முகவுரை அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் மற்றெம்மொழிகளி லும் காணப் பெறாது தமிழ்மொழி ஒன்றனுக்கு மாத்திரம் உரிமை பூண்ட தனிப் பெரும் பொருள்களாம். இவ்விரு இலக்கணங்களும், கிறித்துவுக்குப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன் உள்ள தமிழர்களது வாழ்க்கை முறை களைக் காட்டும் படிமக்கலங்களாகும். ஆகவே தமிழர்களது பழைய சரித்திரங்களை ஆராயப் புகும் எவருக்கும் அகப்பொருள், புறப்பொருள் அறிவு இன்றியமையாதது. அகப்பொருள் இலக்கணத்தைப் பிரமாணமாகக் கொண்டு செய்யப்பட்ட நூல்கள் கோவைப் பிரபந்தங்களும், அகநானூறு, கலித்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலியனவும் பிறவு மாகும். புறப்பொருள் இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப் பட்டன புறப்பொருள் வெண்பாமாலையும் புறநானூற்றிற் காணப்படும் செய்யுட்களுமாகும். புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தால் தொல் காப்பியத்தைவிடப் புறப்பொருள் இலக்கணங்கூறும் பன்னிருபடலம் என்னும் ஓர் நூல் இருந்ததாகத் தெரிகிறது. தொல்காப்பியம் கூறும் புறப் பொருள் இலக்கணத்திற்கும் பன்னிரு படலத்திற் கூறப்படுவன வற்றுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவ் வேற்றுமைகளை ஒப்பு நோக்குவதற்காகப் பன்னிரு படலத்தைப் பின்பற்றிச் செய்யப்பட்ட புறப்பொருள் வெண்பா மாலையிற் கூறப்படும் பொருள்களும், தொல்காப்பியத்திற் சொல்லப்படும் பொருள்களும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருக்கின்றன. தொடர்பு பெறாது தனித்தனியாக விளக்க வேண்டிய பொருட் கூறுபாடுகள் ஒழிபியலில் விளக் கப்பட்டிருக்கின்றன. செய்யுள் நடையிற் காணப்படுவதும் பண்டிதர்கள் ஆட்சியில் மாத்திரம் இதுவரையில் இருந்து வருகின்றதுமாகிய புறப் பொருளை பள்ளிச்சிறாரும் கற்றறியும் முறையில் இன்னூல் ஆக்கப் பெற்றுள்ளது. தமிழ்நிலையம் நாவலியூர், 01.02.1936 ந. சி. கந்தையா. புறப்பொருள் விளக்கம் தோற்றுவாய் புறப்பொருள் பழந்தமிழரின் போரொழுக்கத்தைக் கூறும். இவ் வொழுக்கங்களை புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் முதலிய நூல்கள் திணைவகையானும் துறைவகையானும் இலக்கண முறையிற் கூறுகின்றன. அவ் விஷயங்கள் பலவற்றையும் தொடர்புபடுத்தி ஆராய்ந்து விளங்கி மகிழ்வது சாமானிய கல்வியாளர்க்கு எளிதன்று. ஆகவே புறப் பொருள் சம்பந்தமாகிய விஷயங்களனைத்தையும் பள்ளிச் சிறாரும் இலகுவில் அறிந்து உவகை எய்துமாறு இந் நூல் இலேசான முறையில் எழுதப்படலாயிற்று. கூத்தர் கூத்தியர் முதலானோர் அகப்பொருள் புறப்பொருள் விஷயங்களை மன்னர் அவைகளில் நடித்துக் காட்டுதல் வழக்கு. காதல் சம்பந்தமாகிய அகம் வேத்தியல் எனப்படும். அகப்பொருள் நாடகங்கள் அரசர் அவைகளிலன்றி ஏனைய விடங்களில் நடித்தற்கு அரசரால் அனுமதிக்கப் பட்டில. 1புறப்பொருள் சம்பந்தமாகிய பொதுவியல் எல்லா விடங்களிலும் நடிக்கப் பெற்றது. “நாடக வழக்கினும் - பாடல் சான்ற புல நெறி வழக்கினும்,” என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தானும் அகப் பொருள் புறப்பொருள் விஷயங்கள் நாடக வழக்கிலுள்ளன என்று உய்த்து உணரப்படும். அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் புலவர்களாற் பாடப் பட்ட தனிநிலைச் செய்யுட்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப நாடகங்களிற் பாடப் பட்டு வந்தன. புலவர்கள் பாடிக்கொண்டு வந்த அகப்பொருட் பாடல்களை அரசர்கள் மதித்து அவற்றிற்கு வெகுமதி அளித்தது இக் காரணம்பற்றிப் போலும். புறப்பொருட் பாடல்களை நாடகங்களில் பாடுவதால் வேந்தர்க ளுடைய புகழ் உலகின்கண் பரவா நிற்கும். இவ் விஷயம் ஆராய்ச்சிக் குரியது. நிரை கவர்தல், நிரை மீட்டல், படை எடுத்தல் (மாற்றரசன்) எதிர்த்தல், மதிலை வளைத்துப் பொருதல், மதில் காத்தல், பொருதல் எனப் போர் ஏழு வகைப்படும். வென்றது வாகை எனப்படும். நிரை கவர்தலும் நிரை மீட்டலும் தமிழ் மக்களது முற்பட்ட காலத்துப் போர் ஒழுக்கங்களாகும். மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த ஒரு காலத்து இவ்வகையான போரொழுக்கங்கள் மிகுதியும் நிகழ்ந்தன வாதல் வேண்டும். மேலே கூறப்பட்ட ஒவ்வோர் போர் ஒழுக்கத்தின் கண்ணும் படைவீரர் தமது கொண்டையிடத்தே ஒவ்வோர் அடையாளப் பூவைச் சூடினர். அக் காரணம்பற்றி அவ்வொழுக்கங்கள் அப் பூக்களின் பெயரைப் பெற்றன. “வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம் வட்கார் மேற்செல்வது வஞ்சியாம்-உட்கார் எதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி யதுவளைத்தலாகு முழிஞை” “அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம் அத்திணைத் தொழிலு மத்திணைப் பூவும் அப்பெயர் பெறுத லந்நிலத் துரியவே” (திவாகரம்) “வெட்சி ஆகவர்தலானும் கரந்தையுட்கு வரச்சென்று விடுத்தலானும் வெட்சியுங்கரந்தையுந் தம் முண்மாறே, வஞ்சிமேற் செல்லலானும் காஞ்சி அஞ்சாதெதிர் சென்றூன்றலானும், வஞ்சியுங் காஞ்சியுந் தம் முண்மாறே, உழிஞையாரெயின் முற்றலானும், நொச்சி விழுமி தினவ்வெற்றி காத்த லானும் உழிஞையு நொச்சியுந்தம் முண் மாறே” “புறப்புறமாவன-வாகையும் பாடாண் பாட்டும் பொது வியற் றிணையும்.” (யாப்பருங்கலவிருத்தி) 1. புறப்பொருள் வசனம்1 நிரை கவர்தல் ஒரு வேந்தன் பிறிதோர் அரசனோடு போர் செய்யக் கருதினான்; கருதித் தனது படைத் தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றோரை யும் அழைத்துப் பகைவனின் நிரைகளைக் கவர்ந்து வரும்படி பணித்தான். அவ் ஏவலை மேற்கொண்ட வீரக்கழலைக் காலிலே புனைந்த மறவர், “அரசனே! பகைவரது ஆநிரைகள் விடியற்காலத்தே நின் வாசலிடத்தன வாம்” எனக் கூறிச் சென்று மகிழ்ச்சிக்குரிய இச் செய்தியைப் போர்வீரர்க் குணர்த்தினர். போரின்மையால் தினவுகொண்டு, ‘மலை ஏறிக் குதித்தேனும் உயிர் விடுவேம்’ எனக் கவன்றிருந்த மறத்தொழில் மிக்கார் இந்நற் செய்தியைச் செவிக்கொண்டு அகமும் முகமும் மலர்ந்து ஆநந்தத் தாண்டவஞ் செய்தனர். அரசனது ஒற்றர் சிலர் பகைவரது ஆநிரை நிற்கும் இடம் முதலியவற்றை அறியும்படி மாறுவேடமிட்டுச் சென்றனர். போர் வீரருட் சிலர் இருள் சூழ்ந்த மாலைக்காலத்துப் பாக்கத்தே சென்று முற்றத் தின்கண் முல்லை மலரையும் நாழியிலிட்ட நெல்லையுந் தூவித் தெய் வத்தைப் பரவிக் கைகூப்பித் தொழுது நற்சொற்கேட்க நின்றனர். அஞ்ஞான்று அவ்விடத்துள்ளாள் ஒரு மாது “பெரிய கண்ணையுடைய பசுவைக் கொண்டுவா” எனக் கூறினாள். நற்சொற் கேட்டு வந்தோர் தாம் கேட்டதைப் படைத் தலைவர்க் குணர்த்தலும் அன்னோர் அதனை அறிவோரால் ஆராய்ந்து நன்றெனக் கொண்டனர்; கொண்டு பருக்கைக் கற்கள் செறிந்ததும் சிள் வண்டுகள் ஒலிப்பதுமாகிய காட்டு வழியே செல்ல வேண்டி ஆர்ப்பரித்துக் காலிடத்தே செருப்புத் தொட்டனர்; முடியிடத்தே வெட்சிப் பூச் சூடினர்; துடி கறங்கிற்று. இஃதிவ்வாறாக பகைவரது மணிகட்டிய நிரைகள் நிற்கின்ற காட்டிடத்துள்ள காரி என்னும் புள் தனது கடிய குரலால் அவர்க்கு வருங் கேட்டினை முன்னர் அறிவித்தது. அதனைச் செவிக்கொண்ட நிரைகாவலர் தமக்கு நேர்வதோர் ஏதம் உண்டென ஓர்ந்து இமை கொட்டாது ஏந்திய விற்களுடன் நிரைகளைக் காத்து நின்றனர். சிங்கக் கொடியையும் கிளியையும் கலைமானையும் பேய்மிக்க படையினையுமுடைய கொற்றவையின் கொடியை முன்னே உயர்த்தியவர் களாய் கூற்றுவர் குழுவினை ஒத்த வெட்சிவீரர், கழுகும் பருந்தும் பின்னே படர்ந்து செல்ல, வில்லாளர் காவல் செய்வதும், மூங்கில் அடர்ந்த மலைச்சாரலிடத்ததுமாகிய மாற்றார் நிரையினைக் கவரும் பொருட்டுக் கடிதேகினர். முன் சென்ற ஒற்றர் பசுக்கள் நின்ற இடமும் அவற்றின்அளவும், அவற்றைப் புறங்காத்து நின்ற படையின் அளவும் ஆராய்ந்து நள்ளிருளில் வந்து சேனைத்தலைவர்க்கு உணர்த்தினர். பகைவர் நிலைமையினை நன்கறிந்துகொண்ட வெட்சி வீரர் மூங்கில் செறிந்த மலைச்சாரலிடத்தே செறிந்த இருளிற் பதுங்கியிருந்து தருணம் பார்த்து ஒய் யெனக் கிளம்பி நிரை காத்து நின்ற வில்லாளரை வீழ்த்தி நிரை யினை அடித்துச் சென்றனர். செல்லுமிடத்து நிரையினைப் பறிகொடுத்தார் சிலர். அபிமான மிக்கவர்களாய்ப் பின்தொடர்தலும் அன்னோரைப் பின்ன ணியத்தார் பொருது வீழ்த்த முன்னணியத்தார் நிரைகளை வருத்தமின்றிக் கடத்திச் சென்றனர். இஃதிவ்வாறாக நிரைகவர்தற் பொருட்டுச் சென்ற வீரர்களது செய்தியை அறியாத வேட்டுவிச்சியர் கையைக் கன்னத்தே கொடுத்து வியாகுலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். அஞ்ஞான்று நிரைகள் மன்றத்தே புகுந்தன. இடக்கண் துடிக்கப்பெற்ற வேட்டுவிச்சியர் தமது துன்பத்தைப் போக்கியவர்களாய் “எம்முடைய சுவாமி தலையிலுள்ள மாலை வாழ்வ தாக” என்று வாழ்த்தினர். மாற்றார் நிரையினைக் கவர்ந்து வந்த போர் வீரர்க்கு மரியாதை செய்தற் பொருட்டு ஊரார் மன்றத்தே பந்தரிட்டு ஆற்று மணல் பரப்பி ஆட்டு மாமிசத்தைச் சுவைபெறச் சமைத்துப் பெருவிருந் தளித்தனர்.1 அரசன், போர்வீரர் கொணர்ந்த நிரையினை2 நிமித்தம் பார்த்துத் தப்பா வகை சொன்ன அறிவுடையோர்க்கும், துடி கொட்டும் புலையனுக்கும், பாணிச்சிக்கும், பாணனுக்கும் இன்னும் தமக்கு வேண்டிய பிறர்க்கும் பகுந் தளித்தான்; தமது உயிரைப் பொருட்படுத்தாது பகைவர் ஊரிற் சென்று ஒற்றி வந்தார்க்கும், நிமித்தம் அறிந்து சொன்ன அறிவுடையோர்க்கும் மேலதிக மாகச் சில பசுக்களைக் கொடுத்தான். போர்வீரர் கள்ளுண்ணும்போது செருவிடத்துத் துடிகொட்டிய புலையனுக்குக் கள்ளினை மிகுதியாக வார்த் தனர். ஆபரணங்களை அணிந்த அழகிய பெண்கள் மணம் பொருந்திய மாலைகள் பக்கத்தே அசையும்படி1 வள்ளிக் கூத்தாடினர். நிரை மீட்டல் நிரையினைப் பறிகொடுத்தோர் அபிமான மிக்கவர்களாய் நிரை கவர்ந்தோரைப் பின்தொடர்ந்து அவரைச் செருவிடை வீழ்த்தி நிரையினை மீட்டுக்கொண்டு வருதலுமுண்டு. பகைவர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர்; ஆன்காத்து நின்றோரில் இறவாது எஞ்சியோர் சிலர் ஓடோடியுஞ் சென்று தமது வேந்தர்க்கு அவமான மிக்க அச்செய்தியை உணர்த்தினர். அதனைச் செவி மடுத்த வேந்தன் மண்டு தீயென வெகுண்டு முடியிடத்தே கரந்தைப் பூவினைச் சூடினான். போர்வீரர் காலிடத்தே வீரக் கழலைக் கட்டினர்; கூற்றுவரைப்போற் கோபித்துக் கரந்தை மலரை மயிர் மிசை மிலைந்து கொடிய வில்லைக் கையிடத்தே கொண்டனர். போர் செய்தற்கு ஏலாத சிறுவர் வயோதிபர் நோயாளிகளைத் தவிர, ஏனையோர் சங்கும், கரிய வீரக் கொம்பும் மயி லிறகு கட்டிய வாத்தியங்களும் பறையும் ஆர்ப்ப ஒளிவிடுகின்ற வேல் களுடன் கல் நிறைந்த காட்டிடத்தே கூற்றுவரைப்போல் வரிசையாகச் சென்றனர்; செல்லுதலும்2 நிரைகவர்ந்து சென்றோர் பசுக்களை முன்னே செல்லவிட்டு தழைகள் மூடிய காட்டிடத்தே தலைமறைந்திருந்தனர். நிரை மீட்கச் சென்றோர் அவர்களைப் பதுக்கிடங்களினின்றும் வெளியேறச் செய்து அவர்களுடன் அச்சம் தருகின்ற போரைச் செய்தனர். முடிவில் நிரை கவர்ந்தோர் வென்னிட்டனர்; நிரைகள் மீட்கப்பட்டன. நிரை மீட்டோரிற் சில வீரர் மார்பிலும் முகத்திலும் பட்ட புண்களி னின்றும் உதிரம் பெருகச் சாதிலிங்கஞ் சொரியும் மலையைப்போல் மீண்டனர். விபரமறியாத சிறுபிள்ளைகளை ஒப்பப் பகைவரை வெட்டி வீழ்த்திய பின் நிரைகவர்ந்தோர் முதுகிட்டோடவும் தாம் போர்க்களத்தை விட்டுப் போகாராய்த் தனியே நின்றனர் சில வீரர். தலையறுபட்டு உடற் குறையாய் நின்ற வீரர் சிலர் பிள்ளைத்தன்மை யுடையராய் வாளை உறையி னின்றும் வாங்கிக் கையிலேந்திப் போர்க்களத்தே வீரர்களுடன் நின்று அடிமேலடி வைத்தாடினர். சிலர், பகைவர் மார்பைப் பிளந்த வேல்களை அவர் மார்புகளினின்றும் வாங்கி அவையிடத்தே குடல் மாலைகளைச் சுற்றி துடிகறங்க ஆடா நின்றனர். பகைவர் படை வெள்ளம்போல் வரவும் அதனைக் குறுக்கிட்டு “யானொருவனே தாங்குவனாகப் பிறர் மதுவை அருந்துகின்றனர்” என ஓர் வீரன் புகன்றான். போரிடத்தே காரி என்னும் குருவி விலக்கவும் விலகாராய் வீரரை வென்று நிரையை மீட்டு வந்த வீரருக்கு அரசன் மருத நிலம் பலவுங் கொடுத்து வரிசை செய்தான்; சிலருக்கு, 1ஏனாதி காவிதி முதலிய பட்டங்களை அளித்தான். அவ் வரிசைகளைப் பெற்ற வீரர் வேந்தனைப் போற்றினர். ஓர் அரசன் பிறிதோர் அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இவ் வகையான போர்கள் நிகழ்வது சகசம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “மகன் மறுத்து மொழிதல்” என இலக்கியங்கள் கூறும். குறிஞ்சி நிலத்தேயுள்ள மறக்குடித் தலைவர்கள் பெரும்பாலும் அயல் நிலத்தேயுள்ள நிரைகளைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பார்களென்றும் இலக்கியங்களிற் கூறப்படுகின்றது.2 வீரக் கல் நிரைமீட்கு மிடத்துப் பலரும் ஆச்சரியமுறும்படி தமது வீரத்தைக் காண்பித்துப் படைமுகத்தே இறந்த வீரனுக்கு அவனுடைய பெயரும் ஊரும் ஆற்றலும் எழுதிக் கல் நடுவது பண்டைப் போர் வழக்கு. இவ் வழக்கினைப் பின்பற்றியே இறந்தவர் பொருட்டுப் பாடப்படும் பாடல்கள் ‘கல்வெட்டு’ என வழங்குவதாகும். இறந்தவர்களைச் சமாதி செய்து ஆலயங்கள் எடுத்தலும் கல் நாட்டும் வழக்கத்தைப் பின்பற்றியதெனக் கருத இடமுண்டு. கல் நடுதலின் விபரம் வீரர் காட்டிற் சென்று இறந்த வீரனுக்கு நாட்டத்தகுந்த கல்லினைக் காண்பர். கண்டு அதற்கு நறும்புகை முதலியவற்றைக் காட்டி, எடுத்து, வாசம் பொருந்திய நீரினாலே மஞ்சனமாட்டி வாவியிலும் முழுக்காட்டுவர். பின் மாலை தூக்கி, மணி ஒலித்து, மதுத் தெளித்து மயிலிறகுஞ் சூட்டி வீரன் பெயரை எழுதி “வேற்போரை விரும்பினோனுக்கு இது உருவமாகுக” என்று கல்லினை அழகுபெற நடுவர். நட்டபின் அக் கல்லின் நின்ற வீரனை எல்லோரும் வணங்கிக் கோயிலமைப்பர். போருக்குச் செல்லும் வீரர் அதனை வணங்கிச் செல்வர். அவ்வழிச் செல்லும் பாணர் யாழினை மீட்டுப் பாடி அக் கல்லினை வழிபடுதல் மரபு. “கன்றுடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகைக்குச் சிவந்த பூவுடைய கண்ணியுடனே அழகிய மயிலிறகைச் சூட்டிப் பெயரை எழுதி இப்பொழுதே கல்லை நட்டார்.” (புறம் 264.) “ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கட் டோன்றிய வீரன் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட வீரர் எய்த அம்பினை விலக்கி வென்று அவர் கொண்ட ஆநிரையை மீட்டான். தோலுரித்த பாம்பு போலத் தானொருவனுமேயாகத் தேவருலகத்தின்கட் போயினான். அவனதுடம்பு காட்டுச் சிற்றியாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த விலங்கினை ஒப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது. உயர்ந்த கீர்த்தி மிகவுந் தோன்றிய பெயர் மென்மையமைந்த மயிலினது அழகிய பீலியைச் சூட்டப் பிறர் இடங்கொள்ளப்படாத சிறிய விடத்தும் புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்ட கல்மேலது.” (புறம். 260). “கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்ட கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும்.” (மலைபடுகடாம்.) “பட்டார் பெயரு மாற்றலு மெழுதி நட்ட கல்லு மூதூர் நத்தமும்” (சேரமான் பெருமாள்) “நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும் பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல்” (அகம்) நடுகல் பெரும்பாலும் வீரவான்களுக்கு நடுவதாயினும் நிரைமீட்டு அவிந்தார் பொருட்டு நடுதலே சிறப்பு. வஞ்சி (படை எழுச்சி) தன்னைப் பணியாத அரசனைப் பணிவித்து அவனது நாட்டைக் கைப்பற்ற விரும்பிய வேந்தன், போர்வீரர் மதுவருந்தி விற்போரை விரும்ப முடியிடத்தே வஞ்சிப் பூவைச் சூடினான். சிவந்த வேலைத் தாங்கிய படையின் நடுவே உகாந்த காலத்து நெருப்பை ஒத்த யானையும் மகிழ்ந்து முழங்கா நின்றது. சோதிட நூலார் தெரிந்த நாளிலே, கடல் போன்ற சேனை யினையும், கிட்டுதற்கரிய வலியினையுமுடையராய்ப் பணிந்தெழாத வேந்தர்களுடைய வாணாள் கெடும்படி அரசன் தனது குடையையும் வாளையும் புறவீடு செய்தான். பகைவரது உள்நாட்டில் கோட்டான் குரல் காட்டிற்று. எட்கசிவும் நெற்பொரியும் அவரையும் துவரையும் நிணமும் குடரும் உதிரமும் நிரம்பிய தாழியைப் போர் வீரர் படையின் முன்னர் எடுத்துச் சென்றனர். விரைந்து செல்லும் நெருப்புப்போலப் போரிடத்து முற்படப் புகும் வீரர் பகைவர் நாட்டை அழித்து வென்றனர். அரசன் வேலை வலமாக உயர்த்தினான். ஆரந்தாழ்ந்த மார்பினையுடைய வேந்தனது கண்கள் சிவந்தன; வண்டுகள் மொய்க்கின்ற மாலையினையும் பொலிவினையு முடைய சிறுவரது அழகிய தேர்கள் ஆரவாரிக்கின்ற நாடு பாழாய்க் கண்டாரிரங்கும் படி கெட்டன. கோயில்களையும் பள்ளி யிடங்களையும் அந்தணர் இல்லங் களையும் நெருங்காது பகைவர் கெட்டோடும்படி பொருதுவென்ற வில் வீரர்க்கு வேந்தன் பல உபகாரங்களைக் கொடுத்தான். பகைவரது வேலை ஏற்றுக்கொண்ட போர் வீரர்களின் மார்புகள் முத்துமாலைகளைப் பூண்டன. வேந்தன் பகைவர் சேனையைக் கிட்டி “யாம் இன்னதன்மையினேம் என்று பிறர் சொல்லுதல் வேண்டா, மாறுபாட்டினையுடைய வேந்தர் கோபித்து என்முன்னே வருவார்களாக; வரின் அன்னோரைப் பலரும் போற்ற வீர சுவர்க்கத்துக்குப் புதியராய் அனுப்புவேன்.” எனப் புகன்றான். பகைவ ருடைய வாட்படையை வென்று யானையை வெட்டிப் புண்ணுடனே வந்த வனுடைய மகனுக்கு வேந்தன் மருத நிலங்கள் பலவற்றைக் கொடுத்தான். குயில் பாட, ஆளுலாவ, வண்டு ஒலிக்கும் தலைமையையுடைய ஊர்கள், மயிலை ஒத்த மகளிர் வேலை ஒத்த விழியைப் புதைத்துப் பயப்பட்டு அலறிமன்றென்று பாராதே ஓடும்படி நெருப்பால் உண்ணப்பட்டன. பகைவர் சுற்ற மிரங்க, அடிமைகளையும் வயிர அரதனங்களையும் முத்தினையும் பொன்னினையும் வீடுகள் வறிதாகும்படி வில்லாளர் கொள்ளை கொண்ட னர். மகளிர் கலங்கி வயிற்றில் அடித்துக்கொண்டு கெட்டோடும்படி பகைவ ரிடத்துக் கைப்பற்றிய பொருள்கள் முழுவதையும் பாண்கிளைகள் கவர்ந்து கொண்டன. அரசன் தங்கியிருந்த பாசறையிடத்து மகளிர் கூத்தாடினர்; மேளம் யாழுடன் ஒலித்தது; ஒருபால் கவிழ்ந்த மணியினையுடைய யானை மகிழ்ச்சி மிகுதியால் முழங்கிற்று. பகைவரது அளவிறந்த சேனை நெருங்கி வந்து மேலிடவும் நின்ற நிலையினின்றும் நீங்காத புலியை ஒத்த ஒருவனது வீரம் முத்தியினை அறிந்து எல்லாப்பற்று மற்றோர்க்கும் அற்புதத்தை விளைத்தது. தனக்குப் புறங் கொடுத்து ஓடுவோரைப் பார்த்து “பகைவர் சுவர்க்கலோகம் போதலைக் கருதி எதிர்க்கினல்லது புறங் கொடுத்து ஓடும் போது வீரர் வாளை ஓங்குவரோ’ எனக் கூறினான் ஓர் வீரன். கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் நெருப்பினை உண்ணப் பண்ணுவித்துப் பெரிய நீர் நிலைகள் பலவும் உடைந்ததற் பின்னும் வேந்தன் படை வீட்டில் தங்கியிருந்தான். பெருமை பொருந்திய மன்னர் நடுங்கப் பெரிய புகை ஆகாயத்தின்கண் பரக்க இரண்டாவதும் வேந்தன் தேயமுழு தும் நெருப்பை மூட்டினன். புலியை ஒத்த படைவீரர்க்கு அரசன் பெரிய விருந்தளித்தான். ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத்தின மலையை ஒப்ப ஓங்கின மாளிகைகளெல்லாம் பேய்ச்சுரையும் பேய்ப் பீர்க்கும் படர்ந்தன. பகை அரசன் தனது நாட்டகத்தே படை எடுத்து வருதலை அஞ்சிய வேந்தன் திறையளப்பின் அவற்றைப் பெற்றுச் சினந்தணிந்து நாடு செல்லு தலும் அவ்வரசற்கியல்பு. இங்கு கூறப்பட்ட போர் முதலியன பகைவர் நாட்டகத்து நிகழ்வன; நகரத்தன்று. படைகள் நாட்டைச் சூறை கொள்ளுதல் எரி கொளுவுதல் முதலிய செய்திகள் கலிங்கத்துப்பரணியில் அழகுறக் கூறப்பட்டுள்ளன; அவை வருமாறு: “கடையிற் புடையொரு கடலொத் தமரர் கலங்கும் பரிசு கலங்கப் புக் கடையப் படரெரி கொளுவிப் பதிகளை யழியச் சூறைகொள் பொழுதத்தே கங்கா நதியொரு புறமாகப் படை கடல்போல் வந்தது கடல்வந்தா லெங்கே புகலிட மெங்கே யினியரண் யாரே யதிபதி யிங்கென்றே இடிகின் றனமதி லெரிகின் றனமதி யெழுகின் றனபுகை யெழிலெல்லா மடிகின் றனகுடி கெடுகின் றனமென வலைகின் றனபடை படையென்றே.” காஞ்சி (இருந்த வேந்தன் வந்த வேந்தனை மதிற்புறத்தே சென்று எதிர்த்தல்) வேற்று மன்னன் நகர்ப்புறத்தே வருதலும் அவனது வலிமையை அழிக்கவேண்டி எயிலகத்தே இருந்த வேந்தன் முடியிடத்தே காஞ்சிப் பூவைச் சூடினான். செரு முனையிற் பொருவாரைப் பெறாமையால் போர்த் தினவு கொண்டிருந்த போர்வீரர் பூசல் விருப்பால் அணியிட்டு நின்றனர். மார்பிடத்தே வேல் பாய்ந்து சென்ற புண்ணினால் வேலைக் கையினாற் பிடிக்கவும் ஆற்றாத மேம்பாட்டினையுடைய வீரன் செருப்பறை கொட்டும் படி கூறத்துடியன் அது கொட்டா நின்றான். மாற்றரசனின் பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி புலியை ஒத்த மறவர் காத்து நின்றனர். படை வீரர்க்கு வேந்தன் வேல் வாள் முதலிய படைக்கலங்களை வழங்கினான். அன்னோர் அரசனின் ஆற்றலைப் புகழ்ந்து போற்றினர். மாற்றார் படையின் மீது போர்வீரர் அம்பு மழை பொழிந்தனர். கோபத்தையுடைய யானைகள் பலவும் தினை யரிந்த தாளினையுடைய மலையை ஒத்தன. பகைவருடன் பொரும் பூசல் இன்ன நாள் என்று நிச்சயித்த வேந்தன் தனது குடையையும் வாளையும் புற வீடு செய்தான். “இற்றை நாள் ஆதித்தன்படுவதன் முன் பகைவரை வென்று போர்க்களத்தைக் கொள்ளாத வேலை எடுப்பேனாயின் எந்நாளும் யானிருந்த அரண் கெடத்தாக்கும் பகைவர் முன்னே தாழ்மை யான வார்த்தைகளைச் சொல்லி நிற்பேனாவேன்” என மன்னன் வஞ்சினங் கூறினான். கடலைப் போல் ஒலிக்கும் போர்வீரர் பூசலை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக அரசன் வழங்கிய காஞ்சிப் பூவைச் சூடினர். பகைவர் போரினைத் தடுத்துத் தூசிப்படையை எதிர்த்து இறந்தவன், இப் பூமியிற் சிறப்பித்துச் சொல்லும் புகழினை எல்லாம் பெற்றான். பகைவரது தலைமைபெற்ற வீரனுடைய தலையைக் கொண்டுவந்தவர்களுக்கு அரசன் மிக்க பொருளைக் கொடுத்தான். போர்க்களத்தே பட்டவனது தலையை அவன் மனைவி பார்த்துக் கொங்கையாற் றழுவினாள்; ஒளி சிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; உயிர் மேலே பறிந்தது. கறுத்த தலையையும் வெள்ளை நிணத்தையும் சிவந்த தசையையும் பருந்துங் கழுகும் இழுத்துக் கொண்டு செல்லும்படியாக வேந்தன் பூசல் விளைத்தான். பகைவரது மாறுபாட்டைப் பொறானாகி வேல்பட்ட தனது மார்பின் புண்ணைக் கிழித்து இறந்தான் ஒரு வீரன். பெண்பேய் அச்சந்தரும்படி உதிரமாகிய புலாலிடத்துக் கிடந்து அழல நோக்கும்; வீரரைப் பார்த்துச் சுழலும்; நீளும்; குடர்மாலையைச் சூடித் தன்னுள்ளம் விரும்பிச் சிரிக்கும்; போம். அகன்ற இல்லிலே கணவனுடைய புண்ணைமனைவி பரிகரிக்க நான்ற முலையினையும் பெரிய வாயினையு முடைய பேய்மகள் அவனைக் கிட்டி இருளின்கண்ணின்று கோபித்துப் பார்த்து நெருப்பைக் கக்கிக் கிட்டப்போய் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தீண்டினாள். அவன் உயிர் பறிந்தது. இன்னோர் வீரனது புண்ணை வெண்சிறு கடுகு தூவிக் குங்கிலியம் முதலிய நறுநாற்றத்தைப் புகைப்பித்துக் குறிஞ்சிப் பண் பலவற்றைப் பாடி மலரிட்டு மனைவி பரிகரிக்கப் பேய்மகள் அஞ்சி விலகினாள். பூமியிலுள்ளார் மயங்கப் பூசலுக்குத் தெப்பமனையவனும், தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை ஒப்ப வனும் உயர்ந்தோர்க்குத் தாணு ஒப்பவனும் வீரசுவர்க்கத்தை எய்தினான். தறுகண்மை மிக்க வீரர்க்கு களித்தாடும்படி மன்னன் வெவ்விய கள்ளைக் கொடுத்தான். சக்கரத்தாலேபட்ட புண்ணால் ஆவி இகந்த தனது கணவ னோடு தானும் நெருப்பிலே விழ வேண்டி மகரக்குழையை அணிந்தவள் தோழிமாரை “அகலப்போமி” னென்று கூறினள். ஒருத்தி தனது தலைவனது மார்பைப் பிளந்து உயிரைப் போக்கிய வேலால் தனது உயிரை ஒழித்தாள். மகட்கேட்ட அரசனது வேண்டுகோளைச் சினமிக்க மன்னன் மறுத்துரைத் தான். வீரக் கழலினை யுடையவன் வெற்றிக் கொடியான் மிக்க யானைகளை ஏவிப் பகைவரைச் செருப்புலத்தினின்றும் துரத்தினான். “தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்கு மருப்பியா ழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழுதிழகி யையவி சிதறி யாம்ப லூதி யிசை மணி யெறிந்து காஞ்சிபாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ” (புறம். 281) நொச்சி (மதிற்புறத்தே சென்று பொருதிய காஞ்சியார் எயிலகத்தே சென்று மதிலைக் காத்தது) கூரிய வேலினையுடைய போர்வீரர் நொச்சிப் பூவைக் கொண்டை யில் மிலைந்து சிவபெருமான் அழித்த திரிபுரத்தைக் காக்கும் அவுணரை ஒப்பத் திங்கள் ஊரும்படி உயர்ந்த மதில்களினின்றும் மலைந்தனர். மாற்றாரது போர் வீரர் பலர் வீரசுவர்க்கம் ஏகினர். சங்கும் கொம்பும் முழங்க வாள் வீசிக் காவற்காடு அழியும்படி காவலைக் கெடுத்த பகைவர் சேனை கெடும்படி மதிலிடத்து வீரர் பொருது ஆர்த்தனர். முட்செடிகள் பின்னிய காவற்காட்டையும் சிவந்த பூவுடைய பெரிய அகழியினையுங் காத்து நின்ற சிங்கமொத்த வீரர் மடிந்தனர். பரந்த மார்புகளினின்றும் உதிரம் பெருகிய விடத்தும் எயிலகத்தே உள்ளார் வெளியே சென்று பகைவரைக் கொல்லுதலை விரும்பினார்கள். வீரக் கழல் பொலிந்த வலிய கால்கள் அரணின் உள்ளே வீழ்ந்தன; போரினைச் செய்யும் திண்ணிய தோள்கள் மதிலின் புறத்தே வீழ்ந்தன; தெய்வ மகளிர் கொண்டாட போர்வீரர் வீரசுவர்க்கத்தை அடைந் தனர். கிடுகுப் படையாரை வென்று பகைவர் எதிர்த்தனர். அவர்கள் மதிலிற் காலிடாதபடி மதிலின்மேல் நின்றவீரர் பிணங் குவியும்படி வாளோச்சி வெட்டினர். கரிய கண்ணினை யுடையவளது கட்டிலின் கால்கள் மாற்றரச னின் இளைய யானையின் தந்தத்தினால் செய்யப்பட்டன. உழிஞை (மதிற்புறத்தே நின்று பொருத வஞ்சியார் மதிலை வளைத்துக் கைப்பற்றி நகரைப் பாழாக்கியது) மட்டஞ் செய்த மாலையை அணிந்த வேந்தன் முடியிடத்தே உழிஞை மாலையை அணிந்து கொடியசையும் பகைவர் கோட்டையைக் கைப்பற்ற நினைந்தான். நினைந்து கோட்டையைக் கைப்பற்ற ஓர் நல்ல நாளை நியமித்து குடையினையும் வாளினையும் புற வீடு செய்தான். (மலர் மாலை யணிந்தவனது வீர முரசம் மழைபோல் முழங்க வெற்றியையுடைய யானை குத்தக் குலைந்து வீழாத மதிலுமுண்டோ) ஆழ்ந்த கிடங்கினையும் மேகந் தவளும் ஞாயிலையுமுடைய மதிலைக் கைப்பற்ற விரும்பிப் பிரகாசிக்கின்ற வேலினையுடைய வேந்தன் வெற்றிக் கொடியையுடைய படையை ஒன்று சேர்த்துக்கொண்டு புறப்பட்டான். செல்வத்தையும் வெற்றியையுமுடைய அரசனுக்குக் கைகூடாதன இல்லை. சிவந்த சடையை யுடைய சிவபெருமானும் உழிஞையைச் சூடித் திரிபுரங்கள் மூன்றையுஞ் சுட்டான்; ஆதலின் உழிஞையின் பெருமையை அறிபவர் யார்! வீரக் கழலை யணிந்த அரசன் பகைவர் புகுமிடமும் ஓடிப்போகு மிடமுமின்றி பகைவர் எயிலை வளைத்து அவரது அரணத்தின் பக்கத்தே பாடி வீடு கொண்டிருந்தான் (மாயப்போர் செய்யவல்ல வேந்தனது மதிலை மயிலின் கணத்தை ஒத்த மகளிர் மதுத் தெளிவை ஊட்ட வீரக்கழலணிந்த உழிஞையார் விழி நெருப்பைச் சிந்த, அரணிடத்துள்ளார் பலரும் படப்பூசல் செய்தாலும் வெற்றிபெறுதல் அரிது.) “நிலைநின்ற கீர்த்திபோக நிலையில் லாத உயிரைக் காத்து இற்றைநாளிலே நாம் இவ் வெயிற்புறத்துத் தங்குவது நமக்குத் தாழ்வு; பகைவர் குறும்பினைக் கைப்பற்றவேண்டில் கிடுகுப்படை யார் கொள்ளல் எளிது” என்று அரசன் கூறினான். போர் யானைகள் கணைய மரங்களை மருப்பினாலே பெயர்த்துக் கதவுகள் ஒடியப்பாய்ந்தன. உழிஞை யாருடைய வாள்கள், காவற்காட்டிடத்தே பொரும்வீரர்கள் வென்னிடும்படி அவர்கள் மார்புகளிலே தங்கின. பரிசையினை எடுத்துச் சூழ்ந்து நின்றாடு தலை விரும்பிய உழிஞைவீரர், இயந்திரங் களமைந்ததும் பதுக்கிடங்களு முடையதுமாகிய மதிலின் நெற்றியிலே மலையிடத்துச் சென்று புகும் புட்களை ஒப்பக் கடுகிக் கிட்டினார். (ஆளைப் பற்றும் முதலையினை யுடையகுழிந்த அகழிடத்தே வாளினையுடைய மன்னன் வந்து விட்டான்; வளையலணிந்த பெண்கள் பெருமூச் செறியும்படி மதிலிடத்தே வெல்லு தற்கரிய போர் நிகழும் போலும்) சிவந்த மலர் நிறைந்த கிடங்கிலே ஓடமும் ஒருமுகத் தோணியுங்கொண்டு போர் செய்தனர். இரத்தஞ் சொரியும்படி அம்புகளாற் துளைக்கப்பட்டோர் அகழின்கண் மாண்டனர். குதிரைப் படையினையும் யானைப்படையினையுமுடைய உழிஞையாரை இடங் கணியும், அரவும், நெருப்பும், கடிகுரங்கும், வில் இயந்திரமும், அயிலும் இவையனைத்தும் உட் புகுதாதபடி விலக்கவும், அவர் அரணிடத்துப் பல ஏணிகளைச் சாத்தினர். சாத்திச் செங்கல்லாற் செய்த உயர்ந்த மதிலைச் சூழ்ந்து நீங்காராய் வேல் மார்பிலே பட்டு உருகிப்போக இறந்தார் அல்லாத மற்றையோர் பாம்பும் உடும்பும் போல ஏறினர். உயர்ந்த மலை உச்சியி னின்றும் இரையைப் பூமியிலே கண்டு பாயும் பறவைக் கூட்டம் போல முழவெனத் திரண்ட தோளையுடைய வீரர் அரணிடத்துப் பாய்ந்து இழிந்து ஆரவாரித்தனர். சிவந்த கண்ணினையுடைய வீரர் மதியை ஒத்த வதனத்தையுடைய மகளிர் அலற உயர்ந்த மதிலிலுள்ளாரை வென்றனர். விடியற்காலையில் அரணின்கண் முரசு ஒலித்தது. வெற்றியை விரும்பிய வேந்தன் மாலைப் பொழுதே சோறடுவோமென்று அரணினுள்ளே அகப்பையை எறிந்தான். பகைவர் யானையையும் தோட்டியையும் அவன் கைப்பற்றினான். 1சித்திர மெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது கவடியும் குடைவேலும் வேந்தன் வித்தினான். இரத்தக் கறையுள்ள தனது வீரவாளை தீர்த்த நீரும் மலருஞ் சொரிந்து மஞ்சனமாட்டி அரணிடத்தே களவேள்வி வேட்டான். அவன் தன்னைப் பணியாத வேந்தனின் மகளை வதுவை செய்தான். மாற்றார் திறை அளக்க கொற்றவேந்தன் அதனைப் பெற்றுத் தனது நாடு திரும்பினுந் திரும்புவன். அன்றேல் பகைவர் நாட்டில் சிறிது காலந் தங்கித் தனது ஆணையை நாட்டிச் செல்லினுஞ் செல்வன். தும்பை (போர்) குற்றந் தீர்ந்த புகழினையுடைய மன்னன் போர்க்களத்தே ஒழுகுங் குருதி சூழ்ந்த பூசலை நினைந்து முடியிடத்துத் தும்பைமாலையைச் சூடினான். அவன், போர்வீரர்க்குப் போர் வெல்லும் அடையாளங்களையும் (பட்டங்களையும்) சிறு நாடுகளையும் மருத நிலத்தையும் கொல்லும் யானையையும் குதிரையையும் கொடுத்து அருள் செய்தான். பிரகாசிக்கின்ற வேலினையும் தலைமையினையுமுடைய கடல் போன்ற சேனை பகைவர் அஞ்சும்படி சென்றது. மாலையணிந்த அரசரது தசையினையும் உயிரையும் உண்ண வேண்டிக் கடல் போன்ற சேனையுள் கழுகும் கூற்றும் தன் பின்னே செல்ல யானை வெகுண்டது. பகைவரது சவளப்படையும், விற்படையும், வேற்படையும் வந்த வகையறியாது செய்யும் வாட்போரிடத்து அரசனது குதிரை வில்லிற்றொடுத்த அம்புபோல் வந்தது. “பகைவருடைய தூசிப் படையை ஒளி பொருந்திய வாளுடன் யான் நின்று தடுப்பின் அது சிறிய விளக்கின் முன் பெரிய இருளைப் போல் இரிந் தோடும்” என்றான் ஓர் வீரன். அரசன்மீது சென்ற மலையை ஒத்த யானை வேல் வீரன் கைவேல் படுதலால் கருமுகில் போலக் கீழ்மேலாய் வீழ்ந்தது. அரசனது அழகிய தேர் பிணத்திரளின்மேல் ஊர்ந்து உதிரவெள்ளம் தேர்க்காலைத் தொடர வரா நிற்கும். தம் மனைவியும் தாயும் சிறுவரும் அறியாது யானையை எறிந்து போர்க்களத்துப்பட்டோர்க்குப் பாணர் பறந்தலையிலே நெருப்பை மூட்டிச் சாப்பண் பாடினர். அவ் வீரர்க்குச் சுவர்க்கத்துள்ளார் நல்ல விருந்தைச் செய் தனர். போரிடத்துக் காலாள் வெள்ளம் இரிந்தோடவும் தான் போகானாகி வாட்படை நெருங்கி வரத் தறுகண் வீரன் அழல்போற் கோபித்து யானைப் பிணத்தின் நடுவே நின்றான். சிவந்த கண்ணினையுடைய மறவன் தோளே கொம்பாக மதர்த்த எருமை யேறுபோலக் கை வேலை யானைமீது எறிந்து மேல்வரும் படையை விலக்கி நிராயுதனாய் நின்று வெற்றிகொண்டான். பகைவர் மார்பை உருவின வேலைக் கையிலே கொண்டு, வீழ்ந்த குடரைச் சூடிஆடும் சுழலும்விழியையுடைய பேயினைப்போல் ஆடுதலை விரும்பி னான் ஓர் வீரன். (வீரக் கழலணிந்த வீரன் தன் மார்பைப் பிளந்த வேலைப் பறித்துக் கையிடத்தே கொண்டான். வேந்தர் கதி இனி என்னாமோ.) அரசனது தேரிலே நாட்டிய கொடிகள் மின்னலைப்போல் அசைந்தன. பாணிச்சியரும் வீரரும் தேரின் பின்னே ஆடினர். நிணத்தைக் கொண்ட வாயினையுடைய பேய் அரசனது தேரின் முன்னும் பின்னும் சாயைபோல் ஆடிற்று. ஆனையை எறிந்து அதன் கீழ்ப்பட்ட வேலையும் வீரக்கழலையுமுடைய வீரன் மலை பறிந்து வீழ அதன் கீழ்ப்பட்ட சிங்கத்தை ஒத்தான். பகைவர் சேனை மடிந்து கிடக்கும் கொலைக் களத்தே வாள்வீரர் அரசனுடனே வாளை அசைத்து ஆடினார். பகைவரது வலியைக் கவனியாதும் வாளை உறையினின்று எடாதும் யானைவீரர்க்கும் தேர் வீரர்க்கும் குதிரைவீரர்க்கும் நிலைத்தூண்போல் களத்தே நின்றான் ஒரு வீரன். வேற் போரிடத்து உயிர்நிலையான எவ்விடத்தும் வேல்தைப்பச் சிவந்த கண்ணினையும் புலால் நாறும் வாளினையுமுடையனாய் நிலத்தில் விழாது நின்றான் ஒரு வீரன். இளமையினையுடைய குலமகளிர் தங் கணவரின் அம்புபோழ்ந்த புண்ணுடைய மார்பைத் தழுவினர். வளையலணிந்த மனைவியர், பகைவர் வாளாற்றுணிபட்ட வெற்றிச் சிங்கத்தை ஒத்த கணவரைப் பார்த்து உள்ள மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டனர். வேந்தன் விண்ணுலகடைந்தானாக வீரன் வாட்போரிலே உயிரை விட்டான். வேலையுடைய வேந்தரிருவரும் போர்க்களத்துப்பட்டனர். அவர் தேவியரெல்லாம் கடிதாயெழும் தீயிற் குதித்தார்; இதனினும் கொடுமையுண்டோ! கூற்றத்தின் வயிறு நிறைந்தது.. வாகை (வெற்றி) கடல்போன்ற சேனையினையுடைய அரசனைக் கொன்று வேந்தன் இலை விரவித்தொடுத்த வாகைமாலையைச் சூடினான். வேந்தன் வாள் வீரரை நோக்கி, “இனிமேல் துயரமில்லை, போரிடத்து வேல்பிளந்த சீரிய புண்கள் இத்தன்மையாயின; வீரக்கழலினையும் மாலையினையும் கச்சினையும் அணிமின்” எனக் கூறி அவற்றை அளித்தான். பூமியினை வேந்தன் காக்கின்றான். இவன் காத்தலால் பல்லுயிர்க்கும் மகிழ்ச்சி ஒழியாது. அவன் ஓதல் வேட்டல் ஈதல் படைக்கலம் பயிற்றல் பல்லுயிரோம்பல் என்னும் ஐந்தொழிலினையும் நான்கு வேதத்தையும் மூன்று தீயினையும் இரு பிறப்பினையும் பகைவரிடத்துத் தறுகண்மையையும் குளிர்ந்த அருளினையு முடையன். படை எழுச்சிக் காலத்து இடிபோன்று முழங்கிய முரசு அரசனது உயர்ந்த மாளிகையிடத்து ஓசையைச் செய்தது. அச்சந்தரும் போர்க்களமாகிய பெரிய வயலுள் பகையாகிய விதையை விதைத்துக் கீர்த்தியை விளைக்கும் வேலாகிய கோலினையுடைய உழவன் (அரசன்) காத்தலால் எம்போல்வாரிடத்து வறுமையடையாது. மகுடத்தலையாகிய மிடாவில் தோளுடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள் வளையுடைய கை அகப்பையாக மூளையாகிய அழகிய சேற்றை முகந்து, பிறழ்ந்த பற்களை யுடைய பேயுண்ணும்படி கொடியோடுகூடிய மன்னன் வழங்கினான். பகை மன்னர் நடுங்கும்படி வெட்டிக் களவேள்வி வேட்டவனது முரசு முழங்க வென்ற தேரின் முன்பு “அழியாத நன்மையைச் செய்தவன் நெடுங்காலம் வாழ்வானாக” எனச் சொல்லி பறட்டை மயிரினையுடைய பேய் கூத்தாடிற்று. வெற்றி வீரரும் இனிய மொழியையுடைய பாணிச்சியரும் கைகோத்து நின்று அரசனை வாழ்த்திக் கூத்தாடினர். நான்கு வேதத்தையும் உணர்ந்த அந்தணர் யாகங்களை இயற்றி அரசனது வெற்றியைச் சிறப்பித்தனர். உழுது அதன் பயன் கொண்டு, ஆநிரையை ஓம்பிக் குற்றமில்லாத பண்டங்களை விற்று நான்கு வேதம் முதலியவற்றைக் கற்று, அழலோம்பி, பொருளைச் சீர்தூக்காது கொடுக்கும் கொடையான் முதல் வணிகர் எல்லார்க் கும் தலைமையுடையர். முற்கூறிய மூவர் ஏவலையு மேற்று நீதிநூல் வழி ஒழுகி கழனியை உழுபவன் பூமியிலுள்ளார்க்கெல்லாம் உயிரெனத் தக்கவன். அறிவான் மிக்கோர் சூடாறிய பின்னல்லதுசாம்பர் பூத்ததழலைக் கையில் ஏந்தார்; அதுபோல, கடல்போன்ற சேனையுடையேம் யாமென்று மதித்துப் பகைவரை இகழார் மேலோர். நாகலோகம் பூலோகம் சுவர்க்க லோகம் என்னும் மூன்று லோகத்தினுமுள்ள இருளைப் போக்கும் சூரியனைப் போல இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் மூன்று காலத்தையு மறிதலால், தம்மில் தாம் மாறுபட்டுப் பால் புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் சான்றோர் மெய் மொழிகள் எக்காலத்தினுந்தப்பா. துறவோர் நீரில் பலகால் மூழ்கி வெறுநிலத்தில் படுத்து மான்றோலை ஆடையாக உடுத்து சோர்ந்த சடை வீழத் தீயோம்பி ஊரிடத்துச்சேராராய் காட்டிலுள்ள கீரைகளையும் மூலங்களையுங் கைப்பற்றித் தெய்வத்தையும் விருந்தையும் போற்றுவர். கொடியசையும் தேரினையுடைய அரசன் கவர்பட்ட தெருவில் வீரர் தழையாற்பண்ணின கூரையுடைய பாசறையிற் றங்கியிருக்கும் மனைக் கிழத்தியை அணைதலை நினையான். அவன் வாடைக்காற்று வருத்தத் தலைவியின் தோளைச் சேர விரும்பிப் பாசறையின்கண் இருந்தான். மயிர்க் கண் முரசு ஒலிப்ப ஆதித்தனை ஒப்ப நாவலந்தீவின்கண் எல்லாவுயிர்க்கும் செங்கோல் செலுத்தல் அரசனுக்கு முறைமை. புகழினையும் முத்தியினை யும், நான் மறையையுமுடைய அந்தணன் சந்துசெய்யச் சென்றானாகில் மன்னர் பகை தணிந்து மீள்வர்.அரசனது அவைக்களத்துள்ள சான்றோர்கள் வினாவையும் விடையையும் கவனித்து நடுவு சொல்வர். சோதிடவர் சோதிட நூல் உணர்ச்சியால் இப்புவியில் நிகழ்பவை எல்லாவற்றையும் நிச்சயித்துக் கூறுவர். மறக்குடியிற் பிறந்தவள் தங்கள்மேல் எடுத்து வந்த சேனையைப் பொறாளாய் பிள்ளை வாயின் முலையை வாங்கி முன் பகைவரைக் குத்தி வளைந்த வேலின் வளைவை நிமிர்த்தி தன் மரபிலுள் ளோர் நடு கல்லைக் காட்டிப் பிள்ளையைப் பூசலுக்குப் போவாயென்றாள். மறக்குடியிற் பேதை யானவள் “கல்லிலே பொருந்தி நின்றான் என் தகப்பன், என் கணவன் போர்க்களரியிலே பட்டான்; பகைவர் முன்னே நின்று எதிர்த்துப் பூசலிலே விழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை கெடவும் கெடாதே பின்னின்று தன்கை அம்பைச் செலுத்தவும் பகைவர் மேலே சென்று எய்பன்றி போலக் கெட்டுக் கிடந்தான் என்னுடைய மகன்” எனக் கூறி மகிழ்ந்தாள். பகை அரசனது மார்பிடத்தே வாளழுந்தப் போர் செய்த வனது வீட்டின் முன் வேட்டையாடும் சிறு பிள்ளைகளின் எதிரே முயல்கள் பாயும். வேந்தன் நாடு காத்தற்றொழிலை ஒரு நாள் தவறினும் பிறப்பு முதலிய எண்வகை இயல்புடைய பெரியோர் தன்மை நிலைபெறாது. மன்னுயிரைக் காத்து ஆறிலொரு கடன் பெற்று அதனைப் பிறர்க்கும் கொடுத்துண்டு சுவர்க்கத்தை எய்திய பிதாவின் நெறியை மன்னன் மேற்கொண்டான். வாட்சேனை உடையும்படி வென்று மத் தவாரணங்கெட்டோடும்படி வேந்தன் போர்க்களத்தைக் கொண்டான். வேந்தன் வீரனுக்கு அவன் விரும்பியதைக் கொடுக்கவும் அவன் அவற்றைக் கொள்ளானாகி உயர்ந்த வார்த்தை பலவற்றைச் சொன்னான். கீர்த்தியையுடைய வேந்தனது குடைக்குப் போர்வை ஆகாயம்; இலங்கும் பகுதி மேல்வட்டம் மேகம்; எதிரே சொரி யும் நீர்த்தாரை, சூழத் தூக்கப்பட்ட முத்துகளாகும்; சந்திராதித்தர் வழங்கும் மாமேரு காம்பாகும். இயமனை வருத்தும் வேலினையுடைய வேந்தனது வெண்கொற்றக் குடைக் கீழ் உலகம் தங்குதலால் அவனது கண்கள் கோபித் தலின்றி உறங்கின. வாட் பூசல் என்னும் நெருப்பிலே வீரர் செஞ் சோற்றுக் கடனாகிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார். அவ் விடத்து வீரர் கிட்டுதற்குரிய வீரசுவர்க்கமுள்ளது. சங்கு போன்ற சான்றோர் தூய்மை வானத்து விளங்கும் நிறைமதி ஒப்பநிலை பெறுவதல்லது, மரக் கலம் பிளந் தோடும் குறையாத கடலிடத்துப் பல பொருளினைப் பெறினும் மாறு படுமோ. கிணைப் பொருநன் ஆமையின் வயிறு போன்ற கிணையின் மாசைத் துடைத்து ஏர் வாழ்கவென்று சொல்லி நெற்போரையுடையவனது செல்வத்தை வாழ்த்த எங்கள் மிடி நீங்கும். இனி மூப்பும் ஆம்; இளமையும் கழிந்தது; நோய் தாமும் இனிமேல் வரும்; பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் மேற்கொள்ளச் சீவியாது விசேஷமாகிய பஞ்ச விருத்தியை நல்லறிவு செய்வ தாக. சரீரம் அழிவதற்குமுன் நன்னெறிக்கண் செல்லுதல் உறுதியுடைத்து. (வாகைத் திணையின் கண் பற்பல தொழில்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.) பாடாண் (ஒருவனுடைய கீர்த்தி, வலி, கொடை, தண்ணளி முதலியவற்றைப் பரிசில் வேண்டிய புலவன் ஆராய்ந்து சொல்லுதல்.) பூவாற் றொடுத்த மாலையினையும், அழலும் சினத்தையும் வேற்படையையுமுடைய எம்முடைய அரசன், அரசர் பலர்க்குஞ் சிங்கம்; அந்தணர்க்குப் புகழ்மாலை; அன்ன நடையினையுடைய மகளிர்க்கு நிறைந்த அமிர்தம்; இரவலர்க்கு மழை என் வேந்தனின் தண்ணளியையும் கொடையையும் புகழ்ந்து சென்ற புலவன், வாயில்காப்போனை நோக்கி, “கொடி உயர்ந்த மதிலின் வாயிலிடத்துள்ளவனே! என் வரவை அரசற்குச் சென்றுணர்த்துவாய்” எனப் புகன்றான். வாயில் காப்போனால் அனுமதி பெற்று உட்சென்ற புலவன் வேந்தனைத் திருமாலோடு உவமித்துப் புகழ்ந்து, “எங்கள் தரத்தினை நினையாது மகிழ்ந்து போர்க்களத்தே பகைவரிடத்தி னின்றும் கைப்பற்றிய யானைகளையும் திரவியங்களையும் மழைபோல் வழங்குஞ் சீரிய வேந்தே! முல்லைக்கு பொற்றேரும் மயிலுக்கு மணிப்போர் வையும் உலகத்திலே புகழ் விளங்கும்படி கேளாதே கொடுத்த உபகாரிகளை ஒப்ப நீயும் ஒளியாது பரிசில் வழங்கல் கடன்” எனப் புகன்றான். பகைவரை வென்று செங்கோல் செலுத்திப் பூமியிடத்தே கொடு மையை நீக்குதலால் துயில்கொண்ட வேந்தனை “பூமியிடத்துள்ள அரசர் திறை அளக்க வந்து நிற்கின்றாராதலின், வேந்தே! தாமரை மலரை ஒத்த கண்களை விழித்துத் துயில் ஒழிக” எனக் கூறிப் பாணன் துயில் எழுப்பினான். துயில்விட்டெழுந்த அரசன் முன்னே பாணன், “பகைவர் சுவர்க்கத்தை விரும்பின் உன்னோடு மாறுபடுவர்; உலகை ஆள விரும்பின் உன்னை வணங்குவர்” என மங்கலங் கூறினான். காற்று வீசுமிடத்து விளக்கு வலமாகச் சுழன்று வேந்தனது வெற்றியை அறிவிக்கும். ஆதித்தன் முன் ஆகாயத்தின்கண் விளங்கும் நட்சத்திரங்கள் ஒளியின்றி மறைந்திருப்பதுபோல கொடியுடைய தேர் வேந்தன் முன் அரச அவையிடத்து வேந்தர் திரள் ஒளி மழுங்கிற்று. காவல் முரசம் முழங்க வேந்தன் பசுத்திரளை மணியுடனும் பொன்னுடனும் அந்தணர்க்குத் தானம் பண்ணினான். அழலாகிய நாவினால் தேவர்கள் அவியை அருந்தும்படி அரசன் யாகம் வேட்டான். ஆகாயத்திலுள்ள வெள்ளி ஒளிவிடும்படி மேகம் நாட்டில் மழை பொழிந்தது. வெற்றி வேலையுடைய அரசனது நாடு 1எட்டு இடர் ஒழிந்தது. கழனியில் நீலோற்பலம் கண்போல் மலர்ந்தது. வயலாமையினது வயிற்றை ஒத்த கிணையை உபகாரியின் தலைவாயிலிற் கொட்டி, “யானை வாழ்வதாக” என்று கூறுவதன் முன்னே என்னிடத்தினின் றும் துயர் ஒழிந்தது. (கிணைப்பொருநன் கூறியது) வேந்தே! முற்றிய மதுவை விலைக்கு விற்குமவள் அதன் விலைக்கு பருந்துகள் திரண்டு சிறகடிக்கும் போர்க் களரியில் யாம் விரும்பிக் கைக்கொண்ட யானைகளை விரும்பாள்.2 அரசர் நின்று வாழ்ந்த வெற்றி வேந்தன் சிங்காசனத்தின்மீது நாவலந் தீவுக்கு வேந்தனாகிச் செம்மாந்திருந்தான். பூமியிலுள்ளோர் வாழ்ந்த அவன் தன் மயிர்ச்சிகையைக் கூட்டி முடிந்தான். அரணினை யுடைய வேந்தன் வேய் போன்ற தோளினையும், கூரிய பல்லினையும், சிவந்த வாயினையுமுடைய காமவல்லியனையாளை மணமாலைசூட்டினான். அவனுக்குச் சிவந்த வாயினையும், பெரிய கண்ணினையுமுடைய மைந்தன் பிறந்தமையால் தேவுக்கள் மகிழ்ந்தனர்; பகைவர் மாறுபாடொழிந்தனர்; பூமியிலுள்ளார் வாழ்த்தினர். அவனது (அரசன்) பிறந்த நாளில் இரவலர் யானையும் பொன் னும் பெற்று மகிழ்ந்தனர்; பகை வேந்தரும் சங்கு வளை அணிந்த பெண் களின் மார்பை விரும்பி இந் நாளிற் படைஎடாரென்று அரணங்களிற் கதவுத் தாழ்களை தாமே நீக்குவர். குதிரை பூட்டிய தேரை அரசன் இரப்போர்க்கு வழங்கிய பின் விடை யளிக்கத் தாழ்ந்தான்; இரவலர் பரந்து நின்ற தோற்றம் பகைவர் நாட்டில் கடல் போன்ற சேனை பரந்து நிற்பது போன்றது. முடி மன்னர் பணியும் பாதங் களையுடைய அரசன் யானை, தேர், குதிரைகளைப் பாணர்க்கு வழங்கிப் பின்னே (ஏழடி) சென்று விடையளித்தான். விருந் தினரை வருக வென்று சொல்லும் புண்ணியத்தையுடைய வேந்தன் உயிர் களை மகிழ்ச்சி பெறக் காத்தலால் நிலையாகிய புகழோடு அவன் நெடுங் காலம் வாழ்வானாக. யாழ்வல்ல பாணனே! எங்களை ஒப்ப யானை இயங்கும் காட்டைக் கழிந்து அரசனை அடையின் பொற்றாமரை மலரை அவன் நின் தலையிற் சூட்டுவான் (பாணாற்றுப்படை) கொல்லுஞ் சிலை போன்ற புருவத்தினை யுடைய வஞ்சிக்கொம்பன்ன விறலியர் நிருத்தத்துக்குத் தலைவனே! மேகத்தை வென்ற கொடையுடையவன் வழங்குஞ் செல்வத்தைத் தொகுத்துக் கொள்வதற்குத் தவறாது செல்வாயாக (கூத்தராற்றுப்படை). தெருவிலே சுழன்று திரியும் கிணையினையுடைய பொருநனே! போரை விரும்புவோனிடத்துச் செல்வையாகில் உயர்ந்த களிற்றின் நிரையைப் பெறுவாய் (பொருநராற்றுப்படை). வளையுடைய கையினையும் சிவந்த வாயினையுமுடைய பாண்மகளே! போரிற் சிறந்தவனது கீர்த்தியை வாழ்த்திப் போவாயாயின் அவையின் கண்ணுள்ளோர் புகழ ஆபரணத்தைப் பூண்டு மலர்ந்த மல்லிகையை ஒப்பப் பொலிவு பெற்று இப் பொழுதே மீள்வை (விறலியராற்றுப்படை) வெல்லுகின்ற சேனையையுடைய மன்னன் எம் முடைய வார்த்தையை எள்ளாது ஏற்றுக்கொள்வானாயின் பகை இரிந் தோடக் கடல் சூழ்ந்த பரந்த உலகத்தை அங்கையிடத்தே கொள்வான். (வாயுறை வாழ்த்து) மாலை வேந்தே! வேதியர் சான்றோர் அருந்தவத்தோர், தகப்பன், மாதா முதலியோர்க்கு முன்னோர் செய்த முறையில் நின்று, பின்பு ஞாலத்து வார்த்தையைக் கேட்பது வழக்கு (செவியறிவுறூஉ) அரசனது உயர்ந்த கொற்றக்குடை தன்னுடைய நிழலில் வாழ்பவர்க்கும் குளிர்ந்த நிறைமதியாகும்; பகைவர்க்குக் கொடிய வெய்யிலாகும். தேன் மலரும் சுருள், குரல், அளகம், துஞ்சுகுழல், கொண்டையென்னும் ஐந்து பகுதியாயமைந்த கூந்தலையுடைய பெண்கள் அகன்ற மாளிகைகளிலிருந்து அரசனது உயர்ந்த வாள் வெற்றியை வேண்டிச் சினம் அழலும் மன்னன் கங்கை நீரை ஒத்த தீர்த்தத்திலே மங்கல நீராடினான். போர்க்களத்தே பகைவரை வென்ற மன்னவனே! கடல் சூழ்ந்த வையகத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் வென்று படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறினையும் பெருக்கி1 ஏழினையுங் கடிந்து இனிமையுற்று நெடுங் காலமிருப்பாயாக. வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப நாவலந்தீவிடத்து மாமேருவைப்போல நிலை பெறுவாயாக. பல யானைகளையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த மாலை யணிந்த வேந்தனது வீரக்கொடி திருமாலின் கருடக் கொடிபோல் உயர்ந்தது. ஒள்ளிய சடையையுடைய முருகனுக்கு ஆடும் வெறியாட்டை விரும்புவை யாயின் வேடத்தை உடையோய்! அருவியாற் பொலிந்த திருவேங்கடத்துப் போவையாயின் சக்கரத்தையுடைய கடவுள் இந்திரியங்கட்கு மயக்கந்தரும் காசினியில் துயரெல்லா மொழிய அருளை வழங்கும். சூடிய பிறையையுடை யோய்! இப்பூமியினின்றும் பிழைத்து நன்னெறிக்கண்ணே போவே மென்று சொல்லிப் பழிச்சி சுடுகாட்டில் ஆடிவருத்தந் தீர்ந்த நின் பாதங்களைப் பல காலும் வணங்குவோமாக. திருக்கூத்தாடுதலை மேவினவன் சீபாதங்களைச் சேர்ந்தார் என்பெறார். 