கூறும் பாவாணர் மன் திரம் என்னும் கூட்டுச் சொல் மந்திரம் எனத் திரிந்தமையை விளக்குகிறார் வாய்மொழியே மந்திரம் என்றும் நிலை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பியர் உரை எனினும் அவர்க்கு முற்பட்ட பழமையது என்றும் தெளிவிப்பார். 26. பழந்தமிழாட்சி 1952இல் வெளிவந்தது இந்நூல். பழந்தமிழாட்சி பற்றித் தமிழில் போதிய விரிவான நூல் இல்லாமையால், தாம் இலக்கியம் கல்வெட்டு உலக வழக்கு ஆகிய முந்நிலைக் களத்தினின்றும் தொகுத்து எழுதியதாகக் கூறுகிறார் பாவாணர். இந்நூலைப் பயில்வார் பழந்தமிழ் அரசியலைப் பற்றித் தெளிவான அறிவு பெறுவார் எனக்கருதுகிறார் பாவாணர். அரசியலுறுப்புகள் முதலாக அரசர் முடிபு ஈறாக 26 தலைப்புகளில் நூல் இயல்கின்றது. பின்னிணைப்பாக மக்கள் நிலைமை, மொழி நிலைமை, சீமையரசாட்சி வகைகள் வேத்தியல் எழுத்தும் நூல்களும் சிறப்புப் பெயர்களின் அகர வரிசை என்பவை இடம் பெற்றுள. நூல் 196 பக்கங்களில் இயல்கின்றது. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என உறுப்புகளை எண்ணும் நாம், ஒரு நாடு அல்லது சீமை (State). 1 .ஆள்நிலம் (Teritory) 2 குடிகள் (Population) 3. அரசியல் (Government) 4. கோன்மை (Sovereignty) என நாலுறுப்புகளையுடையது எனப் பாவாணர் தொடங்குவதை நோக்க உலக அரசியலொடு ஒப்பு நோக்குப் பார்வை பாவாணர்க்கு உளதாதல் தெளிவாம். அரசியல் என்பது சட்டம் அமைப்போர், கருமம் ஆற்று வோர் நடுத்தீர்ப்பாளர் என்னும் முத்துறை அதிகார வகுப்புகளை உறுப்பாகக் கொண்டது என்பதும் மேல் விளக்கம் தரும் சிற்றரசர் மன்னர், தலைமையரசர் வேந்தர், கோ எனவும் வழங்கப்பட்டதைத் தெளிவிக்கிறார். (16) அரசர் அமரும் அரியணைகளுக்கும் பெயருண்டு என்கிறார். (25) அரசச் சின்னங்கள் பதினைந்தை வரிசைப் படுத்தி விளக்குகிறார். (21-30) அரசியல் வினைஞர் பெயர் செயல் ஆயவற்றை விரிவாகக் கூறுகிறார். (31-39) வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் தகுதி எனவும் தகாதார் எவர் எனவும் கூறுவன கொண்டு அந்நாளின் அரசு அறத்தை எத்தகு சிறப்பாகப் போற்றியது என்பதை அறிவதுடன் முடியாட்சியில் போற்றிய குடியாட்சி முறைச் சிறப்பும் புலப்படும். இந்நாளில் தக்கார் தகுதிக்கு எவரேனும் அமைவரா என மேலோட்டமாகப் பார்ப்பினும் அமையார் எனவே படுதல் உறுதி. பாதுகாப்பு என்பதை விளக்கும் பாவாணர் வளைவிற் பொறி முதலாக அரிநூற் பொறி ஈறாக முப்பத்தைந்து பொறிகள் அரணத் திருந்தமையைச் சிலம்பு வழியாகக் காட்டுகிறார். ஆவணத்திற்கு ஏடு,ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை, தீட்டு, நறுக்கு,பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும் அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கியமை தெரிவிக்கிறார் (78) வாங்கப்பட்ட வரிகள் அங்காடிப்பாட்டம் முதலாக மடக்குவரி ஈறாகக் குறிப்பிடுகிறார். வரிகளின் எண்ணிக்கை 225. பாவாணர் செய்த அடைவு முயற்சி காட்டும் சான்று இது. இக்காலத்தில் இல்லாத ஆள்வரி, மணவரி. துலாபார வரி முதலிய சில வரிகள் அக்காலத்திருந்தமை சுட்டுகிறார். (86) அரசர்க்கு அடங்காது வாழ்ந்தவர் ஊர், அடங்காப் பற்று! ‘v‹d brŒthŒ v‹id? என்பார் என்றும் உண்டு தானே! (125) ஆசு கவிகள் காசு என்பது பிற்காலத்து வாங்கப்பட்ட ஒரு வரி. அது அரச ஒப்பம் பெற்றுப் புலவர் வாழ்க்கைச் செலவுக்கு வாங்கப்பட்டது போலும் என்கிறார் பாவாணர். புலவர் முற்றூட்டு பொதுமைப்படுத்தப்பட்ட திட்டமாகலாம் இது (142) வேத்தியல் எழுத்தும் நூல்களும் என்னும் இணைப்பில் அரசு சார்ந்து வளர்ந்த இலக்கிய வரலாறு ஆகும். சில அரசியற் கருத்துக்கள் என்னும் குறிப்புக்கள் இருபத்தொன்பதும் அரிய தொகுப்பு ஆகும். (154-156). பாவாணரின் வரலாற்றுப் புலமையை வெளிப்படுத்தும் நூல் இஃதாகும். 27. மண்ணில் விண் பாவாணரின் பன்முக அறிவாற்றல் திறங்களைப் பளிச்சிட்டுக் காட்டும் நூல் மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை என்பதாகும். நேசமணி பதிப்பகம் வழியாக 1978 இல் வெளிவந்த இந்நூல் 248 பக்கங்களைக் கொண்டது. விலை உருபா 12. இந்நூல் வெளியீட் டுக்கு நெய்வேலி உ.த.க. நேயர்கள் பணக்கொடை புரிந்துளர். தக்க அரசிருந்து செங்கோலாட்சி செய்யின் விண்ணுலக இன்பம் மண்ணுலகத்திலும் நுகர்தல் கூடும் என்பது நூலாசிரி யரின் முகவுரை. கூட்டுடமையைப் பொதுவுடைமை என்று பலர் தவறாகக் கூறுவர். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன் படுத்தி, ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும் என்று இம்முக வுரையிலேயே குறிப்பிடுகிறார். எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும் வகுப்பு வேற்றுமையைத் தோற்றுவிக்காததும், உடம்பியற் பண்பாட்டை யும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும், இறைவழி பாட்டை மறுக்காததும், தனியுடைமையை விலக்காததும், பகுத்தறி விற்கு முற்றும் ஒத்ததும் உயரியதுமான கூட்டுடமையாட்சி அல்லது வாழ்க்கை கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுவே, இப்பொத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது என்று இப்பகுதியிலேயே நூற்பிழிவைத் தந்துவிடுகிறார் பாவாணர். நூல் முன்னுரைப் பகுதியில் பண்டைத் தமிழக அரசு வரலாறு, பண்டைத் தமிழக ஆட்சி முறை, அரசின் பயன், அரசியல் வளர்ச்சி வரலாறு, உலக நாட்டு வகைகளும் அரசு வகைகளும், கூட்டுடமைத் தோற்றம், கூட்டுடமை வகைகள் பொதுவுடைமை என்னும் பெயர் பொருந்தாமை, கூட்டுடமையே அரசின் முதிர் நிலை, குடியரசியல்பு என்னும் பதின் உட்பிரிவுகள் இடம் பெற்றுள. (1-36) அரசியல் வளர்ச்சியில் கிரேக்க அரசு, உரோம அரசு, ஆங்கில நாட்டரசு, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு, பிரெஞ்சு அரசு, சுவிட்சர்லாந்து அரசு, இரசிய அரசு என்னும் எழுவகை அரசுகளின் அமைவுகளையும் விளக்குகிறார். கூட்டுடமை வகைகளை, உடன்புரட்சிக் கூட்டுடமை, படிமுறைப் புரட்சிக் கூட்டுடமை, வள்ளுவர் கூட்டுடமை என மூன்றாகக் கூறி, வள்ளுவர் கூட்டுடமை எல்லார்க்கும், எக்காலத் திற்கும் ஏற்றதாகும் என்கிறார் (34) ஒரு குடும்பத்தில் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊன் உடை உறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்று கூட்டுடமையே குடியரசின் முதிர்நிலை என்பதில் சுட்டுகிறார். செங்கோலாட்சியோடு கூடிய இரு கட்சி அரசே குடியரசிற்கு ஏற்றது என்று பல்கட்சி, பல்குழுக்கேடுகளைக் கருதச் செய்கிறார் குடியரசியல்பு என்பதில். வள்ளுவர் கூட்டுடமை, தமிழ்நாட்டு அரசின் கடமை, தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை, நடுவணரசின் கடமை, உலகக் கூட்டரசு, முடிவுரை என ஆறு பகுதிகளைக் கொண்டது நூல். வள்ளுவர் கூட்டுடமை என்பதை ஒன்பது உட்டலைப்புக ளாக வகுத்து வரைந்துள்ளார் பாவாணர்; அவை; வள்ளுவர் கூட்டுடமை இயல்பு, வறுமையடையும் வகைகள், மக்கட்பண்பாடு, வள்ளுவர் கூட்டுடமையின் தனிச்சிறப்பு, கூட்டுடமையின் நன்மைகள், கூட்டுடமைப் பண்பாடு, மக்கட் பெருக்கம், மக்கட் பெருக்கத் தீமைகள், மக்கட்பெருக்க மட்டுப் படுத்தம் என்பவை. வள்ளுவர் கூட்டுடமை, எல்லார்க்கும் ஏற்றது. ஈகையாளர்க் கும் புதுப்புனைவாளர்க்கும் தமிழ்ப்புரவலர்க்கும் கல்வி வள்ளலர்க் கும் செல்வ வரம்பிடாதது மதத்தில் தலையிடாதது என்று அதன் தனித்தன்மைகளைத் திட்டப்படுத்தி நயனுறக் கூறுகிறார். கூட்டுடமையின் நன்மைகளாக அனைவர்க்கும் வேலைப் பேறு, இரப்போர் குடிவாணர்க்குத் தொல்லை தராமை, வாழ்க்கைக் கவலையின்மை, ஆசையடக்கம், ஆள்நர் அமைச்சர் அதிகாரிகள் முதலியோர் ஊழலுக்கிடமின்மை, கல்லாமை இல்லாமை, குலப் பிரிவினை நீக்கம், நாட்டமைதி, அரசுச் செலவுக் குறைவு, ஒழுக்க உயர்வு, உயிர்ப்பாதுகாப்பு, பொருட்சேதமின்மை, குடும்ப உணர்ச்சி, வாழ்நாள் நீடிப்பு, உலக ஒற்றுமைக்கும் உலகப் பொது ஆட்சிக்கும் வழிகோலல் எனப் பதினாறு பேறு கூறல் பாவாணரின் நுண்ணிய பார்வைக் கொடையாகும். (47-51) மக்கட்பெருக்கம் முதலான மூன்று உட்டலைப்பும் ஒருபொருள் பற்றியன. கடினமான நோய்க்குக் கடினமான மருந்தே வேண்டும் என்று துணிவு மிகப் பல கருத்துகளை வெளியிடுகிறார். அவற்றுள் கட்டாய மலடாக்கம் என்பதொன்று. மக்கட்பேறில் லாமை, துறவு என்பவற்றைப் பாராட்டிச் சிறப்புச் செய்தலோடு வேண்டும் உதவிப்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்பது பின்பற்ற வேண்டிய இன்றியமையாமை உடையதாம். (65-69) எந்நாட்டு நலத்திற்கும் பொதுவாக அமையும் திட்டங்களைத் தமிழ் நாட்டரசின் கடமை என்னும் தலைப்பிலும், தமிழ்நாட்டு அரசுக்கென உள்ள வடமொழி, இந்தி வல்லாண்மைகளை ஒழித்தல் தமிழைப் பேணிவளர்த்தல், இருமொழிக் கொள்கை ஏற்றல் என்பவற்றைத் தமிழ்நாட்டரசின் தனிக் கடமை என்னும் தலைப்பிலும் பகுத்துக் கொள்கிறார். போக்குவரத்து, தற்காப்பு,வெளிநாட்டுறவு, நடுத்தீர்ப்பு என்னும் நாற்பெருந் துறையில்தான் நடுவணரசிற்கு அதிகாரமுண்டு. ஏனைத் துறைகளில் எல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப் பெற வேண்டும் என ஆணை மொழி போல் அரசுக்கு உரைக்கிறார். (107) ஆங்கிலத்தை அகற்றல் ஆகாது என்றும், ஆற்றுநீர்ப் பாசனம் நடுவண் ஆட்சிக்கு உட்படல் வேண்டும் என்றும், வேட்பாளர் தகவு, தகவின்மை இவை என்றும், வெளிநாட்டுறவு இத்தகைத்து என்றும் நடுவண் அரசின் கடமைப் பகுதியில் எடுத்துரைக்கிறார் பாவாணர். இலங்கையின் இந்தியத் தூதாண்மைக் குழுத் தலைவர் இனப்பற்றுள்ள தமிழராகவே இருத்தல் வேண்டும். ஒருநாட்டில் பன்னீராண்டு தொடர்ந்து குடியிருந்தவர்க் கெல்லாம் குடியுரிமை உரியதாகும். அவரை நாட்டை விட்டகற்று வது நாகரிக அரசிற்கு உரியதன்று கருநாடக அரசு புதிய அணை கட்டுவதை நடுவணரசு உடனே தடுத்தல் வேண்டும். அதற்கு அவ்வரசு இணங்காவிடின், பன்னாடு பாயும் இந்திய ஆறுகளை எல்லாம் தேசியப் படுத்திவிடல் வேண்டும் என்று சுட்டுபவற்றைச் செவிக் கொள்ளா அரசுகள் வழியாக நேர்ந்துள்ள கேடுகளை எண்ணத்தொலையுமா? 1973 இலேயே பாவாணர் எழுதிய எழுத்துகள் இவை. உலகக் கூட்டரசின் இன்றியமையாமையை உரைக்கும் பாவாணர் அதன் நன்மைகளைப் பட்டியலிட்டுப் பதினாறு காட்டுகிறார். நிறைவில் இத்தகைய விண்ணக இன்ப வாழ்வை மண்ணகத்தில் நிறுவுவதற்கு, உலக முதுநாடாகிய இந்தியாவே உலக முதுமொழியாகிய செந்தமிழைக் கொண்டு விரைந்து அடிகோல வேண்டும் என்று கூறி நூலை முடிவுரை, மக்கள் வாழ்த்து என்ப வற்றுடன் முடிக்கிறார். (248) சாதி ஒழிப்பு, குடும்பக் கட்டுப்பாடு, மது ஒழிப்பு, தீயோரைத் திருத்துதல், பல்வேறு நாட்டு அரசமைப்பு இன்னன இந்நூலில் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள என்பது குறிப்பிடத்தக்கதாம். 28. முதல் தாய்மொழி முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்னும் நூல் கழக வெளியீடு 631 ஆக வெளிவந்தது. முதல் பதிப்பு சனவரி 1953. ஆசிரியர் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் எம்.ஏ; உரிமை; D. அன்னபூரணம் என்பவை ஆசிரியர் பற்றியும் உரிமை பற்றியும் உள்ளவை. என் முதல் தாய்மொழியை அச்சிடவேண்டும். அதன்பிறகு தான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும் என்று பாவாணர் கழக ஆட்சியாளர்க்கு எழுதிய அஞ்சலால் (14.8.1931) இந்நூல்மேல் பாவாணர் கொண்டிருந்த மதிப்பீடும் அப்பொழுதே எழுதியிருந்த அல்லது எழுதத் திட்டமிட்டிருந்த குறிப்பும் வெளிப்படும். இதனைத் ஆக்கித் தந்த மெய்ப்பொருள் காணும் பேரறிவு படைத்த புலவர் திரு. தேவநேயனார் என்பது பதிப்புரையில் பாவாணர் பற்றிய குறிப்பு. கணிதமும் அறிவியலும் எங்ஙனம் திட்டமும் துல்லியமு மான நூற் கலையோ, அங்ஙனமே மொழி நூலும் என நூன் முகவுரையில் குறிப்பிடுகிறார் பாவாணர். மேலும், மொழியானது இந்நாட்டில் பொதுவாய்க் கருதப் படுகிறபடி இறைவனாற் படைக்கப்பட்டது மன்று; இயற்கையாய் உள்ளதுமன்று; மாந்தனால் ஆக்கப்பெற்றதே. ஆயின், ஒருவனால் மட்டுமன்று; கழிபல ஊழிகளாகக் கணக்கற்ற தலைமுறையாள ரால் சிறிது சிறிதாய் ஆக்கப் பெற்றதாகும். என்று மொழி தோன்றிய வகையை எடுத்துரைக்கிறார். தமிழ் எங்ஙனம் ஒன்றன் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்துள தென்பது, இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுளது என்று நூல் இயங்கும் வகையையும் தெளிவிக்கிறார். பாவாணர் சேலங்கல்லூரியில் பணி செய்த காலம் அது. முகவுரையில் உள்ள நாள் 21.2.49 என்பது. வழக்கம் போல் பாவாணர் விரிவான முன்னுரை வரைந் துள்ளார். குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம், மக்கள் ஞாலத்திற் பரவிய வகை, மொழி தோன்றிய வகை, தமிழ் முதல் தாய் மொழி என்பதற்குக் காரணங்கள், பெரும்பான் மொழிகள் தமிழை ஒவ்வாதிருத்தற்குக் காரணங்கள், மொழிகள் மாந்தன் அமைப்பே, மொழிவளர்ச்சி ஒரு திரிந்தமைவு, தமிழ் அல்லது தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்பதற்குக் காரணங்கள் என எண் வகையில் பகுத்து விரித்து எழுதுகிறார். ஒவ்வொன்றன் காரணங்களையும் எண்ணிட்டு வரிசைப்படுத்துகிறார். இனி நூலைக் காண்டம், படலம்., இயல், துறை என ஒன்றனுள் ஒன்றாகப் பகுத்துத் திட்டமுள்ள யாப்புறவில் அமைத் துள்ளார். காண்டங்கள் குறிப்பொலிக் காண்டம், சுட்டொலிக் காண்டம் என இரண்டே. முன்னது ஐம்படலங்களையும் பின்னதும் ஐம்படலங்களையும் உடையனவே. எனினும் பின்னதன் விரிவாக்கமே நூல் ஆகின்றது. பின்னதிலும் ஈகார ஆகாரச் சுட்டுப் படலங்களினும் ஊகாரச் சுட்டுப் படலம் ஒன்றே 95 விழுக்காடு விளக்கம் பெறுகிறது. குறிப்பொலிக் காண்டத்தில் உணர்வொலிப்படலம், ஒப்பொலிப்படலம், குறியொலிப்படலம், வாய்ச் செய்கை யொலிப்படலம், குழவி வளர்ப்பொலிப்படலம் என்பவை உள. இவ் வைவகை ஒலிகளுள் வாய்ச் செய்கையொலியும் அதனினும் ஒப்பொலி களும் மொழிவளர்ச்சிக்குத் துணையாவதை அக்காண்ட நிறைவில் சுட்டுகிறார். சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களையும் முறையே சுட்டக்கூடிய ஒலிகள் ஆ,ஈ,ஊ என்னும் மூன்றாய்த்தான் இருக்க முடியும். வாயை ஆவென்று விரிவாகத் திறந்து சேய்மையைச் சுட்டும் போது ஆகார ஒலியும், ஈயென்று பின்னோக்கி இழுத்துச் சேய்மைக் குப் பின்மையாகிய அண்மை யைச் சுட்டும்போது ஈகார ஒலியும், ஊவென்று முன்னோக்கிக் குவித்து முன்மை யைச் சுட்டும்போது ஊகாரவொலியும் பிறத்தல் காண்க முச்சுட்டும் சுட்டும் மூவிடங் களையும் குறிக்கும் பாவாணர், நெடிலின் குறுக்கம் குறிலும் குறிலின் நீட்டம் நெடிலும் ஆதலின் ஆ,ஈ,ஊ எனினும் அ,இ,உ எனினும் ஒன்றே. குறிலினும் நெடில் ஒலித்தற் கெளிதாதலானும், குழந்தைகள் குறில்களைப் பெரும்பாலும் நெடிலாகவே யொலித்தலானும், குழந்தை நிலையில் இருந்த முந்தியல் மாந்தன் வாயில் நெடில்களே முந்திப் பிறந்திருத்தல் வேண்டும் என்று அறுதியிடுகிறார். மூவகைச் சுட்டுகளுள் சொற் பெருக்க வகையில் ஒன்றினொன்று சிறந்திருத்தலின் ஊ, ஈ, ஆ முறையில் கூறப்படும் எனத் திட்டப்படுத்துகிறார். முன்மையைக் குறிக்கும் ஊகாரச் சுட்டு வழியாகக் கருத்து விரிவாக்கத்தைக் கணக்கியல் போலவும் அறிவியல் போலவும் தெளிவாக விளக்குகிறார். முன்மைக் கருத்தினின்று முன்வருதலாகிய தோன்றற் கருத்தும், தோன்றற் கருத்தினின்று முற்படற் கருத்தும், முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்தும் , முற்செலவுக் கருத்தினின்று நெருங்குதற் கருத்தும், நெருங்குதற் கருத்தினின்று தொடுதற் கருத்தும், தொடுதற் கருத்தினின்று கூடற் கருத்தும், கூடற் கருத்தினின்று வளைதற் கருத்தும் பிறக்கும் என்பதை இருதிணை யுயிரிகளைக் கொண்டே தெளிவிக்கிறார். கூடற் கருத்தினின்று பிறக்கும் வளைதற் கருத்தொடு துளைத்தற் கருத்துத் தோன்றுவதையும் காட்டுகிறார். துளைத்தல் என்பது குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய ஐவகைக் கருத்துக்களைத் தழுவும் என்னும் பாவாணர், தோன்றல் முதல் துருவல் வரையுள்ள கருத்துக்களெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க என வரையறை செய்கிறார். ஊகாரச்சுட்டு வழியே தமிழமைப்புற்ற வகையைத் தெள்ளத் தெளியக் காட்டுதலாலும் அம்மொழியே உலகெலாம் பரவியது ஆகலாலும் நூற் பெயரை முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்கிறார். ஈகாரச்சுட்டு அண்மை, பின்மை, இழுத்தல் வழிப்பட்டதை யும், ஆகாரச் சுட்டு சேய்மை ஒன்றே குறித்து நிற்றலையும் மட்டிட்டுக் காட்டுகிறார். நூற் பொருளைத் திரட்டாக்கி, தமிழ் குமரிநாட்டில் பிறமொழிச் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்த தொன்முது மொழி என்றும், அது உணர்வொலி, ஒப்பொலி, குறியொலி, வாய்ச் செய்கை ஒலி, குழவி வளர்ப்பொலி , சுட்டொலி என்னும் அறுவகை நிலைக்களத்தினின்றும் எழுந்த சொற்களின் தொகுதி என்றும், அந்நிலைக் களங்களுள் சுட்டொலி - அதனுள்ளும் முன்மைச் சுட்டு - மிகச் சிறந்ததென்றும், தமிழ்ச் சொற்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு ஊகாரச் சுட்டினின்றே தோன்றியவை யென்றும் அறிந்து கொள்க என முடிவுரை கூறுகிறார். 29. வடமொழி வரலாறு பாவாணர் காட்டுப் பாடியில் வாழ்ந்த காலத்தில் நேசமணி பதிப்பகப் பெயரால் வெளிவந்த நூல் வடமொழி வரலாறு. ஆண்டு 1967. வடமொழி வரலாற்றை எழுதப் பாவாணர் 1949ஆம் ஆண்டிலேயே திட்ட மிட்டிருந்தார் என்பது வடமொழி வரலாறும் தலைநாகரிகமும் புகழ்வேண்டி எழுதுபவை அல்ல - தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை என்று கழக ஆட்சியாளர்க்கு எழுதிய கடிதத்தால் புலப்படும் (6.4.1949) வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழை வடமொழியினின்று மீட்க வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டே நான் கற்றாய்ந்தவன் தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும் என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டியவாறெல்லாம் என்னைத் தகுதிப்படுத்தி வருகின்றேன். என்றெல்லாம் எழுதும் பாவாணர் அதற்குரிய ஆவணமாகவே வடமொழி வரலாறு வரைகின்றார். வடமொழி வரலாறு, திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதியர் உதவியால் வெளிவந்தது. நூல் 350 பக்கங்களை யுடையது . மொழியதிகாரம் இலக்கண அதிகாரம், இலக்கிய அதிகாரம், தமிழ்மறைப்பதிகாரம், முடிபதிகாரம் என ஐந்ததிகாரங்களைக் கொண்டது. முன்னுரை 54 பக்கங்களில் இயல்கின்றது. இவ்வுலகில் இதுவரை நிகழ்ந்துள்ள பெரிய ஏமாற்றுக்களுள் தலைமையானது வடமொழி தேவமொழி என்பதே என்று முகவுரையில் சுட்டும் பாவாணர், தமிழை வடமொழியினின்று மீட்டு மீணடும் அதை அரியணையில் அமர்த்தினாலன்றி, தமிழும் தமிழனும் வாழவழியில்லை. ஆகவே இந்நூலை எழுதத் துணிந்தேன் என்கிறார். தமிழின் தென்மை, தமிழின் திரிபு வளர்ச்சி, ஆரிய மொழிக் குடும்பம், வடமொழிப் பெயர்கள், ஆரியர்க்குப் பிறந்தகமின்மை, வடமொழியின் ஐந்நிலை. இந்திய ஆரியர் வருகை, வேதமும் வேதமொழியும், வேத ஆரியர் தென்னாடு வருகை, சமற்கிருத வாக்கம், தொல்காப்பியமும் பாணினீயமும், ஆரிய ஏமாற்று, மூவகை வடசொற்கள், முக்கால வடமொழித் தமிழ்ச் சொற்கள், மேலையர் திரிபுணர்ச்சி, தென்மொழி வடமொழி வேறுபாடு, தென்மொழி வடமொழிப் போராட்டம் என்னும் பதினேழு தலைப்புகளில் முறையே முன்னுரையை வரைகின்றார். இந்திய ஐரோப்பிய மொழித் தொகுதியின் தொடக்க நிலை தமிழாயும் முடிவு நிலை சமற்கிருதமாயும் இருப்பதால் வடமொழி யின் வரலாற்றை அல்லது இயல்பைத் தெளிவாய் அறிதற்கு, தமிழின் பிறந்தகம் எதுவென்று முதற்கண் காணல் இன்றியமையாதது என்று தமிழின் தென்மை தொடங்கி முன்னுரையில் ஆய்வது நல்ல நுழைவாயில் ஆகின்றது. இந்தியாவிற்குள் பிராமணர்க்குத் தனிநாடில்லாமை போல், விரிநீர் வியனுலகிலும் ஆரியத்திற்குப் பிறந்தகம் இல்லாமையைக் குறிப்பிடும் பாவாணர், திரவிடம் வடமேற்காகத் தொடர்ந்து சென்று காண்டி னேவியத்தை முட்டித் திரும்பி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியபின், மீண்டும் தென்கிழக்காக வந்து வடஇந்தியாவில் வேத ஆரியத்தையும் தென்னிந்தியத் தொடர்பினாற் சமற்கிருதத்தையும் பிறப்பித்திருப்பதால், இந்தியாவும் ஐரோப்பாவும் ஆகிய இரு கோடிகளும் இவற்றிற் கிடைப்பட்ட பல இடங்களும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோரளவு ஆரியப் பிறந்தகமாக, வெவ்வேறு கோணத்தில் நோக்குவார்க்குத் தனித்தனி காட்சியளிக்கின்றன என்கிறார். தென்திரவிடம், வடதிரவிடம் எனப் பகுத்து ஆய்வது ஆழமிக்க செய்தியாம். தென்திரவிடமாகிய வடுகு மொழியே முதற்கண் வடமொழி எனப்பட்டதையும், வடதிரவிட வட்டார மொழி பிராகிருதம் என்பதையும், விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள கூர்ச்சரம், மகாராட்டிரம், ஆந்திரம், கன்னடம் திராவிடம் (தமிழ்) ஆகிய ஐந்நாடுகளும் பஞ்ச திராவிடம் என வழங்கியதையும் குறிப் பிடுகிறார். பிராகிருதம் என்னும் வடதிரவிடத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஐம்பான் சொற்களை எடுத்துக்காட்டி நிறுவுகிறார். ஐந்ததிகாரங்களைக் கொண்ட இந்நூலுள் மொழியதிகாரம் 241 பக்கங்கள். மற்றை அதிகாரங்கள் நான்கும் 52பக்கங்கள். முடிபதிகாரம் வெண்பா 16 மட்டுமே கொண்டது. மொழியதிகாரச் சிறப்பு, அகராதி அமைப்பாகும். மேலை யாரிய இனச் சொற்கள் பிராகிருதச் சொற்கள் உள்ளமையை முகப்பாகக் காட்டி, வடமொழிப்புகுந்த தென்சொற்கள் என அக்கம் முதல் வைகை வரை அகர நிரலில் விரியக் கூறி, தென் சொல் மூலத்திரிசொற்கள், தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள், மொழிபெயர்ப்புச் சொற்கள் , இருபிறப்பிச் சொற்கள், மயக்கச் சொற்கள், தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள், சுட்டுச் சொற்கள் வினாச் சொற்கள், இடைச்சொற்கள், பலவகைச் சொற் பெருக்கம், இடுகுறிச் சொற்கள், வடசொற்கள் தென் சொற்களால் விளக்கம் பெறுதல், வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச் சொற்கள் அன்மை என்னும் குறுந்தலைப்பு விளக்கங்களொடு மொழியதிகாரத்தை நிறைவிக்கிறார். சொல்வரிசையில் 665 சொற்கள் இடம் பெற்றுள. வட மொழிப் புகுந்த தென்சொற்கள் என்னும் தலைப்பிட்டு, இடச் சொல் தென் சொல்லும், வலச்சொல் வடசொல்லும் ஆகும் எனக் குறிப்பெழுதித் தொடர்கின்றார். அக்கம் - அர்க்க, அக்கம் - அக்ஷ என இருவடிவ இருபொருட் பகுப்பில் எழுதப்பட்டிருப்பினும் அக்கம் ஒரு சொல்லாகக் கொண்டு எண்ணப்பட்டதே 665 ஆகும். இவ்வாறே பிறவும். இலக்கண அதிகாரம், வியாகரணம் என்னும் சொல்விளக்கம், எழுத்தியல் (வண்ணமாலை, ஒலியும் பிறப்பும், எழுத்துச் சாரியை, முறை., அளபு, வடிவம், புணர்ச்சி வடமொழி எழுத்துப் பெருக்கம், வடமொழி வண்ணமாலையின் பின்மை அவ்வண்ணமாலையின் ஒழுங்கின்மை, வடமொழிக் குறுங்கணக்கு நூற்பாக்கள் ) சொல்லியல் (பெயர்ச்சொல், இடம், வேற்றுமை, வினைச் சொல், இணைப்பிடைச் சொல், சுட்டும் வினாவும் தொடரியல்) என ஈரியல் களில் ஆய்ந்து நிறைக்கிறார். இலக்கிய அதிகாரம், வேதம் பிராமணம் ஆரணியகமும் உபநிடதமும், வேதாங்கம், வேத சாத்திரம், புராணம், இதிகாசம், ஆகமம் முதலியவற்றைக் குறித்த விளக்கப் பகுதியாகும். நான்காவதாக வரும் தமிழ் மறைப்பதிகாரம் பன்னிரு பக்கங்களையே உடையது. எனினும், சொன்மறைப்பு, சொற் பொருள் மறைப்பு, முதனூல் மறைப்பு, கழகக் கலைப்பு, முன்னூ லழிப்பு, கலை மறைப்பு, அறிவியல் மறைப்பு, தெய் வமறைப்பு, சமய மறைப்பு, கொள்கை மறைப்பு, கருத்து மறைப்பு, ஒழுக்க மறைப்பு, நாகரிக மறைப்பு, பண்பாடு மறைப்பு, கருப்பொருள் மறைப்பு, அறிவு மறைப்பு, மொழி மறைப்பு, எழுத் துமறைப்பு, கழக மறைப்பு, வரலாறு மறைப்பு, தமிழன் பிறந்தக மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ்இன மறைப்பு, வனப்புக்கதை மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, புலவரை மறைப்பு, மொழியாக்க முயற்சித் தடுப்பு, தனித்தமிழ் வழக்குத் தடுப்பு, தமிழ்ப் பற்றுத் தடுப்பு, தமிழ்விழாத் தடுப்பு, தமிழ்ப் புலவர் பதவிப்பேறு தடுப்பு, தமிழ்த்தொண்டர் வாழ்வுத் தடுப்பு முதலியன என்று தொகுத்துச் சுட்டி இயன்ற அளவில் விரித்துரைக்கிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி வழியாக இம்மறைப்புச் சான்றுகளை விரிய எடுத்துக் காட்டுகிறார். நீலகண்ட சாத்திரியார், சுப்பிரமணிய சாத்திரியார், சட்டர்சி ஆயோர் ஆய்வுரைக் கேடுகளைச்சுட்டிக் காட்டுவதுடன் இன்று தமிழைக் கெடுப்பவர் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் அரசியற் கட்சித் தலைவருமாகிய இருசாராரே என்கிறார். தமிழ் மறைப்பதிகாரத்தில் விடுபட்ட இருசொற்கள் என அம்மணம், மடம் என்பவற்றை இணைத்து விளக்குகிறார். முடிபதிகாரம் 16 வெண்பாக்களையுடையது. மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண், முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான் என்பதில் ஒரு பாட்டு இது (10) 30. வண்ணனை மொழிநூலின் வழுவியல் பாவாணர் காட்டுப்பாடியில் வாழ்ந்த நாளில் 1968 இல் வெளிவந்த நூல் இது. 2 உருபா விலையில் நேசமணி பதிப்பக வெளியீடாக மலர்ந்தது. முகவுரை 2 பக்கம். நூல் 122 பக்கம். ஆரிய விளம்பரத்தின் விளைவாக மறைந்து கிடக்கும் தமிழைப் பற்றிய உண்மைகளை அறிதற்குத் தடையாக வுள்ள வண்ணனை மொழிநூலின் வழுவியலை, மொழிநூல் வல்லாரும் கண்டறிந்து கொள்ளுமாறு இச்சிறுநூலை எழுதத் துணிந்தேன் என்பதால் நூல் இயற்றிய நோக்கைப் பளிச்சிடச் செய்கிறார் பாவாணர். ஆங்கிலவர்கள் கண்டதால் உயர்ந்தது வண்ணனை மொழிநூல் எனல் ஆகாது என்பதை, வெள்ளை என்னும் சொல் வெண்ணிறக் கருத்தடிப்படையில் தூய்மையை மட்டுமன்றி வெறுமையையும் குறிக்கும் என்கிறார். ஆங்கிலவரை வெள்ளையர் என்று சுட்டுவது வழக்கம் அல்லவா. முதல் முதல் இலக்கணம் இயற்றப்பெற்ற தமிழில் தான் மொழிநூல் தோன்றியது. ஒரு பொருளின் உண்மையை ஒப்புக் கொள்ளுவதற்கு நடுநிலைமையும் வேண்டும் என இம்முகவுரையில் சுட்டுகிறார் பாவாணர். சமற்கிருதத்தைப் பரப்புதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பூனாத் தெக்காணக் கல்லூரியின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்பெறும் வேனிற் பள்ளியில் அறுகிழமையும் இலையுதிர் காலப்பள்ளியில் முக்கிழமையும் பயிற்சி பெற்ற அளவிலேயே வண்ணனை மொழிநூல் அறிஞராகக் கிளம்பும் ஆங்கில பட்டந் தாங்கியரான மாணவர், தமிழிலக்கியப் பரப்பையும், பொரு ளிலக்கணச் சிறப்பையும், குமரிநாட்டுத் தமிழ்ப் பிறப்பையும் எங்ஙனம் அறியவல்லார்? என வினாவுகிறார். மொழிநூல், வண்ணனை மொழிநூல், உலகத் தமிழ்ப் பேரவைகள் என்னும் முப்பெரும் பகுப்பும், பதினாறு உட்பகுப்பும் உடையது இந்நூல். மொழி நூல், மொழிநூல் தோற்றம், மொழிநூல் முதன்மை, தமிழின் தொன்மை, தமிழ் மறைப்பு, மறைமலையடிகள் மாண்பு, வடவர் மொழி நூல், மேலை மொழி நூல் வரலாறு, உலக மொழிக் குடும்பங்கள், மொழித்தோற்றக் கொள்கைகள் என்பவை முதற் பெரும் பகுப்பைச் சார்ந்தவை. இவையே நூலின் மூன்றில் இரண்டு பங்காகும்.(பக்கம் 89) மொழிநூல் என்பது ஒரு மொழியின் அல்லது மொழிக் குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு சிறப்பியல், இனமொழி அல்லது இனமொழிக் குடும்பம் முதலிய வரலாற்றுக் கூறுகளை யெல்லாம் விளக்கிக் கூறும் அறிவியல் என மொழிநூல் இயல் வரையறையில் வகுத்துக் கொண்டு நூலைத் தொடங்குகிறார். ஒரே மொழி பற்றியதை அம்மொழியின் பெயராலும், ஒரே மொழிக் குடும்பம் பற்றியதை அக்குடும்பத்தின் பெயராலும், பல்வேறு மொழிக் குடும்பம் பற்றியதை ஒப்பியலின் பேராலும் குறிப்பது வழக்கம் என்று வரம்பிடும் பாவாணர், தமிழ்மொழி நூல், தமிழிய மொழிநூல், ஒப்பியன் மொழிநூல் என முறையே எடுத்துக் காட்டுகிறார் (1) திசைச்சொல் என்பது வேற்றுமொழிச் சொல் அன்று, அது செந்தமிழ் நிலத்து வழங்காது கொடுந்தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய திருந்திய சொற்களும் சொல்வழக்குகளுமே என்று உறுதிப்படுத்துகிறார். திசைச் சொல் என்பது அயன்மொழிச் சொல்லன்று என முடிவு செய்கிறார் (3) மொழி நூல், ஒரு நூற்பாவின் உண்மைப் பாடத்தையும் வழுவையும் அறிந்து கொள்ள உதவுகின்றது என்பதைச் சகரம் மொழி முதலாக நூற்றுக்கணக்கான சொற்களில் இடம் பெற் றுள்ளமையைக் காட்டி நிலைப்படுத்துகிறார் (7-9) தமிழை, வடமொழி வழிப்பட்டதாகக் காட்டுவாரையெலாம் பட்டியலிட்டுக் காட்டி, அவர்தம் கருத்துகள் ஒவ்வொன்றையும் விரிவாக மறுத்துரைக்கும் பாங்கு பாவாணர் ஏரண முறைத் தெளிவை அருமையாய் வெளிபடுத்துகின்றது (27-63) இப்பகுதியில் கிரேக்கத்தில் தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் உள்ளமையைச் சுட்டும் பாவாணர் அவற்றுள் 172 சொற்களை எடுத்துக் காட்டுகிறார் (58-63) ஒருமொழியில் ஓர் அகரமுதலி தொகுத்தற்கோ திருத்து தற்கோ இலக்கண அறிவு,சொல்லாராய்ச்சி , மொழியாராய்ச்சி, சொற்றொகுப்பு ஆகிய நாற்றிறம் வேண்டும் என்பது அழுந்திய பயிற்சி வெளிப்பாடு (67) மொழிநூற் கலையைக் கண்திறந்து விட்டவர் வில்லியம் சோன்சு என்றும், ஒப்பியன் மொழி நூல் அவர்காலத்தில் இருந்தே வளரத் தொடங்கியது என்றும் மேலை மொழிநூல் வரலாற்றில் குறிக்கிறார். (71) மேலை மொழிநூலார் மூன்று நூற்றாண்டுகளாக ஆய்ந்தும் உண்மை காண முடியாமை, முந்தியல் இயன்மொழியாய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது பிந்தியல் திரிமொழியாகிய சமற் கிருதத்தை அல்லது ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே கரணியம் என்கிறார் (89) வண்ணனை மொழி நூலின் வழுக்களை அடிப்படைத் தவறு, நெறிமுறைத் தவறு என இருபாற்படுத்தி விரியக் கூறும் பாவாணர், வயிரக் கற்களின் உயர்வு தாழ்வை மணிநோட்டகள் கண்ணே காண்பதுபோல், சொற்களின் வேரையும் பொருட் கரணியத்தையும் மொழிநூல் வல்லான் அகக் கண்ணே காணும் என்றும், அறிவொடு உயிரும் அற்ற அஃறிணைக் கருவிகள் காணா வென்றும் அறியல் வேண்டும் என்கிறார் (105) குமரிநாட்டுத் தமிழரின் வரலாற்றிற் கெட்டாக் தொன்மை யையும், அக்கால மக்களின் எஃகுச் செவியையும், நுண்ணுணர்வை யும் நோக்கின் எழுத்துக்களின் தன்மையையும் வகைகளையும் மாத்திரை அளவையும் அவை தோன்றும் இடங்களையும் அவற்றின் பிறப்போடு தொடர்புள்ள உறுப்புக்களையும் பற்றி, தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ள அளவே பண்டையர்க்குப் போதுமென்றும், அதிலிருந்து வண்ணனை மொழிநூலார் இக்காலத்தில் கூறும் நுட்பங்களையும் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடுமென்றும் உய்த்துணரலாம் என அப் பகுதியை முடிக்கிறார். உலகத் தமிழ்ப் பேரவைகள் என்னும் மூன்றாம் பகுதி உலகத் தமிழ்மாநாட்டு நடைமுறை பற்றியது. தமிழ்மாநாடு, தமிழ்மாநாடாகவும் தமிழர் மாநாடாகவும் விளங்கவேண்டும் என்னும் வேட்கையில் கிளர்ந்தது அது. 31. வேர்ச்சொற் கட்டுரைகள் செந்தமிழ்ச் செல்வியில் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து நூலுருப் பெற்றது வேர்ச்சொற்கட்டுரைகள் என்னும் நூலாகும். இதன்கண் உயிர்முதல் வேர்ச்சொற்கள் 15 கட்டுரைகளும் உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள் 16 கட்டுரைகளும் ஆக 31 கட்டுரைகள் உள. வேரின் வளர்ச்சி அடியும், அடியின் வளர்ச்சியே முதனிலை யும் ஆகும் என்பதைக் குல், குழு, குழுவு என எடுத்துக் காட்டி விளக்குகிறார். வேருக்கு மூலமான முளையும், முளைக்கு மூலமான வித்தும் உண்டு என்பதை உல் (முளை) குல் (வேர்) என்றும், உ (விதை) உல் (முளை) என்றும் தெளிவு செய்கிறார். வேரும், ஆணிவேர் பக்கவேர் கிளைவேர் சிறுகிளைவேர் எனப்பலதிறப்படும் என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு கருத்தில் இருந்து மற்றொரு கருத்துத் தோன்றும் போது, ஒரு சொல்லில் இருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டா கின்றது மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம் குடும்பமாகவும் குலம் குலமாகவும் இனம் இனமாகவும் கொடிவழி முறையில் இயங்குகின்றன. மலையா, சிங்கபுரம், தென்னாப்பிரிக்கா முதலிய வெளிநாடு கட்குத் தனித் தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக வாழினும், அவர்களின் முன்னோராலும் தமிழ்நாட்டு உறவினராலும் அவர்கள் தமிழர் என்றே அறியப் படுதல் போல், தமிழ்ச் சொற்களும் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன் மொழிகளிற் சென்று வழங்கினும் அவற்றின் மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பவை ஆசிரியன் முகவுரையில் சுட்டும் குறிப்புகள். உயிர் முதல் வேர்ச்சொற்கள் அம், அர், இல், இள், உ,உம், உய், உல், உள், ஊது, ஏ,ஒல், ஓ என்பவை. இவற்றுள் ஊது, ஓ என்பவை ஒலிக்குறிப்பு வேர்ச்சொற்கள். உல் என்பது எரிதல், வளைதல், உள்ளொடுங்கல் ஆகிய முக்கருத்துவேர். அம் என்பது பொருந்துதல் அடிப்படையினது அமல், அமைதல் , அவை, அமர்தல், அமையம். அம்முதல் என்னும் சொற்களை நோக்கிய அளவில் பொருந்துதல் புலப்படும். அர் என்பது அறுத்தல் கருத்து வேர் என்பதை அரம், அரங்கு, அரிதல், அரிவாள், அருகுதல், அரை, அறை, அறுகு என்பவற்றை நோக்க எளிதில் அறியலாம். இல் என்பது இளமைக் கருத்து வேராதலை இளமை, இலவு, இலம்பாடு, இலை, இளகு, இளைத்தல், எள், எள்கு, எஃகு, எய்ப்பு, ஏள் ஏழை என்பவற்றால் தெளியலாம். இள் என்பது இணைதற் கருத்து வேர் ஆகும். இதனை இழை, இழைதல், இணங்கு, இணைதல், இயை, இசைவு, ஏய் என்பவற்றால் காணலாம். உ என்பது சுட்டு. அது முன்னைக் கருத்தையும் உயரத்தையும் குறிக்கும். உது, உங்கு, உவன், ஊங்கு உக்கம், உச்சம், உம்பர், உயர், ஊர்தல், ஓங்கல் முதலியவற்றைக் கருத இப்பொருள் புலப்படும். உகரம் பக்கத் திரிபு, பின்னைத் திரிபு, மெய்ம் முதற் சேர்க்கை பெறுதலையும் எடுத்துக் காட்டுகிறார் பாவாணர். இவ்வாறே, உம் கூடுதற் கருத்தையும் உய் செல்லுதல் கருத்தையும் உள் என்பது துளைத்தற் கருத்தையும் ஒல் என்பது பொருந்துதற் கருத்தையும் குறித்தலை விரித்தெழுதுகிறார். உல் என்பது முக்கருத்துகள் பெறுதலையும். ஊதுவும் ஓவும் ஒலிக் குறிப்பாதலையும் சுட்டினோம். ஏ என்னும் வேர் தன்மைப் பெயரடியாகவும், வினாச்சொல் அடியாகவும் வருதலை விளக்கித் தெளிவிக்கிறார். இனி இரண்டாம் பகுதியாகிய உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள் கல்,குல், சுல், துல் என நான்கு காட்டுகிறார். இவற்றுள் கல் என்பது கருமைக் கருத்து என்பதைக் கஃறு, கல். கால், கள், களங்கம், காள், காளி, கர், கரி, கரு, கருப்பு, கார் முதலிய சொற்கள் வழியாக நிறுவுகிறார். குல் என்பது குலம், குலை, கலம் களம் முதலாம் கூடற் கருத்து வேராகவும், குளகு, குழ, குரு முதலிய தோன்றற் கருத்து வேராகவும், குலவு, குளம், குரங்கு, கோல் முதலிய வளைதற் கருத்து வேராகவும், குளவி, குகண்டு, குட்டு. குத்து, குதிர் முதலாம் குத்தற்கருத்து வேராகவும் குரு, குருதி, குதம், கதம் . கனல் முதலாம் எரிதற் கருத்து வேராகவும் குரல், கல் கன்னம், குளி, குழிவு முதலாம் துளைத்தற் கருத்து வேராகவும் இருத்தலை ஆறுகட்டுரைகளில் விரித்துக் காட்டுகிறார். சுல் என்பது குத்தற்கருத்து (சூல், சூலம் சுள். சுணை ) சுடுதற்கருத்து (சுள்ளாப்பு, சுள்ளை சுடலை சூடு சுண்ணம்) சிவத்தற் கருத்து (சுல்லம், சேல், செள், செய், செம்மை) வளைதற் கருத்து (சுலவு, சிலந்தி, சூல், சுளி, சுழல்) துளைத்தற் கருத்து (சுனை, சோனை, சுரப்பு, சுரங்கம் , சொள்ளை) ஆகியவற்றில் வருதலை விளக்குகிறார். மொழியாராய்ச்சியும், சொல்லாராய்ச்சியும் செய்யாத பலர், இக்கட்டுரைகள் சொற்களின் திரிபையே காட்டுகின்றன என்றும் அவற்றையாளும் நெறிமுறைகளைக் காட்டவில்லை என்றும் குறைகூறினராக, ஒவ்வொரு கலைக்கும் அறிவியற்கும் தெரிவியல் புரிவியல் என இரு கூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும் போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று என்று மறுக்கிறார். மேலும், ஐம்பான் ஆண்டாக மொழியாராய்ச்சி செய்யும் ஒருவனை நெறிமுறை யறியாது குருட்டுத் தனமாக வரைபவன் என்பது அறியாமையொடு அழுக்காறும் கலந்த இருட்டடிப்பு என்று வெறுத்தொறுக்கும் பாவாணர், என்வேர்ச் சொற் கட்டுரைகளில் எடுத்துக்காட்டும் சொற்களினின்றே எழுத்தும் சொல்லும் திரியும் முறைகளைப் பொது அளவு மதியுள்ள எவரும் அறிந்து கொள்ளலாம் என்கிறார். (202, 203) நிறைவாக உள்ள துல் என்பது பொருந்துதற் கருத்து, வளைதற் கருத்து, துளைத்தற் கருத்து, தெளிவுக் கருத்து என நாற்கருத்துகளில் அமைதலை நிறுவுகிறார். வேர்சொற்கட்டுரைகள் சை.சி.நூ.க வெளியீடாக 1973ல் வெளிவந்தது. விலை உருபா 10. மொத்தப்பக்கங்கள் 300. 32. வேர்ச் சொற்சுவடி தமிழில் வேர்ச்சொல் ஆய்வு மூலவராகத் திகழ்ந்தவர் பாவாணர். தமிழில் வல்ல அறிஞராலும் வேர்ச்சொல் ஆய்வு என்பது அறியப்படாத கால நிலையில் அத்துறையில் இறங்கி வாழ்நாள் அளவும் நிகரற்ற வேர்ச்சொல் ஆய்வாளியாகவே திகழ்ந்தவர் பாவாணர். 1940இல் ஒப்பியல் மொழிநூல் இயற்றித் தாமே வெளி யிட்டவர் பாவாணர். அக்காலம் திருச்சி பிசப்பு ஈபர் மேற்காணியார் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். அப்பொழுது வேர்ச்சொல் சுவடி என ஒன்று எழுத இருப்பதைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளைக்கு எழுதினார். கழக ஆட்சியாளர் வேர்ச்சொல்லுக்கு மாதிரி எழுதக் கேட்கிறார். வேர்ச்சொல் வரிசையைப் பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன் என எழுதுகிறார் பாவாணர் (31.7.40) 29.8.40ல் ஒரு பக்கத்தில் 4 வேர் சொற்றிரிபுகள் அடங்குமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப் பற்றி எழுதி அனுப்புவேன் என்கிறார். 14.9.40இல் வேர்ச்சொல் சுவடியை முடித்து விடுக்கிறார். அந்நூல் அச்சிடப்படாமலே நின்று விட்டது. பாவாணர் வாழ்நாள் அளவும்., கழக ஆட்சியர் வாழ்நாள் அளவும் அச்சில் வரவில்லை. பாவாணர் கடிதங்களைத் தொகுக்கும் போது அச்சிடாமல் நின்ற வேர்ச்சொற் சுவடியின் பாவாணரின் மூலக்கைப் படி கிடைத்தது. அதில் 73 சொற்களுக்கே வேர்விளக்கம் கிடைத் தது. அர் முதல் வேள் வரை அகரநிரலில் அவை இருந்தன. வணங்கு என்பதன் கீழ் வாங்கு - வளை என்பதையும் சேர்த்துக் கொள்க கீழ் மேல் முதலிய சொற்களுடன் கீழோர், கீழை, கிழக்கத்திய, மேலோர், மேலை, மேற்கத்திய முதலியவைகளை வேண்டுமாயின் சேர்த்துக்கொள்ளலாம். என்று சுவடியை அனுப்பிய பின் பாவாணர் வரைந்துள்ளார். ஆனால் இச்சொற்களுள் எதுவும் வேர்ச்சொற் சுவடியில் இடம் பெறவில்லை. அதனால் பாவாணர் நூறு சொற்களுக்கு எழுதி விடுத்திருக்க வேண்டும் என்றும், அவற்றுள் சில சொல் விளக்கக் குறிப்புகள் விடுபட்டிருக்க வேண்டும் என்றும் தெளிவு கொள்ளலாம். வேர்ச்சொற் சுவடி கழக வெளியீடு எண். 1816. ஆக 1986ல் வெளிவந்தது. பதிப்புப் பணி செய்தவன் யான். பாவாணர் மாதிரியாக எழுதியனுப்பிய இறு என்னும் சொல் இறை, இறால், இறாட்டி, இறுத்தல், இறையன், இறப்பு, இறவாணம், இறகு, இறங்கு என்பவற்றை யெல்லாம் விரிவாக விளக்குகின்றது. வேள் என்னும் சொல் வேணவா, வேண்டு, வேள்வி, வேட்கை, வேட்டம், வேட்டை, வேளாண், வேளாண்மை வேளான், வேளாளன், வேட்கோ, வேடுவன், வேடன் என விரிதலை விளக்குகின்றது. வேர்ச்சொற் சுவடியில் இடம் பெற்றுள்ள 73 சொற்களுள் ஓரெழுத்து வேர்கள் 18. ஈரெழுத்து வேர்கள் 55. ஒரு வேர் பொருள் வேறுபடுதல் வகையால், தனிச் சொல்லாக எண்ணப் படுதலால், ஏ என்பது நான்கு விளக்கங்களையும் அர் என்பது மூன்று விளக்கங் களையும் பெற்றுள்ளது. ஏ - உயர்வுக் குறிப்பு வகையில் ஏண், ஏணி, ஏணை, ஏத்து, ஏங்கு, ஏய், ஏர், ஏல்,ஏழ், ஏறு, ஏற்றம், என்னும் பொருள்களிலும் மேற்செலற் குறிப்பு வகையில் ஏவு, ஏகு, எண், எண்ணம் என்னும் பொருள் களிலும், மேலெழற் குறிப்பு வகையில், ஏழ், எக்கு, எக்கர் , எடு, எம்பு, எவ்வு என்னும் பொருள்களிலும் வினாவுதற் குறிப்பு வகையில் எது? எங்கு? என்று? என்பவற்றிலும் வருதலை எடுத்துக் காட்டுகிறார் இவ்வாறே பிறவுமாம். அருமருந்தன்ன என்பது அருமந்த என்றாயிற்று என்பது நூல்வழக்கு. அருமை வந்த என்பது, அருமந்த என்றாயிற்று என்பது இச்சுவடி(3) புறா என்பதன் பொருள் புறவப் பறவை (முல்லைநிலப் பறவை புறா) என்பது இச்சுவடியால் அறியப்படுகிறது. (13) இளகிய இரும்பு எஃகு என்பது அறியப்படுவது. அது, எள்கு என்பது எஃகு என ஆயதை இச்சுவடியால் அறியலாம் (11) இராகி என்பது கேழ்வரகு. தமிழகக் கூலங்களுள் ஒன்றாகிய அதன்பொருள் புலப்படுமாறு இல்லை. இரத்தம் இரத்தி என்பவை போலச் சிவந்த கூலம் இராகி ஆயது என இதனால் அறியலாம் (5) மெத்து என்பது மாடிக்கு-உயர்வுக்கு- ஒரு பெயர். மெத்தை என்பதும் உயரப் பொருள் தருவதே. மெச்சுதல் என்பது உயர்த்திக் கூறல், பாராட்டல் எனப் பொருளறிய வரும் போது மெச்சவே செய்கிறோம். (40) வேர்ச்சொல் மாதிரியாகப் பாவாணர் காட்டிய வேள் என்பதன் விரிவு கடிதத்தால் அறியப்பட்டு, அது பதிப்பாசிரியன் பகர்வில் இடம் பெற்றது. அது: வேள் + வேண் (வேண் - அவா = வேணவா) வேள் + து = வேண்டு வேள் + வி = வேள்வி வேள் + கை = வேட்கை வேள் + தம் = வேட்டம் வேள் + தை = வேட்டை வேள் (பெ) வேள் + ஆண் = வேளாண் வேள் + ஆண்மை = வேளாண்மை வேள் + ஆளன் = வேளாளன் வேள் + கோ = வேட்கோ வேட்டம் + அன் = வேட்டுவன், வேடுவன், வேடன் வேர்ச்சொற்கட்டுரை பாவாணர் வேர்ச்சொல் ஆய்வின் வெள்ளப்பெருக்கு என்றால், இச் சுவடி மலையில் கசிந்தூறும் சுனை போன்றது என அறியச் செய்கிறது. ஒருவர் வளர்நிலை ஆய்வுக்குக் கால அடைவில் நூல்களை முறையே காணல் தெளிவும் திறமும் நம்பிக்கையும் ஊட்டும். வேர்ச்சொல் சுவடி 31 பக்கங்களையுடையது. பதிப்புரை, பதிப்பாசிரியன் பகர்வு ஆகியவை 10 பக்கம். பதிப்பாசிரியர் இரா.இளங்குமரன். விலை உருபா. 4. நூல் வெளிவந்த ஆண்டு 1986 பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும் திரட்டு நூல்கள் - 12 1. இலக்கணக் கட்டுரைகள் 1. தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை 2. இலக்கணவுரை வழுக்கள் 3. உரிச்சொல் விளக்கம் 4. ஙம் முதல் 5. தழுவு தொடரும் தழாத் தொடரும் 6. நிகழ்கால வினை 7. படர்க்கை இ விகுதி 8. காரம், காரன், காரி 9. குற்றியலுகரம் உயிரீறே (1) 10. குற்றியலுகரம் உயிரீறே (2) 11. ஒலியழுத்தம் 12. தமிழெழுத்துத் தோற்றம் 13. நெடுங்கணக்கு (அரிவரி) 14. தமிழ் எழுத்து மாற்றம் 15. தமிழ் நெடுங்கணக்கு 16. ஐ, ஔ அய், அவ் தானா? 17. எகர ஒகர இயற்கை 18. உயிர்மெய் வரிவடிவுகளின் ஓரியலின்மை 2. தமிழியற் கட்டுரைகள் 1. செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு 2. தென்மொழி 3. தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும் 4. தமிழ் தனித்தியங்குமா? 5. தமிழும் திரவிடமும் சமமா? 6. திராவிடம் என்பதே தீது 7. மொழிபெயர் முறை 8. நிகழ்கால வினைவடிவம் 9. நிகழ்கால வினை எச்சம் எது? 10. கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் 11. ஆய்தம் 12. மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் 13. பாயிரப் பெயர்கள் 14. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும் 15. சிந்தாமணியின் செவ்விய வனப்பியல் 16. ஆவுந் தமிழரும் 17. கற்புடை மனைவியின் கண்ணியம் 18. அசுரர் யார்? 19. கோசர் யார்? 20. முருகு முதன்மை 21. மாந்தன் செருக்கடக்கம் 22. தற்றுடுத்தல் 23. தலைமைக் குடிமகன் 24. மாராயம் 25. முக்குற்றம் 26. திருவள்ளுவர் காலம் 27. வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம் 3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் 1. மொழியாராய்ச்சி 2. உலக மொழிகளின் தொடர்பு 3. முதற்றாய் மொழியின் இயல்புகள் 4. வாய்ச் செய்கை யொலிச் சொற்கள் 5. சொற்குலமும் குடும்பமும் 6. சொற்பொருளாராய்ச்சி 7. சொல்வேர்காண் வழிகள் 8. ககர சகரப் பரிமாற்றம் 9. மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே 10. மேலை மொழி நூலாரின் மேலோட்டக் கொள்கைகள் 11. சேயும் சேய்மையும் 12. ஆலமரப் பெயர் மூலம் 13. கருப்பும் கறுப்பும் 14. தெளிதேனும் களிமதுவும் 15. கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் 4. மொழி நூற் கட்டுரைகள் 1. ஒப்பியல் இலக்கணம் 2. சொற்பொருள் வரிசை 3. வண்ணனை மொழி நூல் 4. பொருட்பாகுபாடு 5. உலக வழக்கு கொச்சை வழக்கன்று 6. எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்? 7. வடசொல் தென்சொல் காணும் வழிகள் 8. பாவை என்னுஞ் சொல் வரலாறு 9. திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா? 10. உத்தரம் தக்கணம் எம்மொழிச் சொற்கள்? 11. மதி விளக்கம் 12. உவமை தென் சொல்லே 13. திராவிடம் தென் சொல்லின் திரிபே 14. தமிழ்முகம் 15. வள்ளுவன் என்னும் பெயர் 16. கழகமெல்லாம் சூதாடுமிடமா? 17. இந்திப் பயிற்சி 5. பண்பாட்டுக் கட்டுரைகள் 1. புறநானூறும் மொழியும் 2. வனப்புச் சொல்வளம் 3. அவியுணவும் செவியுணவும் 4. அறு தொழிலோர் யார்? 5. 501 ஆம் குறள் விளக்கம் 6. அரசுறுப்பு 7. பாவினம் 8. அகத்தியர் ஆரியரா? தமிழரா? 9. தமிழ்மன்னர் பெயர் 10. வேளாளர் பெயர்கள் 11. பாணர் 12. குலப்பட்ட வரலாறு 13. கல்வி (Culture) 14. நாகரிகம் 15. வெடிமருந்து 16. பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை 6. தென்சொற் கட்டுரைகள் 1. வடமொழிச் சென்ற தென்சொற்கள் 2. வடமொழித் தென் சொற்கள் 3. வடசொல்லென மயங்கும் தொல்காப்பியத் தென்சொற்கள் 4. இலக்கியம், இலக்கணம் 5. இலக்கணம் இலக்கியம் எம் மொழிச் சொற்கள்? 6. திருவென்னும் சொல் தென்சொல்லே 7. காலம் என்னும் சொல் எம்மொழிக்குரியது? 8. மாணவன் தென்சொல்லா? வடசொல்லா? 9. என்பெயர் என் சொல்? 10. சிலை என்னும் சொல் வரலாறு 11. கருமம் தமிழ்ச் சொல்லே 12. எது தேவமொழி? 13. சமற்கிருதவாக்கம் - சொற்கள் 14. சமற்கிருதவாக்கம் - எழுத்து 15. சமற்கிருதவாக்கம் - இலக்கணம் 16. ஆரியப்பூதம் அடக்கம் எழும்புதல் 7. செந்தமிழ்ச் சிறப்பு 1. மதிப்படைச் சொற்கள் 2. தமிழின் தனிப்பெருந்தன்மைகள் 3. தமிழின் தனியியல்புகள் 4. தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள் 5. தமிழின் தொன்மையும் முன்மையும் 6. தமிழும் திராவிடமும் தென் மொழியும் 7. தமிழ் வேறு திரவிடம் வேறு 8. செந்தமிழும் கொடுந்தமிழும் 9. திசைச்சொல் எவை? 10. மலையாளமும் தமிழும் 11. இசைத்தமிழ் 12. கடிசொல் இல்லை காலத்துப்படினே 13. புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும் 14. போலித் தமிழ்ப்பற்று 15. மதுரைத் தமிழ்க் கழகம் 16. உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு 17. தமிழனின் பிறந்தகம் 18. தமிழன் உரிமை வேட்கை 19. உரிமைப் பேறு 8. தலைமைத் தமிழ் தனிச் சொற்கள் 1. உம்பர் 2. உய் 3. உருளை 4. அரத்தம் 5. கண் 6. காந்து 7. காலம் 8. கும்மல் 9. அந்தி 10. எல்லா 11. கலித்தல் 12. மகன் 13. மன் 14. தெய்வம் 15. புகா (உணா) 16. பள்ளி 17. பாதம் 18. புரி (வளை) 19. பொறு 20. பகு 21. பேசு 22. திரும்பு தொகுதிச் சொற்கள் 1. பூனைப் பெயர்கள் 2. நெருப்புப் பற்றி சுள் அடிச் சொற்கள் 9. மறுப்புரை மாண்பு 1. குரலே சட்சம் 2. குரல் சட்சமே: மத்திம மன்று 3. நன்னூல் நன்னூலா? 4. நன்னூல் நன்னூலா? மறுப்பறுப்பு 5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 6. பேரா. தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா? 7. தெ. பொ.மீ. யின் திரிபாராய்ச்சி 8. பாணர் கைவழி மதிப்புரை (மறுப்பு) 9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு 10. தமிழ் வளம் 1. வேர்சொற் சுவடி 2. போலிகை யுருப்படிகள் 3. அகரமுதலிப் பணிநிலை 4. தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி 5. உலகத் தமிழ்க் கழகக் கொள்கை 6. பதவி விடுகையும் புத்தமர்த்தமும் 7. உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு 8. உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க 9. உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள் 10. பாவாணரின் மூன்று அறிக்கைகள் 11. தமிழா விழித்தெழு! 12. தமிழ் ஆரியப் போராட்டம் 13. கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து 14. தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை 15. பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும் 16. உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை 17. அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு 18. தி.மு.க அரசிற்குப் பாராட்டு 19. மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வாழ்த்தை இனிப்பாட வேண்டிய முறை 20. தனித் தமிழ் இதழாசிரியர் தவறு 21. வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள் 22. மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு 23. ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா? 24. தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள் 25. திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் 26. மதிப்புரைமாலை 27. கேள்விச் செல்வம் 28. ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள் 29. பிறந்த நாட்செய்தி 11. பாவாணர் நோக்கில் பெருமக்கள் 1. மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை 2. நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு 3. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு 4. பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன் 5. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள் 6. தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா? 7. தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு. கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு 8. என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்? 9. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு அடிப்படை எவர்பட்ட அரும்பாடு? 10. செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா? 11. வரிசை யறிதல் 12. மகிழ்ச்சிச் செய்தி 13. துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்! 14. வல்லான் வகுத்த வழி 15. தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர் 16. திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை 12. பாவாணர் உரைகள் 1. மொழித் துறையில் தமிழின் நிலை 2. இயல்புடைய மூவர் 3. தமிழ்மொழியின் கலைச் சொல்லாக்கம் 4. தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை 5. பாவாணர் சொற்பொழிவு 6. தமிழின் தொன்மை 7. தமிழன் பிறந்தகம் 8. வ.சு. பவளவிழா 9. தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா 10. கலைஞர் நூல் வெளியீட்டு விழா 11. பாவாணர் இறுதிப் பேருரை பாவாணர் நூல்கள் - கால அடைவில் 1. சிறுவர் பாடல் திரட்டு 1925 2. மருத நிலப் பாடல் 1925 3. கிறிதவக் கீர்த்தனம் 1932 4. துவாரகை மன்னன் அல்லது பூபாரந் தீர்த்த புண்ணியன் 1932 5. கட்டாய இந்திக் கண்டனம் அல்லது செந்தமிழ்க் காஞ்சி 1937 6. கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் 1937 7. கட்டுரை வரைவியல் 1939 8. தமிழன் எப்படிக் கெட்டான் 1940 9. தமிழர் சரித்திரச் சுருக்கம் 1940 10. வேர்ச் சொற் சுவடி 1940 11. இயற்றமிழ் இலக்கணம் 1940 12. ஒப்பியன் மொழிநூல் 1940 13. சுட்டுவிளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து 1943 14. திரவிடத் தாய் 1944 15. தொல். எழுத்து - குறிப்புரை 1946 16. தொல். சொல் - குறிப்புரை 1949 17. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 1949 18. உயர்தரக் கட்டுரை இலக்கணம் I 1950 19. உயர்தரக் கட்டுரை இலக்கணம் II 1951 20 பழந்தமிழாட்சி 1952 21. முதல் தாய்மொழி 1953 22. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 1954 23. தமிழர் திருமணம் 1956 24. சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு 1961 25. சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு (ஆங்கிலம்) 1961 26. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை 1962 27. இசைத் தமிழ்க் கலம்பகம் 1966 28. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் 1966 29. The Primary classcical Language of the world 1966 30 தமிழ் வரலாறு 1967 31. வடமொழி வரலாறு 1967 32. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 1968 33. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (ஆங்கிலம்) 1968 34. வண்ணனை மொழிநூலின் வழுவியல் 1968 35. தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? 1969 36. திருக்குறள் தமிழ் மரபுரை 1969 37. இசையரங்கு இன்னிசைக் கோவை 1969 38. தமிழர் வரலாறு 1972 39. தமிழர் மதம் 1972 40. வேர்ச்சொற் கட்டுரைகள் 1973 41. மண்ணில் விண் 1978 42. தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள் 1979 43. தமிழ் இலக்கிய வரலாறு 1979 பாவாணர் மறைவுக்குப் பின் வெளிவந்தவை 44. செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலி முதன்மடலம் 1985 45. பாவாணர் கடிதங்கள் 1985 46. பாவாணர் மடல்கள் 2000 47. பாவாணர் பாடல்கள் 2001 பாவாணர் இயற்றி நமக்கு எட்டாதவை 48. பழமொழி பதின்மூவாயிரம் 49. சொல்லியல் நெறிமுறை 50. இசைத் தமிழ் வரலாறு கட்டுரைத் தொகுதிகள் - 12 தனிப்பட்டியல் உள்ளது தமிழ்மண் பதிப்பக வெளியீடு. மேற்கோள் - மொழி, நூல், ஆசிரியர் குறுக்க விளக்கம் அ. - அரபி அகத். - அகத்திணையியல் அக.நி. - அகநானூறு, நித்திலக் கோவை அக.நி. - அகராதி நிகண்டு அகம், அகநா - அகநானூறு அங். - அங்கேரியம் அதி. - அதிகாரம் அ.பா. - அலிப்பால் அபி. - அபிசீனியம் அ.ம.ப.க.க - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அர - அரமேக்கு அரிச்.பு - அரிச்சந்திர புராணம் அரிசமய - அரிசமய திவாகரம் அருட் - திருவருட்பா அ.வே. - அதர்வண வேதம் அழகர் கல. - அழகர் கலம்பகம் அறநெறி - அறநெறிச் சாரம் ஆ - ஆங்கிலம் ஆசாரக் - ஆசாரக்கோவை ஆசு. - ஆசுக்கன் (OSCON) ஆ.பா. - ஆண்பால் இ., ; இ.,வே. - இருக்கு வேதம் இ., ; இந். - இந்தி, இந்துத்தானி இ. - இடைச்சொல் இ. - இழிசொல், இழிவழக்கு (Slang word or Usage) இ.கா. - இறந்தகாலம் இசு. - இசுப்பானியம் (Spanish) இடை - இடையியல்; இடைச்சொல் இ.போ. - இலக்கணப்போலி இரகு - இரகுவமிசம் இராசவைத் - இராசவைத்திய மகுடம் இராமநா - இராம நாடகம் இரு. - இருபிறப்பி (Hybrid) இ-ரை. - இதன் தொடருரை இலக்.அ. - இலக்கிய அகராதி இலக்.வி. - இலக்கண விளக்கம் இலத். - இலத்தீன் இலாப். - இலாப்பியம் (Lapish) இ.வ. - இலக்கிய வழக்கு இ.வே. - இருக்கு வேதம் இறை. - இறையனார் அகப்பொருள் இறை.உரை - இறையனார் களவியலுரை ஈடு - ஈடுமுப்பத்தாறாயிரப்படி உ. - உடன்பாடு உஞ்சை. - உஞ்சைக்காண்டம் உ. த. - உயர்தரம் உபதேசகா - உபதேச காண்டம் உரி. - உரியியல் உரி. நி. - உரிச்சொல் நிகண்டு உவ. - உவமவியல் உ. வ. - உலக வழக்கு ஊர்தேடு - ஊர் தேடுபடலம் எ. - எபிரேயம் எ. - எதிர்மறை எழுத். - எழுத்ததிகாரம் எ.கா. - எதிர்காலம்; எடுத்துக்காட்டு எச் - எச்சம்; எச்சவியல் எசு. - எசுத்திரியன் (Estraian) எ-டு - எடுத்துக் காட்டு எ.வ.நோ. - என்னும் வழக்கை நோக்குக ஏ. - ஏவல்வினை ஐ. - ஐசிலாந்தியம் ஐங்குறு - ஐங்குறுநூறு ஐந். ஐம். - ஐந்திணை ஐம்பது ஒ. - ஒருமை; ஒசித்தியம் (Ostiak) ஒ.நோ - ஒப்பு நோக்குக ஒ.பா. - ஒன்றன் பால் ஒ.மொ. - ஒப்பியன் மொழிநூல் ஔவைக் - ஔவைக்குறள் ஔவை த - ஔவையார் தனிப்பாடல் க. - கன்னடம் கந்தபு. - கந்தபுராணம் கந்தரலங். - கந்தரலங்காரம் கம்ப. - கம்பவிராமாயணம் கல்லா. - கல்லாடம் கல. - கலதேயம் (Chaldean) கலி. - கலித்தொகை கலிங். - கலிங்கத்துப்பரணி கலித். - கலித்தொகை கள. - களவியல் களவழி - களவழி நாற்பது கற். - கற்பியல் கா. - காட்டு காஞ்சிப்பு - காஞ்சிப் புராணம் கார்கா. - கார்காலப் படலம் காரிகை - யாப்பருங்கலக் காரிகை கிரேக். - கிரேக்கம் கி.பி. - கிறித்துவிற்குப் பின் கி.மு. - கிறித்துவிற்கு முன் கு., - குறை; குடகு (குடகம்) குச. - குசராத்தி கும். - கும்பகருணப் படலம் குமர.பிர - குமரகுருபரர் பிரபந்தம் குரு. - குருக்கு குருபரம் - குரு பரம்பரை குற்றா.தல. - குற்றாலத் தலபுராணம் குற்றா.குற. - குற்றாலக் குறவஞ்சி குற்றி. - குற்றியலுகரப் புணரியல் குறள் - திருக்குறள் குறிஞ்சி., ; குறிஞ்சிப். - குறிஞ்சிப் பாட்டு குறு. - குறுக்கம் (ஹbசெநஎயைவiடிn) குறுந். - குறுந்தொகை கூர்மபு. - கூர்ம புராணம் கூளப்ப. - கூளப்ப நாயக்கன் காதல் கொ. - கொச்சை(க்ஷயசயெசளைn) கொண் - கொண்டா கொன்றைவே. - கொன்றைவேந்தன் கோ. - கோத்தம் கோண். - கோண்டி கோதி. - கோதியம் (ழுடிவாiஉ) கோயிற்பு. - கோயிற் புராணம் கோல். - கோலாமி ச. - சமற்கிருதம் சங்கர.உலா - சங்கரசோழன் உலா சச். - சச்சிதானந்த சிவம் சமா. - சமாயிதம் (ளுயஅடிநைனய) சி., - சிங்களம், சிந்தியம் சி.சி - சிவஞானசித்தியார் சி.போ.பா. - சிவஞானபோத பாடியம் சிலப். - சிலப்பதிகாரம் சிவஞா. - சிவஞான போதம் சிவதரு. - சிவதருமோத்ரம் சிவரக. - சிவரகசியம் சிறுபஞ். - சிறுபஞ்சமூலம் சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை சினேந். - சினேந்திரமாலை சீ. - சீரியம் (Syriac) சீதக். - சீதக்காதி Ót., சீவக - சீவகசிந்தாமணி சுந். - சுந்தரகாண்டம் சு.வி. - சுட்டுவிளக்கம் சூடா. - சூடாமணி நிகண்டு சூத. - சூதசங்கிதை சூளா. - சூளாமணி செ. - செய்யுளியல் செ.குன்றாவி. - செயப்படுபொருள் குன்றாவினை செ.குன்றியவி. - செயப்படுபொருள் குன்றிய வினை செர். - செர்மிசம் (Chermiss) செவ்வந்திப். - செவ்வந்திப்புராணம் செ.வ. - செய்யுள் வழக்கு சென. - செனசெய் (Jenesei) சேதுபு. - சேதுபுராணம் சேனா. - சேனாவரையம் சைவச. - சைவசமயநெறி சொ., ; சொல். - சொல்லதிகாரம்., சொல்லாராய்ச்சிக்கட்டுரைகள் சௌந்தரி - சௌந்தரிய லகரி ஞான வா - ஞானவாசிட்டம் ஞானா - ஞானாமிர்தம் த. - தமிழ் த.இ.வ., - தமிழ் இலக்கிய வரலாறு தக்கயாகப் - தக்கயாகப் பரணி தக்கன்வே. - தக்கன் வேள்விப் படலம் தஞ்சைவா. - தஞ்சைவாணன் கோவை தண்டலை.சத. - தண்டலையார் சதகம் தண்டி. - தண்டியலங்காரம் தணிகைப்பு. - தணிகைப்புராணம் த.த.நா.த. - தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள் த.தி. - தமிழர் திருமணம் த.நா.வி. - தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் த.ப.பெ. - தன்மைப் பன்மைப் பெயர் தமிழ்நா. - தமிழ் நாவலர் சரிதை தமிழர் வ. - தமிழர் வரலாறு த.வ. - தமிழ் வரலாறு த.வி. - தன்வினை தனிப்பா. - தனிப்பாடல் திரட்டு தாயு. - தாயுமானவர் பாடல் தி. - திபேத்தம் திணைமாலை - தினைமாலை நூற்றைம்பது தி.ம;தி.த.ம. - திருக்குறள் தமிழ் மரபுரை âÇ., திரிகடு. - திரிகடுகம் திரு. - திருவாளர் திருக்கருவைக் கலித் - திருக்கருவைக் கலித்துறை திருக்கல். - திருக்கல்யாணப் படலம் திருக்காளத். - திருக்காளத்திப் புராணம் திருக்கோ. - திருக்கோவையார் திருச். - திருச்சந்த விருத்தம் திருநூற். - திருநூற்றந்தாதி திருப்பு. - திருப்புகழ் திருமந். - திருமந்திரம் திருமுருகு. - திருமுருகாற்றுப்படை திருவள்ளுவ. - திருவள்ளுவமாலை திருவாச. - திருவாசகம் திருவாத. - திருவாதவூரர் புராணம் திருவாய். - திருவாய்மொழி திருவாரூ. - திருவாரூரர் நான்மணி மாலை திருவால. - திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் திருவிளை. - திருவிளையாடற்புராணம் திவ். - திவ்வியப்பிரபந்தம் திவா. - திவாகரம் து. - துளு (துளுவம்) துங். - துங்குசியம் துட. - துடவம் துரு. - துருக்கி தெ. - தெலுங்கு தேசோ. - தேசோமயானந்தம் தேவா. - தேவாரம் தைலவ. - தைலவதைப் பரணி ijy., தைலவ. - தைலவகைச் சுருக்கம் தொண்டை.சத. - தொண்டைமண்டல சதகம் தொ.பொ. - தொழிற்பெயர் தொல். - தொல்காப்பியம் தொல்.உரி. - தொல்காப்பியம் உரியியல் தொல்.உவ. - தொல்காப்பியம் உவமவியல் தொல். எழுத்து - தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொல்.சொல். சேனா. - தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் தொல். பொரு. - தொல்காப்பியம் பொருளதிகாரம் தொல். மர. - தொல்காப்பியம் மரபியல் தொல்.மெய்ப். - தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் தோரா. - தோராயம் (உத்தேசம்) நல். - நல்வழி நள. - நளவெண்பா நற். - நற்றிணை நன். - நன்னூல் நா. - நாய்க்கீ. நாஞ். வ. - நாஞ்சில் நாட்டு வழக்கு நாமதீப - நாமதீப நிகண்டு நாலடி - நாலடியார் நான்மணி - நான்மணிக் கடிகை நி.கா. - நிகழ்காலம் நீதிநெறி - நீதிநெறி விளக்கம் நீதிவெண். - நீதி வெண்பா நூ - நூற்பா நூ.வ. - நூல்வழக்கு நெடுநல். - நெடுநல்வாடை நைடத. - நைடதம் ப. - பவானந்தம்பிள்ளை பதிப்பு; பன்மை ப.ஆ. - பழைய ஆங்கிலம் பக். - பக்கம் ப.க. - பல்கலை ப.க. க.அ. - பல்கலைக்கழகத் தமிழகராதி ப.கு.சி. ப.சா. - பழஞ்சாகசீயம் பதார்த்த. - பதார்த்த குணசிந்தாமணி பட்டினப். - பட்டினப்பாலை பணவிடு. - பணவிடுதூது பத். - பத்துப்பாட்டு ப.த.ஆ. - பழந்தமிழாட்சி பதிற்றுப். - பதிற்றுப் பத்து பதினொ. திருவிடைமும். - பதினொராந்திருமுறை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை ப.பா. - பலர்பால் ப.பிரெ. - பழம் பிரெஞ்சு பர். - பர்சி; பண்டாரகர் பரிபா. - பரிபாடல் பல.பா. - பலவின்பால் பழ. - பழமொழி நானூறு ghf., பாகவத. - பாகவதம், பாகவத புராணம் பாரத. - வில்லிபுத்தூரார் பாரதம் பி. - பிராகிருதம்; பிராகுவீ பிங். - பிங்கல நிகண்டு ãuò., பிரபுலிங். - பிரபுலிங்கலீலை பிரபோத. - பிரபோத சந்திரிகை பிரமோத் - பிரமோத்தர காண்டம் பிரா. - பிராகிருதம் பிரெ. - பிரெஞ்சு பி.வி. - பிறவினை பின். - பின்னியம் (Finnish) பு. - புணரியல் புள்ளி. - புள்ளிமயங்கியல் புறத். - புறத்திணையியல் புறத்.ஆசிரிய. - புறத்திரட்டு - ஆசிரிய மாலை புறம் - புறநானூறு பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை பெ. - பெயர், பெயர்ச்சொல் பெ.எ. - பெயரெச்சம் bg©.,bg. பா. - பெண்பால் பெர். - பெர்சியன் (பாரசீகம்) பெரிய தி. - பெரிய திருமொழி பெரியபு. - பெரிய புராணம் பெரியாழ். - பெரியாழ்வார் பெருங். - பெருங்கதை பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை பேரா. - பேராசிரியம், பேராசிரியர் பொ. - பொருளதிகாரம் பொருந. - பொருநராற்றுப்படை பொதுப்பா - பொதுப்பாயிரம் bghJ.,bgh.gh. - பொதுப்பால் பொருள். - பொருளதிகாரம் போ. - போலி (Prrmutation),போர்த்துக்கீசியம் போதி. - போதியா (Bhotiya) ம. - மரூஉ (Disguise or corrupion) மலையாளம் மங். - மங்கோலியம் மணி. - மணிமேகலை மதுரை. - மதுரைக் காஞ்சி மயிலை. - மயிலைநாதர் kuh., மராத். - மராத்தி மலை. - மலையகராதி மலைபடு. - மலைபடுகடாம் மனு - மனுமிருதி மா. - மார்துவின் மா.வி.அ. - மானியர் வில்லியம்சு சமற்கிருத அகராதி மாறன. - மாறனலங்காரம் மீனாட்சி. பிள்ளைத் - மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் மு.தா. - முதல் தாய்மொழி முல்லைப். - முல்லைப்பாட்டு மூ.அ. - மூலிகை அகராதி மெ. - மெச்சு (Mech) மேரு.மந். - மேருமந்திர புராணம் மொ. மொழி - மொழி மரபு யா. - யாழ்ப்பாணத் தமிழ் யாப்.காரிகை - யாப்பருங்கலக் காரிகை யாப். வி. - யாப்பருங்கல விருத்தி யாழ். அக. - யாழ்ப்பாணத்து மானிப்பாய் அகராதி யாழ்ப். - யாழ்ப்பாண வழக்கு வ. - வடமொழி, வடசொல், வங்கம் t.மூ.ï. - வடமொழியில் மூலம் இல்லை வ.வ. - வடமொழி வரலாறு வள்ள. - வள்ளலார் சாத்திரம் வி. - வினைச்சொல் வி.எ. - வினையெச்சம் வி.சிந். - விவேகசிந்தாமணி விநாயக பு. - விநாயக புராணம் விபீ.அடை. - விபீடணன் அடைக்கலப் படலம் விவிலி. - விவிலியம் விறலிவிடு. - விறலி விடு தூது வெங்கைக் கோவை - திருவெங்கைக் கோவை வெண்பாப். - வெண்பாப் பாட்டியல் வே.உ. - வேற்றுமை உருபு வே.க. - வேர்ச்சொல் கட்டுரைகள் குறுக்க விளக்கம் - ஆங்கிலம் AS. - Anglo -Saxon AF - Anglo - French adj. - adjective Ar. - Arabic Com. - Comparative COD. - The concise Oxford Dictionary c.f., cf - - Confer ( = compare) Cog. - Congnate Conj. - Conjunction Celt. - Celtic. Comp. - Comparative C.I.S.I. - Castes and Tribes of Southern India dim. - diminutive Da., Dan. - Danish Du., Dut. - Dutch E. - English F., Fr. - French Finn. - Finnish Fris. - Frisian G., Ger. - German GK. - Greek. Goth - Gothick Gaec - Gaelic Heb. - Hebrew Hind. - Hindustani H. - Hindi Ice - Icelandic It. - Italian K. - Kannada Kur. - Kurukh L. - Latin Lith. - Lithuanian LL. - late Latin LG. - Low German Lat. - Latin lit Lit. - literally L.S.I. - Linguistic Survey of India L.S.L. - Lectures on the Science of Language M.E. - Middle English MLG. - Middle Low German Mod.G - Modern German M. - Malayalam MDU. - Middle Dutch MHG. - Middle High German MSW. - Middle Swedish M.S.D. - Monier William’s Sanskrit English Dictionary n. - noun Norw. - Norwegian OE. - Old English OF. - Old French OHG. - Old High German ON. - Old Norse OS. - Old Saxon Orig. - Originally O.Fr. - Old French O.Fris - Old Frisian OLG. - Old Low German OE D. - The Oxford English Dictionary Pfx. - Prefix Pron. - Pronoun P. - Page PP - Pages Pg. - Portuguese P. - Persian Russ. - Russian Suf., Sfx. - Suffix Sans., - Sanskrit Sup. - Superlative S.I.I. - South Indian Inscriptions S.I.I. Vol - South Indian Inscriptions volume Sw. - Swedish S., Skt - Sanskrit Slar. - Slavonic SC. - Scotch SP. - Spanish T., T., Tel. - Telugu T. - Tulu U. - Urudu V - Verb. v.t. - verb transitive vol - volume w. - welsh பாவாணர் காட்டியுள்ள சொல்லியல் நெறிமுறைகள் சில முதல் தாய்மொழி என்னும் தம் நூலுக்குப் பாவாணர், தமிழாக்க விளக்கம் என்னும் பெயரையும் இணைத்தே எழுதினார். அதன், சுட்டொலிக் காண்டச் சுட்டொலி வளர்ச்சிப் படல இறுதியில், உலகியல் நிகழ்ச்சிகளையெல்லாம் ஊன்றிக் கவனித்து, சுட்டுக் கருத்துக்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தி, உளநூற்கு ஒப்பவும் ஏரணநூற்கு இசையவும் இயற்கையுண்மை எள்ளளவும் தப்பாது, எல்லாக் கருத்துக்களையும் குறிக்கும் சொற்களை ஆக்கிக் கொண்ட முன்னைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலம் என்னே! என்று வியந்து எழுதுகிறார். பல்லாயிர ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்கள், இவ்வாறு சொல்லை ஆக்கிக் கொண்டனர் என்பதைத் தேவநேயர் கண்டு கொண்ட அருமை இருக்கிறதே அது, ‘அவர் தம் நுண்மாண் நுழைபுலம் என்னே! என்று நம்மை வியப்பில் ஆழ்த்தவே செய்கின் றது! ஏனெனில், தடமே அறிவரா அடர் கானில், தன்னந்தனியே சென்று, புதையல் இடங்கண்டு தடமமைத்துக் காட்டிய சீர்மை ஒத்த அது, முந்தைப் படைப்பாளியின் படைப்புச் சீர்மை ஒப்பதாம்.ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சியை அவர் காட்டும் முறை: ஊகாரச் சுட்டு, முதலாவது முன்மையைக் குறிக்கும். முன்மை என்பது, காலமுன், இடமுன், முன்னிலை, முன் னுறுப்பு, முற்பகுதி, முனி (நுனி) முதலிய பல கருத்துக்களைத் தழுவும். முன்மைக் கருத்தினின்று முன்வருதலாகிய தோன்றற் கருத்துப் பிறக்கும். வித்தினின்று முளையும், மரத்தினின்று துளிரும், தாயினின்று சேயும் போல, எப்பொருளும் ஒன்றினின்றே தோன்றுதலானும்; குட்டியும் குழவியும் முகமும் முன்னுங்காட்டியல்லது புறமும் பின்னும் காட்டித் தோன்றாமையானும்; எப்பொருட்கும் முற்பகுதி முகம் எனப்படுதலானும்; முகத்திற்கு எதிர்ப்பட்ட பக்கம் முன்மை யாதலானும்; புதிதாய் ஒன்றினின்று ஒன்று தோன்றுதலெல்லாம் முன்வருதலே யாதல் அறிக. தோன்றக் கருத்தினின்று முற்படற் கருத்துப் பிறக்கும். ஒரு மரத்தில் தோன்றிய தளிர் முன்னால் நீண்டு வளர்வதும், ஓர் உடம்பில் தோன்றிய உறுப்பும் கொப்புளமும் முன்னுக்குத் தள்ளியும் புடைத்தும் வருவதும், இவை போல்வன பிறவும், முற்படலாகும். முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்துப் பிறக்கும். இடம் பெயரும் இருதிணை யுயிரிகளும் ஓரிடத்தினின்று இன்னோ ரிடத்திற்குச் செல்வதெல்லாம் முற்செலவே, பிற்செல வெல்லாம் பெரும்பாலும் உயிரிகள் சிறிது வளர்ச்சியுற்ற பின்பும் குறுந்தொலை விற்கும் வேண்டுமென்றே நிகழ்த்தப் பெறுவதால், இயற்கை யான செலவெல்லாம் பொதுவாக முற்செலவென்றே யறிக. கீழிருந்து மேற்செல்வதும் ஒருவகை முற்செலவாதலின், முற்செலவு என்பது எழுதல் அல்லது உயர்தலையும் தழுவும். முற்செலவுக் கருத்தினின்று நெருங்கற் கருத்துப் பிறக்கும். ஒரு மரக்கிளை நீண்டு வளர்ந்து இன்னொரு கிளையை அடுப்பதும் இருதிணையியங்கு உயிரிகளும் முன்சென்று தாம் தாம் விரும்பும் இடத்தையும் பொருளையும் கிட்டுவதும் நெருங்கலாகும். நெருங்குதற் கருத்தினின்று தொடுதற் கருத்துப் பிறக்கும். ஒரு பொருள் எத்திசையினும் மேன்மேல் சென்றுகொண்டே யிருப்பின் ஏதேனுமொரு பொருளைத் தொட்டே தீரல் வேண்டும். முன் னோக்கிச் செல்லும் உயிரிகளும் தாம் விரும்பிய பொருளையும் இடத்தையும் தொட்டடையும். தொடுதல் என்பது, மெலிதாய்த் தொடுதல், வலிதாய்த் தொடுதல் என இருபாற்பட்டு, தீண்டுதல், தழுவுதல், முட்டுதல், குத்துதல், உறைத்தல் முதலிய பல கருத்துக் களைத் தழுவும். தொடுதற் கருத்தினின்று கூடற்கருத்துப் பிறக்கும். கூடல் என்பது, ஒன்றிய கூடல் ஒன்றாக் கூடல் என இருவகை. மண்ணொடு மண்ணும், நீரொடு நீரும் கூடுவது ஒன்றிய கூடல். உடலொடு உடலும் கூலத்தொடு கூலமும் கூடுவது ஒன்றாக் கூடல். ஒன்றாக் கூடல் மீண்டும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இரு திறத்தது. கூடற் கருத்தினின்று வளைதற் கருத்துப் பிறக்கும். ஒன்றாக் கூடலில் சில பொருள்கள் வளைவதுண்டு. ஒன்றை ஒன்று முட்டிய இரு பொருள்கள் ஒன்றாதவையாயின் அவற்றுள் மெலியது கம்பிபோல் நீண்டிருப்பின் வளையும். கல்லை முட்டிய வேரும் கடினமான பொருளை முட்டிய ஆணியும் வளைதல் காண்க. வழிச் செல்வோன் தெருவடைத்த சுவரை முட்டித் திரும்புவதும் வேற்றிடம் சென்றவன் வினைமுற்றி மீள்வதும், அணிவகையில் வளைதலின் பாற்படும். வளைதல் என்பது, சாய்தல், கோணல், திருகல், வட்டம், சுற்றல், சூழ்தல், உருட்சி, சுழற்சி முதலிய பல கருத்துகளைத் தழுவும். கூடற் கருத்தினின்று பிறக்கும் மற்றொரு கருத்து துளைத்தற் கருத்தாகும். முட்டியபின் வளையாத வலிய பொருள், தான் முட்டியதைத் துளைத்தும் செல்லும். ஆணி சட்டத்தையும், வண்டு மரத்தையும், பூச்சி புத்தகத்தை யும் மாந்தன் மலையையும் துளைக்கலாம். துளைத்தல் என்பது, குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய பல கருத்துக்களைத் தழுவும். துளைத்துப் புகுதலும், துளைக்குட் புகுதலும் எனப் புகுதல் இருவகைத்து. உயிரிகள் தத்தம் உறைவிடத்திற்குட்புகுதல் துளைக்குட் புகுத லாகும். ஒன்றைத் துருவிய பொருள் இறுதியில் வெளிப்படும். அது தோன்றல் அல்லது முன்வருதல் போன்றதாகும். அதன்பின் நிகழக் கூடியவை தோன்றல் முதல் துருவல் வரை கூறியுள்ள பல நிகழ்ச்சிகளே. இவை ஒரு பொருளின் காலமெல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே யிருக்குமாதலின் ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி முற்றுறும் எல்லை துருவற் கருத்தே. ஆகவே, தோன்றல் முதல் துருவல் வரையுள்ள கருத்துக்களெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க. ஒரு வேர் தோன்றல், முற்படல், முற்செலல், நெருங்கல், தொடுதல், கூடல், வளைதல், துளைத்தல் என்பவை, இயற்கை இயல்நெறி வகையில், ஒத்துச் செல்லும் அருமையில் மொழிப் படைப்பும், அம் மொழிப்படைப்பு இம்முறைப் பட்டது எனக் கண்டுரைத்த காட்சியும் கவினும், வியந்து பாராட்ட வைத்தல் இயல்பாம். இப்படிமான வளர்நிலை, உயிரியற்கை யாகலின் ஒரு மொழி என்றும் உயிரியக்க மாகத் திகழவேண்டின் என்றும் இம்முறையைச் செம்முறையாகக் கொண்டு காத்து வரவேண்டும் என்பது வெளிப்படச் செய்வதுமாம். பாவாணர் வேர்ச் சொற்கட்டுரைகள் என்னும் தொடர் கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதிவந்தார். அதில் இடைமடுத்து அவர் வரைந்த சில குறிப்புகள்: ஒவ்வொரு சொல்லும் அசையும் எழுத்தும் தோன்றுதற்கும் திரிதற்கும் கெடுதற்கும் நெறிமுறைகள் உள. நான் 1938 -இலேயே ‘கீற்று’ (ளுமநநவ) எழுதிய ஆங்கிலச் சொற் பிறப்பியல் நெறிமுறைகள் (ஞசinஉiயீடைநள டிக நுபேடiளா நுவலஅடிடடிபல) இருமடலங் களை (2 ஏடிட)ப்படித்து அவற்றை ஒட்டிச் செந்தமிழ்ச் பிறப்பியல் நெறிமுறைகள் எழுதிவைத்தேன். ... பல்லாண்டிற்குமுன் சொற் மென்றாளில் எழுதப்பட்ட தாதலின் அதன் தாட்கள் பழுப்பேறியும் பூச்சியரித்தும் போய்விட்டன. ஆயினும் இன்று அதனினும் சிறந்த தொன்று தொகுக்க இயலும்...என் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளிவரும் போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகளை விளக்கும் மடலமும் விரிவாக வெளிவரும் என்றார். ஆயினும் வேறு வழிகாட்ட விரும்பிய அவர், அதற்குமுன் என் தமிழ் வரலாறு என்னும் நூலைப் படித்து ஓரளவு தெரிந்து கொள்க. மேலும் என் வேர்ச்சொற் கட்டுரைகளில் எடுத்துக் காட்டும் சொற்களினின்றே எழுத்தும் சொல்லும் திரியும் முறை களைப் பொது அளவு மதியுள்ள எவரும் அறிந்து கொள்ள இயலும் என்றும் எழுதினார். 1சொல்வேர்காண் வழிகள் என்பது பாவாணர் கட்டுரை களுள் ஒன்று. அதில் சொற்பிறப்பியல் நெறிமுறைகளை அறியார் சொல்வேர் காணும் முயற்சியில் ஈடுபடின் ஏற்படும் எழுவகை வழூஉ முடிபுகளை முதற்கண் எழுதி அதன் மேல் உண்மைச் சொல்லியல் நெறிமுறைகளும் சொல்வேர் காணும் வழிவகைகளும் என இருபது குறிப்புகளை வரைந்துள்ளார். ஒவ்வொரு பகுசொற்கும் முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை, புணர்ச்சி, திரிபு ஆகிய அறுவகை உறுப்புகளும் அமைந் துள்ளவற்றைப் பகுத்தறியத் தெரிதல். வரலாற்று மொழி நூலறிவும் சொந்த மொழியாராய்ச்சியும் பெற்றிருத்தல்; கீற்று எழுதியுள்ள ஆங்கிலச் சொல்லியல் நெறிமுறைகளை யும் அவரும் சேம்பரும் தொகுத்த ஆங்கிலச் சொல்லியல் அகர முதலிகளையும் கற்றுத் தெளிந்திருத்தல். மலையாளம் தெலுங்கு போன்ற அகப்புற மொழிகளையும் மராட்டி இந்தி போன்ற புற மொழிகளையும், ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் போன்ற புறப்புற மொழிகளையும் ஓரளவு கற்றிருத்தல்; இருவகை வழக்குகளிலுமுள்ள தமிழ்ச் சொற்களுட் பெரும் பாலனவற்றின் பொருளை அறிந்திருந்திருத்தல்; இற்றைத் தென்பாண்டி நாடாகிய நெல்லை வட்டார நாட்டுப்புற உலக வழக்கை அறிந்திருத்தல்; என்பவை வேண்டும் என்கிறார். மேலும், எழுத்துக்களின் திரிபுகளை அறிதல், சொற்றிரிபு அறிதல், சொற்களின் திருந்திய வடிவறிதல், பலபொருள் ஒருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல், சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல், பொருள்களின் சிறப்பியல் பறிதல், பொருள் வரிசை யறிதல், ஒப்புமை அமைப்பறிதல், வரலாற்று அறிவையும் ஞாலநூல் அறிவையும் துணைக்கொள்ளல், இடுகுறி தமிழில் இல்லை என அறிதல், பகுத்தறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் அஞ்சாமை, நடுநிலை, பொறுமை ஆகிய பண்பு நலங்களும் வேர்ச்சொல் ஆய்வார்க்கு வேண்டும் என்கிறார். ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு ள - க : உளி - உகிர், தளை - தகை ள - ச : உளி - உசி - ஊசி வ. சூசி ள - ட : நளி - நடி, மகள் - மகடூஉ ள - ண : பெள் - பெண், வள் - வளர் - வணர் ள - ய : தொள் - தொய், மாள் - மாய் ள - ர : நீள் - நீர், வள் - வார் ள - ல : கொள் - கொல் ள - ழ : காள் - காழ், துளசி - துழாய் ள - ற : தெள் - தெறு - தெற்று, வெள் - வெறு ள - ன : முளை - முனை, வளை - வனை - இவை எழுத்துக்களின் திரிபு. அரம் (சிவப்பு) - அரத்தம் (சிவப்பு) - அரத்தி - அத்தி = சிவந்த பழம் - இது சொற்றிரிபு இடைகழி - டேழி (கொச்சை) - ரேழி (கொச்சை) - இது சொல் திருந்திய வடிவு மணி = கரியது . மள் - மண் - மணி = நீலக்கல் = வட்டமானது. மள் - முள் - முண்டு - மண் - மணி = நாழிமணி = சிறியது. மள் - மண் - மணி = மணிப்புறா = ஒளியுள்ளது. மண் - மண்ணி -மணி = ஒளிக்கல் - இது பலபொருள் ஒரு வடிவச் சொல். உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப்போதல் உடக்கு = உடம்புக் கூடு - இது சொல்லைச் செவ்வையாய்ப் பிரித்தல் இருமை (கருமை) யான மாட்டினம் எருமை வழுவழு வென்றிருக்கும் மரம் வாழை - இவை பொருள்களின் சிறப்பியல்பு அறிதல் அருகுதல் = சிறுத்தல் , ஒடுங்குதல், அரு - அரை = சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை, உடம்பின் நடு, பாதி. - இது பொருள் வரிசை யறிதல் குழல் - குடல் புழல் - புடல் - இஃது ஒப்புமை அமைப்பு அறிதல் பாண்டி = காளை , மறவன் பாண்டி = பாண்டியன் - இது வரலாற் றறிவையும் ஞால அறிவையும் துணைக்கொள்ளல். சுடலை < சுடல் < சுடு < சுள் - இஃது இடுகுறி தமிழில் இல்லை என அறிதல் வடவை = வடமுனையில் தோன்று நெருப்பு அல்லது ஒளி. - இது பகுத்தறிவைப் பயன்படுத்தல். சொல்லியல் நெறிப்படி உயிர்த்திரிபு, உயிர்மெய்த் திரிபு, மோனைத் திரிபு, எதுகைத் திரிபு எனப் பகுத்துத் தமிழ் வரலாற்றில் வரைகின்றார். சொற்பொருள் வரிசை , பொருட் பாகுபாடு, கல்லும் எல்லும், கலைச் சொல்லாக்கம் என்னும் கட்டுரைகளிலும் எடுத்துரைத்துள்ளார் பாவாணர். ஆதலால் அவர்காட்டும் அறிமுகப்படி நாம் சொல்லியல் நெறி முறைகளை வகுத்துக் கொள்ளலாம். முற்ற எடுத்துக் காட்டல் இம் முகப்புக்குப் பொருந்தாது ஆதலின் எடுத்துக் காட்டாகச் சில நெறிமுறைகளை இவண் காணலாம்: மொழிவளர்ச்சியில் சொற்கள் பல்குதற் பொருட்டு அறுவகைச் செய்யுள் திரிபுகளும், மூவகைப் புணர்ச்சி வேறுபாடு களும், முக்குறைகளும் முச்சேர்க்கை களும் முன்னோரால் கையாளப் பெற்றுள்ளன. முச்சேர்க்கையாவன முதற்சேர்க்கை, இடைச் சேர்க்கை, கடைச்சேர்க்கை. ஒருபொருளின் சிறப்பியல்பு அப்பொருள் முழுதும் தழுவுதல் ஒருமருங்கு தழுவுதல் என இருவகைப்படும். முழுதும் தழுவுதல்: பரிதி (வட்டமானது) ஒரு மருங்கு தழுவுதல்: வாழை (வழவழப் பானது) ஒருவினைப்பகுதி பல விகுதிகளை ஏற்றுப் பல தொழிற் பெயர்களை ஆக்குதல் இயல்பு: உவ என்னும் பகுதி தல், கை, பு, உ, மை, மம், மானம், என்னும் பல விகுதிகளை ஏற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு, உவவு, உவமை, உவமம், உவமானம் என்னும் பல தொழிற்பெயர்களைத் தோற்றுவிக்கும். ஓர் அடிச்சொல் பொருள் கருதிப் பல அடிகளாக விரியும்: கர் - கரி, கரு, கறு கார் - கால் - காய் கல் - கன் - கள் - காள் - காழ் கள் - களம் - களகம் - கழகம் கள் - கண் - கணம் குல் - குலம் - குலை - குலவு அம் ஈறு, ஒரு பெருமைப் பொருள் பின்னொட்டு: எ-டு: மதி - மதியம் (முழுமதி) நிலை - நிலையம் இல் ஈறு, ஒரு குறுமைப் பொருள் பின்னொட்டு: எ-டு: தொட்டி - தொட்டில் குடி - குடில். கை ஈறு குறுமைப் பொருள்தரல்: கன்னி - கன்னிகை. மணி - ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு தக்காளி இனத்தில் சிறியது மணித்தக்காளி மணி - முன்னொட்டு. குட்டி - ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு: எ-டு: குட்டிப் பை (சிறுபை) குட்டியப்பா (சிற்றப்பா) திரம் - தொழிற்பெயர் விகுதி: திரம் - மந்திரம், இயந்திரம் மானம் என்னும் சொல் தொழிற்பெயர் ஈறாய் வரும். எ-க: அடைமானம் கட்டுமானம், தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம். மகன் என்னும் சொல் வருமொழியாகவும் ஈறாகவும் வருங்கால் மான் என்று மருவும். எ-டு: மருமகன் - மருமான் பெருமகன் - பெருமான். இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும் என்பது திரிவுமுறை: எ-டு: அகல் - ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்). வணங்கு - வாங்கு (வளைவு) நிலத்தினின்று மேலெழும் மரம் செடிகொடிகட்கும், மண்ணினின்று விண்ணிற் கெழும் பறவையினங்கட்கும் முன்னேற்றம் மேற் செலவாய் இருத்தலால் உகரச் சுட்டு உயரக் கருத்தையும் தழுவலாயிற்று. உக்கம் = தலை, உயரம் உச்சி = முடி உச்சாணி = உச்சாணிக் கிளை. உகரத்தை ஒலிக்குங்கால் இதழ்குவித்து முன்னோக்குவதால் உகரச் சுட்டு முதற்கண் பேசுவோனின் முன்னிடத்தைக் குறித்தது. உதுக்காண் = என் முன் பார் உதா, உதோ, உந்த, உங்கு. உகரவடித் திரிபு: உகரம், ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு. உகரம் அகரமாவது அன்னைத் திரிபு. உகரம் இகரமாவது பின்னைத் திரிபு. எ-டு: புழை - பூழை, குட்டு - கொட்டு = முன்னைத் திரிபு. முடங்கு - மடங்கு - அன்னைத் திரிபு. புரள் - பிறழ் - பின்னைத் திரிபு. உகரம் அகரமாகத் திரியும் திரிவுமுறை: எ-டு: குடும்பு - கடும்பு. நுரை - நரை (வெண்மை) முடங்கு - மடங்கு உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரிதல் எ-டு: புரண்டை - பிரண்டை தூண்டு - தீண்டு. உகர ஈறு சிலசொற்களில் சுகர ஈறாகத் திரியும் எ-டு: ஏவு - ஏசு; பரவு - பரசு; விரவு - விரசு; துளவு - துளசு, துளசி; அரவு - அரசு. உகரச் சொல் முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக்கருத்திலும் வகர மெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே ஒப்புமைக் கருத்திலும் பெறும். உவ் - உவக்காண் - முன்மைச் சுட்டு. உவ்வி - (தலை) - உவ - உவண் - உவணை உயர்ச்சிக் கருத்து. உவ் - உவ - (உவர்) - இவர் - ஒப்புமைக் கருத்து. இவர்தல் = ஒத்தல். அகரம் சகரமாகத் திரியும் அவை - சவை. இயை - இசை = இசைதல் இயை - எய் - ஏய் = பொருந்துதல் ஏய் - ஏ; இசைதல் பொருள் எண்ணுப் பொருளில் ஏஆகக் கடைக்குறை ஆகும். அஃறிணைப் பெயர்களின் மகர இறுதி னகர இறுதியாவது பெரும்பான்மை: பருமம் - பருமன்; தடுமம் - தடுமன் (தொழிற்பெயர்). திறம் - திறன்; கடம் - கடன் (பிறபெயர்). அல் - அலை - அசை. அசை - அயை. அயை - அயா. அயை - ஆய். உல் அடிவேரில் இருந்து தோன்றியவை அல் - அர் - அலத்தம் - அரத்தல் இல் - இர் - இலந்தை - இரத்தை எல் - எர் - எல்லி - எரி. ஒகர அடி பலமெய்களொடும் சேர்ந்து பலஒப்புமை அல்லது பொருந்தற் கருத்துச் சொற்களை உண்டுபண்ணும். ஒக்கல், ஒச்சை, ஒட்டு, ஒண்டு, ஒண்ணு, ஒத்து, ஒப்பு, ஒம்பு, ஒல்லு, ஒற்று, ஒன்று, ஒன்னு ஆகிய சொற்களை நோக்குக. லகரம் ஆய்தம் ஆதலும், றகரமாதலும் ஒல்கு - ஒஃகு - ஒஃகுதல் = பின்வாங்கல் அல்கு - அஃகு - அஃகுதல் = சுருங்கல் ஒல்கு - ஒற்கு - ஒற்குதல் = குறைதல். கு - குறு, சிறு. எ-டு: குக்கிராமம். குல் - குள்; குளை; குண் குள் - குட்டு, குய், கூள். கூள் - கூடு, கொள், கொட்கு, கொக்கு கொடு - கொடுக்கு - கொடி கொள் - கோள் - கோணம். குல் - குலா - குலவு - குலாவு - குலாவுதல் = வளைதல் குல் - குர் - குர - குரம் = வட்டமான குதிரைக் குளம்பு. குரங்கு - குரங்குதல், குரவை = வளைதல் குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு = சுழலுதல். குழு என்னும் வேரினின்றே குழாம், குழுமம் முதலிய தொகுதிப் பெயர்கள் தோன்றின. குழு = சிறு கூட்டம் குழூஉ = தொழிற் குலம் அல்லது கூட்டம் குழாம் = குழுவிலும் சற்றுப் பெரிய கூட்டம் குழுமம், குழுவல் = குழாத்திலும் பெரிய கூட்டம் குழும்பு = தோழமைக் கூட்டம். டகரம் ரகர மாகத் திரியும் திரிவுமுறை எ-டு: படவர் - பரவர் விடிச்சி - விரிச்சி. தகரம் சகாரமாகத் திரிதல்: அத்தன் - அச்சன்; நத்து - நச்சு. மம் - ஒரு தொழிற்பெயர் ஈறு. எ-டு: உருமம், பருமம். உருத்தல் = வெப்பமாதல். உருமம் = வெப்பமான நண்பகல். மம் ஈறு மையீற்றுத் திரிபென்று கொள்ள இடமுண்டு. ஓ, நோ: செய்யாமை - செய்யாமல். ம் - வ் ஆகும்: அம்மை - அவ்வை; செம்மை - செவ்வை; அமை - அவை. ம் - ன் ஆகும்: அம்மை - அன்னை; நிலம் - நிலன். மு - மி - ஆதல்: முழா - மிழா; முண்டு - மிண்டு; முறை - மிறை. ர் - ற் ஆகும் ஒளிர் - ஒளிறு; முரி - முறி. ரகரத்தின் வல் வடிவம் றகரம். முரிதல் - முறிதல் பார் - பாறை. ல் - ர் ஆகும். குடல் - குடர் பந்தல் - பந்தர். வ் - க் ஆகும். சிவப்பு - சிகப்பு ஆவா - ஆகா வுகர வீறு சுகர வீறாதல்: பரவு - பரசு; விரவு - விரசு. அணம், இயம் - விகுதிகள்: கட்டணம், ஏரணம்; கண்ணியம், மானியம். ழகரம் டகரமாகத் திரியும். புழல் - புடல், குழல் - குடல். ழ - ஆதல்: தழல் - தணல்; நிழல் - நிணல். ளகர மெய் பல சொற்களில் யகர மெய் ஈறாகத் திரியும். தொள் - தொய்; பொள் - பொய். வள் - வய் - வை = கூர்மை. ழ - க = போலி. மழவு - மகவு; தொழுதி - தொகுதி. இவ்வாறு பல்வேறு நெறிமுறைகளைச் சுட்டிக் காட்டியும் கருத்தில் கொண்டும் வேர்ச்சொல் விளக்கங்களைக் கண்டு காட்டுகிறார் பாவாணர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது பண்டு தொட்டுப் பயிலவரும் ஒரு மரபு. அதனால் தகுதியமைந்த எந்த இலக்கியமும் பின்னவர்களால் இலக்கண மரபாக ஏற்றுப் போற்றப்பட்டுவருதல் கண்கூடு. அவ்வகையில் பாவாணர் வேர்ச்சொல் ஆய்வு வழியே சொல்லியல் நெறி முறை யாதலை, ஆழ்ந்து கற்பார் அமைத்துக் கொள்வார் என அமைவாம். தேவநேய முன்னோட்ட மடல் ஒன்று கு. பூங்காவனம், 8 பெட்டிக்ரு தெரு, பெங்களூர் - 560 001 தி.பி. 2013 நளி 25 (11.12.82) அன்பார்ந்த ஐயா வணக்கம். நலம். நலமே சூழ்க. தங்கள் அன்பான மடல் வந்தது. தங்கள் மடலில் கண்ட கருத்துகள் நான் எண்ணியவாறே அமைந் தமையால் பெரிதும் மகிழ்ந்தேன். பாவாணர் அவர்களின் படைப்புகளில் உள்ள சொல்லாய்வை அகரவரிசையில் வெளியிட வேண்டும் என்று தாங்கள் எண்ணியவாறே நானும் ஓராண்டுக்கு முன்னர் எண்ணினேன். முதற்பணியாக அவர்கள்தம் நூல்களில் ஆங்கில, வடமொழி, பிறமொழிச் சொற்கட்கிணையாகப் பயன் படுத்தப்பட்டுள்ள சொற்களைத் திரட்டியுள்ளேன். தமிழர் திருமணம் பழந்தமிழர் விளையாட்டுகள் போன்ற சில நூல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. கட்டுரைகள் சிலவும் பயன்பட்டன. இன்னும் பல கட்டுரைகளைத் தேடித் திரட்டவேண்டும். இப்போதே அச் சொற்களின் அளவு முந்நூறு பக்கக் குறிப்பேட்டின் முழுமை! ஓய்விருப்பின், இருகிழமை சென்னைக்குச் சென்று தங்கினால் அப்பணி முழுமையடையும். பிற பணிகளிலிருந்து விடுவித்துக் கொண்டு அப்பணியை முழுமையுறச் செய்யவியலாது உள்ளது. பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கருத்தரங் கொன்றில் Hope, Faieth, Belief, Confidence, Trust ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தனித்தமிழ்ச் சொற்கள் இல்லை என்று கருத்துரைக்கப் பட்டதாம். இதனை எம் நண்பர் ஒருவர் எனக்குக் கூறி அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்கள் இலவா என வினவினார். பாவாணர் அவர்கள் பயன்படுத்திய சொற் களை நான் தொகத்து வைத்திருந்தமையால் அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை என்னால் தரமுடிந்தது. Hope = நம்பிக்கை; Faith = நம்பகம்; உட்கோள்; Belief = நம்பிக்கை; Trust = கையடை Trustee = கையடைஞர் ஆகிய சொற் களைப் பாவாணர் அவர்கள் பயன்படுத்தி யுள்ளார்கள். Confidence என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் எதுவும் பாவாணர் அவர்களின் நூலின் இதுவரை எனக்குக் கிட்டவில்லை. ஆயின் சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில் Confidence = பற்றுறுதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதை, அந் நண்பரின் வேண்டுகோளின்படி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு செல்லப்பர்க்கு எழுதித் தெரிவித்துள்ளேன். தமிழ்ச் சிக்கல் பலவற்றைத் தீர்க்க அத்தகைய நூலொன்று மிகவும் பயன்படும். பாவாணர் அவர்களின் நூல்கள் விரைவில் நாட்டுடைமை யாக்கப் படலாம். அதன் பின்னர் அந்நூல்களை வெளியிடவும், கட்டுரைகளைத் திரட்டி வெளியிடவும் பாவாணர் அவர்களின் ஆய்வு குறித்த நூல்களையும் அவர்கள்தம் கொள்கைக்கு அரண் செய்யும் நூல்களையும் வெளியிடவும் பாவாணர் தமிழ் நூற் பதிப்புக் கழகம் என்னும் ஓரமைப்பை உருவாக்குதல் நலம் என்றும் முதல் நூலை வெளியிடுதற்கு ஆகும். செலவாகிய உரூபா 5000-ஐ பாவாணர் அன்பர்களிடம் திரட்டிக் கொள்வ தெனவும் அதனை விற்றுக் கிடைக்கும் தொகையால் பிற நூல்களை வரிசையாக வெளியிடலாம் என்றும் எண்ணினேன். அவ்வமைப்பின் வரைவு (Draft)x‹iwí« எழுதினேன். தங்களையும், பர். இரா. இளவரசர், பர். பொற்கோ ஆகிய மூவரையும் அறிவுரைக் குழுவாகக் குறித்தேன். என்னை அதன் அமைப்பாளராகக் குறித்தேன். அவ்வரைவுப் படியை இரா. இளவரசர்க்கு அனுப்பி பர். பொற்கோவிடமும் காட்டிக் கருத்துரைக்குமாறு அனுப்பினேன். இன்றுவரை விடை யில்லை. வந்த அவ்வரைவுப் படியைத் தங்களுக்கு அனுப்புவேன். அவ்வரைவின் சுருக்கமாய்த் தங்கள் மடல் கருத்தேந்தி வந்தமை பெரிதும் மகிழ்ச்சி யூட்டுகின்றது. கிறித்துப் பிறப்பையொட்டிக் குழந்தைகட்கு விடுமுறை யிருக்குமாதலால் அவ்வமயம் பெரும்பாலும் ஊருக்குவருவேன். வருங்கால் தங்களைக் காண்பேன். பிறபின் இன்னணம், அன்புடன், கு. பூங்காவனம் தேவநேயம் அ (எழுத்தும் சொல்லும் சொல்லுறுப்பும் குறியும்) 1. எழுத்து அ1 a. பெ. n. தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து; first letter of the Tamil alphabet. வகை: உயிர்க்குறில்; short vowel. சொல்வகை: அங்காத்தலால் ஒரு மாத்திரை யளவொலிக்கும் அஃறிணைச் செவிப்புலப் பொருளாகிய தற்சுட்டொலிப் பெயர். வேற்றுமைப்பாடு: 2ஆம் வகை, 3ஆம் பிரிவு. எ-டு: அவ்வை, அவ்வால், அவ்விற்கு, அவ்வின், அவ்வது, அவ்வில். 2. சொல் அ2 a. பெ. n. 1. அழகு; beauty. அவ்வாய் வளர்பிறை சூடி (பெரும்பாண். 412), 2. சிவன்; Siva. ஆரு மறியா ரகார மவனென்று (திருமந். 1751); 3. திருமால்; Vishnu அவ்வென் சொற்பொரு ளாவான் (பாகவ. சிசுபா. 20). 4. நான்முகன்; Brahma. (தக்கயாகப். 65, உரை), 5. சுக்கு; dried ginger. (பரி. அக.) 6. திப்பிலி; long pepper. (பரி. அக) அ3 a. பெ. எ. adj. புறச்சுட்டு; demon. prefix: அ = அந்த. 1. சேய்மைச் சுட்டு; pref. to nouns, expressing remoteness. எ-டு: அப் பையன். 2. முற்பெயர்ச் சுட்டு; pref. to nouns, referring to their antecedents. எ-டு: பண்டைத் தமிழகத்தை ஆண்டவர் சேர சோழ பாண்டியர். அம் மூவேந்தரும் இன்றில்லை. 3. உலகறி சுட்டு; pref. expressing world-wide eminence. அத்தம் பெருமான். (சீவக. 221) 3. சொல்லுறுப்பு (இ; ind) அ4 a. அகச்சுட்டு; demon. base: முதனிலை - 1. சேய்மைச் சுட்டு; base of the dem. pron. expressing the remote person or thing.எ-டு: அவன், அங்கு, அன்று. 2. முற்பெயர்ச்சுட்டு; base of the dem. pron. referring to its antecedent. எ-டு: ஓரூரில் ஓரரசன் இருந்தான். அவனுக்கு இரு மக்கள். 3. உலகறி சுட்டு; base of the dem. pron. expressing world-wide eminence. எ-டு: அவனன்றி ஓர் அணுவும் அசையாது (பழமொழி). 4. பொதுநிலைச்சுட்டு; base of the dem. pron. expressing generality or indefiniteness. எ-டு: அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார் (பழமொழி). அ5 a. இன்மை யன்மை மறுதலைப் பொருளில் வரும் முன்னொட்டு; pref. implying negation, privation or contrariety. எ-டு: இன்மை - அவலம் = வலம் இல்லாதது (துன்பம்), துயரம். அன்மை - அகாலம் = காலம் அல்லாதது. மறுதலை - அசுரன் = சுரனுக்கு மாறானவன். அ6 a. ஒரு சொற்சாரியை; a euphonic augment. எ-டு: வண்ணாரப்பேட்டை. அ7 a. மெய்யெழுத்துச் சாரியை; an enunciative augment. எ-டு: மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (தொல். 46) வல்லெழுத் தென்ப கசட தபற (தொல். 19) அ8 a. ஓர் அசைச்சொல்; an expletive generally in poetry. எ-டு: தன்வழிய காளை (சீவக. 494). அ9 a. ரகரத்தில் தொடங்கும் சில சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டு; euphonic prothesis of some Sanskrit words beginning with ர. எ-டு: ரத்ந - அரதனம். அ10 இரக்கம், வியப்பு, துயரம் முதலியன உணர்த்தும் ஒரு குறிப்புச் சொல்லுறுப்பு; a part of an interjection expressing pity, wonder, grief etc. உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அ ஆ இழந்தானென் றெண்ணப் படும் (நாலடி. 9) என்னுஞ் செய்யுளில் அ ஆ இரக்கப் பொருளில் வந்தது. அ11 a. ஒரு பலவின்பாற் பெயரீறு; a neut. pl. noun suf. எ-டு: சில பல. அ12 a. ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மை யுருபு; genitive neut. pl. ending. எ-டு: என கைகள். அ13 a. ஒரு பலவின்பால் வினைமுற்றீறு; a neut. pl. verbal ending. எ-டு: வந்தன, வந்த, பெரியன, பெரிய. அ14 a. ஒரு வியங்கோள் வினை யீறு; an opt. verbal ending. எ-டு: வரப்புயர. வியங்கோள் வினையெல்லாம் முற்றே. அ15 a. இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்ச வீறு; a rel. participial ending. எ-டு: வந்த, வருகின்ற. அ16 a. ஒரு (குறிப்புப்) பெயரெச்ச வீறு; an adj. ending. எ-டு: நல்ல, சிறிய. அ17 a. ஒரு நிகழ்கால (எதிர்காலப் பொருட்டு) வினையெச்ச வீறு; an infinitive suf. எ-டு: உண்ண. அ18 a. ஒரு சொல்லாக்க ஈறு; formative particle. எ-டு: குல்-கல்-கல, பிள்-பிள. அ19 a. சில பெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம்; shortening of 'aa' ending certain nouns. எ-டு: இரா-இர, களா-கள, நிலா-நில, புறா-புற. அ20 a. குறிலில் இறும் வண்ணப்பாட்டுச் சீர்களின் அல்லது அசைகளின் வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு; ending of rhythmatic patterns of metrical feet and syllebles ending in a short vowel. எ-டு: தன, தனன, தான, தத்த, தந்த, தய்ய, தனத்த, தனந்த. அ21 a. நெடுங்கணக்குப் பெயருறுப்பு; part of a name of the alphabet. அஆ = நெடுங்கணக்கு. எ-டு: உனக்கு அஆ தெரியுமா? இதை அன ஆவன்னா என்றது பண்டை வழக்கு. அ22 a. உகர முதல் திரிபு சொல்லாக்கத்தில் உகரமுதல் அகர முதலாகத் திரிவதுண்டு. எ-டு: உகை (செலுத்து) - அகை, குட்டை - கட்டை, குடும்பு - கடும்பு, குடை(தல்) - கடை(தல்), சுரி (வளையல்) - சரி, துளிர் - தளிர், துணை - தனை (எத்துணை - எத்தனை, வருந்துணையும் - வருந்தனையும்), நுரை (வெண்மை) - நரை, புரி - பரி (வளை), புரம் (உயர்ந்த இடம் அல்லது கட்டிடம். எ-டு: பரவெளி, கோபுரம்) - பரம் - வரம் - வரன் (மேலான வீட்டுநிலம்), முடங்கு - மடங்கு, முடி - மடி (இற), முயங்கு - மயங்கு. இத் திரிபினால், சில சொற்களின் மூலத்தையும் சில சொற்களைப் புனையும் வகையையும் அறியலாம். 4. குறி அ23 a. 1. எட்டு என்னும் எண்ணின் குறியாக அ சுழியின்றி எழுதப்படுவது; symbol of the number eight, written without the loop. 2. ஐம்புள்ளுள் (பஞ்சபட்சியுள்) ஒன்றாய் வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து; letter representing the vulture one of the five astrologically important birds. அ24 a. மொழி முதல் எழுத்துகளுள் ஒன்று. எ-டு: அவன். (எட்டென்னும் எண்குறியும் வல்லூற்றின் குறியும்) எண் வகைப்பட்ட பொருளின் அல்லது பொருட்டொகுதியின் பெயர் முதலெழுத்தாகவும், வல்லூற்றின் பெயர் ஒன்றன் முதலெழுத்தாகவும் இருக்கலாம். இருபெயரும் இறந்து பட்டன போலும். வரலாறு 1. எழுத்து : ஆ - அ. அகரம் ஆகாரத்தின் குறுக்கம். உயிரொலிக ளெல்லாம் பெரும்பாலும் இயற்கையாக நெடிலாகவே தோன்றிப் பின்பு குறுகின. 2. சொல் : அம் = அழகு. அம் - அ2. அ2 = எழுத்துகட்கு முதலாகிய அகரம் போல் உலகங்கட்கு முதலாகிய இறைவன். அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (குறள் 1) இறைவனைக் குறிஞ்சி நிலத்துச் சேயோன் வழிபாட்டினர் சிவன் என்றும் முல்லை நிலத்து மாயோன் வழிபாட்டினர் திருமால் என்றும், குறித்தனர். கி.மு. 1500 ஆம் ஆண்டுபோல் நாவலந் தேயத்திற்குட் புகுந்த சிறு தெய்வ வேள்விமத ஆரியர், சிவநெறியும் திருமால் நெறியும் ஆகிய இரு தூய தமிழ் மதங்களையும் ஆரியப் படுத்தற்கு முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கையைப் புகுத்தி, நான்முகன் (பிரமன்) என்னும் படைப்புத் தெய்வத்தைப் புதுவ தாகப் படைத்து, அத்தெய்வத்தையும் அகரத்தாற் குறித்தனர். சுக்கு, திப்பிலி என்னும் மருத்துவச் சரக்குகள், ஏதேனுமொரு கரணியம் பற்றி அகரம் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம், அதைப் பிற்காலத்தார் அ (அ2) என்று குறித்திருக்கலாம். (புறச்சுட்டு ஆ = அந்த. ஆயீரியல என்று (தொல். 17) செய்யுள் வழக்கிலும், ஆயாள் (மலையாளம்), ஆவூரு (தெலுங்கு) என்று உலக வழக்கிலும், ஆகாரம் சொல்லாகவே வழங்கிவருதல் காண்க. ஆ - அ3. 3. சொல்லுறுப்பு ஆ (அகச்சுட்டு) - அ4. ஆ - ஆகு - ஆங்கு - அங்கு, ஆது - அது. அல் - அ5. ஒ.நோ. நல் - ந. அ6 (சொற்சாரியை) பெயரெச்ச வீறாயிருக்கலாம். அ7 (எழுத்துச் சாரியை) நெடுங்கணக்கின் முதன்மையும் பலுக்கெளிமையும் பற்றியது. அ8 (அசைச்சொல்) குறிப்புச் பெயரெச்ச வீறாயிருக்கலாம். அசைச் சொற்களெல்லாம் பொருள் குன்றிய அல்லது இழந்த சொற்களே. அ9 (அயற்சொல் முன்னொட்டு) பலுக்கெளிமையும் ஆட்சியும் பற்றியது. பலுக்கு - உச்சரிப்பு. அ10 (இரக்கக் குறிப்பு) இயற்கை பற்றியது. ஆ - அ. ஒ.நோ. E.ha.hah. அ11 (பலவின்பாற் பெயரீறு) சுட்டாட்சி பற்றியது. அ12 (ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மையுருபு) பலவின் பாற் குறிப்பு வினைமுற்றீறு. கைகள் என - என கைகள் (சொன் முறை மாற்று). அ13 (பலவின்பால் வினைமுற்றீறு) சுட்டாட்சி பற்றியது. அ14 (வியங்கோள் வினைமுற்றீறு) அல்லீற்றுத் தொழிற்பெயரின் ஈறுகேடு. செய்யல் - செய்ய செயல் - செய. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். (தொல். நூன்.15) அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். (தொல். சொல். கிளவி. 36) மக்கட் பதடி யெனல். (குறள் 196). இவற்றில் தொழிற்பெயரே வியங்கோளாய் நிற்றல் காண்க. அ15 (இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. செய் = செய்கை. செய் + அது = செய்யது - செய்து = செய்கையுடைய - வன் - வள் - வர் - து - வை. செய்கையுடையவன் - செய்தவன் = செய்தான். வினையுடைமை வினை முடிந்தமையை யுணர்த்தும். உண்டு என்னும் ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று. இன்று இரு திணை ஈரெண் மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்குவது போன்றே. அது என்னும் சுட்டுச் சொல்லை ஈறாகக் கொண்ட செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினைச்சொல்லும், முதற்காலத்தில் வழங்கிற்று. உள் + அது = உள்ளது. உள் + து(அது) = உண்டு. செய்து + அ = செய்த = செய்த - வன் - வள் - வர் - அது - வை ஆன அந்த. செய்து என்னும் வாய்பாட்டு வினைச்சொல் முதற்காலத்தில் முற்று வினையாகவும், பின்னர் முற்று வினையும் எச்சமுமாகவும் வழங்கி, அதன்பின் ஐம்பாலீறு பெற்ற காலந் தொடங்கி எச்ச மாகவே வழங்கி வருகின்றது. செய்து என்னும் இறந்தகால வினைச்சொல் போன்றே, செய்கின்று என்னும் நிகழ்கால வினைச் சொல்லும் அகரவீறு பெற்றுப் பெயரெச்சமாகும். செய்கின்று + அ = செய்கின்ற - செய்கிற. செய்கின்று என்னும் வாய்பாட்டு வினைச் சொல் எச்சப் பொருளில் வழக்கற்றது. அ16 (குறிப்புப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. அ17 (நிகழ்கால வினையெச்சவீறு) அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறுகேட்டால் நேர்ந்தது. செய்யல் (வேண்டும்) - செய்ய (வேண்டும்). வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். (தொல். எழுத். தொகை. 14) அ18 பொருள் வேறுபாடு பற்றியது. அ19 பலுக்கெளிமை நோக்கியது. அ20 அகரத்தின் முதன்மையும் மாத்திரையும் பற்றியது. அ21 முதற்குறிப்பு. சிறப்புக் குறிப்பு எழுத்துக்களை யெல்லாம் உயிரும் மெய்யும் எனக் கூறுபடுத்தியும், உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பிறப்பும் ஒலியும் பற்றி முறைப்படுத்தியும், உயிருக்கும் மெய்க்கும் போன்றே உயிர்மெய்கட்கும் வேறு வரிவடிவமைத்தும், வண்ண மாலை (alphabet) முதன்முதலாக அமைக்கப்பெற்றது தமிழிலேயே. உயிரும் மெய்யும் மட்டுங்கொண்டது குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யுங் கொண்டது நெடுங்கணக்கு என்றும், பெயர்பெறும். இருவகைக் கணக்கிலும் அகரமே தமிழின் முதலெழுத்தாம். வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த பின்னும், நீண்டகாலம் எழுத்தின்றித் தம் முதனூலாகிய வேதத்தை வாய்மொழியாகவே வழங்கி வந்ததனால், அஃது எழுதாக் கிளவி எனப்பட்டது. தமிழரோடு தொடர்புகொண்ட பின்பே, முதலிற் கிரந்த வெழுத் தையும் பின்பு தேவநாகரியையும் அவர் அமைத்துக் கொண்ட னர். இற்றைத் தமிழெழுத்திற்கும் அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை. (போலிகை) அஃறிணை பகுத்தறிவில்லாத பொருள்களைக் குறிக்கும் சொற்களை அஃறிணை என்று வகுத்தனர். (சொல். 34) அஃறிணை யொலிகள் உயிரி யொலிகள் ஒலிக்குறிப்பு சொல் மா மாடு காள்-காழ் காழகம், கழுதை (தெ. காடிதெ) ஞள் ஞள்ளை - ஞெள்ளை, ஞாளி - நாளி (=நாய்) குர் குரங்கு கீர் கீரி சரசர சாரை (என்று நகர்வது) காகா காக்கா - காக்கை, காகம் கூ குயில் கூம் கூகை சிள் சிள் ஈ ஈ உர் உரறு உர் உறுமு ஊள் ஊளை கும் குமுறு - குமுறி (ஒரு வகைப் புறா) கே கேர்-கேரு (கேருதல் = கோழி முட்டையிடக் கத்துதல்) கொக்கக் கொக்க கொக்கரி இம் இமிர் - ஞிமிறு - மிஞிறு, இமிழ் சீத்(து) சீறு - சீற்றம் உயிரிலி யொலிகள் சல்சல் சலங்கை - சதங்கை, சிலங்கை கிலுகிலு கிலுகிலுப்பை கிண்கிண் கிண்கிணி உர் உரும் - உருமு (இடி) விண் (யாழ் நரம்பொலி) வீணை வில் நாணைத் தெறிக்கும்போது எழுமொலியை விண் என்றொலிக்கிறது என்பதையும், வில்லினின்று வில்யாழும் வில் யாழினின்று வீணையாழும் பிறந்திருத்தலையும், புண்பட்ட நிலையில் உடல் நரம்பு துடிப்பதை விண்விண்ணென்று தெறிக்கிறது என்பதையும், ஓர்ந்துணர்க. உறுமி, கஞ்சுரா (கிஞ்சிரி), கிறி, குடுகுடுப்பை (குடுகுடுக்கை), சல்லரி, சல்லிகை, சாலர், சிங்கி, தகுணிச்சம், தம்புர், பறை, மதங்கம் (மிருதங்கம்) முதலிய இசைக் கருவிப் பெயர்களும்; அகவு, கனை, குரை, பிளிறு முதலிய கத்து வினைச்சொற்களும் ஒலிக்குறிப்பை யடியாகக் கொண்டு பிறந்தவையே. சில அஃறிணை யொலிக்குறிப்புக்களும் சொற்களும் கடுமை அல்லது இழிவுபற்றி மக்கள் செயலையுங் குறிக்க வரும். எ-டு: சள்ளெனல் = நாய்போல் சினத்தல். சீறுதல் = அராப்போற் சினத்தல். அழை, விளி முதலிய பல ஒலிவினைச்சொற்கள் ஒலிக்குறிப் படியினவாகத் தோன்றாவிடினும், உண்மையில் ஒலிக்குறிப்படி யினவே. எண்ணிறந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் வழக்கற்று மறைந்தன. (மு. தா.) அக்கம்1 - அர்க்க அஃகல் = சிறிதாதல் (திவா.) அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுண்ணிதாதல். அஃகு = அஃகம் = அக்கம் = 1/12 காசு. காசு என்பது பழங்காலத்தில் ஒரு சிறு செப்புக்காசாயிருந்ததாகத் தெரிகின்றது. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல்பொய். 72) ஒரு காசிற் பன்னிலொரு பங்கு மதிப்புள்ளது மிகச் சிறிதா யிருந்திருக்குமாதலின், அக்கம் எனப் பெயர்பெற்றது. அர்க்க (arka) என்னும் வடசொற்குச் செம்பு (copper) என்றே மானியர் வில்லியம்சு வடமொழி யாங்கில அகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆயின், செ. ப. க. க. த. அகர முதலியில், அது அக்கம் என்னும் தென்சொற்கு மூலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அக்கம்2 - அக்ஷ அல் - அள் = கூர்மை (திவா.) அல்-அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = 1. குறுகுதல் (நன். 60). 2. சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி. 29) 3. குவிதல். ஆம்பல்.................மீட்டஃகுதலும் (காஞ்சிப்பு. திருக்கண். 104) 4. நுண்ணிதாதல். அஃகியகன்றஅறிவென்னாம் (குறள். 175) அஃகு - அக்கு = முட்போன்ற முனைகளுள்ள மணி. (உருத்திராக்கம்). அக்கை யணிந்தவர் மெய்யுரை (திருவானைக். கோச். செங். 4) அக்கு - அக்கம் = பெரிய அக்குமணி. அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. அப்புக்கெக்கிறகக்கம்(திருப்பு.416) அக்கு என்பதேஇயல்பானbசால்வடிவம்.முள்ளுண்மை பற்றி அப்பெயர் தோன்றிற்று.முண்மணிகள் காய்க்குமரம் முப்பதுட னெட்டே என்று விருத்தாசலப் புராணம் கூறுதல் காண்க. கண்டம், கண்டி, கண்டிகை என்னும் பெயர்களும் அப்பொருள் பற்றித் தோன்றினவே. கண்டம் (கள்ளி), கண்டகம் (முள், நீர்முள்ளி) கண்டகி (தாழை), கண்டு, கண்டங்கத்தரி (முட்கத்தரி) முதலிய பெயர்களை நோக்குக. அக்கமணி இந்தியாவில் நேபாள நாட்டிற்கே உரிய இயற்கை விளைபொருள். ஆரியர் வருமுன்பு வட இந்திய வாணருட் பெரும்பாலர் சிவமதத் திரவிடரே. சிவநெறிக்குரிய குறி (இலிங்க) வழிபாடு செய்துவந்த பழங்குடி மக்கள் சிச்னதேவ என்று வேத ஆரியராற் பழிக்கப்பட்டனர் (இ.வே.). ஆரிய வருகைக்கு ஆயிர மாண்டுகட்கு முற்பட்ட அரப்பா - மொகெஞ்சோதரோ மக்களும் சிவநெறியரே. அந்நெறி தென்னாட்டிலேயே தோன்றிற்று. தென்னா டுடைய சிவனே போற்றி (போற்றித் திருவகவல்) தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (சிவபுராணம்) பாண்டி நாடே பழம்பதி யாகவும் (கீர்த்தித் திருவகவல்) என்று மாணிக்கவாசகர் பாடுதல் காண்க. அக்கமணி யணிவு முதலில் மருத்துவ முறையில் தோன்றி, பின்பு சிவநெறியோடு தொடர்புபடுத்தப் பெற்றதாகத் தெரிகின்றது. அக்கம் என்னும் சொல்லை வடமொழியாளர் அக்ஷ என்று திரித்து, அதை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, சிவபெரு மான் முப்புர எரிப்பு முயற்சியில் ஆயிரம் தேவயாண்டு மருண்டு விழித்திருந்ததால், அவர் கண்களினின்று வடிந்த கண்ணீரில் அக்குமணி மரங்கள் தோன்றினவென்று, அக்ஷ என்னும் வட சொல்லின் கண் என்னும் பொருட்கேற்பக் கதையுங் கட்டிவிட் டனர். இக்கதையின் பொய்ம்மையைத் துடிசை கிழாரின் உருத்திராக்க விளக்கம் என்னும் நூலிற் கண்டு தெளிக. ஆரியர் பிற்காலத்தில் வேத உருத்திரனைத் தமிழ்ச் சிவனொடு மயக்கிவிட்டதால், உருத்திராக்கம் என்னும் சொற்குச் சிவமுண்மணி அல்லது சிவமணி என்பதே பொருந்திய பொருளாம். (வ.வ. 63-65) அக்கினி அழல் - அழன் - அழனம் - தீ (பிங்.) அழல் - அழலி - நெருப்பு - தீ (பிங்.) அழலி - அழனி (அக்னி) வ. அக்நி (agni) L. ignis. ழ - க. போலி. ஒ.நோ. மழ - மக, தொழு - தொகு, முழை - முகை. (த.இ.வ. 196) அக்கை அக்கை - அக்கா, அக்கோ - அகோ. ஒ.நோ. ஐயன் - ஐயோ! அத்தன் - அத்தோ! - அந்தோ! அத்தன் - அச்சன் - அச்சோ! அம்மை - அம்மோ! அம்மவோ! அன்னை - அன்னோ! இங்ஙனம் பெற்றோர் பெயர்கள் பல்வேறு உணர்ச்சிக் குறிப் பிடைச் சொல்லாவது, தமிழிற் பெரும்பான்மையென அறிக. அக்கை என்னுஞ் சொல் தாயையும் மூத்த உடன் பிறந்தாளையும் குறிக்கும். (வ.வ. 65-66) அகத்தழகின் சிறப்பு முகத்தழகு யாவராலும் விரும்பப் படுவதொன்று. ஆனால் அகத் தழகு அதனினும் சிறந்தது. ஆதலால் அழகின்மையை யுணர்த்தும் பொல்லாங்கு பொல்லாப்பு என்னும் சொற்கட்கு, தீமை தீங்கு என்னும் பொருள்கள் ஏற்பட்டுள்ளன. பொல் என்பது அழகை யுணர்த்தும் பகாச் சொல். பொன்மை அழகு; பொல்லாமை அழகின்மை. பொல்-பொன் = அழகான தாது. பொல்+அம் = பொலம். பொலம் = பொன். பொலங்கழல் = பொற்கழல். பொல்+பு = பொற்பு. பொல்லுதல் = அழகாயிருத்தல். பொற்ற = அழகிய, நல்ல. பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885) என்றார் திருத்தக்க தேவர். பொல்லாத - பொல்லா = அழகில்லாத. பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே என்று ஔவையார் பாடுதல் காண்க. பொல்லாங்கு தீது; பொல்லாப்பு தீங்கு. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது என்று அதிவீரராம பாண்டியரும், உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்குப் பொல்லாப்பு என்று பழமொழியும் கூறுதல் காண்க. பொல்லான் பொல்லாதவன் என்பன தீயவனைக் குறிக்கும் பெயர்கள் (சொல். 106). அகத்தியம் பண்டைக்காலத்தில் தலைக்கழகத் திலக்கணமாக இருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழு இலக்கணமாயிருந்ததினால் தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கு இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வர வேண்டுமாயின் அவரைத் தாங்கள் அகத்தியமாய் வர வேண் டும் என்றழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு (சொல். 15.). அகத்தியர் அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர். அகத்தியர் காலம் அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழக் கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர். அகத்தியர் கதைகள் (1) விந்தத்தின் செருக்கடக்கினது ஒரு காலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்திய மலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்த பின், அதனொடு ஒப்புநோக்க விந்தம் மிகச் சிறிதாய்த் தோன் றிற்று. இதே, விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெய ரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரி நாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கினவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது. (2) கடலைக் குடித்தது முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது. (3) குடத்திற் பிறந்தது மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலையெனப் பட்டது. தென்மதுரை யைக் கடல் கொண்டபின், அகத்திய ரிருந்தது பொதியமலை. அது குடமலையின் ஒரு பகுதி. குடதிசை யில் அல்லது குடமலையிலிருந்தமைபற்றி அகத்தியர் குட முனிவர் என்று கூறப்பட்டிருக்கலாம். பழைமையர் தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதைகட்டி, அதன் மறுபெயர்களான கும்பம் கலசம் முதலிய சொற்களாலும் அவர்க்குப் பெயரமைத் திருக்கலாம். ஆர்க்காட்டுப் புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று மொழி பெயர்த்திருப்பதாகப் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் கூறுவர். (4) அங்குட்ட அளவாயுள்ளது அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறுமுனிவரென்றும் குட்டமுனிவரென்றுங் கூறப்பட்டார். குட்டை - குட்டம். ஒ.நோ. பட்டை - பட்டம், தட்டை - தட்டம். செய்யுளடிகள் குறளுஞ் சிந்துமாய்க் குறுகி வருவது குட்டம் படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழுநோயும் குரங்குக் குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க. குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ.நோ. nfh£l« nfhZl« (t.), முட்டி - முஷ்டி (வ.). சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச் சேர்தல் இயல்பு. எ-டு: அங்கயற்கண்ணி, அங்காளம்மை. இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம். அங்குட்டன் என்று ஏற்கெனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையா யிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது. அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். எ-டு: குட்டன் = ஆட்டுக் குட்டி. குட்டான் = சிறுபெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் = அங்குட்டன். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும். அகத்தியர் பெயரான அங்குட்டன் என்பதையும், பெருவிரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்ந்திருக்கலாம். (5) மாநிலத்தைச் சமனாக்கியது பனிமலை ஒரு காலத்தில் நீர்க்கீழிருந்து பின்பு வெளித் தோன்றி யது. அகத்தியர் தெற்கே வந்தபின், குமரிநாட்டைக் கடல் கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ் விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தின ரென்றும், வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினெண் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர். (6) தமிழை உண்டாக்கினது தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறி வின்மையாலும், இதுபோது அறியப்படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக் கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர். அகத்தியம் வழிநூலாதல் அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டு வந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது. அகத்தியம் வழிநூல் என்பதற்குக் காரணங்கள் (1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை. (2) என்ப, என்மனார் புலவர், என மொழிப, என்றிசி னோரே என்று தொல்காப்பியர் முன்னூலாசிரியரைப் பல்லோ ராகக் குறித்தல். (3) களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர் என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோதுதல். சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றியதென்று கூறுவர். அது தவறாகும். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் (புறத். 19) என்று ஆனந்தப் பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர். அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இயற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை, மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி என்று தொல்காப்பியப் பாயிரத்திற் கூறியதா லறியலாம். ஏழியன் முறையது என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப் பட்ட இரு நூல்களை யும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். பாணினி கி.மு. 5ஆம் நூற்றாண்டினரா யிருக்க, அவரியற்றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்? ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று தொல்காப்பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப் படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாத லின், ஐந்திரம் அதன் சிறப்புப் பற்றியும் நூலாசிரியன் பெயரொப் புமைபற்றியும் அத் தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறைய னார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெயரொப்புமை பற்றியும், கோயிற் பீடத்தடியிற் கிடந்தமை பற்றியும், சிவபெருமா னியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக்குப் பண்டைத் தமிழ்ப்பெயர் வேந்தன் என்பது. இந்திரத் தெய்வத் திற்குப் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதி காரத்தானும் மணிமேகலையானு முணர்க. தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவை யல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றியிருக்க முடியும். இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை. அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே, ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளன் என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nominative of Address) என்றே கூறுவர். ஐந்திர இலக்கணத்தில், விளிவேற்றுமை முன்னூல்களிற் போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இதையே, இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்று கூறினர் அகத்தியர். (4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல் ஒரு மொழியில், முதன்முத லிலக்கணம் தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக்கணமும், அதன் மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப்பட்டி ருத்தலின், அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம். அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை அகத்தியம் வடமொழி யிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதா தலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழி யிலக்கணத்தி லில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கண மும் இசை நாடகவிலக் கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியா விற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமை யானும், அகத்தியத்திற்கும் வடமொழியிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க. ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும். அகத்தியர் காலம் இனி, அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போதுகின்றவர்.... துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள் ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகார வுரையிற் கூறி யிருப்பதன் பொருளையுணராது, அகத்தியரைக் கண்ணனுக்குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர். நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரச முத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவுகளுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவதென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறந்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவராதல் எங்ஙனம்? அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழர சரையும் அவர்க்கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை. காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரை யினின்றும் கொண்டு போந்த குடிகளைக் குடியேற்றியதை. அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாட புரத்தை)க் கடல் கொண்டபின். துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும். துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற்காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட்டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையான தென்பதை, அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும், உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறம். 201) என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம். மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக்கழக அகராதி யில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்றதென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதை யறியாமையாலேயே, மேற்கூறிய தவறுகளும் இன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிடரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர்களை யிட்டனர் என்க. மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோவேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமி நாதையர் அவர்கள் அச் செய்யுளின் அடிக்குறிப்பில், தபங்க ரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, `ஹொய்ஸள என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமையால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென் றும் வழங்கப்பட்டானென்று சிலர் கூறுவர். சசகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப் பட்டு வருந்துகையில், அக் கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி `ஹொய்ஸள என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி `ஹொய்ஸளன் என்றும் `புலிகடிமால் என்றும் பெயர்பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர் என்று வரைந்துள்ளார்கள். இவை கல்வெட்டுச் செய்திகள். இதனால், இருங்கோவேளின் மரபினர் ஹொய்சளர் என்பதும், அவ் வேள் ஒருமுறை ஒரு புலியைத் தன் குடிகட்குத் துன்பஞ் செய்வதினின்று விலக்கினான் என்பதும், பிற்காலத்தில் ஹொய் சளன் என்னும் பேருக்குப் பழங்காலக் கதை சற்றுப் பொருத்திக் கூறப்பட்ட தென்பதும் அறியப்படுமேயன்றி, புலிகடிமாலே ஹொய்சளக் குடியினன் என்பது பெறப்படாது, காலவிடையீடு பெரிதா யிருத்தலின் (Ancient India, pp. 228, 229). இனி, புலிகடிமால் என்னும் பெயராலும் ஹொய்சள என்னும் பெயராலும் சுட்டப்பட்ட கதைகள் வெவ்வேறாகவு மிருக்கலாம். மைசூர் நாட்டில் சிறுத்தைப் புலிகள் நிறைந்திருப்பதும், அடிக்கடி அவை சிற்றூர்களுக்கு வந்து குடிகளுக்குத் துன்பம் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப்போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. வடபால் முனிவரன் தடவுட் டோன்றினதாக இருங்கோ வேளைப்பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனை யான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று. இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவ ரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும், இடைக்கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க. தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழியாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப்பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற் றுணர்ச்சி அற்றுவிட்டதுமே, கரணியமாகும். ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்தி லேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூலறி வின்மையும், மிக்க பண்டைக்கால அல்லது இடைக்காலத் தமிழ ரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்! (ஒ.மொ.) அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமை யானது தமிழ். தொண்டு, நும் என்னுஞ் சொற்களின் இயல்பு தொல்காப்பியரால் அறியப் படாமையாலும், இக்காலத்தி னின்று பழங்காலம் நோக்கிச் செல்லச் செல்லத் தமிழில் வட சொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத் திலும் தொல்காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வடசொற் களாயிருத்தலானும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணை யும் வடசொற் கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழராலேயே வழங்கப்பட்டதென்றும் அறிந்துகொள்க. வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழிநூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்த தாகத் தெரியவில்லை. ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியிருப்பதால், அது தமிழினின்றும் மொழிபெயர்த்த வடநூல் களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங் கினதையே உணர்த்துவதாகும். அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை அகத்தியர் காலத்திற்குமுன், தமிழ்நூல்கள் சிறிதுபோது கற்கப் படாதிருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும். (1) அகத்தியர் முருகனை நோக்கித் தவங்கிடக்க, அத் தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகளைக் காட்டிற்று என்ற கதை. (2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு. (3) தொல்காப்பியப் பாயிரத்தில் முந்துநூல் கண்டு என்று கூறியிருத்தல். அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்திருந் தனர். அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழகத்திற்குப்பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடி மாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க. தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல் களைக் கண்டமைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், முந்துநூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் காலத்தில் கழக நூல்கள் அறியப்படா திருந்ததும், அவருக்குத் தெரியாத முதுநூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம். தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்துநூல் கண்டமை பற்றியே, தம் நூலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிட வில்லை யென்க. தொல்காப்பியம் அகத்தியத்திற்குப் பிந்தின தாதலின், அதினும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதையறியாதார் பிற்காலத்தில், தொல்காப்பியர் அகத்தியத்தைச் சாவித்ததாக ஒரு கதை கட்டினர். அகத்தியர் தமிழ்நூற் பயிற்சியைப் புதுப்பித்தமை மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ. (Plato, B.C. 427) என்றும், அவர் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிசிற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச் சொல்லும் எச்சமுங் கண்டுபிடித்தா ரென்றும், மேனாட்டிலக் கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனி சியசு திராக்சு (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமே யென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார். வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியி லிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி யிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன்முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக் கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவை. ஆரியர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்து வைத்தது, அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டே யன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற் பொருட்டன்று. தமிழி லுள்ள கலைநூல்களை மொழி பெயர்த்தும், அவற்றை விரி வாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக் கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நேரேயறி விக்கவேயில்லை. மேனாட்டாரே முதன்முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க் கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதே யென்று, ஆரியர் தம் முன்னோர் கி.மு. 2500 ஆண்டுகட்குமுன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ்விருபதாம் நூற்றாண்டிற்குரிய விழுமிய கருத்துக்களையெல் லாம் பொருத்தியுரைக்கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சி யில்லார்க்குப் புலனாகாது போயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க. ஒ.மொ. அகப்பட்டி தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டி மாடு. பட்டி மாடு போற் கட்டுக் காவலின்றித் திரிபவனைப் பட்டி என்றது உவமையாகு பெயர். நோதக்க செய்யும் சிறுபட்டி (கலித். 51) (தி.ம. 1074) அகமணம் ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல், இன்றுள்ள குலங்களுள், கலப்புக் குலங்கள் தவிர ஏனையவெல்லாம் அக மணத்தனவே. திணைமயக்கம் ஏற்படுமுன் குறவர், ஆயர், வேட்டு வர், உழவர், நுளையர் (செம்படவர்) எனத் தமிழர் ஐந்திணை மக்களாய் வெவ்வேறு நிலத்தில் வாழ்ந்த போது, அவர்க்குள் பெரும்பால் வழக்கமாய் நிகழ்ந்தது அகமணமே. (த.தி. 12) அகர மேற்றுதல் அகரம், மருத நிலத்து ஊர். அகரமேற்றலாவது, ஆயிரக்கணக் கான பிராமணரை வடநாட்டினின்று வருவித்துத் தமிழக மருத நிலத்து வளநகரில் குடியேற்றி, அதை அவர்க்குத் தானமாகக் கொடுத்தல். இதனை அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென் எனத் திருமூலர் கண்டித்தார். (த.இ.வ. 182.) அகில் - mfU(g). அகில் ஒருவகைக் கள்ளிமரத்தில் விளைவதென்பது, கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் என்னும் நான்மணிக்கடிகை (4) அடியால் அறியப்பெறும். கள்ளி என்பது பெரும்பாலும் முள்ளுள்ள நிலைத்திணை (தாவர) வகை. தேக்குப்போல் அகிலும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் விளைவதாகும். குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்றது (பட்டினப். 188), உள் நாட்டகிலை. வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் என்றது (சிலப். 14:107.110) கீழ்நாட்டகிலை. பண்டைக் காலத்தில் இங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருள்களுள் அகிலும் ஒன்றாம். அது தமிழ்வணிகமேயன்றி ஆரிய வணிகமன்று. அக்கு = அகில் (மலை.) அக்கிலு = நெருஞ்சி (மூ.அ) அக்கு - (அக்கில்) - அகில். ம. அகில். Heb ahalim, Gk agallochon, L aquillaria agallocha, E eagle - wood, S. agaru. மேலை மொழிகளிலெல்லாம் லகர வடிவும், வடமொழியில் அதன் திரிபான ரகர வடிவும் இருத்தலை நோக்குக. மானியர் வில்லியம்சு அகரமுதலியில் agaru என்பதை aguru என்றும் காட்டிப் பளுவில்லாதது (“not heavy”) என்று சொற் பொருட் கரணியங் குறித்திருப்பது, அவர் சொந்தக் கைவரிசையே. அகோ - அஹா அகோ என்பது, மகிழ்ச்சி, வியப்பு, இரக்கம், துயரம் முதலிய உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொல். இது அக்கை என்னும் முறைப் பெயரின் விளிவேற்றுமையாம். அங்கணம் - அங்கண வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கு - அங்கணம் = வாட்டஞ்சாட்டமாயிருக்கும் சாலகம். சாலகம், சாய்கடை (சாக்கடை) என்னும் பெயர்களும் இக்கரணியம் பற்றியவையே. வாட்டமாயில்லாவிட்டால் நீர் செல்லாது தேங்கி நிற்கும். அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முற் கோட்டி கொளல் என்னும் குறளில் (720) உள்ள அங்கணம் என்னும் சொற்கு, பரிமேலழகர் முற்றம் என்று பொருளுரைத்திருப்பது பொருந் துவதன்று. கீழோர்க்கு உரைக்கும் மாணுரை வீண்படுவதற்குச் சாலகத்திற் கொட்டிய பாலே தக்க உவமையாம். அங்கு (ang) என்னும் முதனிலைக்குச் செல் (to go) என்று பொருள் கூறி, உலாவுமிடம் அங்கணம் என்று கொள்ளும் வடவர் சொல்லியல் உத்திக்குப் பொருந்துவதன்று. (வ.வ. 67 : தி.ம. 720). அங்கதம் - அங்கத அங்கு = வளை. அங்கதம் = வளையல், தோள் வளைவி. பொதுவாக உறுப்பைக் குறிக்கும் அங்கம் என்னும் வடசொல்லி னின்று அங்கதம் என்னும் சொற் பிறந்ததாக வடவர் கூறுவர். (வ.வ.67). அங்காடி பாரித்தல் ஒரு கடைக்காரன் பேரூதியம் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு வந்து நிறைத்தலுக்கு அங்காடி பாரித்தல் என்று பெயர். அவனைப் போலப் பேராசை யினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவது அங்காடி பாரித்தல் எனப்படும். (சொல்.12) அச்சாணி அச்சு, சக்கரங்கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி, சக்கரம் கழலாதவாறு அச்சின் கடைசியில் செருகும் ஆணி. அதனால் கடையாணி எனவும் படும். (குறள். 667.) அட்டு குறுக்கு. அட்டு - அச்சு = வண்டிக்கும் தேர்க்கும் சக்கரம் கோப்பதற்குக் குறுக்காக அமைக்கப்படும் கட்டை அல்லது உத்தரம். அச்சு - அக்ஷ (வ.) (தி.ம. 735) அச்சு - அக்ஷ (axle) அட்டு - அட்டம் = குறுக்கு. அட்டு - அச்சு = குறுக்காக இருப்பது, உருள்கோத்த மரம் (வ.வ.67). அசுரர் புராணங்களிலும் புராணச் செய்தி குறிக்கும் இலக்கியங்களிலும் அசுரர் என்னும் வகுப்பாரைப்பற்றி அடிக்கடி படிக்கின்றோம். அவருள் கயமுகாசுரன், சம்பராசுரன், தாரகாசுரன், நரகாசுரன், பகாசுரன், விருத்திராசுரன், முதலிய சிலர் மிகப் பெயர் பெற்றவர். அசுரரெல்லாரும். இயல்பாகக் மிகக் கொடியவரென்றே கூறப்படுகின்றனர். இவ் வசுரர் யார்? சுரர் என்னும் தேவருக்குப் பகைவர் என்றும், விசும்பில் (ஆகாயத்தில்) இயங்கக்கூடிய பதினெண் கணத்தாருள் ஒரு கணத்தார் (கூட்டத்தார்) என்றும் அரக்கரைப்போலக் கொடியவரென்றும், பண்டைநாளில் இந்தியா முழுவதும் இருந்தவரென்றும், அடியார் முறையீட்டின்பின் அவ்வப்போது சிவனால் அல்லது திருமாலால் அழிக்கப்பட்டவரென்றும், புராணங் கூறும். சுரையென்னும் அமுதத்தை உண்டவர் சுரர் என்றும், அதை உண்ணப்பெறாதவர் அசுரர் என்றும், பெயர்க் காரணம் காட்டப் பெறும். அசுரர்க்கு அவுணர், தானவர் என்ற பெயருமுண்டு, அசுரர் “a class of demons at war with the gods” என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி கூறும். அசுரர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவரும், மக்களினத் திலின்று வேறுபட்டவருமான ஒரு கொடிய வகுப்பினரென்றே புராணங்களும் இதிகாசங்களும் ஒருமிக்கக் கூறினும், ஆராய்ந்து பார்ப்பின், அவர் தமிழரின் அல்லது திராவிடரின் முன்னோரே யென்பதும், அத்துணைக் கொடியவ ரல்லர் என்பதும் வெளியாகும். அசுரர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் இருந்திருக் கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பேரூர்ப் புராணமும் அங்கு முற்காலத்தில் ஓர் அசுரன் அல்லது அரக்கன் இருந்து ஆண்ட தாகவே கூறுகின்றது. தஞ்சையில் தஞ்சன் என்னும் அரக்கனும், திருச்சியில் திருசிரனென்னும் அரக்கனும் மன்றெச்ச நல்லூரில் மண்ணரக்கன் என்பவனும் பிற நகரங்களில் பிற வரக்கரும், முதற்காலத்தில் ஆண்டனர் என்பது புராணக் கதை, அசுரரும் அரக்கரும் வெவ்வேறினத்தாராகப் பதினெண்கணப் பாட்டுகளிற் கூறப்பட்டிருப்பினும், இயலிலும் செயலிலும் ஒன்றுபட்ட வராகவே காட்டப்படுகின்றனர். மேலும் அவ்விரு வகுப்பார்க்கும் ஒருவரே (காசியப முனிவர்) தந்தையென்றும் புராணங் கூறுகிறது. தென்பெருங் கடலில் முழுகிப்போன ஒரு தீவையாண்ட சூரபதுமன் அசுரனாகவே சொல்லப்படுகின்றான். இங்ஙனம் தமிழகமெங்கும் தொன்முது காலத்திலிருந்த அரசரை யெல்லாம் அசுரரும், அரக்கருமாகக் கூறுவதே அயிர்ப்பிற்கு (suspicion) இடனாகின்றது. இனி செங்குட்டுவனிலும், பன்மடங்கு திறமையாக ஆண்ட சேர வேந்தனாகிய மாவலி என்னும் பச்சைத் தமிழனையும் அவன் மகன் வாணனையும், அசுரராகப் புராணங் கூறுவது. ஏனை முது பண்டைத் தென்னாட் டரசரும், தமிழரே என்றும் வாணன் என்னும் பெயரைப் பாணன் என்றும் திருத்தினர் பின்னோர் என்றும் உய்த்துணர வைக்கிறது. மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். `நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய வந்தாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர் கெழு திருமகள் சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு ............... இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணிமேகலை 19. 51 - 116) இப் பகுதியில் மாவலிக்கு ``மூரி வார்சிலை'' என்னும் அடை கொடுத் திருப்பது கவனிக்கத்தக்கது. சேரனுக்குச் சிறப்பாக உரிய சின்னம் வில். மூரி வார்சிலை - வலிமையுள்ள நீண்ட வில் ``மூரி வெஞ்சிலை'' என்றார் கம்பரும் (கம்பரா. கும். 26). மாவலியின் மகன் வாணன் அவன்வழியினர் தென்னார்க்காடு மாவட்டத் தில் திருக்கோவலூரைச் சூழ்ந்த மகதையென்னும் நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டு வரை வாணகோவரையர் என்னும் பட்டப் பெயருடன், பெரும்பாலும் சேர வேந்தர்க் கடங்கிய சிற்றரசராயும், படைத்தலைவராயுமிருந்து ஆண்டு வந்ததாகத் தெரிகின்றது. வாணகோவரையரைப்பற்றி வி.நா. இராமச்சந்திர தீட்சிதர் கூறுவது:- மகாபலியின் வமிசவத்தர்களாக வழங்கப்பட்ட இவர்கள், சங்ககால முதலே பலம் பெற்ற சிற்றரசராயிருந்த வர்கள். அக்காலத்தில் சோணாடாண்ட கிள்ளிவளவனது பட்டத்துத் தேவி சீர்த்தி என்பவளை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்' என்று மணிமேகலை கூறுதலுங் காண்க. பிற்காலத்தில் இன்னோர் நடுநாடான மகதை மண்டலத்தின் தலைவர்களை ஆறகழூர் அல்லது ஆறை என்ற நகரிலிருந்து ஆட்சி செய்து, சோழ ஏகாதிபத்தியத்தின் பெருமையைத் தாங்கி வந்தார்கள். நம் சோழனது ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியில் விளங்கிய வாண வரசன் ``ஏகவாசகன் குலோத்துங்கசோழ வாணகோவரசன்' என்பவன். இவன் சாசனங்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங்கியவன். ``ஆறகளூருடைய மகதேசன் ராஜ ராஜ தேவன். பொன் பரப்பினான் வாணகோவரையன்'' எனப்பட்டவன். திருவண்ணாமலைக் கோயிலிலும் பிறவிடங் களிலும் வரைந்துள்ள கல்வெட்டுகளில் இவ் வாணனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவை யாவும் சொற்செறிவும் பொருட் பொலிவும் பெற்று விளங்கும். அவற்றிலிருந்து பெருந் தமிழ்ப் புலவர்களின் புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச்சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல் களும் அப் பாடல்களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால் ``பொன் பரப்பினான்'' என்ற பெயர் இவனுக்கு வழங்கியது. (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் பக். 65, 66) மாவலி வழியினரைப் பற்றி வி. வெங்கையர் வரைவது. பாண வம்சத்து அரசர்கள் மகாபலியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கல்வெட்டுகள் வடஆர்க்காடு ஜில்லா வேலூருக்கடுத்த திருவல்ல மென்கிற கிராமத்திலும், மைசூர் சமசுதானத்தில் குல்கான்பொடே என்கிற ஊரிலும் கிடைத்திருக்கின்றன. மூவுலகிலும் தொழப்பட்டவனாயும் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் தலைவனாயுமிருக்கின்ற பரமேசுவரனுக்கு வாயில் காக்கும்படியாக நியமிக்கப்பட்ட மகாபலிகுலத்தைச் சேர்ந்த வன், என்று சில பாண வரசர்கள் தங்களுக்குரிய கல்வெட்டுகளிற் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். பாண குலத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள் இரண்டுண்டு, அவற்றில் ஒன்று சிதம்பரம் கனக சபையின் முகட்டைப் பொன்வேய்ந்த பராந்தகன் என்று சொல்லப்பட்ட வீர நாராயணச் சோழன், பாண வம்சத்தை நின்மூலம் செய்து அவர் நாட்டைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த அத்திமல்லனென்ற அரசனுக்குக் கொடுத்ததாகச் சொல்லுகின்றது. இந்த வீரநாராயணன் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீவித்திருந்தான். மற்றொரு செப்புப் பட்டயத்தில் கீழே எழுதப் பட்டிருக்கும் வம்சாவளி கிடைத்தது. பலி; அவன் மகன் பாணன்; அவன் குலத்திற் பிறந்தவன் பாணாதிராசன். இவ் வம்சத்தைச் சேர்ந்த அநேக அரசர்கள் மரித்தபிறகு இருந்தோன் ஜயநந்தி வர்மன் (இவன் ஆந்திர தேசத்திற்கு மேற்கிலிருந்த நாட்டை ஆண்டவன்) அவன் மகன் முதலாம் விசயாதித்தன். அவன் மகன் ஜகதேகமல்லன் என்கிற மல்லதேவன். அவன் மகன் பாண வித்தியாதரன். அவன் மகன் பிரபுமேருதேவன். அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தன். அவன் மகன் புகழ்விப்பவர் கண்டன் என்கிற இரண்டாம் விசயாதித்தன். அவன் மகன் விசயபாகு என்று கூறப்பட்ட இரண்டாம் விக்கிரமாதித்தன், (மணிமேகலை 19.54 உ.வே.சா. அடிக்குறிப்பு) கீழ்வரும் பாடல்கள் 12ஆம் நூற்றாண்டிலிருந்த ஏகம்ப வாணன் புகழ்பற்றியன. `பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம் மார்பகலங் கண்டு மகிழ்வோரே - போர்புரிய வல்லான் அகளங்க வாணன் திருநாமம் எல்லாம் எழுதலாம் என்று வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழுரையா வாயுண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ அடிதாங்கி நில்லா அரசு. பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க் கரசளித்த ஆண்டகையென் றுன்னை யறியேனோ - மூண்டெழுந்த கார்மாற்றுஞ் செங்கைக் கடகரிவா ணாவுனது பேர்மாற் றுவதரிதோ பேசு. என்கவிகை யென்சிவிகை யென்கவசம் என்துவசம் என்கரியீ தென்பரியீ தென்பவரே - மன்கவன மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற பாவேந்த ரைவேந்தர் பார்த்து,' தேருருளைப் புரவி வாரணத் தொகுதி திறைகொ ணர்ந்து வரும் மன்னநின் தேச மேதுனது நாமமேது புகல் செங்கையாழ் தடவுபாணகேள் வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக தேவன் ஆறைநகர் காவலன் வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகு வரிசை பெற்றுவரு புலவன் யான் நீரும் இப்பரிசு பெற்று மீளவர லாகும் ஏகும் அவன் முன்றில்வாய் நித்திலச் சிவிகை மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம் ஆரும் நிற்கும் உயர் வேம்பும் நிற்கும் வளர் பனையும் நிற்கும் அதன் அருகிலே அரசு நிற்கும் அரசைச் சுமந்த சில அத்தி நிற்கும் அடையாளமே.' சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அடிச்சேற்றில் - மானபரன் மாவேந்தர் வேந்தன் பறித்துநட்டான் ஏகம்பன் மூவேந்தர் தங்கள் முடி. இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர்வரை தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இனி அசுரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்களுள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்து மகட் கோடலாம். ஆசுர மாவது, கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 92 உரை) பண்டைத் தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்த போதே ஒருசேங்கன்றிற்கு அவள் பெயர் குறித்து அதைக் கொல்லேறாக வளர்ப்பதும், அவள் பூப்படைந்த பின் அக் கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவளைக் கொடுப் பதும் வழக்கம். கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள். (கலித். 103) கன்று, காலி வளர்த்து நெய், பால் விற்கும் இனச் செய்தி இஃதாயின் போரையே தொழிலாகக்கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளரும் துணிசெயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுர நிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (Surgery) அசுர வைத்தியம் என்றும் வடநூல் கூறும். ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார். ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான் என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவத் திற்குச் சான்று பகரும். பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள மல்லரையும், மறவரையும், உறுவலி மதவலி மாவலி என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப்பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி என்று அவனை இகழ் வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவ தற்கஞ்சா வாய்மையும் முறைசெய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அரும் பண்புகள். ஆரியத்திற்கு மாறாக விருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் கொடைத் திறத்தையும் சொல் தவறாமையையுமே குன்றின் மேலிட்ட விளக்காக எடுத்துக் காட்டுகின்றது. அவன் குடிகளால் அன்புகூரப்பட்ட செங்கோல் வேந்தனாயிருந்த தனால் அவன் மறைந்ததுமுதல் கடைக்கழகக் காலம்வரை தமிழகம் முழுவதும் ஆண்டிற்கொருமுறை ஓணநாளிற் கொண்டாடப் பெற்றான். இன்று அது அவன் பிறப்பு நாடாகிய மலையாள நாட்டில் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. மாங்குடி மருதனார் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்மேல் மதுரைக் காஞ்சி பாடியது, ஓர் ஓணத்திருநாள் என்று கூறப்பெறும், அச் செவியறிவு நூலை ``ஓணத்திருநாளில் அவர் கூறியதற்கு அரிய கருத்து ஒன்றுண்டு, மூவுலகையும் அடக்கியாண்ட மாவலிச் சக்கரவர்த்தியை ஒடுக்க வேண்டி வாமனாவதாரத்தைக் கொண்டாடுவதே அத் திருவிழா என்பர். அம் மாவலி உத்தம குணச்செயல்கள் உடையவனாயினும், தன் ஆசுர வியல்பால் தேவர் முதலியவர்க்கு இடுக்கண் விளைவித்து வந்தவன். அதனால் கடவுளே அவதாரமூலம் அவன் செருக்கை ஒடுக்கநேர்ந்தது. எத்தனைப் பெருவலியும் செல்வங்களும் உடையவனாயினும் தெய்வ பலம், இல்லையேல் அவை யாவும் சிதைந்தொழியும் என்ற உண்மையைக் குறிப்பிடுவது அத் திருநாள் என்று கூறுவர் மு. இராகவையங்கார். இது ஆராய்ச்சி யுள்ள தமிழ்ப் புலவர் கருத்தன்று. சொல் தவறாமையினாலே மாவலி மாய்ந்தான் என்றும் தவறியிருப்பிற் தப்பியிருப்பான் என்றும் முடிவு கொள்வதற்கே குறள் தோற்றரவுக் (வாமனன்) கதை இடந்தரு கின்றது. கொடையும் வாய்மையும் வழுவிய அறங்களேயன்றி வழுவாய் (பாவம்) ஆகா. அவற்றை ஊக்குவ தன்றித் தளர்விப்பது இறைவனுக்கு ஒத்ததன்று. மேலும் மாபலி கொடை வழங்கிய சமையம் வேள்வி என்று கூறப்படுவதால் அது தெய்வப் பற்றைக் காட்டுவதுடன் ஆரிய முறைப்படி சீரிய திருச்செயலுமாகின்றது. ஆதலால் தெய்வத்துக்கு மாறாக அவன் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தேவர் முதலியவர்க்கு இடுக் கண் விளைவித்தான் என்று வேகடையாய்க் கூறுவது பொருந் தாது. தேவர் யார்? அவருக்கு என்ன தீங்கு செய்தான்? மண்ணுலக வேந்தன் விண்ணுலகத் தேவருக்கு எங்ஙனம் தீங்கு செய்ய முடியும்? இன்னோரன்ன வினாக்கட்கு விடையின்மையால் அக் கூற்று பொருளற்றதெனக் கூறி விடுக்க. குடிகளை அன்பாய் அரவணைத்துக் காப்பதே அரசன் கடமை. ஆண்டிற்கொரு முறை ஓணநாளில் மாவலி தன் குடிகளைக் கண்டு போக இறைவ னிடம் ஈவு (வரம்) பெற்றான் என்றும், மலையாளியர் அவனைக் கண்டு களிப்பதுபோல் கொண்டாடுகின்றனர் என்றும் கூறப்படுவது மாவலியின் மாபெருந் தகைமையைக் காட்டுமன்றோ! இதுகாறும் கூறியவற்றால் அசுரர் தமிழரின் முன்னவரே யென்றும், தீயவரல்லரென்றும், பாகதத்திற் கொள்வது போல், சுரையென்னும் கள்ளை யுண்டவர் சுரர் என்றும் அதை உண்ணாத சான்றோரை அசுரர் என்றும் கூறுவதே பொருத்த மென்றும் தெரிந்து கொள்க. அசை-அச் நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா. 581: 3) அசைத்தல் = உண்ணுதல். அசைவு செய்தல் = உண்ணுதல். அசை என்னும் முதனிலை வழக்கிறந்தது. ஒ.நோ. கட்டல் (கள்+தல்) என்னும் வினை வழக்கற்றபின் களவுசெய் என்பது முதனிலையாய் வழங்குதல் காண்க. அட்டம்1 - அட்டம் (boiled rice) அடு - அடுசில் - அடிசில். அடு - அட்டம். அடுதல் = சமைத்தல். (வ.வ. 67). அட்டம்2 - அட்ட (High, lofty) எட்டு - எட்டம் = உயரம். எட்டம் - அட்டம். அட்டம் - அட்ட(வ.) = மதில்மேற் காவற்கூடம். (வ.வ. 68). அட்டலங்காய் புட்டலங்காய் விளையாட்டு செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு, அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய் பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு எந்தப் பூனை தின்றது - இந்தப் பூனை தின்றது என்று பாடி இந்தப் பூனை என்று சொல்லும் போது ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டுவாள். பூனை உறியிலுள்ள உப்புக் கண்டத்தைத் தின்று விட்டதைக் குறிப்பதாக உள்ளது இவ்விளையாட்டு. அட்டாலை - அட்டால அட்டம்+ஆலை = அட்டாலை = மதின்மேற் காவற்கூடம் அல்லது கோபுரம். சாலை - ஆலை. கீழ்பா லிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 20:10) அட்டாணி - அட்டாலை தலையெடுப்பாக வுயர்ந்த அட்டாணியும் (இராமநா. சுந். 3) ஆரியர் வருமுன்பே, பல்வகை யரணுறுப்புக்களைக் கொண்ட கோட்டை கொத்தளங்கள் தமிழகத்திலிருந்தன. அட்டாலை - அட்டாளை (யா.) அட்டில் வகை அடுக்களை வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை சமைப்பதற் கென்று தனியாயுள்ள அறை; அட்டில் சமையலுக்குத் தனியா யுள்ள சிறு வீடு; ஆக்குப்புரை விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடைப்பள்ளி கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு. (சொல். 50). அடக்கம் - டக்கா (dh) அடக்கம் = அடங்கிய ஓசையுடைய தோற்கருவி. நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம் *(சிலப். 3: 27 உரை) (வ.வ. 68). அடவி - அடவீ (t) அடு-அடர்-(அடர்வி)-அடவி = மரமடர்ந்த சோலை அல்லது காடு. இனி, அடு-அடவி என்றுமாம். அடுத்தல் = நெருங்குதல், சேர்தல், அடர்தல். வடமொழியாளர் காட்டும் சொற்பொருட் கரணியம் வருமாறு. அட் = திரி (to roam), அலை (to wander about). அடவீ = திரியுமிடம் (place to roam in), மரமடர்காடு (forest). (வ.வ. 68). அடியளந்தான் கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப் போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்ப தாகச் சொல்லப்பட்டது. வேத ஆரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால் திருமால் மூவடியால் உலக முழுவதையும் அளந்தான் என்றொரு கதை யெழுந்தது. இதுவே குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் முன்னை நிகழ்ச்சி பற்றி அடியளந்தான் இறந்தகால வினையாலணையும் பெயரால் குறிக்கப்பெற்றது. உழிஞைக் கொடி முடக் கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. (குறள்610.) அடிவகை தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி கோல்: நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி தூறு: குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி தட்டு அல்லது தட்டை: கம்பு சோளம் முதலியவற்றின் அடி கழி: கரும்பின் அடி, கழை: மூங்கிலின் அடி. அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி (சொல். 65). அடு-அச் (இ.வே.) அடுத்தல் = நெருங்குதல், அடைதல். அண்டின உயிரைக் காத்தல் அடைக்கலங்காத்தல் உயர்ந்தோர்க்குச் சிறந்த அறமாகும். பழந்தமிழரும் ஆப்பிரிக்க மூர் வகுப்பினரும் இவ்வறத்தைக் கடைப்பிடித்து வந்தனர். இடைந்தவர்க் கபயம் யாமென் றிரந்தவர்க் கெறிநீர் வேலை கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின் அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம் (கம். விபீ. அடை.111) என்று கம்பர் கூறுவது தமிழர் அறமே. அடைந்தவர் மக்களாயின், அவர் தம்மால் அடையப் பட்ட வரிடம் அடைக்கலம் வேண்டிப் பெறுவர். ஆனால், வாயில்லா அஃறிணை யுயிரிகள் எங்ஙனம் பேசும்? எங்ஙனம் வேண்டும்? இவ்வெளிய நிலையுணர்ந்தே, இல்லங்களையடுத்து வாழும் சிற்றுயிரிகள் கொல்லும் ஆற்றல் வாய்ந்தனவாயினும், மக்கள் அவற்றைக் கொல்வதில்லை. நல்ல பாம்பு போன்றே அரணையும் நச்சு நீர் உடையது. அரணை தீண்டினால் மரணம் என்பது பழமொழி. ஆயினும், மக்கள் அதைக் கொல்வதில்லை; அதுவும் ஒன்றும் செய்வதில்லை. வீட்டையடுத்துவாழும் நல்லபாம்பும், பேணி வளர்க்கப்படின், அல்லது பாதுகாக்கப்படின், தீங்கு செய்யாதிருத்தலும், பலவிடத் தும், சிறப்பாக மலையாள நாட்டில் காண்கிறோம். வீட்டு முகட்டிலும் கூரையிறப்பிலும் கூடுகட்டி வாழ்வது அடைக்கலான் குருவி. பிறப்பிறப்பிலே என்றார்காளமேகரும். சிறுவரும் எளிதாய்ப் பிடித்துத் தீங்கிழைக்கும் வண்ணம், இக் குருவிகள் தாமாக வந்து இல்லங்களிற் கூடுகட்டி வாழும். பெரியோர் இவற்றைக் காவாவிட்டால் இவற்றிற்கு வாழ்க்கை யில்லை. இதை யுணர்ந்த பெரியோர் இவற்றிக்கு அடைக்கலான் எனப் பெயரிட்டனர். இவை இல்வாணரை அடைக்கலமடுத்த தென்பதும், இவற்றைக் காத்தல் அவர் கடமை என்பதும், இச் சொல்லாற் குறிக்கப்படும் கருத்தாகும் (சொல். 108). அணி கருத்தின் அழகே அணி; அது செய்யுளைப் போலவே உரை நடைக்கும் உரியது (சொல். 1). அணி அமைவு ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே தனிச் சொற்களிலும் அணி அமைதற்கு இடனுண்டு (சொல் 2). அணியின் நோக்கு பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கு (சொல். 1). அணிற்பிள்ளை (விளையாட்டு) ஆட்டின் பெயர்: ஒருவன், பெருஞ்சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கி யாடும் ஆட்டு அணிற் பிள்ளை எனப்படும். ஆடுவோர் தொகை: இதை ஐவர் ஆடுவர். ஆடு கருவி: நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடு கருவிகளாம். ஆடிடம்: பொட்டலும், அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம். ஆடுமுறை: நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்று கொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப்படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில் குறுக்கும் மறுக்கும் முன்னும் பின்னுமாக முன்னோக்கியே இயங்கிக் கொண்டு, அந் நால்வரும் அக் கற்களை யெடாதவாறு தடுப்பன். அவர் அவனால் தொடப்படாமல் ஆளுக்கொரு கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவனே நாற்கல்லையும் எடுத்து ஆளுக்கொன்றாகக் கையில் கொடுக்கவுஞ் செய்யலாம். ஒவ் வொருனும் ஒவ்வொன்றாக எடுக்கும்போதேனும், ஒருவனே நான்கையும் எடுத்துக் கொடுக்கும்போதேனும், அணிற்பிள்ளை தொட முயல்வான்; தொட்டுவிடின், தொடப்பட்டவன் அணிற் பிள்ளையாதல் வேண்டும். இங்ஙனமே தொடரும். அத்தம் - அத்வன் (ch) அற்றம் - அத்தம் = ஆளில்லாத காடு, அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறம் 23) அத்தவனக் காடு என்பது உலக வழக்கு. ஆள்வழக்கற்ற காட்டுவழி என்னும் சிறப்புப் பொருளை இழந்து வழி என்னும் பொதுப் பொருளையே அத்வன் என்னும் வடசொல் உணர்த்துகின்றது (அ.வே.) (வ.வ. 68.) அந்த - ஹந்த (இ.வே) அத்தன் (தந்தை) - அத்தோ! - அந்தோ! - அந்த! அந்த! - அந்தவோ! - அந்தகோ! சிறு பிள்ளைகள் ஏதேனுமொன்று கண்டு வியக்கும் அல்லது அஞ்சும் அல்லது இரங்கும் அல்லது வருந்தும் நிலையில், தம் பெற்றோரை (சிறுவர் தந்தையையும் சிறுமியர் தாயையும்) விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயரின் விளிவடிவுகள் மேற்குறித்த உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொற்களாயின. ஒ.நோ. அச்சன்-அச்சோ; ஐயன்-ஐய-ஐயவோ-ஐயகோ, ஐயோ. (வ.வ. 70) அத்தன் அத்தி அத்தன் அத்தி என்பன முறையே தந்தையையும் தாயையும் குறிக்கும் தென் சொல். அவை அச்சன், அச்சி என்று திரியும். தகரம் சகரமாகத் தமிழில் திரிவது இயல்பு. அப்பன் அம்மை என்பன கண்ணப்பன், கண்ணம்மை என்பவற்றில் வருவது போல், அத்தன், அத்தி, அச்சன், அச்சி என்னும் தந்தை, தாய்ப் பெயரும் ஆண்பால் பெண்பால் ஈறாய் வரும். வண்ணாத்தி, தட்டாத்தி என்பவற்றில் அத்தி என்பதும் மருத்துவச்சி, வேட்டுவச்சி என்பவற்றில் அச்சி என்பதும் பெண்பால் ஈறுகளாம். (எ.கா.) நத்து - நச்சு. அதி - அதி (ati, adhi) அதித்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல். மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. (குறள். 636). அதி + இகம் = அதிகம். அதி + அனம் = அதனம் = மிகுதி. அதிகன் = 1. மிக்கோன். பகைஞர்க் கெல்லா மதிகனாய் (பிரபோத 26: 110). 2. பரம்பொருள், இறைவன். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி - 20). அதிகர் = பெரியோர். அதிகருக் கமுதமேந்தல் (சூடா. 11 : 99). அதி + அகம் = அதகம் - அதகன் = வலிமையோன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2: 1: 9). அதி - அதை. அதைத்தல் = வீங்குதல், செருக்குதல். அதி என்னும் வினை பிற்காலத்தில் வழக்கற்றது. அதி என்பது வடமொழியில் முன்னொட்டாகிய இடைச்சொல் லேயன்றி வினைச்சொல்லன்று. அது இருவடிவில் காட்டப்படினும் ஒரு சொல்லே. (வ.வ: 69); (தி.ம. 735.) அதிகாரம் - அதிகார அதி என்னுஞ் சொல் முற்கூறியதே. கடுத்தல் = மிகுதல். கடு - கடி - கரி. கரித்தல் = மிகுதல். உப்புக் கரித்தல் என்னும் வழக்கை நோக்குக. கரி - காரம் = மிகுதி, கடுமை, வலிமை கடுஞ்சுவையான உறைப்பு. அதிகரித்தல் (மீமிசைச்சொல்) = மிகுதல், பேரளவாதல். அதிகரி - அதிகாரம் = ஆட்சிவலிமை, நூலின் பெரும்பகுதி. அதிகாரி = அதிகாரமுள்ளோன். வடமொழியில் அதிக்ரு என்னும் கூட்டுச்சொல்லை மூலமாகக் காட்டி, அதற்குத் தலைமையாயிருத்தல் என்று பொருளுரைப்பர். க்ரு( செய்) என்னும் சொற் சேர்க்கையால் அப்பொருள் பெறப்படாமை காண்க. (வ.வ.) மேலும், அதிகாரம் என்னும் சொல் வடமொழியில் நூற் சிறு பிரிவைக் குறிப்பதாக மானியர் வில்லியம்சு குறிப்பர். தமிழில் தொல்காப்பியத்திற்போல் நூற்பெரும் பிரிவைக் குறிப்பதே மரபு. திருக்குறளில் பதிகம் என்னும் பெயருக் கீடாக அதிகாரம் என்னும் சொல்லைப் புகுத்தியது உரையாசிரியர் தவறு போலும்! (வ.வ.70) அதிகாரிகளின் அமர்த்தம் (முன்னாளில்) ஊர்களிலிருந்த ஆளுங்கணத்தார் ஆங்காங்குள்ள மக்களால் அரசாணை விதிப்படி தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பிற அரசியல் வினைஞரெல்லாம், பெரும்பாலும் அரசனாலும் அவ்வம்மேலதிகாரிகளாலும் அமர்த்தப்பட்டனர். ஓர் இளவரசன் அல்லது வேற்றரசன் அரியணையேறு முன்னரே, அவன் முன்னோரால் அல்லது அவனுக்கு முந்தினோரால் அமர்த்தப்பெற்று ஏற்கெனவே தத்தம் வினையைச் செவ்வை யாய்ச் செய்துவரும் அரசியல் வினைஞரை. குற்றஞ் செய்தா லொழியப் புதிய அரசன் நீக்குவதில்லை. ஒரு வினைஞன், பொறுக்கலாகாக் குற்றஞ் செய்த விடத்தும், தீராத நோய்ப்பட்ட விடத்தும், வினையாற்ற இயலா மூப்பெய்தியவிடத்தும், இறந்த விடத்தும், அவனுக்குப் பதிலாக ஒருவன் ஆளும் அரசனால் அல்லது மேலதிகாரியால் அமர்த்தப் பெறுவான். தகுதி வாய்ந்திருப்பின் இயன்ற விடத்தெல்லாம், தந்தை மகன் ஆகிய வழிமுறைப்படியே வேலைகள் வழங்கப்பட்டு வந்தன. சிறந்த தகுதி வாய்ந்திருப்பின், கீழ்ப் பதவியாளர் மேற்பதவிக் குயர்த்தப்படுவர். ஒவ்வொரு வினைஞனும் தகுதிபற்றியே அமர்த்தப்பட்டா னெனினும், தலைமையமைச்சன் தகுதியையே அரசன் முக்கியமாய்க் கவனித்தான். அறநிலை திரியா அன்பின் அவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக (புறம் 71) நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் (கலி. 8) என்னும் பகுதிகள், முதலமைச்சன் அரசியலில் எவ்வளவு தனிப் பொறுப்பும் அதிகாரமும் வாய்ந்தவன் என்பதை உணர்த்தும். உயர்குடிப் பிறப்பும், ஒழுக்கமும், மதிநுட்பமும், இலக்கண விலக்கியப் பயிற்சியுடன் அரசியல் நூலில் சிறந்த புலமையும், சூழ்ச்சித் திறனும், நெஞ்சுரனும், அரசியல் வினைத்திட்பமும், அரசனது குறிப்பறிந்தொழுகு மாற்றலும், அரசன் சிறப்பாக நுகரும் பொருளை விரும்பாவியல்பும், அரசனிடத்துங் குடிக ளிடத்தும் அன்பும், எவ்வகையினும் அறைபோகா உள்ளமும், அற வுணர்ச்சியும், சொல்வன்மையும், தோற்றப் பொலிவும் மகப் பேற் றுடன் சுற்றமும் உடையவனே, முதலமைச்சனாக அமர்த்தப் பெறுவன். முதலமைச்சனுக்கு அடுத்தபடியாய் அரசியற் பொறுப்பு வாய்ந்தவன் தலைமைப் படைத்தலைவன். இவ்விருவரும் ஒரு நாட்டிற்கு இருபெருந் தூண்களாவர். ஏற்கெனவே துணையமைச்சனாயும் துணைப்படைத் தலைவனாயும் ஊழியம் செய்து உண்மை காணப்பட்டவரே, பின்னர் முறையே தலைமையமைச்சனாகவும் தலைமைப் படைத் தலைவனாகவும் அமர்த்தப் பெறுவர். தலைமையமைச்சனாகவோ தலைமைப் படைத்தலைவனாகவோ ஒருவனை யமர்த்துமுன், அவனிடத்து அரசன் மாட்டன்பும் அரசவின்பம் விரும்பா வியல்பும் அறை போகா நெஞ்சும் உளவா வென்றறிதற்கு, அவனை அறம் பொருள் இன்பம் உயிரச்சம் என்னும் நால்வகை நோட்டஞ் செய்து, அவற்றில் அவன் தேறப்படின் அமர்த்துவதும் தவறின் நீக்குவதும், அரசர் வழக்கம். அறநோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட அறவோர் சென்று, இவ்வரசன் அறவோனன்மையின், இவனை நீக்கிவிட்டு அறவோனான ஒருவனை அரசனாக்கத் தீர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது? என்று தாமே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். பொருள் நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட படைத் தலைவர் சென்று, இவ்வரசன் இவறி (உலோபி) யாதலின், இவனை நீக்கிவிட்டுக் கொடையாளியான ஒருவனை அரசனாக்கத் தீர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது? என்று தாமே வினவுவது போல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். இன்ப நோட்டமாவது, அரசனுடைய தேவிமாருடன் நெருங்கிப் பயின்ற ஒரு தவமுதியாளை அரசன் விடுக்க அவள் சென்று, இன்ன தேவி உன்னைக் காதலிக்கின்றாள். உன் கருத்து யாது? என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். உயிரச்ச நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட வேறு சிலருடன் ஒரு பொய்க் காரணத்தையிட்டு அவன் சிறை செய்யப் பட்டபின், உடனிருப்போருள் ஒருவன், முன்னேற்பாட்டின்படி, இவ்வரசன் நம்மைக் கொல்லத் துணிந்தான். நாம் முற்பட இவனைக் கொன்றுவிட்டு நமக்கினிய ஒருவனை அரசனாக்கு வோம். உன் கருத்து யாது? என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். இவ்வகை நோட்டத்தையே, அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் என்னுங் குறளால் (501) தெரிவித்தார் திருவள்ளுவர். சில பதவிகட்குச் சில குடியினர் சிறப்பாகத் தெரிந்து கொள்ளப் பட்டனர். அமைச்சப் பதவிக்கு வேளாளர் அல்லது வேளிரே தகுந்தவராகக் கருதப்பட்டார் நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு என்பது ஔவையார் கூற்று. அறமும் மதமும்பற்றிய வினைகட்கெல்லாம். பெரும்பாலும் பார்ப்பனரே அமர்த்தப்பட்டனர் என்பது. அறக்களத் தந்தணர் தருமாசனபட்டர் என வருந்தொடர்களால் அறியலாகும். தூதிற்குப் புலவரும் பார்ப்பனரும் ஆளப் பெற்றனர். ஊர்ச்சபைத் தேர்தல்: ஒவ்வோர் ஆள்நிலவூரிலும் ஆண்டுதோறும் ஆளுங்கணத்தேர்தல் நடைபெற்றது. ஓர் ஆளுங்கணத்தின் ஊழிய ஆண்டு முடிவுறுஞ் சமையத்தில். அதனைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிக்காவது ஊரதிகாரிக்காவது, அரசனால் மதிக்கப் பட்ட ஒரு பெருமகனுக்காவது, ஊர்ச்சபைத் தேர்தலை நடத்தி வைக்கும்படி, அரசனிடத்திருந்து தேர்தல் விதிகளடங்கிய ஆணைவரும். ஆணைபெற்ற அதிகாரி உடனே அதை ஊர்ச்சபையார்க்குக் காட்டுவன். அவர் அதைத் தலைமேற்கொண்டு கண்ணிலொற்றி அதன்படி செய்யத் தொடங்குவர். ஒவ்வோர் ஊரும் தேர்தல் வினைப்பொருட்டுப் பல குடும்பு களாகப் (Wards) பகுக்கப்பட்டிருக்கும். செங்கற்பட்டு மாவட் டத்தைச் சேர்ந்த உத்தரமேரூர் (உத்தர மேலூர்) முப்பது குடும்புகளையும், தஞ்சை மாவட்டத்தில் இன்று செந்தலை என வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் அறுபது குடும்பு களையும், கொண்டிருந்தன. தேர்தலதிகாரி, குறித்த நாளில், சிறுவருட்பட ஊரிலுள்ள மக்களை யெல்லாம், சபைமண்டபத்தில் அல்லது கோயில் மண்டபத்தில் கூட்டுவன். புதிய ஆளுங்கணத்தில் உறுப்பினராயிருந்து வாரியஞ் செய்தற்கு ஒவ்வொரு குடும்பாரும், ஊரின் அளவிற்கும் நிலைமைக்கும் தக்கபடி, ஒருவரையோ பலரையோ, ஒரு தடவைக் கொருவராக, குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். தேர்தல் தொடங்குமுன், அரசாணைத் திருமுகத்திலுள்ள தேர்தல் விதிகள் அனைவர்க்கும் படித்துக்காட்டப் பெறும் என்று தெரிகின்றது. அவ் விதிகள், தேர்தல் நடைபெறவேண்டிய முறையும், வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதும், புதிய ஆளுங்கணத்தின் வாரியப் பகுப்பும், ஊர்ச்சபை வினைஞர் கடமையும், அவர் கடமை தவறியவழி அடையவேண்டிய தண்டமும், பற்றியவாகும். தேர்தலை விதிப்படி நடத்த வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் அதிகாரிகளுடையதாதலின், ஊர்ப் பொது மக்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியிருந்தவை, வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதே. கீழ்க்காணும் தகுதிகளையெல்லாம் ஒருங்கேயுடையார் தக்காராவர்: (1) காணிக்கடன் செலுத்தும் நிலம் கால்வேலிக்குக் குறையாமல் உடைமை. (2) சொந்த மனையிற் கட்டிய வீட்டில் குடியிருத்தல். (3) சிறந்த கல்வியுடைமை. (4) காரியம் நிறைவேற்றும் ஆற்றலுடைமை. (5) அறநெறியில் ஈட்டிய பொருளைக் கொண்டு செம்மை யான வாழ்க்கை நடாத்துதல். (6) முப்பத்தைந்தாண்டிற்குக் குறையாதும் எழுபத்தைந் தாண்டிற்குக் கூடாதுமிருத்தல். (7) முந்திய மூவாண்டிற்குட்பட்டு எந்த வாரியத்திலும் இருந்திராமை. கீழ்க்காண்பவர் தகாதாராவர்: (1) எந்த வாரியத்திலேனுமிருந்து கணக்குக் காட்டாதார். (2) ஐம்பெருங் குற்றம் செய்தோர். (3) ஊர்க் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டோர். (4) பிறர் பொருளைக் கவர்ந்தோர். (5) கள்ளக் கையெழுத்து இட்டோர். (6) குற்றங் காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டோர். (7) கையூட்டு (லஞ்சம்)க் கொண்டோர். (8) ஊர்க் கண்டகர். (9) முறைகெட்ட மணம் புரிந்தோர். (10) துணிச்சலுள்ளோர். (11) உண்ணத்தகாததை உண்டோர். (12) இப் பதினொரு சாராரின் நெருங்கிய உறவினர். (13) கீழ் மக்களோடு கூடியுறைந்து கழுவாய் (பிராயச் சித்தம்) செய்யாதோர். விதிகள் படிக்கப்பட்டு முடிந்தவுடன் தேர்தல் தொடங்கும். குடவோலையாளர் (வாக்காளர்) தகுதியாளர் பெயர்களை எழுதித்தரும் குடவோலைகளைக் குடும்பு வாரியாகக் கட்டி உள்ளிடுவதற்கு ஒரு குடமும், அதிலிருந்து ஒவ்வொரு கட்டாய் எடுத்துக் குலைத்து உள்ளிட்டுக் குலுக்குவதற்கு ஒரு குடமுமாக, இரு வெறுங்குடம் கூட்ட நடுவில் வைக்கப்பட்டிருக்கும். கூட்டத்திலுள்ள நம்பிமாருள் முதியார் ஒருவர் எழுந்து நின்று, குடவோலைக் கட்டுக்களையெல்லாம் இட்டு வைக்கும் குடத்தையெடுத்து, அதில் ஒன்றுமில்லையென்று எல்லார்க்கும் தெரியும்படி காட்டுவர். பின்னர் ஒவ்வொரு குடும்பாரும், தத்தம் குடும்பில் தாந்தாம் விரும்பிய பெயரை வரைந்து கொடுத்த ஓலைச் சீட்டுக்களை யெல்லாம், குடும்புவாரியாகச் சேர்த்துக்கட்டி, ஒவ்வொரு கட்டி லும் அவ்வக்குடும்பின் பெயர் பொறித்த வாயோலை பூட்டி, வெறுமை காட்டப்பட்ட குடத்திற்குள் இடுவர். பின்னர், அம் முதியார் நன்மை தீமையறியாத ஒரு சின்னஞ்சிறு பிள்ளையைக் கொண்டு அக்குடத்திலிருந்து ஒரு கட்டை யெடுத்துக் குலைத்து, முன்போன்றே வெறுமை காட்டப்பட்ட இன்னொரு குடத்திற் குள் இட்டு நன்றாய்க் குலுக்கியபின், மீண்டும் அப்பிள்ளையைக் கொண்டே அதிலிருந்து ஒரு குடவோலைச் சீட்டையெடுத்துக் கரணத்தான் கையிற் கொடுப்பர். அவன் அதைத் தன் வலக்கை விரலைந்தையும் விரித்து வாங்கி, அதில் வரையப்பட்டுள்ள பெயரை அனைவர்க்குங் கேட்கும்படி உரக்கப் படிப்பான். அங்ஙனமே அங்குள்ள நம்பிமார் அனைவரும் அதை வாங்கிப் படிப்பர். அதன் பின் அப்பெயர் கரணத்தானால் ஓர் ஓலையில் குறிக்கப்பெறும். இங்ஙனமே ஏனைக் கட்டுக்களினின்றும் ஒவ்வொரு குடவோலை எடுக்கப்பட்டு, அதில் வரைந்துள்ள பெயர் உடனுடன் குறிக்கப்பெறும். எல்லாப் பெயருங் குறிக்கப் பெற்றபின், வாரியப்பகுப்பு நடைபெறும். ஓர் ஊரில் முப்பது குடும்புகளிருப்பின், மேற் கூறியவாறு முப்பது உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்தோரும், ஏற்கெனவே ஏரிவாரியமும் தோட்ட வாரியமும் செய்து பயிற்சி உடையவரும், காரியவாற்றலும் நடுவுநிலையுமுடையவருமான, பன்னிருவர் முதலாவது ஆட்டை வாரியம் என்னும் ஊர்வாரியமாகத் தெரிந்தெடுக்கப்பெறுவர். எஞ்சியவருள், பன்னிருவர் தோட்டவாரியமாகவும், அறுவர் ஏரி வாரியமாகவும், தகுதிப்படி அமர்த்தப்பெறுவர். பின்பு, மீண்டும் முப்பது உறுப்பினர் முன்போன்றே குடவோலை வாயிலாய்த் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், அறுவர் பொன் வாரியமாகவும், அறுவர் பஞ்சவாரவாரியமாகவும் அமர்த்தப் பெறுவர். வேறுசில வாரியங்களும் அவ்வூரிலிருப்பின், ஒவ் வொன்றிற்கும் அவ்வறுவராக எஞ்சியவரும் அமர்த்தப் பெறுவர். தேர்தல் முடிந்த பின், அது ஏதேனுமொருவகையில் புது முறை யாக நடந்திருப்பின், அதன் நடைமுறை கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் அல்லது ஊர் மண்டபத்தில் பதிக்கப்பெறும். புதிதாய் அமர்த்தப்பெற்ற வாரியத்தார் ஓர் ஆண்டு முழுதுந் தத்தங் கடமையைச் செவ்வனே நிறைவேற்றல் வேண்டும். கடமை தவறியவரும் குற்றஞ் செய்தவரும், உடனே நீக்கப்பட்டுக் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவர். ஊர்ச் சபைக் கணக்கு எழுதற்கு, உண்மையும் சுறுசுறுப்பும் கணிதத்திறமையுமுள்ள ஒருவன் அச்சபையால் அமர்த்தப் படுவான். அவன் தன் கணக்குகளைச் செவ்வையாய் வைத்திருந்து, எந்தச் சமயத்தில் வாரியர் கேட்டாலும் காட்டல் வேண்டும். அங்ஙனங் காட்டத்தவறினும், சரியாய்க் கணக்கெழுதாவிடினும், வேறு குற்றஞ்செய்யினும் ஓராண்டிறுதியில் நீக்கப்படுவான். எவ்வகைக் குற்றமும் அற்றவனாயின், அடுத்த ஆண்டும் அவன் வேலை தொடரும். கரணத்தானுக்குச் சம்பளம், ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும், அதனொடு ஓராண்டிற்கு ஏழு கழஞ்சு பொன்னும் இரு கூறையு மாகும். அவனுக்குக் கொடுக்கப்படும் நெல் கணக்கமேரை எனப்படும். ஆண்டிறுதியில், அவன் ஆட்டைக் கணக்கை அதிகாரிகட்குக் காட்டும்போது, தன்னிடத்தில் பொய்மையில்லை யென்பதை மெய்ப்பித்தற்கு, பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் ஏந்த வேண்டும். அதனால் ஊறு நேராவிடின் காற்பங்கு பொன் மிகுதியாகக் கொடுக்கப்படும்; நேர்ந்துவிடின், பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் பிற தண்டனையும் விதிக்கப்பெறும். ஊர்ச்சபைத் தேர்தல் போன்றே, நகரத்தார் என்னும் நகரசபைத் தேர்தலும், நகரமாந்தர் என்னும் தலைநகர்ப்பெருமக்கள் தேர்தலும், நடந்திருக்கலாம். தேர்தல் விதிகள், தேவையான போதெல்லாம், அவ்வக்காலத்து அரசனால் திருத்தியமைக்கப்பெறும். அக்காலத்துத் தேர்தல் இக் காலத்துத் தேர்தல் போலாது, குடவோலை முறையும் திருவுளச் சீட்டு முறையுங் கலந்ததாகும் ஆயின், இக்காலத்து விருப்பாளர் (அபேட்சகர்) செய்யும் வலக்காரங்களையும் கையாளும் தீயவழி களையும், அக்காலத்துத் தகுதியாளர் பெரும்பாலும் கையாண் டிருக்க முடியாது. அதோடு, குட வோலைகளை யெண்ணும் தொல்லையும் அக்காலத்தில்லை. குடவோலையாளரின் தகுதி கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், வளர்ச்சியுற்றாருள் எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லாம் குடவோலையாண்மை பெற்றார் என ஊகிக்க இடமுண்டு. சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தல் - பார்ப்பனர் தலைமை யாயிருந்த சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தலில், வாரியத்தகுதி பற்றிய விதிகளுள் இரண்டொன்று வேறுபட்டிருந்தன. அவை யாவன: (1) எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்திரப் பிராம்மணம் வல்லார் ஓதுவித்து அறிவானைக் குடவோலை இடுவதாகவும். (2) அரைக்கானிலமே உடையானாயினும், ஒரு வேதம் வல்லானாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் அவனையும், குடவோலை எழுதிப்புக இடுவதாகவும் (Pandyan Kingdom p.93-4 (மொழிபெயர்ப்பு). பார்ப்பனரல்லாதாருள் ஒருவரும் வேதம் வல்லாராய் அக்காலத்திருந்திருக்க முடியாதாதலானும், இங்குக் காட்டிய இரு விதிகளும் பார்ப்பனத் தலைமையிலிருந்த உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலச் சபைத்தேர்தல் விதிகளாதலானும், இவை சதுர்வேதிமங்கலங்கட்கேயன்றிப் பிறவூர்கட்குரிய வல்ல என்பது வெள்ளிடை மலையாம். இனி, பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மானூர்ச்சபைத் தேர்தலைப்பற்றிக் கிடைத்துள்ள கல்வெட்டுச் செய்தியோ, முற்றிலும் வேறுபட்டிருப்பதுடன் வியப்பை விளைப்பதாகவும் இருக்கின்றது. மானூர்ச்சபை விதிகளாவன (1) ஊர்க்கரையாளர் மக்களில் மந்திரப் பிரமாணமும் தருமமும் கற்ற ஒருவனே, ஊர் மன்றில் தன் தந்தையின் கரைக்குரிய உறுப்பினனாக இருக்கலாம்; அதே தகுதி யுள்ளவனே, விற்கப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப் பட்ட அல்லது பெண்ணுடைமையாகப் பெறப்பட்ட கரைக்குரிய ஆளாக மன்றில் இருக்கலாம். (2) இங்ஙனம் மூவகையில் அடையப் பெற்ற கரை. ஒரு வனை முழுவுறுப்பாண்மைக் (Full membership) கன்றி, கால் அரை முக்கால் உறுப்பாண்மைக்கு உரியவ னாக்காது. (3) கரையை விலைக்கு வாங்குவோர். ஒரு வேதம் முழு வதையும் அதன் பரிச்சிட்டங்களோடு நன்றாக ஓதி யிருப்பானையே, தம் கரைக்குரிய உறுப்பினனாகத் தேர வேண்டும். (4) முழுவுறுப்பாண்மை யில்லாதார், ஊர்க்காரியங்களை நிறைவேற்ற எந்த வாரியத்திலும் இருக்க முடியாது. (5) இத்தகுதியெல்லாமுடையோர், ஊர்மன்ற நடவடிக்கை களில். ஒவ்வொரு முன்னீட்டையும் (Proposal) கட்டுப் பாடாக எதிர்க்கவுந் தடுக்கவுங் கூடாது. (6) இங்ஙனம் தடங்கல் செய்தோர், தாமும் தம் சார்பாளரு மாக, தம்மாற் செய்யப்பட்ட ஒவ்வொரு தடங்கற்கும். ஐங்காசு தண்டமிறுத்து விதிகட்குங் கட்டுப்படுவாராக. (சோழவமிசச் சரித்திரச் சுருக்கம், பக். 53). இவ்விதிகளால், மானூர் அந்தணப் பெருமக்கள், ஊர் மக்களின் குடவோலைத் தேர்தலாற் பெறக்கூடிய ஊர் மன்ற உறுப் பாண்மையை, நிலையான சொந்தவுடைமையாக்கிக் கொண்டி ருந்தனரென்பதும்; அவ்வுறுப்பாண்மை பிறவுடைமைகள் போல் விற்கப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும் பெண்டனமாக அளிக்கப்பட்டும் வந்தன என்பதும்; அறியப்படும். (ப.த.ஆ.) அந்தணர் அழகிய குளிர்ந்த அருளையுடையவர். அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால் அருளுடைமையைத் துறவு நிலைக்குரிய முதல் அறமாகக் குறித்தார் திருவள்ளுவர். அந்தணர் என்னும் பெயர் முதன்முதல் தமிழத் துறவியரையே குறித்தது. (தி.ம.54. த.தி.2.) அந்தி உம்முதல் = கூடுதல். முன்வருதல் (தோன்றுதல்), முன் செல்லுதல் (செல்லுதல்), நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவுதல் ஆகிய எண்பெருங் கருத்துக்களிலும், உகரவடி மூலவேர்ச்சொல் சொன்முதன் மெய்களாகிய கசதநபம என்னும் ஆறொடுங் கூடி, அறுவழி வேர்ச் சொற்களைப் பிறப்பிக்கின்றது. அதன்படி, கூடுதற் பொருள் கொண்ட உம் என்னும் மூலவேர்ச் சொல்லினின்று, கும் சும் தும் நும் பும் மும் என்னும் அறுவழி வேர்ச்சொற்கள் பிறக்கும். 