2. புறப்பொருள் (தொல்காப்பியத்திற் கூறியபடி) வெட்சி ஓர் அரசன் பிறிதோர் அரசனோடு போர் செய்ய விரும்பினான்; விரும்பிய விடத்துத் தனது படைத்தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றோரையும் ஏவி பகைவரது ஆநிரைகளைக் களவினாற் கொண்டுவரும் படி பணித்தான்; அங்ஙனம் கொண்டுவரப்பட்ட ஆநிரைகளைப் பாதுகாத்தல் வெட்சி எனப்படும். நிரையினைப் பறிகொடுத்தோர் அவற்றை மீட்டலும் வெட்சியில் அடங்கும். நிரை கவருமிடத்தும் அவற்றை மீட்குமிடத்தும் நிகழும் பதினான்கு செய்திகள் ஆசிரியராற் கூறப்படும். (1) நிரை கவர்தற்கு எழுந்த படை பாடிப்புறத்துத் திரளுமிடத்து அரவமெழுதல்; (2) போர்வீரர் பாக்கத்தே இருளில் நல்வாய்ப் புட்கேட்டல்; (3) கேட்டபின் பகைவர் நிலத்து ஒற்றர் உணராமற் செல்லல்; (4) சென்று ஒற்றர் வாயிலாகப் பகைவர் செயலை அறிதல்; (5) அறிந்து நிரைப்புறத்து ஒதுங்கியிருத்தல்; (6) புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டு நின்ற நிரைகாவலரைக் கொல்லுதல்; (7) எதிர்ப்போர் இலராக நிரையை அகப்படுத்தி மீள்தல்; (8) தம் பின்னே தொடர்ந்து சென்று ஆற்றிடைப்போர் செய்தாரை வெற்றி கொள்ளல்; (9) சிலர் போர் செய்ய ஏனையோர் நிரையினைப் புற்காட்டி இளைப்பாற்றிக் கொண்டு போதல்; (10) நிரையினைக் கவர்ந்தோர் வருதல்; (11) நிரையினை ஊர்ப்புறத்து நிறுத்துதல்; (12) வேந்தன் ஏவலால் நிரைகளைத் தமக்குள் பகுத்துக்கொள்ளுதல்; (13) நிரையைப் பகுத்துக் கொண்ட மகிழ்ச்சியால் சுற்றத்தோடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதல்; (14) நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மகிழ்தல். இச் செய்திகள் நிரைமீட்போருக்கு முரிய. வஞ்சி நாடு கவர்தல் வேட்கையால் மக்கள் அஞ்சும் படியாக அந் நாட்டிடத்தே சென்று ஒரு வேந்தனை மற்றொரு வேந்தன் வெற்றிகொள்ளல் குறித்தது வஞ்சி எனப்படும். நாடு கைக்கொள்ளச் சென்றவிடத்து இருந்த வனும் மண்ணழியாமற் காத்தற்கு எதிர்த்து மேற செல்வானாயின் அவ் விருவரும் வஞ்சிவேந்தர் எனப்படுவர். இவ் வஞ்சிவேந்தருடைய செய்திகள் பதின்மூன்று. (1) இரு படைகளும் எழுமிடத்து ஆரவாரஞ் செய்தல்; (2) இரு வகைப் படையாளரும் பகைவர் நாட்டிற் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதல்; (3) ஒருவர் ஒருவர் மேற் செல்லுமிடத்து பிற வேந்தர் தத்தம் படையுடன் அவர்களுக்குத் துணையாயவழி அவர் பெருமிதம் அடைதல்; (4) போர்மேற் செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலி யன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலுமாகிய கொடைத்தொழிலைச் செய்தல்; (5) பகைவர் நாட்டை அடைந்த படைகள் நாடு காத்து நின்றோரைக் கொல்லுதல்; (6) போரிடத்து வீரச் செயல்கள் காட்டிய தானைத்தலைவருக்கு ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும், நாடு ஊர் முதலியனவும் அளித்தல்; (7) பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்திப் பேராண்மையுடையராய் விளங்குதல்; (8) தன் படை நிலையாற்றாது பெயர்ந்த வழி விசையோடு வரும் பெரு நீரைக் கல்லணை தாங்கினாற் போல தானே தடுத்துப் பெருமை அடைதல்; (9) போர் செய்த பிற்றை ஞான்று, வேந்தன், போர் குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்;1 (10) இருவருள் ஒருவர் ஒருவர் மிகைகண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற் றிறை கொடுப்ப அதனை வாங்கினோர் விளக்க மெய்தல்; (11) திறை கொடுத்தோர் குறைபாடு எய்தல்; (12) பகைவர் நாடழிந்தமைக்கிரங்கித் தோற்றோனைச் சிறப்பித்துக் கொற்றவள்ளை பாடுதல்; (13) வென்றும் தோற்ற வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்த விடத்து கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவியும் உபசரித்தல். உழிஞை பகைமேற் சென்ற வேந்தன் வேற்று வேந்தனது அரணை வளைத்த லும், அதனுள் இருந்த வேந்தன் அதனைக் கொண்டு காத்தலும் உழிஞை யாம். சென்ற வேந்தன் செய்திக்கு நான்கும் இருந்த வேந்தன் செய்திக்கு நான்குமாக எட்டுத் துறைகள் கூறப்படுகின்றன. (1) பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் வேண்டியோர்க்கு அவற்றைக் கொடுத் தலைக் குறித்தல். (இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்); (2) அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவர், தூதர் முதலியோரும் எடுத்துப் புகழ்தல்; (3) ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகல் அழித்து மென்று கூறி அஃது அழித்தற்கு விரும்பல்; (4) அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அம்புமாரி விலக்குதற்குக் கிடுகுங்கேடகமுமாகிய தோற் கருவியை மிகுதியாகக் கொண்டு செல்லுதல். அகத்தோன் செய்திகளாவன: (1) அகத்தோனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, நீர்நிலை, ஏமப்பொருள் மேம்படுபண்டங்கள் முதலிய பெருஞ் செல்வங்களைக் கூறுதல்; (2) புறத்தோனை அகத்தோன் தன் செல்வத் தானன்றிப் போர்த்தொழிலால் வருத்தியது கூறல்; (3) அகத்திருந்தோன் தன்னரணழிவு தோன்றிய வழிப் புறத்துப் போர் செய்தலைக் கூறுதல்; (4) புறத்தோன் அகத்தோன் மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அடைத்த மதிலரணின் சிறப்பைப் கூறுதல். இன்னும் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய் வரும் பன்னிரண்டு துறைகள் உண்டு. (1, 2) தன் ஆக்கம் கருதியும் குடிகளைக் காத்தற்கும் குடையும் வாளும் நாட்கொள்ளுதல்1 (3) புறத்தோரும் அகத்தோரும் எயில் மதிலில் ஏணிமீது நின்று போர் செய்தல்; (4) அவ்விருபகைவரும் புறத்தும் அகத்தும் தம்படை கொண்டு போர் தொலைத்து அம்மதிலைக் கைப் பற்றுதல்; (5) உண் மதிலில் வளைத்து நின்றவன் போர் செய்யும் உள்ளத்தை விடாமலும், வளைக்கப்பட்டவன் மதிலைவிடாமலும் காத்தலை விரும்பிய நொச்சி; (6) இடைமதிலில் அகத்தோனிடத்தைப் புறத்தோனும் புறத்தோ னிடத்தை அகத்தோனும் விரும்பிக் கைப்பற்றுதல்; (7) அகத்தோரும் புறத் தோரும் எயிற்புத்தின் அகழின் இருகரையும்பற்றி நீரிடைப்படர்ந்த நீர்ப்பாசி போல் நின்று போர் புரிதல்; (8) மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பி நிற்றல்; (9) புறஞ்சேரி மதிலும் ஊர்மதிலுமல்லாத (அரண்மனை மதில்) கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர்செய்தல்; (10) போர் செய்த மதிற்கண்ணே ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடுதல்; (11) இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற வெற்றி வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி அதற்கு நீராட்டும் வாண்மங்கலம்; (12) அவ்வாண்மங்கலம் நிகழ்ந்த பின்னர், வென்ற வேந்தன் தன் படைக் கெல்லாம் சிறப்புச் செய்தற்காக அவற்றை ஒருங்கு கூட்டி மகிழ்வித்தல். தும்பை தனது வலிமையினை உலகம் புகழ்தல் காரணமாகப் பகைமேற் சென்ற வேந்தனை மாற்று வேந்தனும் அப்புகழ் கருதிச் சென்று வலியழித் தல் தும்பையாம். இதனகத்துப் படையாளரது வீரச் செயல்கள் கூறப்படும். அவையாவன: பலரும் ஒருவனை அணுகிப் போர் செய்தற் கஞ்சித் தூர நின்று அம்பாலும் வேலாலும் எறிந்து போர் செய்ய அவ் வாயுதங்கள் ஒன் றோடு ஒன்று முட்டும்படியாக நெருங்கித் தைத்தலின் குற்றுயிரான நிலையி லும் வீரச்செயலில் அவன் குறைவுபடாதிருத்தலும், வாள்முதலியவற்றால் தலையேயாயினும் உடம்பேயாயினும் அறுபட்ட நிலைமையினும் நிலத்திற் சாயாது அவனுடம்பு வீரச்செயல் காண்பித்தலும் போல்வன. இத்திணைக்குப் பன்னிரண்டு செய்திகள் கூறப்படும். அவை பொரு வோர் எதிர்ப்போர் என்னும் இரு பகுதியினர் செயல்களைக் குறிப்பன. (1) பகைவர் அஞ்சத்தக்க தானை (காலாள்) நிலை, (2) யானை நிலை, (3) குதிரை நிலை முதலியவற்றின் தன்மைகளைக் கூறுதல், (4) வெற்றியையே நோக்க மாகக் கொண்ட வேந்தன் களத்து முகப்பிற் சென்று பொருதவிடத்து மாற்றார் சூழ்ந்து மொய்த்தனராக, அவன் படைத்தலைவன் ஒருவன் தான் வேறோ ரிடத்திற் செய்து கொண்டு நிற்கும் போரைவிட்டு வந்து வேந்தனோடு பொரு கின்றாரை எறிதல், (5) இருவர் படைத்தலைவரும் தம்மிற் பொருது மடிதல், (6) தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று அதன் பின்னணியை மதர்த்த எருமைபோலத் தாங்கி நிற்றல், (7) கையிலிருந்த படையை எறிந்து விட்டு மெய்யாற் பொருதல், (8) பகைவன் ஊர்ந்து வந்த களிற்றை எறிந்து ஆர்த்தல், (9) களிற்றொடுபட்ட வேந்தனை மற்ற வேந்தன் படையாளர் சூழ்ந்து நின்று ஆடுதல், (10) இரு பெரு வேந்தரும் அவருக்குத் துணையாகிய வேந்தரும், தானைத்தலைவரும், தானையும் வாட்போர் புரிந்து ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்தல், (11) போரிடத்தே தன் வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்டு பொரும் படைத்தலைவன் தலை மயங்கிப் போர் செய்தல் (“குரு குலத்தவனைக் குறந்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன”-ந-உரை). (12) புறங் கொடுத்தலின் அவரைக் கோறல் தரும மல்ல என்று உணராது அவரைக் கொன்று குவித்தல். வாகை வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தால் நாற்குலத் தோரும், அறிவருந் தாபதர் முதலியோரும் தம்முடைய தொழிற் கூறுபாடு களை மிகுதிப்படுத்திக் கூறல் வாகையாம். 1மிகுதிப்படுத்தல், தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும் தன்னைப் பிறர் மிகுதிப்படுத்தலுமென இரு வகைப்படும். மேற்கூறியது போலத் துறைப்படுத்திக் கூறுதற்கியலாத பரந்த செய்கை பலவும் தொகுக்கப்பட்டு ஒரோ வொன்றாக்கி எழு வகையாகக் கூறப்படும். (1) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம். அவையாவன-ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. (2) ஐவகை மரபின் அரசர் பக்கம். அவையாவன: ஓதல் வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்பன. (3) இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம். ஏனோர்-வணிகரும் வேளாளரும். வணிகர்க்குரிய ஆறு-ஓதலும், வேட்டலும், ஈதலும், உழவும். வேளாளர்க்குரிய ஆறு-ஓதல், ஈதல், உழவு, நிரை ஓம்பல், வாணிகம். வேளாளர்க்கு வழிபாடு உரித்தாகவுங் கூறுவர். அது பொருத்தமின்று. என்னை, “மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும், முடி யில்லாதோரும்; உழுவித்துண்போரும், உழுதுண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். வேளாண் மாந்தர்க்கு ‘வேந்து விடுதொழில்’ என்னும் மரபியற் சூத்திரத்தான் வேளாளர் இருவகையரென்ப. அரசரேவுந் திறமாவன. பகைவர் மேலும் நாடுகாத்தன் மேலுஞ் சந்து செய்வித்தன் மேலும் பொருள் வருவாய் மேலுமாம். “அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்களுந் தண்டத் தலை வருமாய்ச் சோழனாநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற் றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோருங் குறுமுடி குடிப் பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். ‘இருங்கோ வேண்மானருங் கடிப் பிடவூர்’ எனவும், ‘ஆலஞ்சேரி மயிந்தனூருண் கேணி நீ ரொப்போன்’ எனவுஞ் சான்றோர் செய்யுட் செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெரு வளத்தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலுங்கூறுவர்” என ஆசிரியார் நச்சினார்க்கினியர் கூறினாராதலின். (4) மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன்தேயம்-காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்ற மில்லாத ஒழுக்கத்தினை மூன்று காலத்தும் வழங்கும் முறைப்படி அமைத்த முழுதுணர்ந்த பெரியோர். இவர் கலசயோனியாகிய அகத்தியன் முதலியோ ரென்பர். “மழையும் பனியும் வெயிலும் ஆகிய குற்றமற்ற செயலையுடைய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறித்த அறிவன் பக்கமும் என்றவாறு. “இனி இறந்தகாலம் முதலிய மூன்று காலத்தினையும் நெறியிற் றோற்றிய அறிவன் என்றாலோ எனின் அது முழுதுணர்ந்தோர்க்கு அல்லது புலப்படாமையின் அது பொருளன்று என்க. என்னை, ‘பனியும் வெயிலுங் கூதிரும் யாவும் துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய தணிவுற் றறிந்த கணிவன் முல்லை’ எனப் பன்னிருபடலத்துள் ஓதுதலின்; ஆகவே அறிவன் என்றது கணிவனை. “மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றல் ஆவது-பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோணிலையும், மழை நிலையும், பிறவும் பார்த்துக் கூறல் என்பதாம். அங்ஙனம் வேண்டுதலின் ஆற்றிய அறிவன்” எனக் கூறுவர் ஆசிரியர் இளம் பூரணவடிகள். (5) எட்டு வகைப் பட்ட வழக்கினையுடைய தாபதப் பக்கம். அவையாவன-நீராடல், நிலத் திடைதல், தோலுடுத்தல் சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, கான் உணவு கோடல், தெய்வ பூசை, திதி பூசைகோடல் என்பன. (6) “அறிமரபிற் பொருநர்கட்பால்”-தாம் தாம் அறிந்த முறைமையானே போர் செய்வார் பகுதி “அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் வேறலாம்.” (7) அனைநிலை வகை-வாளானும் தோளானும் பொருது வேற லன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறல். அவையாவன-சொல் லால் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், சூதான் வேறலும், தகர்ப்போர் குறும்பூழ்ப்போர் என்பனவற்றால் வேறலும் பிறவும் அன்ன. “யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனைநிலைவகையோராவர்; அவர்க்கு மாணாக்காரகித் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத்தவராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறி மரபிற் பொருநர்கண் அனை நிலை வகையாம்” (ந-உரை). இன்னும் வாகைத்திணைக்கு உரித்தாகிய பதினெட்டுத் துறைகள் கூறப்படும். (1) கூதிர் வேனிற் பாசறை நிலை, (2) 1களம்பாடுதல் களவழி பாடுதல், (3) தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டில் நின்று போர்த்தலைவரோடு கைபிணைத்துக் குரவையாடுதல், (4) வெற்றி வேந்தன் சென்ற தேரின் பின்னே கூழுண்ட கொற்றவையும் கூளிச்சுற்றமும் குரவைக் கூத்தாடுதல், (5) பெரிய பகை யினைத் தாங்கும் வேலினைப் புகழ்தல், (6) பகைவர் பெருமையை நன்கு மதியாது எதிர்செல்லும் ஆற்றல், (7) உயிர்வாழ்க்கையை வேண்டாது விண் ணுலகை வேண்டிய ஆண்டன்மை, (8) பகைவர் நாணும்படி உயர்ந்தோரால் நன்கு மதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனக் கூறி உயிரை அங்கியங்கடவுளுக்குப் பலி கொடுத்தல், (9) பகைவராயினும் அவர் சுற்றத்தாராயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க் கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தல், (10) பகட்டினாலும் ஆவினாலும் குற்றந் தீர்ந்த சிறப்பினை யுடைத் தாகிய சான்றோர் (வேளாளர், வணிகர்) கூறுபாட்டைக் கூறல். (11) அரசன் அரச வுரிமையைக் கைவிட்ட பகுதி கூறுதல் (“அது பரதனும் பார்த்தனும் போல் வார் அரசு துறந்த வென்றி”-ந-உரை.) (12) குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எட்டுக்குணத்தினைக் கருதிய சான்றோர் தன்மை கூறல், (13) அற நூல்களாற் கற்பிக்கப்பட்ட ஒழுக்கத்தோடு பொருந்தியிருத்தல். அவையாவன-அடக்க முடமை, ஒழுக்க முடைமை, நடுவு நிலைமை, பிறர் மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை ஆதியன (14) புகழினைத்தரும் கொடை, (15) தம்மாட்டுப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பு, (16) அரசர்க்குரியவாகிய படைகுடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவு மாகிய பொருட் டிறத்துப்பட்ட வாகைப் பகுதி. (17) யாதானும் உயிர் இடர்ப்படு மிடத்துத் தன்னுயிர் வருந்தினாற் போல வருந்தும் ஈரமுடைமை. (18) ஆசையை அறவிடுத்த பகுதி. காஞ்சி வீட்டின்பம் காரணமாக அறம், பொருள், இன்பம் என்றவற்றாலும், அவற்றின் பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் முதலியவற்றால் நிலைபேறில்லாத உலகியற்கையைக் கூறுதல் காஞ்சியாம். வீடுபேறு ஏதுவாக வன்றிச் சிறுபான்மை நிலையாமைக் குறிப்புக் காரண மாகவுங் கூறப்படும். நிலையாமைக் குறிப்புத் தோன்றும் காஞ்சி, ஆண்பாற் காஞ்சி பெண்பாற் காஞ்சி எனத்துறைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பத்துப் பகுதிகள் கூறப்படும். ஆண்பாற் காஞ்சி பத்தாவன. (1) பிறராற் றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சி, (2) வயசு முதிர்ந்த அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில்லா மக்களுக்குக் காட்டிய முதுகாஞ்சி, (3) போர்முகத்து விழுப்புண்பட்ட வீரன் ஒருவன் அதனை ஆற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையை விரும்பாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சி, (4) போர்க்களத்தே புண்பட்டோனை கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகுவந்து புண்பட் டோனைப் பேய் காத்ததாகச் சொல்லப்படும் பேய்க் காஞ்சி, (5) ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று உலகத்தார் இரங்கிக் கூறும் மன்னைக்காஞ்சி, (6) இத்தன்மைய தொன்றனைச் செய்தல் ஆற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறும் வஞ்சினக் காஞ்சி, (7) போரிலே புண்ணுற்றுக் கிடந்த தன் கணவனை அவன் மனைவி பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சி, (8) உயிர் நீத்த கணவன்மேல் வேல்பாய்ந்த வடுவைக்கண்டு மனைவி அஞ்சிய ஆஞ்சிக் காஞ்சி (ஆஞ்சி-அச்சம்)1 (9) தம் பெண்ணைக் கொடுத்தற்கு மறுத்தது காரணமாகப் பெண்ணை வலிந்து கோடற்குப் படையெடுத்துவந்த அரசனுக்கு முதுகுடித் தலைவராகிய மக்கள் தம் மகளிரைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சி, (10) தன் கணவன் தலையைத் தன் முகத்தினும் முலையினுஞ் சேர்த்துக் கொண்டு அவன் மனைவி இறந்த நிலை. பெண்பாற் காஞ்சிபத்து ஆவன:- (1) பெரும் புகழுடையவனாய் மாய்ந்தானொருவனை பெண்கிளைச் சுற்றம் சூழ்ந்து அழுதல், (2) சுற்றத்தா ரின்றி மனைவியர்1 தாமே தத்தங்கொழுநரைத் தழீஇ யிருந்து அழுவதைக் கண்டோர்க் குண்டாகிய துயர். (3) தன் கணவன் மடிந்த பொழுதே மனைவி யும் உடன் இறந்து போனதைக் கண்டோர் பிறருக்குக் கூறிய மூதானந்தம். (ஆனந்தம்=சாக்காடு). (4) கொடிய சுரத்திடத்தே கணவனை இழந்த மனைவி தமியளாய்ப் புலம்பிய முதுமாலை, (5) கணவனோடு மனைவியர் இறந்த விடத்துச் சுற்றத்தார் பரிசிலாளர் முதலியோர் வருத்த முற்றுப் புலம்புகின்ற கையறுநிலை, (6) தன் மனைவியைக் கணவனிழந்து நிற்கின்ற தபுதார நிலை. (7) காதலனை இழந்த மனைவி தவம் புரிந்தொழுகும் தாபத நிலை. (8) கற்புடை மனைவி தன் கணவன் இறந்துழி அவனோடு எரிபுகுதல் வேண்டி தன் கணவன் இறந்துழி அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினா ரோடு மாறுபட்டுக் கூறும் பாலைநிலை (பாலை=புறங்காடு), (9) தன் மகன் போர்க்களத்துப் புறங்கொடுத்த செய்தி கேட்டேனும், வீரச்செயல் காட்டிக் களத்து மாண்ட செய்தி கேட்டேனும் தாய் இறந்து படுநிலை, (10) பிறந்தோ ரெல்லாம் இறந்தொழியவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங் காட்டினை வாழ்த்தல். “எதிரூன்றல் காஞ்சி” என்னும் கோட்பாடு தொல்காப்பியருக்கு உடன்பாடன்று. பாடாண் புகழ் முதலியவற்றை விரும்பிய தலைவனது குணாதிசயம் முதலிய வற்றை பரிசில் வேண்டிய புலவன் புகழ்ந்து பாடுதல் பாடாண் எனப்பபடும். இது மக்கள் தேவர் என்னும் இருதிறத்தார்க்கும் உரியன. இவற்றுள் தேவர்க் குரிய பாடாண் இருவகைப்படும். ஒன்று பிறப்பினாலன்றிச் சிறப்பினால் தேவ சாதியைச் சார்ந்தனவாகச் சொல்லப்படும்-முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்னும்2 அறுவரையும் வாழ்த்துதல். இஃது அறுமுறை வாழ்த்து எனப்படும். மற்றது தேவரிடத்தே சிறப்பில்லாத இம்மைப் பயன்களை வேண்டி, அவர்பால் அக் குறிப்பைக் கூறுதல். மேற் கூறிய அறுமுக வாழ்த்தோடு கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு வருமென்பர். கொடிநிலை-கீழ்த்திசைக் கண்ணே நிலை பெற்று தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி-ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி-தண்கதிர் மண்டிலம்.3 மக்கட் பகுதியாகிய பாடாண் திணைக்கு இருபது துறைகள் கூறப் படும். (1) கொடுப்போரை ஏத்திக் கொடாதாரைப் பழித்தல். (2) தலைவன் எதிர் சென்று அவன் செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும், அவன் மேல் ஏற்றிப் புகழ்தல் (இயன்மொழி வாழ்த்து) (3) சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில் காக்கிறவனுக்குத் தன் வரவைத் தலைவனிடத்து உணர்த்தும்படி கூறல், இழிந்தோரெல்லாம் தத்தம் இயங்களை இயக்கி வாயிற்கண் நிற்பர். (4) அரசரும் தலைவரும் அவைக் கண் நெடிது வைகிய வழி மருத்துவரும் அமைச்சர் முதலியோரும் அவர்க்கும் கண்துயில்தலைக்கூறுதல் (கண்படைநிலை). (5) சேதாவினை அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய வேள்வி நிலை. (6) செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலை. (7) ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாழ்த்திக் கூறும் வாயுறை வாழ்த்து. (8) உயர்ந்தோர் மாட்டு அடங்கி ஒழுகுதல் வேண்டுமெனக் கூறும்-செவியறிவுறூஉ. (9) இன்ன கடவுள் காப்ப நீ வாழ்வாயாகவெனக் கூறும் புறநிலை வாழ்த்து. (10) முற் காலத்து ஒத்த அன்பினராயிருந்து பிற்காலத்தே தலைவன் வேறுமகளிர் வசப்பட்டுத் துறந்ததனால் வருந்திய பெண்பாலைப் பற்றி இடைநின்ற சான்றோரும் பிறருங் கூறும் கைக்கிளைவகை. (11) தமது வலியினால் பாசறைக் கண் மனக் கவற்சியின்றித் துயின்ற அரசற்கு அவன் நல்ல புகழைக் கூறிச் சூதர் துயிலெழுப்பும் துயிலெடை நிலை. (12) 1கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்னும் நாற்பாலருந் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெற்றுக் கூறுதல். இது ஆற்றுப் படை எனக் கூறப்படும். அச்செய்யுட்கள் கூத்தராற்றுப்படை பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, விறலியராற்றுப்படை, 2முருகாற்றுப்படை என வழங்கும், (13) அரசன்தான் நாடோறுஞ் செய்கின்ற செற்றங்களைக் கை விட்டுச் சிறைவிடுதல், செருவொழிதல், கொலையொழிதல், இறை தவிர்தல் தானம்செய்தல் முதலிய சிறந்த தொழில்களைச் செய்யத் தொடங்கும் பெருமங்கலம் (மங்கல வண்ணமாகிய வெள்ளணியுமணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்பர். (ந.உரை) (14) முடிபுனைந்த நாட்டொடு ஆண்டுதோறும் நீராட்டு மங்கலம் (15) உலகுட னிழற்றும் கொற்றக் குடையினியல்பு கூறுதல். (16) அரசனது வெற்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறகு மவாளினை வாழ்த்தும் வாள் மங்கலம். (17) மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்து மங்கல நீராட்டு மங்கலம். (18) பரிசில் வேட்டுவந்தோன் தனது குடும்பத்தின் துன்பம் முதலியன கூறித் தான் விரும்பிய பொருள்களைக் கேட்டல். (19) வேண்டிய பரிசிலைப் பெற்றவன் தான் பெற்ற பரிசிலை உயர்த்திக்கூறித் தலைவன் விடை கொடுத்த பின் பேனும் தான் போக வேண்டுமென விடை பெற்றேனும் செல்லுதல். (20) நாள்நிமித்தத்தானும் புள்நிமிதித்தத்தானும் பிற வற்றினி மித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அவர்பாற் சகாயம் பெற்றவர் அவர்க்குத் தீங்கின்றாக என ஒம்படைகூறுதல். புறத்திற்கெல்லாம் பொதுவாகிய இருபத்தொரு துறைகளும் கூறப் படும் (1) செவ்வேளின் வேலைத் தாங்கிய வேலன் (படிமத்தான்) காந்தளைச் சூடித் தெய்வமேறி யாடுதல். (2) தமிழ் நாட்டு மூவேந்தருடைய படையாளர், படையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டி அவர்க்குரிய பனங்குருத்து வேம்பு, ஆத்தி என்னும் பூக் களைச் சூடுதல். (3) வள்ளிக் கூத்தாடுதல், (4) கழனிலைக் கூத்து-இளம் பிராயத் தானொருவன் போரில் ஓடாது நின்று வீரச் செயல் காட்டினதைக் கண்டு வீரக்கழல் கட்டி வீரர் ஆடும் கூத்து. இங்ஙனம் கழல் கட்டுதலே யன்றி அவற்குக் கொடி முதலியன கொடுத்தலும் மரபு. (5) போரிற் பின்னே அடிபெயராது நின்று போர்செய்த வேந்தனை உன்னமரத்தோடு சேர்த்துப் புகழ்தல். இம்மரம் தன் நாட்டகத்துக் கேடு வருங்கால் உலறியும், வராத காலம் குழைந்தும் நிற்கும் தெய்வத் தன்மையுடையது. (6) பூவை நிலை-மாயோனுடைய புகழை அரசனுடைய புகழோடு உவமித்துக் கூறுதல். பிற கடவுளர் புகழை உவமையாக்கிக் கூறுதலும் மரபு. (7) குறு நில வேந்தரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த் தொழில் வேந்தரைப்பொருது புறங் கொடுக்கச் செய்தல். (8) வெட்சி வீரர் கொண்ட நிரையைக் குறு நிலமன்ன ராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத் தருதல். (9) வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமகளை ஒருவற்கு உரியளாக அவன் படை யாளரும் பிறரும் கூறுதல். (10) தன்னிடத்துள்ள போர்வலியால் வஞ்சினங் களைக் கூறுதல். (11) வருகின்ற கொடியையுடைய படையைத்தானே தாக்கு தல். (12) வாட்டொழில் வீரர் பகைவரைக் கொன்று தானும் வீழ்தல். (13) வாட் போரால் பகைவரை வென்ற அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டாடிப் பறை ஒலிக்க ஆடி அவர்க்கு அரசு கொடுத்தல், (14) நிரை மீட்டோர் கரந்தைப் பூச்சூட்டப் பெறுதல், (15) போரில் வீரச்செயல் காண் பித்து இறந்த வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லைக் காணுதல் (16) அங்ஙனங் கண்ட கல்லை எடுத்தல். (17) அதனைப் புண்ணிய தீர்த்தத்திலே நீராட்டுதல். (18) கல்லை நடுதல். (19) அவன் செய்தபுகழை எழுதுதல். (20) அக் கல்லினை வாழ்த்தல். துறைகள் இருபத்தொன்று எனக் கூறப்பட்டாலும் இருபது செய்திகள் மாத்திரம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இளம்பூரன அடிகள் இருபது துறைகளாகவே பொருளுரைத்தார். நச்சினார்க்கினியர். “ஆரம ரோட்டன் முதலிய எழு துறைக்குரிய மரபினையுடைய கரந்தையும் அக் கரத்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக் காந்தளும் பூவும் வள்ளியும் கழனிலையும் பூவை நிலையும் உளப்பட்டுச் சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை உடைத்தெனக் கூட்டுக” எனக் கூறினர். இங்கே முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லும் எனக் கல்லை இரண்டாகக் கொண்டதனால் துறை இருபத்தொன்றாயிற்று. கரந்தையார்க்கு நாட்டும் கல், ஏனை வீரர்க்கு நாட்டும் கல் எனக் கல் இருவகைத்து. 3. துறை விளக்கம் வெட்சி இது இரு வகை:- (1) மன்னுறு தொழில் - அரசன் ஏவச் சென்று நிரை கவர்தல். (2) தன்னுறு தொழில் - அரசன் ஏவாது சென்று நிரை கவர்தல். வெட்சி அரவம் - பகைவர் முனையிடத்துப் செல்லல். செலவு - போர் மறவர் மாற்றாரிடத்துப் போக விரும்பல். வேய் - நிரை நிற்கும் இடம் முதலியவற்றை ஒற்றி அறிதல். புறத்திறை - பகைவர் குறும்பைச் சூழ்தல். ஊர்க்கொலை - குறும்பிலுள்ளோரைக் கொன்று அரணைப் பிடித்தல். ஆகோள் - நிரைகளைக் கொள்ளல். பூசன் மாற்று - பின் தொடர்ந்தோரை நிரை கவர்ந்த வீரர் வீழ்த்தல். சுரத்துய்த்தல் - அரிய சுரத்திடத்தும் பெரிய காட்டிடத்தும் பசு நிரையை நோவுபடாது செலுத்தல். தலைத்தோற்றம் - போர்வீரர் நிரை கவர்ந்து வருதலையறிந்து உறவினர் மகிழ்ச்சி எய்தல். தந்து நிறை - ஆநிரைகள் மன்றத்தே சென்று நிற்றல். பாதீடு - கொள்ளை கொண்ட பசுநிரையை செய்தார் செய்த தொழில் முறையை அறிந்து கொடுத்தல். உண்டாட்டு - போர்வீரர் மதுவை உண்டு மனங்களித்தாடல். கொடை - கேட்டவர்களுக்குப் பசுக்களைக் கொடுத்தல். புலனறி சிறப்பு - பகைவர் நாட்டின் கண் சென்று ஒற்றறிவித்தார் முதலியோர்க்கு ஒன்று இரண்டு பசுக்களை அதிகமாகக் கொடுத்தல். பிள்ளை வழக்கு - நிமித்தஞ் சொன்னார்க்குச் சில பசுக்களை அதிக மாகக் கொடுத்தல். துடிநிலை - அரசன் ஏவலால் போரிடத்தே பறை கொட்டிய துடியனுக்கு வீரர் மிகுந்த கள்ளை வார்த்தல். கொற்றவை நிலை - நிரை கவரச் சென்ற வீரர் படைக்கு முன்னே கொற்றவையின் சிங்கக்கொடியை எடுத்துச் செல்லல் வெறியாட்டு - ஆபரணங்களை அணிந்த பெண்கள் முருக பூசை பண்ணும் அவனோடு வள்ளிக் கூத்தாடுதல். கரந்தை கரந்தை - பகைவர் கைப்பற்றிய நிரையை மீட்டல். கரந்தை அரவம் - பகைவர் பசு நிரையைக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற வீரர் விரைவிற்றிரளுதல். அதரிடைச்செலவு - போர் செய்ய இயலாதவர்கள் ஊரிலே தங்க ஏனையோர் பகைவர் போனவழியிடத்தே செல்லல். போர்மலைதல் - நிரைகவர்ந்து செல்கின்றோரை மறித்துப்போருதல். புண்ணொடு வருதல் - வீரர் தமது புகழை நாட்டி ஆயுதம் பட்ட புண்ணுடனே வருதல். போர்க்களத் தொழிதல் - வீரர் போர்க்களத்தே மடிதல். ஆளெறிபிள்ளை - பொருவாரை விலக்கித் தானொருவனாய் நின்று வீரரை வெட்டுதல். பிள்ளை யாட்டு - வேலிடத்திற்குடர்மாலையைச் சூட்டி மகிழ்ந்து ஆடுதல். கையறுநிலை - போரிடத்து இறந்தோனைப் பார்த்து அவன் இறந்த தன்மையை யாழ்ப்பாணர் கூறுதல். நெடுமொழி கூறல் - ஒரு வீரன் தன்னுடைய மேம்பாட்டைத் தானே உயர்த்திக் கூறல். பிள்ளைப் பெயர்ச்சி - போர் வென்ற வீரர்க்கு அரசன் வரிசை கொடுத்து மரியாதை செய்தல். வேத்தியன் மலைவு - அரசனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதல். குடிநிலை - பழமையும் தறுகண்மையுமுடைய மறக் குடியின் தன்மையைக் கூறுதல். வஞ்சி வஞ்சி - வேந்தன் வஞ்சி மாலையைச் சூடிப் பகைவர் பூமியைக் கொள்ள விரும்பல். வஞ்சி அரவம் - சேனை கோபித்து ஆரவாரஞ் செய்தல். குடைநிலை - குடையைப் புற வீடு செய்தல். வாள்நிலை - வாளைப் புற வீடு செய்தல். கொற்றவை நிலை - கொற்றவையின் பொருட்டு நிணக்குடர் எட்கசிவு முதலியன நிறைத்த தாழியை முன்னே எடுத்துச் செல்லுதல். பேராண்வஞ்சி - போர் வென்ற வீரர்க்கு அரசன் உபகாரமளித்தல்; திறையளிப்பப் பெற்று மீண்டு செல்லுதல். மாராய வஞ்சி - மறமன்னனாற் சிறப்புப் பெற்ற வீரரின் தன்மையைக் கூறுதல். நெடுமொழி வஞ்சி - வேந்தன் மறவர் சேனையைக் கிட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திக் கூறுதல். முதுமொழி வஞ்சி - மறக்குடியிலுள்ள வீரனது தந்தையின் நிலையைச் சொன்னது. உழபுல வஞ்சி - பகைவருடைய நாட்டைக் கொளுத்தியது. மழபுல வஞ்சி - பகைவர் நாட்டிலுள்ள மனைகள் பாழ்படும்படி கொள்ளை கொள்ளுதல். கொடை வஞ்சி - பாடிய புலவர்களுக்குப் பரிசில் கொடுத்தல். குறு வஞ்சி - பகை அரசனுக்குத் திறைகொடுத்து, நாட்டுக்குரிய அரசன் குடிகளைக் காத்தல், மேற்படி தங்கியிருக்கும் பாசைறையின் தன்மையைச் சொல்லுதல். ஒருதனி நிலை - வெள்ளந் தள்ளாதபடி கல்லாற் கட்டின கரையைப் போலப் பெரும் படையை ஒரு வீரன் தடுத்து நிற்றல். தழிஞ்சி - தனக்குக் கெட் டோடுவார் முதுகுப் புறத்துக் கூரிய வாளோச்சாத மறப்பண்பு. பாசறை நிலை - பல வேந்தர் பணியவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மன்னன் பாடி வீட்டில் இருத்தல். பெரு வஞ்சி - பகைவர் நாட்டை இரண்டாவது முறையும் நெருப்புக் கொளுத்தல். பெருஞ்சோற்று நிலை - பகைவர் நாட்டை அழித்துத்தருவர் என்று சொல்லி மிக்க சோற்றை வீரர்க்கு அளித்தல். நல்லிசை வஞ்சி - பகைவர் நாட்டை அழித்த வேந்தனது வெற்றியை மிகுத்துச் சொல்லுதல். மேற்படி - பகைவர் தேசத்துக் கேட்டிற்கு இரங்குதலைத் திரும்பவும் கூறுதல். காஞ்சி காஞ்சி - வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சிப் புவைச் சூடித் தனது ஊரைக் காத்தல். காஞ்சி எதிர்வு - எதிர்க்க வந்த சேனை மேலிடுதலைப் பொறாத வீரனின் வெற்றியைக் கூறுதல். தழிஞ்சி - பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி அரிய வழியைக் காத்தல். படைவழக்கு - அரசன் வீரர்க்குப் படை வழங்கல். மேற்படி - படை வழங்கிய பின் வீரர் அரசனை உயர்த்திக் கூறல். பெருங் காஞ்சி - எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினை யுடைய வீரர் தத்தம் வலிமையைப் பெருஞ்சேனையிடத்தே காண்பித்தல். வாள் செலவு - வாளைப் புற வீடு செய்தல். குடைச் செலவு - குடையைப்புற வீடுசெய்தல். வஞ்சினக் காஞ்சி - மன்னன் வஞ்சினங் கூறுதல். பூக்கோணிலை - போரை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக வீரர் அரசன் கொடுத்த பூவினை ஏற்றல். தலைக் காஞ்சி - பகைவருடன் பொருதி வீரத்தைக் காண்பித்துப் பட்டவனது தலையின் மதிப்பைச் சொல்லுதல். தலை மாராயம் - பகைவர் தலைவனின் தலையைக் கொண்டுவந்த வனுக்கு அரசன் செல்வத்தைக் கொடுத்தல். தலையொடு முடிதல் - கணவனது தலையுடன் மனைவி இறத்தல். மறக் காஞ்சி - பகைவர் கெடும்படியாக அரசன் போர் செய்தல். மேற்படி - பகைவர் வேல்பட்ட புண்ணைக் கிழித்துக் கொண்டு வீரன் இறத்தல். பேய் நிலை - போரிடத்து வீழ்ந்தவனைப் பேய் பரிகரித்தல். பேய்க் காஞ்சி - போர்க்களத்தே பட்ட வீரரைப் பார்த்துப் பேய் அச்சமுறுத்துதல். தொட்ட காஞ்சி - வீரனது புண்ணைப் பேய் தீண்டுதல். தொடாக் காஞ்சி - வீரனது புண்ணைத் தீண்ட அஞ்சிப் பேய் பெயர்தல். மன்னைக் காஞ்சி - வீரசுவர்க்கஞ் சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து பிறர் வருந்துதல். கட்காஞ்சி - அரசன் வீரர்க்கு மதுவைக் கொடுத்தல். ஆஞ்சிக் காஞ்சி - கணவனோடு உடன்கட்டை ஏறும் இயல்பினை யுடையவள் தன்மையைக் கூறுதல். மேற்படி - கணவன் உயிர் நீங்கின வேலாலே மனைவி தனது ஆவியை ஒழித்தல். மகட்பாற் காஞ்சி - மகளைக் கேட்ட அரசனோடு மாறுபடுதல். முனைகடி முன்னிருப்பு - பகை வேந்தனைப் போர்க்களரியி னின்றும் போக்குதல். நொச்சி நொச்சி - மதிலைக் காக்கும் வீரர் சூடிய பூவைப் புகழ்தல். மறனுடைப்பாசி - பகை அரசர் வீரசுவர்க்கத்திடத்துப்போன தன்மையைக் கூறுதல். ஊர்ச்செரு - காவற்காடும் அகழும் சிதையாதபடி போர் செய்தல். செருவிடை வீழ்தல் - காவற்காட்டையும் அகழியையும் காத்து நின்று பட்ட வீரரின் வெற்றியைக் கூறுதல். குதிரைமறம் - மதிலிடத்துப்பாயும் குதிரையின் தன்மையைக் கூறுதல். எயிற்போர் - மதிலிடத்து வீரர் கூரிய ஆயுதத்தால் செய்யும் போரைச் சிறப்பித்தல். எயில்தனை யழித்தல் - வீரக்கழலணிந்த வீரர் மதிலின்கண் இறந்த தன்மையைக் கூறல். அழிபடை தாங்கல் - மதிலின்மேல் நின்ற வீரர் பகைவரை வெட்டிக் குவித்து எயிலைக் காத்தல். மகள் மறுத்து மொழிதல் - பகை அரசன் பெண் கேட்க மறுத்து மொழிதல். உழிஞை - உழிஞை மாலை சூடி அரணை வளைத்து நாட்டைக் கைப்பற்ற நினைத்தல். குடை நாட்கோள் - குடையைப் புறவீடு செய்தல் வாணாட்கோள் - வாளைப் புறவீடு செய்தல். முரசவுழிஞை - உயிர்ப்பலி உண்ணும் முரசின் தன்மையைக் கூறல். கொற்ற வுழிஞை - பகைவர் நாட்டைக் கவர விரும்பிப் பரந்த சேனையுடன் செல்லல். அரசவுழிஞை - அரசனது கீர்த்தியைக் கூறுதல். கந்தழி - திருமால் வீரசோ என்னும் அரணத்தை அழித்த வீரத்தைக் கூறுதல். முற்றுழிஞை - சிவபெருமான் சூடிய உழிஞையின் சிறப்பைக் கூறுதல். காந்தள் - கடலிடத்திற் சூரனைக் கொன்ற முருகனது காந்தட் பூவின் சிறப்பைச் சொல்லல். புறத்திறை - பகைவரின் அரணின் பக்கத்தில் பாடி வீடு கொள்ளுதல். ஆரெயிலுழிஞை - பகை அரசனது மதிலின் வலிமையைக் கூறுதல். தோலுழிஞை - கிடுகுப்படை வெற்றியை உண்டாக்குமெனக் கூறி அதனைச் சிறப்பித்தல். குற்றுழிஞை - அழிவில்லாத பகைவர் அரண்மீது தான் ஒருவனுமே போர் செய்தது. மேற்படி - காவற்காட்டைக் கடந்து செல்லல். மேற்படி - பரிசையை யுடைய சேனைத்தலைவர் ஆடிப்பகை வருடைய அரணைக்கிட்டுதல். புறத்துழிஞை - காவற்காட்டைக் கடந்து கிடங்கின் அருகை அடைதல். பாசி நிலை - அகழியிடத்துப் போர் செய்தல். ஏணி நிலை - பகைவருடைய மதிலில் ஏணி சாத்துதல். எயிற்பாசி - ஏணிமேல் ஏறுதல். முதுவுழிஞை - மதிலினின்று பகைவர் குறும்பில் போர் வீரர் குதித்தல். மேற்படி - எயிலிற் குதித்தோரின் வலியைக் கூறல். அகத்துழிஞை - மதிலினுள் பாய்ந்த வீரர் வெற்றி கொள்ளல். முற்று முதிர்வு - மதிலினுள்ளோரின் காலை முரசொலிப்ப புறத்திருந் தோரது கோபத்தைக் கூறல். யானை கைக்கோள் - அரசன் யானையையும் தோட்டியையும் கைக் கொள்ளல். வேற்றுப்படை வரவு - வேற்று வேந்தன் துணையாக வருதல். உழுது வித்திடுதல் - பகைவருடைய அரணை அழித்துக் கடவியும் குடைவேலும் விதைத்தல். வாண் மண்ணு நிலை - நீராட்டிய வாளின் சிறப்புக்கூறல். மண்ணு மங்கலம் - பகை அரசன் மகளை வெற்றி வேந்தன் வதுவை செய்தல். மகட்பாலிகல் - மகள் வேண்டிய அரசனுடைய தன்மையைக் கூறுதல். திறை கொண்டு பெயர்தல் - திறையைப் பெற்றுத் தனது நாட்டுக்கு ஏகுதல். அடிப்பட விருத்தல் - பகைவர் தமது சொற்கேட்டு நடக்கும்படி பாசறையிலிருத்தல். தொகை நிலை - எல்லா அரசரும் அவன் தாள் வணங்கல். தும்பை தும்பை - போர்க்களத்தே யுத்தத்தை விரும்பிய வீரர் தும்பைப் பூவைச் சூடுதல். தும்பை அரவம் - படைகளுக்கு மன்னன் யானை குதிரை முதலிய வற்றையும் பொன்னையும் வழங்குதல். தானைமறம் - இருவகைச் சேனையும் பொருது மடியாது பாதுகாத்தல். மேற்படி - படை கெடும், படும் என்று ஒராது போர் செய்தல். மேற்படி - பகைவருடைய கேட்டிற்கு இரங்கல். யானைமறம் - இளம் களிற்றின் வீரத்தைக் கூறுதல். குதிரை மறம் - குதிரைப் படையின் வேகத்தைக் கூறுதல். தார் நிலை - தூசிப்படையைத் தடுப்பனென ஒரு வீரன் தனது தறு கண்மையைக் கூறுதல். மேற்படி - ஒரு வேந்தனைப் பல வேந்தர் எதிர்த்த வழி வீரன் தானே எதிர்த்தல். தேர் மறம் - வேந்தன் தேரின் நன்மையைக் கூறல். பாடாண் பாட்டு - யானையை எறிந்து பட்ட வீரர்க்குப்பாணர் உரிமை செய்தல். இருவருந்தபு நிலை - இரு திறச் சேனைகளும் அரசரும் ஒருங்கே படுதல். எருமை மறம் - கை வேலை யானைமேல் விட்டெறிந்து வந்த படையை நிர் ஆயுதனாய் நின்று வெற்றி கொண்டது. நூழில் - அரசர் சேனையைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுதல். நூழிலாட்டு - தன் மார்பைப் பிளந்த வேலைப் பிடுங்கி பகைவர் மீது எறிதல். முன்றேர்க் குரவை - தேர் முன்னே வீரர் ஆடுதல். பின்றேர்க் குரவை - வீரரோடு பாணிச்சியர் தேரின்பின் ஆடுதல். பேய்க் குரவை - தேரின் முன்னும் பின்னும் பேயாடுதல். களிற்று நிலை - யானையை எறிந்து அதன் கீழ்ப் பட்டு இறத்தல். ஒள் வாளமலை - வாள் வீரர் வீரக்கழலணிந்தவனுடன் ஆடுதல். தானை நிலை - இரண்டு சேனையும் வீரத்தைப் புகழப் போர்க் களத்தில் வீரன் நிலைத் தூண்போல் நிற்றல். வெரு வருநிலை - மார்பைப் பலஅம்புகள் பிளப்பவும் வீரன் நிலத்தில் விழாது நிற்றல். சிருங்கார நிலை - பகைவர் புகழும்படி பட்டவனை கற்பின் மிக்க மனைவியர் தழுவுதல். உவகைக் கலுழ்ச்சி - வாளாற் போழப்பட்டுக் கிடக்கும் கொழுநனைக் கண்டு மனைவியர் மகிழ்ந்து கண்ணீர் விடுதல். தன்னை வேட்டல் - தனது அரசன் களத்துப் பட்டானாக ஒரு வீரன் உயிரை ஆகுதி பண்ணல். மேற்படி - களத்துப் பட்ட கணவனைக் காண வேண்டி மனையாள் போர்க்களத்துச் செல்லுதல். தொகை நிலை - புகழை நாட்டி எல்லோரும் போர்க்களத்தில் மடிதல். வாகை வாகை - வாகைப் பூவைச் சூடிப் பகை வேந்தனைக் கொன்று ஆரவாரித்தல். அரச வாகை - அரசன் தன்மையைக் கூறல். முரச வாகை - முரசின் தன்மையைக் கூறல். மறக்கள வழி - அரசனை வேளாளனாகச் சிறப்பித்தல். கள வேள்வி - பேய் உண்ணக் கள வேள்வி வேட்டல். முன்றேர்க்குரவை - அரசனது தேரின் முன் பேயாடுதல். பின்றேர்க்குரவை - தேரின் பின் பேயாடுதல். பார்ப்பன வாகை - பார்ப்பார் அரசன் வெற்றியை யாகம் வேட்டுச் சிறப்பித்தல். வாணிக வாகை - வாணிகனுடைய ஆறு செய்தியை உயர்த்திக் கூறல். வேளாண் வாகை - அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்ப அவர் ஏவல் வழியே செல்லல். பொருந வாகை - நின் கீர்த்தியின் மிகுதியைப் பார்த்துப் பிறரை இகழுதலை ஒழி என்று சொல்லுதல். அறிவன் வாகை - மூன்று கால நிகழ்ச்சியையும் அறியும் அவனது தன்மையைக் கூறுதல். தாபத வாகை - தாபதருடைய தன்மையைக் கூறல். கூதிர்ப்பாசறை - மனைக்கிழத்தியின் பிரிவாற்றாமையை ஆற்றி பாசறையிற் றங்கியது. வாடைப்பாசறை - வீரர் நடுங்கும்படி வாடைக்காற்று வீசப் பெறும்பாசறையின் தன்மையைக் கூறல். அரச முல்லை - உலகைக் காக்கும் அரசன் தன்மையைக் கூறல். பார்ப்பன முல்லை - பார்ப்பாரின் நன்மை மிகுந்த முறையைக் கூறல். அவைய முல்லை - நடுவு சொல்லும் சான்றோர் தன்மையைக் கூறல். கணிவன் முல்லை - சோதிட வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது. மூதின் முல்லை - மறக்குடியில் உள்ள பெண்களது சினத்தைச் சிறப்பித்தது. ஏறாண் முல்லை - மென்மேல் ஏறா நின்ற மறக்குடியின் ஆண்மைத் தன்மையை உயர்த்திக்கூறுதல். வல்லாண் முல்லை - இல்லையும் ஊரையும் இயல்பினையுஞ் சொல்லி ஆண்மைத் தன்மையைச் சிறப்பித்தல். காவன் முல்லை - அரசனது பாதுகாத்தலைச் சிறப்பித்தல். போராண் முல்லை - சின மன்னன் போர்க்களத்தில் கொண்ட மிகுதியைக் கூறல். மற முல்லை - மன்னன் விரும்பியது கொடுக்கவும் அதனைக் கொள்ளாத வீரனதுதன்மையைக் கூறல். குடை முல்லை - அரசனது குடையைப் புகழ்தல். கண்படை நிலை - வென்று பூமியைக் கைக்கொண்ட அரசனின் உறக்கத்தைக் கூறல். அவிப்பலி - போரிடத்து வீரர் செஞ்சோற்றுக் கடன் கழித்தது. சால்பு முல்லை - சான்றோர் இயல்புரைத்தல். கிணை நிலை - கொட்டுபவன் வேளாளனது கீர்த்தியை உரைத்தல். பொருளொடு புகறல் - பூமியில் விருப்பத்தை நீக்கி மெய்யாய பொருளிடத்து விருப்பத்தைச் செலுத்தியது. அருளொடு நீங்கல் - உலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றொழித்தல். பாடாண் பாடாண் பாட்டு - அரசனது இசையும், வலியும், கொடையும், தண்ணளியும் என்பனவற்றைத் தெரிந்து சொல்லுதல். வாயினிலை - புலவன் வாயில்காப்போனை தனது வரவை அரசற்குணர்த்தும்படி கூறல். கடவுள் வாழ்த்து - வேந்தனை அரி அயன் அரன் என்னும் ஒருவனாக உயர்த்திக் கூறல். பூவை நிலை - அரசனை மாயனோடு உவமித்துக் காட்டிடத்துக் காயாம் பூவைப் புகழ்தல். பரிசிற்றுறை - புலவன் அரசன் முன்னே தான் பெற விரும்பியது இதுவெனக் கூறல். இயன் மொழி வாழ்த்து - இன்னோர் இன்னவை கொடுத்தார். நீயும் அவைபோன்று எமக்கு ஈ என எடுத்துச் சொல்லுதல். மேற்படி - அரசனுடைய தன்மையைக் கூறுதல். கண்படை நிலை - அரசனது துயிலைப் புகழ்ந்து கூறல். துயிலெடை நிலை - அரசருக்கு அருள் செய்யும்படி எழுந்திருப்பா யென அரசனைத் துயில் நீக்குதல். மங்கலநிலை - துயில்விட்டெழுந்த அரசன் முன் மங்கலங் கூறல். மேற்படி - மங்கலத்துக் குரியவற்றை எல்லாம் அரசன் பெற்றா னெனக் கூறல். விளக்கு நிலை - அரசனது விளக்கின் தன்மையைக் கூறுதல். மேற்படி - அரசனைச் சூரியனோடு உவமித்தல். கபிலை கண்ணிய புண்ணிய நிலை - அந்தணருக்குக் கொடுக்க விரும்பிய பசுவின் தன்மையைக் கூறுதல். வேள்வி நிலை - அரசன் தேவர்கள் மகிழும்படியாகப் பண்ணிய வேள்வியின் தன்மையைக் கூறல். வெற்றி நிலை - உலகத்தில் துன்பம் நீங்க மழைபெய்யுமெனக் கூறி வெற்றியினது தன்மையைச் சொல்லுதல். நாடு வாழ்த்து - நாட்டின் வளத்தைக் கூறுதல். கிணை நிலை - அழகிய மாளிகையில் கிணை கொட்டுபவன் தன்மை கூறுதல். களவழி வாழ்த்து - போர்க்களத்துள்ள செல்வத்தை யாழ்ப்பாணர் கூறுதல். வீற்றிருந்த பெருமங்கலம் - அரசன் செம்மாந்திருந்த சிறப்பினைக் கூறுதல். குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை - அரசன் குடுமியைக் கூட்டி முடிந்த தன்மையைக் கூறுதல். மணமங்கலம் - அரசன் மகளிரை மணந்து மங்கலங் கூறுதல். பொலிவுமங்கலம் - அரசன் மகிழப் புதல்வன் பிறந்ததைப் பலருங் கொண்டாடுதல். நாண்மங்கலம் - தருமத்தினையும் செங்கோலினையும் விரும்பிய அரசனின் பிறந்த நாளின் தன்மையைக் கூறுதல். பரிசினிலை - அரசன் இன்பத்திலே அசைய இரவலர் இரக்கச் செல்லல். பரிசில் விடை - அரசனுடைய புகழ் கூறியவர்க்கு அரசர் பரிசில் வழங்கி விடை கொடுத்தல். ஆள்வினை வேள்வி - அரசனது இல்லறத்தின் தன்மையைக் கூறல். பாணாற்றுப்படை - பரிசில் பெற்ற பாணன் பரிசில்பெற அலையும் பாணனை வழியிலே சந்தித்துச் செலுத்துதல். கூத்தராற்றுப் படை - தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளன் கூத்தரை வழியிலே செலுத்துதல். பொருநராற்றுப் படை - கிணை கொட்டுபவனை வழிப்படுத்தல். விறலியராற்றுப்படை - விறலியை வழிப்படுத்தல். வாயுறைவாழ்த்து - எங்கள் வார்த்தையை ஏற்று நடப்பின் அதன் பலன் பின்னே பலிக்குமெனக் கூறல். செவியறிவுறூஉ - அரசனுக்கு அவனது சிறந்த ஒழுக்கத்தைக் கூறுதல். குடைமங்கலம் - அரசன்குடையைப் புகழ்தல். வாள்மங்கலம் - அரசனது வாளைப் புகழ்தல். மண்ணு மங்கலம் - அரசனது திருமுழுக்கின் தன்மையைக் கூறுதல். ஓம்படை - இன்ன காரியத்தைச் செய்தல் இயல்பென்று அரசன் முன்னின்று புலவன் கூறுதல். புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப நின்வழி முறையில் உள்ளோர் மேம்படுவார்களெனக் கூறுதல். கொடிநிலை - அரசனது கொடியை அரி அயன் அரன் என்னும் மூவர் கொடியின் ஒன்றோடு உவமித்தல். கந்தழி - திருமால் சோவென்னும் அரணை அழித்த வெற்றியைக் கூறல். வள்ளி - பெண்கள் குமரனுக்கு வள்ளியென்னுந் கூத்தாடல். புலவராற்றுப் படை - தேவர்களிடை அறிவாளனை வழியிடைச் செலுத்துதல். புகழ்ந்தனர் பரவல் - தெய்வத்தின் பாதங்களைப் பணிதல். பழிச்சினர் பணிதல் - இறைவன் பேற்றை விரும்பி வாழ்த்தி வணங்கல். கைக்கிளை - பெண் தலைவனது மாலையை ஆசைப்பட்ட தன்மையைக் கூறல். பெருந்திணை - தலைவனது புல்லு தலை விரும்பி இருட்காலத்துப் போகின்றவனது தன்மையைக் கூறல். புலவி பொருளாகத் தோன்றிப் பாடாண் பாட்டு - தலைமகள் வீரனது மார்பையான் தருவேன் என ஊடிக் கூறுதல். கடவுண் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் - தெய்வமகளிர் கடவுளரை விரும்புதல். கடவுண் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் - மூன்று கண் ணுடைய கடவுளைப் புல்ல விரும்பிய மானிட மகளிரின் வருத்தத்தைக் கூறல். குழவிக்கட் டோன்றிய காமப்பகுதி - சிறு புதல்வரது நலத்தை விரும்பிய காமப்பகுதியுடைய தன்மையைச் சொல்லுதல். ஊரின்கட்டோன்றிய காமப் பகுதி - நீங்காத அன்புடைய ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக்கூடும் பகுதியைச் சொல்லுதல். பொது போந்தை - சேரன் சூடும் பனம்பூவைப் புகழ்தல். வேம்பு - பாண்டியனது முடியிற்சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல். ஆர் - சோழன் சூடும் ஆத்திப்பூவைப் புகழ்தல். உன்ன நிலை - அரசனை உன்ன மரத்தோடு சேர்த்துப் புகழ்தல். ஏழக நிலை - செம்மறிக் கிடாமீது சென்றாலும்அரசன் மனவெழுச்சி யுடையனென்று அவன் புகழைக் கூறல். மேற்படி - இளமையைப் பாராது அரசன் பூமியைக் காத்தல். கழனிலை - போர்க்களத்து அரசன் கழலிடத்து வீரக்கழலை அணிதல். கற்காண்டல் - போரில் இறந்தோர்க்கு நிறுத்தக் காட்டிடத்துக் கல்லைப் பார்த்தல். கற்கோணிலை - பார்த்த கல்லை எடுத்தல். கல்நீர்ப்படுத்தல் - கல்லினை நீரிலே கழுவுதல். மேற்படி - கற்களை நிரைத்தல். கன்னடுதல் - வீரன் நாமத்தை எழுதிக் கல்லை நடுதல் கன்முறை பழிச்சல் - கல்லினைத் தொழுதல். இற்கொண்டு புகுதல் - கோயிலெடுத்துப் புகழ்தல். சிறப்பிற் பொது முதுபாலை - கணவனை இழந்தவளது தன்மையைக் கூறல். சுரநடை - தலைவியை இழந்தவனது தன்மையைச் சொல்லுதல். தபுதார நிலை - மனைவியை இழந்த பின் இல்லிடத்து உறையும் ஆடவன் முறையைக் கூறல். தாபதநிலை - கணவனிறந்தபின் மனைவியின் கைம்மை நிலையைக் கூறுதல். தலைப்பெய் நிலை - மாதா இறந்த முறையைக் கூறல். பூசன் மயக்கு - பிள்ளை இறந்தானாகச் சுற்றத்தார் செய்யும் ஆரவாரத்தைக் கூறுதல். மேற்படி - அரசன் இறந்தமைக்குப் பூமியிலுள்ளோர் இரங்கல். மாலைநிலை - சுடுகாட்டிடத்து கணவனோடு நெருப்பிலே புகவேண்டி மனைவி மாலைக்காலத்தே நின்ற தன்மையைக் கூறல். மூதானந்தம் - மனைவி கணவனோடு இறந்ததைக் கண்டு வழியிடத்துச் செல்வார்அதிசயித்துக் கூறல். மேற்படி - தம்மேற் பகைவருடைய கூரிய அம்பு அழுந்தத்தான் நினைத்த வினையை முடிவு செய்யானாகி இறத்தல். ஆனந்தம் - நற்சொல்லும் நிமித்தமும் வேறுபடப் பயப்பட்டு நடுக்கமுறல். மேற்படி - போரிடத்திலுள்ள வீரன் பொருட்டு வருந்துதல். ஆனந்தபபையுள் - மனைவி கணவனிறப்ப மெலிந்து வருந்துதல். கையறுநிலை - அரசன் இறந்தானாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி வருந்துதல். மேற்படி - இறந்தவனது புகழை அன்புற்றுச் சொல்லுதல். காஞ்சிப் பொது முதுமொழிக் காஞ்சி - அறிவுடையோர், முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை உலகினர் அறியக்கூறுதல். பொதுக் காஞ்சி - உலகத்து நிலையாமையைக் கூறுதல். பொருண்மொழிக் காஞ்சி - முனிவர் கண்ட தெளிந்த பொருளைக் கூறுதல். புலவரேத்தும் புத்தேணாடு - பற்றற்றோர் விரும்பும் மேலுலகத்தைக் கூறுதல். முதுகாஞ்சி - மேலாய் வரும் பொருள்களைத் தக்கபடி ஆராய்ந்து நிலையில்லாமையை முறைபடச் சொல்லல். காடுவாழ்த்து - சாப்பறை ஒலிக்கும் சுடுகாட்டை வாழ்த்துதல். முல்லைப் பொது முல்லை - தலைவன் தனது மனைவியைக் கூடிய மகிழ்ச்சி நிலையை உரைத்தல். கார் முல்லை - பாசறையினின்றும் தலைவர் வர முன்கடல் நீரை முகந்து கொண்டு மேகம் வந்தது. தேர் முல்லை - அரசர் பகையைத் திருத்திய காதலர் தேர் வந்த தன்மையைக் கூறுதல். நாண் முல்லை - கணவன் பிரிய இல்லிலே தங்கி மனை நாணத் தன்னைப் பரிகரித்தது. இல்லாண் முல்லை - கணவனை வாழ்த்திக் கீர்த்தியாற் சிறந்த இல்லின் சிறப்பைக் கூறுதல். பகட்டு முல்லை - தலைவனை முயற்சியான் வந்த இளைப்பாறும் பாரம் பொறுத்தலாலும் ஏருடன் உவமித்தல். பான் முல்லை - ஆபரணத்தை யுடையவளை மணந்தவன் துன்பம் நீக்கிய மனத்துடன் விதியை வாழ்த்தல். கற்பு முல்லை - மனைவி கணவனின் நன்மையைப் புகழ்தல். மேற்படி - கணவன் நீங்கத் தனது காவலைக் கூறல். மேற்படி - மாளிகையில் கணவனது செல்வத்தை மனைவி வாழ்த்தல். 4. ஒழிபு அணி வகுப்பு அணி வகுப்பை உணர்த்தும் பழைய சொற்கள் உண்டை, கை, ஒட்டு, யூகம் முதலியன. திருக்குறள் உரையில் நால்வகை அணி வகுப்புகள் கூறப்படு கின்றன. அவையாவன:- 1. தண்டம்-சேனையை குறுக்காக நிறுத்துவது. 2. மண்டலம்-பாம்பு மண்டல மிடுவதுபோலச் சேனையை நிறுத்துவது. 3. அசங்கதம்-சேனையை வேறு வேறாக நிறுத்துவது. 4. போகம்-சதுரங்க சேனையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்துவது. படை வீரர் தமது படைகளைப் பலவாறு அணிவகுத்துப் போர் புரிந்தனர். அவற்றுட் சில வருமாறு:- தெண்ட வியூகம்-முன்னே சேனைத்தலைவனும் நடுவில் அரசனும் பின் சேனாதிபதியும் இரு புறமும் யானை குதிரைகளும் புறம்பே காலாட்களும் நிற்பது. சகட வியூகம்-முன்னே சிறிது சேனையும் பின்னால் அதிக சேனையும் இருப்பது. வராக வியூகம்-முன்னும் பின்னும் சொற்ப சேனைகளும் இடையில் பெருஞ் சேனைகளும் கொண்டிருப்பது. மச்ச வியூகம்-சிற்றெறும்பின் ஒழுங்குபோல் வது. காருட வியூகம்-ஊசியை ஒப்பது. சூசிக வியூகம்-ஊசியை ஒப்பது. சக்கர வியூகம்-எட்டு வட்டமாக ஒன்றினுள் ஒன்றாக எல்லாத் திசைகளையும் நோக்கி நிற்பது. சர்வதோபத்திர வியூகம்-எட்டு திசைகளையும் நோக்கி நிற்பது. பிறை வியூகம்-பிறைபோல் நிற்பது. 1ஆறு, மலை, காடு, கோட்டை முதலியவற்றால் இடையூறு நேர்ந்த காலத்தும் படைத்தலைவனது சேனையை அணிவகுத்துச் செல்லுதல் வேண்டும். முன்னால் ஆபத்துத்தோன்றின் படையினை மகரம் பட்சி ஊசி ஆகிய இவற்றில் ஒன்றாக வியூகம் வகுத்துச் செல்லுதல் வேண்டும். பின்னால் ஆபத்துத் தோன்றின் சகட வியூகமாகவும் பக்கத்தேயாயின் வச்சிர வியூகமாகவும் எல்லாப் பக்கங்களிலுமாயின் எண்கோணம் சக்கரம் அல்லது பாம்பு வியூகங்களில் ஒன்றாக அணிவகுத்துச் செல்லல் வேண்டும். குதிரை யானை காலாள் முதலியவற்றுக்கு வெவ்வேறு அணிவகுப்புச் செய்தல் வேண்டும். அரசன் “சீருலவு மனுநீதி மந்திரி சொல்தன்புத்தி தேசத் தியற்கை நான்குஞ் சேர்ந்து செவி விழி மனது மூன்றினும் பொறுமை சேர்ந்து செங்கோல் செலுத்தித் தாருலவு கமலங் குமுதங் காலங்கள் சார்ந்து மலர்கின்ற விதமுந் தந்தியொடு முதலைபொரு தானபலமுங்கண்டு தரியலரை வெற்றிகொண்டு பாருலவு கொடிசேனை தனதானியமுஞ் சகல பாக்கியமு மிகவிளங்கப் பற்பல தன்மங்களோடு கீர்த்திப்ரதாபம் படைத்த திறலோ னரசனாம்” “மனுநீதி முறைமையும் பரராசர் கொண்டாட வருமதிக ரணவீரமும் வாள்விஜய மொடுசரச சாது விசேஷம் வாசி மதகரி யேற்றமும் கனமா மமைச்சரும் பலமான துரகமும் கை கண்ட போர்ப் படைஞருங் கஜரத பதாதியுந் துரகப்ர வாகமுங் கால தேசங்க ளெவையும் இனிதா யறிந்த ஸ்தானா பதிகளொடு சமர்க் கிளையாத தளகர்த்தரு மென்றும் வற்றாத் தன தானிய சமுத்திரமு மேற்றகுள குடிவர்க்கமும் அனைவோரு மெச்ச விவை யெலாமுடையபே ரரச ராம்” “அரசருட் சிறந்தோன் நாடு, அரண், பொருள், படை, பிற அரசரின் நட்பு என்னும் ஆறும் உடையவனாவன். வறியவராய் நலிவெய்தினார்க்கும் வறுமையுற்றிரந்தார்க்கும் காண்டற்கெளியனாய் யாவர் மாட்டும் இனிய சொற்களைக் கூறுபலனா யிருப்பின் அவ்வரசனை உலகம் உயர்த்துக் கூறும். வேண்டுவார்க்கு வண்டுவன கொடுத்தலும், யாவர்க்கும் முகமலர்ந் தினிய கூறலும், முறைமை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய இந்நான்கு செயலையுமுடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன் (குறள்’) அரசனது உறுதிச் சுற்றம் அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர் என்ற ஐம்பெருங் குழுவும், கரும வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர் பெருங்கணி என அரசியல் வகிக்கும் தலைவரும் அரசனது உறுதிச் சுற்றமாவர். கரும வினைஞர் தேசத்தின் ஆட்சியை நடத்துவர். கணக்கியல் வினைஞர் தேசத் தின் வரி வருவாய்களைக் கவனிப்பர். தரும வினைஞர் நாட்டின் அறங் களைப் பாதுகாப்பர். தந்திர வினைஞர் படைகளில் சம்பந்தமான தலைமை வகிப்பர். பெருங்கணி அரசனுக்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்பான். இவர்களெல்லாம் அரசனது மந்திராலோசனை கூறுதற் குரியர். மேற்கூறியவாறன்றி கரணத்தியலவர் (கணக்கர்), கருமவிதிகள் (ஆணைநிறைவேற்றுவோர்) கனகச் சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடை காப்பாளர் (அரண்மனை காவலர்), நகரமாந்தர் படைத்தலைவர் யானைவீரர் குதிரைவீரர் என்னும் ஐம்பேராயத்தினரும் அரசனுக்கு உறுதிச் சுற்றத்தின ராவர். இவரையன்றி சாந்து முதலிய வாசனைப் பொருள்களைப் பூசுவோர், மாலைகட்டுவோர், வெற்றிலை மடிப்போர், பாக்கு வழங்குவோர், கச்சுக்கட்டு வோர், நெய் பூசுவோர், மருத்துவர் என்போரும் அரசனைச் சூழ்ந்திருப் போராவர். “அரசர்க் குக்குழு வைந்துமந்தியர் புரோகிதர் சேனா பதியர் தூதர் சாரண ரென்னச் சாற்றப் படுமே” “மந்திரி யானவ ரரசர்க் குத்துணை யிருந்தா லோசிப் பவரே யென்ப” “புரோகித ரானவ ரரசர்க்கு வரும் காரிய முரைத்துங் கிருத்திய மவைகளைச் செயச் சொலுஞ் சோதிட ரென்னச்செப்புப” “சேனாபதிய ரானவர் படை கொடு பகைவரை வெல்பவ ரென்னப் பகருப” “தூதரானவ ரொருவர்க் கொருவர் சொன்ன செய்தியைச் சொல்பவரென்ப” “சாரண ரானவர் புறம் பினுண்டாகுஞ் செய்தி யெல்லாந் தெரிந்துரைப்பவரே” “அரசர்க் குறுதிச் சுற்ற மைவராவர் நட்பாள ரந்தனர் நன்மடைத் தொழிலர் மருத்துவக் கலைஞர் நிமித்திகப் புலவரே” “நட்பாள ரானவ ரரசன தின்பந் துன்பந் தமதெனச் சூழ்ந்தியல் பவரே” “அந்த ணாள ரரசன் வாழ்நாள் செங்கோல் வளர நீதி செப்புவரே” “மடைத் தொழி லாளரறு வகை யுண்டிக ளுடம்பிற் கினியவா யூட்டுவோ ரென்ப” “மருத்துவக் கலைஞ ருடம்பி னோயறிந் தன்னாடகப் பரிகாரஞ் செய்பவர்” “நிமித்திகப் புலவர் பல்லிச் சொன்முதல் குறிகளை யாய்ந்து கூறுவோரே” தானாதிபதி மந்திரி சேனாபதி களினியல்பு “தன்னரசன் வலிமையும் பரராச ரெண்ணமுஞ் சாலமேல் வரு கருமமுந் தானறிந் ததிபுத்தி யுண்டாயினோன் றானாதி பதியாகுவான் மன்னவர் மனத்தையும் காலதே சத்தையும் வாழ்குடி படைத் திறமையும் மந்திரா லோசனையு மெல்லா மறிந்தவன் வளமான மதிமந்திரி துன்னிய படைக் குணங் கரி பரிபரீட்சையே சூழ்பகைவர் புரிசூழ்ச்சியுந் தோலாத வெற்றியுந் திடமான சித்தியுள சூரனே சேனாதிபன்” “காரியா காரியங் கொற்றவர் தெரிந்திடக் கண்டு சொல்வோன் மந்திரி காலமுந் தன்பலமு மெண்ணி யிகல்வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் சீரிய தனங்களோடு ராச்சியஞ் சகலமுந் திட்டமிடுவோன் ப்ரதானி செய்ய வாசகத்தாட்டி யவதான வக்கணை சிறக்கு மவனே ராயசன் சூரியன் றிசை மாறினுந் தான்றொடுத்தவத் தொகைவிடான் கருணீகனாஞ் சொல்வன்மை சபைவன்மை பராரசர் வண்மைதெரி சுமுகனே தனாதிபதி” “மந்திரியர் கருமாதி காரர் கடைகாப் போர்கண் மருவுநகர் மாக்கள் சுற்ற மலைபடைத் தலைவரோ டிவுளி யேறிடுமவர் மதயானை வீர ரெண்மர் சந்ததமு மரசருக் குறுதுணைவ ராமியல்பு தவறாத வந்தணாளா சாந்தமுறு நட்பாளரொடுமடைத் தொழிலர்நோய் தனையறிந் தவிழ்த்தமீயும் புத்தியுண் மருத்துவக் கலைஞருநிமித்திகப் புலவரிவரைவர் களுமெப் போதுமர சர்க்குறுதி யாகின்ற சுற்றமிது.” அரசாளும் முறை மலையரன் காட்டரண் மதிலரண் நீரரண் மருவுமிந் நான் கரணமும் மந்திரிகட ளகர்த்தர் குடிபடை யுடையராய் வலிய சதுரங்க சேனை நிலையுடைய ராயெளிய ரெளிதினிற் கண்டுகொள நேரிடுங் கருணையாளராய் நிலமுழுதுங் குடிகள் பாலாறி லொருகடமையின் னிதி கொண்டு தனது நாட்டிற் கலக மிடுவோர்களைக் கொலை களவினோர்களைக் கனதுட்ட மிருகங்களைக் கண்டித்து மனு நூலறிந்து செங்கோலின் முறை காத்திடுத லரசாட்சிகாண்” அரண்1 நகரைச் சூழ்ந்து மதிலும் மதிலைச் சூழ்ந்து வெள்ளிடை நீலமும், வெள்ளிடை நீலத்தைச் சூழ்ந்து அகழும், அகழைச் சூழ்ந்து மலையும், மலையைச் சூழ்ந்து காடும் அரண்செய்யும். காவற்காடும், அகழும் மதிலு மாகிய அரண்கள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. காவற்காடு அகழைப் புறஞ்சூழ்ந்து பலவகை முள் மரங்கள் நெருங்கி வளரப் பெற்றதாய் வெகு தூரம் பரந்திருக்கும். அது வஞ்சனை பலவுடையதாய் மழு முள் முதலியன பதிக்கப் பெற்றிருக்கும். அதனைக் காவல் செய்திருக்கும் வேட்டுவர் அரண் பல அவ்விடத்துண்டு. கோட்டையை அடுத்து அகன்று ஆழ்ந்த அகழ் உண்டு. அதனிடத்தே பெரிய முதலைகளும் ஆட்களை விழுங்கும் பெரிய மீன்களும் வாழும். நாட்டில் பெருகும் கழி நீரெல்லாம் கற்படை (மதகு) வாயிலாக வந்து இவ் வகழிலே விழும். இதனை அடுத்துள்ள மதில் புற மதிலெனப்படும். மதிலின் மேல் பலவகைப்பட்ட இயந்திரப் பொறிகளும், அம்பு எய்து மறைதற்குரிய பதுக்கிடங்களு முண்டு. அது ஏணி முதலியவற் றிற்கு எட்டாத உயரமும், பகைவர் தகர்க்க முடியாத திண்மையும் அகலமும் உடையது. அதன்வாயில் பல உயரமான வேலைப்பாடுகள் பெற்று பெரிய இரும்பினாலே கட்டிச் செவ்வரக்கு உருக்கி வழிக்கப்பட்டது. நிலையைத் தாங்கி நிற்பதாகிய சுவரின் பகுதி (உத்தரக் கற்கவி) இரண்டு யானைகளின் நடுவே திருமகள் வீற்றிருக்கும் வடிவமுடையதாய் அமைக்கப்பட் டிருக்கும். இடை வெளியில்லாமற் கடாவிய பல மரங்களின் கூட்டமாகிய நிலை நெய்பூசி வெண் சிறுகடுகு அப்பப் பெற்றிருக்கும். கதவுகள் ஒன்றோடு ஒன்று வாய் சேரும்படி இரண்டாகச் செய்யப்பட்டுத் தாழுடன் பொருத்தப் பட்டன. அதன் கதவுகள் உட்புறத்தே திரண்ட மரங்களினால் தாழிடப்பட் டிருக்கும். வெற்றிக் கொடியுடன் யானைகள் செல்லும்படியாக வாயில் உயர்ந்திருக்கும். அதன்தோற்றம் வெள்ளிமலையை இடையே திறந்தாற் போன்றது. வாயிலிடத்தே பந்தும் பாவையும் பசியவரைகளுடைய புட்டி லும் அவற்றை எறிந்து விளையாடும் மகளிராகிய பாவைகளும் அம்பின் முனையிற்கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அங்ஙனம் தூக்குவது பகைவரை மகளிராக்கி அவற்றை அவர் கொண்டு விளையாடுதற்கேயாம். பந்திற்கும் பாவைக்கும் பதில் சிலம்பினையும் தழையினையுங் கட்டித் தொங்கவிடுதலுமுண்டு. “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கினவென் றது, ஈண்டு பொரு வீருளரேல் நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க் குரிய உடையினையு மொழித்து சிலம்பினையும் தழையினையும் அணிமி னென அவரைப் பெண்பாலாக்கி இகழ்ந்த வாறென்க.”1 மலையுள்ள விடங்களிலே அம்மலை தானேஅரணாகவும் வளைந் திருக்கும். மதில் வாயிலுக்கு அடுத்துள்ள அகழ் பலகைகளினால் மூடப்பட்டு போக்கு வரத்துக் கேற்றதாயிருக்கும்.போர்க்காலங்களில் அப்பலகைகள் எடுத்துவிடப்படும். வெளிமதிலின் உட்புறத்துள்ளது இடைமதிலெனப் படும். நெடுங்காலம் அடைமதிற்பட்ட காலத்து உணவுப்பொருள்களை விளைவித்தற் பொருட்டு மதிலகம் குளமும் வயல்களுமுடையதா யிருக்கும். “அது வஞ்சனை பலவும் வாய்ந்து தோட்டி முண் முதலியன பதிந்து காவற் காடு புறஞ் சூழ்ந்ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத் தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனரியற்றிய பல பொறிகளும், ஏனைய பொறிகளும் பதணமும் மெய்ப்புழைஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழு வின்றமைந்த வாயிற், கோபுரமும் பிறவெந்திரர்களும் பொருந்த வியற்றப்பட்டதாம். “இனி மலையரணும் நிலவரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போலவே வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்கள் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். (ந. உரை) மூவகை ஆற்றல் உடையராய் பிறர்மேற் செல்வார்க்கும், அவையின்றித் தத்தம் மேல்வருவார்க்கும், அஞ்சித்தன்னையே அடை வார்க்கும் அரண் சிறந்தது. மணிபோன்ற நீரும் வெள்ளிடை நிலமும் மலையுங் குளிர்ந்த நிழலையுடைய காடுடையதும், ஏணி எய்தாத உயரமும் புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும் அகத்தோர்க்கு நின்றாள்வினை செய்யலாந் தலையகலமும் செங்கட்டி கல் முதலியவற்றாற் செய்தமையின் தகர்க்கலாகாத திண்மையும் உடைய கோட்டையுடையதும் சிறந்த அர ணாகும். காக்கவேண்டிய இடம் சிறியதாயும் உள்ளே அகன்ற இடமுடைய தாயும் அகத்தார் புறத்தார்மேல் அம்பு முதலியவற்றைச் செலுத்திப் போர் செய்தற்கரிய தன்மையுடையதாயும், அகத்தோர்க்கும் பொருள்கள் எல்லா வற்றையும் உள்ளேயுடையதும் புறத்தோரால் அழிவெய்து மெல்லைக்கண் அகந்து எய்தா வகை நல்ல வீரரையுடையதே அரணாவது. வீரர் உள் ளிருந்து வெளியே செல்லாவாறும், வெளியே இருந்து உள்ளே புகாவாறும் நெருங்கிச் சூழ்ந்து முற்றுகை இட்டும், அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த விடம் நோக்கி ஒரு முகமாகப் போர் செய்தும் துணிவுடையோரை ஏவிக் கத வினைத் திறந்தும் அகத்தோரைப் புறத்தோர் கொள்ளுதற்கரியது அரண். படைப் பெருமை சூழ்தல் வல்லவராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும் அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாது நின்று பொருது வெல்வதரண். போர் தொடங்கிய வளவிவே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் தொழில் வேறுபாட்டால் வீறுபெற்று மாட்சிமைப்பட்டதே அரண். மாட்சி என்றது புறத்தோரறியாமற் புகுதல் போதல் செய்தற்கு சுருங்கைவழி முதலிய வுடையதை. அரண்மேற் சொல்லப்பட்ட சிறப்புகளுடையன வாயினும், ஏற்ற தொழிலை அளவறிந்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியும் (குறள்.) ஆயுதங்கள் வில், அம்பு, பிண்டி, பாலம், சூலம், மழு, எழு, வாள், கவசம், தோமரம், கதை, தண்டம், நாராசம், இரும்புமுள், கழுமுள் கூன்வாள், சிறுவாள், கொடு வாள், அரி வாள், சுழல் படை, ஈர் வாள், உடை வாள், கை வாள், கணையம், கோடாலி, தோட்டி, வேல், வச்சிரம், குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெருஞ்சவளம், சக்கரம், கன்னம், உளி, பாசம், தாமணிசாலம், ஊசி, முசுண்டி, முசலம், இடங்கணி, அள், பலகை முதலியன முற்காலத்தவர்கள் உப யோகித்த யுத்த ஆயுதங்களாகும். ஆயுதங்கள் சிலவற்றின் வடிவம் அம்பு-இரண்டு முழநீளமுடையதாய் அடியில் இறகுகட்டப்பட்டது. வேல்-பலமான பிடியுடையதாய் மார்பளவு நீளமுள்ளது. ஈட்டி-இதன் அலகு நாவிதன் கத்தி போன்றதாய் கைபிடி இறுக்கப்பெற்று நான்கு முழ நீளமுடையது. குந்தம்-சங்கைப்போன்ற கைபிடியுடைய தட்டை வடிவின தாய் பத்துமுழ நீளமுடையது. சக்கரம் ஆறுமுழச் சுற்றளவுடையது; நாவிதன் கத்திபோன்ற அலகுடையதாய் நடுவிற் பிடித்துச் சுழற்றும் கைபிடி யுடையது. பாசம்-மூன்று ஊசிகள் இறுக்கப்பெற்று இரும்பால் முறுக்கிய கயிறுடைய தடி. கவசம்-உடம்பின் மேலுறுப்புகளைக் காப்பது. தலையைக் காக்கும் தொப்பி கோதுமையளவு கனமுள்ள இரும்புத்தகட்டாற் செய்யப் பட்டது. கரசம்-இரும்பாற் செய்யப்பட்ட கூரிய முனையுடையது. படைக் கலங்களைத் தடுக்கும் கருவிகள் வலகை, கேடகம் முதலியன. கேடகம்-வட்டவடிவினதாகத் தோலினாற் செய்யப்பட்டு உட்புறத்தேகையில் கொளுவிப்பிடிக்கக்கூடிய கைபிடியுடையது. பலகை-பலரைத் தாங்கக் கூடியதாக நீளமாகக் செய்யப்பட்டதாயிருக்கலாம். கவசம்-புலித்தோலி னாலாவது இரும்பினாலாவது செய்து உடம்பில் சட்டை போல் அணியப் பெறுவது. காலாட்கள் கவசமணிவது சிறப்பின்று. ஆயுதவகை இரண்டு “ஆயுதவகை யிரண் டத்திரஞ் சத்திரம்” “அத்திரங் கைவிடு மாயுதமென்ப சத்திரங் கைவிடா வாயுத மெனத்தகும்” இரதம் போரில் உபயோகிக்கும் தேர் இலகுவில் உருளக்கூடிய சில்லுகளை உடையது. அதன் முற்புறத்தின் சாரதிக்கு இடமுண்டு. அதனிடத்தே பல வகை எறி கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலே கொடிகள் நாட்டப் பெற்றும் பக்கங்களில் மணி கோத்துக் கட்டப்பெற்றும் அலங்கரிக்கப் பட்டிருக்கும். வீரர் முதுகில் அம்பறாத் தூணி கட்டியவர்களாய் மத்தியில் நின்று வில்லை வளைத்தும் பாணங்களைச் செலுத்திப் போர் செய்பவர். சேம விற்களும் தேர்களில் வைக்கப்பட்டிருக்கும். இருவகைப் போர் ஒரு வேந்தன் மாற்று வேந்தனின் அரணை வளைத்துப் பொருது கோட்டையைக் கைப்பற்றல் ஒன்று. போர் கருதிய இரு வேந்தரும் ஓர் இடத்தைப் போர்க்களமாகக் குறித்து அதனிடத்தே கை கலந்து போர் செய்வது மற்றொன்று. இருவர் பாசறைக்கும் மத்தியில் உள்ளவிடமே போர்க்களமாகும். உன்னம் உன்னம் என்பது ஓர் மரம். இது தன்னாட்டகத்துக் கேடு வருங்காலம் உலறியும் வராதகாலம் குழைந்தும் நிற்கும். காவல்மரம் பண்டைக்காலத்துத் தமிழரசர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர் மரத்தைத் தமது ஊர்ப்பக்கத்துச் சோலைகளில் வைத்து, வளர்த்து அதனைக் குறிக்கொண்டு காப்பர். படையெடுத்து வரும் பகைவேந்தர் அக் கடிமரத்தையே முதற்கண் கடிய முற்படுவார்கள்; அங்ஙனம் அதனை அவர்கள் தடித்துவிடுவார்களானால், அம் மரத்துக் குரிய அரசருக்குப் பெருந் தோல்வியும் பேரவமானமும் எய்தியதாகக் கருதப்படும். பகைவேந்தர்கள் அம் மரத்தில் தம் யானைகளைக் கட்டுதலும், அதனை வெட்டிக்கொண்டு போய்த் தங்கள் யானைகட்குக் கட்டுத்தறியாக நட்டு வைத்தலும் அம் மரத்தால் தங்களுக்கு வீரமுரசஞ் செய்தலும் மரபு. கைப்போர் இடக் கையினாற் குடுமியைப் பற்றி இழுத்து நிலத்தில் வீழ்த்திக் கால் களால் அடித்தல், தலையில் உதைத்தல் நெஞ்சை முழங்காலால் அழுத்தல், கையை முட்டித் துக்குத்துதல், முழங்கையாற் குத்துதல், அடித்தல், சருவுதற்கு வசதியான இடங்களை ஆராய்தல் முதலியன ஆயுதமில்லாது போர் புரிவோர் செய்கைகளாம். சேரன் “சேர னானவன் றிகழ்சீர் வஞ்சியுங் குடக நாடுங் கொல்லி மலையும் பொருகை யாறும் புகழ்பனை மாலையும் பாடல மென்னப் பகருங் குதிரையும் விற் கொடி யுமுள னென்ன விளம்புப” சேனைத்தொகை “சேனைத் தொகைபத் தாமவை பதாதி சேனாமுகங் குமுதங் கணகம் வாகினி பிரளயஞ் சமுத்திரஞ் சங்க மநீக மக்கு ரோணி யென்ன வறையப்படுமே” “பதாதியாவது யானை யொன்று தே ரொன்று பரிமூன்றா ளைந்து கூடிய தென்னக் கூறப் படுமே பதாதி முதல் மேன் மேன் மும்மடி கொண்டதாஞ் சேனா முக மாதியவே.” யானை ஒன்று குதிரை மூன்று தேர் ஒன்று காலாள் ஐந்து கொண்டது ஒருபத்தி. இந்தப் பத்தி மூன்று கொண்டது சேனாமுகம். சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம். குமுதம் மூன்று கொண்டது கணம். கணம் மூன்று கொண்டது வாகினி. வாகினி மூன்று கொண்டது பிரளயம். பிரளயம் மூன்று கொண்டது சமுத்திரம். சமுத்திரம் மூன்று கொண்டது அநீகினி. அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி எனப்படும். அக்குரோணிக்குத் தேர் 21870, யானை 21870, குதிரை 95610, காலாள் 109350. இன்னொரு வகை:-சமுத்திரம் மூன்று கொண்டது சங்கம். சங்கம் மூன்று கொண்டது அநீகம். அநீகம் மூன்று கொண்டது அக்குரோணி. அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம். ஏகம் எட்டுக் கொண்டது கோடி. கோடி எட்டுக் கொண்டது மகாசங்கம். மகாசங்கம் எட்டுக் கொண்டது விந்தம், விந்தம் எட்டுக் கொண்டது குமுதம், குமுதம் எட்டுக் கொண்டது பதுமம். பதுமம் எட்டுக் கொண்டது நாடு, நாடு எட்டுக்கொண்டது சமுத்திரம், சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம். “ஒருபெருந் தேரு மிருபெருங் களிறும் துரக நான்கும் படைஞ ரைவருங் கொண்டது பதாதி யென்பதாகும் பதாதி முறை வழுவாமன் மும்மடங்கு கொண்டது சேனை யென்பதாமே ஆங்கது மும்முறை கொண்டது குன்மங் குன்ம மும்முறை கொண்ட தனீகினி அனீகினி ஐம்பதிற் றிரட்டு யோடாயிரங் கொண்ட தக்குரோன யென்ன மொழிந்தான் மூவகை யுலகமு முறைபட வேத பாரதம் பகர்ந்த பராசரன் மகனே” (பெருந்தேவனார்பாரதம்) சோழன் சோழனானவன் றோல்லுறையூரூம் தண்புன னாடும் தனி நேரி மலையுங் காவிரி யாறுங் கவினார் மலையுங் கோர மென்னுஞ் குதிரையும் வரிப்புலிக் கொடியு முடையவ னென்னக் கூறுப. துணங்கை வீரர் ஆடுங் கூத்து, “முடக்கிய இருகை பழுப்பு டையொற்றித் துடங்கிய நடையது துணங்கை யாகும்” தேரளாளர் நால்வகையினர் அதிரதர்-தம்மையும் தமது சேனையையும் காத்துக்கொண்டு பல தேர்வீரர்களோடு போர்செய்யும் வீரர். மகாரதர் தம்மையும் தாமேறிய தேர் குதிரை சாரதி சேனைகளையுங் காத்துக்கொண்டு சில போர்வீரரோடு போர்செய்பவர். சமரதர்-தம்மையும் தம்முடையதேர் சாரதி குதிரைகளையும் காத்துக்கொண்டு ஒரு தேர்வீரனோடு போர்செய்பவர். அர்த்தரதர்-தம்மைமட்டுங் காத்துக்கொண்டு ஓர் தேர் வீரனோடு போர்செய்பவர். நகர் கோட்டை வாயிலைக் கடந்து செல்லின் அதனைக் காவல் புரிவோர் நெருங்கியுறையும் விதிகளும், மீன் விலைஞரும், உப்பு வாணிகரும், கள் விற்போரும், பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற் போரும், இறைச்சி விற்போரும் வசிக்கின்ற வீதிகள்தோன்றும். இவ் வீதி களையடுத்து மட்கலஞ் செய்யுங் குயவர்களும், செம்பு வேலைசெய்வோர், வெண்கலக் கன்னார், பொற்கொல்லர், தச்சர், மட்பாவை செய்வோர், தையற் காரர், மாலை கட்டுவோர், சோதிடர், பாணர் முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப் பணியாளர் வீதிகளும்,நாடகக் கணிகையர் வீதியும், நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும், சூதர் மாகதர் வேதாளிகர் பொதுமகளிர் தெருக்களும், ஆடை நெய்து விற்போர், பொன் வாணிகர் இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரா காரமும் இராசவீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழும் தெருக்களும் அமைந்திருக்கும். இவையேயன்றி யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்திகளும் அருவியோடும் அழகிய செய்குன்றுகளும் அறச்சாலைகளும் பொன்னம்பலமும் விளங்கும். இவற்றின் மத்தியில் அரசனது அரண்மனை பொன்மயமான மேருப் போல் விளங்கும். அதன்கண் கொலுவிருக்கை மண்டபமும் மந்திராலோசனைச் சபையும் சமயத்திருக்கையும் நடன சாலையும் மாட்சிமைபெற்று விளங்கும் (மணிமேகலை.) பட்டினம் “பக்கமொரு நாற்காத நீளஞ் சவுக்கமாய்ப் பலர்கணிறை தருமா வணம் பனிவாவி மாடமாளிகை மேடை கோபுரம் பகரால யங்களுடனே மிக்கரத கசதுரக பதாதிகே தனமாடல் வேசையர்க ளாடல் பாடல் வீதியிருபாலினுந் தாழைகமு கஞ்சோலை மேவுமொளி சூழு மணிக டக்கபுக ழந்தணர்கண் மன்னர் மந்திரிமுதற் சகலசா தியரு முளதாச சற்சனரோ டட்டலட் சுமிவாச முள்ளதே சதுரங்க பட்டண மதாம்.” “பரத கீதப் ரபல வேசியர்களாடலும் பாடலும் பெறு கோயிலும் பலவாவி மண்டபங் கோட்டை யரணங்களோடு பலர் மேவு கடை வீதியும் இரத கஜ துரகம் பதாதிச துரங்கபல மேற் கின்ற தளகர்த்தனு மெண்ணமிகு மந்திரிப் ரதானி தானாபதிய ரியலுத்தி யோக சனமும் விரதமறை யோராதி நாற்குலமு மொன்றென்று மிக்க சோடச தானமு மேலாயச் சமீபித்த நதியுமாய் மனு நீதி வேந்தனும் பெறு பட்டணம்.” நால்வகை நிலை வில்லாளர்களது நிலை ஆலீடம், மண்டிலம், பிரத்தியாலீடம், பைசாசம் என நாலுவகைப்படும். ஆலீடம்-வலக்காலை மண்டியிட்டு இடக்காலை முன் வைத்து நின்று பாணஞ் செலுத்துதல். மண்டிலம்-இருகால் மண்டியிட்டு நிற்கும் நிலை. பிரத்தியாலீடம்-வலக்காலை முன்வைத்து இடக்காலையிட்டு நிற்றல். பைசாசம்-ஒருகாலிநின்று ஒருகால் முடக்குவது. “நிலைநான் காகு மவைபை சாசம் மண்டல மாலீடம் பிரத்தியாலீட மிவைவிற் றொடுத்தம் பெய்வார்க்குரியவே” 1“பைசாச நிலையொரு காலினின் றொரு காலை முடக்க லென்னக் கழறுப” 2“மண்டல நிலையிரு காலும் பக்கல் வளையமண் டலித்த லென வழங்குப. 3“ஆலீட நிலை வலக்கான் மண்டலித் திடக்கான் முந்துற வென்ன வியம்புப” 4“பிரத்தி யாலீட நிலைதான் வலக்கான் முந்துற் றிடக்கான் மண்டலித்தலே” நால்வகை உபாயம் சாமம் பேதம் தானம் தண்டம் “சாம வுபாயம் சமாதா னம்மே’ “தான வுபாயம் பொருளைத் தருதலே” “பேத வுபாயந் துணைவலி பிரித்தலே” “தண்ட வுபாயம் படைகொண்டு தாக்கலே” படை போரின்கண் மடிவதற்கஞ்சாது யானை தேர் குதிரை காலாள் என்னும் நாற்படையுடனும் நின்று பகையை வெல்வதாகிய படை அரசனுடைய செல்வங்களெல்லாவற்றுள்ளும் தலைமை பெற்றது. சிறிய படையாயினும் அரசனுக்குப் போரிடத்தே அசைவுவரின் தாம் மேற் செல்வதற்கஞ்சாது நின்று போர் கொடுக்கும் வன்கண்மை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கு (மூலப்படைக்கு) அல்லது உளதாகாது. எலியாய பகை திரண்டு கடல்போல ஒலித்தால் நாகத்துக்கு என்ன துன்பம் வரும்? அந் நாகம் மூச்சு விட்ட துணைத்தானே அவ்வெலிப்படை தானேகெடும். அதுபோல வீர ரல்லாதார் பலர் திரண்டார்த்தால் அதற்கு வீரனஞ்சான். போரின் கட்கெடுத லின்றி பகைவரால் கீழறுக்கப்படாத தாய்த்தொன்று தொட்டதறுகண்மை யுடையதே. அரசனுக்குப் படை. கூற்று வன்றானே வெகுண்டு மேல் வந் தாலும் நெஞ் சொத்து எதிர் நின்று மாற்றலுடையதே படை. தறுகண்மையும் மானமும் முன் வீரராயினார் சென்ற நெறிக்கட் சேறலும் அரசனாற் றேறப் படுத்துமென இருநான்கு குணமுமே படைக்கு அரணாவது. பகைவரால் வகுக்கப் பட்டுத் தன்மேல் வந்தபகையின் போரை விலக்கும் விலக்கறிந்து அணிவகுத்து அவர்கள் தூசியைத் தன்மேல் வராமற்றடுத்துத் தான் அதன் மேற் செல்வதே படையாவது. அது பகைமேற்றான் சென்று அடுந்தறு கண்மையும் தானை தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லை யாயினும் (தான்) அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும் பதாகைகொடி பல்லியம் காளம் முதலியவற்றுடனும் பொலிவெய்தும். தான் தேய்ந்து சிறிதாகிலும் மனத்தினின்றும் நீங்காத வறுமையும் வெறுப்பும் தன் படைக் கில்லையாயின் படை பகையை வெல்லும். போரின் காண் நினைவுடைய வீரரை மிகவுடைத்தே யாயினும் தானைக்குத் தலைவராகிய வீரரில் வழி தானைநில்லாது (குறள்.) படைச் செருக்கு பகைவீர்! இன்று இங்கு என் தலைவன் எதிர் போர் ஏற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர். நீர் அதன் கண் அல்லாது நும்முடற் கண்ணிற்றல் வேண்டின் என்றலைவ னெதிர் போரேற்று நிற்றலை யொழிமின். கானத்தின் கண் ஓடும் முயலை பிழையாமலெய்த அம்பை ஏந்தலினும் வெள்ளிடை நின்ற யானையை யெறிந்து பிழைத்த வேலை யேந்துதல் நன்று. மாற்றரசன் படையோடு பொருதானொரு வீரன் அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் இதனைத் தனக்குட் சொல்லலுற்றான் பகைவர் மேற்றறுகண்மையினாற் செய்யும் வீரத்தை நூலோர் மிக்க ஆண்டன்மை என்பர். அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயிற் கண்ணோடி அது தீர்த்துக்கோடற்கு உபகாரியாந்தன்மை எய்தல் அதற்குக் காரணம் என்று சொல்லுவர். அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத்தன் றானை முழுதும் படத்தமியனாக்கப் பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியரிறை மேற் செல்லாது இன்றுபோய் நாளை நின்றானை யோடு வாவென விட்டாற் போன்றது. தன்கைப் படையாகிய வேலைத் தன்மேல் வந்தகளிற்றோடு போக்கி வருகின்ற களிற்றுக்கு வேனாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்றவேலைக் கண்டு பறித்துமகிழும் (இதனால் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடைப்போழ் நத்தறிந்தி லனென்பதூஉம், பின்னும் போர்மேல் விரும்பினனென்பதூஉம் பெறப்பட்டது.) பகைவரை வெகுண்டு நோக்கியகண் அவ்வேலைக் கொண் டெறிய அஃதாற்றாது அந்நோக்கை யழித்து இமைக்குமாயின் அது வீரர்க்குப்புறங் கொடுத்தலாம். தனக்குச் சென்ற நாள்களை எடுத்தெண்ணி அவற்றுள் முகத்திலும் மார்பிலும் புண்படாத நாள்களை யெல்லாம் பயன் படாது கழிந்தநாளுள்ளே வைக்கும் வீரன் (குறள்) படைசெல்லும் காட்சி “சின்னமுஞ் சங்குந் தாரையுங் கொம்புஞ் செம்பொனின் காளமுங் குழலுந்-துன்னுவங்கியமுந் தம்முனெம் மருங்குந் தொகுபுவி செவிடுறக் கறங்க.” “சீர்மணி தாளஞ் சச்சரி கஞ்சஞ் சிலம்பவின்றண்ணுமை தடாரி-பேரிகை கரடி மத்தளஞ் சல்லி பெரும்பறை துடிகடி முரசம்-பார்புக ழடக்கை யுடுக்கை நன்னியாளம் படகம் வண்டிமிலை தெண்டுடுமை-வார்படு படகம் பெருந்தகு ணிச்ச மெங்கணும் வானுற முழங்க.” “வில்லொடு கணைவாள் கேடகங் கடகு வென்மழுக் கடைத்தலைக் கழுக்கோ-றொல்கதை பாராவளை வளையெறிகோல் சுரிகை பத்திரங் கொடுங் கணிச்சி-பல்விதமுயலங் குந்தமொண் பிண்டி பாலம் வெஞ்சூல நீள் கழைக்கோல்-கொல்லெழுக்கோல் முதலிய வளவில் கோடி பல்படைக் கலம் பிறங்க” “பொருந்து பூங்கொடிக ளாடைகளாடப் பொருவருஞ் சாமரை யிரட்டத்-திருந்து பல்கவிகை நிழற்ற வெம் மருங்குஞ் சேர்தரு தோரைகள் வீச-நெருங்கடையாளந் துளங்க மட்பாம்பு நெளிய நுண்டூளி வான் முட்டப் படர்ந் தொலிமிக்கு நடந்தது பெரும் படைச்சாத்து. (நம்பி திருவிளையாடல்.) படைத்தலைவர் இடும் கட்டளை வீரர்களுக்கு இடப்படும் கட்டளைகள் வாத்தியங்களை வெவ்வேறு வகையாக ஒலித்துச் செய்யப்படும் என்றும் ஒரு படையினருக் குரிய அடையாளங்களை மற்றவர்கள் அறிதல் கூடாதென்றும் சுக்கிர நீதியிற் சொல்லப்படுகிறது. படையின் வகை 1“யானை தேர் குதிரை காலாள் எனப்படை நால்வகைப்படும். இவற் றோடு விற்படை வேற்படைகளையும் சேர்த்து படையினை அறுவகை யாகவும் கூறுவர் “தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை என ஆற்றல் சான்ற அறுவகைத் தானை” (திவாகரம்) மூலப்படை கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை துணைப் படை, பகைப் படை எனப் படை ஆறு வகையாகவுங் கூறப்படும். மூலப்படை-அரசனிடத்து நெடுங்காலமாக உள்ள படை. கூலிப்படை-கூலி பெறுவதற்காகப் போர் செய்யும் படை. நாட்டுப்படை-போருக்கு உதவக்கூடிய நாட்டிலுள்ள படை. (Volunteers) காட்டுப்படை-காட்டில் வசிக்கும் வேடர் ஆகியபடை. துணைப்படை-துணை அரசர் களுடைய படை. பகைப் படை-பகை அரசரிடத்திருந்து யுத்தத்தில் அகப் படுத்தப் பட்டவர்கள், அல்லது பகைவரிடமிருந்து விலகியவர்கள். பாசறை மாற்றார்மீது சென்ற படை அவரது காவற்காட்டை வெட்டி அழித்து அங்கு காவல் காத்து நின்ற வேட்டுவர் அரண்களை அழித்து அதனிடத்தே பாடிவீடு அமைப்பர் முதற்கண் பாசறை அமைத்தற்குரிய இடம் முட்களால் வளைத்த தடைத்த அரண் செய்யப்படும். அதனகத்தே வீரர்கள் விற்களை நாற்புறங்களிலும் நட்டுப் பரிசைகளை நிரையாக நிறுத்தி வைத்து விற்களிலே துணிகளைத் தூக்குவர். குத்துக்கால்களை நட்டுக் கயிற்றினால் இழுத்துக் கட்டிய கூடாரம் பலவகைத் தழைகளினால் வேயப்பட்டிருக்கும். படைகள் தங்கியிருக்கும் இடத்தின் ஒரு பகுதியை வீரர் எல்லோரும் சேர்ந்து அரசனுக்குக் கோயிலாகத் தெரிந்தெடுத்துக் கூடமாக எறிகோல்களை நட்டுக் குத்துக்கால்களில் தைக்கப்பட்ட பலநிறத் திரைச் சீலைகளை மறை வாக வைப்பர். வாயில் முகப்பில் புலிசங்கிலியிற் கட்டப்பட்ட வடிவினதாகிய சித்திரம் யௌனவரால் சித்தரிக்கப்பட்டிருக்கும். குழாய்களில் நெய்யுமிழும் திரிகளைக் கொளுத்திச் சிற்றாட்கள் எங்கும் விளக்குகளை எங்கும் ஏற்றுவர். விளக்குகள் அவியுந்தோறும் அவர்கள் பந்தங்களைக் கொளுத்திப் பிடிப்பர். காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர் அரசனை வணங்கி வாழ்த்தி நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்தனை என்று கூறுவர். அஞ்ஞான்று தூவெண்டுகிலுடுத்த பெண்கள் ஆலத்தி காட்டுவார். அரசன் திரைச்சீலையைத் தூக்கி உள்ளறையில் நித்திரைகொள்ளும்படி செல்வான்1. நடுயாமத்துத் தலைப்பாகையுங் சட்டையும் தரித்த மெய்க்காப்பளரும் ஊமைகளும் அரசனைக் காவலாகச் சூழ்ந்து திரிவார். அரசன் ஒரு கையைப் படுக்கையின்மேல் வைத்தும் ஒரு கையை முடியுடன் சேர்த்தியும் இருந்து, யானையை எறிந்து பட்ட வீரரை நினைந்தும், அம்பு தைத்த வருத்தத்தால் செவி சாய்த்துப் புல்லுண்ணாமல் நின்று குதட்டும் குதிரையை நினைத்தும், இப்படை நொந்த அளவுக்கு நாளை எவ்வாறு பொருதுமென்று நினைத்தும் நடு நடுங்குவான். தெருவின் நாற் சந்திதழையால் வேய்ந்த கூரையுடையது. அதனிடத்துக் காவலாய் நிறுத்தப்பட்ட யானை கரும்பையும் நெற்கதிரோடு கலந்து கட்டிய இலையையும் அதிமதுரத் தழையையும் உண்ணாது அவற் றால் தமது நெற்றியைத் துடைத்தும் அவற்றைக் கொம்பின் மேல் போட்டுக் கையிட்டதே கொண்டும் நிற்கும். யானைப் பாகர் யானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிக் கவர்பட்ட பரிக்கோலாலே கவளத்தைத் தின்னும்படி யானைகளைக் குத்துவார். 