1. கும். கும்முதல் = கூடுதல், திரள்தல். 2. சும். சும்மை = தொகுதி. சுடரின் சும்மை விசும்புற (கம்பரா. இலங்கை காண். 33). சும் - சொம் = சொத்து. 3. தும். தும் - திம் - திம்மை = பருமை, பருமன். திம்மலி (திமிலி) = பருத்தவள். திம்மன் = பருத்த ஆண் குரங்கு. திமி = பெருமீன் (திவா.). திமிறுதல் = நீண்டு பருத்து வளர்தல். திமிலம் = பெருமீன் (பிங்.). 4. நும். - (இறந்துபட்டது). 5. பும். பும் - பொம் - பொம்மல் = 1. கூட்டம். பொலிந்தன வுடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன் புல. 28). 2. பருமன். பொம்மல் வனமுலை (சீவக. 2717). 3. மிகுதி. புகுந்தவவ் விருளின் பொம்மல் (இரகு. இலவாண. 55). 4. பொலிவு. பொன்னனைய பொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). பொம்மு தல் = மிகுதல். அதிர்குரல் பொம்ம (பாரத. பதினான். 112). பொம்மெனல் = அடர்ச்சிக் குறிப்பு. பொம்மெனிருள் வாய் (திருக்கோ. 395). 6. மும். மும் - மம் - மம்மல் = மயங்கல் - மசங்கல் (அந்தி நேரம்) என்று கொள்ளவும் இடமுண்டு. மம்மல் - மம்மர் = மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி. 14). மயங்குதல் என்னுஞ் சொல்லின் முதற் பொருள் கூடுதல் (கலத்தல்) என்பதே. உம் என்னும் சொல் கூடுதல் என்னும் வினைப் பொருளில் வழக் கிறந்தது. அப் பொருளுண்மையாலேயே அது கூட்டிணைப்புச் சொல்லாகக் (copulative conjunction) கொள்ளப்பட்டது. இணைப் பிடைச் சொல்லாக வரும் உம்மைச் சொல்லை எண்ணும்மை யென்பது இலக்கண மரபு. எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம்என் றப்பா லெட்டே உம்மைச் சொல்லே (தொல். இடை. 7) எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. (நன். 425) உம்மை யிடைச்சொல், பெயர்ச் சொற்களையும் உரிச்சொற் களையும் வினையெச்சங்களையும் இணைக்கும். எ-டு: அறமும் பொருளும் இன்பமும் வீடும் - பெயர். மழவுங் குழவும் இளமைப் பொருள - உரி. சொல்லியும் எழுதியும் வருகிறான் - வி.எ. உம் - அம் = நீர். அம்தாழ் சடையார் (வெங்கைக் கோ. 35) நீர் தன்னொடும் பிறிதொடும் கலக்குந் தன்மையது. செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 118) அம் - அம்பு = நீர். ஒ.நோ. கும் - கும்பு. அம்பு - வ. அம்பு. அம்பு - அப்பு = நீர்(பிங்.). ஒ.நோ. கும்பு - குப்பு. அப்பு - வ. அப். அம் - ஆம் = நீர். ஆமிழி யணிமலை (கலித் 48) அம், ஆம் என்னும் இருவடியும் வடிமொழியி லின்மையை நோக்குக. அம்பு - அம்பல் = 1. கூடுதல், குவிதல், முகிழ்த்தல் 2. பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை (பேரரும்பு) (இறை. 22, உரை). 3. சிலரே யறிந்து புறங் கூறும் மொழி. அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் (தொல். கள. 48). அம்பல் - ஆம்பல் = இரவில் மலர்ந்து பகலிற் குவிவதாகச் சொல்லப்படும் அல்லி. அல் (இரவு) - அல்லி. ஒ.நோ. கும் - குமுது - குமுதம். k., து. ஆம்பல், க. ஆபல். அம்பு - அம்பலம் = 1. பலர் கூடுமிடம். ஆனைத் தீக்கெடுத் தம்பல மடைந்ததும் (மணி. பதி. 67). 2 ஊர்ச்சவை. 3. கற்றோர் கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா? (பழ.). 4.. தில்லைப் பொன்னம்பலம். சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும் (திருக்கோ. 11). 5. நாடகங் காண்போ ரிருக்கை. அம்பலமு மரங்கமும் (சீவக. 2112). 6. ஊர்த் தலைவன். 7. சிற்றூர் அலுவல் வகை. ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர. சிற்றம்பலம், பேரம்பலம் என்பன தில்லையீரம்பலங்களைக் குறிக்கும் உறவியலிணைச் சொற்கள் (relative terms). சிற்றம்பலம் - வ. சிதம்பர. சிறு + அம்பலம் = சிற்றம்பலம், பேரம்பலம் என்பதற்கு எதிர். வடமொழியாளர் சித் + அம்பர என்று பிரித்து, ஞானசபை என்று பொருள் கூறுவர். அம்பலக்கல், அம்பலக் கூத்தன், அம்பலகாரன், அம்பலச் சாவடி, அம்பலத்தாடி, அம்பலத்தி (தில்லைமரம்), அம்பலப்படுத்துதல், அம்பலமேறுதல், அம்பலவரி, அம்பலவாணன் முதலிய தூய தமிழ் வழக்குண்மையையும், பேரம்பர என்னும் வழக்கின்மை யையும், அம்பர என்னும் சொல்லிற்கு வடமொழியில் அம்பலம் என்னும் பொருளின்மையையும், நோக்குக. அம்பலம், தில்லையம்பலம், திருச்சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், மணியம்பலம் என வருமிடமெல்லாம் லகரம் ரகரமாகாமையும் காண்க. அம் - அமல். அமல்தல் = 1. நெருங்குதல். வேயம லகலறை (கலித். 45). 2. கூடுதல், திரள்தல். அமல் = நிறைவு. (ஞானா. 34). அமல் - அமலை = 1. செறிவு. அடுசினத் தமலையை (ஞானா. 43). 2. பட்ட வேந்தனைச் சூழ்ந்து நின்று மறவர் திரண்டு ஆடும் ஆட்டம். பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் (தொல். புறத். 17). 3. சோற்றுத் திரளை. வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441). 4. மிகுதி. (திவா.). அமல் - அமர். அமர்தல் = 1. நெருங்குதல். அமரப் புல்லும் (திருக்கோ. 372). 2. பொருந்துதல். தன்னம ரொள்வாள் (பு.வெ. 4:5). 3. படிதல். 4. அமைதல். வேலையில் அமர்ந்தான். 5. அமர்ந் திருத்தல். (கந்தபு. கடவுள். 12). 6. அமைதியாதல். காற்றமர்ந்தது. அமரிக்கை. 7. இளைப்பாறுதல். 8. ஒத்தல். அமர ஓர் உவம வுருபு. (தொல். உவம. 11, உரை) 9. விரும்புதல். அகனமர்ந்தீத லினன்றே (குறள். 92). 10. தகுதல், ஏற்றதாதல். குலத்திற் கமர்ந்த தொழில். அமர் - அமர்கை - அமரிக்கை. அமர்தல் = விரும்புதல், அன்பு கூர்தல், நேசித்தல், அமர்தல் மேவல் (தொல். உரி. 82). ஆத்திசூடி யமர்ந்த தேவனை (ஆத்தி. கடவுள்.). அண்ணல் இரலை அமர்பிணை தழீஇ (அகநா. 23). அமர் = விருப்பம். த. அம் - அமல் - அமர். அம்முதல் = பொருந்துதல். L. amo, amare to love, amor, love, amator, a lover, a friend, amatrix, sweet heart, amicus, friendly, amice, in friendly manner. இவ் விலத்தீன் சொற்களினின்று, amateur, amative, amatory, amiable, amicable, amoret, amorist, amoroso, amorous, amour, paramour முதலிய ஆங்கிலச் சொற்கள் திரிந்துள்ளன. அமர்த்தல் = 1. பொருந்திப் பொருதல். ஒ.நோ. பொருதல் = பொருந்துதல், போர்செய்தல். 2. மாறுபடுதல், பேதைக் கமர்த்தன கண் (குறள். 1084). அமர் = 1. போர் (சூடா.). 2. போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னும் நீள்வயலுள் (பு.வெ. 8:5). 3. கடுமை. (W.). 4. வலிமை. அமர் - சமர் = போர். அமரகம் = போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள். 814). அமர் - அமரி = போர்த் தெய்வமாகிய கொற்றவை யென்னுங் காளி. அமரி - சமரி = போர்த் தெய்வமாகிய காளி. அமரி குமரி கவுரி சமரி (சிலப். வேட். 67). அமர் - அமரம் = 1. போர். 2. ஆயிரங் காலாட் படைத் தலைமை. (W). 3. பண்டைப் படை மறவர்க்கு விடப்பட்ட ஊழிய மானிய நிலம். (I.M.P.Ct.344) தெ. அமரமு. அமரம் - சமரம் - வ. ஸமர. வடமொழியில் சமர் என்னுஞ் சொல்லின்மையை நோக்குக. சமர் - சமர்த்து = போர்த் திறமை, திறமை. சமர்த்தாற்று மாற்றால் (அரிச். பு. இந்திர. 46). சமர்த்து - வ. ஸமர்த்த. சமர்த்து - வ. ஸாமர்த்ய. அம் - அமை. அமைதல் = 1. நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181). 2. பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9). 3. தங்குதல். மறந்த வணமையா ராயினும் (அகநா. 37). 4. தகுதியாதல். 5. உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள். 803). 6. ஏற்புடைய தாதல். பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல். பொ. 196 உரை). 7. தீர்மானமாதல். அந்த வீடு எனக்கமைந்தது. 8. அடங்குதல். அமையாவென்றி (கல்லா. முருக. 15.) 9. நிறைதல். உறுப்பமைந்து (குறள் 761). 10. போதியதாதல். கற்பனவுமினியமையும் (திருவாச. 39: 3). 11. பொந்திகை (திருப்தி) யாதல். அமைய வுண்மின் (W.). 12. கூடியதாதல். காரியம் ... அமையு மாயினும் (சேதுபு. அவை.2) 13. முடிவடைதல். அமைந்ததினி நின்றொழில் (கலித். 82). அமை - அமைதி = 1. பொருந்துகை. 2. சமையம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா. 210). 3. தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176). 4. செய்கை. அமைதி கூறுவாம் (கந்தபு. தெய்வ. 185). 5. அடக்கம். 6. தாழ்மை. தொழுதகை யமைதியின் (பரிபா. 4: 71). 7. அமரிக்கை. 8. சமந்தம் (சாந்தம்). 9. நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78). 10. பொந்திகை. அமை - அமைவு. அமை - அமைப்பு - அமைப்பகம். அமை - அமையம் = பொருந்திய வேளை. ஆனதோரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72). ஒ.நோ. நேர் - நேரம். அமையம் - சமையம் = தகுந்த வேளை, வேளை. அமை - சமை. சமைதல் = 1. அமைதல் 2. நிரம்புதல். மலர்ந்து சமைந்த தில்லைகாண் (திருவிருத். 68, வ்யா, 357). 3. முடிதல். 4. அரிசி காய்கறி முதலிய உணவுப் பொருள்கள் வெந்து உண்ணத் தகுதியாதல். 5. வேதல். 6. புழுங்குதல். இந்தக் கூட்டத்தில் சமைந்து விடுகிறது. 7. அழிதல். ஐவர் தலைவருஞ் சமைந்தார் (கம்பரா. பஞ்சசே. 67). 8. பெண் பிள்ளை பூப்படைந்து நுகர்ச்சிக்குத் தகுதி யாதல். சமைந்தால் தெரியும் சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் (பழ.). 9. மக்கள் இறைவனை வழிபட்டும் அறநெறியில் ஒழுகியும் அவன் திருவருளைப் பெற அல்லது திருவடிகளை யடையத் தகுதியாதல். 10. ஏதேனும் ஒரு நிலைமைக்கு அல்லது கருமத்திற்கு அணியமாதல். ம. சமை. சமைத்தல் = 1. உணவுப் பொருளை வேவித்தல். 2. ஒன்றைச் செய்து முடித்தல். 3. அழித்தல். மாதரைத் தங்கழலாற் சிலர் சமைத்தார் (கம்பரா. கிங்கர. 42). ம. சமெ. க. சமை, தெ. சமயு. சமை - சமையல் = உணவவித்தல். சமை - சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) இறைவன் திருவடிகளை யடையச் சமையும் வகை பற்றிய மதம். சமயம் - வ. ஸமய. சமையம் என்பது வேளையையும், சமயம் என்பது மதத்தையும், குறிக்கும் என வேறுபாடறிக. அமை = 1. அமைவு. 2. கூட்டம். 3. கெட்டி மூங்கில். அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொ. 357). அமை - அவை = 1. மாந்தர் கூட்டம். (பிங்.) 2. அறிஞர் கூட்டம். அவையறிதல் (குறள்). 3. அவை மண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6). 4. நாடகவரங்கு. கூத்தாட்டவை. (குறள். 332). ஒ.நோ. அம்மை - அவ்வை. செம்மை - செவ்வை. அவை - சவை = அறிஞர் கூட்டம். சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் (மூதுரை. 13). சவை - சபை - வ. ஸபா (Sabha). சமர், சமை, சமையம் என்னுஞ் சொற்கள் போன்றே, சவை யென்னுஞ் சொல்லும் சகர மெய்யொடு கூடிய அகரமுதற் சொல்லாகும். வடமொழியாளர் ஸபா என்னுஞ் சொல்லை ஸ + பா (bha) என்று பிரித்து, ஒளியொடு (பிரகாசத்தொடு) கூடியது என்று பொருட் கரணியங் காட்டுவர். காலஞ்சென்ற சு.கு. சட்டர்சி அதை மறுத்து, Sib என்னும் தியூத்தானிய அல்லது செருமானியச் சொல்லினின்று ஸபா என்னும் சொல் திரிந்ததாகக் கூறினார். ஆயின், Sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரைக் குறிக்குஞ் சொல்லாதலால், அது பொருந்தாது. ஆகவே, அவை என்பதை மூலச் சொல்லாகக் கொள்வதே பொருத்தமாம். அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம் (முதனிலைத் தொழிலாகு பெயர்). அமை - அவை - சவை - சபை. உம் என்னுஞ்சொல் உந்து எனத் திரியுமென்று தொல்காப்பியங் கூறுகின்றது. உம் உந்தாகும் இடனுமா ருண்டே (தொல். இடை. 44). புறநானூற்றில் 24, 137, 339, 343, 352, 367, 384, 386, 395, 396 என்ற எண்கொண்ட பாட்டுக்களில், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் செய்யுந்து என்னும் வாய்பாட்டுச் சொல்லாகத் திரிந்துள்ளது. தொல்காப்பியம் உம் என்னுஞ் சொல்லைப் பெயரெச்ச வீறென்று விதந்து குறியாது பொதுப்படக் கூறியிருப்பதால், உம் என்னும் இணைப்பிடைச் சொல்லும் உந்தெனத் திரியுமென்று கொள்ள இடமுண்டு. உம் என்னுஞ்சொல் அம் என்று திரிந்தது போன்றே, உந்து என்னுஞ் சொல்லும் அந்து என்று திரிதல் வேண்டும். உம் என்னும் கூட்டிணைப்புச் சொல்லை யொத்த and என்னும் ஆங்கிலச் சொல், அந்து என்னுஞ் சொல்லை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. “AND, Copulative Conjunction. (E.) common from the earliest times. AS. and, also written ond; by form, and. O.Fries. ande, and an; end, en: Du. en; Feel. nda, O. H.G. anti, enti, lnti, unti; mod. G. und” என்று கீற்று (Skeat) தம் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் வரைந் திருத்தல் காண்க. உந்து என்னும் வடிவும் செருமானியத்தில் வழங்குதலை நோக்குக. அம் என்பதன் திரிபான அமல், அமர், அமை என்னும் ஏனைச் சொற்கள் போன்றே, அந்து என்னும் சொல்லும் கூடுதற் பொருள் கொள்ளும். அந்துதல் - கூடுதல், கலத்தல், மயங்குதல், இப் பொருளில் இச் சொல் வழக்கற்றது. இப் பொருளில் வழங்கிய இலக்கியமும் இறந்துபட்டது. அந்து - அந்தி = பகலும் இரவும் கலக்கும் (மயங்கும்) வேளை. பகலும் இரவும் கலத்தல் காலையும் மாலையும் நிகழ்வதால், முதற்காலத்தில் அந்தி யென்னுஞ் சொல் காலை மாலை யிரண்டிற்கும் பொதுவாகவே வழங்கிற்று. காலையந்தியும் மாலையந்தியும் என்னும் புறநானூற்றடியையும் (34:8). காலை யாகிய அந்திப் பொழுதும் மாலையாகிய அந்திப் பொழுதும் என்னும் அதன் உரையையும், நோக்குக. அந்திக்காலை, அந்தி மாலை என்றும் வழக்கிருந்தது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை (சிலப். 4). பின்னர், இம் மயக்கத்தை நீக்க, காலையந்தியை வெள்ளந்தி யென்றும், மாலையந்தியைச் செவ்வந்தியென்றும் அடைகொடுத்து வழங்கினர். வேலைக்காரப் பிள்ளை வெள்ளந்தி நேரத்திலேயே எழுந்து வேலை தொடங்க வேண்டும் என்று, இன்றும் பெருமனைக் கிழத்தியர் கூறுதல் காண்க. செவ்வந்தி நேரத்திற் பூக்கும் பூ செவ்வந்தியென்றே பெயர் பெற்றது. அப்பெயர் கன்னடத்தில் சேவந்தியென்றும், தெலுங்கிற் சேமந்தியென்றும், வடமொழியில் சேவதீயென்றும், கொச்சை வழக்கிற் சாமந்தியென்றும் திரியும். கொச்சை வழக்குச் சொல்லை ஒரு புலவர் சா + மந்தி யென்று பிரித்துச் செத்த குரங்கு என்று பொருள் கொண்டு, செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே என்று பாட்டும் பாடிவிட்டார். அமர், அமை, அமையம் என்னும் சொற்கள் போன்றே, அந்து என்னுஞ் சொல்லும் சகரம் பெற்றுச் சந்து என்றாயிற்று. சந்து = 1. பொருத்து; மூட்டு. (பிங்.). சந்துசந்தாகப் பிய்த்துவிட் டான். 2. இருதொடைச் சந்தான இடுப்பு. 3. பலவழி கூடுமிடம். சந்துநீவி (மலைபடு. 393). 4. மாறுபட்ட இருவரை ஒன்று சேர்ப்பு. உயிரனையாய் சந்துபட வுரைத்தரு ளென்றான் (பாரத. கிருட்டிணன் தூ. 6) 5. தக்க (பொருந்திய) சமையம். k.f., து. சந்து. சந்துக்கட்டு = நெருக்கடி நிலைமை. k., f., தெ. சந்துக்கட்டு. சந்துக்காறை = ஒருவகைக் கைவளை. சந்து செய்தல் = பிணங்கிய இருவரைச் சேர்த்து வைத்தல். சந்து சொல்லுதல் = பிணங்கியவரை இணக்கும் தூது சொல்லுதல். நடுநின்றா ரிருவருக்குஞ் சந்து சொல்ல (சிலப். 8:01, உரை). சந்து போதல் - பிணங்கியவரை இணக்குந் தூது போதல். சந்து போனவன் = உறுப்புக் கட்டில்லாதவன், முடவன். சந்துவாதம் = இடுப்பில் வரும் ஊதைநோய். சந்துவாய் = மூட்டுவாய், அந்து என்பது சந்து என்றானபின், அந்தியென்பது சந்தி யென்றாகிக் காலையந்தியைச் சிறப்பாகக் குறித்தது. அதனால், அந்தியென்னும் பொதுப்பெயர் மாலையந்திக்கே சிறப்புப் பெயராயிற்று. அந்தியும் சந்தியும் அவனுக்கு இதே வேலை என்பதில், சந்தி யென்பது காலையைக் குறித்தல் காண்க. அந்திக்கடை, அந்திக்காப்பு, அந்திக்காவலன், அந்திக்கோன், அந்திச்செக்கர், அந்திப்புள் தீங்கு (தோஷம்), அந்தி மந்தாரம், அந்திமந்தாரை, அந்திமல்லிகை, அந்திவண்ணன், அந்திவானம் என்னும் சொற்களில், அந்தியென்பது மாலையைக் குறித்தல் வெளிப்படை. அந்திமழை அழுதாலும் விடாது அந்தியீசல் அடைமழைக் கறிகுறி என்னும் பழமொழிகளிலும், அந்தியென்பது மாலையையே குறித்தது. கூடுதல் அல்லது கலத்தல் என்னும் அடிப்படைக் கருத்தில், அந்தி சந்தியென்னுஞ் சொற்கள் பல்வேறு பொருள்களைக் குறிக்கும். அந்தித்தல் = 1. சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடை யாலே (திருப்பு. 85). 2. கிட்டுதல். வேதமந்தித்து மறியான் (திருவிளை. நகர. 106). 3. பணமுடிப்பாக முடித்து வைத்தல். அந்தித்திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30:14). சந்தித்தல் = 1. எதிர்தல். சந்தித்திடற் கெளிதோ விந்தவாழ்வு (திருக்கருவை. கலித். 75). 2. கண்டு கொள்ளுதல். மயில்வாகனனைச் சந்திக்கிலேன் (கந்தரலங். 60). 3. சேர்த்தல். சந்தித்த கோவணத்தர் (தேவா. 16:9). சந்தி = 1. கூடுகை. 2. பல தெருக் கூடுமிடம். சதுக்கமுஞ் சந்தியும் (திருமுரு. 225). 3. இணைப்பு. 4. பல பொருத்து அல்லது கணுவுள்ள மூங்கில். (பிங்.). 5. எழுத்துப் புணர்ச்சி. 6. நட்பாக்குகை (குறள். 633, உரை). 7. தறுவாய். நல்ல சந்தியில் வந்தான். 8. ஒரு பெரும்பண். (பிங்.). 9. நாடகச்சந்தி. (சிலப். 3:13, உரை) 10. வரிக்கூத்து வகை. (சிலப். 3:13, உரை). சந்திக்கரை = சாலையும் ஆறும் கூடுமிடம். சந்திக் கருப்பன் = தெருச் சந்திகளில் வைத்து வணங்கும் சிறு தெய்வம். சந்திக் கிழுத்தல் = தெருச்சந்திக்கு வரச் செய்து குற்றங் குறைகளை வெளிப்படுத்தல். சந்திக் கூத்து = தெருச்சந்தியில் ஆடும் ஆட்டம். சந்திக்கோணம் = தேருறுப்புக்களுள் ஒன்று. சந்திக் கோணமு மந்திரவாணியும் (பெருங். உஞ்சைக். 58:51). சந்திசிரித்தல் = தெருச்சந்தியில் மக்கள் பழித்தல். சந்திப்பாடு = தெருச்சந்தியிலுள்ள பேய்களால் ஏற்படும் கோளாறு. சந்திப்பு = 1. எதிர்கை. 2. ஆறு, தெரு, பாதை முதலியன கூடுமிடம். 3. பெரியோரைச் சென்று காண்கை. 4. பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கை. சந்திமறித்தல் = கொள்ளை நோய்க் காலத்தில் தெருச்சந்தியிற் கொடை கொடுத்துத் தீய தெய்வங்களின் சினந்தணிக்கை. சந்திமிதித்தல் = 1. நாலாம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். நாலாகு மதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27) 2. அம்மை நோய் நீங்கியபின் தெருச் சந்தியில் முதன் முதலாக வந்து மிதித்தல். சந்தியில் நிற்றல் = களைகணின்றித் தெருச்சந்தியில் நிற்றல். சந்தியில் விடுதல் = போக்குப் புகலில்லாதவாறு செய்தல். சந்தியிற் கொண்டு வருதல் = குற்றங் குறைகளை வெளிப்படுத்திப் பலர் பழிதூற்றுமாறு செய்தல். முச்சந்தி = மூன்று தெருக் கூடுமிடம். நாற்சந்தி = நான்கு தெருக் கூடுமிடம். சொற் புணர்ச்சியைக் குறிக்கச் சந்தி யென்னுஞ் சொல் பண்டை நூல்களில் ஆளப்படாவிடினும், அப்பொருளையுங் குறிக்கத் தகுதி வாய்ந்த தமிழ்ச் சொல்லே அஃதென்பதை அறிதல் வேண்டும். வடவர் அப்பொருளில் அச்சொல்லை ஆண்டுவிட்டதனால், அது வடசொல்லாகி விடாது. சந்து - சந்தை (ஓ.நோ. மந்து - மந்தை) = 1. பலவூர் வணிகரும் விற்பனையாளரும் கூடுமிடம். தந்தை தாய் தமர் தார மகவெனு மிவையெலாம் சந்தையிற் கூட்டம் (தாயு தேசோ. 3). 2 கூட்டம். தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே (பிரபுலிங். கொக்கி. 6). 3. இருபுருவமுங் கூடுமிடம். சந்தையில் வைத்துச் சமாதி செய் (திருமந். 1201). ம. சந்த. க. சந்தெ. து. சந்தெ. இச் சொல் வடமொழியில் இல்லை. சந்தைக்காரன், சந்தைக் கூட்டம், சந்தை கூட்டுதல், சந்தைச் சரக்கு, சந்தைமடம், சந்தை முதல், சந்தையிரைச்சல், சந்தையேற் றுதல், சந்தைவிலை, சந்தைவெளி என்பன தொன்று தொட்டு வழங்கிவருஞ் சொற்கள். இந்த மடம் போனாற் சந்தை மடம். சந்தைக்கு வந்தவர்கள் என்றைக்குந் துணையா? சந்தையில் அடிபட்டவனுக்குச் சான்றவன் யார்? சந்தையில் விலைபோகாதது எந்த வூரிலும் விலை போகாது. சரக்கு மலிந்தாற் சந்தைக்கு வரும். இவை பழமொழிகள். வடமொழியாளர் சந்தி யென்னுஞ் சொல்லை ஸம் + தி (sam + dhi) என்று பிரித்து, ஸம் + தா (sam + dha#) என்னும் கூட்டுச் சொல்லினின்று திரிப்பர். ஸம் = உடன், கூட, together தா (dha#) = இடு, வை. to put. ஸம்தா (samdha#), to put together, join என்பது அவர் காட்டும் மூலம். தமிழில், உம் - உந்து - அந்து - அந்தி, அந்து - சந்து - சந்தி, சந்து - சந்தை என்றிவ்வாறு ஒரே சொல்லினின்று சொற்கள் படிமுறை யாய்த் திரிந்துள்ளன. இவை தொன்றுதொட்டும் தொடக்கந்தொட்டும் வழங்கி வருவன. சந்தை யென்னுஞ் சொல் வடமொழியிலின்மையும், இவை தூய தென்சொல்லே யென்பதை வலியுறுத்தும். தமிழ் குமரி நாட்டில் தோன்றிய உலக முதன்மொழியென்னும் அடிப்படையுண்மையை உள்ளத் திருத்தின், மேற்கூறியதை உணர்வதில் இடர்ப்பாடேது மிரா. கைத்தலந் தன்னிற் செம்பொன் வளையல் கலகலெனச் சத்தமொ லித்திட நூபுரப் பாதச் சதங்கைகொஞ்சத் தத்திமி யென்றே நடஞ்செய் சம்பீசர் சந்நிதிப்பெண் செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே என்பது, முன்பு (பக். 50) ஈற்றடி மட்டும் வரைந்து விடப்பட்ட பாட்டாகும். பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும் போமிராச் சூழ்சோலை பொருகொண்டைப் பொம்மிகையில் என்னும் தனிப்பாட்டடிகளுங் கவனிக்கத் தக்கன. (த.த.நா.சொ.) அப்பம் - அபூப (இ.வே.) உப்புதல் = ஊதுதல், எழும்புதல், பருத்தல். உப்பு - (உப்பம்) - அப்பம். ஊது - ஊத்து = பருக்கை. ஊத்து + அப்பம் = ஊத்தப்பம். ம. அப்பம், தெ. m¥gK, f., து. அப்ப. அப்பளம் - பர்ப்பட (t) அப்பளித்தல் = சமமாகத் தேய்த்தல். அப்பளி - அப்பளம். (வ.வ.74) தெ. அப்பளமு, க. அப்பள, ம. பப்படம். அம் அம் (பொருந்தற் கருத்து வேர்) உம்முதல் = கூடுதல், பொருந்துதல். உம் - அம். அம்முதல் = க. நெருங்குதல். அம் - அமல். அமல்தல் = நெருங்குதல். வேயம லகலறை (கலித். 45) அம் - அமை. அமைதல் = (1) நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181) (2) நிறைதல். உறுப்பமைந்து (குறள். 761) அமல் = நிறைவு. (ஞானாமிர்தம், 34) (3) போதியதாதல், உளம் நிறைதல். அமைவு = பொந்திகை (திருப்தி) (4) பொருந்துதல். பாங்கமைபதலை (கந்தபு. திருப்பர. 9) அமர்தல் = 1. பொருந்துதல். தன்னம ரொள்வாள் (பு.வெ.4,5) 2. ஒத்தல். அமர, ஓர் உவமவுருபு. அம் - அம்பு - அம்பர் = ஒருவகைப் பிசின் M. ambar. அமைதி = பொருந்திய தன்மை, இலக்கணம். அமல் - அமலை = சோற்றுத்திரளை. வெண்ணெறிந் தியற்றிய மாக்கணமலை (மலைபடு. 441) அமலை = மிகுதி. அமல் - அமள் - அமளி = மிகுதி. M. amali. அமை = கெட்டி மூங்கில். சேரே திரட்சி (தொல். 846) அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொழி, 357) அமலை M. ama. = படைமறவர் திரண்டு ஆரவாரித்தாடும் ஆட்டம், ஆரவாரம். அமளி = ஆரவாரம். அம் = (1) நிலத்தொடு பொருந்தும் நீர். அந்தாழ் சடையார் (வெங்கைக் கோவை, 35) செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே என்னுங் குறுந்தொகையடிகளை (40) நோக்குக. அம் - ஆம் = நீர். ஆமிழியணிமலை (கலித். 48) பூமரு தேன்பட்டுப் புனுகுசவ்வா (து) - ஆம் அழன்மற்று (நீதிவெண்பா) அம் - அம்பு = நீர். அம்பு = ambu (S.) அம் - அப் (S.) M. ambu. அம் = (2) அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாசகம், 19, 5) அம் - அம்மை = 1. அழகு. (பிங்.) ஆம் = அழகு. ஆம்பாற் குடவர் மகளோ (சீவக. 492) நீரால் வளம் ஏற்படுவதால் அழகு தோன்றும். ஒ.நோ. கார் = நீர், அழகு. அமரல் = பொலிவு (திவா.) அமர்தல் = 3. அன்பு கூர்தல். உளத்தாற் பொருந்துதல், காதலித்தல், விரும்புதல். அமர்தல் மேவல் (தொல். 863) அகனமர்ந் தீதலி னன்றே (குறள். 92) ஆத்திசூடி யமர்ந்த தேவனை (ஆத்திசூடி, கடவுள் வாழ்த்து) C/f. L. amare, Love. E. amateur, amatory, amiable, amorist, amorous, amour, Paramour etc. அம்முதல் = உ. கூடுதல், குவிதல். அம் - அம்பு - அம்பல் = குவிந்தமொட்டு. சிலரறிந்து கூறும் புறங்கூற்று. அம்பலும் அலரும் களவு (தொல். 1085) அம்பல் - அம்பலம் = கூட்டம், கூடுமிடம். வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதிகம், 41) K. ambala, M. ampalam, Tu. ambila, S. ambara. அம்பல் - ஆம்பல் = பகலிற் குவியும் அல்லி, பலகோடி கொண்ட ஒரு பேரெண். ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சி. 222) ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப். ஆய். பா.2) K. abal, M. Tu. ambal. இரவில் மலர்வதால் அல்லி என்றும், பகலிற் குவிவதால் குமுதம் என்றும் பெயர் பெற்றிருத்தலும் காண்க. கும்முதல் = குவிதல். அமர்தல் = 4. இருத்தல். அமர்வு = இருப்பிடம். அலிபுருடோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4,7,8) M. Amaruka. கிடையமர்தல் = மந்தையை இருத்துதல். அமைதல் = (5) தங்குதல். மறந்தவண் அமையாராயினும் (அகம். 37) அமர்தல் = 5. படுத்தல். அமளி = படுக்கை. அமளியங்கட் பூவணைப்பள்ளி (சீவக. 1710) M. amali (அமளி) அமர்தல் = 6. வேலையில் அமர்தல். T. amaru, K. amar. அமர்தல் = 7. அமைதியாதல், அடங்குதல், படிதல், இளைப் பாறுதல், இசைதல், அணைதல், தாழ்தல். அம்மை = 2. அமைதி. அம்மையஞ் சொல்லா (சீவக. 3131) 3. சொற்சுருங்கியும் அடி பல்காதும் அடங்கிநிற்கும் பனுவல் வகை. சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே (தொல். 1491) M. ameyuka - amekka. அமர் - அமரிக்கை = அடக்கம். T. amarika M. amarcca. அமர்தல் = 8. விளக்கணைதல். விளக்கானது காற்றினால் அமருமா போல (குருபரம். 305) M. amaral. அமர் - அமர்த்து. அமர்த்துதல் = அழாதிருக்கச் செய்தல். அமை - அமைதி. அமைவன் = முனிவன். அமர்தல் = 9. அமைதல், ஏற்படுதல். வீடமர்தல் = குடியிருக்க வீடு ஏற்படுதல். அமைதல் = (6) ஏற்படுதல். அமைதல் = (7) சமைதல், பதமாதல், நுகருதற்கேற்ற நிலைமையை அடைதல், அணியமாதல் (ஆயத்தமாதல்). அமைத்தல் = ஆக்குதல், சமைத்தல். ஐந்து பல்வகையில் கறிகளும் ... அமைப்பேன் (பாரத. நாடுகர. 15) அமை - சமை. M. camayuka (சமையுக) ஒ.நோ. இறகு - சிறகு, இளை - சிளை, உருள் - சுருள், உலவு சுலவு, உழல் - சுழல், எட்டி - செட்டி, ஏண் - சேண். சமைத்தல் = ஆக்குதல், பதப்படுத்தல், தகுதியாக்குதல், அணியமாக்குதல், M. camekka (சமெக்க). சமைதல் = சோறாதல், பெண் பூப்படைதல், மணஞ்செய்யத் தகுதியாதல், தகுதியாதல். சமை - சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) இறைவனை யடையத் தகுதியாகும் ஒழுக்கம் அல்லது நெறி. அரிசி உண்ணச் சமைதலும், பெண் மணக்கச் சமைதலும் போன்றதே, ஆதன் இறைவனை அடையச் சமைதல். சமைவு = நிலைமை. அமைதல் = (8) நேர்தல். அமை - அமையம் = நேரம். ஒ.நோ. நேர் - நேரம், நேர்தல் = நிகழ்தல். ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72) அமையம் - சமையம். அமர்தல் = 10. பொருந்துதல், கலத்தல், பொருதல், இருவர் அல்லது இருபடைகள் கலந்தே பொருதலால், கலத்தற் கருத்தில் பொருதற் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ. கைகலத்தல் = சண்டையிடுதல். கல - கலாம், கலகம். பொரு - போர். பொருதல் = பொருந்துதல், போர் புரிதல். அமர் M. amar = போர். அமர் - அமரம். அமர் - அமர்த்தல் = போரிடுதல், மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள். 1084) அமரி = போர்த்தெய்வமான காளி. அமரகம் = போர்க்களம். அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா (குறள் 814) அமர் - சமர் - சமரம். சமம் = ஒப்பு, போர், ஒ.நோ. பொருதல் = ஒத்தல், போர்புரிதல். ஒத்தல் ஈண்டுக் கலத்தல். ஒளிறுவாட் பொருப்ப னுடல்சமத் திறுத்த (பரிபா. 22,1) அமர்க்களம் = போர்க்களம், ஆரவாரம், M. amarkkalam. அம்முதல் = 3. அமுங்குதல், பதுங்குதல். அம் - அம்மி. M. ammi = அமுங்க நெருக்கியரைக்குங் கல். அம்முக்கள்ளன் = ஒன்றும் தெரியாதவன்போல் நடிக்குந் திருடன். அமர்தல் = 11. அமுங்க நெருங்கித் தழுவுதல். அமரப் புல்லும் (திருக்கோவை, 372) அம்மு - அமுங்கு - அமுக்கு - அமுக்கி = இரவில் அமுக்குவது போன்ற தோற்றம் (Nightmare) அமுக்கடி = நெருக்கடி. அமுக்கன் = மறைவாக வினைசெய்பவன். M. amun)n)uka (அமுங்ஙுக) amukkuka. அமுக்கலான் = சிலந்தியை அமுக்கி நலமாக்கும் தழை. அமுக்கம் - கமுக்கம். அம் - அமிழ், அமிழ்தல் = நீரில் அமுங்குதல். M. amiluka (அமிழுக). அமிழ் - ஆழ் - ஆழம். ஆழ் - ஆழி. அமிழ் - அமிழ்த்து - ஆழ்த்து - M. amilttuka (அமிழ்த்துக) ஆழ் - அழுந்து - அழுத்து - அழுத்தம். அழுத்து - அழுத்தி. அம் - அமை அமைதல் = (1a) நெருங்குதல், கூடுதல், அமை - அவை = கூட்டம். கழகம், ம - வ, போலி. ஒ.நோ. அம்மை - அவ்வை, குமி - குவி. அமை, அவை என்பன முதனிலைத் தொழிலாகுபெயர். இமை, சுவை, என்பன முதனிலைத்தொழிலாகு பெயராயிருத் தலை நோக்குக. அவை - அவையம் - பேரவை. அம் ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ. மதி - மதியம் (முழுமதி), நிலை - நிலையம், விளக்கு - விளக்கம். அவை - சவை - Sabha (S) ஒ.நோ. இளை - சிளை, ஏமம் - சேமம். ஒ.நோ. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (925) அவையடக் கியலே அரில்தபத் தெரியின் (1370) என்று தொல்காப்பியத்திலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும், அவை, அவையம் என்னும் இருவடிவுச் சொற்களும் வந்திருத்தல் காண்க. சபா என்னும் சொல்லை வடமொழியாளர் ச + பா என்று பிரித்து bha, to shine என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருளுரைப்பர். பர். சட்டர்சியோ அதை ஒப்புக்கொள்ளாது, sib என்னும் தியூத்தானியச் சொல்லை மூலமாகக் காட்டுவர். sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரையோ பலரையோ குறிக்கும் சொல். எருதந்துறைச் சிற்றகராதியை (The Concise Oxford Dictionary) எடுத்துப் பார்க்க. இருவகை மூலமும் எள்ளளவும் பொருந்தா மையை அறிஞர் கண்டு கொள்க. (வே.க.) அம்பரம் அம்பரம் - அம்பர. உம்பர் = உயர்ச்சி, மேலிடம், வானம், தேவருலகம். உம்பர் - உம்பரம் - அம்பரம். ஒருமருந்தருங் குருமருந்தை உம்பரத்திற் கண்டேனே (வே.சா). இதற்கு வடமொழியில் வேரில்லை. க. அம்மி, ம. அம்மிஞ்ஞி. (வ.வ: 74.) அம்பல் அலர் ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப்படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் - அரும்பு. அலர் - விரிந்த மலர். (சொல். 8.) அம்மணம் ஆடையில்லா வுடல்நிலையைக் குறிக்க. அற்றம் என்னும் இலக்கிய வழக்குச் சொல்லும் அம்மணம், முண்டம், மொட்டைக் கட்டை என்னும் உலக வழக்குச் சொற்களும், தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன. இவற்றுள், அம்மணம் என்னும் சொல் சமணம் என்பதன் திரிபாகச் சென்னைப் ப.க.க.த. அகர முதலியிற் காட்டப்பட்டுள்ளது. சமணம் என்பது ச்ரமண என்னும் வடசொல்லின் திரிபு. ச்ரம் (ஏ.வி.) = களை, அயர், சோர், சலி, உழை, வெட்டிவேலை செய். ச்ரம (பெ.) = களைப்பு, அயர்வு, சோர்வு, உழைப்பு, மெய்வருத்தம், ஓகப்பயிற்சி, தவம், உடம்பை வாட்டல். ச்ரமண (பெ.எ.) = உழைக்கின்ற, இழிந்த, கெட்ட, அம்மண; (பெ.) புத்தத் துறவி, சமணத் துறவி, முனிவன், அடியான், ஆண்டி. (வ.வ) ஆச்ரம் = தவநிலையம், முனிவர் குடில். Gk gumnos = naked. gumnosophistes - E gymnosophist = One of ancient Hindu philosophic sect going nearly naked and given up to contemplation, mystic, ascetic. Gk gumnasticos - E gymnastics = bodily exercise. ச்ரமண என்னும் வடசொல், சமணம், சமண, அமணம், அமண் என்றே தமிழில் திரிந்துள்ளது. அம்மணம் என்னும் தென்சொல் என்றும் அற்றம் ஒன்றையே குறிக்கும். அதுவும் சமயச் சார்பின்றி எல்லார்க்கும் பொதுவானதே. வடசொற்றிரிபுகளுள் ஒன்றேனும் அற்றத்தை உணர்த்துவதில்லை. அமணம் என்னும் வடிவம் செய்யுளில் அம்மணம் என்பதன் தொகுத்தல் திரிபாக வந்தே அற்றத்தை உணர்த்தும். சமணத் துறவியருள் ஒரு வகுப்பாரே திசையாடையர் (திகம் பரர்) என்னும் அம்மணர். சமணம் என்னும் சொல் உடம்பை வாட்டலையும் சமண மதத்தையுமேயன்றி அற்றத்தை உணர்த்தாது. பண்டைநாளில் அடியாருள்ளும் நாட்டில் வதியும் துறவிய ருள்ளும் சிலர் நீர்ச்சீலையே (கோவணமே) அணிந்திருந்தனர். காட்டில் வதிந்த முனிவர் சிலர் அதுவுமின்றி யிருந்தனர். ஆதலால், அம்மண நிலை சமணத் துறவியர்க்கே சிறப்பாக வுரியதன்று. அம்மணத்தைக் குறிக்கும் கும்னொ என்னும் கிரேக்கச் சொல்லும் , பொதுவானதேயன்றிச் சமயச் சார்பானதன்று. ஆதலால், அம்மணம் என்னும் சொல்லைத் தென்சொல்லென்று கொள்வதே பொருத்தமாம். (வ.வ.) அம்மை1 வைசூரிக்கு அம்மை என்னும் பெயர் இருப்பதால், காளியம்மை யினால் அந்நோய் வருவதாக நம் முன்னோர் கருதினர் என்றறி யலாம். இன்னும் அக்கருத்து பலர்க்கு நீங்கவில்லை. அம்மை வந்திருக்கிறாள் அம்மை விளையாடுகிறாள் முதலிய வழக்கு களும், வைசூரி வந்தவுடன் காளிக்குச் செய்யப்படும் சிறப்புக்களும் அதை விளக்கும். முதுவேனிலில் தோன்றும் பாலைநிலத்திற்குத் தெய்வம் காளி யாதலாலும், அவ்வம்மையை ஓர் அழிப்புத் தெய்வமாக மக்கள் கொண்டதனாலும், வெப்பமிகுதியால் தோன்றி பலவுயிரைக் கொள்ளை கொள்ளும் வைசூரி நோயைக் காளியால் வருவ தென்று கருதி அதை அத் தெய்வத்தின் பெயரால் அம்மை என்றே அழைத்தனர் முன்னோர். (சொல் 25, 26.) அம்மை2 - அம்பா (இ.வே.) ம., தெ., க. அம்மா. அம்ம - அம்மா - அம்பா (வ.). டீழு யஅஅய, கூhநஅ யஅஅடிn, யஅஅரn, ழுநச யஅஅந (ரேசளந), நு அயஅஅய. அம்பி, அம்பிஸ் (இ.வே.), அம்பீ (இ.வே.), அம்பிகா (ஏளு & கூளு), அம்பாலீ (கூளு), அம்பாலிகா (ஏளு). யஅஅய என்னும் வடிவம் செ.ப.க.க.த. அகர முதலியில் வட சொற்போற் குறித்திருப்பது தவறாகும். அம்மம் (தாயின் முலை) என்ற சொல்லினின்றாவது ஆவின்கன்று கதறொலியினின்றாவது அம்ம என்னும் சொற் பிறந்திருத்தல் வேண்டும். அம்ம முண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ் 2:2:1). க. அம்மி, ம. அம்மிஞ்ஞி. (வ.வ. 74-75.) அமர் அம்முதல் = பொருந்துதல். அம் - அமர். அமர்தல் = பொருந்துதல். அமர் = பொருந்திச் செய்யும் போர். ஒ.நோ. பொருதல் = பொருந்துதல், போர் செய்தல், அமர்த்தல் = போர் செய்தல், வலிமை கொள்ளுதல், செருக்குதல். அம் - சம் - சமம் (போர்) - சமர் - சமரம் - ஸமர (வ.). (தி.ம. 736.) அமரர் அல் - அ. மடி - மரி - மரன் - மரர். அ + மரர் = அமரர் (வ) மரி L. Mori, ம்ரு (இ.வே), (தி.ம.பின்.) அமிழ்தம் சாவா மருந்தாகிய இருவகை உணவுகள். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசி, தகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இவை இருவகை மருந்து. இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் (புறம். 70.) (தி.ம.42.) அமிழ்து அவிழ் - அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு. மருமம் - மம்மம் - அம்மம் - அம்முது - அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும், சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி அமிழ்து என்னும் வடிவம் கொள்ளும். அமுது - அமுதம் - அம்ருத (வ.). வடமொழியாளர் அம்ருத என்னும் வடசொல் வடிவை அ + ம்ருத என்று தவறாகப் பகுத்து சாவைத் தவிர்ப்பது என்று பொருள் புணர்த்து. தேவரும் (சுரரும்) அசுரரும் திருப்பாற் கடலைக் கடைந்தெடுத்த சுரையைத் தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டார் என்றும் அச்சுரை சாவைத் தவிர்த்ததனால் அம்ருத எனப்பெயர் பெற்றதென்றும் கதை கட்டிவிட்டனர். அதைக் குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர் விண்ணுலகப் பொருளெல்லாம் மண்ணுலகப் பொருளினும் மிகச்சிறந்தவை என்னும் பொதுக் கருத்துப் பற்றி, தலை சிறந்த இன்சுவையுண்டியை அமிழ்து என்றும் அமிழ்தினும் இனியது என்றும் சொல்லத் தலைப்பட்டனர். அம்ருத என்னும் வடசொல் வடிவம் கிரேக்கத்தில் Ambrotos என்றும் ஆங்கிலத்தில் Ambrotia என்றும் திரியும். (தி.ம.பின்.) அமைச்சன் அமைச்சன் - அமாத்ய (வ.) அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை + சு = அமைச்சு (தொ. பெ.). ஒ.நோ. விழை - விழைச்சு. வடவர் காட்டும் வரலாறு : அம = இது (அ.வே.). அமா (அம என்பதன் கருவி வேற்.) = உடன் (இ.வே.). அமாத் (நீக்க வேற்.) = அண்மையிலிருந்து (இ.வே). அமாத்ய = உடன் வதிவோன், உடன் குடும்பத்தான் (இ.வே.). 2. (அரசனின்) உடன் கூட்டாளி, அமைச்சன் (ம.பா). உடன் கூட்டாளி என்பது உழையன் என்பதற்கு ஒத்திருப்பினும், அம என்னும் அண்மைச் சுட்டுப் பெயரினின்று அமாத்ய என்னுஞ் சொல்லைத் திரிப்பது பொருந்தாது. பாரதக் காலத்தில் வடவருக்குத் தமிழரொடு மிகுந்த தொடர்பு ஏற்பட்டு விட்ட தனால், அமைச்சன் என்னும் தென்சொல் அக்கால வடநூல் வழக்கில் புகுந்ததென்று கொள்ளுதற்கு எதுவுந் தடையில்லை. மேலும், அமை என்னுந் தமிழ்ச்சொல் அண்மைப் பொருளும் உணர்த்துவது கவனிக்கத் தக்கது. அமைதல் = நெருங்குதல். வழையமைசாரல் (மலைபடு. 181). (வ.வ. 75) அமைச்சு அமைத்தல் = பொருத்துதல், ஏற்பாடு செய்தல். அமை - அமைச்சு = அரசியல் முறையையும் வினைகளையும் செவ்வையாக அமைத்தல். சு தொழிற்பெயரீறு, ஒ.நோ. விழை - விழைச்சு. அமைச்சு - அமைச்சன், வேந்தன் என்னும் பெயர் வேந்து என்று குறுகுவதுபோல, அமைச்சன் என்னும் பெயரும் அமைச்சு என்று குறுகி வழங்கும். இனி, அண்மையிலிருப்பவன் என்று பொருள்படும் அமாத்ய என்னும் வடசொல்லொடு தொடர்புடையதாகக் கொள்ளினும், அப் பொருளிலும் இச்சொல் தென்சொல்லாதற்கு எத்துணையும் இழுக்கில்லை யென்க. அமைதல் நெருங்குதல், அமை நெருக்கம். அமை - அமைச்சன். ஒ.நோ. தலை - தலைச்சன், உழையிருந்தான் என்று திருவள்ளுவருங் கூறுதல் காண்க (638), - அமைச்சன் அமாத்ய (வ.). (தி.ம. 736.) அயர் அயர்-ஹய் அயர்தல் = தளர்தல், கொண்டாடுதல். வடசொற்பொருளும் இவையே. (வ.வ.75.) அர் அர் (அறுத்தற் கருத்து வேர்) உல் - உர் - அர். உர் - உர - உரவு - உரசு - உரைசு - உரைஞ்சு; உரசு - உரோசு - உரோஞ்சு. உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு. உர உரை - உராய். ரகர றகரம் இரண்டனுள்ளும் காலத்தால் முந்தியது ரகரமே. அதன் வல்வடிவே றகரம். றகரம் தோன்றாத முதுபண்டைக் காலத்தில், ரகரமே அதன் தொழிலை ஆற்றி வந்தது. எ-டு: முரிதல் - முறிதல் = வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்தசிலைப் புருவமும் (மணி 18:161) பார் = பாறை. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். (குறள். 1068) இவ்வெடுத்துக்காட்டுக்கள் பிற்காலத்து நூலினவாயினும், சொல்லளவில் முற்காலத்தனவே. அறுத்தல் என்னும் பொருளில் முதற்காலத்தில் வழங்கிய சொல் அர் என்பதே. அது பிற்கால மொழி நிலையில், ரகார ழகாரம் குற்றொற் றகா (தொல். 49) என விலக்கப்பட்டது. அர் - அரம் = அராவும் இருப்புக்கருவி. அர் - அரா - அராவு. அராவுதல் = அரத்தால் அறுத்துத் தேய்த்தல். அரம் - அரம்பு - அரம்பம் = மரமறுக்கும் ஈர்வாள். Te. rampamu. அரம்பு - அரம்பணம் = வெற்றிலை நறுக்கும் கருவி. அர - அரம்போற் கூரிய பல்லையுடைய பாம்பு. அர - அரா. அர - அரவு - அரவம் = பாம்பு. அரங்குதல் = 1. அறுபடுதல். 2. அம்புபோல் தைத்தல். அம்பு ... அரங்கி முழுக (சீவக 293) 3. அழுந்துதல் (உரி. நி.) 4. தேய்தல் 5. வருந்துதல். அரக்கர்கண் அரங்க (கம்பரா. மூல. 81) 6. உருகுதல். செம்பை அரங்கவை (உலக வழக்கு.) 7. அழிதல். அரக்கரங் கரங்க (திவ். திருச்சந். 32) அரங்கு = 1. (அறுக்கப்பட்ட கட்டடப்பகுதியாகிய) அறை. அவ்வீடு அரங்கரங்காகக் கட்டப்பட்டுள்ளது (உலக வழக்கு) 2. அறைபோன்ற நடன அல்லது நாடகமேடை 3. நாடகசாலை 4. சொற்பொழிவு அல்லது நூலுரைப்பு மேடை 5. அவை 6. பாண்டி அல்லது சில்லாக்கு என்னும் விளையாட்டிற்குக் கீறிய கட்டம். 7. கவறாட்டிற்கு வரைந்த கட்டம் 8. கவறாடும் இடம். அரங்கு - அரங்கம் = 1. நாடக சாலை. ஆடம்பலமும் அரங்கமும் (சீவக. 2119) 2. கவறாடும் இடம் (பிங்) 3. படைக்கலம் பயிலும் இடம் (சூடா.) 4. போர்க்களம் (திவா.) 5. அவை (திவா.) 6. ஆற்றிடைக்குறை. ஆற்றுவீயரங்கத்து (சிலப். 10 : 156) 7. திருவரங்கம் (திவ். பெரியதி. 5, 7, 1). அரங்கம் - Skt. ranga. ஆற்றிடைக் குறைகட்கெல்லாம் பொதுப்பெயரான அரங்கம் என்னும் சொல், திருவரங்கத்திற்குச் சிறப்புப் பெயராயிற்று. ஆற்று நீரால் அறுக்கப்பெற்ற திட்டு அல்லது தீவு என்பது அதன் பொருள். அரங்கன் = அரங்க நாயகனான திருமால். அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன் என்றார் பிள்ளைப் பெரு மாளையங்கார். திருவரங்கம் என்பது பிற்காலத்தில் ஸ்ரீரங்கமென வடமொழியில் திரிந்தது. அரங்கு - அரக்கு (பி.வி.) அரக்குதல் = 1. தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந். 456) 2. சிதைத்தல் (சூடா.) 3. அழுத்துதல். விரலால் தலையரக்கினான் (தேவா. 223:11) 4. வருத்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230) 5. கிளைதறித்தல். 6. வெட்டுதல். தாளும் தோளும் அரக்கி (விநாயகபு. 42:4) 7. குறைத்தல். காரரக்கும் கடல் (தேவா. 46: 8,8) 8. முழுதுமுண்ணுதல். அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரப்பு = அழுக்குத் தேய்க்கும் கட்டி அல்லது தூள். அரம்பு = குறும்பு. அரம்பன் = குறும்பன். அரமகள் = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள். ஒ.நோ. அணங்கு = வருத்தும் பெண் தெய்வம், தேவமகள். அரம்பையர் = தேவமகளிர். அரம்பையர்ச் சேருவரன்றே (நைடத. நிலா. 13) அரளுதல் = அஞ்சுதல். அரள் - அரட்டு - அரட்டன் = துன்புறுத்துவோன், துன்புறுத்தும் குறுநில மன்னன். அரட்டமுக்கி = துன்புறுத்தும் குறுநில மன்னனை அடக்கும் செங்கோலரசன். அரற்றுதல் = துன்பத்திற் கதறுதல். அர் - அரி. அரிதல் = பொடியாய் நறுக்குதல் அல்லது சிறிய பொருளை அறுத்தல். அரிதாள் = கதிரறுத்த நெல்தாள். அரிவி - இருவி = அரிதாள். அரிவாள் = சிறிதாய் அறுக்கும் வாள்வகை. அரிவாள்மணை = அரிவாள் பதித்த பலகை அல்லது கட்டை. அரிவாள் முனைப்பூண்டு = அரிவாள் முனையிலுள்ள தேங்காய் திருகி போன்ற இலையுள்ள பூண்டு. அரித்தல் = 1. அரித்தொழுகுதல். 2. சிறிது சிறிதாய்க் கறையான் (சிதல்) போல் அறுத்தல். 3. தினவெடுத்தல், புல்லரித்தல், நுண்ணியதாய் வலித்தல். 4. வெட்டுதல். 5. அழித்தல். கோடரி = கிளையை வெட்டும் வாள். Skt. Kuthara. கோடரி - கோடாரி - கோடாலி. அரி, அரிமா = பிறவுயிரினங்களை அழிக்கும் விலங்கு. கோளரி = கொல்லும் மடங்கல் (Lion) அரி - Skt. Hari. அரி = அறுக்கப்பட்டது, அறுக்கப்பட்ட சிறுதுண்டு, சிறியது, நுண்மை, மென்மை. அரியே ஐம்மை (தொல். உரி. 58) அரிநெல்லி = சிறுநெல்லி. அரிக்குரல் = நுண்ணியதாய் ஒலிக்கும் குரல். அரித்தல் = சிறிது சிறிதாய்ச் சேர்த்தல். அரிக்கன் = அரிக்கும் சட்டி. அரிப்பு வலை = அரிக்கும் மீன்வலை. அரி = பருப்பினும் சிறிய கூல உள்ளீடு. அரி = அரிசி. அரிசிக்களா = சிறுகளா. அரிசிப்பல் = சிறுபல். அர் - அரு - அருவு. அருவுதல் = 1. மெல்லெனச் செல்லுதல். 2. அறுத்தொழுகுதல். கரையை ஆற்றுவெள்ளம் அருவுகிறது (உ.வ.) 3. துன்பப்படுத்துதல். அருவி நோய் செய்து (திவ். பெரியதி. (9,7,6). அருவு - அருவி = மலையுச்சியினின்று மரஞ்செடி கல் மண்ணை அரித்தொழுகும் நீர் வீழ்ச்சி. அருவு - அருகு. அருகுதல் = 1. குறைதல். ஒன்னார் மதிநிலை அருக (இரகு. யாக. 34). 2. அரிதாதல். அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 242) 3. அஞ்சுதல். அஞ்செஞ்சாய லருகாதணுகும் (சிலப். 30:120) 4. கெடுதல். பருகுவன்ன அருகா நோக்கமொடு (பொருந. 77) அரு - அருமை = 1. பொருள்முடை. 2. எளிதிற்பெற அல்லது காண முடியாமை. 3. அளவிறந்த பற்று அல்லது மதிப்பு மிகை. 4. பெருஞ்சிறப்பு. அருமருந்தன்ன - அருமந்தன்ன - அருமந்த - அருமாந்த. அருமைக்காரன் = கொங்குவேளாளர் பூசாரி. அருகு - அருக்கு - அருமை. நீதியின் அருக்கு முன்னி (திருக்கோவை, 275) அருக்குதல் = அருமை பண்ணுதல். அருக்காணி = அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை (உ.வ.) அரு - அருந்தல் = விலையுயர்வு, பொருளருமை. அருந்தற்படி - Dearness Allowance அர - அரை. அரைத்தல் = 1. தேய்த்தல். 2. தேய்த்துத் தூள் அல்லது களியாக்கல். அரை - அரைவை. அரு - அரை = அருகிய அல்லது சிறுத்த இடை; உடம்பிற் பாதி, பாதி. ஒ.நோ. இடு - இடுகு. இடுத்தல் = சிறுத்தல். இடு - இடுப்பு. இடு - இடை = இடுப்பு, நடு. அர் - அறு - அறை = அரங்கு. அறைக்கீரை = அறையறையாய் வகுக்கப்பெற்ற பாத்தியில் விளையும் கீரை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந். 100) அறை = அறுத்தது, அற்றது, எ-டு: உறுப்பறை, கண்ணறை, மூக்கறை (யன்). அறை = அறுத்தது, வரம்பிட்டது. எ-டு: வரையறை. அறு - அறுதி. அறு - அறவு = நீக்கம். எ-டு: வரையறவு. அறு - அற்றம் = ஆடை நீங்குகை, விழிப்பில்லா நிலை. அறு - அறுவு = தீர்ந்து போதல். அரிசி அறுவாய்ப் போய்விட்டது (உ.வ.) அறு - அறுவு - அறுவடை. அறு - அறுப்பு = 1. கதிரறுப்பு. 2. கைம்பெண் தாலியறுப்பு. அறுதாலி = கைம்பெண் (தாலியற்றவள்) அறு - அறுவை = 1. அறுக்கப்பட்ட ஆடை, சவளி. 2. அறுப்பு மருத்துவம் (இக்காலப் பொருள்) அறு - அறுகு = 1. அகலப் படர்ந்து ஆழ வேரூன்றிப் பயிரை அழிக்கும் புல். 2. பிறவுயிரினங்களை அழிக்கும் அரிமா. அறுகு = அறுகை (அறுகம்புல்). அறுகிடல் = அறுகம்புல்லைத் தூவி அதுபோல் வேரூன்றிப் படருமாறு மணமக்களை வாழ்த்தல். அறு - ஆறு = 1. நிலத்தூடறுத் தொழுகும் நீரோட்டம். 2. வழி. நில முழுதும் சோலையாயிருந்த பண்டைக்காலத்தில் ஆறுகளே வழிகளாயிருந்தன. 3. சமயநெறி. 4. ஆறென்னும் எண். முதற்காலத்திலேயே தெய்வ வழிபாடுகள் அல்லது மதக் கொள்கைகள் அறுவகைப்பட்டிருந்ததனால், ஆறென்னும் நீர் நிலைப்பெயருக்கு ஆறென்னும் எண்ணுப் பொருளும் தோன்றிற்று. மதம் என்னும் சொற்கு ஆறென்னும் பொருள் இருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ஆறிருக்கும் ஊர் சில ஆற்றூர் எனப்படும். அப்பெயர் ஆறையென மருவும். எ-டு: பழையாறை. அறு - அறுவாள். அரிவாள் வேறு, அறுவாள் வேறு. காய்கறியறுக்கும் மணைவாளே அரிவாள் எனப்படும். பிற அறுப்பு வாளெல்லாம் அறுவாள் என்றே கூறப்பெறும். மெலிதாய் அறுப்பது அரிவாள் என்றும், வலிதாய் அறுப்பது அறுவாள் என்றும், வேறுபாடறிதல் வேண்டும். தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும் வன்மையைக் குறிக்க வல்லின றகரமும் ஆளப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அறுவாள் வகைகள் (1) பன்னறுவாள் (Sickle) பல் - பன். பன் வைத்தது பன்னறுவாள். (2) பாளையறுவாள். தென்னை பனை முதலியவற்றின் பாளையைச் சீவுவது பாளையறுவாள். (3) வெட்டறுவாள். கடா கிளை முதலியவற்றை வெட்டுவது வெட்டறுவாள். (4) கொத்தறுவாள். இஃது ஆட்டுக்கறியை அறுப்பதற்கும் கொத்துவதற்கும் பயன்படுவது. (5) வீச்சறுவாள். இது வீசிப் பகைவரைக் கொல்வதற்கு உதவுவது. இங்ஙனம் பல்வேறு அறுவாட்கள் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரவும், அவற்றுள் ஒன்றைக்கூட அறுவாள் எனக் குறியாது எல்லாவற்றையும் அரிவாள் என்றே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி குறித்திருப்பது வருந்தத் தக்கது. (வே.க) இணைப்பு அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற, எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல். அர - அரா - அரவு - அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல்2 நுண்ணிதாயொலித்தல். கா : அரிக்குரற்பேடை. அரித்தல்3 அறுத்தல். கா : அரிவாள்மணை (அரி) - (அரம்) - அரங்கு. அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை. ஆற்றிடைக்குறை. அரங்கு - அரங்கம். அரங்கு - அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரித்தல்4 வெட்டுதல். கா : கோடரி (கோடு + அரி) = மரக் கிளையை வெட்டுங்கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. அரித்தல்5 அராவுதல். அரி + அம் = அரம் - அரவு - அராவு. அரித்தல்6 அராவுதல் போல உடம்பிலுண்டாகும் நமச்சல். அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல்7 அரிப்பெடுக்கும்போது சொறிதல் போல, விரல்களால் ஒரு பொருளை வாரித் திரட்டல். அரிப்பது அரிசி. அரிசி போற் சிறிய பல் அரிசிப்பல். சிறிய நெல்லி அரிநெல்லி. அரி = நுண்மை, அழகு. அரித்தல்8 அழித்தல். அரி = பகைவன், சிங்கம், அரசன், தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம். அரி = அழிப்பவன். அழிப்பது. கா : முராரி, ஜ்வரஹரி (வ.) அரி யரி (வ.). அரி - அம் = அரம் = அழிவு. துன்பம்; E. Ger. harw. அரம் - அரந்தை. அரி + அன் = அரன் = அழிப்பவன், தேவன், சிவன். இனி அரம் = சிவப்பு. அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன்முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற் காரணம். அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் = தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. சூரர மகளிரோ டுற்ற சூளே என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது. (அரம்) - (அரம்பு) - அரம்பை = தேவமகள் ரம்பா (வ.). அரன் - ஹரன் (வ.). அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அ ரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா - அரோவரா - அரோகரா. அரம். மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religiosa). அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளை யுடையதாய்ப் பூவோடு கூடியது பூவரசு. (ஒ.மொ.) அரக்கு அரக்கு - ராக்ஷா ம. mu¡F, f., து. அரகு. எல் = கதிரவன். எல்-எர்-எரி = நெருப்பு, சிவப்பு, எர்-எருவை = குருதி, செம்பு, செம்பருந்து. எர்-இர்-இரத்தி = செம்பழ இலந்தை. இர்-அர்-அரன், அரக்கு, அரத்தம், அருணம். அரக்கு = இங்குலிகம், சிவப்பு. அரக்கு - அரக்கம் = அவலரக்கு (பதிற்றுப். 30:27). அரக்காம்பல், அரக்குச் சாயம், அரக்கு மஞ்சள் என்பன செந்நிறப் பொருள்களைக் குறித்தல் காண்க. (வ.வ.75.) அரசச் சின்னங்கள் அரசர்க்கு அவர் தகுதிக்கேற்பப் பல அடையாளங்கள் உள. அவை அரசச் சின்னங்கள் எனப்பெறும். அவை, குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை கொடி, முத்திரை, முரசு, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை எனப் பதினைந்து வகைய. இவற்றுள் முடியொன்றும் மூவேந்தர்க்குச் சிறப்பு என்றும், பிறவெல்லாம் முத்திற வரசர்க்கும் பொதுவென்றும், கூறுவது மரபு. (1) குலம் : மூவேந்தரும், கதிரவன் திங்கள் நெருப்பு ஆகிய முச்சுடரைத் தங்குல முதலாகக் கூறி வந்தனர். பாண்டியர் திங்கட் குலம்; சோழர் கதிரவக்குலம்; சேரர் நெருப்புக்குலம். (கடலுள் மூழ்கிய குமரி நாடாகிய பாண்டி நாட்டில் கதிரவன் கழி பெருங் கடுமையாய்க் காய்ந்து மக்கள் திங்களையே விரும்பும்படி செய்ததனால், பாண்டியர் தம்மைத் திங்கள் வழியினராகவும், குணபுலமாகிய சோழநாடு கதிரவன் எழுந்திசையிலிருந்ததால், சோழர் தம்மைக் கதிரவன் வழியினராகவும் மலை நாடாகிய சேர நாட்டில் மூங்கிலும் பிறவும் ஒன்றோடொன்றுரசி அடிக்கடி பெருநெருப்புப் பற்றியதால், சேரர் தம்மை நெருப்பு வழியின ராகவும் கூறிக்கொண்டதாகத் தெரிகின்றது. குமரி நாட்டு வெப்பத்தினாலேயே, வேனில் இன்னிழல் தரும் வேம்பின் பூமாலையை அடையாள மாலையாகவும், நீர் வாழ் மீன் வடிவை முத்திரையாகவும், பாண்டியன் கொண்டான்போலும்!) (2) பெயர்: அரசர் பெயர்கள், குடிப்பெயர், இயற்பெயர், பட்டப்பெயர், விருதுப்பெயர், சிறப்புப்பெயர், உயர்வுப்பெயர், வரிசைப்பெயர், திணைநிலைப் பெயர், இயனிலைப் பெயர் என ஒன்பான் வகைப்படும். மூவேந்தர் குடிப்பெயர்கள் பலப்பல. அவற்றுள் முதன்மை யானவை. சேரன் (சேரல், சேரலன்) சோழன் பாண்டியன் என்பன. பிற குடிப்பெயர்கள்: சேரனுக்கு மலையன், (மலைநாடன், பொறையன்,) வானவன் (வானவரம்பன்,) வில்லவன், கோதை, உதியன், குடவன், குட்டுவன், கொங்கன், பூழியன் என்பவும்; சோழனுக்குச் சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன், புனனாடன் என்பவும்; பாண்டியனுக்குச் செழியன், மாறன், வழுதி, மீனவன், வேம்பன், பஞ்சவன், கைதவன், கௌரியன், தமிழ்நாடன் என்பவும்; ஆகும். பாண்டியனுக்குச் செழியன் என்னும் பெயர், பஃறுளியாற்றுச் செழிப்பால் ஏற்பட்டதுபோலும்! இயற்பெயராவது பெற்றோரிட்ட பிள்ளைப் பெயர். முதலாம் இராசராசச் சோழனின் பிள்ளைப் பெயர் அருண்மொழித் தேவன் என்பது. பட்டப்பெயர் என்பது, அரசன் முடி சூடும்போது புனைந்து கொள்ளும் பெயர். பிற்காலச் சோழவேந்தர் ஒருவர் விட்டொருவர் தாங்கிய பரகேசரி இராச கேசரி என்னும் பெயர்களும், பிற்காலப் பாண்டிய வேந்தர் ஒருவர் விட்டொருவர். தாங்கிய மாறவர்மன் சடாவர்மன் என்னும் பெயர்களும், முதற் குலோத்துங்கன் வேங்கை நாட்டில் எய்திய விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயரும், பட்டப் பெயராம். விருதுப் பெயராவது, அரசன் தன் பகைவரை வென்றபோது அதற்கறிகுறியாகச் சூடிக்கொள்ளும் கொற்றப்பெயர். முடிவழங்கு சோழன் சோழ கேரளன் முடித்தலை கொண்ட பெருமான் கோனேரின்மை கொண்டான் உலகுய்யவந்த நாயனார் முதலியன 3 ஆம் குலோத்துங்கச் சோழனின் கொற்றப் பெயராகும். சிறப்புப் பெயராவது, நல்ல வகையிலோ தீய வகையிலோ ஏதேனுமொரு சிறப்புப்பற்றி, மக்கள் அரசர்க்கு இட்டு வழங்கும் பெயர். முதற்குலோத்துங்கனுக்கு வழங்கிய சுங்கந்தவிர்த்த சோழன் என்பது இசைச் சிறப்புப் பெயரும், 2 ஆம் குலோத்துங்கச் சோழனுக்கு வைணவர் வழங்கிய கிருமிகண்ட சோழன் என்பது வசைச் சிறப்புப் பெயரும், ஆகும். உயர்வுப் பெயராவது மக்கள் அரசரைக் கண்ணியமாகக் குறிக்கும் பெயர். இறைவன், அடிகள், தேவர், நாயனார், உடையார், பெருமாள், உலகுடைய பெருமாள், என்பன அரசனுக்கும்; பிராட்டியார், நாய்ச்சியார், ஆழ்வார் என்பன அரசிக்கும்; மக்கள் நாயனார் பிள்ளையார் என்பன இளவரசனுக்கும்; பெரியதேவர் என்பது இறந்து போன அரசனுக்கும்; வழங்கிய உயர்வுப் பெயர்களாம். வரிசைப் பெயராவது அரசனின் தரத்தைக் குறிக்கும் பெயர். வேள், மன்னன், கோவன் (கோன், கோ), வேந்தன் என்பன வரிசைப் பெயராம். திணைநிலைப் பெயராவது, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணை பற்றிய பெயர். வெற்பன், கானக நாடன், ஊரன், துறைவன், விடலை முதலியன திணைநிலைப் பெயராம். இவை பெரும்பாலும் குறுநில மன்னர்க்கு வழங்கும். இயனிலைப் பெயராவது ஏதேனும் ஓர் இயல் பற்றி வழங்கும் பெயர். செம்மல், வள்ளல் முதலியன இயனிலைப் பெயராம். தமிழகம் முழுவதையும் அடிப்படுத்திய பிற்காலச் சோழப் பேரரசர். மும்மடிச் சோழன், மும்முடிச் சோழன், திரிபுவன தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலிய கொற்றப் பெயர்களைக் கொண்டிருந்தனர். தமிழகத்தோடு பிற நாடுகளையும் வென்ற சோழ பாண்டியப் பேரரசர். எல்லாந்தலையான பெருமாள், சகல புவனச் சக்கரவர்த்தி, இராசராசன், இராசாக்கள் தம்பிரான் முதலிய கொற்றப் பெயர்களையும்; எம் மண்டலமுங் கொண்ட ருளின என்பது போன்ற கொற்ற அடைமொழிகளையும் கொண்டிருந்தனர். அரசர் போன்றே அரசியரும் பெயரால் பெருமை குறிக்கப் பெற்றனர். அரசனுடைய பட்டத்துத் தேவிக்குக் கோப்பெருந்தேவி அல்லது பெருங்கோப்பெண்டு என்பது வரிசைப் பெயராக வழங்கிற்று. ஒரே பெருநாட்டரசன் தேவிக்கு உலக முழுதுடையாள், அவனி முழுதுடையாள், உலக மகாதேவி முதலிய பெயர்களும்; முப்பெருநாட்டுப் பேரரசன் தேவிக்கு மூவுலகுடையாள், திரிபுவன மகாதேவி, முதலிய பெயர்களும்; பல்பெருநாட்டுப் பேரரசன் தேவிக்கு ஏழுலகுடையாள் என்னும் பெயரும்; கொற்றப் பெயராக வழங்கிவந்தன. (3) முடி : முடி என்பது மகுடம். தமிழகம் முழுவதும் நிலையாக மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டிருந்த பழங்காலமெல்லாம், அம்மூவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. பிற்காலத்தில் மூவேந்தருக்கடங்காத உள் நாட்டுச் சிற்றரசரும் முடியணிந்து கொண்டனர். முடி சூடியர் அல்லாத அரசர் பட்டங்கட்டியர் ஆவர். ஓர் அரசன் பிற அரசரை வென்றபின், அவர் முடிபோற் செய்த பொன்னுருக்களை மாலையாகக் கோத்து அணிந்து கொள்வ துண்டு. செங்குட்டுவனும் அவன் முன்னோரும், சோழ பாண்டி யரையும் ஐம்பெரு வேளிரையும், வென்றமைக் கறிகுறியாக, எழுமுடி மாலையொன்றணிந்திருந்தனர். ஆளும் அரசனைப்போல் இளவரசனும் முடியணிந்திருந்தான். ஆயின் அரசன்முடி நீண்டு குவிந்தும், இளவரசன் முடி குட்டை யாகவும் இருந்த அதனால், பின்னது மண்டை எனப்பட்டது. (4) கோல் : கோல் என்பது, அரசன் அதிகார முறையில் வீற்றிருக்கும்போதும் செல்லும் போதும் கையிற் பிடித்திருக்கும் தண்டு. அது மணியிழைத்து ஓவிய வேலைப்பாடமைந்த பொற்றகட்டால் பொதியப் பெற்றிருப்பது. கோல் ஆட்சிக் கறிகுறியாதலால், அரசனுடைய ஆட்சி நேர்மையானதாயிருக்க வேண்டுமென்பதைக் குறித்தற்கு, அது நேரானதாகச் செய்யப் பட்டிருக்கும். அதனால் அதற்குச் செங்கோல் என்று பெயர். செம்மை - நேர்மை. கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்னும் பெயராற் குறிக்கப்படும். கொடுமை - வளைவு. ஆட்சியின் நேர்மையாவது அறநெறிவழி நேரே செல்லுதல்; அதன் கொடுமையாவது அறநெறியினின்று திறம்பி வளைதல். (5) மாலை : மாலை என்பது அடையாள மாலை. பாண்டிய னுக்கு வேப்பமாலையும், சோழனுக்கு ஆத்தி மாலையும், சேரனுக்குப் பனம்பூமாலையும், அடையாள மாலையாம். குறுநில மன்னர்க்கும் ஒவ்வோர் அடையாள மாலையிருந்தது. ஆய்அண்டிரனுக்குச் சுரபுன்னை மாலையும், ஏறைக்கோனுக்குக் காந்தள் மாலையும், அடையாள மாலையாக இருந்தன. (6) கட்டில்: கட்டில் என்பது இருக்கை. அரசனது கட்டில் அரசுகட்டில் என்றும் அரசிருக்கை என்றும் அழைக்கப்பெறும். அதன் கால்கள் அரி (சிங்க) வடிவாய் அமைந்திருந்ததனால், அதற்கு அரியணை (சிங்காசனம்) என்றும் பெயர். தலைநகரிலும் பிற பாடிவீடுகளிலும் அரசனுக்கு அரியணையுண்டு. தலை நகரில், அரசன் அரசு வீற்றிருக்கும் ஓலக்கமண்டபத்திலும் (Durbar Hall). அமைச்சரொடு சூழும் சூழ்வினைமண்டபத்திலும், அறங்கூறும் மன்றத்திலும், ஒவ்வோர் அரியணையிருக்கும். அரியணைகட்குச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவது மரபு. சடாவர்மன் குலசேகரபாண்டியனுக்கு, மதுரையில் மழவராயன் கலிங்கராயன் முனையதரையன் என மூவரியணைகளும்; விக்கிரமபாண்டியனுக்கு, மதுரையில் முனைய தரையன் என்னும் அரியணையும், இராசேந்திரத்தில் மலையதரையன் என்னும் அரியணையும், இருந்தன. (7) குடை : குடை என்பது, அரசன் குடிகளைத் துன்பமாகிய வெயிலினின்று காத்து, அவர்கட்கு இன்பமும் பாதுகாப்புமாகிய நிழலைத்தருகின்றான் என்னுங் குறிப்புப் படப்பிடிக்கப்படும். பெரிய வெண்பட்டுக் குடை. அது, பகலாயினும் இரவாயினும், அரசன் அதிகார முறையில் இருக்குமிடம் உடனிருந்து செல்லுமிடம் உடன் செல்லும். அது நிறத்தாலும் வடிவாலும் தண்மைக் குறிப்பாலும் மதியை ஒத்திருத்தலால், மதிக்குடை அல்லது மதிவட்டக்குடை என்றும்; கொற்றத்தைக் குறித்தலால், கொற்றக்குடை அல்லது வெண்கொற்றக்குடை என்றும்; பெயர் பெறும். கோல் என்னும் பெயர் போன்றே, குடை என்னும் பெயரும் ஆகுபெயராய் ஆட்சியைக் குறிக்கும். அதனால், ஓர் அரசன் ஒரு பெருநாட்டைத் தனிநாயகமாய் ஆள்வதை, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள்தல் என்பர். (8) கொடி : கொடி என்பது, அரசனது அடையாள வடிவம் எழுதிய துணி அல்லது பட்டுக்கொடி. அது அதன் அடையாள வடிவாற் பெயர் பெறும். சேரனுக்கு விற்கொடி; சோழனுக்குப் புலிக்கொடி; பாண்டியனுக்கு மீன்கொடி (மீனக்கொடி). (9) முத்திரை : முத்திரையென்பது, அரசனுடைய திருமுகத்தில், மையாலும் அரக்காலும் மண் என்னும் சாந்தாலும் பொறிக்கப் படும் அடையாள வடிவம். மூவேந்தர்க்கும் அவரவர் கொடியி லெழுதப்பட்ட வடிவமே, முத்திரையாகவுமிருந்தது. ஓர் அரசன், தன்னால் வெல்லப்பட்ட அரசரின் முத்திரை களையும், தன் முத்திரையுடன் சேர்த்துப் பொறிப்பது வழக்கம். செங்குட்டுவன் மும்முத்திரைகளையும், அதியமான் ஏழு முத்திரைகளையும், உடையவராயிருந்தனர். (10) முரசு : முரசாவது, ஏதேனுமொன்றை அறிவித்தற்கு, அல்லது யாரேனும் ஒரு சாராரை அழைத்தற்கு, அடிக்கப்படும் பேரிகை என்னும் பெரும் பறை. அது கொடை (தியாக) முரசு, முறை (நியாய) முரசு, போர் (வீர) முரசு என மூவகைப்பட்டதாகக் கூறப்படும். அவற்றுள் சிறந்தது போர்முரசு. அதற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது முரசுகட்டில் எனப்படும். போர் முரசு, படை திரட்டுவதற்கு நகரத்திலும், பொருநரை ஊக்குவதற்குப் போர்க்களத்திலும், வெற்றி குறித்தற்கு ஈரிடத்திலும், இடியோசைபட முழக்கப்பெறும். அது புலியை வென்ற கொல்லேற்றின் சீவாத தோலால் போர்க்கப்பெறுவது மரபு. புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடையுரிவை போர்த்த துனைகுரல் முரசம் என்று சிந்தாமணியும் (2899). கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சியும் (732-3), கூறுதல் காண்க. போர்முரசு தெய்வத்தன்மையுள்ளதாகவும் வெற்றியைத் தருவதாகவுங் கருதப்பட்டதனால், அதற்கு மாலையும் பீலியு மணிவதும், பலி யிடுவதும், அதை நீராட்டுவதும், வழக்கம். (11) கடிமரம் : கடிமரமாவது, ஒவ்வோர் அரசகுடியினராலும், அவரவர் குடியொடு தொடர்புள்ளதாகவும் தெய்வத்தன்மை யுள்ளதாகவுங் கருதப்பட்டு, தொன்று தொட்டுப் பேணப்பட்டு வரும் ஏதேனுமொரு வகையான காவல்மரம். அது தலைமை யரசர்க்கும் சிற்றரசர்க்கும் பொதுவாகும். பாண்டிநாட்டிலிருந்த பழையன் என்னும் குறுநிலமன்னன், ஒரு வேம்பைக் காவல் மரமாக வளர்த்து வந்தான். செங்குட்டுவனின் பகைவருள் ஒருவன் கடப்பமரத்தைக் காவல்மரமாகக் கொண்டிருந்தான். கடிமரம், சில அரசரால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும், சிலரால் ஊர்தொறும் தனிமரமாகவும், சிலரால் சோலைதொறும் தனிமரமாகவும், வளர்க்கப்பட்டதாகத் தெரிகின்றது. (12) குதிரை : அரசன் ஊருங் குதிரை பட்டத்துக் குதிரை என்று அழைக்கப்பெறும். நல்ல மணமும், வாழைப்பூ மடல்போற் காதும், கால் மார்பு கழுத்து முகம் முதுகு ஆகிய ஐந்துறுப்புக் களில் வெள்ளையும், 82 விரல் (அங்குலம்) உயரமும் உள்ள சேங்குதிரை அரசிவுளியாதற்குத் தக்கது (பிங்கலம்). குதிரைகளை, அவற்றின் உடற்கூறும் நடையும் குரலும் இயல்பும் நிறமும் திறமும்பற்றி, பற்பல வகையாகப் பரிநூல் வகுத்துக் கூறும். அவற்றுள் பாடலம் சேரனதும், கோரம் சோழனதும், கனவட்டம் பாண்டியனதும், கந்துகம் குறுநில மன்னரதும், ஆகும். அரசர் குதிரைகட்கு இயற்பெயர் போன்ற சிறப்புப் பெயரும் இடப்பெறும், சிலர் தம் பெயரையே இடுவதும் உண்டு. ஓரியின் குதிரை ஓரி என்றும், காரியின் குதிரை காரி என்றும், பெயர் பெற்றிருந்தன. (13) யானை : அரசன் ஊரும் யானை, அரசுவா என்றும், பட்டத்தியானை என்றும், அழைக்கப்பெறும். கால் போன்றே வாலும் துதியும் நிலத்தைத் தொடுவதும், பால் போலும் வெள்ளை நகமுடையதும், காலாலும் வாலாலும் துதியாலும் கொம்பாலும் உடம்பாலுங் கொல்ல வல்லதும், ஏழுமுழ வுயரமும் ஒன்பது முழ நீளமும் பதின்மூன்று முழச் சுற்றளவு முள்ளதும், சிறிய கண்ணும் சிவந்த புள்ளிகளுமுடையதும், உடலின் பின்புறத்திலும் முன் புறம் ஏற்றமாயிருப்பதுமான, களிற்றியானை அரசுவாவாதற்குத் தக்கதாம் (பிங்கலம்). அரசுவாவிற்கும், இடுகுறி போன்ற இயற்பெயரும் காரணக் குறியான சிறப்புப் பெயரும், இடப்பெறும். (14) தேர் : அரசன் ஊருந்தேர், மற்றத் தேர்களினும் உயர்ந்தும், ஓவிய வேலைப்பாடமைந்தும், விலையுயர்ந்த அணிகலங்களும் சிறந்த குதிரைகளும் பூட்டப் பெற்றும், இருக்கும். பொதுவாக அரசன் ஊரும் ஊர்திகள் மூன்றும், அரசமாண்பிற் கேற்ப, ஒப்புயர்வற்ற ஆடையணி யலங்கரிப்புடையனவாயிருக்கும். சங்ககாலத்தில், வேட்டைக்குத் தேரிலும் குதிரை மேலும் செல்வ தும், போரும் நகர்வலமும் நாடுகாவலும் ஆகிய பிறவற்றுக்குத் தேரிலும் தேர் செல்லாவிடத்து யானைமேலும் செல்வதும், அரசர்க்கு வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் தேர் பயன்படுத்தப் பெறாமையால், வேட்டை தவிரப் பிறவற்றிற் கெல்லாம் யானைமீதே அரசர் சென்றனர். (15) மனை : அரசன் வாழும் மனை அரண்மனை எனப்படும். மதிலும் கோபுரமுஞ் சுருங்கையுமாகிய அரணுடைமைபற்றி, அது அரண்மனையெனப்பட்டது. அதற்குக் கோயில் பள்ளி நகர் மாளிகை எனப் பிற பெயர்களுமுண்டு. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரு முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய என்னுஞ் சூத்திரத்தில் (1571). தொல்காப்பியர் படையையும் அரசர் சின்னங்களுடன் சேர்த்துக் கூறினார். அரசச் சின்னங்கள் : முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம் என 21 வகைப்படுவதாகச் சூடாமணி நிகண்டு கூறும். இவற்றுட் பல, மங்கலப் பொருள்களும் அரணும் உவமையுமாம். (ப.த.ஆ.) அரசர் இயல்பு அரசனுக்கும் குடிகட்குமுள்ள தொடர்பு தந்தைக்கும் மக்கட்கு முள்ள தொடர்பாகும். குடிகளை அரவணைத்துக் காப்பவனே யன்றி, அதிகாரத்தோடு ஆள்பவன் சிறந்த அரசனல்லன். அரசனைக் குறிக்கும் பெயர்களுள், காவலன் என்பது ஒன்றாகும். அரசனுக்கரிய தொழில் குடிகளைத் திறமையாய்க் காப்பதே என்னும் உண்மை, இச்சொல்லால் விளங்கும். ஓர் அரசனுடைய குடிகளை அவன் அடி நிழலார் என்று கூறுவதும் இக்கருத்துப் பற்றியே. மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ என்றார் சேக்கிழார். - (திரு ஆரூர் - 36). அரசன் குடிகளைத் துன்பவெயிலினின்று காத்தற்கு அடையாள மாகவே, வெண்கொற்றக்குடை தாங்கியுள்ளான். கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ! (புறம் - 35 : 19 - 21) என்றார் வெள்ளைக் குடிநாகனார். பலகுடை நீழலுந் தம்குடைக் கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் (குறள். 1034) என்று அரசனுடைய நாட்டைக் குடை நிழல், என்று வள்ளுவர் கூறியதும் இக்கருத்துப் பற்றியே. (சொல். 104.) அரசர் இல்லற வாழ்க்கை மூவேந்தரும், பெருநில மன்னர் குடியிலும் குறுநில மன்னர் குடியிலும் வேளிர் குடியிலும் பெண் கொண்டனர். அவருக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் தலைமையான கோப்பெருந் தேவிக்கு அரசனுக்குள்ள மதிப்பிருந்தது. ஓலக்க மண்டபத்திலும் சூழ்வினைக் கூட்டத்திலும் நகர்வலத்திலும், கோப்பெருந் தேவியும் அரசனொடு கூட அமர்ந்திருப்பது வழக்கம். தேவிமாருள் அரசனால் சிறப்பாகக் காதலிக்கப்படுபவள் காமக்கிழத்தி எனப்படுவாள். ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப்பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி என, நம்பியகப் பொருள் கூறும். உதயகுமரன் மணிமேகலையை இவ்வகையில் மணக்க விரும்பியிருக்கலாம். சங்ககாலத்தரசர் சிலர் சேரிப் பரத்தையரொடும் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. பரத்தையர் சேரியிலுள்ள மகளிர்க்குச் சேரிப்பரத்தையர் என்றும், அவருள் அரசனால் காதலிக்கப்படுபவட்குக் காதற்பரத்தை யென்றும், அவனால் வரைந்து கொள்ளப்பட்ட பரத்தைக்கு இற்பரத்தையென்றும் பெயர். அரசன் தொடர்பு கொள்ளும் பரத்தையரெல்லாம், ஒரு வர்க்கே யுரிமை பூணுங்குலப் பரத்தையராகவே யிருந்திருத்தல் வேண்டும். அரசனாற் காதலிக்கப்படும் பரத்தையரெல்லாம், அவனுரிமை யென அவன் பெற்றோராலேயே ஒதுக்கப்பட்டு இளமைமுதல் வளர்க்கப்பட்டவர் என்று, இறையனாரகப் பொருளுரை யாசிரியர் கூறுவர் (பக் 226-228). இனி, அரசன் வேட்டைக்கும் உலாவிற்கும் சென்றவிடத்து யாரேனும் ஓர் அழகிய அரசகன்னியைத் தனியிடத்துக் காணின், அவளைக் களவுமணம் புரிவதுமுண்டு. நெடுமுடிக்கிள்ளி நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளையைக் கடற்கரையிற் கண்டு களவுமணம் புரிந்ததாக, மணிமேகலை கூறும். இயலுமிட மெல்லாம் களவு கற்பாகத் தொடரும். அரசன் மணத்திற்கு இத்துணையென ஒரு வரம்பில்லாதிருந்தது. அரண்மனையில் மகளிர் உறைவதற்குத் தனியிடமுண்டு. அது உவளகம் எனப்படும். அதில் அரசனையும் இளவரசரையுந் தவிரப் பருவமடைந்த ஆடவர் வேறு யாரும் புகுவதில்லை. குறளருஞ் சிந்தரும் பெண்டிரும் சோனகப் பேடியரும் வாளேந்தி உவளகத்தைக் காக்குமாறு அமர்த்தப்பட்டிருந்தனர். கன்னியர் உறைவதற்குத் தனிமாடம் இருந்தது. அது கன்னிகைமாடம் எனப்பட்டது. அரசன் உவளகஞ் செல்லும்போதெல்லாம் மகளிர் பரிவாரமே உடன்செல்லும். தேவியருக்குத் தனித்தனி மாளிகை இருந்தது. அரசன் வேறொருத்தியைக் காதலித்தான் என்றோ வேறு காரணம்பற்றியோ, கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது, புலவர் பாணர் முதலியோர் வாயிலாய் அவள் ஊடலைத் தீர்ப்பது அரசன் வழக்கம். அரசனுக்கும் அரசிக்கும், அடிமையரும் தோழியரும் குற்றேவலரும் பரிவாரத்தாரும் மெய்காவலருமாக, பற்பல ஊழியர் இருந்தனர். அரசி செல்லுமிடமெல்லாம் பரிவார மகளிர் எண்மங்கல (அட்டமங்கல)ப் பொருள்களை ஏந்திச் செல்லுவது வழக்கம். நகைச்சுவை யுணர்ச்சிமிக்க அரசர், தம்சொந்த இன்பத்திற் கென்று ஒரு நகையாண்டியை அமர்த்திக்கொள்வது முண்டு. அவனுக்குக் கோமாளி அல்லது கோணங்கி என்று பெயர். அரண்மனை வேலைக்கென்று தனியாக, ஐவகைக் கம்மியரும், மயிர்வினைஞன் வண்ணான் செம்மான் முதலிய குடிமக்களும், பிறதொழிலாளரும், அமர்த்தப் பெற்றிருந்தனர். அவரை அரண்மனைத் தட்டான் அரண்மனை மயிர்வினைஞன் அரண்மனைக் குயவன் என அழைப்பது வழக்கம். அரண்மனைப் பொற்கொல்லன் சட்டையணிந்திருந்தான் என்று சிலப்பதிகாரங் கூறுவதால், அரசனொடு நெருங்கிப் பழகுபவர்க்கெல்லாம் அச்சிறப்பளிக்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது. அரசனுக்கு உட்பகையும் அறைபோகு வினைஞரும் பற்றிய அச்சமிருக்கும் போது, அரண்மனை மருத்துவர் அவன் உணவை அன்னம் சக்கரவாகம் கருங்குரங்கு முதலிய உயிர்களைக் கொண்டு நோட்டஞ்செய்வர். அரசன் உண்டபின் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பவனுக்கு அடைப்பையான் (அடைப்பைக்காரன்) என்று பெயர். அரண்மனைச் செலவெல்லாம் அரசியற் செலவாகவே கருதப் பட்டது. அரசியற் செலவும் அரண்மனைச் செலவும் போக எஞ்சிய பொதுவகை (சாதாரண)ப் பொருள்களெல்லாம், கொடைக்குப் பயன்படுத்தப்பட்டன. அரசர்க்கே தகும் அருவிலையணிகலன் களும், பெருமணிகளும், பெருந்தொகை யான பொற்காசுகளும், அரசன் சொந்த உடைமையாகப் போற்றப்பட்டன. குறிப்பிட்ட நிறைக்கு மேற்பட்ட மணிக்கற்களைக் குடிகள் வைத்திருக்க வாவது நாடு கடத்தவாவது கூடாதென்றும். அரசனிடத்தில் ஒப்பு வித்து விலைபெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கண்டிப்பான அரசவிதியிருந்தது. அரசனுக்குச் சொந்தமாக இருந்த நிலத்திற்குக் கண்டுழவு என்று பெயர். அரசியர்க்குச் சிறு பாட்டுச் செலவிற் கென்று நிலங்களும் ஊர்களும் விடப்பட்டிருந்ததாகவும் தெரிகின்றது. அரசன் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்குப் பல வழிகள் இருந்தன. கண்போலும் நண்பரோடு அளவளாவலும், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விப் புலவரொடு பயிலலும், நகையாண்டி சொற்கேட்டலும், வட்டாட்டு வல்லாட்டு புனலாட்டு முதலிய விளையாட்டுக்களை யாடலும், இலவந்திகைச் சோலைக்கும் செய்குன்றிற்கும் நெய்தலங்கானலுக்கும் உலாப் போதலும், பாணர் பாடினியர் கணிகையரின் இசைகேட்டலும், விறலியர் கணிகையர் சாக்கையரின் கூத்துக் காண்டலும், வேட்டை யாடலும் மலைவளங் காணலும், பிறவும், அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் வழிகளாம். அரசன் உலாப்போகும் போது தோழியரொடு செல்வது வழக்கம். (அரசன் தோழியரொடு செல்லும் இன்பவுலாவும், நகர்வலம் வரும் வெற்றியுலாவும், வேறுபட்டவை) அவருக்கு அரசனொடு மெய்தொட்டுப் பயில வும் விளையாடவும் உரிமையுண்டு. வையமுஞ் சிவிகையு மணிக்கா லமளியு முய்யா னத்தி னுறுதுணை மகிழ்ச்சியுஞ் சாமரைக் கவரியுந் தமனிய வடைப்பையுங் கூர் நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் என்னும் சிலப்பதிகாரப் பகுதியால் (14: 126-131), அரசன் பரத்தைய ரொடு உலாப்போதலும், அவர்க்கு அவன் பற்பல வரிசையளித் தலும், உண்டென்பது பெறப்படும். அரசர், பருவம்வந்த புதல்வரைத் துணையரையராக அல்லது மண்டலத் தலைவராக, வெவ்வேறிடத்தமர்த்தி வைப்பது பெரும் பான்மை. அவர் தம் புதல்வியரை அரச குடியினர்க்கன்றிப் பிறர்க்குக் கொடுப்பதில்லையென்பது, 3 ஆம் குலோத்துங்கன் அம்பிகாபதியைக் கொன்றதினால் அறியப்படும். நாடுகாவல், சந்து (பகைதணிவினை), போர், நட்பரசர் விழா முதலிய காரணம்பற்றி, அரசன் தன் தேவியரிடத்தினின்று பிரிந்து போவன். பிரிவுக்காலத்தில், இன்றியமையும் அணிகழற்றலும், மெய்யலங்கரியாமையும், அளவாக வுண்டலும், நாளெண்ணிக் கழித்தலும், மகிழாதிருத்தலும் தெய்வத்தை வேண்டலும்; மீட்சிக்காலத்தில், வரவு கண்டு மகிழ்தலும், விருந்தயர்தலும்; தேவியர் மேற் கொள்ளுஞ் செயல்களாம். அரசன் இறப்பின், தேவியரும் உடன் இறப்பர்; அல்லது உடன்கட்டையேறுவர்; அல்லது கைம்மை பூணுவர். அவர் முன்னிருவகையில் இறப்பதே பெரும்பான்மை. (ப.த.ஆ.) அரசர் கால மொழி நிலைமை முதற்காலத்தில், தமிழ் எல்லாத் துறைகளிலும் தனியாட்சி செலுத்தி முழுத்தூய்மையாய் வழங்கி வந்தது. ஆயின், இடைக் காலத்தில் வடமொழி தேவபாடை என்று மூவேந்தராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதனால், புரோகிதர் நடத்தும் பூசை கரணங்கட்கெல்லாம் தமிழ் விலக்கப்பட்டது. வடசொல் வழங்குவது உயர்வு என்னுங் கருத்தும் நாளடைவில் எழுந்தது. தமிழரசரும் ஒரு சில தமிழ்ப்புலவரும் தமிழைப் புறக்கணிக்கவுந் தலைப்பட்டனர். தொன்றுதொட்டுத் தமிழ்ச்சங்கம் இரீஇத் தமிழை வளர்த்துத் தமிழ்நாடன் என்று சிறப்பிக்கப்பெற்ற பாண்டியன் குடியினரே, கி.பி.3 ஆம் நூற்றாண்டில் சங்கத்தைக் குலைத்துவிட்டனர். அதன் பின், 11 ஆம் நூற்றாண்டில் அதைப் புதுப்பிக்குமாறு பொய்யா மொழிப்புலவர் செய்த பெருமுயற்சியும் வீணாய்ப் போயிற்று. வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திலேயே, தமிழில் இடம் பெறத் தொடங்கி விட்டன. ஆயின், அவர் காலத்தில் தற்பவமாக வும் சிதைவாகவும் ஒரோவொன்றாய் அருகியே வழங்கின. பிற்காலத்திலோ, அவை படிப்படியாய்ப் பெருகி வந்ததுடன், கடைச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில், பொது மக்கட்கென் றேற்பட்ட கல்வெட்டுக்களில் தற்சமமாகவும் கிரந்தவெழுத்திலும் தோன்றி, கல்வெட்டுத் தமிழையே தமிழர்க்கு விளங்காததும் பிழை மலிந்ததுமான மணிப்பவளக் கலவை மொழியாக மாற்றி விட்டன. அரசர் பெயர் (அரசர்களும் அவர்களைச்சார்ந்த உறவினரும்) அகத்தில் காரிகிள்ளி இருக்குவேள் என்பன போன்ற பழந்தமிழ்ப்பெயர் தரித்திருத்தல் வழக்கம். ஆயின், உத்தியோக முறைமையில் பராந்தகன் இராஜராஜன் இராஜாதித்தன் என்னும் வடமொழிப் பெயர்களைத் தரிப்பார்கள் - சோ. பக்.71.) தெய்வப் பெயர் இடப்பெயர் முதலிய பல்வகைப் பெயர்களும், நாளடைவில் வடசொற்களாய் மாறின. எடுத்துக்காட்டு முற்காலச் சொல் பிற்காலச் சொல் பாண்டியவரசர் பெயர் : காய் ஜயந்த வர்மன், ஜடில சினவழுதி, கடுங்கோன், வெண் பராந்தகன், ராஜசிம்மன், டேர்ச்செழியன், முடத்திருமாறன். ஜடாவர்மன் (பராக்கிரம பாண்டியன்) தெய்வப் பெயர் : சொக்கன், சுந்தரன், பிருகதீவரன், பெருவுடையான், முருகன், சுப்ரமணியன், விஷ்ணு, திருமால் , திருமகள், நாமகள். லக்ஷ்மி, சரவதி. இடப்பெயர் : தகடூர், முதுகுன்றம், தர்மபுரி, விருத்தாசலம், மறைக்காடு, மயிலாடுதுறை. வேதாரண்யம், மாயூரம். பல்வகைப் பெயர் : அரசு கட்டில், சிங்காசனம் (சிம்மாசனம்) அரியணை, ஆட்டை வாரியம், சம்வத்ஸர (வாரியம்) திருவோலை, கள்ளக் கையெழுத்து, நியோகம், கூட லேகை, கல்வெட்டு. சிலாசாஸனம். (தடித்த எழுத்துள்ள வடசொற்கள் அவற்றுக்கு நேரான தென்சொற்களின் மொழிபெயர்ப்பாகும்). இனி, சில தென் சொற்கள் தம் தென்மொழி வடிவிழந்து வடமொழி வடிவில் வழங்கத் தலைப்பட்டன. எ-டு: தென்மொழி வடிவம் வடமொழி வடிவம் அரசன் ராஜன் அவை சபை திரு ஸ்ரீ படி பிரதி மக்களைத் தாக்கிய குலப்பிரிவினை நாளடைவில் இலக்கியத் தையும் தாக்கிற்று. வெண்பா அந்தணர்பா என்றும், ஆசிரியப்பா அரசர் பா என்றும், கலிப்பா வணிகர்பா என்றும், வஞ்சிப்பா வேளாளர் பா என்றும், வகுக்கப்பட்டதுடன்; கலம்பகச் செய்யுட்கள் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற் றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதும் பாடப்படும் எனவும் இலக்கணம் விதிக்கப்பட்டது. பாணரைத் தீண்டாமை தாக்கியதால். இசைத்தமிழும் நாடகத் தமிழும் 12 ஆம் நூற்றாண் டிற்குமேல் வழக்கொழிந்தன. அவற்றிற்குரிய நூல்களும் இறந்துபட்டன. தமிழ் கற்பார்க்குப் போதிய அரசியலூக்குவிப்பின்மையால், முதலிரு சங்ககாலத்தும் முத்தமிழாயிருந்த இலக்கண நூல், கடைச்சங்க காலத்தில் ஒரு தமிழாயும், 11 ஆம் நூற்றாண்டிற்கு மேல் அதுவும் நிறைவின்றி எழுத்துச் சொல்லளவாயுங் குறுகி விட்டது. தமிழ் வடமொழிக் கிளையெனக் கருதப்பட்டு, 11 ஆம் நூற்றாண்டில் வடமொழி யிலக்கணந் தழுவி வீரசோழியம் என்னும் தமிழிலக்கண நூலும் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திலிருந்து ஆரியக் கருத்துக்களும் தமிழிலக் கியத்திற் புகுத்தப்பட்டதனால், தமிழ் வரலாற்றிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் புராணக்கருத்துக்கள் புகுந்தன. பிற்காலத்து நூல்களெல்லாம் பெரும்பாலும் கலைத்துறை பற்றாது மதத்துறையே பற்றின. 14 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட வில்லிபாரதத்தில், வடசொற்கள் வரைதுறையின்றி ஆளப்பட்டன. தமிழ்ப்புலவரையுங் கலைஞரையும் போற்றுவாரின்மையால், நூற்றுக்கணக் கான தமிழ் நூல்கள் இறந்துபட்டன. தூயதமிழ் தாழ்த்தப்பட்டோர் மொழி எனத் தாழ்த்தப்பபட்டதனால் நூற் றுக்கணக்கான தென்சொற்களும் மறைந்தொழிந்தன. (ப.த.ஆ.) அரசர் பாகுபாடு சிற்றரசர் தலைமையரசர் பேரரசர் எனத் தமிழரசர் முத்திறப் பட்டிருந்தனர். இம் முத்திறத்தாரும், முறையே, குறுநிலவரசரும் பெருநிலவரசரும் பலநிலவரசரும் ஆவர். சிற்றரசர்க்கு மன்னன் என்னும் பெயரும், தலைமையரசர்க்கு வேந்தன் கோ (கோன்) என்னும் பெயரும், மரபாகவுரிய. இதை, கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் என்னும் தனிப்பாடற் செய்யுளடியாலும், வேந்திடை தெரிதல்வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தே வேம்பே ஆரென வரூஉம் என்னும் தொல்காப்பிய அடிகளாலும் (1006), அறியலாம். பேரரசரைப் பெருங்கோ அல்லது மாவேந்தன் என்னும் பெயரால் அழைக்கலாம். கோ என்னும் பெயர் வேந்தருக்கு மட்டுமன்றி, அவருக்கடங்கி அவர்நாட்டுள் ஒவ்வொரு பகுதியை ஆளும் அவர் தாயத்தார்க்கும், சிற்றரசருள் பெரியவர்க்கும் வழங்கும். சேரன் செங்குட்டுவனின் தாயத்தாரான இரும்பொறை மரபினருள் ஒருவனான சேரமான் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும், சிற்றரசருள் ஒருவனான விச்சிக்கோவும், கோவென்று பெயர் கொண்டிருந்தமை காண்க. வேந்தன் என்னும் பெயரோ, என்றும் தலைமையரசனையே குறிக்கும். தமிழகச் சிற்றரசர், எயினர் வேட்டுவர் முதலிய பாலைநிலக் குடிகளின் தலைவராகிய குறும்பரசரும், சிறுமலைக் கிழவரும், உழுவித்துண்ணும் வேளாண் குடியினரான வேளிரும்; படைத் தலைவரும், அரச குடும்பத்தினரும், அரசியற் பேரதிகாரிகளு மாகப் பல வகையர்; தொல்வரவினர் புதியர் என இருபாலார்; ஊர்க்கிழவர் முதல் மண்டலத் தலைவர்வரை பல திறத்தார். கொங்கர், கோசர், கங்கர், கட்டியர், பங்களர், துவரை வேளிர், அதிகர், ஆவியர் என்னும் பலகுடிச் சிற்றரசர் சேரனுக் கடங்கிய வராகவும்; பொத்தப்பிராயர், காடவராயர், பல்லவர் (பல்லவ தரையர்), தொன்டையர், சம்புவராயர், இலாடராயர், மலைய மானர் (சேதிராயர்), வாணகோவரையர், முனையரையர் (முனைய தரையர்), ஓய்மானர், முத்தரையர், மழவராயர், பழுவேட்ட ரையர், இருக்கு வேளிர் முதலிய பலகுடிச் சிற்றரசர் சோழனுக் கடங்கியவராகவும்; ஆயர் (ஆய்குடியர்), களப்பாளர் (களப்பிரர்) முதலிய சிலகுடிச் சிற்றரசர் பாண்டியனுக் கடங்கியவராகவும்; பல தலைமுறையினரா யிருந்துவந்தனர். கொங்குமண்டலம் சோழப் பேரரசிற்குட்பட்ட, பிற்காலத்தில், கொங்கர் கங்கர் நுளம்பர் முதலியோர் சோழருக்கடங்கியவராயினர். இனி, சிற்றரசர்க்கடங்கிய கீழ்ச் சிற்றரசருமுண்டு. வேங்கட மலையைச் சார்ந்த ஒரு சிறு நாட்டுத் தலைவனான கரும்பனூர் கிழானும், வேங்கடமலைத் தலைவனான புல்லியும், பல்குன்றக் கோட்டத் தலைவனான நன்னனும், தொண்டை மானுக்கடங்கிய கீழ்ச் சிற்றரசர். அடங்கா மன்னரை யடக்கு மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம் 199) என்று விச்சிக்கோ கபிலராற் பாடப்பெற்றிருப்பதால் அவன்கீழ்ப் பல மன்னரிருந்தமை அறியப்படும். இனி, கடைச்சங்க காலத்தில், அகுதை, எயினன், எருமையூரன், ஏறைக்கோன், ஏனாதிதிருக்கிள்ளி, ஓரி, கடியநெடுவேட்டுவன், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான்பண்ணன், தழும்பன், தாமான்தோன்றிக்கோன், திதியன், நள்ளி, நாலை கிழவன் நாகன், நாஞ்சில் வள்ளுவன் கந்தன், பழையன், பாரி, பிட்டங்கொற்றன், மல்லிகிழான் காரியாதி, மூவன், வல்லார் கிழான் பண்ணன், வெளிமான், வேங்கைமார்பன் என அரசகுடி கூறப்படாத பற்பல சிற்றரசரும் கீழ்ச்சிற்றரசரும் தமிழ்நாடு முழுமையுமிருந்தனர். தமிழரசருள், சேர சோழ பாண்டியராகிய முக்குடியரசரும், வேந்தர் என்று கூறப்படும் தலைமையரசராவர். முதற்காலத்தில் அவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. இதனாலேயே, அவர் வேந்தர் எனப்பட்டார். வேந்தன் என்னும் பெயர் வேய்ந்தோன். (கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றை வேந்தன் என மருவியிருத்தல் காண்க) என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல். முடியணியும் முத்தமிழரசரையும் முடியுடை மூவேந்தர் என்று கூறுவது மரபு. ஒரே காலத்தில், ஓர் அரச குடியினர் பலர். மாற்றாந்தாய் மக்களும் மற்றத் தாயத்தாருமாகச் சமவுரிமையாளராக விருந்து, ஒரு பெருநாட்டின் வெவ்வேறு பகுதியைத் தனித்தனி ஆண்டுவரின், அவரனைவர்க்கும் முடியணி யும் உரிமையும் கோவென்னும் பெயரும் உண்டு. பிற் காலத்தில், ஒரு பெருநாட்டினின்று தனியரசாய்ப் பிரிந்துபோன சிற்றரசரும் இவ்வுரிமைகளைத் தாமே அடைந்து விட்டனர். மூவேந்தருள் ஒருவன் இன்னொருவனை வென்று அடிப்படுத்தி னவனாயின், அவனைப் பேரரசன் என்றும், அவனது அரசைப் பேரரசு என்றும் அழைக்கலாம். தமிழ்வேந்தருள்ளேயே ஒருவரிருவரை வென்று இருமுடிப் பேரரசும் மும்முடிப் பேரரசும், அவருடன் ஈழவரசன் வேங்கை (கீழைச்சளுக்கி) யரசன் போன்றாரை வென்று பன்முடிப் பேரரசும், நிறுவிய சேர சோழ பாண்டியப் பேரரசர் பலராவர். வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன் என்பவர் பன்முடிப் பேரரசர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டாவர். மூவேந்தரும் தலைமையரசரென்றும், பிறரெல்லாம் சிற்றரச ரென்றும், மரபும் பெரும்பான்மையும் பற்றிப் பொதுவாகக் கூறப்படினும்; காலச் சக்கரத்தின் சுழற்சியால், இடையிடை, சிற்றரசக் குடியினர் பேரரசரும் பேரரசக் குடியினர் சிற்றரசரும் ஆயினர் என்றறிதல் வேண்டும். வேந்தர் குடியைச் சேர்ந்த சோழர், இடைக் காலத்தில், தாயப்போரால் புகார்ச்சோழரும் உறையூர்ச் சோழருமாகப் பிரிந்து கோக்கள் நிலையடைந்து, பின்பு அதுவுமின்றிப் பல்லவருக் கடங்கிய மன்னராகத் தாழ்ந்தனர். மன்னர் நிலையிலிருந்த பல்லவரோ, இதற்கு நேர்மாறாக, பேரரச நிலைக்குயர்ந்தனர். இந்நிலைமை பின்பு மாறி, சோழர் மீண்டும் வேந்தரும் மாவேந்தரு மாயினர். இங்ஙனம் அரசக் குலங்களிடை மாறிமாறி நேர்ந்த ஏற்றிறக்கம் பலப்பல. (ப.த.ஆ.) அரசர் முடிவு தமிழரசர் முடிவு தனிப்பட்டதும் குடிப்பட்டதும் என இருவகை. அரசர் தனிமுடிவு : தமிழரசர், போரில் இறத்தலையே, பெரும் பேறாகவும் விண்ணுலகம் புகும் வழியாகவுங் கொண்டிருந்தனர். அதனால், இயலும் போதெல்லாம் அவரும் சேனையுடன் போருக்குச் செல்லுவது வழக்கம். போரிலன்றி நோயாலும் மூப்பாலும் இறக்கும் அரசர் வாள்போழ்ந்தடக்கப் பெறுவர். அதன் இயல்பை, நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கல் என்னும் புறப்பாட்டுப் பகுதியால் (93:5-11) அறிக. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், வாள்போழ்ந் தடக்கல் விடப்பட்டது. போரிற் பெற்ற புறப்புண் நாணியும், புதல்வன் தன்னொடு பொரவருகை நாணியும், பிறவகையில் மானக்கேடு நேர்ந்த விடத்தும், உலகப்பற்றைத் துறந்தவிடத்தும், அரசர் ஊருக்கு வடக்கில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பர். அது வடக் கிருத்தல் எனப்படும். பகைவரால் சிறைப்பட்டிருந்து உண்ணா திறத்தலும் வடக்கிருத்தலின் பாற்படும். வாழ்நாளிறுதியில், அரசாட்சியை இளவரசனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குச் சென்று தவஞ்செய்தல், ஒரோவோர் அரசன் மேற்கொண்ட செயலாகும். அரசர்க்குப் பிறப்பினும் இறப்பே சிறப்பாதலால், கொற்ற அடை மொழியில்லாத வரசரெல்லாம், அவர் இறந்த இடப்பெயரால் வேறுபடுத்திக் கூறப்பட்டனர். அரசரிறந்தபின், அவருடம்பைத் தாழியாற் கவித்தலும், தாழியாற் கவித்துப் புதைத்தலும், வெறுமனே புதைத்தலும், முற்கால வழக்கம்; எரித்தல் பிற்கால வழக்கம். அரசருக்கு இறுதிச் சடங்கியற்றல் பள்ளிபடுத்தல் (பள்ளி படை) என்றும், அவர் நினைவுக்குறியாக எழுப்பப்படுங் கட்டிடம் பள்ளிப்படைக் கோயில் என்றும், பெயர்பெறும். அரசக்குடி முடிவு : முத்தமிழரசரும் தமிழாலும் மணவுறவாலும் இணைக்கப்பட்டு ஒற்றுமையாயிருந்த வரை, அசோகப் பேரரசனாலும் அவரை அசைக்கமுடியவில்லை. சங்ககாலத் திற்குப் பிற்காலத்தில், தமிழ் பேணாமை ஒற்றுமையின்மை குலப்பிரிவினை முதலிய காரணங்களால், முத்தமிழ் நாடும் மூவேறு பிரிந்து வலிமை குன்றிப்போய்ச் சோழ பாண்டிய நாடுகள் முதலாவது 14 ஆம் நூற்றாண்டில் தில்லி மகமதியப் படைகட்கும் பின்பு 16 ஆம் நூற்றாண்டில் விசயநகர வடுகப் படைகட்கும், எளிதாய் இரையாயின. பாண்டி நாட்டு வலிமை அதன் தாயப் போர்களாலும் தேய்ந்து மாய்ந்தது. இறுதிப் பாண்டியன் கி.பி.1652 வரை இருந்தான். சேரர், குடியில் இறுதியாக விருந்த அரசர் வலிமையற்றவரா யிருந்ததினால், சேரநாடானது, வேணாடு (திருவதங்கோடு) கொச்சி கோழிக்கோடு கோலத்து நாடு முதலிய பல சிறு தனியரசு களாகப் பிரிந்து போனதுடன், 17 ஆம் நூற்றாண்டில் வடசொல் கலப்பால் மலையாள நாடாகவும் திரிந்துவிட்டது. இங்ஙனம், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு இருந்தவை யெனப் பாராட்டப்பெற்ற மூவேந்தர் குடிகளும், 17ஆம் நூற் றாண்டிடையில் முடிவுற்றன. (ப.த.ஆ.) அரசர் வகை குறிஞ்சித் தலைவன் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன் கானக நாடன் (வெற்பு, சிலம்பு, பொருப்பு என்பன மலையின் பொதுப் பெயர்கள்). முல்லைத் தலைவன் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல். மருதத் தலைவன் - ஊரன், மகிழ்நன், கிழவன். பாலைத்தலைவன் - விடலை, மீளி, காளை. நெய்தல் தலைவன் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம் புலம்பன். நாட்டுத் தலைவர் - குரிசில் - பிரபு, வேள் - குறுநிலமன்னன்; குறும்பன் - கொள்ளைத் தலைவன்; மன்னன் - சிற்றரசன்; கோன் அல்லது கோ - அரசன்; வேந்தன் - முடிவேய்ந்த பேரரசன், இந்திரன், (சொல் 39.) அரசர் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சி அரசர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகள் பொதுவாகப் பின்வருமாறு நிகழ்ந்துவந்தன. வைகறையில், அகவர் (சூதர்) அரசனின் பள்ளி மாடத்திற்கு வெளியே வாயிலருகு நின்று, அவன் முன்னோரின் புகழை இனிதாகப் பாடி அவனைத் துயிலுணர்த்துவர். அரசன் துயிலுணர்ந்து, அன்று செய்ய வேண்டியவற்றைச் சிந்தித்துப் புலரும் வேளையிற் பள்ளிவிட்டெழுவன். அவன் எழுந்தமைக் கறிகுறியாகக் காலை முரசம் என்னும் பள்ளியெழுச்சி முரசம் அடிக்கப்பெறும். அரசன் எழுந்தபின், படைக்கலப் பயிற்சியிருப்பின் அதைச் செய்துவிட்டுக் காலைக்கடன்களை முடித்து, நீராடி இறைவழிபாடு முற்றிக் காலையுணவுண்டு, ஓலக்க மண்டபத்திற்குச் செல்வன். அங்குக் கொடை முரசு அடிக்கப்படும், பல்வேறிடத்தினின்றும் வந்திருக்கும் புலவர் பாணர் கூத்தர் முதலிய பரிசிலர், பாடியும் ஆடியும் தத்தம் திறமைகாட்டி, அதற்குத் தக அரசனிடம் பரிசு பெறுவர். கொடை நிகழ்த்தி முடிந்தவுடன், முறைமுரசு அடிக்கப்படும். வழக்காளிகள் தத்தம் வழக்கைச் சொல்வதற்கு முன்னே வந்திருப்பர். முரசடித்தவுடன் வழக்குக் கேட்கை தொடங்கும். அரசன் ஓலக்கமண்டபத்திலிருந்து கொடை நிகழ்த்தி முடிந்தபின், அவ்வக்கால வினைநிலைமைக்கேற்பச் சூழ்வினை மண்டபத்திற் கேனும் அற மன்றத்திற்கேனும் செல்லினும் செல்லலாம்; அன்றி ஓலக்கமண்டபத்திலேயே இருந்து தன்னாட்டெழுத்துப் போக்குவரத்தையும் அயல்நாட்டெழுத்துப் போக்குவரத்தையும் கவனிப்பினும் கவனிக்கலாம். இவ் வினைகளெல்லாம் முற்பகல் நிகழ்ச்சிகளாகும். நண்பகலில் அரசன் உணவுண்டபின், இரண்டொரு நாழிகை அல்லது வெயில் தணியும்வரை, இளைப்பாறலாம். அதன்பின் மீண்டும் ஓலக்கமண்டபம் சென்று சிறிது நேரம் அரசியற் காரியங்களைக் கவனிக்கலாம். பிற்பகல் நிகழ்ச்சிகள் பொதுவாக, அரசர்க்குக் குடும்பக்காரியக் கவனிப்பாகவும் இன்பப் பொழுதுபோக்காகவுமே யிருக்கும். இராவுணவு உண்டபின், சிறிதுநேரம் உரையாடியிருந்து, ஊரடங்கும் வேளையில் அரசன் பள்ளிகொள்வன். பள்ளி மாடத் திற்குப் பள்ளிமண்டபம் பள்ளியம்பலம் என்றும் பெயருண்டு. கார்காலத்திலும், போர்க்காலத்திலும், விழாநாளிலும், நாடு காவற் சுற்றுப்போக்கு நாட்களிலும், பிற சிறப்பு வினை நிகழ்ச்சி யின் போதும், மேற்கூறிய அன்றாட நிகழ்ச்சி வினைகள் மாறியும் நிகழும். பொதுவாக, அறத்தை உயிர்நாடியாகக் கொண்டிருந்த செங் கோலரச ரெல்லாம். எவ்விடத்தும் எந்நேரத்தும், பெருமுறை கேடான காரியங்களைக் கவனித்தற்கு ஆயத்தமாயிருந்ததாகவே தெரிகின்றது. தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன தருமம் அருத்தம் காமம் என மூன்று; அம் மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கட் பத்துநாழிகை யும் அறத்தொடு படச்செல்லும், இடையன பத்து நாழிகையும் அருத்தத்தொடு படச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடு படச்செல்லும்; ஆதலான் தலைமகன் முதற்கண் நாழிகை தருமத்தொடு படுவான்; தலைமகளும் வேண்டவே தானும் வேண்டிப்போந்து அத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தொடு படச்சொல்வதுஞ் செய்யும், நாழிகை அளந்துகொண்டு இடையன பத்து நாழிகையும் இறையும் முறையுங்கேட்டு அருத்தத்தினொடு பட்டனவே செய்து வாழ்வானாம். அவ்வருத்தத்து நீக்கத்துக் கடையன பத்து நாழிகையில் தலைமகளுழைப் போதரும், என்பது இறை யனாரகப் பொருளுரை (பக். 226). அரசர்க்குக் காலைக்கடன் கழித்தலும், உலகத்திலிருந்து நாடு காவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொடலும், நாவலரொடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களில் களித்தலும், மடவாரொடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப்பரா வலுமாகிய காலவரை எட்டு, என்பது தஞ்சைவாணன் கோவையுரை (பக். 248) (ப.த.ஆ.) அரசர் விழாக்கள் அரசர் விழாக்கள் பொதுவும் சிறப்பும் என இருபாற்படும். அவற்றுட் பொதுவாவன : (1) மண்ணு மங்கலம் : அரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப்பெறும் விழா மண்ணுமங்கலம் ஆகும். அது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல் - நீராடுதல். தொல்காப்பியர் இதனைச் சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்பர் (1037). உழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோரரசனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்டவேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம், குடுமி கொண்ட மண்ணுமங்கலம் (தொல். 1014) எனப்படும். அது அகத்தோன் மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை. மாற்றரசன் மதிலையழித்துக் கழுதையேரால் உழுது வெள்ளை வரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின செய்த வெற்றிவேந்தன். அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம். மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம் (தொல். 1037) எனப்படும். (2) பெருமங்கலம் : ஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும். அது பெருநாள் எனவும்படும். அதில், அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப் பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ் செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம். (3) வெற்றி விழா : அரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரி லாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழா வாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம். (4) மகப்பேற்று விழா : அரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப்பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றிலும் பட்டத்திற்குரிய முதன் மகற்பேறும், சிறப்பாகக் கொண்டாடப் பெறும். (5) அரங்கேற்று விழா : முத்தமிழும் ஓரிரு தமிழும் பற்றி நூலியற்றிய ஆசிரியர், அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும். அரங்கேறிய புலவரை வெண்பட்டணிவித்து யானை மேலேற்றி நகர்வலம் வருவித்து. அவருக்குச் சிறந்த பரிசும் சின்னமும் முற்றூட்டும் அளிப்பது அரசர் வழக்கம். (6) நடுகல் விழா : போரில்பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல் விழாவாகும். (7) பத்தினி விழா : சிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்த பின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவாகும். இனி, சிறப்பாவன : பஃறுளி நெடியோன் எடுத்த முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளிவரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும், முதலாம் இராசராசன் பிறந்த நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும், போன்றவை சிறப்பு விழாவாகும். (ப.த.ஆ.) அரசன்1 சிறுகுழந்தைகட்கு எங்ஙனம் தாயும் தந்தையும் தெய்வமோ அங்ஙனமே பழங்கால மக்கட்கு அரசன் தெய்வம். உணவளித்தும் பகையழித்தும் மக்களைக் காத்த காவலன் தெய்வமாக அல்லது கண்கண்ட தெய்வமாகக் கருதப்பட்டும் வணங்கப்பட்டும் வந்தான். மணவறையில் அரசாணிக் கொம்பு நட்டும் அல்லது கட்டும் வழக்கம் பண்டைக்காலத்தில் அரச வணக்கம் பற்றித் தோன்றிய தாகத் தெரிகின்றது (சொல். 24.) அரசன்2 அரசன் - ராஜன் ம. அரசன், க. அரச, து. அரசு. L. regis, rex, Kelt, rig, OG rik, Goth reiks, AS rice, E rich. அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றித் தழுவிக்காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின் முதலுறுப்பு, பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான ஒருவனையே குறித்தல் வேண்டும். அகரம் பல சொன் முதலில் உகரத்தின் திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை. வலி என்பது பண்பாகுபெயராய் வலிமையுள்ளவனையுங் குறிக்கும். காய மனவசி வலிகள் (மேருமந். 1097). Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும் சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும். முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ யொருதா மாகிய வுரவோ ரும்பல் என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது காண்க (புறம். 18). வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது. எ-டு: ஏவு - ஏசு, பரவு - பரசு, விரவு - விரசு துளவு - துளசு துளசி. இம்முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று. அரசு - அரசன். இச்சொல் குமரிக் கண்டத்தில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்தில் குறிக்கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் அரசர். அரசன் என்பது, கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் ஐவகைத் தலைவர்க்கும் பொதுப் பெயராம் - ஐவகை மரபின் அரசர் பக்கமும் என்னுமிடத்து (தொல். 1021) வேறு பெயர் பொருந்தாமை காண்க. அரசன் - அரைசன் - அரையன். அரசு - அரைசு. தெ. ராயலு, க. ராயரு E. roy, மாவரையன் - மாராயன் - மாராயம். மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (தொல். பொ. 63). இந்தியர்க்குள் வழங்கிவரும் ராய் என்னும் பட்டப் பெயர், அரையன் என்பதைத் தழுவியதாகும். ராவ் என்பது அரவன் (அரசன்) என்பதைத் தழுவியது போலும்! மாராயம் என்பது தொல்காப்பியர் காலத்தில் மாவரையம் என்றே வழங்கியிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் எழுதினவன் பழமொழிப்படி ஏட்டைக் கெடுத்ததாகத் தெரிகின்றது. அரையன் - வ. ராய. யகரம் பெற்ற இச்சொல் வடிவிற்குத் தமிழில் தவிர வேறெம்மொழியிலும் விளக்கமின்மை காண்க. ராஜ என்னும் சொல்லை ரஜ் என்று குறுக்கி ஆள் (to rule) என்றும், ஒளிர் (to shine) என்றும், செயற்கை முறையில் வடவர் பொருள் கற்பிப்பது எள்ளளவும் பொருந்தாது. (வ.வ.) இனி, அத்திரு, அத்து(க) மானி, இலணை, கணவம், சுவலை, திருமரம், பணை எனப் பல பெயர்கண்ட அரசமரத்திற்கு, அப்பெயர் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்கி வருவதும், அச்சொல்லின் தமிழ்மைக்கு ஒரு சான்றாகும். ம. அரசு, க. அரசெ, தெ. ராய். நாட்டு மரங்களுள் அரசமரம் மிக ஓங்கி வளர்வதால், மரவரசு என்னும் பொருளில் அது அப்பெயர் பெற்றது. அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோலோங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர். என்னும் மரபுத் தொடர்மொழியையும் நோக்குக. (வ.வ. 76-78.) அரசன் - வ. ராஜன், ராஜா - இ. ராஜ், தெ. ராஜு. அரையன் - அரையர் - ராயர் - க. ராயரு, தெ. ராயலு. அரையன் - ராயன் - வங். ராய். அரவன் - (ராவன்) - மராட். ராவ். அரசன் - அரசு, அரையன் - அரைசு. அரசன் - Gk. archon = ruler, king. L. re#x, re#gis, OIr. re#g. E. rich, OE. rice, OFris, rike, Mod Fris. ryk. rik - rijck, MDu. rijke, rijck, Du. rijk, OS, riki, MLG. rike, LG. rik, OHG. richi, riche, G. reich, ON. rikr, Norw. and Sw. rik, Da. rig, Celt. rix, F. riche, Sp. rico, It. ricco. அரையன் - ராயன் - ராய் - OF. roy, F. roi, ONF. rei, E. ray, roy. மேலையாரிய மொழிகளில் இச் சொற்கட்கு மூலமில்லை. சமற்கிருதத்தில் ராஜன் என்னும் சொற்கு ரஜ் (ஒளிர், to shine) என்பதை மூலமாகக் காட்டி, ரங் (நிறம்) என்னுஞ் சொல்லொடு தொடர்புபடுத்துவர். ஆளுதற் பொருளில், arkho அல்லது arkh-ein என்னும் கிரேக்கச் சொல்லையும், ராஜ் என்னும் சமற்கிருதச் சொல்லையும், rego என்னும் இலத்தீன் சொல்லையும், ஆளுதல் பிற்பட்ட வழக்கென அறிக. அரசி = வ. ராஜ்ஞீ, L. regina. ராஜ்ஞீ என்னும் வட சொல்லே இன்று ராணி என்று வழங்குகின்றது. அணைத்தல் = தழுவுதல், தழுவிக் காத்தல். ஒ.நோ. தழுவுதல் = அணைத்தல், அணைத்துக் காத்தல். குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் (குறள். 544). தழுவு - தழிஞ்சி = போரிற் படைக்கலங்களால் தாக்குண்டு சேத முற்ற படையாளரைப் போற்றியுரைத்தும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடல். அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ (தொல். பொ. 63). அரவணைத்தல் = அரசன் தழுவுதல், அரசன்போல் தழுவிக் காத்தல். ஐயன் புரியும் அரவணைப்பும் (பணவிடு. 27). அரவணைத்துக் காக்க வேண்டும் என்னும் உலக வழக்கையும் நோக்குக. இதில், அரவு என்பது அரசனையன்றிப் பாம்பைக் குறிக்காது. பாம்பணைத்தல் என்பது புணர்ச்சியைக் குறிக்குமே யன்றிப் பாதுகாத்தலைக் குறிக்காது. (தமிழர் வ.) அரசன் தகுதிகள் ஓர் அரசனுக்குப் பின் அரியணை யேறற் குரியவன், அவ்வரசனு டைய கோப்பெருந்தேவியின் மூத்தமகனாவன். மூத்தமகன் இறந்துவிடின் இளையமகனும், ஆண்மக்களே இல்லாதபோது மகள்வழிப் பேரன்மாருள் மூப்புடையவனும், பேரன்மாரும் இல்லாதபோது கோப்பெருந்தேவிக்கடுத்த தேவியின் புதல்வருள் மூப்புடையவனும், அவரும் இல்லாதபோது பிற நெருங்கிய உறவினருள் தகுதிமிக்கவனும், அரியணையேறுவர். அரசனாதற்குரியவன், இளமையிலேயே பல கலைகளையுங் கற்று, பல்வகைப் படைப்பயிற்சியும் பெற்று, வேட்டை யாடுவதிலும் தேர்ச்சியுற்று, அறிவு ஆற்றல் அன்பு அறம் மறம் முதலிய குணங்களை ஒருங்கே உடையவனாய், பல அருஞ் செயலும் அறச்செயலும் ஆற்றிக் குடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தவனாய், இருத்தல் வேண்டும். மக்கள் யாக்கை -சிறப்பாக அரசர் யாக்கை - நிலையற்ற தாதலின், ஆளும் அரசன், தனக்குப் பின்னால் அரசியற் குழப்பமும் இடர்ப்பாடும் நேராதவாறு, தன் காலத்திலேயே மூப்புத் தகுதியுள்ள தன் மகனுக்கு அல்லது பேரனுக்கு, மண்டை கவித்து இளவரசுப் பட்டங்கட்டி, ஆட்சித் துறையிலும் போர்வினை யிலும் பிறவற்றிலும் பயிற்சி அளிப்பது வழக்கம். அரசன் யாருக்கு இளவரசுப் பட்டம் கட்டினும், ஆட்சித்திறனும் அரசியற்பொறுப்புச் சுற்றத்தின் உடன்பாடும் குடிகளின் இணக்கமும் இருந்தாலொழிய, ஆட்சியைக் கடைபோகக் கொண்டு செலுத்த முடியாது. பழவிறல் தாயம் புதுவிறல் தாயம் என்னும் இருவகைத் தாயங்களுள், மூவேந்தர் தாயம் பழவிறல் தாயமாகவும், குறுநில மன்னர் தாயம் இருவகையாகவும் இருந்து வந்தன. (ப.த.ஆ.) அரசனுந் தோட்டமும் - விளையாட்டு அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடி களும்) என ஆடுவார் முதலாவது பிரிந்து கொள்வர். அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித் தோட்டம் போடும்படி சேவகன் வழித் தோட்டக்காரனை ஏவுவன். தோட்டக்காரன் வேலை தொடங்குவன். அரசன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமை யைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், முளைத்தல், ஓரிலை முதற் பலஇலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகிய பல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை ஒவ்வொரு வினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர். காய்கள் முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி முற்றிவிட்டதா? என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை முற்றிவிட்டது என்றும், சில தலைகளை முற்ற வில்லை என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டு போய்த் தன் வீட்டில் வைத்திருப்பதுபோல், சில பிள்ளைகளைக் கொண்டுபோய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக்காய்கள் களவு போவதுபோல், அப்பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு வந்துவிடுவர். இங்ஙனம் இரண்டொரு முறை நிகழ்ந்த பின், சேவகன் அரசனையே அழைத்து வந்து, எல்லாக் காய்களையுங் கொண்டுபோவது போல் எல்லாப் பிள்ளைகளை யுங் கொண்டுபோவன். இதோடு ஆட்டம் முடியும், இவ்விளை யாட்டின் தோற்றம் வெளிப்படை. (த.நா.வி.) அரசிய லுறுப்புகள் ஒரு நாடு அல்லது சீமை (State) (1) ஆள்நிலம் (Territory) (2) குடிகள் (Population) (3) அரசியல் (Government) (4) கோன்மை (Sovereignty) என நாலுறுப்புக்களை உடையது. இந்நான்கும் உள்ள நாட்டை நிறைநாடு என்றும், இவற்றுள் ஒன்றும் பலவுங் குறைந்ததைக் குறைநாடு என்றும் அழைக்கலாம். (1) ஆள்நிலம் : சேர சோழ பாண்டியர் என்னும் முத்தமிழரசரும், தனித்தனி ஆண்ட சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்னும் முந்நாடும் சேர்ந்த தமிழகம் முதலாவது (தலைச்சங்கக் காலத்தில்) வடபெண்ணையாற்றிற்கும், (கிருஷ்ணா கோதாவரி மாவட்டங் களைக் கொண்ட கீழைச் சளுக்கிய நாடு வேங்கைநாடு என்றும், அதற்குமேற்கே பம்பாய் மாகாணத் தென் பகுதியிலிருந்த மேலைச் சளுக்கியநாடு வேள்புலம் என்றும், பெயர் பெற்றிருந்த தினால், தலைச்சங்க காலத் தமிழக வடவெல்லை கிருட்டிணை யாறு என்று கொள்ள இடமுண்டு.) தெற்கில் அமிழ்ந்துபோன பஃறுளியாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது; பின்பு (இடைச் சங்கக் காலத்திலும் கடைச்சங்கக் காலத்திலும்), வேங்கட (திருப்பதி) மலைக்கும் கடல் கொண்ட குமரி (கன்னி) யாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது. அதன்பின், குமரியாறுங் கடல் கொள்ளப்பட்டுக் குமரிமுனை (Cape Comorin) தெற்கெல்லை யாயிற்று. தமிழகத்தில் சேரநாடு மேற்கிலிருந்தமையால் குடபுலம் என்றும், சோழநாடு கிழக்கிலிருந்தமையால் குணபுலம் என்றும், பாண்டிய நாடு தெற்கிலிருந் தமையால் தென்புலம் என்றும் கூறப்பட்டன. இம் முந்நாடும் தமிழ் நாடேயாயினும், பாண்டிய நாடே சிறந்த தமிழ் வழக்குப் பற்றியும் தமிழ்ச்சங்க விருக்கை பற்றியும். தமிழ்நாடெனச் சிறப்பித்துக் கூறப்பெற்றது. சோழநாடு பாண்டிய நாடு என்னும் பெயர்கள். முறையே சோணாடு பாண்டிநாடு என மருவும். சேரநாடு நெடுமலைத் தொடருடைமையாலும், குறிஞ்சிநில மிகுதியாலும் மலைநாடெனப்பட்டது. தலைச்சங்கக் காலத்தில் இப்போதுள்ள திருவாங்கூர் கொச்சி குடகு மைசூர் என்னும் சீமைகளும், மலபார் தென்கன்னரம் கோயம்புத்தூர் சேலம் என்னும் மாவட்டங்களும், சேரவேந்தன் ஆள்நிலமாயிருந்தன திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தென்னார்க் காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, சித்தூர், நெல்லூர், கடப்பை, அனந்தபுரம் என்னும் மாவட்டங்கள் சோழவேந்தன் ஆள்நிலமா யிருந்தன. புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மாவட்டங்களும், திருவாங்கூர்ச் சீமையின் தென் பகுதியிலிருந்த வேணாடும், தெற்கே இந்துமாவாரியில் (Indian Ocean) அமிழ்ந்து போன பெருநிலப் பகுதியும், பாண்டிய வேந்தன் ஆள்நிலமாயிருந்தன. இப்போதுள்ள சீமையெல்லைகளும் மாவட்டப் பிரிவினையும் பெரும்பாலும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்டவையாதலின், மேற்கூறிய முத்தமிழ்நாட்டெல்லைகள் மதிப்பாகக் கூறப்பட்டவை என அறிக. ஒருவாறு சுருங்கச்சொன்னால், பொதியமலையிலிருந்து வட பெண்ணையாறு நோக்கி வடகிழக்காக இருபது பாகை (Degree) சாய்த்து இழுக்கப்படும் கோட்டால் பிரிக்கப்படும் இருநிலப் பகுதிகளுள், மேலைப்பகுதி முற்றும் சேர நாடாகும்; கீழைப் பகுதியில், புதுக்கோட்டைக்கு வடக்கிலுள்ளது சோழநாடும், அதற்குத் தெற்கிலுள்ளது பாண்டி நாடும் ஆகும். தெற்கில் அமிழ்ந்துபோன குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட தொலைவு எழுநூறு காதம் என்று, சிலப்பதிகார விரிவுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறியிருப்பதால் பாண்டிநாட்டின் பழம்பரப்பை ஒருவாறு உணரலாம். காதம் என்பது பத்துக்கல் கொண்டதென்றும், மூன்று கல் கொண்ட தென்றும், இருவேறாகக் கூறப்படும். அவற்றுள் குறைந்த அளவைக் கொள்ளின், தெற்கே அமிழ்ந்துபோன பாண்டிநாட்டு நிலம் 1100 கல் தொலைவிற்குக் குறையாததாகும். அந்நிலையில், பஃறுளியாறு சாவகத்தீவிற்கு நேர் மேற் காயமையும். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கு மிடையே. எழுநூற்றுக் காவதவாறும்; இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ் குறும்பனைநாடும், என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும் காடும், நதியும், பதியும்; தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால், என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால் (சிலப்பதிகாரம் (சாமிநாதையர் பதிப்பு), பக்கம் 230) அமிழ்ந்து போன பாண்டிநாட்டுப்பகுதி ஐம்பத்தொன்றிற்குக் குறையாத நாடுகளைக் கொண்டிருந்ததென்பதும், அவற்றுள் தென்கோடி யிலிருந்த தென்பாலிமுகம் பஃறுளியாற்றிற்குத் தெற்கிலிருந்த தென்பதும், அறியப்படும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11: 19-22) என்று இளங்கோவடிகள் கூறியிருப்பதால், பஃறுளியாறு கங்கைபோலும் பேரியாறு என்றும், குமரிக்கோடு பனிமலைக் கடுத்த பெருமலை என்றும், ஊகிக்கலாம். இடைச்சங்கக் காலத்தில், குமரியாற்றிற்குத் தெற்குப்பட்ட பாண்டிநாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கியபின் தமிழகப் பேரியாறாயிருந்தது குமரியாறே. தெனாஅ துருகெழு குமரி (புறம். 6) என்று காரிகிழாரும், குமரியம் பெருந்துறை (புறம். 67) என்று பிசிராந்தையாரும் பாடியிருத்தல் காண்க. கடைச்சங்கக் காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியுங் குமரியும் மூழ்கிய பின்னரே, தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்திற் சிறந்து, சோழநாடு புனல் நாடு எனப்பட்டது. கடைச்சங்கக் காலத்திலேயே, சேரநாடும் சோழநாடும் இவ்விரு பாகங்களாகப் பிரிந்திருந்தன. சேரநாட்டில், குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்கிலுள்ளது கடன்மலைநாடு என்றும், கிழக்கிலுள்ளது கொங்குநாடு என்றும், பெயர் பெற்றிருந்தன. கடன் மலைநாட்டின் வடபாகம், குட்டம் குடம் துளுவம் கொங் கணம் என்னும் பல பகுதிகளைக் கொண்டிருந்தது. கொங்குநாடு, குடகொங்கு (மேல்மண்டலம்), குணகொங்கு (கீழ்மண்டலம்) என இருபாகமாகப் பிரிந்து, அவற்றுள் குடகொங்கு, மீண்டும் குடகு, கருநாடு, கங்கநாடு, கட்டியநாடு முதலிய பலநாடுகளாகப் பிரிந்து போயிற்று. அவற்றுள் குடகையாண்ட கோசர் கொங் கிளங்கோசர் எனப்பட்டனர். கங்கநாட்டையாண்ட கங்கர் தம்மைக் கொங்குநாட்டரசர் (கொங்குதேசராஜாக்கள்) என்று கூறிக்கொண்டனர். அக்காலத்துக் கட்டியநாடு தமிழக வட வெல்லையா யிருந்ததென்பது. குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (11) என்னுங் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாகும். குணகொங் கின் தென்பாகம் பூழிநாடு எனப் பிரிந்திருந்தது. அது பொதினி என்னும் பழனிமலையையும் உட்கொண்டிருந்தது. பழனிமலை சேரநாட்டைச் சேர்ந்தது என்பது, சேரர் கொங்குவை காவூர் நன்னாடு என்னும் அருணகிரிநாதர் கூற்றாலும், வடக்குத்திசை பழனி என்னும் கம்பர் கூற்றாலும் அறியலாகும். குடகொங்கு பல நாடுகளாய்ப் பிரிந்து போனபின், கொங்கு நாடு எனச் சிறப்பாக அழைக்கப்பெற்றது, கருவூரைத் தலைநகராகக் கொண்டிருந்த குணகொங்கே, அதனின்றும் பூழிநாடு பிரிந்த பின், கொங்கு நாடென எஞ்சியிருந்தது கோவை சேல மாவட்டங்கள் கூடிய பகுதியேயாகும். இங்ஙனம் கடன்மலை நாடும் கொங்குநாடும் பலபல பகுதிகளாகப் பிரிந்துபோயினும், அவையாவும் செங்குட்டுவன் போன்ற சேரன் ஆட்சியில் அவனுக்கடங்கியே இருந்தன. அவற்றுள் குடநாடும் குட்ட நாடும் கொங்குநாடும் பூழிநாடும் நீண்ட காலமாகச் சேரநாட்டுப் பகுதிகளாகவே யிருந்து, சேரர் குடும்பத்தினரால் ஆளப்பட்டு வந்தன. சோழநாட்டின் வடபாகம் தொண்டைநாடு (வட சோழம்) என்றும், தென்பாகம் புனல்நாடு (தென்சோழம்) என்றும், பெயர் பெற்றிருந்தன. கடைச்சங்க காலத்திறுதியிலேயே, சேரநாட்டின் வடபாகத் திலுள்ள துளுவம் கொங்கணம் குடகு கருநாடகம் முதலிய நாடுகள், மொழிபெயர் தேயமாகத் திரியத் தொடங்கி விட்டன. முத்தமிழ் நாடுகளுள் அடங்கிய உள்நாடுகளை வெவ்வேறு சிற்றரசரும் துணையரையரும் (Viceroys) ஆண்டு வந்தனர். தலைமையரசர் வலிகுன்றியபோது, அதிகார வாசைமிக்க சிற்றரச ரும் துணையரையரும் தனியரசராகி விடுவது வழக்கம். இவ்வகை யில், சேரநாட்டினின்று கொங்குநாடும், சோழநாட்டி னின்று தொண்டைநாடும், பிரிந்துபோயின. பிற்காலத்துப் பேரரசர் தம் பெருவலியால் அவற்றை மீள அடிப்படுத்தினும், அவை வெல்லப் பட்ட புறநாடுகள் போல் கருதப்பட்டனவே யொழிய, பண்டு போல் சேரசோழ நாட்டுப்பகுதியான உள்நாடாகக் கருதப்பெற வில்லை. ஆயினும், தமிழகத்தை வண்புகழ் மூவர் தண்பொழில் என்று கூறும் இலக்கிய மரபு நெடுகலும் இருந்துவந்தது. பாண்டி நாட்டின் பெரும்பகுதியைச் சிறிதும் பெரிதுமாய்ப் பன் முறையிற் கடல்கொண்டு விட்டதனாலும், சேர சோழ நாடுகளின் எல்லைப் புறத்துச் சிற்றரசர் அடிக்கடி தனியரசராகிக் கொண்டும் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டும் இருந்ததினாலும், தமிழகத்தின் வடகோடியும் வடமேற்குப் பகுதியும் மொழிபெயர் தேயமாகத் திரிந்து வந்ததினாலும், கடைச்சங்கக் காலத்திற்குப் பின் முத்தமிழ் நாடுகளும் மிக ஒடுங்கி விட்டன. சேரநாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த கருநாடும் கங்கமும் கட்டியமும், 9 ஆம் நூற்றாண்டிலேயே முழுக்கன்னட நாடாகி, 11 ஆம் நூற்றாண்டில் ஹொய்சள ஆட்சிக்குட்பட்டுவிட்டன. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த விஷ்ணு வர்த்தனன் என்னும் ஹொய்சள மன்னன். கேரள (சேரல) அரசனை வென்று நீலமலையைக் (Nilgris) கைப்பற்றிக் கொண்டதாக அவன் கல்வெட்டுக் கூறுவதால், சேரநாட்டின் வடவெல்லை 12 ஆம் நூற்றாண்டில் மிகத்தெற்கே தள்ளி விட்டதென அறியலாம். கொங்குநாடு, மூவேந்தரும் முட்டிப் பொருங்களமாயிருந்து, ஒரு நிலையிலில்லாமல், அடிக்கடி அம் மூவருள்ளும் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்குக் கடந்து கொண்டும் எல்லைமாறிக் கொண்டும் இருந்ததினால். ஒரு தனி நாட்டிற்குரிய தன்மையை முற்றும் இழந்துவிட்டது. அதனால், 3 ஆம் குலோத்துங்கச் சோழன் (1178-1218) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார். வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல் மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம் ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருப தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு. இவ்வெல்லைகளும் நீடித்து நிற்கவில்லை, முத்தமிழரசரும் பிறகும் ஒருவரையொருவர் பொருது வென்று கொண்டும் தத்தம் நாட்டை விரிவாக்கிக்கொண்டு மிருந்ததினால், அவர் நாடுகளும் அதற்கேற்பச் சுருங்கியும் விரிந்தும் வந்து கொண்டிருந்தன. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், கங்க கட்டிய நாடுகளின் வடபாகத்தில், தடிகைபாடி நுளம்பபாடி எனச் சில சிறுநாடுகள் புதிதாகத் தோன்றின. (2) குடிகள் : சேரசோழ பாண்டியம் என முப்பாற்பட்ட தமிழகத் துப் பழங்குடி மக்கள் யாவரும், திரவிடப் பேரினத்தைச் சேர்ந்த தமிழர் என்னும் இனத்தாராவர். அவர் நகர வாழ்நரும் நாட்டு வாழ்நரும் காட்டு வாழ்நரும் மலை வாழ்நருமாய், நால்வகைப் பட்டிருந்தனர். அவருள் ஒருசார் மலை வாழ்நரும், ஒருசார் காட்டு வாழ்நரும், நாகரிகமின்றிக் காட்டு விலங்காண்டிகளாய் (காட்டு விலங்காண்டி - காட்டு மிருகாண்டி காட்டுமிராண்டி) வாழ்ந்து வந்தனர். சித்தர் முனிவர் முதலிய சிறந்த துறவு வகுப்பார் நாட்டிடைப் பிறந்து வளர்ந்தவரேயாயினும், தம் துறவு நிலைபற்றி மலையில் உறைந்து வந்தனர். முழு அநாகரிகரும் மலையுறை துறவியரும் அரசனாட்சிக் குட்பட்டிலர். வடமொழியாளர் எனப்பட்ட பார்ப்பார் (பிராமணர்) தொல் காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்நாடு புகுந்து நகரிலும் நாட்டிலும் கோயில் வினைஞராகவும் அரசியல் வினைஞராகவும் புலவராகவும் பெருமக்கள் தூதராகவும் அமர்ந் திருந்தனர். மருதம் என்னும் அகநாட்டிலும் நெய்தல் என்னுங்கரை நாட்டிலுமுள்ள கோநகரங்களில், வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே, யவனர் (கிரேக்கர், ரோமர்) சோனகர் (அரபியர், துருக்கர், மிலேச்சர்) முதலிய மேனாட்டாரும், அவந்தியர், மகதர், குச்சரர் மராட்டர் முதலிய வடநாட்டாரும், ஈழவர், நாகர் முதலிய கீழ் நாட்டாரும், கம்மியம் வணிகம் அரசவூழியம் முதலிய பற்பல வினை மேற்கொண்டு, அவரவர்க்குரிய சேரியில் பதிவாயிருந்து வந்தனர் . (3) அரசியல் : அரசியல் என்பது, (1) சட்டம் அமைப்போர் (Legislature) (2) கருமம் ஆற்றுவோர் (Executive) (3) நடுத்தீர்ப்போர் (judiciary) என்னும் முத்துறை அதிகார வகுப்புக்களை உறுப்பாகக் கொண்டது. பண்டைத் தமிழகத்தில், இம் முத்துறை அதிகாரங்களும் பிரிக்கப்படவில்லை. அதனால், சட்டம் அமைத்தற்கென்று இக்காலத்திற் போல் ஒரு தனி அவை இருந்ததில்லை, அரசனும் அவனுடைய துணையதிகாரிகளுமே, இம் மூவகை வினைகளையும் புரிந்து வந்தனர். சிற்றரசனாயினும் பேரரசனாயினும் சட்டம் அமைக்கும் அதிகாரம் அரசனிடத்திலேயே இருந்தது. அரசனுக்கும் குடிகளுக்கும் தீங்கு விளைக்காத பழைமையான மரபு வழக்கங் களெல்லாம் அப்படியே தழுவப் பெற்றன. அவ்வப்போது தேவைப் பட்ட திருத்தங்களும் புது விதிகளுமே அரசனால் ஆக்கப்பட்டன. (4) கோன்மை : கோன்மையாவது, ஒரு நாடு பிற நாட்டைச் சாராது, தனக்குரிய சட்டங்களைத் தானே அமைத்துக் கொள்ளும் உரிமை. இவ்வுரிமை மூவேந்தருக்கும் தனித்தனி யிருந்ததால், அம்மூவர் நாடும் முழுநிறை வுற்றவையாகும். கோன்மை என்பது ஒரு நாட்டிற்குரிய தனியுறுப்பாகப் பண்டைக்காலத்தில் உணரப்படாமையால், திருவள்ளுவர் ஏனை மூன்றுறுப்புக்களையும் ஆறாக வகுத்து. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்று கூறினார் (381). அவர் கூறும் ஆறனுள்; குடி என்பது குடிகள்; கூழ் (பொருள்); அரண் என்னும் இரண்டும் ஆள்நிலத் தின் பகுதிகள்; அரசன் படை அமைச்சு நட்பு என்னும் நான்கும் அரசியலின் பகுதிகள். சில தமிழ் நூலாசிரியர். மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால் என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளை யொட்டி, பெயர், மலை, நாடு, ஆறு, நகர், முரசு, தமிழ், கொடி, குதிரை, மாலை என்னும் பத்தும் அரசவுறுப்புக்கள் எனக் கூறுவர். பாட்டியல் இலக்கணியர், இவற்றுள் பெயர் தமிழ் என்னும் இரண்டை நீக்கி, அவற்றுக்குப் பதிலாக, யானை ஆணை என்னும் இரண்டைச் சேர்ப்பர். இவ்விரு சாராரும் கூறுபவற்றுள் பெரும்பாலன அரசச்சின்னங் களும் ஆள்நிலப் பகுதிகளுமாதலின், அவை இற்றை அரசியல் நூற்படி அரச வுறுப்புக் களாகா என அறிக. (ப.த.ஆ.) அரசியல் வினைஞர் முத்தமிழ் நாட்டிலும், அரசியல் வினைஞர், பெருநாட்டுத் தலைநகர் சிறுநாட்டுத் தலைநகர்கள் ஊர்கள் ஆகிய மூவகை யிடங்களில் சிதறியிருந்தனர். (1) பெருநாட்டுத் தலைநகரிலிருந்த வினைஞர் : அரசனுடைய ஆட்சிக்கு அடிப்படைத் துணையாயிருந்த அதிகாரச்சுற்றம் ஐம்பெருங்குழு என்பது, அமைச்சர், புரோகிதர், படைத் தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐந்து குழுவாரின் பெருந்தொகுதியே ஐம்பெருங்குழுவாகும். தலைமையமைச்சனுக்கு உத்தர மந்திரி அல்லது மகாமந்திரி என்று பெயர். தூதர், (தூதுவர்) அரசன் விடுத்த செய்திகளைப் பிற அரச ரிடத்துக் கொண்டு செல்பவரும், அரசனுடைய ஆணைகளை நாட்டதி காரிகளிடத்தும் ஊரதிகாரிகளிடத்துங் கொண்டு செல்பவரும் என இரு பாலர். அரச தூதர் சட்டையுந் தலைப் பாகையு மணிந்திருப்பர். அதனால் அவர்க்குக் கஞ்சுகமாக்கள் என்றும், சட்டையிட்ட பிரதானிகள் என்றும் பெயர். தலைமைத் தூதன் கஞ்சுகமுதல்வன் எனப்படுவான். சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர் என்று சிலப்பதிகாரங் கூறுவதால் (26: 137-8), தூதர் பெருந் தொகை யினராயிருந்தனர் என்பதறியப்படும். ஐம்பெருங் குழுவிற்கு அடுத்தபடியாய், அதனினுஞ் சற்று விரிவாக இருந்த அதிகாரச்சுற்றம் எண்பேராயம் என்பது, கரணத்தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (அரசாணையை நிறைவேற்றும் அதிகாரிகள்,) கனகச் சுற்றம் (பண்டாரம் என்னும் பொக்கிசசாலை யதிகாரிகள்), கடை காப்பாளர் (அரண்மனை வாயிற் காவலர்), நகர மாந்தர் (நகரப்பெருமக்கள் அல்லது வணிகப் பெருமக்கள்), படைத்தலைவர், யானைமறவர், இவுளி மறவர் (குதிரைச் சேவகர்) என்னும் எட்டுக் கூட்டத்தாரின் பெருந் தொகுதி எண் பேராயமாகும். அரசனுடைய நன்மையையும் உடல் நலத்தையும் உண்மையாகக் கவனித்துப் பேணுதற்கு, உறுதிச் சுற்றம் என்றொரு குழு இருந்தது குறிக்கப்பட்ட படைத் தலைவர், நிமித்திகர், மருத்துவர், நட்பாளர், அந்தணர் ஆகிய ஐந்திறத்தார் சேர்ந்த குழு, உறுதிச் சுற்றமாகும். அரசனில்லாத அல்லது அவன் கடுநோய்ப்பட்ட சமையத்தில் அரசியலைக் கவனித்தற்கு, அரசியற்பொறுப்புச் சுற்றம் ஒன்று இருந்தது. அது ஆசான் (புரோகிதன்) பெருங்கணி (கணியர் தலைவன்), அறக்களத்தந்தணர் (நியாய சபையார்), காவிதி (வரியதிகாரிகள்), மந்திரக் கணக்கர் (அரசவாணை யெழுதுவோர்) ஆகிய ஐந்திறத்தாரைக் கொண்டது. கோவலனைக் கொல்வித்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் இறப்பிற்கும், அவன் மகன் வெற்றிவேற்செழியனின் முடிசூட்டிற்கும், இடைப்பட்ட காலத்தில், பாண்டிப் பெருநாட்டரசியலைக் கவனித்தது அரசியற் பொறுப்புச் சுற்றமே. தலை நகரிலுள்ள அத்தாணி மண்டபத்தில், அரசன் முன்னிலையில், சூழ்வினை யமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும், ஆசானும், பல்வகைப் புலவரும் பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான கூட்டத்திற்கு அரசவை என்று பெயர். அது இருக்குமிடம் அவைக்களம் எனப்படும். அரசவையில் அரசனுக்கடுத்தபடியாக முதலமைச்சனே தலைமையாயிருப்பான். அரசவை, அதிலுள்ளாரின் தன்மையும் அறிவும் பற்றி, நல்லவை தீயவை நிறையவை குறையவை என நால்வகையாக வகுத்துக் கூறப்படும். அறிவு ஒழுக்கம் முதலியவற்றிற் சிறந்து, நடுநிலைமை யாகப் பேசுவோர் கூடிய அவை நல்லவை; அதற்கு எதிரானது தீயவை; எல்லாப் பொருள்களையும் அறிந்து, எதிர்காலச் செய்திகளை முன்னமாக அறிவிக்கும் பேரறிஞர்கூடிய அவை நிறையவை; அதற்கு எதிரானது குறையவை. அரசன் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளை நேரிற் கேட்பவனுக்குத் திருவாய்க் கேள்வி என்றும், அத் திருவாய்க் கேள்வி அறிவிக்க அறிந்து அரசவாணையை எழுதுவோர்க்குத் திருமந்திர வோலை என்றும். அவ்வெழுத்தாளர் தலைவனுக்குத் திருமந்திர வோலை நாயகம் என்றும் பெயர். அரசவாணை களைக் கேட்டெழுதும் அதிகாரச் சுற்றத்திற்கு வாயிற் கேட்போர் (Secretarial Staff) என்றும், அரசவாணைக்கு வாய்க் கேள்வி என்றும், இதை நிறைவேற்றுவோர்க்கு வாய்க் கேள்வியர் என்றும், பெயருண்டு. நாள்தோறும் நிகழும் அரசியல் நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிப் புத்தகத்தில் எழுதி வைப்பவன் பட்டோலைப் பெருமான் எனப்படுவான். ஊர்ச்சபைகளினின் றும் நாட்டதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித் தறிந்து, அவற்றிற்குத் தக்க விடைகளை யெழுதித் தூதர் வாயி லாய் விடுப்போர்க்கு விடையில் என்றும், அவர் தலைவனுக்கு விடையதிகாரி என்றும் பெயர். ஊர்களிலும் தலைநகரிலும் தண்டப்பட்டு வந்த வரித் தொகை களைக் கணக்கிற் பதிந்து கொள்வோர், வரியிலார் எனப்படுவர். பதிந்துகொள்ளப்பட்ட வரித்தொகையை, இன்னின்ன செல விற்கு இவ்வளவிவ்வளவென்று கூறு செய்வோர்க்கு வரிக்கூறு செய்வார் என்று பெயர். ஒவ்வோர் ஊரினின்றும் அரசனுக்கு வரவேண்டிய காணிக்கடன் என்னும் நிலவரிக்குக் கணக்கு வைப் போர் வரிப்பொத்தகம் என்றும், அவர் தலைவன் வரிப் பொத்தகக் கணக்கு என்றும், பெயர் பெறுவர். நிலவரி நீங்கிய இறையிலி நிலங்களினின்றும் ஊர்களினின்றும் வரவேண்டிய பிறவரிகட்குக் கணக்கு வைப்போர், புரவுவரி எனப்படுவர். அவர் தொகுதி புரவுவரித் திணைக்களம் எனப்படும். அத் திணைக் களத் தலைமைக் கணக்கனுக்குப் புரவுவரிச்சீகரணம் என்றும், அதன் தலைவனுக்குப் புரவுவரித் திணைக்கள நாயகம் என்றும், பெயர். இவரல்லாது, வரியிலீடு என்றும், புரவுவரித் திணைக்கள முகவெட்டி என்றும், இருவரி யதிகாரிகள் இருந்தனர். சேரநாட்டு அரசிறையதிகாரி பாட்டமாளன் என்றும், அரசியற் கணக்கதிகாரி மேலெழுத்துக் கணக்கு என்றும், பெயர் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. அத்தாணிமண்டபத்திலும் அரண்மனையிலும், அவ்வப்போது நாழிகையறிந்து அரசனுக் கறிவிப்பவர், நாழிகைக் கணக்கர் எனப்படுவர். மணநாள் திருநாள் பொருநாள் ஆகிய மூவகைப் பெருநாளிலும், யானைமேலேறி முரசறைந்து அரசவாணையை நகரத்தார்க் கறிவிப்பவன் வள்ளுவன் என்றும், அரசர்க்குரிய வேத்தியற் கூத்தை யாடுபவன் சாக்கையன் என்றும், கூறப்படுவர். திவாகரம் இவ்விருவரையும் உள்படுகருமத்தலைவர் என்று இணைத்துக் கூறும். சாக்கையனுக்குக் கூத்துள்படுவோன் என்றும் பெயருண்டு. அரண்மனைக் காரியங்களை மேற்பார்ப்பவனுக்கு மாளிகை நாயகம் (Seneschal or Chamberlain) என்றும், அரண்மனைக் கணக்கெழுதுபவனுக்குத் திருமுகக்கணக்கு என்றும் பெயர். அரண்மனை வேலையாட்கள் அகப்பரிவாரம் என்றும், அரசனொடு நெருங்கிப் பணிசெய்வார் அணுக்கச் சேவகம் என்றும், அரசனுக்குப் பக்கத்தில் நின்று ஏவல் கேட்போர் உழைச்சுற்றாளர் என்றும், அழைக்கப்பெறுவர். அரசனுக்குக் கவரி ஆலவட்டம் முதலியன வீசுவாரும், குடைகொடி முதலியன பிடிப்பாரும், அடையாளக்காரர் எனப்படுவர். அரசனுக்கு ஊக்கமும் மறமுங் கிளருமாறு, அவனுடைய முன்னோரின் அருந்திறற் செயல்களை எடுத்துக் கூறி, அவன் குடியைப் புகழ்வதற்கு, ஓவர் அல்லது ஏத்தாளர் என்று சொல்லப் படும் பாடகர் பலரிருந்தனர். அவர் சூதர் மாகதர் வேதாளிகர் (வைதாளிகர்) எனப் பல்வகையர். சூதர் நின்றேத்துவார் என்றும், மாகதர் இருந்தேத்துவார் என்றும் சொல்லப்படுவர். வைகறை யில் அரசன் பள்ளியறைக்குப் புறம்பே நின்று, அவன் குடியைப் புகழ்ந்து பாடி, அவனை இனிதாகத் துயிலுணர்த்துபவர் சூதர் ஆவர். இங்ஙனம் பாசறையில் அரசனைத் துயிலுணர்த்துபவரை, அகவர் என்று மதுரைக் காஞ்சி கூறும். அரசனுடைய ஆணைகளை அவ்வப்போது காளமூதிப் படை கட்குத் தெரிவிப்பவன் படையுள்படுவோன் அல்லது சின்னமூதி எனப்படுவான். அவனுக்குப் படைக்கிழவன் சிறுக்கன், படைச் சிறுக்கன், படைச்சிறுபிள்ளை என்றும் பெயருண்டு. அரசன் அரண்மனைக்கு வெளியே நகரிலும் நாட்டிலும் செல்லும் போதெல்லாம், அவனுடைய பரிவாரத்திற்கு முன் சென்று, அவன் வருகையைக் கூறி மக்களை வழியினின்றும் விலக்குபவனுக்குக் கட்டியங்காரன் (Herald) என்று பெயர். அரசன் தலைநகரிலிருக்கும்போதும் நாடுகாவன் மேற்செல்லு மிடத்தும், அவனொடு கூடவேயிருக்கும் அரசியல் வினைக் கூட்டத்தார்க்கு, உடன் கூட்டம் என்றும் உழையர் என்றும் பெயர். அவருள் அதிகாரிகளாயிருப்பார் உடன் கூட்டத்ததி காரிகள் எனப்படுவர். வினையாற்றும் வேளையில் அரசனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரம், ஏவற்பரிவாரம் காவற்பரிவாரம் வினைப்பரிவாரம் என முத்திறப்பட்டிருக்கும். அரசியல், அல்லது அரண்மனைத் தொடர்பான, உணவு உடை உறையுள் உண்கலம் அணிகலம் ஊர்திகள் தட்டுமுட்டுக்கள் முதலிய பல்வகைப் பொருள்களையும், பணியாட்களைக் கொண்டு ஆக்குவித்து அரசாணையை நிறைவேற்றும் தலைவர், பொதுவாகக் கருமிகள் அல்லது கன்மிகள் என அழைக்கப் பெறுவர். இவர் ஆக்கவினைத்துறையர். இவரை ஏவி நடத்துவோர் கருமவிதிகள் ஆவர். இவரல்லாத பிறரெல்லாம் ஆள்வினைத் துறையர். (2) மூவகைச் சிறுநாட்டுத் தலைநகர்களிலுமிருந்த வினைஞர்: மண்டலம் வளநாடு நாடு என்னும் (அல்லது இவற்றிற்கொத்த) ஆள்நிலப்பிரிவுகளுள், ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தலைவன் அல்லது அதிகாரி இருந்தான். மண்டல அதிகாரிக்கு மண்டலிகன் அல்லது மண்டல முதலி என்று பெயர். நாட்டதிகாரிக்கு நாடாள்வான் என்றும், நாட்டு நாயகம் என்றும், நாடுடையான் என்றும், நாட்டுவியவன் என்றும் பெயர். வளநாட்டதிகாரிகளும் நாட்டதிகாரிகள் போன்றே அழைக்கப்பட்டனர்போலும். நாட்டைக் கூறுபட அளப்பதற்கு நாடளப்போர் என்றும், நாட்டையளந்ததைக் கண்காணித்து உண்மை காண்பதற்கு நாடுகண்காட்சி என்றும், கூறுபட அளந்த நாட்டிற்கு வரிவிதித் தற்கு நாடுகூறு என்றும். நாட்டைக் காவல் செய்தற்கு நாடுகாவல் என்றும், பல அரசியல் அலுவலாளர் இருந்தனர். (3) ஊர்களிலிருந்த வினைஞர் : ஒவ்வோர் (ஆள்நில) ஊரையும் ஆள்வதற்கு, அரசனாணைப்படி ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சபை இருந்தது. அச்சபையார்க்கு ஆளுங்கணம் என்றும், கணப்பெருமக்கள் என்றும், வாரியப்பெருமக்கள் என்றும், கணவாரியப்பெருமக்கள் என்றும் பெயர். ஊர்ச்சபையானது, ஊராட்சி பற்றிய பல்வேறு காரியங்களைக் கவனித்தற்கு, பல்வேறு வாரியமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வாரியம் என்பது மேற்பார்வை அல்லது மேலாண்மை. ஊரைப் பற்றிய பொதுக்காரியங்களையும், அறமுறை குற்றத்தீர்ப்பு முதலியவற்றையும், கவனிப்பது ஆட்டைவாரியம் (சம்வத்சர வாரியம்); தோட்டம் தோப்பு புன்செய் முதலியவற்றைக் கவனிப்பது தோட்ட வாரியம்; நன்செய்களைக் கவனிப்பது கழனிவாரியம்; ஏரி குளம் ஆறு முதலிய நீர்நிலைகளைக் கவனிப்பது ஏரிவாரியம்; ஏரி குளங்களிலுள்ள கலிங்குகளையும் மதகுகளையுங் கவனிப்பது கலிங்குவாரியம்; ஊரில் வழங்கும் நாணயங்களை நோட்டஞ் செய்து நற்காசுகளையே செலாவணி யாக்குவது பொன்வாரியம்; ஊர்ச்சபைக் கணக்குகளைக் கவனிப்பது கணக்குவாரியம்; பஞ்சகாலத்திற் பயன்படும்படி வளமைக்காலத்தில் உணவுப்பொருள்களைத் தொகுத்து வைப்பது பஞ்சவாரவாரியம் (பஞ்சவாரியம்); ஊரிலும் அக்கம் பக்கத்திலுமுள்ள பெருவழிகளைக் கவனிப்பது தடிவழிவாரியம்; ஊரிலுள்ள குடும்புகளைக் கவனிப்பது குடும்பு வாரியம். இவற்றுள் சில வாரியங்கள் பலவூர்களிலில்லை. எல்லா ஊர் களிலுமிருந்தவை, ஆட்டைவாரியம், தோட்டவாரியம், ஏரி வாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம் என்னும் ஐந்தே. ஆட்டை வாரியத்திற்கு ஊர்வாரியம் தருமவாரியம் என்றும் பெயருண்டு. கழனி மிகுதியா யில்லாவிடத்துத் தோட்ட வாரியமே கழனிகளையும். ஏரி குளங்கள் பலவா யில்லாவிடத்து ஏரிவாரி யமே கலிங்குகளையும் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு வாரிய மும், தனித்தனி சபை அல்லது சிறுகுறி என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து மகாசபை அல்லது பெருங்குறி என்றும், கூறப்பெறும். ஊர்ச்சபைக் கணக்கெழுதுபவன் கரணத்தான் (மத்தியதன்) எனப்படுவான்; கணக்கு மிகுதியாயில்லாத சிற்றூர்களில் கணக்கு வாரியம் இருந்திராது. ஊரைக் காவல்செய்பவர்க்குப் பாடிகாவல் என்று பெயர். தலைமைக் காவலனைப் பெரும்பாடிகாவல் அல்லது தலையாரி என்றும், அவனுக்குக் கீழ்ப்பட்டவரைச் சிறுபாடி காவல் என்றும், கூறுவது வழக்கம். கொடிக்கால்கள் தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனித்தற்கு, வேலிநாயகம் என்றோர் அலுவலாளன் இருந்தான். ஊர்ச்சபை வேலைக்காரனுக்கு வெட்டி (வெட்டியாள் வெட்டி யான்) என்று பெயர். ஊராளி என்று இலக்கியத்திலும், ஊராளன் ஊருடையான் ஊர்மேல் நின்ற திருவடிகள் என்று கல்வெட்டிலும், வந்திருப்பதால், ஓரிரு பெருநாடுகளில் ஒவ்வொர் ஆள்நில ஊருக்கும் ஓர் அரசியலதிகாரியுமிருந்ததாகத் தெரிகின்றது. தனியூர்களில் ஒருவகையான நகரங்களில், நகரமக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நகரத்தார் என்னுஞ் சபையார் இருந்தனர். (4) பெருநாடெங்குமிருந்த வினைஞர் : தலைநகரிலும், பேரூர் களிலும், வழக்காளிகளின் வழக்கைக் கேட்டு முறைசெய்ய அறங் கூறவையமும்; எல்லா ஆள்நில ஊர்களிலும், ஆவணங்களைக் காப்பிடுவதற்கு ஆவணக்களரியும் இருந்தன. அறங்கூ றவையத் திற்கு, அறக்களம், மன்றம், தருமாசனம், நியாயசபை என்றும்; அதன் உறுப்பினர்க்கு, அறக்களத்தார், மன்றத்தார், தருமாசனத் தார், நியாயத்தார் என்றும்; பெயருண்டு. ஆங்காங்குள்ள ஊட்டுப்புரை மடம் மருத்துவசாலை முதலிய அறநிலையங்களை மேற்பார்த்தற்கு, தனித் தனிக் குழுவார் அமர்த்தப் பெற்றிருந்தனர். அவருக்கு அறப்புறங்காவலர் என்றும், புண்ணியக்கணப் பெருமக்கள் என்றும் பெயர். பொற்காசுகளையும் காசாக வழங்கின பொற்கட்டிகளையும், நிறுத்தும் உரைத்தும் நோட்டஞ்செய்யவும், சரியானவற்றின் மேல் முத்திரையிடவும், வண்ணக்கர் என்னும் அலுவலாளர் எல்லாப் பேரூர்களிலுமிருந்தனர். அரசிறையும் பிறவரிகளும் தண்டுவதற்கு ஊர்தொறும் தண்டு வான் (தண்டலாளன்) என்னும் அரசியல் வினைஞன் இருந்தான். வரி செலுத்தாத குடிகளைத் துன்புறுத்தித் தண்டு பவனுக்குப் பேறாளன் என்று பெயர். (5) வேறு சில வினைஞர் : வினையறியப்படாத சில அரசியற் பதவியாளரும் அலுவலாளரும் அதிகாரிகளும், கல்வெட்டிற் குறிக்கப்பட்டுளர். அவர், அரைசுமக்கள், முதலிகள், பழநியா யம், தெரிப்பு, முகவெட்டி. பெரும்பணைக்காரன், (நடுவிருக்கை என்பவன், அறங்கூறவையத்தானாய், அல்லது கரணத்தானாய் இருக்கலாம்) நடுவிருக்கை, சிறுதனம், பெருந்தனம், சிறுதரம், பெருந்தரம், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் (சிறுதரம் என்பவன் நாட்டதிகாரியாகவும், பெருந்தரம் என்பவன் வளநாட்டதி காரியாகவும், பெருந்தரத்துக்கு மேல் நாயகம் என்பான் வளநாட்டதிகாரிகள் தலைவனாகவும் இருந்திருக்கலாம்.) முதலியோராவர். பெருங்கோயிலுள்ள இடமெல்லாம், அதைமேற்பார்த்தற்கு ஒரு தனிக்குழு இருந்தது. ப.த.ஆ. அரசு வகைகள் 1. ஒருவராட்சி அ. தாயாட்சி - Matriarchy ஆ. தந்தையாட்சி - Patriarchy இ. நாட்டாண்மை - City State ஈ. தேவாட்சி - Theocracy உ. கோவரசு - Monarchy: அ. தன்னரசு - Autocracy ஆ. தன்மூப்பாட்சி - Dictatorship இ. அமைச்சரசு - Limited monarchy ஈ. பாராளுமன்றக் கோவரசு - Parliamentary Monarchy 2. பலராட்சி அ. குருக்களாட்சி - Hierocracy ஆ. சீரியோராட்சி - Aristocracy அ. சிலராட்சி - Oligarhcy ஆ. பலராட்சி - Polyarchy இ. செல்வராட்சி - Plutocracy ஈ. படையாட்சி - Stratocracy 3. குடியாட்சி - Democracy அ. மக்களாட்சி - Republic அ. ஒற்றையாட்சி - Unitary Government ஆ. கூட்டாட்சி - Federal Government ஆ. கூட்டுடைமை - Socialism இ. பொதுவுடைமை - Communism ஈ. கட்டுடைமை - Fascism உ. உழைப்பாளராட்சி - Ergatocracy ஊ. மன்பதாட்சி - Mobocracy Ochlocracy எ. அனைவராட்சி - Pantisocracy அரசுகளெல்லாம் கீழ் வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு திறப்படும். 1. செங்கோலாட்சி Benign Govt. + கொடுங்கோலாட்சி Despotic Government 2. தன்னாட்சி Home Rule x வேற்றாட்சி Xenocracy 3. ஒருவராட்சி Monocracy x பலராட்சி Polyarchy 4. பேரரசு Imperialism x சிற்றரசு Feudalism 5. பாராளுமன்ற ஆட்சி (Parliamentary Govt.) அல்லாட்சி (Non-Parliamentary Govt.) 6. ஆடவராட்சி Androcracy x பெண்டிராட்சி Gynecocracy Gynocracy. 7. முதலாளியர் ஆட்சி Capitalistic Govt. x தொழிலாளியர் Proletarian Govt. (தி.த.ம.) அரசுறுப்பு பல்வகைக் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்து அரசியல் நூலார். அரசியலமைப் பில் நாட்டை (State) உடம்பாகக் கொண்டு ஆள் நிலம் (Territory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sovereignty), ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தை அதன் உறுப்பாக்குவர். செங்கோல் அல்லது கொடுங்கோல் கொண்ட கோவரசே (Mon-archy) வழங்கிவந்த முற்காலத்தில், பேரறிஞரான திருவள்ளுவர் அரசியலமைப்பில் அரசனையே உடம்பாகக் கொண்டு. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு (குறள். 381) என்று. படை குடி பொருள் அமைச்சு நட்பு அரண் ஆறையும் அவனுக்கு உறுப்பாகக் கூறினர். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே அவர் கூறிய அரசின் இயல்வரையறை, இன்றும் பொருத்தமாயும் பொருள் பொதிந்ததாயுமிருப்பது. அவரின் பல்துறைக் கல்வியை யும் பரந்த நோக்கையும் ஆழ்ந்த எண்ணத்தையும் கூர்த்த மதியையும், காட்டப் போதிய சான்றாகின்றது. அரசுறுப்பு ஆறென்று குறளிற் கூறினும், உண்மையில் ஏழென்பதே ஆசிரியர் உள்ளக் கருத்து. நாடில்லாது குடியிருக்க முடியாததாக லின், நாட்டைக் குடியுள் அடக்கியே அரசுறுப்பு ஆறென்றார். நாடு என்பது ஒரு தனியுறுப்பாகவே, நாடு என்னுந் தலைப்புக் கொண்ட 74ஆம் அதிகாரத்தில் அவர் கூறியிருத்தல் காண்க. குடியின்றி நாடிருக்கலாம். ஆயின் நாடின்றிக் குடி இருக்க முடி யாது. இவ்வெளிய வுண்மையைத் திருவள்ளுவர் அறியாதிருந் திருப்பின், திருக்குறளையே இயற்றியிருக்க முடியாது. மேலும், நாடு என்றே ஒரு தனியதிகாரம் பின்னர் வகுத்திருப்பதால், முன்னுக்குப் பின் முரணாகவும் முடியும், ஓரதிகாரம் முழுவதை யும் தலைப்புடன் கவனியாது போவதும், இயலுஞ் செயலன்று. திருவள்ளுவமாலையிற் போக்கியார் பாடல். அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துருவல் லரணிரண்டொன் றென்கூ - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை என்றே. பொதுவாக வெளியிடப்பெற்று வந்திருக்கின்றது. ஆறும் உடையான் அரசருள் ஏறு என்று திருவள்ளுவர் எண் வரம்பிட்டுக் கூறியிருப்பதனாலும். அரண் நாட்டின் கூறாதலா லும், நாடு முழுதும் அரணமையவுங் கூடுமாதலாலும், நாட்டை அரணுள் அடக்கிப் போக்கியார் அங்ஙனம் பாடின ரென்று. பெரும்பாலர் கருதலாம். ஆயின், சேலங்கல்லூரி மேனாள் தமிழ் விரிவுரையாளர் திரு. நடேச அந்தணனார் இயற்றிய திருக்குறள் திறவு - பொருட்பால் இறைமாட்சி என்னும் அரிய ஆராய்ச்சி நூலில், போக்கியார் பாடலாக. அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துரைநா டரண்பொரு ளொவ்வொன் - றுரைசால் படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று குடியெழுபான் றொக்கபொருட் கூறு என்னும் அருமையான பாடவேறுபாடே காட்டப்பட்டுள்ளது. இதுவே சரியான பாடமாக இருத்தல் வேண்டும். திருக்குறட் பதிப்புகளெல்லாவற்றிலுமுள்ள பாடத்தில். இரு வியல் என்னும் தனிச்சீர் இலக்கணப்படி ஈரியல் என்றிருத்தல் வேண்டும். அதைச் செய்யுள் திரிபென்று கொள்ளினும், அக் கொள்கை அத்துணைச் சிறந்ததாகத் தோன்ற வில்லை. ஆதலால், திரு. நடேச அந்தணனார் கொண்ட பாடத்தையே இனிப் பதிப்பிப்போரெல்லாம் மேற்கொள்வாராக. திருவள்ளுவர் கூறிய அரசுறுப்புகளுள். கூழ் (பொருள்). நட்பு என்னும் இரண்டும் மிக முதன்மையாகக் கவனிக்கத்தக்கவை. இந்தியா உலகப் பெருநாடுகளுள் ஒன்றாயிருப்பினும், தனக்குப் போதிய உணவுப் பொருளின்மையால், அமெரிக்கா விற்கும் ஏனை நாடுகட்கும் சென்று கையேந்த வேண்டியுள்ளது. சில பெரு நாடுகட்குப் போதிய உணவுப் பொருளிருப்பினும், கைத்தொழிற் கருவிப் பொருட்குப் பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையுள்ளது. இனி, அமெரிக்காவும் இரசியாவும் எத்துணை வல்லரசுகளா யிருப்பினும், ஒன்றிய நாட்டினங்கள் (United Nations) என்னும் அமைப்பு ஏற்பட்டபின்னும்,அதற்குள்ளேயே; வட அத்திலாந்திய உடன்படிக்கையமைப்பு (N.A.T.O.) என்றும், தென்கிழக்கு ஆசிய உடன்படிக்கை யமைப்பு (S.E.A.T.O.) என்றும், நடுவ உடன் படிக்கையமைப்பு (C.T.O.) என்றும். இன்னும் பிறவாறும், எத் துணையோ கூட்டு நட்புகளைத் தோற்றுவித்துக் கொண்டுள்ளன. இனி, ஆப்பிரிக்க நாடுகளும் அரபிய நாடுகளும் பிறவும் தம்முட் செய்துகொண்டிருக்கும் நட்புடன்படிக்கைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம், ஒற்றுமைக்காக ஏற்பட்ட உலகமைப்பு ஒன்றா நாட்டினங்கள் (Disunited Nations) என்று சொல்லுமாறே. உலக நாடுகளின் போக்கு இருந்து வருகின்றது. திங்களையடைந்து தன் அறிவியல் (Scientific), கம்மியல் (Technolo-gical) வளர்ச்சியின் தலைத்திறத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், எவ்வெந் நாட்டொடு எவ்வெவ்வகையில் நட்புப் பூணலாமென்று சூழ்வதிலும், சூழ்ச்சி முடிபை நிறைவேற்று வதிலுமே, கண்ணுங் கருத்துமாயிருந்து வருகின்றது. இவ் விருபதாம் நூற்றாண்டிலும்; ஒரு மாபெரு வல்லரசு. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471) என்பதற்கேற்ப, தன் வாழ்விற்குத் துணைவலியை இன்றியமை யாததாகக் கருதின், ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்காலத்தில், நட்பு எத்துணைச் சிறந்த அரசுறுப்பாயிருந்திருத்தல் வேண்டு மென்பதை எண்ணிக் காண்க. இனி, ஒரு நாட்டின் நிலைமை, சூழ்நிலைக்கேற்ப அடிக்கடி மாறிக் கொண்டு வருவதால், கோன்மை என்பது நிலைத்தவுறுப்பன்று. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (குறள் 735) என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒற்றுமை என்பதும் அவர்க்குத் தெரியாததன்று. இன்று மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியிருப்பதாலும், தமிழம் என்பது மொழி இலக்கியம், பண்பாடு முதலியவற்றில் தனிப்பட்டதாதலாலும். எதிர்காலத் தமிழக அரசு புத்தம் புதிய முறையில் அமைதல் வேண்டும். (தமிழம்) அரண் பகைவராற் கைப்பற்றப்படாவாறும், கொள்ளையடிக்கப்படா வாறும், அழிக்கப் படாவாறும், நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. (குறள் அதி. 75.) உரம் - அரம் - அரண் = வலிய காப்பு, காப்பான கோட்டை, காப்பான இடம். ஒ.நோ. பரம் - பரண். mu© - muz« - ruz (t.), சரண என்னும் வடசொற்குச் சார்தல் என்று பொருள்படும் சரி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சார் என்னுந் தென்சொல்லின் திரிபே. (தி.ம. 737) அரண் உறுப்புக்கள் மதில்மேலுள்ள பதணம், ஏப்புழை, சூட்டு, ஞாயில் (ஏவறை) கொத்தளம் (காவல் கோபுரம்) முதலியனவும், பகைவர்க்குத் தெரியாது நகர்க்கு வெளியே சென்றுவர நிலத்தின் கீழமைத்த சுருங்கை முதலியனவுமாம். (குறள் 749) அரண்வகை இயற்கை அரண் : காடு, மலை, ஆறு, கடல். செயற்கை அரண் : கோட்டை, அகழி. (குறள் 737) அரணம் - அரண்ய (இ.வே.) அரண் = காவற்காடு. அரண் - அரணம் = காடு. காவல்வேல் காவற் காடிவை யரணே. (பிங்.) காடும் எயிலுங் கவசமும் அரணம். (பிங்.) மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் நவையறு சிறப்பின் நால்வகை யரணே (திவா.) (பிங்.) வடமொழியார் காட்டும் மூலம்: ரு(சயி) = செல். ரு - அரண = தொலைவான, அயலான. அரண - அரண்ய = தொலைவான அல்லது அயலான இடம், காடு, அடவி, பாலை. (வ.வ. 78.) அரத்தகம் - அலக்தக, அலக்தகம் அர் - அரன் = சிவன். அர் - அரக்கு = செம்மெழுகு. அர் - அரத்தம் = செந்நீர் (குருதி). அரத்தம் - அரத்தகம் = செம் பஞ்சுக் குழம்பு. எல் - எர் - இர் - அர். (வ.வ.78.) அரத்தம் நிறப் பெயர்கள் பொதுவாகப் பொருள் பண்பு வினை என்னும் மூவடிப்படையில் தோன்றியுள்ளன. அவற்றுள் முதலதே பெரும் பான்மை. எ-டு: ash, gold, lead, olive, orange, slate, snuff. அரத்தம், களிப்பாக்கு, சாம்பல், பவழம், பால், பொன், மயில். நெருப்பு, எரியும் பொதுநிலையில் சிவப்பாகவும், ஒளிரும் சுடர் நிலையில் வெள்ளையாகவும், தோன்றுவதால், நெருப்புக் கருத்தினின்று செம்மைக் கருத்தும் வெண்மைக் கருத்தும் தோன்றியுள்ளன. கதிரவன், இளவெயில் வீசும் விடிகாலையிற் பவளம்போல் சிவந்தும், முதிர்வெயிலெறிக்கும் நண்பகலில் வெள்ளிபோல் வெளுத்தும், தோன்றுதல் காண்க. அழல்வண்ணன் என்பது சிவனையும், எரிமலர் என்பது செந் தாமரை மலரையும் முண்முருங்கை மலரையும், செந்நிறம் பற்றிக் குறிக்கின்றன. இந்நிறக் கருத்து நெருப்புக் கருத்தினின்றே தோன்று வதால், அழல், எரி என்னும் பெயர்களின் மூலச் சொற்களும் இக் கருத்தைத் தெரிவிக்கின்றன. உல் - உல - உலவை = காய்ந்த மரக்கிளை. இலை தீந்த வுலவையால் (கலித். 11) உல் - உலர். உலர்தல் = 1. காய்தல். 2. வாடுதல். உலர்ந்து போனே னுடையானே (திருவாச. 32:1), ம. உலர். உலர்ச்சி - ம. உலர்ச்ச. உலத்தல் = அழிதல், சாதல், முடிவு பெறுதல், கழிதல், நீங்குதல். உல் - உலை = 1. கொல்லன் எரிக்கும் அடுப்பு. கொல்லனுலையூதுந் தீயே போல் (நாலடி. 298). 2. உணவு சமைக்கும் பொருட்டுக் கொதிக்க வைக்கும் நீர். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி. 114). உல் - உர் - உரி = நெருப்பு. க. உரி. உர் - உரு. உருத்தல் (செ. கு. வி.) = 1. எரிதல், அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா. 23:10). 2. வெகுளுதல், பெருஞ்சினங் கொள்ளுதல். ஒருபக லெல்லா முருத்தெழுந்து (கலித். 39:23) (செ.குன்றாவி) வெகுளுதல். ஒன்வாட்டானை யுருத்தெழுந் தன்று (பு.வெ.3:2). சினத்தல் எரிதல் போன்றது. உரு - உருத்திரம் = சினம். உருத்திரம் - வ. ருத்ர (rudra). OE. wreth, OS wre#th, OHG, reid, ON. reithr, E. wrath, wroth. உருத்திரம் - உருத்திரன் = கடுஞ்சினத்தன். உருத்திரன் - வ. ருத்ர (rudra). தமிழரின் முத்தொழிலோனான சிவன் ஆரியரின் முத்திருமேனி யருள் (திரிமூர்த்திகளுள்) ஒருவனான அழிப்புத் தொழிலோனாக் கப்பட்டபின், ஆரியக் கடுங்காற்றுத் bjŒt(storm god)kh»a ருத்ர (உருத்திரன்) அழிப்புத் தொழிலொப்புமை பற்றிச் சிவ னோடு இணைக்கப்பட்டான். ருத்ர ஆரியத் தெய்வமாயினும், வடமொழி தமிழின் திரிமொழி யாதலின், தமிழ்த் திரிசொல் லாலேயே குறிக்கப்பட்டான் என அறிக. உரு - உரும் - உருமி - உருமித்தல் = வெப்பமாதல். உரும் - உருமம் = 1. வெப்பம். (பிங்.) 2. உருமிக்கும் நண்பகல். உருமத்திற் கதிரே (சேதுபு. இராமனருச். 218). உருமவிடுதி (யாழ்ப்.) = நண்பகல் வேலை நிறுத்தம். உருமகாலம் = கோடைக்காலம். உருமத்துக்குவிடுதல் = நண்பகலில் வேலை நிறுத்துதல். உரும் - உரும்பு = கொதிப்பு. உரும்பில் கூற்றத்தன்ன நின் (பதிற்றுப். 26:13). உரும்பு - உருப்பு = 1. வெப்பம். கன்மிசை யுருப்பிறக் கனைதுனி சிதறென (கலித். 16:7). 2. சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50:16). 3. கொடுமை. உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி (பெரும்பாண். 417). உருப்பு - உருப்பம் = 1. வெப்பம். கனலும் ... வந்து குடிகொண் டவணுறைந்தன வுருப்பமெழ (அரிச். பு. விவா. 104) 2. சினம். (W.). உரும்பு - உரும்பரம் = 1. செம்பு. 2. பெருங்காயம். உரும்பரம் - வ. உதும்பர = செம்பு. உரு - உருகு. உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல். 2. மன நெகிழ்தல். பூண்முலையார் மனமுருக (பு. வெ. 9:11, கொளு). 3. மெலிதல். தாயிறந்தபின் உருகிப் போனாள். ம. உருகு. உருகு - உருக்கு. உருக்குதல் = 1. மாழை யிளகச்செய்தல். தீயிடை யுருக்குதல் முயன்றான் (கந்தபு. மார்க்க. 131). 2. மன நெகிழச் செய்தல். எம்பிரா னாமஞ் சொல்லி யுருக்கினன் (கம்பரா. உருக்காட். 27). 3. மெலியச் செய்தல். அவனை நோய் உருக்கி விட்டது. 4. அழித்தல். 5. வருத்துதல். ம. உருக்கு. உருக்கு = 1. எஃகு. (சூடா.). 2. உருக்கின பொருள். செப்புருக் கனைய (கம்பரா. கார்கா. 91). ம. உருக்கு, க. உர்க்கு, தெ. உக்கு. உருக்கு - உருக்கம் = 1. மனநெகிழ்ச்சி, இளக்கம். 2. இரக்கம். உருக்கமி லவ்வசுரக் குலம் (இரகு. மாலையி. 113). 3. தெய்வப் பத்தி, உருக்கத்திற் கரத்தேந்தி (விநாயகபு. 75:121) ம. உருக்கம். உருக்கு - உருக்கன் = மேனியை வாட்டும் நோய், (யாழ்ப்.). உல் - உள் - ஒள் = 1. ஒளியுள்ள. 2. அழகான. 3. நல்ல. 4. அறிவுள்ள. ஒண்மை = 1. விளக்கம். ஒப்பின் மாநக ரொண்மை (சீவக. 535). 2. இயற்கை யழகு. ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 31:151). 3. நன்மை. (பிங்.). 4. நல்லறிவு. ஒண்மை யுடையம் யாம் (குறள். 844). 5. மிகுதி. (திவா.) 6. ஒழுங்கு (சூடா.). ஒள் - ஒள்ளியன் = 1. அறிவுடையோன். ஒளியார் முன் ஒள்ளிய ராதல் (குறள். 714) 2. நல்லவன். நடக்கையில் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் (பழ. 255). க. ஒள்ளித. ஒள் - ஒளி = 1. நெருப்பு. 2. எரிக்குந் தன்மை 3. விளக்கு. 4. காந்தி , 5. கதிரவன். 6. வெயில். 7. திங்கள். 8. நாண்மீன். 9. மின்னல். 10. கட்புலன். 11. கண்மணி. 12. பெருமை. 13. புகழ். 14. அரசனது கடவுட்டன்மை. 15. அறிவு. 16. நன்மை. 17. செயற்கை யழகு. ம. ஒளி. க. ஔ. ஒளி - ஒளிர். ஒளிர்தல் = விளங்குதல், உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37:5). உள் - உண் - உண்ணம் = நெருப்பு, வெப்பம். உண்ண வண்ணத் தொளிர் நஞ்ச முண்டு (தேவா. 510:6). உண்ணம் - வ. உஷ்ண. மரா. ஊன்பாணி = வெந்நீர். உண் - உண. உணத்தல் = காய்தல். புலர்தல். உண - உணத்து (பி.வி.). உணத்துதல் = 1. காய வைத்தல். நெல்லை யுணத்தினாள். 2. ஈரம் புலர்த்துதல், தலையை யுணத்து. 3. வற்ற லாக்குதல், வற்றுவித்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைல. 140). உண - உணங்கு. உணங்குதல் = 1. உலர்தல். தினை விளைத்தார் முற்றந் தினையுணங்கும் (தமிழ்நா. 154). 2. மெலிதல். ஊடலு ணங்க விடுவாரோடு (குறள். 1310). 3. மனம் வாடுதல். உணங்கிய சிந்தையீர் (கந்தபு. மோன. 21). 4. சுருங்குதல். உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 5. செயலறுதல். உணங்கிடுங் கரண மென்னில் (சி.சி.4: 7). க. ஒணகு. உணங்கு - உணக்கு (பி.வி.) உணக்குதல் = 1. உலர்த்துதல். தொடிப் புழுதி கஃசா வுணக்கின் (குறள். 1037). 2. கெடுதல். உணக்கினான் ... என் வாழ்க்கை (விநாயகபு. 80: 120). ம. உணக்கு. உணங்கு - உணங்கல் = 1. உலர்த்திய தவசம். உணங்கல் கெடக்கழுதை யுதட்டாட்டங்கண் டென்பயன் (திவ். திருவாய். 4:6: 7). 2. வற்றல். வெள்ளென் புணங்கலும் (மணி. 16:67). 3. சமைத்த வுணவு. ஓடுகை யேந்தி ... உணங்கல் கவர்வார் (தேவா. 1030:3) . 4. உலர்ந்த பூ (பிங்.). உணக்கு - உணக்கம் = வாட்டம். (W.). ம. உணக்கம், க. ஒணகிலு (g), து. ஒணகெலு. உள் - அள் - அழு - அழல் = 1. நெருப்பு. 2. வெப்பம். 3. ஒளிவிளக்கம். 4. துளங்கொளி (கேட்டை). 5. செவ்வாய். 6. நரகம். 7. காந்தல், உடம்பெரிவு. 8. எருக்கு. 9. நஞ்சு. 10 உறைப்பு. 11. சினம். ம. அழல். அழல்தல் = 1. எரிதல். 2. விளங்குதல், நிகழ்தல். 3. காந்துதல். 4. உறைப்பாதல். 5. சினத்தல். 6. பொறாமைப்படுதல். அழல் வண்ணன் = சிவன் (தேவா, 1055:5). அழல்விதை = நேர்வாள வித்து. (மலை). அழல் விரியன் = எரிவிரியன். (W.). அழல் விழித்தல் = சினத்தல். (திருவாலவா. 14:5). அழலவன் = 1. நெருப்புத் தேவன். 2. கதிரவன் 3. செவ்வாய். அழல் - அழலி = நெருப்பு. (பிங்.). அழலி - அழலிக்கை = எரிச்சல். அழல் - அழலை = தொண்டை யெரிச்சல். அழலோன் = 1. நெருப்புத்தேவன். 2. கதிரவன் 3. செவ்வாய். அழற்காய் = மிளகு. அழற்குட்டம் = நளி (கார்த்திகை) அழற்குத்துதல் = மணம் உறைத்தல். அழல் - அழற்சி = 1. எரிவு. 2. கால்நடைச் சுரநோய். 3. உறைப்பு 4.சினம். 5. அழுக்காறு. அழல் - அழற்று (பி.வி.) அழற்றுதல் = 1. எரியச் செய்தல். 2.வெம்மை செய்தல். அழற்று - அழற்றி - அழற்றியன் - அழத்தியன் = பெருங்காயம். (மூ. அ.). அழல் - அழன் - அழனம் = 1. தீ. (பிங்.). 2 வெம்மை. (பிங்.). அழு - அகு - அகுட்டம் = எரியும் மிளகு. (W.). ழ -க, போலித்திரிபு. ஒ.நோ. மழவு - மகவு, தொழுதி - தொகுதி, முழை - முகை. அகு - அகை. அகைதல் = எரிதல். அகையெரி யானாது (கலித். 139:26). அகு - அக்கு - அக்கி = 1. நெருப்பு, தீ. அக்கிவாய் மடுத்தவேடு (திருவிளை. சமண. 38). 2. நெருப்புத்தேவன். அக்கியுங் கரமிழந்து (சிவதரு. சனன. 51). 3. சூட்டினாலுண்டாகுந்தோல் நோய் (herpes). k., தெ. அக்கி. பிரா. அக்கி (aggi). அக்கு - இ. ஆக் (a#g) = தீ. அகி - அவி. ஒ.நோ. குழை - குகை - குவை. வ - க திரிபின் தலைமாற்று க - வ. அவிதல் = புழுங்குதல், வேதல், சமைதல், அழிதல், அணைதல், ஒடுங்குதல், ஓய்தல், பணிதல். அவி - அவிர். அவிர்தல் = விளங்குதல். அழு - அழுங்கு. அழுங்குதல் = வேதல், புழுங்குதல், வருந்துதல், பொறாமைப்படுதல். அழுங்கு - அழுக்கு - அழுக்குறு. அழுக்குறுதல் = பொறாமைப் படுதல். அழலி - அழனி - அகனி - வ. அக்நி. (agni) - L. ignis, Lith. ugnis, Russ. ogone, Slav. ognj. “From what root is Agni derived? He is the foremost leader, he is led foremost in sacrifices, he makes every things, to which it inclines, a part of himself. ‘He is a drying agent’ says Stha#ulas@t@hivi, it does not make wet, it does not moisten. ‘It is derived from three verbs’, says Sakarpuni, from going from shining or burning, and from leading.’ He, indeed, takes the letter a from the root i (to go), the letter g from the root an#j (to shine), or dah (to burn) with the root (ni) (to lead) as the last member.” என்று லக்ஷ்மன் சரூப் எழுதிய The Nighantu & the Nirukta என்னும் நூலில் 120 ஆம் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது. அறிஞர் இதன் பொருத் தத்தைக் கண்டுகொள்க. இனி, அக்நி என்னும் வட சொற்கு, agra, foremost என்பது மூலமென்றும், ago, to lead என்பது மூலமென்றும் ag, to go என்பது மூலமென்றும், உரைப்பர். அக்கினியைத் தேவருள் முந்தினவனென்று வேத ஆரியர் கொண் டாலும், அக்கினியென்னுஞ் சொல்லிற்கு அக்கிரம் என்னுஞ் சொல்லொடு தொடர்பில்லை. அக்கு (ak) = கூர்மை, நுனி. அக்கு. - அக்கிரம் (Gk. acros) = நுனி, உச்சி. அக்கிரம் (Skt. agra) = நுனி, முதன்மை, தலைமை. அகை (ago) என்னும் சொல் உகை என்பதன் திரிபு. செல்லுதலைக் குறிக்கும் ag என்னும் சொல் பொருளளவில் ஒரு சிறிதும் பொருந்தாது. உல் - அல் - அன் - அன்று. அன்றுதல் = சினத்தல். அன் - அனல் = 1. தீ. 2. வெப்பம். 3. இடி. அனல்தல் = அழலுதல். அனல் - அனலம் = நெருப்பு. அனலம் - வ. அனல. இது சென்னைப் ப.க.த. அகர முதலியில் தலைகீழாகக் காட்டப் பட்டுள்ளது. அனல் - அனலி = 1. நெருப்பு. 2. கதிரவன். அனல் - அனலன் = நெருப்புத் தேவன். அனல் - அனற்று (பி.வி.). அனற்றுதல் = (செ.கு.வி.) நோய்நிலையில் முனங்குதல். (செ. குன்றாவி.) 1. எரித்தல். 2. வெப்பமாக்குதல். 3. வயிறுளையச் செய்தல். 4. சினத்தல். அல் - அலத்து - அலத்தி = மின்மினி (சது.). அலத்து - அலத்தம் = செம்பருத்தி. (மலை.). அலத்தம் - வ. அலக்த. அலத்தம்-அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தகம் - வ. அலக்தக. அலத்து - அலத்தல் - அலந்தல் = செங்கத்தரி. அல் - அர் - அரம் = சிவப்பு. அரன் = சிவன் - வ. ஹர. ஆரியர் சிவனை அழிப்புத் திருமேனியாக்கினதினால், ஹர என்னும் வடசொல்லிற்கு அழிப்பவன் என்று பொருள் கூறுவர். அர் - அரக்கு = 1 சிவப்பு. (திவா.). 2. ஒரு செஞ்சரக்கு (சாதிலிங்கம்) 3. செம்மெழுகு. ம. mu¡F, f., து. அரகு (g). வ. ராக்ஷா. (செம்மெழுகு). அரக்காம்பல் = செவ்வாம்பல். (பிங்.). அரக்கு - அரக்கம் = 1. அரத்தம் 2. அவலரக்கு. அரக்கம் (அரத்தம்) - வ. ரக்த. அரக்கம் (அவலரக்கு) - வ. ராக்ஷா. அர் - அரத்து - அரத்தம் - 1. சிவப்பு. அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ (சிலப். 14:86) 2. அரத்தம். 3. அரக்கு. 4. பவளம் 5. செம்பரத்தை 6. செங்கழுநீர் 7. செம்பருத்தி. 8. செங்கடம்பு. 9. செந்துணி (துகில்). 10. செம்மெழுகு. அரத்தம் (குருதி) - வ. ரக்த. ஒ.நோ. முத்தம் - வ. முக்த. அலத்தகம் - அரத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு. (சீவக 2459). அரத்தம் - அரத்தன் = செவ்வாய். அலத்தி - அரத்தி = செவ்வல்லி. (சிந்தா. நி.). அரத்தம் - அத்தம் = சிவப்பு. அத்தம் - அத்தி = செங்கனி மரம். அரத்து - அத்து - 1. சிவப்பு. ஆய்ந்தளந் தியற்றியவத்து ணாடையர் (சீவக. 1848). 2. துவர். ஆடுநீரன வத்து மண்களும் (சீவக. 2418). உல் - இல் - இல - இலகு. இலகுதல் = விளங்குதல். வெண்ப லிலகுசுடர் இலகு விலகுமகர குண்டலத்தன் (திவ். திருவாய். 8:8:1). ம. இலகு. இலகு - இலங்கு. இலங்குதல் = திகழ்தல். (பிங்.). இலங்கு - இலக்கு. இலக்குதல் = சொலிப்பித்தல். எரியத்திரத் திலக்கியே (சைவ. பொது. 294). இலக்கு - இலக்கம் = ஒளி விளக்கம். எல்லே யிலக்கம் (தொல். இடை. 21). ஒ.நோ. L. luc, lux, Gk, luke. இல் - இலக்கு = 1. சிவந்த அரக்கு. 2. அரக்குக் குறி. 3. அடையாளம். அங்கே போக உனக்கு இலக்குச் சொல்கிறேன். 4. குறிப்பொருள். இலக்கு வைத்து எய்து பழக வேண்டும். 5. குறித்த இடம். அந்த இலக்கிலே உன்னைப் பார்த்தேன். 6. நாடிய பொருள். இலக்கை நோக்கிக் தொடருகிறேன். (விவிலி. பிலிப். 3:14). 7. வெல்ல வேண்டிய போட்டி அல்லது எதிரி. இவனே உனக்கு இலக்கு. இலக்கு (அரக்கு) - E. lac. இலக்கு (குறி) - இ. லக் (lakh. வ. லக்ஷ்). இலக்கு -இலக்கம் = 1. குறி 2. எண்குறி. குறியிலக்க மெழுதே (தைலவ. பாயி. 15). 3. குறிப்பொருள். இலக்க முடம்பிடும்பைக்கு (குறள். 627). 4. நூறாயிரம். இலக்கத்தொன்பதின்மர் (கந்தபு. திருவவதார. 127). இலக்கம் - வ. லக்ஷ. இலக்கம் - இலங்கம் = குறி. இலங்கம் - வ. லிங்க. சிவ விலங்கம் (சிவலிங்கம்), மாவிலங்கம் (மாவிலிங்கம்) என்பன தமிழ்ச் சொற்களே. இல் - இலத்து - இலத்தை - இலந்தை = செம்பழம், செம்பழ முட்செடி. இலத்து - இலத்தி - இரத்தி = இலந்தை. இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறநா. 34:12). இல் - இர் - இராகி = சிவந்த கேழ்வரகு. k., க.. தெ, து ராகி (g). இல் - எல் = 1. ஒளி. எல்லே யிலக்கம் (தொல். இடை 21). 2. கதி ரவன். எற்படக் கண்போல் மலர்ந்த (திரு முரு 74). 3. வெயில். (பிங்.). 4. பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா. 170). 5. நாள். (பிங்.). 6. வெண்மை. எல் - எல்லி = 1. கதிரவன். (பிங்.). 2. பகல். இரவொடெல்லியு மேத்துவார் (தேவா. 344:8). எல் - எல்லோன் = கதிரவன். (பிங்.). எல் - எல்பு - என்பு = 1. வெள்ளையான எலும்பு. என்பிலதனை வெயில் போலக் காயுமே (குறள். 77.) 2. எலும்போடு கூடிய உடம்பு. என்பு முரியர் பிறர்க்கு (குறள். 72). x.neh.: அல் + பு = அன்பு. அல்லுதல் = பொருந்துதல் நல் - (நல்பு) - நன்பு, வல் - (வல்பு) - வன்பு. எல்பு - எலுபு - எலும்பு = வெள்ளையான உறுப்பு. ம. vY«ò, f., து. எலு, தெ. எம்மு. எல்பு - L. albus, white, LL. alba, white. E. alb, white vestment reaching to feet, worn by priests. OE., ME. albe. E. albata, white metal. L. albata, whitened. Port. albino, white Negro. E. albite, white or soda fieldspar. E. album, book of white sheets for insertion of autographs, photographs, etc. E. albumen, white of egg. E. albuminuria, presence of albumen in the urine. E. alburnum, recently formed white wood in exogamous trees. எல் - எர் - எரி. எரிதல் = 1. வேதல். 2. விளங்குதல், திகழ்தல். 3.காந்துதல். 4. எரிச்சலுண்டாதல். 5. சினத்தல். 6. வருந்துதல், பொறாமை கொள்ளுதல். k., து. எரி, தெ. எரியு. க. உரி. எரி = 1. நெருப்பு. 2. நெருப்புத் தேவன். 3. நரகம். 4. விளக்கம். 5. கந்தகம். எரிச்சல் = 1. வேகை. 2. அழற்சி, 3. காந்தல். 4. உறைப்பு. 5. சினம். 6.பொறாமை. 7. சிவப்பு. எரிமலர் = 1. செந்தாமரை மலர். 2. முண்முருக்கம்பூ. எர் - எரு = காய்ந்த சாணம். தெ. எருவு. க. எருபு (b). எரு - எருக்கு = எரிக்கும் வேகமுள்ள செடி. ம. எரிக்கு. வ. அர்க்க (arka). தெ. எருப்பு = சிவப்பு. எருவை = 1. அரத்தம். (திவா). 2. செம்பு. எருவை யுருக்கினா லன்ன குருதி (கம்பரா. கும்பக. 248). 3. செம்பருந்து. விகம்பா டெருவை பசுந்தடி தடுப்ப (64:4) 4. கழுகு. எருவை குருதி பிணங்க வருந்தோற்றம் (களவழி. 20). எருவங்காடு - எரங்காடு = செங்களிமண் நிலம். அரத்தம் = சிவப்பு. அரத்த = சிவப்பான. அரத்த - ரத்த - Com. Teut. OE. read, OF ris. rad. OS. (M. Du., MLG) ro#d, (Du., LG. rood), OHG., MHG. ro#t (mod. G. roth, rot) ON. raudr, (Sw., Da., ro#d), Goth. rauths, E. red. L. ru#fus, OIr. ruad(h), Lith. rau#da - s. Gk. ereuthein, to redden, OE. read, ON. rjodr, red, ruddy, L. ruber, Gk. eruthros OSI. rudhru, Skt. rudhira, red. L. rubeus, red, Fr. rubis, ME. rubi, E. ruby = precious stone of colour varying from deep crimson or purple to pale rose. E. rudd, freshwater fish, red-eye; rud, read. E. ruddle, red ochre. E. ruddy, healthily red OE. rudig f. rud, red. E. rufous, reddish brown. L. rufus. வேதமொழி மேலையாரியத்தினின்று ருதிர (அரத்தம்) என்னும் சொல்லையும், தமிழினின்று நேரடியாக ரக்த என்னுஞ் சொல்லை யும் பெற்றுள்ளது. இவை இரட்டையன்கள் (Doublets). பிற்சேர்க்கை அள் - அடு. ஒ.நோ. சுள் - சுடு, விள் - விடு. அடுதல் = 1. சுடுதல், 2. காய்ச்சுதல், 3. உருக்குதல், 4. சமைத்தல், 5.கொல்லுதல், 6. அழித்தல், 7. வருந்துதல். 8. வெல்லுதல், 9. போர் செய்தல். ம. அடுக. க. அடு. அடு - அடுப்பு = நெருப்பு எரிக்கும் முக்கல் அல்லது சுடு மண் கலம். அடு - அடுதல் - அடுசல் - அடுசில் - அடிசில் = சமைத்த உணவு. சுடு - கடலை = 1. சுடுதல். 2. சமைத்தல். 3. கொல்லுதல், 4. அழித்தல். 5. போர் செய்தல். அடு - அடல் - அடலை = 1. எரித்த சாம்பல். 2. நீற்றின நீறு, சுண்ணம். 3. துன்பம். 4. போர். அடுகளம் - அடுக்களை = மடைப்பள்ளி. ம. அடுக்கள. அரத்தன் அரத்தன் - ரக்த அரத்தன் = செவ்வாய். (பிங்.). அரத்தம் என்னும் சொற்குத் தமிழில், சிவப்பு. செந்நீர், பவழம், செம்பரத்தை, செங்கழுநீர், செங்கடம்பு, செம்பருத்தி, செவ்வாடை (துகில்) என்னும் பொருள்களிருப்பதையும், வடமொழியில் அ + ரக்த என்று பிரித்துப் பொருந்தா மூலங் காட்டுவதையும், நோக்குக. (வ.வ. : 79.) அரவம் அரவம் - ரவ (இ. வே.) அர் - அரவு. அரவுதல் = ஒலித்தல், அரவஞ் செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89:3). அரவு - அரவம். படையியங் கரவம் (தொல். 1004). வடவர் ரு என்னும் மூலங்காட்டுவர். அது அர் அல்லது அரவு என்னும் தென்சொல்லின் சிதைவே. அரவம் - ஆரவம் - ஆரவ (வ.) = ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24). (வ.வ.79.) அரன் அரன் - ஹர அரம் - அரன் = சிவன் (சேயோன்). அர் - அரம் = சிவப்பு. பிற்கால முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைக் கேற்ப, ஹ்ரு (அழி) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் வடவர், அது அரி என்னும் தென்சொல்லின் திரிபாம். சிவன் ஆரியத் தெய்வமல்லன். அவன் முத்தொழிலையுஞ் செய்கின்றான் என்பதே தமிழர் கொள்கை. (வ.வ.79.) அரி அரி - ஹ்ரு அரித்தல் = அழித்தல். அரி - ஹரி அரி = காட்டிலுள்ள உயிரிகளையெல்லாம் அழிக்கும் விலங்கு (சிங்கம்) - பிங். வடசொன்மூலம் ஹரி (பச்சை) எனக் காட்டுவர். அது பொருந்தாமை காண்க. (வ.வ. 79-80.) அரிதாள்வகை இருவி, நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள் கட்டை, சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள் தூறு, தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள் முருடு, வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள் (சொல் 65.) அரிவரி தமிழ் நெடுங்கணக்கிற்கு அரிவரி என்று பெயர் இருப்பது, அது இடைக்காலத்தில் அரிஓம் என்று சொல்லித் தொடங்கப் பட்டதை அறிவிக்கும். (சொல் 23.) அருக்கம் அருக்கம் - அர்க்க அருகு - அருக்கு. அருக்குதல் = அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422). அருக்கு = எருக்கு. அருக்கு - அருக்கம். எருக்குதல் = 1. அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83:7). 2. கொல்லுதல் (திவா.). அருக்கு - எருக்கு, எருக்கஞ்செடி நஞ்சாதலால் இப்பெயர் பெற்றது. (வ.வ.80.) அருணம் அருணம் - அருண (இ.வே.) அர் - அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு. அருணம் - அருணன் = எழும் செங்கதிரோன். அருணமணி = மாணிக்கம். அருணமலை = தீப்பிழம்பாய் நின்ற தாகச் சொல்லப்பெறும் மலை. அருணமலை - அண்ணாமலை, அருணை. ஆதித்தரின் தாயாகச் சொல்லப்படும் அதிதியின் பெயரான U(r) என்னும் சொல்லினின்று, அருண என்னும் பெயர் பிறந்துள்ள தாக வடவர் கூறுவர். இவ் ரு அர் என்னும் தமிழ் வேரின் திரிபாயிருக்கலாம். (வ.வ.80.) அருந்ததி காட்டல் அருந்ததி காட்டல் என்பதும் ஆரியத் தொடர்பு கருதியதே. தமிழ மரபுப்படி அருந்ததி தலையாய கற்பரசியல்லள். அவள் தன் கணவனாகிய வசிட்ட முனிவன் ஒழுக்கத்தைப் பற்றி ஐயுற்று, அவனால் விண்மீனாகச் சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறு கின்றது. தமிழப் பத்தினிப் பெண்டிரோ, கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை, என்னுங் கொள்கையினர். ஆதலால், ஆதி மந்தியார், பூதபாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப் படை கடந்த நெடுங்செழியன் தேவியார், திலகவதியார் முதலிய எத்துணையோ தலையாய தமிழகக் கற்புத் தெய்வங் களிருக்கவும் அவரை விட்டுவிட்டு அருந்ததியை நினைப்பித்தல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்றே. (த.தி.35.36.) அருந்து அருந்து - அத் (இ.வே.) L ed, E eat ஒ.நோ. : மருந்து - மந்து (தெ.). உந்து - உத்து. (வ.வ. 80.) அரும்புவகை அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது; மொட்டு, அடுக்கு மல்லிகை நந்தியா வட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரி தாயும் மொட்டையாயுமிருப்பது, முகை தாமரை சதுரக்கள்ளி முதலியவற்றின் அரும்பு போல் பெரிதாயிருப்பது. (சொல் - 67) அல் (கருமைக் கருத்துவேர்) அல்லுதல் = பொருந்துதல், கலத்தல், மயங்குதல். அல்லுதல் = 1. முடைதல், குருவி கூட்டை அல்லுகிறது என்பது உலக வழக்கு ஒரு கூண்டை அல்லுகிறவன் ஒன்பது கூண்டை அல்லுவான் என்பது பழமொழி. 2. பின்னுதல். மரங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளு தலை. அல்லிக் கொண்டன என்பர். அல் = மயக்கம் (ஒழிவிலொடுக்கம். பொது. கவி. 6). அல் - அலவு = மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களும் அலவுற்று (மணிமேகலை 4:42) கலத்தற் கருத்தில் மயக்கக் கருத்தும், மயக்கக்கருத்தில் கருமை அல்லது இருட்கருத்தும் தோன்றும் அல்லார்ந்த மேனியொடு ... அந்தகா (தாயுமானவர் பாடல்) ஒ.நோ. முயங்கு - மயங்கு - மயக்கம். முயல் - மயல் - மால் - மயக்கம், கருமை. கள்ளுதல் = பொருந்துதல். கலத்தல். கள் - கர் - கரு - கருமை. கள் - காள் - காளம் = கருமை. காள் - காளி = கரியவள். காள் - காழ் = கருமை. அல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை (மதுரைக்காஞ்சி, 544) 2. இருள் (பிங்.). 3. இரா (பிங்.). M.al. ஒ.நோ. மால் - மாலை. அல் - அல்லி = இரவில் மலரும் ஆம்பல், கரியமலருள்ள காயா. K. alamar, Tu. alimar. அல் - அலவன் = இரவில் விளங்கும் திங்கள். இரவில் நன்றாய்க் கண்தெரியும் பூனை. அல் - அல்லோன் = திங்கள் (பிங்.) அல் - இல் - இர் - இரா - இர - இரவு இர் -இரு - இருள் - இருளன். இருள் - இருட்டு = இருள். அறியாமை. K., M. irul, Tu. irlu, T. irulu. இரு - கரிய இருமலர்க்குவளை (சீவக. 1171) இருமை = கருமை. (சீவக. 1171) இரவு - இரவன் = திங்கள். இரவன் - இரவோன் - இராவோன், இரவன் பகலோனும் (தேவா. 571, 4). இரவு - இரவம் = இருள்மரம் (புறம். 281). இரா - இராகு = கருங்கோள் S. rahu. இராப்பு = ஆம்பல் முதலியன (சிலப். 2:14 உரை) இரா - இராத்திரம் - இராத்திரி - ratri (S.) இருண்மலம் = ஆணவமலம். இருள்மலத்தி னழுந்தி (சிவப்பிர. 2.1) இருணிலம் = நரகம் (திவா.) இரு - இருந்து - இருந்தை = கரி. வலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று (நாலடி. 258) இருந்து - இருந்தில் = இருந்தை. (திங். பெரியதி. 2.10.3) K. iddal M. irunnal. இரு - இரும் - இரும்பு = கரிய கனியம் (உலோகம்) M. irumbu, T. irunu. O.E. iren, E. iron. O.E.Iserr, isen, OS. OHG, ON isarn, Goth. eisarn, S. ayas. இரு - இறு - இறடி = கருந்தினை (திவா) இறு - இறுங்கு = காக்காய்ச் சோளம். இல் - எல் = இரவு எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி.8) எல்லிருள் = இராவிருள். எல் - எல்லி = 1. இரவு. எல்லியிது காலையிது (சீவக. 1877) 2. இருள். நீரரை யெல்லியியங்கன்மினே (இறை. 20, எடுத்துக் காட்டுச் செய்யுள் 217) எல்லிநாயகன் = திங்கள். எல்லிப்பகை = கதிரவன். எல் - என் - ஏன் = கரியவிலங்கான பன்றி. ஏனொருவனா யெயிற்றில் தாங்கியதும் (திவ். இயற். நான். 70) ஏன் - ஏனம் = பன்றி. இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் (தொல். பொ. 623) ஏன் - ஏனல் = கருந்தினை (சூடா) ஏன் - ஏனை - யானை - ஆனை. இன்றும் யானையை ஏனை என்னும் வழக்கு நெல்லை நாட்டில் உள்ளது. T. enuga, M.ana, K., Tu.ane. இரு - எரு - எருமை = கரிய மாடு. குவிமுலை படர்மருப் பெருமை (சீவக. 2102). M. eruma, Tu. erme, T. enumu, K. emme. S. heramba. எருமை மறம் மறவனொருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ.7,13) ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும் (தொல். பொ.72) (வே.க.) அலங்காரம் வடமொழியில் முதன்முதற் சிறப்பாகக் காவ்யா தர்சம் என்னும் அணியிலக்கணம் தொகுத்தவர் தண்டி. இவர் தென்னாட்டார்; காஞ்சியில் வாழ்ந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் காலம் கி.பி. 650-700. தமிழ்த் தண்டியலங்காரம் இயற்றியவரும் இவரேயாயின். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்னும் எடுத்துக்காட்டுச் செய்யுளால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையையும் வடமொழி தமிழுக்குப் பட்டுள்ள கடப்பாட்டின் அளவின்மையையும், தம் உள்ளான தமிழ்ப்பற்றினால் உலகிற்குணர்த்தியுள்ளார் என்னலாம். (வ.வ.) அலத்தகம் அலத்தகம் - அலத்தக - அலத்தகம் - அரத்தகம். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. (வ.வ.80.) அலத்தம் அலத்தம் - அலக்த அலத்தம் - அரத்தம். அலத்தம் = செம்பருத்தி. எல் (கதிரவன்) - இல் - அல். (வ.வ. 80.) அலப்பு அலப்பு - லப் லப்-ரப் (இ.வே.) = அலப்பு. (வ.வ.80.) அலமரல் அலமரல் தெருமரல் உழலுதல் என்னும் சொற்கள் குற்ற வாளிகளைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி என்பது தொல் காப்பியம் (சொல். 25.) அவ்வை அம்மை = அவ்வை (தாய், பாட்டி) ஔவை ஒரு புலத்தியார் பெயர். ஒரு பொதுப் பெயர் இயற்பெயராகும் போது எழுத்து மாறுவது நன்றே. இவ்வழக்கை ஆங்கிலர் செருமானியர் முதலிய மேலையர் பெயர்களிற் காணலாம். (த.இ.வ.177.) அவ்வை - அக்கை. தம் அவ்வை தவ்வை. தம் அக்கை தமக்கை என்பது போல. (தி.ம.114.) அவம் அவிதல் = வேதல், அழிதல், கெடுதல். அவி - அவம் = கேடு, வீண். அவம் - அவ - அப (வ.). (தி.ம.737) அவரை அவரை avarai. வழங்கும் இடம் - தமிழகம் சொல்வகை: அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். இயல் விளக்கம் - பெம்பான்மை பச்சை நிறமும் சிறுபான்மை வெண்ணிறமும் செந்நிறமுள்ளதும், பெரும்பாலும் தட்டை வடி வானதும், இரு விரலம் (inches) முதல் அறுவிரலம் வரை நீண்டு பல வகைப்பட்டிருப்பதும், வீட்டுப் புறங்களில் விளைவிக்கப் படுவதும், நளி, (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவ (தை) மாதங் களில் ஊர் கொடியாகவும் (creeper) சிறப்பாக இவர் கொடியாக வும் (climber) படர்கொடியிற் காய்ப்பதும் கறி வகையாகச் சமைக்கப்படுவதும் உடல் நலத்திற்கேற்றதும், சுவையுள்ளதுமான காய் வகை a kind of bean including many varieties. மறுபெயர்களும் வழங்கும் இடமும் Kâiu (g.F.á.), á¡fo (ã.§.), இவ்விரு பெயரும் இலக்கிய வழக்கு முதிரை என்பது துவரையையுங் குறிக்கும். கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் - தங்களுக்கும் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழுறையா வெண்முதிரைப் பிஞ்சாம் விதி (ப.கு.சி. 687) இதன்பொருள் - விதை முதிராத வெள்ளையவரைப் பிஞ்சு, இரா வுணவிற்கும் மருந்துண்பவர்க்கும் ஊதை (வாதம்) முதலிய முந்நாடிக் குற்றம், புண், காய்ச்சல் விழிக்குள் முதிர்ந்த கோழைப் பில்லம் ஆகிய நோயுடையார்க்கும் நல்லதாம். வேற்றுமைப்பாடு. முதல்வகை எ-டு: அவரையை, அவரையால், அவரைக்கு அவரையின், அவரையது, அவரையில் பழமொழி ‘mtiu ngh£lhš Jtiu Kis¡Fkh? ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய் சொல்லமைவு அம் வேர் அல்லது அடி முதனிலை. அவல், அமல் என்பதன் திரிபாகி மேன் முதனிலையாக நிற்கும் தொழிலாகுபெயர். ஐ பண்பி யீறு. லகரம் ரகரமானது போலித் திரிபு. சொல் வரலாறு அம்முதல் = அமுங்குதல், அமுக்குதல். அம் - (அம்மி) = அமுக்கி யரைக்குங் கல். அம் - (அமு) - (அமுகு) - அமுங்கு - அமுக்கு - அமுக்கம் அமுக்கு - அமுக்கல் - அமுக்கலான் = கொப்புளங்களை அமுங்கச் செய்யும் தழை. அம் - அமிழ் - ஆழ் - அழுந்து - அழுத்து - அழுத்தம். அமுக்குவதனாலும் அழுத்துவதனாலும் ஓரிடம் பள்ளமாகும்; ஒரு பொருள் தட்டையாகும். அம் - அமல் - அவல் = 1. பள்ளம். அவலிழியினும் மிசை யேறினும். (புறம். 102:3). 2. விளைநிலம். 3. குளம். 4. தட்டையாக இடித்த நெல்லரிசி அல்லது கம்பரிசி. பள்ளக் கருத்தினின்று குள்ளக் கருத்துந் தோன்றும். ஒ.நோ. பள் - பள்ளம். பள் - பள்ளை = 1. குள்ளம். 2. பள்ளையாடு. பள்ளையன் = குறுகித் தடித்தவன். பள்ளையாடு = குள்ளமான ஆடு. குள்ளக் கருத்தினின்று சப்பைக் கருத்துத் தோன்றும். k - t., போலி ஒ.