2மாற்றார் வாளாற் போழ்ந்த வீரரின் புண்ணைப் பரிகரித்ததற்கு அரசன் நித்திரை கொள்ளாது புறம்போந்து திரிவான். வாடைக் காற்று வீசுந்தோறும் விளக்குகள் தெற்கு நோக்கிய தலையுடையனவாய் எரியும். வேப்பமாலையைத் தலையிலே கட்டிய வேலுடன் முன் நடந்து செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே முறையே காட்ட அவர்களுக்கு அகமலர்ந்து இன்னுரை கூறுவான். ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள குதிரைகள் தம் மீது வீழ்கின்ற மழைத்துளிகளை உதறும் அரசன் வாளெடுத்தற்கு தோளிலே வைத்த வலக்கையனாய் இடத்தோளில் நின்றும் நழுவி வீழ் கின்ற உத்தரீயத்தை இடப்பக்கத்தே அணைப்பான். “பாசறையிடத்து மதத்தையுடைய யானை கம்பத்தே நின்றசைந்தது; தம்மிடத்தே வாள் இல்லாதவர்கள் முத்துமாலை தூங்கும் வெண்கொற்றக் குடையே காவலாக உறங்கினார்கள். அசைகின்ற நெற்கதிரால் வேயப் பட்டதும் மெல்லிய கரும்பாற் கட்டப்பட்டதுமாகிய ஒழுங்குபட்ட கூரை விழாவெடுத்த களம்போல் செய்யப்படட இதழையுடைய பசிய தும்பை யோடு பனந் தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி கடலொலி போலப் பொங்கப் படைப் பெருமையால் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது பரந்து கிடக்கின்ற அகன்ற பாசறையிடத்துக் காவலாள்.” (புறம்-உரை.) பாண்டியன் “பாண்டிய னானவன் பகர்சீர்ப் பொருநையுஞ் செந்தமிழ் நாடுந் திகழ்பொதி யமலையும் வையை யாறும் மலிவேம் பாரமும் கனவட்ட மாகக் கழறுங் கற்கியு மீனக் கொடியு முளனென விளம்புப.” போர் யானைக் கூட்டங்களையுடைய அரசர் போர் செய்தற்கு எழுந்த கொலைக்களம் விழாக் களம் போன்றது. மகிழ்ச்சி மிகுந்தவர்களும் ஆண்மையுடையவர்களுமாகிய போர் வீரர் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டு யுத்த களத்தே மாய்ந்தனர். நீரிலே தோன்றிய நீர்க்குமிழி போலத் தாக்கிய விசையிலே சிதறி நிலத்திலே வீழ்ந்து சிலர் மடிந்தனர். சிலர் கிடயும் கிடாயும் முட்டியதுபோல முகமும் முகமும் சிதறும்படி முட்டினர். சிலர் கையை முட்டித்து ஒருவரை ஒருவர் குத்தினர். சிலர் கைதட்டி நின்று காலைத் தட்டினர். சிலர் கையினாற்றட்டி யிழுத்தனர். வீரர்கள் என்னும் பெயர்வாங்கிய பகைவர் புகழைச் சிலர் கெடுத்தனர். சக்கரம் போலச் சிலர் சங்கை விட் டெறிந்தனர். சிலர் ஒலிக்கின்ற மேளங்களின் தலையை உடைத்தனர். சிலர் மற்போர் செய்தும் வில்லால் எற்றியும் தள்ளியும் உரப்பியும் நோக்கியும் வீரமொழிகளைக் கூறியும் வீரர்களை ஓடச்செய்தும் கோபித்தும் நாக்கைக் கடித்தும் பற்களை நெறுமியும் பலகயிறுகளை வீசியும் போர்க்களத்தே மயங்கித் திரிந்தனர். பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையுமுடையோ ராகிய யுத்தவீரர் சென்று அடைகின்ற இடம் (வீர சுவர்க்கம்) ஒன்றே ஆதலின் அவர் ஒரே மனத்தினராய் பகைவரைக் கொன்று செஞ்சோற்றுக் கடன் தீர்த்துத் தமது பிணத்தைத் தமது மனைவியர் தழுவி வருந்தி இரங்கும் படியாகவும், புதிதாக வந்த தெய்வ மகளிர்க்கு மண மாலை சூட்டும்படியாக வும் விண்ணுலகை அடைந்தனர். “சிலைத்தன தூசி மலைத்தனயானை யார்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை விலங்கின வொள்வா ளிலங்கின குந்தம் விட்டன தோமரம் பட்டன பாய்மாத் துணித்தன தடக்கை குனிந்தன குஞ்சர மற்றன பைந்தலை யிற்றன பல்கொடி சோர்ந்தன பலகுடர் வார் நன்குருதி குழிந்தது போர்க்கள மெழுந்தது செந்துக ளழிந்தன பூமி விழுந்தனர் மேலோர்,” (உதயணன் கதை) காலாட் படைகள், அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணியை முது கிடத்தே தரித்தவரும், கருமையாகிய கச்சையை இழுத்துக் கட்டியவர்களும், மற்ற வீரர்களைப் பிறங்கிடச் செய்து அவர்கள் சிறப்பை அழித்துச் சிரிப்பது போன்று பலவாக ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்தவர்களும் ஆகிய வீரரைக் கொண்டன. விற்படையினர் வளைந்த வில்லிடத்தே கூரிய அம்பு களைத் தொடுத்து நெஞ்சிலும் நெற்றியிலும் நிணம்படும்படியாகக் கைப் பக்கத்தே பரந்து தாக்குவர். வாட்படையினர் பக்கத்தே நிரைத்தவர்களாய்க் கூரிய வாளைப் பிடி நொறுங்கும் படியாகப் பிடித்து மாலையும் வயிரமும் முறை முறையே எழுந்து வீழத்தாக்குவர். படையிடத்தே வரிசையாய் நிற்கும் குதிரைகள் அழகிய குளம்பை யுடையன; கையினால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடியோடு அசைகின்ற சாமரை அணியப்பெற்றன; சிவந்த போர்வையுடையன; கட்டுதலமைந்த கச்சினால் மறைக்கப்பட்ட சேணத்தையுடையன; விருது கட்டப்பட்ட முகத்தையுடையன; கடற்றிரைபோல மென்மேலும் தத்திவருகின்ற பொங்கு கின்ற பிடரி மயிருடையன; இவ்வாறு கெச்சை ஒலிப்ப வருகின்ற குதிரை களிலே வீரர்கள் ஏறி வருவர். யானைப்படை, வீரத்துடனே ஒன்றோடொன்று தாக்குவனவும், போர்ப் பறைமுழங்கினும் கோபித்துமழைபோல மதஞ்சொரியும் சுவட்டை யுடையனவுமாகிய கொல்லும் பல யானைகளையுடையது. மலை நிமிர்ந் தாற்போன்ற பெரிய யானையின் பிடரியில், நிலையும், கணையும், அழகிய வட்டும், மழுவும், குந்தமும், மயிற்குரல் போன்றொலிக்கும் சின்னமும், சங்கும், கணையமும், சத்தியும், வாளும், பிண்டி பாலமுமாகிய எல்லாம் குறைவில் லாது பயின்ற மாலையணிந்த மறவர் இருந்து நிலமதிரும்படி இடைவிடாது திரியும்படி கதியிற் பழக்கிக் கொன்று குவிக்கப் போர்க்கள வட்டம் கட லொலிபோலக் கலித்தது. அஞ்ஞான்று பனை வெட்டுண்பதுபோல துதிக்கை வெட்டுண்ணவும், வார்கட்டிய மேளத்தைப்போலக் கால்கள் அறுப்புண்டு கிடக்கவும், வால்கள் வில்லின் துணிபோற் கிடக்கவும், தாமரை மலர்போற் செய்யப்பட்ட கிம்புரி யிறுக்கப்பட்ட கொம்புகள் செக்கர் வானத்திற்றோன் றும் பிறையைப்போற் காணவும் யானைகள் வீழ்ந்தன. மார்பிலே கொடிய படைபடுதலால் வீரர் யானையோடு வீழ்ந்தனர். ஆரமணிந்த வேல்பாய அதனைப் பிடுங்கி வளைவெடுத்து யானையைக் கொன்று மாற்றார் உயிரை வாங்கி வீழ்வோரும், பெரிய கடலிடத்தேவரும் திரையைப் போலக் கடைக் கயிற்றைப் பிடித்துவரும் எழுச்சியைப் போல அழகிய பிடிவாரைப் பிடித்த கையினராய் இரத்த வெள்ளத்து வீழ்வோரும், கரிய தலைகளும் இரத்த வெள்ளத்திற் புரளவும், யானையும் குதிரையும் காலாட்களும் விழுந்து குழம்பாகிய சேற்றுள் பலரும் உழக்கலிற் சவர் நிலத்து எழும் தூசைப் போலத் தூளி ஆகாயத்திற் பரந்தது. போர் செய்யும் முறை போர்க் காலங்களில் வீரர்களை உற்சாகப்படுத்தக் கூடிய மதுவர்க் கங்கள் அளிக்கப்படும். குதிரை வீரரைக் குந்தத்தினாலும் வாளினாலும், தேர் வீரரையும் யானை வீரரையும் அம்புகளாலும் தாக்குதல் வேண்டும். தேர்கள் தேர்களுடனும், குதிரைகள் குதிரைகளுடனும், காலாட்கள் காலாட் களுடனும் ஒவ்வொருவராக எதிர்த்தல் வேண்டும். எறிபடைகளையும் மற்றும் படைகளையும் கொண்டு போர் செய்வோர் அவ்வப்படையாள ரோடு போர் செய்தல் முறையாகும். போர் உடை போர் வீரர் காலில் வீரக்கழல் அணிந்திருப்பர். அரையில் வட்டுடை அணிந்திருப்பர். சிலர் முழங்காலுக்குமேல் காற்கட்டை தரித்திருந்தனர். மற நிலை யறம் “மறநிலை யறமா வதுநீரை மீட்டுப் பகை வென்று சோற்றுக் கடனது கழியா தாரைத் தண்டித் துக்குறை செய்தலே”. யுத்த தருமம் யுத்தத்தில் புறங்கொடாது போர் செய்வோர் சுவர்க்கம் புகுவர். ஓராயுதத்தை மற்றொரு ஆயுதமாகக் காட்டியும், நுனியில் விஷந்தடவிய பாணங்கள், நெருப்பிற் காய்ச்சிய பாணங்கள் ஆகிய இவைகளைப் பிரயோகிக்காமலும் இரதத்தை விட்டுப் பூமியில் இறங்கியவன், பேடி, அஞ்சலி செய்தவன், தலை மயிரை அவிழ்த்துக் கொண்டிருப்பவன், அபய மென்று சொன்னவன், தூங்குகிறவன், ஆடையில்லாதவன் எதிர்க்காதவன், சண்டையைப் பார்ப்பவன், மற்றொருவனோடு சண்டை போடுபவன், ஆயுதம் ஒடிந்தவன், பயந்தவன், புறங்கொடுத்தோடுகிறவன் ஆகிய இவர்களைக் கொல்லுதல் கூடாது. வாட்போர் வாட்போர் செய்வோர் இடக்கையிற் கேடகமும் வலக்கையில் வாளுமாக நின்று பொருவர். “வட்டணை வாளெடுத்-தாதிசாரணையடர் நிலைப்பார்வை-வாளுடநெருக்கன் மார்பொடு முனைத்தல்-பற்றி நின்றடர்த்தலுட்கையின் முறித்த-லானனத் தோட்டலணிமயிர்ப் புரோக-முட்கலந்தெடுத்த லொசிந் திடமழைத்தல்-கையொடு கட்டல் கடிந்துளழைத் தலென்-றிவ்வகை பிறவும்.......” (கல்லாடம்). வட்டணை-கேடகம், ஆதி சாரணை-முதலிற் சார்ந்து நிற்றல், அடர் நிலைப்பார்வை-நெருங்கு நிலை யிலே பார்வை வைத்தல், மார்பொடு முனைத்தல்-வாளை மார்பிலேற்று எதிர்த்தல், பற்றி நின்றடர்த்தல்-ஒருவர் ஒருவரைப் பற்றி நின்று பொருதல், உட்கையின் முறித்தல்-கைக்குள் அடக்கி முறித்தல், ஆநநத் தோட்டல்-(கேடகத்துள் தாழ்ந்து) முகத்தோடடங்குதல், அணிமயிற் புரோகம்-அழகுள்ள மயில்போலும், ஞமலிபோலும் முறையே பின்னே பறிந்து முன்னே நடத்தல், உள்கலந்து எடுத்தல்-ஒருவருட லொருவருடலொடு மயங்கி மேலுற வெடுத்தல், ஒசிந்து-வளைந்து, இடம்-இடப்புறமாக, அழைத்தல்-அறைகூவல், கையொடுகட்டல்-ஒருவர் கையோடு ஒருவர் கையேற்றுச் சேரவிறுக்கல், கடிந்து-குறிவழி பிழைத்து, உள் அழைத்தல்-தாம்தாம் நிற்கும் நிலைக்களத்தே ஈர்த்தல். வீரக்கழல் இது பொன்னாற் செய்து வீரத்துக்கும் வெற்றிக்கும் அறிகுறியாக வீரர் காலில் அணியும் அணி. இதனிடத்தே வீரர்கள் செய்த அரிய போர்த் தொழில்கள் பொறிக்கப்பட்டிருக்கும். போருக்குச் செல்லும் வீரர் அதனை அணிவர். வீர முரசம் போரிடத்துத் தோற்ற பகை அரசனின் காவல் மரத்தை வெட்டித் துண்டுசெய்து வண்டிகளில் ஏற்றிப் பட்டத்து யானையை அவனது மகளிரின் கூந்தலாற் பின்னிய கயிற்றாற் பூட்டித் தமது நாட்டகத்தே கொண்டு சென்று முரசஞ் செய்தல் சிறப்புடைத்தாம். தனது வலியினாலே புலியோடு பொருது அதனைத்தனது கூர்ங்கோட்டாற்குத்திக் கொன்று, கொம்பிடத்து மண்ணைக் கொண்டு முக்காரமிட்டுச் செல்லும் இடபராசனுடைய ஆவி இகந்தபின் அதன் தோலை உரித்து மயிர் சீவாதே கொணர்ந்து சுருக்கு விழாது அம் முரசின்மேற் போர்க்கப்படும். அவ்வகை முரசினை மயிர்க்கண் முரசு என்பர். அம்முரசம் வெள்ளிய பூக்கள் பரப்பப்பட்ட அழகிய தட்டிலிலே வைக்கப்படும். அக் கட்டில் முரசு கட்டில் எனப்படும். அம் முரசினை வாத்தியம் முழங்கத் தினமும் நீர்த்துறைக்கு எடுத்துச்சென்று பயபத்தியுடன் முழுக்காட்டியபின் மயிலிறகும் உழிஞைத்தளிரும் சேர்த்துக் கட்டிய மாலையைச் சூட்டிப் பின் அம்முரசினை அதிட்டித்து நிற்கும் தெய்வத்தைப் பூசித்து, அக் கடவுளுக்கு இரத்தமும் நறவுங் கலந்த பயங்கரமான சோற் றுண்டையை மந்திரஞ் சொல்லிப் பலியாக இடுவது மரபு. அக் குருதிப் பிண்டத்தைக் கண்டு கொடிய கண்ணையும் முருக்கம் நெற்றுப் போன்ற விரலையுமுடைய பேய்களும் அஞ்சி அகல்வார்கள். எறும்புகளும் அவற்றை மொய்யா. காக்கையும் பருந்தும் அவற்றை உண்ணும். அவை உண்பது பலியிட்ட அரசனுக்குப் பின்னிகழும் போரில் வெற்றி யுண்டாவ தற்கு நன்னிமித்தமெனக் கருதப்படும். பலியூட்டுங்காலத்து அம் முரசம் உரக்க அடிக்கப்பெறும். அதன் முழக்கம் எவர்க்கும் பேரச்சத்தைக் கொடுக்கும். அக் காலத்து வீரரும் படைத் தலைவரும் வஞ்சினங் கூறிப் பலியினை எறிவார்கள். பலியினைப் பருந்தும் காக்கையும் உண்ணும் போது புதுப்புள் வந்துசேரப் பழம்புள் அகன்று போகும். வெற்றிவேந்தர் பகை வரது போர் முரசினைக் கைப்பற்றல் வெற்றிக்கு அடையாள மாகும். இம் முரசம் நீராட்டப்பெறாதும் இரத்தப் பலியூட்டிப் பூசிக்கப்பெறாதும் கிடக் கில் அரசனுக்குத் தீமை விளையும். போர்க்காலத்து வீரமுரசம் முழக்கப் படும். மதிற் பொறிகள் கோட்டையைப் புறஞ்சூழ்ந்த மதில்களில் பகைவர் அணுகாதபடி தடுக்கும் பல இயந்திரப் பொறிகள் அமைக்கப் பெற்றிருந்தன. அக் காலத் தில் தமிழர்கள் பல இயந்திரங்கள் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். தமிழ் நாட்டு அரசரின் கீழ் உத்தியோகங்களில் அமர்ந்திருந்த கிரேக்கரும் இவ்வியந்திரங்களிற் பலவற்றைச் செய்தளித்தனர். அப்பொறிகளாவன:- வளைவிற் பொறி (இது வளைந்து தானே எய்வது) கருவிரலூகம் இது குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கொல்வது), கல்லுமிழகவண், கல்லிடு கூடை (இடங்கணியென்னும் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை) தூண்டில் (இது தூண்டின் வடிவாகச் செய்து அகழியிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் இழுத்துக்கொள்வது,) தொடக்கு (கழுத்திற் பூட்டி யிழுக்கும் சங்கிலி), ஆண்டலையடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை எடுப்பது), கவை (இது மதிலேறின் மறியத் தள்ளுமாயுதம்) கழு, புதை (அம்புக்கட்டு), ஐயவித்துலாம் (இது கதவை யணுகாதபடி அம்புகள் வைத்தெய்யும் யந்திரம்), கைபெயர் ஊசி, (மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர்க்கும் ஊசி), எரிசிரல் (இது சிச்சிலி வடிவாய்க் கண்ணைக் கொத்துமாயுதம்), பன்றி (இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட்டாற்கிழிக்க இரும்பாற் செய்தது), பனை (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமைந்த பொறி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, தகர்ப்பொறி, ஞாயில் (குருவித்தலை) முதலியன.  கலிங்கத்துப் பரணி வசனம் முகவுரை பண்டைக் காலத்தே தமிழ் நாடு, சேர சோழ பாண்டியர் முதலிய முடியுடை மூவேந்தராலும், குறுநில மன்னராலும் புரக்கப்பட்டதென்பது எவரும் அறிந்ததே. அம் மன்னர்கள் தம்மைப் பாடிவரும் புலவரின் தரங் களை யறிந்து பரிசில் வழங்கி அவர் வறுமை களைந்தனர். இவ்வாறு பாடிய பாடல்களே பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்கச் செய் யுட்களாகும். தமிழ் நாட்டின் பல்லிடங்களிலிருந்து, பாடி வருவோரையன்றி அரசராற் கௌரவிக்கப்பட்ட அரண்மனைப் புலவர்களும் விளங்கினர். அரசன் பகைவரைவென்று எடுக்கும் விழா போன்ற பெருநாட்களில் புலவர்கள் தம்மைப் புரக்கின்ற வேந்தனின் வீரம், கொடை, புகழ் ஆகிய வற்றை இனிய செய்யுள் நடையில் அமைத்து அவன் முன்னிலையிற் பாடுதல் மரபு. கலிங்கத்துப் பரணியும் இவ்வாறு பாடப்பட்ட தொன்றேயாம். இந்நூலின் பாட்டுடைத் தலைவனாகிய விசயதரனது அரண்மனைப் புலவராய் விளங்கியவர் சயங்கொண்டார். விசயதரன் ஆணையைத் தலைக்கொண்டு கருணாகரத் தொண்டைமானின் தலைமையிற் சென்ற சோழப்படை கலிங்கரை முறியடித்து வாகைசூடி மீண்டது. இவ்வெற்றி காரணமாகக் கங்கைகொண்ட சோழபுரத்துப் பரணி விழா பெருஞ் சிறப் போடு கொண்டாடப் பெற்றது. தன்னைப் புரக்கும் வேந்தனின் புகழை என்றும் அழியாது நாட்ட விழைந்த சயங்கொண்டார் இவ்விழாவினை ஏற்ற தருணமாகக் கொண்டு, கலிங்கத்துப் பரணியென்னும் நூலை யாவரும் மெச்சும் முறையில் இயற்றி, விசயதரன் முன்னிலையிற் பாடியருளினார். இப்புலவர் காலத்திற்குப் பின் விளங்கிய புலவர்கள் பல பரணிகள் பாடின ராயினும் அவை யெல்லாம் கலிங்கத்துப் பரணிக்குத் தோற்றன. ஆகவே, பிற்காலப் புலவரொருவர் “பரணிக்கோர் சயங் கொண்டார்” எனப் புகழ்ந்து கூறினர். சங்கச் செய்யுட்கள் முதலிய பண்டை நூல்கள் இக்காலத்தவர்க்கு எளிதிற் பொருள் விளங்கக்கூடாதனவாயிருக்கின்றன. அக்காலப் புலவர்கள் அவ்வளவு கடின பதங்களைப் புகுத்தி ஏன் நூல் செய்தார்கள்? என்று பலர் வினாவுதல் கூடும். அப்புலவர்கள் அக்கால மக்கள் எளிதில் விளங்கக்கூடிய சொற்களை அமைத்தே செய்யுட்களைப் பாடினர். அக் காலச் சொற்கள் வழக்கு வீழ்ந்த பிற்காலத்து அச்செய்யுட்கள் பொருள் விளங்கற் கருமையுடையனவாய்க் காணப்படுகின்றன. சங்க நூல்களை விடக் கலிங்கத்துப்பரணி காலத்தால் மிகப் பிற்பட்டதாதலின் அதிற் பயின் றுள்ள சொற்கள் பெரும்பாலன எளிதிற் பொருள் விளங்கக்கூடியனவா யிருக்கின்றன. நூல்களிற் பயின்றுள்ள சொற்களையும் நடையையும் கொண்டு ஒருவாறு அவற்றின் காலத்தைக் கூறுதலும் அமையும். இந்நூலின் செய்யுட் பதிப்புப் பல பிழைகள் விரவப் பெற்றதாதலின், மூல பாடத்தின் சில விடங்களுக்குத் திருத்தமான பொருள் காண்பதில் இடையூறு ஏற்படுவதாயிற்று. மகா வித்துவான், திரு. மு. ராகவ ஐயங்கார் அவர்களின் கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி அவ்விடையூறு களைதற்குப் பேருதவி புரிந்தது. கடைதிறப்பென்னும் பகுதி, தங் கணவர் வரத் தாமதித்தமையின் ஊடித் தாழடைத்திருந்த மகளிரை விளித்துப் புலவர் பாடுவதாக அமைந்தது என்பது மூலத்தைப் பதிப்பித்த திரு. கோபால ஐயரது கருத்து. தந்தலைவர் வராத விடத்து மகளிர் கவலையுற்றிருத்தலே மரபு என ஐயங்காரவர்கள் கூறுவது மிகப் பொருத்தமானதே. கணவர் வரத் தாழ்ந் தமைக்கிரங்கி அவர் மகளிர் வருந்தி இருக்கும் இயல்பு புறப்பொருள் வெண்பாமாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இக்காலத்தை வசனகால மென்பர். இக்காலம் மாணவரும் பிறரும் எல்லாப் பொருள்களையும் வசன நூல்கள் வாயிலாகவே கற்றறியவிரும்பு கின்றனர். அதனால் செய்யுள் நடையிலுள்ள நூல்களைப் பயில்வாரின் தொகை நாள் வீதம் அருகி வருகின்றது. செய்யுள் நூல்கள் தெள்ளிய வசன நடையில் எழுதப்படுதலால் அவற்றைக் கற்கும் மாணவர்க்கு மூலத்தைப் படிக்க ஆர்வமுண்டாகும். இந்நோக்கத்துடனேயே கலிங்கத்துப்பரணி, வசன நடையில் எழுதப் படலாயிற்று; எழுதுமிடத்து மூலத்தின் கருத்து விடுபட்டிலது. இந்நூல் மாணவர்க்கும் பிறர்க்கும் ஓர் விருந்துபோன்றது. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்போரின் சில குறைகளையும் நாம் கூறாமலிருக்க முடியவில்லை. விளக்கவேண்டிய கடின பதங்களையும் சொற்றொடர்களையும் விளக்காது போகும் அவர் மௌனம் கவற்சிக் குரியதே. 1“கள்ளி பாலறப் பொரிந்த தாவரையும் வள்ளியோர் கொடைமறந்திடிற் கயவரோ வளர்ப்பார்” நவாலியூர், தமிழ் நிலையம், 1. 4. 1938 ந. சி. கந்தையா. சயங்கொண்டார் ஒருவன திரண்டியாக்கை யூன்பயி னரம்பின் யாத்த வுருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்துவந்து மருவிய வுருவமிங்கே மறைந்து போமற்ற யாக்கை திருவமர்ந் துலகமேத்தச் சிறந்து பின்னிற்கு மன்றே. (சூளாமணி) என்றாங்கு புகழ் உடம்புபெற்று நம்மெதிரே உலவுகின்ற பெரும் புலவர் களுள் சயங்கொண்டாரும் ஒருவர். சயங்கொண்டாரென்பது இவர் இயற் பெயரன்று; காரணப் பெயரே. “இவர் விசயதரன் வாயில் வித்துவான்கள் தந் தலைவர். தென் னாட்டுப் புலவர் போந்து புரிந்த வாதப் போரின்கண் நந்தம் புலவர் பிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டாரெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழா நின்றுழி விசயதரன் வடகலிங்கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து, சயங்கொண்டானை நோக்கி, ‘யானுஞ் சயங்கொண்டானா யினேன்’ என்றனன். எனவே சயங்கொண்டான் மீது பரணி புனைவே னென்று நம் பாவலர் கோமான் கூறிச்சென்று சின்னாட்களில் நூலினை யியற்றி அரசனது அவைக்களத்தே அரங்கேற்றக் கருதி அவ்வாறே செய்யா நின்றுழி பரணி நூற் பாடல்களைப் பரிவுகூர்ந்து செவி மடுத்து வீற்றிருந்த வேந்தன் ஒவ்வொரு தாழிசைகளி னிறுதியிலும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாக உருட்டி, தனக்கு அவ்வித்துவான் மீதும் அவனது நூலின்மீதும் உள்ள அன்பினையும் ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினானென்று கூறுப.1” இவரது பிறப்பு வளர்ப்பு குலம் கோத்திரம் ஆதியன அறியாத வற்றுட் சில. இவர் பிறந்த ஊர் தீபங்குடி என்று தமிழ் நாவலர் சரிதையால் விளங்குகின்றது. இவரது சமயம் சைவமே என்பது கடவுள் வாழ்த்துச் செய்யுட்களால் இனிது புலனாம். கொடு வைணவமும் கொடுஞ் சைவமும் இவர் காலத்தில் தோன்றிற்றில போலும். விநாயகக்கடவுள் தனது கொம்பை முறித்து எழுத்தாணியாகக் கையிற் பிடித்து மேருமலையின் புறத்தே, பாரதக் கதையை வியாசர் சொல்லக் கேட்டெழுதினார் என்னும் கதையை முதன்முதல் எழுதியவர் இவரே. இவரது வாக்குகளை அடியொற்றியே கடவுள் முனிவர் “தவளமா மருப் பொன்றொடித் தொருகரத்திற் றரித்துயர் கிரிப் புறத்தெழுதும் கவளமா களிற்றின்றிருமுகம் படைத்த கடவுளை நினைத்துகைதொழுவாம்”1 எனப் பாடினர்போலும். சயங்கொண்டார் காலத்து, முன்னதாக விநாயகக் கடவுளுக்குக்காப்புச் சொல்லி நூல் தொடங்கும் மரபில்லை என்று விளங்கு கின்றது. சயங்கொண்டாரின் பரணி பாடுந்திறமையை உணர்த்தும் செய்யுள்:- 2“வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்த மென்னு மொண்பாவி லுயர் கம்பன் கோவையுலா வந்தாதிக் கொட்டக் கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாய பகர்சந்தம் படிக்காச லாதொருவற் பகரொணாதே”  கருணாகரத் தொண்டைமான் மத்திய காலத்துச் சோழர் நாளிலே, பல்லவ வேந்தர் தம் பெருவலி குன்றி, அச்சோழரின்கீழ் அமைச்சராகவும், படைத் தலைவராகவும், அதிகாரிகளாகவும் அமர்ந்ததோடு தொண்டை நாட்டில் மட்டுமன்றிச் சோணாட்டினும் பிற விடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்கட்குத் தலைவர்களாகவும் இருந்தவர்களுள் கருணாகரனும் ஒருவன். இவன் முன்னோர் தொண்டை நாடாண்டமை பற்றி, அவர் நாடு ஊர்களையும் புலவர்கள் இவனுக்கு உரியவாகச் சிறப்பிப்பாராயினும், இவன் உண்மையிற் சோணாட்டவனே. இவனூராகிய வண்டை என்பதும் இதுவரையிற் கருதப்பட்டதுபோல், தொண்டை நாட்டிலுள்ள வண்டலூரன்றிச் சோழ நாட்டிலுள்ளதோர் ஊரேயாகும்.1 கருணாகரன், விசயதரனது முதன் மந்திரியும், அவனது சக்கரமாகப் படைத்தலைமை பூண்டு கலிங்கத்தே சென்று போர் நிகழ்த்திக் கலிங்கரை முறியடித்து, கலிங்க வேந்தனையும் பிடித்துக்கொண்டு யானை குதிரை குவிதனம் முதலியவற்றோடு சோழ நாடு திரும்பியவனுமாவன். இவன் பிரமாவமிசத்தவன் என்பது. “மறைமொ ழிந்தபதி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ராசனே” (328) என்னு மடிகளால் அறியக்கிடக்கின்றது. “அலகில் செருமுதிர் போதில் வண்டைய ரரச னரசர் கணாதன் மந்திரி உலகு புகழ்கரு ணாக ரன்தன தொருகை இருபணை வேழமுந்தவே.” (430) “காட்டிய வேழ வணிவாரிக் கலிங்கப் பரணிநங் காவலனைச் சூட்டிய தோன்றலைப் பாடீரே தொண்டையர் வேந்தனைப் பாடீரே.” (522) “வண்டை வளம்பதி பாடீரே......... பல்லவர் தோன்றலைப் பாடீரே.” (521) “வண்டைமன், தொண்டைமான் முதன்மந்திரி பாரகர் சூழ்ந்துதன் கழல்சூடி யிருக்கவே.” (314) இத்தாழிசைகள் கருணாகரன் வரலாறுகளைத் துலக்குகின்றன. “பண்டையோர் நாளையிலேரேழ் கலிங்கப் பரணிகொண்டு செண்டையும் மேருவிற் றீட்டுவித்தோன் கழற் செம்பியன் சேய் தொண்டை நன்னாடு புரக்கின்ற கோனந்தி தோன்ற லெங்கள் வண்டையர் கோனங் கருணாகரன் றொண்டை மண்டலமே” என்பது தொண்டை மண்டல சதகம்.  பரணி பரணி என்பது, போரிடை ஆயிரங்களிற்றியானை படஎறிந்து வென்ற தலைவனைப் பாடும் ஓர் பிரபந்தம். இது கடைதிறப்பு, காடுபாடுதல், காளிகோயில் பாடுதல், பேய்களைப் பாடுதல், தேவியைப் பாடுதல், பேய் களுக்குக் காளிகூறுதல் முதலிய உறுப்புகளைப் புணர்த்துக் கூறுமுகத் தால் பாட்டுடைத்தலைவன் கீர்த்தியும் சிறப்பும் தோன்றக் கூறுதல். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” அது:- “கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல் கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம் கடிகண முரைத்தல் காளிக்கது சொலல் அடுபேய்க் கவள்சொல லதனாற் றலைவன் வண் புகழுரைத்த லெண்புறத் திணையுற வீட்ட லடுகளம் வேட்ட லிவைமே லளவடி முதலா வடி யிரண்டாக உளமகிழ் பரணி உரைக்கப் படுமே.” (இல. விள.) “பரணியாவது:- நாடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழும் துணங் கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விரவிற்று.” (தொல். செய். 148 நச்.)  விசயதரன் கி. பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாவது இராசேந்திரன் மிகவும் பராக்கிரமசாலியாய் விளங்கினான். இவனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்பது மறுபெயர். இவனது இராசதானியாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம். இவனுக்கு இராசாதித்தன், விசய ராசேந்திரன், வீர ராசேந்திரன் என்ற மூன்று புதல்வர்களும் மங்காதேவி என்னும் ஓர் புதல்வியும் இருந்தனர். மங்காதேவியை வேங்கை நாட்டரசனான சளுக்கிய இராச இராசன் மணந்தான். சோழர் சூரிய வமிசத்தினர். சளுக்கியர் சந்திர வமிசத்தினர். சளுக்கிய இராச இராசனுக்கு மங்காதேவியின் வயிற்றிற் பிறந்தவன் விசயதரன். சோழ வமிசம் நேரான சந்ததி இல்லாமல் இருந் தமையால் கங்கை கொண்ட சோழன் மனைவியாகிய பாட்டி அவனைச் சுவீகார புத்திரனாக எடுத்து வளர்த்தாள். அக்காலத்து ஆட்சி புரிந்தவன் இவனது தாய் மாமனாகிய வீரராசேந்திரன். விசயதரன் உரிய பிராயம் அடைந்தபோது இளவரசுப் பட்டங் கட்டப்பெற்றான். விசயதரன் வடக்கே சக்கர கோட்டத்துக்குப் படையெடுத்துச் சென்ற காலத்து வீரராசேந்திரன் பரலோகம் அடைந்தான். சோழசிம்மாசனத்துரிமைபற்றி அங்கிருந்த அரச வமிசத்தினருள் விவாத முண்டாகியதால் நாடெங்கும் கலக்கமும் குழப்பமும் விளைந்தன. தன் மாமன் இறந்தமையையும் நாடு அரசனில்லாமற் குழப்ப மடைந்திருப்பதையும் கேள்வியுற்ற விசயதரன் உடனே அங்கிருந்து திரும்பிச் சோணாடடைந்து கலகத்தை அடக்கி முடிசூடி ஆட்சிபுரிந்தான். இவனது ஆட்சிக்காலம் கி. பி. 1070 முதல் 1118 வரை. இவனுக்கு அபயன், சயதுங்கன், முதலாம் குலோத்துங்கன் முதலிய மறு பெயர்களும் வழங்கும். இவனது முதல்மந்திரியாய் விளங்கியவர் கருணாகரத் தொண்டை மான். கருணாகரத் தொண்டைமானோடு கலிங்கப்போருக்கு உபசேனாதி பதிகளாகச் சென்றோர் பல்லவரசன், வாணகோவரையன், முடிகொண்ட சோழன், காலிங்கராயர் முதலியோர். இவன் முடிசூடி 25வது ஆண்டில் அப்போர் நேர்ந்தது. இவ் வேந்தன் சைவ மதத்தினனென்பது. “தென்றிசையினின்று வடதிக்கின்முகம் வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன் மன்றிடை யாடியருள் பொண்டுவிடை கொண்டதிகை மாநகருள் விட்டருளியே” என்னும் தாழிசையால் இனிது விளங்கும். இவன் ஏழிசை வல்லபி என்னும் காதற்றேவியும், தியாகவல்லி என்னும் பட்டத்துத் தேவியுமாகியஇரு மனைவிய ருடையனாகவிருந்தான்.  நூல்நயம் சயங்கொண்டாரின் பரணிப் பாடல்கள் விலைமதித்தற்கரிய மணிகள் போன்றன. இப்புலவரைச் சொல்லின் மன்னர் என்று கூறலாம். சொற்பஞ்ச மென்பதை இவர் அறியார். சொற்களுக்காக எங்காவது இவர் இடர்ப்பட்டா ரெனத் தெரியவில்லை. செய்யுள் ஒவ்வொன்றும் ஆற்றோட்டம்போலத் தங்குதடையின்றிச் செல்கின்றது. பாடுவதில் இணையற்றவ ராதலினாலேயே இவர் கவிச்சக்கரவர்த்தி எனக் கொண்டாடப்பெற்றார். சுருங்கக் கூறுமிடத்து, கலிங்கத்துப்பரணிச் செய்யுட்கள் “தமிழினொழுகு நறுஞ்சுவை” என விள்ளலாம். இப்பாடல்களில் எது சுவையான் மிக்கது எது சுவையாற் றாழ்ந்தது என அறிந்துகொள்ள முடியாதிருப்பது ஒரு சிறப்பு. ஒவ்வொரு பாடலும் சொல்வளம் பொருள்வளம் நிரம்பப்பெற்றது. இந்நூலைக் கற்போருள்ளத்தில் எவ்வகைக் களைப்பும் தோன்றுவ தில்லை. ஒவ்வோர் பொருளையும் வருணிக்குமிடத்து அளவுகடந்து செல்லாது நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி அமைத்திருத்தலோடு, நகை, வீரம், சோகம் முதலிய சுவைகள் இடையிடையே விரவ உள்ளம் கொள்ளும் முறையில் அமைத்துப் பாடியிருத்தல் மிக வியக்கத்தக்கது. தாம் வருணிக்கும் ஒவ்வொன்றையும் உச்சப்படியில் வைத்து இப் புலவர் வருணித்திருத்தல் கருத்தில் கொண்டு நோக்கத்தக்கது. விசயதரனது கீர்த்தியைப் பற்றிப் புலவர் வருணிக்கின்ற வருணிப்பில் நமக்கே பொறாமை உண்டா கின்றது. புலவர் பாடியுள்ள ஒவ்வொருபகுதியின் காட்சிகளும் நம்மனக் கண்ணெதிரே நனவுபோல் தோன்றுகின்றன. பாலைவனத்தின் கொடுமையைப் புலவர் கூறுமிடத்து நாமே அதன் வெம்மையை உணர்கின்றோம். “காடிதனைக் கடத்து மெனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்கவப்பா லோடியிளைத் துடல் வியர்த்த வியர்ப்பன்றோ வுகுபுனலும் பனியுமம்மா” (கலி. பர. 73) என்னும் தாழிசை எவ்வளவு நயமாகக் கூறப்பட்டுள்ளது. பேய்களைப் பாடுமிடத்து, “கொட்டு மேழியுங் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய தட்டி வானைத் தகர்க்குந் தலையின தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின” (128) என்பன போன்று கூறப்படும் செய்யுட்கள் மகிழ்தற்குரியன. சண்டையைக் கூறும் பகுதியைப் படிக்கில் அதனை நாம் நேரிற் காணவேண்டியதில்லை. வீரரின் உற்சாகம் முதலியன வீரச்சுவை தோன்றக் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும் நமக்கே நம்மை அறியாது வீரம் எழுகின்றது. கலிங்கர் சிதறி ஓடியதைப்பற்றிக் கூறுமிடத்தும், பேய்கள் கூழ் உண்பதைக் கூறுமிடத்தும் நகைச்சுவை பொங்கி வழிகின்றது. பிராமணப்பேய் “பகவதி! பிட்சாந் தேகி” என்று பிச்சை கேட்டல், பாக்குச் செருக்கிய பேய்கள் பூதத்தின் தலைமயிரை மணத்தல், சமணப் பேய்கள் ஒருபொழுதுண்ணல், புத்தப் பேய்கள் தோள் மறையப் போர்வை போர்த்திருத்தல் கஞ்சி குடித்தல், ஊமைப்பேய் பதலை நிறைந்த கூழைக் கையாற் காட்டி வயிற்றைத் தடவிப் பசியை அறிவித்தல் முதலியன சில உலகவழக்கினை உணர்த்துவன.  கலிங்கத்துப்பரணி வசனம் கடவுள் வாழ்த்து உமாபதி இந்நில வுலகாகிய பெண்ணை அயன் படைத்தான். திருமால் அவளைக் காத்தளிக்கும் உரிமையுடையன். அத்திருமாலின் அவதார மாகியவனும் தந்தை தாய் என்னும் இரு தூய மரபினுக்கும் உரிமை பூண்டவனுமாகிய அபயன் வாழ்வானாக என்று, திருமால் தாரை வார்க்கப் பிரமா சடங்கியற்ற, உலகில் இல்வாழ்க்கையை நிலை நிறுத்துதற்பொருட்டு மலை அரசன் மகளை மணந்த கடவுளை நினைந்து துதிசெய்வோமாக. (என்று துதிசெய்வோமாக என்று கொண்டு கூட்டுக) திருமால் நெடியமாலின் வயிற்றை ஒப்ப அருளுடைய அபயனது ஒப்பற்ற வெண் கொற்றக்குடை, அகன்ற பெரிய உலகனைத்தையும் கவித்து இனிது வாழ்வதாகவென்று, ஒரு வயிற்றிலும் பிறவாது பிறந்து (சங்கார காலத்தே) உலகைத் தனது திருவயிற்றில் ஒடுக்கும் ஒப்பற்ற குழந்தை வடிவினராகிய திருமாலின் திவ்விய நாமங்களைப் பாடித் துதிப்போமாக. நான் முகன் (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங் களையும், நாலு நெடிய கடல்களையும், நாற் குலங்களையும் காத்தளிப் போனும், தங்குலத்திற்குத் தீபம் போன்றவனுமாகிய அபயன் வாழ்க வென்று, நாலு உகங்களையும் நால் வேதங்களையும் நாலு முகங்களையு முடையவராகிய பிரமாவை வணங்குவோமாக. சூரியன் கடல்சூழ்ந்த உலகனைத்தும் பரந்த குற்றமாகிய இருள் நீங்க, ஒப்பற்ற ஆஞ்ஞா சக்கரத்தை நடத்துகின்ற வெற்றியாலுயர்ந்த அபயன் வாழ்வா னாகவென்று, கடல் சூழ்ந்த உலகனைத்தும் விளங்கவும் வளர்கின்ற இருள் மாயவும் ஒற்றைச் சக்கரமுடைய தேரை ஊர்ந்துசெல்லும் சூரியனை வணங்குவோமாக. கணபதி திக்கியானைகளைக் கட்டும் தறிகளை வெற்றித் தம்பங்களாக நாட்டி, ஒரு கவிப்பில் உலகனைத்தையும் மூடும் அருட்குடை யுடையவனும், வறுமைக்குப் பகைவனுமாகிய அபயன் வாழ்வானாகவென்று, நான்கு வேதங்களாகிய கூடத்தில் அணைந்து யோகிகளின் யோகக் கருத்தென்னும் ஒரு தறியிற் கட்டுண்டு நிற்கும் ஐந்துகரமுடைய ஒரு களிறாகிய கணபதிக்கு அன்பு செய்வோமாக. முருகவேள் இரு குலமும் நிலைபெறுமாறு ஒரு குடையின்கீழ் நான்கு கடலையும், நான்கு திசைகளையும் பெற்றுள்ள சூரிய குல உத்தமனாகிய அபயன் வாழ்வானாகவென்று, இரண்டு பொன் வரைகளை வென்ற பொருதற்கரிய மார்பையும், பன்னிரண்டு புயங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடைய முருகக் கடவுளின் சீபாதங்களைப் பணிவோமாக. நாமகள் “எண்ணுக்கடங்காத புகழை உடையோன் என் அரசன்; யான் அவனிடத் துறைதல் நன்று” எனப் புவிமாது கூறுவதை ஒப்ப, அவட்குப் புகழாகிய வெள்ளணி சாத்தி மகிழ்ந்த தலைவன் வாழ்வானாக வென்று, இலக்குமியும் வீரமாதும் புயத்திற்றங்கி வாழ, யாம் தனித்து உயரத்திருப்பே மென்று நினைவாள்போல, அவன் நாவிடத்தே தங்கியிருப்பாளைத் துதிப்போமாக. உமையவள் கோபித்துப் போர்க்கெழுந்த பாண்டியன் அடி சிவப்பவரைமீதோடி மறைய வில்வளைத்து, பின் அப்பாண்டியன், தன் முடிமீதுள்ள மலர், பாதத்திற் படும்படி வணங்கினமையால் பிழைபொறுத்த அபயன் வாழ்வா னாகவென்று, சிவந்த திருமேனியில் ஒரு பாதி கருமையுறச் சிவபெருமானை எய்த சிலையுடைய மன்மதன் கரத்துள்ள மலர்க்கணை பாதமலர்மீதும் அணுகமாட்டாத துர்க்கையின் மலர்ப்பாதங்களைச் சிரமீது கொள்வோமாக. சத்தமாதர் பன்றி, மேழி, யானை, வீணை, சிலை, மீன் என்று இவ்வகைப் பல கொடிகள் தாழ, மேருவில் நாட்டிய சோழரது புலிக்கொடி தழைப்பதாக வென்று எருமை, அன்னம், பேய், மயில், ஏறு, கழுகு, பருந்து, வேழம் என்ற ஏழு கொடியுடைய சோதியுடைய சத்தமாதரின், நினைப்பார்க்குத் துணையாயுள்ள பதினான்கு பாதங்களையும் வணங்குவோமாக. வாழி வேதவிதியின் ஒழுகும் மறையவர் தொழில் வளர்க; அவர் தொழில் வளர்தலால் முகில் நல்ல மழையைப் பெய்து செல்வத்துக்கு ஏதுவாகிய பயிர்வளம் நிறைக; பயிர்வளம் நிறைதலால் உயிர்கள் நிலைபெறுக; உலக முழுமையும் மனித குலம் தழைப்பதாக; சயதரனது புலிக்கொடி தழைவதாக; தண்ணிய ஒளி வீசுகின்ற அவன் வெண்கொற்றக்குடை வளர்வதாக. கடைதிறப்பு சோழர் பெருமானுக்குக் கொடுக்குந் திறையை கலிங்கர் வேந்தன் இறுத்திலன். அது காரணமாகச் சீற்றங்கொண்ட சோழன் கருணாகரத் தொண்டைமானின் தலைமையின்கீழ் ஒரு படையைக் கலிங்கர் மீது ஏவினான். அங்கு மூண்ட போரில் கலிங்கர் படை தோற்றது. கருணாகரன் வாகை சூடினான். கலிங்கர் போர்க்களத்தேவிட்டு ஓடின யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும், சூறையாடிய பொன்னையும், பல நிதிக் குவியலையும் கொண்டுமீண்ட கருணாகரத் தொண்டைமான் வேந்தனடி பணிந்து தான் எய்திய வெற்றியைப் புகன்று நின்றான். அதனைக் கேட்டுச் செவிகுளிர்ந்த மன்னன் மகிழ்ச்சியால் விம்மிதமெய்தி நகரிடத்து வெற்றி விழா எடுக்குமாறு கட்டளையிட்டான். அவ்விழாச் சிறப்புக் காண்பது காரண மாக நகர மாந்தர் வைகறைக் காலத்தே துயிலெழுந்து ஆரவார மிகுந்தனர். துயிலெழுந்த இளம் மகளிர் இன்னும் துயிலெழாதாரைக் கபாடந் திறந்து வெளியே வருமாறு கூறினர். கூவுமிடத்துப் பெண்களுக்குரிய மென்மைத் தன்மைகளையும், அவர் உறுப்புகளின் அழகிய இயல்புகளையும், நடை உடை பாவனைகளையும், அவர் கணவரோடு ஊடிப் பிணங்குதலையும், பின் ஊடல் தணிந்து இன்புறுதலையும், இவை போன்ற பிற இனிய பண்பு களையும் இனிதெடுத்து மொழிகின்றனர். வைகறைக்காலத்தே துயிலுணர்ந்த ஆடவரும் மகளிரும் தம்மைப் பலவாறு கோலஞ் செய்துகொண்டு மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் விழாக் காணச் சென்றனர். விழாவின் தலைவியாகிய காடுகெழுசெல்விக்குக் கூழாகிய அமுது படைக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் தேவியை இறைஞ்சி நின்றனர். அப் போது, தாம் அழகியாகப் புனைந்துவந்த பரணிப் பாடல்களைப் பலருங் கேட்டு பரவச முறும்படி சயங்கொண்டார் பாடுவாராயினர். காடுபாடியது முதலாவது பாலைநிலத்தின் தன்மையைக் கூறுகின்றார். “காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி நீருந்நிழலுமின்றி நிலம் பயந்துறந்து புள்ளும்மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறும்” முதுவேனில் வெம்மையால் முல்லை, குறிஞ்சி முதலிய நிலங்களின் சில பாகங்கள் மரஞ் செடி புல் பூண்டு முதலியன தீந்து பாலைநிலமென்னும் பெயரைப் பெறும். 1பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி; காடுகிழாள், காடுகிழவோள், துர்க்கை, கொற்றவை, விந்தை, வீரமாது, உமை என்பன அவளுக்கு மறுபெயர்கள். போரில் மடிந்த கலிங்கரது நிணத்தை இட்டுச் சமைத்த கூழால் களப்பேயின் அடிவயிற்றினிரண்டு பக்கங்களையும் நிரப்பியதேவிக்கு இருப்பிடமாகிய பாலைநிலத்தின் இயல்பைக் கூறுகின்றேன். காரை, சூரை, வீரை, பாரை பாலை, ஓமை, வன்னி, நெல்லி, தும்பை, வேல், சுள்ளி, வெள்ளில், கள்ளி, வாகை இண்டங்கொடி, மூங்கில், புன்கு முதலிய மரங் களுஞ் செடிகளுங் கொடிகளும், வறந்தும் கரிந்தும் பொரிந்தும் பிளந்தும் முரிந்தும் பரந்தும் எவ்விடங்களிலும் கிடக்கும். வெய்யில் வெப்பத்தாற் பிளந்த நில வெடிப்புகள் தோறும் தனது சாயை புகுந்த வழியாது என்று சூரியன் தன் கிரணங்களாகிய கைகளை விட்டு ஆராயும். இரை தேடுதற்கு மேலே வட்டமிடும் பருந்தின் ஓரிடத்து நில்லாத நிழல், அவ் வெம்மையைத் தாங்கமாட்டாது ஓடித் திரிவதை ஒக்கும். ஓடுகின்ற நிழலன்றி ஓரிடத்தில் நிற்கும் நிழல் அவ்வனத்தில் எவ்விடத்துமில்லை. வெளியே நிற்பின் வெயில் பருகுமென்று, நீர்பெறாது உலர்கின்ற மரத்தின் அடியிற்போய் நின்ற நிழல் அம்மரங்கள் தம்மைப் பருகிவிடுமென அஞ்சி அவ்விடத்தினின்றும் மறைந்தது. சிவந்த நிலப்பரப்பு, நெருப்பைக் கொட்டித் தகடு செய்த தொத்தது. மீது பறக்கும் புறாவினங்கள், அந்நெருப்பிடத்தே திரண்டெழும் புகைக் கூட்டம் போன்றன. விடாயினால் வெதும்பிய மான் நெருப்பின் வாயில் நீர்பெறினும் உண்ணும் வேட்கை எய்தின. எய்திச் செந்நாயின் நாவின் வடியும் நீரை நீரென நாக்கினால் நக்கிவிக்கும்2. இக்கானம் பூமி யிலுள்ளோர் ஏகுதற்கு எளியதன்று. அதன் வெம்மையை உணர்ந்தே தேவர் நிலத்தில் அடியெடுத்து வையாதிருப்பது. இக்காட்டில் ஒரு கணமேனும் தரித்தன்றி ஊடுபோதல் அரிது என்பதை அறிந்தே சூரியனுடைய பச்சைக் குதிரைகள் இருபொழுதும் இயங்காமலிருப்பது கரியமுகிலும் வெண்மதி யும் இக்காட்டைக் கடப்பேமென்று அப்பால் ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வையே சொரிகின்ற மழையும் பனியும் ஆவன. விண்ணோர் ஆகாயத்தே முகிலாகிய திரையிட்டுச் சந்திரனாகிய விசிறி கைக்கொண் டிருப்பது இவ்வனத்தின் வெம்மையைக் குறித்தே. “இந்நி லத்துளோ ரேக லாவதற் கெளிய கானமோ வரிய வானுளோ ரந்நி லத்தினில் வெம்மை யைக்குறித் தல்ல வோநிலத் தடியி டாததே.” “விம்முகடு விசைவனதின் வெம்மையினைக் குறித்தன்றோ விண்ணோர்விண்ணி னம்முகடு முகிற்றிரையிட்ட முதவட்ட மாலவட்ட மெடுப்பதம்மா.” புகைந்து கரிந்துநின்ற மரங்கள், நிலம் இடம் பெயர்ந்து போகாமல் தேவி நிறுத்திய பேய்கள் வருந்தி நின்று பெரு மூச்செறிவது போல்வன. முதியமரப் பொந்தினின்றும் புறப்படும் கிழப்பாம்புகள், உணவின்றி வற்றிய பேய், வாய் காய்ந்து வறண்ட நாக்கை நீட்டுவது போல்வன. பார்ப்போரின் விழிகள் சுழலும்படி மிதந்து வருகின்ற கானல்நீர்ச் சுழி போலச் சூறாவளி சுழன்று பிணச் சாம்பலைச் சிதறடிக்கும். சாம்பர் இறந்த வரின் ஆபரணங்களினின்றும் உதிர்ந்த மணிகளைப் புதைக்கும். அதனால், அம்மணிகள், தழல் போலவும், சாம்பல் பூத்த நெருப்புப் போலவுந் தோன்றும். நிலம் வறண்டு ஓடி வெடித்த பிளப்புகளின் வழியே மூங்கில் முத்துக்களைச் சொரியும். அம்முத்துக்கள் மூங்கில் இரங்கிச் சொரி யும் கண்ணீரையும், கண்டோர் வருந்தி உகுக்கும் விழிநீரையும் ஒக்கும். மூங்கிலின் கணுக்கள் வெடித்து விசையோடு சிந்துகின்ற முத்து, நிலம் புழுங்கி மென்மேலும் வியர்த்த வியர்வையை, அல்லது கொண்ட கொப் புளங்களை ஒத்தன. வெவ்விய கொடிய இக்கானினின்றும் வீசுகின்ற காற்று வருவதைத் தடுக்கவே கடல் வலிய திரைகளாகிய கரங்களைக் கரைமீது மேன்மேலும் பலமுறை வீசுவதும், திக்கியானைகள் செவிகளை வீசிக் காற்றை எழுப்பு வதும் என்க. பாண்டியர்க்கும் விசயதரனுக்கும் முன்னொருகாற் போர் மூண்டபோது பாண்டியர் தோற்று முள்ளும் கல்லும் பரந்த வழிகளால் ஓடினர். அப்போது வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூடிவெந்த தன்மை போன்றது, தேவி உறைகின்ற இக்காட்டின் இயல்பு. கோயில்பாடியது “ஓதி வந்தவக் கொடிய கானகத் துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப் பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண்டது விளம்புவாம்.” மேற்கூறிய பாலைநிலத்தில் வதியும் தேவிக்கு, பிரமன் வகுத்த இந்த உலகம் பழங்கோயிலெனினும், அவளுக்குப் புதிய இயல்பினையுடைய தோர் கோயிலுண்டு. அதனை ஈண்டு கூறுகின்றேன். வட்டமான வெண் கொற்றக் குடையுடைய விசயதரனுடன் பொருது வாள்வாய்ப்பட்டுமடிந்த மன்னருடன் உடன்கட்டை யேறிய பட்டத்துத் தேவியரின் ஆபரணங்களிற் கிடந்த நவரத்தினங்கள் கொண்டு ஆலயத்தின் கற்பக்கிருகம் அமைக்கப் பெற்றது. இரத்தந்தோய்ந்த செந்நிறக்களிறுடைய சேரன் ஏவுதலின், விசயதரனதுவாள் தம்முடலிற் பட்டுருவும்படி நேர் நின்றெதிர்த்து வீழ்ந்த வீரரின் கரிய தலைகளைக் கல்லாக அடுக்கி, அவர் நிணத்தோடு இரத்தநீர் பெய்து குழைத்த சேற்றை எறிந்து, சுவர் எடுக்கப்பெற்றது. அறிஞர்களது தலைவனாகிய அபயனது யானைகள் பகை அரசரின் மதில்களைப் பெயர்த் தெறிந்தபோது கிடைத்த கணையமரங்கள் அம்பினால் எழுதிய தூண்களாக வும் உத்தரங்களாகவும் அமைந்தன. கூரை, மதிலைப் போரில் விரைவில் அழிந்து மடிந்த யானைகளின் கொம்புகளைத் திரண்ட கை மரங்களாக இட்டு, பழுவெலும்புகள் பாமரங்களாக அடுக்கப்பட்டது.முன்னொருபோது அபயன் வலியுடைய குதிரையைச் செலுத்தி விருதராசரைப் பொருது வென்றபோது கிடைத்த யாளி, யானை, பன்றி, சிங்கம் முதலியன நிலைச் சட்டத்தின்மீது அழகுதரும்படி நிறுத்தப்பட்டன. துங்கபத்திரையின் சிவந்த களத்து அபயன் வாளால்வெட்டுண்ட கொடிய கோபமுடைய யானையின் முகபடாம் வெளியடங்கும்படி மேலே போர்க்கப்பட்டது. இவ்வாறுடையது கோயிலின் அமைப்பு. கொள்ளிவாய்ப்பேய் காக்கின்ற கோபுரமும் நெடியமதிலும் வெள்ளியாற் அமைந்தனபோல் வெள்ளெலும்பினால் எடுக்கப்பட்டவை. வாயிலிடத்தே இரண்டு கரும்பேய்கள் தூண்களாக நிற்க மீது ஒரு கரியபேய் வில்லாக வளைந்துகிடக்கும். இரும்புச் சலாகையில் தூங்குவதுபோல் அதனிடத்தே பல மகர தோரணங்கள் தொங்கும். அவை, வீரர் தம் கையி னாற் கழுத்தை அரிய மலர்ந்த முகத்தாமரைகள், வட்டமாகிய மதிலிற் றூக்கும் நிணக்கொடி, சிறுவரின் பசிய தலை, பணியாத பண்டியரின் பாய் கின்ற களிற்றின் சுளகுபோன்ற செவிகள் என்பனவாம். மதுரையினின்றும் பிடுங்கியதும், மணிஊசல் போன்றதுமாகிய மகரதோரணம் எதிரே நாட்டப் பெற்று விளங்கும். அடியார், குதிரையின் வாலாகிய கூட்டுமாற்றினால் தேவியின் கோயிலை அலகிடுவர்; நிணமாகிய பூவைச் சிந்துவர்; சுடலை விளக்கை ஏற்றுவர். இளைக்காத சிறந்த வீரமும் தறுகண்மையுமுடைய வீரர், “தேவீ! எங்கட்கு யாம் விரும்பும் வரங்களைத் தருவாய்; வரத்துக்குத் தக உறுப்புக் களைப் பலியாக அரிந்து தருவோம்” எனக் கூவித் துதிப்பர். துதிக்கும் அவ்வொலி கடல் ஒலிபோற் பரக்கும். சிலர் சொல்லுதற்கரிய பெரியஓமத்தீ வளர்ப்பர்; வளர்த்திருந்து தொழுது பழுவெலும்பைத் தொடராகப் பிடுங்கி வலிய நெருப்பில் விறகாக இடுவர். சிலர் தம் நெடிய சிரத்தை அடிக் கழுத்தோடு அரிவர்; அரிந்த சிரத்தை அணங்கின் கையிற் கொடுப்பர்; கொடுத்த சிரம் தேவியைப் பரவும்; குறையுடல் கும்பிட்டு நிற்கும். உயர்ந்த பலிபீடத்தில் அறுத்துவைத்த வளைந்த உச்சிக் கொண்டை யுடைய சிரத்தை ஆண்டலைப்புள் தன்னினமென்று அருகணைந்து பார்க்கும்: பார்த்தலும் சிரம் அதனை அச்சுறுத்தும். “சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலியிற் பரக்கு மாலோ.” “சொல்லரிய வோமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி வல்லெரியின் விறகாக விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வளர்ப்ப ராலோ.” “அடிக்கழுத்தி னொடுஞ் சிரத்தை யரிவ ராலோ வரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ குறையுடலுங் கும்பிட்டு நிற்கு மாலோ.” “நீண்டபலி பீடத்தி லறுத்து வைத்த நெறிகுஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி யாண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ வணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ.” கரியதலையை அரிந்து தேவி முன்னிலையில் வைத்த போதே ‘நமது கடமை தீர்ந்தது; இனிச் செய்யக்கடவது ஒன்றுமில்லை’ என்று மகிழ்ந்து உடல் துள்ளி விளையாடும்; விளையாடி விழுதலும் உவந்து உண்ணப் பசியுடைய சில பேய்கள் அவ்வுடலைச் சூழ்ந்து திரியும். ‘தேவீ! எருமையைப் பிளந்து கொண்ட பசிய உதிரம் இது; அன்போடு ஏற்றுப் பலி கொள்வாய்’ என்று மொழிந்து அடியவர் ஆரவாரிப்பர். அக்குரலோசை எட்டுத்திசையும் பிளந்து அண்டமுகடிடிந்து இடித்தாற்போல் முழங்கும். அப்போது பல தமருகங்கள் மொகுமொகுவென்று ஒலிக்கும். அவ் வோசையைக் கேட்டு, தேவியை மகிழ்வித்து அநாதியாய் வருகின்ற மெய் காப்பாளரும், படைக்கலங்களை வலக்கையிற் பிடித்தோரும், உடையின்றி இடைதுவள நிற்போருமாகிய யோகினி மாதர் வெளிப்படுவர். எல்லாத் திசைகளிலும் நெடிய மூங்கில் மீது விழித்த பெரிய தலைகள் தூங்கும். தூங்கும் மத்தலைகளின் சிரிப்பைக் கண்டு சுழலுகின்ற கண் ணுடைய அச்சந்தரும் பேய் தூக்கத்தை மறந்திருக்கும். அரிந்த தலை களோடு கூடி ஆடுகின்ற மூங்கில், உயிர்களைக் கவரக் காலனிட்ட நெடுந் தூண்டில் போற்றோன்றும். கொள்ளிவாய்ப்பேய் வாய்க்கினிய சிவந்த தசையைத் தேடிச்சென்று நரிவாயின் நல்லதசையைப் பறிக்கும்; பறித்துக் கொல்லென்னும் ஓசை யுடைய கிழநரியின் ஊளைச் சத்தம் முழவாக தன் குழவிக்கு ஊட்டும்1. நிணத்தையும் தசையையும் பருந்து கவர, நெருப்பும் பஞ்சும் போற்றோன் றும் பிணங்களும், பேயும், குறுக்கு நெடுக்காகச் செல்லும் வழிகளும் அக் கோயிலிடத்துண்டு. இவ்வாறமைந்துள்ளது தேவி உறையும் காளி கோட்டம். தேவியைப்பாடியது தேவியின் அவயவங்கள் இவை இவை என அறிந்துரைப்பது ஒருவர்க்கு அமைவதன்று. யாம் புகழப் புகழ வருகின்ற அவற்றையே தமக்கு அவயவங்களாகக் கொண்டு மகிழும் தேவியின் அவயவங்களை ஈண்டு கூறுகின்றேம். மேருவை மத்தாகக்கொண்டு சுரரும் அசுரரும் அமுதங் கடைதற்கு நாணாகிய வாசுகி, தேவியின் ஒரு காற்சிலம்பு. பூமியைத் தன் முடிகளாற் றாங்குகின்ற ஆதிசேடன் மற்றொரு சிலம்பு. இப்பணிகளாகிய பாதசரங்கள் மீது முத்துகளும் நட்சத்திரங்களும் இடையிடையே வைத்துத் தைக்கப் பட்டுள்ளன. சேடனும் திக்கு யானைகளும் பூமியைத் தாங்கிய காலத்துத் தேவி பூமிமீது அடி எடுத்து வைத்தாள். அப்போது அது சேடனதும் திக்கியானை களதும் பிடரியுட் குழிந்து நடுங்கிற்று. பின்னர், புகழ்படைத்த விசயதரன் அதனைத் தாங்கிப் பரணிதரித்தான். தேவி, அதற்குமகிழ்ந்து அவனைப் புகழ்ந்து பாடித் தாளத்துக்கு ஆடினாள்; அவள் இவ்வாறு ஆடும் நடனத் தினள்; பரந்த சடையும் மூன்று கண்களுமுடைய பரமன் கொடுத்த யானை உரிமீது அதன் குடரையும் பாம்பையும் உதரபந்தமாக இறுகக்கட்டிய உடையினள் பிரமனையும் கரியமுகில் வண்ணனையும், மதம் பாயும் பெரிய கன்னமுடைய யானைமுகமும் பொன்னிறமு முடைய விநாயகக் கடவுளையும், அவுணர் கூட்டம் மடிய வில் வளைத்து அம்பு ஏவிய முருகக் கடவுளையும் ஈன்ற திருவயிற்றினள்; மார்பிடத்தணிந்த முத்துமாலையொடு பவளமாலையை ஒத்துவிளங்க அணிந்த தழலைஉமிழ்கின்ற பாம்பாகிய உத்தரியத்தள்; இமையவரையிலுள்ள பொன்குவியல் உருகவும் கடலிடத் துள்ள திரைசுவறிப் புகையவும் ஆலகால விடம் திசைகளைச் சுடுகின்ற காலத்து இமையவரைக் காத்தற்கு இருண்ட மிடற்றினராகிய இறைவற்கு இனியள்; சிரமறுத்த கழுத்தினின்றும் பெருகித் ததும்பி அலை வீசும் இரத்தத்திற்கெதிராகக் கைகளை நீட்டி முகந்து மிகவும் குடித்தலால் ஏறிய சிவப்பைத் திக்கியானைகளின் மதநீரிற் கழுவிக் கருமைபெற்று விளங்கும் மலர்க்கரத்தினள்; தன்னை நோக்குகின்றவரும், தலை மாலை அணிந்தவரு மாகிய சிவபெருமானது நடனச் சுழற்சிக் கேற்பச் சுழன்றுலாவுகின்ற பார்வை படுதலால் அப் பெருமானை வருத்துகின்ற பகை அற்று ஒழியும் படி ஆடுகின்ற குரவையள்; சிறிய மழலை மொழியுடைய சிவந்த வாயிடத்துப் புன்முறுவல் பூக்கும் முத்துப்போன்ற எயிறுடைய அழகிய வதனத்தள்; அருமறை ஒப்ப உலகில் அருள்நெறி நடத்தும் விசயதரன் உதித்த இரண்டு மரபினுக்கும் ஒப்பச் சூரியனையோ சந்திரனையோ ஒத்த திலகமிட்ட நெற்றியள்; பிரணவத்தின் உட்பொருளாய் எல்லாப் பொருள் களிலும் வியாபித்திருக்கும் அவளது தன்மையை எவ்வாறு எடுத்துரைப் பேன். விண்ணைத் தடவும் மலைக்கூட்டம் அவள் ஒருகால் காதிலணியும் குண்டலங்களாம். அவை, கோத்தணியின் மணிவடங்களுமாம். அக்கிரி குலங்கள் அவள் மலர்க்கைகளால் எடுத்து விளையாடு அம்மானைக் காய்களும் பந்துங் கழங்குமாம். “அண்டமுறுங் குலகிரிக ளவளொருகா லிருகாதிற் கொண்டணியுங் குதம்பையுமாங் கோத்தணியின் மணிவடமாம்.” “கைமலர்மே 1லம்மனையாங் கந்துகமாங் கழங்குமா மம்மலைக ளவள்வேண்டி னாகாத தொன்றுண்டோ.” பேய்களைப்பாடியது எல்லா அணங்கும் வந்து அடிவணங்கும் பெருமை சான்ற தேவியை விட்டகலாத பேய்க்கணங்களின் இயல்புகளை இனிக் கூறுவோம். அப்பேய்கள் நீண்ட பெரிய பசியை இடும் கொள்கலம் போன்றன; ஒரு நாளைப்போற் பலநாளும் பசியால் மெலிவன; பனங்காட்டின் கரிய பெரிய பனைகள் முழுமையும் தமக்குக் காலுங்கையுமாயின போன்றன; வலிய நிலப் பிளப்பை ஒத்த வாயின; வாயினால் உண்டு நிறையாத வயிற்றின; இருப்பின் தலைக்குமேல் மூன்று முழம் மேலே செல்லும் அழகிய முழந்தாளின; வெற்றெலும்பினை நரம்பிற் பிணைத்து வேயாத இறப்புப்போன்ற உடலின; ‘வேலை இல்லேம், பெறும் கூழும் இல்லேம், எங்களை ஆட்கொள்வது உனது கடன்’ என்று தேவியை நோக்கி அலறுவன; உட்பக்கம் ஒடுங்கி இரண்டும் ஒன்றாக ஒட்டி விடாத கதுப்பின; மலைக் குகைக்குள் நெருப்புக் கொள்ளியைக் கொண்டு உட்புகத்தோன்றும் மலை முகை போல விழிக்கும் கண்ணின; வற்றலாக உலர்ந்து மரக்கலம் போன்ற முதுகின; பெரும்புற்றெனப் பாம்பும் உடும்பும் உறங்கும் கொப்பூழன; பாம்பு நெளிவதுபோல் வளைந்த மயிரும், பாசி படர்ந்த பழைய துளையு முடைய மூக்கின; ஆந்தை பதுங்கி யிருக்க வெளவால் புகுந்து அங்கு மிங்கு முலாவும் செவியின; மண்வெட்டியும் மேழியும் கோத்தாலன்ன பல்லின; ஓந்தியைப் பாம்பிடை கோத்தணியும் தாலிய; வானைத் தட்டி உடைத்திடும் தலையின; தாழ்ந்து மார்பை முட்டும் உதட்டின; பக்கத்தே கிடக்கும் நீண்ட மூங்கிலைக் காணின் `என் அன்னை, என் அன்னை, என்று கூத்தாடும் குழவிய; ஒட்டல் ஒட்டகங்களைக் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்குமென்றாக்கலை கொள்வன. இவ்வியல்பின வாம் பேய்களெல் லாம், உறங்குதற்கிது சமயம் என்று கூறுதலும் தேவியை வணங்கி அவள் சொன்ன இடத்தை விட்டகலாது அருகாமையில் நின்றன. ஒருகால், முகில் வழங்குதலினும் அதிகம் பரிசிலர்க்களித்திடும் பொற்கரமுடைய அபயனது புலிக்கொடி துரத்திச் செல்லக் கயற்கொடி கடிய சுரத்தில் மறைந்தது. நின்ற பேய்களுட் சில அக்கொடிய சுரம்போலப் பசி யால் வயிறு காய்ந்து முதுகு தீந்தன. சில ஆளைக் கோபிக்கின்ற களிறுடைய விசயதரன் பொருகின்ற களத்து வீழ்ந்த அரசர் சிரத்தினின்றும் தெறித்த முளைச் சேற்றில் வழுக்கி விழுந்து முற்றாகக்கால்மொழிபெயர்ந்து முட முற்றன. சில அப்போரிடத்தே அடும் களக்கூழுக்கிட, காய்ந்த வெண் பல்லரிசியை உரலி லிட்டுத் தீட்டின. அப்போது நீண்ட யானைக் கொம் புலக்கை படுதலால் அவற்றின் வலக்கைகள் குறைந்து முடமாயின. விருத ராசர் பயங்கரனாகிய விசயதரன் முன்னொரு நாள் சக்கரக் கோட்டத்தை வெற்றி கொண்டான். அப்போது அங்கு அட்ட கொதிகூழ் பட்டுச் சில குரு டாயின; காவேரி பாய்கின்ற வண்டல் பரந்த நாடுடைய விசயதரனை வாழ்த்தி, மதுரைப் போர்க்களத்துச் சுவைபிறக்க அட்டு உண்ட களக்கூழோடு நாவுஞ் சுருண்டு புகுந்து உள்விழுந்து, சில முற்றும் ஊமைகளாயின; ஐம்படைப் பிராயத்தனாகிய விசயதரன், குதிரை ஒன்று ஊர்ந்து ஆனைமடியும்படி பொருத திமிரிப் பறந்தலைப் போரில் சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் சில செவிடாயின. பண்டு தென்னவர் சாய, அதற்குமுன் ஏவல் செய்த பூதகணங்கள் அனைத்தையும் பேய்கள் கொண்டுவந்து கூட்டின. அப்பொழுது இடாகினி முதலிய அக்குமரி மாதர்க்குப் பணி செய்தற்குச் சில1 குறளாயின. பரந்த கடலுடைய கடாரம்2 அழிந்த அன்று இரத்த வெள் ளத்திற் பாய்ந்து மூழ்கியும் நீந்தியும் ஆடிய பேய்கள் குரங்குவாதம் பிடித்து வலித்துக் குடி முழுதும் கூன் முதுகாயின. சில, 3“சிங்களத்தொடு தென்மது ராபுரி செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே வெங்க ளத்தி லடுமடைப் பேய்க்கெலாம் வேலை புக்கு விரல்க டறிந்தவும்.” ஆக உடற்குறை யுற்றன. இந்திரசாலம் இவ்வியல்பினவாகிய பேய்கள் இருபுறத்தும் தொழுதிருந்தன; எலும்பாகிய பீடத்தின்மீது மெல்லியகுடர்க் கச்சுடுத்துச் சிவந்த குருதியிற் றோய்ந்த சிறு பூதமாகிய தீபக் காற்கட்டில் இடப்பட்டிருந்தது. அதன் மேல், ஐந்து பிண மெத்தைகளடுக்கி, பேயை அணையாக முறித்திட்டுத் தூய வெள்ளை நிணமெத்தை விரித்து நிலா ஒளிசெய்கின்ற உயர்ந்த பஞ்சசயனத்தின்மீது தேவி வீற்றிருந்தாள். போரிற் புறங்கொடுத்தோடிய பாண்டியர் எறிந்துசென்ற 1பிண்டிபாலங்களை ஏந்திய இடாகினிகள் 2ஈச்சோப்பியை இரட்டி இருமருங்கு மிருந்தன. அப்போது, போர் யானை யின் எலும்பை எடுத்து நரம்பாற் கட்டியதும், தலைமுறை தலைமுறையாக வருகின்றதுமாகிய பிரம்பைக் கையிற் பிடித்து அமரில் மடிந்த வீரரின் குடர் மாலையைச் சூடினதும், நிணச்சட்டை இட்டதுமாகிய 3கோயில் நாயகப்பேய், எதிரில் வந்து கும்பிட்டு நின்றது; நின்று “தேவீ! அன்று சுரகுருவின் தூதாக இயமனிடத்துச் சென்றோன் கொய்துவைத்துச் சென்ற 4சிரத்தைத் தின்ற பேயின் கழுத்தை அரியும்படி சில பேய்களுக்கு ஆணை யிட்டாய்; அப்பேய்க்கு உறவாயிருந்து ஒளிந்தோடிப்போன சில பேய் களைக் குறித்த ஞாபகம் தேவி திருவுள்ளத்தில் உண்டன்றோ. அப்பேய் களுள் ஒரு முதுபேய் இன்று வந்து புறக்கடையில் நின்று, ‘தேவியிடஞ் சென்று யான் வந்திருப்பதைத் தெரிவிப்பாய்’ என வேண்டிற்று. அப்பேய் முன் இவ்விடத்து ஒரு தீங்குஞ் செய்திலது. தேவியின் திருவுள்ளம் யாதோ?” என விண்ணப்பித்தது. அதனைச் செவிக் கொண்டே தேவி, “அப் பேயை உள்ளே அழைத்து வருக” எனக் கட்டளையிடலும், கோயினாயகப் பேய் அம்முதுபேயை உள்ளே புகுத்திற்று. அப்பேய் அஞ்சி அஞ்சித் தேவிமுன் வந்து அடிபணிந்து, “தேவீ! நின் ஆணைகடந்த பிழையைப் பொறுத்து எனக்கு அருள் செய்” என வேண்டிற்று. உணவுக்கு ஆவல் கொண்டு பிழை இழைத்த அப்பேயைத் தேவி கடாட்சித்து, “சுரகுருவின் தூதன் கொய்து வைத்த தலையை அன்றே அவன் பெறுமாறு செய்தேன். நீ செய்த பிழையை இன்று பொறுத்தேன்” எனப் புகன்றாள். புகலலும் அம் முதுபேய், “தேவீ! நீ இவ்வாறு மகிழ்ந்து திருவாய் மலர்ந்தருளினமையின் உய்தேன். ஒன்றோடொன்றொத்த ஓராயிரம் இந்திரசால விச்சைகளைக் கற்றுவந்துளேன், அவற்றை இருந்து கண்டருளுதி” என இயம்பி விச்சை களை இழைத்துக் காட்டாநின்றது. “இக்கையிடத்துச் சில துதிக்கைகளைப் பார்; அவற்றை மாறி இக்கை யிலழைக்க அவை மதயானைத் தலைகளாயின பாராய். இக்கரித் தலையின் வாயிடத்து உதிர் நீரைக் குடித்த பேய்கள் இடிமுழக்கம்போற் கொக்கரித்துச் சுற்றி வருவதைப் பாராய். இவை கொஞ்சமல்ல; இதுகிடக்க, எம்முடைய அம்மை வாழ்கவென்று பேய்கள் கத்தும் வேகத்தைப்பார். அபயன் கடக்கத்தை வென்று அன்று களத்தே கொண்ட பரணியை இன்று பார்; உதிர ஆறுகள் பல ஓடுவதைப் பார்; உவை அற்ற தோள்கள்; அவற்றை ஆறு அலைத்தலைப் பார்; அறாத நீண்ட குடல்கள் மிதப்பதைப் பார்; துணிந்த தோள்களை நரிகள் இழுப்பதைப் பார்; மூளைச் சேற்றில் அடிவழுக்குதல் பார்; நிணத்தையும் நிணமணங்கனிந்த நிலத்தையும் பார்; நிலம் அடங்கலும் பிணங்களைப் பார். இவை கிடக்க, நம்முடையன வல்லாத சில பேய்களைப் பார்” என்ற போது உடனிருந்த பேய்கள் மெய்யென நினைந்து ஊனை உண்ணக் கருதி ஓடி ஒன்றின் மேலொன்று கால் முறிய விழுந்தன; விழுந்து கொழுவிய இரத்த நீரென்று கையை முகந்து முகந்து ஒன்றுமின்றி எழுந்தன; விழுகின்ற தசையென்று நிலத்தை யிருந்து தடவின. சில பேய்கள் உடுக்க நிணத்துகில் பெற்றனமென்று சுற்றுங் கையின; சில, அற்ற குறைத்தலையென்று விசும்பை அதுக்கும் எயிற்றின; கயிற் றுறியை ஒத்த ஒரு பேய்; பிணத்தைக் கௌவினதொப்ப வறிதே எயிற்றை அதுக்க, நிரைத்து நின்ற பேய்கள் மேல்விழ ஓடி இரைத்தன; விழுந்து பல முறங்கள் போன்ற நகங்கள் முறிந்து, முகமுஞ் சிதறி முதுகும் முறிந்து விலாக்களும் ஒடிந்தன; இதனைக் கண்ணுற்று யோகினிமாதர் விலா இறச் சிரித்தனர். “கயிற்றுறி யொப்பதோர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்க விரைந் தெயிற்றை யதுக்க நிரைத்திடு பேய்க ளிரைத்தன மேல்விழவே.” “முறம்பல போல நகங்கண் முறிந்து முகஞ்சித றாமுதுகுந் திறம்பி விலாவிற யோகினி மாதர் சிரித்து விலாவிறவே.” அப்போது கணங்களெல்லாம் தேவியை வணங்கின; வணங்கி, “தேவீ! இவ்விச்சையை இப்பேய் தவிராவிடின் இக்கணங்களெல்லாம் உடனே மாளும்; ஆதலின் இவ் விச்சையைத் தவிரும்படி இக்கணமே ஆணைசெய்” என வேண்டிக் கையுதறி நின்றன. அப்போது அம்முதுபேய், “தேவீ! வேந்தர் வேந்தனாகிய அபயன், கலைகளின் தன்மைகளை அறிவானென்று அறிஞர் எல்லாக் கலைகளை யும் அவனெதிரில் எடுத்தியம்புவர். அவன் ‘கற்றவர் கற்றவற்றின் அளவை கண்டு அருள் செய்வான்’. அதுபோல எனது விச்சையை இறுதிவரைக் கண்டருள்” எனப்புகன்று வணங்கிற்று. அது கேட்டு நின்ற கணங்கள் அம் முதுபேயைப் பார்த்து, “மாயப்பாவீ! மறுபடியும் எம்மை வருத்த நினைத் தனையாயின் தேவிமீது ஆணை” என்று ஆணையிட்டுத் தடுத்தன. தேவியும், “இனி இவ்விச்சை தவிர்” எனப் பணித்து, “நீ இவற்றை எங்குக் கற்றாய்” எனலும், முதுபேய், “தேவீ! அடியேன் நின் முனிவையும் சுரகுரு வின் முனிவையும் அஞ்சி இங்கிருத்தல் அரிதென்று இமயவரைச் சென் றிருந்தேன்; அங்கு நின் பழைய அடியாரின் அடியாளாகிய தெய்வ உருத்திர யோகினி என்பாளை அடைந்தேன்; அவள் நின் முனிவும் சுரகுருவின் முனிவும் ஒழிதற்கான மந்திர விச்சைகள் பலவற்றையும் எனக்கு உபதேசித் தாள்; உபதேசித்து, ‘இவ்விடத்திருப்பின் உனக்குப் பல நன்மைகள் கிடைக்கு’ மெனக் கூறினள். யான் அவ்விடத்துச் சிலகாலந் தங்கியிருந்தேன். அங்குத் தங்கியிருக்கும் நாளில் நிகழ்ந்த சில செய்திகளை உரைப்பேன் கேள்” என்றனள். இராச பாரம்பரியம் தமிழ்நாட்டிற் றன்னை எதிர்ப்பாரைப் பெறாத கரிகாற் பெருவளத் தான், போர்விருப்பால் வடதிசைக்கண் சென்றானாக, தேவருறையும் இமயக்குன்று குறுக்கிட்டது. அவன், தனது செலவைத் தடுத்துநின்ற குன்றை முனிந்து செண்டாலடித்துத் தாழ்த்தி மறுபடி நிற்கவைத்தான்; வைத்து அதன் முதுகில் தனது பாய்கின்ற புலிக்குறியைப் பொறித்தான். இதனை அறிந்து மூன்று காலமும் முற்றவுணர்ந்த கடவுட் குணம் வாய்ந்த நாரதன் என்னும் தெய்வ முனிவர், அப்போது அங்கெழுந்தருளினார்; எழுந்தருளி, “மன்ன! கடல் சூழ்ந்த இவ்வுலகில் உன்னை ஒத்த அரசர்களிலர்” என முகமன் கூறி ஆசீர்வதித்தார். ஆசீர்வதித்து, “அரச! நினக்கு யான் புகல்வ தொன்றுளது; அதைக் கேட்குதி” என்று கூறிப் பின் புகல்கின்றார்: “முன்னொரு காலத்துப் பராசர முனிவரின் மகனாகிய வியாசர் பாரத மென்னுங் கதையைப் பகர்ந்தார். விநாயகக் கடவுள் தனது மருப்பொன்றை வாங்கி அதனைக் கையிடத்தே எழுத்தாணியாகப் பிடித்து மேருவின் சிகரம்ஒன்றின் புறத்தே அதனை எழுதினார். அதனால் உலகம் உரைத்தற் கரிய தவப்பயன் எய்திற்று. பாரதத்திற் கூறப்படும் கண்ணனின் புனிதமாகிய நல்ல கதைகளும், மெய்மையுடைய நான்கு வேதங்களுமே, இப்பொழுது கூறும் வரலாற்றுக்கு நேர். யான் கூறும் இக்கதைகளெல்லாம் இக்குன்றின் மிசை வரையப்பட்டுள்ளன. யான் கூறும் அக் கதைகளை நீ இவ்வெற் பிடத்தே எழுதுக. “பாரதத்தின்கண் முதல்வனாகச் சொல்லப்படும் திருமால் என்னும் கடவுளைப்பற்றியும், பிரணவமாக அமைந்த வேதமும், அதன் பதத்தைக் கூறுபடுத்த வந்த பாதமும், பதமோடு பாதமாகச் சிலபல வந்தவகை ஆகிய வற்றைப் பற்றியும், இவை அடங்கி இருக்கும் இருக்கின் வழிவந்த வருக்க மும், வருக்கம் முழுதும் வந்த வட்டமும், நிகரில்லாத சங்கிதைகளும், வேதியர் விதி எனப்படும் மந்திர வகையும், பிரமா முதலாக உலகை முறை செய்து வருகின்ற உங்கள் மரபின் அரசர்களுமாகிய இவரின் வரலாறுகளை யும் நவில்கின்றமையின் இதுவும் குற்றமில் லாத வேதமாகும். “திருமாலின் உந்திக் கமலத்திற் பிரமன் தோன்றினான்; அவன் மரீசி என்னும் அரசனைப் பெற்றான். அவன் மகனாகிய காசிபன் அருக்கனைப் பெற்றான். அவன் மகனாகிய மனு பசுவின் கன்றுக்கு நேரெனப், பசுக் கன்றைக் கொன்ற தன் மகனைத் தேர்ச் சக்கரத்தின் கீழ் இட்டு உலகில் எல்லோரும் வியக்கும்படி நீதி அரசு புரிந்தான். அவன் இக்குவாகுவைப் பெற்றான். இக்குவாகுவின் பேரனான புரஞ்சயன், வெற்றியுடைய இந்திரன் ஆயிரங் கையுடைய ஐராவதத்தை ஊர்வதுபோற், களிறு ஒன்று ஊர்ந்து பகைவரை வென்றான். மாந்தாதா, சினமுடைய புலியும் மானும் ஒரு துறையில் நீர் பருகும்படி செங்கோல் ஓச்சினான். முசுகுந்தன் இமையோரை வென்று அவர் நாடு முழுதையும் அரண் செய்து ஆண்டான். ஒரு சோழன், கடல் கடைந்து கொண்ட அமுதைத் தேவர்களுக்கு அளித்தான். சிபி மெய்பதறாது தனது தசையை அரிந்து வைத்துத் தானும் புறாவோடு ஒரு துலையில் நின்றான். சுராதிராசன் என்னும் முதற் சோழன் சோழமண்டல மமைத்தான். அவன் மரபில் வந்த இராசகேசரி, பரகேசரி என்னும் இருவர் தமதாணை புலி ஆணையை ஒக்குமெனப் புலிக்கொடி நாட்டி ஒருவர்பின் ஒருவர் ஆட்சி புரிந்தனர். கிள்ளிவளவன் காலனுக்கு ‘இது வழக்கு’ என உரைத்தான். காந்தன் குடகு மலையைக் குடைந்து காவிரியாற்றைக் கொண்டு வந்தான். தனது ஆணைக்குட்பட்ட உயிர்கள் ஒன்றையும் கவராதபடி சுரகுரு இயமனை வென்றான். சித்திரன் புலிக்குப் பதில் இந்திரனைக் கொடியில் வைத்தான். சமுத்திரசித்தன் ஒரு கடல் மற்றக் கடலோடு கலக்கும் படி விட்டான். பஞ்சபன், தன் வலியால் உடம்பினின்றும் இரத்தத்தை இயக்கன் குடிக்கும்படி கொடுத்தான். ஒரு சோழன் காற்றுக் கடவுளை ஏவல் கொண்டான். தொடித்தோட் செம்பியன் தூங்கெயில் மூன்றை அழித்தான். ஒரு சோழன் பெரிய பாரதப்போர் முடியுமளவும் நின்று தருமனது கடல் போன்ற படைக்கு உதவி புரிந்தான். செங்கண்ணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் போரிலகப்படுத்திக் காவலில் வைத்தானாக, பொய்கை யார் களவழிக்கவிதை நாற்பது பாடி அவன் தலையை வெட்டி விடுவித்தார்.” கரிகாலன் இவ்வாறு முனிவர் கூறக்கேட்டுத் தனக்கு முன் விளங்கிய அரசர் வரலாறுகளை எல்லாம் மேருவில் எழுதினான். பின்னர், தான் களிறூர்ந்து சேர பாண்டியர்களைக் கொன்று வெற்றி பெற்றதும், தன்னை வணங்கி அரசர் அணை செய்கின்ற காவிரிக் கரையை அணைகட்ட வராத திரிலோசனனைப் படத்தில் எழுதிவரச் செய்து ‘இது மிகை’ என்று கூறி நெற்றிக்கண்ணை அழிக்க அவன் கண் அழிந்ததும், வரால்மீன் துள்ளிக் குதிக்கின்ற நீருடைய குடுமிநாட்டைக் தான் வென்றதும், பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குத் தான் பதினாறுலட்சம் பொன் அளித்ததும், முன்னொரு நாள் சேரனையும் பின்னொரு நாள் பாண்டி யனையும் போரில் அகப்படுத்தி அவர்கள் தலையில் விளக்கெடுப்பித்தது மாகிய தனது புகழ்ச் சிறப்புகளைப் பொறித்தான். அதன்மேல் “ஓர் சோழன் வேழம் ஏறிச்செலுத்தி வானவரை வெல்வான். பின் பராந்தக சோழன் பிறந்து ஈழத்தையும் தமிழ்க் கூடலையும் அழித்து வெற்றிபெறுவான். பின் இராசராசன் தோன்றிச் சதய நட்சத்திர விழாவைச் சேரநாட்டில் கொண்டாடுவான்; கொண்டாடி ஒரு தனிக் குதிரை யூர்ந்து உதயபானுவை ஒத்து உதகையை வென்று பல யானைகளைக் கவர்வான். அதன்மேல் கங்கை கொண்டசோழன் பிறந்து களிறுகளைக் கங்கை நீருண்ணச் செலுத்தி, மண்ணையிற்றடுத்து எதிர்க்கும் வேந்தனைச் சினந்துபொருது வெல்வான்; வென்று கங்கைக்கு அப்பாலுஞ்சென்று ஒலித்துத் தெள்ளுகின்ற திரையுடைய கடாரத்தைக் கைப்பற்றி நாட்டைத் தன் குடைக்கீழ்க் கொள்வான். பின் இராசாதித்தன் தோன்றி யானை உந்தி, கடிய காவலுடைய அரணை அழித்து, கம்பிலியிற் சயத்தம்பம் நாட்டி அட்டகிரிகளிலும் புலிப்பொறி தீட்டுவான். பின் இராசேந்திரதேவன் பிறந்து ஒரு களிற்றை எதிர்க்கச் செல்கின்ற களிற்றை ஒத்து ஆதவமல்லனை எதிர்த்துக் கோப்பைப் பொருகளத்தே முடிகவிப்பான்; கவித்துப் பகைவன் பிடிக்கும் கொற்றக் குடையைத்தான் கவிப்பான். அப்பால் இராசம கேந்திரன் தோன்றி நூல்களுக்குத் தலைமையாயுள்ள நான்கு வேதங்களிற் பண்டு உரைத்த நீதி முறைகளைப் புதுக்கிப் பழைய மனுவினுக்கு மும் மடங்கு நான் மடங்காக நீதி செலுத்துவான்; செலுத்தின் தனது வெண் கொற்றக்குடை நிழலில் அறம் வளர்ப்பான். இவனுக்குப் பின் வீர ராசேந்திரன் தோன்றிக் குந்தளரைக் கூடற் சங்கமத்து அழிப்பான். பின், இந் நிலவுலகம் இவ னிடத்துச் சேர்ந்திருக்க என்ன தவஞ் செய்தது என்னும்படி விசயதரன் அவ தரிப்பான். அவதரித்துத் திரிலோகமுள்ளளவும், வேதங்களுள்ளளவும் சக்கரவாளகிரிவரையில் செங்கோல் செல்ல ஆட்சி புரிவான். தீக்கடைகோலிற் பிறந்த தீயினால் வேட்கும் வேள்வியில் வெளிப் படும் வடிவாய்ப் பாம்பணையிற் கண்வளரும் திருமால் முதலாக அபயன் தரணியை ஆள்வதுவரையுமுள்ள தனது தொன்மரபும், அம்மரபை மேலாகச் சொல்லும் புகழுமாகிய இவற்றை எல்லாம் ஒன்றும் ஒழியாது முனிவர் சொன்னபடி கரிகாலன் மேருவின் ஒருபுறத்தெழுதினான். எழுதி இதனைக் கற்றுப் ‘பிறருக்குச் சொல்வோர் செய்த பிழை எல்லாம் அரசர் பொறுக்க’ என முடித்தான். ஆதலினால் வணங்கி இதனைக் கற்றுவந்தேன்” எனக்கூறி முடித்து அம் முதுபேய் அஞ்சலி செய்து நின்றது. இதனைச் செவிக்கொண்ட தேவி, கணங்களைப் பார்த்து, “பூமாதைக் கைக்கொண்ட அபயனது சிறப்பைக் கேட்ட என்னுள்ளம் அவனை ஈன்ற ஞான்றினும் பெரிதும் மகிழ்ச்சி பூத்தது. இப்பேய் சோழவமிச மரபினைக் கூறிய முறை மிக அழகுடையது . ஒரு வெண் கொற்றக்குடையின் கீழ் உலகு முழுவதையும் ஆள்கின்ற சயதுங்கனது கீர்த்திப் பிரதாபங்களை எல்லாம் நீவிர் கற்று உய்மின். அவனே பூதங்கள் எல்லாவற்றையும் காக்க வல்லான்” எனத் திருவாய்மலர்ந்தருளினள். பேய்முறைப்பாடு இவ்வாறு திருவாய்மலர்தலும் பேய்கள் தேவியை நோக்கித்தங் குறையை முறையிடுகின்றன: “சடாபாரத்திற் கங்கா நதியைத் திரித்த சிவபெருமானின் திருவருளைப் பெற்ற பெருந்தேவீ! அபயன் காக்கின்ற பேறுடைய பூதங்களாகப் பிறவாமல் பேய்களாகப் பிறந்து கெட்டோம். எங்கள் குறையறிந்து நீ காவாதொழியின் பின் யார் காப்பார். பாழடைந்த ஊரைக் காக்க மதில் வேண்டாததுபோலப் பாழான எங்கள் உயிரைக் காக்க உடம்பு வேண்டாம். ஆகவே உடலைவிட்டு ஓடிச்செல்வேம். பசியால் ஓய் கின்றோம். ஓய்கின்ற ஓய்வுக்கு இனி ஆற்றேம். நீ பகைத்தாலும் உய்ய மாட்டோம். பசித்தீ பற்றி எரிதற்கு விறகாய் மெலியா நின்றேம். மெலிந்த உடலை விடுதற்கு உபாயமுங் காணேம். சாதற்கு நாங்கொண்ட ஆசை இவ்வளவும் போதும். பாழான சாக்காட்டையும் எமக்கு அரிதாக வைத்தாய். நாங்கள் சாவதற்குத்தான் முடியுமோ? முற்பிறப்பில் நாம் இழைத்த பாவத்தால் பிரமா இப்பிறப்பில் வயிற்றிற் பசியை வைத்தான். பசிக்கு ஒன்றும் பெற்றிலேம். காற்றடிக்கப் பதடிகள் போற் பறக்கின்றேம். பசியால் வருந்திப் பாதி நாக்கும் உதடுகளிற் பாதியுந் தின்று ஒறுவாய ஆனேம். தேவீ! அடியேங்கள் உய்யும் வண்ணம் கடைக்கண் நோக்காய். களங்கமற்ற விசயதரன் போர்க்கு இளையான். அரசரிடும் திறைக்கு அருளு வான். அவனது யானைகள் கட்டுத்தறியிற் கட்டுண்டு நிற்கின்றன. பெரும் பசியால் மெலிந்து நெற்றாய் உலர்ந்தேம். எங்கள் மூக்கின் அருகே சளியும் முடையும் நாற, உதடுகளை ஈ மொய்க்கின்றன. இந்நற்சகுன மொன்றால் மாத்திரம் உய்ந்திருக்கின்றேம்; இல்லையேல் இன்றே இறந்துபடுவேம்” என்று ஆர்த்தன. அத்தருணம் இமயாசலத்தினின்றும் வந்த பேய், தேவியின் முன் வந்து அடிகளில் இறைஞ்சி, “தேவீ! அடியேன் வடகலிங்கஞ் சென்றிருந்த போது சில நிமித்தங்கள் தோன்றின; அவற்றைக் கூறுவேன் திருச்செவி கொண்டருள். “மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ காலமுகில் செங்குருதி காலவரு மாலோ.” “வார்முர சிருந்துவறி தேயதிரு மாலோ வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ வூர்மனையி னூமனெழ வோரியழு மாலோ வோமவெரி யீமவெரி போலெரியு மாலோ.” “பூவியலு மாலைகள் புலால் கமழு மாலோ பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ வோவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ வூறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ.” இந்நிமித்தங்களால் விளையற்பாலன யாவை?” எனக் கூறி நின்றது. அதனைத் திருச்செவிகொண்ட தேவி பேய்களை நோக்கி, “உங்கள் நிமித்தமும் வடகலிங்கத்து நிகழ்ந்த நிமித்தமும் உங்களுக்கே நன்மையைத் தரும்; அரசரது அணிவகுத்த படையை வென்ற அபயனது மதயானைகள் கோட்டிடத்தே நிணத்தைக் குத்தி நிற்பதாகக் கணிதப் பேய்கள் கண்ட கனவினாலும் அண்மையில் ஓர் பரணியுண்டு. உங்கட்கு இனிக் குறைவில்லை” என விளம்பினள். உடனே பேய்களெல்லாம், “இனிப் பெருமையுற்றோம்! இனி மிகவும் பெருமையுற்றோம்!!” எனப் பாடிப் பல தனிப்பனைகள் துள்ளுவ போற் றுள்ளி நடித்தன; நடிக்க வலிமை பெற்றன; கடைவாய்களையும் உதடுகளை யும் நாக்கினால் நக்கி நனைத்தன. விலாவின் அலகுகள் விம்ம உண்டது போற் களிப்பு மிகுந்தன; பசித்த பசியையும் மறந்தன. இவ்வாறு களிப்பி னால் ஆடி ஆரவாரித்த பேய்களெல்லாம் தேவியைப் பார்த்து, “அணங்கே! நாமெல்லோருங் கூடிக் கலிங்கக்கூழைச் சத்தமிட்டுக் குடித்தால் நமது கூடுகள் போன்ற வயிறுகள் நிறையுமோ?” என வினாவி விடையை எதிர்பார்த்து நின்றன. அணங்கு, “நீங்கள் போதும் போதாதென்று கூட்டங் கூடி ஆலோ சிக்கவேண்டா. இக்கலிங்கப்போர் கடல் சூழ்ந்த இலங்கைப் போருக்கு ஒட்டி இரட்டியாகும்” என்றனள். அதைக் கேட்ட பேய்கள் நெஞ்சு குளிர்ந்து உற்சாகங்கொண்டன. அவதாரம் தேவி பேய்க்கணங்களை நோக்கிக் கூறுகின்றாள்: “முன்னொருபோது இலங்கையைப் பொருதழித்த இராமனே கண்ணனாக வந்து பாரதப்போரை முடித்தான். அவனே, பகைவரை வென்று விளங்கும் ஒளியுடைய ஆணைச் சக்கரத்தை உருட்டும் விசயதரன் என உதித்தான். இன்னும் கூறக் கேளுங்கள்; முன்னொருபோது தேவரெல்லாம் திருமாலிடஞ் சென்று தங்குறையிரந்தனர்; திருமால் அத்தேவர்களின் வேண்டுதலுக் கிரங்கித் தேவகியின் திருவயிற்றில் வசுதேவற்குப் பிள்ளை யாக மூவுலகும் தொழும்படி திரு அவதாரஞ் செய்தார். அவரே மறுபடியும், பூமியிற் கலியிருளை நீக்க வேண்டியும், சூரியகுலம் இனிது ஓங்கவேண்டி யும், இராச இராசன் மகளாகிய மங்காதேவியின் திருவயிறாகிய ஆலிலை யில் வந்தவதரித்தார்; அவதரித்தலும், இனி மண்ணுலகும் நான்மறைகளும் துன்பம் நீங்கின என்று அந்தர துந்துபி அதிர்ந்து முழங்கின; பூமாரி பொழிந்தது. இவற்றைக் கண்டு மகிழ்ந்த கங்கை கொண்ட சோழனின் தேவி தன் மகளின் மகனைத் தன் தாமரை மலர்போன்ற கரங்களால் எடுத்தாள்; எடுத்து, இவனிடத்து, அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கும் அடை யாளம், முறையே இருத்தலைக் கண்டு ‘இவன் நமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை விளக்க வல்லான்’ ஒன்று கூறி அவனைச் சுவீகாரங் கொண்டாள். இருகுலத் தரசரும் தனித்தனி சந்திரகுலத் தோன்றலிவ னென்றும், சூரியகுலத் தோன்றலிவனென்றும் எண்ணிப் பெருமையுறும்படி அக்குழவி வளரா நின்றது; வளர்ந்து, பண்டு வசுதேவன் மகனாகி அவதரித்துப் பூமாதின் துயர்களைந்த மாயன் இவனென்று கண்டோர் தெளியுமாறு, தனக்குரிய தண்டு, வில், வாள், சங்கு, சக்கரம் என்னும் பெய ருடைய ஐம்படையைத் தரித்தது. விசயதரன் சீற்றமுடைய புலி வளர்க்கும், சிறு புலி ஒத்தும், திக்கு யானை அணைத்து வளர்க்கும் வீரமுடைய யானைக் கன்றை ஒத்தும் உலகில் எல்லா அறங்களும் ஒருமித்து அடி வைக்கும்படி அடி எடுத்து வைத்தான். அறத்தோடு அறத்துறைகள் நடப்பது போல நடந்து நடைகற்றான். தாய் முலை சுரந்து பால் அளிக்கின்ற நாளே அவன் உலகுக் கருள் சுரந்தான்; தூய மனுநூலும் வேதநூலும் பொருள் விளங்க, சொற்றெரியப் பேச்சுப் பயின்றான்; அழகிய மார்பிடத்து வீற் றிருக்கும் இலக்குமியின் கழுத்தில் விளங்கும் மங்கல நாண் எனும்படி, அகன்ற மார்பில் முப்புரி நூல் கிடந்து விளங்க இரண்டாவது பிறப்பை எய்தினான்; அதன்மேல் ஞானம் நிறைந்த வாமனர் என்னும் சிறந்த அந்தணர்வடிவாய் மாவலியிடஞ்சென்று பூமி இரந்தபோது தான் ஓதிச் சென்ற நான்கு வேதங்களையும், வேதியர்பாற் கேட்டு மறுபடியும் கற்றான்; நிலமாது, நிறைந்த வாழ்வுபெற நமக்கு அணித்து என்று களிப்ப, வீரமாதைப் புயத்திருத்தி வீரவாளை அரையிற் செருகி வாள் வித்தை கற்றான்; இந்திரன் நான்கு மருப்புடைய ஐராவதத்தை ஊர்ந்து எதிர்த்தோரை வென்று வருவானாயின், யான் இரண்டு மருப்புடைய யானையை ஊர்ந்து உலகத்துப் பகைவரை வெல்வேனென யானையேற்றம் பயின்றான்; அருக்கன், ஒரு நாட்போல அன்று முதல் இன்றுவரையும் ஏழ்பரி உகைத்து இருள் கடிந்து வருவனேல், யான் ஒரு குதிரை உந்திப் பூமியின் கலியிருள் நீக்குவனெனக் குதிரை ஏற்றங் கற்றான்; சக்கரம் முதலிய ஐம்படைகள் அவனுக்குரியன வாதலின் அவன் அவற்றிற் பழகிலன்; தமக்குத் திக்கு விசயத்தில் உதவுமென்று அவனது தாமரை மலர்போன்ற கரங்கள் அவற்றிற் பழகின; அவன் பொருட்டுப் படைக்கலம் பயின்ற கைகள் நோகப்பெற்றில; அவன் பயின்ற கல்வித் துறைகளைக் கூறின் மிகையாகும்; கூறவேண்டின் உலகத்து அரசரெவரும் இவற்கு ஒப்பில்லை என்னும்படி, அவை புகழ்கின்ற நிறைந்த கலைகள் ஒவ்வொன்றையும் துறை போகக் கற்றான். கலைகள் எல்லாம் பயின்றபின் இவன் மாமனாகிய வீரராசேந்திரன் இவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். அதன்மேல் இவன் திக்கு விசயஞ்செய்து மாற்றரசரின் செல்வங்களைக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டான். இந்நினைவுடன் வளருங் காலத்து, ஒருநாள், மதயானையின் முகத்து வளைந்த நகங்களைப் புகுத்தி விளையாடும் புலிக் குட்டியைப் போலப் பகைவர் பொருமுனைகளைக் கிழிக்க எறிபடைகளைக் கையி லெடுத்தான். மேற்குத் திசையை அடைதற்குக் குதிரைகளைத் தூண்டுகின்ற தேருடைய சூரியன் உதயமாக மாயும் இருள்போன்ற, வடதிசைக் கண்ணுள்ள அரசரது பகை முகத்துத் தன் குதிரையைச் செலுத்தினான்; செலுத்திச் சிவபொருமான் திரிபுரத்தை எரித்த ஞான்று எழுந்த தீ இது என்னும்படி தனது ஆஞ்ஞா சக்கரம், புகையோடு கூடி எரியைக் குவிப்ப வயிராகரம் என்னும் நகரைத் தீ மூட்டி, அரசர் கைகூப்பித்தொழ வாரண மூர்ந்து சென்றான்; சென்று குளம் சிதையும்படி மோதி ஒலிக்கின்ற கடலைப் போலப் பகைவர் தூண்டிய குதிரைப் படையை முறியவெட்டி, திரண்டு பொருதோரின் சிரங்களைத் துணித்து மலைபோலக் குவித்துத் தனது புருவத்தை ஒத்தவில்லை வளைத்துச் சக்கரவாள கோட்டத்தை நமன் கோட்டமாக மாற்றி வென்றான்; போர்க்களங்கள் தோறும் இவன் வாகை சூடுதலின் யானைகளையும் குதிரைகளையும் பொன்னையும் பார்த்திபர் சீதனம்போல் நல்கினர். இவனை எதிர்த்துப் பொருத அரசரின் கண்கள் சிவந்தில; தோற்றோடிய வேந்தர் கால்கள் சிவந்தன. விருதராச பயங்கரனான விசயதரன் பிடித்தவேல் சிவந்தது; அவன் கீர்த்தி வெளுத்தது. தனக் கொப்பாரில்லாத வீரனாகிய விசயதரன் பரி ஊர்ந்து வடதிசை மேற்செல்ல, வீரராசேந்திர சோழன் தேவருலகுக்கு அரசனெனும்படி வானுலகம் புகுந்தான். அப்போது சோழ நாட்டில் நடந்த தடுமாற்றங்களைக் கூறுவேம். வேதியரது வேள்வியும் அறுதொழிலும் குன்றி, மனுநீதி தடுமாறி, வேதமும் முழங்குத லொழிந்தது. சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறின. எவரும் தத்தமக்குக் கூறிய ஒழுங்கில் நில்லாது ஒழுங்குகளை மறந்தனர். ஒருவரை ஒருவர் மிஞ்சினர். கடவுளரின் கோயில்கள் பூசையை மறந்தன. பெண்கள் கற்புநெறி தவறினர். அவரவர்க்குரிய கட்டுப்பாடுகளு மழிந்தன. செறிந்த இருள் பரந்த காலை அவ்விருளை ஒட்டுதற்கு ஒலிக்கின்ற கடலிடத்தே உதயமாகும் சூரியனைபோல விசயதரன் வட நாட்டினின்றும் திரும்பிவந்தான். காத்தற் றொழிலுக்குரிய அவனே, படைத்தலையும் கடனாகக்கொண்டு ஒழுக்கங்களிற் குலைந்தோரை முறையிற்கொணர்ந்து உலகை முன்னிருந்த நிலையில் நிறுத்தினான். பரந்த புனலுடைய நான்கு கடல்போல நான்கு வேதங்கள் முழங்கவும், மூவுலகத் துள்ளார் வாழ்த்தவும் முடிசூடிட்டு முழுக்குச் செய்தான். அப்பொழுது, ஒலிக்கின்ற வீரக்கழல் புனைந்த மன்னர் ‘மனு நீதி தலையெடுக்க’ எனக் கூறி அடிமீது அறுகெடுத்து வைத்தனர். மறையவர் சென்னி மீது முடி யெடுத்து வைத்தனர். அரச நீதி திறம்பாத வேந்தன் முடிமீது விதிப்படி சொரிந்த புனலினிடையே அறத்துறைகள் அனைத்தும் வளர்ந்தன; உலகைத் தனக்குச் சொந்தமாகக் கைக்கொண்டு புலிக்கொடி நாட்டுதலும், அன்று முதல் அமரர்க்கு விழாவெடுக்கக் கொடிகள் ஏறின. குவித்த கையோடு அரசர் வலம் வருகின்ற கழலிடத்தே ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த அபயனது முததுக்கள் தூக்கிய வெண் கொற்றக்குடையின் நிலவெறிக்க, கலியிருள் ஒளித்தது. உலகை விளக்கும் அழகிய வெண் கொற்றக்குடை நிழலில் சிவவெருமான் உறையும்படி மலைகள் சேர்ந்து விளங்கின. வறுமையைக் கழுவி அழகு பெற்று உலவுகின்ற பெரிய புகழாகிய நிலவில் திருமால் பள்ளி கொள்ளும்படி கடல்கள் சேர்ந்து விளங்கின. நான்கு திசைகளும் அவனது குடைநிழலிலடைந்தன. மறைகள் முறைமையில் அடைந்தன. சேரர் பாதங்களில் அடைந்தனர். பாண்டியர் கடலில் மறைந்தனர். கருணை யோடு இரண்டு கரங்களாலும் வாரி இறைக்கும் பொருள், மழை போன்றது. தீக்கடை கோலிற் பிறந்த நெருப்பால் வேட்கப்படும் மந்திர வேள்விகள், மழையை உதவின. கவிஞர் பரிசில் சுமந்தனர். எருமைகள் திறைகளைச் சுமந்தன. அரசர் 1பாதங்களைச் சுமந்தனர். புயங்கள் உலகைச் சுமந்தன. விரித்த கூரிய நகங்கள் விளங்குகின்ற கிழப்புலியின் முத்திரையைப் பொறித்த மேருவை அடித்துத் தாழ்த்திய கோலிடத்தே வளை வுண்டு; அவன் செலுத்தும் செங்கோலிடத்து வளைவில்லை. இகல் கொண்டு பொருது வணங்காத அரசர் கால்களிற்றளையும் செய்யுளடிகளில் வரும் தளைகளுமல்லாது வேறொருவர் பாதங்களிலும் தளையில்லையாகும். மடமயில் போன்ற சாயலுடைய மாதரின்சிறியபாதச் சிலம்பொலி விளைக் கின்ற கலா மன்றிப் பகையினால் விளையும் ஆர்ப்பு அந்நாட்டின் ஓரிடத் தும் இல்லையாகும். விளைகின்ற போர் ஒன்றும் இன்மையால் விசயதரன், மற்போரும், புலவர்களின் வாதப்போரும், வலிய யானைப்போருமாகிய இவற்றைக் கண்டும், கலையினோடும், கவிவாணர் கவியினோடும், மனுநீதி முறையினோடும் பொழுது போக்கினான். ஒரு நாள், சோலைகளுக்கு நீர் பாயும் கால்வாய்களுடைய காவிரியாற்றங்கரையில் வேட்டையாடியிருந்த விசயதரன், “பாலாற்றங்கரையில் 1பரிவேட்டையாடுதற்குப் பயணமென்று பறை அறமின்” எனலும் உலகு முழுமையும் ஒரு நகருட் புகுந்தாலொப்பத் திரைவீசுகின்ற கடலொலி அடங்கும்படி நாற்றிசைகளிலும் நான்கு படை களும் திரண்டன. விசயதரன் தனது அழகினால் அணிகள் அழகுறும்படி அவற்றை அணிந்து சோதிடர் ஆராய்ந்து கூறிய சுப முகூர்த்தத்திற் புறப்பட்டான். அப்பொழுது, வேதியர் பலர் நின்று புண்ணியதானங்களைப் பெற்ற னர். அடைக்கலம் புகுந்த மன்னர் அபயதானம் பெற்றனர். கவிவாணர் பொன்னோடு மத யானைகளையும் தானமாகப் பெற்றனர். சூரியன் சந்தி ரனைக் குடையாகப் பிடித்து உதயகிரியில் தோன்றினாற்போல் விசயதரன் அழகிய களிறொன்றின்மேல் விளங்கினான். வெண்கொற்றக் குடையின் கீழ் சந்திர விம்பம்போல் கவரிகள் பல இரட்டின. வலம்புரிச் சங்கின் தழங்கு கின்ற குரலோடு பல சங்குகள் முழங்கின. பருவகால முகில்களின் முழக்கம் போல வாத்தியங்கள் குமுறின. பார்த்திபர், விசயதரனுக்குச் சிறப்புச்செய்ய வந்து கூடுதலால் இடையறாத ஆரவாரமெழுந்தது. மறையவர் நான்மறை ஓதும் முழக்கமும் இவற்றோடு கூடி ஆர்த்தது. இவ்வாறு இடையறாது எழுகின்ற ஆரவாரத்தை மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் கடலொலியோ? என்று அறியாது மயங்கினர். ஏழுலகோடு ஏழிசையும் வளர்த்தற்குரிய விசயதரன் வகுத்த இசையின் மதுரவாரிதி எனலாகும் காதற்றேவி ஏழிசை வல்லபி, யானைமீது பிரியாது உடன் இருந்தாள். அரசர் மனைவியர் பொன்மாலையையும் மலர் மாலையையும் அணிவித்து நின்றேவல் கேட்டுப் பக்கத்தே சூழ்ந்திருப்பப் பட்டத்துத் தேவியாகிய தியாகவல்லி பிடி ஒன்றின்மீது ஏறி வந்தாள். பிடிமீது வரும் வளையணிந்த கையினராகிய மடமாதர் பலரும் பிடிமீதேறி வரும் பிடிக்குலமொத்தனர். பொற்குடை பிடித்துவரும் அரசாளும் வேந்தர், முடிமீது நிரைத்து வரும் முடிகளை ஒத்தனர். யானை மீது வரும் அநேகம் அரசர் யானைமீது வரும் அநேக யானைகளை ஒத்தனர். ஒளிபடைத்து வரும் விடுபடைகள், சேனைமீதொரு சேனை வருவதொத்தன. பெரிய யானைகள் மீது அதிர்ந்துவரும் பேரிகைகள், முகிலின்மேல் முகில் முழங்கி வருவதொத்தன. முனை நீண்ட கொடிகளின் மேற் படிந்த முகில்கள் துகிலின் மேல் வரும் துகிற் கூட்டமொத்தன. தேரின் மீது வரும் பொன்மேகலை உடுத்த மகளிர், தேரின்மீது வரும் தேரையொத்தனர். பூமியின்மீது இன்னொரு பூமி உள்ளதுபோலப் படலதூளி எழுந்திடையில் மூடிற்று. யானைமீதும் இளம்பிடிகள் மீதும் பொற்றவிசிட்டு இடையறாது நிரைத்துச்செல்லும் கடல்போன்ற சேனை அபயன் இம்முறை சேதுபந்தனஞ் செய்ததொத்தது. நீலமணிகள் நாற்றிய சிவிகை வெள்ளமும் முத்துக் குடை வெள்ளமும், கால்வாய்களாற் பெருகும் யமுனை வெள்ளத்தை ஒத்தன. மீன், பாம்பு, கலுழன், யானை, பன்றி, ஆளி, குதிரை, மேழி, கோழி, வில் முதலிய ஆயிரங் கொடிகள் அசைந்தன. கடிய சினப்புலிக் கொடிகள் அவற்றின் மேலாக விளங்கின. மாலை அணிந்த கழுத்துகளும், பூச்சூடின கூந்தலும், மிருது வான நடையும், இனிய மொழியும், என்றும் ஒப்பில்லாத நகையுமுடைய மகளிர் கூட்டங்கள் எவ்விடத்தும் பரந்து சென்றன. அப் பெண்களின் தோற்றம், 1மெல்லிய கதலிகளும், பச்சைக் கமுகும், பொங்கும் இளநீர்க் குலைகளும் ஆற்றிடத்து எழுஞ் சுழிகளும், அன்னநடையும், ஆலை யிடத்துக் கமழ்கின்ற பாகும் எவ்விடத்தும் பரந்து, வேறுமொரு பொன்னி வள நாடு சயதுங்கன்முன் நின்றது போன்றது. எங்கும் நெருங்கிச் செல்லும் வேழ நிரைகளாகிய மலைகளோடு செல்லும் வெற்றிவேல் அபயன், தனது அருளைப்பெற்று வாழ்தலால் அபயம் புகுந்த சேரனோடு கூட மலைநாடு காணச்சென்றவன் போன்றான். அவ்வானைகளாகிய மலைக்கூட்டங்கள் துதிக்கைகளினாற் றெறிக்கும் நுண்ணிய நீர்த்திவலை, பாண்டியர் அத் திக்கில் அஞ்சி விட்டோடிய முத்தை வாரிக்கொண்டு தென்றற்காற்று வருவதை ஒத்தது. இவ்வகை ஆடம்பரங்களோடு புறப்பட்ட விசயதரன் தென்திசையி னின்றும் வடக்கு முகமாகத் திரும்பிச் சிதம்பரத்துக்குச் சென்று சிவபெரு மானைத் தரிசித்து, அவரருளைப் பெற்றுக்கொண்டு அதிகைமாநகரை அடைந்தான். பின் அதிகையினின்றும் பயணப்பட்டு வேட்டையாடி வட்டமதி ஒத்த குடையுடைய மன்னர் தொழ வளம் பொருந்திய கச்சிநகர் அடைந்தான். இவ்வாறு இதந்தரும் வரலாற்றை இறைவி சொல்லிக் கொண்டிருக் கும்போது போர்க்களத்தினின்றும் ஒரு பேய் கால்பிற்பட மனத்து உவகை தள்ளிவர ஓடி வந்தது. வந்து கலிங்கரது இரத்தம் வெள்ளம், வெள்ளமா யோடுகின்றது. கலிங்கதேசத்துக்கு, அவசரம், அவசரமாகச் செல்லுங்கள்; சென்று மெலிந்த உடலை நிரப்புங்கள்! நிரப்புங்கள்!! தேவியின் கணங்களே! ஏன் இங்கிருக்கின்றீர்கள். இதற்குமுன்னே வலிய சிறகுடைய கழுதினதும் பருத்தினதும் வயிறுகள் பீறிப்போயின; அங்குள்ள பிணங்களை உண்ப தற்கு உங்கள் வயிறுகளும் போதா; என்றாலும் எல்லோரும் திரண்டு ஓடிச் செல்லுங்கள்; சிரமலைகளை மேலும் மேலும் விழுங்கவும், திரை எழுகின்ற இரத்தக் கடலைக் குடிக்கவும் பிரமனை வேண்டி இன்னும் பெரும் பசியைப் பெறுங்கள்” என்றது. இவ்வாறு கூறக் கேட்ட பேய்கள், கொழுத்த பிணம் தின்றனபோல் உடல் பூரித்துச் சிரித்து ஒன்றின்மேல் ஒன்று விழுந்தன. மகிழ்தற்குரிய கலிங்கப்போரை அறிவித்த பேயின் வாயை ஓடி ஓடி முத்தமிட்டன. சாவேம் என்ற பேய்களின் பற்களைத் தகருங்கள் என்றன. ஒக்கலைப் பிள்ளை விழவிழப் பெருந்துணங்கை ஆடின; வள்ளைப் பாட்டுப்பாடி ஆடச் சில பேய்களை அழைத்தன; கனாவுரைத்த பேயைக் கழுத்தினிற் கொண்டு, அரைப்பட்டி பூண்ட நந்தேவி வாழ்க! வாழ்க!! என்று ஆடின. இவ்வாறு துள்ளிக் குதித்து ஆடல் புரியும் பேய்களின் ஆடலைத் தேவி தவிர்த்தாள்; தவிர்த்துப் போர்க்களத்தினின்றும் வந்த பேயை நோக்கி, “அப்போர் நிகழ்ந்த வகையைக் கூறு” என அப்பேய் கூறுகின்றது. 