நோ. செம்மை - செவ்வை. சும - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை. அவல் - (அவலை) - அவரை = சப்பையான அல்லது தட்டையான காய்வகை. ஒ.நோ. அயில் - அயிலை - அயிரை. ல - ர, போலி. அவரை வகைகளிற் சில உருண்டு திரண்டிருப்பினும், பெரும்பான்மை நோக்கி அவை விலக்காகக் கொள்ளப்பட்டன. மேலும், பிஞ்சு நிலையிலேயே சமைக்குமாறு மருத்துவ நூல்கள் கூறுவதால், எல்லா வகைகளும் பிஞ்சு நிலையில் சப்பையாகவே யிருத்தலை நோக்குக. ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்பு பற்றியே பெயர் பெறுவது மரபு. வாழை, கத்தரி, முருங்கை, வெண்டை, பூசணி, சுரை, பீர்க்கு, புடலை, பாகல் முதலிய பிற காய்வகைகள் எல்லாவற்றோடும் ஒப்புநோக்கி, அவரை யொன்றே தட்டையா யிருத்தலைக் கண்டறிக. பள்ளம் என்பது ஒன்றன் மேல்மட்டத்தின் தாழ்வு; குட்டை என்பது ஒன்றன் உயரத்தின் தாழ்வு; சப்பை என்பது ஒன்றன் திண்ணத்தின் அல்லது புடைப்பின் தாழ்வு. இம் முக் கருத்தும் ஓரினப்பட்டன. ஆழமில்லாத கிண்ணம் தட்டம் எனப் பெயர் பெற்றிருத்தல் காண்க. பொருள்வகை (1) ஆட்டுக் கொம்பவரை = ஆட்டுக் கொம்புபோல் வடிவுள்ள அவரை; kind of bean that resembles goat’s horn in shape. (2) ஆரால் மீனவரை = ஆரால் மீன் போன்ற வடிவுள்ள அவரை; kind of bean that resembles sand - eel in shape. (3) ஆனைக் காதவரை = ஆனைக் காது போல் வடிவுள்ள அவரை; kind of bean that resembles elephant’s ear in shape. (4) கணுவவரை = கொடியின் கணுக்களில் காய்க்கும் அவரை; kind of bean that brings forth fruits at joints also. (5) கொழுப்பவரை = குட்டையாகக் கொழுத்த சதையுள்ள அவரை; kind of bean that is short and fleshy. (6) கோழியவரை (கோழிக்கா லவரை) = கோழி விரல் போன்ற வடிவுள்ள அவரை; canavalia gladiata. (7) சிவப்பவரை - செவ்வவரை = செந்நிற அவரை; a red variety of bean, lablab cultratus. (8) சிற்றவரை - மணியவரை = a small variety of bean. (9) தீவாந்தர வவரை = கீழைத் தீவினின்று வந்த அவரை; a bean from the eastern islands (w.). (10) நகரவரை - dolichos rugosus (W) (11) பாலவரை - வெள்ளவரை; a white variety of bean, அவரைக் கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக. (புறம் 120. 10-11) (12) பேரவரை - a large variety of bean. (13) முறுக்கவரை = திருகல் முறுகலாகவுள்ள அவரை; psopha carpus tetragonolobus. இனப்பொருள்கள் (1) கப்பல் அவரை = french beans. (2) காட்டவரை = கொழுப்பவரை போன்றதாயுள்ள மொச்சை (சேலம் வழக்கு); wild bean, lablab vulgaris. வீட்டுப் புறத்தில் விளைவிக்கப்படும் அவரையை நோக்கி மொச்சை காட்டவரை எனப்பட்டது. இதனால், அவரைக்கு வீட்டவரை என ஓர் அடைமொழிப் பெயர் பெறப்படும். வீட்டவரைக்கும் காட்டவரைக்கும் வேறுபாடு வீட்டவரை காட்டவரை (1) வீட்டுப் புறத்தில் காட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது விளைக்கப்படுவது (2) கொடியாகப் படர்வது குத்துச் செடியாக வளர்வது (3) இளங்காய் கறியாகச் முற்றிய காய் அவித்துச் சமைக்கப்படுவது தின்னப்படுவது (4) தோல் மெல்லியது தோல் வல்லியது. (3) அயல்நாட்டு (சீமை) அவரை = மருதங்காய் போன்ற வடிவுள்ளதும் நீண்டதுமான வெளிநாட்டுக் காய்வகை; a kind of foreign vegetable. அயல் நாட்டை அல்லது மேல் நாட்டைப் பொது மக்கள் சீமை என்னும் வடசொல்லாற் குறிப்பர். இங்கு வடசொல் என்றது வடநாட்டுச் சொல்லை. (4) சீனியவரை - கொத்தவரை - குத்தவரை = கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்வகை; a species of pulse whose fruits are in bunches. (5) சுடலையவரை = சுடுகாட்டுப் பக்கத்தில் இயற்கையாக விளைவதும், சீனியவரை போன்றதும், உண்ணப் படாததுமான காய்வகை; a species of inedible bean growing wildly near burning grounds. இது பேயவரையெனவும்படும். (6) பாடவரை - வாளவரை - தம்பட்டவரை - சாட்டவரை = வாள் போல் நீண்டு பட்டையாக விருக்கும் காய்வகை; sword-bean, canavalia ensiformis. இனச்சொல் அவரை தெ(லுங்கு) - சிக்குடு, க(ன்னடம்) - அவர, அவரி, ஆவரே, அமரே; ம(லையாளம்) - அவர, அமர; கோ(த்தம்) - அவர் துட(வம்) - எவிர் (f); து(ளுவம்) - அவரெ, அபரெ, lablab vulgaris அவடெ. அபடெ. ஆவடெ (a kind of bean) அவரைக்காய் என்பது மலையாளத்தில் அவரக்க எனத் திரிந்துள்ளது. அமரக்க என்பது அவரக்க என்பதன் திரிவு. துளுச் சொற்களுள் ரகரமுள்ளவை ஒருவகையையும் டகர முள்ளவை மற்றொரு வகையையும் குறிப்பனவாகப் பரோ எமனோ திரவிட அகரமுதலியிற் குறிக்கப் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் துளு அகரமுதலியில் அங்ஙனங் குறிக்கப்பட வில்லை. இணைமொழி அவரை துவரை. சிறப்புக் குறிப்பு அவரை கொய்யுந ரார மாந்தும் (புறம் 215:5) சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு (புறம். 335:5) என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, மொச்சையும் அவரையெனப் பட்டதென்றோ, கருத இடந்தரும். கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்திருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை. சீர்திருத்தம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, கோழி யவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது. ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெறவில்லை. மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர். அவியுணவும் செவியுணவும் மாந்தன் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத காற்று, நீர், உணவு என்னும் மூன்றனுள், முதலது உடல் நலத்திற்கேற்ற இடத்தி லெல்லாம் இருக்கு மிடத்திலேயே முயற்சியின்றி இலவசமாகப் பெறக்கூடியது; இடையது பஞ்ச மில்லாத காலமெல்லாம் சிறு முயற்சியாற் பெறக்கூடியது; இறுதியதே விளைவுக்கால மெல் லாம் முயற்சியினாலோ, விலைகொடுத்தோ பெறக்கூடிய தாகும். நாகரிக வாழ்க்கைக்கு வேறு பல பொருள்களும் வேண்டு மாயினும், உயிர் வாழ்க்கைக்கு வேண்டியதே இன்றியமையாத தாதலின், மாந்தன் கவலைப்பட்டுத் தேட வேண்டிய முதன்மை யான பொருள் உணவொன்றே. உணவினாலேயே உயிர் உடம்பில் நிற்பதுடன், உடம்பும் உரிய வளர்ச்சியடைகின்றது. உணவின் மாற்றமே உடம்பு. உடம்பின் நன்னிலையே உயிர் நிலை. நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண்(டு) உடம்பு முயிரும் படைத்திசி னோரே. (புறம்.18) உணவு பெறுதற்குரிய பல்வேறு தொழில்களைப் பயில்வதற்கும், அவற்றைச் செய்தற்கும், உரிய பருவத்தில் மணம் புரிவதற்கும், பின்னர் மக்களைப் பெற்று வளர்த்தற்கும், நீண்ட காலம் உடம்பின் நன்னிலை வேண்டியிருத்தலின், உலக வாழ்க்கையை விரும்புவோரெல்லாம் உடம்பைப் பேணுவது இன்றியமையாத தாகின்றது. இனி, பண்பட்ட மக்கள் இம்மை வாழ்க்கைக்கு மட்டுமன்றி மறுமை வாழ்க்கைக் கும் அறிவுபெற வேண்டியிருத்தலின், அதன் பொருட்டும் உடம்பின் நீள் நன்னிலை இன்றியமையாத தாகும். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724) உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்(று) உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725) என்பவை திருமூலர் திருமந்திரங்கள். எனவே, மாந்தன் இருமை வாழ்விற்கும் இன்றியமையாதது உடம்பு என்பது பெறப்பட்டது. இத்தகைய உடம்பை உருவாக்கு வதும் இறுதிவரை நிலைப் படுத்துவதும் உணவே. உணவை விளைப்பது உழவுத்தொழில். அத்தொழிலை மக்கள் அனைவரும் மேற்கொள்ளினும், இரு நிலைமையால் உணவுத் தட்டு ஏற்படும். அவற்றுள் ஒன்று மழையின்மை; இன்னொன்று மக்கட் பெருக்கம். மழையின்மை நீடிக்காது; உலகம் ஒருங்கே அழியும் ஊழியிறுதி வரை, பார் முழுதும் பரவவுஞ் செய்யாது. ஆதலால், பஞ்சகாலத்தில் வளநாட்டினின்று வறட்சி நாட்டிற்கு வேண்டிய உணவை வருவித்துக் கொள்ளலாம். ஆயின் மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் உணவுத்தட்டு நிலைத்ததும் நீக்க முடியாததுமாகும். மழை ஏராளமாகப் பெய்யினும் உணவுப்பொருள் விளைவது நிலமே யாதலாலும், மக்கட் பெருக்கத்திற்கேற்ப நிலமும் விரிவுறாமை யாலும், நிலவரம்பீடும் பகிர்ந்துண்டலும், குடும்ப மட்டுப்பாடும் அரசியலேற்பாடாக அமைகின்றன. இவ்வகை அரசியலே கூட்டுடைமை (Socialism) என்பது. கூட்டுடைமை என்னும் ஆட்சிமுறை இக்காலத்ததேயானாலும், அதன் உயிர்நாடிக் கூறான பகிர்ந்துண்டலை, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தெய்வப் புலமைத் திருவள்ளுவர். பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்ட வரிது. (227) பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (322) தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (1107) என்னும் குறள்மணிகளால் நெறியிட்டுக் கூறியுள்ளார். அவர் காலத்தில் மக்கட் பெருக்கமில்லை; நிலக்குறைவுமில்லை. அவை யிருந்திருப்பின். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (1040) என்று கூறியிரார். ஆகவே, அவர் இக்காலத்தில் இருந்தாராயின், நில வரம்பீட்டிற்கும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கும் நெறி வகுத்தேயிருப்பார். அவர் இன்று இல்லாவிடினும், அவர் போங்கிலேயே, இந்தியத் தலைமை மந்திரினியாரான திருமாட்டியார் இந்திராகாந்தி யம்மையார், இருபான் குறிப்புப் பொருளாட்சித் திட்டத்தை வகுத்திருப்பது, இந்தியர் மீது இறைவன் கொண்ட பேரருளென்றே கருதுதல் வேண்டும். மக்கள் ஆறறிவு படைத்த உயர்திணை என்னும் உயர்ந்த உயிரினத்தைச் சேர்ந்தவராதலால். புறவுடம்பிற்குரிய அவியுணவை மட்டுமன்றி அகவுடம்பிற்குரிய அறிவுணவையும் அரும்பாடு பட்டேனும் தேடி நுகர்தல் வேண்டும். அவியுணவென்றது அவித்த அல்லது சமைத்த உணவை. நாகரிக மக்களுணவு அவிக்கப்பட்டதே என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அறிவுணவு செவிவாயிலாகக் கேட்டு உட்கொள்ளப் படுதலால் செவியுண வெனப்பட்டது. செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து (நன். 40) என்று நன்னூற் பாயிரங் கூறுதல் காண்க. அவியுணவை மட்டும் ஒருவன் விரும்புவானாயின், அவன் உயர் திணையைச் சேர்ந்தவனாகான். உடம்பால் உயர்திணையாயினும் உளத்தால் அஃறிணை யாகவே கருதப்படுவான். அவனால் மக்களினத்திற்கே இழிவு உண்டாகும். அதனால், செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (412) என்று செவியுணவின் பெரும் சிறப்பை எடுத்துக்கூறி. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். (420) என்று செவியுணவு கொள்ளாதவனை இறப்ப இழித்தும் பழித்தும் கூறினார் திருவள்ளுவர். ஆதலால், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய ஒப்புயர்வற்ற தமிழை, தாய் மொழியாகக் கொண்டிருந்தும், அதனைச் சற்றும் பேணாது. தமிழ் வந்து வயிற்றை நிறைக்குமா என்று புறக்கணித்துக் கூறுவது, தன்னைத் தமிழனென்று சொல்லிக் கொள்பவனுக்குச் சற்றும் தகாது. செவியுணவுண்டு கொண்டே அவியுணவும் பெற இயலும்போது. ஒருவன் ஏன் தமிழைத் தள்ள வேண்டும்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழ்நாட்டில் தமிழரிடைத் தமிழிற் பேசித்தானே வாழவொண்ணும்! அது கருதியேனும் கூட்டுடைமைக் கொள்கையன் தமிழைப் போற்றுக. தான் போற்றாவிடினும் போற்றுவாரை இயன்றவரை போற்றுக. (தென்மொழி கும்பம் 1976.) அவிழ் அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு அறுசுவை நால்வகை அமிழ்தம் (மணி 28:116.) அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர். மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தை யுணவு (தி.ம. 42.) பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடை ஒப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால். அமுதம், பால், அமிழ்து = பால். (தி.ம.43.) அவை - சபா (sabha#) - இ.வே. அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம். அமை -அவை ஒ.நோ. அம்மை - அவ்வை, குமி - குவி. அவையடக்கியல் அவையல்கிளவி என்பன, தொல்காப்பியர்க்கு முன்பே தொன்னூல்களில் வழங்கிவந்த இலக்கணக் குறியீடுகளாம். வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன. (தொல். 1367) அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். (தொல். 925) அவை - அவையம். தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள் 67) அவை - சவை. ஒ.நோ. இளை - சிளை, உதை - சுதை. சவை - சபா (வ.) வடசொல் வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங்காட்டுவர். (வ.வ.) (1) ஸ = ஸஹ (கூட). ஸ-ஸபா = கூட்டம். (2) பா (bha#) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு (பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை. இப்பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும் தென் சொல்லொடு தொடர்புடையதாயிருக்கலாம். பால் = வெண்மை. பாற்றிரு நீற்றெம் பரமனை திருவாச (446). (3) ஸிப். இது உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச் சொல். ஆக்கசுப்போர்டுச் சிற்றகரமுதலியில் (C.O.D.) பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது. sib = a brother or sister. sibship = the group of children from the same two parents. OE sib (b), MDu sib (be), OHG sippi, Goth sibjis. இம் மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமாயிருத்தல் காண்க. (வ.வ. 80-81) அவை : அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம், அம்பலம், அமை - அவை. ஒ.நோ. அம்மை - அவ்வை, குமி - குவி. அவை - சவை, ஒ.நோ. அமையம் - சமையம், எட்டி - செட்டி. அவை - அவையம். அம் ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு. எ-டு: நிலை நிலையம், கம்பு - கம்பம், சவை - சபா (வ.). (தி.ம. 737.) அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைந்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொன்னூல்களில் கூறப்படுகின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. அகத்தியருக்கு முந்திய தமிழ்நூல்களில், செங்கோன்தரைச் செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது. தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக் கத்தனவும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையகவலுமென இத் தொடக்கத் தனவும் கடைக்கழகத்தாராற் பாடப்பட்ட பரிபாடலுட்பல வும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும் இப்போதில்லை. தலைக்கழகக்காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக்கழகத் திலக்கண மாகிய மாபுராணமும் இசைநூலும் பூத புராணமும் இப்போதில்லை. இனி, அடி நூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திர காளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, களவு நூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கைபாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள் நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கைபாடினியம், சிறுகுரீஇயுரை, சுத்தானந்தப் பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகை யோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்ச பாரதீயம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனா பதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு. பாட்டு மடை, பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது), புணர்ப்பாவை, புதையல் நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், மந்திர நூல், மயேச்சுரர்யாப்பு, மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதரகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக்கழகக் காலத்திலும் பிற் காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை. பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி, ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடகநூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம், பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம். திருவல்லை யந்தாதி முதலியவை, இதுவரையறியப்படாத நூல்களாகச் சாஸனத் தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன. கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல்களில் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை. இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணாயிரத் தெச்சம் நூல் களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந்தனவென் றொரு வழிமுறை வழக்குள்ளது. பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை. ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் செய்யுளாலறியலாம். மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்து போனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர்நிலைக்கல்வி யிழந்தமையும், இருபெருங் காரணங்களாகும். தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவுமான எத்துணையோ நூல்கள் இறந்துபட்டன. (ஒ.மொ.) அழிபசி கொல்வது போல வருத்துவதனாலும் குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும், பண்புகளையும் அழிப் பதனாலும் கடும்பசி அழிபசியாம். (தி.ம. 136.) அழுக்காறு அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு என நிற்கும். அழுக்குறுதல், பிறராக்கம் கண்டு பொறாது வருந் துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற் போன்று அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. அழுக்கற் றகன்றாரும் இல்லை (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க. (தி.ம.102.) அள் அள்-அல (முள்) - வ. ஒ.நோ. நுள் - நள் - நள்ளி = நண்டு. நள்-நளி = தேள். வடமொழி யில் அலி என்னுஞ் சொல் தேளையுங் குறிக்கும். (வ.வ.82.) அளகம் அளகம் - அலக - அள் = செறிவு. அள்ளுதல் = செறிதல். அள்ளல் = நெருக்கம். அளம் = செறிவு. அளம் - அளகம் = 1. பெண்மயிர். (பிங்), செறிந்த கூந்தல். 2. மயிர்க் குழற்சி (பிங்.). (வ.வ.81.) அளவைகள் பழந்தமிழாட்சியிற் பயன்படுத்தப்பட்ட அளவைகள், பெரும் பாலும் இக்காலத்துள்ள தமிழ் அளவைகளே. அவை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும். (1) எண்ணலளவை: எண்ணலளவை, சிற்றிலக்கம் பேரிலக்கம் என இருவகை. அரை கால் அரைக்கால் வீசம் (மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கமும், ஒன்று இரண்டு மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கமும் ஆகும். சிற்றிலக்கத்தில், கீழ்வாயிலக்கமென்றும் மேல்வாயிலக்கமென்றும் இருவகை யுண்டு. கீழரை (1/640), கீழ்க்கால் (1/1280), கீழரைக்கால் (1/2560), கீழ்வீசம் (1/5120), முதலியன கீழ்வாய்ச் சிற்றிலக்கமும், மேலரை (அரை). மேற்கால் (கால்), மேலரைக்கால் (அரைக்கால்) மேல்வீசம் (வீசம்) முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமுமாகும். கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தொடு ஒப்பு நோக்கியே, அரை, கால் அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும். மேல்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் மேல் முந்திரி என்னும் முந்திரி (1/320) யும், கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ்முந்திரி (1/102.400) யும், ஆகும். (2) எடுத்தலளவை: எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்த லளவையில், பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள் களை நிறுக்க ஒன்றுமாக. இருவகையுண்டு. பொன்னிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். கீழ்வருவது பொன்னளவை : 4 நெல் - 1 குன்றிமணி 2 குன்றிமணி - 1 மஞ்சாடி 2 மஞ்சாடி - 1 வல்லம் (பணத்தூக்கம்) 10 வல்லம் - 1 கழஞ்சு (16 அவுன்சு) கீழ்வருவது பிறபொருளளவை 4 கஃசு - 1 பலம் (தொடி) 8 பலம் - 1 சேர் 5 சேர் - 1 வீசை 2½ வீசை - 1 துலாம் (கா, தூக்கு, நிறை) 8 வீசை - 1 மணங்கு 20 மணங்கு - 1 கண்டி (பாரம்) சிலவிடங்களில் 5 வீசை கொண்டது ஒரு துலாமாக விருந்தது. அரச முத்திரையிட்ட அளவுக்கல், குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது, நகரங்களில் அது நகரக்கல் எனப்பட்டது. பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல் என்னும் நிறைகல் இருந்தது. மிகப் பேரளவான பொன் துலாம் கணக்காக நிறுக்கப்பெற்றது. (3) முகத்தலளவை: முகந்தளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும் சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்த லளவை நெல்லிலக்கம் எனப்படும். கீழ்வருவது முகத்தலளவை : 2 செவிடு - பிடி 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 நாழி 8 நாழி - 1 குறுணி (மரக்கால்) 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி (காடி) 3 தூணி - 1 கலம் 400 குறுணி - 1 கரிசை (பறை) அரச முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரையும், கோயிற் பண்டாரத்தில் தெய்வப் பெயரையும் தாங்கியிருந்தன. சோழாந்தகன் நாழி அருண்மொழித்தேவன் மரக்கால் என்பன அரசன் பெயரையும், ஆடவல்லான் மரக்கால் செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடை யான் மரக்கால் என்பன தெய்வப் பெயரையும், தாங்கியவை யாகும். இனி, ஒவ்வொரு நாட்டிற்கும் சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு. பாண்டி நாட்டில் கோட்டை (21 மரக்கால்) என்பதும் வடசோழநாட்டில் புட்டி (40 மரக்கால்) என்பதும் பெருமுகத்த லளவாம். (4) நீட்டலளவை : நீட்டலளவை, வழியளவையும் நிலவளவை யும் என இருவகைப்படும். இவற்றுள் நிலவளவை குழிக் கணக்கு எனப்படும். வழியளவை வருமாறு : 8 தோரை (நெல்) - 1 விரல் 12 விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம் 4 முழம் - 1 பாகம் அல்லது தண்டம் 2000 தண்டம் - 1 குரோசம் 2¼ மைல் 4 குரோசம் - 1 யோசனை 7½ நாழிகைவழி - 1 காதம் (10 மைல்) குழியளவை வருமாறு 16 சாண் - 1 கோல் 18 கோல் - 1 குழி 100 குழி - 1 மா 240 குழி - 1 பாடகம் 20 மா - 1 வேலி செய் என்று ஒரு நில அளவு சங்ககாலத்திலிருந்தது. நிலவரியைத் துல்லியமாய் விதித்தற் பொருட்டு, சோழப் பெரு நாடு முழுமையும், முதலாம் இராசராசன் காலத்தில் ஒருமுறை யும், முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது. அவ் வளவையை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான். அவன் கையாண்ட அளவுகோல் உலகளந்த கோல் எனப்பட்டது. எல்லை மாறும்போதெல்லாம் வளநாடுகளும் நாடுகளும் அளக்கப்பெறும். அவற்றை யளக்குங் கோல் இறையிறுக்குங் கோல் எனப்பெறும், குடி தாங்கிக் கோல் என்றும் ஓர் அளவு கோல் முன்காலத்திருந்தது. நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன என்பது “ஆக இறை யிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரைக் கீழ் நான் குமாவினால் இறை கட்டின காணிக்கடன்” (சோ., பக்.58) என்பதனால் விளங்கும். இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி. இனி, காலவளவை வருமாறு : 60 நொடி - 1 விநாடி 60 விநாடி - 1 நாழிகை 7½ நாழிகை - 1 சாமம் 8 சாமம் - 1 நாள் 7 நாள் - 1 வாரம் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம் - 1 ஆண்டு. (ப.த.ஆ.) அளி அளி - அலி அள் = கூர்மை, நீர்முள்ளி. அள் - அளகம் = பன்றிமுள். அள் - அளி = கொட்டும் முள்ளுள்ளது, தேனீ. (வ.வ. 81.) அறக்கடன் ஒருவன் கடமையாகச் செய்யவேண்டிய பல வினைகளுள், அறமும் ஒன்றாகும், உயர்திணையைச் சார்ந்த காரணத்தினாலும், உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்ட ஒரு மாபெருங் குடும்பம் என்னுங் கருத்தினாலும், ஒவ்வொருவனும் பிறர்க்கு, அவருள்ளும் சிறப்பாக ஏழை எளியவர்க்குத் தன்னால் இயன்ற வரை உதவியும் நன்மையும் செய்தல் வேண்டும். இங்ஙனம் செய்தற்குக் கடப்பாடு என்று பெயர். கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள் - 211) என்றார் திருவள்ளுவர். கடப்பாடு என்னும் சொல்லின் முதற்பொருள் கடன் என்பதே. ஒவ்வொருவரும் அறஞ்செய்ய வேண்டுவது கடன் என்னும் கருத் தினால், அச்சொல்லுக்கு ஒப்புரவொழுகல் (உபகாரஞ் செய்தல்) என்பது வழிப் பொருளாய்த் தோன்றிற்று. (சொல். 111.) அறத்தொடுநிலை காதலியின் மெலிவு கண்டு, அதைப் போக்குவதற்கு, அவள் பெற்றோர் கட்டுவிச்சி (குறிகாரி) வேலன் (மந்திரக்காரன்) முதலியோரின் துணை வேண்டும் போதோ, அதற்கு முன்னதாகவோ, காதலி தானாகவேனும் தன் தோழி வாயிலாகவேனும் தன் காதலனைப்பற்றித் தெரிவித்தல். (த.தி.6.) அறமும் கொடையும் அறம்: அறநெறியிற் பொருளீட்டி அப்பொருளால் அறநெறியில் இன்பந் துய்க்க வேண்டும் என்பதை உணர்த்தற்கே, அறநூலார் இம்மைப்பொருள் மூன்றையும் அறம் பொருள் இன்பம் என்னும் இம்முறைப்படுத்திக் கூறினர். ஒவ்வொருவனும் அறநெறியில் தன்தன் தொழிலைச் செய்வதே, அவனவன் பொருளீட்டி இன்பந்துய்க்கும் வழியாகும். அரசன் தொழிலாவது நாடுகாவல். போர்வினையும் நாடுகாவலுட்பட்டதே. அதனால் அக்காலத்து அரசர், பெரும்பாலும், தம் வினைகளிலெல்லாம் அறத்தைக் கடைப்பிடித்தனர். குறளரும் சிந்தரும், அரண்மனையில் மகளிர் உறையும் உவளக மெய்காவலராக அமர்த்தப் பெற்றனர். தேவாரம் பாடும் குருடர் பதினறுவர், திருவாமாத்தூர்க் கோயிலில் தேவாரப்பாடகராக அமர்த்தப் பெற்றிருந்தனர். இங்ஙனம் சில எச்சப் பிறவியர்க்கு வாழ்க்கை வசதி செய்யப்பட்டிருந்தது. சிறுவர், மெலியார், தூயர் முதலியோரைக் கொல்லாமையும்; பொருநிலையற்றவன், தோற்றோடுபவன், முதலியோரொடு பொராமையும்; அடைக்கலம் புகுந்தவனைக் கைவிடாமையும்; போரறங்களாகப் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டன. பண்டைத் தமிழரசர், தம் நாட்டை அல்லது குடிகளை ஆளும் தொழிலை ஆட்சி என்னுஞ் சொல்லாற் குறியாது, காவல் புரவு ஓம்பல் முதலிய சொற்களாலேயே குறிக்க விரும்பினர். அவர் காவல் பூண்ட இடம். குடை நிழல் என்றும் அடிநிழல் என்றும், குறிக்கப்பட்டது. நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கொன்றதால் தன் கோல் கோடிற்றென்று கண்ட நொடியே உயிர் துறப்பானாயின், அவன் அறவுணர்ச்சி எத்துணை அளவிறந்த தாய் இருந்திருத்தல் வேண்டும்! கொடை: அக்காலத்தரசர், அறம்நோக்கியும் கலை வளர்ச்சி பற்றியும் ஊழியப் பாராட்டாகவும், வினையூக்கற் பொருட்டும். பல்வேறு கொடை நிகழ்த்தி வந்தனர். அவை, உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை, விலங்குக்கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக்கொடை என ஒன்பான் வகைப்படும். பார்ப்பனர்க்கு நாள்தோறும் உணவளிக்கும்படி, ஆங்காங்கு கோயில்களிலும் மடங்களிலும் ஊட்டுப்புரைகளிலும் நிதியும் மானியமும் விட்டிருந்தது, உண்டிக் கொடையாகும். பெருஞ் சோற்றுதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப்படை களிரண்டிற்கும் பதினெட்டுநாளும் பெருஞ்சோறு வழங்கியதும், உண்டிக் கொடையின் பாற்படும். புலவர்க்களித்த பல்லாயிரக்கணக்கான பொற்காசும், பாணர்க் களித்த பொற்றாமரைப்பூவும், பாடினியர்க்கும் விறலியர்க்கும் அளித்த பொன்னரி மாலையும், ஆடல்பாடல் அரங்கேறிய பாணர்க்கும் கணிகையர்க்கும் அளித்த ஆயிரத்தெண்கழஞ்சு பொன்னும். (முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்தவாயிரம்பொன் பெறுப என்பது அடியார்க்கு நல்லாருரை மேற்கோள் (சிலப். பக். 121) வெற்றிவிழாத் தொடர் பாக மறையோர்க்களித்த துலாபாரம் (சேரன் செங்குட்டுவன் மாடலமறையோனுக்களித்த துலாபாரம் 50 துலாம் (375 பவுண்டு) பொன்னாகும்.) என்னும் ஆள்நிறைப் பொன்னும் இரணிய கருப்பம் என்னும் பொற்குடமும், பொற்கொடை யாகும். புலவர் பாணர் கூத்தர் முதலியோர்க்களித்த குதிரை யானை தேர். என்பவை ஊர்திக்கொடையாகும். மறையோர்க் கவ்வப்போதளித்த ஆவாயிரம் (கோசகரம்) விலங்குக் கொடையாகும். அவைக்களத் தலைமைப் புலவர்க்களித்த குடை கொடி சிவிகை முதலிய விருதுகளும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க்களித்த தலைக்கோலும், வணிகத் தலைவர்க்களித்த எட்டிப்பூவும், படைத் தலைவர்க்களித்த ஏனாதி மோதிரமும், அமைச்சர்க் களித்த காவிதிப் பூவும். சின்னக்கொடையாகும். உழுவித்துண்ணும் வேளாளர்க்களித்த வேள் அரசு என்னும் பட்டங்களும், வணிகர் தலைவர்க்களித்த எட்டிப் பட்டமும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க்களித்த தலைக்கோற் பட்டமும், அமைச்சர்க்களித்த காவிதிப் பட்டமும், படைத்தலைவர்க் களித்த ஏனாதிப் பட்டமும், பலவகை அரசியலதிகாரிகட்களித்த அரையன் (ராயன்) மாவரையன் (மாராயன்) பேரரையன் விழுப்பேரரையன் மூவேந்த வேளான் முதலிய பட்டங்களும், சிற்றரசர்க்களித்த பிள்ளை மக்கள் நாயனார் என்னும் பட்டங் களும், பெயர்க்கொடையாகும். இனி, அரசர் தம் குடிப்பெயர் களை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும், தம் சிறப்புப் பெயர்களைச் சிற்றரசர்க்கும் பட்டப்பெயராகவும் பெயரடை யாகவும் இடுவதுமுண்டு. சேரன் செங்குட்டுவனின் படைத் தலைவன் வில்லவன்கோதை என்றும், அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சரான மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்றும், மூன்றாங் குலோத்துங்கச் சோழனின் சிற்றரசருள் ஒருவன் குலோத்துங்கச் சோழப் பிருதிகங்கன் என்றும், பெயர்பெற்றிருந்தமை காண்க. அரசியல் வினைஞர், பொருநர் (போர் மறவர்), பொது நல வூழியர், புலவர், கலைஞர், வணிகர், மறையோர், அறச்சாலை, மடம், கோயில் முதலியோர்க்கு அளித்த நிலம் நிலக்கொடை யாகும். அது முற்றூட்டு, இறையிலி, இறை நிலம், நிலவிறை ஆகிய நால்வகை நிலைமையிலும்; நிலம் ஊர் நாடு என்னும் மூவகையளவிலும் கொடுக்கப்பட்டது. ஒரு வகை வரியுமில்லாதது முற்றூட்டு. அது உறாவரை, காசு கொள்ளா விறையிலி எனவும் படும். அரசிறைமட்டும் நீங்கியது இறையிலி. இறையிறுக்கும் நிலம் இறைநிலம். நிலத்தில் வரும் இறையைமட்டும் நுகர்வது நிலவிறை. அரசியல் வினைஞர்க்கு, அக்காலத்தில் சம்பளம் உம்பளம் என் னும் இருவகையில் வேலைப்பயன் அளிக்கப்பட்டது. நெல்லாக வேனும் காசாகவேனும் கொடுப்பது சம்பளம்; நிலமாகக் கொடுப்பது உம்பளம். உம்பளம் மானியம் எனப்படும். அது நிலையானது; பெரும்பாலும் இறையிலியாயிருப்பது. மானியவகை: அரசியல் வினைஞருள், ஊர்த்தலைவனுக்குக் கொடுப்பது அம்பலமானியம்; ஊர்க்கணக்கனுக்குக் கொடுப்பது கணக்கக்காணி; வெட்டியானுக்குக் கொடுப்பது வெட்டிப்பேறு. அரசியல் வினைஞருள் ஒருசாராரான பொருநருள். படைத் தலைவனுக்குக் கொடுப்பது அமரநாயகம்; போரிற்பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுப்பது இரத்தக்காணி (இரத்தக் காணிக்கை, இரத்தமானியம், உதிரப்பட்டி). பொதுநலவூழியருள், குடிமக்கட்குக் கொடுப்பது குடிமக்கள் மானியம்; பறையடிப்பவனுக்குக் கொடுப்பது பறைத்துடைவை; உவச்சனுக்குக் கொடுப்பது உவச்சக்காணி; மருத்துவனுக்குக் கொடுப்பது மருத்துவப்பேறு; நச்சுமருத்துவனுக்குக் கொடுப்பது விடகர (விஷ ஹர) போகம்; ஏரியுடைப்பை அடைத்தவனுக்குக் கொடுப்பது ஏரிப்பட்டி. இவையெல்லாவற்றிற்கும் பொதுப்பெயர் ஊழியமானியம் என்பது. இவற்றுட் பல, ஊரவையாராற் கொடுக்கப்பட்டவையேனும், அரசவொப்பம் பெற்றவை. வணிகருட் சிறந்த தொண்டு செய்தவனுக்குக் கொடுப்பது எட்டிப் புரவு. புலவர்க்குக் கொடுப்பது புலவர்முற்றூட்டு. கலைஞருள், நட்டுவனுக்குக் கொடுப்பது நட்டுவநிலைக்காணி; கணியனுக்குக் கொடுப்பது கணிமுற்றூட்டு. மறையோர் என்னும் பிராமணருக்குக் கொடுப்பது பிரமகாயம் (பிரமதேயம்). அது தொகுதிப்பட்டவருக்குக் கொடுப்பதும் தனிப்பட்டவர்க்குக் கொடுப்பதும் என இருவகை. அகரப்பற்று, அக்கிரசாலைப்புறம், அக்கிரகார வாடை என்பன தொகுதிப் பட்டவர்க்குரியன. பார்ப்பனர் மட்டும் குடியிருக்கும் இறையிலி நிலம் அகரப்பற்று. பார்ப்பனர் பெரும்பான்மையாகவும் பிறர் சிறுபான்மையாகவும் குடியிருக்கும் இறையிலிநிலம் அக்கிரகார வாடை. பார்ப்பனரை உண்பிக்கும் அக்கிரசாலைக்கு விடப்பட்ட மானியம் அக்கிரசாலைப்புறம். வேதவிருத்தி, பட்ட விருத்தி, அத்தியயனவிருத்தி (அத்தியயனாங்கம்), தயித்திரியக் கிடைப்புறம், பாரதப்புறம் முதலியன தனிப்பட்டவர்க்குரியன. சத்திரம், அடிசிற்சாலை (ஊட்டுப்புரை, சோற்றடைப்பு, அன்னசத்திரம்) முதலிய வற்றிற்கு விடும் மானியம் சாலைப்புறம் (சாலாபோகம்), அடிசிற்சாலைக்கு மட்டும் விடப்படுவது அடிசிற்புறம். தண்ணீர்ப்பந்தலுக்கு விடப்படுவது தண்ணீர்ப் பட்டி. மடத்திற்கு விடப்படுவது மடப்புறம். கோயிற்கு விடப்படுவது தேவதானம் அல்லது தேவதானப்பற்று (தேவதாயம், திருநாமத்துக்காணி, திருவிடை யாட்டம், திரு விடைப்பற்று). குடியிருக்கும் மக்களொடு சேர்த்துக் கோயிற் களிக்கப்படும் நிலம் குடி நீங்காத் திருவிடையாட்டம் எனப் படும். பிடாரிகோயிற்கு விடப்படும் மானியம் பிடாரிபட்டி அல்லது பிடாரிவிளாகம் என்றும், சமணபௌத்தப் பள்ளிகட்கு விடப்படுவது பள்ளிச்சந்தம் என்றும், பெயர்பெறும். அறம்நோக்கியும் மதம் பற்றியும் விடப்படும் மானியமெல்லாம் பொதுவாக அறப்புறம் எனப்பெறும். பார்ப்பனர்க்கும் கோயிற்கும் ஒரு முழுவூரைத்தானஞ் செய்யும் போது, ஒரு பெண்யானையை அவ்வூரைச்சுற்றிப் போகவிட்டு, அதுபோனவழியே எல்லையமைத்துக் கல்லுங்கள்ளியும் நட்டி, நீரட்டிக் கொடுத்து, பெரும் பணைக்காரன் என்னும் அதிகாரி வாயிலாய், செப்பேட்டில் அரசாணை (ஆணத்தி) பொறிப்பது மரபு. பெண் யானையைவிட்டு எல்லையமைத்தல் பிடிசூழ்ந்து படாகை நடத்தல் எனப்படும். தானஞ் செய்யப்படும் ஊரிலுள்ள உழுதுண்பார் காராண்மை என்னுஞ் சொல்லாலும், உழுவித் துண்பார் மீயாட்சி என்னுஞ் சொல்லாலும், குறிக்கப் பெறுவர். இனி, ஓர் ஊரை மேற்பார்க்குங் கூட்டமும் மீயாளுங் கணம் எனப்படும். நீரட்டிக் கொடுத்த செப்பேட்டுத் தான மெல்லாம் அட்டிப்பேறு எனப் பட்டன. கோயிற்கு விடப்படும் நிலமெல்லாம் இறையிலியாக இருக்க வேண்டியி ருந்தமையின், அரசன் தானாய்ச் செய்யாத தேவதான மெல்லாம் அவனுடைய இசைவுபெற்றே செய்யப்பட்டன. அங்ஙனஞ் செய்யு ம்போது, இறை நீங்கலால் அரசியற்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக, தானஞ் செய்பவன் அல்லது செய்பவர் ஒரு குறித்த தொகையைப் பண்டாரத்திற் சேர்க்கும்படி ஊரவை யாரிடம் கொடுத்து விடுவது வழக்கம். ஒரு நிலம் அல்லது ஊர் இறையிலியாக்கப்படும் போது, அதன் இறை நீக்கம் இறங்கல் என்றும், அதை இறையிலிப் பதிவுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதுதல் நீங்கல் அல்லது நாட்டு நீங்கல் என்றும், குறிக்கப் பெறும். வரிக்கணக்கையும் நிலங்களின் நிலை மையையும் எந்தச் சமயத்திலும் தெரிந்துகொள்ளற் பொருட்டு, பல்வேறு கணக்குகள் வைக்கப்பட்டிருந்தமையின், சில சமயங் களில் ஓர் இறையிலி ஆணைக்கு ஐம்பதின்மருக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைந்நாட்டிட வேண்டியிருந்தது. இறுதியில் அரசன் இடும் முடிவான ஆணை கடையீடு எனப் பட்டது. நாட்டுக் குழப்பத்தினால் இழக்கப்பட்ட மானியவுரிமையை, குழப்பம் நீங்கியபின் சான்றுகாட்டி மீண்டும் பெற்றுக்கொள்ள அக்காலத்து இயல்கை (சாத்தியம்) இருந்தது. களப்பாளர் ஆட்சியில் இழக்கப்பட்ட வேள்விக்குடிப் பிரமதேய வுரிமை, இரு நூற்றாண்டிற்குப் பின் மீள நாட்டப்பெற்ற பாண்டிய வாட்சியின் ஏழாம் தலைமுறையில் புதுப்பிக்கப்பெற்றது. சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன், பரணர்க்குத் தன் மகன் குட்டுவன் சேரலைக்கொடுத்தது மகற்கொடை யாகும். மகற்கொடையாவது மகனை மாணவனாகக் கொடுத்தல். தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும்பொறை, அரிசில் கிழார்க்குத் தன் அரியணையைக் கொடுத்தது ஆட்சிக் கொடையாகும். ஆயின், அவர் அதை ஏற்கமறுத்து அவனிடம் அமைச்சுப் பூண்டார். கொடை மடம் : பண்டையரசருட் பலர்க்குக் கொடை ஒரு சிறந்த குணமா யிருந்தபோதே, ஒருவகையிற் குற்றமாகவும் இருந்தது. அது கொடை மடம் எனப்பட்டது. பேகன் ஓர் அருவினை யுயர்விலைக் கலிங்கத்தை ஒரு மயில்மேற் போர்த்தான். பாரி தன் இழையணி நெடுந்தேரை ஒரு முல்லைக் கொடி படர நிறுத்தியதொடு, தனக்கிருந்த முந்நூறூர்களையும் பரிசிலர்க் கீந்துவிட்டான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன்மேற் பத்துப்பாட்டுப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு, ஐந்நூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமுங் கொடுத்தான். களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு, பத்துப் பாட்டிற்கு நாற்பதிலக்கம் பொன்னும் தான் ஆண்டதிற் பாகமுங் கொடுத் தான். இங்ஙனம், அஃறிணையுயிரிகட்குத் தகாத பொருள் களையும், அரசு கெடும்படி பரிசிலர்க்கு நாடு முழுவதையும், பல புலவர் பசியால் வாட ஓரிரு புலவர்க்கு மாபெருஞ் செல்வத் தையும், அளித்தது கொடை மடமாம். (ப.த.ஆ.) அறிவ (சித்த) மதம் அறிவன் தேயம் என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால். உருவ வணக்கத்தை (Idolatry) யொழித்த உயர்ந்த அறிவமதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமை யுணரப்படும். பிற்காலத் திலிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. கடவுள் என்ற பெயர் எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க. அறிவு அறிவு என்னும் சொல் அறிதல் (Perception, understanding) அறிந்த செய்தி (knowledge), ஓதி (Wisdom) மதி (Intelligence) என்னும் நாற்பொருள் உணர்த்தும். - தி.ம.250. அறுதொழிலோர் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காலான் எனின். (குறள். 560) இக் குறளுரைக்கு அடிமணையாயிருப்பது அறுதொழிலோர் என்னுஞ் சொல். அச் சொற்குப் பரிமேலழகர் அந்தணர் என்னுஞ் சொல்லாற் பிராமணர் என்னும் பொருள் குறித்து. அறுதொழி லாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும். அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம். ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதா யிற்று என்று அதற்கேற்ப விளக்கவுரையுங் கூறினார். இவ்வுரை தவறானதென்பதற்குக் கரணியங்களாவன: 1. நாற்பாலார்க்கும் அறுதொழிலுண்மை அந்தணர், அரசர், வணிகர், வேளாளரென்னும் நால்வகுப்பார்க் கும் அறுதொழில் கூறப்படுவதால், அவருள் ஒரு வகுப்பாரை மட்டும் அறுதொழிலோர் என்று கட்டுவது பொருந்தாது. ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்றிரு மூவகை ஆதிக் காலத் தந்தண ரறுதொழில் அரச ரறுதொழில் ஓதல் வேட்டல் புரைதீர் பெரும்பார் புரத்தல் ஈதல் கரையறு படைக்கலங் கற்றல் விசயம் வணிக ரறுதொழில் ஓதல் வேட்டல் ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் வேளாள ரறுதொழில் உழவுபசுக் காவல் தெள்ளிதின் வாணிகம் குயிலுவம் காருகவினை ஒள்ளிய இருபிறப் பாளர்க் கேவல்செயல் குயிலுவம் வாத்தியங் கொட்டுத லாகும் பருத்திநூல் பட்டுநூல் அமைத்தாடை யாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில். என்று திவாகரமும். ஓதலே யோதுவித்த லுடன்வேட்டல் வேட்பித்திடல் ஈதலே யேற்றலாறும் ஏற்குமந் தணர்தொழிற்பேர் ஓதலே வேட்டலீதல் உலகோம்பல் படைப யிற்றல் மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே படைகுடி கூழமைச்சுப் பற்றிய நட்பினோடு நெடுமதி லரசியற்கு நிகழ்த்தியவாறு பேதம்! இடையற வோதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தி னுடனிரை காத்த லேரை யுழலாறும் வசியர்க் காமே வசியர்தந் தொழில்க ளாறுள் வகுத்தமுத் தொழில்க ளான பசுவோம்பல் பொருளை யீட்டல் பயிரிடல் புராண மாதி வசைதவி ரனுகூ லம்மாம் வகைத்தொழில் சூத்திரர்க்காம் என்று சூடாமணி நிகண்டும். நால்வகுப்பார்க்கும் அவ்வாறு தொழில் கூறுதல் காண்க. 2. பரிமேலழகர் அரசர்க்கும் அறுதொழில் கூறல் அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு (384) என்னுங் குறட்கு. தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன்னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து, வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை யுடையான் அரசன் என்று தொடருரை வரைந்து, அதன் விளக்கத்தில், அவ்வறமாவது ஓதல், வேட்டல், ஈதலென்னும் பொதுத் தொழிலினும், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதலென்னுஞ் சிறப்புத் தொழிலினும், வழுவாது நிற்றல் என்று பரிமேலழகரே அரசர்க்கும் அறுதொழில் கூறியிருத்தலால், அறுதொழிலோர் என்னும் பொதுப் பெயர்க்குப் பிராமணர் என்னும் பொருளும். நூலோதுதல் அரசர்க்கும் உரியதாதலால் நூல் மறத்தல் என்பதற்கு வேத மோதாமை என்னும் பொருளும், பொருந்தாமை யுணர்க. 3. தொல்காப்பியர் அரசரொழிந்த மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறல் அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொல் பொருள் புறத். 20) என்று, தொல்காப்பியர் அந்தணர் (பிராமணர்), வணிகர், வேளாளர் என்னும் மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறியிருப்ப தால், அவர் கருத்துப்படியும் அறுதொழிலோர் என்பது அவருள் ஒரு வகுப்பாரை மட்டுஞ் சிறப்பாகச் சுட்டலாகாமை அறிக. ஆரிய முறைப்படி நூலோதலுரிமை வணிகர்க்கு முண்மையை நோக்குக. 4. அரசர்க்கு அறுதொழிலுண்மை கோக்களைக் காத்தலும் மாப்பொரு ளீட்டலும் ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தந் தொழிலே என்று வணிகர்க்கு முத்தொழில் கூறும் பிங்கலமும். ஓதல் பொருதல் உலகு புரத்தல் ஈதல் வேட்டல் படைபயிற லறுதொழில் என்று அரசர்க்கு அறுதொழில் கூறுகின்றது. வேட்டல் என்பது, ஏமாற்று வகையில் மூவேந்தரிடைப் பிற் காலத்துப் புகுத்தப்பட்ட ஆரிய வழக்கமாதலால், அதற்குப் பகரமாகத் தமிழரசர்க்குரிய தொழிலாகக் கொள்ளப்படுவது வேட்டையாடலே. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள். 259) என்று திருவள்ளுவருங் கூறியிருத்தல் காண்க. இனி, இறை (வரி) கோடல் என்பது அரசர்க்கு இன்றியமையாத தாதலின், அதையுஞ் சேர்ப்பின் எழுதொழிலுமாகும். முறை செய்தல் அல்லது தண்டஞ்செய்தல் உலகு புரத்தலுள் அடங்கும்; ஆயின், பொருதல் அடங்காது. பழவிறல் தாயத்தைக் காத்துக் கொள்வதற்கு மட்டுமன்றிப் புதுவிறல் தாயத்தை உண்டாக்கிக் கோடற்கும், போர் இன்றியமையாததென்பது பண்டைக் கொள்கை. 5. பிராமணர்க்கு அறுதொழிலின்மை தொல்காப்பியமும் எல்லா நிகண்டுகளும் பிராமணர்க்கு அறுதொழில் கூறியிருப்பினும். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்னுந் தொல்காப்பியத் தொடருக்கு, ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறு ... அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம் என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பினும், உண்மையிற் பிராமணர்க் குரியவை ஈதலொழிந்த ஐந்தொழிலே. இதை, ஓதல் முதலிய ஏனை ஐந்தொழிற்கும் சிறப்புச் செய்யுள்களை எடுத்துக்காட்டிய நச்சினார்க்கினியர். ஈதலுக்கும் ஈதற்சிறப்பிற்கும் மட்டும். இலனென்று மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள (குறள். 223) ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228) என்று பொதுச் செய்யுள்களையே எடுத்துக்காட்டியிருப் பதினின் றும், விருந்தோம்பலும் வேளாண்மையுமில்லாப் பிராமணர் இல் வாழ்க்கையினின்றும். முட்டிபுகும் பார்ப்பார் என்னும் கம்பர் பாட்டினின் றும். அறிந்துகொள்க. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி (பதிற்றுப் 24) என்பது, ஆரிய அடிமையான பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பாலைக் கௌதமன் என்னும் பிராமணப் புலவன் பாடியதாதலால். அளவைச் சான்றாகாது. வேதமோதுவித்த லையே ஈதலென்று கூறின் அது ஓதுவித்தலென்னும் ஒன்றேயன்றி வேறாகாதெனக் கூறிவிடுக்க. ஆகவே, பிராமணர்க்குரிய தொழில் ஐந்தே யென்பது தெரிதரு தேற்றமாம். அரசர்க்கு ஐந்தும் பிராமணர்க்கு ஆறுமாகத் தொல் காப்பியங் கூறுவது. உலகியற்கு மாறான இன்மை நவிற்சியே என அறிக. 6. அந்தணர் வேறு, பிராமணர் வேறு அந்தணர் என்பவர், இருதிணை யுயிர்களிடத்தும் அருள் கூர்ந்து. துறவு மேற்கொண்டு ஐம்புலனடக்கி. இனமொழி குலமத இட வேறுபாடின்றி உலகப் பொதுவாய் உள்ளந் தூயராய உயர்நிலை இறைவனடியார். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30) என்றார் திருவள்ளுவர். அந்தணரின் பிறவியல்புகளைத் திருக்குறட் பாயிர, நீத்தார் பெருமை யதிகாரத்திற் கண்டு கொள்க. பிராமணரோ, மாணவ (பிரமசரிய) நிலைக்குப் பின் இல் வாழ்க்கை (கிருகத்தம்) காடுறைவு (வானப்பிரத்தம்) என்னும் இருநிலைகளிலும் இயன்றவரை இன்பந்துய்த்து, ஐம்பொறியுந் தாமே அடங்கிய பின் துறவுக் கோலம் (சந்நியாசம்) பூண்டு. குலவெறியும் மொழி வெறியும் நீங்காது. ஆணவமும் தந்நலமும் மிக்க ஆரிய இனத்தார். இதனால், திருவள்ளுவர் குறித்த அந்தணர் வேறு; பரிமேலழகர் குறித்த பிராமணர் வேறு; என அறிந்து கொள்க. 7. நிகண்டுகள் ஆரியமுறை தழுவியன தமிழ் நிகண்டுகளெல்லாம் தமிழகத்தில் ஆரியம் வேரூன்றியபின் தோன்றி யவையாதலால், பிறவியொடு தொடர்புற்ற குலவொழுக்கம் பற்றி அவை கூறுபவையெல்லாம் ஆரியச் சார்பானவேயாகும். உரிச்சொல் என்னும் பெயர் மாறி நிகண்டு என்று பெயர் பெற்றதே இதற்குப் போதிய சான்றாம். இயற்றமிழ்ப் பொருளிலக்கணம். கல்வி காவல் வணிகம் உழவு என்னும் நாற்பெருந் தொழில்பற்றி அகப்பொருட் டலைவரை நால் வகுப்பாராக வகுத்ததே, அந்தணர். அரசர். வணிகர். வேளாளர் என்னும் தமிழ்ப் பாகுபாடாம். இல்லறத்தாரான தமிழ்ப் பார்ப்பாரும், அக்காலத்தில் அருளாளராய் அந்தணர் என்னும் பெயருக்குத் தகுதியுடையாராயிருந்தனர். கி.மு.7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர், தம் காலத்தி லேயே ஆரியம் வேரூன்றியதைக் கண்டதனால், துறவியர் போல் வீடு வாசலின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த பிராமணரையும் அந்தணராகக் கொண்டு. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல். பொருள் மர. 71) என்று கூறினாராயினும், வணிகர்க்கு வாணிகமும் வேளாளர்க்கு உழவுமே தனிச்சிறப்புத் தொழில் என்னும் உண்மையை, வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல். பொருள் மர. 79) வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி (தொல். பொருள் மர. 82) என்னும் நூற்பாக்களாற் குறித்தார். இங்ஙனமிருந்தும், நிகண்டுகள், அந்தணர் அரசர் முதலிய நால் வகுப்பான தமிழ்ப் பாகுபாட்டை, ஆரியர் (பிராமணர்), பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத் தந்நலத்திற்கேற்ப முறையே படிமுறைத் தாழ்வுற்ற நிலையான நாற்பெரும் பிறவிக் குலப் பாகுபாடாகத் திரித்து. பிராமணர்க்கு ஆரிய மறையான வேதமோது தலும் வேள்வி செய்வித்தலும், சத்திரியர்க்குப் போர் புரிதலும் வேள்வி செய்தலும், வைசியர்க்கு வாணிகமும் உழவும் செய்தலும், சூத்திரர்க்குக் கைத்தொழிலும் மேல் மூவகுப் பார்க்கும் ஏவல் செய்தலும், தனிச்சிறப்புத் தொழிலென வகுத்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றியே, ஆரியரல்லாதவரும் வேதமும் வேள்வியும் வேண்டாதவருமான தமிழ் நால்வகுப் பார்க்கும் அவ்வாறு தொழில் வகுத்துக் கூறியுள்ளமை, தமிழ் மரபிற்கும் தமிழர் உயர்வுக்கும் எள்ளளவும் ஏற்காத இழி நிலையும் கடைப்பட்ட அடிமைத்தனமுமே காட்டும். 8. ஆரியத்தை எதிர்ப்பதே திருக்குறள் நோக்கம் திருவள்ளுவர் அறம்பொருளின்பம் என்னும் முப்பால்பற்றி இயற்றியருளிய அறநூல் வையகம் முழுவதற்கும் பயன்படும் வாயுறை வாழ்த்தே யாயினும், தமிழரை ஆரிய அடிமைத்தனத் தினின்று விடுவிப்பதே அதன் அடிப்படை நோக்கமென்பது. அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (30) அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (46) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (133) மறப்பினு மோத்துக் கொளவாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (144) அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259) ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (666) பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால் உழந்து முழவே தலை. (1031) உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து. (1035) இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (1033) என்னுங் குறள்களாலும், இவை போன்ற பிறவற்றாலும் அறியப் படும். இங்ஙனம் ஆரியத்தைக் குறிப்பாகவும் வெளிப்படை யாகவுங் கண்டிப்பவரும். தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) என்று கல்வியை எல்லா மக்கட்கும் பொதுவாகக் கூறியவரும். விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (410) என்று வேதத்தைக் குறியாது வேறு விழுமிய நூல்களையே குறித்த வருமான திருவள்ளுவர். பிராமணரை ஒருபோதும் போற்றா ரெனத் தெற்றெனத் தெரிந்துகொள்க. இங்ஙனம் அவர் தமிழர்க்கு விழிப்புணர்த்தி ஈராயிரம் ஆண் டிற்கு மேலாகியும், இன்றும் அவர் கருத்தறியாது. பரிமேலழகர் உரையை மறுக்கப் பாரில் எவருள்ளார் என்று தருக்கும் தமிழ்ப் புலவரும் உளர். அவர் பேதைக் குரைத்தாலுந் தோன்றா துணர்வு என்னும் பழமொழிக் கூற்றை (93) விளக்கப் பிறந்தவரே யாவர். இனி, அறுதொழிலோர் யாரெனின், உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை கற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கருமபூமி என்னும் திவாகர நூற்பாவிற் குறித்த அறுதொழிலைக் கற்றவரே யென்க. - செந்தமிழ்ச் செல்வி - 1970 அறைப்படுத்தல் அறைப்படுத்தல் எனினும் அறைபோக்குதல் எனினும் கீழறுத்தல் எனினும் ஒன்றே. கையூட்டால் காட்டிக் கொடுக்கச் செய்தல் என்பது இவற்றின் பொருள். (குறள் 747.) அன்னம் OE Ganra, OHG ganazzo, RV ஹம்ஸ - அன்னம், எகினம் ஓதிமம் என்பனவே தென் சொற்கள். மேலையாரியச் சொற்கள் முறையே பெருவாத்தையும் அதற்கினமான ஒரு கடற்பறவையையும் குறிப்பன. அவற்றின் திரிபான ஹம்ஸ என்னும் கீழையாரியச் சொல்லே, ஓதிமத்தின் பெயராக வழங்கிவருவதாகத் தெரிகின்றது. Swan என்பது ஆங்கிலச் சொல். (தி.ம.பின்.) அனல் அனல் - அனல அன் - அன்று, அன்றுதல் = சினத்தல். அன்று - கன்று. கன்றுதல் = சினத்தல், வெயிலாற் கருகுதல். அன் - அனல் - கனல் = நெருப்பு, கனலி = கதிரவன். அனல் = தீ, வெப்பம், இடி. அனலுதல் = அழலுதல். அனலி = நெருப்பு, கதிரவன். அழல், அன்று. அனல் என்னும் சொற்களின் மூலம் அல் என்பது உய்த்துணரப்படும். அது வழக்கற்றது. அது எல் என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல். வடமொழியில் அன் என்பதை மூலமாகக் காட்டுவர். அதற்கு உயிர்த்தல், இயங்குதல் என்னும் பொருளே உண்டு. - வ.வ.81. ஆ ஆக்கம் ஆகுவது ஆக்கம். ஆகுதல் - மேன்மேல் உயர்தல். (தி.ம.55.) ஆக்கம் தருவன செல்வம், உடல்நலம், அறம், புகழ், அறிவு, நட்பு முதலியன. (குறள் 831) ஆகமம் வேதப்பிராமணர் தென்னாட்டிற்கு வந்தவுடன், மதக்கொண் முடிபு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திர மொழிகள் முதலியனபற்றிய நூல்களை அமைத்துக் கொண்டனர். அவை சிவ நெறி பற்றியவாயின் ஆகமம் என்றும் திருமால்நெறி பற்றியவாயின் ஸம்ஹிதை யென்றும், சாக்தம்பற்றியவாயின் தந்த்ரம் என்றும், பெயர் பெறும். ஆகம = வந்தது, தோன்றியது, வழிவந்த நூல். பல்வகை நூல்கள் பாணினீயம் (அஷ்டாத்யாயீ) இயற்றப் பெற்றது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டு. அர்த்த சாதிரம் சாணக்கியரால் இயற்றப் பெற்றது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. பிற்காலத் தர்ம சாதிரங்கள் மநுதர்ம சாதிரம் (கி.பி.200); யாஞ்யவல்கிய மிருதி (கி.பி.400), நாரத மிருதி (கி.பி.500). (வ.வ.) ஆகவம் - ஆஹவ (இ.வே.) அகவுதல் = அழைத்தல், போருக்கழைத்தல், அறைகூவல். அகவு - அகவம் - ஆகவம் = போர். வடவர் ஆ.ஹ்வே என்று மூலங்காட்டுவர். ஹ்வே என்பது அகவு என்பதன் திரிபு. ஆ என்பது பொருளற்ற முன்னொட்டு. (வ.வ.82.) ஆகாரச் சுட்டு முந்தியல் தமிழர் சேய்மையைக் குறித்தற்கு வாயை அகலத் திறந்த போது, அது ஆகார வொலிக்கே ஏற்றதாயிருந்ததினால், அவ் வொலியைச் சேய்மைச் சுட்டாக்கினர். சேய்மைச்சுட்டு பெயர் ஆது - அது ஆன் = அவ்விடம் அல்- அஃது - அத்து. அவ் - அவ - அவை அவன், அவள், அவர். பெயரெச்சம் ஆ - அ. ஆன் - ஆன = அந்த. ஆன் - அன் - அன்ன. அது. அந்த. வினையெச்சம் ஆங்கு - ஆங்கர் - ஞாங்கர். ஆங்கு - அங்கு - அங்கா - அங்கை. ஆங்கு - ஆங்கண் - ஆங்கன் - ஆங்கனம். ஆங்கன் - அங்கன் - அங்கனம். அங்கன் - அங்ஙன் - அங்ஙனம். ஆண்டு. அவண். அம் - அம்பு - அம்பர் = அங்கு. வினையெச்சமும் இடைச்சொல்லும் அன் - அன்று. அன் - அன்னா. அத - அதா - அதோ - அதோள் - அதோளி. அந்தா, அந்தோ. சேய்மைக் கருத்தினின்று தோன்றக்கூடிய பிற கருத்துக்கள் நீக்கம் மறைவு முதலிய ஒரு சிலவே யாதலாலும், அவையெல்லாம் ஊகாரச் சுட்டுக் கருத்துக்களுள் ஒவ்வொரு வகையில் அடங்கி விட்டமையாலும், ஆகாரச் சுட்டினின்று சேய்மை யொழிந்த வேறெக் கருத்தும் பற்றிய சொற்கள் தோன்றியில. (மு.தா.) ஆகாரச்சுட்டுக் கருத்து ஆகாரச் சுட்டு, ஒரு திசையையுஞ் சிறப்பாய்ச் சுட்டாது சேய்மையை மட்டுங் குறித்தலானும், ஒருசார சேய்மை கண்முன் தோன்றும் அண்மைக்கப்பாற் பட்டதாதலானும், சேய்மையின் தொடர்ச்சியெல்லாம் சேய்மையேயாதலானும், சேய்மைக் கருத்தினின்று வேறொரு கருத்துந் தோன்றுதற்கின்று. (மு.தா.) ஆகாரச்சுட்டு வேர்ச்சொற்கள் (1) சேய்மைச்சுட்டு (Remoteness) ஆ = அந்த (அது, அவை). ஆங்கு - அங்கு Cf. A.S. thar, E. there, Sans. tatra, ஆங்கர் > (யாங்கர்) > (நாங்கர்) > ஞாங்கர், ஆண்டு, Cf. E. yon. yond, yonder, A.S. geond, Ger. jener, that, root ya. ஆது - அது, அதா, அதோ, அதோளி, அது - அதன் (தெ.). அம்: அந்து, அந்த, அந்தா, ஒ.நோ. உம் > உந்து. அம்மை = சேய்மையிற் சென்றுவிட்ட முற்பிறப்பு. ஆ - அவ்: (அவள்), அவண், அவள் = அவ்விடம். ஆன் > அவன்; ஆம் > அவம். அவன், அவள், அவர், அவ - அவை. அல்: அல் + து = அஃது, ஒ.நோ. பல் + து = பஃது. அல் + து = அன்று. ஒ.நோ. நல் + து = நன்று. லகரவீற்றுச்சுட்டு வினாவடிகளும் உண்டு என்பதை அல ஏலா என்னும் தெலுங்குச் சொற்களாலும் அல்லி இல்லி எல்லி என்னும் கருநடச் சொற்களாலும் உணர்க. Cf. L. ille, he. Ar. al. the. ஆன் - அன் : அன்ன, அன்னா (சுட்டு); அன்ன (such) - சுட்டாச் சுட்டு. அன்ன (உவமையுருபு), அன்னது, அற்று. அனை (சுட்டு), அனை + து = அனைத்து, அனை, அனைய (உவமை.) அகம் = அவ்வுலகம், வீடு (heaven, bliss), வீடு போன்ற தங்கிடம், வீட்டை நுகரும் உள்ளம், உள்ளிடம், இடம். அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. (குறள். 247) என்னுங் குறளில், அவ்வுலகம் இவ்வுலகம் என்பன முறையே சேய்மையும் அண்மையும் பற்றி வீட்டையும் ஞாலத்தையுங் குறித்தல் காண்க . ஏசுமீட்பர் தம் மாணவரை நோக்கிப் பேரின்ப வீடு உங்கள் உள்ளத்திலிருக்கிறது என்றார். பேரின்ப வுலகிற்கும் இவ்வுலக இருப்பிடத்திற்கும் வீடு என்பது பொதுப் பெயரா யிருத்தலை நோக்குக. உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்றார் திருமூலர். அப்பால் > Gk. apo; L. ap. ab, abs, a; Sans. apa; Ger. ab; E. ab, abs, a, off, of, away. அப்போது என்னுஞ் சொல்லே அப்ப என்று திரிதலால், அப்பால் என்பது அப்ப என்று திரிவது வியப்பன்று. (2) படர்க்கைப் பெயர் : படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் சேய்மைப் பொருள்களைக் குறிப்பனவாதலின், சேய்மைச்சுட்டினின்று படர்க்கைப் பெயர்கள் தோன்றின. ஆன் - தான் (ஒருமை) = அவன், அவள், அது. ஆம் - தாம் (பன்மை) = அவர் அவை. Cf. Sans. tat; A.S. thoet; E. that; Ger. das, dasz; Gk. te; (sl.) A.S.thas; E. those (pl.) தான் என்னும் பெயரே தன் என்று குறுகிப் பின்பு ஆரிய மொழிகளில் தகரவீறாய்த் திரிந்ததென்க. ஒப்பு நோக்க : திருமான் > ஸ்ரீமத்; நுனி - நுதி - துதி. த - ச போலி. எ-டு: மாதம் - மாசம்; பித்தன் - பிச்சன். ஆங்கிலத்திலுள்ள than என்னும் ஒப்பீட்டிடைச்சொல், தன்னின் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருக்கலாம். தன்னின் = அதனின். கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி என்பதை நோக்குக. A.S. thanne; Ger. dann; E.than; from stem of The. அக்கரை என்னும் சொல் ஒரு நீர்நிலையின் மறுபக்கத்தை அல்லது எதிர்ப் பக்கத்தைக் காட்டுவது போல், அப்பால் அப்புறம் என்னும் சொற்களும் ஒரு பொருளின் மறு அல்லது பின்புறத்தைக்காட்டி, அதன்பின் காலப்பின்மை யுணர்த்தும் இடைச் சொற்களாயின. அகல் = சேய்மையிற் செல், நீங்கு, விரி. ஒ.நோ. படர் = செல், விரி. அகல் - ஆல் - ஆலம் (மரம்). (3) மிசைமைக்கருத்து : சேய்மை ஒரு வகையில் மிசைமை போலுதலாலும், மேட்டினடியில் நிற்கும்போது சேய்மை மிசைமையாயிருத்தலாலும், சேய்மைச் சுட்டில் மிசைமைக் கருத்துத் தோன்றிற்று. அண் = மேல்; அண்ணம் = மேல்வாய்; அண்ணல் = மேலானவன், அரசன்; அண்ணன் = மூத்தோன்; அண்ணாவி = ஆசிரியன்; அண்ணி = அண்ணன் மனைவி; அண்ணா = மேல் நோக்கு; அணர் = மேனோக்கிச்செல். Gk. ana, an, up; Goth, ana; E, on. (4) செலவுக்கருத்தும் பிறகருத்தும்: அல் - சேய்மைப்படு, அசை, செல், வருந்து, சுருங்கு, தங்கு, நீங்கு, முடிவடை, விரி: ஒ.நோ. ஏ - இய - இயங்கு = அசை, செல். செல்லல் = துன்பம். ஒருவர் செல்லுதவாவது சேய்மைப்படுதல்; செல்வதினால் உடம்பிற்கு அசைவும் அதனால் வருத்தமும் பிறக்கும்; செல்லச் செல்ல உடம்பு சுருங்கித்தோன்றும்; இராவானவுடன் ஓரிடத்தில் தங்கநேரும்; செல்லுதல் ஓரிடத்தினின்று நீங்குதலாகும்; நீக்கமே முடிவு; ஒரு பொருளின் விளிம்பு நீங்குவது விரிதல். அல்லாடு = அலை, வருந்து; அல்லா = வருத்தம்; அல்லல் = வருத்தம், துன்பம்; அலத்தல் = வருந்தல்; அலக்கழி = வருத்து; அலம் = துன்பம்; அலக்கண் = துன்பம்; அலம்வா = அலமா; அலமருதல் = வருந்துதல்; அலவு = வருந்து; அல் =- அலு; அலுத்தல் = அசைதல், களைத்தல்; அலு + அல் = அலுவல் = வருந்திச் செய்யும் வேலை, வேலை; அலு = அலுங்கு; அலுங்குதல் = அசைதல்; அலுக்கு = அசைப்பு, இசையசைப்பு (கமகம்). அல் = அல = அலை, அலைதல் = அசைதல், பலவிடஞ் செல்லல், வருந்துதல்; அலை = இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் நீர்த்திரை. அலைக்கழி = வருத்து. அலை - அசை. அல் - ஆல். ஆலுதல் = ஆடுதல். ஆலத்தி - ஆளத்தி = விளக்கை வட்டமிட்டு ஆட்டுதல், இசையை வட்டமிட்டு ஆட்டுதல்போல் வளர்த்தல்; ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = அசைதல், விளையாடுதல், கூத்தாடுதல். ஆடுவது ஆடை. அசைத்தல் = அசைத்து உடுத்துதல், புலித்தோலை அரைக்கசைத்து என்னுந் தேவாரத் தொடரை நோக்குக. அல் - அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = சுருங்குதல், நுட்பமாதல், கூராதல். எ-டு: அஃகிய இ உ அஃகியகன்ற அறிவென்னாம். L.acuo, to sharpen, from root ak. sharp, E. acute, L. acus, a needle, E.L. acumen, sharpness, quickness of perception. E. acme, Gk. akme - ake, a point. அல்கு - அல்குல் = சுருங்கிய இடை, இடையின் கீழ்ப்பக்கம், அல்கு - அலகு, கூரிய பல பொருள்கள் அலகுப்பெயர் பெற்றன. அவை கத்தி, பறவை மூக்கு, இலை, நெற்கதிர், நெல் முதலியன. பறவை மூக்கிற்கொத்த கன்னமும் அலகெனப்பட்டது. அலகு - அலக்கு = இலை. அலக்கு - இலக்கு - இலை; அலம் = கூரிய கலப்பைக்கொழு, கலப்பை. அல்கு - அஃகு - அஃகம் - நெல், கூலம் (தானியம்). அஃகு - அக்கு அக்கம் = கூலம், விதை, மணி. உருத்திர + அக்கம் = உருத்திராக்கம் = சிவமணி; அல் - அல்கு; அல்குதல் = தங்குதல்; அல்குநர் = தங்குபவர், வசிப்பவர்; அல் - அல்கு = தங்கும் இராக்காலம், இரா; அல் + அவன் = அல்லவன் - அலவன் = இரவில் தோன்றும் நிலா, இரவில் வெளியேறும் நண்டு. இனி குறட்டின் அலகுபோற் கௌவுகின்ற காலையுடையது நண்டு என்றுமாம். அலவு - அலகு. அல் - அறு; அறுதல் = நீங்குதல், ஒடிதல்; அறுதி = முடிவு. அர் என்னும் ஒலிக்குறிப்பினின்று தோன்றிய அறு (cut) என்னுஞ் சொல்வேறு. அல் - அலர் - மலர். சேய்மைப்படுவதால் விரிதல் உண்டாகும். ஒ.நோ. அகல் = செல், விரி; படர் = செல், விரி; ஒரு பொருள் முழுதும் ஓரிடத்தினின்று செல்லுதல் நீங்குதலாம்; அதன் மையம் நிற்க மற்றப் பகுதிகள் மட்டும் இடம் பெயர்தல் விரிதலாம். மலர் - மல்லா, மல்லாத்தல் = மலர்ந்து மேனோக்கிப்படுத்தல். மல்லா x குப்புறு; குப்புறு = குவி, கீழ்நோக்கிப்படு. அல் - அல - அலசு; அலசுதல் = அசைத்தல், அசைத்துக்கழுவுதல், அலைதல், வருந்தல், நீங்கியிருத்தல்; அலசடி = வருத்தம்; அலசு - அலசல் = இழை நீங்கியிருக்கும் ஆடை; அலவு - அலவல் = அலசல், கற்பின்மை (கட்டின்மை); அல் - அல - அலம் - அலம்பு. அலம்புதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல். அலம்பு - அலப்பு: அலப்புதல் = வாயசைத்தல், பிதற்றல். அலட்டு = அசை, வருத்து, பிதற்று. அலதி, அலக்கு - நீக்கம், வேறு. ஒ.நோ. விள் - வில் - விலு - விறு - வீறு - வேறு = விலகினது, வேறானது . அலதி - அலாதி. அலக்கு - அலாக்கு. இத்தமிழ்ச் சொற்களே இந்தியில் வழங்குகின்றன. நான் அலாதி, அவனை அலாக்காய்த் தூக்கிக்கொண்டு போய்விட்டான் என்பன உலக வழக்கு. அலவை - பிதற்றல், வாயாடிப் பெண், கற்பின்மை. (சு.வி.) ஆங்கிலராட்சி ஆங்கிலராட்சி 18ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இவ்விருப தாம் நூற்றாண்டிடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களி லும், பெருஞ்சாலைகளிலும், பொதுவிடங்களிலும், புகை வண்டிகளிலும், மின்வண்டிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும், வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிற்று. எல்லாத் துறையிலும், பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வியின்றி, உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் அறவே அகற்றுவதுமான, அறிவியற்கல்வி புகட்டப்பட்டது. கல்வித் திறமை மிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமையின்றிப் படிப்புதவி (Scholar-ship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த, இலங்கை காழகம் (பர்மா) மலையா தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கிலவரசு மதத்துறையில் தலையிடவேயில்லை. குல மத கட்சியின வேறு பாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும், ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது. இதனால், ஆங்கிலராட்சி நேர்மையையும் புதுச்சேரி காரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி, பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும். என்று பழமொழியாக வழங்குமாறு, பொதுமக்கள் புகழ்ந்து பாராட்டினர். குமுகாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருந்த, உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (Hook-swinging), குழந்தை மணம், நரக் காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்க வழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலிய கொடிய கயவர் கூட்டங்களும்; அறவே ஒழிக்கப்பட்டன. அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச்செல்லும் இருப்புப் பாதைகளும் , அழகிய மாட மாளிகைகளும் மலைநகர் களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர் காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படை யமைப்பும், ஏற்பட்டன. எல்லாத் திணைக்களங்களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பெற்றனர். இந்தியா முழுதும் ஒன்றுபட்டு நாளடைவில் தன்னாட்சி பெறுமாறு, இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (hume) என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1885-இல் தோற்றுவிக்கப் பெற்றது. அதன் பயனாக, பேராயத் தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டுமன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்து வந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்த பருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு, அமைதியாய் அகன்றனர். அதனாற் பிரெஞ்சியரும் போர்த்துக் கீசியரும் சற்றுப் பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது. ஆங்கிலருக்கும் பிராமணருக்கும் வேற்றுமை ஆங்கிலர் பிராமணர் (1) வாணிகத்திற்கு வேண்டும் கையுங் காலுமாக வந்தனர். பொருளொடும், பாது காப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக் கேற்ற அறிவொடும், வந்தனர். (2) வெண்ணிறமாயிருந்தும், வெண்ணிறம் பொன்னிறமாயும் தம்மை மக்களென்றே செந்நிறமாயும் கருநிறமாயும் கூறினர். மாறிய பின்னும், தாம் நிலத்தேவ ரென்றே கூறி யேமாற்றினர். (3) தம்மொழி மக்கள் ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா மொழி யென்பதை யிருந்தும், தம் முன்னோர் மறைக்கவே யில்லை. மொழியையும் இந்தியாவிற் புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியையும் (literary dialact), இன்றும் தேவ மொழி யென்றே துணிச்சலுடன் சொல்கின்றனர். (4) தாழ்த்தப்பட்ட தமிழருள் தலைமையானவ தமிழருட் கடைப்பட்ட ராகக் கருதப்படும் பறையரைத் தம் சமையற் மரக்கறிவெள்ளாளர், காரராக்கி,அவர்ஆக்கிய பொற்கலத்திற் கொடுக்கும் தையும் படைத்ததையும் தண்ணீரும் குடிக்கத் பிராமணரும் விரும்பி தகாததுபோல் நடிக்கின்றனர். யுண்ணும்படி செய்தனர். (5) அகக் கரண வாற்றலை தமிழரை அடிமடையராக்கி, வளர்க்கும் உண்மையான அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் அறிவியலைக் தொல்கதைக் கல்வியைப் கற்பித்தனர். புகட்டினர். (6) தமிழ் ஆரியத்திற்கும் தமிழ் சமற்கிருதக் கிளை சித்தியத்திற்கும் முந்திய யென்றும் பன்மொழிக்கலவை தென்றும், மக்கள் முதன் யென்றும் காட்டியுள்ளனர். மொழிக்கு நெருங்கிய (சென்னைப் ப.க.க. தமிழ் தென்றும், கூறினர். அகர முதலி). (கால்டுவெல்). (7) குலம் தொழில் பற்றிய குலம் பிறவிபற்றியதென்றும் தென்றும் மக்கள் இறைவன் படைப்பென்றும், படைப்பென்றும் அதை இறைவனே சொன்னா கூறுகின்றனர். னென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை). (8) ஆங்கிலத்திலுள்ள அயற் வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களையெல்லாம் சொற்களெல்லாம் வட தாமே தெரிவிக்கின்றனர். சொல்லே யென்று வலிக்கின்றனர். (9) கிறித்துவ மதம் உரோம சிவனியமும் மாயோனியமும் நாட்டினின்று வந்து முழுத்தூய தமிழ மதங்களா இலத்தீன் வாயிலாகப் யிருந்தும், தமிழர் கோவில் புகுத்தப்பட்டும், தம் வழிபாட்டையும் சடங்குகளையும் தாய்மொழியில் வழி அவர்க்குத் தெரியாத வட பாட்டை நடத்து மொழியிலேயே ஆற்றி கின்றனர். வருகின்றனர். (10) ஆட்சியினாலும் கல்வி ஒரே பேரினத்தைப் பல யினாலும் இந்தியா முழு சிற்றினமாகவும், ஒவ்வொரு வதையும் ஒற்றுமைப் சிற்றினத்தையும் பற்பல படுத்தினர். அகமணப் பிறவிக் குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித்தாட்சி முறையைப் பிராமணரைப் போற்கையாண்டவர், இவ் வுலகத்தில் வேறெவருமில்லை. (11) தமிழ் தூய்மையாகப் நூற்றிற்கு நூறும் வடசொற் பேசப்படுவதையே கலந்து பேசப்படுவதையே விரும்புவர். விரும்புவர். (12) தம் திருமறை இறை ஐம்பூதச் சிறுதெய்வ வழுத்துக் வனால் ஏவப்பெற்ற களும் ஆரிய வரலாற்றுத் முற்காணியரால் (தீர்க்க துணுக்குகளுமான வேத தரிசிகளால்) எழுதப் மந்திரங்கள், இறைவனாலும் பட்டதென்பர். இயற்றப்படவில்லை யென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும், பிதற்றுவர். (13) தாம் கண்டவற்றையும் அயலார் நாகரிகத்தையும் செய்தவற்றையுமே தம் இலக்கியத்தையும் தமவென்றே செயலாகக் கூறுவர். கூசாது பறையறைவர். (14) தம் வளமனைக்குள் தம் இல்லத்திற்குள் பிராமணர் நல்லார் எவரையும் அல்லார் புகின் தீட்டெனக் தாராளமாகப் புகவிடுவர் கருதுவர். (15) தமக்கு உதவிய மொழி தமக்கு வாழ்வளித்த தமிழையும் களையும் அயலாரையும் தமிழரையும், இழிந்தோர் மொழி நன்றியறிவோடு புகழ்வர். (நீச பாஷை) யென்றும், சூத்திரர் என்றும், பழிப்பர். (16) தமிழ் நூல்களை பழந்தமிழ் நூல்களையும் அச்சிடின், உள்ளபடியே பாடல்களையும் அச்சிடும்போது, அச்சிடுவர். தம் குல மேம்பாட்டிற் கேற்றவாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர். (17) பிரித்தானியம் உடலை பிராமணியம் ஆதனையும் மட்டும் தாக்கி, ஆங்கில (ஆன்மாவையும்) அகக்கரணங் னுடன் நீங்கிவிட்டது. களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது. பிராமணர் தென்னாடு வந்து மூவாயிரம் ஆண்டாகியும், இன்னும் தமிழருடன் உறவாடாவிடினும் உடனுண்ணாவிடினும், ஒரு தெருவிற் குடியிருப்பதைக் கூட விரும்புவதில்லை. (தமிழர் வ.) ஆட்சிமுறை அரசவொளி: பண்டைத் தமிழாட்சியில், அரசனே நாட்டிற்குத் தனி நாயகமாயிருந்தான். பெரும்பாலும், அவன் இட்டது சட்டமும் வைத்தது வரிசையுமாயிருந்தது. முழு நிறைவான தலைமையும் உடன் கொல்லும் அதிகாரமும் அவனுக்கிருந்த தால், அவன் குடிகள் யாவராலும் கண் கண்ட தெய்வமாகவே கருதப்பட்டான். ‘âUth¡»‰F vâ®th¡F©nlh?, அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்னும் பழமொழிகள் அரசனுக்கிருந்த அதிகார வலியை யுணர்த்தும். அரசனுக் கின்றியமையாதவரும் அவனுக் கடுத்த படியாய் அதிகார முடையவருமான அமைச்சர் படைத் தலைவரும், அவனை மிக அணுகாது தீக்காய்வார்போல் ஒதுங்கி யொழுகினர். அவன் முன்னிலையில், பிறரொடு பேசாமையும் நகாமையும் சாடை காட்டாமையும், அவனைச் சுட்டாமையும், அவன் பிறரொடு மெல்லப் பேசுவதை உற்றுக் கேளாமையும், அவனொடு பயில்வார் போற்றிக் காக்கவேண்டிய ஒழுக்க நெறிகளாகும். அரசனிடத்தில் ஒன்றைக் கூறுவோர் அவனை வாழ்த்தியே கூறுவதும். அவனைக் காணும்போதும் அவனைவிட்டுப் பிரியும்போதும் பெருமக்கள் தலை வணங்கியும் பொதுமக்கள் நிலத்தில் விழுந்தும் கும்பிடுவதும் வழக்கம். அரசவுடைமைகள் தெய்வவுடைமைகள் போல் திருவென்னும் அடைமொழி பெற்ற பெயராலும், அரசவினைகள் தெய்வ வினைகள் போல் அருள் என்னும் துணைவினை கொண்ட வினைச்சொல்லாலும், குறிக்கப்பட்டன. அரசன் அமைச்சரொடும் படைத்தலைவரொடும் சூழ்ந்து வினை செய்வது வழக்கமாயிருந்ததேனும். அவன் விரும்பியதை நிறை வேற்றற்கு எதுவுந் தடையாயிருந்ததில்லை. தலைமை அமைச்ச னுக்கும் படைத் தலைவனுக்குங்கூட, அரசனால் வினவப்பட்ட காரியத்தைப்பற்றி அவர் தம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையே யன்றி, அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்திலது. மேலும் அமைச்சர் படைத்தலைவரொடு சூழ்ந்தே எதுவுஞ் செய்ய வேண்டும் என்னும் யாப்புறவும் அரசனுக்கிருந்த தில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்வித் ததும், புதையலுரிமை எடுத்தவர்க்கே என்று பறை சாற்றுவித் ததும், இதற்குச் சான்றுகளாம். அரசன் செயல் - அரசன் தன் துணையதிகாரிகளும் புலவருங் கூடிய அவையுடன் அரியணையில் வீற்றிருத்தல், அரசு வீற் றிருக்கை என்றும் மகிழிருக்கை என்றும் ஒலக்கமிருக்கை என்றும் கொலு விருக்கை என்றும் கூறப்படும். அது பெரும் பாலும் காலையில் தொடங்குமாதலால், அதை நாளவை நாண் மகிழுருக்கை நாளோலக்கம் எனக் கூறுவதுண்டு. அரசன் அரசு வீற்றிருக்கும் மண்டபம், வேத்தியன் மண்டபம், ஓலக்கமண்ட பம், கொலு மண்டபம், அத்தாணி மண்டபம், சபாமண்டபம் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். அம் மண்டபத் திற்குச் சிறப்புப் பெயரிடுவதுமுண்டு. சடாவர்மன் குலசேகர பாண்டியனின் ஓலக்கமண்டபம் புகழாபரணம் எனப் பெயர் பெற்றிருந்தது. அரசன் ஒவ்வொரு காரியத்தையும் அதற்குரிய சிறப்புக் குழுவுடன் அல்லது அதிகாரியுடன் கலந்து எண்ணுவானாயினும், அனைத்துக் காரியங்களையும் தலைமையமைச்சனோடு கூடிச் சூழ்ந்த பின்னரே ஒரு முடிவிற்கு வருவன். அரசிருக்கையிலும் சூழ்வினையிலும் அரசியும் உடனிருப்பது வழக்கம். அரசன் எக்காரியத்தைச் செய்தாலும், கணியன் குறித்த நன்னாளிலும் மங்கல வேளையிலுமே செய்வன். ஊர்ச்சபையார், நாட்டதிகாரிகள், கோயிற் கண்காணிப்பாளர், பொதுமக்கள் முதலியவருள், தனிப்பட்டவரோ ஒரு குழுவாரோ ஒரு காரியத்திற்கு அரசனுடைய ஒப்பத்தையேனும் தீர்ப்பை யேனும் பெறவேண்டி அவனிடம் வரின், அவர் தாமே நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது அரசனுக்கு அதைத் தெரிவிப்பர். அரசனுக்கு மிக வேண்டியவராயிருந்தா லொழிய நேரில் தெரிவிக்க முடியாது. அரசன் அக்காரியத்தை அதற்குரியவருடனெல்லாம் சூழ்ந்து. தன் கட்டளையை நேரி லாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாக வாவது பிறப்பிப்பன். அரசனுடைய ஆணைகளை ஓலையி லெழுதும்போதும் பின்னர் அவற்றுள் முக்கியமானவற்றைக் கல்லில் வெட்டும்போதும், அவை பிறந்த இடத்தையும் அமயத்தையும் பின்வருமாறு குறிப்பது வழக்கம். கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலுள்ளால், திரு மஞ்சன சாலையி லெழுந்தருளியிருந்து உதகம் பண்ணி யருளா நிற்க. ஸ்ரீ ராஜராஜ தேவர் தஞ்சாவூர்ப் பெரிய செண்டு வாயிற் சித்திர கூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி. காஞ்சீபுரத்துக் கோயிலுள்ளால் அட்டத்து வெள்மேலை மண்டபம் ராஜேந்திர சோழனில் சொட்டையில் எழுந்தருளி யிருந்து. புரசை நாட்டுச் சிவபுரத்துப் பகலிருக்கையில் திருவமுது செய்தருளா விருந்து. (சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக்.49). வேற்றரசரும் மாற்றரசரும் விடுத்த தூதர், வாயிற் காவலன் வாயிலாய் அரசனுக்குத் தம் வரவைத் தெரிவித்து, உத்தரவு பெற்றபின் ஓலக்க மண்டபம் புகுந்து, தம் அரசர் திருமுகத்தை நீட்டி, அது பற்றிய வினாக்கட்கெல்லாம் அஞ்சாது விடை கூறுவர். அரசன் தன் அவையுடன் நன்றாக ஆய்ந்து அதற்குத் தக்க விடை விடுப்பன். அவ்வவ்வரசர் தரத்திற்கும் நட்பளவிற்கும் தக்கபடி, அவர் விடுத்த தூதரைச் சில பல நாட்கள் அரசன் காக்க வைப்பது முண்டு. தலைநகரிலிருந்த அறங்கூறவையத்தில், பொது வகையான வழக்குக்களையெல்லாம் அவையத்தாரே தீர்ப்பர். எங்குல வணிக ரேறே யெம்மனோர் வழக்கை யிந்தப் புங்கவ ரிடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி யார்த்தார் நரைமுது புலியன் னான்சொற் கேட்டலும் நடுங்கிச் சான்றோர், இருவர் சொல்வழக்கு மேற்கொண் டனுவதித் திரண்டு நோக்கி அனையது கேட்ட வான்றோ ரனைவரும் நோக்கி யந்தத் தனபதி வணிகர் தாமே யிவரெனச் சாற்ற லோடும் மனவலித் தாயத் தார்தம் வழக்கிழுக் கடைந்த தீது நனைவழி வேம்பன் தேரிற் றண்டிக்கு நம்மை பென்னா (மாமனாகவந்து வழக்குரைத்த படலம். 28,30,33.) என்று பரஞ்சோதிமுனிவர், தனபதிச் செட்டியார் வழக்கை மதுரை யறங்கூறவையத்தாரே தீர்த்ததாகக் கூறியிருத்தல் காண்க. சிறப்பானதும் அரசனொடு தொடர் புற்றதுமான வழக்காயின். அரசனே மன்றத்திருந்து தீர்ப்பன். சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். மலையமான் திருமுடிக்காரி மக்களைப் பற்றிய செய்தியை. உறந்தை மன்றத்திலிருந்து ஆய்ந்தமை காண்க. ஈரூரார்க்கும், இருகுலத்தார்க்கும், இரு மதத்தார்க்கும், இரு கோயிலார்க்கும், ஈரதிகாரிகட்கும், இரு சிற்றரசர்க்கும் இடைப் பட்ட வழக்காயின்; அவ்வழக்காளிகள் தலைநகர்க்கு வந்த விடத்து அரசனே தீர்த்துவைப்பதும், அவர் வராது அரசனுக்கறி வித்த (அல்லது அவனிடம் முறையிட்ட) விடத்து அதைத் தீர்க்கும் படி அவன் ஓர் அதிகாரியை அனுப்புவதும் வழக்கம். வன்கொலை யும் முறைகேடான கொலைத் தண்டமும் நிகழ்ந்த விடத்துக் கொலையுண்டாரின் ஆருயிர்க் கேளிர் அரசனிடம் முறையிடு தல் பொருட்டுச் சோழர் அரண்மனைப் புறவாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. பாண்டி நாட்டில் அஃதில்லையா யினும், பாண்டியர் காட்சிக் கெளியராயிருந்து அத்தகைய முறை யீடுகளைக் கேட்டு முறை வழங்கி வந்தனர் என்பது, கண்ணகி முறையீட்டா லறியப்படும். இனி, கடினமான வழக்கின் உண்மை காண்டற்கு இறைவன் திருமுன் பாடுகிடப்பதும் மாறுகோலம் பூண்டு சென்று பொதுமக்கள் கூற்றைக் கவனிப்பதும், பாண்டியர் வழக்கம். அரசன் தன் நாட்டு நிலைமையைப் பற்றி அமைச்சர் வாயி லாகவும், பிறர் நாட்டு நிலைமையைப் பற்றித் தூதர் வாயிலாகவும், இரண்டையும் பற்றி ஒற்றர் வாயிலாகவும், அடிக்கடி அறிந்து வருவன். ஒற்றருள் ஒருவன் கூற்றை அவனறியாது இன்னொருவன் கூற்றொடு ஒப்புநோக்கி, மூவர் கூற்று ஒத்தவிடத்தே அதை அரசன் நம்புவான். தன் நாட்டு நிலைமையையும் தன் நகர நிலைமையையும் தானே அறிவான்வேண்டி, இடையிடை நாடுகாவற் சுற்றுப்போக்குச் செல்வதும், மாறுகோலம் பூண்டு நகர நோட்டஞ் செய்வதும் அரசன் வழக்கம். விக்கிரமச் சோழன் 1122 இல் குடந்தைக்கரு கிலுள்ள பழையாறையிலும், 1123 இல் செங்கற்பட்டு மாவட்டத் தைச் சேர்ந்த குளிவளநல்லூரில் ஒரு குளக்கரை மண்டபத்திலும், 1124 இல் தென்னார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்னும் காட்டு மன்னார் கோயிலில் உள்ள அரண்மனையிலும், 1130 இல் தில்லைக் கருகில் ஓர் அரண்மனையிலும், இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுவதால், அவன் அடிக்கடி நாடுகாவற் சுற்றுப் போக்குச் சென்றமை அறியப்படும், மதுரையில் கொற்கைப்பாண்டியன் மாறுகோலம் பூண்டு நகர நோட்டம் செய்து, கீரந்தை ஊரிலில்லாதபோது அவன் வீட்டிற்குக் காவலாயிருந்து வந்தது நூற்புகழ்பெற்ற செய்தியாகும். அரசன் தன் நாடுகாவற் சுற்றுப்போக்கில், ஆங்காங்குள்ள அதிகாரிகள் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகின்றார் களாவெனக் கவனிப்பதும், ஊர்ச் சபையாரும் அறங்கூறவையத் தாரும் தீர்க்கமுடியாத வழக்குக்களைத் தீர்த்துவைப்பதும், குற்றஞ்செய்தவரைத் தண்டிப்பதும், தக்கார்க்குத் தானஞ்செய் வதும், குடிகள் முறையீடுகளைக் கேட்டு அவர்கள் குறைகளை நீக்குவதும், சீர்திருத்தமும் மக்கள் நலமும் பற்றிய ஆணைகளைப் பிறப்பிப்பதும், வழக்கம். இயற்கையாகவும் செயற்கையாகவும் நாட்டிற்குப் பெருந்துன்பம் நேர்ந்த காலங்களில், அரசன் அத்துன்பங்களை இயன்றவரை நீக்குவதும், அத்துன்ப நீக்கத்திற்காகத் தொண்டு செய்தவர்க்கு மானியம் அளிப்பதும் உண்டு, வெள்ளக்காலத்தில் கரைகட்டி உடைப்படைப்பதும், அழிந்த நிலத்தை மீள அளந்து அவ்வாண்டு இறைநீக்கிக் கொடுப்பதும், பஞ்சகாலத்தில் வரி நீக்கிப் பழநெல் விற்பதும், புயற்காலத்தில் இடிந்த கோயில்களைப் பின்னர்க் கட்டுவதும், கலகங்களைப் படைகொண்டு அடக்குவதும், கொள்ளை நோய்க் காலத்தில் (தெய்வகோபந் தணித்தற் பொருட்டுப்) பலியிட்டு விழவெடுப்பதும், காட்டு விலங்குகள் நாட்டில் வந்து சேதஞ்செய்யின் அவற்றை வேட்டையாடிக் கொல்வதும், கடல்கோள் நேர்ந்தவிடத்துப் பிறநாட்டுப் பகுதி களை வென்று அவற்றில் தன் குடிகளைக் குடியேற்றுவதும், துன்ப நீக்கச் செயல்களாம். சிற்றரசர் செயல்: சிற்றரச நாடுகட்கெல்லாம் தன்னாட்சி (Self Government) அளிக்கப்பட்டிருந்தது. திறையளத்தல் அல்லது படையுதவிப் போராற்றல் சிற்றரசர் செயலாம். அரசன் வலிகுன்றியபோது, அன்பற்றவரும் அதிகார விருப்பினரு மான சிற்றரசர், அரசனுக்கடங்காது தனியரசாகிவிடுவதும் அவனுடைய பகையரசரொடு தொடர்பு கொள்வதும் உண்டு. அத்தகைய சமையங்களில் அன்பும் உண்மையும் அடக்கமுமுள்ள சிற்றரசர் ஒன்று சேர்ந்து, அடங்காச் சிற்றரசர்க்கு மாறாகத் தமக்குள் ஒப்பந்தஞ் செய்துகொள்வது முண்டு. அது நிலைமைத் தீட்டு எனப்படும். 3 ஆம் குலோத்துங்கச் சோழனின் 27 ஆம் ஆண்டில், கீழ்க்குறித்த சிற்றரசர் பதின்மரும், அரசன் சார்பாகவும் அவனுக்கடங்காத சிற்றரசர்க்கு மாறாகவும் தம்முள் ஒப்பந்தஞ் செய்து கொண்டனர். (1) பாண்டிநாடு கொண்டானான சம்புவராயன். (2) செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலிச் சோழ சம்புவராயன். (3) கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன். (4) கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜ கம்பீரச் சேதிராயன். (5) குந்தன் நம்பூரலான இராஜராஜ நீலகங்கரையன். (6) அம்மையப்பன் மருதனான இராஜராஜ மூவேந்தரையன். (7) பாவந்தீர்த்தானான இராஜேந்திர சோழச் சம்புவராயன். (8) நரசிங்க வன்மனான கரிகால்சோழ ஆடையூர் நாடாழ்வான். (9) சோமன் திருவண்ணாமலையுடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன். (10) சோமன் வரந்தருவானான சோளேந்திர சிங்கப்பிருதி கங்கன். (மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (இராமச் சந்திர தீட்சிதர்) பக்.87-88). நாட்டதிகாரிகள் செயல்: நாட்டதிகாரிகள் தம் நாட்டைச் சுற்றிப்பார்த்து, அதிலுள்ள ஊர்ச்சபையார் கோயில் கண்காணிப் பாளர் அறநிலையப் பாதுகாப்பாளர் முதலியோர் தத்தங் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனராவெனக் கவனிப்பதும், ஊர்க்கணக்கு கோயிற்கணக்கு அறநிலையக் கணக்கு முதலியவற்றைத் தணிக்கையிடுவதும், குற்றங்கண்ட விடத்துத் தண்டிப்பதும், ஆங்காங்குள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், அரசாணைகளை நிறைவேற்றுவதும், ஊர்ச்சபைத் தேர்தலை நடத்திவைப்பதும், செய்வர். சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் கண்காணிப்பிலும் பேரூரான நகர்கள் அரசனது நேரடியான கண்காணிப்பிலும், இருந்ததாகத் தெரிகின்றது. ஊர்ச்சபையார், தம் குற்றத்தை மறைத்தற்பொருட்டும் தம்மேற் குற்றத்தை ஏற்றாமைப்பொருட்டும், தம்மைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிகட்கும் தம்மை வினவவரும் வேறதிகாரிகட்கும் கை யூட்டும் கொடுப்பதுண்டென்பது; சடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில், ஓர் ஊர்ச்சபையார், வாரப்பற்றிலிருந்தும், கடமைப் பற்றிலிருந்தும் வரும் வாரத்தையும் கடமையையும், சுந்தரபாண்டி யனுடைய அதிகாரிகளின் நட்பைப் பெறச் செலவிட்டதி லிருந்து அறியக்கிடக்கின்றது. (Pandyan Kingdom p. 218-9). ஊர்ச்சபையார் செயல் : ஊர்ச்சபையாருள், ஒவ்வொரு வாரியத் தாரும் தத்தம் கடமையை ஆற்றிவந்தனர். அவருள் ஊர் வாரியத் தினர்க்கு, உரிமை (Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இருவகை வழக்கையுந் தீர்க்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், முழு அதிகாரமிருந்தது. அவரால் தீர்க்கமுடியாத வழக்கும், அவர் தீர்த்த வழக்கின் மேன் முறையீடும் (Appeal) அரசனிடம் கொண்டு போகப்பட்டன. ஒரே வாரியத்திற்குரிய செய்தியை அவ்வவ்வாரியத்தாரும், பல வாரியங்கட்குரிய செய்தியை எல்லா வாரியத்தாரும், கூடிச் சூழ்ந்து முடிவுசெய்தனர். ஊர்ச்சபைக் கூட்டங்கள் காளமூதியும் பறைசாற்றியும் கூட்டப்பட்டன. கூட்டங் கூடுவதற்கு ஊர் மண்டபம் அல்லது மாளிகை இருந்தது. அஃதில்லா விடத்துக் கோயில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அவ்வப்போது வரும் அரசாணைகளைத் தலைமேற்கொண்டு அவற்றை நிறைவேற்றிவைப்பதும்; அவற்றுள் முக்கியமான வற்றையும் ஊராட்சியில் தாம் செய்துள்ள புதுமையான ஏற்பாடு களையும், கல்லில் வெட்டுவித்துச் சபை மண்டபத்திலாவது கோயில் மண்டபத்திலாவது பதிப்பிப்பதும்; ஊர்ச்சபையார் கடமையாகும். ஊர்க் குடியிருப்பையும், வெள்ளாண்மையையும் இரவிற் காவல் செய்வது பாடிகாவலன் வேலை. ஊரவையாரின் ஊராட்சி, ஊராண்மையென்றும் ஊரமை யென்றும் கூறப்படும். சிற்றூர்த் தலைவன் செயல்: ஆள்நிலப் பிரிவான ஒரு கூட்டூரின் பகுதியாய். ஒரே குலத்தார் அல்லது ஒரு குலத்தார் பெரும்பான் மையராக இருக்கும் சிற்றூரில், அவ்வக்குலத்திற்கும் இடத்திற்கு மேற்ப, அம்பலகாரன், ஊராளி, கவுண்டன், கிழவன், குடும்பன், சேர்வை (சேர்வைகாரன்) தலைமகன், தலைவன், நாடன் (நாடான், நாடாள்வி), நாட்டான், நாட்டம்பலம், நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், பட்டங்கட்டி, பட்டத்துப்பிள்ளை, பண்ணாடி, பெரியதனக்காரன், மணியக்காரன், மன்றாடி (மண்ணாடி) மந்திரி. மூப்பன் முதலிய பெயர்களுள் ஒன்றைப் பூண்டு. ஊராரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தந்தையினின்று மகனுக்கு வரும் வழிமுறை யுரிமைப்படி ஊர்த்தலைவனாயிருப்பவன், தன் ஊர் வழக்குக்களில் கொலையொழிந்த பிறவற்றையெல்லாம் தானே தீர்த்துவந்ததாகத் தெரிகின்றது. (Hindu Administrative Institutions in South India. p.262). சிற்றூரிலிருந்து அரசனுக்கு வரவேண்டிய வரிகளெல்லாம் ஒழுங்காய் வந்து, ஊரார் ஊர்த்தலைவனோடு முற்றும் ஒத்துப் போய்க் காரியங்கள் அமைதியாய் நடந்து வந்ததினால், அரசனும் நாட்டதிகாரியும் கூட்டூர்ச்சபையாரும் சிற்றூர் வழக்குத் தீர்ப்பில் பெரும்பாலும் தலையிடவில்லை. கூட்டூரைச் சேர்ந்த எல்லாவூர் கட்கும் பொதுவான செய்திகளையும், சிற்றூர்ச் செய்திகளில் ஊர்த்தலைவன் அதிகாரத்திற்கு மேற்பட்டவற்றையுமே, ஊர்ச் சபையார் கவனித்து வந்ததாகத் தெரிகின்றது. உத்தமச்சோழன் காலத்தில், தொண்டை நாட்டைச் சேர்ந்த சிற்றியாற்றூரில் பிரமதேயமாகக் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றிய அரச ஆணை யோலையில், அடிகள் நக்கன் என்னும் பல்வத்திரி கிழவன் (பவ்வத்திரி யூர்த்தலைவன்) உடன் கூட்டத்ததி காரிகளுடன் சேர்ந்து கையெழுத்திட்டதாலும், ஊர்த்தலைவனு டைய ஊழியத்திற்காக அம்பலமானியம் என்னும் இறையிலி நிலம் விடப்பட்டிருந்ததினாலும், சிற்றூர்த் தலைவன் பதவி அரசனால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்ததை அறியலாம். சிற்றூர்த் தலைவனுக்கு ஊராட்சியில் உதவுவதற்கு, சிலவூர்களில், துணைத்தலைவனொருவனும் கருமமாற்றுவோனொருவனும் சேவகனொருவனுமாக மூவர் இருந்தனர். ஒவ்வோர் ஊர்க்கும், நீர்ப்பாய்ச்சி யொருவனும் குடிக்காவல் என்னும் ஊர்காவலன் ஒருவனும் இருந்தனர். ஊர்வழக்குக்களைத் தீர்ப்பதற்கும் ஊரில் சட்டதிட்டங்களை ஏற்படுத்தற்கும் ஊர்த்தலைவன் கூட்டும் கூட்டம், ஊர்மண்ட பத்திலாவது, ஒரு மரத்தடியிலாவது, வெள்ளிடையிலாவது நடைபெறும். ஆவணக்களரியார் செயல்: ஆள்நில ஊர்தொறும் ஆவணக் களரியிருந்தது. ஒரு நிலத்தை விற்பவனும் கொள்பவனும், அல்லது அடைமானம் வைப்பவனும் வாங்குபவனும், அல்லது குத்தகைக்கு விடுபவனும் எடுப்பவனும், தம்முள் இசைந்து எழுதிய ஆவணத்தை ஆவணக்களரிக்கெடுத்துக் கொண்டு போய், களரியார் முன் தாம் இருவரும் இசைந்து கொண்டதாக உறுதிமொழி கூறியபின் ஆவணம் களரியாரால் காப்பிடப் பெறும். காப்பிடுதல் என்பது அரசு முத்திரையிட்டுப் பதிவுசெய்தல். ஆவணத்திற்கு, ஏடு, ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை, தீட்டு, நறுக்கு, பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும், அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கின. ஆயினும், அவற்றையெல்லாம் தழுவுவதும், அதிகார எழுத்துச் சான்றைச் சிறப்பாகக் குறிப்பதும், ஆவணம் என்னும் சொல்லே பத்திரம் பிரமாணம் என்னும் வடசொல் வழக்கு பிற்காலத்த தாகும். ஓலை சீட்டு நறுக்கு முறி என்னும் சொற்கள் பனையோலையில் எழுதப் பட்டவற்றையும், பட்டிகை பட்டம் என்பன செப்பேட்டில் எழுதப்பட்டவற்றையும், பிற இரண்டையும், குறிக்கும். நிலவிற்பனை யாவணத்திற்கு விலையாவணம், விலையோலை, விலைத் தீட்டு என்னும் பெயர்களும்: ஆள்விற்பனை யாவணத்திற்கு ஆள்விலைத்தீட்டு, ஆள்விலைப்பிரமாண இசைவுத்தீட்டு, அடிமையோலை என்னும் பெயர்களும்; வழங்கின. அடைமான ஆவணம், ஒற்றிக்கலம் ஒற்றிக்கரணம் ஒற்றிநறுக்கு அடையோலை என்றும்; அடைமானம் வாங்குபவன் எழுதிக்கொடுத்த ஓலை, எதிரடையோலை யென்றும்; பெயர் பெற்றிருந்தன. நுகர்ச்சியோடு கூடிய ஒற்றிக்கு இறங்கொற்றி அல்லது அடைப்பு (Usufructuary mortgage) என்றும் நிலையான ஒற்றிக்கு உறாவொற்றி (Irredeemable mortgage) என்றும் பெயர். தீட்டுக்காரனால் (Notary) எழுதப்படாத அல்லது பதிவு செய்யப்படாத ஒற்றிக்கலம் கையொற்றி எனப்பட்டது. குத்தகைத் தவணை முடிந்தவுடன் அதன் தீர்வுபற்றி எழுதப்படுவதற்கு அறுதிமுறி (Cancelled lease-deed) என்றும், ஒரு பொருளின் உரிமை குறிப்பிட்ட ஒருவர்க் கன்றிப் பிறருக்கில்லையென்று குறிக்கும் எழுத்தீட்டிற்கு விடுதீட்டு அல்லது தீர்வுமுறி (Release-deed) என்றும், பெயர். ஒருவர் ஒன்றற் குடம்பட்டு எழுதித்தரும் சீட்டு, இசைவுத் தீட்டு இசையோலை ஒப்புமுறி என்னுஞ் சொற்களுள் ஒன்றாற் குறிக்கப்பெற்றது. ஒருவர் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக எழுதித்தரும், சீட்டிற்குப் பற்றுமுறி (Receipt) என்று பெயர். நிலவாரச் சாகுபடி யாவணம் (Deed of lease for cultivation) காணிப் பிடிபாடு எனப்பட்டது. விலையாவணம் ஒழிந்த பிறவற்றுள் பெரும்பாலன, இன்றியமை யாது ஆவணக்களரியிற் பதிவுசெய்யப்பட வேண்டுந் திறத்தனவல்ல. பொதுவகையான ஆவணங்கள் ஓலையிலும், சிறப்பானவை செப்பேட்டிலும், எழுதப்பெறும். ஊராருக்குத் தெரியவேண்டிய ஆவணமாயின், கல்லில் வெட்டப்பெறும். அறங்கூறவையத்தார் செயல் : நகரங்களிலிருந்த அறமன்றத்தார், வழக்காளி (plaintiff) எதிர் வழக்காளி (Defendant) ஆகிய இருவரின் சொல்லையும் பலமுறை கேட்டு, கரியும் (witness) சான்றும் (Evidence) இருப்பின் அவற்றைக் கொண்டும், அவையில்லாவிடின் நூலுத்தி பட்டறிவு (கருதியுக்தியனுபவம்) கொண்டும், நடுநிலை மையாய்த் தீர்த்து முறைசெய்து வந்தனர். இருவர்தம் சொல்லையும் எழுதரங் கேட்டே என்று அதிவீரராம பாண்டியனும். இருவர் சொல்வழக்கு நோக்கி யனுவதித் திரண்டுநோக்கி என்று பரஞ்சோதி முனிவரும், கூறியிருப்பதால், வழக்கை நன்றாய் அறிந்துகொள்ளற்கும், வழக்காளரின் மெய்ம்மை காண்டற்கும், மன்றத்தார் வழக்கைப் பலமுறை சொல்வித்தமை அறியப்படும். கரியுஞ் சான்றுமில்லாத வழக்குக்களில், பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பிடித்தல், பாம்புக் குடத்தில் கையிடுதல் முதலிய தெய்வச்சான்று வாயிலாகத் தம் மெய்ம்மையை நாட்டும்படி, வழக்காளரை மன்றத்தார் கேட்பது முண்டு. அத்தகைய சான்று பல வழக்குகளில் உண்மைக்கு மாறாயிருந்ததென்பது. பாழ்ந்தனிசு வேண்டிப் பாம்புக்குடம் பெற்றான் என்னும் பழமொழியாலும். கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார் மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்! கடம்பெற்றான் பெற்றான் குடம் என்னும் பழமொழிச் செய்யுளாலும் (57) அறியப்படும். இம்முறை பிற்காலத்துக் கைவிடப்பட்டது. வழக்குக்கள், உரிமை வழக்கு (Civil case) குற்ற வழக்கு (Criminal case) என இக்காலத்திற் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் அக் காலத்திற் பிரிக்கப்படவில்லை. இரு வகை வழக்குக்களும் எல்லா அறமன்றங் களிலும் தீர்க்கப்பட்டன. படைத்தலைவன் செயல் : ஆங்காங்கு அவ்வப்போது நடக்குங் கலகங்களையும் கொள்ளைகளையும், தானாகவும் தன் துணை வரைக் கொண்டும் அடக்கிவைப்பது, படைத்தலைவன் செய லாகும். (ப.த.ஆ.) ஆட்டை ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும். (த.வி.3.) ஆடாதொடை ஆடாதோடை - ஆட்டாருஷ - ஆடு தின்னாப்பாளை ஆடும் ஆவும் (மாடும்) தொடாத செடி என்று தமிழிற் சொற் பொருட் காரணங் காட்டுவர் (வ.வ.83.) ஆடு-(ஏடு) ஏட முழுத்தல் = திரளுதல். முழு-முழா = திரண்டமுரசு, முழா-முழவு - முழவம். முழா-மிழா = திரண்ட ஆண்மான். ஒ.நோ. முடுக்கு - மிடுக்கு. முண்டு - மிண்டு, முறை - மிறை = வளைவு. மிழா - மேழம் = திரண்ட செம்மறிக்கடா. மேழம் - மேழகம் = செம்மறிக்கடா. வெம்பரி மேழகமேற்றி (சீவக. 522). மேழம் - மேடம் = செம்மறிக்கடா, மேடவோரை (பிங்.). மேழகம் - மேடகம் = செம்மறிக்கடா, மேடவோரை. மேழகம் - ஏழகம் = செம்மறிக்கடா, ஆடு (சூடா.) ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு = ஆடு. யாடுங் குதிரையுங் நவ்வியும் உழையும் (தொல். 1511) யாடு - ஆடு. ம. ஆடு, க. ஆடு, து. ஏடு. மேடம் - மேஷ மேடகம் - மேஷிகா ஏழகம் - ஏலக ஏடகம் ஏடக ஏடு - ஏட (வ.வ.82-83.) ஆடு அடித்தல் புலால் உண்பவர் ஆடு கோழி முதலிய உயிர் (பிராணி)களைக் கொல்வதை ஆடு கொல்லுதல் கோழி கொல்லுதல் என்னாது ஆடடித்தல் கோழியடித்தல் எனக் கூறும் வழக்கு, மக்கள் குறிஞ்சி நிலையில் விலங்குகளையும் பறவைகளையும் கல்லாலும் வணரி (வளைதடி) யாலும் அடித்துக் கொன்றதை நினைப்பூட்டும். (சொல். 19.) ஆண் பெண் இயல்பு ஆண்மையுள்ளவன் ஆண்; பெண்மையுள்ளவள் பெண். ஆண்மை - மறம் ; பெண்மை விரும்பப்படும் தன்மை. நெறிப்படக் கருதிய கருத்துக்களையெல்லாம் வெளியிடுதலும், இருளுக்கும் பேய்க்கும் அஞ்சாமையும், உயிர்க்கிறுதி வரினும் ஒழுக்கம் தப்பாமையும், பற்றலரைக் கண்டால் பணியாது பொருதிறத்தலும், இடுக்கண் வருங்கால் நகுதலும், ஆண்மையாம்; முகத்தழகோடு அகத்தழகும் உடைமையும் ஆணவமின்றி யமைந்திருத்தலும், கல்வியறிவு நிரம்பியிருத்தலும், நல்ல கணவனுக்கு அடங்கி நடத்தலும் பெண்மையாம். (சொல் 105.) ஆண்மை ஆண்மை ஆளுந்தன்மை. ஆளுதல் பயன்படுத்துதல். (குறள் 614.) ஆணவம் - ஆணவ ஆண் - ஆணவம் = ஆண்மை, செருக்கு. மானியர் வில்லியம்சு அகரமுதலி, ஆணவ என்னும் சொல்லை அணு என்பதினின்று திரித்து நுண்மை அல்லது மிகச் சிறுமை என்று மூலப்பொருள் கூறுகின்றது. (வ.வ.83.) ஆணி2 ஆணி - ஆணி (இ.வே.) ஆழ் - ஆழி - ஆணி = ஆழ்ந்திறங்குவது, இருப்பாணி, மரவாணி, ஆணி போல் கூரானது. ஆணிக்குருத்து = அடிக்குருத்து, ஆணிவேர் = அடிவேர். ஆணி = அடிப்படை, நிலைக்களம், தாங்கல். ஆணியா யுலகுக் கெல்லாம் (கம்பரா. கடறாவு. 27). ஆணிக்கொள்ளுதல் = ஊன்றிக் கொள்ளுதல். ழ - ண, போலி. ஒ.நோ. தழல் - தணல், நிழல் - நிணல். கால்டுவெலார் பொருந்துதல் என்னும் அடிப்படைப் பொருள் கொண்டு, அண் என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். வடமொழியார், ஊசிமுனை, கழுமுனை, அச்சாணி, முகக்கோற் குச்சு, வீட்டுமூலை, எல்லை என்று வடமொழி யகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ள அணி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர். அது ஆணி என்பதன் குறுக்கமே. முனைப்பொருள் கொள்ளினும், அள் (கூர்மை) என்னும் தென் சொல்லே ஆணிவேராம். - வ.வ.84. ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை (1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை. (2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச்சொற்கள் ஆக்கப்படல். (3) ஆத்திரேலியா மொழிகளில் உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் வேறுபடுத்தப்படாமை. முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது. கா : மண்வெட்டி, விறகுவெட்டி, சலிப்பான் (சல்லடை). (4) அர் பன்மையீறா யிருத்தல். தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு ஓரினத் தாராயிருந்ததாகத் தெரிகின்றது. இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழநாட்டர சர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் செந்தமிழ்ச் சுவடிகையில் (Magazine) எழுதி யிருப்பது பொருத்தமானதே. ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாந்தனூலார் கூறுகின்றனர். (ஒ.மொ.) ஆதி ஆதி என்பது தொடக்கம் என்று பொருள்படுவது. பெண்பாற் பெயராயின் ஆதன் என்பதன் பெண்பால் வடிவாம். அது தூய தென்சொல். (தி.ம.பின்.) ஆம் ஆம்1 - ஆம் ஆ - ஆகு - ஆகும் - ஆம் (Yes) ம. ஆம். தெ. அவுனு ஆம் வடமொழியில் மூவமில்லா உடன்பாட்டிடைச் சொல். ஆம்2 - ஆப் அம் - ஆம் = நீர். ஆமிழி யணிமலை (கலித். 48). (வ.வ.84) ஆமணக்கு ஆமணக்கு - ஆமண்ட ஆமணக்கு நட்டால் ஆச்சா வாகுமா? என்பது பழமொழி. சிற்றாமணக்கு, காட்டாமணக்கு (ஆதளை) என்பன ஆமணக்கு, வகைகள் . வடசொல் அமண்ட, மண்ட என்னும் வடிவுங் கொள்ளும். (வ.வ.84.) ஆய்தம் ஆய்த எழுத்து வகைமை எழுத்தெனப் படுப அகர முதல னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல். நூன்மரபு 1, 2) என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் முதலெழுத்து முப்ப தென்பதும், சார்பெழுத்து மூன்றென்பதும், இவற்றுள் முன்னை யவே சிறந்தனவென்பதும் பெறப்படும். முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்து வரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன; ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில வெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு, எழுத்தோரன்ன என்றார் என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, இப் பெயர்களே பெயர், இம் முறையே முறை; தொகையும் மூன்றே என்று நச்சினார்க்கினியர் தேற்றேகாரமிட்டுக் கூறு வதாலும், நன்னூலார் சார்பெனக் கூறிய பத்து எழுத்துக்களுள் ஏனைய வேழும் தொல்காப்பியர் காலத்திலும் இருந்தமையாலும், தொல்காப்பியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் நன்னூலார் கொள்கை யிருந்ததில்லை யென்பது தெளிவாம். ஆய்தப் பெயரும் ஒலியும் தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிக்கும்போதே முப்பாற்புள்ளி என அதற்கு மற்றுமொரு பெயர் கொடுத்தார். பிற்காலத் தாசிரியர் வேறுஞ் சில பெயரிட்டு வழங்கினர். ஆய்தம் என்பது அஃகேனம், அஃகேனமெனினும் ஆய்த மெனினும் தனிநிலை யெனினும் புள்ளி யெனினும் ஒற்றெனினும் ஒக்கும், என்னை? அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே என்றார் மயேச்சுரர் என்று காரிகையுரையாசிரியரான குணசா கரரும், ஆய்தம் எனினும், அக்கேனம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும், என்னை? அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே என்றார் அவிநயனார் என்று யாப்பருங்கல விருத்திகாரரும் கூறுவது காண்க. அவிநய நூற்பாவில் அக்கேனமென்பது ஏட்டுப்பிழையா யிருத்தல் வேண்டும். பழைய திண்ணைப்பள்ளிப் பாடமுறையில் ஆய்தப்பெயர் அதன் ஒலி வடிவொட்டி அஃகன்னா என வழங்கிற்று. ஆய்தவொலி ஏனையிரு சார்பெழுத்துப் போன்றே. ஆய்தமும் ஒரு முதலெழுத்தின் திரிபென்பது. இதற்கு (ஆய்தத்திற்கு) வடிவு கூறினார். ஏனை யொற்றுகள் போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன் றாகலின், என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும், சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும் (பிறப்பியல், 19) என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், சார்பெழுத்து என்னும் பெயராலும், அறியப்படும். ஆயின், எவ்வெழுத்தின் திரிபெனின், ககரத்தின் திரிபாம் என்க. ஆய்தம் தொன்றுதொட்டு மெல்லிய ககரமாகவே ஒலிக்கப்பட்டு வருவதாலும், ஏனச் சாரியை பெற்றக்கால் அஃகேனம் எனக் ககரத்தோடியைந்தே வழங்கு வதாலும், பண்டையேட்டரிச்சுவடி களில் க - ஃ என்று எழுதப் பெற்றமையாலும் உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட்டிருப்பினும் ககரத்தை யடுத்திருப் பதாலும், போப்பையர் தம் தமிழிலக்கணத்தில் ‘the guttural’ என்னும், கால்டுவெல் தம் ஒப்பியலிலக்கணத்தில் “guttural h” என்றும் குறித்திருப்பதாலும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் அதன் அமைப்பு முறையை விளக்குமிடத்து “the aspirate aytam” என்று குறித்திருப்பினும், வரிபெயர்ப்பில் (transliteration) k என்னும் குறியை ஆள்வதாலும் ஆய்தவெழுத்து ககரத்தின் திரிபேயெனத் தெற்றென வறிக. ஆரிய வன்மை சான்ற வல்லெழுத்துக்கள் தமிழுக்கின்மையின், ஆய்தத்தை வடமொழி ஹகரம் (h) போன்ற மூச்சொலியாகக் கொள்வது முற்றும் தவறாம். இனி வடமொழி விசர்க்கம்: போன்ற ஒலியெனக் கொள்ளின், ஒலியளவில் விசர்க்கம் ஆய்தத்தையொத் திருப்பினும், அதில் அகரக் கூறும் கலந்திருப்பதால், அதுவும் பொருந்தாதென்க. ஆய்தம் எவ்வகையினும் உயிரேறப்பெறா எழுத்தாம் குறியதன் முன்ன ராய்தப் புள்ளி என்னும் நூற்பா வுரையில், ஆய்தமான புள்ளி, ஆய்தப்புள்ளி என்றார். இதனையும் ஒற்றின்பாற் சார்த்துதற் கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல் வேண்டுமெனின். சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக் கொள்க என மயிலைநாதர் உரைத்திருப்பதைக் காண்க. ஆய்தம் அற்றாலளவறிந் துண்க வஃதுடம்பு முதலிய இடங்களில் உயிர்போல அலகு பெற்றும், தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் முதலிய இடங்களில் மெய்போல அலகு பெறாமலும் உயிர்மெய்களை (ஒரு புடையொத்து) உயிருமாகாமல் மெய்யுமா காமல் (அலிபோலத்) தனிநிற்றலால், தனிநிலை எனப்பட்டது என்றார் நன்னூற் காண்டிகை யுரைகாரராகிய சடகோப ராமானுசாச் சாரியார். அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு என்னும் பாடத்திற்கு ஆய்தம் அலகு பெறல் வேண்டாமை யானும், அவ்வாச்சாரியாரே உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல் போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனி நிற்றலால் தனிநிலை யெனப்பட்ட தென்றலு மொன்று. எனக் கூறியிருத்த லானும் அவ்வுரை பொருந்தாதென்க. ஆய்தம் ககரத்தின்பாற் பட்ட ஒரு நுண்ணிய வொலி யாயிருத்தல் பற்றியே அப்பெயர் பெற்றதென் றறிக. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரியியல். 32) என்பது தொல்காப்பியம். ஆய்தப் பெயர்க்காரணங் கூறுமிடத்து, “that which is subtle, minute” என்றார் கால்டுவெலும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி, தான் கொண்ட குறிக்கோட்கொப்ப, தமிழ்ச் சொற்களைத் தமிழ்வழி ஆராயாது, ஆய்தம் என்னும் தென்சொல்லைச் சார்ந்திருக்கையென்று பொருள்படும் ஆசிரிதம் என்னும் வடசொற் றிரிபா யிருக்கலா மெனக் கருதி மயங்குகின்றது. குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்றாயிருக்க, அவற்றுள் ஒன்றிற்கு மட்டும் சார்ந்திருக்கைப் பொருட்சொல் எங்ஙனம் பெயரா யமைந்திருத்தல் கூடும்? வடமொழியைத் தமிழுக்கடிப்படையாய் வைத்து, ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology) பற்றித் தென் சொற்கள் பலவற்றை வடசொல்லெனக் கூறுவது, வடமொழி யாளர்க்குத் தொன்று தொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது. இனி, ஆய்தம் என்னும் தென்சொல்லை ஆயுதம் என்னும் வட சொல்லொடு மயக்கி, அடுப்புக்கூட்டும் கேடகம் மூவிலைச் சூலம் ஆகிய படைக்கலமும் போல் வரிவடிவு கொண்டிருப்பதால் ஆய்தம் எனப் பெயர் பெற்றது எனக் காரணங் காட்டுவாரும் உளர். ஆய்தம் என்னும் சொல் ஒரிடத்தும் ஆயுதம் என எழுதப் படாமையையும், ஆயுதம் என்னும் சொல்லும் ஆய்தம் என எழுதப்படாமை யையும், நோக்குக. ஆரியர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே, ஆய்த வெழுத்தும் அதன் பெயரும் குமரிநாட்டில் தோன்றிவிட்டன என்னும் உண்மையையும் அறிந்து கொள்க. இனி, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் உயிரே மெய்யே என்னும் நூற்பாவுரையில், சார்பிற் றோன்றும் தன்மைய என்று மிகுத்துச் சொல்லிய வதனால், அகரத்தொடு யகரவொற்று வந்தும் ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாய் நிற்கும் ... ஆய்தமும் யவ்வு மவ்வொடு வரினே ஐயெனெ ழுத்தொடு மெய்பெறத் தோன்றும் என்றார் அவிநயனார். வரலாறு ... கஃசு, கஃதம், கஃசம் என அகரத்தொடு ஆய்தம் வந்து கைசு, கைதம், கைசம் என ஐகாரத்தின் பயத்தவாயினவாறு ... என உரைத்திருப்பது. ஆய்தத்தைப் பொறுத்தமட்டில் உத்திக்குப் பொருந்துவதன்று. கஃசு முதலிய மூன்றும் கைசு முதலிய மூன் றாகத் திரிந்திருக்கலாமேயன்றி, ஆய்தம் யகரமெய் யொத் தொலித் திருத்தல் முடியாது. ஒருகால், கள் என்பது கஃசு முதலிய வற்றின் அடியாகலின், அது கய் எனத் திரிந்திருக்கலாம். ஒப்பு நோக்க : தொள் - தொய், பொள் - பொய். ஆய்தப் பிறப்பு சார்ந்துவரி னல்லது என்னும் சார்பெழுத்துப் பிறப்பு நூற்பாலின் ஆற்றொழுக் கைக் கொண்டுகூட்டாகச் சிதைத்து, இரு கூறாக்கி, சில எழுத்துகளைச்சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தோன்றுதற்கு ஓரிய பிலவென்று, ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால், தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும் என்றும், ஒழிந்த ஆய்தந் தமக்குப் பொருந்தின நெஞ்சு வளியாற் பிறக்கும் என்றும் உரைத்தனர் நச்சினார்க்கினியர். இந் நூற்பா முழுவதையும் ஒரே கூற்றாகக் கொண்டு, சில எழுத்துகளைச் சார்ந்துவரினல்லது தமக்கெனத் தனியியல் பில்லாதனவென ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட (குற்றியலு கரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமாகிய) மற்ற மூன்று எழுத்து களும், தத்தம் முதலெழுத்துகளின் பிறப்பொடு பொருந்தி அவற்றோ டொருபுடை யொத்த தோற்றத்தினவாய்த் தத்தம் சிறப்புத் தன்மையுடன் நடக்கும் என்றுரைப்பதே பொருத்தமாம். இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர் என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆய்தச் சாரியை காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை (புணரியல், 32) என்னும் எழுத்துச்சாரியை நூற்பாவில் ஆய்தவெழுத்திற்குரிய சாரியையை ஆசிரியர் கூறாவிடினும், நேரத்தோன்றும் எனவே நேரத் தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின என்று உரையாசிரியர் (நச்சினார்க்கினியர்) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தொல்காப்பிய நூலில் கூறப்படாத சில இலக்கணங்கள் உரை யாசிரியராற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் ஆய்தவெழுத்துச் சாரியையும் ஒன்று. இது உரையிற் கோடல் என்னும் உத்தி பற்றியது. ஆய்தச் சார்பு ஆய்தம், குறிலுக்கு முன்னும் வல்லின வுயிர்மெய்க்குப் பின்னுமாக அவ்விரண்டிற்குமிடையில் வருவதே இயல்பாம். குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே (மொழி மரபு. 5) என்றார் தொல்காப்பியனார். ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல்வந் தியலு மென்ப என்றார் கையனார். இவ் விதிக்கு, எஃகு கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது, இஃது, உஃது என நச்சினார்க்கினியரும், அஃகம், வெஃகா, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும், எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனக் குண சாகரரும், எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என மயிலை நாதரும் எடுத்துக்காட்டினர். இவை தனிச் சொற்கள். அஃறிணை, முஃடீது, அஃககூடிய என்பன தொடர்ச்சொற்கள். விலஃஃகி லீங்கிரு ளோட்டுமே மாத ரிவஃஃகு முத்தி னினம் என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற் பொருட்டு ஒற்றின் வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க என்று மயிலைநாதர் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. லளஃகான் (நூன்மரபு. 24) ணனஃகான் (நூன்மரபு. 26) எனத் தொல் காப்பியத்தில் வந்திருப்பவை உம்மைத் தொடர்களாத லின், குறிலிணைக்கீழ் வந்தனவாகா. ஆயின், இளஃகுமே எனச் சிந்தாமணியில் (149) வந்திருப்பது விதிக்கு மாறாதலின், இதனை யும் ஒற்றில் வழியொற்றெனவே கொள்ளல் வேண்டும். ஆய்தம் தோன்றும் வகை லகரத்திரிபு. வகரத்திரிபு, ளகரத்திரிபு, ஒற்றில் வழியொற்று, சாரியைப் புணர்ப்பு என ஆய்தம் தோன்றும் வகை ஐந்தாம். தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே (புள்ளிமயங்கியல் 74) என்பது லகரத்திரிபு. கஃறீது, கற்றீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி, அஃறிணை பஃறுளி என்பன உறழ்ச்சியில்லாதன. வேற்றுமை யல்வழி யாய்த மாகும் (புள்ளிமயங்கியல் 84) என்பது வகரத்திரிபு. அஃகடிய, இஃகடிய, உஃகடிய, சிறிய, தீய, பெரிய என்பன எடுத்துக்காட்டு. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான (புள்ளிமயங்கியல் 104) என்பது ளகரத்திரிபு. முஃடீது. முட்டீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. ஒற்றில் வழியொற்று முன்னர்க் காட்டப்பெற்றது. அஃகான், மஃகான், வஃகான் என்பன சாரியைப் புணர்ப்பு. அஃது என்பதன் குறுக்கமே அது எனத் தெரிதலின். செய்வஃது என்பது செய்வது என்பதன் விரித்தல் திரிபெனக் கொள்வது சரியன்று. வகரத்திரிபும் சாரியைப் புணர்ப்பும் ஒத்தியலமைபு (assimilation) என்னும் நெறிமுறை பற்றியன. ஆய்தம் வரும் தனிச் சொற்கள் ஆய்தச் சார்பையும் ஆய்தந் தோன்றும் வகையையும் துணைக் கொண்டு ஆய்தம் வரும் தனிச் சொற்களை ஆய்ந்து பார்ப்பின், அவற்றுட் பெரும்பாலான லகர ளகரத் திரிபாகவே போதரும். இத் திரிபு குமரிநாட்டின் ஒரு மருங்கு தோன்றியிருக்கலாம். எ.கா. அஃகு அல்குதல் = சுருங்குதல், குன்றுதல், நுணுகுதல். அல்கு - அஃகு. அஃது, இஃது, உஃது, எஃது. இவை, அல் + து, இல் + து, உல் + து, எல் + து என்னும் புணர்ச்சியாகத் தோன்றுகின்றன. அன்று இன்று என்று என்னும் காலச் சுட்டு வினாச் சொற்களின் அடிகளும், அல் இல் எல் என்பனவே. இவற்றை, அல்லி இல்லி எல்லி என்னும் கன்னட இடச்சுட்டு வினாச் சொற்களொடும், அன்று (அல் + து) இன்று (இல்+து) நன்று (நல்+து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுச் சொற்களொடும், ஒப்புநோக்குக. அல்+து = அஃது - அத்து - அது. இங்ஙனமே ஏனையவும். அத்தொடு நின்றது அலைச்சல், கொட்டொடு நின்றது குலைச்சல், எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம் என்பன பழமொழிகள். பஃது பல் + து = பஃது - பத்து - பது. பல் - பன் = பத்து. ஒ.நோ. ஆல் - ஆன். வெல் - வென். பன் + இரண்டு = பன்னிரண்டு. பன் - பான் = பத்து. இருபான் முப்பான் முதலிய எண்ணுப் பெயர்களை நோக்குக. முதன் முதலாகத் தோன்றிய ஒன்று முதற் பத்து வரைப்பட்ட எண்ணுப் பெயர்களுள், ஒன்பதிற்கு மேற்பட்ட எண்ணைப் பல என்னும் கருத்துப்பற்றிப் பல் என்னும் அடியினின்று அமைத்ததாகத் தெரிகின்றது. எஃகு இள் (- இள - இளகு) - எள் - எள்கு - எஃகு = உருக்கு. அதாவது இளகின தாது (உலோகம்). எஃகு - எஃகம் = உருக்கினாற் செய்த வேல். பஃறி பல் + தி = பஃறி (பன்றி) = பன்றி வடிவான ஒருவகைப் படகு. இதில் சரக்கேற்றிச் செல்வதை இன்றும் கூவம் முதலிய ஆறுகளில் பார்க்கலாம். வெஃகு பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல். பிணா - பிணை. பிள் - பெள் - பெண் - பேண் - பேடு - பேடை பெள் - பெட்டை - பெடை. பெள் - பெட்பு = விருப்பம். பெள் - வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வேண்டல். வெள் - வேள் - வேண் - வேண்டு. வெள் - வெள்கு - வெஃகு. வெஃகுதல் = பிறன் பொருளை விரும்புதல். கஃறு கல் - கால் = கருமை. கால்தோய் மேனிக் கண்டகர் (கம்பரா. வானர. 21) கல் - கள் - காள் - காளம் = கருமை. கள் + து = கஃறு (கருமை) கஃஃறென்னுங் கல்லதரத்தம் (தொல். எழுத். 40. உரை) கஃசு, கஃடு, கஃது, கஃபு முதலிய பிற ஆய்தச் சொற்களின் வேர்ப்பொருள்கள் மறைந்து போயிற்றென்க. ஆய்த வரிவடிவு ஆய்தவொலி, அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால், ஒருகால், அதன் வரிவடிவு அடுப்புக் கூட்டுப்போல் முப்புள்ளி வடிவாய் அமைக் கப்பட்டிருக்கலாம். முடிபு இதுகாறும் கூறியவற்றால். ஆய்தம் தமிழெழுத்தென்றும். அது லகர ளகர வகரத் திரிபான நுண் ககர மெய்யென்றும், ஒன்றா யிருத்தலும் உயிரேறாமையும்பற்றித் தனிநிலை யெனப்பட்ட தென்றும், அறிந்து கொள்க. இனி ஆய்தவெழுத்தைத் தமிழெழுத்து களின் முன்னும் பின்னும் இட்டு. ஜ. ஷ. F,Z முதலிய பிறமொழி யெழுத்துக்களை இக்காலத்துச் சிலர் குறிப்பது. தமிழியல்பிற்கு மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதுமாகு மென்றும், பிறமொழிச் சொற்களையெல்லாம், அவ்வாறாக்கின் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிந்து கடைப்பிடிக்க. மேலும், ஆய்தவொலிக்கு அயன் மொழி யொலிகளைக் குறிக்கும் ஆற்றலில்லையென்றும், ஆய்த வரிவடி வெழுதுவதும் அயன் மொழி வரிவடிவெழுதுவதும் ஒன்றே யென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன் றென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. (கழகத்தின் 1008ஆவது வெளியீட்டு விழா மலர்.) ஆயம் ஆயம் - ஆய (இ.வே.) தாயம் - ஆயம் = உரிமை, கடமை, கடத்தக்கூலி, தாய ஆட்டக்காய், தாய எண் அல்லது பணையம். உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். (குறள். 933). ஆயத்திற் கஞ்சி ஆற்றில் நீந்தினதுபோல். என்பது பழமொழி. இருக்கு வேதத்தில் ஆய என்னும் சொல் வந்துசேர்கை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது (ii, 38: 20). பாணினீயம், மனுமிருதி, மகாபாரதம் முதலிய பின்னூல்கள் வருவாய், வரி, ஊதியம் முதலிய பொருள்களில் ஆள்கின்றன. ஆய என்னும் சொற்கு ஆ-இ என்னும் மூலங் காட்டுவர். இ என்பது இய் என்னும் தென்சொல்லின் சிதைவாம். இய்-இயல், இயங்கு. (வ.வ. : 84.) ஆயம் : (க) தாய் - தாயம் = தாய்வழியுரிமை. முதற்காலத்திற் குடும்பத் தலைமை தாங்கியது தாயே. தாயம் - ஆயம் = உரிமை. தாயம் - தாய (வ.). ஆயம் : (உ) வா - ஆ - ஆயம் = வருவாய், வரி, கட்டணம். ஓடிவா என்பது கொச்சை வழக்கில் ஓடியா என்று சொல்லப்படுதல் காண்க. வா என்னுஞ் சொல்லே ஆவ் என்று முன்பின்னாக முறை மாறி இந்தியில் வழங்கும். ஆயம் - ஆய (வ.). (தி.ம. 737.) ஆயிரத்தாழி கோலப் பானையை ஆயிரங்கண்ணுப் பானையென்றும், அரசாணிப் பானையென்றும் ஆயிரத்தாழியென்றுஞ் சொல்வ துண்டு. (த.தி.22.) ஆயிரம் ஆயிரம் - ஸகர (இ.வே.) அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால், மணற் பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. வாழிய ... நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம் 9). நீ நீடுவாழிய ... வடுவாழ் எக்கர் மணலினும் பலவே (புறம். 55). ம. ஆயிரம், கு. ஆயிரெ, க. சாவிர, து. சாவிர, துட. சோவெர் (f), கோ. சாவ்ர்ம். இ. ஹசார் (haza#r), பெ. ஹசார் (haza#r), கி khilloi for khesloi. வடமொழியில் மூலமில்லை. அகரமுதல் சகர முதலாய்த் திரிவதும் யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. ஒ.நோ. இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் சேண். நீயிர் - நீவிர், சேயடி - சேவடி. கன்னடச் சொல்லை யொட்டியே துளுவச் சொல்லும், கன்னடத் திரிபான படகச் சொல்லை யொட்டியே துடவச் சொல்லும் கோத்தச் சொல்லும், இவற்றை யொட்டியே வடசொல்லும், சகர முதலாய்த் திரிந்துள்ளன. இதை அறியாது, பேரா. பரோ வட சொல்லையே தென்சொற்கு மூலமாகத் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தம் தவற்றுக் கருத்தினாலேயே. (வ.வ. 84-85.) ஆர் ஆர் - அர (இ.வே.) ஆர்தல் = பொருந்துதல். ஆர் = சக்கரக் குறட்டிலும் வட்டை யிலும் பொருந்தும் சட்டம் (spoke, radius). ஆர்கெழு குறடுசூட்டாழி போன்று (சீவக. 828). வடமொழியிற் காட்டப்பெறும் வேர் ரு (ri) என்பதே. அறு இரி என்னும் தென் சொல்லின் திரிபாகும். (வ.வ.85.) ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் - ஆரபாட்ட (bh). ஆர்த்தல் = ஆரவாரித்தல். ஆர்ப்பு + ஆட்டம் - ஆர்ப்பாட்டம் = ஆரவாரம். தெ. ஆர்பாட்டமு (bh). (வ.வ.85.) ஆரம் ஆரம்1 - ஆர ஆர் - ஆரம். ஆரஞ் சூழ்ந்த அயில்வாய் நேமி (சிறுபாண். 253). வ.வ.85. ஆரம்2 - ஹார ஆர்தல் = பொருந்துதல். ஆர் - ஆரம் = பல மலர்கள் அல்லது மணிகள் பொருந்திய மாலை. ஒ.நோ. தொடு - தொடை. (வ.வ. 84.)