1காளிக்குக் கூளிகூறியது தேவீ! யானைகள் ஆயிரம் படக் கலிங்கர் மடிந்த களப்போர் உரைப் போர்க்கு நாவாயிரமும் கேட்போர்க்கு நாளாயிரமும் வேண்டும்; இதனை, ஒருவர்க்கு ஒருவர் ஒரு நாவினாற் கூற முடியாதெனினும் சிறியேன் விண்ணப்பஞ் செய்கின்றேன்; கேட்டருள். முன்னொரு நாள், பாரெல்லாம் உடைய அபயனது செந்தாமரை மலரொத்த கொடைக்கை நிகரென மேகம் இருண்டு காஞ்சி நகரிடத்து ஏழரை நாழிகை பொன்மழை பெய்தது. அந் நகரிடத்து, அழகிய பொன்மயமான மேரு இதுவோ அன்றி அதுவோ என்று, வலம் வருவதற்குச் சூரியன் சந்தேக முறுகின்ற இராச மாளிகையின் தென்மேற்கு மூலையில் சித்திர மண்டபமொன்றுண்டு. அதன் நடுவே, மொய்த்து விளங்குகின்ற தாரகைகளுக்கு நடுவிலெழுந்த பூரண சந்திரனுக்கு ஒப்பென, அழகுபெற்று விளங்கிய முத்துப் பந்தரின் நடுவே சந்திரவட்டக் குடை ஒன்று நிழற்செய்யா நின்றது. அதன்கீழ் வீசுகின்ற வெண்சாமரைகள், திருப்பாற்கடலின் இரண்டு திரைகள் வந்து பணி செய்வது போன்றன; அவற்றின் இடையே இடனகன்ற உலகம் முழுவதையும் புயத்தில் வைத்து மேருவிற் புலிக்குறி பொறித்த விசயதரன் சிங்காசனத்திலிருப்பதோர் சிங்கமென விளங்கினான். பாம்பின் படத்திற்றங்குன்ற பூமிக்கு நாயகனும், நாவிற் பல கலைகள் உறையப் பெற்றவனுமாகிய விசயதரனது மணிக ளழுத்திய பணிகள் பூண்ட புயத்தே சிங்கவாகனி வந்து இலக்குமியோடு அமர்ந்தாள். கற்பகதரு நாணும்படி பொன்னைப் பிறர்க்குத் தானமாகப் பொழிகின்றன ஆகிய தன் புயத்தைவிட்டு நீங்காத வீரமாதும் திருமாதும் போலப் பெரும் புண்ணியஞ் செய்த தியாகவல்லியும் ஏழிசை வல்லபியும் ஆகிய தேவியர் சேவித்திருந்தனர். நாடகாதி நிருத்தம் அனைத்தும் 2நால் வகைப் பெரும்பண் என்று சொல்லப்பட்ட ஆடல் பாடல்களிற் சிறந்த அரம்பயரை ஒத்த பெண்களநேகர் பக்கத்தே நின்றனர். நின்றேத்துவாரும், இருந்தேத்துவாரும், தூயமங்கலம் பாடுவாரும் ‘நின்பாதத்தில் வீழ்ந்து வணங்கிய அரசருக்கெல்லாம் பசும் பொன் முடி’ எனப் புகழ்ந்து பாடினர். வீணை, யாழ், குழல், மத்தளம் முதலியன வல்லோர், “இவை வேறு வேறு நூறு விதம்படக் காணலாம் வகை யாம் கற்றறிந்துள்ளேம் இவற்றை நீ கண் டருளல்வேண்டு” மெனக் கூறிப் பாதங்களிற் பணிந்து நின்றனர். தாளமும் இசையும் பிழையா வகை தான் வகுத்த பாடல்களைத் தன்னெதிரிற் பாடிச் சின்னமும் களிறும் பெறும்பாணரின் கல்வியிற் பிழைகண்டு 1கேட்டிருந் தான். அழகிய யானையைவிட்டு இழிந்துவந்து அடியில் வீழ்ந்த மன்னர் முதுகுகாட்டிச் செல்லாது தமது பொற்குடை சாமரை என்றிவற்றைத் தங் கரத்தாற் பணிமாறினர். பாண்டியராதி அரசபத்தினிகளைச் சேடியராக வுடைய தன் தேவிமாருடன் விசயதரன் இந்திரனைப்போற் கொலுவிருந் தான். குறுநில மன்னரும் நெடுநில வேந்தரும் வந்து வணங்கும் வாயி லிடத்து வண்டை மன்னனாகிய தொண்டைமான் முதலிய மந்திரி பாரகர் சூழ்ந்து நின்றனர். அத்தருணத்துத் 3திருமந்திர ஓலை நாயகன் அரசன் முன்போந்து வணங்கி, “வேந்தர்பெரும! வேந்தர், தம் திறையைச் செலுத்து வதற்கு வாயிற்புறத்தே நிற்கின்றனர்” எனக் கூறி நின்று, நோக்கினால் அவன் குறிப்பறிந்து அவர்களை உள்ளே புகுத்தினான். “தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே.” “கங்கர் கடாரர் பவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே.” “சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் சீயண ரையணரே கொங்கணர் கொங்கர் குலிங்க ரவந்தியர் குச்சரர் கச்சியரே.” “வத்தவா மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்திரர் குத்தர் குடக்கர் பிடக்கர் குருக்கர் துருக்கர்களே.” என்னும் பல தேசத்து அரசர்களெல்லாம், “செயதுங்கனே! நீ எமக்கு அருள் செய்த நாடு நகர்களின் பொருட்டாக இடப்பணித்த திறைகளை எல்லாம் சொன்னபடி தவறாது கொணர்ந்தனம்: ஏற்றருள்க” எனப் புகன்று கூப்பிய கரங்களோடு பாதத்தில் வீழ்ந்து வணங்கினர்; வணங்கி, “ஆரமிவை யிவை பொற்கல மானை யிவையிவை யொட்டக மாடலயமிவை மற்றிவையாதி முடியொடு பெட்டக மீரமுடையன நித்திலமேறு நவமணி கட்டிய வேகவடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே.” “இவையு மிவையும் மணித்திரளினைய வினைய தனக்குவை இருளும் வெயிலு மெறித்திட விலகுமிவை மகரக்குழை யுவையு முவையு மிலக்கணமுடைய பிடியுவை 1புட்பக முயர்செய் கொடியிவை மற்றிவை யுரிமை யரிவையர் பட்டமே.” எனக் கூறித் தாங்கொணர்ந்த கப்பங்களை எல்லாம் கொண்டு முன் நின்றனர். திறை செலுத்திய அரசருட் சிலர், “இந்நூறு கரிகளும் ஏறிச்செலற்கு வந்தன. இவ்வியானைகளுக்கு நிகராக வேறு அரசர் ஓர் ஆனை தருவ ரெனில் எமது நாட்டை அவருக் களிக்க இசைவோம்” எனத் தனித்தனி தம் வாழ்வு கருதிக் கூறி நின்றனர். திறைசெலுத்திப் பணிந்த அரசரின் சிரங்கள் மீது விசயதரன் தன் இருபாதங்களையும் வைத்து “அஞ்சேல்” என்று அபய மளித்தான்; அளித்து, “இங்கு திறைகொடுத்து நின்றவர்களொழிய திறை கொடுக்கத் தவறியவர்களுமுண்டோ?” எனத் திருமந்திர ஓலை நாயகனை வினாவலும், அவன் “வேத்தர் பெரும! தத்தந் திறைகளுடன் வந்து ஏனை வேந்தரெல்லாம் தாள் நிழல் வணங்கினராயினும், கலிங்க அரசனாகிய அனந்த வன்மன் என்பவன் மட்டும் உரிய திறையோடும் இருமுறையாக வந்திலன்” என்றான். அதனைக் கேட்டதும் விசயதரன் முகத்திற் புன்முறு வல் அரும்பியதே யன்றிச் சிறிதும் கோபக் குறிதோன்றியதில்லை. வந்து நின்ற ஏனை மன்னர்கள், “இனி நிகழ்வது யாதோ?” என உடல் குலைந்து நடுநடுங்கலாயினர். அப்போது, சோழன், தன் படைத்தலைவரை நோக்கிக் “கலிங்கர்பதி படை வலியற்றதாயினும் அவன் குன்றரண் பெருவலிமை கொண்டது. அதனால் நம் யானைப் படையுடன் நீவீர் சென்று கலிங்கனைப் பிடித்து வருதிர்” என்று கட்டளை யிட்டனன். இவ்வாறு அரசன் மொழிதலும் வேதங்களைக் கூறிய பிரமாவின் மரபில் வந்த பல்லவ குலதிலகனும் வண்டை நகர்க்கரசனும், விசயதரனது மதிமந்திரியும், தலைமைச் சேனாபதி யுமாகிய கருணாகரத்தொண்டைமான் எழுந்தடி வணங்கி, “வேந்தர் வேந்தே! யானே படை எடுத்துச் சென்று ஏழு கலிங்கங்களையும் அழித்து வருவேன்” என்று கூறினான். இங்ஙனம் கூறி விரைந்து பகை அழிக்கும் விருப்புடன் அவன் அரசன்பால் விடைகேட்க அவனும் அங்ஙனமே செய்க என விடை கொடுத்தருளினான். படையெழுச்சி கடலைக் கலக்குவதோ, மலையை இடிப்பதோ, கடிய விடமும் பொறியுமுடைய ஆதிசேடனின் பிடரியை முறிப்பதோ, இப்படையின் நினைவு எனும்படி நால்வகைப் படையும் பிரளயம் போற்றிரண்டன. வளை, முரசு, வயிர் முதலிய பல்லியங்கள் ஆர்த்தன; சாமரைகள் இரட்டின; குடைகள் நிரைத்தன; மயிற்பீலிக்குடைகள் நெருங்கின; கொடிகள் பரந்தன. இவை ஒருமித்துச்சென்று நிழல் செய்தலின் பூமி குளிர்ந்த நாற்சந்தியை ஒத்தது. கொடி, குடை முதலியன நிரைத்தலின் சூரியன் மறைந்து பூமியில் இருள் கவிந்தது. எண்ணில்லாத பரிசைகள் தழலெழ மின்னுதலாலும் அரிய பொன்னாபரணங்கள் கனல்போல் விளங்குதலாலும், விளங்குகின்ற படைக் கலங்கள் ஒளிவிடுதலாலும், அவ்விருள் ஓடி மறைந்தது; ஒளி பரந்தது. “அகில வெற்புமின்றானை யானவோ வடைய மாருதம் புரவியானவோ முகில னைத்துமத் தேர்க ளானவோ மூரிவேலை போர் வீர ரானவோ.” “பார்சி றுத்தலிற் படை பெருத்ததோ படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிட நெடுவி சும்பலா லிடமு மில்லையே.” என மண்ணுள்ளோரும் விண்ணுள்ளோரும் எடுத்து மொழிந்து அதி சயித்து மனம் நடுக்குற வான்மறைத்த நாற்றிசைகள் எங்கும் நால்வகைப் படைகளும் திரண்டு பரந்து நின்றன. கடல்களைச் சொரியும் மலையுள வெனும்படி யானைகள் 1சுவடுகளினின்றும் மதம் பொழிந்தன; நெருப்பை உமிழும் முகில்கள் உளவென விழிகளிற் சினக்கனல் சிந்தின; யானை களோடு பரிகளின் உடலையும் பிளக்கும் சில பிறைகள் உண்டெனும்படி உயர்ந்த மருப்போடு விளங்கின. உலகை நிலைகுலைக்கும்படி முழங்கும் வடவை உண்டென அவை நெருங்கி முழங்கின. குதிரைகள் எதிர்த்தவர் முடியினை இடறுவ; முடியின் முத்தினைப் புகழின் விளைவென நிலத்திற் சிந்துவ; நிலத்திலெழும் பூதூளி அற முகிலை மிதிப்பன; முகில்விடுகின்ற துளியோடு, ஒலிக்கின்ற கடற்றிரையென விரை வொடு கடல் சூழ்ந்த நிலத்தை வலமிடமாக வருவன; கடலிடத்து விழும் இடியென அடியெடுத்து வைக்கும் கதியின. இவ்வாறான குதிரைப் படைகள் வேகத்தோடு சென்றன. இரதங்கள் பெரிய நிலத்தின் திடர்களை உடைக்கும் உருளின; இரு புறத்துஞ் சிறகுடையன; போர்முனையில் எதிரே பறந்து செல்லும் செலவின; நுகத்திற் பூட்டிய குதிரைகள் வேகத்தோடு முன்னே செல்லும் செலவின. அது தமக்கு அவமான மென்னும் 1ஒரு நினைப்பின. 2கொடிஞ்சித் தாமரை மலர்போல் மலராதிருத்தற்குப் போர்க்களத்துள்ள இரத்தத்தை வாரி இறைப்பன; உலகை அளப்பன; இவ்வியல்பினவாகிய தேர்கள் பரந்து சென்றன. காலாட்கள் அளவிடவரிய வெற்றியும் உரிமையும் இவையெனப் பிறர் அறிய அவயவத்திலெழுதிய அறிகுறி அவை என, உடம்பில் பல ஆயுதங்கள் பட்ட நிரைத்த தழும்புகளுடையர். தேவருலகோடு இவ்வுலகம் கிடைப்பதாயினும் பின் அடி எடுத்து வையாத கோட்பாட்டினர்; உடல் எமக்கொரு சுமை என்னும் சினத்தினர். உயிரை விற்றுப் புகழ்கொள்ள விழைபவர். இவ்வாறு ஒருவரை ஒத்த பல வீரர் நெருங்கிச் சென்றனர். கண்ணிற் கோபத்தீ எழ விழித்த விருதர்கள் வெகுண்டு வெடிசிரிப்புச் சிரித்து அதட்டியபொழுது இமயவர் திடுக்கிட்டனர்; திக்கியானைகள் திடுக்கிட்டன. உகமுடிவில் எழுந்த கடலின் பெருக்கு இது எனும்படியான பரிகள் முகிலின் முழக்கத்திலும் மேலாகக் கனைத்து முகத்தினின்றும் சிந்தும் நுரை, கங்காநதியிடத்து எழும் நுரைபோன்றது. கட்டுத்தறியைக் கோபிக்கின்ற சினமும், பெரிய கன்னத்தே சொரிகின்ற மதமும், நிலத்திற் பொறுத்த அடியுமுடையவாய் நிலத்தைச் சீய்த்து வருகின்ற முகில் போன்ற யானைகளின் முழக்கில் அலை எழுகின்ற கடல் நீரைக் குடித்த முகில்களும் பிளந்தன. கடிய விசையுடைய உருள் தொடுத்து உலகை ஒரு கணத்தில் வலம்வரும் அளவிடற்கரிய தேர்களின் மீது எடுத்த கொடிகள் திக்கு யானைகளின் மதமீதிருக்கும் வண்டுகளை எழுப்பின. இவ்வாறு சேனைகள் எழுந்தன; எழுதலும் பூமியின் முதுகு நெளிந்தது; காடுகள் விழுந்தன; நதிகள் வெறுந்தரையாகச் சுவறி உலர்ந்தன; நான்கு திசைகளும் அதிர்ந்தன; ஏழு கடல்களும் அடங்கின; பெரிய மலைகள் பொடிந்தன. பூதூளி எழுந்தது; நிலத்தே எழும் தூளியைப் பருகி வானின் வயிறு நிறைந்தது; வலமாக எழுகின்ற முகில் நிரைகள் நீர்சுவறி வறந்தன; விளங்குகின்ற நெற்றிப்பட்ட மணிந்த மலைகள் சொரியும் மத வெள்ளத்தினாலும், குதிரைவாயினின்று சிந்தும் நுரையினாலும் பூதூளி அடங்கிற்று; ஏகும் திசையை உதயத்தே அறிந்து, எழுகின்ற பூதூளி அடங் கும்படி நடந்து, மீளச் சூரியன் அத்தகிரியில் மறையும்போது செல்லுதல் ஒழிந்து, எப்பொழுதுஞ் சென்றனர். இவ்வாறு செல்லுதற்குத் தண்ணிய மலர் மாலை யணிந்த உபசேனாபதிகளோடு, அபயனது படைகள் எல்லாவற் றுக்கும் கண்போன்றவனும், சோழன் சக்கரமாகியவனுமாகிய கருணாகரன் யானை இவர்ந்தான். தொண்டையர்க்கரசனும் காமதேனுவின் வழியில் வந்த பரிசுத்தமான வெள்ளிய இடபக்கொடி உடையவனும், வண்டையர்க் கரசனும், பல்லவர்க்கரசனுமாகிய கருணாகரத் தொண்டைமான் களிற்றின் மீது ஏறுதலும், வெற்றிகொண்டு அரசர் யானையைக் கவர வாணர்கோ வரையன் ஒரு யானை மீதேறினான் பகைவர் தூசிப்படையை வாளால் வென்று முடிகொண்டவனாகிய முடிகொண்ட சோழனும் ஒரு முகபாடம் போர்த்த களிறூர்ந்தான். எவ்வரசரும் புறங்கொடுத்தோடி மடிகவென்று வரும், வருத்துகின்ற பல்லவர்கோனும் சோழனும் ஒளிவிட்டு விளங்கும் நெற்றிப்பட்ட மணிந்த களிற்றின்மீது ஏறி இரை வேட்ட பெரும்புலிபோல் இகல்மேற் சென்றனர். அப்பெரும்படை பாலாறு, குசைத்தலை, பொன்முகரி, பழைய ஆறு படர்ந்து எழுகின்ற கொல்லி ஆறு, நான்கு ஆறுகள் சேர்ந்து அகன்ற பெண்ணை யாறு முதலியவற்றைக் கடந்தது; வயலாறு புகுந்து மணிபோன்ற நீர்பாயும் மண்ணாறு. வளம்பொருந்திய குன்றியாறு, பரந்து நிறைந்துவரும் பேராறு ஆகியவற்றைக் கடந்து, அவை பின்னே கழியக் கோதாவரியோடு குளிர்ந்த நீர் ஓடும் வளம்பொருந்திய கம்பை, சந்தநதி, கோதமை என்னும் நதிகளைத் தாண்டி, உகமுடிவிற் பெருகிவருகின்ற கடலையொத்துக் கலிங்க நாட்டினுட் புகுந்தது. வீரர், தங்கள் வரவை அறிவிப்பவர்போல நாடெங்குந் தீக்கொளுவிச் சூறையாடினர். கங்காநதி ஒரு புறமாகக் கிடக்கக் கடல்போற் படைவந்தது; “படைவந்தால் எங்கே புகுவது? அரண் இனி எங்கே? இனி எமது விதியாதோ? என்று குடிகள் கலங்கின, மதில்கள் இடிகின்றன; வீடுகள் எரிகின்றன; பொழில்களெல்லாம் புகை எழுகின்றது; மடிகின்றேம்; பகை என்று படைகள் வளைகின்றன” என்று துடித்தன. துடித்து அப்படைகளின் கொடுமைக்கு ஆற்றாத மக்கள் அரையிற் றுகிலுரியும்படி கலிங்கவேந்தன் பால் ஓடிச்சென்று, அவன் பாதங்களில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து உரை குழறவும், உடல்பதறவும், “வேந்தே ! உலகைத் தனி ஆழி செலுத்துகின்ற அபயனுக்கு இடுதிறையைச் சொன்னபடி கொடாது தவறியதே இப்படைகள் வருதற்குக் காரணம். இவை அபயன் ஏவிய படைகளாகும். யாம் கூறியவற்றை முன்னமே நினைந்தாயில்லை. இப்போது நமக்கு இவ்வகைத் துன்பம் நேர்ந்தது” என ஒருவர்போற் பலரும் கூறி நின்றனர். “உலகுக் கொருமுத லபயற் கிடுதிறை யுரைதப் பியதெம தரசேயெம் பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே.” “உரையிற் குழறியு முடலிற் பதறியு மொருவர்க் கொருவர்முன் முறையிட்டே யரையிற் றுகில்விழ வடையச் சனபதி யடியிற் புகவிழு பொழுதத்தே.” பயம் என்பதை அறியாத வடகலிங்கர் வேந்தனான அனந்த பன்மன் இதனைச் செவிக்கொள்ளுதலும், வெவ்விய தறுகண் வெகுளியினால் நெட்டுயிர்த்துக் கைகொட்டி வியர்த்து எரிபறக்க நோக்கி, “வண்டுகளுக்கும் மதத்தை உண்ணக் கொடுக்கும் திக்கு யானைகளைப்போன்று அளிக்கின்ற கவிந்த மலர்க்கரமுடைய அபயற்கன்றி அவன் தண்டினுக்கும் யான் எளி யனோ?” எனக் கூறி வெகுண்டு விசாலித்த புயங்கள் குலுங்க நகைத்தான். நகைத்துக் காடு, மலை, கடல் ஆகிய அரண்களைக் கலிங்கர்நாடு சூழ்ந்து கிடக்கின்றதென்பதை அறியாது அச்சோழன் தண்டு வந்தது போலும்” என மொழிந்தான்; மொழிதலும் அவன் மந்திரிகளுள் ஒருவ னாகிய எங்கராயன் எழுந்து, “அரசே! அரசர் கோபிப்பராயினும் அடியவர் அவருக்குறுதி கூறாதிரார். ஏனை வேந்தரை வெல்லச் சயதரன் தானை அல்லது அவன் வருதலும் வேண்டுமோ? அவன் ஏவிய தண்டின்முன் பாண்டியர் ஐவர் கெட்ட கேட்டினை நீ கேட்டிலைபோலும்; பொருதற்குப் படை வருதலும் புறங்கொடுத்தோடிய சேரரின் செய்தியைக் கேட்டிலையோ; கடலிற் சென்று விழிஞத்தை அழித்துச் சாலையைக் கொண்டதும் தண்டுகொண்டன்றோ; சோழன் படை பகைத்து எழுந்து வந்து இடிபட்டதும் இம்முறையன்றோ; அவன் பகையோடு பொர எழுந்த சளுக்கியர் படை அளத்திற்பட்ட பாட்டை அறிந்திலையோ; அவனது தண்டத் தலைவர் நவிலையைத் தாக்கி அவர்கள் ஆயிரம் யானைகளைக் கொண்டனரன்றோ; இன்னும் வேந்தர் பலரைப் பலவிடங்களிலும் அபயன் வென்றது தான் சென்றன்றித் தன் தண்டைக் கொண்டன்றோ? அவனது சக்கரமாகிய கருணாகரனைத் தலை மையாகக் கொண்டு, அவன் சேனை நம்மைத் தாக்க வருகின்றது, இப்போது நீ என்னைச் சினக்கக்கூடுமாயினும், அவன் சேனைமுன் நாளை நிற்கும் போது யான் கூறியதன் உண்மையை நீ அறிவாய்,” எனக் கூறி முடித்தான். கலிங்க வேந்தன் அவ்வார்த்தைகளைக் கேட்கப்பெறாது தன்னமைச்சனை நோக்கி, “எனக்கு எதிர்வார்த்தை கூற இமையோரும் நடுங்குவர். குன்றனைய எனது புயங்கள் நெடுநாட்களாகப் போர் பெறாது மெலிந்திருப்பதை நீ கண்டிலையோ? நீ உறுதி கூறுவதிற் பிழைத்தாய்; எனக்கு உறுதி கூறுவது நின்பெருமை கெடவோ? சிறிய கண்ணுடைய சிங்கக் குட்டியை எதிர்த்தல் எளிதென்று நினைத்து யானை அதனைக் கிட்டி எதிர்க்க வருமோ? எனது தோள்வலி வாள்வலி ஆகியவற்றைச் சிறிது மறியாதார்போல அறியாமை யினால் இவ்வாறுரைத்தாய். நினைப்பளவில் அப்படையை வெல்வ தரிதோ? ” எனக்கூறி, “யானை, குதிரை, தேர், காலாள் முதலிய எனது நாற் படைகளும் பாடிவீடு கொண்டிருக்கும் சோழனது படை எதிரிற் சென்று அமர் தொடங்குக,” என ஆணை கொடுத்தான். ‘போர் யானைகளையும், குதிரைகளையும், எண்ணில்லாத தேர்களை யும் கடாவிக் காலாட்களும் செருக்களத்தே செல்க; இனி நமக்குப் போர் கிடைத்தது,’ என்று கலிங்கத்தே பேரொலி எழுந்தது. ஏழு கலிங்கத்தும் எழுந்த பெரிய ஆரவாரம், முழங்குகின்ற கடலேழும் ஒரே காலத்துப் பொங்கி எழுந்தது போன்றது. மதம் பாயும் துளைகளையுடைய மத மலைகள் கடல் நீருண்ட மேகம் போற் பிளிறின. வளைந்த முகத்தின் நுரை சிந்தப் பாய்ந்து வருகின்ற துரகங்கள் கடலில் மறித்தடிக்கும் திரைகள் போன்றன.பரிகள் விசையோடு இழுத்துச் செல்லும் தேர்கள் அத் திரைகள் மீது ஓடும் தோணிகள் போன்றன. ஒலிக்கும் வீரக் கழல் கட்டிய வயவரின் முறுகிய கோப அனல் அக்கடலிடத்தே மடுத்தெரியும் ஊழித் தீ போன்றது. புகழ்விரும்பித் தம் உயிரைத் திரணமென மதிக்கும் அவ்வீரர், கடலிடத்தே உழுது திரியும் சுறாமீன்கள் போன்றனர். அரசர் இடையிடையே பிடிக்கின்ற குடைகளும், இரட்டுகின்ற கவரியும் திரையின் தலையில் தோன்றும் நுரைபோன்றன. நெருங்கிப் பிறழுங் கொடிகள் கடலிடத்தே விளையாடும் கயல்மீன்கள் போன்றன. வேற்படைகளி னலகினோடு அலகு பட்டுக் கலகல என எழும் ஒலி, அறைகின்ற திரைகளின் ஒலிபோன்றது. இங்ஙனம், உலகைப் பருகும் ஒரு கடல் எனும்படி கலிங்கர் படை எழுந்தது. ஒருவர் உடல் ஒருவர் உடலிற் புகும்படி வீரர் நெருங்கினர். காண்போர் அஞ்சும்படி நெருங்கிச் செல்லும் படையின் நடுவில் ஒரு விரலிட வெளியரிது. இடை வெளியின்றி நெருங்கிச் சென்ற கலிங்கர் படை அணிவகுத்துக் கருணா கரனது படையினெதிரே புலி நிரைகளைப் போல் வலிமையோடு நிரைத்து நின்றன; நின்று படைக்கலங்களை எடும் எடும் என்று ஆர்த்தன. போர் எடுமெடு மெடுமென வெடுத்ததோ ரிகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை யிளையவர் தெழித்ததோர் தெழியுல குகள் செவி டெடுக்கவே. எறிகட லொடுகடல் கிடைத்தபோ லிருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுநிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே யினமுகி லொடுமுகி லெதிர்த்தபோ லிரதமு மிரதமு மெதிர்க்கவே. பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே யரியினொ டரியின மடர்ப்பபோ லரசரு மரசரு மடர்க்கவே. விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை பிறக்கவே வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை சிறக்கவே. குருதியி னதிவெளி பரக்கவே குடர்நிரை நுரையென மிதக்கவே கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. படை எடும் எடும் என எழுந்த ஓசை கடலொலியைக் கடந்தது. பரி களை விடும் விடும், யானைகளை விடும் விடும் என இருதிறப் படைகளும் கூவுமோசை மிகுந்தது. வரிந்து கட்டிய வில்லின் நாணை அச்சந்தரும்படி தெறிக்கு மோசையால் திசாமுகங்கள் வெடித்தன. இருதிற வீரர்களும் அதட்டும் அதட்டுகள் உலகைச் செவிடுபடுத்தின. திரை எறிகின்ற கடலெதிரிற் கடல் கிடந்தது போல் இரு படைகளும் கிடந்தன. திரையோடு திரை எதிர்த்ததுபோல் பரியொடு பரி பொருதின. மலையோடு மலை மலைவதுபோல் மத யானைகள் மலைந்தன. முகிற் கூட்டத்தோடு முகிற் கூட்டம் எதிர்ப்பதுபோல் இரதமு மிரதமு மெதிர்த்தன. வலிய புலியொடு புலி எதிர்த்தல் போல் வீரரொடு வீரர் எதிர்த்தனர். சிங்கத்தோடு சிங்கம் எதிர்த்தல்போல் அரசருமரு மெதிர்த்தனர். இருபடை வீரரின் கண்களிலும் தீப்பொறி பறந்தன. அத்தீயினின்றும் மின்னலொளி பிறந்தது. வளைந்த சிலைகள் இடியென இடித்தன. கூர்ங்கணைகள் நீண்ட மழையெனப் பொழிந்தன. இரத்த ஆறுகள் பெருகின. குடர் நிரைகள் நுரையென மிதந்தன; அவ்வாற்றி னிருமருங்கும் கரைபோல் துணியுண்ட யானைப்பிணங்கள் அடுக்கிக் கிடந்தன. இவை மலைகளெனும்படி மருப்பொடு மருப்பு முட்டி எதிர்த்துப் பொரும் களிறுகளின் கொம்பிடையே நெருப்பொடு பொறிகள் எழுந்தன. அப்பொறிகள் நிழற்செய்யும் கொடிகளைக் கதுவின. அழற் கதுவுதலின் விரைவிலழிந்த கொடிச் சீலைகள், நினைப்பவர் நினைப்பதன்முன் நாட்டிய புதுக்கொடிபோல் புகைக்கொடிகளை எடுத்தன. மதம் பாயும் சுவடுகளுள் விட்டு உழுது கறுப்பேறிய யானைகளின் மருப்புகள், இடத்தும் வலத்தும் உள்ள கைகள் போன்றன. கரத்தோடு கரம் எதிர்தெற்றி வலிக்கும் யானை களின் கைகள் மருப்புடைய மலைகளிரண்டைப் பிணைக்க மூங்கிலை முறுக்கித் திரித்த கயிற்றை ஒத்தன. களத்தே பாய்ந்து செல்கின்ற குதிரை களின் முகத்திற், கடிய காற்றோடு கூடி உகமுடிவில் சுடர்விட்டெழுந்து உலகை உண்ணும் வடவைக் கனலை ஒத்த தீ எழுந்தது. சில வீரர் களத்தே வருகின்ற குதிரைகளை எதிராது, யானைகளின் மருப்புகளுக் கெதிரே மார்பைக் கொடுத்து நின்றனர். யானைகளின் மருப்பை எறிபடைபோன்று மார்பில் ஏற்ற வீரர் மார்பின் தழும்புகள், சயமாது செய்த அடையாளங்கள் போன்றன. சில வீரர் “இவை சயமாது மார்பில் அணியத் தகுந்த முத்துக்கள்” என்று கூறி அவை உதிரும்படி யானையின் மத்தகங்களை வாளால் வெட்டினர். களத்து யானைப் பிணங்கள் நிரைத்துக்கிடந்தன; படைகள் செருக்களத்தே அலை என நிரை நிரையே நின்றன. ஒப்பில்லாத விற்படை அக்கினிச்சட்டி போன்று எரியும் நெருப்புடைமையின்1, எரி கின்ற மூங்கில் வனத்தை ஒத்தது. தழல்பட்ட மூங்கில் வனம் எப்படியோ அப்படிச் சடசட என்னும் ஓசை எழவும், அம்புகள் தழலோடு புகையைக் கக்கவும், சிலர் வில்லிடத்து ஓயாது அம்பைத் தொடுத்து நாணை வலித்து நின்றனர்; வில்லிடத்து அம்பு தொடுத்துவிடப் புகுமிடத்து எதிர்த்தவரை வாளால் வெட்டினர்; வெட்ட, உடல்கள் இரு துண்டாய் விழுந்தன; அவற்றுள் ஒரு துணி குறிவைத்த இலக்கை அழிக்க, விடுபட்ட பிறைமுகக்கணை “அரிது அரிது” என்று கூறி எல்லோரும் அதிசயிக்கும்படி பரிவீரரின் முடி களையும் அடிகளையும் கொய்து வீழ்த்திற்று; அடியும் முடியுமற்று விழுவோர் தமது அம்பை மார்போடணைத்தனர். நாணேற்றிய அச்சரங்கள் விடுபட்டுப் பல வில் நாண்களை அறுத்தன. விடுசரங்களால் நாண் துணிவுற்றவர், விற்களை முறித்தெறிபவர்போல் அவற்றை எறிந்து எதிர்த்து வருகின்ற கழல் கட்டிய வீரரின் உடல் இரு வகிர்படும்படி வாளால் வெட்டி னர். பகைவர் ஆயுதங்கள் தம்மேற்படாது எடுத்த மந்திர வேலிபோலக் கலிங்கர் பரிசைகளை நட்டு வைத்தனர். நட்ட பரிசைகள் மீது வேல்கள் பாய்ந்து திறந்த வாய்கள், வட்ட நிணமதிலுக்கு வைத்த துவாரங்கள் போன்றன. கலக்கமில்லாத வீரரின் வாள்கள் எதிர்த்த சூரரின் கையிடத்துள்ள உலக்கையின் உச்சியிற் பாய்ந்து தைத்தபோது உழுங் கலப்பை போன்றன. சுருண்டு விழும் மதயானையின் கரம், தன்மீது வலிய சரம் தைத்தபோது சக்கரப் படையை ஒத்தது. கொடிய யானையின் மத்தகத்தினின்றும் சொரி யும் முத்துகள், வீரமாதுக்குச் சொரியும் மங்கலப் பொரிபோன்றன. பரிசை யுடன் துஞ்சிக்கிடக்கும் வீரர் தேர்ச்சில்லோடு கிடக்கும் மலைபோன்றனர். வீரர் ஏவிய சக்கரப் படைகள், மறித்தெறிந்த தண்டுகளுள் நுழைந்து கையிடத்தேந்திய கூர் மழுக்கள் போன்றன. பிணங்களோடு ஆடும் பேய்கள், நிருத்தமாட ஆட்டுவிக்கும் நிருத்தகாரரை ஒத்தன. ஒட்டகங்கள், யானைகளையும் குதிரைகளையும் வாளினால் வீசி எறிந்து செய்யும் போரை விட்டு நீங்க மனமின்றித் திரும்புவபோல் மீண்டன. விளங்கும் இரத்தக் கடலிற் பிளிறி விழும் யானைக் கூட்டங்கள், ஒலியுடைய கடல் நீருட் படிந்த மேகத்தை ஒத்தன. யானையின் கைகளை வாளினால் வெட்டித் தோளிலிட்ட வீரர் துருத்தியைத் தோளிலிட்டு நீர்விடும் துருத்தியாளரை ஒத்தனர். பகைவர் வில்லிடத்துச் சரந்தொடுத்து விடுதலும், அம்பில்லாத சில வீரர் மார்பிற் தைத்த அம்பைப் பிடுங்கிச் சாபத்திற்றொடுத் தெய்தனர். விருதர்கள் குதிரையின் மார்பிற் சவளப் படையை அழுத்தி உயர்த்திய தோற்றம், சயமாதுக்குக் களத்தே எடுத்த கொடியை ஒத்தது. இரு தொடை களுமற்றுக் கிடக்கும் வயவர், எதிரே வருகின்ற யானையின் வலி கெடும்படி ஒரு தொடையை விட்டெறிந்து ஒரு தொடையை இனி எறிதற்கு இட்டு வைத்தனர். ஒத்த பலமுடைய இரு வீரர், ஒருவர் மார்பில் ஒருவர் உடை வாளை ஏற்றி ஒருவர் போல்வீழ்தலின் பெரிய ஆர்ப்பெழுந்தது. பொரும் வீரர் சிலர், தம் மார்பைக் குத்தக் கவிழ்ந்து வருகின்ற யானைகள் மீது அடிவைத்தேறி மீதிருக்கும் சூரரின் தலைகளை அரிந்தனர்; அவை விழும்போது “அறை” என்று அக்களிற்றினுக்குச் சத்தமிட்டன. சிலர், தமது மார்பைக் குத்தக் கவிழ்கின்ற போர் யானையின் மத்தகத்தை அடித்தனர். பின் அது தங்களிறென்றறிந்து நாணிப் படைஞர் இகழ்வாரென அஞ்சி, அதனைக் கொல்லாது விடுகிலர். இவ்வாறு இருதிறப்படைகளும் விடாதும் இளைக்காதும் அதிவீரச் செயல்களைக் காட்டி ஒத்த பலத்தொடு போர் செய்தலும் போரை முடித்து வாகைசூட நினைந்து வண்டையர் அரசனும், அரசர்க்குத் தலைவனும் விசயதரனது மந்திரியுமாகிய உலகம் புகழும் கருணாகரன் ஒரு கையும் இரண்டு கொம்புமுடைய மதமலை ஒன்று உகைத்துப் போர்முகத்துள் நுழைந்தான்; புகுதலும், அவன் படைகள் உற்சாகம் மிகுந்து ஒருமுகமாக முன் சென்றன. தேவர்களும் அப்போரைக் காண முந்தினர்; கலிங்கரின் மதயானைகள் துணிபட்டு விழுந்தன; நிரைத்த குதிரைகளோடு தேர்கள் ஒடிந்தன; வீரர் தலைகள் குவிந்து மலைபோல் வானில் வளர்ந்தன; இரத்த வெள்ளம், ஒலிக்கின்ற கடல்போற் பாய்ந்தது; குடர்கள் இரத்த வெள்ளத்தின்மீது பரந்து நீந்தின. குதிரை செலுத்தும் கோல்களும் சேணங்களும் சிதறிக்கிடந்தன. திசைகளோடு அட்டகிரிகளும் அதிர்ந்தன. எங்கும் திமிலகுமிலமாயிற்று. புரசையிலிருந்து ஆயிரம் மத யானைகளைக் கொணர்ந்து பொருவோம் என்று ஆணை கூறிய ஏழு கலிங்க அரசன் வீரம் குன்றியது. அவன் வீரர் அமரில் எதிர் நிற்கமாட்டாது ஓடி ஒதுங்கினர்; அலதிகுலதியா யச்சங்கொண்டு, “இப்படை என்ன மாயையோ மறலியோ ஊழியின் கடையோ” என்றலறி அறிந்த மலைக் குகைகளிற் பதுங்கவும், அரிய பிலங்களிடை மறையவும், அடவியிற் கரப்பவும் சிதைந்தோடினர். சிலர் கும்பிட்டு நின்றனர். சிலர் கடலிற் குதித் தொளித்தனர். சிலர் உடலிற் கரியைப் பூசி மறைந்தனர். சிலர் வழிதேடிப் பிலங்களிற் புகுந்தனர். இவ்வாறு ஒருவர் போனவழி ஒருவர் போகாது கரந்தனர். இருவர் ஒருவழி போகாது ஒருவர் ஒருவராக ஓட முந்தினர். ஓடுமிடத்துத் தமது நிழலைக்கண்டு, தம்மைத் துரத்திச் செல்லும் சோழ வீரரென்று அஞ்சினர். சிலர் நாம் அருகர் அருகர் எனக் கூறி அபயம் அபயம் என்று நடுங்கினர். முகில் அதிர்வது போல் அதிர்ந்து எழும் சோழனது யானைப் படையைப் போன்றிருண்ட குகைகளில் நுழைந்தோர், போரிடத்து நமது முதுகுகள் செய்த உபகாரம் இது எனக்கூறினர். இரண்டு குலத்துக்கும் நீங்காத சிறப்பாக விளங்கும் விசயதரன் எளிதில் வெற்றி மாலை புனைய, ஏழு கலிங்கப் படையும் ஒருமுகமாய்முறிந்து அபயமிட்டது. ஏழு கலிங்கத்தையும் கருணாகரன் அழித்த நாள் ஏழு கலிங்கர் ஓர் ஆடையை உடுத்தனர்1. இவ்வாறு கலிங்கர் ஓடப் படைவீரரின் கைப்பட்ட யானை குதிரை முதலியவற்றைக் கணித்துரைப்பவர் யார்? “புண்டொறும் குருதி பாயப் பொழிதரு கடமும் பாய வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறநேகம்” “ஒட்டறப் பட்டபோரி லூர்பவர் தம்மை வீசிக் கட்டறுத் தவர்போ னின்று கட்டுண்ட களிறநேகம்” “வரைசில புலிகளோடும் வந்துகட் டுண்ட வேபோ லரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிறநேகம்” கதியுடைய குதிரையும், தேரும், நவநிதியும், மகளிரும் என்று அவர்கள் கைக்கொண்டவற்றை அளவிடல் அரிது. அவற்றை எல்லாம் கவர்ந்தபின் கருணாகரன் தன் படை வீரரையும் ஒற்றரையும் நோக்கி, “ஏழு கலிங்கரது அரசனையும் பற்றிக்கொண்டு பெயர்தற்கு அவன் இருக்கு மிடத்தை அறிந்து வருமின்” எனக் கூறினான். கூறுதலும் ஒலிக்கும் கடல் போன்ற வீரரும் ஒற்றரும் கடிது சென்று மலைகளிலும் வனங்களிலும் முனி வர்கள் இருக்கும் பன்னசாலைகளிலும் தடவிப் பார்த்துத் திரும்பிவந்து, “அவனது அடிச்சுவடும் பெற்றிலோ” மெனக் கூறினர். பின் சில ஒற்றர்கள் வந்து, “அவன் இருக்குமிடத்தை அறிந்தேம். ஒரு மலையிடத்தைச் சார்ந்து கொடிய சில வீரரைக் காவலாகக் கொண்டு உறைகின்றான். அவ்விடத்தை அடைதல் அரிது” என விளம்பினர். உடனே அவன் வீரர், கலிங்க நாட்டில் வேறு மலையும் கடலும் நாடும் தேடுவதற்கு இல்லை எனும்படி அவற்றை எல்லாம் தேடிச் சூரியன் அத்தமனகிரியை அடையும் அளவில் கலிங்க வரசன் இருந்த வெற்பை அணுகினர். அணுகி, தோலாத களிறுடைய அபயன் பன்றி வேட்டையாடற்கு வளைத்தடைத்த வேலியைக் காப்பார் போல வேலாலும் வில்லாலும் வேலி கோலி மலையை விடியுமளவும் காத்து நின்று கலிங்கவேந்தனை அகப் படுத்தினர். இம்மலை இயல்பாகவே சிவப்பாக ஒளிபெற்றதோ? அன்றி இது சூரியன் உதயமாகும் உதயகிரிதானோ? என்று கண்டார் ஐயுறும்படி கலிங்கரின் இரத்தம் ஆறாகப் பெருகிற்று. அப்போது துகிலுரிந்த கலிங்கர் மாசுபூசித் தமது மயிரைப் பறித்தெறிந்து “நாம் அமணர்” எனக் கூறிப் பிழைத்தனர். அநேகர், சிலை நாணை முந்நூலாக மடித்துத் தரித்து, “யாம் கங்கையாடச் செல்பவர்கள்; விதிவசத்தால் இம்மலையில் அகப்பட்டுக் கொண்டோம்” எனக் கூறிப் பிழைத்தனர். அநேகர் குருதி தோய்ந்த கொடிச் சீலைகளைக் காவியாடையாக உடுத்துத் தலையை மொட்டையடித்துக் கொண்டு, “உடையைக் கண்டால் எங்களைப் பௌத்த ரென்றறியீரோ” எனக் கூறி அபயமிட்டோடினர். அநேகர், தங்கள் யானைகளின் கழுத்திற் கட்டியிருந்த மணிகளை அவிழ்த்துக் கையிற் பிடித்துக் கொண்டு, “ஐயா! நாங்கள் தாளம்பிடித்துப் பாடி ஆடும் தெலுங்கப் பாணர்கள்: சேனைகள் மடிந்து கிடக்கின்ற கலிங்கப் போர்க்களத்தைக் கண்டு திகைத்து நிற்கின் றோம்” எனச் சொல்லிப் பிழைத்தோடினர். “வேடத்தாற் குறையாது முந்நூ லாக வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை யாடப்போந் தகப்பட்டேங் காத்தோம் பென்றென் 1றபிதாவிட் டுயிர் பிழைத்தா ரநேக ராங்கே” “குறியாகக் குருதிநீர்க் கோடி யாடை கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித் தறியீரோ சாக்கயரை யுடைகண் டாலென் றப்பிரமண் ணியமிடுவா ரநேக ராங்கே” “சேனைமடி களங்கண்டு திகைத்து நின்றேந் தெலுங்கரே மென்றுசிலைக் கலிங்கர் தங்க ளானைமணி யினைத்தாளம் பிடித்துப் பாடி யுடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே” இவ்வாறு தப்பி ஓடியவர்களே பிழைத்தனர்; கலிங்க ஓவியர் சுவரில் எழுதிய ஓவியங்களும் பிழைத்தன; மற்றவர்களை எல்லாம் சோழ வீரர் பிடித்திழுத்து அறுத்தெறிந்தார்கள். கடல்போன்ற கலிங்கரது படையை வென்று சயத்தம்பம் நாட்டி மதயானைகளும் வலிய குதிரைகளும் குவிதன முங்கொண்டு, விளங்குகின்ற வாளுடைய அபயன் அடியை வண்டயர்க் கரசனாகிய தொண்டைமான் அருளோடு சூடினான். இப்போர்க்களம், தேவாசுர யுத்தங்கள் உண்டென்ற ஒழியாத பேச்சை அடக்கிற்று. 1களங்காட்டியது “இறைவீ! கொலைக்களத்தைக் கண்டருளுதி” எனக் கூளி வேண்டு தலும், காலகண்டன் மகிழ்கின்ற அமுதை ஒத்த காளி போர்க்களத்தை அணுகி, “இக்கொடிய போர்க்களம் என்னே!” என்று அதிசயமுற்று அப் பேய்க் கணங்கள், அக்களத்துள்ளவற்றைக் கண்டருளும்படி காட்டிக் கூறுகின்றாள்: உடல்மீது பட்ட காயங்களினின்றுங் குருதி சொரியப் பின்னங் காலோடு இரத்தவெள்ளத்தில் துடித்துச் செல்லும் மரக்கலங்கள் போன்றன, பார்மின். உயர்ந்த நற்குதிரை மீதிட்ட கலணை சாயும்படியாய் நிணச் சேற்றிற் கால்கள் புதைந்து நிரையே நிற்கும் குதிரைகள், குருதி வெள்ளத்தை அணைகட்டக் குதிரைப் பாய்ச்சலாக நிறுத்திய தறிகளை ஒத்தன, காண்மின். விருந்தினரும் வறியோரும் நெருங்கியிருந் துண்ண முக மலரும் மேலோர் போற், பருந்தினமும் கழுகினமும் படிந்துண்ண, மலர்ந்த பங்கய வதனங் களைக் காண்மின். சாமளவும் பிறர்க் குதவாரை விரும்பிச் சார்ந்தவர் களைப் போல வீரருடலிற்றங்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து பின்னும் விட்டு நீங்காத பல நரிக்கூட்டங்களைக் காண்மின். சாய்ந்து விழும் மதயானைகளுடன் சாய்ந்து குருதியிற் படியும் கொடிகள், கணவருடன் எரி புகுந்து உடன்மடியுங் கற்புடை மாதரை ஒத்தன காணமின். கற்புடை அரிவையர் சிலர், தங்கணவருடன் தாமுஞ் செல்வதற்கு, ‘எங்கணவர் கிடந்த இடம் எங்கே’ என்று பேய்களைக் கேட்பர்; தடவிப்பார்ப்பர்; இடா கினிகளையுங் கேட்பர், பார்மின். தன் கணவன் வாய் மடித்துக் கிடத்தலைக் கண்டு, ‘மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டனையோ? நீ இதழ் மடித்துக் கிடத்தற்குக் காரணமென்ன?’ என்று கூவிப் புலம்பி ஆவி சோர்கின்ற வளைக் காண்மின். பூமாது தன் கணவன் உடலைத் தாங்காமல் தன் கரத் தாற்றாங்கி, விண்ணாட்டரிவையர் அவனைச் சேர்வதன்முன் தன் ஆவியை உடன் விடுவாளைக் காண்மின். பொருந் தடக்கையில் வாளெங்கே? மணி மார்பெங்கே? போர்முகத்தெவர்வரினும் புறங்கொடாத பெரியவயிரத்தோ ளெங்கே; என்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்; காண்மின். “பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே போர்முகத் தெவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்” பாய்ந்துவரும் குதிரையைப் பிடித்து ஆளை ஆளோடு அடித்துப் புடைக்கப் புண்ணின் நீரோடித் தெறித்துக் கருமேகம் சிவந்த மழை பொழிவதைப் பார்மின் களத்தே நெருங்கிய நிணப்போர்வை மூடக் கருங் காகம் வெண்காகமாக மாறிய ஒருபோதுமில்லாத புதுமையைக் காண்மின். நெருங்கிய தேர்க்கொடிஞ்சி தாமரை மொட்டாகவும், இரத்தம் நீராகவும், விழுகின்ற கொடி இலையாகவும், அச்செங்களம் தாமரைப் பொய்கையாக விளங்குவதைக் காண்மின். அம்புகளும் வேல்களும் மொய்த்து விழாது நிற்கும் வீரர் கழைக்கூத்தர் கயிற்றால் கட்டிச் சாயாது நிற்கும் மூங்கில் போன் றனர். பார்மின் உடற்குறையின்மீது ஏறிய அம்பு புதையும்படி மேலிருந்து சிறகு விரித்தாடும் பருந்தின் ஆட்டத்தைக் காண்மின். வருகின்ற பகை வரின் சேனை தம் படைமீது வந்துறாதபடி வாள்வீரர், தம் உயிர் கெடும்படி வீரங் காட்டிச் செஞ்சோற்றுக்கடன் கழித்த கைமாற்றைக் காண்மின். யானை வீரர் எதிர்த்தபோது அற்று எழுந்தாடுகின்ற தலைகள், வீரமாது எறிந்தாடும் அம்மானைக் காய்கள் போன்றன பார்மின். எதிர்கொள்கின்ற தேவரின் விமானங்களிற் றேவராய் ஏறும் வீரர், எண்ணுதற்கரிய அநேகராதலின், விண்ணுலகத்திலும் இவ்வகைப் பெருநாள் இல்லை என அத்தேவர் ஐயுறுதலைக் காண்மின். கலிங்கரது யானை சொரியும் மதம் கடல்போற் பெருக அதைத் தடுத்தும், பரிகளாகிய திரையை அலைத்தும் அமர்செய்த கலிங்கரது உடலினின்றும் பெருகி இரத்தக் கடல்மீது கவரிபோல நுரை பரந்தோடுதலைக் காண்மின். உலகைக் காக்கும் விசயதரன் 1முன்னொரு போது பெரிய கடல்மீது அணையிட ஒப்பிலாத வில்லை விளைத்தபோது, குரங்கினம் கடலிடத்தே குவித்த மலைக்கூட்டம்போலக் கரிய யானைப் பிணங்கள் அவ்விரத்தக் கடலிற் கிடப்பதைக் காண்மின். பகைவர் விடுத்த அம்பு, பரிசையையும் கவசத்தையும் ஊடுருவி மார்பைப் பிளக்க ‘இவன் விற்றிறமை என்னே’எனக்கூறிக் கைம்மறித்து விழும் வீரரைக் காண்மின். தேவர்களாகி மேல் எழுகின்ற வீரர் மாத்திரமல்லர், கண்ணிமைப்பு நீங்க முகமலர்ந்து கிடக்கும் உடல்களும் தேவரை ஒத்தன பார்மின். பிறைபோன்ற மருப்புடைய யானைகள் வாலும் தளையும் துணியுண்ணத் தலையற்றுக் கிடக்கும் துண்டங்கள் கொல்லன் உலையில் இரும்படிக்கும் சம்மட்டி களைப் போன்றன, பார்மின். வாயிற் புகுந்த வேலைக் கையாற்பற்றி நிலத்திற் சரியும் வீரர் வாத்திய மூதுவோரை ஒத்தனர் காண்மின். மார் பிடத்துப் பாய்ந்த நீண்ட வேலைப்பிடுங்கி நிலத்தே ஊன்றித் தேர்மேல் நிற்போர், முன்னே இரத்தவெள்ளம் கிடத்தலின் படவு ஒட்டும் தொழிலோர் போன்றனர் பார்மின். வாயலம்புகின்ற இரத்தத்தோடு நிணத்தைக் கவர்ந்து பறக்கும் பருந்தைப் பின்னொரு கூரிய நகமுடைய பெரிய பருந்து பின் தொடர்ந்து, முகில்கள் ஓடுகின்ற அகன்ற ஆகாய வீதியிற் சண்டையிட்டுப் பிணத்தைப் பறிக்க வலிய வாய் கிழிந்து அது நிலத்தில் வீழ்வதைப் பார்மின். சதுரங்க சேனைக்குத் தலைவனைப் போர்க்களத்தே வந்த பெரிய வயிறுடைய பூதம் அருந்திய பெரிய தலையைச் சுமந்து வயிறூதி ஒரு பெரும் முகில் போல் வருதலைக் காண்மின். முதிய மலைமீதேறி இருப்போரை ஒத்த யானை வீரர் போர்க்களத்துத் தம் முதுகு வடுப்படும் என அஞ்சி நின்று மார்பிடத்தே வடுப்பட்டுக் கிடத்தலைக் காண்மின். “சாதுரங்கத் தலைவனைப்போர்க் களத்தில் வந்த தழைவயிற்றுப் பூதந்தா னருந்தி மிக்க சாதுரங்கத் தலைசுமந்து கமஞ்சூற் கொண்டு தனிப்படுங்கா ரெனவருமத் தன்மைகாண்மின்” “முதுகுவடுப் படியிருக்கு மென்ன நிற்கு முனைக்களிற்றோர் செருக்களத்து முந்து தங்கண் முதுகுவடுப் படுமென்ற வடுவை யஞ்சி முன்னம்வடுப் பட்டவரை யின்னங் காண்மின்” 1கூழடுதல் “போர்க்களம் முற்றும் காட்டுவதற்கு முடிவதன்று; ஆளை அடு தற்குக் கவிழுகின்ற மதயானையின் இரத்தஞ் சொரியக் குளம் மடைதிருந் ததுபோற் குமிழி விட்டுப் பெருகும் இரத்தத்திற் றோய்ந்து கூழடுங்கள்” என்று அணங்கு சொல்லக் கணங்கள் கும்பிட்டுக் கூழடத் தொடங்கின. குறுமோடீ! நிணமாலை! கூடைவயிறீ! கூரெயிறீ! நீலி! மாடீ! குதிர் வயிறீ! எல்லீரும் கூழட வாருங்கள். யானை மருப்பினாற் பல்லை விளக்கு மின்; அதன் பழுவெலும்பை ஒடித்து நாக்கை வழியுமின்; அம்பின் வாயாகி ய உகிர்கொள்ளியால் நகங்களைக் களைமின்; பாய் களிற்றின் மதமாகிய எண்ணெயை ஒழுக ஒழுகத் தலைக்கு வைமின், எண்ணெய் போக வெண்மூளை என்னும் களிமண்ணைத் தேய்த்து இரத்த மடுவிற் கூட்ட மாகப் பாய்ந்து நீந்தி யாடுமின்; இரத்த மடு அத்தனையும் அம்பும் வேலும் குந்தமும் கிடப்பதால் இக்கட்டுக்குப் பயந்தோர் கரையிடத்தே இருந்து குளிமின்; ஆழ்ந்த இரத்த மடுவில் நீந்தி நெடுநேரம் விளையாடாது கரையேறி, வீழ்ந்த கலிங்கரின் நிண ஆடையை விரித்து விரித்து உடுமின்; மதயானைகளின் கிம்புரிகளை அழகிய கை வளையல்களாக அணிமின்; குதிரைகளின் சதங்கை சேர்த்திய மாலைகளை, முத்தை உள் மணியாக இட்ட பாதசரங்களாக அணிமின்; செருவிடத்து வீர ரெறிந்த பெரிய வளை தடிகளை, வேண்டியளவும் வாயை நெகிழ்ந்து, 2விடுகம்பிகளாக அணிமின்; பெரிய யானையின் கரிய கரங்களைக் 3கரு நாணாகக் கட்டுமின்; இரட்டை முரசமெடுத்து நடுவே வாளின் பிடியைச் செருகி இரட்டை முரசமெடுத்து நடுவே வாளின் பிடியைச் செருகி இரட்டை 4வாளியாக அணிமின்; பட்ட குதிரையின் குளம்புகளை வாகுவலயமாக அணிமின்; எறிந்து கிடக்கும் புரியுடைய சங்குகளை ஏகாவலியாக அணிமின்; சினந்து பொருத வீரரின் கண்மணியும் யானை மத்தக முத்துங்கொண்டு மயிரிற் கோத்து அழகிய மாலைகளாக அணிமின்; இன்னும் பலவாறாக அணிகளைச் சுமத்தி அலங் கரித்துக் கொண்டிருப்போமாயின் பொழுது போய்விடும்; பசி அதிகரிக்கும். ஆதலின் பணி பூணுவதை இவ்வளவில் நிறுத்தி உண்பதற்காகிய சமைய லுக்கு ஆயத்தஞ் செய்யுங்கள். பெரிய உடலுடைய மதயானையின் பிண மாகிய மலைமீது வலிய கழுகின் சிறகால் வேய்ந்த அழகிய பந்தரின்கீழ் அடுக்களையைக் கொள்ளுங்களம்மா; யானைகள் பொழிகின்ற மதத்தால் நிலம் மெழுகிப் பொடிந்துதிர்ந்த முத்தை உலக்கைமேல் வைத்திழுத்துக் கோலமிடுமின்; மதயானைகளின் மத்தகங்களை அடுப்பாகக் கொண்டு விரைவாகச் சமையுங்களம்மா; கொற்ற வாளை வீரரோச்சக் குடரொடு தலையும், காலும் அற்று வீழ்ந்த ஆனையாகிய பானையை அடுப்பில் வையுங்களம்மா; வெண்தயிரும் செந்தயிரும் கலந்து கிடக்கும் மிடாக்கள் போற் கிடக்கும் வீரரின், மூளையாகிய குளிர்ந்த தயிரையும் ஈரலையும் பெரிய மிடாக்களிற் கொள்ளுங்களம்மா; கொல்கின்ற யானையாகிய மிடாவுட் குதிரையின் குருதியைக் கூழடுதற்கு உலையாக வாருங்கள்; களத்தே துள்ளி வீழ்ந்த குதிரையின் வெண் பல்லாகிய உள்ளியையும் கிள்ளியிட்டு நகங்களாகிய உப்பையும் இடுமின்; விண்ணுலகடையினும் கண்ணினின்றும் நீங்காத வீரரின் கோபாக்கினியாகிய நெருப்பை மூட்டுமின்; வேலும் அம்பும் குந்தமும் எறிதடிகளுமாகிய விறகு தடிகளை முறித்தெரிமின்; கல்லைக் கறித்துப் பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர் தம் பல்லைத் தகர்த்துப் பழவரிசியாக எடுங்கள்; சுவையைத் தரும் மிகுந்த கூழுக்கு இடும் அரிசியைக் கறைபோகத் தீட்டுங்கள்; கண்ணுடைந்த முரசங் களை உரல்களாகக் கொள்ளுங்கள்; இவ்வுரல்களின் எல்லா அரிசியையும் கொட்டிக் கொல்லும் யானையின் தந்த உலக்கையை ஓங்கி இட்டுச் சலுக்கு முலுக்கெனக் குத்துங்கள். “கல்லைக் கறித்துப் பன்முறிந்து கவிழ்ந்து விழுந்த கலிங்கர் தம் பல்லைத் தகர்த்துப் பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளீரே” “இந்த வுரற்க ணிவ்வரிசி யெல்லாம் பெய்துகொல் லானைத் தந்த வுலக்கை தனையோச்சிச் சலுக்கு முலுக்கெனக் குத்தீரே.” 1வள்ளைப்பாட்டு வாசனை பொருந்திய மாலையணிந்த சயதுங்கனாகிய எங்கள் தலைவனது வாள்வலியால், எமது மெலிவு நீங்கும்படி பிணங்களைத் தந்த நாச்சியைப் பாடீர்; பெரிய திருவுடையாளைப் பாடீர்; கதியோடு கூடிய உயர்ந்த பரியுடைய விசயதரனாகிய காவிரி நாடுடையவனது இரு தோள்கள் உலகைச் சுமந்ததைப் பாடீர்; அரவு சுமை தவிர்ந்ததைப் பாடீர்; இராசாதி இராசனாகிய விசயதரனது வாரணம் இவ்விடத்தே மதங்கொள்ள அவ்விடத்துப் பாண்டியர் போர்க்குடைந்தோடினமையைப் பாடீர்; சேரர் வெருவி ஓடினமையைப் பாடீர்; வணங்கிய சேரர் மணிமுடியையும் பாண்டியர் திருமுடியையும் இடறிய சேவடிகளைப் பாடீர்; எங்கள் பெரு மானது திருவடியைப் பாடீர்; விளங்குகின்ற நீண்ட வேலுடைய வாள பயற்கு வடநாட்டவர் திறையளித்த களிறு வரும்படி பாடீர்; கடல்போன்ற மதம் நாறுவதைப் பாடீர்; கடல் சிறிதென்னும்படி வட்டித்த கொற்றக் குடையுடைய பண்டித சோழனது மலர்ப்பாதங்களிற் பகைவர் அடைந் தமை பாடீர்; அவனது சிலைவலி வாள்வலிகளைப் பாடீர்; எப்பகலிலும் 2வெள்ளணி நாளிலும் நிலமகளைப் நிழற் செய்யும் கொற்றக் குடையைப் பாடீர்; வண்டை வளம் பதியைப் பாடீர்; மல்லையையும் கச்சியையும் பாடீர்; பல்லவர் தோன்றலாம் கருணாகரனைப் பாடீர்; வேழ நிரைகளைக் கொன்று பரணியை நம்மரசனுக்குச் சூட்டிய கருணாகரனைப் பாடீர்; தொண்டையர் வேந்தனைப் பாடீர். துலையிலிட்டு நிறுத்துத் திறையை வைத்து விசயதரன் புருவத்துக் கடைபார்த்துத் தலைவணங்கும் கதிர் முடிகள் நூறாயிரம். எமது அரசனாகிய முதல்வன் சூடும் முடி ஒன்றே. அவன் அடிசூடும் முடிகளை எண்ணின் ஆயிரம் நூறாயிரமாகும். முடியினால் வழிபட்டுச் சொன்ன திறையிடாத வேந்தரின் அடிகள் மிதித்தோடிய அரிய மலைகள் நூறாயிரம். அவன் மந்திரிமார் இருக்கும் வாயிலிடத்துப் பார்வேந்தர் படும் சிறுமை நூறாயிரம். போர் தாங்கும் களிறுடைய விசயதரன் இரண்டு புயம் பாரைத் தாங்கப் பொறை தவிர்த்த பாம்பின் தலைகள் ஆயிரம்; நான்கு கடல்களை யும் கவித்த குடையுடைய விசயதரன் அமுதமெழப் பாற்கடலைக் கடைந் தருளும் பணைத்த தோள்கள் ஆயிரம். நிலவேந்தர் தலைகளால் இரண்டு தாள்களையும் தாங்குகின்ற விசயதரன் தனது இரண்டு தோள்களால் முன் துணித்த வாணனது தோள்கள் ஆயிரம். முகபடாம் போர்த்த களிற்றபயன் கிருட்டிணனாகத் துரியோதனாதிகளிடம் தூது நடந்தபோது சக்கரம் முதலிய படைகள் தாங்கிய அழகிய தோள்களாயிரம்.1 பல்லரிசிகள் எல்லாம் இனிக் கூழுக்கிடத்தக்க பழவரிசி ஆயின; 2சல்லவட்டம் என்னும் சுளகாற் றவிடுபோகப் புடையீர்; கைகளினால் நிலம் மெழுகிக் கலிங்கரின் அழகிய அம்பறாத் தூணிகள் நாழியாகத் தூணிமா அளவுங்கள்; கைக் கவசங்களைச் சிறியவும் அம்பறாத்தூணிகளைப் பெரியவும் கூடைகளாகக் கொண்டு உரலிலிட்ட அரிசியை இறக்கி உலை யிடத்தே இடுங்கள்; 3பரணிக்கூழ் பொங்கி வழியாது, கையைக் காம்பாக இறுக்கிய பெரிய குதிரைக் குளம்பாகிய அகப்பையாற் றுழாவுங்கள்; கூழ் அடுப்பிலிருத்து கொதித்தது இனிப்போதும்; உப்புக் காண்பதற்கு எனக்கும் வார்த்து நீங்களும் உள்ளங்கையில் ஒவ்வோர் துளி வார்த்துக் கொள் ளுங்கள்; அழல், கையைச் சுடாதிருக்க நெருப்பை அவித்துக் கைத் துடுப்பி னாற் சுழலச் சுழலப் பக்கமெல்லாந் துழாவுங்கள்; இக்கூழின் பதத்தைக் கையினாற் றொட்டுப்பாருங்கள்; இதன் பதமுஞ் சுவையும் முன் உண்ட கூழ்கள் எல்லாவற்றிலும் மிக நன்று. இனி இதனை இறக்க வாருங்கள்; எடுத்துக் கையிற் கவிழ்த்துக் கொள்ளாமற் குதிரைமீதிட்ட துணிகளை இருமருங்கும் அண்டப் பிடித்து மெதுவாக அடுப்பினின்றும் இறக்குங்கள். ஒரு வாய்கொண்டு குடிக்க இது தொலையாதென்று அஞ்சி நின்றீராயின், இக்கூழுண்ண ஆயிரம்வாய் வேண்டுமோ? வெந்த இரும்பில் நீரைத் தெளித்தது போல் உண்டு பசியால் வெந்தெரியும் இந்த உடம்பை நாவாற் றோய்க்கில் எல்லாக் கூழுஞ் சுவறாதோ? பண்டும் இதுபோன்ற மிகுந்த பரணிக் கூழை இவ்வுலகிற் கண்டறியேம்; நீர் சொன்ன உபாயத்தைக் கைக்கொண்டால் உண்டு மிகாது; கொதிக்கின்ற பெரிய இரத்த ஆற்றில் வேண்டிய தண்ணீரை யானையின் கும்பங்களிலே முகந்தெடுத்துக் குளிர வைத்துக்கொள்ளுங்கள்; மடிந்த களிற்றின் வாலாகிய கூட்டு மாற்றினாற் சுற்றி அலகிடுமின்; அலகிட்டு அலை எழுகின்ற இரத்த நீரைத் தெளித்து, உண்ணும் பாத்திரங்களை வைக்க நிலத்தைச் சமைத்துக் கொள்ளுங்கள்; போர் வேந்தரின் கேடகங்களைத் திருப்பித் திருகணியாகப் பரப்புமின்; பார்வேந்தர் மண்டை ஓடுகளைப் பல பாத்திரங்களாகக் கொள்ளுமின்; இறந்த கலிங்கரின் பொற் பரிசைகளைப் பொற்பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; விழுந்த முத்துக் குடைகளை வெள்ளிப் பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; நிலத்தைச் சுத்தஞ்செய்து கொண்டு நீவிர் நீண்ட கையுடைய யானையின் பணைத்த காலாகிய கலங் களை அதிகம் கூழ்கொள்ளும் பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; கோபம் மூண்டு ஆர்க்கும் வீரரின் விழிக்கனலும் நிணமும், அணங்கின் அருள் பெற்றார்க்குப் பகல் விளக்கும் பாவாடையுமாகக் கொள்ளுங்கள்; அழகாகக் கலங்களைப் பரப்பிப் பந்தி பந்தியாக நிரைத்திருந்துண்ணக் கூழை வாருங்கள்; கங்கை கொண்ட புரத்தின் மதிற்கு அப்புறத்தே பகைவர் சிரம் போய் விழுந்து இங்கே கிடக்கும் தலைகளை அகப்பைகளாகக் கொள்ளுங்கள். மணலூரிற் பாண்டியரோடு பொருதபோது அட்ட பரணிக்கூழைப் படைத்த பேய்களே! பந்திபந்தியாய் இருக்கும் பேய்களுக்குக் கூழை வாருங்கள்; நிறைந்த சுவையுடைய கூழைக் கண்டு, 1“பகவதி! பிட்சாந்தேகி” என்று பிச்சை கேட்கும் பிராமணப்பேய்க்குக் கூழை வாருங்கள்; உயிர் களைக் கொல்லாத சமணப் பேய்கள் ஒருபோது உண்பன; அவை உண்ண, மயிரில்லாது நிணத்துகிலால் வடித்து வாருங்கள்; தோளை மறைத்து நிற்கும் புத்தப் பேய்க்குக் கழுத்துமட்டும் நிறைந்து நாக்குழறும்படி மணம் மாறாத கஞ்சியாக வாருங்கள்; போராட்டின் உறுப்பனைத்தும் கொய்திட்ட கூழை, வெள்ளாட்டுக் குட்டிகளைத் தின்று வற்றிய பெரிய பேய்க்கு வாருங்கள்; கூழுக்கு ஆசை மிகுந்த களப்பேய் எடுத்தொளித்ததால் கலத்தைத் தடவிக் காணாது அரற்றும் குருட்டுப் பேயின் கைக்குக் கூழை வாருங்கள்; வருந்தித் தன் பசி யுணர்த்தி, மிடா நிறைந்த கூழை விரலாற் சுட்டிக்காட்டிக் கையாற் பேசும் ஊமைப் பேயின் கலம்நிறையக் கூழ் வாருங்கள்; அடியேனுக்குப் பசியாலடைத்த காதுகள் திறந்தனவென்று கடவாயைத் துடைத்து நக்கிச் சுழன்று நின்ற சூல்கொண்ட பேய்க்கு இன்னுஞ் கூழ் வாருங்கள்; பொல்லாத ஓட்டைக் கலத்தே கூழ் புறத்தொழுகக் கவிழ்த்து நோக்கி எல்லாங் கொட்டித் திகைத்திருக்கும் ஊமைப்பேய்க்குக் கூழை வாருங்கள். துதிக்கையின் துண்டைப் பல்லின்மீது நேராக நிறுத்தி வைத்து, கையின் நுதிக்குக் கூழை வாரென்னும் எளிய பேய்க்குக் கூழை வாருங்கள்; இறைச்சியைத் தின்று, கூழ் முழுதையும் தான் குடித்துத்தன் கணவன் குடியானெனக் குலுக்கடிக்கும் கூத்திப் பேய்க்கு இன்னும் வாருங்கள்; பரணிக்கூழ் அடுதற்கு, முன் களத்தைக் கண்டு வந்து சொன்ன பேய்க்கு முன்வார்த்து நாமிருக்கும் ஊர்ப்பேய்களுக்குக் கலம் முட்ட வாருங்கள்; இரவிற் கண்ட கனாவுரைத்த பேய்க்கு இன்றைக்கன்றி நாளைக்கும் குதிரைத் தோலாகிய (பொதிகட்டும்) மடலில் பொதிந்து வைக்க வாருங்கள்; மகிழ்ச்சி இல்லாதிருந்தேமெல்லாம் மகிழும்படி சோதிடத்தால் இப்பரணியை அறிந்தேன் என்று கூறிய கணிதப்பேய்க்கு அகமகிழ்ந்து வாருங்கள்; மெல்லிய குடராகிய நிணத்தை அதக்குங்கள்; மெல்லிய விரலாகிய இஞ்சியை மெல்லுங்கள்; முன்கை எலும்பினைக் கடித்துக் கொள்ளுங்கள்; மூளையை வாரி விழுங்குங்கள்; அரிந்திட்ட தாமரை மொட்டு என்னும் உள்ளியைக் கறித்துண்மின்; ஊதி அலைத்துண்மின்; உடல் ஓடி வியர்க்க உண்மின்; உந்தி மூச்செறிந்து இளைக்கும்படி உண்மின்; தனக்கு நான்கு வாய்கள்படைத்துக்கொண்டு எமக்கு ஒருவாய் படைத்த பிரமன் நாணும்படி களிப்போடு உண்மின்; கோபித்துக் கொதித்த கரியின் கும்பத்துக் குளிர்ந்த நீர் மொண்டு பொதுத்த துளையா லொழுகவிட்டுப் புசித்த வாயைப் பூசுங்கள்; குதிரையின் கலணையையும் செவிச் சுருளையும் பரடாகிய பாக்குப் பிளவையும் பட்ட கலிங்கரின் கண்மணியாகிய சுண்ணாம்பும் கலந்து மடித்துத் தின்னுங்கள், தாம்பூலத்தைப் பெரிதும் உண்டு புரைக்கேறப் பெற்றீர்! பாக்குச் செருக்கிய பேய்காள்! பூதத்தின் சிரத்தின் மயிரை மோந்தாற் பிழைப்பீர்கள் என ஒன்றுக்கு ஒன்று கூறி உண்டுகளித்தன. இவ்வாறு களித்து வயிறு நிறைந்து ஏப்பமிட்டுப் பருத்து நின்ற பேய்கள் குன்று குதிப்பன போற்களத்தே நின்று கும்பிட்டுக் கூத்தாடின; குதிரைகளை விட்டுக் கலிங்கரோட விசயதரனது வீரர் குதிரைகளைக் கவர்ந்தமை பாடி மண்ணையும் அள்ளித் தூவி நின்றாடின. போர் தவிர்ந்து கலிங்கர் ஓட விசயதரன் ஏவிய தண்டின் இரு 1கைகளின் வெற்றியைப் பாடி இரு கைகளும் வீசி நின்றாடின; வழுதியர் நுழையும் மலைக் குகைகள் இவை எனும்படி மத யானைகளின் வயிறுகளுள் நுழைந்தன; உருவிய வாளோடு உயர்கணைவிடும் கலிங்கர் உருளும் வடிவிதென உருண்டன சில; பயந்தோடும் வீரர்களின் வடிவு இதென தலைவிரித்தோடின சில; முரசு, குடை, கவரி, விருது, கொடு, சுரிந்த சங்கின் நாதம் முதலியவற்றோடு சுமந்து வந்து எப்பொழுதும் அரசர் திறையிடும் அபயன் அடிகளை அடைய வாருங்கள் என்றன சில; இவ்வாறான நாடகங்கள் முடித்தபின் சூரியகுலத் துதித்தவனும் இந்திரனை ஒத்தவனுமாகிய குற்றமற்றவனது புகழை இனிப் பாடுவேமென்று எல்லாம் தொடங்கின; இரு பிறப்பாளர் உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் அபயமெனப் புகுந்து அஞ்சாதிருக்கும்படி அபயமளித்த அபயன் தாள்களை வாழ்த்தின. நாற்றிசைகளிலுமிருந்து வந்த அரசர்களின்முன் அதட்டி உரப்புஞ் சிசுபாலன் வைத வசையைப் பொறுத்தானை வாழ்த்தின. காவிரித் துறைவனை வாழ்த்தின பொருநைக்கு அரையனை வாழ்த்தின. கங்கை மணாளனை வாழ்த்தின. ஏழு கலிங்கரது ஆணையாம் சக்கரமும் ஓராழியின்கீழ் வந்த வட கலிங்கத்தை ஊழிகாலமட்டும் காத்தளிக்கும், உலகுய்ய வந்தானை வாழ்த்தின. பிரமா படைத்தளித்த புவியை இரண்டாவதும் படைத்துக் காப்பதும் என் கடனென்று காத்த கரிகால் வளவனை வாழ்த்தின. வாழ்த்து எங்கும் களிசிறக்க; தருமம் என்றும் எங்கும் நிலை உள்ள தாகுக; தேவரின் அருள் சிறக்க; முனிவர் செய்தவப்பயன் விளைக; வேதநெறி பரக்க; அபயன் வென்ற வெவ்விய கலிமறைக; சொல்லப்பட்ட புகழ் பரக்கவும் புவி நிலைக்கவும் மழை பொழிக. முற்றும்  அரும்பொருள் விளக்கம் புரக்கும் - காக்கும் வாகைசூடி - வென்று விழைந்த - விரும்பிய இடையூறு - தடை களைதல் - நீக்குதல் ஊடி - வெறுத்து கடை - வாயில் விளித்து - அழைத்து வள்ளியோர் - கொடையாளிகள் கயவர் - கீழோர் செய்யுட் கருத்து - பாலுடைய கள்ளி பாலற்றுப் பொரிந்தது; ஆவரையு மப்படியே; கொடுக்குமியல் புடையோர் கொடை மறந்தால் கீழோரோ அதனை வளர்ப்பர். யாக்கை - உடம்பு ஊன் - மாமிசம் பயில் - பொருந்திய யாத்த - பிணைத்த உருவம் - உடல்; மாமிசத் தினாலாகிய உடம்பு ஊழ் முடிய மறைந்து விடும்; புகழுடம்போ அழியாது என்றவாறு. வாதம் - தர்க்கம் மிலைந்து - சூடி அவைக்களம் - சபை பரிவு - விருப்பம் கூர்ந்து - மிகுந்து செவிமடுத்து - கேட்டு ஆர்வம் - ஆசை கோத்திரம் - வமிசம் தவளம் - முத்து கிரி - மலை கவளம் - திரணை மா - பெருமை களிறு - யானை மரபு - முறைமை சந்தம் - பொருள்; இசை மறைமொழிந்தபதி - பிரமா மரபு - வமிசம் திலகன் - திலகம் போன்றவன் காவலன் - அரசன் தோன்றல் -தலைவன் வளம் - செல்வம் பதி - நகர் பாரகர் - தேர்ந்தவர் கழல் - வீரதண்டை செம்பியன் - சோழன் கோன் - அரசன் மானவன் - வீரன் கோட்டம் - கோயில் கடி - பேய் வீட்டல் - கொல்லல் பராக்கிரமம் - வீரம் சுவீகாரபுத்திரன் - வளர்ப்புப்புத்திரன் பரஉலகம் - மறுஉலகம் மன்று - சிதம்பரம் மன்றிடையாடி - சிவன் இணை - ஒப்பு நறும் - நல்ல விள்ளலாம் - சொல்லலாம் உகுதல் - சொரிதல் புனல் - மழை கொட்டு - மண்வெட்டி கோம்பி - ஓந்தி தகர்தல் - உடைதல் பிட்சாந்தேகி - பிச்சையிடு தாரை - நீர் கவித்து - மூடி ஆஞ்ஞா சக்கரம் - ஆணையாகிய சக்கரம் தம்பம் - தூண் சிலை - வில் கணை - அம்பு விம்மிதம் - பூரிப்பு காடுகெழுசெல்வி - துர்க்கை தேம்பி - வாடி மாறி - வற்றி மா - விலங்கு புலம்புற்று - வருந்தி நிணம் - கொழுப்பு பருகுதல் - விழுங்குதல் வானுளோர் - தேவர் விரிபணப்பாந்தள் - விரிந்த படமுடைய பாம்பு விம்முகடு - உயர்ந்தமுகடு அமுதவட்டம் - சந்திரன் ஆலவட்டம் - விசிறி அயன் - பிரமா வகுத்த - உண்டாக்கிய பூதலம் - பூமி கணையமரம் - மதிற் கதவுச் செருகித் தாழிடும் திரண்ட மரம் உத்தரம் - வளைமரம் யாளி - சிங்கம் போல்வதோர் விலங்கு (இப்போது இல்லை) முகபடாம் - யானையின் முகத்திற் போர்க்குஞ்சீலை ஊசல் - ஊஞ்சல் தறுகண்மை - அஞ்சாமை ஆண்டலைப்புள் - மனிதரின் முகம் போன்ற தலையுடைய பறவை பரவுதல் - துதித்தல் குஞ்சி - உச்சிக்குடுமி அச்சுறுத்தல் - பயமுறுத்தல் தமருகம் - உடுக்கை அனாதியாய் - தொன்றுதொட்டு குழிந்து - பதிந்து அவுணன் - அசுரன் ததும்பி - நிறைந்து குரவை - கூத்து குண்டலம் - காதணி அண்டம் - ஆகாயம் குலகிரி - மலைக்கூட்டம் அம்மானை - கொக்கான் வெட்டுங்காய் கந்துகம் - பந்து வெற்றெலும்பு - இறைச்சியில்லாத எலும்பு கதுப்பு - கன்னம் கயல் - மீன் பறந்தலை - போர்க்களம் கடாரம் - பர்மா தீபக்காற்கட்டில் - ஒருவகைக் கட்டில் இரட்டி - வீசி கறைப்பல் - கரியபல் மோட்டு - திரண்ட குறைத்தல் - வெட்டல் கூர்ங்கத்தி - கூரியகத்தி புறக்கடை - வாயிற்புறம் விச்சை - வித்தை தோன்றல் - புதல்வன் கயிற்றுறி - கயிற்றினாற் செய்த உறி எயிறு - பல் விலாஇற - விலா எலும்பு ஒடிய மாளும் - மடியும் ஆணை - கட்டளை குன்று - மலை வாங்கி - பிடுங்கி புனிதம் - பரிசுத்தம் நேர் - ஒப்பு உந்தி - கொப்பூழ் அருக்கன் - சூரியன் ஐராவதம் - இந்திரனது யானை அரண் - காவல் துலை - தராசு தூங்கெயில் - அந்தரத்திலுள்ள மதில் தளை - விலங்கு உந்தி - செலுத்தி அட்டகிரி - எட்டுத்திக்கிலுமுள்ள மலை கொற்றம் - வெற்றி கண்வளரும் - நித்திரை கொள்ளும் சடாபாரம் - சடாமுடி இழைத்த - செய்த கடைக்கண் நோக்காய் - அருளாய் இமயாசலம் - இமயமலை புலருதல் - காய்தல் ஆலோ - அசை பிடி - பெண்யானை குருதி - இரத்தம் காலுதல் - விளங்குதல் வார்முரசு - வார்கட்டிய மேளம் அதிர்தல் - ஒலித்தல் ஊமன் - கூகை ஓரி - நரி ஈம எரி - சுடலைத்தீ கமழும் - நாறும் ஓவியம் - சித்திரம் களிப்பு - மகிழ்ச்சி குறையிரந்தனர்-குறையை முறையிட்டனர் கலி - வறுமை; முறைகேடு துந்துபி - வாத்தியம் களைதல் - போக்குதல் மங்கலநாண் - தாலி உகைத்து - செலுத்தி ஐம்படை - வில், வாள், சங்கு, தண்டு, சக்கரம் வாரணம் - யானை பார்த்திபர் - அரசர் செறிந்த - நெருங்கிய சென்னி - சிரம் அமரர் - தேவர் வீரக்கழல் - அவரவர் புரிந்த வீரத்தை எழுதிக் காலிலிட்ட காப்பு கலாம் - ஆரவாரம் கலாம் - கலகம் அபயம் - அடைக்கலம் சந்திரவிம்பம் - நிலா வாரிதி - கடல் பிடிக்குலம் - பெண்யானைக் கூட்டம் தவிசு - ஆசனம் கலுழன் - பருந்து திவலை - துளி உவகை - மகிழ்ச்சி தகர்க்க - உடைக்க தாரகை - நட்சத்திரம் பணி - ஆபரணம் மந்திரபாரகர் - மந்திராலோ சனையிற் றேர்ந்தவர் ஆரம் - முத்துவடம் அயம் - குதிரை ஏகவடம் - தனிமாலை விலையில் - விலைமதிக்க முடியாத மகரக்குழை - சுறாமீன் வடிவாகச் செய்த காதணி பிரளயம் - கடல் வளை - சங்கு வயிர் - கொம்பு பல்லியம் - வாத்தியங்கள் வெற்பு - மலை மாருதம் - காற்று மூரி - பெரிய வேலை - கடல் விசும்பு - ஆகாயம் வடவை - உகமுடிவிற்றோன்றும் தீ இவர்ந்தான் - ஏறினான் இரைவேட்ட - இரைவிரும்பிய இகல் - பகை கொளுவி - மூட்டி கற்பனை - உறுதிமொழி சனபதி - அரசன் தறுகண் - கொடிய நெட்டுயிர்த்து - பெருமூச்செறிந்து தண்டு - படை சாலை - ஓர் நாடு தண்டத்தலைவர் - படைத் தலைவர் இமையோர் - தேவர் வயவர் - வீரர் கவரி - சாமரை பருகும் - விழுங்கும் இகல் - போர் குழாம் - கூட்டம் தெழித்த - அதட்டிய இனம் - கூட்டம் சிலைத்த - ஒலித்த அடர்த்தல் - நெருங்குதல் முளைக்க - எழ உரும் - இடி வடி - கூரிய நதி - ஆறு எற்றி - கொண்டு வடவை - உகமுடிவில் தோன்றும் நெருப்பு சயமாது - வீரமாது சரம் - அம்பு வகிர் - பிளவு மந்திரம் - காவல் துஞ்சி - இறந்து விருதர் - வெற்றிவீரர் வயவர் - வீரர் வாகை - வெற்றிமாலை மதமலை - யானை உற்சாகம் - வீரம் அட்டகிரி - எட்டு மலைகள் மறலி - இயமன் பிலம் - குகை கரந்தனர் - மறைந்தனர் அருகர் - அருகசமயத்தவர் குருதி - இரத்தம் கடம் - மதம் ஒட்டு - படைவகுப்பு கட்டு - பற்று கம் - வேகம் ஒற்றர் - உளவறிவோர் கடிது - விரைந்து பன்னசாலை - முனிவர்கள் இருக்கும் வீடு அத்தமனகிரி - சூரியன் படுகின்ற மலை வெற்பு - மலை பறித்து - களைந்து அமணர் - சமணர் சாக்கையர் - பௌத்தர் ஓவியர் - சித்திரகாரர் சயத்தம்பம் - வெற்றித் தம்பம் சூடினான் - தொழுதான் காளகண்டன் - சிவபெருமான் அதரம் - இதழ் பொய்கை - குளம் செஞ் சோற்றுக் கடன் - உண்ட சோற்றுக் காகச் செய்யும் கடமை கவசம் - சட்டை சாதுரங்கம் - நால்வகைப்படை சாதுரங்கம் - பெரிய தழை - பெரிய கமஞ்சூல் - வயிறு ஊதி முன்னம் - மார்பு கவிழுகின்ற - குனிகின்ற உகிர் - நகம் மடு - கோணி இக்கட்டு - துன்பம் முரசம் - வாத்தியம் வாகுவலயம் - தோள்வளை ஏகாவலி - ஒற்றைவடமாலை கறித்து - கடித்து தகர்த்து - உடைத்து நாச்சி - தலைவி துலை - தராசு தூணி - ஓர் அளவு கடை - கடைக்கண்பார்வை மிதித்தோடிய - பயந்து தப்பிஓடிய நாழி - அளக்கும்கொத்து பந்தி - நிரை நுதி - முனை பொறுத்து - துளைத்த வழுதி - பாண்டியன்  விறலிவிடு தூது வசனம் முன்னுரை இற்றைக்கு நூற்றுச் சில்லரை வருடங்களுக்கு முன் சீரங்கத்தில் வாழ்ந்த சுப்பிரதீபக் கவிராயரென் பவர் தன் மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு மதுரைக்குச் சென்றவிடத்து மதனாபிஷேகம் என்னும் தேவடியாள் ஒருத்தியின் மாயக்கன்னியிற் பட்டுக் கைப்பொருளை இழந்து அவமானப்பட்ட வரலாற்றை “விறலிவிடுதூது” என்னும் நூலாகப் பாடியிருக் கின்றார். அவர் தமது சொந்த அனுபவத்தையே கூறு கின்றமையின் அந் நூலிற் கற்பனைகளும் ஊகை களும் இல்லை என அறியலாம். எவராவது தாசிகளின் முழுத் தத்துவத்தையும்அறிய வேண்டுமானால் “விறலிவிடு தூது” என்னும் செய்யுள் நூலின் வசன நடையாகிய மதனாபிஷேகம் என்னும் நூலைப் படியுங்கள். இது உண்மை வரலாறாகும். ந.சி. கந்தையா மதனாபிஷேகம் ஐயர் மனைவியைப் பிரிய நேர்ந்தமை ஸ்ரீரங்கத்திலே சுப்பிரதீப ஐயர் என்னும் ஓர் பிராமணர் இருந்தார். இவர் பதினாறு வயசுக்குள் தமிழும் ஆரியமும் கற்றுக் கவி பாடும் திறமை அடைந்தார். ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை அவதானித்துச் சொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தமையால் இவர் அட்டாவதானி எனப் பெயர் பெற்றார். திருப்பதியிலே வாசுதேவ ஐயரின் புதல்வி பூங்காவனம் என்னும் மாதை இவர் மணந்தார். பூங்காவனத்துடனிருந்து இல்லறம் நடத்தும் நாளில், செவ்வந்தீசர் கோயிற் சந்நிதியில் சதிராடும் தாசி ஒருத்திமீது ஐயர் ஆசையாகி நேசமானார். இவளுறவு சில காலம் அந்தரங்கமாக விருந்தது. திருச்சிராப்பள்ளிக்குச் சென்று இவளைத் தரிசியாதிருக்க ஐயர் மனம் ஒரு நாளும் தரித்திராது. சிறுவனொருவனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஐயர் திருச்சிராப்பள்ளியில் அந்தப் பொன்னனையாள் வீடு சென்று திரும்பினார். திரும்பினதும் சிறுவன் திடுதிடுமென ஓடிப் பூங்காவனத்தினிடம் சொல்லுவான் : ஐயர் ஓடத்தில் ஏறினார். சால்வையைப் போக்கடித்தார். திருச்சிராப்பள்ளி சென்றார். என்னை வீதியில் நிற்கவைத்தார். இன்பரச வல்லி என்னும் தாசி வீட்டிற்புகுந்தார். அவ்வேசி மகள் மிஞ்சி மிஞ்சிப் பேசினாள். ஐயர் அஞ்சி அஞ்சிப் பேசினார். வேசி கதவடைத்தாள்; அவருடன் கொஞ்சிக் குலாவினாள். ஐயர் வீட்டைவிட்டுப் புறப்பட்டார். என்னை வாவென்றார். காவிரியிற் கைகால் அலம்பினார். திருச்சிராப்பள்ளிக்குச் சென்ற கதை ஆருக்குஞ் சொல்லாதே என்றார். துட்டப் பையன் இவ்வாறு சொல்லுதலும் பூங்காவனம் வைரங் கொண்டாள். கடுகடுத்தாள். தூங்குமஞ்சம் விட்டிறங்கித் தரையிற் படுத்தாள். ஐயர் அடுத்தடுத்து வேண்டினார். தீண்டாதே என்றாள். திருச்சிராப்பள்ளி யில் அந்தத் தேவடியாள் தேடுவாளென்றாள். இன்னுஞ் சொல்லாத வார்த்தை சில சொன்னாள். “இல்லாள் வலிகிடந்த மாற்றமுரைக்குமேல் இல்வல்லின் புலிகிடந்த தூறாய்விடும்” என்னும் ஒளவை வாக்கை ஐயர் நினைந்தார். ஐயர் யாத்திரை சென்றமை கைக்கடங்கியதைக் கொண்டு அன்றிரவே ஐயர் பயணமானார். பல தலங்களைத் தரிசிக்கவும் புண்ணிய தீர்த்தமாடவும் ஐயர் மனங்கொண்டார். தேவாரம் பெற்ற பல தலங்களையும் திருமால் ஆலயங்களையும் தரிசித்த பின் சோலை மலையை அடைந்தார். அவ்விடத்தில் ஞானியார் ஒருவர் தங்கியிருந்தார். அஞ் ஞானியாருடன் ஐயர் நட்பானார். மதுரைச் சொக்கரைத் தொழுது வருவோம் வாருமென்று ஞானியரையும் உடன் அழைத்தார். அதனைக் கேட்டு ஞானியார் நகைத்துக் கூறுவார்: ஞானியார் நல்வழி உரைத்தது கொந்தி என்னும் அரசன் திருவொற்றியூர் பார்க்கவேண்டுமென்று விருப்பமானான். அப்பொழுது அவன் மந்திரி அவ்விடத்துள்ள தாசிகள் சதி செய்வார்கள் என்று கூறினான். மந்திரி சொற் கேளாது சென்ற அரசன் ஒரு வேசி கைக்குள் சிக்கினான். அவள் இட்ட மருந்தால் புத்தி மாறு பட்டான். யானைகளையும் நாடு நகரங்களையும் அவள் வாங்கினாள். ஓடும் குழையுமாக அவனை ஓட்டினாள். அவன் கூத்தாடிகளுடன் கள்வன்போல் வேடமிட்டு ஆடுதலை நீர் பார்த்ததில்லையோ மதுரையைக் காணச் செல்வதென்றால் விலைமாதரால் நேரும் தொல்லைகள் மெத்தவுண்டு. மதனாபிஷேகத்தின் பிறப்பு மதுரைச் சொக்கர் ஆலயத்தில் பணிசெய்யும் தாசிகளுள் மாணிக்க மாலை என்பாள் ஒருத்தி. அவள் தனக்கோர் பெண் பிறக்கவேண்டுமென்று பல நேர்த்திக்கடன்கள் செய்தாள். கோயில் மெழுகுவாள். விரதமிருந்தாள். என்ன குறை என்று கேட்டுச் செப்புத்தகட்டில் யந்திரம் எழுதிக் கழுத்திற் கட்டினாள். கெர்ப்பத்துக்காக மருந்து கிண்டி உண்டாள். இளமை கழிந்து ஒருவரும் விரும்பாத நாற்பதுக்கு மேற்பட்ட பிராயத்தே காற்றடிக்கத் தாழை பூத்ததுபோல இவள் கர்ப்பமானாள். பத்து மாதமும் நிரம்பிய பின் வயிறுளைந்து இவள் ஓர் மகவை ஈன்றாள். பெற்ற வேதனையால் மூர்ச்சை யானாள். தாதியர் பெண் என்றார். காதில் மருந்து பிழிந்து விட்டதுபோற் கேட்டுத் துண்ணென்றெழுந்தாள். மூர்ச்சை தீர்ந்தாள். மாணிக்கமாலை பெற்றெடுத்த குழந்தையைப் பொன் காய்க்கும் பூடு என்று சொல்லித் தாதிமார் ஏந்தி எடுத்து நீராட்டினர்; பட்டாடையினால் உடம்பைத் துவட்டி னார்கள். மதனாபிஷேகத்தின் வளர்ப்பு “தேனே, கனியே, தெவிட்டாத தெள்ளமுதே, மானே, என் கண்ணே, மரகதமே” என்று சொல்லி மாணிக்கமாலை மடிமீது எடுத்து வைத்துத் திருநீறிட்டாள். காலுக்குக் காப்பிட்டாள். நீல மலர்போலுங் கண்ணுள்ள மயிலே! பொருளுள்ள பேர்களைக் கைக்குள் வளை என்று சொல்லிக் கைக்குக் காப்பிட்டாள். பணமுள்ள பேர் உன் பொட்டுக்குள் ஆக வென்று பொட்டிட்டாள். ஆரார் உனக்குள் ஆசைகொண்டு சுற்றாதார் ஆராரோ என்று பொற்றொட்டிலில் வைத்துத் தாலாட்டினாள். இவ்வாறு மாணிக்கமாலை தானீன்ற மகளைக் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாள். பெண் சிற்றாடை யுடுத்துத் தெருவில் வரக் கண்டு திருட்டி சுற்றினாள். மதனாபிஷேகமென அவளுக்குப் பெயரிட்டு ஆரியமும், தமிழும், தெலுங்கும், கன்னடமும் படிப்பித்தாள். தாய் பருவக்குறி கண்டமை வயதேற ஏற மதனாபிஷேகம் பரத நாட்டியம் எல்லாம் கற்றறிந்தாள். முனிவரையும் மயக்கும் சங்கீத வித்தை எல்லாம் கரைகண்டாள். வாச மஞ்சள் பூசுவாள். மல்லிகைப்பூச் சூடுவாள். ஆடவரை வீட்டுக்கழைப்பாள். ஓடி நின்று பிலுக்குவாள். கிட்ட நின்று பேசுகையிலே முத்துக் குலுக்குவாள். வந்தவர்களை விழியால் வாள் வீச்சுப் போல வெட்டுவாள். இவைகளைப் பொக்குவாய்ச்சியாகிய தாய் கண்டு உள்ளம் பூரித்தாள். மன்மதனை ஒத்த வாலிபர் அவள் கைக்குள் வசமாகிவந்து காலைப் பிடிக்கும் சொக்குப்பொடி மருந்தையும் சொல்லிக்கொடுத்தாள். மதுரையிலே புதுமண்டபத்தின் முன்னே வசந்தன் திருநாளிலே மதனாபிஷேகம் தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினாள். அவள், தனங்கள் சின்னச் சிமிழாகித் செப்பாகித் தேங்காயாய் வளர்ந்து கன்னியானாள். அப்போது மாணிக்கமாலை தனது பழைய தேட்டமாகிய பொன்னை எல்லாம் ஒரு பக்கத்திற் புதைத்து வைத் தாள். மதனாபிஷேகத்தை பல பணக்காரர் சுற்றுவதையும், அவர்களைச் சேர மகளின் மனம் பற்றுவதையும் மாணிக்கமாலை கண்டறிந்தாள். தாய்க்கிழவியின் போதனை மாணிக்கமாலை தன் மகளை அழைத்துக் கூறுவாள் : “மானே! என் கண்ணே! மயிலே! குயிலே! செந் தேனே! மதனாபிஷேகமே! -மீனீன்ற குஞ்சுக்கு நீச்சுங் கொடும் பாம்பின் குட்டிக்கு நஞ்சுங் கொடுத்தவரார் காரிகையே” “யாருக்கும் சாதித்தொழில் தனக்குத்தானே வருமொருவர் போதிக்கவேண்டுமோ போற்கொடியே” பெண் சிங்கம் குட்டி யீனும்போது அதற்கு முன் எழுதி வைக்கப் பட்ட யானைமீது அக்குட்டி பாய்ந்ததென்னும் கதை பொய்யல்லவே. ஆருக்கம் சாதித்தொழில் தானே வரும். பெண்களுக்குள் என் புத்திக்கு உன் புத்திக்கு இரட்டியாயினும் என் புத்தியையும் சற்றே கேள். நீ நாளும் மஞ்சட் குளிப்பதை மறாவாதே. மஞ்சள் மணங்காட்டியும் வாடைப் பொடியின் குணங்காட்டியும் உத்தரியத்தை ஒரு பால் விட்டு சற்றே தனத்தைக் காட்டியும், முத்துப்போற் பற்கள் தெரியச் சிரித்தும், நடையைக் காட்டியும், இடையைக் காட்டியும் வாலிபருக்கு ஆசையைக்காட்டுவாய். யானைக் கொம்பு தனம் சாய்ந்தால், முகம் சுருக்கு விழுந்தால் அரைக் காசு தந்து ஆதரிப்பாரார்? பஞ்சுப் பெட்டிபோல் நரைத்த பெண்கள் என்ன செய்வார்? சட்டி சுரண்டுவார். கட்டழகு மிகுந்த வாலிபப் பருவத்தில், மனம் வைத்தால் வீடெல்லாம் பொற்றகட்டில் வேலைசெய்து கட்டலாம். சிலர் வந்து உன் காலைப் பிடிப்பார்கள் முழுப் புரட்டெல்லாம் பேசி வெற்றிலை மடித்துத் தருவார்கள். இவர்களை வீட்டில் அழைக்காதே. நீ ஒருவரிடத்தில் ஆசை வைத்தால் பின்பு ஒருவரும் வந்துன்னை அண்டார். இது மற்ற வேசியருக்கெல்லாம் சிரிப்பாகும். காசு பணம் கும்பல் கும்ப லாய்த் தந்தாலும் வாலிபத்தில் வைப்பிருக்க மனம் வையாதே. சரசம் பண்ணிவிட்டு உன்னை அலையவிடும் முட்டாள்களை வீட்டுக் கழை யாதே. முன்பின் அறியாதவர்கள் எழுநூற்றொன்பது பொன் தந்தாலும் இணங்காதே. இன்பமாகச் சேருவர். நித்திரையில் மயக்குப்பொடி தூவுவர். சேலைகளையும் பொன்னுடைமைகளையும் சுருட்டிக்கொண்டு போய் விடுவர். விடிந்ததும் ஆரிடம் நாமவற்றைக் கேட்பது. ஊரிலே தகப்பன்கீழ்ப் பிள்ளைகளும் தாய்க்கீழ் சிறுவர்களும் உண்டு. அவர்கள் வந்தால் வாயில் வடுச்செய்யாமற் சுகங்காட்டு. மாலைக் காலத்து ரொக்கப்பணங் கிடைத்தா லிணங்குவாய். தூரத்திலே யிருந்துவந்து இராத்தங்கிப் போவார் மீது ஆசையாயிருப்பது போல பிறகே போ. போய் உன்னைக் கணமும் பிரிந்து இருக்கமாட்டேன் சாமி என்று ஆசை கூறு. உடனே புதையல் எல்லாம் கிளம்பும். பிரபுக்களைச் சப்பிர மஞ்சத்திலிருத்திக் காசு பணங் கேளாமற் கூடு. அது ஊரிலும் புகழ், நம்மோடொத்தவர்களுக்கும் பெருமை. புல்லுவிற்றும் கீரை விற்றும் ஆரும் நமக்குப் பணந்தருவார். பல்லு விழுந்த கூனற் கிழவன் கொடுக்கும் பணத்தில் நரை உண்டோ? “... ... ... ... ... ... ... ... ... ... ... மானமின்றி அப்பன் வருவான் அதன்பின் மகன் வருவான் தப்புமுறை என்று நீ தள்ளாதே” குடிகாரர் கள்ளர்களின் சோலிக்குப் போகாதே. வேலையின்றி வேசி களைச் சேர்ந்து பணம்பறிக்கும் எத்தர்களும் உண்டு. அவ் எத்தர்களை நாம் எத்த வேண்டும். நான் ஆடுகின்ற பருவகாலத்தில் இவ்விடத்தில் ஓர் பையல் இருந்தான். அவன் மதுரையில் மழுங்குண்ணி என்பவளின் பணத்தைத் தழுவிப்பறித்தான். கிழக்குத் தெருவில் கிஷ்ணாயி வீட்டை ஒரே பறியாகப் பறித்தான். தாசி குப்பியின் உடைமை முழுவதையும் கொள்ளையடித்தான். வைப்பென்று பசப்பி தஞ்சாவூர்ச் செல்லியைக் கந்தை யுடுக்கவைத்தான். இவன் இப்படி மற்றவரது பொருளை வாங்கினானேயன்றி அவன் பொருளை ஆரும் வாங்கினதில்லை. என்மீது மையலாகி அவன் இவ்விடம் வந்தான். கொழுத்த குட்டி கிடைத்ததென்று பூரிப்படைந்தேன். அன்று முதல் மாட்டுப் பறங்கிக்காய் கறி ஆக்கிக்கொடுத்தவனைச் சேர்ந்தேன். அவன் வீட்டில் வந்த நாலாம் நாள் நடுச்சாம இரவில் நித்திரை சோதித்தேன். காலிலே செருப்பிட்டேன். மேலெல்லாம் வெண்ணீறு பூசினேன். ஐந்து சடை பின்னி விட்டேன். கண்டவர் பெண் பசாசு என்று நினைக்கும்படி கோலங்கொண் டேன். கையில் கள்ளும் சோறும் கைவாளுமாகச் சுடலை சென்றேன். கழுவிற் கிடக்கும். கள்ளம் குதிக்கால் நரம்பில் மெள்ள விளக்கெரித்து நெய்யெடுத் தேன். வீட்டில் வந்து அரிசியில் ஊற்றி ஊறவைத்து புளிப்பில்லாச் சாற்றில் பாற் குழம்பிற் சர்க்கரையில் கூட்டியும், சோற்றிலிட்டும் கொடுத்தேன். நெஞ்சு சுழலச்செய்த உபாயத்தால் அவன் தேடும் பணம் முழுதும் கரடி புற்றில் வாய் வைத்தாற்போல வாங்கிவிட்டேன். உள்ளதெல்லாங் கொடுத்துக் கையில் ஓடெடுத்துத் தெய்வமே என்று திரிகிறான். பெண்ணணங்கே! அந் நெய்யரிசி நாளுக்கு நாள் செலவாய் இனி உனக்கு வரும் ஆளுக்கென்று காற் படி இருக்கிறது. காரிகையே! வீதியிலே நாம் உலாவும்போது பணக்காரரை மெல்லக் கூட்டிப் போய் முத்து மாலை பவள மாலைகளைக் காட்டு. மோதிரத்தையோ கடுக்கனையோ வைத்தென்றாலும் வாங்கித்தா என்று சொல்லு. அவன் கையிலுள்ள பணத்தைக் கொடுப்பான். கடையிலுள்ள சரக்கெல்லாம் வாங்கி அறையில் வை. சிலர் மருந்தை இடுப்பிற் கட்டிக்கொண்டு வருவார்கள். நீ அவர் களைச் சேர்ந்து கைச்சரசம் போல் தடவிக் கண்டுபிடித்துப் பிடுங்கி எறிந்து விடு. கொக்கோகம் படித்தவரைச் சென்மம் உள்ள வரையிற் சேராதே. சன்னியாசிகள்போல் உருத்திராட்சப் பூனைகள் சிலர் உண்டு. வந்தால் மெத்தையிலே வைத்து விளக்கணை. கூடையிலே ஆள் வந்து கூப்பிட்டால் கூடையிலே மூடிவைத்துக் கூப்பிடு. கடுக்கனை ஆட்டும் கவிபாடும் புலவர்கள் வந்தால் துடுக்காக ஒரு வார்த்தை சொல்வார். ஐந்து பொன்னும் கொடுக்கமாட்டார். அரைப் பணம் போதும் என்பார். அவர் மனத்தைக் களிக்கச் செய்தால் எம்மேல் புகழ் பாடுவார். முடியாதென்றால் எம்மேல் வசை பாடுவார். எமது வாழ்வு கெட்டுவிடும். கச்சேரியில் வேலைசெய்யும் சேவுகர் வந்தால் அவர் தருவதை வாங்கிக்கொள். கொஞ்சமென்று நினை யாதே. கை முதல் என்ன செலவாகும் ஒரு செம்பு தண்ணீர் போகும். நாம் செய்யும் பொய்ச் சத்தியமும் போம். மணியகாரர் வந்து வாவென்று அழைப்பார். சும்மா போ என்று சொன்னாலும் பொல்லாப்பு. சீலையிலே தம்பலத்தைப் பூசிச் சூதகமென்று தூர இரு. மாதவிடாயானாலும் ரொக்கப் பணம் வந்தால் ஒருபானை வெந்நீருக்காகப் பாராதே. நான் உன்மேல் ஆசையானேன். நீ என்மேல் ஆசையில்லை எனச் சிலர் உனது கருத்தைச் சோதிப்பார்கள். நீர் எவ்வாறு சொன்னீர் உம்மீது நான் ஆசை என்று தலை யில் தொட்டு சத்தியம் செய். பொய்ச் சத்தியத்தால் சீவன் போய்விடுமோ? அச்சத்தியம் எங்களுக்குத் தயிர் சாத மல்லவோ? இருட்டிற் செல்லாக் காசைக் கொடுத்து கருக்கலில் எழுந்துபோவார்மீது கண்ணாயிரு. கோயிற் குருக்கள் என்னுடன் உண்டு. நீ அவர் தம்பியைக் கூடிக்கொள். சோறு சமைக்கும் சமையற்காரன் வந்தால் அவன் தரும் பொருளை வாங்கிக் கொள். நாடகத்திற் பாடுகிறவனைத் தனது பண்ணிக்கொள். தித்திக்காரனை யும் கைத்தாளக்காரனையும் கூட்டிச் சுகங் காட்டாதே. உன்னோடு திரிந்த உத்தியோகஸ்தருக்கு இடைஞ்சல் வந்தால் உன்னை வந்தேய்ப்பார். உனது உடைமைகளை அடைவு வைத்து அடுத்த மாசம் திருப்பித் தருகிறோம் என்பார். பெண்ணே, நீ சிறிதும் இரங்காதே. தாய்க்கிழவி சம்மதித்தால் எனக்கும் சம்மதம் என்பாய். எனது வாய்க்குப் பயந்து அவர் பேசார். நேசமாய் என்னைக் கலந்தவரென்றாலும் கை நிறையப் பொருள் தந்தாற் புணர்ந்துவிடு. பறவை மிருகங்கள் முறை பார்க்குதோ? வேசி முறை பார்த்தால் பிழைப்பு மோசம். மதனாபிஷேகத்தின் செய்தி அவள், அன்று முதலாய், காதல் என்னும் மதம் மிஞ்சிவரும் காமுகரை கும்பமுலையாம் கம்பத்திற் பிடித்துக் கட்டினாள். யோக முனிவரையும் அவள் பாவை ஆட்டலானாள். அரசர் பெருஞ் செல்வத்தை உண்பதில் அவள் குறுமுனிவரை ஒத்தாள். மதனாபிஷேகத்தின் தோழிகள் மதனாபிஷேகத்தின் தோழிகள் பத்துப் பேர். அவர்கள், கைமருந்துச் சொக்கி, சாராயத்தாழி, தூதுசவுந்தி, எழுமதிலேறி, தஞ்சாவூர் எத்தி, மாமாயக் காரி, குண்டுணிவாய்க்கள்ளி, மாறாட்டக்குள்ளி, மாயக்குருவி, மாரீசக்கள்ளி என்போர். இவர்கள் காமுகரை மெல்ல அழைத்துக் கூட்டுவார்கள். வந்து பிரிந்து செல்கின்றவர்களை மெல்லச்சந்து செய்வார்கள். பணம் கொடாதவர் களை அடித்துத் துரத்துவார்கள். கல்லிலே நார் உரிப்பதுபோல வந்தவர் களைக் கசக்கிப் பணம் பறிப்பார்கள். நனைந்த விடத்தைக் கல்லித் தோண்டுவார்கள். மதனாபிஷேகத்தை விரும்பிய ஆடவர் செய்தி இவ்வாறு மதனாபிஷேகம் பொருள் சம்பாதிக்கிற காலத்திலே, இவளது இருண்ட விழிக்கும், பிறைபோன்ற நெற்றிக்கும், கொடிபோன்ற அழகிய இடைக்கும், ஒளி வீசும் பற்களுக்கும் பிடி போன்ற நடைக்கும், வயிரம் பதித்த வளையல்களுக்கும், அமுதம்போன்ற இனிய சொற்களுக் கும், மலைஒத்த தனங்களுக்கும் ஆசைகொண்ட இளைஞர் வலையுள் மான் சிக்கினதுபோலானார்கள். தூண்டிலிலே மீன் சிக்கினதுபோலச் சிலர் மெலிவார்கள். சிலர் ஏன் சிக்கினோம் என்று வருந்துவார்கள். சிலர் இவர்களைச் சேர்ந்து இன்பம் பெற்றோமென்று களிப்பார்கள். கற்கண்டைப்போன்ற பேச்சுடைய மதனாபி ஷேகத்துக்குப் பிடிக்குமென்று பூச்சு மருந்திட்டு அணையச்செல்வார் சிலர். மாயப்பொடி போடும் அவள்முன் வாசப்பொடி பூசிச் செல்வார் சிலர். தந் தனத்தைக் கொடுத்து சரிந்த தனமுடையவளின் ஆட்டத்துக்குள்ளாய்த் தளர்வார் சிலர். சிலர் பசப்பவென்று சிலர் வாசல்மட்டும் வந்து நரைத்த பூதத்தைக் கண்டு அகலப்போவார்கள். சிலர், பெண்ணே, உன்கால் பிடிக்கவோ, வெற்றிலைப்பை கட்டவோ, சண்பகப் பூப்போன்ற மேலைப் பிடிக்கவோ, விசிறி வீசவோ, அழகிய மலர் கட்டவோ, உறக்கம் வரத் தொடையைத் தட்டவோ என்று அருகிற் செல்வார்கள். வெட்டிவேர் வைத்து முடிந்த கூந்தலாள் குளித்த வாச மஞ்சள் நீரை சிலர் அள்ளித் தலைமேற் றெளித்துக் கொள்வார். சிலர், கோயிற் சந்நிதானத்தில், ஆள் நெருக்கடியில் தள்ளப்பட்டு விழுகிறவர்களைப்போல் அவளைத் தாவிப் பிடிப்பார். ஒருவன் வீட்டிலே இருக்க வெளியிலே நின்று சாடைகாட்டித் திரிவார் சிலர். சப்பிரமஞ்சத்தில் தூங்கும்போது துப்பட்டிகொண்டு அவள் காலைத் துடைப்பார் சிலர். காலிலே பவளக்குமிழிலங்கப் பிரபுக்கள் அறைக்குள் வரும்போது பரணில் ஏறிப் பதுங்கியிருப்பார் சிலர். இவளுக்குக் கொடுக்கப் பொன்னில்லாதார் சிலர் இரசவாதஞ் செய்வோமென்று இரசத்தைக் குகை யில் வைத்துக் குனிந்தூதிப் புகையிலடிபட்டு மாலைக் கண்ணானார்கள். இவளுக்காகப் பொன் திருடிக் கையிரண்டுங் கட்டுப்பட்டு நிற்பார் சிலர். அவள் இட்ட மருந்தால் இருமல் பிடித்து குட்டி ஈன்ற நாய் போல் ஓயாமற் குரைப்பார் சிலர். அரையாப்புக்குச் சத்திரமிட்டுத் தோப்பிற் கிடந்து துடிப்பார் சிலர். இவள் நம்மோடு முத்து முத்தாய்ப் பேசினாலும் போதும், தூஷணமாய் ஏசினாலும் போதும் என்பார் சிலர். பூப்படுக்கைமீது அவள் கும்பகர்ணன் போல் தூங்க பக்கத்தே இந்திரனைப்போல் இருப்பார் சிலர். சிலர் ஐம்பது மாடு விற்றோம், நூறு ஆடு விற்றோம், குத்துவிளக்கு விற்றோம், காணி விற்றோம், உடைமை விற்றோம், இவள் செலவுக்குக் கேட்டால் என்னத்தைக் கொடுப்போம் என்னத்தைச் சொல்லுவோம் என்பார் சிலர். சிலர், பாண்டிநாட்டுச் சிறுக்கி பணம் எல்லாம் உரிஞ்சினாள் ஆண்டியானோ மென்று அலைவார்கள். சிலர், வேசிக்கீந்த பொருளை வட்டிக் கீந்தோமோ, மச்சு வீடு கட்டி வைத்தோமோ, வீட்டுப் பெண்டாட்டிக்கு உடைமை பூட்டிப் மகிழ்ந்தோமோ, ஆடு கொண்டுவிட்டோமோ என்பார்கள். இவ்வாறெல் லாம் காமுகர் மயங்கிச் சுழன்றார்கள். ஆதி ஐயர் என்னுமொருவர் மாசித்தெருவிலே மதனாபிஷேகத்தைக் கண்டார். அவர் அவளின் மையலுக்குள்ளானார். காயப்பட்ட மாமரத்தில் உரைஞ்சிய கவரிமான் மயிரிழந்ததுபோல் கையிலிருந்ததெல்லாம் வீட்டிலிருந்ததெல்லாம் ஆஸ்தி எல்லாம் தோற்றார். பிச்சை எடுத்தார். மருந்தினால் கள்ளுண்டவர்போற் கலங்கினார். வாசலிலே தள்ளுண்டார். இப்பொழுது ஆதி ஐயர் என்னும் பெயர் போய் வியாதி ஐயன் என்னும் பெயரெடுத்தார். அவர் பாதி உடலாய்ச் சுருங்கித் தொடலாகாச் சீழ், சிரங்கு, அரையாப்பு, மேகவெட்டை, அடைவாதம், பவுத்திரம், புகைச்சல், இருமல் இளைப்போடு மருந்திட்ட நோயால் களைப்புமாய் பூனைபோல் கத்தி அடுத்த வீட்டுத் திண்ணையிற் படுத்துக்கிடக்கிறார். இப்படியாகத் தேடி உண்ணும் தேவடியாள் வாழ் மதுரைக்கு எப்படிப் போவீர். திரும்பி வருவது எப்படி என்று ஞானியார் சொன்னார். ஐயர் மதுரைக்குச் சென்றமை ஐயர் ஞானியாரைப் பார்த்து, “இரும்புத்தூணில் கறையான் ஏறுமோ, நெருப்பிற் புழு விழுமோ” என்றார். ஞானியாரும் நல்லது ஐயரே என்று சொல்லி அவர் பிறகே சென்றார். ஐயர் வைகையிலே தீர்த்தமாடி அங்கயற் கண் அம்மையையும் சொக்கரையும் தொழுதார். பிரகாரத்தைச் சுற்றிவந்து வடமேற்கில் சங்கப்புலவரைத் துதித்தார். ஐயர் மதனாபிஷேகத்தைக் கண்டு மருண்டமை ஆயிரங்கால் மண்டபத்தே ஐயர் மதனாபிஷேகத்தைக் கண்டார். அவளது, முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயழகும், வேலைப்போன்ற விழி அழகும், தண்டையிட்ட காலழகும், பொற்காப்பிட்ட கையழகும், இறவிக்கை இறுக்கிய மார்பழகும், கட்டழகும் பொட்டழகும் கண்டு ஐயர் மயங்கினார். பூங்கொம்பு போன்ற மதனாபிஷேகம் தித்தி மத்தளம் கொட்ட, பாடி ஆடினாள். ஐயர் அவள் கண்ணம்பு பட்டு அம்பு ஏறுண்ட மான்போலானார். சயமங்களம் பாடி சதிர் முடித்த மாது வீடு திரும்பினாள். பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப்போல் ஐயரும் அவள் பின்னே சென்றார். அவள் காலிலிட்ட சதங்கைகள் கலின் கலின் என்று சத்தமிட்டன. மேலே அணிந்த ஆபரணங்கள் மின்னல்போல் விளங்கின. அவளைக் கண்ட வாலிபர் அவள் அண்ணாந்த கொங்கைக்கு அறிவைப் பறிகொடுத்து வெற் றிலைக்குச் சுண்ணாம்பிட மறந்து சுருட்டி உண்டனர். பெண்மேல் கண்ணாக வருவாரும் போவாரும் தங்களிலே தங்கள் தலையை மோதுவார்கள். மங்கைநல்லாள் சந்தனகும்பஸ்தனங்கள் சுமந்து இடை வருந்தினதென்று நடுங்க நடந்து தனது வீடுபோய்ப் புகுந்தாள். ஐயரும் பின்தொடர்ந்து முன் முகப்பு வாயிலில் ஓர் ஊமைபோல் நின்றார். அப்போது அவரெதிரே செக்கு வருவது போல் கைமருந்துச்சொக்கி என்னும் பாங்கி வந்து தோன்றினாள். பாங்கிகள் சந்து செய்தமை “ஐயரே, உனது ஊரேது, பேரேது” என்று அண்டி அண்டிக் கேட்டாள். ஐயரும், “பெண்ணே! எனது ஊர் சீரங்கம். எனது தகப்பனார் சிங்கையர். எனது தம்பி சாரங்கபாணி ஐயர். எனக்குக் கவிபாடும் அட்ட அவதானி என்று பெயர். என் மனைவியோடு மனத்தாபமாய் உங்கள் வீடு தேடி வந்தேன். இன்று சொக்கர் முன் கதிராடிவந்த காரிகை யார்?” என்று வினவினார். அவர் “மாணிக்கமாலை பெற்றெடுத்த `மானை மரகதத்தை மதனாபிஷேகத்தை’ இப்பூமியிலுள்ள எல்லாரும் அறிந்திருக்க தாம் அறியேம் என்று சொல்லுவது எப்படி?” என்றாள். ஐயர் “பெண்ணே, இன்று இவளிடத்து யார் வருவார்” என்று கேட்டார். “அவள் பட்டணத்துப் பாஸ்கர ஐயனோ, சோலையப்ப பிள்ளையோ, மணியம் கனக சபாபதியோ என்று எத்தனையோ பேர் பொற்கொடிமேல் காதலாகி எத்தனையோ பொன் கொண்டு வந்து எத்தனையோ எத்துகள் கூறுவார். ஆனால் உத்தமி அவர் ஒருவருக்கும் இணங்கமாட்டாள். சிங்கம் ‘சிறு’ தேரையை உண்ணுமோ? உங்கள் போல் நற்குணமுடையோரையே நாடுவாள். அரசரே வந்து பொன்னை மலைபோற் குவித்தாலும் உடன்படுவளோ?” என்று கை மருந்துச் சொக்கி கூறினாள். சொக்கி இதனை தூதுசவுந்தி என்னும் பாங்கிக்குச் சொன்னாள். அவளும் ஏனழைத்தீர் என்று சொல்லிவந்தாள். ஐயர், “இன்று மாதுக்கு ஆர் வருவார்” என்று கேட்டார். “இன்று ஆருமில்லை, பொன் கொடுத்து வருவீராகில் இங்கு நிற்பானேன் வாரும்” என்றாள். “அவளுக்குப் பணயம் எத்தனை பொன் கொடுக்கவேண்டு” மென்றார். “முன்னூறு பொன் மகளுக்கும், முன்னூறு பொன் எனக்கும், இன்னொரு நூறு பொன் தோழிமாருக்கும் ஒரு முடிப்பாகத் தரவேண்டு” மென்றாள். அப்படியே ஐயர் பொன்னை எண்ணிக் கொடுத்தார். ஏவற் பெண்கள் உபசரித்தமை பெண்கள் சிலர் வந்து தொழுது ஐயரை உள்ளே அழைத்தார்கள். சந்தனத்தி கைவிளக்கும் கொண்டுவந்தாள். தெய்வி கால்விளக்கப் பொற்செம்பில் நல்ல தண்ணீர் கொண்டுவந்தாள். வெற்றிலைப் பையைச் சின்னதங்கி பிடித்தாள். பூச்சி என்பாள், பூத்தொடுத்தாள். பூவி என்பாள் பொன் கவரியும் வெண் கவரியும் மெல்ல வீசினாள். இராசி பாவாடை விரித்தாள். மனைக்குள் சென்றிருந்தமை உட்பகட் டறியாத புலியைப்போல ஐயர் மதனாபிஷேகத்தின் மண்டபத்தே சென்றார். சிங்கக்காற் கட்டில்மீது பெண்கள் திண்டு கொண்டு வந்து போட்டார்கள். ஐயர் அரச பாவனையாக வீற்றிருந்தார். மதனாபிஷேகம் கண்டு உபசரித்தமை மதனாபிஷேகம் ஐயர் கொடுத்தனுப்பிய பொன் முடிப்பைப் பெற்றாள். இரண்டு எலுமிச்சம் பழமும், மருக்கொழுந்துச் செண்டும் கொண்டு வந்து நின்று ஐயரைக் கும்பிட்டாள். காதலரை இதற்கு முன் காணாக் கன்னிபோலவும் சூதறியாப் பேதை போலவும் கூசி மெள்ளப் பேசினாள். “நான் புது மண்டபத்தில் ஆடினேன். வந்து நின்றீர். உம்மை நான் கண்டு மையலானேன். பக்கத்தே நின்ற பாங்கியை மெள்ளப் போய் வீட்டுக் கழைத்துவாவென்றேன். அவள் குழப்பிவிட்டாள். செந்தமிழ் பாடுவதில் வல்லவரே! எங்கள் குலதெய்வமே வீட்டிற் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது. வீட்டுக்கு வந்தால் தலைவாயில் முற்றத்தில் நிற்பானேன். நீர் நல்ல பூவைக் கண்டு எடுத்து முடித்துப் போக நினைந்தீர். இனி உம்மை விடமாட்டேன். தேவரீரது விருப்பமே எங்கள் பாக்கியம்” என்றாள். இச்சால வித்தைகள் அத்தனையும் ஐயர் மெய்யென்று நம்பினார். அவள் கையைப் பிடித் திழுத்து முன்னாள் இருத்தியவள் முகத்தைப் பார்த்தார். அவள் யாழை மீட்டுக் கீதகானஞ் செய்தாள். அவள் பாடல்கள் தேன்போல் காதுக்குச் சுவை அளித்தன. ஐயர் தொண்ணூறு பொன் பெறும் கற்கட்டு மோதிரத்தை அவள் கையிலிட்டார். தாய்க்கிழவி உபசரித்தமை அப்போது வில்லைப் பிடித்து வளைத்தாற் போன்ற வளைவும், வறண்ட உடலும், தடிக்கம்பும், தேங்காய்க் குடுக்கைபோல வாயும், சற்றே நடுங்கும் தலையும், நரையும், பொடிக் கொசுகு மொய்த்த கண்ணுமாய்த் தாய்க்கிழவி தோன்றினாள். கிட்டச் செல்ல நாணினாள். மாமியென்று அறியத்தூணோடு ஒதுங்கினாள். “எங்கள் துரையே, வந்தீரோ ! சந்தோஷ மாக வர இந்த வீடு என்ன பாக்கியஞ் செய்ததோ ! இவள் முற்பிறப்பிலே என்ன தவஞ் செய்தாளோ! முந்தனாளிவள் கண்ட கனவு நன்மையாய் முடித்தது. இவள் தோளின் இடப்புறந் துடித்தது. ஆள்வரத்தில் காகங் கரைந்ததது. கட்டைச்சி தும்மினாள். யோகம் வரப் போகுதென்று ஒரு குறத்தியுஞ் சொன்னாள். பல்லியும் பல தடவை நிமித்தஞ் சொன்னது. இந் நிமித்தங்கள் மங்கைக்கு நல்லவரைச் சேர்க்கும் என்று சொல்லி வைத்தேன். அப்படியே நீரும் வந்தீர். என் ஆசை மகள் குணத்தை இன்னும் எப்படி என்று அறியமாட்டீர். பொய் புரட்டுச் சால வித்தைக்காரிகளின் அடிகளிலும் மிதித்தறியாள். அவர்கள் வீட்டுக்குப் போகாள். மற்றப் பரத்தையரைப்போல காசு பணந் தேடும் விருப்பு இவளிடத்தில்லை. ஓர் ஆடவரிடமும் இவளை நான் விட்டறியேன். கிரந்திப் புண் வந்தால் இவள் அரைக் காசுக் குதவு வளோ? இவளுக்கு இராச வளர்ச்சியேயன்றி வேறெதையுங் கண்டறியாள். இவளுக்குச் சிறு வயதானாலும் உம்மைக் கூடிச் சுகிக்க வயது காண். மன்மதனைப்போல வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளாள். பாலிலே பழம் நழுவி விழுந்ததுபோலாயிற்றே. நான் நீலி, ஓர் பேய்ப்பிள்ளையைப் பெற்றேன். மாப்பிள்ளையும் பெண்ணுமாய்க் கொண்ட பற்று விடாமல் வாழ்ந்திருங்கள். மாப்பிள்ளைக்கு நித்திரைக்கு நேரமாகுதுபோலும் “ என்று சொல்லி மாமியாரும் போயினாள். தோழிமாரும் போயினர். சிவந்த வாயுடைய மதனாபிஷேகம் ஐயரை உள் வீட்டுக் கழைத்தாள். பள்ளியறைச் சிறப்பு மதனாபிஷேகம் முன்னாகச் சென்றாள். ஐயர் பின்னாகச் சென்றார். பள்ளியறைச் சிறப்பைச் சொல்லி முடியாது. தூங்குமஞ்சப் பிரகாசமெங்கே! மேல்விரித்த பட்டாடை எங்கே! பட்டாடைமீது பரப்பிய மல்லிகைப் பூவெங்கே! சூத்திரப் பாவை எண்ணெய் விடும் விளக்கெங்கே! வெள்ளிப் படிக்கமெங்கே! பள்ளியறையின் நாற்புறமும் சித்திர வகைகளெங்கே! இரதியும் மதனும்போல்வார் சையோக வகை காட்டும் ஓவியங்களெங்கே! இவ்வாறு பள்ளியறைச் சிறப்பினை நாவாற் கூறமுடியுமோ? மதனாபிஷேகமும் வேதியரும் தூங்குமஞ்ச மேறினார்கள். தாய்க்கிழவி வரிசை வரவிட்டமை அப்போது தேங்காய்போலுந் தனமுடையார் சிலர் தட்டிலே பாக்கு, வெள்ளித் தட்டிலே வெற்றிலை, பொற் பெட்டியிலே மல்லிகை, பிச்சிப்பூ வெட்டிவேர், தந்தச் சிமிழில் சவ்வாது, பவளக் கிண்ணத்தில் சந்தனம், வண்ணக் கிளிமொழியாளைக் கூடியபின் விடாயாறி தேறும்பொழுதி லுண்ண சிற்றுண்டி, வேறு சில பீங்கானிற் பன்னீர், செம்பிலே வெந்நீர் முதலியன கொண்டுவந்து மாமியார் வரவிட்ட வரிசை என்று சொல்லி வைத்தார்கள். மதனாபிஷேகம் கண்ணாற் சாடை செய்தாள். பெண்கள் வெளியே சென்று மறைந்தார். படுக்கை அறை சேர்ந்தமை மதனாபிஷேகம் வாயிற்கத வடைத்தாள். பேதைபோற் கூசினாள். மதிபோன்ற முகத்தைக் கவிழ்த்தாள். வளையல்களைத் திருத்தினாள். புதிய மணவறைப் பெண்போல் நின்றாள். “மதனாபிஷேகமே! என் பிராண சகியே! தாங்காதென் மோகமே!” என்று கையைப் பிடித்துப் படுக்கையில் இருத்தினார். முகத்தோடு முகமும் கண்ணோடு கண்ணும் வைத்துத் தயவு பிறக்கப் பேசினாள். மல்லிகை பிச்சி முதலிய பூக்களை அணிந்தும், வாசச் சாந்து பூசியும் தாம்பூலம் மடித்தும் கொடுத்தாள். அவர் மடிமீதிற் படுத்தாள். ஐயர் மனம் பூரித்தார். அனுபோக வகை நடந்த கலவி விநோதங்களைச் சொல்லவென்றால் நாலு நாள் செல் லும். அவற்றைக் கூற முடியாது. பொழுதும் விடிந்தது. மார்புமீது இலங்கும் வெண் பூணூல் மஞ்சள் படிந்து பொன் பூணூல் போலாயிற்று. அதைக் கண்டு ஐயர் மனம் பூரித்தார். வைகையிலே சென்று நீராடினார். மயக்கத்தால் நாயுருவியென்று குப்பைமேனியைப் பிடுங்கி பல் துலக்கினார். ஆற்றில் ஓர் சோமனை மறந்து விட்டார். விரைந்து வீடு சென்றார். மதனாபிஷேகம், “மீனாட்சி ஆயி வீட்டில் சமையலாயிற்று” என்றாள். சாப்பிட்டார். காய்கறிகள் இன்னதென்றும் சாப்பாட்டின் சுவையும் அறியார். எந்நேரமும் மதனாபி ஷேகத்தைக் கூடிச் சுகிக்க ஆசை கொண்டார். இப்படியே சிலகாலங் கழிந்தது. தாய்க்கிழவி ஐயரை மருந்திட்டு வசப்படுத்த எண்ணினாள். வனமூலிகை சேர்த்தமை தாய்க்கிழவி பலவகைப்பட்ட வனமூலிகைகளைத் தேடலானாள். நாவடக்கி, வாதமடக்கி, கருந்துவரை, பாடவரை, கஞ்சா, பெருந்தும்பை, ஆதளை, ஆவிரைமேற்புல்லுருவி (குருவிச்சை), மாதுளைமேற்புல்லுருவி, தூதுவளை, பேய்ப்பீர்க்கு வல்லாரை, பேய்முசுட்டை, பேய்ச்சிமிட்டி, பேய்ப் புடலை, நாய்ப்பாகல், நாயுருவி, நாய்வேளை, நாய்க்கோட்டான், புன்னைப் பூ, வன்னிப்பூ, பூளைப்பூ, முன்னைப்பூ, மாம்பூ, முருங்கைப்பூ, சின்னிப்பூ, பூலாவேர், சங்கம்வேர், நெட்டிவேர், வெட்டிவேர், பாலைவேர், அத்திக்காய், துத்திக்காய், அல்லிக்காய், நெல்லிக்காய், கத்தரிக்காய், பேய்ச்சுரைக்காய், காஞ்சிரங்காய், நின்றாற்சிணுங்கி, நிலம்புரண்டி, ஆலின்கீழ்க்கன்று, பணம் உறிஞ்சி, காஞ்சோறி, குன்றுமணியிலை, பின்தொடரி, முன்தொடரி, பெண் தொடரி, ஆண்தொடரி, இன்பூறல், ஆனை வணங்கி, அழுகண்ணி, தொழு கண்ணி, பூனைவணங்கி, புளிமடலை, சுருளி, நன்னாரி, தான்றி, வெள்ளைத் தோன்றி, மலைகலக்கி, தேள்கொடுக்கும் வாகையிலை, கருநாரத்தங்காய்ப் பிஞ்சு, மலைநத்தை, சூரிக்கொழுந்து, நாட்டகத்தி, சிற்றகத்தி, தோதகத்திப் பட்டை, நரைத்தோதகத்தி ஆகியவற்றைச் சூரியனைக் கிரகணம் பிடிக்கும் போது தேடினாள். கடைச்சரக்குச் சேர்த்தமை கஸ்தூரி மஞ்சள், அரைத்த சித்திரமூலம், செவிட்டு ஆதிமூலம், தக்கோலம், குரோசாணி, ஏலம், வேலிக்காரம், சீனக்காரம், கர்ப்பூரசாரம், அரிதாரம், நவாச்சாரம், சவுக்காரம், காரீயம், துத்தம், துரிசு, கொத்தமல்லி, குங்குமப்பூ, முத்தக்காசு, இந்துப்பு, வெடிவாண உப்பு, கட்டுப்பு, கறி உப்பு, மட்டிப்பால், இஞ்சி, இலவங்கபத்திரி, கசகசா, மஞ்சள், அதிமதுரம், சதகுப்பை, சாதிக்காய். சாதிபத்திரி, அதிவிடயம், பாக்கு, சிறுதேக்கு, பாஷாணம், வேப்பம் புண்ணாக்கு, பச்சை நாபி, அபினி முதலிய கடைச்சரக்குகளையும் தேடினாள். பிராணிகளின் உறுப்புக்கள் சேர்த்தமை செவ்வரணை வால், ஆந்தைப் பிச்சு, பருந்து நகம், முதலைப் பல்லு, குரங்கின் இந்திரியம், மரஅட்டை, செவ்வட்டை, பெண்ணரியின் முதுகுத் தோல், உடும்பு நாக்கு, குருஞ்சேவல் முள்ளு, வெள்ளைப் பல்லி, ஆண் காடைச் சிறகு, பனையடியில் ஓணான் கண், வாகைமேற் கூகையின் கீழ்வாய் அலகு, செந்நாயின் வாய், தேவாங்குக் கன்னம், பருந்தின் கழுத்து, காடை முட்டை, எலி மூளை, பன்றியிறைச்சி, புலி மீசை, வல்லூற்று எலும்பு, மாடப்புறாவின் எச்சம், கவரி மயிர், நல்ல பாம்பின் ஈரல், தலையீற்று எருமை யின் இளங்கொடி, முயற்புழுக்கை, தேரைக்கால், தூக்கணாங்குஞ்சு, சுழல் வண்டு, நண்டு, காக்கை நிணம், கரிய பசுவின் பால், நாக்குப்புழு, பூனைப் பீசம், கடாவின் கொம்பு, பெருச்சாளிக்குட்டி, வவ்வாற்றலை, குதிரைவாயி னுரை, கரடிச் சவ்வு, கிழட்டு யானை மதம், சங்கின் இறைச்சியும் இரத்தமும், கன்னிகழியாத பெண்ணின் காதுக்குறும்பி, தலையிற்பேன், சின்ன அட்டை, வாற்குருவியின் சந்து எலும்பு, வானம்பாடிக் குடல், காட்டோரித் தொண்டை, காட்டோந்தி மண்டை ஆகிய இவற்றையும் சேர்த்தாள். மருந்து கூட்டினமை இவற்றுள் வனமூலிகைகளை எல்லாம் அவித்துத் தயிலமாக எடுத்தாள். சரக்கை எல்லாம் பேய்க்கருப்பஞ் சாற்றில் அரைத்தெடுத்தாள். விலங்குகளின் உறுப்புகளை எல்லாம் பானையிற் சாராயத்தை ஊற்றி அதில் இட்டுச் சோற்றடுப்பின் கீழ் புதைத்துவைத்தாள். ஒரு மாசங் கழிந்து இவற்றை எல்லாம் அம்மியிலிட்டு மகளின் சூதக நீர், நாக்கழுக்கு, நகத் தழுக்கு, காலடிமண், மூக்கில் வியர்வை முதலியன சேர்த்து மூன்று நாள் அரைத்து மைபோல் உருட்டி எடுத்தாள். எடுத்து மகளிடம் இந்த உருண்டை தப்பாது என்று சொல்லிக்கொடுத்தாள். மருந்திட்டமை மதனாபிஷேகம் அப்பளத்திலும் பழத்திலும் சுண்ணாம்பிலும் வைத் திட்டாள். ஐயர் மதிமயங்கினார்; அவளை விட்டுப் பிரிய முடியவில்லை. கண்ணுறக்கம் வராது, சாப்பாட்டைக் தேடாது, வேறு மனஞ்செல்லாது, மதனாபிஷேகம் என்னும் மோக சமுத்திரத்தில் அமிழ்ந்தினார். செபதபங்கள் மறந்தார். அவள் தன தரிசனமல்லாமல் சிவலிங்க தரிசனம் மறந்தார். வஞ்சிக்க உபாயஞ்செய்தமை ஒரு நாள் அந்த நரைத்த தாய்கிழவி ஐயரண்டை வந்தாள். “இன்று அழகருக்குத் திருவிழா நடக்கிறது. வேடிக்கைப் பார்க்க வெகு சனங்கள் செல்கின்றார்கள். நீங்களும் போய்த் தீர்த்தத்தில் ஆடிவந்தால் நல்ல பலன் கிடையாதோ” என்றாள். ஐயர், “மதனாபிஷேகம்! நீயும் திருவிழாவுக்கு வருகிறாயோ?” என்றார். அவளும் உங்களைக் காணாமலிருந்தால் எனக்கு வீட்டிற் கண்ணுறங்குமோ என்று சொல்லிப் புறப்பட்டாள். மாமியார் பெண்ணுக்குப் பித்தளை நகைகள் பூட்டிவிட்டுத் தானும் பிறகே சென்றாள். பத்துப்பேர் பாங்கியருடனும் மதனாபிஷேகம் அழகர் மலையிலேறித் தீர்த்தமாடினாள். ஐயருடன் மதனாபிஷேகமும் தோழியரும் தேருக்குப் பிறகே சென்றார்கள். ஒரு அம்பு எய்யும் தூரத்தில் ஞானியர் தோன்றினார். ஐயர் தேருக்குப் பின்னால் மறைந்து சென்று ஓர் பிராமணன் வீட்டில் தங்கினார். தாய்க்கிழவி, ஒரு கையிலே தோசைச் சுமையும் மறு கையிலே பாக்குப் பையுமாக மதனாபிஷேகத்தின் பின்னே நடந்துவர ஐயர் முன்னே சென்றார். அரை நாழிகை தூரம் போனதும் கிழவி விடுதியில் சரிகைச் சேலையை மறந்துவிட்டு வந்தேனென்றாள். தான் சென்று தேடி எடுத்து வருவ தாகச் சொல்லி ஐயர் ஓட்டமாகச் சென்றார். ஐயர் போய் மீள்வதன்முன் தாய்க்கிழவி மதனாபிஷேகம் அணிந்திருந்த பித்தளை நகைகளை எல்லாம் கழற்றிக்கொண்டு மதுரை சென்றாள். ஐயர் மதனாபிஷேகத்தைத் தேடி ஓட்டமாக வந்தார். அவள் உருவிய முருங்கைபோல ஆபரணங்கள் ஒன்றுமின்றி நின்றாள். மழைபோல் கண்ணீர் வடித்தாள். “பெண்ணே! என்ன காரியம்” என்று ஐயர் பதில் கேட்டார். அவள் ஏங்கினது போல் விம்மி விம்மி நாக்குழறி முன்னின்று கூறுவாள்; ஐயர் வருவார். நாம் திருவிழாப் பார்த்துச் செல்லும் சனங்களோடு செல்லலாமென்று தாய் சொன்னாள். நான் அவரை விட்டு வரமாட்டேன், நீ பயந்தாற்போ என்றேன். அவளும் கோப மாய்ப் போயினாள். கிழவன் ஒருவன் வந்தான். கையிற் பூண்கட்டிய பிரம்பு பிடித்திருந்தான். கூவென்றாற் கேட்பாருண்டோ? நரைத்த பேழ்வாய்க் கிழவன் தனித்த வழியிலே என் உடைமைகளை எல்லாம் அடித்துப் பறித் தான்” என்றாள். இதனைக் கேட்ட ஐயர் திடுக்கிட்டார். “போனாற்போகிறது அதற்குமேல் நான் உடைமை பண்ணித் தாரேன்” என்றார். அவளைத் தேற் றினார். வீடு வந்தார்கள். கிழவி மகளைப்பார்த்து “ஆபரணங்களெல்லாம் எங்கே” என்றாள். “பறிபோயின” என்று கூறினாள். தாய்க்கிழவி பொய்ப் புலம்பல் தாய்க்கிழவி பதறினாள். கையை நெரித்தாள். நெரித்த கையைப் பிரித்தாள். வயிற்றைப் பிசைந்தாள். ஒருவருமில்லாத இடத்தில் அவள் உடலைச் சேதம்பண்ணினால் என்ன செய்வேனென்று வாய்விட்டழுதாள். பரிதவித்தாள். விம்மினாள். நகை எல்லாம் போய்ச்சே. ஊரறிந்தததே. ஏச்சானதே. இன்று ஆபரணம்பண்ணி இடக்காசு பணஞ் சிந்துகிறதோ? பண்ணியிட்டாலும் அவை கள்ளர்பறித்த உடைமைகள்போல் வருமோ? அவை எல்லாம் இரத்தின உடைமைகளே! பறிகொடுத்த தோட்டைப்போல இனி வருமோ! இருநூறு பொன் கொடுத்துச் செய்த கொப்பும் பறியாச்சே! இவளுக்கு முன் காளிங்கன் கொடுத்த பொற்சிமிக்கி போலக் கிடைக்குமோ என்று பலவாறு சொல்லிக் கிழவி புலம்பினாள். ஐயர் கிழவியையும் கன்னியையும் தேற்றினார். நகை செய்திட்டமை ஐயர் ஐயாயிரம் பொன் தட்டான் கையிற் கொடுத்தார்; நகை செய்தார். மதனாபிஷேகத்துக்கிட்டு அழகு பார்த்தார். மனம் பூரித்தார். ஐயரும் மதனாபிஷேகமும் மஞ்சத்தில் மகிழ்ந்திருந்தனர். அப்போது பஞ்சுபோல் நரைத்த கூந்தலுடைய தாய்க்கிழவி பைய வந்தாள் “பெண்ணே! கோவி லுக்குப் போகவில்லையோ? என்றாள். “கோடிப் புடவையில்லை. உள்ள சேலைகள் சாயம் மங்கிவிட்டன” என்று கூறிக் கவலை கொண்டாள் மதனாபி ஷேகம். தாய்க்கிழவி, “அடி பைத்தியமே! பிறந்த ஊருக்குப் புடவை ஏனம்மா, எல்லாரும் அறிந்தவர்களே, வேறார் இருக்கிறார்கள். பொன்னின் குடத்துக்குப் பொட்டும் இடவேண்டுமோ?” என்றாள். ஐயர் ஆடை வாங்கிக் கொடுத்தமை ஐயர் நன்னிச்செட்டி சவுளிக்கடைக்கு மதனாபிஷேகத்தை அழைத்துச் சென்றார். பார்த்துப் பளபளப்பான பட்டுச் சேலைகள் வாங்கி னார். பொன் இறவுக்கைகள் வாங்கினார். பாவாடைக்குப் பதினாறு வகைப் பட்டுகள் வாங்கினார். தாய்க்கிழவி தனக்கும் இரண்டு சேலை வேண்டுமென் றாள். அப்படியே அந்தப் பேய்க்கும் இரண்டு வாங்கிக் கொடுத்தார். பலவகைக் கடன் தீர்த்தமை பாலளந்தவன்னி, நெய்யளந்தமாரி, நெல்லளந்தசின்னி என்னும் இவர்கள் எந்த நேரமும் வைவதும் போவதும், வாசலில் நின்று அலம்பல் செய்வதுமாகத் திரிந்தார்கள். அவர்கள் கடனுக்கென்று ஐயர் ஐம்பது பொன் ஈந்தார். காலையிலும் மாலையிலும் தாயும் மகளும் குடிக்கச் சாராயமூற்றிய நெட்டைப்பிச்சி வந்து இது நியாயமோ? என்று சண்டைக்கு வாய்திறந்தாள். ஐயர் முப்பது பொன் போட்டு வாய்மூடச் செய்துவிட்டார். தெய்வ பூசைக்குக் கொடுத்தமை மதனாபிஷேகம் வயிற்றை வலிக்கிறதென்று மாயமிட்டாள். “இது மருந்துக்கு மாறாது. குலதெய்வத்தின் குறை” என்றாள். ஐயர், “தெய்வத் துக்கு என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். “கையில் அரிவாள் பிடித்த உருவம் வேணும். உறுமால் வேணும். பொற்பிரம்பு வேணும். சேவல் வெட்டிப் பொங்கவேண்டும்” என்றாள். அதற்கென்று ஐயர் ஐம்பது பொன் கொடுத்தார். கேட்டபோது தா என்று சொல்லி ஒரு ஆழாக்கு முத்தும், ஆயிரம் பொன்னும், ஒரு மாணிக்கமும் ஐயர் மதனாபிஷேகத்திடம் கொடுத்தார். பின்னும் பலவகையால் வஞ்சித்துப் பொருள் கவர்ந்தமை கட்டிலென்றும், கட்டில்மீது விரிக்கப் பட்டென்றும், வட்டிலென்றும், சீப்பு வகை என்றும், குத்து விளக்கென்றும், பால் எருமை என்றும், மாடென் றும், மங்கை விளையாடி நிற்க மேடை என்றும், ஆடவிட்ட நடடுவனுக்கு வேட்டி என்றும், சேடியர்க்குச் சேலை என்றும், காதோலை என்றும், தைப் பொங்கலுக்கென்றும், சிவராத்திரிக்கென்றும் தலை தடவி மூளையை வாங்கு வதுபோல் மதனாபிஷேகம் ஐயர் பொருள் அத்தனையும் வாங்கிவிட்டாள். எல்லாம் விற்று இறுத்து வெறுங்கையானமை ஐயர் ஆடையை விற்றார். காதிற் கடுக்கனையும் விற்றார். வீட்டுச் செலவுக்கு இல்லை என்று தாய்கிழவி தந்திரமாய்க் கேட்டாள். ஐயர் தலை கவிழ்ந்து துரும்பு குத்துவதைக் கண்டாள். குறிப்பறிந்தாள். ஐயரை ஊரைவிட்டுப் போக உபாயஞ் செய்தாள். துரத்த வகை தேடினமை ஐயர் படுக்கையில் முன்புறங் காட்டிப் படுத்தால் மதனாபிஷேகம் பின்புறங் காட்டிப் படுப்பாள். அன்பாய் உபசாரம் செய்தால் அவள் முழங் கையால் இடிப்பாள். தாய்க் கிழவி வந்து அவளை அழைக்கச் செருமுவாள். அந்தக் குறிப்பறிந்து ஐயரைவிட்டுச் செல்வாள். சென்று பிற ஆடவரைக் கூடுவதும், பொன் முடிப்பு வாங்குவதும், ஐயர் அருகில் வந்து படுத்துத் தூங்குவதுமாக விருந்தாள். மதனாபிஷேகம் ஐயரை ஏசினமை மதனாபிஷேகம் பாங்கிமாரில் மாயக்குருவியை பிட்டுப் பழைய மாப்பிள்ளைமாரை அழைத்தாள். அவள் ஐயரைப் பார்த்தாள். அவர்கள் வந்தால் “நான் அவர்கள் அருகிற் போயிருந்தால் சவுங்கலே! குறிப்பறி யாயோ! போடா, போய்ப்புது மண்டபத்து இருந்து வாடா” என்பாள். மட்டுக்கு மிஞ்சிப் புரணிகள் கூறத் தொடங்கினாள். ஏசித் துரத்தினாள். துரத் தினாலும் ஐயர் பூட்டிய செக்கின் எல்லையை விடடுப் போகாத எருது போலானார். தாய் மகளை ஏசினமை தாய்க்கிழவி மகளைப் பார்த்துக் கூறுகின்றாள்: “இந்தப் பார்ப்பான் தான் உனக்குப் பொருளோ? உனக்கு முகமாயம் என்ன செய்தான்? நீ அவனுக்கு ஏற்ற உடன்படிக்iகை என்ன சொன்னாய்? இது பார்த்தவருக்கு ஏற்குமோ? கொடுக்கு மட்டும் வாங்கிக் கொடாதிருந்தால் விட்டுத் துரத்துவ தல்லவோ வேசிகளின் முறைமை. நீ என்ன? எடுக்கும் கைப்பிள்ளையோ? நீயும் பேய்ப் பிள்ளையானாய். மாப்பிள்ளைமார் கள்ளரைப் போற்றிரியக் காரண மென்ன? ஓடத்திலேறிக் கடக்காவிட்டால் ஓடக்காரன் தலையில் இடுவது சொட்டு என்பார்கள். உனக்கு நான் சேர்த்தளித்த மருந்துக்கு மலையும் நகர்ந்து வருமே. உனக்கு ஸ்தனங்கள் வயிற்றைத் தொட்டதோ? கன்னம் சுருங்கினதோ? கூந்தல் நரைத்ததோ? மேனி இளைத்ததோ? தொட்டவனை விட்டுப் பிரிந்தால் வேறு பிழையில்லையோ? இந்தப் பிராமணனோ உனக்குப் பிடிப்பாய்ச்சுது. அவனை ஊரைவிட்டுத் துரத்து.” இவள் இவ்வாறு கூறியதை ஐயர் வீட்டின் இறப்புக் கூரையோடு ஒட்டி நின்று கேட்டனர். சண்டையிட்டமை நன்றி மறந்தாரைத் தெய்வங் கேட்கும் என்று சொல்லி ஐயர் எதிரே வந்தார். ஐயர் பொருளை எல்லாம் தனது கையால் வாங்கிவிட்ட மாமியார் ஆங்காரமிட்டாள். இந்த மாமியார் தனது மூப்பைக் கொடுத்து இளமை வாங்க மொட்டைமாப் பிள்ளைமாரைத் தேடுவாள். தன்னை முன்பு சேர்ந்த பணக்காரரை முறை மாற்றி மகளுக்கு இணக்குவாள். இவள், “என்ன பார்ப்பாரப் பயலே ! இன்ன மொருக்காற் சொல்லு. கன்னத்தில் அறைய ஆளில்லையோ? சின்னஞ் சிறுக்கி உனக்கு நன்றாகச் சிக்கினாளோ? உனக்கு வைப்பு நிசமாச்சோ? சாப்பாட்டுக்கு என்ன கொடுத்தாய்? நீ இவ்வளவு காலமுந் திரிந்தாய். இனிப்போதும் போ. பெண் உனக்குத் தாய் மாமன் பிள்ளையோ? தாலிகட்டித் தந்தேனோ? நீ மாத்திரம் என் மகளுக்கு நேசமோ? மாமியிடம் கொடுத்த பணம் நட்டம் போனதுண்டோ? சாண் வயிற்றுப் பிச்சைக்கு வந்தவனும் பெண்ணுக்கு மாப்பிள்ளையோ? சொந்த மாகக் கிட்டக் கிடக்கக் கிடைப்பாளோ? தேவடியாள் அழைத்தொரு வனைச் சேர்வது எத்தனை நாள்? சவுங்கலே ! வாயை மூடு” என்று புடவையை இறுக்கினாள். ஐயர் அவளைத் தின்றுவிடலாம் என்னும்படி கோபித்தார். “நெருப்பிற் பட்ட பாம்பை எடுத்த நளனை அது கடித்த கதை மெய்யே. பதறிப் பேசாதே. நான் கொடுத்தது இரகசியமோ? செட்டிகளுக்குத் தெரியாதோ? நான் கொடுத்த கட்டி வராகன் கணக்குண்டோ? தட்டார் அறியாரோ? ஊரார் அறியாரோ? உன் நெஞ்சறியாதோ?” என்றார். அவள் பொங்கி எழுந்தாள். “சுவட்டில் நுழையடா. சந்தையின் மாங்கொட்டையே ! களவாணியப் பயலே ! கண்ணைக் கிளறட்டோ ! இனி ஆசை வேண்டாம். புறப்பட்டுப் போ” என்றாள். அந்த வரட்டுத் தோய்ப் பாடி ஐயர் மடியைப் பிடித்தாள். தள்ளினாள். ஐயர் ஐந்தாறு தாக்கினார். பொக்க வாய்ச்சி ஐயர் குடுமியைப் பிடித்தாள். சபையேறினமை ஊரிலுள்ளவர்கள் கூடி விலக்கிவிட்டார். கூகூ என்று அம்பலத்தில் ஓடினாள். ஐயரும் பிறகே சென்றார். அவள் தாடகைபோற் போய்ப் புது மண்டபத்தில் கோயில் தலத்தாரைக் கூட்டமிட்டாள். வாய்விட்டழுதாள். மகளை அருகே நிறுத்தினாள். சபையாரைத் தொழுதாள். கிழவி அறிவிப்பு கிழவி கூறுகின்றாள் : “தெய்வேந்திர பட்டரே! மீனாட்சி பட்டரே! காமாட்சி பட்டரே! நரசிங்க ஐயரே! செவ்வந்தி லிங்கையரே! எங்கள் சொக்கலிங்க ஐயரே! சங்கராசாரியரே! அனந்த சாத்திரியாரே! கோவில் ஸ்தானியரே! ஊருக்குள் நியாயமில்லையோ ! எனது மகளைப் பார்ப்பாரப் பேய் பிடித்ததே. ஐந்தாறு மாதமாக அவள் கோயிலுக்குள் ஆடிப்பாடித் திரியக் கண்டீரோ ! பஞ்சமாபாவி இந்தப் பார்ப்பான் பணங் கொடுத்து ஒரு நாள் அவளுடன் கூடியிருந்தான். விடிந்தவுடன் போவானென்று எண்ணி னேன். என்ன மருந்திட்டானோ? என்ன வகை பண்ணினானோ? இவனுக்கு மதன நூல் பாடமோ? அவளை வைப்பென்று சொன்னான். வட்டிலிற் கஞ்சிக்கும் அவள் உப்பென்று கேளாமல் உபாயமிட்டான். கலியாணஞ் செய்தவன்போலக் கூடிக் குலாவினான். அவள் வேறு ஆடவரைக் கண்டா லும் பேசாமற் கட்டிவிட்டான். இவளுக்கு வாடைப் பொடியிட்டான். எனக்கு வாய்ப்பூட்டும் இட்டான். ஒரு பட்டிமாடு வைக்கிறேன். சம்பா நெல்லுக் கட்டி வைக்கிறேன். பொற் கிடாரங்கள் ஏழெட்டுத் தூங்க வைக்கிறேன் என்றான். சோற்றுக்குத் தூங்கவைத்தான். ஏங்கவைத்தான். அம்பலத்தில் ஏற்றிவைத் தான். தனக்குக் குங்குமம் சம்பாவரிசி கொள்ளவென்றும், பொங் கலுக்குப் பாசிப்பயறு என்றும், பூசுவதற்குச் சவ்வாதென்றும், தோசைக் குழுந் தென்றும் பகலிரவாய்க் கேட்பான். கொடுக்குங் கடன்போற் கொடுத்தேன். இவள் கழுத்திற் கட்டிய பொட்டொழிய எல்லா உடைமையும் தோற்றோம். கள்ளப்பயல் மோகினி மந்திரம் முழுதும் அறிவான். மன்மத நூலெல்லாம் அவனுக்குப் பாடம். வசியப் பொட்டறிவானாம். போகக் கட்டறிவானாம். தண்டுப் பூச்சறிவானாம். ஒரு நாள் இவன் பையைச் சோதித்தேன். சிறிய மயிர்த்தோலும், நரிக்கொம்பும், விபூதி முடிப்பும், சில உண்டைகளும் நான் கண்டேன். இவன் திருட்டுப் புரட்டன் என்று அறிந் தேன். சோதிப்பாரென்று அவற்றை அம்பலத்திற்கொண்டு வருவானோ? இவள் மாதவிடாயானால் தானே தண்ணீர் ஊற்றவேண்டுமென்பான். அல்லும் பகலும் அடைத்த கதவைத் திறவான். இவளைச் சற்றும் வெளியில் விடான். இவன் முற் பிறப்பில் ஊர்க்குருவியோ? “பொருள் கொடுப்பேனென்று சொன்னதல்லால் இவன் என் மகட்கு என்ன கொடுத்தான். முளை அரையாப்புக் கொடுத்தான். மேகங் கொடுத் தான். உடம்பிற் சிரங்கானாள், மெலிந்தாள். தம்பியிட்ட மருந்தால் மாது குரங்கானாள். குத்து இருமல் கொண்டாள். மருந்து கொடுப்பவரார். புண் ணுக்குக் கூசாமற் கிட்டக் கிடப்பவரார். பாவி ! என் மகளைக் கெடுத்தான். தேட்டம் வந்து சேரும் சிறு வயதில் போக்கறுவான் விடுதிபோல் வந்து சேர்ந்தான். கூடவந்து இருந்த குடுமித் தலையைக்கண்டு ஆடவர் எல்லாம் அகன்றுவிட்டார். நித்தம் படுக்கைக்கு நூறு பொன் தந்த முத்திரைப்பண்டாரம் மெத்தக் கறுப்பானான். மாலை கட்டிக் கன்னியப்பன் முற்றும் வெறுப் பானான். “சிறுக்கிமேல் ஆசைவைத்த வாத்தியார் ஐயர் கோபித்துப்போனார். பகையானார். காசு பணம் மாரிபோல் சொரிந்த மாரியப்பன் சண்டையிட்டு வீரிவளவிற் போனான். மீள்வானோ? பொன்னுடைமை பூட்டிவிட்ட பொன்னப்பன் அந்தி சந்தி சாடைசெய்து பார்த்தான். சலித்துவிட்டான். பின்னை வரத்துமில்லை. இவனும் ஒன்றும் கொடுக்கமாட்டான். என் மகள் ஒரு சேலை வாங்கித் தரச் சொன்னாள். சண்டைக்குப் புறப்பட்டான். வாயில் வந்தபடி வைதான். என்னை மடிபிடித்துச் செய்யாததெல்லாம் செய்தான். மகளைச் செவியிலே பிடித்துக் கையால் அடித்தான். என்னைக் கையால் இடித்தான். இடுப்பு முறியப் போட்டான். நான் மூர்ச்சையானேன். எழுந்திருந் தேன். கேட்டார் சிரிக்கக் கீர்த்திவைத்தான். ஏன் செய்தாய் என்று கேட்டால் தாய்க்கிழவி சூதென்பான். கொடுத்த பொருள் கொஞ்ச நஞ்சமோ என்பான். நானும் மகளும் தாமரையில் நீரானோம். பெண்ணென்றால் பேயுமிரங்கும். கண்டிப்பாய் நடுப்பேசி இவன் இந்தச் சோமனைக் கடக்கும்படி கூறுங்கள்” என்று சொல்லி முடித்தாள். அப்போது சபையார் தாய்க்கிழவியைக் கை யமர்த்தி ஐயரை நோக்கி, “இனி உமது கதையைச் சொல்லும்” என்றார்கள். ஐயர் கூறுகின்றார் : ஐயர் தனது அறிவிப்புக் கூறல் “இவள் சொன்னதற்கு எதிர் யான் என்ன சொல்வேன். வேதியரே! முன்னொரு நாள் நடந்த கதையைக் கேளுங்கள். முன்னொருநாள் செட்டி ஒருவனைக் காட்டு நீலி என்னும் பேய் தொடந்தாள். அவன் யந்திரமும் பிரம்பும் வைத்திருந்தமையால் அதற்குத் தப்பி பழையனூர் அம்பலத்திற் கூடியிருந்த வேளாளர்முன் சென்றான். ஆலங்காட்டுப்பேய் என் மனைவி போல் வருகின்றாள் என்றான். நீலி கள்ளிக் கொம்பொன்றைப் பிள்ளை யாக்கிக் கையில் ஏந்திவந்தாள். என் கணவர் என்னை நடுக்காட்டில் விட்டு வந்தார். என்னைப் பேயென்றார். இந்தப் பிள்ளையை கள்ளிக் கொப்பென் றார். இந்தப் பிள்ளையை நிலத்தில்விட்டால் ஆர் கிட்டப் போகின்ற தென் றறியலாம் என்று சொல்லி அதனைச் சபையில் விட்டாள். அதுவும் தவழ்ந்து சென்று செட்டி மடியில் ஏற அவனும் திடுக்கிட்டான். கண்டோர் இவன் மாயஞ் செய்கின்றானென்று, இப்பெண் சத்துருப் பேயாகி உனக்குச் சதிசெய் தால் நாங்கள் இத்தனை பேரும் உங்களுக்குப் பழிகாண் என்று உரைத்தார்கள். வணிகனையும் நீலியையும் ஒரு வீட்டில் தூங்கும்படி வைத்துக் கத வடைத்துப் பூட்டிட்டு சபையாரும் போனார்கள். நீலி செட்டியின் உதரத்தைக் கடித்து இரத்தங்குடித்தாள். குடல் மாலை சூடினாள். செட்டி இறந்தபின் நடுவுரைத்தவர்கள் கண்டார்கள். ஆதலால் பெண்கள் சொல்லும் சால வித்தைகளை நம்புதல் கூடாது. “அந்தணர்களே! நான் இவள்மேல் ஆசை கொண்டேன். இந்த விதி வருமென்று நான் அறியேன். இந்தக் கூனி மருந்திட்டாள். அன்று முதல் மேனி ஒடுங்கினேன். இவளுக்கு ஆடையோ ஆபரணமோ என்று கொடுத்த தெல்லாம் கணக்கிட்டுச் சொல்லி முடியாது. இவள் சொந்த வைப்பென்று பேர். ஆனால் ஆயிரம்பேர் போக்குவரத்து. என்னிடத்துள்ள பொருளெல் லாம் உபாயமாய் வாங்கிக்கொண்டு கள்ளி என்னைத் துரத்த உபாயமெடுத் தாள். சும்மா புறப்பட்டுப் போ என்றாள். நீ கொடுத்தது என்ன என்றாள். முன்மடி பிடித்தாள். சந்தியிலே வைத்துப் பூணூலை அறுத்தாள். இந்தக் கிழவி அலக்கழிக்கப் பார்த்திருந்த இந்தக் குமரி ஏனென்றாளோ? ‘பெண்ணே! உணக்கு என்மேல் காதல் உண்டோ இல்லையோ’ என்றேன். அவள் சளக் கென்று தலையில் அடித்தாள். அந்தணரே! நான் நல்ல மெழுகு பிள்ளையார் போல் இருந்ததை நீர் அறியீரோ? கிழவி இட்ட மருந்தாலும், இவள் கொடுத்த புண்ணாலும் ஒட்டி உலர்ந்த உடலானேன். இவளிடத்தில் ஒரு ஆழாக்கு முத்தும், ஒரு மாணிக்கமும், ஒரு பொன் முடிப்பும் வைத்திருந்து தா என்று கொடுத்தேன். அவற்றை வாங்கி வழங்குவீர்” என்று கூறினார். இவ்வாறு ஐயர் முறையிடுதலும் தாய்க்கிழவி துடிதுடித்து, பின்னும் தாய்க்கிழவி அறிவிப்பு “இவன் வஞ்சகத் திருடன். இவன் கூத்திச் செலவும் போக்கி ஒரு முடிப்பு வைத்ததுண்டோ? மருதங்குடித் தெய்வம் இருக்கிறது. பதினெட்டாம் படித் தெய்வம் இருக்கிறது. சத்தியஞ் செய்யட்டும் தீர்த்துக் கொடுக்கிறோம். அல்ல என்றால் என்னைக் கிடத்தி எனது மகள் தாண்டுவாள். அல்லது மகளைக் கிடத்தி நான் தாண்டுகிறேன். இவன் சொல்வதென்ன? இவன் முற்பிறப்பில் என் மகளுக்குப் பிள்ளையோ?” என்றாள். இதனைக் கேட்டுச் சபையோர் சிரித்தனர். ஐயரைக் கிட்ட அழைத்து, “ஓய்! ஐயரே! வேசி வசிய மருந்திட்டாள் என்றீர். அச்செய்தி உமக்கு எப்படித் தெரிந்தது” என்றார். மருந்திட்ட தறிந்தமை கூறல் ஐயர் கூறுகின்றார்: “எனக்குக் காதல் தந்த முத்தனையாள் நேற்றிரவு மூலைக்குள் வைத்துச் சாராயம் நிறையக் குடித்துக் கூட்டமிட்டாள். அத்தை முதல் சேடிகளும் குடித்து வெறிபிடித்துத் துள்ளாட்டமாடினர். மதனாபி ஷேகம் சேடியரைத் தூஷித்து வெளி வாயிலில் தள்ளிவிட்டாள். அப் போது ஒருவன் எருதுபோல் உள்ளே நுழைந்தான். நானும் திண்ணையில் படுத்திருந்தேன். குண்டுணிவாய்க்கள்ளி என்னும் தாதி அங்கே வந்தாள். சாராய வெறியாலே அவள் என்மீது விழுந்து பண்ணாத கோலமெல்லாம் பண்ணினாள். அவள் தன்னால் ஆனமட்டும் பார்த்து ஆகாமல் வெம்பிக் காட்டு மருந்தும் கடைமருந்தும், ஊன் மருந்தும் கூட்டி இட்டால் பெண்மீது வரும் ஆசை மட்டுக்கடங்குமோ என்றாள். அவளுக்கு உடந்தையாகத் திரியும் பாங்கி கூறினமையால் நான் அறிந்தேன்” என்றார். இது கேட்ட சபையார் விந்தை என்று சொல்லிச் சிரித்துக் கூறுகின்றார்கள்: சபையார் ஐயரைத் தேற்றியது “பிராமணரே! நீர் தாசியுடன் அம்பலத்தில் ஏறுதல் தகாது. வேசி ஒருத்தி ஐயர் தலைமேற் கல்லைப்போட்ட கதை அறியீரோ? அவள் திரவியத்தை மாத்திரம் வாங்கிக்கொண்டு உம்மைச் சீவனுடன் விட்ட பாக்கியம் போதாதோ? வேதியராயுள்ளோர் வேசியரைக் கண்டால் காற்காத வழிதூரம் விலகுதல் முறையன்றோ? மந்திரஞ் செபிக்கும் வேதியன் வேசி எச்சில் கொள்ள எப்படித் துணிவான்? உமது மையல் தீர்த்த கடனுக்குத் திரவியத்தைக் கொடுத்துத் தீர்த்துவிட்டீர். இது பிராமணருக்கெல்லாம் வசையாச்சே! வைக்கக் கொடுத்த பொன்னை எடுத்துத் தரச் சொல்லுமென்றீர். இனிக் கேட்க முடியுமோ? பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட மண்டூகமும், யானைவாய்க்குள் அகப் பட்ட கரும்பும், தீக்குள்விட்ட நறுநெய்யும், பூமியின் வெடிப்புள் ஊற்றிய பாலும், பரம உலுத்தர் கைப்பொருளும் வாங்கினால் உமது பொருளும் வாங்கலாம். நாம் சொல்லும் புத்திமதி கேட்டால் பொன் அரிதல்ல. உமது கல்வியால் பொன் சம்பாதிக்கலாம். பரத்தைக்குக் கொடுத்ததிலும் பத்து மடங்கு யோகம் பிறக்கும். மனத்திலே நினைந்து இடையாமல் ஊருக் கேகும்” என்று சொல்லிச் சபையார் வீடு சென்றனர். ஐயர் கலங்கித் தெளிந்தமை வற்றிய குளத்திற் பறவைபோல் மதனாபிஷேகம் வீடு திரும்பினாள். ஐயர் எண்ணமிடுகின்றார். “மோகமுற்ற என்னைக் கிழவி இடர்செய்து பிரித் தாள். இக்கிழவி தலையிற் கல்லைப் போட்டுப் புறப்பட்டுப் போவோமோ? எனது ஊரெங்கே? தோழர் எங்கே? மனைவி எங்கே? அட்டாவதானி என்னும் பேரெங்கே? நட்டாற்றில் கோரைபோல் ஆனோம்?” என்று இவ்வாறு எண்ணி கலங்கிச் சொக்கரைத் தெரிசித்தார். மதுரையினின்றும் சென்றமை ஐயர் மதுரையை விட்டு நடக்கப் பெண்ணாசை ஒரு காலைப் பிடித் திழுக்கும். மாமியின் சினம் ஒரு காலை முன்னிழுக்கும். ஆசைச் சீமாட்டி ஆசைக் கரும்பை நினைந்து மூன்று தரம் முன்னே திரும்புவதும் மீள்வது மாக நடந்தார். ஐயர் மனைவியை அடைதல் ஐயர் அக்காலத்தில் இருந்த நாகமகூளப்பன் என்னும் ஓர் சிற்றரச னிடம் சென்று தனது வரலாற்றை யெல்லாம் “விறலிவிடு தூது” என்னும் பாட்டாகப் பாடி அதனிடையே இடையே அரசனையும் புகழ்ந்தான். அரசன் அவருக்கு கனபரிசுகளளித்து உபசரித்தான். ஐயரும் சீரங்கஞ் சென்று தனது மனைவியுடன் மகிழ்ந்திருந்தார். இவர் பாடிய விறலிவிடு தூதென்பது, தன்னோடு ஊடல்கொண்டிருக்கும் தலைவியை அவ்வூடல் தணிக்குமாறு விறலியை அனுப்பியதாகப் புனையப்பட்ட பாட்டு. அஅஅ 1 புறப்பொருள் விளக்கம் 2 15 1. “வெட்சிக் கரந்தை விறல் வஞ்சி காஞ்சி யுழிஞை நொச்சியுட்கிய தும்பை யென்றேழும் புறம்” - (வீரசோழியம்). 1. புறப்பொருள் வெண்பாமாலை வசனமாக எழுதப்பட்டுள்ளது 1. புறம். 262 2. “சீமத்தையுடைய இளைய வேட்டுவ மகளே! முன்னாளில் நின் ஐயன்மார் கவர்ந்து கொணர்ந்த நல்ல ஆனிரைகள் வேல் வடிக்கும் கொல்லனும், துடிகொட்டும் புலையனும், பாடவும் புணர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரு மென்னு மிவரது முன்றிலின் கணிறைந்தன; நீ இவற்றைக் காண்பாயாக. “முருந்துபோலும் முற்றாத நகையுடையாய்! நின் ஐயன்மார் முன்னாட் கரந்தையார் அலறும் படி கைக்கொண்டு வந்த இளநிரைகள், கள்விற்குமவளும், நல்ல வேய்த் தொழிலை ஆராயுமவனும், புண்ணிமித்தங் கூறுமவனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் முன்றிலின் கண்ணிறைந்தன.” - (சிலப்பதிகாரம் வேட்டுவ வரி.) 1. மண்டம ரட்ட மறவர் குழாத் திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான்-பண்டே குறமகள் வள்ளிதன் கோலங் கொண்டாடப் பிறமக ணோற்றாள் பெரிது. (சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை, மேற்கோள்.) 2. புறம். 259 1. ஏனாதிப் பட்டத்துக்கு மோதிரம் அளித்தல் மரபு. 2. “கள் விற்குமவள் இவன் பழங் கடன் கொடாமையிற் பின் கட்கொடாது மறுப்ப, அது பொறாத வீரன் அந் நிலையே வில்லைக் கையிலேந்திப் புள் நிமித்தம் தன் கருத்திற்கு ஏற்பச் சேறலிற் பகைவர் நிரை கொள்ளுதலைக் கருதிப் போகுதலைச் செய்யும்; அங்ஙனம் போகுங்கால் தான் கைக்கொண்ட ஆளிக் கொடியை உயர்த்துக் கொற்றவையும் வில்லின முன்னே செல்லு மன்றோ வென்க. “பெரிய மலர் போலுங் கண்ணையுடையாய்! நின் ஐயன்மார் அயலாரூர் அலறும்படி தலை நாளிற் கைக் கொண்டுவந்த நல்ல ஆநிரைகள், நயமில்லாத மொழியையும் நரைத்த நீண்ட தாடியையுமுடைய எயினரும் அங்ஙனமூத்த எயிற்றியருமாகிய இவர்கள் முற்றிலின் கண்ணிறைந்தன”. (சிலப்பதிகாரம் வேட்டுவ வரி). “யானை தாக்கினும் அரவு மேலே ஊர்ந்து செல்லினும் இடியேறு இடிப்பினும் அஞ்சாத சூற்கொண்ட மகளிரையும் கொள்ளை கொள்ளும் உணவினையுமுடைய வாட்போர் செய்யும் மறக்குடியிற் பிறந்த மறவன் குறி வைத்த மிருகத்தைத் தப்பாமற் பிடிக்கும் வேட்டை நாயைப் போல காவலையுடைய பகைவரது ஊரின்கண் சென்று விடியற் காலத்தே கொண்டுவந்த பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து வீட்டிலே சமைத்த கள்ளினைப் பருகிக் கிடாயை உரித்துத் தின்று ஊரின் நடுவேயுள்ள மன்றிலே மத்தளங் கொட்ட இடத் தோளை வலப்புறத்தே வளைத்து நின்றாடுவான். (பெரும்பாணாற்றுப்படை.) “வேற்றுப் புலக்களவின் ஆதந்தோம்பல்” எனத் தொல்காப்பியங் கூறலின் நிரை கவர்தல் ஒருவகைக் களவென அறியலாகும். In ancient days too, cattle lift was a robbery but a daring one and of such great magnitude that it was nothing short of a call to arms (Studies in Tamil Literature-Deshikar.) 1. மருத நிலங்களை நெருப்புண்டது. நாடென்னும் பெயர் பெற்றவிடம் காடென்னும் பெயர் பெற்றது. பசுத்திரள் தங்குமிடம் புலி தங்குமிடமாயிற்று. ஊராயிருந்த இடங்கள் பாழாய்க் கிடந்தன. வளையலையும் மடப்பத்தினையுமுடைய மகளிர் துணங்கைக் கூடத்தையும் தாள அறுதியுடைய குரவைக்கூத்தையும் மறந்தனர். சான்றோர்களிருந்த அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் அச்சந்தரும் பார்வையினையுமுடையய பேய்மகளிர் உலாவி ஆடினர் இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து நிலத்துள்ளாரையெல்லாம் உள்ளே போக்கும் வாயில் காப்போரின் வாயில் களிலிருந்து மனவருத்தமுடைய பெண்கள் வருந்தியழுதனர். பசியாலுலர்ந்த குடிகளுக்குப் பாதுகாவலாக அயல்நாடுகளிலுள்ள சுற்றத்தார் வந்து சேர்ந்தனர். பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிலே சூட்டினையுடைய கூகைச்சேவல் பேட்டுடனிருந்து யானை நின்றால் மறையும் வாட் கோரையுடன் சண்பகக் கோரையும் வளர்ந்தது. எருதுகளுழுது விளைகின்ற வயல்களில் பெண்பன்றியுடன் ஆண்பன்றி ஓடித்திரிந்தது. நின்னேவல் கேளாமையால் பகைவரது நாடுகள் இவ்வாறு கெட்டுப் பாழாயின. (மதுரைக் காஞ்சி). 1. “விட்டில் கிளிநால் வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும் பெயல் காற்று..............” 2. ஆடற்பாட்டில் வல்ல யாழ்ப்பாணர் சொல்லியது. 1. “நாடிய நட்புப் பகை செலவு நல்லிருக்கை கூடினரைப் பிரித்தல் கூட்டலா-றீடிலா வேட்டங் கடுஞ்சொன் மிகுதண்டஞ் சூதுபொரு ளீட்டங்கட் காமமிவை யேழு.” 1. பெருஞ் சோற்று நிலை. 1. புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாட்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞை எனப் படாதாகலின். அகத்தோனும் முற்றுவிடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித்தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாட்கொள்ளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக் காலத்துக்கோர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல். (ந-உரை), 1. இகல்கொண்டாரை வென்று வாகைப்பூச் சூடி ஆரவாரித்தல் வாகை என்பர் ஐயனாரிதனார். 1. என்றது நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்து அழித்து, அதரி திரித்து (கடா விட்டு) சுற்றத்தோடு நுகர்வதற்கு போர் முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற்குவித்து எருதுகளிறாக வாள்பட ஓச்சி அதரிதிரிந்துப் பிணக்கு வையை நிணச் சேற்றோடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனா வேண்மாள் (பேய்) இடம் துழந்து (துழாவி) அட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம்.” 1. தன்னை நீத்த கணவன்மேற் பாய்ந்த வேலினால் மனைவி தன்னுயிரையும் போக்குதல் எனவுங் கூறுவர். 1. தாமே எனப் பன்மை கூறினார் ஒருவர்க்குத் தலைவியர் பலரென்பதற்கு. (ந.-உரை.) 2. அறுவகை என்பன் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் எனக் கூறுவர் இளம்பூரண வடிகள். 3. புறப் பொருள் வெண்பா மாலைகாரர், கொடிநிலை யாவது-அரி அயன், அரன், என்ற மூவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்துத் தன் அரசன் கொடியைப் புகழ்தல் என்றும், கந்தழியாவது-திருமால் வாணாசுரனின் சோநகரத் தரணை அழித்த வெற்றியைச் சிறப்பித்தலென்றும், வள்ளியாவது-முருகக் கடவுள் பொருட்டு வெறியெடுத்தாடுவது என்றும் கூறுவர். 1. கூத்தராயினார் எண்வகைச் சுவையும், மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலியென்றார். அவளுக்குஞ் சாதி வரையறை யின்மையிற் பின் வைத்தார். பாணரும் அசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் பரணிபாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாகலின் விறலியென ஒருமையிற் கூறினார்-(ந-உரை.) 2. இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றாவகையினாலேதான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழி யாகிய செல்வத்தையாண்டுந் திரிந்து பெறாதார்க்கு அன்னவிடத்தே சென்றார் பெறலா மென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடு. முருகாற்றுப்படையுட் ‘புலம்புரிந்து துறையுஞ் சேவடி, யெனக் கந்தழிகூறி, ‘நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி’ யெனவுங் கூறி,அவனுறையும் இடங்களும்கூறி ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறவரும் பரிசில்னல்கும் எனவுங்கூறி, ஆண்டுத்தான் பெற்ற பெருவளம் அவனும் பெறற்கு கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுதற்குச் சமைந்தான் ஒரிரவலனை ஆற்றுப்படுத்த லென்பது பொருளாகக் கொள்க- 1. சுக்கிர நீதி அத். IV, பகுதி VIII. 1. கோட்டைகள் அகழினாலும், முட்காட்டினாலும், மலைகளாலும், பாலை நிலத்தாலும் அரண் செய்யப் பெறும். (சுக்கிர நீதி அ. VI பகுதி IV நில வெல்லையைக் கடந்த பாதலத்தேயுற ஆழ்ந்த அகழியினையும் வானைத் தடவும் மதிலினையும் அம் மதிலின் மீது பதுக்கிடங்களையும் வெயிற் கதிர் நுழையாத காவற் காட்டினையு முடைய (மதுரைக்காஞ்சி) 1. பதிற்றுப் பத்து உரை. 1. படையின் தோற்றப் பொலிவைக் கண்டு பகைவரஞ்சுவரெ ன்பது. 1. “படுமணிவமருங்கின் பனைத்தாள் யானையுங் கொடி நுடங்கு மிசைய தேருமாவும் படையமை மறவ ரொடு துவன்றிக் கல்லென” 1. முல்லைப்பாட்டு 2. நெடுநல்வாடை 1. திரிகூடராசப்ப கவிராயர். 1. வி. கோ. சூரியநாராயண சாத்திரியார். 1. வில்லிபுரத்தூரரும் இவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 2. இது பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடியது. 1. மகா வித்துவான் திரு. மு. இராகவ ஐயங்கார். 1. முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிருந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை யென்பதோர் படிவங்கொள்ளும். (சிலப்பதிகாரம்) 2. “வருந்து கானிடை வானிடைச் சுழல்வன பருந்து பருந்து நீழலி லொதுங்குவ விரிபணப் பாந்தள் கரிந்த பாந்தளின் படநிழ லொளிப்பன கருப்பை பொரிந்த கானெரி தளிரெனப் புகுவனபுனமான்.” கருப்பை - காரெலி. (திரிகூடராசப்ப கவிராயர்.) 1. அன்னப்பிராசனஞ் செய்யும். 1. அம்மானைக்காய், கொக்கான் வெட்டுங் கல். 1. கூன் குறள் முதலாயினவே அரசர் அரண்மனை அந்தப்புரங்களில் ஏவல் செய்வோர். 2. விசயதரன் இலங்கையையும் பாண்டிய நாட்டையும் செயித்த வரலாற்றை இச் செய்யுள் குறிக்கும். 3. கடாரம் - பர்மா. 1. பிண்டிபாலம் - கையாலெறியும் ஒருவகைத் தண்டு. 2. ஈச்சோப்பி - ஈ ஓட்டுங்கருவி. வேப்பிலையைப் பிடியாகக் கட்டி ஒப்புவதும் மரபு. 3. கட்டியகாரப் பேய். 4. “கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் கரைத் திருந்த சாந்தைத் தொட்டப்பேய் மறைக்க வறியாது மற்றுந்தன் கையைக் மறைக்குமானால் கூர்ங்கத்தி கொண்டு” என பேயின் செய்தி ஒன்று யாப்பருங்கல விருத்தி உரையிற் கூறப்படுகின்றது. கடாரம் - பர்மா. 1. காலில் விழுந்து கும்பிட்டனர். 1. பரியின்மீதேறி வேட்டையாடுதல். 1. இவை மாதரின் உறுப்பு, நடை மொழி முதலியவற்றுக்குவமை. 1. கலிக்கப்போர் கண்ட பேய் அப்போர் நிகழ்ச்சிக்குக் காரணமாய் நின்றவற்றை முதற்கட் கூறுகின்றது. 2. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. 1. இவன் பாட்டு இசை முதலியவற்றிற் புலமையுடையவன் என்றவாறு. 1. புட்பகம் - உயர்ந்த சாதியானை. 1. மதம்பாயும் சுவடு. 1. வேகமாகச் செல்லும் என்றவாறு. 2. தேரின் முன்புறத்துத் தாமரைமுகை வடிவினதாக அமைக்கப்பட்டிருப்பது. 1. அம்பு உண்டாக்கிய நெருப்பு தலையிற்பட்டு எரிதலால் தலை அக்கினிச் சட்டி போன்றது. 1. ஆடை உரிந்தது தெரியாமல் ஓடி ஒளிந்தவர்கள் ஒளிந்தபின் ஆடை இல்லாதிருப்பதை உணர்ந்து ஒரு சீலையை ஏழு துணிகளாகக் கிழித்துடுத்தனர். 1. அபிதா - அபயம்; அப்பிரமண்ணியம் - அபயம். 1 இது, கூளி, தேவிக்குப் போர்க்களத்தைக் காட்ட, அது கண்ட தேவி அதிசயித்துப் பேய் களுக்குக் கூறியதாகப் போர் நிகழ்ந்த களத்தினை வருணித்துக் கூறுகின்றது. கலணை - தவிசு. 1. இராமனாக அவதரித்தபோது. 1. இது, களங்காட்டிய தேவி, கணங்களைப் பார்த்து “களத்தை முற்றாகக் காட்டுவது முடிவதன்று. இனிக் கூழடுங்கள்” என்று கூற அதனைக் கேட்ட கணங்கள் தேவியைக் கும்பிட்டு ஒன்றை ஒன்று கூவி யழைத்துத் தம்மிற் பல படியாகப் பேசிக்கொண்டு காரியங்களைச் செய்து கூழட்டு உண்டு களித்ததாக வருணித்துக் கூறுவது. 2. ஓர் ஆபரணம். 3. கரிய கயிறு இதனைக் கறுத்தைப் பாசி எனவும் வழங்குவர். 4. வாளி - காதணி. 1. “ஊழ்முறை யுலக்கை ஓச்சி வாழிய தரு, மனைக்கிழவர் தம்வளங் கூறி மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே.” (திவாகரம்) 2. பிறந்த நாள் அன்று வெள்ளாடை உடுப்பது மரபு. 1. இவ்வளவும் வள்ளைப்பாட்டு. 2. முரசின் கண்ணாயிருத்தல் கூடும். 3. மூலத்தில் விரற்புட்டி, விற்கூடை என்னும் சொற்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு அரும்பதம் எழுதியவர் மௌனம் சாதித்துள்ளார். இவ்வாறு இருக்கலாம் என்று ஊகித்து எழுதி உள்ளேம். 1. பகவதி பிச்சை தா. 1. அணி வகுப்பு. தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா நூல் திரட்டு நூல் திரட்டு 1 பத்துப்பாட்டு பதிற்றுப்பத்து 75.00 நூல் திரட்டு 2 கலித்தொகை பரிபாடல் 110.00 நூல் திரட்டு 3 அகநானூறு 105.00 நூல் திரட்டு 4 புறப்பொருள் விளக்கம் கலிங்கத்துப்பரணி விறலிவிடுதூது 80.00 நூல் திரட்டு 5 பெண்கள் உலகம் பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் பெண்கள் புரட்சி 75.00 நூல் திரட்டு 6 பொது அறிவு பொது அறிவு வினா விடை உலக அறிவியல் நூல் உங்களுக்குத் தெரியுமா? 215.00 நூல் திரட்டு 7 அறிவுக் கட்டுரைகள் நூலகங்கள் அறிவுரை மாலை அறிவுரைக் கோவை 110.00 நூல் திரட்டு 8 தமிழர் சமயம் எது? சைவ சமய வரலாறு சிவன் இந்து சமய வரலாறு தமிழர் பண்பாடு 140.00 நூல் திரட்டு 9 நமது தாய்மொழி நமதுமொழி நமதுநாடு திராவிட மொழிகளும் இந்தியும் தமிழ்ப் பழமையும் புதுமையும் முச்சங்கம் 115.00 நூல் திரட்டு 10 தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? ஆரியர் தமிழர் கலப்பு ஆரியத்தால் விளைந்த கேடு புரோகிதர் ஆட்சி இராமாயணம் நடந்த கதையா? ஆரியர் வேதங்கள் 75.00 நூல் திரட்டு 11 திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா திராவிட நாகரிகம் மறைந்த நாகரிகம் 80.00 நூல் திரட்டு 12 ஆதி மனிதன் ஆதி உயிர்கள் மனிதன் எப்படித் தோன்றினான்? மரணத்தின் பின் பாம்பு வணக்கம் 80.00 நூல் திரட்டு 13 தமிழர் யார்? உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு சிந்துவெளித் தமிழர் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 100.00 நூல் திரட்டு 14 தமிழர் சரித்திரம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் நூல் திரட்டு 15 திருவள்ளுவர் திருக்குறள் 175.00 நூல் திரட்டு 16 தமிழகம் 85.00 நூல் திரட்டு 17 தமிழ் இந்தியா 90.00 நூல் திரட்டு 18 திருக்குறள் அகராதி 65.00 நூல் திரட்டு 19 தமிழ்ப் புலவர் அகராதி 100.00 நூல் திரட்டு 20 தமிழ் இலக்கிய அகராதி 90.00 நூல் திரட்டு 21 காலக் குறிப்பு அகராதி 50.00 நூல் திரட்டு 22 செந்தமிழ் அகராதி 300.00 நூல் திரட்டு 23 கலிவர் யாத்திரை இராபின்சன் குரூசோ அகத்தியர் 45.00 நூல் திரட்டு 24 தமிழ் ஆராய்ச்சி தமிழ் விளக்கம் நீதிநெறி விளக்கம் 55.00 xvi உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் 1. புறப்பொருள் விளக்கம் . . . 1 2. விறலி விடுதூது வசனம் . . . 67 3. கலிங்கத்துப் பரணி . . . 91 புறப்பொருள் விளக்கம் ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : புறப்பொருள் விளக்கம் ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 160 = 176 படிகள் : 1000 விலை : உரு. 80 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix